மாணிக்க விழுமியங்கள் - 1 (நூற்றாண்டு நினைவு வெளியீடு) ஆய்வு நூல்கள் 1  வள்ளுவம் - முதல் பதிப்பு 1953 ஆசிரியர் மூதறிஞர் செம்மல் வ.சுப. மாணிக்கனார் பதிப்பாளர் கோ. இளவழகன் மாணிக்க விழுமியங்கள்- 1 ஆசிரியர் மூதறிஞர் செம்மல் வ.சுப. மாணிக்கனார் பதிப்பாளர் கோ. இளவழகன் முதல்பதிப்பு : 2017 பக்கம் : 16+320 = 336 விலை : 315/- வெளியீடு தமிழ்மண் பதிப்பகம் எண். 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர் நகர், சென்னை - 600 017. bjh.ng.: 24339030, செல்: 9444410654 மின்னஞ்சல்: elavazhagantm@gmail.com jhŸ : 16.0 கி. மேப்லித்தோ,  அளவு : 1/8 தெம்மி   எழுத்து : 11.5 புள்ளி,  பக்கம் : 336 f£lik¥ò : இயல்பு  படிகள் : 1000  நூலாக்கம் : கோ. சித்திரா, ப. கயல்விழி  அட்டை வடிவமைப்பு : செல்வன் பா. அரி (ஹரிஷ்)  அச்சு : வெங்கடேசுவரா ஆப்செட், ஆயிரம் விளக்கு, சென்னை - 600 006. நுழைவுரை தமிழ் மரபுகளைத் தலைமுறை தலைமுறையாகக் காத்து வரும் தமிழ்ச்சமூகங்களில் தலையாய சமூகம் நாட்டுக் கோட்டை நகரத்தார் சமூகம். இந்தச் சமூகம் ஈன்றெடுத்த அரும்பெரும் அறிஞரும், நாடு, மொழி, இனம், சமுதாயம், கல்வி, இலக்கியம், வாழ்வு முதலான பல்வேறு பொருள்களைப் பற்றித் தம் தெள்ளத் தெளிந்த சிந்தனைகளால் தமிழ் இலக்கிய வானில் சிந்தனைச் சிற்பியாக வலம் வந்தவர் மூதறிஞர் செம்மல் வ.சுப. மாணிக்கனார் ஆவார். இப்பெருந்தமிழ் ஆசான் வாழ்ந்த காலத்தில் தமிழர்க்கு எய்ப்பில் வைப்பாக எழுதி வைத்துச் சென்ற தமிழின் அறிவுச்செல்வங்களைத் தொகுத்து மூதறிஞர் செம்மல் வ.சுப.மாணிக்கனாரின் நூற்றாண்டு நினைவைப் போற்றும் வகையில் மாணிக்க விழுமியங்கள் எனும் தலைப்பில் 18 தொகுதிகளாக தமிழ்கூறும் நல்லுலகம் பயன் கொள்ளும் வகையில் எம் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. மூதறிஞர் மாணிக்கனார் தமிழ் ஆராய்ச்சி உலகில் தமிழ்ப் பேரொளியாய் விளங்கியவர்; அவருடைய ஆய்வு நெறி தமிழ் மரபு சார்ந்தது. தொல்காப்பியத்தின் புதுமைக் கூறுகளையும், பாரதியின் பழமைக் கூறுகளையும் கண்டு காட்டியவர். உரையாசிரியர்களைப் பற்றி நிரம்பச் சிந்தித்த உரையாசிரியர். தொல்காப்பியத்திற்கும், திருக்குறளுக்கும் தெளிவுரை கண்டவர். மரபுவழிப் புலமையின் கடைசி வளையமாகத் திகழ்ந்தவர், ஆய்வு வன்மைக்குத் `தமிழ்க்காதல், சிந்தனைத் தெளிவிற்கு `வள்ளுவம், புலமை நலத்திற்குக் `கம்பர் ஆகிய இவர் எழுதிய நூல்களைத் தமிழ்ச் சான்றோர்கள் இனம் காட்டி மகிழ்வர். என்று மணிவாசகர் பதிப்பகத்தின் நிறுவனர் அய்யா ச. மெய்யப்பன் அவர்கள் இப்பெருந்தமிழ் ஆசானின் அறிவின் பரப்பை வியந்து பேசுகிறார். வளர்ந்து வரும் தமிழாய்வுக் களத்திற்கு வ.சுப. மாணிக்கனார் பதித்த பதிப்புச் சுவடுகள் புதிய வழிகாட்ட வல்லன. தாம் எழுதிய நூல்களின் வழி தமிழின் தனித்தன்மையை நிலைநாட்டியவர். மறைமலையடிகளின் ஆய்வுத் திறனும் கொள்கை உறுதியும்; திரு.வி.க.வின் மொழிநடையும் சமுதாய நோக்கும் இவர் நூல்களில் மிகுந்து காணப்படுகின்றன. இத்தொகுப்புகளைப் பயில்வோர் இவ்வுண்மையை முழுதாய் உணர முடியும். தமிழ்மண் பதிப்பகம் தமிழ் - தமிழர்க்குப் பெருமை சேர்க்கும் பயனுள்ள நல்ல தமிழ் நூல்களை வெளியிட்டுத் தமிழ்நூல் பதிப்பு வரலாற்றில் தனித்தன்மையுள்ள நிறுவனம் என்பதை நிறுவி வருகிறது. இதன் பெருமைக்குப் பெருமை சேர்க்கும் வகையில் மூதறிஞர் செம்மல் வ.சுப. மாணிக்கனாரின் அறிவுச் செல்வங்களை வெளியிடுவதன் மூலம் உவகையும், களிப்பும், பூரிப்பும் அடைகிறேன். இவர் நூல்களை நாங்கள் வெளியிடுவதை எங்களுக்குக் கிடைத்த நற்பேறாக எண்ணி எண்ணி மகிழ்கிறேன். நல்ல தமிழ் நூல்களைப் பதிப்பித்துத் தமிழ்கூறும் உலகிற்கு அளிக்கும் போதெல்லாம் என் சிந்தை மகிழ்கிறது; புத்துணர்வும், பூரிப்பும், புத்தெழுச்சியும் அடைகிறேன். தமிழ்ப் பதிப்பு உலகில் உயர்வுதரும் நெறிகளை மேற்கொள்ள உறுதி ஏற்கிறேன். நன்றிக்குரியவர்கள் மணிவாசகர் பதிப்பக நிறுவனர் அய்யா ச. மெய்யப்பன் அவர்கள் இவ்வருந்தமிழ் அறிஞர் எழுதிய நூல்கள் பலவற்றை வெளியிட்டுத் தமிழுக்கும் தமிழருக்கும் அருந்தொண்டு செய்தவர். இந்த நேரத்தில் அவரை நன்றி உணர்வோடு நினைவு கூறுகிறேன். பாரி நிலையம் மற்றும் காரைக்குடி செல்வி புத்தக நிலையம் ஆகிய இரண்டும் பெருந்தமிழ் அறிஞர் வ.சுப.மா. நூல்களை வெளியிட்டுத் தமிழ் உலகிற்கு வழங்கியுள்ளதையும் இந்நேரத்தில் நன்றி உணர்வோடு நினைவு கூறுகிறேன். பேரறிஞரின் மக்கள் அனைவரும் இந்நூல் தொகுப்புகள் எல்லா நிலையிலும் செப்பமுடன் வெளிவருவதற்கு உதவினர். இச்செந்தமிழ்த் தொகுப்புகள் வெளிவருவதற்கு மூல விசையாய் அமைந்தவர்கள் திருமதி. தென்றல் அழகப்பன், திருமதி மாதரி வெள்ளையப்பன் ஆகிய இவ்விரு பெண்மக்கள் மாணிக்க விழுமியங்கள் தமிழ் உலகம் பயன் கொள்ளும் வகையில் வெளிவருவதற்குத் தோன்றாத் துணையாக இருந்ததை நன்றி உணர்வோடு நினைவு கூறுகிறேன். மொழியை மூச்சாகவும், அறத்தை வாழ்வாகவும், இலக்கிய வேள்வியை வினையாகவும் ஆக்கிக் கொண்டவர் மூதறிஞர் வ.சுப.மா அவர்கள் என்பதை மேலைச்சிவபுரி, கணேசர் கலை அறிவியல் கல்லூரி தமிழ் உயராய்வு மையம் இனம் காட்டி உள்ளது. இது முதுமுனைவர் இரா. இளங்குமரனார் கூறிய புகழ் வரிகள். மாணிக்கச் செல்வ மணித்தமிழ் அன்னைக்குக் காணிக்கை யாய்வாய்த்த கண்ணாள - பேணிக்கை வைத்jதுறையெல்லா«வாய்ந்jதுறையாக்» வைத்தநீ எங்களின் வைப்பு இப்பாடல் வரிகளுக்கு ஏற்ப வாழ்ந்து காட்டிய நிறைதமிழ் அறிஞரின் அறிவுச் செல்வங்களை உலகெங்கும் உள்ள தமிழர்களுக்கு வழங்குவதன் மூலம் நிறைவடைகிறேன். தனக்கென வாழ்வது சாவுக்கு ஒப்பாகும் தமிழ்க்கென வாழ்வதே வாழ்வதாகும் எனும் பாவேந்தர் வரிகளை நினைவில் கொள்வோம். கோ. இளவழகன் நூலாக்கத்திற்குத் துணை நின்றோர் கணினி செய்தோர்: திருமதி கோ. சித்திரா திருமதி ப. கயல்விழி திருமதி வி. ஹேமலதா திரு. டி. இரத்திரனராசு ஜா. ஜெயசீலி நூல் வடிவமைப்பு: திருமதி கோ. சித்திரா மேலட்டை வடிவமைப்பு: செல்வன் பா. அரி (ஹரிஷ்) முதல் திருத்ததிற்கு உதவியோர்: திருமதி. தென்றல் அழகப்பன் திரு. புலவர். த. ஆறுமுகம் திரு. க. கருப்பையா முனைவர். க. சுப்பிரமணியன் புலவர். மு. இராசவேலு திரு. நாக. சொக்கலிங்கம் இறுதித் திருத்தம் : முனைவர் மாதரி வெள்ளையப்பன் நூலாக்கத்திற்கு உதவியோர்: இரா. பரமேசுவரன், கு. மருது, வி. மதிமாறன் அச்சடிப்பு மற்றும் நூல் கட்டமைப்பு: வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்சு, ஆயிரம் விளக்கு, சென்னை. `மாணிக்க விழுமியங்கள் எல்லா நிலையிலும் செப்பமுற வெளிவருவதற்குப் பல்லாற்றானும் உதவியாக இருந்த இவர்களுக்கும் மற்றும் அறிஞர் பெருமக்களுக்கும் எம் நெஞ்சம் நிறைந்த நன்றியும் பாராட்டும். பதிப்பாளர் விவரம் கோ. இளவழகன் பிறந்த நாள் : 3.7.1948 பிறந்த ஊர் : உறந்தைராயன்குடிக்காடு அஞ்சல் உரத்தநாடு வட்டம் - 614 625 தஞ்சாவூர் மாவட்டம். கல்வி : கல்லூரி புகுமுக வகுப்பு இப்போதைய தொழில் : புழக்கத்தில் இல்லாத பழந்தமிழ் நூல்களைத் தேடியெடுத்து வெளியிடல் ஆற்றியுள்ள பொதுப்பணிகள் 1965இல் பள்ளி மாணவனாக இருந்தபோதே மொழிப் போராட்டத்தில் முனைப்பாகப் பங்கேற்றுத் தளைப்படுத்தப் பெற்று 48 நாள்கள் சிறையில் இருந்தவர். பிறந்த ஊராகிய உறந்தைராயன்குடிக்காட்டில் `ஊர்நலன் வளர்ச்சிக் கழகம் எனும் சமூக அமைப்பில் இருந்து ஊர் நலப்பணி ஆற்றியவர். உரத்தநாட்டில் `தமிழர் உரிமைக் கழகம் என்னும் அமைப்பையும், பாவாணர் படிப்பகத்தையும் நண்பர்களுடன் இணைந்து நிறுவித் தமிழ்மொழி, தமிழின, தமிழக மேம்பாட்டிற்கு உழைத்தவர். இளம் தலைமுறைக்குத் தமிழ்த் தொண்டாற்றியவர். பேரறிஞர் அண்ணாவின் மதுவிலக்குக் கொள்கையை நெஞ்சில் ஏந்தி உரத்தநாடு மதுவிலக்குக் குழுவின் முக்கிய அமைப்பாளர்களில் ஒருவராக இருந்து செயலாற்றியவர். 1975-இல் தமிழ்நாடு சட்டமன்றத்தில் `உரத்தநாடு திட்டம் என்று பாராட்டப் பெற்ற மதுவிலக்குத் திட்டம் வெற்றி பெற உழைத்தவர். தமிழ்மண் பதிப்பகத்தை நிறுவி புழக்கத்தில் இல்லாத பழந்தமிழ் நூல்களையும், புதிய படைப்பு இலக்கியங்களையும், 19 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20ஆம் நூற்றாண்டுத் தொடக்கத் திலும் வாழ்ந்த தமிழ்ச்சான்றோர்கள் எழுதி வைத்துச் சென்ற தமிழின் அறிவுச் செல்வங்களைத் தேடி எடுத்து முழுமையாகப் பொருள் வழிப் பிரித்து, கால நிரலில் ஒரே வீச்சில் தொடர் தொடராக வெளியிட்டுத் தமிழ்நூல் பதிப்பில் தனி முத்திரை பதித்து வருபவர். பொதுநிலை தனித்தமிழ் இயக்கத் தந்தை மறைமலையடிகள், தந்தை பெரியார், பாவேந்தர் பாரதிதாசன், பேரறிஞர் அண்ணா, மொழிநூல் மூதறிஞர் ஞா. தேவநேயப் பாவாணர், பாவலரேறு பெருஞ்சித்திரனார் ஆகியோரை வழிகாட்டிகளாகக் கொண்டு அவர்தம் கொள்கை களை நிறைவேற்ற அயராது உழைத்து வருபவர். அறிமுகவுரை செம்மல் வ.சுப.மாணிக்கனார் தமிழ்ச்சான்றோர் பெருமக்கள் முன்னோர் எடுத்து வைத்த அடிச்சுவட்டில் தாமும் கால் பதித்து எழுத்துக்களையும் ஆய்வுகளையும் செய்த காலத்தில் தனக்கென ஒரு தனி வழியை அமைத்துக்கொண்டவர் செம்மல் அவர்கள். தமிழகத்தில் பிறந்து இரங்கூனில் வளர்ந்து வாய்மைக் குறிக்கோளைத் தன் வாழ்வின் குறிக்கோளாக எண்ணிய பள்ளிப்படிப்பை நிறைவு செய்யாத ஒரு சிறுவனை அடையாளம் கண்டாள் தமிழன்னை. அச்சிறுவனைத் தமிழ்க்கொடையாக உலகிற்குத் தந்தாள். பண்டிதமணி கதிரேசனார் துணை கொண்டு தமிழைக் கசடறக் கற்றவர், வ.சுப. சொல்லும் செயலும் ஒன்றாக வாழ்ந்தவர். தமிழ்க்கொடையாக வந்த வ.சுப. தமிழுக்குச் செய்த கொடை மிக அதிகம். தமிழால் அடையாளம் காணப்பெற்ற அவர் கற்றோருக்கு முதன்மையராகவும் எல்லோருக்கும் தலைவராகவும் விளங்கினார். சங்க இலக்கியங்களை புதிய நோக்கில் ஆய்வு செய்தவர். இனி வரும் காலங்களில் சங்க இலக்கியம் கற்பாரின் நுழைவாயில் வ.சுப.வின் அகத்திணை ஆய்வு நூல் `தமிழ்க்காதல். இராமாயணத்தில் பற்றில்லாமல் இருந்தவர்களையும் `கம்பர் என்ற நூல் கம்பராமாயணத்தைக் கற்கத் தூண்டுகின்றது. சிலப்பதிகாரத்தின் பெயர்க்காரணத்தை ஆய்வு செய்தது `எந்தச் சிலம்பு. திருக்குறளைப் புதிய கோணத்தில் ஆய்வு கண்டது `வள்ளுவம் மற்றும் `திருக்குறட்சுடர். திருக்குறளின் மூலமும் உரையும் ஒட்டிப்பிறந்த இரட்டையர் போல் காணும் `உரை நடையில் திருக்குறள். தொல்காப்பியத்தை வெளியுலகிற்குக் கொண்டு வந்து அறிஞர்களிடையே நிலைநிறுத்தியவர் வ.சுப. தமிழ்க்கொடை மட்டுமன்று ஒரு தமிழாசிரியனாலும் அறக்கொடை செய்ய முடியுமென்பதை நிலைநாட்டியவர். அறம் செய்ய பணம் வேண்டியதில்லை. மனம் தான் வேண்டும். அழைப்பு வேண்டியதில்லை. உழைப்புத்தான் வேண்டும். அறிவு கூட வேண்டியதில்லை. அன்பு கூட வேண்டும். என்பதை உணர்த்தியவர். செம்மல் வ.சுப. அவர்களின் புகழ் தமிழ் வாழும் காலமெல்லாம் நிலைத்து நிற்கும். அந்நிய மோகத்தில் அடிமைப்பட்டு, உரிமை கெட்டு, ஆட்சிஅதிகாரம் தொலைத்து அல்லலுற்றுக்கிடந்த இந்திய மண்ணில், அக்கினிக் குஞ்சுகளை வளர்த்தெடுத்த அண்ணல் காந்திக்குப் பாரதி பாடிய வாழ்த்துப் பா இது: வாழ்க நீ! எம்மான், இந்த வையத்து நாட்டி லெல்லாம் தாழ்வுற்று வறுமை மிஞ்சி விடுதலை தவறிக் கெட்டுப் பாழ்பட்டு நின்ற தாமோர் பாரத தேசந் தன்னை வாழ்விக்க வந்த காந்தி மகாத்மா! நீ வாழ்க வாழ்க! இதைப் போலவே, தமிழ் மண்ணில் அந்நிய மொழிகளின் ஆதிக்கத்திற்குத் தமிழர் அடிபணிந்து, மொழி உரிமை இழந்து, தமிழ்க் கல்விக்குப் பெருங்கேடு நேர்ந்த போது, இந்த அவலத்தை மாற்றும் முயற்சியில் தன்னையே அர்ப்பணித்துக் கொண்டவர் அண்ணல் வ.சுப.மா. அண்ணல் காந்தியை பாரதி பாடியதுபோல், அண்ணல் மாணிக்கனாரை, வாழ்க நீ எம்மான், இங்கு வந்தேறி மொழிமோ கத்தால் தாழ்வுற்று உரிமை கெட்டுத் தமிழ்க்கல்வி தனையும் விட்டுப் பாழ்பட்டுப் பரித வித்த பைந்தமிழ் தன்னைக் காத்து வாழ்விக்க வந்த புதிய வள்ளுவமே வாழ்க! வாழ்க! என்று பாடிப் பரவத் தோன்றுகிறது. - தென்றல் அழகப்பன் (வ.சுப. மாணிக்கனாரின் மகள்) மாணிக்கம் - தமிழ் வார்ப்பு வாய்மை வாழ்வைத் தன் உயிராகவும், திருவாசகம், திருக்குறள், தொல்காப்பியம் மூன்றினையும் போற்றிப் பாதுகாத்து பொய்யாமை, தூய்மை, நேர்மை, எளிமை என்ற நான்கு தூண்களையும் அடித்தள மாகவும் வரலாறாகவும் கொண்டு வாழ்ந்தவர் தமிழ்ச் செம்மல், மூதறிஞர் முது பேராய்வாளர், பெருந்தமிழ்க் காவலர், முதுபெரும் புலவர், தொல்காப்பியத் தகைஞர் எனது தந்தை வ.சுப. மாணிக்கனார். பெற்றோர்கள் இல்லாமலே வளர்ந்தாலும் தன்னை நற்பண்பு களாலும் நல்லொழுக்கத்தாலும் நற்சிந்தனைகளாலும் செதுக்கிக் கொண்டவர்கள். அவர்களின் மறைவிற்குப் பின் தாயார் திருமதி. ஏகம்மை மாணிக்கம் அவர்கள் தந்தை இட்ட புள்ளிகளைக் கோலமாக்கினார்கள். அப்பா தனது வாழ்நாளில் 50 ஆண்டுகட்கு மேலாக தமிழைப் போற்றினார்கள். தாயார் (தந்தையின் மறைவிற்குப் பிறகு) 20 ஆண்டுகட்கு மேலாக தந்தையின் குறிக்கோள்களைப் போற்றி நிறைவேற்றினார்கள். தமிழறிஞர்களும் ஆர்வலர்களும் இன்று தந்தையைப் போற்றுகிறார்கள். செம்மலின் அறிவுடைமை தமிழக அரசால் பொது வுடைமை ஆக்கப்பட்டது. என் தந்தையின் தொண்டுகள் பலதிறத்தன. மாணிக்கனாரின் நூற்றாண்டு விழாவின் நிலைப்பயனாக செம்மலின் நூல்கள் அனைத்தையும் மறுபடியும் பதிப்பித்து அவற்றை தமிழுலகிற்குக் கிடைக்கும்படி செய்ய வேண்டும் எனவும் செம்மலின் படைப்புக்களை வெளியிடுவது விழாவிற்கு உயர்வும் நூல்கள் வழிவழி கிடைக்கவும் தேடலின்றிக் கிடைக்கவும் வழி வகுக்க வேண்டும் என்றும் மக்கள் நாங்கள் எண்ணினோம். நூற்றாண்டு விழாப் பணியாக மாணிக்கனார் நூல்களை யெல்லாம் வெளியிடும் அமையத்து செம்மலின் தமிழ்மையை திறனாய்ந்து தமிழறிஞர்களின் முத்திரைகளும் நூல்களாக வெளிவருகிறது. இவ்வாண்டில் பொறுப்பெடுத்து வெளியிட்ட தமிழ்மண் பதிப்பகத் திற்கும் எம் தந்தையின் தமிழ்ப்பணிக் குறித்து பெருமை தரும் நூல்களாக எழுதியுள்ள நூலாசிரியர் கட்கும் தமிழினமே நன்றி கூறும். முனைவர். மாதரி வெள்ளையப்பன் (வ.சுப. மாணிக்கனாரின் மகள்) கோவை 11.8.2017 என் அன்புறை எட்டு வயது பாலகனாக இருந்தபோதே ஈன்றெடுத்த பெற்றோர்கள் விண்ணுலகு எய்திய சூழ்நிலை. இளம் வயதிலேயே லேவாதேவி என்று சொல்லப்படும் வட்டித் தொழிலைக் கற்றுக் கொள்ள பர்மா சென்று வேலைப்பார்த்த இடத்தில் முதலாளி, வருமானவரி அதிகாரியிடம் பொய் சொல்லும்படி அப்பாவை வற்புறுத்தியதால், திண்ணமாக மறுத்துவிட்டுத் தாயகம் திரும்பிய உத்தம மனிதர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பண்டிதமணி, கதிரேசனாரிடம் தமிழ் பயின்று, பிற்காலத்தில் காரைக்குடியில் தான் கட்டிய இல்லத்திற்கு கதிரகம் என்று பெயர் சூட்டி, ஆசானுக்கு மரியாதை செலுத்திய மாமனிதர். சிற்பி ஒரு கல்லை உளியைக் கொண்டு செதுக்கிச் செதுக்கி, சிறந்த சிற்பமாக்குவான். அதேபோல், தன் மனதை எளிய வாழ்வு, எதிர்கால நம்பிக்கை, தெளிவான சிந்தனைகள், வாழ்க்கைக்கான திட்டங்கள், உயர்ந்த குறிக்கோள், உன்னத மான செயல், வாய்மை, தூய்மை, நேர்மை, இறை வழிபாடு போன்ற எண்ணத் திண்மையுடன் தன்னைத்தானே பக்குவப் படுத்திக் கொண்டதால், உயர் பதவியான துணைவேந்தர் பதவி அப்பாவை நாடி வந்தது. திருக்குறள், திருவாசகம், தொல்காப்பியம் ஆகிய மூன்று தமிழ் மறைகளும், பண்புடன் வாழ்வதற்குரிய வழிகாட்டிகள் என்று நினைத்து வாழ்வில் கடைப்பிடித்து வெற்றி கண்ட உயர்ந்த மனிதர். அப்பா எழுதியுள்ள `தற்சிந்தனை என்னும் குறிப்பேட்டில் நான் படிப்பிலும் எழுத்திலும் ஆய்விலும் பதவிப் பணியிலும் முழு நேரமும் ஈடுபடுமாறு குடும்பப் பொறுப்பை முழுதும் தாங்கியவள் ஏகம்மை என்ற என் ஒரே மனைவி என்று எழுதியுள்ளதிலிருந்து அப்பாவின் முன்னேற்றத்திற்கு அம்மா முழு உறுதுணையாக இருந்துள்ளார்கள் என்பதை நான் குறிப்பிட விரும்புகிறேன். சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பே கல்விக்கு மிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமென்ற எண்ணம் என் தாய்தந்தையர் இருவருக்கும் ஒருமித்தக் கருத்தாக இருந்ததால், தன் குழந்தைகள் அறுவரையும் பள்ளிப் படிப்போடு நிறுத்திவிடாமல், ஆண், பெண் என்ற வேறுபாடு இல்லாமல் பட்டப் படிப்புக்கள் வரை பயில வைத்து வெற்றி கண்டுள்ளார்கள். என் இளங்கலை வணிகவியல் சான்றிதழிலும், என் கணவரின் பொறியியல் சான்றிதழிலும் துணைவேந்தரின் கையொப்ப இடத்தில் என் தந்தையாரின் கையொப்பம் இருக்கும். இதை நான் பெற்ற பாக்கியமாக நினைக்கிறேன். நான் பெங்களூரில் இருந்தபோது, அப்பா எழுதிய ஒவ்வொரு கடிதத்திலும், அவிநயன் திருக்குறள் சொல்லு கிறானா? புதிதாகச் சொல்லும் குறளுக்கு அய்யா காசு தருவார்கள் என்று சொல் என்ற வரிகள் நிச்சயமாக இருக்கும். என் மகன் இளம் வயதிலேயே திருக்குறள் கற்க வேண்டும் என்பது என் தந்தையாரின் எண்ணம். இளஞ்சிறார்களுக்குப் பிஞ்சு நெஞ்சங்களிலேயே திருக்குறள், திருவாசகம் படித்தல், இறைவழிபாடு செய்தல் போன்ற விதைகளை விதைத்து விட்டால், முழுவாழ்வும் மிகவும் சிறப்பாக அமையும் என்பது தந்தையாரின் திண்மையான கருத்து. மிகச் சிறு வயதில் பெற்றோரை இழந்த சூழ்நிலையில், அடிப்படை பொருளாதாரம் இல்லாத நிலையில், அதிகமான உழைப்பாலும், முயற்சியாலும், நேர்மையான வழியில் தான் ஈட்டிய பொருளாதாரத்தில், அதாவது தன் சொத்தில் ஆறில் ஒரு பங்கை தனது சொந்த ஊரான மேலைச்சிவபுரியின் மேம்பாட்டுக்காக உயர்திணை அஃறிணை பாகுபாடுயின்றி செலவு செய்ய வேண்டும் என்று தன் விருப்பமுறியில் எழுதியுள்ளார்கள். தந்தையாரின் விருப்பப்படியே தாயார் அவர்கள் 20-4-1992 இல் அப்பாவின் பெயரில் அறக்கட்டளை ஆரம்பித்து நடத்தி வந்தார்கள். இன்றும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அப்பா எழுதிய முப்பதுக்கும் மேலான நூல்களில் `வள்ளுவம், `தமிழ்க்காதல், `கம்பர், `சிந்தனைக்களங்கள் போன்றவை தமிழ் இலக்கிய வரலாற்றில் மிகச்சிறந்த ஆய்வு நூல்களாகக் கருதப்படுகிறது. உன்னத வாழ்க்கைக்கு ஓர் எடுத்துக்காட்டாக வாழ்ந்துள்ள என் தந்தையாரின் வாழ்க்கை வரலாற்றைப் பற்றி தெரிந்து கொள்பவர்களின் வாழ்விலும் நல்ல திருப்புமுனை ஏற்பட்டு வாழ்வு செம்மையாகும் என்பது உறுதி. பொற்றொடி செந்தில் (வ.சுப. மாணிக்கனாரின் மகள்) மும்பை 21-7-2017. வள்ளுவம் முதல் பதிப்பு 1953 இந்நூல் 1987இல் மணிவாசகர் நூலகம் வெளியிட்ட பதிப்பை மூலமாகக் கொண்டு வெளிவருகின்றன. முகவுரை திருக்குறள் நண்பர்களே! வணக்கம் வள்ளுவம் எனப் பெயரிய நூல் பன்னிரண்டு சொற் பொழிவுகளைக் கொண்டது. இவை யாண்டும் யார் முன்னும் பேசப்பட்டன வல்ல; யானே திருவள்ளுவரை முன் வைத்துப் பேசினாற்போல் எழுதிய கற்பனைச் சொற் பொழிவுகள். இஃதோர் இலக்கியப் புதுநெறி. உங்கட்கும் எனக்கும் நெஞ்சக் கலப்பு - சுற்றப்பிணிப்பு - உண்டாகும் என்ற நோக்கத்தால், கற்பனைப் பொழிவு நெறியை மேற்கொண்டேன். சென்ற கால நம்மொழித்தாயின் இயற்கை வளம், நிகழ்காலத் தமிழ் மக்களின் மொழியறிவுக் குறைவு, வருங்காலத் தமிழகத்தின் தூய பெருஞ் செயல்கள் என இவ்வெல்லாம் நீள நினைந்தேன். இந் நினைவுச் சூல் முதிர்ச்சியால் பிறந்தது வள்ளுவத் தமிழ்க் குழவி. வள்ளுவ நூலின் நடை கற்பவரை நிறுத்திக் கற்கச் செய்யும்; வேகப் படிப்பைக் குறைத்து விளங்கிப் படிக்கத் தூண்டும்; சொல் தோறும் ஒன்றி நின்று மனம் வைத்து அறிவு செலுத்தி உண்மை காணச் சொல்லும். ஓரளவேனும் தமிழ் இலக்கியம் பயின்றார்க்கு - மொழியறிவு பெற விழைவார்க்கு - வள்ளுவம் அரிய நடையதன்று; கருத்துக்கு உரிய நடையது எனத் தமிழறிஞர் உடன்படுவர். வள்ளுவம் தொகுப்பு நூலன்று; முதற்கண் முழுதும் வரையறுத்துக் கொண்டு முரணறுத்து எழுதிய முறைநூல். ஆதலின், கற்கும் பெருமக்கள் சோற்றுப்பதம் காண்பது போல் இடையிடையே ஒரு பக்கத்தை விரித்துத் தள்ளிக்கல்லாது, முதல் தொடங்கி வரன்முறையாய்க் கற்பாராக, இஃது என் விழைவு. தூய கிழமையீர்! வள்ளுவநூற் கருத்துக்களைப் பிறர் ஏற்றல் வேண்டும்; ஏற்குமாறு வலிந்தேனும் உரைத்தல் வேண்டும் என்பது என் குறிக்கோள் அன்று. யான் கண்ட வள்ளுவங்களை - அவற்றுக்கு நிலைக்களனாகக் கொண்ட உலகியல் விளக்கங்களை - பிறர் அறிதல் வேண்டும்; அறியுமாறு அழுத்தம் பெற மொழிதல் வேண்டும் என்பதுவே என் குறிக்கோள். கொள்ளுவதும் தள்ளுவதும் நும் அறிவின் தனியுரிமை. தள்ளுங்கால் ஆசிரியனுக்கு மாசு கற்பிக்க முயல வேண்டா என்று வேண்டுவல். வள்ளுவநூல் இயற்கையழகொடு வெளிவரற்குப் பதிப்புதவியும் பார்வையுதவியும் செய்தளித்த சாது அச்சகத்தார்க்கும், பாரி நில காரைக்குடி வ.சுப. மாணிக்கம் 1-4-1953 அன்புறை அண்ணன் திருப்பதி அவர்களுக்கு எங்கள் குலமுதல்வன்; இல்லாண்மை ஏற்றமகன்; பொங்கல் மனைபோற் பொலிவுடையன்; - சங்கத் தமிழனைய தூயன்; தனைமறந்த தொண்டன்; கமழுங் குடிமைக்கோர் காட்டு. குடும்பக் களத்துக் குறிக்கோட் படையால் இடும்பைப் புறங்கண்ட எம்முன் - நெடும்பொறையை, வள்ளுவ நூலகத்து வாழ்வெண்ணிக் கற்பவர் கொள்ளுப நெஞ்சிற் குறித்து. பொருளடக்கம் 1. வள்ளுவர் நெஞ்சம் 7 2. பல நிலையறம் 30 3. பொருள் நிலை 54 4. பொருட் பயனிலை 76 5. இன்மை நிலை 101 6. அறிவுப் பிறப்பு 125 7. அறிவுக் கல்வி 146 8. குடும்ப வாழ்க்கை 171 9. வள்ளுவ அரசு 198 10. திருக்குறள் நடை 227 11. ஆசான் கருத்துரை 254 12. வாய்மை நெஞ்சம் 285 1. வள்ளுவர் நெஞ்சம் இனிய நண்பர்களே! எல்லோர்க்கும் வணக்கம். திருக்குறளே என் சொற்பொழிவுகளின் முழுப்பொருள். அப்பொருட்கு ஒரு பெருந்தோற்றுவாயாக, வள்ளுவர் நெஞ்சம் என்பது குறித்து முதற்கண் சொல்லாற்றுவேன். வள்ளுவர் நெஞ்சம் வேறு, திருக்குறள் வேறா? குறளின் அகத்ததோ புறத்ததோ அப் பெருமகன் உள்ளம்? ஆசான் நெஞ்சுக்கும் குறள் நூலுக்கும் உரிய தொடர்பு என்கொல் என்பது வினா. இவ்வினாவிற்கு விடையாகவும் என் பின்னைச் சொற்பொழிவு அனைத்திற்கும் உள்ளுறையாகவும் ஓர் அடிப்படைக் கருத்தினை இத் தொடக்கத்தே யான் சொல்லிவிடக் கடமைப்பட்டிருக் கின்றேன். உளங்கொள்வது உங்கள் கடன். ஒருவன் வாழ்க்கைச் செயலெல்லாம் மனத்தின் விளைவு. மனத்திற்கு அமைச்சன் போல்வது அறிவு. ஆதலின், அறிவினை ஒருவன் மனக்கண் என்று கொள்ளல் சாலும். அறிவு வெளியீடே ஒருவன் சொல்லும் எழுத்தும் என்க. திருக்குறள் வள்ளுவனார் அறிவுக் குழவி. திருக்குறள் அவ்வறிஞன் நெஞ்சோடு நம் நெஞ்சினைப் பிணைக்கும் எண்ணக் கயிறு. திருக்குறள் அச் சான்றோன் உள்ளத்து நுண்ணிய நினைவை, தீட்டாத நம் அறிவிற்குக் காட்டும் பூதக்கண்ணாடி. வள்ளுவர் நெஞ்சிற்கும் அவர் யாத்த ஆயிரத்து முந்நூற்று முப்பது குறள்களுக்கும் உரிய தொடர்பு என்னை? இட்ட வித்துக்கும், அதனில் தோன்றிய மரம் யாருங் காணப் பலவாகத் தாங்கிக் கொண்டிருக்கும் வித்துக்களுக்கும் பொருந்திய உறவினை ஒப்பிட்டுக் கொள்க; கொள்வீராயின், பின்வரும் கருத்துக்கள் புலனாம். வள்ளுவர் நெஞ்சம் நிலத்திட்ட விதை ஒக்கும்; அவர் நெஞ்சம் தந்த அறிவு அவ்விதை தோற்றிய மரம் ஒக்கும்; அவ்வறிவு வெளிப்படுத்திய குறள்கள் மரம் தாங்கிய விதைகள் ஒக்கும். மேலும் எண்ணுவோம். வித்திய விதை செத்தொழிந்ததென யாரும் துணியார், ஒழிந்தால் மரம் தோன்றுமாறு எங்ஙன்? தோன்றிய மரத்திலும் அது தாங்கும் பல் வித்துக்களிலும் இட்ட முதல்விதை உடனிலையாய் வாழ்கின்றது. மேலெழுந்த எல்லா வித்தும் ஒரு தாய் வித்தின் உரத்தைக் கொண்டு அதன் பண்பைத் தந்து நிற்கின்றன. அதுபோல, வெளிப்பட்ட அனைத்துக் குறள்களும் வள்ளுவர் நெஞ்சுரம் பெற்று அந்நெஞ்சின் நினைவைப் புலப்படுத்து நிற்கின்றன. இவ் வுவமையை மேலும் தொடர்ந்து நினைவோம். ஒரு வித்து தாய்மரமாய்த் தோன்றி அளவிறந்த வித்துக்களை ஈனும். அங்ஙனம் பிறந்த ஒவ்வொரு வித்துக்கும் தன்னிலிருந்து எண்ணிலா வித்துக்களைப் பிறப்பிக்கும் ஆற்றலுண்டு. பாருங்கள்! இதனால் நாம் கொள்ளக் கிடப்பது என்ன? குறள் ஒவ்வொன்றும் தனி வித்தாகி நவில்தொறும் நூல் நயம் போலும் (783) என்றாங்கு, எத்துணையோ எண்ணங்களைத் தன்னில் தோற்றுவிக்கும் ஆற்றல் சான்றது என்பதாம். மணற்கிளைக்க நீரூறும்; மைந்தர்கள் வாய்வைத்து உணச்சுரக்கும் தாய்முலை யொண்பால்; - பிணக்கிலா வாய்மொழி வள்ளுவர் முப்பால் மதிப்புலவோர்க்கு ஆய்தொறும் ஊறும் அறிவு என்னும் திருவள்ளுவமாலை திருக்குறள் அறிவூற்று என இயல்பு கூறும் அழகு காண்க. ஆகவே, வள்ளுவர் நெஞ்சு உள்வித்தாம்; அவர் யாத்த பல்குறள் புறப்பல்வித்தாம் என்பது துணிபு. இனி, குறள்களிடை ஆசிரியன் நெஞ்சங் காண்டல் யாங்ஙனம் எனப் பார்ப்போம். உள்ளக் கருத்தினை வெளிக் காட்டும் வன்மை சொல்லுக்கு ஓரளவுதான் உண்டு. கோவலன் கண்ணகியோடு மதுரை மூதூர் செல்கிறான் என்ற காட்சியை எவ்வளவு தொலை நாடகம் காட்ட வியலும்; அவ்வளவே தான். சில பொழுது அவ்வளவினும் குறைவாகத் தான், சொல் ஒருவன் உள்ளக் கருத்தினைத் தொடக்கூடியது. ஓரளவேனும் உட்கருத்தைப் புறப்படுத்துவது கிடக்க, வினைவேறு சொல்வேறு பட்டார் தொடர்பு (819) எனைத் தொன்றும் சொல்லினால் தேறற் பாற்றன்று(825) என்ற குறட்பகுதி களால். அகத்தை ஒளித்துக் காட்டும் பொய்த்திறமும் சொல்லிற்கு உண்டு காண். எனவே, சொல்லெனப்படுவது யாதெனின், மக்கள் நெஞ்சூர்தி யன்று; கருத்தூர்தி என்பதுவே உண்மை. சொல்வழி ஆசிரியன் உள்ளம் காணவேண்டின் கற்பார்க்குப் பொய்யில் தூயநெஞ்சும் மயக்கமில் நுண்ணறிவும் வேண்டுவன. வானிலைக் காட்சிக்கு உதவுவது தொலைநோக்கிக் கருவி. அக்கருவியாற் பயனென் கண்ணிழந்தானுக்கு? கண்ணிருந்தும் பயனென், நினைமின்! அறிவில்லாதவனுக்கு. அறிவொடு கண்வைத்துத் தொலை நோக்கிவழி வானிலை களைக் காணுமாப் போல, கற்பான் மாசில் நெஞ்சும் மயக்கமில் அறிவும் உடையனாய், நூலாசிரியன் சொல் வழி அவன் உள்ளநிலை காண அவாவ வேண்டும். சொல்லிடை ஆசான் நெஞ்சக் காட்சி கற்பவன் அறிவுடை மனத்தைப் பொறுத்தது. சொல்வான் கருத்தின் ஒரு கூறே சொல்லெனக் கொள்க; அங்ஙன் கொள்ளாது, அவன் முழுக்கருத்தே சொல் என்பது உடம்பே மனிதன் என்பது போலப் பிழைபட்டது. நெஞ்சங் காண்டல் என்பதன் பொருள் யாது? சொல்லியான் கருத்தாழம் உணர்ச்சி நுகர்ச்சிகளையும் சொல்லத் தூண்டிய சூழ்நிலையையும், அவன் எதிர்பார்க்கும் பயனையும் உயிராகக் காண்பது. இக் காட்சிக்கு அவன் ஆண்ட சொற்களையும் சொன்னடையையும் உடலாகக் கொள்வது. சொல்வழி இத்துணையும் காண வொல்லுமோ என்பீராயின், இவை மாத்திரமல்ல, சொல்லியான் கல்வி ஒழுக்கம் குடிமை நாகரிகம் வரலாறு என்றின்ன வாழ்க்கை நிலைகளையும் காண வொல்லும் என்று திருக்குறள் அறிவூட்டும். நட்டார்போல் நல்லவை சொல்லினும் ஒட்டார்சொல் ஒல்லை யுணரப் படும் (826) உறாஅ தவர்போற் சொலினும் செறாஅர்சொல் ஒல்லை யுணரப் படும் (1096) என்ற குறள்களால், இன்சொல்வழிப் பகைநெஞ்சினையும் வன்சொல்வழிக் கேள்நெஞ்சினையும், அஃதாவது வெளிப்பட்ட பொய்ச் சொல் வழியும் நெஞ்சுண்மை காணலாம் என்பது வள்ளுவர் காட்டும் வாழ்வியலாகும். இக்காட்சி முன்னர் அறுதியிட்டாங்கு, கற்பவர், கேட்பவர் தூய நெஞ்சினைச் சார்ந்தது எனத் தெளிக. தன்னைமட்டும் தனித்துச் சுட்டி நிற்கவல்ல தனிப் பொருள் மக்களுலகில் உண்டா? ஒரே பொருள், இடம், காலம் ஆளுக்கொப்பப் பல எண்ணங்களை எழுப்ப வல்லதாகும். ஒருவற்குப் பல்லுக் குத்தும் நினைவை, ஒருவற்குக் காது குடையும் நினைவை, ஒருவற்கு நகவழுக்கு எடுக்கும் நினைவை, ஒருவற்குப் பொட்டு வைக்கும் நினைவை, ஒருவற்கே பல்வேறு காலங்களில் இவ்வனைத்து நினைவுகளை, ஒரு சிறு துரும்பு பிறப்பிக்கக் காண்கிறோம். ஆதலின் சொல் அடிப்படையாக அதனை அப்பொழுது சொல்லியான் எவ்வுள்ளத்தான் எனக் காணவேண்டும். காணும் இயல்பு தமிழர்க்குப் புதுமையன்று; தொன்னெறியாகும். இந்நெறியை நம் தமிழுக்கு இன்று முதனூலாக வாழும் தொல்காப்பியம் நோக்கு என மொழியும். மாத்திரை முதலா அடிநிலை காறும் நோக்குதற் காரணம் நோக்னெப் படுமே (தொல். 1361) புலவனது உள்ளம் ஆராய்வார்க்கும் மக்களின் உள்ளம் காண்பார்க்கும் இந்நூற்பா பொய்யாக் கைவிளக்காகும். நோக்கு என்பது மேலோடான பார்வையன்று; அழுந்திக் காணும் அகக்காட்சி. பிறன்மனை நோக்காத பேராண்மை (148) என்ற குறட் பகுதியில் இப் பொருளுண்மை அறிக. நோக்காத என்னும் சொல்லாட்சியால் பிறன் மனைவியை மனத்துட் கொளல் பிழை என்பதூஉம், இயல்பாய கண் பார்வை பிழையன்று என்பதூஉம் பெறப்படும். ஒருவன் வாய் திறந்து சொல்லாமுன்னரே, அவன் முகம் கண்களைக் கூர்ந்து பார்த்து உள்ளப் பொருளை அறிய வேண்டும். இக் குறிப்பறிவை கூறாமை நோக்கி (701) என்று குறள் ஆளும். கண்ணொடு கண்ணிணை நோக்கு ஒக்கின் (1100) என்ற வள்ளுவர் காதற் குறளை, அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள் என்னும் கம்பர் காட்சிப் பாவொடு நீங்கள் பன்முறை கேட்டிருப்பீர்கள். உள்ளம் தாக்கும் உரனுடைப் பார்வையைத் தான் இப்பெரும்புலவர்கள் நோக்கு எனச் சுட்டுப. நோக்கு அரிய நோக்கே என்னும் மணிவாசகத்தின் கண் இந் நுணுக்கப் பொருளை ஓர்க. ஆதலின், நோக்கு என்பது கண்பார்வையல்லா மனப்பார்வை எனப் பொருள்படும். சொல்லிடை நோக்குதல் எங்ஙனம்? தொல்காப்பிய வுரையின் பேராசிரியர் எழுநூறு ஆண்டுகட்கு முன் வாழ்ந்தவர். இது பற்றி ஒரு குறிப்பு எழுதியிருக்கிறார். கேட்டார் மறித்து நோக்கிப் பயன் கொள்ளுங் கருவி என்பது அவ்வுரையாளர் வரைந்த குறிப்பு. இவ்வாறு ஏன் சொன்னான்? இப்படி ஏன் சொல்லிற்றிலன்? இவ்வண்ணம் மறித்துத் தானே வினவிக் காண்பதால், சொல்லியான் நெஞ்சம் வெளிப்படும் என்பது இக்குறிப்பின் விளக்கம். ஆதலின், வெளிப்பட்ட சொல்லை ஆசிரியன்போற் கருதி, வினவி வினவித் தன் நினைவுக் கருவி கொண்டு அவன் நினைவுப் பொருளைக் கல்லியெடுக்க வேண்டும். இனிவரும் அனைத்துச் சொற்பொழிவிலும் நோக்கு என்னும் இவ்வரிய தனியுண்மை பரந்து விளங்கக் காண்பீர்கள். பேரன்பர்களே! பரப்பும் வனப்பும் குளுமையும் செறிந்த இக் காவணச் சோலைக்கு இன்று காலை ஒன்பது மணிக்கு வந்தேன். அவ்வமயம் பல பெருமக்களைக் கண்டேன்; உவந்தேன். நம் இந்தியப் பிற பகுதித் தமிழர்களும், இலங்கை மலேயா தென்னாப்பிரிக்கா முதலாம் பிற நாட்டுத் தமிழர்களும், பெண்களும் ஆண்களுமாய், குழூஉக் குழூஉவாய்த் திருக்குறட் சொற்பொழிவு கேட்க அவாவி வந்துளர். ஒரு மொழித் தாய் வயிற்றுப் பிறந்த நம் மக்கட்கெல்லாம், தாய்த் தமிழகத்து வாழும் பேறுடைய நாம் குடும்ப நல்வரவு கூறுகின்றோம். தமிழ் மதிக்கும் பிறமொழிப் பெருமக்களும் பலராய் இவண் குழுமியுளர். அவ்வன்பர்க்கெல்லாம் நாம் பெருமைசான்ற நல்வரவு கூறுகின்றோம். ஞாலத்துப் பரந்து வாழ் தமிழரனைவரையும் ஒருங்கு கூட்டி வைக்கும் மொழியாற்றல் நிரம்பிய வள்ளுவர்க்கு நம் பெருஞ் செய்ந்நன்றி உரியதாகுக. செயலுக்கு வரும் வாழ்க்கை அறங்கூறி, எவ்வகை மக்களையும் உய்விக்கவும் உயர்விக்கவும் உளங்கொண்ட வள்ளுவரை நாம் நன்றி மறப்போமா? நன்றி மறக்கவில்லை; ஆனால் அதனைக் காட்ட வேண்டிய நன்முறையை மறந்தோம். அவரைப் பெருமைப்படுத்தினோம்; அஃது எஞ்ஞான்றும் செயற்பாலது; ஆனால் அங்ஙன் பெருமைப்படுத்தக் கையாண்ட முறைக்கண் சிறுமை செய்தோம். அவர் திருக்குறளைப் பன்மாணும் வரப்பண்ணிக் கற்றோம். நல்லதோர் தொடக்கம் செய்தோம். அதனாற் பயனென்? குறள்கள் நாள்வாழ்வில் ஒட்டுமா? உலகியலிற் பொருந்துமா? இவற்றுப்படி நடந்தால் இழப்பல்லது ஊதியம் உண்டா? என ஒவ்வாதன உளறி ஓராண்டுக் குழந்தை வாய்ச்சோறு போலச் செய்ய மறுத்தொழிந்தோம். வாய்மைக் கழகத்துச் சார்பில் நிகழும் இக்கூட்டம் இன்றுமுதல் பன்னிரண்டு நாட்கள் தொடர்ந்து நடைபெறும். வெயில் சுடவும் வேர்க்கவும் நான்கு மணிக்குத் தொடங்கிப் பசி சுடவும் ஆள் சுருங்கவும் பத்து மணிக்கு முடியாது முடியும் கூட்டங்களையும், கேட்போர்தம் உள்ள நிலையும் உடல் நிலையும் கணித்தறியாப் போக்குடைய கூட்டங்களையும் கேட்டுக் கேட்டு நன்மக்கள் உவர்ப்புற்று வருகின்றனர். நம் கழகம் அப் போக்கு வழிச் செல்லாது. காண்மின்! மென்குளிர் காற்று கரு முதிர்ந்த தாய் போல் உலவிவர, உயிர்கள் இன்புறும் சாயுங்காலம் ஆறு மணிக்குத் துவங்கி, கூடியது ஒரு மணியளவு நிகழ்ந்து,. ஏழு மணிக்குள் நம் கூட்டம் நிறைவெய்தும் என அறிவிக்க விரும்புவல். திறந்த நெஞ்சும் மலர்ந்த முகமும் உடையராய், உண்டற்கண் உரையாடல் போல, நாம் இனிது பழகுவோமாக. உங்கள்பற்றும் என் ஆர்வமும் உங்கள் அமைதியும் என் பணிவும், உங்கள் மலர்ச்சியும் என் உவகையும், நம் தூய எண்ணமும் எண்ணத் திட்பமுமெல்லாம் என் செய வேண்டும்? ஞாலம் புகழும் திருக்குறளுக்கு நம் வாழ்க்கையை இலக்கியமாக்க வேண்டும். நம் நாள் வாழ்வு ஒழுக்கக்குறள் வாழ்வாதல் வேண்டும். என் உள்ளம் பொங்கும் ஓர் உவகை யுணர்ச்சியை அடக்கி வையாது இன்னே சொல்ல விழைவல். கேள்விப் பெரு மக்களாகிய நீங்கள் கூட்டங்குறித்த காலத்திற்குக் கால் மணிப் பொழுது முன்பாகவே வந்து விட்டீர்கள். வந்த ஒழுங்கொடு பின்னே நின்று கொண்டிராது, எல்லோரும் அமர்ந்தும் இருக்கிறீர்கள், வாய்மைக் கழகம் காட்டும் தொடக்கப் பண்பிது. சித்திரப் பாவையின் அத்தக அடங்கி என்ற ஒழுங்கு இந்நாள் மாணாக்கரிடத்து அவ்வளவு காணப்படுமாறில்லை. பூசற்கும் யாரும் யாதும் பேசற்கும் உரிய கட்சிக் கூட்டங்களில் இவ்வொழுங்கு காணப்படாமை வியப்பன்று. திருக்குறள் சொற்பொழிவுக் கேள்வியராகிய நீங்கள் ஒழுங்கமைதி காட்டுவது வழி காட்டும் இயல்பன்றோ! நிற்க. வள்ளுவர் நெஞ்சம் எனப் பெயரிய இம்முதற் பொருள், குறளனைத்திற்கும் நீங்கா உயிர்நிலையாகவும் நில்லாக் குருதி யோட்டமாகவும் அமைவது. ஆதலின் அவர் நெஞ்சம் காண்டற்கு முன், காட்சிக்குத் தக்க அறிவு விளக்கம் நாம் பெறல் வேண்டும். அவ்விளக்கமாக, முன் சொல்லிய நோக்கு என்னும் அரிய பண்புக்கு நாள்வழக்கிலும் இலக்கிய வழக்கிலும் சில காட்டுக்கள் தந்து செல்வேன். இச்செலவால் வரும் பிறிதொரு பயன் யாதெனின், தமிழ்மக்கள் வழக்கும் தமிழ்ச் செய்யுள் வழக்கும் பூவும் கனியும் போன்ற உறவுடையன என்பது தெளியப்படும். கால்மணிப் பொழுது கொள்ளும் இந்நோக்கு விளக்கத்தை, மிகையெனா, புறம்பெனாக் கருதாதீர்கள். செல்லச் செல்ல இவ்விளக்கப் பயனை உணர்வீர்கள். நோக்கு எனப்படும் நெஞ்சுகாண் முறையை முதற்கண் வழக்குலகிற் பார்ப்போம். ஒரு வணிகன் சேலையொன்றிற்கு ரூபாய் பதினைந்தென விலை பகர்கிறான். அவன் விலையைக் குறைக்க முடியாது என அழுத்திக் கூறும் நிலைகொண்டே மிகக் குறைந்த விலைக்குத் தருவான் என்று நாம் கண்டுகொள்கிறோம். இவ்வளவு உயர்த்திச் சொன்னாற்றான் மக்கள் அரைவிலை யளவுக்கேனும் வந்து நிற்பர் என்ற அவன் உள்ளக் கிடை புலனாகின்றது. ஒரு சிறு பையன் மணிப்பொறி யொன்று கொண்டுவந்து, நீர் தரும் விலையைத் தருக என்று விரைகிறான். நாம் கேளாமுன்னே என் அப்பன் மணிப் பொறியிது; அவர் இறந்து விட்டார்; நோய் வாய்ப்பட்டுக் கிடக்கும் தாய் மருந்துச் செலவிற்கென விற்றுவர என்னை விடுத்தாள் என்று மன்றாடிக் கழறினாலும், குறைந்த விலை கண்டு மயங்கி உயர்ந்த விலைமணிப்பொறியை நன் மக்கள் வாங்கத் துணியார். அச் சிறான் சொல்லைப் பொருளாகக் கொள்ளார். சொல் வழியாக அவன் களவு நெஞ்சைக் காண்ப. உங்களைப் பார்க்க வந்தேன் என்று ஒருவன் சொன்னால், என்னைப் பார்த்தாயிற்றே போ எனச் சொல்வார் உளரோ? நான் செத்தாபோனேன் பார்க்க வருவதற்கு? எனக் கேட்பார் உளரோ? வந்த காரியம் என்னப்பா என்றுதான் இயல்பாகக் கேட்ப. பொருளஞ்சல்வழிப் பணம் போக்கினால், விடு செலவு வருமே என்று கருதிக் கடிதத்துள் பொதிந்து ரூபாய் பத்து அனுப்புகிறான் ஒருவன். உரியானைத் தெருவில் நாலுபேர் சூழக் கண்டபோது என் முடங்கல் வந்திருக்குமே என்று வினவுகிறான். அதன் குறிப்பென்ன? ரூபாய் பத்து வந்ததா? என்பது, காணீர்! முடங்கலை இன்னாரிடம் கொடுத்து விட்டேன் என்று மற்றவன் விடையிறுக்கிறான். பணத்தை நீ எழுதி யானிடம் சேர்ப்பித்துவிட்டேன் என்பதன்றோ குறிப்பு. இவ்வாறு முழுக்க முழுக்க நாள்வழக்கில் சொற்களை - மொழியை - சொற்பொருள் காட்டற்கின்றி, நெஞ்சம் காட்டும் ஒரு குறிப்புக் கருவியாகவே மக்கள் பயன் கொள்ப. பலபட விளம்புவானேன்? வந்த விருந்தினரை வாருங்கள் என நாம் அழைப்பதும், வருகின்றோம் என அவர் சொல்லிச் செல்வது மெல்லாம், பண்பு காட்டும் கிளவிகள் அல்லவா? இனைய சொற்களுக்கு நெஞ்சப் பொருள் அல்லது நோக்குப் பொருள் தவிரச் சொற்பொருள் அப்பொழுது உண்டா? நாள் வழக்கிற்கு நல்ல எடுத்துக்காட்டாவது அரசியல். ஒரு நாட்டு அரசுத் தலைவன் விடுத்த அறிக்கையைப் பிற நாட்டுத் தலைவர்கள் கூர்ந்து நோக்குப. அறிக்கைச் சொற்களின் வாயிலாய் அதனை விடுத்தான் நெஞ்சங்காண முயல்ப. போரை நிறுத்தி, அமைதி செய்து கொள்வோம் என்ற அறிக்கை காணின், எதிர் நாட்டுத் தலைவன் என்ன கருதுகிறான்? அமைதிக் காலத்துப் படையாற்றலைப் பன்மடங்கு பெருகிக் கொள்வான் இட்ட சூழ்ச்சி என உட்பொருள் காண்கிறான். எங் கொள்கை உலகவமைதியே என்னுமோர் புறத்துரை கண்டால் உள்ளே படைமிகுத்து உலகினை ஏய்ப்பான் செய்த வெளியீடு என்று கருத்துரை பகர்ப. ஞாலத்தமைதி நாட்டவே நில நீர் வானப் படைகளைத் திரட்டுகிறோம் என்ற புறத்தீடு காண்பவர், நினைவன யா? அச்சுறுத்திப் பிறரை அடிமை செய் நோக்கம் எனப் புகுந்து உள்ளங் கண்டாற்போல் நெஞ்சப் பொருளை விரிப்ப. எம் நாட்டினைத் தாக்காவாறு காப்பான். முன்னறிவொடு எம் எல்லைக்குள் படை வைத்துள்ளோம் என்றால், நம்பிக்கை பிறக்கிறதா? இல்லை, இல்லை. படைமுனை காட்டி இணைக்கப் பார்ப்பர் என்று பறை சாற்றுப. இந்நிகரனவாய் அரசியலுலகில் நாம் காணும் செய்திகள் எண் கடந்தன. அரசியல் தலைவர்கள் இகல் நோக்கத்தானும் பகல் நோக்கத்தானும், மக்கள் நலங் கொளாது, பொய் மானம் பற்றி வேண்டாது கிளறிப் பார்க்கும் அளவிறந்த ஆகாமதியானும், அறிக்கை விடுத்தவர் தம் உண்மை நெஞ்சம் காணப் பல்காலும் பிழைத்து விடுகின்றனர்; என்றாலும், அறிக்கைச் சொற்கிடை முறைப்படி அறிக்கையாளன் நெஞ்சம் காணவேண்டும் இன்றியமையாமையை யாரும் உடன்படுவர். அறிக்கைச் சொற்பொருளே பொருளெனத் துணியார். இது காறும் நோக்கு என்னும் அரியவற்றுள் அரிய கருவியை வழக்குச் செயல்களில் வைத்து அறிந்தோம். இனி இலக்கிய உலகில் ஓர் எடுத்துக் காட்டுத் தந்து நிறுத்துவேன். சங்க நெடும் பாட்டாய அகநானூற்றிலிருந்து ஒரு சிறு தொடர். சோலையிடை நிற்கும் தலைவி, மருங்கில் நிற்கும் தன் தோழியை விளித்து, இவன் மகனே தோழி என்று சுட்டுகிறாள். இம்மூன்றே தலைவி சொல்லிய சொற்கள். இவன், மகனே, தோழி என்னும் இக்கிளவிகள் அருஞ்சொற்களா? தமிழ்த் தாயாகப் பிறந்த எவரும், குழவி நிலைதொட்டு இச்சொற்களின் பொருளை யறிவர். ஆனால் ஒன்று நினைமின்! அன்னோர் தெரிந்தவை சொற்பொருள்; நிகண்டுப் பொருள்; அவ்வளவு தான். சொன்ன தலைவியின் நெஞ்சப் பொருளல்ல; நோக்குப் பொருளல்ல. ஒவ்வொரு சொல்லுக்கும் பொருள் உண்டு. அது சொற்பொருள் எனப்படும். இதனை எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே என்னும் தொல்காப்பியம். இச் சொற் பொருள்களைப் பழைய நிகண்டுகளிலும் புதிய அகர நூல்களிலும் கற்கலாம். சொற்பொருட் கல்வி யார்க்கும் எளிது. சொல்லுக்குப் பொருள் அனைவர்க்கும் பெரும்பாலும் எல்லாக் காலத்திற்கும் இடத்திற்கும் ஒன்றாகவே அமையும். இனி ஒவ்வொரு சொல்லுக்கும் இயல்பான சொற்பொரு ளோடு உடன்கலக்கும் நெஞ்சப்பொருளும் ஒன்று உண்டு. இப்பொருள் சொல்லிடை என்று கலக்கும்? ஒருவன் பேசுங் காலத்து, எழுதுங்காலத்து, அஃதாவது சொல்லை ஆட்சிப் படுத்துங் காலை, அவன் எடுத்தாளும் சொல்லுள் அன்னவன் நெஞ்ச நினைவு கலந்துவிடுகிறது. இந்நெஞ்சப்பொருள் ஆள், இடம், காலந்தோறும் தனித்தனி வீற்று வீற்றுப்படும். சொற்பொருள் உடல் போல்வது நெஞ்சப் பொருளே உயிரனையது. இவ்வுயிர்ப் பொருள் காண்டற்கு அரியதாயினும் நோக்கெனும் கருவி கொண்டு, காணற்கு உரியது. உள்ளப் பொருளைக் கண்டு கொள்ள வல்ல பண்பட்ட அறிவுக் கூர்மையின்றிச் சொற் பொருளை மட்டும் கற்றொழியும் பரந்த மொழிப் பயிற்சியால் பயன் என்னோ? இவன் மகனே தோழி என்றாள் ஒரு குமரித் தலைவி. இங்ஙன் சொல்ல வாயெழுப்பிய சூழ்நிலையாது? தன் சொல்லால் தலைவி எதிர்பார்க்கும் பயன் என்ன? பொருந்திய கற்பனைப் படுத்துக என மாணாக்கர்க்குத் தேர்வில் ஒரு வினா வருவதாகக் கொள்வோம். எத்துணைப் பேர் எத்துணை வகையாகவோ எழுதி முடிப்பர். அகநானூற்றுப் பாடலை (48) யாத்த தங்கால் முடக்கொற்றனார் தீட்டிய சூழ்நிலையைக் கேண்மின்! என் மகள் சோற்றை மறந்தாள்; பாலும் பருகாள்; வருத்தமுற்று மேனியும் பசந்தாள்; தோழி, நீ அறிவாயன்றோ காரணம் என்று தலைவியின் தாய் வினவுகிறாள். வினவக் கேட்ட தோழி, அவள் துன்பத்துக்கு காரணம் யானும் விளங்க அறியேன். ஆனால் நடந்த ஒரு நிகழ்ச்சியைக் கேள். நேற்று நின்மகள் எம்மொடு பூக்கொய்யச் சென்றாள். புலிநிறம் பாய்ந்த வேங்கைமலரைப் புலி புலியென்று கூவிப் பறிப்பது நம் வழக்கங் காணாய். அவ்வழக்கப்படி, தலைவியும் நாங்களும் புலி புலியெனா விளையாடிப் போது உதிர்த்தோம். எங்கள் பொய்ப் புலி யாரவாரத்தைக் கேட்டானோ இல்லையோ ஓரிளைஞன், மார்பிற் செங்கழுநீர் மாலையணிந்தவன்; தலையில் வெட்சிப் பூத்தொடுத்தவன்; நெஞ்சு கமழச் சாந்து பூசியவன்; என் செய்தான்; கடுகியோடி வந்து தொடுத்த அம்போடு, புலி எங்கே, அது போகிய இடம் எங்கே, சொல்லீர் சொல்லீர் என்று துடிதுடித்தான். அவன் பதற்றத்தைக் கண்டு முறுவலித்து யாங்கள் ஒருத்தி புறமே ஒருத்திக்குத் திரையாக, நாணி மறைந்து ஒடுங்கினோம். எம் புன்முறுவலைக் கண்டான் அச்செம்மல். நறுங்கூந்தல் மடவீர், பழம் ஒக்கும் நும் செவ்வாயும் பொய்க்குப் பிறப்பிடமாயிற்றோ என்று நகை செய்தான். வேறென் செய்வான்! தேரேறிக் குதிரையை முடுக்கி வந்தவழிச் செல்பவன் திரும்பித் திரும்பி, நின்மகள் கண்ணினையே பன்முறை நோக்கி நோக்கிச் சென்றான். அற்றை விளையாட்டு முடிந்து வீடு மீளுஞ் சாயுங் காலத்து நின்மகள் என்செய்தாளோ எனின் அவன் மறைந்த திசையைப் பார்த்த வண்ணமாய், இவன் மகனே தோழி என ஒரு முக்கூட்டுத் தொடர் மாத்திரம் உரைத்தாள். இதுதான் நெருநல் நிகழ்ந்த நடப்பு எனத் தோழி தாய்க்கு விடையிறுத்தாள். அவையப் புலவர் தங்கால் முடக்கொற்றனார் கற்பித்த சூழ்நிலை இது. இவன் மகனே என்ற இரு சொற்களில் தலைவியின் நெஞ்ச வோட்டங்கள் நன்கு புலனாகின்றன. புலியென் ஒலி கேளாமுன் காக்கத் துடித்த அருளும், விற்பூட்டி வந்து நின்ற ஆண்மையும், பொய்க்கு அஞ்சும் ஒழுக்கமும், கண் துளைத்து எய்த காதற் குறிப்பு மெல்லாம் தலைவியின் நெஞ்சை உருக்கி விட்டன. உருகிய குமரித் தலைவி தன் காதல் வேட்கையை இவ்விரு சொற்களில் வைத்துக் குறிப்பிடுகிறாள். மகன் எனத் தக்க ஆண்டகை இவன் ஒருவனே என்று வாழ்க்கை நினைகிறாள். மகனே என்ற கிளவி இவன் ஆடவருட் சிறந்தான் என்பதனொடு, என் கணவனும் ஆனான் என வரிந்துகொண்ட அவள் துணிபையும் உடன் காட்டி நிற்கிறது. நினக்கிவன் மகனாய்த் தோன்றியதூஉம் என வரூஉம் மணிமேகலை யடியால், மகனென் சொற்குக் கணவன் என்ற பொருள் பண்டுண்மையை அறிகிறோம். ஆதலின், இவன் மகனே என்ற கன்னி வாய்த் தொடருக்கு, இவன் என் கணவனே எனவும் ஈண்டுப் பொருள்படும். இவ் வகப்பாடல் 26 அடிகொண்ட நெடும் பாட்டா யினும், இவன் மகனே தோழி என்னும் ஒரு சிறு தொடரின் சூழ்நிலையைத்தான் ஆசிரியன் விரித்துரைக் கின்றான். யான் முன் வரையறுத்தாங்கு, தலைவி தன் கூற்றால் எதிர்பார்க்கும் பயனென்ன? இதனை இப்பாட்டுக் காட்டிற்றிலது. ஒரு பருவ நங்கை சட்டென மலர்ந்த தன் காதலைச் சொற்களால் விளம்புதல் அழகிய நாகரிகமன்று என்ற கருத்தால், உய்த்துணர வைத்துப் பாடலை ஒரு நாடகம் போல் ஆசிரியன் நிறுத்தி விடுகிறான். இவன் மகனே என்ற தன் துணிபை இல்லம் ஏகும் அமையத்து, தோழி என விளித்துக் கூறுவானேன்? அவன் குடி கொண்ட தன் மனப்பாங்கினை, வாய்ப்பு வரின் தாய்க்குத் தோழி வெளிப்படுத்த வேண்டும் என்பதன்றோ தலைவி எண்ணம்! நண்பர்களே! 26 அடிப்பாடல் முச்சொல்லின் சூழ்நிலையை வெளிப்படையாகவும், நெஞ்சக் கருத்தை உய்த்துணர்வாகவும் தந்து நிற்கிறது. திருவள்ளுவரோ எனின், ஈரடி வெண்பா யாத்தவர். ஈரடி என்பதினும் எழுசீராதலின் ஒன்றே முக்காலடி என்பதே பொருந்தும். இச்சிறு பாவில் வைத்துச் சூழ்நிலையும் நெஞ்சப் பொலிவும் ஓரிடத்தேனும் காட்டவியலுமா? முன்னிருக்கும் ஓரன்பர் வினவுகிறார். எல்லாம் வெளிப்படுமாறு பலவடிப் பாடலாக வள்ளுவர் நூல் ஏன் செய்தாரிலர் என்று. நல்வினா; யாவரும் தெளியத்தகும் ஒரு வினா. வினாவிய அன்பர்க்கு நம் நன்றி. கற்பவர் சிந்தனைக்கு இடம் வைத்தார் என்பது சுருங்கிய விடை. சொல்லாற் பரந்த பாவால் என்பயன் என மறித்து வினவுவர் மதுரைத் தமிழ்நாகனார். எல்லாம் ஆசிரியனே சொல்லிவிடுவதாயின் விளக்கம் நிரம்பப் பெறலாம். விளக்கம் வேண்டுமென்பதை மறுப்பவர் இலர். அதற்கும் ஓரெல்லையுண்டு. சுருங்கச் சொல்லல் விளங்க வைத்தல் என்பது தமிழர் கண்ட நெறி. பொருளையே மறைக்கும் விளக்கம் எற்றுக்கு? வினை செய்தற்கும் பொருள்களைக் காண்டற்கும் துணை தரும் விளக்கொளியே, நம் நாள் வாழ்க்கையில் விரும்பப்படுவது. கண்கூசும் திருவிழாப் பேரொலி யாலும், விளம்பர நிறவொளியாலும் பயன் பெரிது உளதாமோ? பெருவிளக்கம் அறிவு முனையை ஒருவந்தம் மழுக்குவது. அறிவிற் பதிந்தாலும் நினைவை இயக்காது. கற்பார்க்கு நீடிய ஆர்வமும், உழைப்பின்பமும் அறிவொளியும், எண்ணத் திட்பமும் உண்டாகா. செயலெழுச்சி அறவே வருதலின்று. மக்கள் நினைவு வளர்ச்சிக்கு ஏற்ற கருத்துணவை ஆசிரியன் படைத்தருளுவான். வளர்ச்சியையே தருதல் யார்க்கு ஒல்லும்? பிறந்த குழந்தை வளர்ப்புக்கு உரிய உணவுப் பொருளையே தாய் ஆய்ந்துதர மாட்டுவள். வளர்ந்த கண், கால், கை முதலிய உறுப்புக்களையே அப்படி அப்படி முழுமையாகத் தந்துவிட்டாலென்ன? என்று மடம்பட்டு வினவுவோர் உளரோ? முழுவுறுப்பாக வேண்டின், மரக் கண், மரக்கால், மரக்கையாகத் தான் கிடைக்கும் காணீர்! ஆசிரியன்பால் அறிவுணவு எதிர்பார்க்கலாம். அவ்வளவுதான். உண்பதும், செரிப்பதும், செரித்தற்கு உழைப்பதும் வாழ வேண்டுவார் வினை. ஆதலின், வள்ளுவப் பெருந்தகை பொருட்பார்வை மாத்திரைக்கு ஒளி தந்தார். தம் சுருங்கிய குறளில். எண்ண வளர்ச்சிக்கு நிரம்பிய இடம் வைத்தார். இவ்வமைப்பா லன்றோ, திருக்குறள் பிறந்த நாள்தொட்டு ஈராயிரம் ஆண்டுகளாக எல்லார்தம் உள்ள நினைவிற்கும் ஊற்றிடனாய் விளங்குகிறது. இதனால் வையத்தார் உள்ளுவ எல்லாம் அளந்தார் ஓர்ந்து எனவும், உள்ளுநர் உள்ளும் பொருளெல்லாம் உண்டு என்ப எனவும் வரூஉம் புகழுரை தகுதி சான்றது என அறிக. இதுகாறும் பேசிய கருத்துக்களை ஈண்டு ஒருமுறை நினைவுகொள்வோம். வள்ளுவர் நெஞ்சுக்கும் குறள்களுக்கும் அமைந்த இயைபு. வித்திய வித்துக்கும் விளைந்த வித்துக் களுக்கும் உரிய தொடர்பாகும் என்று சொன்னேன். நோக்கு என்னும் நெஞ்சு காண் முறையை வழக்காலும் செய்யுளாலும் விளக்கினேன். வெள்ளைக் குறட்பா விரி என்னும் உரைக்கு ஒப்பத் திருக்குறள் உள்ளம் விரியும் எண்ணப் பெருக்கஞ் செய்வது என்று நிறுத்தினேன். இதுவரை செய்த விரிவெல்லாம் எதன் பொருட்டு? இனி யான் சொல்ல நிற்கும் எஞ்சிய பொருள் என்ன? வள்ளுவர் நெஞ்சம். அந்நெஞ்சம் ஒவ்வொரு குறளிலும் உண்டு. அத் தனிக் குறள் நெஞ்சத்தை இன்று விளக்கப் புகுந்தேனல்லேன். திருக்குறள் முழுதும், அனைத்துக் குறள்களிலும், வீறு கொண்டு ஓடிப்பரந்து கலந்து நிற்கும் வள்ளுவர் தனிப்பொது நெஞ்சமே இந்நாள் யான் விளக்க எண்ணிய பொருள். குறளனைத்தினும் ஒரே நினைவோட்டம் காணக் கிடத்தலின், பொதுநெஞ்சம் என்றும், அந்நினைவு வள்ளுவத் தோன்றல் ஒருவர் மாட்டே பிறந்ததாதலின் தனி நெஞ்சம் என்னும் பண்படை கொடுத்தேன். வள்ளுவர் தனிப் பொது நெஞ்சம் யாது? செயல், செயல், செயல். சொல்வது செயலுக்கு வரவேண்டும்; செயலுக்கு வருமாறு சொல்லவேண்டும் என்னும் ஓர் அடிப்படைக் கருத்தினைத் தம் நெஞ்சில் நீள இருத்திக் கொண்டே குறள் எழுதியவர் வள்ளுவர். செயல் அடிப்படையை யாண்டும் மறவா உளத்தினர் அப்பெருமகன். ஆதலால் செயலே வள்ளுவம் எனச் செய்க. பொதுவாகக் கல்வித் தேர்வுகளின் வினாத்தாள்களை ஆராய்வோம். இத்தாள்கள் தேர்வுக்குச் செல்லும் இந்நாள் மாணாக்கர் கற்ற அறிவையொட்டியோ, அன்னவர் எழுதும் ஆற்றலைப் பொறுத்தோ குறிக்கப்படுவன வல்ல. இவற்றைக் குறிப்பார் நோக்கம் வினாத்தாள்களைக் கண்ணுறும் பல்கலைக் கழகத்தார், கல்வியாளர், பிறநாட்டார் எல்லோரும் வகுப்புக்கு ஏற்ப (மாணாக்கர் தரத்துக்கு ஏற்ப அன்றி) நன்கு வினவியுளர் என்று மதிக்குமாறு செய்வதேயாம். நோக்கம் உயர்வுதான். ஆயினும் அதன் விளைவென்ன? மாணாக்கர்க்கு அறிவீட்டும் ஆர்வம் இல்லை. செவ்விய செயல் இல்லை. குறிப்பவர் நோக்கத்திற்கும் விடையெழுதும் மாணவர் செயற்கும் ஏற்றத்தாழ்வு மரக்கிளைபோல் அகலச் செய்வதால், கல்விச் செம்மை பெரிதும் குறைபடக் காண்கின்றோம். கல்விப் பேரால் கோடி கோடிப் பொருள் கடலிற் கொட்டியதுபோல் பயனறக் காண்கின்றோம். ஆதலின், செயலுக்கு அணித்து வாரா உயர்ந்த நோக்கத்தாற் பயனென்? வயிற்றியல்பு அறியாமல் அரசினர் செய்யும் உணவுச் சட்டம்போல யாரொருவர் வாழ்விலும் கொள்ளவியலா இமயலையன்ன உயரிய அறங்களால் வரும் நலம் யாது? மக்கள் தத்தம் நிலைக்கேற்ப, நாள்வாழ்க்கைக் கண்ணே நடைமுறையிற் கடைப்பிடிக்க வேண்டும் என்றதோர் அடிப் படையில், வாழ்க்கை நூல் செய்தவர் வள்ளுவர். செயல் நினை வொடு பிறந்தது திருக்குறளாதலின், முரணிலா வரை யறையைக் காண்கின்றோம். ஒட்டும் வாழ்வு நெறிகளைக் காண்கின்றோம். எல்லோரும் ஓர் நிலையினர் என்று வைத்துப் பொது வறங்களைச் சொல்லியொழியாது, பல்வேறு வாழ்நிலையுடையாரும் பற்றியொழுகுமாறு, தனியறங்கள் அஃதாவது நிலைக்கேற்ற பல்லறங்கள் கரையும் மாட்சியைக் காண்கின்றோம். வாழ்வாங்கு வாழ்தல் வேண்டும் என்னும் துணிவிற்று திருக்குறளாதலின், அறத்துப் பால் பொருட்பால் களோடு, காமத்துப் பாலையும் கூட்டியுரைக்கக் காண்கின்றோம். இவ் வுலகில் வாழ நூல் செய்தார் வள்ளுவராதலின், திருக்குறளகத்து, மக்கட் பேறும் விருந்தோம்பலும் சுற்றந்தழாலும் ஈகையும் நல்குரவும் இரவும் மருந்தும் என்றாங்கு. உலகியல் அதிகாரங்களைக் காண்கின்றோம். அப்பொழுதை உலக நிலையொட்டி ஒழுக வல்லாதார் பலபடக் கற்றவராக இருப்பினும், அறிவிலாதவரே என்று துணிந்து அறையுமேல், திருக்குறளை வாழ்க்கை நூல், செயல் நூல், உலக நூல் என்றழைப்பதுவே பொருத்தம் காணீர். உலகத்தோடு ஒட்ட ஒழுகல் (140) உலகத்தோடு அவ்வது உறைவது அறிவு (426) உலகத்து இயற்கை அறிந்து செயல் (637) வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் (50) என உலகவறம் வலியுறுத்திய தமிழ்ப் பேராசானை உலகியல் கூறிப் பொருளிது என்ற வள்ளுவன் எனக் கல்லாடம் விதந்தோதுவது ஒன்றாவுலகத்துப் பொன்றாது நிற்கும் உயர்ந்த புகழன்றோ! நாம் வாழும் உலகம் பொருளுலகம் என்ப. காப்பு அணிந்த பொற்கையும், தோடு தொங்கும் வயிரச் செவியும், மோதிரம் இட்ட பச்சை விரலும் உடைய ஓரன்பர் மனத்துக்கண் அவாவற்றவராய் இருப்பினும் அவரைத் துறவோராக மதிக்க உலகம் பிற்படும். துறவு என்பது உலகக் கண்ணாளர்க்குப் பொருட்டுறவையே குறிக்கும். இயல்பாகும் நோன்பிற்கு ஒன்றின்மை (344) என்பது குறள். ஆதலின் அடியவர்களை ஓடும் செம்பொன்னும் ஒக்கவே நோக்குவார் என்றும், வீடும் ஒரு பெருஞ் செல்வமாகப் புனையப்படுதல் நோக்கி, வீடும் வேண்டா விறலின் விளங்கினார் என்றும் சேக்கிழார் வரையறுப்பர். செல்வமே உரைகல்லாக மக்களை மக்கள் அளப்பது உலகக் காட்சி. இந்நிலையில் பொருளை ஒரு பொருட்படுத்திச் சொல்லா நூல் உலகிற்கு ஒட்டுங்கொல்? மக்களையெல்லாம் தம் குறள் கற்பான் ஈர்க்கும் இவ்வுலக நிலையை, பொருள் மனப்பாங்கினை உணர்ந்தவர் வள்ளுவர். வீதிவிளக்கு ஆயிரமும் ஒளிர ஓரழுத்தம் போதுமாப் போலே, மாந்தரனைவோரும் திருக்குறள் கற்கவேண்டும் என்றற்கு. பொருள் செயல்வகை என்னும் ஓரதிகாரம் போதாதா? பொருளுக்கு யாவரினும் மிக்க ஏற்றம் கூறுபவர் இவ்வாசிரியர் என்பதற்கு, அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை; பொருளில்லார்க்கு இவ்வுலம் இல்லாகி யாங்கு. (247) என்ற ஒரு குறளே கரி. காணாத் துணிபைக் கண்ட துணிபால் நிறுவுவது இக்குறள். ஒவ்வோர் உலகத்திற்கும் இன்றியமையாப் பொருள் ஒன்றுண்டு. அப் பொருளின்றேல் அந்த உலகத்து வாழ்வு இன்று. இவ்வுலகத்தை ஆள்வது செல்வப்பொருள் இவ்வுடைமை யில்லார் இவ்வுலக வாழ்க்கை இழந்தார் என்பது ஒரு தலை. இது நாம் கண்ட துணிபு. இத்துணிபு காட்டுவதென்? அருட் செல்வாக்கு உடைய உலகம் ஒன்றுண்டு. அருளிலதேல் அவ்வுலக நலமில்லை என்பது. இங்ஙன் அருளுக்கு உவமையாகும் தனிப் பேற்றோடு. அருளென்னும் அன்பீன் குழவி பொருளென்னும் செல்வச் செவிலியால் உண்டு (757) என்றபடி, அவ்வுலகக் குழந்தையை இல்வுலகத்தே போற்றி வளர்க்கும் செவிலிப் பேறும் பெற்றது பொருள் என்றறிக. எனவே, அருள்வளர்ச்சி வறியார்க்கு ஈயும் பொருட்செலவைப் பொறுத்தது அன்றோ? திருக்குறள் பொருளுக்கு அளித்த மதிப்பு இற்றாகும். வள்ளுவர் செயல்நெஞ்சத்தினர் என்றேன். அதனைத் திருக்குறளின் தொடக்கமே பறைசாற்றும். அகரமுதல எழுத்தெல்லாம் என்னும் முதற் குறளால் ஓர் இறையுண்மை சுட்டுகிறார். உண்மை சுட்டியவர் அதனை அடுத்து இறைவன் பண்புகளை விரிப்பார் எனவன்றோ நாம் எதிர்பார்ப்போம். அங்ஙன் அவர் செய்திற்றிலர். கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின் (2) என்பது இறையுண்மைக்கு அடுத்த குறள். நூலின் இரண்டாங் குறளாக இதனை வைப்பானேன்? திருக்குறளைக் கற்கத் தொடங்கும்போதே, வாலறிவனைத் தொழுக என்று வழிப்படுத்துவர். தூய அறிவுத் தொழுகையின்றித் தங்குறள் முழுதும் கற்றாலும் அறிவறிந்த மக்கட் பிறப்பிற்குப் பயனின்று என்னும் துணிபினராய், கற்றதனால் ஆய பயன் என்கொல் என வினவி விடுப்பர். இதனால் குறள் கற்பான் விழைவாரை ஒரு நோக்கப் படுத்தும் வள்ளுவர் செயல் நோக்கம் முதற் கண்ணேயே தெளிவாதல் காண். மணக்குடவர் முதலாய உரை யாசிரியர்கள் குறள் வைப்பு முறையில் தம்முள் பல்வேறு பட்டிருப்பினும், இக்குறளைப் பொறுத்தவரை அகர முதலுக்கு அடுத்த இரண்டாம் வைப்பாகவே கொள்ப. ஆதலால் வைப்பு நிலைமேல் எழுந்த என் கருத்து ஒக்கும் எனத் துணிவல். இங்ஙனம் நூலின் முகத்தேயே கற்பாரைச் செயற்படுத்திச் செயலுளத்தோடு அனைத்துப் பகுதிகளையும் எழுதிச் செல்லும் ஆசிரியர், தந்நூல் முழுதும் கற்ற பின்னும் ஒழுக்கம் கைவரப் பெறாதானை இகழ்வாராகி, பொருட்பால் இறுதிக்கண் கயமை என்று ஓரதிகாரமே வைத்தமைத்தார். வேறென் செயவல்லார்? கயமை என்னும் இழிதலைப்புத் தாங்கி ஒரு பத்துப் பாட்டு திருக்குறளில் உளவாமேல். என் நினைக்கின்றீர்? அவ்விருப்பு வள்ளுவர் நெஞ்சக் கொதிப்பின் வெளியீடு காண்மின்! மக்களே போல்வர் கயவர் (1071). தேவர் அனையர் கயவர் (1073) அறைபறை யன்னர் கயவர் (1076) . ஈர்ங்கை விதிரார் கயவர் (1077) என வரூஉம் கயமைத் தலைப்புக் குறள்களை இந்நாள் எழுத்தாளர் சொல்லாளர் நகைச்சுவைக்குப் பயன்கொள்ப, சொல்வார் சிரித்து விளக்குப. கேட்பார் வெடிசிரிப்பு மிக்குக் கைதட்டுப, பிறந்த தமிழகத்தேயே குறள் ஆட்சிப்படும் முறைக்கேடு இது. நம்மனோரை முன்னிலைப்படுத்திச் சொல்ல நாணிக் கண்ணோடி நாகரிகமாகப் படர்க்கைமாட்டு வைத்து, நம் கயநிலை வெளிப்படுத்துகிறார் என்னும் உட்கோள், சொல்வார் கேட்பார் நெஞ்சுகளைத் தைக்குமேல், நகை பிறக்குமா? சுவை யூறுமா? கைதட்டுமா? தீயவொரு மகன் திருந்த வேண்டும் என்று இடித்துரைக்குங் காலை, அவன் சிரித்தாலும் அவன் பக்கத்தார் சிரித்தாலும் என்னாவோம்? ஆறாச் சினம் உறுவோம் அல்லது இன்ன மடவனைத் திருத்த முன் வந்தோமே என்று நம்முள் வருத்தமும் நாணமும் கொள்வோம். இவ்வுணர்ச்சியோடு நினைக. வள்ளுவத் தோன்றல் நம்முன் அமர்ந்து இக் குறள்களை விரிப்பதாகக் கருதுமின். அன்பு ஊறி மனங்கசிந்து மக்கள் நலமே நினைந்து செயல் தோய ஆயிரத்தெழுபது குறள்கள் வரைந்தேன். இவ்வனைத்தையும் கற்றபின்னும், அக்கற்றான் வாழ்வில் யாதொரு பண்புத் திருத்தமும் கண்டிலேன். பல நல்ல கற்றக் கடைத்தும் மனநல்லர் ஆகுதல் மாணார்க்கு அரிது (823) என்னும் வேண்டாக் கருத்திற்கு விழைந்த இலக்கியமாயினன். எங்ஙன் எங்ஙன் ஒழுகத்தகும் என்று அறங்கூறும் என் குறள்களைக் கசடறக்கற்று, யாது பற்றிக் கொண்டான். அங்ஙன் அங்ஙன் ஒழுகப்படாது என்று எடுத்துக் கொண்டனன். இவன் மகனல்லன்; விலங்கல்லன்; மரமுமல்லன்; கயமை என்னும் புத்தம் புதிய பிறப்பினன், இப்பிறப்புக்கெனத் தனியுடம்பு இல்லை. பிறரை வஞ்சிக்கும் கோள்கொண்டு பிறக்கும்போதே, மக்களுடம்பு போர்த்து வந்த போலியன் எனவாங்கு வள்ளுவர் உரையாற்றுங் காலை அவர் நெஞ்சு கொதிக்கக் காண்போம். சொல் துடிக்கக் காண்போம். அப்போது நமக்குச் சிரிப்பா தோன்றும்? ஓர்மின்! நீங்கின் தெறூஉம்; குறுகுங்கால் தண்ணென்னும்; தீயாண்டுப் பெற்றாள் இவள் (1104) முதலின்பம் துய்த்த தலைவன் தன்னுட் சொல்லிக் கொள்வது இது நெருங்கினாற்சுடும்; நீங்கினால் யாதும் செய்யாது. இது யாருங் காணும் புறத்தீயின் இயல்பு. யான் கண்ட இவள் காமத்தீயோ நெருங்குதொறும் குளிரும்; நீங்குதொறும் சுடும். இப்புதிய அகத்தீ இவளொருத்திக்கு மட்டும் யாண்டுப் பிறந்தது? எனத் தலைவன் வியக்கின்றான். தலைவன் உரைகேட்டு நாம் நகைத்தால், நம் நகை கண்டு அவனுக்கும் நகைப்பு வரும். தலைவியே குலுங்க நகுவாள். யாரும் நகுதற்குரிய இக்குறள்கள் போல்வனவல்ல. கயமைத் தலைப்புக் குறள்கள். அவை நாணற்குரியன. அறம் பொருட் பால்களின் எல்லையதிகாரமாகிய கயமைத் தலைப்பு ஆசிரியர் மனக்கொதிப்பு எல்லைக்கோர் அறிகுறி. கற்பதும் அறிவதுமெல்லாம் வாழ்வில் நடப்பதற்கு என்பது அப்பெருமகன் துணிவு. செல்வப் பயன் பிறர்க்கு வழங்குவது, உண்டு உடுத்துத் துய்ப்பது. உடையான் தன் வாழ்நாளில் கொடாது நுகராது கழியினும், அவனுடைமைக்கு அழிவு இல்லை. அவனுக்குப் பின்றை அச்செல்வம் பயன்படும். ஏனெனின் செல்வம் உடையானொடு மாய்வதில்லை. கல்வி யறிவுகளோ எனின், உடையான் ஒழியுங்கால் தாமும் ஒழிந்து போவன. கற்ற அறிவுடையான் தன்னுடைமைகளை வாழுங் காலத்தே பயன்படுத்தியாக வேண்டும் இது பொருளுடைமைக்கும் கல்வியறிவுடைமைக்கும் உள்ள ஒரு பெரும் வேறுபாடு. வேறு வகையாகச் சொல்லின், மனிதன் புறவுடைமைக்கும் அகவுடைமைக்கும் இடைப்பட்ட வேற்றுமை என்க. இதனால் நாம் அறியக் கிடப்பது பிறிதொன்றும் உண்டு. செல்வத்தையுடையான் துய்த்தலினும் கொடுத்தல் சிறந்தது. கல்வியறிவுடையான் உரைத்தலினும் ஒழுகல் சிறந்தது. சொல்லுதல் யார்க்கும் எளிய; அரியவாம் சொல்லிய வண்ணஞ் செயல் (664) என்பது செயல் வேண்டும் திருக்குறள். பிறிதொரு வகையாக நினையின், செல்வமுடையார்க்கு மதிப்பு வழங்க வழங்க வரும்; கற்ற அறிஞர்க்கு மதிப்பு அக்கல்வியறிவுகளைத் தம் வாழ்விற் கொள்ளக் கொள்ள வரும். என் வன்புறையெல்லாம் என்ன? வாழநூல் செய்தார் வள்ளுவர். வாழ்வோ யார்க்கும் செயலின்றி யமையாது. அறிவுடையார் எல்லாம் உடையார் (430) என்று அறுதியிடும் திருவள்ளுவரே, அரம் போலுங் கூர்மையரேனும் மரம் போல்பவர் (997), அஃகி அகன்ற அறிவு என்னாம் (175), அறிவினான் ஆகுவது உண்டோ (315) என்றவாறு நாணிட்டு அந்தரத்துத் தொங்கும்படி அறிவுச்செருக்குப் படிந்தாரை ஏதும் வைத்துப் பாராது இகழ்வரேல், ஒழுக்கச் செயலற்ற அறிவின் இழிவும், அறிவுடைச் செயலின் உயர்வும் நன்கு புலனாகின்றன. ஓதுவது, உணர்வது, பிறர்க்கு உரைப்பது மெல்லாம் தன்னடக்கத்துக்குத் துணையாதல் வேண்டும். இம்மூன்றும் பெறாநிலையில் அடங்காதானை, பாவம், பேதை எனச் சொல்லி வாளா விட்டுவிடுகிறார்! கல்வி, உணர்வு, சொல்வன்மை யெல்லாம் நன்னர் வாய்க்கப்பெற்றும் அடக்கமிலானை, கேண்மின்; பேதையிற் பேதை என்று சுடச்சுட விரிக்கிறார். கல்லாப் பேதைக்கு, கற்றால் திருந்தும் வாய்ப்பு உண்டு. கற்றறி பேதையோ யார் சொல்லினும் அவரைப் பேதையாக மயங்கி இறுமாந்து தன் மடமையைப் பெருக்கிக்கொள்வன். பேதைமை யழிதற்குத் துணை செய்வனவற்றை, இம் மடவோன் அதன் ஆக்கத்திற்குத் துணைக்கொள்வன். ஆதலால் பெற்றிருந்தும் பேதைப் பட்டானை ஓரினத்துக்கே தலைமை கொடுப்பது போல, பேதையிற் பேதை என்ற சொன்னடையில் வைத்து, ஓதி யுணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப் பேதையிற் பேதையார் இல் (834) எனப் பழிப்பர். மரம் பழுத்தற்கன்றோ தோட்டக்காரன் உழைக்கிறான். அவன் பாட்டையெல்லாம் ஏற்ற மரத்தின் காய் வெதும்பி விழுந்தால், நன்று, மரம் விறகாயிற்று என்று உவப்பானோ? நினைந்தபயன் வாராமையின், எத்துணைக் கவலுறுவன்! பேராசிரியர் தம் பெருமைக்கோ கருத்துக்களை வெளியிடுப. இல்லை; இல்லை. செய்கைக்கு அன்றோ! அக்கருத்துக்களைக் கற்றார் தம் வாழ்விற் செயற்படுத்தாது வாயளவிற் சொற் படுத்தினால், அப்பெருமக்கள் வெறாரோ? பொருளாக்கு வார்க்கும் துய்ப்பார்க்கும் இடைநின்று சரக்குப் பரப்பும் தரகர் போலக் கல்வியாளர் இடைநிற்ப. அவர் என்செய்வார்? பேராசிரியர் எழுத்தினை ஊரார்க்குப் பரப்புவார். தரகர் கழிவூதியம் பெறுவதொப்பக் கற்றார் என்னும் மதிப்பீட்ட விழைப. அறிவுலகில் இத்தரகு முறையை வாழ்நூல் ஆசிரியர் பொறுப்பதில்லை. தங்கருத்துப் பரப்பாளர்களை வேண்டார். கற்றபடி நிற்கும் செயலாளரையே மதிப்ப, கற்றான் தன்வாய்வழிப் பறைசாற்றுவதிலும் செய்தான் தன்பயன்வழிப் பரப்புவதையே ஏற்ப. வள்ளுவர் தனிப் பொதுநெஞ்சம் செயல், செயல் செயலேயாகும். இச்செயல் வள்ளுவத்தை மாங்குடி மருதனார் மறந்து, ஓதற்கு எளிதாய் உணர்தற்கு அரிதாகி என்ற பாராட்டளவோடு அமைந்தார் செய்தற்கு உரியது என்றும், யார்க்கும் எளியது என்றும் முடித்தாரிலர். புலவர் சிறு கருந்தும்பியார் உள்ளுதல், உள்ளியுரைத்தல் உரைத்ததனைத் தெள்ளுதலன்றே செயல்பால எனத் தெளிதல் அளவோடு நின்றுவிடக் காண்கின்றோம். இவ்வளவுப் பாராட்டுரை, ஓதி யுணர்ந்தும் பிறர்க்கு உரைத்தும் தானடங்காவிடில் பேதை என்ற குறளின் இடிப்புரைக்குப் பொருந்துமா? உரைத்துத் தெளிதலோடு, ஒழுகுதலன்றோ செயற்பாலது என்று தும்பியார் முடித்திருந்தால், வள்ளுவர் உள்ளங் கண்ட வராவர்மன். வந்திக்க சென்னி வாய் வாழ்த்துக நன்னெஞ்சஞ் சிந்திக்க கேட்க செவி எனச் செயல் காட்டாது நிறுத்தினார் உக்கிரப் பெருவழுதியார். மருதனார், தும்பியார், வழுதியார் உள்ளிட்ட திருவள்ளுவமாலை பாடிய புலவரனைவோரும் வள்ளுவர் செயல்நெஞ்சினை மறந்தொழிந்தனர். ஏனைப் புலவோரும் மருந்திற்குக்கூட நினைவுபடுத்தினாரிலர். தனக்குவமை யில்லாக் குறள் பிறந்தும், தமிழ்நாடு வளநாடாக வில்லை. குறள் பிறவா முன் இருந்தமைந்த சீரும் சிறப்பினையுங் கூட, குறள் பிறந்தபின், அப்பெரு நூல் பிறந்த காரணத்தால் அன்று; அதன் செயலடிப் படையை அற மறந்த காரணத்தால், தமிழகம் மக்களொடும் மொழியொடும் இழந்தொழிந்தது. இஃதோர் வியப்பிருந்த வாறென்! ஆர்வ நண்பர்களே! வள்ளுவர் நூலமைப்பும் பொருட்பேச்சும் கயமைத் தலைப்பும் எல்லாம் செயல் நோக்கின என்று அறிந்தோம். பின்னும் அறிவோம். சென்னை மக்களவைப் பொருளமைச்சர், தெலுங்குத் தாய்மொழியினர் 1951-52ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தை ஆங்கில மொழியில் வெளியிடுங்காலும், பிணியின்மை செல்வம் விளைவு இன்பம் ஏமம் அணி யென்ப நாட்டிற்கு இவ்வைந்து (738) என்ற குறளை எடுத்தாளக் கண்டு இந்நாள் இன்புறு கிறோம். இந்திய மக்களவைப் பொருளமைச்சர் 1952-53 வரவு செலவுத் திட்டத்தை வெளியிட்டு வறுமைக்கு வழியுரைக்குங் காலை இலம் என்று அசைஇ இருப்பாரைக் காணின் நிலம் என்னும் நல்லாள் நகும் (1040) என்ற முயற்சிக் குறளை, குறள் மொழியிலேயே விளம்பக் கண்டு, இந்திய வுரிமை பெற்ற ஞான்றினும் கழிபேருவகை எய்துகிறோம். இங்ஙனம் திருக்குறள் நாமறியவும் ஞாலமறியவும் தன்னாற்றலை உணர்த்தி வருகிறது. காலத்தால் ஏறக்குறைய ஈராயிரம் ஆண்டுத் தொன்மை சான்ற திருக்குறள், பொருளால் இற்றை அரசியலுக்கும் எடுத்துக்காட்டாவதை உன்னும்போது நல்ல குறளுலகம் நம்முன் தோன்றக் காண்கின்றோம். குறள் பிறந்தநாள் தொட்டுத் தமிழும் தமிழ் மக்களும் தமிழ் மன்னரும் அதற்கு அளித்த மதிப்பிடம் யாதுகொல்? வழிவந்த தமிழ்ப் புலவரனைவரும் தத்தம் நூல்களில் குறள் மேற்கொண்டனர். திருக்குறள் இங்ஙன் தமிழாட்சி செய்யக் காணுதுமேயன்றி, தனக்குரிய தமிழ்க் குடியாட்சியோ, நாட்டாட்சியோ செய்யக் கண்டிலம். தமிழரும், தமிழரசர்களும் வாழ்விலும் திருக்குறளை மறந்தனர்; பொருட்பால் விரிவுபட எழுதிய அந்நூலை அரசியலிலோ மற்றும் மறந்தனர். வாழ்வும் அழிந்தது; தமிழ் வேந்தும் அழிந்தது. அழியாதென் செயும்! இன்றுங்கூட அரசுத் துறைப் பட்ட தமிழர் பல்லோர் குறளறியாமை சாலவுடையர். குறள் கல்லா முன்னைத் தமிழரின் எச்சம் இவர் என்றற்கு வேறு சான்றும் வேண்டுங் கொல்! தமிழின் உயர்வுக்குத் தமிழர் அடிப்படை. வெள்ளத் தனைய மலர் நீட்டம் (595) என்பதுபோலத் தமிழன் வளர்ச்சியளவே தமிழ் வளர்ச்சி. தமிழ் வல்லது; வாழ்வது; உயர்வது என்பதற்குத் திருக்குறளை நாம் சான்று காட்டுமாறு போல, தமிழன் வாய்மையன்; முயற்சியன்; அறிவினன்; அன்பன்; மறவன் என்றற்கு வள்ளுவத் தோன்றலை ஞாலம் சான்று காட்டுமாறு நாம் குறள் வாழ்வு வாழவேண்டும். செயற்படுத்தாக் கல்விக் குப்பையால், மனங்குவிந்து உடலொடுங்கும் மடிமையால், வசைச் சொற்களை அள்ளித் தூற்றும் இகலால், குறள் வாழ்வு ஒரு ஞான்றும் யார் மாட்டும் அமையாது காணீர்! புகழ்சான்ற திருக்குறளைப் போற்றுகிறோம். பன்மாணும் பறை சாற்றுகிறோம். அவ்வளவோடு அமைதல் ஆகாது; புகழ்ந்தவை போற்றிச் செயல் வேண்டும் (538) என்பது ஒரு தனி வள்ளுவம். செய்யாது இகழ்ந்தார்க்கு எழுமையும் இல் என்பது குறள் காட்டும் அச்ச முடிபு. ஆதலின் யார்க்கும் செயல் வேண்டும் என்பதுதான் வள்ளுவர் நெஞ்சம். இச் செயல் நெஞ்சமே என் திருக்குறட் சொற்பொழிவுகளின் உயிர்நிலை. விளக்கமெல்லாம் இதன் சூழ்நிலை. குறள் கற்பேன்; நிற்பேன்; நிற்கக் கற்பேன்; குறள் வாழ்வு வாழ்வேன்; வள்ளுவர் ஆணை என்று எண்ணுமின்! எண்ணத் திட்பங் கொள்ளுமின்! இச் செயல் எண்ணத்தொடு சொற்பொழிவனைத்தையும் கேண்மின்! எனக் கைகூப்பி வேண்டுதும். 2. பலநிலையறம் அறப்பெரு மக்களே! சால வணக்கம். இன்று நடப்பது இரண்டாவது சொற்பொழிவு. பலநிலையறம் என்பது குறித்து உரையாற்றப் புகுவேன். பலர் திருக்குறட் பேச்சைக் கேட்ட உங்கட்கு இத் தலைப்பு புதிதாகத் தோன்றும். அத்தோற்றப் புத்துணர்வை வரவேற்கின்றேன். திருவள்ளுவர்செயல் நெஞ்சினர் என்று முதற் சொற்பொழிவில் விளங்கக் கண்டோம். செயல் மக்கள்பால் அமைவது யாங்ஙனம்? அனைத்து மக்களையும் செயலாளராக்க வள்ளுவர் கொண்ட முறைகள் யாவை? அவர் அறிந்து தெளிந்த மக்கள் நிலைகள் யா? அவர் கண்ட உலகியல் யாது? இனைய வினாக்களை ஆழ்ந்தகன்று மெய்யுணர்தல் நம் கடன். இம் மெய்யுணர்ச்சி யின்றேல் திறப்பட்ட செயலுணர்ச்சி பிறவாது காண். திருக்குறட்படி செய்வோம் என்று மனத்திட்பம் பெற்ற நாம் திருக்குறளைப் பன்மாணும் அறிவோம் என்னும் வினைத் திட்பம் கொளவேண்டும். அறிவின்றிச் செயலமையாது. செயலின்றிப் பயன் பிறவாது. அறிவுடைச் செயல்தான் வாழ்க்கை தர மாட்டுவது. ஆதலின் உலகிற்கு ஒரு நூலான திருக்குறளை, எத்துணை வகையான் கற்றுத் தெளிய வொல்லுமோ, அவ்வகையனைத்தையும் மேற்கொண்டு வருந்தித் தெளிதல் தமிழர் பொறுப்பு. அவ்வுலக நூல் தமிழ் மொழியில் எழுதப் பெற்றதாதலின். ஞாலமக்களின் தொகை இருநூற்று நாற்பது கோடியென உலக நாட்டவை கணக்கிடும் அடுக்கிய கோடி கோடி மக்கள், மக்கட் பிறப்பு என்றளவில் ஒரு நிலையினரே யன்றி, வாழ்வில் மற்றுப் பல் வகையானும் எண்ணத் தொலையா வேற்று நிலைப்பட்டவர். பொருள் வரும் வழிகளை ஆக்கிக்கோடல், ஈட்டல், காத்தல், துய்த்தல், ஈதல், இவறல் என்றின்னோரன்ன பொருள் நிலைகளாலும்; கற்கும் நோக்கம். நூல், ஆர்வம், முறை, கொள்வன்மை, சுவை, நுண்மை, ஆழம், அகலம் என்றின்னோரன்ன கல்வி நிலைகளாலும்; இயற்கை யறிவு, நூலறிவு, நுண்ணறிவு, புரட்சியறிவு, தொழிலறிவு, ஆக்கவறிவு, பழக்கவறிவு, தன்னறிவு என்றின்னோரன்ன அறிவு நிலைகளாலும் ஒருத்தர்போல் ஒருத்தரிலர். பொருள் கல்வி அறிவுண்மைகள் ஒருபாற் கிடக்க, பொருளின்மை கல்வி யின்மை அறிவின்மை என்ற இன்மை நிலைகளிலுந் தாம் நம்முள் வேறுபாடு கணிக்கத் தரமோ, சொன்மின்! இனைய நிலைப்பன்மை வேறுபாடெல்லாம் நுணுகித் தெளிந்த ஓராசிரியர் வள்ளுவர். அவர் தெளிவுக்கு நம் கைக்குறளே கரி. அழுக்காற்றினனும் பண்பிலானும் கல்லாதவனும் பேதையும் பெருஞ்செல்வர்களாக, அழுக்காற்றிலாரும் கற்றாரும் இற்பிறந்தாரும் நற்பொருள் சொல்வாரும் வறியவராகக் கண்டார். தமர்பசிக்க ஏதிலார் ஆர்த்தும் பேதைமையும், எச்சிற்கை உதறாக் கயமையும், ஒருவரால் நச்சப்படாவசையும், ஈயாது இவறும் மருளும், செயற்பால செய்யா வெறுமையும் பற்றிய செல்வர் பலராக, ஊர் நடுப் பழமரமாய், நீர் நிறை ஊருணியாய், மருத்து மரமாய், கைம்மாறு வேண்டா மாரியாய் வழங்கும் ஒப்புரவுச் செல்வர் சிலராகக் கண்டார். ஒன்றெய்தி நூறு இழப்பிக்கும் சூதிற்கும், மெய்யறி யாமை விளைக்கும் கள்ளிற்கும், மாய முயக்குத் தரும் இரு மனப் பெண்டுக்கும் படூஉம் செல்வச் செலவு ஒரு பாலாக, பல குடும்பத்து ஈன்றாள் பசிதீர்க்க மாட்டா வறுமைப் பிணியை மறுபால் கண்டார். உண்ண இலன் என்று வெஃகுவாரையும், தீய செய்வாரையும், வாளா மடிவாரையும் ஒருபாற் கண்ட வள்ளுவர், நன்றே தரினும் அல்வழிச் செல்வம் வேண்டாம், உழைப்பே ஊதியம், ஊக்கமே உடைமை என்னும் உயரிய கொள்கைச் செல்வரையும், அவர் வழி வினவி ஆக்கம் செல்லலையும் கண்டார். அன்பும் அறமும் பசியும் துறந்து ஈட்டுவாரும், வஞ்சகத்தால் பொருள் செய்து மகிழ்வாரும், எளியோர் அழப் பறிப்பாரும், பழிமலைந்து ஆக்கம் பெறுவாரும், இகழ்வார் பின் நின்று மானம் இழப்பாரும், பிறர் செல்வம் வெஃகித் தம்முடைமை விடுவாரும், இரந்தே வாழப் பயில்வாரும், சிறு பொருள் வருவது போலினும் முந்துற்றுத் தம்மையே விற்பாரும் ஆக, உலகம் பொருள்வகையான் பல நிலையாளரைக் கொண்டது. செல்வம் ஈட்டுதற்கண் நன்னெறியெல்லாம் உலகச் சூழ்நிலை காரணமாய்ப் பயன் படா தொழிகையும், முயற்சியால் கோடி தொகுத்தார்க்கும் அரசியல் காரணமாய்த் துய்க்கக் கொடுத்து வையாமையும், யாங்ஙனம் ஒழுகினும் பொருட்கேடும் பெருக்கமும் உலகியலாதலும், யாபிற இருப்பினும் பொருளிலார்க்கு இவ்வுலகம் இன்மையும், நிலையாச் செல்வம் நிலையிற்று என்னும் மக்கள் மயக்கமும், சிலர் அறவே ஈயாமையும் துய்யாமையும், சிலர் முற்றும் தாமே துய்த்தலும், சிலர் அனைத்தும் பிறர்க்கே வழங்கலும் எனவாங்கு, வள்ளுவப் பேராசிரியர் பொருள் பற்றி மக்கள் பாற் கண்ட நிலைகள் பலப்பல. நுழை புலம் இல்லான் எழில் நலம் (407) என அழகுப் பேதையும், கல்லார்கட் பட்ட திரு (408) எனச் செல்வப் பேதையும், மேற் பிறந்தாராயினும் கல்லாதார் (409) எனக் குடிப் பேதையும் கல்லாதான் சொற்காமுறுதல் (402) என வாய்ப் பேதையும் வள்ளுவர் கண்ட ஞாலப்பேதைகள். இந்நிலையினர்களைக் கண்ட அப்பேராசான், இணர் ஊழ்த்தும் நாறா மலரனையர் (650) எனப் பயனில் புலவரையும், அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால் (720) என அவையறியாப் புலவரையும், கற்றறிந்தும் நல்லாரவை அஞ்சுவார் (729) என அச்சப் புலவரையும், பல நல்ல கற்றக்கடைத்தும் (823) என மாணாப் புலவரையும், கல்லாத மேற்கொண்டொழுகல் (845) எனப் பிற துறை விரிக்கும் சிறிய புலவரையும் கண்டவர். செல்வர் முன் வறியர்போல ஏக்கற்றுக் கற்பாரும், அங்ஙன் கற்க நாணிக் கல்லாதொழிவாரும், கல்வியே கண்ணெனப் பெற்றாரும், கண்ணெனப் பெயரிய புண்ணுடையாரும், செவிக்குணவாகிய கேள்வி இல்லாத போது பசியாற்றிக் கொள்ளும் செல்வ மக்களும், செவிச்சுவை சிறிதும் அறியாச் சோற்று மாக்களும் வள்ளுவக் காட்சிகள். அறிவுத் தொழுகை செய்வாரும், மக்கள் மனமுவப்பக் கலந்து பழகுவாரும், அவையோர் வேட்ப விரித்துரைப்பாரும், அவையஞ்சா மாற்றம் விடுக்கும் நோக்கொடு நிரம்பிய நூல் பயில்வாரும், பிறரின்பங்கண்டு கல்வியை மேன்மேலும் விழைவாரும், கசடறக் கற்றுக் கற்றபடி நிற்பாரும் எனவாங்கு குறள் முதல்வன் கல்வி பற்றி மக்கள்பாற் கண்ட நிலைகள் பலப்பல. பொருளானும் கல்வியானும் பன்னிலை சான்ற மக்கள் அறிவானும், மனத்தானும், பண்பானும் பட்ட நிலைப்பன்மை சொல்லத் தரமோ? ஆளுக்கு ஒருமுகம் போல ஆளுக்கு ஒரு தனிப் போக்குடையோம். காலையில் ஒன்றாவர் கடும்பகலில் ஒன்றாவர் மாலையில் ஒன்றாவர் மனிதரெல்லாம் என்றபடி, ஒருபொழுது இருந்ததுபோல் யார்கண்ணும் மறுபொழுது இருந்திலம். முகத்தளவு மக்கட் பொதுவமைப்பு உடையோ மேயன்றி, நம் அனைவோர் அகமும் உயர்திணைப் பிறப்பிற்கு ஒத்த உள்ளம் என்று துணிதற்கில்லை. நட்பினர்க்கு நஞ்சு பெய்வாரும், பெயக்கண்டும் உண்டு துஞ்சும் நாகரிகரும் நம்மிடையுளர், கொடுத்து கொளத்தகும் பெரு நட்புடையாரும், கொடுத்துவிடத் தகும் கூடாநட்புடையாரும் நம்மவர் ஆவர். நிலை கொள்ளுங்காறும் நன்கு ஒழுகுவாரும், கொளப் பட்டேம் என்று எண்ணிக்கொள்ளாத செய்வாரும் நம்மினத்தவர் அல்லரோ? செல்லாவிடத்துச் சினம் அடக்கிக் கொள்வாரும், செல்லிடத்து வெகுளி பெருக்கிக்கொள்வாரும் நம்மனோர் காண். உயிர் காக்கும் பெருநன்மை யாற்றுவாரும், கொன்றன்ன இன்னாசெய்வாரும் நம் சாதியரே. உரமில்லாதார் மரம் (600) மக்கட் பண்பில்லாதார் மரம்போல்வர், (977), தலையின் இழிந்த மயிரனையர் (964), ஒழுக்கத்தின் இழுக்கம் இழிந்த பிறப்பாய் விடும் (133) என்ற இழி கூற்றுக்கும், இளிவரின் வாழாத மானமுடையார் ஒளி (970), மக்கட்கு இறை என்று வைக்கப்படும் (388) நாணுக்கு உறைபதி என்னும் உலகு (1015), சான்றாண்மைக்கு ஆழி எனப்படுவார் (989) என்ற உயர் சொற் கிளவிக்கும் உரிமை பூண்டது மக்களினமே யன்றோ! ஒத்தமுகம் இருவர்பாற் காண்கை அரிதாதல் போல, முற்றும் ஒத்த வாழ்க்கைநிலை பெற்றார் இருவரைக் காண் கையும் அரிதாம். மேலும், ஒருவர் முகந்தானும் காலக் கோட்பட்டும் நோய்முதற் பிற அல்லல் வாய்ப்பட்டும், மறைவாகவோ புலனாகவோ, மாற்றம் உற்றுச் செல்வது பொதுக்காட்சி. நம்மிடைப்பட்ட நிலைவேற்றுமைக் கெல்லாம் இயற்கைக் காரணம், ஒருவர்க்குக் கருத்தொடங்கி அமைந்த சூழ்நிலை, மனம், அறிவு, செயல் அனையன இந்நனந்தலை யுலகத்து மற்றொருவர்க்கு முற்றும் ஒத்து அமைவதில்லை. அமையாமை குற்றமோ எனின், அன்று; அஃது யாரொருவராலும் காத்துக்கொள்ள வாராப் பிறப்பு அனைய உலகியல்பு என்க. மர முதலாய பிறவிகளிலும் நிலையொப்பின்மை அறிவார், கற்புடைத்தாய் வயிற்று இரட்டைகள் பாலும் வேற்றுமை காண்பார். மனவறிவுப் பிறப்புடைய கோடானு கோடி மக்கள்பால் நிலைப்பன்மையிருப்பதைக் கண்டு, இஃதோர் ஒழுங்கின்மை என்று மயங்கார். மக்கள் நாம் வார்க்கும் அச்சுருவமோ, நினைமின்! உலகம் ஒழுங்குட்பட்ட வேற்றுமையுடையது. அவ்வேற்றுமை யாற்றல்களால் உலகம் வளர்வது. நம் உடற் சிறுவுலகமும் கலப்புணவால் உரம் பெறக் க ணுதும் அன்றோ! பிறப்பிற்கு ஒவ்வா, மன்பதை நலத்திற்கு ஒட்டாப் பொய்ம்மிடை வஞ்சகநிலை கண்டு, சான்றோர் வெய்து துடிப்பரே யல்லது, தூய நெஞ்சில் தோன்றிய மக்களின் தனித்தனிப் போக்குக் கண்டு கசவார்; வையங் கெடுமென மயங்கார். உள்ளத் தனி வளர்ச்சியே உலகப் பொது வளர்ச்சி என்ற உண்மை கண்டவர். யாரொருவர் மனவறிவுப் பெருக்கத்தையும் இடையூறெனத் தூற்றார்காண். மக்கள் வாழ்வு வெள்ளத்தின் ஓட்டம்போல, நிலை பலவாய்ச் செல்லும் அரிய எளிய உலகியல்புகளை உட் கொண்ட பெருமகனார் திருவள்ளுவர். நட்பு, நட்பாராய்தல், பழைமை, தீ நட்பு, கூடா நட்பு, பேதைமை, புல்லறிவாண்மை, இகல் என்றினைய அதிகாரத் தலைப்புக்களை ஒருவர் நோக்காது பார்த்த அளவிலேயே, நாம் பழகும் மக்களினம் ஒரு நிலைப்பட்டதன்று; நிலைவேறு மிகுந்தகுழு என்பது புலனாம். வலியறிதல், காலமறிதல் இடனறிதல், தெரிந்து தெளிதல், தெரிந்து வினையாடல், வினைசெயல்வகை குறிப்பறிதல், அவையறிதல், அமைச்சு, தூது என்ற தலைப்புக்கள் தம்மளவிற் காட்டுவது யாது? ஓரினப் பிறவியாகிய நாம் வலியானும், காலத்தானும், இடத்தானும், இனத்தானும், தொழிலானும். இவற்றைப் பயன் கொள்ளும் வழியானும் சாலப் பிரிவுடையோம் என்பது. ஈண்டு எண்ணிய தலைப்புக்களும் நல்குரவு, இரவு, ஈகை, இரவச்சம், கண்ணோட்டம், இடுக்கணழியாமை, மருந்து, ஊழ் என வரூஉம் இன்ன பல தலைப்புக்களும் திருக்குறள் கற்பார்க்குப் பறைசாற்றும் ஓரடிப்படை என்கொல்? மக்கட் சாதி பல்வேறு நிலையிற்று; ஒருவனும் பல்வேறு நிலையினன்; அஃதாவது மனம் அறிவு பொருள் சூழ்நிலை காலத்துக்குத்தக, வந்த வினைக்குத்தக, பழகும் ஆளுக்குத்தக, நல்ல தீய, இனிய வின்னா, தெளிந்த மயங்கிய, மெல்லிய வலிய பல நிலைகளை வெவ்வேறு அளவுகளில் உடையவன் என்பது. இம்மாறா வியல்பை மனத்துட் பதித்துக் கொண்டு, நிலைப் பன்மைக் கேற்ப அறப்பன்மை கரைந்த செந்நாவினர் வள்ளுவக் குரிசில் என்ற குறள் அடிப்படையை நாம் நன்கு தெளிவோமாக. பல நிலையறம் என்ற இத்தலைப்பு புதியதாயினும் ஆழ்ந்து விளங்குவதற்கு உரியதாயினும், வாய் வழி உணவு போலவும் மூக்குவழி உயிர்ப்புப் போலவும் திருக்குறட் கல்விக்கு இன்றியமையா நேர்வழியாகும். இவ்வழிக் கற்பினல்லது, வள்ளுவர் நெஞ்சம் காண்டலும் இன்று; நாம் சாலப் பயன் உறுதலும் இன்று. பொதுமறை என்னும் கருத்தழுத்தம் படிந்து பலர் திருக்குறளைக் கற்கின்றனர். பொதுமறை பொதுமறை என்றே யாரும் இந்நூலைப் பறைசாற்றுப. ஒன்றே பொருளெனின் வேறென்ப; வேறெனின் அன்றென்ப ஆறு சமயத்தார் - நன்றென எப்பா லவரும் இயைபவே வள்ளுவனார் முப்பால் மொழிந்த மொழி. என வள்ளுவர் சமயப் பொதுமை பரப்பப்படுகின்றது. அதற்கு உரியார் அந்தணரே யாராயின் ஏனை இதற்கு உரியார் அல்லாதார் இல் என அவர் சாதிப் பொதுமை அறையப்படு கின்றது. வள்ளுவர்செய் திருக்குறளை மறுவறநன்கு உணர்ந்தோர்கள் உள்ளுவரோ மனுவாதி ஒருகுலத்துக்கு ஒருநீதி என அவர் அறப்பொதுமை விளம்பப்படுகின்றது. என்றும் புலராது யாணர் நாள் செல்லுகினும் நின்றலர்ந்து தேன்பிலிற்றும் என அவர் காலப்பொதுமை வியக்கப்படு கின்றது. வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து என அவர் இடப்பொதுமை கிளக்கப்படுகின்றது. ஆம், இப்பொதுமைப் புகழ்ச்சிக்கு எல்லாம் திருவள்ளுவர் ஆன்ற தகையினர் என்பதனை மறுப்பவரும் உண்டு கொல்! ஒருசாதி, ஒருமதம், ஒருநாடு என்றினைய செயற்கை நிலைகடந்தது திருக்குறள் என்பதனை ஐயுறுவாரும் உண்டு கொல்! மறுப்பாரும் ஐயுறுவாரும் இலராகப் பெருமை தழைத்தோங்கிப் பரவுவது உலகத் தமிழ் மறைகாண். இப்பொதுப் புகழ் நிற்க. ஒரு பெருவினா. சாதிமத நாட்டுப் பொதுமை வள்ளுவர் நெஞ்சமா? இப் பொதுமை யெண்ண வுருவின்மேல் திருக்குறள் எழுந்ததா? பொதுமைப் பரப்பும் கோளோடு, ஆசான் அறம் வகுத்தனரா? பொதுமை நிலைக் களம் எண்ணித் திருக்குறள் கற்க வேண்டுமா? நன்கு ஓர்மின்! மயங்கன்மின்! சாதிப்பற்றும் சமயப்பற்றும் தம் எல்லை கடந்து, அறிவின்றிக் கடவுளன்பின்றி, பிற சாதி சமயங் கட்கு அல்லன பெருக்கித், தலை விரித்தாடிய ஆகாப்பூசல் நாள் தொடங்கி, நாம் கொண்ட புதுக்குரலேயன்றி, வள்ளுவனார் எழுத்துக்குப் பொதுமை நிலைக்களம் அன்று. மடியன் பழம் பெருமை பேசுமாப்போல தமிழன் உயர்ந்தவன்; பொதுமை சாற்றும் வள்ளுவரைக் காண்க; தமிழ் சிறந்தது; பொதுவறங் கூறும் திருக்குறளைக் காண்க என்று, தமிழினமும், தமிழும் உட்பகையால், புறப்பகையால், காணும் உலகை வெறுத்த அழிவுக் கொள்கையால், பலபட வாழ்விழந்த காலத்து நாம் பற்றிய எழுச்சிக்குரலேயன்றி, திருக்குறட் பிறப்பிற்குப் பொதுமை நிலைக்களமன்று. சாதிசமயக் கிழட்டுப் பூசல்கள் வலியிழந்து நிற்ப கட்சிப் பூசலும் கொள்கைப் பூசலும் நிறவெறியும் இன வெறியும் போர்ச்சூழலும் அரசுப்பகையும், அறிவுப் போர்வை பூண்டு அறிஞர்கள் முத்திரை தாங்கிப் பரவி வரும் இவ்விருபதாம் நூற்றாண்டில், வாழும் பேறுடைய நாம் திருக்குறட் பொதுமையை முன்னைவிட முரசறையத் தொடங்கி யிருக்கிறோம். எம்மாட்டும் பொதுமை அறையும் அரிய நூலொன்று உண்டு காண் என்று திருக்குறள் கல்லாத் தமிழரும், அவையேறிச் சொல்லுமாறு பொதுப்பறை முழக்கி வருகிறோம். பொய்யில் புலவருக்கு நாம் காட்டற்குரிய நன்றி வேறென்கொல்! ஒழிவில் பொதுப்பறையால் வள்ளுவர் புகழை ஞாலங்காண இமயமலை மேலிட்ட ஞாயிறு ஆக்கினோம் என்று இற்றைத் தமிழரனைவரும் செம்மாப்படை யலாம். அதனை யான் ஒவ்வேன்; ஒவ்வேன். வள்ளுவர் நெஞ்சம் கேட்கும் நீவிரும் ஒவ்வீர்; ஒவ்வீர். மக்கள் ஒவ்வொருத்தரும் உய்வான். நிலைத் தனிமை கண்டு அறத்தனிமை வரைந்த, தனிமறை எழுதிய வள்ளுவர் புகழ் நம் பொதுமைக் கூக்குரலால் கடலடிக் கீழ் விளக்காயிற்றன்றோ! சாதி, மதம், நாடு முதலாய பொதுமை திருக்குறள் அறப் பிறப்பிற்கு நிலைக்களம் அன்று என்றேன். இப் பொதுமையை வள்ளுவர் பற்றினார் அல்லர் என்றேன். ஏன்? மக்கள் நடப்பை ஆய்ந்தாய்ந்து தெளிந்தகுரிசில் இவ்வாசான். நாமும் சிறுபொழுது அந் நடப்பை முன்னிறுத்திக் காண்பாம். மக்கள் பல்வேறு சாதியராக, இனத்தவராக, மதத்தவராக, நாட்டவராக, மொழியவராக, பிறகிளையவராக, ஞாலத்திடைப் பிரிவுண்டு சேய்மைக் காலந்தொட்டுக் கிடக்கின்றனர். கட்சி, பதவி, கொள்கை என்றினைய புதிய பிரிவினராகவும் கிளைத்துக் கொண்டு வருகின்றனர். போர் தொடுக்கும் இரு நாட்டாரிடை உலகப்பொதுமை, ஒரு நாட்டு இரு குழுவினரிடை நாட்டுப் பொதுமை, இரு சமயத்தாரிடை கடவுட் பொதுமை, இரு சாதியாரிடை சாதிப் பொதுமை பேசுகின்றோம். இப் பொதுமையறம் சாற்றுவார் ஆழ்ந்து நினைய வேண்டிய தொன்று உண்டு. ஒரு சாதியாருக்குள் பூசலில்லையா? ஒரு மதத்தாருள் பூசல் இன்றா? இன்று வளர்ந்துவரும் அரசியற்கண் ஒரு கட்சியுள் பெரும் பிணக்கு இல்லை கொல்? ஒரே சாதி ஒரே மதம் ஒரே கட்சி எனப் பொதுப்பட்டிருந்தும், ஏன் மலைத்துக் கொள்ப? சாதி சமயம் மொழி கட்சி நாடு என்று ஏனை வகையானும் வேற்றுமை யில்லா ஓரின மக்களுள், போரனைய பூசல் நிகழக் காணுதுமே, எதனால்? இரும்பனை வெண்டோடு மலைந்தோன் அல்லன்; கருஞ்சினை வேம்பின் தெரியலோன் அல்லன்; நின்ன கண்ணியும் ஆர்மிடைந் தன்றே; நின்னொடு, பொருவோன் கண்ணியும் ஆர்மிடைந் தன்றே; ஒருவீர் தோற்பினும் தோற்பதுங் குடியே; இருவீர் வேறல் இயற்கையும் அன்றே; அதனால், குடிப்பொருள் அன்று நுஞ்செய்தி என்று கோவூர்கிழார் அறிவறையுமாறு, ஒருகுடிப் பிறந்த நலங்கிள்ளி நெடுங்கிள்ளி தம்முள் போர் தொடுத்துக் கொள்வானேன்? பொதுமைக் குறைவு ஏதும் உண்டா? எனைத்து வகையானும் ஒற்றுமை சான்ற ஒரு தாய் வயிற்று மக்களுள்ளும், ஈருடல் ஓருயிரெனக் காதலன்பிற் கட்டுண்ட கணவன் மனைவி யருள்ளும், கோப்பெருஞ்சோழனும் மக்களும் போலப் பெற்றோர் பிள்ளைகளுள்ளும், மாமி மருமகள் நாத்தூணாருள்ளும் நாள்தொறும் விடிந்தது முதல் தொழில்போலக் காணும் பூசல் முழக்கங்கள், ஐயகோ, கொஞ்ச நஞ்சமா? ஆண்டு நாம் பரப்பும் பொதுமைக்குக் குறைவு உண்டோ? தகப்பனார் தோண்டிய கிணற்றில், நீர் வேற்றுமை யில்லாக் கிணற்றில் மக்கள் ஐவர்தம் இறைகயிற்று வேற்றுமை யன்றோ நம் கண்ணுறுத்தும் இன்னாக் காட்சி. பிறிதொருவாறாகவும் ஆய்மின். இரு வேறு குலத்தாரிடை வியத்தகு ஒற்றுமையில்லையா? கொள்வனை கொடுப்பனை இல்லையா? இருவேறு சாதியாரிடைக் கூட்டுப் பெரு வாணிகம் இல்லையா? இரு வேறு சமயத்தாரிடை உயிர் காக்கும் பெருநட்பு இன்றா? ஒரு மதத்து அரசு தன் நாடே போர்க் களமாக, தன்னாட்டு மற்றை மதக்குடியினரெல்லாம் பகைவராகத் துணிந்து, பனங்குலைபோல் வெட்டிச் சாய்த்த போது, அரசு மதத்துச் சிலர் கண்ணோடி அடைக்கலங் கொடுத்த அன்புச் செயல்கள் வரலாற்றில் உளவலவோ? மொழிபல பெருகிய பழிதீர் தேஎத்துப் புலம்பெயர் மாக்கள் கலந்தினிது உறையும் முட்டாச் சிறப்பிற் பட்டினம் என்று உருத்திரங்கண்ணனார் காட்டிய நாகரிகப்படி, பன்மொழி மக்களிடை நாம் கலந்து உறையும் வாழ்க்கை யுடையம் அல்லமோ? பல்வகையான வேற்றுமை சான்ற இந்தியர், அயல் நாட்டிடை வாழுங் காறும், ஊர்ப்பூசல் மறந்து ஓரினமாய் வாழ்கின்றனர் அல்லரோ? ஈண்டெல்லாம் வேற்றுமை நிரம்பியும் ஒற்றுமை திகழ்வானேன்? ஓர்மின்! ஒரே குடி, ஒரே சாதி, ஒரே நெறி, ஒரே மொழி, ஒரே நாடு எனவாங்குப் பொதுப்பட்டாருள்ளும் கொலையனைய பெரும் பூசல் தடிப்புற்று நீடூழி இருத்தலானும், பிறகுடி, பிறசாதி, பிறசமயம், பிறமொழி எனவாங்கு வேற்றுமைப் பட்டாருள்ளும் வாழ்வனைய பெருங்கேண்மை சால நீடித்திருத்தலானும், நாம் பகுத்தறியத் தகும் வள்ளுவர் நுனித்துக்கண்ட வள்ளுவம் என்னை மனத்துக்கண் மாசிலன் ஆதல் (34) என்பது. அப்பெருமகன் காட்டும் நெறி நாம் அறையும் புறப் பொதுமை யன்று; தனி நெஞ்சத் தூய்மை. சான்ற பொதுமைப்பட்டிருந்தும், மனமாசுடையவர் யாவர் கண்ணும் இகலுவர்; முரணுவர்; பகைப்பர். மனமாசற்றார் எவ்வகை வேற்றுமைக் கண்ணும் உறவு கொள்வர்; உதவுவர்; கலப்பர். இதுவே முடிந்த பேரடிப்படை உண்மை. ஆதலின் திருக்குறளுக்குச் சாதிசமய முதலாய பொதுமை நிலைக்களமன்று. மக்கள் மனம் நிலைக்களம். ஆளுக்கொரு மனம் உடையராதலின், அப்பன்மை நிலைக்களம், மனத்து விரிந்து பரந்த, நல்லதீய எண்ணங்கள் நிலைக்களம். சாதிசமய நாடுகளிடைப் பொதுமை நாட்டல் திருக்குறள் நோக்கமன்று. மேற்கூறியாங்குப் பொதுமைக்குள் பகையும் வேற்றுமைக்குள் நட்பும் கண்ட மனவறிஞர் வள்ளுவராதலின், தனித்தனியோரின் வஞ்சனை போக்கி நெஞ்சத்தூய்மை செய்வதே வள்ளுவம் என்று தெளிக. தன் நெஞ்சறிவது பொய்யற்க (293), நெஞ்சில் துறவார் துறந்தார் போல் (276), மனத்தது மாசாக மாண்டார் நீராடி (278), வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் (271). நெஞ்சத்து அகநக நட்பது (786) எனப் பலவிடத்தும் நெஞ்சு சுட்டிப் பேசும் திருக்குறள் நெறியை நாம் நினையவேண்டும். உடலறிஞனாகிய மருத்துவன் யாது செய்கின்றான்? மக்கள் உடலையும், உடலொன்றின் பல்வேறு அகப் புறக் கூறுகளையும் நிலைக்களமாகக் கொள்கிறான். உடம்பின் நல்ல தீய வளர்ச்சிகளை, நோயாளி தோறும் நுணுகி ஆய்கிறான். அவ்வளர்ச்சிகளுக்கு அவரவர் உணவுகளையும் செயல்களையும் சூழ்நிலைகளையும் வினவி அறிகிறான். பசியையும் உறக்கத்தையும் செரிமானத்தையும், தனித்தனி ஆளின் உடற் கூறுக்கேற்ப, பட்ட நோய்க்கேற்ப, உணவு மாற்றமோ, சூழ்நிலை மாற்றமோ, பிற மருந்தோ விதிக்கிறான். உடல் நலம் தருகிறான். யார்க்கும் மருத்துவம் செய்யும் இவ்வுடலறிஞனை, சாதி சமய மொழி நாட்டுப் பொதுமையன் எனக் கூறுவாருளரோ? அன்னோன் மருத்துவத்திற்குப் பொதுமை நிலைக்களம் என்று புகல்வார் உளரோ? சாதி சமய எண்ணமின்றியே அவற்றை எண்ணுவதும் வேண்டாமலே, உடலறிஞன் ஆள்தோறும் கைந் நாடி பார்த்து மருந்தளித்து உடல்நலம் செய்யுமாப் போலே, உள்ளத்தறிஞராகிய வள்ளுவரும் ஆள் தோறும் மனநாடி பார்த்து, நிலைக்கேற்ற அறங்கூறி, அகத்தூய்மை செய்பவர். அத்தூய்மை பெருக்கும் நல்லெண்ணங்களையும், கெடுக்கும் தீய வெண்ணங்களையும் மக்கள் மாட்டு ஆய்பவர். எந்நிலையினர்க்கு எவ்வறங் கூறினால், தூய்மை பெருகும். மாசு அகலும் எனத் தனித்தனி நிலைகளை நுணுகுபவர். திருக்குறள் ஒரு மருந்துக்கடை. அவரவர் நோய்க்கேற்ப உரிய மருந்துகள் கடையில் உளவாதல் போல, திருக்குறளகத்தும் நம் வாழ்நிலைக்கேற்ப உரிய அறங்கள் உண்டு. ஆயின் ஒரு பெரு வேறுபாடு. நம் உடல் நிலையை மருத்துவனால் அறிந்து, மருந்தினை அவன் பாலோ பிறர் பாலோ வாங்குகிறோம். திருக்குறளோ, வள்ளுவர் தாமே செய்து வைத்துச் சென்ற உயிர் மருந்துக் கடையாதலின், நம் வாழ்நிலையை நாமே நாடி, நிலைக்கேற்ற அறத்தினையும் நாமே கண்டு கொள்ளல் வேண்டும். ஈண்டு பொறுப்பும் எடுப்பும் நம் மேலன. தீதும் நன்றும் நம் எடுப்பிற்கேற்ப வருவன. வள்ளுவ அன்பர்களே! சாதி சமய இன நாட்டுப் பொதுமைகளை யான் மறுப்பதாகவோ நகைப்பதாகவோ எண்ணற்க. என்சொற்பொழிவுக் கருத்தினைப் பிறழ உணரற்க. நல்லுலக வேராய திருக்குறளடிப் படையை மயங்கற்க திருக்குறள் மக்கள் ஒவ்வொருவர்க்கும் ஞாலத்திற்கும் பயன் செய்யவேண்டும்; வேண்டுமேல், வள்ளுவனார் தூய தனி நெறியை நாடித் தெளியவேண்டும். நம் மனம்போன போக்கெல்லாம் திருக்குறளகத்துத் திணித்தலோ, காலக் கோட்பட்டு மயங்கலோ, திணித்தும் சுமத்தியும் அவ்வுண்மை நூற்குக் காலப்பெருமை வேண்டுமென்று தேடலோ, அறிவழகன்று; மக்கட்கு உய்தியுமன்று. ஆணும் பெண்ணும் மதிப்பு ஒத்த பிறப்பினர் என்றால் தொழில் கல்வி உடைகள் ஒன்றுபோல் வேண்டும் என்று துணியும் நமக்கு. மொழி வளர்ச்சி என்றால் பொருள் வளர்ச்சி என்பதின்றி மொழிக் கலப்பு என்று அறையும் நமக்கு. கல்வி என்று ஒலிபல மொழிபல கற்பித்துச் சிறுவர் சிறுமிகளை மடவர்களாக்கும் நமக்கு. உடற்பயிற்சி என்று தொழிலொடு படாது தனிப் பயிற்சி செய்யும் நமக்கு, பொதுமை சுட்டாது தனியறம் கரைந்தார் வள்ளுவர் என்பது விளங்காப் பெரும் புதிராகவே தோன்றும். வாழ்வுப் பேரறிஞர் வள்ளுவர் நிலையாகக் கண்ட உண்மை யாது? சாதி சமய நாட்டுப் பூசலனைய வெல்லாம். எரிமலை போலும் உள்ளப் பூசலின் வெளிப்பாடு. மூடிய நீர்க் கொதிப்புப்போலும் நெஞ்சக் கொதிப்பின் புறப்பாடு. காலம் பார்த்து உள் வேர்ப்பர் (487) என்றபடி, மன வெதுப்பின் வெளிப்பாடு எம்முறு துயரஞ் செய்தோர் யாவதும், தம்முறு துயரம் இற்றாகுக என்று நிலைக்களங்காணா நீலியும், காய்சினம் தணிந்தன்றிக் கணவனைக் கைகூடேன் என்று படாத துயரம்பட்ட கண்ணகியும் உரைத்தாங்கு வருவன அகக்கொதிப்பின் வெளியீடு. உள்ளப் பெரும் பூசல் தன் வெளிப்பாட்டிற்கு மடைவாய்போல, குடி சாதி சமயம் மொழி கட்சி நாடு என வரூஉம் பிரிவுகளை வாயில்களாகக் கொள்ளுகின்றது என்பதன்றி. இப் பிரிவுகள் அடைபடுமேல், வேறு பல புதிய வாயில்களை உண்டாக்கிக்கொண்டு, முன்னையினும் வேகமாகப் பூசல் விளைக்கும் என்பதன்றி, பொதுமைப் பறையால் உள்ளப்பூசல் அவிந்துவிடாது காண். யாண்டும் யாரும் வாய்திறந்தால், கைவரைந்தால், பொதுமை பொதுமை பொதுமை என்று பேசி எழுதும் நாளிற்றானே, ஞாலம் உயிர்ப்பூடற அழிந்து மட்டப்படுங்கொல் என்னும் அரிய பேரச்சம் தோன்றியுளது. பொதுமைப் பறையளவு போர்ப்பறையும் பெருகியுளது. பொதுமை யல்லது வேறு பேசா நாடுதோறும் காப்புச் செலவு முதலிடம் பெற்றுளது. ஏன், அச்சக்காட்டுள் புகைந்தோங்கும் இகல் நெருப்பினைப் பொதுமை மூடி தணிக்க மாட்டுமோ? ஓர்மின்! மூடி சூடாற்றலை மிகுதிப் படுத்தும் இயல்பினது. விறகு மிகின், நெருப்புமிகின், மூடி எனப்படும்? இகல் நெருப்பு அவிய, அச்சவிறகு பச்சையாக, அகநீர்மையே வேண்டப்படுவது. ஞாலப் பூசல் குறைப்பான், வள்ளுவர் கண்ட நெறி உளப்பூசல் தணிக்கும் அகத் தூய்மை எனத்துணிக. வள்ளுவர் செயல்நெஞ்சத்தைப் பொச்சாந்த நாம் அப் பெருமகன் தெளித்த தூய தனி நெறியையும் பொச்சாந்தோம். உலகத்து எம்மகனும் எம்மகளும் தன் மனம் தூயதாய் வாழ எழுதப்பட்டது குறள் என்பதை நினைந்தோமில்லை. மக்கள் தனிவாழ்வுக் கல்லறை மேல் பொதுக்கோபுரம் எழுவான் பாடுபடுகிறோம். நோய்நாடி நோய்முதல் நாடி அது தணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல் (948) என்னும் மருத்துவ முறையைப் பற்றாது, தனிஉள் வேக்காட்டினைப் பாராது, தெருமருத்துவன்போலப் பொதுமை மருந்து சாற்றிக் கழிப்பதாலன்றோ, நாடு தொறும் அரசு தொறும் குழப்பம், ஊர்தொறும் குடிதொறும் குழப்பம், உள்ளந்தொறும் குழப்பம் என ஞாலமுழுதும் ஒரே குழப்பக் கொந்தளிப்பு பரவி நிற்கிறது. நாடுகள் தம்முள் அச்சப்பகை நீங்கி, காப்புச் செலவை யெல்லாம் மக்கள் பசி பிணி நீக்கவும். அறியாமை அகற்றவும், மாசொழிக்கவும் புதுவழிப்படுத்து மேல், இவ்வுலகம் என்றும் காணாநிலையுலகமாம் அன்றோ! மக்கள் நலியப் போர்ச்செலவு பெருக்கும் பொதுமைக் குரலால் யார்க்குப் பயன்? மனிதன் தன் உள்ளப்பூசலைப் பலவாயில்களில் வெளிப் படுத்துகிறான். அறியாப் பேதையுலகம் மூலங் காணாது சாதிப்பூசல், சமயப்பூசல், நாட்டுப்பூசல், கொள்கைப் பூசலென வழிப்பேரிட்டு மயக்குகின்றது. முதற்கண் ஓரிடத்து நீர்த்தூய்மை செய்ய நினையாது, நீரோடும் பல்குழாய் தோறும் அத்தூய்மை செய்ய அரும்பாடுபடுகின்றது. அகத்தூய்மை தத்தம் வாய்மையாற் காணப்படும் என்று துணியாது, பொதுமைப் பேச்சாற் காணப்படும் என்று நம்புகின்றது. எக்காலத்து எவ்வாயில் புகழப்படுகின்றதோ அவ்வாயில் வஞ்சகர் பலர்க்கு ஒளிவிடமாகிறது என்பது வரலாற்றுக் காட்சி. ஆதலின் வாயிற் பொதுமை பரப்புவதினும், அவ்வாயில் வழி வரூஉம் எண்ணத் தூய்மை பரப்புக. எண்ணம் பிறக்கும் நெஞ்சத்தூய்மை வலியுறுத்துக. தூய்மையே வள்ளுவம் எனத்துணிக. ஞாலவளர்ச்சி வேற்றுமைக் கண்ணது. நாம் விரும்பினும் வெறுப் பினும், ஞாலம் வேற்றுமைகளை ஆக்கிக் கொண்டுதான் வருகிறது. வேண்டத்தகும் வேற்றுமைகளோடு, தகா வேற்றுமைகளும் உடன் தோன்றுவது வளர்ச்சியின் இயல்பு. தகாதன ஒழித்தோ குறைத்தோ தகு வேற்றுமைகளைக் காப்பதும் பெருக்குவதும் அறிவுடைமை. ஒரு மரத்து எடுத்த இருவிதைகள் ஒரே காலத்து ஒரே வகை நிலத்துப் பயிரிடப் படினும், அவற்றின் வளர்ச்சியில் வேற்றுமைகளைத் தெற்றெனக் காண்கிறோம். இரண்டு உயிர்களுக்கு வாழ் நிலைகளை எத்துணை தான் ஒன்றாக்கினும், வேற்றுமைக் காட்சி வெளிப்படை. அகம் தீதாயின், பகை யுணர்ச்சிக்குச் சிறு வேற்றுமையும் போதாதா? வழுத்தினாள் தும்மினே னாக அழித்தழுதாள் யாருள்ளித் தும்மினீர் என்று (1317) என ஊடற்குத் தலைவி காரணம் இன்றியும் படைத்துக் கொள்ளுமாப்போல, இகலுடைய நெஞ்சம் வேற்றுமை யின்றியும் படைத்துக் கொள்ளவல்லதன்றோ? மேலும் மக்கள் பல்பூசலெல்லாம் இகல், அழுக்காறு, அவா என்றினைய மனமாசாலும், பேதைமை புல்லறிவு என்றினைய அறிவழுக் காலும் எழுவனவன்றி, கேவலம் வேற்றுமை யொன்றானே எழுவன வென்றா எண்ணுகிறீர்கள்? நற்பண்புக்கு வேற்றுமை இடையூறாகாது; ஆகப்படாது. வேற்றுமை யெல்லாம் காரணம் என மயங்கும் ஒரு போக்கு ஏற்படின், உடலுறுப்புப் போலும் எனைத்துநல் வேற்றுமையும் இடையூறென்றாகிவிடும். மக்கள் ஆளுக்கொரு உடல் வேற்றுமையும், ஆண்பெண் பால் வேற்றுமையும், குழவி, இளமை, முதிர்வாம் பருவவேற்றுமையும் கூடப் பகைக்கு உரிப்பொருளாய் விடும். ஆதலின் மனத்தூய்மையும் மக்கள் ஒற்றுமையும் வேற்றுமைக் குறைவை நம்பியிருத்தல் சாலா. வேற்றுமையிடையும் ஒற்றுமை காட்டுவதே நம் கோளாதல் வேண்டும். பகையுள்ளும் பண்புள பாடறிவார் மாட்டு (995) ஊழி பெயரினும் தாம் பெயரார் (989) என்றபடி, எனைப்புற வேற்றுமைக் கண்ணும் அகத் தூய்மை காத்தல் வேண்டும். எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம் மாணா செய்யாமை தலை (317) என்றபடி வழிப்பொதுமை பேசாது, நெஞ்சத்தொருமை, மூலத்தூய்மை சுட்டுவதே வள்ளுவமாம். ஆதலின் தனிமறை யென்றோ, வாழ்வுமறை யென்றோ, செயல்மறை யென்றோ, தூயமறை யென்றோ, என் மறை யென்றோ, திருக்குறளுக்குப் பெயர் பொருத்துக. ஆகுல நீர பிற என வள்ளுவர் தள்ளியதனை அறமாகப் பறைசாற்றாது, மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்து அறன் என அவர் துணிந்ததனை உளங் கொள்க. அன்பர்களே! பலநிலையறம் என்ற தலைப்பிட்டு இந் நெடும் பொழுது விளக்கிய ஓருயிர்க் கருத்தாவது:- திருக்குறட்கு மக்கள் நெஞ்சமே நிலைக்களம். அந்நிலைக்களத் தூய்மை செய்வதே வள்ளுவம். நம் ஒவ்வொருத்தர் நெஞ்சமும் பல்வேறு எண்ண நிலை களைக் கொண்டது; ஆதலின் தூய்மை நோக்கிய ஆசிரியர், நம் எண்ண நிலைப் பன்மைக் கேற்ப, அதனிற்பிறந்த வாழ்வு நிலைப்பன்மைக் கேற்ப, அறப்பன்மை வகுத்துக் காட்டினார். நிலைபல உட்கொண்டு ஒரு நிலைக்கு ஓரறமாகப் பலவறம் வகுத்த செயல் நுட்பம் திருவள்ளுவர் கண்ணேதான் காணக் கிடப்பது, திருக்குறளைக் கற்றபின், அதற்குத்தக நிற்கமுனையும் நாம் கசடற்ற இம் முறையில் அவ்வாழ்வு நூலைக் கற்க வேண்டும். அதிகாரத் தலைப்புக்கள் அளவில் பலநிலையறம் யாங்ஙனம் தோன்றுகிறது என முன்னர் உரைத்தேன்; இனி வருஞ் சொற்பொழிவுகளிலும் உரை செய்வேனாதலின், ஈண்டுக் குறள்களிடை வைத்து ஓரளவு காண்பாம். நிலையில் திரியாது அடங்கியான் தோற்றம் (124), அவரவர் பண்பறிந்து ஆற்றாக்கடை (469), தம்மொடு கொள்ளாத கொள்ளாது உலகு (470), நிலையின் இழிந்தக் கடை (964) என வரூஉங் குறள்களால், ஆசான் கண்டுகொண்ட நிலைப்பன்மை தெளியத் தகும். செல்வ வாழ்வும் செல்வத் தாழ்வும் கேடும் பெருக்கமும் இல்லல்ல (115) என்றபடி உலகியல்பாகும். மக்கள் புதுச் செல்வக்காலை ஏக்கழுத்தம் உடையவராய் விம்மி நடப்பர். வறுமைக்காலை குற்றம் செய்தாற்போல் கூசிப் புறஞ்செல்வர். புறவாழ்வுக்கு ஒப்ப, மன வாழ்வையும் ஏற்ற விறக்கஞ் செய்து கொள்வர். மாந்தர்தம் உள்ளத்து அனையது உயர்வு (595) என்று எண்ணாது செல்வத்து அனையது உயர்வு என மயங்குவர். இஃது அறிவுடைமை யன்று காண். ஒருபொழுதும் வாழ்வது அறியா நாம் கோடி பல கருதும் கற்பனைக் கண்ணை இயல்பில் உடையோம். இன்னாமை இன்பம் எனக் கொளின் (630) என்றபடி, ஒன்றனை ஒன்றாக மாறி நுகரும் அறிவுக் கற்பனை வல்லோம். இழந்ததை, இல்லாததை நிறைமனஞ் செய்துகொள்ளும் அகவன்மை மக்கட்கு உண்டு. இவ்வன்மையை வேண்டுழி வேண்டுழி விரிவித்துக் கொள்ளும் மக்களே வாழ்வு நுட்பம் அறிந்தோராவர். புறவளன் பெருகிய காலத்துக் குணநலம் பெருகினாற் போல் உணர்ச்சியால் துள்ளித் திரியும் மனவெழுச்சியைக் கற்பனை வன்மையால் மட்டுப் படுத்த வேண்டும். புறவளன் சுருங்கிய காலத்து இலைபோல் உடன் சுருங்கும் மன முடக்கத்தை, அவ் வன்மையால் காத்து நீட்ட வேண்டும். பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய சுருக்கத்து வேண்டும் உயர்வு (963) என்பது புறநிலைக் கேற்பக் கொளத்தகும் அகநிலையறம். புறவகச் சமனிலை செய்துகொள்க என்பது இக்குறட்கருத்து. செல்வக்காப்போ உயிர்க்காப்போ நம் வாழ்வின் குறிக் கோளன்று. செல்வ வரவும் செலவும் பெரும்பாலும் ஊழ் எனப்படும் உலகத்தியற் கையைப் பொறுத்தது. உயிர் நிற்பு நம் முயற்சிக்கு உட்பட்டதன்று. அஃது என்றோ ஒரு நாள் நீங்கும் நில்லா இயல்பிற்று. ஆதலின் நாம் உயிர் வாழுங் காறும் தத்தம் உளத்தைத் தூய்தாக, பட்டமாசு நீங்க, புதுமாசு படியாமல் போற்றிக் கொள்வதே நம் கோளாகும்; நம்மனைவோர் முயற்சிக்கு உட்பட்ட இன்றியமையா நோக்கமாகும். மனத் தூய்மையே உயிரினும் காத்தோம்பத்தகும் ஒழுக்கமாகும். செல்வ நிலை செருக்குத் தந்து எளிதில் பல் மனமாசு விளைவிக்கும் என்ற கருத்தானன்றே, பணிதல் அவருள்ளும் செல்வர்க்கே செல்வம் தகைத்து (125) என நிலையறம் விதந்தோதுவர். ஆற்றுவார் ஆற்றல் பணிதல் (985) என்பதூஉம் செல்வம். பதவி முதலிய புறப் பெருக்க நிலையார்க்குக் கிளக்கப்படுவது என அறிக. உள்ளம் போற்றாமல், முயற்சி வழிபற்றாமல், உயிர் மெய்காப்பான் யார்பின்னும் வால்பிடித்து இரப்பார் நிலை நோக்கி, பெருந்தகைமை பீடழிய வந்தவிடத்து ஊனோம்பும் வாழ்க்கை மருந்தோ (968) என்று இகழ்வர். இன்ன நிலையான் கெட்டான் எனப்படுதல் நன்று (967) என வழி காட்டுவர். இனைய குறள்களெல்லாம் உடல் உயிர் உள்ளம் பற்றிய பல்வேறு எண்ண நிலைகளுக் கொப்ப மக்களை அறிவித்தும் இடித்தும் இகழ்ந்தும் சொல்லிய பலநிலை யறங்களாகும். உலகம் மக்கள் கூட்டுறவால் நாகரிகப்படுவது. முற்றும் ஒதுங்கிய வாழ்க்கை என்பது உண்மையில் யார்க்கும் இன்று. தன் முயற்சி ஒருவர்க்கு எளிய இனிய கைப்பிடி யாயினும், இயன்ற வரை பிறர் உதவி மறுத்த வீறு நன்னோக்கமாயினும், யாரொருவர் முழு வாழ்க்கையும் தன் முயற்சி யொன்றானே கட்டி முடிக்கப்படுவது என்று விளம்ப வொல்லுமா? பலருதவியும் தன் முயற்சியும் இயைந்த சேர்க்கையே வாழ்க்கை என்பது. ஆதலின், என்றும் பலர்க்குக் கடமைப்பட்டுள்ளோம் என்ற மறவா நல்லுணர்வு ஒரு மக்கட் பண்பாகும். உதவிகளுள் பொருளுதவியே சிறந்த தென மக்கள் கருதுப. இஃது ஆழ்ந்து காணாக் கூற்று. பொருட் பயனே இன்பமெனத் துணியாது, பொருளே இன்பமென்னும் அறியாமையோடு ஒப்பது. போடும் சோறு பெரிதென மகிழாது, அரிசியும் அதனினும் காசும் சிறப்பின என்று அவாவும் பிச்சைக்காரன் அறிவை நிகர்ப்பது. பொருள் பொதுவுடைமைப் படினுங்கூட, அதனாலென், மக்கள் வாழ்க்கை தம்முள் உதவியின்றி இயங்காது. நோயினர்க்கு உழையிருப்பார் உதவியும், முதியோர்க்கு இளையோர் பணிவிடையும், ஒன்று கற்று ஒன்று கல்லார்க்கு அது கற்றார் அறிவும், ஒன்றில் மெலியார்க்கு அதனில் வலியார் பற்றும், தவறி விழுவார்க்குக் காப்பார் துணையும், கொள்கைப் பூசலார்க்கு அமைதி காட்டுவார் கேண்மையும், மானத்தால் நாணிடுவார்க்கு அஃதறுப்பார் சார்பும் என்றினைய அருளன்பு உதவிகள், உயிரென ஒரு பொருள் ஞாலத்து உள்நாள்வரையும் வேண்டப் படும். ஆதலின் செய்ந்நன்றியறிவு, உயிர்ப்பண்புள் - மக்கட் பண்புள் - தலையாயது என்க. இந்நன்றி யுணர்ச்சியை உதவி செய்தவரே கொல்லுவதும் உலகிடைக் காட்சி. இவ்வுலகியலை வள்ளுவர் அறிவர். நன்றி செய்தவன் செயப் பெற்றானைக் கைம்மாறு காட்டும்படி கட்டாயப்படுத்துகிறான். தினைத்துணை நன்றி செய்தவன் தானே பனைத்துணைக் கைம்மாறு வேண்டுகிறான். உதவி பெற்றானது நன்றியுணர்ச்சியைக் கொல்லுகிறான். நன்றி காட்டத் தயக்கஞ் செய்வானேல், பகைத்துச் சீறி யெழுந்து, நெடுநாட் பகைவன் போல உயிரழிதுன்பம் உறுத்துகிறான். இஃதோர் மனநிலை, இந்நிலைக்கண் உதவி பெற்றான் தன் மனத் தூய்மை கெடாவண்ணம் நடப்பது யாங்ஙன்? சிறந்த மக்கட் பண்பான நன்றி யுணர்ச்சியைக் காப்பது யாங்ஙனம்? கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த ஒன்றுநன்று உள்ளக் கெடும் (109) ஒருவரே நமக்கு நன்மையும் அன்மையும் செய்த நிலையில் -நல்லது ஒன்றாகத் தீயபலவாகச் செய்த நிலையில் - பண்பு வேண்டும் குறளிது. நினைவுப் படைப்பால் எதனையும் அழித்து ஆக்கிக் கொள்ளும் அகப்பெருவன்மை, வேண்டுங்கால், நம் நெஞ்சத்துப் பிறக்குமாதலின், இன்னா செயினும் உள்ளக் கெடும் என வழி சுட்டினார். வெள்ளத் தனைய இடும்பை அறிவுடையான் உள்ளத்தின் உள்ளக் கெடும் (622) எனப் பிறாண்டும் யாண்டும் இக்கற்பனை யாற்றலை ஒப்பற்ற தனி நெறியாக வலியுறுத்துவர். இதனைக் குறள் வழி என்றும், வள்ளுவ வழி என்றும், செயல் வழி என்றும் ஈண்டே ஆழப் பதித்துக் கொள்க. உதவியவன் நன்றியை அழிக்க முயன்ற நிலையிலும், அதனை அழியாது நொச்சி செய்தல் உதவி பெற்றவன் கடன் என்ற பண்பால், நன்றி மறப்பது நன்றன்று; நன்றல்லது அன்றே மறப்பது நன்று. (108) என நிலையறம் கூறுவர் வள்ளுவர். தம் மக்கள் தாம் விதிப்பாரையே மணப்பது நன்றிக்கு அறிகுறி எனப் பெற்றோர் எண்ணலாமா? தன் கொள்கைகளை ஒத்தூதித் தன்முன் புகழ்பவனே நன்றி யுணர்வினன் எனக் கல்விக்கு உதவினான் கருதலாமா? தன் பகைவனைத் தனக்கும் பகைவனென இகலினானே நன்றி கொல்லாதவன் என நம் வாழ்வில் உதவினோன் நினைக்கலாமா? என் கடன் உதவி செய்தல்; தன் கடன் நன்றி காட்டல் என்ற பகுத்தறிவு மெய் வாழ்க்கையை நல்கும். கடன் மாறிமயங்கலன்றோ உலகக் குழப்பத்திற்குக் காரணமாகிறது. தனி மக்களுள் பகைமையைப் பெருக்குகிறது. உதவுவாரெல்லாம் குறி யெதிர்ப்பை நீரராகிக் கட்டாயக் கைம்மாறு வேண்டுவரேல், மக்களினம் செத்துப் போம் என்ற எதிருணர்வாலன்றோ, செய்ந்நன்றி யறிதல் அதிகாரத்தை உதவி பெற்றார்மேல் வைத்து அறங்கரைந்தார். பயன் தெரிவார் பனைத்துணையாக் கொள்வர் (104) என்றும், செய்ந்நன்றி கொன்ற மகற்கு உய்வில்லை (110) என்றும், உதவியுண்டார் மேலிட்டு வலியுறுத்தினார். இந்நிலை ஒருபாலாக, நன்றி கொல்லும் மாக்களையும் பலராய் நம்மிடைக் காண்கின்றோம். காலமறிந்து பயன் தூக்காது தாமே முன்வந்து செய்த உதவிகளைப் பெற்றும், நன்றிக் கொலையோடு உதவினான் குடும்பத்துக்கும் கொலை சூழ்வாரும் உலகிற் சிலரல்லர். மணமானபின், ஈன்று புறந்தந்து சான்றோராக்கிய தந்தை தாய்த் தெய்வங்களை மிதித்து நடப்பாரும், அன்னோர் முதுமைப் பருவத்துச் செவிலிபோல் காவாமையே யன்றி, இக்கிழடுகள் காடேகும் நன்னாள் எந் நாளோ என்று வெடுக்கென வீழ்வாரும், செருப்புத் தேய்த்துக் கழிப்பதுபோல நலனுண்டு மெலிவித்த மனைவியைப் பரத்தமைப் பற்றால் வைவாரும். ஏறப் படி தந்தானை ஏறியபின் காலால் உதைப்பாரும் நம்மிடை அரிய ரல்லர், எனவாங்கு நன்றிக் கொலை செய்ததன் மேலும், வாழ்வு அறுக்கும் கயவர்களைக் காண்கின்றோம். வளர்த்த கிடாய் மார்பிற் பாய்ந்தாற்போலும் இந்நிலைக்கண், பயன் தூக்காது உதவினார் நடக்கை யாது? மரத்தின் மேலிருந்துகொண்டே அதன் கிளையை வெட்டுகிறான்! நிலத்தின்மேல் நின்று கொண்டே அதற்குக் குழி தோண்டுகிறான். நம்மால் வளர்ந்து கொண்டே நம்மைக் கீழறறுக்கிறான். இந்நிலைக்கென்று, அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை. (151) என ஓரறம் வகுப்பர். பொறுத்தற்கு உரியதன்றாயினும் பொறுத்தல் தலையென்ப. பொறுத்தலோடு; கீழறுப்பாரைத் தடுத்தலும் வாழ்வு முறைகாண். ஆதலின் மடப் பொறுமைப் படாது. தகுதியான் வென்றுவிடல் (158) என்றும், அவர் நாண நன்னயஞ் செய்துவிடல் (314) என்றும் வாழ்வு வழி கூறுவர். உண்கடன் வழிமொழிந்து இரக்குங்கால் முகனும்தாம் கொண்டது கொடுக்குங்கால் முகனும்வே றாகுதல் பண்டுமிவ் வுலகத்து இயற்கை என்று பாலை பாடிய பெருங்கடுங்கோ உணர்த்தியபடி, ஒன்றைப் பெறூஉங் காறும் ஒருவகை மனப்பான்மையும், பெற்றபின் நேர்முரணான மனப்பான்மையும் உலகப் பொதுக்காட்சி. தேர்தல் அமையத்து வாக்குரிமை வீடு வீடாக வந்து இரக்கும் ஒரு பெருமகன் அவைப்பதவி பெற்றபின், தம்மைத் தூக்கி விடுத்த மக்களின் அணிமையை வெறுக்கிறான். இனி ஐந்தாண்டிற்கு ஈசனும் அசைக்க முடியாதென எண்ணத் தடிப்பு உறுகிறான். இந்தியா உரிமை பெறுநாள் வரையும் மக்கட்கு இருந்த ஒற்றுமையும் தன்னல மறுப்பும் பெற்றபின், பெருவேற்றுமையும் பதவி வேட்டையுமாக மாறிவிடக் காண்கின்றோம். பழகாமுன் ஒருவர்பால் வைத்திருந்த மதிப்பினை, அடிக்கடிப் பழக்கத்தால் மனம் குறைத்து எண்ணுகின்றது. அணித்திருப்பார் அருமை இயல்பிற் புலப்படுவதில்லை. அவர் சொல் எளிதில் செவி யேறுவதில்லை. இன்ன இரு வேறு ஆகா மன நிலைகளை உட்கொண்டு, பழைய மெனக்கருதிப் பண்பல்ல செய்யும் கெழுதகைமை கேடு தரும். (700) கொளப்பட்டேம் என்றெண்ணிக் கொள்ளாத செய்யார் துளக்கற்ற காட்சி யவர் (699) என நிலையறம் விதிப்பர். இவ்வாறு குறள்தோறும் மனம் வைத்து அறிவோட்டி நின்று ஆராயின், ஒவ்வொரு குறளும் ஒவ்வொரு நிலையை யுட்கொண்டு அந் நிலைக்கேற்ற தனியறம் சுட்டுவது என்று தெளியப்படும். நிலையோடு ஒட்டிக் கல்லாது யார்க்கோ சொல்லப்பட்டது என இகழும் பொது மனப்பான்மையில் இன்று கற்று வருகிறோம். இம்முறை தூய குறட் கருத்தை வெளிப்படுத்தாதன் மேலும், செயலுணர்ச்சியை உண்டாக்காது காண். கற்க கசடறக் கற்பவை (391) கற்றில னாயினும் கேட்க (414) எனைத்தானும் நல்லவை கேட்க (416) என்ஒருவன் சாந்துணையும் கல்லாத வாறு (397) கசடற வல்லதூஉம் ஐயந்தரும் (845) என வரூஉம் கல்வி பற்றிய பல குறள்களும் மக்களின் பல்வேறு நிலைகள் நோக்கிப் பிறந்தன என்பது வெளிப்படை. வள்ளுவர் பெருமகன் மறந்தோ இகழ்ந்தோ எந்நிலையினரையும் குறளகத்து ஒதுக்கவில்லை. நீ மிகவும் இழிந்துவிட்டனை; இனி உனக்கு முன்னேற்றம் இல்லை; இங்ஙன் கிடந்து மாள்வதுதான் உன் முடிவு எனத் தள்ளி விடும் சிறுமை வள்ளுவர் உணர்ச்சியில் இல்லை. நீ பெரிதும் உயர்ந்து விட்டனை; இனிப் பெறவேண்டும் உயர்வு உனக்கு யாதும் இன்று எனப் புகழ்ந்து அழிக்கும் போக்கும் அவர் மாட்டு இல்லை. இழிந்தார்க்கும் உயர்ந் தார்க்கும் எந்நிலைக் கண்ணும், பின்னும் நல்வாழ்வுண்டு; மேல்வாழ்வு உண்டு என்னும் அழிவில் கொள்கையுடையவர். இவ்வாழ்வுக் கோட்பாட்டினின்றும் அவர் திருக்குறள் பிறழ்ந்ததில்லை எனத் தெளிமின். ஏவவுஞ் செய்கலான் தான் தேறான் (848) அஃதாவது சொன்னாலும் அறியான் தன்னாலும் அறியான் என்னும் அறிவிரண்டும் கெட்டான் நிலைக்கே இடித்துரைத்து முன்னேற்றம் காட்டுவரேல், யாபிற நிலைக்குத் திருக்குறளகத்து உயர் வழியில்லை! பொறியின்மை யார்க்கும் பழியன்று (618) என உறுப்புக் குறைந்தான் நிலையும், இன்மை ஒருவற்கு இளிவன்று (988) எனப் பொருள் வறியான் நிலையும் உயர்வடைய ஆண்டுப் பேசப்படுதல் வியப்பன்று. ஆதலின், நீரற்ற கடல்போல் அஞ்சத்தகும் ஆழ்ந்த தாழ்நிலை யுடையார்க்கும் நிலையுயர்த்தும் வழிகாட்டி திருக்குறளல்லது பிறிதில்லை. செயற்கரிய செய்வார் பெரியர் (26) உள்ளுவது எல்லாம் உயர்வுள்ளல் (596) கடன் என்ப நல்லவை எல்லாம் (981), குற்றமே காக்க பொருளாக (434), வேண்டாமை யன்ன விழுச் செல்வம் (363), உற்ற நோய் நோன்றல் உயிர்க்கு உறுகண் செய்யாமை (261), தன்நெஞ் சறிவது பொய்யற்க (293) ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும் (131) எனவரூஉம் நிரம்பிய பல்கருத்துக்களால் நாம் அறியக் கிடப்பது என்? இமயமலை மேல் நிற்கும் ஞாயிறு போல உயர்ந்து ஒளிறும் வாழ்க்கை நிலையுடையார்க்கும் நிலை தாழாது உயர்த்தும் அறிவுச்சுவடி திருக்குறளல்லது பிறிதில்லை காண். தந்தையின் ஒருதனிவீடு மக்கள் நால்வர்க்குப் பிரிவு படுகின்றது. ஒருமகனைப் பார்த்து, இஃது யார்வீடு என்றால், எங்கள் பொதுவீடு என்பான். பின்னும் அவனை, இவ் வீட்டகத்து உன் பகுதி யாது என வினவினால், தன் வாழ்க்கைக்கு உரிய தனியிடத்தைச் சுட்டுவான். அத்தனியிடமே அவன் செய்கைக்கு நிலைக்களமாவது. அனைத்து நிலையினரையும் உட்கொண்ட பல நிலைக்குறள்களின் தொகுதி யாதலால், திருக்குறள் பொது நூல் எனப்படும். பொது நூல் என்ற பெயரினுங் காட்டில் தொகை நூல் என்பதுவே உண்மை. திருக்குறள் பொது வீடே யொழியப் பொதுமடம் அன்று என உணர்க. யான் ஆர் என் உள்ளம் ஆர் எனத் தன்னிலை கண்டு, என் நிலைக்கு ஏற்ற - யான் இதுபோது செய்தற்கு வாய்ந்த - குறள்கள் இவை இவை என நாடி, தன்னிலைக் குறள்களைப் பொறுக்கி எடுத்துக்கொள்ள வேண்டும். என் வாழ்வில் முன்னரே செயலாகிச் செரித்த குறள்கள் இவை; இன்றே செயலுக்குக் கொளவேண்டும் குறள்கள் இவை; உடனடிச் செயலுக்கு வாராவாயினும் என் உள்ளத்தே இன்று முதற் கிடந்து ஊறுகாய் போல் பதமாக வேண்டும் குறள்கள் இவை என இவ்வண்ணம் அவரவர் அற்றை நிலைக்கேற்ப, ஆற்றற்கேற்ப, விழைபயனுக் கேற்ப, குறளறிவுப் பகுப்பு வேண்டும். இதுவே செயல் வழியாகும். இப்பகுப்பும் செயலுமில்லாக் குறட்கல்வியால், அகத்தூய்மைக்கு உதவாப் பொதுப் பறையால், உலகம் கண்ட பயனென்னோ? குறட்பிறப்பின் பயனென் கொல்? கேடல்லது, சாப்பறையல்லது காணும் விளைவு என்னோ? ஓர்மின்! கேள்வி நண்பர்களே! என் சொற்பொழிவிற்கு ஒரு நல்ல பயன் கண்டேன். எல்லோர் தம் கையகத்தும் திருக்குறட்சுவடி. இஃதோர் அழகிய உளங்கவர் காட்சி. குறட்பொழிவு கேட்க வருவாரனைவர்க்கும் குறள் முழு நூலொன்று வழங்க ஓரன்பர் முன்வந்தனர். அவர் வரவு நல்வரவு. அவர் நூற்கொடை கொள்ளத்தக்கதாயினும், நான் இடைமறித்தேன். திருக்குறள் என் வாழ்க்கைச் சுவடி என்று உணர்ந்து அவரவரும் தாமே வாங்கிக் கற்கும் நாள் வரும்; உழைத்து ஈட்டிய தன் பொருளால் திருக்குறள் யாரும் பெறுகதில் என்று அவர்க்கு ஏதுக் காட்டினேன். தன் முயற்சி உங்கள்பால் காண விழைந்தேன். என் நம்பிக்கை கொண்ட அன்றே செயலாயிற்று. மாணாக்கர் பள்ளிக்குப் பாடநூல் சுமந்து வர நாணி வழக்கமாக மறக்கும் இவ்விருபதாம் நூற்றாண்டில், கேள்வியாளர் நூலேந்திச் சொற்பொழிவு கேட்க வருப. அவர் தம் ஆர்வம் வாழிய! பிறிதொரு நற்செய்தி. குறளுரை செய்யும் என்பால் ஓரச்சம் ஒட்டியிருந்தது. பெரும்பாலும் குறட்பகுதிகளையும் முழுக் குறள் களையும் சொற்பொழிவில் காட்டிச் செல்கின்றோமே; காட்டுங்குறளின் சொற்பொருளை விளக்கவில்லையே; பொழிப்புப்பொருள் தெரிந்தன்றோ பொருள்நுண்மை விளங்கவேண்டும்; மேற்பொருளையும் விளக்கி நெஞ்சப் பொருளையும் உடன் விரிப்பதாயின், என்னாம், விளக்கம் வேண்டாது மிகுந்து, செயற்பயன் குறைந்து கருத்துத்தரம் குறையுமே, என் செய்வல் என்று அஞ்சினேன். வள்ளுவர் நெஞ்சமாம் முதற் சொற்பொழிவைக் கேட்டார் பலரிடம் இச்சிக்கல் பற்றி உசாவினேன். எனக்கோர் நீண்ட ஆறுதல் மொழி தந்தனர். கேள்வியாளர் பலர் தமிழறிவும் சான்றவர் என்று சொல்லினர். முன்னர் குறள் கல்லாருங்கூடத் திருக்குறட் பொழிவு செவிப்படுதற் கென்றே, சின்னாளாய்ப் பொழுதனைத்தையும் குறள் படிப்பான் செலவிடுப என்று மனம் இனிக்க மொழிந்தனர். இதுகாறும் எழுத்து மணம் நுகராத் தமிழருங்கூடத் திருக்குறள் கற்கும் ஒரே நோக்கொடும் ஒரே மூச்சொடும் தமிழ் பயில்வதாக, எவ்வளவு உயர்ந்த புதிய செய்தியைத் தெரிவித்தார்கள். இனைய நல்ல பல முற்படு செய்திகளைக் கேட்டு நாமனைவோரும் உவகை யடைகின்றோம். மனம் பொய்யா முயற்சியுடையார் வாழிய! 3. பொருள் நிலை செல்வப் பேரன்பர்களே! வணக்கம். இம்மாலைச் சொற்பொழிவு பொருள் நிலை என்னும் செல்வத் தலைப்பின் மேற்று. இன்று, நாளை, நாளை நீக்கி என்ற முந்நாட்களிலும் பொருள் பற்றிய பலநிலைச் சொற்பொழிவுகளைத் தொடர்ந்து நீவிர் செவி மடுப்பீர். வள்ளுவர் நெஞ்சத் தலைப்பில், திருக்குறள் நாள் வாழ்க்கைக்கு ஒப்பிய செயல்நூல் என்பதை எண்பிப்பான். நனி சிறிது பொருள்பற்றிக் குறிப்பிட்டேன். பல நிலையறத் தலைப்பில், மக்கள் பால் ஆசிரியர் கண்ட பல்வேறு பொருள் நிலைகளைத் தவச் சிறிது தொகுத்துரைத்தேன். செயல் நெஞ்சினராம் வள்ளுவர் நம்மை உடைமைக் காலத்தும் இன்மைக் காலத்தும் பொருளுலகில் யாங்ஙனம் செயற்படுத்துகிறார் என்பதனை. இது முதலாம் முத்தலைப்பிலும் ஆராய்வாம். இவ்வாராய்ச்சியைக் குறிக்கொண்டு கேட்டார் யார்க்கும் குறளைக் கற்குமுறையும், கற்றுப் பயன்கொள்ளும் செயல் வேட்கையும் விளங்கித் தோன்றும் என்பது என் துணிபு. தன் பொருள்நிலை எது? அந்நிலைக்கேற்ற குறள் நெறி எது? என்பதூஉம் முன்னர்த் தோன்றக் காண்பீர்கள். கைக்கப் பேசினும், கழறியுரைப்பினும், மயங்குவது போலினும், முரணுவது போலினும், யான் அறிந்தவாறு சொல்லாற்றும் உங்கள் அன்பனைப் பொறுத்துச் சாய்த்த செவியினராய் உளங்கொண்மின்! பொருளை ஆராய்வதற்குமுன் வேறொரு விளக்கம்; நென்னல் மாலைச் சொற்பொழிவைப் பற்றியது. அப் பொழிவால் எழுந்த இரண்டோர் ஐயங்களை, அன்பர் சிலர் என் இல்லம் தேடிவந்து வினவினர். அவரவர் நிலையோடு ஒட்டித் திருக்குறளைப் பொறுக்கிக் கற்க வேண்டும் என்று அழுத்தி மொழிந்தீர்; அதுவே கருத்தாயின் கற்றோர், கற்றில னாயினும் கேட்க என்னும் குறளைப் படியாது விட்டுவிட வேண்டுமா? பொருளற்றவன், ஈத்துவக்கும் இன்பம் அறியார் கொல் என்ற குறள் எனக்கு அன்று என ஒதுக்கிவிட வேண்டுமா? இரப்பான் வெகுளாமை வேண்டும் என்ற குறளை, ஒருசெல்வன் தனக்கு அன்று எனத் தள்ளிவிட வேண்டுமா? அவரவர் வாழ்நிலையொடு பொருத்திக் குறள் கற்க என்னும் நும்வன்புறையை நம்பினார் யாது கொள்வர் எனின், வாழ்க்கைத்துணை நல அதிகாரத்தை ஆண் கற்க வேண்டா. பெண் வழிச் சேறல் அதிகாரத்தைப் பெண் கற்க வேண்டா. மக்கட்பேறு அதிகாரத்தைப் அப்பேறில்லாதார் கற்க வேண்டா. இல்வாழ்க்கை யதிகாரங்களையும் காமத்துப் பால் முழுமையையும் துறவி கற்கவேண்டா. உழவு, தூது, ஒற்றாடல், அமைச்சு, படைமாட்சி அதிகாரங்களைப் பிறர் கற்கவேண்டா எனவாங்குக் குறள் குறளாக அதிகாரம் அதிகாரமாகத் திருக்குறளை ஒதுக்கும் போக்கு விளையும் அன்றோ? தன்னிலைக்குப் பொருந்திய பகுதிகளைக் கல்; பொருந்தாப் பகுதிகளை விடு என ஓர் கழிப்பு உணர்ச்சியை நும்முரை தூண்ட வில்லையா? பிரிவினை குறள் நூலகத்துக்கும் ஆயிற்றுக்கொல்! முழுதும் கற்றாகவேண்டிய ஒருநூல் குறளன்றோ! இன்னதோர் துண்டுபடு குறட் கல்வியை மக்களிடைப் பரப்பாதீர் என வேகஞ் செறிந்த அன்பினராய் அன்னோர் எடுத்துரைத்தனர். கற்றற்கு உரிய குறள்கள். கல்லாது ஒதுக்கப்படும் குறள்கள் என்றதோர் பிளவுக் கருத்து என் சொற் பொழிவால் யாரொருவர் உள்ளத்தும் விழுந்திருக்கு மேல், ஐயன்மீர்! அவ் விழுக்காடு பிழை; முற்றும் பிழை. இவன் சொல்வன்மைக் குறை யுடையான் என்று என்னைப் பழித்து அக்கருத்தை அகற்றிக் கொண்மின்! குறளனைத்தும் யாண்டும் யாரும் கசடறக் கற்கத் தகும் சால்புடையவை என்பதுவே என் அறிவுத் துணிபு. தமிழ் மகளும் தமிழ் மகனும் குழவிப்பருவம், கேள்விப் பருவந் தொட்டே குறள் முழுதும் பயிலவேண்டும். அகம் குறளாதல் வேண்டும். புறத்தே குறட்சுவடி மிகையாதல் வேண்டும் என்பதுவே என் உள்ளம். இம்முழுத் துணிபிற்கு மாறாக முன்னும் சொல்லிற்றிலேன்; இனியும் சொல்வேனல்லேன். நிற்க. வள்ளுவர் நெஞ்சின் அடிப்படை என்? திருக்குறளின் அடிப்படைதான் என்கொல்? என் சொற்பொழிவுகள் அனைத்தின் அடிப்படைதான் என்கொல்? செயல், செயல், செயல், முன்னெல்லாம் பெருமைநோக்கொடு பலர்பார்த்த திருக் குறளைச் செயல் நோக்கில் வைத்து நான் பார்க்கின்றேன். அந் நோக்கொடு கற்குமாறு யாரையும் வேண்டுகின்றேன். திருக்குறள் கண்காட்சிச் சாலையோ எனின், அற்றன்று; நிலத்துட் கிடந்த நாணயம், புழங்கிய மட்பாண்டம், எலும்புக்கூடு, உடல் புதைதாழி, ஒருகால் மறஞ் சான்ற வில் வாள் வேல், அணிசான்ற கலன் என்றினைய பொருள்கள் ஒருங்கு காணப்படும் இடம் ஒரு கண்காட்சிச்சாலை. அச்சாலை காண்பார் வரலாற்றறிவு பெறுவர். பழம் பெருமை அறிவர். அச்சாலைப் பொருள்கள் காண்பார் தம் நாள்வாழ்விற்குப் பயன்படா. ஆயிரத் தெண்ணூறு ஆண்டுகட்கு முந்திய பழம்பெருமை விரித்தற்கும், பண்டையோர் உயர்நிலை அறிவித்தற்கும் எழுந்ததன்று திருக்குறள். நம் திருக்குறட்பற்றை நாமே ஒருகால் தனித்திருந்து நினைந்து பார்ப்பின், நாளைச் சாகவிருக்கும் கிழவனுக்குக் கொடுக்கும் மதிப்பளவே திருக்குறளுக்கும் கொடுக்கிறோம் என்பது தோன்றும். பாடஞ்செய்யப்பட்ட உயிர்ப்பொருள் போலத் திருக்குறளை வைத்திருக்கிறோம் என்று தோன்றும். திருக்குறள் என் கருத்தில் ஒரு பெருஞ் சந்தை. நடப்புச் சந்தையில் பல இனச் சரக்குகளும், ஓரினத்துள்ளே பலவகைப் பொருள்களும் உள. திருக்குறட்சந்தைக்கண் அதிகாரங்கள் பலவினச் சரக்குக்களாம். ஓரதிகாரத்துக் குறள்கள் ஓரினச் சரக்கின் பல்வகையாம். சந்தையில் உள்ள எல்லாப் பொருள் களும் விற்றற்கு உரியன என்றாலும், அனைத்தினையும் ஒருவரே வாங்கிக்கொள்ளல் இல்லை. கைப்பொருளுக்கேற்ப, நாட்செலவிற்கேற்ப, ஒவ்வொருவரும் வெவ்வேறு தரத்தில் பண்டங்களை வாங்கிக் கொள்கிறோம். நம் உள்ளங் கசிய, நாட்டின் கேடு புலப்பட, பழம் என்ற பெயரோடு அழுகி ஒதுக்கியவற்றையும், காய்கறி என்ற பெயரினவாய்த் தோல் திரைந்து நீர் சுருங்கியவற்றையும், மளிகை என்னும் பெயரால் கல்லும் மண்ணும் குப்பையொடு கலந்தவற்றையும், மக்கள் என்பார், என் செய்வது, தம் வறுமைநிலை காரணமாய்க் காசு கொடுத்து வாங்கக் காண்கின்றோம். விற்றற்கு வந்த சந்தைப் பொருள்களை ஒருவர் அல்லர்; பற்பலர் பலப் பல நிலையில் வாங்கிக்கொள்வதால், எல்லாம் விற்பனையாகி விடுகின்றன. திருக்குறட் சந்தைப் பொருள்கள் எல்லாம் செய்வதற்கு உரியனவே; என்றாலும், அனைத்துக் குறள்களும் ஒருவர் வாழ்க்கையில் ஒரு நிலைக்கண் மேற்கொள்ளுதற்கில்லை. என் மனத்திட்பம், அறிவு வளர்ச்சி நிலைகளுக்கு ஒப்பவும், என் வாழ்வு ஏற்கும் பிற ஆற்றற்குத் தகவும், அளவறிந்து உண்க என்ற படி யான் செய்தற்குரிய குறள்களையே வள்ளுவச் சந்தையில் எடுத்துக்கொள்வேன். நும் மனவறிவு நிலைகளுக்கு ஒப்ப, யான் தேர்ந்துகொண்ட குறள்களையோ இவற்றோடு வேறு பலவற்றையோ நீவிரும் எடுத்துக் கொள்வீர். இங்ஙன் அவரவர் உண்டற்கு உரிய ஊணளவுபோல், செயற்குரிய குறள்களை ஒருவர் அல்லர். பற்பலர் பலப்பல வாழ்க்கை நிலைகளில் மேற்கொள்வதால் எல்லாக் குறள்களும் பல்லோர் வாழ்க்கைத் தொகுதியில் செயலாகி அமைகின்றன. சந்தைக்கண் வணிகர் பலர் உளர். காசுக்குச்சரக்கு விற்பர். அவர் சரக்குக் குவியல் நாம் வாங்குதொறும் குறைவுபடுவது; முந்திக் கொள்ளாவிடின் பெருங்காசுக்கும் சில சரக்கு கிடைப்பது அரிதா யொழியும். இக் குறைகள் அற்றது திருக்குறட் சந்தை. வள்ளுவர் ஒருவரே வணிகர். வணிகர் மட்டுமல்லர்; மருந்தும் தானே செய்து மருத்துவமும் உடன் செய்யும் தமிழ் மருத்துவன்போல், குறளும் தானே விளைத்துக் கொடுப்பதனையும் நேரடியாகச் செய்யும் வணிகவுழவர். இவ்வுழவரும் தம் குறட் சரக்குக்களுக்கு அணித்து இருக்க மாட்டார். ஒருவன் அளந்துகொடுக்க ஒருவன் வாங்கும் விற்பனைப்பண்டம் போலாது, குடங்கொண்டு முகக்கும் குளத்து நீர் போலவும், விழைந்தாங்கு எடுத்துக் கொள்ளும் மேலைநாட்டு விருந்துபோலவும், தடையின்றி அவரவர் தாமே கொள்ளக் கிடப்பது குறட்பண்டம், காசில்லை, கடனில்லை, வணிகனில்லை என்று குறள்களை மனத்து நிரப்பிக் கொண்டாலோ, வாழ்வு செரிக்காது. எப்போதும் கொள்ளக் கிடப்பது தானே என்று நிலைக்குக் குறையக் கொண்டாலோ, வாழ்வு பட்டினிப்படும். குடும்பப் பொருளைக் குழந்தை கொள்ளுமாப்போல் மிகுத்தும் குறைத்தும் குறள்களைக் கொள்வதில் ஓர் மனக் குற்றம் இல்லெனினும், அளவறியா வாழ்க்கை அறிவுக் குற்றம் உடைத்துக் காண். அக்குற்றம் மனக்குற்றத்திற்கு அடிப்படை காண். மிகினும் குறையினும் நோய் செய்யும் (941) என்றபடி, அவரவர் வயிற்றுப் பதம்போல் வாழ்வுப் பதம் நாடி, செரித்துப் பசிக்கும் நிலைக்கேற்ற செயற் குறள்களையே மிகுதியும் எண்ணவேண்டும். உரைகல் போலக் குறளொடு செயலை உராயவேண்டும். அந்நிலையிற்றான் வாழ்வு ஒளிபெறும். என் அறிவுடைச் சுற்றமே! செயல் செயலென யான் துடித்துரைக்கும் வள்ளுவத்தினை ஓரளவு இவண் விளக்கஞ் செய்தேன். இனி, அன்பர்கள் தொடுத்த வினாவிற்கு, அஃதாவது கல்லாது குறளொதுக்கம் செய்யவேண்டுமா என்ற வினாவிற்கு விடைகாண்போம். குறள் முழுதும் கற்ற பின்னர்த்தானே நிலைக்கொத்த குறள்கள் இவையென ஒருவர் தெரிந்து கொள்ள இயலும். என் நிலையை உயர்த்தும், திருத்தும் குறள்கள் ஓரிரு அதிகாரங்களில் ஒருங்கு வாய்க்க மாட்டா. அதிகாரத்துக்குச் சிலவாக எல்லா அதிகாரங் களிலும் புகுந்து கிடக்கும். அறிதோறும் அறியாமை கண்டற்றால் (1110) என்ற பயில்வுக் குறளடியைக் காமத்துப்பால் கற்றாலன்றோ துறவி எடுத்துக் கொள்ள வியலும். ஆதலின் நிலைக்கு ஒத்த குறள்களைக் கண்டு கொள்ளுதற்கேனும் யாரும் குறள்முழுதும் கற்றாக வேண்டும். அவ்வினாவிற்கு இஃதோர் சிறுவிடை, மழுப்பிய விடையென்று சிலர் கருதலாம். மழுப்புவது என் உட் கிடக்கையாயின், அன்னதோர் வினாவை நண்பர்கள் வினவினர் என்று இப்பேரவைமுன் சொல்லமாட்டேன். அவர் வினா பொருள் பொதிந்தது என்ற கருத்தானும், குறள்களைப் பள்ளிப் பிள்ளைகள்போல் இடையிடையே கற்பாராயின், விட்டுவிட்டு மருந்துண்பார் போலப் பயன் பெறார் என்ற துணிபானும், அன்பர்தம் வினாவை வரவேற்றேன். பொருள்நிலை என்ற தலைப்பிட்டு, பேரன்பர்களே! மற்றொன்று விரிப்பதுபோல் தோன்றினும், இவ்விரிவு இன்று இட்ட சிறு தலைப்பிற்குப் புறம்பேயொழிய, எடுத்துக்கொண்ட திருக்குறட் பெருந் தலைப்பிற்கு வித்தனைய கேண்மைத்து என்று எண்ணியே, முன்னைச் சொற்பொழிவின் ஓழிபாக ஈண்டுப் பேசுகின்றேன். நிலை சார்நத குறள்களை நாடி மேற்கொள்ளற்கேனும் ஒருவர்க்குத் திருக்குறள் முழுநூற் கல்வி வேண்டும் என்பது ஒரு பெரும் விடையாகாது என்று நானே ஒத்துக்கொண்டேன். ஏன்? அகர முதல எழுத்தெல்லாம் என்ற முதற் குறள் தொடங்கி, கோலும் தாளும் வைத்துக்கொண்டு, ஒருவர் கற்கிறார். இடையிடை தந்நிலைக்கு அமைந்த குறள்களைப் பொறுக்கி எழுதிக் கொள்கிறார். ஊடுதல் காமத்திற்கு இன்பம் என்னும் ஈற்றுக்குறளைக் கற்று முடித்தபின், பொறுக்கிய குறள்களே தம் வாழ்வுச் செயலுக்கு உரியன என்று தொகுத்துக் கொள்கிறார். அவர் சேர்த்த குறள்கள் இருநூறு என்று கொள்வோம். இவ்விருநூறும் தாம் அவர் நிலைக்கு வேண்டும் குறள்கள் எனவும், மற்றை ஆயிரத்தெச்சமும் அவர்க்கு உதவாக் குறள்கள் எனவும் கருத்தாகுமா? ஒருவர் நிலை என்பது வாழ்நாள் காறும் மாறாத தொன்றா? வளர்ச்சியுடைப் பொருட்கு மேலோ கீழோ நிலைப் பெயர்ச்சி என்பது உண்டன்றோ? சந்தைக்கண் வாங்கிய சரக்குகளைத் தவிர ஆண்டுப் பிறசரக்குகளெல்லாம் வேண்டாதன என்றா பொருள்படும்? அற்றைநாட் செலவிற்கு வேண்டாதன சில; முன்னரே கைவசம் இருத்தலின் விரும்பாதன சில; செலவிருக்கும்போது வாங்குவோம் என்று விட்டுவைப்பன சில; செலவிருந்தும் பொருள் வலிக்கு விஞ்சியன என்று எண்ணி விழையாதன சில. இஃதோர் உலகவியல்பு. இவ்வுவமைத் தொடர்ச்சியை நிலையடிப்படை விளக்கத்திற்கு ஒரு தெளிவு கருவியாக நினைக. திருக்குறள் கற்கும் பெருமக்கள் தந்நிலைக்குப் பொறுக்கியன நிற்க, பிற குறள்களெல்லாம் தமக்கு என்றும் வேண்டாதன என்பது நினைப்பரிய பெரும் பிழை. பால்குடி மறந்து உண்ணப் பயின்ற குழந்தை தாய் வேண்டாம் என்பதை ஒப்பது, செய்தகுறள், செய்யுங்குறள், செய்குறள் என்ற செயலடிப்பட்ட முந்நிலைக் கல்வி திருக்குறள் கற்பார் யார்க்கும் ஒருவந்தம் வேண்டற்பாலது. வாழ்க்கையில் நின்றொழுகும் முனைப்பினராய்த் திருக்குறள் ஏந்துவார் யாரும் செயல் முந்நிலைப் பகுத்தறிவு கொண்டு கற்கதில். பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு அறனொன்றோ ஆன்ற ஒழுக்கு (148) இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும் திருநீக்கப் பட்டார் தொடர்பு (920) ஓ! இவை என் வாழ்க்கையிற் செய்த குறள்கள். இவை கழறும் குற்றங்கள் என்மாட்டு இல. பரத்தை நச்சல், கள்ளுண்டல், சூதாடல் ஆகிய வேட்கைகளை இயல்பில் அறியேன். இக்குணங்கள் தாமே என்பால் அமைந்து கிடப்பன. தன்நெஞ்சு அறிவது பொய்யற்க; பொய்த்தபின் தன்நெஞ்சே தன்னைச் சுடும். (293) புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலிற் சாதல் அறங்கூறும் ஆக்கம்தரும் (183) மனத்தது மாசாக மாண்டார் நீராடி மறைந்தொழுகும் மாந்தர் பலர் (278) ஆ! இவை என் வாழ்க்கையில் இதுகாறும் செயற்படாக் குறள்கள். நினைவாலும் சொல்லாலும் செயலாலும் பொய் வாழ்க்கையேன். யாம் மெய்யாகக் கண்டவற்றுள் தலையாய அறம் (300) என்ற நடையில், வள்ளுவர் தம்மையே ஆணைப் படுத்தி மொழிந்த வாய்மை யொழுக்கம் இன்று முதல் என் செயலுக்கு உரியது காண். ஆளைக் கண்டு ஒன்று, காணாது ஒன்று சொல்லித்திரிந்த கயமையேன். என்னை கொல் ஏதிலார் மாட்டு (188) என வள்ளுவரும் அஞ்சும் புறங்கூற்று இனி ஆகாது காண். மறைந்தொழுகும் மாந்தர் பலருள் நெடுங் காலமாக யானும் ஒருத்தன். மாசு மனத்துப் பெருகவும், தூய்மை விளம்புவான் புறக்கோலம் பூண்ட அறிவுடை வஞ்சகன். வன்கணார் என வள்ளுவர் பழித்த, அகங்கூடாப் புறவொழுக்கம் இன்று ஒழிகதில். இவையெல்லாம் யான் இன்று தொட்டுச் செய்யுங் குறள்களாகும். பொறுத்தல் இறப்பினை என்றும்; அதனை மறத்தல் அதனினும் நன்று (152) சால்பிற்குக் கட்டளை யாதெனின், தோல்வி துலையல்லார் கண்ணுங் கொளல் (986) தன்னுயிர் தானறப் பெற்றானை ஏனைய மன்னுயி ரெல்லாம் தொழும் (268) அற்றவர் என்பார் அவாவற்றார் மற்றையார் அற்றாக அற்றது இலர் (365) இக் குறள்களோ வாழ்விற்கு இன்றியமையாதன; எனினும் இன்று என் ஆற்றலுக்கு விஞ்சியன. நாட்செல்லச் செல்லப் படிப்படியாகக் கொள்ளற்கு உரியன. இவை முன்னோ பின்னோ ஒரு ஞான்று என் வாழ்வில் அமையத்தகும் செய்குறள்கள் என்னும் பகுத்தறிவோடு குறள்தோறும் நின்று நிலை நினைந்து கற்பதுவே வாழ்வு நலஞ் செய்யும் எனத் தெளிமின்! நிலையில் தாழாமைக்குச் செய்த குறள்களின் நினைப்பும், நிலை வளர்ச்சிக்குச் செய்யுங் குறள்களிடை அழுத்தமும், நிலையை மேன்மேல் என்றும் உயர்த்தற்குச் செய்குறள்கள்மேல் ஓட்டமும் வேண்டுமாதலின், குறளொதுக்கம் யாண்டும் யார்க்கும் அமையாது காண். மேலும் ஒரு பெரு நூலகத்துப் புகுவார்க்கு இரு நிலை உரியன. ஒன்று கல்வி நிலை; ஏனையது அறிவுநிலை. வள்ளுவர் ஞாலமக்களைப் பகுத்து உணர்ந்த முறை யாது? புறத்தும் அகத்தும் கண்ட மக்கள் நிலைகள் யா? நிலைக்கேற்ப விதித்த வழிகள் யா? உளம் பதிப்பான் ஆளும் சொற்களும் நடைகளும் யா? என ஆசான் அறிவைக் காண்பது கல்விநிலை. இஃதோர் பரந்த முழுக்கல்வி. ஆசிரியன் நெஞ்சங் காண்பதற்கு அவன் செய்த முழுநூற் கல்வி இன்றியமையாதது. இங்ஙன் திருக்குறளைக் கற்றபின், அப்பெருமகன் கண்ட மக்களுள் யான் யார்? நிலைகளுள் என் நிலை யாது? வழிகளுள் எனக்குரிய செயல்வழி எது? எனத் தன்நிலையோடு ஒட்டிய குறட் காட்சியே அறிவு நிலை எனப்படும். இந்நிலையறிவே செயலூக்குகிற்பது. கற்றபின் நிற்க அதற்குத் தக என்ற குறளடி இவ்விரு நிலையையும் ஒருங்கு சுட்டுவது. இதுவே நூல் புகு முறையாதலின், கல்வி நிலையில் திருக்குறளை முழுதும் என்றும் சாந்துணையும் கற்க; அறிவு நிலையில் தன் நிலைக்கு ஏற்ற செயற்குறள்களையே நீடு நினைக! நினைவுத் திட்பம் பெறுக. கற்பார் நிலையுயர்வே வள்ளுவர் எழுத்துப் பயன் ஆகியர். குறள் நண்பர்களே! இனி இன்று மேற்கொண்ட பொருள் நிலைத் தலைப்புப்பற்றி உரை செய்வேன். பொருள் செயல்வகை, நன்றியில் செல்வம், நல்குரவு, ஒப்புரவறிதல், ஈகை, ஊழ், ஊக்கமுடைமை, ஆள்வினையுடைமை என்ற அதிகாரங்களில் பலவாகவும், பிற தலைப்புடைய அதிகாரங்களில் சிலவாகவும், பொருட் குறள்கள் பரந்து கிடக்கின்றன. பொருளினை விழைந்தும் வெறுத்தும், பொருள் காரணமாய் மக்களை அறிவுறுத்தியும், புகழ்ந்தும், இகழ்ந்துமாகப் பல நிலைகளில் குறள்கள் பிறந்திருக்கின்றன. பொருள் இன்றியமையாமையை முழுதுணர்ந்த வள்ளுவர் பொருளின் ஆற்றலை, அது நன்மையினும் தீமைக்குக் கருவியாதலை ஒருஞான்றும் மறந்தவரல்லர், பொருளிலாதவன் தன் இன்மை துடைப்பான், மனத்தூய்மை கெடுத்துப் பொருளீட்டுகிறான். உடையான் தனிப் பெருஞ் செல்வனாக, எல்லாம் தனதாக, மனம் ஒன்று உண்டு என்பதையும் மறந்து பொருள் குவிக்கிறான். பொருள் என்பது யாது? அதன் பயன் யாது? அதனை ஈட்டும் நெறி யாது? பொருட்கும் தன்னிலைக்கும் உரிய தொடர்பு யாது? வாழ்க்கைக்கு வேண்டும் அளவு யாது? பொருளுக்கும் மனத்தூய்மைக்கும் பொருந்திய அடிப்படை யாது? என்றெல்லாம் மக்கள் வினவிக் கொள்வதில்லை. பொருள் இன்றியமையாதது என்பதற்காக, அதற்கோர் ஒழுக்க வரம்பின்றா போய்விடும்! உடலும் கல்வியும் அறிவும் இன்றியமையாதனவெனினும் அவற்றின் வளர்ச்சிக்கும் ஒழுக்க வரம்பு உண்டன்றோ? இன்றியமையாப் பொருளை ஈட்டற் கண்ணும் செலவிடற் கண்ணும் மக்கள் உறும் பல மாசுகளைக் கண்ட வள்ளுவர் - பொருளல்லது இல்லை பொருள் என்று சிறப்பித்த வள்ளுவரே - யாது கூறினார்? பொருட் செல்வம் பூரியார் கண்ணும் உள (241) என இழித்துரைத்தார். பழி மலைந்து ஆக்கம் எய்துவதைக் காட்டினும், கழி நல்குரவே தலை எனப் பொருளுடைமையினும் புகழுடைமை காட்டினார். மனம் அழுக்குறினும் உறுக என்று பொருளீட்டல் நன்றா? பொருள் வாராதொழியினும் ஒழிக என்று மனத்தூய்மை காத்தல் நன்றா? என வள்ளுவரை வினவின், இன்றி யமையாச் சிறப்பின வாயினும் குன்ற வருப விடல் (961) என நேர்விடை இறுப்பர், பேதை, கற்றான், அறிவுடையான் என்ற வேறுபாடின்றி மக்கள் மனங்களெல்லாம் பொருளொன்றின்மேலதாய் அழுக்கடையக் கண்ட ஆசிரியர். தாம் தூய்மை சொல்லும் இடம் பொருட் கண்ணது என்று துணிந்துவிட்டார். தனித்தோர் வாழ்வு ஆகுக, தொண்டு செய்வான் தோற்றிய கழகங்கள் ஆகுக! அவைகள் ஆகுக. பேரரசுகள் ஆகுக, பொருளில் ஓரொழுங்கு யாண்டுக் காணப்படுமோ ஆண்டு மன வொழுங்கும் நாணய மதிப்பும் காணப்படும். பொருளொழுக்கமே ஒருவன் அக வொழுக்கத் திற்கு உரைகல் என்பது வள்ளுவம். இக் கருத்தானன்றே மனப் பண்பு பேசும் இடந்தொறும் பொருட் பண்பினையும் தொடர்பு படுத்திப் பேசுவர். கள்ளாமை வெஃகாமை, அழுக்காறாமை, நடுவு நிலைமை அதிகாரங்கள் சான்றாதல் காண்க. உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக் கள்ளத்தால் கள்வேம் எனல் (282) நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை அன்றே யொழிய விடல் (113) இவ்விரண்டும் மனத் தூய்மை வேண்டும் பொருட் குறள்கள். தாய் குழந்தைமேல் வைத்த பேரன்பால், அது நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் வளரவேண்டு மென்று மிக்க வுணவை இடைவிடாது ஊட்டுகிறாள். தாயன்பால் பிள்ளை நோய்வாய்ப்படுகின்றது. கணந்தோறும் மெலிகின்றது. குழந்தை நோய் நீங்கிப் பருத்து வளர்வதற்கு மருந்து வினவு கிறாள். அம்மா! குழந்தை பிழைக்க வேண்டும். வல்லுணவு ஆகாது. நீருணவே கொடு. மெலிவு பாராதே. நாட் பொறு என மருத்துவன் வாய்ப்பச் சொல்லுகிறான். கொழுத்த உணவு திணித்த தாயன்பே இப்போது குறைந்த உணவு கொடுத்தற்குக் காரணமாகி நிற்கிறது. தன் மகவு பருக்காவிடினும் நலமாக வாழ்க என்று அவ்வன்பு அறிவுறுத்துகிறது. நோய்க்குக் காரணமாகிய தாயன்பை நோய் நீக்கத்திற்கு மருந்துவன் காரணமாக்கிக் கொண்டாற்போல, வள்ளுவரும் மனமாசிற்குக் காரணமாய மக்களின் பொருட்பற்றையே, அன்னார் மாசு நீக்கத்திற்கும் காரணமாக்கிக் கொண்டார். இஃதோர் வள்ளுவப் புதுநெறி. அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமை வேண்டும் பிறன்கைப் பொருள் (178) அறனாக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம் பேணாது அழுக்கறுப் பான் (163) தன் செல்வம் குறையாமைக்கு வழி பிறன் செல்வத்தைக் கவர விரும்பாமை என்பர். தனக்கு நல்லது வேண்டா; செல்வம் வேண்டா என்று துணிந்தவனே அழுக்காறு கொள்வான் என்பர். தன் பொருள் அழிவு சுட்டி, ஆகாப் பொருட் பற்றைக் குறைப்பர். அச்சுறுத்தி மனமாசுபடாது காப்பர். பொருளாவது ஓர் உலகக் கருவி. அக் கருவி குணம் பெருக்கவும் குறை நிரப்பவும் பயன்பட வேண்டும். பொருளாவது பண்டமாற்றும் பொதுக்கருவி என்ற அறிவுத் தெளிவு என்றும் வேண்டும். புறப்பொருளெல்லாம் நல்லதற்கும் தீயதற்கும் பயன்படுதல் ஆளும் மனிதனின் நல்ல தீய மனத்தைச் சார்ந்தது. குணமும் குற்றமும் பொருள் மேலனவல்ல; அதனை ஆள்வான் மேலன. செல்வப்பொருள் தீமைக்கே கருவியாதலை வள்ளுவர் கண்டார். உடைமை உடையானை அழிப்பதைக் கண்டார். உடையான் தான் அழிவதை உணராது மகிழ்வதையும் கண்டார். தன்னைத்தானே வஞ்சித்துக் கொள்வதையும் கண்டார். வரைவின் மகளிர், கள்ளுண்ணாமை, சூதாடாமை அதிகாரங்கள் சான்றாதல் காண்க. நல்லதொன்றினைத் தம் நன்மைக்குப் பயன்கொள்ள அறியா மக்கள் இழிநிலை கண்டு கவன்று. ஒன்றெய்தி நூறிழக்கும் சூதர்க்கும் உண்டாங்கொல் நன்றெய்தி வாழ்வதோ ராறு! (932) எனப் பொருளழிவு காட்டித் திருத்துவர். கல்வியறிவுடையாருங்கூடப் பொருள்மேல் ஆரா வேட்கையராய்ப் பேதையரோடு ஒரு தரமாய் மாசு பட்டும் செல்வம் திரட்ட முயல்வதைக் காண்கின்றோம். பேதைக் கில்லாத் தம் நுட்ப அறிவையெல்லாம், தீய நெறியில் பொருளீட்டம் ஒன்றுக்கே ஆளக் காண்கின்றோம். முறைப்படி களவு செய்வது எப்படி? சட்டத்திற்கு உட்பட்டுப் பிறரை வெஃகுவது எப்படி? வரி கொடாது பணத்தைப் பதுக்குவது எப்படி? என வாங்கு நுண்ணிய நுழைபுலச் செல்வராகக் காண்கின்றோம். காமத்திற்குக் கண்ணில்லை என்பதுபோலப் பொருளுக்கு ஓர் ஒழுக்கமில்லை என்று நாண் துறந்து அறங்கூறக் காண்கின்றோம். பொருளுலகம் வேறு, நூலுலகம் வேறு என மனக்கொலை செய்யக் காண்கின்றோம். இனைய அறிஞர்களே பிறரெல்லாம் தம்மாட்டு ஒழுங்காக, நாணயமாகப் பொய்ப் புரட்டின்றி நடந்துகொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கவும் காண்கின்றோம். கல்வி அறிவெல்லாம் உப்பு வீழ்பால்போலத் திரிந்து நிற்ப, நன்மக்களும் அழுக்குற்றுப் பொருள் வேட்டையாடக் கண்ட வள்ளுவர், அஃகியகன்ற அறிவு என்னாம் (175) என்று கடிந்துரைப்பர். பொருளாற்றலுக்கும் ஓரெல்லையுண்டு. அதன் நன்மை தீமைக்கும் ஓரெல்லையுண்டு. பொருளாற்றல் அஃதுடையான் ஆற்றலைப் பொறுத்தது. அவனாற்றலுக்கும் ஓரெல்லை யுண்டு. எல்லாம் பொருளால் ஆம் என்பது இன்றியமையாமை காட்டும் ஒரு தொடர். குழந்தைப்பேறு உடையார்க்குக் குறைவில்லை என்பதை ஒப்பது. பொருளிலார்க்கு இவ்வுலகம் இல் என்றதனால் அஃதுடையார்க்கு இவ்வுலகம் முற்றும் உண்டு என்பது கருத்தன்று காண். பொய்யனேன் நான் உண்டு உடுத்து இங்கு இருப்பதானேன் என மெய்யன்பர் சுட்டியபடி, கேவலம் ஊனோம்பும் வாழ்க்கை எம்மக்களின் குறிக்கோளும் அன்று. உலக நல்வாழ்விற்குப் பொருளோடு, பொருளினும் சிறந்த பல பண்புகள் இன்றியமையாதன. அப் பண்புகள் இருப்பின் பொருள் நலஞ் செய்யும்; இன்றேல்பொருள் உடையானைக் கீழறுக்கும். வகைமாண்ட வாழ்க்கையும் வான்பொருளும் என்னாம் தகைமாண்ட தக்கார் செறின்! (897) ஏந்திய கொள்கையார் சீறின் இடைமுரிந்து வேந்தனும் வேந்து கெடும் (899) பொருளாற்றலுக்கு ஓர் அளவு காட்டும் குறள்கள் இவை. நேர்வழியால் பொருளீட்டுதல் எளிதன்று என்பதுவே பலர் வாய்ச் சொல். பண்புடையான் பெருஞ் செல்வனாதல் உலகத்து அரிய காட்சி. பேதை பெருஞ் செல்வம் உற்றக் கடை (837) என்றும், பண்பிலான் பெற்ற பெருஞ் செல்வம் (1000) என்றும் வள்ளுவரே ஒப்புவர். நாம் அறியும் செல்வப் பெரியோர் பலர் மனத்தைக் கொன்று நேர்மையைச் சிறையிட்டுப் பூட்டி வைத்தபின் பொருள் திரட்டியோராகவே உளர். அரசியல் விதிகளும் நேர்மைக் கொலைக்குப் பெருங்காரண மாகுப. ஒழுக்கமுடையார்க்கே இடையூறாய் அதனை மறந்தார்க்கு ஊன்றுகோலாய் அமைப. பொருளின் வரவும் செலவும் உலகத்து ஒரு கணிப்பிற்கு உட்பட்டு நிற்கவில்லை. பெற்றோர் தம் கல்வியறிவு ஒழுக்கங்களை மக்கட்கு மாற்றவியலாது. இவை கைமாறத்தக்க பொருள்கள் அல்ல. செல்வம் ஒரு நொடியில், ஓர் எழுத்தில், ஆள் மாறத்தகும் எண்மையுடையது. வழக்காடுவார்க்குச் சட்டம் போலச் செல்வம் யார்க்கும் எந்நிலைக் கண்ணும் வளைந்து கொடுக்கும் தன்மைத்து, அவ்விய நெஞ்சத்தான் ஆக்கம் பெறுதலும், செவ்வியான் கேடு உறுதலும், அறத்தின்கண் வாழ்வான் செல்வத் தாழ்வு படுதலும் பொருளுலகத்து இயற்கை. நல்லவை எல்லாஅம் தீயவாம்; தீயவும் நல்லவாம் செல்வஞ் செயற்கு (375) எனப் பொருளின் பண்பற்ற இயற்கையை வள்ளுவரும் அறிவர். அறிந்து வைத்தும், வாழ்க்கைச் செலவிற்கு வேண்டிய பொருளை நேர்வழியால் யாரும் ஈட்டவியலும் என்பதுவே அவர் துணிபு. பொருள் யார்க்கும் வேண்டும்; அதனை யாரும் நன்னெறியால் ஈட்ட வேண்டும் என்பது வள்ளுவம். இவ்வதிராப் பொருட் கொள்கையை இனிப் பல நிலைகளில் ஆராய்வாம். பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லாகி யாங்கு (247) என உவமையானும் பொருளல்லது இல்லை பொருள் (751) என உண்மையானும் வலியுறுத்திய வள்ளுவர். இல்லாரை எல்லாரும் எள்ளுவர் (752) என்று ஓர் உலகியல்பு கூறினார். வறியோனைச் செல்வரும் சிறுமைப் படுத்துவர். என்போல் இவனும் ஒரு வறளிதானே எனப் பிற வறியோரும் சீரழிப்பர். ஈன்ற தாயும் தன் மகன் என நினையாது பிறன்போல நோக்குவள். இன்னோர் ஒருபாலாக, யாமும் இகழ்வேம் என்று வள்ளுவர் தம்மையும் இகழ்வார் கூட்டத்தொடு உளப்படுத்திக் கொள்ளும் குறிப்பு. எல்லாரும் எள்ளுவர் என்ற நடைக்கண் அமைந்து கிடப்பக் காணீர்! ஆசிரியரின் முதல் நோக்கம் பொருளின் இன்றியமையாமை காட்டி யாவரையும் இடையறாது ஈட்டத் தூண்டுவது. பொருளல்லவரைப் பொருளாகச் செய்யும் (751) என்பதனால் இல்லபிற நிரப்பும் வன்மையும், எண்ணிய தேயத்துச் சென்று இருளறுக்கும் (753) என்பதனால் தூது செல்லும் தன்மையும் செல்வத்தின் தனியாற்றல்களாம். இவ்வுண்மை யுணர்பவர் பொருளைக் குறைத்துப் பேசார், கல்வி கேள்விகளே அழிவில் செல்வங்கள்; பொருளோ அழிதல் மாலையது. இஃதோர் செல்வமாமோ என்று இவ்வுலகத்துத் தூற்றிப் பேசார் ஒவ்வொன்றும் ஒவ்வொரு நிலையில் வேண்டும் என்றே உரிய இடம் உணர்வர். அற்கா இயல்பிற்றுச் செல்வம் (333) என வள்ளுவரும் ஒப்பி மொழிப. நிலையாமை செல்வத்தியல்பு என்பதனால், பற்றுள்ளங் கொண்டு அதனை நிறுத்தப் பாடுபடுதல் பேதைமை என்பது கருத்தாமே யன்றிப் பொருளீட்டம் குற்றம் என்றோ வேண்டாம் என்றோ கருத்தாகாது. உடல் நிலையாதது என்பதனால், மக்களைப் பெறுதல் இழிவு என்றும் அதனை விளைவிக்கும் இல்லறம் இழிவு என்றும் கொளப்படுமோ? மக்கட் பேறன்றோ யாம் அறியும் பெரும் பேறு. இல்லறம் அன்றோ! அறனெனப்பட்டது என ஆசிரியர் கொள்வர். பழம் அழுகிப்போம்; பலகாரம் ஊசிப்போம் என இயல்பு தெரிப்பது பிழையா? அழுகுவதன் முன்னும் ஊசிப் போவதன் முன்னும் தின்று பயன் படுத்த வேண்டும் என்பதே உட்கிடை. அற்கா இயல்புற்றுச் செல்வம் என இயல்பு வரைந்த வள்ளுவர், அதே மூச்சில் அது பெற்றால் அற்குப ஆங்கே செயல் (333) எனப் பயன் வரைப. செல்வம் நிலையாது, ஈட்டற்க; இளமை நிலையாது, வளரற்க; உடல் நிலையாது, வாழற்க; என முதலறுக்கும் கருத்து தமிழ் நூலில் இல்லை. யார் மாட்டும் நில்லாது செல்வம்; ஆதலால், பகடு நடந்த கூழ் பல்லாரோடு உண்க; தீவளியால் நற்காய் உதிர்தலும் உண்டு; ஆதலால், யாம் இளையம் என்னாது கைப்பொருள் உண்டாம் போழ்தே கரவாது அறஞ் செய்ம்மின்; புல் நுனி மேல் நீர்போல் உடல் நிலையாமைத்து; ஆதலால், இன்னினியே செய்க அறவினை என வரூஉம் நாலடிப் பகுதிகளே சான்றாவன. நில்லாதவற்றை நிற்கின்ற சிறுபொழுதைக்குள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அறைவதுவே தமிழ் அறநூல்களின் உள்ளம். இவ்வுண்மை உணராதவரே ஈட்டாது, கால் முடங்கி, மனஞ்சுருண்டு, நிலையாமை பேசி, அவ்வுலகச் செலவு பார்த்து, இவ்வுலகத்து நிலக்குப் பொறையாகக் கிடப்பர். அவர் முன் இருந்து சொல்வார் போல் செய்க பொருளை (759) என வள்ளுவர் ஆணையிடுவர். ஒண் பொருள் காழ்ப்ப இயற்றுக (760) என ஊக்குவர். இவ்வாணைக்குப்பின் பன்னாள் மடியனும் வாளா விருப்பனோ? காலாடி, மனம் விரிந்து, பொறுப்பு உணர்ந்து, மெய்யுதறி, மடிபோக்கிக் குகை விடுத்து வரும் புலிபோல், உடல் நிமிர்ந்து உழைக்கப் புறப்படானோ? வள்ளுவர் ஆணைகேட்டு, உளங்கிளர்ந்து பொருளீட்ட எழுந்தவன், மெய் வருத்தம் பாராது கண் துஞ்சாது கருமமே கண்ணாகின்றான். பசித்துக் கிடந்தவன் உணவு வேட்கை போலவும், காயலுற்றவன் நீர் வேட்கை போலவும், அறத்திற்குத் தகும் தகாது என நினையாது, ஒரே நோக்குடையவனாய்ப் பொருள் குவிக்க முயலுகிறான். இது போர்க்காலம்; இது மழை வளஞ்சுருங்கிய காலம்; இது எனக்கு வாய்த்த பதவிக்காலம்; நான் பெரும் பொருள் தொகுத்தற்கு இதுவே பொய்யாக் காலம் என ஒருவன் துணிகின்றான். துணிந்து மனமாசு படினும், நெறி மாறுபடினும் பொருட்படுத்தாது, செல்வத்தைத் திரட்டுகிறான். கேவலம் ஈட்டும் உணர்ச்சி மிக்கானுக்கு, அறனீனும் இன்பமும் ஈனும் திறனறிந்து தீதின்றி வந்த பொருள் (754) என நெறியுணர்ச்சியை, நேர்மைப் பண்பை ஊட்டுவர். பொருள் மிகப் படைத்தார்க்கு, அறனும் இன்பமும் பெறுதற்கு எளிய பொருள்கள் என்று கிளந்த வள்ளுவர் ஈண்டு ஒரு வரையறை காட்டுகிறார். பொருளெல்லாம் அறம் இன்பம் பயவா. தீதின்றி வந்த பொருளே அவற்றைப் பயக்கும் என விதி செய்கிறார். ஈட்டவும் வேண்டும்; நெறி நேர்மையும் வேண்டும் என இணைத்துக் கூறுகிறார். நல்வழியே நலம் விளைக்கும் என நெறிக்கும் பயனுக்கும் நீங்காத தொடர்பு சுட்டுகிறார். இளமாணாக்கர்க்குத் திருக்குறள் முழுதையும் வரப்பண்ணுக என்ற நல்லாசிரியன் பொருளறிந்து கற்கஎன மறித்து அறிவூட்டுவது போல, ஈட்ட வேண்டுவது பொருளல்லது பிறிதில்லை என்ற வள்ளுவப் பெருமகன், நெறியோடு ஈட்டுக என அடுத்து வழிப்படுத்துவர். நண்பர்களே! இடை தெரிந்து நன்கு உணர்ந்து சொல்லுக(712) என்னும் அவை யிலக்கணப்படி, என் சொற்பொழிவைக் கேட்கும்போதே உங்கட்கு என்னென்ன ஐயம் எழக்கூடும் என்று நான் கருதுகிறேனோ அவற்றை அவ்வப்போதே விளக்கி மேற்சேறல் நல்லது. இன்றேல் ஐயங்கள் பலவாய் மறந்து போதலும் கூடும். மாக்கள் சேர்த்து வைத்த பின் அசைபோடும் உடற்கூறு உடையவை. மக்களோ புகுந்த உணவை உடனடியாக உண்பவர். நம் உடற்கூறுக்கு ஒப்பவே நம் அறிவுக் கூறும் அமைந்தது போலும். ஒரு கருத்து புகுந்ததோ இல்லையோ நம்மறிவு உடனே அதன்மேல் நோக்கம் செலுத்துகின்றது. சொற்பொழிவு முழுதும் கேட்டுக்கொண்டு பின் ஆராயலாம் என நாம் எண்ணினாலும், பொருள் புதிது கண்ட குழந்தைபோல அறிவு நம் வயப்படாது, ஒரு பொருளைச் செவிப்பட்ட அப்பொழுதே ஆராயத் தொடங்கி விடுகிறது. ஆதலின் என்னுரையைக் கேட்குந்தொறும் தோன்றும் ஐயக்களையை அகற்றிச் செல்ல எண்ணுவல். ஈட்டுதலை முதற்கண் மொழிந்து தீதின்றி ஈட்டு நெறியைப் பின்னர் மொழிப திருவள்ளுவர் என்று என் விளக்கம் கேட்ட நீங்கள், நெறிக்கு முதன்மை இவ்வாசிரியர் கொடுத்தாரலரோ என ஐயப்படுவீர்கள். ஈட்டின் தீதின்றி ஈட்டுக; அன்றேல் ஈட்டற்க என்று ஒரேயடியாக விதித் திருந்தால், நீவீர் ஐயங் கொள்ளீர். இவ்வைய வுணர்ச்சி நமக்குத் தோன்றுவானேன்? நாம் காந்திப் பெருமகன் காலத்து வாழ்ந்து வருகிறோம். அவர் மாசில் வாழ்க்கையைக் கண்ணாரக் கண்ட பேறுடையோம். சான்றோருள் சான்றோராகிய இத்தோன்றல் மேற்கண்ட வினையும் தூய்தாதல் கண்டோம். அவ்வினை முடிப்பான் கையாண்ட நெறியும் தூய்தாதல் கண்டோம்; நெறி மாட்சியின் சிறப்பினாலன்றோ, உரிமை பெற்ற இந்தியாவுக்கு, மீண்டும் ஆங்கிலேயன் முதற்றலைவன் ஆயினான். இகலென்னும் எவ்வநோய் நீக்கின் தவலில்லாத் தாவில் விளக்கம் தரும் (853) என்றபடி, வேண்டாக் கருத்தினை இகலி, அக்கருத் துடையாரைப் பகைத்து இகலா எண்ண மாட்சியாலன்றோ, நம் இந்தியத் தாய்நாடு படைப்பெருக்கம் இன்றியேயும், ஆற்றல்சால் நாடாக மதிக்கப்படுகின்றது. இவ்வெல்லாம் வினைத்தூய்மை ஒப்ப நெறித் தூய்மையும் இன்றியமையாதது என்ற நல்லுணர்வை நமக்கு ஊட்டின. அண்ணல் அடிகளாரின் அறிவுரை தெளிந்துடையோம்; ஆதலின், ஈட்டலினும் ஈட்டு நெறிக்கு வள்ளுவச் செம்மல் முதன்மை வழங்கினாரல்லரோ என்ற ஐயவுணர்வு நமக்குப் பிறப்பதாயிற்று. பிறக்க வேண்டுவ தொரு கருத்துத்தான். நன்று, திருக்குறள் ஆசிரியர், கல்வியாகுக. அறிவாகுக, பொருளாகுக, வினையாகுக, நெறியாகுக, யாண்டும் தூய்மையே வேண்டும். ஓரடிப்படைக் கோளினர். தூய்மை நோக்கொடும், தூயசெயல் நோக்கொடுமே அறங்கரைபவர். மனத்துக்கண் மாசிலனாதல் என்னும் தம் முதல் வள்ளுவத்திற்கு ஒப்பவே. தூஉய்மை என்பது அவாவின்மை மற்றது வாஅய்மை வேண்ட வரும் (364) மனந்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும் இனந்தூய்மை தூவா வரும் (455) என அடிப்படை மறவாது குறள் யாப்பவர். வினைத் தூய்மை அதிகாரத்தும் பொருள்செயல்வகை அதிகாரத்தும் சொல்லப்படுவது செயல் மாத்திரம் அன்று; பொருளீட்டம் மாத்திரம் அன்று; செய்வினையைக் காட்டினும் தேடு பொருளைக் காட்டினும் ஆண்டு நெறித் தூய்மையே கழறப்படுவது, செய்யற்க சான்றோர் பழிக்கும் வினை (656) இடுக்கட் படினும் இளி வந்த செய்யார் (654), புகழொடு நன்றி பயவா வினை என்றும் ஒருவுதல் வேண்டும் (652) என வாங்கு, தூய்மையொடு படாவாயின், வினைகளை விட்டொழிக என்று வன்முறை செய்யும் அத்துணைத் தூய்மைப் பற்றுடையவர் வள்ளுவர். அழக்கொண்ட வெல்லாம் அழப்போம் (659), களவினால் ஆகிய ஆக்கம் பெருகுவது போலக் கெடும் (283). வஞ்சகப் பொருளீட்டம் நீர் பெய்த பசுமட் பாண்டம்போல் உடையானையும் கொண்டு அழியும் (660) எனவாங்கு, தூய்நெறியொடு பொருந்தாவாயின், வரும் பொருட் கேடுகள் பல என்று இடித்துரை சாற்றும் அறஞ்சான்றவர் வள்ளுவர். வழிநலம் கழறுங் குறள்கள் நனி பலவாதலால், திருக்குறள் நெறித்தூய்மையில் தவச்சிறு ஐயமும் நினையற்க. அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம் புல்லார் புரள விடல் (755) என்னும் ஒரு குறளே பெருங்கரி. வினையினும் அது முடிக்கும் நெறிக்கண் தூய்மை வேண்டும் என்ற வள்ளுவத்தை ஆசிரியர் சொல்லும் முறையில், ஒரு செயல்முறை யுண்டு என்பதனை யான் வலியுறுத்த விரும்புபவன். தீதற்ற வழியால் பொருளீட்ட வேண்டும் என்பதுதான் அவர் துணிபாயினும், அத்துணிபை வெருவரு நடையில், செயல் மழுக்கு நடையில் கழறிப் பயனென்? ஞால மக்களோ ஒரு நிலையினர் அல்லர். பொருளும் பொருளோ என நிலையாமை பேசி இரந்துண்பாரும், தொழில்போலப் பிச்சை எடுப்பாரும், ஆண் தேனீப்போல மடி பெருக்கி முடங்கிக் கை நொடித்துக் கொட்டாவி விடுவாரும், சூழ்நிலை பாராது தம் சுழிநிலை பார்ப்பாரும், முயற்சி விட்டுக் குருவிச் சீட்டு எடுப்பாரும், கைத்தொழில் செய்யாது கைக்கோடு காண்பாரும் ஆக வினைவாய்ப்படா மாக்கள் நம்மிடைப் பலர். இன்னோர்க் கெல்லாம் நெறிமுதன்மை என் செயும்? செயல் வாய்ப்பட்டார்க் கன்றே நெறிவாய்ப்படும் இடம் உண்டு. எழுத்தறியாதானை விளித்து, கற்றால் இப்படி இப்படித் தான் கற்கவேண்டும்; இன்றேல், கற்றலினும் கல்லாமை நன்று என்று நெறியழுத்தம் கூறின், என்னாம்? கல்வி கண்டு அஞ்சுவான்; கற்கும் எண்ணத்தையே ஒழித்துக் கொள்வான். கல்வி இன்றியமையாதது; பிழை கண்டு மலையாதே; செல்லச் செல்லப் பிழை தானே கழியும்; முதலில் கற்கத் தொடங்கிவிடு என்று குளிர்க்கு நடுங்குவானைக் குளத்துத் தள்ளுமாப் போல், செயலில் உய்ப்பது பெரியோர் செயல். இவ்வண்ணமே கற்க எனச் செயலில் உய்த்து, கசடற எனப் பின்னர் நெறி காட்டும் மனமறி புலவர் வள்ளுவர். கற்பவை கசடற என்ற வரையறைகளை முன்வையாது, கற்கக் கசடறக் கற்பவை எனச் செயல் நிலையை முன்னுரைத்த நடை நுட்பம் வள்ளுவர் நெஞ்சம் இற்றெனப் புலப்படுத்தும். நெறி இன்றியமையாச் சிறப்பினதாயினும், முதற்கண் வற்புறுத்தற்பாலதும் செயலேயாகும். செயலின்றி எந்நெறியு அமையாதுகாண் திருத்தமெல்லாம் செயல்நிலைக் கண்ணது என்பது எச்சிறு வினைக்கும் பொருந்துவது காண். ஆதலால் பொருளல்லது இல்லை பொருள், இல்லாரை எல்லாரும் எள்ளுவர், செய்க பொருளை, ஒண்பொருள் காழ்ப்ப இயற்றுக என்றவாறு மக்களை ஒருபாற் செயற்படுத்தி, தீதின்றி வந்த பொருள் தான் அறன் ஈனும் இன்பமும் ஈனும் என்றும், அருளொடும் அன்பொடும் வாராப் பொருளைப் புல்லார் புரளவிடு என்றும் செயல் நிலையில் நெறிப்படுத்துவர். பொருள் நிலை என இந்நாள் தலைப்பின்கண் வாணிகம் பற்றிச் சில சொல்லவேண்டும். பெரும் பொருள் ஈட்டுதற்கும் நெறித்தூய்மை காட்டுதற்கும் உரிய பேரிடம் வாணிகம் அன்றோ! உழைப்புத் தொழில்கள் செல்வப் பெருக்கை நல்கமாட்டா. ஆசிரியம், மருத்துவம் பிற பதவி முதலாய வினைகள் வரையறுத்த ஊதியமே தருவன. வாணிகம் சாராப் பிற துறையாளர் நடுவு நிலைமை கோடினும், கையூட்டு பையூட்டுப் பெறினும், பெருத்த செல்வராதல் அரிது. வாணிகமே செல்வத்துறையாவது. வாணிகமே யாரும் புகு தற்குவாய்ந்த பொதுத்தொழிலாவது வாணிகமே நெல் விதைத்து நெல் குவிப்பது போலப் பொருள் முதலிட்டுப் பொருள் திரட்டற்கு அமைந்த நிலைக்களமாவது. ஆதலின், நடுவுநிலைமை யதிகாரத்து வணிக நிலைக்கென ஒரு தனியறம் கூறினார் வள்ளுவர். வாணிகம் செய்வார்க்கு வாணிகம் என்று இனியதோர் எழுச்சி நடையில் தொடங்கி, பேணிப் பிறவும் தமபோல் செயின் (120) என்று அரியதோர் அறநடையில் முடித்தார். கற்க கசடற என்றாங்கு, வணிகச் செயல் உய்த்து நாணய வொழுங்கு கற்பித்தார். இக் குறளில், பிற என்றது மற்றையோர்க்கு விற்கும் சரக்குகளை. தம என்றது விற்பனைக்கு வணிகன் வாங்கும் சரக்குகளை. எனவே வணிகன் பண்டங்களைத் தூய்மையாக வாங்குவதுபோலத் தூய்மை யொடு விற்கவும் வேண்டும் என்பதுதான். பேணிப்பிறவும் தம்போல் செயின் என்ற அடிக்குக் கருத்தாகும். பதரோடு நெல்லும், கல்லோடு அரிசியும், கொழுப்போடு நெய்யும், நீரோடு பாலும், மணலோடு சருக்கரையும், குப்பையோடு கூலமும், இவ்வாறே பிறபலவும் விற்பனைச் சரக்குக்களாய் வணிகம் ஒரு கலப்புக் கலையாய்ப் பெருகி வருவதைக் காணுகின்றோம். அச்சரக்குகள் ஒருநொடியில் விற்றுப் போவதையும் கண்டு கொண்டு இருக்கின்றோம். கொள்வதூஉம் மிகை கொளாது, கொடுப்பதூஉம் குறைபடாது என்ற உருத்திரங்கண்ணனார், வணிகர் பேரூதியம் கொள்வர், அளவு குறைத்துக் கொடுப்பர் என அன்று இரு வணிகக் குற்றம் காட்டினர். ஊதியம் மிகுத்து அளவு குறைப்பதோடு நில்லாது, சரக்கல்லாச் சரக்கும் கலந்து கொடுப்பர் என இன்று நாம் நுகர்ந்து வருகின்றோம். இவ்வாறு அல்நெறிக்கண் வணிகம். ஐயகோ! முன்னேறுகின்றது. மக்களும் உடல்நலம் கெடுக்கும் இக்குற்றங்களை அறிவர். அரசும் நாடு கீழறுக்கும் இக்குற்றங்களை நன்னர் அறியும். நாட்டு வயலில் மக்கட் பயிர் அழிய வணிகக் களைகள் இடமெல்லாம் தோன்றிப் பரவுவதை அரசு என்னும் உழவன் கண்ணாரப் பார்த்துக் கொண்டிருக்கிறான். கொடுங்கோன்மை என்று சிலர் தூற்றுவர்கொல் என அஞ்சி, அவ்வுழவன் செங்கோலால் தீமைக்களை பறிக்கவும் நடுங்குகின்றான். எனைப் பெருந் தீமைகளும் குடியாட்சி என்னும் பெயரால், வளர்ந்தோங்கிச் செல்கின்றன. பிறவும் தம்போல் வாணிகம் செய்யாதார்க்கு இன்று நல் வாணிகம் ஆதலைக் காணுங்காலை, பொய்யில் புலவர் கூற்றும் இவ்வணிகர்பால் பொய்ப்பட்டதுபோலும், ஏழை மக்கள் படும் இன்னல் கண்டும், குழவிகள் நெஞ்சு என்பு தோன்ற உரமின்றிக் கூடாதல் கண்டும், குறள் பிறந்த நாட்டின் குணக்கேடு கண்டும், உளமுடையார் வெதும்பாரோ, சொன்மின்! மக்கள் எனைத்து வகையானும் பொருள் ஈட்டும் நோக்கம் யாது? அறத்துக்கு வழங்கவேண்டும் என்று ஈட்டுவாரினும், துய்க்கவேண்டும் என்று ஈட்டுவாரினும் தம் பிள்ளைகட்கு வைக்க வேண்டும் என்று ஈட்டுவாரே சாலப்பலர். இம்மகவு அன்பன்றோ கொடாதும் உண்ணாதும் பொருள் சேர்ப்பதற்குக் காரணமாவது. இம் மனப்பாங்கினை வள்ளுவர் நன்கு அறிந்தவர். உலகோர் எதனைப் பற்றுகின்றனரோ, அப்பற்று வழியாகவே தூய்மை யூட்டல் நம் புலவர் பெருமகன் செயல்முறை யாதலின், செப்பம் உடையவன் ஆக்கம் சிதைவின்றி எச்சத்திற்கு ஏமாப்பு உடைத்து (112) என்று குறள் யாப்ப, ‘நும்பொருள் நும்மக்களைச் சேர வேண்டுதிரேல், வணிகர் ஆகுக, பிறதுறையினர் ஆகுக, நடுவுநிலையோடு ஈட்டுமின்! என நெறித்தூய்மை விதிப்பர். கேள்விப் பெருமக்களே! நூறாயிரத்துக்கு மேற்பட்ட தொகையினராய் நாம் இங்குக் குழுமி யிருக்கின்றோம். நம் திருக்குறட் பற்று அறிவாகவும் செயலாகவும் விளைய வேண்டும். நம்முட் சிலர் இதுவரை மடிமடிப்பட்டு முடங்கிக் கிடந்திருக்கலாம். சோதிடம் பார்த்துப் பார்த்து நல்லூழ் இல்லை என்று அறிவு மழுங்கி யிருக்கலாம். நல்லோர்க்கு இது காலம் இல்லை என்று உலகம் பழித்து வாளா உடல் சுமந்திருக்கலாம். ஈட்டமுனைந்து குற்றமே பெருக்கி வஞ்சனை அணிந்து மனமாசு படிந்திருக்கலாம். அரைகுறை முயற்சியின ராய்க் கொட்டாவி விட்டிருக்கலாம். கடந்த நிலை கிடக்க. சென்றது கவலற்க. வள்ளுவப் பொருள் செவிமடுத்து இன்னே. உடல் முடக்கம் உதறுமின்! அறிவு மழுக்கம் தீட்டுமின்! வாய்ப்பேச்சு மூடுமின்! படிமாசு துடைமின்! கொட்டாவி சுண்டுமின்! முயற்சிக்கு இடையூறாம் எதனையும் வாழ்வுப்பகை எனத்துணிமின்! முயல்மின்! முயற்சிப் படுமின்! இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்று நம் காலப்பெரும் புலவன் பாரதி எண்ணியாங்கு, நாமும் வாழ்வு திருந்துவான் புத்தெண்ணம் எண்ணுவோம். அகத்தூய்மை காப்பான் செல்வத் தூய்மை காப்போம். 4. பொருட் பயனிலை பயனுடைப் பெருமக்களே! வணக்கம் பல. நெருநல் மாலைச் சொற்பொழிவில், பொருளீட்டமும் ஈட்டு நெறியும் பற்றி, வள்ளுவர் நெஞ்சினை யான் அறிந்தவாறு விரித்துரைத்தேன். செல்வத் தொடர் புடைய குறள்கள் நூற்றுக்கு மேற்பட்டன. அக்குறளகத்துப் பொதிந்த ஆசான் எண்ணங்கள் ஒளிக்கதிர்போல் நுண்ணியவாயினும், அறியாமை இருள் அகற்றவல்ல பொய்யா விளக்குகள். அறிதற்கு அரியன என்று மலைத்து அறியவேண்டுமவற்றை அறியாது மடிதல் சாவுநோக்கியின் இயல்பு. அரிய என்று ஆகாத இல்லை, (537) என வீறு சான்று உரம் பெற்று மலைபுரட்டும் முயற்சி கோடல் வாழ்வு நோக்கியின் துணிபு. ஆதலின் வாழ்வாங்கு வாழ விழைவார் அரிதின் முயன்று வள்ளுவர் நெஞ்சங்கண்டு வாழ்கதில். பொருட் குறள் அனைத்தையும் ஒன்று விடாது எடுத்துரைப்பது என் எண்ணமன்று. அவற்றை அவரவர் நிலைக்கு ஏற்ப மேற்கொண்டு தழுவல் கற்பார்கடன். செல்வம் குறித்த முச்சொற்பொழிவுகளுள் இரண் டாவதாகப் பொருட்பயன் நிலை பற்றி ஆராய்வோம். அறிவுப்பயன் வேண்டிக் கற்கின்றோம். ஒழுக்கத்து நல்வாழ்வு வேண்டி அறிவு பெறுகின்றோம். அதுபோல் பொருளீட்டமும் பயன் நோக்கியது. கல்வி கல்விக்கே, அறிவு அறிவுக்கே, பொருள் பொருளுக்கே என்ற கூற்று எவ்வாற்றானும் நடைமுறைக்கு ஒவ்வாது. கற்றதனால் ஆய பயனென் கொல் (2) என்றும், அறிவினான் ஆகுவது உண்டோ (315) என்றும் கல்வி யறிவுகளுக்குப் பயனுண்மை காட்டுமாப்போல, செல்வந்தான் பெற்றத்தாற் பெற்ற பயன் (524) ஒன்று உண்டு எனக் காட்டுவர். தமிழ் நூல் அனைத்தும் பொருள்பற்றி வலியுறுத்தும் ஒருமுகக் கோட்பாடுகள் ஈதலும் துய்த்தலும் என்ற இரண்டு. ஈதலும் துய்த்தலும் இல்லோர்க்கு இல் என்பது குறுந்தொகை. கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு என்பது திருக்குறள். வழங்கலும் துய்த்தலும் தேற்றாதான் என்பது பழமொழி கொடுத்தலும் துய்த்தலும் தேற்றா இடுக்குடை உள்ளத்தான் என்பது நாலடி. கொடையை முன்னும் துய்த்தலைப் பின்னும் பெரும்பாலும் நிரல்பட மொழிவதால், தமிழ் நூலோரின் கருத்து செல்வத்துத் தலைப்பயன் ஈதல் என்பதாம். இதனால் உடையான் துய்ப்பதைக் கீழ்மைப் படுத்தினர் என்றோ புறக்கணித்தனர் என்றோ மயங்கற்க. ஈதல் கடமை; துய்த்தல் உரிமை என்பது அன்னோர் தெளிந்த முடிபு. பயன் இரண்டனுள் நினைவூட்டத்தகுவது கொடைக் கடனேயன்றோ! தன்னுரிமை பேணும் வேட்கை காமம் போல் யார்க்கும் இயல்பில் உண்டு. நிலத்திடைப் புல்போல் உரிமையுணர்ச்சி மனத்திடை யாங்ஙனமோ தோன்றி விடுகின்றது. அதனால் துய்க்கும் உரிமை பற்றி நூலோர் விரித்து உரைப்பதில்லை. குழிதோண்டி நீர் விட்டுக் காத்துவளர்க்கும் மரக்கன்று போல்வது கடமையுணர்வு. அறிவூட்டி நினைவூட்டி அதனை மக்கள் பால் வளர்க்கவேண்டும். ஆதலின் கொடைக்கடன் பற்றியே பன்மாணும் சான்றோர் விரிக்கலாயினர். உரிமை வெறியும் கடமைக்கழிப்பும் இன்று பெருகிவரும் ஆகா உணர்ச்சிகள் அல்லவா? இந்திய உரிமை பெற்றுவாழும் நாம் ஆகாப் பல எழுச்சிகளுக்கு அடிமைப்பட்டுக் கிடக்கின்றோம். அவை ஆகும் உணர்ச்சிகளாக மேலும் மயங்கி அறிகின்றோம். ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக நாம் சுமந்த அடிமை அரசு நிலையில் மட்டுமன்று; கல்வி, அறிவு, காதல் முதலாய அனைத்து நிலையிலும் பரந்த அடிமைப்பட்டோம். எழுபிறப்புக்கு வேண்டிய தீவினைப் பெருக்கத்தை எடுத்த ஒரு பிறப்பிலேயே ஈட்டிக்கொள்வான் பேதை என்று வள்ளுவர் நகுவதற்கு ஒப்பப் பல அடிமைப்பான்மைகளை ஓரடிமையால் ஈட்டிக்கொண்டு மடம் பட்டோம். ஆட்சியுரிமை பெற்ற இன்றும் நம் அடிமை பல துறைகளினின்றும் மீண்ட பாடில்லை என்று தணியும் இவ்வடிமையின் மோகம் என்ற உரிமைப் புலவன் பழிச்சொல் இன்னும் மறையவில்லை. ஏன்? அணித்தாரைப் பேணுங்கடமையை மறந்தோம். இன்றும் நன்கு மறந்து வருகின்றோம். உறவினர் நலத்தை, ஊரார் நலத்தை மறப்பது மிகநல்லது என்றுகூட நினைக்கின்றோம். மேலும் சுற்றங்கெடுத்துப் பக்கங்கெடுத்து, ஊர்கெடுத்துப் பரந்த நோக்கம் என்ற காலப்போர்வை பூண்டு உலகநலம் பேணுவது போலத் துடிக்கின்றோம். கடமையில் உண்டு உரிமைக்காவல் என்ற தூய அறிவு நமக்கு இன்னும் தோன்றவில்லைகாண். வேருக்கு நீரூற்றிப் பழங்கொள்ளும் எளிய வழியை விடுத்து, நாம் கொள்வது பழந்தானே என்று மரமேறிப் பிஞ்சுக்கு நேரடியாக நீரூற்றினோம். புல்லறிவு உடையவர்களானோம். கண்ட பயனென்? கூரைபோல் மாளிகையும் தளைப்பட்டது. ஏழையொடு பெருஞ் செல்வரும் அடிமைப்பட்டனர். உரிமை பெற்ற நாம் அவரவர் சுற்றுப்புறம் வாழுங் கடமையைப் பெரிதாக நினைக்கவேண்டும். கடமையை மறந்தோமாயின், மீண்டும் வருவது அடிமைகாணீர். பிறநலம் பேணும் கடமையும் அதற்காகத் தன்னலம் பேணிக்கொள்ளும் உரிமையும் அறத்தொடுபட்ட பொருட் பயன்கள் என்பதுவே தமிழ்த் துணிபு. ஈன்று புறந்தருதல் என்தலைக் கடன் என்றபடி மகச்செல்வம் தருவது பெண்பேறு ஆயினாற்போல, பொருட் செல்வம் ஈட்டுவது உலகத்து ஆடவர் மேற்றாய் வருதலின், ஈதற்கடனை ஆண்கடன் என்ப. ஆண்கடன் உடைமையின் பாண்கடன் ஆற்றிய எனப் புறநானூறும், ஆற்றாதார்க்கு ஈவதாம் ஆண் கடன் என நாலடியும் கொடைக்கடனை ஆண் கடனெனவே ஆட்சி செய்யும். ஈட்டம் இவறி இசை வேண்டா ஆடவர் என்ற குறட்பகுதியும் சான்றாதல் காண்க. நுனிப்புல் மேய்வார்க்குத் திருக்குறள் பல முரண் உடையதாகவே தோன்றும். மக்களின் வாழ்க்கைப் பல் நிலைகளை ஒருபால் உட்கொண்டு, வள்ளுவர் நெஞ்சுகாணும் திறலுடையார்க்கு, அம்முரணெல்லாம் உடலுறுப்பு வேற்றுமை போல் உலகநிலை வேற்றுமை யென விளங்கி யொழியும். தெளிவு சான்ற வாழ்க்கைச் செயல் நூல் திருக்குறள் என்பது என்துணிபு. உலகிடை நிலவும் ஈகைநிலை, துய்ப்பு நிலைகளை யெல்லாம் ஒருங்கு கூட்டிச் சூழ்ந்து யார்க்கும் ஒல்லும்வழி காட்டுபவர் வள்ளுவர். அந்நிலை பலவற்றுள் ஒன்று பின்வருமாறு: ஒருவன் ஈகை யுணர்ச்சியே நிரம்பியவன். கடமையே குடிகொண்ட உள்ளத்தவன். தானும் தன் குடியும் வாழும் உரிமையை முற்றும் மறந்தவன். ஏதிலார் ஆரத் தமர் பசிக்கச் செய்யும் பேதையோ எனின், அல்லன்; அழுந்திய கொடைப் பயிற்சியானும், கனிந்த நெஞ்சு நெகிழ்ச்சியானும் மடம் பட்டவன். உரிமை போற்றாத் தனிக் கடமையன். கைப்பட்டது சிறிதேனும் பெரிதேனும் பிறர்க்கு வழங்கினால் அன்றி மனவமைதி கொள்ளாக் கடமைச் செல்வர். ஞாலத்திடைச் சிலரேயாயினும், இன்றும் உளர். கடன் பட்டும், இரவல் பட்டும், குடும்பக்கடன் போல் கொடைக் கடன் ஆற்றுவார் என்றும் உளர். தாய்க்குக் கொடுத்தால் அவள் தன் மகவுக்குக் கொடுக்குமாப் போலப் பெற்றதை யெல்லாம் பிறர்க்கே ஈயும் அன்பு நிறை நெஞ்சினர். அரியரேனும், நம்மிடை யுளர். ஈத்து உவக்கும் இன்பமே அவர் கண்ட பொருட் பயன். தமக்கென முயலா நோன்தாள், பிறர்க்கென முயலுநர் எனப் பெதுப் படவும் தனக்கென வாழாப் பிறர்க்கு உரியாளன் பண்ணன் எனத் தனிப்படவும் சங்க இலக்கியம் மொழியும். இன்னோரெல்லாங் உரிமை துறந்த முழுக் கடமை உணர்வினர். இன்னோர்க்கு என்னாது என்னொடுஞ் சூழாது வல்லாங்கு வாழ்தும் என்னாது நீயும் எல்லார்க்கும் கொடுமதி; மனைகிழ வோயே! பழந்தூங்கு முதிரத்துக் கிழவன் திருந்துவேற் குமணன் நல்கிய வளனே என்ற புறப்பாடல் (163) புலவர் பெருஞ்சித்திரனார் தம் மனைவிக்குக் கூறுவது. இக்கூற்றால் அவர் கொடைத் துடிப்பை அறிகின்றோம். செல்வம் கொண்டு வந்தவர் கணவன் ஆயிற்றே; அவரைக் கேட்டன்றோ கொடுப்பது முறை என்று எண்ணிப் பொழுது கடத்தாதே என்பார். என்னொடுஞ் சூழாது என உரிமை வழங்கினார். கொண்டு வந்த பொருள் பெருஞ் செல்வம் ஆயிற்றே; பல தலைமுறைக்குப் போதுமே; கட்டி வைத் திருந்தால் நன்னர் வாழலாமே என்று வன்கண்மை நினையாதே என்பார். வல்லாங்கு வாழ்தும் என்னாது என்று அறிவுறுத்தினார். கைப்பொருள் எவ்வாறேனும் விரைவில் நம் கையை விட்டு நீங்கித் தொலைய வேண்டும் என்ற கருத்தால், நெருப்பை மடியிற் கொண்டாற்போலத் துடிதுடித்து, யானும் கொடுப்பேன்; நீயும் கொடு எனக் கொடுத்தற்கு உதவி ஆள் சேர்த்தார். இன்னார்க்குத்தான் ஈவது என்று ஒரு வரையறை கொள்ளின், கைப்பொருள் கொடுபடாது எஞ்சிப்போம் என்ற துயரால் எல்லார்க்கும் கொடுமதி எனப் பொதுமை காட்டினார். நமக்குக் கொடுத்தற்கென ஒருவன் இருக்கும்போது நாம் ஏன் செல்வத்தை இறுகப் பிடிக்க வேண்டும் என்ற கருத்தால், குமணன் நல்கிய வளனைக் கொடுமதி எனக் குறைவின்மை சுட்டினார். ஈட்டிக் கொடை மடம் பட்ட பண்டைத் தமிழ் வள்ளல்கள் போலாது, அவர்பால் இரந்து கொடை மடம் பட்ட பண்டைத் தமிழ்ப் புலவருள் பெருஞ்சித்திரனாரும் ஒருவர். உலகத்துப் புலவர் பல்லோரின் வரலாறு வறுமையையும் கொடைமையையும் ஒருங்கே காட்டி நிற்பன. அன்றே என்தன் ஆவியும் உடலும் உடைமை எல்லாமும் குன்றே யனையாய் என்னை ஆட்கொண்ட போதே கொண்டிலையோ? என்ற திருவாசகப்படி, வாழ்க்கையில் அனைத்தும் வழங்கும் துறவு நிலை கற்று வருவதில்லை. கற்பித்தாலும் வரப் போவதில்லை. உடம்பின் அழகுபோல் இயல்பில் அமைந்து கிடக்கும் இவ்வுள்ளழகு உயர்ந்தது ஒப்பில்லாதது என வள்ளுவர் அறிவர். விருந்தோம்பி மிச்சில் மிசைவான் உயர்ந்தவன், ஒப்பில்லாதவன் என வள்ளுவர் அறிவர். இக் கடன் அறிவாழ்க்கையர் நல்குரவு எய்தல் பள்ளத்து நீர் வீழ்வு போல் இயல்பு எனவும் வள்ளுவர் அறிவர். இன்னோர் பொருள் வறுமையை வாழ்க்கைத் தாழ்வாக, கெடுவாக உலகம் கருதாது. கொடுத்துப் பெற்ற வறுமை காலாடி வீண் செலவு செய்து பற்றிய வறுமையோடு வைத்து எண்ணத்தக்க தன்று. ஒப்புரவி னால்வருங் கேடெனின் அஃதொருவன் விற்றுக்கோள் தக்கது உடைத்து (220) என ஆசிரியர் கொடை வறுமையின் பரந்த செல்வாக்கைக் காட்டுப. இச்சரக்கு எங்கும் விலைபோகும் என்ற வழக்குப்படி. இவ் வறுமை யாண்டும் மதிப்புக்கொள்ளும் என்ப. இதனை வறுமை என்ற சொல்லால் கிளக்கவும் அஞ்சி, சீருடைச் செல்வர் சிறுதுனி (1010) எனக் காதல் நடை இலங்க மொழிப. யாரும் வாழ்வாங்கு வாழ வழி வகுப்பது வள்ளுவம்; ஆதலின், உரிமை துறந்த முழுக்கடன் உணர்ச்சியை அறமாக விதித்திற்றிலர். செய்க பொருளை உலகத்தோடு ஒட்ட ஒழுகல் என்ற விதிநடைபோல உரிமை ஒழித்துக் கடமை செய்க என்றோ, துய்த்தல் விடுத்து ஈதல் செய்க என்றோ நடையாத்திலர். சொல்லியும் கற்றும் வரக்கூடியதன்று முழுத் துறவு என உலகு ஒட்டும் பண்பு தெளிந்தவராதலின், செயற்கரிய செய்வார் பெரியர் (26) என்ற தன்மை நடைபோல, இடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார் (218) என உள்ளது சுட்டி அமைந்தார். அன்னோரெல்லாம் கடனறி காட்சியவர் (218) எனப் பெருமைக்குரிமை சுட்டி (பின்பற்றுதற்கு இயலாது என்ற எண்ணத்தால்) விடுத்தார். இதுவரை நாம் கடை பிடித்தற்கு ஒல்லாது உயர்ந்த அரிய கடமையினரை அறிந்தோம். முற்றும் உரிமை துறந்த இவ்விழுமியோர் உலகிற் சிலராய் ஒரு பாலாக, முற்றும் கடமை மறந்த மக்கள் பலராய் யாண்டும் காண்கின்றோம். துய்க்கும் உரிமையே இவர் முழுமன நிறைவு. வினை செய்தானே அதன் முழுப் பயனையும் நுகரவேண்டும் என்பதற்கு ஒப்ப, செல்வம் ஈட்டியவனே முழுதும் துய்க்க வேண்டும் என்ற கொள்கையினர். தானுண்டு, தன் வாய் உண்டு, தன் உடல் உண்டு எனத் தன்னையே நினையும் தடிப்பினராய், பெற்றோர் மனைவி மக்கள் சுற்றும் அற்றவர் போல, அனைத்தையும் துய்க்கும் அவாவினர். அருகிருந்து தாய் சோறு படைக்கவும், மனைவி சோறு படைக்கவும் கூட, பொறா மனத்தினர், தாம் ஈட்டிய செல்வத்தைத் தாமே துய்த் தழிக்கும் இன்ன இழிநிலையினோரையும் கண்டவர் வள்ளுவர். இரத்தலின் இன்னாது மன்னோ நிரப்பிய தாமே தமியர் உணல் (229) என்பது ஆசான் கொதி நெஞ்சம். இன்மை இடும்பை இரந்து தீர்வாம் (1063) என்றபடி, ஒருகால் இரப்புக் கொள்கையைக் கண்டு சினந்த புலவர். ஈண்டு ஈயாக் கொள்கையை - இன்னா உணவுக் காட்சியை - கண்டு சினப்பர். பகுத்து உண்டற்கு உரிய உணவுக் குவியல் இருந்தும் ஈயார் என்று காட்டுவான். நிரப்பிய என்ற சொற் பெய்தார். இலைக் கலத்திலும் ஒரு சோற்றுப் பருக்கை வையாது, கையகத்தும் ஒன்று ஒட்டாது நறுவிதாய் உண்டபின், எச்சிற் கையையும் உதற மனம் நடுங்கும் இக்கொடா நோன்பிகளுக்கு, கயவர் என்று பெயர் பூட்டினர். கேட்பித்தாலும் கற்பித்தாலும் தாமே யுண்ணிகள் திருந்தார் என்று உட்கொண்டு போலும், ஈர்ங்கை விதிர்த்தற்கே கொடிறு உடைக்கும் கூன்கையர் வேண்டும் என்றும், கரும்பு போல் கொல்லப் பயன்படும் கீழ், (1078) என்றும் இடித்துரைத்தனர். துய்ப்பு நிலைபற்றி உரையாற்றும் இவ்வமயத்து ஒன்றை நாம் நினைவு கூரவேண்டும். நிரப்பிய தாமே தமியர் உணல் என்ற இடிப்புரை கேட்டு, நன்கு உண்டு உடுத்து ஆடிப் பாடிக் கூடிக் களித்து நுகரும் உலகின்ப வாழ்வை, இகழ்பவரோ வள்ளுவர் என ஐயுற வேண்டா. பொருட் செருக்கால் நெறியல்லா நெறி விழைந்து, இன்பம் எனப் பெயரிய துன்பக்குழிபுக்கு, பரத்தை வேட்டுக் கட்சாடி முழுகிச் சூதுத் தொழில் கற்று, வீழ்வாங்கு வீழ்ந்த மக்கட்கும் மருந்து கூறும் அருள் நெஞ்சினர். இவ்வருளால் அன்றோ வரைவின் மகளிர், கள்ளுண்ணாமை, சூது, மருந்து என அதிகார வைப்புத் தொடுத்தனர். மக்கள் உடம்பு பெற்ற நாம் நெடிது உய்யுமாறு மருந்து உணவு சொல்லும் உடல் மருத்துவர். இந்நிலமிசை நீடு வாழுமாறு ஒழுக்க நெறி நிறுத்தும் வாழ்வு மருத்துவர். காதலின்பத்தை உளங்கலந்து நனிதுய்க்கும் அறிவு மக்கட்கு இல்லை என்ற இரக்கமன்றோ, காமத்துப்பால் இருநூற்றைம்பது குறள்களின் பிறப்புக்குக் காரணம். நிரம்பிய ஊண் உண்டலை மறுப்பவ ரல்லர்; தான் உண்டலை மறுப்பவரும் அல்லர். கடமை மறந்து உண்பதையும், வயிற்றளவு மறந்து கழிபேரிரை எடுப்பதையுமே, இன்பம் அன்று என்ற காரணத்தால் மறுப்பவர். விருந்து புறத்ததாகத் தான் உண்டலையே மறுப்பவர். இன்பப் பெருக்கு தனித் துண்பதால் வருவதன்று. வெறும் சோற்றுப் பண்டக் குவியலால் அமைவதன்று. உணவுக்காலை உள்ள மனவெழுச்சியே இன்பத்தைப் பெருக்கவல்லது. அதனாலன்றோ, பண்டைத் தமிழ் வள்ளல்கள் பாணரோடும் புலவரோடும் இருந்துண்ண விரும்பினர். மேலை நாட்டவர் போல் குடும்பம் முழுதும் ஒக்க இருந்து இன்னுரையாடலோடு உண்பதுவே துய்ப்பு நெறியாகும். தனித்து உண்பது அவா உணர்ச்சிக்கும் அச்ச வுணர்ச்சிக்கும் அடிப்படை. அறத்தான் வருவதே இன்பம் (39) என்பது அதிராத் துணிபாதலின், அதன் புறத்து வரூஉம் வாழ்வு நுகர்ச்சியெல்லாம் மனநோயும் உடல் நோயும் விளைப்பனவாம் என்க. இவ்வொரு வரையறைக்கு உட்பட்டு உண்ணுக, உடுத்துக, ஆடுக, கூடுக. மக்கள் மெய்தீண்டல் உடற்கு இன்பம் (65) ஈத்துவக்கும் இன்பம் (228), இழிவு அறிந்து உண்பான்கண் இன்பம் (946) என வருவன ஆசான் காட்டும் நல்லின்பங் களாகும். அறத்துப்பட்ட இன்பம் வரையறையுடையதே யாயினும் நிலையுடையது; வளர்வுடையது? அச்சமற்றது; வாழ்வுப் பயிருக்கு வேலி நிகர்ப்பது. அறத்தொடு படா இன்ப வெள்ளம் பெருகுவது போல் வாழ்வைக் கீழறுப்பது; உடைபட்ட மடைவாய்ப் பயிர்போல வாழ்வை அழித் தோடுவது; ஒரு நாளின்பம் பல்லாண்டுத் துன்பம் தருவது. இவ் வெல்லாம் தெளிந்தன்றோ, அறத்தான் வருவதே இன்பம் என யார்க்கும் இன்பக் குறிக்கோள் ஒன்று நிறுவினர். ஆதலின் வாழ நூல் செய்த வள்ளுவர் வீழ்வு தரூஉம் இன்பத் தடை செய்பவரே யொழிய, வாழ்வு அளிக்கும் அறவின்பப் பகைவர் அல்லர். ஊடுதல் காமத்திற்கு இன்பம்; அதற்கின்பம் கூடி முயங்கப் பெறின் (1330) என்ற ஒரு குறளே அப்பெருமகனார் உலகின்ப நலத்துக்குச் சான்று. துய்க்கும் இன்பத்தைக் கட்டுப் படுத்துபவர் அல்லர் வள்ளுவர். யான் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம் என்ற நல்லுள்ளம் ஒருவற்குத் தான்பெற்ற இன்ப அடிப்படை யினின்று பிறக்க வேண்டும். தன்னலம் அழியாப் பிறநலமே உலகொட்டும் இயற்கை. அருள் என்னும் அன்பு ஈன் குழவி (757) என இவ்வியற்கையை ஆசிரியர் ஒப்புவர். துய்ப்பின்பம் அறிபவனே பிறர்க்கு ஊட்டின்பம் அறிவான். தாம் இன்புறுவது உலகு இன்புறக் கண்டு (399) என்றபடி, தன்னின்பம் நுகர்ந்தவனே பிறரை நுகர்விக்க வல்லனாவான். ஆதலின், அறனொடுபட்ட இன்பத் துய்ப்பைக் குறைத்துக் கொள்ளச் சொல்வார் வள்ளுவர் அல்லர். கடன் பட்டும் தன்னை விற்றும் வரவுக்கு விஞ்சிச் செலவு செய்வது பேதைமை. பொய்ம்மானம் நச்சிப் பொருள் வலி பாராது. அகலக்கால் வைப்பது புல்லறிவு. வருவாய்க்கு அடக்கமாகச் செலவு கொள்வதே துய்ப்பு நெறி. வரும்படியை நான்கு கூறாக்கி, ஒரு கூறினை மேல் இடர் வந்துழி அது நீக்குதற் பொருட்டு வைப்பாக்க வேண்டும் என்பார் பரிமேலழகர். செலவு அடக்கி வைப்பு மிகுப்பதே அறிவுடைமை; எதிரதாக் காக்கும் பகுத்தறிவு என்க. இன்றோ மக்கள் நிலை யாது? பொருள் வலி யாது? பண்டத்தின் விலை யாது? வணிகர் மனம்போல் நாள்தொறும் பண்டவிலை தரங்குறைந்து பெருகுகின்றது. பல குடும்பத்தார் செலவு வரவுக்கு உட்படுமாறு இல்லை. வரவும் செலவும் தன்னொத்துக் காண்பதே இக்கால அறிவுப் போராட்டம். இந் நிலையில் எதிர்கால வைப்புக்கு இடமுண்டோ? நாட் செலவை ஒத்துப்படுத்திக் கொண்டாற் போதாதா? ஆகாறு அளவிட்டிது ஆயினும் கேடில்லை; போகாறு அகலாக் கடை (478) என்பது குறள். வருவாய்க் கோடு கடந்து வறுமைக் கோட்டிற்குள் அடிவையாதே என்பது இதன் கருத்தாயினும், வரவு முழுதையும் எஞ்சாது துய்த்து இன்ப வாழ்வு நடத்துதலை ஆசிரியர் உடன்படுகிறார் என நாம் அறிகிறோம். ஆதலால், இன்பக் கட்டுப்பாடு செய்தல் வள்ளுவர் நினைவன்று. அறத்தான் வருவதே இன்பம் என்னும் நெறித் தூய்மையே வள்ளுவம் எனத் தெளிக. வறியவன் இரந்து வாழத் துணியாது முயன்று வாழத் துணிய வேண்டும். செல்வன், அஃதாவது வறுமை நீங்கியோன், தானே துய்த்து வாழ எண்ணாது கொடுத்து வாழ எண்ண வேண்டும். என் வருவாய் என் செலவிற்கே போதவில்லை? என் குடும்பக் காப்பிற்கே பற்றவில்லை; எச்சப்பட்டன்றோ ஈதல் வேண்டும் என ஒருவன் சொல்லுகிறான். தனக்கு மிஞ்சி யன்றோ தானம் எனச் சொல்லக் கேட்கின்றோம். இக்கூற்றை வள்ளுவர் சிறிதும் ஒவ்வார். அவர் வரையறுக்கும் ஈகைக் கட்டுப்பாடு யாருஞ் செய்தற்கு ஒத்தது. யார்க்கும் ஒல்லும் அறம் விதிப்பதே வள்ளுவம்; ஆதலின், வறியார்க்கு ஒன்று ஈவதே ஈகை (221) என அறக் கீழெல்லை சுட்டுவர். வறியார்க்கு அவர் வேண்டியதொன்றைக் கொடுத்தல் என்பது இவ்வடியின் கருத்தன்று. ஒன்று என்ற கிளவியான், ஆசான் சுட்டுவது பசி தீர்க்கும் உணவு. அப்பசியை மாற்றுவார் (225) என்றும், அற்றார் அழிபசி தீர்த்தல் (226) என்றும் ஒன்றன் பொருளை விளங்கக் கூறுவர். இரப்பார்க்கு ஒன்று ஈவர் (1035) என்ற உழவதிகாரத்துக் குறட் கண்ணும் இவ்வுணவுப் பொருள் அமைந்திருத்தலை நினைவு கூர்க. ஒருவன் படூஉம் எனைத்து வறுமையையும் தீர்ப்பது நம் கடனன்று; நம்மால் இயலுவது மன்று. வறுமை என்னும் உலக வழக்கு வயிற்று நல்குரவையே குறிக்குமாதலானும், பசிப்பிணி உயிர்க்கெல்லாம் பொதுவாதலானும் உண்டிக் கொடை நம் கடன் ஆகும். மன்பதைக் கண் பசித்துக் கிடப்பார்க்கெல்லாம் சோறு படைத்தல். பசிப்பிணி மருத்துவன் என எதிரில் புகழ் சான்ற பண்ணன் போல்வார்க்கே இயல்வதொன்றாயினும், ஓரிரு உயிர்களின் பசிப்பிணி நீக்குதல் யார்க்கும் ஒல்வதுகாண். இம்மி அரிசித் துணையானும் வைகலும் நும்மில் இயைவ கொடுத்து உண்மின் என்ற சிற்றறம் செய்ய வல்லாதார் யாரும் இலர். இரந் துண்ணிகள்கூட, முகம்நோக்கி நிற்கும் நாய்க்குச் சில பருக்கை இடுவது அம்பலக் காட்சி. ஈகை என்று வள்ளுவர் சிறப்பித்து உரைப்பது வயிற்றீகை. இச்சிறு முதற்கடமையும் செய்யும் வலியில்லை என்பரேல். சாதலின் இன்னாதது இல்லை; இனிததூஉம் ஈதல் இயையாக் கடை (230) என இனிய வழி காட்டுவர். மனமின்மையே ஈயாமைக்குக் காரணம் என்ற கருத்தால், கடமை செத்த நெஞ்சத்தவன் உடல் இருப்பது உலகிற்குப் பயனின்று என்ற எண்ணத்தால், சாதல் இனிது என இடித்துரைப்பர். தன் வாழ்க்கைக்கு என மனைவி மக்களைக் கொண்டவன் பின்னை அன்னவர்க்கென வாழுமாப் போலவும், தன்னை ஈன்று வளர்த்த அம்மையப்பரை முதுமைக் காலத்துத் தான் வளர்க்குமாப் போலவும், உலகத்தாற் புரக்கப்பட்ட தான் உலகத்தைப் புரக்கும் கடன் ஆற்ற வேண்டும். பெற்றோர் செய்த நன்மைபோல, ஒருவன் வாழ்க்கைக்கு ஊரும் சுற்றுப்புறமும் உலகமும் செய்த நன்மை வெளிப்படக் காணுதற்கு இன்று எனினும், பிறந்தது முதல் நினைந்து பார்ப்பார்க்கு அந்நன்மைப் பெருக்கம் புலனாகும். செய்யாமற் செய்த வுதவி (101) என்பது இவ்வுலக உதவியையே சுட்டும் போலும். ஆதலின் உண்டு வாழ்வான் ஞாலத்திற்குச் செய்யும் ஒழியாக் கடன் ஒன்று உண்டு. பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை (322) இக்குறள் நடையை நோக்குமின்! பகுத்தூட்டிப் பல்லுயிர் ஓம்புதல் என்றார் அல்லர்; என்பரேல் உலகிற்கு ஒட்டா அறங்கரைந்தவர் ஆவர். தம் நூலடிப் படை இறந்தவர் ஆவர். துய்க்கும் உரிமை மறுத்தவர் ஆவர். ஆதலின், பகுத்தூட்டி எனப் பிறவினைப் படுத்தாது, பகுத்துண்டு என ஓம்புவானையும் கூட்டி உளப்பாட்டு வினைப்பட மொழிந்தார். ஈதற் கடமை யையும் துய்க்கும் உரிமையையும் தலையறமாகவே எண்ணினார். பகுத்து ஊட்டி மட்டும் அமைவது ஊட்டியான் வாழ்வை அழிக்கும். பகுக்காது உண்டு மட்டும் அமைவது உலக நலத்தை அழிக்கும்; அதனால் உண்டவன் வாழ்வும் அழியும். ஆதலின், உலகமும் வாழ ஒருத்தனும் வாழ, கடமையும் வாழ உரிமையும் வாழ, அறங் கூறும் தமிழ் இனிய ஒருதொடர். பாத்தூண் என்பது, பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் (44), பாத்தூண் மரீஇயவனை (227), தமது பாத்து உண்டற்றால் (1107) எனத் திருக்குறள் யாண்டும் மறவாது இத்தொடரை ஆட்சி செய்யும். உலகத்தொடு தன்னையும் வாழ்விக்கும் பாத்தூண் வள்ளுவம் என அறிக. தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் எனக் கடமைகளை எண்ணுங்காலை தான் என்றாங்கு ஐம்புலத்தாறு ஓம்பல் தலை (43) என உரிமையையும் ஒருநிகர் பொருளாக எண்ணி முடிப்பரேல், ஒன்று காத்து ஒன்று அழியார்; ஒன்றழிய ஒன்று காவார் வள்ளுவர் என்பதற்குச் சான்று பிற வேண்டா. இங்ஙன் தெளிந்த பகுத்தறிவினர்; ஆதலின், அழிபசி தீர்த்தல் அஃது ஒருவன் பெற்றான் பொருள் வைப்புழி (226) பாத்தூண் மரீஇயவனைப் பசியென்னும் தீப்பிணி தீண்டல் அரிது (227) என்ற குறள்களால் உரிமை வேண்டுவான் கடமை செய்க என்று வரைந்தனர். நிரப்பிய தாமே தமியர் உணல் இன்னாது எனப் பழித்தனர். கடமை முற்றும் மறந்த உரிமை முழு மக்களைச் சாதல் இனிது என இழித்தனர். முதலில் ஆய்ந்த முழுக்கடமை யுணர்ச்சி பின்பற்றுதற்கு எட்டா அரியசிறப்பு உடையது. இதுவரை ஆய்ந்த முற்றுரிமை யுணர்ச்சியோ பின்பற்றுதற்கு ஆகா இழி தரத்தது கடமையே நினையும் நீத்தாரையும் உரிமையே பற்றும் கயவரையும் உள்ளவாறு கண்ட வள்ளுவர் இரண்டும் கெட்ட - துய்த்தலும் கொடுத்தலும் அற்ற - பேதையரையும் உலகிடைக் கண்டார். நன்றியில் செல்வம் என்னும் அதிகாரம் இப்பேதையர் நிலைகண்டு பிறந்தது. பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை என்று எண்ணிய பேதை, உடையார்க்கு எல்லாம் உளவாம் என்று கனவுகிறான். நீரால் விளைவு உண்டாமோ? நூல் நிலையத்தால் அறிவுண்டாமோ? உண்டாம் என்று சொல்லும் உலகோரின் கருத்து என்னை? விளைவு வேண்டின், நீரினை வயலுக்குப் பாய்ச்சவேண்டும். அறிவு வேண்டின், நிலைய நூலைக் கற்கவேண்டும். செலுத்தா நீர்த்தேக்கத்தால், கல்லா நூற்றொகுதியால் எப்பொருளும் தன் இருப்பளவால் பயன் ஊட்டாது. எல்லாம் பொருளால் ஆம் என்பதன் உள்ளுறை அதனைப் பயன்படுத்துவதால் ஆகும் என்பதன்றோ! இப்பொருட்கு இவன் உடையான் என்பதற்குக் கேவலம் பொருளிருப்புச் சான்றாகாது. இருப்பளவு சான்றாகுமேல். அஞ்சற்காரன் செல்வன் எனப்படுவான். வங்கிகளிலும் அரசுக் கருவூலங்களிலும் பணம் வாங்கும் கணக்கர்கள் கோடிச் செல்வர் எனப்படுவர். ஆதலின் பொருளிருப்பு வெறும் பொய்க்காட்சி; பொய்யுடைமை என்க. பொய்யா உடைமை என்பது பயனுடைமை. பயன் கொள்பவனே உடையோன் எனத்தகுவன். பயனே உடைமைக்கு வலுவாவது கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு, அடுக்கிய கோடியுண்டாயினும் இல் (1005) என்பது குறள் முடிபு துய்த்தும் கொடுத்தும் ஆள்பவன் யாவனோ, அவனே யார் செல்வத்திற்கும் உடையோன் ஆவன். ஆட்சிப்படுத்தாதவன் செல்வம் ஆளுதற்கு உரியவர் யார் என அறியப்படாமையின், பொதுவுடைமை எனத்தகும். எனதெனது என்றிருக்கும் ஏழை பொருளை எனதெனது என்றிருப்பன் யானும் - தனதாயின், தானும் அதனை வழங்கான்; பயன்துவ்வான்; யானும் அதனை அது. என்னும் நாலடிப் பொருட்பால் அரியதோர் கருத்தினை வழங்கும். அறிலிலான் பெருஞ்செல்வம் யார்க்கு உடைமை யாகுமோ என்ற கருத்தால் ஈட்டிய ஒண் பொருள் கொள்வார் பிறர் (1009) என ஈட்டிய தேட்டாளனுக்கு உறவின்மை காட்டுவர் வள்ளுவர். பொருளால் எல்லாம் ஆம் என்று இருப்புக்கட்டியானுக்கு ஆமாறும் ஒன்று உண்டு; அதுதான், மாணாப்பிறப்பு என நயம்பட நகுவர். ஒரு தொழில் முதல்வோன்பால் வேலை கேட்க ஒருவன் சென்றான். வந்தவனைப் பார்த்து, நீ அல்லும் பகலும் அயராது உழைக்கவில்லையோ என்று முதல்வன் வினவினான். ஆம், உண்ணாதும் உறங்காதும் உழைப்பேன் என்று விடை யிறுக்கவே, தன்னை முதற்கண் பேணிக்கொள்ள அறியான் தொழிலுக்குத் தகுதியில்லை என்று தொழில் ஈய மறுத்தனன் என்பது ஒரு வழக்கு. வாழ்வுக்குத் தன்னைப் பேணிக்கொள்ளும் தகுதிப்பாடு வேண்டும். குடியாள்வான் நாடாள்வான் என்பதுபோலத் தற்காக்க அறிந்தவனே பிறரைக் காக்க அறிவான். தற்காவா இகழ்ச்சியை - யாதொன்றும் பேணாமையை - பிறநலமாக மதியாது, பேதை தொழில் எனவே திருக்குறள் பழிக்கும். உண்டு வாழ்பவனுக்கு அன்றோ, பிறரை ஊட்டு எனக் காட்டலாம். மனைமுழுதும் நிரம்பிய உண் பொருள் இருந்தும், குறைந்தழியுமே என்று கவன்று, தான் எடுத்து உண்ண மறுப்பவனைக் கொடுத்து உண் என்று யாங்ஙனம் கழறுவது? தன் வயிற்றை வஞ்சிக்கும் இவன் உலகிடைச் செய்யக் கிடப்பதோர் கடமை இல்லை என்ற சினத்தால், வைத்தான் வாய்சான்ற பெரும்பொருள் அஃதுண்ணான் செத்தான்; செயக்கிடந்தது இல் (1001) என்பர். இக்கருத்தான் அன்றோ, கொடைக்கடனை முன் வைத்துத் துய்ப்புரிமையைப் பின் நிரல்படச் சொல்லும் ஒரு பெரும் தமிழ் மரபினை, இரண்டுங் கெட்ட வாழ்விலி நோக்கி, தான் துவ்வான் தக்கார்க்கு ஒன்று ஈதல் இயல்பு இலாதான் (1006) என மாற்றி நிறுத்துவர். துய்த்துக் கழியான் துறவோர்க்கு ஒன்று ஈகலான் வைத்துக்கழியும் மடவோன் என இந்நிரல் மாற்றத்தை நாலடியாரிலும் காண்க. முறைப்படி ஈட்டியவன் கொடுத்தும் துய்த்தும் பொருட்பயன் கொள்வான். தேடுங்காலத்துத் தன் வாய் வயிற்றைக் கட்டி, முதலினும் ஊதியம் பெருக்கிய வன் கண்ணனுக்குத் தேடியபின்னும் இவறல் மனப்பான்மை மாறாது. திருக்குறள் கற்கும்போதே ஒழுகும் எண்ணமிலாதார்க்கு, முழுதும் கற்றபின் ஒழுகும் எண்ணம் உண்டாகாது. அதுபோல, பொருள் வருங்காலைச் செலவிடான் வந்தபின்னும் செலவிட நினையான். பூதங்காக்கும் பொருள் என்பது பழமொழி, பூதமோ உள்ள பொருளைத்தான் காத்துக் கிடக்கும். இப்பேதைப் பூதனோ எனின், ஈட்டிக் காக்கும் ஏற்றம் உடையான். அன்பு ஒதுக்கி அறம் ஒதுக்கித் தன் வயிறு ஒதுக்கி, முறைகோடி ஈட்டிய பேதை துய்த்தற்கு உரியனல்லன் என்ற விதியால், அன்பொரீஇத் தற்செற்று அறநோக்காது ஈட்டிய ஒண்பொருள் கொள்வார் பிறர் (1009) என்பர். தம் மக்கட்கென வைக்கும் இப்பேதையின் பெருஞ்செல்வத்தை மக்கள் அடையார்; சுற்றத்தாரும் அடையார்; அடைவார் யார் யாரோ என்ற சேய்மை காட்டுவான். கொள்வார் பிறர் என்றார். செல்வம் மாசுடைய தன்று; அஃது, ஒண் பொருள் எனத்தக்க சிறப்புடையது. இனத்தான் ஆம் இன்னான் எனப்படும் சொல் (453) என்றபடி, பேதையால் ஈட்டப்பட்டமையால் நன்றியில் செல்வம் என்னும் இழிபெயர்க்கு உரித்தாயிற்று. நச்சப்படாதவனைச் சேர்ந்தமையால், நச்சுமரப் பழமாயிற்று. ஆகாதவன் கூட்டுறவால், செல்வம் தன் மதிப்பு இழந்தமை கண்டு, ஏதம் பெருஞ்செல்வம் (1006) என்றும், மிக நலம் பெற்றாள் தமியள் மூத்தற்று (1007) என்றும் பொருள் மேல் இரக்கங்கொள்வர். பேதையர்பால் விரைந்து புகுந்து நீடித்திருத்தலும், சீருடைச் செல்வர்பால் நாணிவந்து விரைந்து அகலுதலும், செல்வத்து இயற்கையாகக் கண்ட வள்ளுவர் அறமில் பொருள் என்ற கருத்தில், நன்றியில் செல்வம் என இகழ்ந்தார் எனவும் கொள்ளற்கு இடனுண்டு. செயற்பால செய்யாது இவறியான் செல்வம் உயற்பாலது அன்றிக் கெடும் (437) பற்றுள்ளம் என்னும் இவறன்மை எற்றுள்ளும் எண்ணப் படுவதொன்று அன்று (438) என்ற குறள்களால் கொடாதும் உண்ணாதும் நாய் பெற்ற தெங்கம்பழம் போல், பொருட்பற்றுக் கொள்வது வாழ்வு இறந்த பெருங்குற்றம் என அறிகின்றோம் உரிமையும் கடமையும் ஒருபடித்தாய்க் கைவிட்ட செல்வப் பேதைநிலை முற்றும் ஒழித்தற்குரியதே யன்றிச் சிறிதும் பற்றற்கு உரியதன்று. குறள் அறிஞர்களே! பொருட்பயன் பற்றி வள்ளுவர் குறித்த முந்நிலையினரை ஆராய்ந்தோம். இந்நிலை மூன்றினுள் கடமையே நினையும் சிறந்த நிலை மேற்கொள்ளற்கு எட்டா உயர்ச்சியது என்றும், உரிமையே நினையும் நிலை கொள்ளற்கு ஆகா இழிந்தது என்றும், கடமையும் உரிமையும் அற்றநிலை ஒரு நிலையாக எண்ணத்தக்கது அன்று என்றும் அறிந்து கொண்டோம். இம்மூன்றும் அறமாகச் சொல்வதற்கு ஒவ்வா; வாழ்வாங்கு வாழ்வதற்கு ஒட்டா; பின்பற்றற்கு ஆகா என்று ஆய்ந்து ஆய்ந்து தெளிந்த அறப் பெருமகன். ஆற்றின் அளவறிந்து ஈக; அதுபொருள் போற்றி வழங்கும் நெறி (477) என உலகு ஒட்டும் பொருளொழுக்கம் கரைந்தனர். அளவறி ஈகையே வள்ளுவம் எனத்துணிக. வாழநூல் செய்தவர் வள்ளுவராதலின், செயற்கு வரும் அறங் கூறுவதே வள்ளுவம் ஆதலின், அனைத்தும் ஈக என்று பொறுப்பின்றிச் சொல்லி யொழியாது. அளவறிந்து ஈக என்று நினைந்து சொல்லளந்து மொழிந்தனர். அனைத்தையும் ஈக என்பது அறவுயர்ச்சி சான்ற தேனும், செயலுணர்ச்சியை ஊட்டாது மழுக்குவது, முற்றீகை யுணர்ச்சி கற்றும் கற்பித்தும் வருவதில்லை என்பது கண்கூடு. ஆதலின், கற்றால், கற்பித்தால் கொளத் தகும் அளவறி யீகையையே ஆசான் செயலறமாகக் கூறினர். கற்க கசடறக் கற்பவை என்ற விதி நடைபோல், அளவறிந்து ஈக என்று விதி நடையில் யாத்தனர். அனைத்தையும் ஒடுக்கிச் சுருட்டித் தன்னையழித்தும் அறவினை செய் என்று அஞ்சும் அறம் சாற்றாது. ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே செல்லும் வாயெல்லாம் செயல் (33) என அறஞ்செய்வானும் வாழ அறமும் வாழ வழிவகுத்தனர். எல்லா அறங்களும் தான் உளனாய் நின்று செய்யவேண்டுதலின், தன்னை ஓம்பலும் அறனாயிற்று என்பது உரைசான்ற பரிமேலழகர் காரணக் குறிப்பு. நம் பணியாளனை மாம்பழம் பறித்துவர ஏவுகின்றோம். இருபது பழம் கொண்டுவந்த அவனை, மரத்திலிருந்து கவர்ந்தது இவ்வளவுதானா? என்று வினவுகிறோம். ஆம் என்றவுடன் போகென விடுத்துப் பழம் அனைத்தையும் நாம் நம் குடும்பத்தோடு நுகர்கின்றோம். நுகர்ந்து முடிந்தபின், நுகர்விடத்தைத் தூய்மை செய்வான். அவனை மீண்டும் ஏவுகின்றோம். அவன் நெஞ்சுள் உலவும் நினைவு யாது? மரத்திடத்தே இரண்டு பழம் தின்று வந்தேனில்லையே, அல்லது பறித்தவற்றுள் இரண்டினை ஆங்கே தின்றுவிட்டு, கவர்ந்தன பதினெட்டுப் பழங்களே என்று கொடுத்தேனில்லையே எனத் தீயது செய்யாமைக்கு இரங்குவான். அன்று முதல் பழம் பறிக்கப் பணிப்பினும், பிறகொணரச் சொல்லினும், அவன் உள்ளத்துக் களவெண்ணம் ஓடும். இது மானிடநெஞ்சின் பொதுவியல்பு பறித்து வந்தவன் தின்னும் உரிமையைப் பறித்துவிட்டோம். உரிமையிழப்பு உணர்விற் கலந்து களவாடத் தூண்டுகின்றது. உரியாரைப் பற்றும் காதற்களவுபோல, உரிமையைப் பற்றும் பொருட் களவும் பலரறியினுங்கூடப் பழிப்பிற்கு இடனாவ தில்லை. நிற்க, மரத்திலேயே, கூட இரண்டு பழம் பறித்துத் தின்றுவரும்படி அவ்விளைஞனுக்குச் சொல்லுகின்றோம்; அல்லது கொண்டுவந்த பழத்துள் இரண்டொன்று அளிக்கின்றோம். உழைப்பின் உரிமைப் பயன்பெற்ற அச் சிறுவன் மனம் தீய நினைவின்றி அமைதி கொள்ளும். உரிமைப் பேற்றுக்குப் பின்னும் களவாட அவாவுவானேல், கழறற்கும் ஒறுத்தற்கும் வன்மையுண்டு; நடுவுண்டு. அவ்விடிப்புக்கு அவன் உள்ளமும் நாணி நிற்கும். உரிமைகொடா நிலையில் களவு செய்வானை ஒறுப்பினும் அவ்வொறுப்புக்கு உள்ளம் நோக்கித் திருத்தும் ஆற்றல் இல்லை. இன்ன பிழையில் நெஞ்சப் பாங்கினை - மக்கள் இயல்பை நுணுகி அறிந்தவர் வள்ளுவர். காய், பழம், நிழல் எனப் பல பயன்கள் வித்தின் வளர்ச்சியுள் அடங்கிக் கிடக்குமாப்போல, அருள், அன்பு, ஒப்புரவு, ஈகை என்ற பிறநலன்கள் உரிமை வளர்ச்சியுள் அடங்கிக்கிடப்பன என்று கண்டு கொண்டார். தம்மக்கட்குத் தந்நலவுரிமை கொடுத்தே, துய்க்கும் உரிமை வழங்கியே, பிறநலக் கடமையும் ஈகையறமும் வலியுறுத்த வேண்டும் என்று தெளிந்தார். கையிருப்பு விதை உணவும் விளைத்து மேலைக்கு வித்துக்களும் தரவல்லது என உழவன் அறிவான்; ஆதலால், வித்து அழித்து உண்ணான். முதலிலார்க்கு ஊதியம் இல்லை (449) என்றபடி, முதல்வைத்தே ஊதியம் ஈட்ட வேண்டும். அவ்வூதியம் கொண்டே கொடுத்தலும் துய்த்தலும் பேணவேண்டும். இஃதோர் வரன் முறை. அனைத்தும் ஈக என்னின், முதல் அழியும். பின்னர் ஊதியம் எங்கே? கொடுப்பும் துய்ப்பும் தாம் எங்கே? அவை செய்யும் மகன் வாழ்வுதான் எங்கே? செய்வான் அழியப் பயன்கள் அழிய, ஊதியம் அழிய, முதல் அழிக்கும் அறங் கரைவது ஒட்டாது என்ற துணிபால், ஆற்றின் அளவறிந்து ஈக; அதுபொருள் போற்றி வழங்கும் நெறி (477) எனக் காரியகாரண நடையிற் கூறினார். அளவறிந்த ஈகையே முதற்பொருளைக் காத்து ஊதியத்தைப் பின்னும் பின்னும் வழங்குதற்கு உரிய நெறியாகும் என்பது அறிவொக்கும் காரணம் அனறோ! ஊதியம் வழங்கற்கு உரியது; முதற் பொருள் போற்றற்கு உரியது என்ற கருத்து பொருளாட்சி போற்றாதார்க்கு இல்லை (252) என்ற அடியான் பெறப்படும். அவையத் தமிழ் வள்ளல்கள் வழங்கிய பெருங்கொடை தமிழகம் அறிந்தது. நாடீந்தார்; குன்றீந்தார்; பொன்னீந்தார்; பிற பல்பொருள் ஈந்தார்; கொடை மடம் பட்டார் என்று புகழக் கற்றோமேயொழிய, அளவின் விஞ்சி ஈந்து அழிந்தார்கள் எனா. அளவறியா ஈகையால் அன்னோர் கொடை வற்றிப் போய்விட்டது எனா நாம் கற்றோம் அல்லோம். ஆதலால், கடமையும் ஆற்றி, உரிமையும் பேணி, கொடையும் வழங்கித் துய்ப்பும் நுகர்ந்து, வாழும் அளவறி நிலையே வள்ளுவமாகும்; திருக்குறட் பொருளறமாகும்; பொருட்பயன் நிலையாகும்; யாரும் கொளத்தகும் உலக வாழ்வாகும். அளவறி நண்பர்களே! அறிவியற் கலையினின்றும் விளைந்த பல்லூர்திகளும், மின்னியல் ஆக்கங்களும், எண்ணிறந்த பிற புது நுண்பொருள்களும் இல்லாப் பழைய வுலகத்தை, இன்று நாம் கற்பனைக் கண்ணாற் காணவொல்லும். அப்பழைய உலகமே மீள்வதாயினுங் கூட ஆண்டு வாழ வொல்லும். ஆனால் மொழியில்லா ஓருலகு நம் கற்பனைக்கு எட்டாதது மொழியின்றி நினைக்கும் திறம் இன்று நமக்கு இல்லை. மொழி அளத்தற்கில்லா ஆற்றலுடையதாய், உலக வளர்ச்சிக்கே ஊட்டம் தருவதாய், நினைவோடு, இரண்டறக் கலந்து வாழ்வை ஆட்சி செய்வது. ஆதலால் மனந்தூய்மை இனந்தூய்மை, அறிவுத் தூய்மை, வினைத்தூய்மைகளுக்கு ஒப்பக் கற்கும் சொல்லும், எழுதும் மொழியும் தூய்மையாதல் இன்றியமையாதது. மொழித் தூய்மை வேண்டும் குறிப்புக்கள் இந்நூலகத்துப் பலப்பல. ஆக்கமும் கேடும், அறனும் பொருளும் மொழியால் வருமாதலால், சொற்றிறன் அறிந்து சொல்லுக எனத் திருக்குறள் சொல்லாற்றலை அறிவுறுத்தும். ஐதராபாத்து இந்தியவரசில் இணைய மறுத்த போது, அதன்மேல் இந்தியவரசு போர்தொடுக்கும் என்றே பலரும் கருதினர். போர் என்ற சொல்லையே ஆண்டனர். அதுகாலை, நேரு பெருமகன் திறனறிந்து வெல்லுஞ் சொல்லொன்று விளம்பினார். போர் என்பது வெளிநாட்டுத் தொடர்புடைய சொல். இயல்பில் இந்திய நான்கெல்லைக்கு உட்பட்ட ஐதராபாத்தின்மேல் செய்யப்புகுவது போர் வினையன்று. அஃதோர் காவல் வினை என்றார். நாட்டகத்துக் கொள்ளும் காப்பு நடவடிக்கை என்று சுட்டினார். இச்சொல்லாட்சி அவர்தம் தெளிந்த அரசியல் அறிவை நன்கு தோற்றிற்று. ஆதலால், வள்ளுவர் நெஞ்சினை மயக்கறக் காண வேண்டுவார்க்குத் தமிழ் மொழியறிவும், திருக்குறளகத்து ஆசான் ஆண்ட சொற்களின் பொருளறிவும், நடையறிவும் நன்னர் வேண்டும். ஏன்? தம் நூல் என்றும் நின்று விளங்கும் வண்ணம், செவ்விய கிளவிகளை ஆய்ந்தெடுத்து, காலம் இடம் வலியறிந்து, ஆண்டமொழியறிஞர் வள்ளுவர். கொடைக்கடனும் துய்ப்புரிமையும் பொருட் பயன்கள் என மேலே வரையறுத்தேன். கொடைக் கடன் ஒப்புரவும் ஈகையும் என இருவகைப்படும். இவ்விரு பெயரால் தனித்தனி அதிகாரங்கள் இருப்பதுவே, அன்புடைமை அருளுடைமை போல இச்சொற்கள் வேறுபட்ட பொருளின என்பது கொள்ளப்படும். அவ்வேறுபாடு என்னை? பொதுக் கொடை ஒப்புரவு ஆம்; தனிக்கொடை ஈகையாம். ஒப்புரவு என்கிற விளக்கு, ஒ- பல்லுயிர்க்கும் ஒத்த, புரவு-கொடை அல்லது, காப்பு என்பது பொருள். உயர்திணையுள்ளும் அஃறிணையுள்ளும் பல்லுயிர்க்குப் பொருந்திய பெருங்கொடை என்பதுவே, ஒப்புரவு அதிகாரத்தின் கருத்து என்று துணிதற்கு, ஆண்டு வரூஉம் உவமைகளே கரி. பேரறிவாளன் திரு ஊருணி நீர் நிறைந்தற்று (215), பயன் மரம் உள்ளூர்ப் பழுத்தற்று (216), மருந்தாகித் தப்பா மரத்தற்று (217), மாரிமாட்டு என்னாற்றுங் கொல்லோ உலகு (211) எனப் பரந்த பொதுவுவமைகளையே ஆளுவர். கல்வி நிலையம், நூல் நிலையம், உடற்கழகம், ஏழைவிடுதி, கோயில், பல்வகை மருத்தில்லம், தண்ணீர்ப்பந்தல், ஊருணி, பூங்கா, விளையாடு களம் என்றின்னவை ஒப்புரவுத் தோற்றங்களாம். ஈகையோ எனின், வறியார்க்கு ஒன்று ஈவதே ஈகை (221) எனவும், அற்றார் அழிபசி தீர்த்தல் (226) எனவும், விதந்தாங்கு. தனியுயிர்த் துன்பம் நீக்கும் சிறப்புக் கொடையாம். ஒரு தோட்டத்துச் செடிகளுக்குக் கிணற்றிலிருந்து கால்வாய்வழி நீர் பாய்ச்சுகின்றோம். அதனால் செடிகள் பலவும் ஒருங்கே நீரைக் குடிக்கின்றன. இஃது ஒப்புரவுக் கொடையனையது. செடி தோறும் சென்று சென்று பார்வை யிடுகின்றோம். நீர்பெறாச் செடிகளுக்குத் தனித்து நீர் ஊற்றுகின்றோம். அரும்பிய இளம் பயிர்களுக்கு வேர் அறாதபடி கொள்ளளவு அறிந்து நீரைத் தெளிக்கின்றோம். இஃது ஈகை போல்வது தோட்ட வளர்ச்சிக்குப் பொது நீர்ப் பாய்ச்சலும் தனி நீர் ஊற்றலும் வேண்டுமாப்போல, உலக மக்கள் வளர்ச்சிக்குப் பொதுக் கொடையும் தனியீகையும் வேண்டும். அறியாமையாலோ, ஏற்கும் ஆற்றல் இன்மையாலோ, பயன்கொள்ளப் பிழைத் தார்க்கு, ஈகையே கை தூக்கும் உதவியாம். இவ்வண்ணத்தால் அன்றோ, பல்லாற்றானும் தாழ்த்தப்பட்ட நம் மக்களுக்குப் படிப்புதவி உணவுதவி என அரசினரும் பிறரும் தனிக்கொடை செய்ப. ஈகையின்றேல், தாழ்வுண்டார்க்கு உய்தியில்லை; ஒப்புரவு இன்றேல், நாட்டிற்கு உயர்வில்லை என்று தெளிந்த உலகறிவுடைய வள்ளுவர். நாடும் குடியும் பொதுப்படவும் தனிப்படவும், வாழ, ஒப்புரவு ஈகைக் கடமைகளைத் தனி அதிகாரங்களாக வகுத்துக் காட்டினர் என்க. ஈதலை, அளவு அறிந்து ஈக என்று வரையறுத்தாங்கு ஒப்புரவுக்கும் அளவு செய்வர்கொல் என்று காண்பான். குறள் தேடிப் புறப்பட்டேன். வரையறுக்கும் குறளைக் கண்டேன். உளவரை தூக்காத ஒப்புரவு ஆண்மை வளவரை வல்லைக் கெடும் (480) நாடு நலம் பெருக்கும் ஒப்புரவுப் பெருங்கொடையே யாயினும், ஒருவன் பொருள் வலிக்கு மிகலாகாது என்பது இக்குறட் கருத்து. ஈகை பற்றிய குறள்களையும் ஒப்புரவு பற்றிய குறள்களையும் ஒருங்குவைத்து ஆராய்வார்க்கு ஆசான் தன் கருத்து நுண்மைகள் புலனாகும். ஒப்புரவு பெருஞ் செல்வர்க்கு உரியது. ஈகையோ, எல்லாரும் செய்ய வேண்டுவது. இக் குறிப்பானன்றோ, ஒப்புரவு இயையாக்கடை சாதல் இனிது என்னாது, ஈதல் இயையாக் கடை சாதல் இனிது என்றார். ஈகை உணவுக் கொடை மேலது. பசி நீக்கும் அவ்வளவிற்று, ஒப்புரவு வேறு பிற நலம் செய்வது என்று எண்ணியே, ஈகையதிகாரத்துப் பசிப்பிணி நீக்கம்பற்றிப் பல குறள் யாத்தனர். ஒப்புரவு நீடித்த நிலைத்த கொடைப்பாலது; பெரும் பொருள் வேண்டுவது; செய்த அன்றோடு ஒழியாது பின்னுங் காக்க வேண்டுவது. மருத்துவச்சாலை அமைக்கும் பெருமகன் இடம் வாங்கி இல்லங்கள் கட்டி முடிப்பதோடு தம் ஒப்புரவை நிறுத்திக்கொள்வானாயின், அது வெட்டி வைத்த வாய்க்கால் ஒக்கும். அதனாற் பெரும் பயன் என்? என்றும் இடையறாது நீரோடுமாறு அணைகட்டி நீர்காப்புச் செய்வதுபோல், இடையீடின்றி மருத்துவம் நடக்குமாறு பொருள் வைப்பும் செய்யவேண்டும். ஆதலால், அளவு அறிந்து ஈக என்ற செய்நடையிற் கூறாது. ஒப்புரவு ஆண்மை வளவரை வல்லைக் கெடும் என அச்சநடையிற் கூறினார். ஈகையாள ரெல்லாம் ஒப்புரவு செய்வார் என்பதற்கு இல்லை. பரந்த பெரும் ஒப்புரவாளர் ஈகையும் செய்வர் என்ற துணிபான், உலகு அவாம் பேரறிவாளன், நயனுடையான், பெருந்தகையான், கடன் அறிகாட்சியவர் என ஒப்புரவாளர்களை நன்கு புகழ்வர். பொருள் ஈட்டியவன் வருவாய்க்கு உட்பட்ட செலவு செய்க; அளவு அறிந்து ஈக; உளவரை தூக்கி ஒப்புரவு ஆளுக எனப் பொருட் பயன்களை யெல்லாம் ஒருங்கு உளத்திற் கொண்டு. அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல இல்லாகித் தோன்றாக் கெடும். (479) எனக் கூட்டி முடிப்பர். ஈட்டிய செல்வத்தைப் பயன் கொள்ளும் அறிவின்றேல், பொருட் கேடு ஒருபுறம் நிற்ப, வாழ்க்கையே கெடும் என்ப. பொருளுடைமை வாழ்க்கை யன்று; அதன் பயன் கொள்ளும் அறிவுடைமையே வாழ்க்கை என்ற துணிபான். அளவு அறிந்து வாழாதான் என அறிவின் மேற்றாய் இயம்பினர். ஈட்டிய பொருட்கண் தனக்கு எவ்வளவு, பிறர்க்கு எவ்வளவு என்னும் பகுத்தறிவு வேண்டும். தனக்கே அவ்வளவும் எனப் பற்றுவது வாழா அறிவில் வாழ்வு என விடுக்க. இதுகாறும் பொருள் குறித்து எடுத்துக்காட்டிய குறள்களால், அவை குறித்து விரித்த விளக்கங்களால், உலகு ஒட்டும் அறங்கரையும் வள்ளுவம் இன்ன பண்பிற்று என்பது மலைவின்றி அறியத்தகும். பொருட்பயன் என்ற இச் சொற்பொழிவின் இறுதியாக, இன்று காலை குறள் அன்பர் சிலர்க்கும் எனக்கும் இடையே நடந்த ஓர் உரையாடலை, அன்னோர் உடன்பாடு பெற்று, உங்கள் முன் அறிவிக்க விரும்புவல். வள்ளுவம் என்னும் குறட் சொற்பொழிவுகளைத் தொடர்ந்து கருக்கிடையாய்க் கேட்டுவரும் நண்பர் பதின்மர் இன்று காலை ஒன்பது மணிக்கு என்சிறு மனை போந்தனர். நாங்கள் பெருஞ் செல்வம் உடையோம் என்றும், ஆளுக்கு ரூபாய் நூறாயிரமாகப் பத்திலக்கம் திருக்குறள் வளர்ச்சிக்கென வழங்கும் நோக்கு உடையோம் என்றும் உண்மையை உவப்பொடு மொழிந்தனர். அப்பெரு மக்கட்கு நம்மனைவர் வணக்கம் உரியதாகுக. நீங்கள் கருதும் திருக்குறள் வளர்ச்சி யாது; இப்பெரும் பொருள் வைத்துச் செய்யும் செயல்கள் யா? என்று வினவினேன். திருக்குறளை யாண்டும் யார்க்கும் பரப்பவேண்டும். தமிழகமும் இந்தியாவும் உலகமும் ஏசு பெருமகன் விவிலிய நூல் போல் அறியச் செய்யவேண்டும். தமிழகப் பதிப்பு இந்தியப் பதிப்பு ஞாலப்பதிப்பு பன்மொழிப் பதிப்பு என்ற வகையானும், குழந்தைப்பதிப்பு பள்ளிப் பதிப்பு, பரிசுப் பதிப்பு விலையில் பதிப்பு என்ற வகையானும், ஆராய்ச்சிப் பதிப்பு சொற்பதிப்பு பொழிப்புரைப் பதிப்பு விரிவுரைப் பதிப்பு நுண்ணுரைப் பதிப்பு நிகழ்ச்சிப் பதிப்பு என்ற வகையானும் முறைகள் பல மேற் கொள்ள வேண்டும் திருக்குறள் இதழ் வெளியிடலும், வள்ளுவர் அச்சகம் அமைத்தலும் வள்ளுவர்க்குக் கோயிலொடு மண்டபம் கட்டலும் இன்னபிறவும் எங்கள் நோக்கம், என்று தெளிந்து விடையிறுத்தனர். இப்பத் திலக்கம் பற்றாதெனின், இன்னும் பல்லிலக்கம் தருவோம் என உறுதி வழங்கினர். உவகை யடைந்தேன். வந்த நண்பர்கள், நும் கருத்து யாது என என்னை மறித்து வினவினர். உங்கள் கொடைப்பண்பு நன்னர்ப் பாராட்டத் தகுவது. பத்திலக்கப் பொருளை உவப்பொடு யார்தாம் வரவேலார்! இத்துறவுப் பண்பு செல்வர்க்கெல்லாம் வளர்வதாகுக என்று முகவுரை துவங்கி. என் மனத்திற்பட்ட உண்மையை வஞ்சியாது உரைப்பேன். அறிவிற்பட்டாங்கு ஆய்ந்து சொல்வன். மாசுகற்பியாதும் மயங்காதும் கேண்மின்! என்று சில கருத்துக்களை உணர்த்தினேன். உலகத்துப் பிறந்த பெரியோர்கள் பலப்பலர். அவரெல்லாம் மக்கள் உய்ய ஆராய்ந்து வடித்த உரைகள் பலப்பல. எனினும், நாம் விடாது செய்துவரும் ஒரு கெடு போக்கு யாது? அவ்வுரைகளை மனத்திட்பத்தோடு நம் வாழ்க்கையிற் செயற்படுத்தவில்லை. கடைப்பிடித்து அன்னவர்களைப் பெருமை செய்ய நினைக்கவில்லை. பெரியோர்தம் புகழ் உலகத்து மறைந்து விடுங்கொல் என்று நம் பேதைமையால் மயங்கி, கல்லானும் கட்டானும் பிறவற்றானும் பெரியோர்களையே நிலைநாட்டப் புறப்பட்டோம். செயல் வழிப்பட்டு அக வழிப்பட்டு ஒழுகாது, சிறு தெய்வ வழிபாடாகக் கொண்டாடினோம். அறைபறை முழக்கினோம். அவர் சொற்படி நடக்கவல்லார் அவரொருவரே என்னும் மறைமுகத் துணிபால், செய்வது அவர் கடன்; புகழ்வது நம்கடன் என மடம்பட்டோம். செயல்நாட்டாது, அன்னோர் புகழ் நாட்டற் பொருட்டு பீடி சுருட்டுக் கடைக்கும், கள்ளுக் கடைக்கும், சூதுக் கழகத்துக்கும், வணிகக் கடைக்கும், சந்து பொந்து மூலை முடுக்குத் தெருக்களுக்கும் எல்லாம், பெருமக்கள் பெயர்களை விளம்பரம் ஆக்கினோம். இவ்வாற்றான் பிறர் அறிய நம் அன்பை வெளிப்படுத்தியதாகக் கழிபேருவகை எய்தினோம். பெரியோரை யெல்லாம் அன்னவர் அறிவுரைகளோடு ஒருவகையால் சமாதிப் படுத்தினோம். புகழ் விலைக்கு வாங்கிக் கொடுப்பது போல், நிலையிழிந்த முரணிய ஆரவாரங்களை மேற்கொண்டோம். அதன்மேலும், ஆகுல நீர்மையிற் கலவாது, அறிவும் அடக்கமும் சான்று, தன் நெஞ்சறியப் பெரியோர் உரைச்சுவடு பின்பற்றும் செயலொழுக்கினர்களைப் பழிப்பதும் செய்கின்றோம் என்று என் உள்ளக்கொதிப்பை, அன்பின் முனைப்பை, ஆர்வமொடு கலந்து ஒருவாறு அவ்வன்பர்கள் முன்கொட்டினேன். என் அகப்பண்பை அறிந்த நண்பர்களாதலின், நீர் சொல்லும் செயல் யாது? நாங்கள் கொடை செய்வது உறுதி. உலகத்தோடு ஒட்டஒழுகல் என்றபடி, ஏனைப் பெரியவர் கட்கு மக்கள் வழிபாடு செய்யுமாங்கு, வள்ளுவருக்கும் செய்ய எண்ணினோம். அவ்வெண்ணத்தால், பதிப்பு வெளியீடு, மண்டபக்கட்டு என்ற வகையில் திட்டமிட்டோம் என அமைதியோடு மொழிந்தனர். இம்முறை ஆகாதெனின், வேறு நன்முறையை மேற்கொள்வோம் என உறுதி பூண்டனர். அன்னோர் உள்ளத் தூய்மைக்கும், உறுதிப் பற்றுக்கும், ஒப்புரவுக் கொடைக்கும் என் நன்றியை மனமாரக் காட்டி, வள்ளுவர்க்குச் செயத்தகும் தொண்டு முறைகளை விளம்பினேன். நீவிரும் கேட்டுக்கோடல் நலம் என்று இக் கூட்டத்திற் சொல்லுவன். திருக்குறள் நண்பர்களே! உருவப்படத்தை நெய்யூர்தி மேலும் யானைமீதும் வைத்துப் பூமாரி செய்து மின்விளக்குப் பந்தல் இட்டு நாடு வலம் வந்து, குறட் சுவடிகளை வானவூர்தி வழித் தூற்றினாலும், இப்பரப்பறைவால் செயல் மக்கள் மாட்டு அமையாது, கூத்துத் தாள் வாங்கும் குழந்தை யுணர்ச்சியே அவர்கட்குத் தோன்றும். மக்கட்கெல்லாம் கல்விவேண்டும்; கேள்வி வேண்டும்; முயற்சி வேண்டும் என்பது வள்ளுவம். இக்கோட்பாடு செயற்படுதற்கு உரிய வழிதுறை களை அன்பராகிய நாம் பற்றல் வேண்டும். கல்விவேண்டும் வள்ளுவர் பெயரால், தெருத்தோறும் பள்ளி அமைக. ஊர்தோறும் பெரும்பள்ளிகள் நிறுவுக. நூல் நிலையம் படிப்பகங்கள் பெருக்குக. கேள்வி வேண்டும் வள்ளுவர் பெயரால், கூடங்கள் கட்டுக. முயற்சிவேண்டும் வள்ளுவர் பெயரால், தொழிற் களங்கள், உழைப்புச்சாலைகள், உழவுப்பண்ணைகள் தொடங்குக. ஈகைவேண்டும் வள்ளுவர் பெயரால், ஏழை இல்லங்கள், குழந்தை விடுதிகள் பேணுக. மடிமகனும், பசிமகனும், மடமகனும் இல்லை எனும்படி, பள்ளியில் தெருவும் தொழிலில் ஊரும் இல்லை எனும்படி, வள்ளுவர்க்குத் தொண்டு செய்க. ஏதிலார் ஆரத் தமர் பசிப்பர் என்னும் பேதைக்குற்றத்துக்கு ஆளாகாதவாறு, இவ்வெல்லாம் முதற்கண் தத்தம் ஊரிலேயே ஆற்றுவார் ஆற்றுக. செல்வ மிகுதியிருப்பின், பிறவூர்களுக்கும் தொண்டினைப் பரப்புக. கோடிச்செல்வம் குவியின், வள்ளுவர் பலவகைக் கல்லூரிகளும் வள்ளுவர் பல்கலைக் கழகமும் நிறுவ முயல்க. திருக்குறட் பல்பதிப்பும் உலகப் பரப்பும் ஒரு பால் இன்றியமையாச் செய்கைகள்; எனினும் அவற்றை மேற்கோடல் எம்போலும் ஆசிரியர்களின் தொழிற் கடன். நும்மனைய செல்வர்கடன் மக்கட்கு வேண்டும் வள்ளுவங்களைப் பொருளால் நேரடியாகச் செய்வது என்று என் மனத்துத் தெளிவை விரித்துரைத்தேன். திருக்குறள் எண்ணங்களைத் தத்தம் ஊரின் கண்ணேயே முதற்கண் பொருளால் செயற்படுத்துவோம் என்று உடன்பட்டு, வந்த அன்பர் பதின்மரும் வணக்கொடு மீண்டனர். புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டும் என்பது ஆணை வள்ளுவம், காணீர்! 5. இன்மை நிலை ஆள்வினைச் செல்வர்களே! பெருநல் வணக்கம். முந்திய நாள் பொருள் நிலை பற்றியும், நெருநல் பொருட் பயன்நிலை பற்றியும் வள்ளுவர் கருத்துரை கேட்ட நீவிர் இன்று செல்வத்தின் இறுதிச் சொற் பொழிவாகிய இன்மை நிலை பற்றிக் கேட்கும் அவாவொடு குழுமியிருக்கிறீர்கள். பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லாகி யாங்கு (247). இல்லாரை எல்லாரும் எள்ளுவர் (752), பொருளல்லது இல்லை பொருள் (751) பொருள் என்னும் பொய்யா விளக்கம் (753) என வரூஉம் சில குறள்களையே பலர்வாய்க் கேட்ட நமக்கு, செல்வப் பொருள் ஒன்று குறித்து முற்சொற்பொழி விற்குத் திருக்குறள் இடந்தந்து நிற்கும் செறிவு மெய்யாகவே மருட்கை யூட்டுகின்றது. இன்மை நிலையையும் ஒரு நிகர் பொருளாகக் கொண்டு வள்ளுவர் காட்டும் அரிய செயற் குறிப்புக்களைக் கண்டு, நாமென்ன அறிவுசால் உலகமே இறும்பூது எய்தும் என்பது துணிபு. வாழ்க்கை நூல் செய்த வள்ளுவர் அனைத்து நிலை யினரையும் உட்கொண்டு அறங்கள் கூறினாரேனும், தாய்க்குப் பேதைப்பிள்ளை நினைவே பெருகித் தோன்றுமாப் போல அவர்க்கு நிலைதாழ்ந்தார் முன்னேற்றமே நெஞ்சுட் கிடந்தது. மற்று முன்னரே நிலையுயர்ந்தார் அவ்வுயர்ச்சியைப் பேணிக் கொள்ளுமதுவே முதற்கண் செயக்கிடப்பது என்பது ஆசான் காட்சி. அக்கருத்தான், குன்றுபோல் உயர் வாழ்வினரும் குன்றிமணியளவு குற்றம் செயின் நிலைதாழ்வர் (965) என்றும், பெருநிலை பெற்றார் சிறுமை பயக்கும் எளிய செயல்களைச் செய்யப் புகார்; செய்வதாயின் அருஞ்செயல்களையே ஆற்றுவர் (975) என்றும், சான்றாண்மைக் கடலுக்குக் கரையெனத் தகும் நிலையுயர்ந்தார் ஊழி பெயரினும் தம் நிலை பெயரார் (990) என்றும் மேன்மை நிலை தாழாமைக்கு உரிய அறிவுடைமை காட்டி விடுப்பர். இம்மேலோரை அவ்வளவில் விடுத்துப் பல்லாற்றானும் வழுக்கி வீழ்ந்த கீழோரையே நிலையுயர்ப்பான் பெருமனம் வைத்தனர். புறங்கூறுவானை அறன் நோக்கி ஆற்றுங் கொல்வையம் (189) என்றும், பயனில பாராட்டுவானை, மக்கட் பதடி (196) என்றும், கல்லா அழகனை, மண் மாண் புனை பாவை (407) என்றும், குற்றங் காவானை, அற்றம் மறைத்தலோ புல்லறிவு (846) என்றும், பாவி ஏழையை உப்பிற்கும் காடிக்கும் கூற்று (1050) என்றும் வள்ளல் குணத்தானும் பொருளானும் இழிந்த நிலையினரை உயிர் புறம்போமாறு திருவள்ளுவர் ஏசுவர்; ஏசினும், அங்ஙன் ஏசும் உரிமையைத் தமக்கென வைத்துக் கொண்டவர். தந்தை தன் குறும்பு மக்களை ஓவாது வைது குருதி பீறிடக் கோல்கொண்டு புடைப்பினும், அவ்விளஞ் செல்வங்களின் திருமேனி மேல் பிறர் மெல்லெனக் கைவைக்கவும் பொறானன்றே; இன்ன அன்பினர் நம் வள்ளுவர். பிறர் யாரும் ஏச புகுவரேல் எவன்கொலோ வன்சொல் வழங்குவது (99) நயமில செய்வார்க்கும் பண்பு ஆற்றாராதல் கடை (998) என வெகுண்டு உரைப்பவர். குற்றப்பட்டார் பின்னரும் குற்றப்படுவதும், மிடிப் பட்டார் பின்னும் மிடிப்படுவதும் மெலிவுற்றார் பின்பும் மெலிவுறுவதும், துன்பம் சுமந்தார் என்றும் துன்பம் சுமப்பதும் உலகப் போக்காகக் கண்ட வள்ளுவர் தம் தொண்டுக்கும் காப்புக்கும் உரியோர் இந்நிலையினரே என்று துணிந்தனர். குற்றப்பட்டார் திருந்திக் குணப்படலும், வறுமைப்பட்டார் முயன்று வாழ்வுப்படலும், மெலிவுற்றார் ஊக்கி வலிவுறலும், துன்புற்றார் சிரித்து இன்புறலும் இனி உலகக் காட்சியாக மாறவேண்டும் என்று திட்பங் கொண்டனர். தாழ்ந்தார் எஞ்ஞான்றும் தாழ்ந்து கீழ்ப்போவதற்கு உயர்ந்தார் கொடுமையும் புறக்கணிப்பும் ஒரு பெருங் காரணமாக அறிந்துகொண்டனர். கீழோர்மேல் உயர்ந்தார் அழுத்தும் சுமையைத் தடுத்தலும், செல்வத்து உயர்ந்தார் பெருக்கைக் குறைத்தலும், தாழ்ந்தாரை உயர்த்து நிறுத்தலும் தம் கடனாக எண்ணினர். இவ்விரக்க எண்ணங் காரணமாகப் பிறந்த குறள்கள் பலப்பல. எளியார்மேல் சீறி வெகுள்வானை, செல்லிடத்துக் காப்பான் சினம் காப்பான் (301) செல்லிடத்தும் அதனின் தீய பிற இல் (302) என்று இடித்துரைப்பர் தீய மனத்தைத் திருத்துவதே ஒறுப்பின் பயன் ஆதல் வேண்டும். இந்நன்னோக்கம் விடுத்துப் பிறர் குற்றம் பொறுக்ககில்லாது பழிவாங்கும் முனைப்பொடு வல்லாங்கு ஒறுப்பாரே பலர். அதனாற் குற்றஞ் செய்தார் திருந்தாமையோடு வாழ்வுக்கேடும் அடைவர். இங்ஙன் பழிவாங்கும் செருக்கொடு, குற்றஞ் செய்வதன் வேரற அளவிறந்து ஒறுக்கும் பொறையிலிகளை, ஒறுத்தாரை ஒன்றாக வையாரே (155) ஒறுத்தார்க்கு ஒரு நாளை இன்பம் (156), கடிது ஒச்சி மெல்ல எறிக (562) என்று வன்மையடக்குவர். பொருள்வலி மிக்காரும் பிறவலி மிக்காரும் தம் ஆற்றல்களால் மெலியோரை வருத்துவதைக் கண்டு, அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீர் அன்றே செல்வத்தைத் தேய்க்கும் படை (555), வலியார் முன் தன்னை நினைக்கத் தான் தன்னின் மெலியோர்மேல் செல்லும் இடத்து (250) என அச்சவுணர்ச்சியும் அருளுணர்ச்சியும் ஊட்டுவர். ஆற்றல் சான்றார் எளியார் மேல் செய்யும் தீமைகளையெல்லாம் நன்னெறி காட்டித் தடுத்து நிறுப்பதற்குக் காரணம் ஏழை காக்கும் வள்ளுவர் இரக்கப் பண்பு அன்றோ! தனியுடைமை பொதுவுடைமைக் கொள்கைகளுக்குப் போர்க்களமாகி நிற்பது இன்று நாம் வாழும் உலகம். இக் கொள்கைப் போர் முதலாளி தொழிலாளிப் போர் எனவும், உடையார் இல்லார் போர் எனவும் பிற பெயரானும் வழக்குப் பெறும். தொழிலாளரும் இல்லாரும் என்றும் உலகத்து உளரேனும் பொதுவுடைமைக்கோள் அணி நணிக் காலத்தே தான் எழுந்தது. நாம் அறிந்த வரலாற்றுப்படி தனியுடைமை அமைப்பே நாகரிகக் காலந்தொட்டு நிலவி வந்திருப்பது; நாகரிக வளர்ச்சிக்கும் அடிப்படையாக இருந்திருப்பது. வள்ளுவர் காலம் தனியுடைமைக் காலம்; அச்சு ஊர்தியும், வானூர்தியும், நீர்மூழ்கியும், மின்னியற் பொறிகளும், அணுக்குண்டும், நீர்க்குண்டும் போலப் பொதுவுடைமை நினைவிலும் கருப்படாத் தனியுடைமைக் காலம். இக் கொள்கை கொண்ட நாடுகளில் இன்றும் இருப்பது போல், அன்றும் ஒருவன் ஈட்டுதற்கும் ஒரு வரையறை இல்லை. கோடி தொகுத்தார்க்கும் (377) என்றபடி ஈட்டியவெல்லாம் தொகுத்துக் கோடற்கும் ஒரு வரையறையில்லை. பண்டை வரி விதிப்பு முறை பெருஞ் செல்வர்க்கென ஒரு வகையான் அமைந்ததுமில்லை. இறை எல்லார்க்கும் ஒப்பவே வகுக்கப்பட்டது. ஒன்னார்த் தெறு பொருளும் வேந்தன் பொருள் (755) என்றாங்குக் குடிமக்கள் தரும் இறைப் பொருளினும் பகைவர் இடும் திறைப் பொருளே பெருமைசால் வருவாயாகக் கருதப்பட்டது. ஒன்று போல் யார்மாட்டும் வரிகோடலே செங்கோன்மை; இப் பொதுமுறை விடுத்துப் பெருஞ் செல்வர்பால் நேரடிப் பொருள் கேட்பது கொடுங்கோன்மை என்று அறிஞராலும் எண்ணப்பட்டது. வேலொடு நின்றான் இடுவென்றது போலும் கோலொடு நின்றான் இரவு (552) இன்மையின் இன்னாது உடைமை; முறைசெய்யா மன்னவன் கோற்கீழ்ப் படின் (558) என்ற குறள்களே தனியுடைமை மக்களின் பற்றுமனப் பான்மைக்கு அன்றும் இன்றும் சான்றாவன. தனியுடைமை நாட்டின்கண், சிலர்பால் பெருஞ் செல்வம் யாறுநோக்கும் கடல்போல் சேர்வதைத் தடுக்கும் வலி அரசிற்கு இல்லை. தடுக்கும் அரசு உளதேல் அது முறைகோடிச் சூழாது செய்யும் அரசாகவே பழிக்கப்படும். செல்வன் நாட்டன்பினனாய்த் தானே கொடை செய்தால் அல்லது, அவன் நிறை செல்வம் இயல்பாகக் குறைதற்கு வழி பிறிதில்லை. அறிவிலாச் செல்வன் ஒருகால் நெஞ்சு உவந்து ஈதல் ஏனையோர் தவத்தின் பயனென வியக்கப்பட்டது. ஆதலின் தனியுடைமைக் காலத்து எழுந்த திருக்குறள் அற்றைப் பிறநூல்கள் ஒப்ப, உடையவன் பற்று மனம் இளக நல்லுணர்ச்சி கொளுத்திற்று. குழந்தை தன் கைப்பத்து ரூபாய்த்தாளை இன்பண்டம் பெற்றக்கால் கொடுத்து விடுமாப் போல, உடையான் தன் கைப்பொருளைப் புகழுக்காக ஈயவேண்டும் என்று நல்லுணர்வு ஊட்டிற்று ஈதல் இசைபட வாழ்தல் (231) எனச் சிறந்த பண்டமாற்றுக் காட்டிற்று. ஈட்டியவனெல்லாம் கொடாதும், துய்யாதும் தொகுப்பதுவே கருமம் எனக் கொண்டால், நாணயச் செல்வரவின்றி நாடு வளங்குன்றும்; நல்குரவு பெருகும் என்ற எண்ணத்தால், தனியுடைமை பொதுவுடைமையாய்ப் பரவ, வள்ளுவர் வழி தேடினர். தொகுப்பும், தாமே துய்ப்பும் இழிவு என்ற சிறுமையுணர்ச்சியை எழுப்பினர். செல்வனுக்குத் தாழ்வாவது கொடாமையாதலின், தாழ்வு இலாச் செல்வரும் சேர்வது நாடு (731) என இன்றியமையாமை சுட்டினர். இவ்வெல்லாம் நினைந்து, சிலர்மாட்டுத் தொக்க பொருளை நாட்டிற் சமப்படுத்த வேண்டி, பெருங்கொடையாம் ஒப்புரவுப் பண்பினைத் தனியதிகாரமாக வகுத்தனர். ஒப்புரவின் நல்லபிற பெறல் அரிது (213) என்று வலியுறுத்தினர். யார்மாட்டும் தனியுடைமைப் பற்றைக் குறைக்க வேண்டி ஈதலே நன்று என்றும், அதுவே பொருள் வைக்கும் நல்லிடம் என்றும் வழிப்படுத்தினர். பொருள்வலி அரசிற்கும் தனி மகனுக்கும் இன்றியமை யாதது. வாங்கும் ஆற்றல் அரசிற்கு வரியாலும் தனி மகற்குத் தொழில் முயற்சியாலும் வருவது. கொள்ளாற்றல் இன்மையே வறுமை எனப்படும். பொருள் மெலிவுடைய அரசு நாட்டுக்குப் பொதுநலன்கள் செய்ய வியலாது. தொழில் இல்லா மனிதன் தன் பசியும் தீர்த்துக்கொள்ள வியலான். இப் பொதுக் குறையும் தனிக் குறையும் ஒப்புரவு ஈகைகளால் நிறை செய்யப்பட வேண்டும். ஒரு சில செல்வரேனும் இல்லா ஊரில்லை. தம்மூர்க்கு வேண்டும் பள்ளிக்கூடம், மருத்துவ விடுதி, கைத்தொழிற் களம், விளையாடு களம் என்றின்ன பொதுப் பணிகளை அன்னோர் தனித்தோ சேர்ந்தோ செய்ய வேண்டும். இதுகாறும் அங்ஙன் செய்யக் கண்டிலம். வித்திட வான்நோக்கும் உழவன் போலத் திட்டம் வகுத்து வரி நோக்கியிருக்கும் அரசுக்கு ஊர்தோறும் பொதுநலம் புரக்கும் பொருளாற்றல் இல்லை. தம்மூர் அளவுக்கேனும் பணியாற்றல் தம் கடன் என்று ஊர்தோறும் செல்வர் மேற்கொண்டிருப் பரேல், இப் பொதுவுடைமைப் பேருணர்ச்சி தோன்றி யிராது. இனியேனும் விரைந்து ஊர்ப்பணி தம் பொருளாற் செய்வரேல், இவ்வுணர்ச்சி பரவாது. பணைகெழு வேந்தரை இரந்தும் இரவலர்க்கு ஈயும் வள்ளியோன் எனப் புகழப்படும் பாரியும், எழுவுறழ் திணிதோள் எழுவர் பூண்ட ஈகைச் செந்நுகம் எனப் புகழப்படும் பேகன் முதலா எழுவரும், நல்லியக்கேடன், குமணன், பண்ணன் முதலாய பல்லோரும் பெரும் ஒப்புரவுச் செல்வர்களாக இருந்தமையால் அன்றோ, அக்காலத்து உடைமைப் பூசல் தோன்றிற்றிலது. திருவள்ளுவர் அன்ன ஞாலப் பெரியோரின் உரைகளைச் சிறிதும் செயற்படுத்தாமை யாலும், மேலும் அவ்வுரைகள் உலகிற்கு ஒட்டா என்று மடம் பட்டு இவறியமையானும், உடைமைப் போர் இன்று எழுவதாயிற்று என அறிக. ஒப்புரவும் ஈகையும் தனியுடைமை நாடுகளுக்குக் காப்புத் தூண்கள் ஆவன. பெருஞ்செல்வர்பால் ஒப்புரவும், மக்கள்பால் ஈகையும், அடையுண்ட மடைவாய் வழி நீர்க்கசிவுபோல் இன்று அருகி வருதலின், தனியுடைமை நாடுகள் கூடப் பொது வுடைமை வழிகளைச் சிறுகச் சிறுகக் கையாள்வன. பேரூதியத்திற் பெரும் பகுதியை வரியாக விதிப்பன. தந்தை பொருள் மகன்கை மாறும்போது மாற்றுவரிக் கேட்பன. வரியை ஒரு பெரு வருவாயாக நம்பியிருத்தல் அரசாற்றலுக்கு ஈனம் என்ற கருத்தான். தாமே பல்தொழில்களை நாட்டுடைமைப் படுப்பன. உலகெங்கும் மறைமுகமாய்ப் பெருகிவரும் இப்பொதுவுடைமை அல்லது நாட்டுடைமைப் புரட்சி கொடைவறிய செல்வத்தாய் பெற்றுவிட்ட குழவி என்பது வெளிப்படை. இஃதோ என் கைச் சிறுதாள் ஓரன்பர் விடுத்த வினாச் சீட்டு. வள்ளுவர் வகுத்த ஒப்புரவு ஈகைகளுக்குப் பொது வுடைமை நாட்டில் இடமுண்டா? என்பது அவர் வினா. காலத்திற்கு ஏற்ற வினா எழுப்பிய அவர்க்கு நம் நன்றி உரியது. பொருளென ஒன்று உள்ளவரையும், காற்று நீர் ஒளிபோல அன்றி அப்பொருள் ஒரு கணக்கு வழக்குப்படும் வரையும். ஒப்புரவு ஈகைப் பண்புகளுக்கு உயிர் உண்டு. நாம் இன்று பொதுவுடைமை என்பது ஓரளவுப்பட்டது; குறுக்கம் உடையது. ஒருநாட்டுத் தனியுடைமையைத் தான் பொது வுடைமை என்று கூறுகின்றோம். உண்மைப் பொது வுடைமையாவது உலகப் பொதுவுடைமை என்பது தெளிவு. நாடுகள் எனா அரசுகள் எனா ஞாலம் பிரிந்து கிடக்கும் வரை, ஊர் எனா நகர் எனா ஒரு நாடு பகுத்துக் கொள்ளும்வரை, இயற்கை உலகத்துக்கு இன்றியமையாச் செயற்கைப் பகுப்புக்கள் இருக்கும் வரை, பொய்யில் புலவர் வகுத்த ஒப்புரவு ஈகைப் பண்புகள் ஒருவந்தம் வேண்டற்பாலன. இப் பண்புகள் உளவேல், தனியுடைமை யரசும் வாழும். இவையிலவேல், பொதுவுடைமை அரசும் கெடும். பொருள் தனிமையாகுக, பொதுமையாகுக. உடைமைப் பூசல் அறிஞர் நோக்கம் அன்று. முன்னைச் சொற்பொழிவில் நிறுவியாங்கு, பயன் கொள்வாரே உடையர் எனப்படுவர். ஆதலின் பயன் பொதுவுறலே வள்ளுவம் என அறிக. ஈட்டிய ஓர் ஆடவன் பொருள் குடும்ப முழுதும் பயன்படல் போல, ஓரிடச் செல்வப் பெருக்கம் ஊர் முழுதும் நாடெங்கணும் பயன் செய்ய வேண்டும். குடும்பவுணர்ச்சி உலக வுணர்ச்சியாதல் வேண்டும். சிலர்பாற் செல்வக் குவிவை வெளிவரச் செய்து, செல்வப் பயன் பரப்பி, இன்மையகற்றும் அன்பு நோக்கத்தால், ஒப்புரவு ஈகைகளைப் பொருள்பற்றிச் சொல்லும் இடமெல்லாம், இனிய இன்னா நடைபட வள்ளுவர் அறிவுறுத்தினர். ஒப்புரவினை, கைம்மாறு வேண்டாக் கடப்பாடு (211) என்றும், ஈகையை, மேலுலகம் இல் எனினும் ஈதலே நன்று (222) என்றும், சிறப்பித்து அழுத்தி மொழியும் குறள்களே ஆசான் கொடைப் பற்றுக்கும் பொருளறிவிற்கும் சான்றாவன. ஆற்றலாலும் செல்வத்தாலும் வலியார் அவற்றால் மெலியாரை நலியாதபடி, பொறுமையும் ஈகையும் ஒப்புரவும் செய்வித்துக் காத்த திருக்குறள் முறையைக் கண்டோம். நிலைதாழ்ந்தார் நலங் கருதி நிலையுயர்ந்தார்க்குச் சுட்டிய அறங்களைக் கண்டோம். பொறை யுடைமை, வெகுளாமை, இன்னா செய்யாமை, கொடுங்கோன்மை முதலாய அதிகாரங்கள் எல்லாம் இச்சுட்டின்பாலன. செயல் வேண்டுவது வள்ளுவம் என்பதற்கு வினைத்திட்பம், கயமை அதிகாரங்கள் சான்றாதல் போல, வாழ்வாங்கு வாழ்தல் வள்ளுவம் என்பதற்கு மக்கட்பேறு, பொருள் செயல்வகை அதிகாரங்கள் சான்றாதல் போல, மெலியார்மாட்டு இரங்குவது வள்ளுவம் என்பதற்கு நல்குரவு. இரவு அதிகாரங்களே சான்றாவன. வள்ளுவர் வறுமைச் சுவையைத் தம் வாழ்க்கையில் துய்த்தவரோ? அறிகிலம். ஆயின் வறியோர் துன்பத் துடிப்பினை - ஈர நெஞ்சினர் ஆதலின் - நன்கு அறிந்தவர். திறவாக் கண்ண சாய்செவிக் குருளை கறவாப் பால்முலை கவர்தல் நோனாது புனிற்றுநாய் குரைக்கும் புல்லென் அட்டில் என்றபடி, புலமை யுள்ளங் கொண்டு சுவை பொதுள நல்குரவைப் பாடாது, இன்மையின் இன்மையே இன்னாதது (1041), இன்மை என ஒருபாவி (1042), அறம்சாரா நல்குரவு (1047) எனத் துடிப்புள்ளம் கொண்டு வருத்தம் மீதூர வைது பாடுவார். கல்வியின்மை, அறிவின்மை, பண்பின்மை என இன்மை பெற்றார்பால் ஓரினமாகப் பொருளின்மையும் சேரவேண்டும். இதுவே காரணகாரிய முறை. ஆயின் நாம் காண்பது என்ன? நல்லார்கட் பட்டவறுமை (408) என்றாங்கு கல்வி, அறிவு, ஒழுக்கங்கள் உடையாரையே இன்மை எளிதில் பற்றுகின்றது. உடல் நோய் போல் இவ்வின்மை நோயும் பிற நலங்களை யெல்லாம் உறிஞ்சுகின்றது. இவ்வின்மை அளவிறந்து நீடித்திருந்தால், கல்வி, அறிவு, ஒழுக்கம் எல்லாம் இன்மைப்படு கின்றன. தொல்வரவும் தோலும் கெடுக்கும் என்றும், நற்குடிப் பிறந்தார்க்கும் இளிவரவுச் சொல்லைப் பிறப்பிக்கும் என்றும், நற்பொருள் நன்கு உணர்ந்து சொல்லினும் அறிவுடையார் சொற் பொருள் இகழப்படும் என்றும், இன்மையால் நல்லன பல கெட்டழிவதைக் கண்டு, மழையின்மையால் வளர்ந்த பைங்கூழ் வாடக்கண்ட உழவன்போலக் கவல்வர் ஈன்ற பொழுதில் பெரிது உவக்கும் (69) எனச் சால்புக்கும், ஈன்றாள் பசி காண்பானாயினும் (656) என வினைத் தூய்மைக்கும், ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் (923) எனக் குடித் திருத்தத்துக்கும் பற்றாகத் தாயன்பு சுட்டும் ஆசிரியர். ஈன்ற தாயானும் பிறன்போல நோக்கப்படும் (1047) என அவள் அன்புப் புரட்சி காட்டுவர். திங்கள் பல சுமந்து பொறையுயிர்த்த தாயே தன் மகனல்லன்; இவன் யாரோ என அயற் பார்வை செய்வாளேல், வறுமையின் கொடுமைக்கு வேறெல்லையும் வேண்டுமோ? செவிலித்தாயை நீக்குதற்கு, ஈன்ற தாய் என அடை கொடுத்தும், நிலம் திரியினும் அன்பில் திரியாத் தாயும் புறக்கணிப்பாள் என்று காட்டற்கு, தாயானும் என உம்மை கொடுத்தும், இன்மையின் இன்னாமையை வெளிப்படுத்தினர். இலக்கியப் புலவன் சிறந்த பண்பாவது, கூற்று வேறு தான் வேறு என்று எண்ணாமை. அஃதாவது சொல்லப்படும் மாந்தரும் சொல்லுந் தானும் ஒன்றி நிற்கும் பிரிவில் உணர்ச்சி இவ்வீடுபாட்டில் எழுந்த இலக்கியப் பகுதிகள் நயத்தேன் துளிப்பன. மனங் கலந்த இவ்விலக்கியங்கள் நமக்குக் கொள்ளை கொள்ளையாக உள. பாணனாகக் கூத்தனாகப் பொருநனாக விறலியாகத் தம்மை முழுதும் எண்ணிக் கொண்டு, பண்டைப் புலவர்கள் யாத்த ஆற்றுப்படை இலக்கியப் பாக்களை - அஃதாவது உறவிலக்கியங்களை - நாம் கல்லாதோம் அல்லோம். மக்கட்பேற்றால் உலகம் நீடு வாழ்தல்போல, சங்க நூற் பேற்றால் நம் தமிழ்த்தாய் என்றும் வாழ்வள், சங்க நூல்களின் இயற்கையும், அழகும், தூய்மையும், சொற்றிறமும் சிற்றளவாகவே இற்றைத் தமிழர் அறிந்து வருப. அந் நூல்களை நிரம்பக் கல்லாக் குறையால், பொய்க் கோட்பட்டு நெறியல்லாதவற்றை நெறி யாகப் பற்றி, மடிந்து முடங்கி வளைந்து சுருண்டு தமிழகம் முன்னேற்றம் குறைந்து நிற்கின்றது. கண்ட இவ்வுலகத்து, எடுத்த இவ்வுடல் கொண்டு, தூயவாழ்வு காட்டும் அவைய நூற் கல்வி பரவாது புதையுண்டமையால் அன்றோ, வள்ளுவர் மாசில் தனி நெஞ்சமும் அடுப்படி ஓவியம் போல் நம்மனோர்க்கு மறைபட்டு கிடக்கின்றது. குறள் நூல் சங்கக் குடிப்பிறப்பு உடையது. அது சங்கத் தமிழ்த்தாய் பெருநலத்தோடு ஈன்ற ஈற்றுக் குழவி, திருக்குறட் பொருள் நன்னர் விளங்க வேண்டின், நன்றாகக் குறிக்கொண்மின்! சங்க நூற் கல்வி செவ்வன் வேண்டும். இவ்வரலாற்று அடிப்படையை உங்கட்கு உணர்த்தவே, என் சொற்பொழிவுகட்கு இடையிடை சங்கநூற் பகுதிகளை மேற்கோளாகக் காட்டி வருவல். நிற்க. உலகவிலக்கியப் பேராசிரியர் வள்ளுவர், வறியோர் வேறு. தாம் வேறு எனப் பிரிந்து நின்றார் அல்லர். குறள் கற்பார்க்கு அங்ஙன் பிரிவுணர்ச்சியை ஊட்டினார் அல்லர். வறிய நிலையைத் தமக்கே ஏற்றிக் கொண்டு. இன்றும் வருவது கொல்லோ நெருநலும் கொன்றது போலும் நிரப்பு (1048) என மனம் துடித்தனர். நாள்தோறும் படாதபாடு பட்டு நாய்போல் அலைந்து திரிந்து கிடைத்ததைக் கொண்டு பொழுது வீழ் அமையத்து ஒருவாற்றான் பசியாற்றிக் கொள்ளும் மக்கள் பலப்பலர். ஒருநாட் போவது அவர்கட்குப் பெரும் பாடாகத் தோன்றும். செத்துப் பிழைப்பர். உண்டி யின்மையே மெய்யான வறுமை எனப்படும். நெய்யூர்தி ஊர்ந்தார் வண்டி ஏறுதலையும், வண்டி யூர்ந்தார் நடத்தலை யும், நல்குரவெனக் கருதி இளிவரலுறக் காண்கின்றோம். அடுக்கு நிலை மாடத்து விளையாடினார் ஓட்டு வீட்டில் வாழ்தலையும், அவ்வீட்டார் கூரைக்கண் வதிதலையும், கூரை யகத்தார் வாடகைக்குக் குடியிருத்தலையும் நிலைத் தாழ்வாக எண்ணி நாணுறக் காண்கின்றோம். இனைய புறத்தாழ்வெல்லாம் நலக் குறைவு எனப்படுமேயன்றி நல்குரவு எனப்படா. உயிரனைத் திற்கும் பொதுவாய வயிற்றுப் பிணியே அப்பெயர்க்கு உரியது. உடல் சுருக்கி, அறிவகற்றி, மனம் மாளச் செய்யும் பசி நோய்க்கே இன்மைப் பெயர் சாலும். ஆதலால் பிற எளிய நிலையினராகத் தம்மைக் கருதாது. மிகத் தாழ்ந்த பட்டினி மக்களோடு ஒன்றுபட்டு, நேற்றும் வந்தபசி வறுமை இன்றும் வருங்கொல் என்று வள்ளுவர் துடிதுடித்தனர். நோய் குறைதற்கும் மறத்தற்கும் உறங்குதல் ஓர் இயற்கை நெறி. உறங்கியேனும் பசிப்பிணியைச் சிறுபொழுது மறந்திருப்போம் எனின், நிரப்பினுள் யாதொன்றும் கண்பாடு அரிது (1049) என வழியற்ற வறுமைக் கொடுமையைச் சுட்டுவர். உண்டு தணித்தாலன்றி உறங்கித் தணிக்கும் பிணியன்று அது எனக்காட்டுவர். மேற்காட்டியாங்கு நல்லன அழித்து அல்லன தந்து உயிர்க்கேடுசெய்வது பசியாதலின், மக்கள் ஒழுக்கம் பாராது பசி நீக்க முனைப. ஆக்கப் பொறுத்தவன் ஆறப் பொறுக்க வில்லை என்னும் பழமொழிக்கு ஒப்ப, செல்வமுடையவன்கூட, பசி சுடும்போது அறிவிழந்து வைது ஆர்ப்பரவஞ் செய்யக் காண்கின்றோம். ஆற்றுவார் ஆற்றல் பசியாற்றல் (225) என்பர் வள்ளுவர். இஃது இவ்வாறாயின், யாதொன்றும் இல்லா வயிறுடையார்களின் துடிநிலை சொல்லத் தகுமோ? சுவர் இருந்தன்றோ சித்திரம்; உடல் இருந்தன்றோ ஒழுக்கம் என்ற கோளினராய், வெஃகியும் பொய்த்தும் திருடியும் பொருள்தேட விழைகின்றனர். பசிப்பிணி பொறாது மக்கள் கொள்ளும் ஒழுக்கத் துறவை உட்கொண்டார் நம் ஆசிரியர். இலமென்று வெஃகுதல் செய்யார்; புலம்வென்ற புன்மையில் காட்சி யவர் (174) இலனென்று தீயவை செய்யற்க; செய்யின், இலனாகும் மற்றும் பெயர்த்து (205) ஈன்றாள் பசிகாண்பா னாயினும் செய்யற்க; சான்றோர் பழிக்கும் வினை (656) என அறிவும் அச்சமும் பழியும்காட்டித் தீவழிச் செலவை ஒழுக்க விலக்கைத் - தடுக்க எண்ணினார். வள்ளுவர் உரை மடுத்து அறிவறிந்து பழிக்கு அஞ்சி ஒருசிறு கணம் பசி பொறுத்துக்கொள்ளலாம். அதற்கு மேல் அவருரை நேரடியாகப் பசியைத் தணிக்க மாட்டுமா? உயிர்த்துடிப்பை நிறுத்த ஒல்லுமா? சோறு பசியாற்றுமன்றி ஏனைப் பெரியோர் சொல்லும் பசி மாற்றாது காண். கொள்கைகளோடு அவற்றைச் செயற்படுத்தற்கு உரிய வழிகளும் உடன்காட்டுவது திருக்குறள் முறை யாதலின், வறுமையிற் செம்மை வேண்டும் ஆசிரியர் - நல்குரவின் இன்னாமையை யாரினும் நன்கு உணர்ந்து ஓரதிகாரம் வகுத்த ஆசிரியர் - வெற்றென அறத்தைத் தொடுத்துச் சொல்லார். ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும் (131) என்றாரேனும், அரிய பெரிய நல்லுயிர் உண்டி இன்மையானே மாய்வதை விரும்பார். பெறற்கு அரிய மானிட உடம்பு பெற்றான் நெடிது உய்க்குமாறு மருந்து வரையும் ஆசிரியர், அவ்வுடம்பு பிடிசோறு இல்லாக் குறையான் அழியக் கருதார். வாழ்வுக்கு முதலெனத்தகும் இவ்வுயிர் மெய், இளிவரின் வாழாத மானமுடையார் (970), நாணால் உயிரைத் துறப்பர் (1017), தன்னுயிர் நீப்பினும் செய்யற்க (327), புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற் பின் (780), இழைத்தது இகவாமைச் சாவாரை (779), ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும் (131) என மானத்துக்கும், நாணத்துக்கும், அருளுக்கும், செய்ந்நன்றிக்கும், கொள்கைக்கும், ஒழுக்கத் துக்கும், இன்ன பிற - குணவுயர்வுக்கும் துறக்கத்தகுவதன்றி, ஐயகோ, பசி வாய்ப்பட்டுத் தொலைக்கத் தகுவதோ? ஆதலால் உலகியல்பு பலவற்றையும் சூழ்ந்து, வாழ்க்கை ஆசான் வள்ளுவர் இரக்க (1051) என ஒரு வழி காட்டினர். இதனை இகழ்ந்த நடையிற் சுட்டாது, ஈக (477) என்பதுபோல், விதிநடைப் படுத்தி இரக்க என்றனர். இரப்பும் ஒருவழியாக ஆணைப்பட இந்நூல் கூறுமேல், திருக்குறள் வாழ்க்கைச் சுவடி என்ற துணிபிற்கு வேறு சான்று வேண்டுங்கொல்! இரத்தல் உயர்வழியென வள்ளுவர் கொண்டவர் அல்லர். உதவி சிறிதாதலும் பெரிதாதலும் உதவி செய்யப்பட்டார் சால்பின் வரைத்தாதல்போல, இரப்பு இழிவாதலும் உயர்வாதலும் இரக்கப்பட்டார் தகுதியைப் பொறுத்தது. இரக்க என வழியோதிய ஆசிரியர். இரத்தக்கார்க் காணின் (1051) என இடமும் சுட்டுவர். இகழாதும், எள்ளாதும், கரவாதும் ஈவார் கிடைத்து இரப்பின், அவ்விரப்புப் பழியன்று என்றும், இன்பம் என்றும், ஓர் ஏர் உடைத்து என்றும், ஈதலேபோலும் என்றும் சிறப்பிப்பர். இரக்க இரத்தக்கார்க் காணின் என்ற வரையறையால், வள்ளுவர் சொல்லும் இரவு, மான நாண வொழுக்கங்களைப் போக்காது நின்றே உயிரோம்புவது என்று அறியப்படும். அறிஞரெல்லாம் மூக்கிற் சுட்டுவிரல் சேர்த்தும்படி இரப்புநெறி கூறும் நம் வாழ்க்கை ஆசான், ஒன்று தெரிக்க விரும்புவர். இரத்தல் எளிதாயினும் இரத்தக்கார்ப்பேறு அருமையெனக் காட்ட நினைவர். வறியார்க்கு ஈவதே ஈகை எனக் கொடையிடம் சுட்டினாற் போலக் கரவார்பால் இரப்பதே இரவு எனப் பெறுமிடம் சுட்டுவர். உயிர் ஓம்புதற்கு யாதுஞ் செய்யலாம் என்பது அறமன்று; அதற்கும் ஒரு வரையறை உண்டு. பசி தீர்த்தற்கு யார்மாட்டும் இரக்கலாம் என்பது நெறியன்று; அதற்கும் ஓர் எல்லைப் பண்பு உண்டு. பிற ஆசிரியர்கள் போல மேலெல்லைஅறங்களையே பேசி நில்லாது, யாரும் வாழ்தற்குக் கீழெல்லை அறங்களையும் மிகுந்து கரையும் அன்பு நோக்கினர் வள்ளுவராதலின், இரக்க வென மொழிந்தனர். ஆயின் யாவர் கண்ணும் பசித்துடிப்பால் இரக்கப்படுவது கீழெல்லை அறமாகாது. அறக்கடையாய் விடுமாதலின், தம் கூற்றைச் செவ்வன் தெரிவிப்பான். இரத்தக்கார்க் காணின் என வேலி கோலினர். தகாதார்பால் இரப்பு அழிபசியைத் தணியாமை மேலும் பழியாகும் என்பது கருத்து. அறிவுடை நண்பர்களே! ஒருவன் செல்வன் ஆதற்கு இரப்பு வழி சுட்டினார் அல்லர் ஆசிரியர். முதல் இன்மை எனப்படும் வயிற்றுப் பசி தீர்த்தற்கென்றே இவ்வழிகாட்டினர். மக்கள் தோன்றிய நாள்தொட்டே பசிபோல் வறுமையும் உடன்வரக் காண்கின்றோம். இஞ்ஞாலத்து, எவ்வுயிர்க்கும் பசிப் பிணி இல்லை; மக்கள் அனைவோரும் ஒருவர் விலக்கின்றிப் பசிதீர உண்டு வாழ்ந்தனர் என்ற செல்வ வரலாற்றை நாம் இதுவரை கற்றோம் இல்லை. எக்காலத்தும் எந்நாட்டகத்தும் பசியலைப்பட்ட மக்கள் பலராய வரலாறுகளையே நாம் கற்றிருக் கின்றோம். உயிர்த்தோற்ற வளர்ச்சியில் தலைசான்ற உயர்திணை மக்கள் கேவலம் உடற்பசியால் நலிவது அழகோ என்று கவன்று. இப்பசியொன்றனையாவது மன்பதைக் கண் ஒழிப்போம் என்று வரிந்துகட்டிப், பல்லாயிரம் ஆண்டுகளாகப் பாடுபட்டு வரூஉம் பெருமக்கள் சாலப் பலர்; நூல்களும் சாலப் பல. நம் சங்க நூல்களும் அவ்வழித் தோன்றிய நூல்களும் சிறப்பாக மணிமேகலைக் காவியமும் பசி நீக்கமே அறம் என்றும், பசியொழித்தோனே அறவோன் என்றும், உண்டி கொடுத்தோரே உயிர் கொடுத்தோர் என்றும் வலியுறுத்துப. பாரதிப் பெருமகனும் தனியொருவனுக்கு உணவில்லை யெனில் என்று தொடங்கி வஞ்சினம் மொழிவர். திருக்குறள் இன்மையாவது பசிப்பிணி; ஆற்றலாவது பசியை மாற்றல்; இன்மையுள் இன்மையாவது விருந்து ஓம்பாமை என்றும், அறம் எனப்படுவது பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்; இல்லறம் எனப்படுவது பழியஞ்சிப் பாத்தூண் உடைமை என்றும், பொருள் வைப்பு என்பது அற்றார் அழிபசி தீர்த்தல் என்றும் சோற்றீகையையே ஒரு தலையாக மொழியா நிற்கும். பெருமக்களின் அறக்கூற்று இவ்வண்ணமாகவும் நாம் எங்ஙன் நடந்து கொள்கின்றோம்? உண்டிச் சாலைகளில், காரடிகளில், கோயில்களில், கூடுமிடங்களில், நம் இல்லங்களில் ஓடேந்திகளைக் காணுங்கால், நம்முள் ஈகையுள்ளம் நன்கு உடையாருங்கூட, இன்று எங்ஙன் நடந்துகொள்ப? காசு ஈந்து கடன் கழிக்கின்றோம். இரவலன்பாலே ஓரணாவிற்குச் சில்லறை பெற்று அவன் விரிதுண்டில் காலணாபோட்டு நாகரிகக் கொடை செய்கின்றோம். இல்லம் வரும் இரவலனுக்கு அரிசியோ சோறோ இடுவதினும், பண்டவிலை நஞ்சேற்றம் கொண்ட இக்காலத்து, காசீதல் எளிமையும், சிக்கனமும் ஆம் எனக் கருதுகிறோம். ஆயின் பிச்சையாளன் செய்கை யாது? சுடுபசியைப் பெரிதென மதிக்கிறான் அல்லன். வயிற்றுக்கு ஈந்த காசுகளைக் கொண்டு புகையூதுகிறான்; சுவைநீர் குடிக்கிறான்; பட்டினியைப் பொருட்படுத்துகின்றான் அல்லன். ஆதலால் காசீதல் அறமன்று; நூலோர் கருத்தும் அன்று. அணா காலரை கூடினும் இவறாது சோறோ இட்டிலியோ தோசையோ வடையோ பிறவோ உண்பண்டமாக ஈவதே உயிரீகை. கால் காலணாவாகப் பலர்க்குக் கொடுப்பதினும், சிலர்க்கேனும் பசி நிரப்புவதே அறிவீகை; ஈத்துவக்கும் இன்பமும் ஆகும். இனி ஒரு சாரார் ஈகை நாட்டின்கண் மடியர்களைப் பெருக்கும் எனக் கருதுவர். அக்கொள்கை உறைப்பால் கொடுக்கும் ஆற்றல் இருந்தும் ஈயாது இருப்பர். இக்காரணம் கொள்கையளவில் எம்மனோர்க்கு உடன்பாடு; எனினும் நடைமுறைக்கு ஒவ்வுவது அன்று. ஒருவன் தன் பசி தீர்த்துக் கொள்ளற்கு நேர்மை சிறந்த இயற்கை வழி முயற்சியாகும்; இவ்வழி தன்னையே நம்பியிருப்பது செயற்கை வழி இரத்தலாகும்; இது பிறர் குணத்தை நோக்கி நிற்பது. முயற்சியானோ, இரத்தலானோ மக்கள் பசியின்றி வாழ வேண்டும். அங்ஙன் வாழச் செய்வது பசியாதார் கடன். நம்பால் வந்து இரப்பார்க்குப் பிச்சை ஈய மறுப்போமேல், மடி பெருக்கும் என்று ஏதுரைப்போமேல், முயல்விடம் காட்டவேண்டும்; தொழில் வழங்க வேண்டும். தொழிலும் படுத்தாது. ஈகையும் செய்யாது, பசி தணியும் பயனும் நோக்காது, கொள்கைக் கண் கடைப்பிடியாக நிற்போமேல், அந்நிற்பு முடிவில் தன்னலமாகவே அமையும்; பொருட்பற்றாகவே அமையும்; இவறற் குற்றத்துக்கே துணை செய்யும். தொழில் ஈதல், சோறீதல் இரண்டனுள், பின்னதே பலரும் செய்தற்கு எளியது. ஆதலின், நாட்டின் கண் மடிப்பெருக்கம் வருமோ என்று மயங்காது பசிப்பெருக்கம் குறைய நம்கடன் ஆற்றவேண்டும். அரசு தன் கடன் செய்யத் தவறுங்கால், குடிமக்கள் தம் கடன் என எண்ணவேண்டும். நேரடியாக நம்பால் வந்து இரந்த எளியோர்க்கு ஈரங்காட்டாது, வரி விதித்து இவ்வெல்லாம் அரசு செய்யட்டும் என வன்கண்மை பேசுதல், பற்று எனப்படுமன்றி, நாட்டுக்குப் பயன் எனப்படாது. காணார் கேளார் கால்முடப் பட்டோர் பேணுந ரில்லோர் பிணிநடுக்கு உற்றோர் யாவரும் வருகென்று இசைத்தமுது ஊட்டி என்றபடி குருடர் செவிடர் முடவர் போலும் உறுப்பறைகள். தாயில் குழவிகள், சார்பில் கிழவர்கள், வெள்ளம் நெருப்பு நில நடுக்கம் போலும் பூதக்கேடுற்றோர்கள். பல்லாற்றான் நலிவுற்றோர்கள் எனவரூஉம் இந்நிலைய இரப்பாளர்களைப் புரப்பது மக்கள் கடனும் அரசின் கடனும் ஆகும். யார் கடனோ என அரசு வாளா விருப்பதும், அரசின் பொறுப்பென ஊர்மக்கள் தட்டிக் கழிப்பதும், நாட்டின் அடிப்படைக் கேடாக முடியும். தத்தம் கடனெனத் துணிந்து பசி தணிக்கும் சோற் றீகையை, நாணம் மறைக்கும் உடையீகையை, ஒல்லும் வகையான் யாரும் செய்வதே நடைமுறை ஒழுக்கம் ஆகும். ஆதலின் சோறும் உடையும் இல்லா வறியோர்க்கு உடை சோறு ஈவதே வள்ளுவம் எனத் தெளிக. இன்மை நிலை என்பது இற்றைச் சொற்பொழிவின் தலைப்பு. இத்தலைப்பில் நின்று இதுவரை உரைத்தது யாது? இன்மை நிலை துடைப்பது உடையார் கடன் எனப் பிறர் மேற்றாக வைத்து ஆசான் கூறிய அறநிலையைக் கண்டோம். ஒருவன் பசித்துக் கிடக்கக் கண்டால் அப்பசி நீக்குதல் ஈகையாளன் பொறுப்பாயினும், தன் வயிற்றுப் பசிக்கென ஒருவன் பிறனை நோக்கி நிற்கலாமா? பிறர் பசியைத் தான் தீர்த்துதவ மாட்டாது போயினும், தன் பசி யிடும்பையையாவது தானே ஆற்றிக்கொள்ள வேண்டாமா? பிறரைப் புரக்கும் கடமையை மேற்கொள்ளாது ஒழியினும், தற்காக்கும் உரிமை யொன்றனையாவது பேணிக்கொள்ளப் படாதா? ஈதல் இசையாது எனினும் இரவாமை ஈதல் இரட்டியுறும் என்றபடி, பிறர் சுமையை ஏற்றுக் கொள்ளாது விடினும், தான் சுமையாக ஏறிக்கொள்ளப் படாதன்றோ? இவ்வாறு நமக்குத் தோன்றும் மறுப்பெண்ணங்களைத் திருக்குறளாரும் எண்ணினர். வலக்கை புண்ணுற்றகாலை அப்பொழுதைக்கென இடக்கை கொண்டு உண்பது போலவும், கால் நொண்டியபோது அக்கணத்திற்கெனக் கோல்கொண்டு நடப்பது போலவும், எவ்வாற்றானும் முயற்சி இல்லுழி அவ்வமயத்திற்கென இரந்துகொண்டு பசியாறுக என்பதுவே திருக்குறள் சொல்லும் இரப்பின் உட்பொருள். இதுவே வள்ளுவர் நெஞ்சம். இடக்கையால் உண்ணற்கென்று வலக்கை புண்ணுறுத்திக் கொள்வாரும், கோலால் நடத்தற்கென்று கால் முடம்பட்டுக்கொள்வாரும், பிச்சையால் பசி தீர்த்தற்கென்று உள்ள தொழிலைப் போக்கிக் கொள்வாரும் உளரோ? உளராயின், அன்ன முழு மக்கள் நகுதற்கு உரியரன்றி எண்ணற்கு உரியர் அல்லர். பசி தீர்க்கும் வழி இரண்டனுள் இரப்பு யாரும் நினைப்பது போல் எளிய முறையன்று. பத்து மணிக்குச் சென்று இரந்தால், இன்னும் சமையல் தொடங்கவில்லை என்ப. பதினொரு மணிக்குச் சென்றால், ‘இன்னும் சமைத்து முடியவில்லை; அடுப்பும் துடுப்புமாக இருக்கும் நிலையில் உனக்கு அள்ளிப் போடுவது யார்? என்ப, நண்பகல் பன்னிரண்டு மணிக்குச் சென்றால், இன்னும் யாரும் உண்ணவில்லை; வடித்து உனக்கு முதலில் போட முடியுமா? என்ப, ஒரு மணிக்குச் சென்றால், இப்போதுதான் உண்ணுகிறோம் என்ப. இரண்டு மணிக்குச் சென்றால், இன்னும் எல்லாரும் உண்டு முடியவில்லை என்ப. மூன்று மணிக்குச் சென்று இரந்தால், உண்டு கழிந்து நேரம் ஆயிற்று; மிச்சமில்லை என்ப. ஏன் அம்மா! போட மனம் இல்லை என்று முன்னே சொல்லப்படாதா? எனப் பிச்சையாளன் எதிர்த்துரை செய்தால், இரப்பான் வெகுளாமை வேண்டும் (1060) என்று வள்ளுவரும் இடித்துரைப்ப, இரக்க இரத்தக்கார்க் காணின் (1051) என உடன்பாட்டு முகத்தான் குறள் யாத்த ஆசிரியர். இரப்பன் இரப்பாரை யெல்லாம்; இரப்பின் கரப்பார் இரவன்மின் என்று (1067) என எதிர்மறை முகத்தான், எளியார்க்கு எளியராய் வேண்டிக் கொண்டனர். கரப்பாரே உலகத்துப் பலராதலில், மானம் தீரா இரவு அரியது என்று உணர்த்தினர். இரந்தும் வாழ்வேன் என்பது ஒருவன் குறிக்கோள் ஆதல் இல்லை. இரவலையும் மருந்துண்பதுபோல் நிலைத்த ஒரு நேர் நெறியாக, தொழிலாக ஒருவன் எண்ணிவிடின். அவன் மக்கள் இனத்துக்குப் பாரமாவன்; நடைப்பிணம் ஆவான். இரத்தல் அரிய வறியதோர் காலத்துக் கொளத் தகும் காப்புவழி யாதலின், அஃது இயற்கைப் பொது நெறியன்று என நன்கு உணர்த்தும் நோக்கோடு, இரவு அதிகாரம் செய்த ஆசிரியரே இரவச்சம் என ஓரதிகாரமும் செய்வார் ஆயினர். கரவாது உவந்து ஈயும் கண் அனைய சிறந்தார்பாலும் இரவாமை கோடி உறும் (1061) என அறிவுறுத்தினர். ஆவிற்கு நீர் என்று இரப்பினும் (1066) என்ற கருத்தால், ஓருயிர்க்கு நன்மை செய்வதாயினும்கூட அதனை இரந்து செய்தல் இளிவரவு என உள்ளச் சிறுமை சுட்டினர். நல்லாறு எனினும் கொளல் தீது (222) எனப் பெருமிதம் வேண்டினர். இரவு, இரவச்சம் என்ற அதிகாரங்கள் தம்முள் முரணியன அல்ல. பலநிலையறம் கரையும் உலகியல்பு சான்றது திருக்குறள் ஆதலின், வாழ்க்கை நிலை வேறுபாடு நோக்கிச் சொல்லிய வேறுவேறு அதிகாரங்களாகவே கொள்க. உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும் சேராது இயல்வது நாடு (734) என்பது திருக்குறள் வரைந்த நனவுலகம். ஆதலின் வள்ளுவம் என்பது பசியின்மை, பிணியின்மை, பகையின்மை என்னும் முக்கூற்று உடையது. இவ்வின்மை மூன்றும் உடைய நாடே நம் தமிழ் முன்னோர் காண விழைந்த நல்லுலகம். திருக்குறள் அடிச்சுவடு போற்றி, இளங்கோவும் சாத்தனாரும். பசியும் பிணியும் பகையும் நீங்கி வசியும் வளனும் சுரக்க என நாடு வாழ்த்து முழங்குப. உலகத்து யாண்டும் உறுபசி கூடாது என்று குறிக்கோள் வரைந்த வள்ளுவர் காட்டும் நெறிக்கோள் யாது? முயற்சி, முயற்சி, முயற்சி. நாம் வாழும் உலகம் எவ்வகையானும் வறிய உலகமன்று; வற்றாப் பெருஞ்செல்வ இயற்கையை உள்ளும் புறமும் உடையது. இச்செல்வ உலகில் மக்கள் வறியர். நெற்றி வேர்வை நிலத்துவீழ இயற்கையைப் பயன்கொள்ளும் மெய்ம் முயற்சியில் வறியர். மக்களுயிர் அல்லாப் பிறவுயிர் எல்லாம் - அஃறிணைப் பிறப்பெல்லாம் - முயற்சி சான்றன; பசியோடு பிணியும், அற்று வாழ்வன; பசி தீர்க்கும் உணர்ச்சியோடு கவல்வின்றிப் பொழுதுவரை ஊர்வன; திரிவன; பறப்பன. கோழி தன் குஞ்சுகளோடு குப்பை கிளறுவதூஉம், குருவி நாகணம் காகங்கள் நெடுஞ்சேண் பறந்தும், குறுகுறு நடந்தும் இரைவாய்க் கொள்வதூஉம், மக்கட்கு அறிவூட்டும் காட்சிகள் அல்லவா? உவமை என்பது உயர்ந்ததன் மேற்றே உள்ளுங் காலை எனத் தமிழ் முதல்வன் தொல்காப்பியன் மொழிந்தபடி, சிற்றெறும்பின் முயற்சியன்றோ நம்மனோர்க்கு எடுத்துக் காட்டாய்த் திகழ்வது. ஐயகோ, ஆறறிவுப் பறை யறையும் மக்களும், அம்மடி மக்கள் வயப்பட்ட பாவி மாவினங்களும் பசி வறுமை பிணி வறுமைப்பட்டு நலியக் காணுதுமேயன்றி, மக்கள் தொடர்பற்று உரிமை சான்ற பிறவுயிரெல்லாம் பசி பிணியின்றி வாழக் காணுதும். என்கொல்? பசி, பிணி, பகை என்னும் உயிர்நோய் மூன்றனுள், முயற்சி யின்மையே இருநோய்க்குக் காரணம் என்று தெளிக. ஒருவன் உண்டற்கு யாதுமின்றிப் பசிநோய் உறுகின்றான். கழிபேர் இரையான்கண் நோய் (946) என்றபடி, மற்றொருவன் விழுங்கியது செரித்தற்கு இன்றிப் பிணிநோய்ப் படுகின்றான். உண்ணாப் பசி நோயும் உண்ட பிணிநோயும் மெய்யுழைப்பு என்னும் ஒரு மருந்தானே தீரவல்லது. நாம் வாழும் உலகம் உடலால் முயல்வாரை வஞ்சிக்கும் உலகம் அன்று. வருந்தி உழைத்தாலும் பயன் நல்கா மலட்டுலகம் அன்று. நிலம் படைத்தான் வளஞ் சுருங்கப் படைத்தானல்லன். நிலத்துப் பிறக்கும் எவ்வுயிரும் எத்துணைக்கோடி யுயிரும் பசியாறி வாழும் வண்ணம். முட்டையுள்ளீடுபோல, நிலவளம் நிரம்ப வைத்துள்ளான்; வளஞ்சான்ற இவ்வையகத்து ஓருயிர் பசியால் வாடிற்று எனின், அஃது அவ்வுயிரின் மெய்ம் முயற்சிக் குற்றமே யன்றிப் பிறப்பின் குற்றமன்று என்பது வள்ளுவர் தெளிந்த உலகவடிப்படை. ஆதலாலன்றோ, இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக உலகியற்றி யான் (1062) என்று படைத்தானை வைவார்போல் உழையா மக்களைப் பழிப்பர். முயன்று உயிர்வாழ்தலே இயற்கை; ஓருயிர் தன்போலும் மற்றோர் உயிர்பால் இரந்து பசியொழிப்பது செயற்கை என ஆள்வினை காட்டுவர். முயற்சி பெருமை தரும் (611), முயற்சி திருவினை ஆக்கும் (616) என உறுதி கூறுவர். முயற்றின்மை இன்மை புகுத்திவிடும் (616) என அச்சுறுத்துவர். மெய்யன்பர்களே! வெயில் மழை பனி என்ற இயற்கைப் பருவங்களொடு ஒன்றி, அயராது உஞற்றும் ஆள்வினை மக்கள்தம் உடல், கொல்லன் கைபோல் வன்மை சான்றது; ஆனால் அடுக்களைத் துணிபோல் கண்ணுக்குக் கவர்ச்சியற்றது. இவ்வுடல் வலிய தோற்றத்தை நாகரிகமின்மை எனக் கருதுகிறோம். கால நிலைகளொடு ஒன்றாது, செயற்கை நிழலிலும் காற்றிலும் அமர்ந்து, சுடுநீர் குடித்த வேர்வை யன்றி மெய் வருத்திய வியர்வை அறியா உழைப்பிலிகள் தம் உடல், பொன் பூசினாற் போலும் கண்ணுக்கு இனியது; ஆயின் சுரைபோலும் உள்ளீடு அற்றது; ஒரு காயல் வந்தால் என்பு எண்ணத் தகுவது; ஒரு குழவி யீன்றால் ஒன்பது குழவி யீன்றால் ஒக்கும் ஒட்டிய வற்றல் தோற்றம் காட்டுவது. இப் பொய் யுடலை, நாகரிகம் என்று விரும்பியும் வளர்த்தும் வருகின்றோம். நாடும் அரசும் குலமும் மேற்கொள்ளும் போக்கெல்லாம் முயற்சிக் கொல்லிகளாகவே உள. மெய்த் தொழிலாளிகள் ஊதியம் சுருங்கப் பெறுகின்றனர். கல்வி யறிவுத் தொழிலாளி களின் ஊதியமோ, பலர்க்கு மிக வேற்றமாய் அமைந்து கிடக்கின்றது. நேரடியாக உழைப்பவன் சிற்றூதியமும், உழையாது கண்காணிப்பவன் பேரூதியத்தோடு ஆற்றலும் பெறுகின்றான். உடல் நோவா வினைகளே உயர்ந்த வினைகள் என்ற மயக்கெண்ணம் இன்று யார்பாலும் தடித்து நிற்கின்றது. மக்களின் அறிவில் மனப்பான்மைக்கு எண்ணிறந்த பொறிகளும் துணை செய்கின்றன. மானமாவது உள்ளப் பண்பு; ஒழுக்கப் பண்பு. அதற்கும் பொருளுக்கும் நேரடித் தொடர்பு இல்லை. பொருள் ஏறி இறங்கும் அளவுக்கொப்ப, மானமும் ஏற்ற இறக்கம் உடையது என நாமும் மயங்குகிறோம்; நம் சுற்றுப்புற உலகமும் அப்படியே மதிக்கிறது. இப் பொய்ம்மானம் குடிகெடுப்பது; முயற்சியை அறவே கொல்வது ஒரு காலத்து ஏவல் இடம் பொருள் நிரம்பிய செல்வர்கள் அவை தொலைந்த ஞான்று, நாணி ஒடுங்கி, பலர்காண அஞ்சி, முடங்கிக் கிடக்கின்றனர். கைச்சிறு பொருளை விற்று விற்று வயிறு காக்கின்றனர். ஒரு சாரார் தங்கள் குலப்பெருமையே நினைந்து, வீட்டு வேலையும் வெளி வேலையும் செய்யாது மடிகின்றனர். ஒரு சாரார் தொழில்களில் உயர்வு தாழ்வு பேசிக் கொண்டு, ஒரு தொழில் அற்ற காலை மறு தொழில் பார்க்க முனையாது வாளா இருக்கின்றனர். கற்பு என்னும் பெயரால் ஒரு சார்ப் பெண்ணினத்தின் மெய்ம் முயற்சியைச் சமூகம் கொல்லுகின்றது. பட்டி தொட்டிகளில் வாழும் ஆண் பெண் மக்கள் முயற்சிக்கு உறைவிடமாய் வாழ, நகர மக்கள் முயற்சிக் கொல்லிகளாய்ப் பெருகி வருகின்றனர். குடிசெய்வார்க்கு இல்லை பருவம்; மடிசெய்து மானம் கருதக் கெடும் (1028) என்பது ஆசான் காட்டும் பொய்ம்மானப் புரட்சி. முயற்சிவழி அறையும் வள்ளுவர் மக்களின் பொருந்தாக் கோட்பாடு களை - முயற்சிக்கு இடையூறாம் பொய்ம் மனப் பற்றுக்களைக் காண்கின்றார். செயல் நெறி காட்டுவது மட்டும் தங்கடன் அன்று; செய்ய வொட்டாது விளங்கும் தப்பெண்ணங் களைக் கடிந்து அகற்றுவதும் தங்கடன் எனத் துணிகின்றார். அத்தப்பெண்ணங்களுள் அவர் கண்ட ஒரு தடிப்பெண்ணம் ஆவது ஊழ்க் கொள்கை. ஊழின் பெயரால், பசிக்கும் பிணிக்கும் பிற நோய்களுக்கும் வாழ்வளித்து, மடிமடிப் படும் பேதைப் போக்குக்களைக் கண்டார். ஊழ் கெடுதலையே செய்வது என்னும் ஒரே மயக்கினராய், அம் மயக்க வாள் கொண்டு வாழ்வுக் கிளைகளை யெல்லாம் தாமே வெட்டி வீழ்த்தி, வேருக்கும் முயற்சி நீர் பாய்ச்சாது, தோலுரித்த பட்டமரமாய், மக்கள் நிற்கும் பாழ்நிலைகளைக் கண்டார். நன்கு தளிர்த்துக் கிளைத்துப் பூத்துக் காய்த்துக் கனிந்து இனித்து வாழ எண்ணாது, சாவுக்கே பிறந்தாராகி, உடும்புபோல் ஆகாக் கொள்கைகளைப் பிடியெனப் பிடித்துத் தேய்ந்தழியும் பாவிப் பிறப்புக்களைக் கண்டார். பெறுமவற்றுள் மக்கட் பேறே யாம் அறிந்த பேறு எனத் துணிந்த வள்ளுவத் தோன்றல், இவ்வழிவுச் செலவெல்லாம் பார்த்து மனம் வெதும்பி நைந்தார். அவர் மனத்து எழுந்த ஆய்வுகள் பலப்பல. வலியுடையது ஊழா? முயற்சியா? முயற்சிப் பயனை அழிக்கும் திறம் ஊழுக்கு உண்டா? ஊழ் என்பது தீயூழையே சுட்டுமா? ஊழ் என்றால் பொருள் என்னை? ஊழின் வலியே வலியாயின், தீயூழே எதனையும் முன்னின்று அழிக்குமாயின், திருந்துமின்! திருந்துமின்!! என யாப்புறுக்கும் அறநூல்களால் பயனென்? எந்நிலை மக்களும் முறையோடு முயன்றால், துணிவோடு ஊக்கினால் உயர்வாழ்வு பெற ஒல்லும் என்ற அதிரா அடிப்படையில் நின்றன்றோ, பெரியோரும் பெரு நூல்களும், அறஞ்சாற்றி வருப. ஊழ்கெடுவலி உடையதேனும், மிதித்துக் கடக்க வல்ல பற்றுக்கோடு மக்கட்கு இன்றெனின், ஊழாட்சியே தலைசான்ற உலகாட்சியாய் விடுமெனின், அரசாட்சி யாலும் பயனென்? யார் யாருக்குச் செய்யும் யாதா னுந்தான் பயனென்? இவ்வாறெல்லாம் இரக்கம் உடைய ஆசான் நெஞ்சு எண்ணிற்றுப் போலும். உலகக் கட்டடம் கெட்டடிப்படைமேல் எழுந்ததன்று. முயற்சியே வாழ்வு; வினையே உயிர் என்பது வள்ளுவம். ஒருவன் ஊழ் அல்லது உலகச் சூழ்நிலை துணையாக நிற்பின், சிறிய முயற்சியால் பெரும் பயன்வரும். முயல்வின் பயன் அளவுக்கு மிகுந்து தோன்றும். இன்று சிலர் புதிய பெருஞ் செல்வராய் இருப்பதற்கு அவர்தம் பெருமுயற்சி காரணம் அன்று; போருலகச் சூழ்நிலை காரணம் என்று நாம் அறிவோம். ஆகூழாயின், முயற்சிப் பயன் இயல்பளவினும் இறந்து தோன்றும்; அத்துணையே யொழிய, முயன்ற அளவுக்கு வரவேண்டிய உரிமைப் பயனை அழிக்கும் கொடுங்கோன்மை ஊழுக்கு இல்லை மன் என்பது வள்ளுவம். ஆதலின், தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும் (619) என வாழ்க்கைக்கு ஓர் அதிராப்பற்றுக்கோடு காட்டினார். தெய்வம் நோக்கி இராது முயல்க என்பது கருத்து என்னும் பரிமேலழகர் நுட்பக் குறிப்பு குறளனைய பெருமைத்து என்று கொள்க. உடம்பு முயற்சிக்கே உரிய கருவி. ஆள்வினை நம் பிறப்புரிமை. எழுது கருவியை ஒருவனிடத்துக் கொடுத்து, நீ எழுதக் கூடாது; எழுதின், எழுத்துப் பயன் அழிப்பல்; அதனை வாளா வைத்திரு என்று கூறுவார் உளரோ? உளரேல், ஐய! கருவி வினைப்படுதற்கா? துருப்படுதற்கா? என்று மறித்து வினவாரோ? ஓர்மின்! முயற்சிக்கே வாய்த்த உடற்கருவி கொண்டு தொழில் செய்தலும், அத் தொழிற் பயன் உறுதலும் உயிர்க்கடன். ஊழ் அல்லது சுற்றுச் சூழ்நிலை ஒருவனை முயலவிடாது தடுத்தாலும், முயற்சிப் பயனை நுகர விடாது தடுத்தாலும், அறிவுடையான் என் செய்வான். என் செய வேண்டும்? ஊழ் எனப் பெயரிய ஒரு பொருளே! உன்னைப் புறங் காண்பேன். இமயப் பெருமலையையும் புரட்டித் தள்ளும் இடையறாப் பெருமுயற்சிப் படைகொண்டு, நின் முது கோட்டம் காண்பேன் என்று வீறு பெறல் வேண்டும். நம் வாழ்வு எஞ்ஞான்றும் வினைவாய்ப் படல் சாலுமே யொழிய, ஒரு கணமும் ஊழ்வாய்ப் படல் சாலாது. போட்டியில் தொடக்கத்து விரைந்து ஓடுவான் முடிவில் தோற்பது போல், முதற்கண் விரைந்து தடை செய்யும் ஊழ் தன் வலியிழந்து அயர்ந்து, ஒரு சீரான இடையறா முயற்சிக்குமுன் இறுதியில் தோல்விப்பட்டே தீரும் என்று அளந்து அறிந்த வள்ளுவர். ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித் தாழாது உஞற்று பவர். (620) என முயற்சி வாகை சாற்றினர். ஆதலின் யாதன் முன்னும் தோலாப் பல்கால் முயற்சியே தனிப்பெரு வள்ளுவம் என்று ஒழுகுக. அதனாலன்றோ நின்தாள் வாழிய! நின்தாள் வாழிய! என்றே சங்கப் புலவர்கள் வள்ளல்களை வாழ்த்துவாராயினர். வினைச் செல்வர்களே! பசிப்பிணி அன்றுதொட்டு உலகை என்றும் நலிவித்து ஆட்டி வருவதற்கு ஒரு பெருமுதற் காரணம் மக்களின் முயற்சிக் குறைவேயாகும் என்று துணிமின்! அடுத்த பெருங் காரணம் சமூகச் சூழல் என்று அறிமின்! உற்றவிடத்து உதவாது, தொடுத்து அம்பலும் அலரும் மொழியும் சமூகக் கோளாறுகளால், எண்ணத் தொலையாக் குடும்பங்கள் எழுதத் தொலையா அல்லற்படுகின்றன. உறுபசியும் ஓவாப் பிணியும் சேராது இயல்வது நாடு என்று நாட்டுக் குறிக்கோள் நன்கு உணர்த்திய வள்ளுவர் தம் எண்ணம் செயற்படுமாறு, முயற்சி நெறிக்கோளும் காட்டினார். அரிய கோளும் எளிய வழியும் ஒருங்கு தந்த திருக்குறளாரை, நாம் மறந்த மறப்புக்கு ஓரளவில்லை காண். செயல் வள்ளுவத்தையும் தூயமன வள்ளுவத்தையும் நினையாது கெட்டாற்போல் ஆள் வினை வள்ளுவத்தையும் நினையாது கெட்டொழிந்தோம். பொச்சாப்பு உடையார்க்கு நன்கு இல்லை (534) என்னும் பொய்யா மொழிக்குக் குறள் பிறந்த நாடும் மொழியுமே இலக்கியமாயின காண். நாம் வள்ளுவர்க்குப் பொய்யா அன்பர்களாயின், நம் தனி வாழ்வினையும், சமூகத்தினையும், அரசினையும், முயற்சிப் பூதத்தால் பிணிக்கவேண்டும். நாட்டுக் காப்பும் வரி விதிப்புமே இன்று அரசின் நோக்கங்களாய் நிற்கின்றன. குடிமக்களின் ஒவ்வொருத்தர் பசியும் நீங்கவேண்டுமாயின், புறநடையின்றி ஒவ்வொருவரையும் முயற்சிப்படுத்தல் அரசின் முதல் நோக்கமாக வேண்டும். குடிமக்கள் அனைவரும் தொழில் செய்வரேல், அரசிற்குக் காக்கும் கடப்பாடு குறையும்; வரி வரவும் பெருகும். முயலாதாரைக் கட்டாயம் முயற்சிப் படுத்தலும், முயன்றும் தொழில் பெறாதார்க்குத் தொழில் பெருக்கிக் கொடுத்தலும், உழைப்புப் பயனைப் பிறர் வஞ்சியாதபடி உழைத்தாரே நுகரும் வண்ணம் சட்டக்காப்புச் செய்தலும், அரசின் தலைப்புதுக் கோள்களாதல் வேண்டும். உழையாதார் யாரும் இலர்; உறுபசியாளர் யாரும் இலர் என்பது வள்ளுவம்; ஆதலின், தனித்தோர் வாழ்க்கையும் சுற்றுச்சூழலும் அரசின் அடிப்படையும் எல்லாம், நன்கு குறிக்கொண்மின்! முயற்சி என்னும் வினைக்குன்றின்மேல் நிலைக் கொள்ள வேண்டும். மெய்ம் முயற்சியை இழிவு, மானக்குறைவு, நிலைத் தாழ்வு, அறிவுப் புறம்பு, தீவினை, குலப்பழி, அநாகரிகம் என்று பலவாய்ப் பேதைப்பட்டு நினைவார் நினைவெல்லாம் அழிந்தொழிகதில், முயற்சிக்கு இடையூற்றை நல்வாழ்வுக்கே இடையூறு என்று தெளிமின்! மடிக்குத் துணை செய்வன வற்றைச் சாவுக்குத் துணையெனக் களைமின்! ஆகாக் கொள்கைகளும், அணைத்துக் காவாச் சமூக வழக்கமும், ஆள்வினைக்கு இடைநின்று விலங்கின். கலங்காது ஒருகால் இருகால் பல்கால் எனைத்துக் காலாயினும், அறிவுத் துணி வோடு செய்வினை விடாது. அக்கோள்களையும் வழக்கங்களையும் உப்பக்கம் காண்மின்! புறங்கண்டு நகுமின்! 6. அறிவுப் பிறப்பு அறிவுடைப் பெருமக்களே! நும் அனைவர்க்கும் என் தலை வணக்கம். ஐந்து நாள் மாலைதோறும் இதுவரை திருக்குறள் பற்றி ஐவகைச் சொற்பொழிவுகள் என் முகமாகக் கேட்டுப் பெருமைப் படுத்தினீர்கள். பல்லாயிர மக்கள் திரளாகக் குழுமியிருக்கும் இவ்வவையின் முகமலர்ச்சி, உள்ளக் கிளர்ச்சி, அறிவுணர்ச்சி முதலாய எழுச்சிகளை உவந்து காணும் யான் ஒரு மொழித்தாய் வயிற்றுப் பிறந்த உங்கள் முன்னர் உரையாற்ற வந்த பெரும் பேறு உடையேன். பேறு அளித்த நுமக்கெல்லாம் தனித்தனி நன்றி செலுத்துவல். வாழ்க்கை யறிவு சான்ற வள்ளுவத் தோன்றல் பெயரால் நிறுவிய வாய்மைக் கழகத்தின் சார்பாக, என் திருக்குறட் சொற்பொழிவுகள் நிகழ்வன என்று நீவிர் அறிவீர். இக்கழக அன்பர்கள் மூவாண்டுகட்கு முன் என்னை அணுகி, திருக்குறள் குறித்துப் பல்பொழிவு ஆற்றுக என்று வேண்டினர். எக் கழகத்தார்க்கும் சொல்லும் வழக்கம்போல் இக் கழகத்தார்க்கும் பேச மறுதலித்தேன். இந்திய நாடு உரிமை பெற்ற நாள் முதல், பிற ஆக்கம் பெருகாது எத்துறைக் கண்ணும் பேச்சே பெருகுவதைச் சுட்டிக் காட்டினேன். சொல்வார் செயலற்றுச் சொல்லக் கேட்பார் மனமற்றுக் கேட்டொழியும் நாட்டின் வளராச் சிறுமையை விளம்பினேன். நாகரிகம் என்னும் பெயரால் பட்டி மக்கள் பட்டினத்தாராய் மாறுதல் போல, குடியரசு என்னும் பெயரால், குடிமக்கட்கு அறிவு கொளுத்துதல் என்ற மேற்கோளிட்டுச் செயற்கு உரியாரெல்லாம் சொற் குரியாராய்ப் பெருகி வருவதை எடுத்துக் காட்டினேன். திருக்குறள் பற்றிச் சொல்லாற்றுவார் உட்கிடை இன்று பலப்பல. தாய்மொழியாகத் தமிழினைப் பெற்றிருந்தும், அத்தாய் பல்லாயிரவாண்டு கருக்கொண்டு, பொறையுயிர்த்த அறிவுத் திருக்குறளைக் கற்றிலோம் என்றால், கல்லாத் தமிழரை இற்றைத் தமிழகம் நன்கு மதியாது என்று அஞ்சி, யாமும் குறள் கற்றுள்ளோம் என்பதை ஊரார்க்கு விளம்புவான். கைத் துண்டில் மிகச் சில குறள்களை எழுதி வைத்துக்கொண்டு ஆகுல நீர்மை செய்வார் ஒரு சாரார். யாம் அறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிது ஆவது எங்கும் காணோம் என்று நாட்டுப் புலவன் உண்மை மொழிந்தாங்கு. பெருமைப்படத்தக்க தமிழ்ப் பிறப்பு எடுத்தும், திருக்குறளைப் பிறமொழி வாயிலாய்ப் பயின்று விளம்புவார் ஒருசாரார். திருக்குறள் ஓரடியும் கல்லாது, குறட் பெருமை சாற்றும் பிறர் புகழ்க்கருத்துக்களையே, தாமும் ஒப்பித்துத் தம் அறிவில் பற்றுடைமை காட்டி நிற்பார் ஒரு சாரார். குறள் முழுதும் அறிவேம்: அதன் உரைபலவும் எண்ணியாங்கு எடுத்துவிட வல்லு நம் என்று ஆற்றல் காட்ட முனைவார் ஒரு சாரார். தலைகீழாகக் கீழ்மேலாக ஒப்பிப்போம்; எவ்வெண் கொடுத்து, எச்சொற் கொடுத்து, எக்குறிப்புக் கொடுத்து வினவினும் குறள் சொல்ல வல்லேம்என்று பரிசிலிடுவார் ஒருசாரார். மேடைச் சரக்கெனக் கற்பாரும், தேர்வுப் பாடம் என உருப்போடுவாரும், ஆசான் சமயம் காண ஆராய்வாரும், இலக்கியம் நோக்கி இலக்கணம் நோக்கி மொழியறிவு நோக்கி ஆய்வாரும், ஒப்பு நோக்கிக் காண்பாரும் என வாங்கு திறக்குறள் கற்பார் சொல்வார் கேட்பார் எழுதுவார் உட்கிடை பலதிறத்தன. இவ்வெல்லாம் முற்றும் தகாதன என்பது என் கருத்தன்று .மக்கள் பல நிலையினர் என்பது வள்ளுவம் ஆதலின், எந்நிலையிலாவது நின்று குறள் கற்பரேல், அக் கற்பு நெஞ்சார வரவேற்கத்தக்கது. குறட் கல்வி எனைத் தளவு பெறினும், பெற்ற அனைத்தளவிற்கு நம் வாழ்க்கை உரம்பெறும். மேலும், தவச்சிறிய நல்ல தொன்றின் பயன் இவ்வளவிற்றுத்தான் என்று ஒருதலையாகக் கணித்துவிட முடியாது. ஆதலின் யார் உள்ளம் யாவண்ணம் ஆயினும், அவர்தம் குறள் நட்பு சிறிதும் இகழற் பாற்றன்று. எனினும் திருக்குறள் மாட்டுத் தொடர்பு கொள்வார் யாரும் தலைநின்ற ஒன்று நினைதல் வேண்டும். பிறபயன்கள் உளவேனும், ஆவின் முதற்பயன் பால் என்றும், சோற்றின் முதற் பயன் பசி நீக்கம் என்றும், ஆடையின் முதற்பயன் அற்றங் காப்பு என்றும் கொள்ளும் உண்மை போல, குறளின் முதற்பயன் பொய்யாத் தூயசெயல் என்று விளங்கிக் கொள்ளல்வேண்டும். குறள் கற்பார் யாரும் தம் நெஞ்சத் தூய்மையை முதலெண்ண மாகத் துணிய வேண்டும். தம் வாழ்வுத் திருத்தமே குறளின் அகநோக்கம்; மற்றைக் கல்விக் காட்சியெல்லாம் புறநோக்கம் என்னும் அதன் பகுத்தறிவு வேண்டும். இவ்வாறு யான் துணிந்த திருக்குறட் கல்வியை வாய்மைக் கழகத்தார்க்கு மொழிந்தேன். நீர் விரும்பியவாறே வாழ்க்கை நோக்கம் தலைவைத்துக் குறட் பொழிவு பல செய்ம்மின்! என்று மறுமொழி கூறி அழைத்தனர். உங்கள் கழகம் அண்மையில் தோன்றியது. ஆரவாரத்தொடு பிறந்த அன்றே இறந்து படூஉம் பிறபல் கழகங்கள் போலாது, நும் கழகம் திருக்குறள் போல நீடு வாழிய! தூய செயல் நோக்கொடு ஆசான் வகுத்த வள்ளுவங்களைச் செவ்வன் ஆய்ந்து தெளிந்தபின், தொடர்ந்து சில நாள் நும் கழகச் சார்பில் சொல்லாற்றுவேன் என்று உடன்பட்டேன். இச் செய்தி மூன்றாண்டுகட்கு முன்னர் நிகழ்ந்தது. உறுப்பினர்கள் தம்முட் பகையின்றியும், தலைமை அவாவும் வேட்கையின்றியும், பொருளொழுங்கு உடையராய், செயல் வேட்கையினராய்க், கழகப் பொறுப்பைத் தத்தம் குடும்பப் பொறுப்புப்போல் தாங்குபவராய் நடப்பதுகண்டு நாமெல்லாம் கழிபேருவகை எய்துகின்றோம். இன்ன ஒற்றுமை சால் உறுப்பினர்களைப் பெற்றியங்கும் வாய்மைக் கழகத்தின் சார்பில் வள்ளுவப் பெரும்பொருள் குறித்துச் சொல்லாற்றும் நான் நெஞ்சார்ந்த பெருமிதம் அடைகின்றேன். நிற்க. ஐந்து நாட் சொற்பொழிவின் கருத்துக்களை ஒருவாறு தொகுத்து நினைவுபடுத்தி மேற்செல்வேன். முதற் சொற் பொழிவில், செயலே வள்ளுவர் நெஞ்சம் எனக் கண்டோம். ஒழுக்கம் என்பது ஆற்றொழுக்குப் போலும் இவ்விடையறா நற்செயலையே குறிக்கும். தனித்தோர் நெஞ்சத் தூய்மையே வள்ளுவம் என இரண்டாவது உரைக்கண் அறிந்தோம். திறக்குறட்குப் பொதுமை நிலைக்களம் அன்று; மக்கள் மனமே நிலைக்களம் என்பதூஉம், நிலைப்பன்மைக்கு ஏற்ப அறப் பன்மை வகுப்பது திருக்குறள் முறை என்பதூஉம், அவரவர் வாழ்நிலையொடு பொருத்திக் கற்பதே குறட்கல்வி நெறி என்பதூஉம் ஆண்டுச் சொல்லப்பட்டன. மூன்றாவது சொற்பொழிவு பொருள் ஈட்டுதலும் வேண்டும்; ஈட்டுநெறி தூய்தாதலும் வேண்டும். அகத் தூய்மையும் பொருள் ஒழுக்கமும் அகங்கை புறங்கை போல்வன என்று வலியுறுத்திற்று, உலகக் கடமையும் தன்னுரிமையும் ஒரு படியவாய்ப் பேணிக் கொள்வதே வள்ளுவம் என்றும், அறத்தான் வருவதே இன்பம் என்றும், பசி மாற்றும் ஈகை யாரும் செய்ய வேண்டுவது என்றும் நாலாம் பொழிவு யாப்புறுத்திற்று. முயற்சி வினையே உயிர்நிலை என்பது ஐந்தாவது உரையின் கருத்து. இவ்வைந்து சொற் பொழிவுகட்கு இடையிடையே இன்றியமையாக் குறளடிப் படைகளை எடுத்து நிறுவினேன். செயற்கு வரும் அறங்கூறுவதே வள்ளுவம் எனவும், யாரும் வாழ்வாங்கு வாழ வழி வகுப்பதுவே வள்ளுவம் எனவும், உலகு ஒட்டும் அறங்கரைவதே வள்ளுவம் எனவும், யார்க்கும் ஒல்லும் நெறி காட்டுவதே வள்ளுவம் எனவும் யான் அறிந்தவாறு தெளிவுபடுத்தினேன். வாழ நூல் செய்தவர்; எளியார்க்கு இரங்குபவர்; யாரையும் எந்நிலைக் கண்ணும் கைதூக்கி விடுபவர் வள்ளுவர் என்று பட்டாங்கு வெளிப்படுத்தினேன். யார்க்கும் உள்ள நிலையினின்று உயர்ச்சி நிலையுண்டு என்பது வள்ளுவம் என்றால் இக்கருத்து நன்கு விளங்கவில்லை. மக்களோ மிக்க ஏற்றத்தாழ்வுடைய பல நிலையினர். அவ்வாறாக எனைத்து நிலையினர்க்கும் முன்னேற்றம் உண்டெனின், அனைத்து நிலையினர்க்கும் உரிய ஒரு பொதுக்கால்கோள் என்கொல்? மக்களுள் பாம்பு போலும், தேள் போலும், அட்டை போலும், நாய் போலும், குரங்கு போலும், கொடிய பிறவுயிர் போலும் குணங்கெட்டார் பலராக இருக்கும்போது, எவ்வகை மக்கட்கும் வள்ளுவர் கொண்ட ஒரு பொது வடிப்படை என்? யாரும் முன்னேறலாம் என்பது கேட்டதற்கு இனிய நம்பிக்கை யூட்டும் வள்ளுவம் ஆவதன்றி, மெய்யறம் ஆகுமா? இவ்வெல்லாம் தெளியத்தகும் வினாக்களேயாகும். அறிவுப் பிறப்பு என்பது இன்று உரையாற்றும் ஆறாவது சொற்பொழிவின் தலைப்பு. இத்தலைப்பே மக்கட் சாதிக்கு அமைந்த பொதுத் தன்மையைக் காட்டும். பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த மக்கட்பேறு அல்ல பிற (61) என்பது எஞ்ஞான்றும் மாறா அடிப்படைக்குறள். மக்கட்கு அறிவு பிறப்பிலேயே அமைந்துகிடப்பது; கருப்பட்ட ஞான்றே அறிவுத் திருவுடையார் என்னும் பொய்யாத் தனிப்பெரு முதலுண்மையை நினைவு படுத்தற்கு அன்றோ, அனைத்துக் குறளும் யாத்தவர் வள்ளுவரே எனினும், இக்குறளகத்து, யாம் எனத் தம்மைச் சான்று வைத்து மொழிந்தனர். இதுபோல் மொழிந்த சிறப்பிடங்கள் பின்னும் இரண்டுள. ஈண்டு பெறுமவற்றுள் என்னும் குறளை ஆராய்வோம். அறிவு அறிந்த மக்கட்பேறு என்னும் தொடருக்கு அறிவு அறிந்த மக்கள், அறிவு அறியா மக்கள் என இரு நிலையார் உளர்என்றும், அவருள் அறிவு அறிந்த மக்கட்பேற்றையே யாம் அறிந்த பெரும்பேறு என ஆசான் விதந்து சுட்டுப என்றும் பலர் பொருள் கொள்ப. அதனினுங் காட்டில், அறிவறிந்த என்ற தனான், மக்கள் என்னும் பெயர் பெண் ஒழித்து நின்றது. இதனாற் புதல்வரைப் பெறுதலின் சிறப்புக் கூறப்பட்டது எனப் பரிமேலழகர் வள்ளுவத்தின் அடிவேரினை விளக்கம் என்னும் வாள்கொண்டு அறுத்தெறிந்தார். பிற உரைகளினும் கொளத்தகும் பேருரை கண்ட இத்தமிழ்ப் பெருமகனார் காலக்கோட்பட்டு முரணி எழுதிய இடங்கள் இன்னும் சிலவுள. இவ்விடங்கள் ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால் வெளி றின்மை அரிது என்னும் இயல்புக்கு இலக்கியம் ஆயின. அத்துணையே யொழிய, திருக்குறள் போலும் அளவிற் சிறுமைத்தாய இவர் நுண்ணிய தெளிவுரை என்றும் கற்று நன்கு போற்றற்கு உரியது என்றுஅறிக. மக்களுள் அறிவுப் பிறப்பும் உண்டு; அறிவிலாப் பிறப்பும் உண்டு என்று பிறப்பு வேற்றுமை கொள்வதூஉம், அறிவு ஆண் இனத்துக்கே உரித்து என்று பால் வேற்றுமை கொள்வதூஉம் எல்லாம் வள்ளுவ முரண்கள் ஆகும். இவ்வெல்லாம் ஒரு நாட்டுக் குடிமக்களுள் ஒவ்வொரு சாதிக்கே அறிவு ஊறும் என்றும், ஆண்மை பிறக்கும் என்றும், நாகரிகம் தெரியும் என்றும், பண்பு உண்டு என்றும் குறுகிய மனத்துச் சிறுகிய அறிவில் எழுந்த ஆகாக் கொள்கைகள் போல்வன. பிறந்த மக்கட்கெல்லாம் ஏற்ற ஏற்ற சூழ்நிலைத் துணை வாய்ப்பின், அனைவருக்கும் முன்னேற்றம் உண்டு என்பது பொய்யாமோ? ஆசிய நாடுகள் வாழ்வு வளன் சுருங்கிக் கிடப்பதற்கு ஆண்டுப் பிறந்த மக்கள் அறிவுக் குறையுடையார் என்பதுவா காரணம்? அமெரிக்க ஐரோப்பிய உருசிய நாடுகள் வளம் பெருகித் திகழ்தற்கு ஆண்டுப் பிறப்பு எடுத்த மக்களே அறிவுடையவர் என்று யாரும் அறுதியிட ஒருப்படுவர் கொல்? உண்மை யாது? ஞாலத்து எப்பகுதிக் கண்ணும் மக்களாய்ப் பிறக்கும் எவர்க்கும் இயல்பிலேயே அறிவு உண்டு. அங்ஙன் பிறந்தார் பலர்க்கு இன்று இல்லாதது யாதோ எனின், அறிவென்னும் நல்வித்து வளர்தற்கு உரிய வாய்ப்பு என்னும் உரம் இல்லை. அரசு என்னும் உழவன் வாய்ப்பு என்னும் எருவிட்டு அறிவுப் பைங்கூழ் வளர்ப்பானேல் எந்நாட்டு வயலகத்தும் குடிவளன் பெருகும். காணீர்! இவ் வுண்மையை நன்கு தெளிந்தன்றோ நம் இந்திய அரசியல் அமைவு தன்குடிமக்கட்கு எல்லாம் ஒத்த வாய்ப்பிடன் அளித்தல் வேண்டும் என்று முறை செய்கின்றது. ஆதலின், வெளிப்படாமை கருதி, மக்களுள் அறிவின்றிப் பிறந்தாரும் உண்டு என்று மயங்கற்க. பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும் கொல்குறும்பும் இல்லது நாடு (735) என்ற குறள் நடையைப் பார்மின். பாழ்செய்யும் உட்பகை ஒன்றுண்டு; பாழ்செய்யா உட்பகையும் ஒன்றுண்டு என இருபிரிவுப் பொருள் படுமா? வேந்து அலைக்கும் கொல் குறும்பு ஒன்று உண்டு; வேந்து அலையாக் கொல் குறும்பு என மற்றொன்றும் உண்டு என்று இருவகைப் பொருள் படுமா? உட்பகை பாழ் செய்யும் கொடுமைத்து; கொல்குறும்பு வேந்து அலைக்கும் தீமைத்து என அவற்றின் தன்மை சுட்ட வந்த அடைகளாகவே கொள்ளப்படும். உட்பகையும் கொல்குறும்பும் இல்லது நாடு என்று அரசியல் கூறும் ஆசிரியர், தம் கூற்றுக்கு ஏதுக் காட்டுவாராய், பாழ் செய்யும் என்றும் வேந்து அலைக்கும் என்றும் உடம்பொடு புணர்த்தினார் என்றே பொருள்படும். அறிவு அறிந்த மக்கட்பேறு என்னும் தொடரும் இந்நடை யுடையது என அறிக. மக்கட்பேறே ஒருவர்க்கு யாம் அறிந்த பெரும் பேறு என்ற தம் அடிப்படைக் கோளுக்குக் காரணம் கூறுவாராய், அறிவு அறிந்த என்னும் காரணக் கருத்தை அடையாய் இயைத்து மொழிந்தார். இது சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்னும் நடை வனப்புக் கொண்டது. குறுகத் தறித்த குறள் எனப் புகழ்ந்த இந்நூலகத்து இவ்வழகு யாண்டும் காணப்படும். நன்கலம் நன்மக்கட் பேறு (60) என்னும் பகுதிக்கும் மக்கட்பேறு நற்பேறு என்ற அளவே பொருள் கொள்க. தீமக்கட் பேறும் ஒன்று உண்டு; அது நன்கலம் ஆகாது என்று எதிர்ப்புரை கோடல் ஈண்டு மெய்யுரையன்று; வள்ளுவர் நெஞ்சமும் அன்று. காதலர்கள் தமக்கு ஒத்த நல்ல துணையை முன்னரே தேர்ந்து கொள்ள இயலும். துணை யொப்பாயின் மணக்கவும், ஒவ்வாதாயின் முதற்கண்ணே மறுக்கவும் இயலும். மக்கட்பேறு துணைப்பேறு போல்வது அன்று. ஈருயிர்ப் புணர்ச்சியால் தானே தோன்றும் ஓருயிர் ஆதலானும், பெறுங்குழவி நல்லது எனா அல்லது எனா முன்னரே ஒரு தலையாத் துணிதற்கு வாராது ஆதலானும், செயற்கு ஒவ்வா எதிர்ப்புரை வள்ளுவர் நெஞ்சம் அன்று என்று கழறினேன். செந்தமிழ் நாடு எனும் போதினிலே இன்பத் தேன் வந்து பாயுது என்பதுபோல், அறிவு அறிந்த மக்கட்பேறு என்னும் தொடர் காரணம் உள்ளடக்கிய தன்மை நடை என்று துணிக. இல்லறத்தார் எத்துணையோ பிற புறச் செல்வங்களைப் பெறலாம். அச்செல்வங்கட்கெல்லாம் அறிவு என்னும் உள்ளீடு இல்லை. தம்மிலிருந்து தோன்றும் குழவிப் பொருட்கே தன்னையும் பெற்றோரையும் உலகத்தையும் காணவல்ல அறிவுத் தன்மை உண்டு. பிற எப்பொருட்கும் இல்லா அறிவுப் பேறு உடைமையின், குழந்தைப் பேறு சிறந்த செல்வம் ஆயிற்று என்பார், அறிவறிந்த மக்கட்பேறு அல்லாத பிறவற்றை யாம் ஒரு பேறாகவே கருதுவது இல்லை என்று எதிர்மறுத்து உண்மை வலியுறுத்தினார். விதைத்த நெல்லால் நெல் தோன்றுதல்போல் மக்களால் மக்கள் பிறத்தலின், தம் பொருள் என்பதம் மக்கள் (63) என ஒத்த அறிவுப் பிறப்புச் சுட்டினார். மக்கள் மெய் தீண்டலை உடற்கு இன்பம் (65) என்றும், அவர் சொற் கேட்டலைச் செவிக்கு இன்பம் என்றும் பெற்றோர் அளவில் வைத்துக் காட்டி தம்மக்கள் அறிவுடைமை மாநிலத்து மன்னுயிர்க்கு எல்லாம் இனிது(68) என அறிவுப் பயனையே பரந்தெடுத்து மொழிந்தார். எந்நிலைய மக்களும் பிறப்பில் அறிவு அமைந்த திருவினர் ஆதலின் யாரும் தந்நிலையினின்று முன்னேறலாம் என்பது அடிப்படை வள்ளுவம் என்று பற்றுக. அறிவுப் பிறப்பு வாய்த்த நாம் பெற்ற உடம்பால் குறையுடையோமாயினும், அவ்வுடற்குறை நம் வாழ்விற்கு ஒரு பெரும் இடையூறு அன்று. கண்ணறை, செவியறை, வாயறை, மூக்கறை, காலறை, கையறை, அளவறை என்று இன்ன உடலறையாளர் வாழ்க்கை இழந்தவர் தாம் எனக் கருதுவது மானிடப் பிறப்பையே அவமதிப்பது ஆகும். முகத்துக் கண்ணாடி அணிந்தவரே கண்ணுடையார் என்பதை நிகர்ப்பது ஆகும். உடற்குறையாளர் பலர் பெரியவர்களாய்ச் செய்த அருஞ் செயல்களை வரலாறு நமக்கு எண்பிக்கின்றது. பாடநூல் முழுதும் வைத்துள்ள மாணாக்கன் வேண்டுங்கால் எடுத்துக் கற்றுக் கொள்ளலாம் என்று ஒரு போதும் முயலாது காலங் கழிப்பான். கையகத்து நூல்கள் உள என்னும் இறுமாப்பால், ஆசான் சொல்வனவற்றை ஊன்றிக் கேளான். நூல் இல்லா மாணாக்கன் குறை நிரப்பும் வேகத்தனாய், நூலுடையான்பால் அதனை இரவல் வாங்கிக் கற்றும், ஆசான் கூற்றுக்களை விரைந்து குறித்தும் முயற்சி வயப்படக் காண்கின்றோம். முழு மக்கள் பலரிடத்து மடிமையும் அறிவு மழுக்கமும் இருப்ப, மெய் குறை மக்கள் அனைவோர்பாலும் சுறுசுறுப்பும் அறிவோட்டமும் பிறங்கக் காண்கின்றோம். தனக்கு ஒரு குறையுண்டு என்று அழுந்தி உணர்ந்த மகன் அக்குறைவை அறிவால் ஈடுசெய்ய முனைவது அவன் பிறப்பியல்பு. உள்ளது கொண்டு இல்லது நிரப்பிக் கொள்ளும் நினைப்பரிய வன்மை நம் அறிவின் இயல்பு என்பது வள்ளுவம். வெள்ளத்து அனைய இடும்பை அறிவுடையான் உள்ளத்தின் உள்ளக் கெடும் (622) என்றும், அறிவு அற்றம் காக்கும் கருவி (421) என்றும் வரும் குறள்களே கரியாவன. ஒருவன் பிறக்கும்போது உடன் தோன்றும் புறத் தொடர்புகள் பழித்தற்கு உரியன அல்ல; பகைத்தற்கும் உரியவை அல்ல. தமிழ் நம் தாய்மொழி; தமிழகம் நம் தாயகம். தமிழ் மொழியன், தமிழ் நாடன் என்பதற்காகப் பிறமொழியர் பிறநாடர் நம்மீது பகைகொள்வரேல், அப்பகை பொருளற்றது. ஏன்? பகைக்குரிய காரணத்தை நினைப்பினும் நாம் நீக்கிக் கொள்ள முடியாது. நாடும் மொழியும் நிறமும் உருவமைப்பும் எல்லாம் கேளாதே நம்மைப் பற்றி விடுவன. இவ்வுலகக் கட்டுக்கள் நமக்குப் பிறப்பொடு அமைவன. ஒருநாட்டான் ஒருமொழியான் ஒரு நிறத்தான் ஒருமதத்தான் ஒருகுலத்தான் என்பதுவே கொண்டு நாம் இடும் பூசலெல்லாம் பேதைப் பூசல்கள். இப்பெரு வுண்மையைத் தனி மக்களும் அரசும் இன்னும் உணர்ந்தபாடில்லை. விடுக்க கில்லாப் பிறப்பியல்பைக் காரணமாக மயங்கி மக்கள் கொள்ளும் பகை இகல் எனப் பெயர் பெறும். இகழ்ந்தான், சினந்தான், வெஃகினான், அடித்தான், முறை பிறழ்ந்தான் என்ற அடிப்படைமேல் வரும் பகை பகல் எனப் பெயர் பெறும். இங்ஙன் கொள்ளும் பகையை நாம் அகற்றிக் கொள்ளவும் முடியும். இகழாதும் சினவாதும் வெஃகாதும் அடியாதும் பிறழாதும் ஒழுகுவமேல், முன்பிழைத்தவற்றைப் பொறுக்கும்படி வேண்டுவமேல். காரணத்தின் மேலெழுந்த பகைப்பகல் காரணம் ஒழியத் தானும் ஒழியும். இவ்விளக்கத்தின் கருத்து என்னை? பிறப்பொடு அமையும் அமைவுகள் இகழுதற்கோ, இகலுதற்கோ காரணம் ஆகா என்பது. குருடும் செவிடும் ஊமும் முடமும் ஆகப் பிறக்கும் மக்கள் உளர். இக்குறைப் பிறப்பு ஒருவர் விரும்பிப் பெற்றுக் கொள்வதில்லை. மக்கள் ஆற்றலுக்கு உட்படாச் செயல் பலவற்றுள் இஃதொன்று, பெற்றோரைப் பொறுத்தும் அவர்தம் முன்னோரைப் பொறுத்தும் பிற சூழ்நிலையைப் பொறுத்தும் பிறக்கும் குழந்தையின் உடலுருவம் அமைகின்றது. ஆதலின், உடன்தோன்றும் உடற் குறையை மக்களாய்ப் பிறந்தார் யாரும் ஒரு சொல் சொல்லார். உருவு கண்டு எள்ளாமை வேண்டும் (667) என்பர் வள்ளுவர். பொறியின்மை யார்க்கும் பழியன்று; அறிவறிந்து ஆள்வினை யின்மை பழி (618) என்பது அறிவு சுட்டி வினையூட்டும் குறள். பொறி வாயில் ஐந்து அவித்தான் (6) கோளில் பொறியில் குணம் இலவே (9) என்ற பிறவிடத்துப் போல இவ்விடத்தும் பொறி என் கிளவி மெய் வாய் கண் மூக்கு செவி என்ற உறுப்புப் பொருளே படும். பெற்ற உடற் குறையைப் பிறர் பழி யஞ்சி நிறைவு செய்ய இயலாது ஆதலின் பழியன்று என்று அறுதியிட்டார். உடற்குறை வாழ்வுக் குறையன்று என்று உள்ளுறுத்தினார். பெற்றது கொண்டு அற்றது நிரப்பும் அறிவாற்றல் மக்கள் யார்க்கும் உண்மையின், அறிவு அறிந்து ஆள்வினை இன்மை பழி என்று பழிப்பிடன் சுட்டினார். உடற்குறை போல மக்கள் யாரும் பிறப்பில் அறிவுக் குறையினரோ எனின், அற்றன்று; அறிவு உண்டு என்பதை அறிந்து அதனை ஆளாக் குறையே குறை என்று வற்புறுப்பான், அறிவு அறிந்து ஆள்வினை இன்மை என ஆட்சியின்மையை விதந்து கூறினார். இதனானும் செயலே வள்ளுவம் எனச் செய்க. ஒத்தவாய்ப்பும் தொழிலும் அளித்தால் முழுமெய் மக்கள் முன்னேறுவதுபோலத் தரம் சிறிதும் தாழ்வின்றிக் குறையுடல் மக்களும் முன்னேற்றம் காட்டுவர். ஏன்? நாம் காணும் நிறையும் அறையும் கேவலம் உடம்பு பற்றியதே யன்றி, அறிவு என்னும் உள்ளீடு பற்றியது அன்று காண். செல்வத்தாழ்வும் உயர்வும் வாழ்வுத் தாழ்வு வாழ்வுயர்வு என்று பொருளாகாதது போல, உடல் நிறைவும் குறைவும் அறிவு நிறைவு அறிவுக் குறைவு என்று பொருளாகாது. முழு மெய்யாளர்க்கே வாய்ப்பும் தொழிலும் வழங்க இயலா நிலையில் நாடும் அரசும் இருத்தலால், அறை குறையாளர் புறக்கணிக்கப்படு கின்றனர் என்பது அன்றி. அப் புறக்கணிப்பு நாட்டுக் குறை என்று கொள்ளப்படும் அன்றி, மக்களாய் உறுப்பற்றுப் பிறந்தார் யாரும் அறிவற்றவர் என்று வேரறப் பேசற்க. உறுப்பிலிகட்குச் செய்வினை இல்லை எனவும், அன்னோர் இரத்தல் வேண்டும் எனவும், அன்னோர்க்கு முதற்கண் ஈகை செய்க எனவும் திருக்குறள் விதித்தது உண்டா? நினைமின்! இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின் (1062) என்றும், வறியார்க்கு ஒன்று ஈவதே ஈகை (221) என்றும், பொதுப்படவே கூறக் காண்கின்றோம். மக்கள் வாழ்வுக்கு நிறையுடலை அரிய பெருந்துணை என்றோ குறையுடலைத் தடுப்பரிய இடையூறு என்றோ கோடல் வள்ளுவம் அன்று. பெற்ற உடம்பு முழுதாகுக. பழுதாகுக. அஃது ஓர் பொருளன்று, நல்வாழ்வுக்கு அறிவாட்சியே அடிப்படை என்பது வள்ளுவம். அறிவுடையார் எல்லாம் உடையார்; அறிவிலார் என்னுடைய ரேனும் இலர். (430) என்னும் ஒரு குறளே தனிச்சான்று. தம்மறிவை ஆட்சிப்படுத்தினாரை, அறிவுடையார் என்றும், அதனை ஆளாதாரை அறிவிலார் என்றும் இயம்புப, எதனையும் ஆளுபவனே உடையான்; ஆளாதவன் இல்லான் என உடைமை இன்மைகட்கு, பொருட்பயன் நிலை என்னும் தலைப்பில் இலக்கணம் கண்டோம். ஆதலின் பிறப்பில் அறிவுடையார், பிறப்பில் அறிவிலார் என்று பொருள் கொள்ளன்மின். ஆளும் அறிவு, ஆளா அறிவு என்றே கொள்க. அறிவின்மை இன்மையுள் இன்மை(841) என்ற குறட்பகுதிக்கும் இதுவே கருத்தாகும். ஈண்டெலாம் யான் வலிந்து பொருள் செய்வதாக நினைப்பது பிழை. பிழை என்பதைப் பின்னொருகால் உணர்வீர்கள். இந்தியா செல்வம் இல்லா நாடு என்றால் கருத்து என்னை? நிலத்துட் கிடக்கும் இயற்கைச் செல்வத்தை எடுத்தாளும் வலியில்லா நாடு என்பதன்றோ குறிப்பு. மக்கட்கு ஒழுக்கம், அறிவு, கல்வி, ஊக்கம், முயற்சி என்னும் பிரிவில்லா இயற்கை நலங்களே பிறழா வாழ்வு நலங்கள் என்பது வள்ளுவம். ஒருவற்குப் பொருள் பிரிந்து நிற்கும் உடைமை என்ற கருத்தால், உள்ளம் உடைமை உடைமை (592) எனத் தன்னுடைமை தெளிப்பர். உணவினைச் சிறு கரண்டியால் உண்ணினும் அக்கரண்டி பிடித்தற்குத் தன்கை வேண்டுமாப் போல, வாழ்வுக்குப் பொருள் வேண்டினும் அஃது ஈட்டற்கு முதற்கண் வேண்டுவது தன் முயற்சியே என்ற கருத்தால், முயற்சி திருவினை ஆக்கும் (616) என நுண்ணிய கருவி காட்டுவர். உடலணிகள் புறத்தணிகள் என்ற கருத்தால், கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் (575), பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு அணி (95), நெஞ்சத்துக் கோடாமை சான்றோர்க்கு அணி (115) என அகத்தணி பூட்டுவர். பார்வைக்கண் கண்ணாகா என மறுத்து, கண்ணுடையர் என்பவர் கற்றோர் (393) என அகக் கண் வேண்டுவர். நாநலம் என்னும் நலன் உடைமை (641), குண நலம் சான்றோர் நலனே (982), கேடில் விழுச் செல்வம் கல்வி (400), செல்வத்துள் செல்வம் செவிச் செல்வம் (411), அருட் செல்வம் செல்வத்துள் செல்வம் (241), ஒழுக்கம் விழுப்பம் (131) என்று வருவன எல்லாம் பிரிப்பில் அகவுடைமைகளே பொய்யா வாழ்வுடைமைகள் எனத் துணிவு செய்யும் வள்ளுவக் குறள்கள் ஆகும். இவ்வாறு உடன்பாட்டுமுகத்தான் அகவுடைமைச் சிறப்பு வலியுறுத்திய ஆசிரியர் அதனை எதிர்மறை முகத்தானும் நிறுவுவர். கற்றார் முன் சொல்லாது இருக்கப் பெறின், கல்லாதவரும் நனிநல்லர் (403) என ஊமையாக்கியும், கண்ணோட்டம் இல்லவர் கண்ணிலர் (577) எனக் குருடாக்கியும், கேட்பினும் கேளாத் தகையவே (418) எனச் செவிடாக்கியும் உறுப்பறை செய்வர். ஊமையராய்க் குருடர் களாய்ச் செவிடர்களாய் வாழ்கின்றோம் என மக்கட்புலவன் பாரதி இகழ்ந்த குறிப்பும் இங்கு நினையத்தகும். முகத்து இரண்டு புண்ணுடையவர் கல்லாதவர் (393) என ஆறாப்புண் ஆகவும், கல்லாதான் எழில் நலம் மண்மாண் புனைபாவை (407) எனப் பொம்மை யழகு ஆகவும், அற்றம் மறைத்தலோ புல்லறிவு (846) என விலங்கு ஆகவும், போஓம் அளவும் ஓர் நோய் (848) என நடைப்பிணம் ஆகவும், நலம் அற்ற பிறவுடை மைகளை வள்ளுவர் இழித்துரைப்பர். இதனால் தெரியக் கிடப்பது என்? புறநிறைவு நிறைவாகா; புறக் குறைவு குறைவாகா. உடம்பிற் சார்ந்த உணவு நலம் போல. எவ்வாற்றாலும் நீங்ககில்லாத் தன்னுடைமை வளர்ச்சியே வாழ்வுயர்ச்சி என்பது வள்ளுவம். இப்பெருவுண்மையை, அறிவுடையார் எல்லாம் உடையார்; அறிவிலார் என்னுடைய ரேனும் இலர் (430) என்ற ஒருகுறள் விதி, மறை என்னும் இருநடையானும் துணிவு செய்யும்; எனவே நாம் அறிவுப்பிறப்பினம் என்று அறிக. நாம் எல்லாரும் மனிதவுடல் பெற்றுளோம் என்றாலும், அவ்வுடல் வன்மை ஆளுக்கு ஒருதரமாக அமைந்து கிடக்கின்றது. உடம்பை ஆட்சிப்படுத்திய பயிற்சிக்கு ஏற்ப மெய்யாற்றல் விளையும். அதுபோல் நாம் இயல்பில் அறிவுடையோம் என்றாலும் அறிவாட்சியைப் பொறுத்து அறிவுக்கூர்மை பிறக்கும். குழந்தை நிலையில் பிறங்கும் அறிவு முனைப்புப் பருவம் ஏற ஏறத் தேயக் காண்கின்றோம். என் குழந்தை பெரியவனாய் ஊரையே விலைக்கு விற்றுவிடுவான் என்று வாய்கொள்ளாது பாராட்டிய பெற்றோர். பின்னொருகால் மடவன், அறிவிலான், உலக்கைக் கொழுந்தன்ன உன்னையும் பெற்றெடுத்தேனே என்று வையவும் கேட்கின்றோம். இளமை யறிவொளி பின்னர் யாங்ஙன் இருண்டது? இளங்கொடி பற்றுக்கோடு பெறின் அதன் முனை என்றும் முனையாகவே நீண்டு செல்லும். அது போல் அறிவு இடைவிடாது தீட்டப் பெறுதற்கு நுண்ணிய கருத்துப்பொருள்கள் பற்றுக்கோடு ஆக வேண்டும். ஆளும் ஆட்சி வேறுபாட்டால் நாம் அறிவில் பல்வேறுபட்டு வாழ்கின்றோம். கல்வி கற்றோ பிற சூழ்நிலை பெற்றோ ஆளாமையால் அறிவிலார் போலப் பலர் தோற்றந் தரலாம். செல்வமின்மையை முயன்று ஈட்டித் துடைப்பது போல, அறிவின்மையைக் கல்விப் பொருளோடு தீட்டித் துடைத்து விடலாம் என்று நம்புங்கள். மக்கள் பிறவற்றிற்போல அறிவாட்சியிலும் பல் நிலையினர் என்று கண்டார் வள்ளுவர். அறிவுப்பன்மை வாய்ந்த நம்மனோர்க்கு ஒரே நடையில் அறஞ் சாற்றல் பலியாது என்ற கருத்தால், ஒருகருத்தையே நடைப்பன்மையில் விளம்புவார் ஆயினார். ஒவ்வோர் அதிகாரமும் ஒவ்வோர் அறமே சொல்லுவது; எனினும் ஓர் அதிகாரத்துக்கு ஒரு பொருளுக்குப் பத்துக் குறள் அமைப்பானேன்? கருதுமின். அறிவு பலவாய் உள்ள மக்கட்கு ஒரு கருத்தினை நடைபலவாய்ச் சொல்லின், எந்நடையாவது அவரறிவைக் கவ்வமாட்டாதா? அவரறிவு எந்நடையிலாவது பதியமாட்டாதா? என்று இயல்பறிந்தார் வள்ளுவர். அறங்கூறுகை தம் கடன் என்றளவில் நினைந்திருப்பரேல், ஆத்திசூடி முதலாம் நூல்கள் போலவும், கல்லோவியங்கள் இல்லாச் சிமிண்டு பூசிய கோபுரம் போலவும், பொறுமை, வெஃகாமை, வாய்மைவேண்டும் என்று அறத்தொகை செய்திருப்பர். யாரும் செயல்வேண்டும் என்பது வள்ளுவம் ஆதலின், அறங்கூறும் கடனளவில் நில்லாது, யார்க்கு எங்ஙன் உரைத்தால் அவ்வுரை அவரறிவிற் பதியும் என அறிவுப் பதிப்புச் செய்யும் நடைக் கடனையும் மேற்கொண்டார். இந்நடை வேற்றுமையன்றோ மறைமுகமாய் நின்று, அறிவில் எனை வேற்றுமை யுடையாரையும் திருக்குறள்பால் ஈர்க்கின்றது. மேலைவிளக்கம் நமக்கு அறிவிப்பது என்ன? திருக்குறளகத்து இனிய நடைகளும் உள; அறிவுக் கீழ்நிலையாளரையும் திருத்தவேண்டி யாத்த இன்னா நடைகளும் உள; போற்று நடைகளும் உள; நெஞ்சம் சுடும்படி தொடுத்த வசவு நடைகளும் உள. அணைக்கும் நடைகளும் உள; விட்டுப்பிடித்தல் என்ற உலக வழக்கிற்கு ஒப்ப, அணையா நடைகளும் உள. செவிக்கு உணவு இல்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும் (412) என்பது இன்னடை. செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள் அவியினும் வாழினும் என் (420) என்பது இன்னாநடை. உலகத்தோடு அவ்வது உறைவது அறிவு (426) என்பது இயல்பு நடை. பல கற்றும் உலகத்தோடு ஒட்ட ஒழுகல் கல்லார் அறிவிலாதார் (140) என்பது சுடுநடை. அணியன்றோ நாண் உடைமை சான்றோர்க்கு. அஃது இன்றேல் பிணியன்றோ பீடுநடை(1014) என்பது அழகும் நோயும் வந்த நடை. களித்து அறியேன் என்பது கைவிடுக (928) என்பது அணைவு நடை. கள்ளை உணில் உண்க சான்றோரான் எண்ணப்பட வேண்டாதார் (922) என்பது அணையா நடை. உலகு அவாம் பேரறிவாளன் திரு (215) என்பது இசையும், அச்சப்படாதவன் செல்வம் (1008) என்பது வசையும் அமைந்த நடை. திருக்குறள் நடையமைவு செயல்மேலது; விரிவுடையது; ஆசான் நெஞ்சம் காட்டுவது; குறள்நூல் கற்பார்க்குக் கைவிளக்கு அனையது என்ற துணிபால், திருக்குறள் நடை என்னும் தலைப்பில் இன்னொரு நாள் உரையாற்றும் திட்டம் உடையேன். ஆதலால் ஈண்டு இற்றைப் பொருளுக்கு ஏற்பச் சுருங்கச் சொல்லி நிறுத்துவன். ஏவவும் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர் போஓம் அளவுமோர் நோய் (848) பிறர் சொன்னாலும் அறியான்; தன்னாலும் அறியான் என்ற நிலைநோக்கி எழுந்தது இக்குறள். மக்களுள் முன்னேற மாட்டா அறிவிலிகளும் உளர்; அன்னோர் சாவது உலகிற்கு நலம் என்று சிலரை ஒதுக்கிவிட்டது போல் இக்குறட்பா நிற்கிறது. யாது கூறினும் ஏலாப்பேதையரும் இருப்பர்; அந் நிலையினரைப் பற்றிப் பொருட்படுத்தற்க என்று நமக்குச் சொல்லிக் கொடுக்குமாப்போல் இப்பாடல் கிடக்கின்றது. இது வள்ளுவர் நெஞ்சம் ஆகுமா? கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றால் சான்றோர் குழாஅத்துப் பேதை புகல் (840) அறிவுடையார் அவைக்கு அறிவிலான் செல்லுவது, பகரவீ ஒட்டிய காலைப் பூப்படுக்கையில் வைத்தற்று என்று பிறரைப் பழிப்பான் நமக்குக் கற்றுக்கொடுக்க எழுந்ததா இக்குறள்? இசை வேண்டா ஆடவர் தோற்றம் நிலக்குப் பொறை (1003) புறன்நோக்கிப் புன்சொல் உரைப்பவன் உடற்பாரத்தை வையம் அறன் நோக்கி ஆற்றுங் கொல் (189) ஈதல் இயையாக் கடை சாதல் இனிது (230) என்றவையெல்லாம் நம்மைச் சாகடிக்க எழுந்த குறள்களா? ஓர்மின்! மக்கள் பெயரெல்லாம் தொகுத்த ஒரு பெயர்ப்பட்டியல் உண்டு என வைத்துக் கொள்வோம். என் பெயரும் ஆண்டு உளதா என்று முதற்கண் தன்பெயரைப் பார்க்கும் வேட்கை எழும். யாரோ இருவர் தம் முள் உரையாடும்போது இடையே மாணிக்கம் என்று சொல்லின், என் பெயரன்றோ, என்னைப்பற்றி ஏது பேசுகின்றனர் என்று கேட்கும் அவா தோன்றும். இந்நினைவு பிழையற்ற இயல்புடையது. இவ் வேணவா தற்கலப்பு எனப்படும். வாழ்கின்றாய் வாழாத நெஞ்சமே! வல்வினைப்பட்டு ஆழ்கின்றாய் ஆழாமற் காப்பானை ஏத்தாதே; சூழ்கின்றாய் கேடுனக்குச் சொல்கின்றேன் பல்காலும் வீழ்கின்றாய் நீ அவலக் கடலாய வெள்ளத்தே என்னும் திருவாசகப் பாடலை மணிவாசகர் பாடினார் என்பதூஉம், தம் நெஞ்சுக்கு அவர் இடித்துரைத்தனர் என்பதூஉம் மறந்துபட, நம் வாசகமாக, நம் நெஞ்சுக்கு அறைந்த வன்புறையாக, நாம் தற்கலப்பு உணர்ச்சிப் படுகின்றோம். இவ்வுள்ளக் கலப்பினை நான் கலந்து பாடுங்கால் என்றார் இராமலிங்க அடிகள். வாழ விரும்புவார் திருக்குறளைத் தாம் கலந்து கற்க வேண்டும். இங்ஙன் கற்பரேல், சிலர்க்கு வாழ்வில்லை என ஒதுக்கினார் என்றும், சாகப் பழித்தார் என்றும் வள்ளுவரைப் பிறழ உணரார்கள். ஒதுக்குவதாலும், பழிப்ப தாலும் உலகப் பெருமகனார்க்கு வரும் ஊதியம் என்னோ? அங்ஙன் முற்ற ஒதுக்குவதும் ஒதுக்கிப் பழிப்பதும் செய்தார் எனக் கருத்துக் கொள்ளின், அவர் ஆற்றலுக்கு இழுக்கல்லது பெருமையுண்டோ? நன்றாற்ற லுள்ளும் தவறுண்டு அவரவர் பண்பறிந்து ஆற்றாக் கடை (469) என்பது ஆசான் கண்ட உலகியல். யாரையும் திருத்தும் நோக்கமே வள்ளுவம் ஆதலின், அவரவர் அறிவிற்கு ஏற்ப நெஞ்சு சுடுமாறு நடையாத்தனர் என்றே துணியத்தகும். குறள் கற்பவர் தத்தம் நிலையொடு பொருந்திக் கற்பார் என்ற எண்ணத்தால், மிகத் தாழ்ந்த மக்கட்கும் சூடுண்டாக்கினார். எனவே அறிவுப் பிறப்பினராகிய நாம் வாழ்வுத் திருத்தம் வேண்டின், அவரவர் நிலையறிவோடு திருக்குறளைக் கலந்து கற்கவேண்டும் என்பதை நினைவூட்டவே - பிறப்பறிவு மட்டும் சாலாது; அவரவர் நிலையுயர்த்தும் சிறப்பறிவும் வேண்டும் என்பதை வலியுறுத்தவே - தடைப்பொருள் குறித்து ஈண்டு மொழிந்தேன். திருத்தமே வள்ளுவர் நெஞ்சு ஆதலின், நாம் ஒருவரை ஒருவர் அற ஒதுக்கவும், வறிதே பழிக்கவும் குறள் எடுத்தாளுவது அழகன்று என்று விடுக்க. எல்லாரும் அறிவுத்தன்மை உடையர்; அதனை ஆட்சிப் படுத்தினால் எல்லாரும் வாழ்வு நலம் பெறுவர் என்று அதிரா மெய்ந் நம்பிக்கை தெரிவிக்கும் திருக்குறளிடைப் பிறிதொரு நல்லடிப்படையையும் காண்கின்றோம். இன்று எழுத்தாளர் பலர் விற்பனையிற் கண்வைத்து, அச்சுப் பொறியை முன்வைத்து, அவ் யானைக்கு இடையறாது கவளம் ஊட்டும் அவாவொடு, வந்தவையெல்லாம் கருத்தாக எழுதித் தள்ளிப் பக்கம் பெருக்குப. எண்ணத்திற்கும் எழுத்திற்கும் செலவழிக்கும் பொழுதையினும் பல்காலம் கவர்ச்சிக்கும் பரப்புக்கும் செலவிடுப. தம் எழுத்தால் மக்களும் மொழியும் உறும் நலத்தை நோக்காது, அவ்வெழுத்து தமக்குக் கொண்டுவரும் செல்வத்தையும் விளக்க மதிப்பையுமே நினைப்ப. தம் கையெழுத்து நூலை ஒரு முறை கூடப் பார்க்கும் அமைதியும் பொறுப்பும் இலராய், என் செய்வர், தம்நூல் பற்றிப் பிறர் வரைந்த மதிப்புத் தாள்களைத் தொகுத்து வைத்துக்கொண்டு பல்காலும் பார்த்து மகிழ்ப, எண்ணம் சுருங்கிய எழுத்து நூல்கள், இற்றைப் பள்ளிப்பாட நூல்கள் போலப் பழைய கடைக்குத் தாள் நிறுவை அளவில் விலைபோகக் காண்கின்றோம். அவற்றின் மதிப்பு தாள் மதிப்பாகும். திருக்குறள் ஒரு நன்மகனார் தம் வாழ்நாள் முழுதும் ஆய்ந்து கண்ட எண்ணத்தொகுதி; பலர் வாழ்க்கையொடு உராய்ந்து சீர்தூக்கித் துணிந்து நிறுத்திய உண்மைத் தொகுதி; மக்கள் என ஓரினம் உளநாள்வரையும் கற்று ஒழுகத்தகும் அறிவுத் தொகுதி. எண்ணம் ஊற்றெடுக்கும் சில நூல்களை யேனும் கற்பதால் நம் வாழ்வுக்கு நிலையும், நினைவிற்குத் திட்பமும் பிறக்கும். அன்ன நூல்களுள் தலையாயது திருக்குறள் என அறிக. அறிவுப் பொதுவுண்மை சுட்டிய ஆசான் காட்டும் மற்றொரு உண்மை யாது? ஆராய்வோம். முழுதும் கெட்டவன் என ஒருவன் உளனா? குறைவற்ற நல்லவன் என ஒருவன் உளனா? எனக்குத் தீயோன் மற்றொருவனுக்கு நல்லவன் ஆகக் காண்கின்றோம். அத்தீமகன் நாளை எனக்கே பெருநண்பன் ஆதலுங்கூடும். இல்லையென யார் துணிவர்கொல்? ஓரினத்தா ரால் புகழப்படுபவன் அயலினத்தாரால் பழிக்கப் படுகிறான். களவாளி தன் குடும்பத்தார்க்கும், படையாளி தன் நாட்டார்க்கும், காந்திக் கொலையாளி தன் கட்சியார்க்கும் மறஞ்சான்ற அன்புத் திருவுருவங்களாகக் காட்சி நல்குப. மறத்திற்கும் அஃதே (அன்பே) துணை (76) என்பது குறள். பிறவிக்குணம் எனக் கொடை மடம்பட்ட பண்டைத் தமிழ் வள்ளல்கள்கூட. காணாது ஈத்தார் எனா, பரிசில் நீட்டித்தார் எனா, சிறிது கொடுத்தார் எனா, கொடுக்க மறுத்தார் எனாப் பழிப்பு உண்பதைப் படிக்கின்றோம். கணவன் கூற்றுவனாக, மனைவி காளியாக, மக்கள் சனியன்களாக, பெற்றோர் முட்டுக் கட்டைகளாக, பெரியோர் வஞ்சகர்களாக ஒருகால் வெறுத்துத் தூற்றப்படல் உலகப் புதுமையன்று. மிகக் கொடியன் ஆயினான் மிக நல்லனாய் மாறலும், சாலப் பெரியவன் அறக்கொடியனாய்த் திரிதலும் இவ்வுலகத்து நடவாச் செயல்கள் அல்ல. குன்றின் அனையாரும் குன்றுவர் (965) என்றும், சான்றவர் சான்றாண்மை குன்றின் (990) என்றும் குறள் உயர்ந்தோர் நிலைத்திரிபைச் சுட்டும். ஒரு நிலையான் என்றும் அந்நிலையவனே என்று முழு மூச்சாகத் துணிந்து கொள்வது மூடநம்பிக்கை எனப்படும். முழுதற ஆய்ந்து பார்க்கும் திறப்பாடும் முயற்சியும் மக்கள் பலர்க்கு இல்லை. மேலும் இத்தொல் பேருலகத்து நம் வாழ்க்கையைப் பிணிக்கும் ஒவ்வொன்றையும் ஆயப் புறப்படுவது சாகப் புறப்படுவதாகவே முடியும்; வாழ்வாவது முழுதும் மாயமாய் மண்ணாவது உடனே திண்ணமாய் முடியும். ஆதலின், நம் வாழ்வுத் தொடர்புகள் பெரும்பாலும் நல்லன என்று நம்பிக்கை கடைப்பிடித்தலல்லது ஐயவுணர்ச்சி அறிவாகாது. நம்பிக்கை வேண்டும் எனினும் நம்பிக்கை நம்பிக்கை தான் என்னும் அறிவு வேண்டும். மூடநம்பிக்கையை அறிவு என மயங்கலும், அந்நம்பிக்கையை ஆராய வேண்டி வரின் அது செய்ய நடுங்கலும் அறிவுடைமை ஆகா. ஊசிக் கூர்மையும் குழவித் தூய்மையும் அவற்றொடு காற்றன்ன மடியில் இயக்கமும் அறிவுக்கு இன்றியமையாதன. உழவர், மறவர், கொல்லர், தச்சர், கொத்தர், மருத்துவர் என்ற பெயர்கள் தொழிற்காரணத்தால் பிறந்தன. ஒருகால் உழுதவன் தன்தொழிலை விட்டால் உழவன் என்ற பெயர் அவனுக்குப் பொருந்தாது. காரணம் அழிந்தபோது காரணப் பெயரும் நீங்க வேண்டும். உழவன் மகன் மருத்துவத் தொழில் செய்தால் அவன் மருத்துவன் எனப்படுவான்; உழவன் என்னப்படான். இதுவே இயல்பாய அறிவுடைமை. உலகம் அறிவியக்கம் பெற்றிருப்பின், காரண நிலைக்கு ஏற்பப் பெயர்களும் மாறிச் செல்லும், உழவன் முதலாம் காரணத் தொழிற் பெயர்கள் இன்று சாதிப் பெயர்களாய் இடுகுறி களாய்ப் பொருள் இழந்து நிற்கின்றன. தமிழ்மொழியை அறிவுக்குப் பொருந்தியதாகவும், தமிழகத்தை அறிவோட்டம் உடையதாகவும் நம்முன்னோர் காத்து வந்தனர். அவ்வறிவுக் காப்பினை நாம் பல படியான் இழந்தோம். அகலும் தொழிற்பிரிவை அசையாப் பிறப்புப் பிரிவாக மாற்றிச் சீரழிந்தோம். அதனால் பலவாய் இழிந்த பழமொழிகள் வையப் பிறந்தன. பழமை நினைந்து பயனென்? இன்று நமக்கும் ஞாலம் அனைத்திற்கும் வேண்டுவது அறிவுப் புதுவோட்டம்; காரணவாழ்வு; பழக்க வயத்தால் சென்ற தடத்துச் செல்லும் செக்குமாடும் பாரமாடும் போலாது, ஆய்ந்து ஆய்ந்து செல்லும் அறிவு வாழ்வு. முன்னோர் வினைக்குத் தகத் தொழிற்பெயர் வழங்கினாற் போல வள்ளுவரும் நிலைக்குத் தகப் பண்புப் பெயர் சுட்டினார். ஒருத்தனை வாழ்நாள் முழுதும் பேதை என்றோ, புல்லறிவன் என்றோ, அறிவினன் என்றோ, கயவன் என்றோ, அறவன் என்றோ முடிவு செய்தார் அல்லர். பேதை நிலையும், புல்லறிவு நிலையும், அறிவு நிலையும், கயமை நிலையும், அற நிலையும் ஒருவன்பாலே ஒவ்வொருகால் காணத்தகுவன! மாறிவருவன. இவன் முழுப்பேதை; இவன் முற்றறிவன் என்ற அறியாத் துணிபு வள்ளுவமுரண்; வாழ்க்கை முரண். ஒருத்தனையே ஒரு நிலையன் என்று துணிய மாட்டாக்காலை, ஓரினம் முழுதையுமே, வஞ்சகர்எனா, அறிவுடையர் எனா, அநாகரிகர் எனாக் கோடல் உலக முரண் அன்றோ! மக்கள் எந்நிலையி னின்றும் கீழாக மேலாக எந் நிலைக்கும் மாறவல்ல பிறப்பினர் என்பது வள்ளுவம். ஆதலால், எப்பொருள் யார் யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு (423) எனத் திருக்குறள் மெய்யறிவு வேண்டும். அரியன கற்று மனக்குற்றம் அற்றவர் என்று நாம் எண்ணிய பெரியோர் மாட்டும் அறிவின்மை காணப்படும்; சிறிதும் கற்றறியான் கண்ணும் பெருநலம் பயக்கும் ஒட்பம் காணப்படும் என்று நிலைத்திரிபு அறிந்தவர் வள்ளுவர். களிமண் பிடித்தாற் போலும் ஒரு நிலை அச்சுவார்ப்புக்கள் அல்லர் மக்கள். உயிராதலாலும், அறிவுப் பிறப்பாதலாலும், பொது வளர்ச்சியும் சிறப்பு வளர்ச்சியும் பெற்று மாறிச் செல்லும் இயல்பே மக்கள் நிலையாகும். அறக்கொடியான் எண்ணம் மாறி ஒரு நொடிப் பொழுதில் திருந்துவான். ஈர்ங்கை விதிராக் கயவன் ஒரு மனமாற்றத்தால் பண்ணன் ஆவான். அடங்கிய கண்ணகி ஆறாச் சினத்தள் ஆனதும், பரத்தைகுல மாதவி அறிவுடையளாய்க் குலப்பழக்கம் விட்டு, சீர்திருந்திய நங்கை ஆனதும் நினைய வேண்டிய நிலைமாற்றங்கள். ஒருவன் நெருநல் இருந்ததுபோல் இன்றும் இருப்பன் என எண்ணி வினை செய்வது உலகறிவாகாது. இப்படி விளக்குவதால், ஒருவரை ஒருவர் நம்பாது வாழ வேண்டும் என்று கருத்துக் கொள்வது பெரும் பிழை. அறிந்துவாழ்க என்பதுவே வள்ளுவம். மாற்றுநிலை யுண்டா? முன் நிலையே இன்றும் உண்டா? என்று உண்மை அறிந்துகொள்ள வேண்டும் என்பதுவே பொருள். நன்னிலைக்கண் தன்னை நிறுப்பானும் தன்னை நிலைகலக்கிக் கீழிடு வானும் நிலையினும் மேன்மேல் உயர்த்து நிறுப்பானும் தன்னைத் தலையாகச் செய்வானும் தான் என்னும் நாலடிப் பாடல் நன்னம்பிக்கைப் பாடல் ஆகும். மக்கள் தாமே தம் நிலையை உயர்த்திக் கொள்ள வல்லர் என்ற காட்சியால் அன்றோ, உள்ளுவது எல்லாம் உயர்வு உள்ளல் (596) என மேல்நிலை காட்டினார். தம் தாழ் நிலையைத் தாமே அகற்றிக் கொள்ளவும் மாட்டுவர் என்ற துணிபான் அன்றோ, உள்ளற்க உள்ளம் சிறுகுவ (798) என நிலைப் பெயர்ச்சி சுட்டினார். அச்சமும் புறங்கூற்றும் அழுக்காறும் உடைய கயவன். அஞ்சாது புறங்கூறாது அழுக்காறு படாது ஒழுகுவனேல், அப்பெயர் ஒழியச் சான்றோன் எனப்படுவான். கல்லாதவற்றைக் கற்றாற்போல் பறைசாற்றி அறிஞர் சொற்கேளாப் புல்லறிவன் கற்றவற்றை விரித்துரைத்துப் பிறர் நல்லுரைக்குச் செவிசாய்ப்பானேல், புன்மைப் பெயர் ஒழிய அறிஞன் எனப் பெயர் பெறுவான். நிலைமாற்றத்துக்கு ஒப்ப இன்னான் எனப் பெயர் மாற்றமும் உடன் செல்லும்; செல்ல வேண்டும் என்று எண்ணி, வள்ளுவ அறிஞர் திருக்குறள் நூலில் காரணங் காட்டும் தன்மைப் பெயர்களையே ஆளுவர். செயற்கரிய செய்வார் பெரியர்; சிறியர் செயற்கரிய செய்கலா தார் (26) என்ற குறளில் பெரியர் சிறியர் என்பன ஒருவர்ச்சுட்டாது இலக்கண வகையான் தோன்றிய காரணப் பெயர்கள், பெரியர் எனா சிறியர் எனா மக்கட் பிறப்பில் ஒரு பகுப்பு இன்று என்பது வள்ளுவம். பெரியராயினார் இழிந்த செயல்களைச் செய்வாரேல் சிறியர் ஆவர். சிறியராயினார் தம் சிறுமை நீங்கி அரியனசெய்வாரேல் பெரியர் ஆவர். ஒருவரே ஒருகால் பெரியராயும் மறுகால் சிறியராயும் மாறிச்செல்வர். தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர் (201), அறிவுடையார் ஆவது அறிவார் அறிவிலார் அஃது அறிகல்லாதவர் (427), தான் அடங்காப் பேதையிற் பேதையார் (834), பிறர்மேல் வடுக்காண வற்றாகும் கீழ் (1079) என்பனவெல்லாம் குணம்பற்றி எழுந்த காரணப் பெயர்கள். அறிவுடை நங்கையர்களே! அறிவுடை நம்பிகளே! நாம் துணியத்தகும் வள்ளுவம் யாது? எந்நிலையிலும் நமக்கு முன்னேற்றம் உண்டு. தன்னைப் பேதையெனக் கயவன் என எவனும் மனமார எண்ணான். அவ்வாறு உண்மை நிலை யுணர்ந்து எண்ணுவனேல், அவன் உயர்வான் என்பதற்கு அவ்வெண்ணமே சான்று. நாம் பட்ட கீழ் நிலையே நம்முடைய முடிபுநிலை என்று சோர்ந்து வீழினும் தூக்கி விடவல்ல நெடுங்கையும் அணைத்துக் கொள்ளவல்ல அகன்ற மார்பும் உடையவர் வள்ளுவர். ஆதலால் நமக்கு வேண்டுவது அறிவுப் பிறப்பினம் என்னும் பிறப்பு நம்பிக்கை. நமக்கு வந்த பிறப்பை மதித்து, என்றும் அறிவோட்டம் காத்து, நிலையொடு பொருந்தித் திருக்குறளைக் கற்போமேல். நம் பிறப்பு நறுமணம் கமழும் இனிய மலர் வாழ்வாகும். 7. அறிவுக் கல்வி காலம் உணரும் அறிவர்களே! பணிவுடை வணக்கம். அறிவுக் கல்வி என்பது இம் மாலைப் பொருள். தொட்டனைத்து ஊறும் மணற் கேணி (396) என்றார் வள்ளுவர். இதன் உட்கிடை என்னை? மணற் கேணியகத்து நீர் என்ற ஒரு பொருள் உண்டு. முன்னரே அமைந்து கிடக்கும் அந்நீர் தோண்டுதொறும் புறப்படுகின்றது. அவ்வளவிற்றே யொழியத் தோண்டுகை தண்ணீரைப் படைப்பதின்று. இவ்வுண்மை கல்வி யறிவுகளுக்கும் பொருந்தும். புதிதென ஓரியற்கையைப் படைக்கும் ஆற்றல் மக்கட்கு இல்லை. படைப்புற்றுக் கிடக்கும் ஞாலப்பல்லியற்கை களைக் கண்டு தமதாக்கிக் கொள்ளும் செய்வினையே அன்னோர்க்கு உரித்து. கல்வி என்பது ஒரு தோண்டுவினை. அச் சொல்லே தன் செயலைக் காட்டி நிற்பது. அவ்வினை முன்இல்லா அறிவை ஒருவர்க்கு உண்டு செய்யும் என்றல் அறப்பிழை. உழவால் வித்தின் உள்ளீடு வெளிவரல் போலக் கல்வியால் அறிவென்னும் மக்கட் பிறப்பின் உள்ளீடு புலப்படும். உள்ளது தோன்றும் என்னும் உண்மை தெரிப்பான். கற்றனைத்து ஊறும் அறிவு (396) எனத் தோற்றம் மொழிந்தார். நாம் அறிவுடையோம்; அது மாத்திரம் அன்று; ஆளுக்கோர் அறிவுத் தனித் தன்மையும் பெற்றுள்ளோம் என்பது திருக்குறள் சுட்டும் இருபெருங்காட்சி. இவ்வுய்த்துணர் விற்குத் தன் உண்மையறிவே மிகும் (373) என்னும் பகுதியே சான்று. அறிவுப் படைப்பினம் என்றாலும், அவ்வறிவுக் கூறு ஒருத்தர்போல் மற்றொருத்தர்க்கு அமையக் கண்டிலம். மாநில வளர்ச்சி தூய வேற்றுமைக் கண்ணது; ஆதலின், ஒன்றுபோல் அனைவர்க்கும் அறிவமையாமை இயல்பும் நலமும் ஆகும். ஒரு குடிப் பிறந்த மக்கள் தனித்தனித் துறையில் அறிவாளர் ஆவது, ஒரு ஞான்றும் குடி நலியாப் பெரு நலம் பயக்கும் என்பது கண்கூடு. அறிவும் தனியறிவுக் கூறும் உடையேன் என்னும் மெய்ந்நம்பிக்கை செவ்விய வள்ளுவம் ஆகும்; வாழ்வானுக்கு உயிர்ப்பு ஆகும்; ஒரு மூச்சு ஓடும்வரை இறுகப் பிடிக்கத்தகும் உண்மைப்பற்று ஆகும். வெறி கொண்டாற்போலும் ஒரே செயல் வேட்கையோடு திருக்குறளைக் கற்பவர், தன்னறிவில் தன்னம்பிக்கை கொள்கதில். நிற்க. வள்ளுவச் செம்மல் தொகுத்த வாழ்க்கை நூலை முன்னையோர் வினைப்படுத்திற்றிலர் என்று சிறுமை தூற்றுவதால், நாம் உறும் பெருமை என்னோ? நிறை செய்யும் கடமையாளர்க்கு அன்றோ குறை கூறும் உரிமை யுண்டு. தந்தை விட்ட கடனை மகன் எனத் தக்கான் அடைக்குமாங்கு, முன்னோர் அறியாது சோர்ந்த குறட் செயலை, அவர் பின்னோர் எனத்தக்க நாம், இன்னே அறிவொடு கடைப்பிடிக்க வேண்டும். இனிப் பிறந்து வருவாரெல்லாம் மறவாதபடி, உண்டல் உறங்கல் போலக் குறள்வழி ஒழுகலையும் உயிரியல்பு ஆக்கல் வேண்டும். எனைத்து வேண்டுகையும் கைவரற்கு ஒரு நன்னெறி யாது எனின், திருக்குறள் எடுப்பார் அவரவர் வாழ்நிலை யொடும், வாழும் கால நிலையொடும் பொருத்தி வைத்துக் கற்பது, நிலையறி செயலே குறட்பயனாகும். இதனை முன்னரும் அழுந்த நினைவூட்டினேன். வேண்டுழி வேண்டுழிப் பின்னரும் நினைவுறுத்துவேன். தத்தம் நிலையொடு சார்த்திக் கற்றல் படிப்பவர் பொறுப்பு என விட்டுவிட்டு, கால நிலையொடு இயைத்துக் குறட் செயல் பரப்புவதையே, பெரிதும் நான் மேற் கொண்டேன். நாம் வாழும் இவ்விருபதாம் நூற்றாண்டின் நடுவண் காணப்படும் பல்வேறு போக்குகளைத் திருக்குறட் கட்டளைக் கல்லில் உரைத்து, மாற்றுத் தெளிப்ப எண்ணங் கொண்டேன். சொல்லும் சொற் பொருளுமாக, ஒப்பும் பழைய புராணக் காட்டுக்களுமாக, வைத்துக் குறளிடைப் புகுவு தாழ்முறை என்ற துணிவால், உண்மை நிகழ்ச்சிகளிலும், சுற்றிவரும் சூழ்நிலைகளிலும் வைத்து நடைமுறை தெரிக்க உளங் கொண்டேன். மேலும், எல்லாக்கும் ஓரெடை காட்டாது. (காட்டின் உதவாக் கெடுபொறி எனப்படும்) நிற்பவர்தம் உடற்கேற்ப, நிறுவை சுட்டும் மெய்ப்பொறி நிகர்ப்பது திருக்குறள் என்று சிறப்புண்மை வலியுறுத்த அவாவினேன். நெஞ்சறி நண்பர்களே! நாட்டு நடப்புக்களை - காலத்தின் ஓட்டங்களை - என் அறிவிற் பட்டாங்கு தெளித்துக் கூறுதொறும். நம்முள் பற்பலர் மனம் புண்ணுறுதலும் செய்யும் என்று ஓராற்றான் அஞ்சுவல். நடக்கை மேல் வைத்து உராய்ந்து செல்லாது, குறள் குறளாக ஒப்பித்துச் சேறல் வள்ளுவக் கொலை யாகும் என்று பிறிதோராற்றான் அஞ்சி நடுங்குவல். யாரொருவர் மனத்தையும் புண்ணாக்கல் எனைத்தும் என் நோக்கம் அன்று, அதன் மேலும் மனத்தானாம் மாணா செய்யாமை தலை (317) என்ற குறள் ஆணைப்படி, பிறர் வருந்தாவாறு உரைசெய்யல் வேண்டும் என்ற நோக்கம் உடையேன். ஆள் சுட்டிப் பேசுவது தான் ஆகாதே யொழிய. நிலைசுட்டிப் பேசுவது வேண்டும். பிறரைப் பழிப்பான் தாக்குவதுதான் கூடாதே யொழிய, நாடும் யாரும் திருந்துவான் நடப்பினை ஆராய்தல் அஞ்சாது வேண்டும். காலத்து நிகழும் தன்மைகளின் அலசலை, ஒருவன் தன்னைத் தாக்குதலாக நினைவானேல், அந்நினைவு செருக் கொடு பட்ட மயக்கம் என விடுக்க, யார் கண்ணும் கோட்டம் எண்ணாது மெய்யுணர்வான் நிகழ்ச்சிகளொடு முரணுற்று இகலிக் காண்பதே என் உரை யொழுங்காதலின், யான் சீர்தூக்கிக் கண்ட உண்மையை அஞ்சிக் கரவாது அழுந்த மொழிவதே என் சொன்னடையாதலின், மனத் தூய்மைக்கும் அறிவிற்கும் முயற்சிக்கும் இடையூறாய் வளரும் பழக்க வழக்க எண்ணக் களைகளை அகற்றுமின்! அகற்றுமின்! எனக் குறட் செயற்படுவதே என் நெஞ்சமாதலின், என் சொற்களைப் பிறழ உணரற்க என ஒரு தலையாக வேண்டிக் கொள்வல். சில்லாண்டுகளாக என் உள்ளத்தைக் கவல்விக்கும் கல்விபற்றிய ஒரு சில சிக்கல்களை இன்று வெளியிடுவன். நம் இந்தியப் பெருநாடு ஆயிரம் ஆண்டு அடிமைத் தளையறுத்து உரிமைப் பணிபூண்டு ஐந்தாண்டுகள் ஆகின்றன. ஆங்கிலேயர் இந்நாட்டு இயல்பு அறிகிலர்; மக்கள் உள்ளம் தெரிந்திலர்; தெரியும் நோக்கமும் இலர். இந்தியர் அறிவு பெற்றால் ஆள நினைப்பர் என்றஞ்சிக் கல்வி நல்கிற்றிலர். முடிந்தவரை சுரண்டிச் செல்வதே அன்னோர் உட்கோள். கால் கொள்ளா வேற்றாட்சியால் நம் பண்டைப் பண்பும் மொழிகளும் கலைகளும், மக்கள்போல் நலிவுற்றன. தன்னாட்சி பெறின் எல்லா வளமும் பெருக்குவோம் என்றெல்லாம் நெஞ்சறியப் பறைசாற்றி உரிமைப் போர் தொடுத்தோம். உரிமை பெற்றபின், நம் உள்ளத் துடிப்பு எங்ஙன் செத்தது? உண்மைக்கோள் யாண்டு மறைந்தது? பயிர் வளர்த்தற்கு அன்றோ களை பறித்தோம்? நீண்டநாள் களைகட்ட அயற்சியான் பைங்கூழ் செழிப்பிக்கும் கடன் ஒழிந்தோம். ஒன்றன் அழிவுமட்டும் பிறிதொன்றன் ஆக்கமாய் விடுமா? ஓர்மின்! தீயதன் மாய்வோடு நல்லதன் வளர்ப்பினையும் போற்றல் வேண்டும். எண்ணியாங்கு விடுதலை சிறந்து வாழும் நாம் தொடர்பு சான்ற தமிழகக் கல்வி குறித்து, ஈண்டுச் சில நினைவோம். தமிழகம் என்றும் அடிமைப்பட்டுக் கிடந்த நாடன்று. தமிழ் மக்கள் எஞ்ஞான்றும் தளை பிணிபட்ட மக்கள் அல்லர். நம் அடிமை சில நூற்றாண்டு அணிமையது. உரிமை வாழ்வே தமிழகத்தின் பல்லாயிரவாண்டு வாழ்வு, தமிழ் மொழியோ எனின், நாடும் மக்களும் கால் தளையுண்ட ஞான்றும் தன்னிலை விடாத் தனிமொழி. தமிழ் இதுகாறும் அடிமைப்பட்ட தின்று. இனியும் பிறர்அடிப்படுவதின்று. கன்னித் தமிழ், குமரித் தமிழ் என்னும் வழக்காறுகளே இவ்வுண்மைக்குக் கரியாவன. உரிமைசால் இந்தியத் தமிழகம் நீடிய உரிமை நுகர்ந்த பண்டைத் தமிழகத்தின்மேல் ஒருகண் செலுத்த வேண்டாவா? விடுதலை பெற்ற நமக்கு உரிமை யல்லது வேறறியா அற்றைத் தமிழர் நினைவு தோன்றல் ஒவ்வாதா? இந்நாள் வளரத் துடிக்கும் தமிழுக்கு முன்னாள் வளர்ந்த உரிமைத் தமிழ் ஒரு வழிகாட்டி யாகாதா? எண்ணுமின்! இற்றைக் கல்வித் துறையாளர் முன்னோர் வகுத்த கல்வி யாது? கற்ற முறை யாது? கல்வி நோக்கம் யாது? எனச் சிற்றளவேனும் நம் தமிழ் நூல்களை ஆராயப் புகுந்தார் அல்லர். ஞாலம் உள்ளளவும் கற்கத் தகும் பெரும் பனுவல்கள் தமிழ் மொழிக்கண் உளவே; இவை எழுதற்குச் செவ்விய கல்வி அமைந்திருக்க வேண்டுமே எனச் சிறக்கணித்த பார்வையும் செய்திற்றிலர். இந்நாட்டுக் கல்வி வகுக்கப் பிறநாடுகளுக்கே பறப்பர். அயல்நாடு செல்கையைப் பழிப்பவன் அல்லேன். அறிவு எத்திசைக் கண்ணது ஆயினும் ஆகியர் யார்பாலதாயினும் ஆகுக. அஃது இகலுறாது பற்றிக் கொளத் தகும் ஒரு தனிப் பெருஞ் செல்வம். சென்றிடுவீர் எட்டுத் திக்கும் கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்து இங்கு சேர்ப்பீர் என்ற தமிழ்ப் பாரதி ஆணைப்படி யாண்டும் பறந்தோடி அறிவன அறிதல் நங்கடன். இன்றேல் ஊருள் ஒதுங்கிய குடிசைபோல, நம் நாடு உலகப் போக்கு இழந்து பிற்படும். இஃது ஒரு பாலாக, மற்றோர் உண்மையை உள்ளுமின்! முழுக்க முழுக்கப் பிறரையே நாடிப் பின்பற்றி அலைபவன் ஒருபோதும் வேரூன்றான். எம் மகனும் தீய நிறைவினன் அல்லன். எவன் மாட்டும் நற்பண்புகள் சிலவேனும் உள. ஒருவன் மக்களிடை வாழ்கின்றான் என்பீரேல், அதுசாலும் அவன்பால் ஒருசில மாண்புகள் உண்டு என்று துணிதற்கு. ஆதலின் தன் தனித்தன்மை விடாதும் கெடாதும் ஏனையோர் அறிவைத் தலைக்கொள்வதே பொருளுடைத்து. நல்ல சூழ்நிலைகளைப் பயன்கோடற்கு விதையொன்று வேண்டுமாப் போல, நல்லுலகப் பகுதிகளைப் பயன் கொள்வானுக்குத் துளங்காத் தனித் தன்மை வேண்டும். இமையாக் கண்ணனாய் முற்றும் பிறர் சுவடு பார்ப்பவன் சிறப்புறான். பிற நோக்காது திறவாக் கண்ணனாய் யான் எனது என்று இறுமாந்திருப்பவன் வளர்வுறான். வேண்டுழி வேண்டுழி மூடலும் திறத்தலும் செய்யவல்ல அறிவுக் கண்ணனுக்கே அளவறி மதுகை யானுக்கே - வாழ்வு வீறெய்தி ஓங்கும். ஆதலின் கல்வி வரைவார்க்குப் பிறநாட்டு ஆய்வொடு தன்னாட்டு ஆய்வுத் திறமும் இன்றியமையாதது. ஆங்கிலவழி அறிவுரம் பெற்ற இன்னோர் இதுகாறும் ஒரு பொருளாக மதித்துத் தமிழ் நூல்களைக் கற்றிலர். அதன்மேலும் தமிழ்ப் புலவர் குழுக் கூட்டி நாட்டுக் கல்வி முறை கேட்கும் துணிச்சலும் இலர். பழங் கல்வி முறை இந்நாள் உலகப் போக்கிற்கு ஒட்டாது என்று அத்துணை எண்மைத்தாய்ச் சொல்லி விட முடியுமா? முன்னைத் தமிழகத்துக்கும் வரும் தமிழகத்துக்கும் பன்மாணும் ஒற்றுமை உண்டு. முதல் ஒற்றுமை இரண்டும் உரிமை சான்றன. சாதி சமய மொழிப் பிணக்கு அற்ற நாட்டினை உருவாக்குவதே நம் உள்ளக் கிடையாயின், அங்ஙன் உருக் கொண்டிருந்த காலத்து எழுந்த தமிழ் நூல்களே நமக்குப் பற்றுக்கோடு ஆவன; சிக்கல் தீர்க்கும் வழி வழங்க வல்லன; முதல் ஆய்வுக்கு உரியன. திருக்குறள் ஈராயிரம் ஆண்டுத் தொன்மைத்து என்பதனால், அது நுதலும் கருத்துக்கள் உயிரற்றன; தள்ளுபட்டன என்று புறக்கணித்தல் அறிவுக் கூர்மை யன்று காண். வள்ளுவ நம்பிக்கு முந்நூறு ஆண்டு முன் நிகழ்ந்த அசோக முடிவேந்தன் சக்கரம் இந்நாள் நம் இந்தியக் குடியரசின் பொறியென அமையவில்லையா? இதுகாறும் ஞாலத்தாய் வளர்த்த வளர்ப்பு எல்லாம் நேர்கோடிட்டாற் போல், இருபதாம் நூற்றாண்டுக் காலக்கோடு வரைந்து, இனி ஆகா என்று அறவொதுக்கி வாழ வொல்லுமா? அசோகப் பெருமகன் தன் குடைக் கீழ்ப் பல்லினப்பட்டு வதிந்தாரையெல்லாம் குடி மக்கள் என ஓரினமாகத் தழுவிப் புரந்தான்; குருதியாறு பரப்பும் கொலைப் போரை வெறுத்தான்; மறவலி பெருக்காது அருள் என்னும் அறவலி பெருக்கி ஆண்டான். இம் முடியண்ணல் ஆட்சிப் பூட்கைகள் நமக்கு உடம்பாடாவன என்ற இசைவினால், அச்சான்றோன் அறவாழியை நம் அரசாழியாக அறிவொடு ஏற்றுக் கொண்டோம். ஒன்றினைக் கொள்ளற்கும் தள்ளற்கும் புதுமையோ பழமையோ காரணம் ஆகா; கால அணிமையோ தொன்மையோ, இட அண்மையோ சேய்மையோ ஏதுப்படா. ஒத்த நோக்கமே - ஒருமனப்பட்ட குறிக்கோளே - முதற் காரணம் எனத் துணிக. தமிழும் தமிழ் வேந்தும் தமிழகமும் ஞாயிற்றன்ன ஆற்றல் தோற்றித் திங்கள் அன்ன புகழொளி பாரித்து உயர்ந்த எண்ணங்கள் செயற்பட்டஞான்று பிறப்பு எடுத்தது திருக்குறள். இடையறவுபடா உரிமைப் பருவக்கன்னி, வள்ளுவச் செம்மலின் தூய அறிவொடு நெடுநாள் மணங்கூடி இன்புற்று, ஈன்ற ஒரே உலகத் தனித் தமிழ்க் குழவி திருக்குறள். நமக்கு நாளடைவில் சிறிது சிறிதாகக் கல்வி பற்றிப் புலனாகும் நல்லெண்ணம் எல்லாம் முன்னரே வள்ளுவர் திறம்படக் கண்ட எண்ணங்கள். தொடர்பற்ற இரு விஞ்ஞானிகள் ஒரே நுண்மையைத் தனித்தனி கண்டு பிடித்தனர் என்று நாம் வரலாறு அறிவோம். இருவர்க்கும் ஒன்றிய பொதுச் சூழ்நிலையே அதற்குக் காரணம் ஆவது. நாம் துய்க்க இருக்கும் உரிமைச் செவ்வியை வள்ளுவரும் துய்த்தவர்; ஆதலால் நல்லவென நாம் அறியும் கல்விக் கருத்துக்கள் அவ்வாசானுக்கும் முகிழ்த்தன என்பது உயர்வு நவிற்சி யன்று; அளவு நூற்பட்டது. மேலும் விடுதலை அரும்பிய முகைப் பருவத்துத் தவழும் குழவிகளாகிய நமக்குத் தோன்றல் செய்யாக் கல்வி நுண்மை பல உரிமைப் பழம் சுவைத்த வள்ளுவக் கிழவர்க்கு இயல்பாகத் தோன்றின என்பது அறிவு முரணோ? போலிப் பெருமையோ? பயிற்சியால் மூத்த அறிவுடையார் கூற்றுக்களைப் பயிற்சியில்லாதார் போற்றிக் கொண்டு விரைந்து முன்னேறுமாப்போல, இந்திய வரசும் தமிழகமும் இனியேனும் தூக்கம் கடிந்து விழிப்புற்றுக் கல்வி பற்றிய வள்ளுவங்களை ஓர்ந்து தலைக்கொள்ளின், பளிச்சென உய்தல் கூடும். ஒரு நூறாண்டு கடந்து பெறும் கல்வி வளர்ச்சி ஒரு பத்தாண்டுப் போழ்தில் கைவரும். தொண்ணூறாண்டுக் காலக் கழிவும், எத்துணையோ கோடிப் பொருட் செலவும் எச்சப்படும். ‘அரசாங்கம் புரட்சியைத் தூண்டிவிடுமானால், ஜனங்கள் அந்தப் புரட்சியின் மூலமாகத்தானே பதில் சொல்ல வேண்டும்? வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து எனப் பாரதி பாராட்டிய நல்லாசான், உலகப் பகுதியாய இந்தியாவிற்கும், இந்தியப் பகுதியான தமிழகத்துக்கும் வழித்துணை யல்லன் என்று ஒரு சொற்கிளக்கப் படுங்கொல்? இத்துணையும் ஓராற்றான் அறிவுத் துடிப்பில் எழுந்த பீடுடைக் கிளவிகள். இனி நூலுட் புகுந்து கல்வி வள்ளுவங்களைக் காண்பாம். இற்றைக் கல்வி நிலைகளொடு சார்த்தி நன்று தீது துணிவாம். இதுவே செயக் கிடப்பது. மக்களாய்ப் பிறந்தாரெல்லாம் கற்க என்பது வள்ளுவம். கற்றற்கு இன்னார் உரியர்; இன்னார் உரியரல்லர் என்ற ஆளொதுக்கம் திருக்குறளில் அறவே இல்லை. வாழ்வு வேண்டின் வேண்டுக கல்வி என்னும் அடிப்படையை நனி சுருக்கமாக கண் என்ப வாழும் உயிர்க்கு (392) என்பர். எல்லோரும் கற்க; பெண்டிரும் கற்க என்றவாறு வள்ளுவர் பிரித்து விதந்திலர். ஏன்? பால் காரணமாகக் கல்வி மறுக்கும் இழிபினைத் தங்காலத்துக் கண்டிலர். பரத்தை வழிப் பிறந்த மாதவி கற்றுத் துறை போகிய பொற்றொடி நங்கை எனப் புகழப் பட்டாள். இன்று காண்பது போல் மொழிப் பூசல் இருப்பின் அன்றோ தாய்மொழிக் கல்வியே தலை என்று விதந்து அறைதற்கு இடனுண்டு? பாலொதுக்கம் இருந்தால் அன்றோ பெண்பாலும் கற்க வேண்டும் என்ற விதப்புக் கிளவிக்கு வாய்ப்பு உண்டு? இனைய அடிமை யுணர்வுகள் நெஞ்சு நினையா உரிமை கனிந்த காலம்; ஆதலால் வாழும் உயிர்க்குக் கண் என்ப என இயல்பு நடையில் யாத்தார். வாழ்க்கைத் துணை என நலஞ்சான்ற மக்களினத் தாயர் உயிர்கள் அல்லர் என்றும், வாழா உயிர்கள் என்றும் நினைக்கவே நாணுவர் அறிவுடையார். சிறு முதுக் குறைவிக்குச் சிறுமையும் செய்தேன் என்று இரங்கினான் கோவலன். இதனால் அறிவு பெண்பாற்கும் உண்டு; அறிவின்மை ஆண்பாற்கும் உண்டு என்ற பாற்பொதுமை பெறப்படும். காலவொழுக்கத்தை ஒரு பாங்கு சொன்னடை காட்ட வல்லது. இப் பதவிக்குப் பெண்டிரும் விண்ணப்பிக்கத் தகுவர் என்று விளம்பரங்கள் இன்று வெளியாகுவ. ஆணும் பெண்ணும் ஒரு நிகரினர் என்பது இந்திய அரசியற் பாயிரம். இருந்தும் மக்கள், எண்ணத்து ஒன்றிய சமவுணர்ச்சி இன்னும் பதிய வில்லை என்பதை மேலை விளம்பர நடை தெரிப்பது அன்றோ? அழிவுக் கொள்கையால் தாய்ப் பெண்டிரைக் கற்கவிடாது ஒதுக்கினோம்; அவ் வொதுக்கத்தால் நாடு அடிமைப்பட்டது என்னும் ஒரு பகுதி உண்மையைத் தெளிந்து, பெண்ணினமும் கற்கவேண்டும் என்று ஊக்குகின்றோம். உரிமைப்பேறு அண்மையில் வந்த காரணத்தால், பெண்டிரும் என எச்ச நடையில் பேசுகின்றோம். இன்னும் சில்லாண்டு சென்ற பின் - உரிமை வளர்ந்த பின் - ஆணும் பெண்ணும் விண்ணப்பிக்கத் தகுவர் என ஒத்த நடையிற் சுட்டுவோம். உரிமைப் பயிற்சி மேலும் கைவந்த பின்றை, யாரும் விண்ணப்பிக்க எனப் பொது நடைப் படுத்துவோம். பதவித் தகுதியை மாத்திரம் வரையறுத்து, விண்ணப்பிக்க என்று ஒரு சொல்லால் சொல்லும் நாளும் ஒன்று வருங்காண். அதுதான் உரிமை பழுத்த காலம்; சோற்றுக் கவலை யறியாச் சோணாட்டு உழவன் போல உரிமை யுணர்வு மறந்த இயல்புக் காலம். வள்ளுவர் இன்ன நல்லூழி வாழ்ந்த தொல் மகன் ஆதலின், பெண்ணும் கற்க; ஆணும் பெண்ணும் கற்க; யாரும் கற்க என்றாங்கு உரிமைக் குறைவு நடைசெய்யாது கற்க என ஏவல் நடை யியல்பின் மொழிந்தனர். அடிமைத் தொடி உடைத்த ஐயாண்டு இந்திய விடுதலைச் சிறுமி கற்கத் தகும் முதற் பாட நூல் யாது? உரிமை இன் துயில் கொள்ளும் திருக்குறள் காண். கற்பிக்கத் தகும் முதலாசான் யாவன்? அகர முதல என நூல் துவங்கிய வள்ளுவர்காண். இகலில்லா எஃகுடையார் இவ் வுண்மையைத் தொழுது ஒப்புவர். அறிவுக் கேளிர்! உறையிட்டுத் தலையணையைப் போற்றுகின்றோம். மேலட்டை போட்டு நூலினைப் பேணுகின்றோம். மெய்ப்பை புக்கு உடற்புறம் காக்கின்றோம். பணத்தாளினும், வெள்ளி பொன் நாணயங்களைச் சேமிக்கின்றோம். மிகுதி கிடைப்பதாயினும் அற்றைக் கூலிக்கு அலைவதை விடுத்து, ஊதியம் சுருங்கிய மாதத் தொழில்களை நாடுகின்றோம். இவற்றின் கருத்து என்கொல்? நிலையாப் பொருளுள்ளும் ஓரளவு நிலையுடைப் பொருளுக்கு மக்கள் மதிப்புக் காட்டுப. மதிப்பளவு பொருளின் நிலைப்பளவைப் பொறுத்தது. செல்வத்திலும் கல்வி விழுமியது என்பதற்கு, அதன் அழிவின்மை அன்றோ காரணம்? கல்வி கேள்வி அறிவு முதலாம் அகவுடைமைகள் மாய்வில என்று துணிந்த வள்ளுவர் நிலையாமை அதிகாரத்து உடம்பு முதலாம் புறவுடைமை களையே விளிவனவாகத் தெரித்தோதினர். ஆதலின், கேடில் விழுச் செல்வம் கல்வி (400) என்ற வள்ளுவத்தை அடிமுதலாக வைத்துக் கல்வி கோலுவார் மேற்செய்வன செய்தல் சால்புடைத்து. வெள்ளத்தால் வெந்தணலால் அழியாக் கல்வி இன்றோ கல்வித் திட்டம் தன்னாலே விரைந்து அழிவது மன். இளஞ் சிறுவர் சிறுமியர் வரன்முறையாக ஊர் கற்றுக் கூற்றங் கற்று மாகாணம் கற்று நாடு கற்று உலகம் கற்றுச் செல்லாது, மென்மெல மலராது, முறைப் பிறழ்வால் பலூன் போல விம்மிப் பரந்து, வாழ்வு சுருங்குப. பள்ளி முதல் கல்லூரி இறுவாய் மாணாக்கர் எண்ணற்ற கருத்துக்களைச் செரித்தலின்றி அவக்கென விழுங்கிக் கொண்டு அறிவு மெலிப. ஏற்க மாட்டாமலும் ஏற்றன சுமக்கமாட்டாமலும் பயிற்சிக் கொம்பின்றி நெஞ்சு தடுமாறுப. ஒருவற்கு எழுமையும் ஏமாப்பு உடைத்து (398) என உயிரறிஞன் பாராட்டிய கல்வி, வயிறு முட்ட எடுத்தவன் கழுத்துணவு போல ஒரு பொழுதும் உள்ளிருக்க மறுக்கின்றது. குளிக்க வந்தவனைக் குளம் சேறு பூசி விடுத்தால் ஒப்ப, இன்று கல்விக் கூடங்கள், உள்ள அறிவுக் கூர்மையையும் மழுக்கி விடுப, இவ்வெல்லாம் கேடில் விழுச் செல்வம் கல்வி (400) என்ற வள்ளுவமுரண்கள். யாரும் கற்றலின் முதன்மையை, வள்ளுவர் போல நாமும் உளங்கொண்டோம். இம் முதலொழுங்கு வரவேற்கத் தகுவது. மற்றுப் பல்பகையானும் கல்வி வள்ளுவங்களை இன்னும் உணராது தூங்குகின்றோம். முயற்சியையும், பயிற்சியையும் இரு கால்களாகக் கொண்டு இவ்வுலகத்து வாழ்வு நடத்த வேண்டியவர் மக்கள். அன்னோர்க்குப் பொன்றா அறிவரண் செய்துவிடுகைதான் கல்வி நிலையத்தின் முழு நோக்கமேயன்றிக், கோபுரத்தொடு அறிவுக் கட்டடமே எழுப்பிக் கொடுப்பது அதன் நோக்கு அன்று. வாழும் உயிர்க்கு அறிவுக்கண் திறப்பதுதான் கல்விக் கோளே யொழிய, அக்கண் காணுதற்குப் பொருள்களையும் உடன் தொகுத்துக் கொடுப்பது அதன் கோட்பாடு அன்று. முத்துப் போல்வது பல் என்றால் தன் பற்களை விற்கப் புறப்படுவாரோ? கேடில் விழுச் செல்வம் என்பது சிறப்பைக் குறிக்கும் அளவிற்று. தாம் பெறும் பள்ளிக் கல்வி குழவித் தன்மைத்து; பள்ளி விடுத்த பின் பன்னூல் உணவூட்டிக் கொழுகொழுவென வளர்த்தற்கு உரியது என்பதனை மாணாக்கரும் கற்குங்கால் உணரவில்லை; நாமும் உணர்த்தவில்லை. பள்ளி நுழைந்த மகாருக்கு உலகனைத்தையும் ஒருங்கு கற்பித்துவிடுவது என ஓர் இரக்கமில் வன்கண்மைப் பற்றி, பொதுவறிவு என்னும் குறியொன்றே எண்ணி, எல்லார்க்கும் எல்லாவற்றிலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக, இறுதி வரை காட்டுக் கல்விதான் நல்கி வருகின்றோம். பத்தாண்டு படித்த பின்றையும், அந்தோ! ஒருதுறைச் சிறப்பறிவு மாணாக்கர் எய்திற்றிலர். இதுதான் கல்விமுறை கொல்? கண்மாய் முழுவதும் பரவிநிற்கும் முழங்கால் அளவு நீரால் நன்செய் பயிராகாதது நிகர்ப்ப, மக்கள் அனைவோரும் பொதுவறிவே பெற்றுப்பெற்று ஒழிவதால், நாடு வினைச் சிறப்பும் விளைவுப் பெருக்கும் உறாது. இந்தியத் தாயின் கீழ்நிலைக்கு இதுவே காரணம். சில்லாண்டுப் பொதுவறிவுக்குப் பின், பல்லாண்டுத் துறையறிவு வழங்கல் வேண்டும். வழங்கும் தொழிற்கூடங்கள் பெருகல் வேண்டும். கற்பவை கல்லாததால் அன்றோ இற்றைக் கல்வி கேடுபடுகின்றது. சாந்துணையும் கல் (397) என்றார்; ஆதலின் கல்வி நிலையங்கள் அனைத்தையும் கற்பிப்பான் புகுதல் கடைபோகாது; புகின் சாக்குப் பையுள் குத்தி நிரப்புதல் போல் கருத்துக்களை வலிந்து திணித்தலாகுமேயன்றி உளங் கொள உணர்த்தலாகாது. கல்வி கோலுவார் உயர்ந்த எண்ணத்தால் பயனில செய்யற்க. இவ்வெல்லாம் கற்க கற்பவை (391) என்னும் வள்ளுவ முரண்கள். இற்றைக் கல்வி வேண்டி நிற்பது செம்மை, செம்மை, செம்மை. மாணாக்கர் கற்கும் நூல்களுள் ஒரு பகுதி கற்பவை என்று ஒத்துக் கொள்ளினும், கற்கு முறை பெரும் பிழையாகக் காண்கின்றோம். சொல்லிக் கொடுப்பது யாங்ஙன்? என ஒரு வகையில் ஆசான் ஆவார்க்குப் பயிற்சி கொடுக்கின் றோமேயல் லால், ஏற்றுக்கோடல் எங்ஙன்? என மாணவர்க்கு யாதும் உணர்த்துகின்றோம் இல்லை. இஃது ஒருதலைக் காமம் என்னும் கைக்கிளை போல்வது. ஏக்கற்றும் கற்றார் (395) என்றபடி, கல்வியை வாரிக் கொள்வோம் என்னும் ஏக்கறவு மாணாக்கர்க்கு வளரவில்லை. உண்டது செரிப்பினன்றே பசியெடுக்கும். கற்றது தெளிந்தால் அன்றோ அறிவுப்பசி எழும். அடிப்படை வலுவின்மையின், யாது சொல்லினும் அன்னோர் மெல்லிய நெஞ்சம் பதிவு செய்துகொள்ள மாட்டுவதில்லை. அறிதோறும் அறியாமை கண்டற்றால் (1110) என்பது பயிற்சிப் பயன்; அறியுந்தோறும் அறிய வேண்டுவன இன்னும் பலவுள எனக் கற்பவர் அறிவுப் பேற்றுக்கு எல்லையின்மை காண்பார் என்பது இக் குறள் நுதல் பொருள். இதற்கு நேர் மாறாவது இந்நாள் மாணவர் நிலை. ஆசிரியன்பாற் கேட்ட பழம் பாடத்தையே படிக்கப் புகுந்தொறும் புதுப்பாடமாக மயங்குப. பள்ளி கல்லூரிகட்குச் சென்று நாள் தொறும் ஐந்துமணிப் பகற்போது அமர்ந்து ஆசான்வாய்ப் பாடங் கேட்டொழுகும் மாணவ மாணவியர் அவ்வளவில் கல்வி பெற்றார் அல்லர் என்றால், அது சாலும். நம் கல்வித் திட்டம் நீள்மாசு படிந்தது என்றற்கு. அம் மாசு யாதுகொல்? தேர்வுப் பித்து. கல்வி யுலகை இஞ்ஞான்று ஆளுவது அறிவுத் தெய்வம் அன்று; தேர்வுப் பூதம் காணீர். நடைமுறை நோக்குழி, மாணாக்கரைத் தேர்வுரியோர் என்றும், ஆசிரியரைத் தேர்வு செய்வோர் என்றும், கல்வி வகுப்பாரைத் தேர்வு வகுப்பார் என்றும், கல்விக் களங்களைத் தேர்வுக்களங்கள் என்றும், கலைமகளைத் தேர்வு மகள் என்றும் அழைப்பதுவே இற்றைக்குப் பொருந்தும். தேர்வு மூச்சுத்தான் கல்வி முழுதும் ஓடுகின்றது. தப்பும் உணர்ச்சியே கள்வனுக்கு முந்துறுமாப்போல் தேர்ச்சி தாண்டும் துடிப்பே மாணர்க்கர்க்கு முற்படுகின்றது. தேர்ச்சிக் கடப்புக்கெனவே ஆசிரியர்களும், நிலையங்களும் பாடுபடுப, மாணவர்கள் மூலப் பாட நூல்களைக் கல்லாது, தேர்வுக்கென எவ்வகையாலோ எழுதிய குறுக்குவழி நூல்களைக் கற்றொழிப, ஒருசிலர் பாட நூலுள்ளும் தேர்வுக்கு வருமென ஞானத்தாற் கருதிய பகுதிகளைக் கற்க முயல்ப. உண்மைக் கல்வி நிலையங்களைக் காட்டிலும் தேர்வுக்கெனவே பிறப்பெடுத்த போலிக் கல்வி நிலையங்கள் அடுத்துப் பெருகுநிலையும், மாணாக்கரானார் ஆண்டுத் தொகை தொகையாகப் புகுதலையும், பாடநூல்களினும் பாடப் போலி நூல்கள் அன்னோர் உள்ளங்களை ஈர்த்தலையும், சீர்தூக்கிக் காணவல்ல நாட்டன்பினர்க்குக் கல்விப் புரையோட்டம் தெற்றெனத் தோன்றும். தேர்வின் அழி நுட்பங்களை ஈண்டு விரிவுரை செய்வதில் பெரும் பயனில்லை. அறிவுக்கொல்லி என்பது அதன் தீமைகாட்டும் சுருக்குப் பெயர். இவ்வெல்லாம் கற்க கசடற (391) என்னும் வள்ளுவ முரண்கள். கல்வித்தரம் வரவரப் பெரிதும் இழிகின்றது என்பது நாடறிந்த கூப்பாடு. என்போலும் ஆசிரியத் துறையினர் நாள்தொறும் கண்ணுற்று இரங்கும் கையறுநிலை. பல்லோர் தொழிற்கும் பல்வகை வருவாய்க்கும் தேர்வு நன்னிலமாக அமைந்திருப்பதால், அஃது எளிதிலும் விரைவிலும் கல்வி யுலகை விட்டுப்போம் என நம்புகிலேன்; எனினும் ஒழிய வேண்டும் என்பது துணிபு. முற்றழிவு வருமுன் நாடுகாக்க எண்ணும் தலைமை யறிவினோர் தேர்வு முறையைத் துணிவொடு களைவாராக. தேர்வை ஒழிப்பதால் கல்வி நேரடியாக உயர்ந்து விடாது. இடையூறு நீங்கிற்று என்பதுவே கருத்து. சொல்லிக் கொடுத்தவற்றை மாணவர் ஏற்றுளரோ? என்று காண்கை கல்வி வகுப்பார் தலைக்கடன். இந் நோக்கத்தான் ஏற்படுத்திய தேர்வுமுறை, கல்வி முதலையே வேரறுக்கும் அழி கருவியாய் மாறிய காரணத்தால் அன்றோ, தேர்வு ஒழிக என்று யாப்புறுத்தினேன். அழிவுநெறி கூறிய யான் ஆக்க நெறி கூறவும் கடப்பட்டுளேன். யான் வேண்டும் கல்விச் செந்நெறி நாண்முகக் கேள்வி முறை எனப் பெயர் பெறும். வருந்தித் தாம் கற்றன ஓம்பாது மற்றும் பரிந்து சில கற்பான் தொடங்கல் கல்விக் குற்றம் என்பர் குமரகுருபரவடிகள். முதல் நாட்பாடத்தை மாணாக்கர் விளங்கினரா? தெளிந்து உளங்கொண்டனரா? என ஒவ்வொருவரையும் ஆசான் வகுப்பில் வினவல் வேண்டும். வீட்டில் எழுதிவரச் செய்ய வேண்டும். முன்னைப் பாடத்து ஐயம் களைந்தபின், புதுப்பாடம் தொடங்கல் வேண்டும். நாள்தொறும் ஆசான் பாடம் வினவின், மாணாக்கர் நாள் தொறும் பாடம் போற்றிப்படிப்பர். இஃது உயிரின் இயல்பு. தேர்வுக்குச் சின்னாள் முந்தி, இரவு பகலாக விழித்து, உடல்நோவ மனங்கசந்து, எவ்வெப் பொருளையோ பதறி உருப்போடும் குறுக்குத் தீவழி இல்லாதொழியும். ஆசிரியர் மாணாக்கரிடை இடையறா நல்லுறவு வேண்டும், வேண்டும் என நாம் உரத்துப் பேசுகின்றோம். வழியறியாது மயங்குகின்றோம். கல்விக் குடும்பத்து ஆசானும் மாணாக்கனும் உடன் பிற்பபு எனப்படுவர்; பெற்றோர் குழந்தை எனப்படுவர். இன்ன இரு சாராரைத் தேர்வு வலிந்து பிரிக்கின்றது. கல்வி வகுப்பார்க்கு ஆசிரியன் மாட்டு தன்னம்பிக்கையில்லை. இவ் விழிவுக்குத் தேர்வே காரணம் என்பது மறுக்க வொண்ணுமோ? நாண்முகக் கேள்வி முறையால், உண்மை விளம்பின், மாணவர் கல்வித் தரம் பெருகுவதோடு, ஆசான் கல்வித் திறமும் வளப்படும். நேர்முகக் கல்வி முறை நிகழுதற்கு, பள்ளி முதல் கல்லூரி இறுவாய், ஒரு வகுப்பின் மாணாக்கர் எண்ணிக்கை இருபது அல்லது இருபத்தைந்துக்கு உள்ளாதல் வேண்டும். இதனால் செலவு மிகுதியாகும் என அஞ்சற்க. தேர்வுப் பெயரால் பலகால்வாயாக அரசும், மக்களும் செலவிடும் பல்கோடித் தொகையைக் கணக்கிட்டு நினைபவர், பொருள் நோக்கி இம்முறையைக் கைவிடார். நாள்தோறும் நாடுக (520) என்ற குறள் நெறி அரசுத்துறைக்கே யன்றி, வாழ்க்கை அனைத்துத் துறைக்கும் ஏற்கும்; ஆதலின் தேர்வு ஒழிக; நாண்முகக் கேள்வி முறை வருக என்பது என் வேணவா. இந்நாள் தமிழகச்சிறுவன் பத்தாட்டைப் பருவத்தான் நான்கு மொழிகள் பயில்கின்றான். உலகிற்கென ஒரு மொழியும், இந்திய வொருமைக்கென ஒரு மொழியும் இந்தியத் தொல்பண்பிற்கென ஒரு மொழியும், தாயெனத் தமிழ் மொழியும் கற்பிக்கப்படுகின்றான். இஃதோர் கல்வித் திருவிளையாடல், கண்டீர் . மரம் என்ற ஒரு பொருளறிவிற்கு நால்மொழிச் சொற்களை, அந்தோ! ஊர் கடந்தறியா இளஞ் சிறார்க்குக் கல்வித் திட்டம் அழுத்துகின்றது. வளர்ந்தது எது? அறிவன்று; பன்மொழிச் சொற்கூட்டம். கொடுத்தது பொருளறிவன்று; மொழியறிவு. அதுவும் செவ்விய மொழியறிவோ எனின் அன்று; கேவலம் ஒலிக்கூட்டம். இவ் வொலிக் கல்வியின் விளைவு என்னை; ஒலிப்பிழை. எம்மொழிக்கு உரிய நூலைப் படித்தாலும் பிறமொழி ஒலிகள் கலக்கும் வரம்புப் பிழை. மாணவர் பலரை எழுதச் செய்து, படிக்கச் சொல்லி, ஆசிரியன் நிலையில் இருந்து கல்வி கோலுவார் காண்பாராயின் என் கூற்று அளவறிவுண்மை என ஒப்புவர். பன்மொழிச் சொற்றொகுதி அளிப்பதுவே கல்விக் கோளாயின், அதற்குப் பெரும்பாடு வேண்டுவதின்று. நான்கு மொழி தொகுத்த ஓர் அகர நூலைப் பாடம் வைப்பது போதும், பன்மொழியோ, பன்மொழிச் சொற்கூட்டமோ, பல்லொலித் தொகுதியோ, நாம் கருதும் பரந்த மனப்பான்மையை ஒருஞான்றும் பயவாது என்பது பொதுக்காட்சி. அறிவுப் பரப்பே எண்ணப் பரப்பிற்குக் கால்கோள். பன்மொழிப் பரப்போ மாறாகப் புல்லறிவையே விளைக்கும். ஒண்மை யுடையம் யாம் (844) என்னும் செருக்கினையே வளர்க்கும். ஒருநாட்டு மக்கள் மொழிபல கற்றலை யான் மறுப்பதாகவோ இகழ்வதாகவோ அருள் செய்து சிறிதும் மயங்கவேண்டா. பிறநாட்டுத் தொடர்பான குறிப்புக்களை அறிதற்கும் தூதிற்கும் வாணிகத்திற்கும் பன்மொழிப் படிப்பு வேண்டப்படும். மொழிபெயர்த்து நம் மொழி வளர்ப்பார்க்கும், மேல்நிலை சென்ற அறிவியல் ஆய்வாளர்க்கும் மொழி பல வேண்டும். மொழிக்கலை ஆராய்வார்க்கும், பிறமொழி மூல இலக்கியங்களின் சுவை காண விழைவார்க்கும் மொழிப்பன்மை நன்று. எனினும் நாட்டிற்கும் அரசிற்கும் இவ்வகைக் கல்வியாளரின் எண்ணிக்கை பத்தாயிரத்தில் ஒன்றளவுகூட ஆகாத் தவநனிக் குறைவு என்பது ஒருதலை. நம் நாட்டிற்கு வேண்டும் மொழி பல கற்றாரை, உரிய மொழி வழங்கும் நாடுகளுக்கு விடுத்துக் கற்று வரச் செய்வோம். நீரில் வைத்து மீனியல்பு கற்குமாப் போல, ஒரு மொழி பயிலும் இடத்துத் தங்கி அதனைக் கற்றலே பாடுடைத்து. நம் நாட்டுத் தலைநகரங்களிலும் பெருங் கல்வி நிலையங்களிலும் பன்மொழிச் சூழ்நிலையை ஆக்கிக் கொள்வோம். அதனால் உள்நாட்டிலிருந்தே பிற மொழி கற்க விரும்பும் நம்மனோர் ஆங்கண் சென்று பன்மொழிக் கல்வி பெறுவர். இதுவே செலவு சுருங்கிய நேர்வழியாகும்; எண்ணிய பயனும் நன்னர்க்கைகூடும். இம்முறைகோடி, ஒரு சிலர் வேண்டுகையின் பொருட்டு, ஊர்தொறும் நகர்தொறும் அனைத்துக் குடிமக்கட்கும் பன்மொழி வைப்பு அறிவழிக்கும் என்பதில் ஐயமில்லை. ஒருமொழிப் பெருந் தேர்ச்சியில்லா மாணாக்கர்க்கு, ஊர்ப்பட்ட மொழியழுத்தம் வாழ்க்கை முரிவாய்விடும். நாம் வளர்ந்து தாங்கிய சுமையை வளருங் குழந்தைமேல் வைப்பது அறிவு முடஞ் செய்யும். இப் பன்மொழிப் பாடெல்லாம், கற்றனைத்து ஊறும் அறிவு (396) என்னும் வள்ளுவ முரண்கள். உயர்ந்த எண்ணத்திற்குப் பரந்த அறிவு வேண்டும் என்பது மறுப்பில் உண்மை. உலகவறிவும், இந்திய அறிவும், தமிழக வறிவும் தமிழ் மகனுக்குத் தன்மொழி வாயிலாய் வாராவோ? யார்க்கும் அவரவர் தாய்மொழிக் கல்வியில் அன்னைப் பால்போல் அறிவுப்பால் ஊறாதோ? ஒவ்வோர் அறிவிற்கென ஒவ்வொரு மொழியா வேண்டும்? இன்ன மொழி இன்ன அறிவு பயப்பது என அங்ஙன் bமாழிகளிடை வரம்பு ஒன்று உண்டு கொல்?இவ்வெல்லாம் மோகக் கூத்து. ஞாலத்து மொழிகள் ஒவ்வொன்றிலும் சிற்சில சொற்களைத் தொகுத்துப் பயின்று கொள்வதால், உலகவொற்றுமையோ உலகவறிவோ எள்ளளவும் வாராது காண். அறிவு என்பது பல்பொருட் சரக்கு. அச்சரக்கு இழுக்கும் ஊர்தியே மொழி எனப்படும். ஆதலின் ஈட்டத்தகும் முடிபொருள் அறிவு எனத் துணிக. உலக மக்களின் உலக நாடுகளின் இயல்பினையும் வரலாற்றினையும் தமிழ் வாயிலாய்க் கற்றுத் தமிழ் மகளும் தமிழ் மகனும் விரைந்து ஞாலவறிவு பெறுப. இந்திய அரசியலையும் பல்வேறு இனப் பழக்கவழக்கங்களையும் தத்தம் தாய்மொழியில் உணர்ந்து கற்பதால், தமிழ் மக்களும் பிறபகுதி மக்களும் இகலின்றிக் கட்டாயம் இன்றி இந்திய வொருமை நாடுப. அறிவு நிலைக் களமே அன்பு நிலைக்களம். இந்நாட் சொற்பொழிவின் தலைப்பாக அறிவுக் கல்வி எனப் பெயரிட்டுக் கொண்டேன். இன்று காண்பது சொற் கல்வி. ஒலிக்கல்வி என்று அடிப்பிழை சுட்டுவதே இத்தலைப்பின் உட்கிடை. இந்தியா பெருத்த மொழிச் சேற்றில் உடல் பதித்துக் கொண்டு அறிவு மெலிந்து வருகின்றது என்றும், மறைவான மொழிப் பூசலால் இந்திய வொருமைத் தளமே கெடுங்கொல் என்றும் என் நெஞ்சம் அடிக்கடி கவல்வது உண்டு. உரிமை பெற்ற இந்தியாவின் தலைக்கடன் மக்கட்கு அறிவு வழங்குவது; அவரவர் தாய்மொழி வாயிலாய்ப் பல்துறையறிவும் நல்குவது. அறிவே கல்விப்பயன் எனவும், தாய்மொழியே அனைத்துக் கல்வித்துறைக்கும் உரிய தனி நேர்வாயில் எனவும், முதற்கண் இந்தியப் பெருந்தாய் அச்சமின்றி அறிவு பெறுவாளாக. சிறந்த பல்துறை யறிஞர்கள் பலராக இந்தியாவில் தோன்ற வேண்டுமேல், பொய்ம்மானம் நச்சாது ஐயுறவு ஆடாது, தாய்மொழிக் கல்வியே கல்வி என அரசு கற்புநெறி போற்றல் வேண்டும். பள்ளி கல்லூரிகளைச் சூழ்ந்து வழங்குவது எம்மொழி, அம்மொழிதான் கல்வி மொழியாதல் வேண்டும். நுண்ணிய நினைவு, கூரியவறிவு, கற்பனை வளம் எல்லாம் வழங்கும் இயற்கையாற்றல் வழிவழித் தாய்மொழிக்கே உண்டு. இதுவரை இந்திய மக்கள் தொகைக்கு ஏற்பப் புத்தறிஞர் பல்காமைக்குத் தாய்மொழி என்னும் முதலின்மையே தலைக்காரணம். தாய்மொழிக்குக் கல்வித்துறைக்கண் அடிமை யிருக்கும் வரை. அதனை ஒரு கீழ் நிலைப்படுத்தும் வரை, நாடு அரசுரிமை பெற்றபோதும், மக்கள் மீளா அறிவடியர், நினைவடியர் ஆவர் என்பது திண்ணம். இந்தியக் குடியரசு அறிவுடை மக்களால் நிலைக்க வேண்டுவது. கல்விப் பேரால் நாடு செலவிடும் நூற்றினும் இறந்த கோடித்தொகை, பன்மொழி மோகத்தால் இன்று கொன்னே கழிகின்றது; சிதறுண்டு சிறு பயனாய் ஒழிகின்றது. தாய்மொழியில் அறிவூட்டுவது என்று முறை செய்யின், இப்பெருந்தொகையால் இந்திய இளங் குழந்தைக்கெல்லாம் கட்டாயக் கல்வி இன்னே உறுத்தலாம் அன்றோ? கற்பவை கற்க; கசடறக் கற்க; கற்றனைத்து ஊறும் அறிவு என்ற கல்வி வள்ளுவமூன்றும் நம்மனோர் உடனே தழுவற்கு உரியன; நம் கல்வித் துறையாளர் கைக்கொள்ளத் தகுவன. கல்விக்கு அழிவும் இழிவும் தருவன எவையாயினும் அவை ஒதுக்கற்பாலன. கேடில் விழுச்செல்வம் கல்வி என்ற அடிமுதல் வள்ளுவம் கல்வித் திட்டத்துக்கெல்லாம் ஓர் உரைகல். திட்டம் வெளியிடுமுன் அக்கல்லில் உரை செய்க. தாய்மொழி வாயிலும் பல்துறையறிவும் என்பது கல்வி வகுப்பார் வாய்பாடு ஆகுகதில். இத்துணிவு இருப்பின் நிலையெனச் சிறந்த கல்வி இன்றுபோல் அடிக்கடி நிலையாமைப் படாது. இதுகாறும் கல்வி வள்ளுவம் நான்கினை, இற்றைக் கல்வி நிலைகளோடு பொருத்திச் செய்வன தவிர்வன கண்டோம். இனி அறிவு வள்ளுவங்களைக் காண்பதற்கு முன், தமிழ்க்குறள் ஆசான் ஆண்ட கல்வி அறிவு ஒட்பம் என்ற முக்கிளவிகளின் நுண்பொருளை இவண் விளங்கிக் கொள்வாம். மன்னன் ஒருவன் வைகறைத் துயில் எழுந்து உலகு நோக்கினான். அவன் கட்பார்வைக்கு முதற்கண்பட்டான் கொல்லன் உலைக்களத்து ஒரு சிறுவன். அச்சிறானைப் பார்த்துத் திரும்பும்போது சுவராணி அரசன் தலைப்புறத்தைப் புண்ணுறுத்தியது. ஊர்காப்பாளரை ஒல்லை ஏவி அவ் விளைஞனைக் கட்டிவரச் செய்தான், ஈசலிறகு போலும் புண்பட்ட மன்னன். வந்த பையனை விளித்து ,உனக்குக்கொலைத் தண்டன விதித்தோம். இவனைக் கொல்லுக என்று ஆணையிட்டான். சாகத் துணிந்த இளையான் ஏது வினவ, அரசன் கூறலுற்றான்; யாம் நாட்டுப் புரவலன். விடியற்போது உன்முகத்து விழித்த பெரு வேந்தாகிய எமக்கே உன் முதற்காட்சி தலைப்புண் படுத்துமாயின் நாள்தோறும் உன் அழிமுகத்து விழித்தெழுந்த எங்குடிகள் என்னென்ன பெருங்கேடு உற்றனரோ அறியகில்லேம். மக்கள் பலர்க்கு நலஞ் செய்வான் உன் ஒருத்தனுக்குக் கொல சூழ்ந்தனம்”என்று அச்செங்கோலன் விளம்பினான். அது கேட்டு, மதிநலம் வாய்ந்த அச்சிற்றிளைஞன், அமைச்சரீர்! கேண்மின்! என்முகத்து விழித்தமையால் அரசன் உற்றதோ, தலைப்புறச் சிறுகீறல். அரசன் முகத்து விழித்த யான் உறுவதோ உயிர்க்கொலை. யார் முக விழிப்பு நாட்டிற்குப் பேரழிவு? என்று துணிச்சலாய் வினவி மீட்சி பெற்றான். இச்சிறுபையன் வினா ஒட்பம் காட்டுவது. மக்கள் பால் கல்லாக் குழவிப் பருவத்து ஒளிறும் இயற்கை யறிவெல்லாம் ஒட்பம் எனப்படும். கல்லாதான் ஒட்பம் கழியநன் றாயினும் கொள்ளார் அறிவுடை யார் (404) என்பது இச்சொல் ஆளப்படும் ஈரிடங்களில் (404,425) ஓரிடம். கல்லாதான் ஒட்பத்தை அறிவுடையார் ஏலார் என்றதனால், ஒருவன் ஒட்பம் கல்வியொடு சேர்ந்த வழி அவர் ஏற்பர் என்பது கருத்தாயிற்று. சாணை பிடியா மணிபோல்வது ஒட்பம். அது நூலோடு தீட்டிய வழி. அஃதாவது ஒட்பமும் கல்வியும் இயைந்தவுணர்ச்சி - அறிவு என்ற பெயர்க்கு உரித்து. மதிநுட்பம் நூலோடு உடையார்க்கு (636) என்ற குறளால் ஒட்பத்தீட்டு வேண்டுவர் ஆசிரியர். ஆவின் இயற்கையாற்றல் முழுதும் பாலாக மாறிவிடுவதில்லை. அஃதொப்ப, ஒருவன் இயற்கை யறிவாம் ஒட்பம் முழுதும் அறிவாய் ஒருபோதும் மாறுவதில்லை. கல்லா வொட்பக் கூறும், கற்ற அறிவுக்கூறும் ஆகிய இரு நிலையும் ஒவ்வோரளவில் மக்கட்கு உண்டு என்ற காரணத்தால், மதிநலத்தின் மாண்ட அறிவினர் (915) என்றார் ஆசிரியர். கல்வி என்பது பிறர் அறிவுத் தொகுதி; இறந்த கால நிகழ்காலக் கருத்துத் தொகுதி; எள்ளும் பஞ்சும் போல்வது. அறிவு எனப்படுவது வருங்கால முன்னுணர்வு; அவ்வுணர் விலும் மயக்கற்ற நல்லுணர்வாம் என்பது வள்ளுவம். அறிவுடையார் ஆவது அறிவார்(427) என்னும் குறட்பகுதிக் கண் ஆவது என்னும் கிளவி எதிர்வோடு தக்கதையும் சுட்டும். கல்வி வேறு அறிவு வேறு; கற்றார் வேறு அறிவுடையார் வேறு. பலகற்றும் உலகத்தோடு ஒட்ட ஒழுகல் காணாதாரைக் கல்லார் என்று நிறுத்தாது, அறிவிலாதார் (140) என்று முடித்தல் காண்க. அறிவுடையார் எல்லாம் உடையார் என்ற தனிப் பெருமை கற்றார்க்கு இல்லை. அறிவிலார் என்னுடைய ரேனும் இலர் என்ற குழுவில் ஆவது அறியாக் கற்றாரெல்லாம் அடங்குவர். நிரம்பிய நுண்ணிய நூல்பல கற்பினும், அவற்றுள் வாழ்வுக்கு நல்லது நாடிக் காணும் முன்னுணர்வு வேண்டும் கருத்தானன்றே, தமிழ்மொழியில் காட்சி என்பது அறிவுக்கு ஒரு பெயராயிற்று. பல நல்ல கற்றக் கடைத்தும் என்ற திருக்குறளும், காதல் மிக்குழி கற்றவும் கைகொடா என்ற சீவக சிந்தாமணியும், கற்றவர் ஞானம் இன்றேல் காமத்தைக் கடக்கலாமோ என்ற இராமாயணமும் அறிவிலாக் கல்வியின் இழிவு தெரிப்பன. மக்களாய்ப் பிறந்தார் எல்லார்க்கும் இயற்கை யறிவு என்னும் ஒட்பம் உண்டு. ஆனால் பலர் அவ்வொட்ப மணியைக் கையாண்டிலர்; தீட்டிலர். தீட்டிய ஒரு சிலரும் தம் அறிவுக் கூர்மையை, படைகொண்டார் நெஞ்சம்போல் (253) என்றபடி, பண்பாக ஆண்டிலர் என்று கண்டார் அறிவாசான். இயற்கையறிவை ஒளிபெறத் தீட்டவும் ஒழுக்கம்பெற ஆளவும் கற்றுக் கொடுக்கும் இரு நோக்கினராய், அறிவு அதிகாரத்தைப் புதுமுறையில் யாத்தார். அறிவாவது யாது? என்று விளம்பாமல், அறிவு தீட்டும் இடங்கள் யா? என்று விரித்துரைத்தார். இடையறா அறிவுத் தீட்டுக்குக் கருத்துக்கள் நிரம்பவேண்டும். எண்ணச் செறிவு சான்றோர் எழுதிய நூல்களிடைத் திணிந்து கிடக்கும் என்ற காரணத்தான் அன்றோ கல்வி மக்களுயிர்க்கு இன்றியமையாத தாயிற்று. எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு (423) என்பது அறிவு உராயத்தகும் ஓரிடம். யாரொருவரும் தங்காலத்துக்கும், சூழ்நிலைக்கும், தாம் பெற்ற கல்வி கேள்விகட்கும், தம் வாழ்நிலைக்கும் உள்ளாகித்தான் கருத்துக்களை மொழிவர்; எழுதுவர். கொள்கலம் போல் அப்படியே ஏற்றுக்கோடல் அறிவு எனப்படாது. ஏன்? கணித்துணர்தலே அறிவின் தொழில். தன் வாழ்நிலை சூழ்நிலை காலநிலைகளுக்குப் பொருந்துங்கொல்? செயற்படுங்கொல்? எனக் கற்ற கேட்ட கருத்துக்கள்மேல் ஓர் எதிர்நோக்குப் பாய்ச்ச வேண்டும். இங்ஙன் அளவு மறித்து ஓடுவதால், பெரியோர்தம் சொல்மேல் அவநம்பிக்கை என்றோ ஐயுறவு என்றோ குறை கூறற்க. யார் தரினும் பணத்தை எண்ணிப் பார்த்து வாங்குகின்றோம். சரிபார்க்கிறாயே, என்மேல் நம்பிக்கை யில்லையா என்று இயல்புடையார் கேளார். நீயும் ஒருமுறை எண்ணிக் கொள் அப்பா! யார்க்கும் வழுக்கு உண்டு என்றுதான் நாணயம் சிறந்தாரும் வலியுறுத்துவர். இஃது ஒழுங்கியல். தாங்கள் மொழிந்தவற்றை எழுத்து விடாமல் அப்படியே தலைக் கொண்டேன் என்றால் அதனைச் சான்றோர் உவவார். நீயும் உன் அறிவுகொண்டு உண்மைகாண் என்றே யாப்புறுப்பர். சொல்லியவர் திருவள்ளுவர் என்பதற்காக, அவர் கூற்றை ஆய்வின்றி ஒப்பக் கடமைப்பட்டிலம். இவ்வறிவுப் பெருமிதம் திருக்குறள் கற்பார்க்கு வேண்டும். வன்புறை யில்லாமலே மக்களைக் கட்டுண்ணும் ஆற்றல் சான்றது உண்மைப் பொருள். வள்ளுவர் உரைத்தனவும் கற்பவர் தம் ஆராய்வுக்கு உரியனவே என்ற குறிப்பு. யார் யார்வாய்க் கேட்பினும் என்ற குறளகத்துக் கிடக்கின்றது. பசும்பொன் உரைதொறும் தானும் ஒளிசிறந்து கட்டளைக் கல்லுக்கும் ஒளிமிகுக்குமாப்போல், திருக்குறள் அனைய மெய்ப்பொருளை ஆய்தொறும் உண்மையும் முன்னையினும் ஒளிறும்; அதனைத் தாக்கிக் கணிக்கும் வினையிடை நம் அறிவும் இலங்கும். இத்தீட்டுவினையின்றேல் நம் அறிவொடு பெரியோர்தம் உண்மையும் துலங்கா. ஆதலின் ஆராய்வது அவநம்பிக்கை என்னற்க; அறிவொளி என்று ஆய்க. சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ நன்றின்பால் உய்ப்பது அறிவு (432) என்பது அறிவு ஓய்வு ஒழிச்சலின்றி, வாழுங்காறும் விழிப்பொடு தீட்டிக்கொண்டு இருக்கவேண்டிய பிறிதோரிடம். கார் மிதிவண்டி முதலாய ஊர்திகளில் உள்ள அடக்கியின் பயன் என்னை? ஓட்டத்தின் வேகத்தை வேண்டியவளவு மேற் கொள்ளற்கும், பிறவுயிர்க்கும் ஒட்டி தனக்கும் ஊறுவரின் விலக்கி நன்னெறிக்கண் செலுத்துதற்கும், அடக்கிக் கருவியை ஆளுகின்றோம். இவ்வடக்கி இல்லா ஊர்திகளுக்குச் செல்லுரிமை அரசு வழங்காது. இவ்வுவமை நெஞ்சுக்கும் அறிவுக்கும் பொருந்தும். உலகச் சூழல்கள் என்றும் நம் மனத்தைக் கரைமோது அலைபோல் தாக்கிய வண்ணம் உள. தாக்கெண்ணங்களுள் வேண்டாதவற்றை முன்னரே ஒதுக்கிக் கொள்ளும் ஓய்வு மனத்துக்கு இல்லை. நன்றோ தீதோ ஒன்றினைப்பற்றி நிற்றல் மனவியல்பு. அவ்வழி அமைச்சன் போல் காத்தோம்பல் அறிவின் கடன். தீயது பற்றுங்காலைப் பிடித்திழுத்தலும், மீண்ட மனத்தை நல்வழிப் புகுத்தலும் அறிவின் ஒழிவில் தொழில்களாம். மனம் என ஒன்றுள்ளவரை அறிவின் வினைக்கு ஈறில்லை. உள்ளத்தின் இயக்கத்தை ஆகாவழி மறிப்பதாலும் ஆகுவழி உய்ப்பதாலும் அறிவு தீட்டுப் பெறும்; கூரியதாய் ஒளிறும். அறிவு தீண்டா நெஞ்சு மூக்கணாங் கயிறு இல்லாப் பொலிகாளை ஒக்கும். பிறப்பறிவை வாழ்வுத் தொடர்புடைய அனைத்துக் கருத்தோடும் உராய்ந்தும் பகுத்தும் கணித்தும் ஆகவேண்டும் என்பது வள்ளுவம். ஆதலின், தீதுஒரீஇ நன்றின்பால் உய்ப்பது அறிவு (422) மெய்ப் பொருள் காண்ப தறிவு (423), பிறர்வாய் நுண்பொருள் காண்பது அறிவு (424) என்றவாறு அறிவாளுகைக்கு இடம்பல வகுத்தோதினர். உடம்புபோல் அறிவு யார்க்கும் உள்பொருளாதலின், அது வேண்டும் என விதிப்பது பொருளற்றது என்று எண்ணினார் வள்ளுவர்; அதனால் ஆள்வினை அதிகாரத்து மெய்ம்முயற்சி வேண்டினாற்போல, அறிவதிகாரத்து ஆவது காணும் அறிவாட்சியே வேண்டினர் என்று கொள்க. திருக்குறள் கற்பவர் தம் அறிவை ஆளுவர் என்று நம்பியே ஆசிரியர் நூல் யாத்தார் என நாம் உளங்கொள்வோமாக. தன்னறிவு என்னும் தூய நெடுங்கையை நீட்டுவார்க்குத்தான் ஏற்ற குறட்பொருள்கள் அகப்படும். இந்நூல் பல நிலையறம் கரையும் மாட்சித்து; ஆதலின் அப்பன்னிலையுள் தன்னிலை எது? எனக் காண்பது அவரவர் அறிவின் தனிக்கடன். தூங்குக தூங்கிச் செயற்பால (672) என்ற குறட்படி, நீட்டிச் செய்யும் வினைகள் யாவை? செய்தக்க வல்ல செயக் கெடும் (466) எனின், செய்யத் தகாதன யா? எவ்வது உறைவது உலகம் (426) என்றபடி, உலகம் போகும் போக்கு யாது? அவரவர் பண்பு அறிந்து ஆற்றாக் கடை (469) என்றால், அவரவர் பண்பு எது? கற்க கசடறக் கற்பவை (391) கற்பவை யாவை? கடன் என்ப நல்லவை எல்லாம் (981) நல்லவை யா? அமைந்தாங்கு ஒழுகான் அளவறியான் (474) அமைவும் அளவும் எவை? ஒல்லும் வகையான் அறவினை (33) ஒல்லும் வகை யாது? எனவரூஉம் எண்ணிலா வினாக்களுக்கு உரிய விடை கண்டு செய்வது நம் அறிவின் பொறுப்பு. சோறு உண்ண வழங்கலாம்; ஊட்டவும் செய்யலாம். பிறர் உதவி இவ்வெல்லைப்பட்டது. மென்று உட்கொளல் வயிறுடையான் வினை. எனைப் பெரிய நூலும் கருத்து வழங்கும்; உளங்கொளச் சொல்லும். நூலுதவி அவ்வளவிற்று. அக் கருத்துக்களை நிலைக்கேற்பக் கணித் துணர்ந்து செய்தல் அறிவுடையான் வினை. முடிவில் அவனவன் வாழ்க்கை அவனவன் அறிவாட்சிக் கண்ணது என்பது வள்ளுவம். இவ்வுண்மையை ஒருதலையான் முற்றுணர்ந்த வள்ளுவர். அறிவுடையார் எல்லாம் உடையார் (430) எனப் பொய்யாக் கருவி மொழிந்தார். வெள்ளத்து அனைய இடும்பை அறிவுடையான் உள்ளத்தின் உள்ளக் கெடும் (622) ஆக்கங் கருதி முதலிழக்கும் செய்வினை ஊக்கார் அறிவுடை யார் (463) பொதுநலத்தார் புன்னலம் தோயார் மதிநலத்தின் மாண்ட அறிவி னவர் (915) என வரும் பல குறள்களால், அறிவை நம்பியே ஆசான் வாழ்வியல் வகுத்தார் என்பது பெறப்படும். பிறப்புக் கருவியை முன்னதாப் பயன்படுத்தும் நினைவும் துணிவும் மக்கட்கு இல்லை. முன்னோ பின்னோ வீழ நிற்கும் அடியற்ற வீட்டுச் சுவரை உடனே வீழ்த்தும் அறிவுத் துணிவுடையார் எத்துணைப் பேர்? சுவர்தானே வீழ்ந்து சிலரைக் கொன்றபின், அன்றே இங்ஙன் நிகழும் என எண்ணினேன் என்று துயர்ப்படுவாரே பலர். பெருத்த செல்வக் கணக்கு வழக்குக்களைக் கூடுதல் குறைவு பாராது. பொய்ம் மானப்படாது. சிக்கலறுத்துக் கொள்ளும் முன்னறிவினர் எத்துணையர்? பொருள் பறிப்பார் கூற்றை நம்பி, கைப்பொருளை மானத்தோடு இழந்து, அறிவும் சுருங்கி மன்றேறித் திரிவாரே சாலப் பலர். ஆகாச் சுற்றுப்புறச் சமூகத்தை விடுத்து, யாரும் அறியாப் புத்தூர் போகி வாழவல்ல முன்னுணர்வினர் எனையர்? பிறந்த ஊராயிற்றே எனத் தம்மூர் பற்றுக்கொண்டு, உள்ளது சுருங்கிக் குற்றுயிராய் மடிவாரே பலப்பலர். உடல் வலிக்கு ஏற்ப அடக்கிச் சிற்றின்பம் துய்ப்பாரும், பொருள் வலிக்கு ஏற்பக் குழந்தைகள் பெற்றுக் காமத்துறவு கொள்வாரும், எவ்வெண்ணிக்கையர்? அறிவு அற்றம் காக்கும் கருவி என்பது காப்பு வள்ளுவம். இக் கருவியை முன்கூட்டியே ஆளாதார் வாழ்வு சீரழியும் என்பது உலகக் காட்சி. எதிரதாக் காக்கும் அறிவினார் (429) என உடன் பாட்டானும், வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை (435) என எதிர்மறையானும், ஆவது காணும் அறிவுவன்மை வாழ்வுக்கு இன்றியமையாது என வலியுறுத்துவர். உலகப் போக்கினை ஒரு நூறாண்டளவும் முன்அறிந்து கணிக்கவல்ல திறத்தினரும், நம்முள் அரியராக உளர். தம் பின்னை வாழ்நாள் முழுதினையும், இருபத்தை யாண்டு ஐம்பதினாண்டு முன்கூட்டியே வகுத்தியலும் அறிவுக் கூறுடையாரும், நம்மிடைச் சிலராக உளர். நாலைந்து ஆண்டு நாலைந்து திங்கள் நாலைந்து நாள் எனக் குறுகிய வருங்காலத்தை முன்னுணரும் பெற்றியாளரும்கூட, எண்ணத் தக்கவராகவே உளர். மறுகணம் வருவது பகுத்து முன்காண வல்லாதாரும், அங்ஙன் காலப் பகுத்தறிவு வேண்டும் என்ற உணர்வுகூடத் தோன்றாதாரும், நம்முள் பலப்பலர். இப்பலருள் கற்றார் பெரும்பாலோரும் அடங்கக் காண்கிறோம். கற்றார் பலர் அறிவுடையாராக வளரவில்லை. ஆடை நெய்பவன் தொழிலாளி எனப்படுவானே யொழிய, அதனை உடுப்பவன் உடுத்துந் தொழில் காரணமாய்த் தொழிலாளி எனப் பெயர் பெறுவானா? வருங்கால உலகைப் பன்னூறாண்டு நினைந்து தம் அறிவை நூலால் வடித்தவர் அறிவர் எனற்கு உரியரே அன்றி, அப்பனுவலைக் கற்கும் அறிவு மாத்திரையால், கற்பவர் அறிவர் என்ற பெயர்க்கு உரியர் ஆகார். மறுவில் செய்தி மூவகைக் காலமும் நெறியின் ஆற்றிய அறிவன் என்றார் தமிழ் முதல்வர் தொல்காப்பியர். இறப்பும் நிகழ்வும் ஆகிய கல்வி நிலைக்களத்தினின்று, மெய்யான எதிரது உய்த்துணர வல்லுநரே அறிவர் ஆவர். நீடிய வருங்காலத்தை முன் எண்ணுதல் அளவில், அறிவின் இலக்கணம் நின்றுவிடவில்லை. அங்ஙன் எண்ணுவது பிறழா திருத்தலும் வேண்டும். செம்மை தழுவிய மயக்கமில் எதிருணர்வே மெய்யறிவு எனப்படுவது. மக்களுள் எத்துணைச் சால்பினரும் முற்றிய மெய்யறிவுடையவராகக் காணோம் கூர்த்த அறிஞர் என ஞாலப் புகழ் பெற்றாரும் சில பல கால் பிழைப்பக் காண்கின்றோம். நாட்டின் செலவினைக் கணித்தறிந்த இந்திய முதல்வர் காந்தியடிகள் அறப்போர் துவங்கினார். சௌரி சௌரா என்னும் இடத்து எதிர்பாரா வகையாய் மறக்குற்றம் நிகழ்ந்தது கண்டு, அறப்போரைத் திடீரென நிறுத்தினார். தம் கணிப்பு பிழை என்றும், அறப்போர்க்கு இந்தியா பக்குவம் எய்திற்றிலது என்றும் மெய்யுணர்ந்தார். கற்றதனால் ஆய பயனென்கொல்? வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின் (2) என்றபடி, வாலறிவுத் தொழுகை நம் பிறப்பு வள்ளுவம். உள்ளன கற்றதன் பயன் உறுவதை மயக்கமின்றி அறிதல் என்னும் மெய்ப்பொருட் கொள்கையை, மக்கட் பிறப்பினர் யாரும் மறார். ஒன்றில்லார் அதனைப் பெறுதற்கு உடையாரைச் சார்தல் உலகியல்பு. இறைவனை வாலறிவன் என்று அறிமுகப்படுத்தியதனால், மருளறிவினராகிய நாம் அவனை வணங்குதொறும் இடையறாது எண்ணுதொறும் தூயறிவு ஊறப் பெறுவோம் என்பது வள்ளுவர் நெஞ்சம் ஆயிற்று. வாழ்வின் குறிக்கோள் மாசில் மெய்யுணர்வு பெறுகை என்னும் திண்ணிய எண்ணக் கொழுந்தினையே, வாலறிவன் நற்றாள் தொழல் என உருவகஞ் செய்தார். இறையுண்மை கண்டவர் என்பதற்கு, ஒருவர் தம் பொய்யில் அறிவே மெய்ச் சான்றாகும். தூயவறிவு தேடாதவர் இறைக் கொள்கை சாற்றினும், தம் செயலால் அதனை மறுப்பவர் ஆகின்றார். தூய அறிவுப் பசியுடையார் தாம் இறைக் கொள்கை இலர் எனினும், என் தாய் மலடி என்பது போலத் தம் செயலால் இறையுண்மை ஒப்பியவர் ஆகின்றார். தத்தம் கருமமே கட்டளைக்கல் அன்றோ! ஒருவர் எய்திய இறைத் தன்மையைக் கணித்தற்கு வேறு அளவுகோல் வேண்டா; அவர்தம் அறிவே அமையும். காலவுணர்வும், தூயவுணர்வும் நம்மறிவு பெற்றது எவ்வளவு அவ்வளவே காண். நாம் எய்திய இறைத் தன்மையும் வணங்கிய இறைத் தொழுகையும் என்று துணிக. 8. குடும்ப வாழ்க்கை வாழ்வாங்கு வாழும் குடி மக்களே! மெய்வணக்கம். மூன்றாம் நாட் பிறையன்று திருக்குறள் முதல் சொற்பொழிவு துவங்கினோம். பிறை வளர்தொறும் அதன் ஒளி உடன் வளருமாப் போல, நம்கூட்டம் பெருகு தொறும் புத்துணர்ச்சி பெருகக் காண்கின்றோம். நாள்தொறும் புதுமுகங்கள் தோன்றக் காண்கின்றோம். சென்ற ஞாயிற்றுக் கிழமை இவ்வவை தொடங்கிற்று. இன்று மறு ஞாயிறு. எட்டு நாட்களாகத் தொடர்ந்து கூடி, வாழ்க்கை நோக்கம் தலை வைத்துக் குறளை ஆராய்கின்றோம். முயலா மடியர்களும் கல்லா மடவர்களும் மண்டிக் கிடப்பது நம் நாடு. இன்ன கீழ்மக்கட்கு முயற்சியின் ஆண்மை யையும் கல்வியின் விழுப்பத்தையும் வலியுறுத்தற்கென, ஆயுத விழா என்றும், கலைமகள் விழா என்றும் முன்னோர் திருநாள் நிறுவினர். இந்நாட்களில் மடியர் வினைசெய்யத் தொடங்குவ தில்லை; கல்லார் கற்க முனைவதில்லை. அதன் மேலும், ஐயகோ! நாம் காணும் முரண் என்ன? முன்னெல்லாம் முயற்சி யுடையாருங்கூட, ஆயுத விழாவன்று கருவிகளையெல்லாம் குளிர்ப்பாட்டி வாளா மடிந்திருப்பர். கற்றாருங் கூட, கலைமகள் விழாவன்று நூல் ஏடுகளையெல்லாம் மூட்டை கட்டிக் கல்லாதிருப்பர். ஆள்வினைக்கு உரிய விழாவை மடிவிழாவாக, கற்றற்கு உரிய விழாவைப் பேதை விழாவாக, மாறிச் செய்யும் திரிபுணர்ச்சி நம் நாட்டின் பண்பாய் ஊறிவிட்டது. நாட்டு நோக்கத்தினும், ஒன்றையொன்று தூற்றும் நோக்கமே பல்வகைக் கட்சிகளிடை வளர்ந்து வருவதுபோல, பெரியோர் சொல்லியவற்றைச் செய்யும் உணர்ச்சி யினும் அங்ஙன் சொல்லிய பெரியோரை வழிபடும் உணர்ச்சியே மக்களிடை முந்தி நிற்கின்றது. செயற்பாடே வழிபாடு; ஏனைய வெல்லாம் ஊரை ஏய்க்கும் போலிக் கூப்பாடு என்ற உண்மையை, வள்ளுவரையும் காந்தியையும் தோற்றிய இந்நன்னாடு அணிமையில் உணர்ந்து கொள்ளும் என்று நம்புகிறேன். விழாப் பேரிட்டுப் பின்னும் மடிபுகும் இந்நாட்டில், நாம் எண்ணாளாகக் குறளைச் செவிமடுத்து வருகின்றோம். வாய்மைக் கழகம் காட்டும் ஒழுங்கு இது யாரும் எவ்வினைக்கும் ஓய்வு விழைவது இந்நூற்றாண்டு இயல்பு. நீங்களும் குறளோய்வு வேண்டவில்லை எனக்கும் அது மனத்திற்படவில்லை. செல்லும் வாழ்க்கைக்கு ஓய்வு இருந்தாலன்றோ செய்யும் குறளுக்கு ஓய்விருக்கும். மனமடிவும் வினைமடிவும் ஓய்வல்ல. ஒரு நினைவு விட்டு மறு நினைவு எண்ணுவதே, ஒருவினைவிடுத்து மறுவினை தொடங்குவதே - மாற்றமே - ஓய்வு எனப்படும். நாள் தவறா நம் குழு எதனை அறிவுறுத்துகின்றது? உயிரினும் சிறந்த வாழ்வுநூலை - செயல்நூலை - நம் முன்னோர் கல்லாது கொன்னே கழித்திழந்த ஆண்டுகள் பல என்று கவன்று, அவற்றையெல்லாம் ஈடு செய்யும் முனைப்பையன்றோ இக்குழு தோற்றரவு செய்கின்றது. செய்யப் பிறந்த திருக்குறளைச் செய்யாது தற்கொலைப் பட்டோம்; இனிப் படோம் என்ற மனப் புரட்சியை யன்றோ இவ்வவை புலப்படுத்துகின்றது. எனைப் பெரிய வேலையையும் சற்றே இரு என்று தள்ளி வைத்து, ஆறு முதல் ஏழு வரை ஒரு மணிப் பொழுது ஈண்டுக் குழுமும் உங்கள் ஆர்வம் இனி இத்தமிழகத்து நீடு வாழிய. நாட் கருமத்தை ஒதுக்கிக்கொண்டு, எக்காரணத்தானும் குறளொதுக்கம் செய்யா உங்கள் ஒழுங்கு இனிவரும் தமிழர்க்கெல்லாம் அமைவதாக, வள்ளுவர் மக்கள் வாழ்விற் குறள் கண்டார்; மக்கள் அவர் குறளில் வாழ்வு காண்பாராக. குடும்ப வாழ்க்கை என்பது எட்டாம் நாள் மாலைத் தலைப்பு. இத்தலைப்பை வெளியிடும்போதே என் அகம் உவக்கின்றது; இன்பம் சிறக்கின்றது. ஏன்? குடும்பமாதல் உயிரின் இயல்பு; உலகநிலை. ஆண்,பெண் துறவு குறித்து மூன்று கோட்பாடுகள் நூல் வழக்கிலும் மக்கள் வழக்கிலும் உள. அவற்றுள் ஒன்று பிறவித் துறவு; என்றும் மணமின்றி இருப்பது. இம் மணவாத் துறவு வள்ளுவர்க்குச் சிறிதும் உடன்பாடன்று. ஆண் தனிமையும், பெண் தனிமையும் வாழ்வு எனப்படா; காமஞ் சான்ற உயிர்ப்பிறப்புக்கு இயற்கை யாகா. மிகநலம் பெற்றாள் தமியள் மூத்தற்று (1007) எனத் தனி நிலைக்குக் கழிவிரக்கப்படுவர் ஆசிரியர். ஊமை நாவடக்கத்தன் ஆகான்; பேடி புலனடக்கத்தன் ஆகான். கண்ணிருந்தும் தீயது காண மறுப்பவன், செவியிருந்தும் தீயது கேட்க மறுப்பவன், நாவிருந்தும் தீயது சொல்ல மறுப்பவன் அடக்கமுடையவன் ஆவான். ஆகுங்கால் விடுத்து ஆகாக்காலை மடக்கும் வன்மையே அடக்கம் எனப்படும். இஃது ஒழுங்கியல். இந்நிலை காம நுகர்ச்சிக்கும் ஒக்கும். பரத்தை நச்சாது பிறன் மனை நயவாது ஒழுகும் ஒரு மனை வாழ்க்கை மெய்யாகவே காமவடக்கம் எனப்படும். இவ்வுலகியல் ஒழுக்கத்தை - பிறப்பொழுக்கத்தைத் - தன் நெஞ்சு அறியத் துறத்தல் என்பது பிறப்பையே மாய்ப்பார்க்கு கடைபோவதாகும். ஒரு மனை வாழ்க்கையாம் இல்லறம் நன்றா; இளமைத் துறவறம் நன்றா? என ஆராய்ந்த வள்ளுவர் இத்துறவு நெறியை இயற்கைக்குப் புறத்தாறு என்றும், இத்துறவோரை இயற்கை கடக்க முயல்வார் என்றும், இத்துறவுப் பயனை போஒய்ப் பெறுவது எவன் என்றும் பொருந்தாமை சுட்டினர். அறத்துப்பால் - திருக்குறள் முதற்பால் - இல்வாழ்க்கை, வாழ்க்கைத் துணை, மக்கட்பேறு எனக் குடும்பப் பற்றுக்கோடு கொண்டு அன்பான் இயங்குவதை நாம் உணரவேண்டும். அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை (49) என்றார்; ஆதலின் குடும்பம் அறமும் ஆயிற்று; வாழ்வும் ஆயிற்று. இரண்டாவது கோட்பாடு குடும்பத்துறவு; மனைவியை இடைநடுவிற் கைவிட்டுச் செல்வது. இம் மணந்த துறவும் வள்ளுவர்க்கு உடம்பாடன்று. உடம்படுவரேல், குடும்பம் என்பது ஆடவன் நலத்துக்கே ஏற்படுவது என்றும், பெண் அவன் தன் இன்பக் கருவி என்றும் கருதியவர் ஆவர். மனைவியைப் பெண்ணிற் பெருந்தகை யாவுள (54) என்றும், மக்களைப் பெறுமவற்றுள் யாம் அறிவதில்லை (61) என்றும், ஒருதலையாய்ப் பாராட்டிய ஆசிரியரோ அன்னோர் துறத்தற்கு உரிய துன்பப் பொருள் என்று முரணி மொழிவர்? துறவு குறித்த வள்ளுவத்தை அறிய விரும்புவார் துறவு அதிகாரத்தை நோக்குவாராக, மனைவி மக்கள் சுற்றம் முதலாய குறிப்பின்மையை - உயர்திணைத் துறவின் தன்மையை நினைவாராக. அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை என்ற குடும்ப நிலையைத் துறக்கச் சொல்வாரா? ஓரறம் விடுவது பிறிதோர் அறமாமா? வாழ்க்கை என்பது அகத்திணை; ஆண் பெண் என்னும் ஈருயிர்க்கூட்டு. குடும்பத்துள் இன்றியமையாதவர் ஆணா? பெண்ணா? என்பது பயனற்ற வினா. ஒரு நாளுள் சிறந்தது பகலா? இரவா? என்பதை ஒக்கும். கிழவன் கிழத்தி என்றும், தலைவன் தலைவி என்றும், காதலன் காதலி என்றும், ஏற்றத்தாழ்விலாப் பெயர்களையே ஆளுவர் தமிழ் நூலோர். இருவருள் யார் மாயினும், எஞ்சியோர் நிலை வாழ்க்கை யாகாது. காதலி இழந்த தபுதார நிலையும், காதலன் இழந்த தாபத நிலையும் எனத் தமிழ் முதல்வன் தொல்காப்பியன் கூறியாங்கு. இழவு நிலையாகிப் புறத்திணைப் பாற்படும். இது தமிழ்த் துணிபாதலின், குடும்பம் ஆண் நன்மைக்கு உரியது என்றும், குடித்துக் கழிக்கும் குவளைபோல நுகர்ச்சிக்குப்பின் பெண் துறக்கத் தக்கவள் என்றும், காணா அவ்வுலக வீடு கருதிக் கண்ட இவ்வுலக வீடு துறக்கத் தகுவது என்றும், சாற்றும் கொள்கைகள் எல்லாம் வள்ளுவமுரண்கள் எனத்துணிக. மணவா நிலையும் துறவன்று; மணந்து விடுகையும் துறவன்று. பற்று நீக்கமே வள்ளுவத் துறவாகும். இயல்பாகும் நோன்பிற்கு ஒன்றின்மை (344) என உடைமைப் பற்றும், அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை (343) என உடற்பற்றும், பிறப்பறுக்கல் உற்றார்க்கு உடம்பும் மிகை (345) என உயிர்ப்பற்றும் எனவாங்கு. யான் எனது என்னும் தற்பற்று அறுவதே உண்மைத் துறவு. ஓர் உயர்திணை மற்றோர் உயர் திணைக்கு உடைமையாதல் இல்லை. பெண்டிரும் மக்களும் உறவுப் பொருளேயொழிய, மாடு வீடுபோல ஒருவன் உடைமைப் பொருள் அல்லர். இவ்வுலக உண்மையை - தமிழ் கண்ட உண்மையை - சமூகவடிப்படையாகக் கொள்ளல் வேண்டும். யாதனின் யாதனின் நீங்கியான் (341) என்ற அஃறிணைச் சுட்டால், பொருள் உடல் உயிர் என்னும் தன்னகத் துறவையே - மனத்துக்கண் பற்று அவிதலையே - ஆசிரியர் முடித்துக் கூறினார். இல்லறமும் துறவறமும் முரணுடை ஒழுக்கங்கள் அல்ல; அடிமரமும் பரந்த பெருங்கிளையும் போன்றன. அன்பும் அருளும் சான்றன. அன்பு நீங்கியது அருளன்று; அன்பின் பரப்பே அருளாவது. ஒரு குடும்பம் விடுவது துறவன்று; உலக முழுவதையும் தன் குடும்பமாக அணைப்பதுவே துறவாகும். பிறப்பு என்னும் அறிவு வித்திலிருந்து இல்லறம் என்னும் அன்புமரம் தோன்றித் துறவு என்னும் அருட்பழம் கனிய வேண்டும். அருள் என்னும் அன்பீன் குழவி (757) என்பது குறள். இல்லறம் இருபாற்கும் உரியதுபோல், துறவறமும் ஒக்க அவ்விரு பாலார்க்கும் உண்டு. ஒருவரை ஒருவர் கைவிடார். ஆள் துறவாது அவாத் துறப்பர். முன்னெல்லாம் ஓர் இன் பண்டத்தைத் தான் நுகராது வைத்திருந்து கணவன் தன் மனைவிக்குக் கொடுப்பான்; அதுபோல் மனைவியும் கொழுநனுக்குக் கொடுப்பாள்; பெற்றோர் தம் மக்கட்குக் கொடுப்பர். பிறர்க்கு வழங்கும் இவ்வன்புநிலை இல்வாழ்க்கைக் கண் குடும்பவுறுப்பினர் அளவில் காணப்படும். இந்நிலை முதிர்ந்த துறவுக்கண், உலகத்தையே தம் குடும்ப உறுப்பினராக மதிக்கும் அருள்நிலை பிறக்கும். இருநிலைக் கண்ணும் குடும்பம் என்பது உண்டு; தலைவன் தலைவியர் உளர். உடம்பு இளமை முதுமை எனப் பருவமாற்றம் உறுதல்போலக் குடும்பம் இல்லறம் துறவறம் என அறமாற்றம் பெறும் என்பது சுருங்கிய விளக்கம். மக்கட் பெருமகன் வள்ளுவர் கண்ட துறவு நெறிக்கு. உலகச் சான்றோன் காந்தியடிகளின் தூய வாழ்க்கைதான் பொய்யா இலக்கியமாவது என்று நாம் தெரிந்து கடைப் பிடிப்போமாக. மணவாத்துறவு உலகியல்பு அன்று; மணந்த துறவு செய்ந்நன்றி அறிவன்று என்று கொண்ட ஆசிரியர். உலகு ஒட்டும் அறங் கரைவதே வள்ளுவம் ஆதலின், இல்லறம் விடாத் துறவறம் கூறினார். மனம் அறி நண்பர்களே! முத்திறத் துறவுகளுள் மக்கள் யாரும் ஒருவந்தம் கொள்ள வேண்டுவது, பற்றுத் துறவு என்பதில் ஐயமில்லை. மணந்துவிடும் தன்னலத் துறவு ஒருவரும் கொள்ளத் தகாதது என்பதிலும் ஐயமில்லை. மணஞ் செய்துகொளாப் பிறவித் துறவு பற்றி ஒன்று சொல்ல விரைவல். இத்துறவு இயற்கை முரண்; கொளற்கு அரியது என்றாலும் ஒரு சிலரேனும் கொள்ளற்கு உரியது. குடும்பப் பொறை சுமக்க அஞ்சியோ, தான் தோன்றித்தனமாய்க் கண்டவாறு திரிய விழைந்தோ, சில பல வேக வெறுப்புக்கு உட்பட்டோ, இளமைத் துறவு கோடல் கூடா வொழுக்கமாய் இழிக்கப்படும். துறவு நெறிக்கே அவஞ் செய்வதாகும். துறவு இனிக் கடைபோகாது என்று அறியவரின், தன் நெஞ்சு அறியப் பொய்த்து வாழாது, பிறர் நகைப்பர் எனப் பொய்ம்மானம் பற்றாது துறவு உதறி, உண்மையை விளம்பி, மணந்து வாழத் துணிய வேண்டும். பிறவியூட்டம் வேடத்தாலும், வெற்றாரவாரத்தாலும் சிறிதும் குறையாது என்பது வெளிப்படை. பால் வழிச் செல்லாப் பிறவி யாற்றலை, மனம் நிறைந்த ஒரு குறிக்கோள்வழிச் செலுத்தல் வேண்டும். உலக நலன், நாட்டு நலன், குடிநலன், மொழிநலன், உயிர் நலன், ஏழை நலன் என்ற வகையில் ஒன்று பல மேற் கோடற்கு உரியன. காமத்தால் கலக்குறும் மனத்துக்குத் தூய குறிக்கோள் ஒரு பற்றுக்கோடு ஆகும். கோள் அற்ற துறவு முடிபு எய்தாது. ஒழுக்கத்து நீத்தார் பெருமை (21) என்றபடி, ஒழுக்கம் சான்ற அடிப்படையில் பூணும் மெய்த்துறவு - முற்றிய தன் அவிவு - வரவேற்கத் தகும். அஞ்சாமையும், பொய்யாமையும், அரிய செய்கையும் பிழையாது, காமம் நீத்த துறவிகள் சிலரேனும் வாழும் நாட்டுக்கு, அதிரவருவதோர் சூறாவளி இல்லை. இத்துறவு இருபாலார்க்கும் உரித்து. நிற்க. இல்லறம் இயல்பு நெறி என்றாலும் விலங்கு நெறியன்று; செய்தற்கு எளிய நெறியும் அன்று. வாய்மை யொழுக்கம் இயல்பான தூயவழி என்றாலும், அதனைக் கடைப்பிடித்தல் கிள்ளுக் கீரை யன்று என அறிவோம். ரூபாய் பத்து நம்பால் ஒருவர் வேண்டும்போது, என்னிடம் ரூபாய் நறுவிதாய் இல்லை. யானும் யாரிடமாவது பற்றுக் கேட்க நினைத்திருக்கி றேன் என்று சொல்லி விடல் எளிது. இப்படித்தான் பலர் தம் நெஞ்சு அறியப் பொய்யறைப. இங்ஙன் பொய்படாது, நீ முன் என்பால் வாங்கிய கடன் தொகையை இன்னும் மாறாத நிலையில் மறுபடியும் கடன் கேட்கிறாயே என்றவாறு உண்மையை நாணும் நாகரிக நடையில் உரைப்பார் எத்துணைப் பேர்? மெய்ம்மைக்கு அறிவும் செயற் துணிவும் வேண்டுமாப் போல், இல்லறத்துக்கும் சிறப்பாகக் குடும்ப அன்பும் அதனை நடத்தும் அறிவும் வேண்டும். ஆண் பெண் கூட்டுறவு மட்டும் இல்வாழ்வு ஆகாது காண். அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் (46) இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் (47), வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் (50) என்ற குறள்களால், பண்பு உடைய குடும்பமே பயன் உடைய வாழ்வாகும் என்று விதிப்பர் ஆசிரியர். குடும்பம் என்பது ஆண் பெண்ணாகிய குடியானவர் மக்கட் பயிர் விதைத்து வளர்க்கும் மனை வயல்; குழந்தை மழலை ஒலிக்கும் இன்பக்காடு; சமூகம் கொந்தளித்து மோதும் துன்பக் குன்று; செயலெல்லாம் நினைவெல்லாம் ஓடி விழும் பற்றுக்கடல்; அன்பு நீரற்ற காலை சினைப்பாலை. குடும்பம் என்பது உலகத்துப் பலர் எண்ணமெலாம் சிறு பேரலையாக வந்து தாக்கும் மண் தீவு; சமூக வழக்கும் புத்தறிவும் பூசலிடும் போர்க்களம்; அரசு காக்கும் நுண்வேர்; நாட்டின் எந்நிலையும் காட்டும் அறிவுக் கண்ணாடி; முயல்க, முயல்க என்று தூண்டும் முள்ளிருக்கை; அச்சமில் ஒழுக்க நிலையம். குடும்ப நோக்கம் ஒரு குறுகிய நோக்கம் என்பது அறிவுக்குற்றம். இடச்சிறுமை குறுகிய எண்ணம் என்றும், இடப் பெருமை பரந்த எண்ணம் என்றும், இடவளவால் எண்ணவளவு கணிப்பது இற்றைய உலகத்துடிப்பு. தமக்குப் பிடியாவிடின், சமய வேற்றுமைக்கண் நாத்திகம் என்றும், அரசியல் வேற்றுமைக் கண் பொதுவுடைமை என்றும் நா மறந்தும் உரைக்கப் பழகிவிட்டது. அஃதொப்ப, கருத்து வேற்றுமைக் கண் எதனையும், குறுகிய நோக்கம் என்று நாத்தழும்பேறச் சொல்லி, அவ்வளவில் மகிழ்தல் இந் நூற்றாண்டின் ஆகாப் போக்கு. உலகமாவது பல் குடும்பத் தொகுதி. தனிக் குடும்பம் உலகத்தின் ஒரு கூறு. ஆதலின், தன்குடி காப்பவனை ஓரளவால் உலகம் காப்பவனாக ஒப்பவேண்டும். காவா தொழிவானேல், அக்குடி பிறர்பாரமாம் அன்றோ? அடுத்த குடும்பத்தையும் ஒரு சிறு உலகம் என்று மதியாது, அதனைக் கெடுத்தாயினும் தன் குடும்பம் பேணும் தடிமைதான் குறுகிய நோக்கம் ஆமன்றி, அல்லது செய்யாத் தன்னலம் பரந்த நோக்கின் முதலெனத் துணிக. அடுத்த அகத்து முற்றத்து வீசுவான் தன் இல்லக் குப்பை கூட்டும் மடமைதான் குறுகிய எண்ணம் ஆமன்றி, தன் தோட்டத்து மேட்டில் குவிப்பான் தன்மனைத் தூய்மை செய்யும் அறிவு உயர்ந்த நோக்கம் எனத் தெளிக. பிறரை நன்கு மதியாது தன்னையே மதித்துக் கொள்வது புன்மை நோக்கம். பிறரையே மதித்துத் தன்னை மதியாமை வாழா நோக்கம். பிறரையும் தன்னையும் மதிப்பது அறிவு நோக்கம். ஆதலின், குடிக்கடன் இயல்பாய உலகக்கடன் ஆகும். தன்குடி காப்பது தன் பொறுப்பு என அக்குடிப் பிறந்தோர் அறிவு பெறுவரேல், நாம் மலைக்கும் உலகத் துன்பங்கள் ஒரு நொடிப் பொழுதில் ஒழியாகொல்? பிறரைக் கொன்று குவித்து நாடு காக்கும் கொல்லாண்மை போலாது. தன் மெய்யை வருத்திப் பொருள் குவித்து வீடு காத்தலின், நல்லாண்மை (1026) என இனித்த பெயர் சூட்டினார் ஆசிரியர். தஞ்சைப் பெருவுடையார் கோயிலால் சோழப் பேரரசன் இராசராசன் புகழ்படைத்தான். மண்கொட்டிக் கல்லேற்றி அக்கோயிலை மெய்யாகவே உழைப்பால் நிறுவிய பல்லாயிரக் கூலித் தமிழ் மக்கட்குத் தனித் தனிப் புகழ் உண்டுகொல்? வரலாறு சிறந்த பெரும் போர்களில் படைத்தலைவர் சிலர் புகழ் பெற்று நிற்ப. அஃதன்றி மெய்யாகவே படைமுனை நின்று விலங்கி மன்னுயிர் வழங்கிய தனித்தனி மறவர்தம் புகழ்கள் யாண்டுள கொல்? இந்திய விடுதலைப் போர் வரலாற்றில், அரிய சில தலைவர்கள் பெயர் உலகம் அறியுமாறு ஒளி தாங்கி நிற்ப, அத்தலைவர்தம் கட்டளையை மேற்கொண்டு பட்டிதொறும் ஊர்தொறும் வீறிட்டெழுந்து பல இழவுற்றுப் பலிக்கடன் ஆற்றிய தனித் தனித் தொண்டர் தம் புகழ் எழுதப்பட்டது கொல்? நாட்டு வரலாற்றில் ஆள்வார் சிலர் புகழுற்றுத் திகழ, சட்டத்தாலும் சமூகத்தாலும் நலிவுற்று, குழவி போற்றிக் குடிமை சுமந்த தனித்தனிக் குடும்பத்தினர் இசை எய்தியது உண்டுகொல்? கூலியின் அற்றைப் புகழ் இராசராசன் ஆண்டுப்புகழாயிற்று. மறவர் பொதுப் புகழ் படைத்தலைவன் தனிப்புகழ் ஆயிற்று. தொண்டர் உட்புகழ் தலைவன் வெளிப்புகழ் ஆயிற்று. பலர் வீட்டுப் புகழ் ஆள்வான் நாட்டுப் புகழ் ஆயிற்று. பலர் வினைத் தொகுதி ஒருவன் ஒளிக்கற்றையாய் நிலவுகின்றது. தொண்டனும் மறவனும் கூலியும் தம் நாட் செயல்களை இயல்பு எனக் கொள்ளுப. இவை யொப்ப குடும்பியும் தன் குடும்பப் பொறுப்பை வாழ்வின் இயல்பு என எண்ணுவான். குடிதாங்குகை ஒருவன் பிறப்புக்கடன் என்ற கருத்தால், குடிசெயலை கருமம் செய (1021) என்று குறள் கூறும். பெருநிலப்பரப்பைச் செய் செய்யாக வரப்புக் கொண்டு உழவர் பயிர்போற்றுமாப்போல, மன்பதையைக் குடி குடியாகப் பிறப்புப்படுத்தி வாழ்வு பேணுவதே செயலொழுங் காகும். சிறு துளி பெரு வெள்ளம் என்பது போலச் சிறு குடிச் செயலே முடிவில் உலகச் செயல் ஆம் என்ற நோக்கால், குடி செயல் வகை என ஓரதிகாரம் புதுமைப்பட நிறுவினார். செயல் வேண்டுவது வள்ளுவம்; ஆதலின், வினைக்கு உதவாப் பொதுமை அறையாது, வினை வேண்டும் சிறப்பிடம் - மனையிடம் - சுட்டினார்; உலக முழுமை பேசாது, உலக வடிப்படை - குடும்ப நிலைக்களம் - விளங்க ஓதினார். குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச் சுற்றமாச் சுற்றும் உலகு (1025) என்றபடி, பிற குடிக்கு அல்லது செய்யாத் தன் குடிச் செய்கை ஞாலச் செய்கையாம் என்பது வள்ளுவம். இவ்வுண்மை உணர்பவர், உலகம் யாங்ஙன் இயங்க வேண்டும்? என்று வகுக்கும் முறை அறிவர். கடலிற் படு பொருளெல்லாம் கரையில் ஒதுங்குமாப் போல, நாம் காணும் அறிவு நலமெல்லாம் முடிவில் ஒவ்வொரு குடும்பத்தும் சேரவேண்டும். பண்டைத் தமிழ் மருத்துவ அறிவு குடும்பந்தோறும் பரவியிருந்த நிலை இதற்கு ஓர் எடுத்துக்காட்டாகும். இன்று பெருகிவரும் வாழ்க்கைப் பல்லறிவு வேறாக நிற்கின்றதன்றிக் குடும்பமாய்க் கலக்கவில்லை என்பதைக் கல்வி வகுப்பார் நினைவு கூர்வாராக. கற்பதும் அறிவதும் எல்லாம் குடிநல் வாழ்க்கைக்கு அன்றோ? இதுகாறும் மெய்த்துறவு யாது? குடும்ப அமைப்பின் சிறப்பு யாது? என்பன குறித்து உரை செய்தேன். இனி ஒரு குடி பிறக்கும் தோற்றம் பற்றியும், ஒரு முனைக் காமவின்பம் பற்றியும், குடியுறுப்பினர்தம் இயல்நிலை பற்றியும் திருக்குறள் சான்றாகக் காண்போம். உடற்பசிபோல் மெய்யின்பம் இயல்பான உயிர்ப்பசி. உண்டால் உணவுப் பசி அடங்குதல் போல இணைவிழைச்சால் காமப்பசி தணிந்து நிற்கும். கள்ளப் பசியாவதெல்லாம் பசியாவதில்லை. கண்டவாறு உண்பதெல்லாம் உடலுரம் ஆவதில்லை. புறப்பசி தீர்தற்கு ஓரொழுங்கு இருத்தல்போல் அகப்பசி தீர்வுக்கும் ஒழுங்கு உண்டு. உண்பது பசி தீர்த்தலோடு, உடம்பிற் கலந்து உடல் நலமாய் உடலுரமாய்ப் பெருக வேண்டும். காம நுகர்ச்சி வேட்கை தணிப்பதோடு, உயிரிற் கலந்து மனநலமாய் நெஞ்சுரமாய் வளரவேண்டும். உறுதோறு உயிர் தளிர்ப்பத் தீண்டல் (1106) என்ற குறளால் காதலர் மெய்தீண்டல், மக்கள் மெய்தீண்டும் உடலின்பம் போலாது, உயிரின்பம் என்பது பெறப்படும். எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது தானமர்ந்து வரூஉ மேவற் றாகும் என்ற தொல்காப்பிய முதனூற்படி, இன்பப் பசி உயிரியல்பு என்றும், அப்பசியாற்றல் இன்றியமையா ஒழுக்கமாவது என்றும், இயற்கையை மறித்தல் தலைவந்த குழவியைத் தாய்க் கருப்பையில் மீண்டும் அடக்கப் புகுவதையொப்ப நகையாடற்கு உரித்து என்றும், பன்மாணும் பிறப்புண்மையைச் சீர்தூக்கித் தெளிந்த வள்ளுவர் காமத்துப்பால் வகுத்தார். வாழ நூல் செய்தார் வள்ளுவர் என்பதற்கு, உலகு ஒட்டும் இயற்கை நூல் திருக்குறள் என்பதற்குக் காமத்துப்பாலினும் பிறிதொரு கரிவேண்டுங் கொல்! இயற்கையுணர்ச்சிகளை வேரறக் களையும் ஆற்றல் நம்மனோர்க்கு அப்பாற்பட்டது. நாம் முடிந்த எல்லையாகச் செயக் கூடுவது; பொதுவில் நிற்கும் இயல்புகளை நல்வழிப் பாய்ச்சுவது; அல்நெறி தடுப்பது. புழங்கும் நீர் சாய்க் கடையில் ஓடி விழாது, மறித்துத் தோட்டப் பயிருக்குச் செலுத்தும் திருப்புநிலை வன்மைதான் நமக்கு உரியது. நன்றின்பால் உய்ப்பது அறிவு (422) என்பதுவே வள்ளுவ நெறி. இயல்பாய இன்ப வேட்கையை நசுக்கப் புகின், உள்ளம் தாங்காது உணர்ச்சி மீதூர்ந்து கூடாவொழுக்கங்களாய்த் தடுக்க வாராப் பெருங் கோளாறுகளாய், இயல்புணர்ச்சி முடிவில் திரிபுணர்ச்சியாய், வாழ்க்கை வற்றிப்போம் என்று அஞ்சித்தான், இருபத்தைந்து அதிகாரங்களாகக் காமத்துப் பாலை விரிவு செய்தார். பிறப்பின்பம் தூயது; அதனை நுகரும் நெறியும் தூயதாதல் வேண்டும் என்று மக்கட்கு உணர்த்துவான். ஒரு மனை வாழ்க்கை அடிப்படையில் நுகர்வு விளம்பினர். இயல்பின்பத்தைச் சிற்றின்பம் என்று இழித்துரைப்பார்தம் கூற்று தமக்கு உடன்பாடன்று என்பதை இனிது கொல் தாமரைக் கண்ணான் உலகு (1103), புலத்தலிற் புத்தேள் நாடு உண்டோ (1323), வேட்ட பொழுதின் அவையவை போலுமே (1105) என்று காதலர் வாய்ச் சொற்களில் வைத்து வெளியிட்டனர். திருக்குறள் பல நிலையறம் கரைவது என்று முன்னர்க் கூறினேன். அவ்வுரை அறத்துப்பால் பொருட்பால்கள் அளவில் ஒக்கும். காமத்துப்பால் இன்பத்துறைக் கண் ஒரு நிலையறம் சுட்டுவது. மக்களுயிரின் மெய் வேட்கையை, அஃறிணைபோல் பல் வழிப் படுத்தாது, ஒரு வழிப் படுத்துவது - ஒரு குடியாக்குவது - வள்ளுவம். யார்க்கும் அஞ்சா, யாதும் இழவா, என்றும் நீங்கா, ஆழ்ந்தகன்ற இன்ப நுகர்வுக்கு உரியநெறி இருபாற்கும் கற்புநெறி என்பது வள்ளுவம். ஆதலின் காமத்துப்பால் உயிருடையார் யாரும் கற்றற்கு உரியது; வாழ்வு வேண்டுவார் யாரும் ஒழுகற்கு உரியது. காமம் இயல்பு என்பதற்காக, அதனைத் துய்க்குமுறை கல்லாதே தோன்றும் என்பது பிழை. இணை விழைச்சு எல்லா உயிர்க்கும் பொது. மக்கள் அல்லா ஏனையுயிர்க்குக் காமநூல் கற்கும் பேறு இல்லை. அப்பேறு உடைய மக்களும் கல்லாதே காம நுகர்வரேல், அது அஃறிணையோடு ஒப்பப் பொது நுகர்வாகும். வள்ளுவர் அனைய சான்றோர் மனவுணர்வு கண்டு எழுதிய தூய காமப்பனுவல்களைக் கற்று, பருவ நம்பி நங்கையர் இன்பப் பாயல் துயில்வரேல், அத்துயில் அறிவுத் துயிலாகும். மலரினும் மெல்லிது காமம்; சிலர்அதன் செவ்வி தலைப்படு வார் (1289) என்பது ஒரு காமக்குறள். இல்லறத்தார் பலர் இன்பம் நுகர அறிகிலர் என்றும், அறிந்து முழுச்சுவை காண வல்லார் சிலரே என்றும், காமவுணர்ச்சியின் நுண்ணிய மென்செவ்வி நினைத்தற்கு உரியது என்றும் திருக்குறள் கூறும். காமக் கல்வி அறியாராய், வேட்கை மீதூர்ந்த காமப் புணர்ச்சி, தேனுடைந்து ஒழுகும் செவ்வித் தாமரைப் போது புல்லி ஊனுடை உருவக் காக்கை இதழுகக் குடைந்திட் டாங்கு என்றபடி இழித்துரைக்கப்படும். தமிழ் இயற்கை மொழியாதலின், காமம் உலகியல்பு என்று துணிந்து, ஐந்திணை என்னும் அகத்திணையை வகுத்துக் கொண்டது. சங்கத் தொன்னூல்களும் பின்னர்த் தோன்றிய சில பெரு நூல்களும் ஒருமனை வாழ்க்கை வலியுறுத்தும் நோக்கின. மக்களினத்துக்கே அகப்பொருள் இலக்கணம் வகுத்தோதிய இன்பத் தமிழினம் வள்ளுவர் காமத்துப் பகுதியை, மணப் பருவத்துக் கற்கதில். காமத்துப்பால் இலக்கியச் சுவைக்கு எழுதப்பட்டதன்று; ஆண்டு முரிந்த கிழப் பருவத்து மெல்லத் தகும் ஓய்வுப் பகுதியன்று. காதல் மணம் நுகரும் காளை குமரியர் கற்கத் தகும் பருவநூல்; ஒழுக்கநூல். ஆதலின் இள நம்பி நங்கையர் வாழ்க்கைத் தொடக்கத்து முதனூலாக வைத்து ஒருங்கிருந்து திருக்குறள் காமத்துப்பாலைக் கற்பாராக. காமக்குறள் நுட்பம் கண்டு இன்ப நுட்பம் திளைப்பாராக. இல்லறத்தீர்! வேட்கை வளர்க்கும் இன்பக் கூறுகளை - திருவள்ளுவர் நுனித்தறிந்த காம வோட்டங்களை - இனி ஆராய்வோம். ஆடவர் பெண்டிர் பல்லாயிரம் பேராகக் குழுமிக் கேட்கும் இவ்வவைக்கண், சில நுண்கூறுகளை மட்டும் நனி நாகரிகமாகச் சொல்லும் எண்ணம் உடையேன். காமத்துப் பாலை அவரவர் தாமாகக் கற்பதுவே நாண் நெறியாகும். பிரிவு புணர்ச்சியின் பொதுவடிப்படை. இடையீடு இல்லா நட்புணர்ச்சி கோழிப்புணர்ச்சி போன்றது. நாட்காமம் எடுத்தற்கெல்லாம் வெகுளும் முன்சினம் போல வலுவற்றது; உள்ளத்திற்கும் உடலுக்கும் குடும்பத்துக்கும் கேடு பயப்பது. பிரிவால் அகமும் மெய்யும் அறிவும் திண்ணியவாம். பிரிவின் அகற்சிக் கேற்பப் புணர்ச்சித் தழுவலும், பிரிந்த வேட்கைக்கு ஒப்பப் புணர்ச்சியின்பமும் பெருகும். கூட்டுப் பேரின்பம் பிரிவுப் பெருந்துன்பத்தால் முகிழ்க்கும் என்பது காம வள்ளுவம்; ஆதலின், காமத்துப்பால் இருபத்தைந்து அதிகாரங்களுள் பதினைந்து அதிகாரம் பிரிவுப் பொருளாக ஆசிரியர் அமைத்தார். சங்கவிலக்கியத்திலும் பாலைப் பாடல்களே மிகுவரவின அல்லவா? உள்ளுவன் மன்யான் மறப்பின் மறப்பறியேன் ஒள்ளமர்க் கண்ணாள் குணம் (1125) கூடிய தலைவியின் குணங்களை, இவ்வாறு நினைந்து பார்க்கும் ஒரு தனி வாய்ப்பினைப் பிரிவு தலைவனுக்கு நல்குகின்றது. வருகமன் கொண்கன் ஒருநாள் பருகுவன் பைதல்நோ யெல்லாம் கெட (1266) இவ்வாறு தலைவன் பிரிவுக் காலத்துத் தலைவிக்கு வேட்கை மனத்துள் நீளுகின்றது. பிரிவு என்பது காதலர்கள் ஓரிடத்து இல்லா அகற்சியைக் குறிக்கும். இச் சேய்மையால் புணர் வெண்ணம் உள்ளடங்கி நிற்க. ஒருவர்க்கு ஏனையோர்தம் குணநினைவு அடிக்கடித் தோன்றும் இடப் பிரிவு எல்லார்க்கும் இயல்வதன்று காண். குடும்பமாகவே ஓரிடத்துச் சென்றிருந்து பொருளீட்டுவது இக்காலத்து வினையாயிற்று. நெடுநாட் புணராக் கால நீட்டிப்பே பிரிவின் உட்கோள்; ஆதலின் மீதூர்ந்த இன்பம் விழைவார் உரத்தாற் காமம் அடக்கி, உடனிருந்தும் பிரிவுத் துன்பம் மேற்கொள்வார்; இடையீடு செய்து கொள்வர். ஊடல் புணர்ச்சியின் சிறப்படிப்படை. வேட்கைத் துடிப்போடுக் கூடும் நொடிப் புணர்வு விலங்குப் புணர்ச்சி போன்றது. இக்கூட்டம் உடற்கழிவாம் அன்றி, உயிர் நலம் ஆகாது. மெய்ம்முயக்கு ஆமன்றி, அன்புக் கூட்டம் ஆகாது. எண்ணம் மக்கட் பிறப்பின் தனிப் பண்பு. ஆதலால், எவ்வினைக்கும் எண்ணச் சிறப்பு ஊட்டல் வேண்டும். காதலர் தம்முள் பரிமாறிக் கொள்ளும் பேரெண்ணமே ஊடல் எனப்படும். பிரிவு என்னும் நெட்டிடை அகற்சி புணர்ச்சி வேட்கையை மிகுவிக்கும். ஊடல் என்னும் பாயற் சிறு பிரிவு புணர்ச்சி இன்பத்தை மிகுவிக்கும். ஊடி இன்பம் நுகர்ந்தார் நொடிக் கூட்டுறவை - அடிக்கடி புணர்தலை - நச்சார் என்பது வள்ளுவம் புணர்ந்து கையறுதற்கு முன், இன்ப நினைவுக் கூறுகளைக் கற்பனையால் எழுப்பிக் கொள்வார்க்குப் புணர்ச்சி வலுவுடைத்து. நிறையழிதல், புணர்ச்சி விதும்பல், புலவி, புலவி நுணுக்கம். ஊடலுவகை என்ற குறள் அதிகாரங்கள் கற்பார்க்கு ஊடற்கல்வியை நல்குவன. ஊடல் காமத்தின் நுண்ணிய நாடி. இந்நாடித் துடிப்பு கூடல் என்னும் கலவை மருந்தால் அடங்குவது. உப்பு அமைந்தற்றால் புலவி (1302) என்னும் உவமையால், ஊடுவார்க்குக் காம மயக்கத்தும் அளவறிதல் என்னும் அறிவோட்டம் வேண்டும் என்பது போதரும். ஊடாப் புணர்வால் இன்பம் குறையும்; புணரா ஊடலால் அன்பு குறையும். ஊடல் உணர்தல் புணர்தல் இவைகாமம் கூடியார் பெற்ற பயன் (1109) என்ற இன்பப் பகுதி மூன்றனுள், பிணங்கலும் அப்பிணக்கம் தெளிதலும் ஆகிய இருதுறையும், அறிவுடைய அன்புக் காதலர்க்கே மனநலமாய் முடியும். கணவன் மனைவி இருவருமோ இருவருள் ஒருவர் தாமோ அறிவற்றவராயின், ஊடல் வம்பாகும்; உணர்தல் விளங்காமையாகும்; அதனால் இன்ப முரிவு ஏற்படும். புலவியும் வீழுநர் கண்ணே இனிது (1309) என்பது குறள். புலவி, ஊடலுவகை என்ற அதிகாரங்கள் யாத்த ஆசிரியர் இவற்றின் வேறாகப் புலவி நுணுக்கம் என ஓரதிகாரம் செய்தார். காமத்துப்பால் இருபத்தைந்து அதிகாரங்களுள்ளும் இஃதொப்பது பிறிதில்லை காண். புலவி நுணுக்கமாவது யாது? ஓரமளிக்கண் இனி திருக்கும் கணவன் மனைவி குடும்பச் செய்திகளைப் பேசலாகாது. குடிப் பேச்சுக் காரணமாக எழும் புலவி, கருத்து வேற்றுமைக்கு இடனாகிப் பாயற் பயனைக் கெடுக்கும். ஊடற்குப் பற்றும் காரணங்கள், ஊடும் அப்பொழுது தோன்றிப் புணர்ச்சியோடு அழிய வேண்டும் என்பது வள்ளுவம். ஊடற்கு முன்னும் புணர்ச்சிக்குப் பின்னும் நின்று நிலைக்கும் நீடிய செய்திகளைப் புலவிக் காலப் பொருளாகக் கொள்வரேல், இன்பத்தோடு மன நலமும் கெடும் என்பது ஒரு தலை. நீர் கிழிய எய்த வடுப்போல மாறுமே சீரொழுகு சான்றோர் சினம் என்பது ஒப்ப, அறிவுக் காதலர் தம் புலவிக் காரணம் கூடுங்கூட்டத்துப் பிறந்து ஆண்டே மறையவேண்டும். இப்பிறப்பில் நின்னைப் பிரியேன் என்றான் தலைவன்; மறு பிறப்பில் பிரிவான் என்று வகுத்துக்கொண்டு, தலைவி ஊடினாள். யாரினும் நின் பால் காதலுடையேன் என்றான் தலைவன்; யாரினும் என்ற சொல்லுக்குத் தன் கணவன் காதலிக்கும் மகளிர் பலருள்ளும் என்ற கருத்து எடுத்துக் கொண்டு, தலைவி புலந்தாள். வேற்று நாட்டிடைப் பிரிந்த காலத்து நின்னை நினைத்தேன் என்றான் தலைவன்; நினைப்பு என்பது ஒரு கால் மறந்திருந்தார்க்கு அன்றோ தோன்றும் என்பதாகக் கருத்து வாங்கிக்கொண்டு, இன்பக் காய்வு காய்ந்தாள் தலைவி. இவ்வெல்லாம் சொல்நுணுக்கம் தலைக்கீடாய் எழுந்த ஊடற் செய்திகள். தலைவன் பூச்சூடுதலும், தும்முதலும், அஞ்சித் தும்மல் அடக்குதலும், காதல் மிகுதியால் இமையாது தலைவியின் உறுப்புக்களை நோக்கலும்கூட, ஊடற் காரணங்களாய் முடிகின்றன. இன்பக் கிளர்ச்சி செய்யும் கருத்துக் கூர்மை மட்டும் புலவிநுணுக்கம் அன்றுகாண்; அக்கூரிய சுவைக் கருத்தும் முன்னும் பின்னும் தொடராது, எழுதச் சீவிய கோலின் கூர்மை எழுதுங்கால் ஒடிந்து விடுதல் போல, ஊடலோடு தேய்ந்து அழிவதும் புலவி நுணுக்கம் ஆகும் என்று, இல்லற அறிஞர்களே! குறிக்கொண்மின்! குடும்பப் பேச்சும் காதலொருமை செய்யாப் பிற பேச்சும் அமளிக்கண் ஆகாப் பேச்சுக்கள் என்று துணிமின்! அறிவிலா இன்ப முரிவன்றோ - அமளிப் புரட்சியன்றோ - வேண்டாப் பாயற் பேச்சு அன்றோ - பல குடும்பத்தார்தம் தொல்லைக்கு மறைமுகக் காரணமாய் நிற்கின்றது. அழுக்காறுடையான் பிறர்மேல் கொண்ட தன் பகைக்குக் காரணம் ஏதேதோ சொல்லுமாப் போல, இன்ப முரிவு உற்ற கணவன் மனைவி ஊரார்க்கு ஏதேதோ புறக்காரணம் விளம்புவ குடும்பச் செய்தி தலையிடாதபடி, இலக்கியச் சுவையும் இன்பக் கொழுந்தும் துய்க்கும் அறிவுக் காதலர்களாக, சொற்கோட்டமும் மனக்கசப்பும் இல்லாக் காமக் காதலர்களாக, புலவி நுணுக்கத்தில் தமிழ்க்குடிப் பெருமகன் வள்ளுவர் அமைத்துக் காட்டினார். இந்நுட்ப வள்ளுவம் ஊடற்காலத்து நினையத் தகுவது. நெடுநாட் புணராப் பிரிவுத் துன்பத்தானும், ஊடலின் உண்டு ஆங்கு ஓர் துன்பம் (1307) என்றபடி புணர்ச்சிக்கண் படும் புலவிச் சிறு துன்பத்தானும், முடிவில் ஒருமனை இன்பம் பெருகும் என்பது காமவொழுக்க நூலின் துணிபு. இங்ஙன் கற்பு நெறிக்கண் நின்று வாழ்க்கைப் பேரின்பம் திளைக்கும் உயர்திணை மக்கள் பிறர்மனை நயவார்; பரத்தை நச்சார். அங்ஙன் நயத்தலும் நச்சலும் அறம் அல்ல என்பது ஒருபாலாக இன்பமும் அல்ல என்பது வெளிப்படை. காமத்தின் சிறந்த கூறு புணர்ச்சியன்று; ஊடல் ஆகும். புணர்தலின் ஊடல் இனிது (1326) என்றல் காண்க. அவ்வூடல் தானும் புணர்வுபோல் சிறிதளவே நிற்பின், துய்க்கும் இன்பம் சிற்றின்பமாய் ஒழியுங்காண். ஊடுக மன்னோ ஒளியிழை யாமிரப்ப நீடுக மன்னோ இரா (1329) என்றபடி, நீடிய ஊடலே காமத்தின் உயிர்க் கூறாவது. இந்நெட்டூடல் அச்சம் மனக்குடி கொண்ட பிறன்மனை நயப்புக் கண்ணும், பொருள் நினைவுடைய பரத்தைத் தோய்வுக் கண்ணும் அமைதற்கில்லை. ஆதலின், ஊடல் என்ற தன்னுரிமைப் புணர்ச்சியே - கற்புக் காமமே - அறமும் ஆன்ற ஒழுக்கமும் ஆம் என்பது வள்ளுவம். திருக்குறளின் துணிவு இதுவாதலின், வாழ்வு தொடங்கும் பருவ நங்கை நம்பியரும் இல்லற வாழ்வினரும் காமத்துப்பாலை அறவொழுக்க நூலாக - குடும்ப நூலாக - கற்றல் வேண்டும் என்பது என் அறிவுரை. கற்புடைய ஆண் பெண் முதற்கூட்டு, குடி எனப் பெயர் பெறும். காதலர் இருவரும் குடும்ப முதலுறுப்பினர் ஆகுவர்; குடும்பச் சுமைதாங்கிகள் எனப்படுவர்; குடும்பம் கணவன் மனைவியின் கூட்டுப் பண்ணை; பொறுப்பு வாழ்க்கை. கையெழுத்திட்டார் இருவருள் வலுவுடையானைக் கடன் சார்தல்போலக் குடிக்கடனும் ஆண் பெண்ணுள் ஆற்றலுடை யாரைச் சாரும். அமரகத்து வன்கண்ணர் போலத் தமரகத்தும் ஆற்றுவார் மேற்றே பொறை (1027) எனக் குடிச்சுமை வீழிடம் காட்டுவர். இருவரும் அறிவும் திறமும் உடையராயின், குடும்பச் சுமை மட்டுமோ, சமூகத்தின் கொடிய வழக்கம் முதலாய இடிகளையும் தாங்கிக்கொள்வர். எல்லாரும் எல்லாத் தொழில்களையும் பார்ப்பது என்றல் செயல்நிலைக்குப் பொருந்தாது. இன்னார்க்கு இன்னவினை என்ற தொழிற் பகுப்புத்தான் அறிவுக்கும் நடைமுறைக்கும் ஏற்கும்; பலர்தம் தனித்தனி வினை முடிவில் ஒரு கூட்டுப்பயனை விளைக்கும். இஃது உலகியல். இல்லறம் இருவர் தொழிற்களம்; ஆதலின் கணவனும் மனைவியும் ஆளுக்கோர் தொழிற் பகுதியைப் பொதுவாக மேற்கொள்ளல் வேண்டும். இம் முறைப்படி அகவினை பெண் கடனாயிற்று; புறவினை ஆடவன் கடனாயிற்று. பொருள்வரும் வழிகளை இயற்றலும் ஈட்டலும் மகனுக்கு உரியன; தற்கொண்டான் வளத் தக்காள் (51) என்றபடி, காத்தலும் வகுத்தலும் மகளுக்கு உரியன. பிள்ளைகளின் உடல் வளர்த்தல் தாய்க்கும், உளம் வளர்த்தல் தந்தைக்கும் கடனாயின. ஒரு பள்ளிக்கண் உள்ள ஆசிரியர்கள் இயல்பாகத் தத்தமக்கு உரிய வகுப்புக்களுக்குத்தான் பாடம் நடத்துவர். ஓராசிரியர் வாராதவன்று அவர் தம் வகுப்பை வந்தவருள் ஒருவர் மேற்பார்ப்பர். ஒரு பொது நிலையத்து அவரவரும் வரையறுத்த தத்தம் கடனை ஆற்றுவதுதான் இயல்பாயினும், அமயஞ் சமயத்துப் பிறர் கடனையும் ஏற்றுக் கொள்ளும் பரந்த மனப்பான்மை வேண்டும். குடும்பக் கடன் ஆணுக்கு இது, பெண்ணுக்கு இதுஎன நுண்ணிதாக விதித்தற்கு இல்லை. ஏன்? அவர்கள் கூலிக்கு உழைப்பவர் அல்லர். குடும்பம் அன்புத் தொழில் நிலையம். தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து முந்தி யிருப்பச் செயல் (67) என்றதனால், மக்கட்குக் கல்வி வழங்கல் தந்தை கடன் எனச் சுட்டுவர். இதனால் தாய் கடன் இல்லை எனல் ஆகுமா? ஓர்மின்! தமப்பன் பிற ஊர்களுக்குப் பிற நாடுகளுக்குப் பொருளீட்டச் செல்லுகிறான்; அஃதன்றி இறந்து விடுகிறான் எனின், தந்தையோடு குழந்தைக் கல்வி நின்று விடுங்கொல்? கணவன் இருக்கும் போதும் மறைந்த பின்னும், தம்மக்களைப் போற்றி அறிஞர்களாய் வளர்க்கும் அறிவுடைத் தாயார் பலரைக் காண்கின்றோம். வளர்த்ததாய்ச் சான்றோர் வரலாறுகளைக் கற்கின்றோம். ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே; சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே என்றார் பொன்முடியார். தாய் கைவிட்ட காலை உளத்தோடு உடலையும் ஓம்பல் தந்தை முழுக்கடன் அன்றோ? ஆதலின் குடித்தொழிற் பகுப்பு விலக்கு மிகுந்த விதியுடையது; வரம்பிலா வரம்பு உடையது. இன்று பரவிப் பெருகி வரும் ஓர் உலகப் போக்கால், பலர் மனமாசும் அறிவழுக்கும் உறக் காண்கின்றோம். ஒப்புப் பார்த்தற்கு உரிய வல்லாப் பொருளையெல்லாம் ஒப்பாக மயங்கிக்கொண்டு, உயர்வு - தாழ்வு - மேல்கீழ் - கூறுவது. எதற்கும் ஓர் அடிப்படைபற்றாது கருத்துச் சொல்ல விரைவது. ஆணினம் செய்யும் அவ்வினைகளையே பெண்ணினமும் செய்தாற்றான் மதிப்பு நிகர் என்றும், வேறுவினை செய்வதால் மதிப்பிழிவு என்றும் பறைசாற்றி வருகின்றோம். பெண்ணின் நிலையைக் கணித்தற்கு ஆண் நிலையன்றோ அளவாகின்றது என அடி முரணை உணர்ந்தோம் அல்லோம். மக்கட் பிறப்பினரேனும் உடல் வேறான பால் வேற்றுமையை நினைந்தோம் அல்லோம். இருபாற்கும் உரிய பொது வினைகளும் உள; ஒருபாற்கே தகும் சிறப்பு வினைகளும் உள என்று பகுத்து அறிந்தோம் அல்லோம். குடும்பம் ஒரு சிறு உலகம்; ஆதலின், ஞால வாழ்க்கையை இரு சிறப்புக் கூறாகப் பிரித்து, ஆண் பாலார்க்கெல்லாம் ஒரு கூற்றுக் கல்வியும், பெண் பாலார்க்கெல்லாம் மறுகூற்றுக் கல்வியும் வழங்கினோம் அல்லோம். கல்வி வீறு சான்ற இருபாலார் மணம் முழுக்குடித்தன்மைத்து என்று குடும்பவியல் தெளிந்தோம் அல்லோம். இவ்வின்மைக் கெல்லாம் காரணமாவது நம் மயக்கக் கொள்கை. ஆணும் பெண்ணும் ஒரே துறைக் கல்வி, ஒரேவகை வினை மேற்கொள்வதுதான் பிறப்பொப்புமைக்குச் சான்று எனக் குடிகெடுக்கும் கோட்பாடு சாற்றுகின்றோம். உயர்வு தாழ்வு கணித்தற்கு உரிய செங்கோல் யாது? தன் கடனைச் செவ்வன் செய்து முடிப்பவன் உயர்ந்தவன். முடிக்க மாட்டாதவனோ பிழைபட முடிப்பவனோ இழிந்தவன். பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக் கல் (505) என்றபடி, ஒருவர்க்கு மேன்மை கீழ்மை அவர் வினைமேல் வைத்துக் காணவேண்டுமேயன்றி, ஒருவர் நிலையை ஏனையோர் நிலையொடு ஒப்பிடப் புகுவதே முதற்கோணல் என்று அறிக. இந்திய நாட்டுத் தலைவனும் கழிவெடுக்கும் தோட்டியும் தத்தங் கடனைச் செய்யுங்காலை ஒரு நிகராவர். தலைவன் அரசுக் கடனைத் தோட்டி செய்ய இயலான் எனத் தலைவற்கு உயர்வு கூறுவிரேல், வீடுதோறும் கொல்லைப்புறம் சென்று கழிவள்ளும் தோட்டியின் தாய்க்கடனை அத்தலைவன் செய்ய மாட்டுவனோ? தோட்டி தன் வினையைப் பிழையாது ஆற்ற, நாட்டுத் தலைவன் தன் வினையைச் செய்யாது பிழைப்பானாயின், உயர்ந்தவன் தோட்டியல்லனோ? தோட்டி வினை, துவைப்பு வினை, மழிப்பு வினை, அடுப்பு வினை என்றினையன நாட்டிற்கு வேண்டா; தலைமை வினை, அமைச்சு வினை, உறுப்பு வினை, படைவினை என்றினையவே நாட்டிற்கு இன்றியமையாதன என்று சொல்லப்படுங்கொல்? உலகிற்கு வேண்டிய தொழில்களுள் சிறப்பென இழிவென ஒன்றின்று. அவ்வினையைச் செய்யும் திறத்தாற்றான் சிறப்பும் இழிவும் தோன்றும் என்ற கருத்தால், சிறப்பு ஒவ்வா செய் தொழில் வேற்றுமையான் (972) என்றார். கணவனும் மனைவியும் தத்தங் குடும்பப் பொறுப்பை ஆற்றுங்காலை, இருவரும் உயர்ந்தோராவர். ஆற்றத் தவறியவர் தாழ்ந்தோராவர். ஆதலின், மதிப்பளக்கும் கோல் கருமச் செய்கை என்பது வள்ளுவம். குடித்துறை அறிஞர்களே! இல்லப் பொறுப்புப் பெண்ணைச் சார்ந்தது என்பது தமிழர் செய்த பகுப்பு. இல்லாள் மனைவி என்ற சொற்களே கரி. இக் கருத்தானன்றே, வாழ்க்கைத் துணை நலம் எனச் சிறப்பதிகாரம் செய்தார் ஆசிரியர். வாழ்க்கை எனை மாட்சித் தாயினும் இல் (52), இல்லவள் மாணாக்கடை உள்ளது என் (53) என்ற குறட்பகுதிகளால், குடும்ப வாட்சிக்குத் தலைவியின் மாட்சி இன்றியமையாத முதன்மைத்து என்பது பெறப்படும். பெண் தான் பிறந்தகச் சுற்றத்தாரை மதிக்கும் அன்பு நோக்கத்தோடு, கணவன் பிறந்த குடிச் சுற்றத்தாரையும் மதித்து அணைக்க வேண்டும். இவ்வறிவுப் பண்பினைத்தான் மனைமாட்சி என்றும், இல்லவள் மாண்பு என்றும் யான் அடிக்கடி எண்ணுவதுண்டு. மக்கட்குப் பெரியோர் துணை, மாணாக்கர்க்கு ஆசான் துணை என்பதுபோல, ஆணுக்கு வாழ்க்கைத் துணை எனப் பெண்ணைச் சிறப்பித்தார். இதனால் மனைவி கணவனுக்கு அமைச்சி ஆவள் என்பது போதரும். கண்ணகி கற்பு என்னும் திண்மையுடையவள்; பெண்ணிற் பெருந் தக்கவள்; தெய்வம் தொழாதவள்; தற்காத்தவள்; தற்கொண்ட கோவலன் ஒழுக்கம் பேணியவள் அல்லள்; தகைசான்ற சொற்காத்தவள் அல்லள். மனைவியாகத் தன்னைப் பெற்ற கோவலனை பெற்றாற் பெறின் பெறுவர் (58) என்றபடி, தனக்கே உரிய கணவனாகப் பெற்றவள் அல்லள். நிரம்பிய மனைமாட்சி யுடையளாய் இருந்தும், அதனை வேண்டுங்கால் துணிந்து ஆட்சிப்படுத்தாமையின், விருந்து புறந்தருதலும் இழந்த என்னை எனவும், யாவதும் போற்றா ஒழுக்கம் புரிந்தீர் எனவும், அவன் சாக்காட்டிற்கு முன் கழிவிரக்கங்கொண்டு சொல்லி அமைந்தாள். தாம் வீழ்வார் தம்வீழப் பெற்றவர் (1191) என்றபடி, தான் விரும்பியான் தன்னை விரும்பப் பெறாமையின், பரலற்ற காமக் கனியை உண்டிலள். குடும்பம் பேணா ஆண்வழிச் சேறல் என்னும் புதுக் குற்றப் பட்டாள் கண்ணகி. ஒருவர் மென்மையை - வலுவின்மையை - மற்றவர் தமக்குப் பயன்படுத்திக் கொள்வதே பலர் சூழ்ச்சியாகக் காண்கின்றோம். ஒருவன் எப்பொழுது குற்றப்படுவான் என்று சோர்வுப்பதம் பார்த்திருந்து, குப்புற வீழ்ந்தானைக் குழியில் தள்ளி, மேலும் மண் அள்ளிப் போடுவதே பலர் அறிவுக் கூர்மையாகக் காண்கின்றோம். இவ் வாகாப் புறவுலகப் போக்கு குடும்ப அகவுலகத்து நினைக்கவும் கூடாதுகாண். கணவன் மனைவி இருவருள் ஒருவர் உடற் குறையாக, அறிவுப் பிழையாக, பண்புத் தவறாக இருப்பரேல், ஏனையோர் அவற்றைத் தன்னலமாகப் பயன் கொள்ளல் அறவும் ஆகாது. இன்று பல குடும்பத்தாரிடைக் காணுமாப் போல, கணவனோ மனைவியோ ஒருவர் குற்றத்தை ஊரறியப் பிறர் வீடறிய உய்த்துக்கொண்டு புறந்தூற்றும் கயநிலையும் ஆகாது. இருவருள் ஒருவர் பிழை செய்வராயின், அக்குற்றத்தை நிரப்பும் குணப்பெருக்கு ஏனையோர்க்கு வேண்டும். ஒருவர் குறையால் குடும்பப் பொதுநிலையம் கெட்டுத் தளராதபடி, ஈடு செய்யும் அறிவுப் பெருக்கு ஏனையோர்க்கு வேண்டும். குற்றமே காக்க பொருளாக (434) என்பது குடும்பக் குறிக்கோள். குடும்ப உறுப்பினருள் ஒருவர் குற்றப்படுவரேல், அதனைப் பொறுத்துக் கோடல் மட்டும் ஏனையுறுப்பினர் கடன் அன்று. பொறுத்தபின், மீண்டும் குற்றம் புகாமல் அன்பால் இடித்து அவரை நிறுத்தலும் அவர்தம் கடனாகும். அங்ஙன் இடிப்புக்கு உடன்பட்டுக் குடிநலன் நோக்கித் திருந்துவது, குற்ற வுறுப்பினர்க்கு அறம் ஆகும் என ஈண்டுச் சுட்ட விரும்பு கின்றேன். தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற சொற்காத்துச் சோர்விலாள் பெண் (56) எனவும், புகழ் புரிந்த இல் (59) எனவும் வரூஉம் குறட் பகுதிகளால், பிழைவழிச் செல்லும் கணவனைத் திருத்தும் கடப்பாடு தலைவிக்கு உண்டு என்பது போதரும். வளத்தக்காள் (50) என்றபடி குடும்ப வரவுசெலவுத் திட்டம் வகுத்தலும், மனைமாட்சியும், தற்காப்பும், கொழுநனைப் பேணுகையும், குடிப்புகழ் விருப்பமும் எல்லாம், கல்வி அறிவிலாப் பெண்ணுக்கு நன்னர் வாயா என்பது வெளிப்படை. செறிவும் நிறைவும் செம்மையும் செப்பும் அறிவும் அருமையும் பெண்பால் ஆன என்பது தமிழ் முதல்வன் தொல்காப்பியனார் காட்சி. ஆதலின் குடும்பப் பெண்ணுக்குப் பல்குணச் சால்பு வேண்டும். இல்லாள், மனைவி என்ற கிளவிகள் குடும்பவுறுப்பினருள் தலைவியின் தலைப் பொறுப்பினைச் சுட்டுவன. அஃதன்றி வீட்டுக்கு வெளியே செல்லாது, உலகம் பாராது, இடச் சிறு மனைக்குள் முடங்கிக் கிடப்பவள் என்பது பொருளன்று. கற்பு என்னும் பெயரால் உலக வறிவு பெறாதபடி, பெண்டிரைக் குறுகிய இடத்துக்குள் அடைத்துத் திரியவிடும் சமூகக் கதவைச் சிறை காக்கும் காப்பு எவன் செய்யும் (57) என்னும் கருத்துப் புரட்சிக் கோடரிகொண்டு, சுக்குநூறாக்கும் தலைவர் வள்ளுவர். இன்று பெண்ணினத்துப் பெரும்பாலோர் ஒவ்வாச் சமூகப் பழக்கவழக்கத்துட் புதையுண்டு கிடக்கின்றனர்; உலகப் புது வோட்டம் காணும் கண்ணிலர்; காலப் புத்தெண்ணம் தோன்றும் நெஞ்சிலர்; தூய புதுமை வேட்கும் கணவனோடு ஒழுகும் நடையிலர்; காரண காரியத்தோடு உரைத்தாலும் ஏற்கும் செவியிலர். செக்கு மாடு போல் சமூகப் பழந்தடமே சுற்றும் காலினராய், அவற்றையே வலிந்து பேசும் வாயினராய், ஆகாச் சடங்குபற்றி அறிவு முன்னேற்றத்துக்கு இடையூறாய் நிற்கக் காண்கின்றோம். இவை அன்னோர் குற்றம் அல்ல; பெண்ணை அறிவுக்கு உதவா இனம் எனப் பழித்து ஒரு வீட்டுத் தொழுவத்து அடைத்துக் கல்விக் கண் கெடுத்த ஆகாக் கொள்கையாளரின் குற்றம். தூய புத்தறிவும், புத்துணர்வும், சமூகப் பழக்கம் பொருந்தாமை காணின் துணிந்து கடக்கும் புது நடையும், உலகம் காணும் ஒரு பெரு வேட்கையும், குடும்பக் கல்வியும், காமத்துக் கல்வியும், மக்கட் பயிர் வைத்து வளர்க்கும் மருதப் பெண்ணினம் பெறுக. பெறுக என்பது திருக்குறட் சுட்டு. குடும்ப வாழ்க்கை என்னும் தலைப்பின்கண் இத்துணை நெடும் பொழுது, மெய்த்துறவு, குடும்பச் சிறப்பு, குடித் தோற்றம், ஒருமனை யின்பம், கணவன் மனைவி இயல்புகள் பற்றி வேண்டுமளவு விரித்துரைத்தேன். இனி ஓரளவு, பெற்றார்க் கெல்லாம் இன்பூட்டும் வள்ளுவர் பிள்ளைப் பேச்சைக் கேண்மின்! உடம்புபோல் சட்டையையும் ஓர் உறுப்பாகக் கொள்வது இற்றைய உலக நாகரிகம். குழந்தைக்கு மெய்ப்பை அணிகின்றோம். நாமும் மெய்ப்பை புக்குக் குழந்தையை அணைக்கின்றோம். இத் தழுவல் சட்டைக்கு இன்பமே யொழிய, உடம்பிற்கு இன்பம் அன்று. குழவியின் மேனியொடு நம் மேனி படவேண்டும்; மெய்யின்பத்துக்கு இடைபடு பொருள் கூடாது என்று காட்டுவாராகி, மக்கள் மெய்தீண்டல் உடற்கு இன்பம் (65) என ஒரு பொருள் இருசொற் பெய்தார். இஃதோர் ஊற்றின்பம். அவர் சொற் கேட்டல் இன்பம் செவிக்கு (65) என்பது கேள்வியின்பம். சிறுகை அளாவிய கூழ் அமிழ்தினும் ஆற்ற இனிதே (64) என்பது காட்சி கலந்த ஊணின்பம். இக்குழவிச் சுவைகள் நீடித்து நிற்பனவல்ல; பருவத்தோடு மறைவன என்ற கருத்தால் உடற்கின்பம், செவிக்கின்பம் எனப் புறவளவோடு நிறுத்தினார். இப்புறச் சிறு இன்ப வுணர்ச்சியும்கூட, பிறருடைய குழந்தைகளின் மெய்யைத் தீண்டுவதால், சொல்லைக் கேட்பதால் தோன்றுவதில்லை என உலகியல்பு கண்ட வள்ளுவர். தம் மக்கள் சிறு கை அளாவிய கூழ் (64) தம் மக்கள் மழலைச் சொற் கேளாதவர் (66) எனத் தம் உறவு சுட்டினார். உடல் செவி இன்பம் போலாது. தம் மக்களால் பெறத் தகும் நீடித்த இனிமை ஒன்றுண்டு; அவ்வினிமை தானும், பெற்றோர் அளவில் அடங்காது உலகத்துப் பிறவுயிர்க்கெல்லாம் பயன்படும் என்று துணிந்த உண்மை காட்டுவாராகி. தம்மின் தம்மக்கள் அறிவுடைமை மாநிலத்து மன்னுயிக் கெல்லாம் இனிது (68) என ஒரு குறள் யாத்தார். மக்களின் அறிவாக்கமே பெற்றோரின் வளர்ப்பு நோக்கம் என்பது குழந்தை வள்ளுவம். இந்நோக்கம் மக்கட் பேறு உடையார்க்கு எல்லாம் கைகூடுவது. பிள்ளைகளை அறிவுடைமைப் படுத்தாது பொருளுடைமைப் படுத்துவதே இன்று பெற்றோரின் பெருநோக்கமாகக் காண்கின்றோம். இப்பொருட்பற்றால் பெற்றோர்க்கும், பிறந்தோர்க்கும் அடிக்கடி பல பூசல் நிகழக் காண்கின்றோம். முதிர்ந்த தாய் தந்தையரை அவர்தம் மக்கள் முற்றும் புறக்கணிக்கக் காண்கின்றோம். பெற்றோரினும் அவர் ஈட்டிய பொருள் மேல் மக்கள் குறிபார்க்கக் காண்கின்றோம். இவ்வெல்லாம் செல்வக் கண் கொடுத்து வளர்த்த வளர்ப்புக் குற்றம்; தம்மினும் தம் மக்கள் பொருளுடையவர் ஆதல் வேண்டும் என்று பற்றிய வள்ளுவ முரண். தம்மின் தம் மக்கள் அறிவுடைமை என்பது பெற்றோரின் குறிக்கோள். அறிவுடைய தாய் தந்தை தம் மக்களைத் தம்மைக் காட்டிலும் (செல்வராய் அன்று) அறிவினராய்ச் செய்வர் என்ற உயர் நோக்கத்தை இக்குறளால் அறிகின்றோம். குழந்தை குடும்பத்துக்கு இன்றியமையாப் பொருளா? மக்கட்பேறு இல்லா இல்லறத்தார் வாழ்வு இழந்தவரா? குடும்ப நோக்கம் குழந்தைப் பயன்கொல்? இதுபற்றி வள்ளுவர் கருத்து யாது? இன்றியமையாப் பொருள் எனின், அது மணந்தார் யாரும் எய்தக் கூடியதாதல் வேண்டும். எளிதில் எய்த வாராவிட்டாலும், முயற்சிக்கேனும் எய்தலாவதாய் வரல்வேண்டும். அவ்வரவும் ஒழுக்கம் உடையதாதல் வேண்டுங்காண். இவ்வடிப்படையில் நின்று ஆராயும் போது, உடலணி போலக் குழந்தை இல்லணி செய்யும் சிறப்புப் பொருளேயன்றி, உறுப்புப்போல் இன்றியமையாப் பொருளன்று என்பது பெறப்படும். மனையின் நன்கலம் நன்மக்கட் பேறு (60) என்பர் வள்ளுவர். கற்பொழுக்கம் வலியுறுத்தும் ஆசிரியர் இன்றியமையாதது மக்கட்பேறு என்று சொல்வார் என எதிர்பார்க்கலாமா? இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு (81) என்றபடி வேளாண்மை - பிறவுயிர்க்கு நல்லது செய்கை - குடும்ப நோக்கம் என்பது குடிவள்ளுவம். ஆதலின் மக்களை இல்லோர்க்குப் பயக்குறை இல்லைத் தாம் வாழுநாளே என்ற நம்பியின் கூற்று திருக்குறட்கு உடன்பாடன்று எனினும், குழந்தைப் பேறுடைய குடும்ப வாழ்க்கை காதலர்ப் பிணைப்பும், அன்பூற்றும், கடமைப் பற்றும், முயற்சிப் பெருக்கும் தரும் என்பதில் ஐயமில்லை. அன்பர்களே! நீவிர் விரும்பினும் வெறுப்பினும் குடி நலத்துக்கு ஆகா ஒரு வழக்கத்தினை ஈண்டுச் சுட்டத் துணிவல். எதற்கும் சோதிடம் பார்ப்பது பலர் குடும்ப இயல்பாய் விட்டது. அறிவூட்டற்கு எழுந்த பல செய்தித்தாள்கள்கூட, மக்களின் சோதிட வெறியைப் பயன்கொண்டு விற்பனை பெருக்கி நாட்டினைப் பின்னும் நலிவிக்கின்றன. குழந்தை பிறந்த ஞான்றே, சோதிடனை அழைத்துவந்து, குழந்தையின் ஆயுட்காலம் எவ்வளவு? இப்பிள்ளைப் பிறப்பால் குடும்பமும் பெற்றோரும் பெறும் நலம் தீங்கு என்ன? என்று வினவி அவன் வாய்ச் சொல் கேட்கக் காண்கின்றோம். கேடும் பெருக்கமும் இல்லல்ல (115) என்ற உலகியல் அறியாது, நீ வந்த பின்தான் என் குடி கெட்டுப் போயிற்று என மனைவியையும், நீ பிறந்த பின்னர்த்தான் எங்கள் நிலை இவ்வாறாயிற்று எனக் குழவியையும் வையும் அன்பற்ற போக்கு இந்நாட்டில் ஊறிவிட்டது. இவ்வெல்லாம் குடிசெயல்வகை அல்ல என்று துணிமின்! திருக்குறட்படி ஒழுகுவார்க்கு முற்றும் பொருந்தா என்று எண்ணுமின்! ஆள்வினையும் ஆன்ற அறிவும் என இரண்டின் நீள்வினையான் நீளும் குடி (1022) என்றபடி, அறிவும் ஆள்வினையுமே குடிசெயல் வள்ளுவம் ஆம். சோதிடம் ஆகுக; விதிப்பற்று ஆகுக; சமூகப் பழக்க வழக்கம் ஆகுக; அரசுச் சட்ட திட்டங்கள் ஆகுக; எனைக் கொள்கையும் ஆகுக; முயற்சிச் செலவு கெடுத்து மடிமையூட்டும் எதனையும் உதறுமின்! அறிவோட்டம் தடுத்து இருட்படுத்தும் எதனையும் ஓட்டுமின்! அகத்தூய்மை குறைத்து வஞ்சனை பெருக்கும் எதனையும் அகற்றுமின்! முயற்சி அறிவு தூய்மைகட்கு இடையூறானவற்றைக் களைமின்! அவற்றுக்கு உறு துணையானவற்றைப் பற்றுமின்! இதுவே வாழ்வியல். குடும்பம் என்பது கணவன் மனைவி மக்களைக் கொண்டதாயினும், அப்பெயர்களோடு நின்று விடுவதில்லை. சுற்றுப் பொருளோடு முற்றும் தொடர்பிலா ஒரு தனிப் பொருள் உலகத்து இன்று. ஞாலத்து அஃறிணை உயர்திணை களெல்லாம் கட்புலனாகவோ நுண்ணிதாகவோ தம்முட் சார்புடையன. நெருக்கத்துக்கு ஏற்பச் சார்பின் அளவில் வேற்றுமை யுண்டே யன்றி, அறவே சார்புத் தாக்குக்கு உட்படாப் பொருள் யாதும் இல்லை. ஓரிடத்து நீர் பக்கத்துக் கசிந்து செல்லுமாப்போல, ஒரு குடும்பத்தின் நல்லவும் தீயவும் உறவுக் குடும்பங்களைச் சார்ந்து பற்றும். கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம் உண்பதூஉம் இன்றிக் கெடும் (166) என்பது ஆசான் காட்டும் உலகியல். இச் சுற்றம் விருந்தினும் வேறானது. விருந்து ஒக்கல் தான் என்றாங்கு (43) என்ற பகுதியில், ஒக்கல் என்பது சுற்றத்தைக் குறிக்கும். சுற்றத்தார் சிலபல பொழுது வேண்டா வம்புகள் விதைத்தாலும், சமூகக் குழிப்படுத்தி மேலேற வோட்டாது தடுத்தாலும், செல்வம் இருக்கும்போது நெருங்கி இல்லாதபோது எட்டிப் பாரா விட்டாலும், குடும்பத்துள் புகுந்து ஒற்றுமை கெடுத்தாலும், பயனுடைய முட்கிளைபோல் ஒடியாது தழுவுதற்கு உரியோராவர்; காத்தற்குத் தக்கவர் ஆவர். தன்குடி காக்கப் பிறகுடி கெடுப்பவன் அறிவிலி; தன் ஒரு குடியையும் காக்கமாட்டாதவன் மடியன்; ஏனைக் குடிகட்குத் தீமை செய்யாது தன் குடி பேணுபவன் இயல்பன்; தன் குடியோடு பிற குடிகளையும் காப்பவன் சான்றோன். தன் குடியை ஓம்பிய பின்னும் மிகுந்த வலியுடையவனுக்கு, நெருங்கிய பிறகுடிகளை ஓம்பும் செயற் பரப்புவேண்டும். இயலபன் சான்றோனாக முன்னேறல் வேண்டும். ஒவ்வொரு குடும்பத்தானும் தன் உறவுக் குடும்பம் காப்பதை அடுத்த கடனாகக் கொள்வானேல், அரசுப் பாரம் பல்வகையால் குறையும். நாட்டு நலன் இயல்பாக எங்கும் பெருகும். ஒரு சுற்றக் குழுவில், அங்ஙன் பல்குடியையும் தழுவவல்ல ஆற்றல் நிறைந்த சில குடும்பத்தாரேனும் இல்லாமல் இல்லை. பின் இல்லாதது யாதோ எனின், அச் சிலசெல்வக் குடும்பத்தாருக்குச் சுற்றந் தழுவும் தூய நல்லுணர்ச்சி இல்லை. ஏதிலார் ஆரத் தமர் பசிப்பர் (837) என்றபடி, செய்தித்தாளில் பெயர் வரவேண்டி வரிந்து கட்டிச் செலவு செய்யும் ஆரவாரவுணர்ச்சியே செல்வச் சிலருள்ளும் பலர்பால் உண்டு. இப் பொய்யுணர்ச்சி பெருகிப் பரவி வரும் இவ்வுலகில், கண்கண்ட வறிய தமரைக் காக்கும் மெய்யுணர்ச்சி யுடையோர் மிகச் சிலரே போலும். எம் அன்னையைப் பெற்றோரும் இச்சிலருள் இருவராவர். அவ்விருவரும், உண்மைத் துறவிகள் போலும் எம்மைப் பயந்தோர் இருவரும் குழவிப் பருவத்து விட்டுச் சென்ற பேரர்களாகிய எம் ஐவரை - ஓராண்டு ஈராண்டு அல்ல இருபத்தையாண்டுகள், ஓராயிரம் ஈராயிரம் அல்ல பல்லாயிரத்தொகை ரூபாய்கள் மனமுவந்து செலவிட்டுக் காத்த குறிக்கோளுடையவர்; ஒரு குடித் தொடர்பை நினைந்து ஐந்து குடியாக்கிய உயர்வினர்; பெற்றோர் இருந்தும் ஒரு பிள்ளைக்குக் கடமை செய்யத் தவறும் இவ்வுலகிடை, பெற்றோரும் பிறவும் இல்லா ஐந்திளங் குழந்தைகளை, ஆண்டு பலவாக ஒரே நினைவொடு புரந்து உலகியல் கற்பித்த மெய்த் தாய் தந்தையர்; எம் குடியொடு பிற பல் சுற்றங்களையும் பேணும் உலக நலத்தர்; புகழென ஒன்று நினைக்க அறியாது கடன் ஆற்றும் பொய்யா வாழ்வினர். அண்மை நலம் பேணும் இத்தூய தமிழ்ச் சான்றோர் போல், ஆற்றல் வாய்ந்த செல்வச் சிலர் தம் சுற்றத் தொகுதி பேணுவது தம் மெய்க்கடன் எனத் தெளிவாராக என்பது என் அறிவுரை. தெளிந்து செய்வரேல், குடிசெயல் வகை உண்மையாகவே உலகு செயல் வகையாம் அன்றோ! அளவளாவு இல்லாதான் வாழ்க்கை குளவளாக் கோடின்றி நீர்நிறைந் தற்று (523) என்பது சிறந்த வாழ்வியல். கணவனும் மனைவியும் மக்களும் தம்முள் ஒக்க இருந்து உண்டும் உரையாடியும் ஒல்லும் வினை செய்தும் அளவளாவல் வேண்டும். இந் நல்லியல் இன்று பல தமிழ்க் குடும்பங்களில் அமையவில்லை என்பது நாணற்கு உரியது. ஒரு குடி யுறுப்பினர் சுற்றுக் குடியினரோடு மனம் விட்டு அளவளாவல் வேண்டும். சுருங்கச் சொலின் அளவளாவுகை குடும்ப வள்ளுவம் என்று அறிக. தன் குடும்பத்தைச் சிற்றுலகமாகவும், உலகத்தைத் தன் பெருங் குடும்பமாகவும் எண்ணும் வாழ்வியல் நம் வள்ளுவப் பெருமகன் கண்டறிந்த குடியியல் ஆகும். 9. வள்ளுவ அரசு பிறர் உரிமை மறவாப் பெரு மக்களே! மன வணக்கம். வள்ளுவ அரசு என்பது இற்றை மாலைப் பொருள். அரசுப்பேச்சு இந்நாள் மக்கட்குப் புதிய கேள்விப் பொருளன்று. கேட்டுக் கேட்டுப் புளித்த பொருள். அரசியல் என்ற வகைத் தலைப்பு இட்டுக்கொண்டு, யாரும் எதனையும் எவ்வாறும் எப்போதும் மணிக்கணக்காகச் சொன்மாரி பெய்து வருகின்றமையாலும், பிற தலைப்பிட்டபோதும் அரசியலையே நுழைத்துப் பன்னிப் பன்னி மொழிகின்றமையாலும், பொதுவாக நன்மக்கட்குச் சொற் பொழிவு என்றாலே காலக் கழிவு என்றதோர் உணர்ச்சி தோன்றிவிட்டது. படைத்து மொழிவும், உண்மைத் திரிபும், பிற கட்சித் தூற்றலும், தன் கட்சித் தனிப் பெருமையும், வசவு நடையும், வம்புக்கிழுத்தலும், ஆகாக் கத்தும், ஆட் சேர்ப்பும், இன்ன பல போலிக் குணங்கள் குடியரசு என்னும் பெயரால் இற்றைப் பலர் அரசியலின் ஒழுக்கமாயின. நாடு கெடுக்கும் இந்நிலை பொறாது, கட்சிகளின் மேல் மக்கள் காட்டிவரும் வெறுப்பு பெரிதும் வரவேற்கத் தக்கது. சொல் திருந்தாத கட்சியாளர்க்குத் திருந்திய மக்கள் ஊட்டும் அறிவு இது. மனம் வளர்க்காது வாயை வளர்த்த பேச்சாளர்களுக்கு, ஒழுக்கச் செவியுடைய மக்கள் சுட்டும் நாண் வழி இது. யான் கண்ட அரசு வள்ளுவங்களை, மேலைக் குற்றங்கள் இன்றி எடுத்து மொழிவேன் என்று நம்புமின்! மாறுபட்ட கருத்துக்கள் இருப்பின் இருக்குமே யன்றி, மனப் புண்ணுறுத்தும் சொற்கள் ஒன்றேனும் வழுக்கியும் உரையேன் என்று துணிமின்! ஆதலின், என் வள்ளுவ அரசுப் பேச்சினை மனந்திறந்து கேட்க வேண்டுவல். இற்றை உலகை நினையுங்கால், நமக்கு முன் தோன்றும் அரசியல் எண்ணங்கள் பலப்பல. உலகம் ஒன்று; உலக மக்கள் ஓரினம் என்றும், ஓர் உலகவரசும் உலகப் பொதுப்படையும் வேண்டும் என்றும் பேசுகின்றோம். நாட்டுச் சிக்கல்களைக் கூட்டுப் பேச்சால் தீர்த்துக் கொள்ளல் வேண்டும்; தீர்வு காணற்கு உரிய வழி போரன்று என்று போரொழிவு பரப்புகின்றோம். ஒரு நாடு தன்னந்தனியாய் வாழ வியலாது; பிற நாடுகளின் நல்ல தீய செலவுகள் ஒரு நாட்டினைத் தாக்கவே செய்யும்; ஆதலின், தன்னாடு என்றளவில் ஆய்வை நிறுத்திக் கொள்ளாது, உலக அடிப்படையில் ஒரு நாட்டுக்குத் திட்டம் கோலவேண்டும். ஞால நன்மை, ஞால வமைதி, போர்த் தடுப்பு ஆகியவை என் நாட்டுக் கோள்கள் என்று ஒவ்வோர் அரசும் சொல்வது இன்று பெருகி வரும் எளிய வழக்கு. உலகத்தின் ஒரு கோடியில் கொந்தளிப்பு ஏற்படின், இக்குமுறல் உலகப் போராய்விடக் கூடும்; நெருக்கடியை விரைவில் தீர்த்து வைம்மின் என்று யாரும் அறியப் பெருங்குரலிடக் காண்கின்றோம். சாதி சமய நிறங்களாலும், மொழி அரசு நாடுகளாலும், பல்வேறு பழக்க வழக்கங்களாலும் பிரிவுண்டு கிடக்கும் மக்களினம், ஆராயுங்காலை, ஓரினம்; இடத்தானும் காலத்தானும் வேறுபட்டுத் தோன்றும் உடலின் நிறத்தையும் அமைப்பையும் வைத்துக் கொண்டு, நாம் ஒருவரோடு ஒருவர் பகைத்துக் கோடல் அறியாமை என்பது இன்று வளர்ந்து வரும் நல்லறிவு. ஒருவன் முன்னேற்றத்திற்கு இப் புறவேறுபாடுகள் இடையூறு ஆகா; இடையூறாகச் சாதிசமய நிறச்சட்டங்கள் இயற்றல் ஆகா; இதுகாறும் இயற்றிய குறுக்குச் சட்டங்கள் ஒழிதல் வேண்டும் என்று நாம் விரும்புகின்றோம். இந் நல்லெண்ணம் இன்று ஓரளவு செயற்படவும் காண்கின்றோம். ஒரு நாட்டுள்ளும் அறியாமையால் பகை யுணர்ச்சிப் பட்டுக் கிடந்த பல்வேறு இன மக்கள், இப்போது தம்முள் கசப்பின்றி அளவளாவ முற்படுகின்றனர். ஒரு நாட்டவர் பிற நாடு சுற்றுவதும், பன்னாட்டவரோடு உடனிருந்து உண்டு களித்து மனங்கலந்து பழகுவதும், இன்று இயல்பாகக் காண்கின்றோம். இரண்டு அரசுகளுக்குள் சிறு பெரு வேறுபாடுகள் இருப்பினும், அவற்றால் பல நல்லுறவுகள் தடைபட்டு விடுவதில்லை. மக்கட் செலவு வரவோ வணிகப் போக்குவரத்தோ நின்று விடுவதில்லை. ஒரு வேறுபாட்டை நினைந்து மற்றோர் நல்லுறவைக் கெடுத்துக் கொள்வதில்லை. அந் நல்லுறவால் இவ் வேற்றுணர்ச்சி மட்டுப்படும்; அகலும் என்னும் நம்பிக்கையில் இற்றை அரசுகள் நடந்துகொள்ப. அரசுறவில் வேற்றுமையிருப்பினும், இருநாட்டு விளையாட்டாளர்கள் ஓர் ஆடுகளத்தின்கண் கலந்துகொள்ப, பண்புக் குழு என்றும், நல்லெண்ணக் குழு என்றும், இவ்வாறு ஒரு நாட்டுச் சான்றோர் பிற நாட்டிற்குச் சென்று பழகுப. இனைய பல் தொடர்புகளுக்கு விட்டுக் கொடுப்பது இந்நாள் அரசியல். கூட்டு நாட்டுப் பேரவை நம் எண்ணத்தின் உரு. உலகத்துப் பல அரசுகளின் இணைப்பு அது. ஞாலமுழுதும் பொதுநலம் காணற்குக் கிளைக்குழூஉக்கள் பலவற்றை இப்பேரவை அமைத்துளது. இவ்வவை காரணமாய் எல்லா நாட்டு அறிஞர்களும் தம்முள் இடையறா உறவு கொள்ப. உலக மருத்துவர்கள், உலகக் கல்வியாளர்கள், உலக அறிவியல் அறிஞர்கள், உலகப் பொருள் அறிஞர்கள், உலக விளை யாட்டாளர்கள் என்ற வகையில் எண்ணிலாக் கூட்டங்கள் பற்பல நாடுகளில் நிகழ்கின்றன. முன்னேறிய நாடுகள் இவ்வவை சார்பாக, நலம் தாழ்ந்த நாடுகளுக்கு ஓரளவு முன்வந்து உதவுகின்றன. இரு நாட்டுச் சிக்கலைப் பல நாடுகள் கேட்டுத் தீர்வு கூறும் வாய்ப்பு இன்று ஏற்பட்டுள்ளது. போரற்ற உலகவமைதி இப் பேரவையின் பொறுப்பு. தேர்வு இந்நாள் ஆட்சியின் அடிப்படை. குடிமக்களே நாட்டின் முதல்வர்கள்; ஆட்சித் தலைவனைத் தேர்ந்து எடுத்தற்கு உரியவர்கள். நாட்டுத் தலைமை ஒருவனுக்குப் பிறப்பால் வருவதன்று; மக்கள் தேர்வால் வருவது. கட்சிகள் இஞ்ஞான்று அரசியலுக்கு உறுதுணை. நாட்டின் முழுப் பொறுப்பை ஒரு தனி மகன்மேல் வையாது, பலவாறு பகிர்ந்திடுவது நல்லது என்ற கருத்தால், ஆட்சி யவைகளை அமைத்து, அவற்றுக்கு ஆட்களைத் தேர்ந்தெடுக்கின்றோம். சிற்றூர்தோறும் பெருநகரந்தோறும் தேர்வு இயலுவதால், இற்றை ஆட்சி தேர்வாட்சியாகும். அரசாற்றல் பொதுவாக மக்கள்பால் உண்டு; ஓரளவு கூடுதலாக, நாம் பொறுக்கி விடுக்கும் மாற்றாளிகள்பால் உண்டு; சிறப்பாக, அமைச்சர்க்கும் தலைவனுக்கும் உண்டு. இவ்வாறு நாடாட்சியும் பொறுப்பும் எல்லா மக்கள்பாலும் பரவிக்கிடக்கின்றன; ஆதலின், அமைச்சனோ தலைவனோ, தன்னுடைய காரணங்கொண்டு, தன் பகையாளனுக்குப் பெருங் கெடுதலும் தன் நட்பாளனுக்குப் பெரு நலமும் எளிதில் செய்துவிட முடியாது. ஊதியம் பெற்றுச் செய்யும் வினையாளர்கள் ஒரு பாலாக, தேர்வின் வந்தோர் இற்றை அரசியலின் சிறந்த உறுப்பினர்; இங்ஙன் இங்ஙன் நடக்க வேண்டும் எனக் கழறுதற்கு உரியோர். ஒரு நாட்டு வாழும் அனைவர்க்கும் அரசு ஆளும் உரிமை யுண்டு; குடியின் இலக்கணம் தேர்வுரிமை என்பது இப்புது அரசியலின் வாய்ப்பாடு. பழங்கால அரசியலை நினையுங்கால், வேந்தன் காணும் கடவுளாகக் காட்சி யளிக்கின்றான். வேந்துரிமை பிறப்புரிமை, நாடு மன்னனது உடைமை. அரசனே நாட்டிற்கு உயிர். படைகள் அவன் தற்காப்புக்கு உரியன. குடிகள் மன்னன் வாழும் உடல்கள்; ஆளப்படுதற்கு உரியோர்கள். முதன்மையும் சிறப்பும் அரசர்க்கே உரியன. அரசன் நலமே நாட்டு நலம். நாடாட்சி ஒருவனைச் சார்ந்தது. அவனாட்சியிற் குறுக்கிட்டால், கொலையே தண்டனை. அவன் சொல்வது அறம்; செய்வது சட்டம்; கேட்பது வரி. வரியிற் பெரும்பகுதி அவன் வாழ்விற்கே செலவாகும். அரசனுக்கேயன்றி, அவன் தேவிக்கும் அன்னோர் சுற்றத்திற்கும் நாடாட்சியில் உரிமையுண்டு. உட்பகை பண்டை அரசியல். அமைச்சு முதலிய வினை கூடப் பிறப்புரிமை. நாட்டை இடத்தால் பெருக்குவது அரசன் நோக்கம். இகலும் போருமே வெளிநாட்டுக்கொள்கை. பிறவேந்தர் அடிப்பணிவே பெருமை. அவர் இடும் திறையே புகழ்ச் செல்வம். வில்லும் வாளுமே போர்க் கருவிகள். தரைப்படையே பெரும் படை. இருவேந்தர் தம்முட் கண்டு கோடல் அரிய காட்சி. இரு நாட்டிடைத் தூதுத் தொடர்பு இருந்ததன்றி, மக்கள் தொடர்பு இருந்தது இல்லை; பிறவகைத் தொடர்பும் பெரிது இல்லை. அரசியற் பிணக்கு இருப்பின், உள்ள தொடர்பும் அற்றுவிடும். அரசன் காமமும் திருமணமும் போராக மாறுதலும் உண்டு. அரசாட்சி ஒரு சிலர் உரிமைத் தொழில். நாடும் குடிகளும் ஓரரச குடும்பத்தின் நலனுக்கென ஏற்பட்டவை. ஒருவனாட்சியும் பிறப்புரிமையும் முன்னாள் அரசியல். ஞாலம் ஒரு குடும்பம்; மக்கள் ஒரு குடும்ப வுறுப்பினர்; ஆள்வோரும் ஆளப்படுவோரும் வேறல்லர் என்ற பரந்த பொதுப் பேரடிப்படையில் அரசியல் எண்ணங்கள் உருவாவது இக்காலம். தன் குறுகிய நாடே உலகம்; தன் குடிகளே மக்கள்; தான் ஒருத்தனே மன்னன்; தன் வழித் தோன்றல்களே அரசர்கள் என்ற குறுகிய பிறப்படிப்படையில் அரசியல் இயங்கியது அக்காலம். ஆதலின், அன்றெழுந்த திருக்குறள் இன்று ஒட்டுங்கொல்? திருவள்ளுவர் இவ்வெல்லாம் முன் நினைந்து சொல்லவல்ல பேரறிஞர் கொல்? என நம் நெஞ்சு ஐயுறுகின்றது. ஒழுக்கத்துறையில் வள்ளுவர் சொல் எக்காலத்துக்கும் ஒக்கும்; அரசுத் துறையில் ஒவ்வா என்று நம் மனம் துணிய விரைகின்றது. திருக்குறள் அரசியற் பழஞ்சுவடி என்று நம் உள்ளம் அழைக்க விரும்புகின்றது. பொய்யில் புலவன் சொல்லினான்; பொய்யாத் திருக்குறள் சொல்லிற்று என்பதற்காக, நாம் எதனையும் ஏற்றுக்கொள்ளும் அடிமைப்பட்டிலம். நம் பகுத்தறிவே அப் பெருமகன் நம்பும் துணை. நம் செய்கையே திருக்குறள் வேண்டும் கோள். கற்பாரை அறிவடிமைப் படுத்திப் பேதைமை வாயிலாய், ஒன்றினை நுழைக்க முற்படுவார் வள்ளுவரல்லர் காண். எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும், அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு(423) என்பது அவர் புரட்சிப் புத்தறம்; ஆதலின், நாம் பற்றற்று விழைவு வெறுப்பின்றி வள்ளுவர் நோக்கிய அரசியலை, நம் கால அரசியற் போக்கோடு ஆராய்வோம். பின்னொருநாள் ஆகும் என்ற கருத்தால், சிறு வெட்டுத் துணிகளைத் தையற்காரனும், ஒட்டு நுரைகளை வண்ணானும் காத்துவைப்ப, ஓராண்டுவரை இருக்க வேண்டும் என்ற நினைவால், பள்ளிமாணாக்கர் தம் பாடநூல்களை அட்டை போட்டுப் போற்றுப. கல்வி முற்றியபின் ஆசிரியத் தொழிலுக்குச் செல்வேம் என்ற உறுதியால், அறிவியல் மாணாக்கர் ஆசான் குறிப்புக்களை நன்னர் எழுதிக் கொள்ப. அரியகாலத்து ஆம் என்ற துணிவால், விலை எளிய காலத்துச் சரக்குகளை மக்கள் முயன்று தொகுத்து வைப்ப, வாழ்நாள் முழுதும் பயன்படல் வேண்டும் என்ற எண்ணத்தால், சில பொருள்களைச் சிறந்தனவாக முதன் முறையிலேயே வாங்கிக் கொள்கின்றோம். இரு தலைமுறைக்காவது போத வேண்டும் என்ற எதிர்வால், ஒரு குடும்பி இடம் பரந்த நிலைவீடு கட்டுகிறான். அடிக்கடி செய்யவொண்ணாது என்ற தெளிவால், கோடிச் செலவில், நூற்றாண்டுக் காலம் நீடு நிலைக்குமாறு, திண்ணிய பெருங்கட்டடங்களைச் செய்யும்போதே அரசு வலுப்பெறச் செய்கின்றது. சமையல் போல, அப்பொழுதை அப்பொழுதை அழிவிற்கென, மக்கள் செய்துபோம் நாட் செயல்கள் தவநனிச் சிலவே காண். நாளோ, வாரமோ, திங்களோ, ஆண்டோ, வாழ்நாள் வரையோ வழிவழியோ, நூற்றாண்டோ, உலக நீடூழியோ எனவாங்கு. எதிர்கால வோட்டமே நம் வினைகளுக்குள் பொதிந்து கிடக்கின்றது. வருங்காலத் தூயெண்ணமே அறிவு என்பது வள்ளுவம்; ஆதலின், மக்கள் யாரும் எதிரது நினையும் நிகழ்காலச் செய்கையர், என்பது தெளிவு. தத்தம் ஒரு வாழ்க்கைப் புறச் செயல்களுக்கே இத்தனை வருங்கால நோக்கு மக்கள் பாய்ச்சுவராயின், வள்ளுவர் அனைய சான்றோர்கள் உட்கொண்ட எதிர்காலம் ஓரிரு நூற்றாண்டு அளவினதோ? ஓரீராயிரம் அளவிற்றோ? கல்வித் திட்டப்படி, எழுதும் பாடநூல் போல்வதன்று திருக்குறள். ஒரு பரிசில் வாங்கும் உணர்ச்சித் தூண்டுகையால், பிறந்த நூலன்று திருக்குறள். அண்மைப் புகழ் ஈட்டும் நோக்கொடு, தோன்றியதன்று திருக்குறள். இந்நூல் தங் காலத்தார்க்கு மட்டும் - ஓர் ஐம்பதாண்டுப் பொழுதுக்கு மட்டும் - எனக் கருதினாரல்லர். மனம் என ஒரு பொருள் உளகாறும், மக்களென ஓரினம் வாழும் வரையும் திருக்குறள் செல்லல் வேண்டும்; நின்று நிலைத்து வழிகாட்ட வேண்டும் என்ற வழி வழி நீளெண்ணமே வள்ளுவருக்கு இருந்தது. ஆதலின், காலத்து வீழ்ந்து ஒழியும் புறப்பொய்க் கருத்துக்களை அகற்றி, என்றும் நிலைக்கும் மெய்யெண்ணங்களை அடிப்படையாகத் தழுவி, அறிவுக் கண் நீடூழி பரப்பிப் புத்தறங்களையும் கண்டு, காலக் கோட்படா நிலைநூல் யாத்தவர் வள்ளுவர். இவ்வுண்மைக் கூற்றுக்கு அவர் ஆண்ட உவமைகளே ஒரு பெருங்கரி. வையத்து இறந்தாரை எண்ணிக் கொண்டற்று (22). கனியிருப்பக் காய் கவர்ந்தற்று (100), அகழ்வாரைத் தாங்கும் நிலம் போல (151) வெள்ளத் தனைய மலர் நீட்டம் (595), துளியின்மை ஞாலத்திற்கு எற்றற்றே (557), பைங் கூழ் களை கட்டதனொடு நேர் (550) நிலத்தியல்பால் நீர் திரிந்தற்றாகும் (452), தலையின் இழிந்த மயிரனையர் (964) என வரூஉம் எண்ணிறந்த உவமைகள் நிலை சான்றன; நின்று விளங்குவன. தங் கருத்துக்கள் மக்களினம் உள்ளளவும் விளங்க வேண்டும் என்பதாலன்றோ, எளிய இனிய நிலைத்த காட்சிப் பொருள்களை உவமை செய்தனர். திருக்குறள் அரசன்தன் ஆடை அணி இருக்கை களையோ அவன் நுகரும் புறப் பொருள்களையோ கூறவில்லை. அமைச்சன் தூதன் படைத்தலைவன் புறத்துறுப்புக்களையோ, போர்க்கருவிகளையோ எண்ண வில்லை. காலந்தொறும் வேறுபடும் ஆடம்பரங்களையோ நாட் கரணங்களையோ குறிக்கவில்லை. இவ்வெல்லாம் எழுதியிருப்பரேல், வள்ளுவரின் அரசியல் வழக்கொழிந்து போம். வீட்டுக்குக் கல்லும் மண்ணும் வேண்டும் என்று கூறாமல், காற்றோட்டமும் ஒளியோட்டமும் வேண்டும் என்று கூறுமாப் போலே, வள்ளுவர் அரசியற்கு என்றும் இன்றியமையாச் சிறப்பியல்புகளையே பொறுக்கி யுரைத்தனர். நல்லடிப் படைகளையும் அரசழிக்கும் தீயவற்றையும் விதந்தோதினர். உலகம் ஒன்றெனச் சாற்றும் நம் கூற்று செயற்பாட்டில் நீள் கானலாகவே தோன்றுகிறது. உலகம் நாடு நாடாகப் பிரிந்து அரசுப்படுவது. எவனும் உலக மகனாகப் பிறக்க வில்லை; ஒரு நாட்டு மகனாகவே பிறக்கிறான். நாடு என்பதுவே ஆசான் வகுத்த இடவரம்பு. ஞாலம் பன்னாடுகளாக அமைந்து கிடப்பது இனி மாற்றற்கு இயலா முடிவு என்ற கருத்தால், உலகவதிகாரம் செய்யாது, நாடு அதிகாரம் செய்தார். நாடு என்ற இடப் பிரிவியல் உலகவொருமை முற்றினும், செயலாட்சிக்கு இருந்தே தீரும். நாடு கண்ட வள்ளுவர் மக்களினம் ஒத்து வாழ, அரசமைப்பு மிக மிக இன்றியமை யாதது என்ற தெளிவால், ஆங்கமைவு எய்தியக் கண்ணும் பயமின்றே; வேந்தமைவு இல்லாத நாடு. (740) என நாடு அதிகாரத்து அரசதிகாரம் வேண்டினார். வேந்துரிமை பிறப்புரிமை என்ற கருத்திற்குத் திருக்குறளிற் சிறு குறிப்பும் இன்று. பிறப்பால் அரசனாவதைக் கண்டவரே யாயினும், பிறப்பியலை அரசியலாகக் கொண்டாரல்லர். நாட்டுக்கு ஓரரசு வேண்டும்; அரசுக்கு ஒரு தலைவன் வேண்டும் என்பது வள்ளுவம். தலைவன் வரவு பிறப்பால் அமைக; தேர்வால் அமைக; பிறமுறையால் அமைக. அவன் வருவழி பற்றிக் கவலையில்லை. எவ்வழியானும் அரசேற்றும் தலைவனைப் பற்றியே ஆசான் கவலை கொண்டார். அரசன் வருவழி பேசாது, இறைமாட்சி அதிகாரத்து அவனுக்கு அமைய வேண்டும் அரசியல்புகளையே பேசினார். தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும் நீங்கா நிலனாள் பவற்கு (383) என்பது எஞ்ஞான்றும் ஒரு நாட்டுத் தலைவனுக்கு உரிய இலக்கணம் அன்றோ? இடம் பரந்த ஒரு நாட்டின் அரசுக்கு, வினைத் துணிவு செய்யும் ஒரு பெருந் தலைவன் வேண்டும். இத் தலைவனை வேந்தன், மன்னன், அரசன், இறைவன், காவலன் என்ற கிளவிகளால் திருக்குறள் அழைக்கும். அரசுபற்றி வள்ளுவர் ஆண்ட சொற்கள் வேறு; நாம் ஆளும் சொற்கள் வேறு. இங்ஙன் சொல் வேற்றுமை யன்றி, நாட்டுக்கு ஒரு தலைமை வேண்டும் அரசிலக்கணத்தில், குறளொடு நமக்கு வேற்றுமை யுண்டோ? வாழ்வாங்கு வாழ்பவனைத் தெய்வத்துள் வைக்கப்படும் (50) என உயர்த்தியும், புல்லறிவால் இல்லென்பவனை வையத்து அலகையா வைக்கப்படும் (850) என இழித்தும் மொழிந்தாற் போல, முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு இறையென்று வைக்கப் படும் (388) எனச் சிறப்பித்தார். மன்னவனாய்ப் பிறந்தானை இறைவன் என்னாது, முறை செய்து காக்கும் பண் புடையான் இறைவன் என மதிக்கப்படுவான் என்ற நடை நுட்பத்தை ஓர்மின். வேந்தனைக் கடவுளாகத் தொழுதலும் அங்ஙன் உரைத்தலும் பண்டைத்தமிழ் வழக்கு அன்று. இறை கடியன் என்று உரைக்கும் இன்னாச் சொல் (564), அருஞ் செவ்வி இன்னா முகத்தான் ((565), வெருவந்த செய்தொழுகும் வெங்கோலன் (563), அறிகொன்று அறியான் எனினும் (638), முறை செய்யா மன்னவன் தண்பதத்தான் தானே கெடும் (548) எனக் கொடுங்கோலனை இழித்துரைப்பர்; ஆதலின், அரசனைப் பிறப்பு வகையால் தெய்வமாக்கல் தமிழியல் அன்று எனத் தெளிக. அறிவறை போகிய பொறியறு நெஞ்சத்து இறை என்றும், தேரா மன்னா என்றும், கண்ணகிவாயிலாய் இளங்கோவடிகள் கூறுவன ஈண்டு நினையத்தகும். கடவுளெனத் தன்னை எண்ணாது, செவிகைப்பச் சொற் பொறுக்கும் பண்புடையாளனே வள்ளுவ வேந்தனாவான். முடியாட்சி, குடியாட்சி, பிறவாட்சி என அரசு வகை யாதாயினும் ஆகுக. எவ்வகை அரசியலும் அதனை மேற்கொண்டு நடாத்துவோர் குணஞ் செயல்களைப் பொறுத்தது. முன்னாள் ஆண்ட முடியரசரெல்லாம் நல்லன செய்யவில்லை என்றோ, செய்தவெல்லாம் தீயனவே என்றோ அறுதியிட முடியுமா? இன்று காணும் குடியரசுகள் அல்லவை செய்யா நல்லாட்சிகள் என்று உறுதி கூற முடியுமா? ஆதலின் வள்ளுவர் அரசு வகை பற்றி மொழியாது, அதனை இயக்குவான் மாட்சி பற்றியே கூறினார். ஓர் நல்லரசுக்கு ஆளுமாற்றல் ஓரிடத்து இருக்க வேண்டுமா? பரந்து கிடக்க வேண்டுமா? என்பது ஆராயத் தகும் பெரு வினா. முடியரசு தங்கு தடையற்ற ஒருவன் ஆட்சி என்றும் குடியரசு தடை பலவுடைய ஒருவன் ஆட்சி என்றும் ஓரளவு ஒப்பலாம் ஆயினும், பல பொழுது இருவகை ஆட்சிக்கும் நல்வேறுபாடு கண்டிலம். குடியரசு நாடுகளில் பல சட்டங்கள் முடியரசுத் தன்மையனவாக உள. போர்க் காலங்களில் இனைத்தென விளம்பமுடியாக் கடும்படைச் சட்டங்கள் உள. பாராளுமன்றங் கூடாமுன் புதுச் சட்டம் தலைவன் பிறப்பித்தற்குத் தனி விதிகள் உள. காரணங்கூறாது எத்துணைக் காலமும் யாரையும் சிறை வைப்பதற்கு ஏற்பாடுகள் உள. பெரும்பான்மை அரசுக் கட்சியினர் கொண்டுவரும் கொள்கை யெல்லாம் நிறைவேறவும், எதிர்க்கட்சியினர் கூறும் திருத்தமெல்லாம் படு தோல்வி யுறவும் காண்கின்றோம். ஒரு கட்சி வலுவுடைய நாடு அமைதியும், அஃதற்ற பல்கட்சிக் கூட்டு நாடு நிலையாக் குழப்பமும் உறக் காண்கின்றோம். இவ்வனையன எதனைக் காட்டுகின்றன? குடியரசின் கண்ணும் ஆளும் வன்மை ஒரு தனிக்கட்சிபாற் கிடத்தல் வேண்டும். இஃது - ஓரிட வன்மை – எந்நிலை யரசுக்கும் பொது. இவ்வன்மையைக் கொண்டு ஓர் அரசு தன் குடிகளைப் பிற நாட்டுத் தாக்கலினின்றும், உள்நாட்டுக் குழப்பத்தினின்றும் காக்கவேண்டும். அஃதன்றி அடிக்கடி கடுஞ்சட்டம் இயற்றியும் கொடுந் தண்டனை விதித்தும் குடிமக்களை யெல்லாம் ஒருபடித்தாக அச்சுறுத்தப் படாது. கடுமொழியும் கையிகந்த தண்டமும் வேந்தன் அடுமுரண் தேய்க்கும் அரம் (567) ஆதலின், சிலர் தீமை செயக்கண்டு, குடியனைத்தும் வெருவந்த செய்யாமை அரசு வள்ளுவமாம். மிகப் பெரிய அறிஞனையும் அச்சுறுத்தும் ஆற்றல் ஒரு சிறு ஊர் காவலனுக்கு இன்று உண்டு. செய்யாச் சிறு தெருக் குற்றங்களைச் சாட்டி. ஆகாதவர்களை ஒறுக்கும் வன்மை இற்றை அரசியலுக்கு உண்டு. ஆற்றில் விழுந்தவனை ஒருவன் முன் வந்து கைதூக்கினால், அவன் தான் விழுத்தாட்டியவனோ என்று முதற்கண் ஐயப்படுவது இந்நாள் அரசியல். வள்ளுவ அரசு குடிமக்கட்கு முதற்கண் மதிப்புக் கொடுப்பது. குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன் (544) என்பர். அரசினைக் காப்பது குடிகள் கடன் அன்று; குடிமக்களைக் காப்பது அரசின் கடன் என்பது வள்ளுவம். முறை செய்து காப்பாற்றும் மன்னவன் (388), குடியோம்பல் நான்கும் உடையானாம் (390), மன்னவன் கோல் நோக்கி வாழுங்குடி ((542), துளியின்மை ஞாலத்திற்கு எற்றற்றே வேந்தன் அளியின்மை வாழும் உயிர்க்கு (557) என்பன காண்க. அரசின் நோக்கம் வெறும் தற்காப்பு அன்று; உண்மைத் தற்காப்பு எனப்படும் குடிக்காப்பு என்ற வள்ளுவத்தை, இற்றை நம் அரசியலார் உணர்வரேல், எடுத்ததற்கெல்லாம் உங்கள் கடன், உங்கள் பொறுப்பு என மக்களைப் பார்த்துக் கூறுவதை நிறுத்துவர்; அரசேற்ற தங்கடன் எனத் திறம்பட வினை யாற்றுவர். நாடும் அரசும் அரசுக்கோர் தலைமையும் தலைமைக்குப் பல் பண்புகளும் வேண்டும் என்று கண்ட வள்ளுவர் தலைவன் ஒருவனால் நாட்டின் நிலையறியவும் நாடெங்கணும் வினையாற்றவும் இயலா என்று அறிந்தார். ஒரரசுக்குத் தலைவன்போல அமைச்சியலும் இன்றியமையா உறுப்பு என்பது வள்ளுவம். தலைவன் நிறையாற்றல் உடைய வனேனும், முற்பட்டு நேரடியாக வினைசெய்வான் அல்லன். அங்ஙன் வினைசெயல் வகை அமைச்சன்பாலது என்ற கருத்தால், வினைக்கூறுபாடெல்லாம் மந்திரி மேலனவாகத் திருக்குறள் மொழியும். இற்றை அரசியலுக்கும் இவ்வுண்மை பொது, அமைச்சர் களாகவே மக்கள் யாரையும் தேர்ந்தெடுப்பதில்லை. அவ்வெடுப்பு கட்சியுரிமை. பெரும்பான்மைக் கட்சியும் முதலமைச்சனைத் தேர்ந்தெடுக்குமே யன்றிப் பின்னமைச்சர் களை யெல்லாம் தேர்ந்தெடுப்பதில்லை. அன்னோர் எடுப்பு முதலமைச்சன் உரிமை. ஆதலின், குடியரசின் கண்ணும் தெரிந்து தெளிதல், தெரிந்து வினையாடல் என்ற வள்ளுவ அதிகாரங்கள் மிக நனி பொருந்துவன. நாட்டுக்குத் தலைவன் ஒருவன்; அமைச்சர் எண்ணத்தகும் சிலர். இன்னோர் மேல்நிலையிலிருந்து கண்காணிப்பும் கொள்கை வகுப்பும் சில பெருவினைகளும் செய்பவர்களே யொழிய, அரசு வண்டியை உயரவிருந்து ஓட்டுபவர்களே யொழிய, மெய்யாக அதனை இழுப்பவர்கள் அல்லர். நுகத்திற் கழுத்துக் கொடுத்துப் பாரந்தாங்கி அரசுச் சகடத்தை இயக்கும் காளைகள், கீழ்நிலைப் பதவியாளர்கள் அல்லரோ? இன்று ஒரு கட்சி வரும்; போகும். அமைச்சர்கள் வருகுவர்; போகுவர். பாராளுமன்றங்கள் ஆண்டிற்கு இருமுறை நடக்கும்; கலையும். இந்நிலையா அரசியலுக்கு இடையில், நிலைத்திருந்து இடையறாது அரசு இயக்குநர் ஊதியம் பெறும் வினைக் குழுவினர் அல்லரோ? ஆதலின், நாட்டுத் தலைவனும் அமைச்சர்களும் அரசாட்சியின் அடித்தளத்தை உணர்ந்து, தக்க ஆட்களை அரசுவினை செய்வார்களாக அமர்த்தல் வேண்டும். மிக்க விழிப்போடு அலுவலர்களைப் பொறுக்க வேண்டும் என்பது அரசு வள்ளுவம். காதன்மை கந்தா அறிவறியார்த் தேறுதல் பேதைமை யெல்லாம் தரும் (507) அறிந்தாற்றிச் செய்கிற்பாற்கு அல்லால் வினைதான் சிறந்தானென்று ஏவற்பாற் றன்று (515) என்பன ஆகாமை காட்டும் தேர்வுக் குறள்கள். அறிவுடைய அன்பனுக்கு அரசுவினை கொடுக்க; தனக்கு வேண்டியவன் என்பதற்காக, அறிவிலாதானை வினையில் அமர்த்தற்கு எனக் காதலாட்சி மறுப்பர் வள்ளுவர். தெரிந்து தெளிதல், தெளிந்து வினையாடல் என்ற ஈரதிகாரங்களும் ஊழியர் பற்றி நிரம்பிய கருத்துக்கள் உடையன; எவ்வகை அரசியலுக்கும் இன்றியமையா அறிவூட்டுவன. நாட்டு அன்பரீர்! அரசு வள்ளுவங்களை யெல்லாம் முற்ற முடித்து ஈண்டுக் கூறல் என் கருத்தன்று; கூறத் தொடங்கின். அது பல சொற்பொழிவாய் விரிந்து பெருகும். இன்றும் இனி வரும் காலத்திற்கும், குடியரசிற்கும், பிற எவ்வகை அரசிற்கும், அரசு என ஓரமைப்பு மன்பதைக்கண் உளநாள் வரையும், வள்ளுவர் தம் அரசுரிமைகள் பொய்யா என்றும், ஞாயிற்றுக்குக் கதிர் போலவும் திங்களுக்கு நிலவு போலவும் அவை அரசுக்கு நின்று நிலைக்கும் அடிப்படைப் பண்புகள் என்றும், மெய்யுறுத்துவான் வள்ளுவ அரசின் ஓரங்காட்டலே என் உட்கோள். வேந்தன், அமைச்சன், வினைசெய்வான் என வரூஉம் சொற்களில் அழுத்தங் கொள்ளாது, அவற்றை ஆற்றல் நிறைவு குறைவு தெரிக்கும் படிமுறைச் சொற்களாகவே நாம் பொருள் கொள்ளல் வேண்டும். தலைமைப் பதவி இருப்பினும், இந்தியத் தலைவனுக்கும் மாகாணத் தலைவர்களுக்கும் ஒளி - அஃதாவது அரசாற்றல் - இல்லை. அரசொளி இந்திய முதலமைச்சன் பாலும் மாகாண முதலமைச்சர்கள் பாலும் தங்கிக் கிடக்கின்றது. அமெரிக்கத் தலைவனும் இந்தியத் தலைவனும் ஆங்கில அரசியும் ஒரு நிகரான அரசொளி உடையவர்கள் அல்லர். ஆதலின் அமைச்சன், தலைவன் என்ற அரசியற் கிளவிகளில் பேரழுத்தம் வையாது ஓரரசின்கண் துணியும் முடிவாற்றல் யாவனுக்கு உண்டு; அவனைத் தலைவனாக, வேந்தனாகக் குறிக்கொள்ளவேண்டும். எல்லாரும் இந்நாட்டு மன்னர் என்று ஒப்புக்குப் புகழினும், அரசியலின் உண்மையை உணர்க. நாம் மிதிவண்டியில் விளக்கின்றிச் சென்றால், ஊர்காவலன் நம்மைப் பிடித்து எழுதி வைத்துத் தண்டனை செய்வான்; அவன் அங்ஙனம் செல்லக் கண்டால், நாம் யாதும் செய்ய ஒல்லுமா? செய்தால் நம் வாழ்நாள் பின்னை இடையூன்றி இயங்க முடியுமா? இருவர் தம்முள் அடித்துக் கொண்டால் அதன் கருத்து வேறு. ஒரு குடி மகன் ஊர் காவலனை அடிப்பானேல், அஃது அரசினைத் தாக்கியதாகப் பொருள்படும்; அரசே முன் வந்து வழக்குத் தொடரும். இதன் கருத்து என்னை? ஊர் காவலன் அரசாணை தாங்கியவன்; அரசு வினைஞன்; இம்மியளவேனும் அரசொளியுடையவன்; ஓராற்றால் சிறு மன்னன் எனத் தக்கவன். இவனேயன்றி, அரசுவினை செய்யும் சிறு பெரு ஊழியர்கள் எல்லாம் ஓராற்றால் சிறு மன்னர்கள் எனத் தக்கவர். ஆதலின், வேந்தனுக்கு - நாட்டுத் தலைவனுக்குச் - சொல்லும் இறை மாட்சிகள் சிலவேனும் பிற அரசு வினைஞர்களுக்கும் வேண்டும். காட்சிக்கு எளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல் மீக்கூறும் மன்னன் நிலம் (386) கொலைமேற் கொண்டாரிற் கொடிதே; அலைமேற்கொண்டு அல்லவை செய்தொழுகும் வேந்து (551) என்ற குறள்கள் வேந்தன் ஒருவன் மேலவாக நுதலப் படினும், எளிய காட்சியும், இன் சொல்லும், குடிகளைத் தொந்தரவு உறுத்தாது தழுவும் முறைமையும் ஆகிய வேந்தியல்புகள், அரசுத் துறைப்பட்ட எவ்வினையாளர்க்கும் ஒருவந்தம் இன்றியமையாதன எனக் கொள்க. ஒளி நிரம்பிய ஆட்சித் தலைவனுக்கே இப் பண்புகள் வேண்டும் என்பரேல், ஏனைக் கீழ்நிலைப் பதவியாளர்களுக்கு வேண்டும் என்பது தானே விளங்கும் அன்றோ? குடிமக்களை நன்கு மதிப்பது வினை செய்வார்க்கு ஒழுக்கம் என்ற வள்ளுவம் இதனால் வலியுறும். இதுகாறும் அரசியலில் வள்ளுவர் கண்ட பல்வகை ஆள்வார்களைப் பற்றிச் சிற்றளவே உரைத்தேன். இனி இதனை விரித்தற்கு இவ்வொரு சொற்பொழிவு இடங் கொடாது; ஆதலின், இம்மட்டோடு நிறுத்துவல். ஓரரசு உள்நாடு வெளிநாடு என இருபெரும் பிரிவுகளாகத் தன் கொள்கைகளை வகுத்துக்கொள்ளும். அவற்றுள் வள்ளுவ அரசின் வெளிநாட்டியலை முதற்கண் ஆராய்வோம். முழு இந்தியாவின் விடுதலை நோக்கம் வைத்து, நம் பெறலரும் தலைவர்கள் வினையாற்றினர்; எனினும், முடிவில் பாகித்தான் நாட்டுப் பிரிவினைக்கு இசைந்தனர். குடிமக்கள் அனைவரும் ஒன்றுபோல் முன்னேறுதற்கு ஒத்த வாய்ப்பு அளிக்க வேண்டும் என்பது நம் இந்திய அரசியற் பாயிரம்; எனினும், பன்னூறாண்டு தாழ்த்தப்பட்ட நம் மக்கட்கும் மலை வாழ்நருக்கும் பத்தாண்டுக் காலம் தனி முதன்மை அளிப்பது என்ற சிறப்பு விதி இருக்கக் காண்கின்றோம். உலகவமைதியை யும் போரொழிப்பையும் படைக் குறைவையும் மெய்யாகவே விரும்புவது இந்தியா; எனினும், பாகித்தான் காசுமீரத்துப் படை தொடுத்தகாலை, வாளாவிருக்க முடிந்தது கொல்? எதிர்ப்படை விடுத்து அமர் செய்தது இயல்பன்றோ? உலகத்து அமைதி அமைதியென மூச்சுக்கு முந்நூறு மடங்கு வாய் வீசா அரசு யாதும் இன்று; எனினும், எல்லா அரசும் நாள்தோறும் படைபெருக்கு மிகுக்கவும், நுணுகிப் பரந்த புதுக் கொலைக் கருவி காவும் விரைவதைக் காண்கின்றோம். அணுக் குண்டும் நீர்க் குண்டும் பிறந்தது இவ்வமைதிப் பறைக் காலத்தன்றோ? இவற்றால் எல்லாம் நாம் அறியக் கிடப்பது யாது? குறிக்கோளுண்மை என்பது ஒன்று. நடைமுறை யுண்மை என்பது மற்றொன்று. இவ் விரண்டும் தம்முள் முரணல்ல குறிக்கோள் முன்னோக்கிய அறிவு நிலை பற்றியது; நடைமுறை அப்பொழுதைச் செயல்நிலை தழுவியது. செயற்கை யறிந்தக் கடைத்தும் உலகத்து இயற்கை யறிந்து செயல் (637) என்பது உலகநடை வேண்டும் குறள். உலகத்தோடு ஒட்ட ஒழுகல் (140) உலகத்தோடு அவ்வது உறைவது அறிவு (426) என இந் நடைமுறைத் தழுவலைப் பலபடியான் வற்புறுத்துவர். ஒரு பெருங் குறிக்கோள் கொண்ட அன்றே, முழுதும் செயலாகுவதில்லை; அன்றே ஆகல்வேண்டும் என நினைப்பது அறிவுப் பிழை. கருப்போல் சிறிது சிறிதாகச் செயல் வளர்ச்சி பெறுவதுதான் இயல்பு. திருக்குறள் முழுதும் கற்க வேண்டும் என்று மனத்து நினைப்பது எளிது; நூலெடுத்துக் கற்கப் புகும்போது தான், சொல் முட்டுப்பாடும் பொருளறியாமையும் குடும்ப இடைப்பிறவரலும் உண்டாகும். ஒருநூறு கற்றொலைவு நடக்கவேண்டும் என உள்ளுவது எளிது; நடக்க அடி எடுத்து வைக்கும்போதுதான், கல்லும் முள்ளும் குத்தும்; காற்றும் மழையும் தாக்கும்; நீர் வேட்கையும் உடல் நோவும் வரும். இமயமலைத் தனிச் சிகரத்தை மிதிக்க எண்ணுவது எளிது; பனிமலைமேல் ஏறும் போதுதான் கால் வழுக்கும்; மூச்சடங்கும்; வளிப் பூதம் விளங்கும். தமிழ் எம்மொழிக் கலப்பும் இன்றி உயர்தனிச் செம்மொழியாய் இன்றும் இலங்கல் வேண்டும் எனத் துணிதல் எளிது; பரந்து விரிந்த பல்துறைப் பொருள்களை நம் தாய்மொழிக்கண் எழுதிப் பேசும் போதுதான், பழஞ்சொல் தேடும் முயற்சியும், புதுச்சொல் ஆக்கும் பாடும், பிறவொலி கலவாது மொழி காணும் இடையூறும், குறுகிய நோக்கம் என்னும் பொய்ப் பழியும் உளவாகும். விளங்கீடு குறுக்கீடு இடையூறு இன்ப துன்ப மெல்லாம் செயற்பாட்டின்கண் வருவன. நடைமுறை தழுவுக என்பதனால், குறிக்கோள் அழியத் தழுவுக என்பது கருத்தன்று. குறிக்கோள் இல்லாதவன் உயரான்; உலகத்து அப்பொழுது உள்ள நிலை பற்றாதவன் வாழான்; கொள்கையும் உலக நடையும் கணிக்கும் அறிவுச் செயலுடையவனே எஞ்ஞான்றும் வீழ்ச்சியின்றி உயர்ந்து செல்வான். உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல்; மற்றது தள்ளினும் தள்ளாமை நீர்த்து (596) என்பது ஒரு கொள்கைக் குறள். எண்ணிய உயர்ச்சி வாராவிடினும், உயர்வாக எண்ணுவதை விட்டு விடாதே என்பர். ஆதலின், குறிக்கோளுணர்ச்சி மழுங்கும்படி, மாயும்படி உலகியல் பின்பற்றக் கூடாதே யொழிய, நோக்கம் அழியா நடைமுறை தழுவத் தக்கது என அறிக. உலகத்தோடு ஒட்டும் ஒவ்வொரு முறையும் நம் கொள்கை சிறிதாவது செயற் படுகின்றதா? செயற்படாதொழியினும் முரண்பட வில்லையா? கொள்கையழுத்தம் தன் நெஞ்சறியக் குறையா திருக்கின்றதா? என்று காண்பது உண்மைக் கோளுடையார் பொறுப்பு. எந்த அளவு நடைமுறையைத் தழுவுவது, எந்த அளவு குறிக்கோளை விட்டுக் கொடுப்பது என்பதெல்லாம் கற்பித்து வருவதில்லை. அறிவுடையார் எல்லாம் உடையார் (430) என்பது முடிந்த வள்ளுவம். உலகம் ஒன்று; மக்கள் ஓரினம் என்பது இந் நூற்றாண்டிற் பரவி வரும் அன்புக் குறிக்கோள். பசியும் பிணியும் பகையும் ஒழிக; நாடு தம்முள் அச்சமும் இகலும் நீங்குக; எல்லா மக்களும் கலந்து வாழ்க என்பது நம் வேண்டுகோள். உள்ளுவதெல்லாம் உயர்வு உள்ளல் என்று நினைவு மாட்சி அறைந்த வள்ளுவர் உலகப் பொதுமை எண்ண அறியாதவரும் அல்லர்; எண்ணாதிருந்தவரும் அல்லர். இகலென்ப எல்லா வுயிர்க்கும் பகலென்னும் பண்பின்மை பாரிக்கும் நோய் (851) பகையென்னும் பண்பி லதனை ஒருவன் நகையேயும் வேண்டற்பாற் றன்று (871) பகைநட்பாக் கொண்டொழுகும் பண்புடை யாளன் தகைமைக்கண் தங்கிற்று உலகு (874) உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும் சேராது இயல்வது நாடு (734) நல்லாறு எனப்படுவது யாதெனின் யாதொன்றும் கொல்லாமை சூழும் நெறி (324) என வரூஉம் பல் குறள்களும், அனைத்துத் தீமைக்கும் பிறப்பிடம் காட்டும். இகல் என்னும் தனியதிகாரமும் வானுயர் வள்ளுவ நோக்கங்கட்குச் சான்றாவன. இமயமலையன்ன உயர்ந்த எண்ணங்கள் ஒரு பாலாக, உலகவொருமை சாற்றும் இற்றைய நடைமுறையை நோக்குமின்! வளமிலா நாட்டு மக்கள் வளமுடைய உலகப் பிற பகுதிக்குக் குடியேற ஒல்லுமா? செல்வம் கொழிக்கும் ஓரரசு, குடும்பம்போல் கணக்கு வழக்குப் பாராது, வறிய பிறிதோர் அரசுக்குப் பொருட்கொடை செய்வதுண்டா? தங்கு தடை யின்றி ஒருவன் தன் வீடுபோல் உலக முழுதும் புறப்பாடு செய்ய முடியுமா? ஒரு நாட்டில் நிரம்பிய தொகையுடைய மக்கள் இருப்பரேல், ஒரு பகுதி மக்களைக் குடிகள் குறைந்த பிறிதொரு நாட்டிற்குக் குடியேற்ற இயலுமா? உலகம் ஒன்றென நினைப்பதைக் காட்டினும், ஒவ்வோர் இடத்தையும் உலகமென நினைத்தல் வேண்டும். மக்களை ஓரினம் என எண்ணுவதைக் காட்டினும், ஒவ்வொருத்தரையும் மக்களினம் என எண்ணல் வேண்டும். இங்ஙன் எண்ணுவதே செயலுக்கு வரும் அன்பு நெஞ்சம் ஆகும். கொரியப் போரை உன்னுமின்! கொரியப் போருக்கு ஓர் தீர்வு காணாவிட்டால் அஃது உலகப் போராய் முடிந்துவிடும் என்றும், மக்கட் பூடே அற்றுப்போம் என்றும் அரசியல் அறிஞர்கள் முழங்குப. கொரிய நாடும் உலகமே எனவும், அங்கு நடப்பதும் உலகப் போரே எனவும், கொரியரும் மக்களினமே எனவும், ஆங்கண் இன்று மக்கட்பூடு அற்றுக் கொண்டிருக்கின்றது எனவும், துடிப்புணர்ச்சி இன்னோர்க்கு இல்லை. எதிரிடும் உணர்ச்சியே பீறிட்டு நிற்கின்றது. இப்போர் அமெரிக்காவிலோ இரசியா விலோ தொடங்கியிருக்குமேல், இதுவரை எவ்வகையானும் ஒரு தீர்வு கண்டிருப்பரன்றோ? தன்னாட்டு வீரர்கள் அழியப்படாது என்பதற்கன்றோ, அமெரிக்கர் சப்பானில் அணுக்குண்டு எறிந்து அந்நாட்டு மக்களை அழித்தது; ஆதலின், உலகம் ஒன்றென்பதூஉம், மக்கள் ஓரினம் என்பதூஉம், நடைமுறை யுண்மைகள் அல்ல என்பது பெறப்படும். பிற அரசுகள் தலையிட்டிராவிட்டால், தென்கொரிய வடகொரிய மக்கள் விரைவில் ஒரு தீர்வு கண்டிருப்பர். இன்று அமைதி செய்து கொள்ளும் உரிமை அன்னோர்க்கு இல்லை. உலகவொற்றுமை என்று விளம்பிக்கொண்டு, பல நாடுகள் தலையிட்டதன் விளைவு இது. இரு குடும்பத்தார் அடித்துக் கொண்டால், ஊர்க் குடும்பங்களை எல்லாம் கூட்டித் தீர்ப்புக் கூறுமின் என்று வேண்டல் நகைப்பிற்கு உரியது; மேலும் குழப்பம் தருவது. இந்நிலையையே கூட்டு நாட்டவையிற் காண்கின்றோம். இருநாட்டுப் பூசலை அறுபது நாட்டின் முன் வைப்ப ஒவ்வொரு அரசும் உலக நலம் நோக்கிச் சீர்தூக்காது, அச்சிக்கலைத் தன்னாட்டு நன்மைக்கு எங்ஙனம் பயன் கொள்வது? என்று விழிப்போடு உரைசெய்யக் காண்கின்றோம். கணவனோ மனைவியோ பிள்ளைகளோ ஒருவர் குறையை மற்றவர் தன்னலமாக்கிக் கொள்ளும் இவ்வுலகில், ஓரரசினர் தங் குடிகளைக்கூட ஒன்றெனத் தழுவாது சாதி மதம் நிறம் கொள்கை மேலிட்டு நசுக்கும் இவ்வுலகில், ஒரு நாட்டுள்ளும் ஒரு கட்சியின் பிளவைக் கண்டு பிற கட்சிகள் களிக்கும் இவ்வுலகில், ஓரரசு பிறிதோர் அரசின் குழப்பத்தை - சிக்கலை - வறுமையைத் - தன்னலமாகப் பயன் கோடல் அரிய இயல்பு அன்று; பரந்து காணப்படும் நடைமுறையுண்மையாகும். வள்ளுவ அரசியல் எதிர்காலக் குறிக்கோளும் நிகழ்கால நடப்பும் கொண்டது; உயர்ந்த எண்ணமும் உலகப் போக்கும் உடையது. அறிவுக்கண், உலகக் கண் என்ற இரு நோக்கும் வாழ்வார்க்கு இன்றியமையாதவை என்பது வள்ளுவம். இவ்விரு நிலை அடிப்படையிற்றான் திருக்குறளை யாத்தார் என்பது என் துணிபு; ஆதலின், நாம் அதனை இம்முறையில் கற்போமாக. உலகம் ஒன்றெனப் பறைசாற்றினும், கூட்டு நாட்டவை அமைந்திருப்பினும், உள்ளோடுகின்ற நடைமுறை அரசியலை ஆராய்வார்க்கு, வள்ளுவர் பகை மாட்சி அதிகாரம் இன்று பெரிதும் மெய்யாகின்றது என்பது தெளியப்படும். படைக் குறைவு உலக அமைதியைத் தாராது; படைப் பெருக்கமே அதனைப் பயக்கும். பெருக்கம் இருப்பின் பகைவர் அஞ்சிப் போர் செய்யாது ஒடுங்குவர் என்று அமெரிக்க அறிக்கை விடாது கூறும். எம்பால் அணுக்குண்டும் உண்டு; பிற அழிவுப் பெருங்கருவிகளும் உண்டு என்று பகைவர் துணுக்குற ரகசிய வெளியீடு குறிப்பிடும். நாங்களும் அணுக் குண்டுத் தேர்வு நடத்தினோம் என்பர் ஆங்கிலேயர். இந்தியாவின் படைத் தொகையைக் கண்டு பாகித்தானும் தன் போராரவாரத்தைக் குறைத்துக் கொண்டது. மூன்றாவது உலகப் போர் இன்னும் நிகழாமல் இருப்பதற்கு, ஒரு பெருங் காரணம் எல்லா நாடுகளும் படை பெருக்கி வைத்திருப்பதுதான் என்பர். போர் நிகழின், இருதிறப் பகை நாடுகளும் முற்ற அழியும் என்னும் அச்சமே அமைதிக்கு ஏது என்பர். யாண்டும் காணப்படும் இப்போக்கு வள்ளுவர் கண்ட நடைமுறை அரசியலாகும். வகையறிந்து தற்செய்து தற்காப்ப மாயும்; பகைவர்கண் பட்ட செருக்கு (878) இவ்வரசுக் குறளின் உண்மை இன்று நன்கு பொருந்த வில்லை கொல்? வருவாயிற் பெரும் பகுதியைக் காப்புத் துறைக்கண் எல்லா நாடுகளும் வாரியிறைப்பதுவே இக்குறளுக்குப் பொய்யாச் சான்று பகரும். சுருங்கச் சொல்லின், பிறநாட்டு நட்பு, தன்னாட்டுப் படைப்பெருக்கு என்ற இவ்விரண்டும் வள்ளுவ அரசின் வெளிநாட்டுக் கொள்கைகள் என்று அறிக. வள்ளுவர் பொய்யில் புலவர்; அவர் சொல்லிய வெல்லாம் பொய்யா என்று வரிந்து கட்டிக்கொண்டு நிறுவ முயறல் என் உட்கிடையன்று. அங்ஙன் நீவிர் நினைப்பிரேல், அது பெரும் பிழை. உடலுக்குப் பிணியும் பிணிக்கு மருத்துவமும் உளவாதல் போல, மனத்துக்கு மாசும் மாசுக்குத் திருக்குறள் மருந்தும் இருப்பது இயல்பு. நாடு, நிறம், பிறப்பு முதலாய இயற்கைத் தொல்வேற்றுமைகளைப் பகையாகக் கருதி அறிவின்றி இகலும்வரை, அச்சமும் நம்பாமையும் இருக்கும்; அவை யுளவரை, படைமாட்சி இருக்கும்; படைப்பெருக்கு இருக்கும் வரை, வல்லரசு மெல்லரசு என ஆற்றற் பாகுபாடு இருக்கும்வரை, தானும் தன்னினமும் வஞ்சி மலைந்து வாகை சூடியேனும் அளவு கடந்து வாழ்தல் வேண்டும் என்னும் தற்பற்று இருக்கும் வரை, தலைவன் ஆதல் வேண்டும் என்னும் பேரவா இருக்கும் வரை, வள்ளுவர் வகுத்த, குறிக்கோள் நடைமுறை என்ற இரு வேறு அரசியலுக்கும் ஞாலத்தில் செவ்வியுண்டு. எவ்வுயிரும் நோய்வாரா உடம்பு பெறுவதுண்டேல், மருந்து அதிகாரத்துக்கு இடனின்று, மக்களெல்லாம் ஒருவன் ஒருத்தி என்னும் தமிழ் ஐந்திணை யொழுக்கம் பெற்றுக் காம வரம்புப் படுவரேல், பிறன்மனை நயவாமை, கூடா வொழுக்கம், வரைவின் மகளிர் அதிகாரங்கட்கு வேலை யில்லை. இன்பத்துணை மட்டும் அல்லேன்; வாழ்க்கைத் துணையும் ஆவேன் என மனைவி நடப்பாளேல், பெண் வழிச்சேறல் அதிகாரத்துக்குப் பேச்சு இல்லை. யாரும் விரும்பிய நலம் விரும்பியாங்கு எய்துவரேல், நல்குரவு, இரவு அதிகாரங்கட்கு ஆட்சியில்லை. பிறரும் வாழ்க என்ற பெருமனம் சிறக்குமேல், பகைமாட்சி, உட்பகை, நன்றியில் செல்வம் அதிகாரங்கட்கு உயிர்ப்பு இல்லை. யாவரும் முற்றறிவு உடையர் ஆகுவரேல், புல்லறிவாண்மை பேதைமை முதலாய பல்லதிகாரங்கட்குத் தோற்றம் இல்லை. வஞ்சகம் ஒருத்தர் நெஞ்சகத்தும் இல்லா திருக்குமேல், யாவரும் தன் நெஞ்சு அறியப் பொய்யாது நடப்பரேல், இறைவணக்கம் என்பது பொய்யா ஒழுக்க வாழ்க்கை என்ற மெய்யறிவு கொள்வரேல், எத்துணையோ அதிகாரங்கட்கு இடனில்லை காண். நிற்க. நம் கண்ணாரக்காண்பது என்ன? உலகம் நன்றுக்கும் தீதுக்கும் உரிய பொதுவியல்பு உடையது. மக்கள் மனம் தூய்மையும் மாசும் சார்தற்கு வாய்ந்த, ஒரு பாற்படா அசைவுடையது. ஒவ்வொருத்தரும் மாசுபடாது தூய்மை போற்றல்வேண்டும் என்பது வள்ளுவம். இஃதன்றி, நன்று தீது கலந்த உலகம் என்று எண்ணாது, ஞாலம் குறை அற்றது; குணம் ஒன்றே நிரம்பியது என்று வைத்துக் கோடல் செயலிழுக்காய் முடியும்; வாழ்க்கை யழிவாய்ப்போம். அன்புடைய இன்ப ஞாலமாக ஆவது, பாடுபடத் தக்க உயரிய நன்னோக்கமா யினும், அப்பொழுது ஞாலம் இயலும் நடைமுறையையும் குறிக் கொள்ளல்வேண்டும். இங்ஙன் பிறழா உலக அடிப்படைமேல் வள்ளுவக் கொத்தர் திருக்குறள் கட்டினார்; ஆதலின், அவரும் பிறழார்; அவர் குறளும் பிறழா என்பது என் துணிவு. ஒரு நூல் குறிக்கோளே முழுதும் கூறுவதாயின் வாழ்க்கைக்கு ஒட்டாது. அன்றி அற்றைப் பொழுது கழிக்கும் நடைமுறையே முழுதும் காட்டுவதாயின் வாழ்க்கையை உயர்த்தாது. இக்கருத்தால், ஒட்டும் நூலாக, உயர்த்தும் நூலாக, எதிர்நோக்கும் நிகழ்நடையும் இணைந்த வாழ்க்கைச் செயல் நூலாக, வள்ளுவர் தம் நூலை அமைத்தருளினார். அறத்துப்பால் முழுதும் குறிக்கோள் நிரம்பியது. பொருட்பால் குறிக்கோளும் நடைமுறைச் செயலும் இணைந்தது. காமத்துப்பால் உலகவொழுக்கமே சுட்டுவது. இதுகாறும் திருக்குறளரசின் அமைப்பு வள்ளுவங்களையும் வெளிநாட்டு வள்ளுவங் களையும் ஓரளவு ஆராய்ந்தோம். இனி உள்நாட்டு வள்ளுவங் களை ஒருபால் ஆராய்வோம். ஒருவன் உடல் வன்மையோ, செல்வ வலியோ, கல்வித் திறலோ, அறிவுக்கூர்மையோ பெற்றிருப்பின், அவன் தன் னாற்றலைக்கொண்டு பிறரைக் கெடுக்கவே முந்துகிறான்; அச்சுறுத்தியும் வஞ்சித்தும் எளிதாக வாழ அவாவுகின்றான். செல்வாக்கைப் பிறர் அழிவுக்கு ஆளுவதே ஒழுக்கமிலாதார் தம் உலகப் போக்காகக் காண்கின்றோம். ஒரு நாட்டின்கண் அரசு என்பது பேராற்றல் தங்கிய அமைப்பு; கொலைப் பயிற்சி பெற்ற படைத்தொகையுடையது. நாட்டுத் தலைவன் தன் பதவி காக்கவும், தனக்கொவ்வாக் கொள்கையினரை அழிக்கவும் தீது செய்வான் என்றும், குடிக்காப்பு என்னும் பெயரால் கொலைபல செய்து தற்காப்புக் கொள்வான் என்றும் ஆசிரியர் கருதினார். நின் வலியால் நல்லது செய்க என்று விதிப்பதினும், அல்லது செய்யாதே; செய்யின் பெருவலியால் நீ அழிவாய் என்று தீமை தடுக்க விரும்பினார். படைப் பெருக்கும், தலைமைப் பதவியும், பிற புறத்துணைகளும் வன்மையாகா; வன்மை எனப்படுவது குடிமக்களின் பற்றுக்கோடு என்று இடம் காட்ட எண்ணினார். வேலன்று வென்றி தருவது; மன்னவன் கோலதூஉம் கோடாது எனின் (546) அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே செல்வத்தைத் தேய்க்கும் படை (555) என்ற குறள்களால், படைகொண்டு குடிகளை ஆளப் படாது; முறைகொண்டு ஆள்கைவேண்டும் என்பதூஉம், கண்ணகி போல் மனங் கொதித்து ஒருவர் கொட்டிய கண்ணீரும் அரசு புரட்டும் பறையாய் விடும் என்பதூஉம் வெளிப் படுத்தினார். கொலையாளி பலரைக் காட்டிலும், தன் மக்களை எஞ்ஞான்றும் கலக்கஞ் செய்து தீமை புரியும் ஓரரசு மிகக் கொடியது என்று முடிவு கூறினார். கொலையிற் கொடியரை வேந்தொறுத்தல் பைங்கூழ் களைகட் டதனொடு நேர் (550) கொலைமேற் கொண்டாரிற் கொடிதே அலைமேற்கொண்டு அல்லவை செய்தொழுகும் வேந்து (551) என்ற குறள்கள் ஒன்றன்பின் ஒன்றாக நிற்பன. நிறுத்தியதன் குறிப்பு என்னை? ஒரரசு கொலையாளரைக் கொலை செய்வது களை பறிப்பதை ஒக்கும் என்றால், குடிகளை யெல்லாம் வாழ்வறுக்கும் அவ்வரசினை ஒழிப்பது பயிர் அழிக்கும். அறியா உழவனை அகற்றுவதை ஒக்கும் அன்றோ? ஆதலின், அல்லவை செய்யும் அரசு கெடுதற்கு உரியது என்பது குறிப்பு பொறாமையுடையவன் பகைவரின்றியும் தானே அழிவான் என்பது போலக் கொடுங்கோல் வேந்தும் தண்பதத்தான் தானே கெடும் (548) ஒருவந்தம் ஒல்லைக் கெடும் (563) என இயற்கை யழிவு தெரிப்பர். அரசாற்றலைத் தலைவனும் அமைச்சரும் வினையாளர்களும் தன்னலத்துக்கு ஆளல் கொடுங்கோன்மை; மக்கள் நலமே அரசின் முழு நோக்கம் என்பது வள்ளுவம். இறைமாட்சி, செங்கோன்மை, கொடுங்கோன்மை, வெருவந்த செய்யாமை அதிகாரங்கள் இவ்வுண்மை காட்டுவன. அரசுத் தலைவனை ஒரு நாட்டின் மக்கள் தலைவன் என்றோ, ஆன்று அவிந்து அடங்கிய சான்றோன் என்றோ பொதுவாகச் சொல்லுதற்கு இல்லை. அரசின் உள்ளும் புறமும் தலைமை சான்றோர், நேரு பெருமகன் போலும் தவச்சிலரே யாவர். கல்வியானும், அறிவானும், ஒழுக்கத்தானும், பரந்தோங்கிய புகழானும், செயற்றிறத் தானும் செல்வாக்குடை யோர் குடிமக்களுள் பலரிருப்பர். அரசுத்தலைவன் மக்கட் பெரியோர்களை என்றும் தழுவிக் கொள்ளல் வேண்டும்; அன்னோர் செவி கைப்பக் கழறினும் பொறுத்துக் கேட்டொழுகும் அடக்கம் வேண்டும்; தன்னை ஆட்சித் தலைவனாக எண்ண வேண்டுமே யொழிய, நாட்டுத் தனிப் பெருந்தலைவனாக மயங்கிப் படையாற்றலை நம்பிக் கிடத்தல் ஆகாது என்பது வள்ளுவ அரசியலின் உள்ளோட்டம். பெரியாரைத் துணைக்கோடல், பெரியாரைப் பிழையாமை என்ற அதிகாரங்களால், அரசுத் தலைவன் பற்றுக்கோடும் அழிவும் சுட்டுவர். அவன் உண்மைப் பெரியோனல்லன்; அவனினும் பெரியோர் குடிமக்களுள் உளர் என்று நினைவுறுத்துவர். ஏந்திய கொள்கையார் சீறின் இடைமுரிந்து வேந்தனும் வேந்து கெடும் (899) என்பதனால், குடிப்பெரியோர் திருக்குறளரசின் உள்ளுறுப்பினர் என்பது தெளிவு. இடிப்புரையாளர் செங்கோலரசிற்கு இன்றியமை யாதவர் என்பது வள்ளுவம். தக்காரும் சேர்வது நாடு (731) என்றல் காண்க. இடிப்பாரை விலக்கி முழுதும் ஒத்தூதுவாரைத் தழுவும் அரசு கொடுங்கோலாய் இழியும்; நிலக்குப் பொறையாய்விடும். ஆசிரியர் வேண்டும் இடிப்பாளர். பல் குழுவும், பாழ் செய்யும் உட்பகையும், வேந்து அலைக்கும் கொல் குறும்பும் (735) என்ற இனத்திற் சேராதவர்; நாட்டன்பினர்; இன்றுகாணும் எதிர்க்கட்சியாளர். குடிப்பெரியோரையும், இடிப்பறிஞரையும் கேண்மை கொள்க என்பது எவ்வகை அரசியனுக்கும் உரிய வள்ளுவம் அன்றோ? தக்கார் இனத்தனாய்த் தானொழுக வல்லானைச் செற்றார் செயக்கிடந்தது இல் (146) இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பா ரிலானும் கெடும் (448) இனைய பல் கருத்துக்களால், அரசின் தனிப் பேராற்றலைத் தீமைக்கு ஆளாகாதவாறு குறுக்கீடு செய்வர். படையை வெளிநாட்டுக் கொள்கைக்குத் துணையாகக் கொள்ள வேண்டுமேயன்றித் தன் நாட்டு மக்களை ஆள்வதற்குத் துணையாக்கப்படாது என்பர். படைப்பயன் புறப்பகை யினின்றும் மக்களைக் காப்பதுவே யன்றித், தன் குடிமக்களி னின்றும் ஆள்வார் தம்மைக் காத்துக் கொள்ளுவதற்கு அன்று என்ற வள்ளுவம் குறிக்கொளத் தகும். இவ்வுண்மைக்கு வேலன்று வென்றி தருவது (546) என்ற குறட்பகுதியே கரி. ஒரு பெருந்தொழிற்சாலைக்கண் பொறிகள் எத்துணை இருப்பினும், சிறந்து நிற்பவன் தொழிலாளி போல, திருக்குறள் வேத்தியற்கண் அரசன், அமைச்சன், தூதன், ஒற்றன், மறவன் என வினை செய்வார் பலர் பேசப்படினும், மூலப்பொருள் மக்களே என அறிக. ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும் தேர்ந்துசெய் வஃதே முறை (541) என்பது வள்ளுவ அரசுப் பாயிரம். அகவியல் புறவியல் என்னும் அரசியற் பகுதி இரண்டனுள், மக்கட்கு அணிய தொடர்பு உடையது அகவியலாகும்; உள்நாட்டு நடப்பாகும். நாட்டின் உள்ளாட்சி முறைமையுடையதாக இருப்பின், வலிய புறப்பகையும் வெல்லல் முடியாது; ஆதலின், ஓரரசு தன் குடிகளின் துணையை எஞ்ஞான்றும் போற்றிக் கொள்கை வேண்டும். பகைவன் வரவை நினைப்பதினும், குடி மக்களின் இருப்பை மிகுந்து நினைக்கவேண்டும். நாட்டின் எல்லையைக் காப்பதினும், ஒருகுடியால் மற்றொரு குடி தொல்லைப் படாதவாறு கண்காணிக்கவேண்டும். வெளிப்பகை அடிக்கடி வருவதில்லை; ஓரொருகால் நிகழ்வது; நாடு முழுமைக்கும் பொதுவானது. தீய குடிப்பகையோ களைபோல் இடந்தொறும் இருப்பது; புற்று நோய் போல் உள்ளரிப்பது இங்ஙன் உடனிருந்து தீது இழைக்கும் குறும்புக் குடிகளை ஒறுப்பது அரசின் தனிப் பொறுப்பாகும். இப் பொறுப்பினை ஆற்றற்கென்றே அரசினை மக்கள் ஏற்படுத்தினர். அரசு செய்யாது பிழைக்குமேல், தடி எடுத்தவன் தண்டற்காரன் என்ற நிலை முற்றி மக்கள் விலங்காக அடித்துக் கொள்வர். குடிபுறங் காத்தோம்பிக் குற்றங் கடிதல் வடுவன்று; வேந்தன் தொழில் (549) என்பது ஆசான் உடன்பாடு. தன் தீய குடிகளை ஒறுப்பது அரசின் பொறுப்பு எனினும், அதனை ஆற்றல் எவ்வகையானும் எளிய இனிய செயல் அன்று. தீய குடிதான் எனத் தெளிவதும், தீமைக்கேற்ற தண்டனை விதித்தலும், அரசிற்குப் பெருந் தொல்லை வினைகளாகும். ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் கோவலனைக் கள்வன் என மாறியுணர்ந்தான்; சிலம்புக் களவுக்கு உயிர் வாங்கினான்; அதனால் கோல் வடுபட்டான் என ஆட்சியிழுக்கை அறிகின்றோம். தலைவன் தற்காப்புக்குக் குடிகளை யொறுப்பது வடு என்றும், நற் குடிக் காப்புக்குத் தீக்குடி கடிவது தொழில் என்றும் காட்டுவான், வள்ளுவர் யாத்த நடை நுட்பம் நினையத் தகும். தன்னாட்டுக் கொடுங் குடிகளை, அயல்நாட்டுப் பகைபோல அரசு கருதப்படாது. கருதி அளவிறந்து தண்டிப்பின் ஏனை நற்குடிகளுங்கூட அஞ்சும். தீய குடித் திருத்தமே ஒறுப்பின் நோக்கமாதல் வேண்டும் என்பது வள்ளுவம். நல்லாசிரியன் வகுப்பிற் குறும்பு இழைக்கும் மாணாக்கர்மேல் கறுவு கொள்ளான்; காலம் பார்த்து உள்வேவான்; வகுப்பு இயலுமாறும் அவர்தம் குறும்பு திருந்துமாறும் முறை செய்வான். அரசாட்சி வகுப்பாட்சியை ஒப்பது. தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால் ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து (561) என்ற குடியொறுப்புக் குறளின்கண்,சொற்றோறும் அன்பு ஓடுதல் காண்க. நீடு நினைந்து மிக்க விழிப்போடு யாத்த பா இது. தக்காங்கு, ஒத்தாங்கு என்ற கிளவிகள் வள்ளுவ அரசின் நேர்மை நாடிகள். குற்றஞ் செய்ய அஞ்சும் மனப்பதம் நாண் எனப்படும். நாணுடைமை மக்களுயிர்க்குச் சிறப்புக் குணம்; வாழ்க்கைக்கு வேலி. நாணறுந்தவன் யார்க்கும் எத்தீமையும் விளைக்கப் பின்வாங்கான். யாரொருவர் நாணும் அறும்படி சொல்லுதலும் செய்தலும் பிறப்புப் பிழையாகும். குற்றம் புரிந்தவன் மறுபடியும் குற்றம் புகாதவாறு, நாணுணர்ச்சி பெருக்குவதே ஒறுப்பின் படிப்பினை என்ற கருத்தால், தலைச் செல்லா வண்ணத்தால் ஒத்தாங்கு ஒறுப்பது என்று தண்டனை நோக்கமும் அளவும் காட்டினார். கடிது ஓச்சி மெல்ல எறிக (562) என ஆட்சியும் அன்பும் ஒருங்கு வேண்டினார்; அச்சுறுத்தி நாண் காத்தார். இன்ன குற்றத்துக்கு இன்ன தண்டனை என முன்னரே வரையறுத்துவிடுவது இந்நாட் சட்டவியல். குற்றஞ் செய்யத் தூண்டிய நாணளவு பாராது, செய்த குற்றத்தளவு மாத்திரம் பார்ப்பது, இன்று வழக்காடு அவையத்து நடைமுறையாகக் காண்கிறோம். இஃது எவ்வுடம்புத் தலை நோய்க்கும் ஒரே மாத்திரை உடனே எழுதிக் கொடுக்கும் மருத்துவம் போன்றது. வந்த நோய் மீண்டும் வராதபடி மருந்தும் அறிவும் ஊட்டு வதன்றோ மருத்துவப் பயன். இதனை வழக்கு மன்றத்து நடுவர்கள் உணர்தல் வேண்டும். தலைச் செல்லா வண்ணத்தால் ஒறுப்பது என்ற வள்ளுவத்தை உட்கொண்டு, தீமைக்கு அஞ்சும் நாண்துடிப்பு செத்துப் போகாதபடி, மெல்லுணர்ச்சி தடிப்பாகாதபடி தண்டிக்க வேண்டும். ஒரே குற்றஞ் செய்தார் பலருள், நாண் மிக்கார்க்குத் தண்டமாக ஒரு சுடுசொல் அல்லது காலணா போதாதா? குற்றவாளியின் நாணப்பதம் அளந்து தீர்வு கூறும் ஒறுப்புரிமையை நடுவர்கள் பெறுகதில். குடிமக்கள் நினைவும் திருக்குறள் அறிவும் உடைய ஓர் அமைச்சர் - நம் அனைவோர் மதிப்பிற்கும் உரியராய் இக்கூட்டத்திற்குத் தவறாது வரும் அவர் - வள்ளுவர் இன்று அமைச்சராய் இருப்பாரேல் முதற்கண் மக்கட்கு எந்நலம் செய்வார்? என்று யான் திடுக்கிடும்படி வினவினார். அமைச்சர்கள் புலவர் தொழிலை இன்று மேற்கொண்டு விட்டனர்; வினைகெட்டு ஓயாது சொன்மாரி பொழிகின்றனர். இச் சொல்லாரவாரத்தை வள்ளுவப் பெருமகன் விழையார் என்றும், அறிவுக்கிழவன் இராசகோபாலாச்சாரியார் அரசுக் கடன் வெளியீடு ஐந்துகோடி நிரம்பவும், தஞ்சைப் பண்ணையாட் சட்டம் நிறைவேறவும், கைத்தறிக் குடும்பத்தார் தொழில் வறுமை நீங்கவும், சொல்லம்பு வீசினாற்போல, காரியத்தை முன்வைத்து அதற்கு மக்களின் துணை திரட்ட, நம் ஆசிரியர் மாசற்ற சில சொல்வார் என்றும் விடையிறுத்தேன். அமைச்சர்கள் நிற்க. அறங்கூறு அவையத்து நடுவணரும், படைத்தலை மக்களுங்கூட மக்கள் தொடர்பு என்னும் பெயர் மேலிட்டு, இந்நாள் கழகம் பல ஏறிப் பல சொல்லக் காமுற்றுவிட்டனரே; சொற்பூதம் அன்றோ நாட்டைப் பிடித்து நலிவிக்கின்றது என்று வருந்தினேன். இந்தியக் குடியரசில் தேர்வுக்காலத்து மக்கள் மதிக்கப்படுகின்றனர். நாள்தொறும் இகழப்படுகின்றனர். அரசு வினையாளர்கள் தேர்வில் வென்ற மாற்றாளிகளைத் தம் அலுவலகத்து வரவேற்கின்றனரேயன்றி, அன்னோரைத் தேர்ந்தெடுத்த உரிமைக் குடிமக்களைக் கால்கடுக்க வெளியே நிறுத்துகின்றனர்; இன்று போய் நாளை வா என்று கால் கடுத்தபின் நாள்தோறும் ஏவுகின்றனர்; விளக்கேற்றிய தீக்குச்சியைப் போல் அவமதிக்கின்றனர். இந்திய விடுதலையால் இருபத்தொரு வயது வந்தோர் பெற்றது தேர்வுரிமை. அனைத்து மக்களும் பெறாதது மதிப்புரிமை. வழக்கு மன்றங்களும் அலுவலக வாயில்களுமே போதிய கண்காட்சியாகும். பொதுவாய் மக்கள் அரசியற்கண் அமைச்சர்களோடு தொடர்பு கொள்ள இடமில்லை. கீழ்நிலைப் பதவியாளரொடு தான் மிகுதியான தொடர்பு நாள்தோறும் கொள்ப. ஓர் அலுவலகத்து முன்னிற்கும் வாயிலோன் செய்யும் அட்டூழியம் கொஞ்சநஞ்சமா? அவன் விடைகொடுத்தாற்றான் மேல் வினையாளரைப் பார்க்க முடியும். மேல் வினையாளரோ திடீரென இருக்கை விட்டு வெளிவந்து, காட்சிக்கு எளியராகி ஆண்டு நிற்கும் கால்நடையனைய மக்களைப் பார்த்து ‘நிவீர் வேண்டுவது என்ன? என்று வினவார்; வினவுவது பெருமைக் குறைவு எனக் கருதுவார். ஆதலின், விரைந்து காரியம் முடிக்கும் பொருட்டுக் கையூட்டுக் கொடுப்பது இன்றியமை யாது ஆகின்றது. வாயில் காவலனுக்குச் சில்லறை ஈந்தால், நம்மை அழைத்துக் கொண்டு மேல் வினையாளன் முன்னிறுத்தி, வேண்டியது சொல்லிச் செல்வான்; வினை முடிந்து மீளுங் காலைப் பின்னுமோர் சில்லறை வீசினால், என்று சொல்லினும் ஆசையால் மீண்டும் நன்றி காட்டுவான். இஃது பரந்து காணப்படும் இழிமுறை. கையூட்டு வாங்குவானும் குற்றவாளி; கொடுப்பானும் குற்றவாளி என்று சட்டம் செய்வதால், இக் கொள்வனை கொடுப்பனை நின்றுவிடாது காண். ஏன் வாங்குகின்றான்? ஏன் கொடுக்கின்றான்? என்பதை ஆராயவேண்டும். யாரும் பொருள் வாங்க விரும்புவர்; கொடுக்க விரும்பார்; ஆதலின் மக்கள் கையூட்டு வழங்குதற்குக் காரணம் என்னை? என்று துருவத்தகும். வாழ்க்கை பலர்க்கு வணிகம் போல்வது, வருவாயும் செலவும் ஒத்துப்பார்ப்பது பொதுவியல்வு. காரியம் சுணங்கினால், ரூபாய் நூறு இழப்புவரும் எனத் தெளிந்து, தொலையினும் தொலைக என்று ரூபாய் ஐம்பது கையூட்டளிக்க மனம் ஒப்புகின்றது. கையூட்டளிப்பது சிறுமை; வினை கெடினும் கெடுக; என்று துணிவதுதான் ஒழுக்க மாயினும், ஓரிரு தடவை அங்ஙன் விட்டுக்கொடுக்கலாம். அரசாட்சியின்கண் தொட்ட இடமெல்லாம் பணத்தூக்கமாக இருப்பின், மக்கள் யாது செய்வர்? ஆட்சியின் இயல்பு என்று ஒதுக்கி உலகத்தோடு ஒட்ட ஒழுகுவர். இவ்வுண்மையை வள்ளுவர் அறிந்தவர். தூங்காமை - வினைச் சுறுசுறுப்பு - அரசின் ஒழுக்கமெனத் தெளிந்தவர். மெத்தென விரைந்தோடும் கால்வாய் நீரில் அழுக்குத் தேக்கத்துக்கு இடமின்மை போல், தேங்காது மக்கள் வினையை உடனுக்குடன் முடித்துக் கொடுக்கும் அரசியலில் கையூட்டுக்கு வாய்ப்பில்லை என்று கண்டவர். நாடோறும் நாடுக மன்னன் வினைசெய்வான் கோடாமை கோடாது உலகு (520) என நல்லரசிற்கு அடிப்படை காட்டினர்; ஆதலின் நம் பேற்றால் வள்ளுவத் தோன்றல் இன்று அமைச்சராக இருப்பரேல், நாட்டின் கண் தமக்குரிய அலுவலகங்களை யெல்லாம் சென்று சென்று ‘தூங்காமை யுண்டா? எனக் கட்டுக்களைப் புரட்டிப் பார்ப்பார். தூக்கம் கண்டாரேல், முறைபிறழ்ந்தாற்போல் துடிதுடித்து, பின்னும் நீட்டிக்காவாறு அன்றே மக்கட்குக் காரியம் முடித்துக் கொடுப்பர். யாது பொறுப்பினும் பொறுப்பர்; தூங்காது செய்யத்தகும் மக்களின் வேண்டுதாள் கட்டாகத் தூங்குவதைப் பொறார். இன்று நம் அமைச்சர்கள் நாட்டினைத் தம் இல்லமாகக் கருதவில்லை. ஊர்சுற்றுங்கால் தந்துறை வினைக்களங்களில் நுழைந்து அமர்ந்து பலவற்றையும் நேரடியாகக் காண்ப தில்லை. இங்ஙன் செய்வது நிலைக்கு இழிவெனப் பொய்ம்மானம் நச்சுவர் போலும், மக்களால் தேர்ந்து எடுத்து வந்த குடியரசு மந்திரிகள், மடிசெய்து மானம் கருதக் கெடும் (1028) என்று குறட் குற்றத்துக்கு ஆளாகாது, நேரடிப் பார்வை செய்ய வேண்டுவல், முன்னறிவிப்பின்றித் தம் வீட்டுக்குச் செல்வது போல, ஊர்தொறும் உள்ள தத்தம் அலுவலகங்கட்குப் போவதை ஓர் அரசியல்பாகக் கொள்ள வேண்டுவல். வள்ளுவச் செம்மல் நம் தனிப்பெரும் அமைச்சராய் வருவாரேல், அஞ்சல் நிலையம்போல அரசு நிலையங்களை யெல்லாம் ஒழுங்கு செய்வர். மக்கள் வாழ்க்கை இன்று பலவகைப் போராட்டத்தது. இந் நிலையில் ஒவ்வொரு வினையையும் அலுவலகத்துக்கு நேரடி சென்று முடித்துக் கொள்ளல் காலக்கழிவாகும்; வேண்டா முயற்சியாகும்; உள்ள வினைக் கேடாகும். வள்ளுவ அரசிற்கு மக்கள் உயிர்ப்பொரு ளாதலின், ஆசிரிய அமைச்சர் குடிகளை அலையவிடார்; காக்கவையார். அரசோடு தொடர்புடைய எல்லா வினைகளும் கடிதப் போக்குவரத்தால் முடித்துக்கொள்ள வழி வகுப்பர். நும் முடங்கல் வரப்பெற்றோம்; இன்னும் நான்கு நாளுள் முடிவு அறிவிப்போம் என்று விடையிறுக்குமாறு வினை செய்வார்க்குக் கற்பிப்பர். நீவிர் ஒருவாரத்தில் வருவதை எதிர்பார்க்கின்றோம், நேர் முகமாக வேண்டிய விளக்கம் சொல்வோம். காலை 9-12 மணிக்குள் பார்க்கலாம் என்று வேண்டுழி வேண்டுழி எழுதச் செய்வர். அங்ஙன் வரும் குடி மக்களுக்குக் காட்சிக்கு எளியராய்க் கடுஞ்சொல்லர் அல்லராய் நடந்து கொள்ளப் பணிப்பர். நாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன் நாடொறும் நாடு கெடும் (553) என்பது ஆசான் இடிப்புரை. நாள் தொறும் நாடல் என்பது திருக்குறளரசின் உள்நாட்டு வள்ளுவம். அரசு வினையாளர்கள் சிறிதும் தாழ்த்தல் இன்றி மக்கள் காரியங்களை முடித்து அளிப்பரேல், அங்ஙன் வினையாற்றும்படி அமைச்சர்கள் ஊடுருவிப் பார்ப்பரேல், நாடு விடுதலை பெற்றது என மக்கள் கண்டு கொள்வர்; தேர்வுக்கும் உரியரானோம்; பெருமைக்கும் உரியரானோம் எனப் பெருமிதம் அடைவர். குறித்த ஒருமணியளவினும் இன்று சிறுபொழுது நீளப் பேசிவிட்டேன். பொறுத்திருந்து கேட்ட உங்கட்கு என் வணக்கம். 10. திருக்குறள் நடை தமிழ் நடை மாந்தீர்! நல் வணக்கம். திருக்குறளின் உள்ளியல் பற்றி இரண்டும், பொருளியல் பற்றி மூன்றும், அறிவியல் பற்றி இரண்டும், குடியியல் பற்றி ஒன்றும், அரசியல் பற்றி ஒன்றும் ஆக இதுகாறும் ஒன்பான் வள்ளுவச் சொற்பொழிவுகள் ஆற்றினேன். அவற்றிடை எடுத்தாண்ட குறள்களுள் ஒரு சிலவற்றிற்கு நடை நுட்பமும் அவ்வப்போது தெரிவித்தேன். ஆறாவது அறிவுப் பிறப்புத் தலைப்பில் குறித்தாங்கு, திருக்குறள் நடை என்னும் பொருள்களனாக இன்று பொழிவு செய்வேன். திருக்குறள் வாழ்வியல் காட்டும் இலக்கண நூலாயினும், காவியம்போல் சுவை பொதுளியது; இலக்கிய நடை பயின்றது; நவில்தொறும் நூல்நயம் போலும் (783) என்றபடி, உவமை நூலாகத் தகுவது. எண் பொருளவாகச் செலச் சொல் (424), திறன் அறிந்து சொல்லுக (644), வெல்லுஞ் சொல் இன்மை அறிந்து சொல்லுக (645), நிரந்து இனிது சொல்லுக (648), மாசற்ற சில சொல் (649), கற்றது உணர, விரித்துரை (650) என்ற நடையியலெல்லாம் தனக்கே அமையப்பெற்றது; நம் மொழித்தாயின் தூய்மை, வன்மை, செம்மை, வளமை, தொன்மை, புதுமை, இனிமை முதலாய உண்மைகட் கெல்லாம் சான்றாவது. அறிவியல் நூல்கள் நிழற்படம் போல்வன; கருத்துக் காட்டும் நடையொன்றேயுடையன; ஆதலின், அவற்றைப் பொருள் குன்றாது ஒரு மொழியிலிருந்து பிறமொழிக்கண் பெயர்த்துக்கொள்ள முடியும். இலக்கியத்தின் அடிப்படை வேறு. கருத்துப்போல் செம்பாக மதிப்பு நடை வண்ணத்துக்கும் உண்டு. கருத்தால் அறிவும் நடையால் சுவையும் பெறுகின்றோம். நடையழகு இல்லா இலக்கியம் நிறவண்ணம் இல்லாச் சோலையையும், மெய்ப்பாடில்லா நடிகனையும், வெள்ளாடை உடுத்திய பெண்ணையும் ஒக்கும். எம் மொழிக் கண் ஓரிலக்கியம் தோன்றிற்றோ, அதனை அம் மொழிக் கண் கற்பதுவே முறையும் நிறைவும் ஆகும். மூல இலக்கியம் படிப்பது மாம்பழத்தை நாம் வாய்வைத்துச் சுவைப்பதை நிகர்க்கும். மொழி பெயர்ப்பு இலக்கியம் படிப்பது மாம்பழ வடிவாகப் பண்ணிய இனிப்புப் பண்டத்தைத் தின்பது ஒக்கும். மூல இலக்கியம் பிறமொழி மாறும்போது, உடல்மாறி நடைமாறித் தன் கன்னிமையை இழந்துவிடுகின்றது. இவ்விளக்கம் எம்மொழி இலக்கியத்திற்கும் பொது. நிற்க. ஓரிலக்கியத்தை அதன் மூலமொழியிற் கற்கை பிறமொழி யாளர்க்கெல்லாம் கூடுவதன்று; கூடாமை ஏச்சுரையன்று, வேற்றின மக்களின் நாகரிக வரலாற்றை ஓரளவேனும் அறிந்து கொள்வோம் என்ற கருத்துடைய நாம் மொழிபெயர்ப்பு இலக்கியங்களைத் தாம் நம்பிக் கற்றாக வேண்டும். எனினும், ஒருவன் தன் தாய்மொழி இலக்கியத்தைக் கூட, மொழிபெயர்ப்பு வாயிலாய்க் கற்க விழை வானேல், அதனை என் சொல்வது? காலத்தின் கோளாறு என்பதனைக் காட்டிலும், முறைகெட்ட மயக்கநெறி எனத் தூற்றுக. இங்ஙன் தாய்மாறிக் கற்கும் தமிழரைவிட, யாதுங் கல்லாத் தமிழர் ஒருவகை யால் சிறந்தவர் அல்லரோ? வள்ளுவரை ஈன்ற தாய் வயிற்றுப் பிறந்தும், வள்ளுவரோடு உடன் பிறப்பு எடுத்தும், மொழி பெயர்ப்புத் திருக்குறளைக் கற்பாரேல், அவர் செயல் ஏனைத் தமிழர்க் கெல்லாம் நாணுடைத்து, பொய்யாத் தமிழன் கண்ட பொய்யில் திருக்குறளைத் தமிழனாய்ப் பிறந்தான் தமிழிற் கல்லாது, அங்ஙன் கற்றுப் பிறநாட்டார் வரைந்த மொழி மாற்றுத் திருக்குறளைக் கற்பானேல், அவனைக் குலத்தின் கண் ஐயப்படும் (958) என்றாங்கு. தமிழ்க் குடியிழுக்கம் கூறுவதிற் குற்றம் என்னோ? திருக்குறள் கருத்து வகையால் உலக மக்கட்கெல்லாம் உரியது எனினும், மொழி காரணமாய் நமக்கு உறவுடையது; ஆதலின், அதனை உள்ளவாறு நாம் உணர்தலும், உணர்ந்தவாறு மொழி பெயர்த்து உலகிடைப் பரப்பலும் நம் கடன். ஞாலத் திருக்குறளை உரிய தமிழ் வாயிலாகக் கற்க முயலுமின்! முயலுமின்! என்ற உணர்ச்சியைப் பிறமொழி மாந்தர்க்கு ஊட்டலும் நம் பொறுப்பு. மக்கள் வாழ்விற் பன்னிலையினர் என்று துணிந்து அறப்பன்மை கரைந்தனர்; அன்னோர் ஒரு கருத்தினை ஏற்றுக்கொள்ளும் வன்மையாலும் பல திறத்தினர் என்று கண்டு நடைப்பன்மை மேற்கொண்டனர். தன்னிலையுணர்ந்து செய்க; யார்க்கும் முன்னேற்றம் உண்டு என்பது வள்ளுவம். ஆதலின், இந்நோக்கினை மனத்திற் பதித்துக் கற்பார் கற்க. கற்பின் ஆசான் தன் நெஞ்சங்கள் புலனாகும். பசிதீர்க்கும் ஆற்றல் சோற்றுட் கிடக்குமாங்கு, நம் மாசு அகற்றும் உறுதி குறளிடைக் கிடப்பது வெளிப்படும். ஒரு நோக்கின்றிக் கற்பின், கற்பவர் தம் நெஞ்சு வலுப்படாது. நெஞ்சு உரம்பெறவும், செயல் ஆற்றவும், வாழ்வு உயரவும் திருக்குறள் நடையறிவு இன்றியமையாதது என்று துணிமின்! 1. உலகம் இரு கூறுபட்டது. தான் பிற என்பன அக்கூறுகள். ஒருவன் பிறர்பால் ஒழுகுவது எங்ஙன்? என்ற நடப்பு செல்நெறி எனப்படும். மற்றையோர் தன்பால் எவ்வாறு ஒழுகினாலும், அதனை ஏற்றுக் கோடல் எங்ஙன்? என்ற நடப்பு கொள்நெறி எனப்படும். இவ்விரு வகையுள் வாழ்வியல் அடங்குமாதலின், குறள்களை இங்ஙன் வகைப் படுத்திக் கற்றல் தகும். ஒழுக்கநெறி இதுவென நூல் வாயிலாகவோ பிறர் வாயிலாகவோ பெரிதும் கற்க வேண்டுவதில்லை. ஒருவனுக்குத் தன் எண்ணமே அதனைக் கற்பிக்கும். தன்னை வஞ்சித்தலை, இகழ்தலை, சினத்தலை, ஒறுத்தலை, கொல்லுதலையோ, தன்பால் பொய் கூறலையோ, தன்னுடைமை பறிபோதலையோ எவனும் விரும்பான். இனிய சொல்லுதலையும், அருளுதலையும், இரங்கு தலையும், உதவுதலையும், புகழ்தலையுமே விழைவான். இது மனித உள்ளம். இனைய தன்னெண்ணத்தையே - தன்னல விழைவையே - அறத்தின் சுட்டாக வள்ளுவர் கண்டார். உலகம் உன்பால் எவ்வழி நடக்கவேண்டும் என நீ கருதுகிறாய்; அவ்வழி நீயும் உலகத்தோர் மாட்டு நடந்துகொள் என்று தன் நெஞ்சு நிழலை எடுத்துக் காட்டினார். உன்போல் உலகை நினை; அதுவே அறம் எனச் சுருங்கக் கூறினார். இன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமை வேண்டும் பிறன்கட் செயல் (316) தன்னுயிர்க்கு இன்னாமை தானறிவான் என்கொல்லோ மன்னுயிர்க்கு இன்னா செயல் (318) இக்குறள்கள் தற்சுட்டும் நடையன; தன்னைச் சான்றாக வைத்து அறம் ஊட்டும் அடிப்படையுடையன. 2. ஒழுக்கத்திற்குத் தன்னலம் ஒரு பற்றுக்கோடாகும். தன் வாழ்க்கை பேணுவது குற்றமன்று; அறிவுடைமை. அயலான் வயற்கு ஓடும் கால்வாய் நீரை மறித்துத் தன் செய்க்குப் பாய்ச்சுவதுபோல், பிறர் துய்த்தற்கு உரிய இன்பத்தை அணையிட்டுத் தன்னலமாக வஞ்சித்துக் கொள்வதுவே பழியும் கேடும் ஆகும். உண்மையான தற்பற்றுடையவன் ஏனையோர் தற்பற்றுக்கு இடையூறு செய்யான். செய்யின், பகை தோன்றித் தன்னலக்கேடு வரும் என அஞ்சுவான். அஞ்சுவது அஞ்சல் அறிவார் தொழில் (428) என்றபடி, இத்தன்னச்சம் போற்றிக் கொள்ளத் தகுவது. நன்மக்கள் தன்னலத்துக்கு ஒரு கோடிட்டுக் கொள்வர்; தற்காப்புக்கு ஒரு வரம்பரண் செய்துகொள்வர்; இன்றேல், நெஞ்சு உலக முழுதும் தனதாக நினையும்; பிற ருரிமையைத் தனதாக மயங்கும். தானென்றே வாழப் பிறந்தது என இறுமாக்கும். அளவறிதல் என்பது எத்துறைக்கும் வேண்டிய வாழ்க்கைப் பொது வள்ளுவம். உலகப் பூசல் ஓராற்றான் உரிமைப் பூசல் எனப்படும். ஒருவன் தன்னலத்தின் எல்லை இறந்து பிறரெல்லைக்குள் ஓயாது புகுந்து குறும் பிழைக்கின்றான். மற்றையோர் உரிமையைப் பறித்துண்டாலன்றிப் பலர் மனம் அமைதி கோடலில்லை. இவ்வுரிமைப் பறிப்பினையே களவு எனத் திருக்குறள் இடித்துரைக்கும். களவாடிக் களவாடிச் சுவை கண்டவர் அளவல்ல செய்தாங்கே வீவர் (289) எனச் சாக்காடு சுட்டுவர். உரிமையிழந்தவன் தாக்குதற்குக் காலமும் வலியும் பார்த்துக் கிடப்பான்; ஆதலால் யாரொருவர் உரிமையையும் கவர்வது முடிவில் கவர்ந்தானுக்கே தீதாய் முடியும். தன்னைத்தான் காதலன் ஆயின் எனைத்தொன்றும் துன்னற்க தீவினைப் பால் (209) தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பால தன்னை அடல் வேண்டா தான் (206) தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால் தன்னையே கொல்லும் சினம் (305) இவ்வனைய குறள்கள் தற்காப்பு நடையில் ஒழுக்கம் சாற்றுவன; பிறர்க்குத் தீங்கு இழையாதே என வாளா தொடுக்காது, இழைப்பின், எறிந்த பந்து திரும்புமாப் போல நீ தீதடைவாய் என அச்சுறுத்துவன. தன்னலம் நினைப்பான் பிறநலம் பேணுக என்ற நடைக் கூற்று அத்துணை உயர்வறம் அன்று எனப் பலர் கருதுதலும் கருதுவர். தன்னலம் இழப்பதாயினும் பிறர் நலம்செய்க என்பதன்றோ அறம் எனத்தகும் என்று தொடை விடையாடுவர். தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான் பிறிது இன்னுயிர் நீக்கும் வினை(327) இன்னா செய்தார்க்கும் இனியவே செய்யாக்கால் என்ன பயத்ததோ சால்பு (987) என வரூஉம் குறள்களால், தனக்கு உற்றநோய் பொறுத்துப் பிறஉயிர்க்கு உறுகண் செய்யாதே எனத் தவப்பண்பு வேண்டுவர் வள்ளுவர். எனினும், அவர் அனைத்து மக்களையும் முன்னேற்ற எண்ணியவர்; வெருவராதபடி பலரைத் தழுவிக் கொள்ளும் நோக்கு உடையவர். ஒரு நாட்டின்கண் கல்லூரிகளும் பல்கலைக் கழகங்களும் சிலவேயாக, எல்லாக் குடிகட்கும் கல்விக்கண் அருளும் தொடக்க உயர்நிலைப் பள்ளிகளே பலவாதல்போல், திருக்குறளகத்தும் முதனிலை யறங்களே மிகுவரவின எனத் தெளிக. இதனால் எந்நிலையினர்க்கும் ஒழுக்க வாழ்வு தூண்டிக் கைதூக்கிவிடும் ஆசான் தன் பரந்த நெஞ்சு புலனாகும். 3. ஒழுக்கம் இன்றியமையாதது எனத் தாமே உணர்ந்து கடைப்பிடிக்கும் அறிவுத் திண்ணியர் நம்முள் மிகச் சிலரே யாவர். இன்னோர் வழுக்கி வீழினும் சில சொல் சொன்ன மாத்திரையானே நாணித் திருந்துவர். நெஞ்சத்துக் கோடாமை சான்றோர்க்கு அணி (115) ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் (136) அரும் பயன் ஆயும் அறிவினார் சொல்லார் பெரும்பயன் இல்லாத சொல் (198) பொதுநலத்தார் புன்னலம் தோயார் மதிநலத்தின் மாண்ட அறிவினவர் (915) எனவாங்கு, நாணுடை மாந்தர்க்கு அறிவு நடையிற் பேசுவர் வள்ளுவர். அஃகி அகன்ற அறிவு என்னாம்(175), அரம் போலும் கூர்மையரேனும் மரம்போல்வர் (997), அவனைக் குலத்தின் கண் ஐயப்படும் (958) என அரிதாகச் சுடுநடைப் படுத்துவர். அச்சமே கீழ்களது ஆசாரம் (1075) என்றபடி வலியார் முன் ஒடுங்கி வால் சுருட்டி அச்சுருளை மெலியார் மேல் விரித்தடிக்கும் மாக்களே நம்முட் பலராவர். ஒழுக்கமாய் இருப்பது பெருமை என்ற கருத்து இன்னோர்க்கு இல்லை; இடம் பார்த்து அச்சத்தால் ஒழுக்கம் காட்டுவர்; வணிகம்போல் ஒழுக்கத்தைப் பண்டமாற்றுவர்: ஒன்று உற்றக்கால் விற்றற்கு உரியர் விரைந்து (1080) என்றபடி நாண் விற்பனை செய்வர். இக்கயநிலை மாந்தர்க்கு அறிவு நடைப் பேச்சு நெஞ்சுறுத்தாது என்று மனவியல்பு கண்ட வள்ளுவர் அச்ச நடைகளைப் பலவாறு ஆண்டார். மறந்தும் பிறன்கேடு சூழற்க; சூழின் அறஞ்சூழும் சூழ்ந்தவன் கேடு (204) கெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம் நடுவொரீஇ அல்ல செயின் (116) ஒன்றெய்தி நூறிழக்கும் சூதர்க்கும் உண்டாங்கொல் நன்றெய்தி வாழ்வதோர் ஆறு (932) இவ்வெல்லாம் ஆசான் அன்பில் எழுந்த அச்சநடைக் குறள்கள், ஓரதிகாரம் ஒரு பொருளே நுதலுவது, அங்ஙன் இருந்தும் அதிகாரந்தோறும் குறள்பல தோன்றற்குக் காரணம் இந்நடைப் பன்மையன்றோ? அறிவும் அச்சமும், போற்றலும் தூற்றலும், இரப்பும் ஏவலும், குளிர்வும் சூடும் ஆகிய பலதிறத்தால் நம்மைத் திருத்தும் ஒரே நோக்கொடு தமிழ்நடை தொடுத்தார் ஆசிரியர்; ஆதலின், நம் நெஞ்சினை இழுப்பது எந்நடைக் குறளோ, அக்குறளைச் செயற்படுத்தி வாழ்வு சிறத்தல் நம் கடன். 4. வாழ்வியல் செல்நெறி, கொள்றி என இரு பாற்படும் என்றேன்; அவற்றுள், இதுகாறும் செல்நெறிபற்றி - பிறர்பால் நாம் ஒழுகுவதுபற்றி - நடை விளக்கம் செய்தேன். இனி கொள்நெறி குறித்துக் காண்போம். நாம் நேர்மையாக நடப்பினும் பிறரெல்லாம் அங்ஙன் நடப்பர் என ஒருதலையாகத் துணிய முடியுங்கொல்? நடப்பர் என நம்பினும் பலரால் ஏமாற்றப்படுவோம்; நடவாரெனக் கொள்ளினும் பலரால் எதிர்ப்படை வோம். ஏமாறுவதினும் எதிர்ப்பு வரவேற்கத் தக்கது. நாம் பிறரை வைதல் ஆகாது; பிறர் நம்மை வைவரேல் என் செய்வது? நாம் ஏனையோர்க்குத் தீதிழைத்தல் அறமன்று; அன்னோர் நமக்குத் தீது விளைப்பரேல் என் செய்வது? நாம் ஏதிலார் வாழ்வுக்கு ஊறு செய்தல் நன்றன்று. அவர் நம் வாழ்வுக்கு ஊறு படுத்துவரேல் என் செய்வது? இவ்வினாக் களுக்கு ஒரு தெளிவுடைக் குறிக்கோள் யார்க்கும் வேண்டும். பலர்க்கு இது பற்றி ஒரு கடைப்பிடி இன்மையால், மனங் கொதித்து அடித்தலும் கொல்லுதலும் செய்து, திடீரென வாழ்விழக்கக் காண்கின்றோம். இயற்கையாக என்றும் நிலைபிறழாச் சான்றோர் மிகச் சிலரேயாவர். கோல்கொண்டு அடிக்காமையின் சீற்றங் கொள்ளாப் பாம்பின் அடக்கம்போல், பிறர் துன்பம் செய்யாமையால் நல்லவராய் அடங்கியிருப்பாரே மிகப் பலர். இவ்வடக்கத்தார் முதற்கண் யாரையும் வையார்; அடியார்; பகையார்; வஞ்சியார். யாராவது முந்துற்றுத் தம்மை வைது அடித்துப் பகைத்து வஞ்சிப்பரேல், தாம் பின்னர் அத் தீமை யெல்லாம் பழிக்குப் பழியாக ஆற்றுவர். அவன் முன்வைதான்; யான் பின் வைதேன் எனக் கால முன்பின் மொழிவர். இன்னோர் நிலையிழந்த முன்னோடிக்குப் பின்னோடிகள்; பிறர் முறை மாறும்போதெல்லாம் தாமும் முறை மாறிக் கொள்பவர்; முள்ளை முள்ளால் எடுக்க வேண்டும் என விளக்குபவர்; தமக்கென ஓர் அசைவில் கொள்கையும் தனித் தன்மையும் இல்லாதவர்; இருத்தல் நல்லது என்ற எண்ணங் கூடக் கொள்ளாதவர். இம் முதுகோட்டம் உடையார் வாழ்க்கை ஒருபாற்படாது அலைந்து அசைந்து சீரழியப் பார்க்கின்றோம். நம்மொடு பழகுவார் உலகத்துப் பலர்; பல்வேறு மனப்போக்கினர். அன்னோர்க்கெல்லாம் முழுதும் சாய்ந்து சாய்ந்து தன் மனத்தைப் பலி கொடுப்பவன் மகன் எனப்படான். பண்பு விடாத் தனித்தன்மை வாழ்வின் பற்றுக்கோடும் அரணும் ஆகும். பிறர் வழிச் செல்வதால் இவ்வுலக வாழ்க்கை சிறக்கும்; வளம் கொழிக்கும் என எண்ணற்க. ஒழுக்கக் குறிக்கோள் இல்லா வாழ்வு உலகியல் அன்று; பித்தாகும்; திடீரெனச் சிதறுபடும். ஆதலின், பிறர் இகழ்ந்தாலும், அடித்தாலும், உரிமை பறித்தாலும், காரணமின்றிப் பகைத்தாலும் எங்ஙன் நடந்து கொள்வது என்ற ஒரு தலைத் துணிபு - கொள்நெறி - முன்னரே செய்து கொள்ளல் வேண்டும். நிகழ்ச்சி நடக்குங்கால் பார்த்துக் கொள்வோம் என அமைவது அறிவுப் பிழையாய் முடிவில் தீமையாய் உய்த்துவிடும். திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்து அறனல்ல செய்யாமை நன்று (157) பேதைமை ஒன்றோ பெருங்கிழமை என்றுணர்க நோதக்க நட்டார் செயின் (805) சால்பிற்குக் கட்டளை யாதெனின் தோல்வி துலையல்லார் கண்ணும் கொளல் (986) இவ்வனைய குறள்கள் கொள்கை யுறைப்புச் செய்யும் நடையன; பிறர் செல்நெறி மாறி நடப்பினும் நாம் பற்றத் தகும் கொள்நெறி கூறுவன. 5. பொறுமையும் அடக்கமும் வாய்ந்தானை, வலி யில்லாதவன் என்றும், ஓரொருகால் பேடி என்றுங் கூட, மதிப்போர் உலகிற் பலர். ஒழுக்கஞ் சிறந்தானை ஒரு துணிச்சலான கருமத்துக்கு ஆகான் என்று எண்ணுப. பிறர் யாது செய்யினும் தன் பண்புநிலை பிறழான் என்பது மேலிட்டு, நல்லவன் நல்லவன் என்று அழுத்தி மொழிந்து ஏமாற்ற முயல்ப. வாய் புழுக்க வசை தொடுத்தாலும் மறித்து ஓர் இன்னாச் சொல் சொல்லான்; நையப் புடைத்தாலும் பையச் செல்வான் என்பதுகொண்டு, ஒழுக்கப் பண்பினனை அஃதிலார் பலர் அமுக்கச் சூழுப. இஃது உலகியல். பிறர் ஏமாற்றுதற்கு இடங் கொடுப்பானை ஒழுக்கமுடையவன் என யான் ஒருபொழுதும் சொல்லேன். பல பண்புகள் இருந்தும், பிறர் வஞ்சிப்பதற்குக் களனாகி நின்றானை, ஒழுக்கப் பேடி, அறிவறை என்றே துணிந்துரைப்பன். இவ்வொழுக்க வூனத்தான் நோய் வாய்ப்பட்ட மருத்துவன் ஒப்பான். வள்ளுவர் வேண்டுவது பிணப் பொறுமை யன்று; அறிவுப் பொறுமை. அஃறிணைப் பொறை யன்று; உணர்ச்சிப் பொறுமை. நல்லொழுக்கம் என்பது தலையாய இருகூறுபடுவது. தான் பிறர்க்குத் தீமை செய்ய அஞ்சவேண்டும் என்பது ஒன்று. பிறர் தனக்குத் தீமை செய்யாதவாறு நன் முறையில் அச்சுறுத்தி வைத்தலும் வேண்டும் என்பது மற்றொன்று பிறரை மாசு படுத்தாமை, அவர்தம் மாசு நம்மேற் படியாமை என்ற இரு கூற்றினையும் ஒப்பக் காவாவிடின், எறும்பூரக் கற்குழியுமே என்றபடி, நம் ஒழுக்கத்தரண் இடிபட்டு விடராகி உருக்குலைந்து குட்டிச் சுவராய் விடும். தெருத்தூசி வீட்டுள் வாராவாறு திரையிட்டுப் போற்றிக் கொள்வதூஉம், வந்து விழும் தூசிக் குப்பையைக் கூட்டி அள்ளி அப்புறப் படுத்துவதூஉம் அகமுடையார் கடனலவோ? ஒழுக்கம் உடையார் என நாம் நினைக்கும் பலர் மடியர்; அறிவாட்சியில்லாதவர்; துணிவற்றவர்; ஒழுக்கத்தினும் கேவலம் உயிர்ப்பற்றுடையவர்; வினைசெயல் வகை அறியாதவர்; மனத்திட்பம் இல்லாதவர்; சால்புடையவரே யன்றி ஆண்மையுடையவர் அல்லர்; பல்லாற்றானும் குழந்தை நிலையினர். பேதைபால் காட்டும் பொறுமையை வன்மையுள் வன்மை (153) என்றும், நிறையுடைமை (154) என்றும் தெரிப்பரேல், ஒழுக்கமாவது ஏமாளித்தன்மையன்று! முழு வன்மை என்பது அறியத் தகும். மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாம்தம் தகுதியான் வென்று விடல் (158) இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயம் செய்து விடல் (314) என்ற குறள்கள் ஒழுக்க வென்றி காட்டும் நடையன. நம் மாட்டுத் தீயவை செய்தார்க்கு அஞ்சி வழி மொழிந்து நடக்க வேண்டும் என்பது வள்ளுவம் அன்று, தீயரை அடக்கவேண்டும் என்பதுவே வள்ளுவம். மிக்கவை செய்தாரை விட்டுவிடுக என்னாது, வென்று விடல் என்றும், இன்னா செய்தாரைப் பொறுத்தல் என்னாது, ஒறுத்தல் என்றும் பெய்த சொன்னடை சான்றாதல் காண்க. கொடியோர்க்கு அவர் போல் கொடியது செய்தாயினும் வெல்லுக; தண்டிக்க என்பது ஆசான் நெஞ்சம் அன்றுகாண். வெல்லலும் ஒறுத்தலும் ஒழுக்க நெறியாதல் வேண்டும் என வற்புறுத்துவான். தம் தகுதியான் வென்றுவிடல் எனவும், அவர் நாண் நன்னயம் செய்து விடல் எனவும் நெறியும் பயனும் ஒரு சேரக் கூறினார். ஆதலின், சால்புடைமையாவது ஏமாறா வாழ்வு நெறி என்பதூஉம், வறியோரை உணர்த்தித் திருத்தும் அகப் படை என்பதுஉம் தெளிவு. ஆற்றுவார் ஆற்றல் பணிதல்; அது சான்றோர் மாற்றாரை மாற்றும் படை (985) பணிதல் என்பது கால் வீழ்வன்று; பொய் வணக்கம் அன்று; இகழ்வார்பின் சென்றுநிலை (966) என்றபடி பின்னிற்கும் வால்பிடிப்பன்று; கோழைக் குனிவன்று. மாற்றாரையும் மனிதவினம் என எண்ணி, மதிப்பளிக்கும் மக்கட்பண்பே பணிவு எனப்படும். தன் மதிப்பு விடா இப்பணிவு எத்தகைய வன்னெஞ்சையும் இளக்கி உருக்கிக் குழைத்துவிடும். தன் அறிவுடைப் பணிபு எதிரியைத் தனக்குப் பணிக்கும். ஆதலின், ஒழுக்கம் தற்காக்கும் படையும் ஆகும் என்பது வள்ளுவம். 6. அதிகாரந்தோறும் அறிவு நடையும் பிற நடையும் கொண்ட குறள்கள் இருத்தல் போல், செல் நெறி கொள் நெறி காட்டும் குறள்களும் உள. நடை நோக்கும் நெறி நோக்கும் கொண்டு, திருக்குறள் கற்பீரேல், இதுவரை மறைந்திருந்த ஆசான் உண்மை நெஞ்சங்கள் தோன்றக் காண்பீர். சில குறள்கள் செல்நெறி நடையன; சில கொள்நெறி நடையன. எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய் நுண்பொருள் காண்பது அறிவு (424) வேட்பத்தாம் சொல்லிப் பிறர்சொல் பயன்கோடல் மாட்சியின் மாசற்றார் கோள் (646) நல்லாறு எனினும் கொளல்தீது; மேலுலகம் இல்லெனினும் ஈதலே நன்று (222) இவ்வனைய குறள்கள் இருநெறியும் ஒருங்குசுட்டும் நடைப்பட்டன. 7. ஒரு குறளை நினைப்பதும் சொல்லுவதும் ஆளுவதும் எங்ஙன்? அங்ஙன் செய்தற்கு உரியவர் யார்? என்றெல்லாம் குறள்தோறும் அறிவோட்டிக் காண்பது நம் கடமை. பொறுத்தல் இறப்பினை என்றும், (152) ஒறுத்தாரை ஒன்றாக வையாரே (155) ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் (156) என்ற குறள்களை எடுத்தாண்டு, என் குற்றத்தைப் பொறுப்பது உன் ஒழுக்கம் எனச் சொல்லும் உரிமை, தீயது செய்தானுக்கு உண்டா? ஈத்துவக்கும் இன்பம் அறியார் கொல் (228) ஈதல் இயையாக் கடை சாதல் இனிது (230) என்ற குறள்களை ஆளும் உரிமை, இரப்பார்க்கு உண்டு கொல்? நிலைபிறழ்ந்து தமக்குத் தகாக் குறள்களை ஆளுவரேல் பிறர் சினப்பர்; நகைப்பர். ஆற்றலுடையார் பொறுத்தல் நல்லது; ஒறுத்தல் ஆகாது என்றும், செல்வமுடையார் ஈதல் கடன் என்றும் தாமே உணரல் வேண்டும். உணர்த்துவதாயின், அவர்க்குத் தீதிழையா நல்லவரும், அவர்பால் இரவா ஏற்ற முடையாரும் உணர்த்தல் வேண்டும். குற்றஞ் செய்தானும் இரவலனும் உணர்த்தப் புகுவது அறிவுக் குறும்பாகும். கல்லாதான் ஒட்பம் கழியநன் றாயினும் கொள்ளார் அறிவுடை யார் (404) தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக் கொள்வர் பயன்தெரி வார் (104) இவ்வனைய குறள்கள் தான் உணர் நடைகள். உன் கருத்து உண்மையில் மிகநன்று; எனினும், நீயோ கல்லாதவன்; ஆதலின் அதனை யாம் ஏற்றுக்கொள்ளோம் என்று இக் குறள் காட்டிப் பேசுவது ஆட்சிப் பிழை. ஒருவனை ஒருவன் - மனிதனை மனிதன் - இழித்துரைக்க எழுதப்பட்டதன்று குறள். நான் கல்லாதேன் என்பதால் அன்றோ, என்னுரையைப் பிறர் மதித்திற்றிலர்; நன்று; இனிக் கற்றுச் சொல்வேன் என்ற தன்னுணர்ச்சி பிறக்க வேண்டும் என்பதுவே இந்நடைநுட்பம். பிறவும் அன்ன, 8. சான்றாண்மை - எல்லாக் குணங்களும் உடைமை - நம் குறிக்கோளின் எல்லையாகும். சான்றோன் எனக் கேட்ட தாய் (69) என்றபடி, சால்புக் குணப்பெயர் தான் நாம் தேடும் புகழ்ப் பெயராகும். மனச்சான்றினைச் செல்வப் பண்டத்துக்கு விற்பதினும், பொருள் இழந்தேனும் குணம் பெருக்குவதே நம் வணிகமாகும். இவ்வெல்லாம் எண்ணத் துணிபுகள். குணம் நிறைந்தாரினும், மறைந்தொழுகும் மாந்தர் பலர் (278) வினைவகையான் வேறாகும் மாந்தர் பலர் (514) என்றாற்போல், குற்றம் குடி கொண்டோரே - குடி கொள்ள முந்துற்று இடங் கொடுப்பவரே - நம்முட் பலர். இன்னோரைத் திருத்தும் கடன் பூண்டவர் வள்ளுவர். மாணாக்கன்பால் ஒலிப்பிழை, எழுத்துப்பிழை, சொற்பிழை, இலக்கணப்பிழை, கருத்துப்பிழை எனப் பிழை மலிவு கண்ட தமிழாசான் மலையான்; கை விடான்; ஒரேயடியாக அனைத்துவகைப் பிழையையும் திருத்த முயலான்; முயன்று மாணவனை வெருவரச் செய்யான்; செம்மையாக்கிக் கொள்ளவந்த நன்மாணாக்கன் தன் திருந்தும் உணர்ச்சியைச் சிறிதும் மழுக்கான். தொட்ட இடமெல்லாம் பிழை தோன்றினும், இவன் மொழிப் புண் அம்மைத் தழும்புபோல் மெல்ல ஆறுக என்ற கருத்தால், தமிழாசான், ஏனைப் பிழைகள் நிற்க, முதற்கண் ஒலித்திருத்தம் செய்வான்; செயலூட்டுவான். வள்ளுவர் தனக்கு உவமை இல்லா ஒழுக்கப் பேராசான்; செயல்வேந்தன். ஒருவன் கண் எத்துணைக் குணப்பிழை காணினும், இனித் திருந்தான் என ஒதுக்கிவிடார். அவன் உயிருள்ளவரை ஒழுக்கத்திருத்தத்துக்கும் பதம் உண்டு என்ற துணிவால், மனநாடி பார்த்துச் செயல் மருந்து ஊட்டுவர். மருத்துவன் சொல்லுமாப்போல், உன்பால் மாசுகள் பலவுள. உனக்கு நல்வாழ்வில்லை என்று பின்னடையற்க. முதற்கண். தம்பி! இம்மாசினைப் போக்கிக்கொள் என விட்டுவிடாது இசைப்பர். எவனொருவன் தன் குறள் நூலை எடுத்துக் கற்கின்றோனோ, கற்கும் அம்மனப் பக்குவம் ஒன்றே, திருந்தும் உள்ளமுடையான் அவன் என்பதற்குப் போதிய சான்று என்ற தெளிவால், தீமை பல செறிந்தானுக்கும் ஒரு தூய்மை மருந்து எழுதுவர். யான் அளவிறந்த குற்றம் உடையேன் என்றானை, அவன் தோள் புறம் தழுவி மார்புரம் காட்டி, நம்பி! பலகிடக்க. இம் முதற் குற்றத்தை அகற்றிக்கொள் என்று ஓர் அறவழிப் படுத்துவர். வாங்கிய கடனை அடைக்கும் முழுமனம் இல்லாதவன் பால், நீ செலுத்துவதைத் செலுத்துக என்று தருமுணர்வு ஊட்டுமாப்போல், இச்சிறுமையை யேனும் காத்துக் கொள்வையேல், நீயும் போற்றற்கு உரியை எனப் பல்புரையோடினானைப் பார்த்து, அவன் உளம் மகிழ ஒருசிறு செயல்நல்லுணர்வு பாய்ச்சுவர். அறங்கூறான் அல்ல செயினும் ஒருவன் புறங்கூறான் என்றல் இனிது (181) பகல்கருதிப் பற்றா செயினும் இகல்கருதி இன்னா செய்யாமை தலை (852) அறன்வரையான் அல்ல செயினும் பிறன்வரையான் பெண்மை நயவாமை நன்று (150) யாகாவா ராயினும் நாகாக்க; காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு (127) இவ்வனைய குறள்கள் விட்டுவிடா நடையொழுக்கின; யாரையும் மேனிலை எழுப்பும் வள்ளுவர்தம் அடிப்படை நெஞ்சம் காட்டுவன; நாம் உய்யப் பிறந்தன. 9. மக்கள் அறிவுப்பிறப்பினர் என்றாலும், அதனை ஆளவேண்டும் என்னும் துடிதுடிப்பில்லாதவர்கள்; ஓரொரு கால் தோன்றும் புரட்சி நல்லெண்ணத்தை, மீண்டும் மீண்டும் நினைந்து கொள்ளும் உறுதியற்றவர்கள்; பல வகையால் மயக்கத் தடிப்பு அடைந்தவர்கள். இன்னோர்க்கு அறத்தை அப்படியே சொல்வது பற்றுத் தேயாது ஈயம் பூசுவதை ஒக்கும். பலர்க்கு அறியாமை போக்கி அறிவு நல்காவிடின், அறிவும் அறியாமையுட் புதைந்துபோம். படிமாசு துடைத்து வண்ணம் தீட்டுமாப்போல, மயக்கம் களைந்து அறிவூட்ட எண்ணினார் வள்ளுவர்; தடுத்து நிறுத்த உளங் கொண்டார். நகுதற் பொருட்டு அன்று நட்டல் (784) இன்மை ஒருவற்கு இளிவன்று (988) வேலன்று வென்றி தருவது (546) பொறியின்மை யார்க்கும் பழியன்று (618) உறுப்பு ஒத்தல் மக்கள் ஒப்பு அன்று (993) எனவாங்கு, மனக் கற்பலகையில் ஏறிய அழுக்கை முதற்கண் கழுவுவர். அழுக்கின்மை செய்து கொண்டு, நட்பின் பயன் இடித்துத் திருத்தல் என்றும், சால்பு என்னும் திண்மை இல்லாமைதான் இளிவு என்றும், முயற்சி மடிவே பழிப்பிடன் என்றும், ஒத்த பண்பே பிறப்பொப்புமை என்றும் உண்மை விளம்புவர். சிறைகாக்கும் காப்பெவன் செய்யும்? மகளிர் நிறைகாக்கும் காப்பே தலை (57) மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம் பழித்தது ஒழித்து விடின் (280) இவ்வெல்லாம் விளக்குநடை வாய்ந்தன; இருளோட்டி ஒளி யூட்டுவன; புறச்சார்பு மறுத்து அகச்சார்பு வேண்டுவன. இங்ஙன் வெளிப்படையாகப் பொய்ம்மறுப்பும் மெய்ந் நிறுப்பும் ஒருங்கு செய்யும் வள்ளுவர், ஏற்றிய விளக்கால் இருள் மறையுமாப்போலே, உண்மை விளம்புவதன் மூலம் பொய்க்கொள்கை மறையச் செய்வர். தொழில் காரணமாய்ப் புறக்கோலம் அமைவது நல்ல உலகியல். குணங் காட்டவும், கொள்கை காட்டவும் சமயங்களும் அரசியற் கட்சிகளும் புறவடையாளம் மேற்கொள்ப. இஃது யாண்டும் காணப்படும் பொதுவழக்காயினும், இருவகைக் குற்றம் உடைத்து, கொள்கையில்லாதார் ஒரு கோலத்துட் புகுந்து வஞ்சிப்பர். கோலங்கொள்ளாதார் ஒரு கொள்கையிலர் என விலக்கப்படுவர். தீயோர்க்கு நொடிப் பொழுதில் புகலிடமாய், நல்லோர்க்கு அஞ்சும் பழிப்பிடமாய் நிற்றலால், புறவேடத்தை ஒரு மெய்த் தோற்றமாக வள்ளுவர் துணிந்திலர். உலகம் பழித்தது ஒழித்துவிடின், மழித்தலும் நீட்டலுங்கூட இருக்கலாம் என ஒப்பி மொழியாது, மழித்தலும் நீட்டலும் வேண்டா (280) என்று வேடப்பற்றுத் தூர உதறினர். உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை அற்றே தவத்திற்கு உரு (261) என்பது குறிப்பு விளக்குநடை. அற்றே தவத்திற்கு உரு என்ற சொல்லாட்சியால், புறவணியும் புறக்குறியும் புற வேடமுமே தவத்தின் மெய்யுரு என மடம்பட்டுத் துணியும் மக்களின் பொய் வழக்கைக் குறிப்பால் அழிப்பர்; தன்னுயிர்ப் பொறையும் பிறவுயிர் நலமுமே உருவெனல் வேண்டும் எனப் பட்டாங்குக் கூறுவர். குணநலம் சான்றோர் நலனே (982) என்ற படி, கோலவழகு பகராது, குணவழகு வேண்டுவது வள்ளுவம். புறவடையாளம் மேற்கொள்க; கொள்ளாது இயல்பாகுக. அஃதோர் துணிவுப் பொருளன்று; நம்பும் இடம் அன்று. வேடம் கொண்டாருள் நல்லோரும் தீயோரும் உளர்; கொள்ளாதாருள்ளும் நல்லவர் தீயர் உளர்; எனினும், வேடத் தீயோர் நம்பிக்கையைப் பயன்கொண்டு வாழ்பவர்; நம் அறிவோட்டத்தைத் தடுப்பவர்; நல்வேடத்தார்க்கும் பழி கொண்டு வருபவர். அவம் அதனை அஃதிலார் (தவப் பண்பு இல்லாதவர்) மேற்கொள்வது (262) என்பது ஆசான் துணிந்துரை. தாய் தந்தையர் தம்மக்கட்கு அளிக்கும் நன்மை அவையத்து முந்தி இருப்பச் செயல் (67) என்ற வெளிப்படைக் கூற்றால், செல்வம் ஈட்டிக் கொடுத்தல் என்னும் பெற்றோர் மயக்க எண்ணத்தைக் குறிப்பால் மறுப்பர். வாய்மையாவது தீமையிலாத சொலல்(291) என்ற பட்டாங்கு மொழிவால், வெறுமனே நிகழ்ந்தது கூறல் என்னும் மாந்தரின் பொய்க் கொள்கையைக் குறிப்பினால் அகற்றுவர். இவ்வெல்லாம் குறிப்பு விளக்கு நடையன. வள்ளுவர் உள்ளபடி கூறும் கருத்தால், மறைமுகமாய் உடைந்தெறிந்த போலிக்கோள்கள் இவை என்று உய்த்துணர்தல் நம் அறிவின் தொழில். 10. உணவு, உடை, அணி, ஊர்தி, வீடு முதலாய புறவளன் பெருக்கும் ஒரு கண்ணுடைய மக்களே சாலப் பலர். மனங்கூசாது ஒழுக்கம் இறந்தும், உயிர் வழங்கியும் கூடப், புறவாழ்வு காண முனைவார் சிலரல்லர். தம் காரியம் வரும்போது நல்லொழுக்கத்துக்குப் பலவாறு கருத்துக் கூறிக்கொள்வர். உண்மைப் பற்று வினை செய்யுங்காலைச் சிறிதாவது செயலாதல் வேண்டும். பல்லோர் தம் உள் நடப்புக்களைச் சீர்தூக்கின், நாம் அறியக்கிடப்பது என்ன? வினை வேறு சொல்வேறு பட்டார் (819) என்றபடி, இன்னோர்க்குத் தன் நெஞ்சு அறிந்த வாய்மைப் பற்றும் தூய்மைத் துணிவும் இல்லை என்பது வெளிப்படை. அழுக்கற்றும் வெஃகியும் பொய்த்தும் களவு செய்தும் பலரைக் கொன்றுங்கூட, என் கண்முன், இன்னின்னோர் சிறந்து வாழ்கின்றனரே; குடிபொன்றிக் குற்றமும் ஆங்கே தரும் (171) என்ற கேடு இன்னோரை எய்தவில்லையே; அரிய இனிய கொழுப்புணவு, சிலு சிலு வென்னும் பட்டாடை, வயிரப் பொற்கலன், ஆண்டுப் புதிய கார், அடுக்கிய மாடமாளிகை, பிறபல கால நலங்களையெல்லாம், திருமகள் முகவரி அறிந்து இன்னோர்க்கு அன்றோ உய்க்கின்றனள்; வாழ்வு கொழிக்க வேண்டின் குற்றத்திற்கு அஞ்சப்படாது என்று பெரும்பாலான மக்கள் தம் மனத்துள் நம்பி வேலை செய்ப. ஓரொருகால் தோன்றும் ஒழுக்க அரும்பினை முளையாமுன் கிள்ளிவிடுப. தீயவை தீய பயக்கும் என்பது பலர் தம் வாய்ச் சொல்லேயன்றி வாழ்வுப் பிடி இல்லை. ஒருவன் வாழ்விற்கு எத்துணையோ காரணங்கள் துணையாவன. அவ்வெல்லாம் மற்றையோர்க்குப் புலனாவ தன்று. சிலபொழுது அவனுக்குக்கூடப் புலனாவதில்லை. களவுக் குற்றம் உடையான் ஒருத்தன் அதனினும் பெருங் கொடை யாளியாய் இருப்பன். அறிவிலாதான் தன்பக்கம் அறிவுடையார் பலரைத் துணைவராகப் பெற்றிருப்பின். ஒருகால் கொடுமை நிரம்பியவன் பேரிரக்கத்தனாக இருப்பன். குற்றம்பல புரிபவன் அவற்றை மறைக்கவல்ல அறிவுக் கூர்மையனாக இருப்பன். ஒருவன் தன் அனைத்து மனவோட்டங் களையும் புறத்தோர் அறிதற்கியலாது. தன் நெஞ்சத்துப் போக்குவரவுகளைக் கூடச் செவ்வன் பிறழ்வின்றிக் கணித்துக்கொள்ள மாட்டா மக்கள் பிறர் நெஞ்சத்தை உள்ளவாறு அறிதல் என்பது எளிய செயலன்று காண்; பெரும்பாலும் பிழைபடுவது காண். நூறடி உயரத்திருந்து ஒருவன் விழுந்தான்; காயம் ஒன்றும் இன்றிப் பிழைத்துக்கொண்டான் என்பது கண்டு, மற்றொருவன் அவ்வுயரம் ஏறி விழத் துணிவானா? நூற்றைந்து திகிரி ஒருவன் உடம்பு காய்ந்தது; மருந்துச்செலவு மிகுதியின்றிச் சின்னாளில் நலம் எய்திற்று என்பது அறிந்து, காயல் சிறிது வரப்பெற்ற மற்றொருவன் என்னுடலும் நூற்றைந்து திகிரி காய்க; பின் நலமெய்துக என்று வாளா இருப்பானோ? தீமை தீது தரும் என்பது வள்ளுவம்; எனினும், ஆற்றல் மிகுந்தானை ஓரளவே தாக்கும் எனவும், ஆற்றல் குறைந்தானை உரிய அளவு தாக்கிவிடும் எனவும் நாம் தெளியவேண்டும். ஒரே நோய் உடல் வன்மைக்கும் மனவுரத்துக்கும் சூழ்நிலைக்கும் ஏற்ப வலி செய்யுமாப் போல, ஒரே குற்றமும் செய்தான் பிற குண நலத்துக்கு ஏற்பத் தீது விளைக்கும். உடலின்கண் எதிர்ப்பாற்றல் மிகுந்திருப்பின், நோய்சிறிது தாக்கியவளவில் தணிந்துவிடும்; அஃதொப்ப, ஒருவன்பால் பிறகுணச் சிறப்பு அளவிறந்து இருப்பின், அவன் செய்தீமை பெருங்கேடு செய்யாது குன்றிப் போம். ஆதலின் ஒருவன் புறநல் வாழ்விற்கு நுண்ணிய அடிப்படை. ஒரு பெருங் குணச்சிறப்பே என்று கொள்க. குணங் குறைந்து அதனினும் குற்றம் பெருகிவிடுமேல், அவன் அழிவு யார்க்கும் வெளிப்படையாத் தோன்றும். யான் பேராற்றல் உடையேன்; அரிய சில பண்புகளும் உடையேன்; ஆதலின், எனைத்துக் குற்றம் செய்தாலும் பெருங் கேடுவராது என்று மயங்குவது பெரும் பேதைமை! அழிவுச் செருக்கு, பணத்தைத் துல்லிதமாய் எண்ணிக் கணக்குச் செய்வது போல, யாரும் தன் உள்ளாற்றலை இவ்வளவிற்றென அளந்துகொள்ள முடியாது. மேலும் தீமைகெடுவலியும் மிக்கது; கெடுந்துணையும் பல உடையது. பல்குணச் சிறப்பும் ஒருசிறு தீமையால் தொலைந்துவிடும். அணையாது வைத்த அடுப்பின் நெருப்புத் துண்டால், வீடுமுழுதும் எரியுண்ணக் காணுதும் அன்றோ? ஊசி குத்தினாற் போலும் ஒருசிறு ஓட்டை அடியில் வீழின் பெரும்பானையும் பாழாகும் அன்றோ? ஆதலின், குற்றமே காக்க பொருளாக, (434) என்ற வள்ளுவ நினைவு எனைவகைச் சான்றோர்க்கும் வேண்டற்பாலது. கனவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து ஆவது போலக் கெடும் (283) மனத்துளது போலக் காட்டி ஒருவற்கு இனத்துளது ஆகும் அறிவு (454) அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான் கேடும் நினைக்கப் படும் (169) இவ்வனைய குறள்கள் முன்னறிவிப்பு நடைகொண்டன. குற்றத்தை வரவழைத்துக்கொண்டும், சுமக்கும் உரமுடையேன் என்று தருக்குவது தன்னேய்ப்பாகும்; வாழ்க்கை சடக்கென முரிவாகும். ஒழுக்கம் பல கெட்டும் உண்டு உடுத்து அணிந்து ஒய்யாரமாய் வாழ்வார் உளரேல். அப்பிறரை வழிகாட்டியெனத் தன் நெஞ்சத்துள் பற்றுவது தீயோடு விளையாடுவதை ஒக்கும்; ஆதலின், தன் ஆற்றல் சிறிதாகுக; பெரிதாகுக அஃதோர் நிலைக் களன் அன்று; தீய வினை செய்ய என்றும் அஞ்சுவதே அறிவுடைமை. 11. ஒரு சார் மக்கள் நாம் பன்முறை வேண்டிக் கொள்ளினும், அவ்வேண்டுகைக்குச் செவி சாய்க்க மாட்டார்கள். நாம் தாழத் தாழ, மரக்கொம்பின் நுனிக்கு ஏறிக்கொள்ப. தாயன்பைக் குழந்தை பேணாது நடக்கு மாங்கு. இன்னோரும் நம் அறிவுரையை இகழ்ந்து செல்ப. நாம் அவர்தம் வாழ்க்கை முன்னேற்றத்தில் அக்கறை காட்டுவதாக அறியின், அதன் வழியாக நம்மையே சுரண்டி வாழ நினைப்ப. காதல காதல் அறியாமை உய்க்கிற்பின் (440) என்னுமாங்கு. நம் சொல்லைப் பேணாதார்பால் நாமும் பேணாதேம்போல் நடக்க வேண்டும். அவரைத் தம்வழி அலையவிட்டுப் பிடிப்பது இந்நடப்பின் பயன். திருந்துமின்! திருந்துமின்! என்று பல்கால் வழியுணர்ச்சி கற்பிப்பதினும், அன்ப! என்னைவிட்டுப்போ. கெட்டொழி என்று எதிர்ப்புணர்ச்சி காட்டல் சிலர்பால் நினைந்த பயனைப் பயக்கும். கெடல்வேண்டின் கேளாது செய்க; அடல்வேண்டின் ஆற்று பவர்கண் இழுக்கு (893) உண்ணற்க கள்ளை; உணிலுண்க; சான்றோரான் எண்ணப் படவேண்டா தார் (922) என்ற குறள்கள் பேணா நடையில் அமைந்தன; விட்டுத் திருத்தும் நெஞ்சுடையன. செயல் வேண்டும் என்னும் ஒரே நோக்கு வைத்துத் தான் வள்ளுவச் சொற்பொழிவுகளைத் தொடக்க முதல் ஆற்றி வருகின்றேன் என்பதை நீவிர் அறிவீர். திருக்குறளெல்லாம் செயலுலகிற்கு எழுதப்பட்டன என்ற உண்மையை நீவிர் இதுகாறும் ஐயந்திரிபறத் தெளிந்திருப்பீர். உவமை நயம், சொன்னயம், பொருள் நயம், மெய்ப்பாட்டு நயம், இலக்கண நயம், குறிப்பு நயம், தொடை நயம், ஒப்புமை நயம் என்ற பல்வகை நூல்நயம் காட்டும் நோக்கோடு திருக்குறள் நடைச் சொற்பொழிவைப் பேசலாமாயினும், யான் அவ்வழிச் செல்லவில்லை. துணிந்தெடுத்த தனிச்செயல் நோக்கம் தொட்டவிடமெல்லாம் தோன்றுமாறு நாட்டிச் செல்லுவல். 12. எனைப் பெரியோரும் செய்க என வேண்டுவர்; உளம் பதியுமாறு இயம்புவர். உணவு உட்கோடல் போல், செயல் மேற்கோடல் அவரவர் தொழில். யார்க்கும் செயல் மனம் பிறக்குமாறு பற்பல நடைகளை ஆளுவர் வள்ளுவர்; அரிய பொருளையும் எளிய பொருளாகக் காட்டுவர். ‘மதுரை மூதூர் யாது? எனப் புகார் நகரத்திருந்து வினவிய கண்ணகிக்கு, ஆறைங் காதம் நம் அகன் நாட்டு உம்பர், நாறைங் கூந்தல் நணித்து என்று மலையாதபடி விடையிறுத்தாங்கு. ஆர்வமும் செயலும் தோன்ற நடையாப்பர்; இப்படிச் செய்யின் இப்பயன் பெறுவை என எச்சநடையை முன்வையாது முன்வைத்துப் பின்னடையச் செய்யாது, இப்பயனெல்லாம் பெறுகுவை இவ்வினை செய்யின் எனப் பயனிலையை முன்வைத்து முன்னேறச் செய்வர். எண்ணிய எண்ணியாங்கு எய்துப; எண்ணியார் திண்ணிய ராகப் பெறின் (666) அரியவென்று ஆகாத இல்லை;பொச் சாவாக் கருவியாற் போற்றிச் செயின் (537) விரைந்து தொழில்கேட்கும் ஞாலம்; நிரந்தினிது சொல்லுதல் வல்லார்ப் பெறின் (648) மருந்தென வேண்டாவாம்; யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி யுணின் (942) இவ்வனைய குறள்கள் செயலுய்ப்பு நடையன; கற்கும் போதே நெஞ்சிற்கு உரம் போடுவன. கன்னியொடு இடையறாது நட்பாடும் காளை ஒரு ஞான்று காதலாடு மாப்போலே, இக்குறள்களைப் பல்காலும் நினைய வல்லோமேல், நாம் அரிய வினைவாய்ப் படுவோம் என்பது என் துணிபு. உள்ளியது எய்தல் எளிதுமன்; மற்றும் தான் உள்ளியது உள்ளப்பெறின் (540) என்பது செயல் பொய்யா வள்ளுவம். 13. மக்கள் நெஞ்சு ஓராற்றான் இலக்கியப் பண்பு தழுவியது. பல்லாயிரம் ஆண்டுகளாக நம் நினைவுலகை மொழி ஆண்டு வருவதால், பிறப்பிலேயே நமக்கு இலக்கியத் திரு அமைந்து கிடக்கின்றது. கல்லாதாருங் கூட மொழி நயம்படப் பேசுவது இதற்கு ஓர் சான்று. கேட்டார் மனம் பதியச் சொல்லும் நடை வன்மையைத்தான் இலக்கியப் பண்பு என யான் ஈண்டுக் குறிப்பிடுகின்றேன். எட்டடி உயரத்தவன் என்றால் நெட்டையன் என்ற கருத்தும், மூவடி உயரத்தவன் என்றால் குட்டையன் என்ற கருத்தும் மனத்துக்குச் சட்டெனப் படுவதில்லை. பனைமரம் போன்றவன், கத்தரிக்காய் போன்றவன் என்று சொல்லாமுன், மிக நெடியோன், நனிகுள்ளன் என்ற உருவம் உடனே மனக்காட்சிப்படுகின்றது. அளவாகா ஒரு பொருளினை முற்றும் மேலாக அல்லது அறக்கீழாகச் சொன்னாற்றான் எண்ணிய பெருமை சிறுமைகளைப் பிறர்க்கு உணர்த்த முடிகின்றது. இவ்வுள்ளப் பண்பை நிலைக்களனாகக் கொண்டு ஒழுக்கப் பண்பை வலியுறுத்த விரும்பினார் வள்ளுவர். விருந்தோம்பலும், கற்புத் திண்மையும், கரவா ஈகையும், குன்றா ஊக்கமும் பெருவாழ்வு அளிப்பன என்று கற்பவர்தம் உளம் பதியும்பொருட்டு, வித்தும் இடல் வேண்டுங் கொல்லோ, (85), பெய்யெனப் பெய்யும் மழை (55), கரப்பவர்க்கு யாங்கு ஒளிக்குங் கொல்லோ (1070), ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் (594) எனப் பெருநடை மேற்கொண்டார். புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தேன் அவ்வளவில் அள்ளிக்கொள் வற்றே பசப்பு (1187) நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்டல் அஞ்சுதும் வேபாக்கு அறிந்து (1128) அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர் அடிக்கு நெருஞ்சிப் பழம் (1120) இவ்வனைய குறள்கள் உளப் பதிவு செய்யும் இலக்கிய நடையன; அளவினும் மிகுந்த தம் எண்ண உயர்ச்சியைப் பிறர்க்கு ஓரளவேனும் உணர்த்தவல்ல அழுத்த நடையன. இந் நடையாட்சி அறத்துப்பால் பொருட்பால்களினும் காமத்துப் பாலில் பெருவரவிற்று. 14. காவியப் புலவன் தன் நூலுள் வரும் மக்கள் கூற்றாகவே நின்று பெரும்பகுதி பேசுவான். பிரிந்து நின்று தன் கூற்றாக அவன் சொல்லும் இடங்கள் சிலவேயாகும். வழிகாட்டும் வாழ்க்கைப் புலவனோ உணர்ச்சி யூட்டும் பொருட்டு, கானமுயல் எய்த அம்பினில் யானை பிழைத்த வேல் ஏந்தல் இனிது (772) என்றவாறு சில பொது மக்கள் கூற்றாக மொழியினும், நமக்கு அறிவறையும் பொருட்டுப் பல்காலும் தன் கூற்றாகவே மொழிவான். அரசனாய்க் கட்டளை நடையில் பகராது. அன்பனாய் உழையிருந்து அணைவு நடையில் அறிவு தருவான். தீமை செய்யத் தூண்டும் பிறர் உள்ளக் கிடக்கைகளைத் தன்மனத்து வாங்கிக்கொண்டு அறங் கூறுவான். மக்களின் உள்ளோட்டங்களைக் கண்டு கொள்ளாது வள்ளுவர் அறங்கூறியிருப்பரேல், திருக்குறள் மனங்கற்று எழுதாது. பிறிதொரு நூல் கற்று எழுதிய நூலொக்குமன். நீ யாது நினைக்கின்றாய்; யாதினால் மயங்குகின்றாய்; எக்கருத்து உன்னைக் கெடுக்கின்றது; என்பவெல்லாம் யான் அறியாதேனல்லேன்; அறிந்து வைத்துத்தான் இடித்துரைக்க முன் வந்தேன் என்று ஆசான் உணர்ந்து கழறுங்காலை, மெய்யாகவே அவர் சொல்லை நம்பும் அறிவுடை நம்பிகள் ஆகின்றோம். இலனென்று தீயவை செய்யற்க (205) பழையம் எனக் கருதிப் பண்பல்ல செய்யும் (700) பெயக்கண்டும் நஞ்சு உண்டு அமைவர் (580) அருமை யுடைத்து என்று அசாவாமை வேண்டும் (611) என்ற பகுதிகளில் வரூஉம் இலனென்று, பழையம் என, பெயக் கண்டும், அருமை யுடைத்து என்னும் முற்கூறுகள் வள்ளுவர் உட்கொண்ட பிறர் மனப் பாங்குகள். களித்தறியேன் என்பது கைவிடுக; நெஞ்சத்து ஒளித்ததூஉம் ஆங்கே மிகும் (928) எளிதென இல்லிறப்பான் எய்தும்; எஞ்ஞான்றும் விளியாது நிற்கும் பழி (145) இவ்வனைய குறள்கள் கொண்டு கூறும் நடைத் தொடையன; நம் கருத்தைப் புரிந்து கொண்ட ஆசான் தன் கருத்தை நமக்குத் தெரிப்பன. திருக்குறள் நடையமைப்பின் மேல் விரிவுரை செய்யும் ஈங்கண், அதிகார நடை அமைப்பைக் குறித்தும் ஒரு சில சொல்லல் விரும்பத் தக்கதாகும். ஒரு குறள் கற்ற மாத்திரை யானே, வள்ளுவர் நெஞ்சப் பொதிவு இதுவெனத் தெளிதல் அரிதரிது. செறிந்த பெரும் பயனை வரையறைவிளைக்கும் என்ற துணிவால், அறம் ஒன்று நுவலும் ஓரதிகாரத்துக்குப் பப்பத்துக் குறள் வரம்பு கொண்டார் என்பதன்றி, அக்குறள் பத்துள் அவ்வறக் கருத்தெல்லாம் அடங்கிவிட்டன என்று கோடற்க. கல்வி, கல்லாமை, கேள்வி என்ற முவ்வதிகாரங் களையும் ஒருங்குவைத்து ஆய்ந்தாற்றான், ஆசான்தன் கல்விக் கோள்கள் பெரும்பாலும் புலனாகும். அறிவுடைமை, பேதைமை, புல்லறிவாண்மை என்ற அதிகாரங்களையும், செங்கோன்மை, கொடுங்கோன்மை, வெருவந்த செய்யாமை என்ற அதிகாரங்களையும் ஒரு சேரக்கொண்டு நோக்கி னாற்றான், நிரலே அறிவு வள்ளுவங்களும், அரசு வள்ளுவங்களும் ஓரளவு தெளிவுபடும். அறிவுப் பொருள் பற்றிப் பலபடப் பொருட்பாலுள் மொழிந்த பின்றையும், நிரம்பாமை கண்ட வள்ளுவர் அறிதோறும் அறியாமை கண்டற்றால் (1110) எனக் காமத்துப் பாலிற்சென்று, புதியதோர் அறிவுக்கூறு தெரிப்பக் காண்கிறோம். பனைமரக் கீழிருந்து பால் குடிப்பினும், குடிப்பது கள்ளெனப் பிறர் கருதுவர்; அதுபோல விடுதி முதலாய புற இடங்களில் தங்கி மனைவியொடு இன்புறினும், கள்ளக்காதலி யென்ற எண்ணமே முதற்கண் பிறர்க்குத் தோன்றும். ஆதலின், தனக்கு உரிய பொருளை அதற்கு உரிய இடத்திருந்து துய்ப்பதுவே முறை என அறிக. இவ்வுண்மையின் ஒரு கூறினைப் பாத்தூண் என அறத்துப்பால் இல்வாழ்க்கை அதிகாரத்தில் சுட்டிய ஆசிரியர் தம்மில் இருந்து தமது பாத்து உண்டற்றால் (1107) எனக் காமத்துப் பாலில் மற்றொரு கூறினையும் - உரிய இடத்தையும் - சேர்த்துச் சுட்டக் காண்கின்றோம். ஆதலின் ஓர் ஆசான் தன் உண்மை நெஞ்சம் காணவும், முழுத் தெளிவு கைவரவும்வேண்டின், அவன் எழுதிய நூல் முற்றும் ஒருமுறை இருமுறையல்ல, பன்முறையால் பல நோக்கால் ஆரவமரக் கற்றல்வேண்டும். இங்ஙன் கல்லாது ஆடுவாய் வைத்தனைய மக்கள் புல்லறிவும் திரிவும் நாட்டிடைப் பரப்பும் கீழோராவர்; பொய்யேர் உழவராவர். 1. திருக்குறள் முழுமைத் தெளிவு பெறுவதற்கு முன், அதிகாரந்தோறும் ஒரு முடிபுத் தெளிவு செய்து கொள்ளல் வேண்டும். ஓரதிகாரப் பத்துக் குறள்களையேனும் தொகையாகத் தேர்வது இத்தெளிவைப் பயக்கும். கண்ணோட்டம் என்பது ஓரதிகாரம். கண்ணோட்டத்து உள்ளது உலகியல் (572) கண் என்னாம் கண்ணோட்டம் இல்லாத கண் (573) என்றவாறு, இப் பண்பினை வலியுறுத்துவர் வள்ளுவர். கண்ணோட்டத்தைச் சிறப்பித்துக் கூறும் ஓரிரு குறள்களை மாத்திரம் கற்று அமைந்தார்க்கு, ஆசான் தன் நெஞ்ச முழுமை தோன்றாது. பழகினவர் யாது சொல்லினும் அதனைத் தட்டிக்கழிக்காது நன்கு ஏற்றுச் செயல் வேண்டும் என்பதாகக் கருத்துக்கொள்வர். நண்பன் நம் செல்வாக்கால் பிறர்க்குத் தீது இழைக்க வேண்டினும், அவ்வேண்டுகோட்கு இசைவதே கண்ணோட்ட வள்ளுவம் என்று மாறிக் கொள்வர். அளவினான் கண்ணோட்டம் இல்லாத கண் (574) கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு (578) என்ற அதிகாரப் பிற குறள்களையும் காணும்போதுதான், கண்ணோட்ட வள்ளுவமாவது பிறர்க்கு இன்னா செய்யா நட்புதவி என்ற முழுத்தன்மை தெளியப்படும். காக்க பொருளா அடக்கத்தை (122) என்ற குறளொன்றை மாத்திரம் கற்று, போதும் என்று அமைந்த மனத்தினர், கைதட்டி வாய்பொத்தி உடல் சுருட்டி அறிவொடுங்கிய காட்சிதான் வள்ளுவர் சொல்லும் அடக்கம் எனப் பொதிந்துகொள்வர். யாதும் பேசாது, கேட்டவற்றை யெல்லாம் தலையசைவால் ஒப்பிக் குனிந்து முன்னிற்கும் கூழையனையே, என்ன அடக்கம் எனப் போலிப் பெரியவர் பலர் புகழக் காண்கிறோம். மக்கட் பிறப்பிற்கே உரிய ஒருமகன் அறிவு மற்றொருவன் முன் செயலற்று மடிவதை அடக்கம் எனச் சொல்பவர்கொல் வள்ளுவர்? அறிவு அறிந்து ஆற்றின் அடங்கப் பெறின் (123) என்பது குறள். அறிவு அடங்கப் பெறின் என நடைப்படுத்தாமை காண்க. அடங்கியான் தோற்றம் மலையினும் மாணப் பெரிது (124) என இசைப்பரேல், அவர் சொல்லும் அடக்கம் நாம் பலர்பால் காணும் பலர் நம்பால் எதிர்பார்க்கும் - உடல் முடக்கம் அன்று என்பது பெறப்படும். அடக்க வள்ளுவமாவது அறிவுப் பெருமையும் ஏறுபோல் பீடு நடையும் செறிந்த ஐம்புல மனவடக்கம் என்று அறிக. ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே செல்லும்வா யெல்லாம் செயல் (33) மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன் ஆகுல நீர பிற (34) அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும் இழுக்கா இயன்றது அறம் (35) இவை அறத்தெளிவு பயக்கும் அதிகார நடையன. அறமாவது இடையறாச் செய்கை; வினை செய்யுங்கால் மாசின்மை; இந்நான்கும் மாசு ஆவன என்று ஆசான் தன் நெஞ்சுக் கோளைக் கசடற இம்முக்குறட் கல்வியால் உணர்கின்றோம். 2. ஓரதிகாரம் அறமொன்றே நுவலும் கடப்பாட்டது எனினும், அவ்வறந்தானும் பல்கூறு உடையது. ஆயிர ரூபாய் நாணயத்தாளைச் சில்லறையாக மாற்றிக் கொண்டு புழங்குதல் போல ஒரு பேரறத்தையும் சிறு கூறுகளாக வைத்துக் கொண்டாற்றான் செயல் ஏற்படும். வினைசெய் திறத்தானுக்குப் பெருநோக்கொடு பகுதிச் செயலும் இன்றியமையாதது; ஆதலின், செயல் வேண்டும் வள்ளுவர் முழு முழு அறங்களாகப் பெரிதும் விதியாது, வினைக் கூறுகளாக அறக்கூறு காட்டுவர். பெரியாரைத் துணைக்கோடல் அதிகாரத்தின்கண், இடிக்குந் துணையாரும் (447) குடிமைக்கண், யார்க்கும் பணிவும் (960) மானத்தின் கண், இகழ்வார்பின் சென்று நில்லாமையும் (966) ஒழுக்க முடைமைக் கண், உலகத்தோடு ஒட்ட ஒழுகலும் (140) சான்றாண்மைக்கண், பிறர் தீமை சொல்லாமையும் (984) பண்புடைமைக்கண், நகை யுள்ளும் இகழாமையும் (995) ஈகைக்கண், அழிபசி தீர்த்தலும் (226) வினைத் தூய்மைக்கண், சலத்தால் பொருள் செய்யாமையும் (660) சிறப்புக் கூறுகளாக நிற்றலைக் கற்க. கண்டின் முனை நூலைத் தொட்டு எஞ்சிய நூலை இழுப்பது போலவும், நீண்ட கையைப் பிடித்து ஆளைப் பற்றுவது போலவும், நாம் சிறப்புக் கூறினைச் செயற்படுத்தின், ஏனைக் கூறுகளும் தாமே அமையக் காண்போம். கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம் உண்பதூஉம் இன்றிக் கெடும் (166) அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை (151) இவை சிறப்புக்கூறு சுட்டும் அதிகார நடையன. பலவற்றின் மேலிட்டுப் புன்மக்கள் அழுக்காறு கொள்ப. அவற்றுளெல்லாம் ஒருவன் ஒருவனுக்கு அளிக்கும் கொடையைக் கண்டு பொறாமைப்படுவதையே விதந்தோதுவர் வள்ளுவர். தானும் கொடான்; பிறர் கொடுக்கவும் பொறான் என்பது ஒரு சிலர் வாழ்வியல். நீ இவறினும் மற்றையோர் ஈவது காணின் மனம் பொறு என ஓரறக்கூறு தெரித்துவிடுவர். இப்படியே, பொறுமை யிடங்கள் பலவுளவேனும், தன் துணை மேல் வாழ்ந்துகொண்டே ஒருவன் தன்னை இகழ்வானாயின், அவ்விகழ்வுப் பொறையே தலையிடம் எனத் தெரித்தல் காண்க. 3. எத்துறை நோக்கினும் ஞாலம் இருகூறதாகத் தோற்றம் தருகின்றது. ஒரு கூறு நினையுங்காலை மறு கூறு நினைவிற்கு வருகின்றது! அன்புப் பொருளாகச் சில, முரண் பொருளாகச் சில, உறவுப் பொருளாகச் சில, பகைப் பொருளாகச் சில, அறிவுப் பொருளாகச் சில, இன்றியமையாப் பொருளாகச் சில என வாங்கு. ஒன்றோடு ஒன்றைச் சார்த்தி எண்ணுகின்றோம். பெருமையொடு சிறுமையையும், இசை யொடு வசையையும், மடியொடு குடியையும், ஊக்கத்தொடு ஆக்கத்தையும், இகலொடு பகலையும், பொறுத்தலொடு ஒறுத்தலையும், அருளொடு பொருளையும், கனவொடு நனவையும், ஊடலொடு கூடலையும் திருக்குறள் உடன் வைத்துக் கருத்துத் தொடை செய்கின்றது. கணவன் மனைவி, தந்தை தாய், ஆண் பெண், ஆசான் மாணாக்கன், தலைவன் தொண்டன் என்றவாறு, தொடர்புச் சுட்டுக்கள் ஒருங்கு மனப்படுகின்றன. நன்மை செய்தல் ஒருவன் கடன் எனின், நன்றியறிதல் ஏனையோன் கடனாகும். நாடு காத்தல் மக்கள் கடமை எனின், அன்னோரைக் காத்தல் நாட்டின் கடமையாகும். வரியிறுத்தல் குடிகள் முறைமை எனின், அவற்றைப் புரத்தல் அரசின் முறையாகும். இவ்வாறு நாம் இணைத்து நினைக்கின்றோம். இக்கூட்டு நினைவு மனத்தியல்பு. இவ்வியற்கையைக் களனாகக் கொண்டு, அறம் ஒன்று நுதலப் புகுந்த ஓரதிகாரத்துத் தொடர்பான - மறு கூறாய – இணை யறமும் விதிப்பர் வள்ளுவர். கேட்டுப் பாராட்டுவான் ஒருத்தன் இருத்தலால் அன்றோ, ஒருவன் பொருளின்றிச் சொற்பந்தல் தொடுக்கின்றான். பயனில் சொல்வானை ஒப்பக் கேட்டுப் புகழ்வானும் இழிஞன் என்ற நினைவால், பயனில் சொல்லாமை, என்ற அதிகாரத்துப் பயனில் கேளாமை யறமும் உடன் கூறுவர். பெற்றோர் கடன் காட்டும் மக்கட்பேறு என்னும் அதிகாரத்துப் பிறந்தோர் கடனும் உடன் மொழிவர். பற்று விடக் கழறும் துறவதிகாரத்து, பற்றத் தகும் புதிய பற்றுக் காட்டுவர். பயனில்சொல் பாராட்டு வானை மகனெனல்; மக்கட் பதடி எனல் (196) மகன் தந்தைக் காற்றும் உதவி இவன்தந்தை என்நோற்றான் கொல்லெனும் சொல் (70) பற்றுக பற்றற்றான் பற்றினை; அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு (350) இவ்வனைய குறள்கள் உடனறம் கரையும் அதிகார அமைப்பின; ஒருகூறு உரைக்கும்போது நாணயம் போல் மறுகூறும் தெரிப்பன. நன்றியில் செல்வ அதிகாரத்து, சீருடைச் செல்வர் சிறு துனி (1010) என்பதூஉம். நாடு அதிகாரத்து வேந்தமைவு இல்லாத (740) என்பதூஉம், படைமாட்சி அதிகாரத்து தலை மக்கள் இல்வழி இல் (770) என்பதூஉம் உடனறம் மொழியும் பகுதிகளாகும். உடன் பிறப்பீர்! இதுகாறும் பதினான்கு வகைக் குறள் நடைபற்றியும், மூன்று வகை அதிகார நடை பற்றியும் விரிவு செய்தேன். ஏனைச் சொற்பொழிவுகள் போலாது, இதற்கு எடுத்துக் காட்டுப் பல வேண்டுதலின், ஓரினக் குறள்களைத் தொகை தொகையாகச் சொல்லிச் சென்றேன். இப்பதினேழுந் தான் திருக்குறட் பனுவலின் நடைகள் என்று முற்றுப்புள்ளி இட வேண்டா. ஆராய்ந்து காண விழைபவர், இன்னும் அளவிறந்த நடைக்கூறுகள் உண்மையைத் தெரிந்து கொள்வர். ஈதல் இயையாக் கடை (230) இல்லவள் மாணாக்கடை (53), நிலையின் இழிந்தக் கடை (964), தந்நோய்போல் போற்றாக் கடை (315), பலர்நாண நீத்தக்கடை (1149) தாம் காதல் கொள்ளாக் கடை (1195) என வரூஉம் ஈற்றடிகளில் கடை என்னும் இறுதிச் சீர் நிற்கும் சொன்னடையை உன்னுமின். எச்சப்பொருள் தரூஉம் சொற்கள் பல இருப்பவும், இவ் விடங்களில் கடைச்சொல் வந்து விழுவானேன்? ஈதல் இயையாமை, இல்லவள் மாணாமை, நிலையின் இழிந்தமை, தந்நோய் போல் போற்றாமை, பலர் நாண நீத்தமை, தாம் காதல் கொள்ளாமை என்றவெல்லாம் கடைப்பட்டன என்னும் பொருட் குறிப்பும் தோன்றக் கடைச் சொற் பெய்தார் என்பது நினைக்கத் தகும். ‘புறத்தாற்றின் போஓய்ப் பெறுவது எவன்? (46) ஈண்டு ஓகார அளபெடை புறத்தாற்றுப் போக்கை ஓசையானும் இழித்து நகைப்பது போன்ற ஒரு குறிப்புப் படவில்லையா? நன்னர் அளபெடுத்துப் படிமின்! 11. ஆசான் கருத்துரை ஒழுக்க நெறி வினைஞர்களே! உண்மை வணக்கம். திருக்குறளைப் பன்னிரண்டு தலைப்புக்களாக வைத்து உரையாற்றுவது என முன்னரே வகுத்துக் கொண்டேன். கொள்ளுங்காலை, கேள்வியன்பர் களாகிய உங்களின் ஐயப்பாடுகளை அறிந்து அவற்றைத் தெளிவிக்கும் முகத்தான், ஒரு சொற்பொழிவு தொடுப்பது என ஒதுக்கம் செய்து வைத்தேன். இடையிடையே ஒருசில ஐயங்களை விளக்கிப் போந்தேனாயினும், அதனால் நும் அறிவு வேட்கை அடங்கியிருக்கும் என நம்புகிலேன். இதுகாறும் ஒரு பொருள் நுதலியே சொற்பொழிந்தீர்; சொல்லாத எச்சப் பொருள்கள் இன்னும் பலவுளவே; அவ்வெல்லாம் பற்றிப் பொழிந்தால் அன்றோ, நீர் திருக்குறள் முழுமையும் எம்மனோர்க்குக் காட்டியதாகும் என்று நண்பர் சிலர் வலியுறுத்தினர். இவை இவை குறித்து வள்ளுவர் துணிந்த கருத்து யாது? எனத் தோழமை சான்ற பலர் வினவினர். ஒன்று விடாது 1330 குறள்களையும் நுனித்துக் காட்டுகை என் எண்ணம் அன்று. அங்ஙன் முற்றும் காட்டப் புகுகை குறள் கற்கும் உம் ஆர்வத்தைக் குறைப்பதாய் உம் பகுத்தறிவைக் கொல்லுவதாய் ஆகும்; என் செயல் நோக்கமும் சிதறுண்டு போம். இந்நினைவான் அன்றே பிறநாட்டுப் பெரியவர் தம் எண்ணங்களோடு திருவள்ளுவர் குறள்களை ஒப்பிட்டு உரை விளக்கஞ் செய்வதை நிறுத்திக் கொண்டேன். அவ்வொப் புமை விளக்கம் கேட்பார்க்குக் கருத்தடுக்கை அளிக்குமேயன்றிச் செயலெழுச்சியைத் தூண்டாது என்று விட்டொழிந்தேன். இவ்வாறு செயலுக்கு நேர்முகமாகாது விடுத்த பொருட் கூறுகள் பலப்பல. அவ்வெல்லாம் பிறநிலை நோக்கிப் பேசற்கு உரியன; ஆயின், எல்லா நிலையினர்க்கும் செயல் உரித்து என்ற துணிபால் அதனையே என் பொழிவு முழுதும் உயிர் நாடியாக வைத்து உரை செய்து வருகின்றேன். இதனை நீவிர் நன்னர் அறிவிர். யான் துணிந்த செயலொரு நோக்கில் வைத்துங் கூட இன்னும் பல சொற்பொழிவுகள் ஆற்ற இடனுண்டு. அவ்வெல்லாம் கற்பவர் தம் முயற்சிக்குப் பொருளாகுக என்று அமைந்து, தவச்சிலவற்றையே இற்றைச் சொற்பொழிவில் விளக்குவான் முற்படுகின்றேன். யான் ஆசிரியத் தொழிலாளி. வினவி வினவி மாணாக்கர்க்கு அறிவுறுப்பது அத்தொழிலின் நன்முறை; ஆதலின், உம்மனோர் ஐயங்களை வினாவடிவாக வரைந்து எம்பாற் கொடுமின். விடைவடிவாக ஒரு சொற்பொழிவு செய்வல் என்று என்னை அணுகிய நமர்க்கு மறுமொழிந்தேன். என் வேண்டுகோட்கு இசைந்து வரைந்து உதவிய வினாக்கள் எண்ணிறந்தன. அவற்றுள், பல வினாக்கள் ஒன்றுபோல் இருந்தமையால், கழித்துப் பொறுக்கிச் சிலவற்றைத் தேர்ந்து கொண்டேன். முறையாக இனி அவை பற்றிய ஆசான் கருத்துக்களை நுணுகுவாம். இவ்வாராய்ச்சியின் முடிபைக் கொள்ளுக; தள்ளுக. அது நும் அறிவுரிமை, தள்ளுங்கால், ஆய்ந்தானுக்கு மனமாசு கற்பியாது ஒழுகுமின்! என்பது என் பணிந்த வேண்டுகோள். 1. திருவள்ளுவர் தம் கடவுட் கொள்கை யாது? அன்பர்கள் விடுத்த அளவிறந்த வினாக்களுள், கடவுள் வினாவை முதற்கண் தெரிப்பதாக உவப்போடு எடுத்துக் கொண்டேன். வாழ்வு முழுமைக்கும் இன்றியமையாது என்ற உண்மையால். கடவுள் என்னும் சொல் திருக்குறளகத்து ஓரிடத்தும் இன்மையை முதலாவதாகக் குறிக்கொள்மின்! இக் கிளவியை ஆளாமையானே, கடவுட் கொள்கை இல்லாதவர் நம் வள்ளுவர் என மயங்க வேண்டா. இச்சொல்லாட்சி யின்மையை வேறொரு கருத்திற்காக நினைவுறுத்தினேன். தந்நூலின் முதலதிகாரத்து, ஒன்பது குறள்காறும் ஆதிபகவன், வாலறிவன் எனவாங்கு. ஒன்பது தனிப் பெயரிட்டுக் குறள்யாக்கக் காண்கின்றோம். அவற்றுள் இறைவன் (5) என்பது இப் பெயரின் பொருள். பத்தாவது குறட்கண் கடவுள் அடி சேராதார் என்று புதுச் சொற் பெய்ய வாய்ப்பிருந்தும், இறைவன் அடிசேராதார் (10) என, முன் சொன்ன பெயரையே மீண்டும் ஆள்வானேன்? ஓர்மின்! இவ்வாட்சியால் நாம் அறியக் கிடப்பது என்? எப்பொருள் மாட்டும் தோன்றா அகத்துணையாய் உடன்வாழும் முதல்வனை - கடவுளென - நமக்கு எட்டாது கடந்த பொருளென - வள்ளுவர் அறிமுகஞ் செய்ய விரும்பவில்லைபோலும். நீக்கமின்றி உறையும் இறைவனை - தூய நெஞ்சினால் நினைவார்க்கு எளிய அகப்பொருளை - எட்டாப் புறப் பொருளாக - கானல்போல் நீளும் சேய கடவுளாகப் பெயரிட, ஆசான் உள்ளம் இசையவில்லை போலும். கருத்துக்கு நன்றும் எளியன் என்பது நம்மாழ்வார் மொழி. இந்நிலைக்கண் முதலதிகாரத்துக்குக் கடவுள் வாழ்த்து என்ற தலைப்பு இன்று இருப்பது முற்றும் பொருத்தம் இல்லை காண். கடவுள் என்னும் சொல் உரிய குறள் பத்துள் - குறள் நூலுள் - இன்மையானும், வான் சிறப்பு. நீத்தார் பெருமை என்றபடி, குறளகச் சொற்கொண்டே அதிகாரம் அழைத்தல் நூல் முழுதும் காணப்படும் நெறியாக வருதலானும், இறைவன் என்ற பெயர்மேல் ஈடுபாடு உடையராய் ஆசான் இருகால் ஆளலானும், முதலதிகாரத்துக்கு இறை தொழுகை என்னும் தலைப்பே பொருந்துவதாகும். ஆதலின், திருவள்ளுவர் தம் இறைக் கொள்கை யாது எனக் காண்போம். இங்ஙன் வினாச் சொல்லைத் திருத்திக்கொள்ள அன்பர்கள் உடன்படுவாராக. எப்பொருட் கண்ணும் உறையும் முதல்வனை, உளன் என ஒருவன் ஒப்பினும், இலன் என ஒருவன் மறுப்பினும், அஃது ஒரு பொருட்டன்று. ஒப்புவதால் முன் இல்லா இறைவன் உளனாகிவிடான்; ஒவ்வாமையால் இலனாகிப் போகான். அவன் என்றும் உள்பொருள், அப்பொருளை உண்டென வரிந்து கட்டி ஒரு கட்சி போலப் பறை சாற்றுவதும் இல்லென மார்தட்டி ஒரு தொழில் போல வாயாடுவதும் எல்லாம் பேதைமைப் பால. இறையுண்மை பரப்புவேன் எனக் கங்கணங் கட்டி முனைவது மெய்ந் நெறியன்று. மறுக்கும் சிலர்பால் இறைவன் இலன் என ஒப்பும் பொய்ந் நெறியாகிவிடும். உள்ளான் இல்லான் எனா, ஆத்திகன் நாத்திகன் எனா, மக்களைக் கூறு செய்தல் இறைவனே உண்மை இன்மை என இரு கூறுடையான் என்று பட்டு முதலூனமாய் முடியும். ஏற்பினும் எதிர்ப்பினும், எப்பொருட் கண்ணும் இயல்பாக இறைவன் அமைந்து வாழ்தலைக் கண்ட மெய்யுணர்வினோர் இப் பிரிவுவழி கொள்ளார்; இறைக் கூறுடையராகவே எல்லோரையும் காண்பர்; ஆதலின், திருவள்ளுவர் ஆதிபகவன் முதற்றே உலகு என இறையுண்மையை-யாண்டும் உறையும் முதல்வனை - ஒரு முதற்குறளால் சுட்டி அமைந்தார்; ஏனைப் பின் ஒன்பது குறள்களால், மக்களாகிய நாம் இறைமை வளர்த்துக் கோடற்கு உரிய நெறியையும் பயனையுமே விரித்தார் என்று துணிக. இறைமை எனப்படுவது பிறப்பின் அகப்பொருள்; பிடித்தற்கு வாராப் புறத்தீப் போல யாராலும் அவித்தற்கு ஒல்லா அகத்தீ. இத்தீயொளியை அற ஒழிக்க முடியாது. எனினும், அதனை மறைக்கவோ வளர்க்கவோ மக்களால் இயலும். மடி என்னும் மூடி கவித்து, பேதைமை என்னும் வன்திரையிட்டு, பலர் இவ்விறையொளியை இருள்படுத்தக் காண்கிறோம்; அதனால், அன்னோர் வாழ்வும் நெஞ்சும் குறுகக் காண்கின்றோம்; ஏனைய பிறப்புக்களெல்லாம் தமக்குப் பிறப்பில் அமைந்த இறையளவே உடையன; பின்னர்ப் பெருக்கிக் கொள்ளத்தகும் நினைவுக்கருவி அற்றன. மக்கட் பிறப்பு ஒன்றுதான், தீப்பொறியைப் பஞ்சினால் பெருக்கிக் கொள்ளுமாப் போல, உள்ள இறைமையை நினைவால் பெருக்கிக் கொள்ளும் தனியாற்றல் சான்றது. தன் பிறப்பிற்கே அமைந்த தனித் தன்மையை - நினைவாற்றலை - இறைமையை - எண்ணி எண்ணித் தூய்தாய் வளர்க்கா மகன், ஐயகோ! சிறியவன்; பேதையன்; பிறப்பிழந்தவன், நாம் வேண்டுவது இறைக் கொள்கைப் பூசலன்று காண். பிறந்தார் யார்க்கும் உடம்புபோல் உள்ளாகிக் கிடப்பது இறை. உடல் நோய் தடுப்பான் மெய்வலி பெருக்குமாப்போல், மனமாசு அகற்றுவான் இறைவலியை - உள்ளொளியைப் பெருக்கல் வேண்டும் என்பது பிறப்பு வள்ளுவம். இறைமை என்பது குணமற்ற தனிப்பொதுப் பேராற்றல். குணங்கள் தாம் இல்லா இன்பமே என்பது திருவாசகம். தனக்கோர் குணமில்லா அவ்விறையாற்றல் ஆளும் மக்களைப் பொறுத்து, நல்லதீய குணங்கட்கு இடனாய் மாறும் என்ற கருத்தால், நன்மையும் தீமையும் ஆனார் போலும் என்றும், நல்வினையும் தீவினையும் ஆனான் தன்னை என்றும் இருமைப்படுத்துவர் திருநாவுக்கரசர். இங்ஙன் குப் பொதுவாய் நிற்கும் இறைவனை வள்ளுவர் சால்புத் தனி நிலைப்படுத்தினார்;மக்கள் வாழ்க்கையை உயர்த்தா இறைக் கொள்கை பயனின்று என்ற துணிவால், ஆதிபகவனைத் தூய இறைவனாகப் பிரித்து வடித்துக் காட்டினார்; வாலறிவனாக, வேண்டுதல் வேண்டாமை யிலானாக, பொறி வாயில் ஐந்தவித்தானாக, அறவாழி அந்தணனாக, எண் குணத்தானாகப் பண்புருவம் செய்து கொடுத்தார்; அவன் திருவடியை, நற்றாள் மாணடி என நல்லடைப்படுத்தினார். இவ்வண்ணம் உலக முதல்வனை - பொதுக் குணத்தவனை - ஒழுக்கத் தனி முதல்வனாக நமக்கு அறிமுகப்படுத்தியமையால், அவனை நினைவால் தொழும் நாமும் வாலறிவராக, பற்றற்றவராக, ஐந்தவித்தவராக, அறவாழி அந்தண்மையராக வளரல் வேண்டும் என்பது வள்ளுவம். எவ்வாற்றானும் வலிபெருக்கும் முனைப்பே மக்கள் பால் துடித்து நிற்கின்றது என்றும், பெருகிய அகப்புற ஆற்றலை நல்லாட்சிப் படுத்தும் தூயவுணர்வு அன்னோர் பால் துடித்து நிற்கவில்லை என்றும் கண்டு கொண்ட உலகப் பேராசான், இறைமையைப் பிரிவில் இருகூறுகளாக - தூய வாற்றலாக - வெளிப்படுத்தினார். ஒழுக்கமிலா ஆற்றலான் தீமை இழைப்பான் ஆற்றலில்லா ஒழுக்கத்தான் தீமை விளைக்க இடங் கொடுப்பான் - இறைமையுடையான் - ஒழுக்க உரவோன் - தீது அகற்றி நன்மையே செய்வான். பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க நெறிநின்றார் நீடுவாழ் வார் (6) ஐந்தவித்தான் என்பது பேராற்றலையும், ஒழுக்க நெறி என்பது ஆற்றலை நெறிப்படுத்தும் தூய்மையையும் ஒருங்கு சுட்டி நிற்பக் காண்மின்! வினையாற்றலும் மனத்தூய்மையும் இக்குறட்கண் வள்ளுவர் உறுத்தும் பிரிவில் இறைக்கூறுகள் அல்லவா? இறை நெறியைப் பலர் உளறுமாப் போல அறிவுக்கு விளங்கா நெறி யாக்காது. வாழ்வுக்குப் பின்னெறி யாக்காது, அறிவு நெறியாக, வாழ்க்கைச் செயல் நெறியாக, நன்றாகக் குறிக் கொண்மின்! ஒழுக்க நெறியாகக் காண்பது வள்ளுவ இறைமை. பல்வேறு ஒழுக்கத்துள்ளும் வாய்மை நெறியாகப் - பொய்தீர் நெறியாகத் துணிவது இறை வள்ளுவம். பொய்வண்ணம் மனத்தகற்றிப் புலனைந்தும் செலவைத்து மெய்வண்ணம் நினைந்தவர்க்கு மெய்ந்நின்ற வித்தகனை எனத் திருமங்கையாரும், வஞ்ச மின்றி வணங்குமின் வைகலும் எனத் திருநாவுக்கரசரும், இறை தொழும் நமக்கு முதற்கண் பொய்யா நெஞ்சம் வேண்டுவதை உள்ளுக. திருக்குறள் மக்கள் வாழ்க்கையை உயிர் நிலையாக வைத்துப் பிறப்பு எடுத்தது. திருவள்ளுவனார் தம் எக்கொள்கைக்கும் மனித வாழ்வே அடிப்படை என்பதை நாம் மறப்பது கூடாது. அடிப்படை மறந்து போய்த் திருக்குறள் கற்பார் விளங்காமையே பெறுவர் காண்; கொள்கைப் பூசலே விளைப்பர்காண். இறையாயினும், ஊழாயினும், எழுபிறப்பாயினும், இம்மை மறுமை வீடாயினும், யாது பற்றிய கொள்கை யாதாயினும் ஆகியர்; அவ் வெல்லாம் நாம் இவ்வுலகத்துக் கண்காண இன்று பெற்றிருக்கும் இம் மானிட வாழ்க்கைக்கு வலித்தூய்மை நல்கல் வேண்டும்; ஒழுக்கவுரம் செய்யல் வேண்டும்; கூடிவாழும் மக்களினத்துக்குப் பொதுநலம் பயக்க வேண்டும். சுருங்கச் சொலின், கொள்கை யால் குண வளம் பெருகல் வேண்டும். ஆசான் தன் இறைக்கோள் முதலா எக்கோளும் தூய செயற்கோள் உடையன என்ற நிலைக்களத்தைப் பொச்சாவாதீர்! பொச்சாவாதீர்! திருக்குறட்கண் முழுக்க முழுக்க இறைவனைப் பற்றியே உரைப்பது வள்ளுவர் நெஞ்சம் அன்று. உலகம் கலந்த முதல்வனை, அங்ஙன் விளக்கப் புகுவது உலகப் பொருளாய் - அனைத்துக் கலையும் பற்றி விரிப்பதாய் - ஓராசான் அறிவிற்கு உட்படாததாய் வரம்பிகந்து நீளும். மக்கட் பொருளே திருக்குறட்பற்று; ஆதலின், தனிப்பேரிறைவனை நமக்கு வேண்டிய பொய்யாத் தலைமகனாக உருப்படுத்தித் தந்தார். இறையதிகாரம் கேவலம் உலக முதல்வனை விரிக்க வந்ததன்று காண்; உலகத்துட் பிறந்திருக்கும் மக்களுயிரின் முதல்வனாகப் பிரிக்க வந்தது. இறைவனுக்கு ஒரு குறி கொள்க; கொள்ளற்க; ஒரு கரணம் செய்க; செய்யற்க; ஒரு மந்திரம் ஓதுக; ஓதற்க; ஒரு சமயம் படைக்க; படையற்க. இவ்வெல்லாம் நெஞ்சறிவுடை யார்க்கு ஒரு பூசற் பொருளல்ல. நிகரில் சிறந்த பெரியார்களுங் கூட, இறைவன் எங்கும் நிறைந்த பொதுப் பொருள் என்று உணர்ந்திருப்பினும், தத்தம் சமயப் பிடிப்பட்டு, இதுதான் கடவுள் வடிவு. இதுதான் கடவுட்கரணம், இதுதான் தெய்வ மந்திரம், இதுதான் தெய்வச் சமயம் என இறைக்குறுநெறி பரப்பினர். இறை நிலையில், ஒருவர்க்கு ஒத்தது ஒருவர்க்கு ஒவ்வாமையும் உண்டு என்ற நினைவின்மையால், தம் மனத்துக்குப் பிடித்தது பிறர் மனத்துக்கும் பிடிக்கும் என்ற மயக்கத்தால், எனைப் பெரிய மதச் சான்றோரும் ஒருவடிவும் ஒரு சடங்கும் ஒரு மந்திரமுமாகவே முற்றுப்புள்ளி வைத்தனர்; இறை நிலைக்கண், விரிந்து பரந்த தூய எண்ண வளர்ச்சிக்கு இடம் அருளாது, கணக்குத் துறை போலக் கட்டிறுதி செய்தனர்; அறிவுக்கும் மனத்துக்கும் மீளா அடிமை புகுத்தினர். இப்படியன் இந்நிறத்தன் இவ்வண்ணத்தன் இவன் இறைவன் என்று எழுதிக் காட்டொணாதே எனத் தெளிந்திருந்தும், புகழ்சான்ற அருட் பெருமக்களுங் கூட, வேற்றுக்குறியார், வேற்றுக் கரணத்தார், வேற்று மந்திரத்தார், வேற்று மதத்தார் என்ற ஒரே காரணத்தால் இகலி, பூசல் பல விளைத்தனர்; தமவல்லாப் பிற மதமெல்லாம் அல்நெறி யெனத் தூற்றினர். இனைய வழுநிலையினின்றும் தப்பி நடந்த ஒரு தனித் தோன்றல் நம் வள்ளுவத் தமிழ்மகன், காணீர். இறைமை வேண்டி, அதற்கு ஒருதனி உருவமோ, கரணமோ, மந்திரமோ, இடமோ, பிறபிறவோ சுட்டாதவர்; மக்களின் தூய தனி விருப்பத்துக்கு விட்டருளியவர்; இறைவனைக் குணத்தவ னாகவும், அவன் நெறியை ஒழுக்க நெறியாகவும் சுட்டி அமைந்தவர். எவ்வுரு எனக்குத் தூய வாற்றலை வழங்கும்; அஃது என் இறை வடிவு. எவ் வழிபாடு என் வஞ்சகத்தைக் கொல்லும்; அஃது என் இறைக்கரணம். எவ்விடம் என் நெஞ்சுக்குத் தூய்மை பாய்ச்சும்; அஃது என் கோயில். எச்சொல் என் அகத்துக்கு உரம் நல்கும்; அஃது என் மந்திரம். எவ்வினை என் வாழ்வைத் தூயதாக மடியின்றி ஊக்கும்; அஃது என் இறைவினை. எந்நூல் எனக்குத் தூய எதிர்காலவுணர்வைக் கற்பிக்கும்; அஃது என் முதனூல், எந்நெறி காலத்திற்குத் தக உலகப் பெரு நலம் அருளும்; அஃது என் சமயம். எவ் வெண்ணம் என் நெஞ்சினை ஒருப்படுத்தும்; அஃது என் ஒருமை என இவ்வண்ணம் நினைந்து ஒழுகுமாறு, இறைநிலையில் அவரவர் எண்ணத்துக்கு முற்றுரிமை வழங்குவது திருவள்ளுவம். நற்றாள், மாணடி என வருவது கொண்டு, இறைவனுக்கு உருவம் கூறினார் ஆசிரியர் என்று ஒருசாரார் கொள்ப. அங்ஙன் கொள்ளின், வாலறிவன், மலர்மிசை ஏகினான் என னகர ஈறாக வருவது கொண்டு, உயர்திணை ஆணுருவமாகக் கூறினார் என்றும் கொள்ளல் வேண்டும். ஐந்து அவித்தான் என இறந்த காலமாய் வருவது கொண்டு, அவை அவியாதிருந்த காலமும் ஒன்றுண்டு என்றும் கொள்ளப்படும். இவ்வெல்லாம் கைகூப்பி எல்லா உயிரும் தொழும் (260), தெய்வம் மடிதற்றுத் தான் முந்துறும் (1023), தாளுளாள் தாமரையினாள் (617) செய்யவள் தவ்வையைக் காட்டி விடும் (167) என்பன போல் அமைந்த மரபு நடைகளே யன்றிக் கொள்கை காட்டும் கருத்து நடைகள் அல்ல. இறைவனுக்கு உருவத்தானும், கரணத்தானும், ஒரு சொற்கிளவியானும் கட்டுக் குறுக்கம் வள்ளுவர் செய்திற்றிலர்; எனினும், இதுகாறும் வளர்ந்துவந்த மக்கள் மனப் பாங்கினை ஆராயுங்காலை, அவரவர் மனம் பிடித்த ஒரு புறப்பற்றுக்கோடு இன்றியமையாதது என்ற இயல்பு தெளிந்தவர். அகலிரு ஞாலத்தை அறிவான் கைச்சிறுதிணைப் படமும், எடுப்பிக்கும் பெருங் கட்டடத்தைக் காண்பான் கைவரை மனைப்படமும், வாழ்க்கைப் பெரியோரை நினைவான் நிழற்படமும் கொள்கிறோம். கொள்கை காட்டத் தனிக் கொடியும் தனியுடையும் தனிச் சொல் மந்திரமும் அரசியற் கட்சிகளும் மேற்கொள்ளக் காணுதும் அல்லமோ? எனினும், ஒன்று தெளிமின்! திணைப்படம் செயற்குரிய உலகம் ஆகாது. வரைப்படம் வாழ்தற்குரிய வீடு ஆகாது. நிழற்படம் இடித்துரைக்கும் பெரியோர் ஆகாது. உருவமும் கரணமும் கொடியும் உடையும் மந்திரமும் எல்லாம் நினைவுப் பற்றுக்கோடு அன்றி நினைவுப் பொருளாகா. இவ்வெல்லாம் கேவலம் அறிகுறி மாத்திரைய, நெஞ்சம் பற்றுதற்கு ஒரு குறி வேண்டும் என்ற கல்வியறிவைக் காட்டினும், அக் குறியைக் குறி தான் என வைத்து, ஊடுருவிக் காணும் பகுத்தறிவு இன்றியமையாதது என்பது என் துணிபு. உள்ளொளி யில்லாக் குறியடிமை மக்களே எத்துறைக் கண்ணும் சாலப் பலராக உளர். சார்புணர்ந்து சார்பு கெடவொழுகின் மற்றழித்துச் சார்தரா சார்தரும் நோய் (359) பொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும் மருளானாம் மாணாப் பிறப்பு (351) எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு (355) பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும் செம்பொருள் காண்பது அறிவு (358) இனைய மெய்யுணர்வுக் குறள்கள் நம் உள்ளத்தைப் புறவடிமை யினின்றும் விடுதலை செய்யப்பிறந்தன. மனை கட்டியபின் அதன் வரைபடம் கைவிடப்படுவது போலவும், இந்தியா உரிமை பெற்ற பின்றை, விடுதலை மந்திரங்கள் உரை யிழந்தது போலவும், குறிச்சார்பு கெட நம் நெஞ்சத்துக் குணச் சார்பு வளரல்வேண்டும். கண் குறியைக் காணும் போதெல்லாம் மனம் குணத்தை நாடல் வேண்டும். முகத்துக் கண்கொண்டு காண்கின்ற மூடர்காள் அகத்துக் கண்கொண்டு காண்பதே ஆனந்தம் என்பது திருமூலம். தூய நண்பர்களே! இறைமை பரப்ப இதுகாறும் எழுந்த நூல்களோ பலப்பல. அது பற்றி வரிந்து முனைந்து உரை பரப்புவாரும் சாலப்பலர். அந் நூல்களைக் கற்பாரும் கேட்பாருமோ அளவிறந்தோர். இங்ஙன் இருந்தும், இறைமை - தூயவாற்றல் - மன்பதைக்கண் பெருகக்காணோம்; மாறாகச் சிறுமையே வெடிக்கக் காண்கின்றோம். குற்றம் யாண்டுளது? என ஆராய்க. திருக்குறள் வழியாக யான் ஆய்ந்த சிலவற்றை நும்முன் பணிந்து உரைப்பல். 1. வினை செய்தால் பற்றொட்டும்; பற்றினால் மீண்டும் பிறப்பு உண்டாகும்; ஆதலின், வினை செய்யற்க என்று மதத்தின் பேரால், இவ்வுலக வாழ்வுக்கு நெய்தற்பறை அறைவாரும் நம்மிடைப் பலர். இம்மடிமைக்கு மாளிகையாகி முயற்சி வளம் இழப்பாரும், ஐயகோ நம் நாட்டு மக்களுள் சாலப்பலர். வினை செய்தற்கே நாம் பிறந்துளோம் என்ற இன்ப வள்ளுவத்தை மறவன்மின்! மறவன்மின்! ஒருபோதும் மடியின்றி ஓயாது தொழில் செய்கை நம் உடலுரிமை; வாழ்வறம்; சமூக நலம்; நாட்டுத் தொண்டு. வினைப்பற்று கட்டாயம் வேண்டும். பின் வேண்டாதது யாதோ எனின், அவ்வினைப் பயனிடத்துப் பற்றுக் கூடாது; தான் செய்த வினை நலத்தைத் தானே நுகரல் வேண்டும் என்ற அவாக் கூடாது. தென்னை, பனை, புளிமரம் வைப்பார் எண்ணுமாப்போல், என் அரிய வினைப்பயனை யான் துய்க்கப் பெறேனாயினும், எனக்குப் பிற்பாடு உலகம் துய்த்தருளுக என்று எண்ணும் எதிர்நல வுணர்ச்சி வேண்டும். வினை செய்யாத மடியன் சுற்றப்பாரம்; நாட்டின் உட்பகை; வீட்டுக் கள்வன். வள்ளுவம் என்பது வினையறுப்பு அன்று; அவாவறுப்பு. அற்றவர் என்பார் (வினையற்றார் என்னாது) அவா வற்றார் என்பது குறள் (365). இந்திய நாடு சிறந்து உய்ய வேண்டும்; வேண்டுமேல், ஆள்வினை வள்ளுவத்தை - மடிமையற்ற இறைமையை - இனி நாம் நினைக; நம்மனோரும் நினையச் செய்க. 2. கோயில் வலம் வருகையும், தம் சமய நூற் கல்வியும், தம் அடியவர் ஓம்பலும், நாட்பூசை செய்வதும் ஆகிய இவையே இறைவினைகள்; இவ்வினையாளரே நல்லன்பர் என்றும், பிற செயலெல்லாம் பிறப்புத் தரும் இருள் வினைகள்; பிறரெல்லாம் மருளிகள் என்றும், சமயத்தின் பேரால் பொய்க்காற்றுப் பரப்பி வாழும் தன்னலத்தார் பலரைப் பார்க்கின்றோம். நாட்டின் உயர்வை நினையுந் தொறும், இன்னோர் அழிபோக்கு சீற்றத்தைப் பிறப்பிக்கின்றது. இறைவினை என ஒரு தனித் தொகுதி கோடல் அறப்பிழை. ஆதிபகவனைக் குணத்தவனாக வள்ளுவர் காட்டினாரே யன்றி, ஒரு குறுகிய தனி வினையவனாகக் காட்டவில்லை என்பதைக் குறிக்கொண்மின்! உழவன், மருத்துவன், அரசு வினை செய்வான், வண்ணான், மழிப்பான், வணிகன், ஆசான் முதலாம் எனைத் தொழிலாளிகளும் இறையன்பர் என்றற்குத் தடையென்னோ? வீட்டுப்பணி, நாட்டுப்பணி, மொழிப்பணி, கல்விப் பணி, ஏழைப்பணி, உயிர்ப்பணி எல்லாம் இறைப்பணிகள் அல்லவா? யார் செய்வது எவ்வினை யாயினும் ஆகுக; அவ்வினை பொய்யற்ற வழி - தூய்தாயபோது - இறைவினையே என்று கடைப்பிடிக்க. ஒருவர் தம் புற வாழ்க்கை எத்துறைப் படினும் படுக; ஒழுக்கநெறி தழுவிய காலை, அவர் வாழ்க்கை இறை வாழ்க்கையாம் என்று தெரித்தற் கன்றே. இறையதிகாரத்தை நூலின் முதலதிகாரமாக நிறுத்தி வைத்தனர்; ஆதலின், வஞ்சக மற்ற வினை இறை வள்ளுவம் எனத் தெளிக. 3. எண்ணிறந்த கோடி கோடி மக்களை - இறைப் பண்பு வளர்க்க வேண்டிய அன்னோரை - விரல் விட்டு எண்ணத் தகும் ஒரு சில குறிகளையே வணங்குமாறும், ஒருசில கரணங்களையே செய்யுமாறும், ஒருசில மொழிகளையே ஓதுமாறும், ஒரு சில சமயங்களுள்ளே புகுதுமாறும், வன்கண்மையாக அடிமைப் படுத்தி வருகின்றோம்; இறை நிலையில் - தன் நெஞ்சு தூய்மை பெறும் மெய்ந்நெறியில் - ஒருவன் உரிமை பெறானேல், வேறு நிலையில் அவன் பெறும் உரிமையெல்லாம் என் பயன் செய்யும்? மனவடிமைப்படுத்தும் மதக் கரணங்களையே வளர்க்கின்றோம் அன்றி, மனம் தூய் தாக்கும் உரிமை யுணர்ச்சிகளை வளர்த்தோம் அல்லம். இறை நெறியாக அகத் தூய்மையை வலியுறுத்தி, நின் மனத்துக்குத் தகப் புறச்சார்பு கொள்க என விடுதலை வழங்கிய பெருமகன் வள்ளுவர். பற்றுக பற்றற்றான் பற்றினை(350) என இறைப்பற்றுக் காட்டி, புறப்பற்றுக் கோடெல்லாம் நின் அறிவினாற் கொள்க என்று உரிமையருளியவர் வள்ளுவத் தோன்றல். இன்றியமையா இறைமையை நாம் பெருக்கிக் கொள்வது எங்ஙனம்? பிறப்பொடு அமைந்து கிடக்கும் இறையளவை இடையறாது வளர்த்துக் கோடல் யாங்ஙனம்? இதுபற்றி ஆசான் காட்டும் முறை யாது? அடிசேர்ந்தார் என்பதனால் இடையறாத் தூய நினைவும், பொருள் சேர் புகழ் புரிந்தார் என்பதனால் தூய சொல்லும், ஒழுக்க நெறி நின்றார் என்பதனால் தூய செயலும் இறைமைகளாக வகுத்துக் காட்டுவது வள்ளுவம். சொல்லும் செயலும் நினைவின் குழவிகள்; ஆதலின், இறையதிகாரத்துப் பல குறள்களால் தாள் சேர்தலைப்பற்றியே - நினைவொழுக்கம் பற்றியே - ஆசிரியர் மொழிவாராயினர். இறைவன் உறுப்புடைப் பொருளல்லன்; உறுப்புடையனாவானேல் உலக முதல்வன் ஆகான். இறை சேர்தல் எனினும், இறைவன் அடிசேர்தல் எனினும் கருத்து வேற்றுமையில்லை. பிரிவுபட்ட மாதவி அடிகள் முன்னர் யான் அடி வீழ்ந்தேன் என்று வரைந்தாற்போல, அடி என்னும் சொல் பெரியோரைச் சார்ந்துவரும் பணிவுக் குறிப்புடைய ஒரு தமிழ்க் கிளவி. எனவே அடி சேர்தல் என்ற பகுதிக்கு இறைவனைப் பணிவொடு நினைதல் என்பது பொருள். சேர்தல் - இடைவிடாது நினைத்தல் என்பர் பரிமேலழகர். நினைவு நம் பிறப்பின் தனிச்சிறப்பு; ஆதலின், எண்ணத்தால் கண்டுகொண்ட முதல்வனை எண்ணத்தால் பெருக்கிக்கொள்ள வேண்டும். இறைவன் உள்ளப் பற்றினன்; நெஞ்சக் கேண்மையன். நெஞ்சு கலவா வழிபாடெல்லாம் ஆகுல நீர்மையன; ஓராற்றான் ஊரை ஏய்க்கப் பிறந்தன. உள்ளுவார் உள்ளத்தே உறைகின்றானை எனவும், நினைப்பவர் மனம் கோயிலாக் கொண்டவன் எனவும், என்னுடைய சிந்தனையே ஊராகக் கொண்டான் உவந்து எனவும், இருப்பேன் என்று என் நெஞ்சு நிறையப் புகுந்தான் எனவும் தமிழ் அருட்பெருமக்கள் வலியுறுத்தும் நெஞ்சக் களத்தை நினைக. இறைமை வளர்க்கும் கருவி நினைவல்லது பிறிதில்லை; எனினும், நம் நினைவிற்கு ஓர் ஒழுக்கம் வேண்டும். பண்பிலா நினைவோட்டம் ஒரு கால் மனவாற்றலைப் பெருக்கித்தரினும், மனத்தூய்மையை நல்காது காண். செம்மை மனத்தால் திருப்பணிகள் செய்வோனுக்கு என்றும், காதலித்து நினையாத கயவர் நெஞ்சில் வாரானை என்றும், கள்ள மனம் விள்ளும் வகை கருதித் தொழுவீர் என்றும் வரூஉம் தூய தமிழ்த் தொடர்களை உட்கொள்க; கொள்வீராயின், மாசற்ற உள்ளத்தில் பிறக்கும் தூய நினைவோட்டமே பொய்யா இறைமைக் கருவி என்பது உணரப்படும். தூய நெஞ்சினால் நினையத்தகும் எண்ணப்பொருள்கள் யாவை? இது பொருள் பொதிந்த வினா. இதற்கு விடையை இறையதிகாரக் குறள்களின் நடையிற் காண்க. வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின் என்ற அடிக்கு, தூய எதிர்கால அறிவை நினையாவிடின் என்பது கருத்துரை. வேண்டுதல் வேண்டாமையிலான் அடி சேர்ந்தார்க்கு என்ற அடிக்கு, பற்றற்று நினைப்பவர்க்கு என்பது உள்ளுறை. பொறி வாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க நெறி நின்றார் என்ற அடிக்கு, புலனைந்தும் அடக்கி வஞ்சமின்றி ஒழுகுவார்க்கு என்பது பொருளுரை. அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார் என்ற அடிக்கு. அறமும் அருளும் நினைவார் என்பது உட்கிடை. இறைவன் அடி சேராதார் என்ற அடிக்கு, உள்ளுறை முதல்வனை நினையாதார் என்பது மெய்யுரை. எனவே நாம் அகந்தூயராய் இடையறாது வாழ்க்கை முழுதும் நினையத் தகுவன இறை முதன்மையும், வாலறிவும், அவாவின்மையும், புலனடக்கமும், அறமும், அந்தண்மையும், பொய்யாமையும், ஒழுக்க நெறியும் ஆம் என்பது திருவள்ளுவம். 2. திருக்குறட்கண் முரண்கள் பல உளவே! அவற்றுக்கு நீர் கூறும் அமைதி என்னை? ‘நீ களவாடிய பொருளை யாரிடம் கொடுத்து வைத்திருக்கிறாய்? என்று வழக்கறிஞன் மடக்கி வினவுமாப் போல, இந்நண்பர் உள்ளொன்று வைத்து வினவுகின்றார்; குறளகத்து முரண்கள் உள என யான் உடன்பட்டதாகத் தானே கொண்டு, என்பால் அமைதிக் காரணம் மட்டும் வேண்டுகின்றார். நன்று, நன்று. வழுவமைதி காணுமுன், உண்டா வழுக்கள்? எனக் காணவேண்டுமன்றோ? பொதுவறம் கரைவது திருக்குறள் என்றும், செயற்கு வாராவிடினும் மேனிலை யறங்களையே மொழிபவர் வள்ளுவர் என்றும், பலர் போல் யானும் அழுந்தி மயங்கியிருந்த ஞான்று, முரண்கள் பல தோன்றக் கண்டேன். பலநிலையறம் கூறுவது திருக்குறள் எனவும், யார்க்கும் உலக வாழ்வு தரூஉம் செயலறம் நாட்டுபவர் வள்ளுவர் எனவும் அடிப்படையுண்மை தெளிந்த நாள் முதல், முரண்கள் என முன் தோன்றியவை மக்களினத்தின் அரண்களாக மெய்க்காட்சி தந்தன. ஆசான் குற்றப்பட்டார் என்று முடித்தாற்றான், ஆராய்ச்சி நடுப்பட்டது என்பதாகச் சிலர் மனம் ஒப்பும். குறளும் முரணிற்று என்று கழறினாற்றான், துணிவுடை ஆய்வு என நம்முட் சிலர் பாராட்டப் புகுவர். என் நெஞ்சு அறியத் திருக்குறட்கண் முன்னுக்குப்பின் முரண்கள் காணின், வரைந்தவர் வள்ளுவத் தமிழ் நம்பி என்பதற்காக, மனமறி பொய்யை மெழுகிப் பேசேன்; கண்ட குற்றத்தை ஏதுவோடு புலப்படுத்துவேன். ஆயின், நெஞ்சு அறிந்த முரண்களோ இல. சில்லாண்டு திருக்குறள் படித்த நம்மனோர்க்கே, பார்த்தளவில் முரணெனத் தோற்றரவு செய்யும் குறள்கள். நினைமின்! தம் நெடிய வாழ்நாளில் ஒரு தனி நூல் யாத்த வள்ளுவக் குரிசிற்கு அங்ஙன் தோன்றியிரா கொல்? இப்பொழிவுக் குழுவில் ஆசிரியப் பெருமகன் வந்திருக்கப் பெறுவோமேல், என் செய்வார், அவையேறி உரையாற்றுவார்; மாறா உலகச் செயல் அடிப்படையை விரிப்பார்; நம் உள்ளும் அறிவும் ஒவ்வுமாறு காரணங்காட்டுவார்; முரண்கள் யாண்டுள? என எதிர் வினாத் தொடுத்து, நம் மயக்கம் களைவார் மன். நிற்க. வெளிப்பட்ட சொல்லை ஆசிரியன்போற் கருதி, வினவி வினவித் தன் நினைவுக் கருவி கொண்டு அவன் நினைவுப் பொருளைக் கல்லி யெடுக்கவேண்டும் என்று முதற்பொழிவில் நோக்குமுறைபற்றி வழி கூறினேன். அக்கூற்றுப் பொருளை உள்ளுறுத்திக் கொண்டு, உளவா முரண்கள்? என இனிச் சுருங்கக் காண்பாம். ஒரு வினைக்களத்துமேலாள் முதலாகப் பணியாளர் ஈறாகப் பலர் உளர். காலை வினைக்கு வரும் தொழிலாளிகளை வருக என மேலாள் நல்வரவு கூறுவதில்லை. போய் வருதும் என அன்னோரும் மாலையில் சொல்லிக்கொண்டு செல்வ தில்லை. இஃது ஒரு நிலை. தன் மாளிகைக்குச் சிறு பணியாளன் வரின், வந்தவனை வருக என முகமன் கூறுகின்றான் மேலாள். போய் வருவன் எனப் பணியாளனும் சொல்லி மீள்கின்றான்; இஃது ஒரு நிலை உலக நிகழ்ச்சிகளாகக் காணப்படும். இவ்விரு நிலைகளும் தம்முள் முரண்கொலோ? மனைவி தனக்குத் தீது புரிவாளேல். கணவன் என்ற நிலையை நினைந்தும், மகன் தன் பணத்தைக் கள்ளுவானேல், தந்தை என்ற நிலையை நினைந்தும், உள்ளறிந்த குற்றத்தை ஊர் அறியப்படாது என்ற மானத்தால், ஒரு குடும்பத் தலைமகன் ஒறாது பொறுத்துக் கொள்கின்றான். குடி உறுப்பினர் தம் குற்றத்திற்காக வழக்குமன்று ஏறுவதில்லை. இஃது ஓரற நிலை. இத்தலைமகன் அறங்கூறு அவையத்து நடுவனாகத் தொழில் செய்பவன் என்று வைத்துக் கொள்மின். தன் மனைவி ஊராரைப் பெருமொழி தூற்றியதாக, தன் மகன் ஊரார் உடைமையைத் திருடியதாகத் தன் முன் மெய்க் குற்றம் சாற்றப்படுவரேல், அவ்விடத்து மனைவி மகன் என அவர் உறவு பாராது, குடும்பத் தலைவன் எனத் தன்னுறவு கொள்ளாது, அவை நடுவனாகத் தன்னை உட்கொண்டு, ஒறுக்கின்றான்; சிறைத் தீர்ப்புக் கூறுகின்றான். இஃது ஓரறநிலை ஒரேசார் மக்களிடத்து ஒருவனே மேற்கொள்ளும் இவ்விருவகை ஒழுக்கங் களும் தம்மிடை முரண்பட்டன கொல்? வீட்டில் எழுந்து பணியும் தன் அறிவுடை மகன் நாட்டுத் தலைவனாய்ப் பேரவைக்கு வருங்கால், முன்னிருக்கும் அவன் பெற்றோர், அவையோர் ஒப்பத் தாமும் எழுந்து நின்று பணிவு குறிப்ப. இளையர் இனமுறையர் என்று இகழார்; நின்ற ஒளியோடு ஒழுகப்படும் (698) என்பது குறள். ஓர் உறுப்பினன் தன் அறிவுக்கு முரண் எனத் தோன்றினும், கட்சிப் பொது நலத்தை நினைந்து, அத் தலைவன் சொற்படி மக்களவைக்கண் கை தூக்குகின்றான். ஒரு தீர்மானத்தை முதற்கண் எதிர்த்த சிறுபான்மைக் கட்சி, அது பெரும்பான்மைக் கட்சியால் நிறைவேற்றப்பட்ட பின்றை, அதனை ஒரு பெருங்கட்சித் தீர்மானமாக எண்ணாது, மக்கட் பேரவைத் தீர்மானமாகவே ஏற்றுக் கொள்கின்றது; படைத் தலைவன் போர்முறை பிடித்த மில்லாவிடினும், ஒரு மறவன் தன் அறிவை ஓர் புறம் வைத்து, நாட்டன்பு காரணமாய், தலைவன் கூற்றுக்குக் கீழ்ப்படி கின்றான். கல்லூரி விடுதிக்கண் வதியும் மாணாக்கர் வாய்விட்டு உரத்திப் படியாது, பக்கத்தவனுக்குத் தொந்தரை செய்யாது, விடுதிக் கட்டுப்பாட்டுக்கு அடங்கிப் பாடத்தை மனத்துள் நினைந்து படிப்ப. இவ்வெல்லாம் முரணிய வேண்டா நிகழ்ச்சிகளோ? எண்ணுமின்! மேற்காட்டியாங்கு வரும் அளவிறந்த ஞாலப் போக்குக் களால் நாம் பகுத்தறிய வேண்டும் உலகவியல்பு யாது? அகநிலை, புறநிலை என அறம் இருகூறு படும். இவ்விரு கூறும் ஒருவர்க்கே இடத்துக்குத் தக உரியன. தற்செம்மைக்கு அகவறமும், உலகச் செம்மைக்குப் புறவறமும் இன்றியமை யாதன. புறவறம் பொதுநலம் பயப்பது; பலதிறப்பட்ட மனப்பாங்கு சான்ற மக்களினத்துக்குக் கட்டுப்பாடு தருவது; உலக வொழுங்கிற்கு அச்சாவது; அகவறம்போல் போற்றத் தகுவது. 1. நல்லாறு எனப்படுவது யாதெனின் யாதொன்றும் கொல்லாமை சூழும் நெறி (அறம் - 324) 2. கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ் களைகட் டதனொடு நேர் (பொருள் - 550) 1. ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர் பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து (அறம் - 155) 2. தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால் ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து (பொருள் - 561) 1. நெஞ்சிற் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து வாழ்வாரின் வன்கணார் இல் (அறம் - 276) 2. துறந்தார் படிவத்த ராகி இறந்தாராய்ந்து என்செயினும் சோர்விலது ஒற்று (பொருள் - 586) கொல்லாமையும் கொலையும், ஒறாமையும் ஒறுப்பும், நெஞ்சத்துறவும் வஞ்சத்துறவும் மொழிகின்ற இக் குறள்கள் பெருமுரண் உடையன என்றுதான் கற்ற முதற்கண் நமக்குப் படும்; எனினும், யான் முன் எண்பித்த உலகியல்புகளை மனத்திற்கொண்டு, நோக்குவார்க்கு, எண் ஒன்றிட்ட குறளெல்லாம் (324, 155, 276) அகநிலையறங்கள் எனவும், எண் இரண்டிட்ட குறளெல்லாம் (559, 561, 586) புறநிலையறங்கள் எனவும் தெளிவுபடும். கொலையிற் கொடியாரை ஒறுத்தல் என்றும், தலைச் செல்லா வண்ணத்தால் ஒத்தாங்கு ஒறுப்பது என்றும், துறந்தார் படிவத்தராகி இறந்து ஆராய்க என்றும், வெறுமனே கருத்து நடைமட்டும் செய்திருப்பரேல், முரணெனப் பழித்தற்கு ஓரிடம் வைத்தவராவர்மன். தந்நூலைக் கற்பவர்க்கு, இவ்விவை முரணாகத் தோன்றும் என்ற ஓட்டத்தை வள்ளுவர் அறிந்தவர்; ஆகலான், வேந்து ஒறுத்தல் என்றும், ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து என்றும். சோர்விலது ஒற்று என்றும் முரண் அறுக்கும் எழுவாய்ச் சொற்களைப் பெய்து வைத்தார். குடிபுறங் காத்தோம்பிக் குற்றங் கடிதல் வடுவன்று வேந்தன் தொழில் (549) நாட்டுத் தலைவன் மனிதன், வேந்து என்ற நிலையிருமை கொண்டவன். இரு நிலையுடைய அவன் ஒருவனைக் கொல்லுகின்றான். குடிகளுக்குப் பெரு நலிவு செய்த ஏதுப்பற்றிக் கொலை சூழ்வானேல், அது பொதுநலம் பயக்கும் புறவறமாம்; வடுவாகாது. வேந்தன் தனித்தொழிலாம். குடிபுறங் காத்தோம்பாது, தன் அரசதேவியைக் காத்துக் கொள்ளும் பொருட்டு ஒருவனைத் தண்டிப்பானேல், அது வேந்துத் தொழிலன்று; மகப்பழி என்பது இக்குறட் குறிப்பு. உறைசிறியார் உள்நடுங்கல் அஞ்சிக் குறைபெறின் கொள்வர் பெரியார்ப் பணிந்து (680) குடிசெய்வார்க்கு இல்லை பருவம் மடிசெய்து மானம் கருதக் கெடும் (1028) என்று வரும் வினைசெயல் வகைக் குறளும், குடிசெயல் வகைக் குறளும், நாட்டுப் பொதுநலம் நோக்கி வேந்தன் தன்மானத் தையும், குடிப் பொதுநலம் நோக்கி ஓர் உறுப்பினன் தன்மானத்தையும் ஒதுக்கி வைக்க வேண்டும் எனப் புறநிலையறம் யாப்புறுத்துவன. அறமாவது மனத்துக்கண் மாசிலன் ஆதல். காலந்தோறும் உலகோரால் ஐயப்படா உரு எது, அதனை ஒற்றன் மேற்கொண்டு உளவறிவான். அவன் பூண்ட துறவுக் கோலம் வெளிப்படினும், அந்நிலையை அறப் பிழையாகத் தூற்றாது, ஒற்றறமாக மதிப்பது இன்றுங் காணப்படும் மாறா உலகியல், தன்னாட்டு நலம்நோக்கிப் படைப்பெருக்கின் உண்மையளவை பிறர் மயங்கும்படி திரிபுபடக் கூறுவது இன்றும் நிலவிவரும் அரசியல். இங்ஙன் மாறு கோலம் பூண்ட ஒற்றனையும், உண்மை மயக்கும் அமைச்சனையும் நாட்டன்பினராகக் கொள்ளுதும் அன்றி, மன மாசுடையராகக் கொள்ளுதும் அல்லோம். இனைய நல்லுலகியலை உட்கொண்டன்றே, புரை தீர்ந்த நன்மை பயக்கும் எனின் பொய்ம்மையும் வாய்மை இடத்த (292) என்று அறப்புரட்சி மொழிந்தார். மாண்பு இறந்த மானமும் ஏதம் இறைக்கு (432) என்று தன்மானச் செருக்கு ஒழித்தார். ஆதலின், புறநிலையறத்தின் பொய்யா உரை கல்லாவது வஞ்சனையற்ற தூய பொதுநலம் ஆகும்; கட்டொழுங்காகும். இப்புறவறம் குடிமேற்றாயினும், மொழிமேற்றாயினும், இனமேற்றாயினும், கட்சி மேற்றாயினும், நாட்டு மேற்றாயினும், உலகமேற்றாயினும், பரந்த நன்மை கருதிப் பழியின்றிக் கொளத்தகும் சிறப்பிற்று. அறத்துப்பால் பெரும்பான்மை ஒருவன் அகவாழ்க்கை யறம் கூறுவது எனவும், பொருட்பால் பெரும்பான்மை ஒருவன் புறவாழ்க்கையறம் மொழிவது எனவும் கொண்டு கற்கதில். 3. இற்றை உலகநிலையில் மக்கள் ஒழுகத் தகும் சிறப்பு வள்ளுவம் யாது? உலகம் பல நிலைப்பட்டது, வினவிய நண்பர் கருதி யிருக்கும் இந் நாள் உலகத்தனிப்போக்கு யாதோ, அறிகிலன்; எனினும், எனக்குத் தோன்றும் ஒரு பரந்த புது நிலையை வைத்துச் சில சொல்ல விழைவல். இது கொள்கைக்காலம். இயைபு உண்டோ இன்றோ, அறிவு உண்டோ இன்றோ, அரசியல், மதவியல், அறிவியல் எனவாங்கு எத்துறைக்கண்ணும் யாரும் கொள்கையாடு கின்றனர். கொள்கை பரப்பற்கெனப் பலசில பொழுது தம் தொழில்களைப் புறக்கணிப்பதும் துறப்பதுங்கூடச் செய்கின்றனர். யார் நம்மொடு உரையாடினும், அவர்தம் சொற்கிடை, சமயம், மொழி, அரசு, வாழ்வியல் குறித்து, அன்னவர் தழுவும் கோள்கள் யா? என்று காண்பான் நம் நெஞ்சு விரை கின்றது. ஒரு நன்மகன் கருத்துக்களை இயல்பாக மொழியினுங்கூட, இவன் இக்கொள்கையன் போலும்; வஞ்சகன் போலும் என்று கிளறிப் பார்த்து, ஐயுற்றுத் திரியும் புரையோடிகளே நம்முட் பலர். கொள்கைப்பற்று உடையது இக்காலம் என்று கூறுவதைக் காட்டினும், கொள்கை வெறிப்பட்டது இக்காலம் என்று சுட்ட விரும்புகின்றேன். பற்றுடையான் என்பவன் பிறர் யாரையும் அவமதியான்; தன் பூட்கைக்கண் பற்றிலாப் பிறரையும், ஒத்த மக்கட் பிறப்பு என்ற ஒரே காரணத்தால் நன்கு மதிப்பான்; அதனால், தன் மதிப்பைப் போற்றிக் கொள்வான். அன்பும் அறிவும் ஒன்றிய கொள்கை நிலைதான் பற்று என்ற நற்பெயருக்கு உரியது. ஒரு குறிக்கோட் பற்றினன் தானும் வாழ்வான்; மற்றவரையும் வாழ்விப்பான், வெறி எனப்படுவது அன்பற்ற மூடக்கொள்கை. மனித இனத்தை வெறுப்பினும், ஒரு தனி மகனை அவமதிப்பினுங்கூட, ஒருவன் கொள்கை பற்றாகாது, வெறியென இழிக்கப்படும். வெறிகொண்ட நாய் விரைந்து அழியு மன்றோ? மக்கள் பல கோளினராய் வாழ்தல் பழித்தற்கு உரியதன்று; நல்லுலக வளர்ப்பு நோக்கி, வரவேற்றற்கு உரியது. ஆயின், யார்கொண்ட எக்கோளுக்கும் மக்கட் பணிவும் திணியாப் பகுத்தறிவும் வேண்டப்படும். இது பிறிதோராற்றான் பதவிக்காலம் என்றும் கூறத்தகும். பதவி உயரின், தான் உயர்ந்தவனாக ஒருவன் ஏக்கழுத்தம் உறுகின்றான். பதவி தாழின், அவ்வளவு தானும் தாழ்ந்து போயதாகத் தலைசாய்க்கின்றான். சுற்றுலகமும் அவனை அங்ஙன் ஏற்ற இறக்கமாகக் காண்கின்றது. நூறு ரூபாய் ஊதியத்தானைவிட ஆயிரத்தான் பண்பால் பதின்மடங்கு உயர்ந்தவன் என்றும், பதினாயிரத் தான் நூறு மடங்கு உயரியவன் என்றும் நம் நெஞ்சு சொல்லுகின்றது. மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர்; கீழிருந்தும் கீழல்லார் கீழல் லவர் (978) என்ற அகநிலையை நாம் நடைமுறையில் பெரிதும் பொச்சாந்து அறிவுக்கூறு இழக்கின்றோம். பதவிக்கும் பண்புக்கும் நேர்முகமான காரண காரியத் தொடர்பு இல்லை. சிறு பதவியான் ஒழுக்கத்தால் பெருமையும், பெரும்பதவியான் ஒழுக்கத்தால் சிறுமையும் உடையராதல் உலகிடை அரியகாட்சி யன்று. குணம் பெரியனாயினான் பதவியிலும் பெரியன் ஆவானாயின், அவன் சிறப்புக்கும் நாட்டின் நலத்திற்கும் ஓரளவு இல்லை. மேலை விளக்கத்தால் நாம் ஒழுகக் கிடப்பது என்னை? நம்மொடு பழகுவார் எக்கோளினர். எப்பதவியினர், எக் குலத்தினர், எச்சமயத்தினர், எம்மொழியினர், எவ்வரசினர், பிற எந்நிலையினர் ஆகுக; அவ்வெல்லாம் பிற்பட, நம் பிறப்பினம் என்ற ஒரே தூய அடிப்படை எண்ணம் மேற்பட, அன்னவ ரோடு மனங்கலந்து அளவளாவல் வேண்டும். அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர் மக்கட்பண்பு இல்லா தவர் (997) நண்பாற்றா ராகி நயமில செய்வார்க்கும் பண்பாற்றா ராதல் கடை (998) தற் செருக்கு இன்றி, மக்களினத்தை - மனிதன் மனிதனை - நன்கு மதிக்கும் ஒழுக்கத்துக்கு மக்கட்பண்பு என்று உரிய பெயர் செய்தார் வள்ளுவர். கொள்கைப் பரப்பும் பதவிப் பான்மையும் இடையறாது நினையும் இக்கால மக்கட்கு வேண்டுவது இப்பண்பு வள்ளுவமாம். வாழ்க்கைத் தோழர்களே! யான் கண்ணாரக் கண்ட இரு நிகழ்ச்சிகள் என் நெஞ்சத்து இம் மக்கட் பண்பினை நன்னர்ப் பதிவு செய்தன. கேட்பவர் தம் உள்ளத்தையும் அவை பிணிக்கும் ஆற்றல் வாய்ந்தன என்ற கருத்தால், ஈண்டு வெளியிடுவன். 1. ஒன்பதாண்டுகட்கு முன் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்து ஒரு தமிழ்ப் பெருங் கூட்டம் கூடிற்று, அதன் தலைவர் பல்கலைகத் கழகத் தமிழ்ப் பேராசிரியர், பல்கலைப் புலவர் கா. சுப்பிரமணியனார் அவர்கள். அற்றைச் சொற்பொழிவாளர் பெரியார் ஈ.வெ.ரா. அவர்கள். முறைப்படி இறைத் தமிழ் வணக்கம் பாடப் பட்டது. பாடுங்காலை தலைவரும் ஆயிரம் பேர் குழுமிய அவையினரும் எழுந்து நின்றனர். கடவுட் கொள்கையில் நம்பிக்கையற்ற ஈ.வெ.ரா. அவர்களும் ஒப்ப எழுந்து நின்றனர் காண். தம் எழுந்து நிற்பால் தம்மைக் கடவுட்கோளுக்கு மாறியவராக அவை எண்ணி விடுமோ? என்று மயங்கினாரல்லர். இறை வணக்கத்துக்கு எழும் கருத்திலரேனும், எழுந்து நிற்கும் மக்களவைக்கண் தன்னொருவன் இருப்பு நாகரிகமன்று என்று உட்கொண்டார். கொள்கை வெறியற்று ஒழுங்குப் பற்றினராய், மக்களோடு நின்று, அவரெல்லாம் அமர்ந்தபோது அமர்ந்தார். இப்பெரு மகன் செயல் மக்கட் பண்புக்கு ஒரு காட்டு. 2. மூன்றாண்டுகட்கு முன் காரைக்குடிக் கம்பன் திருநாள் இரண்டாவது மாலை விழாக் கூட்டத்திற்கு, தமிழ்ப் பெரும் பேராசிரியர், பண்டிதமணி மு. கதிரேசனார் அவர்கள் தலைவர் ஆயினர். முதல்நாள் விழாவின் தலைவர், பொய்யில் அறிஞர், சக்கரவர்த்தி இராசகோபாலாச்சாரியார் அவர்கள் அக்கூட்டங் கேட்க வரவு செய்தனர். மேடைமீது இருவர்க்கும் நாற்காலிகள் இருந்தன. சென்னை முதலமைச்சராய், வங்க மாகாணத் தலைவராய், இந்திய மந்திரியாய், உரிமை பெற்ற நம் நாட்டுக்கு முதல் இந்தியத் தலைவராய்ப் பல நிலைப் புகழ் சான்ற இராசகோபாலாச்சாரியார். பண்டிதமணியார் தம் இருக்கையில் வந்து அமருங்காறும், தாம் இருக்கை கொள்ளாது நின்று கொண்டிருந்தனர்காண். உயர்பதவி யெல்லாம் துய்த்துத் திகழும் தாம், நிற்பதால் அவையினர் குறைத்து மதிப்பரோ? என்று மயக்குற்றாரல்லர். நிலையில் பதவிப் பெருமையிலும் நிலைத்த பண்புடைமையைப் பெரிதாகத் தெளிந்தவர். தலைமை யிடம் வறிதே இருக்கும் நிலையில், அடுத்த இருக்கையில் தாம் அமர்ந்து கோடல் உலகவொழுங்கு அன்று எனத் தம் செயலால் நன்முறையை அவையோர்க்குக் கற்பித்தார். அரம் போலும் அறிவு கூரிய இச் செம்மல் ஒழுக்கம் மக்கட் பண்புக்குச் சிறந்த இலக்கியமாகும். 4. திருக்குறட்கண் வரும் அவ்வுலகக் குறிப்புக்கள் வாழ்வுக்குப் பயன்படுமா? இவ்வுலகமே நாம் உயிர் மெய்யராய்த் தொழில் செய்தற்கு உரிய வினைக்களம்; அவ்வுலகமாவது வினைப் பயன் துய்க்கும் நுகர்ச்சிக்களம். மறுமை, எழுபிறப்பு புத்தேழுலகு. அளறு என்று ஆசான் பேசுமிடத்தெல்லாம் இவ் வேற்றுமைக் குறிப்பு கிடைத்தலைக் கண்டுணர்க. அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை (247) ஒருமைக்கண் தான் கற்ற கல்வி (398), மனநலத்தின் ஆகும் மறுமை (459), யான் எனது என்னும் செருக்கு அறுப்பான் (346), வையத்து வாழ்வாங்கு வாழ்பவன், (50) என வரூஉம் பல்பகுதியெல்லாம் அருள், கல்வி, மனநலம், செருக்கறுப்பு, அறிவுடை வாழ்க்கை என இவ்வுலக ஒழுக்கம் வலியுறுத்தலை உள்ளுக. இனிப்பு அளிப்பதாய்ச் சொல்லும் தாய்க்குக் குழந்தை மருந்து குடிப்பது நோக்கம் ஆமாறுபோல, வள்ளுவர் தம் பிறவுலகக் குறிப்பனைத்தும், நம்மை இவ்வுலகின் கண் ஒழுக்கத்துக்கு உய்க்கும் கருத்துடையன. அவ்வுலக இருப்பினை ஒருவன் ஏற்க; ஏலற்க. அது தெளிதற்கு வாராக் கற்பனைப்பட்டது; ஆகலான், அஃது ஒரு பிணக்குப் பொருளன்று. அதனை நம்பினானுக்குத்தான் வாழ்வு உண்டு என்றும், நம்பாதவனுக்கு வாழ்வு இல்லை என்றும் அறைவது அறிவியல் அன்று. இவ்வுலக அறங்களோ மெய்யன; யாவர் தம் வாழ்க்கைக்கும் உரியன; கடைப்பிடிக்க வேண்டுவன. இவ்வாறு ஆசான் அடிமுதலை ஒரு தலையாகத் துணிந்தார். துணிந்த பின்றை, மேலுலகம் இல் எனினும் ஈதலே நன்று (222) என மறுத்த வாய்பாட்டால், அதிரா உலகியலைத் தனித்து நிறுத்திக் காட்டினர். வினைப்பயன் நுகர்தற்கு அமைந்தது அவ்வுலகம் என்பதனால், இவ்வுலகம் கொன்னே பயனில் செயலுக்கு மட்டும் உரியதோ? என ஒரு குறுக்கு வினா எழ இடமுண்டு விதைப்பிடம் வேறு, அறுப்பிடம் வேறா? நினைமின்! மனக் கவலை மாற்றல் அரிது (7), சிறப்பு ஈனும் செல்வமும் ஈனும் (31), சிதைவின்றி எச்சத்திற்கு ஏமாப்பு உடைத்து (112), உடுப்பதூஉம் உண்பதூஉம் இன்றிக் கெடும் (166), வாழ்க்கை தவலும் கெடலும் நணித்து (856) என நல்ல தீய வினைகட் கெல்லாம், அதிகாரந்தோறும் புறநடையின்றிப் பெருவர வினவாய் இம்மைப் பயன் சாற்றுவர் ஆசிரியர். இவ்வுலகப் பயனாவது அளவு மேற்பட்ட பயன். தவறாது பள்ளிக்கு நாள்தொறும் வரும் மாணாக்கன் கல்வியறிவு நன்னர்ப் பெறுகின்றான்; அதன் மேலும் பிறரினும் கூடிய நாள் வந்ததற்காக, வரவுப் பரிசு அளிக்கப்படுகின்றான். உரஞ் சேர்த்திப் பைங்கூழ் பெருக்கிய அறிவுடை உழவன் நெல் மிகுதி அடைகின்றான்; அதன் மேலும், பிறரினும் நெல் விளைவுப் பெருக்கம் செய்ததற்காக, இந்திய அரசால் வெற்றிப் பதக்கம் வழங்கப்படுகின்றான். பெருங்காமப் பட்டவன் முடி வில் காமவின்பம் இழக்கின்றான்; அதன் மேலும், நோய் பலவாய்க் கெட்டழிகின்றான். உலகிடை இங்ஙன் ஒரு வினைக்கு உரிய பயனோடு மேற்பயனும் அடைகுதும் அன்றோ? இத் தன்மைத்து அவ்வுலகப் பயன் என்று ஒரு வகையால் கருதிக் கொள்க. புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின் வலவன் ஏவா வானவூர்தி எய்துப என்பதம் செய்வினை முடித்து என்ற முதுகண்ணன் சாத்தனார் பாட்டு மேலை விரிவெல்லாம் அடக்கி நிற்றலைக் காண்க. நீக்கமில் நண்பர்களே! அன்பர்கள் விடுத்த வினாக்கள் இன்னும் பலவுள. திருக்குறள் தமிழ்ப் பண்பு காட்டும் நூலா? வள்ளுவர் வரலாறும் குலமும் சமயமும் காலமும் யா? இன்று காணும் குறள் வைப்பு முறை பொருந்துங் கொல்? எல்லாப் பொருளும் இதன் பால் உள! என்பது முகமன் அன்றோ? இற்றைத் தமிழர்க்குச் சிறப்பாக உரிய வள்ளுவம் என்னை? உலகத்தார் உண்டென்பது இல் என்பான் வையத்து அலகையா வைக்கப்படும் (850) என்பதனால், உலகோர் ஆய்வின்றிச் சொல்லும் எதனையும் அறிவுடை ஒருவன் மூடமாக ஒத்துக் கொள்ள வேண்டும் என்பது ஆசான் நெஞ்சமா? இனைய விடுப்புக்கெல்லாம் விடையிறுக்கப் புகின். காலம் மிக நீண்டுவிடும் என்று அஞ்சுவல். சொற்பொழிவு துவங்கி ஒரு மணிப் போது ஆகின்றது. இவ்வளவில் உரையை முடித்துக் கொள்வதுதான் என் உட்கிடை. எனினும் நூற்றுக்கு மேலாய அன்பர்கள் விடுத்த ஒரு பொதுவினா உண்டு. அதற்கு விடையிறாது செல்லல் அழகன்று என்ற கருத்தால், அவ் வொன்றுக்கு மாத்திரம் விளக்கஞ் செய்வல். சிறிது பொறுத்தருளுமின். அவ் வினா வருமாறு; 5. திருவள்ளுவர் தம் ஊழ்க் கொள்கை யாது? மாசு கற்பியா மாந்தீர்! இவ்வினா மிக்க சிக்கலுடைத்து; எனினும், இந்நாட்டினன் அறிந்து கொள்ள வேண்டும் இன்றியமையாமைத்து. வினை என்றால் தொழில் என்று பொருள் கொள்ளும் எண்மையை அறவிடுத்து, பாவம் என்ற கருத்துத் தடிக்கப் பெற்ற நமக்கு, ஆசான் தனியுள்ளம் விளங்காமை வியப்பன்று. நம் அறிவிற் பட்டதுதான் வள்ளுவர் அறிவு என, இல்லாப் பொருளைக் குறளுக்கு ஏற்றத் துணிந்து விட்டோமே யன்றி, நாம் ஒவ்வாவிடினும், அப்பெரு மகன் கொண்ட தனி நெறியைக் காணும் உண்மைத் துடிப்பு, ஐயகோ! நமக்கு ஒளிந்தது காண். மறுமை, எழுபிறப்பு முதலியவை திருக்குறளகத்து வருவன என்பது கொண்டு, இயைபில்லாக் குறள்களையும் வலித்து இக்கருத்துரை செய்ப ஒருசாரார். இனிப் பிறிதொரு சாரார் மறுமை முதலிய கருத்தினைத் தரும் இயல்புக் குறள்களுக்குங்கூட, தங்கொள்கையை ஏற்றி வல்லுரை செய்ப. இப் போலியுரையெல்லாம் வெறியின்றி ஒதுக்கி, ஆசான் தன் எண்ணத்தூய்மை காண வல்ல அறிவுச் செப்பம் கற்பார்க்கு அமைக என்பது என் வாழ்த்துரை. ஒரு காட்டு; தவழும் தவமுடையார்க்கு ஆகும்; அவமதனை அஃதிலார் மேற்கொள் வது (262) என்பது ஒரு தவக்குறள். தவக்கோலமும் தவவொழுக்கம் உடையவர்க்கே பொருந்துவதாகும்; அக் கோலத்தை அவ்வொழுக் கில்லார் பூணுவது, அவர் தமக்கே யன்றி, மெய்த்தவ வேடத்தார்க் கெல்லாம் பழியாகும் என்பது பொருள். தவ மறைந்து அல்லவை செய்தல் (274) என்ற இடத்துப் போல், தவமும் என்ற ஈண்டைக் கிளவிக்குத் தவக்கோலமும் என்பது உரை. இங்ஙன் உரைப் படுத்துவதை விடுத்து, பயனே யன்றித் தவந்தானும் உண்டாவது முற்றவம் உடையார்க்கே; ஆகலான், அத் தவத்தை அம் முற்றவம் இல்லாதார் முயல்வது பயனில் முயற்சியாம் என்று பரிமேலழகர் பொருள் படுத்துவர். முன்னைத் தவம் உண்மையும் இன்மையும் இன்று தவஞ் செய்தாலன்றோ வெளிப்படும்? அது கிடக்க, தவஞ் செய்வார் தங் கருமம் செய்வார் (266) என்பது ஆசான் காட்டும் வாழ்வுக் கோள்; ஆதலின், எடுத்த இப்பிறப்பின்கண் தவநோன்பு கொள்ளப் புகுவானை, பயனில் முயற்சி என்று செயல்முனை அறுத்தல் பொருந்துங் கொல்? இவ்வுரை மக்களின் முயற்சியைக் கொல்வது; வள்ளுவர் தம் செயல் நெஞ்சிற்கு முற்றும் முரணியது. தூய்மை, அறிவு, முயற்சி, செயலாகிய வள்ளுவங்கட்கு மாறாக, யார் உரை செய்யினும், யார் விளக்கந்தரினும், அவ்வெல்லாம் வாழப்பிறந்த நாம் ஒருவந்தம் ஒதுக்கற்கு உரியன காண். எனைப் பெரிய உரைக்கும் விளக்கத்துக்கும் விரிவுக்கும் அடிமைப் பட்டு விடாது. விடுதலையில் நின்று கொண்டு, ஆசான் தன் மூலக் குறள்களையே தனித்து வைத்து, ஆய்ந்து அறியும் தூய உரிமை யுணர்வு திருக்குறள் கற்கும் போதெல்லாம் நமக்குப் பிறங்குகதில். வள்ளுவர் தம் ஊழ்க் கொள்கை முற்பிறப்புக் குறிப்போ, பழவினைக் குறிப்போ, அவ்வுலகக் குறிப்போ தினையளவும் அற்றது என்பதனை, முதற்கண் குறிக்கொள்மின்! ஊழ்க்குறள் பத்தகத்தும் இனைய கருத்துக்கு யாதோர் குறிப்புச் சொற்கூட இல்லை என்பதனை நினைவிற்கொண்டு, இனி அவ்வதி காரத்தைக் கற்றுப் பார்மின்! பரிமேலழகர் ஊழதிகாரத்துக்குச் செய்த உரைக்கண், முன்வினைக் குறிப்பு முதலியன யாதும் இன்மையும் காண்க. ஊழ் என்னும் கிளவிக்கு முறை என்பது பொருள். அம் முறையாவது உலக முறை அல்லது உலகச் சூழ்நிலை. உலகத் தியற்கை (373) என்பது சான்று. ஊழ்முறை - என்ற பெயர் தனக்கு இருத்தலின், அஃது ஓர் ஒழுங்குக்கு உட்பட்டுத்தான் உருப்பெறுகின்றது; எனினும், அதனைக் கணிப்பது நமக்கு எளிதன்று. ஏன்? ஊழின் தோற்றத்துக்குக் காரணம் பலப்பல. இடத்தானும் காலத்தானும் அரசானும் சமூகத்தானும் சுற்றுப் புறமக்களானும் வரும் புறநிலைப் பாங்கனைத்தும், முடிவில் ஞாலத்தியற்கையாய் ஊழாய் மாறி நிற்கும். காரணப் பன்மை சான்ற ஊழ் நுண்ணிய பல விரிவுகளாய்க் கிளைப்பது; தூய பேரறிவு இல்லா மக்கள் பலரின் கணிப்பிற்கு அப்பாற்பட்டது. ஊழ் செய்யும் நல்ல தீய தாக்குக்கள் பற்பல; அவற்றுள் சிலவற்றை ஆசிரியர் காட்டுப; மேலும், ஊழ் என்பது புறவுலகச் சூழ்நிலையாதலின், அஃது ஒருவன் புற வாழ்க்கையைத் தான் விரைந்து பற்றும் என்ற காரணத்தால், ஊழதிகாரத்துப் பல் குறட்கண் செல்வம் பற்றியே சுட்டுப. போர்க்காலம் போலும் ஒரு சூழ்நிலையில், ஒருவன் கோடிப் பொருளைத் தொகுத்துக் கொள்கின்றான். அங்ஙன் தொக்க பொருளை அவன் துய்யாதவாறு, இந்தியப் பிரிவினை போலும் பிறிதொரு அரசுச் சூழ்நிலை அவனுக்கு இழவு செய்கின்றது (377). ஒரு சூழ்நிலைக் கண் வருந்தி அழைத்தாலும் வாராத பொருள்கள் மற்றொரு சூழ்நிலைக்கண் வந்து, வீசி யெறியினும் போகாவாய்க் கிடக்கின்றன (376). குறித்த ஓர் சூழ்புறத்தின்கண் செல்வமோ, அறிவோ என ஒன்றுதான் ஒருவன் படைத்துக்கொள்ள வாய்க்கின்றது. ஆங்கண் அவனால் அவ்விரண்டினையும் ஒருங்கு பெறுமாறு இல்லை (374). ஒருவர்க்குப் பிறவற்றின் கண் நற்சூழ் தீச்சூழாயவை, செல்வம் ஈட்டற்கண், தீயூழ் நல்லூழாக மாறி நிற்கவும் செய்யும் (315). ஒருவன் நூற்கல்வி எனை நுண்ணிய பரப்பிற்றாயினும், அஃது அவன் வாழும் சுற்றுப்புறத்தொடு இயையா விடின், என்னாம்? அச்செயற்கையறிவு கீழ்ப்பட, உண்மையறிவாம் இயற்கையறிவு - அவன் தன் சூழ்நிலை யறிவே - அவனுக்கு மிகுந்து தோன்றும் (373). குலவிச்சை கல்லாமற் பாகம் பெறும் என்பது பழமொழி. இனைய சில செய்திகளால், ஊழின் பெருவலியை - அறிய வொண்ணாச் சூழ்நிலையின் மறைமுகச் செல்வாக்கை - மக்கட்கு அழுந்த நினைவூட்டுவர். உலகம் என்றும் யாண்டும் ஊழ் என்ற நிலை யொன்றுதான் உடையது. அது தன்னியற்கையில் கால் கைகள் போல, ஆகூழ் எனவும், போகூழ் எனவும் இரண்டு படப்பிரிந்து நிற்பதில்லை காண். ஆகுதல் போகுதல் என்ற அடைகள், உறவுப் பெயர்கள் நிகர்ப்ப மனிதனை நோக்கி எழுந்த இயைபுக் கிளவிகள். ஒருவன் ஆகூழ் - நற்சூழ் - மக்களனைவர்க்கும் அது வாதல் இல்லை; அவன் தனக்கே பிறிதொரு கால் ஆகூழ் ஆகாமையும் உண்டு. போகூழும் இத்தன்மைத்து. இங்கு இவன் பெருஞ் செல்வம் அள்ளினான் என்று அங்கு மற்றொருவன் ஈட்டப் புகின், உள்ள கைப் பொருளையும் இழப்பன். எனக்கு வாய்த்தது இவ்விடம் என்று சூதாடிபோல் ஒருவன் அவாவால் மீண்டும் அவ்விடம் செல்வானேல், பேரிழப்பு எய்தக் காண் கின்றோம்; இதனால், அயரா ஊழறிவு - இமையாச் சூழ் ஆராய்ச்சி - நமக்கு ஓடிக் கொண்டிருக்க வேண்டும் என்பது விளங்க வில்லையா? உலகின் பல பகுதிகளில் தோன்றிய அறிவு வீறுடைய ஆண்மையர் அரசியல், மதவியல், சடங்கியல், சமூகவியல், குடும்பவியல் எனவாங்கு. எல்லாக் களத்துக் கண்ணும் வேண்டாப் பழமை களைந்து, வேண்டிய புதுமைப் பயிரிடுப. உயிர் வழங்கியும், உறுப்பிழந்தும், உடைமை துறந்தும் எத்துணையோ பலியாற்றியும் செய்த உலகத்திருத்தங்களே வரலாற்றில் நிரம்பியுள. முன்னையோர் நினைவிலும் காணாச் சீர்திருத்தங்கள், அரசு விதிகளாலும், ஆன்றோர் பலரின் அன்புத் தொண்டினாலும், நாம் காண இந்நாள் நிகழ்ந்துள. மூடக் கொள்கை எனவும், அடிமைச் சடங்கு எனவும், முன்னேற்றத்துக்கு ஆகாப் பழக்க வழக்கம் எனவும், தம் அறிவிற்பட்டனவற்றைப் பழி வருவதாயினும் ஏற்றுத் துடைக்க முனையும் உணர்வுடை மாந்தர் இன்றும் பலருளர்; என்றும் இருப்பர். எனினும், ஐயகோ! ஒன்று நினைமின்! சீர்திருத்தம் என நேற்றுப் பெயரியது இன்று ஊழாய் மாறுகின்றது. உண்ணுங்கால் உணவு எனப்பட்டது உட்புகுந்த பின் மலமாதல் போல, ஒருவன் முதற்கண் செய்யுங்கால் புதுவழி எனப்பட்டது செயற்பாட்டிற்குப் பின் பழந்தடமாய்க் கிடக்கின்றது. மணந்த ஆண் கணவனாகும் உண்மைபோல, செய்த திருத்தம் பின்னர் ஊழாய் உறவுபடுகின்றது முயன்று வளர்த்த மரம் முடிவில் மண்ணாதல்போல, எனைப்பலி செய்தும் இழைத்த சீர்திருத்தமெல்லாம் முன்னைச் சூழ்நிலை யொடு சூழ்நிலையாய்க் கலந்துவிடுகின்றன. சீர்திருத்தப்பால் காலப்பிரையால் ஊழ்மோராகும் என்பது அழியா உலகியற்கை. இவ்வுலகில் யார் ஆற்றும் யாதனையுங், காலச் சுழற்சியால் தன்னதாக்கிக்கொண்டு இயலும் முன்னோட்டம் உடையது ஊழ் என்னும் சூழ்நிலை. இவ்வுண்மையை நமக்கு உள்ளுறுத்தும் பொருட்டு. ஊழிற் பெருவலி யாவுள? மற்றொன்று சூழினும் தான்முந் துறும் (380) என்று ஓர் ஊழ்க்குறள் யாத்தார். தனியாட்சி உடையது ஊழ் எனக் கூற வந்ததன்று திருக்குறள்; நுணுகிப் பரந்த அதன் பொதுப் பேரியல்பைச் சுட்ட வந்தது. சூழ்நிலையாம் ஊழுக்கு நம்மை அடிமைப் படுத்துவது வள்ளுவம் அன்று; உலையா முயற்சியானும், கலங்கா அறிவானும், நின் வாழ்வுக்கு அவ்வூழை வயப்படுத்திக் கொள்க என்பது வள்ளுவப் பறை. ஏனைய பிறப்பெல்லாம் ஒத்த சூழ்நிலையாயின் வளரும்; ஒவ்வாச் சூழ்நிலையாயின் அழியும். அவை ஊழரசனின் செங்கோன்மையொடு கொடுங் கோன்மைக்கும் வழிபட்டுக் கிடப்பன; மீறவல்ல தன்னுரிமை யற்றன. மக்கட் பிறப்போ எனின், அக்கீழ் நிலைப்பட்டதன்று; நன்று தீது காணவல்ல பகுத்தறிவு உடையது. சூழ்நிலை ஒப்பின், பயன் நிரம்பக் கொள்ளும் ஆற்றலும், ஒவ்வாவிடின் ஒவ்வுமாறு முயற்சி என்னும் புரட்சி செய்து ஊழை வணக்கும் அறிவுத் துணிவும். மக்கட் பிறப்பிற்கு உண்டு என்பது வள்ளுவம். மிதிவண்டியை மேட்டிலும் எதிர்க்காற்றிலும் அழுத்தி உந்துவது, பார்வைக்குச் சிறு செயலாயினும், ஊழை உதைத்துத் தள்ளி முன்னேறும் மனித முயற்சியைக் காட்ட வில்லையா? காடு கொன்று நாடாக்கிக் குளந்தொட்டுவளம் பெருக்கி என வரூஉம் ஆக்கமெல்லாம் மனித வாகையைச் சாற்றவில்லையா? ஊழ் என்றால் பழவினை என்று மயங்கிப் பொருள் கொண்டது ஒருபுறம் இருப்ப, பழவினை என்றால் முன்செய் தீவினையே என்று பின்னும் பேதுறுவாரே நம்முட் சாலப் பலர். உண்மையறிவு (373) என்ற தொடருக்கு பேதைமை யுணர்வு என ஓரவுரை செய்தல் முறை ஆகுமா? ஊழ் என்பது உலகச் சூழ்நிலை. அஃது ஒருவனுக்கு நன்று தீது ஆகிய இருதிறமும் செய்ய மாட்டுவது. அறிவுக் குறும்பால், தன்னால் யாதும் செய்ய முடியும் எனப் பிறர்க்குக் காண்பிக்க வேண்டும் என்ற தலைக்கிறுக்கால், நல்லூழையும் எதிர்க்கும் வெள்ளறிவுடைய மக்களை நாம் அடிக்கடி காண்கின்றோம். எவ்வது உறைவது உலகம் உலகத்தொடு அவ்வது உறைவது அறிவு (426) செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்து இயற்கை அறிந்து செயல் (637) என்ற குறள்களால், ஆகூழொடு இயைந்து ஒழுகுக என்று அறிவறைவர்; செயல்வகை தெரிப்பர். ஏன்? ஒன்றிய சூழ்நிலையொடு ஒத்துப்போகின், ஆற்றோரத்து மரம்போலப் பயன் விரைந்தும் மிகுந்தும் வரும் அன்றோ? ஊழ் தீதாயின், அது பெருவலியுடையது என்பதற்காகப் பின்னிடற்க; அதனை மனிதன் எதிர்க்கவும் புறங்காணவும் வேண்டும் என்பது வள்ளுவப்பறை. வெல்லும் ஆற்றல் இருந்தும், ஆகா ஊழொடு போரிடுவோம் என்ற மறவுணர்ச்சி மக்கட்கு இல்லாமையை ஆசான் உளங் கொண்டார்; ஆகூழொடு ஒத்துவாழ் என்று அறிவு அறைவதைக் காட்டினும், ஆகா ஊழை எதிர்த்து வாழ் என்று நம் அடிமை தொலையத் தமிழ்க் கோல் கொண்டு, பல்காலும் முயற்சி முரசறைந்தார். ஊக்கம், மடியின்மை, ஆள்வினை, அறிவு, இடுக்கண் அழியாமை, வினைத் திட்பம் என்ற அதிகார மெல்லாம் வென்றி நம் கையகத்து என விளம்ப வந்தன அல்லவா? ஊழையும் உப்பக்கம் காண்பர்; உலைவின்றித் தாழாது உஞற்று பவர் (620) என்பது வாழ்க்கைப் பொருகளத்துப் பகையூழைத் தோற்பிக்கும் நம் படைக்குறள். இவ்வெண்பாவில் ஊழ் என்பது தீயூழைக் குறிக்கும். பெருவலியுடைய தீச்சூழ் நிலையைச் சின்னஞ்சிறு முயற்சியால் வென்று விடலாம் என்று ஏமாறாதீர் என அறிவிப்பான். உலைவின்றித் தாழாது உஞற்றுபவர் என்று நெடுமுயற்சி வேண்டினார். உணவுக்கு முன் பசியடங்குமாப் போல, அயரா உழைப்புக்குமுன், ஆகா ஊழ் அடங்கிவிடும்; ஐயுறற்க என்று இயல்பு காட்டுவான், உப்பக்கம் காண்பர் என மெய்ந் நம்பிக்கை ஊட்டினார். ஊழ்வினை கீழ்ப்பட மக்கட்கு வாழ்வினை வேண்டுவது வள்ளுவம் என்பதற்கு, அறிவுடை யார் எல்லாம் உடையார் (430) எண்ணிய எண்ணியாங்கு எய்துப (666) துன்பம் உறவரினும் செய்க (667) சிதைவிடத்து ஒல்கார் உரவோர் (597) பெருமை முயற்சி தரும் (611) எனவாறு வரூஉம் பல பகுதியெல்லாம் பொய்யாச் சான்று அலவோ? தீயூழ் ஒருவனை வென்றது எனின், அதனால் வெல்லப்பட்டவன் முழுமடியன், நனிபேதையன் என்று கருத்தாகுமே யன்றி, அம்மெல்லிய வெற்றியால், ஊழாட்சியே உலகாட்சி என்று பொருளாகாது காண். ஆகூழால் தோன்றும் அசைவின்மை; கைப்பொருள் போகூழால் தோன்றும் மடி (371) பேதைப் படுக்கும் இழவூழ்; அறிவகற்றும் ஆகலூழ் உற்றக் கடை (372) ஒருவன் தன் சூழ்நிலை ஆகூழா? போகூழா? என்று கண்டுகொள்ளும் வழியை இக்குறள்கள் காட்டுகின்றன. ஆள்வினையும் அறிவும் வழங்கும் சூழ் எது, அது ஆகூழ் எனப் பற்றுக. மடியும் பேதைமையும் விளைக்கும் சூழ் எது, அது போகூழ் என நீங்குக என்று செயலூட்டுவது ஆசான் நெஞ்சம். ஆகாச் சூழ்நிலையைப் பிரிந்து ஆகுஞ் சூழ்நிலையை நட்புக்கொள் என்பது உள்ளுறை. இப்பொருளை முற்றும் மறந்தொழிந் தோம். ஒருவன் முயலாதும் அறியாதும் வாளா கிடப்பானேல், அவன் என் செய்வான்; ஊழ் அவனை அங்ஙன மெல்லாம் ஆட்டுகின்றது என்று வம்புப் பொருள்படுத்தி வலிய சாவுக்கு ஏற்பாடு செய்கின்றோம். நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால் அல்லற் படுவது எவன் (379) தீயூழ் காணின் அலமந்து உலமந்து என் பயன்? கடக்க முயல், மடி பட்டு மடம் பட்டு என் பயன்? வாழ முயல் என்பது வள்ளுவம். இக்குறட்கு இக் கருத்துக் கொள்ளாது. நல்லூழை ஏற்றுக் கொண்டது போல் தீயூழையும் ஏற்றுக்கொள் என்று உரை செய்ப. அவ்வூழ் ஊட்டும் மடிமையையும் மடமையையும் நுகர்ந்து கொள் என்று நாட்டிற் கருத்துப் பரப்புப. ஆக்கம் இழந்தேம் என்று அல்லாவார் (593) என்றால், கவலைப் பட்டுக் கொண்டு இராது. இழந்த பொருளை ஊக்கத்தால் மீண்டும் ஆக்கிக் கொள்வார் என்பது ஆசான் உள்ளம் அன்றோ? இவ் வுள்ளோட்டம் கண்டு திருக்குறள் கல்லாது பிறவாறு கற்பதெல்லாம் வாழ்வுக்குப் பாழ் என்பது என் துணிபு. மக்களாய்ப் பிறந்தார் வாழ்க்கை எஞ்ஞான்றும் அயரா அதிரா அசையா அறிவுடை முயற்சி வாய்ப்படல் வேண்டுமேயன்றி, ஊழின் முதுகை நாம் நகைத்துக் காணல் சாலுமேயன்றி, நம் முதுகை அது காணல் அடாது, அடாது காண். முயற்சி வாகை நாம் மலைக. கனிந்த மன நண்பர்களே! இற்றைச் சொற் பொழிவுக்கும் என் சொற்பொழிவு அனைத்துக்கும் உங்கள்பால் ஒரு வேண்டு கோள் செய்வல். என் கருத்தைப் பிறர் ஏற்க வேண்டும் என்பதும், ஏற்குமாறு வலிந்தேனும் உரைக்க வேண்டும் என்பதும் என் குறிக்கோள் அன்று. ஏற்பதும் தள்ளுவதும் கேட்பாரின் அறிவுரிமை. வள்ளுவங்களாக என் மனத்துப் பட்டவற்றைப் பிறர் அறியவேண்டும் என்பதும், விளக்கம் பெற அறியுமாறு அழுத்தம் பெறக் கூற வேண்டும் என்பதுமே என் உள்ளக் கிடக்கை. ஒன்றேகால் மணிப்பொழுது பொறுமையொடும் ஆர்வத்தொடும் வீற்றிருந்து, ஆசான் கருத்துக்களைச் செவி மடுத்த உங்கட்குப் பெருநன்றி யுடையேன். 12. வாய்மை நெஞ்சம் வாய்மைக் குறிக்கோள் உடையீர்! நன்றி வணக்கம். வரையறுத்தபடி, இந்நாள் மாலை நிகழ்வது பன்னிரண்டாவது இறுதிப் பொழிவு. வாய்மை நெஞ்சம் என்பது இற்றைப் பொருள். வள்ளுவப் பண்புகளைக் கேட்டற்கென்றே ஈண்டு வந்து, முதல் நாட்போல எல்லா நாளும் விருப்போடு இருந்து, உடன் பிறந்தேனை ஊக்கப் படுத்திய நும் அனைவர்க்கும் தனித் தனி நன்றியுடையேன்; வாழ்த்து வழங்குவேன். உலகிற்கு ஒரு நன்மை செய்பவன் அதன் பயனாய்த் தனக்குப் பல நன்மை வரக் காண்கின்றான். பிறநலம் பேணுவது ஒரு ஞான்றும் தன்னலத்தை மாய்ப்பதில்லை; தன் வாழ்வைப் பெருக்குமேயன்றிச் சிறுக்குவதில்லை. தாம் இன்புறுவது உலகு இன்புறக் கண்டு காமுறுவர் கற்றறிந்தார் (399) என்பது தன்னலப் பேறு காட்டும் குறள். நுங்கட்கு வள்ளுவ விளக்கம் செய்வதாகப் போந்து, என் அறிவைப் புதுக்கிக் கொண்டேன். வாழ்க்கை நுண்கூறுகளைக் கேட்பார்க்கு எடுத்துரைக்குமாப் போல, புல்லறிவால் கேளாது கெட்ட என் பேதை நெஞ்சுக்கு இடிப்புரை செய்தேன். செய்க, முயலுக, கற்க, தெளிக, துணிக, ஒழுகுக என்று முன்னிலைப் படுத்துமாப் போலத் தன்னிலைப் படுத்திக்கொண்டேன். காலவறிவும் வினைத் துணிபும் நெஞ்சுரமும் உள்ளத் தூய்மையும் வாய்மை கோரும் இடையறா ஒழுக்கமும் உடையாரே பிறர் உள்ளத்தும் வாழ்வார்; பேதைமையும் மடியும் பொய்யும் பற்றினாரோ தன்னுள்ளத்தும் சாவார் என்ற அறமெல்லாம் புறத்தார்க்குச் சொல்லுமாப் போல, என்னைப் படர்க்கையாக நிறுத்தி என் அகத்துக்குக் கற்பித்தவை. ‘வள்ளுவம் பற்றி உரை தொடுத்த இவன் வினை வேறு சொல் வேறு பட்டான்; முரணிப் பொய்த்து மடிந்தான்; என்னைகொல்? எனப் பிறர் நகைக்குமாறும் இழிக்குமாறும் நடந்துகொள்ளாதே! முன்னறிவுடையவனாய் ஒழுகு! ஒழுகு! என்று என் நெஞ்சிற்கு யான் அடிக்கடி உரம் போடுவதுண்டு; சூடு பிறப்பிப்பது உண்டு; அச்சம் ஊட்டுவது உண்டு. பலர் அறியச் செய்த வள்ளுவப் பொழிவுகளால், உண்மை விளம்பின், யான் என் வாழ்க்கைக்கு ஒழுக்க மெய்வேலி கட்டிக் கொண்டேன். பேரன்பினராய நும் நல்லூழால் நான் பெறப் பெற்ற பயன் இது. இன்னும் ஒரு மணிப் போழ்தில் இக் கூட்டம் நிறைவெய்தும்; அதன்பின் நாமெல்லாம் தத்தம் ஊருக்குச் செல்வான் பிரிவோம் என்று எண்ணுங்காலைக் கவலுணர்ச்சி முளைக்கின்றது. கூடலும் பிரிதலும் உலகியல்பு என்றால், கூடுங்கால் உவத்தலும் பிரியுங்கால் இரங்கலும் உலகியல்பு இல்லையா? பிறந்த குழந்தையால் பெற்றோர்க்குள் அன்பும் பிணிப்பும் நீளுமாப் போல, திருக்குறளால் நம் உறவு வளர்தலல்லது தளர்தல் இல்லை. ஒத்த வள்ளுவ உணர்ச்சியால் நம் உள்ளங்கள் கிழமை கொண்டுவிட்டன. ஆதலின், முகப் பழக்கத்துக்கு வாய்ப்பில்லையே என்று அத்துணை வருந்த வேண்டா. அறிவுப் பசியாலும், ஆர்வத்துடிப்பாலும், அமைதி யிருப்பாலும் இலங்கையர் போல் வள்ளுவ அவையினர் தமிழகத்தின் பண்பு நிலையைப் பன்மடங்கு உயர்த்தி விட்டனர் என்பது காண யார்க்குத்தான் உவகை பூவாது? பல்லாயிர மக்கள் குறளொன்று கையொன்றாய அறிவுக் காட்சியைக் காணும் பேறுடைய எவர் தாம் இறும்பூது எய்தார்? திண்ணிய தூய எண்ணம் செயலாகித் தீரும் என்று கண் சான்றாக அறிந்தேன். தமிழர் தம் மறைந்த ஆற்றல், ஆரப்பா மொகஞ் சோதரைப் புதை பொருள் போல வெளிப்படக் கண்டு மனங்குளிர்ந்தேன். குறள் படியாது கொன்னே கழித்த நாட்களைக் குறித்துப் பின்னிரங்கிக் கொண்டிராது, நம்முட் பலர் செய்த அருஞ் செயலைக் கேண்மின்! நாளொன்றுக்கு 133 குறள்கள் - 266 அடிகள் - பொருட் குறிப்போடு கற்பது; 1330 குறள்களையும் பத்து நாளில் ஒரு வெள்ளோட்டம்போல் முடிப்பது என்று ஓர் உயர் சிறு திட்டம் வகுத்துக் கொண்டு, இங்குக் குழுமியுள்ளோருள் பலர், திருக்குறட் பனுவல் முழுதும் சிறக்கணித்த பார்வை செய்திருக் கின்றனர் காண். இக் கன்னி முயற்சி வரவேற்கத் தகுவது; வளர வேண்டுவது. ஒரு திருமணம் என்றால், ஒரு விழா என்றால், ஓரிழவு என்றால் ஒரு திங்கட்குமேல் இரவு பகல் கழிப்பர் நம் நாட்டு மக்கள். இப் புறத் துடிப்பு கல்வித் துடிப்பாக மாறக் கண்டிலம். இன்று காணப்பெற்று வளர்க! வாழ்க! என்று உவக்கின்றோம், பக்கத்துப் பெரியோர்கள் குறள் படிக்கக் கேட்டு, ஈராட்டை மூவாட்டைப் பச்சிளந் தமிழ்க் குழவிகளுங் கூட, மழலை கலந்து திருக்குறட் பகுதிகளை இசைக்கின்றன, கேளீர்! நாட்டுக்கும் நம் மொழிக்கும் இஃதோர் நல்லூழ். ஆரா வேட்கையால் உந்தப்பட்டுத் திருக்குறளை இவண் வேகத்திற் கற்றாரெல்லாம், வீடு சென்றபின், ஆழ்ந்து அமைந்து என்றும் கற்பாராக. திருக்குறளைக் கற்கும் நன் மக்கள் மறவாது குறிக் கொள்ளத்தக்க முறைகள் நான்கு உள. 1. மூலத் திருக்குறள் முழுமையும் (உரைகட்கு அடிமைப்படாது) கற்றல். 2. திருவள்ளுவர் நெஞ்சறிந்து கற்றல். 3. கற்பவர்தம் வாழ்நிலை யொடும் தம் காலநிலை யொடும் பொருந்திக் கற்றல். 4. கற்றபின் நிற்க வேண்டும் என்ற செயல் முனைப்பொடு கற்றல். உலகத்து எனைப் பெரிய பனுவல்களும் வாழ்வின் ஒரு கூறினையே விரித்துரைக்கின்றன. திருக்குறளோ ஒருவர் முழு வாழ்க்கைக்கு இன்றியமையா அனைத்துத் துறைகளையும், வித்து நிலையில் வேண்டுமளவு நிரந்து இனிது விளங்கக் கூறுவது. அறம் பொருள் இன்பங்களும், இல்லற துறவறங்களும், குடி படை பொருள் நாடுகளும், அரசு அமைச்சு தூது ஒற்றுக்களும், பெற்றோர் கணவன் மனைவி, குழந்தை சுற்றங்களும், நல்குரவு இரவு மருந்துகளும், பழமை கூடா நட்பு தீநட்புகளும், நிலையாமை மெய்யுணர்வு இறைமைகளும் எனவாங்கு சொல்லப்படும் கூறுகள் அளவில. இனைய கருத்துப் பரப்பை உட்கொண்டன்றே, எல்லாப் பொருளும் இதன்பால் உள என எடுத்துக் காட்டினார் மதுரைத் தமிழ் நாகனார். வாழ்வு வகை இங்ஙன் பலவாதலின், வள்ளுவங்களும் பலவாயின என்று அறிக. அன்பகத்து இல்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண் வற்றல் மரந்தளிர்த்து அற்று. (78) காக்க பொருளா அடக்கத்தை; ஆக்கம் அதனினூஉங்கு இல்லை உயிர்க்கு (122) நல்லாற்றான் நாடி அருளாள்க; பல்லாற்றால் தேரினும் அஃதே துணை (242) தவஞ்செய்வார் தங்கருமம் செய்வார் மற்றல்லார் அவஞ்செய்வார் ஆசையுட் பட்டு (266) அன்பும் அடக்கமும் அருளும் தவமும் என்றவாறு அதிகாரந்தோறும் எடுத்துக்கொண்ட பொருளைச் சிறப்பித்து மொழிவது திருக்குறள் வழக்கு. இவ்வறமெல்லாம் தலை சான்றன என்பதில் ஐயமில்லை. மக்கட் பெரு வாழ்வுக்கு அறம் ஒவ்வொன்றும் வேண்டும் என்ற தெளிவாலும், ஓரறம் பிழைப்பின், பிற அறங்களின் நலமுழுதும் அழிதலுஞ் செய்யும் என்ற அச்சத்தாலும், எல்லா அறத்தையும் இடந்தோறும் தனித்தனி யாப்புறுத்துவா ராயினர்; எனினும், அறப்பன்மை கரையும் வள்ளுவர் செயலொன்று வேண்டும் நெஞ்சினர். எங்ஙன் சொல்லினால் மனம் தொழிற்படும் என்று அங்ஙன் நாடிபிடித்துச் சொல்லும் திறப்பாட்டினர். பத்து வினாக்களுள் நீ விரும்பிய நான்கிற்கு விடை வரைக என்று விழைவுடன் அளிப்பின், எந்நான்கினை எடுப்பது என மாணாக்கன் மலைக் கின்றான். ஒரு வினாவிற்கு விடையெழுதி அரைவழி சென்றபின், கருத்து ஓட்டமின்றி எழுதியதை அடித்து மற்றொரு வினாமேல் அவாவுகின்றான். கருவூலக் கதவைத் திறந்துவிட்டு, நீ வேண்டியாங்கு வாரிக் கொள் என்றால், பேரவாப் பிடித்த ஒரு கொள்ளைக்காரனுக்கும், சிறந்த எப்பொருளை முதலிற் பற்றுவது என மனம் ஊசலாடுமேயன்றி, செயல் உடனே தோன்றாதுகாண்; ஆகலின் அறம் பல நுவலும் வள்ளுவர் திருக்குறள் கற்பவர் மலையாதபடி, உடனடி செயலறம் ஒன்று விதந்து சுட்ட எண்ணினார். வாழ்க்கைக் கூறுபல மொழியும் செயலாசான் நம் நெஞ்சக் களத்துச் சட்டெனப் பதியுமாறு, ஓர் அறவித்து அழுத்த விரும்பினார். கற்கும் யாரொருவர் மனத்தும் துண்ணெனத் தைக்குமாறு, தம்மையே சான்று வைத்து, யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை; எனைத்தொன்றும் வாய்மையின் நல்ல பிற (300) எனத் தற்சான்று நடையில் உண்மைக் குறள் யாத்தார். யாம் என்ற நடைப்பட்ட குறள் இன்னும் இரண்டுள. நாம் பெற்ற அறிவுப் பிறப்பின் தனிப்பேறு சுட்ட வேண்டி, பெறுமவற்றுள் யாம் அறிவதில்லை (61) என்றார். சிறப்புடைய பிறப்பு எடுத்தும், வாழ்க்கையில் பிறப்பிற்கு உரிய ஒழுக்கம் இல்லாதார் உள்ளத்தால் கயவர் என்று கீழ்மை காட்டுவான், அவரன்ன ஒப்பாரி யாம் கண்டது இல் (1071) என்ப. இவ்விரு குறள்களும் நம் பிறப்பின் மேல்கீழ் நிலையை நினைவுறுத்தி நிற்ப, யாம் மெய்யாக் கண்டவற்றுள் என்ற குறளன்றோ, நம் பிறப்பொழுக்கம் இதுவென அறிவுறுத்துகின்றது. எனவே, அறிவு வாய்த்த நாம் பொய்யாது ஒழுகும்போது, மக்கட் பிறப்பினர் ஆவோம்; வஞ்சித்து நடக்கும்போது கயவர் என்னும் மக்கட் போலியர் ஆவோம் என்பது ஆசான் நெஞ்சம்; ஆதலின், வள்ளுவத்துள் வள்ளுவமாவது வாய்மை என்று ஒழுகுக! செயல் நெஞ்சம் என்று முதற்பொழிவில் கண்ட வள்ளுவர் நெஞ்சமாவது வாய்மை நெஞ்சம் எனப் பற்றுக! இவ்வுயிர் நிலையை உள்ளவாறு அறிந்து, இவ்வகைக்கு வாய்மைக் கழகம் என மெய்ப் பெயர் அமைத்த மன்ற உறுப்பினர்களை நாம் பாராட்டுகின்றோம். பொய்யில் புலவர் தற்சான்று நடையில் வாய்மை யொழுக்கத்தை இன்னணம் வற்புறுத்துவானேன்? வாய்மை யோடு ஒத்த நல்ல அறம் பிறிதொன்றும் இல்லை எனத் தனியழுத்தம் செய்வானேன்? அறங்களுள் அதற்கு வந்த முதற்பெருமை என்கொல்? அதனால் உலகிற்கும் ஒருவற்கும் விளையும் பெரும் பயன் என்ன? இவை நம் ஆய்வுக்கு உரியன. மக்கட் பிறப்பிற்கே வாய்த்த தனியுடைமைகள் மூன்றுள. நினைவு, அறிவு, சொல் என்பன அவை. அவற்றுள் நினைவும் அறிவும் அகம் பற்றியன; சொல்லோ அகமும் புறமும் பற்றியது. ஒருவன் நினைவு அறிவுகளைப் புறத்தோர்க்குப் புலனாக்கும் ஒரு முதற் கருவி மொழியாகும். மொழியால் உலகம் விரைந்து இயங்குகின்றது; மக்கள் கூட்டுறவும் பல்துறையாகப் பரந்து வளர்கின்றது. ஞாலம் பன்னூறாயிரம் ஆண்டுகள் வளர்ந்த பின்னர்த்தான், மக்கட்கரு தோன்றியது. மக்கட் பிறப்பு எத்துணையோ பல்லாயிரம் ஆண்டுகள் நிலைத்துப் பெருகிய படிமுறை வளர்ச்சிக் கூர்மைக்கு அப்புறந்தான், மொழிக்கரு புலனாயிற்று. இற்றை மனிதன் முற்கூறிய முவ்வுடைமை களோடும் பிறக்கின்றான். நம் பண்டைத் தொல்பாட்டனோ எனின், நினைவு அறிவு என்னும் உடைமை இரண்டே பெற்றிருந்தான். மொழி என்பது பின்னர்ச் சேர்ந்த புது வுடைமை; நினைவும் அறிவும் ஆய காதலர்கள் பெற்று விடுத்த நாகரிகக் குழவி, பிறந்த குழந்தை பெற்றோரை வளர்க்குமாப் போல, மொழி இன்று மக்களின் நினைவறிவுகளை வளர்க்கின்றது. நினைத்தற்கும் அறிதற்கும் பிறர் தொடர்பு வேண்டு மாறில்லை. அவை ஒருவன் தன்னைப் பற்றியன. மக்கள் கூட்டுறவு இல்லாக்காலும், ஒருவன் எண்ணுகின்றான்; அறிகின்றான், சொல்லோ எனின், பிறரொடு உறவாடுங்கால் வெளிப்படுவது; தானே தனக்குள் பேசிக் கொள்வது இல்லை. அங்ஙன் பேசுவது தன்னிலைப் புறமொழி என்னும் நாடக வழக்கு ஆகுமன்றி, நடைமுறைவழக்கு ஆகாது, நம் எண்ணத்தை மற்றையோர் அறிவான் ஆளப்படுவது மொழி. அஃது ஓர் அகப்புறக் கருவி. ஆதலின், தன்னைப்பற்றிய நினைவறம் அறிவறங்களைக் காட்டினும், தன்னையும் உலகத்தையும் பற்றிய சொல்லறத்தை, வாய்மையின் நல்ல பிற இல்லை (300) என்று எதிர் மறுத்து நிறுவினார். சினத்தல், கள்ளல், கொல்லல், தீய செய்தல் முதலாய உணர்ச்சிக் குற்றங்கள் அஃறிணைக்கும் பொதுவின; சொல் பற்றிய குற்றங்களோ உயர் திணைக்கே உரியன; ஆகலான், இனியவை கூறல், புறங்கூறாமை, பயனில சொல்லாமை, வாய்மை, சொல்வன்மை, அவையறிதல், அவை யஞ்சாமை என முழு முழு அதிகாரமாகச் சொல்லறம் விளம்புவர். அவற்றான் அமையாது, பிறதலைப்பு அதிகாரங்களுள்ளும் சொற்றூய்மை பேசுவர். அடக்க முடைமைக்கண், யா காவா ராயினும் நா காக்க (127), அமைச்சின் கண், ஒரு தலையாச் சொல்லலும் வல்லது (934) தூதின் கண், தொகச் சொல்லித் தூவாத நீக்கி நகச் சொல்லி (685), குடிமைக்கண், குலத்திற் பிறந்தார் வாய்ச் சொல் (959) என்று வருவன பல. தன்னை ஏய்த்துக் கொள்ளா வாய்மைப் பேராளன் புறங்கூறான்; வையான்; பிறர் இழிபுகளைச் சொல்லி மகிழான்; கண்டவாறு உளறான்; கள்ளான்; வெகுளான், புறங்கூறினும் களவாடினும் தலை குனிந்து நாளை ஒப்ப வேண்டும் என்று அஞ்சி, அறிவுடைய னாய்க் குற்றம் புகுதாமற் காத்துக் கொள்வான். பிறர் வினாவிய காலை, ஆம்; செய்தேன் எனத் துணிந்து ஒப்ப வரும் பொய்யா வினைகளையே ஆற்றுவான்; சிறுமையுள் நீங்கிய சொற்களையே உரைப்பான். அழுக்காறாமை முதலிய மனவறங்களும், மெய்யுணர்தல் முதலிய அறிவறங்களும், இனியவை கூறல் முதலிய பிற சொல்லறங்களும், உடலுக்கு அனைத்து உரமும் நல்கும் பால் போல, வாய்மையறம் ஒன்றினால் உளவாம் ஆதலின், இல்லை எனைத்தொன்றும் வாய்மையின் நல்ல பிற (300) எனவும், எல்லா அறமும் தரும் (296) எனவும் நிகரின்மை சுட்டினார். ஆசிரியப் பெருமகன் வெறுத்துக் கடிந்த குற்றங்களுள் தலையாயது வஞ்சகம். மாந்தர்பலர்க்கு அறிவும் வஞ்சனையும் உடன் வளரக் காண்கின்றோம். பல சூழ்ச்சிகள் புரிந்து தப்பித்துக் கொள்பவனையே அறிவுடையான் என்பது உலகப் பெரு வழக்கு. அறிவுக் கூர்மையால் தூய புது நெறிகண்டு வாழ விழையாது, வஞ்சித்து வாழவே மனிதன் அவாவுகின்றான். பலர் நம்பிக்கைக்கு உரிய இடமெல்லாம் வஞ்சித்தற்கு உரிய இடங்களாய் விடுகின்றன. இஃதோர் மாறா உலகச் சூழல். தன்னல அறிவுக் கொடியர்கள் இப்பொதுவியற்கைமேல் வைத்து மக்களைச் சூதாடுகின்றார்கள். தெளிந்தார் இல் தீமை புரிந்து ஒழுகுவார் (143), மனத்தது மாசாக மாண்டார் நீராடி மறைந்து ஒழுகும் மாந்தர் (278) தவ மறைந்து அல்லவை செய்தல் (274), முகத்தின் இனிய நகாஅ அகத்து இன்னா வஞ்சர் (824), தொழுத கையுள்ளும் படை ஒடுங்கும் (828) என்றவாறு, நம்பிக்கைக் கட்டடத்துள் தீய அகப்பாம்பு நுழைந்து குடிகொள்ளும் கரவுகளை யெல்லாம் வெளிப்படுத்தி யருளினார். வஞ்சனைக்குத் தஞ்சமாகும் பிறவிடங்கள் உடனே மேற்கொள்ள வாரா; கொள்ளற்குச் சிறிது காலமும் முயற்சியும் வேண்டும். சொல்லோ, எண்ணிய அளவில் யார் வஞ்சிப்புக்கும் வளைந்து கொடுப்பது; கருதியபடி மாற்றம் உறுவது. எலும்பில்லா நா எதுவும் பேசும் என்பது பழமொழி. உலக நடப்புக்கு இன்றியமையா மொழி வாயுடைய ஒவ்வொருத்தன் சூழ்ச்சிக்கும் நனி எளிதாய்ப் பற்றுக்கோடாதலை உணர்ந்தார் வள்ளுவர். ஒருவன் யாதினை வெளிப்படுத்தக் கருதுகின்றான்; அக்கருத்தைக் காட்டுவது சொல். உண்மை கூறும் கருத்தினையின் சொல் உண்மையைக் காட்டும். பொய்ம்மை வெளியிடும் கருத்தினனாயின், சொல் அக் கருத்தினையே பயக்கும். மொழி என்பது நெஞ்சூர்தியன்று; கருத்தூர்தி. இவ்வியல்பினை மக்கள் மறந்தொழிப. சொல் ஒருவன் உள்ளம் காட்டும் பதிவுக் கருவி என்று முற்றும் நம்புப. நாம் அளவிலா மக்களொடு நாள்தொறும் பழகு கின்றோம்; அளவிறந்த செய்திகளை நாள்தொறும் கற்கின்றோம். பழகும் ஒவ்வொருத்தர் கூற்றையும், கற்கும் ஒவ்வொரு செய்தியையும் ஆராய்ந்து கோடல் என்பது கடைபோகும் செயலா? தலைசிறந்த முயற்சியாளர்க்கும் முடிவது கொல்லோ? உலகத்துப் பலர் நல்லவர்கள் என்றும், பல செய்திகள் உண்மையன என்றும், சொல் பெரும்பாலும் சொல்லியவன் உள்ளங் காட்டுவது என்றும் நம்பிக்கைபற்றித் தான் மக்கள் யாரும் வாழ்க்கை நடத்தல் வேண்டும். எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப் பொருள் காண்பது அறிவு (423) எனப் பகுத்தறிவு வலியுறுத்திய ஆசான், கேள்விப் பொருளோ பலப்பல; அவ்வனைத்து மேலும் அறிவோட்டம் செலுத்துதல் இயலுவதன்று எனக் கருதினார். ஆராய்ந்து காண் என்று கேட்பார்க்கு அறிவறைவதைக் காட்டினும், பொய்யாது சொல் என்று கேட்கச் செய்வானுக்கு - சொல்லும் ஒருத்தனுக்கு - ஒழுக்கம் ஊட்டல் நன்றும் எளிதும் எனத் துணிந்தார். நீர்த் தேக்கத்தைத் திறப்பவன் தூய்மை செய்து விடுப்பானேல், குழாய் தோறும் பிடிக்கும் மக்கள் தண்ணீர் நலம் பற்றிக் கவலை கொள்ளார் அன்றோ? ஆதலின், அறிவாகுக; பிறவறமாகுக. அவ்வெல்லாம் நெஞ்சம் என்னும் முதல் நிலத்தைத் தூய்மை செய்யும் வாய்மை யொழுக்கத்துக்கு முன் நில்லா என்ற தெளிவால். யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை; எனைத்தொன்றும் வாய்மையின் நல்ல பிற (300) என அதிகாரச் சொற்களால் அகப்புற அறம் விளம்பினார். அகந்தூய்மை வாய்மையாற் காணப்படும் (298). தூஉய்மை என்பது அவாவின்மை; மற்றது வாஅய்மை வேண்ட வரும் (364) என்பன வாய்மையின் முதற் பயன் சுட்டும் குறள்கள். சொல்வான் ஒருவன் தன் உள்ளத்தாற் பொய்யாது ஒழுகின், கேட்கும் உலகத்தார் பலர் உள்ளத்துள் எல்லாம் உளன் ஆவான் (294) என்பது வள்ளுவப் புகழ். தன் பிறப்புக்கே வாய்த்த சொற்கருவியைத் தன் பிறப்புக்கே உரிய நினைவு காட்ட ஆளாது, தன் பிறப்புக்கே உரிய அறிவுத்துணை கொண்டு மனிதன் எண்ணத்தையும் மொழியையும் கண்டவாறு அலைக்கழிவு செய்கின்றான். உண்மை கூறுவதால் தனக்கு நன்மை வரும் எனத் தோன்றின், நெஞ்சினை மறிக்காது வாய்மை பேச அறிவு விரும்புகின்றது. வாய்மையால் தனக்குத் தீமை வருமெனக் கருதினும், பொய்ம் மையால் நன்மை வருமெனத் தோன்றினும், உண்மை நெஞ்சினை இடைமறித்து, அறிவு பொய்பேசப் புறப்படு கின்றது. மக்கள் முழுக்க முழுக்கத் தன்னலத்தைப் பிறநலம் போலச் சொல்லும் அறிவுத் துறையில் வளர்ந்து விட்டனர்; ஆதலின், அன்னோர் மொழி வாய்மையா? பொய்மையா? எனக் காண்டல் அரிதரிது. மனத்துக்கும் சொல்லுக்கும் இடை நின்று அறிவு வழக்கறிஞன் போலப் பலபொய் இழைக்கின்றது. இவ்வறிவுக் குறுக்கீட்டை ஆசான் விரும்பவில்லை. மனத்தொடு (அறிவொடு அன்று) வாய்மை மொழியின் (295), உள்ளத்தாற் பொய்யாது ஒழுகின் (296) என மன மொழி நேரடித் தொடர்பு வேண்டுவது வள்ளுவம். அறிவோடு பேசுங்கால் சொல் எனப்படுவது மனத்தோடு பேசுங்கால் வாய்மை எனப்படும். சொல் அறிவு வெளியீடு என்றும், வாய்மை நெஞ்சு வெளியீடு என்றும் வேற்றுமை காண்க. இதனால் அன்றோ, சொல் வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க(827), மனத்தின் அமையாதவரை எனைத் தொன்றும் சொல்லினால் தேறற்பாற்றன்று (825) என்றார். பிறர் அறிய மெய்யனாதல் தஞ்சம் எளிது. ஏன்? பிறர் என்பார் பலதிறப்பட்டவர். ஒவ்வொரு செய்திக்கும் ஞாலத்து இரு வேறு கட்சியினர் இருப்பர். தமக்கு வேண்டா ஒரு சாரார் உண்மையென ஒப்பினர் என்பதற்காகவே, பொய்யென முன் வந்து நிறுவுவார் பிறிதொரு சாரார். ஒருவன் உள்ளோட்டத்தை நுணுகி அறியும் பெற்றிமை புறவுலகிற்கு இல்லை காண். அதனால் அன்றே, கொலையாளி களவாளிகள் மன்றேறியும் விடுதலை பெறுப. குற்றஞ் செய்யாதார் மன்றுக்கு இழுக்கப் பட்டுத் தண்டம் உறுப. பொய்யுடை ஒருவன் சொல்வன் மையினால் மெய்போ லும்மே மெய்போ லும்மே மெய்யுடை ஒருவன் சொலமாட் டாமையால் பொய்போ லும்மே பொய்போ லும்மே என்று நறுத்தொகைப் பாக்கள் அறியா உலகப் பேதை யியல்பை நாம் அறியச் செய்வன. ஊர் ஒப்புக் கொள்வது மெய், கொள்ளாதது பொய் என்றோ; தனக்கு நன்மை தருவது மெய், தீமை தருவது பொய் என்றோ எண்ணி மயங்க வேண்டா. தன் நெஞ்சு அறிந்த செய்தி மெய் என்பதும், அங்ஙன் அறிந்ததை மறைப்பதும் மிகுப்பதும் குறைப்பதும் திரிப்பதும், தன் நெஞ்சு அறியாததைப் புனைந்து படைத்து மொழிவதும் எல்லாம் பொய் என்பதும் வள்ளுவ இலக்கணம். தன் நெஞ்சு அறிவது பொய்யற்க (293) என்பது வாய்மை உறைவிடன். யாம் மெய்யாக் கண்டவற்றுள் என ஆசான் தற்சான்று நடையில் கூறியதன் நோக்கம், வாய்மையொழுக்கமாவது ஊர்ச் சான்று பற்றி நிற்பதன்று; ஒருவன் தன் மனச்சான்று பற்றியது என்று அறிவுறுத்தற்கு என்க. பொய்யாமை பொய்யாமை ஆற்றின் (297) எனத் தன்மை சுட்டுவர். தான் நெஞ்சுணரக் கண்ட மெய்யையும் பொய்யையும், பிறர் பொய்யென மெய்யென மாறிக் கூறி எதிர்ப்பினும், அஞ்சி வழி மொழியாது மனச் சான்று கொல்லாது, உள்ளத்தாற் பொய்யாது ஒழுகும் உரவோனே, வாழினும் சாவினும், உலகத்தார் உள்ளத்துள் எல்லாம் உளன் ஆவான் என்பது வள்ளுவக் குறிப்பு. தன் நெஞ்சு அறிவது பொய்யற்க (293) என்ற நெஞ்சுச்சுட்டில், பிறிதொரு குறிப்பும் உண்டு. வாய்மைக்குப் பிறப்பிடன் மனமேயன்றி அறிவு அன்று, மனத்தூய்மை அழியாதும் மாறாதும் இருக்கவேண்டும் நிலைப்பொருள். அறிவோ எனின், அறிதோறும் அறியாமை கண்டற்றால் (1110) என்றபடி, அழிந்து மாறிச் செல்லும் வளர்ச்சிப் பொருள். யாரும் முழுத் தூய்மை பெறமுடியும்; முற்றறிவு உடைய ராதல் இல்லை. அறியாமையன் பேதை எனப்படுவானே யன்றிப் பொய்யன் எனப்படான்; மனமாசு உடையவன்போல, ஒழுக்க மிலான் எனப் படான். அறியாததை அறிந்ததாக, அறிந்ததை அறியாததாகத் திரித்து மொழியும் மனநிலையிற்றான் பொய்ப் பெயர் சூட்டப் படுவான். கற்றனைத்து ஊறும் அறிவு (396) என்பராதலின், சாகுந் துணையும் கல்வியால் வளர்ந்து மாறிச் செல்லும் அறிவு வாய்மைக்குத் துணையாகுமன்றித் தாயாகாது. மனத் தூய்மை வாய்மைக்குப் பிறப்பிடன்; வாய்மை அறிவு நல் வளர்ச்சிக்குப் பிறப்பிடன். உள்ளொளி யிலிருந்து பிறக்கும் வாய்மை அறியா இருளை ஓட்டவல்லது என்ற கருத்தானன்றே, சான்றோர்க்குப் பொய்யா விளக்கே விளக்கு (299) என்று உருவகஞ் செய்தார். எனைத் தொன்றும் வாய்மையின் நல்ல பிற இல்லை (300) என்ற பொய்யாப் பெருமகன் திருமொழி உயர்வு நவிற்சி யன்று; வலிந்துரை யன்று; மெய்யுரை யாகும்; உண்மை நடையாகும். உலகம் நடத்தற்கும் ஒருவன் வாழ்தற்கும் நாணயம் இன்றியமையாதது. அரசு விதிகட்கு அஞ்சி நாணயமாக நடப்பார் எண்ணத் தகும் மிகச் சிலரே யாவர். அரசுச் சட்டங்கள் உலகினைத் தாங்கி நிற்கவில்லை. நம்பிக்கை கெடாவாறு ஒழுகும் நாணயத்தார் - மனச்சான்றோர் - ஞாலத்திற் பலராதலின், உலகம் நிலையாக இயங்குகின்றது. நாணயம் குறைந்தார் சிலராக இருத்தலின், இன்று அரசு விதிகள் மதிப்புப் பெறுகின்றன. இக் குறையாளர் தொகை பெருகிவிடின், பண்டைச் சப்பான் பணத்தாள் போல, எனைப்பல அரசுவிதி களும் மதிப்பிழந்து தொலையுமன்றோ? உலகமெல்லாம் தன்பால் நாணயமாக நடந்துகொள்ள வேண்டும் என்று ஒருவன் எதிர்பார்க்கிறான். அவ்வொழுங்கை உலகமும் தன்னிடமிருந்து எதிர் நோக்குகின்றது என்பதை மறந்து விடுகின்றான். குழந்தைகளைப் பிறர்பால் இடம் பார்த்துப் பொய் சொல்லும் அறிவுடையவராகவும், தம்பால் என்றும் மெய்வழங்கும் ஒழுக்க முடையவராகவும் பெற்றோர் கற்பிப்ப. பொய் என்பது உலக நாணயப் பெருமரத்தின் ஆணிவேரை அறுக்கும் கூர்வாள் என்றும், பொய்க்குந் தோறும் அவ்வேரினை அறுக்கின்றோம் என்றும் நினைத்துப் பார்க்க மக்கட்கு நெஞ்சில்லை. வாய்மைப் பேருழவன் நாணய வேருக்கு உரம் கட்டுகின்றான்; நீரூற்றுகின்றான்; உலகத் தனி மரத்தைக் காக்கின்றான். எத்துறைக் கண்ணும் நெஞ்சு கரியாக ஒழுகுபவன், தன் ஓரற வினையால் ஆற்றும் பரந்த ஞாலக் காப்பை மனமார நினைந்தன்றே அறம் பிற செய்யாமை செய்யாமை நன்று (297) எனப் பாராட்டினர். எனினும், மெய்யாகப் பொய்யாதான் எல்லா அறமும் செய்வான் என்பது ஆசான் உட்கிடை. வாய்மை என் செயற்கோள் என்று நாம் வாழ்க்கைக் குறிக்கோள் கடைப்பிடிக்க வேண்டும். பிடித்தபின், உலகப் பல சிக்கல்களிலிருந்து நாம் விடுதலை அடைகின்றோம். நம்மைப் பற்றிய சிக்கலுக்கு இடமின்றி, நம்மொடு பழகுவார்க்கும் உலகத்துக்கும் விடுதலை வழங்குகின்றோம். இங்ஙன் உலகப் புற நாணயத்தையும் ஒருத்தன் அக நாணயத்தையும், சூல் கொண்ட பெண்ணின் உணவுபோல, ஒருங்கு வளர்த்துக் காக்கும் தனியாற்றல் பொய்யில் சொல்லுக்கு அன்றிப் பிற எவ்வறத்திற்கும் வாய்க்கவில்லை யாதலின், யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை; எனைத்தொன்றும் வாய்மையின் நல்ல பிற (300) என்ற வள்ளுவப் பெருநெறி வகுத்தார். பல்வேறு உலகச் சூழ்நிலையால் கொடிகள்போல் சிக்கல்கள் இயற்கையாகவே மாட்டிக் கொள்கின்றன. மெய் வழிச்செல்லின் அவைகள் தாமாகவே பிரிந்து நீங்கிப்போம். அங்ஙன் செல்லாது மக்களினம் பொய் வழிப்புகுந்து, இயற்கைச் சிக்குக்களை அவிழ்க்க வாராச் செயற்கை முடிச்சுக்களாக - கொலைவாள் கொண்டு அறுக்க வேண்டும் படுமுடிச்சுக்களாக - போட்டுக்கொள்கின்றது. வாய்மையைப் பலபடியால் விளங்க விரிக்கும் இவ்வமையத்து, நம் காலப் போக்கைச் சிறிது உடன் எண்ணுமின்! இந் நூற்றாண்டு செய்திப் பரவல் மிக்குடையது. செய்தி வெளியீடுகள் நிரம்பப்பெற்றது ஒருவர் சொற் பொழிவில் தமக்கு ஏற்ற பகுதியை மட்டும் வெளியிட்டுக் கொள்வதும், மறுப்பு எழுத விரும்பும்போது ஒவ்வாப் பகுதியை மட்டும் போட்டுக் கொள்வதும், இடையிடையே பிரித்துக் கலைத்து வெளியிடலும், சொல்லிய சொற்களைத் திரித்து வெளியிடலும், சொல்லியிருப்பர் என்று தம் எண்ணத்தை வெளியிடலும், செய்திகளை முந்தித் தருகின்றோம் என்று பெயர் வாங்க, ஊர்ப்பேச்சுக்களை ஒருவர் பேச்சாக வெளி யிடலும் எனவாங்கு செய்தித் தாள்கள் பல செய்யும் கொடுங் கோன்மைகள் எண்ணிறந்தன. அதனாலன்றோ, யான் அங்ஙன் கூறிற்றிலேன், யான் கூறிய கருத்து இது என்றவாறு மறுப்பு அறிக்கைகளும் நாள்தொறும் வருகின்றன. முன் சொல்லியபடி, இன்றியமையாச் செய்தித்தாள் நிலை பொய்க்குப் பெரும்புகலிடமாயின. உடன்பட்டோ மறுத்தோ, தம் கருத்தை வரைதற்கென ஆசிரியப் பகுதி ஒன்று இருத்தலால், தாளாசிரியர்கள் என் செயல் தகும்? செய்தித் தலைப்புக்களைச் செய்திச் சொற்களிலிருந்தே எடுத்தாள வேண்டும். இந்நன்முறை தழுவாது, என் செய்ப? தம் கருத்துக்கு ஏற்பத் தலைப்புக் கொடுத்துக்கொண்டு, இதழ் கற்பவர் மனத்தைத் தொடக்க முதலே திரித்துச் செய்திகளைப் படிக்க விடுப்ப. இவ்வெல்லாம் உண்மை நிகழ்ச்சிகள் பரவல் வேண்டும் என்ற செம்மை இல்லாமல், தம் கருத்தே பரவல் வேண்டும் என்னும் அவாவால் விளையும் முறைகேடுகள், பல்வேறு நுண்கருவிகளால் ஞாலமெல்லாம் செய்திகள் விரைந்து பரவும் இக்காலத்து, அரசியல் எழுச்சி காரணமாய் யாரும் விரும்பியாங்கு எழுதவும் பேசவும் உரிமைகள் வழங்கப்பெற்ற இக்காலத்து, கொள்கைத் துடிப்பு முதிர்ந்தோங்கும் இக்காலத்து, சொல்லாகுக; எழுத்தாகுக; வினைத்துறை யாதாகுக; தன் நெஞ்சு அறியப் பொய்யா வாய்மைப் பெருமகனே உலகத் தொண்டன் ஆவான் என்பது என் பாராட்டுரை. வாய்மையின் நலங்கள் இனைய வென அளக்க லாகாமையானும், பொய்யா வொழுக்கம் மக்களாய்ப் பிறந்த மனமுடையார் ஒவ்வொருவர்க்கும் இன்றியமையாமை யானும், திருக்குறளாசான் இறைநெறியைப் பொய்தீர் ஒழுக்கநெறி (6) யாகக் கண்டு காட்டினார். மெய்ம்மைச் செல்வர்களே! வள்ளுவர் கண்ட வாய்மையிலக்கணம் இதுகாறும் செய்த விளக்கத்தால் முற்றுப்பெறவில்லை. இனி விளக்க எஞ்சி நிற்கும் சிறந்த பகுதி ஒன்று உண்டு. வாய்மைக் குறள் பத்துள் இது வரை எட்டுக் குறள்களே எடுத்தாளப்பட்டன. இனி ஆளவேண்டும் சிறந்த குறள்கள் இரண்டு உள. அவை யாவன; வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும் தீமை யிலாத சொலல் (291) பொய்ம்மையும் வாய்மை இடத்த; புரைதீர்ந்த நன்மை பயக்கும் எனின் (292) இவற்றுள் பொதிந்து கிடக்கும் வள்ளுவ நெஞ்சங்கள் பல. ஒவ்வொன்றாகக் காண்போம். மக்கள் தம்முள் உறவுநிலை ஒரே அளவினதாக இல்லை. நட்பு எனினும் நொதுமல் எனினும் பகை எனினும் அவற்றுள் எண்ணிறந்த ஏற்றத் தாழ்வுகள் உள. இற்றை நட்பினர் நாளைப் பகையாகுவர். பகையினர் நாளை நட்பாகுவர். ஒருவன் தன் உறவு நிலைக்கு ஏற்பப் பழகுவாரிடம் நெஞ்சு திறந்து சொல்கின்றான். இருவர் கூடுங்கால், மூன்றாமவரைப்பற்றிக் குற்ற நற்றம் பேசுவதே பெரிய உலகியல்பாகக் காண்கின்றோம். நீவிர் இருவீரும் உரையாடிய கருத்து என்ன? அவன் என்னைப்பற்றி உன்பால் யாது கூறினான்? என்று மூன்றாமவன் வினவுவதும் நாள் வழக்காகக் காண்கின்றோம். இந்நிலையில் உரையாடலை எங்ஙன் வெளியிடுவது? நம்பாற் கொண்ட நம்பிக்கை காரணமாக, ஒருவன் தனக்குப் பிடியாப் பிறனைப்பற்றி இழித்தும் வைதும் நம்மிடத்துப் பகர்கின்றான்; உணர்ச்சியால் உந்தப்பட்டுக் கண்டவாறு பெருமொழி தூற்றுகின்றான். நம்பி ஒருவன் சொல்லி வைத்த மறைபொருள்களைப் பிறர் அறியச் செய்வது கயமை யாதல்போல, பழக்க வயத்தால் நம்மை நம்பி ஒருவன் பலவாறு கொட்டிய சொற்களை அப்படியே ஏனையோர்க்கு எடுத்துரைப்பதும் கயமையாகும். சொன்னதனைச் சொல்லியாங்கு மற்றோர்க்குச் சொல்லுதல் நிகழ்ந்தது கூறும் உண்மையாயினும், ஒரு சொல் காலம், இடம், ஆள் மாறும்போது பொருளால் பெரும்பாலும் திரிவுபடும். நிகழ்ந்தது என்ற ஒன்றை மட்டும் வாய்மையின் முடிந்த இலக்கணமாகக் கொள்ளாமல், வேர் கெடாவாறு நாற்றுப் பறித்து நடுவதுபோல, சொல்லியவன் நெஞ்சக் கருத்து மாறாவாறு அவன் சொற்களைப் பிறர்க்குக் காட்டுவது வாய்மையின் முதல் இலக்கணமாகும். சொல்லிய வற்றை அச்சுபோல் நிகழ்ந்தாங்கு விளம்புவதால், அவன் உள்ளக் கருத்து மயங்கித் தோன்றுமெனின், சொல்பெயர்த்து உரைப்பதுதான் பொய்யாதான் கடன். மொழிபெயர்ப்புப் போலக் கருத்துப் பெயராச் சொற்பெயர்ப்பும் ஒழுக்கமே யாகும். தன் நெஞ்சை மறைப்பதுபோல் பிறர் நெஞ்சை மறைத்துக் காட்டலும் பொய்யன்றோ? வாய்மை எனப்படுவது கேவலம் இதழ் விரித்துச் சொல்லும் வாய்ச்சொல் அன்று. மனங்கலந்து வரும் அகச்சொல்; ஆதலின், நடந்த நிகழ்ச்சிகளாயினும், பிறர் சொல்லிய கிளவிகளாயினும், உட்பண்பு அழியாதபடி வெளிப்படுத்தல் வேண்டும் என்ற கருத்தால், யாதொன்றும் தீமையிலாத சொல் (291) என்றார். தீமை யிலாத சொலல் என்ற வள்ளுவத்தின் கண் பிறிதொரு குறிப்பும் உண்டு. உண்மையையும் பொய்யையும் வேண்டுழி வேண்டுழித் தேர்ந்து கொள்ளும் நிலையிலிகளே மக்களுட் பலராவர். தமக்கு நன்மை வருமெனின், பொய்யும் படைத்து மொழிவர்; பகைவனுக்குத் தீதுவரும் எனின். மெய்யும் பேச முற்படுவர். இன்னோர்க்கு நோக்கம் உண்மை மேலதன்று. மெய்யாக நிகழ்ந்தது என்பதனை அறச்சான்றாகக் கொண்டு மாற்றானுக்குத் தீமை விளைப்பதே நோக்கம். இங்ஙன் ஒரொருகால் உண்மை நிகழ்ச்சிக்குள் புகுந்து நின்று, வஞ்சனை செய்வதைத் தடுக்கத் துணிந்த ஆசான் தீமையிலாத சொல்லுதலே வாய்மை என்று இலக்கணம் வகுத்தார். தன் நெஞ்சு அறிவது பொய்யற்க (293) என்றும் வாய்மைக் கூறு பற்றிப் பிறர்க்குக் கேடு செய்யும் உண்மைக் கள்வர்கட்கு, தீமை யிலாத சொலல் (291) என்னும் வாய்மையின் பிறிதொரு கூறினையும் அறிவுறுத்தினார். இதனால் தன் நெஞ்சு அறிந்தவற்றுள் பிறர்க்குக் கேடில்லா மொழியே வாய்மை வள்ளுவம் ஆகும் என்பது தெளிவு. அன்பற்ற சொல்லினிமை இன்சொல் ஆகாதவாறு, மனக்கோட்டங் கொண்ட சொற்றூய்மை வாய்மை ஆகாது என அறிக. நிகழ்ந்தவற்றுள் தன் நெஞ்சு அறிந்ததும், பிறர்க்குத் தீமை அற்றதுமாய சொல் வாய்மையாம் என வரையறுத்த பொய்யில் புலவர், நூலோர் அதிரும்படி, நிகழாத நற்பொய்யும் வாய்மைப் பாலது என்று உலகம் வாழப் புரட்சிப் புத்தறம் நாட்டுவர். திருக்குறளகத்துத் தனியறத்துக்கு முரண்போலத் தோன்றும் இடமெல்லாம், மக்கட் பொதுநலம் உட்கொண்டு எழுந்த உலகவறங்கள் என்று முன்னைச் சொற்பொழிவில் எண்பித்தேன். அதனை ஈண்டு நினைவு கொள்க. தீமையிலாத சொலல் என வாய்மைக்குக் கீழெல்லைப் பயன் மொழியும் ஆசான், புரை தீர்ந்த நன்மை பயக்கும் எனின் என்று வாய்மைப் போலிக்கு மேலெல்லைப் பயன் வேண்டுவதும் நினையத்தகும். பொய்யால் தனக்கு வரும் நன்மை குற்றப்பட்டது; ஆதலின், தன்னின் நீங்கிய உலகப் பிறநலமே புரைதீர்ந்த நன்மையாம் என்பது வெளிப்படை. வளர்ப்பு மகன் வயிற்று மகன் ஆய்விடான் என்பதுபோல, நன்மை தரும் பொய்யேயாயினும், வாய்மைப் பெயர் அதற்கு இல்லை என்று அறிவிப்பான், பொய்ம்மையும் வாய்மை யிடத்த எனச் செயற்கை யுரிமை சுட்டினார். வாய்மையிடத்த என்ற அயன்மைச் சொற்குறிப்பால், இப்பொய்யும் மெய்யாக நீடித்திராது, உரிய பொய்யேயாய்ப் பின்னொரு ஞான்று விளங்கித் தோன்றும் என்பது கருத்தாயிற்று. மேலும் இடத்த என்ற பன்மை முடிபால், மாசற்ற பிற நலம் நோக்கிக் கொள்ளக் கிடக்கும் புறப் பொய்ம்மைகள் பலவுள என்பதும் குறிப்பாயிற்று. கடிது ஓச்சி மெல்ல எறிக (562), கடாஅ உருவொடு கண் அஞ்சாது (585), துறந்தார் படிவத்த ராகி (587), தானை படைத்தகையால் பாடு பெறும் (768) என்பன திருக்குறள் காட்டும் தூய பொய் யிடங்கள். இப்பொது நலப் பொய்ம்மை இன்றியமையாதது என்பது நடைமுறைக் கண்ணாளர்க்குப் புலனாகும். காந்திப் பெருமகனாரை மாலை ஐந்து மணிக்கு ஒருவன் சுட்டுக் கொன்றான். பிரிவினையால் இந்து முசுலீம் வெறி பெருகியிருந்த காலத்து, இப்பெரு நிகழ்ச்சி நடந்தது. கொன்றவன் மகமதியனோ என்று இந்துக்கள் சினந்தனர். நம்மவனோ என்று மகமதியர்கள் உயிர் கலங்கினர்; ஓடி மறைந்து கொண்டனர். இக்குழப்ப நிலையில், கொன்றவன் இந்து என்றும், அவன் பெயர் கொடுசேய் என்றும் வானொலி விரைந்தோடிப் பரக்க அறிவித்தது. அதனால், இந்திய நாடு பேரழிவு எய்தாது கொலைப்பெருக்கம் இன்றி அமைதி யடைந்தது. கற்பனைக் கண்ணால் சிறிது நோக்குமின்! கொன்றவன் மகமதியனாக இருந்தானேல், அச்செய்தி உடனே வெளியிடற்கு உரியதா? ஐயமாக வேனும் அறிவித்தற்கு உரியதா? மதம் கிடக்க, அவன் பெயர் தானும் கூறற்கு உரியதா? மகமதியனாக இருந்தானேல் உண்மை சொல்லாது, மக்கள் நம்புமாறு, அரசு தன் நெஞ்சு அறியப் பொய் சொல்லுமேல், அது நாட்டன்பினரால் வரவேற்கத் தக்கது அன்றோ? காந்தியடிகள் மாய்ந்த கவலை தணிந்து, திங்கள் பலவாகியபின், கொலையாளி இவன் என உண்மை வெளியிடுவது பொதுப் பேரறம் அன்றோ? தீமையிலாத சொலல் (291), புரைதீர்ந்த நன்மை பயக்கும் எனின் பொய்ம்மையும் வாய்மை யிடத்த (292) என்ற இருகுறட் கண்ணும் மறைந்து கிடக்கும் ஆசான் நெஞ்சங்களைப் பிறழாது உணர்தல் நம் ஒழுக்கமாகும். மயங்கிப் பிறழ்வோமேல், வள்ளுவக் கொலை செய்த பெருங் குற்றப்படுவோம். எடுத்ததற்கெல்லாம் பொய் பகரலாம் என்று இழுக்குப்பட்டு, ஆசான் தாம் மெய்யாக்கண்ட உலகத் தனிப்பெரு நெறியை இகழ்ந்தவராவோம். ஈண்டு தீமை நன்மை என்பவை பிறர்க்குத் தீமை, பிறர்க்கு நன்மை என்ற பொருளன. பிறர் தீமை சொல்லா நலத்தது சால்பு (984) என்பது காண்க. தன் தீது மறைத்துச் சொல்லலும், தன் நன்மைக்கு இல்லது கூறலும் எக்காரணத்தானும் வாய்மையாகா. ஒருவன் தனக்கு ஆக்கம் கெடினும், அழிவு தலைவரினும், கலங்காத் திண்மையால் ஒழுக்கம் காக்கவேண்டும் என்பது வள்ளுவம். உயிர் நீப்பர் மானம் வரின் (969), தன்னுயிர் நீப்பினும் செய்யற்க (327), புறங்கூறிப் பொய்த்து உயிர் வாழ்தலின் (183), உற்றநோய் நோன்றல் (261), ஒப்புரவினால் வருங்கேடு எனின் (220) என்ற பகுதிகளால் எனைப் புறப்பலி செய்தும், ஒருவன் தற்பண்பு ஓம்புவானாக என்று தனியறம் கரைவர். ஆதலின், இங்குச் சொல்லப்படும் தீமையும் நன்மையும் பிறரைச் சார்ந்தன என்பது வெள்ளிடை மலை ஒன்றாக நல்லது கொல்லாமை; மற்றதன் பின்சாரப் பொய்யாமை நன்று (323) இக்குறளால் தலைசிறந்த ஈரறங்கட்கும் உரிய தொடர்பு விளக்குவர். கொல்லாமை திரிபற்ற அறம் என்றும், வாய்மை மெய்யும் பொய்யும் ஆகிய திரிபுடையது என்றும் ஒருசாரார் கருத்து விளக்கிக் கொல்லா அறத்துக்கு முதலிடம் நிறுவுவர். கொலையிற் கொடியாரை வேந்து ஒறுத்தல் (550) என்ற குறட் பகுதியானும், படைமாட்சி அதிகாரத்தானும் கொல்லாமையும் திரிபுடையது என்று அறிகின்றோம். கோறலும் அரசற்குச் சாதி தருமம் என்பர் பரிமேலழகர். ஆகலான், புரைதீர்ந்த நன்மை பயக்குங் காலைப் பொய் வாய்மையாதல்போலக் கொலையும் கொல்லா அறப்பாற்படும்; ஒறுத்தல் என்ற பெயர் பெறும். கொல்லாமை முதலறம்; வாய்மை இரண்டாம் தரத்தது என மேல்கீழ் தெரிந்தோதுதல் இக்குறட்கருத்தன்று. வாய்மை யால் கொலை நிகழும் எனின், எங்ஙன் நடந்து கொள்வது? என நடைமுறைச் சிக்கலை அறுக்க வந்தது இக்குறள். முன் விளக்கியாங்கு, வாய்மைக்குச் செவ்விய தன் நெஞ்சு நிலைக் களம் ஆவதன்றி செவ்விய முற்றறிவு நிலைக்களம் ஆவதில்லை. ஆதலின், மனம் அறிந்த ஒன்று பின்னொருகால் பொய்யாதலும் உண்டன்றோ? அறிவுத் தூய்மையொடு பொருந்தா வாய்மையால் ஒருவன் கொல்லுண்ட வழி, பின்னர் அவ்வாய்மை அறியாமை என்று காணின், சென்ற உயிர் மீண்டு வருங்கொல்? பொற்கொல்லன் சொல்லை நம்பிச் செங்கோற் பாண்டியன் கள்ளாக் கோவலனைக் கொன்றான். அவன் கொல் பொய்யென உணர்ந்த பின்றை, யானோ அரசன் யானே கள்வன் என மானத்தால் தன்னுயிர் வழங்க முடிந்ததேயன்றி, வாங்கிய கண்ணகி தன் கொழுநன் உயிரைக் கொடுக்க முடிந்தது கொல்? தன் நெஞ்சு அறிந்த வாய்மையால் ஒரோவழி விளையும் பிற கெடுதல்களை யெல்லாம் மக்கள் நிரவல் செய்து கொள்வர்; உயிர் நீக்கத்திற்கு என் செய்வர்? ஆதலானன்றோ, பிறர் சான்றுகளை நம்பி உயிர்த் தீர்ப்புக் கூறாது, அறக்களத்து நடுவர்கள், பெருங் குற்றத்தானுக்கும் ஆயுட் சிறைத் தீர்ப்பு வழங்குப. அதன் பின்சாரப் பொய்யாமை நன்று (323) என்பதன் கருத்து. கொலைக்கு ஏதுவாகுமெனின், தன் நெஞ்சறிந்த வாய்மையையும் தூயது என்று நம்பற்க. கொல்லா அறத்துக்குச் சார்புடைய பொய்யாமையே காண். யாம் மெய்யாக் கண்டவற்றுள் நல்லது என்றவாறாம். இவ்விளக்கத் தால், புரைதீர்ந்த நன்மை (292) என்றவிடத்து அந்நன்மை யாவது பிற வுயிர்க் கொலையின்மை என்பது சிறந்த குறிப்பாயிற்று. கொலை நேரும் எனின், நிகழ்ந்த வாய்மையை யும் விட்டொ ழிக்க; நிகழாப் பொய்ம்மையையும் பற்றிக் கொள்க என்பது பொய்யா வள்ளுவம். நூலறம் கூறாது, வாழ்வறம் கூறுவது ஆசான் நெஞ்சம் என்பது இதனானும் வலியுறும். கொல்லாமை சால்பறமே யன்றிச் செயலறம் அன்று, நடவாதபடி நினையத்தகும் தலையறமேயன்றி, நாள் வாழ்க்கையில் வினை தோறும் யாரும் கடைப்பிடிக்கத் தக்கதாகும் நடப்பறம் அன்று. கொலைக் குற்றம் பெரிதேனும், அதனைச் செய்வார் விரல் எண்ணிக்கைக்குள் அடங்கும் சிலரேயாவர். தன்னைப் பற்றிய உயிரச்சத்தால், எல்லா மக்கள் பாலும் கொல்லாவறம் இயல்பாக அமைந்து கிடப்பது பொய்க் குற்றமோ எனின், குழவி முதல் கிழவர் வரை ஒழுக்கமில்லா யார் பாலும், எத்துறைக்கண்ணும் பரந்து காணப்படுவது; மேலும் நினைப்பளவில் நிகழ்தற்கு இடமாவது சிலரே செய்தலின், கொலையும் அடியும் களவும் மன்றேறும் குற்றங்களாக உள்ளன. பொய் எல்லார்தம் பாலும் காணப்படுதலின், பொய்யாளன் என்று வழக்காடுவார் இலர். யான் கல்லாதவன் என இந்நாட்டில் சொல்ல நாணுவார் ஒருவர் உண்டோ? கல்லாதார் தொகை நிரம்பி யிருப்பதே. இந்நாணின்மைக்குக் காரணம். பெருவாரியான மக்கள் இழைக்கும் பொதுக் குற்றத்துக்குப் பழியும் இல்லை; நாணத் துடிப்பும் இல்லை. பொய்ம்மை இங்ஙன் ஐயகோ! உலக வழக்கு ஆயிற்று. தன்நெஞ்சு அறிவது பொய்யற்க; பொய்த்தபின் தன்நெஞ்சே தன்னைச் சுடும் (923) என்றபடி, உள்ளத்துக்கு உணர்ச்சிப்பதம் வேண்டுவது வள்ளுவம். நெருப்புச் சூட்டினைப் பொருட்படுத்தாச் சமையலாளி கைத்திறம் நிகர்ப்ப, பொய் சொல்லிச் சொல்லி நம் மெல்லிய நெஞ்சு காய்த்துக் கன்றி விட்டது. நீர்மறை, நெருப்புமறை, பருவமறைப் பொருள்கள் போல, நம் உள்ளம் உணர்ச்சி மறையாயிற்று. தீக்கொழுந்து படாமுன் செந்தளிர் சுருங்குமாப் போலே, மக்கள் மனம் பொய்க்குமுன் நாணிச் சுருளவில்லை. வழக்கிற் சொல்லுமாங்கு, சூடு சுரணை நமக்குப் பிறக்கவில்லை. அங்ஙன் நெஞ்சு தன்னைச் சுடும் என்ற பொய்யில் மொழியையும் நாணிலிகளாகிய நாம் பொய்யாக்கி விட்டோம். உலகமெங்கும் அறம் போலப் பொய் பெருகி நிற்றலானும், நாமும் பொய்த்துப் பொய்த்துப் பல்கால் பயின்று விட்டமையானும், வாய்மையின் இன்றியமை யாமையைப் புறக்கணித்து விட்டோம்; மறந்தொழிந்தோம். பொய்ப் புற்றுநோயால் ஞாலமும் மக்களும் உள்ளழியும் தீமைக்கு ஓரளவில்லை. எண்ணிக்கைப் பெருக்கத்தால் பொய் அறமாகி விடாது; உண்மையாகாது. இன்ன உலக நிலையில், நாமெல்லாம் மீண்டும் வாய்மைப் பெருமையை உணரவேண்டியும், சூட்டுணர்ச்சி போற்றல் வேண்டியும், பொய்யா வாழ்க்கை ஒழுகல் வேண்டியும், யாம் மெய்யாக் கண்டவற்றுள் எனைத் தொன்றும் வாய்மையின் நல்ல பிற இல்லை என்று தற்சான்று நடையில் நாளறம் யாப்புறுத்தினார் வள்ளுவர் எனத் துணிக. உடன் பிறந்தீர்! நம் வாழ்க்கைநிலை யாது? நாம் முழுதும் கெட்டவர்களோ எனின், இல்லை; முழு நல்லவர்களோ எனின், அதுவும் இல்லை. அன்பு, அருள், ஈகை, செய்ந்நன்றி யறிவு, அடக்கம், இன்சொல் முதலாய குணங்களும் உடையோம். புறங்கூறல், பயனில சொல்லல், பொய்த்தல், சினத்தல், வெஃகல் முதலாய குற்றங்களும் உடையேயாம். மக்களுள் ஒருத்தரைக்கூட முழுத்தீயர் என்று காட்ட ஒல்லுங் கொல்? நம்புமின்! மெய்யாகத் துணிமின்! நாம் அனைத்துப் பண்புக் கருவும் பெற்றுளோம். நல்லறத்தின் வித்தெல்லாம் நம் நெஞ்சக்களத்து உள. இச்சால்புகள் நம் வாழ்வில் அடிக்கடி புலனாகின்றன; ஆனால் என்றும் நிலையாகக் காணோம். நன்றும் தீதும் இயைந்த கலப்பொழுக்கம் நடத்து கின்றோமே யன்றி, பண்பே சான்ற தனி நல்லொழுக்கம் மேற்கொண்டோம் அல்லோம். வேண்டுங்கால் குணமோ குற்றமோ தழுவும் நிலையிலிகள் ஆய்விட்டோமே யன்றி, குணமே பற்றி ஒழுகும் குறிக்கோளிகள் ஆனோமல்லோம். சுருங்கச்சொலின், நமக்கு வேண்டுவது ஒழுக்கம் - இடையறா நற்செயல் - என்பது வள்ளுவம். ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும் (131) என்ற குறட் குறிப்பு யாது? இடையிடையே ஒரொரு கால் கொள்ளும் எனைப் பண்பும், குற்றுயிர் போலக் குற்றொழுக்கு ஆவதன்றி முற்றொழுக்கு ஆகா. வாழ்வுக்கு இடையறவுபடா உயிர்நிலை ஒப்ப, அற்றற்றுப் போகா நீடிய ஒழுக்கநிலை இன்றியமையாதது எனச் சுட்டுவர். ஊழ் அதிகாரத்து ஒழுக்கம் பற்றி ஆசிரியர் யாதும் கூறினாரல்லர். புறச் சூழ்நிலை ஆகூழ் ஆகுக; போகூழ் ஆகுக. அவை ஒருவன் புறவாழ்க்கைக்குக் காரணம் ஆவதன்றி, அகப் பண்புக்குப் பற்றாகா அகம் ஒருவன் தன்னுடைமை. ஒழுக்கம் ஒருவன் தற்பண்பு உள்ளம் கெடினும், ஒழுக்கம் இழுக்கினும், அவ்விழுக்கக்கேடு அவன் தானே ஆக்கிக் கொண்டது என்பதன்றிப் புறவூழ் அங்ஙன் செய்துவிட்டது என்பது ஏமாற்றுரை. செல்வத்துக்கும் ஊழுக்கும் தொடர்பு உண்டு; அறிவுக்கும் ஊழுக்குமோ எனின், நேரடி இயற்கைத் தொடர்பு இல்லை. அகமுடையான் உரமின்றி அறிவின்றி ஊக்கமின்றி ஊழுக்கு வழிமொழிந்து இடங்கொடுப்பானாயின், அவ்வழி தீயூழ் ஒழுக்கத்தைக் கெடுக்கவாற்றாகும். அங்ஙன் கெடுக்க வளைந்து கொடாவாறு, பரிந்து ஓம்பிக் காக்க ஒழுக்கம் (132) என்று தன்னுரிமைக் காப்பு வேண்டுவர். இதுகாறும் நாம் ஒழுக்கம் பிழைத்திருந்தோமாயினும் கழிந்த நிலை குறித்து இரங்கிக் கொண்டிருக்க வேண்டா. இதுகாறும் தீய துறைகளில் கன்றிய பழக்கமுடையோம் ஆயினும், அப்பழக்கத்தை விடமுடியாப் பற்றாகக் காமுற வேண்டா. எற்றென்று இரங்குவ செய்யற்க; செய்வானேல் மற்றன்ன செய்யாமை நன்று (655) என்பது ஆசான் வேண்டுகோள். அறிவு திடீரெனப் பெறுதற்கு இயலா வளர்ச்சிப் பொருள். அதனைக் கல்வியாலும் பயிற்சியாலும் சிறுகச் சிறுகவே பெருக்கிக் கொள்ளல் வேண்டும். ஒழுக்கப் பேறு அறிவுப் பேறு போல்வதன்று. எண்ணம் ஒன்று நமக்குத் திண்ணிதாகி விடுமேல் ஒரு நொடிப் பொழுதில் எனைத் தீயமனமும் மாறி ஒழுக்கச் சான்றோர் ஆகப் பெறுவோம். எண்ண மாற்றத்தால் ஒருத்தன் வாழ்க்கையிலும் உலக நடப்பிலும் நிகழும் செயல் மாற்றங்கள் பலப்பல. மடியன் செல்வன் ஆதலும், ஈயாதான் வள்ளல் ஆதலும், கல்லாதான் அறிஞன் ஆதலும், பகைவன் உயிர் நண்பன் ஆதலும், கொலைஞன் பேரன்பன் ஆதலும், ஒரு நல் எண்ணப் புரட்சியால் எழும் இயற்கை வினைகள் அல்லவா? இன்று முதல் எதற்கும் பொய்யேன் என்ற ஒரு நினைவு நெஞ்சுள் விழுந்து ஆழப் பதிந்து விடுமேல், உயிர் இழப்பதாயினும் காதல் போல வாய்மை காப்போம் அன்றோ? எண்ணம் மட்டும் இருந்துவிட்டால், நீடிய ஒழுக்கம். யாரும் கொள்ளற்கு உரியது; எளியது; அகத்தது; அரிய விழுப்பம் தருவது. வாழ்க்கைத் தோழர்களே! இறுதியாக, ஒரு வள்ளுவம் கேண்மின்! மக்கள்பால் ஆசான் கண்டறிந்த பெருங் குறை ஒன்று உளது. அக்குறை தீர்ந்தாலல்லது வாழ்வுக்கு முன்னேற்றம் இல்லை. கல்வி அறிவு செல்வங்கள் வேண்டும் என்ற எண்ணம் நமக்கு உண்டு. ஊக்கம் முயற்சி மடியாமை வேண்டும் என்ற எண்ணம் நமக்கு உண்டு. தூய்மை, வாய்மை, சால்புகள் வேண்டும் என்ற எண்ணம் நமக்கு உண்டு. நல்லவை யெல்லாம் வேண்டும் என்ற எண்ணம் நமக்கு உண்டு. எண்ணிய எண்ணியாங்கு எய்தல் வேண்டும் என்ற பேரெண்ணம் நமக்கு உண்டு. இவ்வெண்ண மெல்லாம் நிரம்பி வழியும் நமக்கு, நன்கு ஊன்றிக் கொள்மின்! எண்ணத் திட்பம் இல்லை, இல்லை, இல்லை எண்ணியதை மீண்டும் மீண்டும் பெருக்கல் வாய்ப்பாடு போல் நினைவுக்குக் கொண்டு வரும் எண்ணப் பயிற்சி இல்லை. உள்ளத்தால் உள்ளிய எனைச் சிறுபெருஞ் செயலையும் திரும்பத் திரும்ப உள்ளிக் கொள்ளும் உறைப்பு இல்லை. விரும்பிய ஒரு குணத்தைக் குறிக்கோளாகத் தேர்ந்து வைத்துக் கொண்டு, அதனைப் பல்காலும் பயிலும் செயற்கோள் இல்லை. கோளற்ற, செயலற்ற, முறையற்ற வாழ்க்கையாகத் தள்ளிக் கொண்டு, இறப்பு நோக்கிச் செல்கின்றோம். உரம்போடா நல்வித்து விளையாமை போல, திட்பம் இல்லா எண்ணம் செயலாதல் இன்று. நெஞ்சுரம் அற்ற மகன் நினையும் எண்ணம் பேடிகை வாள் ஒக்கும். திண்மை பெறா எண்ணாளன் வாழ்வு விரியாது சுருங்கும்; ஆதலின் வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம் (661) என்பர். இத்திட்ப வள்ளுவத்தை நினைக! நினைக ! என்று நும்மைப் பன்மாணும் இரப்பன். இனிய நண்பர்களே! வணக்கம். ஆறிரண்டு நாட்களாகப் பன்னிரண்டு வள்ளுவப் பொழிவுகளை மனம் திறந்து கேட்டீர்கள். செயலுக்கு வரும் அறங்கரைவது திருக்குறள்; மக்கள் வாழ வழி வகுப்பது திருக்குறள்; பல நிலையறம் தழுவியது திருக்குறள்; எந்நிலைய மாந்தரையும் முன்னேற்றுவது திருக்குறள்; உலகு ஒட்டும் நெறி காட்டுவது திருக்குறள்; ஒருவன் வாழ்க்கை அவனைப் பொறுத்தது என்ற உண்மை அறைவது திருக்குறள். இளைய வள்ளுவ அடிப்படைகளையெல்லாம் அறிந்தீர்கள். மனத்தூய்மை, அயரா முயற்சி, அறிவாட்சி, பொய்யா வாய்மை, எண்ணத்திண்மை, குறிக்கோள் வாழ்க்கை, இடையறா ஒழுக்கச் செயல் எனவாங்கு பல்வேறு வள்ளுவங்களைத் தெளிந்தீர்கள். இனி, கற்றபின் நிற்க (391) என்ற உலகத் தமிழாசான் நெஞ்சம் நம் நெஞ்சம் ஆகுக. புகழ்ந்தவை போற்றிச் செயல் வேண்டும் (538) என்ற மக்கட் பெருமகனார் நெஞ்சம் நம் நெஞ்சம் ஆகுக. துளங்காது தூக்கங் கடிந்து செயல் (368) என்ற திருவள்ளுவர் நெஞ்சம் நம் நெஞ்சம் ஆகுக.  மூதறிஞர் செம்மல் வ.சுப. மாணிக்கனாரின் வாழ்க்கைக் குறிப்பு வாய்மை வாழ்வு வாய்மை வாழ்வைத் தன் வரலாறாகக் கொண்டு வாழ்ந்தவர் தமிழ்ச் செம்மல் மூதறிஞர் வ.சுப. மாணிக்கனார். வாய்மை, தூய்மை, நேர்மை, எளிமை என்ற நான்கு நிலைகளையும் தன் அக வாழ்விலும் புற வாழ்விலும் கடைப்பிடியாய்க் கொண்ட குறிக்கோளர். வள்ளல் பாரியும் வாய்மொழிக் கபிலரும் வாழ்ந்த பறம்பு மலைப் பகுதியைச் சார்ந்த ஊராகிய, புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த மேலைச்சிவபுரி, தமிழ்நாட்டு சபைகளுள் தொன்மையும் தொண்டுஞ் சிறந்த சன்மார்க்க சபை அமைந்த ஊர் என்பதோடு, அந்தச் சபை நிறுவுவதற்குப் பெருங்காரணமாக இருந்த பண்டிதமணியாரின் மாணவர் வ.சுப. மாணிக்கனார் பிறந்த ஊர் என்ற பெருமையையும் தரித்துக்கொண்டது. 17.4.1917 இல் வ.சுப்பையா செட்டியாருக்கும் தெய்வானை ஆச்சிக்கும் மகனாய்த் தோன்றினார். அண்ணாமலை என்பது இவரது இயற்பெயர். பின், மாணிக்கம் என அழைக்கப்பட்டார். நகரத்தார் குல மாணிக்கமாக, தமிழ் மாணிக்கமாகத் திகழ்ந்தார். பெற்றோர் இருவரையும் சிற்றிளம் பருவத்தே இழந்து, வறுமை யுற்ற நிலையில் பதினோராவது வயதில் பருமா சென்று வட்டிக் கடையில் சிறுகணக்கனாகச் சில ஆண்டுகள் பணிசெய்தார். ஒரு நாள் கடையில் சோதனைக்கு வந்த அதிகாரியிடம் தான் ஊரில் இல்லை எனக் கடை முதலாளி சொல்லச் சொன்னபோது, `அப்படிப் பொய் சொல்ல முடியாது என மறுத்துப் பேசவே, வேலை இழந்து ஊருக்குத் திருப்பி அனுப்பப்பட்டார். பெற்ற கல்வி பொருள் முட்டுப்பாட்டோடு, அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தமிழ்ப் புலவர் வகுப்பில் சேர்ந்து பட்டம் பெற்று, அதே பல்கலைக்கழகத்தில் ஆய்வாளனாகவும் ஆசிரியனாகவும் பணியேற்றார். விடா முயற்சி கொண்டு பி.ஓ.எல்., எம்.ஓ.எல்., எம்.ஏ., பிஎச்.டி போன்ற பல பட்டங்களைப் பெற்றார். காரைக்குடி அழகப்பா கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றத் தொடங்கி, துறைத் தலைவராகவும் கல்லூரி முதல்வராகவும் உயர்ந்தார். மீண்டும் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் இணைந்தார், முத்துறை இணைந்த இந்திய மொழிப்புலத் தலைவராக. பட்டங்களும் விருதுகளும் செம்மல், முதுபெரும் புலவர், பெருந்தமிழ்க் காவலர், முதுமுனைவர் (டி.லிட்), முதுபேராய்வாளர், திருவள்ளுவர் விருது, தொல்காப்பியத் தகைஞர் ஆகிய பல பட்டங்களைப் பெற்றார். வள்ளுவத்தின் மீது இவர் கொண்ட ஈடுபாடு, அதை வாழ்வுநூலாய் நிலைநிறுத்திய எழுத்துத்திறம் ஆகியவற்றை அங்கீகரிக்கும் விதத்தில் தமிழக அரசு திருவள்ளுவர் விருது வழங்கி கௌரவித்தது. மாணிக்கத் தலைமை காரைக்குடித் தமிழ்ச் சங்கம், காரைக்குடித் தமிழ் உயர் ஆராய்ச்சி மையம், தமிழ்ப் பல்கலைக்கழக வல்லுநர் குழு, புதுச்சேரி பல்கலைக்கழகத் தமிழ்த்துறை வல்லுநர் குழு, தமிழகப் புலவர் குழு, அனைத்திந்தியப் பல்கலைக்கழக ஆசிரியர் மன்றம், மேலைச்சிவபுரி சன்மார்க்க சபைக் கல்லூரிக் குழு, பண்டிதமணி மு. கதிரேசனாரின் நூற்றாண்டு விழாக் குழு ஆகியவற்றுக்குத் தலைமை கொண்டதோடு, தமிழ்நாடு தெய்வீகப் பேரவை அறிவுறைஞராகவும், தமிழ்வழிக் கல்வி இயக்க நிறுவனராகவும் விளங்கினார். தில்லைத் திருக்கோவில் பொன்னம்பலத்தின்கண் திருமுறைகள் ஓதி வழிபடும் வாய்ப்பை ஏற்படுத்தியவராகவும் திகழ்ந்தார். பட்டங்களும் பதவிகளும் இவரைத் தேடி வந்து பெருமை சூடிக்கொண்டன. அரிய பட்டங்கள் பல பெற்றாலும் துணைவேந்தர் பதவிவரை வகித்தாலும் முறையான பள்ளிக்கல்வி பெறும் வாய்ப்பிழந்தவர் இவர். இழந்த வாய்ப்பை ஈடு செய்யும் வகையில் கடுமையாக உழைத்து, ஆழமாகப் படித்து, தமிழ்மொழி வானில் ஒளிவிடும் மாணிக்கமாய்ச் சுடர் வீசினார். மாணிக்கத் தமிழ் தமிழ் இலக்கிய உலகில் மிக உயரிய ஆய்வு நூல்களாகக் கருதப்பெறும் `தமிழ்க் காதல், `வள்ளுவம், `கம்பர் போன்றவை இவர்தம் உன்னதப் படைப்பாற்றலுக்குச் சான்று பகர்பவை. இவரது செம்மாந்த மொழி நடையும், வலுவான பழமைத் தளத்தில் புத்தம்புதியது சமைக்கும் புலமைத் திறனும், ஆழ்ந்து அகன்ற ஆய்வுப் போக்கும், புதிய சொல்லாக்கத் தரவுகளையும் வரவுகளையும் தமிழுக்குக் கொண்டுவந்து சேர்த்தன; அடுத்து வந்தவர்களும் பின்பற்றிப் போற்றும் மாணிக்கத் தமிழ் நடை, வழக்கிற்கு வந்தது. தமிழ்வழிக் கல்வி தமிழ்மீது கொண்ட அளப்பரிய அக்கறையாலும் ஈடுபாட்டாலும் தமிழ்வழிக் கல்வியைத் தன் இறுதி மூச்சுவரை வற்புறுத்திவந்தார். அதன் தொடக்க முயற்சியாக, மேலைச் சிவபுரியில் தமிழ்வழி மழலையர் பள்ளியை நிறுவினார். குடும்பம் ஆண் மூன்றும் பெண் மூன்றுமாக ஆறு குழந்தைகளைப் பெற்றுத்தந்த வாழ்க்கைத் துணை ஏகம்மை ஆச்சியுடன் அனைத்தையும் பகிர்ந்துகொண்டு வாழ்வாங்கு வாழ்ந்தவர். இவர் எண்ணங்களையும் எழுத்துக்களையும் செயல் வடிவமாக்கியவர் திருமதி ஏகம்மை மாணிக்கம் அவர்கள். ஆசிரியர்கள் தனக்கு குருவாக இருந்தவர்களை ஒளியாகவும் தெய்வத் தோற்றங்களாகவும் கண்டவர். தொடக்கப்பள்ளி ஆசிரியர் நடேச அய்யர், ஆங்கில ஆசிரியர் கோபாலன் நாயர், இந்தி ஆசிரியர் மு. கோ. வேங்கடகிருட்டிணன், வடமொழி ஆசான் பி.சி. இராமானுசாச்சாரியார், பிரெஞ்சு மொழியாளர் சிவப்பிரகாசம், ந.மு. வேங்கடசாமி நாட்டார், ரா. இராகவையங்கார், இராமசாமிப் புலவர், ரா. கந்தசாமி, ஆ. பூவராகன் பிள்ளை, மு. அருணாசலம் பிள்ளை ஆகியோரை நினைக்குங்கால் அச்சங் கலந்த பணிவு, அறிவு கலந்த நன்றியுணர்வு ஏற்படுவதாகக் குறிப்பிடுவார். இவர்களுள், உற்றுழி உதவிய பண்டிதமணி மு. கதிரேசன் செட்டியாரின் மீது இவர் கொண்ட பெருமதிப்பும் பேரன்பும் காரணமாகத் தன் காரைக்குடி இல்லத்திற்குக் `கதிரகம் எனப் பெயரிட்டு ஆசிரியரின் இல்லத்திற்குள்ளே வாழ்ந்தவர். மாணிக்க அறம் 1986இல் விருப்பமுறி எழுதினார். அதில் தம் சொத்துக்களில் ஆறில் ஒரு பங்கினை ஒதுக்கி, மேலைச் சிவபுரியில் ஒரு அறநிலை ஏற்படுத்தவும் அதில் வரும் வருமானத்தினைக் கல்வி, மருத்துவம், நலவாழ்வு, குழந்தைகள் நலன், அஃறிணை உயிர்களின் நலம் முதலான பொது நலங்களுக்குச் செலவிட வேண்டும் என்று எழுதிவைத்து, புதிய வள்ளலாராய்த் தன்னை வரலாற்றிற்கு அடையாளம் காட்டியவர் இந்த மாமனிதர். மாணிக்க விதை தமிழுக்குத் தொல்காப்பியத்தையும் வாழ்வின் உயர்வுக்குத் திருக்குறளையும் உயிர்த் தூய்மைக்குத் திருவாசகத்தையும் வழிகாட்டிய தமிழ் மறைகளென வாழ்ந்தவர் மாணிக்கனார். மேலைச்சிவபுரியில் உதித்து, அண்ணாமலையில் பூத்து, அழகப்பரிடம் காய்த்து, மதுரையில் பழுத்த மாங்கனி மாணிக்கம், தமிழ் நெஞ்சங்களில், 24.4.1989 திங்கட் கிழமையன்று, விதையாய் விழுந்து அமரத்துவம் கொண்டது. `கதிகரம் வ.சுப. மாணிக்கனாரின் மக்கள் காரைக்குடி 21.03.2016 வ.சுப. மாணிக்கனார் எழுதிய நூல்கள் காலநிரலில் தரப்பட்டுள்ளது 1. மனைவியின் உரிமை 1947 2. வள்ளுவம் 1953 3. கொடைவிளக்கு 1957 4. தொல்காப்பியப் புதுமை 1958 5. இரட்டைக் காப்பியங்கள் 1958 6. தமிழ்க்காதல் 1962 7. நெல்லிக்கனி 1962 8. The Tamil concept of Love 1962 9. Collected papers 1962 10. நகரத்தார் அறப்பட்டயங்கள் 1963 11. உரைநடையில் திருக்குறள் 1963 12. எந்தச் சிலம்பு 1964 13. கம்பர் 1965 14. தலைவர்களுக்கு 1965 15. இலக்கிய விளக்கம் 1972 16. உப்பங்கழி 1972 17. ஒருநொடியில் 1972 18. A Study of Tamil verbs 1972 19. சிந்தனைக் களங்கள் 1975 20. மாமலர்கள்(மாணிக்கனார் கவிதைகள்) 1978 21. தொல்காப்பியத்திறன் 1984 22. கம்பர் நாற்பது 1984 23. தொல்காப்பியக் கடல் 1987 24. திருக்குறட் சுடர் 1987 25. சங்கநெறி 1987 26. காப்பியப்பார்வை 1987 27. இலக்கியச்சாறு 1987 28. ஒப்பியல் நோக்கு 1987 29. தொல்காப்பியம் எழுத்ததிகாரமும் நூன்மரபும் 1990 30. மாணிக்கக்குறள் 1991 31. நீதி நூல்கள் 1991 32. Tamilology 33. தற்சிந்தனைகள் 2016 34. என் பொழிவுகள் 2017 பிற நூல்கள் 34. வ.சுப. மாணிக்கனார் போற்றிய விழுமியங்கள் 35. மாணிக்க ஆய்வியல் 36. மாணிக்கப் பேரொளி 37. தொல்காப்யிச் செல்வர் 38. மாணிக்கக் குறளில் மாணிக்கம் 39. மாணிக்கனாரின் கவிதைத் தமிழ் 40. தமிழ்ஞாயிறு வ.சுப. மாணிக்கனார் எழுதிய நூல்கள் பொருள்வழிப் பிரிக்கப்பட்டு - காலநிரலில் தரப்பட்டுள்ளது ஆய்வு நூல்கள் ஆண்டு 1. வள்ளுவம் 1953 2. தமிழ்க்காதல் 1962 3. கம்பர் 1965 4. தொல்காப்பியக் கடல் 1987 5. திருக்குறட் சுடர் 1987 6. சங்கநெறி 1987 7. காப்பியப்பார்வை 1987 8. இலக்கியச்சாறு 1987 9. ஒப்பியல் நோக்கு 1987 10. தொல்காப்பியப் புதுமை 1958 11. சிந்தனைக் களங்கள் 1975 12. எந்தச் சிலம்பு 1964 13. இலக்கிய விளக்கம் 1972 14. இரட்டைக் காப்பியங்கள் 1958 15. தொல்காப்பியத்திறன் 1984 நாடகங்கள் 16. மனைவியின் உரிமை 1947 17. நெல்லிக்கனி 1962 18. உப்பங்கழி 1972 19. ஒருநொடியில் 1972 கவிதைகள் 20. கொடைவிளக்கு 1957 21. மாமலர்கள்(மாணிக்கனார் கவிதைகள்) 1978 22. மணிக்குறள் 1991 23. என் பொழிவுகள் 2017 உரை 24. தொல்காப்பியம் எழுத்ததிகாரமும் நூன்மரபும் 1990 25. உரைநடையில் திருக்குறள் 1963 26. கம்பர் நாற்பது 1984 பிற வகைகள் 27. தலைவர்களுக்கு 1965 28. நீதி நூல்கள் 1991 29. நகரத்தார் அறப்பட்டயங்கள் 1963 ஆங்கில நூல்கள் 30. The Tamil concept of Love 1962 31. A Study of Tamil verbs 1972 32. Collected papers 1962 33. Tamilology சான்றோர்கள் பார்வையில் 34. வ.சுப. மாணிக்கனார் போற்றிய விழுமியங்கள் 35. மாணிக்க ஆய்வியல் 36. மாணிக்கப் பேரொளி 37. தொல்காப்பியச் செல்வர் 38. மாணிக்கக் குறளில் மாணிக்கம் 39. மாணிக்கனாரின் கவிதைத் தமிழ் 40. தமிழ்ஞாயிறு மாணிக்க விழுமியங்கள் ஆண்டு மாணிக்க விழுமியங்கள் - 1 - வள்ளுவம் 1953 மாணிக்க விழுமியங்கள் - 2 - தமிழ்க் காதல் 1962 மாணிக்க விழுமியங்கள் - 3 - கம்பர் 1965 - ஒப்பியல் நோக்கு 1978 மாணிக்க விழுமியங்கள் - 4 - தொல்காப்பியக் கடல் 1987 மாணிக்க விழுமியங்கள் - 5 - திருக்குறட்சுடர் 1987 - சங்கநெறி 1987 மாணிக்க விழுமியங்கள் - 6 - தொல்காப்பியத்திறன் 1984 - காப்பியப் பார்வை 1987 மாணிக்க விழுமியங்கள் - 7 - எந்தச் சிலம்பு 1964 - இலக்கியச்சாறு 1987 மாணிக்க விழுமியங்கள் - 8 - தொல்காப்பியப் புதுமை 1985 - இலக்கிய விளக்கம் 1972 மாணிக்க விழுமியங்கள் - 9 - சிந்தனைக் களங்கள் 1975 மாணிக்க விழுமியங்கள் - 10 - இரட்டைக் காப்பியங்கள் 1958 மாணிக்க விழுமியங்கள் - 11 - மனைவியின் உரிமை 1947 - நெல்லிக்கனி 1962 மாணிக்க விழுமியங்கள் - 12 - உப்பங்கழி 1972 - ஒருநொடியில் 1972 மாணிக்க விழுமியங்கள் - 13 - கொடை விளக்கு 1957 - மாமலர்கள் 1978 - மாணிக்கக் குறள் 1991 - என் பொழிவுகள் 2017 மாணிக்க விழுமியங்கள் - 14 - உரைநடையில் திருக்குறள் 1963 - கம்பர் நாற்பது 1984 - தொல்காப்பியம் எழுத்ததிகாரமும் நூன்மரபும் 1990 மாணிக்க விழுமியங்கள் - 15 - நகரத்தார் அறப்பட்டயங்கள் 1963 - தலைவர்களுக்கு 1965 - நீதிநூல்கள் 1991 மாணிக்க விழுமியங்கள் - 16 - The Tamil Concept of Love 1962 மாணிக்க விழுமியங்கள் - 17 - Collected Papers 1962 - A Study of Tamil Verbs 1972 மாணிக்க விழுமியங்கள் - 18 - மாணிக்கனாரின் முகவுரைகள், முன்னுரைகள் 2017 - இதழ்கள், அறிஞர்கள் பார்வையில்... 2017