kiwkiya«-- 17 (தனித்தமிழியக்க நூற்றாண்டு வெளியீடு) கட்டுரை 2  அறிவுரைக் கொத்து ஆசிரியர் மும்மொழிச்செம்மல் மறைமலையடிகள் பதிப்பாளர் கோ. இளவழகன் தமிழ்மண் முதல்பதிப்பு : 2015 பக்கம் : 24+304 = 328 விலை : 410/- மறைமலையம் - 17 ஆசிரியர் மும்மொழிச் செம்மல் மறைமலையடிகள் பதிப்பாளர் கோ. இளவழகன் வெளியீடு தமிழ்மண் பதிப்பகம் எண். 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர் நகர், சென்னை - 600 017. bjh.ng.: 24339030, செல்: 9444410654 மின்னஞ்சல்: elavazhagantm@gmail.com  jhŸ : 16.0 கி. மேப்லித்தோ,  அளவு : 1/8 தெம்மி   எழுத்து : 11.5 புள்ளி,  பக்கம் : 328 f£lik¥ò : இயல்பு  படிகள் : 1000 üyh¡f« : வி. சித்திரா   அட்டை வடிவமைப்பு : கவிபாகர்   அச்சு : வெங்கடேசுவரா ஆப்செட், ஆயிரம் விளக்கு, சென்னை - 600 006, மற்றும் பிராசசு இந்தியா, திருவல்லிக்கேணி - 600 005. யான் ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக ஏராளமான நூல்களில் ஆராய்ந்து கண்ட முடிவுகளை நூல்களாக எழுதியிருக்கின்றேன். பாற்கடலைக் கடைந்து அமுதம் எடுத்தது போல, உண்மை காணும் உணர்ச்சியினால் நடுநிலை நின்று ஆராய்ந்திருக்கின்றேன். ஒருவர் தம் வாழ்நாள் முழுவதும் கற்றாலும் அறியமுடியாத உண்மைகளை எல்லாம் எளிதாக எழுதி வைத்திருக்கின்றேன். எல்லாரும் தமிழ் இலக்கியங்கள் யாவற்றையும் கற்கும் தொல்லையை மேற்கொள்ள வேண்டிய தில்லை, அது முடியவும் முடியாது, தேவையுமில்லை. எல்லா நூல்களிலும் உள்ள சிறந்த உண்மைகளை எல்லாம் பிழி சாறாக யான் வடித்துத் தந்துள்ளேன். என் நூல்களைப் படித்தாற்போதும், அதனால், தமிழ் முழுதுங் கற்ற பயனை அடையலாம். - மறைமலையடிகள் சான்றிதழ் நாகை - திரு. வேதாசலம் பிள்ளையவர்கள் ஒருபோது திருவனந்தபுரத்தில் ஒருவாரந் தங்கியிருந்த ஞான்று, அவருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்புக் கிடைத்ததற்குச் சாலவும் மகிழ்கின்றேம். வருங்காலத் தமிழ் மக்களுக்கு மட்டற்ற தமிழ்ப்புலமை மிகுந்து வருமென்பதற்குச் சான்றாக இவர் இளமையிலேயே நுண்மாண் நுழைபுலம் உடையராயிருப்பது களிப்பூட்டுகிறது. மற்றும் தாய்மொழிப் பற்றுக் குறைந்த இக்காலத்தில், இவர் தமது நுண்ணறிவைத் தமிழ் நூல்களில் முற்றும் செலுத்தி நன்காராய்ந்துள்ளதும் பாராட்டற்குரியது. பத்துப்பாட்டு, கலித்தொகை, சீவகசிந்தாமணி முதலிய பழந்தமிழ் நூல்களில் ஆராய்ச்சியுடன் கூடிய இவர்தம் அறிவுடைமையே என்னை இவர்பால் மதிப்புறுமாறு செய்தது. தமிழாசிரியர்களின் தொகை சுருங்கிவரும் இக்காலத்தில் இவருக்குச் சிறந்த ஊக்கமளித்தால் இவர் ஒரு சிறந்த தமிழாசிரியராவாரென்று நாம் உறுதியாக நம்புகின்றேம். முன்னரே இரண்டாந்தரக் கல்லூரிகளில் தமிழ்கற்பிக்கப் போதுமான அளவு இலக்கண இலக்கியத்திற் சிறந்த தேர்ச்சி பெற்றவராயிருக்கின்றாரெனக் கருதுகின்றோம். Fiwªj msÉš v~¥, V., (F.A.) வகுப்புக்குரிய ஆங்கில அறிவு பெற்றாரானால் மேல்நாட்டு முறைப்படி தமிழ் நூல்களை வரலாற்றுச் சான்றுடன் ஆராயவும் எழுதவும் வல்லுநராவாரென்பது எம்முடைய சிறந்த எண்ணம். வண்ணாரப்பேட்டை மனோன்மணீயம் பெ. சுந்தரம்பிள்ளை திருநெல்வேலி தமிழ்த்தாய் வாழ்த்தின் ஆசிரியர் 2-12-1895 (இந்த நற்சான்று திருநெல்வேலி இந்துக் கல்லூரியில் சுந்தரம் பிள்ளையவர்கள் பேராசிரியராக இருந்தபோது கொடுக்கப் பெற்றது.) மறைமலைய மாண்பு நுழைவுரை தனித்தமிழ் என்ற அளவில் முன் நிற்கும் முழுதுரு எழில்வடிவர் தவத்திரு. மறைமலையடிகளாரே ஆவர்! முந்தை அடிகள் ஆகிய இளங்கோவடிகள், `முத்தமிழ் அடிகள் என முழக்கமிட நின்றார்! இருபதாம் நூற்றாண்டு மறைமலையடிகளோ, தனித்தமிழ்த் தந்தை என்னும் தகவார்ந்த பெருமை பெற்றார். தமிழ் தனித்து இயங்காது என்றும், வடமொழி வழியது என்றும், வடமொழித் துணையின்றி இயங்காது என்றும், உலக மொழிகளுக் கெல்லாம் தாய்மொழி வடமொழியே என்றும் தமிழ்க் கல்வி வல்ல பெற்றியரும் முற்றும் மயங்கி யுரைக்க, வடமொழி உலக மொழிகளுக்குத் தாய்மொழி என்றால், அதற்கும் மற்றை மொழிகளுக்கும் தந்தை மொழி தமிழே என்று கூறிய வடலூர் அடிகளார் புகழ்ப்பரபாளராய்ப் பொதுநிலைக் கழகம் கண்ட தவ அடிகளார், தனித்தமிழ்த் தந்தை என்னும் பெருமை பெற்ற மறைமலையடிகளார் ஆவர். சிவனியம் சார்ந்த பெருமக்களும், பேரறிவர்களும் கூட, ஒப்பாராய், `தனித்தமிழ் (தனித்து அமிழ்) என்று பழிக்கவும் இழிக்கவும், துணிந்து நின்று, அவர் வெள்க; வெள்ளிடை மலையாகத் `தனித்தமிழ் என்பதை நிலை நாட்டிய நிறைமலை, மறைமலையடிகளாரே! சிவனிய மடத்தினரும், வடமொழி வல்லாரும், `தொல் காப்பியக் கடல் எனப் புகழப்பட்டாருமாம் சாமிநாத தேசிகர், நாணமின்றி, ஐந்தெழுத்தால் ஒருபாடை என்று அறையவே நாணுவர் அறிவுடையோரே; யாமும் அதுவே என்றும், ஒன்றே ஆயினும் தனித்தமிழ் உண்டோ? என்றும் - எழுதிப் பரப்பினாராக, ஒரு சொல் தானும் வேற்றுச் சொல் விரவா நூல் யாம் செய்வேம் என்று ஐம்பான் நான்கு நூல்கள் கலைமலி பேழையாய் எழுதிக் காட்சிப் படுத்திய மாட்சியர் மறைமலையடிகளார்! தொல்காப்பியக் காவல் தமிழ் மொழிக்கு வாய்த்த தொல்காப்பிய வளநூல், வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே (884) என்றும், மொழி பெயர்ப்புச் செய்தலிலும் முறைமை பேண வேண்டும் என்பதை, மொழிபெயர்த்து அதர்ப்பட யாத்தல் (1597) என்றும், பேச்சு வழக்கில் ஒரு கால் வேற்றுச்சொல் வந்து விடினும், மரபுநிலை திரிதல் செய்யுட் கில்லை (1590) என்றும் - வரம்பாணை செய்தும், அச் செவ்வியல் வழித்தடம் சிதைந்தும் சீரழிந்தும், சேறும் சகதியும் நாறும் சிறுமையும் குறுமையும் வழிவழியே எய்த மூவாயிரம் ஆண்டுகளாய், அயலோர் சூழ்ச்சியாலும் திறவோர் மயக்காலும் ஏற்பட்ட அழிபாடுகளை எல்லாம் தாமே ஓர் இயக்கமாய் இருந்து, விழிப்பும் எழுச்சியும் ஊட்டியவர் மறைமலை அடிகளே என்பதால், ஆரியத்தினின்று தமிழை மீட்டெடுப்ப தற்காக அரும் பாடுபட்டு இலக்கிய இலக்கண மரபோடு யான் கற்ற மொழிகள் முப்பது என்னும் பாவாணர், மூவா யிரமாண்டு மோதும் வடமொழியால் சாவாம் தகைநின்ற தண்டமிழை - மேவாக் குமரித் தனிநிலைக்குக் கொண்டுவந்த அப்பர் அமரர் மறைமலை யார் எனப் பாடிப் பரவினார். `தனித் தமிழ்த் தந்தையார் என்ற பாராட்டும் இப் பாட்டின் தலைப்பில் வழங்கினார். நுண்ணிய நூல்பலவும் கற்பதே நோன்பாக எண்ணிய வாழ்நாள் எலாமளித்துப் - பண்ணிய செந்தமிழ்நூல் ஒவ்வொன்றும் செப்பும் கடலறிவை பைந்தமிழ் காக்கும் படை என அடிகள் கல்வி மேம்பாட்டையும் கலைத் திறப் படைப்புகளின் மேம்பாட்டையும் பாவேந்தர் பாரதிதாசனார் பாராட்டுகிறார். பல்துறை ஆற்றல் அடிகளின் பல்துறை ஆற்றலை 1. பேராசிரியர், 2. பெரும் புலவர், 3. பாவலர், 4. ஆராய்ச்சியாளர், 5. மும்மொழிப் புலவர், 6. மொழிபெயர்ப்பாளர், 7. சொற்பொழி வாளர், 8. எழுத்தாளர், 9. பல்கலைச் செல்வர், 10. தனித்தமிழ்த் தந்தையார் என்று பாவாணர் பகுத்துக் காட்டுகிறார். மேலும் அவர் தம் நுண்மாண் நுழைபுலத்தை பனிமலை முகட்டின் உயர்வும், நீல ஆற்றின் நீளமும் அமைதி வாரியின் ஆழமும் அமைந்தவர் மறைமலையடிகள் என்கிறார். (பனிமலை - இமயம்; நீல ஆறு - நைல்; அமைதிவாரி - பசிபிக்கு மாகடல்). அடிகளார் நூல்கள் அடிகள் பன்மாண் மாத்தமிழ் நூல்களை, நூலக இயக்கத் தந்தை அரங்க நாதரும், இந்நாள் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழக ஆட்சியரும் அந்நாள் நூலகருமாகிய திருமிகு இரா. முத்துக் குமாரசாமி அவர்களும் 14 வகைமைப்படுத்தி வைத்தமை பெரும் பாராட்டுக்கு உரியதாம் அவை, 1. மருத்துவம் 2. மறைபொருள் 3. இலக்கியம் 4. இதழ்கள் 5. சங்க இலக்கியம் 6. பாடல் 7. நாடகம் 8. புதினம் 9. கடிதம் 10. கட்டுரை 11. சமயம் 12. தத்துவம் 13. வரலாறு 14. சமூக இயல் என்பன. முதற் குறள் வாத நிராகரணம் என்னும் மறுப்பு நூலே, அடிகளின் முதல் நூலாக வெளிப்படுகின்றது (1898) அந்நூன் மறுப்பு நயமே நாகை அடிகளை - பல்லவபுர அடிகளாக -தனித்தமிழ் அடிகளாக ஆக்க அரும் பெரும் தூண்டல் ஆயிற்றாம். அடிகளார் வரலாறு: கீழ்கடல் சார் நாகப்பட்டினத்தைச் சார்ந்த சிற்றூர் காடம்பாடி, ஆங்கு வாழ்ந்த அருந்தவப் பெருந்தகையர் சொக்கநாதர் - சின்னம்மையார்! இவ்விணையர் கொடையாய்த் தமிழன்னை செய்த தவப் பேற்றால் பிறந்தவர் வேதாசலம். பிறந்த பெரு மங்கல நாள் கி.பி. 15.07.1876. சொக்கநாதர், சித்தமலம் அறுவித்த சித்தமருத்துவர்; அறிவ மருத்துவம் என்பதும் அது. அத்தொழில் அவர்க்கு வளத்தை வழங்கியது. அதனால் வேதாசலம் குறைவற வாழ்ந்தார். நாகப்பட்டினத்து வெசிலியன் மிசன் பள்ளியில் ஐந்து வகுப்புவரை பயின்றார்; சிறந்த மாணவராக விளங்கினார். ஆறாம் வகுப்பில் சேரும் நிலையில், அருமைத் தந்தையார் இயற்கை எய்தினார். ஆயினும் அன்னையார் உறுதியால் கல்வியைத் தொடர்ந்தார். அப்பள்ளியில் ஆங்கிலக் கல்விக்கு இருந்த முதன்மை தமிழுக்கு இல்லை. கிறித்தவ சமயம் பற்றி அன்றிச் சிவனியம் பற்றி அறிய வாய்ப்பில்லை என்னும் இரண்டு குறைகளையும் இளமையிலேயே உணர்ந்தார். வீட்டிலேயே தமிழ் நூல்களைப் பயின்று முதற் குறையையும், நாகையில் இருந்த இந்துமதாபிமான சங்கம் வழி இரண்டாம் குறையையும் நீக்கினார். பள்ளியிலும் குறையறக் கற்றார். வருவாய்க் குறையால் வாடும் அன்னைக்குச் சுமையாய் இல்லாமல் தனியே பயில்வதே இனியவழி என எண்ணி, நாகையில் புத்தக வணிகராக விளங்கிய நாராயண சாமியார் புலமையாலும் சிறந்து விளங்கியவர். ஆதலால் அவரிடம் தனியே இலக்கிய - இலக்கண - சமய நூல்களைக் கற்றார். நாராயணரின் முன்னை மாணவர் பேரா. மனோன்மணீயம் பெ. சுந்தரனார் என்பதையும் அறிந்தார். ஒன்பதாம் வகுப்பொடு பள்ளிக் கல்வியை நிறுத்தித் தனிக்கல்வியே கற்றார். தொல்காப்பியம், தொகை நூல்கள், திருக்குறள், திருச்சிற்றம்பலக் கோவை, இறையனார் அகப் பொருள் எனக்கற்றார். அடிகளார் இயற்றிய திருவொற்றி முருகர் மும்மணிக் கோவை முகப்பில், எமது பதினைந்தாம் ஆண்டில் முறைப்படி துவங்கிய தமிழ்ப் பயிற்சியானது எமது இருபத்தோராம் ஆண்டிற்குள் தொல்காப்பியம், திருக்குறள், சிற்றம்பலக் கோவையார் என்னும் மூன்று நூல்களையும் முழுதும் நெட்டுருச் செய்து முடித்தேம் என்றும் வேறுசில நூல்களையும் முழுவதாக ஓதியதையும் கூறி, இங்ஙனமாக, விழுமிய தமிழ்ப்பழ நூல்களில் எமது கருத்து ஈர்ப்புண்டு நின்று பயின்ற பயிற்சியினாலேயே செய்யுளும் உரையும் தனிச் செந்தமிழ் நடையில் எழுதும் திறம் எமது இளமைப் பருவத்திலேயே எமக்கு வாய்ப்ப தாயிற்று என்கிறார். அவ்வாண்டு கி.பி. 1897. நாகை இந்து மதாபிமான சங்கத்திற்குச் சைவ சித்தாந்த சண்ட மருதம் என்னும் விருது பெற்ற சோமசுந்தர நாயகர் வந்து சொற்பொழிவாற்றினார். அவர் பொழிவில் வந்த கருத்தொன்றனை மறுத்து ஒருவர் எழுத, அதற்கு மறுப்பாக முருகவேள் என்னும் புனைபெயரில் மறுப்புரை எழுதினார். அதனைக்கற்ற நாயகர், மீளப் பொழிவுக்கு வருங்கால் முருகவேளைச் சந்திக்க விரும்பினார். அச்சந்திப்பின் பயனே உன்னை விரைவிலே சென்னைக்கு வருவிப்போம் நீ அந்தப் பக்கங்களில் இருப்பதே நல்லது என்று கூறினார். இதுவே அடிகளார்க்குச் சென்னை வாழ்வு அமைய முதல் தூண்டல் ஆயிற்று. அடிகளுக்குப் பதினேழாம் வயதில் (1893) திருமணம் நிகழ்ந்தது. துணைவி தம் மாமன் மகள் சவுந்தர வல்லி என்பார். திருவனந்தபுரம் நாராயணசாமி அவர்களின் முன்னை மாணவராம் பேரா. சுந்தரனார் திருவனந்த புரத்தில் இருந்தார். அவரியற்றிய மனோன்மணீய நாடக நூல் கற்று அதன் அருமை கண்டு, பேராசிரியரைக் காணவிரும்பினார். அதனால் தம் ஆசிரியரோடு திருவனந்தபுரம் சென்று பேராசிரியரோடு உரையாடினார். வேதாசலனார் இளம் பருவத்தையும் மூதறிவையும் அறிந்த சுந்தரனார் வியப்புற்றுத் தகுதிச் சான்று ஒன்று வழங்கினார். சிறிது காலம் திருவனந்த புரத்தில் ஆசிரியப் பணியும் செய்தார். அவ்விடத்தின் பருவநிலை ஒவ்வாமையால் நாகைக்கே திரும்பினார். சென்னை: சோமசுந்தரனார் முன்னே கூறியபடி வேதாசலரைச் சென்னைக்கு அழைத்து அறிஞர் நல்லுசாமி என்பார் நடாத்திய சித்தாந்த தீபிகை என்னும் இதழாசிரியர் ஆக்கினார். பின்னே சென்னை கிறித்தவக் கல்லூரிக்கு ஒரு தமிழ்ப் பேராசிரியர் வேண்டியிருத்தல் அறிந்த சோமசுந்தரனார் வேதாசலனா ர அக்கல்லூரிப் பேராசிரியராக்க முயன்றார். அதுகால் தமிழ்த்துறைத் தலைவராக இருந்தவர் வி.கோ சூரியநாராயண சாத்திரியார் என்னும் பரிதிமால் கலைஞர். கல்லூரி முதல்வர் வில்லியம் மில்லர் என்பார். 9.3.1898 இல் வேதாசலனார் பணியேற்றார். அங்குப் பதின்மூன்று ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். அக்கல்லூரிக் காலத்தே இளங்கலை மாணவர்க்குப் பாடமாக இருந்த முல்லைப்பாட்டு (1903) பட்டினப்பாலை (1906) என்பவற்றுக்கு ஆராய்ச்சி உரை எழுதினார். அவ்வுரை நூலை வாங்கிக் கற்ற மாணாக்கரும் ஏனைத் தமிழறிஞரும் புதுமுறையாக எழுதப்பட்ட அவ்வுரைப் பாங்கினைப் பின்பற்றிப் பழைய தமிழ் நூல்களை ஆராய்வதில் கிளர்ச்சி பெறலானார். இப்புதுமுறை உரை, தமிழ் நூலாராயும் வகைகளை இனிது விளக்கி அறிஞர் பலர்க்கும் அக மகிழ்ச்சி யினை விளைத்தமை கண்டு இனி, இத்தகைய உரைகளையே எழுதுதல் வேண்டும் என எமதுள்ளம் பெரிதும் விழைந்தது என்கிறார். சென்னைப் பல்கலைக் கழகத்தார்ஆங்கிலமும் வட மொழியும் கட்டாயமாகப் படித்தல் வேண்டும் என்றும், தாய்மொழிப் பாடத்தை விருப்பப் பாடமாகக் கற்பிக்கலாம் என்றும் ஒரு தீர்மானம் ஆட்சிக்குழுவில் கொண்டு வந்தனர். ஒரு பாடம் விருப்பப்பாடம் எனப்பட்ட பின்னர் அதனைக் கற்க வருவார் எவர்? தமிழ் கற்கும் மாணவர் எண்ணிக்கை குறையவே ஆசிரியப் பணியிடமும் குறைய வேண்டுவதாகி, அடிகளார் 31.1. 1911 ஆம் நாளுடன் கல்லூரிப் பணியை முடிக்க வேண்டிய தாயிற்று. மாணவர்: இக்காலத்தில் அடிகளின் மாணவராக இருந்தாருள், தணிகைமணி செங்கல்வராயர், இரசிகமணி டி.கே.சி, நாவலர் ச.சோ. பாரதி, பேரறிஞர் ச. வையாபுரியார் முதலோர் சிலர். தணிகைமணியின், தேவார திருவாசகச் சொல்லடைவு ஒரு பிறப்பளவில் செய்யக் கூடியதா? நாவலர் ச. சோ. பாரதியாரின் ஆய்வுத் துணிவு எத்தனை கசடுகளை நீக்கியது? வையாபுரியார், கால ஆய்விலும், வடமொழிப் பிடிவாதத்திலும் தம்மைச் சால்பு ஆய்வில் இருந்து விலக்கினாலும், சங்க இலக்கியப் பதிப்பு, நிகண்டுப்பதிப்பு, பல்கலைக் கழக அகரமுதலிப் பதிப்பு இவற்றைச் செய்த அருமை என்ன? புறத்திரட்டு, களவியல் காரிகை ஆயவற்றின் பதிப்புச் சிறப்பு என்ன? இவர்கள் பணியும் அடிகளாரைத் தழுவுதல் உண்மை தானே! சமரச சன்மார்க்கம் கல்லூரிப் பணியில் இருந்து வீடுபெற்ற அடிகளார், பல்லவபுரத்தை வாழ்விடமாகக் கொண்டார். சமரச சன்மார்க்க நிலையம் தோற்றுவித்தார். எல்லாச் சாதியார்க்கும் எல்லாச் சமயத்தார்க்கும் அங்கீகாரமான சீவகாருணிய ஒழுக்கத்தையும், சமரச சன்மார்க் கத்தையும் பிற்காலத்தில் மிக வலியுறுத்திப் போதித்த ஆசிரியர் ஸ்ரீமத் இராமலிங்க சுவாமிகளே ஆவார். அச்சுவாமி கள் வலியுறுத்திய அவ்விரண்டு கொள்கைகளையும் எங்கும் வலியுறுத்தி விளக்கி அன்பர்களை ஒருங்கு கூட்ட வேண்டி அச்சுவாமிகள் இட்ட பெயராலேயே, `சமரச சன்மார்க்க நிலையம் என்னும் இது தாபிக்கலாயிற்று. இந்நிலையத்திற்கு முன் ஆசிரியர் திருவள்ளுவ நாயனார்; பின் ஆசிரியர் இராமலிங்க சுவாமிகள் ஆவர் என்று பெயரீடு செய்து கொள்கைகளையும் வகுக்கிறார். குடும்பம் 1898இல் அடிகளார் சென்னைக்கு வரும்போது அவர்தம் அன்னையார் சின்னம்மையார், துணைவியார் சவுந்திரம் அம்மை யார், செல்வி சிந்தாமணி, அடிகளார் என்னும் நால்வரைக் கொண்ட குடும்பமாக இருந்தது. 1911இல் பல்லவ புரத்தில் குடிபுகும் போது நீலாம்பிகை, திருஞான சம்பந்தம், மாணிக்கவாசகம், திருநாவுக்கரசு, சுந்தர மூர்த்தி என்னும் மக்களும் கொண்ட ஒன்பதின்மர் குடும்பமாக இருந்தது. பல்லவுரம் புகுந்த பின் திரிபுர சுந்தரி பிறக்கப் பதின்மன் குடும்பம் ஆயிற்று. இந்நிலையிலேயே 27.08.1911இல் சைவத் துறவியர்க்குரிய துறவாடை (காவி) கொண்டு சுவாமி வேதாசலம் ஆனார். சுவாமி வேதாசலம் என்பதன் தனித்தமிழாக்கமே மறைமலையடிகள் என்பது வெளிப்படை. முன்னேயே அவரை அடிகள் என்றது அவர்தம் மாண்பு கருதியேயாம். மீள்பார்வை நாம் மீள்பார்வை ஒன்றுபார்க்க வேண்டும். அடிகள் 21ஆம் அகவையிலேயே தனித்தமிழ் ஆய்வுத்திறம் கைவரப் பெற்றார். 1903, 1907 ஆகிய ஆண்டுகளில் முல்லைப்பாட்டு, பட்டினப்பாலை ஆகிய நூல்களுக்கு ஆய்வுரை வழங்குங்கால் இதிலுள்ள சொற்கள் இத்தனை; இவற்றுள் செந்தமிழ்ச்சொல் இத்தனை; வேற்றுச் சொல் இத்தனை - என அறுதியிடுகிறார். ஆதலால், தனித்தமிழ் என்னும் தோற்றம் 1916 ஆம் ஆண்டில் நீலாம்பிகையார் தூண்டலால் ஏற்பட்டமை என்பது, அகத்தே அமைந்து கிடந்த வித்து, முளை விட்டு வெளிப்பட்ட நிலையாம். அவ் வெளிப்பட்ட நிலையும் உடனே பற்றிப் படரவில்லை! மேலும் சில ஆண்டுகளின் பின்னரேயே சமசர சன்மார்க்க நிலையம், பொதுநிலைக் கழகமாகவும், ஞானசாகரம் அறிவுக் கடலாகவும், சுவாமி வேதாசலம் மறைமலையடிகள் ஆகவும் படிப்படியே கிளர்கின்றனவாம்! ஓர் அரிய அமைப்பு உருவாகும் நிலையும், ஓர் அரிய கண்டு பிடிப்பு உலகவர் அறிய வெளிப்படலும், அவை இயக்கமாகவும் பயனாகவும் ஆகின்ற நிலையும் பற்றிய விளக்கம், அடிகளார் தனித்தமிழ் இயக்க வரலாற்றில் அடங்கியுள்ளதாம்! எதிரிடைத் தூண்டல்: மேலும் ஒன்று: ஒரு நேரிடைத் தூண்டலினும் எதிரிடைத் தூண்டல் வலிமை மிக்கது என்பதும், உள்ளத்து உறுதியை வெள்ளப் பெருக்காய் வெளிப்படுத்த வல்லது என்பதும் தெளிவாம். ஒன்றே ஆயினும் தனித்தமிழ் உண்டா? என்று கற்றறிந்த தமிழர் ஒருவரே வினாவி நகைத்தல், பெற்ற தாய் மொழிப் பிறவிக்கு உற்ற தகைமை ஆகாது என்பதும், அதனை உணர்ந்த அப்பிறவி பாம்பன் குருபாத அடிகள் போல் சேந்தன் செந்தமிழ் என்ன ஒரு நூலியற்றித் தமிழ் தனித்து இயங்கவல்ல தனி உயர் மொழி என்று நிலைநாட்டியிருப்பின் வழிபடத்தக்க பிறவியாய் அமைந்திருக்கும்! அப்பேறு அதற்கு வாய்க்காமை, துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல் மற்றை யவர்கள் தவம் (குறள் 263) என்னும் வள்ளுவர் வாய் மொழிப்படி, தனித்தமிழ்த் தந்தைப் பேறு மறைமலையடிகட்கு வர இருப்பதற்கே நேரிட்ட நேர்ச்சியாம் என்க. இயக்கம் அடிகள் இயக்கம் ஆலமரமெனக் கால்பல கொண்டு அகல அகல விரியத் தனித்தமிழ் இயக்கமாய், உலகத்தமிழ்க் கழகமாய், பாவலரேறு தமிழ்க் களமாய், சேரர் கொற்றமாய், தமிழ்க்காப்புக் கழகமாய், தமிழ்ப் பாதுகாப்புக் கழகமாய், தனித்தமிழ் இலக்கியக் கழகமாய், தமிழ் வளர்ச்சிக் கழகமாய், மறைமலையடிகள் மன்றமாய், தமிழ்க்காவல் குழுவாய், இயற்றமிழ்ப் பயிற்றகமாய், பாவாணர் தமிழ் இயக்கமாய் ஆங்காங்கு முகிழ்த்து முனைப்பொடு கடனாற்ற ஏவியதாம். நூலகம் அடிகள் நூற்றொகை, அருமணிக் குவையன்ன நாலாயிரம் நூல்களைக் கொண்டது. எதிரது உணர்ந்து, சைவசித்தாந்த நூற் பதிப்புக் கழகத்திற்கு முற்கொடையாக வழங்கியதால், நாலாயிரம் நாற்பதாயிரமாய் மேலும் மேலும் விரிந்து மறைமலையடிகள் நூலகப் பெயரால், பெருமைமிகு வள்ளலார் முதற்கண் பொழிவு செய்த பெரியவர் சோமு அவர்கள் இல்லமே வாய்க்க உலக வளமாக்கியதாம்! அதன் வழியாகவே அடிகள் தாமே வெளியிட்ட நூல்களும், வெளியிடாமல் கழக வழி வெளிவந்த நூல்களும், அடிகள் காலத்திற்குப் பின் வெளிவந்த நூல்களும் ஆகிய முழுமைத் தொகுதிகளும் கி.பி. 1898 முதல் 1969 வரை முதற்பதிப்பாக வெளிவந்தவை. அவற்றுள் படிகள் கிட்டுதற்கு அரியவையும் உண்டு. அடிகள் நூல்கள் நாட்டுடைமை ஆக்கப் பட்ட பேற்றால், இன்று வாய்த்த நூல்கள் அனைத்தையும் ஒட்டுமொத்தமாக வழங்கும் பெருவாய்ப்பைத் தமிழ்மண் பதிப்பகம் பெற்றதாம். வெள்ளச் சேதம் அண்மையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு பதிப்பகத்துள் புகுந்து அச்சு அடிக்கப்பட்டதும், அடிக்கப்பட இருந்ததும், கணினிப்படுத்தி வைத்த குறுவட்டுகளும், மூலநூல்களும் என வாரி அள்ளிக் கொண்டு போனமை, களத்துக்கு வந்த கதிர் மணிகள், களஞ்சியத்திற்கு வாராமல் போய, பேரழிவு ஒப்பதாம். ஆதலால், நூல்களை மீளத் தேடவும், கணினிப்படுத்தவும், குறுவட்டு ஆக்கி அச்சிடவும் என மும்மடங்குப் பணியும் பேரிழப்பும் பெருத்த அவலமும் உண்டாக்கிற்றாம். அந்நிலையில், ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித் தாழா துஞற்று பவர் என்னும் வாய்மொழியை வாய்மை மொழியாக்கிய துணிவுச் செல்வர் இளவழகனாரும் அவர் குடும்பத்தவரும் ஆவர்! முன்னறிவிப்புத் திட்டப்படி நூலுக்கு ஆர்வமாய்ப் பணம் செலுத்தியோர்க்கும் நூல் காலத்தில் கிட்டா உளைச்சல் இல்லாமல் போகாதே! அவர்களும் அமைந்து தாங்கல், இயற்கை இயங்கியல் வழியதாம். வெளியீடுகள் தமிழ்மண் பதிப்பகம் தமிழ்மொழி இன மண்வளம் - வளர்ச்சி மீட்டெடுப்பு - என்பவற்றை முன்வைத்துத் தமிழ்ப் போராளி இளவழகனாரால் தொடங்கப்பட்டதால், பேரிழப்புக்காம் எனத் தெளிவாகத் தெரிந்தும், இசைக் கலைக்கு வாய்த்த ஒப்பற்ற களஞ்சியமாய் வாய்த்த - கருணாமிர்த சாகரத்தை வெளியிட்டதாம்! முன்னை வந்த முதற்பகுதி பேரிழப்பாக்கியும் அதன் பின்னைப் பகுதிகளையும் அரிதின் முயன்று வெளியிட்டது! மொழிஞாயிறு பாவாணர்; ஈழத்து அறிஞர் ந.சி. கந்தையா; வரலாற்றறிஞர் சாமிநாத சர்மா, உரைவேந்தர் ஔவை சு.து; நாவலர் ந.மு.வே; பண்டித வித்துவான் தி.வே. கோபாலர்; சாமி சிதம்பரனார்; மயிலை சீனி. வேங்கட சாமியார்; பேரறிஞர் க. வெள்ளை வாரணனார்; பாவலர் குழந்தையார்; பாவலர் முடியரசனார்; பாவேந்தர், தொல் பொருள் கல்வெட்டு ஆய்ஞர் சதாசிவனார், சாத்தன்குளம் இராகவன் நூல்களையும் எளியேன் நூல்களையும் முழுமை முழுமையாக வெளியிட்டது. தொல்காப்பியம்- பாட்டு - தொகை - காப்பியம் - கீழ்க்கணக்கு - தமிழ்நாட்டு வரலாறு - ஆங்கிலம் வல்ல அறிஞர் இராம நாதனார் நூல்களையும், யாழ்ப்பாண அகராதி முதலாம் அகராதித் தொகுதிகளையும் வெளியிட்டது. பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதிதொட்டு, இருபத்தோராம் நூற்றாண்டின் முற்பகுதி வரை வெளிவந்த - தமிழுக்கு ஆக்கமாம் நாட் டுடைமை ஆக்கப்பட்ட நூல்களை எல்லாம் - ஓரிடத்துப் பெற்று, ஒரு தனித்தமிழ் நூலகம் அமைக்கும் அளவுக்கு அச்சிட்டு வழங்கிய பெருமை இளவழகனார்க்கு உண்டு. அவரே அன்றி அவர் துணையையும் மக்களையும் உறவையும் அன்பையும் நண்பையும் ஒருங்கே இணைத்து, அறிஞர் பெருமக்கள் பலர் அரவணைப்பையும் வாய்ப்பக் கொண்டு வாழும் இயல்பு அவர்க்கு வாய்த்தலால் மட்டுமே, இவ்வாறு செயற்கரிய செய்ய வாய்த்ததாம் என்பதற்கு எடுத்துக்காட்டாகத் திகழ்பவரும் அவர். மறைமலைய மாண்பு மறைமலையம், தனித்தமிழ் இயக்கம்! தமிழ்த் தனிப் பெருவளம்! முத்தமிழ்ச் சுரப்பு! சீர்திருத்தச் செழுமை! வாழ்வியல் வளம்! கலைச் சொல்லாக்கக் களஞ்சியம்! பண்டைத் தமிழர் வரலாற்றுப் புதையல்! ஆய்வியல் வழிகாட்டி! பொழிவுப் பொலிவு! எழுத்தின் எழில்! மொழிக் காவல் முனையம்! முட்டறுக்கும் முழுதுறு கொடை! மீட்டெடுக்கும் மேதகைமை! அள்ள அள்ளக் குறையா அணிமணிக் குவியல்! எனல் மெய்மை விளக்கமாம்! புத்தகம் ஏற்றுப் பொலிவதே புத்தகம் வாழிய நலனே! வாழிய நிலனே! திருவள்ளுவர் நிலையம், இன்ப அன்புடன் 7, இராமன் தெரு, இரா. இளங்குமரன் திருநகர், மதுரை - 6 625006. மலைக்க வைக்கும் மறைமலையம்! பதிப்புரை மொழியே இனமக்கள் முன்னேற நல்ல வழியாம் அதனை வளர்க்க -பழியாய்த் தமிழயரத் தாழ்ந்தான் தமிழன் அவனே தமிழுயரத் தானுயர்வான் தான் மொழிப்பேரறிஞர் பாவாணர் அவர்கள் `மொழியின் வழியாகவே மொழிபேசும் மக்கள் முன்னேற முடியும் எனக் கூறுகிறார். உலகம் முழுதும் இவ்வுண்மை உணரப்பட்டுள்ளதை வரலாறு காட்டுகிறது. பாவாணரை அறிவுலகம் சரியாக அடையாளம் காண்பதற்குக் காரணமானது மறைமலையடிகளார் தந்த பாராட்டு! மறைமலையடிகள் (15.7.1876 - 15.9.1950) தேவநேயப் பாவாணர் (7.2.1902 - 16.1.1981) இருவரும் தனித்தமிழியக்கத்தைத் தாங்கி நிற்கும் தூண்களாகப் போற்றப்படுபவர்கள். மறைமலையடிகளார் 1916இல் தோற்றுவித்த தனித்தமிழ் இயக்கம், நூற்றாண்டை எட்டியுள்ள மகிழ்வான நேரம் இது! தனித்தமிழியக்க நூற்றாண்டை நினைவு கூரும் வகையில், தனித் தமிழியக்கத் தந்தை மறைமலையடிகளாரின் எழுத்து, சொற்பொழிவு, நாட்குறிப்பு, கடிதங்கள் அனைத்தையும் `மறைமலையம் எனும் பெருந்தொகுப்பாகத் தமிழ்மண் பதிப்பகம் வழி வெளிக்கொணரத் திட்டமிட்டோம். உலகம் முழுதும் பரவி வாழும் உணர்வு குன்றாத தமிழர்கள் தந்த ஊக்குவிப்பு, இந்தப் பெருந்திட்டத்தை நிறைவேற்றித் தீரவேண்டும் எனும் உறுதியை எனக்குத் தந்தது. தனித்தமிழ் இயக்க அறிஞர்களும் ஆர்வலர்களும் அடிகளாரின் அரிய படைப்புகள் பலவற்றையும் தேடித்தேடி வழங்கி வழிகாட்டினர்; வலிமையூட்டினர். மறைமலையடிகளார் 1898ஆம் ஆண்டிலிருந்து எழுதி வந்துள்ளார். அறிவுக்கடல் (ஞானசாகரம்) இதழை 1902ஆம் ஆண்டிலிருந்து வெளியிட்டு வந்துள்ளார். அவரின் படைப்புகள் பெருவெள்ளமாய் வெளிவந்திருக்கின்றன. அச்சேறாதவை, பெயர் கூடக் கேட்டறியாதவை, பெயர் தெரிந்தும் பார்வைக்குக் கிட்டாதவை - எனப் பலவகையாய்க் கிடைத்தன அடிகளாரின் அரும்படைப்புகள்! அவற்றை `மறைமலையம் எனும் தலைப்பில் 34 தொகுப்புகளாக ஒருசேரப் பார்க்கும்போது, தமிழுலகம் வியப்படைவது உறுதி. மொழிநலம் இனநலம் பேணுதல் அன்றோ முழுநலம் பெறுவழி! நாம்பெறல் என்றோ? இப்படிக் கவலையோடு கேட்பார் பாவலரேறு பெருஞ் சித்திரனார் (10.3.1933 - 11.6.1995). அவரின் `தென்மொழி இதழ் 1.8.1959 இலிருந்து வெளிவரத் தொடங்கிய பின்புதான், தனித்தமிழ்த் திசை நோக்கி நூற்றுக்கணக்கானோர் நடைபோடத் தொடங்கினர். அதில் நானும் ஒருவன். பெருஞ்சித்திரனாரின் எழுத்து காட்டிய அடையாளத்தால், பாவாணர் நூல்கள் எனும் அறிவுப்புதையல் பலர் கைகளிலும் குடியேறியது. பாவாணர் நூல்கள் வலியுறுத்திப் பேசியதால், மறைமலை யடிகளாரைத் தேடிப்பயிலும் ஆர்வம் தமிழுலகில் புத்துயிர் பெற்றது. ஆரியத்தை எதிர்ப்பதிலும் சமற்கிருதத்தை விலக்கு வதிலுமே தமிழின மேம்பாடும் தமிழ்க் காப்பும் அடங்கியிருக்கிறது. அவ்வுணர்ச்சியைத் தமிழர் நெஞ்சங்களில் அரும்ப வைத்தது திராவிடர் இயக்கம்; மலர்ந்து விரியவைத்தது தனித்தமிழ் இயக்கம்! குமுக, அரசியல், பண்பாட்டு மலர்ச்சிக்கு இந்த ஈரியக்கங்களின் பேருழைப்புப் பயன்பட்டது. தமிழகத்தில் தனித்தமிழ் உணர்வு கி.மு. 7ஆம் நூற்றாண்டுக்குப் பின் தளரத் தொடங்கியது; 10ஆம் நூற்றாண்டுக்குப் பின் சரியத் தொடங்கியது. வடமொழி வெள்ளத்தில் தமிழ் இழுத்துச் செல்லப்பட்டு விடாமல் காப்பாற்றியோர் கம்பரும் பவணந்தியும்! பின்வந்தோருக்கு அந்தக் காப்புணர்ச்சி இல்லாமல், அயன் மொழிப் பற்றுக்கு அடிமையானதால் தமிழும் தமிழினமும் பெற்ற இழப்புகள் ஏராளம்! அயன்மொழிச் சேற்றிலிருந்து தமிழை மீட்கும் முயற்சி ஆங்கிலேயர் வருகையையொட்டிப் புத்துயிர் பெற்றது. வள்ளலார், பாம்பன் சாமிகள், வண்ணச் சரபம் தண்டபாணி சுவாமிகள், சுப்பிரமணியசிவா, பரிதிமாற் கலைஞர் முதலிய பலரும் தொடக்க விதைகளாயினர். கோவை அவிநாசியில் பிறந்து விருதுநகரில் வாழ்ந்த விருதை சிவஞானயோகி 19.11.1908 ஆம் நாள் `திருவிடர் கழகம் தொடங்கித் தனித்தமிழ் உணர்ச்சிக்கு வேகங்கூட்டினார். அவ்வமைப்பில் உறுப்பினராயிருந்தவர் சுவாமி வேதாசலம் (மலைமலையடிகள்). மறைமலையடிகள் எனத் தம் பெயரைக் கொண்டு, 1916இல் அவர் தொடங்கியதே தனித்தமிழ் இயக்கம். `துறைமிகு ஆங்கிலம் மறைவட மொழியொடு தூய்தமிழ்ப் பேரறிஞர் - தனித்தமிழ் தோற்றிய ஓரறிஞர் பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடியதற்கேற்ப, மறைமலை யடிகளார் தமிழ், ஆங்கிலம், சமற்கிருதம் முதலிய பன்மொழியிலும் புலமை மிக்கவர். பன்மொழிப் பேரறிஞரான மறைமலையடிகளார் தமிழுக்கும் தமிழருக்கும் ஆதரவாக நின்றதால் எதிர்ப்புக்கும் இழப்புக்கும் ஆளாக்கப்பட்டார். ஆனாலும் உறுதி குன்றாமல் தமிழுக்கு ஆதரவாய் உழைக்கும் உள்ளத்தோடிருந்தார். அதனால், தமிழர் உள்ளங்களில் இன்றளவும் மாறாப் பெருமையோடு அவர் வீற்றிருக்கின்றார். வாழ்த்தாத நாளில்லை வையகம் மறைமலை யடிகள் மறையாத் திருப்பெயர் வாழ்த்தாத நாளில்லை வையகம் பாவேந்தர் பாரதிதாசன் அவர் மாண்பினைப் பாடி மகிழ்ந்ததும், தம் `குடும்ப விளக்கு நூலினை மறைமலை யடிகளுக்குக் காணிக்கையாக்கி வழங்கியதும், அவரின் உறுதி தளராத உள்ளமும் உழைப்பும் கண்டு போற்றிய நன்றிக் கடன் என்பதில் அய்யமில்லை. சென்னையில் கடந்த இருபது ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் தமிழ்மண் பதிப்பகப் பணிகளைத் தமிழுலகம் அறியும். வாழும் தலைமுறைக்கும் வருங்காலத் தலைமுறைக்கும் வழிகாட்டவல்ல தமிழறிஞர்கள் பலரின் நூல்களை முழுமுழுத் தொகுப்புகளாக வழங்கியிருப்பது தமிழ்மண் பதிப்பகத்தின் முடிப்பினை (சாதனை)யாகப் போற்றப்படுகிறது. தமிழ் மறுமலர்ச்சிக்கு வித்திட்ட அறிஞர்களைக் கண்டறிந்து, அவர்களின் நூல்களை முழுமையான தொகுப்புகளாகத் தமிழ்மண் பதிப்பகம் வெளியிட்டு வருகிறது. அவை காலம் முழுதும் பயன்படவல்ல கருவி நூல்கள் என்பதை அறிஞர் உலகம் அறியும்! தமது நலத்தை ஒதுக்கி வைத்து, தமிழ் நலத்தைக் காக்க வாழ்ந்த அறிஞர்களின் அனைத்து நூல்களையும் ஒரு சேரத் தொகுத்து முழுத் தொகுப்பாக வழங்குவது பெரும்பணி! அதனைத் தமிழ்மண் பதிப்பகம் தொடர்ந்து நிறைவேற்றி வருகிறது. தொகுப்பு நூல்களின் பட்டியலைப் பின்னிணைப்பில் காண்க. தமிழுக்காக உழைக்கும் உணர்வை இளமையில் எம்மிடம் ஏற்படுத்தியோருள் பெரும்புலவர் நக்கீரனாரும் அவர்தம் இளவல் புலவர் சித்திரவேலனாரும் குறிப்பிடத்தக்கோர்! எம் நன்றிக்குரியோர்! தனித்தமிழ் ஆர்வம், திராவிடர் இயக்க ஈடுபாடு எனும் இரு சிறகுகளால் எம்மை எழவைத்தவர் பெரும்புலவர் நக்கீரனார்! அவரை எண்ணிக் கண்பனிக்க நன்றி கூறுகிறது எம் நெஞ்சம். காலப்பழமையாலும் பராமரிப்புக் குறைவாலும் அழிய நேர்ந்த தமிழிலக்கியங்கள் அளவற்றவை! அவற்றில் ஒருபகுதியை யாவது மீட்டு நம் கைகளுக்கு வழங்கியோர் ஆறுமுகநாவலர், சி.வை. தாமோதரனார், உ.வே.சாமிநாதர் முதலிய சான்றோர் பெருமக்கள்! தமிழிலக்கியப் பெருஞ்செல்வத்தை மீண்டும் மீண்டும் அச்சாக்கி, அனைவர் கைகளையும் எட்டச் செய்த பெருமை - சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், உ.வே.சா. நூலகம், மணிவாசகர் பதிப்பகம் முதலிய பதிப்பாளர்களுக்கு உரியது. அச்சுத்துறை அறிமுகமான பின்பே, அறிவுத்துறை அனைவருக்கும் பொதுச்சொத்தாகும் வாய்ப்பு வந்தது. எட்டாக் கனியாக ஓலைச் சுவடிகளில் முடங்கிக் கிடந்த இலக்கியச் செல்வங்கள், எல்லோருக்கும் எளிதாய்க் கிடைக்கும் பணியைச் செய்த பதிப்பாசிரியர்களும், பதிப்பாளர்களும் நம் நன்றிக் குரியோர்! இரவு பகல் பாராது முதுமையைக் கருதாது உழைக்கும் மனவுரத்தை முன்னோடிப் பதிப்பாசிரியர்களின் பணியே எமக்கு வழங்கியது. அரசும், பல்கலைக் கழகங்களும், அறநிறுவனங்களும், சமய பீடங்களும் ,பெரும் இயக்கங்களும், பெரும் செல்வர்களும் செய்ய வேண்டிய பெருந் தமிழ்ப்பணி இது! எளியவர்களால் இயங்கும் தமிழ்மண் பதிப்பகம் பெருந்தமிழ்ப் பணிகளை இன்னல்களுக்கு இடையில் அருமுயற்சியோடு செய்து வருவது, உள்ளவுரம் ஒன்றினால்தான்! வல்லமை சேர்க்கும் வலிமையுண் டாக்கும்! வண்டமிழ் நைந்திடில் எதுநம்மைக் காக்கும்? காக்கும் தமிழைக் காக்கும் உணர்வைப் பாவேந்தர் பாடல் வரிகள் தந்தன. அச்சுக்கு எட்டாமலும் கைக்குக் கிட்டாமலும் இருந்த பேரறிஞர் பலரின் நூல்களை நாட்டுடைமையாக்கி திராவிடர் இயக்க அரசுகள் வழங்கின. அதனால், அறிவு பரவலாகும் வாய்ப்புகள் உருவாயின. `சரிவும் இழப்பும் நமக்கு வந்தாலும் தமிழுக்கு வரக்கூடாது என எண்ணி உழைக்கும் இயக்கங்களும் அமைப்புகளும் தமிழ் நாட்டில் வற்றாமல் வளர்ந்தபடி இருக்கின்றன. திருவிடர் கழகம் (1908) தனித்தமிழ் இயக்கம் (1916) தென்னிந்திய நலஉரிமைக் கழகம் (1916) சென்னை மாகாணத் தமிழ்ச்சங்கம் (1934) தமிழ்ப்பாதுகாப்புக் கழகம் (1937) தமிழறிஞர் கழகம் (1943) தமிழ்ப் பேராயம் (1959) தமிழ்க்காப்புக் கழகம் (1961) தனித்தமிழ்க் கழகம் (1964) உலகத்தமிழ்க் கழகம் (1968) தமிழியக்கம் (1972) தமிழ்ச் சான்றோர் பேரவை (1998) தமிழ் மலர்ச்சிக்கும் தனித்தமிழ் வளர்ச்சிக்கும் அடித்தளம் அமைத்த இத்தகு அமைப்புகளுக்கு மூல விசையாகத் திகழும் பெருமையைப் பெறுவோர் மறைமலையடிகளாரும் பாவாணருமே! தமிழ் வளத்திற்கும் தமிழர் நலத்திற்கும் சிவனிய மேம்பாட்டிற்கும் மறைமலையடிகளார் ஆற்றிய பணிகள் அளப்பரியவை. அவை தொடர்பாக அவர் ஆய்ந்தளித்த அறிவு முத்துகள் எண்ணற்றவை! அடிகளாரின் அனைத்துப் படைப்புகளும் பொருள்வழிப் பிரிக்கப்பட்டு, காலவரிசையில் 34 தொகுப்புகளாகத் தொகுக்கப் பட்டு `மறைமலையம் என உங்கள் கைகளில் இப்போது தவழ்கின்றது. பல தலைமுறைகளுக்குப் பயன்படும் அறிவுக் கருவூலம் இது! தமிழர் இல்லந்தோறும் இருக்கவேண்டிய அருந்தமிழ்ச் செல்வம் இது! அறிவுலகத்தால் `மறைமலையம் வரவேற்கப்படும் என்னும் நம்பிக்கை எமக்குண்டு. நூற் சுரங்கத்தில் நுழைய அழைக்கிறோம். தனக்கென வாழ்வது சாவுக்கொப்பாகும் தமிழ்க்கென வாழ்வதே வாழ்வதாகும் எனும் பாவேந்தர் வரிகளை நினைவுக் கூறுகிறோம். - கோ. இளவழகன் நூலாக்கத்திற்குத் துணை நின்றோர் நூல் கொடுத்து உதவியோர் ரோசா முத்தையா நூலகம் - சென்னை. புலவர் கா. இளமுருகன் - புன்செய் புளியம்பட்டி (மறைமலையடிகள் மன்றம்) மறை. தாயுமானவன் - சென்னை (மறைமலையடிகளின் பேரன்) பிழை திருத்த உதவியோர்: திரு. அ. மதிவாணன் (ஆங்கிலம்) திரு. க. கருப்பையா திரு. புலவர். த. ஆறுமுகம் புலவர். மு. இராசவேலு திரு. இராசுகுமார் திரு. நாக. சொக்கலிங்கம் முனைவர். க. சுப்பிரமணியன் திருமதி. அ. கோகிலா திருமதி. உசா செல்வி. அபிராமி நூல் உருவாக்கம் கணினி செய்தோர்: திருமதி கோ. சித்திரா திருமதி மலர் திருமதி செல்வி திருமதி ஹேமலதா திரு. ஆசம் திருமதி கலைவாணி பிராசசு இந்தியா திருமதி` புகழ்ச்செல்வி கயல்விழி (Process India), நூல் வடிவமைப்பு: திருமதி வி. சித்திரா மேலட்டை வடிவமைப்பு: கவி பாகர் நூலாக்கத்திற்கு உதவியோர் இரா. பரமேசுவரன், க. இளந்திராவிடன், வே. தனசேகரன், கு. மருது, இல. தருமராசன் தாள் வழங்கியோர்: சிவா தாள் மண்டி, சென்னை -1 எதிர்மம் (Negative): பிராசசு இந்தியா (Process India) சென்னை-5. அச்சடிப்பு மற்றும் நூல் கட்டமைப்பு: வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்சு மற்றும் பிராசசு இந்தியா `மறைமலையம் எல்லா நிலையிலும் செப்பமுற வெளி வருவதற்குப் பல்லாற்றானும் உதவியாக இருந்த இவர்களுக்கும் மற்றும் அறிஞர் பெருமக்களுக்கும் எம் நிறைந்த நன்றியும் பாராட்டும். அறிவுரைக் கொத்து 1967இல் பாரிநிலையம் வெளியிட்ட ஆறாம் பதிப்பை அடிப்படையாகக் கொண்டு இந்நூல் வெளிவருகின்றது. F¿¥ò: bghUŸtÊ¥ ãÇ¡f¥g£l kiwkiya« És«gu¤ bjhF¥ãš tuyhW v‹D« jiy¥ã‹ ÑœtU« `ïªâbghJ bkhÊah? (1937) என்னும் இச்சிறிய நூல், கட்டுரைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள அறிவுரைக்கொத்து என்னும் நூலில் இந்தநூலும் சேர்க்கப்பட்டுள்ளது. இந்நூலைப் பற்றிய குறிப்புரை... சைவசமய பரிபாலனம், கோயில் வழிபாடு, சிறு தெய்வங்கட்கு உயிர்ப்பலியிடலாமா? சீவகாருணியம் கடவுளுக்கு அருளுருவம் உண்டு. கல்வியே அழியாச் செல்வம், தமிழ்த்தாய், அறிவு நூற்கல்வி, தமிழிற் பிறமொழிக் கலப்பு, உடன் பிறந்தார் ஒற்றுமை, வணிகக் கூட்டுறவு, பெண் மக்களின் கடமை, பெற்றோர் கடமை என்னும் கட்டுரைகளைக் கொண்டது இந்நூலாகும். அறிக்கைகளாகவும், சிறு நூல்களாகவும் வெளியிடப்பட்டவற்றின் தொகுப்பே இது. வெளிவந்த ஆண்டு 1921. - இரா. இளங்குமரன் இந்திய இலக்கியச் சிற்பிகள் * * `ïªâ bghJ bkhÊah? எனும் இச்சிறிய நூல் வரலாறு எனும் தலைப்பில் வந்துள்ள தொகுப்பில் இடம் பெற்றிருந்தது. இதனை இந்நூலில் புதிதாகச் சேர்த்துள்ளோம். முதற்பதிப்பின் முகவுரை கற்றார் கல்லாதார் என்னும் இரு திறத்தார்க்கும் பயன்படும் பொருட்டுச், சென்ற பல ஆண்டுகளாக யாம் இடையிடையே வெளியிட்டு வந்த துண்டுத் தாள்களிற் போந்த கட்டுரைகளே பெரும்பாலும் இந்நூலிலே தொகுக்கப்பட் டிருக்கின்றன. அவை: `சைவ சமயப் பாதுகாப்பு’, திருக்கோயில் வழிபாடு’, `சிறு தேவதைகட்கு உயிர்ப்பலி யிடலாமா?, `சீவ காருணியம், `தமிழ்த்தாய், `அறிவுநூற் கல்வி, `உடன்பிறந்தார் ஒற்றுமை, `கூட்டு வாணிகம், `பெண் மக்கள் கடமை என்பனவாகும். இவை பல்லாயிரக்கணக்கான துண்டுத் தாள்களில் அச்சிடப்பட்டுத் தமிழ் வழங்கும் நாடுகள் எல்லா வற்றிலும் விலையின்றி வழங்கப்பட்டன. இவற்றைப் பதிப்பிட்ட போது இவற்றின் அச்சுக்கூலி கடிதக்கூலிகளை மட்டும் ஆங்காங்கு உள்ள நண்பர்கள் சிற்சிலர் ஏற்றுக்கொண்டனர். இனித், துண்டுத் தாள்களாக அல்லாமல், எமது ஞானசாகர இதழில் யாம் இடையிடையே எழுதி வெளியிட்ட வேறு சில கட்டுரைகளும் இந்நூலின் கண் ஊடே ஊடே சேர்க்கப்பட்டிருக்கின்றன. அவை: `கடவுளுக்கு அருளுருவம் உண்டு, `கல்வியே அழியாச் செல்வம், தமிழிற் பிறமொழிக் கலப்பு, `பெற்றோர் கடமை என்பனவாகும். இவற்றுட் கல்வியே அழியாச் செல்வம் என்பதும், `பெற்றோர் கடமை என்பதும் எம் அருமைத் திருமகள் நீலாம்பாள் அம்மை அவைக்களத்தில் விரிவுரை நிகழ்த்தும் பொருட்டு எழுதப்பட்டனவாகும். இந்நூலின்கண் அடங்கிய பதின்மூன்று கட்டுரைகளுந் தூய தனித்தமிழில் எழுதப்பட்டிருத்தலோடு, எல்லாரும் எளிதிற் கற்றுணரத்தக்க எளிய நடை யிலும் அமைந்திருக்கின்றன. மேலும், இவற்றிலுள்ள பொருள்களும் எல்லார்க்கும் விளங்குவனவாய், அவர்க்கு மேலுமேலும் அறிவை வளர்க்கும் இயற்கை வாய்ந்து மிருக்கின்றன. யாம் எழுதிய மற்றை நூல்களிற் பெரும்பாலான சிறிதேனுங் கல்வியறிவு பெற்றவர்களுக்கே பயன்படுவனவா யிருக்க இந்நூற் கட்டுரைகள் மட்டும் எல்லார்க்கும் பயன்படும் இயல்பு கண்டு எமக்கு நண்பராய் உள்ளார் பலரும் இவற்றை யெல்லாம் ஒருங்கு திரட்டி ஒரு நூலாக வெளியிடல் வேண்டுமென்று கேட்டுக் கொண்டதற் கிணங்கி, அவற்றை இங்ஙனம் வெளியிடலானேன். சமரச சன்மார்க்க நிலையம், இங்ஙனம் பல்லாவரம், வேதாசலம் இரண்டாம் பதிப்பின் முகவுரை முதற்பதிப்பில் இல்லாத ஐந்து நீண்ட கட்டுரைகள் இப்பதிப்பின்கட் புதியவாய்ச் சேர்க்கப்பட்டிருக்கின்றன. அவை: `கடவுள் நிலை, `கல்வியுங் கைத்தொழிலும், `பகுத்துணர்வும் மாதரும், `தனித் தமிழ் மாட்சி, `தமிழ் நாட்டவரும் மேல்நாட்டவரும் என்பனவாகும். இதனால் இப்பதிப்பில் 80 பக்கங்கள் மிகுதியாகச் சேர்ந்துள்ளன. முதற்பதிப்பிற் சிற்சில கட்டுரைகளிற் கலந்திருந்த சிற்சில வட சொற்களும் இப் பதிப்பின்கண் அறவே களைந்தெடுக்கப் பட்டன. அதனால் இந்நூற் கட்டுரைகளின் உரைநடை இன்னும் மிகுதியான செந்தமிழ்ச் சுவை வாய்ந்து நடத்தல் காணலாம். 1931 இங்ஙனம் மறைமலைகடிகள் மூன்றாம் பதிப்பு இம்மூன்றாம் பதிப்பிற் சிற்சில திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. பொதுநிலைக் கழகம் இங்ஙனம் பல்லாவரம் மறைமலைகடிகள் 1935 பொருளடக்கம் பக்கம் 1. கடவுள் நிலை 7 2. சைவசமயப் பாதுகாப்பு 13 3. திருக்கோயில் வழிபாடு 20 4. சிறு தேவதைகட்கு உயிர்ப்பலியிடலாமா? 27 5. சீவகாருணியம் 34 6. கடவுளுக்கு அருளுருவம் உண்டு 40 7. கல்வியே அழியாச் செல்வம் 48 8. கல்வியுங் கைத்தொழிலும் 57 9. பகுத்துணர்வும் மாதரும் 63 10. தமிழ்த்தாய் 75 11. தமிழிற் பிறமொழிக் கலப்பு 81 12. தனித்தமிழ் மாட்சி 94 13. தமிழின் தனிச் சிறப்பு 105 14. அறிவுநூற் கல்வி 123 15. தமிழ் நாட்டவரும் மேல் நாட்டவரும் 129 16. உடன் பிறந்தார் ஒற்றுமை 154 17. கூட்டு வாணிகம் 160 18. பெண்மக்கள் கடமை 166 19. பெற்றோர் கடமை 173 20. இந்தி பொது மொழியா? 184 1. கடவுள் நிலை சைவ சமயம் என்பது இவ்விந்திய நாடு எங்கும் உள்ள தமிழ் நன்மக்களால் எத்தனையோ ஆயிர ஆண்டுகளுக்கு முன்னே தொட்டுக் கைக் கொள்ளப்பட்ட கடவுட் கொள்கையாகும். அஃது அவர்களை அறிவிலும் உருக்கத்திலும் ஒழுக்கத்திலும் மேலேறச் செய்து மற்றைய நாட்டவர்க்கு இல்லாத தனிப்பெருஞ் சிறப்பினை அவர்கட்கே தந்து, மற்றைச் சமயங்களுக்கெல்லாம் மேலான தனி நிலையில் வைகி விளங்குவது. அது, தமிழ் நன்மக்களை அறிவில் மேம்பட்டு விளங்கச் செய்தது எப்படியென்றாற், கூறுதும் இந்நிலவுலகத்தில் எங்கும் உள்ள எல்லா மக்களும், அவர்கள் நாகரிகத்திற் சிறந்திருப்பினும் நாகரிகம் இல்லாக் காட்டு வாழ்க்கையிலிருப்பினும், எல்லாருங் கடவுள் ஒருவர் உண்டு என்னும் உணர்ச்சியும், அக்கடவுளை வணங்கும் விருப்பமும் உடையராய் இருக்கின்றனர். மக்கட் பிரிவினர் எல்லார் வரலாறுகளையும் மிக நுணுக்கமாக ஆராய்ந்து வரலாற்று நூல்கள் எழுதியிருக்கும் ஆங்கில ஆசிரியர்கள், கடவுளுணர்ச்சியில்லாத ஒரு மக்கட் கூட்டத் தாரை ஓரிடத்துங் காண்டல் இயலாது என்று முடிவுகட்டிச் சொல்லுகின்றார்கள். நமது நாட்டிலும் மிகத் தாழ்ந்தோர் முதல் மிக உயர்ந்தோர் ஈறாக உள்ள எத்திறத்தவருங் கடவுளுணர்ச்சியும் அவ்வுணர்ச்சிக்கு ஏற்ற பலவகையான வணக்கமுறைகளும் உடையராய் இருத்தலை நாடோறும் நாம் எங்கும் கண்டு வருகின்றோம். ஆகவே, கடவுளுணர்ச்சியும் கடவுள் வணக்கமும் இல்லாமல் மக்களாய்ப் பிறந்தவர்கள் உயிர் வாழ்தல் இயலாதென்பது இனிது விளங்கும். இனி, மக்கள் எல்லாரும் ஏன் இங்ஙனம் கடவுள் உணர்ச்சியுங் கடவுள் வணக்கமும் உடையராயிருக்கின்றன ரென்றால், அவர்களனைவரும் இந்த உடம்பின் துணையும், இந்த உடம்பு உலவும் நிலத்தின் துணையும், இந்த உடம்புக்கு வேண்டும் பொருள்களின் துணையும் வேண்டியவர்களா யிருக்கின்றனர். வியப்பான இந்த உடம்பையும், இந்த உலகத்தையும் இந்த உலகத்துப் பொருள்களையும் மக்கள் தாமாகவே உண்டாக்கிக் கொள்ள வல்லவர்களாய் இல்லை. ஆகவே, இத்தனை வியப்பான பண்டங்களையும் தமக்கு ஆக்கிக் கொடுக்கத்தக்க பெருவல்லமையும் பேரறிவும் பேரிரக்கமும் உள்ள ஒரு முழுமுதற் கடவுள் கட்டாயம் இருக்க வேண்டுமென்னும் உணர்ச்சி எல்லார் உள்ளங்களிலும் இயற்கையாகவே தோன்றா நிற்கின்றது. இனி, எவராலும் படைக்க முடியாத இத்தனை உடம்பு களையும், இத்தனை உலகங்களையும் இத்தனை அரும்பொருள் களையும் தமக்குப் படைத்துக் கொடுத்த எல்லாம் வல்ல இறைவன் ஒருவன் உண்டு என்னும் உணர்ச்சி வந்தவுடனே, அவனைக் காணுதற்குங் கண்டு வணங்குதற்கும் எல்லாருக்கும் பேரவா உண்டாதலும் இயல்பேயாம். சலவைக்கல்லில் திருத்திச் சமைக்கப்பட்ட மிக அழகான ஓர் உருவத்தையேனும், பல வண்ணங்களாற் குழைத்து திறமாக எழுதப்பட்ட ஓர் ஓவியத்தையேனும், வானத்தில் பறக்கும் ஒரு மயிற்பொறியையேனும் சுவைத்த சொல்லும் பழுத்த பொருளும் நிறைந்த ஒரு நூலையேனும், இயற்றிய கைத்தொழிலாளரும் நல்லிசைப் புலவருந் தமது காலத்தில் உயிரோடிருக்கின்றனர் என்று தெரிந்தால் அவர்களைக் காண்டற்குங் கண்டு வணங்குதற்கும் மக்கள் எவ்வளவு விழைவுடையவராய் விரைந்து செல்கின்றனர்! சென்று, அவர்களை மனம் உருகி வணங்கி வாழ்த்தி எவ்வளவு இன்புறுகின்றனர்! சிற்றறிவுடைய மக்கட் பிறவி எடுத்தாரிலேயே சிறிது சிறந்த அறிவு வாய்ந்த கைத்தொழிலாளரையும் நல்லிசைப் புலவரையும், அவர் அமைக்கும் உருவ அமைப்பு நூல் அமைப்பின் அழகால் மனம் இழுக்கப்பட்ட மக்கள் தேடிச் சென்று கண்டு வணங்கப் பேராவல் கொள்ளுவார்களானால், எவராலும் அமைக்க முடியாத எண்ணிறந்த உடம்புகளையும் எண்ணிறந்த உலகங்களையும் எல்லையற்ற உலகத்துப் பொருள்களையும் நாம் கேளாமலே அமைத்துக் கொடுத்து, மற்றைத் தொழிலாளரும் புலவரும் அழிந்தொழிவது போல் அழிந்தொழியாமல் எக்காலத்தும் எவ்விடத்தும் நம்மோடு உடனிருக்கும் எல்லாம் வல்ல பெருமானைக் காண்பதற்குங் கண்டு வணங்குவதற்கும் மக்களாகிய நாம் இன்னும் எவ்வளவு மிகுந்த பேராவல் உடையவர்களாய் இருக்க வேண்டும்! மக்களிற் சிறந்தாராயுள்ள சிலரைக் கண்டு வணங்குதலா லேயே, நம்மனோர்க்கு அத்தனையன்பும் இன்பமும் உண்டாகு மானால், எல்லாச் சிறப்புக்குந் தலைவனாய் நிற்கும் இறைவனைக் கண்டு வணங்குதலால் நமக்கு இன்னும் எவ்வளவு மிகுதியான அன்பும் இன்பமும் உண்டாதல் வேண்டும்! ஆதலால் மக்களுக்குக் கடவுளுணர்ச்சியுங் கடவுளை வணங்குதலும் வேண்டாவெனக் கரைவாரது வெற்றுரை மக்களுக்குச் சிறிதும் பயன்படாதென்று உணர்ந்துகொள்க. இனி, விருப்பு வெறுப்பில்லாக் கடவுள், தன்னை மக்கள் வணங்கல் வேண்டுமெனவுந் தனக்குத் திருக்கோயில்களுந் திருவிழாக்களும் வேண்டுமெனவும் விரும்புவரோ என வினவிச் சிலர் நம்மனோரை ஏளனஞ் செய்கின்றார். கடவுள் தம்மை மக்கள் வணங்கல் வேண்டுமெனத் தமது திருவுள்ளத்திற் கருதுவது, அதனால் அவர் தமக்கு ஒரு பெருமை தேடிக் கொள்ளுதற்கு அன்று. ஒருவன் பிறனொருவனை வணங்குவது அச்சத்தினாலும் நிகழும்; அன்பினாலும் நிகழும் செல்வத்தினாலேனுங் கல்வியினாலேனுந் தலைமையினா லேனும் வலிமையினாலேனுஞ் சிறந்தானாயிருக்கும் ஒருவனைச் செல்வமுங் கல்வியுந் தலைமையும் வலிமையும் இல்லாத பிறர் பெரும்பாலும் அச்சத்தால் வணங்காநிற்பர். மேற்சொன்ன வளங்களுடையோன் தன்னையே பெரியனாக மதித்துத் தன்னை வணங்குவோரை மதியாது ஒழுகும் வரையில், அவனை வணங்குவோர் அவன்பால் என்றும் அச்சமே கொண்டு நிற்பர். அங்ஙனஞ் செல்வம் முதலிய வளங்களால் உயர்ந்தோன் தன்னை மேலாகக் கருதாது, தன்னை வணங்குவோரெல்லா ரிடத்தும் அன்பும் இரக்கமும் உடையனாய் ஒழுகுவனாயின், அவனை வணங்குவார் தமக்குள்ள அச்சந்தீர்ந்து அவன்பாற் பேரன்புடையராய் உளங் குழைந்து உருகியொழுகுதலையுங் காண்கின்றோம். இவ்வியல்பை உற்று நோக்குங்காற், கடவுளை அச்சத்தால் வணங்குவோர் நிலைக்கும், அன்பினால் வணங்குவோர் நிலைக்கும் உள்ள வேறுபாடு நன்கு விளங்கா நிற்கும். கடவுள் ஒப்புயர்வு அற்ற செல்வமும் அறிவுந் தலைமையும் வலிமையும் உடையவர்; அவரை வணங்காது ஒழியின் நமக்குத் தீங்குண்டாம் என்னும் அளவே கருதி, அவரை அச்சத்தால் வணங்குவோர் தாழ்ந்த நிலையினராவர். மேற்குறித்த வளங்களையுடையனாதலுடன், எம்பெருமான் ஒன்றுக்கும் பற்றாத எளியேங்களிடத்தும் அளவிறந்த அன்பும் இரக்கமும் உடையன் எனக் கருதி அவனை அன்பினால் வணங்குவோர் உயர்ந்த நிலையினராவர். அன்பினால் வணங்கும் உயர்ந்த நிலையினரே கடவுளின் உண்மையை உணர்ந்தாராவர். ஏனென்றால், கடவுள் எல்லையற்ற செல்வமும் அறிவுந் தலைமையும் வலிமையும் மட்டுமேயுடையரல்லர்; அறியாமையுந் துன்பமும் உடைய எல்லா உயிர்களுக்கும் அவ்விரண்டையும் நீக்கி, அறிவும் இன்பமுந் தருதற்கு அவர் செய்திருக்கும் ஏற்பாடுகளின் அருமையை எண்ணிப் பார்க்கப் பார்க்க அவர் எல்லா உயிர்களிடத்தும் எல்லையற்ற அன்பும் இரக்கமும் உடையவரென்பது தெளிவாக விளங்குகின்றது. நம் உடம்பிலுள்ள உறுப்புக்களிற் கண்ணினும் சிறந்தது பிறிதில்லை; கண் இல்லையானால் நமது அறிவு முக்காற் பங்குக்கு மேல் விளங்காது ஒழியும். இத்துணைச் சிறந்த கண்ணையும், இதற்கு அடுத்த சிறப்பிலுள்ள ஏனைய உறுப்புக் களையும் தாமாகவே படைத்துக்கொள்ள வல்லவர்கள் எங்கேனும் உளரோ? இல்லையன்றே! எவராலும் படைக்க முடியாத இவ்வரும் பெறல் உறுப்புக்களை, நாம் கேளாதிருக்கையிலும், நமக்குப் படைத்துக் கொடுத்தவன் நம்பால் எவ்வளவு அன்பும், எவ்வளவு இரக்கமும் உடைய வனாயிருக்க வேண்டும்! இது பற்றியன்றோ மேனாட்டிற் சிறந்தமெய்ந் நூலாசிரியரான ஒருவர் (Bergson) கண்ணின் வியப்பான அமைப்பை ஆராய்ந்து காட்டிக் கடவுளின் அறிவாற்றலையும் அருளையும் நிலை நாட்டினார். ஆகவே, கடவுள் வகுத்த இவ்வியற்கையமைப்பின் திறங்களை ஆராயுந்தோறும் நாம் அவன்றன் ஆற்றலையும், அருளையும் அறிந்தறிந்து மெய்யறிவு விளக்கப் பெறுகின்றோம் அல்லமோ? பேரறிவுடையோன் ஒருவன் வகுத்த ஒரு நீராவி வண்டியின் அமைப்பையேனும் அல்லது அதுபோன்ற மற்றொரு வியத்தகு பொறியையேனும் நாம் ஆராய்ந்து நோக்குந்தோறும், அவனது அறிவின் திறம் நமக்குப் பெரியதோர் இன்பத்தை விளைத்து நமதறிவையும் விரிவு செய்து விளங்குதல்போல, இறைவன் படைத்த படைப்பின் வழியே அவனது அறிவின் ஏற்றத்தைக் கண்டு நாம் வியந்து மகிழுந்தோறும் நமதறிவும் முறை முறையே விரிந்து பேரொளியோடும் விளங்கா நிற்கும். இவ்வாறு இறைவன்றன் அறிவாற்றல் அருளாற்றல்களை அறிமுகத் தானன்றி, நமக்கு உயர்ந்த அறிவு விளக்கம் உண்டாவதற்கு வேறுவழி இல்லையாதலால், நமக்குக் கடவுளுணர்ச்சி வேண்டா மென்பாரின் வழுக்குரை ஏழை மக்களை அறியாமைப் பாழ்க்குழியில் ஆழ்த்தி அழிப்பனவாமென்றுணர்மின்கள்! இவ்வாற்றாற் சைவசமயமானது மக்களுக்கு உரிய அறியாமையும், பிறப்பு இறப்பும் இல்லாப் பெருமுதற் கடவுளான சிவபெருமான்றன் அறிவாற்றல் அருளாற்றல்களை விளக்கும் வழியே மக்களெல்லாரையும் பேரறிவு நிலைக்குச் செலுத்துவதோர் ஒப்பற்ற கொள்கையாதலை உணர்ந்து கொண்மின்கள்! இனிக் கடவுள் ஒருவர் இருந்தால், அவர், தம்மை மக்கள் வணங்கல் வேண்டுமெனக் கருதார் என்னும் கருத்துப்பட உரைப்பார் உரையும் பாழுரையாதல் காட்டுதும்: எல்லாம் வல்ல இறைவன் இவ்வுலகத்தையும், இவ்வுலகத்துப் பொருள்களையும் படைத்து, அவற்றின் நடுவே இவ்வியப்பான இவ்வுடம்புகளிற் புகுத்தி நம்மை வாழச் செய்திருக்கும் வகையினை உற்று நோக்கும் நுண்ணறிவாளர், இங்ஙனம் அவன் செய்திருப்பது ஒரு சிறந்த நோக்கம் பற்றியே யல்லாமல் வெறும் பாழுக்காக அன்றென உணர்வர். அச்சிறந்த நோக்கம் யாதோவென்றால், நாம் அறிவும் இன்பமும் இவையென உணர்ந்து, நமக்கு இயற்கையாய் உள்ள அறியாமையுந் துன்பமும் களைந்து, என்றும் அழியாப் பேரின்பத்தில் நாம் நிலைபேறாயிருக்க வேண்டுமென்பதே யன்றோ? உலகத்தின் கண் உள்ள அரிய காட்சிகளையும், இனிய ஒலிகளையுந் தீஞ்சுவைகளையும், நறுமணங்களையும், மென்பொருள் களையுங் கண்டு கேட்டுச் சுவைத்து உயிர்த்துத் தொட்டு உணர்தலாலும், அறிவால் மிக்க சான்றோரொடு பழகி அவர் ஆக்கிய நூல்களை ஆராய்ந்து அறிதலாலும் யாம் நாளுக்கு நாள் அறிவும் இன்பமும் இவையென உணர்ந்து அவற்றால் மேன்மேல் உயர்ந்து வருகின்றனம் அல்லமோ? ஆகவே, இறைவன் இவ்வுலக வாழ்க்கையினை வகுத்தது, நாம் அறிவில் வளர்ந்து அவனது பேரின்பத்தில் சென்று நிலைபெறுதற் பொருட்டேயா மென்பது நன்கு துணியப்படும். நாம் கடவுளின் பேரறிவினையும் பேரின்பத்தினையும் அறிதற்குக் கருவிகளாகவே அறிவையும் இன்பத்தினையுஞ் சிறிது சிறிதே காட்டும் இவ்வுலகத்துப் பொருள்களையும் இவ்வுடம்புகளையும் இறைவன் அமைத்தனனே யல்லாமல், இப்பொருள்களும் உடம்புகளுமே பேரறிவையும் பேரின்பத்தையும் அளிக்குமென அமைத்தானல்லன். ஆதலால், சிற்றறிவு சிற்றின்பங்களைத் தரும் இவற்றிற் பற்று வையாமற், பேரறிவு பேரின்பங்களைத் தருங் கடவுளிடத்தில் நாம் பற்று வைத்தல் வேண்டுமென்றே அவனது அரும்பெரு நோக்க மாதலால், அந்நோக்கத்தை யுணர்ந்தவர்களல்லால் மற்றையோர் இவ்வுலகப் பற்றை விடார். ஆகவே, இறைவனைச் சார்ந்து வணங்கி அவன்றன் பேரின்பத்தை நாம் பெறுவது அவனது நோக்கத்தோடு ஒத்திருத்தலால், அதுகண்டு இறைவன் திருவுளம் மகிழ்வன். மகன் உயர்ந்த நிலையடைதல் கண்டு மகிழாத தந்தையாரும் உளரோ? எனவே, நாம் இறைவனை வணங்குவது நமக்குப் பெரும் பயன் தருதலோடு, இறைவற்கும் மகிழ்ச்சி தருவதாகலின், அவற்குத் திருக்கோயில்களும் திருவிழாக்களும் அமைத்து வணங்குதலே சிறந்த முறையாமென்க. இஃது உணர்த்துதற்கே அப்பரும், குறிக ளும்அடை யாளமும் கோயிலும் நெறிக ளும்அவன் நின்றதோர் நேர்மையும் அறிய ஆயிரம் ஆரணம் ஓதினும் பொறியி லீர்மனம் என்கொல் புகாததே என்று அருளிச் செய்தாரென்பது. 2. சைவசமயப் பாதுகாப்பு காகம் உறவு கலந்துண்ணக் கண்டீர்! அகண்டாகாரசிவ, போகம்எனும் பேரின்பவெள்ளம் பொங்கித்ததும்பிப்பூரணமாய், ஏகஉருவாய்க் கிடக்குதையோ! இன்புற்றிட நாம் இனிஎடுத்த, தேகம் விழும்முன் புசிப்பதறகுச் சேரவாரும்! செகத்தீரே! - தாயுமானசுவாமிகள். `சைவசமயம் என்பது `சிவத்தை ஆராய்ந்து அறிந்த பொழுது அல்லது கொள்கை என்று பொருள்படும்; இந்தக் கொள்கையைப் பாதுகாத்துக் கொள்ளுதலே சைவ சமயப் பாதுகாப்பு ஆகும். உலகத்திலே அளவிறந்த கொள்கைகள் இருந்தாலும், அவை யெல்லாவற்றுள்ளுங் கடவுளைப் பற்றிய கொள்கையே சமயம் என்று பெரும்பான்மையும் எல்லாராலுங் கைக்கொள்ளப்பட்டு வருகின்றது. மக்கள் நிலையில்லாத வாழ்க்கை உடையவராய் இருத்தலாலும், நோயுந்துன்பமுங் கவலையும் அடுத்தடுத்து வந்து அவரை வருத்துதலாலுந், தமக்குத் துணையாக நினைத்த மக்களுந் தம்மைப் போலவே நோய் முதலியவற்றால் வருந்தி நிலையின்றி மறைந்து போதலாலும், அவர்கள் தம்மினுந் தம்மைப் போன்ற எல்லா உயிர்களினும் மேற்பட்டு உயர்ந்த ஒரு பேரறிவுப் பொருளான கடவுளின் துணையை நாடினவராய் இருக்கின்றார்கள். கடவுள் இல்லையென்று வலியுறுத்திப் பேசி வந்தவர் களுங் கூடப் பெருந்துன்பங்கள் வந்து தம்மை மூடிக்கொண்ட காலத்தில் தாம்கொண்ட கொள்கையைப் பிசகென உணர்ந்து கடவுளை நம்பத் தலைப்பட்டிருக் கின்றார்கள். கடவுளிடத்தில் நம்பிக்கையில்லாத அருகரும், பௌத்தருங் கூடத் தமக்கு மேற்பட்ட துணையை நாடினவர்களாய்த் தம் சமய குரவரையே கடவுளாக எண்ணி வழிபட்டு வருகின்றனர். தம்மையே கடவுளாக நினைப்பவர்களுங் கூடத் தமது கொள்கையை உண்மைப்படுத்திக் கொள்ள முடியாமை கண்டு ஏதாவ தொன்றைத் தமக்கு மேற்பட்டதாக வைத்து வணங்கி வருகின்றார்கள். இங்ஙனமாக ஒன்றோடொன்று மாறுபட்ட கொள்கைகள் உடையவர்களெல்லாருங் கடைசியாகக் கைக்கொண்டது `தமக்கு மேற்பட்ட ஒரு பேரறிவுப் பொருள் வணக்கமே ஆகும். இம் முடிந்த கொள்கையில் எல்லாச் சமயிகளும் உடன்பாடு உடையவராய் இருக்கின்றனர். இனி, மக்கள் எல்லாரும் இங்ஙனந் தம்மின் மேற்பட்ட ஒரு பேரறிவுப் பொருளின் உதவியை விரும்பி நிற்றல் எதன் பொருட்டு என்று ஆழ்ந்து ஆராய்ந்து பார்க்குங்கால், அவர் தமது துன்பத்தை நீக்கிக் கொள்ளுதற்கும் இன்பத்தைப் பெறுதற்குமேயாம் என்னும் உண்மை புலனாகும். மக்கள் மட்டுமே யல்லர், மக்களினுந் தாழ்ந்த எல்லா உயிர்களுங் கூடத் தமது துன்பத்தைப் போக்கி இன்பத்தை ஆக்கிக் கொள்ளவே முயன்று நிற்கின்றன. இங்ஙனம் நம் கண்ணெதிரே காணப்படுகின்ற இவ்வுண்மையைக் கொண்டு, எல்லா உயிர்களும் இப்போது துன்பக் கயிற்றாற் கட்டப்பட்டிருக் கின்றன வென்றும், இத் துன்பக் கயிற்றை அறுக்கவும் இன்ப வெள்ளத்தைப் பெருக்கவுந் தம்மால் ஆகாமையின், துன்பத்தி னின்றுந் தம்மை விடுவித்து இன்பத்தை ஊட்டவல்ல முழுமுதற் கடவுளின் உதவியைப் பெறுதற்கு அவை பெரிதும் விரும்பி நிற்கின்றன வென்றும் நாம் தெளிவாக அறிந்து கொள்கின்றனம் அல்லமோ? இன்னும், பிறப்புப் இறப்பு நோய் மூப்புக் கவலை இழப்பு முதலான பலதிறப்பட்ட வடிவங்களிற் றோன்றுந் துன்பங்கள் அத்தனையும் எல்லா உயிர்களையும் வருத்தி வரக் காண்கின்றோ மாதலால், இத் துன்பங்கள் உடையோர் வேறுவகையில் எவ்வளவு உயர்ந்தோராயினும் உயிர்களே யல்லாமற் கடவுளாக மாட்டார். இவ்வுயிர்களை இத்துன்பத்தி னின்றும் மீட்டு, இவற்றிற்கு இன்பத்தைத் தருங் கடவுள் ஒருவரே எவ்வகைத் துன்பமும் இல்லாதவர், எல்லா இன்பமும் ஒருங்கே உடையவர். இதுவே கடவுளுக்கு உண்மையான தன்மை யென்பதை எல்லாச் சமயிகளும் உடன்பட்டு உரைப்பார் களாயினுஞ், சைவ சமயத்தில் மட்டும் அவ்வுண்மை முன்னுக்குப்பின் மாறில்லாமற் காணப்படு கின்றது; மற்றைச் சமயத்தவர்களோ பிறப்புப் இறப்பு முதலான மேற்கூறிய துன்பங்களிற் கிடந்து உழன்றவர்களை, அவரவரிடத்துள்ள சிற்சில சிறந்த தன்மைகளைக் கண்டும் வலிய செய்கைகளைக் கண்டும் முழுமுதற் கடவுளாகத் துணிந்து வணங்கி வருகின்றனர். நாடக அரங்கத்தில அரசந்தாங்கி வந்து ஆடுவோன் உண்மையில் அரசன் ஆகாமைபோல, இறைவனருளாற் சிற்சில உயர்நலச் செய்கைகளைப் பெற்றவர்கள் அவற்றால் அவ்விறைவனைப்போற் கருதப்படினும் அவர் உண்மையில் அவ்விறைவனாகமாட்டார். சைவசமயிகள், வணங்கிவருவது, இன்பவடிவான கடவுளே யல்லாமற் பிற உயிர்களுள் ஒன்றும் அன்றென்பதற்கு அடையாளம் என்னென்றால், அன்பு அல்லது இன்பம் என்று பொருள்படுஞ் சிவம் என்னுஞ் சொல்லையே முழுமுதற் கடவுளுக்குச் சிறப்புப் பெயராக வைத்து வழங்குவதும், அச் சிவத்திற்கு இறப்புப் பிறப்பு முதலான எவ்வகைத் துன்பமுஞ் சிவபுராணங் களிற் காணப்படாமையுமே யாம். இவ்வுண்மையை வலியுறுத்தும் பொருட்டே, யாதொரு தெய்வங்கொண்டீர் அத்தெய்வமாகி யாங்கே மாதொரு பாகனார்தாம் வருவர்; மற்றுஅத் தெய்வங்கள், வேதனைப்படும் இறக்கும் பிறக்கும் மேல்வினையுஞ் செய்யும்; ஆதலால் இவையிலாதான் அறிந்தருள் செய்வதன்றே என்பது சிவஞானசித்தியாரிலும் அருளிச் செய்யப்பட்டது. இங்ஙனம் இன்பவடிவாக விளங்கும் முதல்வனையே வணங்குஞ் சைவசமயிகள் எவ்வுயிர்க்கும் இன்பத்தையே செய்யக் கடமைப்பட்டவர்களா யிருத்தலால், இன்பத்திற்கு மாறான துன்பத்தைத் தருங் கொலைத்தொழிலை எவ்வுயிர் களிடத்துஞ் செய்யாதவர்களாயும், அக்கொலைத் தொழிலால் வரும் ஊனைத் தின்னாதவர்களாயுஞ் சீவாருணிய ஒழுக்கத்தில் தலைசிறந்து நிற்கின்றார்கள். சீவகாருணிய ஒழுக்கம் மற்றைச் சமயத்தவராலுங் கைக்கொள்ளப்படினும், அது சைவசமயி களுக்கே பழமைக்காலந் தொட்டுச் சிறந்த உரிமையாகி வருகின்றது. மற்றைச் சமயத்தவருந் தம்மிற் புலால் தின்னாத ஒருவரைப் பார்த்து `அவர் சைவராகிவிட்டார் என்று சைவப்பெயராற் கூறுதலிற், சீவகாருணிய வொழுக்கஞ் சைவசமயிகளுக்கே சிறப்புரிமைப் பொருளாய் விளங்குகின்றது. இனி, இங்ஙனமெல்லாம் பலவகையாலும் உயர்ந்த சைவ சமயத்தைப் பாதுகாத்துக் கொள்ளும் வழிகள் என்னென்றாற், சைவசமயத்திற் பிறக்கும் பெருந்தவம் பெற்றவர்கள் முதலில் தம்மால் வணங்கப்பட்டுவரும் முழுமுதற் கடவுளான சிவத்தின் இயல்புகளை அறிந்தோரிடத்தும் நூல்களிடத்துங் கேட்டும் பயின்றும் நன்கு அறிந்து கொள்ளுதல் வேண்டும். பெண் பாலாரே பிள்ளைகளின் நல்லறிவு வளர்ச்சிக்கும் நல்லொழுக்கத் திற்குங் காரணராக இருத்தலாற், பெண்மக்களுக்குச் சைவசமய நூல்களையும் நல்லொழுக்கங் களையும் அறிந்தோர் வாயிலாகக் கற்பித்து வருதல் வேண்டும். ஆண்பிள்ளைகள் மற்றக் கல்வி யொடு சைவசமய உணர்ச்சியும் பெற்றுவரும்படி கல்விச் சாலைகள் ஆங்காங்கு திறப்பித்து, அதனைச் செவ்வை யாகப் புகட்டி வருதல் வேண்டும். தேவார திருவாசகங்களுக்குப் பொருள் தெரிந்துகொள்வதோடு, இனிய குரலில் அவற்றை இசையுடன் ஓதுதற்கும் ஒவ்வொருவரும் பழகிக் கொள்ளுதல் வேண்டும். இனி, ஓர் உயிரைக் கொலைசெய்யாமையுங், கொன்று அதன் ஊனைத் தின்னாமையுஞ் சைவசமயத்திற்குச் சிறந்த அறமா யிருத்தலால், எல்லாருஞ் சீவகாருணிய வொழுக்கத்தைக் கைப்பற்றி யொழுகும்படி எவ்வெவ்வகை யால் முயற்சி செய்தல் வேண்டுமோ அவ்வவ் வகையாலெல்லாஞ் செய்து அதனை எங்கும் பரவச் செய்தல் சைவர்க்கு இன்றியமையாத கடமையா யிருக்கின்றது. இனித், தமிழ்மொழியின் அமைப்பும் அதன் இயற்கையுஞ் சைவசமய உண்மையோடு மிகவும் ஒன்றுபட்டிருத்தலால், அதனை எல்லாரும் நன்றாகக் கற்று வேறுமொழிக் கலப்பில்லாமற் செவ்வையாகப் பேசவும் எழுதவும் அதிற் புதிய புதிய நல்லநூல்கள் இயற்றவும் பழகிக் கொள்ளுதல் வேண்டும். தமிழ் அல்லாத மற்றமொழிகளில், வருத்தப்பட்டுச் சொல்லுஞ் சொற்களுஞ், சினந்துன்பம் வந்தாற் பிறக்கும் உரத்த ஓசைகளும், இளைத்த ஒலிகளும் நிரம்பிக் கிடத்தலால் அவையெல்லாஞ் செயற்கை மொழிகளென்றுந், தமிழில் வருத்தமின்றி இயல்பாற் பிறக்குஞ் சொற்களே நிறைந்து சினத்தாற் பிறக்கும் வெடுவெடுப் போசையுந் துன்பத்தாற் பிறக்கும் இளைப்பொலியும் இன்றி, எல்லாம் இனிய குணத்திற் பிறக்கும் மெல்லோசைகளாய் இருத்தலின், தமிழ் இன்பவடிவாய் விளங்குஞ் சிவத்தோடு ஒத்த இன்பம் வாய்ந்த தெய்வ மொழியாம் என்றுஞ் சைவசமயிகள் இவ்வுண்மையைக் கருத்திற் பதியவைத்து அதனை வளரச் செய்தற்கான எல்லா முயற்சிகளையுங் குறைவறச் செய்தல் வேண்டும். நம் செந்தமிழ் மக்களில் நூறாயிரம்பேர்க்கு இரண்டு மூன்று பேரே சிறிது கற்றவர்களா யிருக்கின்றார்கள்; மற்றவர்கள் எல்லாருங் கல்வியறிவு இல்லாதவர்களாயும், அறியாமைச் சேற்றிற் புதைந்து கிடப்பவர்களாயும் இருக்கின் றார்கள். உலகத்தில் இவ்விந்திய நாட்டைத் தவிர மற்றைப் பெரும்பாகங்களில் இருப்பவர்களெல்லாருங் கல்வியிலும் மெய்யுணர்விலும் உழவிலுங் கைத்தொழிலிலும் வாணிகத் திலும் நாளுக்குநாள் மேம்பட்டுவர, நமது நாட்டிலுள்ளவர் களோ - அவர்களிலுந் தமிழர்கள், இவற்றில் மிகவுந் தாழ்ந்த நிலைமையி லிருக்கின்றார்கள்! இவர்களை இனிக்கல்விச் சாலைகளுக்கு அனுப்பிக் கல்வி கற்பித்தல் இயலாதாகலின், ஊர்கள்தோறும் நகரங்கள் தோறுங் கழகங்கள்வைப்பித்து அவற்றின் வாயிலாகத் தமிழுஞ் சைவமும் உணர்ந்த அறிஞரைப் பல இடங்கட்கும் அனுப்பித், தமிழ்நூற் பொருள்களையுஞ் சைவ நூற்பொருள் களையும் விளக்கமாக அறிவுறுத்திவருதல் இப்போது உடனே செயற்பாலதான நன்முயற்சியாகும். jÄœ f‰nwh® bjhif ÄfîŠ RU§»¥nghjyhš, `jÄœ m¿P®¡F¥ bghUŸ V‹ nt©L«? என்று ஏளனமாய் உரையாமல், அவர்க்கு ஏராளமாய்ப் பொருளுதவி செய்து, கல்வியில் எல்லையின்றிக் கற்று அதனைப் பிறர்க்கும் பயன் படுத்தும் படி அவருக்கு மனக்கிளர்ச்சியினை விளைவித்தல் வேண்டும். இனிச், சிவபிரான்கோயில்களில் நிறுத்தப்பட்டிருக்குந் திருவுருவங்கள், இறைவனுக்கு என்றும் உரிய அருளுருவத் தையும், அன்பர்க்கு அருள்செய்யும் பொருட்டு முதல்வன் ஓரொருகாற்கொண்ட திருவுருவத் தோற்றங்களையும் அன்பர்க்கு நினைவில் எழுப்புதற் பொருட்டு அமைத்த வடிவங்களே யாகும. இவ்வடிவங்களை வணங்கச்செல்லும் அன்பர்கள் இவற்றைக் கண்டவுடன் ஐயன் அருள் உருவங்களை நினைந்தவராகி அகங்குழைந்து உருகுவர். ஆண்டவன தருளுருவத்திற்குச் செய்யும் எண்ணத்துடன் தம் அன்பினாற் பூவும் நீரும் இட்டு ஆடையணி கலன்கள் சாத்தி அவ்வடிவங் களை வணங்குதலும் அவ் அன்பிற்கு அடையாளமாகும். இறைவனருளைப் பெறுதற்கு மெய்யுணர்வும் அதன்வழித் தோன்றும் பேரன்புமே வாயில்களாதலாலும், இக்காலத்தில் மக்களிற் பல்வகைக் கூட்டத்தாரும் அறிவைப் பெருகச்செய்து, அறிவாலும் அன்பாலும் ஆண்டவனை அடைதற்கு மிக முயன்றுவருத லாலுஞ் சைவசமயிகளான அறிஞரும் ஞானநெறியிற் றமது கருத்தை மிகுதியாய்ச் செல்லவிடுதல் வேண்டுமேயல்லாமல், வெறுந் தொழில்நெறியிற் புகுந்து ஒப்பனைகளின் பொருட்டுந் திருவிழாக்களின் பொருட்டும் ஆயிரக்கணக்காகவும் நூறாயிரக் கணக்காகவும் போட்டி போட்டுக் கொண்டு பொருள்களைச் செலவழித்துச் செருக்கடையலாகாது. எல்லா உலகங்களையும் எல்லாப் பொருள்களையும் உடைய பெருஞ் செல்வரான நம் ஆண்டவனுக்கு, ஏழைமக்கள் நல்ல அல்லா வழிகளில் ஈட்டிய பொருளைத் திரள் திரளாகக் கொடுத்தாலும், அவன் அதனைக் கண்டு ஏமாற்றித் தனது அருளைக் கொடுத்துவிடுவான் அல்லன். நம் ஐயனுக்கு வேண்டுவன அன்பும் அன்பொழுக்க முமேயாகும். அதுபற்றியன்றோ திருநாவுக்கரசு நாயனாரும், நெக்கு நெக்கு நினைப்பவர் நெஞ்சுளே புக்கு நிற்கும் பொன்னார் சடைப் புண்ணியன் பொக்கம் மிக்கவர் பூவும் நீருங்கண்டு நக்கு நிற்பன் அவர்தமை நாணியே என்று அருளிச்செய்தனர். ஆதலால், திருக்கோயில்களுக்குச் செய்யுஞ் செலவை இயன்றமட்டுஞ் சிறுகவேசெய்து, மிச்சப் பெரும் பொருளைச் சிவஞான வளர்ச்சிக்குஞ், சிவனடியார்கட்கும், பழுதுபட்ட கோயில்கள் சத்திரங்கள் குளங்கள் சோலைகள் பாட்டைகள் முதலியவற்றின் திருப்பணிகட்குஞ் செலவுசெய்து சைவர்கள் எல்லாருஞ் சிவபெருமான் திருவருளைப் பெறுவார்களாக! 3. திருக்கோயில் வழிபாடு மூர்த்தி தலந் தீர்த்தம் முறையாற் றொடங்கினர்க்கோர் வார்த்தை சொலச் சற்குருவும் வாய்க்கும் பராபரமே - தாயுமான சுவாமி தெய்வத்தன்மை பொருந்திய ஔவையார், ஆலயந் தொழுவது சாலவும் நன்று என்று அருளிச் செய்திருக் கின்றார். கோயிலுக்குச் சென்று கடவுளை வணங்குவது மிகவும் நல்லது என்பதே, அத்திருமொழியின் பொருளாகும். மற்ற இடங்களிலிருந்து செய்யும் வழிபாட்டைக் காட்டிலும் கோயிலுக்குச் சென்று அங்கே கடவுளுக்குச் செய்யும் வழிபாடு ஒன்றே சிறந்ததாகும் என்பது அதனால் தெளிவாகப் புலப்படுகின்றது. கடவுளையன்றி வேறெதனையுங் காணமாட்டாத முற்றுணர்வுடை யார்க்குக் கோயிலிற் செய்யப்படும் வழிபாட்டிற்கும் வேறிடங்களிற் செய்யப் படும் வழிபாட்டிற்கும் வேறுபாடு சிறிதுந் தோன்றாதாயினும், உலகங் களையும் உலகத்துப் பொருள் களையுமே எந்நேரமும் நினைந்து கொண்டிருக்கும் மற்றை எல்லார்க்குந் திருக்கோயில் வழிபாட்டைத் தவிரக் கடவுளை நினைந்து உருகுதற்கு வேறு வழி சிறிதுமே இல்லை. கோயில் அல்லாத மற்ற இடங்களெல்லாம் உணவு தேடுதற்கு இசைந்த முயற்சிகளுந், தேடிய பொருள்களை வைத்து நுகர்தற்கு இசைந்த முயற்சிகளுமே நடைபெறுந் தன்மை யுடையனவாய் இருக்கின்றன. அந்த முயற்சிகள் நடக்கும் இடங்களிலே செல்பவர்களுக்கு அங்கேயுள்ள பொருள்களைப் பற்றிய நினைவும், அம்முயற்சிகளைப் பற்றிய நினைவுகளுமே அடுத்தடுத்து உள்ளத்தில் தோன்றும். மாம்பழம் விற்குங் கடைப் பக்கமாய்ச் செல்வார்க்கு மாம்பழத்தைப் பற்றிய நினைவும், சாராயம் இறைச்சி கஞ்சா அபின் முதலான தீய பண்டங்கள் விலையாகும் அங்காடி வழியே செல்வார்க்கு அவற்றைப் பற்றிய நினைவுகளும், புழுகு மருக்கொழுந்து சந்தனக்கட்டை முதலான நறுமணங் கமழும் இனிய பண்டங்களுள்ள இடங்களிற் செல்வார்க்கு அவற்றைப் பற்றிய நினைவுகளும், பயன் மிகுந்த கல்விப் பொருளை ஊட்டும் பள்ளிக்கூட வழிச் செல்வார்க்குக் கல்வியின் அருமையைப் பற்றிய நினைவும், ஒருவர் பிணமாய்க் கிடக்க அவரைச் சூழ்ந்து சுற்றத்தார் ஓவென்றலறும் வீட்டின் ஓரமாய்ச் செல்வார்க்கு நிலை யாமையைப் பற்றிய நினைவும், அழகுமிக்க இருவர் மணஞ்செய்ய அவரைக் கண்டு எல்லாரும் மகிழ்ந்திருக்கும் வீட்டின் பக்கத்தே செல்வார்க்கு அம் மகிழ்ச்சியைப் பற்றிய நினைவுந் தோன்றுதலைத் தெளிவாக அறிந்திருக்கின்றனம் அல்லமோ? இவற்றைப் போலவே கடவுளைத் தொழுதற்கென்று ஆங்காங்கு அமைந் திருக்குங் கோயில்களான தூய இடங்களுக்குச் செல்லும் நல்லோர்க்குக் கடவுளைப் பற்றிய நினைவும் இடைவிடாது தோன்றுவதாகும். உலக வாழ்வெனுந் துன்பத்தில் கிடந்து உழன்று கொண்டு கடவுளை நினைதற்கு இடமின்றி வருந்தும் மக்களுக்கு இடையிடையே நம் ஐயனைப் பற்றிய எண்ணத்தை எழுப்பும் பொருட்டாகவே ஓர் ஊரிற் பல இடங்களிலுங் கோயில்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. கோயில்களே இல்லாத நாடு நகரங்களில் இருப்பவர் களுக்குக் கடவுளைப்பற்றிய நினைவு சிறிதும் தோன்றா தாகையால் அவர்கள் விலங்குகளினுங் கடைப்பட்ட வராவார்கள்; உயர்ந்த நினைவில்லா அவர்கள் தங்கியிருக்கும் அவ்விடங்கள் விலங்குகள் குடிகொண்ட காடுகளையே ஒப்பனவாகும். இவ்வுண்மையினை உணர்த்து தற்கன்றோ, திருக்கோயில் இல்லாத திருவில் ஊரும் திருவெண்ணீறு அணியாத திருவிலூரும், பருக்கோடிப் பத்திமையாற் பாடா ஊரும் பாங்கினொடு பலதளிகள் இல்லா ஊரும், விருப்போடு வெண்சங்க மூதாவூரும், விதானமும் வெண்கொடியுமில்லா வூரும், அரும்போடு மலர்பறித்திட் டுண்ணா வூரும் அவையெல்லாம் ஊரல்ல அடவி காடே என்னுந் திருப்பாட்டும் எழுந்தது. திருநீறு அணியாத நெற்றியைச் சுடு, சிவாலயம் இல்லாத ஊரைக் கொளுத்து என்னும் உபநிடதத் திருமொழியும் இவ்வுண்மையினையே அறிவிப்பதாகும். இனி, மனஉறுதி உடையவர்கள் எந்த இடத்திலிருந்தும் கடவுளை நினைக்கலாமாகையாற், கடவுளைத் தொழும் பொருட்டுக் கோயிலுக்குத்தான் செல்லல் வேண்டுமென்று வற்புறுத்தியுரைத்தல் என்னையெனின், மேலே சொல்லியபடி கோயிலைத் தவிர மற்ற எல்லா இடங்களும் வேறு வேறு நினைவுகளை உள்ளத்தில் எழுப்பி மனவுறுதியைச் சிதைப்பன வாய் இருத்தலால், நம்மனோரில் எவ்வளவு மனத்திட்பம் வாய்ந்தவர்கள் இருந் தாலும் அவர்கள் மற்ற இடங்களிலிருந்து கடவுளை நினைக்கப் புகுவார்களாயின், அவர்களைச் சுற்றிலும் நடக்கும் உலக முயற்சிகளாலும், அவ்வவ்விடங்களைப் பற்றிய எண்ணங்களாலும் அவர்களுடைய நினைவு கலைந்து பழுதுபட்டுப் போகும். மேலும், அத்தனை மனவுறுதி வாய்ந்தவர்கள், பலருங் கடவுளைத் தொழுதற்கென்ற இடமாக வகுக்கப்பட்டமையாற் பலரின் நினைவுகளால் மிகவும் புனிதமாய் விளங்குந் திருக்கோயிலின் உள்ளே சென்று நம் ஆண்டவனை வணங்குவதற்குப் பின்வாங்குவதுங் கூசுவதும் அருவருப்பதும் ஏன்? மிகப் புனிதமான கோயிலை வெறுப்பது மனவுறுதிக்கு அழகாகுமா? பலருடைய நினைவாற் கடவுளுக்கென்றே சிறப்பாக அமைக்கப் பட்ட கோயிலிற் சென்று வணங்குவதால் மனவுறுதி யுடையார்க்கு அவ்வுறுதி மேலுமேலும் உரம்பெற்று விளங்குவதோடு அவரது நினைவும் அங்குள்ள இறைவன் திருவுருவத்தை நேரே கண்டு மகிழ்ந்து திருவருள் இன்பத்திற் படிந்திருக்குமன்றோ? ஆகையால், மனவுறுதியுடைவர்களுக்குந் திருக்கோயில் வழிபாடு இன்றியமையாது வேண்டற்பாலதேயாம் என்க. அளவற்ற மனவுறுதியுங் கரைகடந்த அன்புந் தூய உள்ளமுந் தூய அறிவும் நிறைந்த திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் முதலான மேலோரே கோயில்கடோறுஞ் சென்று நம் ஐயனை வணங்கி வந்தனராயின், தாழ்ந்த நிலையி லுள்ள மற்றவர்கள் திருக்கோயில் வழிபாட்டைக் குறைவாகக் கருதுவதும், அதனை ஏளனஞ் செய்வதும் எவ்வளவு பொல்லாத குற்றமாய் முடியும்! அப்படியானாலும் மெய், வாய், கண், மூக்குச், செவி என்னும் ஐம்பொறி களுக்கும் மனத்திற்கும் புலனாகாமல் அறிவு வடிவாய் எள்ளுக்குள் எண்ணெய்போல் எங்கும் பிரிவற நிறைந்து நிற்கும் இறைவனை அவ்வறிவு வடிவாகவே நினைந்து வணங்காமற், கல்லினாலுஞ் செம்பினாலும் உருவாக்கப்பட்ட உயிர் அற்ற வடிவங்களில் வைத்து வணங்குவதும் குற்றமாகா தோவெனிற், குற்றமாகாது. சிறு குழந்தையாய் இருந்த காலத்திலே தன் தாய் தந்தை யரைப் பிரிந்து நெடுந்தொலைவிலுள்ள ஓர் இடத்திற் பிறரால் வளர்க்கப்பட்ட ஒரு சிறுவன் ஆண்டு முதிர முதிர அறிவும் முதிரப் பெற்றவனாய்த் தன் தாய் தந்தையரைக் காண விரும்பியபோது, அவனை வளர்த்து வந்தவர் அவன் தாய் தந்தையர் தம் ஓவியத்தைக் காட்ட அவன் அதில் அவர்களைக் கண்டு வணங்கி அகம் மகிழ்தல்போல, எல்லையின்றி எங்கும் நிறைந்த இறைவனைப் பிரிந்து அவனது திருவருள் வடிவைக் காணமாட்டாமல் அறியாமையிற் கட்டுண்டு கிடக்கும் நம்மனோர்க்குச் சிறிது சிறிதாக அறிவை விளங்கச் செய்து வருந் திருஞானசம்பந்தர், மெய்கண்ட தேவர் முதலான நம் வளர்ப்புத் தந்தைமார் நமது அவாவினை அறிந்து, தாம் கண்ட தம் ஐயன் அருள் வடிவைக் கல்லிலுஞ் செம்பிலும் அமைப்பித்துக் காட்ட, நாம் அதனைக் கண்டு வணங்கி அதன் வழியே நம் ஐயனை அறிந்தவர்களாய் அகங் களித்து வருகின்றனம் அல்லமோ? ஓவியத்தின் கண்ணே தம் உருவங்களைக் கண்டு தம் புதல்வன் மனம் மகிழ்ந்து வணங்குகின்றான் என்பதைச் சேய்மைக்கண் உள்ள அவன் பெற்றோர்கள் அறிந்து, அவனது அன்பிற்குத் தாமும் மனம் மகிழ்வார்களேயல்லாமல் அவன்மேற் சினங்கொள்வார்களோ? இங்ஙனமே, நாமும் நம் ஐயன் அருள் வடிவை நேரே காண இயலாமையால், அதனை நம் ஆசிரியர் உதவி கொண்டு கல்லிலுஞ் செம்பிலுங் கண்டு அன்பால் அகந்துளும்பி வழிபட, அதனை அறியும் நம் ஆண்டவன் அதற்கு மகிழ்ந்து அவ்வழிபாட்டினை ஏற்றுக் கொண்டு நம்மைப் பாராட்டிச் சீராட்டி வருவான் என்பதே திண்ணம். நம் முழுமுதற் றந்தையின் இரக்கத்திற்கு ஒரு வரம்பேயில்லை. சிற்றறிவினரும் ஏழை மக்களுமான நாம் நம் பெருமானை அடைதற் பொருட்டு, இத்துன்பக் கடலின்கண் அவன் திருவுருவ அடையாளங்களாகிய தெப்பங்களைக் கைப்பற்றிக்கொண்டு தத்தளித்து வருவதைக் கண்டு, அவன் நம்மேல் மிகவும் இரக்கம் உடையனாகி நமக்குத் தனது அருளை வழங்கி நம்மை இப்பிறவிக் கடலினின்றுங் கரையேற்றித் தனது பேரின்ப நாட்டில் வாழ்விப்பனேயல்லாது, நம்மேற் சினந்து நம்மை அதன்கண் அமிழ்த்தித் தாழ்விப்பான் அல்லன். ஆதலால், முழுமுதற் கடவுளான நம் ஐயனைச் சேருங் கருத்தோடு அவன் அருள் வடிவிற்கு அடையாளங்களாகக் கல்லிலுஞ் செம்பிலும் அமைத்த திருவுருவங்களை வணங்கி வருதல் சிறிதுங் குற்றமாக மாட்டாதென்க. திருக்கோயிலுள்ள திருவுருவங்கள் இறைவனையறிதற்கு வைத்த குறிகளே யல்லாமல் வேறு அல்ல. இவ்வுண்மை, குறிக ளும்அடை யாளமும் கோயிலும் நெறிக ளும்அவன் நின்றதோர் நேர்மையும் அறிய ஆயிரம் ஆரணம் ஓதினும் பொறியி லீர்மனம் என்கொல் புகாததே என்னுந் திருநாவுக்கரசு நாயனார் திருமொழிக்கண் நன்கு விளக்கப்பட்டமை காண்க. இனி, முழுமுதற் கடவுளாகிய நம் சிவபெருமானையன்றி, வேறு நம் போன்ற சிற்றுயிர்களின் வடிவங்களைக் கல்லிலுஞ் செம்பிலுஞ் செய்து வைத்துக்கொண்டு அவற்றை வணங்குதலே பெரிதுங் குற்றமாவதாம். மாரி கூளி எசக்கி கறுப்பண்ணன் மதுரைவீரன் முதலிய ஆவிகளெல்லாம் நம்போற் குற்றமுடைய சிற்றுயிர்களாதலின் அவற்றைத் துணையாகக் கொள்வது, ஒரு குருடன் மற்றொரு குருடனைத் துணை கூட்டிச் சென்று இருவரும் பள்ளத்தில் வீழ்தற்கே ஒப்பாம். விவிலிய நூலிலுங் கடவுளுக்கு மாறான உருவங்களை வணங்குதல் ஆகாதென்று சொல்லப்பட்டதேயல்லாமற் கடவுளின் திருவுருவத்தை வழிபடுதல் வழுவென்று கூறப்பட்ட தில்லை. ஈசாவசியோப நிடதத்தின் ஒன்பதாவது மந்திரமும், அறியாமையொடு கூடிய சிற்றுயிரின் வடிவங்களை வணங்கு பவர்கள் இருள் நிறைந்த நிரயத்திற்குச் செல்கின்றார்கள் என்று இங்ஙனமே கூறுகின்றது. ஆகையால், முழுமுதற் பரம்பொருளின் உண்மை அருள் வடிவாய் அம்மையப்பராய் நின்ற திருவுருவத்தையும், அம்முதற்பொருளின் பேரருள் விளக்கத்திற்கு இடமாய் மேலோராற் பண்டைக் காலந்தொட்டு வணங்கப் பட்டு வரும் பிள்ளையார் முருகப்பிரான் முதலானோர் திருவுருவங்களையும், இவர்களின் அருள் வழிபட்ட அடியார் திருவுருவங்களையும் அன்றி வேறு எவற்றையும் வணங்குதல் சிறிதும் ஆகாது என்று கடைப் பிடித்தல் வேண்டும். இங்ஙனம் மிகவும் புனிதம் உடையதாய் விளங்குந் திருக் கோயிலினையும், அதனுள் நிறுத்தப்பட்டிருக்கும் அருள் அடை யாளங்களையுஞ் சிவமென்றே நினைந்து உள்ளங்கரைந்துருகி வணங்கவே, கன்றை நினைத்த புனிற்றாப்போல இறைவன் அக்குறிகளில் விளங்கியிருந்து அவர்க்கு அருள் வழங்குவன். இதற்குத், திருக்கோயில் உள்ளிருக்குந் திருமேனி தன்னைச் சிவனெனவே தேறினர்க்குச் சிவன் உறைவன் ஆங்கே என்னுந் திருப்பாட்டே சான்றாகும். பகலவன் ஒளியில் எங்கும் உள்ள நெருப்பானது காந்தக் கண்ணாடியில் விளங்கித் தோன்றினாற்போல, எங்குமுள்ள இறைவன் அன்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி இத்திருக் கோயிலின் திருவுருவத்தின் கண்ணும் விளங்கித் தோன்றினான் என்று உண்மையாக எண்ணி வழிபடுவார்க்கு அவன் அங்கு முளைத்துத் தோன்றி அருள் புரிதல் திண்ணம். ஆனால், நம்மனோரிற் பலர் தாம் கோயிலுக்குச் சென்று கடவுளை வணங்குவதாக வெளியே பெருமை பேசிக் கொண்டாலும், உண்மையில் அவர்கள் அவ்விடத்தைக் கோயிலாகவும் அதனுள்ளிருக்கும் திருவுருவத்தைக் கடவுளின் அருளுருவ அடையாளமாகவும் நினைந்து நடக்கின்றார் களென்று நம்மால் நம்பக்கூடவில்லை. ஏனென்றால், அவர்கள் கோயிலின் உட்சென்றால் அடக்க ஒடுக்கமும், ஐயன் திருவடியில் நினைவும் வையாமல், வீண் கதையும் வம்பு வழக்குகளும் மணச்சடங்கு பிணச்சடங்குப் பேச்சுக்களுந் தமக்கு முன் உபசாரஞ் செய்யவில்லையென்னும் வீம்புப் பேச்சும் பேசுப வராய் ஒருவரோடொருவர் சிரித்துப் பகடி பண்ணுதலிலும், அன்பர்கள் அருவருக்கத்தக்க இன்னும் பல வீணானவை களைச் செய்வதிலும் உள்ளத்தை வைத்துப் பெருங்குற்றங்களை மூட்டை மூட்டையாகத் தொகுத்து வைக்கின்றார்கள். ஐயோ! உலகத்திலே அழிந்து போகுஞ் செல்வப் பொருள் சிறிது உடையவர்களைக் கண்டாலும் அவர்கள் முன்னிலையிற் கைகட்டி வாய் புதைத்துச் செல்லும் மாந்தர்கள், அளவிறந்த உலகங்களையும் அவ்வுலகங்களில் உள்ள அளவற்ற பொருள்களையும் உடைய எல்லாம் வல்ல தலைவனான நம் ஆண்டவன் முன்னிலையிற் செல்லுங்கால் எவ்வளவு அடக்க ஒடுக்கமும் அன்பும் பணிவும் உடையராக இருத்தல் வேண்டும்! நம் தலைவராகிய கடவுள் இத்திருக்கோயிலினுள் எழுந்தருளி யிருக்கின்றாரென்று அவர்கள் உண்மையாகவே நினைத் திருந்தால், ஆ! இப்படியெல்லாஞ் செய்வார்களா! இதற்கு முன்னெல்லாம் இவர்கள் இங்ஙனம் அறியாமையாற் குற்றமாக நடந்தாலும் இனியேனுஞ் செருக்கற்று அடக்கமும் அன்பும் பணிவும் பூண்டு, ஐயன் முன்னிலையில் நெஞ்சம் நெக்கு நெக்கு உருகக் கண்ணீருங் கம்பலையும் உடையவராய் அவன் புகழ்பாடி அவனது திருவருட் பெருஞ்செல்வத்தைப் பெற்றுப் பிழைத்திடுவாராக! 4. சிறுதேவதைகட்கு உயிர்ப் பலியிடலாமா? எவ்வுயிரும் என் உயிர்போல் எண்ணி இரங்கவும்நின் தெய்வ அருட்கருணை செய்யாய் பராபரமே - தாயுமான சுவாமி கல்வியறிவும் நல்லோர் சேர்க்கையும் இரக்கமான நெஞ்சமும் இல்லாமையால், நிரம்பவுந் தாழ்ந்த நிலைமை யிலுள்ள மாந்தர்கள் தாம் தாம் தமது குலதெய்வமாகக் கும்பிட்டு வருங் காளி, பிடாரி, மாரி, குரங்கணி, எசக்கி, கறுப்பண்ணன், மதுரை வீரன் முதலான சிறுதெய்வங்களுக்கு அளவிறந்த ஆடு, கோழி, எருமை முதலான குற்றமற்ற உயிர்களை வெட்டிப் பலி இடுகின்றார்கள். தாழ்ந்த நிலைமையில் உள்ள மக்கள் பலரும் இங்ஙனஞ் செய்து வருதலைப் பார்த்துப், பன்றியொடு கூடிய கன்றுஞ் செயல் மாறுபட்ட பான்மைபோற் சைவ வேளாளர் சிலரும் பார்ப்பனர் சிலரும் இச்சிறு தெய்வங்களை வணங்கப் புகுந்து இவர்களும் மேற்சொன்ன ஏழை உயிர்களின் கழுத்தை அறுத்து அவற்றைப் பலி ஊட்டுகின்றார்கள். உயிர்க்கொலையாகிய புலைத் தொழிலைச் செய்யுந் தாழ்ந்த வகுப் பாரைப் போலவே உயர்ந்த வகுப்பாருஞ் செய்யத் தலைப்பட்டால் உயர்ந்தோர் இவர் தாழ்ந்தோர் இவர் என்று எங்ஙனம் பகுத்துச் சொல்லக் கூடும்? உயர்ந்தோருந் தாழ்ந் தோராய் மாற உலகம் எங்குந் தீவினையாகிய இருள் அன்றோ பரவும்! மக்களிற் பலர் தாழ்ந்தோர் ஆனதும் சிலர் உயர்ந்தோர் ஆனதும் அவரவர் இயற்கையினாலுஞ் செய்கையினாலும் அறிவினாலுமே என்பது எல்லார்க்கும் எல்லா நூலுக்கும் உடன்பாடாம். தெய்வத்தன்மை வாய்ந்த திருவள்ளுவரும் இதனாலன்றோ, பார்ப்பான், பிறப்பொழுக்கங் குன்றக் கெடும் என்றும், பிறப்பொக்கும் எல்லா வுயிர்க்குஞ் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான் என்றும், மேலிருந்தும் மேல்அல்லார் மேலல்லர் கீழிருந்துங் கீழ்அல்லார் கீழ்அல் லவர் என்றும் அருளிச் செய்தனர்? இழிந்த தன்மைகளும் இழிந்த செய்கைகளும் உலகிற் கணக்கற்றனவாய்ப் பெருகி இருப்பினும் அவை எல்லாவற்றுள்ளும் மிகக் கொடியவை இரக்கம் அற்ற வன்னெஞ்சமுங் கொலைத் தொழிலுமே யாகும். உயிர்களைக் கொலை செய்தலும் அவற்றின் ஊனைத் தின்னுதலு மாகிய புலைத்தொழில் எல்லாத் தீவினைத் தொழிலிலும் கடைப்பட்ட தென்னும் உண்மை. நன்றாகும் ஆக்கம் பெரிதெனினுஞ் சான்றோர்க்குக் கொன்றாகும் ஆக்கங் கடை என்னுந் தமிழ்மறையான குறளினாலும், உயிர்களைக் கொல்லச் சொன்னவன், கொன்றவன், ஊனை அறுக் கிறவன், அதனை விற்றவன், அதனை வாங்குகிறவன், அதனைச் சமைக் கிறவன், பரிமாறுகிறவன், தின்கிறவன் என்னும் அவர்கள் அனைவருங் கொலைகாரர்களென்று சொல்லப்படு கிறவர்கள் என்னும் வடமொழி மனுமிருதியினாலும் தெளியப்படும். இவ்வளவு இழிந்ததாக இருத்தலினாலேதான் உயிர்க் கொலை செய்பவர்களும் அதற்கு ஏதுவாய் இருப்பவர்களும் இழிகுலத்தவரென்றும், அப்புலைத் தொழிலைவிட்டுச் சைவவொழுக்கம் பூண்டவர்கள் உயர்குலத்தவரென்றும் வகுக்கப்படுவாராயினர். கொலையாகிய தீவினைக் கடலைத் தாண்டி அருளொழுக்கமாகிய நல்வினைக் கரைமேல் ஏறின மேற் குலத்தவர்கள் கொல்லா அறத்தின் மேன்மையை எடுத்துச் சொல்லுதலாகிய படகைக் கொண்டு சென்று அத்தீவினைக் கடலிற் கிடந்து தத்தளிக்கும் மற்றைத் தாழ்குலத்தவரை எடுத்து உயர்த்திக் கரை சேர்த்தலே புகழும் அறமும் ஆகும். கொலையையும் புலால் தின்னுதலையும் ஒருவன் அறவே ஒழித்துவிடுவானாயின், அதனால் எத்தனையோ ஆடு மாடுகள் கோழி குருவிகள் மான்கள் மீன்கள் உயிர் பிழைக்குமல்லவோ? இங்ஙனமே ஒவ்வொருவராய்ப் புலைத் தொழிலைப் பலரும் நீக்க நீக்க எண்ணிறந்த உயிர்களுந் தத்தம் உடம்புகளில் நிலை பெற்று நின்று இனிது உயிர்வாழும் அல்லவோ? நம்முடைய உயிர் வாழ்க்கை நமக்கு இனிதாய் இருத்தல் போலவே எல்லா உயிர்களுக்குந் தத்தம் உயிர் வாழ்க்கை இனிதாயிருக் கின்றது. எல்லா அறங்களிலும் மேலதாய் விளங்குங் கொல்லா அறத்தைக் கைபற்றி ஒழுகும் நல்வினை வாய்ந்து அதனைப் பிறர்க்கு அறிவுறுத்தும் நிலையிலுள்ள சைவரும் பார்ப்பனருந் தமது உயர்வை மறந்து, தாமும் ஆடு மாடு கோழி வெட்டிப் பலியிடுந் தீவினைப் படுகுழியில் வீழ்ந்தால் இனி உலகத்தில் நல்லறம் நிலைக்குமோ, சொல்லுங்கள்! கொல்லா அறத்திற்கு ஒரு பாதுகாவலாய் அமைந்த மேற்குலத்தாரே அதனை அழித்தால் அதனினும் பெருந்தீவினை வேறுண்டோ? ‘ntÈna gÆiu¤ â‹whš Éistbj¥go? இனி, இச்சிற்றுயிர்களை நம் பொருட்டுக் கொல்லாமற் சிறு தெய்வங் களின் பொருட்டுக் கொல்விக்கின்றோமாதலால் அது தீவினையாக மாட்டா தெனின், அது பொருந்தாது. பிடாரி, குரங்குணி, எசக்கி, மதுரை வீரன் முதலானவை யாவை? தாம் உயிரோடிருந்த காலங்களிற் பலவகையான கொடுஞ் செயல்களைச் செய்து அவற்றிக்காக அரசனாலும் பிறராலும் ஒறுக்கப்பட்டுக் காலம் முதிரா முன்னரே இறந்தொழிந்த மக்களின் பேய் வடிவங்களேயாகும். அவை தாம் செய்த தீவினையால் இந்த நிலவுடம்பை விட்டுப் பேய் உடம்பிற் புகுந்து இருள் உலகத்தில் அலைந்து திரிகின்றன; தாம் செய்த தீவினை பேய் உடம்பில் தாம் அடையும் கொடிய நிரயத் துன்பத்தால் தீர்ந்தவுடன், முழு முதற் கடவுளின் திருவருளாணை யால் மறுபடியும் அவை மக்களுடம்பிற் பிறக்கும். அறிவில்லாத மாந்தர்கள் வணங்கிவருஞ் சில்லறைத் தெய்வங்களிற் பல இப்போது மக்களாய்ப் பிறந்திருக்கு மாதலால், அவைகள் இவர்களாற் செய்யப் படும் நேர்த்திக் கடனை ஏற்றுக் கொள்ள மாட்டாதனவாய் இருக்கின்றன. இப்போது இத் தெய்வத்தின் ஆட்டம் இங்கே ஓய்ந்து போயிற்று என்று அவற்றை வணங்குவோர் சிலகாற் சொல்லுஞ் சொற்களே இதற்குச் சான்றாம். மக்களாய் இருந்தபோது கொலை களவு காமங்கட்குடி முதலான தீவினைகளைச் செய்து சடுதியில் இறந்து கடவுளின் ஆணையாற் பேய் வடிவங்களாய் அலைந்து திரியும் அவ் ஆவிகளை வணங்குதலே குற்றமாகும். ஏனென்றாற், கொலைகாரர்களோடு பழக்கஞ் செய்பவன் அக்கொலைஞ ராலுங், கள்வரோடு நேசஞ்செய்பவன் அக்கள்வர் கூட்டத் தாலும், வேசிக் கள்வரோடு சேர்க்கையுள்ளவன் அவ்வேசிக் கள்வராலுங், கட்குடியரோடு சேர்ந்தவன் அக்கட்குடியராலுஞ் சூழப்பட்டுப் பெரிதுந் துன்புறுதல் போல, இத்தீய பேய் வடிவங்களைத் தெய்வங்களாக வணங்குவோரும் இவ் ஆவி களால் எந்நேரமுஞ் சூழப்பட்டு அவற்றால் மிகவுந் துன்புறுத்தப்படுவார்கள். கொலை முதலான தீவினைகளைச் செய்வோர் நல்லோரை அணுகாமல் அஞ்சி விலகிப் போதல்போல, எல்லாம் வல்ல முழுமுதற் கடவுளான சிவத்தை வழிபடும் நல்லோரைக் கண்டு இக்கொடும் பேய்கள் அஞ்சி விலகி ஓடும். இவ்இயல்புக ளெல்லாம் யாம் எழுதிய மரணத்தின் பின் மனிதர்நிலை என்னும் நூலில் விரிவாக எடுத்துக் காட்டியிருக்கின்றோம்; அவை எல்லாம் இங்கு விரிப்பதற்கு இடம் இல்லாமையால் அதிற் கண்டுகொள்க. நம் போன்ற சிற்றுயிர்களிற் சேர்ந்த இப்பேய்களையும் மற்றெல்லா உயிர்களையும் ஆக்கவும் அழிக்கவும் வல்லது சிவம் ஒன்றேயாம். தீவினை களைச் செய்து பிறப்பிலும் இறப்பிலும் கிடந்து உழன்று வருந்தும் பேய்கள் எதனையும் ஆக்கவேனும் அழிக்கவேனுஞ் சிறிதும் வல்லன அல்ல. இத்தகைய பேய்களைத் தெய்வங்களாக வணங்குவது எது போலிருக்கிற தென்றால், ஓர் அரசன் கீழ் இருந்து வாழுங் குடிகள் தம் அரசனை வணங் காமல் அவ்வரசனால் ஒறுக்கப் பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டிருக்குங் குற்றவாளிகளை அவ் வரசனாகக் கருதி வணங்குதலையே ஒத்திருக்கின்றது. ஆக்கவும் அழிக்கவும் வல்லவனான இறைவனாற் படைக்கப்பட்டு அவ்விறைவனுக்குப் பிள்ளைகளாய் உள்ள எல்லா உயிர் களுள்ளும் மக்களென்னும் உயிர்கள் மற்ற ஏழையுயிர்களான ஆடு மாடு கோழி பன்றி முதலியவற்றை வெட்டி அவற்றிற்குப் பலியிடுவது எதனை ஒத்திருக்கிறதென்றால், ஓர் அரசனுக்குரிய குடிமக்களிற் சிலர் தம்மினும் வலி குறைந்த மற்றவர் சிலருடைய கைப்பொருள் களைப் பற்றிக்கொண்டு போய் அக்குற்ற வாளிகளுக்குக் கொடுத்து அவர்களை அரசராகக் கருதி வணங்குவதையே ஒத்திருக்கின்றது. தன்னால் ஒறுக்கப்பட்ட குற்றவாளிகளை இங்ஙனம் வணங்குபவர் இன்னார் என்று தெரிந்த அளவானே, அரசன் அவர்களைக் கொடுந்துன்பத்திற்கு உள்ளாக்குவது போல, இறைவனுந் தன்னால் ஒறுக்கப்பட்ட பேய்களுக்குத் தான் படைத்த உயிர்களைக் கொண்டு பலியூட்டும் அறிவில்லா மாந்தரைக் கூற்றுவனைக் கொண்டு மிகவும் கடுமையாகத் துன்புறுத்துவன் என்பது திண்ணம். சிறு தெய்வங்களுக்கு உயிர்களைக் கொன்று பலியிடுவோர் இம்மை யிலே தம் பிள்ளைகளைப் பறிகொடுத்து வருந்துவர்; தாமும் நச்சுக் காய்ச்சல், அம்மை, தொழு நோய், கக்கற்கழிச்சல், பொருட்கேடு முதலான துன்பங்களுக்கு ஆளாகிப் பதை பதைப்பர்; மறுமையிலும், கொல்லிடு குத்தென்று கூறிய மாக்களை வல்லிடி காரர் வரிகயிற் றாற்கட்டிச் செல்லிடு நீரென்று தீவாய் நரகிடை நில்லிடு மென்று நிறுத்துவர் தாமே என்றும், கொன்றி லாரைக் கொலச்சொல்லிக் கூறினார் தின்றிலாரைத் தினச்சொல்லித் தெண்டித்தார் பன்றியாய்ப் படியிற்பிறந் தேழ்நரகு ஒன்றுவார் அரன் ஆணையி துண்மையே. என்றுந் திருமூல முனிவர் திருவாய் மலர்ந்தருளிய வண்ணங் கூற்றுவன் தமரால் அலை நிறைந்த நிரயத்திலும் மற்ற எழுவகை நிரயங்களிலும் அழுத்தப்பட்டு மிக நொந்து திரும்பவும் இந்நிலவுலகத்திற் பிறக்குங்காற் பன்றியாய்ப் பிறந்து நைவார்கள். எல்லா உயிர்களையும் படைக்கும் இறைவன் ஒருவனே அவற்றின் கால எல்லை அறிந்து அவற்றை அழித்தற்கும் உரியவன் அன்றி, மற்ற மக்கள் நம் போன்ற உயிர்களான பேய் வடிவங்களின் பொருட்டு வாய் அற்ற ஏழை உயிர்களின் கழுத்தை வெட்டிப் பலியூட்டுதல் மன்னிக்கப்படாத பெருங்குற்றமுந் தீவினையுமாய் முடியும் என்று அறிந்து கொள்ளுங்கள். முழுமுதற் பொருளான சிவபெருமானை நேரே வணங்கும் நல்வினை யும் நல்லறிவும் இல்லாதவர்கள் காளி, கூளி, எசக்கி, கறுப்பண்ணன், மதுரைவீரன் முதலான சில்லறை வடிவங்களை வணங்கினாலும் அவற் றிற்கு ஆடு, கோழி, மாடு முதலிய உயிர்களைப் பலியிடாமல் வணங்குதலே செயல் வேண்டும். அங்ஙனம் இன்றி, அவற்றைப் பலியிட்டால் அவ்வுயிர்ப் பலிக் கடனைக் அவைகள் ஏற்றுக் கொள்ளமாட்டா. ஏனெனில் நிலவுலகத்தில் தாம் செய்த தீவினைகளுக்காக இறைவனால் ஒறுக்கப்பட்டு முன்னமே அலறித் திரியும் அப்பேய்கள் மாந்தர்கள் அறியாமையாற் செய்யும் உயிர்ப்பலியை ஏற்றுக் கொள்ளுமாயின், இறைவன் படைத்த உயிர்களை மக்கள் கொலை செய்யுந் தீவினைக்கு ஏதுவாய் இருந்தமை பற்றி அப்பேய்களை நம் பெருமான் இன்னும் கடுமையாகத் துன்புறுத்துவன். ஆனது பற்றி மக்கள் உயிர்ப்பலி இடுங்காலங் களில் எல்லாம் அப்பேய்கள் இறைவனது ஒறுப்புக்கு மிக நடுநடுங்கி அவற்றை ஏற்றுக் கொள்ளாமல் அப்பால் விலகி ஓடிப்போகும். அதனால் அத்தீவினைக்கு அவைகள் ஆளாவ தில்லை. அவற்றைச் செய்யும் மாந்தர்களே அத்தீவினைக்கு முற்றும் உரியவராகின்றார்கள். அப்பேய்கள் மக்கள் மேல் ஏறி நின்று ஆடிய சில நேரங்களில் யாம் அவற்றின் நேரேயிருந்து கேட்டபோது அவை தமக்கு உயிர்ப்பலி ஆகாதென்றே கூறின. பொய்யாக மருள் கொண்டு ஆடும் பொல்லாத மாந்தர்களே உயிர்ப்பலியிட வேண்டும் என்று சொல்லிப் பழிக்குந் தீவினைக்கும் ஆளாகி இவ்வுலகத்திலும் மேலுலகத்திலுஞ் சிவபெருமானால் ஒறுக்கப் படுகிறார்கள்! ஆதலாற், சைவராய்ப் பிறந்த மேன்மக்களே, சிறு தெய்வ வணக்கத்தையும் உயிர்ப் பலியையும் அறவே விடுத்து, மற்றக் கீழ்மக்களும் அவற்றை விடும்படி செய்வித்துப் புகழையும் அறத்தையும் வளர்த்து எல்லாச் செல்வங்களோடும் பொலிந்து நம் முழுமுதற் சிவத்தின் திருவருளுக்கு உரியவராய் வாழ்மின்கள்! 5. சீவகாருணியம் கொல்லாமற் கொன்றதைத் தின்னாமற் குத்திரங் கோள்களவு கல்லாமற் கைதவரோ டிணங்காமல் கனவிலும் பொய் சொல்லாமற் சொற்களைக் கேளாமற் றோகையர் மாயையிலே செல்லாமற் செல்வந் தருவாய் சிதம்பர தேசிகனே சீவகாருணியம் என்பது இரண்டு சொற்களால் ஆகிய ஒரு சொற்றொடராகும். இதனைப் பிரித்தால் சீவ என்றுங் காருணியம் என்றும் இரண்டு சொற்கள் பெறப்படும். சீவர்கள் என்பன யாவையோவென்றால் தொட்டால் அறியும் ஓர் அறிவு மட்டும் உடைய புல் மரஞ்செடி கொடி முதலியனவும், தொட்டால் அறிவதோடு நாவினாற் சுவைக்கும் சுவையுணர்வும் உடைய ஈரறிவு உயிர்களான நந்தை சங்கு கிளிஞ்சில் முதலியனவுந் தொட்டறிந்து நாவாற் சுவைத்தலொடு மூக்கால் நாற்றத்தையுணரும் மூன்றறிவுயிர்களான கறையான் எறும்பு ஈசல் முதலியனவுந், தொடுதலுஞ் சுவைத்தலும் முகருதலும் என்னும் உணர்வுகளோடு கண்ணாற் காணும் அறிவுமுடைய நான்கறிவுயிர்களான நண்டுந் தும்பியும் வண்டுந் தேனீயும் முதலியனவுந், தொடுதல் சுவைத்தல் முகருதல் காணல் என்னும் நான்கு உணர்வுகளொடு காதாற்கேட்டுணரும் அறிவும் ஐந்தறிவுயிர்களான விலங்குகள் பறவைகள் காட்டு மிராண்டிகள் முதலியனவுந், தொடுதல் சுவைத்தல் முகருதல் காண்டல் கேட்டல் என்னும் ஐந்தறிவுகளோடு நல்லதிது தீயதிது என்று பகுத்துணரும் மனவுணர்வும் உடைய ஆறறிவுயிர்களான மக்களும் என்று சொல்லப்பட்ட இந்த ஆறு வகையில் அடங்கிய உயிர்கள் அத்தனையுஞ் சீவர்களென்றே சொல்லப்படும். இனிக் காருணியம் என்பது அருள் அல்லது இரக்கம் என்னும் பொருளைத் தருவதாகும். இவ்விரக்கம் என்னும் உயர்ந்த குணமானது இது நல்லது இது தீயது என்று பகுத்துக் காணும் உணர்ச்சி வாய்ந்த மக்களிடத்து மட்டுங் காணப்படுகின்றதே யல்லாமல், மக்கள் அல்லாத மற்ற ஐந்து வகைப்பட்ட உயிர்களிடத்துங் காணப்படவில்லை. இவ்வைந்து வகை உயிர்களிற் சில பசியெடுத்த காலங்களிலெல்லாத் தம்மினுங் கீழ்ப்பட்ட உயிர்களைச் சிறிதும் இரக்கமின்றிக் கொன்று அவற்றின் உடம்பைச் சிதைத்துத் தின்னுகின்றன. ஆதலால், இரக்க குணம் மக்கள் அல்லாத மற்றைய உயிர்களிடத்தில் இல்லை என்பது இனிது விளங்குகின்ற தன்றோ? இனி, இவ்விரக்க குணமென்பது எந்த உயிர்களிடத்து இல்லையோ அந்த உயிர்கள் எல்லாங் கொடிய வன்னெஞ்சமுங் கொலைத் தொழிலும் உடையனவாய் இருக்கின்றன. இரக்க குணம் எந்த உயிர்களிடத்து இருக்கின்றதோ அந்த உயிர்கள் இனியமென்னெஞ்சமும் எல்லாரும் விரும்பத்தக்க இனிய செய்கையும் உடையனவாய் இருக்கின்றன. இந்தக் காரணத் தினாலேதான் இரக்க குணம் இல்லா உயிர்களின் தன்மை விலங்கின்றன்மை என்றும் இரக்க குணம் உள்ள உயிர்களின் தன்மை தெய்வத்தன்மை என்றும் வழங்கி வருகின்றோம். இனி மக்களின்றன்மையோ இவ்விரண்டிற்கும் நடுவில் நிற்கும் இயல்பு வாய்ந்ததாய் இருக்கின்றது. பசிநோய் தீரும் பொருட்டுக் கொடிய வன்னெஞ்சம் உடையராய்ப் பிற உயிர்களிடத்துச் சிறிதும் இரக்கம் இன்றி அவற்றைக் கொலை செய்து அவற்றின் ஊனைத் தின்பவர்கள் விலங்கின்றன்மையை அடைகின்றார்கள். தமக்குக் கடும்பசி உண்டான காலத்துத் தம்முயிர்போல மன்னுயிரை எண்ணி அவற்றிற்குச் சிறிதுந் தீங்கு செய்யாமல் தமக்குக் கிடைத்த காய் கனி கீரை கிழங்கு பயறு முதலியவற்றை உணவாகக் கொண்டு எல்லாவுயிர்களிடத்தும் இரக்கம் வைத்து ஒழுகுபவர்கள் தெய்வத் தன்மையுடையராகின்றார்கள். எல்லா உயிர்களிடத்தும் இரக்கமுடையவரான ஆண்டவனது பேரின்பத்தை நாம் நுகர வேண்டுமாயின் அவர்போல் அளவிறந்த இரக்க குணமாகிய தெய்வத் தன்மையை அடைதல் வேண்டும். எவர்கள் மென்மையான இனிய இரக்க குணம் உடையராகின்றார்களோ அவர்களுக்கே எல்லாம் வல்ல கடவுள் அருள்புரிவான். இது, கல்லால் எறிந்துங் கைவில்லால் அடித்துங் கனிமதுரச் சொல்லாற் றுதித்தும்நற் பச்சிலை தூவியுந் தொண்டரினம் எல்லாம் பிழைத்தன அன்பற்ற நான்இனி ஏதுசெய்வேன், கொல்லா விரதியர் நேர்நின்ற முக்கட் குருமணியே என்று அருட்பெருஞ் செல்வரான தாயுமான அடிகள் கூறியவாற்றானுந், திருவருட் செல்வரான இராமலிங்க அடிகள், வன்புகலந் தறியாத மனத்தோர் தங்கள் மனங்கலந்து மதிகலந்து வயங்காநின்ற என்புகலந் தூன்கலந்து புலன்களோடும் இந்திரிய மவைகலந்துள் இயங்குகின்ற அன்புகலந் தறிவுகலந் துயிரைம் பூதம் ஆன்மாவுங் கலந்துகலந் தண்ணித் தூறி இன்புகலந் தருள்கலந்து துளும்பிப் பொங்கி எழுங்கருணைப் பெருக்காறே இன்பத்தேவே என்னும் அருட்பாவினாற் கொலைக் குணமில்லாதவர்களின் உடம்பு உயிரெல்லாம் இறைவன் கலந்து நின்று பொலிவான் என்று கூறிய வாற்றானும் நன்கு விளங்கும். இன்னும் பேரிரக்க குணமான கொல்லாமை உடையவர் களுக்கு எல்லா நற்குணங்களுந் தாமே வந்து பொருந்து மெனவும், அவ்விரக்க குணம் இல்லாதவர்களுக்கு எல்லாத் தீய குணங்களும் மேன்மேற் கிளைத்தெழுந்து அவர்களைத் தனி விலங்குகளாக்கி விடுமெனவும் இனிது விளங்கும் பொருட்டே நம் தாயுமான அடிகள், கொல்லாமை எத்தனை குணக்கேட்டை நீக்கும் என்றும், கொல்லா விரதம்ஒன்று கொண்டவரே நல்லோர்மற் றல்லாதார் யாரோ அறியேன் பராபரமே என்றும் அருளிச் செய்தனர்களாயிற் கொல்லா விரதமாகிய தெய்வத் தன்மையின் மேன்மையையுங் கொலைக் குணமாகிய விலங்கின்றன்மை யின் தாழ்மையையும் யாம் விரித்துச் சொல்லுதலும் வேண்டுமோ? இங்ஙனம் இரக்கமற்ற கொடிய கொலைத் தொழிலையும் அதனால் வரும் புலால் உண்ணுதலையும் நாம் பழகி வருவோமா யின் இரக்கமற்ற கொடிய விலங்குகளாகிய புலி கரடி சிங்கம் முதலிய விலங்குகளின் இயல்பை நாம் அடைவதோடு நம்மைச் சேர்ந்தவர்களையும் அக்கொடிய தன்மையை அடையும்படி செய்துவிடுவோம். ஒரு குடும்பத்தில் ஒருவர் புலால் தின்று பழகுவாராயின் அவரோடு சேர்ந்த அக் குடும்பத்தாரும் நண்பர் களும் அவரைப்போற் புலால் தின்று கெட்டுப்போவர். இது பற்றியே, கொலையிலான் உதவு மன்னங் கூறிற்பே ரமுத மாகும், கொலையுளான் உதவும் அன்னங் கூறிற்பேர் விடமதாகும் புலையர்தம் மனையில் உண்போன் புலையனா மாறுபோலக் கொலைஞர்தம் மனையில் உண்போன் கொலைஞனே ஆவனன்றே என்னும் திருமொழியும் எழுந்தது. இனி, அன்புருவாயும் அருளுருவாயும் இரக்கவுருவாயும் விளங்காநின்ற நம் ஆண்டவன் தன்போல் அன்பும் அருளும் இரக்கமும் நிரம்பியிருக்கின்ற உயிர்களிடத்து மட்டுமே குடிகொண்டு தோன்றுவான். இரக்கமில்லாமற் பல உயிர்களையுங் கொன்று தின்று வாழும் மக்களிடத்து அன்பு வைத்து அருள்புரியான் என்பதும் வெளிப்படையாகும். நாம் நம் தாயின் கருப்பையிலே தங்கியிருந்த காலத்தும், நிலத்திற் பிறந்து வளர்ந்து வருகின்ற காலத்தும் நமக்கு வேண்டுவனவற்றை நாம் கேளாமலே தானே அறிந்து கொடுக்கும் ஆற்றலும், நம்மாற் சிறிதுஞ் செய்யலாகாத உடம்பின் அமைப்புகளையெல்லாம் ஒவ்வொரு நொடியுந் தவறாமல் இழைத்து வரும் ஐயன் அருள்வலிமையும் இங்கு என்னென்று எழுதுவோம்! இத்தனை இரக்கமுள்ள எல்லாம் வல்ல கடவுளாகிய முதற்பெருந் தந்தைக்கு அருமைப் புதல்வர்களாம். உரிமை வாய்ந்த எல்லா உயிர்களுந் தம்முள் அன்பும் இரக்கமும் பூண்டு நடத்தல் இன்றியமையாத கடமையாகும். இதனை நினையாமல் மக்களான நாம் நம்மினுந் தாழ்ந்த உயிர்களைக் கொலை செய்து அவற்றின் ஊனைத் தின்றால் அதனைக் கண்டு நம் அப்பன் சினங்கொண்டு நம்மைக் கொடுந்துன்பத்திற்கு உள்ளாக்குவா னென்பது திண்ணம். இதுகுறித்தே, கொல்லிடு குத்தென்று கூறிய மாக்களை வல்லிடி காரர் வரிகயிற்றாற் கட்டிச் செல்லிடு நீரென்று தீவாய் நரகிடை நில்லிடு மென்று நிறுத்துவர் தாமே என்றும், பொல்லாப் புலாலை நுகரும் புலையரை எல்லாருங் காண இயமன்றன் தூதுவர் செல்லாகப் பற்றித் தீவாய் நரகத்தின் மல்லாக்கத் தள்ளி மறித்துவைப் பாரே என்றுந் திருமூல நாயனார் திருவாய்மலர்ந்தருளினார். நாம் இப்பிறப்பிற் புலால் தின்றால் மறுபிறப்பிற்றானே ஏதோ கடவுள் ஒறுக்கப் போகின்றார் என்று எண்ணிவிடாதீர்கள்! புலால் உண்பதனால் இந்தப் பிறவியிலேயே கோமாரி, அம்மை, கக்கற் கழிச்சல், வயிற்றுவலி முதலிய நோய்களையும், வறுமை, மனக்கவலை, சண்டை, கிறுக்குப் பிடித்தல் முதலான பொல்லாங்குகளையும் ஏவி நம்மை நம் ஆண்டவன் துன்பப்படுத்தி ஒறுப்பான் என்பதற்கு நம் ஆசிரியரான சுந்தரமூர்த்தி நாயனாரருளிச் செய்த, குற்றொருவரைக் கூறைகொண்டு கொலைகள் சூழ்ந்த களவெலாம் செற்றொருவரைச் செய்த தீமைகள் இம்மையேவருந் திண்ணமே, மற்றொருவரைப் பற்றி லேன்மற- வாதொழி மட நெஞ்சமே புற்றரவுடைப் பெற்றமேறி புறம்பயந் தொழப் போதுமே என்னுந் திருமொழியே சான்றாகும். இன்னுங் கொல்லாதவர் களைக் கொல்லச் சொல்லியும், புலால் தின்னாதவர்களைத் தின்னச் சொல்லியுங் கட்டாயப்படுத்தினவர்களெல்லாரும் நிரயத்திற் சேர்வார் களென்று காசி காண்டம் கூறுகின்றது. எவ்வுயிரும் என்னுயிர்போல் எண்ணி இரங்கவும் நின், தெய்வ அருட்கருணை செய்யாப் பராபரமே! என்றபடி எல்லாவுயிர்களையும் நம்முயிர்போல் எண்ணி இரக்கத்தோடு நாம் நடக்க வேண்டும். நம் உடம்பில் ஒரு முள்ளுக் குத்தினாலும் ஒரு கத்தி வெட்டுப்பட்டாலும் நாம் எவ்வளவு துன்பத்தை அடைகின்றோம்! நம்மை ஒருவர் வெட்ட வந்தால் தப்பிப் பிழைக்க ஓடுகின்றோ மல்லேமோ? இங்ஙனமே ஆடு மாடு கோழி கொக்கு பன்றி மீன் முதலான உயிர்களெல்லாந் தம்மை ஒருவர் கொல்ல வரும்போது எவ்வளவு நடுக்கத்தோடு அஞ்சி ஓடுகின்றன! ஐயோ! அவற்றில் பல எவ்வளவு துன்பத்தோடு வாய்விட்டுக் கதறி அழுகின்றன! அவற்றின் கழுத்தை இரக்கமில்லாக் கொடியோர் கத்திகொண் டறுக்கையில் அவைகள் என்ன துடி துடிக்கின்றன! ஆ! ஆ! அவற்றின் துன்பத்தை நினைத்துப் பார்த்தால் நெஞ்சம் நீராய் உருகவில்லையா? ஐயோ, பாவம்! வாயற்ற அவ்வேழை உயிர்களைக் கொல்லவுங் கொன்றதைத் தின்னவும் பெண்பாலர் அஞ்சிக் கைவிட்டால் ஆடவர்கள் புலால் தின்பது ஒழியுமன்றோ! நெடுநாளாக உயிர்களைக் கொன்று தின்று வந்த பாவச் செய்கையை நினைந்து இரக்கமுற்று நம் இறைவனாகிய தந்தையிடஞ் சொல்லி மன்னிப்புக் கேட்டு எந்த உயிர்க்குந் தீங்கு செய்யாமல் இரக்கம் பூண்டு ஒழுகுதலே மக்களுடைய கடமையாகும். கொல்லா விரதம் குவலயமெல்லாம் ஓங்க எல்லார்க்குஞ் சொல்லுவதென் இச்சை பராபரமே! என்னுந் தாயுமான அடிகளின் திருமொழிப்படி கொல்லா அறத்தின் மேன்மையை எங்கும் பரவச் செய்து அன்பும் இரக்கமும் உடையவர்களாய்த் தெய்வத்தன்மையை நாம் அடைந்து கடவுளுடைய திருவருளைப் பெறுதல் வேண்டும். 6. கடவுளுக்கு அருளுருவம் உண்டு அன்பர்கள் சிலர் கடவுளுக்கு உருவம் இல்லையென்றும், மக்களுக்குரிய கண் கால் முதலிய உறுப்புகளின் அமைப்புகளை அவர்க்கேற்றிக் கூறுதல் குற்றமாமென்றுங் கூறுகின்றார்கள். ஆயினுங், கடவுளின் உண்மை நிலையை நுணுகி ஆராயுங்கால் அவர்க்கும் உருவம் உண்டென்பது புலனாகிறது. உருவமென்னுஞ் சொல்லைக் கேட்ட அளவானே அதனைக் கடவுளுக்குக் கற்பித்தல் வழுவாமென்று நினைத்த லாகாது. உருவம் மூன்று வகைப்படும். அஃது அறிவில்லாத கல், மண், நீர், நெருப்பு முதலியவற்றின்கண் அமைந்ததும், அறிவொடு கூடிய உயிர்களுக்கு இருப்பிடமான பலவகை உடம்புகளில் அமைந்ததும், இவற்றிலெல்லாம் மேலதான அறிவின்கண் அமைந்ததும் என மூன்றாம். அறிவில்லாப் பொருள்களில் அமைந்த உருவமானது அப்பொருள்கள் கலங்கலாய் நின்ற நிலையைவிட்டு ஓர் ஒழுங்குப்பட்ட விடத்தே உளதாவது .வடிவு தெரியாமல் நின்ற நீராவியானது குளிரால் இறுகி நீராய் இறங்கும்போது வடிவுடையதாகின்றது. நுண்ணிய அழல்வடிவாயிருந்த ஆவியிலிருந்து இந்த நிலவுலகமும் ஞாயிற்றுமண்டிலம், திங்கள் மண்டிலம் முதலியனவும் உருவாய்த் திரண்டு தோன்றிய பிறகுதான், அவை மக்களும் பல்லுயிர்களும் உயிர் வாழ்வதற்கு இடமாய்ப் பயன்படுகின்றன. இங்ஙனமே ஆவியாயிருந்த எல்லாப் பொருள்களும் உருவாய்த் திரண்டு வெளிப்பட்ட பிறகுதான் பெரிதும் பயனுடையனவாகின்றன. இனி, அறிவுடைய உயிர்கட்கு இருப்பிடமான பல திறப்பட்ட உடம்புகளும் ஆவி வடிவில் நின்றக்கால் உயிர் களுக்குப் பயன்படாதனவாய் இருந்தமையும், அவை ஓர் ஒழுங்குபட்டு உடம்புகளாய்த் தோன்றிய பின்னரே அவ்வுயிர் களுக்குப் பெரிதும் பயன்படுவனவாய் அமைந்த மையும் உணரற் பாலனவாம். ஆறறிவுடைய மேலான மக்கட் பிறவி யெடுத்த நம்மனோர் தத்தம் உடம்புகளில் இருந்து வாழாராயின் அவரெல்லாம் அறிவு விளங்கப் பெறுவரோ? மக்களுடம் பிலமைந்த கண், செவி முதலான உறுப்புகள் எத்துணை வியப்பான உருவ அமைப்பொடு பொருந்தி மக்கள் அறிவு விளக்கத்திற்கு உதவியாய் நிற்கின்றன! இவ்வுருவ அமைப்பு களும், உடம்புகளும் இல்லாதொழியின் மக்கள் அறிவு நிலை என்னாம் என்பதனை நாம் எடுத்துச் சொல்லுதலும் வேண்டுமோ? கண் பழுதான குருடனுங், காது கேளாத செவிடனும், வாய் பேசாத ஊமனுங், கைகால் குறைந்த முடவனும் எவ்வளவு அறிவு விளக்கத்தை யிழந்து எவ்வளவு துன்பத்தை அடைகின் றார்கள்! இதனால் உருவ அமைப்புகள் திருத்தமாய் முதிர முதிர மக்கள் அறிவும் முதிருமென்பதும் புலனாகின்றதன்றோ? இனி, அறிவின்கண் அமைந்த உருவத்தின் மேன்மையையும் ஒரு சிறிது ஆராய்தல் வேண்டும். தாயின் கருப்பையிலிருந்து பிறந்த மகவுக்கு உள்ள அறிவின் நிலைமையை நினைத்துப் பாருங்கள்! அதன் அறிவு எவ்வளவு மழுக்கமடைந்திருக்கின்றது! அந்த நிலையில் அதற்கும் அறிவில்லாக் கல்லுக்கும் வேறுபாடு மிகுதியாய் இல்லை. கல் ஏதொரு முயற்சியுமில்லாது கிடக்க அம்மகவோ வாய் திறந்து அழுதலும் பால் பருகுதலும் ஆன முயற்சி உடையதாயிருத்த லொன்றே அது கல்லின் வேறுபட்ட தன்மையுடையதென்பதை நமக்கு அறிவிக்கின்றது. அக்காலத்தில் எதனையும் நினைக்க வாவது அறியவாவது உணரவாவது அது வல்லதன்று. அங்ஙனமிருந்த அம்மகவு பசியால் உந்தப்பட்டுப் பால் பருகியும், அப்பாலைத் தரும் அன்னையை அறிந்தும், அதன்பின் தந்தையையும் உலகத்துப் பல பொருள்களையும் படிப்படியே அறிவதாகியுஞ் சிறிது சிறிதாய் அறிவு விளங்கப் பெறுகின்றது. அங்ஙனம் அதன் அறிவு மழுங்கியிருந்த நிலைக்கும் விளங்கி வரும் நிலைக்கும் வேறுபாடு என்னவென்றால், அழுக்குப் படிந்த கண்ணாடியில் ஏதோர் உருவமுந் தோன்றாமைபோல மகவின் அறிவில் ஏதோர் உருவமுந் தோன்றாதிருந்தமையே மழுங்கிய நிலையென்றும், இனி அஃது உலகத்துப் பொருள் களை அறிய அறிய அப்பொருள்களின் வடிவத்தோடு ஒத்த உருவம் அதன் அறிவின்கண் விளைதலின் அதுவே அதன் அறிவு விளங்கும் நிலையென்றும் பகுத்துணர்ந்து கொள்ளல் வேண்டும். எனவே, அறிவில் உருவங்கள் தோன்றாதிருக்கும் வரையில் அவ்வறிவு மழுங்கிக் கிடக்குமென்பதும், அவ்வுருவங்கள் தோன்றத் தோன்ற அவ்வறிவு மிகுதியும் விளக்கமுடைய தாமென்பதும் இது கொண்டு அறியற்பாலனவாம். எவனுடைய அறிவு திருத்தமான உருவங்கள் மிகுதியும் உடையதாகின்றதோ அதுவே மிகச் சிறந்த அறிவாய்த் திகழ்கின்றது. ஆதலால் அறிவும் ஓர் ஒழுங்குபட்ட உருவமுடையதாய்த் திகழத் திகழ அது மிகவுஞ் சிறப்பெய்துகின்றது. இங்ஙனமாக அறிவில்லாப் பொருளும் அறிவுள்ள உயிரோடு கூடிய உடம்பும், மக்கள் அறிவும் ஓர் உருவுடையன ஆக ஆக நிரம்பவுந் திருத்தமுற்றுப் பயன்படுதலும் விளக்கமெய்துதலும் நமது பழக்கத்தில் மறுக்கப்படாத உண்மையாய் இனிது அறியப்படுதலின், உருவம் பெற்றிருத்தல் குற்றமாமென்று கூறுவது பொருந்தாவுரையாம். அறிவுப் பொருளிலும் அறிவில்லாப் பொருளிலுங் காணப்படும் உருவங்களே குற்றமில்லாதனவாய்ப் பயன் மிக உடையனவாய் விளங்குமாயிற், பேரறிவு பொருளாய் எல்லாம் வல்லவராய் உள்ள கடவுளிடத்தே காணப்படும் உருவங் குற்றமுடையதாகுமோ? நன்கு ஆராய்ந்து பாருங்கள் அன்பர்களே! இனி, அறிவில்லாப் பொருள்களிற் காணப்படும் உருவங் களைக் காட்டினும் அறிவுள்ள உயிரொடு சேர்ந்த உடம்புகளிற் காணப்படும் உருவங்கள் சிறந்தனவாய் இருத்தல் போலவும், உடம்புகளிற் காணப்படும் உருவங்களைக் காட்டினும் உயிர்களின் அறிவிற் காணப்படும் உருவங்கள் மிகச் சிறந்தன வாய் இருத்தல் போலவும் பேரறிவுப் பிழம்பான இறைவனிடத்தே காணப்படும் உருவங்கள் மிகமிகச் சிறந்தனவாய் இருக்கு மென்பதை யாம் உரைத்தலும் வேண்டுமோ? அங்ஙனமாயின் உருவுடைப் பொருள்கள் எல்லாஞ் சில காலத்துள் அழிந்து போதலைக் காண்கின்றோமாகலின் அது போல் உருவுடைய கடவுளும் அழிவாரென்பது பெறப்படுமே எனின், அங்ஙனமன்று; அறிவில்லாப் பொருள்களிலுள்ள உருவம் மட்டும் அழிவு பெறுமேயல்லாமல், அறிவின் கண் உள்ள உருவம் எஞ்ஞான்றும் அழியமாட்டாது. கொற்றொழிலிற் றேர்ந்த ஓர் அறிஞன் சலவைக் கல்லிற் செதுக்கித் திரட்டிய ஓர் அழகிய உருவம் அழிந்து போயினும், அதற்கு முதலாய் அவன் அறிவில் நின்ற உருவம் எஞ்ஞான்றும் அழிவதில்லை. அவன் தன் அறிவின்கண் அமைந்த அவ்வுருவத்திற்கு இசையச் சலவைக் கல்லின்கண் அதுபோன்ற எத்தனையோ வடிவங்களை அமைக்க மாட்டுவான். இங்ஙனம் வல்லவனான அவ்வறிஞனின் அறிவுருவம் எஞ்ஞான்றும் அழியாமையை நன்கு உணர்ந்தவர்கள் கடவுளின் அருளுருவம் அழியுமென்று கூற ஒருப்படுவார்களோ? ஆதலாற், கடவுளின் அருளுருவம் எஞ்ஞான்றும் அழியாத தொன்றாகலின் உருவங்களெல்லாம் அழியுமெனப் பொதுப்படக் கூறுதல் ஒரு சிறிதும் பொருந்தாததொன்றாம். இனி, உருவுடைய அறிவில்லாப் பொருள்கள் அழிந்து போதல் உருவத்தினால் வந்த குற்றமன்று. அவை பருப்பொருள் களாய் இருத்தலினால் அழிகின்றன என்றும் அவையும் நுணுகிய நிலையை அடைந்த வழி அழியாமல் இருக்குமென்றும் கடைப்பிடித்தல் வேண்டும். அறிவின்கட் காணப்படும் உருவம் என்றும் அழியாமல் ஒரு தன்மையாய் நிற்க, அறிவில் பொருளின் கண் உள்ள உருவமே அழியும் வகையை உற்றுணர வல்லார்க்கு அஃது அவ்வப்பொருளின் தன்மையால் நேர்ந்த தன்றி உருவத்தினால் நேர்ந்ததன்றென்பது தெள்ளிதிற் புலனாம். அறிவு மிக நுணுகிய இயல்பினதாகலின் அதன்கண் உருவம் என்றும் அழியா இயல்பிற்றாயும், அறிவில் பொருள் பருப்பொருளாகலின் அதன்கண் உருவம் அழியும் இயல்பிற்றாயும் நிற்றல் நுண்ணுணர் வினாரெல்லார்க்கும் விளங்கற்பாலதேயாம். இனி, உலகத்திலுள்ள அறிவில்லாப் பொருள்களும். அறிவுடைய உயிர்ப் பொருள்களும் உருவங்களைப் பெற்றது தத்தம் முயற்சியினால் அன்று. ஏனென்றால், அறிவில்லாப் பொருள்கள் தாமாகவே ஓர் உருவத்தை அமைத்துக் கொள்ள மாட்டா. அறிவுடைய சிற்றுயிர்களோ தாம் உருவங்களைப் பெறுதற்குமுன் அறிவு மழுங்கிக் கிடத்தலால் அவைகளும் உருவங்களைச் செய்து கொள்ளமாட்டா. கலங்கிய நிலையில் ஏதோ உருவமுமின்றி இருந்த எல்லாப் பொருள்களும் உருவங்களைப் பெறுதற்கு ஒரு பேரறிவின் உதவி இன்றியமையாத தென்பது சிறிது ஆழ்ந்துணர வல்லார்க்கும் இனிது விளங்கும். அதனால் அத்தகைய பேரறிவு வாய்ந்த கடவுளொருவர் உண்டென்னும் உண்மை ஐயமின்றித் துணியப்படுகின்றது. இவ்வுலகத்திற் காணப்படும் எல்லா உருவங்களுக்கும் முதல் கடவுளுடைய அறிவின்கண் உண்டென்பதும் இதுகொண்டு முடிக்கப்படும். ஓவியக்காரன் வரையும் ஓவியங்களின் உருவங்களுக் கெல்லாம் முதல் அவன் அறிவின்கண் அமைந்திருத்தல் போலவும், கொற்றொழில் வல்லான் ஒருவன் அமைக்கும் பாவைகள், உருக்கள், கட்டடங்கள் முதலானவற்றின் வடிவங்கட் கெல்லாம் முதல் அவனறிவின்கண் அமைந்து கிடத்தல் போலவும், காவியங்கள், கதைகள், அறிவு நூல்கள் முதலியவற்றிலெல்லாம் உள்ள பொருள்களின் வடிவங்களுக்கு முதல் அவற்றை இயற்றிய புலவனறிவின்கண் விளங்கி நிற்றல் போலவும், இவ்வுலகு உயிர்களிற் காணப்படும் எல்லா வடிவங்களுக்கும் முதல் கடவுள் அறிவின்கண் உண்டென்பது திண்ணமாம். பருப்பொருளிற் காணும் வடிவங்கள் சில பல காலத்துள் அழிந்துபோதல்போல அறிவுப் பொருளில் அமைந்த உருவங்கள் அழியாது எஞ்ஞான்றும் நிலைபெற்றிருக்கு மென்பது மேலே காட்டப்பட்டமையிற், கடவுள் அறிவின்கண் உள்ள எல்லையற்ற உருவங்கள் அத்தனையும் ஒருகாலும் அழியமாட்டாவென்று கடைப்பிடிக்க பிராஞ்சு தேயத்தில் புகழ்பெற்ற இயற்பொருள் நூலாசிரியராய் விளங்காநின்ற பாரடக் என்பார் நுண்ணிய பொறிகள் பலவற்றின் உதவி கொண்டு பல்லாண்டுகளாக ஆராய்ந்து கண்ட முடிவுகளும் அறிவுக்கு உருவமுண்டென் பதையும், அஃது ஏனை உருவங்கள் போல் அழியாது என்றும் நிலைபெறுமென்பதையும் இனிது நாட்டுகின்றன. இவைகளை எல்லாம் ஆராய்ந்து பாராமற் கடவுளுக்கு உருவமில்லையென எளிதிற் கூறிவிடுவது அறிவு வளர வேண்டுவார்க்கு முறையாகாது. அது கிடக்க. இனி, உலகத்தின்கட் காணப்படும் எல்லாப் பொருள்களின் வடிவங்களும் அவை எத்துணை இழிந்தனவாயினும், அல்லது எத்துணை உயர்ந்தனவாயினும் அவை எத்துணைச் சிறியனவா யினும் அல்லது எத்துணைப் பெரியனவாயினும், - எல்லாம் மக்களாலாவது ஏனை உயிர்களாலாவது அன்றி அறிவில்லாப் பொருள்களாலாவது தாமாக அமைக்கப்பட்டன வல்லவே! அவையெல்லாம் முழுமுதற் கடவுளின் அறிவால் ஆக்கப் பட்டன வல்லவோ! அவ்வறிவால் ஆக்கப்பட்ட அவ்வடிவங்கள், அத்தனைக்கும் முதலான நுண்ணிய உருவங்கள் கடவுள் அறிவின்கண் அமைந்து கிடப்பன வல்லவோ? ஒரு கண்ணாடியின் பக்கத்தேயுள்ள பொருள்களின் வடிவங்களோடொத்த வடிவங்கள் அக்கண்ணாடியின்கண் விளங்கித் தோன்றுதல் போல இறைவனது பேரறிவாகிய பெருங்கண்ணாடியின் எதிரேயுள்ள எல்லாப் பொருள்களின் வடிவங்களையும் ஒத்த அருள்வடிவங்கள் அதன்கண் விளங்கித் தோன்றுமல்லவோ? ஆதலால் மக்கள் உலகத்திலுள்ள எந்தப் பொருளைக் கடவுளாக நினைத்து வணங்கினாலும் அவ் வணக்கம் அப்பருப்பொருள் உருவத்தின்கட் செல்லாமல் அதற்கு முதலான இறைவனது அருட்பொருள் உருவத்தின்கட் செல்லு மென்பதும், அங்ஙனஞ் செல்லவே அவர்க்கு அவ்விறைவனருள் கிடைக்குமென்பதும் உறுதியாம். கடவுள் அருளின்கண் எல்லா உருவங்களும் உண்டென்பதற்கும், குறித்ததொன் றாகமாட்டாக் குறைவில னாதலானும், நெறிப்பட நிறைந்த ஞானத் தொழிலுடை நிலைமையானும், வெறுப்பொடு விருப்புத் தன்பான் மேவுத லிலாமையானும் நிறுத்திடு நினைந்த மேனி நின்மல னருளினாலே என்னுஞ் சிவஞான சித்தியார்த் திருப்பாட்டே சான்றாகும். எந்த வடிவில் வழிபடுவார்க்கும் இறைவனருள் உண்டென்பதற்கு, விரிவிலா அறிவினார்கள் வேறொரு சமயஞ் செய்தே, எரிவினாற் சொன்னாரேனும் எம்பிராற் கேற்றதாமே என்னுந் அப்பர் சுவாமிகள் திருப்பாட்டே சான்றாகும். இனிக், கடவுளுக்கு உருவமில்லையென்றும், அவர் அருவமாகவே இருப்பாரென்றும், அவர் குணமற்றவரென்றும், அதனால் நிர்க்குணோ பாசனையே சிறந்ததென்றும், நன்றாய் ஆராய்ந்து பாராமற்கூறுஞ் சொற்கள் பொருளற்ற புன்மொழி களாய் இருக்கின்றன. ஏனென்றாற், பேரறிவுப் பொருளாகிய அதற்கு அறிவும், பேரருட்பொருளாகிய அதற்கு அருளும், பேரின்பப் பொருளாகிய அதற்கு இன்பமும், பெருவல்லமைப் பொரு ளாகிய அதற்கு வல்லமையும் அரிய பெரிய குணங்களாயிருக்க, அதனைக் குணமற்ற நிர்க்குணப் பொருள் என்பது எவ்வாறு பொருந்தும்? குணமில்லாத பொருள் எங்கேனும் உண்டா? குணமில்லாதது பொருளாகுமா? என்று இங்ஙனமெல்லாஞ் சிறிதாயினும் ஆராய்ந்து பார்க்க வல்லவர்க்கு நிர்க்குணம் நிர்க்குணோபாசனை முதலிய சொற்களெல்லாம் பொருளில்லாத வெற்றாரவார உரைகளே யாம் என்பது தெளிவாக விளங்கும். அங்ஙனமாயின், அறிவு நூல்கள் சிற்சில இடங்களிற் கடவுளை நிர்க்குணர் என்றோதுவது ஏனென்றாற் சத்துவம், இராசதம், தாமதம் என்னும் வாலாப் பருப்பொருட் குணங்கள் மூன்றும் அவரிடம் இல்லையென்பதை உணர்த்துதற் பொருட்டாகவே அங்ஙனம் அவை ஒவ்வோரிடங்களிற் கூறினவென்பது சிவஞான போதமாபாடியத்தில் நன்கு விளங்கப்பட்டிருக்கின்றது. இனிக், கடவுள் பேரறிவுப் பொருளென்பது முடிக்கப்பட்டதனாலும், அவ்வறிவும் உலகத்திலுள்ள எல்லாப் பொருள் களின் வடிவங்களையும் உண்டு பண்ணுவதொன்றாதலால் அவற்றை உண்டுபண்ணுதற்கு முன்னும் பின்னும் எப்போதும் அவ் அறிவின்கண் அவற்றிற்கு முதலான எல்லா உருவங்களும் உண்டென்பது பெறப்படுதலானும் கடவுள் அருவாய் இருப்பரென்னுமுரையும் வெற்றுரையே அல்லது பிறிதன்று. அங்ஙனமாயின் அறிவு நூல்களில் அவர் அருவரென்றும் ஒரோவிடங்களிற் கூறப்படுதல் ஏனென்றால், மக்களுடைய ஊனக் கண்களுக்கு அவருடைய அருளுருவம் புலப்பட மாட்டாதாகலின், அவ்வாறு சொல்லப்பட்டதென்க. அருட் கண்ணுடையார்க்கு அவனது அருளுருவம் விளங்கத் தோன்றுமென்பதற்குத் திருஞானசம்பந்தப் பெருமான் ஏதும் அறியாக் குழவிப் பருவத்தே அவன்றன் றிருவுருவத்தைக் கண்டு பாடியதும், அவனருளே கண்ணாகக் காணினல்லால், இப்படியான் இவ்வுருவன் இவ்வண்ணத்தன் இவனிறைவ னென்றெழுதிக் காட்டொணாதே என்ற அப்பர் அடிகளின் அருமைத் திருமொழியுமே போதிய சான்றாமென்க. என்று இத்துணையுங் கூறியவாற்றால், உருவமானது பெரிதும் பாராட்டற் பாலதேயன்றி இழிக்கப்படத் தக்கதன் றென்பதும், அறிவு விளக்கமெல்லாம் உருவத்தைப் பற்றியே நிகழுமாதலால் அஃதழியாத உருவ அமைப்பு வாய்ந்ததாகவே நிலைபெறுமென்பதும், உலகிற் காணப்படும் எல்லா வடிவங்களின் தோற்றத்திற்கும் பொருட்டுக் காரணனான கடவுளின் எல்லையற்ற அறிவின்கண் எல்லா உருவங்களும் உண்டென்பதும், கடவுள் அருட்குணமுடையராயும் அறிவுருவ முடையராயும் விளங்குவரல்லால் நிர்க்குணராயும் அருவராயும் இருப்பரல்லரென்பதும், எவரெவர் எவ்வெவ் வுருவிற் கடவுளை வழிபடினும் அவரவர்க்கு அவ்வவ் வுருவிற்கேற்பக் கடவுள் தமது அருளை வழங்குவரென்பதும் எடுத்துக்காட்டப்பட்டன. 7. கல்வியே அழியாச் செல்வம் வெள்ளத்தால் அழியாது வெந்தழலால் வேகாது வேந்தராலும் கொள்ளத்தான் முடியாது கொடுத்தாலும் நிறைவன்றிக் குறைவுறாது, கள்ளர்க்கோ பயமில்லை காவலுக்கோ மிக எளிது கல்வியென்னும் உள்ளத்தே பொருளிருக்கப் புறம்பாகப் பொருள்தேடி யுழல்கின்றாரே! சில நாளில் தோன்றிச் சிலநாளிருந்து சிலநாளில் மறைந்து போவதாகிய இம்மக்களுடம்பிற் பிறந்தவர்களான நாம் எந்த வகையாக செல்வத்தைப் பெறுதற்கு முயலல் வேண்டு மென்றால், என்றும் அழியாததாய் நம் உடம்பு அழிந்தாலுந் தான் அழியாமல் நமது உயிரொடு சேர்ந்து நம்மை எல்லாப் பிறப்புகளிலுந் தொடர்ந்து வருவதாய் உள்ள அழிவில்லாப் பெருஞ் செல்வத்தையே அடைவதற்குக் கண்ணுங்கருத்துமாய் இருக்கவேண்டும். ஏன்? mÊahj bršt¤ijna bgw nt©L bk‹D« ÉU¥g« e«Äš x›bthUtÇl¤J« ïa‰if ahnt fhz¥gLtjhY«., அவ்விருப்பம் இல்லாதவர்களை எவ்விடத்தும் எக்காலத்துங் காண்டல் கூடாமையானுமென்க. ஒரு திங்கள், இரண்டு திங்களிற் கிழிந்து போகுஞ் சீமைத் துணிகளை வாங்க விரும்புகின்றோமா? பன்னிரண்டு பதினைந்து திங்கள் கிழியாமல் அழுத்தமாயிருக்கும் நாட்டுப் புடவைகளை வாங்க விரும்புகின்றோமா? விலை சிறிது மிகுதியாய் இருந்தாலும் அழுத்தமாய் நீடித்திருக்கும் ஆடைகளையல்லவோ வாங்க ஆவல் கொள்கின்றோம்? சிறிது கை தவறினாலும் கீழ் விழுந்து நொறுங்கிப்போகும் மட்பாண் டங்களைப் புழங்க விரும்புகின்றோமா? கீழே தவறி விழுந்தாலும் உடையாமல் வலுவாய் உள்ள செப்புக்கலங்கள் பித்தளைக் கலங்களைக் கையாள விரும்புகின்றோமா? விலை ஏறியிருந்தாலும் நீண்டநாட் பயன்படுஞ் செப்புக்கலங்கள் பித்தளைக் கலங்களையல்லவோ பொருள் கொடுத்து வாங்க விழைகின்றோம்? இங்ஙனமே நாம் நாடோறுங் கையாண்டு வரும் பொருள்களிலுங்கூட விரைவில் அழிந்து போகாமல் நீண்ட நாள் நிலைத்திருக்கும் பொருள் களையே நாம் அடைய விரும்புதலால், நம்மில் ஒவ்வொருவருக்கும் அழியாச் செல்வத்தையே பெறவேண்டுமென்னும் அவா இயற்கையாகவே வேரூன்றி நிற்கின்றது. இங்ஙனம் அழியாச் செல்வத்தையே அடைய வேண்டு மென்னும் அவர் நம்மெல்லாரிடத்தும் இயற்கையாக இருந்தாலும், முத்துச் சிப்பியில் உள்ள முத்தின் ஒளியும் பாசி மூடிய பவளத்தின் நிறமும், மாசியில் மறைந்த மதியின் துலக்கமுங், கூடை கவிழ்ந்த விளக்கின் ஒளியும்போல் நம்மை மூடிக் கொண்டிருக்கும் அறியாமை என்னும் இருளில் அகப்பட்டவர் களாகி நம் அறிவை இழந்து அழியாச் செல்வத்தை அடைய முயலாமல், நிலையின்றி அழிந்து போகும் பொருள்களையே நிலையாகப் பிழைபட நினைத்து, அவற்றைப் பெறுவதிலும் அவற்றை நுகர்வதிலுமே நமது காலத்தைக் கழித்து வருகின்றோம். பாருங்கள்! நம்மவர்களிற் பெரும்பாலோர் மாடமாளிகை களையும் ஆடை அணிகலங்களையும் தட்டு முட்டுகளையுந் தின்பண்டங் களையும் நாடகக் காட்சிகளையும் வேடிக்கை விளையாட்டுகளையுமே மேலான செல்வங்களாகக் கருதி அவற்றைப் பெறுவதிலும் அவற்றை நுகர்வதிலும் விடாமுயற்சியுடையவர்களாய் இருக்கக் காண்கின்றோமே யல்லாமற், சிறிது நேரமாயினும் அடக்க ஒடுக்கத்தோடிருந்து நம்மைப் படைத்த சிவபெருமானை நினைக்கவும், நம்மைப் போலவே அவ்வாண்ட வனாற் படைக்கப்பட்ட உயிர்களின் நன்மையைக் கருதவும் அவை பசியாலும், நோயாலும் வருந்துவதைக் கண்டு மனங்கசிந்து இரங்கித் தம்மால் இயன்ற அளவு அவற்றிற்கு ஒரு கைப்பிடி உணவாவது ஒரு காசு மருந்தாவது உதவி அவற்றின் துன்பத்தைப் போக்கவும், தெய்வப்புலமைத் திருவள்ளுவ நாயனார் ஔவைப் பிராட்டியார் காரைக்காலம்மையார் சேக்கிழார் பெருமான் முதலான உயர்ந்த அறிவுடையோரால் அருளிச் செய்யப்பட்டுள்ள அரும்பெரு நூல்களை ஓதி உணரவும் முயற்சி வாய்ந்தவர்களாய் உள்ள ஆண் பெண் பாலரைக் காண்பது அரிதினும் அரிதாய் போய்விட்டதே! ஆ! நாம் நிலையாக நினைத்த மாடமாளிகைகள் ஆடை அணிகலங்கள் தட்டு முட்டுகள் முதலானவைகள் எல்லாம் நாம் நினைத்த வண்ணம் நிலையாக இருப்பவைதாமா! இல்லை, இல்லை. சில ஆண்டுகளுக்குமுன் ஐதராபாத்திலும் வாணியம் பாடியிலும் நேர்ந்த பெரியதொரு வெள்ளப் பெருக்கினால் எத்தனை வீடுகள் எத்தனை மாளிகைள் நிலமட்டமாகத் துடைக்கப்பட்டு இருந்த இடமுந்தெரியாமல் அழிந்துபோயின! அவ்வீடு களோடு அவ்வீடுகளில் இருந்த எவ்வளவு பண்டங்கள் எவ்வளவு ஆடை அணிகலன்கள் அழிந்து ஒழிந்து போயின! அப்போது அங்கே பெருஞ் செல்வர்களா யிருந்தவர்களெல்லாருந் தம்மால் அருவருத்து ஒதுக்கப்பட்ட ஏழைக் குடிமக்களைக் காட்டிலும் இழிந்த நிலையை அடைந்தவர்களாகி, உண்ணச் சோறும் உடுக்கத் துணியும் இன்றித் தத்தளித்ததெல்லாம் நாம் கேட்டு நெஞ்சம் நெக்குருகி வருந்தினம் அல்லமோ? ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எட்டாம் ஆண்டில் மேற்குத் திசையில் உள்ள சிறந்த நகரமாகிய மெசினாப்பட்டின மானது நில அதிர்ச்சியினால் அழிந்து நீருக்கும் நெருப்புக்கும் இரையானதும், அப்போது அப்பட்டினத்திலிருந்த ஐந்தடுக்கு ஆறடுக்கு மாளிகைகளும், அவற்றில் இருந்த அரியபெரிய பண்டங்களும், அவற்றில் இருந்த நூறாயிரக்கணக்கான மாந்தர்களும், அளவற்ற செல்வங்களும் நெருப்பிலே வெந்து நீரில் அமிழ்ந்துபோன வரலாறுகளையெல்லாம் நினைக்கும் போது நாம் நிலையாக நினைத்திருக்குஞ் செல்வங்களுஞ் செல்வங்களென்று காணப்படுமோ? அவற்றை மதிக்கும் நமது அறிவும் அறிவென்று சொல்லப்படுமோ? சில நாட்களின்முன் மேற்கேயுள்ள ஐரோப்பாக் கண்டத்தில் நடைபெற்ற வெள்ளைக்காரர் சண்டையினால் விளைந்த அழிவினை, ஐயோ! என் ஒரு நாவினால் எங்ஙனஞ் சொல்வேன்! எங்கே பார்த்தாலுஞ் செக்கச் செவே லென்ற செந்நீர்க் களரியும், பிணக்காடும், பீரங்கி வெடியுங், கூக்குரல் ஒலியுமாய் இருந்தனவே! அத்தேயங்களிலுள்ள பத்துப் பதினைந்து மாடமாளிகைகளுக்குந் தேவகோட்டங்களுக்கும் தமது சென்ன பட்டினம் முழுதும் ஈடாக வைத்தாலும், அது அவற்றிற்கு ஈடாகாதே! அப்படிப்பட்ட உயர்ந்த கட்டிடங் களெல்லாம் பீரங்கி வெடிகளால் தகர்க்கப்பட்டுப் பாழாய்க் கிடக்கின்றன! எத்தனை அரசர்கள், எத்தனை செல்வர்கள், எத்தனை போர் மள்ளர்கள் இச்சண்டையில் சாய்ந்து போனார்கள்! நேற்று ஆடையணி கலன்கள் அணிந்து அறுசுவையுணவு உண்டு தம்மை மறந்து அகங்களித் திருந்தவர் களெல்லாரும் இன்று அவற்றை முற்றும் இழந்து மனைவி யொருபுறம் மக்கள் ஒருபுறமாய்க் கையறுந்து காலறுந்து கதறினரே! ஐயகோ! இச்சண்டையினால் நேர்ந்து வந்த அழிவுகளை அறிந்து வைத்தும், இன்னும் நாம் இவ்வொளி ஆரவாரங்களைச் செல்வங்களென்று எண்ணலாமா? இது பற்றியன்றோ, தெய்வச் சிதம்பரத்தேவா உன் சித்தந் திரும்பிவிட்டாற், பொய்வைத்த சொப்பனமாம் மன்னர் வாழ்வும் புவியுமெங்கே, மெய்வைத்த செல்வ மெங்கே மண்டலீகர்தம் மேடையெங்கே, கை வைத்த நாடகசாலை யெங்கே, யிதுகண்மயக்கே என்று பட்டினத்துப் பிள்ளையாரும் அருளிச் செய்தார். இங்ஙனம் வெள்ளத்தால் அழிந்து போவதும் வெந்நெருப்பால் வெந்து போவதும் அரசர்களாற் கைப்பற்றப்படுவதுங் கொடுக்கக் கொடுக்கக் குறைந்து போவதுங் கள்வர்க்காக நம்மை அஞ்சுவிப்பதும் பாதுகாப்பதற்கு மிகுந்த வருத்தத்தைத் தருவதுமான இச்செல்வம் நம்மால் எந்நேரமும் விரும்பத்தக்க தன் றென்பது இதனால் இனிது விளங்குகின்றதன்றோ? இவ்வாறு சொல்லுதலைக் கொண்டு நாம் செல்வத்தை வேண்டாமல் வறுமைப்பட்டு இந்த மண்ணுலகில் வருந்தியே காலங்கழிக்க வேண்டு மென்று நீங்கள் நினைத்தல் கூடாது. நமது மண்ணுலக வாழ்க்கை இனிது நடப்பதற்கும், பிற உயிர்களின் துன்பத்தைப் போக்கும் ஈகை அறங்களைச் செய்வதற்கும், மற்ற நல்ல முயற்சிகளைச் செய்வதற்கும் இன்றியமையாது வேண்டப்படும் பொருளைச் சேர்த்து, ஆரவாரம் இல்லாமலும் எல்லாந் தனக்கே என்று எண்ணாமலும் தனக்கும் பிறர்க்கும் பல வகையால் நல்ல பயன்கள் விளையும்படி அதனைப் பயன்படுத்தல் வேண்டுமென்பதே எனது கருத்தாகும். இன்னும், இவ்வழிந்து போகும் பொருளைப் படைத்தவர்களும் படையாதவர்களுமாகிய எல்லாருங் வெள்ளத்தால் அழியாதாய் வெந்தழலால் வேகாததாய் அரசர்களாலுங் கைப்பற்றப்படாதாய்க் கொடுக்கக் கொடுக்கக் குறையாதாய்க் கள்வர்களுக்காக அஞ்சவேண்டுவது இல்லாதாய் நமது அறிவினுள்ளே இருத்தலாற் பாதுகாப்பதற்கு எளிதாய் விளங்கும் அழியாச் செல்வமாகிய கல்விப் பொருளைப் பெறுதற்கு மிகவும் முயற்சியுடையவர்களாய் இருக்க வேண்டும். இதுபற்றியே, வெள்ளத்தால் அழியாது என்னும் அரிய பாட்டு இந்தக் கட்டுரைக்கு முதலாக எடுத்துக் கொள்ளப்பட்டது. செல்வமானது வெளியேயுள்ள பருப்பொருளாதலால் வெள்ளத்தால் அழியும்; வெந்தழலால் வேகும். கல்வியானது நமது உயிரைப்பற்றி உள்ளே இருக்கும் நுண்பொருளாகையால் வெள்ளத்தில் அழியாது; வெந்தழலில் வேகாது. செல்வமானது பொன் நிலம் வீடும் முதலிய பருப்பொருளா யிருத்தலால் அரசர்களாற் கைப்பற்றவும் படும். கல்வியானது அறிவுருவான நுண் பொருளாகையால் அவர்களாற் கவரப்படமாட்டாது. செல்வமானது பிறர்க்கு எடுத்துக் கொடுக்கக் கொடுக்கக் குறைந்து போகும். கல்வியானது பிறர்க்கு எடுத்துச் சொல்லச் சொல்ல அளவில்லாமற் பெருகும். செல்வத்தை வைத்திருப்பவர்கள் எங்கே கள்வர் வந்து திருடிக்கொண்டு நம்மையுங் கொன்று விடுவார்களோ என்று எந்நேரமும் அச்சத்திலேயே காலங் கழிக்க வேண்டும். கல்வியை வைத்திருக்கும் புலவர்களோ அங்ஙனங் கள்வர்க்குச் சிறிதும் அஞ்சவேண்டுவதில்லை. செல்வத்தைப் பாதுகாப்பதற்கு அளவு கடந்த முயற்சி வேண்டும். கல்வியைப் பாதுகாப்பதற்கு அத்தகைய வருத்தம் வேண்டுவதில்லை. இங்ஙனமெல்லாங் கல்வியானது செல்வத்தினுஞ் சிறப்புடைய அழியாச் செல்வமாய் இருத்தலினாலேயே தெய்வப் புலமைத் திருவள்ளுவ நாயனார், கேடில் விழுச்செல்வங் கல்வி யொருவற்கு மாடல்ல மற்றுப் பிற என்றும், ஔவைப்பிராட்டியார், மன்னனும் மாசறக் கற்றோனுஞ் சீர்தூக்கின் மன்னனிற் கற்றோன் சிறப்புடையன்-மன்னனுக்குத் தன்றேச மல்லாற் சிறப்பில்லை கற்றோர்க்குச் சென்றவிட மெல்லாஞ் சிறப்பு என்றும் அருளிச் செய்தனர். ஆனால், சிலர் கல்வியானது ஆண்மக்களுக்குத்தாம் வேண்டுமேயல்லா மற் பெண்மக்களுக்கு வேண்டுவதில்லையென்றும் பழைய நாளில் மாதர்கள் எவருங் கல்வி கற்க வேண்டுமென்று நூல்களிற் சொல்லப்பட வில்லையென்றுங் கூறுவார்கள். உயிர்கள் என்ற பொதுவகையில் விலங்குகளும் மக்களும் ஒப்பவர்களேயாவர். உணவு தேடுதல், தேடிய உணவை உண்டல், உறங்கல், இன்புறுதல் என்னுந் தொழில்கள் விலங்குகளுக்கும் உண்டு; மக்களுக்கும் உண்டு. ஆனால், மக்கள் விலங்குகளினும் உயர்ந்தவர்கள் என்று சொல்வது ஏன் என்றால், நல்லது இது தீயது இது என்று பகுத்துணர்தலானுந், தம்மைப் போன்ற உயிர்க்கு இரங்கித் தம்மாலான உதவி செய்தலானுங், கடவுளைத் தொழுதலானும், இங்ஙனமெல்லாந் தமது அறிவை வளரச் செய்தற்குரிய பல நூல்களைக் கற்றலானுமே மக்கள் விலங்குகளினும் உயர்ந்தவராக எண்ணப்படுகின்றனர். இவ்வுயர்ந்த அறிவின் செயல்கள் இல்லையானால் விலங்குகளுக்கும் மக்களுக்குஞ் சிறிதும் வேற்றுமை இல்லாமற்போம். கல்வி இல்லாதவர்கள் விலங்குகளேயாவர் என்றும், கல்வி இல்லாதவர்களுக்கு நுட்பமான அறிவு சிற்சில நேரங்களிற் காணப்பட்டாலும் அதனை அறிவாகப் பெரியோர்கள் கொள்ள மாட்டார்களென்றுங், கல்வியுடையவர்களே கண்ணு டையவர்கள் ஆவார்கள் அல்லாமல் மற்றவர்கள் முகத்தில் இரண்டு புண்ணு டையவர்களே ஆவார்களென்றும் விளக்குதற்கன்றோ திருவள்ளுவநாயனார், விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல் கற்றாரோடு ஏனை யவர் எனவும், கல்லாதான் ஒட்பங் கழியநன் றாயினுங் கொள்ளார் அறிவுடை யார் எனவும், கண்ணுடைய ரென்பவர் கற்றோர் முகத்திரண்டு புண்ணுடையர் கல்லா தவர் எனவுந் திருவாய் மலர்ந்தருளினார். இங்ஙனம் அறிவான் மிக்க ஆன்றோர், மக்களாய்ப் பிறந்த எல்லார்க்குங் கல்வி இன்றியமையாது வேண்டற்பாலதே யாமென்று கூறியிருக்க, அஃது ஆண்மக்களுக்குத்தாம் வேண்டுமேயல்லாமற் பெண்மக்களுக்கு வேண்டு வதில்லை யென்று உரைப்பார் உண்மை அறிந்தவராவரோ சொன்மின்கள்! அருமைத் தாய்மார்களே, பெண்பாலார் மக்களினுந் தாழ்ந்த விலங்குகளாயிருந்தாலன்றோ அவர்கட்குக் கல்வி வேண்டாம் எனலாம்? இவ்வுலக வாழ்க்கையை நன்றாக நடத்தும் முறையில் ஆண்மக்களைக் காட்டிலும் மிகுந்த பொறுமையும் ஆழ்ந்த நுண்ணறிவும் வேண்டிய அவர்கட்குக் கல்வியெனுந் தூண்டா மணிவிளக்கைத் தாராமல் அவர்களை அறியாமை என்னும் பேர் இருளிற் போகச் சொல்லுபவர்கள் உண்மை அறிந்தாராவரோ சொன்மின்கள்! இனி, முற்காலத்திருந்த ஔவையார், பூதப்பாண்டியன் பெருந்தேவியார், காரைக்காலம்மையார், மங்கையர்க்கரசியார் முதலான பெண்மணி களெல்லாருங் கல்வியில் மிகச் சிறந்தவர் களாயிருந்தமை தெரிந்தவர் பழைய நாளிற் பெண்மக்கள் எவருங் கல்வி கற்கவில்லையென்று கூறுவரோ சொன்மின்கள்! பெருந்த டங்கட் பிறைநுத லார்க்கெலாம் பொருந்து செல்வமுங் கல்வியும் பூத்தலால் வருந்தி வந்தவர்க் கீதலும் வைகலும் விருந்து மன்றி விளைவன யாவையே என்று கல்வியிற் சிறந்த கம்பர் கூறியிருத்தலால் முற்காலத்தில் இருந்த பெண்மக்கள் எல்லாருங் கல்வியில் வல்லவர்களாய் இருந்தார்களென்பது இனிது விளங்கவில்லையா? இனிப், பெண்பாலார்க்கு ஆடை அணிகலன்கள் முதலான ஒப்பனைகள் அவரவர் அளவுக்குத் தக்கபடி சிறிது சிறிது வேண்டுவதேயாயினுங், கல்வியில்லாதவர்களுக்கு இவ் வாடையணிகலன்களால் உண்டாகும் அழகு அழகாக மாட்டாதாகும் என்னுங் கருத்தோடு, குஞ்சி அழகும் கொடுத்தானைக் கோட்டழகும் மஞ்சள் அழகும் அழகல்ல-நெஞ்சத்து நல்லம்யா மென்னும் நடுவு நிலைமையாற் கல்வி யழகே யழகு என்று நாலடியாரென்னுஞ் சிறந்த பழமையான உயர்ந்த நூலிற் கூறியிருப்பதை உணர்பவர்கள் பெண்மக்களுக்குக் கல்வி வேண்டாமென்று சொல்லத் துணிவரோ கூறுமின் தாய்மார்களே! இனி, இங்ஙனமெல்லாம் ஆழ நினைந்து பார்க்குங்கால் ஆண்மக்களுக்குக் கல்வி இன்றியமையாததாய் இருத்தல் போலவே, அவர்போல் மக்கட் பிறப்பினரான பெண்மக்கட்குங் கல்வியானது இன்றியமையாத அழிவில்லா செல்வமாகு மென்பது நன்கு பெறப்படுகின்றது. இனி, அழியாச் செல்வமாகிய கல்வியைப் பெற்றுக் கொள்வதற்கு நாம் மிகவும் முயன்று வருவதோடு, உயர்ந்த நூல்களைக் கற்று வரும்போதே அந்நூல்களிற் சொல்லப்பட்ட நல்லொழுக்கங்களிலும் நாம் பழகி வருதல் வேண்டும். கற்றறிவார் கண்டது அடக்கம் அடங்காதார், பொச்சாந்துந் தம்மைப் புகழ்ந்துரைப்பர் என்றபடி நாம் சிறிதும் பெருமை பாராட்டாமலுஞ், செருக்கு அடையாமலும், பணிந்த சொல்லும் பணிந்த செயலும் உடையமாய், எல்லா உயிர்களிடத்தும் அன்பும் இரக்கமுங் காட்டி, நல்லொழுக்கத்தில் வழுவாது எல்லாம் வல்ல முழுமுதற் கடவுளான சிவபெருமானை மனமொழி மெய்களால் நினைந்தும் வாழ்த்தியும் வணங்கியும் உலக வாழ்க்கையை இனிது நடாத்தி நாமும் பயன்பெற்றுப் பிற உயிர்களையும் பயன்பெறச் செய்து வருதலே நாம் பெற்ற அழியாச் செல்வமாகிய கல்வியைப் பயன்படுத்தும் முறையாகும். இன்னும், யாவர்க்குமாம் இறைவற்கொரு பச்சிலை யாவர்க்குமாம் பசுவுக்கொரு வாயுறை யாவர்க்குமாம் உண்ணும்போது ஒருகைப்பிடி யாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரைதானே என்னுந் திருமூலநாயனார் திருமொழியை இடையறாது நம் நினைவில் வைத்து, நம்முள் அவரவர் செயலுக்குத் தக்கபடி இறைவனை வணங்கியும், ஆவினைப் பாதுகாத்தும், ஈகை அறங்களைச் செய்தும், எல்லாரிடத்தும் இன்சொற் பேசியும் ஒழுகுதலே அழியாச் செல்வமாகிய கல்வியாலாய பயனாகும். 8. கல்வியுங் கைத்தொழிலும் இவ்வுலகத்திலுள்ள எல்லா மக்களுந், தம்முயிரையும் உடம்பையும் பாதுகாத்து இனிது வாழ்வதற்கு இன்றியமையாத கருவிகள் இரண்டு. அவை, கல்வியுங் கைத்தொழிலுமாகும். பெரும்பாலும் உலகத்தின்கண் நடக்கும் எல்லா முயற்சிகட்குங், கல்வியானது முதன்மையாக வேண்டப்பட்டு உடம்பைப் பாதுகாப்பதே யாயினுஞ், சிறப்பாக நோக்குங்கால் கல்வி உயிரைப் பாதுகாத்து வளர்ப்பதற்கே கருவியா யிருக்கின்றது. கைத்தொழிலோ எவ்வளவு நுட்பமாகச் செய்யப்படினும் அஃது உடம்பைப் பாதுகாக்கு முகத்தால், உயிருக்குஞ் சிறிது பயன் படுமேயல்லது, அது கல்விபோல் உயிருக்கு நேரே பயன்படுவதன்றாம். ஆகவே, கல்வி ஒன்றுமே உயிர்க்கு நேரே பயன்படுவதா மென்பதுங், கைத்தொழிலோ உடம்பிற்கு மட்டும் நேரே பயன் படுவதாமென்பதும் அறிதல் வேண்டும். எத்தொழிலைச் செய்வதாயிருந்தாலும், அதற்கு அறிவு வேண்டியிருக்கிறது. அறிவில்லாமல் எவரும் எதனையுஞ் செய்தலியலாது. அறிவுடையவன் தானெடுத்த ஒரு தொழிலைச் செவ்வையாக செய்து முடித்தலும், அறிவில்லாதவன் தான் துவங்கிய தொன்றை ஒழுங்காகச் செய்யமாட்டாமற் பிழைபட்டு வருந்துதலும் நாம் நாடோறுங் காண்கின்றோமல்லவா? அறிவில்லான் பிழைபட்டுச் செய்யமாட்டாத ஒரு தொழிலை அறிவுடையான் திருத்தமாக்கி விரைவிற் செய்து முடிப்பதனைக் கண்டு நாம் எவ்வளவு மகிழ்கின்றோம்! அப்போதவன் அறிவின்றிறத்தைக் கண்டு எவ்வளவு வியப்படைகின்றோம்! அறிவின் இன்றியமையாமையை எவ்வளவு மிகுதியாய் உணர்கின்றோம்! இத்துணைச் சிறந்த அறிவை எவரும் இயற்கையாகவே பெற்றுக் கொள்ள இயலாது. ஏனென்றால், எல்லா உயிர்களினறி வையும் அறியாமை என்னும் பேரிருள் மறைத்துக் கொண்டிருக் கிறது. இருளைப் போக்குதற்கு ஒளியினுதவி கட்டாயமாக வேண்டப்படுதல் போல், நமதறிவை மறைக்கும் அறியாமை இருளைப் போக்குதற்குங் கல்வியாகிய விளக்கும் இன்றியமை யாது வேண்டப்படுகின்றது. கல்வியில்லாதாரிற் சிலரும் அறிவுடையோராக இருக்கக் காண்கின்றோமே யென்றால், அவர் அறிவுடையார் செய்யுஞ் சில அறிவுச் செயல்களைப் பார்த்தும் பழகியுஞ் சிறிது அறிவுடையராகக் காணப்படினும், அவர் போலியாகப் பெற்ற அச்சிற்றறிவை மேன்மேற் பெருகச் செய்வதற்குக் கல்வியில்லாமையால் அவர் அறிவு பயனின்றாய்க் கழியும். இது பற்றியன்றோ தெய்வப் புலமைத் திருவள்ளுவ நாயனார், கல்லாதவன் ஒட்பங் கழியநன் றாயினுங் கொள்ளா ரறிவுடை யார் என்றருளிச் செய்தனர். மேலும் மக்களுக்கும் விலங்கினங் களுக்கும் எவ்வளவு வேறுபாடு இருக்கின்றதோ, அவ்வளவு வேறுபாடு கல்வியறிவு உடையவர்கட்கும், அஃதில்லாதவர் கட்கும் உண்டென்பதும் விளங்கத் திருவள்ளுவ நாயனார், விலங்கொடு மக்க ளனையர் இலங்குநூல் கற்றாரோ டேனை யவர் என்றருளிச் செய்திருக்கின்றனர். ஆகையால் கல்வியறிவு இல்லாதவர் அதிற் சிறந்து விளங்குவதும், அறிவிற் சிறந்த தொழில்களைச் செய்து முடிப்பதும் இயலா. உடற் பாதுகாப்பின் பொருட்டு எத்தொழிலைச் செய்தாலும், கல்வியின்றி அதனைச் செய்தலாகாது. நம் நாட்டவர்களோ வயிறு வளர்ப்பதற்குச் சோறு கிடைத்தால் போதுமென்றும், இப்பிறப்பில் அடைய வேண்டிய இன்பங்களைப் பெறுதற்கு ஏராளமான பொருளைத் தொகுத்துக் கொண்டால் போதுமென்றுஞ் சொல்லிக் கல்வி கல்லாமல் அறியாமையிலேயே தமது காலத்தைக் கழித்து மாண்டு போகின்றனர்! எல்லா அருளும் இரக்கமும் உடைய இறைவன் நமக்கு இந்தப் பிறவியைக் கொடுத்து வெறுஞ் சோறு தின்பதற்கும், பொருள் சேர்ப்பதற்குந்தானா? மற்றுற இந்த உடம்பைப் பாதுகாக்கு முகத்தால் அறிவை வளர்த்து அறியாமையைத் தொலைத்து அவனது பேரின்பத்தைப் பெறுதற்கன்றோ? இம்மையின்பங்களைச் செவ்வையாயடைந்து மகிழ்ந் திருத்தற்குங் கல்வியறிவு கட்டாயம் வேண்டப்படுவதாகும். உயர்ந்த கல்வியறிவில்லாதவன் எவ்வளவு பொருளைச் சேர்த்து வைத்தாலும் எவ்வளவு உணவுப் பண்டங்களைத் தொகுத்துக் கொண்டாலும் அவற்றை நுட்பமாகத் துய்த்து மகிழும் வழியறியாமையால் துன்பத்திலேயே கிடந்துழன்று மாய்ந்து போவன். ஆகவே, இம்மையின்பத்தைப் பெற வேண்டுவார்க்குங் கல்வியறிவு முதன்மையாகுமென்பதை எல்லாருங் கருத்திற் பதித்தல் வேண்டும். ஆகவே, கைத்தொழிலையே பெரிதாக எண்ணி அதில் புகுந்தவர்களுங் கல்வியறிவைப் பெறுதற்கு இடையறாது முயலல் வேண்டும். ஐரோப்பா முதலான அயல்நாடுகளிலுள்ள மேன் மக்களோ கல்வியறிவில்லாமல் எத்தகைய தொழிலையுஞ் செய்ய மாட்டார்கள். அவர்களில் எந்தத் தொழிலைச் செய்கின்றவர்களுங் கல்வியறிவிற் சிறந்தவராயே காணப்படு கின்றனர். அதனால், அவர்கள் நம்மனோர்க்கு நீண்டகாலம் பிடிக்கும் ஒரு கைத்தொழிலை மிகச் சுருங்கிய காலத்தில் சுருங்கிய செலவில் நேர்த்தியாகவுந் திறமையாகவுஞ் செய்து முடிக்கின்றனர். கல்வியறிவில்லா நம்மனோர் தம்மை வருத்தியும், வாயற்ற மாடு குதிரைகளை வருத்தியுஞ் செய்யும் ஒரு கைத்தொழிலை, ஐரோப்பிய நன்மக்கள் தமக்குள்ள கல்வியறிவால் அருமையான பொறிகளை (இயந்திரங்களை) அமைத்து, அவற்றினுதவியால் தமக்கும், பிற உயிர்க்குந் துன்பமின்றி இனிது முடிக்கின்றனர். இன்னுமிவர்கள் தங்களுக்குள்ள கல்வியறிவின் மேன்மையால் நாளுக்குநாள் எல்லா முயற்சியிலும் பிறைபோல் வளர்ந்தோங்கி வருதலையும், அஃதில்லா நம்மனோர் அம்முயற்சிகளில் குறைமதிபோல் தேய்ந்து போதலையும் அறியாதார் யார்? ஆகையால், எத்தகைய முயற்சிகளிற் புகுவோரும் முதலிற் கல்வியறிவைப் பெறுதலிற் கருத்தூன்றக் கடவராக. இனிக், கல்வியறிவின் உதவி கொண்டு செய்யப்படும் எல்லாக் கைத்தொழில் முயற்சிகளும் உழவு, நெசவு, வாணிகம் என்னும் மூன்று பகுதியிலே அடங்கும். அவற்றுள், உழவுத் தொழில் உடம்பைப் பாதுகாத்தற்கு முதன்மையான உணவுப் பொருளைத் தருவதொன்றாகையால், அது மற்றையிரண்டிலுஞ் சிறந்ததென்று ஆன்றோரால் உயர்த்து வைக்கப்படுவதாயிற்று. இவ்வுண்மை, சுழன்றும் ஏர்ப்பின்ன துலகம் அதனால் உழந்தும் உழவே தலை என்று திருவள்ளுவ நாயனாரும், ஆற்றங் கரையின் மரமும் அரசறிய வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே-ஏற்றம் உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர் பழுதுண்டு வேறோர் பணிக்கு என்று ஔவையாரும் அருளிச் செய்த மெய்ம்மொழிகளால் அறிந்து கொள்ளப்படும். இவ்வளவு சிறந்த தொழிலை நம் நாட்டவர்கள் சிறிதுந் தாழ்வாக நினையாமல் அதனைப் பல வகையாலும் பயன் மிகத் தரும்படி மேன்மேற் பெருகச் செய்தல் வேண்டும். அமெரிக்கா, ஐரோப்பா முதலான நாடுகளிலுள்ள மேலோர்கள் நிலத்தை வளப்படுத்துதற்குரிய புதிய புதிய முறைகளைக் கையாண்டு காலத்திற்கேற்ற பயிர்களை விளைவித்து ஏராளமான கூலங்களையும், மற்றைப் பண்டங் களையும், உணவுப் பொருள்களையும் பெறுகின்றார்கள். மழை பெய்ய வேண்டும் காலத்து மழை பெய்யாவிட்டாலும், அதனால் அவர்கள் கேடு உறாமல் மின் ஆற்றலின் உதவி யினாலும், வேறு சில முறைகளினாலும் பயிர் பச்சைகளை விளைவித்துக் கொள்ளுகின்றார்கள். நம் நாட்டவர்களோ என்றால் ஒரு மழை தவறினாலும், பயிர் பச்சைகளை வளர்க்கும் வழி தெரியாது கொடும் பஞ்சத்திற்குள்ளாகி மிகவுந் துன்புறுகின்றார்கள். மேலும் பலப்பல பயிர்களின் தன்மைகட்கிசையப் பல திறப்பட்ட எருக்களை அவர்கள் திறமையாகச் சேர்ப்பது போல, நம்மவர்க்குச் சேர்க்கத் தெரியாது. பயிர்கட்குத் தக்கவாறு செவ்வையான எருச் சேர்க்க நம்மவர்களுங் கற்றுக் கொள்வார்களாயின் இப்போதடையும் ஊதியத்தினும் பதின் மடங்கு மிகுதியான ஊதியத்தைப் பெறுவார்களென்பதில் எட்டுணையும் ஐயமின்று. இங்ஙனமே பயிர்த் தொழிலில் அறியற்பாலனவாய் உள்ள நுட்பங்கள் எண்ணிறந்தன. இவையெல்லாங் கல்வியறிவின்றி வரமாட்டா. ஆகையால், இவற்றைக் கல்வியறிவால் ஆராய்ந் தறிந்து உழவுத் தொழிலைச் சிறக்க செய்வார்களாயின் நம்மவர்களும் நம் நாடும் மற்ற எல்லாரையும், எல்லா நாடுகளையும்விட மிகச் சிறந்து விளங்குமென்பது திண்ணம். இனி, உழவுத்தொழிற்கு அடுத்த நிலையில் அகத்தியமாகச் செயற்பாலது நெய்தற்றொழிலேயாகும். நாகரிக வாழ்க்கை யுள்ள எத்திறத்தவர்களுந் தமதுடம்பை மறைத்தற்கு ஆடைகள் வேண்டி நிற்கின்றனரல்லரோ? ஆடையில்லா மனிதன் அரை மனிதன் என்ற பழமொழிப்படி மேலே துணியில்லாதவர் விலங்குகளினுந் தாழ்ந்தவராகக் கருதப்படுவர். விலங்கினங் கட்காயினும், மேற்போர்வை போன்ற மயிர்க் கற்றைகளுங் குறிகளை மறைத்தற் கேற்ற வாற்புறங்களுங் கடவுளால் அமைத்துக் கொடுக்கப் பட்டிருக்கின்றன. மக்களோ பகுத்தறிவு உடையராயிருத்தலால் அவர்கட்கு அவற்றைக் கொடுத்திலர். அவர்கள் தமதறிவு கொண்டு ஆடை நெய்து உடுக்க வேண்டியவர்களா யிருக்கின்றார்கள். உடம்பைப் பாதுகாத்தற்கு இன்றியமையாச் சிறப்பினதான உணவைத் தருதல் பற்றி உழவுத் தொழில் எல்லாத் தொழிலும் மேலானதென்று சொல்லப்படினுந் தீவினை ஒரு சிறிதுமில்லாத் தொழில் எதுவென்று ஆராயுமிடத்து, அது நெய்தற்றொழி லாகவேயிருத்தலால் அவ்வகையில் அஃது உழவுத் தொழிலிலும் மேலானதென்றே கொள்ளப்படும். இதுபற்றியன்றோ, தெய்வப் புலமைத் திருவள்ளுவ நாயனார் உழவுத் தொழிலையே சிறப்பித்துக் கூறினாரானுந், தாம் நெய்தற்றொழிலையே செய்து கொண்டு உயிர் வாழ்ந்தனர். உழவு செய்யுங்காற் சிற்றுயிர்கள் சில பல மாளுதலின், அதிற் சிறிது தீவினை உண்டென்றும், நெய்தற்றொழிலில் ஓருயிர்க்குந் தீங்கின்மையின் அதிற் சிறிதுந் தீவினையில்லை யென்றும் அறிதல் வேண்டும். இத்துணைச் சிறந்த நெய்தற்தொழிலை அயல் நாட்டவர்கள் வியப்பான பல பொறிகளமைத்து நிரம்பத் திறமாக நடத்தி அளவிறந்த ஊதியத்தை எய்த, நம் நாட்டவர் களோ, கல்வி யறிவின்மையால் இதில் மிகவும் பிற்பட்ட நிலையினையடைந்து ஏழைகளாயிருக்கின்றார்கள். இனியா யினும், அவர்கள் அங்ஙனங் கல்வியை இகழ்ந்திராது, அதனைத் தாமுங் கற்றுத் தம் மக்கட்கும் கற்பித்து நெய்தற்றொழிலைச் செவ்வையாய் நடத்தி வாழ்வாராக! இனி, உழவுத் தொழிலானும், நெய்தற்றொழிலானும் உண்டாக்கிய பொருள்களை ஒன்றற்கொன்று தொலைவாக வுள்ள பற்பல நாடுகளிலும் உள்ள மக்கட்குப் பயன்படும்படி சேர்ப்பித்தற்கு வாணிகமானது மிகவும் உதவி செய்வதாகும். இத்தொழில் நடைபெறாதானால் எல்லாரும் எல்லாப் பொருள்களையும் பெற்று இன்புற்று வா ழ்தல் முடியாது. எந்தெந்த நாட்டில் எந்தெந்தப் பொருள்கள் நயமாய்க் கிடைக்குமென்பதை ஆராய்ந்தறிந்து, அவற்றை ஓரிடத்திற் றொகுத்துப் பலர்க்கும் பயன்படுத்தித் தாமும் பயனடைதற்குக் கல்வியறிவு கட்டாயம் வேண்டப்படும். வாணிகம் நடாத்து வார்க்குக் கல்வியறிவு அகத்தியமாய் வேண்டப்படுமென்பதை உணர்ந்த அயல் நாட்டவர்கள் கல்வியறிவிற் சிறந்தவராயிருக் கின்றார்கள். நம் நாட்டில் வாணிகம் நடாத்துகின்றவர்களோ எழுதப் படிக்கச் சிறிது தெரிந்தாற் போதுமென்று மனப்பால் குடித்துக் கல்வியில்லாதவர்களாய்க் காலங் கழிக்கின்றனர். இவர்களில் எவ்வளவு பணம் படைத்தவர்களாயிருந்தாலும், இவர்களைக் கல்வியறிவிற் சிறந்த அயல்நாட்டு வாணிகர்கள் ஒரு பொருட்படுத்துவதேயில்லை. இங்ஙனம் தாம் கல்வியறிவுடைய பிறரால் இகழப்படுதல் உணர்ந்தாயினும், இனிமேல், தாமும், தம் மக்களுந் தம்மினத் தவருங் கல்வியில் மேம்பட்டு விளங்க முயன்று அதனால் வாணிக வாழ்க்கையை எல்லாரும் புகழும்படி நடாத்திச் சிறப்பெய்துவாராக! 9. பகுத்துணர்வும் மாதரும் மாதர்களுடைய நன்மையையும் முன்னேற்றத்தையும் நாடி, அவர்களுக்கு முதன்மையாக வேண்டுஞ் சில சிறந்த பொருள் களை இங்கே சிறிது விளக்கிச் சொல்வாம். நமது தமிழ்நாட்டைத் தவிர, மற்ற நாடுகளிலிருக்கும் பெண்மணிகள் கல்வியிலும் கடவுள் வணக்கத்திலும் நாகரிக ஒழுக்கத்திலும் நாளுக்கு நாட் பிறைபோல் வளர்ந்து மிகவும் இனிதாக உயிர் வாழ்கின்றார்கள். நமது தமிழ்நாட்டு மாதர்களோ சிறந்த கல்வி உடையவர்களும் அல்லர்; உண்மையான கடவுளை வணங்கத் தெரிந்தவர்களும் அல்லர்; வேறு எவ்வகையான நாகரிகத்தில் உயர்ந்தவர்களும் அல்லர். உண்ண உணவும், உடுக்கத் துணியும், இருக்க இடமும் கிடைத்தாற்போதும் என்றும், இவைகளுக்கு வறுமைப்படாமல் வாழ்வதே இன்ப வாழ்க்கை என்றும் நினைத்து, உணவு, உடை, இருப்பிடம் என்னும் இவைகளைத் தேடிக்கொள்வதிலும், தேடிய இவற்றை உண்டு உடுத்து உறைவிடமாக்கி உறங்கிக் கழிவதிலுந் தம் வாழ்நாளைக் கடத்தி வருகின்றார்கள். உயர்ந்த அறிவாவது உயர்ந்த நோக்கமாவது நம் பெண் மக்களுக்குச் சிறிதும் இல்லை. அல்லது உயர்ந்த அறிவையும் நோக்கத்தையும் பெறல் வேண்டுமென்னும் விருப்பமாவது இவர்களுக்கு இருக்கின்றதோவென்றால், அது தானும் இல்லை. உண்டு உடுத்து உறங்கி வாழ்நாட் கழிப்பதை விட மக்களால் அடையத்தக்க வேறு சிறந்த பொருள் இல்லையென்றே பெரும்பாலார் நினைக்கின்றார்கள். அப்படி நினைத்தால் மக்களுக்கும் மற்ற உயிர்களுக்கும் வேற்றுமை யாது? மக்களினுந் தாழ்ந்த ஆடு மாடு குதிரை முதல் ஈ எறும்பு புழு ஈறான எல்லாச் சிற்றுயிர்களுங்கூடப் பசியெடுத்த போது தமக்கு எளிதிலே கிடைக்கும் புல் இலை தழை கிழங்கு கனி தேன் முதலான இரைகளைத் தேடி உட்கொண்டும், மலையருவி ஆறு ஏரிகுளங் கூவல் முதலியவற்றின் நீரைப் பருகியும், பசி தீர்ந்தபின் மரங்களின் அடியிலோ, செடிகளின் நடுவிலோ, மலைப் பிளவுகளின் இடையிலோ கிடந்துங் கவலையின்றி உறங்கிக் காலங் கழிக்கின்றன. மக்களுக்காவது உடுக்க ஆடை வேண்டும். இச்சிற்றுயிர் களுக்கோ ஆடையும் வேண்டுவதில்லை; மழையில் நனை யாமலும் பனியில் குளிராமலும் வெயிலில் வெதும்பாமலும் அவ்வுயிர்களைப் பாதுகாக்க தடிப்பான தோலோடு அடர்த்தியான மயிரையுங் கம்பளிப் போர்வைபோல் அவைகளுக்கு இறைவன் கொடுத்திருக்கின்றான். வெப்பம் மிகுந்த நமது தமிழ்நாட்டிலுள்ள ஆடு மாடுகளுக்குக் குளிரின் துன்பம் மிகுதியாய் இல்லாமையால், அவைகளின் உடம்பின்மேல் அடர்ந்து நீண்ட மயிர்கள் இல்லை. ஆனால், வடக்கே இமயமலையிலும், அம்மலைச் சாரலில் உள்ள இடங்களிலும் போய்ப் பார்த்தால், அங்குள்ள ஆடு மாடுகளுக்கு அடர்ந்து நீண்ட மயிர்களிருத்தலைக் காணலாம். ஏனென்றால், அம்மலை நாடுகளில் தாங்கமுடியாத பனியும் குளிரும் மிகுந்திருக்கின்றன; அவ்வளவு குளிரிலும் அவ்விலங்குகள் வெற்றுடம்பு உள்ளன வாயிருந்தால். அவை உடனே விறைத்து மாண்டுபோகும். ஆதலால், அவ்வாடு மாடுகள் அங்குள்ள பனியிலுங் குளிரிலும் மாண்டு போகாமல் அவற்றைப் பாதுகாப்பதற்காகவே எல்லா இரக்கமும் உள்ள கடவுள் அவைகளின் உடம்பின்மேல் நீண்ட அடர்ந்த மயிரை வளரச் செய்திருக்கின்றான். ஆகவே, உணவின் பொருட்டும் உடையின் பொருட்டும் இருப்பிடத்தின் பொருட்டும் மக்களாகிய நாம் ஓயாமல் அடையுங் கவலையுந் துன்பமும் நம்மிற் தாழ்ந்த சிற்றுயிர் களுக்குச் சிறிதும் இல்லை. வேண்டும்போது இரைதேடித் தின்றும், உறக்கம் வந்தபோது உறங்கியும், ஆணும் பெண்ணு மாய்க் கூடித் தம் இனங்களைப் பெருக்கியும் அவைகள் கவலையின்றிக் காலங் கழிக்கின்றன. இப்படிப்பட்ட சிற்றுயிர்களின் வாழ்க்கையையும், உணவுக்கும் உடுப்புக்கும் இருப்பிடத்திற்கும் அல்லும் பகலுமாய்ப் பாடுபட்டு, மனைவியாற் கணவனுங், கணவனால் மனைவியும், பெற்றோராற் பிள்ளைகளும், பிள்ளைகளாற் பெற்றோர்களும், ஒரு குடும்பத்தாரால் அவர்களின் சுற்றத்தாரும், ஒரு சுற்றத்தாரால் அவர்களின் குடும்பத்தாரும்,ஓர் ஊராரால் அவர் தம் அரசரும், ஓர் அரசரால் அவர் தம் ஊராரும் ஆக எல்லாருமாய்ப் பலவகைத் துன்பங்களுக்கு ஆளாகி நோயிலும் கவலையிலும் இடையறாது உழன்று வருந்தி வரும் மக்களாகிய நமது வாழ்க்கையையும் வைத்து ஒப்பிட்டுப் பார்த்தால் நமது துன்ப வாழ்க்கையைவிடச் சிற்றுயிர்களின் இன்ப வாழ்க்கை எத்தனையோ மடங்கு சிறந்ததாய்க் காணப்படுகின்றதன்றோ? நம்மைப் படைத்த உண்மையான கடவுளை நினையாமல் நம் போன்ற மக்களைத் தெய்வமாக வணங்கியுந் தம்மையே தாம் பெரியராக நினைத்தும் வாழ்நாள் முதிரா முன்னரே கவலையாலும் நோயாலுங் கூற்றுவன் வாய்ப்பட்டு மடியும் நம் மக்கட் பிறவியைவிட, இறைவனது பாதுகாப்பில் அடங்கிக் கவலையின்றி உயிர் வாழும் விலங்கினங்களின் வாழ்க்கை சிறந்ததாயிருக்கின்றதன்றோ? அங்ஙனம் இருக்க, உண்ணல் உடுத்தல் உறங்கல் இன்புறுதல் என்னும் இவைகளாலேயே மக்கள் வாழ்க்கை யானது சிறந்ததாயிருக்கின்றதென நினைப்போமாயின், அஃது எவ்வளவு பேதைமையாகக் காணப்படுகின்றது? அப்படியானால், எல்லாப் பிறவிகளையும்விட மக்கட் பிறவியே சிறந்ததென்று அறிவுடையோர்களும் அவர் செய்து வைத்த நூல்களுஞ் சொல்வது ஏன் என்றால், எந்த வகையில் மக்கட் பிறவியானது மற்றச் சிற்றுயிர்களின் பிறவியைவிட அங்ஙனஞ் சிறந்ததாயிருக்கின்றது என்பதை நாம் நன்கு ஆராய்ந்து பார்த்துத் தெளிதல் வேண்டும். மக்களாகிய நாம் பகுத்தறிவு உடையவர்களாயிருக்க மற்றச் சிற்றுயிர்களோ அத்தகைய பகுத்துணர்வு உடையனவாய்க் காணப்படவில்லை. அதனாலே தான் நமது பிறவியானது மற்ற விலங்கின் பிறப்பை விடச் சிறந்ததாகுமென்று அறிகின்றோம். விலங்குகளுக்கு இது நல்லது, இது தீயது என்று பகுத்துணர்தல் இயலாது. அவை வழக்கமாய்த் தின்னுந் தீனியையே உட்கொள்ளும்; பெரும் புதர்களிலும் மலைக் குகைகளிலும், மர நிழல்களிலுங் கிடந்தபடியே நாளைக் கழிக்கும்; இவற்றிற்கு மேல் அவைகள் ஒன்றையும் அறிய மாட்டா; மேல்மேல் இன்பத்தைப் பெருக்கும் வழி வகைகளும் அவை தெரிந்து கொள்ள முடியாது. பிற உயிர்களுக்கு நன்மையாவது இது, தீமையாவது இது என்றும் அவை அறிவதில்லை. இந்த உலகத்தில் நாம் ஏன் படைக்கப்பட்டிருக்கிறோம்? இந்த உடம்பு ஏன் நிலையாயிருப்பதில்லை? சிறிது காலத்தில் இந்த உடம்பு அழிந்து போக உயிர் எங்கே போகின்றது? இந்த உடம்பின் உறவால் வந்த பெற்றோரும் மனைவி மக்களும் உடன் பிறந்தாரும் நேசரும் கற்றத்தாரும் சூழ்ந்து கொண்டிருக்கவும் இந்த உயிர் திடீரென்று இவர்கள் எல்லாரையும் விட்டு எங்கே போகின்றது? அப்படிப் போகும் உயிரை இவர்கள் ஒருவருந் தடுக்க மாட்டாதவர்களாய் அலறி வீழ்ந்து அழுவதேன்? எவராலுந் தடுக்க முடியாத இந்தப் பிறப்பு இறப்புகளை வகுத்தவன் யார்? இவற்றை வகுத்தவனது நோக்கம் யாது? பெருந்துன்பத்துக்கு இடமான இப்பிறப்பு இறப்புகளை நீக்கும் வழி யாது? என்று இங்ஙனமெல்லாம் ஆராய்ந்து பார்க்கக்கூடிய உணர்ச்சியும், அவ்வுணர்ச்சியால் அடையத்தக்க பெரும்பயனும் விலங்குகளுக்குச் சிறிதும் இல்லை. மக்களாகிய நாமே இவைகளையெல்லாம் ஆராய்ந்து பார்த்து, அவ்வாராய்ச்சி யால் வரும் பயனை அடையத்தக்க உயர்ந்த நிலையில் இருக்கின்றோம். கிடைத்தற்கு அரிய இவ்வுயர்ந்த நிலையில் இருந்தும் இவ்வுண்மைகளை ஆராய்ந்து பாராமல், விலங்குகளைப்போல உண்பதிலும் உறங்குவதிலுங் காலங்கழித்து, வகை வகையான உடைகளை உடுப்பதும், பளபளப்பான நகைகளைப் பூண்பதும், மினுமினுப்பான வண்டிகளிற் செல்வதும், நாளுக்கு நாள் வளரும் புதுமைகளைக் காண்பதும், ஒன்றுக்குமேல் ஒன்று உயர்ந்த மணப்பண்டங்களை மோப்பதுங், கற்கக் கற்க இனிக்குங் கதைகளைக் கற்பதும் ஆகிய இவைகளே மக்கட் பிறவியினால் அடையத்தக்க பெரும்பயன்கள் என்று நம்மவர் நினைப்பார் களாயின், ஐயோ? அவர்கள் விலங்கினங்களினுங் கடைப் பட்டவர்கள் ஆவார்கள் அல்லரோ? ஆதலால், நமக்கு அருமையாய்க் கிடைத்த பகுத் துணர்ச்சியை நாம் பலவகையான உயர்ந்த வழிகளிலும் வளரச் செய்து அதனால் அழியாப் பெரும் பயனை அடைதல் வேண்டும். இதுவரையிலுமே, பகுத்துணர்ச்சியால் நாம் அடைந்த பயன்களும் அடைந்து வரும் பயன்களும் அளவிடப்படா. நாவுக்கு இனிமையான பண்டங்களை நாளுக்கு நாட் புதிய புதியவாகச் செய்யக் கற்று வருகின்றோம்; கண்ணுக்கு அழகான உடுப்புகளையும் நகைகளையும் வகை வகையாகச் செய்வித்து அணிந்து வருகின்றோம். பார்க்கப் பார்க்கக் கவர்ச்சி தரும் ஓவியங்களை (சித்திரப் படங்களை) எழுதுவித்தும், பாவை களைச் செய்வித்தும் அவற்றை நம்முடைய இல்லங்களில் வைத்துப் பார்த்து மகிழ்ந்து வருகின்றோம்; மேன் மாடங்களுள்ள மாளிகை வீடுகளையும், அவற்றைச் சூழப் பசிய தோட்டங்களையும் அமைப்பித்து அவ்வீடுகளில் களிப்புடன் குடியிருந்தும் அத்தோட்டங்களில் மனக்கிளர்ச்சியோடு உலவியும் வருகின்றோம்; புல்லாங்குழல், யாழ், முழவு முதலான இசைக் கருவிகளின் இனிய ஒலிகளையும், அவற்றோடு சேர்ந்து பாடுவார்தம் இசைப் பாட்டுகளையுங் கேட்டுப் பெருங்களிப்பு அடைந்து வருகின்றோம்; நறுமணங் கமழும் பலவகை மலர்களைச் சூடியும், அம்மலர்களிலிருந்துஞ், சந்தனக்கட்டை அகிற்கட்டை முதலியவற்றிலிருந்தும் பெற்ற நெய்யையுங் குழம்பையும் பூசியும் இன்புறுகின்றோம்; மிக மெல்லிய பஞ்சுகளாலும் பறவைகளின் தூவிகளாலும் அமைக்கப்பட்ட மெத்தைகளை வழுவழுப்பாகச் செய்வித்த மருப்புக் கட்டில்களில் இடுவித்து, அவற்றின் மேற்படுத்து இனிது உறங்குகின்றோம். இன்னும்,ஏவற்காரரால் வீசப்படும் வெட்டி வேர் விசிறிகளாலுந் தாமே சுழலும் விசிறிப் பொறிகளாலும் வெயிற்கால வியர்வையினையும் புழுக்கத்தினையும் மாற்றி மகிழ்ச்சியடைகின்றோம். திறமைமிக்க புலவர்களால் எழுதப்படும் புதியபுதிய கதைகளைப் பயின்று உள்ளங் களிக்கின்றோம். இங்ஙனமாக, நமக்குள்ள பகுத்துணர்ச்சியின் உதவியைக் கொண்டு நாளுக்கு நாள் நாம் அடைந்து வரும் இன்பங்களை முற்ற எடுத்து முடித்து உரைக்கப் புகுந்தால் அவற்றிற்கு இவ் ஏடு இடங் கொள்ளாது. மேலும், நமக்குள்ள பகுத்துணர்ச்சியின் மிகுதிக்கு தக்கபடி நாம் மிகுந்த இன்பத்தை அடைந்து வருவதுடன் பகுத்துணர்ச் சியில் நம்மினும் எத்தனையோ மடங்கு உயர்ந்த அறிவுடையோர்களாற் புதிய புதியவாகக் கண்டுபிடிக்கப்பட்டு வரும் பொறிகளின் (இயந்திரங்களின்) உதவியால், நாம் எல்லை யில்லாத இடர்க்கடலினின்றும் விடுவித்து எடுக்கப்பட்டு, ஒவ்வொரு நாளும் புதுப்புது நலங்களை அடைந்து இனிதாக வாழ்நாளைக் கழித்து வருகின்றோம். நீராவி வண்டிகள் ஏற்படாத அறுபது எழுபது ஆண்டுகளுக்கு முந்தி நம் முன்னோர்கள் ஓர் ஊரிலிருந்து தொலைவிலுள்ள மற்றோர் ஊருக்குச் செல்ல நேர்ந்தால் அப்போது அவர்கள் எவ்வளவு துன்பப்பட்டார்கள்! அக்காலங்களிற் செவ்வையான பாட்டைகள் கிடையா. இருந்த சில பாட்டைகளோ கல்லுங்கரடும் மேடும் பள்ளமும் நிரம்பிக் கால்நடையாய்ச் செல்வார்க்கும் மாட்டு வண்டிகளிற் செல்வார்க்கும் மிகுந்த வருத்தத்தையுங் காலக்கழிவினையும் பணச்செலவினையும் உண்டாக்கின. அப்பாட்டைகள் காடுகளின் ஊடும், மலைகளின் மேலும், பாலங்கள் இல்லா ஆறுகளின் நடுவுங் கிடந்தமையால், அவற்றின் வழிச் செல்வோர்கள் புலி கரடி ஓநாய் பாம்பு முதலான கொடுவிலங்குகளாலுங் கள்வர்களாலும் அலைக்கப்பட்டுப் பொருளும் உயிரும் இழந்தும்; பொருள் இழந்து அரிதாய உயிர் தப்பியுந் துன்புற்றார்கள், வழியிடையே உள்ள ஆறுகளில் வெள்ளங்கள் வந்து விட்டால், ஓடம் விடுவார் இல்லாதபோது, அக்கரையில் வந்துசேர்ந்தார் அங்கேயும், இக்கரையிற் போய்ச் சேர்ந்தார். இங்கேயும் ஆக, வெள்ளம் வடியும் நாட்கள் வரையிற் கவலையொடு காத்திருந்தார்கள். கடலாற் சூழப்படாத நாடுகளில் இருப்பவர்களே இங்ஙனம் ஓர் ஊரிலிருந்து தொலைவிலுள்ள பிறிது ஓர் ஊர்க்குச் செல்ல இத்தனை துன்பங்களை அடைந்தார் களென்றாற், கடல் சூழ்ந்த இலங்கையில் உள்ளவர்களும், பெருங் கடல்களுக்கு அப்பால் உள்ள கடாரம் (பர்மா), சாவகம் (ஜாவா), சீனம், பாதளம் (அமெரிக்கா) முதலான நாடுகளிலிருந்த மாந்தர்களும் இப்பரத நாட்டுக்கு (இந்தியாவுக்கு) வரவும் இங்குள்ள மாந்தர்கள் அவ் அயல் நாடுகளுக்குச் செல்லவும் எவ்வளவு துன்பப்பட்டிருக்க வேண்டும்! அக் கொடிய துன்பங்களுக்கு அஞ்சியே, முற்காலத் திலிருந்த முன்னோர்களிற் பெரும்பாலார் ஓர் ஊரிலிருந்து தொலைவிலுள்ள மற்றோர் ஊருக்குச் செல்வதில்லை. முழு வறுமையாற் பசித்துன்பந் தாங்க மாட்டாதவர்களே தாம் இருந்த ஊரைவிட்டு, வேறு வளஞ்சிறந்த ஊர்களைத் தேடிச் சென்றனர். மற்றையோர் தாந்தாம் இருந்த இடங்களிலேயே தத்தமக்கு வேண்டிய உணவுப்பண்டங்களைப் பயிர் செய்து கொண்டு பெரும்பாலும் வறுமையிலேயே காலங்கழித்தனர். அக்காலத்தில், ஓர் ஊரில் உண்டாக்கப்பட்ட பண்டங்கள். பிறிதொரு சிறிய ஊர்க்குச் செல்வதில்லை. காவிரிப் பூம்பட்டினம், உறையூர், மதுரை, கரூர் முதலான பெரிய தலைநகர்கள் சிற்சிலவற்றிற்கே அயலூர்களில் ஆக்கின பண்டங்கள் விலைப் படுத்த வரும். நிரம்பப் பாடுபட்டு அப்பண்டங்களை அந்நகரங் களிற் கொண்டு போய்ச் சேர்ப்பிக்க வேண்டியிருத்தலால், வாணிகர்கள் அவைகளை மிகுந்த விலைக்கு விற்றனர். கடல் தாண்டியுள்ள நாடுகளில் ஆக்கின அரும்பண்டங்கள் கப்பல் களின் வழியாக வர வேண்டியிருந்தமை யாலும், அக்காலத்துப் பாய்கட்டிக் கப்பல்கள் கடலிலுள்ள சூழல்களுக்கும் அங்கே வீசுஞ் சூறைக் காற்றுகளுக்குந் தப்பிப் பிழைத்துச் சென்று அயல் நாடுகளிற் கிடைத்த அவ் அரும்பண்டங்களை ஏற்றிக் கொண்டு திரும்பி இங்கு வந்து சேரப் பல திங்களும் பல ஆண்டுகளும் கடந்து போனமையாலும் அவ் அரும்பண்டங்களை மிக உயர்ந்த விலைக்கு விற்பனை செய்தார்கள். அதனால் மிகச் சிறந்த செல்வர்களாய் உள்ளவர்களே அவ்வுயர்ந்த பண்டங்களை வாங்கத் தக்கவராய் இருந்தார்கள். மற்றவர்களெல்லாரும் அவைகளை வாங்குதற்கு ஏலாமல் அவற்றைப் பார்த்துப் பார்த்து ஏமாந்தனர். இவைகளேயன்றி, அக்காலத்தில் இன்னும் ஒரு பேரிடர் இருந்தது. ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் மிகவும் எட்டியிருந்த ஊர்களில் மழை பெய்ய வேண்டுங் காலத்திற் செவ்வையாக மழை பெய்யாமல் மறுத்துவிட்டால், அவ்வூர் களின் விளைபொருள்கள் விளைவு குறைந்து பஞ்சத்தை உண்டாக்கின. விளைந்த ஊர்களிலுள்ள உணவுப் பொருள் களை விளையாத ஊர்களுக்கு விரைவிற் கொண்டுபோய்ச் சேர்ப்பிக்க எளிதான வழி அக்காலத்தில் இல்லை; அதனாற் பஞ்சம் நேரிட்ட ஊர்களிலிருந்த குடிமக்கள் அங்கங்கு இருந்தபடியே கணக்கின்றி மாய்ந்தனர். ஆனால், இக்காலத்திலோ முற்கூறிய துன்பங்களெல்லாம் ஒழிந்தன. எதனாலென்றாற், பகுத்துணர்ச்சியிற் சிறந்த ஜேம் வாட் என்னும் ஒரு துரைமகன் நீராவியின் வல்லமையைக் கண்டுபிடிக்க, அவனுக்குப் பின் வந்த ஆங்கில அறிஞர் பலர் அந்நீராவியைக் கொண்டு வண்டிகளையுங் கப்பல்களையும் இடர்நேராமல் மிகு விரைவாக ஓட்டத்தக்க முறைகளைத் தெரிந்து கொண்டதனாலேயேயாம். ஆறு திங்கள் அல்லது ஓர் ஆண்டு மாட்டு வண்டியிற் சென்று சேர வேண்டும் ஊர்களை இப்போது நீராவி வண்டியில் ஏறி நாலைந்து நாட்களில் போய்ச் சேர்கின்றோம்; முன்னே ஐந்நூறு ரூபாய் ஆயிர ரூபாய் செலவழித்துக் கொண்டு போய்ச் சேரவேண்டிய இடங்களை, இப்போது நாற்பது, ஐம்பது ரூபாய்ச் செலவோடு போய்ச் சேர்கின்றோம். முன்னே வழியின் இடக்காலும், கொடிய விலங்குகளாலும், தீய கள்வர்களாலும் நேர்ந்த இடுக்கண்களெல்லாம் இப்போது இல்லையாயின. பெருங்கடல்களைத் தாண்டிச் செல்ல வேண்டிய நாடுகளை யெல்லாம் நீராவிக் கப்பல்களின் வழியாய்க் குறித்த காலத்திற் சுருங்கிய செலவில் இனிதாய்ப் போய்ச் சேர்கின்றோம். அந்நாடுகளிலுள்ள அரும் பண்டங்களை யெல்லாம் நாமிருக்கும் நாடுகளுக்கும் நம் நாட்டிலுள்ள விளைபொருள்களை அந்நாடுகளுக்குமாக ஏற்றுமதி இறக்குமதி செய்து, குறைந்த விலைக்கு அவைகளைக் கொண்டுங் கொடுத்தும் வருகின்றோம். பிற நாடுகளிற் புதியன புதியனவாக ஆக்கப்பட்டு வரும் நேர்த்தியான அரும் பண்டங்களைச் செல்வர்களேயன்றி, ஏழை மக்களும் வாங்கத் தக்கபடி அவைகள் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றன. அது மட்டுமோ! இலங்கையில் உள்ளவர்கள் இந்தியாவில் இருப்பவர் களோடும், இந்தியாவில் உள்ளவர்கள் இலங்கை யிலிருப்பவர்களோடும், ஒரு வீட்டுக்குள் இருப்பவர்களைப் போல் பேசிக்கொள்வதற்கு வாய்த்திருக்கும் வியப்பான வசதியை எண்ணிப் பாருங்கள்! இஃது எதனால் வந்தது? மின் வடிவின் இயக்கத்தையும் அதனைப் பயன்படுத்தும் முறைகளையும் ஆங்கில அறிஞர்கள் தமது பகுத்துணர்ச்சியின் நுட்பத்தாற் கண்டுபிடித்தமையால் அன்றோ? இலங்கையில் இருப்பவர்கள் இந்தியாவிலிருக்குந் தம் நண்பர்கட்குச் செய்திகள் தெரிவிக்க வேண்டுமானாலும் இந்தியாவிலிருப்பவர்கள் இலங்கையில் இருக்குந் தம் நண்பர்கட்குங் செய்திகள் தெரிவிக்க வேண்டுமானாலும் அவர்கள் அவற்றை ஒரு கடிதத் துண்டில் எழுதி மின்கம்பிச் சாலைக்கு விடுத்து, அதற்குரிய சிறு கூலிக் காசையுங் கொடுத்து விட்டால், ஒருமணி நேரத்தில் இந்தியாவிலிருப்பவர்க்கோ இலங்கையிலிருப்பவர்க்கோ அச்செய்திகள் உடனே தெரிவிக்கப்படுகின்றன; அடுத்த மணி நேரத்தில் அவற்றிற்கு மறுமொழியும் வருகின்றது. இந்தப் படியாகவே, இந்தியா இலங்கைக்கு ஆறாயிரங்கல் எட்டியுள்ள சீமை முதலான இடங்களுக்குஞ் சில மணி நேரத்திற் செய்திகள் தெரிவித்தலும், ஆங்காங்குள்ள செய்திகளைத் தெரிந்து கொள்ளுதலும் ஒவ்வொரு நொடிப் பொழுதும் நடந்து கொண்டு இருக்கின்றன. ஆறாயிரங்கல் எண்ணாயிரங்கல் அகன்றுள்ள நாடுகளுக் கெல்லாம், இங்ஙனம் முற்காலத்திற் செய்திகள் விடுத்தல் முடியுமா? சிறிதும் முடியாதே. இவ்வளவு வசதிகளும் எதனால் வந்தன? ஆங்கில அறிஞர்கள் இடைவிடாது தமது பகுத்துணர்ச்சியைப் பயன்படுத்தி மின்வடிவு முதலான கட்புலனாகா நுண்பொருள்களின் இருப்பையும் வலிவையும் இயக்கத்தையும் பயனையுங் கண்டுபிடித்தமையால் அன்றோ? இன்னும் ஒரு புதுமையைப் பாருங்கள்! ஒரு நூற்றாண்டுக்கு முன் இருந்த நம் முன்னோர்களிற், பட்டமரமுந் தளிர்க்கக் கேட்ட பறவைகளும் மயங்க இன்னிசை பாடுவதில் வல்லவர்கள் எத்தனையோ பெயர் இருந்தார்கள். ஆனால், அவர்கள் இறந்ததும் அவர்களின் தேன்போன்ற குரலும் அவர்கள் மிழற்றிய இனிய பாட்டுகளும் அவர்களோடு கூடவே இறந்து போய் விட்டன! அவற்றை நாம் மறுபடியுஞ் செவி கொடுத்துக் கேட்பது இனி எக்காலத்தும் இயலாது! ஒரு நூற்றாண்டுக்கு முற்பட்டிருந்தோரின் நிலை அவ்வாறாய் முடிய, இந்த ஒரு நூற்றாண்டுக்குள் நாம் பிறப்பதற்கு முன்னிருந்த இசை வல்லோர்களின் நிலை அங்ஙனம் நாம் ஏமாறி வருந்தத் தக்கதாய் முடிந்து போகவில்லை. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னிருந்து முக்கனியுங் கற்கண்டினும் இனிக்கப் பாடிய பாவாணர்கள் இவ்வுலக வாழ்வை நீத்துப் போனாலும் அவர்களுடைய அருமைக்குரல் ஒலியும், அவர்கள் பாடிய இன்னிசைப் பாட்டுகளும் நம்மை விட்டு நீங்கிப் போகவில்லை. எப்படி யென்றால், அமெரிக்க தேசத்திற் பகுத்தறிவிற் சிறந்து விளங்கும் எடிசன் என்னுஞ் துரைமகனார் ஆக்கிய ஒலியெழுதி (Gramophone) என்னும் பொறியானது, அப்பாவாணர்கள் பாடிய இன்னிசைப் பாட்டுகளையும் அவர்களுடைய இனிய குரலொலி களையும் அப்படியே பாடிக்காட்ட, அவைகளைக் கேட்டுக் கேட்டு நாம் வியந்து மகிழ்கின்றனம் அல்லமோ? அவ் இசை வாணர்கள் இறந்து போயினும் அவர்கள் பாடிய இசைகள் இறந்து போகாமல், நாம் திரும்பத் திரும்பக் கேட்டு மகிழும்படி பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கின்றன அல்லவோ? இது மட்டுமா? எந்தெந்தத் தேயத்தில் எந்தெந்த மொழியில் எவ்வெப் பாட்டுகளை எவ்வெவர் எப்படி யெப்படிப் பாடினார்களோ, அவ்வப்படியே அப்பாட்டுகளை யெல்லாம் நாம் இருந்த இடத்திருந்தே கேட்டு இன்புறும் பெரும்பேற்றை இவ்விசைக் கருவியானது நமக்குத் தந்திருக்கின்றதன்றோ? இத்தனை இன்பமும் நாம் எளிதில் அடையலானது எதனால்? எடிசன் என்னுந் துரைமகனார் தமது பகுத்துணர்ச் சியைச் செலுத்தி எவ்வளவோ அரும் பாடுபட்டு இவ் இசைக் கருவியைக் கண்டு பிடித்ததனாலன்றோ? அவர் தமது பகுத்துணர்வினைப் பயன்படுத்தாமல், மற்ற மக்களைப்போல் உண்பதிலும் உடுப்பதிலும் உறங்குவதிலுங் தமது காலத்தைக் கழித்திருந்தனராயின், நாம் அவ்வருமந்த இசைக் கருவியைப் பெறுதலும், நம் முன்னோர்களின் தித்திக்குஞ் சுவைப்பாட்டுகள், அயல்நாட்டு இசைவாணரின் பலதிற வரிப்பாட்டுகள் என்னும் இவைகளைக் கேட்டு மகிழ்தலும் இயலுமோ? இன்னும் பாருங்கள்! நாம் படிக்கும் புத்தகங்களையும் அவ்வவ்வூர்களில் நடக்குஞ் செய்திகளையறிவிக்கும் புதினத் தாள்களையும் அச்சுப் பொறிகள் சிறிது நேரத்தில் ஆயிரக் கணக்காக அச்சுப் பதித்து நமக்குக் குறைந்த விலைக்குத் தருகின்றன. அச்சுப் பொறிகள் இல்லா முன்நாளிலோ இவ்வளவு எளிதாக நாம் விரும்பிய அரிய பெரிய நூல்களைப் பெற்றுக் கற்றுத் தேர்ச்சி அடைதல் ஏலாது. பழைய நாட்களில் ஓர் ஊரிற் சிற்சிலரே கற்றவராய் இருப்பர். அவர்கள் தாம் கற்கும் நூல்களைப் பனையேடுகளிற் பாடுபட்டு எழுதிக் கருத்தாய் வைத்திருப்பர். அவர்கள் தம்மிடம் கல்வி கற்க வரும் மாணாக்கர் சிலர் மட்டுந் தம்மிடத்துள்ள ஏட்டுச் சுவடிகளைப் பார்த்துச் சிறிது சிறிதாய் எழுதிக் கொள்ளும்படி அவர்களுக்குக் கொடுப்பார்களே யல்லாமல் எல்லாரும் பெற்றுப் பயிலும்படி அவ்வேட்டுச் சுவடிகளை எல்லார்க்கும் எளிதிற் கொடார். அல்லது அப்படிக் கொடுத்தாலுங்கூட ஓர் ஏட்டுச் சுவடியில் எழுதப் பட்டிருக்கும் ஒரு நூலை ஒரே காலத்திற் பற்பலர் எப்படி எடுத்துக் கற்க முடியும்? மேலுந் தமிழ் மொழியில் உள்ள சிறந்த நூல்கள் பலவும் ஓர் ஊரில் உள்ள கற்றவர் சிலரிடத்தில் ஒருங்கே காணப்படுவதும் இல்லை. ஓர் அருமையான நூலைக் காண வேண்டுமானால் எத்தனையோ ஊர்களுக்குப் போய் அலைந்து திரிந்து தேடிப் பார்க்க வேண்டும். இப்படித் தேடித் திரிவதற்கு எவ்வளவு நாட்கள் செல்லும்? எவ்வளவு பொருள் செலவாகும்? எவ்வளவு பாடும் உழைப்பும் வேண்டும்? இத்தனை இடர்ப்பாடுகள் இருந்தமை யினாலேயே பழைய காலத்திற் கற்றவர் தொகை மிகுதியாயில்லை; கல்வி பரவவும் இல்லை. ஆனால், இக்காலத்திலோ வெள்ளைக்காரர் கண்டுபிடித்த அச்சுப் பொறிகளின் உதவியாற் பல்வேறு நூல்களும் பல்வேறு புதினத் தாள்களும் ஒவ்வொரு நொடியுங் கோடி கோடியாக அச்சிற் பதிக்கப்பட்டு உலகமெங்கும் பரவிக் கொண்டிருக் கின்றன. இதனால் எவ்வளவு ஏழையாயிருப்பவர்களுஞ் சிறிது பொருள் செலவு செய்து தமக்கு வேண்டிய நூல்களை எளிதில் வாங்கிக் கற்றுக் கல்வியில் தேர்ச்சி பெறுகின்றார்கள். இதனாற் கல்வி யானது எங்கும் பரவுகின்றது. கற்றவர் தொகை மிகுதிப்படுகின்றது; நாகரிகம் எங்கும் அறிவு மணம் கமழ்ந்து இன்ப ஒளி வீசுகின்றது. இத்தனை பெரும்பேறுகளும் காக்டன் என்னும் வெள்ளைக்கார அறிஞர் தமது பகுத்துணர்வினைப் பயன்படுத்தி அச்சுப்பொறியைக் கண்டுபிடித்தமையால் விளைந்தவைகள் அல்லவோ? இன்னும் இங்ஙனமே வெள்ளைக்காரத் துரைமக்கள் அல்லும் பகலுந் தமது அறிவைச் செலுத்தி இதுகாறுங் கண்டு பிடித்திருக்கும் பொறிகளால் விளைந்த,விளைந்திருக்கின்ற நலன்கள் அளவுக்கு அடங்கா. அவர்கள் இவ்வளவிலே ஓய்ந்து விடாமல், இன்னுந் தமது உணர்வினைப் பல துறைகளிற் செலுத்தி இன்னும் பல புதுமைகளை நாடோறும் கண்டறிந்து வருதலால் இன்னும் உலகத்தில் உள்ள மக்களுக்கு வரப்போகும் நலன்கள் இன்னும் எவ்வளவோ இருக்கின்றன! அவையெல்லாம் இப்போது யாரால் அளவிட்டுச் சொல்ல முடியும்? ஆகவே, பகுத்துணர்ச்சியைப் பெற்ற மக்களாகிய நாம் விலங் கினங்களைப்போல் வீணே உண்டு உறங்கி இன்புற்றுக் காலங் கழித்தலிலேயே கருத்தைச் செலுத்திவிடாமல், அப் பகுத்துணர்ச்சியைப் பெற்ற நம்மிற் சிலர் அதனை மிக நன்றாய்ப் பயன்படுத்தி அதனாற் பல புதுமைகளையும் அவற்றால் பல சிறந்த இன்பங்களையுங் கண்டறிந்து, அவற்றால் தாமும் பயன்பெற்று மற்றோரையும் பயன்பெறச் செய்து வருதல்போல, நாமும், அவ்வுணர்ச்சியினை மேலும் மேலும் பயன்படுத்தி இன்னும் மேலான இன்பங்களை அடையக் கடமைப் பட்டிருக்கின்றோம் அல்லமோ? 10. தமிழ்த்தாய் கண்ணுதற் பெருங்கடவுளுங் கழகமோ டமர்ந்து பண்ணுறத் தெரிந்தாய்ந்த இப்பசுந்தமிழ் ஏனை மண்ணிடைச்சில இலக்கண வரம்பிலா மொழிபோல் எண்ணிடைப் படக்கிடந்ததா எண்ணவும் படுமோ - திவிளையாடற்புராணம் தமிழராகிய நாம் நாடோறும் பேசிவருந் தாய்மொழி தமிழேயாகும். நாம் சிறு குழவியாய் இருந்தபோது நம் அன்னையின் தீம்பாலைப் பருகிப் பசிதீர்ந்து அவள் மடியிற்கிடக்க, அவள் நம்மைக் கொஞ்சி முத்தம் வைத்துப் பெருமை பாராட்டிப் பேசியது தமிழ் மொழியிலன்றோ? நாம் குழந்தையாய் இருந்த அந்தக் காலந்தொட்டு நாம் இந்த உலகைவிட்டு அகன்று போகும் வரைநிலைக்கும். தாய் தந்தையரோடும் உடன் பிறந்தவரோடும் மனைவி மக்களோடும் நம் நாட்டில் உள்ளவரோடும் நாம் உறவு ஒட்டி, உறவாடிப் பேசுவதும் எழுதுவதும் நமதருமை தமிழ் மொழியிலன்றோ? இங்ஙனம் நமது உயிரோடும் உடம்போடுங் கலந்து, நமதறிவைத் தன்வண்ணம் ஆக்கிக் கனாக் காணுங் காலத்துங் கனாவுலகில் உள்ளவரோடு நாம் பேசுகையில் அப்பேச்சோடும் உடன் நிற்பதாய்க் கிளர்ந்து விளங்குவது நமது இனிய தாய் மொழியாகிய செந்தமிழ் மொழியேயாய் இருத்தலின், நமதுயிர் இவ் வுலக வாழ்வைத் துறந்து மறுமையுலகிற் சென்று உலவும் நமக்கு உற்றதுணையாய் நம்மோடு உடன்வந்து நிற்பது தமிழ் மொழியே யாகுமென்பதும் தெளிவாகப் புலப்படுகின்ற தன்றோ? இவ்வாறு இம்மை மறுமை யிரண்டிலும் நமது உயிர்க்கு உற்றதுணையாய் இருந்து உதவுவது தமிழ்மொழி ஒன்றுமே யாகையால், நாம் கற்கும் ஆங்கிலம் ஆரியம் முதலான மொழி கள் அதுபோல் நமக்கு எப்போதும் உதவியுந் துணையுமாய் இருந்தும் பயன்பட மாட்டா. நமது வயிற்றுப் பிழைப்புக்காகவும் , வேறு சில காரணங் களுக்காகவும் ஆங்கிலம் ஸமகிருதம் முதலிய மற்ற மொழிகளை நாம் வருந்திக் கற்கவேண்டுவது கட்டாயமாய்த் தோன்றினாலும், இவற்றின் பொருட்டு நமது இனிய செந்தமிழை மறப்பதும் அதனைப் பயிற்சி செய்யாமற் கைவிட்டிருப்பது நமதுயிரையே நாம் அழிப்பதாய் முடியும். அழகுமிக்க செந்தாமரை மலரின் செந்நிறத்தையும் அதில் துளும்பி வழியும் கொழுந்தேனையும் அகற்றி விட்டு, அவற்றிற்கு மாறாக அதற்கு மஞ்சள் நிறத்தை ஊட்டிச் செங்கழு நீரர் மணத்தைப் புகுத்திக் கற்கண்டின் நீரைச் சொரிந்து வைப்பேன் என்று ஒருவன் அதன் இயற்கையை மாற்றப் புகுந்தால் அது கைக்கூடாமல் அத்தாமரைமலர் அழிந்துபோவது போல, மற்ற மொழிகளும் இனிய சொல்லுஞ் சிறந்த உயர்ந்த பயனும் உடையனவாய் இருந்தாலும், தமிழின் நிறமும் அதன் பொருளின் மணமும் அதன் சுவையின் தேனும் இயல்பாகப் பொருந்தப் பெற்ற நமதுயிரை அவ்வியற்கை யினின்றும் மாற்றி, அம்மற்ற மொழிகளின் தன்மையை அதற்கு ஏற்றினால் அது தன்றன்மை இழந்து அழிந்து போகும் தமிழ் முதலான மொழிகளுள் ஒன்றையேனும் அல்லது இரண்டு மூன்றை யேனுந் தமது குழந்தைப் பருவந் தொட்டுப் பேசி வருபவர், தாம் பேசும் அவ் இயற்கை மொழிகளையே மேலும் மேலும் கற்றுத் தமது அறிவை வளப்படுத்தாமல், அவற்றைக் கைவிட்டு முற்றும் மாறாக புதியவான ஆங்கிலம் ஆரியம் முதலான மொழி களையே பழகி வருவராயின் அவர் நீண்ட நாள் உயிர் வாழார். இதனாலான்றோ, தமிழைக் கைவிட்டு ஆங்கிலம் ஆரியம் முதலியவற்றையே கற்றுப்பழகும் நம் நாட்டவர் பலர் முப்பது அல்லது நாற்பது ஆண்டுகட்குட் பலவகை நோய்களாற் பீடிக்கப்பட்டு மாய்ந்து போகின்றனர்! தன் இயற்கையில் வலுப்பட்டு நில்லாத ஒரு தூணின்மேற் பெருஞ் சுமைகளை ஏற்றினால் அவற்றைத் தாங்காமல் முறிந்து விழுவது போலத், தமக்குரிய மொழியைக் கற்று வலிவுபெறாத ஒருவனது அறிவின் மேல் வேறு மொழிகளை ஏற்றினால் அவற்றைத் தாங்க மாட்டாமல் அவை பழுதுபட்டுப் போகும். தாய்ப்பால் நிரம்ப வுண்டு சார்ந்த பிள்ளை ஆண்டு முதிர முதிர அரிய பெரிய முயற்சிகளை யெல்லாம் எளிதிற் செய்து நீண்டநாள் உயிர் வாழ்தல் போலத், தமிழ்ப் பால் உண்டு வளர்ந்தவர் எத்தகைய மொழிகளையும் வருத்தமின்றிக் கற்று நெடுநாள் உயிர் வாழ்ந்திருப்பர். தமிழோடு மற்ற மொழிகளையுங் கற்றவர் நீண்டகாலம் உயிர் பிழைத்திருத்தலுந், தமிழை விட்டு அயல்மொழிகளை மட்டும் பயில்கின்றவர் விரைவில் உயிர் மாளுதலும் இயற்கையாய் நிகழ்தலைக் காண்பவர்களுக்கு நாம்கூறும் இவ்வுண்மை நன்கு விளங்கும். அறிவிற் சிறந்தவரான ஆங்கில நன்மக்கள் தமக்கு இயற்கையில் உரிய ஆங்கிலமொழியை நன்றாகக் கற்ற பிறகுதான் வேறு மொழிகளைக் கற்கின்றார்கள்; தமது மொழியைக் கல்லாமல் வேறுமொழிகளைச் சிறிதுங் கற்கவே மாட்டார்கள். இப்படிப்பட்ட உயர்ந்த பழக்கம் அவர்களிடத் தில் இருப்பதனாலேதான் அவர்கள் தமது மொழியில் நிகரற்ற புலமையுடையராய் இருப்பதோடு, தாம் கற்கும் வேறு மொழி களிலும் வல்லவராய்ச் சிறந்து விளங்கி நீண்டநாள் உயிர் வாழ்ந்து உலகத்திற்கு அறிவிறந்த நன்மைகளை யெல்லாம் விளைவித்து வருகின்றார்கள். நம்மவர்களோ தமக்குரிய செந்தமிழ் மொழியைச் சிறிதுங் கல்லாமலுஞ், சிறிதுகற்றாலுந் தமிழ்நூற் பயிற்சி நன்றாக நிரம்பாமலும், வயிற்றுப் பிழைப்பிற்குரிய ஆங்கில முதலான அயல்மொழிகளையே மிகுந்த பெரும் பொருட் செலவினைச் செய்து, பல ஆண்டுகள் அல்லும், பகலும் உழைத்துக் கற்றுக் கொள்கின்றார்கள். தென்னங்கன்றைப் பெயர்த்து பனிமிகுந்த ஆங்கில நாட்டில் வைத்தால் அஃது ஆங்கிலம் போல வளராமல் அழிந்து போவது போல, நமது செந்தமிழை விட்டு மற்ற மொழி களையே தம் காலமெல்லாங் கற்று அவர் அதனால் வலிவிழந்து மெலிந்து விரைவில் உயிர் துறக்கின்றனர்! ஐயோ! வயிற்றுப் பிழைப்புக் கென்று முழுதுங்கற்ற மற்றமொழி அவரது பிழைப்புக்கே இடையூறு விளைத்து வருதலை நம்மவர் அறி யாமல் வரவு தமதுவாழ்வில் அருகிப்போவது நினைக்குந் தோறும் தூயதுள்ளத்தை நீராய் உருக்குகின்றது! இந்நிலைமை சிறிதாயினுங் கருதிப் பார்ப்பவர்கள் நமது தமிழ்மொழிப் பயிற்சி நம் உயிர் வாழ்க்கைக்கு இன்றியமையாத மருந்தா மென்பதை உணராமற் போவரோ! இது மட்டுமோ, இத் தென்னாட்டின்கண் தமிழ் மொழியானது இருநூற்று மூன்று இலட்சத்து தொண்ணூற்றை யாயிரம் பெயர்களாற் பேசப்பட்டு வருகின்றது. இத்தென்னாட் டில் மட்டுமேயன்றி, இலங்கையிலும், பர்மாவிலும், சிங்கப்பூர், பினாங்கு முதலான மலை நாடுகளிலும், மொரீசு, தென்னாப் பிரிக்கா முதலான இடங்களிலும் நமது தமிழ் மொழியைப் பேசுபவர்கள் பெருந் தொகையாய் இருக்கின்றார்கள். இவ்வாறு பெருந் தொகையினாராய் உள்ள தமிழ் மக்களெல்லாரும் அறிவிலும் நாகரிகத்திலும் உயர்ந்து விளங்கல் வேண்டுவ ராயின், அவர்கள் தமக்குத் தெரிந்துள்ள தமிழ்மொழியின் வழியாகவே அங்ஙனம் ஆகல்வேண்டும். மிகுந்த பொருட் செலவுங் காலக்கழிவும் வருத்தமுமின்றி அவர்களைக் கல்வியில் வல்லராக்குதற்கு இசைவான இந்த எளிய முறையை விடுத்து, அவர்கட்குப் புதுமையாக ஆங்கிலம் ஆரியம் முதலான மொழிகளைக் கற்பித்து அவர்களை உயர்த்தல் வேண்டுமென்று நினைப்பவர் ஒரு காலத்துந் தம்மெண்ணம் நிறைவேறப்பெறார். ஆதலால், தமிழ் மக்களை உண்மையாகவே முன்னேற்ற வேண்டுமென்னும் எண்ணம் உடையவர்கள், அவர்களுக்குரிய தமிழ்க்கல்வியின் வாயிலாகவே அதனைச் செய்யக் கடமைப் பட்டிருக்கின்றார்கள். மற்ற மொழிகளில் நாடோறும் புதியன வாய் வெளிவரும் அரும்பொருள்களை யெல்லாம் தமிழில் மொழி பெயர்த்துக் கற்பிக்கத் தலைப்பட்டால், இப்போது பதினைந்து ஆண்டுகளுக்குமேல் ஆங்கிலமொழியை மிக வருந்திக்கற்று ஒருவர் தெரிந்து கொள்ளும் பொருள்க ளெல்லாம், நமது செந்தமிழ் ஆழியில் ஏழெட்டு ஆண்டுகளில் இன்னுஞ் செவ்வையாகக் கற்றுத் தேறலாம். ஆங்கிலம் ஆரியம் முதலிய மொழிகளில் அவர் எவ்வளவுதான் கற்றுத் தேறினா லுந், அம்மொழிகளில் அறிந்த பொருள்களைத் தமிழ் மக்கள் எல்லார்க்கும் புலப்படும்படி எடுத்துச் சொல்லிப் துன்பப் படுத்தல் இயலாது; தமிழ் கற்றவரோ தாம் அறிந்த மொழி களைத் தமிழ் மக்களெவர்க்கும் நன்கு விளங்கும்படி எடுத்துச் சொல்லிப் பெரிதும் பயன்படுவர். இதனால் தமிழ்நாட்டவர் தமிழ் கற்பதொன்றே தமக்கும் பிறர்க்கும் பயன்படுதற்கு ஏதுவாம் என்க. இனி, ஏழெட்டு நூற்றாண்டுகளாய்ப் புதிதாக, முளைத் தெழுந்து இப்போது ஆங்காங்கு வழங்கிவரும் பலவேறு மொழிகளையும் போன்றதன்று நமது தமிழ் மொழி. இஃது இன்ன காலத்திலேதான் தோன்றியதென்று எல்லாராலுங் கட்டுரைத்துச் சொல்ல முடியாத பழமையுடையதாய், இத்தனைக் காலமாகியுந் தனது இளமைச் செல்வம் சிறிதுங் குன்றாததாய் உலவி வருகின்றது. தமிழைப்போலவே பழமை யுடையன வென்று சொல்லத்தக்க ஆரிய கிரேக்க இலத்தின் ஈரு அராபி சீனம் முதலான ஏனைய தேய மொழிகளெல்லாம் இப்போது உலக வழக்கத்தில் இன்றி இறந்தொழிய, நம் செந்தமிழ்மொழி எல்லாம்வல்ல இறைவனைப்போல் என்றும் இறவா இளமைத்தன்மை வாய்ந்து இலங்குகின்றது. இவ்வுண்மையை, மனோன் மணீயத்தில் பல்லுலகும் பலவுயிரும் படைத்தளித்து துடைக்கினும் எல்லயறு பரம்பொருள்முன் னிருந்தபடி யிருப்பது போல் கன்னடமுங் களிதெலுங்குங் கவின்மலயா ளமுந்துளு உன்னுதரத் துதித்தெழுந்தே ஒன்றுபல ஆயிடினும் ஆரியம்போல் உலகவழக் கழிந்தொழிந்து சிதையாதுநின் சீரிளமைத் திறம்வியந்து செயன்மறந்து வாழ்த்துதுமே! என்றுவந்த தமிழ்த்தாய் வணக்கச் செய்யுளிலுங் கண்டு கொள்க. பழமையில் இதனோடு ஒத்த ஆரியம் முதலான மொழிகளெல்லாம் இறந்தொழியவும், இது மட்டும் என்றும் இளமையோடு விளங்குவது எதனால் என்றால், தமிழ் அல்லாத மற்ற மொழிகளில் எல்லாம் மக்கள் கைக்கு மாறான உரத்த ஓசைகளும் பொருந்தா கண முடிபுகளுங் காணப்படுதலால் அவை வழங்குதற்கு எளிய அல்லாதனவாய் நாளடைவில் மாய்ந்து விட்டன; தமிழோ இயல்பாற் பிறக்கும் அமைந்த அன்னிய ஒலிகளுள் மிகவும் பொருத்தமான இலக்கண முடிபுகளும் இயைந்து பேசுதற்கும் பயிலுதற்கும் எளிதாய் இருந்ததனால் அங்ஙனம் அஃதிறவாமல் இன்னும் இளமை ஆராய்ந்து நடைபெறுகின்றதென்று உணர்ந்து கொள்க. க்ருதம், த்ருஷ்டி, த்வரிதம், ச்ருஷ்டி, ஹ்ருதய முதலான ஆரியச் சொற்களைச் சொல்லிப் பாருங்கள்! அவை பேசுதற்கு எவ்வளவு வருத்தமாய் இயற்கைக்கு மாறுபட்டனவாய் இருக்கின்றன! இச்சொற்களையே தமிழ்வடிவாகத் திரித்துக் கிருதம் திட்டி துரிதம் சிருட்டி இதயம் என்று சொல்லிப் பாருங்கள்! இனி, இவற்றிற்கு நிகரான இழுது, பார்வை, விரைவு, படைப்பு, நெஞ்சம் முதலான தூய தமிழ்ச் சொற்களைச் சொல்லிப் பாருங்கள்! இவை அவற்றைச் காட்டிலுஞ் சொல்லுதற்கு இன்னும் எத்தனை எளியனவாய் இனியனவாய் இருக்கின்றன! இங்ஙனமன்றி ஆரியம் முதலான மற்ற மொழிகளின் இலக்க ணங்கள் இயற் கைக்குமாறாய் .இருத்தலுங், தமிழ் இலக்கணம் ஒன்றுமே இயற் கைக்குப் பொருத்தமாய் இருத்தலும் யாம் எழுதிய ஞான சாகரமுதற்பதுமத்திலும், பண்டைக்காலத் தமிழர் ஆரியர் என்னும் நூலிலுங் கண்டுகொள்க. இங்கே அவை யெல்லாம் விரித்துரைப்பதற்கு இடமில்லை. அது நிற்க, இனி மொழியின் அமைப்பையும், மக்களியற்கை உலக இயற்கைகளையுங் திறம்பட விரித்துரைத்த தொல்காப்பியம் போன்ற மிகப்பழைய நூலை நமது செந்தமிழ்இன்றி வேறு மொழிகளிற் காணல் இயலுமோ? அறம் பொருள் இன்பம் வீடு என்னும் நாற்பொருளையும் முற்றும் எடுத்து விளக்கிய திருக்குறள், நாலடியார் போன்ற அரும்பெரு நூல்களை நம் செந்தமிழ் மொழியாம் தவிர வேறெந்த மொழியேனும் உடைய தாமோ? சிலப்பதிகாரம், மணிமேகலை என்னும் பெரும் பழந்தமிழ்க் காப்பியங்களோடு ஒத்தவை எம்மொழியிலேனும் உளதா?. உலகவியற்கை பிறழாது பாடிய பத்துப்பாட்டு, எட்டுத்தொகை முதலான பழைய தமிழ்ப்பாட்டுக்களுக்கு நிகரானவை வேறெந்த மொழியிலேனும் எடுத்துக்காட்ட இயலுமோ? திருவாசகம், திருச்சிற்றம்பலக் கோவை தேவாரம், பெரியபுராணம் என்னுந் தெய்வத் தமிழ்நூல்கள், கன்னெஞ்சமுங் கரைந்துருகி எத்திறத்தவனும் இறைவன் அருட் பெருக்கில்அமிழ்ந்தி இன்பவுருவாய் நிற்குமாறு செய்தல் போல், வேறு எந்தமொழியில் உள்ள எந்நூலேனும் செய்தல் கண்ட துண்டோ? முடிவாய்த் தெரியவேண்டும் மெய்ப் பொருள்களை தெளித்துச்கூறி முடிவுகட்டிய சிவஞான போதம் சிவஞான சித்தி போன்ற மெய்ந்நூல்களும், அவற்றின் மெய்யுரை விரித்த சிவஞானமுனிவரின் நுண்ணுரை போன்ற உரைநூல்களுந் தமிழிலன்றி வேறெந்த மொழியிலேனுங் காணப்படுவதுண் டோ? இந்நூற் பொருளென்னுந் தீம்பாலை நமதுயிரெல்லாந் தித்திக்கக் குழைந்தூட்டும் நம் தமிழ்த்தாயை மறவாது பேணும் பெரும்பேற்றை நம் தமிழ்மக்கள் எல்லாரும் பெற்றுச் சிறந்திடுவாராக! 11. தமிழிற் பிறமொழிக் கலப்பு இந் நிலவுலகிற் பழமைக் காலந்தொட்டு இன்று காறும் வழங்கிவரும் மொழி தமிழ் ஒன்றேயாம் என்பதை முன்னர் ஒருமுறை விளக்கிக் காட்டினாம். மற்றை மொழிகளிற் சில பன்னூறாண்டுகட்கு முன்னே இறந்து போயின. பல சின்னூறாண்டுகளாகவே தோன்றி நடைபெறுகின்றன. சில பழமையாகி இறந்தன. பல புதுமையுற்றுப் பிறந்தன. பழமையும் புதுமையும் ஒருங்குடைய ஒருமொழியை அவற்றினிடத்தே காணல் இயலாது. மற்றுத் தமிழ் மொழியோ பழமைக்குப் பழைமையுமாய், புதுமைக்குப் புதுமையுமாய்த் தன் இயல்பு பிறழாது, ஏறக் குறைய முந்நூறு நூறாயிரம் மக்களினிடையே உலாவி வருகின்றது. இங்ஙனம் இது பண்டு தொட்டே உயிரோடு விளங்கி வருதலின், முற்காலத்தில் வழங்கிய மொழிகளின் சொற்கள் சிலவும் பிற்காலத்தில் நடைபெறும் மொழிகளின் சொற்கள் சிலவும் இதன்கண்ணே கலந்து காணப்படுதல் இயற்கையேயாம். யாங்ஙனமெனின், நீண்டகாலம் உயிரோடிருக்கும் ஒருவன் பல நாடுகளிலும் சென்று முயலுந் தொழின் முயற்சியும் மிகுந்த சுறுசுறுப்பும் உடையனாயிருந்தால், அவன் தனதிளமைக் காலத்தில் தன்னோடிருந்து இறந்து போனவர் வைத்த பொருள்களிற் சிலவற்றையுந், தனது பிற்காலத்தில் தன்னோடிருப்பவர் வழங்கும் பண்டங்களில் சிலவற்றையுங் கையாள நேர்வது போல, உயிரொடு சுறுசுறுப்பாய் உலவிவருந் தமிழ் மொழியுந் தான் வழங்கிய பண்டைநாளில் வழங்கியிருந்த ஆரியம் இலத்தீன் முதலான மொழிகளின் சில சொற்களையும், இஞ்ஞான்று தன்னொடு சேர்ந்துலாவும் ஆங்கிலம் துலுக்கு முதலான மொழிகளின் சில சொற்களையுந் தான் எடுத்துப் பயன்படுத்தி வருகின்றது. இன்னும் இதனை விளக்கிக் காட்டல் வேண்டின், உயர்ந்த மலை முகட்டில் என்றும் நீர் ஊறும் ஒரு சுனையிலிருந்து இடையறாது ஓடிவரும் ஓர் அருவி நீருக்குத் தமிழ் மொழியை ஒப்பிட்டுச் சொல்லலாம். இனி இவ்வருவி நீர் ஓடிவரும் வழியின் இடையிடையே சுரப்பின்றிச் சேறும் நீருமாய் நிற்குங் குளங்குட்டை கட்கு வழக்கில் இல்லாத ஆரியம் இலத்தீன் முதலான மொழிகளையும், இன்னும் அவ் வழியின் கீழே இருபாலும் ஆங்காங்குப் புதிது தோன்றித் தனித் தனியே ஓடும் யாறுகளுக்கு ஆங்கிலம் துலுக்கு முதலான மொழிகளையும், இவ் யாறுகளிலிருந்து பிரிந்து வந்து அவ்வருவியொடு கலக்குஞ் சிறு சிறு கால்களின் நீருக்கு அம்மொழிகளிலிருந்து தமிழில் வந்து கலக்குஞ் சில சொற்களையும் ஒப்பாகச் சொல்லலாம். பன்னெடுங் காலமாக வறளாது ஓடி வருந் தமிழருவியானது தான் வரும் வழியிலுள்ள ஆரியம் முதலான பழைய குளங் கூவல்களிற் சென்று அவற்றின் சொற்களாகிய நீரையுந் தன்னொடு கலப்பித்துப் புதியவாக்கிப், பின்னும் இடை யிடையே தன் கண் வந்து கலக்கும் பின்றைக் காலத்துச் சொற்களாகிய சிறு கால்களின் நீரையுந் தன்னுரு வாக்கித் தன்னை வழங்கும் மக்கட்கும் பெரிதும் பயன்பட்டு வருகின்றது. இனி, ஒரு மொழியின் சொற்கள் மற்றொரு மொழியில் வந்து கலக்கவேண்டுவதுதான் என்னை யென்று வினவினால், ஒரு மொழியினைப் பேசும் மக்கள் தம் நாட்டையுந் தம் இனத்தாரையும் விட்டு நீங்காமல் இருக்கும் வரையில், அவர் தாம் இருக்கும் நாட்டின் கண்ணே பிறமொழி பேசும் பிறநாட்டார் வந்து சேராதிருக்கும் வரையில், அவர் பேசும் மொழியில் அயல் மொழிச் சொற்கள் வந்து கலப்பதற்கு இடமேயில்லை. அங்ஙனமின்றி அவர் பல நாடுகளையும் அந் நாடுகளிலுள்ள பல திறப்பட்ட மக்களையும் போய்க் கண்டும், அவர் நாட்டுப் பண்டங்களைத் தாம் விலைகொண்டும், தம் நாட்டுப் பண்டங்களை அவர்க்கு விற்றும், அவர்தம் வழக்க வொழுக்கங்கள் சிலவற்றைத் தாங் கைப்பற்றியும், தமக்குரிய சிலவற்றை அவர் கைப் பற்றுமாறு தந்தும், ஒருவரது நாகரிகத்தை ஒருவர் பின்பற்றியும் ஒழுகும் உயர்ந்த அறிவும் உயர்ந்த நடையும் வாய்ந்தவர்களா யிருந்தால், அவர் பேசும் மொழியில் மற்ற மொழிச் சொற்கள் புகுந்து கலவாமல் இரா. ஆகவே, இம் முறையால் நோக்குமிடத்துப் பல வகையாலும் உயர்ந்த நாகரிக வாழ்க்கையுடையராய் விளங்கிய தமிழ் மக்கள் வழங்கிவந்த தமிழிற் பிறமொழிச் சொற்கள் சில வந்து கலக்கலானது இயற்கையேயா மென்பது உணரப்படும். அங்ஙனமாயிற், பழைய காலத்திற் றமிழ் மக்கள் அயல் நாட்டவரொடு சென்று அளவளாவும் நாகரிக முதிர்ச்சி உடையவரா யிருந்தா ரென்பதற்குச் சான்று என்னை யெனின், இற்றைக்கு ஐயாயிர ஆண்டுகட்கு முன்னரே எழுதப்பட்ட தொல்காப்பியம் என்னும் நூல் ஒன்றுமே ஒரு பெருஞ் சான்றாமென்க. அருமை பெருமையிற் சிறந்த இவ்வொரு நூலை ஒரு சிறிது உற்று நோக்குவார்க்கும், இந்நூல் எவ்வளவு பழமையுடையதாய் இருக்க வேண்டுமென்பதும், மிகப் பழைய நாளிலே இவ் வுயர்ந்த நூலை எழுதிய ஆசிரியரோடு ஒருங்கிருந்த தமிழ் முதுமக்கள் எத்துணைச் சிறந்த அறிவும் நாகரிகமும் வாய்ந்தவராயிருந்திருக்கவேண்டு மென்பதும் அவர் உள்ளத்திற் பதியாமற்போகா. இந் நூலின்கண் உள்ள, முந்நீர் வழக்கம் மகடூஉவோ டில்லை என்னுஞ் சூத்திரத்தாற் பண்டைத் தமிழ் மக்கள் பொருள் ஈட்டும் பொருட்டுத் தம் மனைவி மக்களையும் நாட்டையும் விட்டுக் கடல் வழியே மரக் கலன்களில் ஏறித் தொலைவான நாடு நகரங்களிற் சென்று சேர்வரென்பது பெறப்படுகின்றது. தமிழர்கள் கடல் தாண்டிச் சென்று வேற்று நாடுகளிற் போய்ப் பொருள் முயற்சி செய்தது போலவே, வேற்று நாட்டவரும் தமிழ் நாட்டிற்போந்து பல முயற்சிகளை நடத்தினாரென்பது ஈபுரு மொழியில் எழுதப்பட்ட பழைய விவிலிய நூலினால் இனிது விளங்கு கின்றதன்றோ? காவிரிப்பூம் பட்டினத்திற் கரிகாற்சோழன் என்னும் வேந்தர் பெருமான் அரசாண்டபோது, பலவேறு மொழிகள் வழங்கிய பலவேறு தேயத்தாரும் அந்நகரத் தினிடத்தே போன்று கலந்திருந்து பல தொழின் முயற்சி நடத்தினமையும், கடலுக்கு அப்பாலுள்ள நாடுகளிலிருந்து குதிரைகள் வந்தமையும், இமயம் மேரு முதலிய மலை களிலிருந்து பொன்னும் மணியும், மேற்கணவாய் மலை களிலிருந்து சந்தனக்கட்டை அகிற்கட்டைகளுந், தென் கடலிலிருந்து முத்துகளுங், கீழ்கடலிலிருந்து பவழங்களுங், கங்கை யாற்றிலிருந்து அதன் பொருள்களும், இலங்கை பர்மா என்னும் நாடுகளிலிருந்து அவற்றின் விளை பொருள்களும் அந்நகரத்தில் வந்து விலையானமையும், இற்றைக்குச் சிறிதேறக் குறைய இரண்டாயிர ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்ட பட்டினப்பாலையிலும் அதற்குச் சிறிது பிற்பட்ட சிலப்பதிகாரத்திலும் விளக்கமாகச் சொல்லப்பட்டிருக்கின்றன வல்லவோ? கிரேக்க நாட்டிலுள்ள யவனர்கள் தமிழ்நாட்டிற் போந்து தமிழக அரசர்களின் கீழ்ப் பல அலுவல்கள் பார்த்தமை பெருங்கதை, முல்லைப்பாட்டு முதலான பழந்தமிழ்ப் பாட்டுகளில் நன்கு குறிக்கப்பட்டிருக்கின்றது. இங்ஙனம் பண்டை நாளில் தமிழ் நாட்டார் அயல் நாடுகளிலும் அயல் நாட்டார் தமிழ் நாடுகளிலும் போந்து ஒருவரோடு ஒருவர் அளவளாவியிருந்தமை இனிது புலப்படுதலின் வேற்று நாட்டவர்க்குரிய மொழிகளின் சொற்களிற் சில தொன்று தொட்டே தமிழிற் புகுந்து வழங்குவதாயின என்று உணர்தல் வேண்டும். இவ்வாறு நேர்ந்த கலப்பின்றன்மையை ஆராய்ந்து உணர்வார்க்குத் தமிழர் பண்டைக் காலத்திலேயே நாரிகத்திற் சிறந்து விளங்கினாரென்பது புலனாகும். அங்ஙனமாயின், வேற்று நாட்டுச் சொற்கள் தமிழிற் கலந்தது போலவே, தமிழ்ச் சொற்களும் மற்றைத் தேய மொழிகளிற் கலந்து காணப்படுதல் வேண்டுமே யெனின், ஆம், தமிழ்ச் சொற்கள் பல பழைய மொழிகளிலும் புதிய மொழிகளிலுங் கலந்து வழங்கவே படுகின்றனவென்று கடைப்பிடிக்க. ஆணி மீனம் நீர் தாமரை கலை குடம் முதலான பல சொற்கள் ஆரிய மொழியிலும், அசை அருவி இரும்பு ஈன் எல்லாம் மேன்மை முகில் முதலான பலசொற்கள் ஆங்கிலம் இலத்தீன் கிரேக்கு முதலான ஐரோப்பியர் மொழிகளிலும், அவா இரு ஊர் எருமை சினம் செவ்வை முதலான பலசொற்கள் காலடி ஈபுரு முதலான மிகப் பழைய மொழிகளிலும், இன்னம் பல மற்றும் பல மொழிகளிலுமாக ஒருங்கு கலந்து காணப்படு கின்றன. அவையெல்லாம் இங்கெடுத்துக் காட்டப் புகுந்தால் இக் கட்டுரை மிக விரியுமாதலின் அவை தம்மை நுண்ணிய ஆராய்ச்சியாற் பல நூலுதவி கொண்டு அறிந்துகொள்க. இவ்வாறு மொழிகள் ஒன்றோடொன்று கலக்கப் பெறுதற்கு அவற்றை வழங்கும் மக்களின் நாகரிகமே வழியா யிருத்தலால், நாகரிகம் வாய்ந்த எந்த மொழியும் பிறமொழிக் கலப்பில்லாமல் இருத்தல் இயலாது. அது மக்களியற்கை யினையும் அவரது வாழ்க்கையின் இயல்புகளையும் அமைதியாக ஆராய்ந்து பார்ப்பவர்க்கல்லாமல் மற்றவர்க்கு ஒருசிறிதும் விளங்கமாட்டாது. தமிழ்மக்கள் பண்டு தொட்டே நாகரிகத்திற் சிறந்தவரா யிருந்ததனால் அவரொடு பல மொழிபேசும் பல நாட்டவருங் கலந்து பழகவே மற்ற மொழிகளின் சொற்களிற் சில தமிழிலுங் காணப்படுவ ஆயின. இங்ஙனங் காணப்படுதல் தமிழ் மொழியின் நாகரிகச் சிறப்பினையும் அதன் வளர்ப்பத் தினையுங் காட்டுகின்றதே யல்லாமல், அதற்கு அது தாழ்வாதலைக் குறிக்கின்றதில்லை. உண்மை இவ்வாறிருப்ப, இதனைச் சிறிதும உணர மாட்டாமல் சுவாமிநாத தேசிகர் என்பார் தாம் இயற்றிய இலக்கணக் கொத்தில், அன்றியுந் தமிழ் நூற்களவிலை அவற்றுள் ஒன்றே யாயினுந் தனித் தமிழுண்டோ எனக் கூறியது வெற்றாரவார வுரையாமன்றிப் பிறிதென்னை? மேலும், நெடுங்காலம் உயிரோடிருந்து திகழும் ஒரு மொழியிற் பிற சொற்கள் கலத்தல் போலச், சின்னாள் உயிரோடிருந்து பின்னர் இறந்துபடும் ஒரு மொழியிற் பிறசொற்கள் மிக நுழைந்து நிலைபெறுதற்கு இடமேயில்லை. இதனாலேதான், ஆரிய மொழியிற் பிறமொழிச் சொற்கள் மிகுதியாகச் சேர்ந்து காணப்படவில்லை. ஆரியம் பல்லாயிர ஆண்டுகட்கு முன்னரே எவரானும் பேசப்படாமல் இறந்து பட்டமையின், அதன் கட்பிறசொற்கள் புகுதற்கு வழியில்லாமற் போயிற்று. இதுகொண்டு ஆரியமொழி உலக வழக்கிற்குப் பயன்படாமையோடு அது நாகரிக வளர்ச்சிக்கு இசைந்த தாகாமையும் நன்கு பெறப்படும். ஒருவர் ஒருமொழி பேசுகின்ற வராய் இருந்தால்மட்டும் அவர் மற்றமொழிச் சொற்களை எடுத்தாள நேருமல்லது, அவர் ஏதுமே பேசாத ஊமையா யிருந்தால் அவர் பிறவற்றை எடுத்தாளச் சிறிதும் இடமுண்டாக மாட்டாது. ஆதலால், உலக வழக்கிலின்றி இறந்துபட்ட ஆரியமொழி பிற மொழிச் சொற்களை ஏற்கவும் மக்கள் வாழ்க்கைக்குப் பயன்படவும் மாட்டாதாயிற்றென்க. இனி, உலக வழக்கின்கண் உள்ள ஒரு மொழியிற் பிறசொற்கள் வந்து சேருமாயின், அஃது இயற்கையாக நிகழவேண்டுமே யல்லாமற் கல்வியறி வுடைய சிலரால் அவர் தமக்குத் தோன்றியபடி யெல்லாம் அவை செயற்கையாக வலிந்து புகுத்தப்படுத லாகாது. அன்றி அங்ஙனம் புகுத்தப்படு மாயின் அவை அம்மொழியில் நிலைபெற்று உயிர் வாழா. இருவர் தமக்குள் தோன்றிய நேசத்தால் ஒருங்கு ஒட்டி உயிர் வாழ வேண்டுமே யல்லாமல், பிறரால் வலிந்து பொருத்தப்பட்டு அவர் ஒன்றுபட்டிருத்தல் இசையாது. இவ்வியல்பு மொழிகளின் சேர்க்கையிலும் பிறழாமல் அமைந்திருப்பதொன்றாம். ஒருமொழி வழங்கும் ஒருதேயத்தில் உள்ளார் புதிதாக ஒரு பண்டத்தைக் கண்டுபிடித்துச் செய்து அதற்குத் தமது மொழியிற் பெயரும் இட்டுப் பிறகதனை வேறு தேயங்களிற் கொண்டுபோய் விலைப்படுத்துங்கால், அப்பண்டத்தின் பெயர் வேறு மொழியிற் கலத்தல் இயற்கையேயாம். இத்தகைய நிகழ்ச்சிகளிலுங்கூடப், புதுப் பண்டங்கள் வாங்கும் மற்ற நாட்டவர் நாகரிகமும் உயர்ந்த அறிவும் உடையவராயிருந்தால், அவற்றிற்குத் தமது மொழியிலே புதுப்பெயரிட்டும் வழங்குவர். மேல் நாட்டிலிருந்து வந்து இத் தென்னாட்டில் விலையாகுந் தெளிவான ஒருவகை மட்பாண்டத்தைக் கிளாசு என்றுங் கோப்பை என்றும் இச்சொற்கள் ஆங்கிலச் சொற்களின் திரிபுகளாகும்; இப்பாண்டங்கள் மேல் நாட்டிற் செய்யப் பட்டனவாய்த் தமிழ்நாட்டிற்குப் புதியனவாய் இருத்தலால், இவற்றிற்குரிய ஆங்கிலச் சொற்களைத் தமிழர் தாமும் எடுத்தாளுதல் பொருத்தமேயாம்; இப்பாண்டங்களையுங் கூடத் தமிழறிவு மிக்கவர்கள், `கண்ணாடிக்குவளை பீங்கான் கிண்ணம் என்று தமக்குரிய தமிழ்ச் சொற்களாலேயே வழங்குவர். `எஞ்சின், `டிரெயின், `டிக்கெட்டு, `டிராம்ஞ், `கூல், `கமிஷன் ஏஜெண்டு, `ஷாப்பு, `மார்க்கெட்டு, முதலான ஆங்கில மொழிகளைப் பொதுமக்கள் அவற்றிற்கு முறையே `பொறி, `வண்டித் தொடர், `சீட்டு, மின்சாரவண்டி, `பள்ளிக்கூடம், `தரகன், `கடை, `அங்காடிக்கடை முதலான தமிழ்ச் சொற்களையே இட்டு வழங்குவர். கல்வியறிவும் நாகரிகமும் வாய்ந்தவர்கள் இங்ஙனம் பிறநாட்டுச் சொற்களை எடுத்து வழங்க வேண்டிய இடங்களிலும் அவற்றிற்கு ஈடாகத் தமது மொழியிலுள்ள சொற்களையே நடைபெற விட்டு வாழ்வர். இவ்வாறு செய்தல் அவர்க்குள்ள முயற்சியின் திறத்தையும் நாகரிகச் சிறப்பினையுந் தமது மொழியில் வைத்த பற்றினையும் வெளிப்படையாகக் காட்டுவதாகும். முயற்சியும் உண்மையான பற்றும் இல்லாதவர்கள் பிறமொழி பேசுவோருடன் கலந்தால் தமது மொழிச் சொற்களை விட்டுப் பிறசொற்களையே எளிதில் எடுத்தாளத் தலைப்படுவார்கள். தமக்குரிய மொழியை வளம்பெறச் செய்யும் முயற்சியும் அதன்பாற் பற்றும் இல்லாமற் போதல் எதனால் என்றாற், பிறிதொரு மொழியிலுந் தாம் வல்லுநர் என்பதைக் காட்டித் தம்மை உயிர்வுபடுத்திக் கொள்ளும் எண்ணமும், பொருள் வருவாய் ஒன்றிலேயே நோக்கம் வைத்து அதற்கேற்றது பிறமொழிப் பயிற்சியே என்ற பிழைபட்ட கருத்துங் கொள்ளப் பெற்றிருத்தலாலேயாம். இதற்கு இத்தென்றமிழ் நாட்டிலுள்ள பார்ப்பன மாந்தரும், அவரைப் பின்பற்றினவரும் விடாப்பிடியாய்க் கைக் கொண்டிருக்கும் ஒழுகலாறே ஒரு பெருஞ் சான்றாகும். இத்தமிழ்நாட்டின்கண் உள்ள பொருள்களை வழங்குவதற்கு ஏராளமான தமிழ்ச் சொற்கள் இருப்பவும், அவற்றை விடுத்து இத் தென்னாட்டிற்கு உரியவல்லாத வடமொழிச் சொற்களாலும், இப்போது சில ஆண்டுகளாக ஆங்கிலச் சொற்களாலும் அவற்றை அவர் வழங்கி வருகின்றனர். தமிழ் மக்கள் எல்லாருந் தண்ணீர் என்று வழங்கிவர, அவர்கள் அதனை ஜலம் என்று கூறுகின்றார்கள். `எனக்கு ஓர் ஏனத்திலே குளிர்ந்த நீர் கொண்டுவா, வறட்சியாயிருக்கின்றது என்று சொல்ல வேண்டுவதை, `நேக்கு ஒரு பாத்திரத்திலே குளுந்த ஜலங்கொண்டா, தாகமா இருக்கு என்று வடசொற்களைச் சேர்த்தலோடு இடை யிடையே யுள்ளே தமிழ்ச் சொற்களையுஞ் சிதைத்துப் பேசுகின்றார்கள். இன்னும் `பயனற்ற செயல் என்பதைப் `பிரயோஜனமற்ற காரியம் என்றும், வெயில், வெளிச்சம், வானம், காற்று, நெருப்பு, உணவு, உழவு, அலுவல், தூய்மை, நாடோறும், கல்வி என்பவற்றை முறையே சூர்ய ப்ரகாசம், ஆகாசம், வாயு, அக்நி, ஆகாரம், விவசாயம், உத்யோகம், பரிசுத்தம், திநே திநே, வவித்தை என்றும் வடசொற்களை அவர்கள் வழங்கி வருதல் எவரும் அறிவர். இவ்வாறு இன்னும் நூற்றுக்கணக்கான வட சொற்களை அவர்கள் தமிழ்ப் பேசுங்கால் இடையிடையே வேண்டா கூறலாய் வழங்கி வருகின்றனர். இங்ஙனஞ் செய்தல் இறந்துபோன வடசொற்களை முற்றுமே அங்ஙனம் விடாமற், சில பல சொற்களை யேனும் உலக வழக்கிற் பயிலவிடுதற்கு வழியாய் இருத்தலின் அது குற்றமாய்க் கொள்ளப்படுதலாகாதெனின், இறந்துபோன வடமொழியின் சில சொற்களை உயிர்ப்பிக்கின்றேன் என்று புகுந்து பன்னூறாயிரம் மக்களுக்குப் பயன்பட்டு வழங்கி உயிரோடு உலாவிவருந்தமிழ் மொழியின் சொற்களை இறக்கச் செய்தல் எள்ளளவும் பொருந்தாது. கையிலுள்ள பெருந் தொகைப் பொருளைக் கடலிற் கொண்டுபோய் எறிந்துவிட்டு, நிலத்தை அகழ்ந்து அடியிலுள்ள பொருளை எடுக்க முயல்வார், திறத்திற்குந் தமிழ்ச் சொற்களைக் கைந்நெகிழ விட்டு வடசொற்களை வருந்திச் சொல்ல முயல்வார் திறத்திற்கும் வேறுபாடு சிறிதுங் காண்கிலேம். வடமொழியைத் தனியே முழுதும் உயிர்ப்பிக்க முயன்றாலும் அதனைச் சிறிது பயனுடையதென்று சொல்லலாம். அங்ஙனஞ் செய்ய இயலாது அதன் சொற்கள் சிலவற்றை மட்டும் உயிரோடுலவுஞ் சிறந்த மொழியில் வலிந்து புகுத்தி அம் மொழிக்குக் கேடு சூழ்தல் பெரிதும் இழிக்கத்தக்க தொன்றாகும். இன்றியமையா இடங்களில் வட சொற்கள் சிலவற்றை எடுத்தாளுதல் வழுவென்று யாங்கூறவில்லை. பொருள்களைக் குறிப்பிடுவதற்கு ஏராளமான தமிழ்ச் சொற்கள் இருக்கையில், அவற்றை விடுத்துப பிறவற்றைப் புகுத்தலையே பெரியதொரு குற்றமாக நினைக்கிறோம். பிற சொற்களை எடுத்து வழங்குதற்கு இன்றியமையா இடங்கள் என்பன, புதுப் பொருளைக் கூறுதற்குத் தமிழில் உள்ள சொற்களை எவ்வளவு முயன்று பார்த்தும், அதற்கு அவை இசையாத நேரங்களேயாம். முயற்சியும் அறிவும் உடையவர்கள் கருத்து வைத்தால் எத்தகைய புதுப் பொருள்கட்குந் தமிழிலேயே பெயரமைக்கலா மென்பதே நமது கொள்கை. உயிரோ டுலவிவரும் மொழிகள் எவையாயிருப்பினும், அவை எத்துணை ஏழைமை யுடைய வாயினும் அவற்றிற்குரியோர் உண்மைப் பற்றுடையராய் அவற்றை அங்ஙனம் வளம்பெறச் செய்து வருகுவராயின் அதனால் அவர் உயரமான அறிவும் நன் முயற்சியும் மேன்மேல் மிகப் பெற்றுத் தாமுந் தம் மினத்தாரும் உயர்வர். இனி, இவ்வாறன்றி இக்காலத்துப் பார்ப்பன மாந்தர் போல் வடமொழிச் சொற்களையும் ஆங்கிலம் முதலான ஏனை மொழிச் சொற்களையுந் தமிழின் இடையிடையே கலந்து பேசுவோர், தூய தமிழ்ப் பேசும் மற்றைப் பெரும்பாலாரின் வேறாகப்பிரிந்து அவர்களோடு தொடர்பில்லாதவராய், அவர்களால் தாமுந் தம்மால் அவர்களும் பெறும் பயன் வரவரக் குறையத், தாமுந் தம் மினத்தாருஞ் சில நூற்றாண்டு களில் தமிழுக்கு முற்றும் புறம்பாய் வேற்றினமாய் மறைந்து போவரென்பது திண்ணம். இஃது இவர்க்கே தாழ்வாய் முடியுமல்லாமற், பன்னூறாயிரம் மக்களிடையே பரவியிருக்குந் தமிழுக்கு அதனாற் சிறிதுஞ் சிறுமை வராது. அங்ஙனமன்று, பார்ப்பன மாந்தரும் அவர்போல்வார் பிறரும் வடமொழியையே தமக்குரிய மொழியாகக் கருதி அதனையே மிகவும் பயிலுதலின் அதன் சொற்களைத் தமிழிற் கலந்து பேசுகின்றாரெனின், அங்ஙனம் வட மொழியினிடத்து மிகுந்த பற்றுவைத்து அதனையே பயிலும் அவர்கள் அம்மொழியைத் தம் பெண்டிர் பிள்ளைகள் முதலான எல்லார்க்குங் கற்பித்து அம்மொழியிலேயே அவருடன் பேசுதல் வேண்டும்; அதுவே அதன் பால் வைத்த உண்மைப் பற்றுதலுக்குப் பொருத்தமாகும். தமிழருடன் தமிழிற் பேச விருப்பம் இல்லாத அவர்கள், தாம் தமிழரோடு உண்ணல் கலத்தல்கள் செய்யாது அவரின் வேறுபிரிந்து தம்மை உயர்வுபடுத்திக் கொண்டது போலவும், அவர்களுள் வடமொழியை நிரம்பக் கற்றோர் சிலர் தமிழரொடு தாம் நேரே பேசுதலும் ஆகாதென்று ஓர் ஏற்பாடு செய்துகொண்டிருத்தல் போலவுந் தாமுந் தமிழையே முற்றும் பேசாதொழிதலே பொருத்தமுடைத்தாம். அவ்வாறு தங்கொள்கைக்கு ஏற்ப நடத்தலை விடுத்து, வடசொற்கள் சிலவற்றைத் தமிழொடு கலந்து பேசுதலால் மட்டுமே அவர் வடமொழிக் குரியராய் விடுவரோ? அவருட் சிலர் இப்போது ஆங்கிலங் கற்றுஆங்கிலச் சொற்களையுந் தமிழிற் சேர்த்துப் பேசுகின்றார். அதனால் அவர் ஆங்கில மொழிக்கு உரியராவரோ? ஆகாரன்றே, அது போலவே; வடமொழியைத் தஞ்சுற்றத்தார் எல்லாரோடும் முற்றும் பேசத் தெரியாத அவர் அதன்பாற் பாராட்டும் பற்று வெறும் போலியே அல்லாமல் ஏதும் பயனுடையதாகக் காணப்படவில்லை. ஆகவே, உலக வழக்கிற்குப் பயன் படாத வடமொழிமேல் வைத்த போலிப்பற்றால் வளம் நிறைந்த தூய தமிழைக் கெடுக்க முந்துதல் பார்ப்பன மாந்தர்க்கும் அவரைப் பின்பற்றினார் பிறர்க்குஞ் சிறிதும் முறையாகாது. அவ்வாறன்று, வடமொழி உலக வழக்கிற் பெண்டிரானும் பிள்ளைகளானும் பேசுதற்குப் பொருந்திவராத உரத்த ஓசைகளுங் கனைக்கும் ஒலிகளும் உடையதாய்ப், பெயர் வினைகளில் உயர்திணை அஃறிணைப் பாகுபாடுகள் உலக இயற்கையில் அமைந்தபடியாக இல்லாமற் செயற்கையாக வலிந்து வகுக்கப்பட்டு, ஊன்றிப் பயில்வார்க்கும் பேருழைப் பினையும் பெருவருத்தத்தினையும் தருவதா யிருத்தலின் அஃது எல்லாரானும் பேசப்படாததனை ஒரு குற்றமாகச் சொல்லுதல் ஆகாதெனின், இது குற்றமோ அன்றோ என்பதனை இங்கு முடிபு கட்டப் புகுந்திலம். உலக வழக்கிற் பெண்டிர் சிறார் முதலான எத்திறத்தாரானும் பேசுதற்கு இயைந்த எளிய தன்மையுந், தன்னைக் கற்பார்க்கு இனியவாய்க் காணப்படும் இயற்கைப் பொருத்த முள்ள சொன்முடிபு பொருண்முடிபுகளும் வாய்ந்து பல்லாயிர ஆண்டுகளாக இளமை குன்றாமல் வழங்கி வரும் அருமை பெருமை மிக்க செந்தமிழ் மொழியில் வேண்டா கூறலாய் ஆரியம் ஆங்கிலம் முதலான பிறமொழிச் சொற்களைக் கொண்டுவந்து நுழைத்தல் பெரிதுங் குற்றமாவதாம் என்பதனையே இங்கே விளக்கப் புகுந்தோம். இனி, இன்றியமையாது வேண்டப்பட்டுத் தமிழில் வந்து கலக்கும் அயல்மொழிச் சொற்கள் தமிழிற் பொருந்துதற்குரிய இயல்பினையுஞ் சிறிது ஆராய்ந்து காட்டுவாம். தமிழில் வந்து கலக்கும் ஆரியம் ஆங்கிலம் முதலான அயல் மொழிச் சொற்கள் தம் தன்மை திரிந்து தமிழோடொத்துத் தமிழினுருவத்தைப் பெற்று இயல்பாக வழங்கி வருகின்றன. ஜ்ஞாநம், ம்ருகம், தலம், ரங்க, க்ஷீரம், பிரகாசம், ப்ராசி, சக்தி, ஈச்வர முதலான வட சொற்கள் தமிழில் முறையே ஞானம், மிருகம், தலம், அரங்கம், கீரம், பிரகாசம், பாசி, சத்தி, ஈசுவரன் முதலியனவாகத் திரிந்து தமிழோடொத்து நடைபெறுகின்றன; க்ளா, கப், பாட்ல், பம்ப், பைபிள், ஐயோ நியன், க்ரைட், ஜான் முதலான ஐரோப்பிய மொழிச்சொற்கள் தமிழில் முறையே கிளாசு, கோப்பை, போத்தல், வேம்பா, விவிலியம், யவனர், கிறித்து, யோவான் முதலியவனவாகத் திரித்துத் தமிழோ டொத்து நடக்கின்றன. இங்ஙனமே ஆரியம் தமிழ் முதலியவற்றின் சொற்கள் ஆங்கில மொழியிற் பலவாறு திரிந்து அம்மொழியின் தன்மைக் கேற்ப உலவுதலை, இவ்விந்தியாவிலுள்ள ஊர்ப் பெயர்கள் ஆங்கிலத்திற் சொல்லப்படுங்கால் திரிபடையும் வேறுபாடு ஒன்று கொண்டே நன்கு தெளியலாம். இன்னும் இவ்விந்தியாவில் இப்போது வழங்கிவரும் பல மொழிகளுள் ஒன்றன் சொற்கள் மற்றொன்றில் கலக்குங்கால் அம்மற்ற மொழியின் றன்மைக்கு இசையவே அவை திரிந்து வழங்குதலை அவ்வம் மொழியிலும் ஆராய்ந்து பார்த்துத் தெளியலாம். இவ்வாறு ஒரு மொழியின் சொற்கள் மற்ற மொழியில் அதன் றன்மைக் கேற்பத் திரிந்து வழங்கும் இயற்கை கண்கூடாய் அறியப்பட்டுக் கிடத்தலின், தமிழிலும் பிறமொழிச் சொற்கள் தமிழுக் கேற்றவாறு திரிந்து வழங்கல் பெரிதும் பொருத்த மாவதே யாம். ஒரு மொழிச் சொற்கள் வேறொரு மொழியில் அங்ஙனந் திரிந்து வழங்க வேண்டுவதுதான் என்னை? அவற்றைத் திரிபுபடுத்தாமல் உள்ளபடியே வைத்து வழங்குதலால் வரும் இழுக்கு என்னை? எனின், உலக வழக்கில் நடைபெறும் ஒவ்வொரு மொழியும் உயிரோடு உலவும் உடம்பு போல்வதாக லானும், உடம்பு நிலைபெற்றிருந்து வளர்தற்பொருட் அதற்கு இடும் பல்வேறு உணவுப் பொருள்களுந் தந்தன்மை திரிந்து அவ்வுடம்பின் றன்மையோடு ஒத்து ஒன்று பட்டால் அல்லாமல் அவ்வுடம்பு நிலைபெற்று வளராமைபோல, உயிரோடு உலவும் ஒரு மொழியிற் போந்து கலக்கும் பிறமொழிச் சொற்கள் அம்மொழியோ டொத்துத் திரிந்து அதனோ டொன்றுபட்டு நின்றலல்லது அம்மொழி வளராமையானும், ஒரு மொழியில் ஏனை மொழிச் சொற்கள் திரிந்து காணப்பட வேண்டுவது இன்றியமையாத இயற்கையேயாம் என்க. இவ்வியற்கைக்கு மாறுபாடு இல்லாமலே தமிழ் மொழியின் கண்ணும் வேற்று மொழிச் சொற்கள் தமிழிற்கேற்பத் திரிந்து காணப்படுகின்றன. இஃதிங்ஙனமாகவும், இப்போது சில ஆண்டுகளாகப் பார்ப்பனரில் தமிழிலே நூல் எழுதுவார் சிலரும் அவரைப் பின்பற்றின வேறு சிலரும் வடமொழிச் சொற்களையும் ஆங்கிலச் சொற்களையும் மிகுதியாகக் கொண்டுவந்து தமிழில் வலிந்து புகுத்துவதோடு, அவற்றைத் தமிழுக்கேற்பத் திரிபு படுத்தாமல் அம்மொழியில் உள்ளபடியே எழுதுகின்றார்கள். ஜ்ஞானம், ம்ருகம், ப்ரகாசம் முதலியனவாக மேலெடுத்துக் காட்டிய வடசொற்களையும், க்ளா, பாட்ல், க்ரைட் முதலான ஆங்கிலச் சொற்களையுந் தமிழுக்குப் பொருந்தத் திரிபுபடுத்தாமல், இனிய மெல்லிய தமிழ்ச் சொற்களின் இடையே அவற்றை அங்ஙனமே எழுதினால் அவை, தமிழின் இனிமையிலும் அருமையிலும் பழகினார்க்கு எவ்வளவு அருவருப்பாய்த் தோன்றுகின்றன! தேனும் பலாச்சுளையுங் கலந்து அருந்துவார்க்கு, அவற்றிடையே முட்கள் விரவியிருந்து நாவிற்றைத்தால் அஃது எவ்வளவு துன்பத்தினையும் வெறுப்பினையுந் தருமோ, அதுபோலவே வேண்டா வழக்காய் உருவு திரியாமல் தமிழில் வரையப்படும் வேற்று மொழிச் சொற்கள் உண்மைத் தமிழ் அறிஞர்க்குப் பெரியதொரு வருத்தத்தினையும் அருவருப்பினையும் விளைக்கின்றன. எவ்வகைப் பொருளையும் எத்தகைய கருத்தையுந் தெரிவித்தற்கு எண்ணிறந்த தமிழ்ச் சொற்கள் இருப்பவும், அவற்றைப் புறந்தள்ளி மற்றைமொழிச் சொற்களை அதன்கட் கொண்டு வந்து புகுத்தலே ஒரு பெருங் குற்றமாம்; அதன் மேலும், இயற்கைக்கு மாறாய் வருந்திச் சொல்ல வேண்டும் அவ்வயல்மொழிச் சொற்களை, இயற்கையோடொத்து மெல்லென நடக்குந் தமிழ்ச் சொற்களி னிடையே சேர்த்துக் கூறுதல் அதனினும் பெரியதொரு குற்றமாம். அஃதல்லாமலும், வயிற்றிற்கு இடப்பட்ட உணவுப்பொருள்கள் தமது உருவு திரிந்து உடம்பிற்கு வேண்டும் பாலாக மாறாமல், அவை அங்ஙனமே வயிற்றினுட் கிடந்தால், அவை அவ்வுடம்பிற்குச் சிறிதும் பயன்படாமையோடு அவ்வுடம்பினையும் பழுது படுத்துமன்றோ? அது போலவே தமிழின் தன்மைக்கு ஏற்ப உருவு திரியாமல் எழுதப்படும் வடசொற்கள் முதலியனவும், பயன்படாது போதலொடு தமிழின் அழகையுஞ் சிதைவு படுத்தா நிற்கின்றன. மேலும் இயற்கை யழகாற் சிறந்த ஒரு நங்கைக்கு அவளது இயற்கை யழகு ஒன்றுமே அமையும்; அன்றி அவட்கு வேறு ஆடை யணிகலன்கள் அணிந்து பார்க்க வேண்டினும், அவளது அழகிற்குப் பொருத்தமான சிலவற்றைத் தெரிந்தெடுத்து அவளை ஒப்பனை செய்வதே வாய்ப்புடைத்தாம்; அங்ஙனமின்றி அவளது நலத்திற்குப் பொருந்தாதவற்றையும், பொருந்துமேனும் அளவிற்கு மேற்பட்ட ஆடையணிகலத் தொகுதிகளையும் அவள் மேல் இடுதல் அவளது ஒப்புயர்வற்ற அழகைக் குறைப்பதோடு காண்பார்க்கும் நகையினைத் தரும். இங்ஙனமே இயற்கை நலம் நிரம்பிய தமிழுக்குஅதன் நலம் ஒன்றுமே அமையும்; அன்றி இன்றியமையாது வேற்றுமொழிச் சொற்களைச் சேர்க்க வேண்டி வந்தக்கால், அதன் இயல்புக்குப் பொருந்தினவற்றையே சேர்த்தல் அழகுடைத்தாம்; அவ்வாறன்றி அதன் இயற்கைக்கு மாறானவற்றையும், மாறாகாவிடினும் அளவுக்கு மிஞ்சிய அயல்மொழிச் சொற் களையும் அதன்கண் வலிந்து புகுத்தல் அதன் நலத்தைக் குறைப்பதொடு தமிழறிவு மிக்க சான்றோர்க்கு நகையினையும் விளைக்கும் ஆதலால், அயல்மொழிச் சொற்களை உருவு திரியாமற் சேர்த்தலும், உருவு திரிந்தவற்றையும் அளவுக்கு மிஞ்சிச் சேர்த்தலும், ஒரு சிறிதும் பொருந்தாவென்று கடைப்பிடித்துணர்க. அங்ஙனமாயின், தமிழ்ச்சொற்கள் இயற்கையொலியுடையவாதலும், மற்றை மொழிகள் இயற்கைக்கு மாறான செயற்கையொலி யுடைய வாதலும் எவ்வாறெனின், அவ்வேறுபாட்டைத் `தமிழின் ஒலியெழுத்துக்கள் என்ற கட்டுரையில் விளக்கிக் காட்டி யிருக்கின்றோம்; ஆண்டுக் கண்டுகொள்க. 12. தனித்தமிழ் மாட்சி பண்டைக்காலந் தொட்டு இன்றுகாறும் நடைபெறும் மொழி தமிழ் ஒன்றே ஆகும். பண்படுத்தப்பட்ட பழைய மொழிகளில் தன்னைத் தவிர மற்றைய வெல்லாம் இறந்து போகவுந், தான்மட்டும் இறவாமல் நடைபெற்றுப், பன்னூறா யிரம் மக்களுக்குப் பெரிது பயன்பட்டு வரும் பெருஞ் சிறப்பு வாய்ந்த தமிழ் மொழியைக், கல்லாதவர் எல்லாந் தூய்தாய் வழங்கிவர, அதனைக் கற்று அதனாற் பேரும் புகழும் பொருளும் அடைந்துவருஞ் சிற்சிலர் மட்டுந் தமக்கு எல்லா நலங்களையுந் தந்து தாயினுந் தம்மைப் பாதுகாத்துவரும் அதனை நிலை குலைத்து அழித்தற்குக் கங்கணங்கட்டி நிற்கின்றார்கள். இவர்களின் இக்கொடுஞ் செயல் தன்னைப் பெற்ற தாயைக் கொல்லுஞ் செயலினுஞ் கொடியதாய் இருக்கின்றது. இன்னுந் தமிழிற் பிறமொழிச் சொற்களை ஏற்றி அதனை மாசுபடுத்தி யழிப்பதுதான் அதனை வளர்ப்பதாகும் என்று எழுதுவோர், தூய தனித் தமிழ் எழுதுவாரைக், குறுகிய மனநிலை, அறியாமை, பேதைமை யுடையரென இகழ்ந்து பேசிவிடுகின்றனர். கொள்கை யளவில் ஒருவரொடு மற்றொருவர் மாறுபட்டிருப்பதுபற்றி, அவர் மற்றவரைக் குறுகிய மனநிலை யுடையவர் எனவும், அறியாமை, பேதைமை மிக்கவர் எனவும் இகழ்ந்து பேசுதல் அறிவுடை யார்க்கு முறையாகாது என்பதை மட்டும் வற்புறுத்துகின்றோம். தாங் கொண்ட கொள்கையே உண்மையானது என்று ஒவ்வொருவருந் துணிந்துரைத்தல் ஆகாது. மக்கள் எல்லாருஞ் சிற்றறிவுஞ் சிறுதொழிலும் உடையர். ஒருவர் ஒருகாலத்து அறிவெனக் கொண்டது பிறிதொரு காலத்து அறியாமையாக மாறுதலும் உடைத்து, இதனைத் தெய்வப் புலமைத் திருவள்ளுவ நாயனாரும், அறிதோ றறியாமை கண்டற்றால் என நன்கு தெருட்டி யிருக்கின்றனர். இத்தகைய நிலையில் உள்ள மக்கள் ஒருவரை யொருவர், அறியாமை யுடையர் என்று இகழ்ந்து பேசுவதினுந் தகாதது யாது உளது! தாந்தாம் உண்மையெனக் கண்டவைகளைத் தக்க சான்றுகள் கொண்டு விளக்கிப் போதலே அறிவுடையார்க்குக் கடனாவதாம்; தமக்கு மாறான கொள்கை யுடையாரை இகழ்ந்து பேசுதல் அவர் தமக்குச் சிறிதும் முறையன்றாம். அது நிற்க. இனி, நமது செந்தமிழ் மொழியில் ஆரியம் ஆங்கிலம் முதலான பிறமொழிச் சொற்களைக் கலவாமல், நம்மாற் கூடியவரையில் முயன்று அதனைத் தூயதாக வழங்கல் வேண்டும். ஆனால், ஒரு சாரார், உலகத்தில் உள்ள எல்லாப் பொருள்களும் மாறுந் தன்மையவாகலின் அவற்றுள் ஒன்றாகிய மொழியும் மாறுதல் அடைதல் இயற்கையேயாம் என்றும், அதனால் தமிழும் பலவேறு மொழிக்கலப்புற்று மாறுதல் அடைதல் நன்றேயாமென்றும் வரைந்திருக்கின்றார். இனி, `மாறுதல் என்னுஞ் சொல்லால் உணர்த்தப்படும் பொருள் என்னை? ஒன்று தன்றன்மை திரிந்து மற்றொன்று ஆதலா? அல்லது அது தன் இயல்புக்கு ஏலாதவற்றோடு கலக்கப் பெற்றுத் தன் நிலைகுலைதலா? அல்லது தன்னிலைக்கு ஏற்றவாறு பிறவற்றின் உதவியால் தானே வரவர வளர்ந்து திரிபுறுதலா? எனின், இம்மூன்றும் அம்மாறுதல் என்னுஞ் சொல்லுக்குப் பொருளேயாம். முதலிற் சொன்ன பொருளின் படி, தவளையினத்திற் சேர்ந்த சில சிற்றுயிர்களும் பட்டுப்பூச்சி முதலியனவும் முதலில் ஒருவகை யுருவத்திலிருந்து, பிறகு அவ்வுருவு முழுதுந் திரிந்து தவளையாகவும் பட்டுப்பூச்சி முதலியனவாகவும் மாறுகின்றன. இரண்டாவது சொன்ன பொருளின்படி, மக்கள் முதலான எத்தகைய உயிர்களுந் தம்முடம்பின் இயல்புக்கு ஏலாத நோய்ப் புழுக்களோடும் பாம்பின் நஞ்சையொத்த நச்சுப் பொருள்களோடுங் கலக்கப் பெறுமானால் தம்முடம்பின் நிலை குலைந்து மாறி விரைவில் அழிந்து போகின்றன. இனி, மூன்றாவது சொன்ன பொருளின் படி, உலகத்தில் உள்ள எல்லா உயிர்களுந் தத்தம் நிலைக்கு ஒத்த பொருள்களின் சேர்க்கையால் தமது நிலை கெடாமலே வளர்ந்து திரிபெய்தி வருகின்றன; மக்கள் தமக்கேற்ற உணவுகளை உட்கொண்டும் இசைவான இடங்களிற் குடியிருந்தும், வரவரத் தம்முடம்பும் உணர்வும் மாறிமாறி வளர்ந்து வருகின்றனர்; மக்கள் அல்லாத மற்றை உயிர்களில் நிலையியற் பொருள்களாகிய புல் மரஞ் செடி கொடி முதலியனவும், இயங்கியற் பொருள்களிற் புழு முதல் யாடுமாடு முதலான எல்லாவுயிர்களுந் தத்தமக்கேற்ற உணவுப் பொருள் களை உட்கொண்டு தத்தமக்கு இசைவான இடங்களில் இருந்து நாடோறும் மாறுதல் எய்தி வளர்ந்து வருகின்றன. இம் மூவகைப்பட்ட மாறுதல்களில் எத்தகைய மாறுதலை எல்லா உயிர்களும் விரும்புகின்றன வென்று உற்று நோக்கின், தம் இயல்புக்கு ஒத்தவற்றின் செயற்கையால் தமது தன்மை கெடாமல் வரவரப் பெருக்கமுற்று மாறிமாறி வளர்ந்து வருதலையே அவையெல்லாம் அல்லும் பகலும் விழைந்து வருகின்றவென்பது எல்லார்க்கும் புலனாம். தமக்கு ஏலாத பொருள்களொடு கலந்து தமது நிலைகுலைந்து மாறி மாய்தலை எவ்வகைப்பட்ட உயிரும் விரும்புவதில்லை; தமக்கு இடர்தரும் இடத்தையேனும் பொருளையேனுங் கண்டால் அவற்றை அகன்று போய்ப் பிழைக்கும் முயற்சியைப் புழு முதல் மக்கள் ஈறான எல்லா உயிர்களும் மிகவும் பரபரப்பொடு நிரம்பக் கருத்தாய்ச் செய்தல் எவரும் உணர்ந்ததேயாம், இடம் விட்டுப் பெயராத புல் மரம் முதலியனவுங்கூடத் தத்தமக்கேற்ற இடங்களிற் செழுமையாய் முளைத்தெழுந்து தத்தமக்கேற்ற உணவுகளை உட்கொள்ளும் வரையில் உயிரோடிருத்தலும், அங்ஙனம் அமையாக்கால் அவை பட்டுப் போதலும் எல்லாரும் அறிவர். ஆகவே, உலகில் உள்ள எல்லாப் பொருள்களும் எல்லா உயிர்களும் மாறுதல் அடைதலாகிய பொது நிகழ்ச்சியைப் பார்த்து, அப் பொதுவகையான மாறுதலுள் எத்தகைய மாறுதல் மக்களால் வேண்டப்படுவது என்பதனை உணர்ந்து பாராமல், தம் நிலைகுலைந்து மாறுதலாகிய வேண்டாத தொன்றைக் கடைப்பிடியாய்ப் பிடித்துக்கொண்டு, அதன்படி நமது அருமைச் செந்தமிழ் மொழியுந் தனது தூய நிலைகுலைந்து மாறுதல் அடைய வேண்டுமென்று உரைப்பது அறிவுடைய ரால் ஏற்றுக் கோடற்பாலதாமோ? எல்லாப் பொருளும் எல்லா உலகமும் ஒரு காலத்து மாறி மாய்தல் உண்மையேயாயினும், அம் மாறுதலும் அதனால் வரும் அழிவும் இப்போதே வந்துவிடல் வேண்டுமென்று எவரேனும் விரும்புவரோ? ஆண்டு நிரம்பி முதிர்ந்து இறத்தல் உண்மையேயாயினும், ஆண்டு முதிரா நல்லிளமைப் பொழுதிலேயே நோய் கொண்டும் ஆகாப்பொருள்களொடு கலந்தும் மாய்ந்து போக எவரேனும் விரும்புவரோ? அங்ஙனம் எவரேனும் விரும்புவராயின் அவரை அறிவு திரிபெய்திய வெறியர் என்றே உலகங்கொள்ளுமல்லது, மற்று அவரை அஃது உயர்த்துக் கூறுமோ? ஆண்டில் முதிர்ந்தவர்களுங்கூடத் தமது உடம்பின் நலம் பழுதுபடாத வாறு அறிவான முறைகளைக் கையாண்டு மேலும் மேலும் அதனை நலமுற வைத்து வாழ்நாளைப் பெருக்குதற்கன்றோ முயல்கின்றனர்? நலமுடனிருந்து வாழ்நாளைப் பெருகச் செய்பவர்களுக்கு அறிவு வளர்ச்சியும் அதனாற் பேரின்பப் பேறும் வாய்த்தலால், உடம்பை விரைவில் நிலைகுலையச் செய்பவர்களுக்கு அறிவும் இன்பமும் வாயா. அதுபோலவே, நமது செந்தமிழ் மொழியாகிய ஒலியுடம்பும் பழுதுபடாமற் செவ்வையாகப் பாதுகாக்கப்படு மானால், அஃது இன்னும் பன்னூறாயிரம் ஆண்டு உயிரோடு உலவித், தன்னைப் போற்றி வழங்கும் மக்களுக்கு அரிய பல நலங்களையும் நன்கு பயக்கும். சிலருடம்பு தமக்கு இயற்கை யிலேயுள்ள குறைபாட்டானுந், தம்மை யுடையவர்களால் நன்கு பேணப்படாமையானும் விரைவில் அழிந்துபோதல் போலச், சமகிருதம் இலத்தீன் கிரீக் ஈபுரு முதலான பழைய மொழிகளுந் தமக்கு இயல்பாகவுள்ள குறைபாட்டானுந் தம்மை வழங்கியோர் நாகரிகம் அற்றவராய் இருந்தமையானும் இப்போது மக்களாற் பேசப்படாமல் வழங்குதல் அற்றன. நமது செந்தமிழ் மொழியோ தனக்கு இயற்கையிலேயுள்ள வளப்பத்தானுந் தன்னை வழங்கிவரும் நாகரிக நன்மக்களின் அறிவு முயற்சியாற் பெரிது போற்றப்பட்டு வருதலானுந் தனது இளமைத்தன்மை குன்றாது இன்னும் உலவிவருகின்றது. சிலர் இளமையிலேயே மூத்துப் போதலையும், வேறு சிலர் முதுமையிலும் அது தோன்றாமற் புத்திளமையோடுங் கட்டழகோடும் விளங்குதலையும் நீங்கள் பார்த்ததில்லையா? பாதுகாப்பினால் இளமையும் வாழ்நாளும் இவ்வாறு நீண்டு வருதல்போலவே, நமது தனித் தமிழையுந் தூயதாக வைத்துப் பாதுகாப்போமாயின் அது மக்கள் உள்ளளவும் இறவாது நடைபெறுதல் திண்ணமன்றோ? எனவே, தமிழ் மொழியின் வளவிய வளர்ச்சிக்கு ஏதுவாகிய மாறுதலே எல்லாரும் விரும்பத்தக்கதாமன்றி, அது குன்றி மாய்தற்கு ஏதுவான மாறுதல் அறிவுடையார் எவரானும் எக்காலத்தும் விரும்பாலதான்று. இனித், தமிழ் வளர்ச்சிக்கு மாறான மாறுதல் என்னென்றால், தூய தமிழ்ச் சொற்கள் இருப்பவும் அவற்றை விடுத்து அயன்மொழிச் சொற்களை அதன்கட் கொண்டுவந்து புகுத்தலேயாம். ஓர் உடம்பின் உள்ளும் புறம்பும் உள்ள உறுப்புகள் எல்லாவற்றின் தொகுதியே அவ்வுடம்பாதல் போல, ஒரு மொழியில் உள்ள அதன் எல்லாச் சொற்களின் தொகுதியே அம் மொழியாகும். கூனுங் குறளும் ஊமுஞ் செவிடுஞ் சிதடும் உறுப்பறையுமாய்ச் சில உடம்புகள் இயற்கை யிலேயே பழுதுபட்டிருத்தல் போலவும், அங்ஙனம் பழுதபட்ட வுடம்புகள் அக்குறைபாட்டை நீக்கிக்கொள்ளும் பொருட்டுக் கோலும் குறடும் கழுத்தும் போலிக் கைகால்களுஞ் செயற்கை யாகச் செய்து அமைத்துக்கொள்ளுதல் போலவும், இயற்கையிலே குறைபாடு உடைய ஆங்கிலம் மலையாளம் கன்னடம் தெலுங்கு வங்காளி இந்தி முதலான மொழிகளே மற்றைமொழிச் சொற்களின் உதவியைப் பெரிதும் வேண்டி நிற்கின்றன. மற்று எல்லா நிறைவும் உடைய தமிழ் மொழிக்கோ அங்ஙனம் பிறமொழிச் சொற்களின் உதவி சிறிதும் வேண்டப் படுவதில்லை. மக்கள் இம்மை மறுமையைப் பற்றி அறிய வேண்டுவன வெல்லாம் முற்றும் எடுத்துக் கூறுந், `தொல்காப்பியம், `திருக்குறள் என்னும் நூல்கள் இரண்டுந் தூய தனித் தமிழ்ச் சொற்களால் ஆக்கப்பட்டிருத்தலே யாம் கூறும் இவ்வுண்மைக்குச் சான்றாம். இங்ஙனந் தன் இயற்கைச் சொற்களால் அமைந்ததாகிய தமிழிற் பிறமொழிச் சொற்களைப் புகுத்துதல் எதுபோலிருக்கின்றதென்றால், எல்லா வுறுப்புகளும் அமைந்த அழகியதோர் உடம்பில் உள்ள உறுப்புகளை வெட்டி எறிந்துவிட்டு, வேறு மண்ணாலும் மரத்தாலுஞ் செயற்கையாக அவ்வுறுப்புகள் போற்செய்து அவற்றை அதன்கண் ஒட்டவைத்துப் பார்த்தலுக்கே ஒப்பாயிருக்கின்றது. மயிர் குஞ்சி கூந்தல் முதலிய தமிழ்ச் சொற்களை விடுத்து `ரோமம், `சிகை என்னும் வடசொற்களையும், உடம்பு தலை சென்னி முகம் முதலிய வற்றை நீக்கிச் `சரீரம் `சிரசு `வதனம் என்பவற்றையுங், கண் காது செவி மூக்கு என்பவற்றுக்கு `நயனம் `கர்ணம் `நாசி என்பவற்றையும், மிடறு கழுத்து என்பவற்றுக்கு மாறாகக் `கண்டம் என்னுஞ் சொல்லையுந், தோள் கை முதலியன இருக்கப் `புஜம் `கரம் என்பவற்றையும், வயிறு அகடு இருக்க `உதரம் `குஷி என்பவைகளையும், கால் அடி என்னுஞ் சொற்களுக்குப் `பதம் `பாதம் என்பவற்றையுங் கொண்டு வந்து நுழைத்தல், அவ்வத் தமிழ்ச் சொற்களாகிய உறுப்புகளை வெட்டி யெறிந்து விட்டு, அவை போன்ற ஏனை மொழிச் சொற்களைக் கொணர்ந்து அத்தமிழ் உடம்பின்கண் ஒட்ட விடுதலை போல்கின்றதன்றோ? பொருள்களை `வதுக்கள் என்று சொல்வது எற்றுக்கு? ஒளியைப் `பிரகாச மென்றும், ஓசையைச் `சப்தம், என்றுஞ், சுவையை `ருசி என்றும், மணத்தை `வாசநை என்றுந், தித்திப்பு இனிப்பை `மதுரம் என்றுந், தொடுதல் உறுதலை `பர்சம் என்றுங் கல்வியை `வித்தை என்றுந், தண்ணீர் சோறு உணவு என்பவற்றை `ஜலம் `அந்நம் `ஆகாரம் என்றும், ஆடையை `வதிரம் என்றுங், கட்டாயம் என்பதை `அவயம் என்றுந், தாய் தந்தை மகன் மகள் உறவினரை `மாதா `பிதா `புத்ரன் `புத்ரி `பந்துக்கள் என்றுந் துன்பம் கேடு குடும்பம் என்பவைகளைக் `கஷ்டம் `நஷ்டம் `சம்ஸாரம் என்றுந், தலைமுழுக்கு வழிபாடு இளைப்பு தூக்கம் முதலியவைகளை `நாநம் `பூஜை `ஆயாசம் `நித்திரை என்றும், முயற்சி ஊழ்வினை உயிர் சிவம் கடவுள் என்பவற்றைப் `பிரயத்நம் `விதி `ஆத்மா `ஈசன் `பிரமம் என்றும், நினைத்தல் எண்ணல் சொல்லுதல் என்பவற்றை `ஞாபகம் `பாவநை `வசனித்தல் என்றுந் தூய தமிழ்ச் சொற்களை ஒழித்து வடமொழிச் சொற்களைக் கொண்டுவந்து புகுத்தித் தனித்தமிழ்ச் சொற்களை வழங்காமல் தொலைப்பது தானா நமது அருமைச் செந்தமிழ் மொழியை வளர்ப்பது? அறிவுடையீர், கூறுமின்கள்! இன்னும் இங்ஙனமே எத்தனையோ ஆயிரஞ் சொற்களை வடமொழி முதலான பிற மொழிகளி னின்றுங் கொண்டு வந்து, அவற்றைத் தமிழிற் புகுத்தி, அதன் தூய தனிச் சொற்கள் ஒவ்வொன்றாக வழக்கு வீழ்ந்து போகுமாறு செய்வதுதானா தமிழையும் பிறமொழிகளையுங் கற்றவர் அதற்குச் செய்யும் உதவி? தான் பிடித்ததை எப்படி யாவது நிலைநாட்டிவிடவேண்டு மென்று முன்வந்து தமிழ் மொழியைத் தொலைக்க வழி தேடுவதுதானா தமிழ் கற்று அதனாற் பிழைப்பவர் அதற்குச் செய்யும் நன்மை? தமிழையும் பிறமொழியையுங் கற்கக் கற்கத் தமிழ்மொழிச் சொற்கள் இவை அயல்மொழிச் சொற்கள் இவையென்று நன்குணர்ந்து தமிழில் ஏனையவற்றைக் கலவாமற் பேசுதல் எழுதுதலும், தமிழில் முன்னமே வழக்கு வீழ்ந்த சொற்களையுந் திரும்ப எடுத்து வழங்கவிடுதலும் அல்லவோ கற்றவர் அம் மொழியைப் பாதுகாத்து வளர்த்தற்குச் செய்யும் நன்முறையாகும். ஆங்கிலத்தில் வல்ல நல்லிசைப் புலவர்களான ஷேக்பியர், மில்டன், ஷெல்லி, டெனிசன் முதலியோர் தம்மால் ஆனமட்டும் முயன்று அயல்மொழிச் சொற்கள் விரவாத தூய ஆங்கில நடையிற் பல்லாயிரம் இனிய பாக்கள் பாடியிருப்பதற்காக அவர்களை ஆங்கில நன்மக்கள் எவ்வளவு புகழ்ந்து பேசுகின்றார்கள்! பிற்காலத்திருந்த டெனிசன் தமது காலத்தில் வழங்காது மறைந்த தூய ஆங்கிலச் சொற்களையும் மீண்டும் எடுத்து ஆண்டு அவற்றை வழங்கவிட்டமைக்காக, அவர் கற்றறிவுடைய ஆங்கில நன்மக்களால் எவ்வளவு பாராட்டப்படுகின்றார்! ஜான்சன், கிப்பன் என்னும் உரைநூற் புலவர்கள் மற்றைத் துறைகளிற் சிறந்தவர்களாயிருந்தும், அவர்கள் இலத்தீன், கிரீக் முதலான அயன்மொழிச் சொற்களை மிகுதியாய் எடுத்துத், தம் உரைநூல்களில் விரவவைத் தெழுதினமைக்காக அவர்களை அந்நன்மக்கள் இன்னுங் குறைத்துப் பேசுதல் ஆங்கில நூலுரை வரலாறு கற்பார் எவரும் நன்கு உணர்வரன்றோ? ஆங்கில மொழியில் இலக்கண நூற் புலவராய் விளங்கிய மிக்கிள்ஜான் என்னும் ஆசிரியர், பழைய நாளில் ஆங்கில மக்கள் நாகரிகம் அற்றவராய் இருந்தமை யானே பலமொழி பேசும் பல்வகை நாட்டாரும் அவர்மேற் படையெடுத்து வந்து அவர் தம் நாடு நகரங்களைக் கைப்பற்றிக் கொண்டு அவரொடு நெடுகக் கலந்துவந்தனர் எனவும், அதனாற் பலமொழிச் சொற்களும் வெற்றியாளராய் நிலைபெற்ற அப்பலர் வாயிலாக நீக்கமுடியாதவாறு ஆங்கில மொழியிற் கலந்து நிலைபெறலாயின எனவும் மொழிக் கலப்பின் வரலாற்றை எடுத்துக் காட்டிய பின், பதினெட்டாம் நூற்றாண்டில், இலத்தீன் மொழிச் சொற்களை மிகக் கலந்தெழுதும் நடை புது வழக்கமாய் வந்துவிட்டது. `உரோம் அரசியலின் இறக்கமுஞ் சிதைவும் என்ற நூலை எழுதிய கிப்பன் என்பவரும், அந் நூற்றாண்டிற் சிறந்த ஆங்கிலச் சொற்பொருள் எழுதிய ஜான்சன் என்பவரும் இங்கிலாந்தின் மொழிச் சொற்களை நிரம்பவும் மிகுதியாய் எடுத்துக் கையாண்டனர். கிப்பன் நூற்றுக்கு முப்பது சொல் விழுக்காடும், ஜான்சன் இருபத்தெட்டு விழுக்காடுமாக அயன்மொழிச் சொற்களை விரவவிட்டனர். ஆனாலும், உள்ளூர் நிகழ்ச்சிகளைப் பற்றிக் கலப்பில்லாமல் எழுதிய புலவர்களிடத்தும் அவர்கள் இயற்றிய நூல்களிடத்தும் நாம் வரும்போது, இலத்தீன்மொழிச் சொற்கள் மிக மிகக் குறைவாக இருத்தலைக் காண்கின்றோம். ஜான் முனிவரது நூலின் மொழி பெயர்ப்பில், நூற்றுக்கு நான்கு இலத்தீன் சொற்களே காணப்படுகின்றன; அதில் இன்னும் பலவிடங்களில் இலத்தீன் மொழிச் சொல் ஒன்றுகூட இல்லாத பாக்கள் பலவற்றை நிரைநிரையாய் எடுத்துக்காட்டலாம் என்று கூறிப் பின்னும், பதினேழாம் நூற்றாண்டின் இறுதியில் இச்சொற்களைத் தொகுதியாய்க் கொண்டுவந்து நுழைக்கும் நோக்கம் வலுப்பட்டது; அங்ஙனமே அவை பலவும் வந்து சேர்ந்தன; ஆனாலுந் தாம் வந்திருத்தற்கு உரிய இடங்கள் முன்னமே நிரப்பப்பட்டமையுந், தாம் வேலைசெய்தற்கு வாய்த்த பொழுதுகள் முன்னறிந்து நிறுத்தப்பட்டமையுங் கண்டவுடனே அவை வந்தபடியே திரும்பிவிடலாயின. அது முதல் அவை பின்னர்க் கேட்கப்படவே இல்லை. குரு முதல்வரான ஜெரிமிடெய்லர் sportiveness என்னும் ஆங்கில மொழிக்கு மாறாக ludibundness என்னும் இலத்தீன் மொழியையும், mental blindness என்பதற்கு மாறாக city என்னுஞ் சொல்லையும், secret என்பதற்கு மாறாக clancular என்னுஞ் சொல்லையும், cruelty என்பதற்கு மாறாக ferity என்னுஞ் சொல்லையும், lady’s maid என்பதற்கு வேறாக paranymph என்னுஞ் சொல்லையுங் கொணர்ந்து வழங்கினார். ஏளனஞ் செய்யத்தக்க அளவாக இத்தகைய நடை பெருகிவரவே, இத்தன்மையான சொற்களை வழங்குதலில் உண்மையான பயன் இல்லையென்பது ஆங்கில மக்களின் நல்லறிவுக்குப் புலப்படலாயிற்று; புலப்படவே அவை அமைதியுடன் கைவிடப்பட்டன. ஆங்கிலங் கற்கும் இந்துவோ பெருந்தொகையான இலத்தீன் சொற்களைப் பயன்படுத்து வதற்கு எப்போதும் பெருவிருப்புடையனாய் இருக்கின்றான் என்று எழுதி, அதன் பின் ஓர் இந்து மாணவன் ஆங்கிலத்தில் ஆக்கிய ஒரு நாலடிச் செய்யுளை எடுத்துக் காட்டி, ஆங்கில மகன் எவனும் அவ்வளவு மிகுதியான இலத்தீன் மொழிகளைச் சேர்த்து ஒரு நடை எழுதமாட்டான் என்று அதன் பிழைகளை எடுத்துக் கூறிச், சொற்களைச் செவ்வையாக வழங்கும் முறை இன்னதென்று உணரவும் அறியவும் வேண்டும்; அயலான் ஒருவன் அச்சொற்கள் வழங்கும் நாடுகளிற் போய்ச் சிலகாலம் அங்கே தங்கியிருக்க வேண்டும் என்றும், நன்கு கற்றவர்கள் அயன்மொழிச் சொற்கள் விரவிய இத்தகைய ஆங்கில நடையைத் தங்களாற் கூடியமட்டும் விலக்குகின்றார்கள் என்றும், கோல்ட்சிமித், ஜேன், ஆடன், உவால்டர்காட், மெக்காலே, ப்ரௌட், டீபன்சன் முதலானோரை ஒத்த புலவர்களின் நூல்களைப் பயின்று அவற்றின் சுவையை நுகரும் எந்த இளைஞனும் உரிய காலத்தே நல்ல தூய ஆங்கில நடை எழுதுந் திறத்தைத் தானே திண்ணமாய்ப் பெறுவான் என்றும் முடித்துக் கூறுகின்றார். (Porf. J.M. D. Meiklejohn’s The Art of Writing English, pp. 121-132). இந் நல்லிசைப் புலவர் கருத்துக்கு ஒப்பவே, வரலாற்று நூற் புலமையில் நிகரற்று விளங்கிய ஆங்கில ஆசிரியரான பிரிமன் என்பவரும், வேண்டப்படாத பிரஞ்சு இலத்தீன் மொழிச் சொற்கள் உரைநடையை உயர்வு படுத்துகின்றன வென்று பிழையாகக் கருதப்படுகின்றனவே யல்லாமல், உண்மையில் அவை பொருட் குழப்பத்தையே மேலுக்கு மேல் உண்டுபண்ணுகின்றன; ஆதலால், அவைகளுக்கு மாறாகப் பொருட்டெளிவுள்ள வெளிப்படையான ஆங்கிலச் சொற்களையே ஒவ்வொரு பக்கத்திலும் வைத்து எழுதுவது எளிதெனக் கண்டிருக்கின்றேன். பதினான்கு அல்லது பதினைந்து ஆண்டுகளின் முன் யான் எழுதியதைவிட இப்போது யான் தெளிவான தூய ஆங்கில நடை எழுதக்கூடுமென யான் கண்டு கொண்டமை எனக்கு எவ்வாற்றானும் வெட்கமாயில்லை; நடை யெழுதப்பழகும் இளைஞரைத் தேற்றல் வேண்டி இவ்வுலண்மையைச் சொல்லுவது நல்லதென எண்ணுகிறேன். நடை எழுதத் துவங்குவோர் தாம் உயர்ந்த நடை யெழுதுவதாக எண்ணிக்கொண்டு எழுதுவதில் மயக்கம் உடையராகின்றார்கள். உண்மையான ஆற்றலுக்கும், எல்லாவற்றையும்விட உண்மை யான தெளிவுக்கும், நம் மூதாதைகள் வழங்கிய பழைய ஆங்கில மொழியை ஒப்பது பிறிதில்லை என்னும் உண்மை முற்றும் உணரப் படுவதற்குப் பல ஆண்டுகளின் பழக்கம் இன்றிய மையாது வேண்டப்படும் (Quoted in Meiklejohn’s The Art of Writing English. P. 128) என்று ஆங்கில மொழியைத் தூயதாய் வழங்குதலின் மேன்மையை வற்புறுத்திப் பேசியிருக்கின்றார். ஆங்கில மக்களுக்கு நாகரிகமுந் தம்மைப் பாதுகாத்துக் கொள்ளத்தக்க நிலையும் வாயாதிருந்த பழைய நாளில், ஐரோப்பாவின் வடமேற்று மூலையிற்றோன்றிய சூடர், ஆங்கிலர், சாகிசர் முதற் பலமொழி பேசும் பல்வகை நாட்டாரும் பிரித்தானியத் தீவின்கண் வந்தது புகுந்து, அங்கு இருந்த பிரித்தானியரைப் போரில்வென்று அவர் தம்மைத் தத்தம் ஆளுகைக்குள் அடக்கி அரசுபுரிந்து வந்தனர். அவர்கட்குப் பின்னரும் பல்வகை மக்களும் அடுத்தடுத்துப் படையெடுத்து வந்து ஆங்கிலரைத் தங்கீழ் வைத்து ஆண்டு அவரொடு கலந்தமையாலேதான், கெல்டிக், காந்திநேவியம், இலத்தீன், நார்மன், பிரெஞ்சு, கிரேக்கு முதலான பற்பல மொழிச் சொற்களும் ஆங்கிலத்தில் ஒன்றன்பின் ஒன்றாய்க் கலந்து அதனைப் பெருக்கச் செய்தன. முதன்முதற் சூடர் ஆங்கிலமொழியைப் பிரித்தானிய தீவினுட்கொண்டு வந்த காலத்து, அதன்கண் இரண்டாயிரஞ் சொற்களுக்கு மேல் இல்லையென்று அம்மொழிவல்ல இலக்கண ஆசிரியர்கள் வரைந் திருக்கின்றனர். இங்ஙனம் முதலில் மிகக் குறைந்த நிலையிலிருந்து பின்னர்க் காலந்தோறும் பல மொழிக் கலாப்பினாற் பெருகிய ஆங்கிலமொழி, அப்பிறமொழிச் சொற்களின் உதவியின்றி முற்றும் நடைபெறுதல் இயலா தென்பதனை ஆங்கிலம் நன்கு உணர்ந்தார் எவரும் விளக்கமாய் அறிந்திருப்பவும், ஒருவர் அவ்வுண்மையை மறைத்து, அது தனித்து இயங்கவல்ல அதனை அவ்வாறு இயக்குதல் பயன்றராது எனக் கண்டே அதனைப் பலமொழிச் சொற்க ளோடுங் கலப்பித்து வழங்குகின்றார் எனவுங் கூறியது பெரிதும் பிழைபாடுடைத்தாம் என்க. இனி, முற்றுந் தனித்து இயங்கமாட்டாக் குறைபாடுடைய ஆங்கில மொழியையே இயன்ற மட்டுந் தூய்தாய் வழங்குதலிற் கண்ணுங்கருத்தும் வைக்க வேண்டுமென்று அம்மொழிக்குரிய ஆங்கில நன்மக்கள் ஓயாது வற்புறுத்தி வருகுவராயிற், பண்டைக் காலந்தொட்டே நாகரிக வாழ்க்கையிற் சிறந்தாராய்த் தாம் ஒருவர் கீழ் அடங்கி வாழாது, பிறமொழி பேசுவாரையுந் தங்கீழ் அடக்கிவைத்துத் தமது செந்தமிழ் மொழியையே நீண்ட காலம் வரையில் தூய்தாய் வழங்கி வளர்த்து வாழ்ந்துவந்த தமிழ் மக்களின் கால்வழியில் வந்தோரான நாம் நமது அருமைச் செந்தமிழ் மொழியைத் தூய்தாய் வழங்குதலில் எவ்வளவு கண்ணுங் கருத்தும் வைக்க வேண்டும்? அதற்காக நாம் எவ்வளவு முயற்சி யெடுக்க வேண்டும்! அங்ஙனமிருக்க, அதனைக் குறைபாடுடைய ஆங்கிலத்தோடு ஒப்பிட்டு, அதன் தூய்மையைக் கெடுத்து வடமொழி முதலான மற்றைமொழிச் சொற்களை அதன்கட் கொண்டு வந்து புகுத்தல் அதற்கு ஓர் ஆக்கமேயாம் என்று கூறுவார் உரை இப்போது அவர் அடைந்திருக்கும் அடிமைத்தன்மையைக் காட்டுகின்றதன்றோ? பண்டைநாளில் ஆரியப்பார்ப்பனருந் தமிழர்க்கு அடங்கி யிருந்து தமிழை வளர்த்தனர்; இப்போது அப்பார்ப்பனர் பல்வகைச் சூழ்ச்சிகளால் தமிழர்க்கு மேம்பட்டார் போற்றம்மைத் தாமே உயர்த்துக்கொண்டு, தமிழரைத் தங்கீழ் அடக்கி அடிமைகளாக்குதற் பொருட்டு மிக முயன்றும் அது முற்றுங் கைகூடாமையின், தமிழர்க்குரிய தமிழையாவது ஆரியம் முதலான பிறமொழிச் சொற்கள் சேர்த்துக் கெடுத்து வைத்தால் தங்கருத்து நிரம்புமென்றுன்னி அதனைப் பெரிதும் மாசுபடுத்தி வருகின்றார். அப்பார்ப்பனர் வலையிற் சிக்கிய தமிழ்ப் புலவர் சிலரும் அச் சூழ்ச்சியைப் பகுத்துணர்ந்து பாராது, `குலத்தைக் கெடுக்கவந்த கோடரிக்காம்பு போல் அவ்வாரியப் பார்ப்பனரினும் பார்க்கத் தாமே தம் தனித் தமிழ் மொழியைச் சிதைத்தொழிக்க மடிகட்டி நிற்கின்றார்! ஐயகோ! பண்டு தொடங்கிப் புனிதமாய் ஓங்கி நிற்கும் நம் தனித்தமிழ்த் தாயைப், பிறமொழிச் சொற்களென்னுங் கோடரியினுள் நுழைந்துகொண்டு, இத் தமிழ்ப் புதல்வர் வெட்டிச் சாய்க்க முயல்வது தான் கலிகாலக் கொடுமை! இத்தீவினைச் செயலைப் புரியும் இவர்தம்மைத் தடுத்து, எம் தமிழ்த்தாயைப் பாதுகாக்க முன் நிற்கும் எம்போல் வாராது நல்வினைச் செயல் ஒருகாலுங் கலிகாலக் கொடுமை யாகாதென்று உணர்மின்கள் நடு நிலையுடையீர்! 13. தமிழின் தனிச் சிறப்பு! உலக மொழிகள் இந்தக் தலைப்பின் கீழ் மற்ற மொழிகளைவிடத் தமிழுக்கு மட்டுமுள்ள தனிச் சிறப்பியல்புகளை எடுத்துக் காட்ட வேண்டுமென்பதே என் ஆசை. உலகத்திலே பேசப்படும் மொழி ஒன்று குறைய ஆயிரம் என்று சொல்லுகிறார்கள். James என்ற ஆங்கில ஆசிரியர், 999 மொழிகள் மக்களால் பேசப்படுகின்றன என்று சொல்லுகிறார். இவற்றிலே எழுதவும் பேசவும் உள்ள மொழிகள் மிகவும் குறைவு. பேச்சளவிலே உள்ள மொழிகள் தான் மிகவும் அதிகம். 999 மொழிகளிலேயும், பண்படுத்தப்பட்டு இலக்கிய முடையதாய் மக்களைச் சீர்திருத்தும் நிலையிலுள்ள மொழிகள், ஏறக்குறைய பத்துப் பதினைந்து மொழிகளாகும். மக்கள் தோன்றிய காலம் தொட்டு இதுவரையில் எவ்வளவு நாகரிக வளர்ச்சி ஏற்பட்டிருக்கிறது? என்பதை Jeep என்ற ஆசிரியர் ஆராய்ச்சி செய்திருக்கிறார். Jeep என்ற ஆசிரியர் நிலவுலகம் தோன்றி நூறாயிரம் ஆண்டுகள்தான் ஆகின்றன என்கிறார். முன்னர், மக்கள், புல் பூண்டுகள் உள்ள இடங்களிலே அளவுக்கு மிஞ்சி வாழ்ந்திருந்தார்கள். மொழியின் தோற்ம் மக்கள் தோன்றிய பல ஆயிரம் ஆண்டுகள் வரை பேசத் தெரியாது; எழுதத் தெரியாது; படிக்கத் தெரியாது; உடை உடுத்தவும் தெரியாது; உண்ணத் தெரியும்! ஆணும் பெண்ணுமாய் மருவத் தெரியும்!! அவ்வளவுதான். ஆண்டு முதிர முதிர அறிவு வளர்ந்து பேசக் கற்றுக் கொண்டதோடு பின்னர் எழுதவும் கற்றுக் கொண்டார்கள். எழுதவும் பேசவும் தோன்றிய பின்னர், பாட்டுகள் பாடினார்கள். அவர்கள், முதல் முதல், கருத்தை அறிவிக்க ஓவியம் எழுதக் கற்றுக் கொண்டார்கள். எதற்காக ஓவியம் எழுதக் கற்றுக் கொண்டார்கள்? முதல் முதல் தாங்கள் உணவாகக் கொள்ளும் விலங்குகளை ஓவியமாக எழுதி வந்தார்கள். அதுவும் ஓவியம் மூலமாக எழுதப்பட்ட விலங்குகளை எளிதிலே அறிந்து பிடிக்கமுடியும் என்பதற் காகவேயாம். பிறகு, வேட்டுவ வாழ்க்கையிலே இருந்த மக்கள், அம்பினாலே எய்து விலங்குகளைப் பிடிப்பதற்காக எழுத்தின் வாயிலாக விலங்குகளைப்பற்றி எழுதியே விளக்கினார்கள். எண்ணத்தை நிறைவேற்றினால் நினைவிலே எண்ண மானது வரும். இதற்கே Phychography என்று சொல்லுகிறார்கள். உருவேற்ற உருவேற்ற அவ்வெண்ணமானது நிறைவேறுகிறது. தொலைவிலுணர்தல் என்ற நூலிலே இதுபற்றி நன்கு விளக்கியிருக்கிறேன். நாம் நினைக்கின்ற நினைப்பை எண்ணிக் கொண்டே யிருப்போமானால் கட்டாயம் கைகூடுகிறது. ஆராய்ச்சியில் வல்ல பிற ஆசிரியர்கள் இந்த உண்மையை நன்கு புலப்படுத்தி யிருப்பதைப் படித்தால் தெரியும். உண்மை யிலேயே, ஆராய்ச்சி செய்தால் மறைந்த நுண்ணிய பொருள்கள் தெரியும். பலகாலங்களிலே, பல இடங்களிலே, என்னுடைய பழக்க வழக்கங்களைக் கொண்டு நான் முயற்சி செய்த காலத்தும் மறைபொருள் நிகழ்ச்சிகள் காணப் பட்டிருக்கின்றன. “White and Black Magic” பற்றி Haddon என்ற ஆசிரியர் எழுதியிருக்கிறார். இப்போது நிகழ்ந்த பெரும் போரினாலும் 20, 25 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட பெரும் போராலும், பல சிறிய சண்டைகளாலும் இப்படிப் பட்ட உயர்ந்த கலை களெல்லாம் நிலைகலங்கிப் பாழாய்ப் போய்விட்டன. பல நூல் நிலையங்கள் மறைந்துவிட்டன. என்ன காரணத்தினாலோ பெரும்போர் அடிக்கடி நடந்து கொண்டிருக்கிறது. ஏன், பெரும் போர்கள் நிகழ்கின்றன? இதற்கு நுட்பமான காரணம் உண்டு. அதாவது எண்ணமானது நமக்கு எப்படி ஓடுகிறது? தன்னலம்! தானே உண்டு பிறருக்குக் கொடுக்கக் கூடாது என்கிறபோது போர் உண்டாகிறது. தான் உண்ணும் உணவைப் பிறருக்குக் கொடுக்கவேண்டும் என்கிறபோது போரில்லை; சண்டையில்லை; சச்சரவில்லை. இந்த எண்ணமானது பலருக்குத் தோன்றுவதில்லை. பலரிடம் இந்த எண்ணம் இடம் பெறாத தால்தான் போர் உண்டாகிறது. முதன் முதல் ஓர் ஆணும் பெண்ணும் கூடிய கூட்டத்தினின்று ஆணோ, பெண்ணோ பிறந்தது. தனக்கு என்ற முனைப்போடு நில்லாமல் பெண் ஆணுக்குத் துணையாக நின்றாள். ஆண் பெண்ணுக்குத் துணையாக நின்றான். உண்மையிலேயே சேர்க்கையிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள வாழ்க்கைத் துணை ஏற்பட்டது. வாழ்க்கைத் துணையானது பிறருக்கும் உதவி புரியப் பயன்படுகிறது. வாழ்க்கையாறு ஒன்று, இரண்டு பேராறாகி, பிள்ளைகள் மூன்று-நான்காகப் பெருகலாயிற்று. பின்னர், ஒரு குழாங் கொண்டு வாழ்கின்ற வாழ்க்கை ஏற்பட்டது. ஓர் அவா, ஓர் இன்றியமையாமை, எண்ணிய எண்ணம் இவற்றை அறிவிப்பதற்குக் கண்ணினாலேதான் குறிப்பைக் காட்டினார்கள்! வாயினாலே ஒலியை உண்டாக்கினார்கள்! கையினாலே சைகை காட்டினார்கள்! எந்த வகையினால் எண்ணத்தை அறிவிக்க இயலுமோ அந்த வகையிலெல்லாம் எண்ணத்தை வெளியிட்டுவந்தார்கள். மக்கள் அந்தக் காலத்திலே இயற்கையைப் பார்த்தார்கள். உயிர்களின் மூலம் ஒலியை உண்டாக்கினார்கள். கையினாலே- காலினாலே கடைசியாகச் சைகைகள் காட்டி வந்தார்கள். முதன் முதலில் ஒருவர் மற்றொருவருக்கு ஒலி வழியாக, ஓசை வழியாகப், புலப்படுத்தி வந்தனர். விலங்கினங்களும் அப்படியே செய்து வந்தன. முதன் முதலில் மக்களுக்கும், விலங்கினங் களுக்கும் வேறு பாடுகளே இல்லை! உணவு உறக்கம் இவற்றில் முதன் முதலில் விலங்கினங் களைப் போலவே மக்களும் இருந்தார்கள். விலங்கினங்கள் உணவு உண்டன. மக்களும் உணவு உண்டார்கள். மக்களிலே ஆணும் பெண்ணும் மருவினர். விலங்கினங்களிலும் ஆணும் பெண்ணும் மருவின. விலங்கினங்களும் குட்டிகளை ஈன்றன. மக்களும் மக்களை ஈன்றனர். மக்களினமும் விலங்கினமும் எத்தனையோ ஆயிரம் ஆண்டுகள் வேற்றுமை யில்லாமல் வாழ்ந்து வந்தார்கள். அப்பர் இறைவனைப் பார்த்து ஓசை ஒலியெல்லாம் ஆனாய் நீயே! என்று பாடியிருக்கிறார். ïiwt‹ xÈ tot« v‹W eh« brhšY»nwh«., ஆசிரியர் இதனை சப்தப்ரம்மவாதம் என்று சொல்கிறார்கள். மக்கள் பழைய காலத்திலே அதாவது இருபதாயிரம் ஆண்டுகளுக்கு முன்னமேயே பேசுவதற்கு முற்பட்டதாக நூல் ஆசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள் முடிவு செய்திருக்கிறார்கள். முதன் முதலில் எண்ணங்களை ஒலி வகையிலே எழுத்து வகையிலே அறிவித்து வந்தார்கள். மக்கள், வாழ்க்கையைத் திருத்தமாக நடத்த முற்பட்டார்கள். சுவரிலே ஓவியங்களை எழுதி எண்ணத்தைப் புலப்படுத்தியும் வந்தார்கள். மக்கள் முதன் முதலில் எழுதத்தான் எண்ணினார்கள் என்று H.G. வெல் சொல்லுகிறார். பழங்கால மக்கள் வாழ்ந்த மலைகளில் உள்ள குகைகளில்புகுந்து பார்த்தால் உருவங்கள் தென்படு கின்றன. மானின் உருவம் - பறவையின் உருவம் - யானை உருவம் - இப்படிப் பல உருவங்கள் வரையப்பட்டிருக்கின்றன. பழங்கால மக்களுக்கு முதலில் எழுதத் தெரிந்ததே யல்லாமல் பேசத் தெரியவில்லை. முதலில்ஓசை வடிவாகவும் பின்னர் எழுத்தின் வாயிலாகவும், பின் ஓவியத்தின் வாயிலாகவும் எண்ணிய எண்ணங்களை வகைப்படுத்தி ஒருவர்க்கு ஒருவர் அறிவித்து வந்தார்கள். முதலிலே அவர்கள் ஓவியங்களை எழுதக் கற்றுக் கொண்டது மிகவும் வியக்கத் தக்கதாக இருக்கிறது. எகிப்து (Egypt) என்ற பெரிய பட்டணத்திலே பழங்கால ஓவியங்கள் பல முறையிலே பலவிதமாகக் காணப்படுகின்றன. இசை-தமிழ்ச் சொல். ராகம்-வடமொழிச் சொல். ராகம் என்றால்தான் பெரும்பாலான மக்களுக்குத் தெரிகிறது, ஆதலால் ராகம் என்று சொல்லித்தான் இசையைப் பற்றி விளக்கவேண்டிய வெட்கக்கேடான நிலை தமிழர்களுக்கு உண்டாகியிருக்கிறது. மக்களுக்கு மகிழ்ச்சி வந்த காலத்திலே உணர்ச்சி வசப்பட்டுப் பாடுதலைக் (Emotional Language) கற்றிருந்தனர். மிகுந்த மகிழ்ச்சி அளிப்பது பின்னர்த் துன்பமாக மாறும் பொழுதுதான் (Emotional Language) உணர்ச்சி வசப்பட்டுப் பாடுதல் உண்டாகிறது. பெண்பாலார் மனதைக் கரைக்க ஒப்பாரி வைத்துப் பாடுவார்கள். ஒப்பாரியானது மனதை அப்படியே உருக்கி விடுகின்றது. மன அசைவானது அழுகையின் மூலம் வெளிப் படுத்தப்படுகிறது. (அழுகையின் மூலம் வெளிப்படுத்துவதனால் ஒரு விதத்தில் மகிழ்ச்சி ஏற்படுகிறது.) பாடலின் மூலம் இன்பத்தை - துன்பத்தை - அழுகையை அந்நாளில் புலப்படுத்தினார்கள். இந்த ஓசை, வடிவிற்கு வந்த பிறகு, எவரும் இசையைக் கலவாமல் பாடுவதில்லை. இயலோடு கூடவே இசையையும் ஒருங்கு சேர்த்த - அதாவது இயல்-இசை ஒருங்கு நடைபெற்ற காலம் தான் மிக உயர்ந்த காலம். சிலப்பதிகாரம் என்னும் காவியம், பாட்டின் சிறப்பை அறிந்துதான் பாடப்பட்டது. இயற் சொற்களோடு இசையையும் கூட்டி ஒருவரைப் பார்த்து மற்றொருவர் அழும்பொழுது நமக்கு அழுகையும், ஒருவரைப் பார்த்து மற்றொருவர் நகைக்கும் பொழுது நமக்கு நகைப்பும் உண்டாகின்றன. இயற் சொற்களோடு இசையையும் சேர்த்துப் பேசும்பொழுது நமக்கு மன அமைதி உண்டாகிறது. மெய்ப்பாடுகளையெல்லாம், மன நிலைகளை யெல்லாம் ஓசைகள் மூலம் புலப்படுத்தினார்கள் நம் முன்னோர்கள். முதல் ஒலி - ஓம் முதன் முதலில் ஓசையிலிருந்து தான் மொழிபிறந்தது. மக்கள், ஓசையை உண்டாக்காத காலத்தில் இயற்கையாகவே ஓசை உண்டாயிற்று. முதன் முதலில் ஏற்பட்ட ஓசை ஓம் என்பதாகும். கடலோசையைப் பாருங்கள், ஓம் என்று கேட்கும். சங்கை ஊதிப் பார்த்துக் காதில் வைத்துப் பாருங்கள். அமைதியாகக் கடலோசையும் சங்கோசையும் கேட்டால், ஓம் என்ற ஓங்கார ஓசை நன்கு புலப்படும். உள் நோக்கிப் பார்த் தாலும் இந்த ஓம் ஓசை நன்கு புலனாகும். மக்கள் இல்லாத காலத்திலிருந்து இயற்கையினிடம் ஓசை இருந்ததோடு இப்போதும் அந்த ஓம் என்ற ஓசை இயற்கையினிடம் இயற்கையாய் இருந்து வருகிறது. இதை இப்போதும் பார்க்கலாம். ஓம் என்ற இந்த ஓசையிலே நாம் அறிந்து கொள்ளக் கூடிய பொருள் விளங்கவில்லை. அந்தக் காலத்தில் ஒருவர் கருத்து மற்றொருவருக்கு ஒத்திருந்தால் முதலில் ஓம் என்றும், பிறகு ஆம் என்றும் சொல்லி வந்தார்கள். அகரத்துக்குத்தான் வாயைத் திறந்து சொல்ல வேண்டும். அகர முதல வெழுத்தெல்லாம் மாதி பகவன் முதற்றே யுலகு என்று ஆசிரியர் தெய்வப் புலமைத் திருவள்ளுவனார் சொன்னார். அ என்று பிறக்கிறதும், ஆ என்று அழுகிறதும், ஓம் என்ற ஓசையிலேயே ஆரம்பிக்கிறது. எல்லாவற்றையும் உள்ளடக்கி முதலாய் நிற்பது ஓம் என்ற முதல் ஓசையே. ஓம் என்ற ஓசையை ஓங்காரம் என்றும் பிரணவம் என்றும் சொல்லுவார்கள். ஓம் - தமிழ்ச் சொல் உலகம் ஓம் என்ற ஓசையிலிருந்துதான் பிறந்தது. இந்த ஓம் என்ற ஓசையானது தமிழுக்கு மிகவும் சிறப்புடையது. நீக்ரோக்களும் இந்த ஓம் ஓசையைப் புகழ்ந்து பேசுகிறார்கள். தமிழ் மொழியானது ஓம் என்ற ஓசை ஒலியால் தனிச் சிறப்புடையது. ஓம் என்ற ஓசையை முதன் முதலில் கண்டு பிடித்தவர்கள் தமிழர்களே அல்லாமல் பிறர் அல்லர். ஓம் தமிழுக்காகவே எழுதப்பட்டது. ஓம் என்ற சொல் ஓங்கார வடிவிலே எழுதப்படுகிறது. ஆரிய மொழியிலுங்கூட, தமிழ் வடிவிலேயே ஓம் என்ற சொல் எழுதப்படுகிறது. ஓம் என்ற ஓசை முதல் முதலில்ஏற்பட்டதற்கும் அந்த ஓங்கார வடிவில் ஓம் அமைந்திருப்பதற்கும் என்ன காரணமென்று மக்களில் பலரிடம் உசாவியிருக்கின்றேன். இதுவரையிலே யாரும் தகுதியான விடை சொல்லவில்லை. நாளாக நாளாக எனக்கு ஒரு கருத்துப் புலனாயிற்று. அதாவது, நம்முடைய காதின் வடிவத்தைப் பார்த்தால் ஓங்கார வடிவாகவே இருக்கும். பொருத்தமாயிருந்தால் என் கருத்தை எடுத்துக் கொள்ளுங்கள். கூட்டொலி என்றும், பிரிவொலி என்றும் தமிழில் இருவகை உண்டு. இதனைச் சமஷ்டி என்றும், வியஷ்டி என்றும் வடமொழியில் சொல்வதுண்டு. கூட்டொலி - ஓம்; பிரிவொலி - அ, உ, ம். தமிழ் இலக்கணம் எழுத்திலே உயிர் எழுத்தென்றும் மெய் எழுத்தென்றும் பிரித்தவர்கள் தமிழர்களே அல்லால், பிறர் அல்லர். எழுத்திலே 12 உயிர், 18 மெய். இதனை அறிந்தவர்கள் தமிழர்கள். மொழியை வளப்படுத்தும் வழி தெரிந்தவர்கள் தமிழர்களே. Dr. Brain என்ற ஆசிரியர் இதைஒப்புக்கொண்டு குறிப்பிட் டிருக்கிறார். ஆரியர்கள் தமிழர்களோடு உறவாடித்தான் தமிழ் இலக்கிய இலக்கணங்களை அறிந்தார்கள். ஆரியர்களுக்கு முதன் முதலில் இலக்கியம் இலக்கணம் என்றால் என்ன என்றே தெரியாது. தொல்காப்பியம் 5000 ஆண்டுகளுக்கு முன்னே தோன்றியது. அகரத்தைப்பற்றித் தொல்காப்பிய ஆசிரியர் முறைப்படி காட்டியிருக்கிறார். ஓசையை அறிந்ததும் அதனை எழுத்து வடிவிலே கொணர்ந்து நெடுங்கணக்கிட்ட பெருமை தமிழர்களுக்கே உரியது; வேறு எவர்க்கும் உரிய தன்று. எழுத்துக்களை ஒலியெழுத்தென்றும் - வரியெழுத் தென்றும் பிரித்தவர்கள் தமிழர்களே. தொல்காப்பியம் என்னும் அரிய நூல் 5000 ஆண்டுகளுக்கு முன்னே தோன்றியிரா விட்டால் இவைகளையெல்லாம் நாம் அறிந்து கொள்வதற்கு வழி இல்லை. எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்று தமிழர்கள் இலக்கணத்தை 5 பகுதிகளாக வகுத்துள்ளார்கள். பல ஆண்டுகளுக்கு முன்னதாகவே அகத்திணை - புறத்திணை என்பது பற்றித் தொல்காப்பியனார் விளக்கினார். தொல்காப்பியரிடம் எவ்விதக் குறைபாடும் இல்லை. எதையும் நுணுக்கமாக ஆராய்ந்து பார்க்கிற அறிஞர்கள் பழங்காலத்திலே இருந்தார்கள். இப்பொழுது நம் நாட்டில் நுணுக்கமாக ஆராய்ந்து பார்க்கும் அறிஞர்கள் குறைவு. அறிஞர்கள் எல்லாரும் தொல்காப்பியர் கருத்தை ஒத்துக் கொள்வார்கள். தொல்காப்பியர் எல்லாவற்றையும் அறிந்தவர். ஆனால், அவரை அறியாதவர்கள் தமிழ் நாட்டிலேஅதிகம். இது தமிழர்களுக்கு ஒரு மானக்கேடு. தம்மிடம் களஞ்சியம் இருக்க, கருவூலம் இருக்க, பிறரிடம் பிச்சை கேட்கும் இரவலர்களாகத் தமிழர்கள் இருப்பது பெரிதும் வருந்துதற்குரியது. தொல்காப்பியரைப்பற்றி இங்குப் பேச வேண்டுமென்கிற ஆர்வம் எனக்குண்டு. பயிர் நூலைப்பற்றியும் (Botany), உயிர் வகைகளைப் பற்றியும் (zoology) தொல்காப்பியர் சொல்லியிருக்கிறார். எந்தப் பயிர் எந்த நிலத்தில் வளரும்? எந்தப் பறவைகள் எந்த நிலத்தில் வாழும்? எந்தநிலத்தில் மக்கள் தொழில் செய்யலாம்? எது நாகரிகம் என்பதுபற்றியெல்லாம் தொல்காப்பியர் சொல்லி யிருக்கிறார். உலகத்திலே கண்டறியப்படுகின்ற (Geology) பற்றியும் தொல்காப்பியத்திலே காணலாம். ஒன்றை நூறாக, நூறை ஆயிரமாக, ஆயிரத்தைப் பதினாயிரமாகச் செய்ய வேண்டும். அப்படி நாம் செய்தோமா? தொல்காப்பியருக்குப் பின் யாராகிலும் அப்படி வளர்த்தார்களா? இல்லையே! தொல்காப்பியத்தை நாம் எடுத்துப் பார்ப்போமானால் மொழியிலே ஓசை மிகைப்படும் எண்ணத்தை வழிப்படுத்தியிருக்கும் தமிழ்ச் சொற்களைக் காணலாம். தமிழுக்குப் புறம்பான மொழிகளை ஆராய்ந்து சொல்லுகிறேன். தமிழுக்குள்ள சிறப்பு வேறு எந்த மொழிக்கும் இல்லை. இதை எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். தமிழ் இயல் உண்டி முதற்றே உணவின் பிண்டம். உயிர் எதை முதலில் வேண்டு மென்கிறது? உண்டி - உணவை - முதன்மையாக உயிர் வேண்டுகிறது. உணவு செவ்வையாக இல்லாதபோது உயிரை வளர்ப்பது கடினமாயிருக்கிறது. நார்த்த என்ற ஆசிரியர் Population என்ற நூலிலே இதனை நன்கு விளக்கியிருக்கிறார். உலகத்திலே உயிர் வாழ்க்கைக்காக, உடம்பின் வாழ்க்கைக்காக வேண்டியது உணவுதான். உணவின் பிண்டமாகிய நம் உடல் உணவினாலேதான் வளர்கிறது. உணவினால்தான் உலகில் போர் நடைபெறுகிறது. மற்றவர் களின் உணவைப்பற்றிக் கவலைப்படாமல் உணவு எனக்குத்தான் வேண்டும் என்று சொல்வதால்தான் போர் மூளுகிறது அல்லவா? தன்னது என்று சாற்றுவான் என்று தாயுமான அடிகளார் சொல்லுகிறார். ஆகவே, கடவுளே உன்னை நான் எப்படி வேண்டுவேன்? உயிர் இல்லாதபோது உயிர் அளித்தாய். பிறவியிலே தாழ்ந்த எண்ணமுடைய நான் கேட்கவே தெரியாத காலத்தில் எனக்குப் பால் கொடுத்தாய். உணவுப் பிண்டம் அளித்தாய்; ஆனபடியினாலே நீ உனக்கென்று எதையும் வைத்திராமல் எனக்குத் தருகிறாய். உலகத்திலே உள்ள உன்னுடைய பொருளுக்கு, என்னுடையது அவனுடையது என்று மக்கள் போரிடுகிறார்கள். யார் எதைக் கேட்கிறார்களோ, அதை ஈசன் தருகிறார். வேண்டுநர் வேண்டியாங்கு எய்தினர் வழிபட என்ற அடியைத் திருமுருகாற்றுப்படையிலே காணலாம். இறைவன் இன்பமே வடிவாக, அன்பே வடிவாக, அறிவே வடிவாக இருக்கிறார். அறிவும் அன்பும் இன்பமும் பெற, யார் யார் விரும்புகிறார்களோ அவர்களுக்கெல்லாம் அதனைத் தருகிறார். இத்தனை பொருள்களையும் அமைப்புகளையும் இறைவனை வேண்டினால் கிடைக்கிறது. கிடைத்தவுடன் என்னது என்னது என்று சொல்லிப் பெரும் பிழை செய்யலாமா? இறைவற்குரிய பொருளை இறைவனுடையது என்று சொல்லிப் பிறருக்கு வழங்காதிருப்பது பெரும் பிழையல்லவா? கோடிக்கணக்கான பொருள்களை வைத்திருக்கும் பெரும் பணக்காரர்களில் இரண்டு மூன்று பேர் எனக்கு மிகவும் வேண்டியவர்கள். கோடிக்கணக்கான பொருள் வைத்திருந்தும் எவ்வளவோ பேர் மடியவில்லையா? காதற்ற ஊசியும் வாராதுகாண் கடைவழிக்கே என்று பட்டினத்தாரும் பாடியுள்ளார். கோயம்புத்தூரிலே என் நண்பர் ஒருவர் கோடிக் கணக்கான பொருள்களை வைத்திருந்தார். அவர், காரில்மோதிக் காலமானார். அவர் உடலை உதறிச் சென்ற பொழுது என்ன சொன்னார் என்று அன்பர்களைக் கேட்டேன். நான் அறம் செய்யாததினாலேதான் இப்படி இறக்கிறேன் என்று வருந்திச் சொன்னாராம். இறக்குந் தறுவாயிலாவது அறம் செய்யவேண்டுமென்று எண்ணுகிறார்களே! நோய் காணும்பொழுது அறம் செய்யவில்லையே என்று வருந்து வோரும் உண்டு. நாய் இருக்கக் கல் காணாதவர் - கல் இருக்க நாய் காணார். அதைப்போல் செல்வம் உள்ளபோது அறம் செய்ய விரும்பார். நோய் வந்தபோது அறம் செய்ய வேண்டுமென்ற எண்ணம் பிறக்கிறது. ஆனால், நோயுள்ள தால் அச்சமயத்திலே அறம் செய்ய முடிவதில்லை. நோயுள்ளபோது உறவினர்களை அறம் செய்யும்படி ஏவினால் அவர்களோ அறம் செய்ய விரும்பாது, எப்பொழுது இறப்பார்? எப்பொழுது பொருள் கிடைக்கும்? என்ற எண்ணமுடையவர்களாக இருப்பார்கள். இயற்கை என்றால் கடவுள்; கடவுள் என்றால் இயற்கை; இரண்டும் உண்மையே! கடவுள் என்று கொண்டாலும் கொள்ளுங்கள்; இயற்கை என்று கொண்டாலும் கொள்ளுங்கள்; ஓரளவுக்கு இவை ஒன்றே! எல்லாம் இறைவனுடையது என்றிருக்க அதனை எனது எனது என்று சொல்லிக் கொண்டு பிறருக்கு வழங்காதது பெரும் பிழையல்லவா? தமிழ்ச் சான்றோரும் பிறரும் இதை அறிந்தால் உலகில் போரில்லை. இக்கருத்தை இப்பொழுது எல்லாரும் பரப்ப முயற்சி செய்கிறார்கள். தன்னலம் ஒழிந்து போகும் - ஒழிய வேண்டும் என்று Tin Burn, Estral, Huxely, Darwin முதலிய மேனாட்டு அறிஞர்கள் நூல் வாயிலாக நன்கு பரப்பி யிருக்கிறார்கள். விரும்பிய உணவைக் கண்டபடி உண்டால் சரியாக வெளிக்கு வருவதில்லை. எல்லாவற்றையும் தானே உண்டு விடுதல் கூடாது. அறிவுடையவர்கள் உணவைப் பகுத்து உண்ணவேண்டும். பகுத்துண்டு பல்லுயி ரோம்புத னூலோர் தொகுத்தவற்று ளெல்லாந் தலை என்று தெய்வப் புலமைத் திருவள்ளுவர் சொல்லி யிருக்கிறார். தமிழ் நாடு விஞ்ஞானிகள் இப்போது ஆராய்ச்சி செய்து தென்னாடு தான் உயிர் வாழ்வதற்கு ஏற்ற இடமாய் இருக்கிறது என்று சொல்லுகிறார்கள். தென்னாடு தான் முதலில் தோன்றியது, மற்ற நாடுகளெல்லாம் கடலால் சூழப்பட்டுக் கடல் நீர் நிறைந்து புற்பூண்டுகளுடன் காட்சி அளித்தன என்று H.G. வெல் சொல்லுகிறார். மேலும், மக்கள் முதலில்தோன்றிய இடம் தமிழ்நாடு, தென்னாடு என்கிறார். குமரி நாட்டில்தான் மக்கள் தோன்றினார்கள். குமரி நாட்டிலே இருந்த தமிழர்கள் பல நாடுகளுக்குக் குடியேறினார்கள். முதலில் அவர்கள் பேசியது தமிழ். அவர்கள் எழுதியவைகளெல்லாம் தமிழ்ச் சொற்களே. அவர்கள் வடக்கே, கிழக்கே, மேற்கே ஆகிய திசைகளி லெல்லாம் குடியேறினார்கள். வர வரப் பிற்காலத்திலே நாடு பிரிக்கப்பட்டுப் பல வேற்று மொழிகளிலே பழகினார்கள். ஆரியத்திலே - மாதா தமிழிலே - தாய் ஆரியத்திலே - பிதா தமிழிலே - அப்பா ஆங்கிலத்திலே - ஆடிவாநச - குயவாநச, மொழிக்கு மொழி சொற்கள் - எப்படி மாறுகின்றன பாருங்கள். ஆங்கிலேயர்கள் தோட்டத்திலே குழந்தைகள் விளை யாடிக் கொண்டி ருந்தபோது, ஒரு குழந்தை கிறிது என்று சொன்னது. மற்றொரு குழந்தை தமிழர்கள் சொல்லுவது போலக் கிறித்து என்று சொன்னது. ஊசளைவ என்று சொல்லுவது கடினந்தான். குழந்தைக்கு வலுவேறிய பிறகு அம்மா! ngh! என்று பேசுகிறது. முதல் மொழி தமிழ் முதலில்பிறந்த மொழி தமிழ். அதனால்தான் தமிழ் அழிந்து போகாமல் இருக்கிறது. தமிழ், மரபியல் கொண்ட மொழி. தமிழ், வழி வழியாக - இளமையோடு வழங்கி வருகிறது. மலையாளம் 700 ஆண்டுகளுக்கு முன்னர்த் தமிழாக இருந்தது. கன்னடமும் துளுவுங்கூட முதலில் தமிழாகத்தான் இருந்தது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கன்னடம் தமிழாக இருந்தது. தனித்துப் பழகிப் பழகி வேறு மொழியாய் விட்டது. ஆனால், தமிழ் மட்டும் இன்றும் தனித்து இயங்குகிறது. தமிழ் எந்தக் காலத்தும் அழியாது. தமிழை அழிப்பதற்குக் கங்கணம் கட்டுபவர்கள் தாமாகவே அழிந்து போவார்கள். இயற்கையிலே பிறந்து வளர்ந்தது தமிழ். ஆதலால், இயற்கையை யாரும் அழிக்க முடியாது. ஆகவே, தமிழையும் அழிக்க முடியாது. சுந்தரம் பிள்ளை அவர்கள், பல்லுயிரும் பலவுலகும் படைத் தளித்துத் துடைக்கினுமோர் எல்லையறு பரம்பொருள் முன் னிருந்தபடி யிருப்பது போல் கன்னடமும் களிதெலுங்குங் கவின்மலையா ளமுந்துளுவும் உன்னுதரத் துதித்தெழுந்தே யொன்றுபல வாயிடினும் ஆரியம்போ லுலகவழக் கழிந்தொழிந்து சிதையாவுன் சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே தமிழே! நீ எப்போதும் இளமையோடு இருக்கிறாய் என்று வாழ்த்தி யிருக்கிறார். தமிழின் ஆற்றல் எகிப்தியர்கள் (Egypt) மொழி, பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே தோன்றியது. நாகரிகமான மொழி என்று அவர்கள் வழங்கிய மொழி மறைந்து போய்விட்டது. ஈப்ரு, லத்தீன் என்ற ரோமர்கள் மொழியும், அராபியர்களின் அராபிய மொழியும், ஆரியர்களின் சமகிருதமும் இப்பொழுது எந்த நிலையில் இருக்கின்றன? இன்னும் மெக்ஸிகோ (Mexico) மொழி, இருந்த இடம் தெரியவில்லை. இலக்கியங்கள் வளர்த்த இம்மொழிகளே இருந்த இடம் தெரியாமல் போயின. ஆனால், இன்னும் தமிழ் தனித்தியங்குகிறது. தமிழினிடம் ஓர் இயற்கை சக்தி இருக்கிறது. தமிழுக்கு அருட்டுணை யிருக்கிற வரையிலே தமிழை எவராலும் அழிக்க முடியாது. தமிழ்த்தாய் நம்மைக் காக்கிறாள். தமிழ்த்தாய் பிறருக்கு மயங்காள். நம்மைப் பாதுகாக்க முனைந்து நிற்பது தமிழ்! தமிழானது இயற்கைத் தொடர்புடையது என்று இதுகாறும் எடுத்துக் காட்டினேன். இராமலிங்க அடிகளார் தமது அருட்பாவில் பேசுதற்கும் இனியதாய் எனக் கூறியுள்ளார். தமிழின் தரம் தமிழைப்பற்றி ஒவ்வொருவரும் இப்படித்தான் சொல்லுகிறார்கள். எந்த மொழியும் பயிற்சி செய்யச் செய்ய ஓத ஓத இனியதாகவே இருக்கும். அறிவைக் கொண்டு எல்லாவற்றையும்விட இது சிறந்தது என்று சொல்லிவிடலாம். நன்கு ஆராயவேண்டியது நம்முடைய இன்றியமையாத கடமை! எது சிறந்ததில்லையோ அதனை விடல் வேண்டும். எல்லாவற்றை யும்விடச் சிறந்தது எதுவோ அதைக் காத்துக் கொள்ளல் வேண்டும். தமிழ்மொழி எல்லா மொழிகளையும்விடச் சிறந்தது. தமிழன் தமிழ்மொழி தான் உயர்ந்தது என்று சொல்லுகிறான். ஆரியர்கள் தங்கள் மொழியான சமகிருதந்தான் உயர்ந்தது என்று சொல்லுகிறார்கள். தெலுங்கர்களோ தெலுங்கு தேட்ட அரவம் அத்வானம் என்று சொல்லுகிறார்கள். அவரவர்கள் தங்கள் தங்கள் மொழியே உயர்ந்தது என்று சொல்லி, மற்ற மொழிகளைத் தாழ்த்திப் பேசுகிறார்கள். ஒரு செப்புத் துண்டை நன்றாகத் துலக்கிக் கொண்டுவந்து ஒருவரிடம் காட்டினால், அதனை அவர் பொன் என்றுதான் சொல்லுவார். பளீரென்று மின்னுவது கண்டு பொன் என்றே அதனை நம்புவர். அப்படி இரண்டையும் ஒன்றாக நினைக்கலாமா? வெள்ளியும் சிப்பியும் ஒன்றா? பொற்றுண்டு பொற்றுண்டுதான், செப்புத்துண்டு செப்புத்துண்டுதான். அன்பர்கள் சிலர் இரண்டையும் ஒன்றாகக் கருதுகிறார்கள். இவற்றுள் எது செப்பு, எது பொன் என்று கேட்டால், இவைகளுக்குள்ள வேறுபாடுகளைத் தெரியாமல் மயங்குவார் சிலர். ஓர் அன்பர் என்னிடம் ஸர்வம் பிரமம், நானும் பிரமம், நீரும் பிரமம் என்றார். உடனே நான், அவர் மடியிலேயிருந்த பொருளைச் சிறிது எடுத்துக் கொண்டு நீங்களும் பிரமம், நானும் பிரமம் என்றேன். அவர் திடுக்கிட்டார். சிறிது நேரம் அவர் வாளா இருந்துவிட்டு, நீங்களும் பிரமம், அதுவும் பிரமம் - ஆனால் உலக வழக்கில் அதனை எப்படிப் பிரமம் என்று சொல்வது? என்றார். எல்லாம் பிரமமாயிருக்கும்போது உங்களிடத்திலே உள்ள பிரமந்தானே என்னிடம் இருக்கிறது? சர்வம் பிரமம் என்று நீங்களே சொன்னீர்கள். உலக வாழ்த்துக்குரிய பொருளைப் பிறரிடம் சென்றால் மட்டும ஏன் பிரமம் என்று ஒத்துக் கொள்ளவில்லை? இதுதான் ஸர்வம் பிரமமா? என்று கேட்டேன். கல்லையும், செப்பையும், இரும்பையும் சோற்றையும் ஒன்று படுத்தலாமா? சோற்றை உண்ணலாம், சோற்றால் வீடு கட்ட முடியுமா? எந்தப் பொருளையும் வேற்றுமை யறிந்து, இடமறிந்து பயன்படுத்தல் வேண்டும். ஸர்வம் பிரமம் என்றால் ஒவ்வாது. பழக்க வழக்கங்களினாலே வேப்பிலையைக் கரும்புபோல உண்பாருண்டு. பர்மாவிலே கசப்பான பொருள்களைக், கரும்பை நாம் சுவைப்பதுபோலச் சுவைத்து உண்கிறார்கள். நமக்குக் கசப்பாயிருப்பது அவர்களுக்கு இனிப்பாயிருக்கிறது. நமக்கினிக்கும் கரும்பை அவர்களிடம் கொடுத்தால் அஃது அவர்களுக்குக் கசக்கத்தான் செய்யும். இவற்றிற்கெல்லாம் காரணம் பழக்கந்தான். கோழியைப் பாறைமேல் விட்டாலும் குப்பையைக் கிளறுவது போலவே கிளறும். பழக்க வழக்கத்தால் சிலருக்குச் சர்க்கரை கசக்கும். சிலருக்கு இனிக்கும். ஒட்டகம் வேப்பிலையைத்தானே தின்கிறது. ஆனால் வேப்பிலையை மற்ற விலங்குகளோ தொடுவதில்லை! பழக்க மிருக்கிறதே அது நல்லதைத் தீயதாக்கும், தீயதை நல்ல தாக்கும். தமிழின் இனிமை பிற மொழிகளில் உள்ள சில எழுத்தொலிகள் தமிழில் இல்லாததைச் சிலர் தமிழுக்குக் குறையாகச் சொல்கிறார்கள், இ என்று சொன்னால் நமக்கு இளைப்பு வரும். ஹா என்றால் களைப்பு வரும். இந்த இ-உம் ஹா-வும் நமக்கு இளைப்பும் களைப்பும் தருவதால் அவை நமக்கு வேண்டாம்; நமக்கு இளைப்பும் களைப்பும் ஏன்? ச போதும் ஜ வேண்டாம். தமிழ் மொழிகளிலே உள்ள சொற்களின் சிறப்பை அறிந்தால், மற்ற மொழிகளெல்லாம் எம்மாத்திரம்? இளமையில் நான் வேதங்களை உருப்போட்டதுண்டு. உருப்போட்ட பின் வாயிலிருந்து இரத்தம் இரத்தமாக வரும். இப்படி இரத்தம் வருவதற்கு மூலக்காரணம் என்ன என்று மருத்துவர் பலரைக் கேட்டேன். மருத்துவர்கள் ஏதேதோ காரணங்களைச் சொன்னார்கள். ஒவ்வொரு மருத்துவரும் அதைச் செய் இதைச் செய் என்றார்கள். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. ஸம்கிருத லோகங்களைக் காலையிலே உருப் போடுவது எனக்குத் துன்பமாகத்தான் இருந்தது. காலையிலே எழுந்து உருப்போட்டவுடன் உடம்பிலே வலுவில்லாமல் போயிற்று. அரை மணி நேரம் வரை தமிழ்ப் பாடல்களை ஓதிவந்தேன். அப்பொழுது எனக்குத் துன்பமேயில்லை. இன்பமே இருந்தது. ஒரு மருத்துவர் என்னைக் காலையில் ஓதுகின்ற உபநிஷிதத்தையும், வேதங்களையும் பதினைந்து நாட்கள்வரை நிறுத்திவைக்கச் சொன்னார். உபநிஷிதத்தையும், வேதத்தையும் நிறுத்திவைத்துத் தமிழையே ஓதினேன். அப்பொழுது இரத்தம் வரவில்லை! அதிலிருந்து சமகிருதம் இரத்த மொழி என்று முடிவு செய்தேன். தமிழுக்கும் ஸமகிருதத்திற்கும் இந்த வேறுபாடிருக்கக் காரணம் என்ன? என்று ஆராய்ச்சி செய்தேன். தமிழ்மொழி அருந்தவத்தோர் மொழி. நம் உடம்பிலே உள்ள ஆற்றல் அழிந்து போகாதபடி தமிழ்ச் சொற்கள் அமைந்திருக்கின்றன. மிக இளைஞர்களாக உள்ளவர்கள் பார்வைக்கு முதியவர்களாகத் தோன்றக் காரணம் என்ன? 60, 70, 80 - வரை உயிரோடிருப்பவர்களைக் காண்ப தரிதாயிருக்கிறது. 30-க் குள் மாண்டுபோவார் தொகை மிகுதி. திருமூலர் பெரிய முனிவர். அவர் சிறந்த உண்மைகளை நன்கு கண்டவர். ஐயோ, உலகமே! ïªj _¢ir V‰¿í« ïw¡»í« tªjhš eykhÆU¡Fnk! என்றார். காற்றைப் பிடித்து உள்ளடக்கினால் எமனை உதைத்துத் தள்ளி விடலாமென்கிறார். மாணிக்கவாசகர் சொல்லுகிறார்:- யாழுமெழுதி யெழின் முத்தெழுதி யிருளின் மென்பூச் சூழுமெழுதி யோர் தொண்டையுந் தீட்டி யென் றொல்பிறவி யேழுமெழுதாவகை சிதைத்தோன் தில்லை யூரிளமாம் போழு மெழுதிற்றொர் கொம்பருண்டேற் கொண்டு போதுகவே தலைமகன் ஒருவன் இப்படிச் சொல்லுகிறான். யாழ் எழில் முத்து எழுதி, மென்பூச் சூழும் எழுதி, ஒரு தொண்டைக் கனியையும் எழுதி, தன்னுடைய பழமையாகிய பிறப்புக்கள் ஏழையும் எழுதாவிதம் பற்றிச் சொல்கிறான். ஒரு பெரிய ஆங்கிலப் பேராசிரியர் ஆநடடினடிரள Sound ழளைளபே ளுடிரனே (உயிர்ப்பாற்றலை இழக்கச் செய்யும் ஓசை) பற்றி நன்கு எழுதியிருக்கிறார். தமிழின் சிறப்பு நான் குறிப்பிட்ட மாணிக்கவாசகரின் பாடலில் உள்ள அந்த ஓசையே நமக்கு உயிர்ப்பாற்றலைக் கூட்டுகிறது. ஒருகாலத்தில் ஆரிய பண்டிதர் வடநாட்டிலிருந்து பல ஊர்களுக்குச் சென்றுவிட்டு இங்கு வந்தார். அவர் எந்த மொழியிலிருந்தும் கிளம்பும் ஓசை ஆரிய மொழியிலிருந்து தான் வந்தது என்பதைக் கூறி அவர் வல்லமையைக் காட்டினார். அப்பொழுது இங்கே பூண்டி அரங்கநாத முதலியார், தண்டலம் பாலசுந்தர முதலியார், சேலம் ராமசாமி முதலியார் ஆகியோர் தமிழை நன்கு கற்றவர்கள். அந்த ஆரியப் பண்டிதர் எல்லாரிடமும் வெற்றி கண்டு வருகிறார். ஸமகிருத ஓசையிலிருந்துதான் தமிழும் வந்தது என்பதைத் தம் வல்லமையால் காட்டி வெற்றி கண்டுவிடுவார் என்று பலர் எண்ணினார்கள். பல மொழிகளின் ஓசையைத் தம்முடைய வல்லமையால் ஸம்கிருதத்திலே இருந்து வந்ததென்று சான்றுகள் காட்டினார். இதை எவராலும் மறுக்க முடியவில்லை! கடைசியாக அவர் இங்கு வந்து சேர்ந்தார். பூண்டி அரங்கநாத முதலியாரை அக்காலத்தில் ழுநரைள என்று சொல்லுவார்கள். சேலம் இராமசாமி என்பவர் ஒரு பெரிய வழக்கறிஞராக இருந்தார். தண்டலம் பாலசுந்தர முதலியார் தமிழிலே வல்லவர். இவர்கள் மூவரும் வந்தார்கள். ஆரியப் புலவரும் வந்து சேர்ந்தார். கன்னடப் புலவர் ஒருவர் ஒரு பாடலைப் பாடிக் காட்டினார். அப்படியே கன்னடப் பாடலின் ஓசையை வைத்துக் கொண்டு, ஆரியப் புலவர் ஸம்கிருதத்திலிருந்து சான்றுகள் காட்டி சமகிருத ஓசையிலேயே அப்பாடலைப் பாடிக் காட்டினார். எல்லாரும் வியந்தார்கள். தண்டலம் பாலசுந்தரர், பூண்டி அரங்கநாத முதலியாரைப் பார்த்து இந்த ஆரியப் புலவரைத் தமிழ் மடக்குமா? என்று கேட்டார். அதற்குப் பூண்டி அரங்கநாத முதலியார் ஒரு பாட்டுப் பாடுகிறேன் பாருங்கள் என்றார்: விழியாற் பிணையாம், விளங்கி யலான் மயிலா, மிழற்று மொழியார் சிறியா, முதுவானவர்த முடித் தொகைகள் கழியாக் கழற்றில்லைக் கூத்தன் கயிலை முத்தம் மலைத்தேன் கொழியாத் திகழும் பொழிற் கெழிலாமெங் குலதெய்வமே திருச்சிற்றம்பலக் கோவையிலிருந்து ழகர - ளகர ஓசை - ழகரம் - ளகரம் உடைய இந்தப் பாட்டை ஒருதரம் பாடினார். உடனே ஆரியப் புலவர் முகத்தைச் சுளித்தார். ஆரியப் புலவர் முடிவிலே இந்த ஓசையை என் பிறவியிலேயே நான் கேட்டறியேன்; இது என்ன மொழி? என்று கேட்டாராம். இதுதான் அமிழ்தினும் இனிய தமிழ் மொழி என்று அவருக்கு விடை சொன்னார்களாம். இதிலிருந்து நம்முடைய தமிழ் மொழி எவ்வளவு சிறந்த மொழி என்று விளங்குகிறது. இந்த நிகழ்ச்சியைத் தண்டலம் பாலசுந்தர முதலியார் என்னிடம் நேரில் சொன்னார். ஆகவே, இவ்வளவு சிறந்த மொழியை எவராலும் அழிக்க முடியாது; நம்முடைய தமிழ்மொழி பழங்காலந்தொட்டு அழிக்கப் படாமல் - துரத்தப்படாமல் உயிர் வாழ்கிறது. இதற்குக் காரணம், தமிழ் இன்ப வடிவாக, அன்பு வடிவாக, அருள் வடிவாக இருப்பதேயாம். இவ்வளவோடு என் சிற்றுரையை முடித்துக் கொள்ளுகிறேன். 14. அறிவுநூற் கல்வி கல்வியானது இருதிறப்படும். அவை உலக நூற்கல்வி, அறிவுநூற் கல்வி என்பனவாம். இவற்றுள் உலகநூற் கல்வி உடம்பைப் பற்றிக் கொண்டும் அறிவு நூற்கல்வி உயிரைப் பற்றிக் கொண்டும் நடை பெறுவனவாகும். உயிரின் அறிவு விளக்கத்திற்கு உடம்பு இன்றியமையாத் துணையாய் இருத்தல்போல, அறிவுநூற் கல்வியைத் தருதற்கும் உலகநூற் கல்வி இன்றியமையாக் கருவியாய் இருக்கின்றது. அறிவு விளக்கம் இல்லாத உயிருக்கு உடம்பிலிருந்தும் பயன்படாததுபோல அறிவுநூற் கல்வி பெறாதவர்களுக்கு உலகநூற் கல்வி இருந்தும் பயன்படுவது இன்றாம். நறுமணங் கமழத் தேன் ஒழுகி இனிய பழங்கள் குலை குலையாய்த் தொங்கும் ஒரு தேமாந்தோப்பிற்குச் செல்ல விரும்பினான் ஒருவன். அங்கே போவதற்கு இசைந்த வழியைத் தெரிந்து அதனூடே சென்று அவ்விடத்தைச் சேர்வானானால், தான் நீண்டவழி நடந்து வந்ததனால் உண்டான பயனைப் பெற்றுப் பசியுங் களைப்புந் தீர்ந்து மகிழ்ந்திருப்பான். அவ்வாறன்றி அவ்வழியில் உள்ள சில புல்லிய காட்சிகளையே கண்டுகொண்டு உடம்பிலுள்ள வலிமை குறையும் நேரம் வரையில் வழியிலேயே காலங் கழித்து விடுவானாயின் மிகுந்த பசியுங் களைப்பும் வந்து மூடிக்கொள்ள மேற்செல்ல மாட்டாதவனாய் அவ்வழியினிடையே சோர்ந்து விழுந்து உயிர் துறப்பான். அதுபோலவே, அறிவுநூற் கல்வியைப் பெறுதற் பொருட்டாகவே வந்த இம்மக்கள் யாக்கையிலிருந்தும், முடிவாக அதனை அடைதற்கு முயலாமல் உலக நூற் கல்வியளவில் ஒருவன் நின்று விடுவானானால், அவனெடுத்த இம்மக்கட் பிறவி வெறும் பாழேயாவது திண்ணம். உயிரானது தன்கண் உள்ள அறியாமை முற்றுந் தொலையப் பெற்றுப் பேரறிவு விளக்கம் உடைய தானவுடனே பிறவி எடுத்தலும் நின்று போகும். உயிர்கட்கு உடம்புகள் அடுத்தடுத்து வருவதெல்லாம் அவ்வுயிர்களைக் கவிந்து நின்ற அறியாமையை நீக்கி அறிவை எழுப்புதற் பொருட்டாகவேயாகலான், அறியாமை தேய்ந்து அறிவு எழும் வரையில் அவை பிறவிகளிற் சுற்றிச் சுற்றி வரும். ஆகவே, அறிவு நூல்களைக் கற்று அறியாமையை நீக்காதவன் மேன்மேற் பிறவியெடுப்பவனாய் இருத்தலின், அவன் தனக்கு உடம்புகளைப் படைத்துக் கொடுப்பதான ஓயாத வேலையைக் கடவுளுக்குத் தருபவன் ஆவன். இது குறித்தன்றோ பட்டினத்தடிகளும். மாதா உடல்சலித்தாள் வல்வினையேன் கால்சலித்தேன், வேதாவுங் கைசலித்து விட்டானே-நாதா, இருப்பையூர் வாழ்சிவனே இன்னுமோர் அன்னைக் கருப்பையூர் வாராமைக் கா என்று அருளிச் செய்தனர். மேலும், உயிர்க்கு உறுதி தரும் அறிவுநூற் கல்வியைக் கல்லாது, உடம்பைப் பாதுகாத்தற்கு மட்டும் பயன்படும் உலகநூற் கல்வியைப் பயில்வது வெறுங் கூவுதலாகவே முடியும். ஏனென்றால், நிலையாயுள்ள உயிரின் நன்மையை நாடாது, நிலையின்றிச் சில நாளிலோ சில திங்களிலோ அல்லது சில ஆண்டுகளிலோ மறைந்து போகும் உடம்புக்கு உணவு தேடிக் கொடுத்தற்கு மட்டும் பயன்படுகின்ற உலகநூற் கல்வியை வாய் ஓயாது கூவிக் கற்றல் நிலையான பயனைத் தராமையின் அது வெற்றொலியேயாய்ப் போவதன்றி வேறு அது தரும் பேறு என்னை? இவ்வுண்மையை உணர்த்துதற்கன்றே, அலகுசால் கற்பின் அறிவுநூல் கல்லா துலகநூல் ஓதுவ தெல்லாங் - கலகல கூஉந் துணையல்லாற் கொண்டு தடுமாற்றம் போஒந் துணையறிவார் இல் என்று நாலடியார் கூறுவதாயிற்று. இனி, அறிவுநூற் கல்வியைப் பெற்றவர் மறுமையில் இன்பத்தை அடைவரென்று பலருங் கூறக் காண்கின்றோமே யல்லாமல் அவர் இம்மையில் மற்றவர்க்கில்லாத சிறப்பினைப் பெறக் காண்கிறோம் இல்லையே; எல்லாரும் உண்டு உடுத்து உறங்கிச் சாதல் போலவே அவரும் உண்டுத் துறங்கிச் சாகின்றனர்; இன்னும் நன்றாக ஆராய்ந்து பார்க்குங்கால் உலகநூற் கல்வியில் மிக்கவர்களே இம்மையில் எல்லாச் சீருஞ் சிறப்பும் இன்பமும் பெறுகின்றனர்; கட்புலனுக்கும் நமது நினைவுக்கும் எட்டாத மறுமையில் இன்பத்தை அடைய லாமென நினைத்து அறிவுநூற் கல்வியிற் காலத்தைக் கழிப்பவர் கடைசியில் ஏமாறி இறப்பதற்கே இடமாகின்றதென்று அதனை இழித்துக் கூறுவாரே பலர். என்றாலும், அறிவின் ஏற்றத் தாழ்வுகளைச் செவ்வையாக ஆராய்ந்து பார்த்தால், அறிவுநூற் கல்வியில் வருஞ் சிறப்பும் இன்பமும் வேறெதனாலும் வரமாட்டா என்பது நன்கு புலப்படும். எங்ஙனமென்றால், உலகத்தின்கண் எத்தகைய அரும்பெருந் தொழில்கள் நடைபெறுதற்கும் அறிவும், அறிவு முயற்சியுங் கட்டாயமாய் வேண்டியிருக்கின்றன. அறிவில்லாமல் எந்தத் தொழிலையுஞ் செய்தல் முடியாது; எந்த நலத்தையும் அடைதல் இயலாது. அறிவில்லாதவர்களும் அறிவுடையாரைக் கண்டால் அவர்க்குச் சிறப்புச் செய்து பணிகின்றனர்; அவரை விரும்புகின்றனர். ஒருவர் பலருதவி கொண்டு ஓர் அரிய பெரிய முயற்சியை நடைபெறுவிக்குங்கால், அம்முயற்சி அறிவில்லாதவர் செய்கை யால் முட்டுப்படுதல் கண்டு எவ்வளவு வருந்தி அவரை வெறுக்கின்றனர்! அப்போது அறிவுடையான் ஒருவன் மற்றையோர் செய்த பிழைகளையெல்லாந் திருத்தி அதனைச் செவ்விதாக்கி முடிக்குங்கால் அதனைக் கண்டு வியந்து அவன் மேல் எவ்வளவு உவப்படைந்து அவனை விரும்புகின்றனர்! இங்ஙனமே மிகச் சிறிய முயற்சி முதல் மிகப்பெரிய முயற்சி ஈறாக அறிவில்லாதார் செய்வன பெரிதும் பிழைபட்டுத் துன்பத்தைத் தருதலும், அறிவுடையார் செய்வன பெரிதுந் திருத்த முற்று இன்பத்தைத் தருதலுஞ் சிறிதேனும் ஆழ்ந்து நினைப்பார்க்கு விளங்காமற் போகா. இதுபற்றியன்றோ தெய்வப் புலமைத் திருவள்ளுவ நாயனார், அறிவுடையார் எல்லாம் உடையர் அறிவிலார் என்உடைய ரேனும் இலர் என்று அருளிச் செய்தனர். இனி, இத்துணைச் சிறந்த அறிவுங் கல்வியாலன்றி உண்டாகாது. கல்வியில்லாதாரிலும் அறிவால் மிக்கவரைக் காண்கின்றோமேயெனின், அவரும் முற்பிறவிகளிற் பயின்ற கல்வியின் பயனாலேயே அங்ஙனம் கூடப்பெற்ற அறிவும் இப்பிறவியில் மேலுமேலுங் கல்வியாற் பண்படுத்தப்பட் டாலன்றி, அது பாசி மூடிய பளிங்குமணி போல் திரும்பவும் அறியாமையில் அகப்பட்டு மங்கிப் போகும். ஆனதனாலேயே, உயர்ந்த கல்வியில்லாதவன் எவ்வளவு உயர்ந்த அறிவு கூறினாலும், அதனை அறிவால் நிறைந்தோர் ஏற்றுக் கொள்ள மாட்டார். இதனைக், கல்லாதான் ஒட்பங் கழியநன் றாயினுங் கொள்ளார் அறிவுடை யார் என்ற திருக்குறளுங் கூறுகின்றது. இனிக் கல்வியுள்ளும் உலகநூற் கல்வி நிலையில்லாத பொருள் களையே உணர்த்துவதால், அதனால் விளையும் அறிவும் நிலையில்லாத இயல்பினதாய் நிலையான இன்பத்தைத் தரமாட்டாதாய் ஒழியும். அறிவுநூற் கல்வியோ உலக நிலை, உயிரின் நிலை, உயிரோடு ஒன்றாய் நிற்கும் அறியாமையின் நிலை, இருவினைத் தோற்றம், உயிர் மூவகைக் குற்றமும் நீங்கும் வகை, முழுமுதற் கடவுளின் இயல்பு, இது செய்யும் உதவி, அதனோ டொன்றாயிருந்து இம்மை மறுமை இரண்டிலும் நுகரும் இன்பநிலை முதலானவற்றை ஆராயும் உயர்ந்த ஆராய்ச்சியில் அறிவைத் தோயவைத்து, அவ்வழியால் அதனைத் தூயதாக்கிப் பேரொளியோடு துலங்க வைத்தலின், அறிவுநூற் கல்வி கற்றார் முன் உலகநூற் கல்வி மட்டும் உடையார் விலங்கினம்போல் எண்ணப்படுவர். இவ்வுண்மை, விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல் கற்றாரோ டேனை யவர் என்ற தெய்வத் திருவள்ளுவர் திருக்குறளால் நன்கு அறியப்படும். இத்திருக்குறளில் இலங்கு நூல் என்றது அறிவு நூலையேயாம். வெளிப்பார்வையளவில் உயிர்கள் எல்லாம் ஒத்த செயலும் மாறுதலும் உடையனபோற் காணப்படினும் நுணுகி ஆராய்ந்தால் அவற்றின் அறிவும் முயற்சியும் ஏற்றத் தாழ்வாகவேயிருக்கும். உண்ணல் உறங்கல் மருவல் சாதல் எல்லாவற்றிற்கும் பொதுவாயிருப்பினும் விலங்கினங்களில் இழிந்த பன்றியும் மக்களில் அறிவுடையன் ஒருவனும் ஒப்பாவர் என எவரேனுங் கூறுவரோ? மக்களில் அறிவுடையான் ஒருவனும் அறிவிலான் ஒருவனும் அங்ஙனமே உண்ணல் உறங்கல் முதலான தொழிலளவில் வேறுபாடில்லாதவர்போற் காணப்படினும், அறிவுடையான் தனக்குள்ளே அறிவின் பெருமையால் உயர்ந்தோனாதலும், அறிவிலான் தனக்குள்ள அறிவின் சிறுமையால் தாழ்ந்தோனாதலும் எல்லார்க்கும் உடன்பாடேயாகும். அஃது உண்மையென்றாலும், உலகநூற் கல்வியால் விளங்கும் அறிவுகொண்டு இம்மையில் எல்லா நலங்களும் பெறுவதாயிருக்க, இதற்கு மேலும் அறிவுநூற் கல்வி ஒன்று வேண்டுமென்பது எதன்பொருட்டோவெனின், உலக நூற்கல்வி ஒன்றே கொண்டு இம்மையிலும் மிகச் சிறந்த நலன்களைப் பெறுதல் இயலாது; இப்பிறப்பிற் பெறுதற்கரிய இன்பங் களையும் அறிவு நூற்கல்வியுடையார் எளிதிற் பெறுவர். கண்ணாற் கண்டுஞ் செவியாற் கேட்டும் வாயாற் சுவைத்தும் மூக்கால் முகர்ந்தும் மெய்யால் தொட்டும் ஐம்பொறிகளால் துய்க்கும் இன்பங்களிலுங்கூட அறிவு நூற்கல்வியால் உயர்ந்த அறிவு வாய்த்தவனுக்கு வரும் இன்பம், ஏனை உலக நூற் கல்விமட்டும் பெற்றவனுக்குத் தோன்றாது. மிகக் கூரிய முனையையுடைய ஓர் இரும்புக்கோல் ஆழ்ந்த தோர் இடத்தையும் துளைத்துச் செல்லும்; முனை மழுங்கியதோ அதைப்போல ஆழ்ந்து செல்ல மாட்டாதாகும். உலக நூற்கல்வி சிறிது அறிவை விளக்குமேனும் அதனாற் செய்யப்படும் உலக முயற்சிகள் பலவும் மக்களுக்குப் பலவகைக் கவலைகளையுந் துன்பங்களையும் விளைவித்து அவரது அறிவை அலுப்படையச் செய்து மழுக்குமாதலின் அவர் ஐம்பொறி இன்பங்களையுங்கூடக் கூர்ந்து பார்த்துத் துய்க்க மாட்டார். அறிவு நூற்கல்வி யுடையார்க்கு நிகழும் அறிவும் முயற்சியும் அத்தகைய அல்லல்களை வருவியாமல் மேன்மேல் உள்ளக் கிளர்ச்சியினைத் தருவனவாய் இருத்தலின், அவரது அறிவு பெருவிளக்கம் உடையதாய், அவர் துய்க்கும் எவ்வகையின்பங்களையும் மிகவுங் கூர்மையாய்த் துய்த்தற்குரிய வழிமுறைகளைக் காட்டி அவரை எக்காலும் பெருமகிழ்ச்சியில் தோய்ந்திருக்கச் செய்யும். இனிய ஓசையையேனும் அழகிய காட்சிகளையேனுந் தீஞ்சுவை உணவையேனுங் நலஞ் சிறந்த வேறு பிறவற்றையேனும் இவ்விருதிறத்தாரும் ஒரு காலத்து ஒருங்கே துய்க்கும்போது, அறிவு நூற் கல்வியுடையார் அவற்றின் நுணுக்கங்களை நிரம்பத் தெரிந்து மிக மகிழ்தலும், உலகநூற் கல்வியுடையார் அவற்றை அங்ஙனம் உணர மாட்டாமையின் அவர் சிறிதே மகிழ்தலுங் கண்கூடாய்க் கண்டறியலாம். மேலும், அறிவுநூற் கல்வியுடையார் பெரிதுங் கூர்மையான அறிவுடையராதலின், அவர் தாம் விரும்பினால் தம்மினுந் தாழ்ந்த உலகநூற் கல்வியுடையார் செய்யும் எத்திற முயற்சிகளையும் அவரைவிட எளிதாகவுஞ் செவ்விதாகவுஞ் செய்து முடிக்கமாட்டுவர். உலக நூற்கல்வியுடையாரோ தாம் எத்துணை தான் விரும்பினாலும், தம்மினும் மேம்பட்ட அறிவுநூற் கல்வியுடையார்க்குள்ள அறிவைப் பெறவாவது அவர் செய்யும் முயற்சிகளிற்றினையளவேனுந் தாஞ் செய்ய வாவது மாட்டுவாரல்லர்; எதுபோலவெனின், அரசியலைத் திறம்பட நடத்தும் மேலோனான ஓர் அமைச்சன் தன்கீழ் அலுவல் பார்ப்பார் செய்யும் முயற்சிகளைத் தான் செய்ய வேண்டினால் அவரினும் அதனைத் திறமையாகச் செய்து முடிப்பன்; அவன் கீழுள்ள ஊர்காவற்காரன் ஒருவன் அவ்வமைச்சன்றொழிலைத் தான் செய்ய விரும்பினால் அது முடியுமோ? அது போல வென்றறிந்து கொள்ளல் வேண்டும். அதுவல்லாமலும், எல்லா உயர்ந்த பொருள்களும், உயர்ந் தோரும், உயர்ந்த இன்பங்களுந் தமக்கு இசையாத உலக நூலறிவு முயற்சியுடையாரை, விட்டகன்று, தமக்கு இசைந்த அறிவு நூலறிவு முயற்சியுடையாரைத் தாமே வந்து அணுகு மாதலின் அறிவுநூற் கலைஞரே இம்மையிலும் எல்லா உயர்ந்த நலங்களையும் பெறுவர்; மறுமையிலும் ஏனையோர்க்கு எட்டாத பேரின்பத்தையும் பெறுவர். ஆதலால், மக்களாய்ப் பிறந்தோர் உலக நூற் கல்வியிலேயே தமது காலத்தை முற்றுங் கழித்து விடாது அறிவு நூற் கல்வியையும் மிக முயன்று பெற்றுப் பேரறிவையும் பெரு நலங்களையும் எய்துவாராக! 15. தமிழ்நாட்டவரும் மேல்நாட்டவரும் - 1936 நம் தமிழ்நாட்டவர் பொருளையுந், தமிழ்நாட்டை அடுத்துள்ள மற்றை இந்திய நாட்டவர் பொருளையும் மேல் நாட்டவர் பல வழியிற் கவர்ந்து செல்கின்றார் என்னுங் கூக்குரல் ஒலியும், அதனைத் தடை செய்து அந்நாட்டவரின் பொருள் இங்கேயே நிலைபெறுமாறு செய்தல் வேண்டின் அயல் நாட்டவர் இங்கே விலைப்படுத்தக் கொண்டுவரும் பண்டங்களை வாங்காது முற்ற ஒழித்தலே செயற்பாலதென்னும் ஆரவாரமும் நாடு எங்கும் பரவிப், பலவகைக் குழப்பங்களையும் பலவகைத் துன்பங்களையும் உயிரழிவுப் பொருளழிவுகளையும் ஆங்காங்கு விளைத்து வருகின்றன. பேர் அல்லலுக்கு இடமான இப்பிழை பாடான வழியிற் புகுந்து நம்மனோர் துன்புறாமல், அவர்களைப் பாதுகாத்தல் வேண்டியே, எமது அறிவுரையை இங்கெழுது கின்றோம். இதனை நன்றாக, ஆராய்ந்து பார்த்து எமதுரை பொருந்துமாயின் அதனைக் கைப்பற்றியொழுகி நம்மவர் நலப்படுவாராக! முதலில் நம் நாட்டவர்பால் உள்ள ஒரு பெருங்குறை என்னென்றால், எதனையும் ஆய்ந்து ஓய்ந்து பார்க்குங் குணம் இல்லாமையேயாம். ஒருவர் கல்வியறிவு ஆராய்ச்சியுடைய பெரியராயிருந்தாலும், அவரைப் பத்துப்பேர் கொண்டாடா விட்டால் அவரை நம்மனோர் தாமுங் கொண்டாடமாட்டார்; அதுவேயுமன்றி, அவரைப் பத்துப்பேர் பொறாமையினாலோ, அல்லது வேறு காரணத்தாலோ இழித்துப் பேசக் கேட்டால், அது தகுமா தகாதா என்று ஆய்ந்து பாராமல் தாமும் அவரை உடனே இழித்துப் பேசிவிடுவார்; அவர்க்குத் தீங்கும் இழைப்பார். இனி, மற்றொருவர் கல்வியறிவு ஆராய்ச்சிகள் சிறிதும் இல்லாராயினும், அல்லது அவை சிறிதே யுடையாரா யினும், பத்துப்பேர் அவர்பால் வைத்த பற்றினாலோ அல்லது அவர்பால் தாம் பெறும் ஏதேனும் ஒரு பயன் குறித்தோ அவரைக் கொண்டாடுவராயின், அவர் எதற்காக அவரைக் கொண்டாடு கின்றார், நாமும் அவரை ஏன் கொண்டாட வேண்டுமென்று சிறிதேனும் ஆராய்ந்து பாராமல் உடனே அவரைக் கண் கால் தெரியாமற் கொண்டாடி விடுவர்; அக் கொண்டாட்டத்தால் வருந்துன்பங்களையுந் தாம் அடைவர். பெரும்பாலும், நம் நாட்டவர் உண்மையறிவு யாராய்ச்சிகள் உடைய பெரியாரைக் கொண்டாடுவதும் இல்லை; அவரால் தாம் அடைதற்குரிய பெரும் பயன் அடைவதுமில்லை. வெளிமினுக்கும் வெற்றாரவாரமும் உடையாரைப் பின்பற்றித் தமது நலனையுந் தம் நாட்டவர் நலனையும் இழந்துவிடுவதே அவர்க்கு இயற்கையாய்ப் படிந்துவிட்டது. இனி, மேல் நாட்டவர்பால் உள்ள ஒரு பெருங்குணம் என்னவென்றால், எவர் எதைச் சொன்னாலும், எவர் எதை எழுதினாலும் அவ்வப்பொருளின் இயல்புகளைத் தம்மாலான மட்டுஞ் சோம்பாமலாராய்ந்து பார்த்து, எது தழுவத் தக்கதோ அதைத் தழுவுவர்; தழுவத் தகாததை விலக்குவர் வெறும் வெளிமினுக்கையும் வெற்றாரவாரத்தையும் கண்டு அவர் ஏமாந்து விடுவதில்லை. அறிவிலும் ஆராய்ச்சியிலுமே அவர்கள் தமது காலத்தைப் பயன்படுத்தி வருவதால், அவர்கள்பால் வீணான எண்ணங்களும் வீணான பேச்சுக்களும் நிகழ்வதில்லை. பிறர்பாற் குற்றங்கள் இருந்தாலும் அவற்றை அவர்கள் ஆராய்வதில்லை; பிறர்பாலுள்ள குணங்களை மட்டும் ஆராய்ந்து, அவற்றுக்காக அவரைப் பாராட்டுவதுடன், அவரால் தாமும் உலகமும் பயன்படுதற்கான ஒழுங்கு களெல்லாஞ் செய்வர். அதனால், மேல் நாட்டவரில் நற்குணமும் நல்லறிவும் நன்முயற்சியும் உடையவர்கள் சீருஞ் சிறப்பும் எய்தித் தாமுந் தம்மைச் சேர்ந்தவரும் வறுமையும் கவலையும் இன்றி உயிர் வாழப்பெற்று, நாடோறும் ஆயிரக்கணக்கான புதுமை களையும் ஆயிரக்கணக்கான பொறிகளையும் (இயந்திரங் களையும்) ஆயிரக்கணக்கான தொழிற் சாலைகளையும் ஆயிரக்கணக்கான கல்விச் சாலைகளையும் ஆயிரக்கணக்கான சொற்பொழிவு மண்டபங்களையும் ஆயிரக் கணக்கான கலையறிவுக் கழகங்களையும், இன்னும் இவை போல் நம் சொல்லளவில் அடங்காத பலப்பல நலன்களையும் தாமிருக்கும் நாடுகளிற் பரவச் செய்து வருவதோடு, தாஞ் செல்லும் பிறநாடுகளிலும் அந்நலன்களையெல்லாம் பரப்பி வருகின்றனர். இனி, நம் நாட்டவர்களுக்கோ அறிவாராய்ச்சி யில்லாமை யோடு ஒற்றுமைக் குணமும் இல்லை; பிறர்பால் அருள் இரக்கமும் இல்லை. தமக்குத் தம் மனைவி மக்களும் நெருங்கிய உறவினருமே உரியரெனவும், மற்றையோரெல்லாந் தமக்கு வேறானவரெனவுந், தாமும் தம்மினத்தவரும் நன்றாயிருத்தலே தமக்கு வேண்டும், தம்மவரல்லாத பிறர் எக்கேடு கெட்டாலென்ன எத்தெருவே போனாலென்ன எனவும் நினைந்து, பிறர் நலத்தைச் சிறிதுங் கருதாதவர்களாய் இருக்கின்றனர். தன்னலங்கருதும் இப்பொல்லாத எண்ணத்தால் இத்தமிழ் நாட்டவர்க்குட் பிரிந்திருக்கும் அளவிறந்த சாதிகளும், அவற்றால் விளைந்திருக்கும் அளவிறந்த வேற்றுமைகளுங் கணக்கிட்டுச் சொல்லல் இயலாது. நாலுபேர் ஒன்று சேர்வார்களானாற் சாதிப் பேச்சும்; பெண் கொடுக்கல் வாங்கலைப் பற்றிய பேச்சும்; அவன் சாதி கெட்டவன், அவனுக்கும் நமக்கும் உறவு கிடையாது, எங்கள் சாதி உயர்ந்தது, எங்கள் சாதியில் ஒடித்தாற் பால் வடியும், எங்களிற் பத்து வீட்டுக்காரரோடுதாம் நாங்கள் கலப்பது வழக்கம், மற்றவர்கள் கையில் தண்ணீர்கூட வாங்கமாட்டோம் என்னும் பேச்சும்; அதைவிட்டால் பொருள் தேடும் வகைகளைப் பற்றிய பேச்சும்; அதுவும் விட்டால் தமக்குப் பொருள் சேருங்காலத்தைப் பற்றியும், நோய்தீரும் நேரத்தைப்பற்றியும், மணம் ஆகும் நாளைப் பற்றியும் எந்த இடத்திற் போனாற் குறிகேட்கலாம்? எந்தத் தெய்வத்துக்கு ஆடு கோழி அறுத்தால் இவை கைகூடும்? மாரியைக் கும்பிடலாமா? மதுரை வீரனைக் கும்பிடலாமா? காளியைக் கும்பிடலாமா? கறுப்பண்ணனைக் கும்பிடலாமா? எசக்கியைக் கும்பிடலாமா? சுடலை மாடனைக் கும்பிடலாமா? என்னுஞ் சிறுதெய்வச் சிற்றுயிர்க் கொலைக் கொடும் பேச்சும்; தனக்குப் பகையானவனைப் பலவகையால் இழித்துத் தன்னைப் பலவகையால் உயர்த்துச் செருக்கிப் பேசும் பேச்சுமே எங்கும் எல்லாரும் பேசக் காண்கின்றோம். புகை வண்டிகளிலும் இந்தப் பேச்சே, பொதுக் கூட்டங்களிலும் இந்தப் பேச்சே, கோயில்களிலும் இந்தப் பேச்சே, குளக்கரைகளிலும் இந்தப் பேச்சே. இதைத்தவிர நாம் எதற்காகப் பிறந்திருக்கின்றோம்? நாம் இப்பிறவியிற் செய்ய வேண்டுவன யாவை? நமக்கும் மற்ற விலங்குகளுக்கும் (மிருகங்களுக்கும்) உள்ள வேற்றுமை என்னை? நம்மையும் மற்ற எண்ணிறந்த உயிரிகளையுந் தோற்றுவித்தது யாது? இந்த உலகங்கள் எதற்காகப் படைக்கப்பட்டிருக்கின்றன? இவைகளையெல்லாம் படைத்த பேரறிவுப் பொருளின் நோக்கம் யாதாய் இருக்கலாம்? நாம் இறந்தபின் எந்த நிலையையடைவோம்? பொருள் தேடுவதும், உண்பதும், உறங்குவதும், மருவுவதுந் தவிர, வேறு நாம் செய்யத் தக்கதும் தகாததும் இல்லையா? என்று இவ்வாறெல்லாம் எண்ணிப் பார்க்கத் தக்கவர்களை நம்மில் நூறாயிரவரில் ஒருவரைக்கூடக் காண்பது அத்திப்பூத்தாற்போல் இருக்கின்றதே! ஆனால், மேல்நாட்டவர்களிலோ இவைகளையெல்லாம் ஆராய்ந்து பார்ப்பவரும், ஆராய்ந்து எழுதுபவரும், ஆராயுங் கழகங்களும், அவர்களாலும் அக்கழகங்களாலும், எழுதி வெளியிடப்பட்ட - வெளியிடப்படுகின்ற நூல்களும், நாள் வெளியீடுகள் கிழமை வெளியீடுகள் திங்கள் வெளியீடுகளும், அவை தம்மைக் கற்பாரும், கற்பிப்பாரும், இவ்வகை கட்கெல்லாம் கோடி கோடியாகத் தமது பொருளை வழங்கு வாரும் எண்ணிக் கையிலும் அடங்குதல் இல்லை. மேல்நாட்டவர்கள் பசியெடுத்த வேளையில் எந்த இடத்தில் எந்த உணவு கிடைக்கின்றதோ அங்கே அதனைப் பெற்று மகிழ்ச்சியோடு உண்பர்; தமது வாழ்க்கைத் துணைக்கு எந்த நாட்டில் எவர் இசைந்தவராய்த் தெளியப்படுகின்றனரோ, அவரை அங்கே மணந்து கொள்வர். உடம்பைப் பற்றிய இவ்விரண்டு குறைகளையும் இங்ஙனம் எளிதிலே நிரப்பிக் கொண்டு, அதற்குமேல் அவற்றில் தம் கருத்தைச் செலுத்தாமல், தம் அறிவு ஆராய்ச்சிகளை மேன்மேற் பெருக்குவதிலும், நாடோறும் புதிய புதிய ஆற்றல்களையும் புதிய புதிய பொறிகளையும் புதிய புதிய உண்மைகளையுங் கண்டு பிடிப்பதிலும், அவற்றைப் பயன்படுத்துவதிலுமே தமது கருத்தை ஓயாமற் செலுத்தி வருகின்றனர். மற்று, நம் நாட்டவரோ மேலே காட்டியபடி நிலை யில்லாமல் அழிந்து போகுந் தமது உடம்பைப் பற்றியும், அவ்வுடம்பால் வந்த தொடர்புகளைப் பற்றியுமே எந்நேரமும் பேசியும் நினைந்தும் வருவதல்லாமல், என்றும் நிலையாக இருக்கத்தக்க தமது அறிவு விளக்கத்தைப் பற்றியாதல், நம் அன்பையும் அருளையும் வளர்க்குங் கடமைகளைப் பற்றியாதல் பேசியும் எண்ணியும் வரக் காண்கின்றோம் இல்லையே! இன்னும், நமது வாழ்க்கைக்கு இன்றியமையாது வேண்டப்படுவன கல்விப்பொருளுஞ் செல்வப்பொருளும் என்னும் இரண்டுமேயாகும். கல்விப்பொருளைப் பெற்றவர்கள், தமக்கும் பிறர்க்கும் நன்மையைத் தருந்துறைகளை ஆய்ந்து பார்த்துக், காலத்தின் நிலைக்கும் இடத்தின் நிலைக்கும் ஒத்த முயற்சிகளைச் சோம்பாது செய்வார்களாயின், அவர்கட்குச் செல்வப்பொருள் தானே வரும். வெறுஞ் செல்வம் மட்டுந் தமது பழவினைப் பயத்தால் வாய்க்கப் பெற்றவர்கள் அங்ஙனங் கல்விப் பொருளை எளிதிலே பெற்றுக் கொள்ளுதல் இயலாது. மேலும் கல்விப் பொருள் என்றும் அழியாது; செல்வமோ சில காலத்தில் அழிந்து போம்; கல்விப் பொருள் ஒருவனது அறிவைப் பற்றிக் கொண்டு எழுமை எழுபிறப்பும் அவனுக்கு உற்ற துணையாய்ச் செல்லும்; செல்வமோ அதனையுடை யானுக்கு இந்தப் பிறவியிலேயே துணையாகாமற், பிறராற் கவரப்பட்டு, ஒரோவொருகால் அவனுயிரையுந், பிறராற் கவரப்பட்டு, ஒரோவொருகால் அவனுயிரையுந் தொலைத்தற்கு ஏதுவாயிருக்கும்; கல்விப் பொருள் இந்த உலகத்திலும், இங்குள்ள உயிர்களிலும் உள்ள வியப்பான உண்மைகளை விளங்கச் செய்வதுடன், இவற்றிற்கு உள்ளுமாய்ப் புறம்புமாய் நிற்கும் இறைவன்றன் அருளுண்மை களையும் விளங்கச் செய்து நமக்குப் பேரின்பத்தைத் தராநிற்கும்; செல்வப் பொருளோ தன்னையுடையானைப் பெரும்பாலுந் தீய துறைகளிற் புகுத்திச் சில காலத்தில் அவன் சிற்றின்பத்தினையும் நுகரவொட்டாமல் அவனை நோய்வாய்ப்படுத்தி அவனை விட்டு நீங்கி அவனை விரைவில் மாய்க்கும் ஆகையாற், கல்விப் பொருள் சிறந்ததோ, செல்வப் பொருள் சிறந்ததோ என்பதைச் சிறிது எண்ணிப் பாருங்கள்! கல்விப் பொருள் ஒன்றுமே நமக்கும் நம்மைச் சேர்ந்தார்க்கும் நலம் பயப்பதன்றிச் செல்வப்பொருள் அங்ஙனம் நலம் பயப்பதன்றென்பது சிறிதுணர்வுடையார்க்கும் விளங்குமன்றோ? ஆகவே, கல்விப் பொருளின் பொருட்டுச் செல்வப் பொருளைப் பயன்படுத்த வேண்டுமேயல்லாமற், செல்வப் பொருளைப் பெறும் பொருட்டே கல்விப் பொருளைப் பயன்படுத்துதல் ஆகாது. ஆனால், நம் நாட்டவர் நிலை எத்தன்மையாயிருக்கின்ற தென்பதை எண்ணிப் பாருங்கள்; நம்மவரிற் பெரும்பாலர்க்குக் கல்வி கற்பதிற் சிறிதும் விருப்பமேயில்லை. கற்கவேண்டிய கட்டாயத்தில் உள்ளவர்களுந் தமிழ் எழுதப் படிக்கத் தெரிந்தாற் போதுமென்றும் அதுவும் வேண்டாங் கையெழுத்துப் போடத் தெரிந்தாற் போதுமென்றும் எண்ணி அங்ஙனமே நடப்பவர்களாய் இருக்கின்றார்கள். இன்னும் பலர், தமிழ் படித்து என்ன வாரிக் கொள்ளப் போகின்றான்? படியாதவர்களில் எத்தனையோ பேர் பொருள் தேடிச் செல்வர்களாயில்லையா? என்று வாய் கூசாது பேசிப் போகின்றனர். இன்னும் பலர், ஆங்கிலம் படித்தாலும் பெரிய வேலை கிடைக்கும். பெரிய அதிகாரங் கிடைக்கும், ஆங்கிலம் படித்துப் பட்டம் வாங்கின மாப்பிள்ளைக்கு ஐயாயிரம் பத்தாயிரத்துடன் பெண் கிடைக்கும் என்று எண்ணுவதுஞ் சொல்லுவதுஞ் செய்து, இவைகளுக்காகவே தம் மக்களை ஆங்கிலம் பயிலச் செய்கின்றார்கள். துவக்கத்திலிருந்தே இந்த எண்ணத்தோடு ஆங்கிலங் கற்கின்ற பிள்ளைகள், அதனில் தேர்ச்சி பெற்றுப் பட்டங்கள் வாங்கினவர்களாய் வெளிவந்தவுடன் பொருள் வருவாய்க்கு இசைந்த வேலைகளைப் பெறுவதிற் கண்ணுங் கருத்தும் உடையராகின்றார்களேயல்லாமல் மேலும்மேலும் கல்வி யறிவைப் பெருக்க வேண்டுமென்னும் எண்ணம் உடைய வராகக் காணப்படவில்லை. அரசியற் துறைகளிலோ, நீராவி நிலையங்களிலோ, ஆங்கில வணிகர்தந் தொழிற்சாலைகளிலோ, இன்னும் இவை போன்ற பிறவற்றிலோ பெரிய பெரிய அலுவல்களில் அமர்ந்து பிறர்க்கும் ஊழியஞ்செய்து பொருள் ஈட்டுவதிலேயே பெருமுயற்சியுடையவர்களாய் இருக்கின்றார்கள். இவ்வலுவல்களைப் பெறும்பொருட்டு அவற்றிற்குத் தலைவர் களாயிருப்பவர்கள் கேட்கும் அளவெல்லாந் தாழ்ந்து கைக்கூலியுங் கொடுக்கின்றார்கள்; அதுமட்டோ, அத் தலைவர்கள் விரும்புகிறபடியெல்லாம் மானக்கேடான செயல்களைச் செய்வதற்கும் முன் நிற்கின்றார்கள்! பொருள் வருவாயையுந் தலைமையையுமே பெரியவாக நினைத்து, இவ்வாறெல்லாம் பெரும் பாடுபட்டுத், தாம் விரும்பிய வேலைகளை அடைந்த பிறகாவது, இவர்கள் எண்ணங் கல்விப் பயிற்சியிலுங் கடவுள் வழிபாட்டிலும் பிறர்க்குதவி செய்வதிலும் நாட்டுக்கு நலந்தேடுவதிலுந் திரும்புகின்றதோ வென்றால், இல்லை, இல்லை தாமிருக்கும் வேலையினளவுக்கு வருஞ் சம்பளத்தில் மனநிறைவு பெறாமல், தாம் தமக்கு மேலுள்ளவர்கட்குக் கைக்கூலி கொடுத்தது போலவே தாமுந் தமக்குக் கீழுள்ளவர் பாலுந் தமது தலைமைக்குக் கீழ் அடங்கி நடக்கும் ஏழை எளியவர்கள் பாலுமிருந்து ஓயாமற் கைக்கூலி வாங்கின வண்ணமா யிருக்கின்றார்கள். அங்ஙனம் ஏழை எளியவர்கள் அழஅழ அவர்கள் வயிற்றில் அடித்துச் சேர்க்கும் பொருளையாவது அவர்கள் நல்வழியிற் செலவு செய்கின்றார்களோவென்றால் அதுவு மில்லை. இரப்பவர்களுக்கு ஒரு கைமுகந்த அரிசிதானுங் கொடுக்க இசையார்; கற்பவர்க்குங் கற்றவர்க்கும் ஒரு காசுதானுங் கொடார். மற்றுந், தம் மனைவி மட்கட்குப் பொற்சரிகை பின்னிய பட்டாடைகள் வாங்கிக் கொடுப்ப திலும், வைரம் இழைத்த உயர்ந்த அணிகலன்கள் செய்வித்து அணிவதிலும், அவர்கள் புழங்குவதற்குப் பொன் வெள்ளிகளிற் சமைத்த ஏனங்கள் வாங்கிச் சேர்ப்பதிலும், அவர்களுந் தாமும் ஏறி ஊர் சுற்றுவதற்குக் குதிரை வண்டிகள் இவற்றினும் விலையுயர்ந்த உந்து வண்டிகள் (Motor Cars) அமைத்துக் கொள்வதிலும், நாடக சாலைகள் குதிரைப் பந்தயங்கள் வட்டக் காட்சிகள் (Circus) சென்று காண்பதிலும் இன்னும் இவை போன்ற வெற்றார வாரங்களிலுமாகத் தாம் ஏழைக் குடி மக்களிடமிருந்து பகற்கொள்ளையடித்த பெருந்தொகையான பொருளைச் செலவு செய்து விடுகின்றார்கள். இன்னும் பலர், சாராயங் குடித்தும், ஊன்தின்றும், வேசியரை மருவியும் அப்பொருளைப் பாழாக்குகின்றார்கள். மற்றும் பலர், அப்பொருளைக் கடன் கொடுத்து வட்டிமேல் வட்டி வாங்கியும், அம்முகத்தால் ஏழை எளியவர்களின் நிலங்கள் வீடுகள் பண்டங்களைக் கவர்ந்துந் தமது பொருளை ஆயிரம் நூறாயிரங்கோடி என்னும் பேரளவாகப் பெருக்கு வதிலேயே முனைந்து நிற்கின்றார்கள். இவ்வாறாக ஆங்கிலங் கற்கும் இந்நாட்டவர் எந்த இனத்தைச் சேர்ந்தவராயிருந்தாலும், அவர் எல்லாம் மேலும் மேலும் பொருள் சேர்ப்பதற்கே தாங் கற்ற கல்வியைக் கருவி யாக்கி, ஏழைக் குடிமக்களைப் பாழாக்குகின்றார்கள். இந் நிலையிற் பார்ப்பனரும் பார்ப்பனரல்லாதாரும் ஒத்தவர்களாகவே யிருக்கின்றார்கள். தந்நலந் தேடுவதிலேயே நாட்டம் வைத்திருக்கும் இவர்கள், அவைக் களங்களில் மேடை மேலேறிப் பேசும்போது மட்டும் ஏழை மக்களுக்காகக் கண்ணீர் விட்டுக் கதறுகின்றார்கள்! இஃது எதனை ஒத்திருக்கிற தென்றால், ஆடு நனைகிறதேயென்று ஓநாய் குந்தியழுததையே ஒத்திருக்கின்றது. மேடைமேல் இவ்வளவு இரக்கங்காட்டிப் பேசிய அவர்கள் வீட்டுக்கு, ஏழையிரவலர்கள் சென்றால் அவர்களை ஏசித் துரத்துகின்றார்கள். இந்த வகையிற் பார்ப்பனரைவிடப் பார்ப்பனரல்லாதாரே மிகக் கொடியராயிருக்கின்றார்கள். யாங்ஙனமென்றால், உயர்ந்த நிலைகளிலுள்ள பார்ப்பனர்கள், தம்மினத்தவரல்லாதார்க்கு ஏதோருதவியுஞ் செய்யாவிடினுந் தம்மினத்தவர்களில் ஏழை களாயிருப்பவர்க்கு எல்லா வகையான உதவியுஞ் செய்யக் காண்கின்றோம். மற்றும், பார்ப்பனரல்லாதாரில் உயர் நிலைகளிலிருப்பவர்களோ ஏழைக்குடிகட்கு ஏதொரு நன்மையுஞ் செய்யக் காண்கிலேம்; நன்மை செய்யா தொழியினுந் தீமையேனுஞ் செய்யாதிருக்கின்றார்களோ வென்றால், அப்படியு மில்லை; எளியவர்களைத் துன்புறுத்தியும், அவர்கள் பொருளைத் தோலிருக்கச் சுளை விழுங்குவது போல் விழுங்கியும் வந்தாற்றானே, தாம் வல்லாண்மை வாழ்க்கை செலுத்தலாம்! செல்வர்களால் துன்புறுத்தப்பட்டு நடுநிலை மன்றங் களில் முறையிடச் செல்லும் எத்தனை எளிய மக்கள், தாம் நடுவர்க்குக் கைக்கூலி கொடுக்க இடமில்லாமையின், அங்கும் நடுவிழந்து ஓலமிட்டு அழுகின்றார்கள்! ஓர் ஆங்கிலர் நடுவராயிருப்பின், அவரால் எத்திறத்தவரும் முறையாக வழக்குத் தீர்க்கப்பட்டுத் தங்குறை தீர்கின்றனர். நம் நாட்டவர் அந்நிலைகளில் இருப்பிற், பெரும்பாலும் அவரால் நடுவாக வழக்குத் தீர்க்கப்படுதல் இல்லை; அவர்க்குக் கைக்கூலி கொடுப்பார் பக்கமே வழக்கு நன்றாய் முடிகின்றது. இதனினும் பெருங் கொடுமையா திருக்கின்றது! காவலாக இட்ட வேலியே பயிரைத் தின்றால் பயிர் விளைவதெப்படி? இங்ஙனம் பொருளையே பெரிதாய் நினைத்து நடுவு தவறி எளியவர்களை வருத்திப் பொருள் சேர்க்கும் ஆங்கிலங் கற்ற நம்மனோர், பார்ப்பனரல்லாத நம்மனோர்க்கு இவ்வாறெல்லாந் தீங்கிழைப்பினும், பார்ப்பனர் காலில் விழுவதற்கும் அவர்க்குத் தாம் சேர்த்த பொருளை மிகுதியாக வழங்குவதற்கு மட்டும் அவர்கள் சிறிதும் பின்வாங்குகின்றார்களில்லை. இவர்கள் ஆங்கிலங் கற்றது வயிற்றுப் பிழைப்புக்கும் பெருமைக்குமே யல்லாமல், ஆங்கிலத்திலுள்ள விழுமிய அறிவாராய்ச்சியைப் பெறுவதற்கு அன்றாகையால், இவர்கள் தம் வீட்டிலுள்ள அறிவில்லாப் பெண்மக்களின் சொல்லுக்கும், ஆராய்ச்சியில்லாப் பேதைகளான தம் சுற்றத்தார் சொல்லுக்குங் கட்டுப்பட்டவர்களாகித், தம் இல்லத்தில் நடக்கும் ஒவ்வொரு சடங்கிற்கும் பார்ப்பனர்களை வரவழைத்து, அவர்க்கு அவர் வேண்டிய பொருளை வழங்கி அவர் காலிலும் விழுகின்றார் கள்! ஒரு வேளை நல்ல சோறுகூடக் கிடையாமற் பட்டினியும் பசியுமாய்க் கிடந்து வாடி வதங்கும் ஏழைகள் முகத்தை ஏறெடுத்தும் பாராமற், பேதைமை வயப்பட்டு, வறுமையறியாத பார்ப்பனர்க்கும், ஆரவாரக் கொண்டாட்டுகட்குஞ், சிறு தெய்வ வெறியாட்டு கட்கும், அழிவழக்குகட்குந் தமது பொருளைக் கணக்கின்றிச் செலவிடும் நம்மனோரின் நிலை, எண்ணுந்தோறும் நடுக்கத்தை விளைவிக்கின்றது! இனி, ஆங்கிலமாவது தமிழாவது கல்லாதிருந்தும், பழைய நல்வினைப் பயனாற் பெருஞ் செல்வர்களாகவுஞ், சிற்றரசர்களா கவும் வாழ்வார் நம் நாட்டில் பெருந்தொகையாய் இருக்கின்றனர். இவர்களுடைய செல்வச் செருக்கையும், இவர்கள் தங்கீழ் உள்ள ஏழை மக்கட்குச் செய்யுங் கொடுமை களையும் நாம் எண்ணிப் பார்ப்போமானால், நமதுள்ளம் இன்னும் மிகுதியாய் நடுங்காநிற்கும், செல்வர்கள் இல்லங்களில் இருக்கும் பொற்சரிகை பின்னிய பட்டாடைகளிலும், அவர்களும் அவர்களின் மாதரும் அணிந்து கொள்ளுங் கல்லிழைத்த நகைகளிலும், அவர்கள் புழங்கும் பொன் வெள்ளி ஏனங்களிலும், அவர்கள் ஏறிச்செல்லும் ஊர்திகளிலும், இன்னும் இவை போன்ற வெளிமினுக்குகளிலும் அவர்கள் செலவு செய்திருக்கும் பொருளைக் கணக்கிடப் புகுந்தால், அவை நூறாயிரக் கணக்காயிருக்கும். இனிச், சிற்றரசர்களாகிய ஜமீன்தார்களின் அரண் மனைகளிலும் இங்ஙனமே ஆடைகளிலும் அணிகலங்கள் முதலியவற்றிலும் மடங்கி வறிதே கிடக்குஞ் செல்வப் பொருளைக் கணக்கிடப் புகுந்தால், அவை கணக்கில் அடங்கா. இங்ஙனமே, சைவவைணவ சுமார்த்த மாத்துவ மடங்களில் ஏதொரு நற்பயனுமின்றி அடங்கிக் கிடந்து மங்கும் பெரும் பொருட்டிரளுங் கணக்கில் அடங்கா. இவ்வாறெல்லாம் இவர்கள் கையில் முடங்கிக் கிடந்து அவியும் பெரும் பொருட் குவியல்களெல்லாம் இவர்களை விட்டு நீங்கிப், பொதுமக்கட்குப் பயன்படு நிலைமையை யடையுமானால், இவ்விந்திய நாட்டில் வறுமையும் நோயுங் அறியாமையுந் தலைகாட்டுமா? இப்பெரும் பொருள் கொண்டு நூறாயிரக் கணக்கான கல்விச் சாலைகளை நாடெங்குந் திறப்பிக்கலாம். மிக வறியராயிருப் பவர்கட்கு அவர் வறுமை நீங்கும் மட்டும் உணவு கொடுக்கும் அறச்சாலைகள் எங்கும் அமைக்கலாம். ஏழை யெளிய பிள்ளைகட்கு உண்டியும் உடையும் நூல்களும் வாங்கிக் கொடுத்துச் சம்பளம் வாங்காமற் கல்வி கற்பிக்கலாம். உழவுத் தொழில் கைத்தொழில்களை அறிவாராய்ச்சியோடு செய்து இப்போது பெறும் பயனிலும் நூறு மடங்கு ஆயிர மடங்கு மிகுதியான பயனைப் பெறலாம். வாணிகத்திற் பொய்யும் புரட்டுங் கலவாமல் அதனை நேர்மையோடு செய்து பேரூதியத்தையடையச் செய்யலாம். இவை மட்டுமோ, இந்தியர்கள் தாமே தமது பொருள் கொண்டு புகைவண்டித் தொடர்கள், மின் வண்டிகள், வானவூர்திகள் முதலியனவெல்லாம் அமைத்துக் கொள்ளலாம். நீர்வளமில்லாத நாடு நகரங்களுக்குக் குளங்கள் கூவல்கள் நீர்ப்பீலிகள் எடுப்பிக்கலாம். பொது மக்கட்கு அறிவு ஊட்டுங் கழகங்கள் நிலைபெறுத்தி, அவற்றிற் கலைவல்ல அறிஞர்களை அமர்த்தலாம்; அவர்கள் கடவுளைப் பற்றியும் உலகியற் பொருள்களைப் பற்றியுங் குழாங்கொண்டு ஆராய்ந்து அறிவு பெறுதற்குக் கலையாராய்ச்சி மன்றங்கள் நிறுவலாம்; அவர்கள் ஆராய்ந்தெழுதும் நூல்களுக்குத் தக்கபடி பொருளுதவி புரிந்து, அவற்றை அச்சிட்டு நாடெங்கும் பரப்பலாம். ஆண்டுகடோறும் பன்னூறாயிரக் கணக்காய் மக்களுயிரைக் கொள்ளை கொண்டு போகுங்கொடிய நோய்களை வராமற் றடைசெய்து மக்கள் வாழ்நாளை நீளச்செய்து அவரறிவு வளர்ச்சிக்குப் பெருந்துணை செய்யும் மருத்துவக் கழகங்கள் எங்கும் அமைக்கலாம். எல்லா உலகங்களையும் எல்லா உயிர்களையும் தோற்றுவித்து உயிர்கட்கு ஓயாமற் பேருதவி செய்துவரும் ஒரே முழுமுதற் கடவுளான ஒரு பெருந்தந்தையை அறியாமற், பிறந்து பெருந்துன்பப்பட்டு இறந்த மக்களையும் மக்களினுந் தாழ்ந்த சிற்றுயிர்களையும் தெய்வங்களாக நினைந்து வணங்கும் பெருங்குற்றஞ் செய்வதோடு, வாயற்ற தீங்கற்ற ஏழையுயிர்களாய் ஆடு மாடு கோழி முதலியவைகளைத் துடிதுடிக்க அறுத்து, அவற்றை அத்தெய்வங்களுக்குப் பலியாக ஊட்டி மீளா நரகத்திற்கு ஆளாகும் நம் பொதுமக்களை அத்தீமையினின்று விடுவிக்கலாம். சாதியென்றுங் குலம் என்றும் வரையறுத்துக் கொண்டு சிறுவர் சிறுமிகளை அளவிறந்த துயரக் கடலில் அமிழ்த்திவரும் கொடிய செயல்களையொழித்து, அறிவும் நற்குணமும் நற்செயலும் அன்பும் உடையாரை ஏதொரு வேற்றுமையும் இன்றி ஒருங்கு கூட்டி வாழச் செய்யும் மக்கட் கூட்டுறவு மன்றங்கள் (Social Service Leagues) எங்கும் நிலை பெறுத்தலாம். ஒரு முழுமுதற் கடவுளை எல்லாருந் தடை யின்றிச் சென்று வழிபட்டு மகிழுந் திருக்கோயில்கள் எங்கும் எடுப்பிக் கலாம். இன்னும் நம் மக்களின் இம்மை மறுமை வாழ்க்கைக்கு இன்றியமையாது வேண்டிய இன்னும் எத்தனையோ உயர்ந்த ஏற்பாடுகளை யெல்லாஞ் செய்விக்கலாம். இவ்வளவு நலங்களுக்கும் பயன்படுவதற்குரிய கோடி கோடியான பெரும் பொருட் குவியல்கள், நம் நாட்டுச் செல்வர்களிடத்துஞ் சிற்றரசர்களிடத்தும் அரசர்களிடத்தும் மடத்தலைவர்களிடத்துஞ் சிறிதும் பிறர்க்கும் பயன்படாத வாறாய் மடங்கி மங்கிக் கிடக்கையில், அப் பொருட்டிரளை அவர்கள்பால் நின்றும் விடுவித்துப், பொதுமக்கட்குப் பயன்படுந்துறையில் இறங்கி முயலாமல் நம் நாட்டுத் தலைவர்கள், நம் நாட்டுப் பொருள் மேல்நாட்டுக்குப் போய்விடு கின்றதே! என்று சொல்லி, ஆராய்ச்சியறிவு சிறிதுமில்லாத, சாதி வேற்றுமைச் சமய வேற்றுமைப் படுகுழியினின்றும் ஏற விருப்பமில்லாத நம் இந்திய மக்களை வீணே கிளப்பிவிட்டு, இந்நாட்டுக்குப் பலவாற்றாற் பெருந்தீமைகளை உண்டு பண்ணுதல் நன்றாகுமா என்பதனை எண்ணிப் பாருங்கள்! நம் நாட்டவர் கையிற் பொருள் கிடைத்தால் அது நம் பொது மக்கட்குப் பயன்படப் போவதில்லை! நகைக்குந், துணிக்கும், ஊர்திகட்குஞ், சாதியிறுமாப்புச் சமய இறுமாப்பு களைப் பெருக்குதற்கும், ஏழை எளியவர்களைக் கொடுமையாக நடத்துதற்குந், தீயவொழுக்கங்களை மிகுதி செய்வதற்கும் பார்ப்பனர்க்குக் கொடுப்பதற்கும், ஆங்கில மருத்துவஞ் செய்வார் செலவிற்கும், அழிவழக்காடுதற்கும், இன்னும் இவைபோன்ற தீயவற்றிற்குந்தாம் அவரது பொருள் பயன்படும்; அல்லது அவர் பொருள்மேற் பொருள் சேர்த்து வைத்துவிட்டுச் சாகப், பின்வந்தோர் அவற்றையழித்துப் பாழாக்குதற்கே பயன்படும்! இவைகளைத் தவிர வேறெந்த நல்ல துறையிலாயினும் நம் செல்வர்கள் தமது பொருளை மனம் உவந்து பயன்படுத்தக் கண்டதுண்டோ சொல்லுங்கள்! மற்று, நமக்குப் புறம்பான மேல்நாட்டவர் கையிற் பொருள் சேர்ந்தால் அஃது எத்துணை நல்ல துறைகளிற் சென்று பயன்பட்டு, உலகிற் பரந்து விரிந்திருக்கும் எல்லா வகை யினரான மக்களையும் இன்ப அறிவு வாழ்க்கையில் வாழச்செய்கின்ற தென்பதைச் சிறிதுணர்ந்து பாருங்கள்! மேல்நாட்டவர் ஒரே முழுமுதற் கடவுளை வணங்கு வதோடு, அவ்வொரு கடவுளை வணங்காமல் இறந்துபோன உயிர்களையும், மரங்கள் விலங்குகள் கட்டைகள் கற்கள் முதலானவைகளையும் அறியாமையால் வணங்கிப் பிழைபடும் ஏனைத் தேய மக்களிடத்து இரக்கமுடையவர்களாய்க், கோடி கோடியாகத் தமது பொருளைச் செலவு செய்து, கல்வி அறிவு ஆராய்ச்சியிற் சிறந்த தம் குருமார்களை நூறாயிரக்கணக்காய் அத்தேயங்களுக்கெல்லாம் அனுப்பி, ஆங்காங்குள்ள மக்களுக்குச் சமய அறிவையும் புகட்டி வருகின்றார்கள். இங்ஙனம் மேல்நாட்டவர் மற்றைக் கலையறிவுகளுடன் சமய அறிவிலுந் தாம் மேம்பட்டு விளங்குவதோடு, மற்றை நாட்டவரும் அதிற் சிறந்து விளங்க வேண்டுமென்னும் பேரிரக்கமுடையவர்களாய், அதற்கென்று தமது பொருளைக் கணக்கில்லாமற் செலவு செய்து வருதல் போல நம் நாட்டவர் தமக்கேனும் பிறர்க்கேனும் அங்ஙனஞ் செய்யக் கண்ட துண்டோ? நம் நாட்டிலுள்ளவர் ஓரினத்தவர் தமது சமயக் கல்விக்கேனுந், தம்மோடு உடன் உறையும் மற்றையினத்தவர் சமயக் கல்விக்கேனும் ஒரு காசாயினுஞ் செலவு செய்யக் கண்டதுண்டோ? அதுமட்டுமா! ஒரு சில இனங்களைச் சேர்ந்தவர்கள் தாம் வணங்குங் கோயில்களில், தம்மோடு ஓர் ஊரில் ஒருங்கு உறையும் வேறுசில இனத்தவர்களை உள்ளே நுழையவிடாமற், கிட்ட அணுகினால் அவர்களை வெட்டிச் சாய்க்கின்றார்களே! இவர்கள்தாமா ஒரு நாட்டவர்? இவர்கள் தாமா அருளொழுக் கத்திற் சிறந்தவராக நூல்களிற் புலனாகுஞ் சைவ வைணவ சமயாசிரியர் மரபில் வந்தவர்கள்? இத்தமிழ் நாட்டில் இவ்வொரு சில இனத்தார்க்குள்ள இறுமாப்பும் மனக்காழ்ப்புங் கொடுமையும் வேறெங்கேனும் இருக்கக் கண்டதுண்டோ? இத்தகையவர்கள் கையிற் பொருள் மிகுதியாய்ச் சேர்வது எதற்கு? அவர்களின் கொழுப்பையுங் காழ்ப்பையுங் கொடுமை யையும் மிகுதிப்படுத்துதற்கன்றோ? இக் கொடியவர்கள் கையை விட்டு நீங்கி அப்பொருள் மேல்நாட்டவர் கையை அடைந்தால், அதனால் உலகிற்கு நன்மையே விளையுமல்லாது தீமை சிறிதும் உண்டாகாதென்பது நன்கு புலனாகவில்லையா? இனிச் சமயக் கல்வியிலேயல்லாமற் பிற கல்வித் துறைகளிலும் மேல்நாட்டவர் தமது பொருளை எத்தனை கோடிக் கணக்காய்ச் செலவு செய்கின்றார்களென்பதைச் சிறிதெண்ணிப் பாருங்கள்! மேல்நாட்டவர் இத்தமிழ்நாட்டில் வருவதற்குமுன் இங்கே உயர்ந்த பள்ளிக்கூடம் ஒன்றாயினும் இருந்ததா? திண்ணைப் பள்ளிக்கூடங்கள் சிலவே எங்கோ சில இடங்களில் வயிற்றுப் பிழைப்புக்கு இல்லா வாத்தியார்களால் நடத்தப்பட்டன; அவ்வாத்தியார்களிற் பெரும்பாலாரும் தமிழ் நன்கு கற்றறியாதவர். ஒரு சிறுவன் தமிழ் எழுத்துக்கள் எழுதப் படிக்கத் தெரிந்துகொள்வதற்கே நாலைந்து ஆண்டுகள் செல்லும். அக்காலத்தில் அச்சுப் புத்தகங்களேயில்லாமையால், உயர்ந்த தமிழ் நூல்களை எளிதிற் பெற்றுப் பயில்வதற்கே இடமில்லாமற் போயிற்று. இவ்வொட்டுத் திண்ணைப் பள்ளிக்கூடங்களிலுந், தாழ்ந்த குலத்தவராக எண்ணப்படுவோர் சேர்ந்து படித்தல் இயலாது. அஞ்ஞான்றிருந்த தமிழ்ப் புலவர் சிலரும் பொருள் வருவாய்க்கு வழியில்லாமையாற், செல்வர் சிலரையடுத்து அவரைப் பலவகையாலெல்லாம் புகழ்ந்து பாடிக் காலங் கழித்து வந்தார்கள். இவ்விரங்கத்தக்க நிலை இப்போது முற்றும் ஒழிந்து போயிற்றென்று சொல்லுதல் கூடாது. ஆனாலும், மேல்நாட்டவர் இந்நாட்டுக்கு வந்தபின், தமிழ் மக்கட்கும் பிறர்க்கும் விளைந்திருக்குங் கல்வி நலங்கள் எவராலும் மறுக்க முடியா! அவர்கள் இன்னார்க்குக் கல்வி கற்பிக்கலாம், இன்னார்க்குக் கல்வி கற்பிக்கலாகாது என்னும் வேற்றுமை சிறிதும் பாராதவர்களாய்க், கல்வியென்னும் நந்தாமணி விளக்கை எல்லார் கையிலும் கொடுத்து, அறியாமையென்னும் பேரிருளைக் கடந்து அறிவுலகத்துக்குச் செல்லும் ஒப்புயர்வற்ற வழியைக் காட்டி வருகின்றார்கள் அல்லரோ? பார்ப்பனக்குடி வேளாளக் குடிகள் இருக்குமிடங்களிலேயன்றிப், பள்ளச்சேரி பறைச்சேரிகளிலும் அவர்கள் நெடுகப் பள்ளிக்கூடங்கள் அமைத்துக் கல்வியையூட்டி எல்லார்க்கும் அறிவுக்கண்ணைத் திறப்பித்து வருதல் எல்லாரும் அறிந்ததன்றோ? இனி, நன்செய், புன்செய்ப் பயிர்களை விளைத்தற்குங் குளங் கூவல் கிணறுகள் வெட்டுதற்கும் வீடுகள் கட்டுதற்கும், ஆடு மாடுகள் மேய்த்தற்கும் இன்னுந் தமக்கு வேண்டிய எத்தனையோ வேலைகளெல்லாஞ் செய்வித்துக் கொள்ளு தற்கும் இவ்வேழைக் குடிமக்களைப் பயன்படுத்தி, அவ்வழியால் திரண்ட செல்வத்தையடைந்து இனிது வாழும் நம் நாட்டு அரசர்களுங் குறுநில மன்னர்களும் மடாதிபதிகளுஞ் செல்வர்களுமோ வென்றால் அவ்வேழைகளுக்கு ஒரு வேளை நல்லுணவாவது அவர்கள் உடுத்துக் கொள்ளுவதற்கு ஓர் ஆறு முழத்துண்டாவது கொடுக்கின்றார்களா? இல்லை, இல்லை, அவர்கள் தமிழ் கற்பதற்கு ஒரு சிறு பள்ளிக்கூடமாவது வைத்து நடத்துகின் றார்களா? இல்லை. இல்லை. இதுமட்டுமோ! அவ்வேழைகள் நம் மூர்த்தெரு வழியேயுஞ் செல்லல் ஆகாது, தாம் புழங்குந் தண்ணீர்த் துறைகளிலுந் தண்ணீர் முகக்கல் ஆகாது, நான் பெரியவன், அவன் தாழ்ந்தவன். எனக்கு முதலில் திருநீறு துளசி கொடுக்க வேண்டும். அவனுக்கு அப்புறங் கொடுக்க வேண்டும் என்று தமக்குள்ளேயே தம் பெருமையைக் காட்டிக்கொள்ளத் தாம் செல்லுங் கோபுர வாயிலிலும் அவ்வேழை மக்கள் அணுகுதல் ஆகாது என்று அவர்களைத் துரத்தி அடிக்கின்றார்கள். ஏதொரு தீங்குஞ் செய்யாது. எல்லா வகையிலும் நலங்களே செய்து, தம்மையுந் தம்மவரையும் இனிது வாழ வைக்கும் அவ்வெளிய மக்களுக்கு, மேற்குலத்தவராகத் தம்மைத் தாமே உயர்த்துச் சொல்லிக் கொள்ளும் மக்கட்போலிகள் எத்தகைய கைம்மாறு செய்கின்றார்கள்! பார்த்தீர்களா? அருளிரக்கமுடையார் சிலர், இம்மக்கட்போலிகளைப் பார்த்து, உங்களுக்கு நன்மையே செய்யும் இவ்வேழைகளை ஏன் இங்ஙனம் வருத்துகின்றீர்கள்? என்று கேட்டால், ஊரார் எவர்க்குந் தெரியாத வடமொழியிற் பார்ப்பனர் தமது நன்மையையே கோரி, மற்றைப் பிறரையெல்லாம் இழித்து, அவர்க்குத் தீது செய்யுந் தீய எண்ணத்தோடு எழுதி வைத்திருக்குங் கொடிய மிருதி நூற் கட்டளைகளையெல்லாம் எடுத்து முழுநீளங்காட்டிக்,கடவுளே வேதத்தில் இப்படிச் சொல்லி யிருக்கிறார். அப்படிச் சொல்லியிருக்கிறார், அவரவர் முற்பிறவியிற் செய்த வினைப்படிதானே இப்பிறவியில் மேற்குல கீழ்க்குலங்களிற் பிறந்து துன்புற வேண்டும்! அதற்கு நாம் என்ன செய்யலாம்! என்று எளிதாகச் சொல்லி ஏமாற்றி விடுகிறார்கள். வடமொழி நூல்கள் நமக்கு உரியவைகள் அல்ல. நமக்குரிய எந்தப் பழைய தமிழ் நூல்களிலாவது இத்தகைய கொடுமையை நம் போன்ற மக்கட்குச் செய்யும்படி ஏதேனுஞ் சொல்லியிருக் கின்றதா? நம் சைவ சமயாசிரியர்களெல்லாருஞ் சாதிவேற்றுமை சிறிதும் பாராது நடந்தும் பாடியும் இருக்கின்றனரே; நம் ஆசிரியர் செய்தபடியுஞ் சொல்லியபடியும் அல்லவா நாம் நடத்தல் வேண்டும்? என்று அவ்வருளாளர் கேட்டால், அவையெல்லாம் பக்தி மார்க்கத்தில் உள்ளார்க்குந் தகுங், கர்ம மார்க்கத்திலுள்ள நமக்கு அவை தகா என்கின்றார்கள். அதன்மேற், பக்தி மார்க்கம் உயர்ந்ததா? தாழ்ந்ததா? அன்புநெறி அருள் நெறியைப் பரப்பிய நம் சமயாசிரியர் கடைப்பிடித்து ஒழுகிய முறைப்படி நாம் நடப்பது நன்றா? தீதா? என்று வினவினால், அச்சாதி வெறிபிடித்த போலிகள், சமயாசிரியர் எய்தியநிலை வரும் வரைக்கும் நாம் அவர்போல் நடத்தல் தீதாகும் என்று விடை கூறுகின்றனர். அதுகேட்டு மீண்டும் அவ்வருட்செல்வர், ஒற்றுமையின்மையால் வரும் பகைமை பொறாமையினாலும், அன்பு அருள் இன்மையால் வரும் வன்னெஞ்ச இறுமாப்பினாலும் பற்றப்பட்டிருக்கும் வரையில் மக்கள் சமயாசிரியர் நிலையினையெய்தல் யாங்ஙனங் கைகூடும்? என்று கேட்பின், அதற்கவர் விடைகூற மாட்டாமல் மெல்ல எழுந்து நழுவிப் போய்விடுகின்றனர். உண்மையான் நோக்குங்காற், சாதி வெறியர்க்குத் தம்முடம்போடு அழிந்தொழியுஞ் சாதிதான் பெரிதாகக் காணப்படுகின்றதேயன்றி உடம்பழியினுந் தான் அழியாதாய்த் தம்முயிரோடு உடன்வருஞ் சமயவறிவு பெரிதாகக் காணப்பட வில்லை. தம் சமயாசிரியர் வழி நடவாத இவர்கள், தம்மைச் சைவர் என்று உயர்த்திப் பேசிக்கொள்வதும் அவர் அருளிச் செய்த திருப்பதிகங்களை ஓதுவதும், அவரைப் பாராட்டிப் பேசுவதும் நகைப்புக்கேயிட மாயிருக்கின்றன. தமது சமயத்தினுந் தஞ்சாதியையே அவர்கள் மேலதாய்க் கருதுகின்றனர் என்பதற்கு, அவர்கள் தஞ்சமயத்தவரல்லாத வைணவர் சிலர் தமக்கு உறவினராதல் பற்றி அவரோடு உண்ணல் கலத்தல்களைச் செய்தலே சான்றாகும். தம்முடைய சைவ வைணவ சமயந் துறந்து கிறித்துவ சமயம் புகுவாருஞ், சாதி வேற்றுமைக்கு எள்ளளவும் இடம் இல்லாத அக்கிறித்துவ சமயம் புகுந்த பின்னருந் தமது பாழ்த்த சாதி வேற்றுமையினை விடாப்பிடியாய்ப் பற்றிக் கொண்டு, தாம் இறைவனைத் தொழச் செல்லுந் திருக்கோயில்களிலுங் கலகம் விளைக்கின்றன ரென்றாற், சாதியிறுமாப்பின் கொடுமையை என்னென்றெடுத் துரைப்பேம்! திருக்கோயில்களிலுஞ் சாதிவேற்றுமை பாராட்டி ஈர நெஞ்சமின்றி ஒருவரையொருவர் வெட்டிச் சாய்க்கக் கங்கணங் கட்டி முனைந்து நிற்கும் இவர்கள் தாமா ஆங்கில அரசை நீக்கித் தாமாக அரசாள வல்லவர்கள்? இங்ஙனந் தமக்குரிய சமய அறிவையுஞ் சமயாசிரி யரையுஞ் சமயநூல்களையுஞ் சமயவொழுக்கங்களையும் பெரிதாகக் கருதாமற், தாம் பிறந்த சாதியையே அவை யெல்லாவற்றினும் பெரிதாகக் கருதி நடக்குந் தமிழர்கள், தமக்குரிய தமிழ் மொழியிலாயினும் உணர்ச்சி வாய்ந்தவர் களாய் இருக்கின்றார் களோவெனின், அப்படியும் இல்லை. தமிழர் பத்தாயிரம்பேரில் ஒருவர் இருவர்க்கே சிறிது எழுத்துக் கூட்டிப் படிக்கத் தெரியும்; தமிழறிவு செவ்வையாக வாய்ந்தவர்களைத் தேடப் புகுந்தால், நூறாயிரவர்க்கு ஒருவர் இருவரே காணப்படுவர். இங்ஙனம் மிக அரியராய்க் காணப்படுந் தமிழ் கற்றாரிற் பெரும்பாலார்க்குள்ள அறிவு நிலையாவது, தமிழ் கல்லாத ஏனையோர்க்கு உள்ள அறிவு நிலையினுஞ் சிறந்ததாகக் காணப்படுகின்றதோ வென்றால், அப்படியும் இல்லை. கல்லாதவர்க்குளுள் சாதியிறு மாப்பும் மடமைக் கொள்கைகளுங் கற்றவரையும் விட்டு நீங்கிய பாடில்லை. கற்றவருங் கல்லாதார்க் கிணங்கி அவர் வழிச் செல்லக் காண்கின்றோமேயன்றிக், கற்றவர் தாங்கற்ற கல்வி யறிவாற் கல்லாதாரைத் திருத்தி அவரைத் தம்வழிப்படுக்கக் காண்கின்றோம் இல்லை. தமது தனிச் செந்தமிழ் மொழியில் அன்பு அறிவு அருளொழுக்கங்களை விரிக்கும் நூல்களும், அரசர்கள் அடியார்கள் கற்றவர்களின் உண்மை வரலாறுகளைத் தெரிவிக்கும் பாட்டுகள் காப்பியங்களும், இறைவனைக் கண்டு அவனைக் குழைந்து உருகிப் பாடிய சமயாசிரியர் தந்த திருப்பதிகங்களும் நிரம்பிக் கிடக்க, அவற்றின் அருமை பெருமையறியாமல், தமிழ் நூல் நலத்திற் றினையளவும் வாயாது பொய்யும் புரட்டுங் கொலைபுலை கட்குடியும் மலிந்த ஆரிய நூல்களைத் தாம் சிறிதும் ஆய்ந்து பாராதிருந்தும், அவற்றை வேதம் மிருதி, இதிகாசம், புராணம் என்று உயர்த்துப் பேசி அவைதம்மை இறைவன் அருளிச் செய்தனவாகப் பாராட்டித் தாம் கற்ற தமிழையும் தமிழ் நூல்களையும் இழித்துப் பேசுந் தமிழ்ப் புலவரின் அறிவுநிலை எத்தகையதென்பதை எண்ணிப் பாருங்கள்! தாம் கற்ற வடநூற் கல்வி உலகினர்க்குப் பயன்படா தென்பதை நன்குணர்ந்திருந்துந், தாம் கல்லாத தமிழ்மொழிக் கல்வியே இந்நாட்டவர் முன்னேற்றத்திற்குப் பெரிது பயன்படு மென்பதை நெஞ்சாரத் தெரிந்திருந்தும் தாம் பயின்ற இருக்கு முதலான ஆரிய நூல்களிற் பல்வேறு சிறுதெய்வ வணக்கமும் மக்களின் நல்லொழுக்கத் துறைகட்கு ஆகாதனவும் வெறும் பொய்க் கதைகளும் நிறைந்திருத்தல் செவ்வனே அறிந்திருந்துந் தாம் பயிலாத தொல்காப்பியம் சங்க இலக்கியம், திருக்குறள், சிலப்பதிகாரம், தேவார திருவாசகம், பெரியபுராணம், சிவஞான போதம் முதலான அருந்தமிழ் நூல்களில் ஒரே முழுமுதற் கடவுள் வணக்கமும் மக்களின் நல்லொழுங்கத் துறைகட்கு இன்றியமையாது வேண்டுவனவும், உயர்ந்த உண்மை வரலாறுகளும் நிரம்பி விளங்கல் கேட்டிருந்தும், தாம் தமக்குரியவாகக் கருதியிருக்கும் வடநூல்களையே தெய்வ நூல்களாக உயர்த்துப் பேசித் தமக்குப் புறம்பாகத் தாம் கருதியிருக்குந் தமிழ் நூல்களையெல்லாம் மக்களிலுந் தாழ்ந்தவர்க்குரியவாக இழித்துப் பேசி இந்நாட்டவர் முன்னேற்றத்திற்குப் பெருந்தடையாய் நிற்கும் ஆரிய மாந்தர்தம் அறிவு நிலை எத்தகையதென்பதையும் எண்ணிப் பாருங்கள்! இவ்வாறாக இத்தமிழ்நாட்டிலுள்ள கற்றவர்கள் நிலையும் நடுவு நிலை நிரம்பியதாய், உண்மையை உள்ளபடி ஆராய்ந் துரைத்து மக்களை உண்மையறிவில் மேலெழச் செய்தலிற் சிறிதும் விருப்பு இல்லாமல் அவர் தம் முன்னேற்றத்திற்குப் பேரிடர் பயப்பது மாயிருத்தலை ஆழ்ந்து நினையவல்லார்க்கு, இந்நாட்டவரும் இவரிற் பலவகையில் வேறுபடாத வட நாட்டவரும் ஒருங்கு கெழுமித் தாமே தமது நாட்டை அரசுபுரிதல் கனவிலுங் கைகூடாதென்பது நன்கு விளங்காநிற்கும், இஃதிவ்வாறிருக்க, இனி, மேல்நாட்டவரிற் கற்றாரின் அறிவு நிலையினைச் சிறிதெண்ணிப் பாருங்கள்! அவர்கள் தாம் பெற்ற செல்வ மெல்லாந் தமது கல்விப் பயிற்சிக்கே பயன்படுமாறு செய்து, தமது ஆங்கில மொழியை மிகத் திருத்தமாகவுந் தீஞ்சுவை யுடைய தாகவும் வழங்கி, அதன்கண் எல்லா வகையான கலை நூல்களையும் ஆழ்ந்தாராய்ந்து தெளிந்த அறிவான் நாளு நாளும் இயற்றி உலகமெங்கணுந் தமது மொழிப்பயிற்சியை ஒளிரச் செய்து வருகின்றார்கள். அதுமட்டுமோ! அவர்கள் அயல்நாட்டு மொழிகளையும் நன்கு பயின்று, அவற்றின்கண் உள்ள அரியபெரிய நூல்களையும் தமது ஆங்கில மொழியில் திருப்பி, அவற்றின் உண்மைகளையும் நடு நிலை வழாது எடுத்துக்காட்டி, அவைகளும் இவ்வுலகமெங்கும் பரவிப் பயன்தருமாறு செய்கின்றார்கள். மற்று, நம் இந்திய நாட்டு மக்கட் பகுப்பினரோ தாந்தாம் வழங்கும் மொழியையன்றித் தம்மிற் பிறவகுப்பினர் வழங்கும் மொழியையும் அதன்கண் உள்ள நூல்களையுங் கற்பதில் வேட்கை சிறிதுமில்லாராய் நிற்கும் அளவிலமையாது, அவற்றையும் அவற்றை வழங்கி வருவாரையும் இழித்துப் பேசியும் வாளா மாய்கின்றனர். இன்னும், மேல்நாட்டவர் தமக்குரிய கிறித்துவ சமயவுணர்ச்சியை இவ்வுலகமெங்கணும் பரவச்செய்தற்குத் தமது பொருளிற் பெரும்பகுதியைச் செலவிட்டு வருகின்றனரே யல்லாமல், தமது சமயவுணர்ச்சியை ஒரு கருவியாய்க் கொண்டு செல்வப் பொருளை அவர்கள் தேடித் தொகுத்தல் கண்டிலேம். மற்று, இந்நாட்டின்கண் உள்ள குருக்கள்மாரோ இந்து சமயப் பெயரால் அளவிறந்த கிரியைகள் சடங்குகளை வகுத்துவைத்து, அவற்றின் வாயிலாகச் செல்வர்கள் சிற்றரசர்கள் அரசர்களின் செல்வமெல்லாங் கவர்ந்து வருதலுடன், ஏழைக் குடிமக்கட் குரிய சிறு பொருளையுமுறிஞ்சி அவர்களையும் வறுமைக்கு இரையாக்கி வருகின்றார்கள். ஒருவன் பிறந்தது முதல் அவன் இறக்குமளவும், அவனும் அவனுக்குரியாருங் கடன்பட்டாயினுஞ் செய்து தீர்த்து விடும்படியாக அவர்கள் கட்டிவைத்திருக்குங் கிரியைகளையுஞ் சடங்குகளையும் அவற்றிற்காகச் செலவாகும் பொருட்டி ரளையுங் கணக்கிட்டுப் பாருங்கள்! ஒருவன் செத்தவுடனாவது இக்கிரியைகள் ஒழிகின்றனவா? இல்லை, இல்லை. அவன் செத்த பத்தாம் நாளிலுங் கிரியை, ஒவ்வொரு திங்களிலும் மறைநிலா நாளிலுங் கிரியை. ஒவ்வோராண்டிலும் அவன் இறந்த நாளிலுங் கிரியை. இங்ஙனங், கருவாய் வயிற்றிலிருக்கும் போதும், மகவாய்ப் பிறந்து அறை கழிக்கும் போதும், ஆடையுடுக்கும் போதுங், காது குத்தும்போதும், பள்ளிக்கூடத்திற் புகும்போதும், மணஞ்செயும் போதும், மனைவியுடன் கூடும்போதும், அறுபதாம் ஆண்டு நிறையும்போதும், இறந்தபோதும், இறந்த பின்னருந் தொடர்பான செலவிற் கிரியைகளைச் செய்து நம் தமிழ்மக்கள் வறுமையிற் கிடந்துழலுமாறு புரிந்து, அவர் தரும் பொருளாற் கொழுக்கத் தின்று இன்புற்று இரக்கமிலராய் வாழும் ஆரியக் குருக்கள் மார்தஞ் சூழ்ச்சியை எண்ணிப் பார்ப்போர் எவரேனும் உளரா? இங்ஙனந் தொடர்பாகக் கிரியைகளைப் பற்றுமாறு கற்பித்து, அவற்றைத் தமிழர்கள் தாமே செய்யாமல் ஆரியராகிய தம்மைக்கொண்டே செய்வித்தல் வேண்டு மெனவும் வற்புறுத்தி, அவ்வாற்றால் தமிழர்கள் பொருளைப் பகற்கொள்ளை கொண்டு இனிது வாழும் ஆரியக் குருக்கள், தாம் தமிழர் இல்லங்களில் அங்ஙனந் தொடர்பாகச் செய்துவைக்குங் கிரியைகளை அவர்க்கு விளக்கும்படியான தமிழ் மொழியி லாவது சொல்லிச் செய்து வைக்கிறார்களா? அதுவும் இல்லை; தமிழர்க்கு எள்ளளவுந் தெரியாத ஆரியமொழிச் சொற்களை மந்திரங்கள் என உயர்த்தி ஏமாற்றிச் சொல்லி, அக்கிரியை களைச் செய்பவர்களாய், அவர்களைப் பாவை போல் ஆட்டி வைக்கிறார்கள். கடவுளைக் கண்டு பாடிய மாணிக்கவாசகர், திருஞான சம்பந்தர் முதலான தெய்வ ஆசிரியர்கள் அருளிச் செய்த தெய்வச் செந்தமிழ்த் திருப்பதிகங்களாந் தெய்வமாமறை மந்திரங்கள் இருக்க, அவற்றை இழித்து ஒதுக்கி, இந்நாட்டவர்க்குத் தெரியாத வடமொழிச் சொற்களைச் சொல்லி அக்கிரியை களைச் செய்யும் ஆரியக் குருமாரின் தீய எண்ணத்தைக் கண்டுணர்ந்து, அதனைப் பலரறியத் தெரிவிக்கும் அறிவாண்மை வாய்ந்தார் இத்தமிழரில் இல்லையே! இன்னுஞ், சிவபிரான் திருக்கோயில்களில் வழிபாடு ஆற்றுங் குருக்கள்மார் தமிழரினத்தைச் சேர்ந்தவராயிருந்தும், அத்திருக்கோயில் களுக்கு வந்த சிறப்பெல்லாம் அவைகள் சைவசமயாசிரியராற் பாடப் பெற்றிருப்பது பற்றியேயென்பதை அவர்கள் நன்குணர்ந்திருந்தும், அவர்கள் தேவார திருவாசகச் செந்தமிழ் மந்திரங்களைக் கொண்டு இறைவனுக்கு வழிபாடு செய்யாமல், தமிழ் மக்களுக்குச் சிறிதும் புலனாகாத வடமொழிச் சொற்களை மந்திரங்களென உயர்த்துச் சொல்லி அவற்றைக் கொண்டே கோயில் வழிபாடு முழுதுஞ் செய்கின்றார்கள். ஈதென்ன கொடுமை பாருங்கள்! தமிழ்மொழி வழங்கும் இத்தென்னாட்டில், தமிழ் அரசர்களாலுந் தமிழர்களாலும் அமைக்கப்பட்டுச், சைவசமயாசிரியர்களால் தமிழ்மொழி யிலேயே சிறப்பித்துப் பாடப்பெற்ற திருக்கோயில்களிலேயே தமிழ் மந்திரங்களை வழங்காமற் செய்து, இத்தமிழ்நாட்டுக்கும் இங்கு வணங்கப்படுஞ் சிவபிரானுக்கும் அவனை வணங்குந் தமிழ் மக்களுக்கும் ஏதொரு தொடர்பும் இல்லாத, அவர்களுக்குச் சிறிதும் தெரியாத வடமொழிச் சொற்களைக் கொணர்ந்து அவற்றைக் கொண்டே அத்திருக்கோயில்களில் எல்லா வழிபாடும் நடக்கும்படி செய்துவிட்ட பார்ப்பனர் தஞ் சூழ்ச்சியையும் அஞ்சாநெஞ்சையும் ஆண்மையையும் எண்ணிப் பாருங்கள்! இத்தமிழ்நாட்டின்கண் எத்தனையோ கோடிக்கணக்கான தமிழ்மக்களும், நூறாயிரக்கணக்கான செல்வர்களும், ஆயிரக் கணக்கான சிற்றரசர்களும் நூற்றுக்கணக்கான மடாதிபதிகளுந் தமிழ்ப்புலவர்களும் நிறைந்திருந்துந், தமிழர்களாகிய எங்களுக்குக்குரிய இத்திருக்கோயில்களில் தேவார திருவாசகச் செந்தமிழ் மாமந்திரங்களைக் கொண்டு வழிபாடு செய்யாமல், எங்களுக்குப் புறம்பா எங்களுக்குத் தெரியாத வடமொழியைக் கொண்டு ஏன் வழிபாடு செய்கின்றீர்கள்? என்று கேட்ட ஆண்மையுடையவர் எவராவது நம் தமிழரில் உண்டா? இத்துணைப் பெரிய இத்தமிழ்நாட்டில், எத்தனையோ கோடிக்கணக்கான தமிழ்மக்கள் நிறைந்த இத்தென்னாட்டில், எல்லாம் வல்ல இறைவனை நேர்முகமாய்க் கண்டு திருப்பதி கங்கள் அருளிச் செய்த தெய்வ ஆசிரியர் நிலவிய இத்தெய்வ நாட்டில், எல்லா இடங்களிலுஞ் சிறந்ததான தூயதான தெய்வம் உறைவதான திருக்கோயிலிலேயே நம் தெய்வ ஆசிரியர் அருளிய தமிழ் மந்திரங்கள் நிலவாமல் அவற்றைப் புறந்தள்ளித், தெய்வத் தன்மை சிறிதுங் காணப் படாத வடமொழிச் சொற்களைக் கொணர்ந்து நுழைத்து அவற்றைப் பெருமைப்படுத்தித், தேவார திருவாசகச் செந்தமிழ் மாமறைகளைச் சூத்திரப்பாட்டு என்று இழித்துப் பேசும் பார்ப்பனர்கள், எந்தக் காலத்திலாயினும் இந்நாட்டுக்குக் குடியரசு வருவதாயிருந்தால், அதன்கண்ணுந் தமக்கு ஆட்சியை யும் ஆக்கத்தையும் நிலைப்படுத்தி, ஏனை மக்களையெல்லாம் அறிவில்லாத குருடர்களாக்கித் தமக்கு அடிமைப்படுத்தி வைத்திருப்பரேயல்லாமல், அவர்கட்கு ஏதொரு சிறிய உரிமையேனுங் கொடுப்பர் அல்லது கொடுக்க விரும்புவர் என்று கனவிலும் நினைக்கின்றீர்களா? நினையாதீர்கள்! நமக்கு உயிரினுஞ் சிறந்த திருக்கோயில் முதல் அரசியல் நிலைகள் கல்விக் கழகங்கள் கைத்தொழிற்சாலைகள் புகை வண்டி நிலையங்கள் உணவு விடுதிகள் மணக்களங்கள் பிணக்களங்கள் ஈறான எல்லா இடங்களிலும் ஆரியப் பார்ப்பனர்களே ஆட்சியுந் தலைமையும் உடையவர்களா யிருந்து, ஏனை வகுப்பினரின் முன்னேற்றத்திற்குப் பெருந்தடை விளைப்பவர்களாய் இருக்கின்றார்கள். ஏனை வகுப்பினர் எல்லாரும் ஒன்று சேர்ந்துவிடாதபடி, அவர்கட்குள் பல்வேறு சமயப்பிரிவு சாதிப் பிரிவுகளையுண்டாக்கி, அவ்வொவ்வொரு பிரிவினரும் தத்தஞ் சமயமே தத்தஞ் சாதியே உயர்ந்ததென்று சொல்லி ஒருவரையொருவர் பகைத்துப் போராட வைத்து, அப் போராட்டத்திற்கு இடமாக இராமன் கதை கண்ணன் கதை, கந்தன் கதை, விநாயகன் கதை, காளி கதை முதலிய பல்வேறு கட்டுக் கதைகளைத் தமது வடமொழியில் உண்டாக்கி வைத்து அவற்றை இராமாயணம், பாரதம், பாகவதம், காந்தம் முதலிய புராணங்களாக உயர்த்து வழங்கி, அவைதம்மை மற்றையெல்லா வகுப்பினருங் குருட்டு நம்பிக்கையால் விடாப்பிடியாய்ப் பிடித்துக் கொள்ளும்படி செய்துவிட்டார்கள். தமிழரில் ஆராய்ச்சியறிவுடையார் எவரேனுந் தமிழ் மக்கள் இங்ஙனங் குருட்டு நம்பிக்கையால் அழிந்து போவதைக் கண்டு இரங்கி, இப்பார்ப்பனக் கட்டான கதைகளை நம்பவேண்டாம். அறிவு விளக்கத்திற்குந் தூய ஒழுக்கத்திற்கும் உதவி செய்யும் உயர்ந்த தமிழ் நூல்களை ஆராய்ந்து பயிலுங்கள்! குலமும் ஒன்றே, குடியும் ஒன்றே, வழிபாடு தெய்வமும் ஒன்றே என்று பொதுமக்கட்கு அறிவு தெருட்ட முன் வருவாராயின், உடனே அப்பார்ப்பனரெல்லாரும் ஒரேமுகமாய் நின்று அவரை நாத்திகர், பிராமண நிந்தகர், வேத நிந்தகர் என்று பலரறியத் தூற்றி, அவரது அறிவுரை எவரது செவியிலும் ஏறாமற் செய்வதுடன், அவரது வாழ்க்கைக்கும் பல வழியில் தீங்கிழைக்கின்றார்கள். மற்றை வகுப்பினரிற் செல்வமுடையவர்கள் எவர் இருப்பினும், அவரைப் பார்ப்பனர்கள் சூழ்ந்துகொண்டு, அவரது பொருளைப் பல வகையில் உறிஞ்சிவிடுவதொடு, தமிழறிஞரின் அறிவுரை அச்செல்வர்களின் செவியுற் நுழையாதபடிக்கும் மிக விழிப்பாக இருந்து தடை புரிந்து விடுகின்றார்கள். அதனால், இத் தமிழ்நாட்டிலுள்ள செல்வர்களின் பெரும் பொருள் தமிழ் மக்களின் அறிவு விளக்கத்திற்கும் அவர் தம் நல்வாழ்க்கைக்குஞ் சிறிதும் பயன்படாமற் போகின்றது! ஊர்கடோறும் நகரங்க டோறும், இராமாயணம் முதலான கட்டுக்கதைப் பிரசங்கம் நடைபெறச் செய்து அதன் வாயிலாக ஊரவர் பொருளை எளிதிற் கவர்ந்து கொள்வதுடன், அவ்வறிவில்லா மக்கள் உள்ளத்தில் தம்மையுந், தம்முடைய நூல்களையுந் தேவர் என்றுந் தேவர்க்குரிய வேதங்கள் என்றும் நம்பும் அசையாக் குருட்டு நம்பிக்கையும் பதியச்செய்து. அவ்வாற்றால் தம்முடைய ஆட்சியையும் முதன்மையையும் ஆரியப் பார்ப்பனர்கள் எங்கும் நிலைநாட்டிவிட்டார்கள்; இன்னும் அம்முயற்சியை நடத்தியே வருகின்றார்கள்; ஆங்கில நன்மக்கள் ஆங்காங்கு வைத்து நடத்தும் பள்ளிக்கூடங்களிற் கற்குந் தமிழ் மாணவரின் தமிழ்ப் பாடங்களிலெல்லாந் தம்முடைய புராணக் கட்டுக் கதைகளை நுழைத்து, இளமைப் பருவத்திலேயே அவை நம் சிறார் உள்ளத்திற் பசுமரத்தாணி போல் இறுக்கமாகப் பதிய வைக்கின்றார்கள். இவர்கள் இத்தமிழ்நாட்டைப் பாழ்படுத்தும் இவ்வளவு களை, உயர்நிலைகளிலுள்ள தமிழறிஞர் நன்கறிந்து வைத்துந் தமக்கு வரும் பொருள் வருவாயையோ தமது நிலை யுயர்வையோ மேலதாகக் கருதி அவரிழைக்குந் தீங்குகட் கெல்லாந் தாமும் உடந்தையாய் நின்று தம் அருமைச் சிறாரறிவைப் பாழாக்கி விடுகின்றனர்! இன்னும் இங்ஙனமே பார்ப்பனர்களாலும், அவர்களைப் பின்பற்றி அவர்களைப் போல் நடக்கும் ஒழுகலாறுகள் உடையராய் வடமொழிக்கும் வடநூல் கட்கும் ஏற்றஞ் சொல்லித் தமிழையுந் தமிழ் நூல்களையும் புறத்தொதுக்கி நடக்குஞ் சைவ வைணவர் களாலும் இந்நாட்டுக்கு விளைந்திருக் கின்ற தீமைகளை யெல்லாம் எடுத்துரைக்கப் புகுந்தால் இவ்வேடு இடங்கொள்ளாது. ஆதலால், இந்நாட்டுக்கு நலந்தேடுபவராக வெளிவருந் தலைவர்கள் உண்மையாகவே தாம் நலஞ்செய்பவர்களா யிருந்தால், இப்போதுள்ள மிக இரங்கத்தக்க நிலைமையில் நம் குடிமக்களை, நம் ஆங்கில அரசுக்கு மாறாகக் கிளப்பிவிட்டு அவர்களையும் அவர்களின் வாழ்க்கையையும் பாழ்படுத்துஞ் செயலை விடுத்து, யாங்கூறும் நன்முயற்சிகளை விடாப் பிடியாய்ச் செய்து, அவர்களை ஆராய்ச்சியறிவிலும் இன்ப ஒருமை வாழ்க்கையிலும் பயன்படு முயற்சியிலும் முன்னேறுமாறு உதவி புரிதல் வேண்டும். முதலாவதாக, ஊர்கடோறும் நகரந்தோறும் தமிழ்ப் பள்ளிக் கூடங்கள் திறப்பித்துச், செல்வர்கள் வீட்டுப் பிள்ளை களைத் தவிர மற்றை எல்லாப் பிள்ளைகளும் பொருட் செலவின்றித் தனித் தமிழ் கற்கும்படி செய்தல் வேண்டும். அவர்கட்குக் கற்பிக்கும் நூல்களில் ஆரியக் கட்டுக்கதைகள் சிறிதும் விரவல் ஆகாது. ஒழுக்க முறைகளும், இயற்கைப் பொருள் இயல்புகளுஞ், சிற்றுயிர்களின் தன்மைகளும், ஆண்மையிற் சிறந்தாரின் வரலாறுகளும், மக்களின் நாகரிக வரலாறுகளும், உழவு வாணிகம் கைத்தொழில்கள் செய்யும் முறைகளுங், கடவுளின் நன்மைகளுங், கடவுளைக் கண்டு பாடிய சான்றோர் வரலாறுகளும், உண்மையாராயும் முறைகளும் இன்னும் இவை போன்றவைகளுமே அந்தந்த வகுப்புக்குத் தக்கபடி செந்தமிழில் எழுதப்படல் வேண்டும். இரண்டாவது தமிழ்கற்ற அறிஞர்களை ஆராய்ச்சி முறையிற் பயிற்றி ஊர்கடோறும் விடுத்துப் பொதுமக்கட்கு மேற்கூறிய பொருள்களை விளங்க எடுத்துச் சொல்லி, அவர்கள் நல்லறிவு பெறுமாறு செய்வித்தல் வேண்டும். ஊனுணவு ஒழித்தவர் ஊனுணவு ஒழியாதவர் என்னும் இருபிரிவினரன்றி, வேறு எவ்வகைச் சாதிப் பிரிவுஞ் சமயப் பிரிவும் இல்லாமல் ஒழித்தல் வேண்டும். பிறப்பு இறப்பு இல்லா எல்லாம் வல்ல ஒரு முழுமுதற் கடவுளையே எல்லாரும் வணங்கும்படி செய்வித்தல் வேண்டும். பிறந்து இறந்த உயிர்களைத் தெய்வங்களாக வணங்குஞ் சிறு தேவதை வணக்கத்தையும் அவைகளுக்கு இடும் உயிர்ப் பலியையும் அறவே ஒழித்தல் வேண்டும். மூன்றாவது மேற்குறித்த நன்முயற்சிகளைச் செய்து அவற்றால் விளையும் நலன்களை நிலைபெறுத்துதற்கு ஏராளமான பொருள் வேண்டியிருக்குமாதலால், வீணே கோடி கோடியான பொருட்டிரளை வைத்துக்கொண்டு அவற்றை மேற்குறித்த நன்முயற்சிகளுக்குப் பயன்படுத்தாமல் இறுமாந்து கிடக்குஞ் சிற்றரசர்களுஞ் செல்வர்களும் மடத்தலைவர்களும் அப்பெரும்பொருட்டிரளில் ஒரு சிறு பகுதியை மட்டுந் தமக்கு எடுத்துக் கொண்டு, மற்றைப் பெரும்பகுதியைக் குறிப்பிட்ட முயற்சிகளுக்கு கொடுத்துவிடுமாறு, எந்தெந்த வகையில் முயலல் வேண்டுமோ அந்தந்த வகையலெல்லாங் கடைப் பிடியாய் நின்று முயலல் வேண்டும். முயன்று பெற்ற பொருளை இந்நன்முயற்சி களுக்குப் பயன்படுத்துவதிலும் மிக விழிப்பா யிருத்தல் வேண்டும். இங்ஙனம் ஒழுங்கான முறையில், நம் நாட்டவர்கட்கு உண்மையாகவே நலந்தரு முறையில், தலைவர்களாக வருவோர் தமது அரும்பெரும் முயற்சியைப் பயன்படுத்துவாராகவென்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றோம். 16. உடன் பிறந்தார் ஒற்றுமை நீறில்லா நெற்றிபாழ் நெய்இல்லா உண்டிபாழ் ஆறில்லா ஊருக் கழகுபாழ் - மாறில் உடற்பிறப் பில்லா உடம்புபாழ் பாழே மடக்கொடி இல்லா மனை. - ஔவையார் உடன் பிறந்தார் என்னுஞ் சொல் ஒரே வயிற்றிற் கூடப் பிறந்தவர் என்னும் பொருளைத் தருவதாகும். தலைப்பில் எடுத்துக்காட்டிய ஔவையார் திருப்பாட்டின்கட் பகைமை இல்லாத உடன் பிறப்பாளர் இன்றித் தனியே பிறக்கும் பிறப்புப் பயனற்றதாகும் என்பது வலியுறுத்தப்பட்டிருக்கின்றது. படவே, அன்பினால் அகங்கலந்து அளவளாவும் உடன்பிறந்தார் கூடப் பிறந்த பிறவியே பயன் உடைத்தாமென்பதும், பகைமைக் குணங்கள் உள்ளாருடன் பிறப்பது பெருந்துன்பத்திற்கே இடமாமென்பதும் நன்கு பெறப்படும். பொல்லாதாருடன் பிறப்பது பெரிதுந் துன்பந் தருவதென்பதனை இந்தப் பாட்டின்கண் மறைவாகக் கூறினாராயினும். உடன்பிறந்தார் சுற்றத்தா ரென்றிருக்க வேண்டா உடன்பிறந்தே கொல்லும் வியாதி - உடன் பிறவா மாமலையில் உள்ள மருந்தே பிணிதீர்க்கும் அம்மருந்து போல்வாரும் உண்டு என்னும் மற்றொரு பாட்டில் அதனை விளக்கமாகக் கூறியிருக்கிறார், அது நிற்க இனிப், பகைமைக் குணங்கள் உள்ளாருடன் பிறப்பதிலுந், தன்னந்தனியே பிறப்பது நன்றன்றோவெனின், தனியராய்ப் பிறந்தால் உலக வாழ்க்கையில் அடுத்தடுத்துக் கிளைக்கும் பலவகை அல்லலிற்பட்டுத் தனியே உழல வேண்டி வருமாதலால் தனிப்பிறவியெடுப்பது நன்றாகமாட்டாது. எந்தக் காலத்திலும் ஒரு மகன் பிறர் உதவியையுந் துணையையுந் நாடாமல் உயிர்வாழ்தல் முடியாது. ஒருவன் தாயின் கருப்பையிலிருந்து பிறக்குங் காலத்திலேயே முழு அறியாமை உள்ளவனாயும், பிறகு சிறிது சிறிதே வளர்ந்துவருங் காலங்களிளெல்லாம் பிறருடைய சேர்க்கையாற் சிறிது சிறிதாக அறிவு விளங்கப் பெற்று வருஞ் சிற்றறிவு உடையவனாயுந், தனக்கு வேண்டும் ஊண் உடை முதலான எல்லாப் பொருள்களையும் பிறரது முயற்சியாற் பெற வேண்டிய வனாயுந், தனக்கு வேண்டும் வசதிகளைத் தான் தேடிக்கொள்ள முயலும்போது தான் பலருடைய உதவியையும் துணையையும் நாடவேண்டிய வனாயுந் தனது சிறு வாழ்நாளின் இடையிடையே தான் நோயாற் பற்றப்பட்டு வீழ்தலின் அக்காலங்களிலெல்லாம் இவன் தனக்கு நோய் தீர்ப்பார் பேருதவியைக் கட்டாயம் விரும்பி நிற்ப வனாயும் இருத்தலால் ஒரு மகன் தனது துன்பத்திற்கும் இன்பத்திற்கும் அறிவுக்கு மெல்லாம் பிறரைச் சார்ந்தவனாகவே யிருக்கின்றான். இங்ஙனம் பிறரைச் சார்ந்தே உயிர் வாழும் நிலையிலுள்ள ஒரு மகனுக்கு எல்லா வகையிலும் உதவியுந் துணையுமாய் நிற்கத்தக்கவர்கள் எவர்கள்? என்று ஆராய்ந்து பார்க்குங்கால், தன் உடம்போடு தொடர்பு உடையவர்களேயல்லாமல், மற்றவர்கள் அல்லரென்பது நன்கு விளங்கும். தன்னைப் பெற்ற தாயுந் தந்தையுந், தன்னோடு பிறந்த அண்ணன் தம்பி அக்கை தங்கைமாருந், தன்னைச் சேர்ந்த மனைவியுந், தன் வயிற்றிற் பிறந்த தன் பிள்ளைகளுந் தன்னிடத்து அன்பு பாராட்டி உதவியுந் துணையுமாய் நிற்றல்போல் உடம்பின் தொடர்பு இல்லாத மற்றவர் அங்ஙனம் இயற்கையான அன்பு காட்டி ஒருவனுக்குச் சார்பாய் நிற்றல் அரிதினும் அரிது. பிறர்க்கு நாம் எவ்வளவு பொருளைக் கொடுத்தாலும் எவ்வளவு உதவியைச் செய்தாலும் நமக்குப் பெரிய இடுக்கண் வந்த காலத்தில் அவர் நம்மை விட்டு நீங்குவர். இது பற்றியன்றோ ஔவைப் பிராட்டியார், அற்ற குளத்தில் அறுநீர்ப் பறவைபோல் உற்றுழித் தீர்வார் உறவல்லர் - அக்குளத்திற் கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே ஒட்டி யுறுவார் உறவு என்று அருளிச் செய்தார். ஆயினுஞ், சிற்சிலர் தமக்குள் உடம்பின்றொடர்பு இல்லாதவராய் இருந்தாலும், உயிரும் உடம்பும்போல் அத்தனை நேயமும் அன்பும் உடையவராய் எவ்வகை இடுக்கண் வந்த காலத்தும் பிரிவின்றியிருக்கக் காண்கின்றோமேயெனின், அத்தகையோர், சிலநாளில் அழிந்துபோம் இப்பொல்லாப் புலால் உடம்பின் தொடர்பை நோக்காது, ஒருவரிடந்தமைந்த உயர்ந்த அறிவையும் உயர்ந்த அன்பையும் உயர்ந்த செயலையுமே நோக்கி நெகிழாத அன்பு பூண்டு, அவர் பொருட்டுத் தமது ஆவியையுந் கொடுப்பாராதலின் அஃது இங்கே காட்டற் பாலதன்று. ஒரு மகனுக்கு இயற்கையில் உண்டாகும் நேயமானது உடம்பின் தொடர்பால் வருதலின் அதுவே இங்கு ஆராயற்பாலதாகும். இனி, உடம்பின் தொடர்புடையாரிலுந் தன்னைப் பெற்ற தாயுந் தந்தையுந் தன்னிலும் ஆண்டின் முதிர்ந்தாராய்த், தன்னைக் குழவிப் பருவந் தொட்டுப் பாதுகாத்து வளர்க்கப் பெருந்துன்பத்தை அடைந்தவர்களாயிருத்தலால் அவர் களுக்குத் தான் உதவியுந் துணையுமாய் நிற்க வேண்டுமே யல்லாது, அவர்களுடைய உதவியையுந் துணையையுந் தான் நாடலாகாது. தன்னைச் சேர்ந்த மனைவியோ பெண்பாலாய்த் தன் உடம்பைப் பாதுகாத்துத் தனது இன்பத்திற்குக் காரணமாய் இருத்தலால், அவள்பாற் பேருதவியையும் பெருந்துணையையும் பெற விரும்புதல் ஆண்டன்மைக்கு அழகிதன்று. தன் வயிற்றில் பிறந்த பிள்ளைகளோ சிறுமழலைகளாய்ப் பருவம் முதிரும் மட்டுந் தன்னாற் பாதுகாக்கப்பட வேண்டிய வர்களாய் இருத்தலால் தனது முதுமைக்காலம் வரையில் அவர்களுடைய உதவியையுந் துணையையும் ஒருவன் எதிர் பார்க்கலாகாது. இனித் தன் உடன்பிறந்தாருள்ளுந் தன் அக்கையுந் தங்கையும் பெண்பாலராகலின், அவர்க்குத் தான் உதவியுந் துணையுமாய் நிற்றலே முறையாம். இவரெல்லாம் இங்ஙனமாகத் தனக்கு உயிர் வாழ்நாள் முழுதும் உண்மையுமான உதவியுந் துணையுமாய் நிற்றற் குரியவர் எவரெனின், தன்னொடு சிறிதேறக்குறைய ஒத்த ஆண்டும் ஒத்த அறிவும் ஒத்த தோழமையும் ஒத்த அன்பும் வாய்ந்த உடன் பிறந்தாரேயாவார் என்பது முடிக்கப்படும். இங்ஙனம் உடன்பிறந்தார் மட்டுமே தனக்கு உறுபெருந் துணையும் உதவியுமாய் நிற்றலால், நல்ல தமையன் தம்பியரை இல்லாப் பிறவி பயனற்றதென்று ஔவையார் அருளிச் செய்வராயினார். நல்ல உடன்பிறப்பைப் பெறுதல் எவற்றினும் அரிதென்பதும், அத்தகைய உடன்பிறப்பைப் பெற்றவனுக்கு ஆகாதது ஒன்றுமில்லையென்பதும் உணர்த்தும் பொருட்டே சீவகசிந்தாமணியிலும், திண்பொருள் எய்தலாகுந் தெவ்வரைச் செகுக்கலாகும், நண்பொடு பெண்டிர் மக்கள் யாவையும் நண்ணலாகும், ஒண்பொரு ளாவதையா உடன்பிறப் பாக்கல் ஆகா, எம்பியை ஈங்குப் பெற்றேன் என்எனக் கரியதென்றாள் என்று திருத்தக்க தேவரும் அருளிச் செய்தார். இங்ஙனமே, கந்தபுராணத் திலுஞ் சூரபன்பன் தன்றம்பி சிங்கமுகனை நோக்கிப், பொன்னை நிலந்தன்னைப் புதல்வர்களை மங்கையரைப் பின்னை யுளபொருளை எல்லாம் பெறல் ஆகும் என்னையுடைய இளையோனே இப்பிறப்பில் உன்னை இனிப்பெறுவ துண்டோ உரையாயே என்று கூறியதும் உற்றுநோக்கற்பாலதாகும். இங்ஙனம் பெறுதற்கரிய உடன்பிறப்பைப் பெற்று வைத்தும், அண்ணன் தம்பிமார் சிலர் அதன் அருமையைச் சிறிதும் உணராமல் ஒருவரையொருவர் பகைத்தும், ஒருவர் மேல் ஒருவர் பொறாமை கொண்டும், ஒருவரையொருவர் ஏமாற்றியும் ஒற்றுமை கெட்டுத் தமது பிறவியைப் பாழாக்கு கின்றனர். ஏதோ முற்பிறவியிற் செய்த தவத்தால், இறைவன் தமக்கு உடன் பிறப்பைத் தந்தருளினான் என்றும், அவன் தந்த இப்பெரும் பேற்றை நாம் பாதுகாத்துக் கொள்ளல் வேண்டும் என்றும் நினைந்து பாராதவர் மக்கள் ஆவரோ? நாம் உடன் பிறந்தோம் என்பதைச் சிறிதும் உணராத விலங்குகளுக்கும், தம் உடன் பிறப்பின் அருமையை உணராத மக்களுக்கும் வேற்றுமை உண்டோ? பாருங்கள் அன்பர்களே! ஓர் ஆவின் கன்றுகள் பலவும் பருவம் முதிர முதிரத் தாம் உடன் பிறந்ததனைச் சிறிதும் அறியாமல் தத்தம் வழியே போகின்றன; அதுபோலக் குழவிப் பருவத்தே ஒருங்கு பிறந்து ஒருங்கு வளர்ந்த உடன்பிறப்பினருந் தம்மை ஒன்றாய்ப் பிறப்பித்த ஐயனது திருவுளக் கருத்தைச் சிறிதும் நினையாமல் ஒற்றுமை கெட்டுத் தனித் தனியே செல்லுதல் கூடுமோ? சில நாளிலிருந்து தமது கையை விட்டகலுஞ் செல்வத்தின் பொருட்டாகவும், இடையே வந்து சேர்த்த மனையாளின் பொருட்டாகவும், உடன்பிறந்தார் தம்மிற் பகை கொண்டு, வேறு வேறாய்ப் பிரிந்து ஆண்டவன் நோக்கத்திற்கு மாறாய் ஒழுகுதல் மன்னிக்கப்படாத பெருங்குற்றமாய் முடியும். இப்பிறப்பில் ஒருவன் தான் நினைத்த வண்ணந் தம்பியைப் பெறல்முடியுமா? தம்பி தமையனைப் பெறல் முடியுமா? தம்மாற் புதிதாகச் செய்து கொள்ள முடியாத உடன் பிறப்பின் அருமையை உணர்ந்து, தமையன் தம்பிமார் தமக்குள் மிகவும் அன்புடையராய் ஒன்றித்து வாழ்ந்து தமக்கும் உலகத்திற்கும் பயன்படல் வேண்டும். தம்பிமார் கல்வியிலும் அறிவிலும் எவ்வளவு சிறந்தவராயினும், பருவத்தில் முதிர்ந்த தம் தமையன்மார்க்குக் கீழ்ப்படிந்து ஒழுகி அவரைத் தம்மோடு இணக்கிக் கொள்ளல் வேண்டும்; தமையன்மார் ஆண்டில் மூத்தவராயினுங், கல்வியிலும் அறிவிலுஞ் சிறந்த தம் தம்பிமார்க்கு இணங்கி நடத்தல் வேண்டும். தமையன் தம்பிமார் தம் மனைவிமார்க்கு உடன்பிறப்பினருமையை அன்பொடு தெளிவாய் எடுத்துக்காட்டி அவரெல்லாம் ஒன்றுபட்டு நடக்கும்படி திருத்தல் வேண்டும். உடன் பிறந்தாரில் ஒருவர் கல்வி வளர்ச்சியின் பொருட்டும் பிற உயிர்களின் துன்பத்தைத் துடைக்கும் பொருட்டுஞ் செல்வத்தை நன்கு செலவிட்டுப் பயன்படுத்துவாராயின் அதனைக்கண்டு, ஐயோ! எம் உடன் பிறந்தான் எங்கள் செல்வத்தையெல்லாம் அழித்து விடுகின்றனனே! என்று மற்றவர் வயிறு எரியாமல் ஊர் நடுவிலுள்ள இனிய குளம் எல்லார்க்கும் பயன்படுதல்போல, நாம், பெரிதும் முயன்று தொகுத்த பொருளெல்லாந் தக்கார் பலர்க்கும் பயன்படும்படி அதனை நல்வழிப்படுத்தி, நமக்கும் நமது குடும்பத்திற்கும் பெரும் புகழையும் பெரும் புண்ணியத்தையும் வருவிக்கும் இவனோடு உடன்பிறக்கப் பெற்ற எமது தவமே தவம்! என்று மனம் மகிழ்ந்து, அதற்குத் தாமும் உதவியாய் நிற்றல் வேண்டும். ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேர்அறி வாளன் திரு என்றும், தாள்ஆற்றித் தந்த பொருள்எல்லாந் தக்கார்க்கு வேளாண்மை செய்தற் பொருட்டு என்று திருவள்ளுவ நாயனார் அருளிய திருக்குறளை இடையறாது நினைந்து, உடன்பிறந்தவர் பொருட்செலவாற் பகைகொள்ளாது, ஒற்றுமைப்பட்டு வாழக் கடமைப் பட்டிருக்கின்றார்கள்; துன்பம் வந்த காலத்தும் இன்பம் வந்த காலத்தும் ஒரு தாய்மக்கள் ஒன்றாயிருந்து அவற்றை நுகர்தலே அவர் தமக்கு முறையாம். பாண்டவர் ஐவரும் நாடிழந்து காடு போய்த் துன்புற்ற போதும், திரும்பி நாடடைந்து அரசியற்றி இன்புற்ற போதும் ஒன்றாய் இருந்தமை இன்னும் புகழப்படுகின்ற தன்றோ? தன் சொற்கேளாத தமையன் சூரபன்மனைத் தான் விட்டுப் போகாது அவனோடு கூடவேயிருந்து உயிர் துறந்த அவன்றம்பி சிங்க முகனது அரிய அன்பு இன்னும் பாராட்டப்படு கின்றதன்றோ? தன் றமையன் இராமனோடு கூடவே காடு புகுந்து, அவன் உறங்கும் காலத்துந் தான் உறங்காமல் அவனுக்குப் பதினான்கு ஆண்டு பாதுகாவலனாய் நின்று, அதன் பொருட்டுப் பெரிதுந் துன்புற்ற அவன் றம்பி இலக்குமணனது அரிய அன்பு நேயம் இன்னும் உலகிற்கு ஒரு நல் எடுத்துக் காட்டாய் விளங்கு கின்றதன்றோ? இங்ஙனமெல்லாந் தம் உடன் பிறந்தாரோடு ஒன்றுகூடி வாழ்ந்தவர்க்கே, மற்றவர்களையுந் தம்மோடு உடன் பிறந்தவராகக் கருதிப் பேரன்பு பாராட்டி, இறைவன் திருவருளைப் பெறும் பெருஞ் செல்வம் உண்டாம் என்க. 17. கூட்டு வாணிகம் நல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தின் அல்லற் படுப்பதூஉம் இல் (குறள் 460) பொருள் தேடுவதற்கு உரிய முயற்சிகள் பலவற்றுள் வாணிகம் என்பது ஒன்று. பொருள் தேடும் முயற்சிகளில் இதுவும் ஒன்றாய் இருந்தாலும், உலக வாழ்க்கை செவ்வனே நடைபெறுதற்கு மிகவும் பயன்படுதலால், இது மற்ற முயற்சிகளைவிடச் சிறந்ததாய் இருக்கின்றது. நமது வாழ்க்கைக்குக் கட்டாயமாய் வேண்டப்படுகின்ற உணவுப் பொருள்களும், உடுப்புகளும், அணிகலங்களும், புழங்கும் ஏனங்களுந், தட்டு முட்டுகளும், ஓவியங்கள் இசைக் கருவிகள் சந்தனம் பஞ்சு முதலியனவும் ஒரே ஊரில் அல்லது ஒரே நாட்டில் உண்டானவை அல்ல. இவையெல்லாம் ஒன்றுக் கொன்று எட்டாத் தொலைவில் உள்ள பல ஊர்களிலும் பல நாடுகளிலும் உண்டாவன ஆகும். இப்பண்டங்களையெல்லாம் ஒருவர் தாம் வேண்டிய அளவுக்குப் பற்பல இடங்களிலுமிருந்து வருவித்துக் கொள்வதென்றால், அதற்காக அவர் எவ்வளவோ பொருளைச் செலவழித்து எவ்வளவோ அல்லும் பகலும் அலைக்கழியல் வேண்டும். ஏராளமான பொருளுடையவர்க்கு இவ்வளவு செலவும் அலைக்கழிவும் மலைப்புக்கு இடமாய் இல்லா விட்டாலும், மிகச் சிறிய வரும்படியைக் கொண்டு அன்றாடங் காலங் கழிக்கும் ஏழை எளியவர்கட்கு இவை எவ்வளவு துன்பத்தைத் தரும்! இலங்கையிலுள்ள ஏழை மக்கள் வங்காளம் இரங்கூன் முதலான தொலைவிடங்களில் விளையும் நெல்லைத் தனியே வருவித்துக் கொள்ளல் இயலுமோ? இந்தியாவிலுள்ள எளியவர்கள் யாவாயிலும், மோரீசிலும் உண்டாகுஞ் சருக்கரையைத் தனியே வருவித்தல் இயலுமோ? இங்கிலாந்தி லுள்ள வறிய மக்கள் இந்தியாவில் விளையும் பஞ்சை எளிதிற் பெற்றுக் கொள்ளல் கூடுமோ? இந்தியாவிலுள்ளவர் சீனத்திலுண்டாகும் பட்டை எளிதிற் பெற்றுக் கொள்ளல் கூடுமோ? இங்ஙனமே உயிர்வாழ்க்கைக்கு இன்னும் கட்டாயமாக வேண்டப்படும் இவைபோன்ற பொருள்களெல்லாவற்றையும் ஒவ்வொருவருந் தனித்தனியே வருவித்துக் கொள்வதென்றால், அஃது அவர்க்கும் அவரைவிட வறியவர்களாயிருப்பவர்க்கும் முற்றும் ஆகாததொன்றாம். இனி, நடுத்தரமான செல்வம் உடைய வர்களுக்கும் அஃது இசையாததுடன், பெருஞ் செல்வம் உடையவர்க்கு அஃது அளவிறந்த முயற்சியினையுங் காலக் கழிவினையும் பொருட் செலவினையும் தந்து கடைசியில் அவர்களை வறியராக்கவும் கூடும். இவ்வாறெல்லாம் மக்கள் அளவிறந்த துன்பத்திற்கு ஆளாகாமற், பல திசைகளிலும் பல நாடுகளிலும் பல ஊர்களிலுந் தோன்றும் பல்வகைப் பண்டங்களையும் ஓரிடத்தில் தொகுப்பித்து, எத்திறத்தவரும் அவற்றை நயந்த விலைக்கு எளிதில் வாங்கி இன்புறவும், அதனால் உலக வாழ்க்கை இனிது நடைபெறவும், பேருதவி செய்துவரும் வாணிக முயற்சியானது பெரிதுஞ் சிறந்த தொன்றென்பதனை யாம் எடுத்துச் சொல்லுதலும் வேண்டுமோ? இனி, இத்தனை மேன்மை உடையதாகிய வாணிக முயற்சியைச் செய்யப்புகுவோர், இது மக்கள் எல்லார்க்கும் நிரம்பவும் பயன்படுதலை உணர்ந்து, எல்லாரிடத்தும் அன்பும் இரக்கமும் உடையவர்களாயும் மக்களுக்கு வேண்டிய பல பண்டங்களின் வகையும் அவை உண்டாகும் இடங்களின் வரலாறுந் தெரிந்து அவற்றைக் குறைந்த செலவில் வருவித்து எல்லார்க்கும் நயமாக ஒரே விலை கூறி முகமலர்ந்து இனிய சொற் பேசி விற்கும் அறிவுந் திறமான செய்கையும் வாய்ந்தவர்களாயும் இருத்தல் வேண்டும். இவ்வளவுக்கும் அன்பும் அறிவுந் திறமான செய்கையும் இன்றியமையாது வேண்டப் படுதலால், இவ்வுயர்ந்த தன்மைகளை வணிகர்கள் ஒவ்வொருவருந் தம்மிடத்தே பழக்கத்துக்குக் கொண்டு வருதல் வேண்டும். மக்களிடத்தில் அன்பில்லாமல் எந்நேரமுந் தமக்கு வரும் ஊதியத்தையே எண்ணிப் பார்ப்பவர்கள் உண்மையான வணிகர்கள் அல்லர். தாம் செய்யும் வாணிக முயற்சி பலர்க்கும் பெரும் பயன்படுதலை உள்ளக் கனிவோடு எண்ணிப் பாராமல், தாம் அடையும் ஊதியத்திலேயே கருத்து வைப்பவர்கள் அவ்வாணிகத்தை இழந்து வறியராய்ப் போவார்கள். அன்பும் இரக்கமும் வாய்ந்த வணிகனிடத்தே திருமகள் குடி கொண்டிருப்பாள்; அவன் சென்றவிடமெல்லாஞ் செல்வம் ஓங்கும்; மெல்லிய திருமகள், தன் நலத்தையே முதன்மையாய்க் கருதும் வணிகனின் கரடுபட்ட வன்னெஞ்ச நெருஞ்சிற் காயை மிதிக்க அஞ்சி அவனை அறவேவிட்டு விலகிப் போய் விடுவாள். அழகும் அன்பும் அறிவும் உடையவர்களைக் கண்டால் எல்லாரும் அவரை விரும்பி அணுகி அவர்க்கு எல்லாச் சிறப்புஞ் செய்தலைப் பார்த்திருக்கின்றோம் அல்லமோ? அழகில்லாமல் வன்நெஞ்சமும் அறியாமையும் உடையவர்களா யிருப்பவர் களைக் கண்டால் எல்லாரும் அவரை அருவருக்கின்றன ரல்லரோ? அன்பும் அறிவும் உள்ளவர்களுக்கு அழகு தானே உண்டாகும்; அக்குணங்கள் இல்லாதவர்களுக்கு முன்னே உள்ள அழகுங் குன்றிப் போகும். கொடுங்குணம் உள்ளவனுக்குக் கடுகடுத்த முகமும் வன்சொல்லும் அமைந்திருத்தலை வழக்கத்தில் நன்றாய் அறிந்திருக்கின்றனம் அல்லமோ? ஆகையால், வாணிகஞ் செய்பவர்கள் ஈர நெஞ்சமும் விரிந்த அறிவும் உண்டாகப் பழகிக் கொள்வார்களாயின், அவர்கள் முகத்தில் இதற்கு முன் இல்லாத அழகும் பொலிவுங் கிளர்ச்சி பெற்றுத் தோன்றும். அப்படிப்பட்டவர்களை எல்லாரும் விரும்பிச் சேர்ந்து தாம் வேண்டிய பண்டங்களை மகிழ்வுடன் வாங்கிக் கொண்டு செல்வர். அவர்கள் துவங்கிய வாணிகமும் மேன்மேற் செழித்தோங்கி, அவர்க்கும் பிறர்க்கும் அளவிறந்த நன்மையைத் தரும். இனிப், பொருள் தேடும் முயற்சிகளிற் சிறந்த வாணிகமும் பிறவுஞ் செய்து அல்லும் பகலும் வருந்தி உழைப்பதெல்லாம் இந்த வெற்றுடம்பைப் பாதுகாப்பதற்கு மட்டும் அன்று! இந்த உடம்பை இருப்பிடமாகக் கொண்டு வந்திருக்கும் நம் உயிரின் அறிவை மேன்மேல் விளங்கச் செய்தற்கும், எல்லாம் வல்ல கடவுளின் பேரின்பத்தைப் பெறுதற்குமேயாம். இவ்வரும்பெரு நோக்கம் ஈடேறும் பொருட்டு, இவ்வுடம்பைப் பாதுகாக்க வேண்டுவது இன்றியமையாத கடமையாய் இருக்கின்றது. இவ்வுடம்பைப் பாதுகாவாவிட்டால் அறிவு விளக்கத்தையும் இறைவனது திருவருளின்பத்தையும் நாம் பெறல் முடியாது. இதுபற்றியே திருமூல நாயனார். உடம்பார் அழியின் உயிரார் அழிவர் திடம்பட மெய்ஞ்ஞானஞ் சேரவும் மாட்டார் உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே என்று திருமந்திரத்தில் அருளிச் செய்தனர். இனி, உடம்பைப் பாதுகாத்தற்காக நடத்தும் இம்முயற்சிகளின் இடையே, நமதறிவை விளங்கச் செய்தற்கு ஒப்பற்ற துணையாய் வாய்த்த கல்வியைக் கற்றுக் கொள்ளப் பெரிதும் முயற்சி செய்தல் வேண்டும். கல்லாதவர் நெஞ்சம் இருளடைந்து கிடக்குமாதலால், அங்கே இறைவன் விளங்கித் தோன்றானென்பது கல்லார் நெஞ்சின் நில்லான் ஈசன் என்று திருஞான சம்பந்தப் பெருமானுங், கல்லாதார் மனத்தணுகாக் கடவுள் தன்னைக், கற்றார்கள் உற்று ஒருங் காதலானை, என்று திருநாவுக்கரசு நாயனாரும், எல்லா இடத்தும் உளன் எங்கள் தம் இறை கல்லாதவர்கள் கலப்பறியாரே என்று திருமூல நாயனாருங் கூறுதலால் நன்கு தெளியலாமன்றோ? இன்னுங், கல்லாதவரைக் காணலும், அவர் சொற் கேட்டலும் ஆகா வெனவுங் கல்லாதவர்க்குக் கல்லாதவரே நல்லவராய்க் காணப்படுபவரெனவுங், கல்வியில்லாதவர் கடவுளது கருத்தை அறியமாட்டாரெனவும் நன்கு விளக்கிக், கல்லாத மூடரைக் காணவும் ஆகாது கல்லாத மூடர்சொற் கேட்கக் கடனன்று கல்லாத மூடர்க்குக் கல்லாரே நல்லராங் கல்லாத மூடர் கருத்து அறியாரே என்று திருமூலநாயனார் அருளிச் செய்திருப்பதையும் நோக்குங் காற், கல்வியறிவு பெறாமல் காலங்கழிப்பது மிகவும் பொல்லாத குற்றமாய் முடிதல் பெறப்படுகின்றதன்றோ? ஐரோப்பிய அமெரிக்க வணிகர்கள் எல்லாருங் கல்வியில் வல்லவராய் விளங்கித் தமது வாணிக முயற்சியை நிரம்பவும் பெருகச் செய்து உலகத்தார்க்குப் பல பெருநன்மைகளை விளைவித்து வருதலோடு, கல்விப் பொருளையும் எங்கும் பரவச் செய்து மக்கள் மன அறிவையுந் துலக்கி வருகின்றார்கள். தென்னிந்தியாவிலும் இலங்கையிலும் உள்ள தமிழ் வணிகர்களோ பெரும்பாலுங் கல்வியில்லாதவர்களாயுங் கல்வியைப் பரவச் செய்தலிற் கருத்து இல்லாதவர்களாயும் இருக்கின்றார்கள்! இவர்களது இந்நிலைமை பெரிதும் வருந்தத்தக்கதன்றோ? அழியாச் செல்வமாகிய கல்வியைப் பெறாதவரையில் அழியுஞ் செல்வமாகிய பொருளைப் பெற்று யாது பயன் அடைவர்? இனிக், கல்வியில்லாதவர்க்கு அறிவும், அறிவில்லாத வர்க்கு அன்பும் உண்டாகாமையால், இவ்விரண்டு மில்லாதவர்கள் ஒன்று சேர்ந்து ஒரு பெரிய வாணிகத்தைச் செய்து ஒற்றுமையாய் வாழ்ந்து புகழையும் புண்ணியத்தையும் அடைதல் நமது நாட்டில் அருமையாய் இருக்கின்றது. அறிவும் ஆற்றலும் உடையவரே தனிமையாய் இருந்து ஒரு பெரிய வாணிகத்தை நடத்தல் இயலாதாயின், அவ்விரண்டும் இல்லாதவர் அதனை நடத்துவது எப்படி? ஒரு பெரிய வாணிகத்தை ஒருவர் ஏற்று நடத்துவது பல வகையிலும் அல்லலுக்கு இடமாகும்; வருகின்ற ஊதியம் முழுதும் நாமே அடைதல் வேண்டுமென்னும் எண்ணத்தால் தனியே வாணிகம் நடத்துவோர் பெரும்பாலும் ஊதியம் பெறாமற் பழுதுபடுவர்; ஓயாக் கவலையாலும் ஓயா முயற்சியாலும் ஊண் உறக்கம் இன்றி, ஆறுதல் சொல்வாரும் இன்றித், துணை செய்வாருமின்றித் துன்பத்திலேயே உழைப்பர். ஆதலால் தக்கவர் பலரைக் கூட்டாகச் சேர்த்துக் கொண்டு ஒரு பெரிய வாணிகத்தைச் செய்பவர்களே அத்துன்பங்களின்றும் விலகிப், போதுமான ஊதியத்தையும் இன்பத்தையும் பெற்றுத், தாம் மனமகிழ்ந்திருப்பதோடு, தம்மைச் சேர்ந்த கூட்டாளி களையும் அங்ஙனமே இன்புற்றுக் களித்திருக்கச் செய்வர். ஒருவரே ஒரு கற்பாறையைத் தூக்கிச் சுமப்பதென்றால் அஃது அவர்க்கு எவ்வளவு வருத்தத்தினைத் தரும்! அப்படியின்றிப் பலர் கூடி அதனை எடுத்துச் செல்வதென்றால் அஃது அவர்க்கு எத்துணை எளியதாய் இருக்கும். இதுபோலவே ஒரு பெருவாணிகத்தைப் பலர் கூடி நடத்துவது எளியதும் இன்பந் தருவதும் ஆம். இந்த நுட்பத்தை நன்கு உணர்ந்த ஆங்கில நன்மக்கள் கூட்டு வாணிகஞ் செய்து அளவிறந்த செல்வத்தையும் இன்பத்தையும் பெறுகின்றார்கள்; தாம் வாணிகஞ் செய்யும் நாட்டிலுள்ளவர் களையும் நாகரிகத்திலும் நல்வாழ்விலும் மேம்படச் செய்கின்றார்கள். நம் தமிழ் வாணிகர்களோ இந்த நுட்பத்தை அறிதற்கு ஏற்ற கல்வியறிவும் ஈரநெஞ்சமும் பெரும்பாலும் இல்லாதவர்களாய் இருத்தலால், தாமே எல்லாச் செல்வத்தையும் அடைய வேண்டுமென்னும்பேராவலும், மற்றவர்கள் எவ்வகையிலும் மேம்படலாகாதென்னும் தீய எண்ணமும் வாய்ந்தவர்களாய் இருக்கின்றனர்! இதனால் இவர் தாழ்வடைவதோடு, நமது வளம் மிக்க தமிழ்நாட்டையுந் தாழ்வடையச் செய்கின்றனர்! மக்களாய்ப் பிறந்த நாம் இவ்வுலக வாழ்வில் எவ்வளவு காலம் நிலைத்திருப்போமென்றும், இவ்வாழ்வைவிட்டுப் போகுங்கால் எவ்வகையாகச் செல்வோமென்றுஞ் சிறிதேனும் நினைத்துப் பார்ப்போமாயின், இங்ஙனமெல்லாம் நாமே உயர வேண்டுமெனவும் பிறரெல்லாந் தாழவேண்டுமெனவும் எண்ண மாட்டோம். உண்மையோடு ஒருவருக்கொருவர் உதவியா யிருந்து அன்பையும் அறிவையும் வளரச் செய்வதே இந்த வாழ்க்கையின் பயன் என்றும், இங்ஙனம் ஒருவருக் கொருவர் துணைவராயிருந்து வாழ்வதற்கு உதவியாயிருப்பதே செல்வத்தின் பயனாமென்றும், அச்செல்வத்தை எவ்வளவு மிகுதியாகப் பெற்றாலும் அஃது இறக்குங்காற் கூடவர மாட்டாதென்றும் வணிகர்கள் அடிக்கடி நினைந்து பார்த்தல் வேண்டும். அத்தமும் வாழ்வும் அகத்துமட் டேவிழி அம்பொழுக மெத்திய மாதரும் வீதிமட்டே விம்மி விம்மியிரு கைத்தலை மேல்வைத்தழு மைந்தருஞ் சுடுகாடுமட்டே, பற்றித்தொடரும் இருவினைப் புண்ணிய பாவங்களே என்ற பட்டினத்து அடிகள் திருமொழியை எந்நேரமும் அவர்கள் நெஞ்சிற் பதித்துச், சூதுங் கள்ளமும் இன்றி, உண்மையோடு ஒழுகிப், பலரும் ஒன்றுகூடி வாணிக முயற்சியைப் பெருகச் செய்து, தாம் பெற்ற ஊதியத்தைக் கல்விக்கும் பலவகை யறங்களுக்கும் பயன்படுத்தி வருதல் உண்மை வாணிகர்களுக்கு இன்றியமையாத கடமையாமென்க. 18. பெண்மக்கள் கடமை மங்கையர்க்குத் தனியரசி எங்கடெய்வம் வளவர்திருக் குலக்கொழுந்து வளைக்கைமானி செங்கமலத் திருமடந்தை கன்னிநாடாள் தென்னர்குலப் பழிதீர்த்த தெய்வப்பாவை எங்கள் பிரான் சண்பையர்கோன் அருளினாலே இருந்தமிழ்நா டுற்றஇடர் நீக்கித் தங்கள் பொங்கொளி வெண்டிருநீறு பரப்பினாரைப் போற்றுவார் கழலெம்மாற் போற்றலாமே - சேக்கிழார் நீண்டகாலத்திற்கு முன்னரே மங்கையர்க்கரசி என்னும் ஒரு பெண்மணியிருந்தார். அவ்வம்மையார் சோழ அரசனின் புதல்வியாவார். பிறகு அவர் பாண்டிநாட்டுக்கு அரசனான கூன் பாண்டியனுக்கு மனைவியாகி மதுரைமா நகரின்கண் அமர்ந்திருந்தனர். அக்காலத்தில் நாத்திகச் சமண மதமானது எங்கும் பரவிக், கரியமுகிலானது பகலவனொளியை மறைப்பது போலச் சைவசமயத்தை மிகுதியாய் மறைத்துவிட்டது. கூன்பாண்டியனும் அவன் குடிமக்களுஞ் சமண முனிவர் சொற்களால் மயங்கி அவர்களுடைய சமயவலையிற் சிக்கிக் கொண்டார்கள். ஆனால், அப்பாண்டியன் மனைவியரான மங்கையர்க்கரசியாரோ சைவசமய உண்மைகளைச் செவ்வையாகக் கற்றுணர்ந் திருந்தமையாற், சிவபெருமான் திருவடிகளில் நிலைபெயராத அன்புடைய வராய்ச் சமண சமய நாத்திக வலையில் அகப்படாமல் இருந்தனர். அதனோடு அவர் கற்பொழுக்கத்திலும் மிகச் சிறந்தவராய் இருந்ததனால், தங் கணவனான கூன் பாண்டியனிடத்தில் அருவருப்பில்லாதவராய், அவனை மீட்டுஞ் சைவ சமயத்திற்குத் திருப்பித் தரும்படி சிவபெருமானை இடைவிடாது வேண்டி வந்தனர். அங்ஙனம் அவர் வேண்டி வரும்பொழுது, திருஞான சம்பந்தப் பிள்ளையார் என்னும் ஒரு சிறு மதலை, இறைவனும் இறைவியுமாய்த் தோன்றிக் கடவுள் தந்த ஞானப்பாலை உண்டு. மூன்றாம் ஆண்டிலேயே எல்லாம் உணர்ந்த ஞானாசிரியராய்ச், சிவபெருமான்மீது செந்தமிழ்த் திருப்பதிகங்கள் பாடிக் கொண்டு திருமுறைக்காட்டுக்கு (வேதாரணியத்திற்கு) வந்திருக்கிறார் என்பதைக் கேள்வியுற்றார். இதனைக் கேட்டளவிலே அவ் அரசியார் அடங்காப் பெருமகிழ்ச்சி அடைந்து, தம்மைப் போலவே சிவபெருமானிடத்து நீங்கா அன்புடையராய் விளங்கிய தம் அமைச்சரான குலச்சிறை என்பவரை அழைப்பித்து, அவர்க்குத் திருஞானசம்பந்தப் பிள்ளையார் தந்தெய்வத் தன்மைகளை விரித்துரைத்து, அவரை மதுரைமா நகருக்கு வருவிக்கும்படி கட்டளையிட்டார். உடனே குலச் சிறையாருந் திருஞானசம்பந்தப் பெருமானுக்குத் திருமுகம் எழுதிவிடுத்து மதுரைமாநகருக்கு எழுந்தருளும்படி நிரம்பவும் வேண்ட, அதற்கிசைந்து பெருமானும் மதுரைக்கு வந்து அங்குள்ள சிவபிரான் திருக்கோயிலின் கண்ணே மங்கையர்க்கரசியாரைக் கண்டு அப்பெண்ணரசியின் அருங்குணச் செயல்களை மிகவும் பாராட்டி, மங்கையர்க்கரசி வளவர்கோன் பாவை வரி வளைக்கை மடமானி பங்கயச் செல்வி பாண்டிமாதேவி பணிசெய்து நாடொறும் பரவப் பொங்கழல் உருவன் பூதநாயகனால் வேதமும் பொருள்களும் அருளி அங்கயற்கண்ணி தன்னொடும் அமர்ந்த ஆலவாய் ஆவதும் இதுவே என்று தமது மலர்வாய் திறந்து பாடியருளினார். இங்ஙனந் திருஞானசம்பந்தப்பிள்ளையார் திருவாயாற் புகழ்ந்து பாடப்பெற்ற மங்கையர்க்கரசியாரின் ஒப்பற்ற சிறப்பினையே சேக்கிழார் அடிகள் தாம் அருளிச்செய்த பெரிய புராணத்தின் கண்ணே மேற்காட்டிய செய்யுளிற் பெரிதும் வியந்து பேசியிருக்கின்றார். இவ்வளவு உயர்குணச் சிறப்பு வாய்ந்த மங்கையர்க்கரசியார் தோன்றிய பெண் வகுப்பிலே பிறப்பதற்கு அருந்தவஞ் செய்த பெண்மக்கள் எல்லாரும் அந்த அரசியாரைப் போலவே, அறிவுடைய மேன்மக்களாற் புகழ்ந்து பாராட்டும்படி உயர்ந்து நல்வழியிலே நடக்க வேண்டுவது அவர்கட்கு இன்றியமையாத கடமையாகும். இனி, உயர்ந்த நல்வழியிலே நடக்குமிடத்தும், அவரவர் தன்மைக்குப் பொருத்தமான தகையாய் நடந்து கொள்ளல் வேண்டும். பெண்மக்கள் தம்முடைய தன்மைக்குத் தகுந்த வழியிலும், ஆண்மக்கள் தம்முடைய இயல்புக்கு ஏற்ற வழியிலும் பகுத்தறிந்து ஒழுகுதலே சிறந்ததாகும். பெண்மை யென்பது எல்லாராலும் விரும்பத்தக்க ஓர் அமைதியான தன்மையென்றும், ஆண்மை என்பது பிறரை ஆளுந்தன்மை யென்றும் பொருள்படு தலாற், பெண்மக்கள் எல்லாரும் இயற்கையிலேயே அமைதிக் குணம் உடையவராவரென்பது தெளிவாக விளங்குகின்றது. ஆண்மக்கள் ஆளுந்தன்மையுடை யவர்களாய் இருத்தலால், எதனையும் முற்பட்டுச் சென்று செய்யுங் கிளர்ச்சி மிக்கவராய் இருக்கின்றனர்; பெண்மக்களோ அங்ஙனம் எதனையும் விரைந்து செய்யாது ஆழமாக நினைந்து பார்த்து அமைதியுடன் செய்து முடிப்பவராயிருக்கின்றனர்; விரைந்து செய்யுங் கிளர்ச்சியினால் ஆண்மக்கள் ஒரோவொருகாற் பிழை செய்தலுங்கூடும்; அமைதியாக ஆழ்ந்து செய்யும் இயற்கையாற் பெண்மக்கள் பிழைப்பதற்கு இடமே இல்லை. ஆண்மக்களைக் காட்டிலும் எத்தனையோ மடங்கு சிறந்த தான அமைதித் தன்மையைப் பெற்றும், அதனைப் பயன்படுத்தித் திருத்தமாக நடவாவிட்டாற் பெண்மக்கள் பெருங்குற்றத்திற்கு ஆளாவர். கையிற் பொருள் இல்லாதவன் அறஞ்செய்யா விட்டால் அதனை ஒரு குற்றமாகச் சொல்ல மாட்டார்கள். கையிற் பொருளுடையவன் அறஞ் செய்யானாயின் அவனை ஒரு பெருங்குற்றமாகவே நினைத்து எல்லாரும் அவனை இகழ்ந்து பேசுவர். அதுபோலவே, அமைதிக் குணம் என்னும் ஒப்பற்ற பெருஞ்செல்வத்தைப் பெற்றும், அதனை நல்வழியிற் பயன்படுத்தாத பெண்மக்கள், உலகத்தாரால் நிரம்பவும் பழிக்கப் படுவார்கள். அமைதிக் குணத்தை விட்டவர்கள் வடிவத்தாற் பெண் மக்களைப்போல் இருந்தாலும், அவர்கள் கொடுங்குண முடைய ஆண்மக்களினுங் கீழ்ப்பட்டவர் ஆவர். வடிவத்தால் மட்டும் பெண்போற் றோன்றிக் குணத்தால் மிக இழிந்தவர்களாய் இருப்பவர்களையே பட்டினத்துப் பிள்ளையார், தாயுமான அடிகள் முதலான சான்றோர் களெல்லாரும் மிகவும் இழித்துப் பாடியிருக்கின்றார்கள். ஆதலால், இயற்கையாகவே தமக்கு வாய்ந்த அமைதிக் குணத்தை மேன்மேல் வளரச் செய்து வருதலே பெண் பிறவியெடுத்த நல்லார்க்குச் சிறந்த முறையாகும். இனி, அமைதிக் குணத்தை மேன்மேல் வளரச் செய்யும் வழிதான் யாதென்றால், மனமுஞ் சொல்லும் செயலும் அமைதியாக நடைபெறும்படி பழகுவதேயாகும். நிறைந்த செல்வத்தை எப்படியாவது பெற்று உயர்ந்த பட்டாடைகளும் விலையுயர்ந்த மணிக்கலன்களும் அணிந்து நாவிற்கு இனிய பண்டங்களை முப்பொழுதும் விலாப் புடைக்கத் தின்று, யாரும் நிகர் இன்றி மாடமாளிகைகளில் யாம் வாழல் வேண்டும், பிறர் எப்படியானாலும் எனக்கு ஆகவேண்டுவதென்ன, என்று இப்படியெல்லாம் வீணான எண்ணங்களை எண்ணாமல், தமது விருப்பத்தை அடக்கல் வேண்டும். நுகரப்படுகின்ற பொருள்கள் மேல் மட்டுக்கு அடங்காமற் செல்லும் அவாவைச் சுருக்குவதலே பெண்பாலர்க்குப் பெருஞ் சிறப்பாகும் என்பதனை உணர்த்துதற்கன்றே தெய்வத் தன்மை வாய்ந்த ஔவையாரும், உண்டி சுருக்குதல் பெண்டிர்க்கு அழகு என்று அருளிச்செய்திருக் கின்றனர்? இவ்வுண்மை தெரியாத வர்கள் உணவைக் குறைத்துச் சாப்பிடுதலே பெண் மக்களுக்கு அழகாகும் என்று கூறுவார்கள்; அது பொருந்தாது; உடம்பு வலிவு குன்றி நோய்க்கு இரையாகும்; பெரும்பாலும் பெண்மக்கள் நாம் துய்க்கும் பொருள்களிற் கிடைத்தமட்டில் மன அமைதி பெறாமற் பின்னும் பின்னும் அவற்றைப் பெறுதற்கும் நுகர்தற்கும் அளவுகடந்த விருப்பம் உடையவர்களாய் இருத்தலாலும், அவ்விருப்பத்தால் தம்மைக் கொண்டார்க்கும் அளவிறந்த துன்பத்தையுங் கவலையையுங் வருவித்தலாலும், அவர்கள் அவ்விருப்பத்தைச் சுருக்கிக் கொள்ளுதல் வேண்டுமென்பதே ஔவைப் பிராட்டியார் கருத்தாகும். ஆகவே, ஆற்றிற்கிடந்து புரண்டாலும் ஒட்டும் மணலே ஒட்டும் என்ற பழமொழிப்படி, இறைவன் அன்று அமைத்து விட்டபடியல்லாமல் யாருந்தாம் விரும்புகிறபடி யெல்லாந் துய்த்தல் இயலாது. இதனாலன்றோ, வகுத்தான் வகுத்த வகையல்லாற் கோடி தொகுத்தார்க்குந் துய்த்தல் அரிது என்று திருவள்ளுவ நாயனாரும், எண்ணி யொருகருமம் யார்க்குஞ் செய்யொண்ணாது புண்ணியம் வந்தெய்து போதல்லாற் - கண்ணிலான் மாங்காய் விழஎறிந்த மாத்திரைக் கோல்ஒக்குமே ஆங்காலம் ஆகு மவர்க்கு என்று ஔவையாரும் அருளிச் செய்தனர். ஆதலால், தமது கையிற் கிடைத்தது காணிப்பொன் ஆனாலும், அதனைக் கோடியாக நினைந்து மனவமைதி பெறுதலே பெண்மக்கள் தம்மைத் தூய்மையாக வைத்துக் கொள்வதற்குச் சிறந்த வழியாகும். இனி, நுகர்ச்சிக்குரிய பொருள்களை ஏராளமாக வைத்திருக்கும் மாதர்கள், தம்மை அவ்வளவு செல்வ வாழ்க்கையிற் பிறப்பித்த இறைவனது பேரருட்டிறத்தை நினைந்து நினைந்து உருகுவதோடு, அச்செல்வத் திரள்களை மிகவும் பாடுபட்டுத் தேடித் தொகுத்து வைத்த தம் முன்னோரையுந் தங்கணவரையும் நினைந்து நினைந்து அவரிடம் நன்றியுடையராய் அடங்கி யொழுகுதல் வேண்டும். தமது இல்லத்திற்கு வரும் விருந்தினர் எத்திறத்தவராய் இருப்பினும், அவரைத் தாம் எவ்வளவு அன்புடன் ஓம்புதல் கூடுமோ அவ்வளவுக்கு அகம் மலர்ந்து முகம் மலர்ந்து வேளை தவறாமல் இனிய உணவு ஊட்டி இனியராய் நடத்தல் வேண்டும். தாம் ஒருவர் வீட்டுக்கு விருந்தாய்ச் சென்றால் அவ்வீட்டவர் தம்மை அன்புடன் ஓம்புவதால் தமக்குண்டாம் மகிழ்ச்சியையும், அவர் அங்ஙனம் ஓம்பாவிட்டால் தமக்குண்டாம் மனவருத்தத்தையும் எண்ணிப் பார்க்கும் மங்கைமார்க்கன்றோ விருந்தினரை ஓம்புதலின் சிறப்பு நன்கு விளங்கும்? அன்பில்லாமற் செய்யும் விருந்தோம்பல்கள் வந்தவர்க்கு எவ்வளவு துன்பத்தைத் தரும்! இதற்கு. மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து நோக்கக் குழையும் விருந்து என்ற திருவள்ளுவர் திருக்குறளும், காணக்கண் கூசுதே கையெடுக்க நாணுதே மாணொக்க வாய்திறக்க மாட்டாதே - வீணுக்கென் என்பெலாம் பற்றி எரிகின்ற தையையோ அன்பிலாள் இட்ட அமுது என்ற ஔவையார் திருப்பாட்டுமே சான்றாம். இன்னும், உண்ணச் சோறு இன்றியும் உடுக்கக் கூறையின்றியும் வருந்தி வந்த ஏழை எளியவர்களைக் கடுகடுத்துப் பேசித் துரத்தாமல், அவரை ஏற்கும் நிலையிலுந், தம்மை அவர்க்கு இடும் நிலையிலும் வைத்த ஐயன் செயலை எண்ணி அவர்க்கு நெஞ்சம் இரங்கி, அன்போடும் இன்சொற் கூறிச் சோறுங் கூறையுங் கொடுப்பதுதான் பெண்மக்களுக்குத் தெய்வத் தன்மையை உண்டாக்கும். செல்வமானது நிலை யில்லாமல் மாறி மாறி வருவதொன்றாகையாற், பொருளை இழந்த பிறகு அறஞ் செய்யாமற் போனோமே என்று ஏமாறாமற், பொருள் உள்ளபோதே, ஆறிடு மேடும் மடுவும்போல் ஆம்செல்வம் மாறிடும் ஏறிடும் மாநிலத்தீர் - சோறிடும் தண்ணீரும் வாருந் தருமமே சார்பாக உண்ணீர்மை வீறும் உயர்ந்து என்றபடி பல வகையிலும் ஈகையறங்களைத் தாமே செய்தும், தம்மைச் சேர்ந்தவர்கள் செய்வதற்கு உதவியாய் நின்றும் புண்ணியத்தைத் தமக்குத் துணையாகத் தேடிக்கொள்ளல் வேண்டும். இனிக், கல்வியில்லாதவர்கள் விலங்குகட்கு ஒப்பாவர் என்று தெய்வத் திருவள்ளுவர் கூறுதலாலும், குஞ்சி அழகும் கொடுந்தானைக் கோட்டழகும் மஞ்சள் அழகும் அழகல்ல - நெஞ்சத்து நல்லம்யாம் என்னும் நடுவு நிலைமையாற் கல்வி யழகே யழகு என்ற நாலடியாரின்படி கல்வியில்லாதவர்க்கு உள்ள அழகும் ஒப்பனைகளுஞ் சிறப்பாகமாட்டா ஆதலாலும், ஆண் மக்களைப் போலவே பெண்மக்களும் இடைவிடாது கற்றுத், தமது அறிவை நிரம்பவுந் துலக்கிக் கொள்ளல் வேண்டும். கல்வி கற்கக் கற்க அறிவு ஆழமாய்ச் செல்லுமாதலால், அவர்கட்கு இயல்பாக உள்ள அமைதிக் குணமும் அதனால் மேலும் மேலும் பெருகும்; மிகவும் ஆழமான ஓர் யாறானது எவ்வளவு அமைதியாய்ச் செல்கின்றது! ஆழம் இல்லாத யாற்றின் நீர் சிலுசிலுவென்று எவ்வளவு விரைவாய் ஓடி வற்றிப் போகின்றது! ஆகவே, பெண் மக்கள் தமது அமைதிக் குணத்திற்கு மிகவும் இசைந்ததான கல்வியைக் கற்றலிற் சிறிதும் பராமுகமாய் இருத்தல் ஆகாது. இங்ஙனமெல்லாந் தமது அமைதிக் குணத்தைப் பாதுகாத்து வளர்க்கும் மங்கையர்கள், அக்குணத்தை வெளியே புலப்படுத்துந் தம்முடைய வாய்ச் சொற்களை இனிதாக அமைந்த மெல்லிய குரலிற் பேசப் பழகல் வேண்டும். எத்தனை நல்லவர்களாய் இருந்தாலும், இனிமை இன்றிப் பரப்பரப்போடு உரக்கப் பேசுகிறவர்களைக் கண்டால் எவர்க்கும் அருவருப்பு உண்டாகின்றது. அமைதிக்கே உரியவர்களான பெண் பாலாரிடத்து இப்பொல்லாங்கு காணப்படுமாயின், அது பிறர்க்கு எவ்வளவு உவர்ப்பினைத் தோற்றுவிக்கும்! யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு (குறள் ) என்னுந் திருவள்ளுவ நாயனார் அருள் உரையை மாதர்கள் எப்போதும் கருத்திற் பதியவைத்தல் வேண்டும். இனி, மாதர்கள் தமது அமைதிக் குணத்திற்குப் பொருத்த மாகத், தமது உடம்பின் செயல்களை அமைதிப்படுத்தி, நாணமும் அடக்கமும் உடையவர்களாக ஒழுகுதல் வேண்டும். தமது வருவாய்க்குத் தக்கபடி தூய ஆடை அணிகலன்கள் ஆரவார மின்றி அணிந்து, குளித்தும் முழுகியுந் தூயராக நடத்தல் அவர் தமக்கு முதன்மையான கடமையாம். இவற்றொடு கடவுளைத் தொழுதலும் அடியாரை ஏற்று அவர்க்குத் தொண்டு செய்தலும் நாடோறும் வழுவாமற் கடைப்பிடியாகச் செய்துவரல் வேண்டும், என்று இவ்வளவும் எல்லாப் பெண்மக்களுக்கும் உரிய கடமைகளில் முதன்மையாவனவாம் என்க. 19. பெற்றோள் கடமை தாயானவள் பிள்ளைக்குச் செய்ய வேண்டிய கடமை மற்ற எல்லாக் கடமைகளிலுஞ் சிறந்ததாக இருத்தலின் அதைப்பற்றி இங்கு வரைவது பெரிதும் பயன் தருவதாகும். மனைவி கணவனுக்குச் செய்யும் கடமையிலும், மக்கள் பெற்றோர்க்குச் செய்யும் கடமையிலும், உடன்பிறந்தார் உடன் பிறந்தார்க்குச் செய்யுங் கடமையிலும், நண்பர் நண்பர்க்குச் செய்யுங் கடமையிலும், குடிகள் அரசர்க்குச் செய்யுங் கடமையிலும், அரசர் குடிகட்குச் செய்யுங் கடமையிலுந் தாயானவள் தன் மக்கட்குச் செய்யுங் கடமையே மிக மேலானதொன்றாய் விளங்குகின்றது. ஏனென்றால், மனைவியாயுங், கணவனாயும், உடன் பிறந்தாராயும், நண்பராயுங், குடிகளாயும், அரசராயும் உள்ள எல்லாரும் முடிவாகத் தாயின் வயிற்றிற் பிறந்தவர்களே யாகையால், அவர்களெல்லாருந் தாயின் உதவியினாலேயே மேலான நிலைமைக்கு வரவேண்டியவர்களா யிருக்கின்றார்கள். குழந்தை களாயிருந்த காலந்தொட்டே, தாயானவள் தன் மக்களை எந்த வகையில் வளர்த்து வருகின்றாளோ அந்த வகைக்கேற்ற படியே அவர்கள் வளர்ந்து நல்லவராகவாவது, தீயவராகவாவது நடப்பார்கள். தாயானவள் நல்லறிவும், நல்லியல்பும், நல்ல செய்கையும் உடையளா யிருந்தலொடு தன் மக்களும் தன்னைப்போலவே ஆகல் வேண்டுமென்று அக்கறையோடு அவர்களை வளர்த்து வருவளாயின், அவர்கள் நல்லவராயே விளங்குவர். இவ்வா றின்றித் தாயானவள் தீயவளாயிருப்பளாயின் அவளால் வளர்க்கப்பட்ட பிள்ளைகளுந் தீயவர்களாயே நடப்ப ரென்பதை நாம் சொல்லுதலும் வேண்டுமோ? கொழுமையான நல்ல நிலத்தில் முளைத்த பயிரையும், உரமற்ற உவர் நிலத்தில் தோன்றிய புற்பூண்டுகளையும் ஒப்பிட்டுப் பாருங்கள். நல்ல நிலத்தில் முளைத்த பயிர் எவ்வளவு செழுமையாய் வளர்ந்து நெல், கேழ்வரகு, சோளம் முதலான பொருள்களைத் தந்து எல்லார்க்கும் எவ்வளவு மிகுதியாய்ப் பயன்படுகின்றன. உவர் நிலத்திற்றோன்றிய புற்பூண்டுகளோ வற்றி வறண்டு விலங்கினங் களுக்கும் பயன்படாமற் போகின்றன. இதுபோலவே, நல்ல தாயிடத்துந் தீய தாயினிடத்துந் தோன்றிய பிள்ளைகளும் இருப்பார்களென்று தெரிந்து கொள்ளல் வேண்டும். தொட்டிற் பழக்கஞ் சுடுகாடு மட்டும் என்னும் பழமொழிப்படி நாம் சிறு பிள்ளைகளாயிருந்தபோது நம்மிடத்தில் உண்டான பழக்கம் நம் அறிவில் வேரூன்றி விடுதலால் அது நாம் வளருந்தோறுங் கூடவே வளர்ந்து நன்மையையாவது, தீமையையாவது தருகின்றது ஆதலாற் பெரியவர்களான பிறகும் எல்லார்க்கும் நல்லவர்களாய்ப் பயன்பட்டு வாழ்வதற்கு நாம் சிறுபொழுதிற் கைக்கொண்ட பழக்கமே முதன்மையான தாயிருக்கின்றது. இனிச் சிறுபோதில் நமக்கு வரும் பழக்கம் எங்கேயிருந்து வருகின்றதென்பதைச் சிறிது நினைத்துப் பாருங்கள்! நாம் குழந்தையாயிருந்த காலத்தில் நம்மைப் பெற்ற தந்தையொடு நெருங்கிப் பழகினோமா? சிறிதும் இல்லையே. ஏனெனில், நம் தந்தையோ நம்மையும், நம் அன்னையையும், நம்மைச் சேர்ந்தவர் களையும் பாதுகாக்கும் பொருட்டுப் பகற் பொழுதெல்லாம் வெளியே சென்று உழைத்துவிட்டு, மாலைப் பொழுதில் வீட்டிற்கு வந்து அலுத்து இளைப்பாறப் போகின்றனர். நம்முடன் பிறந்தாரோ சிறியராயிருந்தால் நமக்கு ஏதுந் தெரிவிக்க மாட்டாராயிருத்தலின் அவரால் நாம் அடையும் பயன் ஒன்றுமில்லை. அவர் பெரியராயிருந்தாலோ கல்வி கற்கவும், பொருள்தேடவுங், கணவனோடு வாழவும் வெளியே போய் விடுகின்றனர். ஆதலால், அவராலும் நாம் அடைவதொன் றில்லை. மற்றுச், சுற்றத்தாரும் இடைக்கிடையே நம் வீட்டுக்கு வந்து போகின்றவர்களேயல்லாமல் நிலையாக நம்மோடிருந்து நம்மோடு நெருங்கிப் பழகுகின்றவர் களல்லாமையால் அவர்களாலும் நாம் பெறுவது ஒன்று மில்லை. இவர்களெல்லாம் இங்ஙனமாகப், பின்னை யார் தாம் நமது சிறு பருவத்தில் நம்மோடு உடன் பழகுவோர் என்று ஆராய்ந்து பார்த்தால் அவர் தம் தாய்மாரே ஆவரென்று உணரப் பெறுகின்றோம். நாம் ஏதும் அறியாத சிறுகுழவி யாயிருந்த போது நம்மைச் சீராட்டிப் பாராட்டி வந்தவள் நம் அன்னையேயன்றோ? நாம் பசியால் வருந்தி வாய்திறந்து அழுதபோது நம் அருகே ஓடிவந்து நம்மை எடுத்து முத்தம் வைத்து உள்ளங் கசிந்து பாலூட்டினவள் நம் அன்னையேயன்றோ? நாம் சிறிது சிறிதாய் வளர்ந்து வரும்போது நமக்கு வேண்டிய பாலுஞ் சோறும் முதலான பொருள்களை நமக்குச் சுட்டிச் சுட்டிக் காட்டி அவற்றின் பெயர்களை நமக்குக் கற்றுக் கொடுத்து வந்த முதல் ஆசிரியனும் நம் அருமைத் தாயேயன்றோ? இடைக்கிடையே நாம் நோயால் வருந்திக் கிடந்த காலங்களிலெல்லாம் அதற்குத் தானும் உடன் வருந்திப் பகலென்றும் இரவென்றும் பாராது நம் அருகிருந்து நம் நோய் தீரும் பொருட்டு வேண்டும் உதவிகளை எல்லாம் கைம்மாறு கருதாது செய்துவந்த அருட்களஞ்சியம் போல்வாளும் நம் அன்னையேயன்றோ? இங்ஙனமெல்லாம் நம் உயிரோடும், உடம்போடும், நம் நினைவோடும், நம் சொல்லோடும், நம் செயலோடும் உடன் கலந்து, உடன் பழகி வருந் தெய்வம் போல்வாள் நம் அன்னையாகவே இருத்தலின் அவளாலேதான் நாம் சீர்திருந்த வேண்டியவர்களாக இருக்கிறோம். இவ்வாறு நம்மை முழுதுஞ் சீர்திருத்த வேண்டிய நிலைமையிலுள்ள நம் அன்னையானவள் தான் தன் மக்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளை முற்றும் அறிந்தவளாக இருக்க வேண்டுவது முதன்மையன்றோ? அறிவில்லாத தாய் தன் மக்களை எப்படி அறிவுடையராக்கக் கூடும்? விளக்கில்லாத இடத்தில் வெளிச்சம் உண்டாகுமா? பூவில்லாத இடத்தில் மணம் உண்டாகுமா? ஆதலால், தாயானவள் மிகுந்த அறிவுடையவளாய் இருந்தால் மட்டுமே அவள் மக்களும் அறிவுடையராயிருப்பர். இனித் தாய்மார்களுக்கு அறிவுதான் எப்படி வரக் கூடுமென்று எண்ணிப் பார்ப்போமாயிற், கற்றார் சொல்லும் அரிய பொருள்களை அடுத்தடுத்துக் கேட்பதனாலும் அவர் எழுதிய நூல்களை இடைவிடாது கற்று உணர்வதனாலுமே அவர் அறிவுடையராகக் கூடுமென்பது தெளிவாக விளங்கும். கல்வியறிவிலும், உயர்ந்த எண்ணங்களிலுமே எந்நேரமும் பழகின ஒரு தாய்க்கு நல்ல பிள்ளைகளே பிறக்கக் கூடுமல்லாமல், தீய பிள்ளைகள் பிறப்பதற்குச் சிறிதும் இடமில்லை. நாம் எவ்வகையான நினைவில் ஓயாமற் பழகி வருகிறோமோ அதற்குத் தக்கபடியே நம் உடம்பிலுஞ், செய்கையிலும் பல வகையான அடையாளங்கள் காணப்படுகின்றன. வெடு வெடுப்பாகப் பேசும் ஒருவர் முகத்தையும், மிகவும் அமைதியாகப் பேசும் மற்றொருவர் முகத்தையும் ஒப்பிட்டுப் பாருங்கள்! சீற்றம் உள்ளவர் முகம் பார்ப்பவர்க்கு எவ்வளவு அச்சத்தைத் தருகின்றது! அமைதியுள்ளவர் முகமோ எவ்வளவு கவர்ச்சியைத் தருகின்றது! உயர்ந்த அறிவுடையோர் செய்கை எல்லார்க்கும் இன்பத்தைத் தருதலும், அறிவில்லாதவர் செய்கை துன்பத்தைத் தருதலும் நாம் வழக்கமாய் அறிந்திருக்கின்றனமே. இப்படியாக நம்மறிவுக்கும் நினைவுக்கும் ஏற்றபடி நம் உடம்புஞ் செய்கையும் மாறுபடுவதைக் காணுங்கால், நாம் எவ்வளவு அமைதியும் எவ்வளவு அறிவும் உடையவர்களாக ஒழுக வேண்டுமென்பது தங்களுக்கு விளங்காமற் போகாது. நாம் அழகுடையவர்களாயிருக்க வேண்டுமென்றும், நாம் நல்ல பிள்ளை களைப் பெறல் வேண்டுமென்றும் அளவிறந்த ஆவல் உடையவர் களாயிருக்கின்றோம். ஆனால், அவ் ஆவலின் படியே பெறுவதற்கு முன்ன தாகச் செய்ய வேண்டும் ஏற்பாடு களைச் செய்து வைக்கின்றோமா? சிறிதும் இல்லையே. பசியெடுத்த போது நல்ல உணவு உண்ண வேண்டுமென்று விரும்புகிறவர்கள், பசியெடுக்கும் முன்னமே அவ்வுணவைச் சமைத்துக் கொள்ளல் வேண்டும் அன்றோ? மழை பெய்தாற் பயிர் செய்து பிழைக்க வழிதேடுபவர்கள், மழை வருதற்கு முந்தியே நிலத்தைத் திருத்திப் பதப்படுத்த வேண்டாமா? அழகான அறிவும் அழகான தன்மையும் இல்லாதவர்க்கு அழகு எங்கேயிருந்து வந்துவிடும்? நல்லவரல்லாதவரும் அழகுடையராய் இருக்க காண்கிறோமே என்றால், அவர்க்கு உள்ள வெளி அழகு முதலிற் பார்ப்பவர்க்குச் சிறிது கவர்ச்சியை உண்டு பண்ணுமேனும், பிறகு அவரொடு கலந்து பழகுவார்க்கு, அவரிடத்திலுள்ள தீய தன்மை அருவருப்பை விளைக்கு மாதலால் அது சிறிதும் அழகாக மாட்டாது. எட்டிப்பழம் பார்ப்பதற்கு எவ்வளவு அழகாயிருந்தாலும், அதனைச் சிறிது நாவிலிட்டால் அஃது எவ்வளவு அருவருப்பைத் தருகின்றது! ஆகவே, பார்ப்பதற்கும் பழகுவதற்கும் இனிய அறிவும் இனிய இயற்கையும் உடையவர்களே உண்மையான அழகு உடையவர்களென்று அறிந்து கொள்ளுங்கள். நம் பெண்பாலாரில் எத்தனையோ பெயர் அருவருக்கத் தக்க அறியாமையுந் தீயதன்மையுந் தீய செய்கையும் உடையரா யிருந்தும், இவற்றைத் திருத்திக் கொள்ளச் சிறிதேனும் முயற்சி செய்யாமல் உயர்ந்த ஆடை அணிகலன்கள் அணிந்து தம் முடம்பை மினுக்குவதில் மட்டுமே மிகுந்த கருத்து வைத்தவரா யிருக்கின்றார்கள். இதனால் நம்மவர்க்கு ஆடை அணிகலன்கள் வேண்டுமென்பதை நாம் மறுக்கவில்லை. என்றாலும் வெளியே யுள்ள உடம்பை அழகு செய்வது இரண்டாந்தர மாகவும், உள்ளேயுள்ள நம் அறிவையும் நினைவையும் அழகு செய்வது முதற்றர மாகவும் வைத்துப் பழகிக்கொள்ள வேண்டும். ஒரு வீட்டின் முன்வாயிலைக் கூட்டி மெழுகிக் கோல மிட்டுப் பூச்சாத்தி விளக்கிட்டு அழகுபடுத்துவது போலவே, அவ்வீட்டின் உள்ளேயும் அங்ஙனமே துப்புரவு செய்து வைக்க வேண்டாமா? முன்வாயில் மட்டும் அழகாயிருக்கும்படி ஒப்பனை செய்து வைத்து உள்ளே சென்று பார்த்தாற் குப்பையுங் கூளமும் முடை நாற்றமும் இருளும் மலிந்து கிடக்கவிட்டிருப்பது எவ்வளவு அருவருப்பை உண்டாக்குவதாகும்! இதுபோலவே நாம் நமதுடம்பை எவ்வளவுதான் ஒப்பனை செய்து அழகு படுத்தினாலும், நமது உள்ளத்தையும் அங்ஙனமே அறிவினாலும் நல்ல நினைவினாலும் அழகுபடுத்தி விளங்கச் செய்யாவிட்டால் அது சிறிதாயினும் பயன்படமாட்டாது, நாம் பெறும் பிள்ளைகளும் உயர்ந்தவராக மாட்டார்கள். உலகத்தில் மிகச் சிறந்து விளங்கிய மேன்மக்களைப் பெற்ற தாய்மார்களெல்லாரும் அறிவாலும் நாகரிகத்தாலுஞ் சிறப்புற்றி ருந்தார்களென்பதைப் பழைய வரலாறுகளில் நாம் படித்தறிந் திருக்கிறோம். தாய் எத்தன்மை யுடையளாயிருக்கின்றாளோ, அவர் பெற்ற மக்களும், அத்தன்மையுடையவர்களாய்த் தோன்றுகிறார்கள்; இதற்கு தாயைப் போற் பிள்ளை நூலைப்போற் சீலை, தாயைத் தண்ணீர்த் துறையிற் பார்த்தாற் பெண்ணை வீட்டிலா போய்ப் பார்க்க வேண்டும்? என்னும் பழமொழிகளே சான்றாகும். தாயானவள் சூல்கொண்டவளாயிருக்கும்போது நினைத்த நினைவுகளும், எண்ணிய எண்ணங்களும், அவள் வயிற்றிலுள்ள பிள்ளையின் மூளையிற் பதிந்து அதனை உருவாக்குகின்றன என்று இக்காலத்தில் மனநூல் வல்ல அறிஞர்கள் ஆராய்ந்து காட்டுகின்றார்கள். நமது நாட்டிற் பழைய கதையான பாரதத்தினாலும் இவ்வுண்மை நன்கு புலனாகின்றது. கண்ணபிரான் கருக்கொண்டிருந்த தன் தங்கைக்குப் பழைய நாளில் இருந்த போர் மறவர்களின் அரிய ஆண்மைச் செயல்களை எடுத்துச் சொல்லிக் கொண்டு வந்தாரென்றும், அவற்றைக் கேட்டு வந்த சுபத்திரை அவைகளை மிகவும் வியந்து தன் கருத்தை அவ்வாண்மைச் செயல்களிற் பதிய வைத்தமை யால் அவள் வயிற்றகத்துள்ள கருவில் அந்நினைவேறி நன்றாய்ப் பதியலாயிற்றென்றும், பிறகு அது பிள்ளையாய்ப் பிறந்து அபிமன்னியு என்னும் பெயர் பெற்று அஞ்சா நெஞ்சுள்ள ஆண்மையாளனாய்க் கண்டாரெல்லாம் வாய்மேற் கைவைத்து வியக்கும்படி அருந்திறல் ஆண்மையொடு பெரும் போரியற்றிப் புகழ்பெற்று நிகரற்ற ஆண்மகனாய் விளங்கினதென்றும் அப்பாரதக் கதையில் நாம் படித்திருக்கின்றனமல்லமோ? மேல் நாட்டில் நிகரற்ற போர்மறவனாய் விளங்கிய நெப்போலியன் என்னும் மன்னர் மன்னனைப் பற்றி நம்மவர்க்கு நன்றாய்த் தெரிந்திருக்கலாம். அவன் முதலில் மிகவும் ஏழ்மையான ஒரு குடும்பத்திற் பிறந்து, பிறகு ஒரு படையிற் சிறிய சம்பளத்திற்குப் போர் மறவனாய் அமர்ந்து, பின்பு நாட்செல்லச் செல்லத் தனது அஞ்சா ஆண்மையினாலும் நுண்ணறி வினாலும் மேன்மேல் உயர்ந்து, சில ஆண்டுகளில் ஒரு படைக்குத் தலைவனாய் ஏற்படுத்தப்பட்டான். அதன் பின்பு அவன் அரசர் பலர் மேல் எதிர்த்துச் சென்று, அவரையெல்லாம் பெரும் போரில் தோல்வியடையச் செய்து, கடைசியாக இணையற்ற போர் மறவன் என்னும் பெயர் ஐரோப்பா கண்டம் முழுதும் விளங்க, அரசர்க்கு அரசனாய் புகழ்பெற்று நிலவினான். முதலில் ஏழைமையான நிலையிலிருந்த இம்மன்னவன் இத்தனை உயர்ந்த நிலைமைக்கு வரலானது எதனால் என்று அறிவுடையோர் சிலர் ஆராய்ந்து பார்க்க, அவனை ஈன்ற அன்னையே அவன் அங்ஙனம் உயர்ந்த நிலைமையடைதற்குக் காரணமாயினாள் என்பது புலப்படலாயிற்று. அவனை அவள் தனது வயிற்றிற் சூல்கொண்டிருந்த போது, அவள் கற்றறிவுடையாளாயிருந்தமையின் ஆண்மையிற் சிறந்த போர் மறவன் ஒருவனது வரலாற்றைப் படித்து மிகுந்த மனக் கிளர்ச்சி உடையளாய் இருந்தனளாம். தான் படித்த அவ்வரலாற்றிற் போந்த போர் மறவனுடைய ஆண்மைச் செயல்களையும் நுட்ப அறிவின் திறமைகளையும் அவள் அடிக்கடி நினைந்து மகிழ்ந்து வரவே, அவள் வயிற்றிலிருந்த கருவும் அவளுடைய உயர்ந்த எண்ணங்கள் ஏறப்பெற்று மிகுந்த கிளர்ச்சியோடும் வளர்வதாயிற்று. இவ்வாறு கருவிலேயே தன் நினைவுகள் உருவேறப் பெற்றுப் பிறந்தமையாற், பிறகு அஃது இம்மாநிலத்தவரெல்லாம் வியக்கத்தக்க அரிய ஆண்மைச் செயல்களைப் புரிந்து மன்னர் மன்னனாய் விளங்கிற்று. இந்த இயல்பை உற்றுநோக்கும் நம் பெண்மணிகள் தாம் சூல்கொண்டிருக்குங் காலங்களில் எவ்வளவு நல்ல நினைவும், எவ்வளவு நல்ல அறிவும் உடையவர்களாக இருக்கப் பழகிக் கொள்ளல் வேண்டும் என்பதை அறிவார்களாக! கருக் கொண்டிருக்குங் காலத்திற் பிழைபட நடந்தால் அதனாற் பிள்ளைகள் சீர்கெட்டுப் போகின்றனர் என்பதற்கு உண்மையாக நடந்த சில நிகழ்ச்சிகளை இங்கு எடுத்துக் காட்டுவாம். ஒருகால் ஒரு பெண்மகள் தான் சூல்கொண்டிருந்த மூன்றாம் திங்களிற் ஒரு கரடிக் குட்டியைப் பார்த்துப் பெருந் திகில் அடைந்தாள். பின்னர் அக்கரு பிள்ளையாய்ப் பிறந்து பதினான்கு ஆண்டு உயிரோடிருந்தது. அப்பிள்ளை உயிரோடிருந்த காலமெல்லாங் கரடிக்குரிய குணமுஞ் செய்கையும் உடையதாயிருந்தது. மற்றொரு பெண்மகள் சூல்கொண்டிருந்தபோது ஒரு கிளிப்பிள்ளை யினால் அச்சுறுத்தப்பட்டாள். பின்னர் அவள் பெற்ற பெண் குழந்தையானது கிளிப்பிள்ளையின் குரலுஞ் செயலும் உடையதாயிற்று. மற்றொரு பெருமாட்டி தலை நசுங்கிப்போன ஓர் யாட்டுக்குட்டியைப் பார்த்து மனம் மருண்டாள். அவள் ஈன்ற மகவானது தலையின் இருபுறமும் நசுங்கி நெற்றி பிதுங்கி யிருந்தது. என்றாலும் அப்பிள்ளையின் அறிவு மட்டும் பழுதுபடாமல் விளங்கிற்றாம். சில ஆண்டுகளுக்கு முன், ஒரு கால், ஒரு கையுடன் ஒரு பெண்பிள்ளை பிறந்தாள். அப்பிள்ளையைப் பலருங் காணும் படி கண்காட்சிச் சாலையிற் கொண்டுவந்து வைத்தார்கள். இரண்டு திங்களாகக் கருக் கொண்டிருந்த ஒரு பெருமாட்டி அப் பிள்ளைகளைப் பார்க்க மிகுதியும் விரும்பினாள்; தன் விருப்பப்படியே அதனைப் போய்ப் பார்க்கையில், அவளுக்கு அது மிகவும் புதுமையாகத் தோன்றினமையால் அப்பிள்ளையின் வடிவத்தை அவள் நிரம்பவுங் கருத்தாய்ப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் நண்பர்கள் அவளை, அதனின்றுங் கட்டாயப் படுத்தித்தான் வீட்டுக்கு அழைத்துக் கொண்டு போனார்கள். பிறகு அப்பிள்ளையின் வேறுபட்ட வடிவம் அப்பெருமாட்டியின் உள்ளத்தில் மறக்கப்படாமற் பதியலாயிற்று. நாள் முழுவதும் அதைப்பற்றியே பேசி வந்தாள்; இரவிற் கனவிலும் அவ்வடிவத்தைப் போலவே தனக்கும் பிள்ளை பிறக்குமென்னும் நினைவு அவளுக்கு உண்டாயிற்று. பின்னர்ப் பத்து திங்களும் கழிந்து அவளுக்குப் பிள்ளை பிறந்தது; அப்பிள்ளை, ஐயோ! ஒரு காலோடும் ஒரு கையோடுங் கூடிய வேறுபட்ட வடிவம் வாய்ந்ததாய் இருந்தது. இவ்வாறே சூல் கொண்டிருக்குங் காலங்களில் தாயானவள் எண்ணிய எண்ணங்களும் நினைத்த நினைவுகளும் அவள் வயிற்றகத்தே உள்ள கருவில் எளிதாகப் பதிந்து விடுகின்றன. பெரும்பாலும் நம் பெண்மக்கள் வீண் பேச்சுகளையும் வீணான எண்ணங்களையும் எந்நேரமுங் கையாளுகின்றவர் களாய் இருத்தலால் இவர்களுக்குப் பிறக்கும் பிள்ளைகளும் இவர் களோடொத்த பலனற்ற தீய தன்மை உடையவர்களாகவும் அறியாமை உடையவர்களாகவும் இருக்கின்றார்கள்! பிள்ளைகளுக்குத் தந்தையின் இயற்கை சிறிதாகவுந் தாயின் இயற்கை பெரிதாகவும் பதிவது மேலெடுத்துக் காட்டிய நிகழ்ச்சிகளாற் செவ்வையாகப் புலப்படுதலால் தாய்மார் சூல் கொண்டிருக்குங் காலங்களில் தீய நினைவேனுந் தீய செயலேனுந் தம்மிடத் துண்டாவதற்குச் சிறிதும் இடந்தரலாகாது. இனிக், கருக் கொண்டிருக்கும்போது நல் நினைவும் நற்சொல்லும் நற்செயலும் உண்டாவதற்குச் சிறுபொழுது முதற்கொண்டே அந்நல்வழிகளிற் பழகும் பழக்கம் இன்றி யமையாததாய் இருத்தலிற், பெண்மக்கள் ஒவ்வொருவருந் தம் இளந்தைக் காலந்தொட்டே தக்கவர்களை அணுகிச் சிறந்த நூல்களைக் கற்றறிந்து தம்மறிவை வளர்த்துக் கொள்வதோடு பயன்படாத சொல்லும் பயன்படாத செயலும் தம்மிடத்தில் உண்டாகாதபடி நிரம்பவுங் கருத்தாய் நடந்து கொள்ளுதலும் வேண்டும். பெண் மக்களுக்குள்ளே வீணானவர்களுடன் பழகும் பழக்கத்தின் வழியே அவர்களுக்கு உள்ள வீணான தன்மைகள் எல்லாந் தமக்கும் படியுமாதலால், அவர்களுடன் கலந்து பழகாதபடி தம்மைப் பாதுகாத்துக் கொள்வதும் உயர்ந்த நிலைமையினையும் உயர்ந்த புதல்வர்களையும் பெற விரும்பும் பெண் மக்களுக்கு இன்றியமையாத கடமையாகும். சிறுபோது முதற் பழகும் பழக்கம் நல்லதாயிருந்தால், அப்பழக்கத்திற்கு ஏற்றபடி மங்கையர் தாம் கருக் கொண்டிருக்குங் காலங்களில் நல்வினையும் நற்சொல்லும் நற்செயலுமுடையராவர்; சிறுபோதிற் பழகிய பழக்கந் தீயதாயிருந்தால் அதற்கு இசையவே அவர் கருக் கொண்டிருக்குங் காலங்களிலுந் தீய நினைவுந் தீய சொல்லுந் தீய செயலும் உடையவர் ஆவார். சிறுபொழுதில் உண்டான பழக்கத்தைப் பிறகு இடையிலே மாற்றிக் கொள்வது எளிதிலே முடிவதன்று. இதைப்பற்றி முதலிலேயுஞ் சிறிது பேசியிருக்கின்றோம். முள் நிறைந்துள்ள உடை கருவேல் முதலான மரங்களை அவை சிறு செடிகளாய் இருக்கும்போதே களைந்தெறிவது எளிதிலே முடியும்; அங்ஙனம் அப்போது களையப்படாமல் விடப் பட்டால், அவை பருத்து வளர்ந்து பின்னர் எளிதிலே அகற்றப்படாதனவாய் இருந்து துன்பத்தைத் தரும் அல்லவோ? அதுபோலவே, சிறுபோதில் தீயபழக்கம் ஏறிவிட்டாற் கருக் கொண்டி ருக்கும் காலத்தில் அதனை எவ்வளவுதான் நீக்க முயன்றாலும் அது நீங்காதாய் வந்து தாயையும் பிள்ளையையும் ஒருங்கே கெடுத்து விடுமென்று திண்ணமாய் உணரல் வேண்டும். மற்று, ஒரு தோட்டத்திற் சிறு செடிகளாய் வைத்துப் பயிராக்கிய தென்னை மா பலா வாழை முதலியன காலஞ் செல்லச் செல்ல மிகப் பெரியனவாய் வளர்ந்து, மிகத் தித்திக்கும் பழங்களைத் தந்து உண்பார்க்கு உடம்பையும் வளர்த்து இன்பத்தையும் விளைத்தல் போலச் சிறுபொழுதிலே தாய்மார்க்கு உண்டான நற்பழக்க மானது அவர் கருக் கொண்டிருக்குங் காலத்தும் அவரைத் தூயராய் வைத்து அவர் ஈனும் மக்களையும் பெறுதற்கரிய அழியாச் செல்வங்களாக்கிப் பேரின்பத்தை விளைவிக்குமென்பதனை நாம் சொல்லுதலும் வேண்டுமோ? ஆக, இவ்வரும் பேருண்மையை நம்மிற் பெரும்பாலார் உணராமையினாலன்றோ தாம் கருக் கொண்டிருக்கும்போது பிழைபட நடந்து அதனால் தீய பிள்ளைகளைப் பெற்றுத் தம் வாழ்நாள் முழுதுந் துன்புற்றுப் பிறரையுந் துன்பத்திற்கு ஆளாக்குகின்றார்கள். ஆ! நம் பெண்மக்களின் பேதைமைச் செயல் நினைக்குந்தோறும் நம் உள்ளத்தை நீராய் உருக்குகின்றதே! நம் பெண்மக்களைப் பாதுகாத்து வரும் ஆண் மக்களாயினும் இவைகளையெல்லாம் எண்ணிப் பார்த்து அவைகளைச் சீர்திருத்துகின்றார்களாவென்றால், பெரும் பாலும் ஆண்மக்களுங் கல்வியறிவு இல்லாதவர்களாகவே யிருத்தலால் அவர்களும் அது செய்யமாட்டாதவர்களாகவே இருக்கின்றனர். இங்ஙனம் ஆண்பாலார் பெண்பாலார் இருவரும் அறியாமை என்னும் இருளிற் குடியிருப்பவர் களானால் நாமும் மக்களும் முன்னேறுவதெப்படி? சொல்லுங்கள் அறிஞர்களே! இனியேனும் இங்ஙனம் பராமுகமாயிராமல் ஆண் பெண் என்னும் இருதிறத்தாரும் உயர்ந்த நூல்களைக் கற்றும், கற்றறிவுடையார் சொல்லும் பொருளைக் கேட்டும் அவற்றின்படி நடந்து நல்ல மக்களைப் பெறுதற்கும், பெற்ற மக்களைச் சீர்திருத்தி வளர்த்தற்கும் நிரம்பவும் முயற்சி செய்தல் வேண்டும். எல்லாம் ஊழ்வினையால் ஆகும் என்றும், அவரவர் ஊழ் வினைக்குத் தக்கபடிதான் நல்ல பிள்ளைகளோ தீய பிள்ளைகளோ பிறப்பரல்லது நம்மாலாவது ஒன்று மில்லை யென்றுஞ் சொல்லிச் சோம்பேறிகளாய் வாழ்நாளை வீண் நாளாகக் கழிப்பது பெரிய பொல்லாங்கினைத் தரும். ஊழ்வினையால் வந்த நோயை நம் செயலால் நல்ல மருந்துண்டு தீர்த்துக் கொள்வதுபோலப் பழவினையால் நமக்கு நேர்ந்த துன்பங்களையுஞ் சிவபெருமானை எண்ணி முயன்று நாம் தீர்த்துக் கொள்ள வேண்டும். மார்க்கண்டேயர் தமக்கு ஏற்பட்ட பதினாறு ஆண்டைச் சிவபெருமான் திருவருட் டுணையால் என்றும் பதினாறாக ஆக்கிக் கொள்ளவில்லையா? ஆதலால், நாமுந் தீய நினைவுகளையுந் தீய செயல்களையும் விட்டு முழுமுதற் கடவுளான சிவபெருமானை இடைவிடாது தொழுது கொண்டும், எல்லா உயிர்களிடத்தும் அன்பும் இரக்கமும் உடையராய் நடந்தும், அறிவுடையோர் நூல்களை இடைவிடாது கற்றும், அவர் பொன்மொழிகளைக் கேட்டுந், தூய நினைவுந் தூய செயலும் உள்ளவர்களாய் ஒழுகி வருவோமாயின், உலகத்தாரால் நன்கு மதிக்கப்படும் நல்ல பிள்ளைகள் நமக்குப் பிறப்பார்களென்பது திண்ணம். பிள்ளைகள் நல்லவராவதற்குந், தீயவராதற்கும் நம் தாய்மார்களே முதன்மையான வழிகாட்டிகளாயிருத்தலால், அவர்கள் இக்கடமையின் பொருட்டாகவாவது நல்லறிவுடைய வர்களாய் நடக்க மிகவும் பழகிக் கொள்ளல் வேண்டும். தாய்மார் மிகவும் துன்புற்றுப் பிள்ளை பெறுதலும். பெற்ற பிள்ளை பலவகை நோய்களுக்கு இரையாகி மடிதலும், அங்ஙனம் மடியாது தப்பித்தவறிப் பிழைத்த பிள்ளைகளுந் தீயராய்ப் போதலும் எல்லாந் தாய்மார்களின் அறியாமையினாலும் தீய செய்கை யாலுஞ் சோம்பலாலும் விளையுந் துன்பங்களே யல்லாது வேறு இல்லையென்று என் அருமைத் தாய்மார்களே! நீங்கள் திண்ணமாய் நம்புங்கள்! நம் அருமைத் தாய்மார்கள் மட்டுங் கற்றறிவுடையவர்களாவும், நல்லன்பும் நல்லெண்ணமும் உடையவர்களாகவும் இருந்தால் இத்துன்பங்கள் தலைக் காட்டுமா? எல்லாரும் நல்லறிவுடையவராகவும் எல்லாரும் நல்லன்பும் நல்லெண்ணமும் நற்செய்கையும் உடையவராகவும் விளங்க, இந்நிலவுலகந் தேவர்கள் உறையும் வானுலகமேயாகி, இந்நில வாழ்க்கை தேவர்கள் வாழும் இன்ப வாழ்க்கையேயாகி, எல்லாம் இன்பமேயாய், எல்லாம் அன்பேயாய், எல்லாம் அருளேயாய் விளங்குமென்று உறுதியாய் நம்புங்கள்! நம் மக்களுக்குச் செய்ய வேண்டிய இப்பெருங் கடமையை நாம் வழுவாது செய்து வருவோமாயின், எல்லாம் வல்ல சிவபெருமான் நமக்கு அருள்புரிவது திண்ணமென்றும் உறுதியாய் நம்புங்கள்! ஓம் சிவம். 20. இந்தி* பொதுமொழியா? - 1937 இவ் இந்திய நாட்டின் வடக்கே பல ஊர்களிற் பலவகை மாறுதல்களுடன் பேசப்படும் இந்தி மொழியை, இவ்விந்தியநாடு முழுதுமுள்ள மக்கள் எல்லாரும் பயின்று, அதனையே பொதுமொழியாக வழங்கிவரல் வேண்டு மென்று, இந்நாட்டின் நன்மைக்காக உழைக்கும் வடநாட்டறிஞர் பலரும் தென்னாட்டறிஞர் சிலரும் பேசியும் எழுதியும் வருவதுடன், ஆங்காங்கு இந்திமொழிப் பள்ளிக்கூடங்களுந் திறப்பித்து நடத்தி வருகின்றார்கள். ஒரு நாட்டிலுள்ளார் நன்மைக்கென்று செய்ய எடுத்த ஒரு செயல், அந்நாட்டிலுள்ளார்க்கு நன்மை செய்யத்தக்க நலனும் ஆற்றலும் உடையதுதானா? அந்நாட்டவர் எத்தகைய நிலைமையில் இருக்கின்றனர்? அஃது அவர்க்கு எவ்வகையான நன்மையைச் செய்யும்? என முதலில் ஆராய்ந்து பார்த்துப், பின்னர் அதனைச் செய்தலே, உண்மையான அறிவும் உண்மையான தேயத்தொண்டும் வாய்ந்தார்க்கு இன்றியமையாத கடமையாம். ஆகையால், இந்திமொழி நம் நாட்டவர்க்கு நன்மை செய்யத்தக்க நலனும் ஆற்றலும் உடையதுதானா என்பதனை முதற்கண் ஆராய்வாம். பழைய நாகரிக மொழிகள் மக்களுள் ஒருவர் தமது கருத்தைப் பிறர் ஒருவர்க்கு இடர்ப்படாது தெரிவித்துக்கொள்ளுதற்குக் கருவியாயுதவுவதே ஒரு மொழியின் முதற்பயனாகும். இந்நிலவுலகத்தின் பலபிரிவுகளில் உள்ள பல்வகை மக்கட் பகுப்பினருந் தாந்தாங்கருதியவைகளைத் தம்மொடு தொடர்புடை யார்க்கு அறிவித்தற் பொருட்டு வழங்கிவரும் மொழிகள் தொள்ளாயிரத்துத் தொண்ணூற்றொன்பஃது என்று மொழியாராய்ச்சிவல்ல அறிஞர்கள் கணக்கெடுத்திருக்கின்றார்கள். இங்ஙனம் ஒன்று குறையத் தோன்றிய ஆயிர மொழிகளிற், சிற்சிலவே பேசவும் எழுதவும் படுவன; அவற்றுள்ளும் ஒரு சிலவே இலக்கண இலக்கிய நூல்கள் உடையன; அவற் றுள்ளும் மிகச்சிலவே மிகப் பழைய மொழிகளாய் உள்ளன. இம்மூவகை நலங்களும் வாய்ந்தவை; தமிழ், எகுபதியம், சாலடியம், ஈபுரு, சீனம், மெகுசிகம், ஆரியம், கிரேக்கம், இலத்தீன், அராபி முதலிய சிற்சில மொழிகளேயாகும். இவை பண்டிருந்த நாகரிக மக்களாற் பேசவும் எழுதவும் பட்டதுடன், சிறந்த பல இலக்கண இலக்கிய நூல்களும் வாய்ந்தன வாய், எக்காலத்துந் தம்மைப் பயில்வார்க்கு அறிவையும் இன்பத்தையும் மேன்மேற் பெருக்கும் பெரும் பயனும் வாய்ந்த விழுமிய மொழிகளாகும். என்றாலும், இம்மிகப் பழைய மொழிகளில் தமிழ் ஒன்றைத்தவிர, மற்றையவெல்லாம் இஞ்ஞான்றுள்ள எந்த மக்கட் குழுவினராலும் பேசப் படாமல் இறந்தே போய்விட்டன. ஆகவே, இறந்த அப் பண்டைமொழிகளைப் பயில்வது, அவற்றின்கட் பண்டை ஆசிரியர்கள் இயற்றிவைத்த அரிய நூல்களைக் கற்றுப் பல பழம்பொருள்களையும் பல நுண்பொருள்களையும் அறிந்து அறிவு பெறுதற்குதவிசெய்யுமே யல்லாமல், இஞ்ஞான்றுள்ள எந்த மக்கட் கூட்டத்துடனுங் கலந்துபேசி உறவாடி வாழ்க்கை செலுத்துதற்கு அது சிறிதும் உதவி செய்யாது. தமிழும் புதுமொழிகளும் ஆனால், நமதருமைச் செந்தமிழ் மொழியோ மிகப் பழைய காலத்தேயிருந்து இன்றுகாறும் இனிவருங்காலத்தும் பலகோடி மக்களால் இந்தியா, இலங்கை, பர்மா, மலாய்நாடு, தென்னாப்பிரிக்கா முதலான பற்பல நாடுகளிலும் பேசவும் எழுதவும் பட்டு வழங்கிவருந் தனிப்பெரும் பண்டை உயிருடைமொழி ஒன்றேயாய் விளங்கி நிலவுவது; இலக்கண நூல்கள் ஒழுக்க நூல்கள் அறநூல்கள் பொருள்நூல்கள் காவியநூல்கள் கதை நூல்கள் கணக்குநூல்கள் வான்நூல்கள் மருத்து நூல்கள் உரைநூல்கள் அறிவுநூல்கள் கடவுள் நூல்கள் முதலாக மக்களின் இம்மை மறுமை வாழ்க்கைத் துறைகள் எல்லாவற்றையும் நன்கு விளக்கும் எல்லாவகையான நூல்களும் முன்னும் பின்னும் இருந்த சான்றோரால் நிரம்ப எழுதப்பெற்ற பெருவளம் வாய்ந்ததாயும் இன்னும் வருங்காலத்தில் அவ்வளம் மேன்மேற் பெருகப் பெறுவதாயுந் துலங்குவது; இப்போது உலகம் எங்கணும் வழங்கப்பெறும் மற்றை எல்லா மொழிகளுமோ தமிழுக்கு மிகமிகப் பிற்பட்ட காலத்தே அஃதாவது இற்றைக்கு ஐந்நூறு அல்லது அறுநூறு ஆண்டுகளுக்குள்ளாகவே தோன்றி, அவற்றுள்ளுஞ் சிலவே இருநூறு முந்நூறு ஆண்டுகளாக இயற்றப்பட்டுவரும் இலக்கண இலக்கியக் கலைநூல்களை உடையனவாய் உலவுகின்றன. அதனால், இப்புதுமொழிகளின் புதுச்சிறப்புத் தமிழ்மொழியின் பழஞ்சிறப்புக்கு எட்டுணையும் ஒவ்வாததாயிருக்கின்றது. ஆதலால், தமது பழம்பெருஞ் சிறப்பினைச் சிறிதும் உணர்ந்து பாராது அயலவரது புதுச்சிறப்பினைக் கண்டு மயங்கி அவர் வழிப்படுவதில் தலைகால் தெரியாமற் றடுமாறி நிற்கும் நம் இஞ்ஞான்றைத் தமிழ்மக்கள், தமது தாய்மொழியாகிய தமிழுக்குப் பண்டு தொட்டுள்ள ஏற்றத்தை ஆய்ந்தோய்ந்து பார்த்துத் தக்கது செய்யக் கடவராக! இந்தியர் தாய்மொழி கல்லாதவர் முன்னமே காட்டியபடி இத்தென்னாடு எங்கணுந் தமிழ்மொழி பேசும் மாந்தர்களே பெரும்பாலும் நிரம்பியிருக்கின்றனர். இவர்கள் எல்லாருந் தாம் பிறந்த நாள் தொட்டுத் தமிழைப்பேசித் தமிழிலேயே வாழ்க்கை செலுத்து கின்றவர்களாய் இருந்தாலுந், தமிழைப் பிழையின்றி எழுதவோ, தமிழிலுள்ள அளவற்ற நூல்களிற் சிலவற்றையாவது கற்றுத்தெளியவோ தெரியாதவர்கள்; தமது தாய்மொழியாயிற்றே என நினைந்து அதன் பொருட்டாகவாவது அதனைக் கற்கும் விருப்பமேனும் அவர்க்கு உளதோ வென்றால் அது தானுந் தினையளவும் இல்லை. கோடிக் கணக்கான இத்தமிழ் மக்களுள் ஆயிரவரில் ஒருவர்க்குக் கூடத் தமது பெயரை எழுதிக் கையெழுத்துச் செய்யத் தெரியாதென்றாற், கல்வியறிவில்லா இவ்வேழை மக்களின் இரங்கத்தக்க இன்னாநிலையைப்பற்றி வேறு சொல்ல வேண்டுவது யாது உளது? ஆங்கில அரசு இந்நாட்டுக்கு வந்தபின், ஆங்கில மொழி கற்பிக்கும் பள்ளிக்கூடங்களும் கல்லூரிகளும் இத்தென்னாடு வடநாடு எங்கணும் ஆயிரக்கணக்காகத் திறப்பிக்கப்பட்டு, ஆங்கிலமும் அதனுடன் சேர்த்துத் தமிழ் முதலான அவ்வத்தேய மொழிகளும் நம் இந்து மக்கட்குக் கற்பிக்கப்பட்டு வருகின்றன. ஆயினும், பொருள் வருவாய்க்குந் தற்பெருமை வாழ்க்கைக்குங் கருவியாய் இருத்தல்பற்றி, ஆங்கிலமொழியைப் பெருந்தொகையினரான நம்மக்கள் பெரும்பொருட் செலவு செய்து விரும்பிக் கற்பதுபோல, ஆங்கிலத் துடன் சேர்ந்து ஒருநாளில் ஒரு சிறிது நேரமே கற்பிக்கப்படுந் தமிழ் முதலான நாட்டுமொழிகளை விரும்பிக் கற்பார் ஒரு சிலரையேனும் எங்குங் காண்கிலேம். அதனால், ஆங்கிலப்பள்ளிக்கூடங்கள் கல்லூரிகளிற் கற்றுத் தேறிவரும் மாணாக்கர்கள் தமிழ் முதலான நாட்டுமொழிகளிற் பிழையின்றி எழுதவும் பேசவும் வன்மையில்லாதவர்களாகவும், நாட்டு மொழிகளில் உள்ள நூல்களிற் சிறந்த பயிற்சியில்லாதவர்களாகவும் அதனால், தாம் ஆங்கிலத்திற் கற்றறிந்த அரிய நூற்பொருள்களை ஆங்கிலந் தெரியாத தம் இனத்தார்க்குந் தம் நாட்டார்க்கும் எடுத்துச்சொல்ல மாட்டாதவர்களாகவுந் தம் வயிறு கழுவும் வெற்றுயிர் வாழ்க்கையிலேயே வாணாட் கழித்து வருகின்றனர். ஆகவே, ஆங்கிலக் கல்விக்கழகங்களிற் கல்வி பயின்று வெளிவரும் நம் இந்திய மக்களிற் பெரும்பாலார் பொருள் வருவாய்க்கு வேண்டுமளவு சிறிது ஆங்கிலம் பயின்ற வராயும், அதனொடு சேர்த்துச் சிறிதே கற்பிக்கப்பட்ட தமிழ் முதலான மொழிகளைத் தப்புந் தவறுமாய் பேச எழுதத் தெரிந்தவராயும் வெறும் போலி வாழ்க்கையிற் சில்லாண்டுகளே உயிர்வாழ்ந் தொழிதலால், இந்நாட்டின்கட் பெருந்தொகையினராய் வெற்றுயிர் வாழ்க்கை செலுத்துங் கல்லாமாந்தர்க்குந், தமிழ் முதலான நாட்டுமொழிகளை வருந்திக்கற்றும் வறியராய்க் கார்த்திகைப்பிறைபோல் ஆங்காங்கு சிதறிச் சிற்சிலராய்க் காலங்கழிக்குந் தாய்மொழி கற்ற மாந்தர்க்கும் ஆங்கிலங் கற்றவரால் மிகுதியான பயன் ஏதும் விளைகின்றிலது. இங்ஙனமாகத், தமிழ் முதலிய தாய்மொழிப் பயிற்சிக்கென்று தனிப் பள்ளிக்கூடங்களுந் தனிக் கல்லூரிகளும் இல்லாமை யால், பொருள் வருவாய் ஒன்றனையே கருதி நாடெங்கு முள்ள ஆங்கிலக் கல்விக் கழகங்களில் ஆங்கிலத்தையே விரும்பிக் கற்று, அதனுடன் சேர்த்துப் பயின்ற தாய்மொழிப் பயிற்சியில் விருப்பமுந் தேர்ச்சியுமில்லாமல், அவையில்லாமையால் தம் நாட்டவரைக் கல்வியறிவில் மேலேற்றும் எண்ணமுஞ் சிறிதுமே யில்லாதார் தொகையே பெருகிவரும் இந்நாளில், இத்தமிழ்நாட்டிலும், பிறமொழி பேசும் பிற நாடுகளிலும் அயல்மொழியான இந்திமொழிப் பயிற்சியை நுழைத்தால் அதனாற் பயன் விளையுமோ என்பதனை அறிஞர்கள் ஆழ்ந்தாராய்ந்து பார்த்தல் வேண்டும். ஆங்கிலம்போல் இந்தியும் அயல்மொழியே இப்போது, அயல்மொழியான ஆங்கிலத்தைக் கற்றார் தொகை இந்நாட்டில் மிகுதியாயிருந்தும், அவரால் இந்நாட்டுக் கல்லாமாந்தர்க்குந் தாய்மொழி கற்றார் சிலர்க்கும் ஏதொரு பெரும்பயனும் விளையாதிருக்க, ஆங்கிலத்தை யொப்பவே அயல் மொழியான இந்தியை மட்டும் இனி நம்மவரிற் சிலர் கற்று வந்தாற் பெருங்கூட்டத்தினரான நம் ஏழை மக்கட்கு அவரால் நன்மை உண்டாகிவிடுமோ? ஆங்கிலங் கற்றவர் அம்மொழியைப் பேசினால் அதன் பொருளை யறியாமல் நம் ஏழைமக்கள் திகைத்து விழிப்பது போலவே, இந்தி மொழியைக் கற்றவர் நம்மக்களிடையே இந்தியிற் பேசினால் அவர் அதன் பொருளையறியாமல் திகைத்து விழிப்பரென்பதை நாஞ் சொல்லுதலும் வேண்டுமோ? ஆகவே, இவ்விந்திய தேயத்திற் பலநாடுகளில் பல வேறுமொழிகளைப் பேசுவாரான பல்வேறு மக்கட் குழுவினர்க் கும் உண்மையாகவே நன்மை செய்யும் எண்ணமும் நன் முயற்சியும் உடைய தொண்டர்கள் இருந்தால், அவர் அவ் வந்நாட்டினருந் தாந்தாம் பேசும் தாய்மொழியையே நன்கு பயின்று அதன் வாயிலாக இம்மை மறுமை வாழ்க்கைக்குரிய பல துறைகளிலும் நல்லறிவுபெற்று முன்னேற்றம் அடையும்படி உதவி செய்தல் வேண்டும். இங்ஙனஞ் செய்வதை விட்டுத், தந் தாய்மொழியையே கல்லாத பேதைகளாய் வறுமையில் வருந்திக் காலங்கழிக்கும் நம் எளிய மக்களுக்கு, அவர் சிறிதும் அறியாத இந்திமொழியைக் கட்டாயப் பயிற்சியாக வைக்கப் பெரிது முயல்வது, உமிக்குற்றிக் கைசலிப்பதாய் முடியுமே யல்லாது, அதனால் ஒரு சிறுபயன்றானும் விளையமாட்டாது. அற்றன்று, இவ்விந்தியதேயத்தின் பற்பல நாடுகளிலும் உயிர்வாழும் மாந்தர்கள் பற்பல மொழிகளைப் பேசுவாராய் இருத்தலின், இந்நாட்டவ ரெல்லாரும் ஒரு பொதுநன்மையின் பொருட்டு ஒருங்கு கூடிப் பேச வேண்டிய காலங்களில் இந்தியை அவரெல்லாரும் பொதுமொழியாய் கையாளு தலே நன்று; ஏனென்றால், இத்தென்னாட்டவரைவிட வடநாட்டவர் தொகையே மிகுதியாயுள்ளது; அவ்வாறு மிகுதி யாயுள்ள வடநாட்டவரிற் பெரும்பாலோர் இந்திமொழியையே பேசுதலின், அவரோடொப்பத் தென் னாட்டவரனைவரும் இந்திமொழியைக் கற்றுப் பேசுதலே நன்மைக் கிடமாகுமென்று தேயத்தொண்டர் சிலர் கூறுகின்றனர். இவரது கூற்றுப் பொருந்தா தென்பது காட்டுவாம். இந்தி பொதுமொழி யன்று இந்தி மொழியானது வடநாட்டவரெல்லாராலும் பொதுமொழியாக வைத்துப் பேசப்படுகின்றதென்பது உண்மையாகாது. ஏனென்றால், அது வடக்கே பற்பல நாடுகளிற் பற்பல மாறுதல்களோடு பேசப்படுகின்றதே யல்லாமல், அஃதெங்கும் ஒரேவகையாகப் பேசப்படவில்லை. அங்கே ஒரு நாட்டவர் பேசும் இந்தியை, அதற்கடுத்த நாட்டிலுள்ளார் தெரிந்துகொள்ள மாட்டாதவராயிருக்கின்றனர். இங்ஙனம் பலவகை மாறுதல்களுடன் பேசப்படும் இந்தி மொழியை ஆராய்ச்சி செய்த ஆசிரியர்கள் அதனை மேல்நாட்டு இந்தி, கீழ்நாட்டு இந்தி, பிகாரி என்னும் மூன்று பெரும் பிரிவுகளாகவும் அப்பெரும் பிரிவுகளினுள்ளே இன்னும் பல சிறு பிரிவுகளாகவும் பகுத்திருக்கின்றனர். கங்கையாற்றுக்கு மேற்கே பஞ்சாப்பின் தென்கிழக்கில் மேட்டுப் பாங்கான ஊர்களிற் பேசப்படுவது பாங்காரு எனவும், வடமதுரையிலும் அதனைச் சூழ்ந்த இடங்களிலும் பேசப்படுவது, பிரஜ்பாஷா எனவும், கங்கைக்கும் யமுனையாற்றுக்கும் இடையேயுள்ள நாடுகளின் தெற்கிற் பேசப்படுவது கனோஜ் எனவும், பந்தல்கண்டிலம் நருமதையாற்றை யடுத்த இடங்களிலும் பேசப்படுவது பந்தேலி எனவுந், தில்லி நகரத்திலும் அதனைச் சூழ்ந்த ஊர்களிலும் பேசப்படுவது உருது எனவும் வழங்கப்படுகின்றன. இவ்வாறு இந்தியாவின் வடமேற் பகுதிகளிற் பேசப்படும் இவ்வைந்து மொழிகளும் மேல்நாட்டு இந்தி என்னும் பெரும் பிரிவில் அடங்குவனவாகும். இனிக், கீழ்நாட்டு இந்தி என்னும் பெரும் பிரிவில் அடங்குவன: அவதி, பகேலி, சத்தீகரி என்னும் மொழிகளாகும். இம்மூன்று மொழிகளுள்ளும் அவதி என்பதே முதன்மையுடையதாய் அயோத்தி நாட்டின்கண் வழங்குகின்றது. இனிப், பிகாரி என்னும் பெரும் பிரிவில் அடங்குவன: மைதிலி, போஜ்புரி, மககி என்னும் மொழிகளாகும். இம்மூன்றனுள் முதன்மை வாய்ந்தது, கங்கையாற்றின் வடக்கே மிதிலைநாட்டில் வழங்கும் மைதிலி என்னும் மொழியேயாகும். இப்போது இந்திமொழி நூல்களென வழங்கப்படு வனவெல்லாம் இந்த மைதிலி மொழியிலேதான் எழுதப்பட்டிருக்கின்றன. இன்னும் இந்திமொழியின் பிரிவுகளாக ஆங்காங்கு வடநாட்டின்கட் பேசப்படுஞ் சிறு சிறு மொழிகள் மேலும் பற்பல உள. இவ்வாறு இந்திமொழியின் பல பிரிவுகளாக வழங்கும் பற்பல மொழிகளைப் பேசும் பற்பல நாடுகளில் உள்ளாரும், ஒருநாட்டவர் மொழியை மற்ற நாட்டவர் அறியாராய் உயிர் வாழ்ந்து வருதலின், இந்தி அவரெல்லார்க்குந் தெரிந்த பொதுமொழி என்றுரைப்பாருரை எங்ஙனம் பொருந்தும்? எங்ஙனம் உண்மையாகும்? இங்ஙனம் பற்பல நாடுகளிற் பற்பல மாறுதல்களுடன் வழங்கும் பல்வேறு இந்தி மொழிகளில் எதனை இத்தென்னாட்டவர் கற்றுத் தேர்வது? எதனை இவர் கற்றாலும் அதனுதவி கொண்டு இவர் வடநாட்டவரெல்லாரோடும் பேசுதல் இயலுமா? இயலாதே. மேற்குறித்த இந்திமொழிகளே யன்றிச், சிந்தி, லந்தி, பஞ்சாபி, குஜராத்தி, ராஜபுதானி, குமோனி, கடுவாலி, நேபாலி, உரியா, பங்காளி, மராட்டி, சிணா, காமீரி, கோகிதானி, சித்ராலி, திராகி, பஷை, கலாஷா, கவர்படி முதலான இன்னும் எத்தனையோ பலமொழிகளும் வடக்கே பற்பல நாட்டின்கணுள்ள பற்பல மாந்தர்களாலும் பேசப்பட்டு வருகின்றன. இம்மக்கட் பெருங் கூட்டத்துடனெல்லாம், இந்திமொழியில் ஒன்றை மட்டும் தெரிந்த தென்னாட்டவர் உரையாடி அளவளாவுதல் கூடுமோ? சிறிதுங் கூடாதே. வடநாட்டவரிலேயே இந்திமொழியை அறியாமற் பலதிறப்பட்ட பன்மொழிகளை வழங்கும் மக்கட் கூட்டம் பலவாயிருக்க, இத்தென்னாட்டவர் மட்டும் இந்திமொழியைக் கற்றுப் பேசுதலால் யாது பயன் விளைந்திடக் கூடும்? இவ்வியல்புகளை யெல்லாம் நடு நின்று எண்ணிப் பார்க்கவல்ல அறிஞர்க்கு, இத்தென்னாட்டவர்கள் தமக்கு எவ்வகையிலும் பயன்படாததுந் தெரியாததுமான இந்தி மொழிகளில் ஒன்றை வருந்திக் கற்றலால் வீண் காலக்கழிவும் வீண் உழைப்பும் வீண் செலவும் உண்டாகுமே யல்லாமல் வேறேதொரு நன்மையும் உண்டாகாதென்பது நன்கு விளங்கும். இனி, இத்தென்னாடு முழுதும், இலங்கை, பர்மா, மலாய்நாடு, தென்னாப்பிரிக்கா முதலான அயல்நாடுகளிலும் பெருந்தொகையினராய் இருக்குந் தமிழ் மக்கள் எல்லாரும் பேசுந் தமிழ்மொழி ஒரே தன்மையினதாய், இந்நாட்டவ ரெல்லாரும் ஒருவரோ டொருவர் உரையாடி அளவளாவுதற் கிசைந்த ஒரே நிலையினதாய் வழங்கா நிற்க, வடநாட்டின்கட் பேசப்படும் இந்தி, உருது முதலான மொழிகளும் அவற்றின் உட்பிரிவான பல சிறு சிறு மொழிகளும் பலப் பல மாறுதல்கள் வாய்ந்தனவாய், ஒருவர் பேசுவது மற்றொருவர்க்குப் புலனாகாதபடி திரிபுற்றுக் கிடப்பது ஏனென்றால், அவ்விருவேறியல்புகளையுஞ் சிறிது விளக்குவாம். தமிழ்மொழி பேசுந் தமிழ் மக்கள் விந்தியமலைக்குத் தெற்கேயுள்ள இத்தென்னாட்டிலும், இதற்குந் தெற்கேயிருந்து பல்லாயிர ஆண்டுகளுக்கு முன்னே கடலுள் அமிழ்ந்திப் போன குமரிநாட்டிலும் நாகரிகத்திற் சிறந் தோங்கிய வாழ்க்கையில் இருந்தவர்கள். இற்றைக்கு ஐயாயிர ஆண்டுகளுக்கு முன்னே தொட்டுத் தமிழ் மொழியை நன்குகற்ற ஆசிரியர்கள் முதுகுருகு, முதுநாரை, களரியாவிரை, பெரும்பரிபாடல், தொல்காப்பியம், பெருங் கலித்தொகை, குருகு, வெண்டாளி, வியாழமாலை, முத்தொள்ளாயிரம், நற்றிணை, நெடுந்தொகை, அகநானூறு, புறநானூறு, ஐங்குறுநூறு, குறுந்தொகை, சிற்றிசை, பேரிசை, பதிற்றுப்பத்து, எழுபதுபரிபாடல், குறுங்கலி, திருக்குறள், சிலப்பதிகாரம், மணிமேகலை, திருவாசகம், திருக்கோவையார், சீவகசிந்தாமணி, திருத்தொண்டர் புராணம், சிவஞானபோதம் முதலான அரும் பெருந் தமிழ் இலக்கண இலக்கிய வீட்டு நூல்களும், அவை தமக்குச் சொற்பொருள் நுட்பமுஞ் சுவையும் மலிந்த சிற்றுரை பேருரைகளும் இயற்றித், தமிழை மாறா நாகரிக இளமை வளத்தில் இன்றுகாறும் இனிது வழங்கச் செய்துவருதலால், அதனை வழங்குந் தமிழ் மக்களெல்லாரும் ஒருவர் ஒருவர்க்கு நெடுந் தொலைவில் இருப்பினும் அதனாற் பேசியும் எழுதியும் அளவளாவி ஓரிடத்திலுள்ள ஒரே மக்களினம்போல் உயிர் வாழ்ந்து வருகின்றனர். இந்திமொழி வரலாறு மற்று, இந்தி, உருது முதலான வடநாட்டு மொழிகளோ தமிழைப்போற் பழைமையானவைகள் அல்ல; மகமதிய மதத்தவரான மொகலாய அரசர்கள் வட நாட்டின்மேற் படையெடுத்துப் போந்து, தில்லிப் பட்டினத்தைத் தலை நகராய்க் கைக்கொண்டு, அதன்கண், அரசு வீற்றிருக்கத் துவங்கிய பின்னரே அம்மொழிகள் தோன்றியனவாகும். மகமது கோரி என்னுந் துலுக்க மன்னன் வடநாட்டின்மேற் படையெடுத்துப் போந்து இந்திய அரசர்களை வென்று அதனைக் கைக்கொண்டது. கி.பி. 1175ஆம் ஆண்டின் கண்ணதாகும்; அஃதாவது இற்றைக்கு 762 ஆண்டுகட்கு முன்னதாகும். அதுமுதல் துலுக்கமன்னரது ஆட்சியானது நாளுக்கு நாள் வேரூன்றி வரலாயிற்று. கடைசியாக மகமது பின் துகலாக்கு என்னும் மன்னனால் கி.பி. 1340ஆம் ஆண்டில் துலுக்க அரசு தில்லிநகரில் நிலைபெற்றது. அக்காலத்தில் தில்லி நகரிலும், அதனைச் சூழ்ந்த இடங்களிலும் பிராகிருதச் சிதைவான ஒருமொழி வழங்கிக் கொண்டிருந்தது. அப்போது அது வெறும் பேச்சு வழக்கில் மட்டும் இருந்ததல்லாமல், நூல் வழக்கிற் சிறிதும் இல்லை. ஏனென்றால், அது நாகரிகமில்லா மக்களாற் பேசப்பட்டுப் பலப்பல மாறுதல்கள் அடைந்த வண்ணமாய் நடைபெற்று வந்ததனாலும், அறிவுடையோர் தோன்றி அம்மொழியைச் சீர்திருத்தி இலக்கண இலக்கிய நூல்களியற்றி எழுத்து வடிவில் அதனை நிலைப்படுத்தி வையாததனாலும் அதற்கு அந்நாளில் நூல்வழக்கு இலதாயிற்று. தில்லியில் துலுக்கரரசு நிலைபெற்றபின், அவர் கொணர்ந்த அராபி மொழி பாரசிகமொழிச் சொற்கள் அம்மொழியின்கண் ஏராளமாய் கலக்கப் பெற்று, அவரால் அஃது உருது எனவும் பெயர்பெறலாயிற்று. உருது என்னுஞ் சொல்லுக்குப் பொருள் பாசறை, பாடி அல்லது படைவீடு என்பதேயாகும். எனவே, துலுக்கமன்னர் தாங் கைக் கொண்ட நகரையடுத்து முன்னமே பேசப்பட்டுவந்த பிராகிருதச் சிதைவான ஒரு மொழியில், தாங்கொணர்ந்த அராபிச் சொற்கள் பாரசீகச் சொற்களையும் மிகக்கலந்து தமது பாசறையிருப்பின்கட் பேசிய கலவைமொழியே அவரது காலந்தொட்டு உருது மொழியெனப் பெயர் பெற்று நடைபெறலாயிற்று. இதனால் உருது என்பது துலுக்க மன்னரது படைவீட்டு மொழியாய் முதன் முதற்றோன்றி நடைபெற்ற வரலாறு நன்கு விளங்கா நிற்கும். அதன்பின், நூல்வழக்குடையதாய் இஞ்ஞான்றும் வழங்கும் இந்திமொழியானது லல்லுஜிலால் என்பவரால் உருது மொழியினின்றும் பிரித்துச் சீர்திருத்தஞ் செய்யப் பட்ட தொன்றாகும். இதற்குமுன் உள்ளதான பிராகிருதஞ் சிதைவு மொழியிற் கலந்த பாரசிக அராபிச் சொற்களை அறவேயொழித்துச், சமகிருத மொழிச் சொற்களை மிகுதியாய் எடுத்துச் சேர்த்து அவர் இந்தி மொழியைப் புதிதாய் உண்டாக்கினார். இங்ஙனம் அவரால் ஆக்கப்பட்ட இந்திமொழிக்கும், இதற்கு முன்னே தொட்டு நாகரிகமில்லா வடநாட்டு மக்களால் ஆங்காங்குப் பேசப்படும் பிராகிருதச் சிதைவான இந்தி மொழிக்கும் வேறுபாடு மிகுதியாய் இருக்கின்றது; அதற்குக் காரணம் என்னென்றால், முன்னையது வடசொற்கலப்பு நிரம்ப உடையதாயிருத்தலும், பின்னையது அஃதின்றிப் பிராகிருத மொழிகளின் சிதைவாயிருத்தலுமேயா மென்பதனை நன்கு நினைவிற் பதித்தல் வேண்டும். ஆகவே, வடசொற் கலப்பினால் ஆக்கப்பட்டுச் சிறிது காலமாக இப்போது நூல் வழக்கிற் கொணரப்பட்டிருக்கும். இந்தி மொழியை நம் தென்னாட்டவர் கற்றுத் தெரிந்து கொள்வ தனால், இவர்கள் வடநாட்டவ ரெல்லாருடனும் பேசி அளவளாவி விடக்கூடும் என்று சிலர் மடிகட்டி நின்று கூறுவது நம்மனோரை ஏமாற்றும் பொய்யுரையேயாம். இந்திமொழி நூல்கள் இனி, மேற்காட்டிய கலவைப் புதுமொழியான இந்தி யில் நூல்கள் உண்டான வரலாற்றைச் சிறிது விளக்குவாம். கி.பி. 1400ஆம் ஆண்டு முதல் 1470ஆம் ஆண்டு வரையில், அஃதாவது இற்றைக்கு 467 ஆண்டுகளுக்கு முன்னிருந்த இராமானந்தர் எனப் பெயரிய ஒரு துறவி, இராமனையே முழுமுதற் கடவுளாக வைத்து வழிபடல் வேண்டுமென வற்புறுத்திச் சொல்லி வடநாட்டின்கட் பல இடங்களிலும் இராம வணக்கத்தைப் பரவச் செய்து வந்தார். கல்வியறிவில்லா வடநாட்டுப் பொது மக்கட்கு, இராமன் தன் தந்தையின் கட்டளையால் அரசு துறந்து கானகம் ஏகி, அங்குந் தன் மனையாளைப் பறிகொடுத்து அடைந்த துயரக்கதை மிக்கதொரு மனவுருக்கத்தை யுண்டாக்கி, அவரையெல்லாம் எளிதிலே இராம வணக்கத் தின்பாற் படுப்பித்தது. இராமானந்தர் இராமன்மேற்பாடிய பாடல்கள் தாம் முதன்முதல் இந்தி மொழியில் உண்டானவை; அதனால் அவருடைய பாடல்கள் அடங்கிய இந்திமொழி நூல் ஆதிகிரந்தம் என வழங்கப் படுகின்றது. இனி, இராமானந்தர்க்குப் பின், அவர்தம் மாணாக் கருள் ஒருவரான கபீர்தாசர் என்பவர் இற்றைக்கு 430 ஆண்டுகளுக்கு முன் காசி நகரில் தோன்றினார். நெசவு தொழில் செய்யும் ஒரு மகமதிய குடும்பத்தில் இவர் பிறந்தவரென ஒரு சாராரும், ஒரு பார்ப்பனக் கைம்பெண்ணுக்கு இவர் பிள்ளையாய்ப் பிறந்து அவளாற் கைவிடப்பட்டுப் பிறகு நீரு எனப் பெயரிய ஒரு மகமதிய நெசவுகாரரால் இவர் எடுத்து வளர்க்கப்பட்டனரென மற்றொரு சாராருங் கூறுகின்றனர். இவருங், கடவுளை இராமன், அரி, கோவிந்தன், அல்லா என்னும் பெயர்களாற் பாடி வழுத்தினர். ஆனாலுங், கடவுள் பல பிறவிகள் (அவதாரங்கள்) எடுத்தாரெனக் கூறுவது அடாதென்றும், இறைவனைக் கல் செம்பு கட்டை வடிவில் வைத்து வணங்குதல் பெருங்குற்றமாகுமென்றும், இந்து சமயக் கிரியைகளுஞ் சடங்குகளும் பொருளற்ற புன்செயல்களாகு மென்றும் இவர் தம்முடைய பாடல்களில் மிகவுங் கடுமையாக மறுத்துப் பாடியிருக்கின்றார். இந்தி மொழியின் ஒரு பிரிவான அவதி மொழியில் இவருடைய பாடல்கள் பாடப்பட்டிருக் கின்றன. இந்தியின் மற்றொரு பிரிவான மைதிலி மொழியைக் கற்பவர்கள், அவதி மொழியில் இருக்குங் கபீர்தாசரின் பாடல்களை எளிதிலே அறிந்து கொள்ளல் இயலாது. தாம் இயற்றிய விப்ரமதீசி என்னுஞ் செய்யுள் நூலிற் கபீர்தாசர் பார்ப்பனருடைய கொள்கைகளை மிகு கடுமையுடன் தாக்கி மறுத்திருக்கின்றார். கபீர்தாசர் இந்திமொழியில் இயற்றிய செய்யுள் நூல்கள் பற்பல. இவர் இறந்தபின், இவர்தம் மாணாக்கர் இயற்றிய நூல்களும் இவரது பெயரால் வழங்கப்படுகின்றன. கபீர்தாசருடைய பாடல்கள் இந்தி மொழியில் உண்டான பிறகுதான், அதாவது சென்ற நானூறு ஆண்டுகளாகத் தாம் இந்தி மொழியின் ஒரு பிரிவுக்கு ஓர் ஏற்றமுண்டாயிற்று. இனிக், கபீர்தாசருக்குப் பின், அவர்தம் மாணாக்கரான நானாக் என்பவர் சீக்கிய மதத்தைப் பஞ்சாபு தேயத்தில் உண்டாக்கினர். இவருடைய பாடல்கள், பஞ்சாபியும் இந்தியுங் கலந்த ஒரு கலப்பு மொழியிற் பாடப்பட்டிருத்தலால், இந்தியைப் பயிலும் நம் நாட்டவர் இவருடைய பாடல்களையும் எளிதிலே அறிந்துகொள்ளல் இயலாது. இனி, இற்றைக்கு 480 ஆண்டுகளுக்கு முன், தர்பங்கா மாகாணத்தின் கண்ணதான பிசபி என்னும் ஊரில் வித்யாபதி தாகூர் என்னும் பெயர்பூண்ட வைணவர் ஒருவர் தோன்றிக், கிருஷ்ணமதத்தை உண்டாக்கி, அதனை வடகீழ் நாடுகளில் மிகவும் பரவச் செய்தனர். இந்தி மொழியின் மற்றொரு பிரிவான மைதிலி மொழியில் இவர், கண்ணனுக்கும் அவன் காதலி இராதைக்கும் இடையே நிகழ்ந்த காதல் நிகழ்ச்சிகளை விரித்துப் பல பாடல்களைப் பாடி யிருக்கின்றார். இப்பாடல்களையே பின்னர் பங்காளி மொழியிற் சைதன்யர் என்பார் மொழி பெயர்த்து, அவற்றை வங்காள தேயமெங்கும் பரவ வைத்தனர். இது கொண்டு, இந்திமொழி வங்காள தேயத்திலுள்ளார்க்குள் வழங்காமை அறியப்படுகின்ற தன்றோ? வடநாட்டிற் பெரும்பரப்பினதான வங்காள தேயத்தார்க்கே தெரியாததான இந்திமொழியைத் தென்னாட்டிலுள்ளவர்கள் பயின்றாலும், இவர்கள் வங்காள மக்களுடன் அதிற் பேசி உறவாட முடியாதன்றோ? இன்னும் இங்ஙனமே கபீர்தாசர் காலம் முதல் அஃதாவது சென்ற 500 ஆண்டுகளாக வடநாட்டின்கட்டோன்றி, இராமகிருஷ்ண வணக்கங்களை இந்தியின் உட்பிரிவான சிலமொழிகளில் உயர்த்துப் பாடி அவற்றை வடநாடுகளிற் பரவச் செய்த இந்திமொழிப் புலவர்களின் வரலாறுகளை யெல்லாம் எடுத்துரைக்கப் புகுந்தால் இக்கட்டுரை மிக விரியும். ஆதலால், இதுவரையிற் கூறியது கொண்டு, இந்திமொழியானது 500 ஆண்டுகளுக்கு முன் நூல்வழக்கில்லாமற், கல்வியறிவில்லா வடநாட்டு மக்களால் அந்நாட்டின் பலபகுதிகளிலும் பலவாறு திரித்துப் பேசப் பட்டு, ஒருபாலார் பேசும்மொழி மற்றொருபாலார்க்குத் தெரியாத வண்ணம் வழங்கினமையால், அஃது இஞ்ஞான்றுங்கூடப் பற்பல மொழிகளாகவே பிரிந்து வழங்குகின்றதென்பதும், அதனால் இந்தியை வடநாட்டவர் எல்லார்க்கும் பொதுமொழியெனக் கூறுவாருரை மெய்யாகா தென்பதும், ஆகவே இத்தென்னாட்டவர் இந்தியைப் பயிலுதலால் அதனுதவி கொண்டு வட நாட்டவரெல்லாரோடும் உரையாடி உறவாடல் இயலாதென்பதும் நன்கு விளங்கா நிற்கும். அஃதுண்மையே யாயினுங், கபீர்தாசர் முதலான புலவர்கள் பாடியிருக்கும் பாடல்களைப் படித்து இன்புறுதற்காவது, இந்திமொழிப் பயிற்சி உதவி செய்யுமன்றோவெனின்; தமிழ்மொழியிலுள்ள பழைய இலக்கியங்களைப் பயின்றறியாதார்க்கு, இந்திமொழிப் புலவர்கள் பாடிய பாட்டுகள் இனிக்கு மேனுங், கலித்தொகை, திருக்குறள், சிலப்பதிகாரம், மணிமேகலை, திருவாசகம், திருக்கோவையார், தேவாரம், பெரியபுராணம், சிவஞானபோதம் முதலிய ஒப்புயர்வில்லா நூல்களைப் பயின்று அவற்றின் அமிழ்தன்ன சுவையில் ஊறப்பெற்ற மெய்யறிவினார்க்கு, அவ்விந்திமொழிப் பாட்டுகள் இனியா. மேலும், வடநாட்டு இந்தி முதலான மொழிகளின் பாடல்களிற் பெரும்பாலான, நம் போற் பலபிறவிகள் எடுத்துழன்று இறந்துபோன சிற்றரசர்களான இராமன், கிருஷ்ணன், பலராமன், வசுதேவன் முதலானவர்களைக் கடவுளாக வைத்து உயர்த்துப் பாடியிருத்தலால், அவை பிறப்பு இறப்பு இல்லா முழுமுதற் கடவுளாகிய எல்லாம்வல்ல சிவத்தை மக்கள் அறிந்து வழிபட்டுத் தமது பிறவியைத் தூய்மை செய்து உய்தற்குதவி செய்யாமையோடு, அவை உண்மைச் சிவ வழிபாட்டை அவர் அடையவொட்டாமலுந் தடைசெய்து மக்கட் பிறவியைப் பாழாக்குகின்றன. மற்று, மேற்காட்டிய தமிழ் நூல்களோ மெய்யான ஒரு தெய்வம் சிவமேயாதலை விளங்கத் தெருட்டி மக்களுக்கு மெய்யறிவையும் மெய்யன்பையும் ஊட்டி, அவர் இம்மையிலும் மறுமையிலும் அழியாப் பேரின்பத்திற் றிளைத்திருக்குமாறு செய்து, அவரது பிறவியைப் புனித மாக்குந் திறத்தன. அதுவல்லாமலும், இந்தி முதலான வடநாட்டு மொழிகள், தமிழைப்போற் பழையன அல்லாமையாலும்; அவற்றை வழங்கும் மக்கள், பழைமைதொட்டு நாகரிக வாழ்க்கையில் வாழ்ந்த தமிழ் மக்களைப்போல், நாகரிகவாழ்வு வாயாதவர்களாகையாலும்; சென்ற 400 அல்லது 500 ஆண்டுகளாகத் தோன்றிய வடநாட்டுப் புலவர்கள் பலரும், பண்டுதொட்டுத் தனித்த பேரறிவு வாய்ந்த தமிழ்ப் பெரும் புலவர் போலாது, சமஸ்கிருத புராணப் பொய்க்கதைகளை நம்பி அவற்றின் வழிச்சென்ற மயக்க வறிவினராகையாலும்; உயிர்க்கொலை, ஊன் உணவு, கட்குடி, பல சிறுதெய்வ வணக்கம், பலசாதி வேற்றுமை முதலான பொல்லா ஒழுக்கங்களை அகத்தடக்கிய ஆரிய நூல்நெறிகளைத் தழுவிய வடவர், அவற்றை விலக்கி அருளொழுக்கத்தையும் ஒரே முழுமுதற்கடவுள் வணக்கத்தையும் வற்புறுத்தும் அருந்தமிழ் நூல் நெறிகளைத் தழுவாமையாலும்; அவருடைய மொழிகளையும் அவற்றின்கட் புதிது தோன்றிய நூல்களையும் நந்தமிழ் மக்கள் பயிலுதலால், இவர்கள் ஏதொரு நலனும் எய்தார் என்பது திண்ணம். இனி, இந்திமொழிகள் நாலுகோடி மக்களாற் பேசப் படுதலாகிய தொகை மிகுதியை வற்புறுத்திக் காட்டுவார்க்கு, வங்காளமொழி ஐந்துகோடி மக்களாலுந், தமிழுந் தமிழோடினமான மொழிகளும் ஆறுகோடி மக்களாலும் பேசப்படும் பெருந்தொகை எடுத்துக்காட்டப்படும். இந்தியைப் பொதுமொழியாக்கல் வேண்டுமென்று ஒரு சாரார் கூறுவரேல், அதனினும் பெருந்தொகையினரான மக்களாற் பேசப்படும் வங்காள மொழியைப் பொதுமொழி யாக்கல் வேண்டுமென்று வங்காளரும், இவ்விந்திய நாட்டின் நால் எல்லைவரையிலும் பரவியிருக்குந் திராவிட மக்கள் எல்லார்க்கும் முதன்மொழியாவதும், இந்தியாவின் மட்டுமே யன்றி இலங்கை, பர்மா, மலாய்நாடு, தென்னாப்பிரிக்கா முதலான நாடுகளிற் குடியேறி வாணிக வாழ்க்கையிற் சிறந்தாராயிருக்குந் தமிழ்மக்கள் அனைவராலும் வழங்கப் படுவதும் ஆன தமிழையே பொதுமொழியாகப் பயிலல் வேண்டுமென நந்தமிழ் மக்களும் வலியுறுத்துவரல்லரோ? தமிழைப் பொதுமொழியாக்குதலின் நன்மை இனி, இவ்விந்திய நாட்டுக்கு மிகப்பழைய மொழிகளாய், அஃதாவது இற்றைக்கு 5000 ஆண்டுகளுக்கு முன்னே தொட்டுப் பயிலப்படுஞ் சிறந்த நாகரிக மொழிகளாய் திகழ்வன தமிழுஞ் சமஸ்கிருதமும் என்னும் இரண்டேயாம். இவை யிரண்டனுட், சமஸ்கிருதம் பொதுமக்களாற் பேசப்படாமற் பல்லாயிரம் ஆண்டுகட்கு முன்னரே இறந்து போயிற்று. மற்றுத் தமிழ்மொழியோ ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னேதொட்டு இயல் இசை நாடக இலக்கணங்களும், மக்கள் வாழ்க்கையின் பல துறைகளிலும் அறிவை விளக்கி இன்பத்தை ஊட்டும் அரிய பெரிய பல இயற்றமிழ் இலக்கிய நூல்களும் ஆயிரக்கணக்காக உடையதாய், இன்றுகாறும் பலகோடி மக்களாற் பேசவும் எழுதவும் பயிற்சி செய்யவும் படும் உயிருடை நன்மொழியாய் உலவி வருகின்றது. தமிழிலுள்ள பழைய நூல்களெல்லாம் அருளொழுக்கத்தையும் ஒரே முழுமுதற் கடவுள் வணக்கத்தையும் அறிவுறுத்தி, உயிர்க்கொலை ஊனுணவு கட்குடி பல சிறுதெய்வ வணக்கம், பலசாதி வேற்றுமை முதலான தீயவொழுக்கங்களைக் கடிந்து விளக்குகின்றன. இத்தீய வினைகளைச் செய்யுமாறு ஏவிப் பொய்யும் புளுகும் புகலும் ஆரிய நூல்களைப் போல்வன பழந்தமிழில் ஒன்றுதானும் இல்லை; பிறந்து துன்புற்று இறந்தொழிந்த மக்களையெல்லாங் கடவுளாக்கி, அவர் செய்யாதவற்றைச் செய்தனவாகப் புனைந்துகட்டிப் பொய்யாய் உரைக்கும் வடமொழிப் புராண கதைகளைப் போல்வன பழந்தமிழில் ஒன்றுதானும் இல்லை. பழந் தமிழிலுள்ள நூல்களெல்லாம் உள்ளவற்றை உள்ளவாறே நுவல்வன; மக்கள் தம் மனமொழி மெய்களால் நினைப்பனவுஞ் சொல்வனவுஞ் செய்வனவுமெல்லாந் தூயனவாய் இருக்க வேண்டுமென்று வற்புறுத்துவன; மக்கள் வாழ்க்கையானது அன்பையும் அறத்தையும் இரண்டு கண்களாகக் கொண்டு, ஒரு தெய்வ வழிபாடாகிய உயிருடன் கூடி உலவ வேண்டுமென உயர்த்துக் கூறுவன. பிற்காலத்தில் வடசொற் கலப்பும் வடநூற் பொய்க் கொள்கைகளுங் கதைகளும் விரவிய மொழிபெயர்ப்பு நூல்கள் தமிழில் அளவின்றிப் பெருகித் தமிழ் மக்களை அறியாமையிலும் பொய்யிலும் பல தீவினைகளிலும் படுப்பித்திருந்தாலும், விழுமிய பண்டைத் தமிழ்நூற் பயிற்சியுஞ் சைவசித்தாந்த மெய்யுணர்வுந் திரும்பப் பரவத் துவங்கியபின், ஆரியப் பொய்ந்நூல் வலி தேய்ந்து வருகின்றது. அதனுடன் மேல்நாட்டு வெள்ளைக்கார மெய்யறிவினரின் அரிய பெரிய ஆராய்ச்சிகளும் ஆங்கில மொழிப் பயிற்சியின் வாயிலாக இவ்விந்திய நாடெங்கும் பரவி வருவதும் ஆரியநூற் பொய்ம்மை விரைந்து தேய்தற்குப் பெரிதுந் துணை செய்து வருகின்றது. இவைகளையெல்லாம் நடுநின்று நோக்கவல்ல உண்மைத் தேயத் தொண்டர்கள் உளராயின், இவ்விந்திய நாட்டுக்கு மிகப் பழைய மொழியாய் இருப்பதுடன், இன்றுகாறும் பல கோடி மக்களாற் பேசப்பட்டு வரும் உயிருடை மொழியாயும், இவ்விந்திய மக்களை எல்லாத் துறைகளிலும் மேலேற்றத் தக்க பல சீரிய நூல்களை உடையதாயும் உள்ள தமிழ்மொழியையே இவ்விந்திய தேயம் முழுமைக்கும் பொதுமொழியாக்க அவர் முன் வந்து முயலல் வேண்டும். மேலுந், தமிழ்மொழி வழங்குந் தமிழ் மக்கள் இத்தென்னாட்டின் மட்டுமேயன்றி நடு நாட்டின்கட் பங்களூர், மைசூர், சிகந்தராபாக்கம் முதலியவற்றிலும், மேற்கே புனா, பம்பாய் முதலிய இடங்களிலும், வடக்கே கல்கத்தா, காசி முதலான நகர்களிலுங், கிழக்கே காக்கிநாடா, நெல்லூர் முதலான ஊர்களிலும் பெருந்தொகையினராய்க் குடியேறியிருந்து வாணிக வாழ்க்கையிற் சிறந்து வாழ்கின்றனர். தமிழ் மக்கள் இவ்விந்திய தேயத்தின் மட்டுமேயன்றி, இதற்கு அப்பாலுள்ள எல்லாத் தேயங்களிலும் போய் வைகி வாழ்ந்து வருவதும் முன்னமே காட்டினாம். இங்ஙனம் எல்லா வகையாலுஞ் சிறந்த தமிழ்மொழி இவ்விந்தியநாடு முழுமைக்கும் பொதுமொழி யாதற்குரிய நலங்கள் எல்லாம் வாய்ந்ததாயிருந்தும், அதனைப் பொதுமொழியாக்க முயலாமல், நானூறு ஐந்நூறு ஆண்டுகளாகவே தோன்றியப் பழைய சிறந்த நூற்செல்வ மின்றி வறியனவாய் பலவகைக் குறைபாடுகள் உடையனவாய்ப் பெரும்பாலும் நாகரிகமில்லா வடவர்களாற் பேசப்படும் இந்தி முதலான சிதைவுக் கலப்பு மொழிகளை இத்தேயத்திற்குப் பொதுமொழியாக்க வேண்டு மென்று கூக்குரலிட்டு முயல்வோர் உண்மையான தொண்டர்களாவரா வென்பதனை அறிவுடையோர் ஆழ்ந்து நினைத்துப் பார்த்தல் வேண்டும். தமிழ் அல்லாத மொழிகள் வறியன புதியன இனித், தமிழ் அல்லாத மற்றை மொழிகள், தமிழுக்கு மிகப் பிற்பட்ட காலத்தே தோன்றித், தமக்கென இலக்கண இலக்கிய நூல்கள் இல்லாமற், பாரசிகம் அராபி சமஸ்கிருதம் முதலான பழைய மொழிகளிலுள்ள புராணங்கள் காவியங்கள் அவற்றின் கதைகளையே மொழிபெயர்த்துரைப் பனவுந் தழுவி யுரைப்பனவுமாதலைச் சிறிது விளக்குவாம். இந்தியின் உட்பிரிவான சில மொழிகளிற்றோன்றிய நூல்கள் இற்றைக்கு 500 ஆண்டுகளுக்குள் இயற்றப்பட்டனவாதலை மேலே விளக்கிக் காட்டினாம்; அந்நூல்களிற் சிறந்தனவாக வடவராற் கொள்ளப்படுவன கபீர்தாசர் இராமன்மேற் பாடிய பாடல்களும், இற்றைக்கு 314 ஆண்டுகளுக்கு முன்னிருந்த துளசிதாசர் இயற்றிய இராமசரிதமானசம் என்பதுமாகும். இனி, உருது மொழியென்பது சமஸ்கிருதக் கலப்பின்றி, மேற்கேயுள்ள பாரசிக அராபி மொழிச் சொற்கள் சொற்றொடர்கள் மிகுதியுங் கலக்கப் பெற்றதாய், அம்மொழிப் புலவர்களின் போக்கைப் பின்பற்றி நடை பெறுவதாகும். இற்றைக்கு 157 ஆண்டுகளுக்கு முன் ஔரங்கபாத்திலிருந்த சௌதா என்னும் புலவரே முதன் முதல் உருதுமொழியிற் செய்யுள் நூல் இயற்றி, அதனைப் பலரும் பயிலும்படி செய்தவராவர். இவர் பாடிய செய்யுட் களிற் பல நவாபு மன்னர்களைப் புகழ்ந்து பாடுவனவாயும், வேறு பல மகமது முனிவரையும் அவர் தம் உறவினரையுஞ் சிறப்பித்துரைப்பனவாயும், மற்றும் பல தம்மால் உவர்க்கப்பட்டவைகளைப் பழித்துக் கூறுவனவாயும் இருக்கின்றன. இப்புலவர் காலம் முதற்கொண்டே, அஃதாவது இற்றைக்கு 180 ஆண்டுகளாகவே உருது மொழி நூல் வழக்குடையதாகி நடைபெறும் வகை நினைவுகூரற்பாலதாகும். இனி, வடக்கே வங்காளத்திற் பெருந் தொகுதியினரான மக்களாற் பேசப்படுவதுஞ், சமஸ்கிருதச் சிதைவுகளான சொற்கள் மிகக் கலக்கப்பெற்றதுமான வங்காள மொழி, நூல் வழக்குடையதாகத் துவங்கியது. இற்றைக்கு 400ஆம் ஆண்டுகளுக்கு முன்னிருந்த காசீராம் என்னும் புலவர் வடமொழியிலுள்ள மகாபாரதத்தை வங்காள மொழியில் மொழிபெயர்த்துச் செய்த காலந்தொட்டேயாம். அவர்க்கு நெடுங்காலம் பின்னே தோன்றிய ராஜராம் மோகன்ராய் என்னும் அறிஞர் வங்காள மொழியுரை நடையிற் பல சிறந்த ஆராய்ச்சி நூல்களுஞ் சீர்திருத்த நூல்களும் வரைந்து வெளிப்படுத்திய பின்னே தான் வங்காள மொழி பெருஞ் சிறப்படைய லாயிற்று. ஆகவே, சென்ற 150 ஆண்டுகளாகத்தாம் வங்காள மொழி சீர்திருத்த முற்றுச் சிறக்கலா யிற்றென்பதை உணர்தல் வேண்டும். இன்னும், மராட்டி, குஜராத்தி முதலான மொழிகள், பாகதச் சிதைவுஞ் சமஸ்கிருதச் சிதைவுமான சொற்கள் சொற்றொடர்கள் நிரம்பக் கலக்கப்பெற்றுச் சிறுதொகையினரான மக்களாற் பேசப்பட்டு வருகின்றன. கி.பி. 13ஆம் நூற்றாண்டிலிருந்த நாமதேவ் என்பவர் தாம் முதன் முதல் மராட்டி மொழியிற் சில பதிகங்கள் இயற்றினவர். அவர் காலத்தும் அவர்க்குப் பிற்காலத்தும் வந்த திந்யா நோபா, ஏகநாத் ராம்தாஸ், மகீபதி முதலிய புலவர்கள் வடமொழியிலுள்ள பகவத்கீதை, விஷ்ணு புராணக்கதை, இராமன் கதை, சமயக் கிரியை, பக்த விஜயம், முதலானவை களைத் தழுவி நூல்களும் பாட்டுகளும் மராட்டி மொழியில் இயற்றினார்கள். என்றாலும், மராட்டி வேந்தனான சிவாஜி காலமுதற் கொண்டுதான், அஃதாவது சென்ற 300 ஆண்டுகளாகத் தாம் மராட்டி மொழி நூல் வழக்குடையதாகி நடைபெறுகின்ற தென்பது உணரற்பாற்று. குஜராத்தி மொழியில் முதன்முதற் சில பாடல்களைப் பாடினவர் இற்றைக்கு 450 ஆண்டுகளுக்கு முன்னிருந்த நரசிங்கமேதா என்பவரேயாவர். ஆனாலுங், கி.பி. 1681ஆம் ஆண்டில் அஃதாவது இற்றைக்கு 256 ஆண்டுகளுக்கு முன்னிருந்த ப்ரேமானந்தபட் என்பவரும், ரேவாசங்கர் என்பவரும் நரசிங்க மேகேதாநு, என்னும் நூலையும் மகாபாரதத்தையும் இயற்றிய பின்னர்தான் குஜராத்தி மொழிநூல் வழக்குடையதாயிற்று. இனி, இவ்விந்திய நாட்டின் தெற்கே வழங்கும் மொழி கள் அத்தனையுந் தமிழோடு இனமுடையவைகளாகும். அதனால், அவை திராவிடமொழிகள் என்று வழங்கப்படுகின்றன. அம்மொழிகள் எல்லாவற்றுள்ளும் நந்தமிழ் ஒன்றே சிறிதேறக்குறைய பத்தாயிர ஆண்டுகளாகச் சீர்திருத்தமுற்று, நுண்ணறிவு மிக்க சான்றோர்களால் இயற்றப்பட்ட இயல் இசை நாடக இலக்கணங்களும் ஆயிரக் கணக்கான பல்வேறு இலக்கியங்களும் உடையதாய், நூல் வழக்கும் உலக வழக்கும் வாய்ந்து நடைபெறுவதென்பதை முன்னரே விளக்கிக் காட்டினாம். இனி, ஏனைத் திராவிட மொழிகளுள் தமிழோடொத்த பழைமையுஞ் சிறப்புந் தனித்தியங்கும் ஆற்றலும் பழைய தனி இலக்கண இலக்கிய நூல்வளனும் உடையது ஏதுமேயில்லை. என்றாலுந், தமிழல்லாத மற்றைத் திராவிட மொழிகளை நோக்கக் கன்னட மொழி ஒன்றே சிறிதேறக்குறைய ஆயிர ஆண்டுகளாகச் சீர்திருத்தம் எய்தி நூல் வழக்குடையதாய் வழங்கா நிற்பது. இதனை முதலிற் சீர்திருத்தி வழங்கியவர்கள் சமண் சமயத்தினரும் அவரை அடுத்து அதன்கண் நூல்கள் இயற்றியவர்கள் வீரசைவ சமயத்தினரும் ஆவர். கன்னட மொழியில் முதன்முதல் நூல் இயற்றினவர் இற்றைக்கு 1060 ஆண்டுகளுக்கு முன் 63 ஆண்டுகள் அரசுபுரிந்த ராஷ்டரகூட மன்னனான நிருபதுங்கனது அவைக்களத்திருந்த ஸ்ரீவிஜயர் என்னும் புலவரேயாவர்; இவர் இயற்றிய நூல் கவிராஜ மார்க்கம் என்னும் பெயருடையது. பசவரைத் தலைவராய்க் கொண்ட வீரசைவ ஆசிரியர்களாற் பசவபுராணம் என்பது கி.பி. 1369ஆம் ஆண்டிலும், பத்மராஜ புராணம் என்பது கி.பி. 1385ஆம் ஆண்டிலும் ஆக்கப்பட்டன. இவ்விரு சமயத்தவர்க் கிடையே தோன்றிய வைணவ சமய ஆசிரியர்களாற் பாரதம், இராமாயணம், பாகவதம் முதலான பல நூல்கள் சமகிருதத்திலிருந்து மொழிபெயர்த்துச் செய்யப்பட்டன. ஆயிர ஆண்டுகளுக்கு முன்னே வழங்கிய கன்னட மொழி தனித்தமிழாயிருக்க, அதற்குப் பின்னே சைன வீரசைவ வைணவப் புலவர்களாற் கையாளப்பட்ட கன்னடமோ வடமொழிச்சொற்கள் சொற்றொடர்கள் கதைகள் நிரம்பக் கலக்கப் பெற்றுத் தன்றன்மையிழந்து வழங்குவதாயிருக்கின்றது. ஆனாற், பழைய தனிக்கன்னடத்தில் இயற்றப்பட்ட நூல் ஒன்றுதானும் இஞ்ஞான்று கிடைத்திலது. இனிக், கன்னடத்திற்கு அடுத்தபடியிற் பழைமை யுடையதாகக் கருதற்குரியது தெலுங்கு மொழியேயாகும். இம்மொழியை வழங்கினவர்கள் ஆந்திரர் எனப் பழைய இந்துதேய வரலாற்றின்கட் சொல்லப்படுகின்றனர். சாதவாகனர்க்குரிய ஆந்திரகுலமானது கி.மு. 180 ஆண்டிலேயே, அஃதாவது இற்றைக்கு 2117 ஆண்டுகளுக்கு முன்னரேயே வலிமையிற் சிறந்த அரசர்களையுடையதாயிருந்தது. அதன் அரசர்கள் கிருஷ்ண ஆற்றங்கரையில் உள்ள தான்யகடகம் அல்லது அமராவதி என்னும் நகரில் நிலையாயிருந்து அரசுபுரிந்தார்களென்பதும், இவர்கள் பௌத்த சமயத்தைத் தழுவியவர்களென்பதும்; இவர்களது அரசு கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் முடிவடைந்து போயிற்றென்பதும் இத்தேய வரலாற்று நூல்களால் அறியக்கிடக்கின்றன. அத்துணைச் சிறந்த அவ்வரசர்கள் அக்காலத்தே தெலுங்கு மொழியை வழங்கியிருந்தனராயின், அதன்கட் பல நூல்கள் எழுதப் பட்டிருக்க வேண்டும். ஆனால், அத்தகைய பழைய நூல்கள் எவையுந் தெலுங்கு மொழியிற் காணப்படாமையால் அவ்வாந்திர அரசர் காலத்தே தெலுங்குமொழி வழங்கவில்லை யென்பதே தேற்றமாம். அப்பழைய காலத்தே அவர் வழங்கிய மொழி தமிழே என்பது பழைய தமிழ்நூல் ஆராய்ச்சியாற் புலனாகின்றது. ஆய் என்னுந் தமிழ் வள்ளல் வேளிர் குடிக் குரியனாதல் பற்றி வேள் ஆய் எனவும், அண்டிர நாட்டின னாதல் பற்றி வாய்வாள் அண்டிரன் எனவும் புறநானூற்றுச் செய்யுட்கள் (133, 131) நுவல்கின்றன. அண்டிரம் என்னுஞ் சொல் ஆந்திரம் எனத் திரிந்ததோ, அல்லது ஆந்திரமே அண்டிரம் எனத் திரிந்ததோ, இதுதான் உண்மையென்பது இப்போது காட்டல் இயலவில்லை. அஃதெங்ஙனமாயினும் பழைய ஆந்திர அரசர்கள் வழங்கியதும் போற்றி வளர்த்ததுந் தமிழ் மொழியேயென்பது மட்டும் பழைய தமிழ் நூலாராய்ச்சியால் நன்கு புலனாகின்றது. இனி, இத்தென்றமிழ் நாட்டிலேயே பிறந்து வளர்ந்து, நாகரிகத்தின் மிகச்சிறந்து, தமது தமிழ் மொழியை இலக்கண இலக்கிய வளன் உடையதாக்கி, அதனை நிரம்பவுந் திருத்தமாக வழங்கிய பழைய தமிழ் மக்கட்கும், வடக்கே சென்று குடியேறிய பழைய தமிழர்க்கும் இடையே போக்கு வரவு நிகழாமையால் வடக்கே சென்று வைகியவர் நாகரிகம் இல்லாதவராக, அவர் வழங்கிய தமிழும் நூல் வழக்கில்ல தாய்ச் சொற்றிரிபு மிகவுடையதாகி, அதனாற் பிறிதொரு மொழிபோல் தெலுங்கு எனப் பிற்காலத்தே பிறிதொரு பெயர் பெற்று நடைபெறலாயிற்று. இற்றைக்கு 800-ஆண்டுகளுக்கு முன், அஃதாவது கி.பி. பதினொராவது நூற்றாண்டுக்கு முன், இயற்றப்பெற்ற ஒரு தெலுங்கு நூலாவது, ஆந்திர அரசர்களாற் பொறிப்பிக்கப்பட்ட ஒரு கல்வெட்டாவது, எவ்வளவோ நம் ஆங்கில அரசினர் தேடிப் பார்த்தும், இதுகாறும் அகப்படவில்லை. அதனால், 800-ஆண்டுகளுக்கு முன், தெலுங்கு மொழி சீர்திருத்தம் எய்தி நடைபெறவில்லை என்பது திண்ணமாய்ப் பெறப்படுகின்றது. கி.பி. 11ஆம் நூற்றாண்டிற் றோன்றிய நன்னயபட்டர் என்பார், கி.பி. 1022-முதல் 1063 வரையில் அரசுபுரிந்த சாளுக்கிய மன்னனான ராஜராஜ நரேந்திரன் செய்த வேண்டுகோளுக்கிணங்கி, வடமொழியிலுள்ள மகாபாரதத்தை ஆரணிய பருவம் வரையிலுந் தெலுங்கில் மொழிபெயர்த்தியற்றிய காலந்தொட்டே தெலுங்கு மொழி நூல் வழக்குடையதாயிற்று. நன்னயர் இயற்றிய மாபாரத தெலுங்கு மொழி பெயர்ப்பில் வடசொற்கள் இரண்டு பங்குந் தெலுங்குச் சொற்கள் ஒரு பங்குமே காணப்படுதலால், தெலுங்குமொழி அந்நாளிலேயே வடமொழியின் உதவியின்றித் தனித்தியங்கும் ஆற்றல் இல்லாததொன்றாய் நடைபெற்றமை தெற்றென விளங்கா நிற்கும். இனித், தமிழ்நாட்டை யடுத்துள்ள மேல்நாடுகளில் இப்போது வழங்கும் மலையாளமொழி, இற்றைக்கு முந்நூறாண்டுகளுக்குமுன் முழுதுந் தமிழாகவேயிருந்தது. ஆனால், அத்தமிழ், இத்தமிழ் நாட்டில் வழங்குஞ் செந்தமிழ் மொழியின் சொற்கள் திரிந்த கொச்சைத் தமிழாகும். என்றாலும், அத்திரிபுகளை நீக்கிப் பார்த்தால் மலையாளம் முற்றுந் தமிழ் மொழியாகவே காணப்படுகின்றது. மலையாள மொழியில் முதன் முதல் இராமாயணத்தை மொழிபெயர்த்துப் பாடியவர் கன்னச பணிக்கர் என்பவரேயாவர்; இவர் இற்றைக்கு 587 ஆண்டுகளுக்கு முன், அஃதாவது கி.பி. 1350ஆம் ஆண்டில் இருந்தவர். இவர் இயற்றிய இராமாயண மொழி பெயர்ப்பில், வடசொற்கள் சிற்சில மிக அருகி ஆங்காங்குக் காணப்படுகின்றன. இவர்க்குப் பின் மலையாள மொழியில் நூல் இயற்றினவர் கி.பி. 1550ஆம் ஆண்டில் இருந்த செருச்சேரி நம்பூதிரி என்பவரேயாவர். இவர் பார்ப்பனச் சாதியின ராயிருந்தும், இவர் தாம் இயற்றிய கிருஷ்ணகதா என்னும் நூலைப் பெரும்பாலும் வடசொற் கலவாத் தனி மலையாள மொழியில் ஆக்கியிருப்பது மிகவும் பாராட்டற் பாலதாய் இருக்கின்றது. இவர்க்குப் பின் கி.பி. 1650ஆம் ஆண்டிலிருந்த எழுத்தச்சன் என்பாரோ வடமொழியிலிருந்து தாம் மொழி பெயர்த்தியற்றிய மாபாரதத்திலும் வேறு சில புராணங் களிலுந் தொகுதி தொகுதியாக வடசொற்கள் சொற்றொடர் களை அளவின்றிப் புகுத்தி மலையாள மொழியைப் பாழாக் கினவராவர். ஈண்டுக் காட்டியவாற்றால், மலையாளமொழி வடமொழிக் கலப்பால் தமிழின் வேறாய்ப் பிரிந்து வேறொரு மொழிபோல் வழங்கலானது இற்றைக்குச் சிறிதேறக்குறைய முந்நூறாண்டுகளாகத் தாம் என்பது தெற்றென விளங்கா நிற்கும். என்றிதுகாறும் எடுத்து விளக்கியவாற்றால், இப்போது இவ்விந்திய தேயத்தின் வடக்கே வழங்கும் உருது, இந்தி, வங்காளி முதலான மொழிகளிலும், மேற்கே வழங்கும் மராட்டி, குஜராத்தி முதலான மொழிகளிலுங், கிழக்கே தெற்கே நடுவே வழங்குந் தெலுங்கு, தமிழ் கன்னடம், மலையாளம் முதலான மொழிகளிலுந், தமிழைத் தவிர, மற்றையவெல்லாம் பழையன அல்லவாய், ஆயிர ஆண்டுகளுக்குள்ளாகவே தோன்றித், தமக்கெனச் சிறந்த இலக்கண இலக்கிய நூல்கள் இல்லாமற், சமகிருதத்திலுள்ள மாபாரதம் இராமாயணம் பாகவதம் முதலான கட்டுக்கதை நூல்களை மொழிபெயர்த் துரைப்பனவாய்த் தாமே தனித்தியங்க மாட்டாமல் வடமொழிச் சொற்கள் சொற்றொடர்களின் உதவியையே பெரிதுவேண்டி நிற்பனவாய் உள்ள சிறுமையும் வறுமையும் வாய்ந்தனவாகும். மற்றுத், தமிழ்மொழியோ, மேற்காட்டிய மொழிகள் எல்லாந் தோன்றுதற்குப் பத்தாயிர ஆண்டுகளுக்கு முன்னமே வழங்கிய முதுமொழியாதலொடு தன்னோடொத்த பழமை யுடைய ஆரியம், செண்டு, ஈபுரு, கிரேக்கம், இலத்தீன் முதலான மொழிகளெல்லாம் உலக வழக்கில் இன்றி இறந்தொழியவுந், தான் இன்றுகாறும் பரவி வழங்குந் தனிப்பெருஞ் சிறப்பு உடையதாயுந் திகழா நிற்கின்றது. சென்ற அறுநூறு எழுநூறு ஆண்டுகளுக்குள்ளாக வடமொழியிலிருந்து மொழிபெயர்த்து இயற்றப்பட்ட கம்பராமாயணம், நளவெண்பா, நைடதம், வில்லிபுத்தூரர் பாரதம், காசி காண்டம், கூர்மபுராணம், வாயு புராணம், தலபுராணங்கள் முதலியன தவிர, எழுநூறாண்டுகளுக்கு முன்னிருந்த செந்நாப் புலவர்களால் ஆக்கப்பட்ட அரும்பெருந் தமிழ் நூல்களெல்லாமுந் தமிழ் மொழிக்கே உரிய சிறப்புடையனவாகும்; இன்னும் இற்றைக்கு ஆயிரத்தெழுநூறு ஆண்டுகட்கு முன் இயற்றப்பட்ட செந்தமிழ் நூல்களோ வடசொற்களும் வடநூற் பொய்களுஞ் சிறிதும் விரவாத தனிப்பெருஞ் சிறப்புடையனவாகும். மேலும், பல நூற்றாண்டுகளுக்கு முன்னர்த், தமிழ்மொழியொன்றே இவ்விந்திய தேயம் எங்கும் பேசப்பட்டு வந்த பொது மொழியாகும். இப்போது இவ்விந்திய நடுநாடுகளிற் கோண்டர் எனப்படும் மாந்தர் பேசும் மொழியும், ஒரிசா நாட்டையடுத்த மலைநாடுகளிற் கொண்டர் எனும் மக்கள் பேசும் மொழியும், வங்காள தேயத்தின் ராஜமால் மலைகளில் உறையும் மாலர் என்னும் மக்கட் குழுவினர் வழங்கும் மொழியும், சூடியா நாகபுரத்திலும் அதனையடுத்த நாடு களிலும் இருக்கும் ஓராஓனர் என்னும் மாந்தர் கூட்டம் பேசும் மொழியும், இவ்விந்திய தேயத்தின் வடமேற்கேயுள்ள பெலுசித்தானத்தில் உயிர் வாழும் பிராகுவியர் என்பார் வழங்கும் மொழியும் இன்னும் இங்ஙனமே இமயமலைச் சாரலிலும் பிற வடநாடுகளிலும் வழங்கும் பல்வேறு மொழிகளும் பண்டைத்தமிழ் மொழியின் திரிபுகளாய் இருத்தலை நடுநின்று நன்காராய்ந்து கண்ட கால்டு வெல் முதலான மேல்நாட்டாசிரியர்கள், மிகப்பழைய காலத்தே இவ்விந்தியதேயம் முழுதும் பரவியிருந்தவர்கள் தமிழ் மக்களேயாரென்றும், அவர் வழங்கியவை தமிழுந் தமிழின் திரிபானமொழிகளுமே யாகுமென்றும் முடித்துச் சொல்லியிருக்கின்றார்கள். இஞ்ஞான்று இவ்விந்தியதேயம் எங்கணும் வைகி உயிர்வாழுந் தமிழருந் தமிழரோடு இனமான மக்களும் ஆறரைக் கோடிக்கு மேற்பட்டவராவர் என்பதும் அவராற் கணக்கிடப் பட்டிருக்கின்றது. இவ்விந்திய தேயம் முழுதுமுள்ள மக்களின் தொகை முப்பது கோடியாகும். தமிழ் பொதுமொழியாகாத காரணம் இங்ஙனந் தமிழ்மொழி யானது, ஆறரைக்கோடி இந்துமக்கட்குப் பொது மொழியாயும், பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே தொட்டு இன்றுகாறும் வழங்குந் தனிப்பெருஞ் சிறப்பு வாய்ந்த தனித்தலைமை மொழியாயும், வேறெந்த மொழி களிலுங் காணப்படாத தொல்காப்பியம், திருக்குறள், திருவாசகம், சிவஞானபோதம், திருத்தொண்டர் புராணம் முதலான ஒப்புயர்வில்லா இலக்கண இலக்கிய நூற் பெருஞ்செல்வம் வாய்ந்த மொழியாயும் விளங்குவதாயிருந்தும், இஃது இவ்விந்திய தேயத்திற்குப் பொதுமொழி யாகாமல் நிற்பது பெரியதொரு புதுமையாயிருக்கின்ற தன்றோ? இதற்குக் காரணந்தான் என்னையென்பதைச் சிறிதாராய்ந்து பார்ப்பாம். இப்போது உலகம் எங்கணும் பரவி வழங்கும் ஆங்கில மொழியின் றன்மையினை ஆராய்ந்து பார்மின்கள்! ஆங்கில மொழிக்கே உரிய வெள்ளைக்கார நன்மக்கள் இங்கிலாந்து, அயர்லாந்து, காட்லாந்து என்னும் மூன்று தீவுகளில் உறைபவர் ஆவர். இவர்களின் தொகை சிறிதேறக்குறைய நாலேகாற் கோடியாகும். இங்ஙனம் நாலேகாற்கோடி மக்கட்குரிய ஆங்கிலமொழியானது இப்போது இந்நிலவுலக மெங்கும் பதின் மூன்றரைக்கோடி மக்களாற் பேசப்பட்டு வருகின்றது. முன்னொரு காலத்தில் ஏழுகோடி மக்களாற் பேசப்பட்டு வந்த தமிழ்மொழி இப்போது இரண்டு கோடிக்குங் குறைவான மாந்தர் கூட்டத்தாற் பேசப்பட்டு வருகின்றது. இவ்வாறாகத் தமிழ்மொழி பேசுவோர் தொகை பத்தாயிர ஆண்டுகளாக வரவரச் சுருங்கி வருதலையும், ஆங்கிலமொழி பேசுவார் தொகை இரு நூற்றாண்டுகளுக்குள்ளாக உலகம் எங்கணும் அளவின்றிப் பெருகி வருதலையும் உற்றுணர்ந்து நோக்குங்கால், தமிழ்மொழி சுருங்குதற்குக் காரணந் தமிழரிற் கல்வியறிவுடையவருங் கல்வி முயற்சியுடையவரும் வரவரக் குறைந்து போதலும், ஆங்கில மொழி பெருகுதற்குக் காரணம் ஆங்கிலரிற் கல்வி யறிவுடையவரும் கல்வி முயற்சி யுடையவரும் நாளுக்கு நாள் மிகுந்து ஓங்குதலுமேயென்பது தெற்றென விளங்குகின்றது. இனி, அங்ஙனந் தமிழரிற் கற்றார் தொகை அருகுதலும் ஆங்கிலரில் அவர் தொகை பெருகுதலுந்தாம் எதனாலெனின், தமிழரிற் செல்வம் உடையவர்களெல்லாரும் இஞ்ஞான்று தமிழ்க் கல்வியறிவில்லாதவர்களாய் விட்டார்கள்; அதனால் அவர் தந் தாய்மொழியாகிய தமிழின் அருபெருஞ் சிறப்பும், அதனைக் கற்பதனால் மக்கள் அடையும் இம்மை மறுமைப் பெரும்பயன்களும் ஒரு சிறிதும் உணராத வராய் இருக்கின்றனர்; அதனால் அவர், தம்மைப்போலவே தமது நாட்டிற் பிறந்தவர்களெல்லாருஞ் செல்வ வாழ்க்கையிற் சிறந்து வாழல் வேண்டுமென்னும் உயர்ந்த நோக்கமுந் தினைத் தனையும் இல்லாதவராய் இருக்கின்றனர்! அதுமட்டுமோ! ஏழை எளியமக்கள் நாள் முழுதும் வெயிலிற் காய்ந்தும் மழையில் நனைந்தும் அரும்பாடுபட்டு உழவுத் தொழிலைச் செய்தும் பல்வகைக் கைத்தொழில்களைப் புரிந்தும் பெருவரு வாயினையும் நுகர்ச்சிப் பொருள்களையும் விளைத்துக் கொடுக்கச், செல்வராகிய தாம் உடல் வருந்தாமல் மூளை யுழைப்பில்லாமற் சிறந்த இல்லங்களிற் செருக்குட னிருந்து விலாப்புடைக்க உடல் கொழுக்கத் தின்று பஞ்சணைமேற் றுயின்று பல்வகை சிற்றின்பங்களை நுகர்ந்துந், தம்மை இங்ஙனம் இன்ப வாழ்க்கையில் வைத்துள்ள அவ்வேழை யெளியவர்களின் உடல்நல மனநலங்களைச் சிறிதேனும் நன்றியுடன் கருதிப்பார்க்கின்றார்களா? இல்லை, இல்லை. அவ்வேழை மக்கட்கு இப்பாழுஞ் செல்வர்கள் அரைவயிற்றுக் கஞ்சிதானும் வார்ப்பதில்லை! அரையிலுடுக்க நான்கு முழத் துண்டு தானுங் கொடுப்பதில்லை! வெயிலுக்கும் மழைக்கும் நச்சுயிர்களுக்கும் ஒதுங்கி இனிது உறைய நல்ல ஒரு சிறு இல்லந்தானும் அமைத்துத் தருவதில்லை! இத்துன்ப நிலையில் அவர்கள் நோய்கொண்டு வருந்தினால் அது தீர்ப்பதற்கு மருந்தினுதவியுஞ் செய்வதில்லை! அவர் அவ்விடும்பையிற் பெற்ற ஏழைப் பிள்ளைகட்கு உணவோ உடையோ கல்வியோ சிறிதும் ஈவதேயில்லை! அவர்களை அவர் கண்ணேறெடுத்துப் பார்ப்பதுமில்லை! இவை மட்டுமோ! இவ்வேழைக் குடியானவர் தம் வயிற்றுக்கில்லாமையினாலோ உடல்வலிகுன்றினமையினாலோ நோயினாலோ, சிற்சில நாட்களில், இச்செல்வரின் வயல்களிலும் புழக்கடைகளிலும் மாட்டுக் கொட்டில்களிலும் அவர் ஏவிய பணி செய்யத் தவறினால், அவர்களை மரத்துடன் சேர்த்துப் பிணித்து, அவரது முதுகில் இரத்தஞ் சொட்டச் சொட்டப் புளிய வளாரினாற் சிறிதும் நெஞ்சிரக்கமின்றி அடித்துக்கொல்கின்றார்கள்! இங்ஙனந் தமிழ்ச் செல்வர்கள் தங்கீழ் வாழ்வாரை ஓவாது துன்புறுத்து வருகையில், நந்தமிழ்மக்கள் உடல்நல மனநலங்கள் வாய்ந்து தமிழ் கல்வியிற் சிறப்பதெங்ஙனம்? இனி, தங்கீழ் வாழும் பெருந்தொகையினரான ஏழைத் தமிழ் மக்களை அங்ஙனம் மேலேறவொட்டாமல் தமிழ்ச்செல்வர்கள் வன்கண்மை செய்யினுந், தம்மொடு தொடர்பின்றி வாழும் மற்றைக் குடிமக்கட்காவது எந்த வகையிலாயினும் ஏதேனும் உதவி செய்கின்றார்களா? அதுவும் இல்லையே. இந்த நிலைமையில் தமிழ்ப்பயிற்சி பரவுவதெங்ஙனம்? இனி, அச்செல்வர்கள், அத்தி பூத்தாற்போல் அங்கொருவர் இங்கொருவராக அருகிக் காணப்படுந் தமிழ் கற்றார்க்காவது, அக்கற்றார் தமது தமிழறிவைப் பலர்க்கும் பயன்படுத்துதற்காவது, அல்லது அவர் இயற்றும் நூல்கட்காவது எந்த வழியிலேனும் எட்டுணையுதவியாவது செய்கின் றார்களா? அதுவும் இல்லையே. இத்தகைய பயனில் செல்வர்கள் உள்ள இந்நாட்டில் தமிழ் கல்வி பரவாதது ஒரு புதுமையா? இனி, ஆங்கிலரின் சீரிய நிலையைச் சிறிது தேர்ந்து பார்மின்கள்! ஆங்கிலரிற் செல்வராயிருப்பாரெல்லாருந் தமது தாய்மொழியை நன்கு கற்றவர்கள்; அதனால் அவர்கள் கல்வியின் அருமை பெருமையும் அதனைப் பெற்றவர் பெறும் பெரும்பயனும் நன்குணர்ந்தவர்கள். பெற்றவட்கே தெரியும்அந்த வருத்தம் பிள்ளை பெறாப் பேதை அறிவாளோ பேரானந்தம் உற்றவர்க்கே கண்ணீர் கம்பலை உண்டாகும் உறாதவரே கன்னெஞ்சம் உடையா ராவர் என்று தாயுமான அடிகள் அருளிச்செய்தபடி கல்வியை வருந்திப் பெற்றார்க்கே கல்வியின் அருமை தெரியும்! கல்வியறிவு பெறாத கசடர் அதன் சிறப்பும் பயனும் யாங்ஙனம் அறிவர்? ஆங்கிலரில் அரசர்க்கரசராய்த் திகழும் மாவேந்தர் தந் தாய்மொழியாகிய ஆங்கிலத்தில் மிகுந்த புலமையுடைய ராதலுடன், இலத்தீன், கிரீக்கு, பிரஞ்சு, செர்மன் முதலான அயல் மொழிகளிலும் புலமை வாய்ந்தவர். அம்மாவேந்தரின்கீழ் மன்னர்களாய் உள்ளவர்களும், அவர்க்கு அமைச்சர், படைத்தலைவர், அரசியற்பணி புரிவாராயுள்ளவர்களும், அவரது நாட்டிற் பெருஞ் செல்வர்களாய் உள்ள வர்களும், வாணிக வாழ்க்கையில் வாழ்பவர்களும் எல்லாந் தமதாங்கில மொழியைப் பயின்று தேர்ச்சி பெற்றவர்களாவர். இங்ஙனம் முடிவேந்தர் முதல் வணிகர் ஈறான பெருஞ் செல்வர்களனைவருந் தந் தாய்மொழியாகிய ஆங்கிலத்தை நன்கு பயின்றவர்களாய் இருத்தலாற், கேடில் விழுச்செல்வங் கல்வி யொருவற்கு மாடல்ல மற்றை யவை என்னும் தெய்வப் புலமைத் திருவள்ளுவர் தம் அருண் மொழிப்படி மக்கட்கு அழியாச் செல்வமாவது கல்வியேயென்று அவர்கள் கடைப்பிடியாய் உணர்ந்து, தங்கள் செல்வத்தையெல்லாங் கல்வி விளக்கத்திற்கென்றே செல வழித்து வருகின்றார்கள். பாருங்கள்! நந்தமிழ் நாட்டில் தமிழ் கற்பித்தற்கென்று இரண்டு மூன்று உயர்ந்த பள்ளிக்கூடங்களைக் காண்பதுதானும் அரிதாயிருக்க ஆங்கிலங் கற்பித்தற்கோ எத்தனை ஆயிரக்கணக்கான பள்ளிக்கூடங்களும், உயர்ந்த கல்லூரிகளும், இவை தம்மை அகத்தடக்கிய பல்கலைக் கழகங்களும் இருக்கின்றன! இவைகட்கெல்லாம் எத்தனை கோடிக்கணக்கான பொருள் ஆங்கில அரசினராலுங் கிறித்து சமயக் குருமார்களாலும் அளவின்றிச் செலவுசெய்யப்பட்டு வருகின்றன! இவ்வாறு இத்தமிழ் நாட்டிலும், இவ்விந்திய தேயத்தின் பிறநாடுகளிலும் ஆங்கில மொழிப்பயிற்சிக்கென்று ஆங்கிலராற் சென்ற ஒரு நூற்றாண்டாகச் செலவு செய்யப்பட்டு வருந்தொகையைக் கணக்கெடுக்கப் புகுந்தால் அது கணக்கில் அடங்குவதாயில்லை. இங்ஙனமெல்லாம் ஆங்கிலர் தமது மொழிப்பயிற்சியினை இவ்விந்திய தேயமெங்கும் பரவவைத்து வருதலைப் பார்த்தாயினும், இங்குள்ள செல்வர்களுக்குத் தமிழ்ப்பயிற்சியைப் பரவவைக்க வேண்டுமென்னும் உணர்ச்சியும் முயற்சியும் உண்டாகின் றனவா? சிறிதும் இல்லையே. எங்கோ ஒரு செல்வர், எங்கோ ஒரு குறுநில மன்னர், எங்கோ ஒரு மடத்தலைவர் பள்ளிக்கூடம் வைத்து நடத்த எண்ணங்கொண்டால், அவரும் ஆங்கிலப் பள்ளிக்கூடம் வைத்து நடத்துகின்றனரே யன்றித், தனிப்படத் தமிழுக்கென்றொரு பள்ளிக்கூடம் வைத்து அவர் நடத்துதலை யாண்டுங் கண்டிலேம்! ஆங்கிலர் நடாத்தும் பள்ளிக்கூடங்களிலாவது தமிழாசிரியர்க்குத் தக்க சம்பளங் கிடைக்கின்றது, நன்கு மதிப்பிருக்கின்றது. தமிழ்ச்செல்வர்கள் எங்கோ அருமையாய் வைத்து நடத்தும் ஆங்கிலப் பள்ளிக்கூடங்களிலோ தமிழாசிரியர்க்கு மிகக்குறைந்த சம்பளந்தான் கிடைக்கின்றது! அதுவல்லாமலும், அப்பள்ளிகளில் தமிழ்கற்பிக்கும் ஆசிரியர்க்கும் நன்கு மதிப்புமில்லை. அதனால், ஆங்கிலக் கல்விக்கழகங்களிற் பயிலும் மாணவர் தமிழை ஊன்றித் திருத்தமாகப் பயின்று புலமையடைவதுமில்லை; தாம் பயிலும் ஆங்கிலத்தையே கருத்தாய்ப் பயின்று, அதிற் பட்டம் பெறுவதற்கு ஒரு சிறு துணையாகவே தமிழைத் தப்புந்தவறுமாய்ச் சேர்த்துப் பயின்று தொலைத்துவிடுகின்றார்கள்! இங்ஙனமாக இத்தமிழ் நாட்டிலும் பிறநாடுகளிலும் ஆங்கிலர் தம்முடைய பெருமுயற்சியானும் பெரும் பொருட் செலவானும் நடாத்தி வரும் பல்லாயிரக்கணக்கான ஆங்கிலக் கல்லூரிகளிற் பயின்று பட்டம் பெற்று வரும் பல்லாயிரக்கணக்கான நம் இந்துதேய மாணவர்கள் ஆங்கில மொழியிற்றான் வல்லவர்களே யல்லாமல், தமிழ் முதலான தாய்மொழிகளிற் சிறிதும் வல்லவர்களல்லர். இத்தேயமெங்கும் இவ்வாறு ஆங்கில மொழிக்கல்வி சிறந்து பரவி வருதற்குந், தமிழ் முதலான தாய்மொழிக்கல்வி சிறந்து பரவாமைக்கும், ஆங்கிலரின் நன்முயற்சியும், இந்நாட்டவரின் முயற்சியின்மையுமே முறையே காரணமாதல் தெற்றென விளங்கா நிற்கும். இனி, ஆங்கிலர் தாங் கைப்பற்றிச் செங்கோலோச்சும் இவ்விந்திய நாட்டிலேயே தமது தாய்மொழியாகிய ஆங்கிலத்தைப் பரவவைத்தற்கு இத்துணைப் பெருமுயற்சியும் இத்துணைப் பெரும் பொருட்செலவுஞ் செய்து வருகின்றன ரென்றால், தமது தாய்நாடாகிய பிரித்தானியாவிலுந், தம்மவர் குடியேறி வைகும் வட அமெரிக்கா தென்னமெரிக்கா ஆத்திரேலியா தென்னாப்பிரிக்கா முதலான பெரும் பெருநிலப் பகுதிகளிலுமெல்லாம் அவர்கள் இன்னும் எத்துணை முயற்சியும் எத்துணை கோடிக் கணக்கான பொன்னுஞ் செலவு செய்து தமது ஆங்கில மொழியைப் பரவச் செய்பவராதல் வேண்டும்! அதனாலேதான் இவ்வுலக மெங்கணும் ஆங்கிலமொழி திருத்தமாகப் பயிலவும் பேசவும் எழுதவும் பட்டு வருகின்றது. ஆங்கிலம் நன்கு பயின்று அதில் நூல் எழுதும் ஆசிரியர் தொகையும் அவர் எழுதிய நூற்றொகையுமே கணக்கெடுத்தல் இயலா தென்றால், ஆங்கிலப் பயிற்சி மட்டுஞ் செய்வார் தொகையைக் கணக் கெடுத்தல் இயலுமோ! இவ்வியல்பினை உற்றுநோக்குங்கால், ஆங்கிலத்தின்முன் வேறெந்த மொழியுந் தலைதூக்கி நில்லாதென்பது தேற்றமேயாம். ஆங்கிலமே பொதுமொழியாதற் குரித்து இங்ஙனம் இவ்விந்திய தேயத்தின் மட்டுமேயன்றி இவ் வுலகம் எங்கணும் அழுந்திப் பயிலவும், பேசவும் வழங்கவும் பட்டுவரும் ஆங்கிலமொழி யொன்றே உலக முழுமைக்கும் பொதுமொழியாய்ப் பரவிவருதலால், அது தன்னையே நம் இந்துமக்கள் அனைவரும் பொதுமொழியாய்க் கைக்கொண்டு பயிலுதலும் வழங்குதலுமே அவர்கட்கு எல்லா வகையான நலங்களையுந் தருவனவாகும். முதலில் உலகியல் வாழ்க்கைக்கு இன்றியமையாத பொருள் கடைக்கூட்டுதற்கு எத்தொழிலைச் செய்வதாயிருந்தாலும், அத்தொழில் நுட்பங்களை நன்கறிந்து செய்தற்குதவி செய்யும் பல்லாயிரக்கணக்கான தொழிலறிவு நூல்கள் ஆங்கில மொழி யிலன்றி வேறெதிலேனும் இருக்கின்றனவா? பல்வகைக் கைத்தொழில் களைப் புரியுங்கால், அவற்றிற்கு வேண்டும் பல்வகைப் பண்டங்களைப் பல நாடுகளிலிருந்து வருவித்தற்கும், அவற்றால் தாஞ்செய்து முடித்த பண்டங்களைப் பல நாடுகளிலும் உய்த்து விலைசெய்து ஊதியம் பெறு தற்கும் ஆங்கில மொழியேயன்றி வேறேதுந் துணைசெய்யுமோ? செய்யாதே. இன்னும் உலகமெங்கணும் நடைபெறும் வாணிகமெல்லாம் ஆங்கில மொழியின் உதவிகொண்டே நன்கு நடைபெறுதலை அறிந்து வைத்தும், அதனைப் பொதுமொழியாக வழங்காமல், விரிந்த வாணிக வாழ்க்கைக்கு ஒரு சிறிதும் பயன்படாத இந்தியைப் பொதுமொழி யாக்க முயல்வோர் நம்மனோர்க்கு உண்மையில் உதவி செய்பவர் ஆவரோ? கூர்ந்து பார்மின்கள்! இனி, அரசியற்றுறையில் நம் இந்துமக்களை முன்னேற்றி வருவதும், தம்முரிமைகளைக் கண்டு கேட்க அவர்கட்குக் கண்திறப்பித்ததும், இவ்விந்திய நாடெங்கணும் பெரும் பொருட்செலவாற் பலகோடி மக்களாற் பயிலப்பட்டு இயற்கையே பொதுமொழியாய்ப் பரவிவருவதும், இலக்கண இலக்கியத் துறைகளிலும் நடு நிலைகுன்றா உண்மைகாண் வகைகளிலும் பன்னூறாயிரக்கணக்கான நூல்கள் புதியபுதியவாய்ப் பெருகும் அறிவுப் பெருஞ் செல்வம் வளரப் பெறுவதுமான ஆங்கில மொழியை, எல்லா மொழி களிலும் உள்ள எல்லாச் சிறந்த நூல்களையுந் தன்கண் மொழிபெயர்த்து வைத்து அவற்றின் பொருளை அவை வேண்டுவார்க்கு எளிதின் ஊட்டுந் தனிப்பெருஞ் சிறப்பு வாய்ந்த ஆங்கில மொழியை, நம்மனோர்க்குப் பொது மொழியாக்காமல், இந்நலங்களில் ஒரு கடுகளவுதானும் இல்லா இந்தி மொழியைப் பொதுமொழியாக்க முயலல் அறிவுடையார் செயலாகுமா? ஆகாதே. ஆதலால் நந்தமிழ் நாட்டவர் ஆங்கிலத்தையுந் தமிழையுமே நன்கு பயின்று நலம் பெறுவாராக! அறிவுரைக்கொத்து - முற்றும் - மறுப்புக்கு மறுப்பு சுவாமி வேதாசலம் என்னும் மறைமலை யடிகள் எழுதிய தமிழ் நாட்டவரும் மேல்நாட் டவரும் என்னும் கட்டுரையும், அதன் மீது ஏற்பட்ட மறுப்புக்கு மறுப்பாக குடி அரசு, ஜடி , தமிழ்நாடு, ஊழியன் ஆகிய பத்திரிகை களில் வந்த வியாசங்களும், தோழர்கள் கைவல்ய சுவாமியார், நீலாவதி யம்மையார் ஆகியவர்கள் எழுதிய வியாசங்களும் சேர்த்துப் பதிப்பிக்கப் பட்டது, பெரியார் சுயமரியாதை பிரச்சார தாபனம் திருச்சி, 1970. தமிழ் நாட்டவரும் மேல் நாட்டவரும் என்ற கட்டுரையின் மறுப்புக்கு மறுப்பு சுவாமி வேதாசலம் என்னும் மறைமலையடிகள் எழுதிய தமிழ் நாட்டவரும் மேல்நாட்டவரும் என்னும் கட்டுரையும், அதன் மீது ஏற்பட்ட மறுப்புக்கு மறுப்பாக குடி அரசு, ஜடி , தமிழ்நாடு, ஊழியன் ஆகிய பத்திரிகைகளில் வந்த வியாசங்களும், தோழர்கள் கைவல்ய சுவாமியார், நீலாவதி யம்மையார் ஆகியவர்கள் எழுதிய வியாசங்களும் சேர்த்துப் பதிப்பிக்கப் பட்டது, பெரியார் சுயமரியாதை பிரச்சார தாபனம் திருச்சி, 1970. முன்னுரை மறுப்புக்கு மறுப்பு என்னும் இப்புத்தகத்திற்கு ஒரு மதிப்புரையோ , அறிமுக உரையோ தேவை இல்லை, ஏனெனில், எங்கோ சந்திலோ, பொந்திலோ கவனிப் பாரற்று உறைந்து கிடந்த தமிழ் நாட்டவரும் மேல் நாட்ட வரும் என்ற கட்டுரையானது பள்ளிக் கூடத்துக்குப் பாடமாய் வைத்ததின் காரணமாய் பார்ப்பனர்களின் கண்பட்டு, அதைப்படிப்பதால் மக்கள் சமூகத்திற்கே பிரமாதமானதொரு பெருங்கேடு விளையு மெனக் கூக்குரலிடப்பட்டதின் பயனாய் எவரொருவருடைய மதிப்புரையும், அறிமுக உரையும் இல்லாமல் தமிழ் மக்களில் பெரும்பாலோருடைய கவனத்துக்கு வந்து தீரவேண்டிய நிலையை அடைந்து விட்டது. ஆதலால், அதைப்பற்றி மதிப்புரை எழுதவோ அறிமுகவுரை எழுதவோ நாம் ஆசைப்படவில்லை. ஒரு சமயம் அதன் ஆசிரியரைப்பற்றி மதிப்புரையோ, அறிமுக உரையோ வேண்டாமா என்பதின் காரணமாய் ஏதாவது எழுதவேண்டாமா என்று பார்த்தாலும், தமிழ் நாட்டவரும் மேல்நாட்டவரும் என்று எழுதிய கட்டுரையின் ஆசிரியரான சுவாமி வேதாசலம் என்னும் மறைமலை அடிகளைப்பற்றி எவ்வித உரையும் அறிமுகமும் எதிர்பார்த்து, அவரை அறிந்து கொள்ளவேண்டிய அவசியம் கொண்ட அவ்வளவு பேதை நம் நாட்டில் சிறப்பாக தமிழ் மக்களில் யாருமே இருக்கமாட்டார்கள். ஆகவே, அக்கட்டுரை கொண்ட இப்புத்தகத்துக்கு மதிப்புரையோ, அறிமுக உரையே, யாதும் எழுதாமல், அக்கட்டுரையை ஒரு புத்தகமாக பிரசுரிக்கவேண்டிய தவசியம் ஏற்பட்டதைப்பற்றி மாத்திரம் இரண்டொரு வார்த்தை எழுத ஆசைப்படுகின்றோம். பிரதாபக் கட்டுரை கலந்த அறிவுரைக் கொத்து என்னும் புத்தகம் சென்னை சர்வகலாச் சாலை மாணாக்கர் களுக்கு ஒரு பாடப்புத்தகமாக அரசாங்கத்தாரால் வைக்கப் பட்டதை அறிந்த பார்ப்பனர்கள் அதைப் பாடப்புத்தகத் தன்மையில் இருந்து எடுத்துவிட வேண்டுமென்றும் அது மக்களுக்குக் கேட்டை விளைவிக்கக் கூடியது என்னும் பார்ப்பனப் பத்திரிகைகளின் மூலமும் பல இடங்களில் பார்ப்பன மக்களின் முயற்சியைக் கொண்ட பொதுக் கூட்டங்களின் மூலமும் கிளர்ச்சி ஏற்பட்டதால், அப்புத்தகமும் அக்கட்டுரையும் எப்படிப் பட்டதென்று பார்க்க நேரிட்டதில் எவ்வித சரியான காரணத்தையும் கொண்டு கிளர்ச்சி நடைபெறவில்லை என்றும் வெறும் அசூசையே காரணமாய்க் கொண்டு கிளர்ச்சி நடக்கிற தென்றும் உணர்ந்து அக்கிளர்ச்சிக்கு எதிர்க்கிளர்ச்சி செய்யப்பட்டது. அக்கிளர்ச்சிக்கு ஆக பார்ப்பனர்கள் அப்புத்தகத்தைப் பற்றி எழுதி வந்த மறுப்புக்களுக்கு மறுப்புகள் எழுதி ஒருவாறு அக்கிளர்ச்சியை ஒடுக்க வேண்டியதாயிற்று. ஆகவே இந்நிலையில் அறிவுரைக் கொத்துக்கு மறுப்பாக பார்ப்பனர்களால் பத்திரிகைகளில் எழுதி வந்தவை களுக்கு, மறுப்பாக பார்ப்பனரல்லாதார்கள் பத்திரிகைகளில் பார்ப்பனரல்லாதார்களால் எழுதி வந்த ஒரு சில கட்டுரை களையும், கிளர்ச்சிக்குக் காரணமான தமிழ் நாட்டவரும் மேல் நாட்டவரும் என்ற கட்டுரையையும் தொகுத்து ஒரு புத்தக ரூபமாக வெளியாக்கி, அதை தமிழ் மக்களின் சுயமரியாதை உணர்ச்சிக்கு சமற்பிக்கிறோம். இதைப்பற்றிய மற்ற விஷயங்கள் இதைப்படித்தவர் களுக்கு தானாகவே விளங்கிவிடும். ஆதலால் மேலாக நான் ஒன்றும் இங்கு எழுதவில்லை. குறிப்பு:- அறிவுரைக் கொத்து சம்பந்தமான கிளர்ச்சியின் பயனாய் அரசாங்கத்தார் அப்புத்தகத்தையும் அதன் கண்ணுள்ள வியாசங்களையும் மறுமுறையும் விவகாரத்துக்கு எடுத்து ஆலோசித்து அதைப் பாடப்புத்தகமாக ஏற்றுக்கொண்டு விட்டார்கள். ஈ. வெ. ரா. ஈரோடு, 1-9-35. தமிழ் நாட்டவரும் மேல் நாட்டவரும் சாமி வேதாசலமென்னும் மறைமலை அடிகளின் கட்டுரை தமிழறிஞர் சுவாமி வேதாசலம் அவர்கள் எழுதிய அறிவுரைக் கொத்து என்னும் தமிழ் நூலைப் பற்றித் தற்போது பத்திரிகைகளில் பெரும் வாதப்பிரதி வாதம் நடந்து வருகிறது. அந்நூலில், தமிழ் நாட்டவரும் மேல் நாட்டவரும் என்ற கட்டுரையைப்பற்றியே சில பார்ப்பனர்கள் அவதூறாக எழுதிக்கொண்டு வருகின்றனர் அவர்களுடைய பொய்ப் பிரசாரத்தினால் தமிழ் மக்கள் ஏமாறாமலிருக்கவேண்டி, அக் கட்டுரையையும் அது சம்பந்தமாக வந்த மறுப்புகளுக்கு மறுப்பாக வந்த சில கட்டுரைகளையும் பிரசுரித்திருக்கிறோம். அதில் பொது நோக்கோடு எல்லா மக்களின் குறைகளையும், குற்றங்களையும் விளக்கப்பட்டிருக்கிறதை பொதுமக்கள் உணரவேண்டுமென்பதே நமது ஆவல். (ஆ-ன்) தமிழ் நாட்டவரும் மேல்நாட்டவரும் நம் தமிழ் நாட்டவர் பொருளையும், தமிழ் நாட்டை யடுத்துள்ள மற்றை இந்திய நாட்டவர் பொருளையும் மேல் நாட்டவர் பல வழியிற் கவர்ந்து செல்கின்றனர் என்னுங் கூக்குரல் ஒலியும், அதனைத் தடைசெய்து இந்நாட்டவரின் பொருள் இங்கேயே நிலைபெறுமாறு செய்தல் வேண்டின் அயல் நாட்டவர் இங்கே விலைப்படுத்தக் கொண்டுவரும் பண்டங்களை வாங்காது முற்ற ஒழித்தலே செயற்பால தென்னும் ஆரவாரமும் நாடு எங்கும் பரவிப், பலவகை குழப்பங்களையும் பலவகை துன்பங்களையும் உயிரழிவு பொருளழிவுகளையும் ஆங்காங்கு விளைத்து வருகின்றன. பேர் அல்லலுக்கு இடமான இப்பிழை பாடான வழியிற் புகுந்து நம்மனோர் துன்புறாமல், அவர்களைப் பாதுகாத்தல் வேண்டியே, எமது அறிவுரையை இங்கெழுதுகின்றோம் இதனை நன்றாக ஆராய்ந்து பார்த்து, எமதுரை பொருந்து மாயின் அதனைக் கைப்பற்றி யொழுகி நம்மவர் நலப்படுவாராக. முதலில் நம் நாட்டவர்பால் உள்ள ஒரு பெருங்குறை என்னென்றால், எதனையும் ஆராய்ந்து, ஓய்ந்து பார்க்குங் குணம் இல்லாமையேயாம். ஒருவர் கல்வியறிவு ஆராய்ச்சி யுடைய பெரியராயிருந்தாலும் அவரைப் பத்துப்பேர் கொண்டாட விட்டால் அவரை நம்மனோர் தாமும் கொண்டாடமாட்டார்;அதுவேயுமன்றி, அவரைப் பத்துப்பேர் பொறாமையினாலோ, அல்லது வேறு காரணத்தாலோ இழித்துப் பேசக் கேட்டால்; அது தகுமா? தகாதா என்று ஆராய்ந்து பாராமல் தாமும் அவரை உடனே இழித்துப் பேசிவிடுவர்; அவர்க்குத் தீங்கும் இழைப்பர். இனி, மற்றொருவர் கல்வியறிவு ஆராய்ச்சிகள் சிறிதும் இல்லாராயினும் அல்லது அவை சிறிதேயுடையராயினும், பத்துப்பேர் அவர்பால் வைத்த பற்றினாலோ, அல்லது அவர்பால் தாம்பெறும் ஏதேனும் ஒரு பயன் குறித்தோ அவரைக் கொண்டாடுவராயின், அவர் எதற்காக அவரைக் கொண்டாடுகின்றார், நாமும் அவரை ஏன் கொண்டாடவேண்டுமென்று சிறிதேனும் ஆராய்ந்து பாராமல் உடனே அவரைக் கண்கால் தெரியாமற் கொண்டாடி விடுவர்; அக்கொண்டாட்டத்தால் வருந் துன்பங்களையுந்தாம் அடைவர். பெரும்பாலும், நம் நாட்டவர் உண்மையறிவு ஆராய்ச்சிகளுடைய பெரியாரைக் கொண்டாடுவதும் இல்லை; அவரால் தாம் அடைதற்குரிய பெரும் பயன் அடைவதுமில்லை. வெளி மினுக்கும், வெற்றாரவாரமும் உடையாரைப் பின் பற்றித் தமது நலனையுந் தம் நாட்டவர் நலனையும் இழந்துவிடுவதே அவர்க்கு இயற்கையாய்ப் படிந்து விட்டது. இனி மேல்நாட்டவர்பால் உள்ள ஒரு பெருங்குணம் என்னென்றால், எவர் எதைச் சொன்னாலும், எவர் எதை எழுதினாலும் அவ்வப்பொருளின் இயல்புகளைத் தம்மாலான மட்டுஞ் சோம்பாமலாராய்ந்து பார்த்து, எது தழுவத்தக்கதோ அதைத்தழுவுவர், தழுவத் தகாததை விலக்குவர். வெறும் வெளி மினுக்கையும், வெற்றாரவாரத்தையுங்கண்டு அவர் ஏமாந்து விடுவதில்லை. அறிவிலும், ஆராய்ச்சிலுமே அவர்கள் தமது காலத்தைப் பயன்படுத்தி வருவதால், அவர்கள் பால் வீணான பேச்சுக்களும் நிகழ்வதில்லை. பிறர்பாற் குற்றங்கள் இருந் தாலும் அவற்றை அவர்கள் ஆரய்வதில்லை; பிறர்பாலுள்ள குணங்களைமட்டும் ஆராய்ந்து அவற்றுக்காக அவரைப் பாராட்டுவதுடன், அவரால் தாமும் உலகமும் பயன் படுதற்கான ஒழுங்குகளெல்லாஞ் செய்வர் அதனால், மேல் நாட்டவரில் நற்குணமும், நல்லறிவும் நன்முயற்சியும் உடைய வர்கள் சீருஞ்சிறப்பும் எய்தித் தாமுந் தம்மைச் சேர்ந்தவரும் வறுமையும், கவலையும் இன்றி உயிர்வாழப் பெற்று, நாடோறும் ஆயிரக்கணக்கான புதுமைகளையும், ஆயிரக் கணக்கான பொறிகளையும் (இயந்திரங்களையும்) ஆயிரக் கணக்கான தொழிற்சாலைகளையும், ஆயிரக்கணக்கான கல்விச் சாலைகளையும், ஆயிரக்கணக்கான சொற்பொழிவு மண்டபங் களையும், ஆயிரக்கணக்கான கலையறிவுக் கழகங்களையும், இன்னும் இவைபோல் நம் சொல்லளவில் அடங்காத பலப்பல நலங்களையுந் தாமிருக்கும் நாடுகளிற் பரவச்செய்து வருவதோடு, தாஞ்செல்லும் பிறநாடுகளிலும் அந்நலங்களை யெல்லாம் பரப்பி வருகின்றனர். இனி, நம் நாட்டவர்களுக்கோ அறிவாராய்ச்சியில்லாமை யோடு ஒற்றுமைக் குணமும் இல்லை; பிறர்பால் அருள் இரக்கமும் இல்லை. தமக்குத் தம் மனைவி மக்களும், நெருங்கிய உறவினருமே உரியனரெனவும், மற்றையோரெல்லாந் தமக்கு வேறானவரெனவும், தாமுந் தம்மினத்தவரும் நன்றாயிருத்தலே தமக்கு வேண்டுந் தம்மவரல்லாத பிறர் எக்கேடுகெட்டா லென்ன, எத்தெருவே போனாலென்ன எனவும் நினைந்து, பிறர் நலத்தைச் சிறிதுங் கருதாதவர்களாய் இருக்கின்றனர், தன்னலங்கருதும் இப்பொல்லாத எண்ணத்தால் இத் தமிழ்நாட்டவர்க்குட் பிரிந்திருக்கும் அளவிறந்த சாதிகளும் , அவற்றால் விளைந்திருக்கும் அளவிறந்த வேற்றுமைகளுங் கணக்கிட்டுச் சொல்லல் இயலாது. நாலு பேர் ஒன்று சேர்வார் களானாற் சாதிப்பேச்சும்; பெண் கொடுக்கல், வாங்கலைப் பற்றிய பேச்சும்; அவன் சாதிகெட்டவன், அவனுக்கும், நமக்கும் உறவு கிடையாது, எங்கள் சாதி உயர்ந்தது, எங்கள் சாதியில் ஒடித்தாற் பால் வடியும், எங்களிற் பத்து வீட்டுக்காரரோடுதான் நாங்கள் கலப்பது வழக்கம், மற்றவர்கள் கையில் தண்ணீர்கூட வாங்க மாட்டோம் என்னும் பேச்சும் ; அதைவிட்டாற் பொருள்தேடும் வகைகளைப்பற்றிய பேச்சும்; அதுவும் விட்டால் தமக்குப் பொருள் சேருங்காலத்தைப் பற்றியும், நோய்தீரும் நேரத்தைப் பற்றியும், மணம் ஆகும் நாளைப் பற்றியும் எந்த இடத்திற் போனாற் குறி கேட்கலாம், எந்தத் தெய்வத்துக்கு ஆடு கோழி அறுத்தால் இவை கைகூடும்? மாரியைக் கும்பிடலாமா? மதுரை வீரனைக் கும்பிடலாமா? காளியைக் கும்பிடலாமா கருப்பண்ணனைக் கும்பிடலாமா? எசக்கியைக் கும்பிடலாமா? சுடலை மாடனைக் கும்பிடலாமா? என்னுஞ் சிறு தெய்வச் சிற்றுயிர்க்கொலைக் கொடும் பேச்சும்; தனக்குப் பகையானப் பலவகையால் இழித்துத் தன்னைப் பலவகையால் உயர்த்திச் செருக்கிப் பேசும் பேச்சுமே எங்கும் எல்லாரும் பேசக் காண்கின்றோம் . புகை வண்டிகளிலும் இந்தப்பேச்சே, பொதுக் கூட்டங்களிலும் இந்தப் பேச்சே, கோயில்களிலும் இந்தப்பேச்சே, குளக்கரைகளிலும் இந்தப் பேச்சே. இதைத் தவிர, நாம் எதற்காகப் பிறந்திருக்கின்றோம்? நாம் இப்பிறவியிற் செய்யவேண்டுவன யாவை? நமக்கும் மற்ற விலங்குகளுக்கும் (மிருகங்களுக்கும்) உள்ள வேற்றுமை என்ன? நம்மையும் மற்ற எண்ணிறந்த உயிர்களையுந் தோற்றுவித்தது யாது? இந்த உலகங்கள் எதற்காகப் படைக்கப் பட்டிருக்கின்றன? இவைகளையெல்லாம் படைத்த பேரறிவுப் பொருளின் நோக்கம் யாதாய் இருக்கலாம்? நாம் இறந்தபின் எந்த நிலையை யடைவோம்? பொருள் தேடுவதும், உண்பதும், உறங்குவதும், மருவுவதுந் தவிர, வேறு நாம் செய்யத்தக்கதுந் தகாததும் இல்லையா? என்று இவ்வாறெல்லாம் எண்ணிப் பார்க்கத் தக்கவர்களை நம்மில் நூறாயிரவரில் ஒருவரைக்கூடக் காண்பது அத்தி பூத்தாற் போல் இருக்கின்றதே! ஆனால், மேல்நாட்டவர்களிலோ இவைகளையெல்லாம் ஆராய்ந்து பார்ப்பவரும் ஆராய்ந்து எழுதுவாரும், ஆராயுங் கழகங்களும், அவர்களாலும் எழுதி வெளியிடப்பட்ட வெளி யிடப்படுகின்ற நூல்களும், நாள் வெளியீடுகள், அவை தம்மைக் கற்பாருங் கற்பிப்பாரும், இவ்வகைகட்கெல்லாங் கோடிகோடி யாகத் தமது பொருளை வழங்குவாரும் எண்ணிக்கையிலும் அடங்குதல் இல்லை. மேல்நாட்டவர்கள் பசியெடுத்த வேளை யில் எந்த இடத்தில் எந்த உணவு கிடைக்கின்றதோ அதனைப் பெற்று மகிழ்ச்சியோடு உண்பர்; தமது வாழ்க்கைத் துணைக்கு எந்த நாட்டில் எவர் இசைந்தவராய்த் தெரியப்படுகின்றனரோ, அவரை மணந்து கொள்வர், உடம்பைப்பற்றிய இவ்விரண்டு குறைகளையும் இங்ஙனம் எளிதிலே நிரப்பிக்கொண்டு, அதற்கு மேல் அவற்றில் தம் கருத்தைச் செலுத்தாமல், தம் அறிவு ஆராய்ச்சிகளை மென்மேற் பெருக்குவதிலும், நாடோறும் புதிய புதிய ஆற்றல்களையும், புதிய புதிய பொறிகளையும், புதிய புதிய உண்மைகளையுங் கண்டுபிடிப்பதிலும், அவற்றைப் பயன்படுத்துவதிலுமே தமது கருத்தை ஓயாமற் செலுத்தி வருகின்றனர். மற்றும், நம் நாட்டவரோ மேலே காட்டியபடி, நிலை யில்லாமல் அழிந்துபோகுந் தமது உடம்பைப் பற்றியும், அவ்வுடம்பால் வந்த தொடர்புகளைப் பற்றியுமே எந்நேரமும் பேசியும், நினைந்தும் வருவதல்லாமல், என்றும் நிலையாக இருக்கத்தக்க தமது அறிவு விளக்கத்தைப்பற்றி யதால், தம் அன்பையும், அருளையும் வளர்க்குங் கடமைகளைப் பற்றி யதால் பேசியும், எண்ணியும் வரக்காண்கின்றோம் இல்லையே! இன்னும், நமது வாழ்க்கைக்கு இன்றியமையாது வேண்டப் படுவன கல்விப் பொருளுஞ் செல்வப் பொருளும் என்னும் இரண்டுமேயாகும் கல்விப் பொருளைப் பெற்றவர்கள், தமக்கும் பிறர்க்கும் நன்மையைத் தருந் துறைகளை ஆய்ந்து பார்த்துக் காலத்தின் நிலைக்கும் ஒத்த முயற்சிகளைச் சோம்பாது செய்வார்களாயின், அவர்கட்குச் செல்வப்பொருள் தானேவரும். வெறுஞ் செல்வம் மட்டுந் தனது பழவினைப் பயத்தால் வாய்க்கப் பெற்றவர்கள் அங்ஙனங் கல்விப் பொருளை எளிதிலே பெற்றுக் கொள்ளுதல் இயலாது. மேலுங், கல்விப் பொருள் என்றும் அழியாது; செல்வமோ சிலகாலத்தில் அழிந்துபோம்; கல்விப்பொருள் ஒருவனது அறிவைப் பற்றிக் கொண்டு எழுமை ஏழு பிறப்பும் அவனுக்குற்ற துணையாய்ச் செல்லும்; செல்வமோ அதனையுடையானுக்கு இந்தப் பிறவியிலேயே துணையாகாமற், பிறராற் கவரப்பட்டு, ஒரோ வொருநாள் அவனுயிரையுந் தொலைத்தற்கு ஏதுவாயிருக்கும்; கல்விப்பொருள் இந்த உலகத்திலும், இங்குள்ள உயிர்களிலும் உள்ள வியப்பான உண்மைகளை விளங்கச் செய்வதுடன் , இவற்றிற்கு உள்ளுமாய்ப் புறம்புமாய் நிற்கும் இறைவன் தன் அருளுண்மைகளையும் விளங்கச்செய்து நமக்குப் பேரின் பத்தைத் தராநிற்கும்; செல்வப் பொருளோ தன்னையுடை யானைப் பெரும்பாலுந் தீய துறைகளிற் புகுத்திச் சிலகாலத்தில் அவன் சிற்றின்பத்தினையும் நுகரவொட்டாமல் அவனை நோய்வாய்ப்படுத்தி, அவனைவிட்டு நீங்கி அவனை விரைவில் மாய்க்கும். ஆகையாற் கல்விப்பொருள் சிறந்ததோ, செல்வப் பொருள் சிறந்ததோ என்பதைச் சிறிது எண்ணிப்பாருங்கள்! கல்விப்பொருள் ஒன்றுமே, நமக்கும் நம்மைச் சேர்ந்தார்க்கும் நலம் பயப்பதன்றிச் செல்வப் பொருள் அங்ஙனம் நலம் பயப்பதென்பது சிறிதுணர்வுடையார்க்கும் விளங்கு மன்றோ? ஆகவே, கல்விப்பொருளின் பொருட்டுச் செல்வப் பொருளைப் பயன்படுத்த வேண்டுமே யல்லாமற் செல்வப் பொருளைப் பெறும்பொருட்டே கல்விப் பொருளைப் பயன் படுத்துதல் ஆகாது. ஆனால், நம்நாட்டவர் நிலை எத்தன்மையதா யிருக்கின்ற தென்பதை எண்ணிப்பாருங்கள்! நம்மவரிற் பெரும்பாலோர்க்குக் கல்விகற்பதிற் சிறிதும் விருப்பமேயில்லை. கற்கவேண்டிய கட்டாயத்தில் உள்ளவர்களுந் தமிழ் எழுதப்படிக்கத் தெரிந்தாற் போதுமென்றும், அதுவும் வேண்டாங், கையெழுத்துப் போடத் தெரிந்தாற் போதுமென்றும் எண்ணி அங்ஙனமே நடப்பவர் களாய் இருக்கிறார்கள். இன்னும் பலர் தமிழ்ப்படித்து என்ன வாரிக்கொள்ளப் போகிறான்? படியாதவர்களில் எத்தனையோ பேர் பொருள் தேடிச் செல்வர்களாக இல்லையா என்று வாய் கூசாது பேசிப் போகின்றனர். இன்னும் பலர், ஆங்கிலம் படித் தாலும் பெரிய வேலை கிடைக்கும். பெரிய அதிகாரங் கிடைக்கும், ஆங்கிலம் படித்துப்பட்டம் வாங்கின மாப்பிள்ளைக்கு அய்யாயிரம் பத்தாயிரத்துடன் பெண் கிடைக்கும் என்று எண்ணுவதுஞ் சொல்லுவதுஞ் செய்து, இவைகளுக்காகவே தம் மக்களை ஆங்கிலம் பயிலச் செய்கின்றார்கள். துவக்கத்திலிருந்தே இந்த எண்ணத்தோடு ஆங்கிலங் கற்கின்ற பிள்ளைகள், அதனில் தேர்ச்சி பெற்றுப் பட்டங்கள் வாங்கினவர்களாய் வெளிவந்தவுடன், பொருள் வருவாய்க்கு இசைந்த வேலைகளைப் பெறுவதிற் கண்ணுங்கருத்து முடையராகின்றார்களேயல்லாமல், மேலுங் கல்வி யறிவைப் பெருக்கவேண்டுமென்னும் எண்ணம் உடையராக காணப்பட வில்லை. அரசியற்றுறைகளிலோ, நீராவி நிலையங்களிலோ, ஆங்கில வணிகர் தந்தொழிற்சாலைகளிலோ, இன்னும் இவை போன்ற பிறவற்றிலோ பெரிய பெரிய அலுவல்களில் அமர்ந்து பிறர்க்கு ஊழியஞ்செய்து பொருள் ஈட்டுவதிலேயே பெரு முயற்சியுடையவர்களாய் இருக்கின்றார்கள், இவ்வலுவல்களைப் பெரும்பொருட்டு, அவற்றிற்குத் தலைவர் களாயிருப்பவர்கள் கேட்கும்அளவெல்லாந் தாழ்ந்து கைக்கூலி கொடுக் கின்றார்கள்; அதுமட்டோ, அத்தலைவர்கள் விரும்புகிறபடியெல்லாம் மானக்கேடான செயல்களைச் செய்வதற்கும் முன் நிற்கின்றார்கள்! பொருள் வருவாயையுந் தலைமையையுமே பெரியதாக நினைத்து, இவ்வாறெல்லாம் பெரும்பாடுபட்டுத் தாம் விரும்பிய வேலைகளை அடைந்த பிறகாவது இவர்கள் எண்ணங் கல்விப்பயிற்சியிலுங் கடவுள் வழிபாட்டிலும் பிறர்க்குதவி செய்வதிலும் நாட்டுக்கு நலந் தேடுவதிலுந் திரும்புகின்றதோ வென்றால், இல்லை இல்லை. தாமிருக்கும் வேலையினளவுக்கு வருஞ் சம்பளத்தில் மனநிறைவு பெறாமல், தாம் தமக்கு மேலுள்ளவர்கட்குக் கைக்கூலி கொடுத்தது போலவே தாமுந் தமக்குக் கீழுள்ளவர்பாலுந், தமது தலைமைக்குக்கீழ் அடங்கி நடக்கும் ஏழை யெளியவர்கள் பாலுமிருந்து ஓயாமற் கைக்கூலி வாங்கின வண்ணமாயிருக் கிறார்கள். அங்ஙனம் ஏழை எளியவர்கள் அழ அழ அவர்கள் வயிற்றில் அடித்துச் சேர்க்கும் பொருளையாவது அவர்கள் நல்வழியிற் செலவு செய்கின்றார்களோவென்றால் அதுவு மில்லை. இரப்பவர்க்கு ஒரு கை முகந்த அரிசி தானுங்கொடுக்க இசையார்; கற்பவர்க்குங் கற்றவர்க்கும் ஒரு காசுதானுங் கொடார் மற்றுந் தம் மனைவி மக்கட்குப் பொற்சரிகை பின்னிய பட்டாடைகள் வாங்கிக் கொடுப்பதிலும், வைரம் இழைத்த உயர்ந்த அணிகலங்கள் செய்வித்து அணிவதிலும், அவர்கள் புழங்குதற்குப் பொன் வெள்ளிகளிற் சமைத்த ஏனங்கள் வாங்கிச் சேர்ப்பதிலும், அவர்களுந் தாமும் ஏறி ஊர் சுற்றுவதற்குக் குதிரை வண்டிகள்; இவற்றினும் விலையுயர்ந்த உந்து வண்டிகள் அமைத்துக்கொள்வதிலும், நாடக சாலைகள் குதிரைப் பந்தயங்கள்; வட்டக் காட்சிகள் சென்று காண்பதிலும் இன்னும் இவைபோன்ற வெற்றார வாரங்களிலுமாகத் தாம் ஏழை குடி மக்களிடமிருந்து பகற்கொள்ளையடித்த பெருந்தொகையான பொருளைச் செலவு செய்து விடுகின்றார்கள். இன்னும் பலர் சாராயங் குடித்தும், ஊன் தின்றும், வேசியரை மருவியும் அப்பொருளைப் பாழாக்குகின்றார்கள். மற்றும் பலர், அப் பொருளை கடன் கொடுத்து வட்டி மேல் வட்டி வாங்கியும், அம்முகத்தால் ஏழை எளியவர்களின் நிலங்கள், வீடுகள், பண்டங்களைக் கவர்ந்துந் தமது பொருளை ஆயிரம் நூறாயிரங் கோடி என்னும் பேரளவாகப் பெருக்குவதிலேயே முனைந்து நிற்கின்றார்கள். இவ்வாறாக, ஆங்கிலங்கற்கும் இந்நாட்டவர் எந்த இனத்தைச் சேர்ந்த வராயிருந்தாலும், அவர் எல்லாம் மேலும் மேலும் பொருள் சேர்ப்பதற்கே தாம் கற்ற கல்வியைக் கருவியாக்கி, ஏழைக்குடி மக்களைப் பாழாக்குகின்றார்கள். இந்நிலையிற் பார்ப்பனரும் பார்ப்பனரல்லாதாரும் ஒத்தவர் களாகவே யிருக்கின்றார்கள். தந்நலந் தேடுவதிலேயே நாட்டம் வைத்திருக்கும் இவர்கள், அவைக் களங்களில் மேடைமேலேறிப் பேசும்போது மட்டும் ஏழை மக்களுக்காகக் கண்ணீர் விட்டுக் கதறுகின்றார் கள்! இஃது எதனை ஒத்திருக்கின்றதென்றால், ஆடு நனை கிறதேயென்று கோநாய் குந்தியழுததையே ஒத்திருக்கின்றது. மேடைமேல் இவ்வளவு , இரக்கங்காட்டிப்பேசிய அவர்கள் வீட்டுக்கு, ஏழை இரவலர்கள் சென்றால் அவர்களை ஏசித் துரத்துகின்றார்கள். இந்த வகையிற் பார்ப்பனரைவிடப் பார்ப்பனரல்லாதாரே மிகக்கொடியரா யிருக்கிறயார்கள். யாங்ஙனமென்றால், உயர்ந்த நிலைகளிலுள்ள பார்ப்பனர்கள் தம் இனத்தவரல்லாதாருக்கு ஏதோருதவியுஞ் செய்யாவிடினுந், தம்மினத்தவர்களில் ஏழை களாயிருப்பவர்க்கு எல்லா வகையான உதவியுஞ் செய்யக் காண்கின்றோம். மற்றும், பார்ப்பனரல்லாதாரில் உயர் நிலைகளிலிருப்பவர்களோ ஏழைக் குடிகட்கு ஏதொரு நன்மையுஞ் செய்யக் காண்கிறோம்; நன்மை நன்மை செய்யா தொழியினும் தீமையேனுஞ் செய்யாதிருக்கிறார்களோ வென்றால் அப்படியுமில்லை. எளியவர்களைத் துன்புறுத்தியும், அவர்கள் பொருளைத் தோலிருக்கச் சுளை விழுங்குவது போல் விழுங்கியும் வந்தாற்றானே, தாம் வல்லாண்மை வாழ்க்கை செலுத்தலாம். செல்வர்களால் துன்புறுத்தப்பட்டு நடுநிலை மன்றங்களில் முறையிடச்செல்லும் எத்தனை எளிய மக்கள், தாம் நடுவர்க்குக் கைக்கூலி கொடுக்க இடமில்லாமையின், அங்கும் நடுவிழந்து, ஓலமிட்டு அழுகின்றார்கள்! ஆங்கிலர் நடுவராயிருப்பின், அவரால் எத்திறத்தவரும் முறையாக வழக்குத் தீர்க்கப்பட்டுத் தங்குறை தீர்க்கின்றனர். நம் நாட்டவர் அந்நிலைகளில் இருப்பிற், பெரும்பாலும் அவரால் நடுவாக வழக்குத் தீர்க்கப் படுதல் இல்லை; அவர்க்குக் கைக்கூலி கொடுப்பார் பக்கமே வழக்கு நன்றாய் முடிகின்றது இதனினும் பெருங் கொடுமை யாதிருக்கின்றது! காவலாக இட்ட வேலியே பயிரைத் தின்றாற் பயிர் விளைவதெப்படி? இங்ஙனம் பொருளையே பெரிதாய் நினைந்து நடுவு தவறி, எளியவர்களை வருத்திப் பொருள் சேர்க்கும் ஆங்கிலங் கற்ற நம்மனோர் பார்ப்பனரல்லாத நம்மனோர்க்கு இவ்வா றெல்லாந் தீங்கிழைப்பினும், பார்ப்பனர் காலில் விழுவதற்கும் அவர்க்குத்தாம் சேர்த்த பொருளை மிகுதியாக வழங்குவதற்கும் மட்டும் அவர்கள் சிறிதும் பின்வாங்குகிறார்களில்லை. இவர்கள் ஆங்கிலங்கற்றது வயிற்றுப்பிழைப்புக்கும் பெருமைக்குமே யல்லாமல், ஆங்கிலத்திலுள்ள விழுமிய அறிவாராய்ச்சியைப் பெறுவதற்கு அன்றாகையால், இவர்கள் தம் வீட்டிலுள்ள அறிவில்லாப் பெண் மக்களின் சொல்லுக்கும், ஆராய்ச்சியில்லாப் பேதைகளான தன் சுற்றத்தார் சொல்லுக்குங் கட்டுப்பட்டவர்களாகித் தம் இல்லத்தில் நடக்கும் ஒவ்வொரு சடங்கிற்கும் பார்ப்பனர்களை வரவழைத்து, அவருக்கு அவர் வேண்டிய பொருளை வழங்கி அவர் காலிலும் விழுகின் றார்கள்! ஒரு வேளை நல்ல சோறுகூடக் கிடையாமற் பட்டினியும் பசியுமாய்க்கிடந்து வாடி வதங்கும் ஏழைகள் முகத்தை ஏறெடுத்தும் பாராமற்பேதைமை வயப்பட்டு வறுமையறியாத பார்ப்பனர்க்கும், ஆரவாரக் கொண்டாட்டுகட்குஞ் சிறு தெய்வ வெறியாட்டுகட்கும், அழிவழக்குகட்குந் தமது பொருளைக் கணக்கின்றிச் செலவிடும் நம்மனோரின் நிலை, எண்ணுந் தோறும் நடுக்கத்தை விளைவிக்கின்றது! இனி, ஆங்கிலமாவது தமிழாவது கல்லாதிருந்தும் பழைய நல்வினைப் பயனாற் பெருஞ் செல்வர்களாகவுஞ் சிற்றரசர் களாகவும் வாழ்வார் நம் நாட்டிற் பெருந் தொகையினராய் இருக்கின்றனர். இவர்களுடைய செல்வச் செருக்கையும், இவர்கள் தங்கீழ் உள்ள ஏழை மக்கட்குச் செய்யுங் கொடுமை களையும் நாம் எண்ணிப்பார்ப்போமானால், நமதுள்ளம் இன்னும் மிகுதியாய் நடுங்கா நிற்கும். செல்வர்கள் இல்லங் களிலும் இருக்கும் பொற்சரிகை பின்னிய பட்டாடைகளிலும், அவர்களும் அவர்களின் மாதரும் அணிந்து கொள்ளுங் கல்லிழைத்த நகைகளிலும் அவர்கள் புழங்கும் பொன் வெள்ளி ஏனங்களிலும், அவர்கள் ஏறிச்செல்லும் ஊர்திகளிலும், இன்னும் இவைபோன்ற வெளிமினுக்குகளிலும் அவர்கள் செலவு செய்திருக்கும் பொருளைக் கணக்கிடப் புகுந்தால், அவை நூறாயிரக் கணக்கா யிருக்கும். இனிச் சிற்றரசர்களாகிய ஜமீன்தாரர்களின் அரண்மனை களிலும் இங்ஙனமே ஆடைகளிலும் அணிகலங்கள் முதலிய வற்றிலும் மடங்கி வறிதே கிடக்குஞ் செல்வப் பொருளைக் கணக்கிடப்புகுந்தால் அவை கணக்கிலடங்கா. இங்ஙனமே, சைவ வைணவ சுமார்த்த மாத்துவ மடங்களில் ஏதொரு நற்பயனுமின்றி அடங்கிக் கிடந்து மங்கும் பெரும் பொருட்டிரளுங்கணக்கில் அடங்கா. இவ்வாறெல்லாம் இவர்கள் கையில் முடங்கிக் கிடந்து அவியும் பெரும் பொருட் குவியல்களெல்லாம், இவர்களை விட்டு நீக்கிப் பொதுமக்கட்குப் பயன்படுநிலைமையை யடையுமானால், இவ்விந்திய நாட்டில் வறுமையும் நோயும், அறியாமையுந் தலைக்காட்டுமா? இப்பெரும் பொருள்கொண்டு நூறாயிரக்கணக்கான கல்விச்சாலைகள் நாடெங்குந் திறப்பிக்கலாம். மிக வறியரா யிருப்பவர்கட்கு அவர் வறுமை நீங்கும் மட்டும் உணவு கொடுக்கும் அறச்சாலைகள் எங்கும் அமைக்கலாம். ஏழை யெளிய பிள்ளைகட்கு உண்டியும் உடையும், நூல்களும் வாங்கிக்கொடுத்துச் சம்பளம் வாங்காமற் கல்வி கற்பிக்கலாம். உழவுத்தொழில் கைத் தொழில்களை அறிவாராய்ச்சியோடு செய்து, இப்போது பெறும் பயனிலும் நூறு மடங்கு ஆயிர மடங்கு மிகுதியான பயனைப்பெறலாம். வாணிகத்திற் பொய்யும் புரட்டுங் கலவாமல் அதனை நேர்மையோடு செய்து பேர் ஊதியத்தை யடையச் செய்யலாம், இவை மட்டுமோ, இந்தியர்கள் தாமே தமது பொருள் கொண்டு புகைவண்டித் தொடர்கள், மின்சார வண்டிகள், வானவூர்திகள் முதலியன வெல்லாம் அமைத்துக்கொள்ளலாம். நீர்வளமில்லாத நாடு நகரங்களுக்குக் குளங்கள் கூவல்கள் எடுப்பித்து நீர்ப்பீலிகள் வைக்கலாம். பொதுமக்கட்கு அறிவுஊட்டுங் கழகங்கள் நிலைபெறுத்தி, அவற்றிற் கலைவல்ல அறிஞர்களை அமர்த்த லாம்; அவர்கள் கடவுளைப் பற்றியும், உயிர்களைப் பற்றியும் உலகங்களைப்பற்றியும் உலகியற் பொருள்களைப் பற்றியுங் குழாங்கொண்டு ஆராய்ந்து அறிவு பெறுதற்குக் கலை யாராய்ச்சி மன்றங்கள் நிறுவலாம்; அவர்கள் ஆராய்ந் தெழுதும் நூல்களுக்குத் தக்கபடி பொருளுதவி புரிந்து அவற்றை அச்சிட்டு நாடெங்கும் பரப்பலாம். ஆண்டுகடோறும் பன்னூறாயிரக் கணக்காய் மக்களுயிரைக் கொள்ளை கொண்டுபோகுங் கொடிய நோய்களை வராமற்றடை செய்து மக்கள் வாழ்நாளை நீளச்செய்து அவரறிவு வளர்ச்சிக்குப் பெருந்துணை செய்யும் மருத்துவக் கழகங்கள் எங்கும் அமைக்கலாம். எல்லா உலகங்களையும், எல்லா உயிர்களையுந் தோற்று வித்து உயிர்கட்கு ஓயாமற் பேருதவி செய்து ஒரே முழுமுதற் கடவுளான ஒரு பெருந்தந்தையை அறியாமற் , பிறந்து பெருந்துன்பப்பட்டு இறந்த மக்களையும், மக்களினுந் தாழ்ந்த சிற்றுயிர்களையுந் தெய்வங்களாக நினைந்து வணங்கும் பெருங்குற்றஞ் செய்வதோடு, வாயற்ற தீங்கற்ற ஏழை உயிர் களாகிய ஆடு, மாடு, கோழி முதலியவைகளைத் துடிதுடிக்க அறுத்து, அவற்றை அத்தெய்வங்களுக்குப் பலியாக ஊட்டி மீளா நரகத்திற்காளாகும் நம் பொது மக்களை அத்தீமையி னின்று விடுவிக்கலாம். சாதியென்றுங் குலமென்றும் வறை யறுத்துக் கொண்டு சிறுவர், சிறுமிகளை அளவிறந்த துயரக் கடலில் அமிழ்த்திவருங் கொடிய செயல்களை ஒழித்து, அறிவும் நற்குணமும் நற்செயலும் அன்புமுடையாரை ஏதொரு வேற்றுமையுமின்றி ஒருங்கு கூட்டி வாழச்செய்யும் மக்கட் கூட்டுறவு மன்றங்கள் எங்கும் நிலைபெறுத்தலாம். ஒரு முழு முதற் கடவுளை எல்லாருந் தடையின்றிச் சென்று வழிபட்டு மகிழுந் திருக்கோயில்கள் எங்கும் எடுப்பிக்கலாம். இன்னும் நம் மக்களின் இம்மை மறுமை வாழ்க்கைக்கு இன்றியமையாது வேண்டிய இன்னும் எத்தனையோ உயர்ந்த ஏற்பாடுகளையெல்லாஞ் செய்விக்கலாம்! இவ்வளவு நலங் களுக்கும் பயன்படுதற்குறிய கோடி கோடியான பெரும் பொருட் குவியல்கள், நம் நாட்டுச் செல்வர்களிடத்துஞ் சிற்றரசர்களிடத்தும் அரசர்களிடத்தும் மடத்தலைவர் களிடத்துஞ் சிறிதும் பிறர்க்குப் பயன்படாதவாறாய் மடங்கி மங்கிக்கிடக்கையில் அப்பொருட்டிரளை அவர்கள்பால் நின்றும் விடுவித்துப் பொதுமக்கட்குப் பயன்படுந் துறையில் இறங்கி முயலாமல் நம் நாட்டுத் தலைவர்கள் நம் நாட்டுப் பொருள் மேல்நாட்டுக்குப் போய்விடுகின்றதே! என்று சொல்லி, ஆராய்ச்சியறிவு சிறிதுமில்லாத சாதி வேற்றுமைச் சமய வேற்றுமைப் படுகுழியினின்றும் ஏற விருப்பமில்லாத நம் இந்திய மக்களை வீணே கிளப்பிவிட்டு, இந்நாட்டுக்குப் பலவற்றாற்பெருந் தீமைகளை உண்டுபண்ணுதல் நன்றாகுமா? என்பதனை எண்ணிப் பாருங்கள். நம் நாட்டவர் கையிற் பொருள் கிடைத்தால் அது நம் பொதுமக்கட்குப் பயன்படப் போவதில்லை! நகைக்குந், துணிக்கும், ஊர்திகட்குஞ், சாதி இறுமாப்புச் சமய இறுமாப்பு களைப் பெருக்குதற்கும், ஏழை எளியவர்களைக் கொடுமையாக நடத்துதற்குந், தீயவொழுக்கங்களை மிகுதி செய்தற்கும், பார்ப்பனருக்குக் கொடுத்தற்கும், ஆங்கில மருத்துவஞ் செய்வார் செலவிற்கும், அழிவழக்காடுதற்கும், இன்னும் இவை போன்ற தீயவற்றிற்குந் தாம் அவரது பொருள் பயன்படும்; அல்லது அவர் பொருள் மேற்பொருள் சேர்த்து வைத்துவிட்டுச் சாகப், பின்வந்தோர் அவற்றையழித்துப் பாழாக்குதற்கே பயன்படும்! இவைகளைத் தவிர வேறெந்த நல்ல துறையிலா யினும் நம் செல்வர்கள் தமது பொருளை மனமுவந்து பயன்படுத்தக் கண்டதுண்டோ சொல்லுங்கள்! மற்று, நமக்குப் புறம்பான மேல் நாட்டவர் கையிற் பொருள் சேர்ந்தால் அஃது எத்துணை நல்ல துறைகளிற் சென்று பயன்பட்டு, உலகத்திற் பரந்து விரிந்திருக்கும் எல்லா வகையினரான மக்களையும் இன்ப அறிவு வாழ்க்கையில் வாழச் செய்கின்றதென்பதைச் சிறிதுணர்ந்து பாருங்கள்! மேல்நாட்டவர் ஒரே முழுமுதற் கடவுளை வணங்குவ தோடு, அவ்வொரு கடவுளை வணங்காமல் இறந்துபோன உயிர்களையும், மரங்கள், விலங்குகள், கட்டைகள், கற்கள் முதலானவைகளையும் அறியாமையால் வணங்கிப் பிழைபடும் ஏனத்தேய மக்களிடத்து இரக்கமுடையர்களாய்க், கோடி கோடியாகத் தமது பொருளைச் செலவுசெய்து, கல்வியறிவு ஆராய்ச்சியிற்சிறந்த தம் குருமார்களை நூறாயிரக்கணக்காய் அத்தேயங்களுக் கெல்லாம் அனுப்பி, ஆங்காங்குள்ள மக்களுக்குச் சமய அறிவையும் புகட்டி வருகின்றார்கள். இங்ஙனம் மேல்நாட்டவர் மற்றைக் கலையறிவுகளுடன் சமய அறிவிலுந் தாம் மேம்பட்டு விளங்குவ நாட்டவரும் அதிற் சிறந்து விளங்கவேண்டுமென்னும் பேரிரக்கமுடையவர்களாய், அதற்கென்று தமது பொருளைக் கணக்கில்லாமற் செலவு செய்து வருதல் போல, நம் நாட்டவர் தமக்கேனும் பிறர்க் கேனும் அங்ஙனஞ் செய்யக் கண்டதுண்டோ? நம் நாட்டி லுள்ள ஓரினத்தவர் தமது சமயக் கல்விக்கேனுந், தம்மோடு உடன் உறையும் மற்றை இனத்தவர் சமயக் கல்விக்கேனும் ஒரு காசாயினுஞ் செலவுசெய்யக் கண்டதுண்டோ? அதுமட்டுமா! ஒரு சில இனங்களைச் சேர்ந்தவர்கள் தாம் வணங்குங் கோயில்களில் தம்மோடு ஓர் ஊரில் ஒருங்கு உறையும் வேறுசில இனத்தவர்களை யுள்ளே நுழையவிடாமற், கிட்ட அணுகினால் அவர்களை வெட்டிச் சாய்க்கின்றார்களே! இவர்கள் தாமா ஒரு நாட்டவர்! இவர்கள் தாமா அருளொழுக்கத்திற் சிறந்த வராக நூல்களிற் புலனாகுஞ் சைவ வைணவ சமயாசிரியர் மரபில் வந்தவர்கள்! இத்தமிழ் நாட்டில் இவ் ஒருசில இனத் தார்க்குள்ள இறுமாப்பும் மனக்காழ்ப்புங் கொடுமையும் வேறெங்கேனும் இருக்கக் கண்டதுண்டோ? இத்தகையவர்கள் கையிற் பொருள் மிகுதியாய்ச் சேர்வது எதற்கு? அவர்களின் கொழுப்பையுங் காழ்ப்பையுங் கொடுமை யையும் மிகுதிப் படுத்துதற்கன்றோ? இக்கொடியவர்கள் கையைவிட்டு நீங்கி அப்பொருள் மேல்நாட்டவர் கையை அடைந்தால் அதனால் உலகிற்கு நன்மையே விளையுமல்லது தீமை சிறிது முண்டாகா தென்பது நன்குப் புலனாகவில்லையா? இனிச் சமயக் கல்வியேயல்லாமற் பிறகல்வித்துறை களிலும் மேல்நாட்டர் தமது பொருளை எத்தனைக் கோடிக்கணக்காய்ச் செலவு செய்கின்றார்கனென்பதைச் சிறிதெண்ணிப் பாருங்கள்! மேல் நாட்டவர் இத்தமிழ்நாட்டில் வருவதற்குமுன் இங்கே உயர்ந்த பள்ளிக்கூடம் ஒன்றாயினும் இருந்ததா? திண்ணைப் பள்ளிக்கூடங்கள் சிலவே எங்கோ சில இடங்களில் வயிற்றுப் பிழைப்புக்கு இல்லா வாத்தியாயர் களால் நடத்தப்பட்டன; அவ்வாத்தியாயர்களிற் பெரும் பாலருந் தமிழ் நன்கு கற்றறியாதவர். ஒரு சிறுவன் தமிழ் எழுத்துக்கள் எழுதப்படிக்கத் தெரிந்து கொள்ளுவதற்கே நாலைந்தாண்டுகள் செல்லலாம். அக்காலத்தில் அச்சுப் புத்தகங்களே இல்லாமையால், உயர்ந்த தமிழ் நூல்களை எளிதிற்பெற்றுப் பயில்வதற்கே இடமில்லாமல் போயிற்று, இவ்வொட்டுத் திண்ணைப் பள்ளிக்கூடங்களிலுந், தாழ்ந்த குலத்தவராக எண்ணப்படுவோர் சேர்ந்து படித்தல் இயலாது. அஞ்ஞான்றிருந்த தமிழ்ப் புலவர் சிலரும் பொருள் வருவாய்க்கு வழியில்லாமையாற் செல்வர் சிலரையடுத்து, அவரைப் பல வகையரலெல்லாம் புகழ்ந்துபாடிக் காலங்கழித்து வந்தார்கள். இவ்விரங்கத் தக்க நிலை இப்போதும் முற்றுமொழிந்து போயிற்யென்று சொல்லுதல் கூடாது. ஆனாலும், மேல்நாட்டவர் இந்நாட்டுக்கு வந்தபின் தமிழ் மக்கட்கும் பிறர்க்கும் விளைந்திருக்குங் கல்வி நலங்கள் எவராலும் மறுக்க முடியா. அவர்கள் இன்னார்க்குக் கல்வி கற்பிக்கலாம் இன்னார்க்குக் கல்வி கற்பிக்கலாகாது என்னும் வேற்றுமை சிறிதும் பாராதவர்களாய்க் கல்வியென்னும் நந்தாமணி விளக்கை எல்லார் கையிலுங், கொடுத்து அறியாமை என்னும் பேரிஞளைக் கடந்து அறிவுலகத்துக்குச் செல்லும் ஒப்புயர்வற்ற வழியைக் காட்டி வருகின்றார்கள் அல்லரோ? பார்ப்பனக் குடி வேளாளக் குடிகள் இருக்குமிடங்களிலே யன்றிப், பள்ளச் சேரி, பறைச் சேரிகளிலும் அவர்கள் நெடுகப் பள்ளிக்கூடங்கள் அமைத்துக் கல்வியை யூட்டி எல்லார்க்கும் அறிவுக் கண்ணைத் திறப்பித்து வருதல் எல்லாரும் அறிந்த தன்றோ? இனி, நன்செய் புன்செய்ப் பயிர்களை விளைத்தற்குங் குளங்கூவல் கிணறுகள் வெட்டுதற்கும், வீடுகள் கட்டுதற்கும், ஆடுமாடுகள் மேய்த்தற்கும், இன்னுந் தமக்கு வேண்டிய எத்தனையோ வேலைகளெல்லாஞ் செய்வித்துக் கொள்ளு தற்கும் இவ்வேழைக் குடிமக்களைப் பயன்படுத்தி, அவ்வழியால் திரண்ட செல்வத்தை யடைந்து இனிது வாழும் நம் நாட்டு அரசர்களுங், குறுநில மன்னர்களும், மடாதிபதிகளுஞ் செல்வர்களுமோவென்றால் அவ்வேழைக்கு ஒருவேளை நல்லுணவாவது அவர்கள் உடுத்துக்கொள்ளுதற்கு ஓர் ஆறு முழத்துண்டாவது கொடுக்கின்றார்களா? இல்லை, இல்லை. அவர்கள் தமிழ் கற்பதற்கு ஒரு சிறு பள்ளிக்கூடமாவது வைத்து நடத்துகின்றார்களா? இல்லை, இல்லை. இதுமட்டுமோ! அவ்வேழைகள் தம் மூர்த்தெருவழியேயுஞ் செல்லல் ஆகாது, தாம் புழங்குந் தண்ணீர்த் துறைகளிலுந் தண்ணீர் முகக்கல் ஆகாது, நான் பெரியவன், அவன் தாழ்ந்தவன் எனக்கு முதலில் திருநீறு துளசி கொடுக்கவேண்டும், அவனுக்கு அப்புறங் கொடுக்கவேண்டும் என்று தமக்குள்ளேயே தம் பெருமையைக் காட்டிக்கொள்ளத் தாம் செல்லுங் கோயிற் கோபுரவாயிலிலும் அவ் ஏழை மக்கள் அணுகுதல் ஆகாது என்று அவர்களைத் துரத்தி அடிக்கிறார்கள். ஏதொரு தீங்குஞ் செய்யாது, எல்லா வகையிலும் நலங்களே செய்து, தம்மையுந் தம்மவரையும் இனிது வாழவைக்கும் அவ்வெளிய மக்களுக்கு, மேற்குலத்தவராகத் தம்மைத்தாமே உயர்த்திச் சொல்லிக்கொள்ளும் மக்கட் போலிகள் எத்தகைய கைம்மாறு செய்கிறார்கள்! பார்த்தீர் களா? அருளிரக்கமுடையார் சிலர் இம்மக்கட் போலிகளைப் பார்த்து, உங்களுக்கு நன்மையே செய்யும் இவ்வேழைகளை ஏன் இங்ஙனம் வருத்துகின்றீர்கள்? என்று கேட்டால், ஊரார் எவர்க்குந் தெரியாத வடமொழியிற் பார்ப்பனர் தமது நன்மையையே கோரி, மற்றைப் பிறரையெல்லாம் இழித்து, அவர்க்குத் தீது செய்யுந் தீய எண்ணத்தோடு எழுதி வைத்திருக் குங் கொடிய மிருதி நூற் கட்டளைகளையெல்லாம் எடுத்து வந்து முழ நீளங்காட்டி, கடவுளே வேதத்தில் இப்படிச் சொல்லியிருக்கிறார், அப்படிச் சொல்லியிருக்கிறார், அவரவர் முற்பிறவியில் செய்த வினைப்படிதானே இப்பிறவியில் மேற்குல கீழ்க்குலங்களிற் பிறந்து துன்புறவேண்டும்! அதற்குநாம் என்ன செய்யலாம்! என்று எளிதாகச் சொல்லி ஏமாற்றி விடுகின்றார் கள். வடமொழி நூல்கள் நமக்கு உரியவைகள் அல்ல, நமக்குரிய எந்தப் பழைய தமிழ் நூல்களிலாவது இத்தகைய கொடுமையை நம்போன்ற மக்கட்குச் செய்யும்படி ஏதேனுஞ் சொல்லி யிருக்கின்றதோ? சைவ சமயாசிரியர்களெல்லாருஞ் சாதி வேற்றுமை சிறிதும் பாராது நடந்தும் பாடியும் இருக்கின்றனரே; நம் ஆசிரியர் செய்தபடியுஞ் சொல்லியபடியு மல்லவா நாம் நடத்தல் வேண்டும்? என்று அருளாளர் கேட்டால், அவையெல்லாம் `பக்தி மார்க்கத்தில் உள்ளார்க்குத் தகுங் `கர்ம மார்க்கத்திலுள்ள நமக்கு அவை தகா என்கிறார்கள். அதன்மேல் பக்திமார்க்கம் உயர்ந்ததா தாழ்ந்ததா? அன்புநெறியைப் பரப்பிய நம் சமயாசிரியர் கடைபிடித்து ஒழுகிய முறைப்படி நாம் நடப்பதுநன்றா? தீதா? என்று வினவினால், அச்சாதி வெறிபிடித்த போலிகள் சமயாசிரியர் எய்திய நிலை வரும்வரைக்கும் நாம் அவர்போல் நடத்தல் தீதாகும் என்று விடை கூறுகின்றனர். அதுகேட்டு மீண்டும் அவ்வருட்மையினாலும், அன்பு அருள் இன்மையால் வரும் வன்செல்வர் ஒற்றுமையின்மையால் வரும் பகைமை பொறானெஞ்ச இறுமாப்பினாலும் பற்றப் பட்டிருக்கும் வரையில் மக்கள் சமயாசிரியர் நிலையினை யெய்தல் யாங்ஙனங் கைகூடும்? என்று கேட்பின், அதற்கவர் விடைகூற மாட்டாமல் மெல்ல எழுந்து நழுவிப்போய் விடுகின்றனர். உண்மையான் நோக்குங்காற் சாதி வெறியர்க்குத் தம் முடம்போடு அழிந்தொழியுஞ் சாதி தான் பெரிதாகக் காணப்படுகின்றதே யன்றி, உடம்பழியினுந்தான் அழியாதாய்த் தம்முயிரோடு உடன்வருஞ் சமயவறிவு பெரிதாகக் காணப்பட வில்லை. தம் சமயாசிரியர் வழி நடவாத இவர்கள் தம்மைச் `சைவர் என்று உயர்த்துப் பேசிக்கொள்வதும், அவர் அருளிச் செய்த திருப்பதிகங்களை ஓதுவதும், அவரைப் பாராட்டிப் பேசுவதும் நகைப்புக்கே யிடமாயிருக்கின்றன. தமது சமயத்தினுந் தஞ்சாதியையே அவர்கள் மேலதாய்க் கருதுகின்றனர் என்பதற்கு அவர்கள் தஞ்சமயத்தவரல்லாத வைணவர் சிலர் தமக்கு உறவினராதல் பற்றி அவரோடு உண்ணல் கலத்தல்களைச் செய்தலே சான்றாகும். தம்முடைய சைவ வைணவ சமயந் துறந்து கிறித்துவ சமயம் புகுவாருஞ், சாதிவேற்றுமைக்கு எள்ளளவும் இடம் இல்லாத அக் கிறித்துவ சமயம் புகுந்த பின்னருந் தமது பாழ்த்த சாதி வேற்றுமையினை விடாப்பிடியாய்ப் பற்றிக்கொண்டு தாம் இறைவனைத் தொழச் செல்லுந் திருக்கோயில்களிலுங் கலகம் விளைக்கின்றன ரென்றாற் சாதியிறுமாப்பின் கொடுமையை என்னென்றெடுத் துரைப்போம்! திருக்கோயில்களிலுஞ் சாதி வேற்றுமை பாராட்டி, ஈரநெஞ்சமின்றி ஒருவரையொருவர் வெட்டிச் சாய்க்கக் கங்கணங் கட்டி முனைந்து நிற்கும் இவர்கள் தாமா ஆங்கில அரசை நீக்கித் தாமாக அரசாள வல்லவர்கள்? இங்ஙனந் தமக்குரிய சமய அறிவையுஞ், சமயாசிரியரை யுஞ், சமய நூல்களையுஞ், சமய வொழுக்கங்களையும் பெரிதாகக் கருதாமற், றாம்பிறந்த சாதியையே அவையெல்லாவற்றினும் பெரிதாகக் கருதி நடக்குந் தமிழர்கள். தமக்குரிய தமிழ் மொழியிலாயினும் உணர்ச்சி வாய்ந்தவர்களாய் இருக்கின்றார் களோவெனின் அப்படியும் இல்லை. தமிழர் பத்தாயிரம் பேரில் ஒருவர் இருவர்க்கே சிறிது எழுத்துக்கூட்டிப் படிக்கத் தெரியும்; தமிழறிவு செவ்வையாக வாய்த்தவர்களைத்தேடப் புகுந்தால், நூறாயிரவர்க்கு ஒருவர் இருவருமே காணப்படுவர். இங்ஙனம் மிக அரியராயக் காணப்படுந் தமிழ் கற்றாரிற் பெரும் பாலார்க்குள்ள அறிவு நிலையாவது, தமிழ் கல்லாத ஏனை யோர்க்கு உள்ள அறிவு நிலையினுஞ் சிறந்ததாகக் காணப்படு கின்றதோ வென்றால், அப்படியும் இல்லை. கல்லாதவர்க்குள்ள சாதி யிறுமாப்பும் மடமைக் கொள்கைகளுங் கற்றவரையும் விட்டு நீங்கியபாடில்லை. கற்றவருங் கல்லாதார்க்கிணங்கி அவர் வழிச்செல்லக் காண்கின்றோமே யன்றிக், கற்றவர் தாங்கற்ற கல்வியறியவாற் கல்லாதாரைத் திருத்தி அவரைத் தம் வழிப்படுக்கக் காண்கின்றோம் இல்லை. தமது தனிச் செந்தமிழ் மொழியில் அன்பு அறிவு அருளொழுக்கங்களை விரிக்கும் நூல்களும், அரசர்கள் அடியார்கள், கற்றவர்களின் உண்மை வரலாறுகளைத் தெரிவிக்கும் பாட்டுகள் காப்பியங்களும், இறைவனைக் கண்டு அவனைக் குழைந்து குழைந்து உருகிப்பாடிய சமயாசிரியர் தந்திருப்பதிகங்களும் நிரம்பிக்கிடக்க, அவற்றின் அருமை யறியாமல், தமிழ்நூல் நலத்திற் றினையளவும் வாயாது பொய்யும் புரட்டுங் கொலை புலை, கட்குடியும் மலிந்த ஆரிய நூல்களைத் தாம் சிறிதும் ஆய்ந்து பாராதிருந்தும், அவற்றை `வேதம், `மிருதி, `இதிகாசம், `புராணம் என்று உயர்த்துப் பேசி அவை தம்மை இறைவன் அருளிச் செய்தனவாகப் பாராட்டித் தாம் கற்ற தமிழையுந் தமிழ் நூல்களையும் இழித்துப் பேசுந் தமிழ்ப் புலவரின் அறிவு நிலை எத்தகையதென்பதை எண்ணிப் பாருங்கள்! தாம் கற்ற வடநூற்கல்வி உலகினர்க்குப் பயன்படா தென்பதை நன்குணர்ந்திருந்துந், தாம் கல்லாத தமிழ் மொழிக் கல்வியே இந்நாட்டவர் முன்னேற்றத்திற்குப் பெரிது பயன்படு மென்பதை நெஞ்சாரத் தெரிந்திருந்துந், தாம் பயின்ற இருக்கு முதலான ஆரிய நூல்களிற் பல்வேறு சிறு தெய்வ வணக்கமும், மக்களின் நல்லொழுக்கத்துறைகட்கு ஆகாதனவும், வெறும் பொய்க்கதைகளும் நிறைந்திருத்தல் செவ்வனே அறிந்திருந்துந், தாம் பயிலாத `தொல்காப்பியம், `சங்க இலக்கியம், `திருக்குறள், `சிலப்பதிகாரம், `தேவாரதிருவாசகம், `பெரிய புராணம், சிவஞான போதம் முதலான அருந்தமிழ் நூல்களில் ஒரு முழுமுதற் கடவுள் வணக்கமும் மக்களின் நல்லொழுக்கத் துறைகட்கு இன்றியமையாது வேண்டுவனவும் உயர்ந்த உண்மை வரலாறுகளும் நிரம்பி விளங்கல் கேட்டிருந்துந், தாம் தமக்குரியதாகக் கருதியிருக்கும் வடநூல்களையே தெய்வ நூல்களாக உயர்த்திப்பேசித், தமக்குப் புறம்பாகத் தாம் கருதி யிருக்குந் தமிழ் நூல்களையெல்லாம் மக்களிலுந் தாழ்ந்தவர்க் குரியவாக இழித்துப்பேசி இந்நாட்டவர் முன்னேற்றத்திற்குப் பெருந்தடையாய் நிற்கும் ஆரிய மாந்தர் தம் அறிவு நிலை எத்தகைய தென்பதையும் எண்ணிப்பாருங்கள்! இவ்வாறாக இத்தமிழ் நாட்டிலுள்ள கற்றவர்கள் நிலையும் நடுவு நிலை திறம்பியதாய், உண்மையை உள்ளபடி ஆராய்ந்துரைத்து மக்களை உண்மையறிவில் மேலெழச் செய்தலிற் சிறிதும் விருப்பு இல்லாமல் அவர் தன் முன்னேற்றத் திற்குப் பேரிடர் பயப்பதுமாயிருத்தலை ஆழ்ந்து நினைய வல்லார்க்கு இந்நாட்டவரும் இவரிற் பலவகையில் வேறுபடாத வடநாட்டவரும் ஒழுங்கு குழுமித் தாமே தமது நாட்டை அரசுபுரிதல் கனவிலுங் கைகூடாதென்பது நன்கு விளங்கா நிற்கும். இஃதிவ்வா றிருக்க. இனி, மேல்நாட்டவரிற் கற்றாரின் அறிவு நிலையினைச் சிறிதெண்ணிப் பாருங்கள்! அவர்கள் தாம் பெற்ற செல்வ மெல்லாந் தமது கல்விப் பயிற்சிக்கே பயன்படுமாறு செய்து தமது ஆங்கில மொழியை மிகத்திருத்தமாகவுந் தீஞ்சுவை யுடையதாகவும் வழங்கி, அதன் கண் எல்லா வகையான கலை நூல்களையும் ஆழ்ந்தாராய்ந்து தெளிந்த அறிவான் நாளு நாளும் இயற்றி உலகமெங்கணுந் தமது மொழிப்பயிற்சியை ஒளிரச்செய்து வருகின்றார்கள். அதுமட்டுமோ! அவர்கள் அயல்நாட்டு மொழிகளையும் நன்கு பயின்று, அவற்றின் கண் உள்ள அரிய பெரிய நூல்களையுந் தமது ஆங்கில மொழியில் திருப்பி, அவற்றின் உண்மைகளையும் நடுநிலை வழாது எடுத்துக்காட்டி, அவைகளும் இவ்வுலகெங்கும் பரவிப் பயன்றருமாறு செய்கின்றார்கள். மற்று, நம் இந்தியநாட்டு மக்கட் வகுப்பினரோ தாந்தாம் வழங்கும் மொழியையன்றித் தம்மிற் பிற வகுப்பினர் வழங்கும் மொழியையும் அதன்கண் உள்ள நூல்களையுங் கற்பதில் வேட்கை சிறிது மில்லாராய் நிற்கும் அளவிலமையாது, அவற்றையும், அவற்றை வழங்கி வருவாரையும் இழித்துப் பேசியும் வாளா மாய்கின்றனர்! இன்னும், மேல்நாட்டவர் தமக்குரிய கிறித்துவ சமய உணர்ச்சியை இவ்வுலகமெங்கணும் பரவச்செய்தற்குத் தமது பொருளிற் பெரும் பகுதியைக் செலவிட்டு வருகின்றனரே யல்லாமல், தமது சமயவுணர்ச்சியை ஒரு கருவியாகக்கொண்டு செல்வப்பொருளை அவர்கள் தேடித் தொகுத்தல் கண்டிலேம். மற்று இந்நாட்டின் கண் உள்ள குருக்கள்மாரோ இந்து சமயப்பெயரால் அளவிறந்த கிரியைகள் சடங்குகளை வகுத்து வைத்து, அவற்றின் வாயிலாகச் செல்வர்கள், சிற்றரசர்கள், அரசர்களின் செல்வமெல்லாங் கவர்ந்து வருதலுடன், ஏழைக் குடிமக்கட்குரிய சிறு பொருளையுமுரிஞ்சி அவர்களையும் வறுமைக்கு இரையாக்கி வருகிறார்கள். ஒருவன் பிறந்தது முதல் அவன் இறக்குமளவும், அவனும் அவனுக்குரியாருங் கடன் பட்டாயினுஞ் செய்து தீர்த்து விடும் படியாக அவர்கள் கட்டி வைத்திருக்குங் கிரியைகளையுஞ், சடங்குகளையும், அவற்றிற்காகச் செலவாகும் பொருட் டிரளையுங் கணக்கிட்டுப் பாருங்கள்! ஒருவன் செத்த வுடனாவது இக்கிரியைகள் ஒழிகின்றனவா? இல்லை, இல்லை. அவன் செத்த பத்தாம் நாளிலுங் கிரியை, ஒவ்வொரு திங்களிலும் மறை நிலா நாளிலுங் கிரியை, ஒவ்வோராண்டிலும் அவன் இறந்த நாளிலுங் கிரியை. இங்ஙனங்கருவாய் வயிற்றி லிருக்கும்போதும், மகவாய்ப் பிறந்து அறை கழிக்கும்போதும், ஆடையுடுக்கும்போதும், காது குத்தும்போதும், பள்ளிக் கூடத்திற் புகும்போதும், மணஞ் செய்யும்போதும், மனைவி யுடன் கூடும்போதும், அறுபதாமாண்டு நிறையும்போதும், இறந்தபோதும், இறந்தபின்னருந் தொடர்பான செலவிற் கிரியைகளைச் செய்து செய்து நம் தமிழ்மக்கள் வறுமையிற் கிடந்துழலுமாறு புரிந்து, அவர்தரும் பொருளாற் கொழுக்கத் தின்று இன்புற்றிரக்கமிலராய் வாழும் ஆரியக் குருக்கள்மார் தஞ் சூழ்ச்சியை எண்ணிப் பார்ப்போர் எவரேனும் உளரா? இங்ஙனந் தொடர்பாகக் கிரியைகளைப் பற்றுமாறு கற்பித்து, அவற்றைத் தமிழர்கள் தாமே செய்யாமல் ஆரியராகிய தம்மைக்கொண்டே செய்வித்தல் வேண்டுமெனவும் வற்புறுத்தி, அவற்றால் தமிழர்கள் பொருளைப் பகற்கொள்ளை கொண்டு இனிது வாழும் ஆரியக் குருக்கள், தாம் தமிழர் இல்லங்களில் அங்ஙனந் தொடர்பாகச் செய்துவைக்குங் கிரியைகளை அவர்க்கு விளங்கும்படியான தமிழ் மொழியிலாவது செய்து வைக்கிறார்களா? அதுவும் இல்லை; தமிழர்க்கு எள்ளளவுந் தெரியாத ஆரிய மொழிச் சொற்களை `மந்திரங்கள் என உயர்த்தி ஏமாற்றிச் சொல்லி, அக்கிரியைகளைச் செய்பவர் களாய், அவர்களைப் பாவைபோல் ஆட்டிவைக்கின்றார்கள். கடவுளைக் கண்டு பாடிய மாணிக்கவாசகர், திருஞான சம்பந்தர் முதலான தெய்வ ஆசிரியர்கள் அருளிச்செய்த தெய்வச் செந்தமிழ்த் திருப்பதிகங்களாந் தெய்வ மாமறை மந்திரங்கள் இருக்க, அவற்றை இழித்து ஒதுக்கி, இந்நாட்டவர்க்குத் தெரியாத வடமொழிச் சொற்களைச் சொல்லி அக்கிரியை களைச் செய்யும் ஆரியக்குருமாரின் தீய எண்ணத்தைக் கண்டுணர்ந்து, அதனைப் பலரறியத் தெரிவிக்கும் அறிவாண்மை வாய்ந்தார் இத்தமிழரில் இல்லையே! இன்னுஞ், சிவபிரான் திருக்கோயில்களில் வழிபாடு ஆற்றுங் குருக்கள்மார் தமிழரினத்தைச் சேர்ந்தவராயிருந்தும், அத்திருக் கோயில்களுக்கு வந்த சிறப்பெல்லாம் அவைகள் சைவ சமயாசிரியராற் பாடப்பெற்றிருப்பது பற்றியே யென்பதை அவர்கள் நன்குணர்ந்திருந்தும், அவர்கள் தேவார திருவாசகச் செந்தமிழ் மந்திரங்களைக்கொண்டு இறைவனுக்கு வழிபாடு செய்யாமல் தமிழ் மக்களுக்குச் சிறிதும் புலனாகாத வடமொழிச் சொற்களை மந்திரங்களென உயர்த்துச்சொல்லி அவற்றைக் கொண்டே கோயில் வழிபாடு முழுதுஞ் செய்கின்றார்கள். ஈதென்ன கொடுமை பாருங்கள்! தமிழ்மொழி வழங்கும் இத்தென்னாட்டில் தமிழ் அரசர்களாலுந், தமிழர்களாலும் அமைக்கப்பட்டுச் சைவ சமயாசிரியர்களால் தமிழ் மொழியிலேயே சிறப்பித்துப் பாடப்பெற்ற திருக்கோயில்களிலேயே தமிழ் மந்திரங்களை வழங்காமற்செய்து, இத்தமிழ் நாட்டுக்கும், இங்கு வணங்கப் படுஞ் சிவபிரானுக்கும் அவனை வணங்குந் தமிழ் மக்களுக்கும் ஏதொரு தொடர்பும் இல்லாத, அவர்களுக்குச் சிறிதுந் தெரியாத வடமொழிச் சொற்களைக் கொணர்ந்து அவற்றைக் கொண்டே அத்திருக்கோயில்களில் எல்லா வழிபாடும் நடக்கும்படி செய்துவிட்ட பார்ப்பனர்தஞ் சூழ்ச்சியையும், அஞ்சாநெஞ்சையும், ஆண்மையையும் எண்ணிப் பாருங்கள்! இத்தமிழ்நாட்டின் கண் எத்தனையோ கோடிக்கணக்கான தமிழ் மக்களும், நூறாயிரக்கணக்கான செல்வர்களும், ஆயிரக்கணக்கான சிற்றரசர்களும் நூற்றுக் கணக்கான மடாதிபதிகளுந் தமிழ்ப் புலவர்களும் நிறைந்திருந்துந் தமிழர்களாகிய எங்களுக்குரிய இத்திருக்கோயில்களில் தேவார திருவாசகச் செந்தமிழ் மா மந்திரங்களைக்கொண்டு வழிபாடு செய்யாமல், எங்களுக்குப் புறம்பான எங்களுக்குத் தெரியாத வடமொழியைக்கொண்டு ஏன் வழிபாடு செய்கின்றீர்கள்? என்று கேட்ட ஆண்மையுடையவர் எவராவது நம் தமிழரில் உண்டா? இத்துனைப் பெரிய இத்தமிழ்நாட்டில், எத்தனையோ கோடிக்கணக்கான தமிழ் மக்கள் நிறைந்த இத்தென்னாட்டில், எல்லாம் வல்ல இறைவனை நேர்முகமாய்க் கண்டு திருப்பதிகங்கள் அருளிச்செய்த ஆசிரியர் நிலவிய இத்தெய்வ நாட்டில், எல்லா இடங்களிலுஞ் சிறந்ததான தூயதான தெய்வம் உறைவதான திருக்கோயிலிலேயே நம் தெய்வ ஆசிரியர் அருளிய தமிழ் மந்திரங்கள் நிலவாமல் அவற்றைப் புறந்தள்ளித், தெய்வத் தன்மை சிறிதுங் காணப் படாத வடமொழிச் சொற்களைக் கொணர்ந்து நுழைத்து, அவற்றைப் பெருமைப்படுத்தித் தேவார திருவாசகச் செந்தமிழ் மாமறை களைச் `சூத்திரப்பாட்டு என்று இழித்துப்பேசும் பார்ப்பனர் கள், எந்தக்காலத்திலாயினும் இந்நாட்டுக்குக் குடியரசு வருவதா யிருந்தால், அதன்கண்ணுந் தமக்கு ஆட்சியையும், ஆக்கத் தையும் நிலைப்படுத்தி, ஏனை மக்களையெல்லாம் அறிவில்லாத குருடர்களாக்கித் தமக்கு அடிமைப்படுத்தி வைத்திருப்ப ரேயல்லாமல், அவர்கட்கு ஏதொரு சிறிய உரிமை யேனுங் கொடுப்பர் அல்லது கொடுக்க விரும்புவர் என்று கனவிலும் நினைக்கின்றீர்களா; நினையாதீர்கள்! நமக்கு உயிரினுஞ் சிறந்த திருக்கோயில் முதல் அரசியல் நிலைகள் கல்விக் கழகங்கள் கைத்தொழிற்சாலைகள் புகை வண்டி நிலையங்கள் உணவு விடுதிகள் மணக்களங்கள் பிணக் களங்கள் ஈறான எல்லா இடங்களிலும் ஆரியப் பார்ப்பனர்களே ஆட்சியுந் தலைமையும் உடையவர்களாயிருந்து, ஏனை வகுப்பினரின் முன்னேற்றத்திற்குப் பெருந்தடை விளைவிப்பவர் களாய் இருக்கின்றார்கள். ஏனை வகுப்பினர் எல்லாரும் ஒன்றுசேர்ந்து விடாதபடி, அவர்கட்குட் பல்வேறு சமயப்பிரிவு சாதிப்பிரிவுகளை யுண்டாக்கி அவ்வொவ்வொரு பிரிவினருந் தத்தஞ் சமயமே, தத்தஞ் சாதியேயுயர்ந்ததென்று சொல்லி ஒருவரையொருவர் பகைத்துப் போராடவைத்து, அப்போராட்டத்திற்கு இடமாக இராமன்கதை, கண்ணன் கதை, கந்தன் கதை, விநாயகன் கதை, காளிகதை முதலிய பலவேறு கட்டுக் கதைகளைத் தமது வடமொழியில் உண்டாக்கி வைத்து, அவற்றை இராமாயணம் பாரதம் பாகவதம் காந்தம் முதலிய புராணங்களாக உயர்த்தி வழங்கி அவை, தம்மை மற்றையெல்லா வகுப்பினருங் குருட்டு நம்பிக்கையால் விடாப்பிடியாய்ப் பிடித்துக் கொள்ளும்படி செய்து விட்டார்கள். தமிழரில் ஆராய்ச்சியறியவுடையார் எவரேனுந் தமிழ் மக்கள் இங்ஙனங் குருட்டு நம்பிக்கையால் அழிந்து போவதைக் கண்டு இரங்கி, இப்பார்ப்பனக் கட்டான கதைகளை நம்பவேண்டாம். அறிவு விளக்கத்திற்குந், தூய ஒழுக்கத்திற்கும் உதவி செய்யும் உயர்ந்த தமிழ் நூல்களை ஆராய்ந்து பயிலுங்கள்! குலமும் ஒன்றே, குடியுமொன்றே, வழிபடு தெய்வமும் ஒன்றே என்று பொதுமக்கட்கு அறிவு தெருட்ட முன்வருவாராயின் உடனே அப்பார்ப்பனரெல்லாரும் ஒரே முகமாய் நின்று அவரை `நாத்திகர் `பிராமண நிந்தகர் `வேத நிந்தகர் என்று பலரறியத்தூற்றி, அவரது அறிவுரை எவரது செவியிலும் ஏறாமற் செய்வதுடன், அவரது வாழ்க்கைக்கும் பலவழியில் தீங்கிழைக்கின்றார்கள். மற்றை வகுப்பினரிற் செல்வமுடையவர்கள் எவர் இருப்பினும் அவரைப் பார்ப்பனர்கள் சூழ்ந்துகொண்டு, அவரது பொருளைப் பல வகையில் உரிஞ்சி விடுவதோடு. தமிழறிஞர்கள் அறிவுரை அச்செல்வர்களின் செவியுள் நுழை யாதபடிக்கும் மிக விழிப்பாக இருந்து தடை புரிந்து விடுகின்றார்கள். அதனால்; இத்தமிழ் நாட்டிலுள்ள செல்வர் களின் பெரும் பொருள் தமிழ் மக்களின் அறிவு விளக்கத்திற்கும், அவர் தம் நல் வாழ்க்கைக்குஞ் சிறிதும் பயன்படாமற் போகின்றது! ஊர்கடோறும் நகரங்கடோறும் `இராமாயணம் முதலானக் கட்டுக்கதைப் `பிரசங்கம் நடைபெறச்செய்து அதன் வாயிலாக ஊரவர் பொருளை எளிதிற் கவர்ந்துகொள்வதுடன் அவ்வறிவில்லா மக்கள் உள்ளத்தில் தம்மையுந் தம்முடைய நூல்களையுந் `தேவர் என்றுந் தேவர்க்குரிய `வேதங்கள் என்றும் நம்பும் அசையாக் குருட்டு நம்பிக்கையையும் பதியச் செய்து, அவற்றால் தம்முடை ஆட்சியையும் முதன்மையையும் ஆரியப்பார்ப்பனர்கள் எங்கும் நிலைநாட்டி விட்டார்கள்; இன்னும் அம்முயற்சியை நடத்தியே வருகின்றார்கள்; ஆங்கில நன்மக்கள் ஆங்காங்கு வைத்து நடத்தும் பள்ளிக்கூடங்களிற் கற்கும் தமிழ் மாணவரின் தமிழ் பாடங் களிலெல்லாந் தம்முடைய புராணக் கட்டுக்கதைகளை நுழைத்து, இளமைப் பருவத்திலேயே அவை நம் சிறார் உள்ளத்திற் பசுமரத்தாணிபோற் இறுக்கமாகப் பதியவைக் கின்றார்கள். இவர்கள் இத்தமிழ்நாட்டை பாழ்படுத்தும் இவ்வுளவு களை, உயர்நிலைகளிலுள்ள தமிழறிஞர் நன்கறிந்து வைத்துந் தமக்கு வரும்பொருள் வருவாயையோ, தமது நிலை உயர்வையோ மேலதாகக் கருதி, அவரிழைக்குந் தீங்குகட் கெல்லாந்தாமும் உடந்தையாய் நின்று நம் அருமைச் சிறாரறிவைப்பாழாக்கி விடுகின்றனர்! இன்னும் இங்ஙனமே பார்ப்பனர்களாலும், அவர்களைப் பின்பற்றி அவர்களைப்போல் நடக்கும் ஒழுகலாறுகள் உடையராய் வடமொழிக்கும் வடநூல்கட்கும் ஏற்றஞ் சொல்லித் தமிழையும் தமிழ் நூல்களையும் புறத்தொதுக்கி நடக்குஞ் சைவ வைணவர்களாலும் இந்நாட்டுக்கு விளைந் திருக்கின்ற தீமைகளையெல்லாம் எடுத்துரைக்கப் புகுந்தால் இவ்வேடு இடங்கொள்ளாது. ஆதலால், இந்நாட்டுக்கு நலந்தேடுபவராக வெளி வருந் தலைவர்கள் உண்மையாகவே தாம் நலஞ்செய்பவர்களா யிருந்தால், இப்போதுள்ள மிக இரங்கத்தக்க நிலைமையில் நம் குடிமக்களை, நம் ஆங்கில அரசுக்கு மாறாகக் கிளப்பிவிட்டு அவர்களையும், அவர்களின் வாழ்க்கையையும் பாழ்படுத்துஞ் செயலை விடுத்து, யாங்கூறும் நன் முயற்சிகளை விடாப் பிடியாய்ச் செய்து, அவர்களை ஆராய்ச்சியறிவிலும், பயன்படு முயற்சியிலும் முன்னேறுமாறு உதவி புரிதல்வெண்டும். முதலாவதாக, ஊர்கடோறுந் தமிழ் பள்ளிக்கூடங்கள் திறப்பித்துச், செல்வர்கள் வீட்டுப் பிள்ளைகளைத் தவிர மற்றை எல்லாப்பிள்ளைகளும் பொருட் செலவின்றித் தனித்தமிழ் கற்கும்படி செய்தல் வேண்டும். அவர்கட்குக் கற்பிக்கும் நூல்களில் ஆரியக் கட்டுக்கதைகள் சிறிதும் விரவல் ஆகாது. ஒழுக்க முறைகளும், இயற்கைப்பொருள் இயல்புகளும், சிற்றுயிர்களின் தன்மைகளும், ஆண்மையிற் சிறந்தாரின் வரலாறுகளும், மக்களின் நாகரீக வரலாறுகளும், உழவு வாணிகம் கைத்தொழில்கள் செய்யும் முறைகளும், கடவுளைக் கண்டு பாடிய சான்றோர் வரலாறுகளும், உண்மையாராயும் முறைகளும் இன்னும் இவைபோன்றவைகளுமே அந்தந்த வகுப்புக்குத்தக்கபடி செந்தமிழில் எழுதப்படல் வேண்டும். இரண்டாவது: தமிழ்கற்ற அறிஞர்களை ஆராய்ச்சி முறையிற் பயிற்றி ஊர்கடோறும் விடுத்துப், பொதுமக்கட்கு மேற்கூறிய பொருள்களை விளங்க எடுத்துச் சொல்லி, அவர்கள் நல்லறிவு பெறுமாறு செய்வித்தல் வேண்டும். ஊனுணவு ஒழித்தவர், ஊனுணவு ஒழியாதவர் என்னும் இருபிரிவினரன்றி, வேறு எவ்வகைச் சாதிப்பிரிவுஞ் சமயப்பிரிவும் இல்லாமல் ஒழித்தல் வேண்டும். பிறப்பு இறப்பு இல்லா எல்லாம் வல்ல ஒரு முழு முதற்கடவுளையே எல்லாரும் வணங்கும்படி செய்வித்தல் வேண்டும். பிறந்து இறந்த உயிர்களைத் தெய்வங்களாக வணங்குஞ் சிறு தேவதை வணக்கத்தையும், அவைகளுக்கு இடும் உயிர்ப் பலியையும் அறவே ஒழித்தல் வேண்டும். மூன்றாவது: மேற்குறித்த நன்முயற்சிகளைச் செய்து அவற்றால் விளையும் நலங்களை நிலைபெறுத்துதற்கு ஏராளமான பொருள் வேண்டியிருக்குமாதலால், வீணே கோடி கோடியான பொருட்டிரளை வைத்துக்கொண்டு அவற்றை மேற்குறித்த நன்முயற்சிகளுக்குப் பயன்படுத்தாமல் இறுமாந்து கிடக்குஞ் சிற்றரசர்களும், மடத்தலைவர்களும் அப்பெரும் பொருட்டிரளில் ஒரு சிறு பகுதியை மட்டுந் தமக்கு எடுத்துக் கொண்டு, மற்றைப் பெரும் பகுதியைக் குறிப்பிட்ட முயற்சி களுக்குக் கொடுத்துவிடுமாறு, எந்தெந்த வகையில் முயலல் வேண்டுமோ அந்தந்த வகையாலெல்லாங் கடைப்பிடியாய் நின்று முயலல்வேண்டும். முயன்றுபெற்ற பொருளை இந்நன் முயற்சிகளுக்குப் பயன்படுத்துவதிலும் மிக விழிப்பாயிருத்தல் வேண்டும். இங்ஙனம் ஒழுங்கான முறையில், நம்நாட்டவர்கட்கு உண்மையாகவே நலந்தரு முறையில், தலைவர்களாக வருவோர் தமது அரும்பெரு முயற்சியைப் பயன்படுத்துவாராகவென்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம். அறிவுரைக்கொத்தின் ஆட்சேபணைக்கு மூலகாரணம் (கைவல்யம் குடி அரசில் எழுதுவது) மறைமலையடிகள் என்கிற சுவாமி வேதாசலம் அவர் களால் எழுதிய அறிவுரைக்கொத்து என்னும் புத்தகத்தைப் பற்றின ஆட்சேபணை சமாதானம் நடந்து வருவது பத்திரிகை மூலமாக பலர் அறிவார்கள். ஆட்சேபணை உண்டாவதற்குக் காரணமென்ன என்பதை, முதலில் தெரிந்துகொண்டு பின் மற்ற பாகங்களில் செல்லுவோம். தமிழ்நாட்டில் தமிழர்களைச் சூத்திரர்களென்று, எப்பொழுது சொல்லப் பட்டதோ அன்றுமுதல் தமிழர்களின் கல்வி கடவுளின் பேரால், சமயத்தின் ஏற்பாட்டால், சாத்திரத்தின் பிரமாணத்தால், ராஜாக்களின் கொடுந் தண்டனையால், தமிழர்களின் கல்வி தடுக்கப்பட்டு, தமிழர்கள் பார்ப்பனர் களுக்கும், நூல்களுக்கும், சைகைகளுக்கும், எல்லைகளுக்கும், கற்பனைத் தடைகளுக்கும் தலைகுனிந்து பல தலைமுறையாய் தமிழில் வழங்கப்பட்டு இருந்த அறிவு நூலும் போய், வந்த நூலைப் படிக்க வழியுமில்லாமல் போயிற்று. தப்பித்தவறிச் சிலர் கல்வியிலும் அறிவிலும் மேம்பாடு அடைந் திருந்தாலும் அதை வெளியில் காட்ட வேண்டுமானால் பார்ப்பனர்களைப் பூஜிதர்களாகக் கொண்டவர்களாகவும் அவர்கள் எழுதும் நூல்கள் அப்பூஜ்ஜியதையை ஒட்டியதாகவு மிருக்க வேண்டும். இல்லையேல் அவர்கள் பேரில் பழிகொண்ட பல ஆட்சேபணைகளைக் கிளப்பி அவதூறு சொல்லி அடக்கி அழித்துவிடுவார்கள். இந்தப்படி அநேக காலமாகவே நடந்து வந்திருக்கிறது. ஆங்கிலேயே அரசாட்சியில்கூட இன்னும் இப்படிப்பட்ட அவர்கள் எண்ணங்கள் பிரயத்தனங்கள் நின்றபாடில்லை. கண்ணாடி மூடி எல்லைக்குள்ளே வளர்க்கப்பட்ட பொன்னிற மீன்கள், கண்ணாடியை தண்ணீர் என்று நினைத்து அதில்மோதி அந்த எல்லைக்குள்ளே சுற்றினபழக்கம் பெரிய தண்ணீர்த் தொட்டியில் போட்டாலும் தண்ணீரைக் கண்ணாடியென்று நினைத்து பழைய மூடி எல்லைக்குள்ளே எப்படி சுற்றுமோ அதுபோல, பழைய இந்து ராஜாக்களின் குறுகின களத்தில் தெய்வத்தின் பேரால்-சமயத்தின் கொடுமை யால்- சாத்திரத்தின் பாரபட்சத்தால், பழமொழிகளால்-கிரியை சடங்குகளால்-மனித உரிமையை மறந்துவிட்ட தன்மை தமிழர்களின் எலும்புக்குள் ஊறிக் கிடப்பதால், ஆங்கிலேய ராஜ்ஜியத்தின் விசாலமான களத்தில் வாழ்ந்தாலும் பார்ப்பன ரல்லாதார்களை பழைய பயம் விடுவதில்லை. ஆங்கிலம் படித்து ஆங்கிலம் படித்து அவர்கள் உடை உடுத்தி ஊன் உண்டு அவர்கள் மூக்குக்கண்ணாடியே போட்டுக்கொண்டாலும் தெளிவுண்டாகவில்லை. சூத்திரன் கல்வியில், அறிவில் மேன்பாடு அடையக் கூடா தென்று இந்து வேதத்தில் பார்ப்பனர்களுக்கு ஆதாரங்களிருக்கின்றன. அந்த ஆதாரங் களைக்கொண்டும் அது கடவுள் சொன்னதென்றும், ரிஷிகள் சொன்னதென்றும் இந்து அரசர் களுக்குப் போதித்து வசப்படுத்தி அவர்களால், இவற்றை எதிர்த்துப் பேசினவர்களையும் அநேக அறிவாளிகளையும் கொன்று அழித்தார்கள். மதுரை திருமலை நாயக்கர் காலத்தில் அவருடைய குருவிடம் அறிவுநூல் என்று சொல்லப்படும் வேதத்திலுள்ள ஒரு வாக்கியத்திற்கு பார்ப்பனரல்லாத ஒரு வித்வான் பொருள் கேட்டதற்கு, உடனே குருவானவர் ராஜ்ஜியத்தின் அதிகாரத்தை ஒரு முகூர்த்த நேரம் பெற்று அரசு செலுத்தி அந்த வித்வானை கழுவில் போட்டு தலைக்குமேல் பத்து அங்குலம் கழு ஊசி வரும்படியாகச் செய்து இதுதான் சூத்திரனுக்கு அறிவு நூலின் அர்த்தம் என்று சொன்னாராம். இப்படி நடந்த சம்பவம் அனந்தம். மோட்ச உபதேசம் யெல்லோருக்கும் பொதுவென்று சொன்ன ராமானுஜாச்சாரியாருக்குக்கூட ஒருதரம் பாஷாணம் வைத்தார்கள். ஒருதரம் கெங்கையில் தள்ளப்போனார்கள் என்றால் மற்றவர்களைப்பற்றிக் கேட்கவேண்டுமா? வால்மீகி ராமாயணத்திலில்லாத ஈபர நிச்சயத்தை கம்பராமாயணத்தில் இராமருக்கு ஏற்றி அந்த ராமர் பிராமணர் காலில் விழுந்து வணங்கினார் என்று கம்பர் எழுதி பார்ப்பனர் களை தோத்திரம் செய்ததினால்தான் கம்பராமாயணம் அரங்கேற்றப்பட்டதே ஓழிய அப்படியில்லாமலிருந்தால் அன்றே கம்பராமாயணமும் கம்பரும் துலைக்கப்பட்டிருக்கும். பார்ப்பனர்களை பூஜிதர்களாகவும் மற்றவர்கள் என்றும் மடையர் களாகவிருக்கும்படியாகவும் எழுதி வந்த வித்வான் களிடம்கூட அவன் இவ்வளவு படித்து விட்டானே யென்கிற ஒரு கோபம்தானிருக்கும். உள்ளதை உள்ளபடி சொல்லி அவர்கள் மோசடிகளை ஒரு சிறிது சொன்னாலும் அவர்களைத் துலைத்தே விடுவார்கள். இது அவர்கள் பரம்பரை ஏற்பாடாகும். சூத்திரன் வேதத்தைக் கேட்டாலும் படித்தாலும் ஈயத்தைக் காதில் ஊற்று, தொண்டையில் கொழுவை விடு, நெஞ்சில் ஆணிவைத்தடி என்றும், பிராமணனை குற்றம் சொன்னால் நாக்கை அறுத்துவிடு, கையை நீட்டினால் கையை வெட்டு என்றும் கடவுளால் சொல்லப்பட்ட இந்து வேத மிருதிகளில் சொன்னவைகளும் இப்பொழுது நமக்குக் கதைபோலவிருக்கிறது. ஆனால் இதுதான் நிஜமாகவே ஆங்கிலேய ராஜாங்கத்திற்கு முன் நடந்துவந்த தருமச் சட்டங் களாகும். அந்த சட்டங்களின் அமுல்கள் அத்தனையும் நடத்தின ராஜாக்கள் தான் தெய்வங்களாகவும், அவதார புருஷர்களாகவும், தெய்வம் எதிர்கொண்டழைக்கப் பட்டவர் களாகவும் தெய்வலோகத்துப் புஷ்பமாரியைத் தாக்கினவர் களாகவும், அதி வீரர்களாகவும் இதிகாச புராணங்களில் குறிப்பிடப்பட்டிருப்பவர்களாவார்கள். இரக்கபுத்தியுடைய அநேக நல்ல ராஜாக்கள் கூட அந்தச் சட்டங்களை நடத்தாமலிருக்க மார்க்கமில்லாமல் செய்யப் பட்டிருக்கிறது. விஷ்ணுவின் அவதாரமான ராமரே அந்த சட்டப்பிரகாரம் பிர்மஞானத்தை விரும்பின சூத்திரன் தலையை வெட்டின தன் கையைப் புகழ்ந்தார் என்றும், கிருஷ்ணன் பிராமணர்கள் பாதத்தைப் பூஜித்தார் என்றும், தருமர் சதா பிராமணர்கள் சன்னதியிலேயே இருந்தா ரென்றும் இதிகாசங்களிலெழுதப்பட்டு அதையே ராஜாக் களுக்கு உபதேசிக்கப்பட்டிருந்ததினாலும் `பிராமணர்களும் க்ஷத்திரிய அரசர்களும் ஒற்றுமையோடு எந்த தேசத்தில் ஆட்சி புரிகின்றார்களோ வைசிய சூத்திரர்களின் பெயர் பிரதானமாக எந்த தேசத்தில் வெளிவரு வதில்லையோ அத்தேசம் பரிசுத்த தேச மென்று யஜுர் வேதத்திலெழுதப் பட்டிருப்பதாலும், மேற்சொன்ன சட்டங்களை நடத்தாத தேசத்தில் தருமம்கெட்டு தேசம் அழிந்து விடும் என்றும், அந்தச சட்டத்தை நடத்தாத க்ஷத்திரியன் க்ஷத்திரியனுக்குப் பிறந்தவனல்லன் விபசாரத்தில் பிறந்தவன் என்றும் சாதிரங் களிலெழுதப்பட்டிருப்பதாலும், வேதம் கடவுளால் சொல்லப் பட்டதென்கிற நம்பிக்கை உண்டாக்கப் பட்டிருப்பதாலும், இதை நம்பாதவன் நாதிகன் என்கிற தூஷணையாலும், அந்த சட்டங்களை அலட்சியம் செய்த ராஜாக்களை எங்கள் தெய்வமான இந்திரன் கொன்று அழித்து விட்டார் என்கிற வேத சுலோக பயத்தாலும் இந்து ராஜாக்கள் அந்தச் சட்டங்களை அமுல் நடத்தினார்கள். அந்த சட்டங்களுக்கும் அதன் கொடுமையான தண்டனைகளுக்கும் பயந்துதான் படிப்பு என்பதே போய்விட்டது; படிக்கவும் கூடாது படிக்க வசதியுமில்லை என்று ஆகிவிட்டது. இப்பொழுதும்கூட கிராமங்களில் தாழ்ந்த ஜாதி யென்னப்பட்டவர்கள் வெள்ளை வேஷ்டியைக் கண்டால் சாமியென்று கும்பிட்டு டிச்சில் விழுவதெல்லாம் அப்படிப் பட்ட பரம்பரை பயந்தானே? அதுபோல எந்தப் பார்ப்பானைக் கண்டாலும் வாங்க சுவாமி என்று கும்பிடுவது அந்தச் சட்டத்தை அனுபவித்த பரம்பரை பயத்தின் குணமேயாகும். நம்முடைய ஆங்கிலேய ராஜாங்கத்தைக் குற்றம் சொல்லலாம், ஆங்கிலேயர்களை தப்புச் சொல்லலாம், விரோதப்பட்டால் அலட்சியப் படுத்தலாம், அளவுக்கு மீறினால் வழக்குண்டு, விசாரணையுண்டு, சாட்சியுண்டு, அப்பீல் உண்டு, மன்னிப்புண்டு அவர்களையும் நியாய தலத்தின் முன்னே இழுக்கலாம், தண்டனையுண்டு, வெட்கப் படுத்தலாம், அந்த வெட்கமும் வெருந்தன்மையின் மானத்திற்கு லெட்சணமென்றும் மதிக்கப்படும். அந்த காலத்து வேதமிருதி சட்டங்களிலோ அதில்லை. பிராமணர் எனப்பட்டவர்களுக்கு அடிபணியாவிட்டால் ஆக்கினைதான். அந்தச் சட்டத்தினால் பிராமணன் என்று சொல்லப்பட்டவன் தனது தானத்தை முன் ஜாக்கிரதையாவே கெட்டிப்படுத்திக் கொண்டான். அதை என்றும் நிலைநிறுத்த ஜனங்களின் அறிவை ஒடுக்கிவிட்டார்கள். அறிவின் வேர்களை பார்ப்பன ரல்லாதாரிடமிருந்து பறித்து விட்டபடியால் இவர்களுக்கு சுதந்திரமாய் காரியம் செய்ய சாத்தியப்படவில்லை. பிறகு சூத்திரன் என்னப்பட்டவர்களின் தலை பிராமணன் எனப்பட்டவர்களின் பாததூளியில் ஈடுபட்டிருப்பதைக்காக்க வேறு சிரமம் வேண்டியதில்லை யாயிற்று. இப்பொழுது நம்முடைய பிரிட்டிஷ் ராஜாங்கத்திலோ எந்த ஜாதிக்காரர்களுடைய விடுதலைக்கும் நல்ல வழிகாட்டும் அறிவுக்கதவுகளை அடைத்து விடவில்லை. ஆங்கிலேய அதிகாரிகளுக்குப் பட்சாத்தாபமும் உண்டாகிறது. அதனால் இந்து வேதமிருதிகளிலுள்ள தலைவெட்டுவதும், ஈயத்தை ஊற்றுவதும், தொண்டையில் சிலாக்கு விடுவதும் கழுவேற்று வதுமான கொடுமைகளை கிரிமினல் சட்டத்தால் நிறுத்தி னார்கள். மற்ற இந்து லாவிலுள்ள பழக்கவழக்கமென்கிற அனியாயங்களை புத்தியுள்ள பிள்ளைகள் பிழைக்கட்டும் என்று ஜன சமூகத்திற்கே விட்டுவிட்டார்கள். வேதமிருதி புராணங்களை ஆதாரமாகக்கொண்டு எழுதினதே இந்துலா வாகும், சன சமூகத்தில் சமயோஜித விபகாரப் புத்தியுடைய வக்கீல்களும், அதிகாரிகளும், குமாதாக்களும், பார்ப்பனர் களில் அதிகமாகவிருப்பதாலும், புரோகிதன், குரு, ஆச்சாரி முதலியவர்கள் பார்ப்பனர்களாக விருப்பதாலும் வேதத்தால் சொல்லப்பட்ட பிராமணதாசி மக்களான சூத்திரர்களென்னப் பட்டவர்களில் சிலரும், தாழ்ந்த ஜாதிப் பெண்ணுக்கும் பார்ப்பன ஆணுக்கும் பிறந்தவர்களென்று சொல்லப்பட்ட வைசியர்களில் பலரும், தங்களை வைதீகர்களென்று நினைத்துக் கொண்டு பார்ப்பனர்களின் அடியைத்தாங்கிக் கொண்டிருப்பதாலும், சமயமோ சாதிரமோ மனித கடமையோ தெரியாத பணக்காரர்கள் பலர் பார்ப்பனர்களிடம் பல காரணங்களால் வசப்பட்டுப் போவதாலும் பழக்க வழக்கத்தின் கொடுமைகள் இந்துலாவை விட்டுத் துலைவ தில்லை. இந்தியா சட்டசபையில் தீண்டாமை சட்டம் போனகதியைப் பார்த்தாலே இது விளங்கிவிடும். மற்றும் சர் ராஜா அண்ணாமலை செட்டியார் கலா சாலையில் அறிவுநூல் வகுப்பில் பார்ப்பனப் பிள்ளைகள் தவிர மற்ற ஜாதிப் பிள்ளைகளை சேர்த்துக்கொள்ளுவதில்லையே அது ஏன்? பழைய சாதிர சட்டத்தின் ஏற்பாடுதானே? வியாபாரத்திற்கு வந்தவன், சாட்சி சொல்ல வந்தவன், தாசி வீட்டிற்கு வந்தவன், நாடகமாட வந்தவன், தலாலிக்கு வந்தவன், புதிதாக வேலைக்கு வந்தவன் இன்னும்பல வேலைக் காக வந்தவன் முதலிய பார்ப்பனர்களுக்கு திருவனந்தபுரம், கொச்சி புதுக்கோட்டை இன்னும் பல இந்து ராஜாக்கள் சத்திரங்களில் சாப்பாடு போடுவதும், மற்ற பசித்தவர்களுக்கு சாப்பாடு இல்லாமலிருப்பதும் ஏன்? பழைய சாத்திர சட்டந்தானே? சமூகச் சீர்திருத்தத்தில் காங்கிர தலையிடாதென்றும், ஜடி கட்சியை வெட்டிப் புதைக்க வேண்டுமென்பதே காங்கிரசின் முதல் வேலை என்று சத்தியமூர்த்தி அய்யர் சொல்லுவதும் ஏன்? பழைய சாதிர ஆதாரம்கொண்டு மற்ற சமூகங்களை அடக்கிவிட வேண்டுமென்கிற அந்தரங்க எண்ண மல்லவா? சமயமென்றும், அவதாரமென்றும், ஆச்சாரி களென்றும் ஒவ்வொரு காலத்தில் ஒவ்வொன்றைச் சொல்லி அடக்கினதுபோல இப்பொழுது தேசாபிமானமென்று அடக்கப் பார்க்கிறார்கள். இதிகாசப் புராணங்கள் தவிர மற்றவைகளைப் பாடமாகப் பள்ளியில் வைக்கப்படாதென்று இந்துப் பத்திரிகை தலையங்க மெழுதக் காரணமென்ன? இதிகாச புராணங்களில்தான் மற்ற ஜாதிக்காரர்களின் தலை பார்ப்பனர்களின் பாதத்திலிருக்கிறது. இந்து ராஜாங்கத்தில் பார்ப்பனர்களின் பாதக் குறடைத்தாங்கின தலைகள் ஆங்கிலேய ராஜாங்கத்திலும் பார்ப்பனர்களின் பூட்களை உச்சந்தலையில் இனியும் தாங்கிக் கொண்டே இருங்கள் என்பதை மறக்காமலிருப்பதற்குத்தானே? பார்ப்பனரல்லாத பல பண்டிதர்கள் இதிகாச புராணங் களைப் பிரசங்கம் செய்கிறார்கள். சமய ஆச்சாரியாரின் சரித்திரங்களையும் பக்தியோடு சொல்லுகிறார்கள். அந்தக் கூட்டங்களில் பார்ப்பனர்களைக் காண்பதில்லையே அது ஏன்? சூத்திரன் சொல்லுவதைக் கேட்கலாமா? ஆகாதே என்று பார்ப்பனப் பெண்களும் சொல்லுகிறார்களே அது ஏன்? பார்ப்பாரல்லாதவர்கள் அறிவாளிகளாக இருக்கிறார்கள் என்பதை ஒத்துக்கொள்ளாமலிருக்கத்தானே? சிவன் கோவில்களில் பார்ப்பனர்கள் தேவாரப் பாராயணத்திற்குமுன் பிரசாதம் வாங்கிப்போக அரும்பாடு படுகிறார்களே அது ஏன்? தேவாரத் திருவாசகத்தைப் பண்டாரப் பாட்டென்கிறார்களே அது ஏன்? அப்பர் சுவாமிகளுக்குப்பின் வேதம் சொல்லுவதற்கு மறுப்பதும் பின் அதிகக்கூலி கேட்பதுமேன்? தாயுமானவர், இராமலிங்க சுவாமிகள் பாட்டைப் போல உருக்கமான பாட்டுண்டா? பட்டணத்தடிகள், அருணகிரி நாதர் பாட்டைப்போல வைராக்கியமுடைய பாட்டுண்டா? இந்தப்பாட்டுகளைப் பார்ப்பனர்கள் நாடகக் கொட்டகை களில் பாடுவதேயல்லாமல் கோவில் சன்னதிகளில் பக்திக்காக எவரும் பாடுவதில்லையே அது ஏன்? சுவாமி விவேகானந்தர் மேல்நாடுகளில் இந்து சமயத்தைப் பெருமையாகச்சொல்லி அதில் ஜெயமும் பெற்றார். இவ்விடம் வந்தவுடன் அவருக்குப் பூரண கும்ப மெடுக்கப்பட்டது. பிராமணனென்றால் இன்னவனென்றும் பிராமண தருமத்தையும், அவர்கள் செய்த சில குற்றங்களையும், இனிச் செய்யவேண்டியவைகளையும் சொன்ன வுடனே அவர்பின் செல்லுவதை பார்ப்பனர்கள் நிறுத்தி விட்டார்கள். அது ஏன்? மகாத்மா காந்தியைத் தோத்திரம் பண்ணினார்கள்; பச்சையப்பன் கலாசாலைப் பிரசங்கத்தைக் கேட்டவுடன் கும்பகோணத்துப் பார்ப்பனர்கள் கோபித்தார்கள். ஆலைய தெரிசன உரிமை எல்லாருக்கும் வேண்டுமென்ற உடனே பல பார்ப்பனர்களும் பண்டிதர்களும் கூடி வேதத்தைச்சொல்ல இவனுக்கு அதிகாரம் யார் கொடுத்தார்கள் சமகிரதம் தெரியாத முட்டாள் என்றார்கள். அது ஏன்? இவர்களெல்லாம் சமயத்தில், படிப்பில், பக்தியில் உயர்ந்தவர்கள்தானே? ஆகவே, சுருங்கச் சொல்லுவதானால் சூத்திரன் என்று சொல்லப்பட்டவர்கள் கல்வி அறிவை அடையக்கூடாது என்பதும், அப்படி அடைவதற்கு அவர்கள் சாதிரமும் மன எண்ணமும் பழக்கமும் இடம் கொடுக்கவில்லை. கால சக்தியானது அவர்கள் எண்ணங்களையும், சாதிரங்களையும் தள்ளிக்கொண்டே போகிறது என்பதை அவர்களில் பலர் அறிந்திருந்தாலும், மற்றவர்களின் அறியாமை யும் ஆலோசனையில்லாமையும் கண்டு, அந்த எண்ணத்தையும் முயற்சியையும் அவர்கள் விடுவதில்லை. பரம்பரமாய் ஏமாற்றிவந்த பழக்கத்தினால்தான் இவ்விதமான காரியத்தில் வெகு சுளுவாய்ப் பிரவேசிக்கிறார்கள், வெற்றியுமடை கிறார்கள். அதனால்தான் சூத்திரன் என்பதற்கு மடையன் என்கிற அர்த்தமும் சொன்னார்கள். அதனாலேயே குடிஅரசுப் பத்திரிகை சூத்திரன் என்பதின் அர்த்தத்தை யெல்லாரும் தெரிந்துகொள்ளவேண்டும் என்று இவ்வளவு கஷ்டப் படுகிறது. எது இழிவு? பாரதி பாடலா- அறிவுரைக் கொத்தா? (குடி அரசில் நீலாவதி எழுதியது) சுவாமி வேதாசலமவர்களால் எழுதப்பட்ட அறிவுரைக் கொத்து என்னும் தொகுப்பானது காலேஜ் பிள்ளைகளுக்குப் பாடப் புத்தகமாக வைக்கப்பட்டு விட்டதில் பார்ப்பனப் பத்திரிகைகள் சகிக்கமூடியாத ஓலமிடுகின்றன. இவ்வோலம் எதற்காக என்று நம்மால் தெரிந்துகொள்ள முடியவில்லை. ஆனால் அவைகள் அப்பாடத்தைப் பாடப்புத்தகமாக வைத்தது தப்பு என்று மாத்திரம் ஒரே அடியாய் முகவுரை கூறுகின்றன. விலை அதிகமென்றும் ஒரு பத்திரிகை கூறுகிறது. 80 பக்கம் 100 பக்கம் உள்ள தாகூர் கவிகளின் புத்தகம், பர்னாட்ஷா புத்தகம் போன்றவைகள் 3-ரூபாய் 4-ரூபாயுக்கு விற்பனையாகும் விஷயம் இவர்கள் அறிந்திருந்தால் சுவாமிகள் புத்தகத்தின் விலையைப்பற்றி பொறாமைப்பட இடமேற் பட்டிருக்காது. மற்றும், சுவாமிகளின் புத்தகத்தில் கண்ட இரண்டொரு விஷயம் மக்களை அவமானப்படுத்துவதாகவும், குறை கூறுவ தாகவும் தமிழ் மக்களுக்காக பார்ப்பன மக்கள் சிபார்சு பேசுகிறார்கள். இது, ஆடு நனைகின்றதே என்று ஓநாய் பரிதாபப் பட்டதற்கே ஒப்பாகும். உண்மையில் பார்ப்பனர்களுக்குப் பரிதாபம் இருக்கிறதாய் இருந்தால் சுவாமிகள் வாக்கியத்தில் எதையாவது சொல்லி அதைப் பொய் என்று ஆதாரத்துடன் விளக்கி இருந்தால், அதைப்பற்றி யாராவது கவனித்து ஏதாவது செய்யலாம் அப்படி இல்லாமல் சாமிகள் இப்படி எழுதினார், அப்படி எழுதினார் என்று மாத்திரம் சொன்னால் கல்வி அறிவு இல்லாத மூடமக்கள் தான் நம்பமுடியுமே ஒழிய சொந்த அறிவும் ஆராய்ச்சியும் உடையவர்கள் யாரும் லட்சியமே செய்யமாட்டார்கள். தமிழ் மக்களுடைய யோக்கியதையைப் பற்றியும், பார்ப்பனருடைய யோக்கியதைப்பற்றியும் சுப்பிரமணிய பாரதியார் எத்தனையோ இடங்களில் எவ்வளவோ கண்டித்து நாக்கைப் பிடுங்கிக்கொள்ள வேண்டிய அளவு அவமானம் ஏற்படும்படி எழுதி இருக்கிறார். அதற்கு இன்றைய தேதிவரை எந்தப் பார்ப்பானும் தமிழ் மக்களுக்கு அவமானம் ஏற்பட்டதே என்று பரிதாபப்படவும் இல்லை, பார்ப்பனர்களுக்கு இழிவு ஏற்பட்டதே என்று நாக்கைப் பிடுங்கிக்கொள்ளவும் இல்லை. அந்தப்பாட்டாவது:- தமிழன் பாட்டு வீரம்போய் சோரரானோம் மண்வெட்டிக் கூலிதினல் ஆச்சே- எங்கள் வாள்வலியும் வேல்வலியும் போச்சே விண்முட்டிச் சென்றபுகழ் போச்சே- இந்த மேதினியில் கெட்டபெயர் ஆச்சே. கன்னங் கரியஇருள் நேரம்-அதிற் காற்றும் பெருமழையும் சேரும் சின்னக் கரிய துணியாலே-எங்கள் தேகமெலாம் மூடி நரி போலே ஏழை எளியவர்கள் வீட்டில்-இந்த ஈன வயிறு படும் பாட்டில் கோழை எலிகளெனவே-பொருள் கொண்டு வந்து ............................................... பேராசைக் காரனடா பார்ப்பான்- ஆனால் பெரியதுரை யென்னிலுடல் வேர்ப்பான் யாரானாலும் கொடுமை செய்வான் பிள்ளைக்குப் பூணூலா மென்பான்- நம்மைப் பிச்சுப் பணங்கொடெனத்தின்பான் சொல்லக்கொதிக்குதடா நெஞ்சம் வெறும் சோற்றுக்கோ வந்ததிந்தப் பஞ்சம். நாயும் பிழைக்கும் இந்தப் பிழைப்பு நாளெல்லாம் மற்றதிலே உழைப்பு பாயுங் கடிநாய் போலீசு- காரப் பார்ப்பானுக் குண்டிதிலே பீசு சோரந் தொழிலாக்கொள் வோமோ- முந்தைச் சூரர் பெயரை அழிப்போமோ? வீர மறவர் நாமன்றோ- இந்த வீண் வாழ்க்கை வாழ்வதினி நன்றோ? இந்தமாதிரி தமிழ் மக்களைத் திருடர்கள் என்றும், பார்ப்பனர்களை நாயைவிடக் கேவலமாகவும், லஞ்சம் வாங்கு பவராகவும், ஏமாற்றுகிறவனாகவும், பேராசைக்காரனென்றும், பெரிய அதிகாரிகளைக் கண்டால் என்ன வேண்டுமானாலும் செய்வான் என்றும், யாரையும் கொடுமைப் படுத்துவான் என்றும், பார்ப்பனர்களுடைய யோக்கியதைகளைப்பற்றி சொல்லுவதற்கே மனங்கொதித்தது என்றும் சொல்லி இருக்கிறாரே. இந்தப் புதகத்தைப் பாடபுத்தகமாக வைக்கும்படி பார்ப்பனர்கள் சர்க்காரைத் தூண்டவில்லையா? பாடப் புத்தகத்தை வைக்காததற்கு சர்க்கார்மீது குறைகூற வில்லையா, லக்ஷக்கணக்காக விற்ற இந்தப் புத்தகத்துக்கு இன்னமும் விலை 2-ரூபாய் 3-ரூபாய் என்று போட்டு தேசீயத்தின் பேரால் பிரசாரம்செய்து லக்ஷக்கணக்கான ரூபாய்கள் சம்பாதிக்கப்படவில்லையா? இன்னமும் அனேக புத்தகம் “பாரதியார் எழுதி வைத்து விட்டுப் போனவைகள்” என்கின்ற பெயர் கொடுத்துப் புதிய புதிய புத்தகம் வெளியாக்கி பணம் சம்பாதிக்கப்படவில்லையா? பாரதியார் பார்ப்பனர். (ஆனால் நன்றாய் போதைவதுக்கள் அருந்துவாராம்) ஆனாலும் பார்ப்பனர். சுவாமிகளோ அல்லாதவர் அவர் எவ்வளவு பக்தி விவாசத்துடன் இருந்தாலும் அல்லாதவர். இதற்கு ஆக இவ்வளவு ஆர்ப்பாட்டமும் பிரச்சாரமும் செய்வது நியாயமா? தவிரவும், சுவாமி வேதாசலம் புத்தக மறுப்பு விஷயங் களைப்பற்றி தமிழ்நாட்டுப் பார்ப்பனரல்லாத மக்கள் அனேகர் வருத்தப்பட்டுத் தங்கள் வருத்தங்களைக் காட்டும் முறையில் கூட்டங்கள் போட்டுப்பேசி தீர்மானங்கள் அனுப்புகிறார்கள்; பலர் தனியாகவும் எழுதுகிறார்கள். ஆனால் தமிழ்ப் பண்டிதர்கள் என்பவர்கள் ஒருவர்கூட இச்சமயத்தில் தலைகாட்டாமல் மூலையில் பதுங்கிக் கிடப்பதின் மர்மம் நமக்கு விளங்கவில்லை. சுயமரியாதைக்காரர்களைப் பார்ப்பனர்கள் வையும் போது இந்தப் பண்டிதர்களும் கூடச்சேர்ந்து பின் தாளம் போடுவதுபற்றி கவலை இல்லை. ஆனால் ஒரு பண்டிதரைப் பற்றி பார்ப்பனர்கள் விஷமமான பிரசாரம் செய்யும்போது கூடவா இவர்கள் இந்தமாதிரி கைகட்டி வாய்பொத்தி பக்தி காட்டவேண்டும் என்று கேட்கின்றேன். பண்டிதர்கள் என்றாலே ஒருவர்மீது ஒருவர் பொறாமை உள்ளவர்கள் என்று சொல்லக்கூடியது மெய்யாகிவிட்டது. நாட்டார் எங்கே, நடேசனார் எங்கே, செட்டியார் எங்கே, முதலியார் எங்கே, பிள்ளைவாள் எங்கே, பெருமனார் எங்கே மற்றும் என்னமோ பட்டந்தாங்கிய தமிழ் வித்துவான்கள் எங்கே இப்பொழுது? இந்தப் பார்ப்பனர் தயவு இல்லாமல் இந்த நாட்டில் ஒரு வித்வான்கூட பிழைக்கமுடியாத நிலை ஏற்பட்டதானது எல்லாவற்றையும்விட மிகமிகப் பரிதாபமான சேதியாகும். பெண்மக்களில் யாராவது பண்டிதர்களாக இருந்தால்கூட இவ்வளவு மோசமாய்ப் பயப்பட மாட்டார்கள் என்றே கருதுகின்றேன். ஒரு பண்டிதர் அடிபடுவதை இத்தனை பண்டிதர்கள் வேடிக்கைப் பார்த்தால் இந்தப்பண்டிதர்கள் ஒவ்வொருவரும் தனித்தனியாய் அடிபடத்தான் போகிறார்கள் என்பதை ஞாபகமூட்டி முடிக்கிறேன். போக்கிரித்தனமான புகார் தென்னாட்டுக்கலா வல்லவருள் தலை சிறந்து விளங்கும் சுவாமி வேதாசலமென்னும் மறைமலை அடிகள் அவர்களைத் தமிழ் உலகமும், சிறப்பாக சைவ உலகமும் நன்கறிந்திருக்கும் என்பதில் யாருக்கும் அய்யமிருக்காது. சுவாமிகள் ஒரு பெரும் ஆதிகர் என்பதோடு தமிழ் பாஷையில் இணையில்லாத பண்டிதர் என்பதும் தமிழ் பாஷை யுடையவும். தமிழ் பாஷையின் வளர்ச்சியினுடையவும் எதிரி களும் அறிந்ததேயாகும். அதோடு மாத்திரமல்லாமல் சுவாமி கள் சுயமரியாதைக் கொள்கைக்கு மாறானவர் என்பதோடு சுயமரியாதைக் கொள்கையானது, மக்களுக்குக் கேடு விளை விக்கத்தக்கது என்கின்ற அபிப்பிராயமும் உடையவர். அன்றியும் சுவாமிகளின் தோளானது ஒரு முப்பிரி நூலைச் சுமந்து இருக்குமானால் இத்தென்னாட்டுப் பார்ப்பனர்கள் இன்று அவரை அகதியராக்கியிருப்பார்கள். ஏனெனில் அவரினின்று எத்தனையோ மடங்கு தாழ்ந்த ஞான முடையவர்கள் பருத்தி நூலைத் தாங்கிய பண்பி னாலேயே மகாமஹோபாத்தியாயரானதோடு மாத்திரமல்லாமல் தமிழ்க் கடவுளான சுப்பிரமணியனுக்கு ஒப்பாகப் பேசியும், எழுதியும் விளம்பரப்படுத்தி இருக்கிறார்கள். உதாரணமாக இன்று தமிழ் பாஷையின் பேரால் பெரு நிதி திரட்டிக்கொண்டவரும்-பெரும் புகழ் அமைத்துக் கொண்டவரும், தமிழுக்குத் தாயகமெனவும் விளம்பரப்படுத்தப் பட்டு மகாமஹோபாத்தியாயர் எனப்பட்டம் சூட்டப்பெற்ற வருமான தோழர் உ. வே. சுவாமிநாதய்யர் அவர்களை ஒரு தட்டில் வைத்து சுவாமி வேதாச்சலமவர்களை மற்றொரு தட்டில் வைத்து நிறுக்கப்படுமானால், எத்தனை சுவாமி நாதய்யர்களைப் போட்டால் சுவாமி வேதாச்சலம் வீற்றிருக்கும் தட்டை அசைக்கமுடியும்? என்பதை ஒவ்வொரு நேர்மையான தமிழ் மகனும் தன் தன் நெஞ்சில் கையை வைத்து உண்மை உணர்வோடு பார்ப்பாரானால் நன்றாய் விளக்கிவிடும். தோழர் சுவாமிநாதய்யர் அவர்கள் வெகுகாலமாக பல தமிழ்ப்பெரியாரும், தமிழ் அபிமானிகளும் சேர்த்து வைத்திருந்த தமிழ் இலக்கியச் சுவடிகளையும், அவற்றிற்கு அவ்வப்போது பல அறிஞர்களும், பண்டிதர்களும் குறித்து வைத்திருந்த உரைகளையும், கருத்துக்களையும், கைப்பற்றி அவற்றில் பார்ப்பனர்களுக்கு பிரதி கூலமாகவும் இருந்த கூற்றுகளை மாற்றியமைத்து ஆரிய நூல்கள் போலவே எல்லாவற்றையும் பார்ப்பனீயத்துக்கு அரணாக்கிப் பதிப்பித்துப் பயன்பெற்றார் என்பதல்லாமல் தன் சொந்த மனோதர்மத்தில் யாவருக்கும் பயன்படும்படியான முறையில் ஏதாவது புத்தகமோ, வியாசமோ எழுதி இருக்கின்றாரா என்று பார்த்தால் நாம் கூறுவதில் உண்மை இருக்கின்றதா? இல்லையா? என்பது செல்வனே விளங்கும். சுவாமி வேதாச்சலமவர்கள் அவ்வாறின்றி எத்தனையோ நூல்கள் தாமாகவே இயற்றியதுடன் தமதாராய்ச்சித் திறத்தால் எவ்வளவோ அறிய விஷயங்கள் கண்டுபிடித்து சகல மக்களுக்கும் பயன் படத்தக்க பல அரிய கருத்துக்களை வெளியிட்டு வந்திருக்கிறார் என்பதைத் தமிழின் கூற்றுவர் களும் உணருவார்கள். இப்படிப்பட்ட சுவாமி வேதாசலமவர்களைப் பற்றி நமது பார்ப்பனர்கள் விஷமப்பிரசாரம் செய்ய இப்போது ஏன் புறப்பட்டார்கள் என்பது சிலருக்கு அதிசயமாகத் தோன்றலாம்; ஆனால் நமக்கு அது அதிசயமாய்த் தோன்றவில்லை. ஏனெனில் இதற்கு முன்னாலேயே செய்திருக்கவேண்டியவர்கள் இத்தனை நாள் எப்படி சுவாமி வேதாச்சலத்தைப்பற்றி விஷமப்பிரசாரம் செய்யாதிருந்தார்கள் என்பதுதான் ஒரு ஆச்சரியமாகத் தோன்றலாம். ஆனால் இரண்டைப்பற்றியும் ஆச்சரியப்பட வேண்டிய தில்லை என்பதே நமதபிப்பிராயம். ஏனெனில் மறைமலை யடிகளைப்பற்றி நம் பார்ப்பனர்கள் முன்னும் விஷமப் பிரச்சாரம் செய்துதான் வந்திருக்கிறார்கள். இப்போதும் செய்துதான் வருகிறார்கள், இனியும் செய்யத்தான் போகிறார்கள். எப்பொழுது அவர் சுவாமி வேதாச்சலமானாரோ அப்பொழுது முதலும், எப்பொழுது சுவாமி வேதாச்சல மவர்கள் சுவாமி வேதாச்சலமென்னும், மறைமலை அடிகள் என்பதாக ஆனாரோ அப்பொழுது முதல் அதைவிட அதிகமாகவும் அவரைப்பற்றி விஷமப்பிரசாரம் செய்து கொண்டேதான் இருக்கிறார்கள். நமது பார்ப்பனர்களுக்கு ஒருவர் விரோதியாக வேண்டு மானால் அவருக்கு தமிழ்ப் பாஷையில் இணையில்லாப் பற்றும், இணையில்லா ஞானமும் இருந்து வருவது ஒன்றே போது மானதாகும். அப்படிக்கிருக்க நமது சுவாமி வேதாசலமவர்களை பார்ப்பனர் எப்படி வெறுக்காமலும், பழித்துக் கூறாமலும் இருக்கமுடியும். இப்பொழுது சுவாமி வேதாசலம் அவர்களைப் பற்றி பார்ப்பனக் குழாத்திலும் அவர்களது பத்திரிகைகளிலும் நடந்துவரும் பிரச்சாரத்தை நாம் விஷமப்பிரச்சாரம் என்று மாத்திரம் சொல்வதல்லாமல் அதை ஒரு போக்கிரித்தனமான புகார் பிரச்சாரம் என்றுகூட ஏன் சொல்லவேண்டி யிருக்கிறது? ஏனெனில் சுவாமிகள் எழுதிய அறிவுரைக் கொத்து என்னும் ஒரு சிறிய நூலில் தமிழ் நாட்டவரும் மேல் நாட்டவரும் என்ற தலைப்பின் கீழ் எழுதியுள்ள ஒரு கட்டுரையைக் குறிப்பாகக் கொண்டு அது தேச நலனுக்கும் மக்கள் நலனுக்கும் கேடானது என்பதாகச் சொல்லி அவரது பெயருக்கு இழுக்கு உண்டாகும் படியாக பிரசாரம் செய்கின்றார்கள். இரண்டு வாரகாலமாக இந்தப்பிரச்சாரம் பத்திரிகைகளில் அடிபடுவதோடு பல பார்ப்பனப் பத்திரிகைகள் இவ்விஷயத் திற்கு ஆக தலையங்கமும் உபதலையங்கமும் எழுதுவதோடு வழக்கம் போல் ஆங்காங்கு கூட்டம்போட்டு கண்டித்ததாக சூட்சிச் செய்திகளும் பிரசுரமாகின்றன. அவற்றுள் ஒரு பத்திரிகை விஷமத்தனமான புத்தகம் என்கின்ற தலைப்பிலும், மற்றொரு பத்திரிகை மறைமலை அடிகள் சுயமரியாதைக்கட்சியில் சேர்ந்துவிட்டார் என்பது ஆகவும், மற்றும் பல தங்களுக்கு தோன்றிய விதமாகவும் எழுதி அப்புத்தகத்தை பள்ளிகளில் பாடமாக வைத்தது பிசகு என்றும் அதை எடுத்துவிடவேண்டும் என்றும் எழுதி யிருக்கின்றன. இந்தக் கூற்றுகளைத்தான் வேண்டுமென்றே செய்யப் படும் போக்கிரித்தனமான விஷமக்கூற்று என்று சொல்லித் தீரவேண்டிய நிலையில் இருக்கிறோம். ஏனெனில் சுவாமி வேதாசலம் அவர்களால் எழுதப்பட்ட அறிவுரைக்கொத்து என்னும் புத்தகத்தில் தமிழ் மக்களை இழிவுபடுத்தியும், அடிமைப்புத்தி ஏற்படும் படியும் துவேஷம் ஏற்படும்படியும் கட்டுரை எழுதி தமிழ் மக்களை கேவலப்படுத்தி இருப்பதாக எழுதி ஓலமிடுகின்றன. அதில் என்ன எழுதப்பட்டிருக்கிறது, எதற்காக இப்படி ஓலமிட வேண்டியதாயிற்று என்பதற்கு உதாரணம் காட்டும்போது ஒரு பத்திரிகையானது 1. தமிழருக்குச் சுய அறிவு கிடையாது 2. ஒற்றுமைக் குணம் கிடையாது 3. கல்வியில் விருப்பம் கிடையாது 4. மேல் நாட்டார் இங்கு வருமுன் உயர்ந்த பள்ளிக்கூடம் கிடையாது 5. தமிழர்கள் கைக்கூலி (லஞ்சம்) கொடுக்கிறார்கள் 6. உத்தியோகம் பெற எதையும் செய்கிறார்கள் அப்படி என்றால் என்ன? என்றும் கேட்கின்றது. 7. பணம் சேர்ப்பதற்கே கல்வி கற்கிறார்கள் என்ற வாக்கியங்களை எடுத்துக்காட்டி இவை அடிமைப் புத்தியையும், துவேஷத்தையும் விளைவிக்கு மென்று சொல்லி இப்புத்தகத்தை பள்ளிப் பிள்ளைகள் படிக்கும்படியாக அனுமதிக்கக் கூடாது என்று எழுதி இருக்கின்றது. இவற்றிற்கு சமாதானம் கூறியே இப்பத்திகைகளின் போக்கை போக்கிரித்தனமான புகார் கூறும் குணமுடையவை என்று எடுத்துக்கூற ஆசைப்படுகின்றோம். 1. தமிழருக்கு சுய அறிவு கிடையாது தமிழருக்கு சுய அறிவு கிடையாது என்று எழுதியதில் ஏதாவது குற்றமிருக்கிறதா என்று கேட்கின்றோம். கோடிக்கணக்கான தமிழ்நாட்டுத் தமிழ் மக்களில் நூற்றுக்கு 10 அல்லது 5 வீதமான மக்களுக்கு ஆவது சுயபுத்தி இருக்கின்றது என்று யாராவது கூறமுடியுமா என்று பந்தயம்கட்டி கேட்கின்றோம். ஒருவர் இருவருக்கு சுயபுத்தி இருப்பதாக வைத்துக்கொண்டாலும் அது அச்சமுகம் முழுமைக்கும் இருப்பதாகக் கொள்ளக்கூடியதாகி விடுமா என்று கேட்கின்றோம். தமிழனுக்குப் புத்தியிருந்தால் அவன் மோக்ஷமடைய மலத்தையும், மூத்திரத்தையும் சாப்பிடுவானா? தமிழனுக்குப் புத்தியிருந்தால் அவன் தன் மகளைச் சாமி பேரால் பொட்டுக்கட்டி பார்ப்பனனுக்கு மாத்திரம் குறைந்த விகிதத்துக்குக் கலவிக்கு விடுவானா? தமிழனுக்குப் புத்தியிருந்தால் பார்ப்பான் காலில் பவுன் பவுனாக நாணயம் கொட்டிக்கொடுத்து அவன் காலைக் கழுவின தண்ணீரைக் குடிப்பானா? தமிழனுக்குப் புத்தியிருந்தால் காப்பிக் கடையில் எச்சைச் கிண்ணம் கழுவும் பார்ப்பானனையும் கூட்டிக் கொடுக்கும் பார்ப்பானனையும் சுவாமி என்று கூப்பிடுவானா? தமிழனுக்குப் புத்தியிருந்தால் கடுகளவாவது சுய புத்தியிருந்தால் அரிசி பருப்பு காய்கறியை பார்ப்பானுக்குப் படைத்து விழுந்து கும்பிட்டு இவற்றை இறந்துபோன என் பெற்றோர்களுக்குக் கொண்டுபோய் சேர்த்து அவர்களை மோக்ஷத்திற்கு அனுப்புங்கள் என்று சொல்லுவானா? தமிழனுக்குப் புத்தியிருந்தால் தன்னை சூத்திரன் என்றும், தீண்டப்படாதவன் என்றும் அழைக்கின்ற- கருதுகிற பார்ப்பானை, சகோதரன் என்றும் ஒரு தாய் வயிற்றுப்பிள்ளை என்றும் ஒரு தேசமக்கள் என்றும் கருதி அவனோடு நட்புக் கொள்வானா? தமிழனுக்குப் புத்தியிருந்தால் தன்னைத் தொட்டால் பாவம், தன் பாஷையைக் கேட்டால் தோஷம். தன்னை கோவிலுக்குள் கடவுள் இருக்கும் அறையில் அனுமதித்தால் தோஷம் என்று சொல்லும் பார்ப்பானுடன் கூடிக்கொண்டு தமிழ் மக்கள் கழகத்தைக் கெடுக்கவும் அவர்கள் முன்னேற்றத் தைத் தடுக்கவுமான தொண்டைச் செய்து ஒற்றுழைத்து பார்ப்பானிடம் பிச்சை வாங்கிப் பிழைப்பானா? தமிழ் மக்களுக்குப் புத்தியிருந்தால் கெஜம் 3 அணாவுக்கு விற்கும் அருமையான, நயமான துணியை வாங்கிக் கட்டுவதை விட்டுவிட்டு கெஜம் 6,7- அணாப்போட்டு ஆபாசத்துணியை தேசாபிமானம் என்னும் பேரால் வாங்கிக் கட்டிக்கொண்டுத் திரிவானா? மோட்சத்திற்குப்போக மல மூத்திரங்களை உண்பதற்கும் சுயராஜ்யம்பெற கோணி ரட்டைக் கட்டுவதற்கும் என்ன வித்தியாசம் என்பதைக்கூட உணராமல் இருப்பானா? என்று கேட்பதோடு தமிழ்மக்களுக்கு பெரும்பான்மையான வர்களுக்குப் புத்தியும் இல்லை, சுயமரியாதையும் இல்லை என்பதற்கு இன்னும் இது போன்ற எத்தனை ஆயிரம் எடுத்துக் காட்டுகள் வேண்டுமானாலும் இருக்கின்றது என்றுகூறத் தயாராய் இருக்கிறோம். 2. ஒற்றுமைக் குணம் கிடையாது தமிழ் மக்களுக்குள் ஒற்றுமைக் குணம் கிடையாது என்பது பொய்யா என்று கேட்கின்றோம். தமிழ் மக்கள் தாங்கள் பார்ப்பனரால் 1008 ஜாதியாராகப் பிரிக்கப்பட்டு பார்ப்பனர்களின் முன்னோர்களால் செய்யப் பட்ட புராண சரித்திர ஆதாரத்தோடு ஒவ்வோருவரும் கீழ்மேல் நிலை கற்பித்துக்கொண்டு ஒருவருக்கொருவர் உண்பனை, தின்பனை, கொடுப்பனை, கொள்வனை, கூடி உறவாடுவன முதலிய ஐக்கிய பாவமற்றவைகளைச் செய்துகொண்டு, ஒருவன் உண்பதை ஒருவன் பார்க்கக்கூட கூடாது என்கின்ற நியதி ஏற்படுத்தி, ஒவ்வொருவன் தொழிலையும் ஜாதியையும் இழிவாக்கி, ஒருவனிடம் ஒருவனுக்கு சரித்திர பூர்வமாகவே துவேஷமும் வெறுப்பும் உண்டாகும்படி செய்து, மக்களைப் பிரித்துவைத்து ஒரு சிறு சோம்பேறிக் கூட்டத்தார் நோகாமல் பாடுபடாமல் வயிர் வளர்க்கவேண்டி சதாகாலமும் எல்லாத் தமிழ் மக்களும் ஒருவரோடு ஒருவர் விருப்பற்று துவேஷத் துடன் இருக்கும்படி செய்து இருப்பது பொய்யென்று யாராவது சொல்ல முடியுமா என்று பந்தயம் கட்டிக் கேட்கின்றோம். 3. கல்வியில் விருப்பம் கிடையாது தமிழ் மக்களுக்குள் கல்வியில் விருப்பம் கிடையாது என்பது முழுதும் உண்மையற்றது என்று யாராவது சொல்லமுடியுமா என்று கேட்கின்றோம். இந்நாட்டுத் தமிழ் மக்களில் எத்தனைபேர் கல்வி கற்று இருக்கிறார்கள்? ஆரிய மக்களில் எத்தனைபேர் கல்வி கற்று இருக்கிறார்கள்? என்கின்ற கணக்கைப் பார்த்தால் சுவாமிகளின் வாக்கு எத்தனை பரிசுத்தமானது என்பது விளங்கும். இன்று பள்ளி உபாத்தியாயர்கள் பெரிதும் பார்ப்பனர்களானதி னாலும் பார்ப்பனர்களே தமிழ் மக்கள் பலருக்குக் குல குருவாய் இருப்பதாலும் இவ்விரு கூட்டத்தாரும் பார்ப்பனரல்லாத மக்களைப்பார்த்து உங்களுக்குப் படிப்பு எதற்கு நீங்கள் மாடு கன்று மேய்த்து ஏர் உழுபவர்கள் தானே அன்றியும் உங்களுக்கு படிப்பு வருமா உங்கள் நாக்குத்திரும்புமா என்றெல்லாம் கேட்டு அவர்களது தன்னம்பிக்கையைக் கெடுத்து உற்சாகத் தைத் தடுத்து மனச்சோர்வை ஏற்படுத்தி மாடு மேய்ப்பதில் வண்டி ஓட்டுவதில் மோகத்தை உண்டாக்கி தமிழ் மக்களுக்கு கல்வி ஆசையில்லாமலும் கல்வி கற்கமுடியாமலும் செய்ததை எந்த ஒரு யோக்கியமான பார்ப்பனராவது மறுக்கமுடியுமா என்று கேட்கின்றோம். மற்றும் பார்ப்பனரல்லாத மக்கள் சூத்திரராகவும், கீழ் ஜாதியாராகவும் கற்பிக்கப்பட்டு விட்டதாலும், பார்ப்பன ரல்லாதாருக்கு கல்வி கற்பிக்கப்படாது என்றும் கல்வி கற்பதும் கூடாதென்றும், மனுதர்ம நூல் முதலியவைகளில் இருப்ப தாலும் பார்ப்பனரல்லாதார் கல்வி கற்கவும் ஆசைப்படவும் முடியாமல் போனதோடு மற்றும் பார்ப்பனரல்லாத மக்கள் பெரிதும் 5-வயது முதலே பாடுபட்டால்தான் அவர்களது குடும்பம் வாழமுடியும் என்கின்ற மாதிரியில் வாழ்க்கை ஏற்படுத்தப்பட்டு விட்டதாலும், தமிழ் மக்களுக்கு கல்வி ஏற்படவும் ஆசை உண்டாகவும் இடமில்லாமல் போய்விட்டது என்பது பொய்யா மெய்யா என்று கேட்கிறோம். சமகிருத நீதி நூல் ஒன்றில் குளித்த குதிரை, மதம் பிடித்த யானை, படித்த சூத்திரன் இம்மூன்றையும் கிட்ட சேர்க்க லாகாது என்று ரிஷிகள் வாக்கே இருக்க, இந்நிலையில் எந்தப் பார்ப்பனரல்லாதாரையாவது படிக்க பார்ப்பனர்கள் வசதி செய்து கொடுத்திருப்பார்களா என்றும் கேட்கின்றோம். 4. மேல்நாட்டார் இங்கு வருமுன்......... மேல் நாட்டார் இங்கு வருமுன் உயர்ந்த பள்ளிக்கூடம் கிடையாது என்பது. இப்படி எழுதின அப்பத்திரிகையாவது ஆங்கிலேயர் வருவதற்கு முன்னோ அல்லது ஆரிய அரசர்கள் காலத்திலோ ஏதாவது பள்ளிக்கூடங்கள் இருந்ததாக இரண்டொரு பள்ளிக்கூடத்தின் பெயர்களையாவது குறிப்பிட்டதா? அல்லது இனியாவது குறிப்பிட முடியுமா? என்று கேட்கின்றோம். இதைப்பற்றி மிமேயோ அம்மையாரே எழுதி இருக் கிறார்கள். பார்ப்பனரல்லாத மக்கள் படிக்கக்கூடாது என்றும், படித்தால் நாக்கை அறுக்கவும், கேட்டால்கூட காதில் ஈயத்தைக் காச்சி ஊற்றவும் ஏற்படுத்தியிருக்கும் சாதிர தர்மங்களை யாரும் அறியார்கள் என்று நினைத்துக்கொண்டு இப்பத்திரிகை மனப்பால் குடிக்கின்றதா என்று கேட்கின்றோம். முதலாவது ஆங்கிலேயருக்கு முன் புதகம், காகிதம், சிலேட்டு ஏதாவது இருந்தது என்று யாராவது சொல்ல முடியுமா? பொதுமக்கள் படிக்கும் விஷயந்தான் ஏதாவது இருந்ததா? குறள், தொல்காப்பியம் என்பதுபோல் ஏதோ சில நூல்கள் இருக்கின்றதே அது எப்படி வந்தது என்று சொல்லு கின்றது அப்பத்திரிகை. இது மனதறிந்த அக்கிரமமான கேள்வியாகும். ஏனெனில் தொல்காப்பியம், குறள் படித்தவர்கள் லட்சத்தில் ஒருவர் இருப்பார்கள் அதுவும் பள்ளிக்கூடத்தில் படிக்காமல் யாரோ ஒருவர் மூலம் ஒருவர் பாட்டாகக் கேட்டு நெட்டுருப்பண்ணி வைத்திருந்தால் அவர்கள் பெரிய வித்வான்களாக ஆகிவிடு வார்கள் அவ்வளவுதான். படிப்பே ஒழிய பள்ளிக்கூடம் வைத்து எல்லாப்பிள்ளைகளும் அங்குபோய் எழுதுவது, படிப்பது என்பவைகள் தாராளமாய் இருந்ததாக எந்த ஆதாரத்திலும் எவராலும் சொல்லப்படவே இல்லை. அதனாலேயேதான் பார்ப்பனர்கள் தவிர மற்றவர்கள் தாராளமாய் 10000க்கு ஒருவர் இருவர் படித்திருந்ததாகவும் காணப்படவில்லை. 5. தமிழர்கள் கைக்கூலி கொடுக்கிறார்கள் தமிழர்கள் கைக்கூலி கொடுக்கிறார்கள் என்பது. பார்ப்பனர்கள் அதிகாரம் வகிக்க ஆரம்பித்தது முதல் கொண்டே இந்நாட்டில் லஞ்சம் எவ்வளவு தாராளமாகக் கடையில் கத்திரிக்காய், பீடி, சிகரெட் வாங்குவதுபோல் எவ்வளவு மலிவாக இருந்து வருகின்றது என்பதை நாம் எடுத்துச் சொல்லவும் வேண்டுமா? பார்ப்பனர்களே அதிகாரிகளானதாலும், பார்ப்பனர் களே வக்கீல்கள், குமாதாக்கள் ஆனதினாலும், லஞ்சம் எவ்வளவானாலும் பெரிதும் எப்படியாவது பார்ப்பனர் களுக்கே போய்ச் சேரக்கூடியதாய் இருந்தாலும் லஞ்சத்தைத் தாராளப்படுத்தவும் செல்வாக்குப் படுத்தவும் அவசியம் ஏற்பட்டதோடு அது மக்களைக் கவர்ந்தும் விட்டது. லஞ்ச விஷயத்தைப்பற்றி சுவாமிகள் மாத்திரமல்ல நாம் மாத்திரமல்ல, அனேக பெரியார்கள், அதிகாரிகள், ஐரோப்பிய உத்தியோகதர்கள் என்பவர்களெல்லாம் வண்டி வண்டி யாய்ச் சொல்லி இருக்கிறார்கள். மற்றும் ஹைகோர்ட்டு முதல் அரசாங்கத் தலைமை தாபனங்கள் முதல் ரயில்வே, காபீடர் இலாகா. பஞ்சாயத்துக் கோர்ட், கிராமக் கோர்ட்டு உள்பட அவற்றிற்குள் நுழைகின்றவர்கள் ஒவ்வொருவரும் 100க்கு 90-க்கு மேம்பட்ட வர்கள் லஞ்சம் கொடுத்து காரியத்தைச் சாதிக்கும் வக்கீல் களையே தேடிப் பிடிக்கிறார்கள் என்பதும் அதற்குண்டான சகல வழிகளையும் வக்கீல்களும் அவர்களது சிப்பந்திகளும் கற்றுக்கொடுத்து அவர்களை நடத்துகிறார்கள் என்பதும் ஒரு சிறிதாவது மறுக்கக்கூடியதா என்று கேட்கின்றோம். 6. உத்தியோகம் செய்ய எதையும் செய்கிறார்கள் உத்தியோகம் பெற எதையும் செய்கிறார்கள் என்பதை உண்மை அல்லவென்று சொல்லமுடியுமா என்று கேட்கின் றோம். இந்த விஷயம் வெளிப்படையான இரகசியமாகும். கொஞ்ச காலத்துக்கு முன் திருச்சியில் ஒரு சின்ன அதிகாரி ஒரு பெரிய அதிகாரி ஒருவருக்கு தன் மனைவியை அனுப்பியதில் அப்பெரிய அதிகாரி அப் பெண்ணின் மார்பின் முனையைக் கடித்துவிட்டசேதி யாரும் அறியாததா? மற்றும் கும்பகோணத்தில் ஒரு உயர்தர அதிகாரிக்கு ஒரு கீழ்த்தர அதிகாரி தன் சகோதரியையனுப்பி அந்தம்மாள் அவரோடு கூடவே இருந்து கொண்டு வரமாட்டேன் என்று சொன்னதான சேதியும் யாரும் அறியாததா, மற்றும் சில ஜில்லா பெரிய அதிகாரிகள் செல்லுமிடங்களுக்கெல்லாம் ஒரு குறிப்பிட்ட சின்ன அதிகாரியை தன்னுடைய சாமான்கள் போலவே கூட அழைத்துக்கொண்டு போவது என்பதும் அதனால் அந்த சின்ன அதிகாரி தனது யோக்கியதைக்கு மீறின பதவிகள் பெறுவதும் கோவை ஜில்லாவில் பலதடவை நடந்த சம்பவங்களாகும். மற்றும் வேறு எத்தனையோ விதங்களில் இம்மாதிரியான பிரதாபங்கள் சர்வ சாதாரணமாகப் பலவிடங்களிலும் வழங்கி வருவதானது யாரும் அறியாதது என்று சொல்லிவிட முடியுமா? 7. பணம் சேர்க்கவே கல்வி கற்கிறார்கள் பணம் சேர்ப்பதற்கே கல்வி கற்கின்றார்கள் என்பது. இதைக்கூட தப்பு என்று சொல்ல வந்ததானது வேண்டுமென்றே செய்யப்படும் போக்கிரித்தனமான புகார் என்பதற்கு வெளிப்படையான உதாரணமாகும். இன்றைய கல்வியானது, அறிவுக்குப் பயன்படாத தென்றும் வயிற்றுப் பிழைப்பிற்கு அதுவும் அடிமைப்பிழைப்புப் பிழைத்து வயிறு பிழைப்பதற்கு என்றும் சொல்லாதவர்கள் யாருமே இல்லை. அப்படிப்பட்டவர்களும், அவர்களது பிள்ளைக்குட்டிகளும் மறுபடியும் அக்கல்வியையே கற்கின் றார்கள் என்றால் வேறு எதற்குஆக அவர்கள் கற்கிறார்கள் என்பதை அப்பத்திரிகையாவது கூறி இருக்க வேண்டாமா? இன்று கல்வி கற்றவர்கள் என்கின்ற கூட்டத்தில் சேர்ந்த எவராவது அக்கல்வியை பணம் சம்பாதிப்பதை விட வேறு காரியத்துக்கு உபயோகப்படுத்துகிறார்களா? அல்லது கல்வி கற்ற B.A., M.A., டாக்டர்கள் என்பவர்களுக்காவது அறிவு ஏற்பட்டிருக்கிறது என்று சொல்ல முடியுமா? எத்தனை டாக்டர்கள் தூரமான தன் பெண்ணை தெருவில் தள்ளி கதவைச் சாத்துகிறதைப் பார்க்கிறோம். எத்தனை பூகோள சாதிரிகள் கிரகணத்துக்கு சமுத்திரக்கரையில் மூக்கைப் பிடித்து உட்கார்ந்திருப்பதைப் பார்க்கிறோம். எத்தனை பிரபல நியாயவாதிகள், தர்க்கவாதிகள் தாங்கள் மோட்சம்போக கல்லைக் கும்பிடுவதைப் பார்க் கின்றோம். இவர்கள் எல்லாம் புத்திக்குஆக படித்தவர்களா பணம் சம்பாதிக்கப் படித்தவர்களா என்று கேட்கின்றோம். உரலை நினைத்து அவலை இடிப்பதுபோல் பார்ப்பனப் பத்திரிகைகள் வேறு ஏதோ காரணம் வைத்துக்கொண்டு இந்தப் போக்கிரித்தனமான வேலையில் பிரவேசித்து இருக்கின்றன. அவர்களது சூட்சித் திரமும், விஷமத் திரமும் இப்புத்தகத்தைப் படிக்கக்கூடாது என்று செய்வதில் வெற்றி அளித்துவிடலாம். அல்லது சில வாக்கியங்களை எடுத்துவிட வேண்டு மென்று செய்தாலும் செய்துவிடலாம். பிறகு பாட புத்தக விஷயத்தில் எப்படிப்பட்ட கொள்கை அனுசரிக்கவேண்டும் என்பதில் என்ன செய்யவேண்டும் என்பது நமக்குத் தெரியும். தமிழ் மக்களும், தமிழ்ப் பண்டிதர்களும் தமிழ் ரத்த மோடும் தமிழ் அபிமானிகளும் இத்தகைய சீர்கேட்டை நிவர்த்தித்து சரியான நடைமுறையில் நடத்த அமைக்கப்பட்ட அதிகார வர்க்கங்களும் அவைகளை நிர்வகிக்கும் மந்திரி வர்க்கங்களும் பின்னால் என்ன செய்வார்கள் அல்லத அவர்கள் என்ன கதி அடைவார்கள் என்பதைப் பார்க்கவே காத்திருக்கிறோம். இதற்காக ஆங்காங்குள்ள தமிழ் மக்கள் கிளர்ச்சி செய்து இதன் காரணமாகவாவது பாட புத்தக அமைப்புக்கு ஒரு நல்ல காலம் வரட்டும் என்று ஆசைப்படுகின்றோம். பார்ப்பனர்களில் ஒருவருக்கு ஒரு விஷயம் பட்டால் அது கம்பியில்லாத் தந்திபோல் ஒவ்வொரு பார்ப்பனர் உள்ளத்திலும் படிகின்றது. பார்ப்பனரல்லாதாரோ சிலர் இதன்மூலம் வயிறுகழுவ பார்ப்பனருக்கு அடிமையாகிறார்கள். வெட்கம்! வெட்கம்! எதற்கென்று அழுவது! குடி அரசு ஐடி அபிப்பிராயம் பாட புத்தகத் தகராறு என்ற தலைப்புடன் ஐடி பத்திரிகை பின்வரும் தலையங்கம் எழுதியுள்ளது:- தமிழ் இலக்கியம், கலை இவைகளின் ஆராய்ச்சியில் இம்மாகாணத் திலே தமக்கிணை எவருமில்லையென விளங்கும் மாபெரும் புலவரான சுவாமி வேதாசலம் எழுதிய அறிவுரைக்கொத்து என்ற புதகத்தைச் சென்னை சர்வகலாசாலை இன்டர்மீடியட் பரீட்சைக்குப் பாடப் புதகமாக ஏற்பாடு செய்திருக்க அப்புதகத்தில் கண்டுள்ள அபிப்பிராயங்கள் ஒழுங் கானவையா? அல்லவாயென்பது பற்றி நாம் சில கடிதங்களைப் பிரசுரித்திருக்கிறோம். அந்த புதகத்தில் காணும் பல விஷயங் களைப்பற்றி தாரதம்மியங்கள் நமது சக வர்த்தமானிகள் சிலவற்றில் பிரசுரமாகியுள்ளன. திருவல்லிக்கேணியிலும், இதர இடங்களிலும், நடந்த எதிர்ப்புக் கூட்டங்களில் அந்தப் புதகத்தை தடைசெய்ய வேண்டுமென்று தீர்மானங்கள் நிறை வேறின. அக்கூட்டங்களின் நடவடிக்கைகளையும் நாம் வாசித்தோம். இவ்விதக் கிளர்ச்சிகளெல்லாம் ஒருபுறமிருக்க, அந்தப் பாடப் புதகத்தைப்பற்றி நமது சக வர்த்தமானியான `ஹிந்து தலையங்கம் எழுதியுள்ளது. அப்பத்திரிகை அறிவுரைக்கொத்து மீது கூறும் ஆட்சேபணைகள் நியாயம் என்பதை நிரூபிக்க முயன்றிருப்பதோடு, அப் புதகத்தை பாடப் புதகமாக வைக்கக்கூடாதென்பதை வற்புறுத்துகிறது. அந்தப் புதகத்தில் கண்டுள்ள சில விஷயங்களைப்பற்றி ஒரு பிரிவினர் கோபமடைந்தது கண்டு நாம் அந்தப் புதகத்தை வாசித்தோம். இம்மாகாணத்தில் கடந்த இருபது வருஷ காலமாக நிலவிவரும் அபிப்பிராயமே தங்களை ஞாபகத்தில் வைக்கும்பட்சத்தில் அந்தப் புதகத்தில் கண்டுள்ள விஷயங்கள் அசாதாரணமானவையல்ல வென்பதும், மனக் கசப்பை உண்டு பண்ணத்தக்கவை யல்லவென்பதும் வெளிப் படையாகும். படிப்பும், கலையுணர்ச்சியும் உள்ளவர்களும், பட்சாபாதமற்றவர்களுமான பலர், நீண்ட காலமாகக் கொண்டிருக்கும் அபிப்பிராயத்தேயே சுவாமி வேதாசலம் வற்புறுத்துகிறார்; சில விஷயங்களைப்பற்றிய அபிப்பிராயங் களைத் தைரியமாகத் தெரிவிக்க முயன்றுள்ளார். பாடப் புத்தகங்களைத் தடுக்கும் அதிகாரம் எங்கிருந்து ஏற்பட்ட தென்று தெரியவில்லை. அந்த அதிகாரத்தை உபயோகித்தால் நமது பாடசாலைகளிலும், கல்லூரிகளிலும் உபயோகிக்கும் பல பாட புத்தகங்கள் மறையவேண்டியதுதான் ஏற்படும். ஹிந்து கூறுவதாவது:- பெரிய காவியங்களைத்தான் பாட புத்தகங் களாக வைப்பதும், நிகழ்கால அபிப்பிராயபேத பிரச்சனைகள் சம்பந்தமான பிரசுரங்களைத் தவிர்ப்பதுமே வழக்கமாகும். குழப்பமான அபிப்பிராயம் இது குழப்பமான அபிப்பிராயமே தவிர வேறில்லை. மகா காவியங்கள் நிகழ்கால அபிப்பிராயபேதமுள்ள விஷயங்களைக் குறிப்பிடவில்லையென ஹிந்து நிச்சயமாகக் கூறுமா? தற்போது ஏற்பட்டுள்ள சில அபிப்பிராய பேதங்கள் மகா காவியங்களைப்போல புராதனமானவையே ஆகும். உண்மையைக் கூறுமிடத்து புராதன இலக்கிய நூல்கள் பல தற்போது நிலவும் தகராறுகளை மிக்க வலியுறுத்துகின்றன. நமது சகவர்த்தமானி மேலும் கூறுவதாவது:- இளைஞர்களுக்கும், சிறுமிகளுக்கும் உபயோகிக்கும் பாட புதகங்கள் பாஷையின் பொலிவை உணரும்படியும், தங்களது இலக்கியத்தின் சிறப்பை பாராட்டும் படியும் செய்வதோடு மனோவெழுச்சியையும், ஒழுக்கத்தையும் உண்டு பண்ணுவதாக விருக்கவேண்டும் இந்த பரீட்சையை ஏற்றுக் கொள்ள நாம் முற்றிலும் சித்தமாக விருக்கின்றோம். ஆனால், இந்தப் பரீட்சைக்குப் பொருந்தும் புராதன நூல்கள் பல இருக்கின்றனவாயென்ற கேள்விக்கு நமது சகவர்த்தமானி பதில் கூறுமா? மகாபாரதம், ராமாயணம் போன்ற புராதன இலக்கியங் களும், இதிகாசங்களும் இளைஞர் தோரணையில் நோக்கு மிடத்து மிக்க ஆட்சேபகரமானவையாகும். அத்தகைய நூல் களால் இளைஞர்கள் நெறி தவறியிருக்கின்றனர். ஹிந்து பத்திரிகை நேசிக்கும் புராதனக் காவியங்களின் பக்கங்களில் மர்மமான விஷயங்களையும், குறிப்பிட்ட வருணத்தார் தெய்வீகமானவர்களென்றும், ஆகவே இதர வருணத்தவர்கள் அவர்களுக்குக் கீழ்ப்படிய வேண்டுமென்றும் குறிப்பிட்டிருப் பதையும், தாழ்ந்த வகுப்பார் பாவிகளென்று இழிவுபடுத்தப் பெற்றிருப்பதையும், குறிப்பிட்ட வருணத்தாருக்கு தானம் கொடுத்தால் மோட்சமுண்டென்ற விஷயத்தையும், தற்கால சந்ததியார் வெறுக்கும் இதர பல விஷயங்களையும் தற்காலத் திற்கு பொருத்த மல்லாத நீதிகளையும் மிகுதியாகக் காணலாம். இவ்விஷயங்களை விவரித்துக் கூறவேண்டுவது அனாவசிய மாகும். இம்மாகாணத்தில் இந்நாட்டு பாஷையிலுள்ள ஒரு பாடப் புத்தகத்தை பார்த்தவருக்கு ஹிந்து பத்திரிகையின் பரீட்சைப்படி புராதன புத்தகங்கள் மிக்க ஆட்சேபகரமானவை யென்பது நன்கு புலனாகும். நேர்மையைக் கருதும்பட்சத்திலும், சிறுவர் சிறுமிகள் மனதில் பட்சபாதபமற்ற அபிப்பிராயம் ஏற்பட ஆவல் கொள்ளும் பட்சத்திலும் நம்மிடமுள்ள பெரும் பான்மையான புத்தகங்களைப் புதிதாக எழுதியே பாடப் புத்தகங்களாக உபயோகிக்க வேண்டுமென்ற முடிவுக்கு வர வேண்டும். வெளிப்பட்ட குணங்கள் புரோகித சமூகத்தாரை துதி செய்வதும், இதர சமூகங் களை இழிவு படுத்துவதும், இத்தேசத்தில் புரோகித சமூகத் தாரே மோட்ச வாசலை திறக்கத் திறவுகோல் உடையவர் களென்றும், பிராமணரின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வதால் மட்டுமே விமோசனமடையலாமென்றும் பிராமணரல்லா தாருக்கு அறிவுறுத்தும் இளைஞர்கள் மனோவெழுச்சியும் ஒழுக்கமும் பெறுவதற்கு போதிக்க வேண்டிய கல்வியென்று ஹிந்து பத்திரிகை அபிப்பிராயப் படுகிறதா? இந்தப் புத்தகம் சம்பந்தமாக தகராறு ஏற்பட்டதால் நமது தேச மக்களில் ஒரு பிரிவினரின் மிக்க மோசமான குணங்கள் வெளியாகிவிட்டன. அவர்களை துதி செய்யும் வரையில் அவர்கள் எவ்வித குறையும் கூறுவதில்லை. அவர்கள் மீதும், அவர்களது தாபனங்கள் மீதும், அவர்களது நடவடிக்கைகள் மீதும், சுயநலத்திற்காக அவர்கள் மத வுணர்ச்சியை உபயோகிக்கும் முறையைப் பற்றியும் குறை கூறும் கணமே கண்டனக் கூட்டங்கள் நடைபெறும்; மிக்க புலமை வாய்ந்த சின்டிகேட் மெம்பர்களும் அவர்கள் சார்பில் மார்பு தட்டிக்கொண்டு சலுகைபேச முன் வருகின்றனர்; சர்வகலாசாலையையும் மிரட்டுகின்றனர்; ஏற்கனவே பாடப் புத்தகங்களாக விருந்த பலவற்றில் பிராமணரல்லாதார் பலமாக ஆட்சேபிக்கத்தக்க கணக்கற்ற விஷயங்களைக் காணலாம். ஹிந்து பத்திரிகை வாலிப ஆடவர், பெண்களின் ஒழுக்கத்திற்காக பரிந்து பேசுகிறது. எதிர்வாதத்தைக் கூறும் எத்தனம் கண்டு குரோதமும், பொறாமையும் கொள்வதால் ஒழுக்கம் சிறந்து விடாது. இந்த விஷயங்களைப்பற்றி அபிப்பிராயங்களைத் தெரிவிக்க ஓர் அளவு சுதந்தரமும் குறைகளைச் சகித் திருப்பதுமே நல்லொழுக்கத்திற்கு அதிவாரங்களாகும். அநேக பாடசாலைகளிலும் சில கல்லூரிகளிலும் உபாத்தியாயர்கள் பிராமணரல்லா சிறுவர்களை இழிவுக்கு ஆளாக்கி வருகின்றனரென்றும், கட்சிகளையும் அரசியலையும், குறைகூறுவதில் போதனைக் காலத்தை வீணாக்கி வருகின்றன ரென்றும் நமக்கு அடிக்கடி புகார்கள் வந்தவண்ணமா யிருக்கின்றன. அத்தகைய நடவடிக்கைகளை இதுவரையில் எதிர்க்காமலிருப்பதானது பிராமணரல்லாதாரின் சகிப்புத் தன்மையைக் காட்டுகிறது. நமது தேசமக்களில் ஒரு சிறு கோஷ்டியினர் குறுகிய மனப்பான்மையுடன் அனாவசியமாக தகராறுகளை ஏற்படுத்துவார்களேயானால் இம்மாகாணத்தில் சமூகத் துவேஷம் பலத்து வேரூன்றிவிடும் ஹிந்து பத்திரிகைக் கும், அப்பத்திரிகையை ஆதரிக்கும் கோஷ்டியினருக்கும் விவேகம் ஏற்படுமென்றும், துரதிருஷ்டவசமாக ஹிந்து ஆதரித்துள்ள இவ்வித துவேஷகரமான கிளர்ச்சி இனிமேல் ஏற்படாதென்றும் நம்புவோமாக. ஒரு ஆச்சாரியாரின் ஓலம் மறைமலை நூலில் மயக்கம் (ஊழியனில் வசு எழுதுவதாவது) மறைமலையடிகள் என்று தமிழ்நாடு வழங்கும், சுவாமி வேதாசலம் அவர்களை அறியாதாரிருக்க முடியாது. அவர் ஒரு பெரிய கல்விக்களஞ்சியம். ஓர் உண்மைத் தமிழன். தமிழ்த்தாய்த் திருவடி பேணித்தினமும் வணங்கும் திரட்குணம் உடையவர். தமிழ் தழைக்க உலகம் தழைக்கும் என்றுகூட நினைப்பவர். இப்படிப்பட்ட மறைமலையடிகள் ஒருவாறு நவ நாகரிகக் கொள்கைகள், மல்கிய தமிழ் வியாசங்கள் சிலவற்றை எழுதித்தொகுத்து, அறிவுரைக்கொத்து என்ற பெயரால் வெளியிட்டிருக்கிறார். அதில் காணும் வியாசங்கள் பல அவ்வப்போது பல உருவங்களில் வெளிவந்தனவாகும். அந்த அறிவுரைக்கொத்தை சென்னை யூனிவர்சிட்டியார் கண்பார்த்து இண்டர்மீடியட் வகுப்பிற்கு தமிழ் பாடமாக வைத்துள்ளார்கள். அது பிடிக்கவில்லை சில பேர்வழிகட்கு. * * * இந்த வாரம் சனிக்கிழமையன்று டி.கே. ஜெகந்நாதாச் சாரியார் என்ற ஒருவர் ஹிந்துவில் முக்கால் முழநீளத்தில் ஒரு லெட்டர் எழுதியிருக்கிறார். அதில் அறிவுரைக்கொத்து இண்டர்மீடியட் வகுப்பிற்கு வைக்கப்பட்டது பெரிய தவறென்றும், அவசியம் யூனிவர்சிட்டியார் ரத்து செய்துவிட்டு வேறொன்றைப் போட்டு நிரப்பவேண்டுமென்றும் உபதேசிக்கிறார். அந்த திருமுகத்தைப் படித்துப்பார்த்தால், அய்யங்கார் இந்த உலகிற்கே ஒரு புதிய பிராணி என்று தோன்றா நிற்கும். கடந்த சில வருடங்களாக இந்தியாவில் என்னென்ன சமாச் சாரங்கள் நடைபெறுகின்றன, என்னென்ன போராட்டங்கள் நிகழ்கின்றனவென்பது அவருக்குத் தெரியாது போலிருக்கிறது. அப்படிப்பட்ட ஒருவரின் கடிதத்தைப் பெரிதாக நினையாமல் விட்டுவிட்டிருக்கலாம். ஆனால் இந்து பத்திரிகை அதற்கு இடங் கொடுத்திருப்பதை நினைக்கையில் நாம் அதற்கு ஒன்றிரண்டு சமாதானமாவது சொல்லித்தான் ஆகவேண்டு மென்று தோன்றுகிறது. தோழர் அய்யங்கார் அறிவுரைக்கொத்தின் மீது கொண்டுவரும் குற்றச்சாட்டுகள் விநோதமானவை. அப்புத்தகத்தில், (1) பிராமணர் பிராமணரல்லாதார் பிரச்சினை, (2) தமிழ் மொழி-வடமொழி தகராறு, (3) முதலாளி-தொழிலாளி போராட்டம், (4) சீர்திருத்தக்காரர்-பழமைவிரும்பிகள் பூசல், ஆகியவை பற்றி எழுதப்பட்டிருக்கின்றதாம். அப்பால் ஸ்ரீமத் ராமாயணமும், வேறு சில ஹிந்து மதநூற்களும் பொய்யானவை என்று சொல்லப்பட்டிருக் கிறதாம். அப்படிச் சொல்வதால் ஹிந்துக்களின் உணர்ச்சி புண்படுத்தப்பட்டுவிடுமாம். பிறகு உத்யோகம் நாடும் ஆங்கிலம் படித்தவர்கள் கெட்டுப்போவதோடு, மானக்கேடான பல காரியங்கட்கும் ஆளாகின்றார்கள் என்று புத்தகத்தில் சொல்லப்பட் டிருக்கிறதாம். மற்றொரு சார்ஜ், பார்ப்பனரல்லாதாரை நம்மவர் என்று ஆசிரியர் குறிப்பிடுகின்றாராம். இப்படிப் பலப்பல சொல்லிவிட்டு சென்னை சர்வகலா சாலையார் தூற்றப்படுவதினின்றும் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டுமென்றும், எல்லாப்பெற்றோர்களும் சர்வ கலா சாலையாரிடம் மேற்படி புத்தகத்தைப்பற்றிக் கேள்வி கேட்கவேண்டு மென்றும் கேட்டுக்கொள்ளுகிறார். சென்னை சர்வ கலாச் சாலையின் மானத்தைக் காப்பாற்றுவதில் தோழர் ஆச்சாரியார் கொண்டிருக்கும் கவலையைப் போற்றவேண்டுவதுதான்; ஆனால் சர்வகலாச் சாலையார் என்னென்ன பாடங்களைப் போதிக்க வேண்டு மென்று அய்யங்கார் சாமிகள் தெரியாமலிருப்பதுதான் வருந்தத்தகுந்தது. பிராமணர்-அல்லாதார் பிரச்சினை பிராமணர்-பிராமணரல்லாதார் பிரச்சினைப்பற்றி மாணவர் தெரிந்திருக்க வேண்டுவது, சூரியன் கீழ்த்திசையில் தோன்றி மேல்திசையில் அடைகிறா னென்பதைப் படிக்க வேண்டுவது எவ்வளவு அவசியமோ அவ்வளவு அவசியமாகும். வேதம், ஆகமம், புராணம் முதலிய எல்லா இந்து சாதிரங் களும் தங்கட்குச் சொல்கின்ற எல்லா பிராமண தர்மங்களையும் விட்டு விட்டு வெள்ளைக்காரப் பெண்களைக் கட்டி, போலீ உத்யோகம் வகித்து, சிகரட் சாராயங்களை அருந்தி, மிலேச்ச பாஷையைப் பயின்று, வெள்ளைக்காரனோடு சமமாக இருந்து, மீன் வியாபாரம், தோல் வியாபாரம், அரிசி வியாபாரம் முதலியன செய்து, இன்ன ஜாதி இன்னவூர் என்று சொல்ல முடியாதபடி வேஷத்தைப் போட்டுக்கொண்டிருக்கும் ஒரு ஜாதியார், மற்றவர்களையெல்லாம் சூத்திரர் என்று ஓயாது சொல்லி, பலவழியிலும் அழுத்திக்கொண்டிருக்கும் அதர்மம் பல நூற்றாண்டுகளாக இந்த நாட்டில் நிகழ்ந்து கொண்டிருக்கு மானால், அதனைப்பற்றி கல்லூரி மாணவர் தெரிந்துகொள்ளாது வேறு எதைப் பற்றித்தான் தெரியவேண்டும்? தென்னாட்டு அரசியல், சமூக பொருளாதார, மத உலகில் இமாலயம் போன்று நிதம்நிதம் பல உருவங்களில் எழுந்து தோன்றி நாட்டின் முன்னேற்றத்திற்குப் பெரும் தடைக்கல்லாய் நிற்பது இந்த பிரச்சினையன்றோ! கல்லூரி மாணவர்கள் பிரிட்டனி லுள்ள விக்டோரி கட்சிகளையும், லேபரேர், காபிடலிட் (முதலாளி-தொழிலாளி) கட்சிகளையும் லிபரல், கண்சர் வேடிவ் (தாராள நோக்கமுடையோர்; குறுகிய நோக்க முடையோர்) கட்சிகளையும் பற்றி படித்தால் போதும்; ஆனால் தம் நாட்டிலுள்ள கட்சியாரைப்பற்றி மட்டிலும் தெரிய வேண்டாமென்கின்றாரா தோழர் அய்யங்கார்? ஒரு கால், தெரிவதால் தம் ஜாதியாரின் குட்டு வெளியாகிவிடும் என்று பயப்படுகிறாரோ என்னமோ? அப்படியானால் அய்யங்கார், பிராமணர்-பிராமணரல்லாதார் சண்டை இல்லாமல் போகு மாறு சமூகத்தைத் திருத்தம் செய்துவிட முயன்று விடுவதுதான் தகுதி! மறைமலையடிகள் புத்தகத்தை நீக்கிவிடுவதன்மூலம் மேற்படி பிரச்சினை மாய்ந்து விடுமென்று நினைப்பவரானால் அய்யங்கார் மூளைக்கு பரிசுதான் கொடுக்கவேண்டும். தமிழ்-வடமொழித் தகராறு அப்பால் தமிழ் வடமொழி தகராறைப்பற்றி தோழர் அய்யங்கார் பேசுகிறார். இது ஒரு பழையபாடம். தமிழர்க் கெல்லாம் பல தலைமுறைகளாகத் தெரிந்தது. டாக்டர் சாமிநாத அய்யர் போன்ற சிலர் தலைகீழ் குட்டிக்கரணம் போட்டு (மறைமுகமாக) தமிழ்மொழியெல்லாம் வடமொழி என்று காட்டிவிட முயலும் வேலை யொருபால் நிகழ, அதே போழ்து தங்களை ஆரியரென்றும் ஆனால் தாய்மொழி தமிழென்றும் சொல்லிக்கொள்ளும் அநியாயம் மற்றொரு பாலிருக்க, அஃதுடன் கடவுளிடம் ரகசியம் பேசும் போதெல்லாம் வடமொழியிலேயே பேசிக்கொள்ளும் படுமோசம் இன்னொருபால் நடைபெற, துளசிபத்ரம் சமர்ப்யாமி என்பதை ஏனையா துளசி இலை போடப் படுகிறது என்று சொல்லக்கூடாது என்றால், கோபப்பட்டு விடும் ஹம்பக் பிரிதொருபால் நிகழ, நாடு குழப்பமடையும் போது மேற்படி பாஷைத் தகராறைப்பற்றி கூறாமலிருக்க முடியுமா? மேலும், நெருங்கிய சம்பந்தமுடைய இருமொழி களின் ஆக்கம், சம்பந்தம் ஆகியவைகளைப் பற்றி பாஷை கற்பிக்கும் ஒரு நூலில் சொல்லாது வேறெங்கு கொண்டு சொல்வது! தருக்கம், பௌதிகம் முதலிய பாடங்களிலா வடமொழி தமிழ் தகராறுகளைக் கொண்டு நுழைப்பது? தோழர் அய்யங்கார், இப்படி, பாஷைகளைப்பற்றிய, சங்கதிகளே சர்வ கலாசாலை மாணவர்கட்குத் தெரியாமல் போய்விட வேண்டுமென்று நினைப்பாரானால் நிரம்ப நிரம்ப விசேஷந் தான். அய்யங்காரே! தகராறான விஷயங்களைப்பற்றிய பிரச்சினைகளைக் கிளப்பும்போதுதானே மாணவர்களுக்கு யோசிக்கும் சக்தி வளரும்; அறிவு மிகும்; அதுபற்றித்தானே கலாச் சாலைகளில் ஆராய்ச்சிக் கூட்டங்கள் (debating societies) நடத்தப்படுகின்றன? வாதம் ஏற்படாத விடத்தில் அறிவு வளர்வதெங்கே? படிப்பு வளர்வதெங்கே? இந்த சங்கதி தெரியாது. விவாதத்திற்குரிய சங்கதிகள் அறிவுரைக்கொத்தில் விளக்கப்பட்டிருக்கின்றதென்றால் அதன் பொருளென்ன? நீர் கூறியவாறு கல்லூரி temple of peace (சமாதானக் கோவிலாக) விருப்பதனால் ஒரு விளக்கெண்ணெய் தாபனமாகவன்றோ இருக்கும்? தமிழர் ஆலயங்களில் மத விசாரணை, சித்தாந்த கோஷங்கள், தத்துவ ஆராய்ச்சி ஆகியவை நடைபெறுவதைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீரா? ஆலயத்தில் அப்படிப்பட்ட ஆராய்ச்சியின்றி விளக்கெண்ணெய்மயமாக விருந்தால் மத அறிவு பரவுவதெப்படி? சுருங்கச்சொன்னால் சமாதானக் கோவிலில்தான் ஆராய்ச்சிக்குரிய பிரச்சினைகள் வளர வேண்டும். அன்றி ஒருவன் சொன்னதை மற்றொருவன் கேட்டு விட்டு மண்போல் போகும் படிப்பு இருக்குமானால், அப்படிப்பட்ட படிப்பை யொழித்துவிட்டு மாடுஅடைக்கும் தொழுவமாக்கி விடுவதில் என்ன தடை? இராமாயணம் உண்மையா? பிறகு தோழர் அய்யங்கார் ராமாயணம் முதலிய இந்து மத நூல்கள் பொய்யானவை என்று கண்டிக்கப்படுவதாகக் கூறுகிறார். ராமாயணம் மெய்யென்று நினைத்துக் கொண் டிருந்த அய்யங்கார் அறியாமைக்கு இரங்குகிறேன். இந்து மத இதிகாச புராணங்கள் குப்பை கிடங்குகட்குக்கூட லாயக் கில்லாதவை என்பது பழைய காலம் முதல் உறுதிபெற்ற பாடம். அதற்காக எவரும் இப்போது கண்ணீர் வடிப்பார் இல்லை. எந்த இந்துவும் ராமாயணத்தைக் குறை சொன்னதற்காகக் கோபப்பட்டு விடவோ ஆத்திரப்பட்டு விடவோ மாட்டான். உதாரணமாக நான் ஓர் இந்து; என்னிடம் ராமாயணத்தைக் குறை சொன்னால் எனக்கு கோபமே வருவதில்லை. தசரதர் 6000 மனைவிகள் வைத்திருந்ததையும், பாயாசம் பிள்ளை பெற்றதையும், ராவணன் 10 தலை தாங்கி இருந்ததையும், மேகங்களில் ராக்ஷதர்கள் புகுந்து யுத்தம் செய்ததையும், சீதை மண்ணில் பிறந்ததையும், ஹனுமான் 150-யோசனை தாவிச் சென்றதையும் இதுபோன்ற கோடி கோடி ஆபாசங்களையும் நம்பும் தோழர் அய்யங்காருக்கு என்னமெடல் கொடுப்ப தென்று தெரியவில்லை. முதலாளி தொழிலாளித் தகராறு இதன்பின் முதலாளி தொழிலாளித் தகராறைக் கிளப்பு கிறதென்று கலங்குகிறார். இன்று உலகில் என்ன போராட்டம் நடைபெறுகிறதென்பதைத் தெரியாத அய்யங்காருக்கு மாணவர்கட்கு என்ன பாடம் படிப்பிக்க வேண்டுமென்பது தெரியுமா? ஆங்கிலம் கற்றோர் கதி ஆங்கிலம் கற்று வேலைக்காகத் திரிபவர் மானக்கேடான காரியங்கட்கும் துணிவார்கள் என்று அடிகள் சொன்னதில் அய்யங்காருக்கு நிரம்ப வருத்தம். நானும் வருத்தந்தான் கொள்கிறேன். அடிகள் மானக்கேடான காரியங்கள் சிலவற்றை புள்ளி விவரத்துடன் எடுத்துக்கூறாமல் விட்டுவிட்டார் களல்லவா? அது கண்டிக்கத் தகுந்ததுதான் எல்.எம். ஆர் என்ற பெயர்போன எழுத்துக்களை எடுத்து சில பக்கங்கள் விளக்கியிருக்க வேண்டியதும்; அதோடு சிலர் உத்தியோகம் பெற்ற கதைகளை வரிசையாக விளக்கியிருக்க வேண்டியதும் முறை! தவறிவிட்டார் அடிகள். அறிவுரைக் கொத்தில் ஆசிரியர் தமிழர்களை நம்மவர் என்று கூறுவது மற்றொரு குற்றமாம். ஆசிரியர் ஒரு தமிழர் ஆகையால் தமிழரை நம்மவரென்று அழைத்ததில் என்ன ஆச்சரியம்? அய்யங்கார் தன்னை தேவ ஜாதி என்று நினைத்துக் கொண்டிருப்பதால் நம்மவராக முடியவில்லை. இதற்கு ஏதாவது சுவரில் முட்டிக்கொள்வரைத் தவிர அடிகள் புத்தகத்தில் முட்டிக்கொள்வதில் பயனென்ன? ஒருகால் பிராமணரல்லாதார் உணர்ச்சியோடுதான் அறிவுரைக்கொத்து எழுதப்பட்டிருக்கின்றதென்று வைத்துக்கொண்டாலும் அந்த பிராமணரல்லாதார் பணத்தையும் உழைப்பையுமுண்டு. அவர்கள் பக்கத்தில் குடியிருந்து, அவர்களுடைய குருக்கள் என்று சொல்லிக்கொள்ளும் பிராமணர், அந்த பிராமண ரல்லாதார் என்ன சொல்கின்றார்களென்றும் படித்துக் கொள்ளக்கூடாதா? அமெரிக்க நீக்ரோவர்கள் என்ன சொல்கிறார்கள்? செடர்டனுக்கு ஜான்சன் என்ன சொன்னார்? வில்லியம் டெல் ஆதிரிய அதிகாரிக்கு என்ன சொன்னான், எலிசபத்தும் ராலேயும் இரகசியமாக என்ன சொல்லிக்கொண்டார்கள்? என்று இரவெல்லாம் விழித்திருந்து படிப்பதை விட? பக்கத்துவீட்டு பார்ப்பனரல்லாதார் கட்சி யென்ன? ஆசையென்ன? வெண்டுதலென்ன? உணர்ச்சி யென்ன? வென்று தெரிந்தால் குடி முழுகியா போய்விடும்? கல்லூரி செல்லும் இலாம் மாணவரையும், கிருதவ மாணவரையும் சைவத்தின் பெருமை நெட்டுருப்போட வற்புறுத்தும் அய்யங் கார் அய்யங்கார் கோஷ்டி பிராமணரல்லாதார் வேண்டுதலைக் கற்று விட்டால் ஒரு பெரிய பாவமா? அய்யங்கார் மனப்பான்மை விசேஷம்! விசேஷம்!! அவர் வாயை அடக்கி கையைக்கட்டி சும்மாவிருப்பதே சுகம். மறைமலையடிகள் புத்தகத்தில் எந்தப் பூச்சாண்டியு மில்லை. அவர், புத்தகத்தை எல்லோரும் விளங்கிங்கொள்ளும் படியான பாஷையில் எழுதாது தொலைத்தாரே அதுவும், கடவுள் பிரதாபத்தையும் இந்துமதப் பெருமையையும் எழுதினாரே அதுவும்தான் குற்றம்............ அன்றி படிக்கத்தகுந்த தமிழ்ப் புத்தகம் அதைத்தவிர வேறு அதிகமில்லை. அறிவுரைக் கொத்தின் மீது ஆத்திரம் சாமி வேதாசலம் எழுதியதில் தவறு எது? தமிழ்நாடு பத்திரிகையில் கா. கணேஷ் எழுதுகிறதாவது சென்னைப் பல்கலைக் கழகத்தமிழ்ப் போர்டார் இவ் வாண்டு இண்டர்மீடியட் வகுப்புக்குப் பாட நூலாக வைத்துள்ள தோழர் சாமி வேதாசலத்தின் அறிவுரைக் கொத்து என்ற நூலைப்பற்றி ஒருவாரமாகப் பல புகார்களை ஒருவர் மூன்று பேப்பர்களில் வரைந்துள்ளார். உள்ளதைக் கூறினால் உடம்பெரிச்சல் என்பது ஒரு பழமொழி. பார்ப்பனர் கொடுமைகளை யாராவது கூறினால் ஜாதிப் பிரிவினை உண்டாக்குகிறான் என்றுபார்ப்பனர் ஓலமிடுவது வழக்கம், அவர்கள் வாய்பேசாமல் தங்கள் ஆதிக்கம் நிறைந்துள்ள பள்ளிக்கூடங்களில் பார்ப்பனரையே அமர்த்துவது; ஆபீகளில் பார்ப்பன குமாதாக்களையே வேலையில் வைப்பது; பள்ளிக்கூட புதகங்களும் பார்ப்பனர் எழுதியவை; வெளியிட்டவை பிராமண கம்பெனிகள்; இங்ஙனம் மௌனமாக ஒரே கட்டுப்பாடாக பிராமணர் தம் ஆதிக்கத்தை வலுப்படுத்தி வருவதை ஆண்மையும் தூய இரத்த ஒட்டமும் உள்ள எவரும் பொய் என்று மறுக்கமுடியாது. இதன் உண்மையை ஆராய அதிக தூரம் போகவேண்டியதில்லை. திருவல்லிக்கேணியில் உள்ள ஹிந்து ஹைகூலில் உள்ள உபாத்தியாயர்களையும் மைலாப்பூர் பி.எ. ஹைகூலில் உள்ள உபாத்தியாயர்களையும் ஒரு முறை பார்வையிட்டால்போதும். அதை ஆழ்ந்து கவனித்தாலே சமூக துவேஷம் யாரிடத்தில் இருக்கிறதென்பதைப் பிராமண ரல்லாத மக்கள் தாமே தெரிந்துகொள்ளலாம். ஹரிஜன சேவா சங்கம் ஹரிஜனங் களுக்காக ஏற்பட்டது. இதில் உத்தியோகம் பார்ப்பவர் அனைவரும் வைதீக (தீண்டாமை ஒழிப்பை முற்றிலும் எதிர்க்கும்) பார்ப்பனர். சன்னாசி என்னும் ஆதிதிராவிட சூப்ரவைசரை வெளியில் வைத்து அன்னமிட்ட தியாகிகள்! அவர் அதைக் கண்டித்துப் பத்திரிகைகளில் எழுதியதனால் வேலையிலிருந்தும் அவரை நீக்கிவிட்டார்கள்! ஆத்திரத்தின் காரணம் நாடக சினிமா நடிகர்கள் பிராமணராயிருந்தால், உடனே ஊரெங்கும் புகழ்ச்சி அவர்கள் நடிப்பும் பாட்டும் ஆபாசமாயிருந்தாலும் பரவாயில்லை பிராமணரல்லாத நடிகர் என்ன சிறப்பாக நடித்தாலும் நூற்றல்தான். இந்நிலைமையே இன்று சுவாமி வேதாசலத்திற்கும் ஏற்பட்டுள்ளது. அவருடைய புத்தகங்களை ஒரே வருடத்தில் இரண்டு யூனிவர்சிட்டியார் வைத்துவிட்டார்கள். இந்த வயிற்றெரிச்சல் ஒன்று; இவர் தமிழில் இணையற்ற பெரும் புலவர்; ஈடும் எடுப்புமில்லாதவர். இவருக்கு முன்நின்று எதிர்வாதமிடும் தமிழ் புலவர் எவரும் இந்நாட்டில் இல்லை என்பது இரண்டு. ஆகவே இத்தகைய பேரறிவாளரை நசுக்கவேண்டுமென்பது பிராமணர் கூட்டத்தாரின் பல நாளைய முயற்சி. தோழர் சுவாமி வேதாசலம் எழுதிய புத்தகத்தில் எங்கோ ஒன்றிரண்டிடங்களில் பார்ப்பனர் ஒழிந்த நம்மனொர் என்றிருப்பது இவர்கள் மானத்தைப் போக்கிவிட்டதாம்; இவர்கள் காரியத்தில் சாதித்துவரும் ஜாதித் துவேஷத்தைவிட, இவ்வார்த்தைகள் எவ்விதத்தில் மேற்பட்டன? கெடுதலானவை? என்பது தான் விளங்கவில்லை. மறுப்பின் போக்கு அறிவுரைக்கொத்தை மறுத்து எழுதியிருப்பவர், சுவாமியார், இராமாயணம்- பாரதம் என்னும் மகத்தான புண்ணிய கதைகளை பொய், தவறு என்று கூறி, ஹிந்துக்கள் மனத்தைப் புண்படுத்தியிருக்கிறார் என்றும் ஒருவர் ஹிந்து வில் எழுதியுள்ளார். இராமாயணமும், பாரதமும் யாருடைய கதைகள்? தமிழருடையனவா? ஹிந்துக்கள் யார்? மறுப்புரை எழுதியவர் ஹிந்து என்ற வார்த்தைக்கு அர்த்தம் கூறுவாரா? தமிழருக்கும் இந்து மதத்துக்கும் சம்பந்தம் ஏது? ஹிந்து மதம் யாரால் எப்பொழுது எதற்காக ஏற்படுத்தப்பட்டது? ராமாயணமும், பாரதமும் பொய்க்கதைகள்- உயர்வு நவிற்சியணியாகக் கூறப்பட்ட கதைகள் என்பதை இவர் அறியாவிட்டால், மும்மொழிப் புலவராகிய சுவாமிகள் மீது குறைகூறுவானேன்? ஹனுமான் விவரூபம் எடுத்ததும், கண்ணன் விவரூபம் எடுத்ததும், ஹனுமான் இலங்கைக்கு ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்த வரலாறும், துரோபதையை நிர்வாணமாக்கிய கதைகளை கூறும் இராமாயணமும், பாரதமும், அயோக்கியத்தனமான கட்டுக்கதைகள் என்பதில் தடையென்ன? இதைச் சுய அறிவும் பார்ப்பனரால் கலக்கப்படாத தெளிந்த அறிவும் உள்ள எந்தத் தமிழன்தான் உண்மைக் கதைகள் எனக்கூற முடியும்? தமிழ் மன்னனான இராவணனை-சுத்த வீரனான இராவணனை கொன்று ஆரியர் தமிழ்நாட்டில் ஆதிக்கத்தை உண்டாக்கிக் கொண்ட வரலாறு தானே இது இதைப் பிரமாதப்படுத்தி, பாவ புண்ணியங் களையும், தங்கள் பிராமணப் பெருமையையும் உயர்த்திக்கூறும் நூலாகச் செய்துவிட்டது ஆரிய பிராமணர் சூழ்ச்சியல்லவா? இதனை ஆராய்ந்த சுவாமிகள் அவை நம்பத்தகாத கதைகள் என்று எழுதினால், எந்த ஹிந்துவுக்கும், தமிழனுக்கும் மனம் புண்ணாக இடமில்லையே. யாவும் பழுதற வுணர்ந்த சுவாமிகள், ஒரு வார்த்தை எழுதினாலும், அதனை எவரும் அசைக்கமுடியாதென்பதை தமிழர் மறுக்க முடியாது. சுவாமிகளின் படிப்பில் ஆயிரத்தில் ஒரு பங்கும் இல்லாதவர்கள் கண்டபடி பிதற்றுதல் அறிவீனமும் ஜாதித் துவேஷத்தை வளர்ப்பதுமே யாகும். இதில் என்ன தவறு? பார்ப்பனர் செல்வர் முதலியோர்க்கும், ஏழைகட்கும் உள்ள சம்பந்தத்தைத் தவறான முறையில் எழுதியுள்ளார் என்பதும் அப்புத்தகத்தை எதிர்ப்பவரின் மற்றோர் கூற்றாகும். சுவாமிகள் இவ்விடத்தில் ஒரு தவறும் செய்யவில்லை என்பதை அந்நூலை வாசிப்போரும் சுய அறிவுள்ளவரும் மறக்க மாட்டார்கள் இக்காலத்தில் பார்ப்பனர். ஏழைகளாகிய ஆதி இந்துக்களுக்கு இழைத்து வரும் தீங்கை அறியாதாரில்லை. செல்வர்களால் ஏழைகட்கு என்ன நன்மை உண்டாய் விட்டதென்பதை மறுப்பு எழுதின நண்பர் கூற முன்வருவாரா? சுயநலக்காரராகிய பிராமணரும் பெரும்பாலான பணக் காரரும் பெரும்பான்மையோராகிய இந்நாட்டு ஏழைகட்குச் செய்த கடுகளவு நன்மையாவது யாது? பணக்காரப் பிராமணன் மற்றொரு பிராமணனைத்தான் தன் வீட்டில் பையனுக்குப் பாடங்கற்பிக்க அமர்த்துகிறான். பிராமணரல்லாத பணக்கார னும் தன் சமூகத்தில் எவ்வளவோ மேதாவிகள் இருந்தும், கண்டவுடன் அடிபணியும் பிராமண ஆசிரியரைத்தான் உபாத்தியாயராகவும், குமாதாக்களாகவும் அமர்த்துகிறான். ஏழைகட்கு இடம் இந்தப் பிராமணர் உலகிலும், பணச் செருக்குக்கொண்ட செல்வர் சிலர் வாழும் உலகிலும் இல்லை என்பதுதான் கூறவேண்டியிருக்கிறது, தலைநகரான சென்னையில் இருக்க இடமில்லாமல் தவிக்கும் 25-ஆயிரம் ஏழை மக்களைக்கேட்டால் அல்லவா உண்மை விளங்கும்? பிராமணரல்லாதாரை ஏமாற்றி வழக்கு மூலமும், திதி, கருமாதி, கல்யாண மூலமும் கொள்ளையிடும் கூட்டத்தினருக்குச் சுவாமிகள் ஏழை மக்களைப்பற்றி வருந்திக் கூறுதல், பொறாமையையும், வயிற்றெரிச்சலையுந்தான் உண்டாக்கும் இவ்விஷயங்களைப் பிற்கால இந்தியராக வரும் சர்வ கலா சாலை மாணவர்கள் படித்தல் முற்றிலும் பொருத்த முடைய தல்லவா? மானக்கேடான காரியம் உத்தியோகதர்களும், வேலை வேட்டையாடுபவரும் தன் காரியத்தைச் சாதிக்க மானக்கேடான காரியங்களைச் செய்வது வெறுக்கத்தக்கது என்று சுவாமிகள் அறிவுரைக் கொத் தில் கூறியிருப்பதாக ஒரு கண்டனம். இதில் ஏதாவது தவறு உண்டா? அதிகாரிகள் கொள்ளையடிப்பதில்லையா? தங்கள் காரியத்தைச் சாதித்துக் கொள்ளப் பலர் பலவிதமான- உண்மையில் மானக்கேடான-காரியங்கள் செய்வதில்லையா? இது யாருக்குத்தான் தெரியாது? இதுதான் உலகம் அறிந்த விஷயமாயிற்றே பல விவரங்களை எடுத்துக் கூறிப் பச்சையாக எழுதுவது எனக்குப் பிடிக்கவில்லையாதலால் இத்துடன் விடுகிறேன். அக்காலப் படிப்பு சுவாமிகள், ஆங்கில ஆட்சி ஏற்பட்ட பின்னரே ஒழுங்கான கல்வி முறை ஏற்பட்டது; அதற்குமுன் நம் நாட்டுக் கல்வி அந்தகாரத்தில் திண்ணைப் பள்ளிக்கூட அளவிலேதான் இருந்தது என்று தவறாகக் கூறுகிறார் என்பதும் மற்றோர் கூற்று என்பதைப் பின்கூறுங் காரணத்தால் உணர்க. மறுப்பு எழுதியவர்கள் தக்ஷசீலா நாலந்தா முதலிய சர்வகலாச் சாலைகள் இந்தியாவில் சிறந்திருக்க நம்நாட்டில் கல்வி இல்லை என்பது தகுமா? என்று கேட்கிறார்கள். தக்ஷசீலாவும், நாலந்தாவும் வடநாட்டில் சுயநலக் கூட்டத்தாருக்காக சமகிருத அபிவிருத்திக்கு ஏற்பட்டவையே தவிர, தமிழ் நாட்டில் தமிழ் அபிவிருத்திக்கு ஏற்பட்டவையா என்று அவர்களையே கேட்கிறேன். வட இந்தியாவில் இமயமலை சாரலில் ஒருசில மாணவர் சமகிருத பாஷை பயில்வதற்கு ஏதோ ஒரு ஜன்மத்திலிருந்த ஒருசில சர்வகலாச்சாலைகளால் முழு இந்தியாவே கல்வி மணத்தோடு திகழ்ந்தது என்று கூறுவது அறிவீனம் அல்லவா? ஒரு தமிழன் இப்படி எழுதுவானா? தமிழ் நாட்டில் திண்ணைப் பள்ளிகளைத் தவிர எவ்விதக் கலாச்சாலையாவது (சங்க காலத்திலும் சரி) இருந்ததாக எந்தத் தமிழ்ப் புலவரும் கூறமுடியாது. இதனைக் கூட ஆழ்ந்து யோசியாமல் சுவாமிகளைக் குறைகூறுவது பெருந் தவறாகும். ஆங்கில ஆட்சி ஏற்பட்ட பின்னரே தமிழும் (வசன நடையில்) வளர்ச்சி யடைந்ததென்பதில் அய்யமில்லை. ஆங்கில ஆட்சி இல்லையாயின் பிராமணர் ஆக்கம் விந்திய மலைக்கப்பால் அன்றோ இருந்திருக்கும்? இதில் ஏன் ரோஷம்? பார்ப்பனர் அல்லாத நம்மனோர் என்று அடிகள் வரைந்துள்ளார் என்பது ஒரு மறுப்பு. இதில் தவறென்ன? ஆங்கில நூல்களில் நாம் என்று எழுதியுள்ள வார்த்தைகள் அடங்கிய நூற்றுக்கணக்கான நூல்களை இந்தியர் ஏன் படிக்கவேண்டும் வெள்ளையன் சொன்னால் வெல்லம்; கருப்பன் சொன்னால் கசப்பா? உங்கள் புத்தகங்களில் நாம் என்று உங்களைக் கூறிக்கொள்ளுதலை நாங்கள் வெறுக் கிறோம். அவை நாங்கள் படிக்கத்தக்க நூல்கள் அல்ல என்று இப்பூதர்கள் என்றாவது எதிர்த்துக் கூறியுள்ளார்களா? சுவாமிகள் சொன்னால் மாத்திரம் ரோஷம் வந்து விடுவானேன்? இறுதியாக, மறுப்பெழுதியவர்கள் யூனிவர்சிடியாரும், தமிழ் போர்டாரும் இவ்விஷயங்களை அறிந்தே வைத்தார்களா? சுவாமிகளின் இப்போதனைகள் மிக அவசியமாகப் பிள்ளைகள் உணரவேண்டுமென நினைத்தே வைத்தார்களா? என்று கேட்டுள்ளார்கள். சுவாமிகளின் நூலை பதின்மூன்று போர்டுமெம்பர்கள் சேர்ந்த கூட்டத்தில் முடிவு செய்தே வைக்கப்பட்டது. அது எந்தத் தனி நபருக்கும் பொறுப்புமன்று. எல்லோரும் இந்நூலைப் பிள்ளைகள் அவசியம் படித்துப் பயன்பெற வேண்டுவதே என்று முடிவு கட்டித்தான் வைத்தார்கள். மகாமஹோபாத்தியாய அய்யரும் உடனிருந்து செய்தவேலைதான். இது அந்தப் போர்ட்டில் இருந்த நான்கு பிராம்மணப் பண்டிதர்கள் இந்நூலைப் படிக்காமலா வைக்க ஒப்புக்கொண்டார்கள்? எங்களுக்குத் தெரியாது என்று கூற அவர்கள் முன் வருவார்களா? இரண்டாம் வகுப்பு மாணவனுக்கும் பயன்படாத கேவலம் தமிழும் இல்லாத, சம்கிருதமும் இல்லாத பொதுப்பாஷை ஒன்றில் ஒரு பிராமணர் எழுதிய ஒரு புத்தகத்தை இவ்வருடம் இண்டர்மீடியட் பரீட்சைக்கு வைத்திருக்கிறார்களே! அதைப்பற்றி நண்பர்கள் ஏன் மறுப்பு எழுதவில்லை? அதை பிராமணர் எழுதியதால், அது வெல்லம் போலச் சுயநலக் கூட்டத்தாருக்கு இனிப்பைத் தருகிறது போலும்? செய்தது சரிதான் பொதுமக்கள் யூனிவர்சிட்டியாரை இது விஷயமாகக் கண்டுபேசி யூனிவர்சிட்டியின் மானத்தையும், வைதிகர் மானத்தையும் காப்பாற்றவேண்டும் என்று மறுப்பாளர் கூறியுள்ளார். யூனிவர்சிட்டியார் செய்த வேலை சரியென்று எல்லாத் தமிழரும் ஆதரிப்பாரேயன்றி சுயநலக் கூட்டத்தாருக்கு ஆதரவுதர முன்வரார் என்பதை உறுதியாக நம்பும்படி கேட்டுக்கொள்கிறேன். சுவாமிகள் அறிவுரைக்கொத்தை சிண்டிக்கேட்டார். வைத்திருப்பது முற்றிலும் சரியே. அவர்களுடைய மூளையில், ஆட்சேபகரமான விஷயங்கள் என்று ஒருவர் இருவர் கூறுவது தவறென்றே படும் என்பது எனது நம்பிக்கை. தமிழர் தம் சுதந்திரத்தை தமிழர் அறிவினை பாழாக்கும் சுயநலக்கூட்டத்தாரின் ஆதிக்கம் எவ்வளவு தூரம் தான் செல்லும் என்பதைப் பொருமையுடன் பொதுமக்களும், தமிழ்ப்புலவர்களும் இமைகொட்டாமல் கவனித்து வருகிறார்கள் என்பதையும் அறிவுறுத்து கிறேன். தமிழ்ப் போர்டார் தங்கள் மானத்தையும், சுயமரியாதையையும் காத்துக்கொள்ளத் தவற மாட்டார்கள் என்று நம்புகிறேன். மறுப்புக்கு மறுப்பு - முற்றும் - பின்னிணைப்பு அன்பர்களே நாம் தமிழை உயிரோடு வைக்கப்பாடுபட வேண்டும். ஐயகோ! தமிழைக் கொல்ல மடிகட்டி நிற்கலாமா? நூற்றுக்கு எண்பது வடசொல்லும் இருபது தமிழ்ச் சொல்லுமாக எழுதினால் - பேசினால் தமிழ் எப்படி பிழைத்தல் கூடும்? வடமொழி பயில வேண்டாம் என்று யான் கூறவில்லை. மகிழ்வுடன் பயிலுங்கள். நானும் பயில்கின்றேன். ஆனால், அன்பர்களே தமிழ்த் தாயைக் கொல்லாதீர்கள். தமிழ் நன்மங்கையின் அழகிய நன்மேனியில் அம்மைத் தழும்பு போல் வடசொற்களைப் புகுத்தாதீர்கள். அடியேன் உங்களைப் பெரிதுங் கெஞ்சுகின்றேன். ஆண்டவர் களே! தமிழைக் கெடுக்காதீர்கள்! தனித் தமிழுக்குப் பாடுபடுங்கள் (பெருங் கைத்தட்டல்) பண்டைப் புலவராயினும், இக்காலத்தவராயினும், மற்ற எவராயினும் தமிழுக்கு கேடுவிளைத்தோரை விளைப்போரை ஒரு பொருளாகக் கருத மாட்டேன். மறைமலையடிகள் - தனித்தமிழியக்கத் தந்தை மறைமலையடிகள் வரலாறு பக்- 475 ஆங்கிலத்தால் நேர்ந்த அழிவு ஒரு தாய்மொழி வழங்கும் நாட்டில் வேற்றுமொழி ஒன்று ஆட்சிமொழியானால்-அறிவுக்கான மொழி என்று கற்பிக்கப்பட்டால் நாட்டுமக்களில் 100க்கு 90 பேராவது கல்வியற்றவர்களாய் - அறிவிற் குறைந்தவர்களாய்த்தான் இருக்க முடியும். அப்படிப்பட்ட நாட்டில் அறிவியல் வளர்ச்சியால் ஏற்படும் பொருள்வளம் பெருகி மக்கள் சிறப்பான வாழ்க்கை வாழ முடியாது. இதற்கு நம் நாடே போதிய சான்று. தம் நாட்டில், தம்மொழியே ஆட்சிமொழி - அறிவு மொழியானால் அந்நாடு பொருள்வளம் பெற்றுச் சிறந்தோங்கும். இதற்குச் சான்று ஐரோப்பிய - அமெரிக்க - உருசிய நாடுகளாம். அறிவைப் பிறமொழியில் பெறுதற்குப் பல்லாண்டுகளும், பொருட் செலவும், முயற்சியும் 50 விழுக்காடு வீணாய் விடுகிறது; அத்துடன் தன் தாய்மொழியில் நம்பிக்கையில்லார்க்கு அறிவும் ஆண்மையும் நலியத்தானே செய்யும்! ஆங்கிலம் ஆட்சிமொழியாக இருப்பதால் தாய் மொழியில் மக்களுக்கு ஆர்வமிருந்தாலும் அதனைப் பயில்வதால் வாழ்விற்குரிய வளங்கள் கிட்டா என அஞ்சி அவர்கள் தம் தாய்மொழிப் படிப்பைக் கைவிடுகின்றனர். அறிவியல் முதலிய பலதுறை நூல்கள் யாவும் தமிழிலிருந்தால் நகரத்தும், நாட்டும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் கல்லூரிகளின் உதவியின்றிப் பொருட் செலவின்றித் தாமே அவற்றைக் கற்றுப் பயனடைவர். அத்துடன் அந்நூல்களாற்பெற்ற அறிவின் நலத்தால் - அவை கொண்டு தாம் செய்யும் தொழில்களால் மேலும் தாம் பெறும் அறிவாற்றல்களை நாட்டுக்கு வழங்குவரன்றோ? இவ்வாற்றால் கோடிக்கணக்கான மக்களின் அறிவாற்றல்கள் ஒன்றுக்கு ஆயிரமாகப் பெருகுமன்றோ? அதனால் நாட்டின் பொருள் வளமும், கலை வளமும் சிறக்குமன்றோ? அந்நிலையில் நாட்டில் வறுமை தலை காட்டுமா? தம் தாய் மொழியில் பல்துறை அறிவுக் கலைகள் உள்ளபடியினாற்றானே ஆங்கிலர், அமெரிக்கர், உருசியர் முதலியோர் உலகில் உயர்ந்த நலங்கள் பெற்று வாழ்கின்றனர். அவர்கள் யாவரும் தம் தாய்மொழியிலன்றித் தமிழ் முதலிய வேறு மொழிகளில்தான் அவற்றைக் கற்றல் வேண்டு மென்றிருந்தால், அந்நாடுகள் இத்துணைச் சிறந்த நிலையிலிருக்க இயலுமா? எண்ணிப் பாருங்கள்! உண்மையில் தாய்மொழிகயை வளர்க்க வேண்டுமென்ற நாட்டம் நம் பல்கலைக் கழகங்கள் விரும்பினால் ஒரு பத்தாணடு திட்டத்தில் அறிவியற் கலைகள் அனைத்தையும் நம் தாய்மொழியில் மொழிமாற்றி இருக்கலாமே! இன்றுகூட அவை அம்முயற்சியில் மனமார விரைந்து தலைப்படவில்லையே! அப்படிச் செய்தால் ஆங்கிலம் போய்விடுமே என்று அஞ்சுகின்றனர் போலும்! இல்லை; மொழி பெயர்ப்புக்காவது ஆங்கிலப் பயிற்சி வேண்டாமா? என்பர். அதற்கு 40 கோடி பேர் ஆங்கிலம் கற்க வேண்டாம். கூரிய அறிவுடைய ஆயிரவர் போதுமே! நாற்பது கோடி பேரை ஆங்கிலம் படி என்று தண்டிக்க வேண்டுமா? உலகில் ஒரு நாட்டுக்கே தலைமை தந்துவிட்டால் நாளடைவில் ஏனைய நாடுகள் தன்னம்பிக்கையற்று - மடிமை கொண்டு தாழ்ந்தொழியும், அதுபோலவே ஆங்கிலத்துக்குத் தலைமை தந்தால் பிறமொழிகள் தாழ்ந் தொழியும். மொழி மட்டுமல்ல, மொழிக்குரிய மக்களும் அந்நிலையடைவர். ஒருநாட்டின் வளர்ச்சி அதன் மொழியின் வளர்ச்சி கொண்டு அறியப்படும். இதற்குச் சான்று ஆங்கில நாடும் நம் நாடுமாகும். மற்றுமொரு பெருங்கேடு! ஆங்கிலம் கல்லா தாய்மொழியாளர்கள் கோடிக்கணக்கானவர் தம் உரிமையிழந்து - உணர்விழந்து அடிமைகளாய் ஆங்கிலம் கற்றாரைக் கண்டு அஞ்சித் தம்மைத் தாழ்ந்தவராய் நினைத்துக் கொள்கின்றனர். இதனால் அரசாங்க ஆணையர்கள் - எழுத்தாளர்கள் - ஊழியர்கள் புரியும் அட்டூழியங்கட்கும், கொடுமைகட்கும் எல்லையேது? ஆங்கிலம் படித்தவர் தம்மை அறிவாளிகள் எனவும், ஆளும் மாட்சியினர் எனவும் நம்பிக் கோடிக்கணக்கான தாய்மொழியாளர்களை இகழ்ந்து ஒதுக்குகின்றனர். இதனால் மனிதப்பண்பே - உரிமையே - அன்பே - தாழ்ந்து மதிப்பற்றதாகி விடுகின்றது. அறமன்றங்களும் (கோர்ட்டுகள்), ஆட்சிமன்றங்களும், கல்லூரிகளும் ஆற்றும் சிறிய செயல்களைக் கூடக் கோடிக் கணக்கான பொதுமக்கள் அறியவியலாது தவிக்கின்றனர். ஒரு சிலரான அரசாங்க ஊழியர்கட்காகக் கோடிக்கணக்கான மக்கள் அல்லற்பட வேண்டுமா? இதுவா மக்களாட்சி! என்ன கொடுமை! இன்னும் சல்வி நிலையங்களில், கல்லூரிகளில் கற்பிக்கும் மொழியுடன் அவற்றின் அன்றாடச் செயல் மொழியும் ஆங்கிலமாயிருப்பதால் மாணவர்கள் பால் தாய்மொழியில் அருவருப்பும், ஆங்கிலத்தில் பெருமிதமும், பேராசையும், பதவியார்வமும், போலி நடையுடை பாவனைகளும் மிகுகின்றன. ஆங்கிலமே பயன்தருவது; தமிழ் வாழ்வுக் குதவாது; மதிப்புத் தராது யென்றெல்லாம் எண்ணித் தமிழ் மொழி, தமிழ் வகுப்பு, தமிழாசிரியர்களை மாணவர்களும் பிறரும் ஏளனம் செய்து வருவது யாவரும் அறிந்தனவே. இவற்றால் மாணவர் தன் மானத்தை இழந்து அடிமை நிலையடைகின்றனர். பள்ளி, கல்லூரி ஆசிரியர்களும், பல்கலைக் கழக ஆணையர்களும், துணை வேந்தர்களும் ஆங்கிலப் புகழ்பாடிகளாக அம்மொழியிலேயே பேசி நடமாடி எச் செயலையும் செய்வதால் மாணவர் அனைவரும் அப்படியே செய்கின்றனர். இப்படித் தம் தாய்மொழியை இகழ்ந்து அயல் மொழிக்கு அடிமையாகிப் பேடியராக நாட்டார் எவரேனும் உளரோ? கூறுமின்! நாட்டின் பல்வேறு துறைகளில் உயர்ந்தவராக உள்ளார். அனைவரும் ஆங்கிலப் பட்டமுடையவர்கள் - நாளிதழ், கிழமை இதழ் நடத்தும் ஆசிரியர் அனைவரும் பட்டதாரிகளே! தொழில் வல்லுநர் அனைவரும் அப்படியே. கல்லூரி ஆசிரியர்களோ சொல்ல வேண்டியதில்லை. இவர்கள் யாவரும் (ஓரிருவர் நீங்கலாக) தமிழர்களே எனினும், ஆங்கிலத்திற்குப் பரிந்து தாய்மொழியை மறைமுகமாக எதிர்க்கின்றனர். இவர்கள் ஆங்கிலத்தைத் தாய்மொழியாக உடையவர்களுக்கும் மேலாக ஆங்கில ஏற்றத்திற்காகப் பேசுகின்றனர். இவர்கள் தாமா கோடிக்கணக்கான ஆங்கிலம் அறியாப் பொதுமக்கட்கு நன்மை செய்யக்கூடியவர்கள்? இராசாசி போன்ற நல்ல சான்றோர்கள் கூட இன்று ஆங்கிலத்திற்காக அல்லும் பகலும் பாடுபட்டுத் தாய் மொழியின் நன்மைக்காக ஒன்றும் பேசாமல் இருக் கின்றார்களே! இப்படி ஆங்கிலப் பித்தர்களால் தமிழ் மொழிக்கும், நாட்டின் நல் வளர்ச்சிக்கும் பல்கோடிப் பொதுமக்களுக்கும் நேர்ந்துள்ள கொடும் துன்பங்களை எடுத்துரைக்க யாருளர்? அங்ஙனம் எடுத்துரைக்கும் கருத்துக்கட்குத் தமிழ்த்தாளர்களான தினமணி, சுதேசமித்திரன், தமிழ்நாடு, கல்கி முதலிய இதழ்கள் தம் தாள்களில் இடந்தருமா? ஆங்கிலத்துக்குச் சார்பான கருத்துக்களை எல்லாம் கொட்டை எழுத்துக்களில் கோடிட்டுக் கூறித் தமிழ் மொழிக்குச் சார்பான கருத்துக்களை எல்லாம் ‘இருட்டடிப்பு செய்வதற்கன்றோ இத்தாள்கள் உள்ளன!\ இன்னும் திராவிடநாடு - திராவிட இனம் என்று பேசுவோர் தாம், நடத்தும் தாள்களிலும், பேச்சுக்களிலும், ஆங்கிலப் பயன்களையும், சிறப்புக்களையுமே எடுத்துப் பேசுவதில் மேற்கூறிய தாள்களின் ஆசிரியர்களையும், தாள்களையும் மிஞ்சி விடுகின்றனரே! அக் கூட்டத்தவர்கள் தங்கள் தலைவர்கட்குப் பெருமை தேடுவதில் அத்தலைவர் களின் எம்.ஏ. பட்டங்களைத் தாமே பெரிதாக விளம்பரம் செய்கின்றனர்? தம் தலைவர்களைவிட அவர்தம் எம்.ஏ. பட்டங்களில் அக்கட்சியாளர்கட்கு இருக்கும் ஈடுபாட்டை என்னென்று வியப்பது? அப்பட்டங்கள் மீது அவர்கட்குள்ள ஆராக்காதல் பெரிது! பெரிது! அவ்வியக்கத் தலைவர்கள் தம் கட்சியாளர்கட்கு ஆங்கில மோகத்தை அப்படி ஊட்டினார்கள்! மற்றுமொரு வியப்புக்குரிய செய்தியாவது; தமிழாசிரியர் கட்குத் தமிழைவிட ஆங்கிலத்தின் மேல்தான் அளவு கடந்த மயக்கமும், அவாவும், மறைந்த ரசிகமணி (டி.கே.சி. நம் தலைவர்கள் பெயர்கள் கூட இப்படி ஆங்கில எழுத்தில் ஆளப்படுகின்றன!) என்னை நோக்கி, மறை! உங்கட்குத் தெரியுமா? தமிழாசிரியர்கட்கும் தமிழில் பற்றும் நம்பிக்கையும் இல்லை என்பது? அடடா! இப்பாழும் தமிழை ஏன் படித்து மதிப்பிழந்தோம்! என்று வருந்துவது! வெளியில் மேடையில் தமிழ் தமிழ் என்று முழக்குவர். உள்ளுக்குள் ஆங்கிலமே அவர்கட்குத் தெய்வம் என்பர். அவர் ஏதோ! மிகைப்படுத்திச் சொல்கின்றார் என்று யான் கருதினேன். பிறகு என் காட்சியில் அவர் கூற்றில் 50 பங்கேனும் உண்மையுண்டென்று அறிந்து கொண்டேன். தமிழாசிரியர்கள் பலர், மாணவர்கள் முன் சிறுமைப் பட்டாலும் குற்றமில்லை, தமக்கு ஆங்கிலம் தெரியும் என்று அவர் அறிந்தால் போதும் என்றெண்ணி ஏராளமாய் ஆங்கிலச் சொற்கள் - தொடர்களைப் பேசித் தம் தாழ்மை மனப்பான்மையைக் காட்டிக்கொண்டு மாணவர்களால் இகழப்படுகின்றனர். - பேரா. மறை திருநாவுக்கரசு தனித்தமிழியக்கத் தந்தை மறைமலையடிகள் வரலாறு (பக் 706 -709)