16 திராவிடர் நாகரிகம் முன்னுரை திராவிடர் நாகரிகம், காலம் குறிப்பிட்டு எல்லை காணமுடியாத பழமையுடையது. இற்றைக்கு ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே, இன்றையினும் பார்க்க நாகரிகத்தால் உயர்ந்த திராவிட மக்கள் சிந்து வெளியில் வாழ்ந்தார்கள். அவர்கள் மேற்கு ஆசியாவிலே யூபிராதஸ், தைகிரஸ் ஆற்றோரங்களில் அக் காலம் வாழ்ந்த சுமேரிய மக்களோடு வாணிகம் நடத்தினார்கள். இந்திய நாட்டிற் செய்யப்பட்ட முத்திரைகள் பல, சுமேரியாவில் கிடைத்துள்ளன. சிந்துவெளி மக்களுக்கு முற்பட்ட திராவிடமக்களின் நாகரிகச் சின்னங்கள் மைசூரில் கிடைத்துள்ளன.1 இற்றைக்கு ஐயாயிரம் அல்லது ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரேயே திராவிடமக்கள் ஓவியம், சிற்பம், கட்டடஅமைப்பு, வாணிகம், கைத்தொழில், கப்பற் பயணம், இலக்கியம், இசை, கூத்து, போர், நகர் அமைப்புப் போன்ற பற்பல துறைகளில் மிகத் தேறியிருந்தார்கள். இவை போன்ற வரலாறுகளைப் பொதுமக்களும், பள்ளிக்கூட மாணவரும் பயில்வது இன்றியமையாததாகின்றது. இங்கிலாந்தைப்பற்றி எழுதப்பட்ட வரலாற்று நூல்களை நூற்றுக்கணக்கிற் காண்கின்றோம். அவைகளை யெல்லாம் நமது நாட்டு மாணவர் ஆவலோடு கற்கின்றனர். திராவிடநாட்டு வரலாறு, திராவிடர் நாகரிகம் என்பவைகளைப் பற்றிப் பொது மக்களும் மாணவரும் கற்று அறிவதற்கு எத்தனை நூல்கள் உள்ளன? இதனை நினைக்குந்தோறும் திராவிடன் எவனேனும் நாணம் அடையாமல் இருப்பான் என்று கூறமுடியாது. இவ் வகைக் கருத்தை அடிப்படையாகக் கொண்டே இச் சிறியநூல் பல பகுதிகளாக வெளிவருகின்ற தென்க. சென்னை, 25-8-1947. ந.சி. கந்தையா. திராவிடர் நாகரிகம் தோற்றுவாய் தென்னிந்தியாவிலும் இலங்கையிலுமுள்ள பாறைகளே உலகிற் பழைமையுடையனவென்றும், அவை ஒரு போதும் நீருள் மூழ்கியிருக்க வில்லை யென்றும் நில நூலார் கூறுகின்றனர். இந்திய நாட்டில் மிக மிகப் பழமைதொட்டே மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். அவர்கள் பழைய கற்காலம் முதல் உலோக காலம் வரை தொடர்பாகப் பயன்படுத்திய ஆயுதங்களும் பிற பொருள்களும் இந்தியாவில் கிடைத்துள்ளன. ஆகவே இந்திய மக்களின் நாகரிகம், ஆதிகாலம் முதல் இந்தியாவிலேயே தோன்றிப் படிப்படியே வளர்ச்சி அடைந்துள்ளதென, ஆராய்ச்சியாளர் ஒருதலையாக நவில்கின்றனர். இக் காரணங்களால் மக்கட் படைப்பு இந்திய நாட்டிலேயே தோன்றி வளர்ச்சியடைந்ததாகலாம் என மேல்நாட்டாசிரியர்கள் கூறுவாராயினர். இந்திய நாட்டில் தோன்றி வளர்ந்த நாகரிகமே மேற்கு ஆசியா, எகிப்து, சின்ன ஆசியா, கிரேத்தா முதலிய நாடுகளுக்கும் சென்றது. இக் கருத்தினை ஆராய்ச்சியாளர் பலர் புகன்றுள்ளார்கள். உலக நாகரிகத் தோற்றத்திற்கு அடிப்படையான சீரும் திருத்தமும் பெற்றிருந்த மக்கள் திராவிடராவர். இவர்கள் இமயமலை முதல் கன்னியாகுமரி வரையில் வாழ்ந்தார்கள். இவ் வெல்லைகளுக்கு உட்பட்ட நாடுகள் எல்லாவற்றிலும் வழங்கிய மொழி ஒன்றே.1 இவ்வாறு பண்டு தொட்டே நாகரிக வளம் படைத் திருந்த நம் முன்னோராகிய திராவிட மக்களின் பழைய வரலாறுகளை நன்கு அறிந்துகொள்வது நமது கடனாகும். இந்திய நாட்டில் ஆரிய மக்கள் வந்து குடியேறிய பின்பு சில மாறுதல்கள் உண்டாயின. ஆரிய மக்க ளிடையே பிராமண மதம் என்னும் புதிய மதமொன்று தோன்றலாயிற்று. பிராமண மதத்தினர் சிலர், தென்னாடு போந்து, தமிழ் அரசர்களிடையே தமது மதத்தைப் பரப்பலாயினர். இது, இன்று இந்திய மக்களிடையே ஐரோப்பிய கிறித்துவ பாதிரிமார் தமது மதத்தைப் பரப்பிவருவது போன்ற தாகும். தென்னாடு போந்த பிராமணரோடு திருமணத்தினால் கலப்புற்ற தமிழ்நாட்டுப் பார்ப்பனர், பிராமண மதத்தைத் தழுவலாயினர். அதனால் அவர்கள் தம்மை ஆரியரெனவும், தமதுதாய்மொழி ஆரியம் எனவும், ஆரியம் தெய்வ மொழி யெனவும் கூறிப் பல மாறாட்டங்களைத் தென் னாட்டில் உண்டுபண்ணலாயினர். இதனால் தென்னாட்டில் ஆரிய திராவிடப் போராட்டங்கள் பழைமைதொட்டே நடந்து வந்தன. இதனைத் திருமூலர் காலம் முதல் இன்று வரையும் நாம் காணலாகும். ஆரியம் திராவிடம் என்னும் இரண்டில் ஆரியக் கட்சியைச் சேர்ந்த பிராமணரே பெரும்பாலும் திராவிடர் வரலாறுகளை எழுதலாயினர். ஆரியர் திராவிடர் வரலாறுகள் என்பன மொழி ஆராய்ச்சி, மக்கள் இன ஆராய்ச்சி என்பவை அளவில் நின்றுவிடாது அரசியல் சம்பந்தமும் பெற்றுள்ளன. ஆகவே அவர்கள் பிராமணக் குழுவினருக்கும் சமக்கிருதத்தின் பெருமைக்கும் இழுக்கான செய்திகளை வெளியிட ஒருபோதும் விரும்பவில்லை. அதனால் உண்மை யான திராவிடர் வரலாறுகள் வெளிவந்தில. மேல்நாட்டு அறிஞரின் இடைவிடாத பேர்உழைப்பினால் திராவிட மக்களின் வரலாறும், அவர்கள் நாகரிகத்தைப்பற்றிய பல அரிய செய்திகளும் வெளிவந்துள்ளன. உண்மை யில் இந்திய நாகரிகமென்பது திராவிடர் நாகரிகமே. 1இவ்வுண்மைகளை அங்கை நெல்லிக்கனிபோல யாவரும் எளிதில் படித்துணருமாறு இச் சிறிய நூல் வெளிவருவது இன்றியமையாததாகின்றது. மக்கள் வாழ்க்கையில் பண்படுதல் மக்கள் மிக மிகக் கீழ்நிலையிலிருந்து படிப்படியே முன்னேற்ற மடைந்தார்கள். ஆதியில் அவர்கள் வேட்டையாடியும், மீன் பிடித்தும் காடு களிற் கிடைக்கும் காய்கனி கிழங்கு வகைகளை உண்டும் வாழ்ந்தார்கள். இவ்வாறு அன்று அன்றாட உணவின் பொருட்டு அலைந்து திரிந்த மக்கள் வேடர் எனப்பட்டார்கள். இந் நிலைமையில் ஒரு வகையான பண்பாடும் உண்டாகவில்லை. அவர்கள் மிருகங்களை வேட்டையாடுவதற்கு ஏற்ற வில், அம்பு, எறிஈட்டி, கவண் போன்ற சில ஆயுதங்களைச் செய்து பயன் படுத்த அறிந்தனர். இதன்பின்பு மந்தைகளை மேய்த்து அவைகளின் பயன் களைக் கொண்டு வாழும் நிலை உண்டாயிற்று. அக் காலத்திலும் மக்கள் ஆறுதலின்றி இடங்கள் தோறும் அலைந்து திரிந்தமையில் திருத்தமுண்டாக வில்லை. அடுத்த படியில் அவர்கள் பயிரிட அறிந்தார்கள். அப்பொழுது அவர்கள் ஓரிடத்தில் தங்கியிருந்து பயிரிடவும், பயிர் விளையும் காலத்தை எதிர்பார்த்து இருக்கவும், பருவகாலத்தை அறிந்து மறுபடியும் பயிரிடுவ தற்கு ஓரிடத்தில் நிலைத்திருக்கவும் வேண்டிய கட்டாயம் உண்டாயிற்று. இந்நிலைமையில் மனிதனுக்கு ஓய்வு உண்டாயிற்று. பயிர் விளைவிப்பதால் அடுத்த அறுப்புக்காலம் வரையில் பலர் உண்ணப் போதுமான உணவு கிடைத்தது. ஆகவே, மக்கள் அக் காலத்தில் ஓய்ந்திருந்து திருத்தம் எய்தினார்கள். நாகரிகம் மக்கள் திருத்தமடைந்தபோது நகர்கள் உண்டாயின. நகர வாழ்க்கை யின் பண்பட்ட நிலை நாகரிகம் எனப்பட்டது. நாகரிகம் என்பதற்கு நகர் சம்பந்தமானது என்று பொருள். ஆங்கிலத்தில் நாகரிகத்தைக் குறிக்க வழங் கும் “சிவிலிசேஷன்” என்னும் சொல்லும் இப் பொருளினதே. 1நாட்டுப் புறங்களில் உண்டாகும் செல்வமும் அறிவும் நகரிடத்தே சேரும். பலநாட்டு வணிகர் கூடும் அவ்விடத்தில் புதியவற்றைக் கண்டுபிடித்தல், கைத்தொழில் முதலியன பெருகுவதால் உண்டாகும் பல வாய்ப்புக்கள், சொகுசான வாழ்க்கை, பொழுதுபோக்கு, அதற்கு ஒழிவு, நல்ல பண்டங்கள், கருத்துக்கள் எண்ணங்களின் கலப்பு, அதனால் தோன்றும்வாணிகத்தைப் பற்றிய விவேகம், உண்டுபண்ணும் திறமை முதலியன உண்டாகும். நகரங்களில் கைத்தொழில் செய்வதற்குச் சிலர் தனியே விடப்படுவர். நாகரிகம் நாட்டு மக்களின் குடிசையில் ஆரம்பித்து நகரில் வந்து மலர்கின்றது. நாட்டின் பல பாகங்களில் தோன்றி வளரும் எல்லாத் திருத்தங்களின் தொகுதிகளும் நகரில் வந்து பண்பட்ட நிலையை அடையும்போது அவை நாகரிகம் என்னும் பெயரைப் பெறும். பழந்தமிழரின் வாழ்க்கை வாழ்க்கை மக்கள் வாழும் இடங்களுக்கு ஏற்ப மாறுபடுகின்றது. கடல் ஓரங்களில் வாழும் மக்கள் மீன் பிடித்தல், உப்பு விளைவித்தல், அவைகளைப் பிற இடங்களுக்குக் கொண்டு சென்று விற்பதால் கிடைக்கும் ஊதியத்தைக் கொண்டு தமக்கு வேண்டும் பிறபொருள்களைப் பெறுதல் போன்ற செயல்கள் புரிவதைக் காண்கின்றோம். இவ்வாறே காடு, மலை, வயல், மணல் வெளிகளில் வாழும் மக்களும் தத்தம் வாழ்க்கையின் பொருட்டு வெவ்வேறு தொழில்களைப் புரிதலைக் காண்கிறோம். இவ்வுலகம் கடல், காடு, வயல், மலை, மணல்வெளி என ஐவகைப் படும். இவ்வைவகை இடங்களும் இந்திய நாட்டில் உண்டு. ஆகவே, இந்திய நாட்டில் ஆங்காங்கு வாழ்ந்த மக்களின் திருத்தம், வாழ்க்கைமுறை முதலியனவும் இடங்களுக்கேற்ப மாறுபடும். பாலை நில மக்கள் மலை, காடுகளை அடுத்த ஒதுக்குகளில் மணல்வெளிகள் காணப் படும். இவ்விடங்களில் வெய்யிலுக்கு உலர்ந்து பட்டுப்போகாத பாலை மரங்கள் வளரும். அதனால் மணல் வெளிகளைப் பாலைநிலமென முன் னோர் வழங்கினார்கள். இவர்கள் மந்தை வளர்க்கவோ, பயிரிடவோ அறியா தார்; வில்லு, அம்பு முதலியவைகளின் பயனை அறிந்தவர். இவர்கள் வேட்டை ஆடுதலால் கிடைக்கும் விலங்குகளின் இறைச்சியை உண்டும், வழிச்செல்வோரைக் கொள்ளையிட்டும் வாழ்ந்தனர். இவர்களின் கடவுள் கொற்றவை (காளி). இக்கடவுள் வீர தெய்வமாகவிருந்தது. இதற்கு மனித பலிகள் இடப்பட்டன. பாலை நில மக்கள் எயினர், வேடர் எனப்பட்டனர். எயினர் தலைவன் காளை அல்லது விடலை எனப்பட்டான். எயினர் குடியிருப்பு குறும்பு எனப்பட்டது. மலைவாணர் மலை இடங்கள் குறிஞ்சி எனப்பட்டன. மலைகளில் குறிஞ்சி என்னும் ஒருவகை மரம் வளர்ந்தது. இது பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை கருமைகொண்டு கரிய தளிர்களை ஈனும் என்று சொல்லப்படு கின்றது. மலை இடங்களில் வாழ்ந்தோர் குறவர் எனப்பட்டனர். அவர்களின் தலைவன் வெற்பன் அல்லது சிலம்பன் எனப்பட்டான். அவர்களின் குடியிருப்பு சிறுகுடி எனப்பட்டது. அவர்கள் வேட்டையாடியும், மலைகளிற் கிடைக்கும் காய்கனி கிழங்குவகைகள், மலைச்சாரல்களில் தானே விளையும் மலைநெல் ஆகிய இவைகளை உண்டும் வாழ்ந்தனர். அவரை, துவரை, சாமை முதலியனவும் மலைச்சாரல்களில் விளை விக்கப்பட்டன. குறச்சிறுமியர் பகற்காலத்தே புனங்களில் பரண்கள்மீது இருந்து தினைக் கதிரை உண்ணவரும் கிளிகளை ஓட்டினர். இராக்காலத்தில் குறவர் பரண் மீதிருந்து புனத்தை மேயவரும் யானை, பன்றி முதலியவைகளைக் கவணில் கல்வைத்து எறிந்து ஓட்டினர்; மலைச்சாரல்களில் தொங்கும் தேன் கூடுகளை அழித்துத் தேன் எடுத்தனர்; தேனை மூங்கிற்குழாய்களில் ஊற்றி வைத்தனர். இவர்கள் பாலைநில மக்களினும் பார்க்கத் திருத்தமுடையோர். இவர்கள் பயிரிடச் சிறிது அறிந்திருந்தனர். குறவரின் குலதெய்வம் முருகக்கடவுள். குறவர் மறியறுத்துப் பலி தூவி முருகக்கடவுளை வழிபட்டார்கள்; நரபலி இடவில்லை. முருகபூசை செய்பவன் முருகன் எனப்பட்டான். இவன் தெய்வமேறி ஆடும் கூத்து வெறியாட்டு எனப்பட்டது. கையிடத்தே வேலை வைத்திருந்தமையின் இவன் வேலன் எனப்பட்டான். தெய்வத்தால் குறை நேர்ந்த பெண்களின் தெய்வக் குறையைப் போக்குவதற்கு வெறியாட்டு எடுக்கப்பட்டது. தேன், தினைமா, இறைச்சி முதலயவை வேடரின் உயர்ந்த உணவுகளாகும். இவர்கள் மலையிடத்தே கிடைக்கும் யானைக்கொம்பு, புலித்தோல், இறைச்சி முதலியவைகளைப் பிற இடங்களுக்குக் கொண்டுசென்று, விற்று, அவற்றின் விலையாகத் தமக்கு வேண்டிய பிற பொருள்களைப் பெறுவர். முல்லை நில மக்கள் குறுங்காடுகளில் மக்கள் சிலர் வாழ்ந்தார்கள். அங்கு முல்லைக்கொடி அதிகம் வளர்ந்தமையின், அது முல்லை நிலம் எனப்பட்டது. முல்லைநில மக்கள் ஆடுமாடுகளை வளர்த்தார்கள். அவை கொடுக்கும் பால், தயிர், நெய், வேட்டையாடுவதால் கிடைக்கும் இறைச்சி, பயிரிட்டு விளைவிக்கும் வரகு முதலிய தானியங்கள் முதலியவைகளைக் கொண்டு வாழ்ந்தனர்; பால், தயிர், நெய் முதலியவைகளை அயல் இடங்களுக்குக் கொண்டுசென்று விற்றுத் தமக்கு வேண்டிய பிற உணவுப்பொருள்களைப் பெற்றனர். ஆயர் வாழும் குடியிருப்பு, சேரி எனப்பட்டது. இவர்களின் வாழ்க்கை வேடனுக்கும் உழவனுக்கும் இடைப்பட்டதாதலின், இவர்கள் இடையர் எனப்பட்டார்கள். முல்லை நிலமக்கள் திருமாலை வழிபட்டனர். திருமாலின் கையிலிருப்பது சங்கு, சக்கரம் என்பன. இவை ஞாயிற்றுக் கடவுளின் அடையாளங்கள். மால்வணக்கம் ஞாயிற்று வணக்கத்தின் ஒருவகை. மால் என்பதில் எல் என்பது தொனிக்கின்றது. எல் என்பது ஆல் ஆயிற்று. எல் ஞாயிற்றைக் குறிக்கும். கரியமால் என்னும் வழக்குண்மையாயின் மா என்பது கருமையைக்குறிக்கின்றது. பிற்காலத்தில் திருமால் வணக்கம் கண்ணன் வணக்கமாக மாறியுள்ளது. ஆரிய மக்கள் வழிபட்ட விஷ்ணுக்கடவுளின் பெயர் விண் என்பதன் வேறுபாடு எனச் சொல்லப்படுகின்றது. முல்லைநில மக்கள் திருமாலுக்குப் பாற்பொங்கலிட்டுக் குரவைக் கூத்தாடி வழிபட் டார்கள். குரவைக் கூத்து என்பது பெண்கள் எழுவர் கைகோத்து வட்டமாய் நின்று ஆடும் கூத்து. கடற்கரை மக்கள் கடற்கரையில் நெய்தல் என்னும் ஒருவகை நீர்ச்செடி வளரும். அதனால் கடற்கரையை அடுத்த இடங்கள் நெய்தல் எனப்படும். இவர்கள் பரதவர் எனப்பட்டனர். பரதவர் கட்டுமரங்களில் சென்று மீன் பிடித்தார்கள். இவர்களே பிற்காலத்தில், மேற்கு ஆசியா, சுமத்திரா, ஜாவா, மலாயா, கம் போதியா முதலிய நாடுகளுக்கு மரக்கலங்கள் ஓட்டிச்சென்ற மாலுமிகளாவர். இவர்களின் தலைவர் சேர்ப்பன், புலம்பன், துறையன் முதலிய பெயர் களைப் பெற்றனர். உப்பு விளைவிப்பதும் நெய்தல் நில மக்களின் வாழ்க்கைத் தொழிலாகவிருந்தது. உப்பு விற்போர் உமணர் எனப்பட்டனர். உமணர் கழுதைகளிலும் வண்டிகளிலும் உப்பைக் கொண்டுசென்று பிற இடங்களில் விற்றுத்தமக்கு வேண்டிய வாழ்க்கைப் பொருள்களைப் பெற்றனர். மக்கள் கடல் கடந்து பிறநாடுகளுக்குச் செல்லத் தொடங்கியபோது, பிறநாடுகளுக்குக் கொண்டு செல்ல வேண்டிய பண்டங்கள் கடற்கரைகளை அடைந்தன. அயல்நாட்டுப் பண்டங்கள் கடற்கரைகளில் வந்து இறங்கின. அவ் விடங்களில் சுங்கம் கொள்ளும் பொருட்டு, அரசர் காவலாளர் நிறுத் தப்பட்டனர். சுங்கச் சாலைகள் எழுந்தன. பண்டசாலைகள் அமைக்கப்பட் டன. கடற்கரைகளுக்குச் செல்லும் பாதைகள் திறக்கப்பட்டன. உள்நாட்டு வணிகரும் பிறநாட்டு வணிகரும் பட்டினங்களிற் கூடினர். இதனால் முன் கிராமங்களாயிருந்த பரதவர் குடியிருப்புக்கள் சிறப்பு மிக்க இடங்களாயின. பட்டினங்கள் நகர்களாக மாறின. பரதவர் வருணன் என்னும் குல தெய்வத்தை வழிபட்டார்கள். இக் கடவுளையே இந்திய நாட்டை அடைந்த ஆரிய மக்களும் வழிபட்டார்கள். ஆரியரின் வருணன் அசுரன் எனப்பட்டார். அசுரர் எனப்பட்டோர் திராவிடரே யாவர். இக் கருத்தினை வேத ஆராய்ச்சியாளர் நிலை நிறுத்தி யுள்ளார்கள், பரதவர் தாழையின் கீழ் சுறாக்கோடு நட்டுப் பூரணைக் காலங்களில் சிறப்பாகக் கடவுளை வழிபட்டனர். மருத நில மக்கள் மந்தைகளை மேய்க்கும் நிலைக்குப் பின் மக்கள் ஆற்றோரங்களில் தங்கியிருந்து ஆற்று வெள்ளத்தைக் கால்வாய்களால் வயல்களுக்குப் பாய்ச்சித் தானியங்களை விளைவித்தார்கள். இவ்வாறு வெள்ளத்தை ஆண்டமையின் இவர்கள் 1வெள்ளாளர் எனப்பட்டனர். ஆற்றோரங்களல் லாத சமவெளிகளில் தங்கினோர், மழை நீரை ஏரி, குளங்களில் தேக்கி வைத்து ஏற்றம், கபிலை, இடா, பிழா முதலியவைகளால் இறைத்துப் பயிர் விளைவித்துக் காரை ஆண்டமையின் காராளர் எனப்பட்டனர். நீர் ஓரங்களில் மருத மரங்கள் செழித்து வளர்ந்தமையின், வயலும் வயல் சார்ந்த இடங்களும் மருதம் எனப்பட்டன. வேளாளர் தலைவன் ஊரன் அல்லது கிழவன் எனப்பட்டான். இவர்களின் குல தெய்வம் வேந்தன் எனப்பட்டது. நல்ல அரசன் ஆட்சியில் மழை பெய்யும் என்பது இன்றும் பொதுமக்களால் நம்பப்பட்டு வருகின்றது. முற்காலத்தில் மழை பெய்விப்போராகிய (Rain makers) மந்திர வித்தைக் காரரான அரசரே நாடுகளை ஆண்டுவந்தார்கள் என்பது பழைய மக்கள் வரலாற்றால் அறிய வருகின்றது. அவ் வழிபாட்டின் நிழலே வேந்தன் வழிபாடாகலாம். அஃதன்றி, ‘கடவுள் தன் சார்பில் மக்களை ஆள்வதற்கு விடுத்த அவர் புதல்வன் அரசன்’ என்னும் நம்பிக்கையும் மக்களிடையே ஒருகால் ஓங்கியிருந்தது. பிற்கால மக்கள் இறைவன் அல்லது அரசனை வேந்தன் என்னும் பெயரால் வழிபட்டார்கள். முற் காலத்தில் அதிக உணவு வைத்திருப்பவனே செல்வனாக மதிக்கப்பட்டான். உழவனிடத்தில் அதிக செல்வம் இருந்தது. உணவுப் பொருள்களை வேண்டி மக்கள் மருத நிலத்துக்கு வந்தார்கள். அவர்கள் உழவனிடமிருந்து தானியங்களைப் பெற்றார்கள். அதற்கு விலையாகத் தத்தம் நாடுகளிற் கிடைக்கும் அரும் பண்டங்களைக் கொடுத்தார்கள். பண்டங்களைக் கொண்டு வருவதற்கும், கொண்டு செல்வதற்கும் திருந்திய பாதைகள் அமைக்கப்பட்டன. காணியாளராகிய உழவர், தமது தானியங் களைச் சேர்த்துவைப்பதற்கும், செவ்வனே வாழ்வதற்கும் அழகிய வீடு களை அமைத்தார்கள். பயிர் செய்வதற்குக் கலப்பை, கொழு, நுகம், கத்தி, பாரை, அரிவாள் போன்ற பலவகை ஆயுதங்கள் தேவைப்பட்டன. அவர்கள் உல்லாசமாக வாழ்வதற்கும் பொழுது போக்குவதற்கும் விரும்பினார்கள். அவர்கள் மகளிர் அழகிய அணிகலன்களை அணிய விரும்பினார்கள். இவைகளை உதவக்கூடிய பழக்கமுடைய மக்கள் அவ்விடத்தே தங்கி னார்கள். கைத்தொழில்கள் பெருகின. அவர்கள் செய்யும் வேலைகளுக்குக் கூலியாக உழவர் தானியங்களை அளித்தனர். இவ்வாறு மருத நிலம், மக்கட் புழக்கமுள்ள இடமாக மாறிற்று. செல்வம் எங்கு உண்டோ, அங்கு அதனைக் கொள்ளை கொள்ளப் பகைவர் வருவர். பகைவரை எதிர்த்துப் போர் செய்வதற்குப் போர் வீரரும் அவர்களைத் தலைமை தாங்கி நடத்து வதற்கு அறிவும் ஆற்றலும் உடல் வலியுமுடைய ஒருவன் வேண்டும். அவ் வகையினன் ஒருவன் தெரிந்து எடுக்கப்பட்டான். பகைவர், குடியிருப்புக் குள் விரைவில் நுழையாதபடி காக்க அதனைச் சுற்றி மதில் கட்டப்பட்டது. இவ்வாறு ஆட்சியும் நகரும் மருதநிலத்தே தோன்றலாயின. ஆட்சி மக்கள் குடும்பங்களாகச் சேர்ந்து வாழும்போதும், சொத்து உண்டா யிருக்கும் போதும் ஆட்சி தொடங்குகின்றது. மனிதன் வேடனாயிருந்த போது சொத்து இருக்கவில்லை. மக்கள் இடையராக வாழத் தொடங்கிய காலத்திலேயே அவர்களிடம் செல்வம் திரளத் தொடங்கிற்று. மாடு, ஆடு என்பன முற்கால மனிதனின் செல்வங்களாயிருந்தன. இடையர் புல் வெளிகளில் தங்கியிருந்தார்கள். மற்றச் செல்வங்கள் போலல்லாமல், ஆடு மாடுகள், கன்றுகுட்டிகள் ஈன்று பெருகும். இதனால் மந்தைகள் பெரிய அளவினவாகும். இடையனுடைய பிள்ளைகள் மந்தைகளைப் பிரித்துக் கொள்ளுதல் கூடாது. மேய்ச்சல் நிலத்தைச் சிறு துண்டுகளாகப் பிரித்தால் அது மந்தைகள் மேய்வதற்குப் பயனற்றதாகும். ஆகவே குடும்பங்கள் சேர்ந்து வாழும் முறை உண்டாயிற்று. குடும்பத் தலைவன் அதிகாரமுடைய வனானான். குடும்பத் தலைவர் பலருக்கு, அதிக செல்வமும் அதிக அதி காரமுமுடைய ஒருவன் அரசனானான். இவ்வாறு ஆட்சி முறை இடைய ருள்ளேயே முதன் முதல் தோன்றி வளர்ச்சி அடைவதாயிற்று. அரசனைக் குறிக்கத் தமிழில் வழங்கும் பழைய சொல் கோ அல்லது கோன், இது இடை யனை உணர்த்தும். இதனால் ஆட்சி, மக்கள் இடையனாயிருக்கும்போது தொடங்கிற்றென விளங்கும். ஆட்சியில் இருவகை சமாதான கால ஆட்சி, சொல் ஆட்சி; போர்க்கால ஆட்சி, வாள் ஆட்சி; சமாதான கால ஆட்சி, போர்க் காலத்தில் உதவாது. ஆகவே, மக்கள் போர்க் காலங்களில் சமாதான கால ஆட்சித் தலைவனை நீக்கிவிட்டு, அறிவும் ஆண்மையுமுள்ள ஒருவனைத் தலைவனாகத் தெரிந்தெடுப் பார்கள். அவனே படையை நடத்திச் செல்வான். அவன் சொன்னதே சட்டம். “இடைக்” சாதியருக் கிடையில் குடும்பத் தலைவனின் அதிகாரத்தைவிட ஆட்சி யிருக்கவில்லை. போர்க் காலத்தில் அவர்கள் தமக்குள் துணிவும் வீரமுமுள்ள ஒருவனைத் தலைவனாகத் தெரிந்தெடுத்து அவனுக்குப் பணிந்து நடந்தார்கள். போர் முடிந்தவுடன் அவன் தனது சொந்த முயற்சியைப் பார்க்கும்படி விடப்பட்டான். குடும்பத் தலைவன், படைத் தலைவன் என்னும் இரண்டு கருத்துக்களும் கலந்து சமூகங்களுக்குள் அரசநிலை வளர்ச்சி யடைந்தது. இவ்வகை நிலை மருத நிலத்திலேதான் உண்டாயிற்று. அங்கு தான் கோட்டைகளோடு கூடிய நகரங்கள் எழுந்தன. பழைய நாகரிகம் படைத்த நாடுகள் எல்லாம் ஆற்றோரங்களிலேயே உள்ளன. அரசன் தமிழர்களிடையே அரசன் ஆட்சி மிகப் பண்டைக் காலத்திலேயே தோன்றிற்று. அரசனைக் குறிக்கும் பல பழந் தமிழ்ச் சொற்கள் காணப்படு கின்றன. கோன், ஏந்தல், வேந்தன், மன்னன், குரிசில், இறைவன், வள்ளல், அண்ணல் முதலியன அவற்றுட் சில. ஆட்சி என்பது ஆள் என்னும் வினை அடியாகப் பிறந்தது. ஆள் என்னுஞ் சொல் தொடக்கத்தில் ஆளை உணர்த்திற்று. ஆட்சி என்பது இடையன் தனது மந்தைகளைப் பகைகளி னின்றுங் காத்து உணவு கொடுத்துக் காப்பது போன்றது எனக் கருதப் பட்டது. ஏந்தல் என்பது, மக்களை ஆபத்தினின்றும் காப்பவன் என்னும் பொருளில் ஏந்து என்னும் அடியாகப் பிறந்திருக்கலாம். அரசன் வாழும் வீடு, கோட்டை எனப்பட்டது. அரசனின் அதிகாரம் உயர்ந்தபோதும் ஒழுங்குபட்ட போர்முறை உண்டான போதும் அரசனின் வீடு கோட்டையாக மாறிற்று. கோட்டை வலிய மதிலாற் சூழப்பட்டிருந்தது; ஆகவே அரசனின் வீடு அரண்மனை எனப்பட்டது. அரண் என்பது தொடக்கத்தில் அழகு, பாதுகாப்பு என்பவைகளைக் குறிக்க வழங்கிற்று; பின்பு கோட்டையின் சுவரைக் குறிக்க வழங்குவதாயிற்று. கோட்டையைச் சுற்றி அகழ் இருந்தது. அகழைக் குறிக்கப் பல தமிழ்ச் சொற்கள் காணப்படுகின்றன. உடு, ஓடை, கேணி, பரிகம், புரிசை, பாம்புரி முதலியன அகழை உணர்த்தும் பெயர்களுட் சில. இதனால் தமிழர் அகழைப் பற்றி நன்கு அறிந்திருந்தார்கள் எனத் தெரிகின்றது. கோட்டை வாயில் கோட்டி எனப்பட்டது. மதிலுக்குப் பின்னே சரிவாக எழுந்து மேலே மேடையாக முடிவடையும் பகுதி கொத்தளம் எனப்பட்டது. கோட்டையின் மீது மறைந்து நின்று அம்பு எய்யுமிடம் ஞாயில் எனப்பட்டது. அரண்மனை யில் பல அறைகள் இருந்தன. அறை என்பது அறு என்னும் அடியாகப் பிறந்தது. பண்டங்களை இட்டு வைக்கும் அறை கொட்டறை அல்லது கொட்டடி எனப்பட்டது. அரசன் சிறப்புக் காலங்களில் பெரு மக்கள் சூழ விருத்தல் கொலு விருத்தல் அல்லது வீற்றிருத்தல் எனப்பட்டது. கொடி, துகில்,தோகை, கதலி, பூ, தழை முதலியவகைளால் கொலுச்சாவடி அலங்கரிக்கப்பட்டிருந்தது. அரசன் சிறப்புக் காலங்களில் முடி அணிந்தான். அவன் முகத்தை மழித் திருந்தான். கொலுவிருக்கும்போது அவன் கையில் கங்கணம், விரலில் கணையாழி, கழுத்தில் முத்து மாலை இரத்தினமாலைகள், காலில் கழல் போன்ற அணிகலன்களை அணிந்திருந்தான். சிங்காசனம், கட்டில் எனப் பட்டது. அரசன் சிங்காசனத்தில் சாய்ந்துகொண்டு இருக்கும் அணை, அரியணை எனப்பட்டது. அவன் எதிரே அடியார், ஊழியர், அரசனின் புகழ் கூறும் அகவர், அவன் கட்டளைகளை வெளிப்படுத்தும் வள்ளுவர், புகழ்பாடும் பாணர் புலவர், வள்ளல் எனப்பட்ட பெருமக்கள் இருந்தார்கள். ஆட்கள் எனப்பட்ட பொது மக்கள் மரியாதைக்குரிய தொலைவில் நின்று விண்ணப்பித்த வழக்குகளைக் கேட்டு அரசன் தீர்ப்பு அளித்தான். 1தமிழின் தொன்மை தமிழும் தமிழருடையனவும் ஆகிய பழைய வரலாறுகள் இருளில் மறைந்து கிடக்கின்றன. ஆங்கிலம், செர்மன் முதலிய மொழிகளைப் போலத் தமிழை ஆராய்ந்து கூற முடியாது. ஆங்கிலத்தின் வளர்ச்சியை ஆராய்ந்து பின் நோக்கிச் செல்லச் செல்ல நாம் ஒரு நிலையை அடை வோம். அங்கு அது ஆங்கிலமாகத் தோன்றாது. அங்கு அது சாக்சன், கொதிக் என்னும் மொழிகளின் கலப்பாகத் தோன்றும். தமிழ், கடவுளின் வாயில் நின்று பிறந்ததென்னும் பழங்கதை யுண்டு. இது தமிழின் அளவு கடந்த பழைமையை உணர்த்த எழுந்தது ஆகலாம். பண்டுதொட்டே இரண்டு மொழிகள் இந்திய நாட்டில் உள்ளன. இவ் விரு மொழிகளைப் பற்றி இலக்கண நூலார் கூறியுள்ளனர். வட மொழி, தென் மொழி என்பன முறையே சமக்கிருதம், தமிழ் என்பவைகளைக் குறிக்கும். இவை அம் மொழிகள் வழங்கிய இடங்களைக் குறிப்பிடுகின்றன. ஒரு காலத் தில் தென்மொழி இந்தியா முழுமையிலும் வழங்கிற்று என்பதற்குச் சான்றுகள் காணப்படுகின்றன. தென் மொழியை விந்திய மலைக்குத் தெற்கே ஓட்டித் தான் வட நாட்டில் இடம் பெறுவதற்கு வட மொழி திணறிக் கொண்டிருந் தது. இன்று இந்திய நாட்டில் வழங்கும் முன் பின் நூறு மொழிகள், இரண்டி லொரு மொழிகளின் சிதைவுகள் எனப்படுகின்றன. தெலுங்கு, கன்னடம், மலையாளம் முதலியன தமிழின் கிளைகளாகும். தெலுங்கும் பிற திராவிட மொழிகளும் தமிழின் தொடர்பில்லாத மொழிகள் எனச் சில ஆராய்ச்சி யாளர் கற்பனை செய்கின்றார்கள். இது, வளர்ந்த பிள்ளைகள் தமது தாய் தந்தையரின் உறவை மறந்திருப்பது போன்றது. சமக்கிருதச் சிதைவுகளை யும் சமக்கிருதச் சொற்களையும் இம் மொழிகளினின்று எடுத்துவிட்டால், மீந்திருப்பன இன்று வழக்கிறந்தனவோ, பழைய செய்யுட்களிற் காணப் படுகின்றனவோவாகிய தமிழ்ச் சொற்களே யாகும். வித்துவான்கள் சிலர் தமிழ், சமக்கிருதத்தினின்றும் பிறந்ததெனக் கூறித், தூய தனித் தமிழ்ச் சொற்களின் உற்பத்திகளுக்கு வடமொழி மூலங்காண முயல்வர். தமிழ் என்னும் சொல்லின் அடியைக் காணமுயன்ற தமிழ் மொழிநூல் எழுதிய ஒருவர் அதற்குச் சமக்கிருத ‘தமஸ்’ (சூடு) என்னும் சொல் அடியைக் கூறினார். தமிழ் எப்படி இந்தியாவுக்கு வந்தது? அது ஆகாயகங்கையைப் போல அதிசயமாகத் தோன்றவில்லை. தமிழர், ஆரியரினும் பார்க்க ஐந்நூறு1 ஆண்டுகளாவது முற்பட்டவர் களாவர். அவர்களின் செழிப்பான காலம் கி.மு. 500 முதல் கி.பி. 500 வரை. தொல்காப்பியர், சாகரிடிஸ் அல்லது புத்தர் காலத்தவர் ஆகலாம். தொல் காப்பியர் பழைய இலக்கணங்களைப் பற்றிக் குறிப்பிடுகின்றார். இதனால் அக்காலத்தில் பல இலக்கணங்களும் இலக்கியங்களும் தோன்றியிருந்தன என்று நாம் அறியலாம். வாய்ப்பாடமாகச் சொல்லப்பட்டு வந்த இருக்கு வேத பாடல்கள் கி.மு. 1500 முதல் கி.மு. 1000 வரையில் செய்யப்பட்டவை. இக்காலத்தில் ஆரியர் சிந்து நதிப் பள்ளத்தாக்கிலும் கங்கை நதிப் பள்ளத் தாக்கிலும் பரவியிருந்தனர் ஆதல் வேண்டும். தொல்காப்பியத்தில் ஆரியச் சார்பு காணப்படுகின்றது. இதனால் அக் காலத்தில் ஆரியக் கொள்கைகள் சில தென்னாட்டுக்கு வந்து விட்டனவென்று தெரிகிறது. ஆரியர் வரும்போது தமிழர் இந்தியா முழுமையும் பரவி வாழ்ந் தார்கள் என்பது தெளிவு. அவர்கள் உயர்ந்த நாகரிகப் பண்பு அடைந்திருந் தனர். அவர்கள் ஐரோப்பியர்,பினீசியர், சீனர், ஜப்பானியர் முதலியவர்களோடு தொடர்புவைத்திருந்தனர். சாலமன் அரசன் (கி.மு. 1000) தமிழ்நாட்டிலிருந்து மயில்களைப் பெற்றான். எபிரேயத்தில் காணப்படும் தொகி என்பது, தோகை என்னும் தூய தமிழ்ச்சொல்லின் திரிபு. அக் காலத்தில் எபிரேயருக் கும் தமிழருக்கு மிடையில் நெருங்கிய வாணிகத் தொடர்பு இருந்து வந்தது. திராவிடர் நாகரிகத்தின் விரிவு பழைய திராவிடர் என்போர் தமிழர், தெலுங்கர், மலையாளர், கன்னடர் முதலிய தென்னிந்திய மக்களின் முன்னோராவர். ஆதியில் இவர்கள் இந்திய நாடு முழுமையிலும் காணப்பட்டனர். இப்பொழுது அவர்கள் தென்னிந்தியாவிற் காணப்படுகின்றனர். ஆரிய மக்கள் அவர்களைத் தைத்தியர்?, தாசர், நாகர் என்னும் பெயர்களாற் குறிப்பிட்டனர். கன்ன பரம்பரை வரலாறுகளும் பழைய இலக்கியங்களும், பட்டையங் களும் ஆரியர் வருகைக்கு முன் சேர, சோழ, பாண்டிய இராச்சியங்கள் தோன்றி நிலை பெற்றன என்று தெரிவிக்கின்றன. அவர்கள் போர்முறை, கட்டட அமைப்பு, அரசியல் அமைப்புப் போன்ற, கலைகளில் தலை சிறந்து விளங்கினார்கள். உலக வரலாற்றிலும் இந்திய வரலாற்றிலும் சிறப்புற்று விளங்க வேண்டியவர்கள் தென்னிந்திய மக்களாவர் என்றும், இக் கருத்தினை விளக்குவதற்குச் சிறந்த ஆராய்ச்சியாளர் எவரும் முன் வரவில்லை என்றும் இரிச்சார்ட் என்பார் குறிப்பிட்டுள்ளார். திராவிட நாகரிகமே இந்திய பாபிலோனிய உலக நாகரிகங்களுக்கு அடிப்படை சுமேரிய மக்கள், திராவிடரின் ஒரு கிளையினர் என டாக்டர் ஹால் குறிப்பிட்டுள்ளார். டாக்டர் ஹாலின் கருத்து உண்மையாக இருக்குமாயின், நாகரிகம் முதன்முதல் இந்திய நாட்டில் தொடங்கி, மறுநாடுகளுக்குப் பரவிற்றென்று டாக்டர் எஸ்.கே. சட்டர்ஜி கூறியுள்ளார். சர். ஜான் மார்ஷல் என்பார், சுமேரிய நாகரிகம் பாபிலோனில் புதிதாகத் தோன்றியதென்றும், சுமேரிய நாகரிகத்துக்கு அடிப்படை இந்திய நாகரிகமாதல் கூடுமென்றும் இந்திய, நாகரிகத்திலிருந்தே பாபிலோனிய, அசீரிய, மேற்கு ஆசிய நாகரிகங்கள் தோன்றின என்றும் புகன்றுள்ளார். மொழி ஆராய்ச்சி வல்ல டாக்டர் சட்டர்ஜி கிரேத்திய, இலைசிய, சுமேரிய, எல்லம், திராவிட மொழிகள், உற்பத்தியில் தொடர்புடையன வென்றும், சின்ன ஆசியா, ஐசியன் தீவுகள், பாபிலோன் முதலியன ஒரே நாகரிகத் தொடர்புடைய நாடுகளென்றும் விளக்கமாகச் சாற்றியுள்ளார். இப்பொழுது அரப்பா மொகஞ்சதரோ முதலிய இடங்களிற் கண்டுபிடிக்கப்பட்ட பழம் பொருள்களால் இந்தியரின் நாகரிகம் சுமேரிய நாகரிகத்தை மிக ஒத்துள்ளதெனத் தெரிகின்றது. டாக்டர் பானர்ஜியும் மற்றைய ஆராய்ச்சியாளரும், அரப்பா மொகஞ்சதரோ நாகரிகம் ஆரிய ருடையதன்று எனத் துணிந்துள்ளார்கள். பலுச்சிஸ்தானத்தில் திராவிட மொழிக்கு இனமாகிய பிராகூய் காணப்படுவதால், அரப்பா மொகஞ்சதரோ நாகரிகத்துக்குரியவர்கள் பழைய திராவிடர்கள் என உறுதிப்படுகின்றது. சர். ஜான் இவான்ஸ் என்பார், தென் இந்தியாவே மக்களுக்குப் பிறப்பிட மாகலாம் என்றும், இங்கு நின்றே வடக்கிலும் மத்திய தரை நாடுகளிலுமுள்ள நாகரிகங்கள் சென்றன என்றும் குறிப்பிடுவாராயினர். 1ரீட் என்பார் மனிதனுடைய நாகரிக வளர்ச்சிக்கு அதிக உதவி செய்தது இந்தியா என்றும், இந்திய வாணிகமே உள்நாட்டுக் கைத்தொழில்களுக்கும், அயல் நாட்டு ஏற்றுமதி இறக்குமதிக்கும் காரணமா யிருந்ததென்றும் கூறியுள்ளார். மேற்கு ஆசியா, கிழக்கு ஆபிரிக்கா, சீனா, ஜப்பான் மலாய்த் தீவுகளோடு பண்டு வாணிகம் புரிந்தவர் திராவிடரே முற்காலம் கடற் பயணம் செய்து வந்தோர், திராவிடராவர். தென் னிந்திய மக்கள் கடற்கரையை அடுத்த நாடுகளில் வாழ்ந்தார்கள். அதனால் அவர்களுக்குக் கடலிற் செல்லும் பழக்கம் எளிதில் உண்டாயிற்று. தோணி, ஓடம், கப்பல் முதலியன திராவிடச் சொற்கள். இந்தியாவுக்கும் மேற்கு ஆசியாவுக்கும் பண்டங்களைக் கொண்டு சென்ற கப்பல்கள் பெரும்பாலும் இந்திய நாட்டுக்கு உரியன என்றும், கடற் போக்குவரத்து திராவிடர்வசம் இருந்ததென்றும் ரிச்சார்ட் புகன்றுள்ளார். இந்துமாக் கடலில் கப்பல்களை ஓட்டிச் சென்றவர்கள் அவர்களே. கரை ஓரங்கள் அவர்களுக்குக் கடற் பயணஞ் செய்யும் பழக்கம் அளித்தது. ஆபிரிக்கா, அராபியா, மலாயா, சீனா முதலிய நாடுகளுக்கு இந்தியப் பண்டங்களை ஏற்றிச் சென்ற மாலுமிகள் அவர்களிடையே தோன்றினார்கள். திராவிடர் ஜாவா, சுமத்திரா கம்போதியா முதலியவைகளில் குடியேறுதல் அவர்கள் மேற்கே மெசபெதேமியா முதல் கிழக்கே இந்துமாக் கடற்றீவுகள் வரை குறியேறியிருந்தமை, திராவிடமக்களின் பரந்த கடற் பயணத்தைப்பற்றி வெளியிடுவதாகும். இந்திய நாட்டில் வேதமொழி இடம் பெறுவதன்முன், திராவிட மக்கள் பழைய சால்தியாவோடு வாணிகம் புரிந் தனர். டாக்டர் சேய்ஸ் (Dr. Sayce) என்பார், இந்தியாவுக்கும் பாபிலோனுக்கு மிடையில் கி.மு. 3000 வரையில் வாணிகம் நடத்திருக்க வேண்டுமென்றும், அக்காலத்தில் ஐக்கிய பாபிலோனியாவில் ஆட்சி புரிந்த ஊர் பாகஸ் என்னும் அரசன் ஆட்சி புரிந்தானென்றும் கூறியுள்ளார். தென்னிந்திய மக்கள் இந்தியக் கடற்றீவுகள், ஜாவா, சுமத்திரா, போர்ணியோ முதலிய நாடு களுக்குப் பயணஞ்செய்து அவ்விடங்களைத் தமது குடியேற்ற நாடுக ளாக்கினர்; அங்குநின்றும் அவர்கள் எதிர்ப்புறத்தேயுள்ள நாடுகளுக்குச் சென்று சீயம், கம்போதியா முதலிய நாடுகளிற் றங்கினர். சேர, சோழ, பாண்டியர் உரோமுக்குத் தூதரை அனுப்புதல் கி.மு. 30-ல் அகஸ்டஸ் எகிப்தை வெற்றிகொண்டார். அவர் இந்தியா வுக்கும் உரோமுக்கு மிடையில் நேராகக் கடல் வாணிகம் நடத்த முயன்றார். முற்காலத்தில் மத்திய தரை நாடுகளுக்கும் மலையாளத் துறைமுகங்களுக்கு மிடையில் ஹிரம் அரசனுக்கு உட்பட்ட பினீசியர், சாலமன் அரசனின் கீழ் உள்ள பாலஸ்தீனியர், செலியூசிட்சுக்கு (Seleucids)க் கீழ்ப்பட்ட சீரியர், தாலமிக்கு உட்பட்ட எகிப்தியர் முதலியோர் தமிழ் நாட்டோடு வாணிகம் செய்தார்கள். உரோமரே கடல் வாணிகத்தில் பெரும் புரட்சியை உண்டாக்கி னார்கள். சேர, சோழ, பாண்டியர் உரோமுக்குத் தூதரைப் போக்கியது முதல் உரோம் வாணிகம் மிக மும்முரமாக நடைபெறுவதாயிற்று. இன்று கிடைக் கின்ற சான்றுகளால் வரலாற்றுக் காலத்தின் ஆரம்பம் முதல் மத்தியதரை நாடுகள், தைகிரஸ் யூபிராதஸ் பள்ளத்தாக்குகள், சீனா முதலிய நாடுகளுக் கும், இந்தியாவுக்குமிடையில் தொடர்பிருந்து வந்ததெனத் தெரிகிறது. அல்பேருனி (Alberuni), மார்க்கோபோலோ, வாஸ்கோடகாமா முதலியோர் கி.பி. 11, 12, 15ஆம் நூற்றாண்டுகளில் இந்திய நாட்டுக்குப் பயணஞ் செய்தது பழைய வாணிக வரலாற்றின் தொடர்ச்சியாகும். கி.மு. 3ஆம் நூற்றாண்டில் கிரேக்கு, எகிப்து, சீரியா, மாசிடோன், சைரின் (Cyrene) முதலிய நாடுகளுக்கு இந்தியா தூதரை அனுப்பிற்று. எகிப்திய பைப்பிரஸ் தாள்களில் கிரேக்க மொழியில் எழுதப்பட்ட பகுதிகளில்1 கன்னட வாசகங்கள் காணப்பட்டன. சீனக் கலையிலும், சீன இலக்கியங்களிலும் அதிகமாக இந்தியச் சார்பு காணப்படுகின்றது. ஜாவா, சுமத்திரா நாகரிகத்தில் இந்தியக் கலைகள் சுவறியுள்ளன. கிழக்காபிரிக்கா, சோமாலிலாந்து, அபிசீனியா, எகிப்து, அராபியா, பாபிலோனியா, இந்தோனேசியா, சீனா முதலிய நாடுகளோடு இந்திய வரலாறு தொடர்பு பெற்றுள்ளது. எகிப்திய ஓவிய எழுத்துக்களின் பழமை ஒரு நூறு ஆண்டுகளின் முன் எகிப்தைப்பற்றி உலகுக்கு யாதும் தெரியாது. பெரிய எகிப்திய சமாதிகளும், அவைகளின் முன்னால் அமைக்கப்பட்டுள்ள பெரிய மனிதச் சிங்கமும், முற்கால மக்களுக்கு வியப்பு அளிப்பனவாயிருந்தன. நெப்போலியனின் போர்க்காலத்தில் போர் வீரன் ஒருவன் ரொஸட்டாக் கல்லில் (Rosetta stone) சில எழுத்துக்கள் பொறித் திருப்பதைக் கண்டு அதனை எடுத்தான். அதில் எகிப்திய ஓவிய எழுத்தும் அங்கு வழங்கும் எழுத்துக்களும் வெட்டப்பட்டிருந்தன. டாக்டர் யங், சாம்பொலின் (Dr. Young and Champollin) என்போர் அவ்வெழுத்துக் களை வாசிக்கும் முறையைக் கண்டுபிடித்து, எகிப்தின் பழைய வரலாறு களை உலகுக்கு வெளியிட்டார்கள். எகிப்திய சமாதிகளிலும் பைப்பிரஸ் ஏடுகளிலும் காணப்பட்ட எழுத்துக்களே உலகில் பழமையுடையன எனச் சிலர் கருதினார்கள். அவ்வோவிய எழுத்துக்கள் நீண்டகாலப் பழக்கத் தோடும் திறமையோடும் எழுதப்பட்டிருப்பதை அவர்கள் கண்டார்கள். அவ் வெழுத்துக்கள் அக்கால நிலையை அடைவதற்குக் காலம் வேண்டும். பழைய நாகரிகங்களுக்கிடையில் தொடர்பு பேராசிரியர் பிளிண்டெர்ஸ் பெற்றி (Flinders Petrie) என்பார் ஓவிய எழுத்துத் தோன்றுமுன் கீறுகள் போன்ற அடையாளங்கள் இருந்தன என்பதை நாட்டியுள்ளார். அவர் எகிப்தியரின் நாகரிக கால எழுத்துக்களை மத்திய தரை நாடுகளிலுள்ள எழுத்துக்களோடு தொடர்புபடுத்திக் காட்டியுள்ளார். பேராசிரியர் செலிமன் (H. Shliemann) கிரேத்தாவிலிருந்து மத்தியதரை நாகரிகம் உதயமானது எனக் கூறியுள்ளார். சர். ஆர்தர் இவான்ஸ் என்பார், கிரேத்தாவில் எகிப்திய, மெசபெதேமிய நாகரிகம் போன்ற பழைய நாகரிகமிருந்ததெனக் கூறியுள்ளார். இந்நாகரிகம் பினீசியர் தமது மரக் கலங்களைக் கடலுட் பாய்ச்சுவதன் முன் உண்டாயிருந்தது. சிந்து வெளி நாகரிகத்தைப் பற்றி ஆராய்ச்சி நடத்திய சர். ஜான் மார்ஷல், இந்திய நாகரிகம் கிரேத்தாவோடும் மத்தியதரை நாடுகளோடும் தொடர்புடைய தெனக் காட்டியுள்ளார். ஆரியரல்லாத இந்திய மக்களின் சமயத்துக்கும், கிரேத்தா, சின்ன ஆசியா முதலிய நாடுகளின் சமயத்துக்கும் நன்றாகப் புலப்படக்கூடிய ஒற்றுமைகள் காணப்படுகின்றன. மினோவர் கடவுள் பெரிய தாய். இத்தாய் வணக்கத்தின் நெருங்கிய ஒற்றுமையைக் கொண்டு ஐசியக்கடற்றீவுகள், சின்ன ஆசியா, மெசபெதேமியா முதலிய இடங்கள் முன்னொருபோது ஒரே நாகரிகத் தொடர்பு பெற்றிருந்தன எனக் கருதலாம் என, எஸ்.கே. சட்டேர்ஜி குறிப்பிட்டுள்ளார். ஐசியக் கடற் பகுதியிலுள்ள நாகரிகம் கிரேத்தாவில் உறைப்பாகக் காணப்படுகின்றது. இந்நாகரிகமே ஐரோப்பிய நாகரிகத்துக்கு அடிப்படை. சீன நாகரிகம் சுமேரிய நாகரிகத்தின் ஒரு கிளை எனப்படு கின்றது. எகிப்திய சமாதிகள் எகிப்திய சவங்களைப் புதைக்குமிடங்கள் எகிப்தியரின் நாக ரிகத்தைப் புலப்படுத்துகின்றன. சமாதிக் கட்டடங்களைத் தேடிக் கண்டு பிடிக்க வேண்டியதில்லை; அங்கு அவை நன்கு காணக் கிடக்கின்றன. எண்பது பெரிய கூர்நுதிச் சமாதிகள் வரையில் அங்கு உண்டு. தென்னிந் தியாவில் பிரேதங்களை மடக்கிவைத்துப் புதைக்கப்பட்ட தாழிகள் காணப் படுகின்றன. உடம்பை விட்டபின் உயிர்கள் பயணஞ் செய்கின்றன என்று எகிப்தியர் நம்பினார்கள். ஒவ்வொரு மனிதனுக்கும் இரண்டு உடல் உண்டு என்றும் எகிப்தியர் நம்பினர். இக்கருத்தினால் அவர்கள் உடலைத் தைல மிட்டுப் பக்குவஞ் செய்தார்கள்; நிலைக்கக்கூடிய சமாதிகள் கட்டப்பட்டன; இறந்தவரின் பயணத்துக்கு வேண்டிய உணவு முதலியன சமாதிகளுக் குள்ளே வைத்துக் கட்டப்பட்டன. ஒரு சமாதியைக் கட்டுவதற்கு 100,000 அடிமைகள் 20 ஆண்டுகள் ஓயாது வேலை செய்ய வேண்டியிருந்தது. அச் சமாதி வேலைக்கு வேண்டிய பொருள்களைக் கொண்டு செல்வதற்குச் சரிவான வீதி அமைக்க 100,000 அடிமைகள் பத்து ஆண்டுகள் இடை விடாது உழைத்தார்கள் என ஹெரதோதசு என்னும் கிரேக்கர் கூறியுள்ளார். தூதன் காமனின் சமாதிக் கட்டடத்தில் எடுக்கப்பட்ட பொருள்களின் விலை மதிப்பு 3000,000 தங்க நாணயம் ஆகும். சமாதிகளில் விலைமதிப்புள்ள பொருள்கள் வைக்கப்பட்டமையின், அவைகளைத் திருடும் தொழில் இன்பக் கலைகளுள் (fine arts) ஒன்றுபோல் வளர்ச்சியடைந்தது. சமாதி ஒன்றை உடைப்பது கொடிய பாவமாகக் கருதப்பட்டது. ஆனால் சமாதியை உடைப்போர் மறு உலகில் அப்பாவத்துக்குப் பதில் தண்டனையை ஏற்க ஆயத்தமாயிருந்தனர். ஆகவே அச் சமாதிகளை உடைத்து உள்ளேயுள்ள பொருள்களைத் திருடுவதற்குப் பலர் பல உபாயங்களை ஆராய்ந்து வந்தனர். எகிப்திய, பாபிலோனிய சுமேரிய சமாதிகளிற் காணப்பட்ட மட்பாண்டங்கள், எழுத்துக்கள் பொறித்த செங்கற்கள், பைப்பிரஸ் தாள்கள் முதலியன திராவிடரைப் பற்றிய பல மயக்கமான வரலாறுகளை விளக்கு கின்றன. டாக்டர் இரவிலின்சன் (Dr. Rawlinson), பாரசீகத்திலே பெகிஸ்டன் (Behistan) என்னும் இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஆப்பெழுத்துப் பொறித்த பட்டையங்களை வாசித்தார். இலையார்ட் (Mr. Layard) நினேவா பாபிலோன் என்னுமிடங்களில் கண்டுபிடிக்கப்பட்ட ஆப்பெழுத்துப் பட்டையங்களை வாசித்தார். மெசபெதேமியா ஏதேன் தோட்டம் எனக் கருதப்பட்டது. ஆப்பெழுத்தில் எழுதப்பட்ட திருமுகங்கள் எகிப்திலும் மெசபெதேமியாவிலும் காணப்பட்டன. மெசபெதேமியாவின் ஆதிக் குடிகள் சுமேரியராவர். அவர்கள் தங்களைச் சூழ்ந்திருந்த மற்றைச் சாதியின ரினும் பார்க்க நாகரிகம் பெற்று விளங்கினர். தைகிரஸ், யூபிராதஸ் ஆற் றோரங்களிற் கண்டுபிடிக்கப்பட்ட மட்பாண்டங்கள், மண், பொன், வெள்ளி களினாற் செய்யப்பட்ட பாவைகள், முத்திரைகள், செங்கற்களில் எழுதப் பட்ட நியாயப் பிராமணங்கள் முதலியன, இதனை வலியுறுத்துகின்றன. எகிப்திலே மெப்பில் அழிபாடுகளில் இந்திய ஆடவர் மகளிரின் ஓவியங்கள் தென்னிந்தியாவுக்கும், எகிப்து, பாபிலோன், அசீரியா முதலிய நாடுகளுக்குமிடையில் அடிக்கடி போக்குவரத்துக்கள் இருந்து வந்தன. பிளிண்டர்ஸ் பெற்றி (Flinders Petrie) என்னும் எகிப்திய பழஞ்சரித்திர வீரர் மெம்பிஸ் என்னும் பழைய எகிப்திய நகரத்தில் இந்திய ஆடவர் மகளிரின் ஓவியங்களைக் கண்டுபிடித்தார். “இந்தியர் மத்திய தரைப் பகுதியில் தங்கியிருந்தார்கள் என்பதற்கு இது சான்றாகும். மெம்பிஸ் பட்டினத்தில் இந்தியர் குடியேறி யிருந்தார்கள் என்பதை இப்பொழுது அறிகின்றோம்.” என அவர் குறிப்பிட்டுள்ளார். மத்தியதரைச் சாதியினருக்கும் திராவிடருக் கும் நெருங்கிய உறவு உண்டு. ஹிரம் என்னும் பினீசிய அரசனின் துணையைப் பெற்ற எகிப்தியரும், தாவீது என்னும் எபிரேய அரசனும் தென்னிந்தியத் துறைமுகமாகிய முசிறியோடு வாணிகம் நடத்தினர். இதற்கு முன்னே மோசே என்பார், மலையாளத்து விளைபொருள்களாகிய கறுவா, இலவங்கம் முதலிய பொருள்கள் சமயச் சடங்குகளில் பெரிதும் பயன் படுத்தப் பட்டதைப் பற்றிக் கூறியுள்ளார். காதேசியர் மலையாளக் கரையி னின்றும் சந்தனக்கட்டையைப் பெற்றனர். ஊர் நகரத்தில் இந்திய தேக்கமர உத்திரம் காணப்பட்டது. அது அவ் விடத்தை கி.மு. 4000 வரையில் அடைந் திருத்தல் வேண்டும். அது அப்பொழுது பாபிலோனின் துறைமுகமும், சுமேரிய அரசரின் தலைநகரமுமா யிருந்தது. அத் தேக்கு மலையாளக் கரை களில் மாத்திரம் வளர்வது. ஊர் என்னும் சொல், தமிழிலும், மலையாளத் திலும் பட்டினத்தைக் குறிக்கின்றது. எகிப்தியரின் தாய்க் கடவுள், பசு வடிவி னது. தாய்க்கடவுள், பசு வணக்கங்கள் திராவிட மதத்தின் அடிப்படைக் கொள்கைகள். எகிப்தியரின் இடபமும், நிம்ரொட் என்னும் அசீரிய அரசனின் இடபமும் சிவனுடைய நந்தியோடு ஒப்பிடத்தக்கன. எழுத்துக்களின் பொது உற்பத்தி பல நாடுகளில் வழங்கிய எழுத்துக்கள் ஒரே வகையாகக் காணப்படு கின்றன. சுமேரிய எழுத்துக்கள் ஆப்பு வடிவின. பழைய சுமேரிய எழுத் துக்கள் ஓவிய வடிவிலும் கீற்று வடிவிலும் உள்ளன. பகுதி கீற்று வடிவும், பகுதி ஓவிய வடிவமாகிய எழுத்துக்கள் கிரேத்தாவில் காணப்படுகின்றன. பினீசியர் சுமேரிய எழுத்துக்களை அறிந்திருந்தார்கள். அவர்கள் அவை களைத் தணிவுபடுத்தி வேறு வகையில் கையாண்டனர். டாக்டர் பர்நெல் (Dr. Burnell) இந்திய எழுத்துக்கள் பினீசிய எழுத்துக்களினின்றும் வந்தன என்று கூறியுள்ளார். தென் அசோக எழுத்து, தமிழின் மிகப் பழைய எழுத்தாகிய வட்டெழுத்து, இன்றைய மலையாள எழுத்து முதலியன ஒரே தொடக்கத்தைச் சேர்ந்தன என்பது அவர் கருத்து. டாக்டர் பூலர் (Dr. Buhler) என்பார், இந்திய வணிகர், இவ்வெழுத்துக் களை மெசபெத்தேமியாவில் கற்றுக் கொண்டார்கள் எனக் கூறினர். நிக்கோலி காண்டி (Nicole Conte) என்பார், பனை ஓலையில் எழுத்தாணி யால் எழுதினமையால் இவ்வெழுத்துக்கள் வட்ட வடிவை அடைந்தன எனக் கருதினார். வட்டெழுத்துக் கோலெழுத்தின் தணிவு. மலையாள அரசாங்க மூல ஆவணங்கள் இவ் வெழுத்தில் உள்ளன. சுமேரியர் திராவிடர்களாவர் கீழைத்தேச வரலாற்று ஆராய்ச்சி வீரர், மத்திய தரைச் சாதியினராகிய சுமேரியர் பழந்திராவிடரின் பிரிவினர் என முடிவு செய்துள்ளார்கள். அவர்கள் திராவிட நாகரிகத்தின் பழமையையும் ஒப்புக்கொள்கின்றனர். ஆகவே, திராவிடர் பினீசியரிடமிருந்து எழுத்துக்களைப் பெற்றார்கள் என்று அவர்கள் கூறுவதற்குக் காரணமில்லை. பல நாடுகளின் நாகரிகம் ஒரேவகையாயுள்ளதெனக் கூறினோம். அவைகளின் ஒற்றுமை மிக நெருங் கியது. ஆகவே அவர்கள் சீனா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, கன்னியா குமரி முதலிய நாடுகளை இணைத்துக்கொண்டிருந்த பெரிய பூகண்டம் இருந்ததென்னும் பழைய ஐதீகத்தை ஆதாரமாக கொண்டனர், இந்நாகரிகத் தொடர்பு அமெரிக்காவிலும் பிலிப்பைன் தீவுகளிலும் காணப்படுகின்றது. தென்னமெரிக்காவிலே மாயாவிலுள்ள நாகரிகம், இந்திய பொலிநீசிய அடிப்படையினது எனக் கருதப்படுகின்றது. புகையிலை, மிளகாய், கற்றாழை, நிலக்கடலை, கொய்யா, முசுக்கொட்டை, பப்பாளி முதலிய மரஞ் செடிகள் அமெரிக்காவிலிருந்து கொண்டுவரப் பட்டவை. புத்தசமயம் இந்தியாவினின்றும் சீனாவுக்குச் சென்றது. சீனா என்னும் பெயர் இந்திய உற்பத்தியினது என்று டாக்டர் இலாக்கி (Dr. Lagge) கூறியுள்ளார். சீன மக்களின் தொடக்கத்தைப்பற்றி முடிவாக யாதும் தெரியவில்லை. அவர்கள் அக்கேடியரிலிருந்து தோன்றினார்கள் எனச் சிலர் கூறுவர். பழைய சீன எழுத்துக்கள் ஆப்பெழுத்து வடிவினவாயிருந்தமையே அவர்கள் அவ்வாறு கொள்வதற்குரிய காரணமாகும். சீனரின் பிறப்பிடம் தரிம் (Tarim) பள்ளத்தாக்கு என்றும், அவர்கள் அங்கு அக்கேடிய இந்திய நாகரிகத் தொடர்புகளைப் பெற்றார்கள் என்றும் வேறு சிலர் கூறுவர். குடும்ப ஆட்சி யும், இறந்தவர் வணக்கமும் சீனரைத் திராவிடரோடு தொடர்புபடுத்து கின்றது. திராவிடர் நாகரிகம் பரந்து செல்லுதல் இந்தியா சீனாவோடு வாணிகம் நடத்தினமையால், மலாய்க் குடாநாடு முதல் இந்துமாக் கடல் தீவுக் கூட்டங்கள், இந்தோசீனா வரையில் துறைமுகப்பட்டினங்கள் தோன்றியிருந்தன. அவ்விடங்களிலே திராவிடர் நாகரிகத்தின் அடையாளங்கள் காணப்படுகின்றன. ஜhவா, செலிபிசி, பர்மா, சியாம், கம்போதியா முதலிய நாடுகளை நாகரிகத்தால் வளம்பெறச் செய்தது புத்தமத வளர்ச்சியே. இந்நாடுகளினின்றும் நாகரிகம் கொரியா, ஜப்பான் முதலிய நாடுகளுக்குச் சென்றது. கப்பல் வாணிகம் இந்தியமக்கள் கடலோடிகளிற் சிறந்தவர்களாய் விளங்கினார்கள். பெகு, கம்போதியா, ஜாவா, சுமத்திரா, போர்ணியோ, பிலிப்பைன் முதலியன இந்திய மக்களின் குடியேற்ற நாடுகளாயிருந்தன. அவர்கள் தென் சீனா, மலாய்த் தீபகற்பம், அராபியா, ஆபிரிக்காவின் கிழக்குக் கரைகள், பாரசீகம் முதலிய நாடுகளோடும் வாணிகம் புரிந்தனர். பழைய இந்திய மக்களின் கடற் பயணங்கள் பற்றிய சான்றுகள் இந்திய மக்களின் கடல் வாணிகத்தைப் பற்றி உள்நாட்டுப் பிற நாட்டுச் சான்றுகள் பலவுள. உள்நாட்டுச் சான்றுகள், இந்திய இலக்கியங்கள், சிற்பங்கள், ஓவியங்கள், பாலி, சமக்கிருதம், பாரசீகம், தமிழ், மராத்தி முதலிய மொழி இலக்கியங்களிற் காணப்படுகின்றன. வரலாற்றாசிரியர்கள் பிரயாணிகளால் எழுதப்பட்டனவும், ஜாவா, கம்போதியா அழிபாடுகளில் காணப்படும் சிற்பங்களும் ஓவியங்களும் பிறநாட்டுச் சான்றுகளாகும். வரலாற்று ஆசிரியர்கள், யாத்திரிகர்கள் எழுதியவை பெரும்பாலும் சீனம், அராபி, பாரசீகம் முதலிய மொழிகளிற் காணப்படுகின்றன. அசோகச் சக்கரவர்த்தி காலத்திற்கு முற்பட்ட இந்தியக் கடல் வாணிகத்தைப்பற்றிய சான்றுகள் இருக்குவேதம், கிறித்துவ வேதத்தின் பழைய ஏற்பாடு, தமிழ் பாலி நூல்கள், எகிப்திய அசீரிய பழம்பொருள் ஆராய்ச்சி முதலியவற்றாற் கிடைக்கின்றன. கிரேக்க உரோமன் வரலாற்று ஆசிரியர்களும் இது குறித்து எழுதியுள்ளார்கள். சந்திரகுப்த மௌரியர் காலத்து வாழ்ந்த சாணக்கியர் செய்த அர்த்த சாத்திரத்திலும் இந்தியக் கடல் வாணிகத்தைப்பற்றிய குறிப்புக் காணப்படுகின்றது. தென்னிந்தியாவில் உரோமன் நாணயங்கள் கி.மு. 200 முதல் கி.பி. 300 வரை உரோமர் இந்தியாவோடு மும்முர மான கடல் வாணிகம் நடத்தினார்கள். அக்காலத்தில் வட இந்தியாவிலும் தென்னிந்தியாவிலுமிருந்து, பட்டு, மணப்பொருள்கள், மணிகள், சாயப் பொருள்கள் முதலியன ரோமுக்கு ஏற்றுமதியாயின. இதற்குச் சான்றாக வட இந்தியாவிலும், தென்னிந்தியாவிலும் உரோமன் நாணயங்கள் காணப்பட் டன. அவற்றில் தென்னாட்டிற் காணப்பட்ட நாணயங்களே அதிகம். சமக் கிருத பாலி நூல்களில் உரோம்நகர், ‘உரோமகா’ எனக் குறிப்பிடப்பட் டுள்ளது. கிரேக்க நாட்டையும் உரோம நாட்டையும் தமிழ் நூல்கள் யவனம் எனக் குறிப்பிட்டுள்ளன. யவனர் முசிறி, புகார் முதலிய துறைகளில் வந்து புரிந்த வாணிகத்தைப்பற்றித் தமிழ் நூல்கள் பெரிதும் கூறியுள்ளன. அயல் நாட்டு வணிகரும் இந் நிகழ்ச்சியைக் குறிப்பிட்டுள்ளார்கள். அவைகளுள் பிளினி எழுதிய இயற்கை வரலாறு, பெரிபுளூஸ் (Periplus of Erythian sea) தாலமி, ஸ்ட்ராபோ, அகத்திரசிடிஸ் (Agatharcides) முதலியோர் எழுதியவை களில் காணப்படும் குறிப்புக்களே முக்கியமுடையன. கி.பி. நாலாம் நூற்றாண்டுக்கும் ஏழாம் நூற்றாண்டுக்குமிடையில் இந்தியமக்கள் கிழக்கே சென்று பல நாடுகளிற் குடியேறினார்கள். பர்மா, மலாக்கா முதலிய நாடுகள் கலிங்கர் வங்காளர்களாற் குடியேறப்பட்டன. பர்மிய பட்டையங்களில் இதற்குச் சான்று உளது. பாகியன், ஹியன்திசாங் முதலிய சீனப் பயணக்காரரும் இதைக் குறிப்பிட்டுள்ளார்கள். இந்தியா, ஜப்பான் தீவோடு வாணிகம் நடத்தினது இந்திய நாட்டுக்கும் சீனாவுக்கும் இடையில் நடந்த வாணிகத்தைப் பற்றிச் சீன நூல்கள் கூறுகின்றன. ஹியன்திசாங் என்னும் சீனப் பயணக் காரன் எழுதியுள்ளவை நம்பத் தகுந்த நல்ல சான்றுகளாகும். கி.பி. ஏழாம் நூற்றாண்டு முதல் முகமதியர் காலம் வரையில், இந்தியக் கடல் வாணிகம் கிழக்கிலும் மேற்கிலும் அகன்றிருந்தது. இது ஜப்பான் தீவுகள் அளவும் விரிந்திருந்தது. இதைக் குறித்து ஜப்பானிய நூல்கள் குறிப்பிடுகின்றன. ஐ-திசிங் என்பான் (I-Tsing. கி.பி. ஏழாம் நூற்றாண்டு) கிழக்கே இந்தியரின் கப்பல் வாணிகப் பெருக்கத்தைக் குறிப்பிட்டுள்ளான். சீனர் சோழநாட் டோடு வாணிகம் புரிந்ததைப் பற்றிச் சீனநூல்களும் கூறுகின்றன. 700 சோழரோடு இலங்கை சென்ற விசயராசனின் மரக்கலம் கப்பல் கட்டும் முறையைப்பற்றியும் அவைகளுக்குப் பயன்படுத்தப் படும் மரங்களைப் பற்றியும், கப்பல் வகைகளைப் பற்றியும், அவைகளின் நீளம் அகலங்களைப் பற்றியும் பழைய வடமொழி நூல்கள் கூறுகின்றன. இராசாவளி என்னும் சிங்கள நூலில், வங்காள இளவரசனாகிய விசயன், தனது தோழர்களோடு இலங்கைத் தீவுக்குச் சென்ற மரக்கலம் எழுநூறு பேரை ஏற்றிச் சென்றதெனக் கூறுகின்றது. பாண்டி நாட்டிலிருந்து இராச குமாரியை இலங்கைத் தீவுக்குக் கொண்டுசென்ற கப்பல், எண்ணூறு பேரைக் கொண்டு சென்றதென மகாவம்சம் என்னும் நூல் கூறுகின்றது. சாதக பாதக என்னும் பாலி நூல் புத்தரின் முற்பிறப்பில் அவர் உட்பட்ட 700 பேரை ஏற்றிச் சென்ற கப்பல் உடைந்ததைப்பற்றிக் கூறுகின்றது. இந்தியக் கப்பல்களைக் காட்டும் ஓவியங்களும் சிற்பங்களும் இந்தியக் கப்பல்கள் சில சாஞ்சிக் கோபுரத்தில் வெட்டப்பட்டுள்ளன. சாஞ்சிக் கோபுரத்தின் காலம் கி.மு. 2ஆம் நூற்றாண்டு. அசந்தாக் குகை ஓவியங்களிலும் பழைய இந்தியக் கப்பல்கள் தீட்டப்பட்டுள்ளன. அசந்தாக் குகை வேலைப்பாடுகள் கி.மு. இரண்டாம் நூற்றாண்டு முதல் கி.பி. 7ஆம் அல்லது எட்டாம் நூற்றாண்டு வரையிற் செய்யப்பட்டவை. ஹியான்தி சியாங், இக் குகைகளைப் பற்றிக் கூறியிருக்கின்றான். அவன் அசந்தாவுக்குச் செல்லவில்லை; ஆனால் மராட்டிய அரசனாகிய இரண்டாம் புலிகேசியின் தலைநகரில் இருந்தான். அசந்தாக் குகைகளில் காணப்படும் கப்பல்களின் ஓவியங்கள் கி.பி. 525-க்கும் 650-க்கும் இடையில் எழுதப்பட்டன வாகலாம். புலிகேசி காலத்தில் அரசாங்கக்கடற்படை அமைக்கப்பட்டிருந்தது. அசந்தாக் குகைகளிற் காணப்படும் வள்ளங்களும் கப்பல்களும் இந்தியரின் பழைய கடல் வாணிகத்தைக் குறிப்பிடுவன. அசந்தாக் குகைகளில், விசயன் தனது பரிவாரங்களோடு இலங்கைத்தீவில் இறங்கும் காட்சி எழுதப் பட்டுள்ளது. ஆந்திர நாணயங்களில் இரண்டு பாய் மரமுள்ள மரக்கலம் பழைய இந்திய நாணயங்களில் கப்பல்கள் பொறிக்கப் பட்டுள்ளன. அவை அக்கால இந்தியரின் கடல் வாணிகப் பெருக்கத்தை விளக்குகின் றன. கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் அடிக்கப்பட்ட ஆந்திரநாட்டு நாணயங் களில் இரண்டு பாய் மரமுள்ள மரக்கலங்கள் காணப்படுகின்றன. அக் காலத்தில் ஆந்திரர், கடல், தரை என்னும் இரு வழிகளாலும் மேற்கு ஆசியா, கிரீஸ், உரோம், எகிப்து, சீனா முதலிய நாடுகளோடு வாணிகம் நடத்தி வந்தனர் என, சுவெல் (R. Swell) என்பார் கூறியுள்ளார். இராமாயணம், இந்தியாவுக்கும் தூரநாடுகளுக்கு மிடையில் நடந்த கடற்பயணங்களைப் பற்றிக் கூறுகின்றது. முப்பது நூற்றாண்டுகளாகப் பினீசியர், யூதர், அசீரியர், கிரேக்கர், எகிப்தியர், உரோமர் முதலியவர்களோடு முற்காலத்தும், அண்மையில் துருக்கியர், வெனீசியர், போர்த்துக்கேசியர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் முதலியவர்களுடனும் இந்தியர் வாணிகம் நடத்தினர். இந்தியா வெளிநாடு களுக்குப் போக்கிய பொருள்களுள், பட்டு முதன்மையானது. இது பொன்னுக்குச் சமமாக நிறுத்து விற்கப்பட்டது பட்டுக்கு அடுத்தபடியி லுள்ளவை பருத்தி ஆடை, மசிலின் துணி முதலியன. எண்ணெய், பித்தளைப் பொருள்கள், மருந்துப் பொருள்கள், மணச்சரக்குகள், மிளகு, கறுவா முதலியனவும் உரோமரால் விரும்பி வாங்கப்பட்டன. இந்தியர், ஆண்டுதோறும் 400,000 தங்க நாணயம் பெறுமதியான பொன்னை உரோமி லிருந்து வாணிகப் பண்டங்கள் மூலம் கவர்ந்துகொள்கின்றனர் எனப் பிளினி கூறியுள்ளார். இந்தியர் பாபிலோனியர் வாணிகம் டாக்டர் சேஸ் (Dr. Sayce), இந்தியா பாபிலோனோடு கி.மு. 3000 வரையில் வாணிகம் செய்ததென்று கூறியுள்ளார். இது ஊர்பாகாஸ் (Ur Bagas) என்னும் ஐக்கிய பாபிலோனின் முதல் வேந்தன், சால்தியாவிலுள்ள ஊரிலிருந்து ஆட்சிபுரிந்தபோது ஆகும். இது இந்தியத் தேக்கமரம் அங்கு காணப்பட்டதால் அறியப்படுகின்றது. ஹீவிட் (Hewitt) என்பார் அது மலையாளக் கரையிலிருந்து கொண்டு செல்லப்பட்டதெனக் கூறியுள்ளார். இந்தியாவுக்கும் பாபிலோனுக்கு மிடையில் கடல் வாணிகம், கி.மு. 7ஆம் நூற்றாண்டுக்கு முன்னிருந்தே நடந்ததென எழுத்துச்சான்று மூலம் நிலைநாட்டலாம் என்று கென்னடி (Kennedy) கூறியுள்ளார்; கி.மு. 6ஆம் நூற்றாண்டில் தெளிவான சான்று காணப்படுகின்றது. பாபிலோனில் இந்தியத் தேக்கமரத் துண்டு இரசாம் (Rassam) என்பார், நெபுச்சண் நேசர் (கி.மு. 604-562) அரசனின் அரண்மனையிற் கண்டுபிடித்த தேக்கமரத்துண்டு இப்பொழுது இலண்டன் நூதன பொருட்காட்சிச் சாலையில் உள்ளது. பவேரு சாதகக்கதைகளில் (கி.மு. 500) இந்திய வணிகர் பாபிலோனுக்கு மயில்களைக்கொண்டு சென்ற வரலாறு காணப்படுகின்றது. பேராசிரியர் பூலர், (Buhler) இது இந்தியாவின் மேற்குக்கரை வணிகர் கி.மு. 5ஆம் அல்லது கி.மு. 6ஆம் நூற்றாண்டுகளிற் செய்த கடற்பயணங்களைக் குறிக்கின்றதெனக் கூறுவர். இவ் வாணிகம், இதற்குப் பல காலம் முன்தொட்டே நடந்திருக்கலாம். கிரேக்க மொழியில் தமிழ்ச் சொற்கள் கி.மு. 5ஆம் நூற்றாண்டில், அரிசி, மயில், சந்தனக் கட்டை முதலி யவைகளின் இந்தியப் பெயர்கள் கிரேக்க மொழியில் வழங்கின. இப் பண்டங்கள் இந்தியாவின் மேற்குக் கரைகளிலிருந்து ஏற்றுமதியாயின. இதனையே பவேருசாதகம் குறிப்பிடுகின்றது. பாபிலோனுக்கும் இந்தியா வுக்கும் வாணிகத் தொடர்பு கி.மு. 480 வரையில் முடிவடைந்திருக்கலாம். மயிலும் அரிசியும் கிரேக்க நாட்டுக்கு கி.மு. 470 வரையில் சென்றிருக்கலாம். அப்பண்டங்கள் கி.மு. 430இல் பொதுவாக அங்கு கிடைக்கத் தக்கனவா யிருந்தன. இச் சான்றுகள் பாபிலோனுக்கும் இந்தியாவுக்கும் கி.மு. 7ஆம் 6ஆம் நூற்றாண்டுகளில் கடல் வாணிகம் நடந்ததென வலியுறுத்துகின்றன. இவ்வாணிகம் திராவிடர் கையில் இருந்தது. ஆரியர் இதில் பங்காளி களாயிருந்தனர். இந்திய வணிகர் பிற்காலத்தில் கிழக்கு ஆபிரிக்க சீனக் கரைகளிற் குடியேறினர். அவர்கள் பாபிலோனிற் குடியேறவில்லையென நாம் ஐயப்பட வேண்டியதில்லை. இக் கருத்துப் பற்றி ஆராய்ச்சி நடத்திய ரைஸ் டேவிட் இதே முடிவை வெளியிட்டுள்ளார். இவ் வணிகர் திராவிடரேயன்றி ஆரியரல்லர் என்பது அவர் துணிபு. சாலமன் காலத்தில் மேற்கு ஆசியாவுக்குக் கொண்டு செல்லப்பட்ட தந்தம், குரங்கு, மயில், அரிசி முதலியவைகளின் பெயர்கள் சமக்கிருதம், பாலி முதலிய பெயர்கள் அல்லாது தமிழ்ப் பெயர்களாகவே இருக்கின்றன. இந்திய வாணிகத்தைப் பற்றி எழுதிய ஜாக்சன் (A.M.T. Jackson) இதே கருத்தை வெளியிட்டுள்ளார். லெனோர்மாண்ட் (Lenormant) கூறுவது வருமாறு: “ஹற்றாசு (Hatasu) என்பவனின் தலைமையின் கீழ் பண்டு (Punt) நாட்டை வெற்றி கொண்ட வரலாறு தீப்ஸ் நகரிலே தெர் எல் பஃறி என்னும் கோவில் சுவரில் எழுதப்பட்டுள்ளது. பரோவாவுக்கு எகிப்திய அரசன் வெற்றிப் பொருள்களாகக் கொண்டு போகப்பட்ட பொருள்கள் ஏமனுக்குச் (Yemen) சொந்த மல்லாதனவும், இந்திய நாட்டுக்குரியனவுமாகக் காணப்படுகின்றன. அவை தந்தம், பொன், இரத்தினம், சந்தனக்கட்டை, குரங்கு முதலியன. வான் போகென் (Von Bohen), ஹெரன், (Heeran) கூறியவைகளை உறுதிப் படுத்தி இந்தியாவுக்கும் அராபியாவுக்கு மிடையில் மிகப் பழங்காலந் தொட்டே வாணிகம் நடைபெற்ற தென நாட்டியுள்ளார்.” புளிய மரங்கள், நீலம் முதலிய இந்தியப் பொருள்கள் எகிப்திய சமாதிகளிற் காணப்பட்டன என்று வில்கின்சன் என்பார் கூறியுள்ளார். எகிப்தியர், ஆடைகளுக்கு அவுரி நீலத்தால் சாயமூட்டினார்கள் என்றும், அவ்வகைத் துணிகளால் எகிப்தியரின் பக்குவஞ் செய்யப்பட்ட பிரேதங்கள் சுற்றப்பட்டுள்ளன என்றும் இலாசன் (Lassen) கூறியுள்ளார். மோசே காலக் குருமார் (கி.மு. 1491-1450) மார்புக்கவசத்தில் (Breast Plate) அணிந்திருந்த இரத்தினங்கள் இந்திய நாட்டினின்றும் சென்றனவாகலாம் எனப் பால் (Prof. V. Ball) புகன்றுள்ளார். பைபிளின் உற்பத்தியாகமத்தில் வணிகக் கூட்டத்தினர் ஒட்டகங்களில் மணப் பொருள்களை ஏற்றிக்கொண்டு எகிப்துக்குச் சென்றார்கள் என்னும் வரலாறு காணப் படுகின்றது. இந்திய நாட்டிலிருந்தே தந்தம், உடைகள், மணப் பொருள்கள் மயில்கள் முதலியவைகளைச் சீரிய வணிகர் பெற்றிருக்க முடியும். அரசர்-1இல் சாலமனின் மரக்கலங்கள் அகிற்கட்டை, இரத்தினக் கற்கள், பொன் முதலியவைகளை ஒபிரினின்றும் வாங்கிச் சென்ற வரலாறு காணப்படுகின்றது. எசாக்கியேலில் தயர் நாட்டு வாணிகப் பண்டங்களாகக் கூறப்படுபவை இந்திய நாட்டினின்றும் சென்றனவே. பைபிளின் பழைய ஏற்பாட்டின் அரசரைப் பற்றிய புத்தகத் தில் திராவிடச் சொற்கள் பல காணப்படுகின்றன. துகி, அஹவிம் முதலியன தோகை, அகில் முதலிய தமிழ்ச் சொற்களின் திரிபுகள். டாக்டர். கால்ட்வெல், வோல்கஸ் (T. Foulkes) என்னும் ஆசிரியரும் இக்கருத்தையே வலியுறுத்தி யுள்ளார். “கன்னியாகுமரிக்கு ஏறக்குறைய ஆறுமைல் தொலைவில் உவரி அல்லது ஓவரி என்ற செம்படவர் வாழும் கிராமம் ஒன்று இருக்கின்றது. அக்கிராமம் பைபிளிற் கூறியுள்ள ஒபிர் நகரிருந்த இடத்தில் இருக்கிறதென நான் நம்புகிறேன். அதற்குப் பல காரணங்கள் உள. அது செம்படவர் வாழும் முக்கிய கிராமமான போதும் அதைப் போலொத்த மற்றக் கிராமங்களுக்கு வித்தியாசமான கல்லாலமைந்த உறுதியான கோயில் அதற்கு உண்டு. அக் கோயில் இந்தியாவிலுள்ள மற்றக் கோயில்களைப் போலவே, அதிகப் பழமை யானதாயும் தேசத்தின் நானா திசைகளிலிருந்து மக்கள் அங்கே கடவுள் வழிபாட்டுக்கு வரும்படியான அவ்வளவு மகிமையுடைதாயும் இருக்கின்றது. இதனால் அது ஒரு காலத்தில் அதிகப் புகழ் பெற்றிருந்த தென்று தோன்றுகின்றது. உவரி என்றால் தமிழில் கடற்றுறைமுகம் என்று பொருள்; அதாவது உப்பு என்று பொருள் தரும் உவர் என்ற மொழியுடன் சம்பந்தப்பட்டது. இக் குறிப்புக்களினின்றும் உவரி வாணிகத்துக்குப் பேர்போன இடமாயிருந்திருக்கவேண்டு மென்றும், முக்கிய வாணிக இடம் ஆனதினால், அதை உவரி அல்லது சிறப்புடைய துறைமுக மென்று அழைத்தார்கள் என்றும், யூதர் அதற்கு உவரியே பேர் என்று தப்பாக நினைத்தார்கள் என்றும் ஐயமின்றிக் கூறலாம். இவ் வகை தப்பான எண்ணங்கள் தென்னிந்தியாவில் தோன்றுகின்றன. உதாரணமாக நூற்றில் 95 பேர் சென்னையைப் பட்டினமென்றே அழைக்கிறார்கள். உவரிக் கிராமத் தின் வெளித்தோற்றத்தைக் கவனித்தால் அங்குள்ள மணல் மேடுகள் தரை யிலிருந்து வெட்டப்பட்டுக் குவிக்கப்பட்ட மேடுகள் போலக் காணப்படு கின்றன. பெருமழை பெய்து இந்த மணல் மேடுகள் கரையும்போது, மக்கள் அம் மணல் மேடுகளிலிருந்து பொன் நாணயங்களை எடுக்கிறார்கள். அக் கிராமவாசிகள் இந் நிகழ்ச்சியைக் கூறும்போது, தங்கள் கிராமம் பூர்வ காலத்தில் மகிமை பெற்றிருந்த ஒபிர் நகரமென்று பெருமையை நாட்டவ ராமல், தங்கள் கிராமம் முற்காலத்தில் செல்வர் வாழ்ந்த இடமென்றும், இறக்கும்போது அவர்கள் பொன்னையும் செல்வத்தையும் அவ் விடத்தில் விட்டுச் சென்றார்கள் என்றும் சாதாரணமாகச் சொல்கின்றார்கள். Essays by S.V. Thomas M.A., p. 85. 1சாலமன் அரசன், கிழக்குத் தேசங்களோடு வாணிகம் செய்வதில் விருப்பங்கொண்டிருந்தான். அவனுடைய கப்பல்கள் செங்கடல் வழியாகப் பாரசீகக் குடாவைக் கடந்து சென்றன. பினீசியர் தையர் நகரைத் தமது இராசதானியாகக் கொண்டு வாணிகம் புரிந்தனர். அலக்சாந்தர் தையர் பட்டினத்தை வென்ற பின்பும், அவன் அலக்சாந்திரியாப் பட்டினத்தை அமைத்த பின்பும், எகிப்தியர் இவ் வாணிகத்தை நடத்திவந்தார்கள். யூத, பினீசிய, பாரசீக, மேற்கு ஆசிய நாடுகளின் வீழ்ச்சிக்குப் பின் இவ் வாணிகம் பெரும்பாலும் அராபியர் கையில் இருந்தது. நாம் இதுவரை கிறித்துவ வேதத்தில் இந்தியாவோடு பிறநாடுகள் வாணிகம் செய்த செய்திகள் காணப்படுவதைப் பற்றிக் கூறினோம். ஏரதோதசு (Heradotus) கி.மு. 450) என்னும் கிரேக்க ஆசிரியர் இந்திய நாட்டைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். கம்பளி இந்தியாவிலே மரங்களிற் காய்க்கின்றதென்றும் அது, ஆட்டு மயிரிலும் பார்க்கச் சிறந்த தென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். பாபிலோனியர் நாய்களையும் இரத்தினக் கற்களை யும் இந்தியாவினின்றும் பெற்றார்கள். இந்தியர், தரியஸ் (Darius) அரசனுக்குத் திறைப்பொருளைப் பொன்னாகக் கொடுத்தார்கள் என்றும் திறைப் பொரு ளின் அளவு 1,290,000 தங்க நாணய நிறை என்றும், இந்தியா பொன்னால் வளம் பெற்றதென்றும், ஒரு சாதி எறும்புகள் பொன்னைக் கிண்டி எடுக்கின் றன என்றும் எரதோதசு கூறியுள்ளார். கசியஸ் (Ctesias) கி.மு. 400 இந்தியாவி னின்றும் கிடைக்கும் பொருள்களாகக் குறிப்பிட்டவைகளுள் கறுவா ஒன்று. கறுவா என்பது திராவிடப் பெயராகக் காணப்படுகின்றது. பிளினி கூறும் விவரம் அலக்சாந்தர் கி.மு. 325-ல் இந்தியா மீதுபடையெடுத்தார். அரியன் (Arrian), கர்ட்டிஸ் (Curtius) என்பார் இந்தியாவைக்குறித்து எழுதியவை களால் பல செய்திகள் விளக்கமாகின்றன. அலக்சாந்தரின் படை எடுப்புக் காலம் வரையில் கப்பல்கட்டும் தொழில் மிக்க செழிப்புற்றிருந்தது. அக் காலத்தில் கடல், ஆறு என்பவைகளால் வாணிகம் அதிகம் நடந்தமையே அதற்குக் காரணமாகும். அரியன் முப்பது துடுப்புக்களால் ஓட்டப்படும் இந்திய மரக்கலங்களைப்பற்றிக் கூறியுள்ளார். இலங்கைக்கும் இந்தியா வுக்குமிடையில் செய்யப்படும் கப்பற் பயணத்தைப் பற்றிப் பிளினி கூறி யிருக்கின்றார். அவ்விவரம் வருமாறு. “இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலுள்ள கடல் மிகவும் ஆழமில்லாதது; சில இடங்களில் ஆறு அடி ஆழ முண்டு; சில இடங்கள் நங்கூரம் பாய்ச்சமுடியாத ஆழமுடையன. இதனால் கப்பல்கள் இரண்டு பக்கங்களிலும் முன்னணியம் இருக்கும்படி கட்டப்படுகின்றன அவ்வாறு செய்வதால் ஒடுங்கிய வாய்க்கால்களில் அவைகளைத் திருப்புதல் எளிதாகும். இலங்கைக்குச் செல்லும் பாதையில் மாலுமிகள் நட்சத்திரங்களை நோக்கித் திசையை அறிவதில்லை. அவர்கள் பறவைகளைக் கொண்டு செல்கின்றார்கள். இடையிடையே அவர்கள் அவைகளைத் திறந்து பறக்கவிடுவார்கள். பறவைகள் தரையை நோக்கிப் பறந்து செல்லும். அத்திசையாக அவர்கள் மரக்கலங்களை ஓட்டிச் செல்வர். இந்தியக் கப்பல்கள் 2500 டன் நிறையுள்ளன.” கௌடலியர் அர்த்த சாத்திரத்தில், மௌரிய-சந்திரகுப்தன் காலத்தில் இருந்த மரக்கல நிர்வாகத்தைப்பற்றிக் கூறியுள்ளார். அசோகச் சக்கரவர்த்தி காலத்தில் சீரியா, எகிப்து, மாசிடோனியா, இலங்கை, பர்மா, சீனம் முதலிய நாடுகளோடு இந்தியா தொடர்பு வைத்திருந்தது. உரோமுக்குத் தென்னிந்திய மன்னரின் தூதர் ஆந்திரர் காலத்தில் (கி.மு. 200-கி.பி. 250) கடல் வழியாகவும் தரை வழியாகவும் மேற்கு ஆசியா, கிரீஸ், உரோம், எகிப்து, சீனா முதலிய நாடு களோடு அதிக வாணிகம் நடைபெற்றது. தென்னிந்திய அரசரிடமிருந்து தூதர்கள் உரோமுக்குச் சென்றார்கள். இந்திய யானைகள் சீரிய அரசர் போர்களில் பயன்படுத்தப்பட்டன. இந்தியாவினின்றும் அதிக மணப் பொருள்கள் வெளிநாடுகளுக்குச் சென்றனவெனப் பிளினி குறிப்பிட் டுள்ளார். அவர் கூற்றினை பெரிப்புளூஸ் என்னும் நூலின் ஆசிரியர் வலி யுறுத்தியிருக்கின்றார். தென்னிந்தியாவில் அதிக உரோமன் நாணயங்கள் காணப்பட்டன. கி.பி. 68-ல் உரோமரின் கொடுங்கோலுக்கு அஞ்சிய யூதர்கள் இந்தியாவின் மேற்குக் கரையை அடைந்து கொச்சியிற் குடியேறி னார்கள். குசான் அரசர் காலத்தில் இந்தியாவுக்கும், மேற்கு நாடுகளுக்கு மிடையில் போக்குவரத்து வளர்ச்சி யடைந்திருந்தது. இந்தியா இரத்தினக் கற்கள், பட்டு, மணப்பொருள் முதலியவைகளைக் கொடுத்து உரோமி லிருந்து வாங்கிக்கொண்டு வரப்பட்ட பொன் நாணயங்களோடு, உரோமக் கலைகளும் இந்திய நாட்டை அடைந்தன. உரோமரின் முக்கிய வாணிகத் துறைமுகங்கள் தென்னிந்தியாவி லிருந்தன. சாலமன் அரசன் காலத்தில் இத்துறைமுகங்களிலிருந்து பண்டங்கள் மேற்குத் தேசங்களுக்கு ஏற்றப்பட்டன. கிறித்துவ மறையில் பல தமிழ்ச் சொற்கள் காணப்படுகின்றன. வட இந்தியாவிற் கிடைத்த உரோமன் நாணயங்களினும் பார்க்கத் தென்னிந்தியாவிலே கோயமுத்தூர்ப் பகுதியிலும் மதுரையிலும் கிடைத்தவை மிகப்பல. பெரிதும் தக்கணத்திலும் தென்னிந்தியாவினின்றுமே பண்டங்கள் உரோமுக்குச் சென்றன. இதுவே வட நாட்டில் அதிக உரோமன் நாணயங்கள் கிடையாமைக்குக் காரண மாகும். வடக்கே ஆட்சி புரிந்த குசான் மன்னர் உரோமன் நாணயங்களை உருக்கிப் புதிய நாணயங்களை அடித்தனர். இது உரோமன் நாணயங்கள் அதிகம் வடக்கே காணப்படாமைக்கு மற்றொரு காரணமாகும். ஸ்ராபோ செங்கடல் வழியாக இந்தியாவுக்குச் செல்லும் 120 கப்பல்களைப் பார்த்தார் தென்னிந்தியhவின் கிழக்குக்கரைகளிற் கண்டெடுக்கப் பட்ட பழைய நாணயங்களில் இரண்டு பாய் மரங்களுள்ள மரக்கலம் பொறிக்கப் பட்டுள்ளது. இந்தியாவின் மேல் நாட்டு வாணிகம் அகஸ்தஸ் சக்கரவர்த்தி காலத்தில் மிக அதிகம் நடைபெற்றது. அதற்கு முன் இந்தியா எகிப்தோடு வாணிகம் புரிந்தது. தாலமி பிலாடி பஸ் (Ptolemy Philadepus கி.மு. 285-247) என்னும் எகிப்திய அரசனோடு அசோகச் சக்கரவர்த்தி தொடர்பு வைத் திருந்தார். தாலமி பிலாடி பஸ் என்பவனே அலக்சாந்திரியா பட்டினத்தை அமைத்தான். அது பிற்காலத்தில் பெரிய வாணிக முகாமாக மாறிற்று. எகிப்தியக் கடற்கரை ஓரங்களில் திறக்கப்பட்ட பர்நிக்கா (Berenica) மியோஸ் ஒமிஸ் (Myos Hormes) என்னும் இரு பட்டினங்கள் வழியாக அலக்சாந்திரியா வுக்குப் போக்குவரத்து நடந்தது. இத் துறைமுகங்களிலிருந்து மரக்கலங்கள் அராபிய, பாரசீகக் கரைகள் வழியாக இந்தியாவுக்குச் சென்றன. மியோஸ் ஒமிஸ் என்னும் துறைமுகத்திலிருந்து இந்தியாவுக்குச் செல்லும் 120 மரக்கலங்களை நேரில் பார்த்ததாக ஸ்ராபோ குறிப்பிட்டுள்ளார். இந்தியாவுக்கும் மேற்குத் தேசங்களுக்கும் வணிகப் பாதைகள் தரை வழியாகவும் இருந்தன. மத்திய ஆசியாவுக் கூடாக விருந்த பாதை ஆக்ச (Oxus) சிலிருந்து காஸ்பியனுக்கும் அங்கிருந்து கருங்கடலுக்கும் சென்றது. இன்னொன்று பாரசீகம் வழியாகச் சின்ன ஆசியாவுக்குச் சென்றது. பாரசீகக் குடாவிலும் யூபிராத்திலும் தொடங்கிய இன்னொரு பாதை டமஸ்கஸ், பல்மைரா இலவண்ட் (Lavant) முதலிய பட்டினங்களைத் தொடுத்தது. கால் நடைகள் மூலம் செய்யப்பட்ட இவ்வாணிகம் பெரும் பயனுடையதா யிருக்கவில்லை. யவனர் என்பது கிரேக்கரைக் குறிக்கும் பெயர் குளாடியஸ் (Cladius) என்னும் உரோம அரசனுக்குப் பின், தென்னிந்தியாவினின்றும் வாணிகப்பண்டங்கள் கடல் வழியாகச் சென்றன. அவை அராபிய வாணிகத்துறைகளையும் அலெக்சாந்திரியாவையும் அடைந்தன. இந்திய வாணிகப் பொருள்களைப் பெரிதும் கையாண்ட வர்கள் எகிப்திய கிரேக்கராவர். இவ் வியாபாரப் பொருள்களின் பெயர்கள் கிரேக்க மொழியிற் காணப்படுகின்றன. கிரேக்க மொழியில் அரிசியைக் குறிக்கும் ஒரிசா, இஞ்சியைக் குறிக்கும் சிஞ்சிபர், கறுவாவைக் குறிக்கும் கார்பிஒன் முதலியன அரிசி, இஞ்சி வேர், கறுவா முதலிய தமிழ்ச் சொற் களின் திரிபுகளாகும். இதனால் இப்பண்டங்களையும் இவைகளின் பெயர் களையும் தமிழ் நாட்டினின்றும் ஐரோப்பாவுக்குக் கொண்டு சென்றவர்கள் கிரேக்கர் எனத் தெரிகின்றது. மேற்குத் தேச வணிகரைக் குறிக்க சமக் கிருதத்தில் வழங்கியயவன என்னும் சொல் கிரேக்கரைக் குறிக்கின்றது. அச் சொல் அயோனீஸ் (Iaones) என்னும் கிரேக்கச் சொல்லின் திரிபு. இப்பெயர் பழைய தமிழ் இலக்கியங்களிலும் காணப்படுகின்றது. கிரேக்க மரக்கலங்கள் 40 நாள்களில் முசிறியை அடைந்தன எகிப்திலுள்ள கிரேக்க வணிகர், முந்திரிகை இரசம், பித்தளை, ஈயம், கண்ணாடி முதலியவைகளை, வக்கறை, முசிறி முதலிய துறைமுகங்களில் கொண்டுவந்து விற்றார்கள் என்றும், இத் துறைகளிலிருந்து மிளகு, வெற்றிலை, தந்தம், முத்து, மசிலின் ஆடை முதலியவைகளை வாங்கிச் சென்றார்கள் என்றும், பெரிபுளூஸ் என்னும் நூல் கூறுகிறது. கிரேக்க வணிகர் ஆடி (July) மாதத்தில் புறப்பட்டு முசிறிப் பட்டினத்தை நாற்பது நாள்களில் அடைந்தார்கள்; அடைந்து, மலையாளக் கரைகளில் மூன்று மாதங்கள் தங்கினார்கள். அவர்கள் அங்கு நின்றும் மார்கழி அல்லது தை மாதத்தில் புறப்பட்டார்கள். இவ்வாணிகம் அகஸ்தஸ், நீரோ (Nero) அரசர் காலங்களில் உச்ச நிலை அடைந்திருந்தது. கிழக்குக்கும் மேற்குக்குமுள்ள வணிகப் பாதைகள் உரோமர் வசம் இருந்தன. கிழக்குத் தேசங்களில் கிடைக் கும் உல்லாசப் பொருள்களின் தேவை, உரோம் நாட்டுச் செல்வருக்கு அதிகரித்தது. பிளினி, (கி. பி. 77) மணப் பொருள்கள், அணிகலன்கள் முதலியவைகளால் இந்தியா ஆண்டுதோறும் 400,000 தங்க நாணயம் பெறுமதியான உரோம நாட்டுச் செல்வத்தைக் கவர்ந்துகொள்கின்றதென்றும், இந்தியப் பண்டங்கள் உரோமில் அவைகள் கொள்விலையினும் பார்க்க நூறு மடங்கு அதிகவிலைக்கு விற்கப்படுகின்றனவென்றும் கூறியுள்ளார். ஹிப்பாலஸ் (Heppalus கி.பி. 47) என்பவரால், இந்தியாவுக்குக் கப்பல்கள் செல்லக்கூடிய பருவக் காற்றுக் கண்டுபிடிக்கப்பட்டது. உரோமர் மணப்பொருள்களைப் பிரேதங்கள்மீது கொட்டி எரித்தல் உரோமர் இந்தியாவினின்றும் வாங்கிச் சென்ற பண்டங்கள், மணப்பொருள்கள், இரத்தினக் கற்கள், முத்து, பட்டு, மசிலின், பஞ்சு ஆடை முதலியன. உரோம நாட்டு ஆலயங்களில் அதிக மணப் பொருள்கள் எரிக்கப்பட்டன. இறந்தவர்களின் உடல் மீதும் அதிக மணப் பொருள்கள் கொட்டி எரிக்கப்பட்டன. சிலா (Sylla) என்பவரின் சவத்தின்மீது 210 மூட்டை மணப்பொருள்கள் கொட்டி எரிக்கப்பட்டன. பொப்போஆ (PoPPeoa) என்பவரின் சவத்தின் மீது ஒரு நாட்டின் ஓராண்டு விளைவத்தனை கறுவா, இலவங்கம் முதலியவைகளைக் கொட்டி நீரோ அரசன் எரித்தான். இம் மணப்பொருள்கள் உரோமருக்கு அராபியரால் விற்கப்பட்டவை. அவை களை அராபியர் இந்தியாவினின்றும் பெற்றனர். இந்தியாவில் கிடைக்கும் மிளகு, இஞ்சி என்பவைகளைப்பற்றியும், அவை பொன்னுக்கும் வெள்ளிக் கும் சமமாக நிறையிட்டு உரோமில் விற்கப்பட்டமையைப் பற்றியும் பிளினி குறிப்பிட்டுள்ளார். திபேரியஸ் ஸீஸர் (Tiberious Caesar) என்பார், 1பட்டு இடக்கரான உடை எனக் கொண்டு இறக்குமதியைத் தடுக்கும் சட்டம் செய்தார். தமிழ் நாட்டில் மிளகு, முத்து, மரகதம் என்னும் மூன்று வகை அரிய பொருள்கள் கிடைத்தன. ஐரோப்பியச் சந்தைகளில் மிளகுக்கு நல்ல விலை கிடைத்தது. தென்கடலில் குளிக்கப்படும் முத்துக் களுக்காக உலகம் முழுமையிலுமுள்ள வணிகர் கூடினார்கள். கோயமுத்தூரி லும் பாடியூரிலும் பச்சைக்கற்கள் கிடைத்தன. உரோமன் வாணிகம் ஓய்ந்து போதல் தமிழ் அரசர் பலமுள்ள கடற்படை வைத்திருந்தனர். தமிழ் நாட்டுத் துறைமுகங்களுக்குக் கிழக்கிலும் மேற்கிலுமிருந்து மரக்கலங்கள் வந்தன. வணிகர், முத்து, மிளகு, பச்சைக் கற்கள் முதலியவைகளை வாங்கிக்கொண்டு அவைகளுக்குப் பதில் பொன், வெள்ளி, ஐரோப்பாவில் செய்த கைத்தொழில் பண்டங்கள் முதலியவைகளைக் கொடுத்தனர். அகஸ்தஸ் முதல் நீரோ (கி.பி. 68) வரையிலுள்ள எண்பது ஆண்டுகளில் அதிக வாணிகம் நடை பெற்றதென்பதற்குத் தென்னிந்தியாவில் அதிகம் கிடைத்த நாணயங்கள் சான்று அளிக்கின்றன. நீரோ முதல், கரகலா (Caracalla கி.பி. 217) காலம் வரை யில் இவ் வாணிகம் ஓய்ந்திருக்கவேண்டும். இக் காலத்திய உரோமன் நாண யங்கள் மிகச் சிலவே காணப்படுகின்றன. கிடைத்த சில நாணயங்களும் பஞ்சு விளையும் இடங்களில் காணப்பட்டன. பிற்காலத்தில் இரத்தினம், மசிலின், பஞ்சு ஆடை முதலியவை உரோ முக்கு அதிகம் தேவைப்படவில்லை. ஆனால் தென்னிந்தியாவின் கிழக்கி லும் மேற்கிலுமிருந்து மிளகும் மணச்சரக்குகளும் அதிகம் ஏற்றுமதியா யின. அலாரிக் என்னும் கொதியன் (Gothic) கி.பி. 408-ல் உரோம் மீது போட் டிருந்த முற்றுகையை எடுப்பதற்கு, அவன் உரோம் மக்களிடமிருந்து பெற்ற திறைப் பொருள்களுள் 3,000 இராத்தல் மிளகு ஒரு பகுதியாகும். தென்னிந்தியாவில் யவனர் குடியேறிய சேரிகள் கிறித்துவுக்குப் பின் இரண்டு நூற்றாண்டுகளில் உரோமன் மக்கள் பலர் தென்னிந்தியாவில் குடியேறியிருந்தார்கள். ஐரோப்பியப் போர் வீரர் வலிய யவனர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளனர். ஊமராகிய யவன வீரர் அரசரின் மெய்காப்பாளராயிருந்தனர். முசிறித்துறைமுகத்தில் யவனக் கப்பல்கள் மிளகுவாங்கும் பொருட்டு காத்துக்கொண்டு நின்றன. தமிழரச ரின் கோட்டைவாயில்களை மிலேச்ச வீரர் காவல் காத்தனர். முசிறிப்பட்டி னத்தில் அகஸ்தஸ் அரசனுக்குக் கோவில் ஒன்று இருந்தது. காவிரிப்பூம் பட்டினத்தில் யவனர் குடியேறிய யவனச் சேரியிருந்தது. சமக்கிருத பாலி நூல்கள் உரோம் நகரை உரோமக எனக் குறிப்பிடுகின்றன. கி.பி. 505 வரையில் இருந்த வராகமிரர் உரோமகாவைப்பற்றி பஞ்சசித்தாந்திகா, விரிகற்சங்கிதை முதலிய நூல்களிற் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் ஞாயிறு உதிக்கும்போது உரோமாகாவில் நடு இரவு என அவர் கூறியுள்ளார். அலக்சாந்திரியா நூல் நிலையத் தலைவரும், பிளினி, தயதோரஸ் (Diodorus) சைத்ஸ் (Agatharcides கி.மு. 177), சாபியா (Yemen) ஐரோப்பாவுக்கும் ஆசியா வுக்கும் வாணிக மத்திய இடமாயுள்ளதென்றும், அதன் செல்வ வளத்துக்குக் காரணம், இந்தியவாணிகத்தின் தனியுரிமையாகும் என்றும் கூறியுள்ளார். பாண்டிய மன்னன் அகஸ்தஸ் சீஸருக்கு கி.மு. 20-ல் தூது அனுப்பி னான் என ஸ்ராபோ குறிப்பிட்டுள்ளார் மலையாளம், மிளகு வாணிகத்துக்கு முக்கிய இடமென்றும், சீனப் பட்டும், கிழக்கு நாடுகளின் இரத்தினக் கற் களும், இலங்கையில் இறக்குமதியாயின என்றும் அது பாரசீகக் குடாவுக் கும், செங்கடலுக்கும், சீனாவுக்கும் மத்தியிலுள்ள வாணிகம் இடம் என்றும், இந்தியா, பாரசீகம், எதியோப்பியா முதலிய நாடுகளிலிருந்து வருங் கப்பல்கள் இலங்கையிலிருந்து வாணிகப் பண்டங்களை ஏற்றிச் செல் கின்றன என்றும் கொஸ்மாஸ் (Csmas, கி.பி. 535) குறிப்பிட்டுள்ளான். தென்னிந்தியரின் கிழக்குநாட்டு வாணிகம் இந்தியா, மேற்கு நாடுகளோடு வாணிகம் நடத்திய காலத்தில் கிழக்கு நாடுகளோடும் வாணிகம் நடத்திற்று. வின்சன் சிமித் “இந்தியாவின் பழைய வரலாறு” (Early History of India) என்னும் நூலில் கூறியிருப்பது வருமாறு: “பழைய தமிழ் இலக்கியங்களும், கிரேக்க உரோம ஆசிரியர்கள் எழுதி யவையும் கிறித்துவுக்குப் பின் இருநூறாண்டுகளில் தென்னிந்திய மேற்குக் கடற்கரைத் துறைமுகங்களோடு, கிழக்கு மேற்குத் தேசங்கள் வாணிகம் புரிந்தன வென்று உறுதிப்படுத்துகின்றது. சோழ நாட்டுக் கப்பல்கள், கரையை அடுத்துச் செல்லுமளவில் நிற்கவில்லை; தைரியமாக வங்காளக் குடாவைக் கடந்து கங்கை, ஐராவதி முகத்துவாரங்களுக்குச் சென்றதோடு, இந்துமாக் கடல் வழியாக மலாய்த் தீவுக் கூட்டங்களுக்கும் சென்றன. சுமத்திரா, ஜாவா, காழகம் (பர்மா), வங்காளம், இலங்கை முதலிய நாடுகளைப் பற்றித் தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.” வங்காளக் குடாக் கடலை அடுத்த கடற்கரைகளில் வாழ்ந்த தெலுங்கர் பர்மாவின் கீழ்ப் பகுதிகளில் குடியேறி அந் நாட்டை வென்றார்கள். இவர்களைப் பர்மியர் தலெயிங் (Talaing) என அழைத்தனர். கி.பி. 800 வரையில் கலிங்கர் பிறநாடுகளிற் சென்று குடியேறத் தொடங்கிவிட்டார்கள். கலிங்க இராசகுமாரரின் கல்வியின் ஒரு பகுதி கப்பற் பயணத்தைப் பற்றியது. பர்மியரின் புத்தகாத் என்னும் புத்த வேதத்தினால் கலிங்க நாட்டில் புத்தவாணிகர் பர்மாவோடு வாணிகத் தொடர்பு வைத்திருந்து புத்த மதத்தைப் பரப்பி இறுதியில் நாட்டுக்கு அதிபதியானார்கள் எனத் தெரிகின் றது. அசோகச் சக்கரவர்த்தி புத்த குருமாரைச் சுவர்ண பூமிக்குப் (பர்மா) போக்கினார். இந்தியரின் முக்கிய குடியேற்ற இடமாகவுள்ளது, புறோம் என்னும் இடத்துக்கு அண்மையிலுள்ள தாரகேத்திரம். (Tara-Khetra.) மலாய் மொழியில் இந்தியச் சொற்கள் இந்தியர் மலாக்காவோடும் வாணிகத் தொடர்பு வைத்திருந்தார்கள் என்பதற்குச் சான்று மலாய் மொழியில் பல இந்தியச் சொற்கள் காணப் படுதலேயாகும். மலாய் நாட்டில் வாழும் இந்தியர் கிளிங் என அழைக்கப் படுகின்றனர். கிளிங் என்பது கலிங்க என்பதின் திரிபு. சர்-வால்டர் எலியட் கூறுவது வருமாறு: முற்காலத்தில் இந்தியாவின் கிழக்குக் கரைகளில் வாழ்ந்த மக்களுக்கும், அதின் எதிர்க்கரையில் வங்காளக் குடாவிலுள்ள நாடு களுக்கும் மலாக்கா முதலிய இடங்களுக்குமிடையில், பழமைதொட்டுப் போக்குவரத்து இருந்து வந்ததென்பதில் சந்தேகமின்று. புத்த சமய வளர்ச்சி உச்சநிலையில் இருந்த காலத்தில் கி.பி. ஐந்தாம் ஆறாம் நூற்றாண்டுகளில் இது நடந்தது. இந்தியாவில் புத்த சமய நெருக்கடி உண்டானபோது பெரும்பாலும் புத்தமதத்தினர் எதிர்க்கரையிலுள்ள நாடுகளுக்கு ஓடிச் சென்றனர். “கி.பி. 75 வரையில் கலிங்க நாட்டினின்றும் சென்ற கலிங்கர், ஜப்பான் தீவை அடைந்தனர். அங்கு அவர்கள் குடியேறி யிருந்து இந்தியாவோடு வாணிகம் நடத்தினர். இது பல நூற்றாண்டுகள் நடைபெற்றது.” எல்பின்ஸ்டன் (Elphinstone) கூறுவது வருமாறு: கலிங்க தேசத்தினின் றும் வந்த பெருந்தொகை இந்தியர் சாவகத் தீவில் இறங்கி அங்கு வாழ்ந்த மக்களை நாகரிகப்படுத்தினார்கள் என்பதற்கும், அவர்கள் தாம் வந்திறங்கிய காலத்தைக் குறிப்பிட்டு வருகிறார்கள் என்பதற்கும் ஆதாரம் காணப்படு கின்றது. இன்றும் அவர்களின் முதல் ஆண்டு கி.பி. 75-ல் தொடங்குகின்றது. சாவாத்தீவின் பொது மொழி மலாயாக இருந்தபோதும், வரலாற்று நூல்களும் அரசியல் ஆவணங்களும் பட்டையங்களும் சமக்கிருதத்தில் உள்ளன. கி.பி. நாலாம் நூற்றாண்டில் சீன யாத்திரிகன் ஒருவன் எழுதிய குறிப்பில், சாவாத் தீவு முழுவதும் இந்தியரால் குடியேறப்பட்டிருக்கின்ற தென்றும், அவர்கள் கங்காநதி முதல் இலங்கைவரையிலும் உள்ள நாடுகளிலிருந்து வந்தார்கள் என்றும், இலங்கையிலிருந்து இந்தியாவுக்கும் சாவாவிலிருந்து சீனாவுக்கும் செல்லும் கப்பல்களில் வேலை செய்யும் பிராமண மதத்தினராகிய வேலை யாள்கள் இருந்தார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளான். சாவாவிலும் அதனை அடுத்த தீவுகளிலும் கலிங்கர் குடியேறி னார்கள் என்பதற்கு உள் நாட்டு வரலாறுகள் காணப்படுகின்றன. ஆராய்ச்சி வல்லார் இக் கருத்தினை ஏற்றுக்கொள்கின்றனர். கலிங்கத்திலும், வட கிழக்குச் சென்னை மாகாணத்திலுமுள்ள மக்கள் சாவாவிற் குடியேறி னார்கள் என்று குரோபோர்ட் (Crawford) குறிப்பிட்டுள்ளார். இந்திய மக்கள் கோதாவரி, கிருஷ்ணா முகத்துவாரங்களிலிருந்து, கம்போதியா ஜாவா முதலிய தீவுகளிற் குடியேறினார்கள் என்பதை அமராவதி அழிபாடுகள் நன்கு விளக்கும். வங்காளக் குடாவிலுள்ள முசிறிப்பட்டினத்திலிருந்து அரக்கன், பிகு, சீயம், சுமத்திரா, கொச்சின்-சீனா, மணிலாத் தீவுகள், மடகாசிகர் முதலிய இடங்களுக்கு மரக்கலங்கள் பயணப்பட்டன வென்று தவேர்னியர் (Tavernier-கி.பி. 1666) கூறியுள்ளார். இவ்வாறு திராவிட மக்களின் கடல் வாணிகம் கிழக்கே ஜப்பான் தீவு வரையும் மேற்கே மெசபெதேமியா, எகிப்து வரையும் பரவியிருந்தது. தமிழர் இவ்வகை உயர் நிலையில் இருந்தார்கள் எனக் கூறுதல் இன்று கற்பனை போலத் தோன்றலாம். சில வரலாற்றுக் குறிப்புக்கள் ஆரியர் மத்திய ஆசியாவில் அலைந்து திரியும் அநாகரிகராக இருந்த காலத்தில் இந்திய நாட்டில் வாழ்ந்த திராவிடர் அராபியாவில் வாழ்ந்த செமித்தியரை ஒத்த நாகரிகமுடையவர்களாய் வாழ்ந்தனர். தையர் நாட்டு ஹெரம், பலஸ்தீனா நாட்டு சாலமன் முதலிய அரசர் காலத்தில், மத்திய தரை நாடுகளோடு வாணிகஞ் செய்து அவர்கள் மொழிகளைத் திராவிடச் சொற்களால் செழிப்படையச் செய்த மக்கள், அவ்வாறு உயர்ந்த நாகரிகம் பெற்றிருந்தார்கள் என்று கூறுவது வியப்பாகத் தோன்றமாட்டாது. -ஜி.ஆர். ஹன்ட்டர்.1 இந்தியாவிடமிருந்தே ஆசியாவின் மற்றப் பகுதிகளும், மேற்கு உலகம் முழுமையும் தங்கள் அறிவையுஞ் சமயத்தையும் பெற்றன.-ஹீரன்.2 எகிப்தியரின் ஆதி உறைவிடம் மலையாளக் கரைகளில் இருந்திருக்கலாம்.3 - ஜி.ஆர். ஹன்ட்டர். பழைய அபிசீனியர் அபூசின் (Abuisin) என்னும் நாட்டினின்றும் வந்து ஆபிரிக்காவிற் குடியேறினர். அபிசின் என்பது சிந்து நதியின் இலக்கிய காலப்பெயர். - ஜி.ஆர். ஹன்ட்டர்.4 பெரிய பிரித்தனில் (Great Britain) இந்துக்கள் குடியேறி யிருந்தார்கள் என்பதை மேலும் அறிந்துகொள்வதற்கு காட்பிறே கிச்சின்ஸ் என்பவரின் கெல்தியர் துரூத்தியர் என்னும் நூலை நோக்குக. துரூத்திய குருமார் இந்தியாவினின்றும் சென்று பிரித்தினிஸ் குடியேறியவர்கள் என்பது அந் நூலில் கூறப்பட்டுள்ளது. - இந்திய உயர்வு.5  திராவிடம் என்றால் என்ன? முன்னுரை ஆரியமொழி ஒன்றுதானே இந்து ஆரியம், பாரசீகம், கிரேக்கம், இலத்தீன், சிலாவு லிதுஏனியம், சேர்மன், கெல்து முதலிய பல மொழி களாகப் பிரிந்தது போலவே தமிழும் தெலுங்கு, கன்னடம், துளு, மலை யாளம் முதலிய மொழிகளாகப் பிரிந்துள்ளது. வடநாட்டு மொழிகளின் அடிப்படையும் தமிழே. எளிதில் அடையாளம் கண்டுபிக்க முடியாத அள வில் அவை மாற்ற மடைந்துள்ளமையாலும், அவைகளின் சொற்போக்கு பெரிதும் ஆரிய மயமாயிருத்தலினாலும் அவை ஆரியத்தின் வழிமொழிகள் என்று கருதப்படுகின்றன. அம்மொழிகளின் சொற்போக்கு ஆரியத்தன்மை யுடையனவாயினும் அமைப்பு திராவிடத்தன்மை உடையதென்றும், மொழி களின் இனத்தை ஆராய்ந்து அறிதல் சொற்களாலன்று அமைப்பினா லென்றும் பி. தி. சீனிவாச ஐயங்கார் போன்ற ஆராய்ச்சி அறிஞர் பலவிடங் களில் எடுத்துக் கூறியுள்ளார்கள். வடநாட்டு மொழிகளிற் காணப்படும் மத்திய கால இந்து-ஆரியச் சொற்களில் 25 சதவீதம் மாத்திரம் பழைய இந்து ஆரியத்தினின்றும் வந்தவை என டாக்டர் காற்றி (Dr. Katre) என்பார் கூறுகின்றார். மீதிச் சொற்கள் உள்நாட்டுச் சொற்களேயாதல் வேண்டும். வடநாட்டு மொழிகளில் மாத்திரமல்ல, சமக்கிருத மொழியிலும் மிகப்பல தமிழ்ச் சொற்கள் உருமாற்றத்துடன் காணப்படுகின்றன. ஆரியத்துக்குப்பல சொற்களை உதவி அதனைச் சீர்திருத்திச் சமக்கிருதமாக்கியது தமிழே. “பழைய இந்தியாவில் மக்கள் வாழ்க்கை” என்னும் நூலில் பி. தி. சீனிவாச ஐயங்கார் இது குறித்துக் குறிப்பிட்டுள்ளார். இன்று இந்து ஆரியத்திற் காணப்படும் 25 சதவீதச் சொற்களும் உள்நாட்டு மொழிகளிலிருந்து கிடைத்தவை1. இவ்வாறு ஆரியமும் ஆரியத்தின் வழிவந்த மொழிகளும் தமிழுக்குப் பெருங்கடப்பாடுடையனவாயிருக்கத் தமிழைப் புறக்கணித்து ஒதுக்கி அதற்கு முதல் இடங்கொடாது ஆரியத்துக்கு முதன்மை கொடுத்து அதனைச் சமயமொழியாகக் கொண்டுழலும் மக்கள் விழிப்படையும் பொருட்டுத் தமிழின் உண்மை இயல்புகளை விளக்கிச் சிறிய சிறிய நூல்களை வெளி யிட்டு வருகின்றோம். அவ்வரிசையில் இதுவுமொன்றாகும். சென்னை 1-9-48 ந. சி. கந்தையா திராவிடமென்றால் என்ன? எழுவாய் திராவிடம் என்னும் பெயரைப்பற்றி நீண்ட காலம் வாதங்களும் எதிர் வாதங்களும் நடந்துவந்தன. மேல் நாட்டு ஆசிரியர்கள் இந்திய மொழி களை ஆராய்ந்து ஆரியம், தமிழ் என்னும் மொழிகள் ஒன்றோடு ஒன்று தொடர்பில்லாத வெவ்வேறு மொழிகள் என்று காட்டுவதன் முன்பு ஆரியத் தினின்றே தமிழ் தோன்றிற்று; தமிழுக்குமாத்திரமன்று உலகிலுள்ள எல்லா மொழிகளுக்கும் ஆரியம் தாய் என ஒரு கூட்டத்தார் கூறிவருவாராயினர். தமிழ் என்னும் பெயர் தானும் திராவிடம் என்னும் ஆரியச் சொல்லினின்று பிறந்ததாகுமெனவும் அவர்கள் புகன்றனர். அவ்வாறு இன்று கூறுவாரு முளர். தமிழின் உறழ்ச்சி பிறழ்ச்சிகளால் தோன்றிய கன்னடம் தெலுங்கு மலையாளம் என்னும் மொழிகளும் ஆரியத்தின் வழிவந்தன எனக் கருதப் பட்டன. கன்னடம் தெலுங்கு துளு மலையாளம் தமிழ் என்னும் மொழிகள் ஓர் ஆதிமொழியினின்று பிரிந்தன; தமிழினின்று கன்னடம் தெலுங்கு துளு மலையாளம் முதலிய மொழிகள் பிறக்கவில்லை என ஆராய்வின்றிச் சிலர் புகன்று வருகின்றனர். இவ்வகை மாறுபட்ட கருத்துக்களை எல்லாம் ஆராய்ந்து உண்மை யாது என நாட்ட முயன்ற அறிஞர் பலர் கருத்துக்களை இந்நூலகத்தே கோவைப் படுத்தியுள்ளோம் முதற்கண் 1கிளிமென் கோனர் பாடின் கிர்சன் என்னும் சேர்மன் பேராசிரியர் திராவிடம் என்னும் பொருள் பற்றி வெளியிட்ட கருத்தினை ஈண்டு தருகின்றோம். திராவிடம் என்றால் என்ன? மொழி தொடர்பாகவே திராவிடம் என்னும் பெயரை உலகம் அறிந்துள்ளது. திராவிடம் என்னும் இனத்தில் முன்பின் இருபது மொழிகள் அடங்கும். அவைகளுள் நான்கு மொழிகள் தமது பழைய இலக்கியங் களைக் குறித்துப் பெருமை கொள்ள முடியும். இவைகளுள் தமிழ் மொழி யில் மாத்திரம் இந்தியாவின் எல்லையையும் கடந்து சென்றுள்ள குறள் போன்ற பழைய இலக்கியங்கள் உள்ளன. திராவிடம் என்னும் பெயர் எங்கு நின்றுவந்தது? அதன் ஆதிப் பொருள் யாது? இப்பெயர் முதல்முதல் குமாரிலபட்டர் காலத்தில் (கி. பி. 7 அல்லது 8ஆம் நூற்றாண்டு) திராவிட நூல் வழக்கில் காணப்படுகின்றது. அவர் அதனை தென்னிந்தியாவின் கிழக்குக்கரையில் வழங்கும் தெலுங்கு, தமிழ் மொழிகளைக்குறிக்க “ஆந்திர திராவிட பாஷா” எனக் குறிப்பிட்டுள்ளார். ஆந்திர, திராவிட என்னும் சொற்களின் பொருளை அறிவதற்கு இந்தியா வின் தெற்கே வழங்கும் கன்னடம் மலையாளம் என்னும் பெயர்ப் பொருள் களைப்பற்றியும் நாம் ஆராய்தல் வேண்டும். இவ்விரண்டு பெயர்களும் இட சம்பந்தமாக வழங்கப்பட்டுள்ளன. கனரா, கன்னடா, அல்லது கர்நாடக என வழங்கும் பெயர் கர்நாட அல்லது கர்நாடக என்று பிரிகற் சம்கிதையில் எழுதப்பட்டுள்ளது. இப்பெயர் பஞ்சு விளைவதும் தேக்குச் செழித்துவளர் வதுமாகிய கரிய பூமியைக் குறிக்கின்றது. மலையாளம் என்பதற்கு மலை நாடு எனப் பொருள் கொள்ளுதல் வேண்டும். மலையம் என்பது மலையைக் குறிக்கின்றது ஆகவே கன்னடம் மலையாளம் என்னும் பெயர்கள் இடங் களைக் குறிக்க வழங்கிய பெயர்கள் என்றும் அவை வட மொழிப் பெயர்கள் அல்ல என்றும் விளங்கும். இதனால் முற்கால மக்கள் திராவிடம் என்னும் பெயரையும் அவ்வகையில் பயன்படுத்தினார்கள் என்பது தெளிவாகின்றது. அசோகரின் கல்வெட்டுக்களுக்கு முற்பட்ட ஐதரேயப் பிராமணத் தில் ஆந்திரம் என்னும் சொல் தெலுங்கு நாட்டையும் தெலுங்கு மொழியையும் குறிக்க வழங்கப்பட்டுள்ளது. இலக்கிய கால ஆசிரியராகிய பிளினி அதனை ஆந்திரே எனக் குறிப்பிட்டுள்ளார். குமாரிலபட்டர் ஆந்திர மொழியைத் தெற்கே உள்ள தமிழோடு தொடர்பு படுத்தியுள்ளார். தமிழர், தெலுங்கர் என்பதைத் தெலிங்கர் என்றும், அவர்களின் மொழியைத் தெலுங்கு அல்லது தெலுங்கம் என்றும் வழங்கினர். தெலுங்கம் என்னும் பெயர் வேளாண்மை தொடர்பாக உண்டானது. தெல் அல்லது தெல்லு, நீண்ட சதுரமானதும் நாற்புறமும் வரம்புடையதுமாகிய சிறிய வயல் நிலத்தைக் குறிக்கும். தெலுங்கம் என்பது சென்னைக்கும் ஒரிசாவுக்கும் இடையே உள்ள மக்களையும் மொழியையும் குறிக்கவும் வழங்கும். அசோக பட்டையங்களில் கலிங்கம் என்னும் பெயர் நாட்டையும் மலைநாட்டையும் குறிக்க வழங்கப்பட்டுள்ளது. ‘கல்’ என்பது கல்லையும் மலையையும் குன்றையும் குறிக்கும். கலிங்கு, கலுங்கு, கலிங்கல் முதலிய சேரி வழக்குச் சொற்கள் நீர்மடையையும் குறிக்கும். கலிங்க நாட்டின் கடற்கரையிலுள்ள ஒரு பட்டினத்துக்குக் கலிங்கப்பட்டினமென்று பெயர். கஞ்சம் மாகாணத்திலுள்ள மலைத்தொடருக்குக் கலிங்க மலைத்தொடர் என்று பெயர். இதனால் ஆந்திரா என்னும் பெயரும் இடத்தொடர்பாக வழங்கப் பட்டதெனக் கொள்ளுதல் தவறாகமாட்டாது. கலிங்கப் பட்டினத்துக்கு மேற்கே 58 கல் தொலைவில் ஆந்திரா என்னும் தெலுங்கு இடம் ஒன்று உள்ளது. இது முற்காலத்தில் புகழ்பெற்று விளங்கிய ஓர் இடமாகலாம். தெலுங்கு அல்லது கலிங்கநாட்டின் மலைப்பகுதிகளாகிய ஒரிசா மலைகளிலிருந்து கிழக்குத் தொடர்ச்சிமலை எட்டும்வரையில்-கோதாவரி ஆற்றிடைக்குறை முதல் தெற்கே கன்னியாகுமரி வரையில்-தட்டையான சமபூமி காணப்படுகின்றது. இவ்விடங்கள் கரைப்போக்கு என்னும் பொருளில் திராவிடம் என்னும் பெயரால் அறியப்பட்டது. கடற்கரையை ஆள்பவன் திரையன் எனப்பட்டான். இடம் என்பது தெலுங்கில் எடா, எடாமு என வழங்கும்; இவை இடைவெளி, பரப்பு, இருக்குமிடம் போன்ற வைகளைக் குறிக்கும். திரா-விட (ம்) என்பது மயிலென்பதிலிருந்து தோன்றிய மயிலாபுரி, தீவைக் குறிக்கும் இலங்கை என்பதிலிருந்து தோன்றிய இலங்காபுரி என்னும் பெயர்களை ஞாபகப்படுத்துகின்றது. குமாரில பட்டர் ‘திராவிட’ என வழங்கியது தமிழ் வழக்கில் திராவிடம் என்று ஆயிற்று. இப்பெயர் தொடக்கத்தில் தமிழரின் நாட்டுக்கும் மொழிக் கும் பெயராய் வழங்கிப் பின் அம்மொழியோடு சம்பந்தப்பட்ட மக்களை யும் உணர்த்துவதாயிற்று. தமிழ் சம்பந்தமான மொழி மகராட்டிரம் கூர்ச்சரம் முதலிய நாடுகளில் இன்றும் பேசப்படுகின்றது. அவ்விடங்களுக்குத் தமிழரின் ஒரு பிரிவினர் சென்றிருக்கலாம். கால்ட்வேல் காலம் முதல் திராவிடமென்பது தமிழோடு தொடர்பு படுத்தப்பட்டுள்ளது. வரலாற்று முறையான ஆராய்ச்சியாலும், மொழிகளைத் தொடர்புபடுத்தி ஆராயும் ஆராய்வினாலும் திராவிடம், தமிழ் என்னும் சொற்கள் வெவ்வேறு அடியாகப் பிறந்தன என்று தெரிகின்றது. கிரீயர்சன் என்பார், தம்முடையது என்னும் பொருள் தரும் தம் என்னும் அடியாக தமிழ் பிறந்ததெனக் கூறினார். ஐரோப்பிய மொழியில் இதை ஒத்த ஒரு எடுத்துக் காட்டுக் காணப்படுகின்றது. ஜெர்மன் மொழியில் டெயுர்ச் (Deutsch) என்பதும் டச் (Dutch) என்பதும் ஒரு பொருளில் வழங்கும். இவ்விரண்டு உச்சரிப்புக்களும் டியூரிஸ்க் (Diutisk) என்னும் சொல்லின் வேறுபாடுகள். இச் சொல்லின் பொருள் “நமது மக்களுக் குரியது.” என்பது. மதுரை, தூத்துக்குடி, திருவனந்தபுரம் முதலிய இடங்களில் தமிழ் திருத்தமாக உச்சரிக்கப்படுகின்றது. பெசிடோ ஸ்கைலாக்ஸ் என்னும் நூலில்1 தமிராய்2 என்னும் பெயர் காணப்படுகின்றது. தாலமி தமிழகத்தைத் தமிரகே எனக் குறிப்பிட்டுள்ளார்; தபுலா பெதுருங் கேரியானா3, சிதிய தமிரிகி4 எனக் குறிப்பிடுகின்றது. ழகரத்துக்குப் பதில் ளகரம் வழங்கியதை நாம் ஆரிய நூல்களில் பார்க்கலாம். சுவேதாம்பரரின் சைன நூல்களிலும், மகாவம்சம் என்னும் இலங்கைப்பாலி நூலிலும் தமிள என்னும் உச்சரிப்புக் காணப்படுகின்றது. தமிழன் என்பதின் பன்மை தமிழர். தமிழப் பிள்ளை தமிழக் கூத்தன் என்னும் கூட்டுச் சொற்களில் தமிழ என்னும் வழக்குக் காணப்படுகின்றது. இதனால் ஆரியருக்கு முன்பு தமிழ் என்பதும் நாட்டுக்கே பெயராக வழங்கியதெனத் தெரிகின்றது. புதிதாக வந்த ஆரியர் திராவிட, தமிழ் என்னும் சொற்களைக் கையாண்ட முறையினால் அவை ஒரே உற்பத்திக்குரியனவென்று சந்தேகிக்க வேண்டியதாயிற்று. சமக்கிருத நாடகங்களில் (சைனர் பிராகிரு தத்தில் எழுதிய நாடகங்களில்) தாவிள (davila) என்றும், வராகமிகிரரின் சில கையெழுத்து நூல்களில் (கி. பி. 6ஆம் நூற்றாண்டு) திரமிட(ம்) என்றும், கி.பி. 6ஆம் நூற்றாண்டுப் பட்டையங்கள் சிலவற்றில் திராமிடமென்றும் சொற்கள் காணப்படுகின்றன. புத்த சமயம் சம்பந்தமாகவும் புராணங்கள் சம்பந்த மாகவும் உள்ள பழைய மலையாள மொழிபெயர்ப்புக்களிலும் இவ்வாறே காணப்படுகின்றது. இதுவரையும் கூறியவைகளால் தமிழ் திராவிடம் என்னும் சொற்கள் வெவ்வேறு உற்பத்திக்குரியனவென்றும், திராவிடம் தமிழ் என்னும் சொற்கள் பிறமொழிக் குரியவர்களால் கொச்சையாக உச்சரிக்கப்பட்டுவந்தமையின் இரு சொற்களும் ஒரே உற்பத்தியைச் சேர்ந்தனவோ என்னும் மயக்கமும் ஐயப்பாடும் எழுவதாயினவென்றும் புலனாகின்றன. 1தமிழ் என்பதன் சிதைவு திராவிடம் “திராவிடம் என்னும் சொல்லின் பொருள் விளங்காமையால் அதற்குப் பொருளமைப்பான் தொடங்கி நமது நண்பர் கீழ்வருமாறு கூறுகின்றார்:- ‘அது ஸ்திரவிடம் என்பது திராவிடம் என்று வழங்கிப் பின் திராவிடம் என நீண்டு வட நூலார் மூன்றாவது தகரத்தை உபயோகித்து வடமொழியாக மயக்கஞ் செய்ததென்று எண்ணுகிறேன். ஸ்திரவிடமென் றால் உறுதியான அல்லது நிலையான இடமென்பதேயாம். வட இந்தியாவி லிருந்து ஆரியரால் விரட்டப்பட்டு தென்திசையில் ஓடிச் சென்ற துரானிய சாதியார் எவ்விடத்தில் ஸ்திரமாய்த் தங்கினார்களோ அவ்விடத்திற்கு ஸ்திரவிடம் அல்லது திராவிடம் என்று பெயர் அமைந்தது’ என்று விடை யும் பின் பகர்ந்திருக்கிறார்கள். “திராவிடம் என்னும் மொழியின் சிதைவெனக் கொள்ளினும், ஸ்திரவிடம் என்னும் பெயர் தமிழுலகத்திற்கு யாரால் எச்சமயம் கொடுக்கப் பட்டதென யாம் பரியாலோசிக்க வேண்டும். இப்பெயரை உண்டு பண்ணின வர் வடமொழியாரா? அல்லது தென்மொழியாரா? ஸ்திரவிடம் என்ற பெயரில் ‘ஸ்திரம்’ என்ற வடமொழியும் இடம் என்ற தென்மொழியும் புணர்ந்து வருவ தனால் இவ்விருமொழியும் கலவாத அக்காலத்தில் இப்பெயர் உளதாதற்கு இடமே இன்று. சமஸ்கிருதமும் தமிழும் நெடுங்காலம் சேர்ந்து மயங்கிய பின்னரே இப்பெயர் உதிப்பதற்கு இடமாகும். “ஸ்திரவிடமென்பது திராவிடமென எவ்விதம் மருவியதென்று நோக்குங்கால் அதனைத் திரவிடம் என்று சிதைத்தவர் தமிழராகவே இருக்கவேண்டுமென்றும் இதிலிருக்கும் தகரத்தை மூன்றாவது தகரமாக் கியவர் வட மொழியாளராகவே இருக்கவேண்டுமென்றும் தெள்ளிதிற் புலப் படுகின்றன. இருமொழிகளும் சேர்ந்து இம்மாதிரி ஒரு மொழியினை மருவச் செய்வது அசம்பாவிதம் என்றே கூறல்வேண்டும். ஒலி ஒற்றுமை யினால் மருண்டு நமது நண்பர் திராவிடம் என்னும் மொழியை ஸ்திரவிடம் என்பதிலிருந்து பெறத்தொடங்கினதற்குச் சான்றாக நியாயம் ஒன்றும் இல்லை யென்றே அறைதல்வேண்டும். கூரிய ஆராய்ச்சி முன்னிலையில் ஸ்திரவிடம் என்பதன் அடிப்படை ஸ்திரமற்றதாகவே முடிகின்றது. “இது இங்ஙனம் முடிய திராவிடம் என்னும் மொழியிலிருந்து தமிழ் என்னும் பெயர் உதித்ததென்று ஒரு சாரார் கூறுகின்றார். இவர் தக்க நியாயம் கூறித் தம் வாதத்தை நிலைபெறச் செய்கின்றார்களில்லை. அதுபற்றி வட மொழியில் அன்னார் வைத்திருக்கும் அபிமானமே இதற்குக் காரணமா யிருக்கலாமென்று யாம் மயங்கவேண்டியதாயும் முடிகின்றது. திராவிடம் என்னும் மொழிக்குத்தக்க பொருள் இதுவரையிலும் வெளிவராமையாலும், தமிழர்களுக்கும் அவர்களுடைய பாஷைக்கும் ஆரியரோடு ஊடாடும் முன்னமே பெயர்கள் இருந்திருக்கவேண்டு மென்பதினாலும், திராவிடம் என்னும் போலிச்சமஸ்கிருதச் சொல்லிலிருந்து தமிழ் என்னும் மொழியைப் பெற்றோமெனல் உண்மையற்றதே-இங்கிலீஷ்காரருக்கு ‘ஆங்கிலேயர் என்ற பெயரைத் தமிழர் சூட்டி இங்கிலீஷ் என்ற வார்த்தை ‘ஆங்கிலேயம்’ என்ற போலித் தமிழ் வழக்கிலிருந்து வந்திருக்கவேண்டுமென்று பின்சாதிக்கின் அச்சாதனை உண்மையோடு எத்துணை முரண்படுகின்றதோ அத்துணை தமிழ் திராவிடமென்பதிலிருந்து வந்ததென்னும் வாதம் உண்மையோடு முரண்படுகின்றது. “இனித் தமிழ் என்னும் மொழியே திராவிடம் என்னும் வடமொழி ஆடம்பரத்துடன் நிற்கின்றதென வேறோர் சாரார் உரைக்கின்றார். இவர்கள் உரையே உண்மைக்கும் நியாயத்திற்கும் பொருத்தமுடையதாகவும் இருக்கின்றது. காரணங்களாவன: (1) ழ என்னும் எழுத்து தமிழ் மொழிக்கே உரியதாகையால் அவ் வெழுத்துத் தோன்றி நிற்கும் மொழியும் தமிழ் மொழியாகவே இருத்தல் வேண்டும். (2) தமிழ் மொழியிலே தமிழ் என்னும் பதம் இனிமை என்னும் பொருள் பயந்து நிற்கின்றது. பிறமொழிகளில் இப்பதத்திற்குப் பொரு ளில்லை. (3) தமிழர் மிக்க புராதன நாகரிகம் பெற்றிருந்தவராதலினால் அவருக்கும் அவரது பாஷைக்கும் ஓர் பெயர் உண்டாயிருக்க வேண்டுமென்பதே ஐரோப்பிய வித்வான்களில் பெரும்பாலாருடைய துணிபு. கன்னடம் தெலுங்கு மலையாளம், துளு முதலிய பாஷைகளும் தமிழ்ப்பாஷையின் வம்சத்தைச் சேர்ந்தவைகளாயிருக்க அவைகளுக்குத் தமிழ் என்னும் பெயர் வராது தமிழுக்கு மட்டுமே அப்பெயர் வரக்காரணம் யாதென ஒரு சங்கை எழலாம். கூறிய பாஷைகள் எவற்றிற்கும் முந்திய தமிழிலிருந்தே அப்பாஷைகள் உதித்தனவென்றும் ஐரோப்பிய சாஸ்திரிகள் அபிப்பிராயப்படுகின்றனர். இதனாற்றான் புரோபசர் எம்.ஏ. சுந்தரம் பிள்ளை அவர்களும் தாமியற்றிய “மனோன்மணியம்” என்னும் நாடகத் தின் பாயிரத்தில் தமிழ்மாது வணக்கம் கூறும் பொழுது, ‘கன்னடமும் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும் உன்னுதரத்தே யுதித்து ஒன்று பலவாயிடினும்’ என்று கூறியிருக்கின்றார். மேற்காட்டிய நியாயங்களினாலும், பிறமொழி களின் சிதைவு தமிழ் என்பதற்கு ஒரு நியாயமும் இன்மையாலும் தமிழ் என்னும் பெயர் சுத்த தமிழ்மொழியென்றேகொள்ள வேண்டியதாகின்றது. “ 1திராவிட என்னும் பெயர் தென்னிந்தியாவில் ஒரு குறிக்கப்பட்ட நிலப்பரப்புக்குரிய பெயரென வடமொழிப் பண்டிதர்கள் கூறுகின்றனர். சத்த கல்ப துரும என்னும் நூலில் மகாபாரதத்தை ஆதாரமாகக்கொண்டு இவ்வாறு கூறப்பட்டுள்ளது. திராவிட என்னும் நாடு கிழக்குக் கடற்கரை ஓரமாகத் திருப்பதி முதல் கன்னியாகுமரி வரையும் இருந்தது. இப்பெயர் தென்னாடு முழுவதையும் குறிக்கப் பொதுவாக வழங்கப்பட்டது.”-தமிழ் ஆராய்ச்சி. “ 2ஆரிய மொழியை வழங்கிய மக்கள் தமிழை உச்சரிக்க முயன்ற முறையினால் திராவிடம் என்னும் சொல் உண்டாயிற்று. தமிழ் என்பது தம்மையும் தமது மொழியையும் குறிப்பதற்குத் திருவேங்கடத்துக்கும் (கடல் வாய்ப்பட்ட) பஃறுளி ஆற்றுக்கு மிடையே வாழ்ந்த மக்கள் இட்டு வழங்கிய பெயராகும். ‘ழ’கரம் ஆரிய மொழிக்குப் புதியதும் தமிழ் மொழிக் குச் சிறப்பாக உடையதுமாகும். வடநாட்டவர் ‘ழ’கரத்தை ‘ள’கரமாக அல்லது ‘ட’கரமாக உச்சரித்தனர்.....இவ்வாறு தமிழ் திராவிடமாக மாறுபட்ட தெனக் காட்டப்பட்டுள்ளது. சமக்கிருதப் பிரியர் தமிழ் சமக்கிருதத்தினின்று பிரிந்ததென்றும் திராவிட என்னும் சமக்கிருதச்சொல் தமிழ் எனத் திரிந்த தென்றும் கூறுகின்றனர். இதனால் புதிய கற்காலம் முதல் வாழ்ந்து வருகின்ற தமிழர் சமக்கிருதமொழியை வழங்கும் மக்கள் வருவதன் முன் தம்மைக் குறிப்பதற்குப் பெயரில்லாது இருந்தார்கள் என்று ஏற்படுகின்றது. இக் கொள்கையும் சமக்கிருதச் சொல் தமிழ் என மாறவில்லை என்பதை வலி யுறுத்துகின்றது. தமிழர் ‘ட’கரத்தை உச்சரிக்க முடியும். வடமொழி ‘ட’கரம் தமிழில் சென்றிருந்தால் அது ‘ட’கரமா யிருக்குமே யன்றி ‘ழ’கரமாக மாற மாட்டாது. இதனால் தமிழ் என்பது திராவிடம் என்னும் சொல்லுக்கு முந்தியதெனத் தெரிகின்றது. 1திராவிட மொழிகள் சமக்கிருதத்தினின்று தோன்றினவா? திராவிடமொழிச் சொற்கள் பலவற்றில் சமக்கிருத அடிப்படை காணப்படுகின்றது. இதனை ஆதாரமாகக் கொண்டு பழம்போக்கான பண்டிதர்கள் சமக்கிருதத்தை விலக்கித் தனிமையான உற்பத்தியைத் தமிழுக்குக் கூறமுடியாதென்றும், தென்னிந்திய மொழிகள் எல்லாவற்றுக் கும் சமக்கிருதமே தாய்மொழியென்றும் ஆரவாரித்துக் கூறுகின்றனர். இக் கருத்தே கல்லாதவர்களிடையும் ஆராய்ச்சி அறிவில்லாத பழம்போக்கான பண்டிதர்களிடையும் நிலவுகின்றது. திராவிடமொழிகளுக்கு இலக்கண மெழுதியவர்கள் தாம் கையாளும் மொழிகள் சமக்கிருத மல்லாதன எனத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்கள். ஒவ்வொரு திராவிட மொழியின் இலக் கண ஆசிரியரும் சமக்கிருதத்திலிருந்து வேறுபடுத்தியறியப்படும் திராவிட மொழியைப்பற்றிக்காட்டியுள்ளார்கள். நன்னூல் செய்த பவணந்தியார் சமக்கிருதத்தினின்றும் தமிழில் வந்து வழங்கும் சொற்களை ஆளுவதற்கு விதி கூறியுள்ளார். ஆந்திரபாஷா பூஷணம் என்னும் தெலுங்கு இலக்கணம் செய்த கேதானர் தூய தெலுங்குச் சொற்களை சமக்கிருதச் சொற்களிலிருந்து வேறுபடுத்திக் காட்டியுள்ளார். சத்தமாணிதர்ப்பணம் என்னும் கன்னட இலக்கணம் செய்த கேசிராசா தற்பவச் சொற்களைப் பற்றி ஓர் அதிகாரம் எழுதியுள்ளார். கேரள பாணினீயம் என்னும் மலையாள இலக்கணத்தைச் சமீப காலத்தில் எழுதியவரும் இவ்வகை வேறுபாட்டைக் காட்டியுள்ளார். இவ்விலக்கணம் 1896இல் அச்சிடப்பட்டது. இவ்வாறு இலக்கணஞ் செய்தவர்களுள் மலையாள இலக்கணஞ் செய்தவர்கள், டாக்டர் குண்டேட், டாக்டர் கால்ட்வேல் போன்றவர்கள் திராவிட மொழிகள் ஒன்றோடு ஒன்று இனமுடையன எனக்காட்டிய ஆராய்ச்சிகளை அறிந்திருந்தார்கள். தமிழ் இலக்கண ஆசிரியர்கள் மலையாளச் சொற்களையும் தெலுங்குச் சொற்களை யும் திசைச் சொற்கள் எனக்கொண்டனர். அவர்கள் சொற்களைத் தமிழ்ச் சொல், வடசொல், திசைச்சொல் என மூன்றாகப் பிரித்தார்கள். இப் பிரிப்பின்படி அராபி, பாரசீகம், தெலுங்கு, மலையாளம், துளு, கன்னடம் முதலிய சொற் களும் திசைச் சொல்லில் அடங்கும். பழைய காலத்தில் சமக்கிருதம் மிக மரியாதையோடு நோக்கப் பட்டது. அதனால் அது தேவமொழி என்ற நம்பிக்கையும் உண்டாயிற்று. ஆந்திர பாஷா பூசணம் என்னும் தெலுங்கு இலக்கணத்தின் ஆசிரியராகிய கேதானா (கி. பி. 13ஆம் நூற்றாண்டு) என்பார் எல்லா மொழிகளுக்கும் தாய் சமக்கிருதம் எனக்கூறியுள்ளார் 2இதற்குச் சிறிது முற்காலத்தது எனக் கருதப்படும் நன்னயப்பட்டீயம் என்னும் பழைய கன்னட இலக்கணம் சமக்கிருதத்தில் எழுதப்பட்டுள்ளது. கன்னட பாஷா பூஷணம் என்னும் பழைய கன்னட இலக்கணம் சமக்கிருதத்தில் எழுதப்பட்டுள்ளது. கன்னட பாஷா பூஷணம் என்னும் பழைய கன்னட இலக்கணம் சமக்கிருதத்தில் எழுதப்பட்டுள்ளது. இராச இராச வர்மாவாற் செய்யப்பட்ட மலையாள இலக்கணத்துக்குக் கேரள பhணினீயம் என்று பெயரிடப்பட்டது. தமிழில் இலக்கணக் கொத்து என்னும் இலக்கணம் எழுதிய சாமிநாத தேசிகர் “ஒன்றேயாயினும் தனித்தமிழ் உண்டோ....1 ஐந்தெழுத்தா லொருபாடை என்று அறையவும் காணுவரே” என்று கூறினர். இவர் காலத்தவரான சுப்பிரமணிய தேசிகர் பிரயோக விவேகம் என்னும் நூலில் தமிழ் என்னும் பெயரைத் திராவிடத்தினின்றும் பிறந்ததெனக் கூறினார். இவ் வாசிரியர்கள் பதினேழாம் நூற்றாண்டில் விளங்கியவர்களாவர். முற்கால இலக்கண ஆசிரியர்களுக்கு இக்கருத்துக்கள் இல்லை. அவர்கள் சமக்கிருதத்துக்கு மரியாதை கொடுத்தார்கள்; ஆனால் அவர்கள் தமது மொழிக்கு மரியாதை கொடுக்கத் தவறவில்லை. வடமொழியி லெழுதப்பட்ட தெலுங்கு கன்னட இலக்கணங்கள் போன்று தமிழ் இலக்கண மொன்றேனும் வடமொழியில் எழுதப்படவில்லை. இன்றும் தமிழ் வடமொழிக்குக் குறைந்த மொழியன்று என்றும் தமிழ் வடமொழிக் குக் குறைந்த மொழியன்று என்றும் சிவபெருமானே வடமொழியைப் பாணி னிக்கும் தமிழைக் குறு முனிக்கும் அருளிச் செய்தார் என்றும் கொள்ளும் மக்கள் காணப்படுகின்றனர். இக்கருத்து பரஞ்சோதி முனிவருடைய திருவிளையாடற் புராணத்திலும் சிவஞானயோகிகளின் காஞ்சிபுராணத்தி லும் காணப்படுகின்றது. சமக்கிருதத்தில் அவர்கள் வைத்த மதிப்பினாலோ, சமக்கிருதத்துக் கும் திராவிட மொழிக்குமுள்ள உறவைக் கருதிய பொய்யான மரியாதையி னாலோ திராவிட மொழிகளின் இலக்கண ஆசிரியர்கள் சமக்கிருதச் சொற்களைத் திராவிடச் சொற்களினின்றும் வேறுபடுத்தி அவை திராவிட மொழிகளில் வழங்க நேர்ந்தால் அடையவேண்டிய மாறுதல்களுக்கு விதி களும் வகுத்துள்ளார்கள். தமிழ் இலக்கணங்களுட் பழைய தொல்காப்பியம் தமிழ் சமக்கிருத உற்பத்திக்குரிய மொழியென யாண்டும் கூறவில்லை. அவர் வடவெழுத்து உச்சரிப்பில்லாத சொற்கள் தமிழில் வழங்குவதைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். கன்னட இலக்கணத்தில் கன்னடச் சொற்களும், வடமொழிச் சொற்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. 2மலையாளம் எப்படித் தோன்றிற்று? மலையாளம் தமிழ்ச் சிதைவினால் (Dialetic decay) உண்டான பாஷை என்று சிலர் ஒப்பார். மலையாளமும் தமிழும் வேறொரு பாஷையினின்று உற்பத்தியாயினவென்றும் அப்பாஷை இப்போது இல்லாதொழிந்துபோய் விட்டதென்றும் டாக்டர் குண்டேர்ட்டு (Dr. Cundhert) சொல்லுவதுபோல் சிலர் சொல்லுகின்றனர்; வேறு சிலர் மலையாள வியாகரண கர்த்தராகிய அப்பு நெடுங்காடி முதலானவரைப் பின் பற்றி தமிழும் சமஸ்கிருதமும் சேர மலையாளமுண்டாயிற்றென்று கூறுகின்றனர்; வேறுசிலர் தமிழைக்காட்டிலும் மலையாளமே புராதனபாஷை என்றும், பிற்கூறிய பாஷையிலிருந்தே தமிழ் உதித்ததென்றும், யாவரும் அதிசயிக்கும் வண்ணம் நூதன அபிப் பிராயம் ஒன்றை வெளியிட்டனர். இவரது கொள்கைகளனைத்தும் தவறெனச் சிறிது சிந்தித்துப் பார்த்தால் நேயர் யாவருக்கும் விளங்கும். டாக்டர் குண்டர்ட்டு குறிப்பிடும் “மூல பாஷை” ஒன்று இருந்ததென நாம் எங்ஙனம் அறிவது? அதற்குரிய சாட்சிகள் ஒன்றும் எடுத்துக்காட்டா மல் “மனத்தினால் மாளிகை கட்டுவது” போல தற்காலத்தில் வழங்கிவராத ஓர் மூல பாஷையைக் குறித்து டாக்டர் குண்டர்டு மனோராச்சியம் செய்யத் தலைப்பட்டனர். நெடுங்காடி முதலியவருடைய கொள்கை பாஷாசாத்தி ரிகள் முன்னிலையில் சின்னாபின்னப்பட்டுச் சிதறிவிடும் என்பதற்கு எள்ளளவேனும் சம்சயமில்லை. உலகத்தில் நடைபெற்று நிற்கும் எல்லாப் பாஷைகளும் மனிதருடைய வீடு முதலிய செயற்கைப் பொருள்களைப் போல் சிற்சில சாமான்களைச் சேர்த்துத் திடீரெனக் கொஞ்சத்தினத்திற்குள் உண்டுபண்ணப்பட்டவைகளல்ல; அவை வித்தில் முளையும், முளையில் மரமும் காலக்கிரமத்தில் தோன்றுவனபோல் இயற்கைப் பிரமாணப்படி நாளடைவில் உதித்துப் பெருகிவளர்வனவாம். பாஷா சாத்திரத்தின் பல உண்மைகளிலும் முதன்மை பூண்ட இவ்வுண்மை அறியாதார் மட்டுமே சமஸ்கிருதத்தையும் சேர்த்து மலையாளமாகிய ஒரு புதுப்பாஷை ஆதியில் இயற்றப்பட்டதெனக் கூறுவர். சமஸ்கிருதமாகிற வடமொழியின் எழுத் துக்கள் மலையாளத்தில் ஏராளமாக வரலாம்; அம் மொழியின் சொற்களும் சொற்களாலாக்கப்படும் வசனங்களும் மலையாளத்தில் ஒரு வேற்றுமை யின்றித் தோன்றலாம். அம்மொழியின் வியாகரண ரீதியை மலையாளம் சில இடங்களில் அனுசரித்துமிருக்கலாம்; அம்மொழியின் சுலோகங்கள் எங்ஙனம் எழுதப்படுகின்றனவோ அங்ஙனமே மலையாள சுலோகங்களும் எழுதப்படலாம். இவ்வித மெல்லாமிருந்தாலும் மலையாளத்திற்கு சமஸ் கிருதம் தாய்ப்பாஷை ஆகவே ஆகாது; ஏனெனில் இவ்விரண்டு பாஷை களும் இரண்டு மனித வர்க்கத்தைச் சேர்ந்தவையா யிருக்கின்றன. தற்காலத் தைய இங்கிலீஷ் மொழிக்கு ஆங்கிலோ சாக்சன் தான் மூல பாஷை எனக் கூறுவரே தவிர இலத்தீன் முதலியன தாய்ப்பாஷை என எவரேனுங் கூறுவரோ? அதுபோலவே மலையாளமாகிய திராவிட பாஷைக்கு சமஸ்கிருதம் என்னும் ஆரிய பாஷை தாய் எனக் கூறுதல் தவறெனச் சொல்லவும் வேண்டுமோ? இத்தவறுக்குச் சமானமாகத் “தமிழ்” என்னும் சொல் திராவிடம் என்னும் மொழியின் மரூஉ என்று சில சமஸ்கிருத பாண்டித்திய முடைய தமிழ் வித்வான்கள் கூறும் பெருந்தவறு ஒன்றே உள்ளது. மனுஷிய வர்க்க சாத்திர (Ethnology) நிபுணர்கள் ஆரியர் திராவிடர் என்ற இரு பிரிவி னருக்கும் தேகத்தின் அளவு, உருவம், சக்தி, என்பவையிலும், மனப்போக்கு களிலும், புத்திக் கூர்மையிலும், ஆசாரங்களிலும், தொழில்களிலும், மதக் கோட்பாடுகளிலும் வேற்றுமை யுண்டென்று கூறுவதுந் தவிர, பாஷையிலும் வித்தியாசம் உண்டென்றறைகின்றனர். ஆகவே சமஸ்கிருதத்தை மலை யாளத்தின் மூல பாஷை எனக் கூறுதல் ஒரு விதத்திலும் பொருந்தாது. தமிழுக்கு மூல பாஷை மலையாளம் என்ற கோட்பாடுடையவர் சிலரே. இவர் சொல்லுவதை மேற்கூறிய பாஷைகளின் நூற்களை சரித்திர வாயி லாக ஆராய்ச்சி செய்வோர் ஒப்பமாட்டார்கள். ஏனெனில் அந்தக் கோட் பாட்டுக்கும் உண்மைக்கும் இருக்கும் தூரம் சிறிதன்று. இனி டாக்டர் கால்டுவேல், புரோபஸர், எம்.ஏ. சுந்தரம் பிள்ளை முதலிய தமிழ் வித்துவான்களைப் பின்பற்றி தமிழே மலையாளத்திற்குத் தாய்ப் பாஷையென நிலை நிறுத்துங் காரணங்களனைத்தையும் ஒருவாறு ஒழுங்குபடுத்திக் கூறுவோம். காலஞ் சென்ற எம். ஏ. சுந்தரம் பிள்ளை அவர்கள் இயற்றிய மனோன் மணியம் என்னும் சிறந்த நாடகத்தின் பாயிரத்தில் தமிழ் மாதைத் துதிக்கப் புகுந்து “கன்னடமும் களிதெலுங்கும் கவின்மலையாளமுந் துளுவும் உன்னுதரத்தே யுதித்து ஒன்று பலவாயிடினும்” எனக் கூறினது ஆங்கில சாத்திர விற்பன்னர்களின் முடிவை அடிப்படை யாகக் கொண்டுள்ளது. தமிழ் மலையாளம் என வழங்கும் இரண்டு பாஷைகளும் தமக்குள் ஏதாவது சம்பந்தத்தைப் பொருந்தியிருக்க வேண்டும் அல்லது ஒருவித சம்பந்தமும் பொருந்தாதிருக்க வேண்டும். இவ்விரண்டு மொழிகளுக்கும் சம்பந்தம் ஒன்றுமில்லையென ஒருவரும் சொல்லத் துணியார் சம்பந்தம் உண்டெனில் எவ்வித சம்பந்தம்? காரிய காரண சம்பந்தம் என்று கூற நியாயங்கள் பல இருக்கின்றன. ஆயின் காரணமாகிய பாஷை எது? காரிய பாஷை எது? முற்பட்டு நின்ற மற்ற பாஷையை உண்டு பண்ணினது தமிழா? மலையாளமா? தமிழ் சிதைந்து தான் மலையாளம் உண்டாயினதா? அல்லது மலையாளம் திரிந்து தமிழ் உண்டாயிற்றா? இதுதான் நாம் முதலாவது கவனிக்கவேண்டிய விஷயம். ஐரோப்பிய பாஷைகளுக்கு அமைந்திருக்கும் பாஷா சரித்திரங்கள் போல் நம் மொழிக்கும் சரித்திரம் அமைந்திருக்குமாயின் மேற்கூறிய வினாக்களுக்கு எளிதில் விடை பெறலாம். அங்ஙனம் சரித்திரம் இல்லா தொழிந்த பெருங்குறையை நீக்குவதற்கு சில கற்றுணர்ந்தோர் தம் மொழி நூற்களை நன்றாக ஆராய்ச்சி செய்து ‘புராணம் விளம்பாது’ சரித்திர வுண்மை மாத்திரம் தொடுத்துக் காட்டமுயன்றனர். அவரது அபிப்பிராயமே சரித்திரம் இல்லாத இடத்து நம்மால் கொள்ளத் தக்கது. அவர் எவ்வாறு பேசுகின்றனர் என்று பார்ப்போம். தமிழின்ஆதி நூலென அறியப் பெற்ற அகத்தியம் எக்காலத்தெழுதப் பட்டதெனத் திட்டமாகச் சொல்ல இடமில்லை யாயினும் அகத்தியத்தின் வழி நூலாகிய தொல்காப்பியமும், சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை, குண்டலகேசி, வளையாபதி யாகிய பஞ்சகாவியமும்; எட்டுத் தொகை பத்துப்பாட்டு, பதிணெண் கீழ்க்கணக்கு முதலிய நூற்களிற் சிலவும் இன்றைக்கு 1500 முதல் 2000 வருஷங்களுக்கு முற்பட்டு எழுதப்பட்டிருக்க வேண்டுமென்று சில பண்டிதர்கள் கூறுகிறார்கள். சமய குரவர்களாகிய நாயன்மார்களும், ஆழ்வார்களும் இயற்றிய தேவாரம், நாலாயிரப்பிரபந்தம் முதலியன சுமார் 1000 வருடங்களுக்கு முன் உண்டு பண்ணப்பட்டனவென் றும், கம்பராமாயணம், கலிங்கத்துப்பரணி முதலிய இசையால் திசைபோய நூல்கள் 800 முதல் 900 வருஷங்களுக்கு முன் எழுதப்பட்டனவென்றும், நைஷதம் முதலிய நூல்களும் தமிழ்க்கவியின் உண்மையையும் சிறப்பையும் முற்றும் துடைத்த ஆயிரக்கணக்கான ஸ்தல புராணங்களும் 400 முதல் 500 வருஷங்களுக்கு முன் எழுதப்பட்டன வென்றும் தமிழ்ப் புலமை சான்றோர் கூறுகின்றனர். சென்ற 400 வருட காலமாக தமிழ் வளராது பெருந்தூக்கம் தூங்குகின்றதென்பதை இக்காலத்தில் அம்மொழியிற் சிறந்த நூல்களொன்றும் எழுதப்படாமையே விளக்கிக் காட்டும். அங்ஙனமன்றி மலையாளமோ தமிழ் அயர்ந்திருக்கும் சென்ற 400 ஆண்டுகளிற்றான் வளர்ச்சியுற்றது. மலையாள பாஷையின் சரித்திரத்தைக் கூறுபடுத்தி முதற்பாகம் ‘கருந்தமிழ்’ என்றும், அது கலியப்தம் ஆரம்பமுதல் 3000 வருடம் நிகழ்ந்ததென்றும்; இரண்டாம் பாகம் ‘பழைய மலையாளம்’ என்றும் அது 1000 வருடம் நிகழ்ந்ததென்றும்; மூன்றாம் பாகம்; மத்திய கால மலையாளம் என்றும் அது கொல்லம் 600 ஆண்டுவரை நிலை நின்றதென் றும், அதன் பின் நான்காம் பாகமாகிய தற்கால மலையாளம்’ கொல்லம் ஆண்டிற்கு மேல் 500 வருடங்களாக நிலைபெற்று வருகின்றதென்றும் கனம் நாகம் அய்யர் இயற்றிய 1891 வருட திருவாங்கூர் சென்ஸஸ் ரிப்போர்ட் வாலிம் ஒன்று பக்கம் 512இல் எழுதப்பட்டிருக்கின்றன. மேலும் சென்ற 400 வருடங்களில் 176 கிரந்த கர்த்தாக்களால் 604 நூற்கள் மலையாளத்தில் இயற்றப்பட்டிருக்கின்றன வென்றும் அங்கு குறிக்கப்பட்டிருக்கின்றது. இதனால் நாம் அறிவதென்னவெனில், மலையாளம் தமிழுக்குப் பிற்பட்ட தென்பதே. 2000 வருடங்களுக்கு முன்னமே உதித்து வளர்ந்து, கீர்த்தி படைத்து சென்ற 400 வருடங்களில் அலுத்துத் தூங்கும் தமிழ் மாதாவாகும். முதியவளுக்கெதிரில் அந்நானூறு வருடங்களிலேயே உதித்து நடைபெற்று உலாவும் மலையாளத்தைச் சிறுமி எனவோ? அல்லது பசுங் குழவி என்னவோ? கர்ண பரம்பரையான கதையை வைத்துக் கணிக்கில் அம் மலை யாளத்தின் முதற்படி கருந்தமிழ் என்று ஒப்பவேண்டுமே. செந்தமிழ் சிதைந் துண்டான கருந்தமிழே மலையாளத்திற்கு “தாயுமானது தந்தையுமானது” இதனை நிலைநிறுத்துவதற்குச் சான்றுண்டோவெனில் கூறுவோம். 1. தொன்று தொட்டு வழங்கும் பதினெண் பாஷை! என்னும் பாகு பாட்டினுள் மலையாளம் ஏன் வரவில்லையோ? துளுவம், சிங்களம், முதலியவற்றைக் கூறியும் மலையாளத்தைக் கூறாதும் விடுத்ததேன்? சமஸ்கிருதம் ஏன் பதினெண் பாஷையுள் சேர்க்கப்பட வில்லையெனின், அது பிற சாதிப் பாஷைகளைப் போல் ஓரிடத்தில் வழங்கிவராமையினா லும், அவை போலாது உலகவழக்கழிந்தொழிந்து சிதைந்தவதனாலுமே யென்று சந்தேக மறச் சாற்றலாம். மலையாளம் வழக்கில் இயலும் பாஷை யாகவிருந்தும் ஏன் குறிக்கப்பட வில்லையெனின், அக்காலத்தில் மலை யாளம் என்ற ஓர் பாஷை இல்லாதிருந்த தக்க காரணத்தினாற்றான். 2. தமிழ் நாட்டின் பூர்வ எல்லையை நோக்கு மிடத்து, தொல்காப் பியம் சிறப்புப்பாயிரத்தில், “வட வேங்கடம் தென்குமரி யாயிடைத் தமிழ் கூறு நல்லுலகத்து” என்று கூறப்பட்டிருக்கிறது “குணகடல்குமரி குடகம் வேங்கடம் எனு நான் கெல்லையினிருந்தமிழ்க் கடல்” என்றார் பிறரும். வடவெல்லை திருவேங் கடமும் தெற்கெல்லை குமரியும் கீழ்மேல் எல்லைகள் கடலுமெனக் கூறி யிருத்தலினாலும் அவ்வெல்லைக்குள் திருவிதாங்கொடு என்னும் தேசம் அமைந்து கிடத்தலினாலும் இந்நாடு, கால அளவையை எத்துணை நீட்டி னும் 1500 வருடங்களுக்கு முன் தமிழ் நாடாக இருந்திருக்க வேண்டுமெனப் பெற்றாம். 3. கொடுந்தமிழ் நாடு பன்னிரண்டினையும் இலக்கண நூலார் குறிக்கும் பொழுது குட்டநாடு, குடநாடு, மலாடு (மலைநாடு) முதலியன யாவும் தமிழ் நாடெனவே பேசுகின்றார். ஆலப்புழைக்குச் சமீபமாயிருக்கும் குட்டநாட்டில் தாயைத் தள்ளை என்றும் தந்தையை அச்சன் என்றும் கூறுவாராயினும் தமிழ்நாடு என்னும் பெயருக்கு அந்நாடுகளின் உரிமை கெட்டுப் போக வில்லை. தள்ளை, அச்சன் முதலிய பதங்கள் செந்தமிழ் நிலத்தில் வந்து வழங்காமையினால் அவற்றைக் கொடுந்தமிழ் நிலத்திலிருந்து வரும் ‘திசைச் சொல்’ என்று தமிழ் இலக்கண நூலார் தழுவுகின்றார். அவை கொடுந் தமிழாயினுந் தமிழே. கொடுந்தமிழ் எனினும் மலையாளத்திற்கு ஆதியாக நின்ற ‘கருந்தமிழ்’ எனினும் ஒக்கும். 4. கொடு மலையாளம் என்று நம்மவரால் எண்ணப்படும் இடங்களி லிருந்தே அக்காலத்தில் சிலர் தமிழில் சிறந்த நூற்களியற்றி புகழ்படைத் திருக்கின்றனர். கொடுங்கல்லூர் என்ற கொடுங்கோளூரில் வசித்த இளங்கோ வடிகள் என்னும் சேர அரசனால் தமிழின் மணியென விளங்கும் பஞ்ச காவியத்துள் ஒன்றாகிய சிலப்பதிகாரம் செய்யப்பட்டிருக்கிறது. இதுபோல வேறு நூற்களும் உள. 5. தமிழிலும் மலையாளத்திலும் வழங்கிவரும் அநேக எழுத்துகள் ‘வட்டெழுத்து’ என்று சொல்லப்படும் ஒருவித பூர்வ எழுத்திலிருந்து உண்டானவை. மலையாளத்தில் ‘வட்டெழுத்து’ கோலெழுத்தாகிப் பின் சமஸ்கிருதத்தோடு ஊடாடிச் சிறுபாகம் கிரந்தாக்ஷரங்களின் பூர்வ வடிவமே பொருந்தி நிற்கின்றன. தமிழிலே பெரும்பான்மை எழுத்துக்களும் வட்டெழுத்தின் வடிவத்துடன் இருக்கின்றன. சிலவற்றில் வடிவ மாறுபாடும் புகுந்திருக்கின்றது. இவ்விஷயம் டாக்டர் பார்னல் என்னும் வித்வசிகாமணி இயற்றியிருக்கும் தென்னிந்தியாவின் எழுத்து விவரணம் (South Indian Palaeography), என்ற நூலிற் கொடுத்திருக்கும் வட்டெழுத்துப் படத்தை நோக்கும் நண்பர்களுக்கு நன்கு புலப்படும். தமிழ் அக்ஷரங்களாகிய உ, ஒ, க, வ, ண, ன, ர, முதலியவைகளுக்கும் க, உ, ங, ச, முதலிய இலக்கங்களுக்கும் வித்தியாசம் அதிகம் இல்லையே. இதனால் நாம் அறிந்து கொள்வது யாது? 6. மலையாள வீடுகளில் வழங்கிவரும் சாதாரணப் பொருள்களுக்கு மலையாளத்தில் சொல்லும் பெயர்களும் தமிழே. மலையாளத்தோடு கலந்திருக்கும் வடமொழியை நீக்குவோமாகில் மீதியாக நிற்கும் பாஷை தமிழே. அம்மை, அப்பன், ஆண், பெண், மக்கள், வீடு, சோறு, காற்று, மழை, கார், எலி, நாய், கிளி, வாழை, தெங்கு, மா முதலிய தமிழ்ச் சொற்களும், இவை போன்ற எண்ணிறந்த சொற்களும் மலையாளத்தில் வேற்றுமை யின்றிப் பிரயோகிக்கப்படுகின்றனவே. பறைந்நு, பறஞ்ஞு, என்ற மலையாளி கள் சாதாரணமாகப் பேசும் சொற்களின் ‘பறை’ என்பது காவிய வழக்கே தவிர உலக வழக்கன்று; சொல்லாமல் பறையாமல் என்று மொழித்தொடரில் மட்டிலும் அது நிலவி வருகின்றது. 7. தமிழ் இலக்கணத்தில் வரும் பால் விகுதி அள், அர், ஆர், மார், கள், தி முதலியனவும் வேற்றுமையுருபு ஐ, ஆல், கு முதலியனவும் மலை யாளத்தில் ஒரு பேதமும் இல்லாமல் வருகின்றவே! ‘உடைய’ என்பதை ‘உடே’ என மாற்றினாலும் ‘அவனோடு’ என்பதை அவனோடு என எழுதி அவனோட என உச்சரித்தாலும் இவை தமிழுக்குப் புறம்பாமோ? 8. மலையாள பாஷையிற் கூறப்படும் ‘பழமொழிகள்’ ‘பாட்டுகள்’ முதலியவற்றில் தமிழ் வார்த்தைகளே அதிகம். ‘தோற்றப்பாட்டு’ ‘அழ குடைய பெருமாள் பாட்டு’ என்ற பூர்வீக பாடல்களில் தமிழே அதிகரித் திருக்கக் காணலாம். இவைகளில் மலையாளப் பதங்களும் அப்பதங்களைச் சேர்க்கும் நீதிகளும் மிகவும் குறைந்திருப்பதனால் இவை தமிழ் அதிகம் சிதையாதிருந்த காலத்தில் உண்டு பண்ணப்பட்டனவென்று தெளிவா கின்றது. 9. மலையாள பாஷையில் ஆதியில் எழுதப்பட்ட நூற்களாகிய அய்யிப்பிள்ளை ஆசானுடைய இராமாயணம், கண்ணசப் பணிக்கருடைய இராமாயணம் முதலிய நூல்களில் தமிழ் ஏராளமாக உபயோகப் பட்டிருக் கின்ற தென்றும், தற்காலத்தில் இயலும் மலையாள பாஷையின் நூற்களென அவற்றை அழைத்தல் ஆகாதென்றும் அந்நூற்களை ஆராய்ந்த கன வான்கள் ஒப்புக்கொள்கின்றனர். இதனால் மலையாளம் எவ்விதம் எப்படி உதித்ததென்று உள்ளங்கை நெல்லிக்கனி போல் விசதமாகின்றதே! 10. சிலாலிகிதம் என்னும் பூர்வீக கல்லெழுத்துக்களை நோக்குவோ மானால் தமிழ் நாளடைவில் சிதைந்து மலையாளம் உதித்த விதம் நாம் நன்றாக அறிவோம். திருவனந்தபுரத்திற்குத் தெற்கே இருக்கும் திருவல்லம் என்னுமிடத்திலிருக்கும் சிலா லிகிதம் ஒன்றை நமது நண்பர்களாராயின் தமிழ் இங்கு கெட்ட வழியையும் பார்ப்பவர்கள் ஆவார்கள். ‘இருந்து’ என்பது இருந்நு என்று கெடவும், உடைய என்பது உடே என்று வேறுபடவும் வெகு காலம் வேண்டுமோ? உரையாடுதல் என்னும் செந்தமிழ் ‘உரியாடு தல்’ என்று இக்கொடுந் தமிழ்நாட்டில் திரியாதிருக்குமோ? கல் தச்சர் அவ் விதம் எழுத்துக்களைக் கல்லில் கொத்தித் தமிழ்ப் பாஷையைக் கெடுத்தா ரெனச் சொல்லுதலும் சாலாது. அங்ஙனம் அவர் செய்யினும் அவை வழக்கில் வரா. ஆகையினால் வழக்கத்தில் கெட்டு வந்திருந்த மொழி களையே கற்றச்சர் திருத்தாமல் கொத்தி தமிழ் பாஷையினுடைய சிதைவின் சரிதமாக நாட்டினர் என்று நாம் கொள்ளவேண்டும். மேற்கூறிய காரணங்களினால் தமிழ் மலையாளத்திற்கு மிகவும் முந்திய பாஷையென்றும், தமிழ் கெட்டு மலையாளம் உதித்ததென்றும் தெள்ளிதிற் புலப்படும். தெலுங்கு கன்னடம் முதலிய மொழிகளுக்குத் தாய் தமிழே கன்னடம் தெலுங்கு முதலிய மொழிகளில் கி.பி. 10ஆம் நூற்றாண் டுக்கு முற்பட்ட இலக்கியங்கள் இல்லை. கன்னடம் தெலுங்கு முதலியன தமிழை ஒத்த பழைய மொழிகளாயின் அவைகளில் பழைய இலக்கியங்கள் இருத்தல் வேண்டுமன்றோ? தமிழுக்கு முற்பட்ட வேறு ஒரு பழைய மொழி இருந்ததென்பதற்கு ஆதாரம் எதுவும் இல்லை. 3000 ஆண்டுகளுக்கு முன் தமிழ் மொழி இருந்ததென்பதை எபிரேய மொழியில் சென்று வழங்கிய தமிழ்ச் சொற்களைக் கொண்டு அறிகின்றோம். வளர்ந்த பிள்ளைகள் தமது பெற்றோரின் உறவை மறுப்பது போல்வதே கன்னடர் தெலுங்கர் முதலி யோர் தமது மொழிக்குத் தாய் தமிழ் என்பதை மறுத்துரைப்பதாகும்.1 பி.தி. சீனிவாச ஐயங்காரவர்கள் “கற்கால இந்தியா” “ஆரியருக்கு முற்பட்ட தமிழர் நாகரீகம்” என்னும் நூல்களில் இமயமலை முதல் கன்னி யாகுமரி வரையில் தமிழ்மொழி ஒன்றே வழங்கிற்று என்று எடுத்து விளக்கி யுள்ளார். தமிழ் மொழி ஒன்றே வடமொழிப் பிரளயத்துக்குட்பட்டு கன்னடம் தெலுங்கு துளு மலையாளம் முதலிய மொழிகளாக மாறியுள்ளன. சங்க காலத் தமிழுக்கும் இன்றைய தமிழுக்கும் அதிக வேறுபாடு உண்டு. மணிப் பிரவாள நடை என்னும் ஒரு நடையும் ஒருகால் வழங்குவதாயிற்று. இதில் சரிக்குச் சரி தமிழும் சமக்கிருதமும் கலக்கப்பட்டன. இந்நடையைத் தமிழ்ப் புலவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. தமிழ்ப் புலவர்கள் இதனை எதிர்த்து நிற்காவிடில் இன்று தமிழ் மொழி என ஒன்று இல்லாமல் போயிருக்கும். மேற்குக் கரையிலுள்ள மக்கள் இதனை அனுமதித்தமையினாலேயே தமிழ் கெட்டு மலையாள மொழியாக மாறிற்று எனச் சில ஆராய்ச்சியாளர் கூறி யுள்ளார்கள். இன்று ஐம்பது ஆண்டுகளின் முன் எழுதப்பட்ட தமிழ் நடை யில் அதிக வடசொற்களைக் காணலாம். பத்து ஆண்டுகளின் முன் எழுதப் பட்ட தமிழ் நடையில் பல வடசொற்கள் களையப்பட்டுள்ளன. இன்று வட மொழிக் கலப்பில்லாத தமிழ் நடை எழுதுவதே சிறந்த நடை எனப் போற்றப் படுகின்றது. இன்று பெரும்பாலும் தமிழ் தூய்மையாகவே கற்றோரால் எழுதப்பட்டு வருகின்றது. தமிழ்ச் சொல்லாட்சி அறியாத சில்லறைப் படிப்பாளர் பெரும்பாலும் மனம் போனவாறு எழுதி வருகின்றனர். இன்றும் ஒரு சாரார் தமிழோடு பிறமொழி கலப்பதினால் தமிழ் வளருமெனக் கரைகின்றனர். இவர்கள் தமிழ் அறிவு சாலாதவரேயாவர். இவர்கள் தமது தமிழ் எழுதும் திறமையின்மையைப் போர்த்து மூடுவதற் காக இங்ஙனம் கூறுகின்றார்களேயன்றி உண்மையில் உணர்ந்து கூறுகின்ற வர்களல்லர். தமிழ்க்கல்வி மிகக்குன்றிவிட்டமையால் தமிழுக்கு உரைகல் இல்லாமல் போய்விட்டது. தமிழைப்பற்றிக் கூறவல்லவர்கள் தமிழ் அறிவு நிரம்பியவர்களே. இன்று தமிழ் சம்பந்தமானவைகளுக்குத் தமிழறிவு நிரம்பாத ஆங்கிலமொழிப் பட்டம்பெற்ற சிலரே கூறி வருகின்றனர். அரசினர் பேரகராதி தொகுத்த காலத்திலும் கலைக்களஞ்சியம் தொகுக் கப்படவிருக்கும் காலத்திலும் தமிழ் அறிந்த பேராசிரியர்கள் பெயர்களிற் பல காணப்படவில்லை. கோயில்களில் சமக்கிருதம் தமிழ் சிறந்தமொழி, சமக்கிருதம், ஆங்கிலம் போல் பிறநாடுகளி லிருந்து வயிற்றுப் பிழைப்பின் பொருட்டு வந்த மொழி என நாம் நன்கு அறிகின்றோம். அப்படி இருந்தும் சமக்கிருதத்தை இன்னும் ஆலயங்களில் வைத்துக் கொண்டிருப்பது, தமிழ் அவமதிப்பும், புத்தியற்ற செயலுமாகும். இச்செயலில் தமிழ் மக்களின் கண் திறக்காமல் இருப்பது மிக மிக வருந்தத் தக்கது. அன்னிய மொழியைக் கோயில்களில் நுழைய விட்டு விட்டு நாம் தமிழை வளர்க்கிறோம் எனப் போடப்படும் கூச்சல்களில் பொருளே யில்லை. தமிழை வளர்ப்பதற்குச் சிறந்த முறைகளிலொன்று தமிழைச் சமய மொழியாக்குவதே. இந்தியப் பண்பாட்டுக்குச் சமக்கிருதம் திறவுகோலா? இந்தியப் பண்பாட்டுக்குச் சமக்கிருதம் திறவுகோல் எனச் சிலர் சாற்று கின்றனர். இன்று இந்திய மக்களின் பண்பாட்டை வெளியிடும் கருத்துக்கள் பல ஆங்கில மொழியில் எழுதப்பட்டுள்ளன. இதனால் ஆங்கிலம் இந்தியப் பண்பாட்டின் திறவுகோலாகுமா? சமக்கிருதம் சமயமொழியாகிப் பின் சாதி மொழியாகி ஒரு கூட்டத்தினரிடையே வழங்குவதாயிற்று. பிற்காலங்களில் புத்த சைனமதத்தினரும் இம்மொழியைத் தமது சமய இலக்கிய மொழியாகப் பயன்படுத்தினர். இதனால் தென்னாட்டு வடநாட்டு வித்துவான்கள் அறிந்த மொழி சமக்கிருதமாயிருந்தது. ஆகவே வடநாட்டு தென்நாட்டு வித்துவான் களுக்கு ஒருவர் கருத்தை மற்றவர் அறியும்படி உணர்த்தும் மொழி சமக் கிருதமாகச் சிலகாலம் இருந்து வந்தது. சமக்கிருத நூல்களில் காணப்படும் அரிய கருத்துக்கள் பெரும்பாலும் திராவிட மக்களுடையனவே. ஏனைய ஆரிய வகுப்பினர்களிடையே காணப்படாது இந்திய ஆரிய வகுப்பின ரிடையே காணப்படும் பண்பாடுகள் எல்லாம் திராவிட மக்களால் உதவப் பட்டனவே. வேதகாலத்திலேயே வடநாட்டில் திராவிடரும் ஆரியரும் கலந்து ஒன்றுபட்டனர். ஆரியர் திராவிடப்பெண்களை மணந்தனர். அவர் களுக்குத் தோன்றிய சந்ததியினர் ஆரியராயினர். திராவிட ஆடவர் ஆரியப் பெண்களை மணந்தனர். திராவிடரின் தாயாட்சி வழக்கின்படி அவர்கள் மூலம் பிறந்த பிள்ளைகளும் ஆரியராயினர். இவ்வாறு வடநாட்டில் ஆரிய ரெனப்படுவோர் ஆரிய திராவிட இரத்தக் கலப்பினால் தோன்றியவர்களே. தமிழரின் பண்பாட்டுக்கு வடமொழி இம்மியளவும் துணை செய்த தன்று. அது தமிழரின் பண்பாட்டை இரண்டாயிரம் ஆண்டு முதல் கெடுத்தும் குழப்பியும் வருகின்றது. தமிழருக்குச் சமக்கிருதப் பயிற்சி வேண்டுவது மன்று. சமக்கிருதநூல்கள் பெரும்பாலும் ஆங்கிலமொழியில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. ஆரிய நூல்களைப்பற்றி அறியவிரும்புவோர் மொழி பெயர்ப்பு நூல்களைப் படித்து அறிந்து கொள்ளுதல் கூடும். இன்று பெரும் பட்டதாரிகளாகப் பல்கலைக் கழகங்களில் இடம்பெற்று ஆராய்ச்சி செய்வோரும் மேல்நாட்டு அறிஞரின் மொழி பெயர்ப்பு நூல்களையே ஆதாரமாகக் கொண்டு நூல்கள் எழுதி வருகின்றனர். ஒரு கூட்டத்தினர் அது தமது சாதி மொழி, தமது பரம்பரை மொழி என்று வடமொழியைப் பயில்கின்றார்களேயன்றி அம்மொழியிலுள்ள உயர்ந்த நூல்களைக் கற்று ஆராயச்சி செய்வதற்கோ அறிவைப் பெருக்கிக் கொள்வதற்கோ அதனைப் பயில்கின்றவர்களல்லர். அம் மொழியில் எழுதப்பட்ட நூல்கள் பெரும் பாலும் சமய சம்பந்தமானவையும் இக்காலத்துக்கு ஏற்காதனவுமாகும். திருக்குறள் போன்ற ஒரு நூலை வடமொழியிற் காணமுடியாது. “பத்துப் பாட்டாதி மனம் பற்றினார் பற்றுவரோ எத்துணையும் பொருட்கிசையும் இலக்கணமில் கற்பனையே.” “வள்ளுவர்செய் திருக்குறளை வழுவற நன்குணர்ந்தோர்கள் உள்ளுவரோ மனுவாதி ஒருகுலத் துக்கொருநீதி” (மனோன்மணீயம்) “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதா வதெங்கும் காணோம் பாமரராய் விலங்குகளாய் உலகனைத்தும் இகழ்ச்சி சொலப் பான்மை கெட்டு நாமமது தமிழரெனக் கொண்டிங்கு வாழ்ந்திடுதல் நன்றோ சொல்லீர் தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்” (பாரதியார்)  மறைந்த நாகரிகங்கள் முன்னுரை இவ்வுலகின் பழைய நாகரிகங்களை எல்லாம் ஆராய்ந்து நோக்கின் அவை எல்லாவற்றுக்கும் ஒரே அடிப்படை உண்டு என்பது தெள்ளதில் தோன்றும் அவ்வடிப்படைதான் யாது என அறிதல் ஆராய்ச்சி வல்லார்க் கெல்லாம் பெரு மயக்கம் அளிப்பதாயிற்று. சிந்துவெளிப் புதைபொருள் ஆராய்ச்சிக்குப் பின்னர், பழஞ் சரித்திர ஆராய்ச்சியிற் றலைமைசான்ற டாக்டர் பிராங்போர்ட் போன்ற சிலர் சிந்துவெளி நாகரிகமே பழைய நாக ரிகங்களுக்கு எல்லாம் அடிப்படையாகவுள்ளதெனத் தமது கருத்தினைத் தயக்கமின்றி வெளியிட்டனர். சிந்துவெளி நாகரிகம், ஆராய்ச்சியில் திராவிடருடைய நாகரிகமாகவும், திராவிடருள்ளும் தமிழருடையதாகவும் காணப்படுதல் மிக வியப்பளிப்பதே யாகும். பழைய நாகரிக மக்களின் வரலாறுகளை ஒரு சிறிதளவாவது அறிந்திருப்பினன்றோ அவை தம்மை ஒப்பிட்டு அவைகளுக்குள்ள ஒற்றுமை வேற்றுமைகளை அறிதல் சாலும். இச் சிறிய நூல் அவ்வழியில் ஊக்குதற்கு எழுந்த ஒரு சிறு நூலாகும். ஆகவே, “குண நாடிக் குற்றமு நாடி அவற்றுள் மிகை நாடி மிக்க கொளல்” கற்றறிந்தார் கடன். சென்னை 6.1.1948 ந..சி.கந்தையா மறைந்த நாகரிகங்கள் தோற்றுவாய் ஒரு காலத்தில் மக்கள் விலங்குகளோடு விலங்குகளாக வாழ்ந்து வந்தார்கள். காலத்தில் அவர்கள் சிறிது சிறிதாகத் திருத்தமடைந்து உயர்நிலை அடைந்தார்கள். இன்றைக்கு ஆறாயிரம் அல்லது ஏழாயிரம் ஆண்டுகளின் முன்னரேயே செவ்விய நாகரிகம் அடைந்த மக்கள் அழகிய நகரங்களமைத்து வாழ்ந்தார்கள் என்பதைப் பழம்பொருள் ஆராய்ச்சி வெளியிடுகின்றது. அக்கால நாகரிக மக்கள் வாழ்ந்த நகரங்கள் இன்று மண்மேடுகளாகக் காட்சி அளிக்கின்றன. மக்கள் ஆற்றோரங்களில் தங்கிப் பயிரிடத் தொடங்கியபோதே நாகரிகம் வளர்ச்சியடைந்தது. பண்டு நாகரிகம் பெற்று விளங்கிய நாடுகள் எல்லாம் ஆற்றோரங்களிலேயே இருந்தன. பழைய நாகரிகத்துக்குப் பேர்போன இடங்கள் எல்லம், சுமேரியா, பாபிலோன், எகிப்து, கிரேத்தா1 முதலியவை. இந்நாடுகளின் நாகரிகத்துக்கும் மக்களுக்கும் ஒரு பொது அடிப்படை இருப்பதைப் பழம்பொருள் ஆராய்ச்சி யாளரும், பழஞ் சரித்திர ஆராய்ச்சியாளரும் எடுத்து விளக்கியுள்ளார்கள். இந்திய மக்களின் பழைய நாகரிகத்தை விளக்கும் பழம்பொருள்கள் சிந்துவெளியில் அரப்பா, மொகஞ்சதரோ, சங்குதரோ முதலிய இடங்களில் செய்யப்பட்ட புதை பொருள் ஆராய்ச்சியால் கிடைத்தன. இந் நகரங்களின் காலம் ஏறக்குறைய கி.மு. 3,500 என ஆராய்ச்சியாளர் கண்டுள்ளார்கள். மைசூரில் சிற்றால்ட்ரக் என்னும் இடத்திலும் மொகஞ்சதரோவை ஒத்த புராதன நகரம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இந் நகரத்தின் காலம் கி.மு. 40ஆம் நூற்றாண்டு எனக் கூறப்படுகிறது. 2சுமேரிய மக்களும் இந்திய மக்களும் ஒரே இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பது நீண்ட காலமாக வரலாற்றாசிரியர்கள் ஆராய்ந்து கண்ட முடிவு. அரப்பா, மொகஞ்சதரோப் புதைபொருள் ஆராய்ச்சிகளால் இம் முடிவு மேலும் வலியுறுவதாயிற்று. இதனால் இந்திய நாட்டினின்றே மேற்குத் தேசங்களுக்கு நாகரிகம் சென்றதெனத் துணியப்படுகின்றது. இவ்வாறு மிகப் பழமையும் சீரும் சிறப்பும் பெற்று விளங்கிய நாடுகளின் நாகரிகத்தைக் குறித்து இந் நூல் கூறுகின்றது. எல்லம் பாரசீகத்தின் தென்மேற்கில் பாரசீகக் குடாக்கடல் உள்ளது. தைகிரஸ், யுபிராதஸ் என்னும் இரு ஆறுகள் ஒன்றுசேர்ந்து அக் குடாக் கடலுள் வீழ்கின்றன. இக்குடாவுக்கு மேலே ஆற்றின் கிழக்கில் சூசானா என்னும் பட்டினம் இருக்கின்றது. இது முற்காலத்தில் சூசா என்னும் பெயர் பெற்று விளங்கிற்று. இது எல்லம்1 எனப் பெயரிட்டு யூதர் வழங்கிய நாட்டின் மத்தியில் உள்ளது. எவ்வினத்தைச் சேர்ந்தவர்கள் என அறியப்படாத ஒரு மக்கட் கூட்டத்தினர் அங்கு வாழ்ந் தார்கள்.2 வரலாற்றில் முதல் புகழ் படைத்த நாகரிகத்தை இவர்கள் உண்டு பண்ணினார்கள். பிரான்சியப் பழம்பொருள் ஆராய்ச்சியாளர், அங்கு இருபதினாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட மனித சின்னங்களைக் கண்டு எடுத்தார்கள். கி.மு. 45ஆம் நூற்றாண்டில் அங்கு உயர்ந்த நாகரிகம் பரவியிருந்ததென்பதற்குச் சான்றுகள் உள்ளன. எல்லம் மக்கள் அக்காலத்தில், வேட்டையாடுதல், மீன் பிடித்தல் முதலிய அலைந்து திரியும் வாழ்க்கையினின்றும் உயர்ந்து, நிலையாக ஓரிடத் தில் தங்கி வாழ்ந்தார்கள். அவர்கள் செம்பு ஆயுதங்களைப் பயன்படுத்தினர்; தானியங்கள் விளைவித்தனர். விலங்குகளை வளர்த்தனர்; ஓவிய வடிவான எழுத்துகளைப் பயன்படுத்தினர்; பலவகை அணிகலன்களை அணிந்தனர்; முகம் பார்க்கும் கண்ணாடியைப் பற்றி அறிந்திருந்தனர்; எகிப்து முதல் இந்தியா வரையில் வாணிபம் நடத்தினர். அவர்கள் தீத்தட்டிக் கற்களால் செய்து பயன்படுத்திய புதிய கற்கால ஆயுதங்கள் காணப்படுகின்றன. கல்லைக் குடைந்து செய்த அழகிய சாடிகளும் காணப்படுகின்றன. அவை மீது, சதுரம், முக்கோணம், நாற்கோணம் போன்ற வடிவங்கள், விலங்குகள், செடிகள் முதலியவை எழுதப்பட்டுள்ளன. அம் மக்கள் செய்து பயன் படுத்திய பொருள்களிற் சில உலக மக்களாற் செய்யப்பட்ட மிக அழகிய பொருள்களின் வரிசையில் வைத்து எண்ணத்தக்கன. குயவனுடைய சக்கரத்தையும், வண்டிகளின் சக்கரத்தையும் அவர்கள் அறிந்திருந்தார்கள். எல்லம் மக்கள் அமைதியாக வாழ முடியவில்லை. எல்லம், சுமேரியாவையும் பாபிலோனையும் வெற்றி கொண்டது; பின்பு அந் நாடுகள் முறையே எல்லத்தை வெற்றிகொண்டன. சூசா என்னும் நகர் சுமேரிய, பாபிலோனிய எகிப்திய, அசீரிய, பாரசீக, கிரேக்க, உரோம ஆட்சிகளின் கீழ் ஆறாயிரம் ஆண்டுகள் புகழ் பெற்று விளங்கிற்று. கி.பி. 14ஆம் நூற்றாண்டு வரையில் அது சூசான் என்னும் பெயரோடு நிலைபெற்றது. பல காலங்களில் அது திரண்ட செல்வமுடையதாக ஓங்கிற்று. அசுர் பானிப்பால் (கி.மு. 646) என்னும் அசீரிய அரசன் எல்லத்தைக் கைப்பற்றி அதனைச் சூறையாடி, நிறைந்த தங்கம், வெள்ளி, மணி, விலையேறப்பெற்ற உடைகள், சிம்மாசனம், தேர் முதலியவைகளையும், விலை மதிக்க வொண்ணாத பிற பண்டங்களையும் நினேவாவுக்குக் கொண்டு சென்றார். சுமேரியா பாரசீகக் குடாக்கடலில் யூபிராதஸ் தைகிரஸ் என்னும் இரு ஆறுகளும் ஒன்றுசேர்ந்து வந்து விழுதலைக் காணலாம். அங்கிருந்து மேலே நோக்கிச் சென்றால் ஒன்றாகச் செல்லும் ஆறு குர்னா என்னும் இடத்தில் கிளைவிட்டுப் பிரிகின்றது. தைகிரஸ் ஆற்றுக்குமேல் சிறிது தூரம் முதல் கழிமுகம் வரையில் மேற்கில் உள்ள நாடு சுமேரியா எனப்படும். இந் நாட்டின் பழைய பெயர் யாது என அறியமுடியவில்லை. நூறு ஆண்டுகளின் முன்னரேயே இந் நாட்டைப் பற்றி அறியப்பட்டது. பழைய உரோமரும், கிரேக்கரும் சுமேரியாவைப் பற்றி அறியார். ஏரதோதசு1 அதைப்பற்றிச் சிறிதும் கேள்விப்படவில்லை. பாபிலோனிய வரலாறு எழுதிய பெரோசசு2 என்னும் பாபிலோனியர் சில பழங்கதைகள் மூலம் அதனை அறிந்திருந்தார். பெரோசசுக்கு இரண்டாயிரம் ஆண்டுகளின் பின் சுமேரியா கண்டுபிடிக்கப்பட்டது. ஒப்பேட்1 என்பார் அங்கு வாழ்ந்த மக்களைச் “சுமேரியர்” என்னும் பெயரால் குறிப்பிட்டார். மொகஞ்சதரோ, அரப்பா என்னும் பழைய சிந்துவெளி நகரங்களிற் புதைபொருள் ஆராய்ச்சி செய்யப்படுவதன் முன்பு சுமேரிய நாகரிகமே உலகில் மிகப் பழமையுடையதெனக் கூறப்பட்டுள்ளது. மேற்கு ஆசிய எகிப்திய நாகரிகங்களுக்கு அடிப்படை சுமேரிய நாகரிகம் என அறியப்படுகின்றது. சுமேரியரின் நாகரிகம் கி.மு. 4,500இல் உச்சநிலை அடைந்திருந்தது. சுமேரியர் அந் நாட்டின் ஆதிக் குடிகளல்லர். அவர்கள் பிற நாடுகளினின்றும் வந்து குடியயேறியவர்களாவர். தாம் வரும்பொழுதே பயிர்ச்செய்கை, உலோகங்களில் வேலை செய்தல், எழுத்து எழுதுதல் போன்ற நாகரிகங்களைப் பெற்றிருந்தார்கள் என்று அவர்கள் நம்பினார்கள். சுமேரிய நாகரிகத்தைக் காட்டும் பழம்பொருள்களை ஒத்தவை சிந்துவெளி களில் கிடைத்துள்ளன. ஆகவே, இரு நாகரிகங்களும் ஒரு பொது உற்பத்திக் குரியவை என்று கருதப்படலாயின. பிராங்போர்ட்2 என்னும் ஆசிரியர் சுமேரிய நாகரிகம் மிக முற்பட்டதென்றும், அதற்கு அடுத்த படியிலுள்ளது எகிப்திய நாகரிகமென்றும், சுமேரிய நாகரிகத்துக்கு முற்பட்டது சிந்துவெளி நாகரிகம் என்றும் குறிப்பிட்டுள்ளார். சிந்துவெளிப் பழம்பொருள்கள் கண்டு பிடிக்கப்படுவதற்கு முன்னர் கிட்டிய கிழக்குத் தேசங்களின் வரலாறு எழுதிய டாக்டர் ஹால் சுமேரியர் சிந்து ஆற்றுப் பக்கங்களினின்றும் சென்றவர்கள் ஆவார் என்பதற்குப் பல காரணங்கள் காட்டியுள்ளார். ஹெரஸ் பாதிரியார் சிந்துவெளியினின்றும் சென்றவர்களே மேற்கு ஆசிய மக்களாவர் எனக் கூறியுள்ளார். இக் கருத்தே இன்று வலிவடைந்து வருகின்றது. சுமேரியர் இவர்களின் தோற்றம் இன்று தக்காணத்தில் திராவிட மொழிகளில் ஒன்றை வழங்கும் மக்களின் தோற்றத்தை ஒத்துள்ளது என டாக்டர் ஹால் கூறியிருக்கின்றார். ஆடவரிற் பலர் தாடி வளர்த்தார்கள்; சிலர் முகத்தை முற்றாக மழித்தார்கள்; பலர் மேல் உதட்டு மயிர்களை மழித்தார்கள்; அழகிய கம்பளி ஆடைகளை உடுத்தார்கள்; அவர்கள் அரைக்குமேல் உடலை மூடவில்லை. நாகரிகம் ஏற ஏற அவர்கள் உடை கழுத்துவரையும் சென்றது. ஆண் பெண் வேலையாட்கள் வீட்டில் வேலை செய்யும்போது அரைக்கு மேல் யாதும் அணியவில்லை. மக்கள் தொப்பி இட்டார்கள்; காலுக்கு மிதியடி தரித்தார்கள்; செல்வ மகளிர் மிருதுவான தோலினால் செய்யப்பட்டு அழகிய வேலைப்பாடுகளால் அலங்கரிக்கப்பட்ட செருப்பை அணிந்தார்கள்; மாலை, வளை, கைவிரல் மோதிரம், காதணி முதலிய பலவகை அணிகளை அணிந்தனர். கி.மு. 2,300இல் சுமேரியரின் நாகரிகம் பழமையடைந்துள்ளது. அக் காலத்தில் சுமேரியப் புலவர்களும் அறிஞர்களும் தங்கள் பழைய வரலாறு களை ஒழுங்குபடுத்திவைக்க முயன்றுவந்தனர். உலகப் படைப்பைப்பற்றிய வரலாறு, பழைய அரசன் ஒருவன் செய்த பாவத்துக்காகப் பெரிய வெள்ளப் பெருக்கு நேர்ந்த வரலாறு போன்றவைகளைப்பற்றிப் புலவர்கள் பாடி னார்கள். பெரிய வெள்ளப் பெருக்கைப் பற்றிய வரலாறு பாபிலோனிய, எபிரேயருள் வழங்கிப் பின்பு கிறித்துவ வேதத்தின் பழைய ஏற்பாட்டுக் கதைகளுள் சேர்ந்துள்ளது. குருமாராகிய சுமேரிய வரலாற்றாசிரியர்கள் அவர்களின் பழமையை மிக அதிகப்படுத்திக் கூறினர். உலகப் படைப்பிலிருந்து பெரிய வெள்ளப் பெருக்கு வரை உள்ள 432,000 ஆண்டுகள்வரை அரசர் பலர் ஆட்சி புரிந்தனர் என்று அவர்கள் கூறியுள்ளார்கள். குருமார் தமது நாகரிகத்தின் பழமையைச் சிறிது அதிகப்படுத்திக் கூறியிருக்கலாம். நிப்பூர் நகர் அழிபாடு நிலமட்டத்திலிருந்து அறுபத்தாறு அடிகளின் கீழ் உள்ளது. அதன் கீழ் அறுபத்தாறு அடிகளுக்கு அக்காட்டின் சார்கன் அரசனின் கட்டடங்கள் காணப்படுகின்றன. நிப்பூரின் பழமை கி.மு. 5,262 வரையில்தான். கிஷ் நகரில் கி.மு. 4,500லும், ஊர் நகரில் கி.மு. 3,500லும் பல அரச பரம்பரைகளிலுள்ள அரசர் ஆட்சிபுரிந்தார்கள் இவ்விரு நகரங்களின் ஆட்சிக் காலங்களிலும் செமித்தியர்1, செமித்தியரல்லாதார் என்னும் அரசர்களுக்கிடையில் போட்டி யிருந்துவந்தது. முதலாம் சார்கன், ஹமுரபி முதலியோர் செமித்தியராவர். கோயிற் குருமார் கி.மு. 3,000முதல் களிமண் ஏடுகளில் எழுதிவைத்த குறிப்புகள் ஊரில் காணப்பட்டன. அவை இலகாஷ், உருக் முதலிய நகரங் களை ஆண்ட அரசர்களின் முடிசூட்டு, வெற்றி, மரணம் முதலியவைகளைப் பற்றிக் கூறுகின்றன. அவை குறிப்பிடுகின்ற நிகழ்ச்சிகள் மிக ஏற்றனவாகக் காணப்படுகின்றன. இலகாஷ் நகரை ஆண்ட உருக்ககினா2 சில சீர்த் திருத்தங்களைச் செய்தான். குருமார் செல்வரிடமும் வறியவரிடமும் இருந்து பொருளை உறிஞ்சுவதைத் தடுக்கப் பல சட்டங்கள் செய்யப்பட்டன. தலைமைக் குரு காடுகளில் மரங்களை வெட்டுதல் கூடாது; அங்குக் கிடைக் கும் பழங்களுக்கு வரி தண்டுதலும் கூடாது; பிணங்களைப் புதைப்பதற்கு உள்ள வரி ஐந்தில் ஒன்றாகக் குறைக்கப்படுதல் வேண்டும். கடவுளுக்குக் காணிக்கையாகக் கொடுக்கும் வருவாய், ஆடுமாடு முதலியவைகளைக் குருமார் பங்கிடுதல் ஆகாது எனக் களிமண் ஏட்டில் எழுதப்பட்ட ஒரு பட்டையம் கூறுகின்றது. இவ்வாறு குருமாருக்கு மாறாகச் சட்டஞ் செய்த உருக்ககினாவை உலூகல் காகிசி என்னும் அரசன் வீழ்த்தி, நகரைக் கொள்ளையிட்டான்; கோவில்கள் அழிக்கப்பட்டன; மக்கள் வீதிகளிற் கொல்லப்பட்டனர். கோவில்களின் கடவுட் சிலைகள் எடுத்துச் செல்லப் பட்டன. இலகாஷ் நகரின் பெரிய, தாய்க் கடவுட் சிலை எடுத்துச் செல்லப்பட்டதைக் குறித்து வருந்தித் தின்கிரதாமு என்னும் புலவர் ஒருவர் பாடிய பாடல்கள் களிமண் ஏடுகளில் காணப்படுகின்றன. முதலாம் சார்கன் சுமேரியரின் இலகாஷ் நகருக்கு இருநூறு மைல் தூரத்தில் சார்கன் என்னும் செமித்திய அரசன் அகேட்1 என்னும் நகரையமைத்து அக்காட்2 என்னும் இராச்சியத்தைத் தோற்றுவித்தான். சூசாவில் கிடைத்த கல்வெட்டு ஒன்றில் சார்கனுடைய உருவம் வெட்டப்பட்டுள்ளது. அதில் அவன் நீண்ட தாடியோடும் அதிகாரமும் செருக்கும் நிறைந்த தோற்றத்தோடும் காட்சி யளிக்கின்றான். சார்கன் அரசமரபினனல்லன். அவனுடைய தாய் கோவிலில் தேவதாசி. அவள் யாரும் அறியாது இவனைப் பெற்றுக் கூடையில் வைத்துப் புற்களால் மறைத்து ஆற்றில் விட்டாள். அரசனுடைய வேலையாள் ஒருவன் அக் குழந்தையைக் கண்டெடுத்தான். வளர்ந்தபோது சார்கன் அரசனின் கிண்ணம் தாங்குபவனாக வேலை பார்த்தான். அவன் அரசனின் தயவினால் அதிகாரமுடையவனானான். இறுதியில் அவன் கலகம் செய்து அரசனை வீழ்த்திச் சிம்மாசனத்தில் அமர்ந்தான். அவன் தன்னை உலகத்துக்கு அரசன் எனக் கூறிக்கொண்டான்; பல பட்டினங்களைப் பிடித்தான்; நகரங்களைக் கொள்ளையடித்தான். அவனால் கொல்லப்பட்டவர்களில் ஒருவன் இலகாஷ் நகரை வென்று சூறையாடிய உலூகல்காகிசி என்பவனாவன். இப் பெரியஅரசன் கிழக்கு மேற்கு தெற்கு வடக்கு என்னும் நான்கு திசைகளிலும் படை எடுத்துச் சென்றான்; எல்லத்தை வென்றான்; வெற்றியின் அடையாளமாகத் தனது வாளைப் பாரசீகக் குடாக்கடலில் கழுவினான். மேற்கு ஆசியாவைக் கடந்து மத்தியதரைக் கடலை அடைந்தான். அவன் ஐம்பத்தைந்து ஆண்டுகள் ஆட்சி புரிந்தான். அக் காலத்தில் பலவகைப் பழங்கதைகள் தோன்றி அவனைக் கடவுளாகச் செய்துவிட்டன. அவனுடைய மரணகாலத்தில் அவன் ஆட்சிக்குட்பட்டிருந்த நாடுகள் கலகம் செய்தன. அவனுக்குப்பின் அவனுடைய மூன்று குமாரர் ஒருவருக்குப்பின் ஒருவராகச் சிம்மாசனம் ஏறினர். கி.மு. இருபத்தாறாம் நூற்றாண்டில் இலகாஷ் மறுபடியும் செல்வச் செழிப்புற்றது. அக் காலத்தில் குதேயா3 என்னும் அரசன் ஆட்சி புரிந்தான். இவன் கோவில்களைக் கட்டினான்; பழைய இலக்கியக் கல்விக்கு ஆதரவளித்தான். வலியவர்களை அடக்கி மெலியர்களுக்கு இரக்கம் காட்டினான். சாலதியரின்4 ஊர் நகரம் கி.மு. 3,500முதல் கி.மு. 700 வரையில் உயர்நிலையில் இருந்தது. ஊர்என்கூர் அரசன் மேற்கு ஆசியாவைத் தனது ஆணைக்கு உட்படுத்தினான். யூபிராதஸ் ஆறுவழியாகச் செய்யப்பட்ட வாணிகத்தால் ஊர் செல்வம் அடைந்தது. நகர்கள் கோவில்களால் அழகு பெற்றன. ஊர்என்கூர்1 தனது ஆணைக்குட்பட்ட லார்சா, உருக், நிப்பூர் முதலிய நகரங்களையும் கட்டினான். இவனுடைய மகன் துங்கி ஐம்பத்தெட்டு ஆண்டுகள் ஆட்சி புரிந்தான். விரைவில் இச் சிறப்புகள் மங்கின. போர்ப் போக்குடைய எல்லம் மக்கள் கிழக்கிலிருந்தும், அமோரியர்2 மேற்கிலிருந் தும் வந்து ஊர் நகரைச் சூறையாடினர். சமாதானத்தைக் குலைத்து அரசனை யும் சிறைப்பிடித்தனர். அமோரியரும் எல்லத்தினரும் சுமேரியாவை 2,000 ஆண்டுகள் வரையில் ஆட்சி புரிந்தார்கள். பின்பு வடக்கினின்றும் ஹமுரபி என்னும் பாபிலோனியன் வெளித் தோன்றினான்; அவன் உருக், ஐசின் முதலிய நகர்களைப் பிடித்தான்; எல்லம்மீது படை எடுத்து அந் நாட்டரசனைச் சிறைப்படுத்தினான்; அமோரிய அசீரிய நாடுகளில் தனது ஆணையை நாட்டினான். பாரசீகர் தலைஎடுக்கும் வரையில் செமித்தியரே தைகிரஸ் யூபிராதஸ் ஆறுகளுக்கிடைப்பட்ட நாடுகளை ஆண்டார்கள். சுமேரியரைப் பற்றி வேறு யாதும் அறியமுடியவில்லை. சுமேரிய நாகரிகம் வளர்ந்து யூபிராதஸ், தைகிரஸ் ஆறுகளின் வழியே மேல்நோக்கிச் சென்று, பாபிலோன், அசீரியா முதலிய நாடுகளிலும் பரவுவதாயிற்று. பொருளாதாரம் பயிர்ச் செய்கை சுமேரியாவின் சீர்திருத்தம் மாரிக்காலத்தில் ஆறுகள் வெள்ளம்முட்டி வழிவதால் உண்டானது. சுமேரியர் வெள்ளத்தைக் கால்வாய்களிற் செலுத்தி வயல்களுக்குப் பாய்ச்ச அறிந்தார்கள். கி.மு. 50ஆம் நூற்றாண்டிலேயே அவர்கள் இவ்வாறு புரிய அறிந்திருந்தார்கள் எனத் தெரிகிறது. வயல்களில் கோதுமை, வாற்கோதுமை முதலிய தானியங்கள் விளைந்தன; பேரீந்தும் காய்கனிகள் உதவும் பலவகைச் செடிகளும் செழித்து வளர்ந்தன. கலப்பையில் எருதுகளைப் பூட்டி உழவும் அவர்கள் அறிந்திருந்தார்கள். கைத்தொழில் சுமேரியர் செம்பையும் தங்கத்தையும் பயன்படுத்தினர். இவ் விரண்டு உலோகங்களையும் கலந்து வெண்கலத்தை உண்டாக்கவும் அவர்கள் அறிந் திருந்தார்கள். இரும்பினாலும் ஆயுதங்கள் செய்யப்பட்டன. அவர்கள் பயன் படுத்திய ஆயுதங்கள் பல தீத்தட்டிக் கற்களால் செய்யப்பட்டவை. தானியத் தாள்களைக் கொய்யும் அரிவாள் போன்ற சில கருவிகள் களிமண்ணினாற் செய்யப்பட்டன. ஊசி, துளைக்கும் கருவி போன்றவை சில தந்தத்தினாலும் இரும்பினாலும் செய்யப்பட்டன. அரசினர் கண்காணிப்பின் கீழ் நெசவுத் தொழில் அதிகம் நடைபெற்றது. வீடுகள் நாணல் தண்டுகளால் கட்டப்பட்டன. நின்று சுழலும் கதவின் தாள் குழிந்த கல்லின்மீது வைக்கப்பட்டது. தரை களிமண் இட்டு அடித்து மட்டம் செய்யப்பட்டது. நாணல்களின் தலைப்பு களை வளைத்துக் கட்டுவதால் கூரைவில் வளைவினதாயிருந்தது. சில சமயங் களில் குறுக்கே மரங்கள் இட்டுத் தட்டையாக அமைக்கப்பட்ட கூரைமீது களிமண் பரப்பப்பட்டது. சுவர்கள் வைக்கோலும் களிமண்ணும் கலந்த கலவையால் பூசப்பட்டன. வீடுகளில் ஆடு, மாடு, பன்றி முதலியவை வளர்க்கப்பட்டன. குடிக்கும் நீர் கிணறுகளிலிருந்து எடுக்கப்பட்டது. வாணிபம் பண்டங்கள் நீர்வழியாகச் சென்றன. சுமேரியாவில் கல் கிடைப்பது அரிது. ஆகவே அவை பிற இடங்களிலிருந்து கடல்வழியே ஆற்றுக் கழிமுகம் வரையும் கொண்டு வரப்பட்டன; பின்பு கால்வாய்கள் வழியாக நகருக்குக் கொண்டு போகப்பட்டன. இந்தியாவுக்கும் சுமேரியாவுக்கும் வாணிபத் தொடர்பு இருந்து வந்தது. இந்தியாவிற் காணப்பட்டவை போன்ற முத்திரைகள் பல சுமேரியாவிற் கண்டுபிடிக்கப்பட்டன. சுமேரியர் நாணயத்தைப் பயன்படுத்தவில்லை. வாணிபம் பண்டமாற்று முறையில் நடைபெற்றது, பொன்னும் வெள்ளியும் குறிக்கப்பட்ட விலையுடையனவா யிருந்தன. அவை பண்டங்களின் விலைக்குப் பதில் கொடுக்கப்பட்டன. சுமேரியாவில் வாணிபத் தொடர்பான பல களிமண் ஏடுகள் கிடைத்தன. அவைகளைக் கொண்டு சுமேரியர் நடத்திய வாணிபத்தைப் பற்றிய செய்திகள் பல அறியக்கூடுகின்றன. சுமேரியரின் சமாதிகளுள் பொன், வெள்ளி அணிகலன்கள், ஏனங்கள், ஆயுதங்கள். பயிரிடும் கருவிகள் போல்வன காணப்பட்டன. மக்களின் பிரிவுகள் செல்வரும் வறியரும் பல பிரிவினராயிருந்தனர். அடிமை வழக்கு வலிமை பெற்றிருந்தது. செல்வருக்கும் வறியருக்குமிடையில் ஒரு வகுப்பினர் வாழ்ந்தனர். இவர்கள் சிறிய வாணிபம் செய்வோர், மருத்துவர், குருமார் என்போராவர். மருத்துவம் உயர்வடைந்திருந்தது. ஒவ்வொரு நோய்க்கும் தனித்தனி மருந்து பயன்படுத்தப்பட்டது. மருந்து சமயத்தோடு சம்பந்தப் படுத்தப்பட்டிருந்தது. நோய்கள் ஆவிகளின் கோளாறினால் உண்டாகின்ற தென்றும், அவைகளை ஓட்டினாலன்றி நோயை அகற்றமுடியாதென்றும் அவர்கள் நம்பினார்கள். அவர்கள் மாதத்தைச் சந்திர அளவையாகக் கணித் தனர். ஒவ்வொரு நகரத்தினரும் மாதங்களுக்கு வெவ்வேறு பெயர்கள் இட்டு வழங்கினார்கள். ஆட்சி ஒவ்வொரு நகரிலும் தனித்தனி அரசன் இருந்து ஆண்டான். அவன் பதேசி எனப்பட்டான். இதற்குப் பூசாரி அரசன் என்பது பொருள். ஆளுகையின் ஒவ்வொரு பகுதியும் சமயத்தால் கட்டுப்படுத்தப்பட் டிருந்தது. கி.மு. 2,800லேயே வாணிபம் பலமடைந்திருந்தது. அப்பொழுது சிற்றரசர்களுக்கெல்லாம் தலைவனாகிய பேரரசன் தோன்றினான். அவன் எப்பொழுதும் அச்சத்துடன் வாழ நேர்ந்தது. எந்த நேரத்திலும் அவனை இன்னொருவன் வீழ்த்தி அவன் இடத்தை அடைதல் கூடும். அரசன் வீற்றிருக்கும் மண்டபத்துக்கு இரு வாசல்கள் இருந்தன. அவை ஒருவன் மாத்திரம் செல்லக்கூடிய ஒடுக்க முடையன. அரசனைக் காண்பதற்கு ஒருவன் மாத்திரம் ஒரு காலத்தில் அனுமதிக்கப்படுவான். அவன் உள்ளே செல்வதன் முன் அவனிடத்தில் ஆயுதங்கள் இருக் கின்றனவா என்று வாயில் காவலன் சோதனை செய்வான். அரசன் வழிபடும் கோவிலும் மறைவில் இருந்தது. போர்க்காலங்களில் அரசன் வில், அம்பு, ஈட்டி போன்ற ஆயுதந் தாங்கிய வீரர்களின் முன்னே தேர்மீது சென்றான். வாணிபப் பாதைகள், வாணிபப் பண்டங்கள் என்பவை காரணமாகப் பெரும்பாலும் போர்கள் நிகழ்ந் தன. மெனித்தாஸ் என்னும் அக்கேடிய அரசன் தான் எல்லத்தின் மீது படை எடுப்பது அங்குள்ள வெள்ளிச் சுரங்கங்களையும், சிலைகள் செய்யும் கற்களையும் கைப்பற்று வதற்கெனக் கூறினான். போரில் தோற்றவர்கள் அடிமைகளாக விற்கப்பட்டனர்; விற்பது அதிக ஊதியம் அளியாதெனக் கண்டால் அவர்கள் போர்க்களத்திலேயே கொல்லப்பட்டார்கள். போரில் பிடிபட்டவர்களில் பத்திலொரு பகுதியினர் கோவில்களுக்குக் கொடுக்கப்பட்டனர். சமூக ஒழுங்கு காணியாளன் ஆட்சிமுறையால் காக்கப் பட்டு வந்தது. போர்களில் வெற்றி உண்டானபோது, நிலங்கள் திறமையுடைய பிரபுக்களுக்குப் பிரித்து அளிக்கப்பட்டன. அந் நிலங்களுக்கு வரி தவிர்க்கப்பட்டது. இவ்வகை அதிகாரிகள் நாட்டில் ஒழுங்கைப் பாதுகாத்தார்கள்; அரசனுக்குப் போர் வீரரை அளித்தார்கள். வரிகள் மூலம் அரச வருவாய் சேர்க்கப்பட்டுக் களஞ்சியங்களில் வைத்துப் பாதுகாக்கப்பட்டது. அரசர், காணியாளர், அதிகாரிகள் ஆளுகையைப்பற்றி பல சட்டங்கள் இருந்தன. இவைகளே ஹமுரபியின்1 சட்டங்களுக்கு அடிப் படையானவை. செமித்திய சட்டம் பெண்ணின் கூடா ஒழுக்கத்துக்கு மரண தண்டனை விதித்தது; ஆனால் சுமேரிய சட்டம் கணவனை இன்னொரு மனைவியைக் கொள்ளும்படி அனுமதித்ததுடன், முந்தியவளைப் பிந்திய வளுக்குக் கீழாக வைத்திருக்கும்படி விதித்தது. வாணிபம், திருமணம், கடன் கொடுத்தல், கடன் வாங்குதல், கொள்வன, விற்பன போன்றவைகளுக்கெல்லாம் சட்டங்கள் இருந்தன. கோயில்களில் வழக்குகள் கேட்டுத் தீர்ப்பு அளிக்கப்பட்டன. நியாயத் தீர்ப்பாளர் குருமாராக விருந்தனர். ஒவ்வொரு வழக்கும் முதலில் நடுவர் கையில் விடப்பட்டது. நியாயந் தீர்க்கும் இடத்துக்குச் செல்வதன்முன் வழக்குக்கு இடமின்றித் தீர்த்துவைப்பது அவர்கள் கடமையாகும். சமயம் ஊர்என்கூர் என்னும் அரசன் தனது சட்டங்களைச் சமாஷ் என்னும் கடவுள் அருளிச் செய்தார் எனக் கூறினான். சுமேரியh வில் கடவுளர் பலராகப் பெருகினர். ஒவ் வொரு நகரத்துக்கும் ஒவ்வொரு தலைமைத் தெய்வம் இருந்தது. மக்களின் ஒவ்வொரு வகைச் செயலுக்கும் நன்மை புரியும் தனித் தனித் தெய்வங்கள் பல இருந்தன. சுமேரியர் தோன்றிய காலம் முதல் ஞாயிறு வணக்கமும் வளர்ச்சியடைந்து வந்தது. சமாஷ் என்னும் ஞாயிற்றுக் கடவுள் இராக் காலத்தில் வட கடலில் துயின்றார்; அவர் வெளியே வரும்படி விடியற் காலம் கதவைத் திறந்துவிட்டது. செங்குத்தான வானத்தின்மீது தனது தேரைச் செலுத்திக் கொண்டு நெருப்புத் தணல்போல் அவர் மேலே சென்றார். எல்லில் என்னும் கடவுளுக்கும் அவர் மனைவியாகிய நின்லில்லுக்கும் நிப்பூரில் கோவில்கள் இருந்தன. உருக் நகரில் இன்னி என்னும் தரைக் கடவுளாகிய கன்னி வழிபடப்பட்டார். செமித்தியரும் அக்கேடியரும் இக் கடவுளை இஸ்தார் என அழைத்தனர். கிஷ், இலகாஷ் என்னும் நகர்களில் தொலரோசா என்னும் தாய்க்கடவுள் வழிபடப்பட்டார். வானத்தில் ஆவிகள் நிறைந்திருக்கின்றனர்; தேவர்கள் (angels) மக்களைப் பாதுகாக்கின்றனர்; பைசாசுகள் தேவரைத் துரத்தி மக்களைப் பிடித்து வருத்துகின்றன என மக்கள் நம்பினார்கள். கோயில்களில் பல தெய்வங்கள் இருந்தன. அவைகளுக்கு உணவும் காணிக்கைகளும் கொடுக்கப்பட்டன. மாடு, ஆடு, புறா, கோழி, தாரா, மீன், பேரீந்தின் பழம், அத்திப்பழம், வெள்ளரிக்காய், வெண்ணெய், எண்ணெய், பலகாரம் முதலியன தெய்வங்களுக்கு விருப்பமுடையன என்று களிமண் பட்டயமொன்றில் பொறிக்கப்பட்டுள்ளது. இவ்வகைக் காணிக்கைகளைத் தெய்வங்கள் பெறுவதால் சுமேரிய கோவிற் குருமார் அதிக செல்வத்தை ஈட்டி அதனால் அதிகாரம் உடையவர்களானார்கள். பெரும்பாலான கருமங்களில் அவர்களே ஆட்சி புரிவோராயிருந்தனர். அவர்கள் எவ்வளவுக்குக் கோயிற் பூசாரிகளாக விருந்தார்கள், எவ்வளவுக்கு ஆட்சி புரிபவர்களாயிருந்தார்கள் என்று அறியமுடியவில்லை. உருக்ககினா என்னும் அரசன் குருமார் செல்வரிடமும் வறியரிடமும் பணத்தைக் கவர்வதைக் கண்டித்து அவர்களின் அதிகாரத்தைக் குலைத்தான். அவன் மரணமானபோது குருமார் பழைய நிலைமையை எய்தினர். சுமேரியரின் சமாதிகளில் உணவும் ஆயுதங்களும் வைக்கப் பட்டிருந்தன. இதனால் அவர்கள் மரணத்துக்குப் பின்னும் உயிர் அழியா திருப்பதை நம்பினார்கள் எனத் தெரிகின்றது. வாழ்க்கை குருமார் கல்வியோடு பழங்கதைகளையும் சிறுவர்களுக்குப் படிப்பித் தார்கள். பழங்கதைகள் அவர்களது ஆட்சிக்கு வலிமை அளித்தன. ஒவ்வொரு கோயிலிலும் பள்ளிக்கூடம் நடத்தப்பட்டது. பழைய களிமண் ஏடுகளில் கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல், சதுர அளவை, கன அளவை வாய்பாடுகளும் கோணலளவைப் பற்றிய பயிற்சிகளும் காணப்படுகின்றன. கோயில்களில் தேவதாசிகள் இருந்தார்கள். திருமணத்தைப்பற்றிய சட்டங்கள் இருந்தன. தந்தையாலளிக்கப்பட்ட சீதனப்பொருள் பெண்ணின் அதிகாரத்துக்குட்பட்டிருந்தது. கணவனைப் போல மனைவிக்கும் பிள்ளைக ளிடத்தில் சம உரிமை உண்டு. கணவனின் தொடர்பின்றித் தனது சொந்த அடிமைகளை வைத்திருக்கவோ, அவர்களை விற்றுவிடவோ அவளுக்கு அதிகார முண்டு. பெண்கள் அரசி போன்ற நிலை வரையில் உயர்ந்து நகரை ஆளவும் முடியும். கூடா ஒழுக்கத்துக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. வறிய பெண்களின் வாழ்க்கை செம்மையுறவில்லை. செல்வ மகளிர் உயர்ந்த உல்லாச வாழ்க்கை நடத்தினர். அவர்கள் மேனியில் அலங்காரப் பொருள்களையும் பலவகை அணிகலன்களையும் பயன்படுத்தினர். சமாதிகளில் இவ்வகைப் பொருள்கள் காணப்பட்டன. எழுத்துகள் சுமேரிய எழுத்துகள் மிக வியப்பளிப்பன அவர்களின் எழுத் தெழுதும் முறை மிகப் பண்பட்டிருந்தது. இலக்கியப் பாடல்கள், சமயப் பாடல்கள், வாணிபத் தொடர்பான எழுத்துகள் பல காணப்படுகின்றன. கி.மு. 36ஆம் நூற்றாண்டிலேயே இவர்கள் எழுத அறிந்திருந்தார்கள். கி.மு. 32ஆம் நூற்றாண்டில் எழுதுதற்குக் களிமண் ஏடுகள் பயன்படுத்தப்பட்டன. களிமண் ஏடுகளில் ஆப்பு வடிவமான முனையுடைய குச்சியினால் எழுத்துகள் எழுதப்பட்டன. இவ்வகையான பொருள்களைக் கொண்டே அரசாங்க ஆவணங்கள், கொள்வன, விற்பன, உடன்படிக்கை ஆவணங்கள் போல்வன எழுதிக் காப்பாற்றப்பட்டன. எழுதிய பின்பு களிமண் ஏடுகள் வெய்யிலில் அல்லது நெருப்பிலிட்டு உலர்த்தப்பட்டன. ஆகவே, அவர் களின் ஆவணங்கள், நூல்கள் முதலியன நிலைக்கக் கூடியன வாயிருந்தன. சுமேரிய எழுத்துகள் ஆப்பு வடிவமாயிருந்தமையின் அவை ஆப் பெழுத்துகள் எனப்பட்டன. சுமேரிய எழுத்துகள் வலமிருந்து இடம் வாசிக்கப்பட்டன: பாபிலோனிய எழுத்துகள் இடமிருந்து வலம் எழுதப்பட்டன. ஆப் பெழுத்துகள் சுமேரிய மட்பாண்டங்களிற் காணப்படும் ஓவிய எழுத்துக் களின் சுருக்கு எழுத்துகளாகும். இவ்வெழுத்துகள் பல நூற்றாண்டுகளாக விரைந்து எழுதப்படும் போது ஓவிய வடிவங்களை இழந்து கீற்று வடிவங் களை அடைந்தன. எழுத்து நிலை இலக்கிய நிலையை அடையப் பல நூற்றாண்டு களாகும். நெடுங்காலம் வாணிபத்துக்கு எழுத்து துணைபுரிந்தது. ஒப்பந்தங் கள் பற்றுச் சீட்டு, பண்டங்களின் விலை போல்வன எழுதிவைக்கப்பட்டன. மந்திர வித்தை முறைகள் கிரியை முறைகள், சமயத் தொடர்பான பழங் கதைகள், துதிகள், பாடல்கள் முதலியவை மறைந்து போகாமலும் மாறுபடா மலும் இருக்கும்படி அவை எழுதிவைக்கப்பட்டன. கி.மு. 2,700லேயே சுமேரியாவில் பெரிய நூல் நிலையங்களிருந்தன. தெல்லோ என்னும் பழைய நகரில் ஒன்றன்மீது ஒன்றாக அடுக்கி ஒழுங்குபடுத்தி வைக்கப்பட்ட 30,000 களிமண் ஏடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. அங்குப் பெரிய நூல்நிலையம் ஒன்று இருந்தது. கி.மு. 20ஆம் நூற்றாண்டில் சுமேரிய வரலாற்றாசிரியர்கள் பழைய வரலாறுகளை ஒழுங்குபடுத்தி எழுதினார்கள். நிகழ்கால வரலாறுகளையும் எழுதிவைத்தார்கள். அவர்கள் எழுதிய நூல்கள் கிடைக்கவில்லை. ஆனால் அவைகளின் பகுதிகள் பாபிலோனிய அரசரின் வரலாறுகளின் இடையிடையே காணப்படுகின்றன. கட்டடம் சுமேரியாவில் எழுத்துகள் வளர்ச்சியடைந்தமை போலவே கட்டடக் கலையும் வளர்ச்சியடைந்தது. சுமேரியர் நாணல் தண்டுகளைச் சதுரமாகவோ, நீண்ட சதுரமாகவோ அல்லது வட்டமாகவோ நட்டார்கள். அவைகளின் தலைப்புகளை வளைத்து வில்வடிவு அல்லது அரை வட்டவடிவு உண்டாகும் படி கட்டினார்கள். நிப்பூரில் வில் வடிவில் அமைக்கப்பட்ட கால்வாய் ஒன்று காணப்படுகின்றது. அதன் காலம் கி.மு. 3,500ஆக இருக்கலாம். வில் வடிவுடைய கதவுகள் ஊர் அழிபாடுகளில் பொதுவாகக் காணப்படுகின்றன. அவை கி.மு. 2,000 அளவிலமைக்கப்பட்டனவாகலாம். அங்குக் கட்டடங் களில் காணப்படும் வில்கள் (arches) இன்றைய விற்களேயாகும். செல்வர் திடர்களில் அரண்மனை போன்ற மாளிகைகளை அமைத்து வாழ்ந்தார்கள். சில திடர்கள் நில மட்டத்திலிருந்து நாற்பது அடிக்குமேல் உள்ளன. சிறப்பாக அமைக்கப்பட்ட பாதையாலன்றி வீட்டுக்கு ஏறிச் செல்ல முடியாமல் இருந்தது. இவ்வாறு சுமேரியச் செல்வன் ஒவ்வொருவனுடைய வீடும் கோட்டை போலிருந்தது. சுவரின் வெளிப்புறம் சிவப்பு நிறமுடைய தாயிருந்தது. சதுரம், வளைவு, முக்கோணம் போன்ற சூளையிலிட்ட களிமண் வடிவங்களால் அது அலங்கரிக்கப்பட்டிருந்தது. உட்சுவர் சாந்திட்டு மட்டஞ் செய்து, சாயம் பூசப்பட்டிருந்தது. வீட்டின் நடுவில் முற்றமும், முற்றத்தின் நாற்புறத்திலும் வீடும் இருந்தன. செல்வர்கள் மாத்திரம் வீடுகளுக்குச் சாளரங்களைப் பயன்படுத்தினர். தண்ணீர் கிணற்றிலிருந்து எடுக்கப்பட்டது. நகரின் அழுக்குநீர் வெளியே செல்லக் கால்வாய்கள் இருந்தன. வீட்டில் தளவாடங்கள் அதிகம் இருக்கவில்லை. சில படுக்கைகள் உலோகங்களும் தந்தமும் அழுத்தி அலங்கரிக்கப்பட்டன. கைகள் வைத்து ஆறக்கூடிய நாற் காலிகளின்1 பாதங்கள் சிங்கத்தின் பாதங்கள் போன்று செய்யப்பட்டிருந்தன. கோயில்கள் அமைப்பதற்குக் கற்கள் பிற இடங்களினின்றும் கொண்டுவரப்பட்டன. அவை செம்பினாற் செய்யப்பட்டனவாயும், கம்பளி யின் மேல் விலையுயர்ந்த உலோகங்களைப் பதித்துச் செய்யப்பட்டனவாயும் உள்ள வேலைப்பாடுகளால் அலங்கரிக்கப்பட்டன. ஊரில் உள்ள நன்னார் ஆலயத்தில் சிறிது நீலநிறம் கொடுக்கப்பட்டனவாயும், மினுக்கம் கொடுக்கப் பட்டனவாயும் உள்ள செங்கற்கள் பயன்படுத்தப்பட்டன. சுவரின் உட்புறம் சலவைக் கல், கல்நார், நிறக்கற்கள், பொன் முதலியவை அழுத்திய மரச் சட்டங்களால் மறைக்கப்பட்டன. நகரத்தின் முதன்மையான கோயில், மேட்டின்மீது கட்டப்படவில்லை; கோயில்கள்மீது மூன்று, நான்கு அல்லது ஏழு மாடிகள் இருந்தன. அம் மாடிகளை அடைவதற்கு வெளிப்புறமாகச் சங்குப் புரிபோற் சுழன்று செல்லும் படிக்கட்டுடைய பாதை இருந்தது. மிக உயரமான மாடியில் நகரத்தின் பெரிய தெய்வம் வீற்றிருக்கும். படை எடுப்புக் காலங்களில் கோயில் அரணாகவும் பயன்பட்டது. கோயில்கள் வீரர், கடவுளர் போன்ற சிற்பங்களால் அலங்கரிக் கப்பட்டிருந்தன. தெல் எல் உபேயிட்2 அழிபாட்டில் செம்பி னாற் செய்யப்பட்ட இடபம் ஒன்று காணப்பட்டது. இது சுமேரியரின் பழைய சின்னங்களுள் ஒன்று. ஊர் அழிபாட்டில் சபாட் அரசியின் கல்லறையில் வெள்ளியாற் செய்யப்பட்ட பசுவின் தலை கண்டெடுக்கப்பட்டது. சுமேரியர் தண்டு சக்கரங்களைக் கொண்டு மட்பாண்டங்கள் செய்தார்கள். பொற்கொல்லர் பொன்னில் அழகிய வேலைகள் செய்தனர். ஊர் அழிபாட்டில் பொன்னினாற் செய்யப்பட்ட பல ஏனங்கள் காணப் பட்டன. அவைகளின் காலம் கி.மு. 4000 ஆக இருக்கலாம். அங்குக் கல்லில் வெட்டப்பட்ட உருளை வடிவான முத்திரைகளும் கிடைத்தன. இவைகளைச் சுமேரிய மக்கள் தமது கையெழுத்துகளைப் பொறிப்பதற்குப் பயன்படுத் தினர். சுமேரியரின் நாகரிகமே எகிப்திற்குப் பரவியதென்றும் எகிப்திய நாகரிகத்துக்கு அடிப்படை சுமேரிய நாகரிகமே யென்றும் ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். எகிப்து ஆப்பிரிக்காவிலே நீல ஆறு என்னும் பெரிய நதி ஒன்று உண்டு. இது பாலைவனத்துக் கூடாகச் சென்று மத்தியதரைக் கடலுள் விழுகின்றது. இதன் இரு ஓரங்களிலும் ஏறக்குறையத் தனித்தனி பன்னிரண்டு மைல் அகலம் வரையில் உள்ள கீலமான தரை பயிர்பச்சை யுடையதாய்ச் செழிப்படைந் துள்ளது. அப் பகுதி எகிப்து எனப்படுகின்றது. ஆற்றின் முகத்துவாரத்தை அடுத்த பகுதி கீழ் எகிப்து எனவும் வழங்கின. இவ் வாற்றோரங்களில் மிகப் பழங்காலம் முதல் மக்கள் குடியேறியிருந்தார்கள். அவர்களைப்பற்றிய வரலாறு அறியப்படவில்லை. கி.மு. 50ஆம் நூற்றாண்டில் பண்டு எனப்பட்ட ஒரு நாட்டி னின்றும் புதிய மக்கட் கூட்டத் தினர் சிலர் வந்து இவ்வாற்றோரங் களிற் குடியேறினர். பண்டுநாடு செங்கடலுக்குக் கிழக்கேயுள்ள இக்கால எரித்திரியா, சொமாலி லந்து என்னும் இடங்கள் எனக் கருதப்பட்டது. பண்டு என்று குறிக்கப்பட்ட நாடு மலை யாளக் கரைகள் என இக்கால ஆராய்ச்சி யாளர் கூறுகின்றனர்.1 பண்டு நாட்டினின்றும் வந்து நீல ஆற்றுக் கழிமுகத் தீவில்2 குடியேறிய மக்கள் வடக்கி னின்றும் தெற்கு நோக்கிப் பரவி னார்கள். பண்டு நாட்டினின்றும் வந்த மக்களுக்குத் தலைவர் ஓரஸ்3. அவரின் அடையாளம் கழுகு. பண்டு நாட்டினின்றும் வந்து குடியேறிய மக்களிடையே ஆட்சி முறையை நாட்டியவர் இவர் ஆகலாம். ஓரசின் தலைமையில் வந்த மக்கள் மேல் எகிப்தைக் கைப்பற்ற எவ்வளவு காலம் சென்றதெனத் தெரியவில்லை. வடக்கிலும் தெற்கிலும் ஆட்சிகள் தோன்றியிருந்தன. வடக்குத் தெற்கு இராச்சியங்கள் என்பன பல சிற்றரசர் நாடுகளின் இணைப்புக்களேயாகும். சிறிய நாடுகளை ஆண்ட சிற்றரசர்களைப் பற்றியோ அவர்கள் காலத்தில் நடந்த நிகழ்ச்சிகளைப் பற்றியோ யாதும் தெரியவில்லை. அவர்கள் காலத்தில் கையாளப்பட்ட கைவேலைப் பொருள்கள் கற்காலத் தவை. அவை வியக்கத்தக்க அழகுடையன. அக் காலத்தில் உலோக வகை களில் செம்பு பயன்படுத்தப்பட்டது. ஓரசின் தலைமையில் வந்தவர்களின் வெற்றிக்குக் காரணம் உலோக முனைகள் இறுக்கப்பட்ட ஆயுதங்கள் எனப் பிற்காலக் கற்பனைக் கதைகளிற் காணப்படுகின்றது. ஐந்தாவது அரச பரம்பரையினர் பெயர்கள் முறைப்படுத்தி எழுதி வைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு எழுதுவதற்கு முற்பட்ட சில குறிப்புகள் இருந்தன வாகலாம். அரசர் பெயர்களைத் தவிர வேறு நிகழ்ச்சிகள் எவையும் குறிக்கப்படவில்லை, தெற்கே முதலில் ஆண்ட அரசனைப்பற்றிச் சிறிது அறிகின்றோம். இவனை கி.மு. 34ஆம் நூற்றாண்டில் மேல் எகிப்தையும் கீழ் எகிப்தையும் இணைத்தான். இவன் ஓரசின் மரபில் தோன்றியவன் எனக் கூறப்படுகின்றது. எகிப்தியக் கட்டடங்களிலும் ஞாபகச் சிலைகளிலும் காணப்பட்ட எழுத்துகள் வாசிக்கப்படுவதன் முன்பு எபிரேயரின் சமய நூல்களைக் கொண்டும், எரதோதசு1 எழுதியவைகளைக் கொண்டும் எகிப்திய வரலாறுகள் அறியப்பட்டன. முதல் எகிப்திய பரம்பரையைத் தோற்றுவித்தவர் மேன்ஸ்2 எனப்படுகின்றார். வடநாடு தென்னாட்டுக்கு உட்பட்டிருக்கவில்லை; ஆனால் அது தெற்கே உள்ள அரசனுக்கு அடங்கியிருந்தது. தென்னாட்டு அரசன் தனது மரபு வடநாட்டு அரச பரம்பரையைச் சேர்ந்தது எனக் கூறினான். இவன் இரு நாடுகளுக்கும் தலைவன் ஆனான். இவன் அல்லது இவனுக்குப்பின் வந்த அரசன் வடநாட்டிற்கும் தென்னாட்டிற்கும் மத்தியில் அபிடொஸ்3 என்னும் நகரை அமைத்தான். இது மூன்றாம் அரச பரம்பரைக் கால நிகழ்ச்சி. ஆறாவது அரச பரம்பரைக் காலத் தில் அது மெம்பிஸ் நகரை ஒத்த சிறப்படைந்திருந்தது. மெம்பிஸ் நகர் என்சிப்-மேர்பேபா4 என்னும் அரசனால் கட்டப்பட்டதெனச் சொல்லப்படுகின்றது. முதல் இரு அரச பரம்பரையினரும் சிறிதேறக்குறைய 400 ஆண்டுகள் ஆட்சிபுரிந்தனர். இரண்டாவது அரச பரம்பரையினர் காலத்தில் முக்கிய நிகழ்ச்சிகள் யாதும் காணப்படவில்லை. தென்னாட்டு அரசனின் வெற்றியோடு இரண்டாவது பரம்பரை முடிவடைகின்றது. வெற்றியாளனாகிய காசிகெம் தனது பெயரைக் காசிகெமூய் என மாற்றிக்கொண்டு அரசுரிமைக் குரிய பெண்ணை மணந்து மூன்றாவது அரச பரம்பரையைத் தோற்றுவித் தான். இவன் முதற் பரோவா1 எனப்படுவன். காசி கெமூயின் காலம் கி.மு. 2,980. இவனிலிருந்து வலிய பல அரசர் தோன்றி ஆட்சிபுரிந்தார்கள். இவனுடைய உருவச்சிலை ஓரஸ் வணக்கத் தினரின் முதன்மை இடமாகிய ஹிரகோன் போலிஸ்2 என்னும் கழுகு நகரத்திலுள்ள சமாதியில் காணப்பட்டது. காசி கெமூயின் சமாதி ஒடுங்கிச் செல்லும் படிக்கட்டுகளைப் போல் ஒன்றின் மீது ஒன்றாகக் கற்பாளங்களை வைத்துக் கட்டப்பட்டது. இதுவே முதல் பிரமிட்3 சமாதி எனப்படுகின்றது. இதன்பின் சினெவெரு4 என்னும் நான்காவது பரம்பரையில் வந்த அரசன் பெரிய பிரமிட் சமாதியைக் கட்டினான். சினவெருவுக்குப் புதல்வன் இல்லை. அவனுக்குப் பின் குபுவா5 ஆட்சிபுரிந்தான். இவன் நாலாவது பரம்பரையை நாட்டியவனாவன். இவன் எவ்வாறு ஆட்சிக்கு வந்தான் என்று தெரிய வில்லை; ஒருபோது திருமண இணைப்பினால் வந்திருக்கலாம். இவனுடைய மகன் கவ்றி6. கவ்றியின் மகன் மென்கூரா. இவர்கள் கிசே7 என்னும் நகரத்தில் பெரிய பிரமிட் சமாதியையும் பெரிய மனித முகச் சிங்கத்தையும் அமைத்தார்கள் என்பதைவிட வேறு யாதும் தெரியவில்லை. இவர்களைச் சியப்ஸ், மிசீரினஸ் என எரதோதசு குறிப்பிட்டுள்ளார். கிசேயில் அமைக்கப்பட் டுள்ள பெரிய பிரமிட் சமாதியின் உயரம் 484 அடி. இது 13½ ‘ஏக்கர்’ தரையை மூடியிருக்கின்றது. இதைக் கட்டுவதற்கு ஒவ்வொன்றும் இரண் டரை “டன்” பாரமுள்ள 2,300,000 சுண்ணாம்புக் கற்கள் பயன்படுத்தப் பட்டுள்ளன. சில கற்கள் 150 டன் பாரமுள்ளன. இதனைக் கட்டி முடிப்பதற்கு 100,000 அடிமைகள் இருபது ஆண்டுகள் உழைத்தார்கள். இரண்டாவது பிரமிட் சமாதிக்கு முன்னால் வெட்டப்பட்டுள்ள மனிதமுகச் சிங்கத்தின் உயரம் 75அடி. நீளம் 150 அடி. அதன் முகத்தின் குறுக்கு அளவு 18 அடி 8 அங்குலம். அதன் மூக்கின் நீளம் 5 அடி 7 அங்குலம். பயிர்ச்செய்கை இப்பொழுது நைல் நதிக் கழிமுகத்தில் காணப்படும் துருத்திகள் முன்பு குடாக்கடலாக விருந்தன. இப்போது இத் துருத்திகளில் அறுபது இலட்சம் மக்கள் பருத்தியைப் பயிரிட்டு ஏராளமான பஞ்சை வெளிநாடுகளுக்கு அனுப்புகிறார்கள். நீல ஆறு ஆண்டில் ஒருமுறை பெருக்கெடுக்கின்றது. அப் பெருக்கு முன்பின் நூறு நாட்களுக்கு நிலைக்கும்; ஆற்றுநீர் இவ்வாறு அணைகடந்து பெருகுவதால் பாலைநிலம் செழிப்படைகின்றது. அங்கு நாகரிகம் மிகமிக முற்காலத்தில் தோன்றியிருந்ததற்குக் காரணம் இதுவே. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக எகிப்திய மக்கள் ஆறு பெருகும் காலங்களை ஆவலுடன் எதிர்பார்த்திருப்பது வழக்கம். இன்றும் கெய்ரோ வீதிகளில், பிரசித்தம் செய்வோர் ஆற்றுப் பெருக்கின் நிலையைப்பற்றித் தினம் காலையில் அறிவிப்பார்கள். வெள்ளப்பெருக்கைக் கட்டுப்படுத்தாவிட்டால் அது வயல்களை அழித்துவிடும் என மக்கள் அறிந்திருந்தார்கள். வரலாறு தொடங் காத காலத்திலேயே மக்கள் ஒன்றை ஒன்று குறுக்கும் நெடுக்குமாகக் கடந்து செல்லும்படி பல அகழிகளை வெட்டினார்கள். மேற்கொண்டு பெருகும் நீர் அகழிகளில் தங்கிற்று. ஆற்றுப் பெருக்குக் குறைந்தபோது நீர்இறை கூடை களால் இறைத்து வயல்களுக்குப் பாய்ச்சப்பட்டது. கோதுமை நீல ஆற்றை அடுத்த நிலங்களில் தானாக விளைவ தில்லை. ஆகவே, மிகப் பழைய காலத்திலேயே எகிப்தியர் பருவ காலங்களில் விளையும் தானியங்களைப் பயிரிட அறிந்திருந்தார்கள் எனத் தெரிகின்றது. எகிப்திய நாடு பயிர்ச் செய்கைக்கு மிக வாய்ப்புடையதாயிருந்தது. அதிக வேலை புரியாமலே தானியம் விளைவிக்கப்பட்டது. மற்றைய நாட்டவர் நிலத்தைக் கலப்பையால் உழுதும், மண்வெட்டியால் கொத்தியும் அதிகம் உழைத்துத் தானியத்தை விளைவித்தனர். நீலநதி பெருகியபோது வயல்களில் நீர் பெருகிற்று. வெள்ளம் வற்றியபோது ஒவ்வொருவனும் தனது வயலை விதைத்தான். தானியங்கள் மண்ணில் புதையும்படி உழக்கப் பன்றிகள் விடப்பட்டன. பின்பு அறுப்புக் காலத்தை அவர்கள் எதிர்பார்த் திருந்தார்கள். மரங்களில் ஏறிப் பழங்கள் பறிக்கும்படி குரங்குகள் பழக்கப்பட் டிருந்தன. நீல ஆறு பெருகி வயல்களில் நீர் பாய்ந்தபோது ஆயிரக்கணக் கான மீன்கள் குளங்களில் தங்கின. மீன் பிடிக்கப் பயன்படுத்திய வலைகளை மக்கள் இராக் காலங்களில் கொசு வலைகளாகப் பயன்படுத்தினர். ஆற்று நீர் பாய்ச்சுவதால் குடிகள் இலாபம் அடையவில்லை. எல்லா நிலங்களும் அரசனுக்குரியன. அவைகளைப் பயன்படுத்துவோர் அரசனுக்கு வருவாயில் பத்திலொன்றை வரியாகக் கொடுத்தனர். சிற்றரசர் போன்ற பிரபுக்களுக்கும் செல்வருக்கும் சொந்தமான பெரிய நிலங்கள் இருந்தன. இவ்வகை நிலம் ஒன்றில் பதினையாயிரம் பசுக்கள் நின்றன. இதைக்கொண்டு ஒவ்வொரு நிலத்தின் பரப்பும் எவ்வளவென்று நாம் உய்த்து அறியலாம். தானியவகை, இறைச்சி, மீன் என்பன முக்கிய உணவுகளா யிருந்தன. செல்வர் உணவுக்கு மேல் முந்திரிகைச் சாற்றைக் குடித்தார்கள். பொதுமக்கள் கோதுமையில் வடித்த மதுவைப் பருகினார்கள். குடிகளின் வாழ்க்கை வருந்தத்தக்கதாக இருந்தது. கால்வாய் வெட்டுதல், வீதிகள் அமைத்தல், அரசினர் நிலங்களைத் திருத்துதல், பிரமிட் சமாதிகள் கட்டுவதற்குப் பெரிய கற்களை இழுத்தல், கோயில், அரண்மனை அமைத்தல் போன்றவைகளுக்கு மக்கள் கூலியின்றி வேலை செய்தல் கட்டாயமாக இருந்தது. வயல் வேலை செய்யும் கூலியாட்கள் தமது வறுமையில் திருப்தியடைந்திருந்தார்கள். அவர்களுட் பெரும் பகுதியினர் அடிமைகளாவர். இவர்களுட் பலர் போர்களில் பிடித்து அடிமைகளாக்கப் பட்டவர்; சிலர் கடனுக்காக அடிமைகளாக்கப் பட்டவர். சில சமயங்களில் அடிமைகளைப் பிடிப்பதற்குத் தொலைவிடங்களுக்கு ஆயுதம் தாங்கிய கூட்டங்கள் சென்றன. அடிமைகளாகக் கொண்டுவரப்பட்ட பெண்களும் சிறுவர்களும் நல்ல விலைக்கு விற்கப்பட்டார்கள். கைத்தொழில்கள் குடிகள் வேலை செய்தபோது செல்வம் மிகுந்தது. கைத்தொழிலும் வாணிபமும் புரிவோருக்கு உணவுப்பொருள்கள் ஒதுக்கிவைக்கப்பட்டன. எகிப்தில் உலோகம் கிடைப்பதில்லை. ஆகவே அவர்கள் அதனை அராபியாவிலும் நியூபியாவிலும் இருந்து பெற்றனர். எகிப்திய அரசர் போரிற் சிறைபிடிக்கப் பட்டவர்களையும், சிறைத் தண்டனை பெற்றவர்களையும் சிறைச்சாலைகளில் கூட்டங்களாக அடைத்து வைத்தனர். இவர்கள் தனிமையாகவும், சில சமயங்களில் குடும்பங்களோடும் பொன் சுரங்கங்களில் வேலை செய்யும்படி போக்கப்பட்டனர். அவர்கள் புரிந்த குற்றங்களுக்காகப் பழிவாங்கும் பொருட்டு இவ்வாறு செய்யப்பட்டது. பழைய அரச பரம்பரைக் காலத்திலேயே எகிப்தியர் செம்பைத் தகரத்தோடு கலந்து வெண்கலம் செய்ய அறிந்திருந்தனர். வாள், தலைக்கவசம், கேடயம் முதலியவும், வெண்கல வண்டிச் சக்கரங்கள், உருளைகள், மிண்டிகள், கம்பிகள், ஆப்புகள், சங்குப் புரிஆணிகள், கற்களை அறுக்கும் அரிவாள்கள் போன்றவை வெண்கலத்தினால் செய்யப்பட்டன. மரவேலை செய்வதில் அவர்கள் திறமை அடைந்திருந்தனர். மரக்கலம், வண்டி, நாற்காலி, கட்டில், சவப்பெட்டி போன்ற அழகிய பொருள்கள் செய்யப்பட்டன. விலங்குகளின் தோலிலிருந்து ஆடை, அம்பறாத் தூணி, கேடகம், மணை போன்ற பொருள்கள் செய்யப்பட்டன. சமாதிச் சுவர் ஒன்றில் ஒருவன் தோல் பதனிடும் காட்சி எழுதப்பட்டுள்ளது. தோல் பதனிடுபவனின் கையில் வைத் திருப்பதுபோன்ற கத்தியை இன்றும் எகிப்தில் தோல் வேலை செய்வோர் பயன்படுத்துகின்றனர். பைபிரஸ் என்னும் நாணலிலிருந்து கயிறுகள், பாய்கள், செருப்பு, கடுதாசி முதலியவை செய்யப்பட்டன. பொருள்களுக்குச் சாயம் பூசுதல், மரப்பொருளுக்குப் பசைக்கூழ் (வார்னிஷ்) பூசுதல் போன்ற தொழில்கள் அறியப்பட்டிருந்தன. அழகிய சணல் ஆடைகள் நெய்யப்பட்டன. நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன் நெய்யப்பட்ட ஆடைகளைப் பட்டோ சணலோ என்று அறிவதற்குப் பூதக்கண்ணாடி மூலம் பார்க்கவேண்டி யிருக்கின்றது. முற்கால எகிப்தியரின் கை நெசவுத் துணிகள் இக்கால இயந்திர நெசவுத் துணிகள் போன்றவை. நீராவிப் பொறிகள் கண்டு பிடிக்கப்படுவதன் முன் வாழ்ந்த சமீபகால மக்கள் பழைய எகிப்தியரிலும் பார்க்க எவ்வகை யிலாவது அதிக திறமையுடையவர்களல்லர். வேலை புரிவோரில், ஒரு பகுதியினர் அடிமை களும், மற்றொரு பகுதியினர் அடிமைகளல்லா தோருமாயிருந்தனர். இன்று இந்தியாவில் காணப் படுதல்போல ஒவ்வொரு தொழில் செய்வோரும் ஒவ்வொரு சாதியினராயிருந்தனர். பிள்ளைகள் தந்தை செய்த தொழிலையே செய்தார்கள். பெரிய போர்களில் ஆயிரக்கணக்கான மக்கள் அடிமைகளாகக் கொண்டு வரப்பட்டனர். அவர்கள் பெரிய நிலங்களில் வேலை செய்வதற்கும் கட்டடங்கள் அமைப்பதற்கும் பயன் படுத்தப்பட்டனர். மூன்றாம் இராம்சே என்னும் அரசன் தனது ஆட்சியில் 113,000 அடிமைகளைக் கோவில் களுக்குக் கொடுத்தான். கைத்தொழில் புரியும் அடிமை களல்லாத தொழிலாளர் கண்காணி ஒருவனின்கீழ்க் கூட்டாக வேலை செய்தார்கள். கூட்டாக வேலை செய்வ தால் கிடைக்கும் ஊதியம் தனித்தனி ஒவ்வொரு வருக்கும் பகுந்து அளிக்கப்பட்டது. வேலையாட்கள் வேலைக்குச் செல்லாது இடையிடையே கூட்டாக நின்றுவிடுவது பொதுநிகழ்ச்சி. எகிப்தியரின் கட்டடமமைக்கும் முறை கிரேக்கர் உரோமர் அறிந்திருந்தவைகளிலும் மேலானது. மூன்றாம் செனுசறெற் என்னும் அரசன் ஆற்று நீரைத் தடுத்துக் குளமாக்குவதற்கு 27 மைல் நீளமுள்ள பெருஞ்சுவர் ஒன்றை எடுத்தான். இதனால் 25,000 ஏக்கர் நிலம் நீர்பாய்ச்சிப் பயிர் செய்வதற்கு ஏற்றதாக்கப்பட்டது. நீல ஆற்றையும் செங்கடலையும் இணைக்கும் வாய்க்கால்கள் வெட்டப்பட்டன. ஆயிரம் ‘டன்’ பாரத்துக்கு மேற்பட்ட கற்றூண்கள் நெடுந்தொலைவுக்கு எடுத்துச் செல்லப்பட்டன. பெரிய கற்பாளங்கள் கொழுப்புப் பூசிய குற்றிகள் மீது வைத்து ஆயிரக் கணக்கான அடிமைகளால் இழுத்துச் செல்லப்பட்டன. பொறிகள் அருமை யாக இருந்தன. ஆட்களின் வேலை மலிவாக இருந்தது. சமாதிச் சுவர் ஒன்றில் எழுதப்பட்டுள்ள ஓவியத்தில் இரண்டு பெரிய கற்றூண்கள் ஏற்றப் பட்ட மரக்கலத்தை, எண்ணூறுபேர் தண்டு வலித்து ஓட்டும் இருபத்தேழு மரக்கலங்கள் இழுத்துச் செல்லும் காட்சி காணப்படுகின்றது. நூறு அடி நீளமும் ஐம்பதுஅடி அகலமுமுள்ள மரக்கலங்கள் நீலநதியிலிருந்து செங் கடலுக்குச் சென்று மத்தியதரைக் கடலை அடைந்தன. நிலத்தில் சுமைகள் மக்களால் கொண்டு செல்லப்பட்டன. பிற்காலங்களில் கழுதைகள் பயன் படுத்தப்பட்டன. தாலமிகள் காலம்வரையில் ஒட்டகங்கள் காணப்பட வில்லை. வறிய மக்கள் நடந்து அல்லது ஒட்டகத்தின் மீது சென்றார்கள்; செல்வர் அடிமைகளால் சுமக்கும் சாய்வு நாற்காலியில் இருந்து சென்றார்கள். பிற்காலங்களில் தேர்கள் பயன்படுத்தப் பட்டன. எகிப்தில் ஒழுங்கான அஞ்சல் போக்குவரத்து நடைபெற்றது. போக்கு வரத்து மிகக் கடுமையாக இருந்தது. நன்றாயமைக்கப்படாத சில வீதிகளே இருந்தன. வாணிக முறை மிகப் பழம் போக்காக இருந்தது. அயல்நாட்டு வாணிகம் சிறிது சிறிதாக வளர்ந்தது. வழிகளில் அமைக்கப்பட்டிருந்த சுங்கச் சாவடிகளில் சுங்கம் பெறப்பட்டது. எகிப்து அயல் நாடுகளிலிருந்து மூலப் பொருள்களை வாங்கிக் கைத்தொழில் பண்டங்களை வெளிநாடுகளுக்குப் போக்கிற்று. சிரியா, கிரேத்தா, சைபிரஸ் முதலிய நாடுகளின் வணிகர் எகிப்தியச் சந்தைகளில் கூடினர். பினீசிய மரக்கலங்கள் நீல ஆற்று வழியாகத் தீப்ஸ் நகரை அடைந்தன. நாணயப் புழக்கம் வளர்ச்சி அடைய வில்லை. அரசாங்க வேலையாளரின் சம்பளங்கள், தானியம், உரொட்டி, மது போன்ற வகைகளில் கொடுக்கப்பட்டன. எகிப்திய அரசரின் கருவூலத்தில் பணம் இருக்கவில்லை. அது வயல்களிலும், கடைகளிலும் கிடைக்கும் ஆயிரக்கணக் கான பண்டங்களின் பண்டகசாலையாக இருந்தது. மூன்றாம் துத்மோஸ்1 என்ப வனுக்குப்பின் பண்டங்களின் விலை, மோதிரங்கள் அல்லது பொன் துண்டுகள் வகையில் கொடுக்கப்பட்டது. விலைகளின் அளவுக்கு இவைகள் நிறுத்துக் கொடுக்கப்பட்டன. ஆனால் அரசாங்கத்தாரால் விலை குறிப்பிடப்பட்ட நாணயங்கள் வழங்கவில்லை. கடன் கொடுத்து வாங்கும் முறை அதிகம் வளர்ச்சியடைந்திருந்தது. இதற்கு ஆவணங்கள் எழுதப்பட்டன. ஆவணங்கள் எழுதும் எழுத்தாளர் பலர் இருந்தனர். எகிப்திய எழுத்தாளன், தன் கையில் வைத்திருப்பதைவிடச் சிறப்பாகக் காதில் ஒரு எழுதுகோலை வைத்துக்கொண்டும் அட்டணைக் கால் கட்டிக்கொண்டும் இருப்பான். அரசாங்கம் எழுத்தாளரையுடைய நிலையங்கள் மூலம் எகிப்திய அரசரும் பிரபுக்களும் நாட்டில் ஒழுங்கையும் நியாயத்தையும் காப்பாற்றி வந்தார்கள். பழைய எழுத்துப் பொறித்த பட்டையங்களில் அவ்வகை எழுத்தாளர் மக்கள் தொகையைக் கணக்கு எடுத்தல், வருமான வரி தொடர்பான கணக்குகளைச் சோதித்தல் முதலியவைகளைச் செய்தார்கள் என்பது கூறப்பட்டுள்ளது. நீல ஆற்றுப்பெருக்கை அளப்பதற்கு எழுத்தாளர் சிலர் இருந்தனர்; அதனைக் கொண்டு அவ்வாண்டின் தானிய விளைவையும், அரசாங்கத்தின் வருங்கால வருவாயையும் கணக்குச் செய்து வருவாய்க் கேற்ப அரசாங்கப் பிரிவு களுக்கு முன்னமே செலவு ஒதுக்கப்பட்டது. எழுத்தாளர் சிலர் வாணிகத்தை மேற்பார்த்தார்கள். வரலாற்றின் தொடக்கத்திலேயே ஒழுங்கு செய்யப்பட்ட இவ்வகைப் பொருளாதாரத் திட்டம் உண்டாயிருந்தது. கொடுத்தல், வாங்குதல், நிலம், குற்றம் தொடர் பான சட்டங்கள் மிக வளர்ச்சி யடைந்திருந்தன. ஐந்தாவது அரச பரம்பரைக் காலத்தில் தனிப்பட்ட சொத்துரிமை பற்றிய சட்டங்கள் மிகச் சிக்கலாக இருந்தன. நமது காலத்தைப் போல எல்லோருக்கும் நியாயம் ஒரேவகையாக இருந்தது. நியாயாதிபதி, வழக்காளி எதிரிகளின் வாக்குமூலங்களை எழுதி ஒப்பிட்டுப் பார்த்துத் தீர்ப்புச் செய்தான். பொய்ச் சத்தியஞ் செய்தவனுக்கு மரணதண்டனை விதிக்கப் பட்டது. சிற்றரசர் நாடுகளில் சிறிய நியாயத் தீர்ப்பு இடங்களும், மெம்பிஸ், தீப்ஸ், ஹெலியோ பொலிஸ் முதலியவிடங்களில் பெரிய நியாயத் தீர்ப்பு இடங்களும் இருந்தன. குற்றவாளிகளிடத்திலிருந்து உண்மை பெறும்பொருட்டு வேதனை கொடுக்கப்பட்டது. கம்பினால் அடித்தல் பொதுவான தண்டனையாக இருந்தது. மூக்கு, காது, கை, நா முதலிய உறுப்புகள் வெட்டவும்பட்டன. சுரங்கங்களில் வேலை செய்யும்படி போக்குதல், திருகிக் கொல்லுதல், தலையைக் கொய்தல், தூணில் கட்டி நெருப்பினால் கொளுத்துதல் போன்ற தண்டனைகளும் விதிக்கப்பட்டன. சதையை அரித்துத் தின்னும்படி உடல் முழுவதும் ஒருவகை மருந்தைப் பூசிவிடுவது தண்டனைகள் எல்லாவற்றுள்ளும் கொடியதாகும். உயர்ந்த வகுப்பினர் பலர், மக்கள் முன்னிலையில் கொலைத்தண்டனை அடை யாமல் தம்மைத்தாமே கொன்றுகொள்ளும்படி அனுமதிக்கப்பட்டார்கள். இக்காலக் காவலர் (போலீஸ்) போன்றவர்கள் இருக்கவில்லை. எகிப்து, வனாந்தரத்துக்கும் கடலுக்கும் இடையில் இருந்தமையால் அதனைக் காப்பதற்குப் பெரும்படை வேண்டியிருக்கவில்லை. அரசனுக்கு அடுத்தபடியில் பெரிய தலைவன் அமைச்சனாக இருந்தான். இவன் முதல் மந்திரியாகவும் கருவூலத் தலைவனாகவும் கடமை ஆற்றினான். அரசனின் நியாயத் தீர்ப்பே எல்லாத் தீர்ப்புகளுக்கும் முடிவாயிருந்தது. நேரக்கூடிய பெரிய பொருட்செலவைக் கட்சியினர் பொருட்படுத்தவில்லையாயின் வழக்கு அரசன் முன் கொண்டுவரப்பட்டது. அவன் நாட்டைச் சுற்றிப் பயணஞ் செய்தபோது காணியாளராகிய பிரபுக்கள் அவனைத் தமது எல்லைகளில் எதிர்கொண்டு காணிக்கைகள் வழங்கி மரியாதை செய்தனர். இரண்டாம் அமென் அரொப் என்னும் அரசனுக்குப் பிரபு ஒருவன் பொன்னாலும், வெள்ளியாலும் செய்த வண்டிகளையும், தந்தத்தாலும், கருங்காலி மரத்தினாலும் செய்த பாவைகளையும்; அணிகலன்களையும், போர் ஆயுதங்களையும், 680 கேடகங்களையும், 140 வெண்கல ஈட்டிகளை யும், விலை உயர்ந்த உலோகங்களால் செய்த பலவகை ஏனங்களையும் கொடுத்தான். இவ் விபரம் பழைய பட்டையம் ஒன்றிற் பொறிக்கப்பட் டுள்ளது. அரசனுக்குத் துணைபுரியும் பெருமக்கள் சபை ஒன்று இருந்தது. அரசன் குருமாரின் துணையைப் பெற்றுத், தான் கடவுளின் வழித்தோன்றல் எனக் கூறினான். இறந்தபின் அவன் கடவுளாக மாறுகின்றான் என்னும் நம்பிக்கை இருந்து வந்தது. அரசன் கடவுள் போன்ற தோற்றப்பொலிவோடிருந்தான். அவனைச் சூழ்ந்து மெய்காப்பாளர் நின்றனர். அவர்களில் சிலர் படைத்தலைவர்; சிலர் அரசனுக்கு ஆடைகட்டி அலங்கரிப்பவர்; பலர் உயர்ந்த பதவிகளி லுள்ளோராவர். அவனுடைய மேனியை அலங்கரிக்கும் பொருள்களை மேற்பார்ப்பதற்கு இருபது கருமகாரர் இருந்தார்கள். நாவிதன் அவனுடைய முகத்தை மழித்து மயிரைக் கத்தரித்தான். தலையை அலங்கரிப்பவர்கள் அவனை நீராட்டித் தலையில் முடியை வைத்தார்கள்; சிலர் அவனுடைய நகங்களை மினுக்கினார்கள்; வாசனை ஊட்டுவோர் அவன் உடலுக்கு நறுமணம் ஊட்டினர்; கண்ணிமைக்கு மை தீட்டினர்; இதழ்களுக்கும் கன்னங்களுக்கும் சிவப்பு நிறம் பூசினர். ஒழுக்கம் அரசன் பெரும்பாலும் தன் சகோதரியை மணந்தான். மக்களிடையும் இவ்வகைத் திருமணங்கள் பரவின. கிறித்துவுக்குப்பின் இரண்டாம் நூற்றாண்டில் எகிப்திய மக்களில் மூன்றில் இரண்டு பங்கினர் இவ்வகை வழக்கம் உடையவர்களாயிருந்தனர். அவன் மனைவியரல்லாத பெண்களும் அரசனுடைய அந்தப்புரத்தில் இருந்தார்கள். அவர்கள் போர்க் காலங்களில் பகைவர் நாடுகளிலிருந்து பிடிக்கப்பட்டவர்களும், பிரபுக்களின் குமாரிகளும், சிற்றரசரால் கொடுக்கப்பட்டவர்களுமாவர். மூன்றாம் அமென்ஹொரெப் என்பவனுக்கு நஹரினா நாட்டு அரசன் தனது மூத்த குமாரியையும் முந்நூறு கன்னிப் பெண்களையும் கொடுத்தான். பிரபுக்களின் நிலைமைக்கேற்ப அவர்களிடையேயும் இவ்வகை ஆடம்பரங்கள் இருந்தன. நடுத்தரமான வருவாயுடைய மக்கள் ஒரே பெண்ணை மணந்தனர். இக் கால ஆடவர் மகளிர் ஒழுக்கங்கள் போலவே அக்கால எகிப்திய ஆடவர் மகளிரின் ஒழுக்கங்கள் உயர்ந்த பண்புடையனவாயிருந்தன. முற்காலத்தில் திருமண நீக்கங்கள் மிக அருமையாக இருந்தன. பிந்திய அரச பரம்பரைக் காலத்தில் திருமண நீக்கங்கள் பொது நிகழ்ச்சியாக இருந்து வந்தன. ஒருவன் மனைவியைத் திருமண நீக்கம் செய்தால் அவன் குடும்பச் சொத்தில் நியாயமான ஒரு பகுதியைப் பெண்ணுக்குக் கொடுக்கவேண்டி யிருந்தது. இன்று பல நாடுகளிற் காணப்படுவது போலவே பெண்களின் நிலை உயர்வடைந் திருந்தது. முற்காலத்திலாவது இக்காலத்திலாவது எச்சாதியா ராவது எகிப்தியரைப் போலப் பெண்களுக்கு உயர்நிலை அளிக்கவில்லை. எகிப்திய ஓவியங்களில் பெண்கள் வீதிகளிலே தனியே போய்க்கொண்டும் வந்து கொண்டும் இருப்பதாகவும், பொது இடங்களில் உணவு உண்பதாகவும், கைத் தொழில், வாணிகங்களில் ஈடுபட்டிருப்பதாகவும் காட்சியளிக்கின்றனர். பெண்களை வீட்டில் கட்டுப்படுத்தி வைக்கும் கிரேக்கர் இவர்களின் விடுதலையைக் கண்டு ஆச்சரியமடைந்தனர். எகிப்தியக் கணவர் தம் மனைவியருக்குக் கீழ்ப்படிவதாகக் கலியாண உடன்படிக்கையில் கையெழுத் திட்டார்கள். தாயாட்சி முறையினால் எகிப்தியப் பெண்களின் நிலை சிறிது சிறிதாக உயர்வடைந்தது. பெண், வீட்டுக்குத் தலைவியாயிருந்தாள். சொத் துரிமையும் பெண் வழியாகவே இருந்துவந்தது. திருமணப் பதிவு காலத்திற் கணவன் தனது சொத்தையும் வருங்காலத் தேட்டத்தையும் பெண்ணுக்கே எழுதி வைத்தான். தாய்மூலம் பெண்ணைச் சேரும் சொத்துக்கு ஆசைப் பட்டே எகிப்தியர் சகோதரியை மணந்தார்கள். தாய்மூலம் குடும்பத்தை அடையும் சொத்தை அல்லது தாயத்தை அயலவன் ஆண்டனுபவிப்பதை அவர்கள் விரும்பவில்லை. தாலமிகள் என்னும் பிற்கால எகிப்திய அரசர் காலத்தில் கிரேக்கர் வழக்கங்கள் பரவியிருந்தன. அதனால் திருமண நீக்கத்தைப் பற்றிய உரிமை கணவனுக்கு மாத்திரம் அளிக்கப்பட்டது. இம் மாற்றம் உயர் குடும்பங்களில் மாத்திரம் கையாளப்பட்டது. பொதுமக்கள் தாயாட்சி முறையைப் பின்பற்றினார்கள். கோவில்களில் தேவதாசிகள் இருந்தனர். எகிப்தியர் தமது பழைய பழக்க வழக்கங்களையே நீண்டகாலம் பின்பற்றி வந்தனர். போர்வீரர் தாம் கொன்ற பகைவரின் வலக்கைகளை வெட்டிவந்து எழுத்தாளனிடத்தில் காட்டிப் பதிவு செய்தார்கள். மக்கள் சொக்கட்டான் போன்ற பலவகை விளையாட்டுகளை விளையாடினர். இக்கால விளையாட்டுப் பொருள்கள் போன்ற கோலி, பந்து, பம்பரம் போன்றவைகளைச் சிறுவர் வைத்து விளையாடினார்கள். மற்போர், குத்துச்சண்டை, மாட்டுச் சண்டை முதலியவை மக்களின் சிறந்த பொழுது போக்குகளாக இருந்தன. விருந்துக் காலங்களில் விருந்தாளிகளுக்கு ஏவலர் நறுமணம் பூசினார்கள்; பூமாலைகள் இட்டார்கள்; மது வகைகள் கொடுத்தார்கள். எகிப்திய ஓவியங்களில் ஆண்கள் சிவப்பு நிறமாகவும், பெண்கள் மஞ்சள் நிறமாகவும் எழுதப்பட்டுள்ளனர். பெண்கள் இக்கால முறையில் கூந்தலைக் கட்டையாக வெட்டியிருந்தார்கள். ஆடவர் பொய் மயிரை அணிவதற்கு வாய்ப்பாகத் தலையையும் மழித்துக் கொண்டார்கள். அரசன் பெரிய பொய் மயிர் அணிந்தான்; அவனுடைய முகத்துக்குச் சிவப்புப்பொடி பூசப்பட்டது; இதழ்களுக்குச் சிவப்புச் சாயம் ஊட்டப்பட்டது; நகத்துக்குக் கறுப்புச்சாயம் பூசப்பட்டது; தலைமயிருக்கு நெய் தடவப்பட்டது; கண்ணுக்கு மை தீட்டப்பட்டது. செல்வப் பெண்களை அடக்கஞ் செய்த சமாதி அறைகளுள் இருவகைச் சிவப்புச் சுண்ணங்களையும் எழுவகை நறுமணத் தைலங்களை யும் வைத்தார்கள். இவையல்லாத வேறு மேனி மினுக்குக்குள்ள பொருள்கள், முகம் பார்க்கும் கண்ணாடி, மயிர் மழிக்கும் கத்தி, மயிர் சுருட்டி, கொண்டை ஊசி, சீப்பு, சுண்ணம் வைக்கும் சிமிழ்கள், மரம், தகரம், கல்நார் அல்லது வெண்கலத்தினால் செய்யப்பட்ட தட்டுகள், கரண்டிகள் என்பவை. ஆடைகளுக்கும் மேனிக்கும் பலவகை மணப்பொருள்கள் ஊட்டப்பட்டன. வீடுகள், கரிய போளம், பிற மணப்பொருள்கள் என்பவை களால் நறும்புகை ஊட்டப்பட்டன. எகிப்தில் ஆண் பெண் என்னும் இருபாற் சிறுவரும் பன்னிரண்டு பதிமூன்று வயதுகள் வரையில் நிர்வாணமாகச் சென்றனர். அவர்கள்; கழுத்து மாலையும் காதணியும் அணிந்தனர். பெண் குழந்தை களின் அரையில் மணிகள் கோத்த வடம் அணியப் பட்டது. பொதுமக்களும் வேலையாள்களும் அரையில் ஒரு உடை மாத்திரம் உடுத்திருந்தனர். பழைய எகிப்தில் ஆடவரும் மகளிரும் அரைக்குமேல் நிர்வாணமாகச் சென்றனர். உடை, முழங்கால் வரையும் மறையும்படி அரையில் கட்டப்பட்ட குறுகிய வெண் சணலாடை யாகும். நாணம் பழக்கத்தால் உண்டாவதேயன்றி இயற்கையாக உண்டாவதன்று. முதல் அரச பரம்பரைக் காலக் குருமாரும் அரையில் ஆடையை உடுத்தினர். செல்வம் ஏற ஏற உடையும் அதிகப்பட்டது. வண்டி செலுத்துவோரும் பரிவாரங்களும் ஆடம்பரமான உடை அணிந்துகொண்டு தமது தலைவர்களின் தேர்கள் செல்வதற்கு வழியை ஆயத்தஞ் செய்யும்படி வீதிகளில் ஓடிச் சென்றார்கள். செல்வச் செழிப்புண்டான காலத்துப் பெண்கள் இறுக்கமாக உடுக்கும் உடைக்குப் பதில் தளர்ந்த அங்கியை அணிந்தார்கள். உடை யில் பல வகையான தையல் வேலைப்பாடுகள், சுருக்குகள், பாம்புகள் போன்ற வடிவங்கள் வைத்து அலங்காரங்கள் செய்யப்பட்டன. இருபாலாரும் அணிகலன்களை விரும்பினர். கழுத்து, மார்பு, மணிக்கட்டு, புயம், கெண்டைக்கால் முதலியவைகளில் அணிகள் அணியப்பட்டன. ஒவ்வொரு எழுதுவோனும் அல்லது வணிகனும் வெள்ளி அல்லது பொன்னினாற் செய்த முத்திரையை வைத்திருந்தான்; ஒவ்வொரு ஆடவனும் மோதிரமணிந்திருந்தான். ஒவ்வொரு பெண்ணும் அலங் கரிக்கப்பட்ட சங்கிலி அணிந்திருந்தார்கள். பதினெட்டாவது அரச பரம்பரைக் காலத்தில் ஆண் பெண் சிறியவர் பெரியவர் என்ற பேதமின்றி எல்லோரும் காதில் துளையிட்டுக் காதணி அணிந்தார்கள். இருபாலாரும் விலை உயர்ந்த கற்கள் கோத்த மாலைகளையும் பிற நகைகளையும் அணிந்தார்கள். அக்கால எகிப்தியப் பெண், மேனி மினுக்குத் தொடர்பாக இக்காலப் பெண்ணிடம் கற்றுக்கொள்ளவேண்டியது யாதும் இல்லை. கல்வி இன்றைய உரோமானியக் கத்தோலிக்கக் கோயில்களையொப்பப் பள்ளிக் கூடங்கள் கோயிலோடு இணைக்கப்பட்டிருந்தன. குருமார் செல்வரின் பிள்ளைகளுக்குக் கல்வி கற்பித்தார்கள். பழைய பள்ளிக்கூட அழிபாடு ஒன்றில் அக் காலத்தில் எண்ணப் பயன்படுத்திய சிப்பிகள் காணப்படுகின்றன. ஆசிரியரின் வேலை அரசாங்கத்துக்கு எழுத்து வேலை உதவும் எழுத்தாளரை உண்டாக்குவதே. மாணாக்கருக்கு எழுச்சி உண்டாகும் பொருட்டு ஆசிரியர் கல்வியைப்பற்றி ஊக்கம் எழுப்பக்கூடிய கட்டுரைகள் எழுதினார். “உலகில் ஒருவனுக்குக் கீழ் அடங்கி வாழாத தொழிலாளி இல்லை; படித்தவன் தன்னைத்தானே ஆள் கின்றான்” என ஒரு பைபிரஸ் ஏட்டில் காணப்படுகின்றது. பழங்கால மாணவர் பயன்படுத்திய பயிற்சி ஏடுகள் காணப்படு கின்றன. ஓரத்தில் விடப்பட்டுள்ள எழுதப்படாத பகுதியில் ஆசிரியர் திருத்தம் செய்திருக்கின்றார். முக்கியக் கல்வி வாசகம் எழுதுதல். அது சூளை யிட்ட களிமண் தட்டு அல்லது சுண்ணாம்புக்கல் தட்டுகளில் எழுதப்பட்டது. கல்வி வாணிக சம்பந்தமாக இருந்தது. பள்ளிக்கூடங்களில் மாணவர் தம் குற்றங்களுக்கு முதுகில் அடிக்கப்பட்டார்கள். அரசாங்கக் கருவூலத்தோடு இணைக்கப்பட்டிருந்த உயர்ந்த பள்ளியில் கோயில் தொடர்பாக மாணவருக்கு உயர்ந்த கல்வி அளிக்கப்பட்டது அரசினர் கல்விச்சாலையில் இளம் எழுத்தாளர்களுக்கு ஆட்சிமுறை போதிக்கப்பட்டது. கல்வி முடிந்ததும் அவர்கள் கருமத் தலைவர்களின்1 கீழ் சிலகாலம் பழக்கம் பெற்றனர். இவ்வாறு கல்வி முறை எகிப்திலும் பாபிலோனிலும் வளர்ச்சி யடைந்தது. உயர்தரக் கல்வி பயிலும் மாணவர் கடுதாசியைப் பயன்படுத்தினர். அக் காலக் கடுதாசிகள் பைபிரஸ் என்னும் நாணலைப் பிளந்து குறுக்கும் நெடுக்குமாக வைத்து அழுத்தப்பட்டவை. ஐயாயிரம் ஆண்டுகளின் முன் எழுதப்பட்ட பைபிரஸ் கையெழுத்துப்படிகள் இன்றும் அப்படியே இருக் கின்றன. இத் தாள்கள் ஒன்றின்பின் ஒன்றாக இடப்புறமாக ஒட்டப்பட்டுச் சுருட்டிவைக்கப்பட்டன. இவ்வகைப் புத்தகங்கள் சில நாற்பது அடி நீளம் வரையிலுள்ளன. புகையால் உண்டாகும் கரி, மரப்பிசின் முதலியவைகளைத் தண்ணீரில் கரைத்து மசி செய்யப்பட்டது. எழுதும் குச்சி நாணல் தண்டினால் செய்யப்பட்டது. அது நிறமசிகள் பூசும் தூரிகை1 போன்றது. இவர்களின் மொழி ஆசிய நாட்டிலிருந்து வந்ததெனத் தெரிகின்றது. மிகப் பழைய எழுத்துகள் ஓவிய வடிவுடையன. ஓவிய எழுத்துகள் என்பன பொருள்களை உணர்த்த அப் பொருள்களின் வடிவாக எழுதப்படும் ஓவியங்கள். வீட்டை உணர்த்த நீண்ட சதுர மெழுதி நீளமான ஒரு பக்கத்தில் ஒரு வெளிவிடப் பட்டது. பட வடிவிலிருந்து எண்ணங்களைக் குறிக்கும் குறியீடுகள் உண் டாயின. இக் குறியீடுகள் அவ் வடிவுடைய பொருள்களைக் குறிக்கவில்லை. சில கருத்துகளைக் குறித்தன. சிங்கத்தின் முன்புறம் ஆளும் தன்மையைக் குறித்தது. குளவி அரசத் தன்மையைக் குறித்தது. வாற்பேத்தை2 ஆயிரத்தைக் குறித்தது. நல்லது பொல்லாதது போன்ற மனத்தினால் மாத்திரம் அறியப்படும் தன்மைகளைக் குறிப்பதற்குப் பேச்சு வழக்கில் சில ஒலிக்குறிகள் இருந்தன. இவ் வொலிக்குறிகள் உணர்த்துவன போன்ற பெயர்களுடைய சில பொருள்களுமிருந்தன. ஆகவே, மனத்தினால் அறியப்படும் தன்மைகளை விளக்குவதற்கும் அப் பருப்பொருள்கள் எழுதிக் காட்டப்பட்டன. நொவேர் என்பது நல்லது என்பதை உணர்த்தும். குழலுக்கும் நொவேர் என்று பெயர். ஆகவே நல்லது என்பதை உணர்த்தக் குழல் எழுதிக் காட்டப்பட்டது. கோயிற் குருமார் ஓவிய எழுத்துகளிலிருந்து ஒருவகைச் சுருக் கெழுத்தைக் கண்டுபிடித்தார்கள். இது கிரேக்க மொழியில் ஹெராடிக் (Heratic) எனப்பட்டது. இவ்வெழுத்தைப் பொது மக்கள் வாணிகத்தின் பொருட்டும், ஆவணங்கள் எழுதும் பொருட்டும் பயன்படுத்தினர். இதிலும் சுருக்கமான இன்னொரு வகை எழுத்தும் கண்டுபிடிக்கப்பட்டது. இது டெமொடிக் (Demotic) எனப்பட்டது. இதனை எல்லாப் பொதுமக்களும் பயன்படுத்தினர். இலக்கியம் எகிப்தியரின் இலக்கியங்கள் ‘ஹெராட்டிக்’ எழுத்தில் எழுதி வைக்கப்பட்டுள்ளன. நாலாவது அரச பரம்பரைக் காலத்து எழுத்தாளன் ஒருவனின் கல்லறை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. அதில் அங்கு அடக்கஞ் செய்யப்பட்டவன் புத்தக நிலையத்தின் எழுத்தாளன் எனக் குறிக்கப்பட் டுள்ளது; அப்புத்தக ஆலயம் பழைய நூல் நிலையமோ அரசாங்க மூல ஆவண நிலையமோ என்று அறியமுடியவில்லை. சமாதி நூல்கள் எனப் பட்ட பழைய நூல்களே கிடைத்துள்ளன. இவை ஐந்தாம் ஆறாம் அரச பரம்பரையினரின் சமாதிச் சுவர்களில் எழுதப்பட்டுள்ளன. கி.மு. 2,000 முதல் எகிப்தில் பல நூல் நிலையங்கள் இருந்தன. நூல்கள் பைபிரஸ் தாளில் எழுதப் பட்டவை. அவை சுருட்டிச் சாடிகளில் வைத்துத் தட்டுகளில் வரிசையாக வைக்கப்பட்டிருந்தன. நூல்களின் பெயர்கள் சாடிகளில் எழுதி ஒட்டப் பட்டுள்ளன. இவ்வகைச் சாடி ஒன்றிற் காணப்பட்ட நூல் ஒன்றில் சின்பாட் என்னும் கடலோடியின் கதை காணப்படுகின்றது. எகிப்தியரின் இலக்கியங் களில் கதைகள் பல காணப்படுகின்றன. அவர்களின் பழைய இலக்கியங்கள் சமயத் தொடர்புடையன. பிற்கால இலக்கியங்களில் காதல், சமயம் முதலியன சம்பந்தப் பட்ட பாடல்கள் காணப்படுகின்றன. எகிப்தியர் இசையைப்பற்றி நன்கு அறிந் திருந்தார்கள்; பாட்டில் இசையும் உணர்ச்சியும் சிறந்தவை என அவர்களால் கொள்ளப்பட்டது. இவைகள் அமைந்தபோது அவைகளின் வெளித்தோற்றம் கவனிக்கப்படவில்லை. சில சமயங்களில் பாடல்களின் அடிகளின் முதற் சொற்கள் ஒரேவகையாக இருந்தன; சில பாடல்களின் சொற்கள் ஒரே வகையாக இருந்தன; ஆனால் சொற்களின் பொருள் வேறுபட்டிருந்தன. எகிப்தில் வரலாறு மிகப் பழங்காலம் முதல் எழுதப்பட்டுவந்தது. எகிப்திய அரச பரம்பரைக்கு முற்பட்ட அரசரும் வரலாறுகளை எழுதி வந்தனர். படை எடுப்புக் காலங்களில் வரலாறு எழுதுவோர் அரசனுடன் சென்றார்கள். அவர்கள் அரசரின் வெற்றியைப் புகழ்ந்து எழுதினார்கள். வரலாறு எழுதுவது அழகுக் கலைபோல் கருதப்பட்டது. கி.மு. 2,500இல் எகிப்திய அரசரின் பெயர்கள் எழுதி வைக்கப்பட்டிருந்தன. எல்ல நாடு களிலும்போல எகிப்திலும் மொழி மாறத் தொடங்கிற்று. நெடுங்காலம் பழைய மொழியிலேயே நூல்கள் எழுதப்பட்டுவந்தன. மாணவர் அம் மொழியின் இலக்கணத்தையும் நிகண்டையும் கற்று அவைகளை மொழிபெயர்த்தார்கள். கி.மு. 14வது நூற்றாண்டில் புலவர்கள் புரட்சிசெய்து நூல்களை மக்கள் வழங்கும் மொழியில் எழுத ஆரம்பித்தார்கள். பின்னும் ஒரு முறை எழுத்து நடையும் பேச்சு நடையும் வேறு வேறாக மாறுபட்டன. அக் காலத்தில் பழைய இலக்கியங்கள் பேச்சு நடையில் மொழிபெயர்க்கப்பட்டன. இவ் வழக் காறும் மாற்றங்களும் கிரேக்க அராபிய உரோமன் மக்களிடையும் நிகழ்ந்தன. கணிதமும் விஞ்ஞானமும் எகிப்தில் கல்வி கற்றவர்கள் பெரிதும் குருமாராவர். இவர்கள் வாழ்க்கை கொந்தளிப்பின்றி இருந்தது. அவர்களுக்குக் கோயில்களில் எல்லா வாய்ப்புகளும் இருந்தன. எல்லா வகையான மூட நம்பிக்கைக ளிடையே அவர்களே விஞ்ஞானத்தைத் தோற்றுவித்தார்கள். அவர்களின் பழங்கதைகளில் தொத்1 என்னும் அறிவுக் கடவுள் எகிப்தை 3,000 ஆண்டு ஆண்டார் எனக் காணப்படுகின்றது. அவர் ஆட்சிக்காலத்தில் முன்பின் கி.மு. 18,000 வரையில் விஞ்ஞானம் கண்டுபிடிக்கப்பட்டதென அவர்கள் நம்புகிறார்கள். இக் கடவுள் விஞ்ஞானத்தைப்பற்றி இருபத்தையாயிரம் பகுதிகளடங்கிய நூல் எழுதிவைத்தார். எகிப்திய வரலாற்று ஆரம்ப காலத்தில் கணக்கு அதிக வளர்ச்சி யடைந்திருந்தது. பிரமிட் சமாதி கட்டுவதற்கு அளவைப்பற்றிய கணக்கு அதிகம் தேவைப்பட்டது. எகிப்தியர் நைல் ஆற்று ஓரங்களில் தங்கிருந்தமை யால் அவர்கள் அவ்வாற்றின் வற்றுப் பெருக்குகளை அளந்து குறிப்பிட்டு வந்தார்கள். அளவுகாரரும் எழுத்தாளரும் எப்பொழுதும் ஆற்றினால் நீர் பாய்ச்சப்பட்ட நிலங்களை அளந்து கணக்குச் செய்தார்கள். இதனால் நில அளவை தொடர்பான கல்வி வளர்ச்சியடைந்தது. இக் கல்வி எகிப்திலேயே உண்டானதென்பதை எல்லாப் பழைய மக்களும் ஏற்றுக்கொண்டார்கள். வான ஆராய்ச்சியாளர் கோயில்களிலிருந்து வான சோதிகளை நோக் கினார்கள். அவர்கள் பூமி தட்டையான நீண்ட சதுர வடிவுடையதென்றும் அதன் நான்கு மூலைகளிலும் மலைகளிருந்து வானத்தைத் தாங்குகின்றன என்றும் கருதினார்கள். அவர்கள் கிரகணங்களைக் குறித்துவைக்கவில்லை. குருமார் தாம் அறிந்திருந்த வான சாத்திரக் கல்வியை மற்றவர்கள் அறியாதபடி மறைத்துக் காப்பாற்றி வந்தனர். அவர்கள் நட்சத்திரங்களையும் கிரகங்களையும் வேறுபடுத்தி அறிந்தனர்; கிரகங்களும், நட்சத்திரங்களும் மக்களுக்கு நேரும் நன்மை தீமைகளுக்குக் காரணமாயுள்ளன என்று கருதினார்கள். அவர்கள் ஆண்டை மூன்று பருவ காலங்களாகப் பிரித்தனர். ஒன்று நீலநதியின் பெருக்குவற்றுங் காலம்; மற்றது பயிரிடுங் காலம்; மூன்றாவது அறுப்புக்காலம். அவர்களின் ஒவ்வொரு மாதமும் முப்பது நாள்கள் கொண்டது. பன்னிரண்டு மாதங்களுக்குப்பின் ஐந்து நாள்கள் சேர்க்கப் பட்டன. ஓர் ஆண்டு 365¼ நாள்களாகக் கொண்டு நாலு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு நாளைச் சேர்த்து 366 நாள் ஓர் ஆண்டு எனக் கணக்கிடும் முறை யூலியர் சீசர் காலத்தில் (கி.மு. 46) உண்டாயிற்று. எகிப்தியர், உடலைத் தைலமிட்டுப் பக்குவஞ் செய்து வந்தமையால் இவர்கள் மனித உடலைப்பற்றி அதிகம் ஆராய்ச்சி செய்யவில்லை. இரத்தக் குழாய்கள், காற்றையும் நீரையும் சில நீர்ப்பொருள்களையும் கொண்டு சென்றன வென்றும், இருதயமும் குடலும் மனத்தின் உறைவிடமென்றும் நம்பினார்கள். எகிப்திய மருத்துவர் நெற்றி பிடரி கை கால் என்பவைகளைத் தொட்டுப் பார்த்து இருதயம் தொழிற்படுவதை அறிந்தார்கள். எகிப்திலே மருத்துவம் குருமாரிடத்தில் ஆரம்பித்தது. அவர்களின் நம்பிக்கைகள் மந்திர வித்தையில் தோய்ந்திருந்தன. மருந்துக் குளிகை களிலும் பார்க்கத் தாயத்துகளே நோயைப் போக்குவன என்றும், நோய்கள் பேய்கள் பிடிப்பதால் உண்டாகின்றன வென்றும் நம்பினார்கள். நோய்கள் மந்திர வித்தையால் போக்கப்பட்டன. ஒவ்வொரு மருத்துவனும் ஒவ்வொரு நோய்க்கு மருத்துவம் செய்தான். ஒவ்வொரு நோய்க்கும் பயன்படுத்தும் மருந்துகள் கண்டு பிடிக்கப்பட்டிருந்தன. ஒரு பைபிரஸ் ஏட்டில் பாம்புக்கடி முதல் பிள்ளையைப் பெற்ற பெண்ணுக்கு உண்டாகும் சுரம் வரையிலுமுள்ள நோய்களுக்கு எழுநூறு மருந்துகள் கூறப்படுகின்றன. சுத்தத்தினால் நோயைப் போக்கலாம் என எகிப்தியர் நம்பினார்கள். குளித்து முழுகி உடம்பைச் சுத்தமாக வைத்திருத்தல், விரதமிருத்தல், வாயாலும் வயிற்றாலும் போக மருந்து உட்கொள்ளுதல் போன்ற முறைகளை அவர்கள் கையாண்டார்கள். எகிப்தியர் திங்களில் மூன்று நாள்கள் அடுத்து வயிற்றால் போகும்படி மருந்து உண்டார்கள் என்றும், வாந்தி எடுக்கும் மருந்தையும் உட்கொண்டார்கள் என்றும், மலவாசல் மூலம் குழாய் வைத்து மலத்தை எடுக்கும் முறையைக் கையாண்டார்கள் என்றும் எரதோதசு கூறியுள்ளார். கட்டடம், ஓவியம், இசை முதலியன பழைய கலைகளுள் கட்டடக் கலை முக்கியமுடையது. அது சமாதிக் கட்டடங்களை அலங்கரிப்பதிலும் வீடுகளின் வெளிப்புறங்களை அலங்கரிப் பதிலும் தொடங்கி வளர்ச்சியடைந்தது. வீடுகள் பெரும்பாலும் களிமண்ணால் கட்டப்பட்டன. மர வேலைப்பாடுகளும் இருந்தன. வீட்டைச் சுற்றி முற்றமும் முற்றத்தைச் சுற்றிச் சுவரும் இருந்தன. வெளி முற்றத்திலிருந்து கூரைக்குப் படிக்கட்டுகள் சென்றன. குடியிருப்பவர்கள் நாற்புறங்களிலுமுள்ள அறைகளுக்கு அப் படிகளால் இறங்கிச் சென்றார்கள். செல்வர்களின் வீடுகளோடு தோட்டங்கள் இணைந்திருந்தன. நகரங்களில் பொதுமக்கள் தங்கும் சோலைகள் இருந்தன. வீட்டுச் சுவர்களில் நிறமூட்டிய பாய்கள் தொங்கவிடப்பட்டிருந்தன. நிலத்துக்கு முரடான துணி விரிக்கப்பட்டிருந்தது. மக்கள் அதன்மீது இருந்தார்கள். பழைய எகிப்தியர் ஆறு அங்குலம் உயரமுள்ள மணைமீது குந்தியிருந்து உணவு உண்டார்கள். செல்வர் மெத்தை இடப்பட்ட நாற்காலிகளைப் பயன்படுத்தினர். கட்டடம் அமைக்கும் கல் மிக விலையுடையதாயிருந்தது. அரசரும் குருமாரும் கட்டடங்களைக் கல்லினால் அமைத்தார்கள். பிரபுக்கள் அதிகப் பணத்தையும் கட்டடம் அமைத்தற்கு வேண்டிய பொருள்களையும் கோவில் களுக்குக் கொடுத்தனர். பன்னிரண்டாவது அரச பரம்பரைக் காலத்தில் பிரமிட் சமாதி கட்டும் வழக்கம் நின்றுபோயிற்று. குநுப்கொதப (கி.மு.2,180) என்னும் அரசன் தூண்கள் பலவற்றை வரிசையாக நாட்டி விநோதமான சமாதி ஒன்றை அமைத்தான். இதைப் பின்பற்றி நைல் நதியின் மேற்குச் சரிவுகளில் ஆயிரம் வகையான கட்டடங்கள் எழுந்தன. வரலாற்றில் எகிப்தியரே மிகப்பெரிய கட்டடம் அமைப்போராயிருந்தனர். இவர்கள் பெரிய கற்சிற்பிகளுமாவர். செப்ரின் (Chepren) அரசனின் பிரமிட் சமாதிக்கு முன்னால் காணப்படும் மனிதமுகச் சிங்கம் எகிப்தியரின் சிற்பத் திறமைக்குச் சான்றாக விளங்குகின்றது. இறந்தவரின் உருவச் சிலைகள் பெரும்பாலும் சமாதிக்குள் வைப்பதற்காகச் செய்யப்பட்டன. சிலைகள் செய்யவேண்டிய முறைகள் சமய சம்பந்தம் பெற்றிருந்தன. அவர்கள் உலோகம், கல் என்பவை களில் கடவுளர், அரசர், அடிமைகளின் வடிவங்களையும், விலங்குகளும், பறவைகளின் உருவங்களையும், வியக்கத் தக்கனவாகச் செய்தனர். சமாதிச் சுவர்களில் மிக அழகிய ஓவியங்கள் எழுதப்பட்டுள்ளன. மரக்கலங்கள், மரஞ்செடிகள், பறவைகள், ஊர்வன, விளைநிலங்கள், மலைகள், கடல் உயிர்கள் போல்வன அவைகளுட் சில. நெசவாளர் பலவகை ஆடைகளை நெய்தனர். வீடுகளில் பயன் படுத்தப்படும் பலவகை மரத்தளவாடங்கள் செய்யப்பட்டன. நாற்காலிகள் பொன்னாலும் வெள்ளியாலும் அலங்கரிக்கப்பட்டன. ஆபரணச் சிமிழ், மணப்பொருள்களை இட்டு வைக்கும் பேழைகள் போன்ற அழகிய பொருள் கள் செய்யப்பட்டன. வெள்ளி, பொன், வெண்கலம், பளிங்கு முதலியவை களாற் செய்யப்பட்ட ஏனங்கள் மேசைகள் மீது வைக்கப்பட்டன. கழுத்தணி, முடி, மோதிரம், முகம் பார்க்கும் கண்ணாடி, சங்கிலி முதலியவை வெள்ளி, பொன் முதலியவைகளாலும் நிறக்கற்களாலும் செய்யப்பட்டன. வீட்டு வேலை முடிந்ததும் பெண்கள் யாழ், குழல், வீணை முதலியவைகளை வாசித்தனர். கோயில்களிலும் அரண் மனைகளிலும் பாட்டு, கூத்து முதலியவை நடைபெற்றன. அரசன் இவைகளைப் பார்த்தும் கேட்டும் களிப்பதற்குப் பாடுவோரையும் ஆடுவோரையும் ஆயத்தஞ் செய்கின்ற வர்கள் பலர் இருந்தனர். சமயம் எகிப்தியர் சமயத்தை எல்லாவற்றுக்கும் மேலாகக் கொண்டார்கள். இந்திய நாட்டிற்போல எகிப்திலும் தெய்வங்கள் மிகப் பலவாயிருந்தன. எகிப்தியரின் பெரிய கடவுள் விண். விண்ணில் இயங்கும் மீன்கள் வலிய தெய்வங்களாகக் கொள்ளப்பட்டன. ஹதர் என்னும் பெரிய பசுக்கடவுள் விண்ணின் மீது நின்றது. அதன் பாதங்களில் தரை கிடந்தது. அதன் வயிற்றில் பதினாயிரம் விண்மீன்கள் கிடந்து அழகு செய்தன. நோம்ஸ் எனப்பட்ட சிற்றரசர்களின் தெய்வங்களும் அவைகளைப்பற்றிய பழங்கதைகளும் வெவ்வேறாக இருந்தன. விண் தெய்வம் சுப எனப்பட்டது. அது தரைமீது மெதுவாகப் படுத்திருந்தது. தரை, நூயிட் (Nuit) என்னும் பெண் தெய்வம் எனப்பட்டது. வானம், பூமி என்னும் இரண்டின் சேர்க்கையினால் எல்லாப் பொருள்களும் தோன்றின. இராசி களும் விண்மீன்களும் பெரிய தெய்வங்களாகக் கொள்ளப்பட்டன. சாகு என்னும் கடவுள் தெய்வங்களை ஒரு நாளில் மூன்று முறை விழுங்கிற்று. இவ்வெட் என்னும் பெரிய தெய்வம் ஒன்று சந்திரனை விழுங்கிற்று. தேவர்கள் கோபித்தமையால் அது சந்திரனை வெளியே கக்கிற்று. கிரகணம் உண்டாவதை எகிப்தியர் இவ்வாறு விளக்கினர். ஞாயிறும் திங்களும் பெரிய தெய்வங்கள். ஞாயிறு இரா அல்லது ரீ எனப்பட்டது. அது ஒவ்வொரு காலையிலும் தோன்றும்; தெய்வத் தன்மையுடைய தோணியில் சென்று ஆகாச வீதியைக் கடக்கும்; ஒவ்வொரு மாலையும் மேற்கே மறைந்து போகும். ஞாயிறு ஆண்கன்று வடிவிலும் வழிபடப்பட்டது. வானத்துக் கூடாகத் தினம் பறந்து செல்லும் கழுகாகவும் கொள்ளப்பட்டது. கழுகு எகிப்திய சமய அரச அடையாளமாகும். எகிப்தியர் பல செடிகளைத் தூய்மை யுடையனவாகக் கருதினர். வனாந்தரத்தில் நிழல் செய்யும் பேரீந்து, பசுந்தரை களிற் காணப்படும் நீரூற்று, இளைப்பாறத் தகுந்த சோலைகள், மணலில் வளரும் அத்தி முதலியன பரிசுத்த முடையன. எகிப்தியர் அவைகளுக்கு வெள்ளரிக்காய், முந்திரிகைப் பழம், அத்திப்பழம் முதலியவைகளைப் பலியாகக் கொடுத்து வழிபட்டனர். வெண்காயத்தை அவர்கள் தெய்வமாகக் கொண்டனர். எருது, முதலை, கழுகு, பசு, வாத்து, வெள்ளாடு, ஆட்டுக்கடா, பூனை, நாய், கோழிக் குஞ்சு, தூக்கணங்குருவி, நரி, பாம்பு முதலியவை கோயில்களுக்கு நேர்ந்து விடப்பட்டன. அவை கோயிலில் அலைந்து திரியும். கோயிலுக்குரிய விலங்குகள் வழிபடப்பட்டன. அவை இன்று இந்தியக் கோயில்களில் அலைந்து திரியும் கோயில் மாடுகள் போன்றவை. ஆடும் எருதும் ஒசிரிஸ் என்னும் தெய்வத்தின் பிறப்புகளாகக் கருதப்பட்டன. இசிஸ் எகிப்தியரின் தாய்க்கடவுள். இரா என்னும் கடவுள் தெற்கே வாழ்ந்த மக்களால் அமன் எனப்பட்டது. ஒசிரிஸ், இசிஸ், ஓரஸ் என்னும் தெய்வங்கள் எகிப்தியரின் பெரிய கடவுளராவர். இரா, அமன், பிதா என்போர் எகிப்தியரின் மும்மூர்த்திகள். அரசனும் ஒரு தெய்வமாக இருந்தான். அவனுடைய கையில் கழுகும், நெற்றியில் பாம்பும் இருந்தன. அரசன் குருமாருக்குத் தலைவன். பெரிய விழாக்களில் அவனே ஊர்வலங்களின் முன்பு சென்றான். அவனைக் கடவுள் என மக்கள் நம்பினமையால் அவர்கள் அவனுக்குப் பணிந்து அடங்கி நடந்தார்கள். அவன் தனது வலிமையைப் பயன்படுத்தவேண்டிய அவசியம் உண்டாகவில்லை. குருமார் அரசனின் துணைவர்களாகவும், அரசாங்க உளவாளர்களாகவும் இருந்தனர். இவர்கள் மந்திர வித்தை தொடர்பான பல கிரியைகளை வகுத்திருந்தார்கள். மக்கள் கடவுளைக் கிட்டுவதற்குத் தாம் இன்றியமையாதவர்கள் எனக் கொண்டனர். குருவின் மகன் குருவாக இருக்க வேண்டும் என்னும் சட்டம் இருக்க வில்லை; ஆயினும் குருவின் மகன் குருவாக வந்தமையால் அவ் வகுப்புப் பெருகிற்று. அரசரின் ஆதரவினாலும் பொது மக்களின் பக்தியினாலும் குருமார், செல்வமும் அதிகாரமும் உடையவர்களாயினர். அவர்கள் காணியாளராகிய பிரபுக்களிலும், அரச குடும்பத்தினரிலும் பார்க்க மேலான நிலையில் இருந்தனர். தெய்வங்களுக்கு இடப்படும் பலிகள், காணிக்கை இவைகளால் அவர்களுக்கு நிறைய உணவு கிடைத்தது. கோயில் அவர்களின் விசாலமான வீடுகளாக இருந்தது. கிரியைகள் புரிவதாலும், கோயில் நிலங்களாலும் அவர்களுக்கு நிரம்பிய வருவாய் கிடைத்தது. இவர்களுக்கு எல்லா வரிகளும் நீக்கப்பட்டிருந்தன. போரில் சேவித்தல், கட்டாய வேலைகள் முதலியன இவர்களைக் கட்டுப்படுத்தவில்லை. மற்றவர்கள் பொறாமை கொள்ளக்கூடிய அதிகாரமும் செல்வமும் உடையவர்களாயிருந்தனர். கல்வி இவர்கள் வசம் இருந்தது. கல்வியைக் காப்பவர்கள் இவர்களே. இவர்கள் இளைஞருக்குக் கல்வி யளித்தார்கள். இவர்களுக்கு அதிகாரம் உண்டா வதற்கு இது முக்கிய காரணமாகும். எகிப்தியர் இறந்தவர்களின் உடல்களைப் பக்குவஞ்செய்து புதைத்து வைத்தார்கள். இவர்கள் நம்பிக்கைகளிலிருந்தே இறந்தவர் உயிர்த்தெழுதல் என்னும் கொள்கை கிறித்துவ மதத்திற் பரவிற்று. பரு உடலோடு சேர்ந்து நொய்ய உடல் ஒன்று இருக்கின்றதென்றும், மரண காலத்தில், பறவை கூட்டை விட்டுப் பறந்துபோதல் போல் அது உடலை விட்டுப் பறந்து செல்கின்ற தென்றும் இவர்கள் நம்பினார்கள். அந் நுண்ணிய உடல் கா எனப்பட்டது. கா வில் உயிர் தங்கியிருந்தது. கா வும் உயிரும் இறப்பதில்லை. உடலைப் பாதுகாத்து வைத்தால் கா நீண்ட காலம் இருக்கும். பாவம் சிறிது மில்லாத இறந்தவர்கள் கா உடலில் ஒசிரிஸ் என்னும் கடவுளுக்கு முன் வந்தால் எல்லா மகிழ்ச்சிகளும் உள்ள உலகில் எப் பொழுதும் வாழவிடப்படுவர். ஒசிரிசை அடைவதற்கு ஓடத்தில் ஏறிச்செல்லு தல் வேண்டும். பாவமில்லாத ஆடவரையும் மகளிரையும் மாத்திரம் ஓடக் காரன் ஓடத்தில் ஏற்றுவான். ஒசிரிஸ் என்னும் தெய்வத்துக்குமுன் சென்ற வுடன் அத் தெய்வம் ஒவ்வொருவரையும் விசாரணை செய்யும்; அவர்கள் சொன்ன உண்மையை அறிவதற்கு அவர்களின் இருதயத்தை ஒரு தட்டிலும் மற்ற தட்டில் ஒரு இறகையும் வைத்து நிறுக்கும். இந்தச் சோதனையில் தவறினவர்கள் எப்பொழுதும் சமாதி அறையில் தங்கும்படி திரும்ப அனுப்பப்படுவார்கள். அங்கு அவர்கள் பசி தாகம் முதலியவைகளால் வருந்திக்கொண்டும் முதலைகளால் துன்பம் அடைந்துகொண்டும் தங்குவார்கள். ஞாயிற்றின் ஒளியைக் காணும்படி அவர்கள் வெளியே வருதல் முடியாது. இச் சோதனையில் தேறுவதற்குக் குருமார் பல வழிகளை அறிந்திருந் தார்கள். சமாதி அறையில் பசி தாகத்துக்கு வேண்டிய உணவு, நீர் முதலியவை களையும் உதவிக்கு வேண்டிய வேலையாள்களையும் விட்டுவைப்பது ஒன்று. மற்றொன்று சமாதி அறையில் மீன், பருந்து, பாம்பு, வண்டு முதலிய வைகளைப் போல் செய்த உருவங்களை வைத்தல். குருமாரால் நன்கு மந்திரிக்கப்பட்டால் இவை எல்லாப் பகைகளையும், தீமைகளையும் ஓட்டும். இன்னொருமுறை மரணப் புத்தகத்தைப் புதைப்பது. இப் புத்தகத்தில் பல மந்திரங்களும் துதிகளும் எழுதப்பட்டுள்ளன. இவை ஒசிரிஸ் தெய்வத்தை மகிழ்விக்கத்தக்கன. குருமார் நீதிகளை மக்களுக்குப் போதிப்பதற்குப் பதிலாகத் தாயத்துகளை விற்றார்கள்; மந்திர வித்தைகள் சம்பந்தமான கிரியைகள் புரிந்தார்கள். மரணமடைந்தவருக்கு வழியில் நேரும் நூற்றுக்கணக்கான இடையூறுகளை மரணப்புத்தகத்தால் வெல்லலாம் என அந் நூல் கூறுகின்றது. நேர்மையாக வாழ்தலிலும் பார்க்க மந்திரங்களை உச்சரிப்பதால் அதிக நன்மை உண்டாகும் என மக்கள் நம்பினார்கள். தேவர்களில் ஒருவர் இன்னொருவருக்கு எதிராக மந்திரங்களைப் பயன்படுத்தினர். எகிப்தியரின் இலக்கியங்கள் மந்திர வித்தைக்காரரைப்பற்றி அதிகம் கூறுகின்றன. அவர்கள் மந்திரத்தினால் குளங்களை வற்றச் செய்தார்கள்; துணியுண்ட உறுப்புகளை உரிய இடங்களில் பொருந்தும்படிச் செய்தார்கள். ஒவ்வொரு வீட்டின் வாயிலிலும் தீய ஆவிகளை ஓட்டும்படி ஒரு கடவுள் இருந்தது. ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு நாளும் யாதும் ஒரு தெய்வத்துக்கு உரித்தாய் இருந்தன. ஒருவன் பிறந்த நாளையும் நேரத்தையும் கொண்டு வாழ்நாளில் அவனுக்கு என்ன நேரும் என்று அறியப்பட்டது. இறந்தவர்களை அவர்கள் செல்லும் உலகில் நன்மைப்படுத்தும் மந்திரங்கள் பல இருந்தன. இக்கந்தன் என்னும் அரசன் கி.மு. 1,380இல் இக்கந்தன் என்னும் அரசன் பட்டத்துக்கு வந்தான். இவன் நாலாம் அம்கொதெப் எனவும் அழைக்கப்பட்டான். பட்ட மெய்தியதும் இவன் கோயிற் குருமாருக்கு மாறாகப் புரட்சி செய்தான். கோயில்களில் ஆடுகள் பலியிடப்படுவதையும், வியபிசாரங்கள் நடப்பதை யும் வெறுத்தான். குருமார் மந்திரவித்தை, தாயத்துகள் விற்றல் முதலியவை களைக் கொண்டு வாணிபம் புரிதல், வெளிப்பாடு கூறுதல் முதலியவை அரசாங்க ஊழல்கள் என்றும், குருமாரின் வார்த்தைகள் மக்களுக்குத் தீமை விளைவிப்பன என்றும் துணிந்தான்; பல கடவுளர் வணக்கம் தீயது என்று அறைந்தான்; அதன் என்னும் ஒரே கடவுள் மாத்திரம் வழிபடப்படுதல் வேண்டுமெனக் கட்டளை செய்தான். அதன் கடவுள் எல்லா நல்ல குணங் களும், எல்லா ஆற்றலும், எங்கும் நிறைந்திருக்கும் இயல்பும் உடையர் எனக் கொள்ளப்பட்டார். அதன் வழிபாட்டுக் குரியனவல்லாத எல்லாக் கோயில் களையும் மூடும்படி அரசன் கட்டளையிட்டான்; தீப்ஸ் நகரம் புனிதமுடைய தன்று எனக்கொண்டு அகேரான் என்னும் நகரை அமைத்து அதைத் தலைநக ராகக் கொண்டான். குடிகள் குருமாரின் கட்டுகளினின்றும் விடுபட்டுச் சேமமாக வாழ்ந்தார்கள். செல்வமும் அதிகாரமும் மிகுந்த குருமாரை அரசன் ஒரே அடியில் வீழ்த்திவிட்டான். குருமார் திரை மறைவிலிருந்து அரசனுக்கு மாறாகச் சதி ஆலோசனைகள் செய்தனர். தூதன் காபன் இக்கந்தன் மரணமான இரண்டு ஆண்டுகளின்பின் அவன் மகளின் கணவனான தூதன் காபன் ஆட்சியை ஏற்றான். இவன் குருமாரின் நண்பனாயிருந்தான். இப்பொழுது குருமார் முந்திய அரசன் செய்ததற்கு மாறாகத் தமது கொள்கைகளை நாட்டினர். இவனுடைய சமாதியில் அளவில்லாத விலையுயர்ந்த பொருள்கள் கிடைத்தன. அச் சமாதியில் கிடைத்த பொருள்களின் மதிப்பு 30,000 தங்க நாணயம் வரையிலாகும். இவனுடைய ஆட்சிபற்றி யாதும் தெரியவில்லை. இவனுக்குப்பின் ஹர்ம ஹால் ஆட்சி புரிந்தான்; முதலாம் சேதி என்பவன் இவனுக்குப்பின் அரசனா னான். கர்நாக் என்னும் இடத்தில் அபிசிபெல் மலையில் கட்டப்பட்ட இவ் வரசனின் சமாதி சமீபகாலத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இவனுக்குப்பின் இரண்டாம் இராம்சே ஆட்சி புரிந்தான். அவன் பாலத்தீனை வெற்றிகொண்டு அங்குநின்றும் பல யூதரை அடிமைகளாகக் கொண்டுவந்தான். பைபிளின் பழைய ஏற்பாட்டிலே யாத்திரை ஆகமத்தில் சொல்லப்படும் எகிப்திய அரசன் இவன் என்று கருதப்படுபவன். இறக்கும்போது இவனுக்கு நூறு புதல்வரும் ஐம்பது புதல்வியரும் இருந்தனர். இவனுடைய பிள்ளைகள் மிகப் பலராயிருந்தமையின் அடுத்த நூறு ஆண்டுகளில் அவர்கள் தனிக் கூட்டத்தினராகப் பெருகியிருந்தார்கள். அரசனுடைய அதிகாரத்திலும் பார்க்க இன்னொரு கூட்டத்தினரின் அதிகாரம் மேலாக இருந்தது. அக் கூட்டத்தினர் குருமாராவர். எல்லா நாடு களிலும் அரசருக்கும் குருமாருக்குமிடையில் அதிகாரத்தின் பொருட்டுப் போட்டி யிருந்து வந்தது. ஒவ்வொரு போரிலும் கிடைக்கும் கொள்ளைப் பொருளின் பெரும் பகுதி குருமாருக்குக் கொடுக்கப்பட்டது. மூன்றாம் இராம்சே காலத்தில் அவர்களிடம் 107,000 அடிமைகள் இருந்தார்கள். இது எகிப்திய சனத்தொகையில் முப்பதிலொருபகுதி; 750,000 ஏக்கர் நிலம் அவர்கள்வசம் இருந்தது. இது எகிப்தில் பயிரிடும் நிலம் முழுமையிலும் ஏழில் ஒரு பங்கு. அவர்களிடம் 500,000 ஆடுமாடுகளிருந்தன. அவர்கள் எகிப்திலும் சிரியாவிலுமுள்ள 169 நகரங்களின் வருவாயைப் பெற்றனர். ஒவ்வொரு ஆண்டும் குருமாருக்கு 32,000 கிலோகிராம் பொன்னும், பத்து இலட்சம் கிலோகிராம் வெள்ளியும், 18,50,000 மூட்டை தானியங்களும் கொடுக்கப்பட்டன. கருவூலத்தைப் பார்த்தபோது வேலையாள்களுக்குக் கூலி கொடுக்க யாதும் எஞ்சியிருக்கவில்லை. இந்நிலையில் அரசர் குருமாரின் அடிமைகளாதல் இயல்பேயாகும். இராம்சிட் காலத்தில் முதன்மைக் குரு அவனுடைய செங்கோலைப் பிடுங்கித் தானே ஆட்சிபுரிந்தான். அக் காலத்தில் பெரிய கோயில்கள் எழுந்தன. மூடக் கொள்கைகள் செழிப்படைந்தன. எல்லா வகையான முடிவு செய்வதற்கும் குருமார் நிமித்தம் பார்ப்பதைச் சிறப்பாகக் கொண்டனர். அயல்நாட்டவர் எகிப்தின் மீது படை எடுக்க ஆயத்தம் செய்யும் காலத்தில் நாட்டின் செல்வம் முழுமையும் குருமாரால் உறிஞ்சப்பட்டுவிட்டது. எகிப்தின் வீழ்ச்சி பாபிலோன், அசீரியா, பாரசீகம் முதலிய நாடுகள் பலமடைந்தன. எகிப்தோடு போட்டியிட்ட நாடுகள் ஒவ்வொன்றும் எகிப்தை வென்றன. கி.மு. 954இல் மேற்கு எல்லைப் பக்கங்களிலுள்ள இலிபியர் எகிப்தின் மீது படை எடுத்தார்கள். கி.மு. 722இல் எத்தியோப்பியர் தெற்கினின்றும் வந்து தம்மை முன் அடிமைப் படுத்திய எகிப்தியரைப் பழிவாங்கினர். கி.மு. 674இல் அசீரியர் எகிப்தை வென்று அதைத் தமது திறை நாடாக்கினர். கி.பி. 525இல் பாரசீகர் எகிப்தை வெற்றி கொண்டனர். கி.மு. 322இல் அலக்சாந்தர் எகிப்தை மாசிடோன் இராச்சியத்தின் பகுதியாக்கினார். கி.மு. 30இல் எகிப்து, உரோம இராச்சியத்தின் பகுதியாக மாறிச் சரித்திரத்திலிருந்து மறைந்தது. கி.பி. 650இல் முகம்மதியர் எகிப்தை வென்று கெய்ரோ நகரை அமைத்தார்கள். இப்பொழுது எகிப்தியர் அராபியரோடு கலந்தார்கள். அவர்களின் மொழியும் அரபி மொழியோடு கலந் துள்ளது. எகிப்து, இப்பொழுது முசிலிம்களுடைய அதிகாரத்தில் இருக்கின்றது. பாபிலோன் சுமேரியாவும் அக்கேடியாவும் சேர்ந்த நாடு பாபிலோனியாவாகும். யூபிராதஸ் தைகிரஸ் ஆற்று ஓரங்களில் கிடக்கும் அழிபாடுகளை இன்று காண்போர்கள் அவ்விடம் செல்வமும் அதிகாரமும் நிறைந்த மக்களின் தலைநகராக இருந்ததென ஒருபோதும் நினைக்கமாட்டார்கள். பாபிலோனியா சாலதியா1 என்றும் அறியப்படும். பாபிலோனின் முதலரசன் ஹமுரபி (கி.மு. 2,123 - கி.மு. 2,081). இவன் செமித்திய குலத்தவன். அராபியாவில் வாழ்ந்த பழைய மக்கள் செமித்தியர் எனப்பட்டனர். இவனுக்குச் சமாஷ் என்னும் ஞாயிற்றுக் கடவுள் சட்டங்களை அருளிச்செய்யும் காட்சியும், அச் சட்டங்கள் எழுதப்பட்ட கற்றூண் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் துணை கொண்டு அக்காலத்தில் வழங்கிய சட்டங்கள், மக்கள் வாழ்க்கை முதலிய பல செய்திகள் அறியப்படுகின்றன. பாபிலோனிய மக்கள்2 செமித்தியர் போன்ற தோற்றமும், இருண்ட மயிரும், தாடியும் உடையவர்களாயிருந்தனர். ஆண் பெண் என்னும் இரு பாலாரும் மயிரை நீளமாக வளரவிட்டனர். இரு பாலாரும் பாதம் வரையும் மறைக்கக்கூடிய வெண்சணலாடை உடுத்தார்கள்; உடலுக்கு நறுமணம் பூசினார்கள்; பெண்கள் இடது தோள் வெளியே தெரியும்படி விட்டார்கள். ஆடவர்கள் இரு தோள்களையும் மறைத்துச் சட்டையிட்டார்கள். செல்வம் வளர்ந்தபோது ஆடைகளுக்குப் பலவகை நிறங்கள் ஊட்டப்பட்டன; கோடு, வட்டம், புள்ளிபோன்ற பலவகை வேலைப்பாடுகள் செய்யப்பட்டன; மக்கள் காலுக்கு அழகிய செருப்புத் தரித்தனர்; ஆடவர் தலையில் பாகை வைத்தார்கள்; பெண்கள், கழுத்து மாலை, கைவளை முதலிய அணிகள் அணிந்தனர். ஆடவர் கையில் அழகிய கைத்தடிகளைக் கொண்டு திரிந்தனர். அவைகளின் தலைகளில் அழகிய வடிவங்கள் வெட்டப்பட்டிருந்தன. அவர் களின் அரைப்பட்டியில் அழகாக வெட்டப்பட்ட முத்திரைகள் தொங்கின. இவை அவர்களின் கையெழுத்தாகப் பயன்பட்டன. குருமார் தமது தோற்றத்தை மறைப்பதற்கு உச்சியில் நீண்ட முனையுடைய தொப்பியை அணிந்தனர். நாகரிகத்தை உண்டாக்கும் அதிக செல்வம் அழிவுக்கு ஏது வாகும். செல்வத்தினால் கலைகள் வளர்கின்றன; மக்கள் உல்லாசமாகவும் ஆடம்பரமாகவும் வாழ்கின்றனர். அதனால் மக்களின் போர்க்குணம் மழுங்கி விடுகின்றது. அப்பொழுது வலியுடையவர்களும் பசியுடையவர்களுமாகிய வெளியே யுள்ளவர்கள் படை எடுக்கிறார்கள். பாபிலோனின் கிழக்கு எல்லையில் காசைரீசர் (Kassites) என்னும் மக்கள் வாழ்ந்தார்கள். அவர்கள் பாபிலோனியரின் செல்வத்தைக் கண்டு பொறாமையடைந்தார்கள். ஹமுரபி இறந்து எட்டு ஆண்டுகளுள் இவர்கள் பல தடவை பாபிலோன்மீது படை எடுத்து நாட்டைச் சூறையாடினார்கள். இறுதியில் அவர்கள் வெற்றியாளராய் அங்கு அமர்ந்தார்கள். அறுநூறு ஆண்டுகளுக்குப் பின் காசரீசர்கள் வெளியே துரத்தப்பட்டார்கள். அடுத்த நானூறு ஆண்டுகளில் ஆட்சி குழப்பம் அடைந்திருந்தது. அப்பொழுது அசீரியர் பாபிலோனை வென்று அதனை நினேவாவின் ஆட்சிக்குட்படுத்தினர். பாபிலோனியர் கலகம் செய்தபோது சென்னாச்செரிப் என்னும் அசீரிய அரசன் பாபிலோனை முற்றாக அழித்தான். மீதியர் தலையெடுத்தபோது அசீரியரின் பலம் குறைந் திருந்தது. நபோபொலசார் என்னும் பாபிலேனியன் மீதியரின் துணையைப் பெற்றுப் பாபிலோனை அசீரியரிடமிருந்து விடுத்தான். இவனுக்குப் பின் இவன் குமாரனாகிய நெபுசட்னேசர்(Nebuchadnezar) ஆட்சிபுரிந்தான். இவனே பழைய ஏழு வியப்புகளில் ஒன்று எனப்பட்ட தொங்கு தோட் டத்தை(Hanging gardens) அமைத்தான். தொழிலாளர் பாபிலோனின் ஒருபகுதி காடாக இருந்தது. நெருங்கி வளர்ந்த புற்களினிடையே பாம்புகள் திரிந்தன. பாபிலோனிய அரசர் காடுகளில் சென்று சிங்கங்களோடு நேரிற் போர்செய்து அவைகளை வேட்டையாடினர். இது அரசரின் சிறந்த பொழுதுபோக்காகக் கருதப்பட்டது. நிலத்தின் பெரும்பகுதி வாரக்காரராலும் அடிமைகளாலும் பயிரிடப் பட்டது. சில பகுதி நிலத்துக்குரிய குடிகளால் பயிரிடப்பட்டது. புதிய கற்காலத்திற்போல நிலம் பாரையினாலும் மண்வெட்டியினாலும் கிளறப் பட்டது. பிற்காலத்தில் கலப்பை பயன்படுத்தப்பட்டது. ஆற்றுவெள்ளம் வயலுட் பாயாதபடி ஒவ்வொரு வயலையும் சுற்றிப் பெரிய வரம்புகள் கட்டப் பட்டிருந்தன. ஆறு பெருகும்போது வெளியே வழிந்துஓடும் வெள்ளம் கால்வாய்கள் மூலம் குளங்களில் தேக்கி வைக்கப்பட்டது; வேண்டிய காலங்களில் மடைகளைத் திறந்து வயல்களுக்கு நீர் பாய்ச்சப்பட்டது. ஏற்றங்களால் இறைத்து நீர் பாய்ச்சுவதும் வழக்கமாயிருந்தது. நீர் தேக்கி வைக்கப்பட்ட குளம் ஒன்றின் சுற்றளவு 140 மைல். வயல்களில் பலவகைத் தானியங்கள் விளைந்தன; பலவகைப் பழ மரங்கள் செழித்து ஓங்கின. முந்திரிகை, ‘அலிவ்’ முதலியன பாபிலோனி லிருந்து கிரீஸ், உரோம் முதலிய நாடுகளிற் பரவின. நாட்டில் செம்பு, ஈயம், இரும்பு முதலிய உலோகங்கள் அரித்தெடுக்கப்பட்டன; மண்ணெண் ணையும் எடுக்கப்பட்டது. ஹமுரபி காலத்தில் பயன்படுத்தப்பட்ட கல் ஆயுதங்களுக்குப் பதில் வெண்கல ஆயுதங்கள் செய்யப்பட்டன. உலோகங் களை உருக்கி வார்க்கும் தொழில் அறியப்பட்டிருந்தது. இவை வெளிநாடு களுக்குக் கொண்டுபோகப்பட்டன. வீடுகள், வைக்கோல் கலந்த களிமண்ணி னாலும், களிமண்ணில் அரிந்து காயவிடப்பட்ட கற்களினாலும், செங்கற்களாலும் எடுக்கப்பட்டன. உள்நாட்டுப் போக்குவரத்துக்குக் கழுதை பூட்டிய வண்டிகள் பயன் படுத்தப்பட்டன. கி.மு. 2,100இல் எழுதிய பட்டையமொன்றில் குதிரையைப் பற்றி முதன்முதல் சொல்லப்பட்டுள்ளது. அது கிழக்குத்தேசக் கழுதை எனப்பட்டது. மத்தியதரை நாடுகளின் வணிகர் பாபிலோன் நகரில் கூடி னார்கள். பாபிலோனியர் நாணயங்களைப் பயன்படுத்தவில்லை; கோதுமை, தானியம், பொன்துண்டு, வெள்ளி முதலியவை நாணயங்களுக்குப் பதில் பயன்படுத்தப்பட்டன. கடன் வாங்கியவன் கடனைத் திருப்பிக் கொடுக்க முடியாவிடின் அவனுடைய அடிமைகளை அல்லது பிள்ளைகளைக் கடன்காரன் பிடித்துக்கொள்ளப் பாபிலோனியச் சட்டம் அனுமதித்தது. ஆனால் அவன் அவர்களை மூன்று ஆண்டுகளுக்குமேல் வைத்திருத்தல் கூடாது. போர்களில் அகப்பட்ட பகைவர் அடிமையாக்கப்பட்டனர். பிற நாடுகளிற் சென்று கிராமங்களைத் தாக்கி அடிமைகளைப் பிடித்து வாணிகம் புரிவோரும் இருந்தனர். பட்டினங்களிலுள்ள வேலைகள் அடிமைகளால் செய்யப்பட்டன. பெண் அடிமைகள் தம்மை அடிமைகளாக வைத்திருக்கும் தலைவனின் தயவில் தங்கியிருந்தார்கள்; தலைவன் மூலம் பிள்ளைகளைப் பெற்றார்கள். அடிமைகள் கடனுக்காக ஈடு வைக்கவும் விற்கவும் பட்டனர். அவர்கள் இருப்பதிலும் இறந்துபோதல் இலாபம் எனத் தலைவன் நினைத் தால் அவன் அவர்களைக் கொன்றுவிடலாம். தப்பி ஓடிய அடிமையை ஒருவரும் வீட்டில் மறைத்து வைத்திருத்தல் கூடாது. அவ் வடிமையைப் பிடித்துக் கொடுப்பவர்களுக்கு வெகுமதி அளிக்கப்பட்டது. அடிமைகள் அல்லாத பொதுமக்களைப்போல இவர்களும் போருக்கு அல்லது பொது வேலைகளுக்குத் திரட்டப்பட்டார்கள். அடிமை ஒருவன் அடிமை யல்லாத பெண்ணை மணந்தால் அவனுடைய பிள்ளைகள் அடிமைகளாக மாட்டார்கள். தலைவன் விரும்பினால் அடிமையை விடுதலை செய்யலாம். சட்டம் அரசனால் பாபிலோன் ஆளப்பட்டது. காணியாளராகிய பிரபுக்கள் அரசனுடைய துணைவர்களாகவிருந்தனர். அப் பிரபுக்களின் அதிகாரம் சிறிதுசிறிதாக மறைதலும் வணிகராகிய செல்வரின் அதிகாரம் அதிகரித்தது. இவர்கள் அரசனுக்கும் பொதுமக்களும் இடைப்பட்ட நிலையிலுள்ளவர் களாவார். அரசனுக்குப் பின் நாடு அவன் விரும்பிய அவன் புதல்வர்களுள் ஒருவனைச் சேர்ந்தது. ஆட்சி அரசனால் அமைக்கப்பட்ட பிரபுக்கள் சபையால் நடத்தப்பட்டது. ஹமுரபி அரசனின் சட்டங்கள் கையாளப்பட்டன. தெய்வத்தின் பெயரால் நடத்தப்படும் சில சோதனைகளால் சில குற்றங்கள் முடிவு செய்யப்பட்டன. ஒருவன் மந்திர வித்தைக்காரனென்றோ, ஒருத்தி பரத்தை என்றோ குற்றஞ் சாட்டப்பட்டால் அவர்கள் யூபிராதஸ் ஆற்றில் எறியப் பட்டார்கள். நன்றாக நீந்தக் கூடியவர் சார்பில் கடவுள் இருந்தார். மந்திர வித்தைக்காரன் நீரில் மூழ்கி இறவாவிடின் குற்றஞ் சாட்டியவனின் சொத்தை அவன் பெற்றான். பரத்தைக் குற்றஞ் சாட்டப்பட்டவள் இறந்துவிட்டால், அவள் பரத்தையாவாள்! பிழைத்தால் குற்றமற்றவளாவாள். குருமார் நீதிபதி களாவர். கோயில்களில் நீதிமன்றங்கள் நடத்தப்பட்டன. ஒருவன் இன்னொரு வனின் கண்ணையோ பல்லையோ ஊனப் படுத்தினால் அவனுக்கு அதே தண்டனை விதிக்கப்பட்டது. ஒரு வீடு விழுந்து அதனை வாங்கியவனைக் கொன்றுவிட்டால், அதனைக் கட்டினவன் அல்லது கட்டுவித்தவன் மரண தண்டனை பெற்றான். சிறுமி ஒருத்தியை ஒருவன் அடித்துக் கொன்றுவிட்டால் அவனுடைய சிறுமி அவ்வாறு கொல்லப்பட்டாள். காலத்தில் தண்டனை களுக்குப் பதில் பணம் நட்ட ஈடாகக் கொடுக்கப்பட்டது. தந்தையை ஒருவன் அடித்தால் அவனுடைய கைகள் வெட்டப்பட்டன. சத்திர வைத்தியங் காரண மாக நோயாளி இறந்தால் அல்லது அவனுடைய கண்கள் பழுது அடைந் தால் மருத்துவனின் கைவிரல்கள் நறுக்கப்பட்டன. கற்பழித்தல், பெண் களைக் கடத்திச் செல்லுதல், கொள்ளை, திருடு, வேறு கணவனை மணத் தற்குக் கணவனைப் பெண் கொலை செய்தல், பெண்குரு மதுக்கடைகளில் நுழைதல், ஓடிப்போன அடிமையை வீட்டில் வைத்திருத்தல், போரில் பயந்து ஓடுதல், வீட்டுப் பெண் கவனக்குறைவாயிருத்தல் அல்லது சிக்கனமில்லாது செலவு செய்தல் போன்ற குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. ஹமுரபியின் சட்டத்தில் கொத்தர், செங்கல் சூளையிடுவோர், தையற்காரர், கற்கொத்தர், தச்சர் ஓடக்காரன், இடையன், கூலியாள் முதலியோரின் கூலிகள் குறிப்பிடப்பட்டுள்ளன. தந்தையின் சொத்து பிள்ளைகளைச் சமபங்காக அடைந்தது. கணவன் இறந்தபின் பெண் தனது மரணம் வரையில் குடும்பத் தலைவியாக இருந்தாள். குருமார் எழுத்தாளராக வேலைகள் புரிந்தனர். ஒருவன் மற்றொருவனைக் கொலைக்குற்றஞ் சாட்டி அக் குற்றத்தை உறுதிப் படுத்தாவிட்டால் குற்றஞ் சாட்டியவன் கொலைத்தண்டனை அடைந்தான். அரசனுடைய நீதிபதிகள் அடங்கிய விசாரணை சபை ஒன்று பாபிலோன் பட்டினத்தில் இருந்தது. சில சமயங்களில் அரசனே மேல் விசாரணைகளை நடத்தினான். தெய்வங்கள் அரசனுடைய அதிகாரம் சட்டங்களாலும், அதிகாரிகளாலும், குருமாராலும் கட்டுப்படுத்தப்பட்டிருந்தது. அரசன் கடவுளின் சார்பாளனாக (Agent) இருந்தான். கடவுள் பெயரால் வரிகள் விதிக்கப்பட்டன. குருமாரால் அரச அதிகாரம் வழங்கப்படும் வரையில் அரசனை உண்மையான அரசனாக மக்கள் கருதவில்லை. இவ்வகை அதிகாரம் வழங்கும் பொது குருமார் மார்டுக் என்னும் கடவுளை அலங்கரித்து அதனை ஊர்வலம் செய்தார்கள். அப்பொழுது அரசன் குருவைப்போல் உடை உடுத்தப்பட்டான். சுமேரிய பற்றேசி என்னும் கோயிற் குருமாராகிய சிற்றரசர் முதல் நெபுச்சட்னேசர் வரையில் நாடு குருமார் அதிகாரத்துக் குட்பட்டிருந்தது. தலைமுறைதோறும் கோயில்களின் செல்வம் வளர்ந்தது. தெய்வங்களின் தயவைப் பெறும் பொருட்டு அரசர் கோயில்களைக் கட்டினார்கள்; அவைகளுக்கு வேண்டிய அடிமைகளையும், தளவாடங்ளையும் கொடுத்தார்கள்; பெரிய நிலங்களை அவைகளுக்கு மானியங்களாக விட்டார்கள். போர்களில் சிறைபிடித்த அடிமைகளின் முதற் பகுதி கோயிலுக்குக் கொடுக்கப் பட்டது; கொள்ளைப் பொருள்களும் அவ்வாறு கொடுக்கப்பட்டன. பேரீந்தின் பழம், தானியம் போன்ற பொருள்கள், சில நிலங்களிலிருந்து கோயில்களுக்குக் கிடைத்தன. இவ்வாறு கிடைக்கத் தவறியபோது நிலங்கள் கோயில்களால் மேற்பார்க்கப் பட்டன. இவ்வாறு நிலங்கள் குருமாரின் கைக்கு மாறின. செல்வரும் வறியரும் இவ்வுலக வாழ்வில் தமது செம்மையை விரும்பிக் கோவில் களுக்கு அதிகப் பொருளைக் கொடுத்தார்கள். கோயிற் களஞ்சியங்களில் பொன், வெள்ளி, வயிரம், மணிகள் போன்ற விலையுயர்ந்த பொருள்கள் குவிந்தன. குருமார் இச் செல்வத்தைத் தாம் நேராகப் பயன்படுத்த முடியா திருந்தது. ஆகவே அவர்கள் பயிர்த்தொழில், கைத்தொழில் நடத்துவோ ராகவும், வட்டிக்குப் பணம் கொடுத்து வாங்குவோராகவு மிருந்தனர். அவர் களிடத்தில் பெரிய நிலங்கள் இருந்தன. அவைகளில் வேலை செய்வதற்கு அடிமைகளும் இருந்தார்கள். அவர்கள் அடிமைகளை மற்றவர்களிடத்தில் வேலை செய்யும்படி விட்டுக் கூலி பெற்றனர். குருமார் பெரிய வணிகராயு மிருந்தனர்; கோயிலிற் கிடைக்கும் காணிக்கைப் பொருள்கள் கோயிலிலுள்ள கடைகளுக்கு விற்கப்பட்டன. பலர் தமது உடமைகளை அவர்களிடம் நம்பிக்கை யிருந்ததால் கொடுத்து வைத்தார்கள். அவர்கள் ஆவணங்கள் எழுதுவோராகவும், வழக்குகளை விசாரணை செய்து தீர்ப்பளிப்போராகவும் இருந்தனர். சில சமயங்களில் அரசன் கோயிற் பணத்தைப் பயன்படுத்தினான். ஆனால் இது ஆபத்தான செயலாக விருந்தது. கோயிற் சொத்தில் ஒரு துரும்புதானும் பயன்படுத்துகின்றவர்கள் மீது குருமார் கொடிய சாபங்களைப் பொழிந்தார்கள் அரசனுக்குப் பொதுமக்களிடமுள்ள அதிகாரத்திலும் மேலாகக் குருமாருக்கு இருந்தது. அரசன் இறந்துபோகின்றவன். கடவுளர் எப்பொழுதும் இருப்பவர். குருமார் தேர்ந்தெடுக்கப்படுகின்றவர்களல்லர். அவர்களுக்கு வரிகளுமில்லை; போரில் கலப்பதால் நேரும் துன்பமும் இல்லை. வணிகர் நாட்டைச் செல்வத்தால் செழிப்படையச் செய்தார்கள். குருமார் அதனை அநுபவித்தார்கள். பாபிலோனில் பல தெய்வங்கள் இருந்தன. கிறித்துவுக்குமுன் ஒன்ப தாம் நூற்றாண்டில் எடுக்கப்பட்ட கணக்கின்படி அங்கு 65,000 கோவில்கள் இருந்தன. ஒவ்வொரு பட்டினத்திலும், கிராமத்திலும் பல தெய்வங்கள் இருந் தன. ஞாயிற்றுக் கடவுள் சமாஷ் எனவும், திங்கட் கடவுள் நன்னர் எனவும் கூறப்பட்டனர். ஒவ்வொரு வீட்டிலும் வீட்டுத் தெய்வம் இருந்தது. அவை களுக்குக் காலையிலும் மாலையிலும் பலியிடப்பட்டது. முன்பு ஞாயிற்றுக் கடவுளாகக் கொள்ளப்பட்ட மார்டுக் இப்பொழுது தேவர்களுக்கு அரசன் ஆனான். சுவர்க்கத்தில் தேவர்கள் மாத்திரம் வாழ்ந்தார்கள். இறந்தவர் அரலு என்னும் நரகத்தில், கையும் காலும் கட்டுண்டு குளிரால் நடுங்கிக்கொண்டும், பசி தாகங்களால் வருந்திக்கொண்டும் இருந்தார்கள். இவர்களின் புதல்வர் சமாதியில் காலந்தோறும் உணவை வைத்தாலன்றி இவர்களுக்கு உணவு கிடைப்பதில்லை. இவ்வுலகில் கெட்ட வாழ்க்கை நடத்தியவர்களுக்கு அதிக தண்டனைகள் கொடுக்கப்பட்டன. இவர்களின் உடலில் குட்ட நோயும் பிற நோய்களும் உண்டாயின. பிணங்கள் நில அறைகளில் புதைக்கப்பட்டன; சில கொளுத்தப் பட்டன. பிணங்கள் தைலமிட்டுப் பக்குவஞ் செய்யப்படவில்லை. கூலிக்கு அழுவோர் அவைகளைக் கழுவி, வாசனை பூசி, உடுத்தி, கண்ணுக்கு மை எழுதி விரல்களில் மோதிரமிட்டு அலங்கரித்தார்கள். பெண் பிணங்களின் பக்கத்தே வாசனைப் புட்டிகள், சீப்பு, மை தீட்டுங் குச்சி, கண்ணுக்குத் தீட்டும் மை முதலியன வைக்கப்பட்டன. நல்ல முறையாகப் பிணங்கள் புதைக்கப் படாவிட்டால் இறந்தவர் இருப்பவர்களுக்குத் துன்பம் விளைவிப்பர்; உணவுக்காக அலைந்து திரிவர்; நாட்டில் கொள்ளை நோயை உண்டாக்குவர் என எண்ணினர். இவ் வச்சங் காரணமாகவே பாபிலோனிய மக்கள் குருமாருக்கும் கடவுளருக்கும் நல்ல உணவுகளை அளித்து வந்தார்கள். கடவுளுக்கு உணவும் நீரும் கொடுக்கப்பட்டன; ஆட்டுக்குட்டி பலி யிடப்பட்டது. ஆட்டுக்குட்டி மனிதனுக்குப் பதில் இடப்படும் பலி. குருமார் புரியும் பலவகைக் கிரியைகளோடு பலியும் இடப்பட்டது. ஒழுங்குபட்ட வாழ்க்கையிலும் பார்க்க முறையான கிரியையே மேலானது எனக் கொள் ளப்பட்டது. ஒருவனுடைய கடமை கோவில்களுக்கு முறையாகப் பலிக ளிட்டுச் சரியான துதிகள் பாடுவதாகும். ஒருவன் விழுந்து கிடக்கும் எதிரியின் கண்களைப் பிடுங்கிவிடலாம்; கைகளை வெட்டி விடலாம்; அவனுடைய இறைச்சியை அறுத்து வறுக்கலாம்; அவைகளைக் குறித்துக் கடவுள் வெறுப்படைய மாட்டார். குருமார் கடவுளுக்கு எதிரில் சாம்பிராணிப் புகை இட்டார்கள்; கடவுளரை அழகிய உடைகளாலும் அணிகலன்களாலும் அலங்கரித்தார்கள்; குருமார் அவர்கள்மீது பல துதிகளைப் பாடினர். சில சமயங்களில் பலர் ஒன்றுசேர்ந்து நின்று பாடினர். பாபிலோனிய சமய நூல்களும் துதிகளும் சுமேரிய மொழியில் எழுதப்பட்டுள்ளன. கத்தோலிக்கக் கிறித்துவக் கோயில்களில் இலத்தின் மொழி பயன்படுத்தப்படுவதுபோல, சுமேரிய மொழி பயன்படுத்தப்பட்டது. துதிகள் பூதங்களை ஓட்டின. இவை பழைய மந்திர வித்தை தொடர்பாக எழுந்தவை. பூதங்களிலிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்குத் தாயத்துகள், மந்திரங்கள் எழுதிய உலோகத் துண்டுகள் கடவுளரின் வடிவங் கள் முதலியன உடம்பில் அணியப்பட்டன; சிறிய கற்கள் கயிற்றில் அல்லது சங்கிலியில் கோத்துக் கழுத்தில் கட்டப்பட்டன. கறுப்பு, வெள்ளை, சிவப்பு முதலிய கயிறுகள் நோக்கத்துக்கு ஏற்றவாறு பயன்படுத்தப்பட்டன. பரிசுத்த மான தைகிரஸ், யூபிராதஸ் ஆறுகளின் நீரைத் தெளிப்பதாலும் பூதங்கள் விலகின. அசுர் பானிப்பாலின் நூல்நிலையத்தில் கிடைத்த களிமண் ஏடு களில், சோதிடம், கனவின் பலன், சகுனங்களின் பலன் போன்றவைகளைப் பற்றிய செய்திகள் காணப்படுகின்றன. பலியிடப்பட்ட விலங்கின் ஈரலைப் பார்த்துப் பாபிலோனியக் குருமார் வருங் காரியம் கூறினார்கள். இவ் வழக்கம் கிரேக்கக் குருமாராலும் கையாளப்பட்டது. நிமித்தம் பார்ப்பவனாவது கோவிற் குருவாவது சகுனம் பார்த்துப் பலன் கூறுவதன் முன் அரசன் போருக்குச் செல்லமாட்டான். இலக்கியம் பாபிலோனிய வாணிகம் சட்ட சம்பந்தமான ஒழுங்கு பெற்றிருந்தது. மெம்பிஸ், தீப்ஸ் நகரங்களிலிருந்தது போலப் பாபிலோனில் எழுத்தாளர் பலர் இருந்தார்கள். அவர்கள் ஈரமான களிமண் தட்டுக்களில் நுனி முக்கோணமாக வெட்டப்பட்ட எழுதுகோலால் எழுதினார்கள். எழுதப் பட்டது திருமுகமாயின் அது களிமண் உறையில் இட்டு எழுதியவனின் முத்திரை மேலே பொறிக்கப்பட்டது. கோயில்களிலும் பிறவிடங்களிலும் நூல்நிலையங்கள் இருந்தன. களிமண் தட்டுக்களில் எழுதப்பட்ட நூல்கள் சாடிகளில் அடுக்கி ஒழுங்குபடுத்தித் தட்டுக்களில் நிரையாக வைக்கப் பட்டன. போர்சிப்பா நூல் நிலையத்திலிருந்து நூல்கள் படியெடுத்து அசுர் பானிப்பாலின் நூல் நிலையத்தில் வைக்கப்பட்டன. அசீரியாவில் காணப் பட்ட 30,000 களிமண் ஏடுகளின் மூலம் பாபிலோனியரின் வாழ்க்கையைப் பற்றிய செய்திகள் அறியப்பட்டன. நீண்ட காலம் பாபிலோனிய எழுத்துகள் வாசிக்கப்படாமல் இருந்தன. ஹென்றி இரவிலின்சன் என்னும் ஆங்கிலர் பன்னிரண்டு ஆண்டுகளாக முயன்று 1847இல் அவ் வெழுத்துகளை வாசித்தார். பாபிலோனிய எழுத்துகள் சுமேரிய அக்கேடிய எழுத்துகளின் செமித்திய முறையான வளர்ச்சியால் தோன்றியவை. தொடக்கத்தில் நூல்கள் சுமேரிய மொழியில் எழுதப்பட்டன. காலத்தில் அம் மொழி மாறுதலடைந்தது. பழைய புனித மொழியாகிய சுமேரியத்திலிருந்து நூல்களைப் பாபிலோனிய மொழிப்படுத்துவதற்கு அகராதிகளும் இலக்கணங்களும் செய்யப்பட்டிருந்தன. நினேவா நூல் நிலையத்தில் கண்டு பிடிக்கப்பட்ட களிமண் ஏடுகள் பெரும்பாலும் சுமேரிய, பாபிலோனிய அசீரிய மொழி அகராதிகளாகக் காணப்படுகின்றன. அவ் வகராதிகள் அக்காட் அரசனாகிய சார்கன் காலத்தில் செய்யப்பட்டவை. சுமேரியத்திலும் பாபிலோனியத்திலும் எழுத்துகள் சொல்லின் பகுதி களாக இருந்தன. பாபிலோனியத்துக்குச் சொந்தமான எழுத்துக்கள் இல்லை; சொல்லின் பகுதிகளை உணர்த்த 300 அடையாளங்கள் வரையில் இருந்தன. இவ்வடையாளங்கள் மூலம் கணக்கு, சமயம், வாணிகம் போன்ற பாடங்கள் கோயிற் குருமாரால் மாணவருக்குப் பயிற்றப்பட்டன. அழிபாடு ஒன்றில் பள்ளிக்கூட மாணவர் பார்த்து எழுதிய நீதிவாக்கியங்கள் காணப்பட்டுள்ளன. பாபிலோனிய எழுத்துகள் வாணிகத்தின் பொருட்டுப் பயன்படுத்தப்பட்டன. விலங்குகளைப் பற்றிய கற்பனைக் கதைகள், பாடல்கள், சமயக் கிரியைகள், விளக்கங்கள் போன்றவை எழுதப்பட்ட ஏடுகள் பல கிடைத்துள்ளன. அரசாங்க வரலாறுகள், அரசரின் சமயப்பற்று, அவர்களின் வெற்றிகள் போன்றவைகளைக் கூறுகின்றன. பெரோசஸ் (கி.மு.280) என்னும் பாபிலோனிய வரலாற்றாசிரியர் படைப்புக் காலம் முதல் மனிதனுடைய வரலாற்றைக் கூறியுள்ளார். பாபிலோனின் முதல் அரசன் கடவுளால் தெரியப் பட்டான். அவன் பெரிய வெள்ளப்பெருக்கு வரையில் 36,000 ஆண்டுகள் ஆண்டானென்றும் உலகம் தொடங்கி 691,200 ஆண்டுகளாகின்றன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஒழுக்கம் கோயில்களில் தேவதாசிகள் இருந்தனர். மணங்கள் பெற்றோரால் ஒழுங்கு செய்யப்பட்டன. மணமகன் பெண்ணின் தந்தைக்கு வெகுமதி அளித் தான். பெண்ணின் தந்தை பெண்ணுக்கு அவ் வெகுமதியிலும் பார்க்க அதிக பெறுமதியுள்ள சீதனம் கொடுத்தான். பாபிலோனியன் ஒருவன் ஒரு பெண்ணையே மணந்தான். வியபிசாரக் குற்றத்தோடு சம்பந்தப்பட்ட இரு பாலாரும் ஆற்றில் எறியப்பட்டார்கள். ஒருவன் பெண்ணின் சீதனப் பணத்தைத் திருப்பிக் கொடுத்துத் திருமண நீக்கம் செய்துகொள்ளலாம். கணவன் கொடுமையாக நடத்துகின்றான், விசுவாச மில்லாதிருக்கின்றான் எனப் பெண் அத்தாட்சிப் படுத்தினால் அவள் கணவனைக் திருமண நீக்கம் செய்து கொள்ளலாம். பெண்கள் ஆடவரைப்போல வெளியே சென்றார்கள். பெண்களிடம் சொத்து இருந்தது. அவர்கள் அதனைத் தாம் விரும்பியவாறு செய்ய உரிமை பெற்றிருந்தார்கள். பெண்கள் சிலர் வாணிகம் புரிந்தனர்; சிலர் எழுத்தாளராக இருந்தனர். உயர் குடும்பங்களில் பெண்கள் வீட்டில் தனியிடங்களில் வாழ்ந்தனர். அவர்கள் வெளியே சென்றபோது அண்ணகரும் வேலையாள்களும் உடன் சென்றனர். தாழ்ந்த வகுப்பினர் அடிமைகள் போல் வாழ்ந்தனர். எகிப்தியர், பாபிலோனிய மக்களை அதிக நாகரிகம் அடையாதவர்கள் எனக் கருதினர். கலைகள் பாபிலோனியரின் வாணிகம், பொழுதுபோக்கு, கடவுள் பத்தி முதலிய வைகளை வெளியிடும் சின்னங்கள் காணப்படுகின்றன. மினுக்கஞ் செய்யப் பட்ட செங்கற்கள், வெண்கலம், இரும்பு, வெள்ளி முதலிய உலோகங்களால் செய்யப்பட்ட பொருள்கள், நுட்பமான தையல் வேலைகள், மிருதுவான துணிகள், அழகிய சாயம் ஊட்டிய உடைகள், கம்பளங்கள், மேஜைகள், படுக்கைகள், நாற்காலி போன்றவை பாபிலோனியரின் நாகரிகத்தை விளக்கு கின்றன. பலவகை அணிகலன்கள் காணப்படுகின்றன. தெய்வ உருவங்கள் பொன்னாற் செய்யப்பட்டன. இசைக் கருவிகள் பல பயன்படுத்தப்பட்டன. குழல், யாழ், வீணை, மேளம், கொம்பு, நாணற்குழல், எக்காளம், கைத்தாளம், மத்தளம் என்பன அவைகளுட் சில. கோயில்களிலும், அரண்மனைகளிலும், செல்வரின் விருந்துகளிலும் பாடகர் தனித்தும், பலர் ஒன்று கூடியும் பாடினார்கள். பாபிலோனில் ஓவியம் எழுதுதல் தனிக் கலையாக வளரவில்லை. சுவர்களில் ஓவியங்கள் எழுதப்பட்டுள்ளன. அவை எகிப்திய சமாதிச் சுவர் களிற் காணப்படுகின்றவைபோல நிறங்களால் எழுதப்படவில்லை. சிற்பக் கலையும் நன்றாக வளர்ச்சியடையவில்லை. உருவங்களின் முக இரேகைகள் பெரும்பாலும் ஒரே வகையாகக் காணப்படுகின்றன. போரிற் பிடிக்கப் பட்டவர்களைக் காட்டும் சிற்பங்களின் முகங்கள் ஒரே வகையாகக் காணப் படுகின்றன. பாபிலோனியக் கட்டடங்கள் தரைக்கு மேலே சில அடிகளே உயர்ந் திருக்கின்றன. கோயில்களையோ அரண்மனைகளையோ காட்டும் ஓவியங் களும் சிற்பங்களும் கிடைக்கவில்லை. வீடுகள் களிமண்ணால் கட்டப் பட்டன. செல்வர் செங்கல்லைப் பயன்படுத்தினர். வீடுகளுக்குச் சன்னல்கள் இருக்கவில்லை. வீடுகளின் கதவுகள் வீதியை நோக்கி இருக்கவில்லை. உள் முற்றத்தை நோக்கியிருந்தன. மூன்று அல்லது நான்கு மாடிகளுடைய வீடுகளும் இருந்தன. கோயில் வீடுகளைப்போலவே சதுரமாக விருந்தது. கோயிலின் மேலே ஏறிச் செல்வதற்கு சங்குப் புரிபோல் படிக்கட்டுகள் அமைக்கப்பட்ட வழி வெளியே இருந்தது. இது இக் கடவுளின் உயரமான வீடாகும். வான ஆராய்ச்சித் தொடர்பாகவும் இது பயன்படுத்தப்பட்டது. அதன் உச்சியிலிருந்து குருமார் விண்மீன்களை நோக்கினார்கள். போர்சிப்பா விலிருந்த இவ்வகைக் கோபுரம் ஏழு மண்டலங்களின் இருப்பிடம் எனக் கொள்ளப்பட்டது. ஒவ்வொரு மாடியும் ஒவ்வொரு கிரகத்துக்கு உரியது. ஒவ்வொரு மாடியும் வெவ்வேறு நிறம் தீட்டப்பட்டிருந்தது. கீழே உள்ள மாடி சனிக்கு உரியது. இது கறுப்பு நிறம் பூசப்பட்டிருந்தது. அதற்கு மேலுள்ளது வெள்ளிக்குரியது. அது வெள்ளையா யிருந்தது. மூன்றாவது மாடி வியாழனுக் குரியது. இம் மாடி கருஞ்சிவப்பு நிறம் ஊட்டப்பட்டது. புதனுக்குரிய நாலாவது மாடி நீல நிறமுடையது. ஐந்தாவது பச்சை கலந்த சிவப்பு நிறமுடையது. இது செவ்வாய்க்குரியது. ஆறாவது மாடி வெள்ளி நிறம் பூசப்பட்டிருந்தது. இது திங்களுக்குரியது. ஏழாவது மாடி பொன்னிறமானது. இது ஞாயிற்றுக்குரியது. இவ்வாறு ஒவ்வொரு மாடியும் வாரத்தின் ஒவ்வோர் நாளைக் குறிப்பதா யிருந்தது. செங்கற்கள் சிலவற்றின் வெளிப்புறங்கள் மினுக்கஞ்செய்து நிறங்கள் பூசப்பட்டிருந்தன. அவைகளில் விலங்குகள், பறவைகள், மரஞ்செடிகளின் வடிவங்கள் எழுதப்பட்டிருந்தன. வெளிப்பக்கம் அழுத்தஞ் செய்யப்பட்டது அழகுக்காக மாத்திரமன்று, வெய்யில் மழைகளால் அவை பழுதடையாமல் இருப்பதற்குமாகும். விஞ்ஞானம் வாணிகத்தால் கணக்கு வளர்ச்சி யடைந்தது. கணக்கு சமயத்தோடும், வான ஆராய்ச்சியோடும் தொடர்பு பெற்றிருந்தது. நீதிபதிகள், அரசாங்க நிர்வாகிகள், பயிர்த்தொழிலுக்குத் தலைவர், வருங்காலம் சொல்வோர், வான ஆராய்ச்சியாளர் எல்லோரும் குருமாராகவே யிருந்தனர். அவர்களே விஞ்ஞானம் தோன்றுவதற்குக் காரணராயிருந்தார்கள். அவர்கள் அறிந்திருந்த விஞ்ஞான முறைகளைக் கிரேக்கர் சமயத் தொடர்பாகக் கையாண்டனர். பாபிலோனியக் கணிதம் வட்டத்தை 360 பாகைகளாகவும், ஆண்டை 360 நாட்களாகவும் பிரித்தது. இதிலிருந்தே அறுபதாகக் கணக்கிடும் வழக்கு உண்டாயிற்று. அறுபதாகக் கணக்கிடுவதிலிருந்து பன்னிரண்டாகக் கணக்கிடும் வழக்குப் பிற்காலத்தில் தெரிந்தது. நில அளவைப்பற்றிய கணக்கும் பாபிலோனில் வளர்ச்சியடைந்திருந்தது. வான ஆராய்ச்சியில் பாபிலோனியர் புகழ்பெற்று விளங்கினார்கள். பாபிலோனியர் வனாந்தரத்துக் கூடாகச் செல்லும் வணிகர் கூட்டத்துக்கும் கடல் வழியாகச் செல்லும் கப்பல் களுக்கும் வழிகாட்டுவதற்கு வான ஆராய்ச்சி செய்யவில்லை; மக்களுக்கு நேரும் வாய்ப்பு, வாய்ப்பின்மைகளை அறிவதற்கு ஆராய்ந்தார்கள். ஒவ்வொரு கிரகமும் ஒவ்வொரு தெய்வமாகவும், ஒவ்வொரு கிரகத்தின் செலவும் வருங்காரியத்தை அறிவிப்பதாகவும் கொள்ளப்பட்டன. சோதிட மறிந்த குருமார் அரசரிடமும், பொது மக்களிடமு மிருந்து அதிக ஊதியம் பெற்றனர்; சார்கன் காலத்தில் சோதிட நூல்கள் எழுதப் பட்டன என்று பழைய வரலாறு கூறுகின்றது. நிறைந்த சோதிடப் பழக்கமின்றி ஊதியத்திற்காகச் சோதிடம் கூறுகின்றவர்களைப் பற்றிக் குருமார் குறை கூறினார்கள். நெபுசட்னேசர் காலத்தில் கிரகங்களுக்கும் நட்சத்திரங்களுக்கு முள்ள வேறு பாடு அறியப்பட்டிருந்தது. பூமி சூரியனைச் சுற்றிவரும் பாதை பன்னிரண்டு வீடுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. பாகை ‘மினிட்’களாகவும், ‘மினிட்’ நொடி களாகவும் பிரிக்கப்பட்டிருந்தன. அறுபது மினிட் ஒரு பாகை எனவும் 60 நொடி அல்லது ‘செகண்ட்’ ஒரு மினிட் எனவும் கணக்குச் செய்யப்பட்டன. நேரம் நாழிகை வட்டம் (Water-Clock) சூரிய நிழல் வட்டம் (Sun-dial) ஆகிய இவைகளால் அளக்கப்பட்டது. ஆண்டு பன்னிரண்டு சந்திர மாதங்களாகப் பிரிக்கப்பட்டது. முதல் ஆறு மாதங்கள் முப்பது நாளும், பின் ஆறு மாதங்கள் 29 நாட்களும் கொண்டவை. ஆகவே ஆண்டில் 354 நாள்கள் இருந்தன. இடை இடையே ஒரு மாதம் சேர்த்துக் கணக்குச் செய்யப்பட்டது. மாதத்தில் நான்கு வாரங்கள் உண்டு. சந்திரன் எழும் நேரத்திலிருந்து நாள் கணக்குச் செய்யப்பட்டது. மருந்தும், சோதிடமும் சமயத் தொடர்பு பெற்றிருந்தன. ஹமுரபி அரசன் காலத்தில் மருத்துவம் சமயத்தினின்றும் பிரிக்கப்பட்டது. அக் காலத்தில் மருத்துவர் பலர் இருந்தனர். அவர்களுக்குக் கொடுக்கவேண்டிய கூலியும், தமது கடமையைச் சரிவரச் செய்யாவிட்டால் அவர்கள் அடைய வேண்டிய தண்டனை களும் சட்டங்களில் காணப்படுகின்றன. மருத்துவன் ஒருவனை வீட்டுக்கு அழைக்குமொருவன் அவனுக்குக் கொடுக்க வேண்டிய கூலியை அறிந்திருந்தான். நோயாளி வறியவனானால் கூலி குறைக்கப்பட்டது. மருத்துவன் முறையாக மருத்துவம் செய்யாவிட்டால் அவன் நோயாளிக்கு நட்ட ஈடு செய்ய வேண்டியிருந்தது. சில சமயங்களில் மருத்துவனின் கைவிரல்கள் வெட்டப்பட்டன. மருத்துவரிலும் பார்க்க மந்திர வித்தைக்காரருக்கு அதிக மதிப்பு உண்டாயிருந்தது. நோய் பாவத்தினால் உண்டாவது என்று கருதப்பட்டது. ஆகவே அது துதி, மந்திர வித்தைகளால் போக்கப்பட்டது. மருந்துகள் உடலைச் சுத்தஞ் செய்வன என்று கருதப் படவில்லை. உள்ளே இருக்கும் பூதத்தைப் பயமுறுத்துகின்றது எனக் கருதப் பட்டது. மிக அருவருக்கத்தக்க பொருள்கள் சேர்த்து அரைத்த மருந்துகள் ஒளடதமாகப் பயன்படுத்தப்பட்டன. சாதாரண மருந்துச் சரக்குகள் பச்சை இறைச்சி, பாம்பின் இறைச்சி, மரத்தூள் முதலியன. இவை சாராயமும் எண்ணெயும் ஊற்றி அரைக்கப்பட்டன. அழுகிய உணவு, எலும்புத்தூள், கொழுப்பு, அழுக்கு முதலியனவும் விலங்குகளின் அல்லது மனிதனின் மல மூத்திரங்களும் சேர்த்து அரைக்கப்பட்ட கூட்டுகள் மருந்தாகப் பயன்படுத் தப்பட்டன. பூதத்தைத் திருப்திப்படுத்தும் பொருட்டுப் பால், தேன், வெண்ணெய், நறுமணமுள்ள மூலிகைகள் உட்கொள்ளும்படி கொடுக்கப் பட்டன. மருந்துகளால் நோய் குணமடையாவிடின் நோயாளி சந்தைக்குக் கொண்டு போகப்பட்டான். அங்கு அவ்வகை நோய் அடைந்து குணப் பட்டவர்கள் தாமறிந்த மருந்துகளை அவனுக்குக் கூறினார்கள். பாபிலோனின் விழுகை பாபிலோனின் கடைசி அரசன் நெபுசட்னேசர். இவன் 54 கோயில் களைக் கட்டினான். இவன் தனது வாழ்நாளின் இறுதி நான்கு ஆண்டுகளில் பைத்தியம் கொண்டிருந்தான். கி.மு. 562இல் இவன் மரணமடைந்தான். இவன் மரண மடைந்த முப்பது ஆண்டுகளுள் பாபிலோன் இராச்சியம் துண்டு துண்டாகச் சிதறுண்டது. இவனுக்குப் பின் ஆட்சி நடத்திய போனிடஸ் என்பவன் இராச்சியத்தில் கருத்துச் செலுத்தாது சுமேரியாவிலுள்ள அழிபாடு களை வெட்டி ஆராய்ச்சி செய்வதில் காலத்தைப் போக்கினான். இராணுவத் தில் குழப்ப முண்டாயிற்று. வாணிகத்திலும் களியாட்டங்களிலும் பழகிய மக்கள் போரை மறந்தார்கள். குருமார் அரசாங்க அதிகாரத்தைக் கைப்பற்றித் தமது பைகளை நிரப்பினர். இப்பொழுது சைரஸ் என்னும் பாரசீக அரசன் பாபிலோனை வெற்றிகொண்டான். இரண்டு தலைமுறைகளாகப் பாபிலோன் பாரசீகர் ஆட்சிக்குட்பட்டிருந்தது. பின்பு அலக்சாந்தர் வெற்றியாளனாகிப் பாபிலோனை ஆண்டான். பாபிலோனியரிடமிருந்தே கிரேக்கர்கள், கணக்கு, வானசாத்திரம், மருந்து, இலக்கணம்,நிகண்டு, சரித்திரம், தத்துவ சாத்திரம் முதலியவைகளைப் பெற்றனர். உரோமர் கிரேக்கரிடமிருந்து இவைகளைப் பெற்றனர். கிரேக்க மொழியில் உலோகங்கள், இராசிகள், நிறைகள், அளவை கள், இசைக்கருவிகள், மருந்துச் சரக்குகளைக் குறிக்க வழங்கும் பெயர்கள் பெரும்பாலும் பாபிலோனிய மொழிக்குரியனவே. கிரேக்கக் கட்டக்கலை எகிப்திய, கிரீத்திய, பாபிலோனியக் கட்டடக் கலைகளைப் பின்பற்றி எழுந்தது. சுற்றி வரப் படிக்கட்டுக்களுடைய பாபிலோனிய கோபுரங்களைப் பின்பற்றி முகமதிய கோயிற் கட்டடங்கள் அமைக்கப் பட்டன. ஹமிரபியின் சட்டங்களிலிருந்து உரோமரின் நியாயச் சட்டங்கள் உதித்தன. சிந்துவெளி சிந்து என்பது இந்தியாவின் வடமேற்கிலுள்ள ஓர் ஆறு. இவ்வாற்றின் பெயரையே நாவலந்தீவு என்று பெயர் பெற்றிருந்த எமது நாட்டுக்கு மேற்குத் தேச மக்கள் பெயராக வழங்கினர். சிந்து என்பது இந்து எனத் திரிந்து வழங்குகின்றது. சிந்து ஆற்றின் சமவெளிகளில் அழிபாடுகள் 1 பல காணப்படுகின்றன. அவைகளுள் அரப்பா, மொகஞ்சதரோ என்னும் இரு இடங்களிலுள்ள அழிபாடுகள் பழம்பொருள் ஆராய்ச்சியாளரால் அகழப் பட்டன. இவை அழிந்து மண்மேடாக மாறிய இரண்டு பெரிய நகரங்களாகக் காணப்பட்டன. அங்கு வாழ்ந்த பழைய மக்களின் வரலாறுகளை அறிந்து கொள்வதற்கேற்ற பல பழம் பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சிந்துவெளிப் புதைபொருள் ஆராய்ச்சிக்கு முன்பு ஐரோப்பிய அமெரிக்க ஆராய்ச்சியாளர், யூபிராதஸ் தைகிரஸ் ஆறுகளும் நீல நதியும் நீர் பாய்ச்சுகின்ற மெசபதோமியா, அசீரியா, எகிப்து முதலிய நாடுகளே நாகரிகத்தின் தொட்டில் எனக் கருதி வந்தார்கள். அந் நாகரிகங்களின் பழமையை ஒப்பிடும்போது இந்திய நாகரிகம் பச்சிளங்குழவி எனக் கருதப்பட்டது. ஆகவே, இந்திய வரலாற்றை அலக்சாந்தரின் படை எடுப்பு அல்லது மௌரிய அரச பரம்பரை ஆரம்பத்திலிருந்து தொடங்குவது வழக்கமாயிருந்து வந்தது. சிந்துவெளியிலே அரப்பா, மொகஞ்சதரோ என்னுமிடங்களிற் கண்டுபிடிக்கப்பட்ட பழம் பொருள் கள், இந்திய நாகரிகத்தின் பழமையை மேற்கு ஆசியா, எகிப்து முதலிய நாடுகளின் தொன்மையோடு ஒத்ததாக மாற்றியுள்ளன. சிந்து வெளிப் புதைபொருள் ஆராய்ச்சி யிற் கிடைத்த பழம் பொருள்கள் பல சுமேரியாவிற் கிடைத்த பழம் பொருள்களை ஒத்தவை. ஆகவே சிந்து நாகரிகம் என்பது இந்து-சுமேரிய நாகரிகம் எனக் கொள்ளப்படுவதாயிற்று. மேலும் கிடைத்த பழம்பொருள்கள் சிந்து நாகரிகம் இந்தியாவில் தோன்றி வளர்ந்த பழைய நாகரிகம் என்பதைக் காட்டின. சிந்து வெளி நாகரிகத்தின் காலம் கி.மு. 3,500 வரையில் என்று கருதப்படுகிறது. அரப்பா என்னும் பழைய அழிபாடு பஞ்சாப் மாகாணத்தில் இரவி ஆற்றுக்கு அண்மையிலுள்ளது. இரவி ஆறு சிந்து நதியின் ஒரு கிளை. அரப்பா, மொகஞ்சதரோவுக்கு வடக்கே நானூறு மைல் தூரத்திலுள்ளது. அரப்பா அழிபாடு 1920க்கும் 1921க்கு மிடையில் முதன்முதல் அகழ்ந்து பார்க்கப்பட்டது. மொகஞ்சதரோ இலார்கானாவுக்கு வடக்கே இருபத்தைந்து மைல் தூரத்தில் உள்ளது. மொகஞ்சதரோ என்பதற்கு இறந்தவர்களின் மேடு என்று பொருள். இவ்அழிபாடு 240 ஏக்கர் நிலப் பரப்பைக் கொண்டிருக்கிறது. இதில் தோண்டி ஆராயப்பட்ட பகுதி 13 ஏக்கர்களே. சிந்து ஆறு மொகஞ்சதரோ வுக்குக் கிழக்கே மூன்றரை மைல் தூரம் தள்ளி ஓடுகின்றது. முற்காலத்தில் அது மொகஞ்சதரோவின் பக்கத்தில் சென்றிருக்கலாம். இந் நகர் முன்பு ஆற்று மட்டத்திற் கட்டப்பட்டிருந்தது. சிந்து ஆறு காலந்தோறும் உயர்ந்து வந்தமையால் மக்கள் நகரத்தை உயர்த்திப் புதிய கட்டடங்களை அமைத் தார்கள். இவ்வாறு ஒன்றின்மேல் ஒன்றாகக் கட்டப்பட்ட ஏழு நகரங்கள் மொகஞ்சதரோவிற் காணப்படுகின்றன. ஏழாவது படை கற்கால இறுதியிலும் உலோக கால ஆரம்பத்திலும் அமைக்கப்பட்ட கட்டடங்களை உடையது. வீதிகள்: மொகஞ்சதரோவில் அகன்ற பெரிய வீதிகள் வடக்கிலிருந்து தெற்கே செல்கின்றன. அவை ஒன்றுக்கொன்று சம தூரத்திலுள்ளன. பெரிய வீதிகளிலிருந்து சிறிய வீதிகள் கிளைவிட்டுச் செல்கின்றன. கிளை வீதிகள் இவ்வாறு செல்வதால் நகர் பல பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றது. ஒவ்வொரு பிரிவிலும் ஒடுங்கிய வீதிகள் பல செல்கின்றன. அவைகளின் ஓரங்களில் வீடுகள் நெருங்கியுள்ளன. ஒவ்வொரு சிறிய வீதியிலும் பொதுக்கிணறு உண்டு. பெரும்பாலும் ஒவ்வொரு வீட்டுக்கும் கிணறு காணப்படுகின்றது. வீடுகள்: வீடுகள் பல பெருமையுடையனவாகக் காணப்படுகின்றன. இரண்டு அறைகளுக்குக் குறைவாயுள்ள வீடுகள் காணப்படவில்லை. சில வீடுகள் அரண்மனைகள்போல் பெரியன. வீடுகள் விசாலமாகவும் கற்கள் பதிக்கப்பட்ட குளிக்கும் அறையுடையனவாகவும் காணப்படுகின்றன. பாபிலோனிலும் மொகஞ்சதரோவிலும் நடுவில் முற்றமும் முற்றத்தைச் சுற்றி நாற்புறமும் அறைகளுமாக வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன. முற்றத்துக்குச் செங்கற்கள் பதிக்கப்பட்டன. மேன்மாடி புழங்கவும், நித்திரை கொள்ளவும், குளிக்கவும், கீழ்மாடி சமைக்கவும், பண்டங்களைச் சேமித்து வைக்கவும் பயன்படுத்தப்பட்டன. வீதியிலிருந்து வீட்டுக்குச் செல்ல ஒரு வாயில் மாத்திரம் இருந்தது. சுவருக்கு வெளியே யாதும் இருக்கவில்லை. கிணறுகள்: கிணறுகளின் அகலம் பலவாறு இருந்தது. சில கிணறு களின் குறுக்களவு ஏழு அடி இரண்டு அங்குலம். மிகச் சிறிய கிணற்றின் குறுக்களவு ஓர் அடி ஓர் அங்குலம். சாதாரண கிணற்றின் குறுக்களவு இரண்டு அடி இரண்டு அங்குலம். பெரிய நீராடும் கேணியின் பக்கத்தே காணப்படும் கிணற்றின் குறுக்களவு ஆறு அடி இரண்டு அங்குலம். பெரும் பாலும் ஒவ்வொரு வீட்டுக்கும் ஒவ்வொரு கிணறு இருந்தது. பொதுக் கிணறுகள் இரண்டு வீடுகளின் மத்தியில் இருந்தன. கிணற்றைச் சுற்றிச் செங்கற்கள் பதிக்கப் பட்டிருந்தன. செங்கற்களை ஒன்றோடொன்று சேர்த்துப் பிடிக்கச் செய்வதற்குக் களிமண் பயன்படுத்தப்பட்டது. கிணற்றுக் கட்டு ஓரங்களில் கயிறு உராய்ந்த அடையாளம் காணப்படுவதால், ஏனங் களைக் கயிற்றில் கட்டிக் கையினால் இழுத்துத் தண்ணீர் எடுக்கப் பட்டதெனத் தெரிகின்றது. குளிக்கும் அறை: ஒவ்வொரு வீட்டுக்கும் தனியாகக் குளிக்கும் அறைகள் இருந்தன. அவைகளைச் சுற்றிப் பதிக்கப்பட்டிருந்த செங்கற்கள் மீது தண்ணீர் சுவறிச் செல்லமுடியாமல் மேலே ஒருவகைக் கறுப்புப் பொருள் பூசப் பட்டிருந்தது. குளிக்குமறை வீட்டின் வாயிற் பக்கமாக விருந்தது. அதனைச் சுற்றிச் செங்கற் பதிக்கப்பட்ட தரை ஒரு மூலையை நோக்கிச் சரிவாக இருந்தது. மேல் வீட்டில் குளிக்கும் அறை இருந்ததென்பதை மேலே யிருந்து கீழே செங்குத்தாகச் செல்லும் குழாய்களைக் கொண்டு அறியப்பட்டது. தரை: வீட்டின் தரை செங்கற் பதிக்கப்பட்டிருந்தது; அல்லது மண் இட்டு அடித்து மட்டஞ் செய்யப்பட்டிருந்தது. மண் இட்டு அடித்துத் தரையை மட்டஞ் செய்வது பொது நிகழ்ச்சி. சில வீடுகளுக்குச் சூளையிடாத களிமண் கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. கதவுகள்: கதவுகள் மரத்தினால் செய்யப்பட்டவை. சுவர் முடிவு எய்து மிடத்துக் கதவு வைக்கப்பட்டிருந்தது; அது சுவரின் மத்தியில் வைக்கப்பட வில்லை. கதவு நிலையின் அகலம் மூன்று அடி மூன்று அங்குலம் முதல் மூன்று அடி பத்து அங்குலம் வரையில் இருந்தது. சன்னல்கள்: சாதாரண வீடுகளுக்குப் பெரும்பாலும் வெளிச்சுவர் களில் சன்னல்கள் இருக்கவில்லை. சன்னல்கள் சுவரில் விடப்பட்ட வெளிகள்போல இருந்தன. பெரிய நீராடும் கேணியைச் சுற்றி அமைக்கப் பட்ட சுவரில் சன்னல்கள் பதிக்கப்பட்டுள்ளன. படிக்கட்டுகள்: பெரும்பாலும் எல்லா வீடுகளுக்கும் மேலே ஏறிச் செல்லும் படிக்கட்டுகள் உண்டு. அவை சுவரின் எதிரே அல்லது இரண்டு வீடுகளுக்கு இடையே உள்ள இடைவெளியில் செங்குத்தாக அமைக்கப் பட்டுள்ளன. படிக்கட்டுகள் கூரைக்கு மாத்திரமன்று; மேல்மாடிக்கும் செல் கின்றன. வீதியிலிருந்து மேல் மாடிக்குச் செல்லும் படிக்கட்டுகளும் காணப் படுகின்றன. அவ்வகைப் படிக்கட்டுகள் உள்ள வீடுகளில் வெவ்வேறு குடும்பத்தினர் வாழ்ந்தார்கள் ஆகலாம். படிக்கட்டுகள் ஒடுங்கியவையாக வும், படி ஒவ்வொன்றும் பதினொரு அங்குல உயரமும் ஆறு முதல் எட்டு அங்குல அகலமு முடையதாக உள்ளது. கூரை: கூரைகள் தட்டையானவை. அவை மரத்தினால் அமைக்கப் பட்டவை. சில வீடுகளின் சுவர்களில் மரங்கள் இடப்பட்ட துவாரங்கள் காணப்படுகின்றன. மரங்கள்மீது பலகைகள் இடப்பட்டன. வறிய மக்கள் மரங்கள் மீது நாணற்பாயை விரித்து அதன்மேல் மரத்தூளும் உமியும் கலந்து குழைத்த களிமண்ணை இட்டு மெழுகி மட்டஞ் செய்தார்கள். சுவர்கள்: வீட்டுச் சுவர் செங்கற்களால் கட்டப்பட்டுள்ளன. அகலமான சுவர்களின் வெளிப்புறத்துக்கும் உட்புறத்துக்கும் இடையே களிமண் இட்டு நிரப்பப்பட்டது. வெளிச்சுவர்கள் உள்ளே சரிந்து செல்லும்படி அமைக்கப் பட்டன. கதவில்லாத அறைகள், மலக்கூடங்கள்: கதவில்லாத சில அறைகள் காணப்படுகின்றன. இவை நிலத்துக்குக் கீழ் உள்ள அறைகளாக அல்லது மலக் கூடங்களாக இருக்கலாம். இரண்டு மலக் கூடங்களைத் தவிர வேறு மலக் கூடங்கள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. கழிவு நீர் செல்லும் கால்வாய்: சிந்துவெளி நகரங்களில் கழிவுநீர் வெளியே செல்வதற்குக் கற்பதித்த வாய்க்கால்கள் அமைக்கப்பட்டிருந்தன. மறுநாடுகளில் விளங்கிய அக் கால நகரங்களில் இவை காணப்படவில்லை. எல்லா வீடுகளுக்கும் வீதிப் பக்கமுள்ள சுவரில் ஒன்று அல்லது இரண்டு துவாரங்கள் விடப்பட்டிருந்தன. இவை வழியாக அழுக்கு நீர் வெளியே யுள்ள கால்வாயிற் சென்று விழுந்தது. அழுக்கு நீர் விழுமிடத்தில் பாரமான பொருள்கள் தங்கி நிற்கும்படி கற்பதித்த குழிகள் அமைக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு வீதியிலும் 18 அங்குலம் முதல் 2 அங்குலம் வரை ஆழமுள்ள கால்வாய்கள் இருந்தன. இவற்றின் மேலே செங்கற்கள் இட்டு இவை மூடப்பட்டுள்ளன. இச் செங்கற்கள் வேண்டியபோது எடுக்கக்கூடியன. சிறிய கால்வாய்களில் செல்லும் கழிவு நீர் பெரிய வாய்க்காலிற் சென்று விழுந்தது. இவ் வாய்க்கால்களும் அழுக்குத் தங்கி நிற்கும் குழிகளும் இடை யிடை சுத்தஞ் செய்யப்பட்டன. வாய்க்கால்கள் சுத்தஞ் செய்யப்பட்ட இடத்தில் மணல் காணப்படுகின்றது. மொகஞ்சதரோக் கட்டடங்களில் காணப்படும் தூண்கள் சதுரமானவை. சிந்துவெளி நகரங்களின் கட்டட அமைப்புப் பாபிலோனிய அல்லது எகிப்திய கட்டட அமைப்பைவிட அதிகம் வளர்ச்சி யடைந்திருந்தது என டாக்டர் பிராங்போர்ட் குறிப்பிட்டுள்ளார். பெரிய தானியக் களஞ்சியமும் கட்டடங்களும்: அரப்பாவில் 169 அடி நீளமும், 135 அடி அகலமுமுள்ள தானியக் களஞ்சியமொன்று காணப் படுகின்றது. இரண்டு வரிசைகளில் தனித்தனி ஒவ்வொன்றிலும் ஏழு வீடுகள் அடங்கிய பதினான்கு கட்டடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவ் விரண்டு நிரைகளையும் ஒரு பாதை பிரிக்கின்றது. இப் பாதையை ஆறு பாதைகள் குறுக்கே பிரிக்கின்றன. இதனால் ஒவ்வொரு கட்டடத்தையும் சுற்றி வெளி இருக்கின்றது. ஒவ்வொரு வீட்டுக் கும் ஒரு முற்றமும் இரண்டு அறை களும் உண்டு. சிறிய அறை வாயிற் பக்கத்திலும் பெரிய அறை முற்றத்துக்குப் பின்னாலும் உள்ளன. சில இடங்களில் விளக்குத் தூண்கள் காணப்படுகின்றன. இதனால் வீதிகளுக்கு வெளிச்சம் இடப் பட்டதெனத் தெரிகின்றது. வீதிகளுக்கு அப்புறத்தில் காணப்படும் அழுக்குக் குவியல்களால் நகர் நன்கு சுத்தஞ் செய்யப்பட்டதெனத் தெரிகின்றது. சில இடங்களில் அழுக்குக்குப் பதில் சட்டி பானை உடைவுகளும் அழுகிய இலை தழைகளும் காணப்படுகின்றன. சிற்பம்: உருவங்கள் மிருதுவான கற்களில் வெட்டப்பட்டுள்ளன. கண்டு பிடிக்கப்பட்ட மனித உருவங்களில் ஒன்று, அலங்கரிக்கப்பட்ட போர்வையை இடது தோளுக்கு மேலால் வந்து வலது புயத்துக்குக் கீழே செல்லும்படி அணிந்திருக்கின்றது. அதற்குக் குறுகிய தாடியும் கன்ன மீசை யும் காணப்படுகின்றன. தலை மயிர் நடுவே வகிர்ந்து விடப்பட்டுள்ளது. தலையைச் சுற்றி நாடா ஒன்று கட்டப்பட்டுள்ளது. சிந்துவெளியிற் கண்டு பிடிக்கப்பட்டவைகளுள் முத்திரைகள், உடம்பில் அணியும் பொருள்கள் போன்றவை முதன்மையுடையன. சிறிய உருவங்களின் கால்களும் கைகளும் உடைந்துள்ளன. மக்கள் வடிவங்களிற் பல பெண் உருவங்களாகும். அரையில் கட்டப்பட்ட ஒடுக்கமான துணியில்லாவிடில் அவை நிர்வாணத் தோற்றம் அளிப்பனவாகும். பெரும்பாலும் எல்லா வடிவங்களும் அணிகலன்கள் அணிந்துள்ளன. அணில், குரங்கு முதலியவை நிறக் கற்களிலும் ஆமை ஓட்டிலும் வெட்டப்பட்டுள்ளன. நிறக்கல்லில் வெட்டப்பட்ட அணில் இரண்டு அங்குல உயரமுள்ளது. அணிலின் வால் நிமிர்ந்து நிற்கின்றது. அது முன்னங் கால்கள் இரண்டினாலும் எதையோ பிடித்திருக்கின்றது. வெண்கலத்தினாற் செய்யப்பட்ட நாட்டியப் பெண்ணின்வடிவம் ஒன்று மிகவும் கவர்ச்சிக்குரியதா யுள்ளது. அவள் கை மூட்டுவரையும் வளையங்களை அணிந்திருக்கிறாள். நீலநிறக் கல்லில் வெட்டப்பட்ட ஒரு மனித வடிவம் அட்டணைக் காலிட்டுக்கொண்டு கட்டிலின் மீது இருக் கின்றது. இரண்டு பக்கங்களிலும் ஒவ்வொருவர் முழங்கால் படிந்து நின்று வணங்குகின்றனர். பின்புறத்தில் ஒரு பாம்பு உள்ளது. இன்று சிந்துவிற் காணப்படும் மக்கள் மொகஞ்சதரோ மக்களைவிட வேறானவர்களல்லர் எனச் சர் ஆர்தர் கீத் கூறியுள்ளார். ஆடவர் இடது தோளுக்கு மேலால் வந்து இடது புயத்துக்குக் கீழே செல்லும்படி போர்வை அணிந்திருந்தார்கள். இவ்வழக்கே நாளடைவில் பூணூல் அணியும் வழக்காக மாறிற்று. இன்று உடுக்கும் ‘வேட்டி’ போன்ற உடையை ஆடவர் அரையில் அணிந்தனர். பஞ்சினாலும் கம்பளியினாலும் உடைகள் செய்யப்பட்டன. ஊசிகள் காணப்படுகின்றன. மக்கள் தைக்கப் பட்ட உடைகளையும் அணிந்தார்கள் ஆகலாம். ஆடவர் தலையில் மயிரை வளரவிட்டுக் குறுக வெட்டியிருந்தார்கள். சிலர் மயிரைப் பின்புறத்தில் குடுமியாக முடிந்து நாடாவினாற் கட்டினார்கள். இன்று மலையாளிப் பெண்கள் முடிவதுபோல் மயிர் உச்சியில் முடியப் பட்டது. சில உருவங்களின் மயிர் பின்புறமாகத் தொங்குகின்றது. ஆடவர் மேலுதடுகளின் மயிரை மழித்தார்கள் அல்லது மயிரை ஒட்ட வெட்டி னார்கள். ஆபரணங்கள்: ஆடவரும் மகளிரும் ஆபரணங்கள் அணிந் தார்கள். கழுத்தணி, தலைக்குக் கட்டும் நாடா, மோதிரம், புயவணி முதலியவை ஆண்க ளாலும் பெண்களாலும் பயன்படுத்தப்பட்டன. காலணி, காது வளையங்கள், தோடு, அலங்கரிக்கப்பட்ட ஊசிகள், மூக்கு வளையம் முதலியவைகளைப் பெண்கள் பயன்படுத்தினர். செல்வர் பொன், வெள்ளி, நிறக்கற்கள், தந்தம், விலையுயர்ந்த கற்கள் முதலியவைகளாற் செய்த ஆபரணங்களைப் பயன்படுத்தினர். ஓடு, எலும்பு, செம்பு, சூளையிட்ட களிமண் முதலியவைகளாற் செய்யப்பட்ட நகைகள் வறிய மக்களால் பயன் படுத்தப்பட்டன. பெண்கள் அரை யில் அணியும் பட்டிகைகள் மணி கோத்த வடங்களால் செய்யப் பட்டன. அவைகளின் முகப்புக் கள் பொன், செம்பு முதலியவை களாலானவை. மணிகளைக் கோத்து மாலைகள் செய்யப் பட்டன. வயிரக் கற்களையும் மணிகளையும் துளையிடுவதற்குப் போதிய திறமை வேண்டும். செம்பில் செய்யப்பட்ட நாட்டியப் பெண் கைமுட்ட வளைகள் அணிந்திருக்கின்றாள். கைவளைகள் பொன், வெள்ளி, செம்பு, வெண்கலம், நிறக் கற்கள், சூளை யிட்ட களிமண் முதலியவைகளாற் செய்யப்பட்டன. அழகிய கைவேலை செய்யப்பட்ட நிறக்கற்களும் தலைமுடிக்குச் செருகும் பலவகை ஊசிகளும் காணப்பட்டன. அவை வெண்கலம், செம்பு, எலும்பு, நிறக்கற்கள், சுண்ணாம்புக்கல் முதலியவைகளாற் செய்யப்பட்டவை. தலைக்குச் செருகும் ஊசியில் மூன்று குரங்குகள் ஒன்றை ஒன்று பிடித்துக் கொண்டிருப்பதாகிய காட்சி காணப்படுகின்றது. மேனி மினுக்குப் பொருள்கள்: சிந்துவெளி அழிபாடுகளில் கிடைத்த மேனி மினுக்குப் பொருள்கள் பல கிஷ், ஊர் முதலிய இடங்களில் கிடைத்தவை போன்றவை. மேனிமினுக்குப் பொருள்கள் வைக்கும் பெட்டிகள் மரத்தினாற் செய்யப்பட்டன. நிறக்கற்களினாற் செய்யப்பட்டன வும் நான்கு அறைகள் உள்ளனவுமாகிய பெட்டி களும் காணப்படுகின்றன. இவ்வகைப் பேழைகள் கிரேத்தாவில் மாத்திரம் காணப்பட்டன. முகம் பார்க்கும் கண்ணாடி வெண்கலத்தினாற் செய்யப்பட்டது. அது நீண்ட வட்ட வடிவுடையது. கண்ணுக்கு மைதீட்டும் குச்சிகள் வெண்கலத்தினாலும் செம்பினாலும் செய்யப்பட்டன. யானைத் தந்தத்தில் செய்யப்பட்ட சீப்புகள் காணப்பட்டன. மயிர் மழிக்கும் கத்திகள் செம்பினாலும் வெண்கலத்தினாலும் செய்யப்பட்டன. வீட்டுப் பொருள்கள்: கல், ஓடு, நிறக்கல், தந்தம், உலோகம் முதலியவைகளால் வீட்டுப்பொருள்கள் செய்யப்பட்டன. கல் ஆயுதங் களுக்குப் பதில் உலோக ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டன. நிறக்கல், வேலைப்பாடுடைய ஏனங்கள் செய்தற்கு மாத்திரம் பயன்படுத்தப்பட்டது. வீட்டு ஏனங்கள் பெரும்பாலும் மண்ணினாற் செய்யப்பட்டன. அடுக்களை யில் பயன்படுத்தும் ஏனங்கள், கிண்ணங்கள், தட்டுக்கள், சாடிகள், பானை சட்டிகள் முதலிய பலவகையின. நீர் அருந்தும் ஏனங்களின் அடிப்பாகம் முனையுடையது. நீர் உண்ணும் ஏனங்கள் பல, கிணற்றைச் சுற்றி உடைந்து கிடப்பதால் அவை ஒரு முறை மாத்திரம் பயன்படுத்தப் பட்டன எனத் தெரிகின்றது. ஊசியும், துளையிடும் கருவிகளும் செம்பினாலும் தந்தத்தினாலும் செய்யப் பட்டன. கோடரி, அரிவாள், கத்தி, மீன் பிடிக்கும் தூண்டில், குடையும் கருவிகள் போல்வன வெண்கலத்தினாலும் செம்பினாலும் செய்யப்பட்டன. வலைகளை நீரில் ஆழ்த்துவதற்கு ஈயத் துண்டுகள் பயன்படுத்தப்பட்டன. படுக்கைகளும் சாய்வு நாற்காலிகளும் முன் அறையில் வைக்கப்பட்டன. சில நாற்காலிகளின் பாதங்கள் நாழிகை வட்டம் போலவும், இடபத்தின் கால் போலவும் செய்யப் பட்டன. இடபக்கால் உள்ள நாற்காலிகள் எகிப்திய முதல் அரசபரம்பரைக் காலம் முதலாகக் காணப்படுகின்றன. விளக்குகள், ஓடு, மண், செம்பு முதலியவைகளால் செய்யப்பட்டன. வீதிகளிலும் விளக்குகள் இருந்தன. மெழுகுத் திரி வைத்து எரிக்குந் தாள் ஒன்று கண்டு பிடிக்கப்பட்டது. வேளாண்மை: கோதுமையும், வாற்கோதுமையும், நெல்லும் விளை விக்கப்பட்டன. மண்வெட்டிக்குப் பதில் கலப்பை பயன்படுத்தப்பட்டதோ என்பது அறிய முடியவில்லை. பேரீந்தின்பழ விதைகள் மொகஞ்சதரோவிலும் அரப்பாவிலும் காணப்பட்டன. இதனால் அங்குப் பேரீந்து வளர்ந்ததெனத் தெரிகின்றது. உணவு: கோதுமை, வாற்கோதுமை, அரிசி, காய்கனிகள், பால் முதலியன உணவாகப் பயன்படுத்தப்பட்டன. அரப்பாவில் பயறும் எள்ளும் பயிரிடப்பட்டன மாடு, ஆடு, பன்றி கோழி, ஆமை முதலியவை களின் இறைச்சியும், மீன், மீன்-கருவாடு, கடல் உயிர்கள் முதலியனவும் உணவாகக் கொள்ளப்பட்டன. வீட்டு விலங்குகள்: மாடு, எருமை, ஆடு, யானை, பன்றி, ஒட்டகம், நாய் முதலியன வீட்டில் வளர்க்கப்பட்டன. மண்ணினாற் செய்யப்பட்ட எருமை, காண்டாமிருகம், புலி, குரங்கு, கரடி, முயல், அணில் முதலிய விளையாட்டுப் பொருள்கள் காணப்படுகின்றன. இதனால் அக்கால மக்கள் இவைகளைப் பற்றி அறிந்திருந்தார்கள் என விளங்குகின்றது. கழுதை, பூனை, கீரி, மயில், கோழி முதலியனவும் அவர்களால் அறியப்பட்டிருந்தன. விளையாட்டுகள்: சதுரங்கம், கோலி முதலியவை முக்கிய விளையாட்டுகளாகும். சதுரங்கம் ஆடும் காய்கள் பல காணப்பட்டன. அவை களிமண்ணினாற் செய்யப்பட்டவை. விளையாட்டுப் பொருள்கள்: மண்ணினால் செய்யப்பட்ட மனிதர், விலங்குகள், தலையாட்டும் விலங்குகள், கோழி, புறா வடிவான ஊது குழல்கள், கிலுகிலுப்பை, சிறுவர் விளையாடும் பானை சட்டி, இரண்டு சக்கரங்களில் வைக்கப்பட்டுக் கயிறு கோத்து இழுப்பதற்குக் கழுத்தில் துளை இடப்பட்ட ஆட்டுக் கடா, விளையாட்டு வண்டி முதலியவை விளையாட்டுப் பொருள்களிற் சில. இங்குக் காணப்பட்ட விளையாட்டு வண்டிகள் கி.மு. 3,200இல் ஊர் என்னும் மேற்கு ஆசிய நகரிலே கல்லிற் பொறிக்கப் பட்ட தேர் போன்றன. இவை உள் நாட்டிலேயே செய்யப்பட்டன வென்பது சங்கு தரோவிற் காணப்பட்ட விளையாட்டுப் பொருள்களால் நன்கு அறியப் படுகின்றது. போக்குவரத்து: பழைய சிந்துவெளி மக்கள் பயன்படுத்திய வண்டிகள் இன்று பஞ்சாப்பிலும் சிந்துவிலும் பயன்படுத்தப்படும் வண்டிகளை ஒத்தவை. அரப்பாவில் கண்டுபிடிக்கப்பட்ட செம்பினாற் செய்த வண்டியினால் அக்கால வண்டி, வெய்யிலையும் மழையையும் தாங்க மேலே மேற்கட்டி கட்டப்பட்ட இன்றைய ‘எக்கா’ வண்டி போன்றதெனத் தெரிகின்றது. நிறையும் அளவும்: சிந்துவெளி மக்கள் பல வகையான நிறைகளை வழங்கினர். பெரிய நிறைகள் கூரிய தலை உடையனவாயும் கயிறு கோக்கக் கூடிய துளையுடையனவாயும் இருந்தன. சிறிய நிறைகள் இருண்ட நரை நிறக் கற்களாற் செய்யப்பட்டவை. அவை ‘பீப்பா’1 வடிவானவை. எல்லம், மெசபெதோமியா நிறைகளும் இவ்வகையினவே. நெசவு: மொகஞ்சதரோ வீடுகளில் நூல் நூற்கும் கதிர்கள் காணப் பட்டன. பஞ்சு, கம்பளிகளில் நூல் நூற்றல் பொது நிகழ்ச்சியாக இருந்தது. விலை ஏறப்பெற்ற நிறக்கற்களிலும் செய்யப்பட்ட நூல் நூற்கும் கதிர்கள் காணப்பட்டன. இதனால் செல்வரும் வறியரும் நூல் நூற்றார்கள் எனத் தெரிகின்றது. ஆடைகளுக்குப் பலவகைச் சாயங்கள் ஊட்டப்பட்டன. போர் ஆயுதங்கள்: கோடரி, ஈட்டி, வேல், வில், அம்பு, தண்டு, கவண், வாள், கேடகம் முதலியன போரில் பயன்படுத்தப்பட்டன: கோடரிகள் சூசாவிற் கிடைத்தவை போன்றன. வாள்கள் செம்பினாற் செய்யப்பட்டவை. அவைகளுக்கு இரு பக்கங்களிலும் அலகு உண்டு. இவை அக் காலத்தில் எகிப்தில் காணப்பட்ட அவ்வகைப் பொருள்களோடு ஒப்பிட்டுப் பார்க்கத் தகுந்தவை. மெய்உறை அல்லது கவசம் தோலினாற் செய்யப்பட்டது. மருந்து: சிந்துவெளி அழிபாடுகளில் சிலாசத்து என்னும் மருந்து காணப்பட்டது. இது நீரிழிவு, பசியின்மை, வாதம், ஈரற் கோளாறு முதலியவை களுக்குப் பயன்படுத்தப்படும் மருந்து. மருந்தின் பொருட்டு மான் கொம்பும் பிற இடங்களிலிருந்து கொண்டுவரப்பட்டது. காண்டாமிருகத்தின் கொம்பும் மருந்தின் பொருட்டுப் பயன்படுத்தப்பட்டது. மந்திரவாதம், தாயத்துப் போன்றவை நோயை ஆற்றத்தக்கன என்று மக்கள் நம்பினார்கள். வாணிகம்: வட இந்தியாவுக்கும் தென்னிந்தியாவுக்கும் மேற்கு ஆசிய நாடுகளுக்கும் தொடர்பு உண்டாயிருந்தது. சுமேரியாவோடு சிந்து நாடு தொடர்பு பெற்றிருந்ததைக் காட்டும் சான்றுகள் மிகப் பல உள்ளன. எகிப்தோடும் கிரேத்தா (Crete)வோடும் வாணிகம் நடைபெற்றது. முத்திரை ஒன்றில் மரக்கலம் காணப் படுகின்றது. பழைய மீனோவ முத்திரை, சுமேரிய உருளை வடிவான முத்திரை, எகிப்திய அரச பரம்பரைக்கு முற்பட்ட மட்பாண்டங்கள் என்பவைகளிற் காணப்படுவதுபோல் இம் மரக்கலம் மேலே உயர்ந்து வளைந்த முன்பின் புறங்களை யுடையது. இதற்குப் பாய்மர மில்லை. நடுவே ஓர் அறை இருக்கிறது. மரக்கலம் செலுத்துவோன் சுக்கானுக்குப் பக்கத்தே இருக்கின்றான். மொகஞ்சதரோ, ஊர், கிஷ், எகிப்து முதலிய நாடுகளுக்கிடையில் வாணிக உறவு இருந்தது. கைத்தொழில்: சிந்துவெளி மக்கள் எல்லா வகை மட்பாண்டங் களையும் செய்தார்கள். சிலவற்றுக்கு நிறம் பூசப்பட்டன; சிலவற்றில் மினுக்கம் கொடுக்கப் பட்டன. மேலே குமிழியுள்ள முத்திரைகள், பாவைகள் முதலியன அழகாகச் செய்யப்பட்டுள்ளன. பொன், வெள்ளி, விலை உயர்ந்த கற்களில் செய்யப்பட்ட ஆபரண வகைகள் அக்காலப் பொற்கொல்லனின் கைவேலைத் திறமையைக் காட்டுவன. முத்திரைகளிற் செதுக்கப்பட்ட எழுத்துகள், புலி, யானை, மாடு, மரம், செடி முதலியவை அக்காலச் சிற்பனின் கைவினை மாட்சியை வெளியிடுவன. கட்டடங்களைக் கொண்டு கொத்த ருடையவும், ஆடையைக் கொண்டு நெசவாளருடையவும் திறமைகளை அறிதல் அமையும். மக்கள்: ஆரியர் வருகைக்குமுன் வடநாடு முழுமையும் திராவிட மக்களே வாழ்ந்தார்கள் எனப் பெறப்படுகின்றமையாலும், இன்றும் பலுசிஸ் தானத்தில் வழங்கும் பிராகூய் மொழி திராவிடத்துக்கு இனமுடையதாய்க் காணப்படுதலாலும், பிற காரணங்களாலும் மொகஞ்சதரோ மக்கள் திராவிடரேயாவர் எனத் துணியப்பட்டுள்ளது. ஹெரஸ் பாதிரியார் ஒலி முறையாக வாசித்த பழைய சிந்து வெளி எழுத்துகளின் ஒலி முறையான உச்சரிப்புகளில் பெரும்பாலானவை தமிழ்ச் சொற்களாக உள்ளன. மொழி: சிந்துவெளி மக்கள் ஒரு சொல்லைக் குறிக்க ஒரு குறியீட்டை வழங்கினர். சீனமொழியில் வழங்கும் எழுத்துகள் இவ்வகையினவே. மேற்கு ஆசிய, எகிப்திய, சின்ன ஆசிய, சிந்துவெளி எழுத்துகள் ஒரே அடிப்படையி னின்றும் சிற்சில வேறுபாடுகளுடன் வளர்ச்சி யடைந்துள்ளவைகளே எனச் சேர் யான் மார்சல், டாக்டர் பிராங்போர்ட், ஹெரஸ் பாதிரியார் முதலி யோரும் வேறு பலரும் ஆராய்ந்து கூறியுள்ளார்கள். தென்னமெரிக்காவுக்கு அண்மையிலுள்ள ஈஸ்டர் தீவுகளில் காணப்பட்ட எழுத்துகளில் 150 எழுத்துகள் வரையில் மொகஞ்சதரோ எழுத்துகளாகக் காணப்படுகின்றன. மொகஞ்சதரோ எழுத்துகளினின்று வட இந்திய தென்னிந்திய எழுத்துகளும் தோன்றின. பினீசிய எழுத்துக்கும் பிராமி எழுத்துக்கும் உறவு உண்டு. பினீசிய எழுத்திலிருந்து கிரேக்க எழுத்துகளும், கிரேக்க எழுத்துகளி லிருந்து உரோமன் எழுத்துகளும், உரோமன் எழுத்துகளிலிருந்து ஐரோப்பிய மொழிகளின் எழுத்துகளும் தோன்றின. மொகஞ்சதரோ எழுத்துகளை ஒத்தவை ஹைதராபாத்திலும் திருநெல்வேலியிலும் கிடைத்த சரித்திர காலத்துக்கு முற்பட்ட பானை சட்டிகளிலும், இலங்கையிலும் காணப்படு கின்றன. “சிவப்புக் கல்லில் வெட்டப்பட்டதும் திறமையான வேலைப்பாடு உடையதுமான சிறுவனின் உருவம் ஒன்று அரப்பாவிற் கிடைத்தது. அதனை நோக்குமிடத்து அது கிரேக்கர் கி.மு. நாலாம் நூற்றாண்டிற் செய்த கை வேலைப்பாடு போலத் தோன்றும்; ஆனால் அது கி.மு. 3,000 வரையில் செய்யப்பட்டது. இவ் வுருவத்தைக் கொண்டு அறியவருவது, சிற்பக் கலையின் வளர்ச்சியைச் சரித்திர மூலம் அறிய முடியாதென்பதேயாகும். இவ்வுலகம் முழுமையிலும் இந்தியரே மிகப் பழைய சிற்பிகளாவர் எனத் தெரியவருகின்றது.”1 * * * “மொகஞ்சதரோவில் கண்டு பிடிக்கப்பட்ட ஒரு முத்திரையில் வெட்டப்பட்ட இடபத்தின் வடிவம் மிகவும் உயிர்ப்பு உடையதாகக் காணப்படுகின்றது. இதனைக் காணும் ஒருவர் சிற்பக்கலை வளர்வதில்லை; ஆனால் அது தனது போக்கை மாற்றிக் கொள்கின்றது எனத் தனக்குள்ளே முடிவு செய்து கொள்வர்.”2 * * * மொகஞ்சதரோப் புதைபொருள் ஆராய்ச்சி, புத்தர் பிறப்பதற்கு முற்பட்ட கால நிலைமைகளை வெளியிட்டுள்ளது. இந்திய அரசாங்கத் தாரின் சாசனப் பரிசோதகராயிருந்த ஹிரந்த சாத்திரி கூறியிருப்பது வருமாறு: மொகஞ்சதரோ நகரில் வாழ்ந்த மக்கள் நன்கு அமைத்த விசால மான கட்டடங்களோடு ஒப்பிடத்தக்கவை, வரலாற்றுக் காலத்துக்கு முற்பட்ட எகிப்திலோ மெசபெதோமியாவிலோ வேறு எவ்விடத்திலோ இருக்க வில்லை. அங்குள்ள குளிக்கும் அறைகளும், கழிவு நீர் ஓடும் வாய்க்கால் களும் அங்கு வாழ்ந்த மக்கள் உலக நாகரிக மக்களால் மாத்திரம் அறியப் படும் வாய்ப்புகளையும், உல்லாச வாழ்க்கையையும் உடையராயிருந்தார் களென்பதை அறிவிக்கின்றன. இது. கி.மு. 5000 ஆண்டுகளுக்கு முற்பட்ட நிகழ்ச்சி.”3  திராவிட இந்தியா முன்னுரை திராவிட மக்களின் வரலாற்றை நூறு வகையில் விரித்து எழுதலாம். அவ்வாறு நூல்கள் வெளிவரின் பொதுமக்களும் மாணவரும் திராவிட மக்களின் உண்மை வரலாறுகளை நன்குகற்று உண்மை அறிவர். இன்று பள்ளிக்கூடங்களுக்கு என எழுதப்படும் வரலாற்று நூல்களில் காணப்படுவ திராவிட மக்களைப் பற்றிய உண்மைச் செய்திகள் பல காணப்படுவதில்லை. திராவிட இந்தியா என்னும் இந்நூல் பற்பல ஆராய்ச்சி அறிஞர் ஆராய்ந்து கண்ட உண்மைகளை ஆதாரமாகக் கொண்டு கற்போர் எளிதிற் படித்துப் பொருள் விளங்கும் முறையில் அமைந்துள்ளது. திராவிட மக்களின் பொற்காலம் இற்றைக்கு ஆறாயிரம் ஆண்டுகளின் முன் உள்ளது. சங்ககாலம் திராவிட மக்களின் பொற்காலத்தின் கடைக்காலமாக விருந்த தென அறிகின்றோம். முன்பின் மூவாயிரம் ஆண்டுகள் வரையில் திராவிட மக்களின் பொற்காலம் நிலவிற்று. இந்திய மக்களின் நாகரிகமென்பது திராவிட மக்களின் நாகரிகமே. இவ்வுண்மையை இன்று வரலாற்றாசிரி யர்கள் எடுத்துக்கூற முற்பட்டுள்ளார்கள். பேராசிரியர் சுந்தரம் பிள்ளை, பண்டிதர் சவரிராய பிள்ளை காலம் முதல் அறியப்பட்டிருந்த பற்பல உண்மைகள் பொதுமக்களிடையே பரவாதும் பரப்புவாரற்றும் கிடந்து இன்று பரவுவது ஓர் நற்காலத்தின் அறிகுறியே யாகும். சென்னை 1-4-1949 ந.சி. கந்தையா. திராவிட இந்தியா தோற்றுவாய் இந்திய மக்கள் வரலாற்றில் திராவிட மக்கள் வரலாறு மிக முதன்மை யுடையது. இன்று இந்திய நாகரிகம் எனப் பெயர் பெறுவது ஆரிய திராவிட நாகரிகங்களின் கலப்பினால் தோன்றியது. ஆரிய நாகரிகத்துக்கு முற்பட்டது திராவிட நாகரிகம். இதிற் சிறிதும் ஐயப்பாடு இல்லை. நீண்ட காலம் திராவிட நாகரிகத்தைப்பற்றிய செய்திகள் அறியப்படாது கிடந்தன; அதனால் திராவிடரின் பண்பாட்டைக் குறித்த செய்திகள் வரலாற்றாசிரி யர்களால் பற்பலவாறு திரித்துக் கூறப்படலாயின. இன்று தமிழரின் நாகரிகத்தைப் புலப்படுத்தும் சான்றுகள் பல கிடைத்துள்ளன. இச்சிறிய நூல் திராவிடரின் நாகரிகச் சிறப்புக்களைப்பற்றிக் கூறுகின்றது. திராவிடர் பிறப்பிடம் “திராவிட மக்கள் அயல்நாடுகளிலிருந்து இந்தியாவின் வடபகுதி களை அடைந்தார்கள். பின்பு ஆரியர் என்னும் புதிய சாதியினர் அங்கு வந்தனர். அவர்கள் திராவிடரை வென்று தெற்கே துரத்தினர். அவர்கள் தெற்கே வந்து வாழ்ந்தார்கள். அவர்களே தமிழர் எனப்படுவோர்.” என மேல்நாட்டாசிரியர் சிலர், பல ஆண்டுகளின்முன் உண்மை அறியாது மயங்கி எழுதிவைத்தனர். அக்கொள்கை இன்று சிறிதும் ஏற்றுக் கொள்ளத் தக்கதாயிருக்கவில்லை. பள்ளிச் சிறுவர்களுக்கு வரலாறு எழுதும் ஆசிரியர் பலர் உண்மையல்லாத பழைய கொள்கையைப் பின்பற்றி எழுதிவருவது வருந்தத்தக்கதே யாகும். திராவிட மக்கள் வெளிநாடுகளிலிருந்து வந்து இந்திய நாட்டை அடைந்தார்கள் என்று கூறுவதற்கேற்ற ஆதாரம் ஒன்றேனும் காணப்பட வில்லை. பழைய கற்காலம் முதல் இரும்புக்காலம் வரையில் மக்கள் தொடர்பாகச் செய்து பயன்படுத்திய ஆயுதங்களும் பிறபொருள்களும் இந்திய நாட்டின் பல்வேறு இடங்களிற் கண்டு எடுக்கப்பட்டுள்ளன.1 திராவிட மக்கள் அயல்நாடுகளினின்றும் வந்தார்கள் என்று கூறுவோர்க்குத் துணையாயிருப்பது ஆப்கானிஸ்தானத்தின் ஒரு பகுதியில் தமிழுக்கு இனமுடைய பிராகூய் மொழி வழங்குவது. இற்றைக்கு ஆறாயிரம் ஆண்டுகளின்முன் சிந்து ஆற்று வெளிகளில் திராவிடர் நாகரிகம் பரவியிருந்தது. அங்கு தமிழ் வழங்கிற்று. இம்மக்களின் தொடர்புடைய வர்களே ஆப்கானிஸ்தானத்தில் தங்கி வாழ்ந்தார்கள். அவர்களின் சந்ததியினரே திராவிடத்தின் சம்பந்தமுடைய பிராகூய் மொழியை இன்றும் பேசிவருகின்றனர்.1 திராவிட மக்கள் பழமைதொட்டே இந்திய நாட்டில் வாழ்ந்து வருகின்றார்கள். அவர்களின் பழைய நாடு குமரி முனைக்குத் தெற்கிலும் பரந்து கிடந்தது. நாகரிகத்தின் பழமை மேற்கு ஆசியா எகிப்து முதலிய நாடுகளில் பழைய இடிபாட்டு மேடுகள் தோண்டி ஆராயப்பட்டுள்ளன. அங்கு கிடைத்த பழம் பொருள் களைக்கொண்டு அந் நாடுகளின் நாகரிகம் ஏழாயிரம் அல்லது எண்ணா யிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதென ஆராய்ச்சியாளர் துணிந்துள்ளனர். மைசூரிலே சிற்றால்ரக் என்னும் இடத்திலும் சிந்துவெளியிலும் செய்யப் பட்ட அகழ் ஆராய்ச்சிகளால் இந்திய நாட்டின் நாகரிகமும் அந்நாட்டு நாகரிகங்களை ஒத்த பழமையுடையதென அறியப்படுகின்றது. எகிப்து, மேற்கு ஆசியா முதலிய நாடுகளில் நாகரிகத்தைத் தோற்றுவித்தோர் அயல் நாடுகளினின்றும் சென்றவர்களாவர் என்றும், அவர்கள் இந்திய நாட்டி னின்றும், சென்றார்கள் எனக் கொள்வதற்குப்பல ஏதுக்கள் உள்ளவென்றும் சிறந்த மேற்திசை ஆராய்ச்சி அறிஞர் பலர் புகன்றுள்ளார்கள்.2 தமிழும் திராவிடமும் இன்று தமிழரைக்குறிக்கத் திராவிடர் என்னும் பெயரும் வழங்கு கின்றது. திராவிடம் என்னும் சொல்லைப் பற்றிப்பலர் பலவாறு ஆராய்ந்து கூறியுள்ளார்கள். திராவிடமென்பது தமிழ் என்னும் சொல்லின் உச்சரிப்பு வேறுபாடு என்பதே ஆராய்ச்சி அறிஞர் இறுதியாகக் கொண்ட முடிவு. இன்று திராவிடம் என்னும் சொல் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், துளு முதலிய மொழிக் கூட்டத்தைக் குறிக்க வழங்குகின்றது. திராவிடர் என்னும் பெயர் இம் மொழிக் கூட்டத்துக்குரிய மக்களைக் குறிக்கின்றது.1 சூழல்நிலைக்கேற்ப மக்கள் பண்பாடு அடைதல் உலகில் மக்கள் வாழக்கூடிய இடங்கள் ஐந்து வகையின என்று பழந்தமிழர் கண்டனர். அவர்கள் அவ்வகை நிலங்களைத் திணைகள் என்றனர். திணை என்பது திட் அல்லது திண் என்னும் அடியாகப் பிறந்தது. நிலப்பரப்பு என்பது அதன் பொருள். திட் அல்லது திண் என்பதிலிருந்தே திட்டு, திட்டை, திடர், திண்ணை முதலிய சொற்கள் பிறந்தன. திண் என்பது வலிமையையுங் குறிக்கும். இடங்களின் சூழ்நிலைக்கேற்பவே மக்களின் திருத்தமும் வளர்ச்சியடைந்தது. தண்ணீரில்லாத வறண்ட மணற் பகுதி பாலை எனவும், மலைநாடு குறிஞ்சி எனவும், மலைநாட்டுக்கும் கீழ்நாட்டுக் கும் இடைப்பட்ட குறுங்காட்டு நிலம் முல்லையெனவும், ஆற்றோரங்கள் மருதமெனவும், கடற்கரை நெய்தல் எனவும் வழங்கின. இவ்வகை நிலங் களும் தமிழ்நாட்டில் ஓரளவு உண்டு. மக்கள் தோன்றிய காலம் முதல் தமிழர் தென்னிந்தியாவில் வாழ்ந்துவருகின்றார்கள். அவர்கள் ஒரு நிலத்தினின்று இன்னொரு நிலத்துக்குச் சென்று படிப்படியான சீர்திருத்தங்களை அடைந்தனர். மலையும் மலைசார்ந்த நிலமும் மக்கள் முதல்முதல்குடியேறி வாழ்ந்த இடம் மலை. மிகமிக நீண்ட காலம் மழையினாலும் பருவக்காற்றினாலும் தாக்குண்டதால் தேய்ந்து போன சிறிய குன்றுகள் பல தென்னிந்திய பூமிகளிற் காணப்படுகின்றன. இம் மலை இடங்களுக்குக் கீழே தண்டகம் என்னும் இருண்ட காடு இருந்தது. அங்கு சிங்கம், புலி, யானை, காட்டு எருமை, சிறுத்தை, மனிதனுக்கு அழிவைச் செய்யும் பூச்சி வகைகள் காணப்பட்டன. ஆதிகால மனிதன், வெய்யில், மழை, விலங்குகள் முதலியவைகளினின்று தன்னைக் காப்பாற்றிக்கொள்ளக் கூடிய குகைகள் மலையிடங்களிலிருந்தன. அவன் தண்ணீரைச் சேமித்து வைப்பதற்கு மண் பாத்திரங்களைச் செய்ய அறிந்திருக்கவில்லை. நீரூற் றுகள் வற்றிய காலத்தில் பாறைகளிலுள்ள குழிகளில் நீர் நிறைந்திருந்தது. அவன் அதனைக் கைகளால் அள்ளிப் பருகினான்; காலடியிற் கிடந்த கற் களை எடுத்து அவைகளிலிருந்து கோடரி, ஈட்டிமுனை, அரியும் கருவிகள், சுரண்டும் கருவி முதலியவை களைச் செய்யப் பழகிக்கொண்டான். இந் நிலையிலிருந்து மனிதனின் சீர்திருத்தம் வளர்வதாயிற்று. மிக முற்பட்ட திருத்த காலம் பழைய கற்காலம் எனப்படும். பழைய கற்கால நாகரிகத்தைக் காட்டும் கையினாற் செய்யப்பட்ட பொருள்கள் கடப்பா, நெல்லூர், வட ஆர்க்காடு, செங்கற்பட்டு முதலிய இடங்களிற் கிடைத்துள்ளன. குறிஞ்சி நிலத்தில் வாழ்ந்த மக்கள் பழங்கள் விதைகள் கிழங்குகளை உண்டு வாழ்ந்தனர். பருவகால மாறுதல்களால் இவ்வுணவுப் பொருள்கள், சிற்சில காலங்களில் அரிதிற்கிடைப்பவாயின. ஆகவே அவர்கள் ஊன் உணவையும் கொள்ளத்தொடங்கினர். அவர்கள் தற்காப்பின் பொருட்டு விலங்குகளோடு அதிகம் போராட வேண்டியிருந்தது. அதனால் அவர்கள் வேட்டை ஆடுவதில் திறமை பெற்றனர். ஆகவே தொடக்கத்தில் மனித னின் தொழில் வேட்டையாடுவதாகவிருந்தது; அப்பொழுது அவர்கள் ஓரிடத்தில் தங்காது அலைந்து திரிந்தார்கள். உலகம் முழுமையிலும் கண்டெடுக்கப்பட்டுள்ள பழைய கற்கால ஆயுதங்கள் எல்லாம் ஒரே வடிவின. இதனால் ஆதிகால மனிதன் உலகில் எங்கும் அலைந்து திரிபவ னாயிருந்தானெனத் தெரிகின்றது. குறிஞ்சி நிலச்சூழல், மனித சீர்திருத்தத்திற்கு அடிப்படையாகிய இரண்டு புதியவற்றைக் கண்டுபிடிக்கும்படி செய்தது. அவற்றுள் ஒன்று வில்லும் அம்பும், மற்றது நெருப்பு உண்டாக்குதல். மலைகளில் மூங்கில் அதிகம் வளர்கின்றது. மலையில் வாழும் மக்கள் மூங்கிலின் வளையுந் தன்மையை நோக்கி அறிந்தார்கள். அவர்கள் அதனைப் பிளந்து இரு முனைகளிலும் கொடியைக் கட்டி நீண்ட முட்களை அதில் வைத்து எய்யப் பழகினார்கள். இன்றும் மலைகளில் வாழும் மக்கள் ஒரே அம்பினால் ஒரு புலியைக் கொல்லும் திறமை பெற்றிருக்கிறார்கள். ஆதிகால மக்கள் மலையில் தீ உண்டாகி எரிவதைக் கண்டார்கள். மூங்கில் ஒன்றோடு ஒன்று உரோஞ்சுவதால் தீயுண்டாகின்றதென்பதை அவர்கள் அறிந்தார்கள்; ஆகவே தாமும் இரண்டு தடிகளை ஒன்றோடு ஒன்றை உரோஞ்சித் தீ உண்டாக்கலாமென எண்ணினார்கள். தாம் வேட்டை யாடிக் கொன்ற விலங்குகளின் இறைச்சியை வேகச் செய்யும் பொருட்டு அவர்கள் முதலில் நெருப்பைப் பயன்படுத்தினர். ஆடவர் வேட்டையாடச் சென்றார்கள். பெண்கள் காட்டிற் சென்று பழங்களைப் பொறுக்கினார்கள்; கிழங்குகளை அகழ்ந்தார்கள்; தாம் வாழிடங்களைச் சுற்றித் தானே விளைந்த மலை நெல், மூங்கிலரிசி முதலி யவைகளையும் சேகரித்தார்கள். பெண்களின் அடுத்த கடமை குழந்தை களை வளர்ப்பது. இவ்வகை நிலையிலிருக்கும்போது அவர்கள் வீடு அமைக்க அறியவில்லை. தென்னிந்திய வெப்ப நிலைக்கு வீடு வேண்டிய தில்லை; மர நிழல்களும் மலைக்குகைகளுமே ஒதுக்கிடங்களாகப் பயன் பட்டன. மக்கள் தொடக்கத்தில் வீடுகளை உறைவிடத்தின் பொருட்டு அமைக்கவில்லை; தமது செல்வமாகிய உணவுப் பொருள்களைப் பத்திரப் படுத்திவைக்கும் பொருட்டு அமைத்தனர். பழைய கற்கால மனிதனுக்கு உணவைச் சேமித்து வைக்கும் தேவை உண்டாயிருக்கவில்லை. வீடு இல்லாமையாலும், அலைந்து திரியவேண்டிய இன்றியமையாமையாலும் வீட்டில் தங்கி வாழ்வதாகிய உணர்ச்சி ஆடவரிடையே எழவில்லை. ஆகவே தாயாட்சி முறையான வாழ்க்கை ஆதியில் வளர்ச்சியடைவ தாயிற்று. இவ்வகையான வாழ்க்கையை இன்னொன்றும் ஊக்கியது. முற்கால மனிதன் ஆடம்பரமான மணக்கிரியைகளால் கட்டுப்பட்டிருக்கவில்லை. ஆடவரும் மகளிரும் காதலித்து மணந்தனர். சில நாள்களின் பின் உறவி னரை அழைத்து விருந்து இட்டனர். இதுவே முற்காலத் திருமணக் கிரியை யாக விருந்தது. திருமணம் என்றும் நிலையான தன்மையுடையதாக விருக்க வில்லை. தனிப்பட்ட சொத்து இன்மையும் நிலையான வீடு இன்மையும் தாயாட்சி முறையான வாழ்க்கைக்கு நீண்ட காலம் வாய்ப்பு அளித்தன. தமது மேனியை அலங்கரித்துக் கொள்வதில் ஆடவருக்கும் மகளி ருக்கும் விருப்பு உண்டு; இவ்விருப்புப் பெண்களுக்கு அதிகம். குறப் பெண்கள் ஓய்வு நேரங்களில் ஓடுகளைப் பொறுக்கினார்கள்; அவைகளை மாலையாகக் கோத்து அணிந்தார்கள். அவர்களின் காதலர் வேட்டை யாடுவதிற் கிடைத்த புலிநகம், புலிப்பல் போன்றவைகளைக் கொடுத் தார்கள். அவைகளையும் அவர்கள் கழுத்தில் அணிந்தார்கள். பிற்காலத்தில் இவையே தாலியின் வடிவாகமாறின. தென்னிந்தியப்பெண் தாலிதரித்தல் திருமணம் செய்துகொண்டமைக்கு அடையாளமாகும். பெண்களின் இன்னொரு அலங்காரம் தழைஉடை. தழைஉடை என்பது கொடியிற் கட்டிய தழைகளாலான உடை. இவ்வுடை உடுக்கும் வழக்கம் இன்றும் சில காட்டுச் சாதியினரிடையே காணப்படுகின்றது. மணலும் மணல்சார்ந்த இடங்களும் மணலும் மணல்சார்ந்த இடமும் பாலை எனப்படும். இது மக்கள் வாழக்கூடிய இடத்தின் ஓர் உட்பிரிவில் அடங்கும். வேடன் காட்டு விலங்கு களைத் துரத்திச் செல்லும்போது பாலைநிலத்தில் நிலையில்லாது சிலகாலம் தங்குவான். பாலைநிலத்தில் சிலகாலம் தங்குவோர் அல்லது அங்கு வாழ்வோர் மறவர் எனப்படுவர். மறம் வீரத்தை உணர்த்தும். இவர் 1கள்ளர் எனவும் பட்டனர். பாலை நிலம் செழுமையற்றதாதலாலும் பாலைநில மக்கள் போர்த் தொழிலில் சிறந்தவர்கள் ஆதலினாலும் மறவரும் கள்ளரும் செல்வரையும் மற்றநிலங்களில் வாழும் வலியற்றவர்களையும் கொள்ளை யிட்டு வாழ்வாராயினர். இதனால் மறம் என்பது கொடுமையையும் கள்ளர் என்பது திருடரையும் குறிக்க வழங்கலாயின. காடும் காடுசார்ந்த நிலமும் குறிஞ்சி நிலத்தில் மக்கள் பெருகியபோது உணவு சுருங்கிற்று. அப்பொழுது மக்கள் அயலிலுள்ள முல்லை நிலத்திற்குச் செல்வாராயினர். அப்பொழுது அவர்கள் சீர்திருத்தத்தில் இன்னொரு படியை அடைந்தனர். எருமை, பசு, ஆடு, செம்மறியாடு போன்ற விலங்குகளை இவர்கள் பழக்கி வளர்த்தார்கள். அவர்கள் குறவராயிருந்தபோது நாய் பழக்கி வளர்க்கப் பட்டது. முல்லை நிலத்தில் ஆடுமாடுகள் விரைவிற் பெருகின. ஆகவே சொத்து உண்டாயிற்று. இதனால் குடும்பங்களும், குடிகளும் தோன்றி வளர்ந்தன. ஆடவரும் மகளிரும் ஒருவரை ஒருவர் காதலித்தலும், காதலின் அடையாளமாகக் காதலன் புலிநகம், இலையுடை முதலியவற்றைக் காதலிக்குக் கொடுத்துக் கிரியை இன்றி மணந்துகொள்வதுமாகிய மணம் களவு எனப்பட்டது. குறிஞ்சி நிலத்திற்றோன்றிய இவ்வகை மணங்கள் நின்றுபோயின. இப்பொழுது கற்பு ஒழுக்கம் தோன்றிற்று. காதலர் ஒருவ ரோடு ஒருவர் பழகுவதன்முன் மணச் சடங்கு இயற்றப்பட்டது. இலைக ளாலும் மலர்களாலும் அலங்கரிக்கப்பட்ட பந்தரின்கீழ் சுற்றத்தினர் திரண் டிருந்து மணக்கிரியை நடத்தப்பட்டது. சொத்துச் சேரத்தொடங்கியதும், கற்பு ஒழுக்கம் தோன்றியதும் சமூகம் தந்தை ஆட்சிமுறையாக வளர்வதாயிற்று. தந்தையே ஆடுமாடு களுக்குச் சொந்தமுடையவனாயிருந்தான். நிலங்களைப் பிரித்தால் ஆடுமாடுகள் மேய்வதற்கு முடியாமல் போகும். ஆகவே கூட்டுக் குடும்ப வாழ்க்கை தோன்றிற்று. தந்தை ஆட்சியில் பெரிய குடும்பத்தலைவன் அரசன்போல் ஆயினான். இம் முறையில் அரசன் தோன்றினான். ஆட்சி முறை முதலில் முல்லை நிலத்திலேயே தோன்றிற்று. கோன் என்பது பழைய தமிழ்ச்சொல். இது அரசனைக் குறிக்க வழங்குகின்றது. ஆய்ச்சி என்னும் சொல் இடைச்சியையும் அரசியையும் குறிக்கின்றது. மற்ற நாடுகளில் இடையரின் வாழ்க்கை இடம்விட்டு இடம் அலைந்து திரிவதாகவிருந்தது. தென்னிந்தியா செழிப்புடையதாயும் எல்லாக் காலங் களிலும் ஆடுமாடுகளுக்கு வேண்டிய உணவு கிடைக்கக் கூடியதாகவும் இருந்தமையால் தென்னிந்திய இடையருக்கு இடம்விட்டு இடம் செல்ல வேண்டிய கட்டாயம் உண்டாயிருக்கவில்லை. ஆகவே தென்னிந்திய இடையரின் வாழ்க்கை ஓரிடத்தில் தங்கியிருப்பதாக அமைந்தது. இடையர் ஆடு மாடுகளை மேய்ச்சல் நிலத்துக்கு ஓட்டிச் சென் றார்கள். மந்தைகள் மேயும்போது அவர்கள் மரநிழலில் தங்கியிருந்தார்கள்; பொழுதுபோக்கின் பொருட்டு மூங்கிற் குழலில் இனிய இராகங்களைப் பாடினார்கள். ஆடு மாடு மேய்ப்பவர்களில் ஒரு பிரிவினர் குறும்பர் எனப் பட்டனர். இவர்கள் மயிர் நீண்டு வளரும் குறும்பு ஆடுகளை வளர்த்தனர். குறும்பு ஆடுகளின் மயிரிலிருந்து கம்பளி நெய்யப்பட்டது. கடலும் கடல்சார்ந்த நிலமும் இதற்கு அடுத்த படியில் கடற்கரை நிலம் மக்களால் குடியேறப் பட்டது. இங்கு வாழ்ந்த மக்கள் கரையை அடுத்த கடலில் மீன் பிடித்தார்கள்; பின்பு ஆழமான நீரிற் சென்றார்கள். கடற்கரையில் வாழ்வோர் பரதவர் எனப்பட்டனர். இவர்களின் தொழில்கள் மீன் பிடிப்பதும் மரக்கலஞ் செய்வதுமாயிருந்தன. மிகப்பெரிய மரக்கலங்கள் கட்டுமரங்களாயிருந்தன. இதன்பின் தோலால் மூடப்பட்ட கூடைகள் தோணிகளாகப் பயன்படுத்தப் பட்டன. நெய்தல் நிலத்தில் கிடைக்கும் முக்கிய பொருள்கள் உப்பும் மீனும். பரதவர் இவைகளை மற்ற நிலங்களுக்குக் கொண்டு சென்று பிற உணவுப் பொருள்களுக்குப் பண்டமாற்றுச் செய்தனர். பரதவர் இவ்வாறு வணிகராயினர். அவர்கள் தமது பண்டங்களைப் பொதி மாடுகளில் ஏற்றிச் சென்றனர். இந்தியப் பொருள்களை ஆபிரிக்கா, அராபியா முதலிய மேற்கு நாடுகளுக்கும், கிழக்கே மலாயா, சீனா முதலிய நாடுகளுக்கும் ஏற்றிச் சென்ற கடலோடிகள் தோன்றினார்கள். கடற்கரை நிலங்கள் சில பயிர்ச் செய்கைக்கு ஏற்றவாயிருந்தன. அங்கு பயிரிடப்பட்டது. வயலும் வயல்சார்ந்த நிலமும் மருத நிலமக்கள் நிலத்தை உழுது பயிரிட்டார்கள். ஆற்றோரங்களில் வாழ்ந்த மக்கள் ஆற்று வெள்ளத்தை வாய்க்கால் வழியாக வயல்களுக்குப் பாய்ச்ச அறிந்திருந்தார்கள். இவ்வாறு மிக மிக முற்காலத்திலேயே பயிர்ச் செய்கை தென்னிந்தியாவில் மிக வளர்ச்சியடைந்திருந்தது. ஆற்றுப் பள்ளத்தாக்குகளுக்கு அப்பால் பஞ்சு விளையும் நிலம் இருந்தது. புதிய கற்கால மக்கள் பஞ்சிலிருந்து நூல் நூற்கவும் நூலால் ஆடை நெய்யவும் அறிந்திருந்தார்கள். இப்பொழுது மக்கள் மரங்களால் வீடு கட்டினார்கள். தேவைக்கு அதிகமான தானியம் வீடுகளில் சேமித்து வைக்கப்பட்டது. மற்ற நிலங்களி லுள்ள உப்பு, மீன், வெண்ணெய், தயிர், கல் ஆயுதங்கள் போன்றவைக்குத் தானியம் பண்டமாற்றுச் செய்யப்பட்டது. மருத நிலத்தில் பண்டமாற்றுச் செய்யமுடியாத பண்டங்களை வெளியே கொண்டு செல்லவேண்டிய அவசியம் உண்டாயிற்று. பண்டங்களைக் கொண்டு செல்வதற்கு வண்டிகள் செய்யக் கண்டு பிடிக்கப்பட்டது. உணவுக்குப் பயன்படக்கூடிய மரஞ்செடி களும் கண்டறியப்பட்டன. இவ்வாறு திராவிட நாகரிகம் இந்திய நாட்டிலேயே தோன்றி வளர்ச்சியடைந்தது. இந்தியாவின் அயலிலிருந்து நாகரிகம் இந்தியாவை அடைந்ததென்பதற்கு ஆதாரம் சிறிதும் காணப்படவில்லை.1 பேச்சு சமையலும், உடையும் அல்லாத இன்னொன்றும் அறியப்பட்டது. அது பேச்சு. பேச்சு இசை சம்பந்தப்பட்டது அல்லது இசை சம்பந்தப்படாத தாக இருக்கலாம். பாடலுக்கு முன் பேச்சு இருந்ததெனப் பலர் கருதுகின் றனர். ஆதியில் பகுதி இசை சம்பந்தமும், பகுதி இசை சம்பந்தமில்லாததுமா யிருந்த பேச்சின் வேறுபாடே பாடலும் வசனமும் என வேறு பலர் கருதுகின் றனர். இதனை நன்கு அறிந்துகொள்ள முடியவில்லை. இலக்கிய வளர்ச்சியில் உரை நடைக்கு முற்பட்டது பாடல் எனத் தெரிகின்றது. பண், பாண் என்பது இசையின் பகுதிக்குப் பெயர். பண் என்பதிலிருந்து பாடு, பாட்டு முதலிய சொற்கள் எழுந்தன. பாடுதல் தமிழரின் ஆதிகாலப் பொழுது போக்குகளில் ஒன்று. பாணர் தொடக்கத்தில் பாடகராயிருந்தனர். நாகரிகம் வளர்ந்தபோது அரண்மனையில் அரசாங்கப் பாடகர் இருந்தனர். தமிழர் நாகரிகம் வளர்ச்சி யுற்றிருந்த காலத்தில் பாணர் அரசரின் நண்பரும் அவருக்கு ஆலோசனை கூறுவோருமாயிருந்தனர். சமயம் மனிதன் ஆயுதம் செய்யும், உணவைச் சமைக்கும், உடை அணியும், பேசும் விலங்காக மாத்திரம் இருக்கவில்லை; சமயமுடைய விலங்காகவும் வாழ்ந்தான். அவன் தான் விரும்பியவைகளைப் பெறவும், தன்னை அச்சுறுத்தும் தீமைகளைப் போக்கவும் வலிய ஆற்றலை வேண்டிக் கொள்ளும் வழிகளையும் அறிந்திருந்தான். அவ்வழிகள் மந்திர வித்தை தொடர்பான கிரியைகள். அவை விருந்து, பாட்டு, கூத்து வடிவிலிருந்தன. பிற்காலத்தில் விருந்து பாட்டு கூத்து என்பன வெவ்வேறாகப் பிரிக்கப் பட்டன. இடங்களுக்கேற்ப ஒவ்வொரு நிலத்திலும் தெய்வங்களும் கிரியை களும் தோன்றின. பழைய தமிழ் இலக்கியங்கள் மக்களின் வாழ்க்கையைக் கண்ணாடி போல் காட்டுகின்றன. பழைய தமிழ் இலக்கியங்கள் பெரும்பாலும் மறைந்து போயின. வாணிகம், ஆட்சி, தொழில், ஆட்சி முறைகள் கையாளப்பட்டன. இலக்கியங்கள் பெரும்பாலும் மனப்பாடஞ் செய்யப்பட்டுவந்தன. பழைய இலக்கியங்கள் பல இறந்துபோயின என்பதற்குத் தொல்காப்பியப் பொரு ளதிகாரத்துக்கு உரை எழுதிய பழைய ஆசிரியர்கள் துறைகள் பலவற்றுக்கு ஏற்ற மேற்கோள் காட்டமுடியாமல் இருந்தமையே சான்றாகும். இப் பொழுது கிடைத்துள்ள பழைய இலக்கியங்கள் மக்களின் வாழ்க்கை முறைகள் அவர்கள் வாழ்ந்த நிலங்களுக்கேற்பத் தோன்றி வளர்ச்சி யடைந்தன என்பதைத் தெளிவாகக் காட்டுகின்றன. பாடல்கள் தமிழ்நாடு நில அமைப்புக்கேற்பப் பிரிக்கப்பட்டிருந்த காலத்தில் பாடல்கள் தோன்றின. ஒவ்வொரு நிலத்திலும் அந்நிலத்தின் வாழ்க்கைக் கேற்ற பாடல்கள் எழுந்தன. ஆகவே திணை என்பது குறித்த நிலத்துக் குரிய பாடல் வகையைக் குறிப்பதாயிற்று. மனிதனின் காதல், போர் என்பவை களே புலவர் பாடுதற்கு ஏற்ற கருத்துக்களாகக் கொள்ளப்பட்டன. ஆகவே பாடல்கள் இரு வகைப்பட்டன. அகத்திணை, புறத்திணை என்பன அவற் றின் பிரிவுகள். அகம் என்பது காதலுடைய இருவர் மாத்திரம் உணர்ந்து அனுபவிக்கக் கூடியது; புறம் மற்றவரோடு கலந்து பங்குபற்றத் தக்கது. ஐந்து நிலங்களுக்குமுரிய காதற் செயல்கள் ஐந்து எனக்கொள்ளப்பட்டன. குறிஞ்சி நிலத்துக்குரியவை காதலர் ஒருவரை ஒருவர் கண்டு காதலித்து உடன் மணத்தல், மலைக் காட்சி முதலியன. ஆடவரும் மகளிரும் தனித் தனியே எதிர்ப்பட்டு காதலிப்பதற்கு ஏற்ற இடம் மலையாதலில் கூடலும் கூடல் நிமித்தமும் குறிஞ்சி நிலத்துக்கு உரிப்பொருளாகக் கொள்ளப்பட்டன. காதலன் காதலியை சுரவழியே பெண் வீட்டார் அறியாது கொண் டேகுதல், காதலன் காதலியை விட்டுப் பிரிந்து செல்லுதல் போன்ற பொருள் களைப் பாலைப் பாடல்கள் கூறுகின்றன. பிரிந்து சென்ற காதலன் வருந் துணையும் ஆற்றியிருப்பதாகிய செயலைக் கூறுவது முல்லை. தலை வனைப் பிரிந்த காதலி அவன் வரவை நினைந்து இரங்கியிருத்தல் நெய்தல். மருத நிலத்தில் விதைப்பு முடிந்து அறுப்புக் காலம் வரையில் மக்கள் பொழுது போக்குதற்கு ஏற்ற ஒழிவு உண்டு. அக்காலங்களில் காதலருக் கிடையில் ஊடல் நேரும். இது பெரும்பாலும் தலைவன் பரத்தையருடன் நட்புக் கொண்டிருத்தலால் உண்டாகும். திணைக்குரிய மக்களின் பெயர்களிற் சில இக்காலத்தில் சாதிப் பெயர்களாக வழங்குகின்றன. குறவர், மறவர், பரதவர், இடையர், வேளாளர் என்பன அவற்றுட் சில. திராவிடநாடு மிக முற்காலத்திலேயே நாகரிகம் பெற்றிருந்தது மிக மிக முற்காலத்திலேயே திராவிடருடையநாகரிகம் மிக உயர் வடைந்திருந்தது. நாட்டின் செழிப்பும் வாணிகமும் செல்வத்தை வளர்க் கின்றன. மக்களின் குழப்பமில்லாத வாழ்க்கையும் செல்வம் வளர்வதற்கு மற்றொரு காரணம். வடநாட்டு மக்கள் அடிக்கடி அன்னியப் படை எடுப்புக் களால் கலக்குண்டார்கள். அவர்கள் கையில் வாளைப் பிடித்துக்கொண்டு வீட்டையும் உறவினரையும் காக்கவேண்டியிருந்தது. அங்கு மக்களுக்கும் சொத்துக்கும் பாதுகாப்பு இருக்கவில்லை. தென்னாட்டு மக்களுக்கு இவ்வகைத் தொல்லை இருக்கவில்லை. நாட்டின் செல்வத்தை வற்றச் செய்யும் பெரியபோர்கள் தென்னாட்டில் நிகழவில்லை. தென் கடல்களில் கடற்கொள்ளைக்காரரும் காணப்படவில்லை. தரையில் அமைதி நிலவிற்று. அக் காலத்தில் அறியப்பட்டிருந்த கடலை அடுத்த நாடுகளோடு தமிழர் வாணிகம் புரிந்தனர். பாபிலோன், எகிப்து, அசிரியா முதலிய நாடுகள் இந்தியாவோடு வாணிகம் புரிந்தன. நாடு செல்வவளமடைந்தது. வடக்கே வாழ்ந்த மக்களைவிடத் தெற்கே வாழ்ந்த மக்கள் செல்வம் படைத்திருந் தனர். கடற் பயணங்கள் தென்மேற்கு இந்தியாவுக்கும் பாபிலோனுக்கு மிடை யில் ஒழுங்காக நடைபெற்றது. மரக்கலமோட்டும் மாலுமிகள் திராவிட மக்களாகவிருந்தனர். தந்தம், குரங்கு, மயில் போன்றவைகளின் தமிழ்ப் பெயர்கள் மேற்குத் தேசங்களில் வழங்கின. நிலம் செழிப்புற்றிருந்தது. கனிகளில் பொன் அரிக்கப்பட்டது. வைரம், முத்து, பவளம் முதலியவும் அதிகம் கிடைத்தன. தேக்கு, சந்தனம் முதலிய மரங்கள் மேற்குத் தேசங் களுக்கு ஏற்றப்பட்டன. தமிழில் காணப்படும் நாடு, ஊர் என்னும் சொற்கள் தமிழரின் பழைய பண்பாட்டை உணர்த்துவன. நாடு என்னும் சொல் நடு என்னும் அடியாகப் பிறந்தது. பலவகை மரஞ்செடிகளை நட்டு உண் டாக்கும் இடம் நாடு எனப்பட்டது. ஊர் என்பதற்கு வயல் சூழ்ந்த இடம் என்பது பொருள். ஊர் என்பது உழு என்னும் அடியாகப் பிறந்தது. ஊர் என்பது உழுதலை உணர்த்தும். முற்காலத்தில் நாட்டைப்பற்றியும் ஊரைப் பற்றியுமுள்ள தமிழருடைய கருத்து இதுவாகும். பழைய சாலதியாவின் தலைநகர் 1ஊர் எனப்பட்டது. உரோமரின் நகரைக் குறிக்கும் பெயர் ஊர்ப்ஸ். இவை ஊர் என்னும் தமிழ்ச்சொல் சம்பந்தமானவை. நாடு என்பதற்கு எதிர்ச் சொல் காடு. காடு என்பதற்குக் கடத்தற்கு அரியது என்பது பொருள். காட்டைக் கெடுத்துப் பயிரிடும் நிலம் நாடு எனப்பட்டது. இவ்வாறு திராவிடரின் நாகரிகம் இத் தமிழ் நாட்டிலேயே படிப்படி வளர்ச்சியடைந்துள்ளது என அறிந்துகொண்டோம். இனித் தமிழர் நாகரிகத்தின் சிறப்பு இயல்புகளைத் தனித்தனி எடுத்துக் கூறுவோம். நாகரிக மடைந்த திராவிடர் தொலைவிடங்களிற் சென்று குடியேறுதல் சூழ்நிலைக்கேற்ப மக்கள் எவ்வாறு நாகரிக வளர்ச்சி பெற்றார்கள் என்பதை விளக்கியுள்ளோம். இன்று தென்னிந்திய மக்கள் இலங்கை, மலாயா, மொரிசஸ், தென்னாப்பிரிக்கா முதலிய நாடுகளிற் குடியேறி வாழ்ந்து வருகின்றனர். மிகப் பழங்காலத்திலேயே திராவிட மக்கள் ஆபிரிக்கா மேற்குப் பாரசீகம், மலாயா, கம்போதியா, சுமத்திரா, யாவா, சீனா முதலிய பல நாடுகளிற் சென்று குடியேறி வாழ்ந்தார்கள். இந் நிகழ்ச்சியை வலியுறுத்தும் சான்றுகள் பல இன்று கிடைத்துள்ளன. “பண்டை நாளிலே சீரும் சிறப்பும் எய்தியிருந்த மிசிரம் என்னும் எகிப்து நாட்டினம், பாரசீகக் கடற்கரையிலிருந்து அழிந்துபோன சுமேரு (Sumeria) நாட்டிலும், சோழர் குடியேறினமையினாலே. சோழதேயம் என்னும் பெயரினை எய்திப் பிற்காலத்திலே மொழிச் சிதைவினாலே சாலதேயா (Chaldea) என வழங்கப்பட்ட தொல்பதியிலும் சோழர் குலத்தார் கலத்திற் சென்று வெற்றி பெற்றுத் தமது ஆணை செலுத்திய கிரேத்தத் (Crete) தீவிலும் அதற்கணித்தாகிய யவனபுரத்திலும் (Greece) உரோமர் வருவதற்குமுன் பழைய இத்தாலி (Italy) தேசத்திலும் ஐபீரியா எனப்பட்ட பழைய ஸ்பெயின் (Spain) தேசத்திலும் பிறவிடங்களிலும் தமிழ்க்குலத்தார் வாழ்ந்து நாகரிகம் பரப்பினார்களென மேற்றிசை அறிஞர் ஆராய்ச்சியாற் கண்டு வெளியிட்டிருக்கின்றனர்......சிந்துநதி தீரத்திலே பாண்டிய மன்னர் ஆளுகையிலே மீனாடு என்னும் பெயரோடு திகழ்ந்ததும் பின்னாளிலே ‘இறந்தோர் மேடு’ என்னும் கருத்துடைய முகஞ்சதரை (Mohonjo Daro) என்னும் பெயரெய்தியதுமாகிய நாட்டிலே மிதுனராசியானது யாழ் என்னும் பெயரினால் வழங்கப்பட்டு இணையாழுருவத்திலே குறியீடு செய்யப் பட்டதென அறிஞர் கூறுவர். “மணிமலர் என்னும் கட்டுரைத் தொகுதியினுள்ளே பண்டைத்தமிழர் பெருமை என்னும் உரையினை எழுதிய சென்னைப் பல்கலைக் கழகத்து வரலாற்றுப்பகுதி ஆசிரியர் வி.ஆர். இராமசந்திர தீட்சிதரவர்கள், ‘தென் னாட்டிலிருந்து தமிழ் நாகரிகம் உரோமா புரிக்கும், கிரேக்க நாட்டிற்கும் பரவியது. இன்னும் தக்கண பீடபூமியைச் சேர்ந்த வேட்டுவர்1 (கிராதர்) என்ற குறிஞ்சி நில மக்கள் யவன தேசத்திற்குச் சென்று தங்கள் அரசை நிலை நிறுத்தித் தங்கள் பெயரையும் அந்நாட்டிற்குக் கொடுத்தார்கள். இதுவே கிரீட் (Crete) தேசம். இதன் நாகரிகத்துக்கும் தமிழர் நாகரிகத்துக்கும் ஒப்புமை மிகுதியாயுள்ளது.’ என எழுதியிருக்கின்றார்கள். வில்லவர் என்னும் சேரர் பெயரை ‘hunters’ என மேனாட்டார் மொழிபெயர்க்க அது திரும்பவும் தமிழிற்கு மொழிபெயர்க்கப்பட்டு வேட்டுவர் என அமைவது இயல்பு. ஆதலினாலே தக்கிண பீடபூமியைச் சேர்ந்த வேட்டுவர் என்ற குறிஞ்சி நில மக்கள் எனத் தீட்சிதரவர்கள் உரையிலே குறிக்கப்பட்டோர் வில்லவராகிய சேரர் குலத்தினரே என்பது தெளிவாகின்றது. சிலப்பதிகாரத்திலும் பதிற்றுப் பத்திலும் காணப்படும் சேரர் மெய்க்கீர்த்தி இவ்வுண்மையினை நிலை நிறுத்துகின்றது. சேரநாடு கேரளம் எனத் திரிவுபட்டதுபோலச் சேரர் தீவு ‘க்ரீத்’ ஆயிருக்கலாம். தமிழ்நாட்டுவேந்தர் யவனர்களைத் தமது கோட்டை வாயில்களிலே காவலாளர்களாக வைத்திருந்த செய்தியும், உரோமாபுரி வேந்தனாகிய ஆகஸ்டஸ் மன்னனுக்குப் பாண்டியன் தூதனுப்பிய செய்தி யும், பிறவும் ஆதாரமாகத் தீட்சிதரவர்கள், ‘மத்தியதரை நாகரிகமென்று இப்போது வழங்கப்படுவது தென்னிந்திய நாகரிகம் என்று துணிவாய்ச் சொல்லலாம்’1 என்று முடிவு கூறுகின்றார்”2 உலகின் பெரும் பகுதியில் திராவிடம் வழங்கியதற்குச் சான்று மொகஞ்சதரோ அரப்பா முதலிய சிந்துவெளி அழிபாடுகளில் கிடைத் துள்ள முத்திரைகளில் அக்காலத்து வழங்கிய எழுத்துக்கள் பொறிக்கப் பட்டுள்ளன. அவ்வகை எழுத்துக்கள் ஹைதராபாத்து, திருநெல்வேலி முதலிய விடங்களிற் கண்டுபிடிக்கப்பட்ட வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட மட் பாண்டங்களிற் பொறிக்கப்பட்டுள்ளன. இலங்கையிலே கேகாலையி லுள்ள மலை ஒன்றிலும் இவ்வகை எழுத்துப் பொறிக்கப்பட்டிருப்பதை ஹெரஸ் பாதிரியார் குறிப்பிட்டுள்ளார். மொகஞ்சதரோ எழுத்துகளை மிக ஒத்த எழுத்துகள் தென்னமெரிக்காவுக்கு அண்மையிலுள்ள ஈஸ்ரர் தீவுகளிற் காணப்பட்டன. எகிப்து, மேற்கு ஆசியா, சின்ன ஆசியா, கிரேத்தா முதலிய நாடுகளில் வழங்கிய பழைய எழுத்துகளுக்கும் மொகஞ்சதரோ எழுத்து களுக்கும் ஒன்றுமை இருப்பதைப் பழைய எழுத்து ஆராய்ச்சியாளர் காட்டி யுள்ளனர். இவ்வெழுத்துக்களை எல்லாம் நன்கு ஆராய்ந்த ஹெரஸ் பாதிரி யார் பழைய சீனம், சுமேரியம், பழைய எல்லம், பழைய அராபி, அசோகன், பிராமி, மினோவன், பழைய எகிப்தியம், இலிபியன், எற்றூஸ்கன் எழுத்துக் களெல்லாம் பழைய திராவிட எழுத்திலிருந்து தோன்றியவை எனக் கூறி யுள்ளார். மேற்கு ஆசிய, மினோவ, மொகஞ்சதரோ, ஈஸ்டர் தீவு எழுத்துகள் எல்லாம் ஒரே தொடக்கத்தைச் சேர்ந்தனவென்றும் அவை அவற்றைப் பயன்படுத்திய மக்களின் போக்கின்படி வெவ்வேறு வகையில் வளர்ச்சி யடைந்தன என்றும் சர்டயான் மார்சல், பேராசிரியர் லாங்கடன் ஜி.ஆர். ஹன்டர் போன்ற ஆராய்ச்சி வல்லார் கருதினார்கள். இக்கொள்கை நாள் வீதம் வலியடைகின்றது. ஒட்டுச் சொற்களுடைய மொழிகள் பெரும் பாலும் திராவிட மொழியினின்றும் பிறந்தனவெனக் கூறலாம்.1 மொகஞ்சதரோ அகழ் ஆராய்ச்சி அறியப்படுதற்குப் பல ஆண்டுகளின் முன்னரேயே பேராசிரியர் சுந்தரம் பிள்ளை அவர்கள், “சதுமறை ஆரியம் வருமுன் சகமுழுது நினதாயின் முதுமொழிநீ யனாதியென மொழிகுவதும் வியப்பாமே” எனக் கூறியது மிக வியக்கத்தக்கது. தமிழ்ப் பற்று மிக்குடையவராய் விளங்கிய விருதை சிவஞானயோகிகள் இற்றைக்கு முப்பத்துமூன்று ஆண்டுகளின்முன் கூறியுள்ளது வருமாறு: “திருமலர் மணமென வொருமையின் மல்கி எண்ணில் பொழிற்பயிர் பண்ணிக் காக்கும் ஒப்பில் பெருமை மெய்ப்பொரு ளன்பு பாங்கி னிலைபெற் றோங்குந் தமிழகத் தாறறி வுடைமைப் பேறுறு மக்கள் முன்னர்த் தோன்றி மன்னிக் கெழுமி இமிழிய லொலிசார் தமிழ்மொழி பேசி மண்ணிற் பலவிட நண்ணிக் குடியிருந் தவ்வவ் விடத்துக் கொவ்விய வண்ணம் கூற்று நடையுடை வேற்றுமை யெய்தி பற்பல வினப்பெயர் பெற்றுப் பெருகினர். * * * * * * * முதலிடைக் கழக முன்னீர் கொள்ளப் படுதலி னிந்தியப் படியின் வளம்வவி அயனாட் டவரீ ராயிர மாண்டாப் படையெடுத்துத் துன் புறுத்திய படியால் நூல்களு மவற்றி னுண்ணிய வழக்கும் அருகி மறைந்தன வாதலின்” இந்தியநாடு முழுமையிலும் வாழ்ந்த மக்கள் திராவிடர் இதுவரையிலும் அகழ் ஆராய்ச்சியினால் அறியப்பட்ட பழைய நாகரிகங்களுள் இந்திய நாகரிகமே மிகப் பழமை உடையது. சிந்துவெளி நாகரிகத்தின் காலம் கி.மு. 3500 என்று சொல்லப்படுகின்றது. சிந்துவெளி நாகரிக காலத்தில் இந்தியா முழுமையிலும் ஒரே மொழியை வழங்கிய ஒரே இனமக்கள் வாழ்ந்தார்கள். அம்மக்கள் திராவிடர் எனப்படுவர். ஆரிய மக்கள் கி.மு. இரண்டாயிரத்தில் அல்லது அதற்குப்பின் இந்திய நாட்டை அடைந்தார்கள். அக்காலத்தில் வடநாடு முழுமையிலும் திராவிட மொழி வழங்கியதென்பதற்குச் சான்று ஆரிய மக்களின் பழைய பாடல்களாகிய வேதங்களில் திராவிடச் சொற்கள் பல இருப்பதும் பிறவுமென ஆராய்ச்சி யாளர் நன்கு ஆய்ந்து நிறுவியுள்ளாhகள்.1 ஆரியர் வருகைக்குப் பின்பே இந்திய நாட்டில் வெவ்வேறு இன மக்கட் கலப்பும் மொழிக்கலப்பும் உண்டாயிற்று. கி.மு. இரண்டாயிரத்தில் வடக்கே இமயத்துக்கும் தெற்கே குமரிக்கும் இடைப்பட்ட பெரு நிலப்பரப்பு திராவிட நாடாக விளங்கிற் றென, தெளிதில் அறியக் கிடக்கின்றது. புதிய மக்களின் வருகையால் உண்டான மாறுதல்கள் புதியமக்களுக்கும் வடக்கே வாழ்ந்துகொண்டிருந்த திராவிட மக்களுக்குமிடையில் போர்கள் நிகழ்ந்தன. ஆரியருடைய வேதபாடல் களால் அக்காலத்தில் திராவிடர் உயர்ந்த நாகரிகம் பெற்றுவிளங்கினார்கள் எனத் தெரிகின்றது.2 நாகரிகத்தில் உயர்நிலை அடைந்திருந்த திராவிடரை வெல்வது ஆரியமக்களுக்கு இயலாததாகவிருந்தது. நாளடைவில் இருசாதியாருக்கிடையில் திருமணக்கலப்புகளால் தொடர்புகள் உண் டாயின.3 திராவிடப் பெண்களை ஆரிய ஆடவரும் ஆரியப் பெண்களைத் திராவிட ஆடவரும் மணந்தனர். திராவிடருடைய சமூகம் தாயாட்சி முறை யினது. ஆரியருடைய சமூகம் தந்தைஆட்சி முறையினது. திராவிடப் பெண்கள் மூலம் ஆரிய ஆடவருக்குப் பிறந்தவர்கள் தந்தை ஆட்சி முறைப்படி ஆரியர் எனப்பட்டனர். ஆரியப்பெண்கள் மூலம் திராவிடத் தந்தையாருக்குப் பிறந்தவர்கள் திராவிடர் தாயாட்சி முறைப்படி ஆரியர் எனப்பட்டனர். இவ்வகையான கலப்புப் பல நூற்றாண்டுகளாக நிகழ்ந்தது. விந்தியமலைக்கு வடக்கே உள்ள மக்கள் தம்மை ஆரியர் எனக் கூறிக் கொள்வாராயினர். ஆனால் அவர்களிடத்தில் ஆரியக் குலத்தினருக்குரிய குணங்குறிகள் மிகச்சிறிதே காணப்பட்டன.1 மக்களிடை கலப்பு உண்டானபோது மொழிகளும் கொள்கைகளும் கலப்பவாயின. திராவிட மொழிச் சொற்கள் பல திரித்து வழங்கப்பட்டன. இவ்வாறு வழங்கப்பட்ட மிகப்பல சொற்கள் இன்று வடமொழியிற் காணப்படுகின்றன. அச்சொற்களுக்கு மூலம் அறியமுடியாமல் இருக்கிறது. இந்தோ ஆரியமொழிக்கு இனமுடையதாக ஐரோப்பிய நாடுகளில் வழங்கும் ஆரியமொழிகளில் இச்சொற்கள் காணப்படவில்லை.2 புதிதாக வந்த மக்களைவிட வடக்கே வாழ்ந்துகொண்டிருந்த திராவிட மக்கள் பலர். மக்கட் கலப்பினால் சில மாற்றங்கள் உண்டாகி மொழி மாறுபட்டபோதும் வாழ்க்கை முறையில் அவர்கள் திராவிட சமூகத்தினர் போலவே காணப்பட்டனர். புத்தர் காலமக்கள் வாழ்க்கையைப்பற்றி ரைஸ் டேவிட்ஸ் என்பார் கூறியிருப்பது இதனை வலியுறுத்துகின்றது.3 வடநாட்டில் வழங்கியமொழி சமக்கிருதமா? வடநாட்டிலே மக்கள் வழங்கிய மொழி சமக்கிருதமென்று பலர் நினைக்கிறார்கள். இக்கருத்துத் தவறுடையது. சமக்கிருதம் ஒருபோதும் பேச்சு மொழியாகவிருக்கவில்லை. அது குருமாருக்குரிய சாதிமொழி யாகவே இருந்தது. இந்தியநாட்டு மொழியின் திரிபுகளாகிய பிராகிருதம் எனப்பட்ட மொழிகளே பேசப்பட்டுவந்தன.4 ஆரிய மொழியைச் சேர்ந்தனவென்று கருதப்படும் வடஇந்திய மொழிகளின் இலக்கண அமைப்பு திராவிட மொழி இலக்கணத்தை ஒத்துள்ளதென்றும், ஒரு மொழியின் குடும்பத்தொடர்பை அறிவது இலக் கண அமைப்பினாலல்லது சொற்களைக் கொண்டு அறிதல் கூடாதென்றும், வடஇந்திய மொழிகள் திராவிட மொழிகளின் திரிபு என்றும் பி.தி. சீனிவாச ஐயங்கார் துணிந்துள்ளார்.1 பாரசீகர் வடநாட்டின் சிலபகுதிகளை வென்று சில காலம் ஆட்சி நடத்தினார்கள். பின்பு கிரேக்கர் படைஎடுப்பு நேர்ந்தது. பின்பு சித்தியர், மங்கோலியர், அவுணர் (Huns) முதலிய பல சாதியினர் வடநாட்டின்மீது படை எடுத்துவந்து நாட்டில் சிற்சில பகுதிகளிற் குடியேறி இந்திய மக்க ளோடு கலந்தார்கள். இதனால் அலக்சாந்தர் படை எடுப்புக் காலம் முதல் மேலும் மக்கட் கலப்பும் மொழிக் கலப்பும் இந்திய நாட்டில் உண்டாயின. இந்திய மக்களின் குல முறையான ஆராய்ச்சி நடத்திய ரைஸ்லி என்பார் இன்று இந்தியாவில் காணப்படும் குலப்பிரிவினரை கீழ்வருமாறு பிரித்துள்ளார்; படத்திற் காண்க. திராவிடருக்கு முற்பட்ட திராவிடர் என்னும் கொள்கை திராவிடர் இந்திய நாட்டுக்கு அயலிலிருந்து வந்தார்கள். அவர் வருகைக்குமுன் நிகுரோவக் குணங்குறிகளுள்ள ஒருசாதியினர் அங்கு வாழ்ந்துகொண்டிருந்தார்கள் என்றும், அவர்கள் திராவிடருக்கு முற்பட்ட திராவிடர் (Pre-Dravidians) எனப்படு வர் என்றும், அம் மக்களே இன்று மலைகளில் வாழ்வோரென்றும் ஒரு சிலர் எழுதிவருகின்றனர். இக் கொள் கைக்கு ஆதாரம் ஒரு சிறிதும் கிடைக் கவில்லை. திராவிட மக்கள், வாழும் இடங்களுக்கேற்ப, ஐந்து வேறு வகைத் திருத்தங்களுடையவர்களாக வளர்ச்சியடைந்தார்கள் என முன் கூறியுள்ளோம். அவர்களில் குறிஞ்சி பாலை நிலமக்களே மற்ற மக்களின் தொடர்பின்றிப் பழைய முறையில் வாழ்ந்து புதிய சில பழக்கவழக்கங் களுடையராய் வருகின்றனர். அவர் களின் உடல், நிறம், வளர்ச்சி முதலியன அவர்களின் உணவு, வாழ்க்கை நிலை போன்றவை ஏதுவாக உண்டானவை. திரு. வி.ஆர். இராமச்சந்திர தீட்சிதர் அவர்கள் கூறுவது வருமாறு. “திராவிடருக்கு முற்பட்ட திராவிடர் (Pre - Dravidans), பழைய திராவிடர் (Proto-Dravidans) என்னும் கொள்கைகள் இருபதாம் நூற்றாண்டுக் கற்பனை. பழம்பொருள் ஆராய்ச்சியாளராவது வரலாற்றுக்காரராவது தென்னிந்தியாவில் ஒன்றுக்குப்பின் ஒன்றாகத் தொடர்ந்து வந்த பண்பாட்டுக் காலங்களில் புதிய மக்கள் புகுந்து மாறுதல் களைக் கொண்டுவந்தார்கள் என்று சொல்வதற்கேற்ற ஆதாரம் ஒன்றும் காட்டமுடியாது. பழைய கற்காலப் பண்பாட்டுக்குப்பின் புதிய கற்காலப் பண்பாடும் அதற்குப்பின் இரும்புக் காலப் பண்பாடும் முறையே ஒன்றை ஒன்று தொடர்ந்து வந்தன என்று கொள்வதற்கு ஏற்ற சான்றுகளே காணப் படுகின்றன. பழம் பொருளாராய்ச்சி இக் கொள்கைக்கு வலி அளிக்கின்றது. காடுகளிலும், மலைகளிலும் வாழும் மக்கள் குலமுறையாகத் தென்னிந்திய மக்களோடு பொருந்தாதவர்கள் என்று கொள்ளுதல் சாலாது. புதிய கற்காலம் முதல் தென்னிந்தியாவில் ஐந்து வகையான பண்பாடுகள் இருந்து வருகின்றன வென்பதைத் தென்னிந்திய மக்களைப்பற்றி ஆராய்ச்சி செய்வோர் நன்கு அறிவர். வேட்டையாடியும் மீன் பிடித்தும் வாழ்வோர் பழைய கற்காலப் பண்பாட்டைச் சேர்ந்தவர். அவர்கள் தொடர்பாகக் காடு களிலும் கடற்கரைகளிலும் வாழ்ந்தமையால் அவர்களின் மனப்பாங்கும் வாழ்க்கைப் பழக்கங்களும் தனிமுறையில் வளர்ச்சியடைந்தன. நிறத்தைப் பற்றி நாம் ஆராயவேண்டியதில்லை. இது சூழலின் வெப்பநிலை, கை யாளும் தொழில் சம்பந்தங்களால் உண்டாவது. பயிரிடும் தொழில் பரவின தால் பழைய பொருளாதார வழிகள் முற்றாக மாறுதலடைந்தன என்று கொள்ளுதல் முடியாது. சில சூழல்களில் விடப்பட்டோர் பழைய தொழில் களையும் பழக்க வழக்கங்களயும் பற்றித் தம் வாழ்க்கையை நடத்தினர். வேளாளர், காராளர், ஆயர்வேறு வகையான பண்பாடுகளை எய்தினர். பாலை நில மக்கள் குறிஞ்சி மக்களோடு கலந்து ஒன்றுபட்டனர். தமிழ் நாட்டில் பாலை என்று தனி நிலம் இல்லை. ஆகவே கடற்கரைகளிலும் மலைகளிலும் வாழும் மக்களைத் திராவிடருக்கு முற்பட்ட திராவிடர் என்று கூறுதல் சாலாது”1 பி.தி. சீனிவாச ஐயங்கார் ஆரியருக்கு முற்பட்ட தமிழர் பண்பாடு என்னும் நூலிற் கூறியிருப்பது வருமாறு: 2“தமிழ் மொழிக்குரிய மக்களைப்போலவே அம்மொழியும் தென்னிந்தியாவிலேயே தோன்றி யாதும் குழப்பமின்றி உயர்ந்த இலக்கிய வளர்ச்சி நிலையை அடைந்தது. கற்காலம் முதல் தமிழ்க்குலம் ஒரே தொடக்கத்தைச் சேர்ந்ததாக இருந்து வருகின்றது. தமிழ் மொழியைப் பயின்ற அயல் நாட்டு ஆராய்ச்சியாளர் சிலர் தமிழ் மொழியை வழங்கிய பழைய மக்கள் மத்திய ஆசியாவினின்று, வந்தார்கள் என்றும், அதற்குக் காரணம் பலுச்சிஸ்தானத்தில் வழங்கும் பிராகூய் மொழியில் தமிழுக்கு இனமுடைய பல சொற்கள் காணப்படுகின்றன வென்றும் தம்மனம்போல் கூறினர். பிராகூய் மொழியில் தமிழுக்கு இனமுடைய சொற்கள் காணப்படு தல், தமிழ் இந்தியமொழியன்று எனக் கூறுவதற்குப் போதுமான ஆதார மாகாது. இரண்டு தலைமுறைக்கு முற்பட்ட ஆராய்ச்சியாளர் உலகில் வாழ்ந்த பழைய மக்கட் குலத்தினரை எல்லாம் வேறு எங்கோ இருந்து வந்த வர்கள் எனக் கூறுவது இயல்பாக இருந்தது. அவர்களுக்குத் தென்னிந்தியா வில் கற்காலப் பண்பாடு எவ்வளவில் பரவியிருந்ததென்றும், தமிழின் பழைய அடிப்படையில் தமிழ்ர் தென்னிந்தியாவில் அறியமுடியாத காலம் முதல் வாழ்ந்து வருகின்றார்கள் என்பதற்குப் போதிய சான்றுகளுள்ளன வென் பதையும் அவர்கள் அறியாதிருந்தார்கள். புதிய கற்காலப் பண்பாட்டுக்கு மத்திய இடம் தென்னிந்தியாவே. கடப்பா பழைய மத்திய காலப் பழங்கற் காலப் பண்பாட்டுக்கு மத்திய இடமாகும். எகிப்திலே நீல ஆற்றங் கரையி லிருந்து மறைந்துபோன பழைய நாகரிகத்தின் சின்னங்கள் சில இன்றும் தக்காணத்தில் உள்ளன. எலியட் சிமித் என்பார் கிழக்கு ஆப்பிரிக்க மக்க ளிடையே காணப்பட்டனவும், இன்றும் தக்காணத்திற் காணப்படுகின்றனவு மாகிய திராவிட மக்களின் நம்பிக்கைகள் பழக்க வழக்கங்களையும் எடுத்துக் காட்டி இரு மக்களுக்கும் தொடக்கம் ஒன்று எனக் குறிப்பிட்டுள்ளார். ஆறாயிரம் ஆண்டுகளின் முன் திராவிடர் நாகரிகம் திராவிட மக்களின் மிகப் பழைய நாகரிகத்தைப்பற்றி மொகஞ்ச தரோ, அரப்பா, சங்குதரோ முதலிய அழிபாட்டு மேடுகளிற் கண்டுபிடிக்கப் பட்ட பழம்பொருள்கள் வெளியிடுகின்றன. அரப்பா மொகஞ்சதரோ முதலிய நகரங்களில் திராவிடமக்கள் வாழ்ந்தார்கள். அக்காலத்தில் அவர்கள் எகிப்தியர், பாபிலோனியர்களை ஒத்த அல்லது அவர்களிலும் உயர்ந்த நாகரிகமுடையவர்களாக வாழ்ந்தார்கள். அக்காலத்தில் இரும்பு பயன்படுத்தப் படவில்லை. நகரங்கள் அமைக்கப்பட்டிருந்தன. வீடுகள் செங்கற்களால் கட்டப்பட்டன. அவைகளுக்கு மாடிகளும் மாடிகளுக்குச் செல்லப் படிக்கட்டுகளுமிருந்தன. மாடிகளிலிருந்து கழிவு நீர் கீழே செல்வ தற்குச் சூளையிட்ட மண்குழாய்கள் பொருத்தி வைக்கப்பட்டிருந்தன. கூரைவழியாக வழியும் நீர் பீலிகளில் விழுந்து பின் குழாய்கள் வழியே கீழே சென்றது. ஒவ்வொரு வீட்டுக்கும் கிணறும் குளிக்குமறையும் இருந்தன. கழிவுநீர், கால்வாய்கள் வழியாக வீதியிலுள்ள பெரிய கால்வாயில் விழுந்தது. கால்வாய்கள் செங்கற் பதிக்கப்பட்டிருந்தன. தண்ணீர் சென்று விழும் இடத்தில் செங்கற்பதித்த குழி இருந்தது. பாரமான பொருள்கள் குழியில் தங்கிநின்றன. சுத்தஞ் செய்வோர் அக் குழிகளில் தங்கிநிற்கும் அழுக்குகளைச் சுத்தஞ் செய்தனர். வீடுகளுக்கு மலக்கூடங்களும் இருந்தன. பெரிய வீதிகள் 33-அடி அகலமுடையன. சிறிய வீதிகள் 18-அடி அகலமுடையன. மக்கள் வாற்கோதுமையையும், கோதுமையையும் விளைவித்தார்கள். ஆடு, மாடு, எருமை முதலிய விலங்குகள் வீடுகளில் வளர்க்கப்பட்டன. யானைகள் பழக்கி வேலை செய்விக்கப்பட்டன. மக்கள் பஞ்சு விளைவிக்கவும் பஞ்சிலிருந்து நூல் நூற்கவும் நூலிலிருந்து ஆடை செய்யவும் அறிந்திருந்தார்கள். அவர்கள் எகிப்து, பாபிலோன், பாரசீகம் முதலிய நாடுகளோடும் தென்னிந்தியாவோடும் வாணிகம் புரிந்தார்கள். ஒருவகைச் சுண்ணாம்புக் கல்லிற் செதுக்கப்பட்ட முத்திரைகளும், நாட்டியமாடும் பாவனையுள்ள பாவைகள், சுவாத்திக அடையாளமிட்ட பொருள்களும், எருமை காண்டாமிருகம் யானை மாடு போன்ற வடிவங் களும் எழுத்துக்களும் வெட்டப்பட்ட முத்திரைகளும், கல், பொன், செம்பு, வெண்கலம், வெள்ளி முதலியவைகளால் செய்யப்பட்ட பாத்திரங்களும் இவைபோன்ற அழகிய பொருள்களும் காணப்பட்டன. அக் கால மக்கள் இவ் விருபதாம் நூற்றாண்டு மக்களைவிடப் பலவகையில் உயர்ந்த நாகரிக நன்னிலை அடைந்திருந்தார்கள் என ஆராய்ச்சியாளர் நவின்றுள்ளார்கள்.1 சிந்துவெளி நகரங்களின் காலம் கி.மு. 3500 வரையில். பிற்காலத்தில் இந்திய நாட்டை வந்தடைந்த ஆரிய மக்களும் அவர் களின் சந்ததியினரும் அப்பழைய நாகரிக முறைகள் பலவற்றைக் கைக் கொண்டனரென்றும் அதற்குச் சான்று அவர்களின் வேதபாடல்களில் காணப்படுகின்றதென்றும் ஆராய்ச்சி அறிஞர் கூறுவர். திராவிட மக்களைப் பற்றிய சில குறிப்புகள் வேதங்களிற் காணப்படுகின்றன. பாரதம், இராமா யணம் என்னும் நூல்களில் தென்னாட்டு அரசர்களைப்பற்றியும் தென் னாட்டைப்பற்றியும் சில குறிப்புகள் காணப்படுகின்றன. அந்நூல்கள் காலத் துக்குக் காலம் எழுதிச் சேர்க்கப்பட்டன வாதலின் அவைகளிற் கூறப்படு வன சிறந்த வரலாற்றுச் சான்றுகளாகமாட்டா. “மாபாரதத்தையும் இராமாயணத்தையும் நாம் கி.மு. 5ஆம் நூற் றாண்டைய நூல்கள் எனக்கொள்ளலாம். அந்நூல்களின் எப் பகுதி எக் காலத்தில் செய்யப்பட்டது என்னும் ஐயப்பாடும் உண்டாகின்றது. அவை களில் கூறப்படும் இந்திய நாட்டின் பிரிவுகள் கி.மு. நாலாம் நூற்றாண்டு வரையில் உறுதியாக அமைந்திருந்தனவென்று கொள்ளலாம். சாதகக் கதைகள் பதினாறு இராச்சியங்களையும் வேறு சில நாடுகளையும் பற்றிக் கூறுகின்றன. அவைகளை எல்லாம் இந்திய படமொன்றில் ஒழுங்குபட வைத்துப் பார்த்தால் மிகத் தெற்கே உள்ள நாடு கோதாவரிக்குத் தெற்கே போகவில்லை. பழைய பௌத்த இலக்கியங்கள் விந்தியத்துக்குக் கீழே உள்ள நாடுகளைப் பற்றி அறியா. பாணினிக்குத் தென்னாட்டைப் பற்றித் தெரியாது அவர் தெற்கே உள்ளனவாகக் குறிப்பிட்ட இடங்கள் கச்சா, அவந்தி, கோசலம், கரூசா, கலிங்கம் என்பன. இவை விந்தத்துக்கு வடக்கே உள்ளன. பாணினிக்கு இரண்டு நூற்றாண்டுகளின் பின் விளங்கிய கார்த்தியாயனர் தென்னாட்டைப் பற்றி அறிந்திருந்தார். பதஞ்சலி காலத்தில் தென்னாடு நன்றாக அறியப் பட்டிருந்தது. பதஞ்சலியின் காலம் கி.மு. 150. கார்த்தியாயனரின் காலம், கி.மு. 350. பண்டாக்கரது கொள்கையின்படி பாணினி கி.மு. 7ஆம் நூற்றாண்டில் விளங்கினார்.1 அக் காலத்தில் வடநாட்டவரால் தென்னாடு சிறிதும் அறியப் படாதிருந்தது. மெகஸ்தீனஸ் காலத்தில் தென்னிந்தியாவைப்பற்றி வட நாட்டவர் சிறிது அறிந்திருந்தார்கள். சாணக்கியரின் அர்த்த சாத்திரத்தில் தென்னாட்டைப்பற்றிக் கூறப்பட்டுள்ளது. அசோகரின் கல்வெட்டுக்களில் சேர சோழ பாண்டியர் நாடுகள் குறிக்கப்பட்டுள்ளன.2 தமிழ்நாட்டெல்லை கி.மு. 1000 வரையில் விந்தியமலைக்கு வடகே உள்ள நாடுகள் ஆரியாவர்த்தம் என்னும் பெயர் பெற்றிருந்தன. விந்தியத்தக்குத் தெற்கே தமிழ் வழங்கிற்று. கி.மு. 1000 வரையில் எபிரேய மொழியில் சென்று வழங்கிய பெயர்கள் தமிழாகவே காணப்படுகின்றன. தொல்காப்பியம் செய்யப்படுகின்ற காலத்தில் தமிழ்நாட்டின் வட வெல்லை திருப்பதி மலை யாகவிருந்தது. அக்காலத்தில் தெலுங்கு தனிமொழியாகப் பிரிந்துவிட்டது. ஒருகாலத்தில் தமிழ்நாட்டெல்லை கிருட்டிணா ஆறுவரையில் இருந்த தெனச் சிற்பநூலிற் காணப்படுவதாக ஆசிரியர் உ.வே. சாமிநாத ஐய ரவர்கள் சங்ககாலத்தமிழும் பிற்காலத் தமிழும் என்னும் நூலிற் குறிப் பிட்டுள்ளார். ஒன்பதாம் நூற்றாண்டுக்கு முற்பட்ட இலக்கியங்கள் தெலுங்கு மொழிக்கு இல்லை. 1சங்கச் செய்யுட்களில் வேங்கடத்துக்கு வடக்கே வடுகர் நாடு இருந்ததெனக் காணப்படுகின்றது. பழம் பொருள் ஆராய்ச்சி வரலாற்று ஆராய்ச்சிக்கு எவ்வகையில் துணைபுரிகின்றதோ அவ்வாறே பழைய இலக்கியங்களும் அதற்குத் துணைபுரிகின்றன. சங்கநூல்களைக் கொண்டு இற்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளின் முன் தமிழகத்தின் பண்பாடு எவ்வகையினதென நாம் தெள்ளிதில் அறியக்கூடும். சங்ககாலத்தில் தமிழ்நாடு 2கிருட்டிணா ஆற்றுக்குத் தெற்கே கன்னியாகுமரி வரையிலுமுள்ள நிலப்பரப்பு மூன்று பெருவேந்தராலும் ஏழு குறுநில மன்னராலும் ஆளப் பட்டது. இவர்களை அன்றிப் பல சிற்றரசர்களும் இருந்தார்கள். கடற் கரையை அடுத்தவும் வெளியாகவுள்ளவும் பகுதிகளே பெரிய அரசரால் ஆளப்பட்டன. மலைகளும் காடுகளும் குறுநில மன்னருக்கு உரியனவா யிருந்தன. கிழக்குக் கடற்கரை ஓரமாகக் கிருட்டிணா ஆறுதொடக்கம் இராமநாதபுரப்பகுதியிலுள்ள தொண்டி வரையிலுள்ள நாடு சோழர் ஆட்சிக்குட்பட்டிருந்தது. இதன் மத்தியில் காஞ்சி ஆளுகைக்குட்பட்ட திருக்கோயிலூரைச் சூழ்ந்த மலைநாடு மலையமானுக்கு உரியதாயிருந்தது. சோழ இராச்சியத்துக்குத் தெற்கே பாண்டிய நாடு இருந்தது. இது கடற்கரையி லிருந்து கடற்கரை வரையும் பரந்து இக்கால மதுரை திருநெல்வேலி திருவி தாங்கூர் முதலிய மாகாணங்களும் கோயமுத்தூர் கொச்சி முதலியவற்றின் பகுதிகளும் அடங்கியதாயிருந்தது. மேற்குத் தொடர்ச்சி மலையில் ஆயின் மலை நாடு இருந்தது. தாலமி ஆயை அய்ஒய் (Aioi) எனக் குறிப்பிட் டுள்ளான். திருநெல்வேலியிலுள்ள கொற்கைத் துறை முகத்தை அடுத்து எவ்விநாடு இருந்தது. பழனி மலையைச் சுற்றிப் பேகன் நாடு இருந்தது. இதற்கு வடக்கே கடற்கரையை அடுத்துச் சேரநாடு இருந்தது. இதுபாலக் காட்டுவெளிக்கு ஊடாக சேலம் கோயமுத்தூர் வரையும் நீண் டிருந்தது. தென் மைசூரில் தொடங்கி ஒன்றின் பக்கத்தே ஒன்றாக இருங்கோவேளின் அரயம் நாடும், பாரியின் பறம்பு நாடும், அதியமானின் தகடூரும் (தருமபுரி), ஓரியின் கொல்லிமலை யும் இருந்தன. முதல் மூன்று நாடு களும் மைசூர் எல்லைக்குள் இருந் தன. இவ்வெல்லைக்கு அப்பால் கிழக்கே கங்கர் நாடும் தெற்கே கொங்கு நாடும் இருந்தன. தமிழ்நாட் டின் மேற்கேயுள்ள வட எல்லைப் புறம் துளுவ நாட்டரசனாகிய நன்னனுக்கும், கிழக்கேயுள்ள வட எல்லைப்புறம் வேங்கடத்துப் புல்லிக்கும், உரியனவாயிருந்தன. அதற்கு வடக்கே ஆரிய நாடும் (வடுகர்நாடு), தண்டாரணியமும் இருந்தன. தென்னாட்டில் படையெடுப்புகள் மௌரிய சந்திரகுப்தன் காலம்வரையில் தென்னாட்டில் அயல் நாட்டுப் படை எடுப்புகள் நேரவில்லை. சந்திரகுப்தனுடைய மரணத்துக்குப் பின் அவன் மகன் பிந்துசாரன் தமிழ்நாட்டின்மீது படை எடுத்தான். இதன்மேல் இடையிடையே வடநாட்டவர் படை எடுப்புகள் நேர்ந்தன. சேர, சோழ, பாண்டிய அரசர் ஆரியரைவென்று வில்லும் புலியும் மீனுமாகிய தத்தம் கொடிகளை மேருவில் நாட்டியும் அக் குறிகளை அம்மலையில் தீட்டியும் உள்ளார்கள் எனக் தமிழ்ப் பழம் பாடல்களில் காணப்படுவன ஆரியர் தமிழர் போர்களையே குறிக்கின்றன. சேர அரசருள் செங்குட்டு வனும், பாண்டிய அரசருள் நெடுஞ்செழியனும், சோழ அரசருள் கரிகாலனும் ஆரியரை வென்றதாக வரலாறு உண்டு. களப்பிரர் கி.பி. நாலாம் நூற்றாண்டில் களப்பிரர் என்னும் ஒரு கூட்டத்தினர் கிளம்பித் தொண்டை நாடு ஒழிந்த மற்றை மூவேந்தர் நாடுகளையும் அடிப்படுத்தி ஏறக்குறைய இருநூறு ஆண்டுகள் ஆட்சி புரிந்தனர். களப்பிரர் எங்கிருந்து வந்தார்கள் என்பதும், பிறவும் அறியமுடியாமல் இருக்கின்றன. கடுங்கோன் களப்பிரரை வென்று பாண்டிய இராச்சியத்தை அவரிடமிருந்து மீட்டான். பல்லவர் கி.பி. மூன்றாம் நூற்றாண்டுமுதல் பல்லவர் காஞ்சியைத் தலைநக ராகக்கொண்டு தொண்டைநாட்டை ஆண்டு வந்தனர். தொண்டைமான் இளந்திரையன் மணிபல்லவத்து நாககுலப்பெண்ணுக்கும் சோழனுக்கும் பிறந்தவனென்று சங்கநூல்களிற் காணப்படுகின்றது. மணிபல்லவ அரச குடும்பப் பெண்வழித் தோன்றிய இளந்திரையனின் சந்ததியினர் பல்லவர் எனப்பட்டார்களாகலாம். பல்லவம் கொடியைக் குறிக்கும். பல்லவர் ஆட்சி ஒன்பதாம் நூற்றாண்டில் மறைந்துபோயிற்று. பல்லவம் என்பதன் மறு பெயரே தொண்டை என்பது எஸ்.கே. ஐயங்கார் கருத்து. சாளுக்கியர் ஆந்திர நாட்டின் மேற்குக்கரையில் விந்தயமலைக்குத் தெற்கிலும் சேரநாட்டு எல்லைக்கு வடக்கிலும் சாளுக்கியர் என்னும் ஒரு கூட்டத்தினர் அதிகாரமுடையவராய் கி.பி. 7ஆம் நூற்றாண்டு தொடக்கம் ஆட்சி புரிந்தனர். சாளுக்கியருக்கும் பல்லவருக்கும் போர்கள் நடந்தன. புலுகேசி என்னும் சாளுக்கிய வேந்தன் மகேந்திரவன்மன் என்னும் பல்லவ அரசனோடு பொருது கிழக்கே கிருட்டிணாவுக்கும் கோதாவரிக்கும் இடையிலுள்ள வெங்கி நாட்டைக் கைப்பற்றி அதனைத் தனது தம்பியை ஆளும்படி நியமித்தான். அது காலத்தில் கிழக்கு சாளுக்கிய நாடு எனப்படுவதாயிற்று. ஊர் அமைப்பு கோயிலைச்சுற்றி அல்லது அரசனுடைய அரண்மனையைச்சுற்றியே நகரங்கள் எழுந்தன. ஒவ்வொரு கிராமத்துக்கும் கோயில் மத்திய இடமாக விருந்தது.1 மக்கள் கோயில்களைச்சுற்றிக் குடியேறினார்கள். ஒவ்வொரு தொழில் செய்வோரும் தனித்தனி வீதிகளில் வாழ்ந்தார்கள். கிராமத்தின் நடுவில் வெளியிருந்தது. அது மன்றம் எனப்பட்டது. அங்கு நிழல்மரம் நின்றது. அதைச் சுற்றித் திண்ணையிடப்பட்டிருந்தது. ஓய்வு நேரங்களில் மக்கள் அங்கே கூடிப் பொழுதுபோக்கினார்கள். அங்கு ஊர்க்கூட்டங்களுங் கூட்டப்பட்டன. நியாயத்தீர்ப்பும் அங்கு செய்யப்பட்டது. பள்ளிக்கூடங் களும் அங்கு நடத்தப்பட்டன. எல்லாவகையான நிகழ்ச்சிகளுக்கும் கிளர்ச்சி களுக்கும் மன்றம் மத்திய இடமாயிருந்தது. அங்கு அருள்தறி நிறுத்தி வழிபடப்பட்டது. கிராமத்தில் நடக்கவேண்டிய ஒவ்வொரு முக்கிய நிகழ்ச்சியைப் பற்றியும் அங்கு கூட்டங்கள் கூட்டி ஆலோசிக்கப்பட்டன. கிராமங்கள் கிராமசபைகளால் ஆளப்பட்டன. பெரும்பாலும் அவ்வக் கிராமங்களிலுள்ள கடவுளின் பெயரால் கிராமங்களின் பெயர்கள் அறியப் பட்டன. ஒவ்வொரு கோயிலும் ஓர் அரண்மனையின் அமைப்பைப் போலக் கட்டப்பட்டது. அரசனுடைய மாளிகையும் கோயில் எனப்பட்டது. நகரம் அரசனுடைய மாளிகை அல்லது அரண்மனையைச் சுற்றி மதில் இடப்பட்டிருக்கும். அதற்கு அடுத்து அரச குடும்பத்தினரும் அரசனது கருமத்தலைவர்கள் வாழும் வீதிகளும் இருக்கும். இவ்வீதிகளைச்சுற்றி மதிலிடப்பட்டிருக்கும். மதிலுக்கு வெளியேயுள்ள வீதிகளில் பற்பல தொழில் புரியும் மக்கள் வாழ்வார்கள். அங்கு கடைகளும் கடைத்தெருக் களும் உண்டு. பகைவர் இலகுவில் அழிக்கவும் ஏறவும் முடியாத மதில் நகரைச் சூழ்ந்து இருந்தது. மதிலின் வாயில்களுக்கு பெரிய மரங்களால் இரும்பு சேர்த்துச் செய்யப்பட்ட கதவுகள் இடப்பட்டிருந்தன. அவை பழைய கோயில்களிலிடப்பட்டுள்ள கதவுகள் போன்றவை. உள்ளே திரண்ட மரங்களால் அவை தாழிடப்பட்டிருந்தன. கோட்டை வாயிலில் கொடிகள் கட்டப்பட்டிருந்தன. மதிற்சுவர்கள் வீரர்நின்று போர்செய்தற்கேற்ற அகலமுடையனவாயிருந்தன. கொதி எண்ணெயை இறைப்பனவும், நெருப்பை வீசுவனவும், கல் எறிவனவும், அம்பு உமிழ்வனவும் போன்ற பொறிகள் பல மதிற்சுவர்களில் அமைக்கப்பட்டிருந்தன. வெளிமதிலைச் சுற்றிப் பெரிய அகழ் இருந்தது. இது ஆழமுடையதாகவும் நீர் நிறைவுடையதாகவும் இருந்தது. நீரில் பெரிய முதலைகளும் மீன்களும் இருந்தன. கோட்டைவாயிலிலிருந்து அகழியைக் கடக்கக் கூடியதாகப் பலகை இடப்பட்டிருந்தது. போர்க்காலங்களில் பலகை எடுக்கப்பட்டது. அகழில் வெளியே முள்மரங்கள் நடப்பட்டுள்ள காவற்காடு இருந்தது. அங்கு வேட்டுவர் வாழ்ந்தனர். அதற்கு வெளியே விளை நிலங்கள் இருந்தன. கி.பி. 1225இல் இந்தியாவுக்கு வந்து திரும்பிய1 சீனப் பிரயாணி ஒருவன் எழுதியிருப்பது கொண்டு அக்காலக் கோட்டை எவ்வா றிருந்ததென்று. நாம் அறிந்து கொள்ளலாம். “இங்கு (சோழநாட்டில்) ஏழுசுற்றுமதில்களுள்ள நகரம் உண்டு. வடக்கிலிருந்து தெற்குநோக்கியுள்ள வெளிமதிலின் நீளம் பன்னிரண்டு லி (LI) கிழக்கிலிருந்து மேற்கே செல்லும் மதிலின் நீளம் ஏழு ‘லி’ ஒவ்வொரு சுற்று மதிலுக்குமிடையில் நூறடி வெளியுண்டு. ஏழு மதில்களில் நான்கு செங்கல்லாற் கட்டப்பட்டவை; இரண்டு களிமண்ணால் எடுக்கப்பட்டவை; மத்தியிலுள்ளது மரத்தினாற் கட்டப்பட்டது. அங்கு பழமரங்களும் பூ மரங்களும் நடப்பட்ட சோலை உண்டு. முதல் இரண்டு சுவர்களுக்கு இடையிலுள்ள வெளியில் மக்களின் வீடுகள் உண்டு. அவை அகழியாற் சூழப்பட்டுள்ளன. மூன்றாம் நான்காம் சுவர்களுக் கிடையிலுள்ள வெளியில் அரசாங்க கருமகாரர்களின் வீடுகளுண்டு. ஐந்தாவது மதிலுக்குள் அரசனுடைய குமாரர் வாழ்கின்றனர். ஆறாவது சுவருக்குள் கோயில்களும் பூசாரிகளின் வீடுகளும் உண்டு. ஏழாவது சுவருக்குள் நானூறுவீடுகள் அடங்கிய அரண்மனை உண்டு.” மௌரியசந்திரகுப்தனுடைய அரண்மனையைப்பற்றிச் சொல்லப் படும் விபரமும் பிறவும் சங்க இலக்கியங்களிலும உதயணன் கதையிலும் கூறப்படுவனவற்றை ஒத்திருக்கின்றன. அவற்றை இங்கு தருகின்றோம். “அரசனுடைய அரண்மனை பெரிய பூஞ்சோலையின் நடுவில் உள்ளது. அங்கு பழகிய மயிற் சேவல்களும் அழகிய கோழி இனங்களும் உலாவித் திரிந்தன. நிழல் மரங்களின் கொம்புகள் ஒன்றோடு ஒன்று பின்னிக் கிடந்தன. அங்கு நாட்டப்பட்டுள்ள மரங்கள் எப்பொழுதும் பச்சையாக இருக்கும். அவை ஒருபோதும் இலை உதிர்த்துவதில்லை. அங்கு பறவைகள் பல வாழ்கின்றன. அவை கிளைகளில் கூடுகட்டியுள்ளன. அங்கு பல குளங்கள் உண்டு. அவைகளில் மிகப் பெரிய பழகிய மீன்கள் விடப்பட்டுள்ளன. அரசனுடைய குமாரரல்லாத பிறர் அக் குளங்களில் மீன்பிடிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள். அரசனுடைய அரண்மனையை அலங்கரிக்கும் முலாம் பூசப்பட்ட தூண்களில் பொன்கொடிகள் சுற்றியிருக்கின்றன. அவைகள்மீது வெள்ளி யால் செய்யப்பட்ட பறவைகள் இருக்கின்றன. அரண்மனையைச்சுற்றி மதிலும் அகழும் உள்ளன. அரண்மனையின் பின்புறத்தில் பெண்கள் உறையும் அறைகள் உண்டு. அங்கு கூனும் குறளும் இருப்பர். பெண்கள் உறையும் அறைகளுக்கு வெளியே இராசகுமாரரும் இராசகுமாரிகளும் உறையும் அறைகள் இருந்தன. அவைகளுக்கு வெளியே கொலுமண்டப மும் கருமகாரரின் அறைகளும் இருந்தன. அரசனுக்குத் தனி அறைகள் இருந்தன. அரண்மனையில் பல இரகசிய அறைகளும், சுரங்க வழிகளும், உள்ளே வெளியுள்ள தூண்களும், மறைவான படிக்கட்டுகளும், கீழே விழுந்து விடக்கூடிய தரையும் இருந்தன.-Chandra Gupta Maurya and his time-p 194.-R K. Mookerji. அரசனும் ஆட்சியும் அரசனுடைய அதிகாரம் எல்லா அதிகாரங்களுக்கும் மேலாக விருந்தது. தந்தைக்குப்பின் மகன் என்றவாறு அரசுரிமை தலைமுறை தலைமுறையாக வந்தது. அரசனுடைய கடமை துட்டரைத் தண்டிப்பதும் மக்களின் அமைதியைக் காப்பதுமாகும். அரனுடைய விருப்பமே நாட்டின் சட்டம்; அதனை மறுத்தல் எவருக்கும் முறையாகாது. போரில் அரசனே படையை நடத்திச் சென்றான். சமாதான காலத்தில் எல்லாத் தீர்ப்புகளுக்கும் அவனே தலைவனாக விருந்தான். அரன் இருக்கும் மண்டபம் மிகவும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அவனைச் சூழ்ந்து பல ஆடம்பரங்கள் இருந்தன. மக்கள் அதனையே விரும்பினார்கள்.1 அரசன் இருக்குமிடம் கொலு, அரசிருக்கை அல்லது ஒலக்கம் எனப்பட்டது. அரசிருக்கைவேளை அல்லாத மற்றக் காலங்களில் அரசன் மக்களோடு அளவளாவினான். நகரத்தில் நடக்கும் விழாக்களிலும் அவன் கலந்துகொள்வான். அவனுடைய வெற்றிக்காகவும் நீண்ட வாழ்விற்காகவும் கோயில்களில் துதிகள் சொல்லப்பட்டன. அரசன் தங்கும் மாளிகைகள் அவன் நாட்டின் பல இடங்களில் இருந்தன. நாடு போரின்றி அமைதியுற்றிருக்கும் காலங்களில் அரசன் பெருமக்களோடு நாடு முழுவதையும் சுற்றிவந்தான். ஆட்சி அவன் அதிகாரத்தில் இருந்தபோதும் ஒழுங்கும் நீதியும் நிலவின. அரசனைச் சூழ்ந்து பிரபுக்கள், பெருமக்கள், கரும வினைஞர் முதலியோர் இருந்தனர். முக்கியமான கருமங்களைச் செய்வதன் முன் அவன் உடன் கூட்டத்து அதிகாரிகள் என்னும் கூட்டத் தாரோடு ஆலோசனை செய்தான். அனுபவமும் கல்வியும் உள்ளவர்களே ஆலோசனையாளராக அவனால் தெரியப்பட்டனர். கூட்டங்கள் அரசிருக்iக மண்டபத்தில் நடந்தன. அரச கட்டளைகள் நீண்ட ஆலோசனைக்குப் பின்னரே வெளியிடப்பட்டன. கட்டளைகள் வெளியானதும் பெருந்தரம் அல்லது பிரமராயன் எனப்பட்ட அமைச்சன் அவைகளைத் திருமந்திர ஓலைக்காரன் என்னும் மூலஒலை காப்பாற்றும் அதிகாரியால் பொத்தகத்தில் எழுதும்படி செய்தான். பின்பு அவை படி எடுக்கப்பட்டு விடையில் அதிகாரிகளால் இராச்சியத்தின் பல பகுதிகளுக்குப் போக்கப் பட்டன. அக் கட்டளைகள் கிராமக் கூட்டங்களுக்கும் அறிவிக்கப்பட்டன. இக் கூட்டங் களுக்கு அரசனுடைய மக்கள் அல்லது உறவினரே தலைவராகவிருந்தனர். அக் கட்டளைகள் முக்கியமுடையனவும் நிலையானவுமாயின் அவை கோயிற் சுவர்களில் எழுதப்பட்டன. அரசனுக்குப் பொது அமைச்சர், அந்தரங்க அமைச்சர் முதலியோர் இருந்தனர். அரண்மனையில் தலைமைப் பெருந்தனம் (கருவூலம்) இருந்தது. அங்கிருந்து போர் வீரர், கருமகாரர் முதலியோர் சம்பளத்துக்கும் அரண்மனைச் செலவுக்கும் பணம் எடுக்கப்பட்டது. மாகாணங்களில் சிறுந்தனங்கள்1 இருந்தன. இவை பெரும்பாலும் கோயில்களிலிருந்தன. இவைக்குப் பொருள் பெரும்பாலும் இறையிலி நிலங்களாலும், நன்கொடை களாலும் வந்தது. இப்பொருளில் கோயிற் செலவு போக மீதி மக்கள் நலத்திற்காகப் பயன்படுத்தப்பட்டது. அரசாங்கத்தில் மதிப்பும் ஒழுக்கமும் வாய்ந்த ஒற்றர் இருந்தனர். இவர்கள் மாகாணத் தலைவர்களினைப் பற்றிய செய்திகளை அறிந்து அரசனுக்குத் தெரிவித்தார்கள். அரசன் மாறுவேடம் பூண்டு இரவிற்சென்று மக்களின் எண்ணங்களை அறிந்தான். ஒற்றர் துறவிகள், வணிகர் போன்று வேடந்தாங்கி அயல் நாடுகளிற் சென்று பகை அரசரின் மறைவான செய்திகளை அறிந்து வந்தனர். அரசனைத் தலைவனாகக்கொண்டு ஆட்சி செய்யும் முறையை ஆரிய மக்கள் திராவிடரிடமிருந்து அறிந்தார்கள் என்பதற்கு ஆதாரங்கள் காணப்படுகின்றன. 1அவர்கள் தமது மொழியை யும் திராவிடரின் உதவியைப் பெற்றுத் திருத்திக் கொண்டனர்.2 மண்டல ஆட்சி ஆட்சிக்குட்பட்ட நிலம் ஆளுகையின் பொருட்டு 3மண்டலங்கள் அல்லது மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தன. மண்டலங்கள் நாடுகளாகவும் வளநாடுகளாகவும் பிரிக்கப் பட்டன. ஒவ்வொரு நாட்டிலும் பல கிராம சபைகள் இருந்தன. பல கிராமங்கள் சேராத கிராமம் தனியூர் எனப்பட்டது. கிராமங்கள் சேரிகளாகவும் குடும்புகளா(வட்டங்கள்)கவும் பிரிக்கப்பட்டிருந்தன. சில கோட்டங்கள் அரசனின் மேற்பார்வையின்கீழ் நாட்டுக்குரிய தலைவனால் (குறுநில மன்னன்) ஆளப்பட்டன. மற்ற மண்ட லங்களுக்கு அரசன் மண்டலிகரை நியமித்தான். அவர்களின் ஆட்சிக் காலம் அவர்களின் ஒழுக்கத்தையும் அரசனின் நல்லெண்ணத்தையும் பொறுத்திருந்தது. அரசன் மண்டலங்களின் போக்கைத்தான் செய்யும் சுற்றுப் பயணங்களாலும் ஒற்றர்களாலும் அறிந்தான். மண்டலிகன் வரிகளைத் தண்டினான்; நியாயத் தீர்ப்புச் செய்தான்; நாட்டில் அமைதியும் நியாயமும் நிலவும்படியும், ஆட்சி தொடர்பான கருமங்களை நன்கு நடைபெறும்படியும் செய்தான். மண்டலங்கள் முழுமையிலும் சுற்றுப் பயணஞ்செய்து மக்களோடு தொடர்பு வைத்திருத்தல், கணக்கு களைப் பரிசோதித்தல், சபைகளைக் கண்காணித்தல் முதலியன அவனுடைய கடமைகள். அவன் கோயிற் கணக்கு களையும் பரிசோதித்தான். கோயிற் கருமங்களின் குறைபாடுகள் ஐந்து பேரடங்கிய கூட்டத்தோடு மண்டலிக ரால் ஆராயப்பட்டன. மண்டலிகருக்கு அடுத்தபடியி லுள்ளவர் நாட்டுத் தலைவர். அவர் நாடுகண்காட்சி அல்லது நாடுவாகை எனப்பட்டார். நாட்டுத் தலைவர்கள் நாட்டின் ஆட்சிமுறையைக் கண்காணித்தார்கள். கிராமசபை ஒவ்வொரு கிராமத்தின் ஆட்சிக்கும் கிராமசபை பொறுப்பா யிருந்தது. மாகாண அதிகாரிகள் படைத் தலைவரோடு மாகாணம் முழுமை யும் பயணஞ்செய்து விசாரணைகள் செய்தும் கணக்குகளை மேற்பார்த்தும் வந்தனர். கிராமசபைகள் கோயில்களில் கூடின. கிராம சபை உறுப்பினரின் எண் கிராமங்களுக்கு ஏற்றவாறு இருந்தது. சில சமயங்களில் ஐந்நூறு பேர் வரையில் இருந்தனர். அங்கத்தவர்களைத் தெரியும் வாய்ப்புக்காகக் கிராமம் பல குடும்பு (வட்டங்கள்)களாகப் பிரிக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு குடும்பும் சபைக்கு அங்கத்தவர் ஆகக்கூடியவர்களின் பெயர் எழுதிய ஓலைநறுக்குக் கட்டொன்றை அனுப்பிற்று. கல்வியும் சொத்தும் இருப்பது உறுப்பினனாவ தற்குத் தகுதியை உண்டுபண்ணிற்று. கால்வேலிக்கு அதிகம் வரிகொடுக்கும் நிலமுள்ளவன் அல்லது தனது சொந்த நிலத்தில் வீடுகட்டி வாழ்பவன் தெரிவுக்குத் தகுதியுடையவனாகக் கொள்ளப்பட்டான். அங்கத்தவனாகத் தெரியப்படுபவன் 35 வயதுக்கும் 70 வயதுக்கும் இடைப்பட்டவனாயிருத் தல் வேண்டும். அவன் கடந்த மூன்று ஆண்டுகளில் சபை உறுப்பினனாக இருந்தவனாதல் கூடாது. குடும்புகளுக்குச் சீட்டுகள் மூலம் அறிவிக்கப் பட்டபின் கூட்டம் கூட்டப்பட்டது. அதற்கு எல்லாக் கோயில் நம்பிகளும் அழைக்கப்பட்டனர். அவர்களில் முதியவன் சபைக்குத் தலைமை வகித் தான். அச் சீட்டுகள் எல்லாம் ஒரு வெறும் பானைக்குள் இடப்பட்டன. பின்பு சிறுவன் ஒருவன் அவைகளுள் ஒன்றை எடுத்தான். அப் பெயர் வாசிக்கப்பட்டது. அப் பெயருடையவன் குடும்பின் அங்கத்தவனாகத் தெரியப்பட்டான். இவ்வாறு ஒவ்வொரு குடும்பின் அங்கத்தினரும் தெரியப் பட்டார்கள். குளங்களைக் கண்காணிப்போர் குளங்கள் ஆண்டுதோறும் திருத்தப்படுவதை மேற்பார்ப்பதற்கு ஒரு சபை இருந்தது. அது குளத்தில் சேற்றை அப்புறப்படுத்துதல், நீர்ப் பாய்ச்சுதல், பயிரிடுவோருக்குச் சமமாக நீர் அளித்தல் முதலியவற்றைக் கண்காணித்தது. வீதிகளை அமைத்தல் அவைகளை அகலமாக்குதல் முதலியவைகளை மேற்பார்க்கும் சபையும் இருந்தது. குடும்புவாரியாக அங்கத்தவர் தெரியப்பட்ட பின்பு சபை அவர் களைப் பலவேறு வேலைகளைப் பார்க்கும்படி தெரிவுசெய்தது. ஒவ்வொரு அங்கத்தவனும் கடமை பார்க்கும் காலம் 360 நாள்களாகும். இச் சபையின் நிகழ்ச்சிகள் ‘கர்ணத்தான்’ என்னும் கணக்கனால் எழுதி வைக்கப்பட்டன. கோயில் நீங்கலாகக் கிராமத்தின் நிர்வாகம் சபையின் பொறுப்பில் இருந்தது. நியாயத்தீர்ப்பு அரசன் தானே நேரில் நியாயத் தீர்ப்புச் செய்தான். உடன் கூட்டத்தார் அவனுக்கு ஞாயத்தீர்ப்பில் உதவிபுரிந்தனர். சிறிய வழக்குகள் ஒவ்வொரு சேரியையும் மேற்பார்க்கும் சபையால் விளங்கித் தீர்ப்பளிக்கப்பட்டன. கொலைவழக்குகள் கிராமசபையால் விசாரணை செய்யப்பட்டன; சில சமயங்களில் மாகாணத் தலைவர் விசாரணை செய்தார். முதன்மையான வழக்குகள் படைத்தலைவனால் (சேனாபதியால்) ஐவர் அடங்கிய சபைபின் உதவியோடு விசாரணை செய்யப்பட்டன. மிக முக்கியமான வழக்குகளே அரசனுடைய விசாரணைக்கு விடப்பட்டன. அரசன் நாடுகளைச் சுற்றிப் பயணம் செய்யும் காலங்களில் அவை விசாரணை செய்யப்பட்டன. திருட்டுக்குற்றத்துக்குப் பணம் அபராதம் விதிக்கப்பட்டது. அத் தண்டம் தரும ஆசனம் எனப்பட்டது. ஒப்பந்தங்களைமீறிய குற்றங் களுக்குப் பணம் அபராதம் விதிக்கப்பட்டது; சில சமயங்களில் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது. கண்ணுக்குக்கண் கையுக்குக்கை என்பது போல உறுப்புகளைக் களைந்துவிடுவது பொதுவான சட்டமாக விருந்தது. கொதி எண்ணையில் கைவைத்தல் போன்ற குற்றச்சோதனை அறியப்படாத தன்று. கொலைக்குத் தண்டனை கொலையாகவிருந்தது. வேண்டுமென்று செய்யப்படாத கொலைக்கு 16 பசு மாடுகள் அபராதம் விதிக்கப்பட்டது. இறந்தவரின் உயிர் ஆறுதல் அடைதற்குக் கிராமக் கோயிலில் எப்பொழுதும் எரியும்படி நெய்விளக்கு ஏற்றி வைக்கப்பட்டது. இராசத்துரோகத்துக்குச் சட்டப்படி தண்டனை விதிக்கப்பட்டது. இராசத்துரோகஞ் செய்தவரின் சொத்துக்கள் விற்கப்பட்டன. அவ்வாறு கிடைத்தபொருள் கோயில்களுக் கும் அறநிலையங்களுக்கும் கொடுக்கப்பட்டன. நகரக் காவலர் (Police) தலைவன் தண்டநாயகன் எனப்பட்டான். நகர்க்காவலர் வீதிகளைக்காவல் புரிந்தனர். அவர்கள் பதிகாவல் என அறியப்பட்டார்கள். படை தமிழ் அரசர் ஒருவரை மற்றவர் கீழ்ப்படுத்தும்படி பெரும்பாலும் போர் விளைத்தனர். தேர், யானை, குதிரை, காலாள் எனப் படை நால்வகைப் பட்டது. யானை வீரன் புலித்தோற் சட்டை அணிந்து யானைமீது இருந்தான். அவனைச் சூழ்ந்து படைக்கலந் தாங்கிய வீரர் சென்றனர். தேர்கள் நிறமூட்டிய துணிகளில் அலங் கரிக்கப்பட்டிருந்தன. அவை போர்க்களத் துக்கு நிரையாகச் சென்றன. போரில் வில், வேல், ஈட்டி, வாள், கவண், முதலிய பல வகை ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டன. படைகள் அணி, உண்டை, ஒட்டு முதலிய பல அணிவகுப்புகளாக நின்று போர்செய்தன. முன் அணி ஆக்கம், கொடிப்படை, தார், தூசி எனப்பட்டது. பின்படை கூழை எனப்பட்டது. நாடு இராணுவ சம்பந்தமான பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. 1படைத்தலைவன் அரசனோடு நேரில் தொடர்பு வைத்திருந்தான். படை யின் பெரும் பகுதி காலாள். முன்னே குதிரைப் படையும் யானைப் படையும் சென்றன. தேர்கள் பெரிதும் பயன்படுத்தப்படவில்லை. அராபியர் கிரேக்கர் முதலிய அயல் நாட்டினரும் படையில் இருந்தார்கள். தூதுவரை அவ மானப்படுத்துவதும் கொல்வதும் நீதிக் கேடாகக் கொள்ளப்பட்டது. இச் சட்டத்தை மீறுவதால் போர்கள் மூண்டன. வரி நிலவரி தானிய வகையாகக் கொடுக்கப்பட்டது. பெரும்பாலும் விளைவில் ஆறிலொன்று வரியாகக் கொள்ளப்பட்டது. பட்டினங்களும் தோப்புகளும் பணவகையில் வரியை இறுத்தன. வரிக் கணக்கு எழுதும் ஏடு வரிப் பொத்தகம் எனப்பட்டது. வரிதண்டும் கருமிகள் (உத்தியோகத்தர்) இருந்தார்கள். ஒவ்வொரு நாட்டிலும் உள்ள பெரிய வீதியில் சுங்கம் தண்டப்பட்டது. சுங்கம் கொடாவிடின் பண்டங்களை அப்புறங் கொண்டு செல்லமுடியாமல் இருந்தது. போரில் கிடைத்த கொள்ளைப் பொருள், அரசாங்கத்துக்குரிய நிலங்கள், காடு, முத்துக் குளிப்புப் போன்ற வகையிலும் அரசனது கருவூலத்துக்குப் பொருள் வந்தது. இவைகளல்லாமல் கடை வரி, நெசவு வரி, செக்கு வரி போன்ற வரிகளும் வழக்கில் இருந்தன. கண்ணாலக் கடம் என்னும் கலியாண வரியும் இருந்தது.1 நீர்பாய்ச்சும் வாய்ப்பு அரசர் பயிருக்கு நீர்ப்பாய்ச்சும் வசதிகளைஅதிகம் செய்தனர். கரிகாற் சோழன் கட்டிய காவிரி அணை கிட்டிய காலம் வரையில் இருந்தது. ஆறுகளும், கிளை ஆறுகளும் நீர்ப்பாய்ச்சும் வாய்ப்பின் பொருட்டு மறித்துக் கட்டப்பட்டன. திரிச்சினாப்பள்ளியில் கங்கைகொண்ட சோழபுரத் திலுள்ள குளத்தின் அணைக்கட்டுப் பதினாறு மைல் நீளமுள்ளது. பல வெட்டு வாய்க்கால்களும் வெட்டப்பட்டன. செல்வர் வீதி ஓரங்களில் கிணறுகள் வெட்டிச் சுமைதாங்கி அமைத்தார்கள். வீதிகளின் அபாயமான இடங்களில் போர்வீரர் நிறுத்தப்பட்டிருந்தனர். ஆகவே போக்கு வரத்துச் செய்வோர் திருடர் பயமின்றிச் சென்றனர். கால்வாய் வெட்டுதல் ஏரி வெட்டுதல் போன்றவைகள் மக்களால் கட்டாயப்படுத்திச் செய்விக்கப் பட்டன. அவ்வகைவேலை ஊழியம், ஆள்மாஞ்சி எனப்பட்டது. ஆற்றுக் கால்வெட்ட, ஏரிகுழிவெட்ட, சுமை தூக்க என்னும் சொல்வழக்குகள் பட்டையங்களில் காணப்படுகின்றன. அரசருக்குப்புரியும் கட்டாய ஊழியம் இலங்கையில் இராசகாரியம் எனப்பட்டது. பொழுதுபோக்கு மற்போர், சிலம்பம், தேரோட்டம், யானைப்போர், குதிரை ஓட்டம், மாட்டுப் போர், ஆட்டுப் போர், கோழிப் போர், காடை கவுதாரிப்போர் என்பன மக்களின் பொதுவான பொழுது போக்குகளாகும். பெண்கள் வீட்டில் அடைக்கப்பட்டு இருக்கவில்லை; அவர்கள் அம்மானை, பந்து, பாட்டு, ஆட்டம், கும்மி, குரவை விளையாட்டுகளிற் பொழுது போக்கினர்; கிளி, நாகணவாய் முதலியவைகளை வளர்த்தனர். போக்குவரத்து முற்காலப் போக்குவரத்து பெரும்பாலும் கால்நடை, வண்டி, பல்லக்கு, தண்டிகை, கழுதை, எருது, யானை, குதிரை, தேர் வகைகளா யிருந்தன. ஓரிடத்திலிருந்து இன்னோரிடத்திற்குப் பண்டங்கள் கொண்டு செல்வதற்குப் பொதிமாடுகளும் கழுதைகளும் வண்டிகளும் பயன்படுத்தப் பட்டன. அரசரும் பெருமக்களும் தேர் பல்லக்கு, யானை முதலியவை களில் சென்றனர். கடலிற் செல்வதற்குப் பலவகை மரக்கலங்கள் இருந்தன. மரக்கலங் களின் முன்புறம், சிங்க முகம், யானை முகம், குதிரை முகம் போன்று செய்யப் பட்டிருந்தது. மரக்கலங்களுக்குப் பாய் மரங்களும் பாயும் இருந்தன. அளவைகள் எண்ணெய், நெய், தயிர் போன்றவையும் தானியங்களும் அளந்து விற்கப்பட்டன. பொன் வெள்ளி முதலியவை நிறுத்துவிற்கப்பட்டன. தானிய அளவை; 5 செவிடு 1 ஆழாக்கு; 2 ஆழாக்கு 1 உழக்கு; 2 உழக்கு 1 உரி; 2 உரி 1 நாழி; 8 நாழி 1 குறுணி; 2 குறுணி 1 பதக்கு; 4 குறுணி அல்லது 2 பதக்கு 1 தூணி; 3 தூணி அல்லது 12 குறுணி 1 கலம். பழைய பட்டையங்கள் சிலவற்றால் பெரும்பாலும் பொருள்கள் பண்டமாற்றுச் செய்யப்பட்டனவென்று அறிகின்றோம். 2 படி அரிசிக்கு 5 படி நெல்லுக் கொடுக்கப்பட்டது. 5 படி நெல்லுக் குத்துவதற்கு அரைப்படி அரிசி கூலியாகக் கொடுக்கப் பட்டது. ஒரு நாழி நெல் அரிசி கூலியாகக் கொடுக்கப் பட்டது. ஒரு நாழி நெல் 1/16 நாழி நெய்யுக்கும், ஒரு நாழி தயிர் 10ப் பாக்கு, 20 வாழை இலை அல்லது 1/16 நாழி நெய்க்கும் பண்டமாற்றுற் செய்யப்பட்டது. நெல்லும் தயிரும் ஒரே பெறுபதி உடையனவாயிருந்தன வென்பது குறிப்பிடத்தக்கது. நாள் வாழ்க்கைக்கு வேண்டிய பண்டங்களை வாங்குவதற்கு நெல் பயன்படுத்தப்பட்டது. பணப்புழக்கம் இருந்தபோதும் பொதுவாக நெல்லே பணத்தைப்போலப் பயன்படுத்தப்பட்டது. பொன் வெள்ளி நிறை: 1 கழஞ்சு 20 மஞ்சாடி; 1 மஞ்சாடி 2 குறுணி; 1 மா 1/10 மஞ்சாடி; 1 காணி 1/40 மஞ்சாடி. 1 “அக்காலத்தே நிறுத்தல், முகத்தல் முதலிய அளவுகட்கும், பொன் இரத்தினங்கள் நிறுத்தற்கும், பொன் மாற்று நோக்குதற்கும் அரசாங்கத்தா ரால் நியமிக்கப்பட்ட மரக்கால் முதலியன விருந்தன. அரசன் முத்திரையிட்ட மரக்காலுக்கு இராசஇராசன் காலத்தில் இராசகேசரி என்பது பெயர். இதற்குச் சமானமான தஞ்சாவூர்க் கோயில் மரக்காலுக்கு ஆடவல்லான் என்பது பெயர். ஆனால் நாடுதோறும் மரக்கால் பெயர்கள் மாறுபட்டிருந்தன. அரசாங்க முத்திரையிட்ட எடைக்கல்லுக்குக் குடிஞைக்கல் என்று பெயர். தஞ்சாவூர்க் கோயிலில் இதற்குச் சம எடையுள்ள கல்லுக்கு ஆடவல்லான் என்பது பெயர். (இப் பெயர்கள் சிவபிரான் பெயராலிடப்பட்டன) பொன்மாற்றுக்கு வைத்திருந்த ஆணிக்குத் தண்டவாணியென்பது பெயர்.” தமிழர் திருமணம் பருவம் அடைந்த ஆடவரும் மகளிரும் ஒருவரை ஒருவர் காதலித்துச் சிறிதுகாலம் பிறர் அறியாது சேர்ந்து ஒழுகுவார்கள் என்றும் பின் ஆடவன் தனது காதலியைத் தனது ஊருக்கு யாருமறியாது கொண்டு சென்று அங்கு மணந்துகொள்வான்; அல்லது மணமகளது பெற்றோரின் இசைவைப் பெற்று அவள் இல்லத்திலேயே அவளை மணந்துகொள்வான் என்றும் சங்கச் செய்யுட்கள் கூறுகின்றன. இப் பாடல்கள் பழைய மரபைப் பின்பற்றிச் செய்யப்பட்டனவேயன்றி அக்காலத் திருமணம் அவ்வாறு நிகழ்ந்ததெனத் துணிதல் முடியாது. அக் காலத்தில் ஆடவன் ஒருவன் மணஞ் செய்ய வேண்டியிருந்தால் அவன் சில முதியோரைப் பெண்கேட்கும்படி பெண்வீட்டுக்கு அனுப்பு வான். பெண்ணின் பெற்றோர் பெண்கொடுக்க இசைந்தனராயின், கணி எனப் பட்ட சோதிடனால் குறிக்கப்பட்ட நல்லநாளிலே மணமகன் தனது சுற்றத்தா ருடன் மணமகள் வீட்டுக்குவந்து பெண்ணை மணந்து தனது வீட்டுக்குக் கொண்டுபோவான். திருமணத்துக்கு முன் பெண்ணுக்கு விலையாக மணமகன் பரியம் எனப் பொருள் வழங்குவான். இவ்வாறு கொடுக்கப்படும் பொருள் சில இடங்களில் வளர்ப்புக்கூலி எனவும் வழங்கும். பெண்களை விலைகொடுத்து வாங்கி மணத்தலாகிய வழக்கத்தின் நிழலே பரியம் எனச் சிலர் கூறுவர். திராவிட மக்களுள் சில கூட்டத்தினர் பெண்களை விலை கொடுத்து வாங்கி மணந்துகொள்ளும் வழக்கம் இன்றும் காணப்படுகின்றது. முற்காலத்தில் புரோகிதரின் உதவியின்றியே திருமணங்கள் நடந்தன. அக் காலத் திருமணச்சடங்கு எவ்வாறிருந்த தென்பதைச் சங்க நூல்களைக் கொண்டு அறிதல்கூடும். அகநானூற்றில் கூறப்பட்டுள்ளதை இங்கு தருகின்றோம். “சோறு பருப்பிட்டுச் சமைக்கப்பட்டது. பலர்கூடி உண்டபின்பும் சோறு குவிந்துகிடந்தது. நிரையாகக் கால்களை நட்டுப் பந்தரிடப்பட் டிருந்தது. தரையில்வெண்மணல் பரப்பப்பட்டிருந்தது. விளக்குகள் கொளுத்தி வைக்கப்பட்டன. பூரணை நாளின் விடியற்காலையில் தீயகோள்கள் அகன்ற நல்ல நேரமாக விருந்தது. தலையிலே குடத்தையும் கையிலே மட்பாத்திரத்தையும் வைத்துக்கொண்டு பெண்கள் வந்தார்கள். அவர்கள் கையில் வைத்திருந்த பாத்திரத்தை ஒருவர் கையிலிருந்து ஒருவர்கைக்கு மாற்றினார்கள். அப்பொழுது முதிய பெண்கள் பெரிய ஆரவாரஞ்செய்தனர். பின்பு ஆண்மகவை யீன்றவர்களும், வயிற்றில் அழகுதேமல் உடையவர்களும் அழகிய நகைகள் அணிந்தவர்களுமாகிய பெண்கள் முன்னே வந்தார்கள். மணமகளின் தலையில் நீரை ஊற்றினார்கள். அப்பொழுது நீரில் கிடந்த பூவும் நெல்லும் கூந்தலில் கிடந்து விளங்கின. அப்பொழுது அவர்கள் “நீ கற்பில்வழுவாது கணவனுக்கு இனியளாகவிருந்து நெடுங்காலம் வாழ்வா யாக” என வாழ்த்தினாhகள். அன்று மாலைக்காலம் வந்தது. பெண்கள் வந்து கூடினார்கள். “நீ வீட்டுக்குப் பெருந்தலைவியாகுக” என்று வாழ்த்தினார்கள். சுற்றத்தவர் அவள் கையைப் பிடித்து மணமகனிடம் கொடுத்தார்கள்.” (அகம். 86) “நல்ல அரிசியைச் சமைத்த நெய்கலந்த சோற்றைச் சுற்றத்தவர் முதியவர்களுக்குக் கொடுத்தார்கள். நற்சகுனம் காட்டும் பறவைகள் தெளிந்த வானத்தே பறந்தன. திங்கள் உரோகிணியோடு சேருகின்ற குற்றமில்லாத நல்ல நேரம் வந்தது. பெருக்கிச் சுத்தஞ்செய்த வீடு அலங்கரிக்கப்பட்டது. எல்லோரும் கடவுளைத் தொழுதார்கள். பெரிய மேளமும் மணமுரசும் ஒலித்தது. மணவினையைக் காண விரும்பிய பெண்கள் விரைந்துவந்து கூடினார்கள். அறுகங்கிழங்கை வெள்ளிய நூலாற்கட்டி வாகைப் பூவின் மேல் வைக்கப்பட்டதும், மணல் பரப்பப்பட்டதுமாகிய பந்தலின்கீழ் தமர் அவளை மணமகனிடம் கொடுத்தார்கள். மணவினையைக் கண்ட பெண்கள் தமது வீடுகளுக்குச் சென்றார்கள்.” (அகம். 136) அலங்காரம் தமிழ் மக்கள் தமது உடம்பையும் தாம் பயன்படுத்திய ஒவ்வொரு பொருளையும் அலங் கரித்தார்கள். வீட்டுச் சுவர்களில் அழகிய ஓவியங்கள் எழுதப் பட்டன. பெண்கள் முற்றங்களில் அழகிய கோலங்களிட்டனர். வீடு களைத் தாங்கும் தூண்கள், கை மரங்கள், நிலைகள், கதவுகள், வீட்டின் முன்புறங்கள் தானும் அழகிய வேலைப்பாடுகள் பெற்றிருந்தன. தென்னிந்தியக் கோயில்களில் சுவர்களிலும் மதில்களிலும் கோபுரங்களிலும் அழகிய உருவங்கள் வெட்டப்பட்டிருத்தலை நாம் காணலாம். இந்தியச் சிற்பிகள் கற்களை மரத்தைப்போலப் பயன்படுத்தி அதில் பல கண்கவரும் வேலைப்பாடுகள் செய்துள்ளார்கள். வீட்டில் பயன் படுத்தும் கட்டில், முக்காலி, நாற்காலி, மணை, ஆயுதங்களின்பிடி, நீர் அருந்தும் பாத்திரங்களும் அழகிய வேலைபாடுகளுடையனவாயிருந்தன. தென்னிந்தியக் கோயில்களிலும், அமராவதி, அசந்தா, எல்லோரா முதலிய இடங்களிலும் காணப்படும் சிற்பங்கள் திராவிட மக்களின் அலங்கார விருப்பத்தைத் தெரிவிக்கின்றன.1 பெண்கள் தமது கூந்தலைப் பலவகையாக வாரி முடிந்தார்கள். கூந்தல்மீது பலவகைப் பூக்களைச் செருகி வேய்ந்தார்கள். சுறாமீன், வலம்புரிச்சங்கு, பிறை, இருபக்கமும் யானை குடத்திலிருந்து நீர் கொட்டு வதும் நடுவே இலக்குமி வீற்றிருப்பதுமாகிய வடிவுடைய சீதேவியார் போன்ற அணிகலன்களை அணிந்தார்கள். கொண்டையில் பலவகைப் பூக் களையும் மாலையையும் சூடினார்கள்; சந்தனம் குங்குமம் முதலியவை களைப் பூசி உடலை அழகுபடுத்தினார்கள்; உடம்பில் மஞ்சள்பூசிக் குளித் தார்கள். மார்பு, தோள்களில் தொய்யில் என்னும் ஒருவகை குழம்பைப் பூசி அதன்மேல் கரும்பு பூங்கொடி முதலியவைகளை எழுதி அழகு செய்தார்கள். காதில் தோடு அல்லது குழை அணிந்தார்கள். வறிய மக்கள் காதில் ஓலையைச் சுருளாக்கிச் செருகினார்கள். முத்துமாலை, பவளமாலை, சங்கிலி, குறங்குசெறி, கவானணி, பட்டிகை, சதங்கை, கிண்கிணி, சிலம்பு, கழல், வளை, மோதிரம், மேகலை என்பன அவர்கள் அணிகலன்களிற் சில. திருப்பாதம், திருமுடி, புள்ளித் தொங்கல், கொற்றக்குடை, பொற்பூ, திரள் மணிவடம், காறை, அடிக்காறை, அன்னம், கிளி, சோனகச்சிடுக்கு, மகுடம், வாளி, வடுகவாளி, சூடகம், கண்மலர், சுட்டி, தாலி, தாலிமணிவடம், கண்ட ஞாண், பொட்டு, பதக்கம், ஏகாவலி, கால்வடம், கமலம், செடி, வாகுவலயம், துடர் என்பன போன்ற பல அணிகலன்களும் அணியப்பட்டன. இசை 2ஒவ்வொரு நிலத்திலும் ஒவ்வொரு இசை வழங்கிற்று. குறிஞ்சி நிலமக்கள் குறிஞ்சிப் பண்பாடினார்கள். முல்லைநில மக்கள் முல்லைப் பண்பாடினார்கள். அது இன்று மத்தியமாவதி எனப்படும். மருதநில மக்கள் மருதப் பண்பாடினாhகள். அது கேதாரம் எனப்படும். நெய்தலுக்குரிய பண் இன்று புன்னாகவராளி எனப்படும். பலவகை மேளங்கள் வழங்கின. வெவ்வேறு ஓசைகளைப் பிறப்பிக்கும் பறைகள் வெவ்வேறு காலங் களில் கொட்டப்பட்டன. மாடுகளைக் கொள்ளையிடும் போது கொட்டப்படுவது ஏறுகோட்பறை, வெறியாடும்போது அறையப்படு வது முருகியம். மணக் காலத்தில் சாற்றப்படுவது மணமுழவு. தேரிழுக்கும் போது முழக்கப்படுவது தேரோட்டுப்பறை. நெல்லறுக்கும் போது தட்டப்படுவது நெல்லரிக்கிணை. அரசன் வெளிக்கிளம்பும்போது ஒலிக்கப்படுவது புறப்பாட்டுப்பறை. மீன் பிடித்தற்குச் செல்லும்போது கொட்டப்படுவது மீன் கோட்பறை. சூறை ஆடும்போது அடிக்கப்படுவது சூறைகோட்டை. போர்க்காலத்தில் யானை, குதிரை, காலாட்படை களுக்கு உற்சாகம் மூட்டும் பொருட்டுப் பலவகை வாத்தியங்கள் ஒலிக்கப்பட்டன. அவை இயம், இசைக் கருவி, வாத்தியம், வாச்சியம் எனப்பட்டன. அவை தோற்கருவி, துளைக்கருவி, நரம்புக்கருவி, மிடற்றுக் கருவி, துளைக்கருவி என நால்வகைப்பட்டன. தமிழ ருக்குடைய ஏழிசைகள் குரல், துத்தம், கைக்கிளை, குரல், உளை, விளரி, தாரம். மூங்கில், கொன்றைப்பழத் தின் கோது முதலியவைகளால் செய்யப்பட்ட குழல் களும் வழங்கின. எக்காள வகைகளுள் தாரை, காளம், காகாளம், அம்மியம், சின்னம் முதலியவையும், கொம்புவகையில் கோடு, இரலை, வயிர் முதலியவும் இருந்தன. நரம்புக் கருவியில் சிறப்புடையது யாழ் 1அவைகளுக்கு ஏழு, இருபத்தொன்று அல்லது அதற்கு மேற்பட்ட நரம்புகள் இருந்தன. பறை, முரசு, பேரிகை, ஆகுளி, எல்லரி, சல்லிகை, கிணை முதலியன மேளவகைகளுட்சில. இன்னும் இலங்கைத்தீவில் வழங்கும் மேளவகை யில் எழுபதுக்கு மேலுண்டு. தாரை உடுக்கை முதலியன பாணர் கையில் கொண்டுதிரிந்து அடித்துப்பாடும் சிறியமேளங்கள். தோற்கருவிகள் “பேரிக்கை படக மிடக்கை யுடுக்கை சீர்மிகு மத்தளஞ் சல்லிகை கரடிகை திமிலை குடமுழாத் தக்கை, கணப்பறை தமருகந் தண்ணுமை தாவி றடாரி யந்தரி முழவொடு சந்திர வளைய மொந்தை முரசே கண்விடு தூம்பு நிசாளந் துடுமை சிறுபறை யடக்க மாசி றகுணிச்சம் விரலேறு பாகந் தொக்க வுபாங்கந் துடிபெரும் பறையென மிக்க நூலோர் விரித்துரைத் தனரே” உடை பருத்தி இந்திய நாட்டில் உண்டாகும் செடி, மற்றைய நாட்டுமக்கள் ஆடை இல்லாமல் இருந்தபோது அல்லது தோலை உடையாகக் கொண் டிருந்த காலத்தில் இந்திய மக்கள் பஞ்சை நூலாக்கவும், நூலால் ஆடை நெய்யவும் ஆடைக்குப் பலவகைச் சாயங்கள் ஊட்டவும் அறிந்திருந்தனர். இதற்குச் சான்று பழைய சிந்துவெளி நகரங்களிற் கிடைத்துள்ளது. இந்திய நாட்டு வெப்பநிலைக்கேற்ப மக்கள் அற்ப உடையையே அணிந்தனர். ஆடவர் முழங்கால்வரையும் உடை உடுத்து அரையில் கச்சுக்கட்டியிருந் தனர். மிகப்பழங்கால மக்கள் தலையைச்சுற்றி நாடாக்கட்டியிருந்தனர். பின்பு நாடா பாகை ஆக மாறிற்று. பெண்கள் அரையில் மாத்திரம் உடை அணிந்தனர். பெண்களிற்சிலர் மார்பைக் கச்சுக்கட்டி மறைத்தனர். பெரும் பாலும் பெண்கள் அரைக்குமேல் உடை அணியவில்லை. இதனை சான்சி, அமராவதி, பிற்காலச் சிற்பங்களிலும் கோயிற் சுவர்களிலும் கோபுரங்களி லும் காணப்படும் உருவங்களையும் கொண்டு நாம் நன்கு அறியலாம். இறவுக்கை அணியும் வழக்கம் அக்காலத்தில் அரண்மனைகளிலிருந்த கிரேக்கப் பெண்களால் கொண்டுவரப் பட்டிருக்கலாமெனச் சிலர் கருது கின்றனர். அக்காலத்தில் கிரேக்கப் பெண்கள் இந்திய நாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டமையை ஸ்ராபோ (Strabo) போன்ற வரலாற்றாசிரியர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.1 2 “பருத்தி இந்திய நாட்டுக்கு உரிய செடி. மற்றைய நாடுகளில் மக்கள் தோல்களை உடுக்கும்போது அல்லது உடையின்றியிருக்கும்போது தமிழ் மக்கள் பஞ்சிலிருந்து நூல்நூற்று நூலால் அழகிய ஆடைகளைச் செய்து உடுத்தார்கள்.3 தற்காலக் குடியிருப்புகளில் நூல்நூற்கும் கதிர்கள் கண் டெடுக்கப்பட்டன. மொகஞ் சதரோ காலத்திலேயே மக்கள் பஞ்சிலிருந்து ஆடை நெய்யவும், அதற்குச் சாயமூட்டவும், அழகிய வேலைப்பாடுகள் செய்யவும் அறிந்திருந்தார் களென்பது அங்குகிடைத்த மண்பாவைகளைக் கொண்டு நன்கு அறியப்படுகின்றது. மக்கள் ஆடை நெய்ய அறி வதன்முன் மரப்பட்டைகளை யும் தழைகளையும் உடுத்தார் கள். பஞ்சு உடைக்குமுன் மரவுரி தோன்றிய தாதலின் அது துறவிகளுக்கும் தூய உடை யாகப் பிற்கால மக்களால் கருதப்பட்டது. ஆடையைக் குறிக்க ஐம்பதிற்கு மேற்பட்ட பெயர்கள் தமிழிற் காணப்படு கின்றன. ஒவ்வொரு பெயரும் அக்காலத்தில் வழங்கிய வெவ் வேறு வகை ஆடையைக் குறிக்க வழங்கியிருத்தல் வேண்டும். சங்ககால இலக்கியங்கள் பாலாவிபோன்ற ஆடை, இழை சென்ற இடம் அறியமுடி யாது நுண்ணிய நூலால் நெய்யப்பட்ட ஆடைகளைப் பற்றிக் கூறுகின்றன. முல்லை நிலத்தில் வாழ்ந்த மக்கள் ஆட்டு மயிரி லிருந்து கம்பளி நெய் தார்கள். ஆடைகள் வெளுத்துக் கஞ்சியிடப்பட்டன. ஆடவர் வெளுத்துக் கஞ்சியிட்ட மடியைக் குலைத்து அரையிற்கட்டி அதன் மேல் ஒரு ஆடையை வரிந்து கட்டினார்கள். ஆடவர் சட்டை தரிக்கவில்லை சட்டை தரித்தல் ஊழியம் புரிவோருக்குரியதாக விருந்தது. இறவுக்கை அணிதல் இரண்டாயிரம் ஆண்டுகளின் முன் இந்திய அரசரின் மெய்காப்பாளரா யிருந்த கிரேக்கப் பெண்களால் புகுத்தப்பட்டதாகலாம். பழைய ஓவியங் களிலும் சிற்பங்களிலும் இறவுக்கை காணப்படவில்லை. பெண்கள் தமது தனங்களை அசையவொட்டாமல் கச்சுக்கட்டியிருந்தார்கள். ஆடவர் தலைப்பாகை அணிந்தார்கள். உத்தரியம் தரித்தார்கள். கோவணம் கட்டினார்கள்.1 பயிர்ச்செய்கை தமிழ் மக்கள் பயிர்ச் செய்கையையே முதன்மையான தொழிலாகக் கொண்டனர். “உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்” என வள்ளுவரும் உழவின் சிறப்பை முதன்மையாகக் கூறியுள்ளார். பிற்காலத்து விளங்கிய கம்பரும் ஏரெழுபதில் வேளாண் சிறப்பை நன்கெடுத்தியம்பியுள்ளார். பயிரிடும் நிலங்கள் நன்செய், புன்செய் என இருவகைப்படும். நெல் விளையும் வயல் நன்செய் எனவும் மற்றைய தானியங்கள் விளையும் நிலம் புன்செய் எனவும் பட்டன. பயிரிடப்படாத நிலம் தரிசு எனப்பட்டது. வேள் என்பது நிலத்தைக் குறிக்கும் பெயர். நிலத்தைத் திருத்திப் பயிரிடுவோர் வேள் ஆளர் எனப்பட்டனர். ஆளர் என்பதற்கு ஆள்பவர் என்று பொருள். வெள்ளத்தை ஏரி குளங்களில் தேக்கி வைத்து வெள்ளத்தை ஆண்டமை யின் வேளாளர் வெள்ளாளர் எனவும் படுவர். நிலங்களையுடைய வேளாளர் வேள் அல்லது வேளிர் எனப்பட்டனர். இவர்கள் குறுநில மன்னராகவும் இருந்தனர். வேளாளர் கொடையாற் புகழ்பெற்றோர். இதனால் வேளாண்மை என்னும் சொல்லுக்குக் கொடை, உபகாரம் என்னும் பொருள்கள் உண்டு. “இருந்தோம்பி இல்வாழ்வதெல்லாம் விருந்தோம்பி-வேளாண்மை செய்தல் பொருட்டு” என்னும் குறளில் வேளாண்மை உபகாரம் என்னும் பொருள் தருதல் காண்க. சேர சோழ பாணடிய அரசர் வேளாண் மரபில் தோன்றியவர்களே யாவர். சாதி தமிழ் நாட்டில் நிலம் ஐந்து வகையினதாக விருந்ததென முன்னோ ரிடத்திற் கூறினோம். ஒவ்வொரு நிலமக்களும் வெவ்வேறு பெயரால் அறியப்பட்டார்கள். ஒரு நிலத்தில் வாழும் மக்கள் இன்னொரு நிலத்தில் வாழ்ந்த மக்களுக்குத் தாழ்ந்தவரென்றோ உயர்ந்தவரென்றோ கொள்ளும் கொள்கை அக் காலத்தில் உண்டாகவில்லை. செல்வம், வறுமை, ஒழுக்கம், ஒழுக்கக் கேடு என்பவை போன்ற தன்மைகளால் உயர்வு தாழ்வுகள் கொள்ளப்பட்டன. உயர்குடி என்பது பாவம் பழிகளுக்கு அஞ்சும் குடி என்பது பொருள். வள்ளுவர் தமது நூலில் அடிக்கடி குறிப்பிடும் குடிப் பிறப்பு இவ்வியல்பினதாதலை அறிய மாட்டாதார் அது வடநாட்டார் வருணத்தைத் தழுவியதென மருண்டு கூறுவர். “பிறப்பொக்கும் எல்லா வுயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமையால்” என வள்ளுவர் பிறப்பினால் சாதியுண்டென்பாரை மறுத்தமை காண்க. மக்கள் படிப்படியே திருத்தமடைந்து பயிர்ச் செய்கை வளர்ச்சி யடைந்தது. பெரும்பாலும் நகர் மருத நிலத்திலேயே தோன்றிற்று. உலகிலே பழைய நாகரிகச் சிறப்புப் பெற்று விளங்கிய நகரங்கள் எல்லாம் வேளாண்மை செழித்தோங்கிய ஆற்றோரங்களிலேயே விளங்கின. வேளாண்மையால் செழிப்புற்ற நாடுகளில் வாணிகத்தின் பொருட்டும் உணவின் பொருட்டும் பற்பல தொழில் புரியும் மக்கள் வந்து தங்குவா ராயினர். தந்தையின் தொழிலை மகன் செய்தல் என்பதுபோலக் கால்வழி கால் வழியாக ஒவ்வொரு குடும்பமும் பெருகியபோது ஒவ்வொரு குடும்ப மும் தனித்தனிச் சாதியாகப் பெருகியது. நிகண்டு நூல்களிற் காணப்படும் சாதிப்பெயர்கள் தொழில்களையே குறித்தல் காண்க. தனித்தனிக் கூட்ட மாகப் பெருகிய மக்கள் தத்தமக்குள்ளேயே திருமணங்கள் செய்துகொள் ளும் வழக்கம் நீண்ட காலமாக இருந்து வருதலாலும் சாதிக் கட்டப்பாடு வலி அடைந்தது. தமிழ் நாட்டில் அந்தணர் அரசர் வணிகர் வெள்ளாளர் என்னும் நான்கு பெரும் பிரிவினர், இருந்தனர். இவர்களல்லாத கைத்தொழிலும் ஏவற்றொழிலும் செய்யும் மக்களும் இருந்தனர். முன் கூறிய நால்வரும் உயர்ந்தோரென்றும், பின் கூறிய இருவகையினரும் தாழ்ந்தோரென்றும் கொள்ளப்பட்டனர். அந்தண ரென்போர் துறவிகள். கோயிற் பூசை செய்யும் மக்களையும் குறிக்க இப்பெயர் பிற்காலத்தில் வழங்குவதாயிற்று. ஆட்சி புரிவோர் அரசர் எனவும், வாணிகம் புரிவோர் வணிகர் எனவும், வேளாண்மை செய்வோர் வேளாளர் எனவும் பட்டனர். இப்பிரிவுகள் பெரும்பாலும் நகரங்களிலேயே காணப்பட்டன. இச்சாதிப் பிரிவுகள் மருத நிலத்திலேயே பெரும்பாலும் தோன்றி வளர்ச்சியடைந்தன. வடநாட்டவர் தொடக்கத்தில் நிறம்பற்றிப் பிரித்திருந்த வருணங்களும் தமிழரது தொழில் பற்றிய சாதிகளும் வேறுபாடுடையன. வருணம் என்பதற்கு நிறம் என்பது பொருள். வடநாட்டவரின் வருணத் துக்குப் பிறப்பே காரணம். வடநாட்டவரின் பிராமண, சத்திரிய, வைசிய, சூத்திர என்னும் நாற் பிரிவுகளே தென்னாட்டு அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என்னும் பிரிவுகள் எனப் பிற்காலத்தவர் மயங்கினமையால் பல தடுமாற்றங்கள் உண்டாயின. அந்தணர், பார்ப்பார், பிராமணர் என்னும் பெயர்கள் பற்றிய மயக்கம் அந்தணர் என்போர் துறவிகளாவர் என்பது சங்க நூல்களாலும், திருக்குறளாலும் பிறசான்றுகளாலும் அறியக் கிடக்கின்றது. தமிழ் நாட்டில் கோயிற் பூசைசெய்வோர் கோயில்களை மேற்பார்த்தல் பற்றிப் பார்ப்பார் என்னும் பெயர் பெற்றிருந்தனர். தொடக்கத்தில் இன்னவர்தான் பார்ப்பா ராயிருக்கலாம் என்னும் நியதி இருக்கவில்லை. கோயில்களை மேற் பார்க்கும் குடும்பத்தினர் பெருகி ஒரு பிரிவாகப் பிரிந்தனர். இவர்கள் கடவுட் பணி செய்தமைபற்றி உபசார வழக்கில் அந்தணர் என்படுவாராயினர். பார்ப்பார் துறவிகளல்லர். பிராமணர் தமிழ் நாட்டவரல்லர். இவர்கள் வட நாடுகளிலிருந்து தென்னாடுகளில்வந்து குடியேறினோர். தில்லைமூவா யிரவர், 48,000வர், 8,000வர், 3,700வர் என இக்கூட்டத்தினர் பட்டையங்களில் குறிக்கப்பட்டுள்ளார்கள். இவர்கள் பார்ப்பனக் குடும்பங்களோடு கலந்துள் ளார்கள் மத்திய காலத் தமிழ்நாட்டு அரசர் வடமொழிக்கு மதிப்புக் கொடுத்துப் பிராமணரை ஆதரித்தமையால் பார்ப்பன வகுப்பினரும் தம்மைப் பிராமணர் எனக் கூறுவராயினர். இதுவே அந்தணர் பார்ப்பார் பிராமணர் என்போரின் வரலாறாகும். வாணிகம் “இற்றைக்கு மூவாயிரம் ஆண்டுகளின்முன் இந்தியா தூரக்கிழக்கு, தூரமேற்கு நாடுகளோடு முதன்மையான கடல் வாணிகம் நடத்தினது என்றுகாட்டுவதற்குள்ள நல்ல சான்றுகள் உள்ளன. கம்போதியா, யாவா, சுமத்திரா, போர்ணியோ, யப்பான், தென்சீனா, மலாயா, அராபியா, பாரசீகத் திலுள்ள முதன்மையான பட்டினங்கள், ஆபிரிக்காவின் கிழக்குக்கரை என்பவைகளில் இந்தியர் வாணிகத்தின் பொருட்டுக் குடியேறியிருந்தார்கள். அவர்கள் இந்நாடுகளோடு மாத்திரமன்று. அக்காலத்தில் அறியப்பட்டிருந்த உலகம் முழுவதோடும், உரோம இராச்சியங்களோடும் வாணிகம் நடத்தி னார்கள்”1 “இற்றைக்கு ஆறாயிரம் ஆண்டுகளின் முன் சிந்துவெளியில் வாழ்ந்த மக்கள் அயல் நாடுகளோடு ஒழுங்குபட்ட முறையில் வாணிகம் நடத்தினார்கள் என அறிகின்றோம்.”2 சிந்துவெளி நகரங்கள் வாணிகத்துக்கும் கைத்தொழிலுக்கும் மத்திய இடங்களாகவிருந்தன. உள்நாட்டுப்போக்குவரத்துக்கு இரண்டு சக்கரங்களுள்ள வண்டிகள் பயன்படுத்தப்பட்டன. அவ்வண்டிகள் இன்று சிந்துவில் பயன்படுத்தப்படும் வண்டிகளைப் போன்றவை. இன்று சிந்து ஆற்றில் ஓடு கின்ற ஓடங்களும் அக்கால ஓடங்களை ஒத்தனவே. கடற் கரையை அடுத்த நாடுகளிலிருந்து உணவுப் பொருள்களைப் பெறும் முறையில் மாத்திரம் வாணிகம் நடைபெறவில்லை. அயல் நாடுகளிலிருந்து உலோகப் பொருள்களும் பிறவும் பெறப்பட்டன. பலுச்சிஸ்தானத்திலும் இராசபுத்தானத்திலுமிருந்து உலோகங்களும், தென்னிந்தியாவிலிருந்து சங்கும், உல்லாச வாழ்க்கைக்கு வேண்டும் பொருள்கள் பிற இடங்களி லிருந்தும் பெறப்பட்டன. பாரசீகத்திலும் ஆப்கானிஸ்தானத்திலும் இருந்து நிறக்கற்களும், சீனாவிலும் பர்மாவிலும் இருந்து நீலக்கற்களும் பெறப் பட்டன. முத்திரை வெட்டும் கற்கள், சுற்றிவரக்குமிழி வைத்த பானைகள், பாண்டங்கள் செய்யும் கற்கள் போன்ற இந்தியப் பொருள்கள் கி.மு. 3500 வரையில் பாபிலோனுக்குச் சென்றன என்று அறிகின்றோம்.1 “எகிப்துக்கும் இந்தியாவுக்கும் இடையில் முற்காலத்தில் போக்குவரத்து நடைபெற்றதெனத் தெரிகிறது. அலக்சாந்திரியாவில் சந்தித்த படித்த இந்தியர்கள் மூலம் தான் பல செய்திகளைக் கேட்டு அறிந்துகொண்டதாகத் தாலமி குறிப்பிட்டுள்ளார். இந்தியாவிலிருந்து சமயயாத்திரிகர்கள் சிரியாவி லுள்ள ஹெராபொலிசுக்குச் (Hierapolis) சென்றார்கள் என்று லூசியன் (Lucian) கூறியுள்ளார். கிறித்து பிறப்பதற்குமுன் இந்தியர் அபிசீனியாவோடு வாணிகம் புரிந்தார்கள் என்பது கிறித்துவ வேதங்களிற் காணப்படுகின்றது. இந்தியர் அராபியாவிலும் குடியேறியிருந்தார்கள். கிறித்துவ ஆண்டின் தொடக்கத்தில் அவர்கள் சீனக் கடற்கரை நாடுகளில் குடியேறத் தொடங்கி னார்கள். கி.மு. 350 இல் வரலாறு எழுதிய பரோசஸ் (Berossus) பாபிலோனில் அன்னியர் கூட்டமாகக் குடியேறியிருந்தனர் எனக் குறிப்பிட்டுள்ளார். கி.மு. 63 இல் பிறந்த ஸ்ராபோ (Strabo) என்பார் உரோம நாட்டுத் தங்கம் இந்தியாவுக்கு அதிகம் செல்வதைப்பற்றிக் கவலைப்பட்டார். பிளினி கூறியிருப்பது வருமாறு: இந்தியாவுக்குப் பயணஞ் செய்பவர்கள் ஒசெலிஸ் (Ocelis) என்னும் துறைமுகத்தில் இறங்குவது நல்லது. கிப்பாலுஸ் என்னும் பருவக்காற்று வீசுமானால் நாற்பது நாட்களில் முசிறித் துறைமுகத்தை அடையலாம். இதன் சூழல்களில் கடற் கொள்ளைக்காரர் இருக்கின்றார்கள். ஆதலால் அது இறங்குவதற்குத் தகுந்த இடமன்று. நான் இதை எழுதுகின்ற காலத்தில் அங்கு ஆள்கின்ற அரசனின் பெயர் செலிபுத்துருஸ். வேறு ஒரு வாய்ப்பான துறைமுகம் நெல்சிண்டி பக்காரி (Nelcyndi Bacare) இத் துறைமுகம் தொலைவிலே உள்ள மதுரையிலிருந்து ஆட்சிபுரியும் பாண்டியனுக்குரியது. புளுற்றா என்பவர் “ஆகஸ்தசின் பரிவாரங்களுள் ஒருவரான புத்த சன்னியாசி. அவர் நாட்டுக்குள்ள வழக்கப்படி நெருப்பில் விழுந்து இறந்துபோனார். அவருடைய சமாதிக் கட்டிடம் இங்கு கிடக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார். “கடல் வாணிகம் பெரிதும் திராவிடர் வசம் இருந்தது. அதில் ஆரியர் சிறுபங்கு பற்றினார்கள். அராபியா, ஆபிரிக்கா, சீனக் கரைகளில் குடியேறிய இந்தியரிற் பெரும்பாலோர் திராவிடராதல் வேண்டும். வடநாட்டு வாணிகத் தைவிடத் தென்னாட்டு வாணிகம் முதன்மையுடைய தென்றும், இரத்தினக் கற்கள் போன்ற விலையுயர்ந்த பண்டங்கள் தெற்கிலிருந்து வந்தன என்றும் வடநாடு தோல், கம்பளி என்பவைகளை அளித்தனவென்றும், இரத்தினக் கற்கள், சங்கு முதலியன தெற்கிலிருந்து வந்தனவென்றும் கௌடலியர் குறிப்பிட்டுள்ளார். தாம்பிரபரணி ஆறு, இலங்கை, பாண்டியநாடு என்பன அவரால் குறிக்கப் பட்டுள்ளன. “இந்தியாவிலிருந்தே நல்ல யானைகள் மேற்குத் தேசங்களுக்கும் கொண்டுபோகப்பட்டன. தந்தம், குரங்கு, மயில் முதலியவை இந்திய நாட்டுக்குரியவை. இவைகளைக் குறிக்க எபிரேய (Hebrew) மொழியில் வழங்கிய சொற்கள் எபிரேயம் அல்ல! திராவிடம். இந்தியாவிலிருந்து ஒரு மயில் எகிப்துக்கு அனுப்பப்பட்டது. அது யூபிதர் கடவுளுக்கு நேர்ந்து விடப்பட்டது. பாபிலோனுக்கு மயில் அனுப்பப்பட்டதைப்பற்றிப் பவேரு சாதகம் கூறுகின்றது. இந்நூல் கி.மு. 400 வரையில் செய்யப்பட்டது. கிரேக்க மொழியில்வழங்கும் ஒரிசா என்பது அரிசி என்னும் திராவிடத்தின திரிபு. கிராம்பும் சாதிக்காயும் மலாய தீவுகளில் முற்காலத்தில் கிடைப்பனவா யிருந்தன. அவை கி.பி. 180இல் அலக்சாந்திரியாவுக்குக் கொண்டுபோகப் பட்டன. ஆகவே கி.பி. முதல் நூற்றாண்டில் இந்திய மலாய வாணிகம் நடைபெற்றிருக்கலாம். அபிசீனியாவின் தலைநகராகிய அக்சமில் (Auxam) நடப்பட்டுள்ள ஒரு கல்லில் எழுத்துப் பொறிக்கப்பட்டுள்ளது. இக்கல் கி.பி. முதல் நூற்றாண்டில் நாட்டப்பட்டது. அவ்வெழுத்துக்கள் இந்தியாவைக் குறிப்பிடுகின்றன. எகிப்தில் தலைநகராகிய மெம்பிஸ் அழிபாடுகளில் இந்திய ஆடவர் மகளிரைக் காட்டும் ஓவியங்கள் காணப்படுகின்றன என்றும், அங்கு இந்தியர் குடியேறியிருந்தார்களென்றும் பிளிண்டேர்ஸ் பெற்றி (Flinders Petrie) என்பார் கூறியுள்ளார். புளுற்றா காலத்தில் வாழ்ந்தவராகிய டையோ கிறிஸ்தோதம் (Dio Chrysostom) அலக்சாந்திரியாவில் நடமாடிய பல நாட்டு மக்களிடையே இந்தியரைத் தான் பார்த்ததாகக் கூறியுள்ளார்.”1 “கோடைகாலச் சூரிய அயன காலத்தில் ஆண்டுதோறும் நூற்றி யிருபது மரக்கலகங்கன் மோயிஸ் ஹர்முஸ் (Mois Harmos) என்னும் செங் கடற் கரையிலுள்ள எகிப்திய துறைமுகத்திலிருந்து புறப்பட்டன. பருவக் காற்றின் உதவியைப் பெற்று அவை நாற்பது நாள்களில் இந்தியத் துறை முகங்களை அல்லது இலங்கைத் தீவை அடைந்தன. மரக்கலங்கள் விலை உயர்ந்த பண்டங்களுடன் திரும்பி வந்தன. பண்டங்கள் செங்கடற்கரையி லிருந்து நீல நதிக்கு ஒட்டகங்களிலேற்றிக் கொண்டு போகப்பட்டன. அவை நீல ஆற்று வழியாக அலக் சாந்திரியாவை அடைந்து பின் உரோம நாட்டுத் தலைநகரைச் சேர்ந்தன.” இவ்வாறு உரோமன் வரலாற்றாலரியர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். இஞ்சி, மிளகு, கறுவா போன்றவைகளுக்கு மேற்கு நாடுகளில் மிகத் தேவையிருந்தது. வயிரம், முத்து, பட்டு என்ப வற்றையும் அவர்கள் எவ்வளவு பொருள் கொடுத்தும் வாங்க ஆயத்தமாக விருந்தார்கள். கிழக்குத் தேசங்களிலிருந்து சென்ற பண்டங்கள் ஒன்றுக்கு நூறு மடங்கு இலாபத்துக்கு விற்கப்பட்டன. இதனால் கவரப்பட்டு மிகப் பலர் கிழக்குக் காடுகளோடு வாணிகத்தில் ஈடுபட்டிருந்தார்கள் அவர்களுக்கு வேண்டிய பண்டங்களை சேர நாடும் பாண்டிய நாடும் அளித்தன. குமரி, கொற்கை, காயல் பாம்பன் என்னும் துறைமுகங்கள் அதிக வருவாயளித்தன. கிறித்துவ ஆண்டின் ஆரம்ப காலக் கிழக்கு நாடுகளின் வாணிகம் உரோமர் வசம் இருந்தது. வயிரங்களுக்கு அடுத்தபடியில் முத்து விலை ஏறப் பெற்றதாயிருந்தது. உரோமப் பெண்கள் பட்டு ஆடைகளை உடுக்க விரும் பினார்கள். அவர்கள் பொன் எடைக்குப் பட்டை நிறுத்து வாங்கினார்கள் இரத்தினங்கள் இழைத்துச் செய்யப்பட்ட அணிகலன்கள் தென்னிந்தியாவி னின்றும் உரோமுக்கு அனுப்பப் பட்டன. கோயமுத்தூர்ப் பகுதியிலுள்ள பாடியூரில் கிடைக்கும் கோமேதகத்தை உரோம வணிகர் அதிக விலை கொடுத்து வாங்கினார்கள். இந்தியப் பொருள்கள் உரோமில் நூறு மடங்கு விலைக்கு விற்கப்பட்டதென்றும் ஆண்டில் எட்டு இலட்சம் தங்க நாண யத்தை இந்தியா வாணிக மூலம் இழுத்து விடுகின்றதென்றும் அவ்வாசிரியர் குறிப்பிட்டுள்ளார். சமயக்கொள்கைகள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரேயே திராவிட மக்கள் உலகம், உயிர், இறைவன் என்னும் முப்பொருள் உண்மைகளை ஆராயும் உயர்ந்த சமயக்கொள்கை உடையவர்களாயிருந்தார்கள். மொகஞ்சதரோ, அரப்பா முதலிய இடங்களிற்கிடைத்த முத்திரைக் கற்களில் பலவகை விலங்குகளின் இடையே ஆலமரத்தின் கீழ் யோகத்தில் வீற்றிருக்கும் கோலமுடைய வடிவம் ஒன்று காணப்படுகின்றது. இவ்வடிவம், கடவுள் உயிர்களுக்குத் தலைவன் (பசுபதி) என்னும் கருத்தை விளக்குகின்றதென ஆராய்ச்சியாளர் கூறியுள்ளார்கள். அக்காலத்திலேயே மக்கள் யோகத்தின் தன்மைகளையும் அதனால் பெறும் ஆற்றல்களையும் நன்கு அறிந்திருந்தார்கள். பழைய தமிழரின் சமயக்கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டே பௌத்த சைன மதக்கொள்கைகளும் எழுந்தன. புத்தர் அரசமரத்தின் கீழ் யோகத் திருந்தார். சைனக் கடவுள் அசோகமர நிழலில் இருப்பவர் என்னும் கொள்கைகள் மொகஞ்சதரோ மக்கள் கொண்டிருந்த கருத்தைப் பின் பற்றியவே. கடவுள் யோகத்திலிருப்பதாகக் காட்டும் வடிவம் கடவுளாய் வருதற்கும் யோகப்பயிற்சி அவசியம் என்பதை அக்கால மக்கள் கொண் டிருந்தார்கள் என்பதை உணர்த்துதல் கூடும். பௌத்த, சைன மதங்கள் பழைய திராவிட மதக்கொள்கைகளைத் தழுவி எழுந்தன வென்பதை வரலாற்றாசிரியர்கள் ஒப்புக்கொள்கின்றனர். பழையகாலத்தில் சமயக்கருத்துக்கள் ஏட்டில் எழுதி வைக்கப்படாது ஆசிரிய மாணாக்கமுறையில் சொல்லிக் கொடுக்கப்பட்டுவந்தன. இவ்வாறு தலைமுறை தலைமுறையாக வந்த சமய உண்மைகள் மறைகள் எனப் பட்டன. உபநிடதங்கள் எனப்பட்ட சமயநூல்களிற் சொல்லப்படும் கருத்துக்கள் திராவிடரின் கொள்கைகளே. அக்காலத்தில் பிராமணர் அரசவகுப்பினரின் பாதங்களிலிருந்து உபநிடத உண்மைகளைப் பயின்றார்கள். உபநிடத ஞானங்கள் பிராமணரால் அறியப்படாதவை. இக்கருத்துக்களே தமிழ் மக்களின் சமயக்கருத்துகளாகும். அக் கொள்கைகள் இப்பொழுது சைவ சித்தாந்தக் கொள்கைகள் என வழங்கும். சைவசித்தாந்தக் கொள்கைகள் வரலாற்றுக் காலத்துக்கு முன் தொட்டுத் தமிழ் மக்களிடையே வழங்கிவரும் உயர்ந்த கருத்துக்கள் என டாக்டர் பாப் கூறியுள்ளார். தமிழருடைய மதம் எல்லாமக்களுக்கும் பொதுவானது. இதுவே வள்ளுவரதும், தொல்காப்பியரதும் மதமாகும். திருக்குறளில் வினைப் பயன், மறுபிறப்பு, உயிரின் அழிவின்மை, பாவ புண்ணியம், இறைவன், இருவினைகளையும் பற்றாமல் இறைவன் நிற்கும் தன்மை, தவம், தவத்தி னால் பெறும் ஆற்றல் போன்றவை கூறப்பட்டுள்ளன. மந்திர விததைகளி னாலோ கடவுளுக்குக் காணிக்கைகள் கொடுப்பதினாலோ உயிர்கள் உயர் நிலை அடைய மாட்டா வென்பதே அறிவுடையோர் மதமாகும். தொடக்கத்தில் சமயம் அச்சம், உதவியற்ற தன்மை போன்ற ஏதுக் களால் தோன்றி வளர்ந்தது; பின்பு சிறிது சிறிதாகப் பண்பாடடைந்து உயர் நிலை அடைந்தது. இக்கொள்கைகளை முள்ளுள்ள தாழை மரத்தில் பூத்த நறும™முள்ள பூவுக்கு ஒப்பிடலாம். இன்றைய மக்களின் குறைபாடு பூவைப் போற்றாது தாழையின் முள்ளுள்ள இலைகளைப் போற்றுதல் போன் றிருப்பதே. உணவு மக்கள் தாம் வாழ்ந்த இடங்களுக்கு ஏற்ப வெவ்வேறு வகை உண வினை உண்டுவந்தார்கள். தாவரம் ஊன் என்னும் இருவகை உணவுகளும் பெரும்பாலும் கொள்ளப்பட்டன. இவற்றுள் தாவரவகையே உணவின் பெரும் பகுதியாகவும் ஊன் கறிவகைபோன்று சிறிதளவாகவும் இருந்தன. சங்ககால இலக்கியங்களால் வேளான் வகுப்பினர் பார்ப்பனர் என்னும் இருவகுப்பினரல்லாத மற்றையோரெல்லாம் ஊன் உணவு கொண்டார்கள் எனத் தெரிகிறது. ஊன் உணவு கொள்ளுதல் சிறந்ததன்று என்னும் கொள்கை நிலவியிருந்ததென்பது திருக்குறளால் நன்கு தெரிகின்றது. கறிவகைகளுக்கு மிளகு பயன்படுத்தப்பட்டது. மிளகுக்குக் கறி என்பது மற்றொரு பெயர். முற்காலத் தமிழ் மக்கள் மிளகாயைப்பற்றி அறியார். ஐரோப்பியர் மூலம் மிளகாய் இந்தியாவை அடைந்தது. மிளகாய்ச் செடி தென்னமெரிக்காவுக்குரியது. இதன்காய் மிளகுபோல் காரமாயிருத்தல் பற்றி மிளகாய் (மிளகு+காய்) எனப்பட்டது. ஐரோப்பியர் இந்தியாவினின்றும் மிளகை வாங்கிச் சென்றார்கள். கிரேக்கரும் உரோமரும் இதனை அதிகம் விரும்பினமையால் இதற்கு ‘யவனப்பிரியா’ என்னும் இன்னொரு பெயரும் வழங்கிற்று. யவனர் என்பது கிரேக்கரையும் உரோமரையும் குறிக்க வழங்கிய பெயர். மிளகைக் குறிக்கக் கிரேக்கர் பிப்பிலி என்னும் பெயரை வழங்கினர். பிப்பிலி என்பது திப்பிலி என்பதன் திரிபு. பிப்பிலி என்னும் கிரேக்க சொல்லின் திரிபே பெப்பர் என்னும் ஆங்கிலச்சொல். முற்காலத்தில் மிளகு ஐரோப்பிய மக்களின் சொகுசான உணவுப் பொருளாக விருந்தது. மத்திய காலத்தில் அது அவர்களுக்கு இன்றியமையாத உணவுப் பொரு ளாக விருந்தது. முதலில் வெனீசிய வணிகரும், பின்பு போர்த்துக்கேயரும், ஒல்லாந்தரும் மிளகை மேற்கு ஆசிய நாடுகளுக்குக் கொண்டு சென்று வாணிகம் புரிந்தனர். பதினோராம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஒல்லாந்தர் மிளகின் விலையை இருமடி ஆக்கினமையால் ஆங்கிலரால் 1599இல் ‘கிழக்கிந்திய வாணிகக் கம்பனி’ தொடங்கப்பட்டது. அதனால் இந்தியா வில் ஆங்கிலர் ஆட்சி தோன்றி வளர்வதாயிற்று. நிகண்டு நூல்களில் சோறு, சிற்றுண்டி வகைகளைக் குறிக்கப் பற்பல பெயர்கள் காணப்படுகின்றன. அவைகள் எல்லாம் வெவ்வேறு வகையாகச் செய்யப்பட்ட உணவுவகைகளைக் குறிக்கின்றன. “அறுசுவை உண்டி யமர்ந்து இல்லாளூட்ட” என்னும் நாலடியார் அடியினால் செல்வர் அறு சுவையுள்ள உணவுகளை உண்டார்கள் என அறிகின்றோம். கறிவகைகளுக்குத் தாளிதம் செய்யப்பட்டது. தேன், காய், பிஞ்சு, பழம், கிழங்கு, தளிர், இலை முதலியன உணவாகப் பயன்படுத்தப்பட்டன. தமிழில் மதுவகைகளைக் குறிக்க அறுபது பெயர்கள் வரையில் காணப் படுகின்றன. இதனால் அக்காலமக்கள் மதுவை அதிகம் உண்டார்கள் எனத் தெரிகின்றது. நெல், தேன், பழவகைகள், பூவகைகளிலிருந்து மதுவகைகள் செய்யப்பட்டன. அவை சாடிகளில் ஊற்றிக் காரமேறும்படி நிலத்தில் புதைத்து வைக்கப்பட்டன. “தேட்கடுப்பன்ன நாட்படுதேறல்” எனக் கள்ளின் காரம் குறிப்பிடப்பட்டுள்ளது. அக்காலக் கள் வகைகள் இக்காலச் சாராய வகை போன்று வாலையிலிட்டு வடிக்கப்பட்டவையல்ல; இக்காலபீர் (beer) என்னும் மதுப்போன்றவை. அயல்நாட்டுப் பயணக்காரர் இந்திய மக்களின் பழக்க வழக்கங்களைப்பற்றிக் கூறியுள்ள சில குறிப்புகள்: 1இற்சிங் என்னும் சீனயாத்திரிகன் கூறியிருப்பது வருமாறு: விருந்து கொடுப்போர் புத்தகுருமாரை வணங்கி அவர்களை வீட்டுக்கு அழைக் கிறார்கள். விருந்தில் பெரும்பாலும் செப்புப் பாத்திரங்கள் பயன்படுத்தப் படுகின்றன. அவை சாம்பலிட்டு மினுக்கப்படுகின்றன. ஒவ்வொரு குருவும் ஒவ்வொரு மணையில் இருப்பார். ஒருவரோடு ஒருவர் முட்டாதபடி மணைகள் எட்ட இடப்படுகின்றன. மட்பாத்திரங்கள் ஒருமுறைக்குமேல் பயன்படுத்தப்படுவதில்லை. ஒருமுறை பயன்படுத்தப்பட்ட பாத்திரங்கள் குழியில் வீசப்படுகின்றன. பயன்படுத்திய மட்பாத்திரங்களை ஒருபோதும வைத்திருத்தல் கூடாது. பிச்சை இடும் இடங்களில் இவ்வாறு வீசப்பட்ட பாத்திரங்கள் குவிந்து கிடக்கின்றன. சீனாதேசத்தில் செய்யப்படுவன போன்ற உயர்ந்த மட்பாத்திரங்கள் பயன்படுத்தப்பட்டபின் சுத்தஞ்செய்து வைக்கப் படுகின்றன. விருந்தினர் சாப்பிடும் இடம் சாணியால் மெழுகப்பட்டிருக் கும். வாயிலில் பெரிய பானைகளில் தண்ணீர் வைக்கப்பட்டிருக்கும். குரு மார் வந்ததும் அவர்கள் தமது மேல் அங்கியின் கட்டுகளை அவிழ்ப் பார்கள். அவர்கள் தமது கைகளைப் பயறு அல்லது மண்ணைத்தேய்த்துக் கழுவுவார்கள். குருமார் தமது குண்டிகையிலுள்ள நீரைப் பயன்படுத்துவர்; அல்லது விருந்துக்கு அழைத்தவர் தண்ணீரை ஊற்ற அதனைப் பயன் படுத்துவர். பின்பு அவர்கள் மணைகளில் அமர்வர். அவர்களுக்கு முன்னால் உண்ணும் தட்டுகள் வைக்கப்படும். உண்பதன்முன் கடவுளைத் துதிப்பது வழக்கமன்று. விருந்துக்கு அழைத்தவர் உணவைப் பரிமாறுவார். பரிமாறும்போது பெருவிரற் பருமையுள்ள இஞ்சித்துண்டும் ஒருகரண்டி உப்பும் கொடுக்கப்படும். உப்புக் கொடுப்பவன் தலைமைக் குருவின்முன் கைகட்டி முழங்கால் படிந்து நின்று வணங்குவான்; அப்பொழுது அவர் எல்லாருக்கும் உணவைச் சரிவரப் பரிமாறு என்று சொல்வார். எல்லோருக் கும் உணவு படைத்தபின் உண்ணவேண்டுமென்று காத்திருக்க வேண்டிய தில்லை. மார்க்கோபோலோ கூறியிருப்பது: மலபாரில் எல்லா ஆடவரும் மகளிரும் நாளில் இருமுறை குளிக்கிறார்கள். அவ்வாறு செய்யாதவர் தாழ்ந்தவர் எனக் கொள்ளப்படுகின்றனர். அவர்கள் வலது கையால் உண்கின்றனர். எக்காரணம் பற்றியாவது அவர்கள் உணவை இடக்கையால் தொடமாட்டார்கள். அவர்கள் இடக்கையை அசுத்தமான தேவைகளுக்குப் பயன்படுத்துகின்றனர். ஒவ்வொருவனும் நீர் பருகுவதற்குத் தனிமையான ஏனம் வைத்திருக்கிறான். இன்னொருவன் பயன்படுத்தும் ஏனத்திலிருந்து இன்னொருவன் நீர் உண்ணமாட்டான். நீர் உண்ணும்போது அவர்கள் ஏனத்தை வாயில் முட்டவிடமாட்டார்கள்; வாய்க்குச் சிறிது தூரத்தில் பிடிப் பார்கள். எவனாவது ஏனத்தை வாயில் வைத்தல்கூடாது; நீர் குடிப்பதற்கு அதனை அன்னியனிடம் கொடுக்கவும் கூடாது, அன்னியனிடம் ஏனம் இல்லாவிடின் அவர்கள் நீரை அவன் கையில் ஊற்றுவார்கள். அவன் கையை ஏனமாகக் பயன்படுத்துவான். 1மக்கள் மிகவும் நுட்பமாகச் சமையல் செய்கிறார்கள். அவர்கள் நூறுவகையாகச் சமையல் செய்கிறார்கள். தினமும் சமையல் வெவ்வேறு வகையாகவுள்ளது. முடிவுரை திராவிட மக்களே இந்திய நாட்டின் ஆதிமக்கள். இம்மக்கள் இற்றைக்கு ஆறாயிரம் ஆண்டுகளின் முன் சிறந்த நாகரிகவளம் பெற்று விளங்கினார்கள். திராவிடர் நாகரிகப் பண்பாடுகள், சமயக்கருத்துக்கள், கலைகள் என்பன புதிதாக இந்தியநாட்டை வந்தடைந்த மக்கள் திராவிட மக்களோடு கலந்து தோற்றுவித்த புதிய சந்ததியினரால் சிற்சில வேறுபாடு களுடன் கைக்கொள்ளப்பட்டன. இன்று அவைகளே, இந்தியக்கலை, இந்திய மதக்கொள்கைகள், இந்திய நாகரிகம் என்னும் பெயர்கள் பெற்று விளங்குகின்றன.1 இந்திய நாகரிகத்துக்கு மாத்திரமன்று பழைய உலக நாக ரிகத்துக்கே திராவிட அடிப்படை உண்டு என்பதை ஏற்ற மேற்கோள் களுடன் இச்சிறிய நூலில் விளக்கியுள்ளோம். எஎஎஎ 1 2 1. Recent excavations near Chitaldrug in Mysore reveal six levels of buried cities, rising from stone age impliments and geometrically adorned pottery apparently as old as 4000 B.C., to remains as late as 1200 A.D-கூhந ளவடிசல டிக உiஎடைணையவiடிn ஞ-396 - றுடைட னுரசயவே. 1. In fact evidences point to the date when the so called southern tongue was spoken all over India in the north as well as the south-J. Lazarus, B.A., D.D. 1. The descriptions of Megasthenes prove that even at its highest development Hindu Civilization was more Turanian than Aryan; and the Pre-aryan Turaian civilization of India must have been similar to the pre-semitic, Turanian civilization of Babylonia, Chaldaea and Assyria........ Industrial arts of India P. 232.-George C.M. Birdwood C.S.I. A variety of Causes, partly political and partly literary, has tended to the belittlement of peninsular India’s contribution to the history both India and of the whole world at large. The line is ripe for South India to champion her own cause and assert her claims to recognision. -F.R. Richards, I.C.S., M.A., M.R.S., F.R.A.I -Quarterly journal of the mythic society.-Vol. 6.P. 156. 1. Culture suggests agriculture, but civilization suggests the city. In one aspect civilization is the habit of civility and civility is the refinement which townsmen, who made the world thought possible in the Civitas or city-The Story of Civilization-P. 2-Will Durant. 1. நிலத்தை ஆண்டமையின் பயிரிடுவோர் வேளாளர் எனவும் பட்டனர். வேள்-மண். 1. இஃது இலசரஸ் (J. Lazarus, B.A., D.D,) என்னும் அறிஞர் தென்னிந்திய ஆராய்ச்சிகள் (South Indian researches) என்னும் இதழ் ஒன்றில் எழுதிய ஆங்கிலக் கட்டுரை ஒன்றின் சுருக்கமாகும். 1. பல ஆயிரம் ஆண்டுகள் என்பதற்கு இன்று சான்றுகள் கிடைத்துள்ளன. Sidelights of Dravidian Problem-F.J. Richards M.A.R.A S.F.R.A. I.-Quarterly Journal of Mythic Society Vol.6-P. 156. 1. Martyrdam of man - 22nd impression pp. 40, 41 - W. Reade. 1. Canarese passages have been found in a greek farc written in an Egyptian papyrus. 1. The fact is now scarcely to be doubted that the rich oriental merchandise of the days of king Heram and king Solomon had its starting place in the seaports of the Dekhan; and that with a high degree of probability some of the most esteemed of the spices which were carried into Egypt by the Mediantish merchants of Genesis xxxvii 25, 28, and by the sons of patriarch Jacob (gen xi. iii. ii.) had been cultivated in the spice gardent of the Dekhan.-Indian shipping -P. 95., R.K. Mukerji. 1. Hunters Orissa vol - p 197. Hunter remarks “This and others of the inscriptions prove, in the opinion of the scholar to whom we owe their decipherings, that Kalinga was at the time an emporium of trade. We know from other sources that, shut out as Orissa was from the general policy of India, it boasted of fabric which it could not send as valuable present to the most civilized monarchs of the interior. So fine was the lines which the prince of Kalinga sent to the king of Oudh, that a priestess who put on the gauzy fabric was accused of appearing naked.-Cosmos Analysis of the Dulva-Journal Asiatic Society of Bengal. 1. G.R. Hunter-New review vol. 3 2. Hisiorical researches vol. 11 p 45 Professor Heeran 3. Hisiorical researches vol. 11 p 309 Professor Heeran 4. Hisiorical researches vol. 11 p 310 Professor Heeran 5. Hindu Superiority vol. 11 p. 178. Har Bilas Sarda, B.A 15 14 3 4 13 12 5 6 11 10 7 8 9 32 17 18 31 30 19 20 29 28 21 22 27 26 23 24 25 48 1. The remaining quarter of the modern vocabulary occupies itself chiefly with such terms for which Indo-aryan languages had no expressions including legal phraseology, names of Places, trees, animals. etc borrowed from the languages of the rulers of neighbouring tribes - A new approach to the study of middle and modern Indo-aryan-Dr. S.M. Katre M. A. Ph.D 1. A. Clemens Schoener Partenkirchen. 1. Periplus of Pseudo-Skylax BC. 4th C. 2. Tamerai 3. Tabula peutingeiana 4. Scythia Dymirice. 1. Extracts from the works of K. N. Sivaraja Pillai. 1. Tamil studies pp 1-2, M. Srinivasa aiyangar. 2. The journal of the Oriental research magazine-1924-P.T.S Iyengar. 1. Sanskrit element in the Vocabularies of the Dravidian Languages - Anuvaratha vinayakam Pillai M. A. 2. Nagavarma, the Kannada grammarian (12th century) speaks of three and a half mother languages-Sanskrit, Prakrit Apabhramasa and Paisacika, and of fiftysix daughter languages which arose from them including Tamil Telugu and Kanada Ketana the Telugu grammarian (13th Century) says that Sanskrit is the mother of all languages. The anonymous Malayali grammarian who wrote Lilatilakam (14th Century) also holds the view that Malyalam is derived from Sanskrit-Malaylam and other Dravidian languages-Proceedings and Trasactions of the ninth all India Oriental Conference, Trivandram. Dec. 1937-P 1235. 1. எ, ஒ, ழ், ற், ன் 1. Some scholars have fancied that Telugu and other so called Dravidian languages are quite independent of Tamil. This is the old song of grown up children turning proud and disowning all relationaship to their ancestry. If all Sanskrit words and derivatives are eliminated from these languages the residue of words left will be found to be ancient Tamil words, now considered obsolete or found in the poetry of bygone days-South Indian research vol. 1-Rev-J Lazarus B. A. D.D 33 34 47 46 35 36 45 44 37 38 2. K. N. சிவராச பிள்ளை. 43 42 39 40 41 64 ஊர் என்னும் நகரிலே சமாதி ஒன்றில் காணப்பட்ட வெள்ளி இடபம் 49 50 பொன் உறையிட்ட பொன் வாள் 1. Crete. 2. பேராசிரியர் ஹாலின் சுமேரிய திராவிடக்கொள்கைக்கு வலியாகப் பல புதிய சான்றுகள் வெளிவந்துகொண்டிருக்கின்றன. இவைகளுள் சுமேரிய திராவிட மொழிகளுக் குள்ள தொடர்புகள் முக்கியமானவை. சிறப்பாகத் தமிழுக்கும் சுமேரிய மொழிக்கும் தொடர்பு காணப்படுகிறது. The Quarterly journal of the Mythic Society, Vol. XIX. No.3. சுமேரியாவிற் கிடைத்த உருவச்சிலைகளின் முக இரேகை இன்று திராவிட மொழிகளில் ஒன்றை வழங்கும் தென்னிந்தியன் ஒருவனுடையதை ஒத்துள்ளது. சுமேரியர், தரை வழியாகவும் கடல் வழியாகவும் மேற்கு ஆசியாவை அடைந்த இந்தியர் என்று கருதுவது தகாத செயலாகமாட்டாது - The History of the Near East-Professor Hall. சுமேரியர் திராவிட இனத்தைச் சேர்ந்தோராவர். Aryanization of India-N.K. Dutt. 1. இலங்கைத் தீவுக்கும் எல்லம் என்று பெயர். 2. இந்தியர் தாம் செல்லும் வழியில் நமது நாகரிகத்தை எல்லத்தில் விட்டுச் சென்றார்கள். மக்கள் மிக மிக முற்காலத்தில் நாகரிகம் அடைந்த நாடுகளுள் இந்தியா ஒன்று என்பதில் ஐயம் இல்லை. கிழக்கிலிருந்து மேற்கை நாகரிகப்படுத்துவதற்கு வந்த மக்கள் இந்திய உற்பத்திக்குரியவர்கள் எனக் கருதுவது இயல்பாகும். பழைய சுமேரியரின் தோற்றம் இன்றைய இந்தியரின் தோற்றம் போல இருந்தது என்பதை நினைக்குமிடத்து இக் கருத்து வலிபெறுகின்றது - கிட்டிய கிழக்குத் தேசங்களின் வரலாறு - The History of the Near East by Professor Hall. 1. Heradotus - B.C. 480. 2. Berosus - B.C. 250 1. Oppert. 2. Frankfort. 1. அராபியாவில் வாழ்ந்த பழைய மக்கள் செமித்தியர் எனப்படுவர். 2. Urukagina. 1. Acade 2. Akkad. 3. Gudea. 4. Chaldees. 1. Ur-engur. 2. Amorites. 1. இவன் பாபிலோனிய முதல் அரசன்; செமித்திய குலத்தவன். 1. Arm-chairs 2. Tell-el-ubaid. 1. தேர் எல்பஃறியிலுள்ள ஹஸ்விதப் இராணியின் சமாதிக் கட்டடச் சுவரில் எழுதப் பட்டுள்ள வைகளுள் காணப்படும் பண்டு என்பது இந்தியா அ&E html> 16 திராவிடர் நாகரிகம் முன்னுரை திராவிடர் நாகரிகம், காலம் குறிப்பிட்டு எல்லை காணமுடியாத பழமையுடையது. இற்றைக்கு ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே, இன்றையினும் பார்க்க நாகரிகத்தால் உயர்ந்த திராவிட மக்கள் சிந்து வெளியில் வாழ்ந்தார்கள். அவர்கள் மேற்கு ஆசியாவிலே யூபிராதஸ், தைகிரஸ் ஆற்றோரங்களில் அக் காலம் வாழ்ந்த சுமேரிய மக்களோடு வாணிகம் நடத்தினார்கள். இந்திய நாட்டிற் செய்யப்பட்ட முத்திரைகள் பல, சுமேரியாவில் கிடைத்துள்ளன. சிந்துவெளி மக்களுக்கு முற்பட்ட திராவிடமக்களின் நாகரிகச் சின்னங்கள் மைசூரில் கிடைத்துள்ளன.1 இற்றைக்கு ஐயாயிரம் அல்லது ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரேயே திராவிடமக்கள் ஓவியம், சிற்பம், கட்டடஅமைப்பு, வாணிகம், கைத்தொழில், கப்பற் பயணம், இலக்கியம், இசை, கூத்து, போர், நகர் அமைப்புப் போன்ற பற்பல துறைகளில் மிகத் தேறியிருந்தார்கள். இவை போன்ற வரலாறுகளைப் பொதுமக்களும், பள்ளிக்கூட மாணவரும் பயில்வது இன்றியமையாததாகின்றது. இங்கிலாந்தைப்பற்றி எழுதப்பட்ட வரலாற்று நூல்களை நூற்றுக்கணக்கிற் காண்கின்றோம். அவைகளை யெல்லாம் நமது நாட்டு மாணவர் ஆவலோடு கற்கின்றனர். திராவிடநாட்டு வரலாறு, திராவிடர் நாகரிகம் என்பவைகளைப் பற்றிப் பொது மக்களும் மாணவரும் கற்று அறிவதற்கு எத்தனை நூல்கள் உள்ளன? இதனை நினைக்குந்தோறும் திராவிடன் எவனேனும் நாணம் அடையாமல் இருப்பான் என்று கூறமுடியாது. இவ் வகைக் கருத்தை அடிப்படையாகக் கொண்டே இச் சிறியநூல் பல பகுதிகளாக வெளிவருகின்ற தென்க. சென்னை, 25-8-1947. ந.சி. கந்தையா. திராவிடர் நாகரிகம் தோற்றுவாய் தென்னிந்தியாவிலும் இலங்கையிலுமுள்ள பாறைகளே உலகிற் பழைமையுடையனவென்றும், அவை ஒரு போதும் நீருள் மூழ்கியிருக்க வில்லை யென்றும் நில நூலார் கூறுகின்றனர். இந்திய நாட்டில் மிக மிகப் பழமைதொட்டே மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். அவர்கள் பழைய கற்காலம் முதல் உலோக காலம் வரை தொடர்பாகப் பயன்படுத்திய ஆயுதங்களும் பிற பொருள்களும் இந்தியாவில் கிடைத்துள்ளன. ஆகவே இந்திய மக்களின் நாகரிகம், ஆதிகாலம் முதல் இந்தியாவிலேயே தோன்றிப் படிப்படியே வளர்ச்சி அடைந்துள்ளதென, ஆராய்ச்சியாளர் ஒருதலையாக நவில்கின்றனர். இக் காரணங்களால் மக்கட் படைப்பு இந்திய நாட்டிலேயே தோன்றி வளர்ச்சியடைந்ததாகலாம் என மேல்நாட்டாசிரியர்கள் கூறுவாராயினர். இந்திய நாட்டில் தோன்றி வளர்ந்த நாகரிகமே மேற்கு ஆசியா, எகிப்து, சின்ன ஆசியா, கிரேத்தா முதலிய நாடுகளுக்கும் சென்றது. இக் கருத்தினை ஆராய்ச்சியாளர் பலர் புகன்றுள்ளார்கள். உலக நாகரிகத் தோற்றத்திற்கு அடிப்படையான சீரும் திருத்தமும் பெற்றிருந்த மக்கள் திராவிடராவர். இவர்கள் இமயமலை முதல் கன்னியாகுமரி வரையில் வாழ்ந்தார்கள். இவ் வெல்லைகளுக்கு உட்பட்ட நாடுகள் எல்லாவற்றிலும் வழங்கிய மொழி ஒன்றே.1 இவ்வாறு பண்டு தொட்டே நாகரிக வளம் படைத் திருந்த நம் முன்னோராகிய திராவிட மக்களின் பழைய வரலாறுகளை நன்கு அறிந்துகொள்வது நமது கடனாகும். இந்திய நாட்டில் ஆரிய மக்கள் வந்து குடியேறிய பின்பு சில மாறுதல்கள் உண்டாயின. ஆரிய மக்க ளிடையே பிராமண மதம் என்னும் புதிய மதமொன்று தோன்றலாயிற்று. பிராமண மதத்தினர் சிலர், தென்னாடு போந்து, தமிழ் அரசர்களிடையே தமது மதத்தைப் பரப்பலாயினர். இது, இன்று இந்திய மக்களிடையே ஐரோப்பிய கிறித்துவ பாதிரிமார் தமது மதத்தைப் பரப்பிவருவது போன்ற தாகும். தென்னாடு போந்த பிராமணரோடு திருமணத்தினால் கலப்புற்ற தமிழ்நாட்டுப் பார்ப்பனர், பிராமண மதத்தைத் தழுவலாயினர். அதனால் அவர்கள் தம்மை ஆரியரெனவும், தமதுதாய்மொழி ஆரியம் எனவும், ஆரியம் தெய்வ மொழி யெனவும் கூறிப் பல மாறாட்டங்களைத் தென் னாட்டில் உண்டுபண்ணலாயினர். இதனால் தென்னாட்டில் ஆரிய திராவிடப் போராட்டங்கள் பழைமைதொட்டே நடந்து வந்தன. இதனைத் திருமூலர் காலம் முதல் இன்று வரையும் நாம் காணலாகும். ஆரியம் திராவிடம் என்னும் இரண்டில் ஆரியக் கட்சியைச் சேர்ந்த பிராமணரே பெரும்பாலும் திராவிடர் வரலாறுகளை எழுதலாயினர். ஆரியர் திராவிடர் வரலாறுகள் என்பன மொழி ஆராய்ச்சி, மக்கள் இன ஆராய்ச்சி என்பவை அளவில் நின்றுவிடாது அரசியல் சம்பந்தமும் பெற்றுள்ளன. ஆகவே அவர்கள் பிராமணக் குழுவினருக்கும் சமக்கிருதத்தின் பெருமைக்கும் இழுக்கான செய்திகளை வெளியிட ஒருபோதும் விரும்பவில்லை. அதனால் உண்மை யான திராவிடர் வரலாறுகள் வெளிவந்தில. மேல்நாட்டு அறிஞரின் இடைவிடாத பேர்உழைப்பினால் திராவிட மக்களின் வரலாறும், அவர்கள் நாகரிகத்தைப்பற்றிய பல அரிய செய்திகளும் வெளிவந்துள்ளன. உண்மை யில் இந்திய நாகரிகமென்பது திராவிடர் நாகரிகமே. 1இவ்வுண்மைகளை அங்கை நெல்லிக்கனிபோல யாவரும் எளிதில் படித்துணருமாறு இச் சிறிய நூல் வெளிவருவது இன்றியமையாததாகின்றது. மக்கள் வாழ்க்கையில் பண்படுதல் மக்கள் மிக மிகக் கீழ்நிலையிலிருந்து படிப்படியே முன்னேற்ற மடைந்தார்கள். ஆதியில் அவர்கள் வேட்டையாடியும், மீன் பிடித்தும் காடு களிற் கிடைக்கும் காய்கனி கிழங்கு வகைகளை உண்டும் வாழ்ந்தார்கள். இவ்வாறு அன்று அன்றாட உணவின் பொருட்டு அலைந்து திரிந்த மக்கள் வேடர் எனப்பட்டார்கள். இந் நிலைமையில் ஒரு வகையான பண்பாடும் உண்டாகவில்லை. அவர்கள் மிருகங்களை வேட்டையாடுவதற்கு ஏற்ற வில், அம்பு, எறிஈட்டி, கவண் போன்ற சில ஆயுதங்களைச் செய்து பயன் படுத்த அறிந்தனர். இதன்பின்பு மந்தைகளை மேய்த்து அவைகளின் பயன் களைக் கொண்டு வாழும் நிலை உண்டாயிற்று. அக் காலத்திலும் மக்கள் ஆறுதலின்றி இடங்கள் தோறும் அலைந்து திரிந்தமையில் திருத்தமுண்டாக வில்லை. அடுத்த படியில் அவர்கள் பயிரிட அறிந்தார்கள். அப்பொழுது அவர்கள் ஓரிடத்தில் தங்கியிருந்து பயிரிடவும், பயிர் விளையும் காலத்தை எதிர்பார்த்து இருக்கவும், பருவகாலத்தை அறிந்து மறுபடியும் பயிரிடுவ தற்கு ஓரிடத்தில் நிலைத்திருக்கவும் வேண்டிய கட்டாயம் உண்டாயிற்று. இந்நிலைமையில் மனிதனுக்கு ஓய்வு உண்டாயிற்று. பயிர் விளைவிப்பதால் அடுத்த அறுப்புக்காலம் வரையில் பலர் உண்ணப் போதுமான உணவு கிடைத்தது. ஆகவே, மக்கள் அக் காலத்தில் ஓய்ந்திருந்து திருத்தம் எய்தினார்கள். நாகரிகம் மக்கள் திருத்தமடைந்தபோது நகர்கள் உண்டாயின. நகர வாழ்க்கை யின் பண்பட்ட நிலை நாகரிகம் எனப்பட்டது. நாகரிகம் என்பதற்கு நகர் சம்பந்தமானது என்று பொருள். ஆங்கிலத்தில் நாகரிகத்தைக் குறிக்க வழங் கும் “சிவிலிசேஷன்” என்னும் சொல்லும் இப் பொருளினதே. 1நாட்டுப் புறங்களில் உண்டாகும் செல்வமும் அறிவும் நகரிடத்தே சேரும். பலநாட்டு வணிகர் கூடும் அவ்விடத்தில் புதியவற்றைக் கண்டுபிடித்தல், கைத்தொழில் முதலியன பெருகுவதால் உண்டாகும் பல வாய்ப்புக்கள், சொகுசான வாழ்க்கை, பொழுதுபோக்கு, அதற்கு ஒழிவு, நல்ல பண்டங்கள், கருத்துக்கள் எண்ணங்களின் கலப்பு, அதனால் தோன்றும்வாணிகத்தைப் பற்றிய விவேகம், உண்டுபண்ணும் திறமை முதலியன உண்டாகும். நகரங்களில் கைத்தொழில் செய்வதற்குச் சிலர் தனியே விடப்படுவர். நாகரிகம் நாட்டு மக்களின் குடிசையில் ஆரம்பித்து நகரில் வந்து மலர்கின்றது. நாட்டின் பல பாகங்களில் தோன்றி வளரும் எல்லாத் திருத்தங்களின் தொகுதிகளும் நகரில் வந்து பண்பட்ட நிலையை அடையும்போது அவை நாகரிகம் என்னும் பெயரைப் பெறும். பழந்தமிழரின் வாழ்க்கை வாழ்க்கை மக்கள் வாழும் இடங்களுக்கு ஏற்ப மாறுபடுகின்றது. கடல் ஓரங்களில் வாழும் மக்கள் மீன் பிடித்தல், உப்பு விளைவித்தல், அவைகளைப் பிற இடங்களுக்குக் கொண்டு சென்று விற்பதால் கிடைக்கும் ஊதியத்தைக் கொண்டு தமக்கு வேண்டும் பிறபொருள்களைப் பெறுதல் போன்ற செயல்கள் புரிவதைக் காண்கின்றோம். இவ்வாறே காடு, மலை, வயல், மணல் வெளிகளில் வாழும் மக்களும் தத்தம் வாழ்க்கையின் பொருட்டு வெவ்வேறு தொழில்களைப் புரிதலைக் காண்கிறோம். இவ்வுலகம் கடல், காடு, வயல், மலை, மணல்வெளி என ஐவகைப் படும். இவ்வைவகை இடங்களும் இந்திய நாட்டில் உண்டு. ஆகவே, இந்திய நாட்டில் ஆங்காங்கு வாழ்ந்த மக்களின் திருத்தம், வாழ்க்கைமுறை முதலியனவும் இடங்களுக்கேற்ப மாறுபடும். பாலை நில மக்கள் மலை, காடுகளை அடுத்த ஒதுக்குகளில் மணல்வெளிகள் காணப் படும். இவ்விடங்களில் வெய்யிலுக்கு உலர்ந்து பட்டுப்போகாத பாலை மரங்கள் வளரும். அதனால் மணல் வெளிகளைப் பாலைநிலமென முன் னோர் வழங்கினார்கள். இவர்கள் மந்தை வளர்க்கவோ, பயிரிடவோ அறியா தார்; வில்லு, அம்பு முதலியவைகளின் பயனை அறிந்தவர். இவர்கள் வேட்டை ஆடுதலால் கிடைக்கும் விலங்குகளின் இறைச்சியை உண்டும், வழிச்செல்வோரைக் கொள்ளையிட்டும் வாழ்ந்தனர். இவர்களின் கடவுள் கொற்றவை (காளி). இக்கடவுள் வீர தெய்வமாகவிருந்தது. இதற்கு மனித பலிகள் இடப்பட்டன. பாலை நில மக்கள் எயினர், வேடர் எனப்பட்டனர். எயினர் தலைவன் காளை அல்லது விடலை எனப்பட்டான். எயினர் குடியிருப்பு குறும்பு எனப்பட்டது. மலைவாணர் மலை இடங்கள் குறிஞ்சி எனப்பட்டன. மலைகளில் குறிஞ்சி என்னும் ஒருவகை மரம் வளர்ந்தது. இது பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை கருமைகொண்டு கரிய தளிர்களை ஈனும் என்று சொல்லப்படு கின்றது. மலை இடங்களில் வாழ்ந்தோர் குறவர் எனப்பட்டனர். அவர்களின் தலைவன் வெற்பன் அல்லது சிலம்பன் எனப்பட்டான். அவர்களின் குடியிருப்பு சிறுகுடி எனப்பட்டது. அவர்கள் வேட்டையாடியும், மலைகளிற் கிடைக்கும் காய்கனி கிழங்குவகைகள், மலைச்சாரல்களில் தானே விளையும் மலைநெல் ஆகிய இவைகளை உண்டும் வாழ்ந்தனர். அவரை, துவரை, சாமை முதலியனவும் மலைச்சாரல்களில் விளை விக்கப்பட்டன. குறச்சிறுமியர் பகற்காலத்தே புனங்களில் பரண்கள்மீது இருந்து தினைக் கதிரை உண்ணவரும் கிளிகளை ஓட்டினர். இராக்காலத்தில் குறவர் பரண் மீதிருந்து புனத்தை மேயவரும் யானை, பன்றி முதலியவைகளைக் கவணில் கல்வைத்து எறிந்து ஓட்டினர்; மலைச்சாரல்களில் தொங்கும் தேன் கூடுகளை அழித்துத் தேன் எடுத்தனர்; தேனை மூங்கிற்குழாய்களில் ஊற்றி வைத்தனர். இவர்கள் பாலைநில மக்களினும் பார்க்கத் திருத்தமுடையோர். இவர்கள் பயிரிடச் சிறிது அறிந்திருந்தனர். குறவரின் குலதெய்வம் முருகக்கடவுள். குறவர் மறியறுத்துப் பலி தூவி முருகக்கடவுளை வழிபட்டார்கள்; நரபலி இடவில்லை. முருகபூசை செய்பவன் முருகன் எனப்பட்டான். இவன் தெய்வமேறி ஆடும் கூத்து வெறியாட்டு எனப்பட்டது. கையிடத்தே வேலை வைத்திருந்தமையின் இவன் வேலன் எனப்பட்டான். தெய்வத்தால் குறை நேர்ந்த பெண்களின் தெய்வக் குறையைப் போக்குவதற்கு வெறியாட்டு எடுக்கப்பட்டது. தேன், தினைமா, இறைச்சி முதலயவை வேடரின் உயர்ந்த உணவுகளாகும். இவர்கள் மலையிடத்தே கிடைக்கும் யானைக்கொம்பு, புலித்தோல், இறைச்சி முதலியவைகளைப் பிற இடங்களுக்குக் கொண்டுசென்று, விற்று, அவற்றின் விலையாகத் தமக்கு வேண்டிய பிற பொருள்களைப் பெறுவர். முல்லை நில மக்கள் குறுங்காடுகளில் மக்கள் சிலர் வாழ்ந்தார்கள். அங்கு முல்லைக்கொடி அதிகம் வளர்ந்தமையின், அது முல்லை நிலம் எனப்பட்டது. முல்லைநில மக்கள் ஆடுமாடுகளை வளர்த்தார்கள். அவை கொடுக்கும் பால், தயிர், நெய், வேட்டையாடுவதால் கிடைக்கும் இறைச்சி, பயிரிட்டு விளைவிக்கும் வரகு முதலிய தானியங்கள் முதலியவைகளைக் கொண்டு வாழ்ந்தனர்; பால், தயிர், நெய் முதலியவைகளை அயல் இடங்களுக்குக் கொண்டுசென்று விற்றுத் தமக்கு வேண்டிய பிற உணவுப்பொருள்களைப் பெற்றனர். ஆயர் வாழும் குடியிருப்பு, சேரி எனப்பட்டது. இவர்களின் வாழ்க்கை வேடனுக்கும் உழவனுக்கும் இடைப்பட்டதாதலின், இவர்கள் இடையர் எனப்பட்டார்கள். முல்லை நிலமக்கள் திருமாலை வழிபட்டனர். திருமாலின் கையிலிருப்பது சங்கு, சக்கரம் என்பன. இவை ஞாயிற்றுக் கடவுளின் அடையாளங்கள். மால்வணக்கம் ஞாயிற்று வணக்கத்தின் ஒருவகை. மால் என்பதில் எல் என்பது தொனிக்கின்றது. எல் என்பது ஆல் ஆயிற்று. எல் ஞாயிற்றைக் குறிக்கும். கரியமால் என்னும் வழக்குண்மையாயின் மா என்பது கருமையைக்குறிக்கின்றது. பிற்காலத்தில் திருமால் வணக்கம் கண்ணன் வணக்கமாக மாறியுள்ளது. ஆரிய மக்கள் வழிபட்ட விஷ்ணுக்கடவுளின் பெயர் விண் என்பதன் வேறுபாடு எனச் சொல்லப்படுகின்றது. முல்லைநில மக்கள் திருமாலுக்குப் பாற்பொங்கலிட்டுக் குரவைக் கூத்தாடி வழிபட் டார்கள். குரவைக் கூத்து என்பது பெண்கள் எழுவர் கைகோத்து வட்டமாய் நின்று ஆடும் கூத்து. கடற்கரை மக்கள் கடற்கரையில் நெய்தல் என்னும் ஒருவகை நீர்ச்செடி வளரும். அதனால் கடற்கரையை அடுத்த இடங்கள் நெய்தல் எனப்படும். இவர்கள் பரதவர் எனப்பட்டனர். பரதவர் கட்டுமரங்களில் சென்று மீன் பிடித்தார்கள். இவர்களே பிற்காலத்தில், மேற்கு ஆசியா, சுமத்திரா, ஜாவா, மலாயா, கம் போதியா முதலிய நாடுகளுக்கு மரக்கலங்கள் ஓட்டிச்சென்ற மாலுமிகளாவர். இவர்களின் தலைவர் சேர்ப்பன், புலம்பன், துறையன் முதலிய பெயர் களைப் பெற்றனர். உப்பு விளைவிப்பதும் நெய்தல் நில மக்களின் வாழ்க்கைத் தொழிலாகவிருந்தது. உப்பு விற்போர் உமணர் எனப்பட்டனர். உமணர் கழுதைகளிலும் வண்டிகளிலும் உப்பைக் கொண்டுசென்று பிற இடங்களில் விற்றுத்தமக்கு வேண்டிய வாழ்க்கைப் பொருள்களைப் பெற்றனர். மக்கள் கடல் கடந்து பிறநாடுகளுக்குச் செல்லத் தொடங்கியபோது, பிறநாடுகளுக்குக் கொண்டு செல்ல வேண்டிய பண்டங்கள் கடற்கரைகளை அடைந்தன. அயல்நாட்டுப் பண்டங்கள் கடற்கரைகளில் வந்து இறங்கின. அவ் விடங்களில் சுங்கம் கொள்ளும் பொருட்டு, அரசர் காவலாளர் நிறுத் தப்பட்டனர். சுங்கச் சாலைகள் எழுந்தன. பண்டசாலைகள் அமைக்கப்பட் டன. கடற்கரைகளுக்குச் செல்லும் பாதைகள் திறக்கப்பட்டன. உள்நாட்டு வணிகரும் பிறநாட்டு வணிகரும் பட்டினங்களிற் கூடினர். இதனால் முன் கிராமங்களாயிருந்த பரதவர் குடியிருப்புக்கள் சிறப்பு மிக்க இடங்களாயின. பட்டினங்கள் நகர்களாக மாறின. பரதவர் வருணன் என்னும் குல தெய்வத்தை வழிபட்டார்கள். இக் கடவுளையே இந்திய நாட்டை அடைந்த ஆரிய மக்களும் வழிபட்டார்கள். ஆரியரின் வருணன் அசுரன் எனப்பட்டார். அசுரர் எனப்பட்டோர் திராவிடரே யாவர். இக் கருத்தினை வேத ஆராய்ச்சியாளர் நிலை நிறுத்தி யுள்ளார்கள், பரதவர் தாழையின் கீழ் சுறாக்கோடு நட்டுப் பூரணைக் காலங்களில் சிறப்பாகக் கடவுளை வழிபட்டனர். மருத நில மக்கள் மந்தைகளை மேய்க்கும் நிலைக்குப் பின் மக்கள் ஆற்றோரங்களில் தங்கியிருந்து ஆற்று வெள்ளத்தைக் கால்வாய்களால் வயல்களுக்குப் பாய்ச்சித் தானியங்களை விளைவித்தார்கள். இவ்வாறு வெள்ளத்தை ஆண்டமையின் இவர்கள் 1வெள்ளாளர் எனப்பட்டனர். ஆற்றோரங்களல் லாத சமவெளிகளில் தங்கினோர், மழை நீரை ஏரி, குளங்களில் தேக்கி வைத்து ஏற்றம், கபிலை, இடா, பிழா முதலியவைகளால் இறைத்துப் பயிர் விளைவித்துக் காரை ஆண்டமையின் காராளர் எனப்பட்டனர். நீர் ஓரங்களில் மருத மரங்கள் செழித்து வளர்ந்தமையின், வயலும் வயல் சார்ந்த இடங்களும் மருதம் எனப்பட்டன. வேளாளர் தலைவன் ஊரன் அல்லது கிழவன் எனப்பட்டான். இவர்களின் குல தெய்வம் வேந்தன் எனப்பட்டது. நல்ல அரசன் ஆட்சியில் மழை பெய்யும் என்பது இன்றும் பொதுமக்களால் நம்பப்பட்டு வருகின்றது. முற்காலத்தில் மழை பெய்விப்போராகிய (Rain makers) மந்திர வித்தைக் காரரான அரசரே நாடுகளை ஆண்டுவந்தார்கள் என்பது பழைய மக்கள் வரலாற்றால் அறிய வருகின்றது. அவ் வழிபாட்டின் நிழலே வேந்தன் வழிபாடாகலாம். அஃதன்றி, ‘கடவுள் தன் சார்பில் மக்களை ஆள்வதற்கு விடுத்த அவர் புதல்வன் அரசன்’ என்னும் நம்பிக்கையும் மக்களிடையே ஒருகால் ஓங்கியிருந்தது. பிற்கால மக்கள் இறைவன் அல்லது அரசனை வேந்தன் என்னும் பெயரால் வழிபட்டார்கள். முற் காலத்தில் அதிக உணவு வைத்திருப்பவனே செல்வனாக மதிக்கப்பட்டான். உழவனிடத்தில் அதிக செல்வம் இருந்தது. உணவுப் பொருள்களை வேண்டி மக்கள் மருத நிலத்துக்கு வந்தார்கள். அவர்கள் உழவனிடமிருந்து தானியங்களைப் பெற்றார்கள். அதற்கு விலையாகத் தத்தம் நாடுகளிற் கிடைக்கும் அரும் பண்டங்களைக் கொடுத்தார்கள். பண்டங்களைக் கொண்டு வருவதற்கும், கொண்டு செல்வதற்கும் திருந்திய பாதைகள் அமைக்கப்பட்டன. காணியாளராகிய உழவர், தமது தானியங் களைச் சேர்த்துவைப்பதற்கும், செவ்வனே வாழ்வதற்கும் அழகிய வீடு களை அமைத்தார்கள். பயிர் செய்வதற்குக் கலப்பை, கொழு, நுகம், கத்தி, பாரை, அரிவாள் போன்ற பலவகை ஆயுதங்கள் தேவைப்பட்டன. அவர்கள் உல்லாசமாக வாழ்வதற்கும் பொழுது போக்குவதற்கும் விரும்பினார்கள். அவர்கள் மகளிர் அழகிய அணிகலன்களை அணிய விரும்பினார்கள். இவைகளை உதவக்கூடிய பழக்கமுடைய மக்கள் அவ்விடத்தே தங்கி னார்கள். கைத்தொழில்கள் பெருகின. அவர்கள் செய்யும் வேலைகளுக்குக் கூலியாக உழவர் தானியங்களை அளித்தனர். இவ்வாறு மருத நிலம், மக்கட் புழக்கமுள்ள இடமாக மாறிற்று. செல்வம் எங்கு உண்டோ, அங்கு அதனைக் கொள்ளை கொள்ளப் பகைவர் வருவர். பகைவரை எதிர்த்துப் போர் செய்வதற்குப் போர் வீரரும் அவர்களைத் தலைமை தாங்கி நடத்து வதற்கு அறிவும் ஆற்றலும் உடல் வலியுமுடைய ஒருவன் வேண்டும். அவ் வகையினன் ஒருவன் தெரிந்து எடுக்கப்பட்டான். பகைவர், குடியிருப்புக் குள் விரைவில் நுழையாதபடி காக்க அதனைச் சுற்றி மதில் கட்டப்பட்டது. இவ்வாறு ஆட்சியும் நகரும் மருதநிலத்தே தோன்றலாயின. ஆட்சி மக்கள் குடும்பங்களாகச் சேர்ந்து வாழும்போதும், சொத்து உண்டா யிருக்கும் போதும் ஆட்சி தொடங்குகின்றது. மனிதன் வேடனாயிருந்த போது சொத்து இருக்கவில்லை. மக்கள் இடையராக வாழத் தொடங்கிய காலத்திலேயே அவர்களிடம் செல்வம் திரளத் தொடங்கிற்று. மாடு, ஆடு என்பன முற்கால மனிதனின் செல்வங்களாயிருந்தன. இடையர் புல் வெளிகளில் தங்கியிருந்தார்கள். மற்றச் செல்வங்கள் போலல்லாமல், ஆடு மாடுகள், கன்றுகுட்டிகள் ஈன்று பெருகும். இதனால் மந்தைகள் பெரிய அளவினவாகும். இடையனுடைய பிள்ளைகள் மந்தைகளைப் பிரித்துக் கொள்ளுதல் கூடாது. மேய்ச்சல் நிலத்தைச் சிறு துண்டுகளாகப் பிரித்தால் அது மந்தைகள் மேய்வதற்குப் பயனற்றதாகும். ஆகவே குடும்பங்கள் சேர்ந்து வாழும் முறை உண்டாயிற்று. குடும்பத் தலைவன் அதிகாரமுடைய வனானான். குடும்பத் தலைவர் பலருக்கு, அதிக செல்வமும் அதிக அதி காரமுமுடைய ஒருவன் அரசனானான். இவ்வாறு ஆட்சி முறை இடைய ருள்ளேயே முதன் முதல் தோன்றி வளர்ச்சி அடைவதாயிற்று. அரசனைக் குறிக்கத் தமிழில் வழங்கும் பழைய சொல் கோ அல்லது கோன், இது இடை யனை உணர்த்தும். இதனால் ஆட்சி, மக்கள் இடையனாயிருக்கும்போது தொடங்கிற்றென விளங்கும். ஆட்சியில் இருவகை சமாதான கால ஆட்சி, சொல் ஆட்சி; போர்க்கால ஆட்சி, வாள் ஆட்சி; சமாதான கால ஆட்சி, போர்க் காலத்தில் உதவாது. ஆகவே, மக்கள் போர்க் காலங்களில் சமாதான கால ஆட்சித் தலைவனை நீக்கிவிட்டு, அறிவும் ஆண்மையுமுள்ள ஒருவனைத் தலைவனாகத் தெரிந்தெடுப் பார்கள். அவனே படையை நடத்திச் செல்வான். அவன் சொன்னதே சட்டம். “இடைக்” சாதியருக் கிடையில் குடும்பத் தலைவனின் அதிகாரத்தைவிட ஆட்சி யிருக்கவில்லை. போர்க் காலத்தில் அவர்கள் தமக்குள் துணிவும் வீரமுமுள்ள ஒருவனைத் தலைவனாகத் தெரிந்தெடுத்து அவனுக்குப் பணிந்து நடந்தார்கள். போர் முடிந்தவுடன் அவன் தனது சொந்த முயற்சியைப் பார்க்கும்படி விடப்பட்டான். குடும்பத் தலைவன், படைத் தலைவன் என்னும் இரண்டு கருத்துக்களும் கலந்து சமூகங்களுக்குள் அரசநிலை வளர்ச்சி யடைந்தது. இவ்வகை நிலை மருத நிலத்திலேதான் உண்டாயிற்று. அங்கு தான் கோட்டைகளோடு கூடிய நகரங்கள் எழுந்தன. பழைய நாகரிகம் படைத்த நாடுகள் எல்லாம் ஆற்றோரங்களிலேயே உள்ளன. அரசன் தமிழர்களிடையே அரசன் ஆட்சி மிகப் பண்டைக் காலத்திலேயே தோன்றிற்று. அரசனைக் குறிக்கும் பல பழந் தமிழ்ச் சொற்கள் காணப்படு கின்றன. கோன், ஏந்தல், வேந்தன், மன்னன், குரிசில், இறைவன், வள்ளல், அண்ணல் முதலியன அவற்றுட் சில. ஆட்சி என்பது ஆள் என்னும் வினை அடியாகப் பிறந்தது. ஆள் என்னுஞ் சொல் தொடக்கத்தில் ஆளை உணர்த்திற்று. ஆட்சி என்பது இடையன் தனது மந்தைகளைப் பகைகளி னின்றுங் காத்து உணவு கொடுத்துக் காப்பது போன்றது எனக் கருதப் பட்டது. ஏந்தல் என்பது, மக்களை ஆபத்தினின்றும் காப்பவன் என்னும் பொருளில் ஏந்து என்னும் அடியாகப் பிறந்திருக்கலாம். அரசன் வாழும் வீடு, கோட்டை எனப்பட்டது. அரசனின் அதிகாரம் உயர்ந்தபோதும் ஒழுங்குபட்ட போர்முறை உண்டான போதும் அரசனின் வீடு கோட்டையாக மாறிற்று. கோட்டை வலிய மதிலாற் சூழப்பட்டிருந்தது; ஆகவே அரசனின் வீடு அரண்மனை எனப்பட்டது. அரண் என்பது தொடக்கத்தில் அழகு, பாதுகாப்பு என்பவைகளைக் குறிக்க வழங்கிற்று; பின்பு கோட்டையின் சுவரைக் குறிக்க வழங்குவதாயிற்று. கோட்டையைச் சுற்றி அகழ் இருந்தது. அகழைக் குறிக்கப் பல தமிழ்ச் சொற்கள் காணப்படுகின்றன. உடு, ஓடை, கேணி, பரிகம், புரிசை, பாம்புரி முதலியன அகழை உணர்த்தும் பெயர்களுட் சில. இதனால் தமிழர் அகழைப் பற்றி நன்கு அறிந்திருந்தார்கள் எனத் தெரிகின்றது. கோட்டை வாயில் கோட்டி எனப்பட்டது. மதிலுக்குப் பின்னே சரிவாக எழுந்து மேலே மேடையாக முடிவடையும் பகுதி கொத்தளம் எனப்பட்டது. கோட்டையின் மீது மறைந்து நின்று அம்பு எய்யுமிடம் ஞாயில் எனப்பட்டது. அரண்மனை யில் பல அறைகள் இருந்தன. அறை என்பது அறு என்னும் அடியாகப் பிறந்தது. பண்டங்களை இட்டு வைக்கும் அறை கொட்டறை அல்லது கொட்டடி எனப்பட்டது. அரசன் சிறப்புக் காலங்களில் பெரு மக்கள் சூழ விருத்தல் கொலு விருத்தல் அல்லது வீற்றிருத்தல் எனப்பட்டது. கொடி, துகில்,தோகை, கதலி, பூ, தழை முதலியவகைளால் கொலுச்சாவடி அலங்கரிக்கப்பட்டிருந்தது. அரசன் சிறப்புக் காலங்களில் முடி அணிந்தான். அவன் முகத்தை மழித் திருந்தான். கொலுவிருக்கும்போது அவன் கையில் கங்கணம், விரலில் கணையாழி, கழுத்தில் முத்து மாலை இரத்தினமாலைகள், காலில் கழல் போன்ற அணிகலன்களை அணிந்திருந்தான். சிங்காசனம், கட்டில் எனப் பட்டது. அரசன் சிங்காசனத்தில் சாய்ந்துகொண்டு இருக்கும் அணை, அரியணை எனப்பட்டது. அவன் எதிரே அடியார், ஊழியர், அரசனின் புகழ் கூறும் அகவர், அவன் கட்டளைகளை வெளிப்படுத்தும் வள்ளுவர், புகழ்பாடும் பாணர் புலவர், வள்ளல் எனப்பட்ட பெருமக்கள் இருந்தார்கள். ஆட்கள் எனப்பட்ட பொது மக்கள் மரியாதைக்குரிய தொலைவில் நின்று விண்ணப்பித்த வழக்குகளைக் கேட்டு அரசன் தீர்ப்பு அளித்தான். 1தமிழின் தொன்மை தமிழும் தமிழருடையனவும் ஆகிய பழைய வரலாறுகள் இருளில் மறைந்து கிடக்கின்றன. ஆங்கிலம், செர்மன் முதலிய மொழிகளைப் போலத் தமிழை ஆராய்ந்து கூற முடியாது. ஆங்கிலத்தின் வளர்ச்சியை ஆராய்ந்து பின் நோக்கிச் செல்லச் செல்ல நாம் ஒரு நிலையை அடை வோம். அங்கு அது ஆங்கிலமாகத் தோன்றாது. அங்கு அது சாக்சன், கொதிக் என்னும் மொழிகளின் கலப்பாகத் தோன்றும். தமிழ், கடவுளின் வாயில் நின்று பிறந்ததென்னும் பழங்கதை யுண்டு. இது தமிழின் அளவு கடந்த பழைமையை உணர்த்த எழுந்தது ஆகலாம். பண்டுதொட்டே இரண்டு மொழிகள் இந்திய நாட்டில் உள்ளன. இவ் விரு மொழிகளைப் பற்றி இலக்கண நூலார் கூறியுள்ளனர். வட மொழி, தென் மொழி என்பன முறையே சமக்கிருதம், தமிழ் என்பவைகளைக் குறிக்கும். இவை அம் மொழிகள் வழங்கிய இடங்களைக் குறிப்பிடுகின்றன. ஒரு காலத் தில் தென்மொழி இந்தியா முழுமையிலும் வழங்கிற்று என்பதற்குச் சான்றுகள் காணப்படுகின்றன. தென் மொழியை விந்திய மலைக்குத் தெற்கே ஓட்டித் தான் வட நாட்டில் இடம் பெறுவதற்கு வட மொழி திணறிக் கொண்டிருந் தது. இன்று இந்திய நாட்டில் வழங்கும் முன் பின் நூறு மொழிகள், இரண்டி லொரு மொழிகளின் சிதைவுகள் எனப்படுகின்றன. தெலுங்கு, கன்னடம், மலையாளம் முதலியன தமிழின் கிளைகளாகும். தெலுங்கும் பிற திராவிட மொழிகளும் தமிழின் தொடர்பில்லாத மொழிகள் எனச் சில ஆராய்ச்சி யாளர் கற்பனை செய்கின்றார்கள். இது, வளர்ந்த பிள்ளைகள் தமது தாய் தந்தையரின் உறவை மறந்திருப்பது போன்றது. சமக்கிருதச் சிதைவுகளை யும் சமக்கிருதச் சொற்களையும் இம் மொழிகளினின்று எடுத்துவிட்டால், மீந்திருப்பன இன்று வழக்கிறந்தனவோ, பழைய செய்யுட்களிற் காணப் படுகின்றனவோவாகிய தமிழ்ச் சொற்களே யாகும். வித்துவான்கள் சிலர் தமிழ், சமக்கிருதத்தினின்றும் பிறந்ததெனக் கூறித், தூய தனித் தமிழ்ச் சொற்களின் உற்பத்திகளுக்கு வடமொழி மூலங்காண முயல்வர். தமிழ் என்னும் சொல்லின் அடியைக் காணமுயன்ற தமிழ் மொழிநூல் எழுதிய ஒருவர் அதற்குச் சமக்கிருத ‘தமஸ்’ (சூடு) என்னும் சொல் அடியைக் கூறினார். தமிழ் எப்படி இந்தியாவுக்கு வந்தது? அது ஆகாயகங்கையைப் போல அதிசயமாகத் தோன்றவில்லை. தமிழர், ஆரியரினும் பார்க்க ஐந்நூறு1 ஆண்டுகளாவது முற்பட்டவர் களாவர். அவர்களின் செழிப்பான காலம் கி.மு. 500 முதல் கி.பி. 500 வரை. தொல்காப்பியர், சாகரிடிஸ் அல்லது புத்தர் காலத்தவர் ஆகலாம். தொல் காப்பியர் பழைய இலக்கணங்களைப் பற்றிக் குறிப்பிடுகின்றார். இதனால் அக்காலத்தில் பல இலக்கணங்களும் இலக்கியங்களும் தோன்றியிருந்தன என்று நாம் அறியலாம். வாய்ப்பாடமாகச் சொல்லப்பட்டு வந்த இருக்கு வேத பாடல்கள் கி.மு. 1500 முதல் கி.மு. 1000 வரையில் செய்யப்பட்டவை. இக்காலத்தில் ஆரியர் சிந்து நதிப் பள்ளத்தாக்கிலும் கங்கை நதிப் பள்ளத் தாக்கிலும் பரவியிருந்தனர் ஆதல் வேண்டும். தொல்காப்பியத்தில் ஆரியச் சார்பு காணப்படுகின்றது. இதனால் அக் காலத்தில் ஆரியக் கொள்கைகள் சில தென்னாட்டுக்கு வந்து விட்டனவென்று தெரிகிறது. ஆரியர் வரும்போது தமிழர் இந்தியா முழுமையும் பரவி வாழ்ந் தார்கள் என்பது தெளிவு. அவர்கள் உயர்ந்த நாகரிகப் பண்பு அடைந்திருந் தனர். அவர்கள் ஐரோப்பியர்,பினீசியர், சீனர், ஜப்பானியர் முதலியவர்களோடு தொடர்புவைத்திருந்தனர். சாலமன் அரசன் (கி.மு. 1000) தமிழ்நாட்டிலிருந்து மயில்களைப் பெற்றான். எபிரேயத்தில் காணப்படும் தொகி என்பது, தோகை என்னும் தூய தமிழ்ச்சொல்லின் திரிபு. அக் காலத்தில் எபிரேயருக் கும் தமிழருக்கு மிடையில் நெருங்கிய வாணிகத் தொடர்பு இருந்து வந்தது. திராவிடர் நாகரிகத்தின் விரிவு பழைய திராவிடர் என்போர் தமிழர், தெலுங்கர், மலையாளர், கன்னடர் முதலிய தென்னிந்திய மக்களின் முன்னோராவர். ஆதியில் இவர்கள் இந்திய நாடு முழுமையிலும் காணப்பட்டனர். இப்பொழுது அவர்கள் தென்னிந்தியாவிற் காணப்படுகின்றனர். ஆரிய மக்கள் அவர்களைத் தைத்தியர்?, தாசர், நாகர் என்னும் பெயர்களாற் குறிப்பிட்டனர். கன்ன பரம்பரை வரலாறுகளும் பழைய இலக்கியங்களும், பட்டையங் களும் ஆரியர் வருகைக்கு முன் சேர, சோழ, பாண்டிய இராச்சியங்கள் தோன்றி நிலை பெற்றன என்று தெரிவிக்கின்றன. அவர்கள் போர்முறை, கட்டட அமைப்பு, அரசியல் அமைப்புப் போன்ற, கலைகளில் தலை சிறந்து விளங்கினார்கள். உலக வரலாற்றிலும் இந்திய வரலாற்றிலும் சிறப்புற்று விளங்க வேண்டியவர்கள் தென்னிந்திய மக்களாவர் என்றும், இக் கருத்தினை விளக்குவதற்குச் சிறந்த ஆராய்ச்சியாளர் எவரும் முன் வரவில்லை என்றும் இரிச்சார்ட் என்பார் குறிப்பிட்டுள்ளார். திராவிட நாகரிகமே இந்திய பாபிலோனிய உலக நாகரிகங்களுக்கு அடிப்படை சுமேரிய மக்கள், திராவிடரின் ஒரு கிளையினர் என டாக்டர் ஹால் குறிப்பிட்டுள்ளார். டாக்டர் ஹாலின் கருத்து உண்மையாக இருக்குமாயின், நாகரிகம் முதன்முதல் இந்திய நாட்டில் தொடங்கி, மறுநாடுகளுக்குப் பரவிற்றென்று டாக்டர் எஸ்.கே. சட்டர்ஜி கூறியுள்ளார். சர். ஜான் மார்ஷல் என்பார், சுமேரிய நாகரிகம் பாபிலோனில் புதிதாகத் தோன்றியதென்றும், சுமேரிய நாகரிகத்துக்கு அடிப்படை இந்திய நாகரிகமாதல் கூடுமென்றும் இந்திய, நாகரிகத்திலிருந்தே பாபிலோனிய, அசீரிய, மேற்கு ஆசிய நாகரிகங்கள் தோன்றின என்றும் புகன்றுள்ளார். மொழி ஆராய்ச்சி வல்ல டாக்டர் சட்டர்ஜி கிரேத்திய, இலைசிய, சுமேரிய, எல்லம், திராவிட மொழிகள், உற்பத்தியில் தொடர்புடையன வென்றும், சின்ன ஆசியா, ஐசியன் தீவுகள், பாபிலோன் முதலியன ஒரே நாகரிகத் தொடர்புடைய நாடுகளென்றும் விளக்கமாகச் சாற்றியுள்ளார். இப்பொழுது அரப்பா மொகஞ்சதரோ முதலிய இடங்களிற் கண்டுபிடிக்கப்பட்ட பழம் பொருள்களால் இந்தியரின் நாகரிகம் சுமேரிய நாகரிகத்தை மிக ஒத்துள்ளதெனத் தெரிகின்றது. டாக்டர் பானர்ஜியும் மற்றைய ஆராய்ச்சியாளரும், அரப்பா மொகஞ்சதரோ நாகரிகம் ஆரிய ருடையதன்று எனத் துணிந்துள்ளார்கள். பலுச்சிஸ்தானத்தில் திராவிட மொழிக்கு இனமாகிய பிராகூய் காணப்படுவதால், அரப்பா மொகஞ்சதரோ நாகரிகத்துக்குரியவர்கள் பழைய திராவிடர்கள் என உறுதிப்படுகின்றது. சர். ஜான் இவான்ஸ் என்பார், தென் இந்தியாவே மக்களுக்குப் பிறப்பிட மாகலாம் என்றும், இங்கு நின்றே வடக்கிலும் மத்திய தரை நாடுகளிலுமுள்ள நாகரிகங்கள் சென்றன என்றும் குறிப்பிடுவாராயினர். 1ரீட் என்பார் மனிதனுடைய நாகரிக வளர்ச்சிக்கு அதிக உதவி செய்தது இந்தியா என்றும், இந்திய வாணிகமே உள்நாட்டுக் கைத்தொழில்களுக்கும், அயல் நாட்டு ஏற்றுமதி இறக்குமதிக்கும் காரணமா யிருந்ததென்றும் கூறியுள்ளார். மேற்கு ஆசியா, கிழக்கு ஆபிரிக்கா, சீனா, ஜப்பான் மலாய்த் தீவுகளோடு பண்டு வாணிகம் புரிந்தவர் திராவிடரே முற்காலம் கடற் பயணம் செய்து வந்தோர், திராவிடராவர். தென் னிந்திய மக்கள் கடற்கரையை அடுத்த நாடுகளில் வாழ்ந்தார்கள். அதனால் அவர்களுக்குக் கடலிற் செல்லும் பழக்கம் எளிதில் உண்டாயிற்று. தோணி, ஓடம், கப்பல் முதலியன திராவிடச் சொற்கள். இந்தியாவுக்கும் மேற்கு ஆசியாவுக்கும் பண்டங்களைக் கொண்டு சென்ற கப்பல்கள் பெரும்பாலும் இந்திய நாட்டுக்கு உரியன என்றும், கடற் போக்குவரத்து திராவிடர்வசம் இருந்ததென்றும் ரிச்சார்ட் புகன்றுள்ளார். இந்துமாக் கடலில் கப்பல்களை ஓட்டிச் சென்றவர்கள் அவர்களே. கரை ஓரங்கள் அவர்களுக்குக் கடற் பயணஞ் செய்யும் பழக்கம் அளித்தது. ஆபிரிக்கா, அராபியா, மலாயா, சீனா முதலிய நாடுகளுக்கு இந்தியப் பண்டங்களை ஏற்றிச் சென்ற மாலுமிகள் அவர்களிடையே தோன்றினார்கள். திராவிடர் ஜாவா, சுமத்திரா கம்போதியா முதலியவைகளில் குடியேறுதல் அவர்கள் மேற்கே மெசபெதேமியா முதல் கிழக்கே இந்துமாக் கடற்றீவுகள் வரை குறியேறியிருந்தமை, திராவிடமக்களின் பரந்த கடற் பயணத்தைப்பற்றி வெளியிடுவதாகும். இந்திய நாட்டில் வேதமொழி இடம் பெறுவதன்முன், திராவிட மக்கள் பழைய சால்தியாவோடு வாணிகம் புரிந் தனர். டாக்டர் சேய்ஸ் (Dr. Sayce) என்பார், இந்தியாவுக்கும் பாபிலோனுக்கு மிடையில் கி.மு. 3000 வரையில் வாணிகம் நடத்திருக்க வேண்டுமென்றும், அக்காலத்தில் ஐக்கிய பாபிலோனியாவில் ஆட்சி புரிந்த ஊர் பாகஸ் என்னும் அரசன் ஆட்சி புரிந்தானென்றும் கூறியுள்ளார். தென்னிந்திய மக்கள் இந்தியக் கடற்றீவுகள், ஜாவா, சுமத்திரா, போர்ணியோ முதலிய நாடு களுக்குப் பயணஞ்செய்து அவ்விடங்களைத் தமது குடியேற்ற நாடுக ளாக்கினர்; அங்குநின்றும் அவர்கள் எதிர்ப்புறத்தேயுள்ள நாடுகளுக்குச் சென்று சீயம், கம்போதியா முதலிய நாடுகளிற் றங்கினர். சேர, சோழ, பாண்டியர் உரோமுக்குத் தூதரை அனுப்புதல் கி.மு. 30-ல் அகஸ்டஸ் எகிப்தை வெற்றிகொண்டார். அவர் இந்தியா வுக்கும் உரோமுக்கு மிடையில் நேராகக் கடல் வாணிகம் நடத்த முயன்றார். முற்காலத்தில் மத்திய தரை நாடுகளுக்கும் மலையாளத் துறைமுகங்களுக்கு மிடையில் ஹிரம் அரசனுக்கு உட்பட்ட பினீசியர், சாலமன் அரசனின் கீழ் உள்ள பாலஸ்தீனியர், செலியூசிட்சுக்கு (Seleucids)க் கீழ்ப்பட்ட சீரியர், தாலமிக்கு உட்பட்ட எகிப்தியர் முதலியோர் தமிழ் நாட்டோடு வாணிகம் செய்தார்கள். உரோமரே கடல் வாணிகத்தில் பெரும் புரட்சியை உண்டாக்கி னார்கள். சேர, சோழ, பாண்டியர் உரோமுக்குத் தூதரைப் போக்கியது முதல் உரோம் வாணிகம் மிக மும்முரமாக நடைபெறுவதாயிற்று. இன்று கிடைக் கின்ற சான்றுகளால் வரலாற்றுக் காலத்தின் ஆரம்பம் முதல் மத்தியதரை நாடுகள், தைகிரஸ் யூபிராதஸ் பள்ளத்தாக்குகள், சீனா முதலிய நாடுகளுக் கும், இந்தியாவுக்குமிடையில் தொடர்பிருந்து வந்ததெனத் தெரிகிறது. அல்பேருனி (Alberuni), மார்க்கோபோலோ, வாஸ்கோடகாமா முதலியோர் கி.பி. 11, 12, 15ஆம் நூற்றாண்டுகளில் இந்திய நாட்டுக்குப் பயணஞ் செய்தது பழைய வாணிக வரலாற்றின் தொடர்ச்சியாகும். கி.மு. 3ஆம் நூற்றாண்டில் கிரேக்கு, எகிப்து, சீரியா, மாசிடோன், சைரின் (Cyrene) முதலிய நாடுகளுக்கு இந்தியா தூதரை அனுப்பிற்று. எகிப்திய பைப்பிரஸ் தாள்களில் கிரேக்க மொழியில் எழுதப்பட்ட பகுதிகளில்1 கன்னட வாசகங்கள் காணப்பட்டன. சீனக் கலையிலும், சீன இலக்கியங்களிலும் அதிகமாக இந்தியச் சார்பு காணப்படுகின்றது. ஜாவா, சுமத்திரா நாகரிகத்தில் இந்தியக் கலைகள் சுவறியுள்ளன. கிழக்காபிரிக்கா, சோமாலிலாந்து, அபிசீனியா, எகிப்து, அராபியா, பாபிலோனியா, இந்தோனேசியா, சீனா முதலிய நாடுகளோடு இந்திய வரலாறு தொடர்பு பெற்றுள்ளது. எகிப்திய ஓவிய எழுத்துக்களின் பழமை ஒரு நூறு ஆண்டுகளின் முன் எகிப்தைப்பற்றி உலகுக்கு யாதும் தெரியாது. பெரிய எகிப்திய சமாதிகளும், அவைகளின் முன்னால் அமைக்கப்பட்டுள்ள பெரிய மனிதச் சிங்கமும், முற்கால மக்களுக்கு வியப்பு அளிப்பனவாயிருந்தன. நெப்போலியனின் போர்க்காலத்தில் போர் வீரன் ஒருவன் ரொஸட்டாக் கல்லில் (Rosetta stone) சில எழுத்துக்கள் பொறித் திருப்பதைக் கண்டு அதனை எடுத்தான். அதில் எகிப்திய ஓவிய எழுத்தும் அங்கு வழங்கும் எழுத்துக்களும் வெட்டப்பட்டிருந்தன. டாக்டர் யங், சாம்பொலின் (Dr. Young and Champollin) என்போர் அவ்வெழுத்துக் களை வாசிக்கும் முறையைக் கண்டுபிடித்து, எகிப்தின் பழைய வரலாறு களை உலகுக்கு வெளியிட்டார்கள். எகிப்திய சமாதிகளிலும் பைப்பிரஸ் ஏடுகளிலும் காணப்பட்ட எழுத்துக்களே உலகில் பழமையுடையன எனச் சிலர் கருதினார்கள். அவ்வோவிய எழுத்துக்கள் நீண்டகாலப் பழக்கத் தோடும் திறமையோடும் எழுதப்பட்டிருப்பதை அவர்கள் கண்டார்கள். அவ் வெழுத்துக்கள் அக்கால நிலையை அடைவதற்குக் காலம் வேண்டும். பழைய நாகரிகங்களுக்கிடையில் தொடர்பு பேராசிரியர் பிளிண்டெர்ஸ் பெற்றி (Flinders Petrie) என்பார் ஓவிய எழுத்துத் தோன்றுமுன் கீறுகள் போன்ற அடையாளங்கள் இருந்தன என்பதை நாட்டியுள்ளார். அவர் எகிப்தியரின் நாகரிக கால எழுத்துக்களை மத்திய தரை நாடுகளிலுள்ள எழுத்துக்களோடு தொடர்புபடுத்திக் காட்டியுள்ளார். பேராசிரியர் செலிமன் (H. Shliemann) கிரேத்தாவிலிருந்து மத்தியதரை நாகரிகம் உதயமானது எனக் கூறியுள்ளார். சர். ஆர்தர் இவான்ஸ் என்பார், கிரேத்தாவில் எகிப்திய, மெசபெதேமிய நாகரிகம் போன்ற பழைய நாகரிகமிருந்ததெனக் கூறியுள்ளார். இந்நாகரிகம் பினீசியர் தமது மரக் கலங்களைக் கடலுட் பாய்ச்சுவதன் முன் உண்டாயிருந்தது. சிந்து வெளி நாகரிகத்தைப் பற்றி ஆராய்ச்சி நடத்திய சர். ஜான் மார்ஷல், இந்திய நாகரிகம் கிரேத்தாவோடும் மத்தியதரை நாடுகளோடும் தொடர்புடைய தெனக் காட்டியுள்ளார். ஆரியரல்லாத இந்திய மக்களின் சமயத்துக்கும், கிரேத்தா, சின்ன ஆசியா முதலிய நாடுகளின் சமயத்துக்கும் நன்றாகப் புலப்படக்கூடிய ஒற்றுமைகள் காணப்படுகின்றன. மினோவர் கடவுள் பெரிய தாய். இத்தாய் வணக்கத்தின் நெருங்கிய ஒற்றுமையைக் கொண்டு ஐசியக்கடற்றீவுகள், சின்ன ஆசியா, மெசபெதேமியா முதலிய இடங்கள் முன்னொருபோது ஒரே நாகரிகத் தொடர்பு பெற்றிருந்தன எனக் கருதலாம் என, எஸ்.கே. சட்டேர்ஜி குறிப்பிட்டுள்ளார். ஐசியக் கடற் பகுதியிலுள்ள நாகரிகம் கிரேத்தாவில் உறைப்பாகக் காணப்படுகின்றது. இந்நாகரிகமே ஐரோப்பிய நாகரிகத்துக்கு அடிப்படை. சீன நாகரிகம் சுமேரிய நாகரிகத்தின் ஒரு கிளை எனப்படு கின்றது. எகிப்திய சமாதிகள் எகிப்திய சவங்களைப் புதைக்குமிடங்கள் எகிப்தியரின் நாக ரிகத்தைப் புலப்படுத்துகின்றன. சமாதிக் கட்டடங்களைத் தேடிக் கண்டு பிடிக்க வேண்டியதில்லை; அங்கு அவை நன்கு காணக் கிடக்கின்றன. எண்பது பெரிய கூர்நுதிச் சமாதிகள் வரையில் அங்கு உண்டு. தென்னிந் தியாவில் பிரேதங்களை மடக்கிவைத்துப் புதைக்கப்பட்ட தாழிகள் காணப் படுகின்றன. உடம்பை விட்டபின் உயிர்கள் பயணஞ் செய்கின்றன என்று எகிப்தியர் நம்பினார்கள். ஒவ்வொரு மனிதனுக்கும் இரண்டு உடல் உண்டு என்றும் எகிப்தியர் நம்பினர். இக்கருத்தினால் அவர்கள் உடலைத் தைல மிட்டுப் பக்குவஞ் செய்தார்கள்; நிலைக்கக்கூடிய சமாதிகள் கட்டப்பட்டன; இறந்தவரின் பயணத்துக்கு வேண்டிய உணவு முதலியன சமாதிகளுக் குள்ளே வைத்துக் கட்டப்பட்டன. ஒரு சமாதியைக் கட்டுவதற்கு 100,000 அடிமைகள் 20 ஆண்டுகள் ஓயாது வேலை செய்ய வேண்டியிருந்தது. அச் சமாதி வேலைக்கு வேண்டிய பொருள்களைக் கொண்டு செல்வதற்குச் சரிவான வீதி அமைக்க 100,000 அடிமைகள் பத்து ஆண்டுகள் இடை விடாது உழைத்தார்கள் என ஹெரதோதசு என்னும் கிரேக்கர் கூறியுள்ளார். தூதன் காமனின் சமாதிக் கட்டடத்தில் எடுக்கப்பட்ட பொருள்களின் விலை மதிப்பு 3000,000 தங்க நாணயம் ஆகும். சமாதிகளில் விலைமதிப்புள்ள பொருள்கள் வைக்கப்பட்டமையின், அவைகளைத் திருடும் தொழில் இன்பக் கலைகளுள் (fine arts) ஒன்றுபோல் வளர்ச்சியடைந்தது. சமாதி ஒன்றை உடைப்பது கொடிய பாவமாகக் கருதப்பட்டது. ஆனால் சமாதியை உடைப்போர் மறு உலகில் அப்பாவத்துக்குப் பதில் தண்டனையை ஏற்க ஆயத்தமாயிருந்தனர். ஆகவே அச் சமாதிகளை உடைத்து உள்ளேயுள்ள பொருள்களைத் திருடுவதற்குப் பலர் பல உபாயங்களை ஆராய்ந்து வந்தனர். எகிப்திய, பாபிலோனிய சுமேரிய சமாதிகளிற் காணப்பட்ட மட்பாண்டங்கள், எழுத்துக்கள் பொறித்த செங்கற்கள், பைப்பிரஸ் தாள்கள் முதலியன திராவிடரைப் பற்றிய பல மயக்கமான வரலாறுகளை விளக்கு கின்றன. டாக்டர் இரவிலின்சன் (Dr. Rawlinson), பாரசீகத்திலே பெகிஸ்டன் (Behistan) என்னும் இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஆப்பெழுத்துப் பொறித்த பட்டையங்களை வாசித்தார். இலையார்ட் (Mr. Layard) நினேவா பாபிலோன் என்னுமிடங்களில் கண்டுபிடிக்கப்பட்ட ஆப்பெழுத்துப் பட்டையங்களை வாசித்தார். மெசபெதேமியா ஏதேன் தோட்டம் எனக் கருதப்பட்டது. ஆப்பெழுத்தில் எழுதப்பட்ட திருமுகங்கள் எகிப்திலும் மெசபெதேமியாவிலும் காணப்பட்டன. மெசபெதேமியாவின் ஆதிக் குடிகள் சுமேரியராவர். அவர்கள் தங்களைச் சூழ்ந்திருந்த மற்றைச் சாதியின ரினும் பார்க்க நாகரிகம் பெற்று விளங்கினர். தைகிரஸ், யூபிராதஸ் ஆற் றோரங்களிற் கண்டுபிடிக்கப்பட்ட மட்பாண்டங்கள், மண், பொன், வெள்ளி களினாற் செய்யப்பட்ட பாவைகள், முத்திரைகள், செங்கற்களில் எழுதப் பட்ட நியாயப் பிராமணங்கள் முதலியன, இதனை வலியுறுத்துகின்றன. எகிப்திலே மெப்பில் அழிபாடுகளில் இந்திய ஆடவர் மகளிரின் ஓவியங்கள் தென்னிந்தியாவுக்கும், எகிப்து, பாபிலோன், அசீரியா முதலிய நாடுகளுக்குமிடையில் அடிக்கடி போக்குவரத்துக்கள் இருந்து வந்தன. பிளிண்டர்ஸ் பெற்றி (Flinders Petrie) என்னும் எகிப்திய பழஞ்சரித்திர வீரர் மெம்பிஸ் என்னும் பழைய எகிப்திய நகரத்தில் இந்திய ஆடவர் மகளிரின் ஓவியங்களைக் கண்டுபிடித்தார். “இந்தியர் மத்திய தரைப் பகுதியில் தங்கியிருந்தார்கள் என்பதற்கு இது சான்றாகும். மெம்பிஸ் பட்டினத்தில் இந்தியர் குடியேறி யிருந்தார்கள் என்பதை இப்பொழுது அறிகின்றோம்.” என அவர் குறிப்பிட்டுள்ளார். மத்தியதரைச் சாதியினருக்கும் திராவிடருக் கும் நெருங்கிய உறவு உண்டு. ஹிரம் என்னும் பினீசிய அரசனின் துணையைப் பெற்ற எகிப்தியரும், தாவீது என்னும் எபிரேய அரசனும் தென்னிந்தியத் துறைமுகமாகிய முசிறியோடு வாணிகம் நடத்தினர். இதற்கு முன்னே மோசே என்பார், மலையாளத்து விளைபொருள்களாகிய கறுவா, இலவங்கம் முதலிய பொருள்கள் சமயச் சடங்குகளில் பெரிதும் பயன் படுத்தப் பட்டதைப் பற்றிக் கூறியுள்ளார். காதேசியர் மலையாளக் கரையி னின்றும் சந்தனக்கட்டையைப் பெற்றனர். ஊர் நகரத்தில் இந்திய தேக்கமர உத்திரம் காணப்பட்டது. அது அவ் விடத்தை கி.மு. 4000 வரையில் அடைந் திருத்தல் வேண்டும். அது அப்பொழுது பாபிலோனின் துறைமுகமும், சுமேரிய அரசரின் தலைநகரமுமா யிருந்தது. அத் தேக்கு மலையாளக் கரை களில் மாத்திரம் வளர்வது. ஊர் என்னும் சொல், தமிழிலும், மலையாளத் திலும் பட்டினத்தைக் குறிக்கின்றது. எகிப்தியரின் தாய்க் கடவுள், பசு வடிவி னது. தாய்க்கடவுள், பசு வணக்கங்கள் திராவிட மதத்தின் அடிப்படைக் கொள்கைகள். எகிப்தியரின் இடபமும், நிம்ரொட் என்னும் அசீரிய அரசனின் இடபமும் சிவனுடைய நந்தியோடு ஒப்பிடத்தக்கன. எழுத்துக்களின் பொது உற்பத்தி பல நாடுகளில் வழங்கிய எழுத்துக்கள் ஒரே வகையாகக் காணப்படு கின்றன. சுமேரிய எழுத்துக்கள் ஆப்பு வடிவின. பழைய சுமேரிய எழுத் துக்கள் ஓவிய வடிவிலும் கீற்று வடிவிலும் உள்ளன. பகுதி கீற்று வடிவும், பகுதி ஓவிய வடிவமாகிய எழுத்துக்கள் கிரேத்தாவில் காணப்படுகின்றன. பினீசியர் சுமேரிய எழுத்துக்களை அறிந்திருந்தார்கள். அவர்கள் அவை களைத் தணிவுபடுத்தி வேறு வகையில் கையாண்டனர். டாக்டர் பர்நெல் (Dr. Burnell) இந்திய எழுத்துக்கள் பினீசிய எழுத்துக்களினின்றும் வந்தன என்று கூறியுள்ளார். தென் அசோக எழுத்து, தமிழின் மிகப் பழைய எழுத்தாகிய வட்டெழுத்து, இன்றைய மலையாள எழுத்து முதலியன ஒரே தொடக்கத்தைச் சேர்ந்தன என்பது அவர் கருத்து. டாக்டர் பூலர் (Dr. Buhler) என்பார், இந்திய வணிகர், இவ்வெழுத்துக் களை மெசபெத்தேமியாவில் கற்றுக் கொண்டார்கள் எனக் கூறினர். நிக்கோலி காண்டி (Nicole Conte) என்பார், பனை ஓலையில் எழுத்தாணி யால் எழுதினமையால் இவ்வெழுத்துக்கள் வட்ட வடிவை அடைந்தன எனக் கருதினார். வட்டெழுத்துக் கோலெழுத்தின் தணிவு. மலையாள அரசாங்க மூல ஆவணங்கள் இவ் வெழுத்தில் உள்ளன. சுமேரியர் திராவிடர்களாவர் கீழைத்தேச வரலாற்று ஆராய்ச்சி வீரர், மத்திய தரைச் சாதியினராகிய சுமேரியர் பழந்திராவிடரின் பிரிவினர் என முடிவு செய்துள்ளார்கள். அவர்கள் திராவிட நாகரிகத்தின் பழமையையும் ஒப்புக்கொள்கின்றனர். ஆகவே, திராவிடர் பினீசியரிடமிருந்து எழுத்துக்களைப் பெற்றார்கள் என்று அவர்கள் கூறுவதற்குக் காரணமில்லை. பல நாடுகளின் நாகரிகம் ஒரேவகையாயுள்ளதெனக் கூறினோம். அவைகளின் ஒற்றுமை மிக நெருங் கியது. ஆகவே அவர்கள் சீனா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, கன்னியா குமரி முதலிய நாடுகளை இணைத்துக்கொண்டிருந்த பெரிய பூகண்டம் இருந்ததென்னும் பழைய ஐதீகத்தை ஆதாரமாக கொண்டனர், இந்நாகரிகத் தொடர்பு அமெரிக்காவிலும் பிலிப்பைன் தீவுகளிலும் காணப்படுகின்றது. தென்னமெரிக்காவிலே மாயாவிலுள்ள நாகரிகம், இந்திய பொலிநீசிய அடிப்படையினது எனக் கருதப்படுகின்றது. புகையிலை, மிளகாய், கற்றாழை, நிலக்கடலை, கொய்யா, முசுக்கொட்டை, பப்பாளி முதலிய மரஞ் செடிகள் அமெரிக்காவிலிருந்து கொண்டுவரப் பட்டவை. புத்தசமயம் இந்தியாவினின்றும் சீனாவுக்குச் சென்றது. சீனா என்னும் பெயர் இந்திய உற்பத்தியினது என்று டாக்டர் இலாக்கி (Dr. Lagge) கூறியுள்ளார். சீன மக்களின் தொடக்கத்தைப்பற்றி முடிவாக யாதும் தெரியவில்லை. அவர்கள் அக்கேடியரிலிருந்து தோன்றினார்கள் எனச் சிலர் கூறுவர். பழைய சீன எழுத்துக்கள் ஆப்பெழுத்து வடிவினவாயிருந்தமையே அவர்கள் அவ்வாறு கொள்வதற்குரிய காரணமாகும். சீனரின் பிறப்பிடம் தரிம் (Tarim) பள்ளத்தாக்கு என்றும், அவர்கள் அங்கு அக்கேடிய இந்திய நாகரிகத் தொடர்புகளைப் பெற்றார்கள் என்றும் வேறு சிலர் கூறுவர். குடும்ப ஆட்சி யும், இறந்தவர் வணக்கமும் சீனரைத் திராவிடரோடு தொடர்புபடுத்து கின்றது. திராவிடர் நாகரிகம் பரந்து செல்லுதல் இந்தியா சீனாவோடு வாணிகம் நடத்தினமையால், மலாய்க் குடாநாடு முதல் இந்துமாக் கடல் தீவுக் கூட்டங்கள், இந்தோசீனா வரையில் துறைமுகப்பட்டினங்கள் தோன்றியிருந்தன. அவ்விடங்களிலே திராவிடர் நாகரிகத்தின் அடையாளங்கள் காணப்படுகின்றன. ஜhவா, செலிபிசி, பர்மா, சியாம், கம்போதியா முதலிய நாடுகளை நாகரிகத்தால் வளம்பெறச் செய்தது புத்தமத வளர்ச்சியே. இந்நாடுகளினின்றும் நாகரிகம் கொரியா, ஜப்பான் முதலிய நாடுகளுக்குச் சென்றது. கப்பல் வாணிகம் இந்தியமக்கள் கடலோடிகளிற் சிறந்தவர்களாய் விளங்கினார்கள். பெகு, கம்போதியா, ஜாவா, சுமத்திரா, போர்ணியோ, பிலிப்பைன் முதலியன இந்திய மக்களின் குடியேற்ற நாடுகளாயிருந்தன. அவர்கள் தென் சீனா, மலாய்த் தீபகற்பம், அராபியா, ஆபிரிக்காவின் கிழக்குக் கரைகள், பாரசீகம் முதலிய நாடுகளோடும் வாணிகம் புரிந்தனர். பழைய இந்திய மக்களின் கடற் பயணங்கள் பற்றிய சான்றுகள் இந்திய மக்களின் கடல் வாணிகத்தைப் பற்றி உள்நாட்டுப் பிற நாட்டுச் சான்றுகள் பலவுள. உள்நாட்டுச் சான்றுகள், இந்திய இலக்கியங்கள், சிற்பங்கள், ஓவியங்கள், பாலி, சமக்கிருதம், பாரசீகம், தமிழ், மராத்தி முதலிய மொழி இலக்கியங்களிற் காணப்படுகின்றன. வரலாற்றாசிரியர்கள் பிரயாணிகளால் எழுதப்பட்டனவும், ஜாவா, கம்போதியா அழிபாடுகளில் காணப்படும் சிற்பங்களும் ஓவியங்களும் பிறநாட்டுச் சான்றுகளாகும். வரலாற்று ஆசிரியர்கள், யாத்திரிகர்கள் எழுதியவை பெரும்பாலும் சீனம், அராபி, பாரசீகம் முதலிய மொழிகளிற் காணப்படுகின்றன. அசோகச் சக்கரவர்த்தி காலத்திற்கு முற்பட்ட இந்தியக் கடல் வாணிகத்தைப்பற்றிய சான்றுகள் இருக்குவேதம், கிறித்துவ வேதத்தின் பழைய ஏற்பாடு, தமிழ் பாலி நூல்கள், எகிப்திய அசீரிய பழம்பொருள் ஆராய்ச்சி முதலியவற்றாற் கிடைக்கின்றன. கிரேக்க உரோமன் வரலாற்று ஆசிரியர்களும் இது குறித்து எழுதியுள்ளார்கள். சந்திரகுப்த மௌரியர் காலத்து வாழ்ந்த சாணக்கியர் செய்த அர்த்த சாத்திரத்திலும் இந்தியக் கடல் வாணிகத்தைப்பற்றிய குறிப்புக் காணப்படுகின்றது. தென்னிந்தியாவில் உரோமன் நாணயங்கள் கி.மு. 200 முதல் கி.பி. 300 வரை உரோமர் இந்தியாவோடு மும்முர மான கடல் வாணிகம் நடத்தினார்கள். அக்காலத்தில் வட இந்தியாவிலும் தென்னிந்தியாவிலுமிருந்து, பட்டு, மணப்பொருள்கள், மணிகள், சாயப் பொருள்கள் முதலியன ரோமுக்கு ஏற்றுமதியாயின. இதற்குச் சான்றாக வட இந்தியாவிலும், தென்னிந்தியாவிலும் உரோமன் நாணயங்கள் காணப்பட் டன. அவற்றில் தென்னாட்டிற் காணப்பட்ட நாணயங்களே அதிகம். சமக் கிருத பாலி நூல்களில் உரோம்நகர், ‘உரோமகா’ எனக் குறிப்பிடப்பட் டுள்ளது. கிரேக்க நாட்டையும் உரோம நாட்டையும் தமிழ் நூல்கள் யவனம் எனக் குறிப்பிட்டுள்ளன. யவனர் முசிறி, புகார் முதலிய துறைகளில் வந்து புரிந்த வாணிகத்தைப்பற்றித் தமிழ் நூல்கள் பெரிதும் கூறியுள்ளன. அயல் நாட்டு வணிகரும் இந் நிகழ்ச்சியைக் குறிப்பிட்டுள்ளார்கள். அவைகளுள் பிளினி எழுதிய இயற்கை வரலாறு, பெரிபுளூஸ் (Periplus of Erythian sea) தாலமி, ஸ்ட்ராபோ, அகத்திரசிடிஸ் (Agatharcides) முதலியோர் எழுதியவை களில் காணப்படும் குறிப்புக்களே முக்கியமுடையன. கி.பி. நாலாம் நூற்றாண்டுக்கும் ஏழாம் நூற்றாண்டுக்குமிடையில் இந்தியமக்கள் கிழக்கே சென்று பல நாடுகளிற் குடியேறினார்கள். பர்மா, மலாக்கா முதலிய நாடுகள் கலிங்கர் வங்காளர்களாற் குடியேறப்பட்டன. பர்மிய பட்டையங்களில் இதற்குச் சான்று உளது. பாகியன், ஹியன்திசாங் முதலிய சீனப் பயணக்காரரும் இதைக் குறிப்பிட்டுள்ளார்கள். இந்தியா, ஜப்பான் தீவோடு வாணிகம் நடத்தினது இந்திய நாட்டுக்கும் சீனாவுக்கும் இடையில் நடந்த வாணிகத்தைப் பற்றிச் சீன நூல்கள் கூறுகின்றன. ஹியன்திசாங் என்னும் சீனப் பயணக் காரன் எழுதியுள்ளவை நம்பத் தகுந்த நல்ல சான்றுகளாகும். கி.பி. ஏழாம் நூற்றாண்டு முதல் முகமதியர் காலம் வரையில், இந்தியக் கடல் வாணிகம் கிழக்கிலும் மேற்கிலும் அகன்றிருந்தது. இது ஜப்பான் தீவுகள் அளவும் விரிந்திருந்தது. இதைக் குறித்து ஜப்பானிய நூல்கள் குறிப்பிடுகின்றன. ஐ-திசிங் என்பான் (I-Tsing. கி.பி. ஏழாம் நூற்றாண்டு) கிழக்கே இந்தியரின் கப்பல் வாணிகப் பெருக்கத்தைக் குறிப்பிட்டுள்ளான். சீனர் சோழநாட் டோடு வாணிகம் புரிந்ததைப் பற்றிச் சீனநூல்களும் கூறுகின்றன. 700 சோழரோடு இலங்கை சென்ற விசயராசனின் மரக்கலம் கப்பல் கட்டும் முறையைப்பற்றியும் அவைகளுக்குப் பயன்படுத்தப் படும் மரங்களைப் பற்றியும், கப்பல் வகைகளைப் பற்றியும், அவைகளின் நீளம் அகலங்களைப் பற்றியும் பழைய வடமொழி நூல்கள் கூறுகின்றன. இராசாவளி என்னும் சிங்கள நூலில், வங்காள இளவரசனாகிய விசயன், தனது தோழர்களோடு இலங்கைத் தீவுக்குச் சென்ற மரக்கலம் எழுநூறு பேரை ஏற்றிச் சென்றதெனக் கூறுகின்றது. பாண்டி நாட்டிலிருந்து இராச குமாரியை இலங்கைத் தீவுக்குக் கொண்டுசென்ற கப்பல், எண்ணூறு பேரைக் கொண்டு சென்றதென மகாவம்சம் என்னும் நூல் கூறுகின்றது. சாதக பாதக என்னும் பாலி நூல் புத்தரின் முற்பிறப்பில் அவர் உட்பட்ட 700 பேரை ஏற்றிச் சென்ற கப்பல் உடைந்ததைப்பற்றிக் கூறுகின்றது. இந்தியக் கப்பல்களைக் காட்டும் ஓவியங்களும் சிற்பங்களும் இந்தியக் கப்பல்கள் சில சாஞ்சிக் கோபுரத்தில் வெட்டப்பட்டுள்ளன. சாஞ்சிக் கோபுரத்தின் காலம் கி.மு. 2ஆம் நூற்றாண்டு. அசந்தாக் குகை ஓவியங்களிலும் பழைய இந்தியக் கப்பல்கள் தீட்டப்பட்டுள்ளன. அசந்தாக் குகை வேலைப்பாடுகள் கி.மு. இரண்டாம் நூற்றாண்டு முதல் கி.பி. 7ஆம் அல்லது எட்டாம் நூற்றாண்டு வரையிற் செய்யப்பட்டவை. ஹியான்தி சியாங், இக் குகைகளைப் பற்றிக் கூறியிருக்கின்றான். அவன் அசந்தாவுக்குச் செல்லவில்லை; ஆனால் மராட்டிய அரசனாகிய இரண்டாம் புலிகேசியின் தலைநகரில் இருந்தான். அசந்தாக் குகைகளில் காணப்படும் கப்பல்களின் ஓவியங்கள் கி.பி. 525-க்கும் 650-க்கும் இடையில் எழுதப்பட்டன வாகலாம். புலிகேசி காலத்தில் அரசாங்கக்கடற்படை அமைக்கப்பட்டிருந்தது. அசந்தாக் குகைகளிற் காணப்படும் வள்ளங்களும் கப்பல்களும் இந்தியரின் பழைய கடல் வாணிகத்தைக் குறிப்பிடுவன. அசந்தாக் குகைகளில், விசயன் தனது பரிவாரங்களோடு இலங்கைத்தீவில் இறங்கும் காட்சி எழுதப் பட்டுள்ளது. ஆந்திர நாணயங்களில் இரண்டு பாய் மரமுள்ள மரக்கலம் பழைய இந்திய நாணயங்களில் கப்பல்கள் பொறிக்கப் பட்டுள்ளன. அவை அக்கால இந்தியரின் கடல் வாணிகப் பெருக்கத்தை விளக்குகின் றன. கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் அடிக்கப்பட்ட ஆந்திரநாட்டு நாணயங் களில் இரண்டு பாய் மரமுள்ள மரக்கலங்கள் காணப்படுகின்றன. அக் காலத்தில் ஆந்திரர், கடல், தரை என்னும் இரு வழிகளாலும் மேற்கு ஆசியா, கிரீஸ், உரோம், எகிப்து, சீனா முதலிய நாடுகளோடு வாணிகம் நடத்தி வந்தனர் என, சுவெல் (R. Swell) என்பார் கூறியுள்ளார். இராமாயணம், இந்தியாவுக்கும் தூரநாடுகளுக்கு மிடையில் நடந்த கடற்பயணங்களைப் பற்றிக் கூறுகின்றது. முப்பது நூற்றாண்டுகளாகப் பினீசியர், யூதர், அசீரியர், கிரேக்கர், எகிப்தியர், உரோமர் முதலியவர்களோடு முற்காலத்தும், அண்மையில் துருக்கியர், வெனீசியர், போர்த்துக்கேசியர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் முதலியவர்களுடனும் இந்தியர் வாணிகம் நடத்தினர். இந்தியா வெளிநாடு களுக்குப் போக்கிய பொருள்களுள், பட்டு முதன்மையானது. இது பொன்னுக்குச் சமமாக நிறுத்து விற்கப்பட்டது பட்டுக்கு அடுத்தபடியி லுள்ளவை பருத்தி ஆடை, மசிலின் துணி முதலியன. எண்ணெய், பித்தளைப் பொருள்கள், மருந்துப் பொருள்கள், மணச்சரக்குகள், மிளகு, கறுவா முதலியனவும் உரோமரால் விரும்பி வாங்கப்பட்டன. இந்தியர், ஆண்டுதோறும் 400,000 தங்க நாணயம் பெறுமதியான பொன்னை உரோமி லிருந்து வாணிகப் பண்டங்கள் மூலம் கவர்ந்துகொள்கின்றனர் எனப் பிளினி கூறியுள்ளார். இந்தியர் பாபிலோனியர் வாணிகம் டாக்டர் சேஸ் (Dr. Sayce), இந்தியா பாபிலோனோடு கி.மு. 3000 வரையில் வாணிகம் செய்ததென்று கூறியுள்ளார். இது ஊர்பாகாஸ் (Ur Bagas) என்னும் ஐக்கிய பாபிலோனின் முதல் வேந்தன், சால்தியாவிலுள்ள ஊரிலிருந்து ஆட்சிபுரிந்தபோது ஆகும். இது இந்தியத் தேக்கமரம் அங்கு காணப்பட்டதால் அறியப்படுகின்றது. ஹீவிட் (Hewitt) என்பார் அது மலையாளக் கரையிலிருந்து கொண்டு செல்லப்பட்டதெனக் கூறியுள்ளார். இந்தியாவுக்கும் பாபிலோனுக்கு மிடையில் கடல் வாணிகம், கி.மு. 7ஆம் நூற்றாண்டுக்கு முன்னிருந்தே நடந்ததென எழுத்துச்சான்று மூலம் நிலைநாட்டலாம் என்று கென்னடி (Kennedy) கூறியுள்ளார்; கி.மு. 6ஆம் நூற்றாண்டில் தெளிவான சான்று காணப்படுகின்றது. பாபிலோனில் இந்தியத் தேக்கமரத் துண்டு இரசாம் (Rassam) என்பார், நெபுச்சண் நேசர் (கி.மு. 604-562) அரசனின் அரண்மனையிற் கண்டுபிடித்த தேக்கமரத்துண்டு இப்பொழுது இலண்டன் நூதன பொருட்காட்சிச் சாலையில் உள்ளது. பவேரு சாதகக்கதைகளில் (கி.மு. 500) இந்திய வணிகர் பாபிலோனுக்கு மயில்களைக்கொண்டு சென்ற வரலாறு காணப்படுகின்றது. பேராசிரியர் பூலர், (Buhler) இது இந்தியாவின் மேற்குக்கரை வணிகர் கி.மு. 5ஆம் அல்லது கி.மு. 6ஆம் நூற்றாண்டுகளிற் செய்த கடற்பயணங்களைக் குறிக்கின்றதெனக் கூறுவர். இவ் வாணிகம், இதற்குப் பல காலம் முன்தொட்டே நடந்திருக்கலாம். கிரேக்க மொழியில் தமிழ்ச் சொற்கள் கி.மு. 5ஆம் நூற்றாண்டில், அரிசி, மயில், சந்தனக் கட்டை முதலி யவைகளின் இந்தியப் பெயர்கள் கிரேக்க மொழியில் வழங்கின. இப் பண்டங்கள் இந்தியாவின் மேற்குக் கரைகளிலிருந்து ஏற்றுமதியாயின. இதனையே பவேருசாதகம் குறிப்பிடுகின்றது. பாபிலோனுக்கும் இந்தியா வுக்கும் வாணிகத் தொடர்பு கி.மு. 480 வரையில் முடிவடைந்திருக்கலாம். மயிலும் அரிசியும் கிரேக்க நாட்டுக்கு கி.மு. 470 வரையில் சென்றிருக்கலாம். அப்பண்டங்கள் கி.மு. 430இல் பொதுவாக அங்கு கிடைக்கத் தக்கனவா யிருந்தன. இச் சான்றுகள் பாபிலோனுக்கும் இந்தியாவுக்கும் கி.மு. 7ஆம் 6ஆம் நூற்றாண்டுகளில் கடல் வாணிகம் நடந்ததென வலியுறுத்துகின்றன. இவ்வாணிகம் திராவிடர் கையில் இருந்தது. ஆரியர் இதில் பங்காளி களாயிருந்தனர். இந்திய வணிகர் பிற்காலத்தில் கிழக்கு ஆபிரிக்க சீனக் கரைகளிற் குடியேறினர். அவர்கள் பாபிலோனிற் குடியேறவில்லையென நாம் ஐயப்பட வேண்டியதில்லை. இக் கருத்துப் பற்றி ஆராய்ச்சி நடத்திய ரைஸ் டேவிட் இதே முடிவை வெளியிட்டுள்ளார். இவ் வணிகர் திராவிடரேயன்றி ஆரியரல்லர் என்பது அவர் துணிபு. சாலமன் காலத்தில் மேற்கு ஆசியாவுக்குக் கொண்டு செல்லப்பட்ட தந்தம், குரங்கு, மயில், அரிசி முதலியவைகளின் பெயர்கள் சமக்கிருதம், பாலி முதலிய பெயர்கள் அல்லாது தமிழ்ப் பெயர்களாகவே இருக்கின்றன. இந்திய வாணிகத்தைப் பற்றி எழுதிய ஜாக்சன் (A.M.T. Jackson) இதே கருத்தை வெளியிட்டுள்ளார். லெனோர்மாண்ட் (Lenormant) கூறுவது வருமாறு: “ஹற்றாசு (Hatasu) என்பவனின் தலைமையின் கீழ் பண்டு (Punt) நாட்டை வெற்றி கொண்ட வரலாறு தீப்ஸ் நகரிலே தெர் எல் பஃறி என்னும் கோவில் சுவரில் எழுதப்பட்டுள்ளது. பரோவாவுக்கு எகிப்திய அரசன் வெற்றிப் பொருள்களாகக் கொண்டு போகப்பட்ட பொருள்கள் ஏமனுக்குச் (Yemen) சொந்த மல்லாதனவும், இந்திய நாட்டுக்குரியனவுமாகக் காணப்படுகின்றன. அவை தந்தம், பொன், இரத்தினம், சந்தனக்கட்டை, குரங்கு முதலியன. வான் போகென் (Von Bohen), ஹெரன், (Heeran) கூறியவைகளை உறுதிப் படுத்தி இந்தியாவுக்கும் அராபியாவுக்கு மிடையில் மிகப் பழங்காலந் தொட்டே வாணிகம் நடைபெற்ற தென நாட்டியுள்ளார்.” புளிய மரங்கள், நீலம் முதலிய இந்தியப் பொருள்கள் எகிப்திய சமாதிகளிற் காணப்பட்டன என்று வில்கின்சன் என்பார் கூறியுள்ளார். எகிப்தியர், ஆடைகளுக்கு அவுரி நீலத்தால் சாயமூட்டினார்கள் என்றும், அவ்வகைத் துணிகளால் எகிப்தியரின் பக்குவஞ் செய்யப்பட்ட பிரேதங்கள் சுற்றப்பட்டுள்ளன என்றும் இலாசன் (Lassen) கூறியுள்ளார். மோசே காலக் குருமார் (கி.மு. 1491-1450) மார்புக்கவசத்தில் (Breast Plate) அணிந்திருந்த இரத்தினங்கள் இந்திய நாட்டினின்றும் சென்றனவாகலாம் எனப் பால் (Prof. V. Ball) புகன்றுள்ளார். பைபிளின் உற்பத்தியாகமத்தில் வணிகக் கூட்டத்தினர் ஒட்டகங்களில் மணப் பொருள்களை ஏற்றிக்கொண்டு எகிப்துக்குச் சென்றார்கள் என்னும் வரலாறு காணப் படுகின்றது. இந்திய நாட்டிலிருந்தே தந்தம், உடைகள், மணப் பொருள்கள் மயில்கள் முதலியவைகளைச் சீரிய வணிகர் பெற்றிருக்க முடியும். அரசர்-1இல் சாலமனின் மரக்கலங்கள் அகிற்கட்டை, இரத்தினக் கற்கள், பொன் முதலியவைகளை ஒபிரினின்றும் வாங்கிச் சென்ற வரலாறு காணப்படுகின்றது. எசாக்கியேலில் தயர் நாட்டு வாணிகப் பண்டங்களாகக் கூறப்படுபவை இந்திய நாட்டினின்றும் சென்றனவே. பைபிளின் பழைய ஏற்பாட்டின் அரசரைப் பற்றிய புத்தகத் தில் திராவிடச் சொற்கள் பல காணப்படுகின்றன. துகி, அஹவிம் முதலியன தோகை, அகில் முதலிய தமிழ்ச் சொற்களின் திரிபுகள். டாக்டர். கால்ட்வெல், வோல்கஸ் (T. Foulkes) என்னும் ஆசிரியரும் இக்கருத்தையே வலியுறுத்தி யுள்ளார். “கன்னியாகுமரிக்கு ஏறக்குறைய ஆறுமைல் தொலைவில் உவரி அல்லது ஓவரி என்ற செம்படவர் வாழும் கிராமம் ஒன்று இருக்கின்றது. அக்கிராமம் பைபிளிற் கூறியுள்ள ஒபிர் நகரிருந்த இடத்தில் இருக்கிறதென நான் நம்புகிறேன். அதற்குப் பல காரணங்கள் உள. அது செம்படவர் வாழும் முக்கிய கிராமமான போதும் அதைப் போலொத்த மற்றக் கிராமங்களுக்கு வித்தியாசமான கல்லாலமைந்த உறுதியான கோயில் அதற்கு உண்டு. அக் கோயில் இந்தியாவிலுள்ள மற்றக் கோயில்களைப் போலவே, அதிகப் பழமை யானதாயும் தேசத்தின் நானா திசைகளிலிருந்து மக்கள் அங்கே கடவுள் வழிபாட்டுக்கு வரும்படியான அவ்வளவு மகிமையுடைதாயும் இருக்கின்றது. இதனால் அது ஒரு காலத்தில் அதிகப் புகழ் பெற்றிருந்த தென்று தோன்றுகின்றது. உவரி என்றால் தமிழில் கடற்றுறைமுகம் என்று பொருள்; அதாவது உப்பு என்று பொருள் தரும் உவர் என்ற மொழியுடன் சம்பந்தப்பட்டது. இக் குறிப்புக்களினின்றும் உவரி வாணிகத்துக்குப் பேர்போன இடமாயிருந்திருக்கவேண்டு மென்றும், முக்கிய வாணிக இடம் ஆனதினால், அதை உவரி அல்லது சிறப்புடைய துறைமுக மென்று அழைத்தார்கள் என்றும், யூதர் அதற்கு உவரியே பேர் என்று தப்பாக நினைத்தார்கள் என்றும் ஐயமின்றிக் கூறலாம். இவ் வகை தப்பான எண்ணங்கள் தென்னிந்தியாவில் தோன்றுகின்றன. உதாரணமாக நூற்றில் 95 பேர் சென்னையைப் பட்டினமென்றே அழைக்கிறார்கள். உவரிக் கிராமத் தின் வெளித்தோற்றத்தைக் கவனித்தால் அங்குள்ள மணல் மேடுகள் தரை யிலிருந்து வெட்டப்பட்டுக் குவிக்கப்பட்ட மேடுகள் போலக் காணப்படு கின்றன. பெருமழை பெய்து இந்த மணல் மேடுகள் கரையும்போது, மக்கள் அம் மணல் மேடுகளிலிருந்து பொன் நாணயங்களை எடுக்கிறார்கள். அக் கிராமவாசிகள் இந் நிகழ்ச்சியைக் கூறும்போது, தங்கள் கிராமம் பூர்வ காலத்தில் மகிமை பெற்றிருந்த ஒபிர் நகரமென்று பெருமையை நாட்டவ ராமல், தங்கள் கிராமம் முற்காலத்தில் செல்வர் வாழ்ந்த இடமென்றும், இறக்கும்போது அவர்கள் பொன்னையும் செல்வத்தையும் அவ் விடத்தில் விட்டுச் சென்றார்கள் என்றும் சாதாரணமாகச் சொல்கின்றார்கள். Essays by S.V. Thomas M.A., p. 85. 1சாலமன் அரசன், கிழக்குத் தேசங்களோடு வாணிகம் செய்வதில் விருப்பங்கொண்டிருந்தான். அவனுடைய கப்பல்கள் செங்கடல் வழியாகப் பாரசீகக் குடாவைக் கடந்து சென்றன. பினீசியர் தையர் நகரைத் தமது இராசதானியாகக் கொண்டு வாணிகம் புரிந்தனர். அலக்சாந்தர் தையர் பட்டினத்தை வென்ற பின்பும், அவன் அலக்சாந்திரியாப் பட்டினத்தை அமைத்த பின்பும், எகிப்தியர் இவ் வாணிகத்தை நடத்திவந்தார்கள். யூத, பினீசிய, பாரசீக, மேற்கு ஆசிய நாடுகளின் வீழ்ச்சிக்குப் பின் இவ் வாணிகம் பெரும்பாலும் அராபியர் கையில் இருந்தது. நாம் இதுவரை கிறித்துவ வேதத்தில் இந்தியாவோடு பிறநாடுகள் வாணிகம் செய்த செய்திகள் காணப்படுவதைப் பற்றிக் கூறினோம். ஏரதோதசு (Heradotus) கி.மு. 450) என்னும் கிரேக்க ஆசிரியர் இந்திய நாட்டைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். கம்பளி இந்தியாவிலே மரங்களிற் காய்க்கின்றதென்றும் அது, ஆட்டு மயிரிலும் பார்க்கச் சிறந்த தென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். பாபிலோனியர் நாய்களையும் இரத்தினக் கற்களை யும் இந்தியாவினின்றும் பெற்றார்கள். இந்தியர், தரியஸ் (Darius) அரசனுக்குத் திறைப்பொருளைப் பொன்னாகக் கொடுத்தார்கள் என்றும் திறைப் பொரு ளின் அளவு 1,290,000 தங்க நாணய நிறை என்றும், இந்தியா பொன்னால் வளம் பெற்றதென்றும், ஒரு சாதி எறும்புகள் பொன்னைக் கிண்டி எடுக்கின் றன என்றும் எரதோதசு கூறியுள்ளார். கசியஸ் (Ctesias) கி.மு. 400 இந்தியாவி னின்றும் கிடைக்கும் பொருள்களாகக் குறிப்பிட்டவைகளுள் கறுவா ஒன்று. கறுவா என்பது திராவிடப் பெயராகக் காணப்படுகின்றது. பிளினி கூறும் விவரம் அலக்சாந்தர் கி.மு. 325-ல் இந்தியா மீதுபடையெடுத்தார். அரியன் (Arrian), கர்ட்டிஸ் (Curtius) என்பார் இந்தியாவைக்குறித்து எழுதியவை களால் பல செய்திகள் விளக்கமாகின்றன. அலக்சாந்தரின் படை எடுப்புக் காலம் வரையில் கப்பல்கட்டும் தொழில் மிக்க செழிப்புற்றிருந்தது. அக் காலத்தில் கடல், ஆறு என்பவைகளால் வாணிகம் அதிகம் நடந்தமையே அதற்குக் காரணமாகும். அரியன் முப்பது துடுப்புக்களால் ஓட்டப்படும் இந்திய மரக்கலங்களைப்பற்றிக் கூறியுள்ளார். இலங்கைக்கும் இந்தியா வுக்குமிடையில் செய்யப்படும் கப்பற் பயணத்தைப் பற்றிப் பிளினி கூறி யிருக்கின்றார். அவ்விவரம் வருமாறு. “இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலுள்ள கடல் மிகவும் ஆழமில்லாதது; சில இடங்களில் ஆறு அடி ஆழ முண்டு; சில இடங்கள் நங்கூரம் பாய்ச்சமுடியாத ஆழமுடையன. இதனால் கப்பல்கள் இரண்டு பக்கங்களிலும் முன்னணியம் இருக்கும்படி கட்டப்படுகின்றன அவ்வாறு செய்வதால் ஒடுங்கிய வாய்க்கால்களில் அவைகளைத் திருப்புதல் எளிதாகும். இலங்கைக்குச் செல்லும் பாதையில் மாலுமிகள் நட்சத்திரங்களை நோக்கித் திசையை அறிவதில்லை. அவர்கள் பறவைகளைக் கொண்டு செல்கின்றார்கள். இடையிடையே அவர்கள் அவைகளைத் திறந்து பறக்கவிடுவார்கள். பறவைகள் தரையை நோக்கிப் பறந்து செல்லும். அத்திசையாக அவர்கள் மரக்கலங்களை ஓட்டிச் செல்வர். இந்தியக் கப்பல்கள் 2500 டன் நிறையுள்ளன.” கௌடலியர் அர்த்த சாத்திரத்தில், மௌரிய-சந்திரகுப்தன் காலத்தில் இருந்த மரக்கல நிர்வாகத்தைப்பற்றிக் கூறியுள்ளார். அசோகச் சக்கரவர்த்தி காலத்தில் சீரியா, எகிப்து, மாசிடோனியா, இலங்கை, பர்மா, சீனம் முதலிய நாடுகளோடு இந்தியா தொடர்பு வைத்திருந்தது. உரோமுக்குத் தென்னிந்திய மன்னரின் தூதர் ஆந்திரர் காலத்தில் (கி.மு. 200-கி.பி. 250) கடல் வழியாகவும் தரை வழியாகவும் மேற்கு ஆசியா, கிரீஸ், உரோம், எகிப்து, சீனா முதலிய நாடு களோடு அதிக வாணிகம் நடைபெற்றது. தென்னிந்திய அரசரிடமிருந்து தூதர்கள் உரோமுக்குச் சென்றார்கள். இந்திய யானைகள் சீரிய அரசர் போர்களில் பயன்படுத்தப்பட்டன. இந்தியாவினின்றும் அதிக மணப் பொருள்கள் வெளிநாடுகளுக்குச் சென்றனவெனப் பிளினி குறிப்பிட் டுள்ளார். அவர் கூற்றினை பெரிப்புளூஸ் என்னும் நூலின் ஆசிரியர் வலி யுறுத்தியிருக்கின்றார். தென்னிந்தியாவில் அதிக உரோமன் நாணயங்கள் காணப்பட்டன. கி.பி. 68-ல் உரோமரின் கொடுங்கோலுக்கு அஞ்சிய யூதர்கள் இந்தியாவின் மேற்குக் கரையை அடைந்து கொச்சியிற் குடியேறி னார்கள். குசான் அரசர் காலத்தில் இந்தியாவுக்கும், மேற்கு நாடுகளுக்கு மிடையில் போக்குவரத்து வளர்ச்சி யடைந்திருந்தது. இந்தியா இரத்தினக் கற்கள், பட்டு, மணப்பொருள் முதலியவைகளைக் கொடுத்து உரோமி லிருந்து வாங்கிக்கொண்டு வரப்பட்ட பொன் நாணயங்களோடு, உரோமக் கலைகளும் இந்திய நாட்டை அடைந்தன. உரோமரின் முக்கிய வாணிகத் துறைமுகங்கள் தென்னிந்தியாவி லிருந்தன. சாலமன் அரசன் காலத்தில் இத்துறைமுகங்களிலிருந்து பண்டங்கள் மேற்குத் தேசங்களுக்கு ஏற்றப்பட்டன. கிறித்துவ மறையில் பல தமிழ்ச் சொற்கள் காணப்படுகின்றன. வட இந்தியாவிற் கிடைத்த உரோமன் நாணயங்களினும் பார்க்கத் தென்னிந்தியாவிலே கோயமுத்தூர்ப் பகுதியிலும் மதுரையிலும் கிடைத்தவை மிகப்பல. பெரிதும் தக்கணத்திலும் தென்னிந்தியாவினின்றுமே பண்டங்கள் உரோமுக்குச் சென்றன. இதுவே வட நாட்டில் அதிக உரோமன் நாணயங்கள் கிடையாமைக்குக் காரண மாகும். வடக்கே ஆட்சி புரிந்த குசான் மன்னர் உரோமன் நாணயங்களை உருக்கிப் புதிய நாணயங்களை அடித்தனர். இது உரோமன் நாணயங்கள் அதிகம் வடக்கே காணப்படாமைக்கு மற்றொரு காரணமாகும். ஸ்ராபோ செங்கடல் வழியாக இந்தியாவுக்குச் செல்லும் 120 கப்பல்களைப் பார்த்தார் தென்னிந்தியhவின் கிழக்குக்கரைகளிற் கண்டெடுக்கப் பட்ட பழைய நாணயங்களில் இரண்டு பாய் மரங்களுள்ள மரக்கலம் பொறிக்கப் பட்டுள்ளது. இந்தியாவின் மேல் நாட்டு வாணிகம் அகஸ்தஸ் சக்கரவர்த்தி காலத்தில் மிக அதிகம் நடைபெற்றது. அதற்கு முன் இந்தியா எகிப்தோடு வாணிகம் புரிந்தது. தாலமி பிலாடி பஸ் (Ptolemy Philadepus கி.மு. 285-247) என்னும் எகிப்திய அரசனோடு அசோகச் சக்கரவர்த்தி தொடர்பு வைத் திருந்தார். தாலமி பிலாடி பஸ் என்பவனே அலக்சாந்திரியா பட்டினத்தை அமைத்தான். அது பிற்காலத்தில் பெரிய வாணிக முகாமாக மாறிற்று. எகிப்தியக் கடற்கரை ஓரங்களில் திறக்கப்பட்ட பர்நிக்கா (Berenica) மியோஸ் ஒமிஸ் (Myos Hormes) என்னும் இரு பட்டினங்கள் வழியாக அலக்சாந்திரியா வுக்குப் போக்குவரத்து நடந்தது. இத் துறைமுகங்களிலிருந்து மரக்கலங்கள் அராபிய, பாரசீகக் கரைகள் வழியாக இந்தியாவுக்குச் சென்றன. மியோஸ் ஒமிஸ் என்னும் துறைமுகத்திலிருந்து இந்தியாவுக்குச் செல்லும் 120 மரக்கலங்களை நேரில் பார்த்ததாக ஸ்ராபோ குறிப்பிட்டுள்ளார். இந்தியாவுக்கும் மேற்குத் தேசங்களுக்கும் வணிகப் பாதைகள் தரை வழியாகவும் இருந்தன. மத்திய ஆசியாவுக் கூடாக விருந்த பாதை ஆக்ச (Oxus) சிலிருந்து காஸ்பியனுக்கும் அங்கிருந்து கருங்கடலுக்கும் சென்றது. இன்னொன்று பாரசீகம் வழியாகச் சின்ன ஆசியாவுக்குச் சென்றது. பாரசீகக் குடாவிலும் யூபிராத்திலும் தொடங்கிய இன்னொரு பாதை டமஸ்கஸ், பல்மைரா இலவண்ட் (Lavant) முதலிய பட்டினங்களைத் தொடுத்தது. கால் நடைகள் மூலம் செய்யப்பட்ட இவ்வாணிகம் பெரும் பயனுடையதா யிருக்கவில்லை. யவனர் என்பது கிரேக்கரைக் குறிக்கும் பெயர் குளாடியஸ் (Cladius) என்னும் உரோம அரசனுக்குப் பின், தென்னிந்தியாவினின்றும் வாணிகப்பண்டங்கள் கடல் வழியாகச் சென்றன. அவை அராபிய வாணிகத்துறைகளையும் அலெக்சாந்திரியாவையும் அடைந்தன. இந்திய வாணிகப் பொருள்களைப் பெரிதும் கையாண்ட வர்கள் எகிப்திய கிரேக்கராவர். இவ் வியாபாரப் பொருள்களின் பெயர்கள் கிரேக்க மொழியிற் காணப்படுகின்றன. கிரேக்க மொழியில் அரிசியைக் குறிக்கும் ஒரிசா, இஞ்சியைக் குறிக்கும் சிஞ்சிபர், கறுவாவைக் குறிக்கும் கார்பிஒன் முதலியன அரிசி, இஞ்சி வேர், கறுவா முதலிய தமிழ்ச் சொற் களின் திரிபுகளாகும். இதனால் இப்பண்டங்களையும் இவைகளின் பெயர் களையும் தமிழ் நாட்டினின்றும் ஐரோப்பாவுக்குக் கொண்டு சென்றவர்கள் கிரேக்கர் எனத் தெரிகின்றது. மேற்குத் தேச வணிகரைக் குறிக்க சமக் கிருதத்தில் வழங்கியயவன என்னும் சொல் கிரேக்கரைக் குறிக்கின்றது. அச் சொல் அயோனீஸ் (Iaones) என்னும் கிரேக்கச் சொல்லின் திரிபு. இப்பெயர் பழைய தமிழ் இலக்கியங்களிலும் காணப்படுகின்றது. கிரேக்க மரக்கலங்கள் 40 நாள்களில் முசிறியை அடைந்தன எகிப்திலுள்ள கிரேக்க வணிகர், முந்திரிகை இரசம், பித்தளை, ஈயம், கண்ணாடி முதலியவைகளை, வக்கறை, முசிறி முதலிய துறைமுகங்களில் கொண்டுவந்து விற்றார்கள் என்றும், இத் துறைகளிலிருந்து மிளகு, வெற்றிலை, தந்தம், முத்து, மசிலின் ஆடை முதலியவைகளை வாங்கிச் சென்றார்கள் என்றும், பெரிபுளூஸ் என்னும் நூல் கூறுகிறது. கிரேக்க வணிகர் ஆடி (July) மாதத்தில் புறப்பட்டு முசிறிப் பட்டினத்தை நாற்பது நாள்களில் அடைந்தார்கள்; அடைந்து, மலையாளக் கரைகளில் மூன்று மாதங்கள் தங்கினார்கள். அவர்கள் அங்கு நின்றும் மார்கழி அல்லது தை மாதத்தில் புறப்பட்டார்கள். இவ்வாணிகம் அகஸ்தஸ், நீரோ (Nero) அரசர் காலங்களில் உச்ச நிலை அடைந்திருந்தது. கிழக்குக்கும் மேற்குக்குமுள்ள வணிகப் பாதைகள் உரோமர் வசம் இருந்தன. கிழக்குத் தேசங்களில் கிடைக் கும் உல்லாசப் பொருள்களின் தேவை, உரோம் நாட்டுச் செல்வருக்கு அதிகரித்தது. பிளினி, (கி. பி. 77) மணப் பொருள்கள், அணிகலன்கள் முதலியவைகளால் இந்தியா ஆண்டுதோறும் 400,000 தங்க நாணயம் பெறுமதியான உரோம நாட்டுச் செல்வத்தைக் கவர்ந்துகொள்கின்றதென்றும், இந்தியப் பண்டங்கள் உரோமில் அவைகள் கொள்விலையினும் பார்க்க நூறு மடங்கு அதிகவிலைக்கு விற்கப்படுகின்றனவென்றும் கூறியுள்ளார். ஹிப்பாலஸ் (Heppalus கி.பி. 47) என்பவரால், இந்தியாவுக்குக் கப்பல்கள் செல்லக்கூடிய பருவக் காற்றுக் கண்டுபிடிக்கப்பட்டது. உரோமர் மணப்பொருள்களைப் பிரேதங்கள்மீது கொட்டி எரித்தல் உரோமர் இந்தியாவினின்றும் வாங்கிச் சென்ற பண்டங்கள், மணப்பொருள்கள், இரத்தினக் கற்கள், முத்து, பட்டு, மசிலின், பஞ்சு ஆடை முதலியன. உரோம நாட்டு ஆலயங்களில் அதிக மணப் பொருள்கள் எரிக்கப்பட்டன. இறந்தவர்களின் உடல் மீதும் அதிக மணப் பொருள்கள் கொட்டி எரிக்கப்பட்டன. சிலா (Sylla) என்பவரின் சவத்தின்மீது 210 மூட்டை மணப்பொருள்கள் கொட்டி எரிக்கப்பட்டன. பொப்போஆ (PoPPeoa) என்பவரின் சவத்தின் மீது ஒரு நாட்டின் ஓராண்டு விளைவத்தனை கறுவா, இலவங்கம் முதலியவைகளைக் கொட்டி நீரோ அரசன் எரித்தான். இம் மணப்பொருள்கள் உரோமருக்கு அராபியரால் விற்கப்பட்டவை. அவை களை அராபியர் இந்தியாவினின்றும் பெற்றனர். இந்தியாவில் கிடைக்கும் மிளகு, இஞ்சி என்பவைகளைப்பற்றியும், அவை பொன்னுக்கும் வெள்ளிக் கும் சமமாக நிறையிட்டு உரோமில் விற்கப்பட்டமையைப் பற்றியும் பிளினி குறிப்பிட்டுள்ளார். திபேரியஸ் ஸீஸர் (Tiberious Caesar) என்பார், 1பட்டு இடக்கரான உடை எனக் கொண்டு இறக்குமதியைத் தடுக்கும் சட்டம் செய்தார். தமிழ் நாட்டில் மிளகு, முத்து, மரகதம் என்னும் மூன்று வகை அரிய பொருள்கள் கிடைத்தன. ஐரோப்பியச் சந்தைகளில் மிளகுக்கு நல்ல விலை கிடைத்தது. தென்கடலில் குளிக்கப்படும் முத்துக் களுக்காக உலகம் முழுமையிலுமுள்ள வணிகர் கூடினார்கள். கோயமுத்தூரி லும் பாடியூரிலும் பச்சைக்கற்கள் கிடைத்தன. உரோமன் வாணிகம் ஓய்ந்து போதல் தமிழ் அரசர் பலமுள்ள கடற்படை வைத்திருந்தனர். தமிழ் நாட்டுத் துறைமுகங்களுக்குக் கிழக்கிலும் மேற்கிலுமிருந்து மரக்கலங்கள் வந்தன. வணிகர், முத்து, மிளகு, பச்சைக் கற்கள் முதலியவைகளை வாங்கிக்கொண்டு அவைகளுக்குப் பதில் பொன், வெள்ளி, ஐரோப்பாவில் செய்த கைத்தொழில் பண்டங்கள் முதலியவைகளைக் கொடுத்தனர். அகஸ்தஸ் முதல் நீரோ (கி.பி. 68) வரையிலுள்ள எண்பது ஆண்டுகளில் அதிக வாணிகம் நடை பெற்றதென்பதற்குத் தென்னிந்தியாவில் அதிகம் கிடைத்த நாணயங்கள் சான்று அளிக்கின்றன. நீரோ முதல், கரகலா (Caracalla கி.பி. 217) காலம் வரை யில் இவ் வாணிகம் ஓய்ந்திருக்கவேண்டும். இக் காலத்திய உரோமன் நாண யங்கள் மிகச் சிலவே காணப்படுகின்றன. கிடைத்த சில நாணயங்களும் பஞ்சு விளையும் இடங்களில் காணப்பட்டன. பிற்காலத்தில் இரத்தினம், மசிலின், பஞ்சு ஆடை முதலியவை உரோ முக்கு அதிகம் தேவைப்படவில்லை. ஆனால் தென்னிந்தியாவின் கிழக்கி லும் மேற்கிலுமிருந்து மிளகும் மணச்சரக்குகளும் அதிகம் ஏற்றுமதியா யின. அலாரிக் என்னும் கொதியன் (Gothic) கி.பி. 408-ல் உரோம் மீது போட் டிருந்த முற்றுகையை எடுப்பதற்கு, அவன் உரோம் மக்களிடமிருந்து பெற்ற திறைப் பொருள்களுள் 3,000 இராத்தல் மிளகு ஒரு பகுதியாகும். தென்னிந்தியாவில் யவனர் குடியேறிய சேரிகள் கிறித்துவுக்குப் பின் இரண்டு நூற்றாண்டுகளில் உரோமன் மக்கள் பலர் தென்னிந்தியாவில் குடியேறியிருந்தார்கள். ஐரோப்பியப் போர் வீரர் வலிய யவனர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளனர். ஊமராகிய யவன வீரர் அரசரின் மெய்காப்பாளராயிருந்தனர். முசிறித்துறைமுகத்தில் யவனக் கப்பல்கள் மிளகுவாங்கும் பொருட்டு காத்துக்கொண்டு நின்றன. தமிழரச ரின் கோட்டைவாயில்களை மிலேச்ச வீரர் காவல் காத்தனர். முசிறிப்பட்டி னத்தில் அகஸ்தஸ் அரசனுக்குக் கோவில் ஒன்று இருந்தது. காவிரிப்பூம் பட்டினத்தில் யவனர் குடியேறிய யவனச் சேரியிருந்தது. சமக்கிருத பாலி நூல்கள் உரோம் நகரை உரோமக எனக் குறிப்பிடுகின்றன. கி.பி. 505 வரையில் இருந்த வராகமிரர் உரோமகாவைப்பற்றி பஞ்சசித்தாந்திகா, விரிகற்சங்கிதை முதலிய நூல்களிற் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் ஞாயிறு உதிக்கும்போது உரோமாகாவில் நடு இரவு என அவர் கூறியுள்ளார். அலக்சாந்திரியா நூல் நிலையத் தலைவரும், பிளினி, தயதோரஸ் (Diodorus) சைத்ஸ் (Agatharcides கி.மு. 177), சாபியா (Yemen) ஐரோப்பாவுக்கும் ஆசியா வுக்கும் வாணிக மத்திய இடமாயுள்ளதென்றும், அதன் செல்வ வளத்துக்குக் காரணம், இந்தியவாணிகத்தின் தனியுரிமையாகும் என்றும் கூறியுள்ளார். பாண்டிய மன்னன் அகஸ்தஸ் சீஸருக்கு கி.மு. 20-ல் தூது அனுப்பி னான் என ஸ்ராபோ குறிப்பிட்டுள்ளார் மலையாளம், மிளகு வாணிகத்துக்கு முக்கிய இடமென்றும், சீனப் பட்டும், கிழக்கு நாடுகளின் இரத்தினக் கற் களும், இலங்கையில் இறக்குமதியாயின என்றும் அது பாரசீகக் குடாவுக் கும், செங்கடலுக்கும், சீனாவுக்கும் மத்தியிலுள்ள வாணிகம் இடம் என்றும், இந்தியா, பாரசீகம், எதியோப்பியா முதலிய நாடுகளிலிருந்து வருங் கப்பல்கள் இலங்கையிலிருந்து வாணிகப் பண்டங்களை ஏற்றிச் செல் கின்றன என்றும் கொஸ்மாஸ் (Csmas, கி.பி. 535) குறிப்பிட்டுள்ளான். தென்னிந்தியரின் கிழக்குநாட்டு வாணிகம் இந்தியா, மேற்கு நாடுகளோடு வாணிகம் நடத்திய காலத்தில் கிழக்கு நாடுகளோடும் வாணிகம் நடத்திற்று. வின்சன் சிமித் “இந்தியாவின் பழைய வரலாறு” (Early History of India) என்னும் நூலில் கூறியிருப்பது வருமாறு: “பழைய தமிழ் இலக்கியங்களும், கிரேக்க உரோம ஆசிரியர்கள் எழுதி யவையும் கிறித்துவுக்குப் பின் இருநூறாண்டுகளில் தென்னிந்திய மேற்குக் கடற்கரைத் துறைமுகங்களோடு, கிழக்கு மேற்குத் தேசங்கள் வாணிகம் புரிந்தன வென்று உறுதிப்படுத்துகின்றது. சோழ நாட்டுக் கப்பல்கள், கரையை அடுத்துச் செல்லுமளவில் நிற்கவில்லை; தைரியமாக வங்காளக் குடாவைக் கடந்து கங்கை, ஐராவதி முகத்துவாரங்களுக்குச் சென்றதோடு, இந்துமாக் கடல் வழியாக மலாய்த் தீவுக் கூட்டங்களுக்கும் சென்றன. சுமத்திரா, ஜாவா, காழகம் (பர்மா), வங்காளம், இலங்கை முதலிய நாடுகளைப் பற்றித் தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.” வங்காளக் குடாக் கடலை அடுத்த கடற்கரைகளில் வாழ்ந்த தெலுங்கர் பர்மாவின் கீழ்ப் பகுதிகளில் குடியேறி அந் நாட்டை வென்றார்கள். இவர்களைப் பர்மியர் தலெயிங் (Talaing) என அழைத்தனர். கி.பி. 800 வரையில் கலிங்கர் பிறநாடுகளிற் சென்று குடியேறத் தொடங்கிவிட்டார்கள். கலிங்க இராசகுமாரரின் கல்வியின் ஒரு பகுதி கப்பற் பயணத்தைப் பற்றியது. பர்மியரின் புத்தகாத் என்னும் புத்த வேதத்தினால் கலிங்க நாட்டில் புத்தவாணிகர் பர்மாவோடு வாணிகத் தொடர்பு வைத்திருந்து புத்த மதத்தைப் பரப்பி இறுதியில் நாட்டுக்கு அதிபதியானார்கள் எனத் தெரிகின் றது. அசோகச் சக்கரவர்த்தி புத்த குருமாரைச் சுவர்ண பூமிக்குப் (பர்மா) போக்கினார். இந்தியரின் முக்கிய குடியேற்ற இடமாகவுள்ளது, புறோம் என்னும் இடத்துக்கு அண்மையிலுள்ள தாரகேத்திரம். (Tara-Khetra.) மலாய் மொழியில் இந்தியச் சொற்கள் இந்தியர் மலாக்காவோடும் வாணிகத் தொடர்பு வைத்திருந்தார்கள் என்பதற்குச் சான்று மலாய் மொழியில் பல இந்தியச் சொற்கள் காணப் படுதலேயாகும். மலாய் நாட்டில் வாழும் இந்தியர் கிளிங் என அழைக்கப் படுகின்றனர். கிளிங் என்பது கலிங்க என்பதின் திரிபு. சர்-வால்டர் எலியட் கூறுவது வருமாறு: முற்காலத்தில் இந்தியாவின் கிழக்குக் கரைகளில் வாழ்ந்த மக்களுக்கும், அதின் எதிர்க்கரையில் வங்காளக் குடாவிலுள்ள நாடு களுக்கும் மலாக்கா முதலிய இடங்களுக்குமிடையில், பழமைதொட்டுப் போக்குவரத்து இருந்து வந்ததென்பதில் சந்தேகமின்று. புத்த சமய வளர்ச்சி உச்சநிலையில் இருந்த காலத்தில் கி.பி. ஐந்தாம் ஆறாம் நூற்றாண்டுகளில் இது நடந்தது. இந்தியாவில் புத்த சமய நெருக்கடி உண்டானபோது பெரும்பாலும் புத்தமதத்தினர் எதிர்க்கரையிலுள்ள நாடுகளுக்கு ஓடிச் சென்றனர். “கி.பி. 75 வரையில் கலிங்க நாட்டினின்றும் சென்ற கலிங்கர், ஜப்பான் தீவை அடைந்தனர். அங்கு அவர்கள் குடியேறி யிருந்து இந்தியாவோடு வாணிகம் நடத்தினர். இது பல நூற்றாண்டுகள் நடைபெற்றது.” எல்பின்ஸ்டன் (Elphinstone) கூறுவது வருமாறு: கலிங்க தேசத்தினின் றும் வந்த பெருந்தொகை இந்தியர் சாவகத் தீவில் இறங்கி அங்கு வாழ்ந்த மக்களை நாகரிகப்படுத்தினார்கள் என்பதற்கும், அவர்கள் தாம் வந்திறங்கிய காலத்தைக் குறிப்பிட்டு வருகிறார்கள் என்பதற்கும் ஆதாரம் காணப்படு கின்றது. இன்றும் அவர்களின் முதல் ஆண்டு கி.பி. 75-ல் தொடங்குகின்றது. சாவாத்தீவின் பொது மொழி மலாயாக இருந்தபோதும், வரலாற்று நூல்களும் அரசியல் ஆவணங்களும் பட்டையங்களும் சமக்கிருதத்தில் உள்ளன. கி.பி. நாலாம் நூற்றாண்டில் சீன யாத்திரிகன் ஒருவன் எழுதிய குறிப்பில், சாவாத் தீவு முழுவதும் இந்தியரால் குடியேறப்பட்டிருக்கின்ற தென்றும், அவர்கள் கங்காநதி முதல் இலங்கைவரையிலும் உள்ள நாடுகளிலிருந்து வந்தார்கள் என்றும், இலங்கையிலிருந்து இந்தியாவுக்கும் சாவாவிலிருந்து சீனாவுக்கும் செல்லும் கப்பல்களில் வேலை செய்யும் பிராமண மதத்தினராகிய வேலை யாள்கள் இருந்தார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளான். சாவாவிலும் அதனை அடுத்த தீவுகளிலும் கலிங்கர் குடியேறி னார்கள் என்பதற்கு உள் நாட்டு வரலாறுகள் காணப்படுகின்றன. ஆராய்ச்சி வல்லார் இக் கருத்தினை ஏற்றுக்கொள்கின்றனர். கலிங்கத்திலும், வட கிழக்குச் சென்னை மாகாணத்திலுமுள்ள மக்கள் சாவாவிற் குடியேறி னார்கள் என்று குரோபோர்ட் (Crawford) குறிப்பிட்டுள்ளார். இந்திய மக்கள் கோதாவரி, கிருஷ்ணா முகத்துவாரங்களிலிருந்து, கம்போதியா ஜாவா முதலிய தீவுகளிற் குடியேறினார்கள் என்பதை அமராவதி அழிபாடுகள் நன்கு விளக்கும். வங்காளக் குடாவிலுள்ள முசிறிப்பட்டினத்திலிருந்து அரக்கன், பிகு, சீயம், சுமத்திரா, கொச்சின்-சீனா, மணிலாத் தீவுகள், மடகாசிகர் முதலிய இடங்களுக்கு மரக்கலங்கள் பயணப்பட்டன வென்று தவேர்னியர் (Tavernier-கி.பி. 1666) கூறியுள்ளார். இவ்வாறு திராவிட மக்களின் கடல் வாணிகம் கிழக்கே ஜப்பான் தீவு வரையும் மேற்கே மெசபெதேமியா, எகிப்து வரையும் பரவியிருந்தது. தமிழர் இவ்வகை உயர் நிலையில் இருந்தார்கள் எனக் கூறுதல் இன்று கற்பனை போலத் தோன்றலாம். சில வரலாற்றுக் குறிப்புக்கள் ஆரியர் மத்திய ஆசியாவில் அலைந்து திரியும் அநாகரிகராக இருந்த காலத்தில் இந்திய நாட்டில் வாழ்ந்த திராவிடர் அராபியாவில் வாழ்ந்த செமித்தியரை ஒத்த நாகரிகமுடையவர்களாய் வாழ்ந்தனர். தையர் நாட்டு ஹெரம், பலஸ்தீனா நாட்டு சாலமன் முதலிய அரசர் காலத்தில், மத்திய தரை நாடுகளோடு வாணிகஞ் செய்து அவர்கள் மொழிகளைத் திராவிடச் சொற்களால் செழிப்படையச் செய்த மக்கள், அவ்வாறு உயர்ந்த நாகரிகம் பெற்றிருந்தார்கள் என்று கூறுவது வியப்பாகத் தோன்றமாட்டாது. -ஜி.ஆர். ஹன்ட்டர்.1 இந்தியாவிடமிருந்தே ஆசியாவின் மற்றப் பகுதிகளும், மேற்கு உலகம் முழுமையும் தங்கள் அறிவையுஞ் சமயத்தையும் பெற்றன.-ஹீரன்.2 எகிப்தியரின் ஆதி உறைவிடம் மலையாளக் கரைகளில் இருந்திருக்கலாம்.3 - ஜி.ஆர். ஹன்ட்டர். பழைய அபிசீனியர் அபூசின் (Abuisin) என்னும் நாட்டினின்றும் வந்து ஆபிரிக்காவிற் குடியேறினர். அபிசின் என்பது சிந்து நதியின் இலக்கிய காலப்பெயர். - ஜி.ஆர். ஹன்ட்டர்.4 பெரிய பிரித்தனில் (Great Britain) இந்துக்கள் குடியேறி யிருந்தார்கள் என்பதை மேலும் அறிந்துகொள்வதற்கு காட்பிறே கிச்சின்ஸ் என்பவரின் கெல்தியர் துரூத்தியர் என்னும் நூலை நோக்குக. துரூத்திய குருமார் இந்தியாவினின்றும் சென்று பிரித்தினிஸ் குடியேறியவர்கள் என்பது அந் நூலில் கூறப்பட்டுள்ளது. - இந்திய உயர்வு.5  திராவிடம் என்றால் என்ன? முன்னுரை ஆரியமொழி ஒன்றுதானே இந்து ஆரியம், பாரசீகம், கிரேக்கம், இலத்தீன், சிலாவு லிதுஏனியம், சேர்மன், கெல்து முதலிய பல மொழி களாகப் பிரிந்தது போலவே தமிழும் தெலுங்கு, கன்னடம், துளு, மலை யாளம் முதலிய மொழிகளாகப் பிரிந்துள்ளது. வடநாட்டு மொழிகளின் அடிப்படையும் தமிழே. எளிதில் அடையாளம் கண்டுபிக்க முடியாத அள வில் அவை மாற்ற மடைந்துள்ளமையாலும், அவைகளின் சொற்போக்கு பெரிதும் ஆரிய மயமாயிருத்தலினாலும் அவை ஆரியத்தின் வழிமொழிகள் என்று கருதப்படுகின்றன. அம்மொழிகளின் சொற்போக்கு ஆரியத்தன்மை யுடையனவாயினும் அமைப்பு திராவிடத்தன்மை உடையதென்றும், மொழி களின் இனத்தை ஆராய்ந்து அறிதல் சொற்களாலன்று அமைப்பினா லென்றும் பி. தி. சீனிவாச ஐயங்கார் போன்ற ஆராய்ச்சி அறிஞர் பலவிடங் களில் எடுத்துக் கூறியுள்ளார்கள். வடநாட்டு மொழிகளிற் காணப்படும் மத்திய கால இந்து-ஆரியச் சொற்களில் 25 சதவீதம் மாத்திரம் பழைய இந்து ஆரியத்தினின்றும் வந்தவை என டாக்டர் காற்றி (Dr. Katre) என்பார் கூறுகின்றார். மீதிச் சொற்கள் உள்நாட்டுச் சொற்களேயாதல் வேண்டும். வடநாட்டு மொழிகளில் மாத்திரமல்ல, சமக்கிருத மொழியிலும் மிகப்பல தமிழ்ச் சொற்கள் உருமாற்றத்துடன் காணப்படுகின்றன. ஆரியத்துக்குப்பல சொற்களை உதவி அதனைச் சீர்திருத்திச் சமக்கிருதமாக்கியது தமிழே. “பழைய இந்தியாவில் மக்கள் வாழ்க்கை” என்னும் நூலில் பி. தி. சீனிவாச ஐயங்கார் இது குறித்துக் குறிப்பிட்டுள்ளார். இன்று இந்து ஆரியத்திற் காணப்படும் 25 சதவீதச் சொற்களும் உள்நாட்டு மொழிகளிலிருந்து கிடைத்தவை1. இவ்வாறு ஆரியமும் ஆரியத்தின் வழிவந்த மொழிகளும் தமிழுக்குப் பெருங்கடப்பாடுடையனவாயிருக்கத் தமிழைப் புறக்கணித்து ஒதுக்கி அதற்கு முதல் இடங்கொடாது ஆரியத்துக்கு முதன்மை கொடுத்து அதனைச் சமயமொழியாகக் கொண்டுழலும் மக்கள் விழிப்படையும் பொருட்டுத் தமிழின் உண்மை இயல்புகளை விளக்கிச் சிறிய சிறிய நூல்களை வெளி யிட்டு வருகின்றோம். அவ்வரிசையில் இதுவுமொன்றாகும். சென்னை 1-9-48 ந. சி. கந்தையா திராவிடமென்றால் என்ன? எழுவாய் திராவிடம் என்னும் பெயரைப்பற்றி நீண்ட காலம் வாதங்களும் எதிர் வாதங்களும் நடந்துவந்தன. மேல் நாட்டு ஆசிரியர்கள் இந்திய மொழி களை ஆராய்ந்து ஆரியம், தமிழ் என்னும் மொழிகள் ஒன்றோடு ஒன்று தொடர்பில்லாத வெவ்வேறு மொழிகள் என்று காட்டுவதன் முன்பு ஆரியத் தினின்றே தமிழ் தோன்றிற்று; தமிழுக்குமாத்திரமன்று உலகிலுள்ள எல்லா மொழிகளுக்கும் ஆரியம் தாய் என ஒரு கூட்டத்தார் கூறிவருவாராயினர். தமிழ் என்னும் பெயர் தானும் திராவிடம் என்னும் ஆரியச் சொல்லினின்று பிறந்ததாகுமெனவும் அவர்கள் புகன்றனர். அவ்வாறு இன்று கூறுவாரு முளர். தமிழின் உறழ்ச்சி பிறழ்ச்சிகளால் தோன்றிய கன்னடம் தெலுங்கு மலையாளம் என்னும் மொழிகளும் ஆரியத்தின் வழிவந்தன எனக் கருதப் பட்டன. கன்னடம் தெலுங்கு துளு மலையாளம் தமிழ் என்னும் மொழிகள் ஓர் ஆதிமொழியினின்று பிரிந்தன; தமிழினின்று கன்னடம் தெலுங்கு துளு மலையாளம் முதலிய மொழிகள் பிறக்கவில்லை என ஆராய்வின்றிச் சிலர் புகன்று வருகின்றனர். இவ்வகை மாறுபட்ட கருத்துக்களை எல்லாம் ஆராய்ந்து உண்மை யாது என நாட்ட முயன்ற அறிஞர் பலர் கருத்துக்களை இந்நூலகத்தே கோவைப் படுத்தியுள்ளோம் முதற்கண் 1கிளிமென் கோனர் பாடின் கிர்சன் என்னும் சேர்மன் பேராசிரியர் திராவிடம் என்னும் பொருள் பற்றி வெளியிட்ட கருத்தினை ஈண்டு தருகின்றோம். திராவிடம் என்றால் என்ன? மொழி தொடர்பாகவே திராவிடம் என்னும் பெயரை உலகம் அறிந்துள்ளது. திராவிடம் என்னும் இனத்தில் முன்பின் இருபது மொழிகள் அடங்கும். அவைகளுள் நான்கு மொழிகள் தமது பழைய இலக்கியங் களைக் குறித்துப் பெருமை கொள்ள முடியும். இவைகளுள் தமிழ் மொழி யில் மாத்திரம் இந்தியாவின் எல்லையையும் கடந்து சென்றுள்ள குறள் போன்ற பழைய இலக்கியங்கள் உள்ளன. திராவிடம் என்னும் பெயர் எங்கு நின்றுவந்தது? அதன் ஆதிப் பொருள் யாது? இப்பெயர் முதல்முதல் குமாரிலபட்டர் காலத்தில் (கி. பி. 7 அல்லது 8ஆம் நூற்றாண்டு) திராவிட நூல் வழக்கில் காணப்படுகின்றது. அவர் அதனை தென்னிந்தியாவின் கிழக்குக்கரையில் வழங்கும் தெலுங்கு, தமிழ் மொழிகளைக்குறிக்க “ஆந்திர திராவிட பாஷா” எனக் குறிப்பிட்டுள்ளார். ஆந்திர, திராவிட என்னும் சொற்களின் பொருளை அறிவதற்கு இந்தியா வின் தெற்கே வழங்கும் கன்னடம் மலையாளம் என்னும் பெயர்ப் பொருள் களைப்பற்றியும் நாம் ஆராய்தல் வேண்டும். இவ்விரண்டு பெயர்களும் இட சம்பந்தமாக வழங்கப்பட்டுள்ளன. கனரா, கன்னடா, அல்லது கர்நாடக என வழங்கும் பெயர் கர்நாட அல்லது கர்நாடக என்று பிரிகற் சம்கிதையில் எழுதப்பட்டுள்ளது. இப்பெயர் பஞ்சு விளைவதும் தேக்குச் செழித்துவளர் வதுமாகிய கரிய பூமியைக் குறிக்கின்றது. மலையாளம் என்பதற்கு மலை நாடு எனப் பொருள் கொள்ளுதல் வேண்டும். மலையம் என்பது மலையைக் குறிக்கின்றது ஆகவே கன்னடம் மலையாளம் என்னும் பெயர்கள் இடங் களைக் குறிக்க வழங்கிய பெயர்கள் என்றும் அவை வட மொழிப் பெயர்கள் அல்ல என்றும் விளங்கும். இதனால் முற்கால மக்கள் திராவிடம் என்னும் பெயரையும் அவ்வகையில் பயன்படுத்தினார்கள் என்பது தெளிவாகின்றது. அசோகரின் கல்வெட்டுக்களுக்கு முற்பட்ட ஐதரேயப் பிராமணத் தில் ஆந்திரம் என்னும் சொல் தெலுங்கு நாட்டையும் தெலுங்கு மொழியையும் குறிக்க வழங்கப்பட்டுள்ளது. இலக்கிய கால ஆசிரியராகிய பிளினி அதனை ஆந்திரே எனக் குறிப்பிட்டுள்ளார். குமாரிலபட்டர் ஆந்திர மொழியைத் தெற்கே உள்ள தமிழோடு தொடர்பு படுத்தியுள்ளார். தமிழர், தெலுங்கர் என்பதைத் தெலிங்கர் என்றும், அவர்களின் மொழியைத் தெலுங்கு அல்லது தெலுங்கம் என்றும் வழங்கினர். தெலுங்கம் என்னும் பெயர் வேளாண்மை தொடர்பாக உண்டானது. தெல் அல்லது தெல்லு, நீண்ட சதுரமானதும் நாற்புறமும் வரம்புடையதுமாகிய சிறிய வயல் நிலத்தைக் குறிக்கும். தெலுங்கம் என்பது சென்னைக்கும் ஒரிசாவுக்கும் இடையே உள்ள மக்களையும் மொழியையும் குறிக்கவும் வழங்கும். அசோக பட்டையங்களில் கலிங்கம் என்னும் பெயர் நாட்டையும் மலைநாட்டையும் குறிக்க வழங்கப்பட்டுள்ளது. ‘கல்’ என்பது கல்லையும் மலையையும் குன்றையும் குறிக்கும். கலிங்கு, கலுங்கு, கலிங்கல் முதலிய சேரி வழக்குச் சொற்கள் நீர்மடையையும் குறிக்கும். கலிங்க நாட்டின் கடற்கரையிலுள்ள ஒரு பட்டினத்துக்குக் கலிங்கப்பட்டினமென்று பெயர். கஞ்சம் மாகாணத்திலுள்ள மலைத்தொடருக்குக் கலிங்க மலைத்தொடர் என்று பெயர். இதனால் ஆந்திரா என்னும் பெயரும் இடத்தொடர்பாக வழங்கப் பட்டதெனக் கொள்ளுதல் தவறாகமாட்டாது. கலிங்கப் பட்டினத்துக்கு மேற்கே 58 கல் தொலைவில் ஆந்திரா என்னும் தெலுங்கு இடம் ஒன்று உள்ளது. இது முற்காலத்தில் புகழ்பெற்று விளங்கிய ஓர் இடமாகலாம். தெலுங்கு அல்லது கலிங்கநாட்டின் மலைப்பகுதிகளாகிய ஒரிசா மலைகளிலிருந்து கிழக்குத் தொடர்ச்சிமலை எட்டும்வரையில்-கோதாவரி ஆற்றிடைக்குறை முதல் தெற்கே கன்னியாகுமரி வரையில்-தட்டையான சமபூமி காணப்படுகின்றது. இவ்விடங்கள் கரைப்போக்கு என்னும் பொருளில் திராவிடம் என்னும் பெயரால் அறியப்பட்டது. கடற்கரையை ஆள்பவன் திரையன் எனப்பட்டான். இடம் என்பது தெலுங்கில் எடா, எடாமு என வழங்கும்; இவை இடைவெளி, பரப்பு, இருக்குமிடம் போன்ற வைகளைக் குறிக்கும். திரா-விட (ம்) என்பது மயிலென்பதிலிருந்து தோன்றிய மயிலாபுரி, தீவைக் குறிக்கும் இலங்கை என்பதிலிருந்து தோன்றிய இலங்காபுரி என்னும் பெயர்களை ஞாபகப்படுத்துகின்றது. குமாரில பட்டர் ‘திராவிட’ என வழங்கியது தமிழ் வழக்கில் திராவிடம் என்று ஆயிற்று. இப்பெயர் தொடக்கத்தில் தமிழரின் நாட்டுக்கும் மொழிக் கும் பெயராய் வழங்கிப் பின் அம்மொழியோடு சம்பந்தப்பட்ட மக்களை யும் உணர்த்துவதாயிற்று. தமிழ் சம்பந்தமான மொழி மகராட்டிரம் கூர்ச்சரம் முதலிய நாடுகளில் இன்றும் பேசப்படுகின்றது. அவ்விடங்களுக்குத் தமிழரின் ஒரு பிரிவினர் சென்றிருக்கலாம். கால்ட்வேல் காலம் முதல் திராவிடமென்பது தமிழோடு தொடர்பு படுத்தப்பட்டுள்ளது. வரலாற்று முறையான ஆராய்ச்சியாலும், மொழிகளைத் தொடர்புபடுத்தி ஆராயும் ஆராய்வினாலும் திராவிடம், தமிழ் என்னும் சொற்கள் வெவ்வேறு அடியாகப் பிறந்தன என்று தெரிகின்றது. கிரீயர்சன் என்பார், தம்முடையது என்னும் பொருள் தரும் தம் என்னும் அடியாக தமிழ் பிறந்ததெனக் கூறினார். ஐரோப்பிய மொழியில் இதை ஒத்த ஒரு எடுத்துக் காட்டுக் காணப்படுகின்றது. ஜெர்மன் மொழியில் டெயுர்ச் (Deutsch) என்பதும் டச் (Dutch) என்பதும் ஒரு பொருளில் வழங்கும். இவ்விரண்டு உச்சரிப்புக்களும் டியூரிஸ்க் (Diutisk) என்னும் சொல்லின் வேறுபாடுகள். இச் சொல்லின் பொருள் “நமது மக்களுக் குரியது.” என்பது. மதுரை, தூத்துக்குடி, திருவனந்தபுரம் முதலிய இடங்களில் தமிழ் திருத்தமாக உச்சரிக்கப்படுகின்றது. பெசிடோ ஸ்கைலாக்ஸ் என்னும் நூலில்1 தமிராய்2 என்னும் பெயர் காணப்படுகின்றது. தாலமி தமிழகத்தைத் தமிரகே எனக் குறிப்பிட்டுள்ளார்; தபுலா பெதுருங் கேரியானா3, சிதிய தமிரிகி4 எனக் குறிப்பிடுகின்றது. ழகரத்துக்குப் பதில் ளகரம் வழங்கியதை நாம் ஆரிய நூல்களில் பார்க்கலாம். சுவேதாம்பரரின் சைன நூல்களிலும், மகாவம்சம் என்னும் இலங்கைப்பாலி நூலிலும் தமிள என்னும் உச்சரிப்புக் காணப்படுகின்றது. தமிழன் என்பதின் பன்மை தமிழர். தமிழப் பிள்ளை தமிழக் கூத்தன் என்னும் கூட்டுச் சொற்களில் தமிழ என்னும் வழக்குக் காணப்படுகின்றது. இதனால் ஆரியருக்கு முன்பு தமிழ் என்பதும் நாட்டுக்கே பெயராக வழங்கியதெனத் தெரிகின்றது. புதிதாக வந்த ஆரியர் திராவிட, தமிழ் என்னும் சொற்களைக் கையாண்ட முறையினால் அவை ஒரே உற்பத்திக்குரியனவென்று சந்தேகிக்க வேண்டியதாயிற்று. சமக்கிருத நாடகங்களில் (சைனர் பிராகிரு தத்தில் எழுதிய நாடகங்களில்) தாவிள (davila) என்றும், வராகமிகிரரின் சில கையெழுத்து நூல்களில் (கி. பி. 6ஆம் நூற்றாண்டு) திரமிட(ம்) என்றும், கி.பி. 6ஆம் நூற்றாண்டுப் பட்டையங்கள் சிலவற்றில் திராமிடமென்றும் சொற்கள் காணப்படுகின்றன. புத்த சமயம் சம்பந்தமாகவும் புராணங்கள் சம்பந்த மாகவும் உள்ள பழைய மலையாள மொழிபெயர்ப்புக்களிலும் இவ்வாறே காணப்படுகின்றது. இதுவரையும் கூறியவைகளால் தமிழ் திராவிடம் என்னும் சொற்கள் வெவ்வேறு உற்பத்திக்குரியனவென்றும், திராவிடம் தமிழ் என்னும் சொற்கள் பிறமொழிக் குரியவர்களால் கொச்சையாக உச்சரிக்கப்பட்டுவந்தமையின் இரு சொற்களும் ஒரே உற்பத்தியைச் சேர்ந்தனவோ என்னும் மயக்கமும் ஐயப்பாடும் எழுவதாயினவென்றும் புலனாகின்றன. 1தமிழ் என்பதன் சிதைவு திராவிடம் “திராவிடம் என்னும் சொல்லின் பொருள் விளங்காமையால் அதற்குப் பொருளமைப்பான் தொடங்கி நமது நண்பர் கீழ்வருமாறு கூறுகின்றார்:- ‘அது ஸ்திரவிடம் என்பது திராவிடம் என்று வழங்கிப் பின் திராவிடம் என நீண்டு வட நூலார் மூன்றாவது தகரத்தை உபயோகித்து வடமொழியாக மயக்கஞ் செய்ததென்று எண்ணுகிறேன். ஸ்திரவிடமென் றால் உறுதியான அல்லது நிலையான இடமென்பதேயாம். வட இந்தியாவி லிருந்து ஆரியரால் விரட்டப்பட்டு தென்திசையில் ஓடிச் சென்ற துரானிய சாதியார் எவ்விடத்தில் ஸ்திரமாய்த் தங்கினார்களோ அவ்விடத்திற்கு ஸ்திரவிடம் அல்லது திராவிடம் என்று பெயர் அமைந்தது’ என்று விடை யும் பின் பகர்ந்திருக்கிறார்கள். “திராவிடம் என்னும் மொழியின் சிதைவெனக் கொள்ளினும், ஸ்திரவிடம் என்னும் பெயர் தமிழுலகத்திற்கு யாரால் எச்சமயம் கொடுக்கப் பட்டதென யாம் பரியாலோசிக்க வேண்டும். இப்பெயரை உண்டு பண்ணின வர் வடமொழியாரா? அல்லது தென்மொழியாரா? ஸ்திரவிடம் என்ற பெயரில் ‘ஸ்திரம்’ என்ற வடமொழியும் இடம் என்ற தென்மொழியும் புணர்ந்து வருவ தனால் இவ்விருமொழியும் கலவாத அக்காலத்தில் இப்பெயர் உளதாதற்கு இடமே இன்று. சமஸ்கிருதமும் தமிழும் நெடுங்காலம் சேர்ந்து மயங்கிய பின்னரே இப்பெயர் உதிப்பதற்கு இடமாகும். “ஸ்திரவிடமென்பது திராவிடமென எவ்விதம் மருவியதென்று நோக்குங்கால் அதனைத் திரவிடம் என்று சிதைத்தவர் தமிழராகவே இருக்கவேண்டுமென்றும் இதிலிருக்கும் தகரத்தை மூன்றாவது தகரமாக் கியவர் வட மொழியாளராகவே இருக்கவேண்டுமென்றும் தெள்ளிதிற் புலப் படுகின்றன. இருமொழிகளும் சேர்ந்து இம்மாதிரி ஒரு மொழியினை மருவச் செய்வது அசம்பாவிதம் என்றே கூறல்வேண்டும். ஒலி ஒற்றுமை யினால் மருண்டு நமது நண்பர் திராவிடம் என்னும் மொழியை ஸ்திரவிடம் என்பதிலிருந்து பெறத்தொடங்கினதற்குச் சான்றாக நியாயம் ஒன்றும் இல்லை யென்றே அறைதல்வேண்டும். கூரிய ஆராய்ச்சி முன்னிலையில் ஸ்திரவிடம் என்பதன் அடிப்படை ஸ்திரமற்றதாகவே முடிகின்றது. “இது இங்ஙனம் முடிய திராவிடம் என்னும் மொழியிலிருந்து தமிழ் என்னும் பெயர் உதித்ததென்று ஒரு சாரார் கூறுகின்றார். இவர் தக்க நியாயம் கூறித் தம் வாதத்தை நிலைபெறச் செய்கின்றார்களில்லை. அதுபற்றி வட மொழியில் அன்னார் வைத்திருக்கும் அபிமானமே இதற்குக் காரணமா யிருக்கலாமென்று யாம் மயங்கவேண்டியதாயும் முடிகின்றது. திராவிடம் என்னும் மொழிக்குத்தக்க பொருள் இதுவரையிலும் வெளிவராமையாலும், தமிழர்களுக்கும் அவர்களுடைய பாஷைக்கும் ஆரியரோடு ஊடாடும் முன்னமே பெயர்கள் இருந்திருக்கவேண்டு மென்பதினாலும், திராவிடம் என்னும் போலிச்சமஸ்கிருதச் சொல்லிலிருந்து தமிழ் என்னும் மொழியைப் பெற்றோமெனல் உண்மையற்றதே-இங்கிலீஷ்காரருக்கு ‘ஆங்கிலேயர் என்ற பெயரைத் தமிழர் சூட்டி இங்கிலீஷ் என்ற வார்த்தை ‘ஆங்கிலேயம்’ என்ற போலித் தமிழ் வழக்கிலிருந்து வந்திருக்கவேண்டுமென்று பின்சாதிக்கின் அச்சாதனை உண்மையோடு எத்துணை முரண்படுகின்றதோ அத்துணை தமிழ் திராவிடமென்பதிலிருந்து வந்ததென்னும் வாதம் உண்மையோடு முரண்படுகின்றது. “இனித் தமிழ் என்னும் மொழியே திராவிடம் என்னும் வடமொழி ஆடம்பரத்துடன் நிற்கின்றதென வேறோர் சாரார் உரைக்கின்றார். இவர்கள் உரையே உண்மைக்கும் நியாயத்திற்கும் பொருத்தமுடையதாகவும் இருக்கின்றது. காரணங்களாவன: (1) ழ என்னும் எழுத்து தமிழ் மொழிக்கே உரியதாகையால் அவ் வெழுத்துத் தோன்றி நிற்கும் மொழியும் தமிழ் மொழியாகவே இருத்தல் வேண்டும். (2) தமிழ் மொழியிலே தமிழ் என்னும் பதம் இனிமை என்னும் பொருள் பயந்து நிற்கின்றது. பிறமொழிகளில் இப்பதத்திற்குப் பொரு ளில்லை. (3) தமிழர் மிக்க புராதன நாகரிகம் பெற்றிருந்தவராதலினால் அவருக்கும் அவரது பாஷைக்கும் ஓர் பெயர் உண்டாயிருக்க வேண்டுமென்பதே ஐரோப்பிய வித்வான்களில் பெரும்பாலாருடைய துணிபு. கன்னடம் தெலுங்கு மலையாளம், துளு முதலிய பாஷைகளும் தமிழ்ப்பாஷையின் வம்சத்தைச் சேர்ந்தவைகளாயிருக்க அவைகளுக்குத் தமிழ் என்னும் பெயர் வராது தமிழுக்கு மட்டுமே அப்பெயர் வரக்காரணம் யாதென ஒரு சங்கை எழலாம். கூறிய பாஷைகள் எவற்றிற்கும் முந்திய தமிழிலிருந்தே அப்பாஷைகள் உதித்தனவென்றும் ஐரோப்பிய சாஸ்திரிகள் அபிப்பிராயப்படுகின்றனர். இதனாற்றான் புரோபசர் எம்.ஏ. சுந்தரம் பிள்ளை அவர்களும் தாமியற்றிய “மனோன்மணியம்” என்னும் நாடகத் தின் பாயிரத்தில் தமிழ்மாது வணக்கம் கூறும் பொழுது, ‘கன்னடமும் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும் உன்னுதரத்தே யுதித்து ஒன்று பலவாயிடினும்’ என்று கூறியிருக்கின்றார். மேற்காட்டிய நியாயங்களினாலும், பிறமொழி களின் சிதைவு தமிழ் என்பதற்கு ஒரு நியாயமும் இன்மையாலும் தமிழ் என்னும் பெயர் சுத்த தமிழ்மொழியென்றேகொள்ள வேண்டியதாகின்றது. “ 1திராவிட என்னும் பெயர் தென்னிந்தியாவில் ஒரு குறிக்கப்பட்ட நிலப்பரப்புக்குரிய பெயரென வடமொழிப் பண்டிதர்கள் கூறுகின்றனர். சத்த கல்ப துரும என்னும் நூலில் மகாபாரதத்தை ஆதாரமாகக்கொண்டு இவ்வாறு கூறப்பட்டுள்ளது. திராவிட என்னும் நாடு கிழக்குக் கடற்கரை ஓரமாகத் திருப்பதி முதல் கன்னியாகுமரி வரையும் இருந்தது. இப்பெயர் தென்னாடு முழுவதையும் குறிக்கப் பொதுவாக வழங்கப்பட்டது.”-தமிழ் ஆராய்ச்சி. “ 2ஆரிய மொழியை வழங்கிய மக்கள் தமிழை உச்சரிக்க முயன்ற முறையினால் திராவிடம் என்னும் சொல் உண்டாயிற்று. தமிழ் என்பது தம்மையும் தமது மொழியையும் குறிப்பதற்குத் திருவேங்கடத்துக்கும் (கடல் வாய்ப்பட்ட) பஃறுளி ஆற்றுக்கு மிடையே வாழ்ந்த மக்கள் இட்டு வழங்கிய பெயராகும். ‘ழ’கரம் ஆரிய மொழிக்குப் புதியதும் தமிழ் மொழிக் குச் சிறப்பாக உடையதுமாகும். வடநாட்டவர் ‘ழ’கரத்தை ‘ள’கரமாக அல்லது ‘ட’கரமாக உச்சரித்தனர்.....இவ்வாறு தமிழ் திராவிடமாக மாறுபட்ட தெனக் காட்டப்பட்டுள்ளது. சமக்கிருதப் பிரியர் தமிழ் சமக்கிருதத்தினின்று பிரிந்ததென்றும் திராவிட என்னும் சமக்கிருதச்சொல் தமிழ் எனத் திரிந்த தென்றும் கூறுகின்றனர். இதனால் புதிய கற்காலம் முதல் வாழ்ந்து வருகின்ற தமிழர் சமக்கிருதமொழியை வழங்கும் மக்கள் வருவதன் முன் தம்மைக் குறிப்பதற்குப் பெயரில்லாது இருந்தார்கள் என்று ஏற்படுகின்றது. இக் கொள்கையும் சமக்கிருதச் சொல் தமிழ் என மாறவில்லை என்பதை வலி யுறுத்துகின்றது. தமிழர் ‘ட’கரத்தை உச்சரிக்க முடியும். வடமொழி ‘ட’கரம் தமிழில் சென்றிருந்தால் அது ‘ட’கரமா யிருக்குமே யன்றி ‘ழ’கரமாக மாற மாட்டாது. இதனால் தமிழ் என்பது திராவிடம் என்னும் சொல்லுக்கு முந்தியதெனத் தெரிகின்றது. 1திராவிட மொழிகள் சமக்கிருதத்தினின்று தோன்றினவா? திராவிடமொழிச் சொற்கள் பலவற்றில் சமக்கிருத அடிப்படை காணப்படுகின்றது. இதனை ஆதாரமாகக் கொண்டு பழம்போக்கான பண்டிதர்கள் சமக்கிருதத்தை விலக்கித் தனிமையான உற்பத்தியைத் தமிழுக்குக் கூறமுடியாதென்றும், தென்னிந்திய மொழிகள் எல்லாவற்றுக் கும் சமக்கிருதமே தாய்மொழியென்றும் ஆரவாரித்துக் கூறுகின்றனர். இக் கருத்தே கல்லாதவர்களிடையும் ஆராய்ச்சி அறிவில்லாத பழம்போக்கான பண்டிதர்களிடையும் நிலவுகின்றது. திராவிடமொழிகளுக்கு இலக்கண மெழுதியவர்கள் தாம் கையாளும் மொழிகள் சமக்கிருத மல்லாதன எனத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்கள். ஒவ்வொரு திராவிட மொழியின் இலக் கண ஆசிரியரும் சமக்கிருதத்திலிருந்து வேறுபடுத்தியறியப்படும் திராவிட மொழியைப்பற்றிக்காட்டியுள்ளார்கள். நன்னூல் செய்த பவணந்தியார் சமக்கிருதத்தினின்றும் தமிழில் வந்து வழங்கும் சொற்களை ஆளுவதற்கு விதி கூறியுள்ளார். ஆந்திரபாஷா பூஷணம் என்னும் தெலுங்கு இலக்கணம் செய்த கேதானர் தூய தெலுங்குச் சொற்களை சமக்கிருதச் சொற்களிலிருந்து வேறுபடுத்திக் காட்டியுள்ளார். சத்தமாணிதர்ப்பணம் என்னும் கன்னட இலக்கணம் செய்த கேசிராசா தற்பவச் சொற்களைப் பற்றி ஓர் அதிகாரம் எழுதியுள்ளார். கேரள பாணினீயம் என்னும் மலையாள இலக்கணத்தைச் சமீப காலத்தில் எழுதியவரும் இவ்வகை வேறுபாட்டைக் காட்டியுள்ளார். இவ்விலக்கணம் 1896இல் அச்சிடப்பட்டது. இவ்வாறு இலக்கணஞ் செய்தவர்களுள் மலையாள இலக்கணஞ் செய்தவர்கள், டாக்டர் குண்டேட், டாக்டர் கால்ட்வேல் போன்றவர்கள் திராவிட மொழிகள் ஒன்றோடு ஒன்று இனமுடையன எனக்காட்டிய ஆராய்ச்சிகளை அறிந்திருந்தார்கள். தமிழ் இலக்கண ஆசிரியர்கள் மலையாளச் சொற்களையும் தெலுங்குச் சொற்களை யும் திசைச் சொற்கள் எனக்கொண்டனர். அவர்கள் சொற்களைத் தமிழ்ச் சொல், வடசொல், திசைச்சொல் என மூன்றாகப் பிரித்தார்கள். இப் பிரிப்பின்படி அராபி, பாரசீகம், தெலுங்கு, மலையாளம், துளு, கன்னடம் முதலிய சொற் களும் திசைச் சொல்லில் அடங்கும். பழைய காலத்தில் சமக்கிருதம் மிக மரியாதையோடு நோக்கப் பட்டது. அதனால் அது தேவமொழி என்ற நம்பிக்கையும் உண்டாயிற்று. ஆந்திர பாஷா பூசணம் என்னும் தெலுங்கு இலக்கணத்தின் ஆசிரியராகிய கேதானா (கி. பி. 13ஆம் நூற்றாண்டு) என்பார் எல்லா மொழிகளுக்கும் தாய் சமக்கிருதம் எனக்கூறியுள்ளார் 2இதற்குச் சிறிது முற்காலத்தது எனக் கருதப்படும் நன்னயப்பட்டீயம் என்னும் பழைய கன்னட இலக்கணம் சமக்கிருதத்தில் எழுதப்பட்டுள்ளது. கன்னட பாஷா பூஷணம் என்னும் பழைய கன்னட இலக்கணம் சமக்கிருதத்தில் எழுதப்பட்டுள்ளது. கன்னட பாஷா பூஷணம் என்னும் பழைய கன்னட இலக்கணம் சமக்கிருதத்தில் எழுதப்பட்டுள்ளது. இராச இராச வர்மாவாற் செய்யப்பட்ட மலையாள இலக்கணத்துக்குக் கேரள பhணினீயம் என்று பெயரிடப்பட்டது. தமிழில் இலக்கணக் கொத்து என்னும் இலக்கணம் எழுதிய சாமிநாத தேசிகர் “ஒன்றேயாயினும் தனித்தமிழ் உண்டோ....1 ஐந்தெழுத்தா லொருபாடை என்று அறையவும் காணுவரே” என்று கூறினர். இவர் காலத்தவரான சுப்பிரமணிய தேசிகர் பிரயோக விவேகம் என்னும் நூலில் தமிழ் என்னும் பெயரைத் திராவிடத்தினின்றும் பிறந்ததெனக் கூறினார். இவ் வாசிரியர்கள் பதினேழாம் நூற்றாண்டில் விளங்கியவர்களாவர். முற்கால இலக்கண ஆசிரியர்களுக்கு இக்கருத்துக்கள் இல்லை. அவர்கள் சமக்கிருதத்துக்கு மரியாதை கொடுத்தார்கள்; ஆனால் அவர்கள் தமது மொழிக்கு மரியாதை கொடுக்கத் தவறவில்லை. வடமொழியி லெழுதப்பட்ட தெலுங்கு கன்னட இலக்கணங்கள் போன்று தமிழ் இலக்கண மொன்றேனும் வடமொழியில் எழுதப்படவில்லை. இன்றும் தமிழ் வடமொழிக்குக் குறைந்த மொழியன்று என்றும் தமிழ் வடமொழிக் குக் குறைந்த மொழியன்று என்றும் சிவபெருமானே வடமொழியைப் பாணி னிக்கும் தமிழைக் குறு முனிக்கும் அருளிச் செய்தார் என்றும் கொள்ளும் மக்கள் காணப்படுகின்றனர். இக்கருத்து பரஞ்சோதி முனிவருடைய திருவிளையாடற் புராணத்திலும் சிவஞானயோகிகளின் காஞ்சிபுராணத்தி லும் காணப்படுகின்றது. சமக்கிருதத்தில் அவர்கள் வைத்த மதிப்பினாலோ, சமக்கிருதத்துக் கும் திராவிட மொழிக்குமுள்ள உறவைக் கருதிய பொய்யான மரியாதையி னாலோ திராவிட மொழிகளின் இலக்கண ஆசிரியர்கள் சமக்கிருதச் சொற்களைத் திராவிடச் சொற்களினின்றும் வேறுபடுத்தி அவை திராவிட மொழிகளில் வழங்க நேர்ந்தால் அடையவேண்டிய மாறுதல்களுக்கு விதி களும் வகுத்துள்ளார்கள். தமிழ் இலக்கணங்களுட் பழைய தொல்காப்பியம் தமிழ் சமக்கிருத உற்பத்திக்குரிய மொழியென யாண்டும் கூறவில்லை. அவர் வடவெழுத்து உச்சரிப்பில்லாத சொற்கள் தமிழில் வழங்குவதைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். கன்னட இலக்கணத்தில் கன்னடச் சொற்களும், வடமொழிச் சொற்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. 2மலையாளம் எப்படித் தோன்றிற்று? மலையாளம் தமிழ்ச் சிதைவினால் (Dialetic decay) உண்டான பாஷை என்று சிலர் ஒப்பார். மலையாளமும் தமிழும் வேறொரு பாஷையினின்று உற்பத்தியாயினவென்றும் அப்பாஷை இப்போது இல்லாதொழிந்துபோய் விட்டதென்றும் டாக்டர் குண்டேர்ட்டு (Dr. Cundhert) சொல்லுவதுபோல் சிலர் சொல்லுகின்றனர்; வேறு சிலர் மலையாள வியாகரண கர்த்தராகிய அப்பு நெடுங்காடி முதலானவரைப் பின் பற்றி தமிழும் சமஸ்கிருதமும் சேர மலையாளமுண்டாயிற்றென்று கூறுகின்றனர்; வேறுசிலர் தமிழைக்காட்டிலும் மலையாளமே புராதனபாஷை என்றும், பிற்கூறிய பாஷையிலிருந்தே தமிழ் உதித்ததென்றும், யாவரும் அதிசயிக்கும் வண்ணம் நூதன அபிப் பிராயம் ஒன்றை வெளியிட்டனர். இவரது கொள்கைகளனைத்தும் தவறெனச் சிறிது சிந்தித்துப் பார்த்தால் நேயர் யாவருக்கும் விளங்கும். டாக்டர் குண்டர்ட்டு குறிப்பிடும் “மூல பாஷை” ஒன்று இருந்ததென நாம் எங்ஙனம் அறிவது? அதற்குரிய சாட்சிகள் ஒன்றும் எடுத்துக்காட்டா மல் “மனத்தினால் மாளிகை கட்டுவது” போல தற்காலத்தில் வழங்கிவராத ஓர் மூல பாஷையைக் குறித்து டாக்டர் குண்டர்டு மனோராச்சியம் செய்யத் தலைப்பட்டனர். நெடுங்காடி முதலியவருடைய கொள்கை பாஷாசாத்தி ரிகள் முன்னிலையில் சின்னாபின்னப்பட்டுச் சிதறிவிடும் என்பதற்கு எள்ளளவேனும் சம்சயமில்லை. உலகத்தில் நடைபெற்று நிற்கும் எல்லாப் பாஷைகளும் மனிதருடைய வீடு முதலிய செயற்கைப் பொருள்களைப் போல் சிற்சில சாமான்களைச் சேர்த்துத் திடீரெனக் கொஞ்சத்தினத்திற்குள் உண்டுபண்ணப்பட்டவைகளல்ல; அவை வித்தில் முளையும், முளையில் மரமும் காலக்கிரமத்தில் தோன்றுவனபோல் இயற்கைப் பிரமாணப்படி நாளடைவில் உதித்துப் பெருகிவளர்வனவாம். பாஷா சாத்திரத்தின் பல உண்மைகளிலும் முதன்மை பூண்ட இவ்வுண்மை அறியாதார் மட்டுமே சமஸ்கிருதத்தையும் சேர்த்து மலையாளமாகிய ஒரு புதுப்பாஷை ஆதியில் இயற்றப்பட்டதெனக் கூறுவர். சமஸ்கிருதமாகிற வடமொழியின் எழுத் துக்கள் மலையாளத்தில் ஏராளமாக வரலாம்; அம் மொழியின் சொற்களும் சொற்களாலாக்கப்படும் வசனங்களும் மலையாளத்தில் ஒரு வேற்றுமை யின்றித் தோன்றலாம். அம்மொழியின் வியாகரண ரீதியை மலையாளம் சில இடங்களில் அனுசரித்துமிருக்கலாம்; அம்மொழியின் சுலோகங்கள் எங்ஙனம் எழுதப்படுகின்றனவோ அங்ஙனமே மலையாள சுலோகங்களும் எழுதப்படலாம். இவ்வித மெல்லாமிருந்தாலும் மலையாளத்திற்கு சமஸ் கிருதம் தாய்ப்பாஷை ஆகவே ஆகாது; ஏனெனில் இவ்விரண்டு பாஷை களும் இரண்டு மனித வர்க்கத்தைச் சேர்ந்தவையா யிருக்கின்றன. தற்காலத் தைய இங்கிலீஷ் மொழிக்கு ஆங்கிலோ சாக்சன் தான் மூல பாஷை எனக் கூறுவரே தவிர இலத்தீன் முதலியன தாய்ப்பாஷை என எவரேனுங் கூறுவரோ? அதுபோலவே மலையாளமாகிய திராவிட பாஷைக்கு சமஸ்கிருதம் என்னும் ஆரிய பாஷை தாய் எனக் கூறுதல் தவறெனச் சொல்லவும் வேண்டுமோ? இத்தவறுக்குச் சமானமாகத் “தமிழ்” என்னும் சொல் திராவிடம் என்னும் மொழியின் மரூஉ என்று சில சமஸ்கிருத பாண்டித்திய முடைய தமிழ் வித்வான்கள் கூறும் பெருந்தவறு ஒன்றே உள்ளது. மனுஷிய வர்க்க சாத்திர (Ethnology) நிபுணர்கள் ஆரியர் திராவிடர் என்ற இரு பிரிவி னருக்கும் தேகத்தின் அளவு, உருவம், சக்தி, என்பவையிலும், மனப்போக்கு களிலும், புத்திக் கூர்மையிலும், ஆசாரங்களிலும், தொழில்களிலும், மதக் கோட்பாடுகளிலும் வேற்றுமை யுண்டென்று கூறுவதுந் தவிர, பாஷையிலும் வித்தியாசம் உண்டென்றறைகின்றனர். ஆகவே சமஸ்கிருதத்தை மலை யாளத்தின் மூல பாஷை எனக் கூறுதல் ஒரு விதத்திலும் பொருந்தாது. தமிழுக்கு மூல பாஷை மலையாளம் என்ற கோட்பாடுடையவர் சிலரே. இவர் சொல்லுவதை மேற்கூறிய பாஷைகளின் நூற்களை சரித்திர வாயி லாக ஆராய்ச்சி செய்வோர் ஒப்பமாட்டார்கள். ஏனெனில் அந்தக் கோட் பாட்டுக்கும் உண்மைக்கும் இருக்கும் தூரம் சிறிதன்று. இனி டாக்டர் கால்டுவேல், புரோபஸர், எம்.ஏ. சுந்தரம் பிள்ளை முதலிய தமிழ் வித்துவான்களைப் பின்பற்றி தமிழே மலையாளத்திற்குத் தாய்ப் பாஷையென நிலை நிறுத்துங் காரணங்களனைத்தையும் ஒருவாறு ஒழுங்குபடுத்திக் கூறுவோம். காலஞ் சென்ற எம். ஏ. சுந்தரம் பிள்ளை அவர்கள் இயற்றிய மனோன் மணியம் என்னும் சிறந்த நாடகத்தின் பாயிரத்தில் தமிழ் மாதைத் துதிக்கப் புகுந்து “கன்னடமும் களிதெலுங்கும் கவின்மலையாளமுந் துளுவும் உன்னுதரத்தே யுதித்து ஒன்று பலவாயிடினும்” எனக் கூறினது ஆங்கில சாத்திர விற்பன்னர்களின் முடிவை அடிப்படை யாகக் கொண்டுள்ளது. தமிழ் மலையாளம் என வழங்கும் இரண்டு பாஷைகளும் தமக்குள் ஏதாவது சம்பந்தத்தைப் பொருந்தியிருக்க வேண்டும் அல்லது ஒருவித சம்பந்தமும் பொருந்தாதிருக்க வேண்டும். இவ்விரண்டு மொழிகளுக்கும் சம்பந்தம் ஒன்றுமில்லையென ஒருவரும் சொல்லத் துணியார் சம்பந்தம் உண்டெனில் எவ்வித சம்பந்தம்? காரிய காரண சம்பந்தம் என்று கூற நியாயங்கள் பல இருக்கின்றன. ஆயின் காரணமாகிய பாஷை எது? காரிய பாஷை எது? முற்பட்டு நின்ற மற்ற பாஷையை உண்டு பண்ணினது தமிழா? மலையாளமா? தமிழ் சிதைந்து தான் மலையாளம் உண்டாயினதா? அல்லது மலையாளம் திரிந்து தமிழ் உண்டாயிற்றா? இதுதான் நாம் முதலாவது கவனிக்கவேண்டிய விஷயம். ஐரோப்பிய பாஷைகளுக்கு அமைந்திருக்கும் பாஷா சரித்திரங்கள் போல் நம் மொழிக்கும் சரித்திரம் அமைந்திருக்குமாயின் மேற்கூறிய வினாக்களுக்கு எளிதில் விடை பெறலாம். அங்ஙனம் சரித்திரம் இல்லா தொழிந்த பெருங்குறையை நீக்குவதற்கு சில கற்றுணர்ந்தோர் தம் மொழி நூற்களை நன்றாக ஆராய்ச்சி செய்து ‘புராணம் விளம்பாது’ சரித்திர வுண்மை மாத்திரம் தொடுத்துக் காட்டமுயன்றனர். அவரது அபிப்பிராயமே சரித்திரம் இல்லாத இடத்து நம்மால் கொள்ளத் தக்கது. அவர் எவ்வாறு பேசுகின்றனர் என்று பார்ப்போம். தமிழின்ஆதி நூலென அறியப் பெற்ற அகத்தியம் எக்காலத்தெழுதப் பட்டதெனத் திட்டமாகச் சொல்ல இடமில்லை யாயினும் அகத்தியத்தின் வழி நூலாகிய தொல்காப்பியமும், சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை, குண்டலகேசி, வளையாபதி யாகிய பஞ்சகாவியமும்; எட்டுத் தொகை பத்துப்பாட்டு, பதிணெண் கீழ்க்கணக்கு முதலிய நூற்களிற் சிலவும் இன்றைக்கு 1500 முதல் 2000 வருஷங்களுக்கு முற்பட்டு எழுதப்பட்டிருக்க வேண்டுமென்று சில பண்டிதர்கள் கூறுகிறார்கள். சமய குரவர்களாகிய நாயன்மார்களும், ஆழ்வார்களும் இயற்றிய தேவாரம், நாலாயிரப்பிரபந்தம் முதலியன சுமார் 1000 வருடங்களுக்கு முன் உண்டு பண்ணப்பட்டனவென் றும், கம்பராமாயணம், கலிங்கத்துப்பரணி முதலிய இசையால் திசைபோய நூல்கள் 800 முதல் 900 வருஷங்களுக்கு முன் எழுதப்பட்டனவென்றும், நைஷதம் முதலிய நூல்களும் தமிழ்க்கவியின் உண்மையையும் சிறப்பையும் முற்றும் துடைத்த ஆயிரக்கணக்கான ஸ்தல புராணங்களும் 400 முதல் 500 வருஷங்களுக்கு முன் எழுதப்பட்டன வென்றும் தமிழ்ப் புலமை சான்றோர் கூறுகின்றனர். சென்ற 400 வருட காலமாக தமிழ் வளராது பெருந்தூக்கம் தூங்குகின்றதென்பதை இக்காலத்தில் அம்மொழியிற் சிறந்த நூல்களொன்றும் எழுதப்படாமையே விளக்கிக் காட்டும். அங்ஙனமன்றி மலையாளமோ தமிழ் அயர்ந்திருக்கும் சென்ற 400 ஆண்டுகளிற்றான் வளர்ச்சியுற்றது. மலையாள பாஷையின் சரித்திரத்தைக் கூறுபடுத்தி முதற்பாகம் ‘கருந்தமிழ்’ என்றும், அது கலியப்தம் ஆரம்பமுதல் 3000 வருடம் நிகழ்ந்ததென்றும்; இரண்டாம் பாகம் ‘பழைய மலையாளம்’ என்றும் அது 1000 வருடம் நிகழ்ந்ததென்றும்; மூன்றாம் பாகம்; மத்திய கால மலையாளம் என்றும் அது கொல்லம் 600 ஆண்டுவரை நிலை நின்றதென் றும், அதன் பின் நான்காம் பாகமாகிய தற்கால மலையாளம்’ கொல்லம் ஆண்டிற்கு மேல் 500 வருடங்களாக நிலைபெற்று வருகின்றதென்றும் கனம் நாகம் அய்யர் இயற்றிய 1891 வருட திருவாங்கூர் சென்ஸஸ் ரிப்போர்ட் வாலிம் ஒன்று பக்கம் 512இல் எழுதப்பட்டிருக்கின்றன. மேலும் சென்ற 400 வருடங்களில் 176 கிரந்த கர்த்தாக்களால் 604 நூற்கள் மலையாளத்தில் இயற்றப்பட்டிருக்கின்றன வென்றும் அங்கு குறிக்கப்பட்டிருக்கின்றது. இதனால் நாம் அறிவதென்னவெனில், மலையாளம் தமிழுக்குப் பிற்பட்ட தென்பதே. 2000 வருடங்களுக்கு முன்னமே உதித்து வளர்ந்து, கீர்த்தி படைத்து சென்ற 400 வருடங்களில் அலுத்துத் தூங்கும் தமிழ் மாதாவாகும். முதியவளுக்கெதிரில் அந்நானூறு வருடங்களிலேயே உதித்து நடைபெற்று உலாவும் மலையாளத்தைச் சிறுமி எனவோ? அல்லது பசுங் குழவி என்னவோ? கர்ண பரம்பரையான கதையை வைத்துக் கணிக்கில் அம் மலை யாளத்தின் முதற்படி கருந்தமிழ் என்று ஒப்பவேண்டுமே. செந்தமிழ் சிதைந் துண்டான கருந்தமிழே மலையாளத்திற்கு “தாயுமானது தந்தையுமானது” இதனை நிலைநிறுத்துவதற்குச் சான்றுண்டோவெனில் கூறுவோம். 1. தொன்று தொட்டு வழங்கும் பதினெண் பாஷை! என்னும் பாகு பாட்டினுள் மலையாளம் ஏன் வரவில்லையோ? துளுவம், சிங்களம், முதலியவற்றைக் கூறியும் மலையாளத்தைக் கூறாதும் விடுத்ததேன்? சமஸ்கிருதம் ஏன் பதினெண் பாஷையுள் சேர்க்கப்பட வில்லையெனின், அது பிற சாதிப் பாஷைகளைப் போல் ஓரிடத்தில் வழங்கிவராமையினா லும், அவை போலாது உலகவழக்கழிந்தொழிந்து சிதைந்தவதனாலுமே யென்று சந்தேக மறச் சாற்றலாம். மலையாளம் வழக்கில் இயலும் பாஷை யாகவிருந்தும் ஏன் குறிக்கப்பட வில்லையெனின், அக்காலத்தில் மலை யாளம் என்ற ஓர் பாஷை இல்லாதிருந்த தக்க காரணத்தினாற்றான். 2. தமிழ் நாட்டின் பூர்வ எல்லையை நோக்கு மிடத்து, தொல்காப் பியம் சிறப்புப்பாயிரத்தில், “வட வேங்கடம் தென்குமரி யாயிடைத் தமிழ் கூறு நல்லுலகத்து” என்று கூறப்பட்டிருக்கிறது “குணகடல்குமரி குடகம் வேங்கடம் எனு நான் கெல்லையினிருந்தமிழ்க் கடல்” என்றார் பிறரும். வடவெல்லை திருவேங் கடமும் தெற்கெல்லை குமரியும் கீழ்மேல் எல்லைகள் கடலுமெனக் கூறி யிருத்தலினாலும் அவ்வெல்லைக்குள் திருவிதாங்கொடு என்னும் தேசம் அமைந்து கிடத்தலினாலும் இந்நாடு, கால அளவையை எத்துணை நீட்டி னும் 1500 வருடங்களுக்கு முன் தமிழ் நாடாக இருந்திருக்க வேண்டுமெனப் பெற்றாம். 3. கொடுந்தமிழ் நாடு பன்னிரண்டினையும் இலக்கண நூலார் குறிக்கும் பொழுது குட்டநாடு, குடநாடு, மலாடு (மலைநாடு) முதலியன யாவும் தமிழ் நாடெனவே பேசுகின்றார். ஆலப்புழைக்குச் சமீபமாயிருக்கும் குட்டநாட்டில் தாயைத் தள்ளை என்றும் தந்தையை அச்சன் என்றும் கூறுவாராயினும் தமிழ்நாடு என்னும் பெயருக்கு அந்நாடுகளின் உரிமை கெட்டுப் போக வில்லை. தள்ளை, அச்சன் முதலிய பதங்கள் செந்தமிழ் நிலத்தில் வந்து வழங்காமையினால் அவற்றைக் கொடுந்தமிழ் நிலத்திலிருந்து வரும் ‘திசைச் சொல்’ என்று தமிழ் இலக்கண நூலார் தழுவுகின்றார். அவை கொடுந் தமிழாயினுந் தமிழே. கொடுந்தமிழ் எனினும் மலையாளத்திற்கு ஆதியாக நின்ற ‘கருந்தமிழ்’ எனினும் ஒக்கும். 4. கொடு மலையாளம் என்று நம்மவரால் எண்ணப்படும் இடங்களி லிருந்தே அக்காலத்தில் சிலர் தமிழில் சிறந்த நூற்களியற்றி புகழ்படைத் திருக்கின்றனர். கொடுங்கல்லூர் என்ற கொடுங்கோளூரில் வசித்த இளங்கோ வடிகள் என்னும் சேர அரசனால் தமிழின் மணியென விளங்கும் பஞ்ச காவியத்துள் ஒன்றாகிய சிலப்பதிகாரம் செய்யப்பட்டிருக்கிறது. இதுபோல வேறு நூற்களும் உள. 5. தமிழிலும் மலையாளத்திலும் வழங்கிவரும் அநேக எழுத்துகள் ‘வட்டெழுத்து’ என்று சொல்லப்படும் ஒருவித பூர்வ எழுத்திலிருந்து உண்டானவை. மலையாளத்தில் ‘வட்டெழுத்து’ கோலெழுத்தாகிப் பின் சமஸ்கிருதத்தோடு ஊடாடிச் சிறுபாகம் கிரந்தாக்ஷரங்களின் பூர்வ வடிவமே பொருந்தி நிற்கின்றன. தமிழிலே பெரும்பான்மை எழுத்துக்களும் வட்டெழுத்தின் வடிவத்துடன் இருக்கின்றன. சிலவற்றில் வடிவ மாறுபாடும் புகுந்திருக்கின்றது. இவ்விஷயம் டாக்டர் பார்னல் என்னும் வித்வசிகாமணி இயற்றியிருக்கும் தென்னிந்தியாவின் எழுத்து விவரணம் (South Indian Palaeography), என்ற நூலிற் கொடுத்திருக்கும் வட்டெழுத்துப் படத்தை நோக்கும் நண்பர்களுக்கு நன்கு புலப்படும். தமிழ் அக்ஷரங்களாகிய உ, ஒ, க, வ, ண, ன, ர, முதலியவைகளுக்கும் க, உ, ங, ச, முதலிய இலக்கங்களுக்கும் வித்தியாசம் அதிகம் இல்லையே. இதனால் நாம் அறிந்து கொள்வது யாது? 6. மலையாள வீடுகளில் வழங்கிவரும் சாதாரணப் பொருள்களுக்கு மலையாளத்தில் சொல்லும் பெயர்களும் தமிழே. மலையாளத்தோடு கலந்திருக்கும் வடமொழியை நீக்குவோமாகில் மீதியாக நிற்கும் பாஷை தமிழே. அம்மை, அப்பன், ஆண், பெண், மக்கள், வீடு, சோறு, காற்று, மழை, கார், எலி, நாய், கிளி, வாழை, தெங்கு, மா முதலிய தமிழ்ச் சொற்களும், இவை போன்ற எண்ணிறந்த சொற்களும் மலையாளத்தில் வேற்றுமை யின்றிப் பிரயோகிக்கப்படுகின்றனவே. பறைந்நு, பறஞ்ஞு, என்ற மலையாளி கள் சாதாரணமாகப் பேசும் சொற்களின் ‘பறை’ என்பது காவிய வழக்கே தவிர உலக வழக்கன்று; சொல்லாமல் பறையாமல் என்று மொழித்தொடரில் மட்டிலும் அது நிலவி வருகின்றது. 7. தமிழ் இலக்கணத்தில் வரும் பால் விகுதி அள், அர், ஆர், மார், கள், தி முதலியனவும் வேற்றுமையுருபு ஐ, ஆல், கு முதலியனவும் மலை யாளத்தில் ஒரு பேதமும் இல்லாமல் வருகின்றவே! ‘உடைய’ என்பதை ‘உடே’ என மாற்றினாலும் ‘அவனோடு’ என்பதை அவனோடு என எழுதி அவனோட என உச்சரித்தாலும் இவை தமிழுக்குப் புறம்பாமோ? 8. மலையாள பாஷையிற் கூறப்படும் ‘பழமொழிகள்’ ‘பாட்டுகள்’ முதலியவற்றில் தமிழ் வார்த்தைகளே அதிகம். ‘தோற்றப்பாட்டு’ ‘அழ குடைய பெருமாள் பாட்டு’ என்ற பூர்வீக பாடல்களில் தமிழே அதிகரித் திருக்கக் காணலாம். இவைகளில் மலையாளப் பதங்களும் அப்பதங்களைச் சேர்க்கும் நீதிகளும் மிகவும் குறைந்திருப்பதனால் இவை தமிழ் அதிகம் சிதையாதிருந்த காலத்தில் உண்டு பண்ணப்பட்டனவென்று தெளிவா கின்றது. 9. மலையாள பாஷையில் ஆதியில் எழுதப்பட்ட நூற்களாகிய அய்யிப்பிள்ளை ஆசானுடைய இராமாயணம், கண்ணசப் பணிக்கருடைய இராமாயணம் முதலிய நூல்களில் தமிழ் ஏராளமாக உபயோகப் பட்டிருக் கின்ற தென்றும், தற்காலத்தில் இயலும் மலையாள பாஷையின் நூற்களென அவற்றை அழைத்தல் ஆகாதென்றும் அந்நூற்களை ஆராய்ந்த கன வான்கள் ஒப்புக்கொள்கின்றனர். இதனால் மலையாளம் எவ்விதம் எப்படி உதித்ததென்று உள்ளங்கை நெல்லிக்கனி போல் விசதமாகின்றதே! 10. சிலாலிகிதம் என்னும் பூர்வீக கல்லெழுத்துக்களை நோக்குவோ மானால் தமிழ் நாளடைவில் சிதைந்து மலையாளம் உதித்த விதம் நாம் நன்றாக அறிவோம். திருவனந்தபுரத்திற்குத் தெற்கே இருக்கும் திருவல்லம் என்னுமிடத்திலிருக்கும் சிலா லிகிதம் ஒன்றை நமது நண்பர்களாராயின் தமிழ் இங்கு கெட்ட வழியையும் பார்ப்பவர்கள் ஆவார்கள். ‘இருந்து’ என்பது இருந்நு என்று கெடவும், உடைய என்பது உடே என்று வேறுபடவும் வெகு காலம் வேண்டுமோ? உரையாடுதல் என்னும் செந்தமிழ் ‘உரியாடு தல்’ என்று இக்கொடுந் தமிழ்நாட்டில் திரியாதிருக்குமோ? கல் தச்சர் அவ் விதம் எழுத்துக்களைக் கல்லில் கொத்தித் தமிழ்ப் பாஷையைக் கெடுத்தா ரெனச் சொல்லுதலும் சாலாது. அங்ஙனம் அவர் செய்யினும் அவை வழக்கில் வரா. ஆகையினால் வழக்கத்தில் கெட்டு வந்திருந்த மொழி களையே கற்றச்சர் திருத்தாமல் கொத்தி தமிழ் பாஷையினுடைய சிதைவின் சரிதமாக நாட்டினர் என்று நாம் கொள்ளவேண்டும். மேற்கூறிய காரணங்களினால் தமிழ் மலையாளத்திற்கு மிகவும் முந்திய பாஷையென்றும், தமிழ் கெட்டு மலையாளம் உதித்ததென்றும் தெள்ளிதிற் புலப்படும். தெலுங்கு கன்னடம் முதலிய மொழிகளுக்குத் தாய் தமிழே கன்னடம் தெலுங்கு முதலிய மொழிகளில் கி.பி. 10ஆம் நூற்றாண் டுக்கு முற்பட்ட இலக்கியங்கள் இல்லை. கன்னடம் தெலுங்கு முதலியன தமிழை ஒத்த பழைய மொழிகளாயின் அவைகளில் பழைய இலக்கியங்கள் இருத்தல் வேண்டுமன்றோ? தமிழுக்கு முற்பட்ட வேறு ஒரு பழைய மொழி இருந்ததென்பதற்கு ஆதாரம் எதுவும் இல்லை. 3000 ஆண்டுகளுக்கு முன் தமிழ் மொழி இருந்ததென்பதை எபிரேய மொழியில் சென்று வழங்கிய தமிழ்ச் சொற்களைக் கொண்டு அறிகின்றோம். வளர்ந்த பிள்ளைகள் தமது பெற்றோரின் உறவை மறுப்பது போல்வதே கன்னடர் தெலுங்கர் முதலி யோர் தமது மொழிக்குத் தாய் தமிழ் என்பதை மறுத்துரைப்பதாகும்.1 பி.தி. சீனிவாச ஐயங்காரவர்கள் “கற்கால இந்தியா” “ஆரியருக்கு முற்பட்ட தமிழர் நாகரீகம்” என்னும் நூல்களில் இமயமலை முதல் கன்னி யாகுமரி வரையில் தமிழ்மொழி ஒன்றே வழங்கிற்று என்று எடுத்து விளக்கி யுள்ளார். தமிழ் மொழி ஒன்றே வடமொழிப் பிரளயத்துக்குட்பட்டு கன்னடம் தெலுங்கு துளு மலையாளம் முதலிய மொழிகளாக மாறியுள்ளன. சங்க காலத் தமிழுக்கும் இன்றைய தமிழுக்கும் அதிக வேறுபாடு உண்டு. மணிப் பிரவாள நடை என்னும் ஒரு நடையும் ஒருகால் வழங்குவதாயிற்று. இதில் சரிக்குச் சரி தமிழும் சமக்கிருதமும் கலக்கப்பட்டன. இந்நடையைத் தமிழ்ப் புலவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. தமிழ்ப் புலவர்கள் இதனை எதிர்த்து நிற்காவிடில் இன்று தமிழ் மொழி என ஒன்று இல்லாமல் போயிருக்கும். மேற்குக் கரையிலுள்ள மக்கள் இதனை அனுமதித்தமையினாலேயே தமிழ் கெட்டு மலையாள மொழியாக மாறிற்று எனச் சில ஆராய்ச்சியாளர் கூறி யுள்ளார்கள். இன்று ஐம்பது ஆண்டுகளின் முன் எழுதப்பட்ட தமிழ் நடை யில் அதிக வடசொற்களைக் காணலாம். பத்து ஆண்டுகளின் முன் எழுதப் பட்ட தமிழ் நடையில் பல வடசொற்கள் களையப்பட்டுள்ளன. இன்று வட மொழிக் கலப்பில்லாத தமிழ் நடை எழுதுவதே சிறந்த நடை எனப் போற்றப் படுகின்றது. இன்று பெரும்பாலும் தமிழ் தூய்மையாகவே கற்றோரால் எழுதப்பட்டு வருகின்றது. தமிழ்ச் சொல்லாட்சி அறியாத சில்லறைப் படிப்பாளர் பெரும்பாலும் மனம் போனவாறு எழுதி வருகின்றனர். இன்றும் ஒரு சாரார் தமிழோடு பிறமொழி கலப்பதினால் தமிழ் வளருமெனக் கரைகின்றனர். இவர்கள் தமிழ் அறிவு சாலாதவரேயாவர். இவர்கள் தமது தமிழ் எழுதும் திறமையின்மையைப் போர்த்து மூடுவதற் காக இங்ஙனம் கூறுகின்றார்களேயன்றி உண்மையில் உணர்ந்து கூறுகின்ற வர்களல்லர். தமிழ்க்கல்வி மிகக்குன்றிவிட்டமையால் தமிழுக்கு உரைகல் இல்லாமல் போய்விட்டது. தமிழைப்பற்றிக் கூறவல்லவர்கள் தமிழ் அறிவு நிரம்பியவர்களே. இன்று தமிழ் சம்பந்தமானவைகளுக்குத் தமிழறிவு நிரம்பாத ஆங்கிலமொழிப் பட்டம்பெற்ற சிலரே கூறி வருகின்றனர். அரசினர் பேரகராதி தொகுத்த காலத்திலும் கலைக்களஞ்சியம் தொகுக் கப்படவிருக்கும் காலத்திலும் தமிழ் அறிந்த பேராசிரியர்கள் பெயர்களிற் பல காணப்படவில்லை. கோயில்களில் சமக்கிருதம் தமிழ் சிறந்தமொழி, சமக்கிருதம், ஆங்கிலம் போல் பிறநாடுகளி லிருந்து வயிற்றுப் பிழைப்பின் பொருட்டு வந்த மொழி என நாம் நன்கு அறிகின்றோம். அப்படி இருந்தும் சமக்கிருதத்தை இன்னும் ஆலயங்களில் வைத்துக் கொண்டிருப்பது, தமிழ் அவமதிப்பும், புத்தியற்ற செயலுமாகும். இச்செயலில் தமிழ் மக்களின் கண் திறக்காமல் இருப்பது மிக மிக வருந்தத் தக்கது. அன்னிய மொழியைக் கோயில்களில் நுழைய விட்டு விட்டு நாம் தமிழை வளர்க்கிறோம் எனப் போடப்படும் கூச்சல்களில் பொருளே யில்லை. தமிழை வளர்ப்பதற்குச் சிறந்த முறைகளிலொன்று தமிழைச் சமய மொழியாக்குவதே. இந்தியப் பண்பாட்டுக்குச் சமக்கிருதம் திறவுகோலா? இந்தியப் பண்பாட்டுக்குச் சமக்கிருதம் திறவுகோல் எனச் சிலர் சாற்று கின்றனர். இன்று இந்திய மக்களின் பண்பாட்டை வெளியிடும் கருத்துக்கள் பல ஆங்கில மொழியில் எழுதப்பட்டுள்ளன. இதனால் ஆங்கிலம் இந்தியப் பண்பாட்டின் திறவுகோலாகுமா? சமக்கிருதம் சமயமொழியாகிப் பின் சாதி மொழியாகி ஒரு கூட்டத்தினரிடையே வழங்குவதாயிற்று. பிற்காலங்களில் புத்த சைனமதத்தினரும் இம்மொழியைத் தமது சமய இலக்கிய மொழியாகப் பயன்படுத்தினர். இதனால் தென்னாட்டு வடநாட்டு வித்துவான்கள் அறிந்த மொழி சமக்கிருதமாயிருந்தது. ஆகவே வடநாட்டு தென்நாட்டு வித்துவான் களுக்கு ஒருவர் கருத்தை மற்றவர் அறியும்படி உணர்த்தும் மொழி சமக் கிருதமாகச் சிலகாலம் இருந்து வந்தது. சமக்கிருத நூல்களில் காணப்படும் அரிய கருத்துக்கள் பெரும்பாலும் திராவிட மக்களுடையனவே. ஏனைய ஆரிய வகுப்பினர்களிடையே காணப்படாது இந்திய ஆரிய வகுப்பின ரிடையே காணப்படும் பண்பாடுகள் எல்லாம் திராவிட மக்களால் உதவப் பட்டனவே. வேதகாலத்திலேயே வடநாட்டில் திராவிடரும் ஆரியரும் கலந்து ஒன்றுபட்டனர். ஆரியர் திராவிடப்பெண்களை மணந்தனர். அவர் களுக்குத் தோன்றிய சந்ததியினர் ஆரியராயினர். திராவிட ஆடவர் ஆரியப் பெண்களை மணந்தனர். திராவிடரின் தாயாட்சி வழக்கின்படி அவர்கள் மூலம் பிறந்த பிள்ளைகளும் ஆரியராயினர். இவ்வாறு வடநாட்டில் ஆரிய ரெனப்படுவோர் ஆரிய திராவிட இரத்தக் கலப்பினால் தோன்றியவர்களே. தமிழரின் பண்பாட்டுக்கு வடமொழி இம்மியளவும் துணை செய்த தன்று. அது தமிழரின் பண்பாட்டை இரண்டாயிரம் ஆண்டு முதல் கெடுத்தும் குழப்பியும் வருகின்றது. தமிழருக்குச் சமக்கிருதப் பயிற்சி வேண்டுவது மன்று. சமக்கிருதநூல்கள் பெரும்பாலும் ஆங்கிலமொழியில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. ஆரிய நூல்களைப்பற்றி அறியவிரும்புவோர் மொழி பெயர்ப்பு நூல்களைப் படித்து அறிந்து கொள்ளுதல் கூடும். இன்று பெரும் பட்டதாரிகளாகப் பல்கலைக் கழகங்களில் இடம்பெற்று ஆராய்ச்சி செய்வோரும் மேல்நாட்டு அறிஞரின் மொழி பெயர்ப்பு நூல்களையே ஆதாரமாகக் கொண்டு நூல்கள் எழுதி வருகின்றனர். ஒரு கூட்டத்தினர் அது தமது சாதி மொழி, தமது பரம்பரை மொழி என்று வடமொழியைப் பயில்கின்றார்களேயன்றி அம்மொழியிலுள்ள உயர்ந்த நூல்களைக் கற்று ஆராயச்சி செய்வதற்கோ அறிவைப் பெருக்கிக் கொள்வதற்கோ அதனைப் பயில்கின்றவர்களல்லர். அம் மொழியில் எழுதப்பட்ட நூல்கள் பெரும் பாலும் சமய சம்பந்தமானவையும் இக்காலத்துக்கு ஏற்காதனவுமாகும். திருக்குறள் போன்ற ஒரு நூலை வடமொழியிற் காணமுடியாது. “பத்துப் பாட்டாதி மனம் பற்றினார் பற்றுவரோ எத்துணையும் பொருட்கிசையும் இலக்கணமில் கற்பனையே.” “வள்ளுவர்செய் திருக்குறளை வழுவற நன்குணர்ந்தோர்கள் உள்ளுவரோ மனுவாதி ஒருகுலத் துக்கொருநீதி” (மனோன்மணீயம்) “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதா வதெங்கும் காணோம் பாமரராய் விலங்குகளாய் உலகனைத்தும் இகழ்ச்சி சொலப் பான்மை கெட்டு நாமமது தமிழரெனக் கொண்டிங்கு வாழ்ந்திடுதல் நன்றோ சொல்லீர் தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்” (பாரதியார்)  மறைந்த நாகரிகங்கள் முன்னுரை இவ்வுலகின் பழைய நாகரிகங்களை எல்லாம் ஆராய்ந்து நோக்கின் அவை எல்லாவற்றுக்கும் ஒரே அடிப்படை உண்டு என்பது தெள்ளதில் தோன்றும் அவ்வடிப்படைதான் யாது என அறிதல் ஆராய்ச்சி வல்லார்க் கெல்லாம் பெரு மயக்கம் அளிப்பதாயிற்று. சிந்துவெளிப் புதைபொருள் ஆராய்ச்சிக்குப் பின்னர், பழஞ் சரித்திர ஆராய்ச்சியிற் றலைமைசான்ற டாக்டர் பிராங்போர்ட் போன்ற சிலர் சிந்துவெளி நாகரிகமே பழைய நாக ரிகங்களுக்கு எல்லாம் அடிப்படையாகவுள்ளதெனத் தமது கருத்தினைத் தயக்கமின்றி வெளியிட்டனர். சிந்துவெளி நாகரிகம், ஆராய்ச்சியில் திராவிடருடைய நாகரிகமாகவும், திராவிடருள்ளும் தமிழருடையதாகவும் காணப்படுதல் மிக வியப்பளிப்பதே யாகும். பழைய நாகரிக மக்களின் வரலாறுகளை ஒரு சிறிதளவாவது அறிந்திருப்பினன்றோ அவை தம்மை ஒப்பிட்டு அவைகளுக்குள்ள ஒற்றுமை வேற்றுமைகளை அறிதல் சாலும். இச் சிறிய நூல் அவ்வழியில் ஊக்குதற்கு எழுந்த ஒரு சிறு நூலாகும். ஆகவே, “குண நாடிக் குற்றமு நாடி அவற்றுள் மிகை நாடி மிக்க கொளல்” கற்றறிந்தார் கடன். சென்னை 6.1.1948 ந..சி.கந்தையா மறைந்த நாகரிகங்கள் தோற்றுவாய் ஒரு காலத்தில் மக்கள் விலங்குகளோடு விலங்குகளாக வாழ்ந்து வந்தார்கள். காலத்தில் அவர்கள் சிறிது சிறிதாகத் திருத்தமடைந்து உயர்நிலை அடைந்தார்கள். இன்றைக்கு ஆறாயிரம் அல்லது ஏழாயிரம் ஆண்டுகளின் முன்னரேயே செவ்விய நாகரிகம் அடைந்த மக்கள் அழகிய நகரங்களமைத்து வாழ்ந்தார்கள் என்பதைப் பழம்பொருள் ஆராய்ச்சி வெளியிடுகின்றது. அக்கால நாகரிக மக்கள் வாழ்ந்த நகரங்கள் இன்று மண்மேடுகளாகக் காட்சி அளிக்கின்றன. மக்கள் ஆற்றோரங்களில் தங்கிப் பயிரிடத் தொடங்கியபோதே நாகரிகம் வளர்ச்சியடைந்தது. பண்டு நாகரிகம் பெற்று விளங்கிய நாடுகள் எல்லாம் ஆற்றோரங்களிலேயே இருந்தன. பழைய நாகரிகத்துக்குப் பேர்போன இடங்கள் எல்லம், சுமேரியா, பாபிலோன், எகிப்து, கிரேத்தா1 முதலியவை. இந்நாடுகளின் நாகரிகத்துக்கும் மக்களுக்கும் ஒரு பொது அடிப்படை இருப்பதைப் பழம்பொருள் ஆராய்ச்சி யாளரும், பழஞ் சரித்திர ஆராய்ச்சியாளரும் எடுத்து விளக்கியுள்ளார்கள். இந்திய மக்களின் பழைய நாகரிகத்தை விளக்கும் பழம்பொருள்கள் சிந்துவெளியில் அரப்பா, மொகஞ்சதரோ, சங்குதரோ முதலிய இடங்களில் செய்யப்பட்ட புதை பொருள் ஆராய்ச்சியால் கிடைத்தன. இந் நகரங்களின் காலம் ஏறக்குறைய கி.மு. 3,500 என ஆராய்ச்சியாளர் கண்டுள்ளார்கள். மைசூரில் சிற்றால்ட்ரக் என்னும் இடத்திலும் மொகஞ்சதரோவை ஒத்த புராதன நகரம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இந் நகரத்தின் காலம் கி.மு. 40ஆம் நூற்றாண்டு எனக் கூறப்படுகிறது. 2சுமேரிய மக்களும் இந்திய மக்களும் ஒரே இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பது நீண்ட காலமாக வரலாற்றாசிரியர்கள் ஆராய்ந்து கண்ட முடிவு. அரப்பா, மொகஞ்சதரோப் புதைபொருள் ஆராய்ச்சிகளால் இம் முடிவு மேலும் வலியுறுவதாயிற்று. இதனால் இந்திய நாட்டினின்றே மேற்குத் தேசங்களுக்கு நாகரிகம் சென்றதெனத் துணியப்படுகின்றது. இவ்வாறு மிகப் பழமையும் சீரும் சிறப்பும் பெற்று விளங்கிய நாடுகளின் நாகரிகத்தைக் குறித்து இந் நூல் கூறுகின்றது. எல்லம் பாரசீகத்தின் தென்மேற்கில் பாரசீகக் குடாக்கடல் உள்ளது. தைகிரஸ், யுபிராதஸ் என்னும் இரு ஆறுகள் ஒன்றுசேர்ந்து அக் குடாக் கடலுள் வீழ்கின்றன. இக்குடாவுக்கு மேலே ஆற்றின் கிழக்கில் சூசானா என்னும் பட்டினம் இருக்கின்றது. இது முற்காலத்தில் சூசா என்னும் பெயர் பெற்று விளங்கிற்று. இது எல்லம்1 எனப் பெயரிட்டு யூதர் வழங்கிய நாட்டின் மத்தியில் உள்ளது. எவ்வினத்தைச் சேர்ந்தவர்கள் என அறியப்படாத ஒரு மக்கட் கூட்டத்தினர் அங்கு வாழ்ந் தார்கள்.2 வரலாற்றில் முதல் புகழ் படைத்த நாகரிகத்தை இவர்கள் உண்டு பண்ணினார்கள். பிரான்சியப் பழம்பொருள் ஆராய்ச்சியாளர், அங்கு இருபதினாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட மனித சின்னங்களைக் கண்டு எடுத்தார்கள். கி.மு. 45ஆம் நூற்றாண்டில் அங்கு உயர்ந்த நாகரிகம் பரவியிருந்ததென்பதற்குச் சான்றுகள் உள்ளன. எல்லம் மக்கள் அக்காலத்தில், வேட்டையாடுதல், மீன் பிடித்தல் முதலிய அலைந்து திரியும் வாழ்க்கையினின்றும் உயர்ந்து, நிலையாக ஓரிடத் தில் தங்கி வாழ்ந்தார்கள். அவர்கள் செம்பு ஆயுதங்களைப் பயன்படுத்தினர்; தானியங்கள் விளைவித்தனர். விலங்குகளை வளர்த்தனர்; ஓவிய வடிவான எழுத்துகளைப் பயன்படுத்தினர்; பலவகை அணிகலன்களை அணிந்தனர்; முகம் பார்க்கும் கண்ணாடியைப் பற்றி அறிந்திருந்தனர்; எகிப்து முதல் இந்தியா வரையில் வாணிபம் நடத்தினர். அவர்கள் தீத்தட்டிக் கற்களால் செய்து பயன்படுத்திய புதிய கற்கால ஆயுதங்கள் காணப்படுகின்றன. கல்லைக் குடைந்து செய்த அழகிய சாடிகளும் காணப்படுகின்றன. அவை மீது, சதுரம், முக்கோணம், நாற்கோணம் போன்ற வடிவங்கள், விலங்குகள், செடிகள் முதலியவை எழுதப்பட்டுள்ளன. அம் மக்கள் செய்து பயன் படுத்திய பொருள்களிற் சில உலக மக்களாற் செய்யப்பட்ட மிக அழகிய பொருள்களின் வரிசையில் வைத்து எண்ணத்தக்கன. குயவனுடைய சக்கரத்தையும், வண்டிகளின் சக்கரத்தையும் அவர்கள் அறிந்திருந்தார்கள். எல்லம் மக்கள் அமைதியாக வாழ முடியவில்லை. எல்லம், சுமேரியாவையும் பாபிலோனையும் வெற்றி கொண்டது; பின்பு அந் நாடுகள் முறையே எல்லத்தை வெற்றிகொண்டன. சூசா என்னும் நகர் சுமேரிய, பாபிலோனிய எகிப்திய, அசீரிய, பாரசீக, கிரேக்க, உரோம ஆட்சிகளின் கீழ் ஆறாயிரம் ஆண்டுகள் புகழ் பெற்று விளங்கிற்று. கி.பி. 14ஆம் நூற்றாண்டு வரையில் அது சூசான் என்னும் பெயரோடு நிலைபெற்றது. பல காலங்களில் அது திரண்ட செல்வமுடையதாக ஓங்கிற்று. அசுர் பானிப்பால் (கி.மு. 646) என்னும் அசீரிய அரசன் எல்லத்தைக் கைப்பற்றி அதனைச் சூறையாடி, நிறைந்த தங்கம், வெள்ளி, மணி, விலையேறப்பெற்ற உடைகள், சிம்மாசனம், தேர் முதலியவைகளையும், விலை மதிக்க வொண்ணாத பிற பண்டங்களையும் நினேவாவுக்குக் கொண்டு சென்றார். சுமேரியா பாரசீகக் குடாக்கடலில் யூபிராதஸ் தைகிரஸ் என்னும் இரு ஆறுகளும் ஒன்றுசேர்ந்து வந்து விழுதலைக் காணலாம். அங்கிருந்து மேலே நோக்கிச் சென்றால் ஒன்றாகச் செல்லும் ஆறு குர்னா என்னும் இடத்தில் கிளைவிட்டுப் பிரிகின்றது. தைகிரஸ் ஆற்றுக்குமேல் சிறிது தூரம் முதல் கழிமுகம் வரையில் மேற்கில் உள்ள நாடு சுமேரியா எனப்படும். இந் நாட்டின் பழைய பெயர் யாது என அறியமுடியவில்லை. நூறு ஆண்டுகளின் முன்னரேயே இந் நாட்டைப் பற்றி அறியப்பட்டது. பழைய உரோமரும், கிரேக்கரும் சுமேரியாவைப் பற்றி அறியார். ஏரதோதசு1 அதைப்பற்றிச் சிறிதும் கேள்விப்படவில்லை. பாபிலோனிய வரலாறு எழுதிய பெரோசசு2 என்னும் பாபிலோனியர் சில பழங்கதைகள் மூலம் அதனை அறிந்திருந்தார். பெரோசசுக்கு இரண்டாயிரம் ஆண்டுகளின் பின் சுமேரியா கண்டுபிடிக்கப்பட்டது. ஒப்பேட்1 என்பார் அங்கு வாழ்ந்த மக்களைச் “சுமேரியர்” என்னும் பெயரால் குறிப்பிட்டார். மொகஞ்சதரோ, அரப்பா என்னும் பழைய சிந்துவெளி நகரங்களிற் புதைபொருள் ஆராய்ச்சி செய்யப்படுவதன் முன்பு சுமேரிய நாகரிகமே உலகில் மிகப் பழமையுடையதெனக் கூறப்பட்டுள்ளது. மேற்கு ஆசிய எகிப்திய நாகரிகங்களுக்கு அடிப்படை சுமேரிய நாகரிகம் என அறியப்படுகின்றது. சுமேரியரின் நாகரிகம் கி.மு. 4,500இல் உச்சநிலை அடைந்திருந்தது. சுமேரியர் அந் நாட்டின் ஆதிக் குடிகளல்லர். அவர்கள் பிற நாடுகளினின்றும் வந்து குடியயேறியவர்களாவர். தாம் வரும்பொழுதே பயிர்ச்செய்கை, உலோகங்களில் வேலை செய்தல், எழுத்து எழுதுதல் போன்ற நாகரிகங்களைப் பெற்றிருந்தார்கள் என்று அவர்கள் நம்பினார்கள். சுமேரிய நாகரிகத்தைக் காட்டும் பழம்பொருள்களை ஒத்தவை சிந்துவெளி களில் கிடைத்துள்ளன. ஆகவே, இரு நாகரிகங்களும் ஒரு பொது உற்பத்திக் குரியவை என்று கருதப்படலாயின. பிராங்போர்ட்2 என்னும் ஆசிரியர் சுமேரிய நாகரிகம் மிக முற்பட்டதென்றும், அதற்கு அடுத்த படியிலுள்ளது எகிப்திய நாகரிகமென்றும், சுமேரிய நாகரிகத்துக்கு முற்பட்டது சிந்துவெளி நாகரிகம் என்றும் குறிப்பிட்டுள்ளார். சிந்துவெளிப் பழம்பொருள்கள் கண்டு பிடிக்கப்படுவதற்கு முன்னர் கிட்டிய கிழக்குத் தேசங்களின் வரலாறு எழுதிய டாக்டர் ஹால் சுமேரியர் சிந்து ஆற்றுப் பக்கங்களினின்றும் சென்றவர்கள் ஆவார் என்பதற்குப் பல காரணங்கள் காட்டியுள்ளார். ஹெரஸ் பாதிரியார் சிந்துவெளியினின்றும் சென்றவர்களே மேற்கு ஆசிய மக்களாவர் எனக் கூறியுள்ளார். இக் கருத்தே இன்று வலிவடைந்து வருகின்றது. சுமேரியர் இவர்களின் தோற்றம் இன்று தக்காணத்தில் திராவிட மொழிகளில் ஒன்றை வழங்கும் மக்களின் தோற்றத்தை ஒத்துள்ளது என டாக்டர் ஹால் கூறியிருக்கின்றார். ஆடவரிற் பலர் தாடி வளர்த்தார்கள்; சிலர் முகத்தை முற்றாக மழித்தார்கள்; பலர் மேல் உதட்டு மயிர்களை மழித்தார்கள்; அழகிய கம்பளி ஆடைகளை உடுத்தார்கள்; அவர்கள் அரைக்குமேல் உடலை மூடவில்லை. நாகரிகம் ஏற ஏற அவர்கள் உடை கழுத்துவரையும் சென்றது. ஆண் பெண் வேலையாட்கள் வீட்டில் வேலை செய்யும்போது அரைக்கு மேல் யாதும் அணியவில்லை. மக்கள் தொப்பி இட்டார்கள்; காலுக்கு மிதியடி தரித்தார்கள்; செல்வ மகளிர் மிருதுவான தோலினால் செய்யப்பட்டு அழகிய வேலைப்பாடுகளால் அலங்கரிக்கப்பட்ட செருப்பை அணிந்தார்கள்; மாலை, வளை, கைவிரல் மோதிரம், காதணி முதலிய பலவகை அணிகளை அணிந்தனர். கி.மு. 2,300இல் சுமேரியரின் நாகரிகம் பழமையடைந்துள்ளது. அக் காலத்தில் சுமேரியப் புலவர்களும் அறிஞர்களும் தங்கள் பழைய வரலாறு களை ஒழுங்குபடுத்திவைக்க முயன்றுவந்தனர். உலகப் படைப்பைப்பற்றிய வரலாறு, பழைய அரசன் ஒருவன் செய்த பாவத்துக்காகப் பெரிய வெள்ளப் பெருக்கு நேர்ந்த வரலாறு போன்றவைகளைப்பற்றிப் புலவர்கள் பாடி னார்கள். பெரிய வெள்ளப் பெருக்கைப் பற்றிய வரலாறு பாபிலோனிய, எபிரேயருள் வழங்கிப் பின்பு கிறித்துவ வேதத்தின் பழைய ஏற்பாட்டுக் கதைகளுள் சேர்ந்துள்ளது. குருமாராகிய சுமேரிய வரலாற்றாசிரியர்கள் அவர்களின் பழமையை மிக அதிகப்படுத்திக் கூறினர். உலகப் படைப்பிலிருந்து பெரிய வெள்ளப் பெருக்கு வரை உள்ள 432,000 ஆண்டுகள்வரை அரசர் பலர் ஆட்சி புரிந்தனர் என்று அவர்கள் கூறியுள்ளார்கள். குருமார் தமது நாகரிகத்தின் பழமையைச் சிறிது அதிகப்படுத்திக் கூறியிருக்கலாம். நிப்பூர் நகர் அழிபாடு நிலமட்டத்திலிருந்து அறுபத்தாறு அடிகளின் கீழ் உள்ளது. அதன் கீழ் அறுபத்தாறு அடிகளுக்கு அக்காட்டின் சார்கன் அரசனின் கட்டடங்கள் காணப்படுகின்றன. நிப்பூரின் பழமை கி.மு. 5,262 வரையில்தான். கிஷ் நகரில் கி.மு. 4,500லும், ஊர் நகரில் கி.மு. 3,500லும் பல அரச பரம்பரைகளிலுள்ள அரசர் ஆட்சிபுரிந்தார்கள் இவ்விரு நகரங்களின் ஆட்சிக் காலங்களிலும் செமித்தியர்1, செமித்தியரல்லாதார் என்னும் அரசர்களுக்கிடையில் போட்டி யிருந்துவந்தது. முதலாம் சார்கன், ஹமுரபி முதலியோர் செமித்தியராவர். கோயிற் குருமார் கி.மு. 3,000முதல் களிமண் ஏடுகளில் எழுதிவைத்த குறிப்புகள் ஊரில் காணப்பட்டன. அவை இலகாஷ், உருக் முதலிய நகரங் களை ஆண்ட அரசர்களின் முடிசூட்டு, வெற்றி, மரணம் முதலியவைகளைப் பற்றிக் கூறுகின்றன. அவை குறிப்பிடுகின்ற நிகழ்ச்சிகள் மிக ஏற்றனவாகக் காணப்படுகின்றன. இலகாஷ் நகரை ஆண்ட உருக்ககினா2 சில சீர்த் திருத்தங்களைச் செய்தான். குருமார் செல்வரிடமும் வறியவரிடமும் இருந்து பொருளை உறிஞ்சுவதைத் தடுக்கப் பல சட்டங்கள் செய்யப்பட்டன. தலைமைக் குரு காடுகளில் மரங்களை வெட்டுதல் கூடாது; அங்குக் கிடைக் கும் பழங்களுக்கு வரி தண்டுதலும் கூடாது; பிணங்களைப் புதைப்பதற்கு உள்ள வரி ஐந்தில் ஒன்றாகக் குறைக்கப்படுதல் வேண்டும். கடவுளுக்குக் காணிக்கையாகக் கொடுக்கும் வருவாய், ஆடுமாடு முதலியவைகளைக் குருமார் பங்கிடுதல் ஆகாது எனக் களிமண் ஏட்டில் எழுதப்பட்ட ஒரு பட்டையம் கூறுகின்றது. இவ்வாறு குருமாருக்கு மாறாகச் சட்டஞ் செய்த உருக்ககினாவை உலூகல் காகிசி என்னும் அரசன் வீழ்த்தி, நகரைக் கொள்ளையிட்டான்; கோவில்கள் அழிக்கப்பட்டன; மக்கள் வீதிகளிற் கொல்லப்பட்டனர். கோவில்களின் கடவுட் சிலைகள் எடுத்துச் செல்லப் பட்டன. இலகாஷ் நகரின் பெரிய, தாய்க் கடவுட் சிலை எடுத்துச் செல்லப்பட்டதைக் குறித்து வருந்தித் தின்கிரதாமு என்னும் புலவர் ஒருவர் பாடிய பாடல்கள் களிமண் ஏடுகளில் காணப்படுகின்றன. முதலாம் சார்கன் சுமேரியரின் இலகாஷ் நகருக்கு இருநூறு மைல் தூரத்தில் சார்கன் என்னும் செமித்திய அரசன் அகேட்1 என்னும் நகரையமைத்து அக்காட்2 என்னும் இராச்சியத்தைத் தோற்றுவித்தான். சூசாவில் கிடைத்த கல்வெட்டு ஒன்றில் சார்கனுடைய உருவம் வெட்டப்பட்டுள்ளது. அதில் அவன் நீண்ட தாடியோடும் அதிகாரமும் செருக்கும் நிறைந்த தோற்றத்தோடும் காட்சி யளிக்கின்றான். சார்கன் அரசமரபினனல்லன். அவனுடைய தாய் கோவிலில் தேவதாசி. அவள் யாரும் அறியாது இவனைப் பெற்றுக் கூடையில் வைத்துப் புற்களால் மறைத்து ஆற்றில் விட்டாள். அரசனுடைய வேலையாள் ஒருவன் அக் குழந்தையைக் கண்டெடுத்தான். வளர்ந்தபோது சார்கன் அரசனின் கிண்ணம் தாங்குபவனாக வேலை பார்த்தான். அவன் அரசனின் தயவினால் அதிகாரமுடையவனானான். இறுதியில் அவன் கலகம் செய்து அரசனை வீழ்த்திச் சிம்மாசனத்தில் அமர்ந்தான். அவன் தன்னை உலகத்துக்கு அரசன் எனக் கூறிக்கொண்டான்; பல பட்டினங்களைப் பிடித்தான்; நகரங்களைக் கொள்ளையடித்தான். அவனால் கொல்லப்பட்டவர்களில் ஒருவன் இலகாஷ் நகரை வென்று சூறையாடிய உலூகல்காகிசி என்பவனாவன். இப் பெரியஅரசன் கிழக்கு மேற்கு தெற்கு வடக்கு என்னும் நான்கு திசைகளிலும் படை எடுத்துச் சென்றான்; எல்லத்தை வென்றான்; வெற்றியின் அடையாளமாகத் தனது வாளைப் பாரசீகக் குடாக்கடலில் கழுவினான். மேற்கு ஆசியாவைக் கடந்து மத்தியதரைக் கடலை அடைந்தான். அவன் ஐம்பத்தைந்து ஆண்டுகள் ஆட்சி புரிந்தான். அக் காலத்தில் பலவகைப் பழங்கதைகள் தோன்றி அவனைக் கடவுளாகச் செய்துவிட்டன. அவனுடைய மரணகாலத்தில் அவன் ஆட்சிக்குட்பட்டிருந்த நாடுகள் கலகம் செய்தன. அவனுக்குப்பின் அவனுடைய மூன்று குமாரர் ஒருவருக்குப்பின் ஒருவராகச் சிம்மாசனம் ஏறினர். கி.மு. இருபத்தாறாம் நூற்றாண்டில் இலகாஷ் மறுபடியும் செல்வச் செழிப்புற்றது. அக் காலத்தில் குதேயா3 என்னும் அரசன் ஆட்சி புரிந்தான். இவன் கோவில்களைக் கட்டினான்; பழைய இலக்கியக் கல்விக்கு ஆதரவளித்தான். வலியவர்களை அடக்கி மெலியர்களுக்கு இரக்கம் காட்டினான். சாலதியரின்4 ஊர் நகரம் கி.மு. 3,500முதல் கி.மு. 700 வரையில் உயர்நிலையில் இருந்தது. ஊர்என்கூர் அரசன் மேற்கு ஆசியாவைத் தனது ஆணைக்கு உட்படுத்தினான். யூபிராதஸ் ஆறுவழியாகச் செய்யப்பட்ட வாணிகத்தால் ஊர் செல்வம் அடைந்தது. நகர்கள் கோவில்களால் அழகு பெற்றன. ஊர்என்கூர்1 தனது ஆணைக்குட்பட்ட லார்சா, உருக், நிப்பூர் முதலிய நகரங்களையும் கட்டினான். இவனுடைய மகன் துங்கி ஐம்பத்தெட்டு ஆண்டுகள் ஆட்சி புரிந்தான். விரைவில் இச் சிறப்புகள் மங்கின. போர்ப் போக்குடைய எல்லம் மக்கள் கிழக்கிலிருந்தும், அமோரியர்2 மேற்கிலிருந் தும் வந்து ஊர் நகரைச் சூறையாடினர். சமாதானத்தைக் குலைத்து அரசனை யும் சிறைப்பிடித்தனர். அமோரியரும் எல்லத்தினரும் சுமேரியாவை 2,000 ஆண்டுகள் வரையில் ஆட்சி புரிந்தார்கள். பின்பு வடக்கினின்றும் ஹமுரபி என்னும் பாபிலோனியன் வெளித் தோன்றினான்; அவன் உருக், ஐசின் முதலிய நகர்களைப் பிடித்தான்; எல்லம்மீது படை எடுத்து அந் நாட்டரசனைச் சிறைப்படுத்தினான்; அமோரிய அசீரிய நாடுகளில் தனது ஆணையை நாட்டினான். பாரசீகர் தலைஎடுக்கும் வரையில் செமித்தியரே தைகிரஸ் யூபிராதஸ் ஆறுகளுக்கிடைப்பட்ட நாடுகளை ஆண்டார்கள். சுமேரியரைப் பற்றி வேறு யாதும் அறியமுடியவில்லை. சுமேரிய நாகரிகம் வளர்ந்து யூபிராதஸ், தைகிரஸ் ஆறுகளின் வழியே மேல்நோக்கிச் சென்று, பாபிலோன், அசீரியா முதலிய நாடுகளிலும் பரவுவதாயிற்று. பொருளாதாரம் பயிர்ச் செய்கை சுமேரியாவின் சீர்திருத்தம் மாரிக்காலத்தில் ஆறுகள் வெள்ளம்முட்டி வழிவதால் உண்டானது. சுமேரியர் வெள்ளத்தைக் கால்வாய்களிற் செலுத்தி வயல்களுக்குப் பாய்ச்ச அறிந்தார்கள். கி.மு. 50ஆம் நூற்றாண்டிலேயே அவர்கள் இவ்வாறு புரிய அறிந்திருந்தார்கள் எனத் தெரிகிறது. வயல்களில் கோதுமை, வாற்கோதுமை முதலிய தானியங்கள் விளைந்தன; பேரீந்தும் காய்கனிகள் உதவும் பலவகைச் செடிகளும் செழித்து வளர்ந்தன. கலப்பையில் எருதுகளைப் பூட்டி உழவும் அவர்கள் அறிந்திருந்தார்கள். கைத்தொழில் சுமேரியர் செம்பையும் தங்கத்தையும் பயன்படுத்தினர். இவ் விரண்டு உலோகங்களையும் கலந்து வெண்கலத்தை உண்டாக்கவும் அவர்கள் அறிந் திருந்தார்கள். இரும்பினாலும் ஆயுதங்கள் செய்யப்பட்டன. அவர்கள் பயன் படுத்திய ஆயுதங்கள் பல தீத்தட்டிக் கற்களால் செய்யப்பட்டவை. தானியத் தாள்களைக் கொய்யும் அரிவாள் போன்ற சில கருவிகள் களிமண்ணினாற் செய்யப்பட்டன. ஊசி, துளைக்கும் கருவி போன்றவை சில தந்தத்தினாலும் இரும்பினாலும் செய்யப்பட்டன. அரசினர் கண்காணிப்பின் கீழ் நெசவுத் தொழில் அதிகம் நடைபெற்றது. வீடுகள் நாணல் தண்டுகளால் கட்டப்பட்டன. நின்று சுழலும் கதவின் தாள் குழிந்த கல்லின்மீது வைக்கப்பட்டது. தரை களிமண் இட்டு அடித்து மட்டம் செய்யப்பட்டது. நாணல்களின் தலைப்பு களை வளைத்துக் கட்டுவதால் கூரைவில் வளைவினதாயிருந்தது. சில சமயங் களில் குறுக்கே மரங்கள் இட்டுத் தட்டையாக அமைக்கப்பட்ட கூரைமீது களிமண் பரப்பப்பட்டது. சுவர்கள் வைக்கோலும் களிமண்ணும் கலந்த கலவையால் பூசப்பட்டன. வீடுகளில் ஆடு, மாடு, பன்றி முதலியவை வளர்க்கப்பட்டன. குடிக்கும் நீர் கிணறுகளிலிருந்து எடுக்கப்பட்டது. வாணிபம் பண்டங்கள் நீர்வழியாகச் சென்றன. சுமேரியாவில் கல் கிடைப்பது அரிது. ஆகவே அவை பிற இடங்களிலிருந்து கடல்வழியே ஆற்றுக் கழிமுகம் வரையும் கொண்டு வரப்பட்டன; பின்பு கால்வாய்கள் வழியாக நகருக்குக் கொண்டு போகப்பட்டன. இந்தியாவுக்கும் சுமேரியாவுக்கும் வாணிபத் தொடர்பு இருந்து வந்தது. இந்தியாவிற் காணப்பட்டவை போன்ற முத்திரைகள் பல சுமேரியாவிற் கண்டுபிடிக்கப்பட்டன. சுமேரியர் நாணயத்தைப் பயன்படுத்தவில்லை. வாணிபம் பண்டமாற்று முறையில் நடைபெற்றது, பொன்னும் வெள்ளியும் குறிக்கப்பட்ட விலையுடையனவா யிருந்தன. அவை பண்டங்களின் விலைக்குப் பதில் கொடுக்கப்பட்டன. சுமேரியாவில் வாணிபத் தொடர்பான பல களிமண் ஏடுகள் கிடைத்தன. அவைகளைக் கொண்டு சுமேரியர் நடத்திய வாணிபத்தைப் பற்றிய செய்திகள் பல அறியக்கூடுகின்றன. சுமேரியரின் சமாதிகளுள் பொன், வெள்ளி அணிகலன்கள், ஏனங்கள், ஆயுதங்கள். பயிரிடும் கருவிகள் போல்வன காணப்பட்டன. மக்களின் பிரிவுகள் செல்வரும் வறியரும் பல பிரிவினராயிருந்தனர். அடிமை வழக்கு வலிமை பெற்றிருந்தது. செல்வருக்கும் வறியருக்குமிடையில் ஒரு வகுப்பினர் வாழ்ந்தனர். இவர்கள் சிறிய வாணிபம் செய்வோர், மருத்துவர், குருமார் என்போராவர். மருத்துவம் உயர்வடைந்திருந்தது. ஒவ்வொரு நோய்க்கும் தனித்தனி மருந்து பயன்படுத்தப்பட்டது. மருந்து சமயத்தோடு சம்பந்தப் படுத்தப்பட்டிருந்தது. நோய்கள் ஆவிகளின் கோளாறினால் உண்டாகின்ற தென்றும், அவைகளை ஓட்டினாலன்றி நோயை அகற்றமுடியாதென்றும் அவர்கள் நம்பினார்கள். அவர்கள் மாதத்தைச் சந்திர அளவையாகக் கணித் தனர். ஒவ்வொரு நகரத்தினரும் மாதங்களுக்கு வெவ்வேறு பெயர்கள் இட்டு வழங்கினார்கள். ஆட்சி ஒவ்வொரு நகரிலும் தனித்தனி அரசன் இருந்து ஆண்டான். அவன் பதேசி எனப்பட்டான். இதற்குப் பூசாரி அரசன் என்பது பொருள். ஆளுகையின் ஒவ்வொரு பகுதியும் சமயத்தால் கட்டுப்படுத்தப்பட் டிருந்தது. கி.மு. 2,800லேயே வாணிபம் பலமடைந்திருந்தது. அப்பொழுது சிற்றரசர்களுக்கெல்லாம் தலைவனாகிய பேரரசன் தோன்றினான். அவன் எப்பொழுதும் அச்சத்துடன் வாழ நேர்ந்தது. எந்த நேரத்திலும் அவனை இன்னொருவன் வீழ்த்தி அவன் இடத்தை அடைதல் கூடும். அரசன் வீற்றிருக்கும் மண்டபத்துக்கு இரு வாசல்கள் இருந்தன. அவை ஒருவன் மாத்திரம் செல்லக்கூடிய ஒடுக்க முடையன. அரசனைக் காண்பதற்கு ஒருவன் மாத்திரம் ஒரு காலத்தில் அனுமதிக்கப்படுவான். அவன் உள்ளே செல்வதன் முன் அவனிடத்தில் ஆயுதங்கள் இருக் கின்றனவா என்று வாயில் காவலன் சோதனை செய்வான். அரசன் வழிபடும் கோவிலும் மறைவில் இருந்தது. போர்க்காலங்களில் அரசன் வில், அம்பு, ஈட்டி போன்ற ஆயுதந் தாங்கிய வீரர்களின் முன்னே தேர்மீது சென்றான். வாணிபப் பாதைகள், வாணிபப் பண்டங்கள் என்பவை காரணமாகப் பெரும்பாலும் போர்கள் நிகழ்ந் தன. மெனித்தாஸ் என்னும் அக்கேடிய அரசன் தான் எல்லத்தின் மீது படை எடுப்பது அங்குள்ள வெள்ளிச் சுரங்கங்களையும், சிலைகள் செய்யும் கற்களையும் கைப்பற்று வதற்கெனக் கூறினான். போரில் தோற்றவர்கள் அடிமைகளாக விற்கப்பட்டனர்; விற்பது அதிக ஊதியம் அளியாதெனக் கண்டால் அவர்கள் போர்க்களத்திலேயே கொல்லப்பட்டார்கள். போரில் பிடிபட்டவர்களில் பத்திலொரு பகுதியினர் கோவில்களுக்குக் கொடுக்கப்பட்டனர். சமூக ஒழுங்கு காணியாளன் ஆட்சிமுறையால் காக்கப் பட்டு வந்தது. போர்களில் வெற்றி உண்டானபோது, நிலங்கள் திறமையுடைய பிரபுக்களுக்குப் பிரித்து அளிக்கப்பட்டன. அந் நிலங்களுக்கு வரி தவிர்க்கப்பட்டது. இவ்வகை அதிகாரிகள் நாட்டில் ஒழுங்கைப் பாதுகாத்தார்கள்; அரசனுக்குப் போர் வீரரை அளித்தார்கள். வரிகள் மூலம் அரச வருவாய் சேர்க்கப்பட்டுக் களஞ்சியங்களில் வைத்துப் பாதுகாக்கப்பட்டது. அரசர், காணியாளர், அதிகாரிகள் ஆளுகையைப்பற்றி பல சட்டங்கள் இருந்தன. இவைகளே ஹமுரபியின்1 சட்டங்களுக்கு அடிப் படையானவை. செமித்திய சட்டம் பெண்ணின் கூடா ஒழுக்கத்துக்கு மரண தண்டனை விதித்தது; ஆனால் சுமேரிய சட்டம் கணவனை இன்னொரு மனைவியைக் கொள்ளும்படி அனுமதித்ததுடன், முந்தியவளைப் பிந்திய வளுக்குக் கீழாக வைத்திருக்கும்படி விதித்தது. வாணிபம், திருமணம், கடன் கொடுத்தல், கடன் வாங்குதல், கொள்வன, விற்பன போன்றவைகளுக்கெல்லாம் சட்டங்கள் இருந்தன. கோயில்களில் வழக்குகள் கேட்டுத் தீர்ப்பு அளிக்கப்பட்டன. நியாயத் தீர்ப்பாளர் குருமாராக விருந்தனர். ஒவ்வொரு வழக்கும் முதலில் நடுவர் கையில் விடப்பட்டது. நியாயந் தீர்க்கும் இடத்துக்குச் செல்வதன்முன் வழக்குக்கு இடமின்றித் தீர்த்துவைப்பது அவர்கள் கடமையாகும். சமயம் ஊர்என்கூர் என்னும் அரசன் தனது சட்டங்களைச் சமாஷ் என்னும் கடவுள் அருளிச் செய்தார் எனக் கூறினான். சுமேரியh வில் கடவுளர் பலராகப் பெருகினர். ஒவ் வொரு நகரத்துக்கும் ஒவ்வொரு தலைமைத் தெய்வம் இருந்தது. மக்களின் ஒவ்வொரு வகைச் செயலுக்கும் நன்மை புரியும் தனித் தனித் தெய்வங்கள் பல இருந்தன. சுமேரியர் தோன்றிய காலம் முதல் ஞாயிறு வணக்கமும் வளர்ச்சியடைந்து வந்தது. சமாஷ் என்னும் ஞாயிற்றுக் கடவுள் இராக் காலத்தில் வட கடலில் துயின்றார்; அவர் வெளியே வரும்படி விடியற் காலம் கதவைத் திறந்துவிட்டது. செங்குத்தான வானத்தின்மீது தனது தேரைச் செலுத்திக் கொண்டு நெருப்புத் தணல்போல் அவர் மேலே சென்றார். எல்லில் என்னும் கடவுளுக்கும் அவர் மனைவியாகிய நின்லில்லுக்கும் நிப்பூரில் கோவில்கள் இருந்தன. உருக் நகரில் இன்னி என்னும் தரைக் கடவுளாகிய கன்னி வழிபடப்பட்டார். செமித்தியரும் அக்கேடியரும் இக் கடவுளை இஸ்தார் என அழைத்தனர். கிஷ், இலகாஷ் என்னும் நகர்களில் தொலரோசா என்னும் தாய்க்கடவுள் வழிபடப்பட்டார். வானத்தில் ஆவிகள் நிறைந்திருக்கின்றனர்; தேவர்கள் (angels) மக்களைப் பாதுகாக்கின்றனர்; பைசாசுகள் தேவரைத் துரத்தி மக்களைப் பிடித்து வருத்துகின்றன என மக்கள் நம்பினார்கள். கோயில்களில் பல தெய்வங்கள் இருந்தன. அவைகளுக்கு உணவும் காணிக்கைகளும் கொடுக்கப்பட்டன. மாடு, ஆடு, புறா, கோழி, தாரா, மீன், பேரீந்தின் பழம், அத்திப்பழம், வெள்ளரிக்காய், வெண்ணெய், எண்ணெய், பலகாரம் முதலியன தெய்வங்களுக்கு விருப்பமுடையன என்று களிமண் பட்டயமொன்றில் பொறிக்கப்பட்டுள்ளது. இவ்வகைக் காணிக்கைகளைத் தெய்வங்கள் பெறுவதால் சுமேரிய கோவிற் குருமார் அதிக செல்வத்தை ஈட்டி அதனால் அதிகாரம் உடையவர்களானார்கள். பெரும்பாலான கருமங்களில் அவர்களே ஆட்சி புரிவோராயிருந்தனர். அவர்கள் எவ்வளவுக்குக் கோயிற் பூசாரிகளாக விருந்தார்கள், எவ்வளவுக்கு ஆட்சி புரிபவர்களாயிருந்தார்கள் என்று அறியமுடியவில்லை. உருக்ககினா என்னும் அரசன் குருமார் செல்வரிடமும் வறியரிடமும் பணத்தைக் கவர்வதைக் கண்டித்து அவர்களின் அதிகாரத்தைக் குலைத்தான். அவன் மரணமானபோது குருமார் பழைய நிலைமையை எய்தினர். சுமேரியரின் சமாதிகளில் உணவும் ஆயுதங்களும் வைக்கப் பட்டிருந்தன. இதனால் அவர்கள் மரணத்துக்குப் பின்னும் உயிர் அழியா திருப்பதை நம்பினார்கள் எனத் தெரிகின்றது. வாழ்க்கை குருமார் கல்வியோடு பழங்கதைகளையும் சிறுவர்களுக்குப் படிப்பித் தார்கள். பழங்கதைகள் அவர்களது ஆட்சிக்கு வலிமை அளித்தன. ஒவ்வொரு கோயிலிலும் பள்ளிக்கூடம் நடத்தப்பட்டது. பழைய களிமண் ஏடுகளில் கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல், சதுர அளவை, கன அளவை வாய்பாடுகளும் கோணலளவைப் பற்றிய பயிற்சிகளும் காணப்படுகின்றன. கோயில்களில் தேவதாசிகள் இருந்தார்கள். திருமணத்தைப்பற்றிய சட்டங்கள் இருந்தன. தந்தையாலளிக்கப்பட்ட சீதனப்பொருள் பெண்ணின் அதிகாரத்துக்குட்பட்டிருந்தது. கணவனைப் போல மனைவிக்கும் பிள்ளைக ளிடத்தில் சம உரிமை உண்டு. கணவனின் தொடர்பின்றித் தனது சொந்த அடிமைகளை வைத்திருக்கவோ, அவர்களை விற்றுவிடவோ அவளுக்கு அதிகார முண்டு. பெண்கள் அரசி போன்ற நிலை வரையில் உயர்ந்து நகரை ஆளவும் முடியும். கூடா ஒழுக்கத்துக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. வறிய பெண்களின் வாழ்க்கை செம்மையுறவில்லை. செல்வ மகளிர் உயர்ந்த உல்லாச வாழ்க்கை நடத்தினர். அவர்கள் மேனியில் அலங்காரப் பொருள்களையும் பலவகை அணிகலன்களையும் பயன்படுத்தினர். சமாதிகளில் இவ்வகைப் பொருள்கள் காணப்பட்டன. எழுத்துகள் சுமேரிய எழுத்துகள் மிக வியப்பளிப்பன அவர்களின் எழுத் தெழுதும் முறை மிகப் பண்பட்டிருந்தது. இலக்கியப் பாடல்கள், சமயப் பாடல்கள், வாணிபத் தொடர்பான எழுத்துகள் பல காணப்படுகின்றன. கி.மு. 36ஆம் நூற்றாண்டிலேயே இவர்கள் எழுத அறிந்திருந்தார்கள். கி.மு. 32ஆம் நூற்றாண்டில் எழுதுதற்குக் களிமண் ஏடுகள் பயன்படுத்தப்பட்டன. களிமண் ஏடுகளில் ஆப்பு வடிவமான முனையுடைய குச்சியினால் எழுத்துகள் எழுதப்பட்டன. இவ்வகையான பொருள்களைக் கொண்டே அரசாங்க ஆவணங்கள், கொள்வன, விற்பன, உடன்படிக்கை ஆவணங்கள் போல்வன எழுதிக் காப்பாற்றப்பட்டன. எழுதிய பின்பு களிமண் ஏடுகள் வெய்யிலில் அல்லது நெருப்பிலிட்டு உலர்த்தப்பட்டன. ஆகவே, அவர் களின் ஆவணங்கள், நூல்கள் முதலியன நிலைக்கக் கூடியன வாயிருந்தன. சுமேரிய எழுத்துகள் ஆப்பு வடிவமாயிருந்தமையின் அவை ஆப் பெழுத்துகள் எனப்பட்டன. சுமேரிய எழுத்துகள் வலமிருந்து இடம் வாசிக்கப்பட்டன: பாபிலோனிய எழுத்துகள் இடமிருந்து வலம் எழுதப்பட்டன. ஆப் பெழுத்துகள் சுமேரிய மட்பாண்டங்களிற் காணப்படும் ஓவிய எழுத்துக் களின் சுருக்கு எழுத்துகளாகும். இவ்வெழுத்துகள் பல நூற்றாண்டுகளாக விரைந்து எழுதப்படும் போது ஓவிய வடிவங்களை இழந்து கீற்று வடிவங் களை அடைந்தன. எழுத்து நிலை இலக்கிய நிலையை அடையப் பல நூற்றாண்டு களாகும். நெடுங்காலம் வாணிபத்துக்கு எழுத்து துணைபுரிந்தது. ஒப்பந்தங் கள் பற்றுச் சீட்டு, பண்டங்களின் விலை போல்வன எழுதிவைக்கப்பட்டன. மந்திர வித்தை முறைகள் கிரியை முறைகள், சமயத் தொடர்பான பழங் கதைகள், துதிகள், பாடல்கள் முதலியவை மறைந்து போகாமலும் மாறுபடா மலும் இருக்கும்படி அவை எழுதிவைக்கப்பட்டன. கி.மு. 2,700லேயே சுமேரியாவில் பெரிய நூல் நிலையங்களிருந்தன. தெல்லோ என்னும் பழைய நகரில் ஒன்றன்மீது ஒன்றாக அடுக்கி ஒழுங்குபடுத்தி வைக்கப்பட்ட 30,000 களிமண் ஏடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. அங்குப் பெரிய நூல்நிலையம் ஒன்று இருந்தது. கி.மு. 20ஆம் நூற்றாண்டில் சுமேரிய வரலாற்றாசிரியர்கள் பழைய வரலாறுகளை ஒழுங்குபடுத்தி எழுதினார்கள். நிகழ்கால வரலாறுகளையும் எழுதிவைத்தார்கள். அவர்கள் எழுதிய நூல்கள் கிடைக்கவில்லை. ஆனால் அவைகளின் பகுதிகள் பாபிலோனிய அரசரின் வரலாறுகளின் இடையிடையே காணப்படுகின்றன. கட்டடம் சுமேரியாவில் எழுத்துகள் வளர்ச்சியடைந்தமை போலவே கட்டடக் கலையும் வளர்ச்சியடைந்தது. சுமேரியர் நாணல் தண்டுகளைச் சதுரமாகவோ, நீண்ட சதுரமாகவோ அல்லது வட்டமாகவோ நட்டார்கள். அவைகளின் தலைப்புகளை வளைத்து வில்வடிவு அல்லது அரை வட்டவடிவு உண்டாகும் படி கட்டினார்கள். நிப்பூரில் வில் வடிவில் அமைக்கப்பட்ட கால்வாய் ஒன்று காணப்படுகின்றது. அதன் காலம் கி.மு. 3,500ஆக இருக்கலாம். வில் வடிவுடைய கதவுகள் ஊர் அழிபாடுகளில் பொதுவாகக் காணப்படுகின்றன. அவை கி.மு. 2,000 அளவிலமைக்கப்பட்டனவாகலாம். அங்குக் கட்டடங் களில் காணப்படும் வில்கள் (arches) இன்றைய விற்களேயாகும். செல்வர் திடர்களில் அரண்மனை போன்ற மாளிகைகளை அமைத்து வாழ்ந்தார்கள். சில திடர்கள் நில மட்டத்திலிருந்து நாற்பது அடிக்குமேல் உள்ளன. சிறப்பாக அமைக்கப்பட்ட பாதையாலன்றி வீட்டுக்கு ஏறிச் செல்ல முடியாமல் இருந்தது. இவ்வாறு சுமேரியச் செல்வன் ஒவ்வொருவனுடைய வீடும் கோட்டை போலிருந்தது. சுவரின் வெளிப்புறம் சிவப்பு நிறமுடைய தாயிருந்தது. சதுரம், வளைவு, முக்கோணம் போன்ற சூளையிலிட்ட களிமண் வடிவங்களால் அது அலங்கரிக்கப்பட்டிருந்தது. உட்சுவர் சாந்திட்டு மட்டஞ் செய்து, சாயம் பூசப்பட்டிருந்தது. வீட்டின் நடுவில் முற்றமும், முற்றத்தின் நாற்புறத்திலும் வீடும் இருந்தன. செல்வர்கள் மாத்திரம் வீடுகளுக்குச் சாளரங்களைப் பயன்படுத்தினர். தண்ணீர் கிணற்றிலிருந்து எடுக்கப்பட்டது. நகரின் அழுக்குநீர் வெளியே செல்லக் கால்வாய்கள் இருந்தன. வீட்டில் தளவாடங்கள் அதிகம் இருக்கவில்லை. சில படுக்கைகள் உலோகங்களும் தந்தமும் அழுத்தி அலங்கரிக்கப்பட்டன. கைகள் வைத்து ஆறக்கூடிய நாற் காலிகளின்1 பாதங்கள் சிங்கத்தின் பாதங்கள் போன்று செய்யப்பட்டிருந்தன. கோயில்கள் அமைப்பதற்குக் கற்கள் பிற இடங்களினின்றும் கொண்டுவரப்பட்டன. அவை செம்பினாற் செய்யப்பட்டனவாயும், கம்பளி யின் மேல் விலையுயர்ந்த உலோகங்களைப் பதித்துச் செய்யப்பட்டனவாயும் உள்ள வேலைப்பாடுகளால் அலங்கரிக்கப்பட்டன. ஊரில் உள்ள நன்னார் ஆலயத்தில் சிறிது நீலநிறம் கொடுக்கப்பட்டனவாயும், மினுக்கம் கொடுக்கப் பட்டனவாயும் உள்ள செங்கற்கள் பயன்படுத்தப்பட்டன. சுவரின் உட்புறம் சலவைக் கல், கல்நார், நிறக்கற்கள், பொன் முதலியவை அழுத்திய மரச் சட்டங்களால் மறைக்கப்பட்டன. நகரத்தின் முதன்மையான கோயில், மேட்டின்மீது கட்டப்படவில்லை; கோயில்கள்மீது மூன்று, நான்கு அல்லது ஏழு மாடிகள் இருந்தன. அம் மாடிகளை அடைவதற்கு வெளிப்புறமாகச் சங்குப் புரிபோற் சுழன்று செல்லும் படிக்கட்டுடைய பாதை இருந்தது. மிக உயரமான மாடியில் நகரத்தின் பெரிய தெய்வம் வீற்றிருக்கும். படை எடுப்புக் காலங்களில் கோயில் அரணாகவும் பயன்பட்டது. கோயில்கள் வீரர், கடவுளர் போன்ற சிற்பங்களால் அலங்கரிக் கப்பட்டிருந்தன. தெல் எல் உபேயிட்2 அழிபாட்டில் செம்பி னாற் செய்யப்பட்ட இடபம் ஒன்று காணப்பட்டது. இது சுமேரியரின் பழைய சின்னங்களுள் ஒன்று. ஊர் அழிபாட்டில் சபாட் அரசியின் கல்லறையில் வெள்ளியாற் செய்யப்பட்ட பசுவின் தலை கண்டெடுக்கப்பட்டது. சுமேரியர் தண்டு சக்கரங்களைக் கொண்டு மட்பாண்டங்கள் செய்தார்கள். பொற்கொல்லர் பொன்னில் அழகிய வேலைகள் செய்தனர். ஊர் அழிபாட்டில் பொன்னினாற் செய்யப்பட்ட பல ஏனங்கள் காணப் பட்டன. அவைகளின் காலம் கி.மு. 4000 ஆக இருக்கலாம். அங்குக் கல்லில் வெட்டப்பட்ட உருளை வடிவான முத்திரைகளும் கிடைத்தன. இவைகளைச் சுமேரிய மக்கள் தமது கையெழுத்துகளைப் பொறிப்பதற்குப் பயன்படுத் தினர். சுமேரியரின் நாகரிகமே எகிப்திற்குப் பரவியதென்றும் எகிப்திய நாகரிகத்துக்கு அடிப்படை சுமேரிய நாகரிகமே யென்றும் ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். எகிப்து ஆப்பிரிக்காவிலே நீல ஆறு என்னும் பெரிய நதி ஒன்று உண்டு. இது பாலைவனத்துக் கூடாகச் சென்று மத்தியதரைக் கடலுள் விழுகின்றது. இதன் இரு ஓரங்களிலும் ஏறக்குறையத் தனித்தனி பன்னிரண்டு மைல் அகலம் வரையில் உள்ள கீலமான தரை பயிர்பச்சை யுடையதாய்ச் செழிப்படைந் துள்ளது. அப் பகுதி எகிப்து எனப்படுகின்றது. ஆற்றின் முகத்துவாரத்தை அடுத்த பகுதி கீழ் எகிப்து எனவும் வழங்கின. இவ் வாற்றோரங்களில் மிகப் பழங்காலம் முதல் மக்கள் குடியேறியிருந்தார்கள். அவர்களைப்பற்றிய வரலாறு அறியப்படவில்லை. கி.மு. 50ஆம் நூற்றாண்டில் பண்டு எனப்பட்ட ஒரு நாட்டி னின்றும் புதிய மக்கட் கூட்டத் தினர் சிலர் வந்து இவ்வாற்றோரங் களிற் குடியேறினர். பண்டுநாடு செங்கடலுக்குக் கிழக்கேயுள்ள இக்கால எரித்திரியா, சொமாலி லந்து என்னும் இடங்கள் எனக் கருதப்பட்டது. பண்டு என்று குறிக்கப்பட்ட நாடு மலை யாளக் கரைகள் என இக்கால ஆராய்ச்சி யாளர் கூறுகின்றனர்.1 பண்டு நாட்டினின்றும் வந்து நீல ஆற்றுக் கழிமுகத் தீவில்2 குடியேறிய மக்கள் வடக்கி னின்றும் தெற்கு நோக்கிப் பரவி னார்கள். பண்டு நாட்டினின்றும் வந்த மக்களுக்குத் தலைவர் ஓரஸ்3. அவரின் அடையாளம் கழுகு. பண்டு நாட்டினின்றும் வந்து குடியேறிய மக்களிடையே ஆட்சி முறையை நாட்டியவர் இவர் ஆகலாம். ஓரசின் தலைமையில் வந்த மக்கள் மேல் எகிப்தைக் கைப்பற்ற எவ்வளவு காலம் சென்றதெனத் தெரியவில்லை. வடக்கிலும் தெற்கிலும் ஆட்சிகள் தோன்றியிருந்தன. வடக்குத் தெற்கு இராச்சியங்கள் என்பன பல சிற்றரசர் நாடுகளின் இணைப்புக்களேயாகும். சிறிய நாடுகளை ஆண்ட சிற்றரசர்களைப் பற்றியோ அவர்கள் காலத்தில் நடந்த நிகழ்ச்சிகளைப் பற்றியோ யாதும் தெரியவில்லை. அவர்கள் காலத்தில் கையாளப்பட்ட கைவேலைப் பொருள்கள் கற்காலத் தவை. அவை வியக்கத்தக்க அழகுடையன. அக் காலத்தில் உலோக வகை களில் செம்பு பயன்படுத்தப்பட்டது. ஓரசின் தலைமையில் வந்தவர்களின் வெற்றிக்குக் காரணம் உலோக முனைகள் இறுக்கப்பட்ட ஆயுதங்கள் எனப் பிற்காலக் கற்பனைக் கதைகளிற் காணப்படுகின்றது. ஐந்தாவது அரச பரம்பரையினர் பெயர்கள் முறைப்படுத்தி எழுதி வைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு எழுதுவதற்கு முற்பட்ட சில குறிப்புகள் இருந்தன வாகலாம். அரசர் பெயர்களைத் தவிர வேறு நிகழ்ச்சிகள் எவையும் குறிக்கப்படவில்லை, தெற்கே முதலில் ஆண்ட அரசனைப்பற்றிச் சிறிது அறிகின்றோம். இவனை கி.மு. 34ஆம் நூற்றாண்டில் மேல் எகிப்தையும் கீழ் எகிப்தையும் இணைத்தான். இவன் ஓரசின் மரபில் தோன்றியவன் எனக் கூறப்படுகின்றது. எகிப்தியக் கட்டடங்களிலும் ஞாபகச் சிலைகளிலும் காணப்பட்ட எழுத்துகள் வாசிக்கப்படுவதன் முன்பு எபிரேயரின் சமய நூல்களைக் கொண்டும், எரதோதசு1 எழுதியவைகளைக் கொண்டும் எகிப்திய வரலாறுகள் அறியப்பட்டன. முதல் எகிப்திய பரம்பரையைத் தோற்றுவித்தவர் மேன்ஸ்2 எனப்படுகின்றார். வடநாடு தென்னாட்டுக்கு உட்பட்டிருக்கவில்லை; ஆனால் அது தெற்கே உள்ள அரசனுக்கு அடங்கியிருந்தது. தென்னாட்டு அரசன் தனது மரபு வடநாட்டு அரச பரம்பரையைச் சேர்ந்தது எனக் கூறினான். இவன் இரு நாடுகளுக்கும் தலைவன் ஆனான். இவன் அல்லது இவனுக்குப்பின் வந்த அரசன் வடநாட்டிற்கும் தென்னாட்டிற்கும் மத்தியில் அபிடொஸ்3 என்னும் நகரை அமைத்தான். இது மூன்றாம் அரச பரம்பரைக் கால நிகழ்ச்சி. ஆறாவது அரச பரம்பரைக் காலத் தில் அது மெம்பிஸ் நகரை ஒத்த சிறப்படைந்திருந்தது. மெம்பிஸ் நகர் என்சிப்-மேர்பேபா4 என்னும் அரசனால் கட்டப்பட்டதெனச் சொல்லப்படுகின்றது. முதல் இரு அரச பரம்பரையினரும் சிறிதேறக்குறைய 400 ஆண்டுகள் ஆட்சிபுரிந்தனர். இரண்டாவது அரச பரம்பரையினர் காலத்தில் முக்கிய நிகழ்ச்சிகள் யாதும் காணப்படவில்லை. தென்னாட்டு அரசனின் வெற்றியோடு இரண்டாவது பரம்பரை முடிவடைகின்றது. வெற்றியாளனாகிய காசிகெம் தனது பெயரைக் காசிகெமூய் என மாற்றிக்கொண்டு அரசுரிமைக் குரிய பெண்ணை மணந்து மூன்றாவது அரச பரம்பரையைத் தோற்றுவித் தான். இவன் முதற் பரோவா1 எனப்படுவன். காசி கெமூயின் காலம் கி.மு. 2,980. இவனிலிருந்து வலிய பல அரசர் தோன்றி ஆட்சிபுரிந்தார்கள். இவனுடைய உருவச்சிலை ஓரஸ் வணக்கத் தினரின் முதன்மை இடமாகிய ஹிரகோன் போலிஸ்2 என்னும் கழுகு நகரத்திலுள்ள சமாதியில் காணப்பட்டது. காசி கெமூயின் சமாதி ஒடுங்கிச் செல்லும் படிக்கட்டுகளைப் போல் ஒன்றின் மீது ஒன்றாகக் கற்பாளங்களை வைத்துக் கட்டப்பட்டது. இதுவே முதல் பிரமிட்3 சமாதி எனப்படுகின்றது. இதன்பின் சினெவெரு4 என்னும் நான்காவது பரம்பரையில் வந்த அரசன் பெரிய பிரமிட் சமாதியைக் கட்டினான். சினவெருவுக்குப் புதல்வன் இல்லை. அவனுக்குப் பின் குபுவா5 ஆட்சிபுரிந்தான். இவன் நாலாவது பரம்பரையை நாட்டியவனாவன். இவன் எவ்வாறு ஆட்சிக்கு வந்தான் என்று தெரிய வில்லை; ஒருபோது திருமண இணைப்பினால் வந்திருக்கலாம். இவனுடைய மகன் கவ்றி6. கவ்றியின் மகன் மென்கூரா. இவர்கள் கிசே7 என்னும் நகரத்தில் பெரிய பிரமிட் சமாதியையும் பெரிய மனித முகச் சிங்கத்தையும் அமைத்தார்கள் என்பதைவிட வேறு யாதும் தெரியவில்லை. இவர்களைச் சியப்ஸ், மிசீரினஸ் என எரதோதசு குறிப்பிட்டுள்ளார். கிசேயில் அமைக்கப்பட் டுள்ள பெரிய பிரமிட் சமாதியின் உயரம் 484 அடி. இது 13½ ‘ஏக்கர்’ தரையை மூடியிருக்கின்றது. இதைக் கட்டுவதற்கு ஒவ்வொன்றும் இரண் டரை “டன்” பாரமுள்ள 2,300,000 சுண்ணாம்புக் கற்கள் பயன்படுத்தப் பட்டுள்ளன. சில கற்கள் 150 டன் பாரமுள்ளன. இதனைக் கட்டி முடிப்பதற்கு 100,000 அடிமைகள் இருபது ஆண்டுகள் உழைத்தார்கள். இரண்டாவது பிரமிட் சமாதிக்கு முன்னால் வெட்டப்பட்டுள்ள மனிதமுகச் சிங்கத்தின் உயரம் 75அடி. நீளம் 150 அடி. அதன் முகத்தின் குறுக்கு அளவு 18 அடி 8 அங்குலம். அதன் மூக்கின் நீளம் 5 அடி 7 அங்குலம். பயிர்ச்செய்கை இப்பொழுது நைல் நதிக் கழிமுகத்தில் காணப்படும் துருத்திகள் முன்பு குடாக்கடலாக விருந்தன. இப்போது இத் துருத்திகளில் அறுபது இலட்சம் மக்கள் பருத்தியைப் பயிரிட்டு ஏராளமான பஞ்சை வெளிநாடுகளுக்கு அனுப்புகிறார்கள். நீல ஆறு ஆண்டில் ஒருமுறை பெருக்கெடுக்கின்றது. அப் பெருக்கு முன்பின் நூறு நாட்களுக்கு நிலைக்கும்; ஆற்றுநீர் இவ்வாறு அணைகடந்து பெருகுவதால் பாலைநிலம் செழிப்படைகின்றது. அங்கு நாகரிகம் மிகமிக முற்காலத்தில் தோன்றியிருந்ததற்குக் காரணம் இதுவே. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக எகிப்திய மக்கள் ஆறு பெருகும் காலங்களை ஆவலுடன் எதிர்பார்த்திருப்பது வழக்கம். இன்றும் கெய்ரோ வீதிகளில், பிரசித்தம் செய்வோர் ஆற்றுப் பெருக்கின் நிலையைப்பற்றித் தினம் காலையில் அறிவிப்பார்கள். வெள்ளப்பெருக்கைக் கட்டுப்படுத்தாவிட்டால் அது வயல்களை அழித்துவிடும் என மக்கள் அறிந்திருந்தார்கள். வரலாறு தொடங் காத காலத்திலேயே மக்கள் ஒன்றை ஒன்று குறுக்கும் நெடுக்குமாகக் கடந்து செல்லும்படி பல அகழிகளை வெட்டினார்கள். மேற்கொண்டு பெருகும் நீர் அகழிகளில் தங்கிற்று. ஆற்றுப் பெருக்குக் குறைந்தபோது நீர்இறை கூடை களால் இறைத்து வயல்களுக்குப் பாய்ச்சப்பட்டது. கோதுமை நீல ஆற்றை அடுத்த நிலங்களில் தானாக விளைவ தில்லை. ஆகவே, மிகப் பழைய காலத்திலேயே எகிப்தியர் பருவ காலங்களில் விளையும் தானியங்களைப் பயிரிட அறிந்திருந்தார்கள் எனத் தெரிகின்றது. எகிப்திய நாடு பயிர்ச் செய்கைக்கு மிக வாய்ப்புடையதாயிருந்தது. அதிக வேலை புரியாமலே தானியம் விளைவிக்கப்பட்டது. மற்றைய நாட்டவர் நிலத்தைக் கலப்பையால் உழுதும், மண்வெட்டியால் கொத்தியும் அதிகம் உழைத்துத் தானியத்தை விளைவித்தனர். நீலநதி பெருகியபோது வயல்களில் நீர் பெருகிற்று. வெள்ளம் வற்றியபோது ஒவ்வொருவனும் தனது வயலை விதைத்தான். தானியங்கள் மண்ணில் புதையும்படி உழக்கப் பன்றிகள் விடப்பட்டன. பின்பு அறுப்புக் காலத்தை அவர்கள் எதிர்பார்த் திருந்தார்கள். மரங்களில் ஏறிப் பழங்கள் பறிக்கும்படி குரங்குகள் பழக்கப்பட் டிருந்தன. நீல ஆறு பெருகி வயல்களில் நீர் பாய்ந்தபோது ஆயிரக்கணக் கான மீன்கள் குளங்களில் தங்கின. மீன் பிடிக்கப் பயன்படுத்திய வலைகளை மக்கள் இராக் காலங்களில் கொசு வலைகளாகப் பயன்படுத்தினர். ஆற்று நீர் பாய்ச்சுவதால் குடிகள் இலாபம் அடையவில்லை. எல்லா நிலங்களும் அரசனுக்குரியன. அவைகளைப் பயன்படுத்துவோர் அரசனுக்கு வருவாயில் பத்திலொன்றை வரியாகக் கொடுத்தனர். சிற்றரசர் போன்ற பிரபுக்களுக்கும் செல்வருக்கும் சொந்தமான பெரிய நிலங்கள் இருந்தன. இவ்வகை நிலம் ஒன்றில் பதினையாயிரம் பசுக்கள் நின்றன. இதைக்கொண்டு ஒவ்வொரு நிலத்தின் பரப்பும் எவ்வளவென்று நாம் உய்த்து அறியலாம். தானியவகை, இறைச்சி, மீன் என்பன முக்கிய உணவுகளா யிருந்தன. செல்வர் உணவுக்கு மேல் முந்திரிகைச் சாற்றைக் குடித்தார்கள். பொதுமக்கள் கோதுமையில் வடித்த மதுவைப் பருகினார்கள். குடிகளின் வாழ்க்கை வருந்தத்தக்கதாக இருந்தது. கால்வாய் வெட்டுதல், வீதிகள் அமைத்தல், அரசினர் நிலங்களைத் திருத்துதல், பிரமிட் சமாதிகள் கட்டுவதற்குப் பெரிய கற்களை இழுத்தல், கோயில், அரண்மனை அமைத்தல் போன்றவைகளுக்கு மக்கள் கூலியின்றி வேலை செய்தல் கட்டாயமாக இருந்தது. வயல் வேலை செய்யும் கூலியாட்கள் தமது வறுமையில் திருப்தியடைந்திருந்தார்கள். அவர்களுட் பெரும் பகுதியினர் அடிமைகளாவர். இவர்களுட் பலர் போர்களில் பிடித்து அடிமைகளாக்கப் பட்டவர்; சிலர் கடனுக்காக அடிமைகளாக்கப் பட்டவர். சில சமயங்களில் அடிமைகளைப் பிடிப்பதற்குத் தொலைவிடங்களுக்கு ஆயுதம் தாங்கிய கூட்டங்கள் சென்றன. அடிமைகளாகக் கொண்டுவரப்பட்ட பெண்களும் சிறுவர்களும் நல்ல விலைக்கு விற்கப்பட்டார்கள். கைத்தொழில்கள் குடிகள் வேலை செய்தபோது செல்வம் மிகுந்தது. கைத்தொழிலும் வாணிபமும் புரிவோருக்கு உணவுப்பொருள்கள் ஒதுக்கிவைக்கப்பட்டன. எகிப்தில் உலோகம் கிடைப்பதில்லை. ஆகவே அவர்கள் அதனை அராபியாவிலும் நியூபியாவிலும் இருந்து பெற்றனர். எகிப்திய அரசர் போரிற் சிறைபிடிக்கப் பட்டவர்களையும், சிறைத் தண்டனை பெற்றவர்களையும் சிறைச்சாலைகளில் கூட்டங்களாக அடைத்து வைத்தனர். இவர்கள் தனிமையாகவும், சில சமயங்களில் குடும்பங்களோடும் பொன் சுரங்கங்களில் வேலை செய்யும்படி போக்கப்பட்டனர். அவர்கள் புரிந்த குற்றங்களுக்காகப் பழிவாங்கும் பொருட்டு இவ்வாறு செய்யப்பட்டது. பழைய அரச பரம்பரைக் காலத்திலேயே எகிப்தியர் செம்பைத் தகரத்தோடு கலந்து வெண்கலம் செய்ய அறிந்திருந்தனர். வாள், தலைக்கவசம், கேடயம் முதலியவும், வெண்கல வண்டிச் சக்கரங்கள், உருளைகள், மிண்டிகள், கம்பிகள், ஆப்புகள், சங்குப் புரிஆணிகள், கற்களை அறுக்கும் அரிவாள்கள் போன்றவை வெண்கலத்தினால் செய்யப்பட்டன. மரவேலை செய்வதில் அவர்கள் திறமை அடைந்திருந்தனர். மரக்கலம், வண்டி, நாற்காலி, கட்டில், சவப்பெட்டி போன்ற அழகிய பொருள்கள் செய்யப்பட்டன. விலங்குகளின் தோலிலிருந்து ஆடை, அம்பறாத் தூணி, கேடகம், மணை போன்ற பொருள்கள் செய்யப்பட்டன. சமாதிச் சுவர் ஒன்றில் ஒருவன் தோல் பதனிடும் காட்சி எழுதப்பட்டுள்ளது. தோல் பதனிடுபவனின் கையில் வைத் திருப்பதுபோன்ற கத்தியை இன்றும் எகிப்தில் தோல் வேலை செய்வோர் பயன்படுத்துகின்றனர். பைபிரஸ் என்னும் நாணலிலிருந்து கயிறுகள், பாய்கள், செருப்பு, கடுதாசி முதலியவை செய்யப்பட்டன. பொருள்களுக்குச் சாயம் பூசுதல், மரப்பொருளுக்குப் பசைக்கூழ் (வார்னிஷ்) பூசுதல் போன்ற தொழில்கள் அறியப்பட்டிருந்தன. அழகிய சணல் ஆடைகள் நெய்யப்பட்டன. நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன் நெய்யப்பட்ட ஆடைகளைப் பட்டோ சணலோ என்று அறிவதற்குப் பூதக்கண்ணாடி மூலம் பார்க்கவேண்டி யிருக்கின்றது. முற்கால எகிப்தியரின் கை நெசவுத் துணிகள் இக்கால இயந்திர நெசவுத் துணிகள் போன்றவை. நீராவிப் பொறிகள் கண்டு பிடிக்கப்படுவதன் முன் வாழ்ந்த சமீபகால மக்கள் பழைய எகிப்தியரிலும் பார்க்க எவ்வகை யிலாவது அதிக திறமையுடையவர்களல்லர். வேலை புரிவோரில், ஒரு பகுதியினர் அடிமை களும், மற்றொரு பகுதியினர் அடிமைகளல்லா தோருமாயிருந்தனர். இன்று இந்தியாவில் காணப் படுதல்போல ஒவ்வொரு தொழில் செய்வோரும் ஒவ்வொரு சாதியினராயிருந்தனர். பிள்ளைகள் தந்தை செய்த தொழிலையே செய்தார்கள். பெரிய போர்களில் ஆயிரக்கணக்கான மக்கள் அடிமைகளாகக் கொண்டு வரப்பட்டனர். அவர்கள் பெரிய நிலங்களில் வேலை செய்வதற்கும் கட்டடங்கள் அமைப்பதற்கும் பயன் படுத்தப்பட்டனர். மூன்றாம் இராம்சே என்னும் அரசன் தனது ஆட்சியில் 113,000 அடிமைகளைக் கோவில் களுக்குக் கொடுத்தான். கைத்தொழில் புரியும் அடிமை களல்லாத தொழிலாளர் கண்காணி ஒருவனின்கீழ்க் கூட்டாக வேலை செய்தார்கள். கூட்டாக வேலை செய்வ தால் கிடைக்கும் ஊதியம் தனித்தனி ஒவ்வொரு வருக்கும் பகுந்து அளிக்கப்பட்டது. வேலையாட்கள் வேலைக்குச் செல்லாது இடையிடையே கூட்டாக நின்றுவிடுவது பொதுநிகழ்ச்சி. எகிப்தியரின் கட்டடமமைக்கும் முறை கிரேக்கர் உரோமர் அறிந்திருந்தவைகளிலும் மேலானது. மூன்றாம் செனுசறெற் என்னும் அரசன் ஆற்று நீரைத் தடுத்துக் குளமாக்குவதற்கு 27 மைல் நீளமுள்ள பெருஞ்சுவர் ஒன்றை எடுத்தான். இதனால் 25,000 ஏக்கர் நிலம் நீர்பாய்ச்சிப் பயிர் செய்வதற்கு ஏற்றதாக்கப்பட்டது. நீல ஆற்றையும் செங்கடலையும் இணைக்கும் வாய்க்கால்கள் வெட்டப்பட்டன. ஆயிரம் ‘டன்’ பாரத்துக்கு மேற்பட்ட கற்றூண்கள் நெடுந்தொலைவுக்கு எடுத்துச் செல்லப்பட்டன. பெரிய கற்பாளங்கள் கொழுப்புப் பூசிய குற்றிகள் மீது வைத்து ஆயிரக் கணக்கான அடிமைகளால் இழுத்துச் செல்லப்பட்டன. பொறிகள் அருமை யாக இருந்தன. ஆட்களின் வேலை மலிவாக இருந்தது. சமாதிச் சுவர் ஒன்றில் எழுதப்பட்டுள்ள ஓவியத்தில் இரண்டு பெரிய கற்றூண்கள் ஏற்றப் பட்ட மரக்கலத்தை, எண்ணூறுபேர் தண்டு வலித்து ஓட்டும் இருபத்தேழு மரக்கலங்கள் இழுத்துச் செல்லும் காட்சி காணப்படுகின்றது. நூறு அடி நீளமும் ஐம்பதுஅடி அகலமுமுள்ள மரக்கலங்கள் நீலநதியிலிருந்து செங் கடலுக்குச் சென்று மத்தியதரைக் கடலை அடைந்தன. நிலத்தில் சுமைகள் மக்களால் கொண்டு செல்லப்பட்டன. பிற்காலங்களில் கழுதைகள் பயன் படுத்தப்பட்டன. தாலமிகள் காலம்வரையில் ஒட்டகங்கள் காணப்பட வில்லை. வறிய மக்கள் நடந்து அல்லது ஒட்டகத்தின் மீது சென்றார்கள்; செல்வர் அடிமைகளால் சுமக்கும் சாய்வு நாற்காலியில் இருந்து சென்றார்கள். பிற்காலங்களில் தேர்கள் பயன்படுத்தப் பட்டன. எகிப்தில் ஒழுங்கான அஞ்சல் போக்குவரத்து நடைபெற்றது. போக்கு வரத்து மிகக் கடுமையாக இருந்தது. நன்றாயமைக்கப்படாத சில வீதிகளே இருந்தன. வாணிக முறை மிகப் பழம் போக்காக இருந்தது. அயல்நாட்டு வாணிகம் சிறிது சிறிதாக வளர்ந்தது. வழிகளில் அமைக்கப்பட்டிருந்த சுங்கச் சாவடிகளில் சுங்கம் பெறப்பட்டது. எகிப்து அயல் நாடுகளிலிருந்து மூலப் பொருள்களை வாங்கிக் கைத்தொழில் பண்டங்களை வெளிநாடுகளுக்குப் போக்கிற்று. சிரியா, கிரேத்தா, சைபிரஸ் முதலிய நாடுகளின் வணிகர் எகிப்தியச் சந்தைகளில் கூடினர். பினீசிய மரக்கலங்கள் நீல ஆற்று வழியாகத் தீப்ஸ் நகரை அடைந்தன. நாணயப் புழக்கம் வளர்ச்சி அடைய வில்லை. அரசாங்க வேலையாளரின் சம்பளங்கள், தானியம், உரொட்டி, மது போன்ற வகைகளில் கொடுக்கப்பட்டன. எகிப்திய அரசரின் கருவூலத்தில் பணம் இருக்கவில்லை. அது வயல்களிலும், கடைகளிலும் கிடைக்கும் ஆயிரக்கணக் கான பண்டங்களின் பண்டகசாலையாக இருந்தது. மூன்றாம் துத்மோஸ்1 என்ப வனுக்குப்பின் பண்டங்களின் விலை, மோதிரங்கள் அல்லது பொன் துண்டுகள் வகையில் கொடுக்கப்பட்டது. விலைகளின் அளவுக்கு இவைகள் நிறுத்துக் கொடுக்கப்பட்டன. ஆனால் அரசாங்கத்தாரால் விலை குறிப்பிடப்பட்ட நாணயங்கள் வழங்கவில்லை. கடன் கொடுத்து வாங்கும் முறை அதிகம் வளர்ச்சியடைந்திருந்தது. இதற்கு ஆவணங்கள் எழுதப்பட்டன. ஆவணங்கள் எழுதும் எழுத்தாளர் பலர் இருந்தனர். எகிப்திய எழுத்தாளன், தன் கையில் வைத்திருப்பதைவிடச் சிறப்பாகக் காதில் ஒரு எழுதுகோலை வைத்துக்கொண்டும் அட்டணைக் கால் கட்டிக்கொண்டும் இருப்பான். அரசாங்கம் எழுத்தாளரையுடைய நிலையங்கள் மூலம் எகிப்திய அரசரும் பிரபுக்களும் நாட்டில் ஒழுங்கையும் நியாயத்தையும் காப்பாற்றி வந்தார்கள். பழைய எழுத்துப் பொறித்த பட்டையங்களில் அவ்வகை எழுத்தாளர் மக்கள் தொகையைக் கணக்கு எடுத்தல், வருமான வரி தொடர்பான கணக்குகளைச் சோதித்தல் முதலியவைகளைச் செய்தார்கள் என்பது கூறப்பட்டுள்ளது. நீல ஆற்றுப்பெருக்கை அளப்பதற்கு எழுத்தாளர் சிலர் இருந்தனர்; அதனைக் கொண்டு அவ்வாண்டின் தானிய விளைவையும், அரசாங்கத்தின் வருங்கால வருவாயையும் கணக்குச் செய்து வருவாய்க் கேற்ப அரசாங்கப் பிரிவு களுக்கு முன்னமே செலவு ஒதுக்கப்பட்டது. எழுத்தாளர் சிலர் வாணிகத்தை மேற்பார்த்தார்கள். வரலாற்றின் தொடக்கத்திலேயே ஒழுங்கு செய்யப்பட்ட இவ்வகைப் பொருளாதாரத் திட்டம் உண்டாயிருந்தது. கொடுத்தல், வாங்குதல், நிலம், குற்றம் தொடர் பான சட்டங்கள் மிக வளர்ச்சி யடைந்திருந்தன. ஐந்தாவது அரச பரம்பரைக் காலத்தில் தனிப்பட்ட சொத்துரிமை பற்றிய சட்டங்கள் மிகச் சிக்கலாக இருந்தன. நமது காலத்தைப் போல எல்லோருக்கும் நியாயம் ஒரேவகையாக இருந்தது. நியாயாதிபதி, வழக்காளி எதிரிகளின் வாக்குமூலங்களை எழுதி ஒப்பிட்டுப் பார்த்துத் தீர்ப்புச் செய்தான். பொய்ச் சத்தியஞ் செய்தவனுக்கு மரணதண்டனை விதிக்கப் பட்டது. சிற்றரசர் நாடுகளில் சிறிய நியாயத் தீர்ப்பு இடங்களும், மெம்பிஸ், தீப்ஸ், ஹெலியோ பொலிஸ் முதலியவிடங்களில் பெரிய நியாயத் தீர்ப்பு இடங்களும் இருந்தன. குற்றவாளிகளிடத்திலிருந்து உண்மை பெறும்பொருட்டு வேதனை கொடுக்கப்பட்டது. கம்பினால் அடித்தல் பொதுவான தண்டனையாக இருந்தது. மூக்கு, காது, கை, நா முதலிய உறுப்புகள் வெட்டவும்பட்டன. சுரங்கங்களில் வேலை செய்யும்படி போக்குதல், திருகிக் கொல்லுதல், தலையைக் கொய்தல், தூணில் கட்டி நெருப்பினால் கொளுத்துதல் போன்ற தண்டனைகளும் விதிக்கப்பட்டன. சதையை அரித்துத் தின்னும்படி உடல் முழுவதும் ஒருவகை மருந்தைப் பூசிவிடுவது தண்டனைகள் எல்லாவற்றுள்ளும் கொடியதாகும். உயர்ந்த வகுப்பினர் பலர், மக்கள் முன்னிலையில் கொலைத்தண்டனை அடை யாமல் தம்மைத்தாமே கொன்றுகொள்ளும்படி அனுமதிக்கப்பட்டார்கள். இக்காலக் காவலர் (போலீஸ்) போன்றவர்கள் இருக்கவில்லை. எகிப்து, வனாந்தரத்துக்கும் கடலுக்கும் இடையில் இருந்தமையால் அதனைக் காப்பதற்குப் பெரும்படை வேண்டியிருக்கவில்லை. அரசனுக்கு அடுத்தபடியில் பெரிய தலைவன் அமைச்சனாக இருந்தான். இவன் முதல் மந்திரியாகவும் கருவூலத் தலைவனாகவும் கடமை ஆற்றினான். அரசனின் நியாயத் தீர்ப்பே எல்லாத் தீர்ப்புகளுக்கும் முடிவாயிருந்தது. நேரக்கூடிய பெரிய பொருட்செலவைக் கட்சியினர் பொருட்படுத்தவில்லையாயின் வழக்கு அரசன் முன் கொண்டுவரப்பட்டது. அவன் நாட்டைச் சுற்றிப் பயணஞ் செய்தபோது காணியாளராகிய பிரபுக்கள் அவனைத் தமது எல்லைகளில் எதிர்கொண்டு காணிக்கைகள் வழங்கி மரியாதை செய்தனர். இரண்டாம் அமென் அரொப் என்னும் அரசனுக்குப் பிரபு ஒருவன் பொன்னாலும், வெள்ளியாலும் செய்த வண்டிகளையும், தந்தத்தாலும், கருங்காலி மரத்தினாலும் செய்த பாவைகளையும்; அணிகலன்களையும், போர் ஆயுதங்களையும், 680 கேடகங்களையும், 140 வெண்கல ஈட்டிகளை யும், விலை உயர்ந்த உலோகங்களால் செய்த பலவகை ஏனங்களையும் கொடுத்தான். இவ் விபரம் பழைய பட்டையம் ஒன்றிற் பொறிக்கப்பட் டுள்ளது. அரசனுக்குத் துணைபுரியும் பெருமக்கள் சபை ஒன்று இருந்தது. அரசன் குருமாரின் துணையைப் பெற்றுத், தான் கடவுளின் வழித்தோன்றல் எனக் கூறினான். இறந்தபின் அவன் கடவுளாக மாறுகின்றான் என்னும் நம்பிக்கை இருந்து வந்தது. அரசன் கடவுள் போன்ற தோற்றப்பொலிவோடிருந்தான். அவனைச் சூழ்ந்து மெய்காப்பாளர் நின்றனர். அவர்களில் சிலர் படைத்தலைவர்; சிலர் அரசனுக்கு ஆடைகட்டி அலங்கரிப்பவர்; பலர் உயர்ந்த பதவிகளி லுள்ளோராவர். அவனுடைய மேனியை அலங்கரிக்கும் பொருள்களை மேற்பார்ப்பதற்கு இருபது கருமகாரர் இருந்தார்கள். நாவிதன் அவனுடைய முகத்தை மழித்து மயிரைக் கத்தரித்தான். தலையை அலங்கரிப்பவர்கள் அவனை நீராட்டித் தலையில் முடியை வைத்தார்கள்; சிலர் அவனுடைய நகங்களை மினுக்கினார்கள்; வாசனை ஊட்டுவோர் அவன் உடலுக்கு நறுமணம் ஊட்டினர்; கண்ணிமைக்கு மை தீட்டினர்; இதழ்களுக்கும் கன்னங்களுக்கும் சிவப்பு நிறம் பூசினர். ஒழுக்கம் அரசன் பெரும்பாலும் தன் சகோதரியை மணந்தான். மக்களிடையும் இவ்வகைத் திருமணங்கள் பரவின. கிறித்துவுக்குப்பின் இரண்டாம் நூற்றாண்டில் எகிப்திய மக்களில் மூன்றில் இரண்டு பங்கினர் இவ்வகை வழக்கம் உடையவர்களாயிருந்தனர். அவன் மனைவியரல்லாத பெண்களும் அரசனுடைய அந்தப்புரத்தில் இருந்தார்கள். அவர்கள் போர்க் காலங்களில் பகைவர் நாடுகளிலிருந்து பிடிக்கப்பட்டவர்களும், பிரபுக்களின் குமாரிகளும், சிற்றரசரால் கொடுக்கப்பட்டவர்களுமாவர். மூன்றாம் அமென்ஹொரெப் என்பவனுக்கு நஹரினா நாட்டு அரசன் தனது மூத்த குமாரியையும் முந்நூறு கன்னிப் பெண்களையும் கொடுத்தான். பிரபுக்களின் நிலைமைக்கேற்ப அவர்களிடையேயும் இவ்வகை ஆடம்பரங்கள் இருந்தன. நடுத்தரமான வருவாயுடைய மக்கள் ஒரே பெண்ணை மணந்தனர். இக் கால ஆடவர் மகளிர் ஒழுக்கங்கள் போலவே அக்கால எகிப்திய ஆடவர் மகளிரின் ஒழுக்கங்கள் உயர்ந்த பண்புடையனவாயிருந்தன. முற்காலத்தில் திருமண நீக்கங்கள் மிக அருமையாக இருந்தன. பிந்திய அரச பரம்பரைக் காலத்தில் திருமண நீக்கங்கள் பொது நிகழ்ச்சியாக இருந்து வந்தன. ஒருவன் மனைவியைத் திருமண நீக்கம் செய்தால் அவன் குடும்பச் சொத்தில் நியாயமான ஒரு பகுதியைப் பெண்ணுக்குக் கொடுக்கவேண்டி யிருந்தது. இன்று பல நாடுகளிற் காணப்படுவது போலவே பெண்களின் நிலை உயர்வடைந் திருந்தது. முற்காலத்திலாவது இக்காலத்திலாவது எச்சாதியா ராவது எகிப்தியரைப் போலப் பெண்களுக்கு உயர்நிலை அளிக்கவில்லை. எகிப்திய ஓவியங்களில் பெண்கள் வீதிகளிலே தனியே போய்க்கொண்டும் வந்து கொண்டும் இருப்பதாகவும், பொது இடங்களில் உணவு உண்பதாகவும், கைத் தொழில், வாணிகங்களில் ஈடுபட்டிருப்பதாகவும் காட்சியளிக்கின்றனர். பெண்களை வீட்டில் கட்டுப்படுத்தி வைக்கும் கிரேக்கர் இவர்களின் விடுதலையைக் கண்டு ஆச்சரியமடைந்தனர். எகிப்தியக் கணவர் தம் மனைவியருக்குக் கீழ்ப்படிவதாகக் கலியாண உடன்படிக்கையில் கையெழுத் திட்டார்கள். தாயாட்சி முறையினால் எகிப்தியப் பெண்களின் நிலை சிறிது சிறிதாக உயர்வடைந்தது. பெண், வீட்டுக்குத் தலைவியாயிருந்தாள். சொத் துரிமையும் பெண் வழியாகவே இருந்துவந்தது. திருமணப் பதிவு காலத்திற் கணவன் தனது சொத்தையும் வருங்காலத் தேட்டத்தையும் பெண்ணுக்கே எழுதி வைத்தான். தாய்மூலம் பெண்ணைச் சேரும் சொத்துக்கு ஆசைப் பட்டே எகிப்தியர் சகோதரியை மணந்தார்கள். தாய்மூலம் குடும்பத்தை அடையும் சொத்தை அல்லது தாயத்தை அயலவன் ஆண்டனுபவிப்பதை அவர்கள் விரும்பவில்லை. தாலமிகள் என்னும் பிற்கால எகிப்திய அரசர் காலத்தில் கிரேக்கர் வழக்கங்கள் பரவியிருந்தன. அதனால் திருமண நீக்கத்தைப் பற்றிய உரிமை கணவனுக்கு மாத்திரம் அளிக்கப்பட்டது. இம் மாற்றம் உயர் குடும்பங்களில் மாத்திரம் கையாளப்பட்டது. பொதுமக்கள் தாயாட்சி முறையைப் பின்பற்றினார்கள். கோவில்களில் தேவதாசிகள் இருந்தனர். எகிப்தியர் தமது பழைய பழக்க வழக்கங்களையே நீண்டகாலம் பின்பற்றி வந்தனர். போர்வீரர் தாம் கொன்ற பகைவரின் வலக்கைகளை வெட்டிவந்து எழுத்தாளனிடத்தில் காட்டிப் பதிவு செய்தார்கள். மக்கள் சொக்கட்டான் போன்ற பலவகை விளையாட்டுகளை விளையாடினர். இக்கால விளையாட்டுப் பொருள்கள் போன்ற கோலி, பந்து, பம்பரம் போன்றவைகளைச் சிறுவர் வைத்து விளையாடினார்கள். மற்போர், குத்துச்சண்டை, மாட்டுச் சண்டை முதலியவை மக்களின் சிறந்த பொழுது போக்குகளாக இருந்தன. விருந்துக் காலங்களில் விருந்தாளிகளுக்கு ஏவலர் நறுமணம் பூசினார்கள்; பூமாலைகள் இட்டார்கள்; மது வகைகள் கொடுத்தார்கள். எகிப்திய ஓவியங்களில் ஆண்கள் சிவப்பு நிறமாகவும், பெண்கள் மஞ்சள் நிறமாகவும் எழுதப்பட்டுள்ளனர். பெண்கள் இக்கால முறையில் கூந்தலைக் கட்டையாக வெட்டியிருந்தார்கள். ஆடவர் பொய் மயிரை அணிவதற்கு வாய்ப்பாகத் தலையையும் மழித்துக் கொண்டார்கள். அரசன் பெரிய பொய் மயிர் அணிந்தான்; அவனுடைய முகத்துக்குச் சிவப்புப்பொடி பூசப்பட்டது; இதழ்களுக்குச் சிவப்புச் சாயம் ஊட்டப்பட்டது; நகத்துக்குக் கறுப்புச்சாயம் பூசப்பட்டது; தலைமயிருக்கு நெய் தடவப்பட்டது; கண்ணுக்கு மை தீட்டப்பட்டது. செல்வப் பெண்களை அடக்கஞ் செய்த சமாதி அறைகளுள் இருவகைச் சிவப்புச் சுண்ணங்களையும் எழுவகை நறுமணத் தைலங்களை யும் வைத்தார்கள். இவையல்லாத வேறு மேனி மினுக்குக்குள்ள பொருள்கள், முகம் பார்க்கும் கண்ணாடி, மயிர் மழிக்கும் கத்தி, மயிர் சுருட்டி, கொண்டை ஊசி, சீப்பு, சுண்ணம் வைக்கும் சிமிழ்கள், மரம், தகரம், கல்நார் அல்லது வெண்கலத்தினால் செய்யப்பட்ட தட்டுகள், கரண்டிகள் என்பவை. ஆடைகளுக்கும் மேனிக்கும் பலவகை மணப்பொருள்கள் ஊட்டப்பட்டன. வீடுகள், கரிய போளம், பிற மணப்பொருள்கள் என்பவை களால் நறும்புகை ஊட்டப்பட்டன. எகிப்தில் ஆண் பெண் என்னும் இருபாற் சிறுவரும் பன்னிரண்டு பதிமூன்று வயதுகள் வரையில் நிர்வாணமாகச் சென்றனர். அவர்கள்; கழுத்து மாலையும் காதணியும் அணிந்தனர். பெண் குழந்தை களின் அரையில் மணிகள் கோத்த வடம் அணியப் பட்டது. பொதுமக்களும் வேலையாள்களும் அரையில் ஒரு உடை மாத்திரம் உடுத்திருந்தனர். பழைய எகிப்தில் ஆடவரும் மகளிரும் அரைக்குமேல் நிர்வாணமாகச் சென்றனர். உடை, முழங்கால் வரையும் மறையும்படி அரையில் கட்டப்பட்ட குறுகிய வெண் சணலாடை யாகும். நாணம் பழக்கத்தால் உண்டாவதேயன்றி இயற்கையாக உண்டாவதன்று. முதல் அரச பரம்பரைக் காலக் குருமாரும் அரையில் ஆடையை உடுத்தினர். செல்வம் ஏற ஏற உடையும் அதிகப்பட்டது. வண்டி செலுத்துவோரும் பரிவாரங்களும் ஆடம்பரமான உடை அணிந்துகொண்டு தமது தலைவர்களின் தேர்கள் செல்வதற்கு வழியை ஆயத்தஞ் செய்யும்படி வீதிகளில் ஓடிச் சென்றார்கள். செல்வச் செழிப்புண்டான காலத்துப் பெண்கள் இறுக்கமாக உடுக்கும் உடைக்குப் பதில் தளர்ந்த அங்கியை அணிந்தார்கள். உடை யில் பல வகையான தையல் வேலைப்பாடுகள், சுருக்குகள், பாம்புகள் போன்ற வடிவங்கள் வைத்து அலங்காரங்கள் செய்யப்பட்டன. இருபாலாரும் அணிகலன்களை விரும்பினர். கழுத்து, மார்பு, மணிக்கட்டு, புயம், கெண்டைக்கால் முதலியவைகளில் அணிகள் அணியப்பட்டன. ஒவ்வொரு எழுதுவோனும் அல்லது வணிகனும் வெள்ளி அல்லது பொன்னினாற் செய்த முத்திரையை வைத்திருந்தான்; ஒவ்வொரு ஆடவனும் மோதிரமணிந்திருந்தான். ஒவ்வொரு பெண்ணும் அலங் கரிக்கப்பட்ட சங்கிலி அணிந்திருந்தார்கள். பதினெட்டாவது அரச பரம்பரைக் காலத்தில் ஆண் பெண் சிறியவர் பெரியவர் என்ற பேதமின்றி எல்லோரும் காதில் துளையிட்டுக் காதணி அணிந்தார்கள். இருபாலாரும் விலை உயர்ந்த கற்கள் கோத்த மாலைகளையும் பிற நகைகளையும் அணிந்தார்கள். அக்கால எகிப்தியப் பெண், மேனி மினுக்குத் தொடர்பாக இக்காலப் பெண்ணிடம் கற்றுக்கொள்ளவேண்டியது யாதும் இல்லை. கல்வி இன்றைய உரோமானியக் கத்தோலிக்கக் கோயில்களையொப்பப் பள்ளிக் கூடங்கள் கோயிலோடு இணைக்கப்பட்டிருந்தன. குருமார் செல்வரின் பிள்ளைகளுக்குக் கல்வி கற்பித்தார்கள். பழைய பள்ளிக்கூட அழிபாடு ஒன்றில் அக் காலத்தில் எண்ணப் பயன்படுத்திய சிப்பிகள் காணப்படுகின்றன. ஆசிரியரின் வேலை அரசாங்கத்துக்கு எழுத்து வேலை உதவும் எழுத்தாளரை உண்டாக்குவதே. மாணாக்கருக்கு எழுச்சி உண்டாகும் பொருட்டு ஆசிரியர் கல்வியைப்பற்றி ஊக்கம் எழுப்பக்கூடிய கட்டுரைகள் எழுதினார். “உலகில் ஒருவனுக்குக் கீழ் அடங்கி வாழாத தொழிலாளி இல்லை; படித்தவன் தன்னைத்தானே ஆள் கின்றான்” என ஒரு பைபிரஸ் ஏட்டில் காணப்படுகின்றது. பழங்கால மாணவர் பயன்படுத்திய பயிற்சி ஏடுகள் காணப்படு கின்றன. ஓரத்தில் விடப்பட்டுள்ள எழுதப்படாத பகுதியில் ஆசிரியர் திருத்தம் செய்திருக்கின்றார். முக்கியக் கல்வி வாசகம் எழுதுதல். அது சூளை யிட்ட களிமண் தட்டு அல்லது சுண்ணாம்புக்கல் தட்டுகளில் எழுதப்பட்டது. கல்வி வாணிக சம்பந்தமாக இருந்தது. பள்ளிக்கூடங்களில் மாணவர் தம் குற்றங்களுக்கு முதுகில் அடிக்கப்பட்டார்கள். அரசாங்கக் கருவூலத்தோடு இணைக்கப்பட்டிருந்த உயர்ந்த பள்ளியில் கோயில் தொடர்பாக மாணவருக்கு உயர்ந்த கல்வி அளிக்கப்பட்டது அரசினர் கல்விச்சாலையில் இளம் எழுத்தாளர்களுக்கு ஆட்சிமுறை போதிக்கப்பட்டது. கல்வி முடிந்ததும் அவர்கள் கருமத் தலைவர்களின்1 கீழ் சிலகாலம் பழக்கம் பெற்றனர். இவ்வாறு கல்வி முறை எகிப்திலும் பாபிலோனிலும் வளர்ச்சி யடைந்தது. உயர்தரக் கல்வி பயிலும் மாணவர் கடுதாசியைப் பயன்படுத்தினர். அக் காலக் கடுதாசிகள் பைபிரஸ் என்னும் நாணலைப் பிளந்து குறுக்கும் நெடுக்குமாக வைத்து அழுத்தப்பட்டவை. ஐயாயிரம் ஆண்டுகளின் முன் எழுதப்பட்ட பைபிரஸ் கையெழுத்துப்படிகள் இன்றும் அப்படியே இருக் கின்றன. இத் தாள்கள் ஒன்றின்பின் ஒன்றாக இடப்புறமாக ஒட்டப்பட்டுச் சுருட்டிவைக்கப்பட்டன. இவ்வகைப் புத்தகங்கள் சில நாற்பது அடி நீளம் வரையிலுள்ளன. புகையால் உண்டாகும் கரி, மரப்பிசின் முதலியவைகளைத் தண்ணீரில் கரைத்து மசி செய்யப்பட்டது. எழுதும் குச்சி நாணல் தண்டினால் செய்யப்பட்டது. அது நிறமசிகள் பூசும் தூரிகை1 போன்றது. இவர்களின் மொழி ஆசிய நாட்டிலிருந்து வந்ததெனத் தெரிகின்றது. மிகப் பழைய எழுத்துகள் ஓவிய வடிவுடையன. ஓவிய எழுத்துகள் என்பன பொருள்களை உணர்த்த அப் பொருள்களின் வடிவாக எழுதப்படும் ஓவியங்கள். வீட்டை உணர்த்த நீண்ட சதுர மெழுதி நீளமான ஒரு பக்கத்தில் ஒரு வெளிவிடப் பட்டது. பட வடிவிலிருந்து எண்ணங்களைக் குறிக்கும் குறியீடுகள் உண் டாயின. இக் குறியீடுகள் அவ் வடிவுடைய பொருள்களைக் குறிக்கவில்லை. சில கருத்துகளைக் குறித்தன. சிங்கத்தின் முன்புறம் ஆளும் தன்மையைக் குறித்தது. குளவி அரசத் தன்மையைக் குறித்தது. வாற்பேத்தை2 ஆயிரத்தைக் குறித்தது. நல்லது பொல்லாதது போன்ற மனத்தினால் மாத்திரம் அறியப்படும் தன்மைகளைக் குறிப்பதற்குப் பேச்சு வழக்கில் சில ஒலிக்குறிகள் இருந்தன. இவ் வொலிக்குறிகள் உணர்த்துவன போன்ற பெயர்களுடைய சில பொருள்களுமிருந்தன. ஆகவே, மனத்தினால் அறியப்படும் தன்மைகளை விளக்குவதற்கும் அப் பருப்பொருள்கள் எழுதிக் காட்டப்பட்டன. நொவேர் என்பது நல்லது என்பதை உணர்த்தும். குழலுக்கும் நொவேர் என்று பெயர். ஆகவே நல்லது என்பதை உணர்த்தக் குழல் எழுதிக் காட்டப்பட்டது. கோயிற் குருமார் ஓவிய எழுத்துகளிலிருந்து ஒருவகைச் சுருக் கெழுத்தைக் கண்டுபிடித்தார்கள். இது கிரேக்க மொழியில் ஹெராடிக் (Heratic) எனப்பட்டது. இவ்வெழுத்தைப் பொது மக்கள் வாணிகத்தின் பொருட்டும், ஆவணங்கள் எழுதும் பொருட்டும் பயன்படுத்தினர். இதிலும் சுருக்கமான இன்னொரு வகை எழுத்தும் கண்டுபிடிக்கப்பட்டது. இது டெமொடிக் (Demotic) எனப்பட்டது. இதனை எல்லாப் பொதுமக்களும் பயன்படுத்தினர். இலக்கியம் எகிப்தியரின் இலக்கியங்கள் ‘ஹெராட்டிக்’ எழுத்தில் எழுதி வைக்கப்பட்டுள்ளன. நாலாவது அரச பரம்பரைக் காலத்து எழுத்தாளன் ஒருவனின் கல்லறை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. அதில் அங்கு அடக்கஞ் செய்யப்பட்டவன் புத்தக நிலையத்தின் எழுத்தாளன் எனக் குறிக்கப்பட் டுள்ளது; அப்புத்தக ஆலயம் பழைய நூல் நிலையமோ அரசாங்க மூல ஆவண நிலையமோ என்று அறியமுடியவில்லை. சமாதி நூல்கள் எனப் பட்ட பழைய நூல்களே கிடைத்துள்ளன. இவை ஐந்தாம் ஆறாம் அரச பரம்பரையினரின் சமாதிச் சுவர்களில் எழுதப்பட்டுள்ளன. கி.மு. 2,000 முதல் எகிப்தில் பல நூல் நிலையங்கள் இருந்தன. நூல்கள் பைபிரஸ் தாளில் எழுதப் பட்டவை. அவை சுருட்டிச் சாடிகளில் வைத்துத் தட்டுகளில் வரிசையாக வைக்கப்பட்டிருந்தன. நூல்களின் பெயர்கள் சாடிகளில் எழுதி ஒட்டப் பட்டுள்ளன. இவ்வகைச் சாடி ஒன்றிற் காணப்பட்ட நூல் ஒன்றில் சின்பாட் என்னும் கடலோடியின் கதை காணப்படுகின்றது. எகிப்தியரின் இலக்கியங் களில் கதைகள் பல காணப்படுகின்றன. அவர்களின் பழைய இலக்கியங்கள் சமயத் தொடர்புடையன. பிற்கால இலக்கியங்களில் காதல், சமயம் முதலியன சம்பந்தப் பட்ட பாடல்கள் காணப்படுகின்றன. எகிப்தியர் இசையைப்பற்றி நன்கு அறிந் திருந்தார்கள்; பாட்டில் இசையும் உணர்ச்சியும் சிறந்தவை என அவர்களால் கொள்ளப்பட்டது. இவைகள் அமைந்தபோது அவைகளின் வெளித்தோற்றம் கவனிக்கப்படவில்லை. சில சமயங்களில் பாடல்களின் அடிகளின் முதற் சொற்கள் ஒரேவகையாக இருந்தன; சில பாடல்களின் சொற்கள் ஒரே வகையாக இருந்தன; ஆனால் சொற்களின் பொருள் வேறுபட்டிருந்தன. எகிப்தில் வரலாறு மிகப் பழங்காலம் முதல் எழுதப்பட்டுவந்தது. எகிப்திய அரச பரம்பரைக்கு முற்பட்ட அரசரும் வரலாறுகளை எழுதி வந்தனர். படை எடுப்புக் காலங்களில் வரலாறு எழுதுவோர் அரசனுடன் சென்றார்கள். அவர்கள் அரசரின் வெற்றியைப் புகழ்ந்து எழுதினார்கள். வரலாறு எழுதுவது அழகுக் கலைபோல் கருதப்பட்டது. கி.மு. 2,500இல் எகிப்திய அரசரின் பெயர்கள் எழுதி வைக்கப்பட்டிருந்தன. எல்ல நாடு களிலும்போல எகிப்திலும் மொழி மாறத் தொடங்கிற்று. நெடுங்காலம் பழைய மொழியிலேயே நூல்கள் எழுதப்பட்டுவந்தன. மாணவர் அம் மொழியின் இலக்கணத்தையும் நிகண்டையும் கற்று அவைகளை மொழிபெயர்த்தார்கள். கி.மு. 14வது நூற்றாண்டில் புலவர்கள் புரட்சிசெய்து நூல்களை மக்கள் வழங்கும் மொழியில் எழுத ஆரம்பித்தார்கள். பின்னும் ஒரு முறை எழுத்து நடையும் பேச்சு நடையும் வேறு வேறாக மாறுபட்டன. அக் காலத்தில் பழைய இலக்கியங்கள் பேச்சு நடையில் மொழிபெயர்க்கப்பட்டன. இவ் வழக் காறும் மாற்றங்களும் கிரேக்க அராபிய உரோமன் மக்களிடையும் நிகழ்ந்தன. கணிதமும் விஞ்ஞானமும் எகிப்தில் கல்வி கற்றவர்கள் பெரிதும் குருமாராவர். இவர்கள் வாழ்க்கை கொந்தளிப்பின்றி இருந்தது. அவர்களுக்குக் கோயில்களில் எல்லா வாய்ப்புகளும் இருந்தன. எல்லா வகையான மூட நம்பிக்கைக ளிடையே அவர்களே விஞ்ஞானத்தைத் தோற்றுவித்தார்கள். அவர்களின் பழங்கதைகளில் தொத்1 என்னும் அறிவுக் கடவுள் எகிப்தை 3,000 ஆண்டு ஆண்டார் எனக் காணப்படுகின்றது. அவர் ஆட்சிக்காலத்தில் முன்பின் கி.மு. 18,000 வரையில் விஞ்ஞானம் கண்டுபிடிக்கப்பட்டதென அவர்கள் நம்புகிறார்கள். இக் கடவுள் விஞ்ஞானத்தைப்பற்றி இருபத்தையாயிரம் பகுதிகளடங்கிய நூல் எழுதிவைத்தார். எகிப்திய வரலாற்று ஆரம்ப காலத்தில் கணக்கு அதிக வளர்ச்சி யடைந்திருந்தது. பிரமிட் சமாதி கட்டுவதற்கு அளவைப்பற்றிய கணக்கு அதிகம் தேவைப்பட்டது. எகிப்தியர் நைல் ஆற்று ஓரங்களில் தங்கிருந்தமை யால் அவர்கள் அவ்வாற்றின் வற்றுப் பெருக்குகளை அளந்து குறிப்பிட்டு வந்தார்கள். அளவுகாரரும் எழுத்தாளரும் எப்பொழுதும் ஆற்றினால் நீர் பாய்ச்சப்பட்ட நிலங்களை அளந்து கணக்குச் செய்தார்கள். இதனால் நில அளவை தொடர்பான கல்வி வளர்ச்சியடைந்தது. இக் கல்வி எகிப்திலேயே உண்டானதென்பதை எல்லாப் பழைய மக்களும் ஏற்றுக்கொண்டார்கள். வான ஆராய்ச்சியாளர் கோயில்களிலிருந்து வான சோதிகளை நோக் கினார்கள். அவர்கள் பூமி தட்டையான நீண்ட சதுர வடிவுடையதென்றும் அதன் நான்கு மூலைகளிலும் மலைகளிருந்து வானத்தைத் தாங்குகின்றன என்றும் கருதினார்கள். அவர்கள் கிரகணங்களைக் குறித்துவைக்கவில்லை. குருமார் தாம் அறிந்திருந்த வான சாத்திரக் கல்வியை மற்றவர்கள் அறியாதபடி மறைத்துக் காப்பாற்றி வந்தனர். அவர்கள் நட்சத்திரங்களையும் கிரகங்களையும் வேறுபடுத்தி அறிந்தனர்; கிரகங்களும், நட்சத்திரங்களும் மக்களுக்கு நேரும் நன்மை தீமைகளுக்குக் காரணமாயுள்ளன என்று கருதினார்கள். அவர்கள் ஆண்டை மூன்று பருவ காலங்களாகப் பிரித்தனர். ஒன்று நீலநதியின் பெருக்குவற்றுங் காலம்; மற்றது பயிரிடுங் காலம்; மூன்றாவது அறுப்புக்காலம். அவர்களின் ஒவ்வொரு மாதமும் முப்பது நாள்கள் கொண்டது. பன்னிரண்டு மாதங்களுக்குப்பின் ஐந்து நாள்கள் சேர்க்கப் பட்டன. ஓர் ஆண்டு 365¼ நாள்களாகக் கொண்டு நாலு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு நாளைச் சேர்த்து 366 நாள் ஓர் ஆண்டு எனக் கணக்கிடும் முறை யூலியர் சீசர் காலத்தில் (கி.மு. 46) உண்டாயிற்று. எகிப்தியர், உடலைத் தைலமிட்டுப் பக்குவஞ் செய்து வந்தமையால் இவர்கள் மனித உடலைப்பற்றி அதிகம் ஆராய்ச்சி செய்யவில்லை. இரத்தக் குழாய்கள், காற்றையும் நீரையும் சில நீர்ப்பொருள்களையும் கொண்டு சென்றன வென்றும், இருதயமும் குடலும் மனத்தின் உறைவிடமென்றும் நம்பினார்கள். எகிப்திய மருத்துவர் நெற்றி பிடரி கை கால் என்பவைகளைத் தொட்டுப் பார்த்து இருதயம் தொழிற்படுவதை அறிந்தார்கள். எகிப்திலே மருத்துவம் குருமாரிடத்தில் ஆரம்பித்தது. அவர்களின் நம்பிக்கைகள் மந்திர வித்தையில் தோய்ந்திருந்தன. மருந்துக் குளிகை களிலும் பார்க்கத் தாயத்துகளே நோயைப் போக்குவன என்றும், நோய்கள் பேய்கள் பிடிப்பதால் உண்டாகின்றன வென்றும் நம்பினார்கள். நோய்கள் மந்திர வித்தையால் போக்கப்பட்டன. ஒவ்வொரு மருத்துவனும் ஒவ்வொரு நோய்க்கு மருத்துவம் செய்தான். ஒவ்வொரு நோய்க்கும் பயன்படுத்தும் மருந்துகள் கண்டு பிடிக்கப்பட்டிருந்தன. ஒரு பைபிரஸ் ஏட்டில் பாம்புக்கடி முதல் பிள்ளையைப் பெற்ற பெண்ணுக்கு உண்டாகும் சுரம் வரையிலுமுள்ள நோய்களுக்கு எழுநூறு மருந்துகள் கூறப்படுகின்றன. சுத்தத்தினால் நோயைப் போக்கலாம் என எகிப்தியர் நம்பினார்கள். குளித்து முழுகி உடம்பைச் சுத்தமாக வைத்திருத்தல், விரதமிருத்தல், வாயாலும் வயிற்றாலும் போக மருந்து உட்கொள்ளுதல் போன்ற முறைகளை அவர்கள் கையாண்டார்கள். எகிப்தியர் திங்களில் மூன்று நாள்கள் அடுத்து வயிற்றால் போகும்படி மருந்து உண்டார்கள் என்றும், வாந்தி எடுக்கும் மருந்தையும் உட்கொண்டார்கள் என்றும், மலவாசல் மூலம் குழாய் வைத்து மலத்தை எடுக்கும் முறையைக் கையாண்டார்கள் என்றும் எரதோதசு கூறியுள்ளார். கட்டடம், ஓவியம், இசை முதலியன பழைய கலைகளுள் கட்டடக் கலை முக்கியமுடையது. அது சமாதிக் கட்டடங்களை அலங்கரிப்பதிலும் வீடுகளின் வெளிப்புறங்களை அலங்கரிப் பதிலும் தொடங்கி வளர்ச்சியடைந்தது. வீடுகள் பெரும்பாலும் களிமண்ணால் கட்டப்பட்டன. மர வேலைப்பாடுகளும் இருந்தன. வீட்டைச் சுற்றி முற்றமும் முற்றத்தைச் சுற்றிச் சுவரும் இருந்தன. வெளி முற்றத்திலிருந்து கூரைக்குப் படிக்கட்டுகள் சென்றன. குடியிருப்பவர்கள் நாற்புறங்களிலுமுள்ள அறைகளுக்கு அப் படிகளால் இறங்கிச் சென்றார்கள். செல்வர்களின் வீடுகளோடு தோட்டங்கள் இணைந்திருந்தன. நகரங்களில் பொதுமக்கள் தங்கும் சோலைகள் இருந்தன. வீட்டுச் சுவர்களில் நிறமூட்டிய பாய்கள் தொங்கவிடப்பட்டிருந்தன. நிலத்துக்கு முரடான துணி விரிக்கப்பட்டிருந்தது. மக்கள் அதன்மீது இருந்தார்கள். பழைய எகிப்தியர் ஆறு அங்குலம் உயரமுள்ள மணைமீது குந்தியிருந்து உணவு உண்டார்கள். செல்வர் மெத்தை இடப்பட்ட நாற்காலிகளைப் பயன்படுத்தினர். கட்டடம் அமைக்கும் கல் மிக விலையுடையதாயிருந்தது. அரசரும் குருமாரும் கட்டடங்களைக் கல்லினால் அமைத்தார்கள். பிரபுக்கள் அதிகப் பணத்தையும் கட்டடம் அமைத்தற்கு வேண்டிய பொருள்களையும் கோவில் களுக்குக் கொடுத்தனர். பன்னிரண்டாவது அரச பரம்பரைக் காலத்தில் பிரமிட் சமாதி கட்டும் வழக்கம் நின்றுபோயிற்று. குநுப்கொதப (கி.மு.2,180) என்னும் அரசன் தூண்கள் பலவற்றை வரிசையாக நாட்டி விநோதமான சமாதி ஒன்றை அமைத்தான். இதைப் பின்பற்றி நைல் நதியின் மேற்குச் சரிவுகளில் ஆயிரம் வகையான கட்டடங்கள் எழுந்தன. வரலாற்றில் எகிப்தியரே மிகப்பெரிய கட்டடம் அமைப்போராயிருந்தனர். இவர்கள் பெரிய கற்சிற்பிகளுமாவர். செப்ரின் (Chepren) அரசனின் பிரமிட் சமாதிக்கு முன்னால் காணப்படும் மனிதமுகச் சிங்கம் எகிப்தியரின் சிற்பத் திறமைக்குச் சான்றாக விளங்குகின்றது. இறந்தவரின் உருவச் சிலைகள் பெரும்பாலும் சமாதிக்குள் வைப்பதற்காகச் செய்யப்பட்டன. சிலைகள் செய்யவேண்டிய முறைகள் சமய சம்பந்தம் பெற்றிருந்தன. அவர்கள் உலோகம், கல் என்பவை களில் கடவுளர், அரசர், அடிமைகளின் வடிவங்களையும், விலங்குகளும், பறவைகளின் உருவங்களையும், வியக்கத் தக்கனவாகச் செய்தனர். சமாதிச் சுவர்களில் மிக அழகிய ஓவியங்கள் எழுதப்பட்டுள்ளன. மரக்கலங்கள், மரஞ்செடிகள், பறவைகள், ஊர்வன, விளைநிலங்கள், மலைகள், கடல் உயிர்கள் போல்வன அவைகளுட் சில. நெசவாளர் பலவகை ஆடைகளை நெய்தனர். வீடுகளில் பயன் படுத்தப்படும் பலவகை மரத்தளவாடங்கள் செய்யப்பட்டன. நாற்காலிகள் பொன்னாலும் வெள்ளியாலும் அலங்கரிக்கப்பட்டன. ஆபரணச் சிமிழ், மணப்பொருள்களை இட்டு வைக்கும் பேழைகள் போன்ற அழகிய பொருள் கள் செய்யப்பட்டன. வெள்ளி, பொன், வெண்கலம், பளிங்கு முதலியவை களாற் செய்யப்பட்ட ஏனங்கள் மேசைகள் மீது வைக்கப்பட்டன. கழுத்தணி, முடி, மோதிரம், முகம் பார்க்கும் கண்ணாடி, சங்கிலி முதலியவை வெள்ளி, பொன் முதலியவைகளாலும் நிறக்கற்களாலும் செய்யப்பட்டன. வீட்டு வேலை முடிந்ததும் பெண்கள் யாழ், குழல், வீணை முதலியவைகளை வாசித்தனர். கோயில்களிலும் அரண் மனைகளிலும் பாட்டு, கூத்து முதலியவை நடைபெற்றன. அரசன் இவைகளைப் பார்த்தும் கேட்டும் களிப்பதற்குப் பாடுவோரையும் ஆடுவோரையும் ஆயத்தஞ் செய்கின்ற வர்கள் பலர் இருந்தனர். சமயம் எகிப்தியர் சமயத்தை எல்லாவற்றுக்கும் மேலாகக் கொண்டார்கள். இந்திய நாட்டிற்போல எகிப்திலும் தெய்வங்கள் மிகப் பலவாயிருந்தன. எகிப்தியரின் பெரிய கடவுள் விண். விண்ணில் இயங்கும் மீன்கள் வலிய தெய்வங்களாகக் கொள்ளப்பட்டன. ஹதர் என்னும் பெரிய பசுக்கடவுள் விண்ணின் மீது நின்றது. அதன் பாதங்களில் தரை கிடந்தது. அதன் வயிற்றில் பதினாயிரம் விண்மீன்கள் கிடந்து அழகு செய்தன. நோம்ஸ் எனப்பட்ட சிற்றரசர்களின் தெய்வங்களும் அவைகளைப்பற்றிய பழங்கதைகளும் வெவ்வேறாக இருந்தன. விண் தெய்வம் சுப எனப்பட்டது. அது தரைமீது மெதுவாகப் படுத்திருந்தது. தரை, நூயிட் (Nuit) என்னும் பெண் தெய்வம் எனப்பட்டது. வானம், பூமி என்னும் இரண்டின் சேர்க்கையினால் எல்லாப் பொருள்களும் தோன்றின. இராசி களும் விண்மீன்களும் பெரிய தெய்வங்களாகக் கொள்ளப்பட்டன. சாகு என்னும் கடவுள் தெய்வங்களை ஒரு நாளில் மூன்று முறை விழுங்கிற்று. இவ்வெட் என்னும் பெரிய தெய்வம் ஒன்று சந்திரனை விழுங்கிற்று. தேவர்கள் கோபித்தமையால் அது சந்திரனை வெளியே கக்கிற்று. கிரகணம் உண்டாவதை எகிப்தியர் இவ்வாறு விளக்கினர். ஞாயிறும் திங்களும் பெரிய தெய்வங்கள். ஞாயிறு இரா அல்லது ரீ எனப்பட்டது. அது ஒவ்வொரு காலையிலும் தோன்றும்; தெய்வத் தன்மையுடைய தோணியில் சென்று ஆகாச வீதியைக் கடக்கும்; ஒவ்வொரு மாலையும் மேற்கே மறைந்து போகும். ஞாயிறு ஆண்கன்று வடிவிலும் வழிபடப்பட்டது. வானத்துக் கூடாகத் தினம் பறந்து செல்லும் கழுகாகவும் கொள்ளப்பட்டது. கழுகு எகிப்திய சமய அரச அடையாளமாகும். எகிப்தியர் பல செடிகளைத் தூய்மை யுடையனவாகக் கருதினர். வனாந்தரத்தில் நிழல் செய்யும் பேரீந்து, பசுந்தரை களிற் காணப்படும் நீரூற்று, இளைப்பாறத் தகுந்த சோலைகள், மணலில் வளரும் அத்தி முதலியன பரிசுத்த முடையன. எகிப்தியர் அவைகளுக்கு வெள்ளரிக்காய், முந்திரிகைப் பழம், அத்திப்பழம் முதலியவைகளைப் பலியாகக் கொடுத்து வழிபட்டனர். வெண்காயத்தை அவர்கள் தெய்வமாகக் கொண்டனர். எருது, முதலை, கழுகு, பசு, வாத்து, வெள்ளாடு, ஆட்டுக்கடா, பூனை, நாய், கோழிக் குஞ்சு, தூக்கணங்குருவி, நரி, பாம்பு முதலியவை கோயில்களுக்கு நேர்ந்து விடப்பட்டன. அவை கோயிலில் அலைந்து திரியும். கோயிலுக்குரிய விலங்குகள் வழிபடப்பட்டன. அவை இன்று இந்தியக் கோயில்களில் அலைந்து திரியும் கோயில் மாடுகள் போன்றவை. ஆடும் எருதும் ஒசிரிஸ் என்னும் தெய்வத்தின் பிறப்புகளாகக் கருதப்பட்டன. இசிஸ் எகிப்தியரின் தாய்க்கடவுள். இரா என்னும் கடவுள் தெற்கே வாழ்ந்த மக்களால் அமன் எனப்பட்டது. ஒசிரிஸ், இசிஸ், ஓரஸ் என்னும் தெய்வங்கள் எகிப்தியரின் பெரிய கடவுளராவர். இரா, அமன், பிதா என்போர் எகிப்தியரின் மும்மூர்த்திகள். அரசனும் ஒரு தெய்வமாக இருந்தான். அவனுடைய கையில் கழுகும், நெற்றியில் பாம்பும் இருந்தன. அரசன் குருமாருக்குத் தலைவன். பெரிய விழாக்களில் அவனே ஊர்வலங்களின் முன்பு சென்றான். அவனைக் கடவுள் என மக்கள் நம்பினமையால் அவர்கள் அவனுக்குப் பணிந்து அடங்கி நடந்தார்கள். அவன் தனது வலிமையைப் பயன்படுத்தவேண்டிய அவசியம் உண்டாகவில்லை. குருமார் அரசனின் துணைவர்களாகவும், அரசாங்க உளவாளர்களாகவும் இருந்தனர். இவர்கள் மந்திர வித்தை தொடர்பான பல கிரியைகளை வகுத்திருந்தார்கள். மக்கள் கடவுளைக் கிட்டுவதற்குத் தாம் இன்றியமையாதவர்கள் எனக் கொண்டனர். குருவின் மகன் குருவாக இருக்க வேண்டும் என்னும் சட்டம் இருக்க வில்லை; ஆயினும் குருவின் மகன் குருவாக வந்தமையால் அவ் வகுப்புப் பெருகிற்று. அரசரின் ஆதரவினாலும் பொது மக்களின் பக்தியினாலும் குருமார், செல்வமும் அதிகாரமும் உடையவர்களாயினர். அவர்கள் காணியாளராகிய பிரபுக்களிலும், அரச குடும்பத்தினரிலும் பார்க்க மேலான நிலையில் இருந்தனர். தெய்வங்களுக்கு இடப்படும் பலிகள், காணிக்கை இவைகளால் அவர்களுக்கு நிறைய உணவு கிடைத்தது. கோயில் அவர்களின் விசாலமான வீடுகளாக இருந்தது. கிரியைகள் புரிவதாலும், கோயில் நிலங்களாலும் அவர்களுக்கு நிரம்பிய வருவாய் கிடைத்தது. இவர்களுக்கு எல்லா வரிகளும் நீக்கப்பட்டிருந்தன. போரில் சேவித்தல், கட்டாய வேலைகள் முதலியன இவர்களைக் கட்டுப்படுத்தவில்லை. மற்றவர்கள் பொறாமை கொள்ளக்கூடிய அதிகாரமும் செல்வமும் உடையவர்களாயிருந்தனர். கல்வி இவர்கள் வசம் இருந்தது. கல்வியைக் காப்பவர்கள் இவர்களே. இவர்கள் இளைஞருக்குக் கல்வி யளித்தார்கள். இவர்களுக்கு அதிகாரம் உண்டா வதற்கு இது முக்கிய காரணமாகும். எகிப்தியர் இறந்தவர்களின் உடல்களைப் பக்குவஞ்செய்து புதைத்து வைத்தார்கள். இவர்கள் நம்பிக்கைகளிலிருந்தே இறந்தவர் உயிர்த்தெழுதல் என்னும் கொள்கை கிறித்துவ மதத்திற் பரவிற்று. பரு உடலோடு சேர்ந்து நொய்ய உடல் ஒன்று இருக்கின்றதென்றும், மரண காலத்தில், பறவை கூட்டை விட்டுப் பறந்துபோதல் போல் அது உடலை விட்டுப் பறந்து செல்கின்ற தென்றும் இவர்கள் நம்பினார்கள். அந் நுண்ணிய உடல் கா எனப்பட்டது. கா வில் உயிர் தங்கியிருந்தது. கா வும் உயிரும் இறப்பதில்லை. உடலைப் பாதுகாத்து வைத்தால் கா நீண்ட காலம் இருக்கும். பாவம் சிறிது மில்லாத இறந்தவர்கள் கா உடலில் ஒசிரிஸ் என்னும் கடவுளுக்கு முன் வந்தால் எல்லா மகிழ்ச்சிகளும் உள்ள உலகில் எப் பொழுதும் வாழவிடப்படுவர். ஒசிரிசை அடைவதற்கு ஓடத்தில் ஏறிச்செல்லு தல் வேண்டும். பாவமில்லாத ஆடவரையும் மகளிரையும் மாத்திரம் ஓடக் காரன் ஓடத்தில் ஏற்றுவான். ஒசிரிஸ் என்னும் தெய்வத்துக்குமுன் சென்ற வுடன் அத் தெய்வம் ஒவ்வொருவரையும் விசாரணை செய்யும்; அவர்கள் சொன்ன உண்மையை அறிவதற்கு அவர்களின் இருதயத்தை ஒரு தட்டிலும் மற்ற தட்டில் ஒரு இறகையும் வைத்து நிறுக்கும். இந்தச் சோதனையில் தவறினவர்கள் எப்பொழுதும் சமாதி அறையில் தங்கும்படி திரும்ப அனுப்பப்படுவார்கள். அங்கு அவர்கள் பசி தாகம் முதலியவைகளால் வருந்திக்கொண்டும் முதலைகளால் துன்பம் அடைந்துகொண்டும் தங்குவார்கள். ஞாயிற்றின் ஒளியைக் காணும்படி அவர்கள் வெளியே வருதல் முடியாது. இச் சோதனையில் தேறுவதற்குக் குருமார் பல வழிகளை அறிந்திருந் தார்கள். சமாதி அறையில் பசி தாகத்துக்கு வேண்டிய உணவு, நீர் முதலியவை களையும் உதவிக்கு வேண்டிய வேலையாள்களையும் விட்டுவைப்பது ஒன்று. மற்றொன்று சமாதி அறையில் மீன், பருந்து, பாம்பு, வண்டு முதலிய வைகளைப் போல் செய்த உருவங்களை வைத்தல். குருமாரால் நன்கு மந்திரிக்கப்பட்டால் இவை எல்லாப் பகைகளையும், தீமைகளையும் ஓட்டும். இன்னொருமுறை மரணப் புத்தகத்தைப் புதைப்பது. இப் புத்தகத்தில் பல மந்திரங்களும் துதிகளும் எழுதப்பட்டுள்ளன. இவை ஒசிரிஸ் தெய்வத்தை மகிழ்விக்கத்தக்கன. குருமார் நீதிகளை மக்களுக்குப் போதிப்பதற்குப் பதிலாகத் தாயத்துகளை விற்றார்கள்; மந்திர வித்தைகள் சம்பந்தமான கிரியைகள் புரிந்தார்கள். மரணமடைந்தவருக்கு வழியில் நேரும் நூற்றுக்கணக்கான இடையூறுகளை மரணப்புத்தகத்தால் வெல்லலாம் என அந் நூல் கூறுகின்றது. நேர்மையாக வாழ்தலிலும் பார்க்க மந்திரங்களை உச்சரிப்பதால் அதிக நன்மை உண்டாகும் என மக்கள் நம்பினார்கள். தேவர்களில் ஒருவர் இன்னொருவருக்கு எதிராக மந்திரங்களைப் பயன்படுத்தினர். எகிப்தியரின் இலக்கியங்கள் மந்திர வித்தைக்காரரைப்பற்றி அதிகம் கூறுகின்றன. அவர்கள் மந்திரத்தினால் குளங்களை வற்றச் செய்தார்கள்; துணியுண்ட உறுப்புகளை உரிய இடங்களில் பொருந்தும்படிச் செய்தார்கள். ஒவ்வொரு வீட்டின் வாயிலிலும் தீய ஆவிகளை ஓட்டும்படி ஒரு கடவுள் இருந்தது. ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு நாளும் யாதும் ஒரு தெய்வத்துக்கு உரித்தாய் இருந்தன. ஒருவன் பிறந்த நாளையும் நேரத்தையும் கொண்டு வாழ்நாளில் அவனுக்கு என்ன நேரும் என்று அறியப்பட்டது. இறந்தவர்களை அவர்கள் செல்லும் உலகில் நன்மைப்படுத்தும் மந்திரங்கள் பல இருந்தன. இக்கந்தன் என்னும் அரசன் கி.மு. 1,380இல் இக்கந்தன் என்னும் அரசன் பட்டத்துக்கு வந்தான். இவன் நாலாம் அம்கொதெப் எனவும் அழைக்கப்பட்டான். பட்ட மெய்தியதும் இவன் கோயிற் குருமாருக்கு மாறாகப் புரட்சி செய்தான். கோயில்களில் ஆடுகள் பலியிடப்படுவதையும், வியபிசாரங்கள் நடப்பதை யும் வெறுத்தான். குருமார் மந்திரவித்தை, தாயத்துகள் விற்றல் முதலியவை களைக் கொண்டு வாணிபம் புரிதல், வெளிப்பாடு கூறுதல் முதலியவை அரசாங்க ஊழல்கள் என்றும், குருமாரின் வார்த்தைகள் மக்களுக்குத் தீமை விளைவிப்பன என்றும் துணிந்தான்; பல கடவுளர் வணக்கம் தீயது என்று அறைந்தான்; அதன் என்னும் ஒரே கடவுள் மாத்திரம் வழிபடப்படுதல் வேண்டுமெனக் கட்டளை செய்தான். அதன் கடவுள் எல்லா நல்ல குணங் களும், எல்லா ஆற்றலும், எங்கும் நிறைந்திருக்கும் இயல்பும் உடையர் எனக் கொள்ளப்பட்டார். அதன் வழிபாட்டுக் குரியனவல்லாத எல்லாக் கோயில் களையும் மூடும்படி அரசன் கட்டளையிட்டான்; தீப்ஸ் நகரம் புனிதமுடைய தன்று எனக்கொண்டு அகேரான் என்னும் நகரை அமைத்து அதைத் தலைநக ராகக் கொண்டான். குடிகள் குருமாரின் கட்டுகளினின்றும் விடுபட்டுச் சேமமாக வாழ்ந்தார்கள். செல்வமும் அதிகாரமும் மிகுந்த குருமாரை அரசன் ஒரே அடியில் வீழ்த்திவிட்டான். குருமார் திரை மறைவிலிருந்து அரசனுக்கு மாறாகச் சதி ஆலோசனைகள் செய்தனர். தூதன் காபன் இக்கந்தன் மரணமான இரண்டு ஆண்டுகளின்பின் அவன் மகளின் கணவனான தூதன் காபன் ஆட்சியை ஏற்றான். இவன் குருமாரின் நண்பனாயிருந்தான். இப்பொழுது குருமார் முந்திய அரசன் செய்ததற்கு மாறாகத் தமது கொள்கைகளை நாட்டினர். இவனுடைய சமாதியில் அளவில்லாத விலையுயர்ந்த பொருள்கள் கிடைத்தன. அச் சமாதியில் கிடைத்த பொருள்களின் மதிப்பு 30,000 தங்க நாணயம் வரையிலாகும். இவனுடைய ஆட்சிபற்றி யாதும் தெரியவில்லை. இவனுக்குப்பின் ஹர்ம ஹால் ஆட்சி புரிந்தான்; முதலாம் சேதி என்பவன் இவனுக்குப்பின் அரசனா னான். கர்நாக் என்னும் இடத்தில் அபிசிபெல் மலையில் கட்டப்பட்ட இவ் வரசனின் சமாதி சமீபகாலத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இவனுக்குப்பின் இரண்டாம் இராம்சே ஆட்சி புரிந்தான். அவன் பாலத்தீனை வெற்றிகொண்டு அங்குநின்றும் பல யூதரை அடிமைகளாகக் கொண்டுவந்தான். பைபிளின் பழைய ஏற்பாட்டிலே யாத்திரை ஆகமத்தில் சொல்லப்படும் எகிப்திய அரசன் இவன் என்று கருதப்படுபவன். இறக்கும்போது இவனுக்கு நூறு புதல்வரும் ஐம்பது புதல்வியரும் இருந்தனர். இவனுடைய பிள்ளைகள் மிகப் பலராயிருந்தமையின் அடுத்த நூறு ஆண்டுகளில் அவர்கள் தனிக் கூட்டத்தினராகப் பெருகியிருந்தார்கள். அரசனுடைய அதிகாரத்திலும் பார்க்க இன்னொரு கூட்டத்தினரின் அதிகாரம் மேலாக இருந்தது. அக் கூட்டத்தினர் குருமாராவர். எல்லா நாடு களிலும் அரசருக்கும் குருமாருக்குமிடையில் அதிகாரத்தின் பொருட்டுப் போட்டி யிருந்து வந்தது. ஒவ்வொரு போரிலும் கிடைக்கும் கொள்ளைப் பொருளின் பெரும் பகுதி குருமாருக்குக் கொடுக்கப்பட்டது. மூன்றாம் இராம்சே காலத்தில் அவர்களிடம் 107,000 அடிமைகள் இருந்தார்கள். இது எகிப்திய சனத்தொகையில் முப்பதிலொருபகுதி; 750,000 ஏக்கர் நிலம் அவர்கள்வசம் இருந்தது. இது எகிப்தில் பயிரிடும் நிலம் முழுமையிலும் ஏழில் ஒரு பங்கு. அவர்களிடம் 500,000 ஆடுமாடுகளிருந்தன. அவர்கள் எகிப்திலும் சிரியாவிலுமுள்ள 169 நகரங்களின் வருவாயைப் பெற்றனர். ஒவ்வொரு ஆண்டும் குருமாருக்கு 32,000 கிலோகிராம் பொன்னும், பத்து இலட்சம் கிலோகிராம் வெள்ளியும், 18,50,000 மூட்டை தானியங்களும் கொடுக்கப்பட்டன. கருவூலத்தைப் பார்த்தபோது வேலையாள்களுக்குக் கூலி கொடுக்க யாதும் எஞ்சியிருக்கவில்லை. இந்நிலையில் அரசர் குருமாரின் அடிமைகளாதல் இயல்பேயாகும். இராம்சிட் காலத்தில் முதன்மைக் குரு அவனுடைய செங்கோலைப் பிடுங்கித் தானே ஆட்சிபுரிந்தான். அக் காலத்தில் பெரிய கோயில்கள் எழுந்தன. மூடக் கொள்கைகள் செழிப்படைந்தன. எல்லா வகையான முடிவு செய்வதற்கும் குருமார் நிமித்தம் பார்ப்பதைச் சிறப்பாகக் கொண்டனர். அயல்நாட்டவர் எகிப்தின் மீது படை எடுக்க ஆயத்தம் செய்யும் காலத்தில் நாட்டின் செல்வம் முழுமையும் குருமாரால் உறிஞ்சப்பட்டுவிட்டது. எகிப்தின் வீழ்ச்சி பாபிலோன், அசீரியா, பாரசீகம் முதலிய நாடுகள் பலமடைந்தன. எகிப்தோடு போட்டியிட்ட நாடுகள் ஒவ்வொன்றும் எகிப்தை வென்றன. கி.மு. 954இல் மேற்கு எல்லைப் பக்கங்களிலுள்ள இலிபியர் எகிப்தின் மீது படை எடுத்தார்கள். கி.மு. 722இல் எத்தியோப்பியர் தெற்கினின்றும் வந்து தம்மை முன் அடிமைப் படுத்திய எகிப்தியரைப் பழிவாங்கினர். கி.மு. 674இல் அசீரியர் எகிப்தை வென்று அதைத் தமது திறை நாடாக்கினர். கி.பி. 525இல் பாரசீகர் எகிப்தை வெற்றி கொண்டனர். கி.மு. 322இல் அலக்சாந்தர் எகிப்தை மாசிடோன் இராச்சியத்தின் பகுதியாக்கினார். கி.மு. 30இல் எகிப்து, உரோம இராச்சியத்தின் பகுதியாக மாறிச் சரித்திரத்திலிருந்து மறைந்தது. கி.பி. 650இல் முகம்மதியர் எகிப்தை வென்று கெய்ரோ நகரை அமைத்தார்கள். இப்பொழுது எகிப்தியர் அராபியரோடு கலந்தார்கள். அவர்களின் மொழியும் அரபி மொழியோடு கலந் துள்ளது. எகிப்து, இப்பொழுது முசிலிம்களுடைய அதிகாரத்தில் இருக்கின்றது. பாபிலோன் சுமேரியாவும் அக்கேடியாவும் சேர்ந்த நாடு பாபிலோனியாவாகும். யூபிராதஸ் தைகிரஸ் ஆற்று ஓரங்களில் கிடக்கும் அழிபாடுகளை இன்று காண்போர்கள் அவ்விடம் செல்வமும் அதிகாரமும் நிறைந்த மக்களின் தலைநகராக இருந்ததென ஒருபோதும் நினைக்கமாட்டார்கள். பாபிலோனியா சாலதியா1 என்றும் அறியப்படும். பாபிலோனின் முதலரசன் ஹமுரபி (கி.மு. 2,123 - கி.மு. 2,081). இவன் செமித்திய குலத்தவன். அராபியாவில் வாழ்ந்த பழைய மக்கள் செமித்தியர் எனப்பட்டனர். இவனுக்குச் சமாஷ் என்னும் ஞாயிற்றுக் கடவுள் சட்டங்களை அருளிச்செய்யும் காட்சியும், அச் சட்டங்கள் எழுதப்பட்ட கற்றூண் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் துணை கொண்டு அக்காலத்தில் வழங்கிய சட்டங்கள், மக்கள் வாழ்க்கை முதலிய பல செய்திகள் அறியப்படுகின்றன. பாபிலோனிய மக்கள்2 செமித்தியர் போன்ற தோற்றமும், இருண்ட மயிரும், தாடியும் உடையவர்களாயிருந்தனர். ஆண் பெண் என்னும் இரு பாலாரும் மயிரை நீளமாக வளரவிட்டனர். இரு பாலாரும் பாதம் வரையும் மறைக்கக்கூடிய வெண்சணலாடை உடுத்தார்கள்; உடலுக்கு நறுமணம் பூசினார்கள்; பெண்கள் இடது தோள் வெளியே தெரியும்படி விட்டார்கள். ஆடவர்கள் இரு தோள்களையும் மறைத்துச் சட்டையிட்டார்கள். செல்வம் வளர்ந்தபோது ஆடைகளுக்குப் பலவகை நிறங்கள் ஊட்டப்பட்டன; கோடு, வட்டம், புள்ளிபோன்ற பலவகை வேலைப்பாடுகள் செய்யப்பட்டன; மக்கள் காலுக்கு அழகிய செருப்புத் தரித்தனர்; ஆடவர் தலையில் பாகை வைத்தார்கள்; பெண்கள், கழுத்து மாலை, கைவளை முதலிய அணிகள் அணிந்தனர். ஆடவர் கையில் அழகிய கைத்தடிகளைக் கொண்டு திரிந்தனர். அவைகளின் தலைகளில் அழகிய வடிவங்கள் வெட்டப்பட்டிருந்தன. அவர் களின் அரைப்பட்டியில் அழகாக வெட்டப்பட்ட முத்திரைகள் தொங்கின. இவை அவர்களின் கையெழுத்தாகப் பயன்பட்டன. குருமார் தமது தோற்றத்தை மறைப்பதற்கு உச்சியில் நீண்ட முனையுடைய தொப்பியை அணிந்தனர். நாகரிகத்தை உண்டாக்கும் அதிக செல்வம் அழிவுக்கு ஏது வாகும். செல்வத்தினால் கலைகள் வளர்கின்றன; மக்கள் உல்லாசமாகவும் ஆடம்பரமாகவும் வாழ்கின்றனர். அதனால் மக்களின் போர்க்குணம் மழுங்கி விடுகின்றது. அப்பொழுது வலியுடையவர்களும் பசியுடையவர்களுமாகிய வெளியே யுள்ளவர்கள் படை எடுக்கிறார்கள். பாபிலோனின் கிழக்கு எல்லையில் காசைரீசர் (Kassites) என்னும் மக்கள் வாழ்ந்தார்கள். அவர்கள் பாபிலோனியரின் செல்வத்தைக் கண்டு பொறாமையடைந்தார்கள். ஹமுரபி இறந்து எட்டு ஆண்டுகளுள் இவர்கள் பல தடவை பாபிலோன்மீது படை எடுத்து நாட்டைச் சூறையாடினார்கள். இறுதியில் அவர்கள் வெற்றியாளராய் அங்கு அமர்ந்தார்கள். அறுநூறு ஆண்டுகளுக்குப் பின் காசரீசர்கள் வெளியே துரத்தப்பட்டார்கள். அடுத்த நானூறு ஆண்டுகளில் ஆட்சி குழப்பம் அடைந்திருந்தது. அப்பொழுது அசீரியர் பாபிலோனை வென்று அதனை நினேவாவின் ஆட்சிக்குட்படுத்தினர். பாபிலோனியர் கலகம் செய்தபோது சென்னாச்செரிப் என்னும் அசீரிய அரசன் பாபிலோனை முற்றாக அழித்தான். மீதியர் தலையெடுத்தபோது அசீரியரின் பலம் குறைந் திருந்தது. நபோபொலசார் என்னும் பாபிலேனியன் மீதியரின் துணையைப் பெற்றுப் பாபிலோனை அசீரியரிடமிருந்து விடுத்தான். இவனுக்குப் பின் இவன் குமாரனாகிய நெபுசட்னேசர்(Nebuchadnezar) ஆட்சிபுரிந்தான். இவனே பழைய ஏழு வியப்புகளில் ஒன்று எனப்பட்ட தொங்கு தோட் டத்தை(Hanging gardens) அமைத்தான். தொழிலாளர் பாபிலோனின் ஒருபகுதி காடாக இருந்தது. நெருங்கி வளர்ந்த புற்களினிடையே பாம்புகள் திரிந்தன. பாபிலோனிய அரசர் காடுகளில் சென்று சிங்கங்களோடு நேரிற் போர்செய்து அவைகளை வேட்டையாடினர். இது அரசரின் சிறந்த பொழுதுபோக்காகக் கருதப்பட்டது. நிலத்தின் பெரும்பகுதி வாரக்காரராலும் அடிமைகளாலும் பயிரிடப் பட்டது. சில பகுதி நிலத்துக்குரிய குடிகளால் பயிரிடப்பட்டது. புதிய கற்காலத்திற்போல நிலம் பாரையினாலும் மண்வெட்டியினாலும் கிளறப் பட்டது. பிற்காலத்தில் கலப்பை பயன்படுத்தப்பட்டது. ஆற்றுவெள்ளம் வயலுட் பாயாதபடி ஒவ்வொரு வயலையும் சுற்றிப் பெரிய வரம்புகள் கட்டப் பட்டிருந்தன. ஆறு பெருகும்போது வெளியே வழிந்துஓடும் வெள்ளம் கால்வாய்கள் மூலம் குளங்களில் தேக்கி வைக்கப்பட்டது; வேண்டிய காலங்களில் மடைகளைத் திறந்து வயல்களுக்கு நீர் பாய்ச்சப்பட்டது. ஏற்றங்களால் இறைத்து நீர் பாய்ச்சுவதும் வழக்கமாயிருந்தது. நீர் தேக்கி வைக்கப்பட்ட குளம் ஒன்றின் சுற்றளவு 140 மைல். வயல்களில் பலவகைத் தானியங்கள் விளைந்தன; பலவகைப் பழ மரங்கள் செழித்து ஓங்கின. முந்திரிகை, ‘அலிவ்’ முதலியன பாபிலோனி லிருந்து கிரீஸ், உரோம் முதலிய நாடுகளிற் பரவின. நாட்டில் செம்பு, ஈயம், இரும்பு முதலிய உலோகங்கள் அரித்தெடுக்கப்பட்டன; மண்ணெண் ணையும் எடுக்கப்பட்டது. ஹமுரபி காலத்தில் பயன்படுத்தப்பட்ட கல் ஆயுதங்களுக்குப் பதில் வெண்கல ஆயுதங்கள் செய்யப்பட்டன. உலோகங் களை உருக்கி வார்க்கும் தொழில் அறியப்பட்டிருந்தது. இவை வெளிநாடு களுக்குக் கொண்டுபோகப்பட்டன. வீடுகள், வைக்கோல் கலந்த களிமண்ணி னாலும், களிமண்ணில் அரிந்து காயவிடப்பட்ட கற்களினாலும், செங்கற்களாலும் எடுக்கப்பட்டன. உள்நாட்டுப் போக்குவரத்துக்குக் கழுதை பூட்டிய வண்டிகள் பயன் படுத்தப்பட்டன. கி.மு. 2,100இல் எழுதிய பட்டையமொன்றில் குதிரையைப் பற்றி முதன்முதல் சொல்லப்பட்டுள்ளது. அது கிழக்குத்தேசக் கழுதை எனப்பட்டது. மத்தியதரை நாடுகளின் வணிகர் பாபிலோன் நகரில் கூடி னார்கள். பாபிலோனியர் நாணயங்களைப் பயன்படுத்தவில்லை; கோதுமை, தானியம், பொன்துண்டு, வெள்ளி முதலியவை நாணயங்களுக்குப் பதில் பயன்படுத்தப்பட்டன. கடன் வாங்கியவன் கடனைத் திருப்பிக் கொடுக்க முடியாவிடின் அவனுடைய அடிமைகளை அல்லது பிள்ளைகளைக் கடன்காரன் பிடித்துக்கொள்ளப் பாபிலோனியச் சட்டம் அனுமதித்தது. ஆனால் அவன் அவர்களை மூன்று ஆண்டுகளுக்குமேல் வைத்திருத்தல் கூடாது. போர்களில் அகப்பட்ட பகைவர் அடிமையாக்கப்பட்டனர். பிற நாடுகளிற் சென்று கிராமங்களைத் தாக்கி அடிமைகளைப் பிடித்து வாணிகம் புரிவோரும் இருந்தனர். பட்டினங்களிலுள்ள வேலைகள் அடிமைகளால் செய்யப்பட்டன. பெண் அடிமைகள் தம்மை அடிமைகளாக வைத்திருக்கும் தலைவனின் தயவில் தங்கியிருந்தார்கள்; தலைவன் மூலம் பிள்ளைகளைப் பெற்றார்கள். அடிமைகள் கடனுக்காக ஈடு வைக்கவும் விற்கவும் பட்டனர். அவர்கள் இருப்பதிலும் இறந்துபோதல் இலாபம் எனத் தலைவன் நினைத் தால் அவன் அவர்களைக் கொன்றுவிடலாம். தப்பி ஓடிய அடிமையை ஒருவரும் வீட்டில் மறைத்து வைத்திருத்தல் கூடாது. அவ் வடிமையைப் பிடித்துக் கொடுப்பவர்களுக்கு வெகுமதி அளிக்கப்பட்டது. அடிமைகள் அல்லாத பொதுமக்களைப்போல இவர்களும் போருக்கு அல்லது பொது வேலைகளுக்குத் திரட்டப்பட்டார்கள். அடிமை ஒருவன் அடிமை யல்லாத பெண்ணை மணந்தால் அவனுடைய பிள்ளைகள் அடிமைகளாக மாட்டார்கள். தலைவன் விரும்பினால் அடிமையை விடுதலை செய்யலாம். சட்டம் அரசனால் பாபிலோன் ஆளப்பட்டது. காணியாளராகிய பிரபுக்கள் அரசனுடைய துணைவர்களாகவிருந்தனர். அப் பிரபுக்களின் அதிகாரம் சிறிதுசிறிதாக மறைதலும் வணிகராகிய செல்வரின் அதிகாரம் அதிகரித்தது. இவர்கள் அரசனுக்கும் பொதுமக்களும் இடைப்பட்ட நிலையிலுள்ளவர் களாவார். அரசனுக்குப் பின் நாடு அவன் விரும்பிய அவன் புதல்வர்களுள் ஒருவனைச் சேர்ந்தது. ஆட்சி அரசனால் அமைக்கப்பட்ட பிரபுக்கள் சபையால் நடத்தப்பட்டது. ஹமுரபி அரசனின் சட்டங்கள் கையாளப்பட்டன. தெய்வத்தின் பெயரால் நடத்தப்படும் சில சோதனைகளால் சில குற்றங்கள் முடிவு செய்யப்பட்டன. ஒருவன் மந்திர வித்தைக்காரனென்றோ, ஒருத்தி பரத்தை என்றோ குற்றஞ் சாட்டப்பட்டால் அவர்கள் யூபிராதஸ் ஆற்றில் எறியப் பட்டார்கள். நன்றாக நீந்தக் கூடியவர் சார்பில் கடவுள் இருந்தார். மந்திர வித்தைக்காரன் நீரில் மூழ்கி இறவாவிடின் குற்றஞ் சாட்டியவனின் சொத்தை அவன் பெற்றான். பரத்தைக் குற்றஞ் சாட்டப்பட்டவள் இறந்துவிட்டால், அவள் பரத்தையாவாள்! பிழைத்தால் குற்றமற்றவளாவாள். குருமார் நீதிபதி களாவர். கோயில்களில் நீதிமன்றங்கள் நடத்தப்பட்டன. ஒருவன் இன்னொரு வனின் கண்ணையோ பல்லையோ ஊனப் படுத்தினால் அவனுக்கு அதே தண்டனை விதிக்கப்பட்டது. ஒரு வீடு விழுந்து அதனை வாங்கியவனைக் கொன்றுவிட்டால், அதனைக் கட்டினவன் அல்லது கட்டுவித்தவன் மரண தண்டனை பெற்றான். சிறுமி ஒருத்தியை ஒருவன் அடித்துக் கொன்றுவிட்டால் அவனுடைய சிறுமி அவ்வாறு கொல்லப்பட்டாள். காலத்தில் தண்டனை களுக்குப் பதில் பணம் நட்ட ஈடாகக் கொடுக்கப்பட்டது. தந்தையை ஒருவன் அடித்தால் அவனுடைய கைகள் வெட்டப்பட்டன. சத்திர வைத்தியங் காரண மாக நோயாளி இறந்தால் அல்லது அவனுடைய கண்கள் பழுது அடைந் தால் மருத்துவனின் கைவிரல்கள் நறுக்கப்பட்டன. கற்பழித்தல், பெண் களைக் கடத்திச் செல்லுதல், கொள்ளை, திருடு, வேறு கணவனை மணத் தற்குக் கணவனைப் பெண் கொலை செய்தல், பெண்குரு மதுக்கடைகளில் நுழைதல், ஓடிப்போன அடிமையை வீட்டில் வைத்திருத்தல், போரில் பயந்து ஓடுதல், வீட்டுப் பெண் கவனக்குறைவாயிருத்தல் அல்லது சிக்கனமில்லாது செலவு செய்தல் போன்ற குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. ஹமுரபியின் சட்டத்தில் கொத்தர், செங்கல் சூளையிடுவோர், தையற்காரர், கற்கொத்தர், தச்சர் ஓடக்காரன், இடையன், கூலியாள் முதலியோரின் கூலிகள் குறிப்பிடப்பட்டுள்ளன. தந்தையின் சொத்து பிள்ளைகளைச் சமபங்காக அடைந்தது. கணவன் இறந்தபின் பெண் தனது மரணம் வரையில் குடும்பத் தலைவியாக இருந்தாள். குருமார் எழுத்தாளராக வேலைகள் புரிந்தனர். ஒருவன் மற்றொருவனைக் கொலைக்குற்றஞ் சாட்டி அக் குற்றத்தை உறுதிப் படுத்தாவிட்டால் குற்றஞ் சாட்டியவன் கொலைத்தண்டனை அடைந்தான். அரசனுடைய நீதிபதிகள் அடங்கிய விசாரணை சபை ஒன்று பாபிலோன் பட்டினத்தில் இருந்தது. சில சமயங்களில் அரசனே மேல் விசாரணைகளை நடத்தினான். தெய்வங்கள் அரசனுடைய அதிகாரம் சட்டங்களாலும், அதிகாரிகளாலும், குருமாராலும் கட்டுப்படுத்தப்பட்டிருந்தது. அரசன் கடவுளின் சார்பாளனாக (Agent) இருந்தான். கடவுள் பெயரால் வரிகள் விதிக்கப்பட்டன. குருமாரால் அரச அதிகாரம் வழங்கப்படும் வரையில் அரசனை உண்மையான அரசனாக மக்கள் கருதவில்லை. இவ்வகை அதிகாரம் வழங்கும் பொது குருமார் மார்டுக் என்னும் கடவுளை அலங்கரித்து அதனை ஊர்வலம் செய்தார்கள். அப்பொழுது அரசன் குருவைப்போல் உடை உடுத்தப்பட்டான். சுமேரிய பற்றேசி என்னும் கோயிற் குருமாராகிய சிற்றரசர் முதல் நெபுச்சட்னேசர் வரையில் நாடு குருமார் அதிகாரத்துக் குட்பட்டிருந்தது. தலைமுறைதோறும் கோயில்களின் செல்வம் வளர்ந்தது. தெய்வங்களின் தயவைப் பெறும் பொருட்டு அரசர் கோயில்களைக் கட்டினார்கள்; அவைகளுக்கு வேண்டிய அடிமைகளையும், தளவாடங்ளையும் கொடுத்தார்கள்; பெரிய நிலங்களை அவைகளுக்கு மானியங்களாக விட்டார்கள். போர்களில் சிறைபிடித்த அடிமைகளின் முதற் பகுதி கோயிலுக்குக் கொடுக்கப் பட்டது; கொள்ளைப் பொருள்களும் அவ்வாறு கொடுக்கப்பட்டன. பேரீந்தின் பழம், தானியம் போன்ற பொருள்கள், சில நிலங்களிலிருந்து கோயில்களுக்குக் கிடைத்தன. இவ்வாறு கிடைக்கத் தவறியபோது நிலங்கள் கோயில்களால் மேற்பார்க்கப் பட்டன. இவ்வாறு நிலங்கள் குருமாரின் கைக்கு மாறின. செல்வரும் வறியரும் இவ்வுலக வாழ்வில் தமது செம்மையை விரும்பிக் கோவில் களுக்கு அதிகப் பொருளைக் கொடுத்தார்கள். கோயிற் களஞ்சியங்களில் பொன், வெள்ளி, வயிரம், மணிகள் போன்ற விலையுயர்ந்த பொருள்கள் குவிந்தன. குருமார் இச் செல்வத்தைத் தாம் நேராகப் பயன்படுத்த முடியா திருந்தது. ஆகவே அவர்கள் பயிர்த்தொழில், கைத்தொழில் நடத்துவோ ராகவும், வட்டிக்குப் பணம் கொடுத்து வாங்குவோராகவு மிருந்தனர். அவர் களிடத்தில் பெரிய நிலங்கள் இருந்தன. அவைகளில் வேலை செய்வதற்கு அடிமைகளும் இருந்தார்கள். அவர்கள் அடிமைகளை மற்றவர்களிடத்தில் வேலை செய்யும்படி விட்டுக் கூலி பெற்றனர். குருமார் பெரிய வணிகராயு மிருந்தனர்; கோயிலிற் கிடைக்கும் காணிக்கைப் பொருள்கள் கோயிலிலுள்ள கடைகளுக்கு விற்கப்பட்டன. பலர் தமது உடமைகளை அவர்களிடம் நம்பிக்கை யிருந்ததால் கொடுத்து வைத்தார்கள். அவர்கள் ஆவணங்கள் எழுதுவோராகவும், வழக்குகளை விசாரணை செய்து தீர்ப்பளிப்போராகவும் இருந்தனர். சில சமயங்களில் அரசன் கோயிற் பணத்தைப் பயன்படுத்தினான். ஆனால் இது ஆபத்தான செயலாக விருந்தது. கோயிற் சொத்தில் ஒரு துரும்புதானும் பயன்படுத்துகின்றவர்கள் மீது குருமார் கொடிய சாபங்களைப் பொழிந்தார்கள் அரசனுக்குப் பொதுமக்களிடமுள்ள அதிகாரத்திலும் மேலாகக் குருமாருக்கு இருந்தது. அரசன் இறந்துபோகின்றவன். கடவுளர் எப்பொழுதும் இருப்பவர். குருமார் தேர்ந்தெடுக்கப்படுகின்றவர்களல்லர். அவர்களுக்கு வரிகளுமில்லை; போரில் கலப்பதால் நேரும் துன்பமும் இல்லை. வணிகர் நாட்டைச் செல்வத்தால் செழிப்படையச் செய்தார்கள். குருமார் அதனை அநுபவித்தார்கள். பாபிலோனில் பல தெய்வங்கள் இருந்தன. கிறித்துவுக்குமுன் ஒன்ப தாம் நூற்றாண்டில் எடுக்கப்பட்ட கணக்கின்படி அங்கு 65,000 கோவில்கள் இருந்தன. ஒவ்வொரு பட்டினத்திலும், கிராமத்திலும் பல தெய்வங்கள் இருந் தன. ஞாயிற்றுக் கடவுள் சமாஷ் எனவும், திங்கட் கடவுள் நன்னர் எனவும் கூறப்பட்டனர். ஒவ்வொரு வீட்டிலும் வீட்டுத் தெய்வம் இருந்தது. அவை களுக்குக் காலையிலும் மாலையிலும் பலியிடப்பட்டது. முன்பு ஞாயிற்றுக் கடவுளாகக் கொள்ளப்பட்ட மார்டுக் இப்பொழுது தேவர்களுக்கு அரசன் ஆனான். சுவர்க்கத்தில் தேவர்கள் மாத்திரம் வாழ்ந்தார்கள். இறந்தவர் அரலு என்னும் நரகத்தில், கையும் காலும் கட்டுண்டு குளிரால் நடுங்கிக்கொண்டும், பசி தாகங்களால் வருந்திக்கொண்டும் இருந்தார்கள். இவர்களின் புதல்வர் சமாதியில் காலந்தோறும் உணவை வைத்தாலன்றி இவர்களுக்கு உணவு கிடைப்பதில்லை. இவ்வுலகில் கெட்ட வாழ்க்கை நடத்தியவர்களுக்கு அதிக தண்டனைகள் கொடுக்கப்பட்டன. இவர்களின் உடலில் குட்ட நோயும் பிற நோய்களும் உண்டாயின. பிணங்கள் நில அறைகளில் புதைக்கப்பட்டன; சில கொளுத்தப் பட்டன. பிணங்கள் தைலமிட்டுப் பக்குவஞ் செய்யப்படவில்லை. கூலிக்கு அழுவோர் அவைகளைக் கழுவி, வாசனை பூசி, உடுத்தி, கண்ணுக்கு மை எழுதி விரல்களில் மோதிரமிட்டு அலங்கரித்தார்கள். பெண் பிணங்களின் பக்கத்தே வாசனைப் புட்டிகள், சீப்பு, மை தீட்டுங் குச்சி, கண்ணுக்குத் தீட்டும் மை முதலியன வைக்கப்பட்டன. நல்ல முறையாகப் பிணங்கள் புதைக்கப் படாவிட்டால் இறந்தவர் இருப்பவர்களுக்குத் துன்பம் விளைவிப்பர்; உணவுக்காக அலைந்து திரிவர்; நாட்டில் கொள்ளை நோயை உண்டாக்குவர் என எண்ணினர். இவ் வச்சங் காரணமாகவே பாபிலோனிய மக்கள் குருமாருக்கும் கடவுளருக்கும் நல்ல உணவுகளை அளித்து வந்தார்கள். கடவுளுக்கு உணவும் நீரும் கொடுக்கப்பட்டன; ஆட்டுக்குட்டி பலி யிடப்பட்டது. ஆட்டுக்குட்டி மனிதனுக்குப் பதில் இடப்படும் பலி. குருமார் புரியும் பலவகைக் கிரியைகளோடு பலியும் இடப்பட்டது. ஒழுங்குபட்ட வாழ்க்கையிலும் பார்க்க முறையான கிரியையே மேலானது எனக் கொள் ளப்பட்டது. ஒருவனுடைய கடமை கோவில்களுக்கு முறையாகப் பலிக ளிட்டுச் சரியான துதிகள் பாடுவதாகும். ஒருவன் விழுந்து கிடக்கும் எதிரியின் கண்களைப் பிடுங்கிவிடலாம்; கைகளை வெட்டி விடலாம்; அவனுடைய இறைச்சியை அறுத்து வறுக்கலாம்; அவைகளைக் குறித்துக் கடவுள் வெறுப்படைய மாட்டார். குருமார் கடவுளுக்கு எதிரில் சாம்பிராணிப் புகை இட்டார்கள்; கடவுளரை அழகிய உடைகளாலும் அணிகலன்களாலும் அலங்கரித்தார்கள்; குருமார் அவர்கள்மீது பல துதிகளைப் பாடினர். சில சமயங்களில் பலர் ஒன்றுசேர்ந்து நின்று பாடினர். பாபிலோனிய சமய நூல்களும் துதிகளும் சுமேரிய மொழியில் எழுதப்பட்டுள்ளன. கத்தோலிக்கக் கிறித்துவக் கோயில்களில் இலத்தின் மொழி பயன்படுத்தப்படுவதுபோல, சுமேரிய மொழி பயன்படுத்தப்பட்டது. துதிகள் பூதங்களை ஓட்டின. இவை பழைய மந்திர வித்தை தொடர்பாக எழுந்தவை. பூதங்களிலிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்குத் தாயத்துகள், மந்திரங்கள் எழுதிய உலோகத் துண்டுகள் கடவுளரின் வடிவங் கள் முதலியன உடம்பில் அணியப்பட்டன; சிறிய கற்கள் கயிற்றில் அல்லது சங்கிலியில் கோத்துக் கழுத்தில் கட்டப்பட்டன. கறுப்பு, வெள்ளை, சிவப்பு முதலிய கயிறுகள் நோக்கத்துக்கு ஏற்றவாறு பயன்படுத்தப்பட்டன. பரிசுத்த மான தைகிரஸ், யூபிராதஸ் ஆறுகளின் நீரைத் தெளிப்பதாலும் பூதங்கள் விலகின. அசுர் பானிப்பாலின் நூல்நிலையத்தில் கிடைத்த களிமண் ஏடு களில், சோதிடம், கனவின் பலன், சகுனங்களின் பலன் போன்றவைகளைப் பற்றிய செய்திகள் காணப்படுகின்றன. பலியிடப்பட்ட விலங்கின் ஈரலைப் பார்த்துப் பாபிலோனியக் குருமார் வருங் காரியம் கூறினார்கள். இவ் வழக்கம் கிரேக்கக் குருமாராலும் கையாளப்பட்டது. நிமித்தம் பார்ப்பவனாவது கோவிற் குருவாவது சகுனம் பார்த்துப் பலன் கூறுவதன் முன் அரசன் போருக்குச் செல்லமாட்டான். இலக்கியம் பாபிலோனிய வாணிகம் சட்ட சம்பந்தமான ஒழுங்கு பெற்றிருந்தது. மெம்பிஸ், தீப்ஸ் நகரங்களிலிருந்தது போலப் பாபிலோனில் எழுத்தாளர் பலர் இருந்தார்கள். அவர்கள் ஈரமான களிமண் தட்டுக்களில் நுனி முக்கோணமாக வெட்டப்பட்ட எழுதுகோலால் எழுதினார்கள். எழுதப் பட்டது திருமுகமாயின் அது களிமண் உறையில் இட்டு எழுதியவனின் முத்திரை மேலே பொறிக்கப்பட்டது. கோயில்களிலும் பிறவிடங்களிலும் நூல்நிலையங்கள் இருந்தன. களிமண் தட்டுக்களில் எழுதப்பட்ட நூல்கள் சாடிகளில் அடுக்கி ஒழுங்குபடுத்தித் தட்டுக்களில் நிரையாக வைக்கப் பட்டன. போர்சிப்பா நூல் நிலையத்திலிருந்து நூல்கள் படியெடுத்து அசுர் பானிப்பாலின் நூல் நிலையத்தில் வைக்கப்பட்டன. அசீரியாவில் காணப் பட்ட 30,000 களிமண் ஏடுகளின் மூலம் பாபிலோனியரின் வாழ்க்கையைப் பற்றிய செய்திகள் அறியப்பட்டன. நீண்ட காலம் பாபிலோனிய எழுத்துகள் வாசிக்கப்படாமல் இருந்தன. ஹென்றி இரவிலின்சன் என்னும் ஆங்கிலர் பன்னிரண்டு ஆண்டுகளாக முயன்று 1847இல் அவ் வெழுத்துகளை வாசித்தார். பாபிலோனிய எழுத்துகள் சுமேரிய அக்கேடிய எழுத்துகளின் செமித்திய முறையான வளர்ச்சியால் தோன்றியவை. தொடக்கத்தில் நூல்கள் சுமேரிய மொழியில் எழுதப்பட்டன. காலத்தில் அம் மொழி மாறுதலடைந்தது. பழைய புனித மொழியாகிய சுமேரியத்திலிருந்து நூல்களைப் பாபிலோனிய மொழிப்படுத்துவதற்கு அகராதிகளும் இலக்கணங்களும் செய்யப்பட்டிருந்தன. நினேவா நூல் நிலையத்தில் கண்டு பிடிக்கப்பட்ட களிமண் ஏடுகள் பெரும்பாலும் சுமேரிய, பாபிலோனிய அசீரிய மொழி அகராதிகளாகக் காணப்படுகின்றன. அவ் வகராதிகள் அக்காட் அரசனாகிய சார்கன் காலத்தில் செய்யப்பட்டவை. சுமேரியத்திலும் பாபிலோனியத்திலும் எழுத்துகள் சொல்லின் பகுதி களாக இருந்தன. பாபிலோனியத்துக்குச் சொந்தமான எழுத்துக்கள் இல்லை; சொல்லின் பகுதிகளை உணர்த்த 300 அடையாளங்கள் வரையில் இருந்தன. இவ்வடையாளங்கள் மூலம் கணக்கு, சமயம், வாணிகம் போன்ற பாடங்கள் கோயிற் குருமாரால் மாணவருக்குப் பயிற்றப்பட்டன. அழிபாடு ஒன்றில் பள்ளிக்கூட மாணவர் பார்த்து எழுதிய நீதிவாக்கியங்கள் காணப்பட்டுள்ளன. பாபிலோனிய எழுத்துகள் வாணிகத்தின் பொருட்டுப் பயன்படுத்தப்பட்டன. விலங்குகளைப் பற்றிய கற்பனைக் கதைகள், பாடல்கள், சமயக் கிரியைகள், விளக்கங்கள் போன்றவை எழுதப்பட்ட ஏடுகள் பல கிடைத்துள்ளன. அரசாங்க வரலாறுகள், அரசரின் சமயப்பற்று, அவர்களின் வெற்றிகள் போன்றவைகளைக் கூறுகின்றன. பெரோசஸ் (கி.மு.280) என்னும் பாபிலோனிய வரலாற்றாசிரியர் படைப்புக் காலம் முதல் மனிதனுடைய வரலாற்றைக் கூறியுள்ளார். பாபிலோனின் முதல் அரசன் கடவுளால் தெரியப் பட்டான். அவன் பெரிய வெள்ளப்பெருக்கு வரையில் 36,000 ஆண்டுகள் ஆண்டானென்றும் உலகம் தொடங்கி 691,200 ஆண்டுகளாகின்றன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஒழுக்கம் கோயில்களில் தேவதாசிகள் இருந்தனர். மணங்கள் பெற்றோரால் ஒழுங்கு செய்யப்பட்டன. மணமகன் பெண்ணின் தந்தைக்கு வெகுமதி அளித் தான். பெண்ணின் தந்தை பெண்ணுக்கு அவ் வெகுமதியிலும் பார்க்க அதிக பெறுமதியுள்ள சீதனம் கொடுத்தான். பாபிலோனியன் ஒருவன் ஒரு பெண்ணையே மணந்தான். வியபிசாரக் குற்றத்தோடு சம்பந்தப்பட்ட இரு பாலாரும் ஆற்றில் எறியப்பட்டார்கள். ஒருவன் பெண்ணின் சீதனப் பணத்தைத் திருப்பிக் கொடுத்துத் திருமண நீக்கம் செய்துகொள்ளலாம். கணவன் கொடுமையாக நடத்துகின்றான், விசுவாச மில்லாதிருக்கின்றான் எனப் பெண் அத்தாட்சிப் படுத்தினால் அவள் கணவனைக் திருமண நீக்கம் செய்து கொள்ளலாம். பெண்கள் ஆடவரைப்போல வெளியே சென்றார்கள். பெண்களிடம் சொத்து இருந்தது. அவர்கள் அதனைத் தாம் விரும்பியவாறு செய்ய உரிமை பெற்றிருந்தார்கள். பெண்கள் சிலர் வாணிகம் புரிந்தனர்; சிலர் எழுத்தாளராக இருந்தனர். உயர் குடும்பங்களில் பெண்கள் வீட்டில் தனியிடங்களில் வாழ்ந்தனர். அவர்கள் வெளியே சென்றபோது அண்ணகரும் வேலையாள்களும் உடன் சென்றனர். தாழ்ந்த வகுப்பினர் அடிமைகள் போல் வாழ்ந்தனர். எகிப்தியர், பாபிலோனிய மக்களை அதிக நாகரிகம் அடையாதவர்கள் எனக் கருதினர். கலைகள் பாபிலோனியரின் வாணிகம், பொழுதுபோக்கு, கடவுள் பத்தி முதலிய வைகளை வெளியிடும் சின்னங்கள் காணப்படுகின்றன. மினுக்கஞ் செய்யப் பட்ட செங்கற்கள், வெண்கலம், இரும்பு, வெள்ளி முதலிய உலோகங்களால் செய்யப்பட்ட பொருள்கள், நுட்பமான தையல் வேலைகள், மிருதுவான துணிகள், அழகிய சாயம் ஊட்டிய உடைகள், கம்பளங்கள், மேஜைகள், படுக்கைகள், நாற்காலி போன்றவை பாபிலோனியரின் நாகரிகத்தை விளக்கு கின்றன. பலவகை அணிகலன்கள் காணப்படுகின்றன. தெய்வ உருவங்கள் பொன்னாற் செய்யப்பட்டன. இசைக் கருவிகள் பல பயன்படுத்தப்பட்டன. குழல், யாழ், வீணை, மேளம், கொம்பு, நாணற்குழல், எக்காளம், கைத்தாளம், மத்தளம் என்பன அவைகளுட் சில. கோயில்களிலும், அரண்மனைகளிலும், செல்வரின் விருந்துகளிலும் பாடகர் தனித்தும், பலர் ஒன்று கூடியும் பாடினார்கள். பாபிலோனில் ஓவியம் எழுதுதல் தனிக் கலையாக வளரவில்லை. சுவர்களில் ஓவியங்கள் எழுதப்பட்டுள்ளன. அவை எகிப்திய சமாதிச் சுவர் களிற் காணப்படுகின்றவைபோல நிறங்களால் எழுதப்படவில்லை. சிற்பக் கலையும் நன்றாக வளர்ச்சியடையவில்லை. உருவங்களின் முக இரேகைகள் பெரும்பாலும் ஒரே வகையாகக் காணப்படுகின்றன. போரிற் பிடிக்கப் பட்டவர்களைக் காட்டும் சிற்பங்களின் முகங்கள் ஒரே வகையாகக் காணப் படுகின்றன. பாபிலோனியக் கட்டடங்கள் தரைக்கு மேலே சில அடிகளே உயர்ந் திருக்கின்றன. கோயில்களையோ அரண்மனைகளையோ காட்டும் ஓவியங் களும் சிற்பங்களும் கிடைக்கவில்லை. வீடுகள் களிமண்ணால் கட்டப் பட்டன. செல்வர் செங்கல்லைப் பயன்படுத்தினர். வீடுகளுக்குச் சன்னல்கள் இருக்கவில்லை. வீடுகளின் கதவுகள் வீதியை நோக்கி இருக்கவில்லை. உள் முற்றத்தை நோக்கியிருந்தன. மூன்று அல்லது நான்கு மாடிகளுடைய வீடுகளும் இருந்தன. கோயில் வீடுகளைப்போலவே சதுரமாக விருந்தது. கோயிலின் மேலே ஏறிச் செல்வதற்கு சங்குப் புரிபோல் படிக்கட்டுகள் அமைக்கப்பட்ட வழி வெளியே இருந்தது. இது இக் கடவுளின் உயரமான வீடாகும். வான ஆராய்ச்சித் தொடர்பாகவும் இது பயன்படுத்தப்பட்டது. அதன் உச்சியிலிருந்து குருமார் விண்மீன்களை நோக்கினார்கள். போர்சிப்பா விலிருந்த இவ்வகைக் கோபுரம் ஏழு மண்டலங்களின் இருப்பிடம் எனக் கொள்ளப்பட்டது. ஒவ்வொரு மாடியும் ஒவ்வொரு கிரகத்துக்கு உரியது. ஒவ்வொரு மாடியும் வெவ்வேறு நிறம் தீட்டப்பட்டிருந்தது. கீழே உள்ள மாடி சனிக்கு உரியது. இது கறுப்பு நிறம் பூசப்பட்டிருந்தது. அதற்கு மேலுள்ளது வெள்ளிக்குரியது. அது வெள்ளையா யிருந்தது. மூன்றாவது மாடி வியாழனுக் குரியது. இம் மாடி கருஞ்சிவப்பு நிறம் ஊட்டப்பட்டது. புதனுக்குரிய நாலாவது மாடி நீல நிறமுடையது. ஐந்தாவது பச்சை கலந்த சிவப்பு நிறமுடையது. இது செவ்வாய்க்குரியது. ஆறாவது மாடி வெள்ளி நிறம் பூசப்பட்டிருந்தது. இது திங்களுக்குரியது. ஏழாவது மாடி பொன்னிறமானது. இது ஞாயிற்றுக்குரியது. இவ்வாறு ஒவ்வொரு மாடியும் வாரத்தின் ஒவ்வோர் நாளைக் குறிப்பதா யிருந்தது. செங்கற்கள் சிலவற்றின் வெளிப்புறங்கள் மினுக்கஞ்செய்து நிறங்கள் பூசப்பட்டிருந்தன. அவைகளில் விலங்குகள், பறவைகள், மரஞ்செடிகளின் வடிவங்கள் எழுதப்பட்டிருந்தன. வெளிப்பக்கம் அழுத்தஞ் செய்யப்பட்டது அழகுக்காக மாத்திரமன்று, வெய்யில் மழைகளால் அவை பழுதடையாமல் இருப்பதற்குமாகும். விஞ்ஞானம் வாணிகத்தால் கணக்கு வளர்ச்சி யடைந்தது. கணக்கு சமயத்தோடும், வான ஆராய்ச்சியோடும் தொடர்பு பெற்றிருந்தது. நீதிபதிகள், அரசாங்க நிர்வாகிகள், பயிர்த்தொழிலுக்குத் தலைவர், வருங்காலம் சொல்வோர், வான ஆராய்ச்சியாளர் எல்லோரும் குருமாராகவே யிருந்தனர். அவர்களே விஞ்ஞானம் தோன்றுவதற்குக் காரணராயிருந்தார்கள். அவர்கள் அறிந்திருந்த விஞ்ஞான முறைகளைக் கிரேக்கர் சமயத் தொடர்பாகக் கையாண்டனர். பாபிலோனியக் கணிதம் வட்டத்தை 360 பாகைகளாகவும், ஆண்டை 360 நாட்களாகவும் பிரித்தது. இதிலிருந்தே அறுபதாகக் கணக்கிடும் வழக்கு உண்டாயிற்று. அறுபதாகக் கணக்கிடுவதிலிருந்து பன்னிரண்டாகக் கணக்கிடும் வழக்குப் பிற்காலத்தில் தெரிந்தது. நில அளவைப்பற்றிய கணக்கும் பாபிலோனில் வளர்ச்சியடைந்திருந்தது. வான ஆராய்ச்சியில் பாபிலோனியர் புகழ்பெற்று விளங்கினார்கள். பாபிலோனியர் வனாந்தரத்துக் கூடாகச் செல்லும் வணிகர் கூட்டத்துக்கும் கடல் வழியாகச் செல்லும் கப்பல் களுக்கும் வழிகாட்டுவதற்கு வான ஆராய்ச்சி செய்யவில்லை; மக்களுக்கு நேரும் வாய்ப்பு, வாய்ப்பின்மைகளை அறிவதற்கு ஆராய்ந்தார்கள். ஒவ்வொரு கிரகமும் ஒவ்வொரு தெய்வமாகவும், ஒவ்வொரு கிரகத்தின் செலவும் வருங்காரியத்தை அறிவிப்பதாகவும் கொள்ளப்பட்டன. சோதிட மறிந்த குருமார் அரசரிடமும், பொது மக்களிடமு மிருந்து அதிக ஊதியம் பெற்றனர்; சார்கன் காலத்தில் சோதிட நூல்கள் எழுதப் பட்டன என்று பழைய வரலாறு கூறுகின்றது. நிறைந்த சோதிடப் பழக்கமின்றி ஊதியத்திற்காகச் சோதிடம் கூறுகின்றவர்களைப் பற்றிக் குருமார் குறை கூறினார்கள். நெபுசட்னேசர் காலத்தில் கிரகங்களுக்கும் நட்சத்திரங்களுக்கு முள்ள வேறு பாடு அறியப்பட்டிருந்தது. பூமி சூரியனைச் சுற்றிவரும் பாதை பன்னிரண்டு வீடுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. பாகை ‘மினிட்’களாகவும், ‘மினிட்’ நொடி களாகவும் பிரிக்கப்பட்டிருந்தன. அறுபது மினிட் ஒரு பாகை எனவும் 60 நொடி அல்லது ‘செகண்ட்’ ஒரு மினிட் எனவும் கணக்குச் செய்யப்பட்டன. நேரம் நாழிகை வட்டம் (Water-Clock) சூரிய நிழல் வட்டம் (Sun-dial) ஆகிய இவைகளால் அளக்கப்பட்டது. ஆண்டு பன்னிரண்டு சந்திர மாதங்களாகப் பிரிக்கப்பட்டது. முதல் ஆறு மாதங்கள் முப்பது நாளும், பின் ஆறு மாதங்கள் 29 நாட்களும் கொண்டவை. ஆகவே ஆண்டில் 354 நாள்கள் இருந்தன. இடை இடையே ஒரு மாதம் சேர்த்துக் கணக்குச் செய்யப்பட்டது. மாதத்தில் நான்கு வாரங்கள் உண்டு. சந்திரன் எழும் நேரத்திலிருந்து நாள் கணக்குச் செய்யப்பட்டது. மருந்தும், சோதிடமும் சமயத் தொடர்பு பெற்றிருந்தன. ஹமுரபி அரசன் காலத்தில் மருத்துவம் சமயத்தினின்றும் பிரிக்கப்பட்டது. அக் காலத்தில் மருத்துவர் பலர் இருந்தனர். அவர்களுக்குக் கொடுக்கவேண்டிய கூலியும், தமது கடமையைச் சரிவரச் செய்யாவிட்டால் அவர்கள் அடைய வேண்டிய தண்டனை களும் சட்டங்களில் காணப்படுகின்றன. மருத்துவன் ஒருவனை வீட்டுக்கு அழைக்குமொருவன் அவனுக்குக் கொடுக்க வேண்டிய கூலியை அறிந்திருந்தான். நோயாளி வறியவனானால் கூலி குறைக்கப்பட்டது. மருத்துவன் முறையாக மருத்துவம் செய்யாவிட்டால் அவன் நோயாளிக்கு நட்ட ஈடு செய்ய வேண்டியிருந்தது. சில சமயங்களில் மருத்துவனின் கைவிரல்கள் வெட்டப்பட்டன. மருத்துவரிலும் பார்க்க மந்திர வித்தைக்காரருக்கு அதிக மதிப்பு உண்டாயிருந்தது. நோய் பாவத்தினால் உண்டாவது என்று கருதப்பட்டது. ஆகவே அது துதி, மந்திர வித்தைகளால் போக்கப்பட்டது. மருந்துகள் உடலைச் சுத்தஞ் செய்வன என்று கருதப் படவில்லை. உள்ளே இருக்கும் பூதத்தைப் பயமுறுத்துகின்றது எனக் கருதப் பட்டது. மிக அருவருக்கத்தக்க பொருள்கள் சேர்த்து அரைத்த மருந்துகள் ஒளடதமாகப் பயன்படுத்தப்பட்டன. சாதாரண மருந்துச் சரக்குகள் பச்சை இறைச்சி, பாம்பின் இறைச்சி, மரத்தூள் முதலியன. இவை சாராயமும் எண்ணெயும் ஊற்றி அரைக்கப்பட்டன. அழுகிய உணவு, எலும்புத்தூள், கொழுப்பு, அழுக்கு முதலியனவும் விலங்குகளின் அல்லது மனிதனின் மல மூத்திரங்களும் சேர்த்து அரைக்கப்பட்ட கூட்டுகள் மருந்தாகப் பயன்படுத் தப்பட்டன. பூதத்தைத் திருப்திப்படுத்தும் பொருட்டுப் பால், தேன், வெண்ணெய், நறுமணமுள்ள மூலிகைகள் உட்கொள்ளும்படி கொடுக்கப் பட்டன. மருந்துகளால் நோய் குணமடையாவிடின் நோயாளி சந்தைக்குக் கொண்டு போகப்பட்டான். அங்கு அவ்வகை நோய் அடைந்து குணப் பட்டவர்கள் தாமறிந்த மருந்துகளை அவனுக்குக் கூறினார்கள். பாபிலோனின் விழுகை பாபிலோனின் கடைசி அரசன் நெபுசட்னேசர். இவன் 54 கோயில் களைக் கட்டினான். இவன் தனது வாழ்நாளின் இறுதி நான்கு ஆண்டுகளில் பைத்தியம் கொண்டிருந்தான். கி.மு. 562இல் இவன் மரணமடைந்தான். இவன் மரண மடைந்த முப்பது ஆண்டுகளுள் பாபிலோன் இராச்சியம் துண்டு துண்டாகச் சிதறுண்டது. இவனுக்குப் பின் ஆட்சி நடத்திய போனிடஸ் என்பவன் இராச்சியத்தில் கருத்துச் செலுத்தாது சுமேரியாவிலுள்ள அழிபாடு களை வெட்டி ஆராய்ச்சி செய்வதில் காலத்தைப் போக்கினான். இராணுவத் தில் குழப்ப முண்டாயிற்று. வாணிகத்திலும் களியாட்டங்களிலும் பழகிய மக்கள் போரை மறந்தார்கள். குருமார் அரசாங்க அதிகாரத்தைக் கைப்பற்றித் தமது பைகளை நிரப்பினர். இப்பொழுது சைரஸ் என்னும் பாரசீக அரசன் பாபிலோனை வெற்றிகொண்டான். இரண்டு தலைமுறைகளாகப் பாபிலோன் பாரசீகர் ஆட்சிக்குட்பட்டிருந்தது. பின்பு அலக்சாந்தர் வெற்றியாளனாகிப் பாபிலோனை ஆண்டான். பாபிலோனியரிடமிருந்தே கிரேக்கர்கள், கணக்கு, வானசாத்திரம், மருந்து, இலக்கணம்,நிகண்டு, சரித்திரம், தத்துவ சாத்திரம் முதலியவைகளைப் பெற்றனர். உரோமர் கிரேக்கரிடமிருந்து இவைகளைப் பெற்றனர். கிரேக்க மொழியில் உலோகங்கள், இராசிகள், நிறைகள், அளவை கள், இசைக்கருவிகள், மருந்துச் சரக்குகளைக் குறிக்க வழங்கும் பெயர்கள் பெரும்பாலும் பாபிலோனிய மொழிக்குரியனவே. கிரேக்கக் கட்டக்கலை எகிப்திய, கிரீத்திய, பாபிலோனியக் கட்டடக் கலைகளைப் பின்பற்றி எழுந்தது. சுற்றி வரப் படிக்கட்டுக்களுடைய பாபிலோனிய கோபுரங்களைப் பின்பற்றி முகமதிய கோயிற் கட்டடங்கள் அமைக்கப் பட்டன. ஹமிரபியின் சட்டங்களிலிருந்து உரோமரின் நியாயச் சட்டங்கள் உதித்தன. சிந்துவெளி சிந்து என்பது இந்தியாவின் வடமேற்கிலுள்ள ஓர் ஆறு. இவ்வாற்றின் பெயரையே நாவலந்தீவு என்று பெயர் பெற்றிருந்த எமது நாட்டுக்கு மேற்குத் தேச மக்கள் பெயராக வழங்கினர். சிந்து என்பது இந்து எனத் திரிந்து வழங்குகின்றது. சிந்து ஆற்றின் சமவெளிகளில் அழிபாடுகள் 1 பல காணப்படுகின்றன. அவைகளுள் அரப்பா, மொகஞ்சதரோ என்னும் இரு இடங்களிலுள்ள அழிபாடுகள் பழம்பொருள் ஆராய்ச்சியாளரால் அகழப் பட்டன. இவை அழிந்து மண்மேடாக மாறிய இரண்டு பெரிய நகரங்களாகக் காணப்பட்டன. அங்கு வாழ்ந்த பழைய மக்களின் வரலாறுகளை அறிந்து கொள்வதற்கேற்ற பல பழம் பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சிந்துவெளிப் புதைபொருள் ஆராய்ச்சிக்கு முன்பு ஐரோப்பிய அமெரிக்க ஆராய்ச்சியாளர், யூபிராதஸ் தைகிரஸ் ஆறுகளும் நீல நதியும் நீர் பாய்ச்சுகின்ற மெசபதோமியா, அசீரியா, எகிப்து முதலிய நாடுகளே நாகரிகத்தின் தொட்டில் எனக் கருதி வந்தார்கள். அந் நாகரிகங்களின் பழமையை ஒப்பிடும்போது இந்திய நாகரிகம் பச்சிளங்குழவி எனக் கருதப்பட்டது. ஆகவே, இந்திய வரலாற்றை அலக்சாந்தரின் படை எடுப்பு அல்லது மௌரிய அரச பரம்பரை ஆரம்பத்திலிருந்து தொடங்குவது வழக்கமாயிருந்து வந்தது. சிந்துவெளியிலே அரப்பா, மொகஞ்சதரோ என்னுமிடங்களிற் கண்டுபிடிக்கப்பட்ட பழம் பொருள் கள், இந்திய நாகரிகத்தின் பழமையை மேற்கு ஆசியா, எகிப்து முதலிய நாடுகளின் தொன்மையோடு ஒத்ததாக மாற்றியுள்ளன. சிந்து வெளிப் புதைபொருள் ஆராய்ச்சி யிற் கிடைத்த பழம் பொருள்கள் பல சுமேரியாவிற் கிடைத்த பழம் பொருள்களை ஒத்தவை. ஆகவே சிந்து நாகரிகம் என்பது இந்து-சுமேரிய நாகரிகம் எனக் கொள்ளப்படுவதாயிற்று. மேலும் கிடைத்த பழம்பொருள்கள் சிந்து நாகரிகம் இந்தியாவில் தோன்றி வளர்ந்த பழைய நாகரிகம் என்பதைக் காட்டின. சிந்து வெளி நாகரிகத்தின் காலம் கி.மு. 3,500 வரையில் என்று கருதப்படுகிறது. அரப்பா என்னும் பழைய அழிபாடு பஞ்சாப் மாகாணத்தில் இரவி ஆற்றுக்கு அண்மையிலுள்ளது. இரவி ஆறு சிந்து நதியின் ஒரு கிளை. அரப்பா, மொகஞ்சதரோவுக்கு வடக்கே நானூறு மைல் தூரத்திலுள்ளது. அரப்பா அழிபாடு 1920க்கும் 1921க்கு மிடையில் முதன்முதல் அகழ்ந்து பார்க்கப்பட்டது. மொகஞ்சதரோ இலார்கானாவுக்கு வடக்கே இருபத்தைந்து மைல் தூரத்தில் உள்ளது. மொகஞ்சதரோ என்பதற்கு இறந்தவர்களின் மேடு என்று பொருள். இவ்அழிபாடு 240 ஏக்கர் நிலப் பரப்பைக் கொண்டிருக்கிறது. இதில் தோண்டி ஆராயப்பட்ட பகுதி 13 ஏக்கர்களே. சிந்து ஆறு மொகஞ்சதரோ வுக்குக் கிழக்கே மூன்றரை மைல் தூரம் தள்ளி ஓடுகின்றது. முற்காலத்தில் அது மொகஞ்சதரோவின் பக்கத்தில் சென்றிருக்கலாம். இந் நகர் முன்பு ஆற்று மட்டத்திற் கட்டப்பட்டிருந்தது. சிந்து ஆறு காலந்தோறும் உயர்ந்து வந்தமையால் மக்கள் நகரத்தை உயர்த்திப் புதிய கட்டடங்களை அமைத் தார்கள். இவ்வாறு ஒன்றின்மேல் ஒன்றாகக் கட்டப்பட்ட ஏழு நகரங்கள் மொகஞ்சதரோவிற் காணப்படுகின்றன. ஏழாவது படை கற்கால இறுதியிலும் உலோக கால ஆரம்பத்திலும் அமைக்கப்பட்ட கட்டடங்களை உடையது. வீதிகள்: மொகஞ்சதரோவில் அகன்ற பெரிய வீதிகள் வடக்கிலிருந்து தெற்கே செல்கின்றன. அவை ஒன்றுக்கொன்று சம தூரத்திலுள்ளன. பெரிய வீதிகளிலிருந்து சிறிய வீதிகள் கிளைவிட்டுச் செல்கின்றன. கிளை வீதிகள் இவ்வாறு செல்வதால் நகர் பல பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றது. ஒவ்வொரு பிரிவிலும் ஒடுங்கிய வீதிகள் பல செல்கின்றன. அவைகளின் ஓரங்களில் வீடுகள் நெருங்கியுள்ளன. ஒவ்வொரு சிறிய வீதியிலும் பொதுக்கிணறு உண்டு. பெரும்பாலும் ஒவ்வொரு வீட்டுக்கும் கிணறு காணப்படுகின்றது. வீடுகள்: வீடுகள் பல பெருமையுடையனவாகக் காணப்படுகின்றன. இரண்டு அறைகளுக்குக் குறைவாயுள்ள வீடுகள் காணப்படவில்லை. சில வீடுகள் அரண்மனைகள்போல் பெரியன. வீடுகள் விசாலமாகவும் கற்கள் பதிக்கப்பட்ட குளிக்கும் அறையுடையனவாகவும் காணப்படுகின்றன. பாபிலோனிலும் மொகஞ்சதரோவிலும் நடுவில் முற்றமும் முற்றத்தைச் சுற்றி நாற்புறமும் அறைகளுமாக வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன. முற்றத்துக்குச் செங்கற்கள் பதிக்கப்பட்டன. மேன்மாடி புழங்கவும், நித்திரை கொள்ளவும், குளிக்கவும், கீழ்மாடி சமைக்கவும், பண்டங்களைச் சேமித்து வைக்கவும் பயன்படுத்தப்பட்டன. வீதியிலிருந்து வீட்டுக்குச் செல்ல ஒரு வாயில் மாத்திரம் இருந்தது. சுவருக்கு வெளியே யாதும் இருக்கவில்லை. கிணறுகள்: கிணறுகளின் அகலம் பலவாறு இருந்தது. சில கிணறு களின் குறுக்களவு ஏழு அடி இரண்டு அங்குலம். மிகச் சிறிய கிணற்றின் குறுக்களவு ஓர் அடி ஓர் அங்குலம். சாதாரண கிணற்றின் குறுக்களவு இரண்டு அடி இரண்டு அங்குலம். பெரிய நீராடும் கேணியின் பக்கத்தே காணப்படும் கிணற்றின் குறுக்களவு ஆறு அடி இரண்டு அங்குலம். பெரும் பாலும் ஒவ்வொரு வீட்டுக்கும் ஒவ்வொரு கிணறு இருந்தது. பொதுக் கிணறுகள் இரண்டு வீடுகளின் மத்தியில் இருந்தன. கிணற்றைச் சுற்றிச் செங்கற்கள் பதிக்கப் பட்டிருந்தன. செங்கற்களை ஒன்றோடொன்று சேர்த்துப் பிடிக்கச் செய்வதற்குக் களிமண் பயன்படுத்தப்பட்டது. கிணற்றுக் கட்டு ஓரங்களில் கயிறு உராய்ந்த அடையாளம் காணப்படுவதால், ஏனங் களைக் கயிற்றில் கட்டிக் கையினால் இழுத்துத் தண்ணீர் எடுக்கப் பட்டதெனத் தெரிகின்றது. குளிக்கும் அறை: ஒவ்வொரு வீட்டுக்கும் தனியாகக் குளிக்கும் அறைகள் இருந்தன. அவைகளைச் சுற்றிப் பதிக்கப்பட்டிருந்த செங்கற்கள் மீது தண்ணீர் சுவறிச் செல்லமுடியாமல் மேலே ஒருவகைக் கறுப்புப் பொருள் பூசப் பட்டிருந்தது. குளிக்குமறை வீட்டின் வாயிற் பக்கமாக விருந்தது. அதனைச் சுற்றிச் செங்கற் பதிக்கப்பட்ட தரை ஒரு மூலையை நோக்கிச் சரிவாக இருந்தது. மேல் வீட்டில் குளிக்கும் அறை இருந்ததென்பதை மேலே யிருந்து கீழே செங்குத்தாகச் செல்லும் குழாய்களைக் கொண்டு அறியப்பட்டது. தரை: வீட்டின் தரை செங்கற் பதிக்கப்பட்டிருந்தது; அல்லது மண் இட்டு அடித்து மட்டஞ் செய்யப்பட்டிருந்தது. மண் இட்டு அடித்துத் தரையை மட்டஞ் செய்வது பொது நிகழ்ச்சி. சில வீடுகளுக்குச் சூளையிடாத களிமண் கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. கதவுகள்: கதவுகள் மரத்தினால் செய்யப்பட்டவை. சுவர் முடிவு எய்து மிடத்துக் கதவு வைக்கப்பட்டிருந்தது; அது சுவரின் மத்தியில் வைக்கப்பட வில்லை. கதவு நிலையின் அகலம் மூன்று அடி மூன்று அங்குலம் முதல் மூன்று அடி பத்து அங்குலம் வரையில் இருந்தது. சன்னல்கள்: சாதாரண வீடுகளுக்குப் பெரும்பாலும் வெளிச்சுவர் களில் சன்னல்கள் இருக்கவில்லை. சன்னல்கள் சுவரில் விடப்பட்ட வெளிகள்போல இருந்தன. பெரிய நீராடும் கேணியைச் சுற்றி அமைக்கப் பட்ட சுவரில் சன்னல்கள் பதிக்கப்பட்டுள்ளன. படிக்கட்டுகள்: பெரும்பாலும் எல்லா வீடுகளுக்கும் மேலே ஏறிச் செல்லும் படிக்கட்டுகள் உண்டு. அவை சுவரின் எதிரே அல்லது இரண்டு வீடுகளுக்கு இடையே உள்ள இடைவெளியில் செங்குத்தாக அமைக்கப் பட்டுள்ளன. படிக்கட்டுகள் கூரைக்கு மாத்திரமன்று; மேல்மாடிக்கும் செல் கின்றன. வீதியிலிருந்து மேல் மாடிக்குச் செல்லும் படிக்கட்டுகளும் காணப் படுகின்றன. அவ்வகைப் படிக்கட்டுகள் உள்ள வீடுகளில் வெவ்வேறு குடும்பத்தினர் வாழ்ந்தார்கள் ஆகலாம். படிக்கட்டுகள் ஒடுங்கியவையாக வும், படி ஒவ்வொன்றும் பதினொரு அங்குல உயரமும் ஆறு முதல் எட்டு அங்குல அகலமு முடையதாக உள்ளது. கூரை: கூரைகள் தட்டையானவை. அவை மரத்தினால் அமைக்கப் பட்டவை. சில வீடுகளின் சுவர்களில் மரங்கள் இடப்பட்ட துவாரங்கள் காணப்படுகின்றன. மரங்கள்மீது பலகைகள் இடப்பட்டன. வறிய மக்கள் மரங்கள் மீது நாணற்பாயை விரித்து அதன்மேல் மரத்தூளும் உமியும் கலந்து குழைத்த களிமண்ணை இட்டு மெழுகி மட்டஞ் செய்தார்கள். சுவர்கள்: வீட்டுச் சுவர் செங்கற்களால் கட்டப்பட்டுள்ளன. அகலமான சுவர்களின் வெளிப்புறத்துக்கும் உட்புறத்துக்கும் இடையே களிமண் இட்டு நிரப்பப்பட்டது. வெளிச்சுவர்கள் உள்ளே சரிந்து செல்லும்படி அமைக்கப் பட்டன. கதவில்லாத அறைகள், மலக்கூடங்கள்: கதவில்லாத சில அறைகள் காணப்படுகின்றன. இவை நிலத்துக்குக் கீழ் உள்ள அறைகளாக அல்லது மலக் கூடங்களாக இருக்கலாம். இரண்டு மலக் கூடங்களைத் தவிர வேறு மலக் கூடங்கள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. கழிவு நீர் செல்லும் கால்வாய்: சிந்துவெளி நகரங்களில் கழிவுநீர் வெளியே செல்வதற்குக் கற்பதித்த வாய்க்கால்கள் அமைக்கப்பட்டிருந்தன. மறுநாடுகளில் விளங்கிய அக் கால நகரங்களில் இவை காணப்படவில்லை. எல்லா வீடுகளுக்கும் வீதிப் பக்கமுள்ள சுவரில் ஒன்று அல்லது இரண்டு துவாரங்கள் விடப்பட்டிருந்தன. இவை வழியாக அழுக்கு நீர் வெளியே யுள்ள கால்வாயிற் சென்று விழுந்தது. அழுக்கு நீர் விழுமிடத்தில் பாரமான பொருள்கள் தங்கி நிற்கும்படி கற்பதித்த குழிகள் அமைக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு வீதியிலும் 18 அங்குலம் முதல் 2 அங்குலம் வரை ஆழமுள்ள கால்வாய்கள் இருந்தன. இவற்றின் மேலே செங்கற்கள் இட்டு இவை மூடப்பட்டுள்ளன. இச் செங்கற்கள் வேண்டியபோது எடுக்கக்கூடியன. சிறிய கால்வாய்களில் செல்லும் கழிவு நீர் பெரிய வாய்க்காலிற் சென்று விழுந்தது. இவ் வாய்க்கால்களும் அழுக்குத் தங்கி நிற்கும் குழிகளும் இடை யிடை சுத்தஞ் செய்யப்பட்டன. வாய்க்கால்கள் சுத்தஞ் செய்யப்பட்ட இடத்தில் மணல் காணப்படுகின்றது. மொகஞ்சதரோக் கட்டடங்களில் காணப்படும் தூண்கள் சதுரமானவை. சிந்துவெளி நகரங்களின் கட்டட அமைப்புப் பாபிலோனிய அல்லது எகிப்திய கட்டட அமைப்பைவிட அதிகம் வளர்ச்சி யடைந்திருந்தது என டாக்டர் பிராங்போர்ட் குறிப்பிட்டுள்ளார். பெரிய தானியக் களஞ்சியமும் கட்டடங்களும்: அரப்பாவில் 169 அடி நீளமும், 135 அடி அகலமுமுள்ள தானியக் களஞ்சியமொன்று காணப் படுகின்றது. இரண்டு வரிசைகளில் தனித்தனி ஒவ்வொன்றிலும் ஏழு வீடுகள் அடங்கிய பதினான்கு கட்டடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவ் விரண்டு நிரைகளையும் ஒரு பாதை பிரிக்கின்றது. இப் பாதையை ஆறு பாதைகள் குறுக்கே பிரிக்கின்றன. இதனால் ஒவ்வொரு கட்டடத்தையும் சுற்றி வெளி இருக்கின்றது. ஒவ்வொரு வீட்டுக் கும் ஒரு முற்றமும் இரண்டு அறை களும் உண்டு. சிறிய அறை வாயிற் பக்கத்திலும் பெரிய அறை முற்றத்துக்குப் பின்னாலும் உள்ளன. சில இடங்களில் விளக்குத் தூண்கள் காணப்படுகின்றன. இதனால் வீதிகளுக்கு வெளிச்சம் இடப் பட்டதெனத் தெரிகின்றது. வீதிகளுக்கு அப்புறத்தில் காணப்படும் அழுக்குக் குவியல்களால் நகர் நன்கு சுத்தஞ் செய்யப்பட்டதெனத் தெரிகின்றது. சில இடங்களில் அழுக்குக்குப் பதில் சட்டி பானை உடைவுகளும் அழுகிய இலை தழைகளும் காணப்படுகின்றன. சிற்பம்: உருவங்கள் மிருதுவான கற்களில் வெட்டப்பட்டுள்ளன. கண்டு பிடிக்கப்பட்ட மனித உருவங்களில் ஒன்று, அலங்கரிக்கப்பட்ட போர்வையை இடது தோளுக்கு மேலால் வந்து வலது புயத்துக்குக் கீழே செல்லும்படி அணிந்திருக்கின்றது. அதற்குக் குறுகிய தாடியும் கன்ன மீசை யும் காணப்படுகின்றன. தலை மயிர் நடுவே வகிர்ந்து விடப்பட்டுள்ளது. தலையைச் சுற்றி நாடா ஒன்று கட்டப்பட்டுள்ளது. சிந்துவெளியிற் கண்டு பிடிக்கப்பட்டவைகளுள் முத்திரைகள், உடம்பில் அணியும் பொருள்கள் போன்றவை முதன்மையுடையன. சிறிய உருவங்களின் கால்களும் கைகளும் உடைந்துள்ளன. மக்கள் வடிவங்களிற் பல பெண் உருவங்களாகும். அரையில் கட்டப்பட்ட ஒடுக்கமான துணியில்லாவிடில் அவை நிர்வாணத் தோற்றம் அளிப்பனவாகும். பெரும்பாலும் எல்லா வடிவங்களும் அணிகலன்கள் அணிந்துள்ளன. அணில், குரங்கு முதலியவை நிறக் கற்களிலும் ஆமை ஓட்டிலும் வெட்டப்பட்டுள்ளன. நிறக்கல்லில் வெட்டப்பட்ட அணில் இரண்டு அங்குல உயரமுள்ளது. அணிலின் வால் நிமிர்ந்து நிற்கின்றது. அது முன்னங் கால்கள் இரண்டினாலும் எதையோ பிடித்திருக்கின்றது. வெண்கலத்தினாற் செய்யப்பட்ட நாட்டியப் பெண்ணின்வடிவம் ஒன்று மிகவும் கவர்ச்சிக்குரியதா யுள்ளது. அவள் கை மூட்டுவரையும் வளையங்களை அணிந்திருக்கிறாள். நீலநிறக் கல்லில் வெட்டப்பட்ட ஒரு மனித வடிவம் அட்டணைக் காலிட்டுக்கொண்டு கட்டிலின் மீது இருக் கின்றது. இரண்டு பக்கங்களிலும் ஒவ்வொருவர் முழங்கால் படிந்து நின்று வணங்குகின்றனர். பின்புறத்தில் ஒரு பாம்பு உள்ளது. இன்று சிந்துவிற் காணப்படும் மக்கள் மொகஞ்சதரோ மக்களைவிட வேறானவர்களல்லர் எனச் சர் ஆர்தர் கீத் கூறியுள்ளார். ஆடவர் இடது தோளுக்கு மேலால் வந்து இடது புயத்துக்குக் கீழே செல்லும்படி போர்வை அணிந்திருந்தார்கள். இவ்வழக்கே நாளடைவில் பூணூல் அணியும் வழக்காக மாறிற்று. இன்று உடுக்கும் ‘வேட்டி’ போன்ற உடையை ஆடவர் அரையில் அணிந்தனர். பஞ்சினாலும் கம்பளியினாலும் உடைகள் செய்யப்பட்டன. ஊசிகள் காணப்படுகின்றன. மக்கள் தைக்கப் பட்ட உடைகளையும் அணிந்தார்கள் ஆகலாம். ஆடவர் தலையில் மயிரை வளரவிட்டுக் குறுக வெட்டியிருந்தார்கள். சிலர் மயிரைப் பின்புறத்தில் குடுமியாக முடிந்து நாடாவினாற் கட்டினார்கள். இன்று மலையாளிப் பெண்கள் முடிவதுபோல் மயிர் உச்சியில் முடியப் பட்டது. சில உருவங்களின் மயிர் பின்புறமாகத் தொங்குகின்றது. ஆடவர் மேலுதடுகளின் மயிரை மழித்தார்கள் அல்லது மயிரை ஒட்ட வெட்டி னார்கள். ஆபரணங்கள்: ஆடவரும் மகளிரும் ஆபரணங்கள் அணிந் தார்கள். கழுத்தணி, தலைக்குக் கட்டும் நாடா, மோதிரம், புயவணி முதலியவை ஆண்க ளாலும் பெண்களாலும் பயன்படுத்தப்பட்டன. காலணி, காது வளையங்கள், தோடு, அலங்கரிக்கப்பட்ட ஊசிகள், மூக்கு வளையம் முதலியவைகளைப் பெண்கள் பயன்படுத்தினர். செல்வர் பொன், வெள்ளி, நிறக்கற்கள், தந்தம், விலையுயர்ந்த கற்கள் முதலியவைகளாற் செய்த ஆபரணங்களைப் பயன்படுத்தினர். ஓடு, எலும்பு, செம்பு, சூளையிட்ட களிமண் முதலியவைகளாற் செய்யப்பட்ட நகைகள் வறிய மக்களால் பயன் படுத்தப்பட்டன. பெண்கள் அரை யில் அணியும் பட்டிகைகள் மணி கோத்த வடங்களால் செய்யப் பட்டன. அவைகளின் முகப்புக் கள் பொன், செம்பு முதலியவை களாலானவை. மணிகளைக் கோத்து மாலைகள் செய்யப் பட்டன. வயிரக் கற்களையும் மணிகளையும் துளையிடுவதற்குப் போதிய திறமை வேண்டும். செம்பில் செய்யப்பட்ட நாட்டியப் பெண் கைமுட்ட வளைகள் அணிந்திருக்கின்றாள். கைவளைகள் பொன், வெள்ளி, செம்பு, வெண்கலம், நிறக் கற்கள், சூளை யிட்ட களிமண் முதலியவைகளாற் செய்யப்பட்டன. அழகிய கைவேலை செய்யப்பட்ட நிறக்கற்களும் தலைமுடிக்குச் செருகும் பலவகை ஊசிகளும் காணப்பட்டன. அவை வெண்கலம், செம்பு, எலும்பு, நிறக்கற்கள், சுண்ணாம்புக்கல் முதலியவைகளாற் செய்யப்பட்டவை. தலைக்குச் செருகும் ஊசியில் மூன்று குரங்குகள் ஒன்றை ஒன்று பிடித்துக் கொண்டிருப்பதாகிய காட்சி காணப்படுகின்றது. மேனி மினுக்குப் பொருள்கள்: சிந்துவெளி அழிபாடுகளில் கிடைத்த மேனி மினுக்குப் பொருள்கள் பல கிஷ், ஊர் முதலிய இடங்களில் கிடைத்தவை போன்றவை. மேனிமினுக்குப் பொருள்கள் வைக்கும் பெட்டிகள் மரத்தினாற் செய்யப்பட்டன. நிறக்கற்களினாற் செய்யப்பட்டன வும் நான்கு அறைகள் உள்ளனவுமாகிய பெட்டி களும் காணப்படுகின்றன. இவ்வகைப் பேழைகள் கிரேத்தாவில் மாத்திரம் காணப்பட்டன. முகம் பார்க்கும் கண்ணாடி வெண்கலத்தினாற் செய்யப்பட்டது. அது நீண்ட வட்ட வடிவுடையது. கண்ணுக்கு மைதீட்டும் குச்சிகள் வெண்கலத்தினாலும் செம்பினாலும் செய்யப்பட்டன. யானைத் தந்தத்தில் செய்யப்பட்ட சீப்புகள் காணப்பட்டன. மயிர் மழிக்கும் கத்திகள் செம்பினாலும் வெண்கலத்தினாலும் செய்யப்பட்டன. வீட்டுப் பொருள்கள்: கல், ஓடு, நிறக்கல், தந்தம், உலோகம் முதலியவைகளால் வீட்டுப்பொருள்கள் செய்யப்பட்டன. கல் ஆயுதங் களுக்குப் பதில் உலோக ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டன. நிறக்கல், வேலைப்பாடுடைய ஏனங்கள் செய்தற்கு மாத்திரம் பயன்படுத்தப்பட்டது. வீட்டு ஏனங்கள் பெரும்பாலும் மண்ணினாற் செய்யப்பட்டன. அடுக்களை யில் பயன்படுத்தும் ஏனங்கள், கிண்ணங்கள், தட்டுக்கள், சாடிகள், பானை சட்டிகள் முதலிய பலவகையின. நீர் அருந்தும் ஏனங்களின் அடிப்பாகம் முனையுடையது. நீர் உண்ணும் ஏனங்கள் பல, கிணற்றைச் சுற்றி உடைந்து கிடப்பதால் அவை ஒரு முறை மாத்திரம் பயன்படுத்தப் பட்டன எனத் தெரிகின்றது. ஊசியும், துளையிடும் கருவிகளும் செம்பினாலும் தந்தத்தினாலும் செய்யப் பட்டன. கோடரி, அரிவாள், கத்தி, மீன் பிடிக்கும் தூண்டில், குடையும் கருவிகள் போல்வன வெண்கலத்தினாலும் செம்பினாலும் செய்யப்பட்டன. வலைகளை நீரில் ஆழ்த்துவதற்கு ஈயத் துண்டுகள் பயன்படுத்தப்பட்டன. படுக்கைகளும் சாய்வு நாற்காலிகளும் முன் அறையில் வைக்கப்பட்டன. சில நாற்காலிகளின் பாதங்கள் நாழிகை வட்டம் போலவும், இடபத்தின் கால் போலவும் செய்யப் பட்டன. இடபக்கால் உள்ள நாற்காலிகள் எகிப்திய முதல் அரசபரம்பரைக் காலம் முதலாகக் காணப்படுகின்றன. விளக்குகள், ஓடு, மண், செம்பு முதலியவைகளால் செய்யப்பட்டன. வீதிகளிலும் விளக்குகள் இருந்தன. மெழுகுத் திரி வைத்து எரிக்குந் தாள் ஒன்று கண்டு பிடிக்கப்பட்டது. வேளாண்மை: கோதுமையும், வாற்கோதுமையும், நெல்லும் விளை விக்கப்பட்டன. மண்வெட்டிக்குப் பதில் கலப்பை பயன்படுத்தப்பட்டதோ என்பது அறிய முடியவில்லை. பேரீந்தின்பழ விதைகள் மொகஞ்சதரோவிலும் அரப்பாவிலும் காணப்பட்டன. இதனால் அங்குப் பேரீந்து வளர்ந்ததெனத் தெரிகின்றது. உணவு: கோதுமை, வாற்கோதுமை, அரிசி, காய்கனிகள், பால் முதலியன உணவாகப் பயன்படுத்தப்பட்டன. அரப்பாவில் பயறும் எள்ளும் பயிரிடப்பட்டன மாடு, ஆடு, பன்றி கோழி, ஆமை முதலியவை களின் இறைச்சியும், மீன், மீன்-கருவாடு, கடல் உயிர்கள் முதலியனவும் உணவாகக் கொள்ளப்பட்டன. வீட்டு விலங்குகள்: மாடு, எருமை, ஆடு, யானை, பன்றி, ஒட்டகம், நாய் முதலியன வீட்டில் வளர்க்கப்பட்டன. மண்ணினாற் செய்யப்பட்ட எருமை, காண்டாமிருகம், புலி, குரங்கு, கரடி, முயல், அணில் முதலிய விளையாட்டுப் பொருள்கள் காணப்படுகின்றன. இதனால் அக்கால மக்கள் இவைகளைப் பற்றி அறிந்திருந்தார்கள் என விளங்குகின்றது. கழுதை, பூனை, கீரி, மயில், கோழி முதலியனவும் அவர்களால் அறியப்பட்டிருந்தன. விளையாட்டுகள்: சதுரங்கம், கோலி முதலியவை முக்கிய விளையாட்டுகளாகும். சதுரங்கம் ஆடும் காய்கள் பல காணப்பட்டன. அவை களிமண்ணினாற் செய்யப்பட்டவை. விளையாட்டுப் பொருள்கள்: மண்ணினால் செய்யப்பட்ட மனிதர், விலங்குகள், தலையாட்டும் விலங்குகள், கோழி, புறா வடிவான ஊது குழல்கள், கிலுகிலுப்பை, சிறுவர் விளையாடும் பானை சட்டி, இரண்டு சக்கரங்களில் வைக்கப்பட்டுக் கயிறு கோத்து இழுப்பதற்குக் கழுத்தில் துளை இடப்பட்ட ஆட்டுக் கடா, விளையாட்டு வண்டி முதலியவை விளையாட்டுப் பொருள்களிற் சில. இங்குக் காணப்பட்ட விளையாட்டு வண்டிகள் கி.மு. 3,200இல் ஊர் என்னும் மேற்கு ஆசிய நகரிலே கல்லிற் பொறிக்கப் பட்ட தேர் போன்றன. இவை உள் நாட்டிலேயே செய்யப்பட்டன வென்பது சங்கு தரோவிற் காணப்பட்ட விளையாட்டுப் பொருள்களால் நன்கு அறியப் படுகின்றது. போக்குவரத்து: பழைய சிந்துவெளி மக்கள் பயன்படுத்திய வண்டிகள் இன்று பஞ்சாப்பிலும் சிந்துவிலும் பயன்படுத்தப்படும் வண்டிகளை ஒத்தவை. அரப்பாவில் கண்டுபிடிக்கப்பட்ட செம்பினாற் செய்த வண்டியினால் அக்கால வண்டி, வெய்யிலையும் மழையையும் தாங்க மேலே மேற்கட்டி கட்டப்பட்ட இன்றைய ‘எக்கா’ வண்டி போன்றதெனத் தெரிகின்றது. நிறையும் அளவும்: சிந்துவெளி மக்கள் பல வகையான நிறைகளை வழங்கினர். பெரிய நிறைகள் கூரிய தலை உடையனவாயும் கயிறு கோக்கக் கூடிய துளையுடையனவாயும் இருந்தன. சிறிய நிறைகள் இருண்ட நரை நிறக் கற்களாற் செய்யப்பட்டவை. அவை ‘பீப்பா’1 வடிவானவை. எல்லம், மெசபெதோமியா நிறைகளும் இவ்வகையினவே. நெசவு: மொகஞ்சதரோ வீடுகளில் நூல் நூற்கும் கதிர்கள் காணப் பட்டன. பஞ்சு, கம்பளிகளில் நூல் நூற்றல் பொது நிகழ்ச்சியாக இருந்தது. விலை ஏறப்பெற்ற நிறக்கற்களிலும் செய்யப்பட்ட நூல் நூற்கும் கதிர்கள் காணப்பட்டன. இதனால் செல்வரும் வறியரும் நூல் நூற்றார்கள் எனத் தெரிகின்றது. ஆடைகளுக்குப் பலவகைச் சாயங்கள் ஊட்டப்பட்டன. போர் ஆயுதங்கள்: கோடரி, ஈட்டி, வேல், வில், அம்பு, தண்டு, கவண், வாள், கேடகம் முதலியன போரில் பயன்படுத்தப்பட்டன: கோடரிகள் சூசாவிற் கிடைத்தவை போன்றன. வாள்கள் செம்பினாற் செய்யப்பட்டவை. அவைகளுக்கு இரு பக்கங்களிலும் அலகு உண்டு. இவை அக் காலத்தில் எகிப்தில் காணப்பட்ட அவ்வகைப் பொருள்களோடு ஒப்பிட்டுப் பார்க்கத் தகுந்தவை. மெய்உறை அல்லது கவசம் தோலினாற் செய்யப்பட்டது. மருந்து: சிந்துவெளி அழிபாடுகளில் சிலாசத்து என்னும் மருந்து காணப்பட்டது. இது நீரிழிவு, பசியின்மை, வாதம், ஈரற் கோளாறு முதலியவை களுக்குப் பயன்படுத்தப்படும் மருந்து. மருந்தின் பொருட்டு மான் கொம்பும் பிற இடங்களிலிருந்து கொண்டுவரப்பட்டது. காண்டாமிருகத்தின் கொம்பும் மருந்தின் பொருட்டுப் பயன்படுத்தப்பட்டது. மந்திரவாதம், தாயத்துப் போன்றவை நோயை ஆற்றத்தக்கன என்று மக்கள் நம்பினார்கள். வாணிகம்: வட இந்தியாவுக்கும் தென்னிந்தியாவுக்கும் மேற்கு ஆசிய நாடுகளுக்கும் தொடர்பு உண்டாயிருந்தது. சுமேரியாவோடு சிந்து நாடு தொடர்பு பெற்றிருந்ததைக் காட்டும் சான்றுகள் மிகப் பல உள்ளன. எகிப்தோடும் கிரேத்தா (Crete)வோடும் வாணிகம் நடைபெற்றது. முத்திரை ஒன்றில் மரக்கலம் காணப் படுகின்றது. பழைய மீனோவ முத்திரை, சுமேரிய உருளை வடிவான முத்திரை, எகிப்திய அரச பரம்பரைக்கு முற்பட்ட மட்பாண்டங்கள் என்பவைகளிற் காணப்படுவதுபோல் இம் மரக்கலம் மேலே உயர்ந்து வளைந்த முன்பின் புறங்களை யுடையது. இதற்குப் பாய்மர மில்லை. நடுவே ஓர் அறை இருக்கிறது. மரக்கலம் செலுத்துவோன் சுக்கானுக்குப் பக்கத்தே இருக்கின்றான். மொகஞ்சதரோ, ஊர், கிஷ், எகிப்து முதலிய நாடுகளுக்கிடையில் வாணிக உறவு இருந்தது. கைத்தொழில்: சிந்துவெளி மக்கள் எல்லா வகை மட்பாண்டங் களையும் செய்தார்கள். சிலவற்றுக்கு நிறம் பூசப்பட்டன; சிலவற்றில் மினுக்கம் கொடுக்கப் பட்டன. மேலே குமிழியுள்ள முத்திரைகள், பாவைகள் முதலியன அழகாகச் செய்யப்பட்டுள்ளன. பொன், வெள்ளி, விலை உயர்ந்த கற்களில் செய்யப்பட்ட ஆபரண வகைகள் அக்காலப் பொற்கொல்லனின் கைவேலைத் திறமையைக் காட்டுவன. முத்திரைகளிற் செதுக்கப்பட்ட எழுத்துகள், புலி, யானை, மாடு, மரம், செடி முதலியவை அக்காலச் சிற்பனின் கைவினை மாட்சியை வெளியிடுவன. கட்டடங்களைக் கொண்டு கொத்த ருடையவும், ஆடையைக் கொண்டு நெசவாளருடையவும் திறமைகளை அறிதல் அமையும். மக்கள்: ஆரியர் வருகைக்குமுன் வடநாடு முழுமையும் திராவிட மக்களே வாழ்ந்தார்கள் எனப் பெறப்படுகின்றமையாலும், இன்றும் பலுசிஸ் தானத்தில் வழங்கும் பிராகூய் மொழி திராவிடத்துக்கு இனமுடையதாய்க் காணப்படுதலாலும், பிற காரணங்களாலும் மொகஞ்சதரோ மக்கள் திராவிடரேயாவர் எனத் துணியப்பட்டுள்ளது. ஹெரஸ் பாதிரியார் ஒலி முறையாக வாசித்த பழைய சிந்து வெளி எழுத்துகளின் ஒலி முறையான உச்சரிப்புகளில் பெரும்பாலானவை தமிழ்ச் சொற்களாக உள்ளன. மொழி: சிந்துவெளி மக்கள் ஒரு சொல்லைக் குறிக்க ஒரு குறியீட்டை வழங்கினர். சீனமொழியில் வழங்கும் எழுத்துகள் இவ்வகையினவே. மேற்கு ஆசிய, எகிப்திய, சின்ன ஆசிய, சிந்துவெளி எழுத்துகள் ஒரே அடிப்படையி னின்றும் சிற்சில வேறுபாடுகளுடன் வளர்ச்சி யடைந்துள்ளவைகளே எனச் சேர் யான் மார்சல், டாக்டர் பிராங்போர்ட், ஹெரஸ் பாதிரியார் முதலி யோரும் வேறு பலரும் ஆராய்ந்து கூறியுள்ளார்கள். தென்னமெரிக்காவுக்கு அண்மையிலுள்ள ஈஸ்டர் தீவுகளில் காணப்பட்ட எழுத்துகளில் 150 எழுத்துகள் வரையில் மொகஞ்சதரோ எழுத்துகளாகக் காணப்படுகின்றன. மொகஞ்சதரோ எழுத்துகளினின்று வட இந்திய தென்னிந்திய எழுத்துகளும் தோன்றின. பினீசிய எழுத்துக்கும் பிராமி எழுத்துக்கும் உறவு உண்டு. பினீசிய எழுத்திலிருந்து கிரேக்க எழுத்துகளும், கிரேக்க எழுத்துகளி லிருந்து உரோமன் எழுத்துகளும், உரோமன் எழுத்துகளிலிருந்து ஐரோப்பிய மொழிகளின் எழுத்துகளும் தோன்றின. மொகஞ்சதரோ எழுத்துகளை ஒத்தவை ஹைதராபாத்திலும் திருநெல்வேலியிலும் கிடைத்த சரித்திர காலத்துக்கு முற்பட்ட பானை சட்டிகளிலும், இலங்கையிலும் காணப்படு கின்றன. “சிவப்புக் கல்லில் வெட்டப்பட்டதும் திறமையான வேலைப்பாடு உடையதுமான சிறுவனின் உருவம் ஒன்று அரப்பாவிற் கிடைத்தது. அதனை நோக்குமிடத்து அது கிரேக்கர் கி.மு. நாலாம் நூற்றாண்டிற் செய்த கை வேலைப்பாடு போலத் தோன்றும்; ஆனால் அது கி.மு. 3,000 வரையில் செய்யப்பட்டது. இவ் வுருவத்தைக் கொண்டு அறியவருவது, சிற்பக் கலையின் வளர்ச்சியைச் சரித்திர மூலம் அறிய முடியாதென்பதேயாகும். இவ்வுலகம் முழுமையிலும் இந்தியரே மிகப் பழைய சிற்பிகளாவர் எனத் தெரியவருகின்றது.”1 * * * “மொகஞ்சதரோவில் கண்டு பிடிக்கப்பட்ட ஒரு முத்திரையில் வெட்டப்பட்ட இடபத்தின் வடிவம் மிகவும் உயிர்ப்பு உடையதாகக் காணப்படுகின்றது. இதனைக் காணும் ஒருவர் சிற்பக்கலை வளர்வதில்லை; ஆனால் அது தனது போக்கை மாற்றிக் கொள்கின்றது எனத் தனக்குள்ளே முடிவு செய்து கொள்வர்.”2 * * * மொகஞ்சதரோப் புதைபொருள் ஆராய்ச்சி, புத்தர் பிறப்பதற்கு முற்பட்ட கால நிலைமைகளை வெளியிட்டுள்ளது. இந்திய அரசாங்கத் தாரின் சாசனப் பரிசோதகராயிருந்த ஹிரந்த சாத்திரி கூறியிருப்பது வருமாறு: மொகஞ்சதரோ நகரில் வாழ்ந்த மக்கள் நன்கு அமைத்த விசால மான கட்டடங்களோடு ஒப்பிடத்தக்கவை, வரலாற்றுக் காலத்துக்கு முற்பட்ட எகிப்திலோ மெசபெதோமியாவிலோ வேறு எவ்விடத்திலோ இருக்க வில்லை. அங்குள்ள குளிக்கும் அறைகளும், கழிவு நீர் ஓடும் வாய்க்கால் களும் அங்கு வாழ்ந்த மக்கள் உலக நாகரிக மக்களால் மாத்திரம் அறியப் படும் வாய்ப்புகளையும், உல்லாச வாழ்க்கையையும் உடையராயிருந்தார் களென்பதை அறிவிக்கின்றன. இது. கி.மு. 5000 ஆண்டுகளுக்கு முற்பட்ட நிகழ்ச்சி.”3  திராவிட இந்தியா முன்னுரை திராவிட மக்களின் வரலாற்றை நூறு வகையில் விரித்து எழுதலாம். அவ்வாறு நூல்கள் வெளிவரின் பொதுமக்களும் மாணவரும் திராவிட மக்களின் உண்மை வரலாறுகளை நன்குகற்று உண்மை அறிவர். இன்று பள்ளிக்கூடங்களுக்கு என எழுதப்படும் வரலாற்று நூல்களில் காணப்படுவ திராவிட மக்களைப் பற்றிய உண்மைச் செய்திகள் பல காணப்படுவதில்லை. திராவிட இந்தியா என்னும் இந்நூல் பற்பல ஆராய்ச்சி அறிஞர் ஆராய்ந்து கண்ட உண்மைகளை ஆதாரமாகக் கொண்டு கற்போர் எளிதிற் படித்துப் பொருள் விளங்கும் முறையில் அமைந்துள்ளது. திராவிட மக்களின் பொற்காலம் இற்றைக்கு ஆறாயிரம் ஆண்டுகளின் முன் உள்ளது. சங்ககாலம் திராவிட மக்களின் பொற்காலத்தின் கடைக்காலமாக விருந்த தென அறிகின்றோம். முன்பின் மூவாயிரம் ஆண்டுகள் வரையில் திராவிட மக்களின் பொற்காலம் நிலவிற்று. இந்திய மக்களின் நாகரிகமென்பது திராவிட மக்களின் நாகரிகமே. இவ்வுண்மையை இன்று வரலாற்றாசிரி யர்கள் எடுத்துக்கூற முற்பட்டுள்ளார்கள். பேராசிரியர் சுந்தரம் பிள்ளை, பண்டிதர் சவரிராய பிள்ளை காலம் முதல் அறியப்பட்டிருந்த பற்பல உண்மைகள் பொதுமக்களிடையே பரவாதும் பரப்புவாரற்றும் கிடந்து இன்று பரவுவது ஓர் நற்காலத்தின் அறிகுறியே யாகும். சென்னை 1-4-1949 ந.சி. கந்தையா. திராவிட இந்தியா தோற்றுவாய் இந்திய மக்கள் வரலாற்றில் திராவிட மக்கள் வரலாறு மிக முதன்மை யுடையது. இன்று இந்திய நாகரிகம் எனப் பெயர் பெறுவது ஆரிய திராவிட நாகரிகங்களின் கலப்பினால் தோன்றியது. ஆரிய நாகரிகத்துக்கு முற்பட்டது திராவிட நாகரிகம். இதிற் சிறிதும் ஐயப்பாடு இல்லை. நீண்ட காலம் திராவிட நாகரிகத்தைப்பற்றிய செய்திகள் அறியப்படாது கிடந்தன; அதனால் திராவிடரின் பண்பாட்டைக் குறித்த செய்திகள் வரலாற்றாசிரி யர்களால் பற்பலவாறு திரித்துக் கூறப்படலாயின. இன்று தமிழரின் நாகரிகத்தைப் புலப்படுத்தும் சான்றுகள் பல கிடைத்துள்ளன. இச்சிறிய நூல் திராவிடரின் நாகரிகச் சிறப்புக்களைப்பற்றிக் கூறுகின்றது. திராவிடர் பிறப்பிடம் “திராவிட மக்கள் அயல்நாடுகளிலிருந்து இந்தியாவின் வடபகுதி களை அடைந்தார்கள். பின்பு ஆரியர் என்னும் புதிய சாதியினர் அங்கு வந்தனர். அவர்கள் திராவிடரை வென்று தெற்கே துரத்தினர். அவர்கள் தெற்கே வந்து வாழ்ந்தார்கள். அவர்களே தமிழர் எனப்படுவோர்.” என மேல்நாட்டாசிரியர் சிலர், பல ஆண்டுகளின்முன் உண்மை அறியாது மயங்கி எழுதிவைத்தனர். அக்கொள்கை இன்று சிறிதும் ஏற்றுக் கொள்ளத் தக்கதாயிருக்கவில்லை. பள்ளிச் சிறுவர்களுக்கு வரலாறு எழுதும் ஆசிரியர் பலர் உண்மையல்லாத பழைய கொள்கையைப் பின்பற்றி எழுதிவருவது வருந்தத்தக்கதே யாகும். திராவிட மக்கள் வெளிநாடுகளிலிருந்து வந்து இந்திய நாட்டை அடைந்தார்கள் என்று கூறுவதற்கேற்ற ஆதாரம் ஒன்றேனும் காணப்பட வில்லை. பழைய கற்காலம் முதல் இரும்புக்காலம் வரையில் மக்கள் தொடர்பாகச் செய்து பயன்படுத்திய ஆயுதங்களும் பிறபொருள்களும் இந்திய நாட்டின் பல்வேறு இடங்களிற் கண்டு எடுக்கப்பட்டுள்ளன.1 திராவிட மக்கள் அயல்நாடுகளினின்றும் வந்தார்கள் என்று கூறுவோர்க்குத் துணையாயிருப்பது ஆப்கானிஸ்தானத்தின் ஒரு பகுதியில் தமிழுக்கு இனமுடைய பிராகூய் மொழி வழங்குவது. இற்றைக்கு ஆறாயிரம் ஆண்டுகளின்முன் சிந்து ஆற்று வெளிகளில் திராவிடர் நாகரிகம் பரவியிருந்தது. அங்கு தமிழ் வழங்கிற்று. இம்மக்களின் தொடர்புடைய வர்களே ஆப்கானிஸ்தானத்தில் தங்கி வாழ்ந்தார்கள். அவர்களின் சந்ததியினரே திராவிடத்தின் சம்பந்தமுடைய பிராகூய் மொழியை இன்றும் பேசிவருகின்றனர்.1 திராவிட மக்கள் பழமைதொட்டே இந்திய நாட்டில் வாழ்ந்து வருகின்றார்கள். அவர்களின் பழைய நாடு குமரி முனைக்குத் தெற்கிலும் பரந்து கிடந்தது. நாகரிகத்தின் பழமை மேற்கு ஆசியா எகிப்து முதலிய நாடுகளில் பழைய இடிபாட்டு மேடுகள் தோண்டி ஆராயப்பட்டுள்ளன. அங்கு கிடைத்த பழம் பொருள் களைக்கொண்டு அந் நாடுகளின் நாகரிகம் ஏழாயிரம் அல்லது எண்ணா யிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதென ஆராய்ச்சியாளர் துணிந்துள்ளனர். மைசூரிலே சிற்றால்ரக் என்னும் இடத்திலும் சிந்துவெளியிலும் செய்யப் பட்ட அகழ் ஆராய்ச்சிகளால் இந்திய நாட்டின் நாகரிகமும் அந்நாட்டு நாகரிகங்களை ஒத்த பழமையுடையதென அறியப்படுகின்றது. எகிப்து, மேற்கு ஆசியா முதலிய நாடுகளில் நாகரிகத்தைத் தோற்றுவித்தோர் அயல் நாடுகளினின்றும் சென்றவர்களாவர் என்றும், அவர்கள் இந்திய நாட்டி னின்றும், சென்றார்கள் எனக் கொள்வதற்குப்பல ஏதுக்கள் உள்ளவென்றும் சிறந்த மேற்திசை ஆராய்ச்சி அறிஞர் பலர் புகன்றுள்ளார்கள்.2 தமிழும் திராவிடமும் இன்று தமிழரைக்குறிக்கத் திராவிடர் என்னும் பெயரும் வழங்கு கின்றது. திராவிடம் என்னும் சொல்லைப் பற்றிப்பலர் பலவாறு ஆராய்ந்து கூறியுள்ளார்கள். திராவிடமென்பது தமிழ் என்னும் சொல்லின் உச்சரிப்பு வேறுபாடு என்பதே ஆராய்ச்சி அறிஞர் இறுதியாகக் கொண்ட முடிவு. இன்று திராவிடம் என்னும் சொல் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், துளு முதலிய மொழிக் கூட்டத்தைக் குறிக்க வழங்குகின்றது. திராவிடர் என்னும் பெயர் இம் மொழிக் கூட்டத்துக்குரிய மக்களைக் குறிக்கின்றது.1 சூழல்நிலைக்கேற்ப மக்கள் பண்பாடு அடைதல் உலகில் மக்கள் வாழக்கூடிய இடங்கள் ஐந்து வகையின என்று பழந்தமிழர் கண்டனர். அவர்கள் அவ்வகை நிலங்களைத் திணைகள் என்றனர். திணை என்பது திட் அல்லது திண் என்னும் அடியாகப் பிறந்தது. நிலப்பரப்பு என்பது அதன் பொருள். திட் அல்லது திண் என்பதிலிருந்தே திட்டு, திட்டை, திடர், திண்ணை முதலிய சொற்கள் பிறந்தன. திண் என்பது வலிமையையுங் குறிக்கும். இடங்களின் சூழ்நிலைக்கேற்பவே மக்களின் திருத்தமும் வளர்ச்சியடைந்தது. தண்ணீரில்லாத வறண்ட மணற் பகுதி பாலை எனவும், மலைநாடு குறிஞ்சி எனவும், மலைநாட்டுக்கும் கீழ்நாட்டுக் கும் இடைப்பட்ட குறுங்காட்டு நிலம் முல்லையெனவும், ஆற்றோரங்கள் மருதமெனவும், கடற்கரை நெய்தல் எனவும் வழங்கின. இவ்வகை நிலங் களும் தமிழ்நாட்டில் ஓரளவு உண்டு. மக்கள் தோன்றிய காலம் முதல் தமிழர் தென்னிந்தியாவில் வாழ்ந்துவருகின்றார்கள். அவர்கள் ஒரு நிலத்தினின்று இன்னொரு நிலத்துக்குச் சென்று படிப்படியான சீர்திருத்தங்களை அடைந்தனர். மலையும் மலைசார்ந்த நிலமும் மக்கள் முதல்முதல்குடியேறி வாழ்ந்த இடம் மலை. மிகமிக நீண்ட காலம் மழையினாலும் பருவக்காற்றினாலும் தாக்குண்டதால் தேய்ந்து போன சிறிய குன்றுகள் பல தென்னிந்திய பூமிகளிற் காணப்படுகின்றன. இம் மலை இடங்களுக்குக் கீழே தண்டகம் என்னும் இருண்ட காடு இருந்தது. அங்கு சிங்கம், புலி, யானை, காட்டு எருமை, சிறுத்தை, மனிதனுக்கு அழிவைச் செய்யும் பூச்சி வகைகள் காணப்பட்டன. ஆதிகால மனிதன், வெய்யில், மழை, விலங்குகள் முதலியவைகளினின்று தன்னைக் காப்பாற்றிக்கொள்ளக் கூடிய குகைகள் மலையிடங்களிலிருந்தன. அவன் தண்ணீரைச் சேமித்து வைப்பதற்கு மண் பாத்திரங்களைச் செய்ய அறிந்திருக்கவில்லை. நீரூற் றுகள் வற்றிய காலத்தில் பாறைகளிலுள்ள குழிகளில் நீர் நிறைந்திருந்தது. அவன் அதனைக் கைகளால் அள்ளிப் பருகினான்; காலடியிற் கிடந்த கற் களை எடுத்து அவைகளிலிருந்து கோடரி, ஈட்டிமுனை, அரியும் கருவிகள், சுரண்டும் கருவி முதலியவை களைச் செய்யப் பழகிக்கொண்டான். இந் நிலையிலிருந்து மனிதனின் சீர்திருத்தம் வளர்வதாயிற்று. மிக முற்பட்ட திருத்த காலம் பழைய கற்காலம் எனப்படும். பழைய கற்கால நாகரிகத்தைக் காட்டும் கையினாற் செய்யப்பட்ட பொருள்கள் கடப்பா, நெல்லூர், வட ஆர்க்காடு, செங்கற்பட்டு முதலிய இடங்களிற் கிடைத்துள்ளன. குறிஞ்சி நிலத்தில் வாழ்ந்த மக்கள் பழங்கள் விதைகள் கிழங்குகளை உண்டு வாழ்ந்தனர். பருவகால மாறுதல்களால் இவ்வுணவுப் பொருள்கள், சிற்சில காலங்களில் அரிதிற்கிடைப்பவாயின. ஆகவே அவர்கள் ஊன் உணவையும் கொள்ளத்தொடங்கினர். அவர்கள் தற்காப்பின் பொருட்டு விலங்குகளோடு அதிகம் போராட வேண்டியிருந்தது. அதனால் அவர்கள் வேட்டை ஆடுவதில் திறமை பெற்றனர். ஆகவே தொடக்கத்தில் மனித னின் தொழில் வேட்டையாடுவதாகவிருந்தது; அப்பொழுது அவர்கள் ஓரிடத்தில் தங்காது அலைந்து திரிந்தார்கள். உலகம் முழுமையிலும் கண்டெடுக்கப்பட்டுள்ள பழைய கற்கால ஆயுதங்கள் எல்லாம் ஒரே வடிவின. இதனால் ஆதிகால மனிதன் உலகில் எங்கும் அலைந்து திரிபவ னாயிருந்தானெனத் தெரிகின்றது. குறிஞ்சி நிலச்சூழல், மனித சீர்திருத்தத்திற்கு அடிப்படையாகிய இரண்டு புதியவற்றைக் கண்டுபிடிக்கும்படி செய்தது. அவற்றுள் ஒன்று வில்லும் அம்பும், மற்றது நெருப்பு உண்டாக்குதல். மலைகளில் மூங்கில் அதிகம் வளர்கின்றது. மலையில் வாழும் மக்கள் மூங்கிலின் வளையுந் தன்மையை நோக்கி அறிந்தார்கள். அவர்கள் அதனைப் பிளந்து இரு முனைகளிலும் கொடியைக் கட்டி நீண்ட முட்களை அதில் வைத்து எய்யப் பழகினார்கள். இன்றும் மலைகளில் வாழும் மக்கள் ஒரே அம்பினால் ஒரு புலியைக் கொல்லும் திறமை பெற்றிருக்கிறார்கள். ஆதிகால மக்கள் மலையில் தீ உண்டாகி எரிவதைக் கண்டார்கள். மூங்கில் ஒன்றோடு ஒன்று உரோஞ்சுவதால் தீயுண்டாகின்றதென்பதை அவர்கள் அறிந்தார்கள்; ஆகவே தாமும் இரண்டு தடிகளை ஒன்றோடு ஒன்றை உரோஞ்சித் தீ உண்டாக்கலாமென எண்ணினார்கள். தாம் வேட்டை யாடிக் கொன்ற விலங்குகளின் இறைச்சியை வேகச் செய்யும் பொருட்டு அவர்கள் முதலில் நெருப்பைப் பயன்படுத்தினர். ஆடவர் வேட்டையாடச் சென்றார்கள். பெண்கள் காட்டிற் சென்று பழங்களைப் பொறுக்கினார்கள்; கிழங்குகளை அகழ்ந்தார்கள்; தாம் வாழிடங்களைச் சுற்றித் தானே விளைந்த மலை நெல், மூங்கிலரிசி முதலி யவைகளையும் சேகரித்தார்கள். பெண்களின் அடுத்த கடமை குழந்தை களை வளர்ப்பது. இவ்வகை நிலையிலிருக்கும்போது அவர்கள் வீடு அமைக்க அறியவில்லை. தென்னிந்திய வெப்ப நிலைக்கு வீடு வேண்டிய தில்லை; மர நிழல்களும் மலைக்குகைகளுமே ஒதுக்கிடங்களாகப் பயன் பட்டன. மக்கள் தொடக்கத்தில் வீடுகளை உறைவிடத்தின் பொருட்டு அமைக்கவில்லை; தமது செல்வமாகிய உணவுப் பொருள்களைப் பத்திரப் படுத்திவைக்கும் பொருட்டு அமைத்தனர். பழைய கற்கால மனிதனுக்கு உணவைச் சேமித்து வைக்கும் தேவை உண்டாயிருக்கவில்லை. வீடு இல்லாமையாலும், அலைந்து திரியவேண்டிய இன்றியமையாமையாலும் வீட்டில் தங்கி வாழ்வதாகிய உணர்ச்சி ஆடவரிடையே எழவில்லை. ஆகவே தாயாட்சி முறையான வாழ்க்கை ஆதியில் வளர்ச்சியடைவ தாயிற்று. இவ்வகையான வாழ்க்கையை இன்னொன்றும் ஊக்கியது. முற்கால மனிதன் ஆடம்பரமான மணக்கிரியைகளால் கட்டுப்பட்டிருக்கவில்லை. ஆடவரும் மகளிரும் காதலித்து மணந்தனர். சில நாள்களின் பின் உறவி னரை அழைத்து விருந்து இட்டனர். இதுவே முற்காலத் திருமணக் கிரியை யாக விருந்தது. திருமணம் என்றும் நிலையான தன்மையுடையதாக விருக்க வில்லை. தனிப்பட்ட சொத்து இன்மையும் நிலையான வீடு இன்மையும் தாயாட்சி முறையான வாழ்க்கைக்கு நீண்ட காலம் வாய்ப்பு அளித்தன. தமது மேனியை அலங்கரித்துக் கொள்வதில் ஆடவருக்கும் மகளி ருக்கும் விருப்பு உண்டு; இவ்விருப்புப் பெண்களுக்கு அதிகம். குறப் பெண்கள் ஓய்வு நேரங்களில் ஓடுகளைப் பொறுக்கினார்கள்; அவைகளை மாலையாகக் கோத்து அணிந்தார்கள். அவர்களின் காதலர் வேட்டை யாடுவதிற் கிடைத்த புலிநகம், புலிப்பல் போன்றவைகளைக் கொடுத் தார்கள். அவைகளையும் அவர்கள் கழுத்தில் அணிந்தார்கள். பிற்காலத்தில் இவையே தாலியின் வடிவாகமாறின. தென்னிந்தியப்பெண் தாலிதரித்தல் திருமணம் செய்துகொண்டமைக்கு அடையாளமாகும். பெண்களின் இன்னொரு அலங்காரம் தழைஉடை. தழைஉடை என்பது கொடியிற் கட்டிய தழைகளாலான உடை. இவ்வுடை உடுக்கும் வழக்கம் இன்றும் சில காட்டுச் சாதியினரிடையே காணப்படுகின்றது. மணலும் மணல்சார்ந்த இடங்களும் மணலும் மணல்சார்ந்த இடமும் பாலை எனப்படும். இது மக்கள் வாழக்கூடிய இடத்தின் ஓர் உட்பிரிவில் அடங்கும். வேடன் காட்டு விலங்கு களைத் துரத்திச் செல்லும்போது பாலைநிலத்தில் நிலையில்லாது சிலகாலம் தங்குவான். பாலைநிலத்தில் சிலகாலம் தங்குவோர் அல்லது அங்கு வாழ்வோர் மறவர் எனப்படுவர். மறம் வீரத்தை உணர்த்தும். இவர் 1கள்ளர் எனவும் பட்டனர். பாலை நிலம் செழுமையற்றதாதலாலும் பாலைநில மக்கள் போர்த் தொழிலில் சிறந்தவர்கள் ஆதலினாலும் மறவரும் கள்ளரும் செல்வரையும் மற்றநிலங்களில் வாழும் வலியற்றவர்களையும் கொள்ளை யிட்டு வாழ்வாராயினர். இதனால் மறம் என்பது கொடுமையையும் கள்ளர் என்பது திருடரையும் குறிக்க வழங்கலாயின. காடும் காடுசார்ந்த நிலமும் குறிஞ்சி நிலத்தில் மக்கள் பெருகியபோது உணவு சுருங்கிற்று. அப்பொழுது மக்கள் அயலிலுள்ள முல்லை நிலத்திற்குச் செல்வாராயினர். அப்பொழுது அவர்கள் சீர்திருத்தத்தில் இன்னொரு படியை அடைந்தனர். எருமை, பசு, ஆடு, செம்மறியாடு போன்ற விலங்குகளை இவர்கள் பழக்கி வளர்த்தார்கள். அவர்கள் குறவராயிருந்தபோது நாய் பழக்கி வளர்க்கப் பட்டது. முல்லை நிலத்தில் ஆடுமாடுகள் விரைவிற் பெருகின. ஆகவே சொத்து உண்டாயிற்று. இதனால் குடும்பங்களும், குடிகளும் தோன்றி வளர்ந்தன. ஆடவரும் மகளிரும் ஒருவரை ஒருவர் காதலித்தலும், காதலின் அடையாளமாகக் காதலன் புலிநகம், இலையுடை முதலியவற்றைக் காதலிக்குக் கொடுத்துக் கிரியை இன்றி மணந்துகொள்வதுமாகிய மணம் களவு எனப்பட்டது. குறிஞ்சி நிலத்திற்றோன்றிய இவ்வகை மணங்கள் நின்றுபோயின. இப்பொழுது கற்பு ஒழுக்கம் தோன்றிற்று. காதலர் ஒருவ ரோடு ஒருவர் பழகுவதன்முன் மணச் சடங்கு இயற்றப்பட்டது. இலைக ளாலும் மலர்களாலும் அலங்கரிக்கப்பட்ட பந்தரின்கீழ் சுற்றத்தினர் திரண் டிருந்து மணக்கிரியை நடத்தப்பட்டது. சொத்துச் சேரத்தொடங்கியதும், கற்பு ஒழுக்கம் தோன்றியதும் சமூகம் தந்தை ஆட்சிமுறையாக வளர்வதாயிற்று. தந்தையே ஆடுமாடு களுக்குச் சொந்தமுடையவனாயிருந்தான். நிலங்களைப் பிரித்தால் ஆடுமாடுகள் மேய்வதற்கு முடியாமல் போகும். ஆகவே கூட்டுக் குடும்ப வாழ்க்கை தோன்றிற்று. தந்தை ஆட்சியில் பெரிய குடும்பத்தலைவன் அரசன்போல் ஆயினான். இம் முறையில் அரசன் தோன்றினான். ஆட்சி முறை முதலில் முல்லை நிலத்திலேயே தோன்றிற்று. கோன் என்பது பழைய தமிழ்ச்சொல். இது அரசனைக் குறிக்க வழங்குகின்றது. ஆய்ச்சி என்னும் சொல் இடைச்சியையும் அரசியையும் குறிக்கின்றது. மற்ற நாடுகளில் இடையரின் வாழ்க்கை இடம்விட்டு இடம் அலைந்து திரிவதாகவிருந்தது. தென்னிந்தியா செழிப்புடையதாயும் எல்லாக் காலங் களிலும் ஆடுமாடுகளுக்கு வேண்டிய உணவு கிடைக்கக் கூடியதாகவும் இருந்தமையால் தென்னிந்திய இடையருக்கு இடம்விட்டு இடம் செல்ல வேண்டிய கட்டாயம் உண்டாயிருக்கவில்லை. ஆகவே தென்னிந்திய இடையரின் வாழ்க்கை ஓரிடத்தில் தங்கியிருப்பதாக அமைந்தது. இடையர் ஆடு மாடுகளை மேய்ச்சல் நிலத்துக்கு ஓட்டிச் சென் றார்கள். மந்தைகள் மேயும்போது அவர்கள் மரநிழலில் தங்கியிருந்தார்கள்; பொழுதுபோக்கின் பொருட்டு மூங்கிற் குழலில் இனிய இராகங்களைப் பாடினார்கள். ஆடு மாடு மேய்ப்பவர்களில் ஒரு பிரிவினர் குறும்பர் எனப் பட்டனர். இவர்கள் மயிர் நீண்டு வளரும் குறும்பு ஆடுகளை வளர்த்தனர். குறும்பு ஆடுகளின் மயிரிலிருந்து கம்பளி நெய்யப்பட்டது. கடலும் கடல்சார்ந்த நிலமும் இதற்கு அடுத்த படியில் கடற்கரை நிலம் மக்களால் குடியேறப் பட்டது. இங்கு வாழ்ந்த மக்கள் கரையை அடுத்த கடலில் மீன் பிடித்தார்கள்; பின்பு ஆழமான நீரிற் சென்றார்கள். கடற்கரையில் வாழ்வோர் பரதவர் எனப்பட்டனர். இவர்களின் தொழில்கள் மீன் பிடிப்பதும் மரக்கலஞ் செய்வதுமாயிருந்தன. மிகப்பெரிய மரக்கலங்கள் கட்டுமரங்களாயிருந்தன. இதன்பின் தோலால் மூடப்பட்ட கூடைகள் தோணிகளாகப் பயன்படுத்தப் பட்டன. நெய்தல் நிலத்தில் கிடைக்கும் முக்கிய பொருள்கள் உப்பும் மீனும். பரதவர் இவைகளை மற்ற நிலங்களுக்குக் கொண்டு சென்று பிற உணவுப் பொருள்களுக்குப் பண்டமாற்றுச் செய்தனர். பரதவர் இவ்வாறு வணிகராயினர். அவர்கள் தமது பண்டங்களைப் பொதி மாடுகளில் ஏற்றிச் சென்றனர். இந்தியப் பொருள்களை ஆபிரிக்கா, அராபியா முதலிய மேற்கு நாடுகளுக்கும், கிழக்கே மலாயா, சீனா முதலிய நாடுகளுக்கும் ஏற்றிச் சென்ற கடலோடிகள் தோன்றினார்கள். கடற்கரை நிலங்கள் சில பயிர்ச் செய்கைக்கு ஏற்றவாயிருந்தன. அங்கு பயிரிடப்பட்டது. வயலும் வயல்சார்ந்த நிலமும் மருத நிலமக்கள் நிலத்தை உழுது பயிரிட்டார்கள். ஆற்றோரங்களில் வாழ்ந்த மக்கள் ஆற்று வெள்ளத்தை வாய்க்கால் வழியாக வயல்களுக்குப் பாய்ச்ச அறிந்திருந்தார்கள். இவ்வாறு மிக மிக முற்காலத்திலேயே பயிர்ச் செய்கை தென்னிந்தியாவில் மிக வளர்ச்சியடைந்திருந்தது. ஆற்றுப் பள்ளத்தாக்குகளுக்கு அப்பால் பஞ்சு விளையும் நிலம் இருந்தது. புதிய கற்கால மக்கள் பஞ்சிலிருந்து நூல் நூற்கவும் நூலால் ஆடை நெய்யவும் அறிந்திருந்தார்கள். இப்பொழுது மக்கள் மரங்களால் வீடு கட்டினார்கள். தேவைக்கு அதிகமான தானியம் வீடுகளில் சேமித்து வைக்கப்பட்டது. மற்ற நிலங்களி லுள்ள உப்பு, மீன், வெண்ணெய், தயிர், கல் ஆயுதங்கள் போன்றவைக்குத் தானியம் பண்டமாற்றுச் செய்யப்பட்டது. மருத நிலத்தில் பண்டமாற்றுச் செய்யமுடியாத பண்டங்களை வெளியே கொண்டு செல்லவேண்டிய அவசியம் உண்டாயிற்று. பண்டங்களைக் கொண்டு செல்வதற்கு வண்டிகள் செய்யக் கண்டு பிடிக்கப்பட்டது. உணவுக்குப் பயன்படக்கூடிய மரஞ்செடி களும் கண்டறியப்பட்டன. இவ்வாறு திராவிட நாகரிகம் இந்திய நாட்டிலேயே தோன்றி வளர்ச்சியடைந்தது. இந்தியாவின் அயலிலிருந்து நாகரிகம் இந்தியாவை அடைந்ததென்பதற்கு ஆதாரம் சிறிதும் காணப்படவில்லை.1 பேச்சு சமையலும், உடையும் அல்லாத இன்னொன்றும் அறியப்பட்டது. அது பேச்சு. பேச்சு இசை சம்பந்தப்பட்டது அல்லது இசை சம்பந்தப்படாத தாக இருக்கலாம். பாடலுக்கு முன் பேச்சு இருந்ததெனப் பலர் கருதுகின் றனர். ஆதியில் பகுதி இசை சம்பந்தமும், பகுதி இசை சம்பந்தமில்லாததுமா யிருந்த பேச்சின் வேறுபாடே பாடலும் வசனமும் என வேறு பலர் கருதுகின் றனர். இதனை நன்கு அறிந்துகொள்ள முடியவில்லை. இலக்கிய வளர்ச்சியில் உரை நடைக்கு முற்பட்டது பாடல் எனத் தெரிகின்றது. பண், பாண் என்பது இசையின் பகுதிக்குப் பெயர். பண் என்பதிலிருந்து பாடு, பாட்டு முதலிய சொற்கள் எழுந்தன. பாடுதல் தமிழரின் ஆதிகாலப் பொழுது போக்குகளில் ஒன்று. பாணர் தொடக்கத்தில் பாடகராயிருந்தனர். நாகரிகம் வளர்ந்தபோது அரண்மனையில் அரசாங்கப் பாடகர் இருந்தனர். தமிழர் நாகரிகம் வளர்ச்சி யுற்றிருந்த காலத்தில் பாணர் அரசரின் நண்பரும் அவருக்கு ஆலோசனை கூறுவோருமாயிருந்தனர். சமயம் மனிதன் ஆயுதம் செய்யும், உணவைச் சமைக்கும், உடை அணியும், பேசும் விலங்காக மாத்திரம் இருக்கவில்லை; சமயமுடைய விலங்காகவும் வாழ்ந்தான். அவன் தான் விரும்பியவைகளைப் பெறவும், தன்னை அச்சுறுத்தும் தீமைகளைப் போக்கவும் வலிய ஆற்றலை வேண்டிக் கொள்ளும் வழிகளையும் அறிந்திருந்தான். அவ்வழிகள் மந்திர வித்தை தொடர்பான கிரியைகள். அவை விருந்து, பாட்டு, கூத்து வடிவிலிருந்தன. பிற்காலத்தில் விருந்து பாட்டு கூத்து என்பன வெவ்வேறாகப் பிரிக்கப் பட்டன. இடங்களுக்கேற்ப ஒவ்வொரு நிலத்திலும் தெய்வங்களும் கிரியை களும் தோன்றின. பழைய தமிழ் இலக்கியங்கள் மக்களின் வாழ்க்கையைக் கண்ணாடி போல் காட்டுகின்றன. பழைய தமிழ் இலக்கியங்கள் பெரும்பாலும் மறைந்து போயின. வாணிகம், ஆட்சி, தொழில், ஆட்சி முறைகள் கையாளப்பட்டன. இலக்கியங்கள் பெரும்பாலும் மனப்பாடஞ் செய்யப்பட்டுவந்தன. பழைய இலக்கியங்கள் பல இறந்துபோயின என்பதற்குத் தொல்காப்பியப் பொரு ளதிகாரத்துக்கு உரை எழுதிய பழைய ஆசிரியர்கள் துறைகள் பலவற்றுக்கு ஏற்ற மேற்கோள் காட்டமுடியாமல் இருந்தமையே சான்றாகும். இப் பொழுது கிடைத்துள்ள பழைய இலக்கியங்கள் மக்களின் வாழ்க்கை முறைகள் அவர்கள் வாழ்ந்த நிலங்களுக்கேற்பத் தோன்றி வளர்ச்சி யடைந்தன என்பதைத் தெளிவாகக் காட்டுகின்றன. பாடல்கள் தமிழ்நாடு நில அமைப்புக்கேற்பப் பிரிக்கப்பட்டிருந்த காலத்தில் பாடல்கள் தோன்றின. ஒவ்வொரு நிலத்திலும் அந்நிலத்தின் வாழ்க்கைக் கேற்ற பாடல்கள் எழுந்தன. ஆகவே திணை என்பது குறித்த நிலத்துக் குரிய பாடல் வகையைக் குறிப்பதாயிற்று. மனிதனின் காதல், போர் என்பவை களே புலவர் பாடுதற்கு ஏற்ற கருத்துக்களாகக் கொள்ளப்பட்டன. ஆகவே பாடல்கள் இரு வகைப்பட்டன. அகத்திணை, புறத்திணை என்பன அவற் றின் பிரிவுகள். அகம் என்பது காதலுடைய இருவர் மாத்திரம் உணர்ந்து அனுபவிக்கக் கூடியது; புறம் மற்றவரோடு கலந்து பங்குபற்றத் தக்கது. ஐந்து நிலங்களுக்குமுரிய காதற் செயல்கள் ஐந்து எனக்கொள்ளப்பட்டன. குறிஞ்சி நிலத்துக்குரியவை காதலர் ஒருவரை ஒருவர் கண்டு காதலித்து உடன் மணத்தல், மலைக் காட்சி முதலியன. ஆடவரும் மகளிரும் தனித் தனியே எதிர்ப்பட்டு காதலிப்பதற்கு ஏற்ற இடம் மலையாதலில் கூடலும் கூடல் நிமித்தமும் குறிஞ்சி நிலத்துக்கு உரிப்பொருளாகக் கொள்ளப்பட்டன. காதலன் காதலியை சுரவழியே பெண் வீட்டார் அறியாது கொண் டேகுதல், காதலன் காதலியை விட்டுப் பிரிந்து செல்லுதல் போன்ற பொருள் களைப் பாலைப் பாடல்கள் கூறுகின்றன. பிரிந்து சென்ற காதலன் வருந் துணையும் ஆற்றியிருப்பதாகிய செயலைக் கூறுவது முல்லை. தலை வனைப் பிரிந்த காதலி அவன் வரவை நினைந்து இரங்கியிருத்தல் நெய்தல். மருத நிலத்தில் விதைப்பு முடிந்து அறுப்புக் காலம் வரையில் மக்கள் பொழுது போக்குதற்கு ஏற்ற ஒழிவு உண்டு. அக்காலங்களில் காதலருக் கிடையில் ஊடல் நேரும். இது பெரும்பாலும் தலைவன் பரத்தையருடன் நட்புக் கொண்டிருத்தலால் உண்டாகும். திணைக்குரிய மக்களின் பெயர்களிற் சில இக்காலத்தில் சாதிப் பெயர்களாக வழங்குகின்றன. குறவர், மறவர், பரதவர், இடையர், வேளாளர் என்பன அவற்றுட் சில. திராவிடநாடு மிக முற்காலத்திலேயே நாகரிகம் பெற்றிருந்தது மிக மிக முற்காலத்திலேயே திராவிடருடையநாகரிகம் மிக உயர் வடைந்திருந்தது. நாட்டின் செழிப்பும் வாணிகமும் செல்வத்தை வளர்க் கின்றன. மக்களின் குழப்பமில்லாத வாழ்க்கையும் செல்வம் வளர்வதற்கு மற்றொரு காரணம். வடநாட்டு மக்கள் அடிக்கடி அன்னியப் படை எடுப்புக் களால் கலக்குண்டார்கள். அவர்கள் கையில் வாளைப் பிடித்துக்கொண்டு வீட்டையும் உறவினரையும் காக்கவேண்டியிருந்தது. அங்கு மக்களுக்கும் சொத்துக்கும் பாதுகாப்பு இருக்கவில்லை. தென்னாட்டு மக்களுக்கு இவ்வகைத் தொல்லை இருக்கவில்லை. நாட்டின் செல்வத்தை வற்றச் செய்யும் பெரியபோர்கள் தென்னாட்டில் நிகழவில்லை. தென் கடல்களில் கடற்கொள்ளைக்காரரும் காணப்படவில்லை. தரையில் அமைதி நிலவிற்று. அக் காலத்தில் அறியப்பட்டிருந்த கடலை அடுத்த நாடுகளோடு தமிழர் வாணிகம் புரிந்தனர். பாபிலோன், எகிப்து, அசிரியா முதலிய நாடுகள் இந்தியாவோடு வாணிகம் புரிந்தன. நாடு செல்வவளமடைந்தது. வடக்கே வாழ்ந்த மக்களைவிடத் தெற்கே வாழ்ந்த மக்கள் செல்வம் படைத்திருந் தனர். கடற் பயணங்கள் தென்மேற்கு இந்தியாவுக்கும் பாபிலோனுக்கு மிடை யில் ஒழுங்காக நடைபெற்றது. மரக்கலமோட்டும் மாலுமிகள் திராவிட மக்களாகவிருந்தனர். தந்தம், குரங்கு, மயில் போன்றவைகளின் தமிழ்ப் பெயர்கள் மேற்குத் தேசங்களில் வழங்கின. நிலம் செழிப்புற்றிருந்தது. கனிகளில் பொன் அரிக்கப்பட்டது. வைரம், முத்து, பவளம் முதலியவும் அதிகம் கிடைத்தன. தேக்கு, சந்தனம் முதலிய மரங்கள் மேற்குத் தேசங் களுக்கு ஏற்றப்பட்டன. தமிழில் காணப்படும் நாடு, ஊர் என்னும் சொற்கள் தமிழரின் பழைய பண்பாட்டை உணர்த்துவன. நாடு என்னும் சொல் நடு என்னும் அடியாகப் பிறந்தது. பலவகை மரஞ்செடிகளை நட்டு உண் டாக்கும் இடம் நாடு எனப்பட்டது. ஊர் என்பதற்கு வயல் சூழ்ந்த இடம் என்பது பொருள். ஊர் என்பது உழு என்னும் அடியாகப் பிறந்தது. ஊர் என்பது உழுதலை உணர்த்தும். முற்காலத்தில் நாட்டைப்பற்றியும் ஊரைப் பற்றியுமுள்ள தமிழருடைய கருத்து இதுவாகும். பழைய சாலதியாவின் தலைநகர் 1ஊர் எனப்பட்டது. உரோமரின் நகரைக் குறிக்கும் பெயர் ஊர்ப்ஸ். இவை ஊர் என்னும் தமிழ்ச்சொல் சம்பந்தமானவை. நாடு என்பதற்கு எதிர்ச் சொல் காடு. காடு என்பதற்குக் கடத்தற்கு அரியது என்பது பொருள். காட்டைக் கெடுத்துப் பயிரிடும் நிலம் நாடு எனப்பட்டது. இவ்வாறு திராவிடரின் நாகரிகம் இத் தமிழ் நாட்டிலேயே படிப்படி வளர்ச்சியடைந்துள்ளது என அறிந்துகொண்டோம். இனித் தமிழர் நாகரிகத்தின் சிறப்பு இயல்புகளைத் தனித்தனி எடுத்துக் கூறுவோம். நாகரிக மடைந்த திராவிடர் தொலைவிடங்களிற் சென்று குடியேறுதல் சூழ்நிலைக்கேற்ப மக்கள் எவ்வாறு நாகரிக வளர்ச்சி பெற்றார்கள் என்பதை விளக்கியுள்ளோம். இன்று தென்னிந்திய மக்கள் இலங்கை, மலாயா, மொரிசஸ், தென்னாப்பிரிக்கா முதலிய நாடுகளிற் குடியேறி வாழ்ந்து வருகின்றனர். மிகப் பழங்காலத்திலேயே திராவிட மக்கள் ஆபிரிக்கா மேற்குப் பாரசீகம், மலாயா, கம்போதியா, சுமத்திரா, யாவா, சீனா முதலிய பல நாடுகளிற் சென்று குடியேறி வாழ்ந்தார்கள். இந் நிகழ்ச்சியை வலியுறுத்தும் சான்றுகள் பல இன்று கிடைத்துள்ளன. “பண்டை நாளிலே சீரும் சிறப்பும் எய்தியிருந்த மிசிரம் என்னும் எகிப்து நாட்டினம், பாரசீகக் கடற்கரையிலிருந்து அழிந்துபோன சுமேரு (Sumeria) நாட்டிலும், சோழர் குடியேறினமையினாலே. சோழதேயம் என்னும் பெயரினை எய்திப் பிற்காலத்திலே மொழிச் சிதைவினாலே சாலதேயா (Chaldea) என வழங்கப்பட்ட தொல்பதியிலும் சோழர் குலத்தார் கலத்திற் சென்று வெற்றி பெற்றுத் தமது ஆணை செலுத்திய கிரேத்தத் (Crete) தீவிலும் அதற்கணித்தாகிய யவனபுரத்திலும் (Greece) உரோமர் வருவதற்குமுன் பழைய இத்தாலி (Italy) தேசத்திலும் ஐபீரியா எனப்பட்ட பழைய ஸ்பெயின் (Spain) தேசத்திலும் பிறவிடங்களிலும் தமிழ்க்குலத்தார் வாழ்ந்து நாகரிகம் பரப்பினார்களென மேற்றிசை அறிஞர் ஆராய்ச்சியாற் கண்டு வெளியிட்டிருக்கின்றனர்......சிந்துநதி தீரத்திலே பாண்டிய மன்னர் ஆளுகையிலே மீனாடு என்னும் பெயரோடு திகழ்ந்ததும் பின்னாளிலே ‘இறந்தோர் மேடு’ என்னும் கருத்துடைய முகஞ்சதரை (Mohonjo Daro) என்னும் பெயரெய்தியதுமாகிய நாட்டிலே மிதுனராசியானது யாழ் என்னும் பெயரினால் வழங்கப்பட்டு இணையாழுருவத்திலே குறியீடு செய்யப் பட்டதென அறிஞர் கூறுவர். “மணிமலர் என்னும் கட்டுரைத் தொகுதியினுள்ளே பண்டைத்தமிழர் பெருமை என்னும் உரையினை எழுதிய சென்னைப் பல்கலைக் கழகத்து வரலாற்றுப்பகுதி ஆசிரியர் வி.ஆர். இராமசந்திர தீட்சிதரவர்கள், ‘தென் னாட்டிலிருந்து தமிழ் நாகரிகம் உரோமா புரிக்கும், கிரேக்க நாட்டிற்கும் பரவியது. இன்னும் தக்கண பீடபூமியைச் சேர்ந்த வேட்டுவர்1 (கிராதர்) என்ற குறிஞ்சி நில மக்கள் யவன தேசத்திற்குச் சென்று தங்கள் அரசை நிலை நிறுத்தித் தங்கள் பெயரையும் அந்நாட்டிற்குக் கொடுத்தார்கள். இதுவே கிரீட் (Crete) தேசம். இதன் நாகரிகத்துக்கும் தமிழர் நாகரிகத்துக்கும் ஒப்புமை மிகுதியாயுள்ளது.’ என எழுதியிருக்கின்றார்கள். வில்லவர் என்னும் சேரர் பெயரை ‘hunters’ என மேனாட்டார் மொழிபெயர்க்க அது திரும்பவும் தமிழிற்கு மொழிபெயர்க்கப்பட்டு வேட்டுவர் என அமைவது இயல்பு. ஆதலினாலே தக்கிண பீடபூமியைச் சேர்ந்த வேட்டுவர் என்ற குறிஞ்சி நில மக்கள் எனத் தீட்சிதரவர்கள் உரையிலே குறிக்கப்பட்டோர் வில்லவராகிய சேரர் குலத்தினரே என்பது தெளிவாகின்றது. சிலப்பதிகாரத்திலும் பதிற்றுப் பத்திலும் காணப்படும் சேரர் மெய்க்கீர்த்தி இவ்வுண்மையினை நிலை நிறுத்துகின்றது. சேரநாடு கேரளம் எனத் திரிவுபட்டதுபோலச் சேரர் தீவு ‘க்ரீத்’ ஆயிருக்கலாம். தமிழ்நாட்டுவேந்தர் யவனர்களைத் தமது கோட்டை வாயில்களிலே காவலாளர்களாக வைத்திருந்த செய்தியும், உரோமாபுரி வேந்தனாகிய ஆகஸ்டஸ் மன்னனுக்குப் பாண்டியன் தூதனுப்பிய செய்தி யும், பிறவும் ஆதாரமாகத் தீட்சிதரவர்கள், ‘மத்தியதரை நாகரிகமென்று இப்போது வழங்கப்படுவது தென்னிந்திய நாகரிகம் என்று துணிவாய்ச் சொல்லலாம்’1 என்று முடிவு கூறுகின்றார்”2 உலகின் பெரும் பகுதியில் திராவிடம் வழங்கியதற்குச் சான்று மொகஞ்சதரோ அரப்பா முதலிய சிந்துவெளி அழிபாடுகளில் கிடைத் துள்ள முத்திரைகளில் அக்காலத்து வழங்கிய எழுத்துக்கள் பொறிக்கப் பட்டுள்ளன. அவ்வகை எழுத்துக்கள் ஹைதராபாத்து, திருநெல்வேலி முதலிய விடங்களிற் கண்டுபிடிக்கப்பட்ட வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட மட் பாண்டங்களிற் பொறிக்கப்பட்டுள்ளன. இலங்கையிலே கேகாலையி லுள்ள மலை ஒன்றிலும் இவ்வகை எழுத்துப் பொறிக்கப்பட்டிருப்பதை ஹெரஸ் பாதிரியார் குறிப்பிட்டுள்ளார். மொகஞ்சதரோ எழுத்துகளை மிக ஒத்த எழுத்துகள் தென்னமெரிக்காவுக்கு அண்மையிலுள்ள ஈஸ்ரர் தீவுகளிற் காணப்பட்டன. எகிப்து, மேற்கு ஆசியா, சின்ன ஆசியா, கிரேத்தா முதலிய நாடுகளில் வழங்கிய பழைய எழுத்துகளுக்கும் மொகஞ்சதரோ எழுத்து களுக்கும் ஒன்றுமை இருப்பதைப் பழைய எழுத்து ஆராய்ச்சியாளர் காட்டி யுள்ளனர். இவ்வெழுத்துக்களை எல்லாம் நன்கு ஆராய்ந்த ஹெரஸ் பாதிரி யார் பழைய சீனம், சுமேரியம், பழைய எல்லம், பழைய அராபி, அசோகன், பிராமி, மினோவன், பழைய எகிப்தியம், இலிபியன், எற்றூஸ்கன் எழுத்துக் களெல்லாம் பழைய திராவிட எழுத்திலிருந்து தோன்றியவை எனக் கூறி யுள்ளார். மேற்கு ஆசிய, மினோவ, மொகஞ்சதரோ, ஈஸ்டர் தீவு எழுத்துகள் எல்லாம் ஒரே தொடக்கத்தைச் சேர்ந்தனவென்றும் அவை அவற்றைப் பயன்படுத்திய மக்களின் போக்கின்படி வெவ்வேறு வகையில் வளர்ச்சி யடைந்தன என்றும் சர்டயான் மார்சல், பேராசிரியர் லாங்கடன் ஜி.ஆர். ஹன்டர் போன்ற ஆராய்ச்சி வல்லார் கருதினார்கள். இக்கொள்கை நாள் வீதம் வலியடைகின்றது. ஒட்டுச் சொற்களுடைய மொழிகள் பெரும் பாலும் திராவிட மொழியினின்றும் பிறந்தனவெனக் கூறலாம்.1 மொகஞ்சதரோ அகழ் ஆராய்ச்சி அறியப்படுதற்குப் பல ஆண்டுகளின் முன்னரேயே பேராசிரியர் சுந்தரம் பிள்ளை அவர்கள், “சதுமறை ஆரியம் வருமுன் சகமுழுது நினதாயின் முதுமொழிநீ யனாதியென மொழிகுவதும் வியப்பாமே” எனக் கூறியது மிக வியக்கத்தக்கது. தமிழ்ப் பற்று மிக்குடையவராய் விளங்கிய விருதை சிவஞானயோகிகள் இற்றைக்கு முப்பத்துமூன்று ஆண்டுகளின்முன் கூறியுள்ளது வருமாறு: “திருமலர் மணமென வொருமையின் மல்கி எண்ணில் பொழிற்பயிர் பண்ணிக் காக்கும் ஒப்பில் பெருமை மெய்ப்பொரு ளன்பு பாங்கி னிலைபெற் றோங்குந் தமிழகத் தாறறி வுடைமைப் பேறுறு மக்கள் முன்னர்த் தோன்றி மன்னிக் கெழுமி இமிழிய லொலிசார் தமிழ்மொழி பேசி மண்ணிற் பலவிட நண்ணிக் குடியிருந் தவ்வவ் விடத்துக் கொவ்விய வண்ணம் கூற்று நடையுடை வேற்றுமை யெய்தி பற்பல வினப்பெயர் பெற்றுப் பெருகினர். * * * * * * * முதலிடைக் கழக முன்னீர் கொள்ளப் படுதலி னிந்தியப் படியின் வளம்வவி அயனாட் டவரீ ராயிர மாண்டாப் படையெடுத்துத் துன் புறுத்திய படியால் நூல்களு மவற்றி னுண்ணிய வழக்கும் அருகி மறைந்தன வாதலின்” இந்தியநாடு முழுமையிலும் வாழ்ந்த மக்கள் திராவிடர் இதுவரையிலும் அகழ் ஆராய்ச்சியினால் அறியப்பட்ட பழைய நாகரிகங்களுள் இந்திய நாகரிகமே மிகப் பழமை உடையது. சிந்துவெளி நாகரிகத்தின் காலம் கி.மு. 3500 என்று சொல்லப்படுகின்றது. சிந்துவெளி நாகரிக காலத்தில் இந்தியா முழுமையிலும் ஒரே மொழியை வழங்கிய ஒரே இனமக்கள் வாழ்ந்தார்கள். அம்மக்கள் திராவிடர் எனப்படுவர். ஆரிய மக்கள் கி.மு. இரண்டாயிரத்தில் அல்லது அதற்குப்பின் இந்திய நாட்டை அடைந்தார்கள். அக்காலத்தில் வடநாடு முழுமையிலும் திராவிட மொழி வழங்கியதென்பதற்குச் சான்று ஆரிய மக்களின் பழைய பாடல்களாகிய வேதங்களில் திராவிடச் சொற்கள் பல இருப்பதும் பிறவுமென ஆராய்ச்சி யாளர் நன்கு ஆய்ந்து நிறுவியுள்ளாhகள்.1 ஆரியர் வருகைக்குப் பின்பே இந்திய நாட்டில் வெவ்வேறு இன மக்கட் கலப்பும் மொழிக்கலப்பும் உண்டாயிற்று. கி.மு. இரண்டாயிரத்தில் வடக்கே இமயத்துக்கும் தெற்கே குமரிக்கும் இடைப்பட்ட பெரு நிலப்பரப்பு திராவிட நாடாக விளங்கிற் றென, தெளிதில் அறியக் கிடக்கின்றது. புதிய மக்களின் வருகையால் உண்டான மாறுதல்கள் புதியமக்களுக்கும் வடக்கே வாழ்ந்துகொண்டிருந்த திராவிட மக்களுக்குமிடையில் போர்கள் நிகழ்ந்தன. ஆரியருடைய வேதபாடல் களால் அக்காலத்தில் திராவிடர் உயர்ந்த நாகரிகம் பெற்றுவிளங்கினார்கள் எனத் தெரிகின்றது.2 நாகரிகத்தில் உயர்நிலை அடைந்திருந்த திராவிடரை வெல்வது ஆரியமக்களுக்கு இயலாததாகவிருந்தது. நாளடைவில் இருசாதியாருக்கிடையில் திருமணக்கலப்புகளால் தொடர்புகள் உண் டாயின.3 திராவிடப் பெண்களை ஆரிய ஆடவரும் ஆரியப் பெண்களைத் திராவிட ஆடவரும் மணந்தனர். திராவிடருடைய சமூகம் தாயாட்சி முறை யினது. ஆரியருடைய சமூகம் தந்தைஆட்சி முறையினது. திராவிடப் பெண்கள் மூலம் ஆரிய ஆடவருக்குப் பிறந்தவர்கள் தந்தை ஆட்சி முறைப்படி ஆரியர் எனப்பட்டனர். ஆரியப்பெண்கள் மூலம் திராவிடத் தந்தையாருக்குப் பிறந்தவர்கள் திராவிடர் தாயாட்சி முறைப்படி ஆரியர் எனப்பட்டனர். இவ்வகையான கலப்புப் பல நூற்றாண்டுகளாக நிகழ்ந்தது. விந்தியமலைக்கு வடக்கே உள்ள மக்கள் தம்மை ஆரியர் எனக் கூறிக் கொள்வாராயினர். ஆனால் அவர்களிடத்தில் ஆரியக் குலத்தினருக்குரிய குணங்குறிகள் மிகச்சிறிதே காணப்பட்டன.1 மக்களிடை கலப்பு உண்டானபோது மொழிகளும் கொள்கைகளும் கலப்பவாயின. திராவிட மொழிச் சொற்கள் பல திரித்து வழங்கப்பட்டன. இவ்வாறு வழங்கப்பட்ட மிகப்பல சொற்கள் இன்று வடமொழியிற் காணப்படுகின்றன. அச்சொற்களுக்கு மூலம் அறியமுடியாமல் இருக்கிறது. இந்தோ ஆரியமொழிக்கு இனமுடையதாக ஐரோப்பிய நாடுகளில் வழங்கும் ஆரியமொழிகளில் இச்சொற்கள் காணப்படவில்லை.2 புதிதாக வந்த மக்களைவிட வடக்கே வாழ்ந்துகொண்டிருந்த திராவிட மக்கள் பலர். மக்கட் கலப்பினால் சில மாற்றங்கள் உண்டாகி மொழி மாறுபட்டபோதும் வாழ்க்கை முறையில் அவர்கள் திராவிட சமூகத்தினர் போலவே காணப்பட்டனர். புத்தர் காலமக்கள் வாழ்க்கையைப்பற்றி ரைஸ் டேவிட்ஸ் என்பார் கூறியிருப்பது இதனை வலியுறுத்துகின்றது.3 வடநாட்டில் வழங்கியமொழி சமக்கிருதமா? வடநாட்டிலே மக்கள் வழங்கிய மொழி சமக்கிருதமென்று பலர் நினைக்கிறார்கள். இக்கருத்துத் தவறுடையது. சமக்கிருதம் ஒருபோதும் பேச்சு மொழியாகவிருக்கவில்லை. அது குருமாருக்குரிய சாதிமொழி யாகவே இருந்தது. இந்தியநாட்டு மொழியின் திரிபுகளாகிய பிராகிருதம் எனப்பட்ட மொழிகளே பேசப்பட்டுவந்தன.4 ஆரிய மொழியைச் சேர்ந்தனவென்று கருதப்படும் வடஇந்திய மொழிகளின் இலக்கண அமைப்பு திராவிட மொழி இலக்கணத்தை ஒத்துள்ளதென்றும், ஒரு மொழியின் குடும்பத்தொடர்பை அறிவது இலக் கண அமைப்பினாலல்லது சொற்களைக் கொண்டு அறிதல் கூடாதென்றும், வடஇந்திய மொழிகள் திராவிட மொழிகளின் திரிபு என்றும் பி.தி. சீனிவாச ஐயங்கார் துணிந்துள்ளார்.1 பாரசீகர் வடநாட்டின் சிலபகுதிகளை வென்று சில காலம் ஆட்சி நடத்தினார்கள். பின்பு கிரேக்கர் படைஎடுப்பு நேர்ந்தது. பின்பு சித்தியர், மங்கோலியர், அவுணர் (Huns) முதலிய பல சாதியினர் வடநாட்டின்மீது படை எடுத்துவந்து நாட்டில் சிற்சில பகுதிகளிற் குடியேறி இந்திய மக்க ளோடு கலந்தார்கள். இதனால் அலக்சாந்தர் படை எடுப்புக் காலம் முதல் மேலும் மக்கட் கலப்பும் மொழிக் கலப்பும் இந்திய நாட்டில் உண்டாயின. இந்திய மக்களின் குல முறையான ஆராய்ச்சி நடத்திய ரைஸ்லி என்பார் இன்று இந்தியாவில் காணப்படும் குலப்பிரிவினரை கீழ்வருமாறு பிரித்துள்ளார்; படத்திற் காண்க. திராவிடருக்கு முற்பட்ட திராவிடர் என்னும் கொள்கை திராவிடர் இந்திய நாட்டுக்கு அயலிலிருந்து வந்தார்கள். அவர் வருகைக்குமுன் நிகுரோவக் குணங்குறிகளுள்ள ஒருசாதியினர் அங்கு வாழ்ந்துகொண்டிருந்தார்கள் என்றும், அவர்கள் திராவிடருக்கு முற்பட்ட திராவிடர் (Pre-Dravidians) எனப்படு வர் என்றும், அம் மக்களே இன்று மலைகளில் வாழ்வோரென்றும் ஒரு சிலர் எழுதிவருகின்றனர். இக் கொள் கைக்கு ஆதாரம் ஒரு சிறிதும் கிடைக் கவில்லை. திராவிட மக்கள், வாழும் இடங்களுக்கேற்ப, ஐந்து வேறு வகைத் திருத்தங்களுடையவர்களாக வளர்ச்சியடைந்தார்கள் என முன் கூறியுள்ளோம். அவர்களில் குறிஞ்சி பாலை நிலமக்களே மற்ற மக்களின் தொடர்பின்றிப் பழைய முறையில் வாழ்ந்து புதிய சில பழக்கவழக்கங் களுடையராய் வருகின்றனர். அவர் களின் உடல், நிறம், வளர்ச்சி முதலியன அவர்களின் உணவு, வாழ்க்கை நிலை போன்றவை ஏதுவாக உண்டானவை. திரு. வி.ஆர். இராமச்சந்திர தீட்சிதர் அவர்கள் கூறுவது வருமாறு. “திராவிடருக்கு முற்பட்ட திராவிடர் (Pre - Dravidans), பழைய திராவிடர் (Proto-Dravidans) என்னும் கொள்கைகள் இருபதாம் நூற்றாண்டுக் கற்பனை. பழம்பொருள் ஆராய்ச்சியாளராவது வரலாற்றுக்காரராவது தென்னிந்தியாவில் ஒன்றுக்குப்பின் ஒன்றாகத் தொடர்ந்து வந்த பண்பாட்டுக் காலங்களில் புதிய மக்கள் புகுந்து மாறுதல் களைக் கொண்டுவந்தார்கள் என்று சொல்வதற்கேற்ற ஆதாரம் ஒன்றும் காட்டமுடியாது. பழைய கற்காலப் பண்பாட்டுக்குப்பின் புதிய கற்காலப் பண்பாடும் அதற்குப்பின் இரும்புக் காலப் பண்பாடும் முறையே ஒன்றை ஒன்று தொடர்ந்து வந்தன என்று கொள்வதற்கு ஏற்ற சான்றுகளே காணப் படுகின்றன. பழம் பொருளாராய்ச்சி இக் கொள்கைக்கு வலி அளிக்கின்றது. காடுகளிலும், மலைகளிலும் வாழும் மக்கள் குலமுறையாகத் தென்னிந்திய மக்களோடு பொருந்தாதவர்கள் என்று கொள்ளுதல் சாலாது. புதிய கற்காலம் முதல் தென்னிந்தியாவில் ஐந்து வகையான பண்பாடுகள் இருந்து வருகின்றன வென்பதைத் தென்னிந்திய மக்களைப்பற்றி ஆராய்ச்சி செய்வோர் நன்கு அறிவர். வேட்டையாடியும் மீன் பிடித்தும் வாழ்வோர் பழைய கற்காலப் பண்பாட்டைச் சேர்ந்தவர். அவர்கள் தொடர்பாகக் காடு களிலும் கடற்கரைகளிலும் வாழ்ந்தமையால் அவர்களின் மனப்பாங்கும் வாழ்க்கைப் பழக்கங்களும் தனிமுறையில் வளர்ச்சியடைந்தன. நிறத்தைப் பற்றி நாம் ஆராயவேண்டியதில்லை. இது சூழலின் வெப்பநிலை, கை யாளும் தொழில் சம்பந்தங்களால் உண்டாவது. பயிரிடும் தொழில் பரவின தால் பழைய பொருளாதார வழிகள் முற்றாக மாறுதலடைந்தன என்று கொள்ளுதல் முடியாது. சில சூழல்களில் விடப்பட்டோர் பழைய தொழில் களையும் பழக்க வழக்கங்களயும் பற்றித் தம் வாழ்க்கையை நடத்தினர். வேளாளர், காராளர், ஆயர்வேறு வகையான பண்பாடுகளை எய்தினர். பாலை நில மக்கள் குறிஞ்சி மக்களோடு கலந்து ஒன்றுபட்டனர். தமிழ் நாட்டில் பாலை என்று தனி நிலம் இல்லை. ஆகவே கடற்கரைகளிலும் மலைகளிலும் வாழும் மக்களைத் திராவிடருக்கு முற்பட்ட திராவிடர் என்று கூறுதல் சாலாது”1 பி.தி. சீனிவாச ஐயங்கார் ஆரியருக்கு முற்பட்ட தமிழர் பண்பாடு என்னும் நூலிற் கூறியிருப்பது வருமாறு: 2“தமிழ் மொழிக்குரிய மக்களைப்போலவே அம்மொழியும் தென்னிந்தியாவிலேயே தோன்றி யாதும் குழப்பமின்றி உயர்ந்த இலக்கிய வளர்ச்சி நிலையை அடைந்தது. கற்காலம் முதல் தமிழ்க்குலம் ஒரே தொடக்கத்தைச் சேர்ந்ததாக இருந்து வருகின்றது. தமிழ் மொழியைப் பயின்ற அயல் நாட்டு ஆராய்ச்சியாளர் சிலர் தமிழ் மொழியை வழங்கிய பழைய மக்கள் மத்திய ஆசியாவினின்று, வந்தார்கள் என்றும், அதற்குக் காரணம் பலுச்சிஸ்தானத்தில் வழங்கும் பிராகூய் மொழியில் தமிழுக்கு இனமுடைய பல சொற்கள் காணப்படுகின்றன வென்றும் தம்மனம்போல் கூறினர். பிராகூய் மொழியில் தமிழுக்கு இனமுடைய சொற்கள் காணப்படு தல், தமிழ் இந்தியமொழியன்று எனக் கூறுவதற்குப் போதுமான ஆதார மாகாது. இரண்டு தலைமுறைக்கு முற்பட்ட ஆராய்ச்சியாளர் உலகில் வாழ்ந்த பழைய மக்கட் குலத்தினரை எல்லாம் வேறு எங்கோ இருந்து வந்த வர்கள் எனக் கூறுவது இயல்பாக இருந்தது. அவர்களுக்குத் தென்னிந்தியா வில் கற்காலப் பண்பாடு எவ்வளவில் பரவியிருந்ததென்றும், தமிழின் பழைய அடிப்படையில் தமிழ்ர் தென்னிந்தியாவில் அறியமுடியாத காலம் முதல் வாழ்ந்து வருகின்றார்கள் என்பதற்குப் போதிய சான்றுகளுள்ளன வென் பதையும் அவர்கள் அறியாதிருந்தார்கள். புதிய கற்காலப் பண்பாட்டுக்கு மத்திய இடம் தென்னிந்தியாவே. கடப்பா பழைய மத்திய காலப் பழங்கற் காலப் பண்பாட்டுக்கு மத்திய இடமாகும். எகிப்திலே நீல ஆற்றங் கரையி லிருந்து மறைந்துபோன பழைய நாகரிகத்தின் சின்னங்கள் சில இன்றும் தக்காணத்தில் உள்ளன. எலியட் சிமித் என்பார் கிழக்கு ஆப்பிரிக்க மக்க ளிடையே காணப்பட்டனவும், இன்றும் தக்காணத்திற் காணப்படுகின்றனவு மாகிய திராவிட மக்களின் நம்பிக்கைகள் பழக்க வழக்கங்களையும் எடுத்துக் காட்டி இரு மக்களுக்கும் தொடக்கம் ஒன்று எனக் குறிப்பிட்டுள்ளார். ஆறாயிரம் ஆண்டுகளின் முன் திராவிடர் நாகரிகம் திராவிட மக்களின் மிகப் பழைய நாகரிகத்தைப்பற்றி மொகஞ்ச தரோ, அரப்பா, சங்குதரோ முதலிய அழிபாட்டு மேடுகளிற் கண்டுபிடிக்கப் பட்ட பழம்பொருள்கள் வெளியிடுகின்றன. அரப்பா மொகஞ்சதரோ முதலிய நகரங்களில் திராவிடமக்கள் வாழ்ந்தார்கள். அக்காலத்தில் அவர்கள் எகிப்தியர், பாபிலோனியர்களை ஒத்த அல்லது அவர்களிலும் உயர்ந்த நாகரிகமுடையவர்களாக வாழ்ந்தார்கள். அக்காலத்தில் இரும்பு பயன்படுத்தப் படவில்லை. நகரங்கள் அமைக்கப்பட்டிருந்தன. வீடுகள் செங்கற்களால் கட்டப்பட்டன. அவைகளுக்கு மாடிகளும் மாடிகளுக்குச் செல்லப் படிக்கட்டுகளுமிருந்தன. மாடிகளிலிருந்து கழிவு நீர் கீழே செல்வ தற்குச் சூளையிட்ட மண்குழாய்கள் பொருத்தி வைக்கப்பட்டிருந்தன. கூரைவழியாக வழியும் நீர் பீலிகளில் விழுந்து பின் குழாய்கள் வழியே கீழே சென்றது. ஒவ்வொரு வீட்டுக்கும் கிணறும் குளிக்குமறையும் இருந்தன. கழிவுநீர், கால்வாய்கள் வழியாக வீதியிலுள்ள பெரிய கால்வாயில் விழுந்தது. கால்வாய்கள் செங்கற் பதிக்கப்பட்டிருந்தன. தண்ணீர் சென்று விழும் இடத்தில் செங்கற்பதித்த குழி இருந்தது. பாரமான பொருள்கள் குழியில் தங்கிநின்றன. சுத்தஞ் செய்வோர் அக் குழிகளில் தங்கிநிற்கும் அழுக்குகளைச் சுத்தஞ் செய்தனர். வீடுகளுக்கு மலக்கூடங்களும் இருந்தன. பெரிய வீதிகள் 33-அடி அகலமுடையன. சிறிய வீதிகள் 18-அடி அகலமுடையன. மக்கள் வாற்கோதுமையையும், கோதுமையையும் விளைவித்தார்கள். ஆடு, மாடு, எருமை முதலிய விலங்குகள் வீடுகளில் வளர்க்கப்பட்டன. யானைகள் பழக்கி வேலை செய்விக்கப்பட்டன. மக்கள் பஞ்சு விளைவிக்கவும் பஞ்சிலிருந்து நூல் நூற்கவும் நூலிலிருந்து ஆடை செய்யவும் அறிந்திருந்தார்கள். அவர்கள் எகிப்து, பாபிலோன், பாரசீகம் முதலிய நாடுகளோடும் தென்னிந்தியாவோடும் வாணிகம் புரிந்தார்கள். ஒருவகைச் சுண்ணாம்புக் கல்லிற் செதுக்கப்பட்ட முத்திரைகளும், நாட்டியமாடும் பாவனையுள்ள பாவைகள், சுவாத்திக அடையாளமிட்ட பொருள்களும், எருமை காண்டாமிருகம் யானை மாடு போன்ற வடிவங் களும் எழுத்துக்களும் வெட்டப்பட்ட முத்திரைகளும், கல், பொன், செம்பு, வெண்கலம், வெள்ளி முதலியவைகளால் செய்யப்பட்ட பாத்திரங்களும் இவைபோன்ற அழகிய பொருள்களும் காணப்பட்டன. அக் கால மக்கள் இவ் விருபதாம் நூற்றாண்டு மக்களைவிடப் பலவகையில் உயர்ந்த நாகரிக நன்னிலை அடைந்திருந்தார்கள் என ஆராய்ச்சியாளர் நவின்றுள்ளார்கள்.1 சிந்துவெளி நகரங்களின் காலம் கி.மு. 3500 வரையில். பிற்காலத்தில் இந்திய நாட்டை வந்தடைந்த ஆரிய மக்களும் அவர் களின் சந்ததியினரும் அப்பழைய நாகரிக முறைகள் பலவற்றைக் கைக் கொண்டனரென்றும் அதற்குச் சான்று அவர்களின் வேதபாடல்களில் காணப்படுகின்றதென்றும் ஆராய்ச்சி அறிஞர் கூறுவர். திராவிட மக்களைப் பற்றிய சில குறிப்புகள் வேதங்களிற் காணப்படுகின்றன. பாரதம், இராமா யணம் என்னும் நூல்களில் தென்னாட்டு அரசர்களைப்பற்றியும் தென் னாட்டைப்பற்றியும் சில குறிப்புகள் காணப்படுகின்றன. அந்நூல்கள் காலத் துக்குக் காலம் எழுதிச் சேர்க்கப்பட்டன வாதலின் அவைகளிற் கூறப்படு வன சிறந்த வரலாற்றுச் சான்றுகளாகமாட்டா. “மாபாரதத்தையும் இராமாயணத்தையும் நாம் கி.மு. 5ஆம் நூற் றாண்டைய நூல்கள் எனக்கொள்ளலாம். அந்நூல்களின் எப் பகுதி எக் காலத்தில் செய்யப்பட்டது என்னும் ஐயப்பாடும் உண்டாகின்றது. அவை களில் கூறப்படும் இந்திய நாட்டின் பிரிவுகள் கி.மு. நாலாம் நூற்றாண்டு வரையில் உறுதியாக அமைந்திருந்தனவென்று கொள்ளலாம். சாதகக் கதைகள் பதினாறு இராச்சியங்களையும் வேறு சில நாடுகளையும் பற்றிக் கூறுகின்றன. அவைகளை எல்லாம் இந்திய படமொன்றில் ஒழுங்குபட வைத்துப் பார்த்தால் மிகத் தெற்கே உள்ள நாடு கோதாவரிக்குத் தெற்கே போகவில்லை. பழைய பௌத்த இலக்கியங்கள் விந்தியத்துக்குக் கீழே உள்ள நாடுகளைப் பற்றி அறியா. பாணினிக்குத் தென்னாட்டைப் பற்றித் தெரியாது அவர் தெற்கே உள்ளனவாகக் குறிப்பிட்ட இடங்கள் கச்சா, அவந்தி, கோசலம், கரூசா, கலிங்கம் என்பன. இவை விந்தத்துக்கு வடக்கே உள்ளன. பாணினிக்கு இரண்டு நூற்றாண்டுகளின் பின் விளங்கிய கார்த்தியாயனர் தென்னாட்டைப் பற்றி அறிந்திருந்தார். பதஞ்சலி காலத்தில் தென்னாடு நன்றாக அறியப் பட்டிருந்தது. பதஞ்சலியின் காலம் கி.மு. 150. கார்த்தியாயனரின் காலம், கி.மு. 350. பண்டாக்கரது கொள்கையின்படி பாணினி கி.மு. 7ஆம் நூற்றாண்டில் விளங்கினார்.1 அக் காலத்தில் வடநாட்டவரால் தென்னாடு சிறிதும் அறியப் படாதிருந்தது. மெகஸ்தீனஸ் காலத்தில் தென்னிந்தியாவைப்பற்றி வட நாட்டவர் சிறிது அறிந்திருந்தார்கள். சாணக்கியரின் அர்த்த சாத்திரத்தில் தென்னாட்டைப்பற்றிக் கூறப்பட்டுள்ளது. அசோகரின் கல்வெட்டுக்களில் சேர சோழ பாண்டியர் நாடுகள் குறிக்கப்பட்டுள்ளன.2 தமிழ்நாட்டெல்லை கி.மு. 1000 வரையில் விந்தியமலைக்கு வடகே உள்ள நாடுகள் ஆரியாவர்த்தம் என்னும் பெயர் பெற்றிருந்தன. விந்தியத்தக்குத் தெற்கே தமிழ் வழங்கிற்று. கி.மு. 1000 வரையில் எபிரேய மொழியில் சென்று வழங்கிய பெயர்கள் தமிழாகவே காணப்படுகின்றன. தொல்காப்பியம் செய்யப்படுகின்ற காலத்தில் தமிழ்நாட்டின் வட வெல்லை திருப்பதி மலை யாகவிருந்தது. அக்காலத்தில் தெலுங்கு தனிமொழியாகப் பிரிந்துவிட்டது. ஒருகாலத்தில் தமிழ்நாட்டெல்லை கிருட்டிணா ஆறுவரையில் இருந்த தெனச் சிற்பநூலிற் காணப்படுவதாக ஆசிரியர் உ.வே. சாமிநாத ஐய ரவர்கள் சங்ககாலத்தமிழும் பிற்காலத் தமிழும் என்னும் நூலிற் குறிப் பிட்டுள்ளார். ஒன்பதாம் நூற்றாண்டுக்கு முற்பட்ட இலக்கியங்கள் தெலுங்கு மொழிக்கு இல்லை. 1சங்கச் செய்யுட்களில் வேங்கடத்துக்கு வடக்கே வடுகர் நாடு இருந்ததெனக் காணப்படுகின்றது. பழம் பொருள் ஆராய்ச்சி வரலாற்று ஆராய்ச்சிக்கு எவ்வகையில் துணைபுரிகின்றதோ அவ்வாறே பழைய இலக்கியங்களும் அதற்குத் துணைபுரிகின்றன. சங்கநூல்களைக் கொண்டு இற்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளின் முன் தமிழகத்தின் பண்பாடு எவ்வகையினதென நாம் தெள்ளிதில் அறியக்கூடும். சங்ககாலத்தில் தமிழ்நாடு 2கிருட்டிணா ஆற்றுக்குத் தெற்கே கன்னியாகுமரி வரையிலுமுள்ள நிலப்பரப்பு மூன்று பெருவேந்தராலும் ஏழு குறுநில மன்னராலும் ஆளப் பட்டது. இவர்களை அன்றிப் பல சிற்றரசர்களும் இருந்தார்கள். கடற் கரையை அடுத்தவும் வெளியாகவுள்ளவும் பகுதிகளே பெரிய அரசரால் ஆளப்பட்டன. மலைகளும் காடுகளும் குறுநில மன்னருக்கு உரியனவா யிருந்தன. கிழக்குக் கடற்கரை ஓரமாகக் கிருட்டிணா ஆறுதொடக்கம் இராமநாதபுரப்பகுதியிலுள்ள தொண்டி வரையிலுள்ள நாடு சோழர் ஆட்சிக்குட்பட்டிருந்தது. இதன் மத்தியில் காஞ்சி ஆளுகைக்குட்பட்ட திருக்கோயிலூரைச் சூழ்ந்த மலைநாடு மலையமானுக்கு உரியதாயிருந்தது. சோழ இராச்சியத்துக்குத் தெற்கே பாண்டிய நாடு இருந்தது. இது கடற்கரையி லிருந்து கடற்கரை வரையும் பரந்து இக்கால மதுரை திருநெல்வேலி திருவி தாங்கூர் முதலிய மாகாணங்களும் கோயமுத்தூர் கொச்சி முதலியவற்றின் பகுதிகளும் அடங்கியதாயிருந்தது. மேற்குத் தொடர்ச்சி மலையில் ஆயின் மலை நாடு இருந்தது. தாலமி ஆயை அய்ஒய் (Aioi) எனக் குறிப்பிட் டுள்ளான். திருநெல்வேலியிலுள்ள கொற்கைத் துறை முகத்தை அடுத்து எவ்விநாடு இருந்தது. பழனி மலையைச் சுற்றிப் பேகன் நாடு இருந்தது. இதற்கு வடக்கே கடற்கரையை அடுத்துச் சேரநாடு இருந்தது. இதுபாலக் காட்டுவெளிக்கு ஊடாக சேலம் கோயமுத்தூர் வரையும் நீண் டிருந்தது. தென் மைசூரில் தொடங்கி ஒன்றின் பக்கத்தே ஒன்றாக இருங்கோவேளின் அரயம் நாடும், பாரியின் பறம்பு நாடும், அதியமானின் தகடூரும் (தருமபுரி), ஓரியின் கொல்லிமலை யும் இருந்தன. முதல் மூன்று நாடு களும் மைசூர் எல்லைக்குள் இருந் தன. இவ்வெல்லைக்கு அப்பால் கிழக்கே கங்கர் நாடும் தெற்கே கொங்கு நாடும் இருந்தன. தமிழ்நாட் டின் மேற்கேயுள்ள வட எல்லைப் புறம் துளுவ நாட்டரசனாகிய நன்னனுக்கும், கிழக்கேயுள்ள வட எல்லைப்புறம் வேங்கடத்துப் புல்லிக்கும், உரியனவாயிருந்தன. அதற்கு வடக்கே ஆரிய நாடும் (வடுகர்நாடு), தண்டாரணியமும் இருந்தன. தென்னாட்டில் படையெடுப்புகள் மௌரிய சந்திரகுப்தன் காலம்வரையில் தென்னாட்டில் அயல் நாட்டுப் படை எடுப்புகள் நேரவில்லை. சந்திரகுப்தனுடைய மரணத்துக்குப் பின் அவன் மகன் பிந்துசாரன் தமிழ்நாட்டின்மீது படை எடுத்தான். இதன்மேல் இடையிடையே வடநாட்டவர் படை எடுப்புகள் நேர்ந்தன. சேர, சோழ, பாண்டிய அரசர் ஆரியரைவென்று வில்லும் புலியும் மீனுமாகிய தத்தம் கொடிகளை மேருவில் நாட்டியும் அக் குறிகளை அம்மலையில் தீட்டியும் உள்ளார்கள் எனக் தமிழ்ப் பழம் பாடல்களில் காணப்படுவன ஆரியர் தமிழர் போர்களையே குறிக்கின்றன. சேர அரசருள் செங்குட்டு வனும், பாண்டிய அரசருள் நெடுஞ்செழியனும், சோழ அரசருள் கரிகாலனும் ஆரியரை வென்றதாக வரலாறு உண்டு. களப்பிரர் கி.பி. நாலாம் நூற்றாண்டில் களப்பிரர் என்னும் ஒரு கூட்டத்தினர் கிளம்பித் தொண்டை நாடு ஒழிந்த மற்றை மூவேந்தர் நாடுகளையும் அடிப்படுத்தி ஏறக்குறைய இருநூறு ஆண்டுகள் ஆட்சி புரிந்தனர். களப்பிரர் எங்கிருந்து வந்தார்கள் என்பதும், பிறவும் அறியமுடியாமல் இருக்கின்றன. கடுங்கோன் களப்பிரரை வென்று பாண்டிய இராச்சியத்தை அவரிடமிருந்து மீட்டான். பல்லவர் கி.பி. மூன்றாம் நூற்றாண்டுமுதல் பல்லவர் காஞ்சியைத் தலைநக ராகக்கொண்டு தொண்டைநாட்டை ஆண்டு வந்தனர். தொண்டைமான் இளந்திரையன் மணிபல்லவத்து நாககுலப்பெண்ணுக்கும் சோழனுக்கும் பிறந்தவனென்று சங்கநூல்களிற் காணப்படுகின்றது. மணிபல்லவ அரச குடும்பப் பெண்வழித் தோன்றிய இளந்திரையனின் சந்ததியினர் பல்லவர் எனப்பட்டார்களாகலாம். பல்லவம் கொடியைக் குறிக்கும். பல்லவர் ஆட்சி ஒன்பதாம் நூற்றாண்டில் மறைந்துபோயிற்று. பல்லவம் என்பதன் மறு பெயரே தொண்டை என்பது எஸ்.கே. ஐயங்கார் கருத்து. சாளுக்கியர் ஆந்திர நாட்டின் மேற்குக்கரையில் விந்தயமலைக்குத் தெற்கிலும் சேரநாட்டு எல்லைக்கு வடக்கிலும் சாளுக்கியர் என்னும் ஒரு கூட்டத்தினர் அதிகாரமுடையவராய் கி.பி. 7ஆம் நூற்றாண்டு தொடக்கம் ஆட்சி புரிந்தனர். சாளுக்கியருக்கும் பல்லவருக்கும் போர்கள் நடந்தன. புலுகேசி என்னும் சாளுக்கிய வேந்தன் மகேந்திரவன்மன் என்னும் பல்லவ அரசனோடு பொருது கிழக்கே கிருட்டிணாவுக்கும் கோதாவரிக்கும் இடையிலுள்ள வெங்கி நாட்டைக் கைப்பற்றி அதனைத் தனது தம்பியை ஆளும்படி நியமித்தான். அது காலத்தில் கிழக்கு சாளுக்கிய நாடு எனப்படுவதாயிற்று. ஊர் அமைப்பு கோயிலைச்சுற்றி அல்லது அரசனுடைய அரண்மனையைச்சுற்றியே நகரங்கள் எழுந்தன. ஒவ்வொரு கிராமத்துக்கும் கோயில் மத்திய இடமாக விருந்தது.1 மக்கள் கோயில்களைச்சுற்றிக் குடியேறினார்கள். ஒவ்வொரு தொழில் செய்வோரும் தனித்தனி வீதிகளில் வாழ்ந்தார்கள். கிராமத்தின் நடுவில் வெளியிருந்தது. அது மன்றம் எனப்பட்டது. அங்கு நிழல்மரம் நின்றது. அதைச் சுற்றித் திண்ணையிடப்பட்டிருந்தது. ஓய்வு நேரங்களில் மக்கள் அங்கே கூடிப் பொழுதுபோக்கினார்கள். அங்கு ஊர்க்கூட்டங்களுங் கூட்டப்பட்டன. நியாயத்தீர்ப்பும் அங்கு செய்யப்பட்டது. பள்ளிக்கூடங் களும் அங்கு நடத்தப்பட்டன. எல்லாவகையான நிகழ்ச்சிகளுக்கும் கிளர்ச்சி களுக்கும் மன்றம் மத்திய இடமாயிருந்தது. அங்கு அருள்தறி நிறுத்தி வழிபடப்பட்டது. கிராமத்தில் நடக்கவேண்டிய ஒவ்வொரு முக்கிய நிகழ்ச்சியைப் பற்றியும் அங்கு கூட்டங்கள் கூட்டி ஆலோசிக்கப்பட்டன. கிராமங்கள் கிராமசபைகளால் ஆளப்பட்டன. பெரும்பாலும் அவ்வக் கிராமங்களிலுள்ள கடவுளின் பெயரால் கிராமங்களின் பெயர்கள் அறியப் பட்டன. ஒவ்வொரு கோயிலும் ஓர் அரண்மனையின் அமைப்பைப் போலக் கட்டப்பட்டது. அரசனுடைய மாளிகையும் கோயில் எனப்பட்டது. நகரம் அரசனுடைய மாளிகை அல்லது அரண்மனையைச் சுற்றி மதில் இடப்பட்டிருக்கும். அதற்கு அடுத்து அரச குடும்பத்தினரும் அரசனது கருமத்தலைவர்கள் வாழும் வீதிகளும் இருக்கும். இவ்வீதிகளைச்சுற்றி மதிலிடப்பட்டிருக்கும். மதிலுக்கு வெளியேயுள்ள வீதிகளில் பற்பல தொழில் புரியும் மக்கள் வாழ்வார்கள். அங்கு கடைகளும் கடைத்தெருக் களும் உண்டு. பகைவர் இலகுவில் அழிக்கவும் ஏறவும் முடியாத மதில் நகரைச் சூழ்ந்து இருந்தது. மதிலின் வாயில்களுக்கு பெரிய மரங்களால் இரும்பு சேர்த்துச் செய்யப்பட்ட கதவுகள் இடப்பட்டிருந்தன. அவை பழைய கோயில்களிலிடப்பட்டுள்ள கதவுகள் போன்றவை. உள்ளே திரண்ட மரங்களால் அவை தாழிடப்பட்டிருந்தன. கோட்டை வாயிலில் கொடிகள் கட்டப்பட்டிருந்தன. மதிற்சுவர்கள் வீரர்நின்று போர்செய்தற்கேற்ற அகலமுடையனவாயிருந்தன. கொதி எண்ணெயை இறைப்பனவும், நெருப்பை வீசுவனவும், கல் எறிவனவும், அம்பு உமிழ்வனவும் போன்ற பொறிகள் பல மதிற்சுவர்களில் அமைக்கப்பட்டிருந்தன. வெளிமதிலைச் சுற்றிப் பெரிய அகழ் இருந்தது. இது ஆழமுடையதாகவும் நீர் நிறைவுடையதாகவும் இருந்தது. நீரில் பெரிய முதலைகளும் மீன்களும் இருந்தன. கோட்டைவாயிலிலிருந்து அகழியைக் கடக்கக் கூடியதாகப் பலகை இடப்பட்டிருந்தது. போர்க்காலங்களில் பலகை எடுக்கப்பட்டது. அகழில் வெளியே முள்மரங்கள் நடப்பட்டுள்ள காவற்காடு இருந்தது. அங்கு வேட்டுவர் வாழ்ந்தனர். அதற்கு வெளியே விளை நிலங்கள் இருந்தன. கி.பி. 1225இல் இந்தியாவுக்கு வந்து திரும்பிய1 சீனப் பிரயாணி ஒருவன் எழுதியிருப்பது கொண்டு அக்காலக் கோட்டை எவ்வா றிருந்ததென்று. நாம் அறிந்து கொள்ளலாம். “இங்கு (சோழநாட்டில்) ஏழுசுற்றுமதில்களுள்ள நகரம் உண்டு. வடக்கிலிருந்து தெற்குநோக்கியுள்ள வெளிமதிலின் நீளம் பன்னிரண்டு லி (LI) கிழக்கிலிருந்து மேற்கே செல்லும் மதிலின் நீளம் ஏழு ‘லி’ ஒவ்வொரு சுற்று மதிலுக்குமிடையில் நூறடி வெளியுண்டு. ஏழு மதில்களில் நான்கு செங்கல்லாற் கட்டப்பட்டவை; இரண்டு களிமண்ணால் எடுக்கப்பட்டவை; மத்தியிலுள்ளது மரத்தினாற் கட்டப்பட்டது. அங்கு பழமரங்களும் பூ மரங்களும் நடப்பட்ட சோலை உண்டு. முதல் இரண்டு சுவர்களுக்கு இடையிலுள்ள வெளியில் மக்களின் வீடுகள் உண்டு. அவை அகழியாற் சூழப்பட்டுள்ளன. மூன்றாம் நான்காம் சுவர்களுக் கிடையிலுள்ள வெளியில் அரசாங்க கருமகாரர்களின் வீடுகளுண்டு. ஐந்தாவது மதிலுக்குள் அரசனுடைய குமாரர் வாழ்கின்றனர். ஆறாவது சுவருக்குள் கோயில்களும் பூசாரிகளின் வீடுகளும் உண்டு. ஏழாவது சுவருக்குள் நானூறுவீடுகள் அடங்கிய அரண்மனை உண்டு.” மௌரியசந்திரகுப்தனுடைய அரண்மனையைப்பற்றிச் சொல்லப் படும் விபரமும் பிறவும் சங்க இலக்கியங்களிலும உதயணன் கதையிலும் கூறப்படுவனவற்றை ஒத்திருக்கின்றன. அவற்றை இங்கு தருகின்றோம். “அரசனுடைய அரண்மனை பெரிய பூஞ்சோலையின் நடுவில் உள்ளது. அங்கு பழகிய மயிற் சேவல்களும் அழகிய கோழி இனங்களும் உலாவித் திரிந்தன. நிழல் மரங்களின் கொம்புகள் ஒன்றோடு ஒன்று பின்னிக் கிடந்தன. அங்கு நாட்டப்பட்டுள்ள மரங்கள் எப்பொழுதும் பச்சையாக இருக்கும். அவை ஒருபோதும் இலை உதிர்த்துவதில்லை. அங்கு பறவைகள் பல வாழ்கின்றன. அவை கிளைகளில் கூடுகட்டியுள்ளன. அங்கு பல குளங்கள் உண்டு. அவைகளில் மிகப் பெரிய பழகிய மீன்கள் விடப்பட்டுள்ளன. அரசனுடைய குமாரரல்லாத பிறர் அக் குளங்களில் மீன்பிடிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள். அரசனுடைய அரண்மனையை அலங்கரிக்கும் முலாம் பூசப்பட்ட தூண்களில் பொன்கொடிகள் சுற்றியிருக்கின்றன. அவைகள்மீது வெள்ளி யால் செய்யப்பட்ட பறவைகள் இருக்கின்றன. அரண்மனையைச்சுற்றி மதிலும் அகழும் உள்ளன. அரண்மனையின் பின்புறத்தில் பெண்கள் உறையும் அறைகள் உண்டு. அங்கு கூனும் குறளும் இருப்பர். பெண்கள் உறையும் அறைகளுக்கு வெளியே இராசகுமாரரும் இராசகுமாரிகளும் உறையும் அறைகள் இருந்தன. அவைகளுக்கு வெளியே கொலுமண்டப மும் கருமகாரரின் அறைகளும் இருந்தன. அரசனுக்குத் தனி அறைகள் இருந்தன. அரண்மனையில் பல இரகசிய அறைகளும், சுரங்க வழிகளும், உள்ளே வெளியுள்ள தூண்களும், மறைவான படிக்கட்டுகளும், கீழே விழுந்து விடக்கூடிய தரையும் இருந்தன.-Chandra Gupta Maurya and his time-p 194.-R K. Mookerji. அரசனும் ஆட்சியும் அரசனுடைய அதிகாரம் எல்லா அதிகாரங்களுக்கும் மேலாக விருந்தது. தந்தைக்குப்பின் மகன் என்றவாறு அரசுரிமை தலைமுறை தலைமுறையாக வந்தது. அரசனுடைய கடமை துட்டரைத் தண்டிப்பதும் மக்களின் அமைதியைக் காப்பதுமாகும். அரனுடைய விருப்பமே நாட்டின் சட்டம்; அதனை மறுத்தல் எவருக்கும் முறையாகாது. போரில் அரசனே படையை நடத்திச் சென்றான். சமாதான காலத்தில் எல்லாத் தீர்ப்புகளுக்கும் அவனே தலைவனாக விருந்தான். அரன் இருக்கும் மண்டபம் மிகவும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அவனைச் சூழ்ந்து பல ஆடம்பரங்கள் இருந்தன. மக்கள் அதனையே விரும்பினார்கள்.1 அரசன் இருக்குமிடம் கொலு, அரசிருக்கை அல்லது ஒலக்கம் எனப்பட்டது. அரசிருக்கைவேளை அல்லாத மற்றக் காலங்களில் அரசன் மக்களோடு அளவளாவினான். நகரத்தில் நடக்கும் விழாக்களிலும் அவன் கலந்துகொள்வான். அவனுடைய வெற்றிக்காகவும் நீண்ட வாழ்விற்காகவும் கோயில்களில் துதிகள் சொல்லப்பட்டன. அரசன் தங்கும் மாளிகைகள் அவன் நாட்டின் பல இடங்களில் இருந்தன. நாடு போரின்றி அமைதியுற்றிருக்கும் காலங்களில் அரசன் பெருமக்களோடு நாடு முழுவதையும் சுற்றிவந்தான். ஆட்சி அவன் அதிகாரத்தில் இருந்தபோதும் ஒழுங்கும் நீதியும் நிலவின. அரசனைச் சூழ்ந்து பிரபுக்கள், பெருமக்கள், கரும வினைஞர் முதலியோர் இருந்தனர். முக்கியமான கருமங்களைச் செய்வதன் முன் அவன் உடன் கூட்டத்து அதிகாரிகள் என்னும் கூட்டத் தாரோடு ஆலோசனை செய்தான். அனுபவமும் கல்வியும் உள்ளவர்களே ஆலோசனையாளராக அவனால் தெரியப்பட்டனர். கூட்டங்கள் அரசிருக்iக மண்டபத்தில் நடந்தன. அரச கட்டளைகள் நீண்ட ஆலோசனைக்குப் பின்னரே வெளியிடப்பட்டன. கட்டளைகள் வெளியானதும் பெருந்தரம் அல்லது பிரமராயன் எனப்பட்ட அமைச்சன் அவைகளைத் திருமந்திர ஓலைக்காரன் என்னும் மூலஒலை காப்பாற்றும் அதிகாரியால் பொத்தகத்தில் எழுதும்படி செய்தான். பின்பு அவை படி எடுக்கப்பட்டு விடையில் அதிகாரிகளால் இராச்சியத்தின் பல பகுதிகளுக்குப் போக்கப் பட்டன. அக் கட்டளைகள் கிராமக் கூட்டங்களுக்கும் அறிவிக்கப்பட்டன. இக் கூட்டங் களுக்கு அரசனுடைய மக்கள் அல்லது உறவினரே தலைவராகவிருந்தனர். அக் கட்டளைகள் முக்கியமுடையனவும் நிலையானவுமாயின் அவை கோயிற் சுவர்களில் எழுதப்பட்டன. அரசனுக்குப் பொது அமைச்சர், அந்தரங்க அமைச்சர் முதலியோர் இருந்தனர். அரண்மனையில் தலைமைப் பெருந்தனம் (கருவூலம்) இருந்தது. அங்கிருந்து போர் வீரர், கருமகாரர் முதலியோர் சம்பளத்துக்கும் அரண்மனைச் செலவுக்கும் பணம் எடுக்கப்பட்டது. மாகாணங்களில் சிறுந்தனங்கள்1 இருந்தன. இவை பெரும்பாலும் கோயில்களிலிருந்தன. இவைக்குப் பொருள் பெரும்பாலும் இறையிலி நிலங்களாலும், நன்கொடை களாலும் வந்தது. இப்பொருளில் கோயிற் செலவு போக மீதி மக்கள் நலத்திற்காகப் பயன்படுத்தப்பட்டது. அரசாங்கத்தில் மதிப்பும் ஒழுக்கமும் வாய்ந்த ஒற்றர் இருந்தனர். இவர்கள் மாகாணத் தலைவர்களினைப் பற்றிய செய்திகளை அறிந்து அரசனுக்குத் தெரிவித்தார்கள். அரசன் மாறுவேடம் பூண்டு இரவிற்சென்று மக்களின் எண்ணங்களை அறிந்தான். ஒற்றர் துறவிகள், வணிகர் போன்று வேடந்தாங்கி அயல் நாடுகளிற் சென்று பகை அரசரின் மறைவான செய்திகளை அறிந்து வந்தனர். அரசனைத் தலைவனாகக்கொண்டு ஆட்சி செய்யும் முறையை ஆரிய மக்கள் திராவிடரிடமிருந்து அறிந்தார்கள் என்பதற்கு ஆதாரங்கள் காணப்படுகின்றன. 1அவர்கள் தமது மொழியை யும் திராவிடரின் உதவியைப் பெற்றுத் திருத்திக் கொண்டனர்.2 மண்டல ஆட்சி ஆட்சிக்குட்பட்ட நிலம் ஆளுகையின் பொருட்டு 3மண்டலங்கள் அல்லது மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தன. மண்டலங்கள் நாடுகளாகவும் வளநாடுகளாகவும் பிரிக்கப் பட்டன. ஒவ்வொரு நாட்டிலும் பல கிராம சபைகள் இருந்தன. பல கிராமங்கள் சேராத கிராமம் தனியூர் எனப்பட்டது. கிராமங்கள் சேரிகளாகவும் குடும்புகளா(வட்டங்கள்)கவும் பிரிக்கப்பட்டிருந்தன. சில கோட்டங்கள் அரசனின் மேற்பார்வையின்கீழ் நாட்டுக்குரிய தலைவனால் (குறுநில மன்னன்) ஆளப்பட்டன. மற்ற மண்ட லங்களுக்கு அரசன் மண்டலிகரை நியமித்தான். அவர்களின் ஆட்சிக் காலம் அவர்களின் ஒழுக்கத்தையும் அரசனின் நல்லெண்ணத்தையும் பொறுத்திருந்தது. அரசன் மண்டலங்களின் போக்கைத்தான் செய்யும் சுற்றுப் பயணங்களாலும் ஒற்றர்களாலும் அறிந்தான். மண்டலிகன் வரிகளைத் தண்டினான்; நியாயத் தீர்ப்புச் செய்தான்; நாட்டில் அமைதியும் நியாயமும் நிலவும்படியும், ஆட்சி தொடர்பான கருமங்களை நன்கு நடைபெறும்படியும் செய்தான். மண்டலங்கள் முழுமையிலும் சுற்றுப் பயணஞ்செய்து மக்களோடு தொடர்பு வைத்திருத்தல், கணக்கு களைப் பரிசோதித்தல், சபைகளைக் கண்காணித்தல் முதலியன அவனுடைய கடமைகள். அவன் கோயிற் கணக்கு களையும் பரிசோதித்தான். கோயிற் கருமங்களின் குறைபாடுகள் ஐந்து பேரடங்கிய கூட்டத்தோடு மண்டலிக ரால் ஆராயப்பட்டன. மண்டலிகருக்கு அடுத்தபடியி லுள்ளவர் நாட்டுத் தலைவர். அவர் நாடுகண்காட்சி அல்லது நாடுவாகை எனப்பட்டார். நாட்டுத் தலைவர்கள் நாட்டின் ஆட்சிமுறையைக் கண்காணித்தார்கள். கிராமசபை ஒவ்வொரு கிராமத்தின் ஆட்சிக்கும் கிராமசபை பொறுப்பா யிருந்தது. மாகாண அதிகாரிகள் படைத் தலைவரோடு மாகாணம் முழுமை யும் பயணஞ்செய்து விசாரணைகள் செய்தும் கணக்குகளை மேற்பார்த்தும் வந்தனர். கிராமசபைகள் கோயில்களில் கூடின. கிராம சபை உறுப்பினரின் எண் கிராமங்களுக்கு ஏற்றவாறு இருந்தது. சில சமயங்களில் ஐந்நூறு பேர் வரையில் இருந்தனர். அங்கத்தவர்களைத் தெரியும் வாய்ப்புக்காகக் கிராமம் பல குடும்பு (வட்டங்கள்)களாகப் பிரிக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு குடும்பும் சபைக்கு அங்கத்தவர் ஆகக்கூடியவர்களின் பெயர் எழுதிய ஓலைநறுக்குக் கட்டொன்றை அனுப்பிற்று. கல்வியும் சொத்தும் இருப்பது உறுப்பினனாவ தற்குத் தகுதியை உண்டுபண்ணிற்று. கால்வேலிக்கு அதிகம் வரிகொடுக்கும் நிலமுள்ளவன் அல்லது தனது சொந்த நிலத்தில் வீடுகட்டி வாழ்பவன் தெரிவுக்குத் தகுதியுடையவனாகக் கொள்ளப்பட்டான். அங்கத்தவனாகத் தெரியப்படுபவன் 35 வயதுக்கும் 70 வயதுக்கும் இடைப்பட்டவனாயிருத் தல் வேண்டும். அவன் கடந்த மூன்று ஆண்டுகளில் சபை உறுப்பினனாக இருந்தவனாதல் கூடாது. குடும்புகளுக்குச் சீட்டுகள் மூலம் அறிவிக்கப் பட்டபின் கூட்டம் கூட்டப்பட்டது. அதற்கு எல்லாக் கோயில் நம்பிகளும் அழைக்கப்பட்டனர். அவர்களில் முதியவன் சபைக்குத் தலைமை வகித் தான். அச் சீட்டுகள் எல்லாம் ஒரு வெறும் பானைக்குள் இடப்பட்டன. பின்பு சிறுவன் ஒருவன் அவைகளுள் ஒன்றை எடுத்தான். அப் பெயர் வாசிக்கப்பட்டது. அப் பெயருடையவன் குடும்பின் அங்கத்தவனாகத் தெரியப்பட்டான். இவ்வாறு ஒவ்வொரு குடும்பின் அங்கத்தினரும் தெரியப் பட்டார்கள். குளங்களைக் கண்காணிப்போர் குளங்கள் ஆண்டுதோறும் திருத்தப்படுவதை மேற்பார்ப்பதற்கு ஒரு சபை இருந்தது. அது குளத்தில் சேற்றை அப்புறப்படுத்துதல், நீர்ப் பாய்ச்சுதல், பயிரிடுவோருக்குச் சமமாக நீர் அளித்தல் முதலியவற்றைக் கண்காணித்தது. வீதிகளை அமைத்தல் அவைகளை அகலமாக்குதல் முதலியவைகளை மேற்பார்க்கும் சபையும் இருந்தது. குடும்புவாரியாக அங்கத்தவர் தெரியப்பட்ட பின்பு சபை அவர் களைப் பலவேறு வேலைகளைப் பார்க்கும்படி தெரிவுசெய்தது. ஒவ்வொரு அங்கத்தவனும் கடமை பார்க்கும் காலம் 360 நாள்களாகும். இச் சபையின் நிகழ்ச்சிகள் ‘கர்ணத்தான்’ என்னும் கணக்கனால் எழுதி வைக்கப்பட்டன. கோயில் நீங்கலாகக் கிராமத்தின் நிர்வாகம் சபையின் பொறுப்பில் இருந்தது. நியாயத்தீர்ப்பு அரசன் தானே நேரில் நியாயத் தீர்ப்புச் செய்தான். உடன் கூட்டத்தார் அவனுக்கு ஞாயத்தீர்ப்பில் உதவிபுரிந்தனர். சிறிய வழக்குகள் ஒவ்வொரு சேரியையும் மேற்பார்க்கும் சபையால் விளங்கித் தீர்ப்பளிக்கப்பட்டன. கொலைவழக்குகள் கிராமசபையால் விசாரணை செய்யப்பட்டன; சில சமயங்களில் மாகாணத் தலைவர் விசாரணை செய்தார். முதன்மையான வழக்குகள் படைத்தலைவனால் (சேனாபதியால்) ஐவர் அடங்கிய சபைபின் உதவியோடு விசாரணை செய்யப்பட்டன. மிக முக்கியமான வழக்குகளே அரசனுடைய விசாரணைக்கு விடப்பட்டன. அரசன் நாடுகளைச் சுற்றிப் பயணம் செய்யும் காலங்களில் அவை விசாரணை செய்யப்பட்டன. திருட்டுக்குற்றத்துக்குப் பணம் அபராதம் விதிக்கப்பட்டது. அத் தண்டம் தரும ஆசனம் எனப்பட்டது. ஒப்பந்தங்களைமீறிய குற்றங் களுக்குப் பணம் அபராதம் விதிக்கப்பட்டது; சில சமயங்களில் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது. கண்ணுக்குக்கண் கையுக்குக்கை என்பது போல உறுப்புகளைக் களைந்துவிடுவது பொதுவான சட்டமாக விருந்தது. கொதி எண்ணையில் கைவைத்தல் போன்ற குற்றச்சோதனை அறியப்படாத தன்று. கொலைக்குத் தண்டனை கொலையாகவிருந்தது. வேண்டுமென்று செய்யப்படாத கொலைக்கு 16 பசு மாடுகள் அபராதம் விதிக்கப்பட்டது. இறந்தவரின் உயிர் ஆறுதல் அடைதற்குக் கிராமக் கோயிலில் எப்பொழுதும் எரியும்படி நெய்விளக்கு ஏற்றி வைக்கப்பட்டது. இராசத்துரோகத்துக்குச் சட்டப்படி தண்டனை விதிக்கப்பட்டது. இராசத்துரோகஞ் செய்தவரின் சொத்துக்கள் விற்கப்பட்டன. அவ்வாறு கிடைத்தபொருள் கோயில்களுக் கும் அறநிலையங்களுக்கும் கொடுக்கப்பட்டன. நகரக் காவலர் (Police) தலைவன் தண்டநாயகன் எனப்பட்டான். நகர்க்காவலர் வீதிகளைக்காவல் புரிந்தனர். அவர்கள் பதிகாவல் என அறியப்பட்டார்கள். படை தமிழ் அரசர் ஒருவரை மற்றவர் கீழ்ப்படுத்தும்படி பெரும்பாலும் போர் விளைத்தனர். தேர், யானை, குதிரை, காலாள் எனப் படை நால்வகைப் பட்டது. யானை வீரன் புலித்தோற் சட்டை அணிந்து யானைமீது இருந்தான். அவனைச் சூழ்ந்து படைக்கலந் தாங்கிய வீரர் சென்றனர். தேர்கள் நிறமூட்டிய துணிகளில் அலங் கரிக்கப்பட்டிருந்தன. அவை போர்க்களத் துக்கு நிரையாகச் சென்றன. போரில் வில், வேல், ஈட்டி, வாள், கவண், முதலிய பல வகை ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டன. படைகள் அணி, உண்டை, ஒட்டு முதலிய பல அணிவகுப்புகளாக நின்று போர்செய்தன. முன் அணி ஆக்கம், கொடிப்படை, தார், தூசி எனப்பட்டது. பின்படை கூழை எனப்பட்டது. நாடு இராணுவ சம்பந்தமான பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. 1படைத்தலைவன் அரசனோடு நேரில் தொடர்பு வைத்திருந்தான். படை யின் பெரும் பகுதி காலாள். முன்னே குதிரைப் படையும் யானைப் படையும் சென்றன. தேர்கள் பெரிதும் பயன்படுத்தப்படவில்லை. அராபியர் கிரேக்கர் முதலிய அயல் நாட்டினரும் படையில் இருந்தார்கள். தூதுவரை அவ மானப்படுத்துவதும் கொல்வதும் நீதிக் கேடாகக் கொள்ளப்பட்டது. இச் சட்டத்தை மீறுவதால் போர்கள் மூண்டன. வரி நிலவரி தானிய வகையாகக் கொடுக்கப்பட்டது. பெரும்பாலும் விளைவில் ஆறிலொன்று வரியாகக் கொள்ளப்பட்டது. பட்டினங்களும் தோப்புகளும் பணவகையில் வரியை இறுத்தன. வரிக் கணக்கு எழுதும் ஏடு வரிப் பொத்தகம் எனப்பட்டது. வரிதண்டும் கருமிகள் (உத்தியோகத்தர்) இருந்தார்கள். ஒவ்வொரு நாட்டிலும் உள்ள பெரிய வீதியில் சுங்கம் தண்டப்பட்டது. சுங்கம் கொடாவிடின் பண்டங்களை அப்புறங் கொண்டு செல்லமுடியாமல் இருந்தது. போரில் கிடைத்த கொள்ளைப் பொருள், அரசாங்கத்துக்குரிய நிலங்கள், காடு, முத்துக் குளிப்புப் போன்ற வகையிலும் அரசனது கருவூலத்துக்குப் பொருள் வந்தது. இவைகளல்லாமல் கடை வரி, நெசவு வரி, செக்கு வரி போன்ற வரிகளும் வழக்கில் இருந்தன. கண்ணாலக் கடம் என்னும் கலியாண வரியும் இருந்தது.1 நீர்பாய்ச்சும் வாய்ப்பு அரசர் பயிருக்கு நீர்ப்பாய்ச்சும் வசதிகளைஅதிகம் செய்தனர். கரிகாற் சோழன் கட்டிய காவிரி அணை கிட்டிய காலம் வரையில் இருந்தது. ஆறுகளும், கிளை ஆறுகளும் நீர்ப்பாய்ச்சும் வாய்ப்பின் பொருட்டு மறித்துக் கட்டப்பட்டன. திரிச்சினாப்பள்ளியில் கங்கைகொண்ட சோழபுரத் திலுள்ள குளத்தின் அணைக்கட்டுப் பதினாறு மைல் நீளமுள்ளது. பல வெட்டு வாய்க்கால்களும் வெட்டப்பட்டன. செல்வர் வீதி ஓரங்களில் கிணறுகள் வெட்டிச் சுமைதாங்கி அமைத்தார்கள். வீதிகளின் அபாயமான இடங்களில் போர்வீரர் நிறுத்தப்பட்டிருந்தனர். ஆகவே போக்கு வரத்துச் செய்வோர் திருடர் பயமின்றிச் சென்றனர். கால்வாய் வெட்டுதல் ஏரி வெட்டுதல் போன்றவைகள் மக்களால் கட்டாயப்படுத்திச் செய்விக்கப் பட்டன. அவ்வகைவேலை ஊழியம், ஆள்மாஞ்சி எனப்பட்டது. ஆற்றுக் கால்வெட்ட, ஏரிகுழிவெட்ட, சுமை தூக்க என்னும் சொல்வழக்குகள் பட்டையங்களில் காணப்படுகின்றன. அரசருக்குப்புரியும் கட்டாய ஊழியம் இலங்கையில் இராசகாரியம் எனப்பட்டது. பொழுதுபோக்கு மற்போர், சிலம்பம், தேரோட்டம், யானைப்போர், குதிரை ஓட்டம், மாட்டுப் போர், ஆட்டுப் போர், கோழிப் போர், காடை கவுதாரிப்போர் என்பன மக்களின் பொதுவான பொழுது போக்குகளாகும். பெண்கள் வீட்டில் அடைக்கப்பட்டு இருக்கவில்லை; அவர்கள் அம்மானை, பந்து, பாட்டு, ஆட்டம், கும்மி, குரவை விளையாட்டுகளிற் பொழுது போக்கினர்; கிளி, நாகணவாய் முதலியவைகளை வளர்த்தனர். போக்குவரத்து முற்காலப் போக்குவரத்து பெரும்பாலும் கால்நடை, வண்டி, பல்லக்கு, தண்டிகை, கழுதை, எருது, யானை, குதிரை, தேர் வகைகளா யிருந்தன. ஓரிடத்திலிருந்து இன்னோரிடத்திற்குப் பண்டங்கள் கொண்டு செல்வதற்குப் பொதிமாடுகளும் கழுதைகளும் வண்டிகளும் பயன்படுத்தப் பட்டன. அரசரும் பெருமக்களும் தேர் பல்லக்கு, யானை முதலியவை களில் சென்றனர். கடலிற் செல்வதற்குப் பலவகை மரக்கலங்கள் இருந்தன. மரக்கலங் களின் முன்புறம், சிங்க முகம், யானை முகம், குதிரை முகம் போன்று செய்யப் பட்டிருந்தது. மரக்கலங்களுக்குப் பாய் மரங்களும் பாயும் இருந்தன. அளவைகள் எண்ணெய், நெய், தயிர் போன்றவையும் தானியங்களும் அளந்து விற்கப்பட்டன. பொன் வெள்ளி முதலியவை நிறுத்துவிற்கப்பட்டன. தானிய அளவை; 5 செவிடு 1 ஆழாக்கு; 2 ஆழாக்கு 1 உழக்கு; 2 உழக்கு 1 உரி; 2 உரி 1 நாழி; 8 நாழி 1 குறுணி; 2 குறுணி 1 பதக்கு; 4 குறுணி அல்லது 2 பதக்கு 1 தூணி; 3 தூணி அல்லது 12 குறுணி 1 கலம். பழைய பட்டையங்கள் சிலவற்றால் பெரும்பாலும் பொருள்கள் பண்டமாற்றுச் செய்யப்பட்டனவென்று அறிகின்றோம். 2 படி அரிசிக்கு 5 படி நெல்லுக் கொடுக்கப்பட்டது. 5 படி நெல்லுக் குத்துவதற்கு அரைப்படி அரிசி கூலியாகக் கொடுக்கப் பட்டது. ஒரு நாழி நெல் அரிசி கூலியாகக் கொடுக்கப் பட்டது. ஒரு நாழி நெல் 1/16 நாழி நெய்யுக்கும், ஒரு நாழி தயிர் 10ப் பாக்கு, 20 வாழை இலை அல்லது 1/16 நாழி நெய்க்கும் பண்டமாற்றுற் செய்யப்பட்டது. நெல்லும் தயிரும் ஒரே பெறுபதி உடையனவாயிருந்தன வென்பது குறிப்பிடத்தக்கது. நாள் வாழ்க்கைக்கு வேண்டிய பண்டங்களை வாங்குவதற்கு நெல் பயன்படுத்தப்பட்டது. பணப்புழக்கம் இருந்தபோதும் பொதுவாக நெல்லே பணத்தைப்போலப் பயன்படுத்தப்பட்டது. பொன் வெள்ளி நிறை: 1 கழஞ்சு 20 மஞ்சாடி; 1 மஞ்சாடி 2 குறுணி; 1 மா 1/10 மஞ்சாடி; 1 காணி 1/40 மஞ்சாடி. 1 “அக்காலத்தே நிறுத்தல், முகத்தல் முதலிய அளவுகட்கும், பொன் இரத்தினங்கள் நிறுத்தற்கும், பொன் மாற்று நோக்குதற்கும் அரசாங்கத்தா ரால் நியமிக்கப்பட்ட மரக்கால் முதலியன விருந்தன. அரசன் முத்திரையிட்ட மரக்காலுக்கு இராசஇராசன் காலத்தில் இராசகேசரி என்பது பெயர். இதற்குச் சமானமான தஞ்சாவூர்க் கோயில் மரக்காலுக்கு ஆடவல்லான் என்பது பெயர். ஆனால் நாடுதோறும் மரக்கால் பெயர்கள் மாறுபட்டிருந்தன. அரசாங்க முத்திரையிட்ட எடைக்கல்லுக்குக் குடிஞைக்கல் என்று பெயர். தஞ்சாவூர்க் கோயிலில் இதற்குச் சம எடையுள்ள கல்லுக்கு ஆடவல்லான் என்பது பெயர். (இப் பெயர்கள் சிவபிரான் பெயராலிடப்பட்டன) பொன்மாற்றுக்கு வைத்திருந்த ஆணிக்குத் தண்டவாணியென்பது பெயர்.” தமிழர் திருமணம் பருவம் அடைந்த ஆடவரும் மகளிரும் ஒருவரை ஒருவர் காதலித்துச் சிறிதுகாலம் பிறர் அறியாது சேர்ந்து ஒழுகுவார்கள் என்றும் பின் ஆடவன் தனது காதலியைத் தனது ஊருக்கு யாருமறியாது கொண்டு சென்று அங்கு மணந்துகொள்வான்; அல்லது மணமகளது பெற்றோரின் இசைவைப் பெற்று அவள் இல்லத்திலேயே அவளை மணந்துகொள்வான் என்றும் சங்கச் செய்யுட்கள் கூறுகின்றன. இப் பாடல்கள் பழைய மரபைப் பின்பற்றிச் செய்யப்பட்டனவேயன்றி அக்காலத் திருமணம் அவ்வாறு நிகழ்ந்ததெனத் துணிதல் முடியாது. அக் காலத்தில் ஆடவன் ஒருவன் மணஞ் செய்ய வேண்டியிருந்தால் அவன் சில முதியோரைப் பெண்கேட்கும்படி பெண்வீட்டுக்கு அனுப்பு வான். பெண்ணின் பெற்றோர் பெண்கொடுக்க இசைந்தனராயின், கணி எனப் பட்ட சோதிடனால் குறிக்கப்பட்ட நல்லநாளிலே மணமகன் தனது சுற்றத்தா ருடன் மணமகள் வீட்டுக்குவந்து பெண்ணை மணந்து தனது வீட்டுக்குக் கொண்டுபோவான். திருமணத்துக்கு முன் பெண்ணுக்கு விலையாக மணமகன் பரியம் எனப் பொருள் வழங்குவான். இவ்வாறு கொடுக்கப்படும் பொருள் சில இடங்களில் வளர்ப்புக்கூலி எனவும் வழங்கும். பெண்களை விலைகொடுத்து வாங்கி மணத்தலாகிய வழக்கத்தின் நிழலே பரியம் எனச் சிலர் கூறுவர். திராவிட மக்களுள் சில கூட்டத்தினர் பெண்களை விலை கொடுத்து வாங்கி மணந்துகொள்ளும் வழக்கம் இன்றும் காணப்படுகின்றது. முற்காலத்தில் புரோகிதரின் உதவியின்றியே திருமணங்கள் நடந்தன. அக் காலத் திருமணச்சடங்கு எவ்வாறிருந்த தென்பதைச் சங்க நூல்களைக் கொண்டு அறிதல்கூடும். அகநானூற்றில் கூறப்பட்டுள்ளதை இங்கு தருகின்றோம். “சோறு பருப்பிட்டுச் சமைக்கப்பட்டது. பலர்கூடி உண்டபின்பும் சோறு குவிந்துகிடந்தது. நிரையாகக் கால்களை நட்டுப் பந்தரிடப்பட் டிருந்தது. தரையில்வெண்மணல் பரப்பப்பட்டிருந்தது. விளக்குகள் கொளுத்தி வைக்கப்பட்டன. பூரணை நாளின் விடியற்காலையில் தீயகோள்கள் அகன்ற நல்ல நேரமாக விருந்தது. தலையிலே குடத்தையும் கையிலே மட்பாத்திரத்தையும் வைத்துக்கொண்டு பெண்கள் வந்தார்கள். அவர்கள் கையில் வைத்திருந்த பாத்திரத்தை ஒருவர் கையிலிருந்து ஒருவர்கைக்கு மாற்றினார்கள். அப்பொழுது முதிய பெண்கள் பெரிய ஆரவாரஞ்செய்தனர். பின்பு ஆண்மகவை யீன்றவர்களும், வயிற்றில் அழகுதேமல் உடையவர்களும் அழகிய நகைகள் அணிந்தவர்களுமாகிய பெண்கள் முன்னே வந்தார்கள். மணமகளின் தலையில் நீரை ஊற்றினார்கள். அப்பொழுது நீரில் கிடந்த பூவும் நெல்லும் கூந்தலில் கிடந்து விளங்கின. அப்பொழுது அவர்கள் “நீ கற்பில்வழுவாது கணவனுக்கு இனியளாகவிருந்து நெடுங்காலம் வாழ்வா யாக” என வாழ்த்தினாhகள். அன்று மாலைக்காலம் வந்தது. பெண்கள் வந்து கூடினார்கள். “நீ வீட்டுக்குப் பெருந்தலைவியாகுக” என்று வாழ்த்தினார்கள். சுற்றத்தவர் அவள் கையைப் பிடித்து மணமகனிடம் கொடுத்தார்கள்.” (அகம். 86) “நல்ல அரிசியைச் சமைத்த நெய்கலந்த சோற்றைச் சுற்றத்தவர் முதியவர்களுக்குக் கொடுத்தார்கள். நற்சகுனம் காட்டும் பறவைகள் தெளிந்த வானத்தே பறந்தன. திங்கள் உரோகிணியோடு சேருகின்ற குற்றமில்லாத நல்ல நேரம் வந்தது. பெருக்கிச் சுத்தஞ்செய்த வீடு அலங்கரிக்கப்பட்டது. எல்லோரும் கடவுளைத் தொழுதார்கள். பெரிய மேளமும் மணமுரசும் ஒலித்தது. மணவினையைக் காண விரும்பிய பெண்கள் விரைந்துவந்து கூடினார்கள். அறுகங்கிழங்கை வெள்ளிய நூலாற்கட்டி வாகைப் பூவின் மேல் வைக்கப்பட்டதும், மணல் பரப்பப்பட்டதுமாகிய பந்தலின்கீழ் தமர் அவளை மணமகனிடம் கொடுத்தார்கள். மணவினையைக் கண்ட பெண்கள் தமது வீடுகளுக்குச் சென்றார்கள்.” (அகம். 136) அலங்காரம் தமிழ் மக்கள் தமது உடம்பையும் தாம் பயன்படுத்திய ஒவ்வொரு பொருளையும் அலங் கரித்தார்கள். வீட்டுச் சுவர்களில் அழகிய ஓவியங்கள் எழுதப் பட்டன. பெண்கள் முற்றங்களில் அழகிய கோலங்களிட்டனர். வீடு களைத் தாங்கும் தூண்கள், கை மரங்கள், நிலைகள், கதவுகள், வீட்டின் முன்புறங்கள் தானும் அழகிய வேலைப்பாடுகள் பெற்றிருந்தன. தென்னிந்தியக் கோயில்களில் சுவர்களிலும் மதில்களிலும் கோபுரங்களிலும் அழகிய உருவங்கள் வெட்டப்பட்டிருத்தலை நாம் காணலாம். இந்தியச் சிற்பிகள் கற்களை மரத்தைப்போலப் பயன்படுத்தி அதில் பல கண்கவரும் வேலைப்பாடுகள் செய்துள்ளார்கள். வீட்டில் பயன் படுத்தும் கட்டில், முக்காலி, நாற்காலி, மணை, ஆயுதங்களின்பிடி, நீர் அருந்தும் பாத்திரங்களும் அழகிய வேலைபாடுகளுடையனவாயிருந்தன. தென்னிந்தியக் கோயில்களிலும், அமராவதி, அசந்தா, எல்லோரா முதலிய இடங்களிலும் காணப்படும் சிற்பங்கள் திராவிட மக்களின் அலங்கார விருப்பத்தைத் தெரிவிக்கின்றன.1 பெண்கள் தமது கூந்தலைப் பலவகையாக வாரி முடிந்தார்கள். கூந்தல்மீது பலவகைப் பூக்களைச் செருகி வேய்ந்தார்கள். சுறாமீன், வலம்புரிச்சங்கு, பிறை, இருபக்கமும் யானை குடத்திலிருந்து நீர் கொட்டு வதும் நடுவே இலக்குமி வீற்றிருப்பதுமாகிய வடிவுடைய சீதேவியார் போன்ற அணிகலன்களை அணிந்தார்கள். கொண்டையில் பலவகைப் பூக் களையும் மாலையையும் சூடினார்கள்; சந்தனம் குங்குமம் முதலியவை களைப் பூசி உடலை அழகுபடுத்தினார்கள்; உடம்பில் மஞ்சள்பூசிக் குளித் தார்கள். மார்பு, தோள்களில் தொய்யில் என்னும் ஒருவகை குழம்பைப் பூசி அதன்மேல் கரும்பு பூங்கொடி முதலியவைகளை எழுதி அழகு செய்தார்கள். காதில் தோடு அல்லது குழை அணிந்தார்கள். வறிய மக்கள் காதில் ஓலையைச் சுருளாக்கிச் செருகினார்கள். முத்துமாலை, பவளமாலை, சங்கிலி, குறங்குசெறி, கவானணி, பட்டிகை, சதங்கை, கிண்கிணி, சிலம்பு, கழல், வளை, மோதிரம், மேகலை என்பன அவர்கள் அணிகலன்களிற் சில. திருப்பாதம், திருமுடி, புள்ளித் தொங்கல், கொற்றக்குடை, பொற்பூ, திரள் மணிவடம், காறை, அடிக்காறை, அன்னம், கிளி, சோனகச்சிடுக்கு, மகுடம், வாளி, வடுகவாளி, சூடகம், கண்மலர், சுட்டி, தாலி, தாலிமணிவடம், கண்ட ஞாண், பொட்டு, பதக்கம், ஏகாவலி, கால்வடம், கமலம், செடி, வாகுவலயம், துடர் என்பன போன்ற பல அணிகலன்களும் அணியப்பட்டன. இசை 2ஒவ்வொரு நிலத்திலும் ஒவ்வொரு இசை வழங்கிற்று. குறிஞ்சி நிலமக்கள் குறிஞ்சிப் பண்பாடினார்கள். முல்லைநில மக்கள் முல்லைப் பண்பாடினார்கள். அது இன்று மத்தியமாவதி எனப்படும். மருதநில மக்கள் மருதப் பண்பாடினாhகள். அது கேதாரம் எனப்படும். நெய்தலுக்குரிய பண் இன்று புன்னாகவராளி எனப்படும். பலவகை மேளங்கள் வழங்கின. வெவ்வேறு ஓசைகளைப் பிறப்பிக்கும் பறைகள் வெவ்வேறு காலங் களில் கொட்டப்பட்டன. மாடுகளைக் கொள்ளையிடும் போது கொட்டப்படுவது ஏறுகோட்பறை, வெறியாடும்போது அறையப்படு வது முருகியம். மணக் காலத்தில் சாற்றப்படுவது மணமுழவு. தேரிழுக்கும் போது முழக்கப்படுவது தேரோட்டுப்பறை. நெல்லறுக்கும் போது தட்டப்படுவது நெல்லரிக்கிணை. அரசன் வெளிக்கிளம்பும்போது ஒலிக்கப்படுவது புறப்பாட்டுப்பறை. மீன் பிடித்தற்குச் செல்லும்போது கொட்டப்படுவது மீன் கோட்பறை. சூறை ஆடும்போது அடிக்கப்படுவது சூறைகோட்டை. போர்க்காலத்தில் யானை, குதிரை, காலாட்படை களுக்கு உற்சாகம் மூட்டும் பொருட்டுப் பலவகை வாத்தியங்கள் ஒலிக்கப்பட்டன. அவை இயம், இசைக் கருவி, வாத்தியம், வாச்சியம் எனப்பட்டன. அவை தோற்கருவி, துளைக்கருவி, நரம்புக்கருவி, மிடற்றுக் கருவி, துளைக்கருவி என நால்வகைப்பட்டன. தமிழ ருக்குடைய ஏழிசைகள் குரல், துத்தம், கைக்கிளை, குரல், உளை, விளரி, தாரம். மூங்கில், கொன்றைப்பழத் தின் கோது முதலியவைகளால் செய்யப்பட்ட குழல் களும் வழங்கின. எக்காள வகைகளுள் தாரை, காளம், காகாளம், அம்மியம், சின்னம் முதலியவையும், கொம்புவகையில் கோடு, இரலை, வயிர் முதலியவும் இருந்தன. நரம்புக் கருவியில் சிறப்புடையது யாழ் 1அவைகளுக்கு ஏழு, இருபத்தொன்று அல்லது அதற்கு மேற்பட்ட நரம்புகள் இருந்தன. பறை, முரசு, பேரிகை, ஆகுளி, எல்லரி, சல்லிகை, கிணை முதலியன மேளவகைகளுட்சில. இன்னும் இலங்கைத்தீவில் வழங்கும் மேளவகை யில் எழுபதுக்கு மேலுண்டு. தாரை உடுக்கை முதலியன பாணர் கையில் கொண்டுதிரிந்து அடித்துப்பாடும் சிறியமேளங்கள். தோற்கருவிகள் “பேரிக்கை படக மிடக்கை யுடுக்கை சீர்மிகு மத்தளஞ் சல்லிகை கரடிகை திமிலை குடமுழாத் தக்கை, கணப்பறை தமருகந் தண்ணுமை தாவி றடாரி யந்தரி முழவொடு சந்திர வளைய மொந்தை முரசே கண்விடு தூம்பு நிசாளந் துடுமை சிறுபறை யடக்க மாசி றகுணிச்சம் விரலேறு பாகந் தொக்க வுபாங்கந் துடிபெரும் பறையென மிக்க நூலோர் விரித்துரைத் தனரே” உடை பருத்தி இந்திய நாட்டில் உண்டாகும் செடி, மற்றைய நாட்டுமக்கள் ஆடை இல்லாமல் இருந்தபோது அல்லது தோலை உடையாகக் கொண் டிருந்த காலத்தில் இந்திய மக்கள் பஞ்சை நூலாக்கவும், நூலால் ஆடை நெய்யவும் ஆடைக்குப் பலவகைச் சாயங்கள் ஊட்டவும் அறிந்திருந்தனர். இதற்குச் சான்று பழைய சிந்துவெளி நகரங்களிற் கிடைத்துள்ளது. இந்திய நாட்டு வெப்பநிலைக்கேற்ப மக்கள் அற்ப உடையையே அணிந்தனர். ஆடவர் முழங்கால்வரையும் உடை உடுத்து அரையில் கச்சுக்கட்டியிருந் தனர். மிகப்பழங்கால மக்கள் தலையைச்சுற்றி நாடாக்கட்டியிருந்தனர். பின்பு நாடா பாகை ஆக மாறிற்று. பெண்கள் அரையில் மாத்திரம் உடை அணிந்தனர். பெண்களிற்சிலர் மார்பைக் கச்சுக்கட்டி மறைத்தனர். பெரும் பாலும் பெண்கள் அரைக்குமேல் உடை அணியவில்லை. இதனை சான்சி, அமராவதி, பிற்காலச் சிற்பங்களிலும் கோயிற் சுவர்களிலும் கோபுரங்களி லும் காணப்படும் உருவங்களையும் கொண்டு நாம் நன்கு அறியலாம். இறவுக்கை அணியும் வழக்கம் அக்காலத்தில் அரண்மனைகளிலிருந்த கிரேக்கப் பெண்களால் கொண்டுவரப் பட்டிருக்கலாமெனச் சிலர் கருது கின்றனர். அக்காலத்தில் கிரேக்கப் பெண்கள் இந்திய நாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டமையை ஸ்ராபோ (Strabo) போன்ற வரலாற்றாசிரியர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.1 2 “பருத்தி இந்திய நாட்டுக்கு உரிய செடி. மற்றைய நாடுகளில் மக்கள் தோல்களை உடுக்கும்போது அல்லது உடையின்றியிருக்கும்போது தமிழ் மக்கள் பஞ்சிலிருந்து நூல்நூற்று நூலால் அழகிய ஆடைகளைச் செய்து உடுத்தார்கள்.3 தற்காலக் குடியிருப்புகளில் நூல்நூற்கும் கதிர்கள் கண் டெடுக்கப்பட்டன. மொகஞ் சதரோ காலத்திலேயே மக்கள் பஞ்சிலிருந்து ஆடை நெய்யவும், அதற்குச் சாயமூட்டவும், அழகிய வேலைப்பாடுகள் செய்யவும் அறிந்திருந்தார் களென்பது அங்குகிடைத்த மண்பாவைகளைக் கொண்டு நன்கு அறியப்படுகின்றது. மக்கள் ஆடை நெய்ய அறி வதன்முன் மரப்பட்டைகளை யும் தழைகளையும் உடுத்தார் கள். பஞ்சு உடைக்குமுன் மரவுரி தோன்றிய தாதலின் அது துறவிகளுக்கும் தூய உடை யாகப் பிற்கால மக்களால் கருதப்பட்டது. ஆடையைக் குறிக்க ஐம்பதிற்கு மேற்பட்ட பெயர்கள் தமிழிற் காணப்படு கின்றன. ஒவ்வொரு பெயரும் அக்காலத்தில் வழங்கிய வெவ் வேறு வகை ஆடையைக் குறிக்க வழங்கியிருத்தல் வேண்டும். சங்ககால இலக்கியங்கள் பாலாவிபோன்ற ஆடை, இழை சென்ற இடம் அறியமுடி யாது நுண்ணிய நூலால் நெய்யப்பட்ட ஆடைகளைப் பற்றிக் கூறுகின்றன. முல்லை நிலத்தில் வாழ்ந்த மக்கள் ஆட்டு மயிரி லிருந்து கம்பளி நெய் தார்கள். ஆடைகள் வெளுத்துக் கஞ்சியிடப்பட்டன. ஆடவர் வெளுத்துக் கஞ்சியிட்ட மடியைக் குலைத்து அரையிற்கட்டி அதன் மேல் ஒரு ஆடையை வரிந்து கட்டினார்கள். ஆடவர் சட்டை தரிக்கவில்லை சட்டை தரித்தல் ஊழியம் புரிவோருக்குரியதாக விருந்தது. இறவுக்கை அணிதல் இரண்டாயிரம் ஆண்டுகளின் முன் இந்திய அரசரின் மெய்காப்பாளரா யிருந்த கிரேக்கப் பெண்களால் புகுத்தப்பட்டதாகலாம். பழைய ஓவியங் களிலும் சிற்பங்களிலும் இறவுக்கை காணப்படவில்லை. பெண்கள் தமது தனங்களை அசையவொட்டாமல் கச்சுக்கட்டியிருந்தார்கள். ஆடவர் தலைப்பாகை அணிந்தார்கள். உத்தரியம் தரித்தார்கள். கோவணம் கட்டினார்கள்.1 பயிர்ச்செய்கை தமிழ் மக்கள் பயிர்ச் செய்கையையே முதன்மையான தொழிலாகக் கொண்டனர். “உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்” என வள்ளுவரும் உழவின் சிறப்பை முதன்மையாகக் கூறியுள்ளார். பிற்காலத்து விளங்கிய கம்பரும் ஏரெழுபதில் வேளாண் சிறப்பை நன்கெடுத்தியம்பியுள்ளார். பயிரிடும் நிலங்கள் நன்செய், புன்செய் என இருவகைப்படும். நெல் விளையும் வயல் நன்செய் எனவும் மற்றைய தானியங்கள் விளையும் நிலம் புன்செய் எனவும் பட்டன. பயிரிடப்படாத நிலம் தரிசு எனப்பட்டது. வேள் என்பது நிலத்தைக் குறிக்கும் பெயர். நிலத்தைத் திருத்திப் பயிரிடுவோர் வேள் ஆளர் எனப்பட்டனர். ஆளர் என்பதற்கு ஆள்பவர் என்று பொருள். வெள்ளத்தை ஏரி குளங்களில் தேக்கி வைத்து வெள்ளத்தை ஆண்டமை யின் வேளாளர் வெள்ளாளர் எனவும் படுவர். நிலங்களையுடைய வேளாளர் வேள் அல்லது வேளிர் எனப்பட்டனர். இவர்கள் குறுநில மன்னராகவும் இருந்தனர். வேளாளர் கொடையாற் புகழ்பெற்றோர். இதனால் வேளாண்மை என்னும் சொல்லுக்குக் கொடை, உபகாரம் என்னும் பொருள்கள் உண்டு. “இருந்தோம்பி இல்வாழ்வதெல்லாம் விருந்தோம்பி-வேளாண்மை செய்தல் பொருட்டு” என்னும் குறளில் வேளாண்மை உபகாரம் என்னும் பொருள் தருதல் காண்க. சேர சோழ பாணடிய அரசர் வேளாண் மரபில் தோன்றியவர்களே யாவர். சாதி தமிழ் நாட்டில் நிலம் ஐந்து வகையினதாக விருந்ததென முன்னோ ரிடத்திற் கூறினோம். ஒவ்வொரு நிலமக்களும் வெவ்வேறு பெயரால் அறியப்பட்டார்கள். ஒரு நிலத்தில் வாழும் மக்கள் இன்னொரு நிலத்தில் வாழ்ந்த மக்களுக்குத் தாழ்ந்தவரென்றோ உயர்ந்தவரென்றோ கொள்ளும் கொள்கை அக் காலத்தில் உண்டாகவில்லை. செல்வம், வறுமை, ஒழுக்கம், ஒழுக்கக் கேடு என்பவை போன்ற தன்மைகளால் உயர்வு தாழ்வுகள் கொள்ளப்பட்டன. உயர்குடி என்பது பாவம் பழிகளுக்கு அஞ்சும் குடி என்பது பொருள். வள்ளுவர் தமது நூலில் அடிக்கடி குறிப்பிடும் குடிப் பிறப்பு இவ்வியல்பினதாதலை அறிய மாட்டாதார் அது வடநாட்டார் வருணத்தைத் தழுவியதென மருண்டு கூறுவர். “பிறப்பொக்கும் எல்லா வுயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமையால்” என வள்ளுவர் பிறப்பினால் சாதியுண்டென்பாரை மறுத்தமை காண்க. மக்கள் படிப்படியே திருத்தமடைந்து பயிர்ச் செய்கை வளர்ச்சி யடைந்தது. பெரும்பாலும் நகர் மருத நிலத்திலேயே தோன்றிற்று. உலகிலே பழைய நாகரிகச் சிறப்புப் பெற்று விளங்கிய நகரங்கள் எல்லாம் வேளாண்மை செழித்தோங்கிய ஆற்றோரங்களிலேயே விளங்கின. வேளாண்மையால் செழிப்புற்ற நாடுகளில் வாணிகத்தின் பொருட்டும் உணவின் பொருட்டும் பற்பல தொழில் புரியும் மக்கள் வந்து தங்குவா ராயினர். தந்தையின் தொழிலை மகன் செய்தல் என்பதுபோலக் கால்வழி கால் வழியாக ஒவ்வொரு குடும்பமும் பெருகியபோது ஒவ்வொரு குடும்ப மும் தனித்தனிச் சாதியாகப் பெருகியது. நிகண்டு நூல்களிற் காணப்படும் சாதிப்பெயர்கள் தொழில்களையே குறித்தல் காண்க. தனித்தனிக் கூட்ட மாகப் பெருகிய மக்கள் தத்தமக்குள்ளேயே திருமணங்கள் செய்துகொள் ளும் வழக்கம் நீண்ட காலமாக இருந்து வருதலாலும் சாதிக் கட்டப்பாடு வலி அடைந்தது. தமிழ் நாட்டில் அந்தணர் அரசர் வணிகர் வெள்ளாளர் என்னும் நான்கு பெரும் பிரிவினர், இருந்தனர். இவர்களல்லாத கைத்தொழிலும் ஏவற்றொழிலும் செய்யும் மக்களும் இருந்தனர். முன் கூறிய நால்வரும் உயர்ந்தோரென்றும், பின் கூறிய இருவகையினரும் தாழ்ந்தோரென்றும் கொள்ளப்பட்டனர். அந்தண ரென்போர் துறவிகள். கோயிற் பூசை செய்யும் மக்களையும் குறிக்க இப்பெயர் பிற்காலத்தில் வழங்குவதாயிற்று. ஆட்சி புரிவோர் அரசர் எனவும், வாணிகம் புரிவோர் வணிகர் எனவும், வேளாண்மை செய்வோர் வேளாளர் எனவும் பட்டனர். இப்பிரிவுகள் பெரும்பாலும் நகரங்களிலேயே காணப்பட்டன. இச்சாதிப் பிரிவுகள் மருத நிலத்திலேயே பெரும்பாலும் தோன்றி வளர்ச்சியடைந்தன. வடநாட்டவர் தொடக்கத்தில் நிறம்பற்றிப் பிரித்திருந்த வருணங்களும் தமிழரது தொழில் பற்றிய சாதிகளும் வேறுபாடுடையன. வருணம் என்பதற்கு நிறம் என்பது பொருள். வடநாட்டவரின் வருணத் துக்குப் பிறப்பே காரணம். வடநாட்டவரின் பிராமண, சத்திரிய, வைசிய, சூத்திர என்னும் நாற் பிரிவுகளே தென்னாட்டு அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என்னும் பிரிவுகள் எனப் பிற்காலத்தவர் மயங்கினமையால் பல தடுமாற்றங்கள் உண்டாயின. அந்தணர், பார்ப்பார், பிராமணர் என்னும் பெயர்கள் பற்றிய மயக்கம் அந்தணர் என்போர் துறவிகளாவர் என்பது சங்க நூல்களாலும், திருக்குறளாலும் பிறசான்றுகளாலும் அறியக் கிடக்கின்றது. தமிழ் நாட்டில் கோயிற் பூசைசெய்வோர் கோயில்களை மேற்பார்த்தல் பற்றிப் பார்ப்பார் என்னும் பெயர் பெற்றிருந்தனர். தொடக்கத்தில் இன்னவர்தான் பார்ப்பா ராயிருக்கலாம் என்னும் நியதி இருக்கவில்லை. கோயில்களை மேற் பார்க்கும் குடும்பத்தினர் பெருகி ஒரு பிரிவாகப் பிரிந்தனர். இவர்கள் கடவுட் பணி செய்தமைபற்றி உபசார வழக்கில் அந்தணர் என்படுவாராயினர். பார்ப்பார் துறவிகளல்லர். பிராமணர் தமிழ் நாட்டவரல்லர். இவர்கள் வட நாடுகளிலிருந்து தென்னாடுகளில்வந்து குடியேறினோர். தில்லைமூவா யிரவர், 48,000வர், 8,000வர், 3,700வர் என இக்கூட்டத்தினர் பட்டையங்களில் குறிக்கப்பட்டுள்ளார்கள். இவர்கள் பார்ப்பனக் குடும்பங்களோடு கலந்துள் ளார்கள் மத்திய காலத் தமிழ்நாட்டு அரசர் வடமொழிக்கு மதிப்புக் கொடுத்துப் பிராமணரை ஆதரித்தமையால் பார்ப்பன வகுப்பினரும் தம்மைப் பிராமணர் எனக் கூறுவராயினர். இதுவே அந்தணர் பார்ப்பார் பிராமணர் என்போரின் வரலாறாகும். வாணிகம் “இற்றைக்கு மூவாயிரம் ஆண்டுகளின்முன் இந்தியா தூரக்கிழக்கு, தூரமேற்கு நாடுகளோடு முதன்மையான கடல் வாணிகம் நடத்தினது என்றுகாட்டுவதற்குள்ள நல்ல சான்றுகள் உள்ளன. கம்போதியா, யாவா, சுமத்திரா, போர்ணியோ, யப்பான், தென்சீனா, மலாயா, அராபியா, பாரசீகத் திலுள்ள முதன்மையான பட்டினங்கள், ஆபிரிக்காவின் கிழக்குக்கரை என்பவைகளில் இந்தியர் வாணிகத்தின் பொருட்டுக் குடியேறியிருந்தார்கள். அவர்கள் இந்நாடுகளோடு மாத்திரமன்று. அக்காலத்தில் அறியப்பட்டிருந்த உலகம் முழுவதோடும், உரோம இராச்சியங்களோடும் வாணிகம் நடத்தி னார்கள்”1 “இற்றைக்கு ஆறாயிரம் ஆண்டுகளின் முன் சிந்துவெளியில் வாழ்ந்த மக்கள் அயல் நாடுகளோடு ஒழுங்குபட்ட முறையில் வாணிகம் நடத்தினார்கள் என அறிகின்றோம்.”2 சிந்துவெளி நகரங்கள் வாணிகத்துக்கும் கைத்தொழிலுக்கும் மத்திய இடங்களாகவிருந்தன. உள்நாட்டுப்போக்குவரத்துக்கு இரண்டு சக்கரங்களுள்ள வண்டிகள் பயன்படுத்தப்பட்டன. அவ்வண்டிகள் இன்று சிந்துவில் பயன்படுத்தப்படும் வண்டிகளைப் போன்றவை. இன்று சிந்து ஆற்றில் ஓடு கின்ற ஓடங்களும் அக்கால ஓடங்களை ஒத்தனவே. கடற் கரையை அடுத்த நாடுகளிலிருந்து உணவுப் பொருள்களைப் பெறும் முறையில் மாத்திரம் வாணிகம் நடைபெறவில்லை. அயல் நாடுகளிலிருந்து உலோகப் பொருள்களும் பிறவும் பெறப்பட்டன. பலுச்சிஸ்தானத்திலும் இராசபுத்தானத்திலுமிருந்து உலோகங்களும், தென்னிந்தியாவிலிருந்து சங்கும், உல்லாச வாழ்க்கைக்கு வேண்டும் பொருள்கள் பிற இடங்களி லிருந்தும் பெறப்பட்டன. பாரசீகத்திலும் ஆப்கானிஸ்தானத்திலும் இருந்து நிறக்கற்களும், சீனாவிலும் பர்மாவிலும் இருந்து நீலக்கற்களும் பெறப் பட்டன. முத்திரை வெட்டும் கற்கள், சுற்றிவரக்குமிழி வைத்த பானைகள், பாண்டங்கள் செய்யும் கற்கள் போன்ற இந்தியப் பொருள்கள் கி.மு. 3500 வரையில் பாபிலோனுக்குச் சென்றன என்று அறிகின்றோம்.1 “எகிப்துக்கும் இந்தியாவுக்கும் இடையில் முற்காலத்தில் போக்குவரத்து நடைபெற்றதெனத் தெரிகிறது. அலக்சாந்திரியாவில் சந்தித்த படித்த இந்தியர்கள் மூலம் தான் பல செய்திகளைக் கேட்டு அறிந்துகொண்டதாகத் தாலமி குறிப்பிட்டுள்ளார். இந்தியாவிலிருந்து சமயயாத்திரிகர்கள் சிரியாவி லுள்ள ஹெராபொலிசுக்குச் (Hierapolis) சென்றார்கள் என்று லூசியன் (Lucian) கூறியுள்ளார். கிறித்து பிறப்பதற்குமுன் இந்தியர் அபிசீனியாவோடு வாணிகம் புரிந்தார்கள் என்பது கிறித்துவ வேதங்களிற் காணப்படுகின்றது. இந்தியர் அராபியாவிலும் குடியேறியிருந்தார்கள். கிறித்துவ ஆண்டின் தொடக்கத்தில் அவர்கள் சீனக் கடற்கரை நாடுகளில் குடியேறத் தொடங்கி னார்கள். கி.மு. 350 இல் வரலாறு எழுதிய பரோசஸ் (Berossus) பாபிலோனில் அன்னியர் கூட்டமாகக் குடியேறியிருந்தனர் எனக் குறிப்பிட்டுள்ளார். கி.மு. 63 இல் பிறந்த ஸ்ராபோ (Strabo) என்பார் உரோம நாட்டுத் தங்கம் இந்தியாவுக்கு அதிகம் செல்வதைப்பற்றிக் கவலைப்பட்டார். பிளினி கூறியிருப்பது வருமாறு: இந்தியாவுக்குப் பயணஞ் செய்பவர்கள் ஒசெலிஸ் (Ocelis) என்னும் துறைமுகத்தில் இறங்குவது நல்லது. கிப்பாலுஸ் என்னும் பருவக்காற்று வீசுமானால் நாற்பது நாட்களில் முசிறித் துறைமுகத்தை அடையலாம். இதன் சூழல்களில் கடற் கொள்ளைக்காரர் இருக்கின்றார்கள். ஆதலால் அது இறங்குவதற்குத் தகுந்த இடமன்று. நான் இதை எழுதுகின்ற காலத்தில் அங்கு ஆள்கின்ற அரசனின் பெயர் செலிபுத்துருஸ். வேறு ஒரு வாய்ப்பான துறைமுகம் நெல்சிண்டி பக்காரி (Nelcyndi Bacare) இத் துறைமுகம் தொலைவிலே உள்ள மதுரையிலிருந்து ஆட்சிபுரியும் பாண்டியனுக்குரியது. புளுற்றா என்பவர் “ஆகஸ்தசின் பரிவாரங்களுள் ஒருவரான புத்த சன்னியாசி. அவர் நாட்டுக்குள்ள வழக்கப்படி நெருப்பில் விழுந்து இறந்துபோனார். அவருடைய சமாதிக் கட்டிடம் இங்கு கிடக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார். “கடல் வாணிகம் பெரிதும் திராவிடர் வசம் இருந்தது. அதில் ஆரியர் சிறுபங்கு பற்றினார்கள். அராபியா, ஆபிரிக்கா, சீனக் கரைகளில் குடியேறிய இந்தியரிற் பெரும்பாலோர் திராவிடராதல் வேண்டும். வடநாட்டு வாணிகத் தைவிடத் தென்னாட்டு வாணிகம் முதன்மையுடைய தென்றும், இரத்தினக் கற்கள் போன்ற விலையுயர்ந்த பண்டங்கள் தெற்கிலிருந்து வந்தன என்றும் வடநாடு தோல், கம்பளி என்பவைகளை அளித்தனவென்றும், இரத்தினக் கற்கள், சங்கு முதலியன தெற்கிலிருந்து வந்தனவென்றும் கௌடலியர் குறிப்பிட்டுள்ளார். தாம்பிரபரணி ஆறு, இலங்கை, பாண்டியநாடு என்பன அவரால் குறிக்கப் பட்டுள்ளன. “இந்தியாவிலிருந்தே நல்ல யானைகள் மேற்குத் தேசங்களுக்கும் கொண்டுபோகப்பட்டன. தந்தம், குரங்கு, மயில் முதலியவை இந்திய நாட்டுக்குரியவை. இவைகளைக் குறிக்க எபிரேய (Hebrew) மொழியில் வழங்கிய சொற்கள் எபிரேயம் அல்ல! திராவிடம். இந்தியாவிலிருந்து ஒரு மயில் எகிப்துக்கு அனுப்பப்பட்டது. அது யூபிதர் கடவுளுக்கு நேர்ந்து விடப்பட்டது. பாபிலோனுக்கு மயில் அனுப்பப்பட்டதைப்பற்றிப் பவேரு சாதகம் கூறுகின்றது. இந்நூல் கி.மு. 400 வரையில் செய்யப்பட்டது. கிரேக்க மொழியில்வழங்கும் ஒரிசா என்பது அரிசி என்னும் திராவிடத்தின திரிபு. கிராம்பும் சாதிக்காயும் மலாய தீவுகளில் முற்காலத்தில் கிடைப்பனவா யிருந்தன. அவை கி.பி. 180இல் அலக்சாந்திரியாவுக்குக் கொண்டுபோகப் பட்டன. ஆகவே கி.பி. முதல் நூற்றாண்டில் இந்திய மலாய வாணிகம் நடைபெற்றிருக்கலாம். அபிசீனியாவின் தலைநகராகிய அக்சமில் (Auxam) நடப்பட்டுள்ள ஒரு கல்லில் எழுத்துப் பொறிக்கப்பட்டுள்ளது. இக்கல் கி.பி. முதல் நூற்றாண்டில் நாட்டப்பட்டது. அவ்வெழுத்துக்கள் இந்தியாவைக் குறிப்பிடுகின்றன. எகிப்தில் தலைநகராகிய மெம்பிஸ் அழிபாடுகளில் இந்திய ஆடவர் மகளிரைக் காட்டும் ஓவியங்கள் காணப்படுகின்றன என்றும், அங்கு இந்தியர் குடியேறியிருந்தார்களென்றும் பிளிண்டேர்ஸ் பெற்றி (Flinders Petrie) என்பார் கூறியுள்ளார். புளுற்றா காலத்தில் வாழ்ந்தவராகிய டையோ கிறிஸ்தோதம் (Dio Chrysostom) அலக்சாந்திரியாவில் நடமாடிய பல நாட்டு மக்களிடையே இந்தியரைத் தான் பார்த்ததாகக் கூறியுள்ளார்.”1 “கோடைகாலச் சூரிய அயன காலத்தில் ஆண்டுதோறும் நூற்றி யிருபது மரக்கலகங்கன் மோயிஸ் ஹர்முஸ் (Mois Harmos) என்னும் செங் கடற் கரையிலுள்ள எகிப்திய துறைமுகத்திலிருந்து புறப்பட்டன. பருவக் காற்றின் உதவியைப் பெற்று அவை நாற்பது நாள்களில் இந்தியத் துறை முகங்களை அல்லது இலங்கைத் தீவை அடைந்தன. மரக்கலங்கள் விலை உயர்ந்த பண்டங்களுடன் திரும்பி வந்தன. பண்டங்கள் செங்கடற்கரையி லிருந்து நீல நதிக்கு ஒட்டகங்களிலேற்றிக் கொண்டு போகப்பட்டன. அவை நீல ஆற்று வழியாக அலக் சாந்திரியாவை அடைந்து பின் உரோம நாட்டுத் தலைநகரைச் சேர்ந்தன.” இவ்வாறு உரோமன் வரலாற்றாலரியர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். இஞ்சி, மிளகு, கறுவா போன்றவைகளுக்கு மேற்கு நாடுகளில் மிகத் தேவையிருந்தது. வயிரம், முத்து, பட்டு என்ப வற்றையும் அவர்கள் எவ்வளவு பொருள் கொடுத்தும் வாங்க ஆயத்தமாக விருந்தார்கள். கிழக்குத் தேசங்களிலிருந்து சென்ற பண்டங்கள் ஒன்றுக்கு நூறு மடங்கு இலாபத்துக்கு விற்கப்பட்டன. இதனால் கவரப்பட்டு மிகப் பலர் கிழக்குக் காடுகளோடு வாணிகத்தில் ஈடுபட்டிருந்தார்கள் அவர்களுக்கு வேண்டிய பண்டங்களை சேர நாடும் பாண்டிய நாடும் அளித்தன. குமரி, கொற்கை, காயல் பாம்பன் என்னும் துறைமுகங்கள் அதிக வருவாயளித்தன. கிறித்துவ ஆண்டின் ஆரம்ப காலக் கிழக்கு நாடுகளின் வாணிகம் உரோமர் வசம் இருந்தது. வயிரங்களுக்கு அடுத்தபடியில் முத்து விலை ஏறப் பெற்றதாயிருந்தது. உரோமப் பெண்கள் பட்டு ஆடைகளை உடுக்க விரும் பினார்கள். அவர்கள் பொன் எடைக்குப் பட்டை நிறுத்து வாங்கினார்கள் இரத்தினங்கள் இழைத்துச் செய்யப்பட்ட அணிகலன்கள் தென்னிந்தியாவி னின்றும் உரோமுக்கு அனுப்பப் பட்டன. கோயமுத்தூர்ப் பகுதியிலுள்ள பாடியூரில் கிடைக்கும் கோமேதகத்தை உரோம வணிகர் அதிக விலை கொடுத்து வாங்கினார்கள். இந்தியப் பொருள்கள் உரோமில் நூறு மடங்கு விலைக்கு விற்கப்பட்டதென்றும் ஆண்டில் எட்டு இலட்சம் தங்க நாண யத்தை இந்தியா வாணிக மூலம் இழுத்து விடுகின்றதென்றும் அவ்வாசிரியர் குறிப்பிட்டுள்ளார். சமயக்கொள்கைகள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரேயே திராவிட மக்கள் உலகம், உயிர், இறைவன் என்னும் முப்பொருள் உண்மைகளை ஆராயும் உயர்ந்த சமயக்கொள்கை உடையவர்களாயிருந்தார்கள். மொகஞ்சதரோ, அரப்பா முதலிய இடங்களிற்கிடைத்த முத்திரைக் கற்களில் பலவகை விலங்குகளின் இடையே ஆலமரத்தின் கீழ் யோகத்தில் வீற்றிருக்கும் கோலமுடைய வடிவம் ஒன்று காணப்படுகின்றது. இவ்வடிவம், கடவுள் உயிர்களுக்குத் தலைவன் (பசுபதி) என்னும் கருத்தை விளக்குகின்றதென ஆராய்ச்சியாளர் கூறியுள்ளார்கள். அக்காலத்திலேயே மக்கள் யோகத்தின் தன்மைகளையும் அதனால் பெறும் ஆற்றல்களையும் நன்கு அறிந்திருந்தார்கள். பழைய தமிழரின் சமயக்கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டே பௌத்த சைன மதக்கொள்கைகளும் எழுந்தன. புத்தர் அரசமரத்தின் கீழ் யோகத் திருந்தார். சைனக் கடவுள் அசோகமர நிழலில் இருப்பவர் என்னும் கொள்கைகள் மொகஞ்சதரோ மக்கள் கொண்டிருந்த கருத்தைப் பின் பற்றியவே. கடவுள் யோகத்திலிருப்பதாகக் காட்டும் வடிவம் கடவுளாய் வருதற்கும் யோகப்பயிற்சி அவசியம் என்பதை அக்கால மக்கள் கொண் டிருந்தார்கள் என்பதை உணர்த்துதல் கூடும். பௌத்த, சைன மதங்கள் பழைய திராவிட மதக்கொள்கைகளைத் தழுவி எழுந்தன வென்பதை வரலாற்றாசிரியர்கள் ஒப்புக்கொள்கின்றனர். பழையகாலத்தில் சமயக்கருத்துக்கள் ஏட்டில் எழுதி வைக்கப்படாது ஆசிரிய மாணாக்கமுறையில் சொல்லிக் கொடுக்கப்பட்டுவந்தன. இவ்வாறு தலைமுறை தலைமுறையாக வந்த சமய உண்மைகள் மறைகள் எனப் பட்டன. உபநிடதங்கள் எனப்பட்ட சமயநூல்களிற் சொல்லப்படும் கருத்துக்கள் திராவிடரின் கொள்கைகளே. அக்காலத்தில் பிராமணர் அரசவகுப்பினரின் பாதங்களிலிருந்து உபநிடத உண்மைகளைப் பயின்றார்கள். உபநிடத ஞானங்கள் பிராமணரால் அறியப்படாதவை. இக்கருத்துக்களே தமிழ் மக்களின் சமயக்கருத்துகளாகும். அக் கொள்கைகள் இப்பொழுது சைவ சித்தாந்தக் கொள்கைகள் என வழங்கும். சைவசித்தாந்தக் கொள்கைகள் வரலாற்றுக் காலத்துக்கு முன் தொட்டுத் தமிழ் மக்களிடையே வழங்கிவரும் உயர்ந்த கருத்துக்கள் என டாக்டர் பாப் கூறியுள்ளார். தமிழருடைய மதம் எல்லாமக்களுக்கும் பொதுவானது. இதுவே வள்ளுவரதும், தொல்காப்பியரதும் மதமாகும். திருக்குறளில் வினைப் பயன், மறுபிறப்பு, உயிரின் அழிவின்மை, பாவ புண்ணியம், இறைவன், இருவினைகளையும் பற்றாமல் இறைவன் நிற்கும் தன்மை, தவம், தவத்தி னால் பெறும் ஆற்றல் போன்றவை கூறப்பட்டுள்ளன. மந்திர விததைகளி னாலோ கடவுளுக்குக் காணிக்கைகள் கொடுப்பதினாலோ உயிர்கள் உயர் நிலை அடைய மாட்டா வென்பதே அறிவுடையோர் மதமாகும். தொடக்கத்தில் சமயம் அச்சம், உதவியற்ற தன்மை போன்ற ஏதுக் களால் தோன்றி வளர்ந்தது; பின்பு சிறிது சிறிதாகப் பண்பாடடைந்து உயர் நிலை அடைந்தது. இக்கொள்கைகளை முள்ளுள்ள தாழை மரத்தில் பூத்த நறும™முள்ள பூவுக்கு ஒப்பிடலாம். இன்றைய மக்களின் குறைபாடு பூவைப் போற்றாது தாழையின் முள்ளுள்ள இலைகளைப் போற்றுதல் போன் றிருப்பதே. உணவு மக்கள் தாம் வாழ்ந்த இடங்களுக்கு ஏற்ப வெவ்வேறு வகை உண வினை உண்டுவந்தார்கள். தாவரம் ஊன் என்னும் இருவகை உணவுகளும் பெரும்பாலும் கொள்ளப்பட்டன. இவற்றுள் தாவரவகையே உணவின் பெரும் பகுதியாகவும் ஊன் கறிவகைபோன்று சிறிதளவாகவும் இருந்தன. சங்ககால இலக்கியங்களால் வேளான் வகுப்பினர் பார்ப்பனர் என்னும் இருவகுப்பினரல்லாத மற்றையோரெல்லாம் ஊன் உணவு கொண்டார்கள் எனத் தெரிகிறது. ஊன் உணவு கொள்ளுதல் சிறந்ததன்று என்னும் கொள்கை நிலவியிருந்ததென்பது திருக்குறளால் நன்கு தெரிகின்றது. கறிவகைகளுக்கு மிளகு பயன்படுத்தப்பட்டது. மிளகுக்குக் கறி என்பது மற்றொரு பெயர். முற்காலத் தமிழ் மக்கள் மிளகாயைப்பற்றி அறியார். ஐரோப்பியர் மூலம் மிளகாய் இந்தியாவை அடைந்தது. மிளகாய்ச் செடி தென்னமெரிக்காவுக்குரியது. இதன்காய் மிளகுபோல் காரமாயிருத்தல் பற்றி மிளகாய் (மிளகு+காய்) எனப்பட்டது. ஐரோப்பியர் இந்தியாவினின்றும் மிளகை வாங்கிச் சென்றார்கள். கிரேக்கரும் உரோமரும் இதனை அதிகம் விரும்பினமையால் இதற்கு ‘யவனப்பிரியா’ என்னும் இன்னொரு பெயரும் வழங்கிற்று. யவனர் என்பது கிரேக்கரையும் உரோமரையும் குறிக்க வழங்கிய பெயர். மிளகைக் குறிக்கக் கிரேக்கர் பிப்பிலி என்னும் பெயரை வழங்கினர். பிப்பிலி என்பது திப்பிலி என்பதன் திரிபு. பிப்பிலி என்னும் கிரேக்க சொல்லின் திரிபே பெப்பர் என்னும் ஆங்கிலச்சொல். முற்காலத்தில் மிளகு ஐரோப்பிய மக்களின் சொகுசான உணவுப் பொருளாக விருந்தது. மத்திய காலத்தில் அது அவர்களுக்கு இன்றியமையாத உணவுப் பொரு ளாக விருந்தது. முதலில் வெனீசிய வணிகரும், பின்பு போர்த்துக்கேயரும், ஒல்லாந்தரும் மிளகை மேற்கு ஆசிய நாடுகளுக்குக் கொண்டு சென்று வாணிகம் புரிந்தனர். பதினோராம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஒல்லாந்தர் மிளகின் விலையை இருமடி ஆக்கினமையால் ஆங்கிலரால் 1599இல் ‘கிழக்கிந்திய வாணிகக் கம்பனி’ தொடங்கப்பட்டது. அதனால் இந்தியா வில் ஆங்கிலர் ஆட்சி தோன்றி வளர்வதாயிற்று. நிகண்டு நூல்களில் சோறு, சிற்றுண்டி வகைகளைக் குறிக்கப் பற்பல பெயர்கள் காணப்படுகின்றன. அவைகள் எல்லாம் வெவ்வேறு வகையாகச் செய்யப்பட்ட உணவுவகைகளைக் குறிக்கின்றன. “அறுசுவை உண்டி யமர்ந்து இல்லாளூட்ட” என்னும் நாலடியார் அடியினால் செல்வர் அறு சுவையுள்ள உணவுகளை உண்டார்கள் என அறிகின்றோம். கறிவகைகளுக்குத் தாளிதம் செய்யப்பட்டது. தேன், காய், பிஞ்சு, பழம், கிழங்கு, தளிர், இலை முதலியன உணவாகப் பயன்படுத்தப்பட்டன. தமிழில் மதுவகைகளைக் குறிக்க அறுபது பெயர்கள் வரையில் காணப் படுகின்றன. இதனால் அக்காலமக்கள் மதுவை அதிகம் உண்டார்கள் எனத் தெரிகின்றது. நெல், தேன், பழவகைகள், பூவகைகளிலிருந்து மதுவகைகள் செய்யப்பட்டன. அவை சாடிகளில் ஊற்றிக் காரமேறும்படி நிலத்தில் புதைத்து வைக்கப்பட்டன. “தேட்கடுப்பன்ன நாட்படுதேறல்” எனக் கள்ளின் காரம் குறிப்பிடப்பட்டுள்ளது. அக்காலக் கள் வகைகள் இக்காலச் சாராய வகை போன்று வாலையிலிட்டு வடிக்கப்பட்டவையல்ல; இக்காலபீர் (beer) என்னும் மதுப்போன்றவை. அயல்நாட்டுப் பயணக்காரர் இந்திய மக்களின் பழக்க வழக்கங்களைப்பற்றிக் கூறியுள்ள சில குறிப்புகள்: 1இற்சிங் என்னும் சீனயாத்திரிகன் கூறியிருப்பது வருமாறு: விருந்து கொடுப்போர் புத்தகுருமாரை வணங்கி அவர்களை வீட்டுக்கு அழைக் கிறார்கள். விருந்தில் பெரும்பாலும் செப்புப் பாத்திரங்கள் பயன்படுத்தப் படுகின்றன. அவை சாம்பலிட்டு மினுக்கப்படுகின்றன. ஒவ்வொரு குருவும் ஒவ்வொரு மணையில் இருப்பார். ஒருவரோடு ஒருவர் முட்டாதபடி மணைகள் எட்ட இடப்படுகின்றன. மட்பாத்திரங்கள் ஒருமுறைக்குமேல் பயன்படுத்தப்படுவதில்லை. ஒருமுறை பயன்படுத்தப்பட்ட பாத்திரங்கள் குழியில் வீசப்படுகின்றன. பயன்படுத்திய மட்பாத்திரங்களை ஒருபோதும வைத்திருத்தல் கூடாது. பிச்சை இடும் இடங்களில் இவ்வாறு வீசப்பட்ட பாத்திரங்கள் குவிந்து கிடக்கின்றன. சீனாதேசத்தில் செய்யப்படுவன போன்ற உயர்ந்த மட்பாத்திரங்கள் பயன்படுத்தப்பட்டபின் சுத்தஞ்செய்து வைக்கப் படுகின்றன. விருந்தினர் சாப்பிடும் இடம் சாணியால் மெழுகப்பட்டிருக் கும். வாயிலில் பெரிய பானைகளில் தண்ணீர் வைக்கப்பட்டிருக்கும். குரு மார் வந்ததும் அவர்கள் தமது மேல் அங்கியின் கட்டுகளை அவிழ்ப் பார்கள். அவர்கள் தமது கைகளைப் பயறு அல்லது மண்ணைத்தேய்த்துக் கழுவுவார்கள். குருமார் தமது குண்டிகையிலுள்ள நீரைப் பயன்படுத்துவர்; அல்லது விருந்துக்கு அழைத்தவர் தண்ணீரை ஊற்ற அதனைப் பயன் படுத்துவர். பின்பு அவர்கள் மணைகளில் அமர்வர். அவர்களுக்கு முன்னால் உண்ணும் தட்டுகள் வைக்கப்படும். உண்பதன்முன் கடவுளைத் துதிப்பது வழக்கமன்று. விருந்துக்கு அழைத்தவர் உணவைப் பரிமாறுவார். பரிமாறும்போது பெருவிரற் பருமையுள்ள இஞ்சித்துண்டும் ஒருகரண்டி உப்பும் கொடுக்கப்படும். உப்புக் கொடுப்பவன் தலைமைக் குருவின்முன் கைகட்டி முழங்கால் படிந்து நின்று வணங்குவான்; அப்பொழுது அவர் எல்லாருக்கும் உணவைச் சரிவரப் பரிமாறு என்று சொல்வார். எல்லோருக் கும் உணவு படைத்தபின் உண்ணவேண்டுமென்று காத்திருக்க வேண்டிய தில்லை. மார்க்கோபோலோ கூறியிருப்பது: மலபாரில் எல்லா ஆடவரும் மகளிரும் நாளில் இருமுறை குளிக்கிறார்கள். அவ்வாறு செய்யாதவர் தாழ்ந்தவர் எனக் கொள்ளப்படுகின்றனர். அவர்கள் வலது கையால் உண்கின்றனர். எக்காரணம் பற்றியாவது அவர்கள் உணவை இடக்கையால் தொடமாட்டார்கள். அவர்கள் இடக்கையை அசுத்தமான தேவைகளுக்குப் பயன்படுத்துகின்றனர். ஒவ்வொருவனும் நீர் பருகுவதற்குத் தனிமையான ஏனம் வைத்திருக்கிறான். இன்னொருவன் பயன்படுத்தும் ஏனத்திலிருந்து இன்னொருவன் நீர் உண்ணமாட்டான். நீர் உண்ணும்போது அவர்கள் ஏனத்தை வாயில் முட்டவிடமாட்டார்கள்; வாய்க்குச் சிறிது தூரத்தில் பிடிப் பார்கள். எவனாவது ஏனத்தை வாயில் வைத்தல்கூடாது; நீர் குடிப்பதற்கு அதனை அன்னியனிடம் கொடுக்கவும் கூடாது, அன்னியனிடம் ஏனம் இல்லாவிடின் அவர்கள் நீரை அவன் கையில் ஊற்றுவார்கள். அவன் கையை ஏனமாகக் பயன்படுத்துவான். 1மக்கள் மிகவும் நுட்பமாகச் சமையல் செய்கிறார்கள். அவர்கள் நூறுவகையாகச் சமையல் செய்கிறார்கள். தினமும் சமையல் வெவ்வேறு வகையாகவுள்ளது. முடிவுரை திராவிட மக்களே இந்திய நாட்டின் ஆதிமக்கள். இம்மக்கள் இற்றைக்கு ஆறாயிரம் ஆண்டுகளின் முன் சிறந்த நாகரிகவளம் பெற்று விளங்கினார்கள். திராவிடர் நாகரிகப் பண்பாடுகள், சமயக்கருத்துக்கள், கலைகள் என்பன புதிதாக இந்தியநாட்டை வந்தடைந்த மக்கள் திராவிட மக்களோடு கலந்து தோற்றுவித்த புதிய சந்ததியினரால் சிற்சில வேறுபாடு களுடன் கைக்கொள்ளப்பட்டன. இன்று அவைகளே, இந்தியக்கலை, இந்திய மதக்கொள்கைகள், இந்திய நாகரிகம் என்னும் பெயர்கள் பெற்று விளங்குகின்றன.1 இந்திய நாகரிகத்துக்கு மாத்திரமன்று பழைய உலக நாக ரிகத்துக்கே திராவிட அடிப்படை உண்டு என்பதை ஏற்ற மேற்கோள் களுடன் இச்சிறிய நூலில் விளக்கியுள்ளோம். எஎஎஎ 1 2 1. Recent excavations near Chitaldrug in Mysore reveal six levels of buried cities, rising from stone age impliments and geometrically adorned pottery apparently as old as 4000 B.C., to remains as late as 1200 A.D-கூhந ளவடிசல டிக உiஎடைணையவiடிn ஞ-396 - றுடைட னுரசயவே. 1. In fact evidences point to the date when the so called southern tongue was spoken all over India in the north as well as the south-J. Lazarus, B.A., D.D. 1. The descriptions of Megasthenes prove that even at its highest development Hindu Civilization was more Turanian than Aryan; and the Pre-aryan Turaian civilization of India must have been similar to the pre-semitic, Turanian civilization of Babylonia, Chaldaea and Assyria........ Industrial arts of India P. 232.-George C.M. Birdwood C.S.I. A variety of Causes, partly political and partly literary, has tended to the belittlement of peninsular India’s contribution to the history both India and of the whole world at large. The line is ripe for South India to champion her own cause and assert her claims to recognision. -F.R. Richards, I.C.S., M.A., M.R.S., F.R.A.I -Quarterly journal of the mythic society.-Vol. 6.P. 156. 1. Culture suggests agriculture, but civilization suggests the city. In one aspect civilization is the habit of civility and civility is the refinement which townsmen, who made the world thought possible in the Civitas or city-The Story of Civilization-P. 2-Will Durant. 1. நிலத்தை ஆண்டமையின் பயிரிடுவோர் வேளாளர் எனவும் பட்டனர். வேள்-மண். 1. இஃது இலசரஸ் (J. Lazarus, B.A., D.D,) என்னும் அறிஞர் தென்னிந்திய ஆராய்ச்சிகள் (South Indian researches) என்னும் இதழ் ஒன்றில் எழுதிய ஆங்கிலக் கட்டுரை ஒன்றின் சுருக்கமாகும். 1. பல ஆயிரம் ஆண்டுகள் என்பதற்கு இன்று சான்றுகள் கிடைத்துள்ளன. Sidelights of Dravidian Problem-F.J. Richards M.A.R.A S.F.R.A. I.-Quarterly Journal of Mythic Society Vol.6-P. 156. 1. Martyrdam of man - 22nd impression pp. 40, 41 - W. Reade. 1. Canarese passages have been found in a greek farc written in an Egyptian papyrus. 1. The fact is now scarcely to be doubted that the rich oriental merchandise of the days of king Heram and king Solomon had its starting place in the seaports of the Dekhan; and that with a high degree of probability some of the most esteemed of the spices which were carried into Egypt by the Mediantish merchants of Genesis xxxvii 25, 28, and by the sons of patriarch Jacob (gen xi. iii. ii.) had been cultivated in the spice gardent of the Dekhan.-Indian shipping -P. 95., R.K. Mukerji. 1. Hunters Orissa vol - p 197. Hunter remarks “This and others of the inscriptions prove, in the opinion of the scholar to whom we owe their decipherings, that Kalinga was at the time an emporium of trade. We know from other sources that, shut out as Orissa was from the general policy of India, it boasted of fabric which it could not send as valuable present to the most civilized monarchs of the interior. So fine was the lines which the prince of Kalinga sent to the king of Oudh, that a priestess who put on the gauzy fabric was accused of appearing naked.-Cosmos Analysis of the Dulva-Journal Asiatic Society of Bengal. 1. G.R. Hunter-New review vol. 3 2. Hisiorical researches vol. 11 p 45 Professor Heeran 3. Hisiorical researches vol. 11 p 309 Professor Heeran 4. Hisiorical researches vol. 11 p 310 Professor Heeran 5. Hindu Superiority vol. 11 p. 178. Har Bilas Sarda, B.A 15 14 3 4 13 12 5 6 11 10 7 8 9 32 17 18 31 30 19 20 29 28 21 22 27 26 23 24 25 48 1. The remaining quarter of the modern vocabulary occupies itself chiefly with such terms for which Indo-aryan languages had no expressions including legal phraseology, names of Places, trees, animals. etc borrowed from the languages of the rulers of neighbouring tribes - A new approach to the study of middle and modern Indo-aryan-Dr. S.M. Katre M. A. Ph.D 1. A. Clemens Schoener Partenkirchen. 1. Periplus of Pseudo-Skylax BC. 4th C. 2. Tamerai 3. Tabula peutingeiana 4. Scythia Dymirice. 1. Extracts from the works of K. N. Sivaraja Pillai. 1. Tamil studies pp 1-2, M. Srinivasa aiyangar. 2. The journal of the Oriental research magazine-1924-P.T.S Iyengar. 1. Sanskrit element in the Vocabularies of the Dravidian Languages - Anuvaratha vinayakam Pillai M. A. 2. Nagavarma, the Kannada grammarian (12th century) speaks of three and a half mother languages-Sanskrit, Prakrit Apabhramasa and Paisacika, and of fiftysix daughter languages which arose from them including Tamil Telugu and Kanada Ketana the Telugu grammarian (13th Century) says that Sanskrit is the mother of all languages. The anonymous Malayali grammarian who wrote Lilatilakam (14th Century) also holds the view that Malyalam is derived from Sanskrit-Malaylam and other Dravidian languages-Proceedings and Trasactions of the ninth all India Oriental Conference, Trivandram. Dec. 1937-P 1235. 1. எ, ஒ, ழ், ற், ன் 1. Some scholars have fancied that Telugu and other so called Dravidian languages are quite independent of Tamil. This is the old song of grown up children turning proud and disowning all relationaship to their ancestry. If all Sanskrit words and derivatives are eliminated from these languages the residue of words left will be found to be ancient Tamil words, now considered obsolete or found in the poetry of bygone days-South Indian research vol. 1-Rev-J Lazarus B. A. D.D 33 34 47 46 35 36 45 44 37 38 2. K. N. சிவராச பிள்ளை. 43 42 39 40 41 64 ஊர் என்னும் நகரிலே சமாதி ஒன்றில் காணப்பட்ட வெள்ளி இடபம் 49 50 பொன் உறையிட்ட பொன் வாள் 1. Crete. 2. பேராசிரியர் ஹாலின் சுமேரிய திராவிடக்கொள்கைக்கு வலியாகப் பல புதிய சான்றுகள் வெளிவந்துகொண்டிருக்கின்றன. இவைகளுள் சுமேரிய திராவிட மொழிகளுக் குள்ள தொடர்புகள் முக்கியமானவை. சிறப்பாகத் தமிழுக்கும் சுமேரிய மொழிக்கும் தொடர்பு காணப்படுகிறது. The Quarterly journal of the Mythic Society, Vol. XIX. No.3. சுமேரியாவிற் கிடைத்த உருவச்சிலைகளின் முக இரேகை இன்று திராவிட மொழிகளில் ஒன்றை வழங்கும் தென்னிந்தியன் ஒருவனுடையதை ஒத்துள்ளது. சுமேரியர், தரை வழியாகவும் கடல் வழியாகவும் மேற்கு ஆசியாவை அடைந்த இந்தியர் என்று கருதுவது தகாத செயலாகமாட்டாது - The History of the Near East-Professor Hall. சுமேரியர் திராவிட இனத்தைச் சேர்ந்தோராவர். Aryanization of India-N.K. Dutt. 1. இலங்கைத் தீவுக்கும் எல்லம் என்று பெயர். 2. இந்தியர் தாம் செல்லும் வழியில் நமது நாகரிகத்தை எல்லத்தில் விட்டுச் சென்றார்கள். மக்கள் மிக மிக முற்காலத்தில் நாகரிகம் அடைந்த நாடுகளுள் இந்தியா ஒன்று என்பதில் ஐயம் இல்லை. கிழக்கிலிருந்து மேற்கை நாகரிகப்படுத்துவதற்கு வந்த மக்கள் இந்திய உற்பத்திக்குரியவர்கள் எனக் கருதுவது இயல்பாகும். பழைய சுமேரியரின் தோற்றம் இன்றைய இந்தியரின் தோற்றம் போல இருந்தது என்பதை நினைக்குமிடத்து இக் கருத்து வலிபெறுகின்றது - கிட்டிய கிழக்குத் தேசங்களின் வரலாறு - The History of the Near East by Professor Hall. 1. Heradotus - B.C. 480. 2. Berosus - B.C. 250 1. Oppert. 2. Frankfort. 1. அராபியாவில் வாழ்ந்த பழைய மக்கள் செமித்தியர் எனப்படுவர். 2. Urukagina. 1. Acade 2. Akkad. 3. Gudea. 4. Chaldees. 1. Ur-engur. 2. Amorites. 1. இவன் பாபிலோனிய முதல் அரசன்; செமித்திய குலத்தவன். 1. Arm-chairs 2. Tell-el-ubaid. 1. தேர் எல்பஃறியிலுள்ள ஹஸ்விதப் இராணியின் சமாதிக் கட்டடச் சுவரில் எழுதப் பட்டுள்ள வைகளுள் காணப்படும் பண்டு என்பது இந்தியா அல்லாத வேறு இடமாக இருத் தல் முடியாது. எகிப்தியர் நீண்ட காலமாகத் தமது தாய்நாடுகளோடு வாணிபம் நடத்தி னார்கள். அவர்கள் குறிப்பிட்டுள்ள அரசர் பெயர்கள், மரங்கள் முதலியவை இந்தியா வுக்குரியனவாகவே காணப்படுகின்றன. இதனால் எகிப்திய நாகரிகம் பழைய இந்தியாவி னின்றும் சென்றதென்ப தற்கு யாதும் ஐயம் இல்லை. Theosophist; March 1891. பழைய அபிசீனியர் அபூசின் ஆற்றோரங்களினின்றும் சென்று ஆப்பிரிக்காவிற் குடியேறியவர்களாவர். அபூசின் (Abuisin) என்பது இலக்கிய காலத்தில் சிந்து ஆற்றைக் குறித்து வழங்கிய பெயர். Heeran’s Historical Researches, Vol. P. 310 2. Delta 3. Hours. 1. Heradotus. 2. Manes. 3. Abydos. 4. Enzip-merpeba. 1. Paraoh. 2. Heeraconpolis. 3. Pyramid. 4. Sneveru. 5.Khuba. 6. Khafre. (2867-2811 B.C.) 7. Gizeb. 1. Thutmose. 1. Officials. 1. Brush. 2. வாலுள்ள தவளைக் குஞ்சு. 1. Thoth 1. Chaldea. 2. திராவிடரே தென்னிந்தியாவின் பழங்குடிகள். அவர்களிடையே நாகரிகம் வளர்ந்தது. அந்நாகரிகம் பிற்காலத்தில் மெசபெதோமியாவுக்குக் கொண்டு செல்லப்பட்டு செமித்திய நாகரிகத்துக்கு அடிப்படையாயிற்று. - People of India P.471-H. Risely. சிந்துப் பிரதேசத்திலிருந்து நமது நாகரிகம் பாபிலோனியா எகிப்து முதலிய தேசங்களுக்குப் பரவியது. பாபிலோனியாவில் கி.மு. 700இல் ஒரு தமிழ்க் குடித்தனமிருந்தது - திரு வி.ஆர். இராமச்சந்திர தீட்சிதர் M.A. வரலாற்று ஆராய்ச்சியாளர், பல்கலைக் கழகம், சென்னை. பழைய திராவிடர் காலத்துக்குக் காலம் இந்தியாவினின்றும், சுமேரியா, பாலத்தீனம் முதலிய நாடுகளில் சென்று குடியேறினார்கள் கிறித்துநாதர் வரையில் திராவிட நாகரிகம் அந் நாடுகளில் புலப்படுமாறு பரவியிருந்தது - The Quarterly Journal of the Mythic Society, Vol. XIX. No.3. 1. Ruins. 1. நடு பருத்து இரு பக்கங்களும் ஒடுங்கியது. 1. Progress of Archaelogy P. 17, Stanley Casson 2. History of Civilization P. 584, William Durant. 3. Rama Varma’s Research Institute Bulletin, Vol. 3. சுமேரிய அரசி ஒருத்தியின் வடிவம் 63 62 51 52 61 60 53 54 59 58 55 56 57 80 65 66 79 78 எகிப்தியன் ஒருவனின் உடை சமாதி அறையிற் கிடைத்த பொன் வெள்ளி ஏனங்கள் 67 68 77 76 69 70 பிரமிட் சமாதி அரசன் ஒருவனின் வடிவம், முடியில் இருப்பது பாம்பு அடையாளம். 75 74 எகிப்திய எழுத்தாளன் 71 72 எகிப்திய கண்காணி ஒருவன் 73 96 81 82 95 94 83 84 எகிப்தியரின் யாழ்; தமிழரின் யாழும் இவ்வகையினதே 93 92 எகிப்தியரின் பாம்புத் தெய்வமும் பருந்துத் தெய்வமும் 85 86 91 90 87 88 89 112 97 98 (1) சிந்துவெளி மக்கள் வழங்கிய எழுத்துகளின் வாசிப்பு வலமிருந்து இடம். (2) வசனம்; வாசிப்பு வலமிருந்து இடம்; வாசிக்கப்பட்ட பொருள் இடமிருந்து வலம் எழுதப்பட்டுள்ளது. கடைசியிலுள்ளவை. (1) சிந்துவெளி (2) ஈஸ்டர் தீவு எழுத்துகள். 111 110 ஒருவகைக் சுண்ணாம்புக் கல்லில் வெட்டப்பட்ட முத்திரைகள். விலங்கு வடிவங்களுக்கு மேற்காணப்படுவன அக்கால எழுத்துக்கள். 99 100 109 108 பாரசீகம் ஆப்கானிஸ்தான் பாம்பாய் மொகஞ்சதரோ சிந்து ஆறு சிந்து பஞ்சாப்பு 101 அரப்பா திபேத்து 102 ஓவியம் தீட்டப்பட்ட மட்பாண்டம் தலையாட்டும் விலங்கு (விளையாட்டு பொருள்) 107 106 சிந்துவெளி மக்களிற் பெண்பாலர் பயன்படுத்திய அணிகலன்களிற் சில மயிர் மழிக்கும் கத்தி 103 104 போர்வை அணிந்திருக்கும் மனித வடிவம் தலையிற் கட்டியுள்ள நாடாவே அரச முடியாக வளர்ச்சி யடைந்தது! போர்வை பூணூலாகத் திரிந்தது. பக்கத்தில் காட்டப்பட்ட மனித வடிவத்தின் முன்புறத் தோற்றம். நிறக் கல்லில் வெட்டப்பட்ட குரங்கு 105 128 1. We have a continuity of culture from Paleolithic to neolithic, from neolithic to megalithic and megalithic to iron age in South India-Origin and Spread of the Tamils-V.R. Ramachandra Dikshitar. M.A. 1. I ask what is the objection to state that a branch of Dravidians from south went to North and North-West and settled there? Diffusion of Dravidians in Rajaputana and Central India in prehistoric times is seen from the dialects Villi and Santal prevalent today, bearing close affinity to Dravidian languages. Add to this, the Mohenjo daro script which is very probably Dravidian.-Ibid pp. 10, 11. 2. If we take into consideration all these circumstances and examine them critically one has to assume that the authors of these early cultures in the East Mediterranean were emigrants from South India speaking Dravidian dialects. The language migrated and with it the peoples who spoke that language. So my humble thesis is that civilization of the future was borne not on the shores of the Mediterranean but on the coasts of the Indian peninsula and on the banks of its mihghty rivers the Kaveri, Thambraparni, the Periyar and Amarovathi, not to speak of the Krishna, Godavari and Narbada-Ibid p.27. 1. The word Dravida is the name for the speakers of a group of South Indian languages - Tamil, Malayalam, Kanarese and Telugu. No stretch of imagination is required to believe that of them Tamil is the oldest dialect and in my opinion the parental dialect. Though a claim has been recently made for the ancientness of the Kannada tongue, still it is safe to assert that Malayalam, Kanarese and Telugu became cultivated languages only a thousand years ago, when the influence of Sanskrit language had reached its high water mark in the Peninsula. So the term Dravidian we can definitely say, originally stood for the Tamil language and its descendants. - Ibid p. 14. 1. கள்வர் என்னும் பெயர் வலியை உணர்த்தும்; கள் என்னும் அடியாகப் பிறந்தது - களிறு, (போர்க்)களம் முதலிய சொற்கள் கள் என்னும் அடியாகப் பிறந்தவை. மதுவைக் குறிக்கும் கள் என்பதற்கு வலியைத் தருவது என்பது பொருள். பி.தி. சீனிவாச ஐயங்கார். 1. ....whose growth in South India is evidenced by the presences of the artifacts of the palaeolithic, neolithic and early iron ages throughout the country, and is traceable in the earliest strata of Tamil language and literature, show us that the growth of civilization in the Tamil land is entirely due to geographical causes operating in situ and not to historical events such as incursions of foreigners-Environments and Culture-P.T.S. Aiyengar. 1. The very name ur spells like a pukka Tamil name-Ibid. 1 Elsewhere I have suggested that the Kirata tribes of South India might have been the people who were responsible for the Cretan civilization and Crete derived its name probably after this tribe - Ibid p.49. The term Elam in Mesopotamia is suggestive and shows that to be a name given possibly by the emigrants from Ceylon who settled there and were responsible for the growth of the Town. For is not Ceylon known as Ilam (ஈழம்) in literature and epigraphy? The people of Elam were non Semitic and closly related to Sumerian culture. Their language was agglutinative but did not belong to the group of Alarodian like the Sumer tongue. In the same way Caria adjoining Lycia was very probobly Cera after a settlement from Kerala-Ibid p. 39. 1. We therefore conclude that the so called Mediterranean race had its origin in peninsular India, which was a part of the original Dravidian home which was in the submerged continent and connected south India with Africa, when the Indo Gangetic basin had not probably been formed. So the Dravidian element is not to be found in Indian culture alone but is largely traceable in Cretan, Aegean, Sumerian, Baby-lonian, Egyptian, Polynesian and other cultures of ancient world-Ibid p. 29 2. யாழ்நூல்-ப. 26, 49, விபுலானந்த அடிகள். 1. The linguistic affinity between Somali language and Tamil is remarkable. A distinct contribution of the ancient Dravidian to world culture is the Dravidian tongue. The group of agglutinative dialects with a few exceptions look to the ancient Tamil language primarily as their parent. Can we say that the service of Dravida was to give the tongue to the tongueless? -Origin and spread of the Tamils P. 39 1. Dialects of the same family of languages were spoken throughout India, except in the Vindyan regions, in the Neolithic age; and that is what has been called Dravidian family-Stone age in India p. 43. P.T.S. Ayangar. It will thus appear that the Dravidian speakers were the latest occupants of India before the Indo-Europeans arrived...It will thus appear that the civilization of the Indus valley was associated with speakers of the Dravidian languages...Lastly the Brahmi script of later Vedic civilizations is itself traced to Indus valley pictographs...Thus the non aryan of the Rlgveda may be in a sense taken to the non Aryan responsible for the Indus civilization-Hindu civilization-pp 38, 30. Radha Kumud Mukerji. 2. He had to subdue or assimilate the aboriginal element. But the overthrow of the black skin was no means an easy task for the Aryan; The non-aryan of the Rigveda was fully fortified in the stronghold of his own civilization which was meterially quite advanced. Remnants of this civilization are traced in the ruins of cities unearthed at Harappa and Mohenjo-Daro-Ibid p 69. 3. There was also inevitably at work a process of fusion between the Aryan and the non aryan by intermarriage or by alliance-Hindu civilization-Ibid. 1. The Aryan ethnical type which closely intermingled with the non-aryan population before the caste system was fully developed never constituted more than a small fraction even of the population of the north - A short history of India Havell p. 29. But as Dravidian society was matriarchal such intermarriages, with or without consent always exerted powerful influence in the Aryanisation of India, for in the course of time all the highest Dravidian families, both in the north and south claimed Aryan descent on-their mother‘s side and and adopted Aryan custiom and religion - Ibid p. 31. 2. As a rule however the Aryan in adopting a Dravidian word changed it considerably in order to suit it to their tongue and whenever such a word was imperfectly understood and negligenlty reproduced the change became still greater.-Kannada Eng. Dictionary. p XV-Rev E. Kettel. 3. Rhys Davids gives of an account of the life in the days of Buddha which probably holds true generally for the Dravidian communities-The children of the Sun.-p. 337. W.J. Perry M.A. 4. The Vedic language was a “caste language” a “scholastic dialect of a class” employing forms of different linguistic periods, an artificially archaic dialect, handed down from one generation to the other within the class of priestly singers - Macdonnel. Sankrit came into prominance about five thousand years ago in northern India. It appeared from the beginning not as an Indian vernacular, but as the hand maiden of the Arya cult, a literary language, used as the vehicle of the aspirations of the Rishis when they appealed to the gods to satisfy their longings in this world and the next. The Hindus have called it the language of the gods-deva bhasa-and this apparently means that there is no evidence of its employment as a vernaculur by common men in their ordinary secular life before it became the language of the mantras by means of which men spoke to the gods-Stone age in India p. 45-P.T.S. Iyengar. 1. The so called Gaudian dialects now spoken in Northern India from Punjab down to Aryavarta agree in grammatical structure with the so called Dravidian dialects of south India. The family relationships of languages can best be ascertained not so much by similarities of their vocables but by and examination of the essential structure of the languages, by their schemes of accidence of gender, number and cases of nouns and adjectives, of voices, mood number gender, tenses and other inflections of verbs, of their essential structure-such as the order of words in sentences and the methods of formation of idioms. A comparative study of modern North Indian and South Indian dialects reveals the fact that their fundamental grammatical structure is so verymuch the same that it is possible to translate from oneof these languages into any other by the simple process if the substitution of one word for another-a procedure absolutely impossible when translation from Sanskrit or English into any of the spoken dialects of ancient or modern India-Stone age in India. p. 44. 1. Origin and Spread of the Tamils p. 28. 2. Pre Aryan Tamil culture p. 12. 1. The excavations at Mohenjo Daro have revealed the state of things of a date long anterior to that of the Birth of Buddha. In the words of Dr. Hirananda Sastri, the late Epigraphist of the Government of India. “There is no known structure in the pre-historic Egypt or Mesopatamia or elsewhere to compare with the well built commodious houses of the citizens of Mohenjo Doro. Their sanitary baths and the elaborate system of drainage show that even the ordinary town folk there enjoyed a degree of comfort and luxury unknown in other parts of the then civilized world”. That was some what about B.C. 5000. Bulletin No. 3 of Sri Rama Varma Research Institute. 1. கி.மு. 4 ஆம் நூற்றாண்டென்பது பெரும்பாலார் துணிவு. 2. The beginnings of South Indian History pp. 64-9 S.K. Aiyangar. 1. Telugu does not take its available literature much anterior to ninth century A.D. The beginnings of South Indian History. p. 35. S.K. Aiyengar. 2. Ibid. 1. கோயிலில்லாத ஊரிற் குடியிருக்க வேண்டாம் (ஒளவையார்) 1. Chau Ju - Kua. 1. சோயுகுவா (Chau Ju Kua 1225 A.D.) என்னும் சீனப் பிரயாணி இலங்கை அரசனைப் பற்றிக் கூறியிருப்பது பின்வருமாறு: “அரசன் பல நிற ஆடைகளை உடுத்திருக்கிறான்; சிவப்புத் தோலாற்செய்து பொன்வாரிட்ட செருப்பைத் தரித்திருக்கிறான்; வெளியே செல்லும்போது பல்லக்கில் அல்லது யானைமீது செல்கின்றான்; வைடூரியம், நீலம் சிவப்பு முதலிய மணிகள் பதித்துச்செய்த நகைகளைப் பூண்டிருக்கிறான். கிழக்கிலும் மேற்கிலும் கொலுமண்டபங்கள் உண்டு, இரண்டு மண்டபங்களிலும் பொன் மரங்கள் நாட்டப் பட்டுள்ளன, அவைகளின் கொம்புகளும் அடிமரமும் பொன் மயமானவை; பூக்களும் இலைகளும் காய்களும் வைடூரியம் நீலம் சிவப்பு என்னும் மணிகளால் அமைக்கப்பட்டவை. அரசன் உலாவும் தரையும் அலங்கரிக்கப் பட்டுள்ளது. அம்மரங்களின் அடியில் பொன் சிங்காசனங்கள் உண்டு. அவன் காலையில் கிழக்கு மண்டபத்திலும் மேற்கு மண்டபத் திலும் கொலுவிருக்கிறான். அரசன் இருக்கும்போது சோடிப்புகள் வெளியே மின்னும். பொன்மரங்களும் கண்ணாடி மறைப்புக்களும் ஒன்றின் நிழல் ஒன்றில் பட்டுச் சூரிய உதயம்போல் விளங்கும். மேற்கூறியபடி பிரயாணி மலையாள அரசனைப்பற்றிக் கூறியிருப்பது வருமாறு: அரசன் உடம்பைப் போர்த்திருக்கிறான்; அவன் காலில் செருப்புத் தரித்திருக்கவில்லை. அவன் தலையில் தலைப்பாகை தரித்திருக்கிறான்; அரையில் ஆடை உடுத்திருக்கிறான். அவை இரண்டும் வெண்ணிறமுடையன. சில சமயங்களில் அவன் வெள்ளைச் சட்டை அணிகிறான். அவைகளுக்கு நீண்டு ஒடுங்கிய கைகளுண்டு. வெளியே செல்லும்போது அவன் யானைமீது செல்கின்றான். அப்பொழுது அவன் பொன்முடி அணிகிறான். அது முத்தினாலும் இரத்தினங்களாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அவனுடைய கையில் பொன்நாடாக் கட்டப்பட்டிருக்கிறது; அவனுடைய காலில் பொன்சங்கிலி கிடக்கிறது. அவனுடைய சின்னங்களில் சிவப்புத்தடியில் மயிலிறகு கட்டியகொடி ஒன்று. அதை இருபது பேர் நின்று காவல்புரிகின்றனர். அவனைத் திடகாத்திரமுள்ள ஐந்நூறு அன்னியநாட்டுப் பெண்கள் காவல் புரிகின்றனர். முன்னே செல்பவர்கள். நாட்டியமாடிக் கொண்டு வழியைக் காட்டிச் செல்கின்றனர். நாட்டியப் பெண்களுக்கு முன்னால் அரசனின் கருமத்தலைவர் கொண்டு செல்லப்படுகிறார்கள். அவர்கள் துணியினால் செய்யப்பட்ட ஏணைபோன்ற தூக்கில் இருத்தப்பட்டு பொன்னாலும் வெள்ளியினாலும் அலங்கரிக்கப்பட்ட கம்புகள் மூலம் சுமக்கப்படுகிறார்கள்.” அரசனுடைய மெய்காப்பாளர் பெண்களாக விருந்தனர் என மெகஸ்தீனஸ் கூறியுள்ளார். ஸ்ராபோ (Strabo) என்பார், “அரசனுடைய மெய்காப்பாளர் பெண்கள். அவன் வேட்டைக்குச் செல்லும்போது பெண்கள் அவனைச் சூழ்ந்து செல்கின்றனர். சில பெண்கள் தேரிலும், சிலர் குதிரை மேலும், சிலர் யானைமேலும் ஆயுதம் தாங்கியவர்களாகச் செல்கின்றனர்” என்று கூறியுள்ளார். கௌடலியர் கூறியிருப்பது கொண்டு கிரேக்க வரலாற்றுக்காரர் கூறியிருப்பது வருமாறு: அரசன் படுக்கையைவிட்டு எழுந்ததும் வில்லுத் தாங்கிய பெண்கள் அவனை எதிர்கொள்ள வேண்டும். பெண் அடிமைகளே அவனைக் முழுக்காட்ட வேண்டும், படுக்கையை விரிக்கவேண்டும், அவனது உடைகளை வெளுக்கவேண்டும், அவனை பூமாலைகளால் அலங்கரிக்கவேண்டும். கௌடலியர் கூறுகின்றபடி அரண்மனை யில் மூன்று தரங்களான பெண் வேலையாட்கள் இருந்தார்கள். இவர்களில் கணிகையர் எனப்பட்ட கீழ்த்தரத்தினர் அரசனுக்குக் குடை பிடிப்பர். அவனுக்குப் பக்கத்தே எச்சில் உமிழும் பொன் குன்டிகையைப் பிடித்து நிற்பர். இவர்களுக்கு அடுத்த உயர்தரத்தினர் அரசன் மாளிகையில் இருக்கும்போது பக்கத்தே ஆலவட்டங்களோடு நின்று அவனைச் சனத்திலும் தேரிலும் இருக்கும்போது சேவிப்பர். இவர்களில் மூப்படைகின்றவர்கள் அரசனுடைய களஞ்சியத்தில் அல்லது அடுக்களையில் வேலை செய்யும்படி விடப்படுவர்.” (Chandra Gupta Maurya and his times pp. 97-8.) 1. Subtreasruies. 1. The Vedic theory is found in the Aitareya brahmana. It asserts that the Devas i.e. their worshippers, the Hindus, originally had no king. In their struggle against the Asuras-when the Devas found that they were repeatedly defeated that they came to the conclusion that it was because the Asura had a king to lead them, they were successful. Therefore they decided to try the same experiment and they agreed to elect a king. It has a historical reference. It would refer to the tribal stage of the Aryans in India and it would suggest that the institution of kingship was borrowed from the Dravidians-Hindu polity-p. 5. K.P. Jayaswal M.A. 2. Dravidian characteristics have been traced alike in Vedic and classical Sanskrit in the Prakrits or early popular dialects and in the modern vernaculars derived from them. The presence of the second series of dental letters the so called cerebrals in the language of the Rigveda and their absence from any other Indo- European language is ascribed to Dravidian influence-The quarterly Journal of the Mythic society Vol. XVI. Kalipada Mitre M.A.B.L. 3. இராச்சியம் பல மண்டலங்களாகவும், மண்டலங்கள் கோட்டங்களாகவும், கோட்டங்கள் கூறுகளாகவும், கூறுகள் நாடுகள் வளநாடுகளாகவும் வகுக்கப்பட்டிருந்தன. நாடுகளும் வளநாடுகளும், பல நகரங்களும் கிராமங்களுமுடையனவாயிருந்தன. அவற்றுட் பெரிய நகரங்கள் தனியூர் என்றும் மற்றவை ஊர்கள் பற்றுக்கள், குறைப்பற்றுக்கள் என்றும் பெயர் பெறும், -சோழவமிச சரித்திரச் சுருக்கம் - பக். 50 - கோபிநாதராவ். 1. படைத் தலைவர்கட்கு மகா சாமந்தன், சேனாதிபதி, சாமந்தன், தண்ட நாயகன் எனப் பல பெயர்கள் வழங்கிவந்தன. மகாசாமந்தன் என்பவன் எல்லாப் படைகட்கும் தலைவன். சிறுபடைகளைத் தண்ட நாயகர், சாமந்தர் என்போர் ஆளுவர் போலும்-படையாளர் போரில்லாக் காலங்களிற் பயிர்த் தொழில்கள் முதலிய செய்துகொண்டிருப்பது வழக்கம். சோழவம்ச சரித்திரச் சுருக்கம்-ப. 69. 1. போரில் மடிந்த வீரர்க்கும் நிரைமீட்சி வேட்டை முதலியவைகளில் இறந்த வீரர்கட்கும் அரசனாலாயினும் இறந்தவன் பந்துக்களாலாயினும் அவர்களுடைய ஞாபக சின்னமாக அவர்களைப் போல உருச்சமைத்துக் கல்லொன்று நடுவது வழக்கம்-மேற்கூறியபடி. சோழ அரசர் காலத்து இருந்த வரிகள் சில: அங்காடிப்பட்டம் (சந்தைவரி), உப்பாயம், இலாஞ்சினைப்பேறு, சந்திவிக்கிரகப்பேறு, பஞ்சுபிலி, வாசல்வினியோகம், படையிலார் முறைமை, கூற்றிலக்கை, கடைக்கூட்டிலக்கை, தண்டவிலக்கை, விடைப்போர், மாதப்பட்டி, அரைக்கால்வாசி, ஊசி வாசி, விலைத் தண்டம், நீராணி, காவேரிக்குலை, தேவகுடிமை, ஆனைக் கூடம், குதிரைப்பந்தி. விசயநகர அரசர் காலத்து வரிகள் சில: பதிகாவல், காரணயோதி, தலையாரிக்காம், நாட்டுக்கணக்குவரி, அழுக்கு நீர்ப்பாட்டம், பிடாரிவரி, விபூதிக்காணிக்கை, ஆதிபச்சை, கார்த்திகைப் பச்சை, திருப்புதியீடு (முதலில் பழுக்கும்பழம்), பிரசாத காணிக்கை, தறிக்கடமை, செக்குக்கடமை, அரிசிக்கடமை, பொன்வரி, செம்பொன்வரி, புல்வரி, நூல்வரி, பட்டுநூல் வரி, மரக்கலவரி, படிக்காணிக்கை (போர்வீரருக்கு ஆம்செலவு), கோட்டை மகமை, நாட்டுச்சிக்கம், தோரணக்காணிக்கை, தரிசனக் காணிக்கை, கோட்டைக்கு, வெட்டிவரி, ஊசிவரி, குதிரை விலாடம். வரிகளையன்றி மக்கள் கூலியின்றிக் கட்டாயவேலையும் வாங்கப்பட்டார்கள். அவ்வேலை வெட்டி, முட்டி, வெகாரிஎனப்பட்டது. அவ்வேலை செய்பவர் வெட்டிமுட்டி ஆள் எனப்பட்டனர். 1. சோழ வமிச சரித்திரச் சுருக்கம். பக். 66. 1. The sculpture of Sanchi and Amaravathi and the Ajanta Cave paintings and the sculptures of Orissa (Buvaneswar) prove that in its forms also Hindu jewelry has remained unaltered during the last two thousand years. The ornaments of Sanchi are of the same archaic character as those still made in central India and the Central Provinces and by the aboriginal tribes of the Bengal and Bombay presidency while those of Amaravathi shows more elaboration and finish of Dravidian jewelry of Madras presidency. -Industrial arts of India-p. 188. 2. P.T.S, Iyengar. 1. Indian musical instruments are remarkable for beauty and variety of their forms which the ancient sculptures and paintings at Ajanta show how they remained unchanged for the last two thousand years. The harp is identical in shape with Assyrian harp represented on the Nineveh sculptures and the Vena of equal antiquity. The Hindus claim to have invented the fiddle - bow - Industrial arts of India - p. 232. George. C.M. Bird Wood. 1. According to Strabo, young female musicians of western origin were articles of import, certain to please in India. Professionally there was little to choose between them and the young well-made girls intended for debauchery offered by the Greeks to the kings of the ports of Gujarat along with musical instruments-Kannada passages in the Oxyrhyncus Papyri no. 413.p. 17. 2. P.T.S. Aiyengar. 3. Our knowledge of the costumes of Mohenjo Daro people is scanty as naked figures preponderate. A shawl is worn by a male figure covering the left shoulder and passed under the right arm. It is difficult to say what was worn under the shawl, but the heroes and deities wore a thin strip of cotton on their loins. Some very rare fiqurines are depicted wearing kilt or drawers. The hair was tied with a woven fillet. The woven sari terminating well above the knees always fastened with girdles and in one case with a kamarband is also seen. The narrow strip of cloth used as sari at Mohenjo Daro very much resembles the niva mentioned in Vedic literature. Vol. 1. p. 53-Dr. Motichandra M.A. Ph.D. 1. Cotton manufacture did not obtain a real footing in Europe until last century at a date before history. The art was carried from India to Assyria and Egypt; but it was not until the thirteenth century that the cotton plant was introduced into southern Europe where its wool was at first used to make paper. The manufacture of it into cloth in imitation of the fabrics of Egypt and India was first attempted by the Italian States in the thirteenth century-Industrial arts of India p. 241. 1. Indian shipping. p 4-R.K. Mookerji M.A. 2. The light of the most ancient East P. 2/0- V. Gordon & Chile. 1. Peagent of India's commerce shows that within historic times Peninsular India has been in direct contact with East Africa, Somaliland, Abyssinia, Egypt, Arabia, Babylonia, Indonasia and China, to say nothingof the Makran coast and the influence of the routes. The panorama of possible cultural influence is wide-Side lights of the Dravidian problem-F.A. Richards-Quarterly Journal of the Mythic society Vol. 6. 1. Kannada passages in the Oxyrhyncus Papyri No. 413. 1. Itsing. கி.பி. 6ஆம் நூற்றாண்டு 1. Chau Ju - Kua. A variety of causes partly political and partly literary, has tended to the belittlement of penisular india‘s contribution to the history both of India and of the whole world at large. The time is ripe for South India to champion her own cause and assert her claims to recognition-Side lights of the Dravidian Problem-F.R. Richards. i. I.C.S. 113 114 127 126 115 116 125 124 117 118 123 122 119 120 121 144 129 130 போர் வீரன் 143 142 131 132 141 140 133 134 139 138 135 136 137 160 குதிரை வீரன் (எல்லோரா) 145 146 159 158 147 148 ஆந்திர நாணயம் (கி.பி. 200) 157 156 ஆந்திர நாணயம் (கி.பி. 200) நாட்டியம் (சோழர் கால ஓவியம்) 149 150 155 154 யாழ் 151 152 வீட்டு வேலை செய்யும் பெண்கள் (சான்சிச் சிற்பம் கி.மு. 200) 153 164 குறிப்புகள் 161 162 163 xvi தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் வாழ்வும் தொண்டும் (1893 - 1967) தமிழ்மொழியின் தொன்மையை அதன் தனித் தன்மையை உலக மொழிகளோடு ஒப்பிட்டு விரிவாக ஆய்வு செய்தவர் தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள். தமிழ் இனத்தின் மேன்மையை வரலாற்று நோக்கில் ஆய்வு செய்தவரும் அவரே. ‘தொண்டு செய்வாய்! தமிழுக்குத் துறைதோறும் துறைதோறும் துடித்தெழுந்தே’ என்பார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனார். புரட்சிக் கவிஞரின் கனவை நினைவாக்கும் வகையில், தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள் தமிழின் துறைதோறும் துறைதோறும் அரிய ஆய்வு நூல்களை எழுதியவர். தமது நூல்களின் வாயிலாக வீழ்ச்சியுற்ற தமிழினத்தை எழுச்சி பெறச் செய்தவர். ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் தமிழ்ப் பணியோ மலையினும் மாணப் பெரியது. ஆயினும் அவருடைய வாழ்க்கைப் பதிவுகளாக நமக்குக் கிடைப்பன தினையளவே யாகும். தமிழர்கள் அந்த மாமனிதரின் தமிழ்ப் பணியைக் கூர்ந்து அறிந்து தக்க வகையில் அவருடைய வாழ்க்கை வரலாற்றைப் பதிவு செய்யத் தவறி விட்டார்கள் என்றுதான் தோன்றுகிறது. இன்று அவருடைய வாழ்ககைக் குறிப்புகளாக நமக்குக் கிடைப்பன மிகச் சிலவாகும். அவை:- தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள் ஈழ நாட்டில் கந்தரோடை என்னும் ஊரில் 1893 ஆம் ஆண்டில் திரு நன்னியர் சின்னத்தம்பி என்பாரின் புதல்வராய்ப் பிறந்தார். தக்க ஆசிரியரிடம் பயின்று கல்வியில் தேர்ந்தார். பின்னர் கந்தரோடை என்னும் ஊரில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியராகப் பணி புரிந்தார். ஆசிரியர் பணியிலிருக்கும் போதே தக்க பெரும் புலவர்களைத் தேடிச் சென்று தமிழ் இலக்கிய இலக்கணங்கள் முறையாகப் பயின்று பெரும் புலவராய் விளங்கினார். ஆங்கில மொழியிலும் தேர்ச்சி பெற்ற வல்லுநராய்த் திகழ்ந்தார். பின்னர் மலேசியா நாட்டிற்குச் சென்று சிறிதுகாலம் புகைவண்டி அலுவலகத்தில் பணியாற்றினார். ந.சி. கந்தையா பிள்ளையவர்களின் தமிழறிவு ஆழமும் அகலமும் கொண்டது. அவரது வாழ்க்கை முழுமையும் தமிழ் ஆய்வுப் பணியே பெரும் பணியாக அமைந்தது. அவர் பெற்ற ஆங்கில அறிவின் துணையால் தமிழ் மொழி, தமிழினம் தொடர்பான மேலை நாட்டு அறிஞர்களின் நூல்களை யெல்லாம் நுணுகிக் கற்றார் வியக்கத்தக்க கல்விக் கடலாய் விளங்கினார். அறுபதுக்கு மேற்பட்ட ஆய்வு நூல்களை எழுதினார். தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள் தாம் எழுதிய நூல்களைப் பதிப்பித்து வெளியிட வேண்டும் என்று வேட்கை கொண்டார். இலங்கையில் அதற்குப் போதிய வசதி இல்லை. ஆதலால் தமிழ்நாட்டுக்கு வருகை புரிந்தார். சென்னையில் “ஒற்றுமை நிலையம்” என்னும் பதிப்பகத்தின் உரிமையாளராய்த் திகழ்ந்தவர் வீரபாகு பிள்ளை என்பவர். அவர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் நூல்கள் சிலவற்றை வெளியிட்டார். பின்னர் முத்தமிழ் நிலையம், ஆசிரியர் நூற்பதிப்புக் கழகம், திருநெல்வேலி சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் ஆகியவற்றின் வாயிலாக ந.சி. கந்தையா பிள்ளையவர்களின் நூல்கள் வெளிவரலாயின. ந.சி. கந்தையா பிள்ளையவர்களின் அருமைத் துணைவியார் இரத்தினம்மா எனப்படுபவர். இவருக்குத் திருநாவுக்கரசு என்றொரு மகனும் மங்கையர்க்கரசி என்றொரு மகளாரும் உண்டு. துணைவியார் பல ஆண்டுகளுக்கு முன்பே காலமானார். தமிழ்மொழி, தமிழினம் ஆகியவற்றின் மேன்மைக்காக அல்லும் பகலும் அயராது பாடுபட்ட தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை தமது எழுபத்து நான்காம் வயதில் 1967இல் இலங்கையில் மறைந்தார். எனினும் தமிழ் வாழும் வரை அவரது புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும். தமிழறிஞர் கந்தையா பிள்ளை அவர்களின் தமிழ்ப்பணி மதிப்பு மிக்கது; காலத்தை வென்று நிலைத்துநிற்க வல்லது. தமிழ்மொழி, தமிழ்நாடு, தமிழ்ப்பண்பாடு, தமிழ்இனம் ஆகியவற்றின் வரலாற்றை எழுதியதில் அவருக்குப் பெரும் பங்குண்டு. அவருடைய ஆய்வுப் பணியைச் சிறிது நோக்குவோம். அகராதிப் பணி தமிழ் மொழியில் முதன் முதலில் தோன்றிய அகராதி வீரமா முனிவர் எழுதிய சதுரகராதியே யாகும். பின்னர் பல்வேறு அகராதிகள் தோன்றின, வளர்ந்தன, வெளிவந்தன. அகராதி வளர்ச்சிப் பணியில் கந்தையா பிள்ளையவர்களுக்கும் பெரும் பங்குண்டு. அவர் படைத்த அகராதிகள் ஐந்து. 1. செந்தமிழ் அகராதி, 2. தமிழ் இலக்கிய அகராதி, 3. தமிழ்ப் புலவர் அகராதி, 4. திருக்குறள் அகராதி, 5. காலக் குறிப்பு அகராதி என்பன அவை. ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள் செந்தமிழ் அகராதி முன்னுரை யில் “நாம் தமிழ்த் தாய் மொழிக்குச் செய்யும் பணிகளுள் ஒன்றாக இந் நூலைச் செய்து முடித்தோம்” என்கிறார். “நூலொன்றைச் செய்து தமிழுலகுக்கு உதவ வேண்டும் என்னும் ஆவலால் பலவகையில் முயன்று இந் நூலைச் செய்து முடித்தோம்” என்று கூறுகிறார். தமிழ் இலக்கிய அகராதியில் அகத்தியர் முதல் வைராக்கிய தீபம் ஈறாக ஆயிரத்திற்கு மேற்பட்ட தமிழ் இலக்கியங்கள் பற்றிய விவரங்கள் தரப்பட்டுள்ளன. தமிழ்ப் புலவர் அகராதியில் பல நூற்றுக்கணக்கான தமிழ்ப்புலவர்களைப் பற்றிய விவரங்கள் தரப்பட்டுள்ளன. அவர் தொகுத்த திருக்குறள் சொற் பொருள் அகராதி பயன்பாடு மிக்கது. காலக்குறிப்பு அகராதி புதுமை யானது. தமிழ் மொழியில் இது போன்ற அகராதி இதுவரை வெளிவந்த தில்லை “இந்நூல் ஓர் அறிவுக் களஞ்சியம்” என்கிறார் முனைவர். மா. இராச மாணிக்கனார். இலக்கியப் பணி புலவர்களுக்கு மட்டுமே பயன்பட்டு வந்த தமிழ் இலக்கியச் செல்வத்தை எளிய மக்களும் படித்துப் பயன் பெறுமாறு உரைநடையில் வழங்கிய வள்ளல் கந்தையா பிள்ளை அவர்கள். பத்துப்பாட்டு, அகநானூறு, கலித்தொகை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலிங்கத்துப்பரணி, புறப்பொருள் விளக்கம், விறலிவிடுதூது போன்ற இலக்கியச் செல்வங்களை எல்லாம் இனிய எளிய நடையில் உரைநடையில் தந்தவர் கந்தையா பிள்ளை அவர்கள். திருக்குறளுக்கும், நீதிநெறி விளக்கத்திற்கும் அரிய உரை வரைந்தவர். தமிழ்மொழி - தமிழினம் தமிழ்மொழி - தமிழினம் தொடர்பாகப் பதினைந்துக்கும் மேற்பட்ட ஆய்வு நூல்களை எழுதியவர் கந்தையா பிள்ளை. தமிழகம், தமிழ் இந்தியா, தமிழர் சரித்திரம், தமிழர்யார்?, வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட பழந்தமிழர், நமதுமொழி, நமதுநாடு, தமிழ் ஆராய்ச்சி, தமிழ் விளக்கம், முச்சங்கம், அகத்தியர், சிந்துவெளி நாகரிகம், தமிழர் பண்பாடு, தமிழர்சமயம் எது? சிவன், சைவ சமய வரலாறு, தமிழ்ப் பழமையும் புதுமையும் போன்ற எண்ணற்ற அரிய ஆயவு நூல்களைப் படைத்தவர். ஆயிரக் கணக்கான நூற்கடலுள் மூழ்கி எடுத்த அரிய கொற்கை முத்துக்கள் அவரது நூல்கள். எத்தனை ஆண்டுகாலப் பேருழைப்பு! நினைத்தால் மலைப்புத் தோன்றும். தமிழின் - தமிழினத்தின் தொன்மையைத் தமிழர்தம் பண்பாட்டை - நாகரிகத்தை, தமிழர்தம் உயர் வாழ்வியலை உலகறியச் செய்த பேரறிஞர் கந்தையா பிள்ளை. திராவிட நாகரிகமும் - ஆரியத்தால் விளைந்த கேடும் தொன்மை மிக்க திராவிட நாகரிகத்தின் சிறப்புகளை விளக்கும் வகையில் பல நூல்களை எழுதினார். அவை:- திராவிடர் நாகரிகம், திராவிடம் என்றால் என்ன? திராவிட இந்தியா, தென்னிந்தியக் குலங்களும் குடிகளும் போன்ற அரிய ஆய்வு நூல்களை எழுதினார். ஆரியர்களால் விளைந்த கேடுகள் குறித்தும், ஆரியர் தமிழர் கலப்பு, ஆரியத்தால் விளைந்த கேடு, புரோகிதர் ஆட்சி, இராமாயணம் நடந்த கதையா? என்பன போன்ற நூல்களை எழுதினார். பிற மாணவர் தம் அறிவை விரிவு செய்யும் வகையில் எட்டு நூல்களும், மகளிருக்குப் பல்லாண்டுக் காலமாக இழைக்கப்பட்டு வரும் கொடுமைகள் குறித்து மூன்று நூல்களையும் எழுதினார். மேலும் மொழிபெயர்ப்பு நூல்கள் சிலவும் மனித இனத்தோற்றம் குறித்த நூல்கள் சிலவும் எனப் பல நூல்களை எழுதியுள்ளார். புரட்சிக் கவிஞர் கூறியவாறு துறைதோறும், துறைதோறும் எண்ணற்ற நூல்களை எழுதித் தமிழுக்கு வளம் சேர்த்தவர். ந.சி. கந்தையா பிள்ளை. புட்சிக்கவிஞர் பாரதிதாசனார், தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களைப் பற்றிப் பின்வருமாறு பாராட்டுகிறார். “ந.சி. கந்தையா எனும் நல்லவன், வல்லவன் தமிழ் தமிழின வரலாறனைத்தையும் தொல்பொருள் ஆய்வின் தொகை வகை, விரித்து நிலநூல், கடல்நூல் சான்றுகள் நிறைத்தும் தமிழ் நூற் சான்றுகள் முட்டறுத் தியம்பியும் இலக்கிய இலக்கணச் சான்றுகள் கொடுத்தும் பழக்க வழக்க ஒழுக்கம் காட்டியும் வையகம் வியக்க வரலாறு எழுதினான். பொய் அகன்று மெய்க் கை உயர்ந்தது.” வாழ்க! ந.சி. கந்தையா பிள்ளையின் பெரும் புகழ்! தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் வரலாறே தமிழர் களால் மறக்கப்பட்டு விட்டது. தமிழ்ப் பகைவர்களால் மறைக்கப்பட்டு விட்டது. அங்ஙனமிருக்க அம் மாமனிதரின் ஆய்வு நூல்கள் மட்டும் எங்ஙனம் கிடைக்கும்? ஆழ்கடலிலிருந்து முத்துக்கள் எடுப்பது போல, தங்கச் சுரங்கத்திலிருந்து தங்கத்தை வெட்டி எடுப்பது போல, பெருமுயற்சி எடுத்து ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் நூல்களைத் தேடினேன். நூல்நிலையங்களைத் தேடித்தேடி என் கால்கள் அலைந்த வண்ணம் இருந்தன. அதன் விளைவாக ஐம்பது நூல்கள் கிடைத்தன. பெரும் புதையலைத் தேடி எடுத்தது போல் பெருமகிழ்வுற்றேன். அன்பன் கோ. தேவராசன் அகம் நுதலுதல் உலகில் வாழும் மாந்தர் அனைவர்க்கும் உள்ளார்ந்த எண்ண ஓட்டங்கள் அலை அலையாய் எழுந்து பல்வேறு வடிவங்களில் வெளிப் படுகின்றன. சங்கக் காலத்துத் தமிழ் மாந்தர் தமது எண்ணங்களை ஒழுங்கு படுத்தி ஒரு வரையறைக்குள் கட்டுப்படுத்தி வாழ முற்பட்டதன் விளைவே நாகரிகத்தின் தொடக்கம் எனலாம். உலகில் தோன்றி வாழ்ந்து வரும் எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது இயல்பாக விரும்பி ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாகவே உள்ளது. அந்த இன்பத்துககுத் தடையோ இடையீடோ நேரின் அதைப் போக்கிக் கொள்ள முயலும் முறையில் மனிதக் குலத்துக்குத் தனிப் பண்பு சிறப்பாக வெளிப்பட்டிருப்பதைச் சங்க இலக்கியத்தின் வழி நன்கு அறிய முடிகிறது. தொல்காப்பியத்தில் எழுத்து, சொல், பொருள் என மூன்று பெரும் பிரிவாக மனித வாழ்வின் இயல்பை வகுத்து இலக்கணம் செய்தாலும், அவன் உள்ளத்தில் எழும் உணர்வை வெளிப்படுத்த மொழியும் சொல்லும் அதன் பொருளும் ஒன்றையொன்று பின்னிப் பிணைந்திருக்கின்ற பாங்கு புறத்திணைச் செய்யுளைக் காட்டிலும் அகத்திணைச் செய்யுள்களிலேயே மிகுந்திருப்பதைக் காண முடிகிறது. தொல்காப்பியர் எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே என்றார். குறித்தனவே என்னும் தேற்றேகாரம் பொருள் குறியாத சொல் இல்லை என்பதையே உணர்த்துகிறது. இற்றை நாளில் நம்மில் சிலர் வஞ்சக எண்ணத்துடனும் பலர் மக்களின் சிந்தனை ஓட்டத்தைத் தூண்டி நல்வழிப் படுத்தவும் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவதைக் கேட்கிறோம். எருதுநோய் காக்கைக்குத் தெரியாது என்று கூறும் போதும் குதிரைக்குக் கொம்பு முளைத்தது போலத்தான் என்று கூறும் போதும் (முயற்கொம்பே) அச் சொல்லின் பொருளையும் அதனால் நுண்ணுணர் வுடையார் அறியும் வேறு பொருளையும் அச் சொல் உணர்த்துவதாக அறிய முடிகிறது. விடுகதைகள் சொல்லி அறிவைத் தூண்டிச் சிந்திக்க வைப்பதும் சிலேடையாகப் பேசி உட்பொருளை உணரத் தூண்டுவதும் இன்றும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற அறிவார்ந்த செயல்கள். இயல் இசை நாடகம் என்னும் முத்தமிழ்ப் பிரிவின் முடிவும் மனித னின் உள்ளுணர்வை வெளிப்படுத்த முயன்ற முயற்சியே. அகம் - புறம் என்ற பிரிவில் உள்ளத்து உணர்வைத்தான் நுகர்ந்தான் என்பதை எவ்வாறு வெளிப்படுத்துவது? எவ்வாறு அறிவது? அறமோ மறமோ - உயிர் உடல் வேறுபாடுகளால், மொழியால், இசையால், அழுகையால், சைகை என்னும் நாடகத்தால் அல்லவோ வெளிப்படுத்த முடியும். அகத்தில் எழும் காதல் உணர்வை ஒருவனும் ஒருத்தியும் நுகர்ந்த நுகர்ச்சியை இத்தகையது என்று பிறர்க்கு அறிவுறுத்த இயலாது. அகத்தால் மட்டுமே உள் முகமாக நாடி ஆராய்ந்து அறிந்து கொள்ளமுடியும் என்பது உண்மை என்றாலும். இவ்வுணர்வு மனிதக் குலத்திற்கு ஒத்திருப்பதால் சில பல குறிப்புகளை மட்டுமே வெளிப்படுத்தினால் போதும் மற்றவரும் அறிந்து இது இவ்வாறு இருக்கும் என்று உணர்ந்து மகிழவும் ஒருவர்க்கு ஒருவர் உதவி செய்யவும் ஏதுவாக இருக்கிறது. எட்டுத்தொகை நூல்களுள் அகநானூறு, குறுந்தொகை, நற்றிணை ஆகிய மூன்றும் நானூறு நானூறு பாடல்களாலான தொகை நூல்கள். சங்கக்காலச் சான்றோரின் அரிய முயற்சியால் இவ்வாறு தொகுக்கப் பட்டாலும் அகப் பொருள் திணைக் களங்கள் ஐந்தும் இவற்றுள் கலந்துள்ளன. ஆனால் குறுந்தொகை 4 முதல் 8 அடிகளும், நற்றிணை 9 முதல் 12 அடிகளும், அகநானூறு 13 முதல் 21 அடிகளும் கொண்ட அடிவரையறை களையுடையன. ஏனோ அகநானூறு நீண்ட ஆசிரியப் பாவான் அமைந்து நெடுந்தொகை எனப் பெயர் பெற்றாலும் களிற்றி யானை நிரை, மணிமிடைப் பவளம், நித்திலக் கோவை என முப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. உயிர் எழுத்துகள் 12 மெய் எழுத்துகள் 18 என்பதால் எழுத்துகள் ஒவ்வொன்றற்கும் பத்துப் பத்தாகக் களிற்று யானை நிரை 12 x 10 = 120 பாடல்களாகவும் மணிமிடை பவளம் 18 x 10 = 180 பாடல்களாகவும் பிரித்தனரோ என்று எண்ணத் தோன்றுகிறது. மதங் கொண்ட யானை போன்ற ஐம்புலனையும் ஒழுங்கு படுத்தக் களிற்றுயானை நிரை என்று உயிர் பன்னிரண்டை 120 ஆகப் பகுத்தனரோ! மணிபோன்ற மெய்யான உடலை நிரல்பட மாலையாகத் தொடுக்கப்பட்டதாக எண்ணிப் பதினெட்டை 180 மணிமிடை பவளமாகத் தொகுத்தனரோ! உள்ளமாகிய கடலின் ஆழத்திலிருந்து சேகரித்த நித்திலத்தை முழுமை பெற்ற மாலையாகத் தரித்து மகிழவோ முழுவதும் நூறி எழுந்த வெற்றி யின்பத்தைக் குறிக்கவோ 100 நூறு பாடல்களை நித்திலக் கோவை எனத் தொகுத்தனர் என்று எண்ணத் தோன்றுகிறது. இந்த முப்பான் பிரிவிற்குக் காரணம் முழுமையாகத் தோன்றவில்லை. வகுபடாமல் ஒற்றைப் படையாய் எஞ்சி நிற்கும் எண்களையுடைய பாடல்கள் உரிப்பொருளால் பாலைத் திணைப் பாடல்களாகவும், இரண்டும் எட்டும் உரிப் பொருளால் புணர்ச்சியை உணர்த்தும் குறிஞ்சித் திணைப் பாடல்களாகவும், நான்கில் முடியும் எண்ணுள்ள பாடல்கள் நான்கு உறுதிப் பொருள்களை எண்ணி உரிப் பொருளால் ஆற்றி இருக்கும் முல்லைத் திணைப் பாடல்களாகவும், ஆறாவது எண்ணில் முடியும் பாடல்கள் தொடர்ந்து செல்லும் ஆறுபோல மனம் ஒருநிலைப் படாமல் மாறி மாறி உடல் கொள்ளவாய்ப்பாக அமைந்து நீர் வளம் மிக்க மருதத்திணைப் பாடலாகவும், முழுமை பெற்ற ஒன்றோடு சுழியைச் சேர்த்தது போன்ற பத்தாம் எண்ணுள்ள பாடல்கள் யான் என் தலைவனோடு சேர்ந்து என்று முழுமை பெறுவோனோ என்று இரங்கி ஏங்கும் உரிப் பொருளால் நெய்தல் திணைப் பாடலாகவும் பகுத்துத் தொகுத்திருக்கும் பாங்கு அகநானூற்றுப் பாடல்களில் மட்டுமே காணப்படும் சிறப்பாகும். முல்லை, மருதம், நெய்தல் ஆகிய முத் திணைப் பாடல்கள் ஒவ்வொன்றும் சமமாக நாற்பது பாடல்களைக் கொண்டு பொதுவாக அமைந்துள்ளது. புணர்ச்சி உரிப் பொருளை உணர்த்தும் குறிஞ்சிப் பாடல்கள் எண்பதாக அமைந்தன; பிரிவை உணர்த்தும் பாலைத்திணைப் பாடல்கள் இருநூறாக உள்ளது வாழ்வில் இன்பம் அடைய துன்பத்தில் மிகுதியும் உழல வேண்டியுள்ளது என்பதை உணர்த்தவோ என்று எண்ணத் தோன்றுகிறது. அகத்துறைப் பாடல்கள் நாடகப் பாங்கில் அமைந்துள்ளன. சொல்ல வந்த கருத்தை நிலை நாட்ட உவமை மூலமாக விளக்குவது மிகவும் எளிது. பெண்கள் நயமாகப் பேசிக் கருத்தை வலியுறுத்திச் செயல் படுத்துவதில் வல்லவர்கள். அகத்துறையில் தோழி அறத்தொடு நின்று பேசும் பேச்சுகள் தமிழ்ப் பண்பாட்டின் தனித்தன்மையைக் காட்டுவன. தோழியின் பேச்சில் உள்ளுறைப் பொருளும் இறைச்சிப் பொருளும் வெளிப்படும் பாங்கு நினைந்து நினைந்து போற்றத்தக்கன. உள்ளுறை என்பது தெய்வம் நீங்கலாகக் கூறப்படும். அவ்வந் நிலத்துக் கருப் பொருள்களை நிலைக்களனாகக் கொண்டு உணரப்படும் குறிப்புப் பொருளாகும். கருப் பொருள் நிகழ்சசிகள் உவமம் போல அமைந்து அவற்றின் ஒத்து முடிவது போலப் பெறப்படும் ஒரு கருத்துப் பொருளாகும். இறைச்சி தானே பொருட் புறத்ததுவே என்பார் தொல்காப்பியர். இறைச்சியிற் பிறக்கும் பொருளுமாருளவே இறைச்சி தானே உரிப் புறத்ததுவே என்றும் பாடம். அகத்திணைக் கருப்பொருள்களின் மூலம் பெறப்படும் குறிப்புப் பொருள் இறைச்சி என்று கொள்ளலாம். அக் குறிப்புப் பொருளிலிருந்து வேறு ஒரு கருத்துப் பெறப்படுமாயின் அக் கருத்தே இறைச்சியில் பிறக்கும் பொருள் என்று கொள்ளலாம். அகநானூற்றில் முதல் கருப்பொருள்களுக்கே சிறப்பிடம் கொடுத்துப் பேசப்படுகிறது. மிக நுட்பமான உள்ளுறை உவமமும் இறைச்சிப் பொருளும் ஆங்காங்கு கண்டு உணர்ந்து மகிழுமாறு அமைந்துள்ளன. ஆசிரியர் சங்க இலக்கியச் செய்யுள்களில் பெரிதும் பயிற்சியுடையவர் என்பதை அவரது உரைநடையால் காணமுடிகிறது. செய்யுள் இலக்கணம் கடந்த உரைநடைப் பாட்டு என்று சொல்லுமளவுக்குத் தொடர்கள் அமைந் துள்ளன. நீண்ட எச்சச் சொற்களால் கருத்தைத் தெளிவுறுத்தும் பாங்கு இவ்வாசிரியர்க்கே கைவந்த கலையாக அமைந்து நம்மை எல்லாம் வியக்க வைக்கிறது. சங்கக் காலத்தில் வழக்கிலிருந்த சொற்களை நினைவுறுத்தும் பாங்கில் அரிய சொற்களைத் தமது உரைநடையில் கையாண்டு தமிழைப் பழம் பெருமை குன்றாமல் காத்திட இவரது உரைநடை சிறந்த எடுத்துக் காட்டாகும் என்பதை இந்த அகநானூற்று உரைநடையைப் பயில்வார் உணர்வர் என்பது உறுதி. அரிய நயம் மிக்க செந்தமிழ்த் தொடரையும் ஆசிரியர் தமது உரையில் தொடுத்துக் காட்டுகிறார். மெய்யின் நிழல் போலத் திரண்ட ஆயத்தோடு விளையாடி மகிழ்வேன் என்று 49 ஆம் பாடலில் குறிப்பிடு கிறார். மெய் - உண்மை அவரவர் நிழல் அவரவரை விட்டுப் பிரியாது அது போல தலைவியை விட்டுப் பிரியாத தோழியரோடு தலைவி விளையாடி யதை எண்ணி மகிழலாம். உப்புவிற்கும் பெண் ‘நெல்லுக்கு வெள்ளுப்பு’ என்று கூவிக் கை வீசி நடக்கிறாள். பண்ட மாற்று முறையை இது நமக்கு உணர்த்துகிறது. நீனிற வண்ணன் குனியா நின்ற ஆயர் பெண்களின் துகிலை எடுத்துக் கொண்டு குருந்தமரத் தேறினானாகப் பானிற வண்ணன் இடையர் குலப் பெண்களின் மானத்தைக் காக்கக் குருந்த மரக் கிளையைத் தாழ்த்தித் தழைகளால் மறைத்துக் காத்தான் என்று கூறும் வரலாற்றைப் பாலைத் திணைச் செய்யுள் 59 இல் கூறியிருப்பது எண்ணி மகிழத்தக்கது. பெண் யானை உண்பதற்கு ஆண் யானை யாமரத்தின் கிளையைத் வளைத்துத் தாழ்த்தித் தருவதைக் கண்டும், மதநீர் ஒழுகும் கன்னத்தில் மொய்க்கும் வண்டுகளை ஓட்டும் தழைகளின் செயலையும் ஒருங்கு இணைத்துப் பார்த்துத் தலைவனின் தண்ணளியை எண்ணி ஆறி இருக்கலாம் என்னும் தோழியின் கூற்றை மிக ஆழமாக ஆசிரியர் விளக்கிய பாங்கு போற்றுதற்கு உரியதாம். அன்பன் புலவர் த. ஆறுமுகன் நூலறிமுகவுரை திரு. ந.சி. கந்தையா பிள்ளை 1930-40களில் தமிழ், தமிழிலக்கியம், தமிழ்மொழி, தமிழர் வரலாறு, திராவிட வரலாறு, தமிழ்நாட்டுக் குடிகள் போன்ற பல விடயங்கள் பற்றி அக்காலத்துச் சாதாரண தமிழ் வாசகர் நிலையில் பெரிதும் வாசிக்கப்பட்ட நூல்களை எழுதினார். பண்டைய இலக்கியங்களான அகநானூறு, கலித்தொகை, பரிபாடல் போன்ற வற்றினை உரைநடையில் எழுதி மக்களிடையே சங்க இலக்கியம் பற்றிய உணர்வினை ஏற்படுத்தினார். திருக்குறளுக்கான ஒரு சொல்லடைவைத் திருக்குறள் அகராதி என்னும் பெயரில் வெளியிட்டவர். இவை யாவற்றுக்கும் மேலாக உலக வரலாற்று நிகழ்ச்சிகளைச் சுருக்கமாகக் காலவரிசைப்படுத்தித் தந்தார். செந்தமிழ் அகராதி என்றவோர் அகர முதலியையும் தொகுத்தார். இன்று பின்னோக்கிப் பார்க்கும் பொழுது 1940-50களில் இளைஞர் களாக இருந்த பல தமிழ் ஆர்வலர்கள் தமிழ் பற்றிய தங்கள் ஆர்வத்தை வளர்த்துக் கொள்வதற்கான வாசிப்பு விடயங்களை அளித்தவர். இவருடைய பெரும்பாலான படைப்புக்கள் அக்காலத்திற் பிரசுரிக்கப் பட்ட ஒற்றுமை என்னும் இதழின் அலுவலகத்தாலேயே வெளியிடப் பெற்றன. இவர் வெளியிட்டனவற்றுள் பல ஒற்றுமை இதழில் வெளிவந் திருத்தல் வேண்டும். ஆனால், அதனை இப்பொழுது நிச்சயமாக என்னாற் சொல்ல முடியவில்லை. ஒற்றுமை அலுவலகம் இவற்றைப் பிரசுரித்தது என்பதை அறிவேன். ஏனெனில் இலங்கையில் தமிழாசிரியராக இருந்த எனது தகப்பனாரிடத்து இந்நூல்களிற் பெரும்பாலானவை இருந்தன. திரு ந.சி. கந்தையா பிள்ளையின் பெயர் தமிழகத்திலே தொடர்ந்து போற்றப்படுமளவுக்கு ஈழத்தில் நினைக்கப்படுவதில்லை என்ற உண்மையை மிகுந்த மனவருத்தத்துடன் பதிவு செய்யவேண்டியுள்ளது. அங்கு அவர் அத்துணைப் போற்றப்படாதிருப்பதற்குக் காரணம் ஏறத்தாழ அவர்களது எல்லா நூல்களுமே தமிழகத்திலேயே வெளியிடப் பெற்றன. இந் நூல்களின் பிரசுரப் பின்புலம் பற்றி எதுவும் தெளிவாகத் தெரியவில்லை. அவற்றின் பொருளியல் அம்சங்கள் பற்றிய தரவுகளும் இப்பொழுது தெரியாதுள்ளன. ஈழத்துத் தமிழிலக்கிய வரலாற்றிற்கூட இவரது பெயர் முக்கியப் படுத்தப் பெறாது போயுள்ளது. மிகுந்த சிரமத்தின் பின்னர் அவரைப் பற்றிக் கிடைத்துள்ள தகவல்கள் பின்வருமாறு: சுவாமி ஞானப் பிரகாசர், ந.சி. கந்தையா பிள்ளை போன்ற அறிஞர்களின் தமிழ்ப் பங்களிப்புக்கள் தமிழகத்தில் போற்றப்படுகின்றமை ஈழத்தவர்க்குப் பெருமை தருகின்றது. இவர் எழுதிய நூல்களின் பெயரை நோக்கும்பொழுது தமிழ் வாசகர்களுக்கு உலக நிலைப்பட்ட, தமிழ்நிலைப் பட்ட தரவுகளைத் தொகுத்துத் தருவதே இவரது பெருஞ்சிரத்தையாக இருந்தது என்பது புலனாகின்றது. இப்பதிப்பகத்தின் பணியினை ஊக்குவிக்க வேண்டியது தமிழ்சார்ந்த நிறுவனங்களினதும் தமிழ்ப் பெரியோர்களினதும் கடமையாகும். உண்மையில் இதனை ஒரு அறிவுப்பசிப் பிணித் தீர்வாகவே நான் காண்கிறேன். 2/7, றாம்ஸ்கேட், அன்புடன் 58, 37ஆவது ஒழுங்கை, கார்த்திகேசு சிவத்தம்பி வெள்ளவத்தை, தகைசார் ஓய்வுநிலை பேராசிரியர் கொழும்பு - 6 யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம். கருவிநூல் தந்த ந.சி. கந்தையா தமிழ் மறுமலர்ச்சிக்கு வித்திட்ட மூலவர்களில் யாழ்ப்பாணம் தந்த பேரறிஞர் ந.சி. கந்தையாவும் ஒருவர். உண்மையான அறிஞர்களைக் காலங்கடந்து அடையாளம் காண்பதும் அவர்தம் படைப்புக்களைத் தேடிப் பிடித்துப் புரப்பதும் தமிழினத்தின் பழக்கங்களில் ஒன்று. தமிழின், தமிழரின் தொல்பழங்கால வரலாறு தொடர்பாகத் தமிழில் நூல்கள் மிகக் குறைவு. ஓர் ஆயிரம் நூல்களாவது தமிழின் தமிழரின் தொல்பழங்கால வரலாறுபற்றி வெளிவரவேண்டும். விரிவாக எழுதப்பட வேண்டிய தமிழ், தமிழர் வரலாற்று வரைவு முயற்சிக்கு வழிகாட்டும் கருவி நூல்களை வரைந்திருப்பவர்தான் ந.சி. கந்தையா பெருமகனார். உலகம் முழுவதும் உற்றுக் கவனிக்க வேண்டிய வரலாற்றிற்கு உரியவர்கள் தமிழர்கள். அவர்களே உலக மொழிகளை ஈன்ற மூலமொழிக்குச் சொந்தக்காரர்கள். அவர்களே உலக நாகரிகங்களின் பிறப்பிற்குக் காரணமான உலக முதல் நாகரிகத்தைப் படைத்தவர்கள். இந்த உண்மைகளைத் தமிழர்களும் அறியவில்லை உலகமும் அறியவில்லை. தமிழர் சரித்திரம், வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட பழந் தமிழர், தமிழர் யார், உலக நாகரிகத்தில் தமிழர்பங்கு, சிந்துவெளித் தமிழர், தமிழ் இந்தியா, தமிழகம், மறைந்த நாகரிகங்கள் ஆகியன ந.சி. கந்தையாவின் குறிப்பிடத்தகுந்த நூல்களாகும். உலக முதல் நாகரிகம் என இன்று உலகம் நம்பிக்கொண்டிருக்கக் கூடிய நீல ஆற்றங்கரை நாகரிகம் (Nile Civilisation) தமிழ் நாகரிகத்தின் அதாவது சிந்துவெளி நாகரிகத்தின் வழிப்பட்ட நாகரிகமே என்பதை ஏராளமான சான்றுகளால் விளக்குபவை மேலைய நூல்கள். மொழிநிலையில் தமிழின் உலக முதன்மையைப் பாவாணர் நிலைநாட்டினார் என்றால் இன நிலையில் தமிழின உலக முதன்மையை ந.சி. கந்தையா நிலைநாட்டினார் என்று உரைக்கலாம். நீல ஆற்றங்கரை நாகரிக முடிவின்பின் நண்ணிலக் கடற் பகுதியில் உருவான பிறிதொரு வழிநாகரிகமே கிரேக்க நாகரிகம். கிரேக்க நாகரிகத் தின் உடைவில் தெறிப்பில் பிறகு மலர்ந்தவையே இன்றைய மேலை நாகரிகம். உலகின் எல்லா நாகரிகங்களையும் தாங்கிநிற்கும் தாய் நாகரிகமே தமிழ் நாகரிகம். தமிழ் நாகரிகத் தொன்மையைச் சங்க நூல்களுக்கு அப்பால் சிந்துவெளி அகழ்வாய்வும் உலக வரலாற்றாசிரியர்கள் உலக முதல் நாகரிகம் பற்றித் தெரிவித்திருக்கும் கருத்துக்களும் நமக்கு மேலும் விளக்கும் பகுதிகளாகத் திகழ்கின்றன. இங்கெல்லாம் சென்று நுண்மாண் நுழைபுல முயற்சியால் தமிழின வரலாறு எழுதியவர்தான் ந.சி. கந்தையா பெருமகனார். ந.சி. கந்தையா பெருமகனார் நூல்களைத் தமிழரின் தொல்பழங்கால வரலாற்றைக் கற்கும் முயற்சியில் நான் ஈடுபடத்தொடங்கியபோது தேடிக் கற்றேன். பச்சையப்பன் கல்லூரியின் மேனாள் தமிழ்ப் பேராசிரியர் சென்ற ஆண்டு இயற்கையெய்திய வரலாற்றுப் பேரறிஞர் கோ. நிலவழகனார் ந.சி. கந்தையா அவர்களைச் சென்னையில் அவர் வாழ்ந்த நாளில் சந்தித்தது பற்றியும் அவரின் பன்னூற்புலமை பற்றியும் எம்மிடம் மகிழ்ந்து கூறுவார். ந.சி. கந்தையா அவர்களின் நூல்கள் பலவற்றையும் அவர் வைத்திருந்தார். அருகிய பழைய நூல்களைப் பேணுவாரிடத்திலும் நூலகங்கள் சிலவற்றிலும் மட்டுமே ஒடுங்கிக்கிடந்த ந.சி. கந்தையா நூல்களை மீண்டும் அச்சில் வெளியிடுவார் இலரே என்று கவலையுற்றேன். அமிழ்தம் பதிப்பகம் இவரின் நூல்களை வெளியிடுகின்றது. உண்மைத் தமிழ் நெஞ்சங்கள் இந் நூல்களை உச்சிமோந்து வாரியணைத்துப் புகழ்ந்து கற்றுப் பயனடைவார்கள் என்பதில் எனக்கு நம்பிக்கையுண்டு. பேரா. கு. அரசேந்திரன் பதிப்புரை வளம் சேர்க்கும் பணி “குமரிநாட்டின் தமிழினப் பெருமையை நிமிரச் செய்தான்,” “சிந்தையும் செயலும் செந்தமிழுக்கு சேர்த்த நூல் ஒன்றா இரண்டா” என்று பாவேந்தர் பாரதிதாசன் அவர்களால் போற்றப்பட்ட தமிழீழ அறிஞர் ந.சி. கந்தையாவின் நூல்களை மீண்டும் மறுபதிப்புச் செய்து தமிழ் உலகிற்கு வளம் சேர்க்கும் பணியைச் செய்ய முன் வந்துள்ளோம். இப்பெருமகனார் எழுதிய நூல்கள் அறுபதுக்கு மேற்பட்டவை யாகும். இந்நூல்கள் சிறிதும் பெரிதுமாக உள்ளவை. இவற்றைப் பொருள் வாரியாகப் பிரித்து இருபதுக்கு மேற்பட்ட நூல் திரட்டுகளாகத் தமிழ் உலகிற்குக் களமாகவும், தளமாகவும் வளம் சேர்க்கும் வைரமணி மாலை யாகவும் கொடுத்துள்ளோம். மொழிக்கும் இனத்திற்கும் அரணாக அமையும் இவ்வறிஞரின் நூல்கள் எதிர்காலத் தமிழ் உலகிற்குப் பெரும் பயனைத் தரவல்லன. ந.சி. கந்தையா இவர் 1893இல் தமிழீழ மண்ணில் நவாலியூர் என்னும் ஊரில் பிறந்தவர். பிறந்த ஊரிலேயே பள்ளிப்படிப்பை முடித்து அவ்வூரிலேயே ஆசிரியப் பணியாற்றியவர். பின்னர் மலேசிய மண்ணில் சிலகாலம் தொடர்வண்டித் துறையில் பணியாற்றியுள்ளார். இவர் தமிழ் ஈழ மண்ணில் பிறந்திருந்தாலும் தமிழகத்தில் இருந்துதான் அவர் தமிழ் மொழிக்கும் தமிழ் இனத்திற்கும் பெருமை சேர்க்கும் நூல்கள் பல எழுதினார் என்று தெரிகிறது. தமிழுக்குத் தொண்டாற்றிய அறிஞர்களில் ந.சி. கந்தையா குறிப்பிடத்தக்கவர். தன்னை முன்னிலைப் படுத்தாது மொழியையும் இனத்தையும் முன்னிலைப்படுத்திய பெருமைக்குரியவர். உலக மொழி களுள் தமிழ்மொழி தொன்மைமிக்கது. உலகமொழிகளுக்கு வேராகவும் சாறாகவும் அமைந்தது. தமிழர் சமயமும், கலையும் பண்பாடும், வரலாறும், தமிழன் கண்ட அறிவியலும் உலகுக்கு முன்னோடியாகத் திகழ்வன. இவற்றையெல்லாம் தம் நுண்ணறிவால் கண்டறிந்து பல நூல்களை யாத்தவர். தமிழியம் பற்றிய ஆய்வை ஆராய்ந்த அறிஞர்கள் பலருளர். இவர்கள் அனைவரும் கலை, இலக்கியம், சமயம், மொழி, வரலாறு, நாகரிகம், பண்பாடு போன்ற பல துறைகளில் பங்காற்றியுள்ளனர். ஆனால், ந.சி.க. இத் துறைகளில் மட்டுமன்றிப் பொது அறிவுத் துறையிலும் புகுந்து புத்தாக்கச் செய்திகளைத் தமிழ் உலகிற்குக் கொடுத்தவர். இவருடைய மொழிபெயர்ப்பு படிப்பாரை ஈர்க்கக் கூடியவை. படித்தலின் நோக்கம் பற்றியும் பல்வேறு பொருள் பற்றியும் கூறுபவை. தமிழ் அகராதித் துறையில் இவர் எழுதிய காலக்குறிப்பு அகராதி தமிழ் உலகிற்குப் புதுவரவாய் அமைந்தது. தமிழ் மொழிக்கு அரிய நூல்களைத் தந்தோர் மிகச் சிலரே. நிறைதமிழ் அறிஞர் மறைமலை அடிகளும், தமிழ் மலையாம் தேவநேயப் பாவாணரும் தமிழ் மொழிக்கு ஆக்கமும் ஊக்கமும் சேர்க்கத்தக்க நூல்களைத் தமிழர்களுக்கு வைப்பாக எழுதிச் சென்றவர்கள். அவர் தம் வரிசையில் இவர் தம் நூல்களின் வரிசையும் அடங்கும். தமிழ் ஆய்வு வரலாற்றில் இவரின் பங்களிப்பு குறிக்கத்தக்கது. கழகக் காலச் செய்தி களைப் படித்துப் பொருள் புரிந்து கொள்வது பலருக்குக் கடினமாக இருந்தது. இவற்றை எளிதில் படித்துப் பொருள் புரியும் உரைநடைப் போக்கை முதன்முதலில் கையாண்டவர். இவரது மொழிநடை, கருத்துக்கு முதன்மை தருபவை. உரைநடை, எளிமையும் தெளிவும் உடையது. சிறுசிறு வாக்கிய அமைப்பில் தெளிந்த நீரோடை போன்றது. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் தென்னகம் பெற்றிருந்த நாகரிகப் பண்பாட்டுக் கூறுகளைக் கண்ணுக்குக் காட்சியாகவும் படிப்பாரின் கருத்துக்கு விருந்தாகவும் அளித்தவர். நூல் திரட்டுகள் நுவலும் செய்திகள் 1800 ஆண்டுகட்கு முற்பட்ட தமிழர் காலம் தொட்டு இவர் வாழ்ந்த காலம் வரை தமிழரின் வரலாற்றுச் சுவடுகளை நுட்பமாக ஆராய்ந் துள்ளார். அவர் மறைவிற்குப் பிறகு இன்று வரை அவருடைய ஆய்விற்கு மேலும் ஆக்கம் தரும் செய்திகள் அறிவுலகில் தமிழுக்கும், தமிழர்களுக்கும் வலுவாய் அமைந்துள்ளன. தமிழும் சிவநெறியும் ஓங்கியிருந்தமை. - தாயாட்சிக் காலம் முதன்மை பெற்றிருந்தது. மொழியின் தோற்றம், சமற்கிருதம் எப்படித் தோன்றியது - ஆரியர் யார் - இந்தியாவிற்கு எப்படி வந்தனர் - தமிழரோடு எவ்வாறு கலப்புற்றனர் - ஆதிமக்களின் தோற்றமும், பிறப்பும் - இந்திய நாட்டின் ஆதிமக்கள், திராவிட மக்கள் - ஆதிமக்கள் பிறநாடுகளில் குடிபெயர்ந்தது - மொழிக்கும், சமயத்துக்கும் உள்ள உறவு - சமற்கிருதம் சமயமொழி ஆனதற்கான ஆய்வுகள் - வழிபாட்டின் தொடக்கம் - வழிபாடு எங்கெல்லாம் இருந்தது - பண்டைய மக்கள் எழுது வதற்குப் பயன்படுத்திய பொருள்கள் - மேலை நாடுகளிலும், சென்னை யிலும் இருந்த நூல் நிலையங்கள் - ஆரியமொழி இந்திய மண்ணில் வேரூன்றிய வரலாறு - தமிழுக்கு நேர்ந்த கேடுகள் - திருவள்ளுவர் குறித்த கதைகள் - வள்ளுவச் சமயம் - பண்டைய நாகரிக நாடுகள் - அந்நாடுகளில் பெண்களைப் பற்றிய நிலை - அகத்தியர் பற்றிய பழங்கதைகள் - திராவிட மொழிகள் பற்றிய குறிப்புகள் - உலகநாடுகளில் தமிழர் நாகரிகச் சுவடுகள் - திராவிட மொழிகளுக்குத் தாய்மொழி தமிழ் - திராவிடரின் பிறப்பிடம் - ஐவகை நிலங்கள், பாகுபாடுகள் - பழக்க வழக்கங்கள் - சிந்து வெளி நாகரிக மேன்மை - புத்தரின் பிறப்பு - அவரைப் பற்றிய கதைகள் - இராமகாதை பற்றிய செய்திகள் - தென்னவரின் குலங்கள், குடிகள், வடவரின் குலங்கள், .குடிகள் - தமிழின் பழமை, தமிழக எல்லை அமைப்பு - பண்டைக்கால கல்வி முறை, உரைநடை - வேதங்கள், வேதங்களுக்கும் ஆகமங்களுக்கும் உள்ள வேறுபாடுகள் - நீர்வழி, நிலவழி வணிகம் சிறந்தோங்கிய நிலை - மலைவழி, கடல்வழி, நிலவழி பொருள்கள் நிரம்பிய காலம் - சுற்றம் தழைக்க வாழ்ந்த நிலை - தமிழ வணிகர், வேற்று நாட்டு வணிகருடன் தொடர்பு கொண்டு மிக்கோங்கியிருந்த காலம் - வானநூல் கலையும், சிற்பக் கலையும், கட்டடக் கலையும் , இசைக்கலையும் மிக்கோங்கியிருந்த காலம் - ஆரியர் வருகைக்கு முற்பட்ட பிறமொழி கலப்பற்ற தூய தமிழ் பெருகி யிருந்த காலம் - உலக நாகரிகங்களுக்குத் தமிழர் நாகரிகம் நாற்றங்கால் - உலகப் பண்பாடுகளுக்குத் தமிழர் பண்பாடு தொட்டிலாக அமைந்தமை - அகராதிகள் - அறிவுத் தேடலுக்குரிய செய்திகள் - இவர்தம் நூல்களின் உயிர்க்கூறுகளாக அடங்கியுள்ளன. வாழும் மொழி தமிழ் தமிழ் இளைஞர்கள் தம் முன்னோரின் பெருமையை உணர, எதிர்கால வாழ்விற்கு ஏணிப்படிகளாய் அமைவன இந்நூல்கள். எகிப்திய மொழி, சுமேரிய மொழி, இலத்தீனும், பாலியும் கிரேக்கமும் அரபிக் மொழியும் வாழ்ந்து சிறந்த காலத்தில் தமிழ் மொழியும் வாழ்ந்து சிறந்தது. பழம்பெரும் மொழிகள் பல மாண்டும் சில காப்பக மொழிகளாகவும் அறிஞர்களின் பார்வை மொழியாகவும் இருந்து வரும் இக் காலத்தில் இன்றளவும் இளமை குன்றா வளம் நிறைந்த மொழியாக தமிழ் மொழி வாழ்கிறது என்று நாம் பெருமைகொள்ளலாம். ஆனால், இத்தமிழ் மொழியின் நிலை இன்று ஆட்சிமொழியாக அலுவல் மொழியாக, இசைமொழியாக, கல்வி மொழியாக, அறமன்ற மொழியாக , வழிபாட்டு மொழியாக, குடும்ப மொழியாக இல்லாத இரங்கத் தக்க நிலையாக உள்ளது. தாய்மொழியின் சிறப்பைப் புறந்தள்ளி வேற்றுமொழியைத் தூக்கிப் பிடிக்கும் அவல நிலை மிகுந்துள்ளது. முகத்தை இழந்த மாந்தன் உயிர்வாழ முடியாது. எப்படி உயிரற்றவனோ, அவ்வாறே மொழியை இழந்த இனம் இருந்த இடம் தெரியாமல் அழியும் என்பது உலக வரலாறு காட்டும் உண்மை. ஒரு இனத்தை அழிக்க வேண்டுமெனில் மொழியை அழித்தால்தான் இனத்தை அழிக்க முடியும். உலக மக்களெல்லாம் தம் கையெழுத்தைத் தம் தம் தாய்மொழியில் போடுவதைப் பெருமையாகக் கொள்வர். ஆனால் தமிழ் மண்ணின் நிலையோ? எங்கணும் காணாத அவலம் நிறைந்தது. மொழியையும் இனத்தையும் உயர்வாகக் கருதிய இனங்கள் உலக அரங்கில் உயர்ந்து நிற்கும் உன்னதத்தையும் தாழ்வாகக் கருதிய இனங்கள் உலக அரங்கில் தாழ்வுற்று இருப்பதையும் தமிழர்கள் இனியேனும் அறிவார்களா? தமிழர்களின் கடன் இளம் தலைமுறைக்கும் மாணவர்களுக்கும் பயன்படத்தக்க இவ்வரிய நூல்களைத் தொகுத்து 23 திரட்டுகளாகக் கொடுத்துள்ளோம். தமிழ் மொழியின் காப்புக்கும், தமிழரின் எழுச்சிக்கும் வித்திடும் இந்நூல்கள். தமிழர் யார், எதிரிகள் யார் எனும் அரிய உண்மைகளைக் கண்டு காட்டும் நூல்கள். இவரின் பேருழைப்பால் எழுதப்பட்ட இந் நூல்கள் பழைய அடையாளங்களை மீட்டெடுக்கும் நூல்கள். தமிழர் களுக்குள்ள பலவீனத்தை உணர்வதற்கும் பலத்தை உயிர்ப்பிப்பதற்கும் உரிய நூல்களாகும். இந் நூல்களைத் தேடி எடுத்து இளந்தலைமுறைக்கு வைப்பாகக் கொடுத்துள்ளோம். இவற்றைக் காப்பதும் போற்றுவதும் தமிழர்கள் கடன். மாண்டுபோன இசுரேல் மொழியையும் பண்பாட்டையும் மீட் டெடுத்த இசுரேலியர்களின் வரலாறு நமக்குப் பாடமாக அமைந்துள்ளது. உலக மக்களுக்கு நாகரிகம் இன்னதெனக் காட்டியவர்கள் தமிழர்கள். உலகில் முதன்முதலில் உழவுத் தொழிலையும் கடல் வாழ்வையும் வளர்த்த வர்கள் தமிழர்கள். முதன்முதலில் வீடமைப்பும், தெருவமைப்பும் நகரமைப்பும் நாடமைப்பும் கண்டவர்கள் தமிழர்கள். உலகில் முதன்முதலில் மொழியும் கலையும் ஆட்சிப் பிரிவுகளும், சட்டங்களும் பிற கூறுகளும் வகுத்தவர்கள் தமிழர்கள். எழுச்சிக்கு வித்திட... உடம்பு நோகாமல் கை நகத்தின் கண்களில் அழுக்குபடாமல் தமிழகக் கோயில்களைச் சாளரமாகக் கொண்டு வாழும் கூட்டத்தால் தமிழுக்கும் தமிழர்களுக்கும் விளைந்த சீரழிவை இற்றைத் தலைமுறை அறிதல் வேண்டும். மறுமலர்ச்சிக்கும் உரிமைப் போருக்கும் உன்னத எழுச்சிக்கும் அந்தந்த நாடுகளில் இளைஞர்கள் முன்னெடுத்துச் சென்ற வரலாறு நம் கண்முன்னே காட்சியாகத் தெரிகிறது. அயர்லாந்து, செர்மனி, துருக்கி, சப்பானின் அன்றைய நிலையும், இன்றைய நிலையும் - தமிழ் இளைஞர்கள் படித்தால்தான் நம்நாட்டின் எழுச்சிக்கு வித்திட முடியும் என்பதை இந்நூல்களின் வாயிலாக உணர முடிகிறது. இந் நூல் திரட்டுகள் வெளிவருவதற்கு எனக்குப் பெரிதும் உதவியாக இருந்தவர் சென்னை வாழ் புலவரும், வடசென்னை தமிழ் வளர்ச்சிப் பேரவையின் செயலாளர், நிறுவனருமான புலவர் கோ. தேவராசன், மு.க.,க.இ., ஆவார். இவரின் பேருதவியால் முழுமையாக நூல்களைத் தேடி எடுத்துத் தமிழ் உலகிற்குக் கொடையாகக் கொடுத்துள்ளோம். அவருக்கு எம் நன்றி. இந்நூல்களைப் பொருள் வாரியாக பிரித்துத் திரட்டுகளாக ஆக்கியுள்ளோம். ஒவ்வொரு திரட்டிற்கும் தக்க தமிழ்ச் சான்றோரின் அறிமுக உரையோடு வெளியிடுகிறோம். இவர்களுக்கு என் நன்றி என்றும். இந் நூலாக்கப் பணிக்கு உதவிய கோ. அரங்கராசன், மேலட்டை ஆக்கத்திற்கு உதவிய பிரேம், கணினி இயக்குநர்கள் சரவணன், குப்புசாமி, கலையரசன், கட்டுநர் தனசேகரன், இந்நூல்கள் பிழையின்றி வெளிவர மெய்ப்புத் திருத்தி உதவிய புலவர் சீனிவாசன், புலவர் ஆறுமுகம், செல்வராசன் ஆகியோருக்கும் மற்றும் அச்சிட்டு உதவிய ‘ப்ராம்ட்’ அச்சகத்தார் மற்றும் ‘வெங்க டேசுவரா’ அச்சகத்தாருக்கும் எம் பதிப்பகம் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். பதிப்பகத்தார் திராவிட நாகரிகம் ஆசிரியர் ந.சி. கந்தையா தொகுப்பாளர் புலவர் கோ. தேவராசன் எம்.ஏ.,பி.எட்., பதிப்பாளர் இ. இனியன் அமிழ்தம் பதிப்பகம் 328/10 திவான்சாகிப் தோட்டம் இராயப்பேட்டை, சென்னை - 14. நூற்குறிப்பு நூற்பெயர் : திராவிட நாகரிகம் ஆசிரியர் : ந.சி. கந்தையா பதிப்பாளர் : இ. இனியன் முதல் பதிப்பு : 2003 தாள் : 16.0 கி. மேப்லித்தோ அளவு : 1/8 தெம்மி எழுத்து : 11 புள்ளி பக்கம் : 20 + 164 = 184 படிகள் : 2000 விலை : உரு. 80 நூலாக்கம் : பாவாணர் கணினி 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர் நகர், சென்னை - 17. அட்டை வடிவமைப்பு : பிரேம் அச்சு : வெங்கடேசுவரா ஆப்செட் 20 அஜீஸ் முல்க் 5வது தெரு ஆயிரம் விளக்கு, சென்னை - 600 006 கட்டமைப்பு : இயல்பு வெளியீடு : அமிழ்தம் பதிப்பகம் 328/10 திவான்சாகிப் தோட்டம், டி.டி.கே. சாலை, இராயப்பேட்டை, சென்னை - 600 014. i ii xv xiv iii iv xiii xii v vi xi x vii viii ix உள்ளடக்கம் ந.சி. கந்தையாப் பிள்ளை வாழ்வும் தொண்டும். . . . iii அகம் நுதலுதல் . . . vii நூலறிமுகவுரை . . . xi கருவிநூல் தந்த ந.சி.க. . . . xiii பதிப்புரை . . . xv நூல் 1. திராவிடர் நாகரிகம் . . . 1 2. திராவிடம் என்றால் என்ன? . . . 33 3. மறைந்த நாகரிகங்கள் . . . 53 4. திராவிட இந்தியா . . . 113