உரைவேந்தர் தமிழ்த்தொகை 23 திருக்குறள் தெளிவு (கட்டுரைகள்) பொதுமணித்திரள் (கட்டுரைகள்) ஆசிரியர் ஒளவை துரைசாமி பதிப்பாசிரியர்கள் முனைவர் ஒளவை நடராசன் முனைவர் இரா. குமரவேலன் இனியமுது பதிப்பகம் சென்னை - 600 017. நூற் குறிப்பு நூற்பெயர் : உரைவேந்தர் தமிழ்த்தொகை - 23 ஆசிரியர் : ஒளவை துரைசாமி பதிப்பாளர் : இ. தமிழமுது பதிப்பு : 2009 தாள் : 16 கி வெள்ளைத்தாள் அளவு : 1/8 தெம்மி எழுத்து : 11 புள்ளி பக்கம் : 24 + 280 = 304 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) விலை : உருபா.190/- படிகள் : 1000 நூலாக்கம் : பாவாணர் கணினி தி.நகர், சென்னை - 17. அட்டை ஓவியம் : ஓவியர் மருது அட்டை வடிவமைப்பு : வ. மலர் அச்சிட்டோர் : ஸ்ரீ வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்சு இராயப்பேட்டை, சென்னை - 14. வெளியீடு இனியமுது பதிப்பகம் பி.11 குல்மொகர் குடியிருப்பு, 35 செவாலிய சிவாசி கணேசன் சாலை, தியாகராயர் நகர், சென்னை - 600 017. தொ.பே. 2433 9030 பதிப்புரை ஒளவை சு.துரைசாமிப் பிள்ளை தமது ஓய்வறியா உழைப்பால் தமிழ் ஆய்வுக் களத்தில் உயர்ந்து நின்றவர். 20 ஆம் நூற்றாண்டில் தமிழ் மறுமலர்ச்சிக்கு புத்துயிர் ஊட்டிய தமிழ்ச் சான்றோர்களுள் முன் வரிசையில் நிற்பவர். நற்றிணை, புறநானூறு, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து ஆகிய சங்க நூற் செல்வங்களுக்கு உரைவளம் கண்டவர். சைவ பெருங்கடலில் மூழ்கித் திளைத்தவர். உரைவேந்தர் என்று தமிழுலகம் போற்றிப் புகழப்பட்ட ஒளவை சு.துரைசாமிப் பிள்ளை 1903இல் பிறந்து 1981இல் மறைந்தார். வாழ்ந்த ஆண்டுகள் 78. எழுதிய நூல்கள் 38. இதனை பொருள் வழிப் பிரித்து “உரைவேந்தர் தமிழ்த்தொகை” எனும் தலைப்பில் 28 தொகுதிகளாக வெளியிட்டுள்ளோம். இல்லற ஏந்தலாகவும், உரைநயம் கண்ட உரவோராகவும் , நற்றமிழ் நாவலராகவும், சைவ சித்தாந்தச் செம்மலாகவும் , நிறைபுகழ் எய்திய உரைவேந்தராகவும், புலமையிலும் பெரும் புலமைபெற்றவராகவும் திகழ்ந்து விளங்கிய இப்பெருந்தமிழாசானின் நூல்கள் அனைத்தையும் ஒரு சேர வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம். இவருடைய நூல்களில் எம் கைக்குக் கிடைக்கப் பெறாத நூல்கள் 5. மற்றும் இவர் எழுதிய திருவருட்பா நூல்களும் இத் தொகுதிகளில் இடம் பெறவில்லை. “ பல்வேறு காலத் தமிழ் இலக்கியங்கள், உரைகள், வரலாறு, கல்வெட்டு, சமயங்கள் என்றின்ன துறைப் பலவற்றில் நிறைபுலமை பெற்றவர் ஒளவை சு .துரைசாமி அவர்கள்” என்று மூதறிஞர் வ.சுப. மாணிக்கம் அவர்களாலும், “இரவுபகல் தானறியான் இன்தமிழை வைத்து வரவு செலவறியான் வாழ்வில் - உரமுடையான் தன்கடன் தாய்நாட்டு மக்கட் குழைப்பதிலே முன்கடன் என்றுரைக்கும் ஏறு” என்று பாவேந்தர் பாரதிதாசன் அவர்களாலும் போற்றிப் புகழப் பட்ட இப்பெருந்தகையின் நூல்களை அணிகலன்களாகக் கோர்த்து, முத்துமாலையாகக் கொடுத்துள்ளோம். அவர் காலத்தில் வாழ்ந்த சமகால அறிஞர்களால் போற்றிப் புகழப் பட்டவர். சைவ உலகில் தனக்கெனத் தனியிடத்தைப் பெற்றவர். இவர் எழுதிய அனைத்து நூல்கள் மற்றும் மலர்கள், இதழ்களில் வெளிவந்த கட்டுரைகளையெல்லாம் தேடித் தேடி எடுத்து ஒரே வீச்சில் வெளியிடுகிறோம். இத்தொகுதிகள் அனைத்தும் மிகச்சிறப்பாக வெளிவருவதற்கு முழுஒத்துழைப்பும் உதவியும் நல்கியவர்கள் அவருடைய திருமகன் ஒளவை து.நடராசன், மருகர் இரா.குமரவேலன், மகள் வயிற்றுப் பெயர்த்தி திருமதி வேனிலா ஸ்டாலின் ஆகியோர் ஆவர். இவர்கள் இத் தமிழ்த்தொகைக்கு தக்க மதிப்புரையும் அளித்து எங்களுக்குப் பெருமைச் சேர்த்து உள்ளனர். இவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றி தன் மதிப்பு இயக்கத்தில் பேரீடுபாடு கொண்டு உழைத்த இவ்வருந்தமிழறிஞர் தமிழ்ப் பகைவரைத் தம் பகைவராகக் கொண்ட உயர் மனத்தினராக வாழ்ந்தவர் என்பதை நினைவில் கொண்டு இத் தொகை நூல்களை இப்பெருந்தமிழ் அறிஞரின் 107 ஆம் ஆண்டு நினைவாக உலகத் தமிழர்களுக்குப் பயன்படும் வகையில் வெளியிடுவதில் பெருமகிழ்வு கொள்கிறோம். தமிழ் நூல் பதிப்பில் எங்களின் இந்த அரிய முயற்சிக்குத் தோள் தந்து உதவுங்கள். நன்றி - பதிப்பாளர் பேருரை வரைந்த பெருந்தமிழ்க் கடல்! பொற்புதையல் - மணிக்குவியல் “ நூலுக்கு நூலருமை காட்டுவதில் நுண்ணறிஞன் மேலுக்குச் சொல்லவில்லை வேர்ப்பலாத் - தோலுக்குள் உள்ள சுளைகொடுக்கும் உண்மை உழைப்பாளன் அள்ளக் குறையாத ஆறு” என்று பாவேந்தரும், “பயனுள்ள வரலாற்றைத்தந்த தாலே பரணர்தான், பரணர்தான் தாங்கள்! வாக்கு நயங்காட்டிச் செவிக்குத்தேன் தந்த தாலே நக்கீரர்தான் தாங்கள் இந்த நாளில் கயன்மன்னர் தொழுதமொழி காத்ததனால் - தொல் காப்பியர்தான்! காப்பியர்தான் தாங்கள்! எங்கும் தயங்காமல் சென்றுதமிழ் வளர்த்த தாலே தாங்கள்அவ்-ஒளவைதான்! ஒளவை யேதான்!” என்று புகழ்ந்ததோடு, “அதியன்தான் இன்றில்லை இருந்தி ருந்தால் அடடாவோ ஈதென்ன விந்தை! இங்கே புதியதாய்ஓர் ஆண்ஒளவை எனவி யப்பான்” எனக் கண்ணீர் மல்கக் கல்லறை முன் கவியரசர் மீரா உருகியதையும் நாடு நன்கறியும். பல்வேறு காலத் தமிழிலக்கியங்கள், உரைகள், வரலாறு, கல்வெட்டு, சமயங்கள் என்றின்ன துறை பலவற்றில் நிறைபுலமையும் செறிந்த சிந்தனை வளமும் பெற்றவர் உரைவேந்தர் ஒளவை துரைசாமி அவர்கள். தூயசங்கத் தமிழ் நடையை எழுத்து வன்மையிலும் சொல்வன்மையிலும் ஒருங்கு பேணிய தனித் தமிழ்ப்பண்பு ஒளவையின் அறிவாண்மைக்குக் கட்டியங் கூறும். எட்டுத் தொகையுள் ஐங்குறுநூறு, நற்றிணை, புறநானூறு, பதிற்றுப்பத்து என்ற நான்கு தொகை நூல்கட்கும் உரைவிளக்கம் செய்தார். இவ்வுரை விளக்கங்களில் வரலாற்றுக் குறிப்பும் கல்வெட்டுக் குறிப்பும் மண்டிக் கிடக்கின்றன. ஐங்குறு நூற்றுச் செய்யுட்களை இந்நூற்றாண்டின் மரவியல் விலங்கியல் அறிவு தழுவி நுட்பமாக விளக்கிய உரைத்திறன் பக்கந்தோறும் பளிச்சிடக் காணலாம். உரை எழுதுவதற்கு முன், ஏடுகள் தேடி மூலபாடம் தேர்ந்து தெரிந்து வரம்பு செய்துகோடல் இவர்தம் உரையொழுங்காகும். தமிழ் இலக்கிய வரலாற்றில் நான்கு சங்கத் தொகை நூல்கட்கு உரைகண்டவர் என்ற தனிப்பெருமையர் மூதறிஞர் ஒளவை துரைசாமி ஆவார். இதனால் உரைவேந்தர் என்னும் சிறப்புப் பெயரை மதுரை திருவள்ளுவர் கழகம் வழங்கிற்று. பரந்த சமயவறிவும் நுண்ணிய சைவ சித்தாந்தத் தெளிவும் உடையவராதலின் சிவஞானபோதத்துக்கும் ஞானாமிர்தத்துக்கும் மணிமேகலையின் சமய காதைகட்கும் அரிய உரைப்பணி செய்தார். சித்தாந்த சைவத்தை உரையாலும் கட்டுரையாலும் கட்டமைந்த பொழிவுகளாலும் பரப்பிய அருமை நோக்கி ‘சித்தாந்த கலாநிதி’ என்ற சமயப்பட்டத்தை அறிஞர் வழங்கினர். சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, சூளாமணி, யசோதர காவியம் என்னும் ஐந்து காப்பியங்களின் இலக்கிய முத்துக்களை ஒளிவீசச் செய்தவர். மதுரைக் குமரனார், சேரமன்னர் வரலாறு, வரலாற்றுக்காட்சிகள், நந்தாவிளக்கு, ஒளவைத் தமிழ் என்றின்ன உரைநடை நூல்களும் தொகுத்தற்குரிய தனிக்கட்டுரைகளும் இவர்தம் பல்புலமையைப் பறைசாற்றுவன. உரைவேந்தர் உரை வரையும் முறை ஓரு தனிச்சிறப்பு வாய்ந்தது. பொருள் கூறும்போது ஆசிரியர் வரலாற்றையும், அவர் பாடுதற்கு அமைந்த சூழ்நிலையையும், அப்பாட்டின் வாயிலாக அவர் உரைக்கக் கருதும் உட்கோளையும் ஒவ்வொரு பாட்டின் உரையிலும் முன்கூட்டி எடுத்துரைக்கின்றார். பாண்டியன் அறிவுடைநம்பியின் பாட்டுக்கு உரை கூறுங்கால், அவன் வரலாற்றையும், அவனது பாட்டின் சூழ்நிலையையும் விரியக் கூறி, முடிவில், “இக்கூற்று அறக்கழிவுடையதாயினும் பொருட்பயன்பட வரும் சிறப்புடைத்தாதலைக் கண்ட பாண்டியன் அறிவுடை நம்பி, தன் இயல்புக்கு ஒத்தியல்வது தேர்ந்து, அதனை இப்பாட்டிடைப் பெய்து கூறுகின்றான் என்று முன்மொழிந்து, பின்பு பாட்டைத் தருகின்றார். பிறிதோரிடத்தே கபிலர் பாட்டுக்குப் பொருளான நிகழ்ச்சியை விளக்கிக் காட்டி, “நெஞ்சுக்குத் தான் அடிமையாகாது தனக்கு அஃது அடிமையாய்த் தன் ஆணைக்கு அடங்கி நடக்குமாறு செய்யும் தலைவனிடத்தே விளங்கும் பெருமையும் உரனும் கண்ட கபிலர் இப்பாட்டின்கண் உள்ளுறுத்துப் பாடுகின்றார்” என்று இயம்புகின்றார். இவ்வாறு பாட்டின் முன்னுரை அமைவதால், படிப்போர் உள்ளத்தில் அப்பாட்டைப் படித்து மகிழ வேண்டும் என்ற அவா எழுந்து தூண்டுகிறது. பாட்டுக்களம் இனிது படிப்பதற்கேற்ற உரிய இடத்தில் சொற்களைப் பிரித்து அச்சிட்டிருப்பது இக்காலத்து ஒத்த முறையாகும். அதனால் இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன் தோன்றிய நற்றிணையின் அருமைப்பாடு ஓரளவு எளிமை எய்துகிறது. கரும்பைக் கணுக்கணுவாகத் தறித்துச் சுவைகாண்பது போலப் பாட்டைத் தொடர்தொடராகப் பிரித்துப் பொருள் உரைப்பது பழைய உரைகாரர்களான பரிமேலழகர், நச்சினார்க்கினியர் முதலியோர் கைக்கொண்ட முறையாகும். அம்முறையிலேயே இவ்வுரைகள் அமைந்திருப்பதால், படிக்கும்போது பல இடங்கள், உரைவேந்தர் உரையோ பரிமேலழகர் முதலியோர் உரையோ எனப் பன்முறையும் நம்மை மருட்டுகின்றன. “இலக்கணநூற் பெரும்பரப்பும் இலக்கியநூற் பெருங்கடலும் எல்லாம் ஆய்ந்து, கலக்கமறத் துறைபோகக் கற்றுணர்ந்த பெரும்புலமைக் கல்வி யாளர்! விலக்ககலாத் தருக்கநூல், மெய்ப்பொருள்நூல், வடமொழிநூல், மேற்பால் நூல்கள் நலக்கமிகத் தெளிந்துணர்ந்து நாடுய்ய நற்றமிழ் தழைக்க வந்தார்!” என்று பாராட்டப் பெறும் பெரும் புலமையாளராகிய அரும்பெறல் ஒளவையின் நூலடங்கலை அங்கிங்கெல்லாம் தேடியலைந்து திட்பமும் நுட்பமும் விளங்கப் பதித்த பாடு நனிபெரிதாகும். கலைப்பொலிவும், கருத்துத்தெளிவும், பொதுநோக்கும் பொலிந்த நம் உரைவேந்தர், வள்ளலாரின் திருவருட்பா முழுமைக்கும் பேருரைகண்ட பெருஞ்செல்வம். இஃது தமிழ்ப் பேழைக்குத் தாங்கொணா அருட்செல்வமாகும். நூலுரை, திறனுரை, பொழிவுரை என்ற முவ்வரம்பாலும் தமிழ்க் கரையைத் திண்ணிதாக்கிய உரைவேந்தர் ஒளவை துரைசாமி அவர்களின் புகழுரையை நினைந்து அவர் நூல்களை நம்முதல்வர் கலைஞர் நாட்டுடைமை ஆக்கியதன் பயனாகத் இப்புதையலைத் இனியமுது பதிப்பகம் வெளியிடுகின்றது. இனியமுது பதிப்பக உரிமையாளர், தமிழ்மண் பதிப்பகத்தின் உரிமையாளர் கோ.இளவழகனாரின் அருந்தவப்புதல்வி இ.தமிழமுது ஆவார். ஈடரிய தமிழார்வப் பிழம்பாகவும், வீறுடைய தமிழ்ப்பதிப்பு வேந்தராகவும் விளங்கும் நண்பர் இளவழகன் தாம் பெற்ற பெருஞ்செல்வம் முழுவதையும் தமிழினத் தணல் தணியலாகாதென நறுநெய்யூட்டி வளர்ப்பவர். தமிழ்மண் பதிப்பகம் அவர்தம் நெஞ்சக் கனலுக்கு வழிகோலுவதாகும். அவரின் செல்வமகளார் அவர் வழியில் நடந்து இனியமுது பதிப்பகம் வழி, முதல் வெளியீடாக என்தந்தையாரின் அனைத்து ஆக்கங்களையும் (திருவருட்பா தவிர) பயன்பெறும் வகையில் வெளியிடுகிறார். இப்பதிப்புப் புதையலை - பொற்குவியலை தமிழுலகம் இரு கையேந்தி வரவேற்கும் என்றே கருதுகிறோம். ஒளவை நடராசன் நுழைவாயில் செம்மொழித் தமிழின் செவ்வியல் இலக்கியப் பனுவல்களுக்கு உரைவழங்கிய சான்றோர்களுள் தலைமகனாய் நிற்கும் செம்மல்உரைவேந்தர்’ ஒளவை சு.துரைசாமி பிள்ளை அவர்களாவார். பத்துப்பாட்டிற்கும், கலித்தொகைக்கும் சீவகசிந்தாமணிக்கும் நல்லுரை தந்த நச்சினார்க்கினியருக்குப் பின், ஆறு நூற்றாண்டுகள் கழித்து, ஐங்குறுநூறு, புறநானூறு, பதிற்றுப்பத்து, நற்றிணை, யசோதர காவியம் ஆகிய நூல்களுக்கு உரையெழுதிய பெருமை ஒளவை அவர்களையே சாரும். சங்க நூல்களுக்குச் செம்மையான உரை தீட்டிய முதல் ‘தமிழர்’ இவர் என்று பெருமிதம் கொள்ளலாம். எழுத்தாற்றலும் பேச்சாற்றலும் மிக்க ஒளவை 1903 ஆம் ஆண்டு செப்டம்பர் ஐந்தாம் நாள் தோன்றி, 1981ஆம் ஆண்டு ஏப்ரல் மூன்றாம் நாள் புகழுடம்பு எய்தியவர். தமிழும் சைவமும் தம் இருகண்களாகக் கொண்டு இறுதிவரை செயற்பட்டவர். சிந்தை சிவபெருமானைச் சிந்திக்க, செந்நா ஐந்தெழுத்து மந்திரத்தைச் செப்ப, திருநீறு நெற்றியில் திகழ, உருத்திராக்கம் மார்பினில் உருளத் தன் முன்னர் இருக்கும் சிறு சாய்மேசையில் தாள்களைக் கொண்டு, உருண்டு திரண்ட எழுதுகோலைத் திறந்து எழுதத் தொடங்கினாரானால் மணிக்கணக்கில் உண்டி முதலானவை மறந்து கட்டுரைகளையும், கனிந்த உரைகளையும் எழுதிக்கொண்டே இருப்பார். செந்தமிழ் அவர் எழுதட்டும் என்று காத்திருப்பதுபோல் அருவியெனக் கொட்டும். நினைவாற்றலில் வல்லவராதலால் எழுந்து சென்று வேறு நூல்களைப் பக்கம் புரட்டி பார்க்க வேண்டும் என்னும் நிலை அவருக்கிருந்ததில்லை. எந்தெந்த நூல்களுக்குச் செம்மையான உரையில்லையோ அவற்றிற்கே உரையெழுதுவது என்னும் கொள்கை உடையவர் அவர். அதனால் அதுவரை சீரிய உரை காணப்பெறாத ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து ஆகியவற்றிற்கும், முழுமையான உரையைப் பெற்றிராத புறநானூற்றுக்கும் ஒளவை உரை வரைந்தார். பின்னர் நற்றிணைக்குப் புத்துரை தேவைப்படுவதை அறிந்து, முன்னைய பதிப்புகளில் இருந்த பிழைகளை நீக்கிப் புதிய பாடங்களைத் தேர்ந்து விரிவான உரையினை எழுதி இரு தொகுதிகளாக வெளியிட்டார். சித்தாந்த கலாநிதி என்னும் பெருமை பெற்ற ஒளவை, சிவஞானபோதச் சிற்றுரை விளக்கத்தை எழுதியதோடு, ‘இரும்புக்கடலை’ எனக் கருதப்பெற்ற ஞானாமிர்த நூலுக்கும் உரை தீட்டினார். சைவ மாநாடுகளுக்குத் தலைமை தாங்கிச் சொற்பொழிவுகள் நிகழ்த்தினார். தம் உரைகள் பலவற்றைக் கட்டுரைகள் ஆக்கினார். செந்தமிழ்ச் செல்வி, செந்தமிழ், குமரகுருபரன், சித்தாந்தம் முதலான பல இதழ்களுக்குக் கட்டுரைகளை வழங்கினார். பெருந்தகைப் பெண்டிர், மதுரைக் குமரனார், ஒளவைத் தமிழ், பரணர் முதலான கட்டுரை நூல்களை எழுதினார். அவர் ஆராய்ச்சித் திறனுக்குச் சான்றாக விளங்கும் நூல் ‘பண்டை நாளைச் சேரமன்னர் வரலாறு’ என்னும் ஆய்வு நூலாகும். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் ஒளவை பணியாற்றியபோது ஆராய்ந்தெழுதிய ‘சைவ சமய இலக்கிய வரலாறு’ அத்துறையில் இணையற்றதாக இன்றும் விளங்குகிறது. சங்க நூல்களுக்கு ஒளவை வரைந்த உரை கற்றோர் அனைவருடைய நெஞ்சையும் கவர்ந்ததாகும். ஒவ்வொரு பாட்டையும் அலசி ஆராயும் பண்புடையவர் அவர். முன்னைய உரையாசிரியர்கள் பிழைபட்டிருப்பின் தயங்காது மறுப்புரை தருவர். தக்க பாட வேறுபாடுகளைத் தேர்ந்தெடுத்து மூலத்தைச் செம்மைப்படுத்துவதில் அவருக்கு இணையானவர் எவருமிலர். ‘உழுதசால் வழியே உழும் இழுதை நெஞ்சினர்’ அல்லர். பெரும்பாலும் பழமைக்கு அமைதி காண்பார். அதே நேரத்தில் புதுமைக்கும் வழி செய்வார். தமிழோடு ஆங்கிலம், வடமொழி, பாலி முதலானவற்றைக் கற்றுத் தேர்ந்தவர் அவர். மணிமேகலையின் இறுதிப் பகுதிக்கு உரையெழுதிய நிலை வந்தபோது அவர் முனைந்து பாலிமொழியைக் கற்றுணர்ந்து அதன் பின்னரே அந்த உரையினைச் செய்தார் என்றால் அவரது ஈடுபாட்டுணர்வை நன்கு உணரலாம். எப்போதும் ஏதேனும் ஆங்கில நூலைப் படிக்கும் இயல்புடையவர் ஒளவை அவர்கள். திருக்குறள் பற்றிய ஒளவையின் ஆங்கிலச் சொற்பொழிவு நூலாக அச்சில் வந்தபோது பலரால் பாராட்டப் பெற்றமை அவர்தம் ஆங்கிலப் புலமைக்குச் சான்று பகர்வதாகும். சமய நூல்களுக்கு உரையெழுதுங்கால் வடமொழி நூல்களிலிருந்து மேற்கோள் காட்டுவதும், கருத்துகளை விளக்குவதும் அவர் இயல்பு. அதுமட்டுமன்றி, ஒளவை அவர்கள் சட்டநூல் நுணுக்கங்களையும் கற்றறிந்த புலமைச் செல்வர். ஒளவை அவர்கள் கட்டுரை புனையும் வன்மை பெற்றவர். கலைபயில் தெளிவு அவர்பாலுண்டு. நுண்மாண் நுழைபுலத்தோடு அவர் தீட்டிய கட்டுரைகள் எண்ணில. அவை சங்க இலக்கியப் பொருள் பற்றியன ஆயினும், சமயச் சான்றோர் பற்றியன ஆயினும் புதிய செய்திகள் அவற்றில் அலைபோல் புரண்டு வரும். ஒளவை நடை தனிநடை. அறிவு நுட்பத்தையும் கருத்தாழத்தையும் அந்தச் செம்மாந்த நடையில் அவர் கொண்டுவந்து தரும்போது கற்பார் உள்ளம் எவ்வாறு இருப்பாரோ, அதைப்போன்றே அவர் தமிழ்நடையும் சிந்தனைப் போக்கும் அமைந்திருந்தது வியப்புக்குரிய ஒன்று. ஒளவை ஆற்றிய அருந்தமிழ்ப் பணிகளுள் தலையாயது பழந்தமிழ் நூல்களுக்கு அறிவார்ந்த உரைகளை வகுத்துத் தந்தமையே ஆகும். எதனையும் காய்தல் உவத்தலின்றி சீர்தூக்கிப் பார்க்கும் நடுநிலைப் போக்கு அவரிடம் ஊன்றியிருந்த ஒரு பண்பு. அவர் உரை சிறந்தமைந்ததற்கான காரணம் இரண்டு. முதலாவது, வைணவ உரைகளில் காணப்பெற்ற ‘பதசாரம்’ கூறும் முறை. தாம் உரையெழுதிய அனைத்துப் பனுவல்களிலும் காணப்பெற்ற சொற்றொடர்களை இந்தப் பதசார முறையிலே அணுகி அரிய செய்திகளை அளித்துள்ளார். இரண்டாவது, சட்ட நுணுக்கங்களைத் தெரிவிக்கும் நூல்களிலமைந்த ஆய்வுரைகளும் தீர்ப்புரைகளும் அவர்தம் தமிழ் ஆய்வுக்குத் துணை நின்ற திறம். ‘ஜூரிஸ்புரூடன்ஸ்’ ‘லா ஆஃப் டார்ட்ஸ்’ முதலானவை பற்றிய ஆங்கில நூல்களைத் தாம் படித்ததோடு என்னைப் போன்றவர்களையும் படிக்க வைத்தார். வடமொழித் தருக்கமும் வேறுபிற அளவை நூல்களும் பல்வகைச் சமய அறிவும் அவர் உரையின் செம்மைக்குத் துணை நின்றன. அனைத்திற்கும் மேலாக வரலாற்றுணர்வு இல்லாத இலக்கிய அறிவு பயனற்றது, இலக்கியப் பயிற்சி இல்லாத வரலாற்றாய்வு வீணானது என்னும் கருத்துடையவர் அவர். ஆதலால் எண்ணற்ற வரலாற்று நூல்களையும், ஆயிரக்கணக்கான கல்வெட்டுகளையும் ஆழ்ந்து படித்து, மனத்திலிருத்தித் தாம் இலக்கியத்திற்கு உரைவரைந்தபோது நன்கு பயன்படுத்திக் கொண்டார். ஞானசம்பந்தப் பெருந்தகையின் திருவோத்தூர்த் தேவாரத் திருப்பதிகத்திற்கு முதன்முதலாக உரையெழுதத் தொடங்கிய காலந்தொட்டு இறுதியாக வடலூர் வள்ளலின் திருவருட்பாவிற்குப் பேருரை எழுதி முடிக்கும் வரையிலும், வரலாறு, கல்வெட்டு, தருக்கம், இலக்கணம் முதலானவற்றின் அடிப்படையிலேயே உரைகளை எழுதினார். தேவைப்படும்பொழுது உயிரியல், பயிரியல், உளவியல் துறை நூல்களிலிருந்தும் விளக்கங்களை அளிக்கத் தவறவில்லை. இவற்றை அவர்தம் ஐங்குறுநூற்று விரிவுரை தெளிவுபடுத்தும். ஒளவை அவர்களின் நுட்ப உரைக்கு ஒரு சான்று காட்டலாம். அவருடைய நற்றிணைப் பதிப்பு வெளிவரும்வரை அதில் கடவுள் வாழ்த்துப் பாடலாக அமைந்த ‘மாநிலஞ் சேவடி யாக’ என்னும் பாடலைத் திருமாற்கு உரியதாகவே அனைவரும் கருதினர். பின்னத்தூரார் தம் உரையில் அவ்வாறே எழுதி இருந்தார். இந்தப் பாடலை இயற்றியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார். இவரே வேறு சில சங்கத்தொகை நூல்களுக்கும் கடவுள் வாழ்த்து இயற்றியவர். அவற்றிலெல்லாம் சிவனைப் பாடியவர் நற்றிணையில் மட்டும் வேறு இறைவனைப் பாடுவரோ என்று சிந்தித்த ஒளவை, முழுப்பாடலுக்கும் சிவநெறியிலேயே உரையை எழுதினார். ஒளவை உரை அமைக்கும் பாங்கே தனித்தன்மையானது. முதலில் பாடலைப் பாடிய ஆசிரியர் பெயர் பற்றியும் அவர்தம் ஊர்பற்றியும் விளக்கம் தருவர். தேவைப்பட்டால் கல்வெட்டு முதலானவற்றின் துணைகொண்டு பெயர்களைச் செம்மைப் படுத்துவர். தும்பி சொகினனார் இவர் ஆய்வால் ‘தும்பைச் சொகினனார்’ ஆனார். நெடுங்கழுத்துப் பரணர் ஒளவையால் ‘நெடுங்களத்துப் பரணர்’ என்றானார். பழைய மாற்பித்தியார் ஒளவை உரையில் ‘மாரிப் பித்தியார்’ ஆக மாறினார். வெறிபாடிய காமக்கண்ணியார் ஒளவையின் கரம்பட்டுத் தூய்மையாகி ‘வெறிபாடிய காமக்காணியார்’ ஆனார். இவ்வாறு எத்தனையோ சங்கப் பெயர்கள் இவரால் செம்மை அடைந்துள்ளன. அடுத்த நிலையில், பாடற் பின்னணிச் சூழலை நயம்பட உரையாடற் போக்கில் எழுதுவர். அதன் பின் பாடல் முழுதும் சீர்பிரித்துத் தரப்படும். அடுத்து, பாடல் தொடர்களுக்குப் பதவுரைப் போக்கில் விளக்கம் அமையும். பின்னர் ஏதுக்களாலும் எடுத்துக்காட்டுகளாலும் சொற்றொடர்ப் பொருள்களை விளக்கி எழுதுவர். தேவைப்படும் இடங்களில் தக்க இலக்கணக் குறிப்புகளையும் மேற்கோள்களையும் தவறாது வழங்குவர். உள்ளுறைப் பொருள் ஏதேனும் பாடலில் இருக்குமானால் அவற்றைத் தெளிவுபடுத்துவர். முன்பின் வரும் பாடல் தொடர்களை நன்காய்ந்து ‘வினைமுடிபு’ தருவது அவர் வழக்கம். இறுதியாகப் பாடலின்கண் அமைந்த மெய்ப்பாடு ஈதென்றும், பயன் ஈதென்றும் தெளிவுபடுத்துவர். ஒளவையின் உரைநுட்பத்திற்கு ஒரு சான்று. ‘பகைவர் புல் ஆர்க’ என்பது ஐங்குறுநூற்று நான்காம் பாடலில் வரும் ஒரு தொடர். மனிதர் புல் ஆர்தல் உண்டோ என்னும் வினா எழுகிறது. எனவே, உரையில் ‘பகைவர் தம் பெருமிதம் இழந்து புல்லரிசிச் சோறுண்க’ என விளக்கம் தருவர். இக்கருத்தே கொண்டு, சேனாவரையரும் ‘புற்றின்றல் உயர்திணைக்கு இயைபின்று எனப்படாது’ என்றார் என மேற்கோள் காட்டுவர். மற்றொரு பாட்டில் ‘முதலைப் போத்து முழுமீன் ஆரும்’ என வருகிறது. இதில் முழுமீன் என்பதற்கு ‘முழு மீனையும்’ என்று பொருள் எழுதாது, ‘இனி வளர்ச்சி யில்லையாமாறு முற்ற முதிர்ந்த மீன்” என்று உரையெழுதிய திறம் அறியத்தக்கது. ஒளவை இளம்பூரணர், நச்சினார்க்கினியர் முதலான பழைய உரையாசிரியர்களையும் மறுக்கும் ஆற்றல் உடையவர். சான்றாக, ‘மனைநடு வயலை’ (ஐங்.11) என்னும் பாடலை இளம்பூரணர் ‘கிழவனை மகடூஉப் புலம்பு பெரிதாகலின், அலமருள் பெருகிய காமத்து மிகுதியும்’ என்பதற்கு எடுத்துக்காட்டுவர். ஆனால், ஒளவை அதை மறுத்து, “மற்று, இப்பாட்டு, அலமருள் பெருகிய காமத்து மிகுதிக்கண் நிகழும் கூற்றாகாது தலைமகன் கொடுமைக்கு அமைதி யுணர்ந்து ஒருமருங்கு அமைதலும், அவன் பிரிவாற்றாமையைத் தோள்மேல் ஏற்றி அமையாமைக்கு ஏது காட்டுதலும் சுட்டி நிற்றலின், அவர் கூறுவது பொருந்தாமை யறிக” என்று இனிமையாக எடுத்துரைப்பர். “தன் பார்ப்புத் தின்னும் அன்பில் முதலை” என்னும் பாடல் தலைவனையும் வாயில்களையும் இகழ்ந்து தலைவி கூறுவதாகும். ஆனால், இதனைப் பேராசிரியரும், நச்சினார்க்கினியரும் தத்தம் தொல்காப்பிய உரைகளில் தோழி கூற்று என்று தெரிவித்துள்ளனர். ஒளவை இவற்றை நயம்பட மறுத்து விளக்கம் கூறித் ‘தோழி கூற்றென்றல் நிரம்பாமை அறிக’ என்று தெளிவுறுத்துவர். இவ்வாறு இளம்பூரணர், பேராசிரியர், நச்சினார்க்கினியர் உள்ளிட்ட அனைவரையும் தக்க சான்றுகளோடு மறுத்துரைக்கும் திறம் கருதியும் உரைவிளக்கச் செம்மை கருதியும் இக்காலச் சான்றோர் அனைவரும் ஒளவையை ‘உரைவேந்தர்’ எனப் போற்றினர். ஒளவை ஒவ்வொரு நூலுக்கும் எழுதிய உரைகளின் மாண்புகளை எடுத்துரைப்பின் பெருநூலாக விரியும். தொகுத்துக் கூற விரும்பினாலோ எஞ்சி நிற்கும். கற்போர் தாமே விரும்பி நுகர்ந்து துய்ப்பின் உரைத் திறன்களைக் கண்டுணர்ந்து வியந்து நிற்பர் என்பது திண்ணம். ஒளவையின் அனைத்து உரைநூல்களையும், கட்டுரை நூல்களையும், இலக்கிய வரலாற்று நூல்களையும், பேருரைகளையும், கவின்மிகு தனிக் கட்டுரைகளையும், பிறவற்றையும் பகுத்தும் தொகுத்தும் கொண்டுவருதல் என்பது மேருமலையைக் கைக்குள் அடக்கும் பெரும்பணி. தமிழீழம் தொடங்கி அயல்நாடுகள் பலவற்றிலும், தமிழ்நாட்டின் மூலை முடுக்குகளிலும் ஆக, எங்கெங்கோ சிதறிக்கிடந்த அரிய கட்டுரைகளையெல்லாம் தேடித்திரட்டித் தக்க வகையில் பதிப்பிக்கும் பணியில் இனியமுது பதிப்பகம் முயன்று வெற்றி பெற்றுள்ளது. ஒளவை நூல்களைத் தொகுப்பதோடு நில்லாமல் முற்றிலும் படித்துணர்ந்து துய்த்து மகிழ்ந்து தொகுதி தொகுதிகளாகப் பகுத்து வெளியிடும் இனியமுது பதிப்பகம் நம் அனைவருடைய மதிப்பிற்கும் பாராட்டிற்கும் நன்றிக்கும் உரியது. இப்பதிப்பகத்தின் உரிமையாளர் செல்வி இ.தமிழமுது தமிழ்மண் பதிப்பகத்தின் உரிமையாளரின் மகள் ஆவார். வாழ்க அவர்தம் தமிழ்ப்பணி. வளர்க அவர்தம் தமிழ்த்தொண்டு. உலகெங்கும் மலர்க தமிழாட்சி. வளம்பெறுக. இத்தொகுப்புகள் உரைவேந்தர் தமிழ்த்தொகை எனும் தலைப்பில் ‘இனியமுது’ பதிப்பகத்தின் வழியாக வெளிவருவதை வரவேற்று தமிழுலகம் தாங்கிப் பிடிக்கட்டும். தூக்கி நிறுத்தட்டும் என்று நெஞ்சார வாழ்த்து கிறேன். முனைவர் இரா.குமரவேலன் நுழைவாயில் செம்மொழித் தமிழின் செவ்வியல் இலக்கியப் பனுவல்களுக்கு உரைவழங்கிய சான்றோர்களுள் தலைமகனாய் நிற்கும் செம்மல் ‘உரைவேந்தர்’ ஒளவை சு.துரைசாமி பிள்ளை அவர்களாவார். பத்துப்பாட்டிற்கும், கலித்தொகைக்கும் சீவகசிந்தாமணிக்கும் நல்லுரை தந்த நச்சினார்க்கினியருக்குப் பின், ஆறு நூற்றாண்டுகள் கழித்து, ஐங்குறுநூறு, புறநானூறு, பதிற்றுப்பத்து, நற்றிணை, யசோதர காவியம் ஆகிய நூல்களுக்கு உரையெழுதிய பெருமை ஒளவை அவர்களையே சாரும். சங்க நூல்களுக்குச் செம்மையான உரை தீட்டிய முதல் ‘தமிழர்’ இவர் என்று பெருமிதம் கொள்ளலாம். எழுத்தாற்றலும் பேச்சாற்றலும் மிக்க ஒளவை 1903 ஆம் ஆண்டு செப்டம்பர் ஐந்தாம் நாள் தோன்றி, 1981ஆம் ஆண்டு ஏப்ரல் மூன்றாம் நாள் புகழுடம்பு எய்தியவர். தமிழும் சைவமும் தம் இருகண்களாகக் கொண்டு இறுதிவரை செயற்பட்டவர். சிந்தை சிவபெருமானைச் சிந்திக்க, செந்நா ஐந்தெழுத்து மந்திரத்தைச் செப்ப, திருநீறு நெற்றியில் திகழ, உருத்திராக்கம் மார்பினில் உருளத் தன் முன்னர் இருக்கும் சிறு சாய்மேசையில் தாள்களைக் கொண்டு, உருண்டு திரண்ட எழுதுகோலைத் திறந்து எழுதத் தொடங்கினாரானால் மணிக்கணக்கில் உண்டி முதலானவை மறந்து கட்டுரைகளையும், கனிந்த உரைகளையும் எழுதிக்கொண்டே இருப்பார். செந்தமிழ் அவர் எழுதட்டும் என்று காத்திருப்பதுபோல் அருவியெனக் கொட்டும். நினைவாற்றலில் வல்லவராதலால் எழுந்து சென்று வேறு நூல்களைப் பக்கம் புரட்டி பார்க்க வேண்டும் என்னும் நிலை அவருக்கிருந்ததில்லை. எந்தெந்த நூல்களுக்குச் செம்மையான உரையில்லையோ அவற்றிற்கே உரையெழுதுவது என்னும் கொள்கை உடையவர் அவர். அதனால் அதுவரை சீரிய உரை காணப்பெறாத ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து ஆகியவற்றிற்கும், முழுமையான உரையைப் பெற்றிராத புறநானூற்றுக்கும் ஒளவை உரை வரைந்தார். பின்னர் நற்றிணைக்குப் புத்துரை தேவைப்படுவதை அறிந்து, முன்னைய பதிப்புகளில் இருந்த பிழைகளை நீக்கிப் புதிய பாடங்களைத் தேர்ந்து விரிவான உரையினை எழுதி இரு தொகுதிகளாக வெளியிட்டார். சித்தாந்த கலாநிதி என்னும் பெருமை பெற்ற ஒளவை, சிவஞானபோதச் சிற்றுரை விளக்கத்தை எழுதியதோடு, ‘இரும்புக் கடலை’ எனக் கருதப்பெற்ற ஞானாமிர்த நூலுக்கும் உரை தீட்டினார். சைவ மாநாடுகளுக்குத் தலைமை தாங்கிச் சொற்பொழிவுகள் நிகழ்த்தினார். தம் உரைகள் பலவற்றைக் கட்டுரைகள் ஆக்கினார். செந்தமிழ்ச் செல்வி, செந்தமிழ், குமரகுருபரன், சித்தாந்தம் முதலான பல இதழ்களுக்குக் கட்டுரைகளை வழங்கினார். பெருந்தகைப் பெண்டிர், மதுரைக் குமரனார், ஒளவைத் தமிழ், பரணர் முதலான கட்டுரை நூல்களை எழுதினார். அவர் ஆராய்ச்சித் திறனுக்குச் சான்றாக விளங்கும் நூல் ‘பண்டை நாளைச் சேரமன்னர் வரலாறு’ என்னும் ஆய்வு நூலாகும். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் ஒளவை பணியாற்றியபோது ஆராய்ந்தெழுதிய ‘சைவ சமய இலக்கிய வரலாறு’ அத்துறையில் இணையற்றதாக இன்றும் விளங்குகிறது. சங்க நூல்களுக்கு ஒளவை வரைந்த உரை கற்றோர் அனைவருடைய நெஞ்சையும் கவர்ந்ததாகும். ஒவ்வொரு பாட்டையும் அலசி ஆராயும் பண்புடையவர் அவர். முன்னைய உரையாசிரியர்கள் பிழைபட்டிருப்பின் தயங்காது மறுப்புரை தருவர். தக்க பாட வேறுபாடுகளைத் தேர்ந்தெடுத்து மூலத்தைச் செம்மைப் படுத்துவதில் அவருக்கு இணையானவர் எவருமிலர். ‘உழுதசால் வழியே உழும் இழுதை நெஞ்சினர்’ அல்லர். பெரும்பாலும் பழமைக்கு அமைதி காண்பார். அதே நேரத்தில் புதுமைக்கும் வழி செய்வார். தமிழோடு ஆங்கிலம், வடமொழி, பாலி முதலானவற்றைக் கற்றுத் தேர்ந்தவர் அவர். மணிமேகலையின் இறுதிப் பகுதிக்கு உரையெழுதிய நிலை வந்தபோது அவர் முனைந்து பாலிமொழியைக் கற்றுணர்ந்து அதன் பின்னரே அந்த உரையினைச் செய்தார் என்றால் அவரது ஈடுபாட்டுணர்வை நன்கு உணரலாம். எப்போதும் ஏதேனும் ஆங்கில நூலைப் படிக்கும் இயல்புடையவர் ஒளவை அவர்கள். திருக்குறள் பற்றிய ஒளவையின் ஆங்கிலச் சொற்பொழிவு நூலாக அச்சில் வந்தபோது பலரால் பாராட்டப் பெற்றமை அவர்தம் ஆங்கிலப் புலமைக்குச் சான்று பகர்வதாகும். சமய நூல்களுக்கு உரையெழுதுங்கால் வடமொழி நூல்களிலிருந்து மேற்கோள் காட்டுவதும், கருத்துகளை விளக்குவதும் அவர் இயல்பு. அதுமட்டுமன்றி, ஒளவை அவர்கள் சட்டநூல் நுணுக்கங் களையும் கற்றறிந்த புலமைச் செல்வர். ஒளவை அவர்கள் கட்டுரை புனையும் வன்மை பெற்றவர். கலைபயில் தெளிவு அவர்பாலுண்டு. நுண்மாண் நுழைபுலத்தோடு அவர் தீட்டிய கட்டுரைகள் எண்ணில. அவை சங்க இலக்கியப் பொருள் பற்றியன ஆயினும், சமயச் சான்றோர் பற்றியன ஆயினும் புதிய செய்திகள் அவற்றில் அலைபோல் புரண்டு வரும். ஒளவை நடை தனிநடை. அறிவு நுட்பத்தையும் கருத்தாழத்தையும் அந்தச் செம்மாந்த நடையில் அவர் கொண்டுவந்து தரும்போது கற்பார் உள்ளம் எவ்வாறு இருப்பாரோ, அதைப்போன்றே அவர் தமிழ் நடையும் சிந்தனைப் போக்கும் அமைந்திருந்தது வியப்புக்குரிய ஒன்று. ஒளவை ஆற்றிய அருந்தமிழ்ப் பணிகளுள் தலையாயது பழந்தமிழ் நூல்களுக்கு அறிவார்ந்த உரைகளை வகுத்துத் தந்தமையே ஆகும். எதனையும் காய்தல் உவத்தலின்றி சீர்தூக்கிப் பார்க்கும் நடுநிலைப் போக்கு அவரிடம் ஊன்றியிருந்த ஒரு பண்பு. அவர் உரை சிறந்தமைந்ததற்கான காரணம் இரண்டு. முதலாவது, வைணவ உரைகளில் காணப்பெற்ற ‘பதசாரம்’ கூறும் முறை. தாம் உரையெழுதிய அனைத்துப் பனுவல்களிலும் காணப்பெற்ற சொற்றொடர்களை இந்தப் பதசார முறையிலே அணுகி அரிய செய்திகளை அளித்துள்ளார். இரண்டாவது, சட்ட நுணுக்கங்களைத் தெரிவிக்கும் நூல்களிலமைந்த ஆய்வுரைகளும் தீர்ப்புரைகளும் அவர்தம் தமிழ் ஆய்வுக்குத் துணை நின்ற திறம். ‘ஜூரிஸ்புரூடன்ஸ்’ ‘லா ஆஃப் டார்ட்ஸ்’ முதலானவை பற்றிய ஆங்கில நூல்களைத் தாம் படித்ததோடு என்னைப் போன்றவர்களையும் படிக்க வைத்தார். வடமொழித் தருக்கமும் வேறுபிற அளவை நூல்களும் பல்வகைச் சமய அறிவும் அவர் உரையின் செம்மைக்குத் துணை நின்றன. அனைத்திற்கும் மேலாக வரலாற்றுணர்வு இல்லாத இலக்கிய அறிவு பயனற்றது, இலக்கியப் பயிற்சி இல்லாத வரலாற்றாய்வு வீணானது என்னும் கருத்துடையவர் அவர். ஆதலால் எண்ணற்ற வரலாற்று நூல்களையும், ஆயிரக்கணக்கான கல்வெட்டுகளையும் ஆழ்ந்து படித்து, மனத்திலிருத்தித் தாம் இலக்கியத்திற்கு உரை வரைந்தபோது நன்கு பயன்படுத்திக் கொண்டார். ஞானசம்பந்தப் பெருந்தகையின் திருவோத்தூர்த் தேவாரத் திருப்பதிகத்திற்கு முதன்முதலாக உரையெழுதத் தொடங்கிய காலந்தொட்டு இறுதியாக வடலூர் வள்ளலின் திருவருட்பாவிற்குப் பேருரை எழுதி முடிக்கும் வரையிலும், வரலாறு, கல்வெட்டு, தருக்கம், இலக்கணம் முதலானவற்றின் அடிப்படையிலேயே உரைகளை எழுதினார். தேவைப்படும்பொழுது உயிரியல், பயிரியல், உளவியல் துறை நூல்களிலிருந்தும் விளக்கங்களை அளிக்கத் தவறவில்லை. இவற்றை அவர்தம் ஐங்குறுநூற்று விரிவுரை தெளிவுபடுத்தும். ஒளவை அவர்களின் நுட்ப உரைக்கு ஒரு சான்று காட்டலாம். அவருடைய நற்றிணைப் பதிப்பு வெளிவரும்வரை அதில் கடவுள் வாழ்த்துப் பாடலாக அமைந்த ‘மாநிலஞ் சேவடி யாக’ என்னும் பாடலைத் திருமாற்கு உரியதாகவே அனைவரும் கருதினர். பின்னத்தூரார் தம் உரையில் அவ்வாறே எழுதி இருந்தார். இந்தப் பாடலை இயற்றியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார். இவரே வேறு சில சங்கத்தொகை நூல்களுக்கும் கடவுள் வாழ்த்து இயற்றியவர். அவற்றிலெல்லாம் சிவனைப் பாடியவர் நற்றிணையில் மட்டும் வேறு இறைவனைப் பாடுவரோ என்று சிந்தித்த ஒளவை, முழுப்பாடலுக்கும் சிவநெறியிலேயே உரையை எழுதினார். ஒளவை உரை அமைக்கும் பாங்கே தனித்தன்மையானது. முதலில் பாடலைப் பாடிய ஆசிரியர் பெயர் பற்றியும் அவர்தம் ஊர்பற்றியும் விளக்கம் தருவர். தேவைப்பட்டால் கல்வெட்டு முதலானவற்றின் துணைகொண்டு பெயர்களைச் செம்மைப் படுத்துவர். தும்பி சொகினனார் இவர் ஆய்வால் ‘தும்பைச் சொகினனார்’ ஆனார். நெடுங்கழுத்துப் பரணர் ஒளவையால் ‘நெடுங்களத்துப் பரணர்’ என்றானார். பழைய மாற்பித்தியார் ஒளவை உரையில் ‘மாரிப் பித்தியார்’ ஆக மாறினார். வெறிபாடிய காமக்கண்ணியார் ஒளவையின் கரம்பட்டுத் தூய்மையாகி ‘வெறிபாடிய காமக்காணியார்’ ஆனார். இவ்வாறு எத்தனையோ சங்கப் பெயர்கள் இவரால் செம்மை அடைந்துள்ளன. அடுத்த நிலையில், பாடற் பின்னணிச் சூழலை நயம்பட உரையாடற் போக்கில் எழுதுவர். அதன் பின் பாடல் முழுதும் சீர்பிரித்துத் தரப்படும். அடுத்து, பாடல் தொடர்களுக்குப் பதவுரைப் போக்கில் விளக்கம் அமையும். பின்னர் ஏதுக்களாலும் எடுத்துக்காட்டுகளாலும் சொற்றொடர்ப் பொருள்களை விளக்கி எழுதுவர். தேவைப்படும் இடங்களில் தக்க இலக்கணக் குறிப்பு களையும் மேற்கோள்களையும் தவறாது வழங்குவர். உள்ளுறைப் பொருள் ஏதேனும் பாடலில் இருக்குமானால் அவற்றைத் தெளிவு படுத்துவர். முன்பின் வரும் பாடல் தொடர்களை நன்காய்ந்து ‘வினைமுடிபு’ தருவது அவர் வழக்கம். இறுதியாகப் பாடலின்கண் அமைந்த மெய்ப்பாடு ஈதென்றும், பயன் ஈதென்றும் தெளிவு படுத்துவர். ஒளவையின் உரைநுட்பத்திற்கு ஒரு சான்று. ‘பகைவர் புல் ஆர்க’ என்பது ஐங்குறுநூற்று நான்காம் பாடலில் வரும் ஒரு தொடர். மனிதர் புல் ஆர்தல் உண்டோ என்னும் வினா எழுகிறது. எனவே, உரையில் ‘பகைவர் தம் பெருமிதம் இழந்து புல்லரிசிச் சோறுண்க’ என விளக்கம் தருவர். இக்கருத்தே கொண்டு, சேனாவரையரும் ‘புற்றின்றல் உயர்திணைக்கு இயைபின்று எனப்படாது’ என்றார் என மேற்கோள் காட்டுவர். மற்றொரு பாட்டில் ‘முதலைப் போத்து முழுமீன் ஆரும்’ என வருகிறது. இதில் முழுமீன் என்பதற்கு ‘முழு மீனையும்’ என்று பொருள் எழுதாது, ‘இனி வளர்ச்சி யில்லையாமாறு முற்ற முதிர்ந்த மீன்” என்று உரையெழுதிய திறம் அறியத்தக்கது. ஒளவை இளம்பூரணர், நச்சினார்க்கினியர் முதலான பழைய உரையாசிரியர்களையும் மறுக்கும் ஆற்றல் உடையவர். சான்றாக, ‘மனைநடு வயலை’ (ஐங்.11) என்னும் பாடலை இளம்பூரணர் ‘கிழவனை மகடூஉப் புலம்பு பெரிதாகலின், அலமருள் பெருகிய காமத்து மிகுதியும்’ என்பதற்கு எடுத்துக்காட்டுவர். ஆனால், ஒளவை அதை மறுத்து, “மற்று, இப்பாட்டு, அலமருள் பெருகிய காமத்து மிகுதிக்கண் நிகழும் கூற்றாகாது தலைமகன் கொடுமைக்கு அமைதி யுணர்ந்து ஒருமருங்கு அமைதலும், அவன் பிரிவாற்றாமையைத் தோள்மேல் ஏற்றி அமையாமைக்கு ஏது காட்டுதலும் சுட்டி நிற்றலின், அவர் கூறுவது பொருந்தாமை யறிக” என்று இனிமையாக எடுத்துரைப்பர். “தன் பார்ப்புத் தின்னும் அன்பில் முதலை” என்னும் பாடல் தலைவனையும் வாயில்களையும் இகழ்ந்து தலைவி கூறுவதாகும். ஆனால், இதனைப் பேராசிரியரும், நச்சினார்க்கினியரும் தத்தம் தொல்காப்பிய உரைகளில் தோழி கூற்று என்று தெரிவித்துள்ளனர். ஒளவை இவற்றை நயம்பட மறுத்து விளக்கம் கூறித் ‘தோழி கூற்றென்றல் நிரம்பாமை அறிக’ என்று தெளிவுறுத்துவர். இவ்வாறு இளம்பூரணர், பேராசிரியர், நச்சினார்க்கினியர் உள்ளிட்ட அனைவரையும் தக்க சான்றுகளோடு மறுத்துரைக்கும் திறம் கருதியும் உரைவிளக்கச் செம்மை கருதியும் இக்காலச் சான்றோர் அனைவரும் ஒளவையை ‘உரைவேந்தர்’ எனப் போற்றினர். ஒளவை ஒவ்வொரு நூலுக்கும் எழுதிய உரைகளின் மாண்புகளை எடுத்துரைப்பின் பெருநூலாக விரியும். தொகுத்துக் கூற விரும்பினாலோ எஞ்சி நிற்கும். கற்போர் தாமே விரும்பி நுகர்ந்து துய்ப்பின் உரைத் திறன்களைக் கண்டுணர்ந்து வியந்து நிற்பர் என்பது திண்ணம். ஒளவையின் அனைத்து உரைநூல்களையும், கட்டுரை நூல்களையும், இலக்கிய வரலாற்று நூல்களையும், பேருரைகளையும், கவின்மிகு தனிக் கட்டுரைகளையும், பிறவற்றையும் பகுத்தும் தொகுத்தும் கொண்டுவருதல் என்பது மேருமலையைக் கைக்குள் அடக்கும் பெரும்பணி. தமிழீழம் தொடங்கி அயல்நாடுகள் பலவற்றிலும், தமிழ்நாட்டின் மூலை முடுக்குகளிலும் ஆக, எங்கெங்கோ சிதறிக்கிடந்த அரிய கட்டுரைகளையெல்லாம் தேடித்திரட்டித் தக்க வகையில் பதிப்பிக்கும் பணியில் இனியமுது பதிப்பகம் முயன்று வெற்றி பெற்றுள்ளது. ஒளவை நூல்களைத் தொகுப்பதோடு நில்லாமல் முற்றிலும் படித்துணர்ந்து துய்த்து மகிழ்ந்து தொகுதி தொகுதிகளாகப் பகுத்து வெளியிடும் இனியமுது பதிப்பகம் நம் அனைவருடைய மதிப்பிற்கும் பாராட்டிற்கும் நன்றிக்கும் உரியது. இப்பதிப்பகத்தின் உரிமையாளர் செல்வி இ.தமிழமுது தமிழ்மண் பதிப்பகத்தின் உரிமையாளரின் மகள் ஆவார். வாழ்க அவர்தம் தமிழ்ப்பணி. வளர்க அவர்தம் தமிழ்த்தொண்டு. உலகெங்கும் மலர்க தமிழாட்சி. வளம்பெறுக. இத்தொகுப்புகள் உரைவேந்தர் தமிழ்த்தொகை எனும் தலைப்பில் ‘இனியமுது’ பதிப்பகத்தின் வழியாக வெளிவருவதை வரவேற்று தமிழுலகம் தாங்கிப் பிடிக்கட்டும். தூக்கி நிறுத்தட்டும் என்று நெஞ்சார வாழ்த்துகிறேன். முனைவர் இரா.குமரவேலன் உள்ளடக்கம் பதிப்புரை iii பேருரை வரைந்த பெருந்தமிழ்க் கடல்! v நுழைவாயில் ix தண்டமிழாசான் உரைவேந்தர் xv நூலாக்கத்திற்குத் துணை நின்றோர் xx நூலடக்கம் திருக்குறள் தெளிவு 1. வள்ளுவர் காட்டும் சமயக்கருத்துகள் 3 2. திருவள்ளுவரது வரலாற்று ஆராய்ச்சி 11 3. ஏட்டிற் கண்ட குறிப்பு 18 4. ஊழ்வினை 24 5. உரையனுபவம் 34 6. இறைமாட்சி 49 7. கல்வி 54 8. அறிவுடைமை 60 9. தன்குறை நீக்குதல் 65 10. தகுந்த துணை 71 11. செயல்முறை 77 12. தொழில் நுணுக்கம் 82 13. தலைமைச் சிறப்பு 88 14. சுற்றமும் பணிவும் 94 15. நீதிமுறை 100 16. இரக்கம் 106 17. பிறர் மனம் அறிதல் 112 18. ஊக்கம் 118 19. வள்ளுவர் கண்ட இன்பம் 124 20. முயற்சி 129 பொதுமணித்திரள் 1. புரட்சிக் கவிஞன் வாழ்க! 135 2. நாற்பது ஆண்டுகட்கு முன் நான் கண்ட மணிமொழியார் 142 3. அறிஞர் அண்ணாவின் அடிச்சுவடு 144 4. வியப்பிறந்த மேன்மையர் 149 5. ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும்... 150 6. புலமைப் புரவலர் 152 7. அருள் திரு. விபுலானந்த அடிகள் 158 8. அருள்திரு. விபுலானந்த அடிகள் மறைந்தது குறித்துப் பாடியவை 162 8. பாராட்டற்குரியது 165 10. கன்றும் உதவும் கனி 177 11. முன்னணியில் நிற்பவர் 183 12. தலைமையானவர் 184 13. இரு துருவங்கள் 185 14. நிலையான அறிஞர் 187 15. தமிழன்னையின் தனிப்பெருந் தொண்டர் 189 16. முத்தமிழ் காவலன் கவிதை 190 17. எழுத்தாளர் மன்றம் 191 18. வள்ளலார் கண்ட வள்ளன்மை 195 19. பாரத சமுதாய ஒருமை நலம் 200 20. விஞ்ஞானம் 207 21. எழில் உருவம் 218 22. பண்டிதமணியின் மாண்பு 220 23. சித்தாந்தப் பேராசிரியர் 224 24. கரந்தைக்கவியரசு மறைவு 226 25. வாணிக மந்திரம் 230 26. சுந்தரகாண்டம் முதற்பகுதி (மாதிரிப்பதிப்பு) மதிப்புரை 237 27. வாழ் நாள் 241 28. கருவிலே வாய்த்த திரு 249 29. ஞானியார் சுவாமிகள் பொன்விழாப் பாராட்டுரைகள் 261 30. இருபெரும் தமிழறிஞர்கள் 269 31. செய்தி மடலில் ஓர் இனிய காட்சி 273 32. உயிர்களின் நுண்ணறிவு 275 33. அருள் விருந்தளிக்கும் அழகரடிகள் 278  திருக்குறள் தெளிவு (கட்டுரைகள்) 1. வள்ளுவர் காட்டும் சமயக்கருத்துகள் ஆசிரியர் குறிப்பு இவர் பிறந்த ஊர் ஒளவையார் குப்பம். பிறந்த ஆண்டு 1903. முறையாகத் தமிழ் பயின்ற இவர் தமிழ்மொழி, வரலாறு இரண்டிலும் பேரறிவு படைத்தவர். தற்பொழுது மதுரைத் தியாகராசர் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி வருகின்றார். மொழிப் புலமையோடு சைவ சமயப் புலமையும் வல்லார். எழுத்தாற்ற லோடு நாநலமும் மிக்கார். இவருக்கு 'உரை வேந்தர்' என்ற பட்டம் சூட்டப்பெற்றுள்ளது. இவர் பல அரிய உரைநடை நூல்களும் தமிழக வரலாற்று நூல்களும் எழுதியுள்ளார். சைவத் திருமுறை களிலும் நல்ல பயிற்சி யுடைய இவர் அதன் கருத்துக் களைக் கேட்பார் பிணிக்கும் தகையவாய் எடுத்துக் கூறும் வலிமை பெற்றவராதலால் 'சித்தாந்த கலாநிதி' என்ற பட்டமும் பெற்றவர், திருக்குறளையே துணையாகக்கொண்டு திருவள்ளுவரின் வரலாறு காணும் உண்மை நெறியைப் பின்பற்றி இவர் 'தெய்வப் புலவர் திருவள்ளுவர்' என்ற நூல் இயற்றியுள்ளார். திருவள்ளுவர் அருளியுள்ள திருக்குறளைக் கற்றுணர்ந்த பழம்பெருஞ் சான்றோர்களுள் கல்லாடனார் ஒருவர். அவர் சிவபெருமான் மதுரையில் நிகழ்த்திய திருவிளையாடல்களில் மிகவும் ஈடுபாடு கொண்டு அவற்றுள் சிலவற்றைத் தேர்ந்து ஒவ்வொன்றையும் ஒவ்வோர் அகவற்பாவில் வைத்துக் கல்லாடம் என்ற பெயரால் ஒருநூல் செய்தவர். அவற்றுள் அவர் சிவனையும் அவனுடைய அருட் செயல்களையும் குறிக்கும் சொற்களையும் சொற்றொடர்களையும் நோக்கின், அவர் புலம் பழுத்த சிவநெறிச் செல்வர் என்பது தெற்றென விளங்கும். அப்பெற்றியரான கல்லாடர், ஓரிடத்தில் திருவள்ளுவரைக் குறிக்கும்போது, "சமயக் கணக்கர் மதிவழி கூறாது உலகியல் கூறிப் பொருள் இது என்ற வள்ளுவன்" என்று உரைக்கின்றார். திருவள்ளுவ மாலையில் காணப்படும் சான்றோர்களில் கல்லாடர் என ஒருவர் காணப்படு கின்றார். அவர் கருத்தும் இக்கல்லாடனார் கருத்தோடு ஒத்து, "சமய நூல்கள் ஒன்றோடொன்று வேறுபட்டும் மறுத்தும் இயலுவன; திருக்குறளை எல்லாச் சமயத்தவரும் ஏற்று ஒன்றி இயைவர்" என்ற கருத்துப்பட, " ஒன்றே பொருள்எனின் வேறுஎன்ப; வேறுஎனின் அன்றென்ப ஆறு சமயத்தார்- நன்றென எப்பா லவரும் இயைபவே வள்ளுவனார் முப்பால் மொழிந்த மொழி" என்று இயம்புகின்றார். இவ்வண்ணம் திருக்குறள் வகையில் ஒத்த கருத்துக் கொண்ட கல்லாடர் இருவரும் ஒருவரா, வேறு வேறா என்பதைக் காண்பது இங்கே பொருளன்று; திருவள்ளுவருடைய திருக்குறள் சமயம் கடந்த தனிப் பொதுநூல் என்பதை இவ்விருவர் உரைகளும் வற்புறுத்துகின்றன என்பது. இன்று நமது நாட்டில் நிலவும் சமயங்கள் இந்திய மண்ணில் தோன்றி நிலவுவனவும் வேற்று நாடுகளில் பிறந்து இங்கே புகுந்து நிலவுவனவும் என இருதிறத்தனவாகும். அவற்றுள், இசுலாம், கிறித்துவம் என்ற இரண்டும் பிற்கூறிய திறத்தன; ஏனைச் சைவம், வைணவம், வைதிகம், பவுத்தம், சயினம் முதலியன முற்கூறிய திறத்தன.இவற்றைப் பொதுப்பட நோக்குவோமாயின், உலகிற்கும், உலகிடை வாழும் உயிர்கட்கும் வேறாய் ஒரு பரம்பொருள் உண்டு என்பது எல்லாவற்றிற்கும் ஒப்ப முடிந்த உண்மையாகத் தோன்றும். உயிர்கட்கு மறுபிறப்பும் வினையும் உண்டென்பதை இசுலாம், கிறித்துவம் என்ற இரண்டும் உடன்படுவதில்லை. இந்திய சமயங்கள் அனைத்தும் இவ்விரண்டையும் இன்றியமையாச் சமயவுண்மையாகக் கொண்டுள்ளன. இருக்கு முதலிய வேதநூல்களில் வினையுணர்வு நன்கு வெளிப்படாது நிற்பினும், அந்நூல்களை மேற்கொண்டு எழுந்து விரிந்த பிற்றை நூல்களில் அவைகள் பெரிதும் இடம் பெற்றுள்ளன. வேதநூல் ஆராய்ச்சியாளர் சிலர், வினையுணர்வு வேதகால மக்கட்கு இல்லை; அவர்கள் இந்த நாட்டுட் புகுந்தபின் இங்கே வாழ்ந்த மக்களிடையே இருந்த இக்கொள்கையைத் தாமும் மேற்கொண்டனர் என்று உரைக்கின்றார்கள். தமிழகத்தின் முந்து நூல்கள் எல்லாவற்றிலும் வினையுணர்வும் மறுபிறப்புக் கொள்கையும் நிலைபெற்றுள்ளன. அவை எக்காலத்தில் யாவரால் காணப்பட்டன என்பது வரலாறு காணாத ஒன்று. திருவள்ளுவர் இவ்விருகொள்கைகளையும் உடன்பட்டு ஏற்ற இடங்களில் எடுத்துக் காட்டுகின்றார். வினையென்பது மனத்தால் நினைப்பதும் வாயாற் பேசுவதும் உடம்பால் செயல் புரிவதும் ஆகிய யாவற்றையும் குறிக்கும். சமயநூல்கள் மனம், மொழி, மெய் என்ற மூன்றின் அசைவும், அசைவின்மையும் வினை என்று கூறும். எனவே மக்கள் செய்யும் ஓவ்வொரு செய்கையும் வினையாம் என்று அறியலாம். வினைகளில் நன்மை விளைவிப்பவை நல்வினை என்றும், தீமை விளைவிப்பவை தீவினை என்றும் கூறப்படும். இவ்விரண்டாலும் முறையே உண்டாகும் இன்பமும் துன்பமும் வினைப்பயன் எனப்படும். ஒருவினை தொடங்கும் போதே செயப்படு பொருளும் பயனும் உடன் தோன்றி, முடியுங்கால் அவ்விரண்டும் உருவாகும். செயப்படு பொருளோடு பயனும் உடன் தோன்றுமாயினும், அப்பயனது நுகர்ச்சி காலம் தாழ்ந்தும் தாழாமலும் நிகழும். வினையால் உருப்பட்டு நுகரப்படாது நிற்கும் பயன் ஊழ்வினை என்றும் ஊழ் என்றும் வழங்கும். திருவள்ளுவனார், நன்மை பயக்கும் நல்வினையையும், தீமை விளைவிக்கும் தீவினையையும், முறையே ஆகூழ் என்றும் போகூழ் என்றும் வினைப்பயனாய் நுகர நிற்கும் வினைக்கூற்றை ஊழ்வினை என்றும் தனித்தனி நிறுத்தி விளக்குகின்றார். நலம் பயக்கும் நல்வினை யாவும் அறவினை என்றும், அறம் என்றும் அதுவே செய்தற்குரியது என்ற கருத்துத் தோன்றச் "செயற்பாலது ஒரும் அறனே" என்பதனால் திருவள்ளுவர் வற்புறுத்துகின்றார். தீவினையால் விளைவது தீமை; அதன் பயன் துன்பம். வினைப்பயன் அவ்வினையைச் செய்தார்க்கே உரியது; அதனை அவர் ஒரு காலும் நுகராமல் கழிக்க முடியாது. "எனைப்பகை யுற்றாரும் உய்வர் வினைப்பகை, வீயாது பின் சென்று அடும்" என்றும், நுகர்ந்து கழியுமளவும் அஃது அவர் நிழல்போல் நிற்கும் என்பார், "தீயவை செய்தார் கெடுதல் நிழல் தன்னை, வீயாது அடியுறைந் தற்று" என்றும் உரைக்கின்றார். வினையால் உண்டாகும் செயப்படு பொருள் பொறிபுலன் கட்குப் புலப்படுவதுபோல, அவ்வினைப் பயனான இன்பமும் துன்பமும் வினையைச் செய்பவனுக்குப் புலனாவதில்லை. அதனால், அவன் தானே சென்று வினைப்பயனை எடுத்துக் கொள்ள முடியாது; வினைப்பயனோ, உயிர்போல அறிவுடைய தன்று; ஆனால், அதுதானே வினை செய்தவனை அடையமாட்டாது. ஆதலால், வினை முதல் வினைப்பயனை நுகர்தற்குப் பிறிதொன்று இடைநின்று அதனைக் கூட்டல் வேண்டும். பிறிதொன்று என்ற அதுதான், உயிர்க்கும் உயிரில் பொருட்கும் வேறாய் இரண்டையும் கூட்டி வாழ்விக்கும் பரம்பொருள்; அது பற்றியே அதனைத் தொல்காப்பியர் "பால் வரை தெய்வம்" என்று குறிக்கின்றார். வினையைப் பற்றிக் கூறுமிடத்து, வினை "வீயாது பின்சென்று அடும்" என்றும், "மற்றொன்று சூழினும் தான் முந்துறும்" என்றும், "அறம் சூழும் சூழ்ந்தவன் கேடு" என்றும் கூறுவனவற்றைக் காணும் போது, வினை தானே நன்மையும் தீமையும் செய்யும் போலும் என்ற எண்ணம் தோன்றும். அவ்வாறே சில சமயத்தவரும் கருதுகின்றனர். ஆனால் உண்மையை நோக்கின் உணர்வில்லாத ஒன்றாகிய வினை, ஒருவன் செய்யத் தோன்றலும், செய்தானொடு கூட்டக் கூடலும் உடையது என்பது தெளிய விளங்கும். வினை விடாது தொடரும் என்றும் வினைவந்து சேரும் என்றும் கூறுவது, எழுத எழுதும் பேனாவை எழுதுகிறது என்றும், செலுத்தச் செல்லும் வண்டியைச் செல்லுகிறது என்றும் வழக்கில் உரைப்பது போலவாம். "இருள் சேர் இருவினையும் சேரா இறைவன், பொருள் சேர் புகழ்புரிந்தார் மாட்டு" என்ற விடத்து இருவினையும் சேரா என்பதற்கு இருவினைப் பயனும் சேர்க்கப்படா என்பது பொருள். வினைகள், மனம் மொழி மெய்களால் பிறப்பன என்று முன்பே கண்டோம். மன முதலிய மூன்றும் சேர்ந்தது உடம்பு. ஆகவே உடம்பு உள்ளளவும் வினை பிறந்து கொண்டேயிருக்கும்; வினை பெருகப் பெருகப் பெருகி இருந்து கொண்டே இருக்கும். வினைப்பயனையும் வினை வழியாகவே நுகர்கின்றோம்; வினை செய்தற்கும் உடம்பே கருவி; ஆயினும், வினையை இடையறாது செய்வதால் உடம்பும் மூத்து முதிர்ந்து ஓய்ந்து மாய்ந்து போகிறது. அப்போது நுகரவேண்டிய பயன் நுகரப்படாது எஞ்சி விடுகிறது. அதுதானும் நுகர்ந்தே கழிக்க வேண்டியிருப்பதால், அது தீர்தற் பொருட்டு வினை செய்தற்கேற்ற புத்துடம்பு வேண்டப் படுகிறது. அதனால் மறுபிறப்புக் கொள்கை எய்துவதாயிற்று. ஆகவே, வினை காரணமாகப் பிறப்பதும் பிறப்பு வாயிலாக வினை செய்வதும் மாறிமாறி நிகழ்கின்றனவாம். இதனை நன்கு எண்ணு மிடத்து, பிறப்பில்லையாமாறு செய்வதுதான் வினையினின்று விடுதலை பெறும் வழி என்று அறியலாம். அது பற்றியே திருவள்ளுவர் "மற்றும் தொடர்ப் பாடு எவன்கொல் பிறப்பறுக்கல், உற்றார்க்கு உடம்பும் மிகை" என்று உரைக்கின்றார். இப் பிறப்புக்கள் எழுவகைப்படும் என்று திருவள்ளுவர் தெரிவிக்கின்றார்; "எழுபிறப்பும் தீயவை தீண்டா" என்றும், "எழுமையும் ஏமாப்புடைத்து" என்றும், "எழுமை எழுபிறப்பும் உள்ளுவர்" என்றும் வரும் திருக்குறள்கள் இதற்குச் சான்றாகும். இங்கே காட்டிய எழுபிறப்பும் பிறந்து வினை செய்து பயன் நுகர்வதால் உயிர்எய்தும் பயன் யாது? வினை செய்தற்கண் உடம்பும் உள்ளமும் ஒன்றிநின்று அவ்வினையை முடிக்குங்கால், உயிர்க்கு உவட்டாத இன்பம் உண்டாகிறது. தன் காதலியின் இனிமைப்பண்பை எடுத்து உரைக்கும் தலைமகன் "உள்ளிய வினை முடித்தன்ன இனியோள்" என்று கூறுவதை நற்றிணையில் காணலாம், இதனால், உள்ளிய வினை முடிவில் இன்பம் பயக்குமென்பது தெரிகிறதன்றோ? இவ்வாறே திருவள்ளுவர், வினை இன்பம் பயக்கும் என்பாராய், "துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி, இன்பம் பயக்கும் வினைதுணிவாற்றிச் செய்க" எனப் பொருள் கூறுகின்றார். அவ்வாறின்றி, "துன்பம் உறவரினும் துணிவாற்றிச் செய்க, வினை இன்பம் பயக்கும்" என இயைத்துரைப்பது நேரிது. வினை இன்பமேயன்றி அறிவு விளக்கமும் நல்குவது. பொருள் கருவி காலம் வினை இடம் ஆகிய ஐந்து கூறுகளையும் நன்கு ஆய்ந்து செய்யுமிடத்து, புதிய புதிய உணர்வுகளும் செயல்முறை களும் தோன்றிச் செய்வோனது அறிவுக்கு விளக்கமும் ஆக்கமும் பயக்கும். "வினை நலம் வேண்டிய எல்லாம் தரும்" என்பது திருக்குறள். உலகியலில் ஒருவன் பவ்லாண்டு வாழ்ந்து பெற்ற அறிவு, நல்ல கல்வி கற்றிருக்கும் இளையோள் ஒருவனது அறிவினும் விளக்க மிக்கிருப்பது நாம் பெரிதும் காண நிற்கிறது. இதனால் உலகவாழ்வே ஒருவனது அறிவு விளக்கம் எய்தத் துணையாவது என்றும் உயிர் மக்களுடம்பொடு கூடிப்பிறந்து வினை செய்து பயன் நுகர்வது அறிவு விளக்கம் பெறுதற்கே என்றும் தெளியலாம். உலகில் பிறக்கும் ஒவ்வொருவனும் தொடக்கத்தில் அறியாமை யிருள் சூழ்ந்து இருக்கிறான். அதனால் அவனுடைய கண் முதலிய புறக் கருவிகளும் அகக் கருவியாகிய மனமும், உலக வாழ்வில், காண்பன கண்டு, செய்வன செய்து, நினைவன நினைந்து, அறிவு விளக்கம் செய்கின்றன. இவை யாவும் வினையாகும். இருள் நீக்கம் காரணமாக வினை நிகழ்வதால், திருவள்ளுவர், "இருள் சேர் இருவினை" என வினைகளைக் குறிக்கின்றார். வினைவழியாக அறிவு இருள் நீக்கம் பெறுகிறது எனினும், விளக்கேந்திச் செல்பவனது போல அறியாமை தோன்றுகிறது. "அறிதோறு அறியாமை கண்டற்று" என்று குறள் கூறுகிறது. பிறந்தும் வினைசெய்தும் வாழ்ந்து இயலும் உயிர்க்கும், வாழ்தற்கு இடமளிக்கும் உடம்பு உலகுகட்கும் வேறாகவும் ஒன்றாகவும் உடனாகவும் நிற்கும் பரம்பொருளை உணர்வது அறிவின் கடமை என்று வற்புறுத்துகிறது திருக்குறள். அப் பரம் பொருளைத் திருவள்ளுவர் செம்பொருள் என்றும், அஃது உயிர் உலகு என்ற இரண்டினும் சிறப்புடையது என்றும் காட்டுதற்குச் "சிறப்பு என்னும் செம்பொருள்" என்றும் உரைக்கின்றார். அதனை உணர்ந்த வழி, இதுகாறும் அறிவை மறைத்திருந்த இருள் நீங்கும் எனவும், என்றும் குன்றாத இன்பம் எய்தும் எனவும் செம்பொருள் உணர்வின் பயன் கூறப்படும். இருள் நீங்கியவழிப் பிறப்பு வேண்டா மையால் "பிறப்பென்னும் பேதைமை நீங்கும்" என்கிறார். உடம்பொடு கூடி உலகில் இருந்தே செம்பொருளை உணர வேண்டும். இருக்கும் போதோ வினைசெய்தே தீரவேண்டும். வினையால் மேன்மேலும் பிறப்பு எய்துமன்றோ என ஓர் ஐயம், இங்கே எழுகிறது. உடம்பையும் உலகையும் சார்பாகக் கொண்டு வாழும் உயிர் செம்பொருளை உணர்ந்த வழி அதுவே உண்மைச் சார்பு என உணரும்; அவ்வுயர்வால் அதனைச் சார்ந்து தோன்றும் வினைச்சார்பு உயிரைப் பற்றுதற்கு ஆகாமையின் பற்றுக்கோடின்றிக் கெடும். இக்கருத்தைச் "சார்புணர்ந்து சார்புகெட ஒழுகின் மற்றழித்துச் சார்தரா சார்தரும் நோய்" என்கிறார் வள்ளுவர். வினைதோன்றுதற்கு உடம்பு உலகுகளின் மேல் உண்டாகும் பற்றே காரணம்; அப்பற்றை விடுவதுதான் செம்பொருளைச் சார்தற்கு வழி. பல்வேறு பற்றுக்களிடையே வாழும் உயிர், ஒன்றைப் பற்றுவதும் ஒன்றைவிடுவதுமாக இருக்கும். விடும்போதும், ஒன்றைப் பற்றியல்லது உள்ள பற்றைவிடுவது உயிர்க்கு இயல்பன்று; அதனை நன்குகண்ட வள்ளுவர், "பற்றுக பற்றற்றான் பற்றினை" என்றும் "அப்பற்றைப் பற்றுக (ஏனைய) பற்றுவிடற்கு" என்றும் ஓர் அரிய நெறியும் கூறுகின்றார். இனி, அச்செம்பொருளின் இயல்பைக்கடவுள் வாழ்த்து என்ற பகுதியில் விளங்க உரைக்கின்றார். செம்பொருளை ஆதிபகவன் என்றும், அவன் உலகமெல்லாவற்றிற்கும் முதற் பொருள் என்றும் குறிப்பதற்கு "ஆதிபகவன் முதற்றே உலகு" என்றும் எடுத்துரைக் கின்றார். செம்பொருள் உயர்திணையா அஃறிணையா என ஆராய்ந்து இன்னதிணை என வரையறுத்துக் கூறலாகாதது. எனினும், உலகுயிர் களில் உயர்ந்துநிற்பது மக்களுயிராதலால், மக்களில் ஆண் பெண் என இருகூறு உண்டெனினும், உலகில் இதுகாறும் தோன்றிய சான்றோர் அனைவரும் ஆண்மக்கட்கே முதலிடம் தந்து பேசுவது மரபு. அதுபற்றியே செம்பொருளை ஆண்பால் ஒருமையில் வைத்து உரைப்பது இயற்கையாயிற்று. அதனால் செம்பொருளாகிய முதற்பொருளை ஆதிபகவன் என ஆண்பாலில் வைத்து உரைக் கின்றார். அவன் அறிவே உருவானவன் என்றற்கு "வாலறிவன்" என்றும், அவனது அறிவுருவம் மனத்தின்கண் நிகழும் சிந்தனை யொளியில் தோன்றுவது என்றற்கு "மலர்மிசை ஏகினான்" என்றும், அவன் எப்பொருளிடத்தும் பற்றில்லாதவன் என்று காட்டற்கு "வேண்டுதல் வேண்டாமை இலான்" என்றும், அவன் எங்கும் எப்பொருளிலும் தங்கி முறைசெய்பவன் என்றற்கு "இறைவன்" என்றும் ஐம்பொறிகள் வாயிலாக எழும் அவாக்கள் இல்லாதவன்; ஒப்புவமை கூறற்கு இல்லாதவன்; அளப்பரிய கடல்போன்ற அறங்கள் அனைத்தையும் தன்வடிவாக உடையவன் என்றற்கு 'அறவாழி அந்தணன்' என்றும் கூறுகிறார். இங்ஙனம் உலகைப் படைத்தளித்து உடம்பொடு கூட்டி உயிர்கள் வினை செய்து வாழுமாற்றால் அறிவு விளக்கம் பெற்றுச் செம்பொருட் சார்பு பற்றிப் பிறவாப் பேறும், அழியா இன்பமும் பெறுமாறு உதவிபுரியும் அவனது நன்றியை "மறப்பது நன்றன்று"; "செய்ந்நன்றி கொன்றார்க்கு உய்தியில்லை;" மேலும், மக்கள் ஒருவர்க்கொருவர் செய்யும் நன்றிக்கே வானமும் வையகமுமாகிய உலக முழுதுமே ஆற்றாதாகலின், செம்பொருள் முதல்வன் செய்த நன்றிக்கு நாம் தலையால் வணங்கி வழிபடுவது தவிர வேறில்லை. அதுதானும் செய்யாவிடில், நாம் பெற்ற உடல் பயனற்றதாம் என்பார் "எண்குணத்தான் தாளை வணங்காத் தலை முதலியன குணமில" என்று தெருட்டுகின்றார். இவ்வகையே நோக்கின், உலகிலுள்ள மக்கள் அனைவருமே பிறவாப் பெருநிலைக்கு உரியர் என்பது தோன்றும். திருவள்ளுவர், மக்கள் அனைவருமே பிறவிப் பெருங்கடல் நீந்துதற் குரியர்; ஆனால், அவருள் இறைவன் அடிசேராதார் பிறவிப் பெருங்கடலை நீந்தார், அடிசேரும் செவ்வி எய்துங்காறும் மாறிமாறிப் பிறந்தும் இறந்தும் உழலுவர் என்று அறிவிக்கின்றார். அறைவன் என ஆண் பாலால் கூறினமையால், அவன் சார்பை அடியென்றும் தாள் என்றும் வள்ளுவர் வற்புறுத்துகின்றார். இத்துணையும் கூறியவற்றைத் தொகுத்து நோக்கின் வினையுணர்வும் மறுபிறப்பும் செம்பொருள் உண்டென்னும் கொள்கையும், வினைநீக்கத்தால் பிறவாப்பேறு பெறுவதே செயற்பாலது என்பதும், அதற்கு அச்செம்பொருள் செய்துள்ள நன்றியை நினைந்து வழிபடுவதும் பிறவும் வள்ளுவர் காட்டுஞ்சமயக் கருத்தாவது காணலாம். - திருவள்ளுவர் விழாமலர் அக்டோபர் - 1968 2. திருவள்ளுவரது வரலாற்று ஆராய்ச்சி திருவள்ளுவரைத் தமிழ்நாடு உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்டிருப்பினும் அவருடைய வரலாற்றினைத் திட்டமாக அவர் காலத்திலேயே குறித்து வைத்துக் கொள்ளவில்லை. எனவே, பின்னர் திருவள்ளுவரைப் பற்றிய கதைகளும் வரலாறுகளும் பலவாக நிலவத் தொடங்கின. உண்மை காண்பது அரிதாயிற்று. எனினும் உண்மைகாண முயல்வதே இக் கட்டுரையின் நோக்கமாகும். புலவர் புராணமும், கேள்வி வழியும், கபிலரகவலும் நூற் சிறப்புப் பாயிரங்களும் ஒரு முகமாகத் திருவள்ளுவருடைய தந்தை பெயர் பகவன் என்றும், தாய் பெயர் ஆதி யென்றும் கூறுகின்றன. ஞானாமிருதம் என்னும் நூல்மட்டும் வள்ளுவருடைய தந்தைபெயர் யாளிதத்தன் என்பது எய்தக் கூறுகின்றது. சமணக்கதை, கரமுண்டன் என்பது தந்தை பெயரென்றும், சீமதியென்பது தாய் பெயர் என்றும் கூறுகின்றது. புலவர் புராணத்தையும், நூற்சிறப்புப் பாயிரங்களையும் நோக்க, ஞானாமிர்தம் பழைமையான நூலேயாயினும், அது கூறும் செய்தி வழக்கிற் பயிலக் காணப்படவில்லை; சமணர் கதையும் அன்னதே. கர்ண பரம்பரைச் செய்தியும் பொய் விரவிப் பலதிறத்த தாய் நிற்பதாயினும், எல்லாச் செய்தியும் பெற்றோர் பெயர் கூறும் வகையில் ஒற்றுமைப்பட்டு நிற்றலால், திருவள்ளுவரின் தந்தை பகவனார் என்பதும், தாய் ஆதியார் என்பதும் ஈண்டுக் கோடற் பாலனவேயாம். ஆடவர் ஆதன் என்னும் பெயர் பெறுதல்போலப் பண்டை மகளிர் ஆதியென்னும் பெயர் பெற்றிருந்தனர் போலும். தொகை நூல்களுள், ஆதி மந்தி எனவரும் பெண்பாற் பெயரும் இதற்கு ஒரு புடையால் சான்றாகிறது. இக் காலத்தும் மகளிர்க்கு ஆதியென்ற பெயர் வழங்குவதுண்டு. புலவர் புராணமும் பிறவும் பகவனார் அந்தணரென்றும், ஆதியார் இழிந்த சாதி மகள் என்றும் கூறுகின்றன. ஞானாமிர்தமும் ஆதியாரை, "ஆதிப்புலைச்சி" (ஆதிப்புலைச்சிபோலும்!) என்றே கூறுகின்றது. ஆகவே இதுபோது கிடைக்கும் சான்றுகளுட் பெறும் பாலன, ஆதியார் இழிகுலப் பெண்ணென்றே கூறுவதை நோக்க, அவரை அவ்வாறே கோடல் வேண்டியிருப்பினும் திருத்தகுதெய்வத் திருவள்ளுவரைப் பெற்ற பெறலருந் திருமிக்க அவ்வம்மையார், நாம் எல்லாம் தொழுகுலமாம் தெய்வம் என்றே கோடற்குரியராவர் என்பது குறிக்கொள்ள வேண்டும். இனிப், புலாலுண்போர் அனைவரும் முற்காலத்தே நூலோரால் புலையர் என்று கருதப்பட்டமையின், ஆதியார் உயர் சாதியிற் பிறந்தும் புலாலுணவால் புலைச்சியாய்க் கருதப்பட்டனர் என்றும் கருதலாம். "பொல்லாப் புலாலை நுகரும் புலையரை" (திருமந். 99) எனத் திருமூலனார் கூறுதல் காண்க. பிற்காலத்தே, உணவுவகையாற் பிறக்கும் அவ்வேறுபாடு விலக்கப்பட்டமையின், உயர்சாதியிற் புலால் உண்ணும் இயல்பினர் "புலையர்" எனப் படாராயினர் என்று கோடல் வேண்டும். புலாலுண்டலின்றிச் செந்தண்மை பூண்டிருந்தமையின், பகவனார் அந்தணர் ஆகவே இருந்தனர் போலும். எனவே, பகவனாரும் ஆதியாரும் ஒருசாதிப் பிறப்பினராய், உணவொழுக்கத்தால் அந்தணரும் புலையருமா யினார் என்பது முடிபாம். பண்டையில், பார்ப்பனர் முதலிய பலரும் புலாலுணவு மேற்கொண்டிருந்தமை ஆராய்ச்சியாளர் அறிந்த செய்தியாகும். பகவனார்க்கும் ஆதியார்க்கும் நட்புண்டான முறை பலவேறு வகையாகக் கூறப்படுகின்றமையின், அதன் உண்மை புலப்பட வில்லை. ஆயினும், இவர்கள் ஓரிடத்தும் நிலையுறத் தங்காது நாடோடிகளாய்ச் சென்ற செய்தி ஒருமையாய்க் கூறப்படுகிறது. திருவள்ளுவரை யுள்ளிட்ட மக்கள் எழுவரை இவர்கள் பெற்று, ஆங்காங்கே அன்பின்றிக் கைவிட்டு நீங்கினர் என்பதும் ஒருமைப் பட வழங்குகிறது. இங்கே,ஆதியார் பகவனாரைப் பிரியாது தொடர்ந்தும், அவரும் இவர் கூட்டத்தை விரும்பியிருந்தும், பிரியாமைக்கும் கூட்டத்துக்குரிய விருப்பத்துக்கும் ஒப்ப, ஆதியாரும் புலாலுணவை நீக்கி, செந்தண்மை பூண்டொழுகும் அந்தணியாய் விளங்கியிருத்தல் வேண்டுமென்பது எய்துகிறது. ஆகவே, திருவள்ளுவருடைய பெற்றோர் எவ்வுயிர்க்கும் செந் தண்மை பூண்டொழுகும் *அந்தணரே என்பதும், ஆனால், அவர் களைப் பார்ப்பனர் என்று துணியமுடியாது என்பதும் கொள்ளற் பாலனவாம். ஏனெனில், அக்காலத்தே பார்ப்பனர் முதல் நான்கு வருணத்துள்ளும் புலையரும் அந்தணரும் இருந்தனர். பார்ப்பனருள் புலாலுண்போர் பார்ப்பனப் புலையர் எனவும், பிறவகுப்பினருள் புலாலுண்போர் பிறவகைப் புலையர் எனவும் நூலோர் கருதின ரென்பது உய்த்துணரப்படுகின்றது. திருவள்ளுவரை உள்ளிட்ட உடன்பிறப்பினர் எழுவர் என்பது ஒருமைவழக்காயினும், அவர்தம் பெயர்வகை வேறுபடுகிறது. திருவள்ளுவர் குழவிப்பருவத்தே பெற்றோரால் கைவிடப்பட்டனர் என்பது ஒருமைச் செய்தியாயினும், வளர்க்கப்பட்ட செய்தி வேறுபடுகிறது. இவரது மதிநுட்பத்தையும், உலகியலறிவையும் நோக்கின், இவர் ஓர் உயரிய செல்வக் குடும்பத்தில் வளர்ந்து செந்தமிழ் வளம் சிறக்கப் பெற்றவர் என்பது துணிபாம். எல்லாச் சான்றோராலும் இவர் பெயர் வள்ளுவர் என்றே கூறப்படுவதால் இதுவே இவரது இயற்பெய ரென்றே கோடல் வேண்டும். ஆனால் இது பெற்றோரால் இடப்பட்ட தென்றாதல், வளர்த்தோரால் இடப்பட்ட தென்றாதல் துணிவதற்குக் கூடவில்லை. இவர் வளர்ந்து சிறந்து வாழ்ந்தவிடம்திருமயிலை யென்பது பெரும்பான்மையான வழக்கு. சமணர் கதையும் மயிலையைக் குறிக்கிறது. ஆனால் திருவள்ளுவமாலை மட்டில் மதுரையைக் குறிக்கிறது. இதற்கேற்ப, திருவள்ளுவர் நூற்கு உரைகண்ட பரிமேலழ கரைக்குறித்த தொண்டை மண்டல சதகம், அம்மண்டலத்ததாகிய மயிலையில்வாழ்ந்த வள்ளுவரைக் குறித்திலது. "திருக்காஞ்சி வாழ் பரிமேலழகன் வள்ளுவனார்க்கு வழிகாட்டினான் தொண்டை மண்டலமே" (41) என்ற சதகம், வள்ளுவன் சிறந்த மயிலையைச் சிறப்பியாமை காண்க. ஆகவே, திருவள்ளுவர் வாழ்ந்த மயிலை வேறு நாட்டதாகல் வேண்டும்; இன்றேல், திருமயிலை தொண்டை மண்டலத்துப் பதியாகாமை மண்டலத்த தென்பது, அச்சதகத்து, "கயிலையும் கச்சியும் விற்கோலமு நற்கழுக் குன்றமும் பயில்வலி தாயமும் பாசூரு மச்சிறு பாக்கமும்நல் லயிலையும் வல்லந் திருவொற்றி யூரு மரசிலியும் மயிலையும் ஈசன் மகிழ்ந்ததன்றோ தொண்டை மண்டலமே" என்று மூன்றாஞ் செய்யுள் கூறுமாற்றால் தெளியலாகும். திருவள்ளுவர் வாசுகி யென்பவரை மணந்து இல்லறம் புரிந்து வந்தனர் என்னும் செய்தி மேற்கூறிய கேள்வி வழி வரலாற்றிலும், ஏனைப்புராணம் முதலியவற்றிலும் ஒப்பக் கூறப்பெறுகிறது. ஆனால் ஆதியார், பகவனார் என்னும் பெயர்களை நோக்க, வாசுகி யென்னும் பெயர் ஆராய்தற்குரிய தொன்றாகிறது. வாசுகி யென்னும் வடமொழிப் பெயர், அந்நாளில் தமிழ் நாட்டில் வழங்கிய தமிழர் பெயராகத்தோன்றவில்லை. வடமொழியும், வடவரும் விரவி யிருந்த காலத்தே திருவள்ளுவர் வாழ்ந்திருந்தாராயினும், வடமொழிப் பெயருள் வாசுகி என்பது போலும் பெயர் மக்கட்கு வழங்கிற்றிலது. அதனால் திருவள்ளுவர்க்குக் கற்புடைய மனைவியார் இருந்தாராயினும், அவரது பெயர் வாசுகி என்பது மாத்திரம் நம்புதற்கு இடந்தருகின்றலது. ஆடவர் வள்ளுவன், கபிலன், பரணன் என்ற தமிழ்ப்பெயரும், மகளிர் வள்ளி, ஆதி, கண்ணகி, காமக்கண்ணி, வெள்ளி வீதி என்ற தமிழ்ப் பெயரும் புனைந்து வாழ்ந்த காலம் திருவள்ளுவர் காலமாதலின், அக்காலத்து, வாசுகி, மார்க்கசகாயன் முதலிய வடமொழிப் பெயர் உண்டெனக் கோடல் உண்மையறிவுக்குப் பொருந்துவதாகத் தோன்றவில்லை. திருவள்ளுவர் தம் கற்புடைய மனைவியாரோடு கூடி வாழ்ந்து வருகையில் நெசவுத்தொழில் மேற்கொண்டிருந்தனர் என்பது மேற்கூறிய வரலாற்றுக் குறிப்புக்களிற் காணும் பொதுச் செய்தி யாகும். ஆனால், அத்தொழில் பற்றிய சிறு குறிப்பும் அவர் நூலிற் காணப்படவில்லை. உழவு, வாணிபம், அரசாட்சி, மறையோதல் முதலிய தொழில்களை ஆங்காங்கு விதந்து கூறியவர், தாம் விரும்பி மேற்கொண்டிருந்த தொழில், ஏனைத்தொழில் பலவற்றினும் தலையாயது என்பதை யாண்டேனும் குறித்திருப்பார். அது செய்யாமையின், அவரது தொழில் இன்னதெனத் துணிதற்கில்லை. கற்புறு மனைவியோடு கவின் சிறந்து உறையும் நாளில், நம் வள்ளுவர், நந்தமிழ் நாடும், தமிழ் மக்களும் உய்ய, தாம் தம் நல்லறிவு கொண்டு ஆராய்ந்த நன்னூற் பொருள் அனைத்தும் நன்கு தெளிந்து, யாவர்க்கும் ஒப்பப் பயன் படத்தக்க நூலியற்ற வேண்டு மென்ற கருத்தால் உந்தப் பெற்று, தெய்வத் திருக்குறள் நூலை இயற்றினாராதல் வேண்டும். இவர் காலத்தே மக்கள் கூட்டத்தில் கடவுள் உண்மையும், வினைத் தொடர்பும், வீடு பேறும், நரகத்துன்ப வுணர்வும் நிலவி நின்றன. அந்தணர் மறையும், துறவியர் நெறியும் விரவி யிருந்த மையின், அவர் காலம் வடவரது வேத நெறியும். தமிழரது சைவ நெறியும் விரவிய வைதிகநெறி ஒரு மருங்கும், புத்த சமணர்களின் புதுச் சமய நெறி பிறிதொரு மருங்கும் நிலவியிருந்த காலமாகும். இரண்டன் பயிற்சியால் மக்கட்டொகுதி உலகியலில் சீரிய நாட்டம் பெறாது சீர்குலைவதாயிற்று. வைதீக நெறியினர் சாதியுயர்ச்சியையும், உலகம் பொய் அதனை உவர்த்து விடுதல் அறம் எனும் கொள்கையையும் பரப்பி, மக்களை உலகியற் பொருளை ஆராய்தற்கும் மக்களுள் ஒருமையுணர்வு கோடற்கும் ஊக்கங் கொள்ளாது ஒடுங்கி யிருக்கச் செய்தனர். புத்த சமணர் கொல்லா விரதம் ஒன்றனையே வலியுறுத்து முகத்தால் உலகியற் பொருளைச் சிறிதும் ஆராய வொட்டாது, மனை வாழ்க்கையும் வீடு பேற்றுக்கு உறுதிதராது; புதல்வராலும் மக்கட்குப் பயனில்லை யென்னும் உணர்வினை யெழுப்பி, உலகத்து மக்களை உலகத்தை நோக்க விடாது தகைந்தனர். இவ்வாறு இருதலைப்பட்டு உலகியலில் வழுவுதலை மக்கள் மேற்கொள்வது கண்ட வள்ளுவர், அவ்வுல கியற்குரிய அறத்தையும், பொருளையும், இன்பத்தையும் வகுத்துக் கூறலுறுவா ராயினர். இவ்வுண்மையினை நன்கு ஆராய்ந்து கண்டே கல்லாடனாரும், "சமயக் கணக்கர் மதிவழி கூறாது, உலகியல் கூறிப் பொருளிது வென்ற வள்ளுவன்" என்றார். ஏனைய இருதிறத்தாரும் இவ்வுலகியலைக் கருவியாகக் கொண்டு தத்தம் சமயக் கருத்தினைச் சாதிக்க முயன்றனர். வள்ளுவரோ, அவர்கள் பொதுவாகக் கொண்ட உலகியலையே நூற் பொருளாக விளக்கத் தொடங்கினார். மேலும், உலகியலை அறம், பொருள், இன்பம் என்ற மூன்று குறிக்கோளின் கண் வைத்து ஆராய்ந்த முதன்மை தொல்காப்பியர்க்கு உரித்து. அதனைப் பயன்பட வுணர்ந்து, உண்மை யுணர்வால் மக்கட்கு உணர்த்திய உயர்நிலைப் பெருமை வள்ளுவர்க்கே உரித்து. இவர் போல் உலகியற் பொருளை மூன்றாகப் பகுத்து விரித்துரைத்த அறிஞர் இப்பரந்த மண்ணுலகில் வேறு எவருமே இலர் என்பதை யாவரும் அறிவர். உலகில் காணப்படும் நூல்களுள் மிகப் பழைமையானதாகக் கூறப்படும் வேதமும் உலகியலை ஞானமும் கருமமும் எனப் பகுத்தோதியதாகக் கூறப்படுகிறதே யன்றி, உலகியலில் உயிர்கள் செய்தற்குரியது அறமே, அதனால் செயப்படு பொருள் பொருளே அதனால் அவ்வுயிர்க்குளதாம் பயன் இன்பமே என்று வகுத்தோதும் அறிவுடையியல்பு படைத்ததாகக் கூறப்படுவதே கிடையாது. ஆதலால், திருவள்ளுவர் இந்நூலைச் செய்தற்குக் காரணம், உலகில் தாம் கேட்டும் கண்டும் தெளிந்த நூல்கள் பலவும் உலகில் வாழும் மக்கட்கு அவ்வுலகியலைத் தனிப்பட விதந்து வகுத்தும் விரித்தும் ஓதாமல், அதன்பால் உவர்ப்பை விளைவித்து உயிர் ஒருமைக்கண் இறுதிதோன்ற நிலவினமையே என்பது குறிக்கற் பாற்று. இத்திருக்குறள் நூல் அமைந்துள்ள முறை வேறு எம்மொழியினும் காணப்படாமையால், அது வள்ளுவர் தாமே படைத்துக் கொண்ட உண்மை முறையாகும். திருக்குறள் நூல் மதுரையிலிருந்த சங்கத்தில் அரங்கேற்றப் பட்ட தென்னும் செய்திக்கும் மேற்கூறிய செய்திகளே ஆதாரமாகும். சமணர் குழுவும் அதனை ஒப்புக்கொள்ளுகிறது. அதனால், இந்நூல் மதுரையிலிருந்த புலவர்களால் ஆராய்ந்து ஆதரிக்கப் பெற்ற தென்பது கோடற் பாலதாம். மற்றும், சங்கமிருந்ததென்பதே பொய் யென்பாரும் உளராதலின், அவர் கூற்று உண்மையானால், இக்கதையும் ஆதாரமிழந்துபோம். திருவள்ளுவமாலை சங்கப் புலவர்களால் இயற்றப்பெற்ற தன்றென்பது சிலர் கொள்கை. நல்லதன் நலனும் தீயதன் தீமையும் உள்ளவாறு காணும் உரவோரே புலவர் என்பபடுவ ராகலின் அவர் கூடிய அவையில், வள்ளுவர் முதற்கண் புறக்கணிக்கப்பட்டார் என்பதும், சங்கப்பலகை நிகழ்ச்சியால் தெளிந்தார் என்பதும் ஆதாரமற்றவை யாகும். திருக்குறட் சிறப்பால் சீரிய புகழ் பெற்ற வள்ளுவனார் ஏலேல சிங்கன் என்னும் செல்வர் தொடர்புபெற்று, மனையறம் புரிந்தனர் என்ற செய்தியே பொதுவாகக் கூறப்படுகிறது. அவன் இவர்பால் மாணவனாய் அறங்கேட்டான் என்பாரும், அவன்பால் இவர் நூல் பெற்றுத் தம் நெசவுத் தொழில் புரிந்தார் என்பாருமாகப் பல திறத்தார் உளர். இவை எத்துணை உண்மையானவை என்பது அறியக் கூடாதாயினும், இருவர்க்கும் தொடர்பிருந்த தென்பது மட்டில் கோடற் பாற்றேயாம். திருவள்ளுவர் மனையறம் புரிந்து வருங்காலத்து, இவர்க்கு எத்துணைமக்கள் பிறந்திருந்தனர் என்பது தெரிந்திலது. கோப் பெருஞ்சோழன் புதல்வர்போல, தம் தந்தை பெயரோடு தம் பெயரும் நிலை பெறத்தக்க புகழோடு தோன்றிய புதல்வர் அல்லர் போலும் என்றும், புதல்வர்ப் பேறே இல்லை போலும் என்றும் வள்ளுவரின் மக்கட்பேறு கருதினோர் கூறுவர். திருவள்ளுவர் விண்புகுவதன் முன்பே அவர் மனைவியார் தம்பூத உடம்பு நீத்தனர் என்பது தெரிந்த செய்தியாகக் கூறப்படுகிறது. அவர் பிரிவாற்றாது வள்ளுவர் வருந்திப் பாடியதாகக் கூறும் பாட்டொன்றும் காட்டப்படுகிறது. சின்னாள் கழித்து, இவரும் விண்ணுலகு நண்ணினார் என்றும், இவரது மாணவராகிய ஏலேல சிங்கரே இறுதிக் கடன் ஆற்றினார் என்றும் கூறுகின்றனர். யாதோர் ஆடம்பரமுமின்றி, மிக்க எளிய நிலையில் இவர் அடக்கம் செய்யப் பெற்றனர் என்பதே இவரது இறுதிக் காலம் பற்றிக் கூறும் கதைகளின் உண்மைக் கருத்தாகும்.இவரால் வேறு நூல்கள் இயற்றப்பட வில்லை. - திரு.வி. உலகநாத முதலியார் அவர்களின் மணிவிழாமலர் 1941 3. ஏட்டிற் கண்ட குறிப்பு தஞ்சை மாவட்டத்தில் காவிரியின் வடகரையிலுள்ள வள மிக்க ஊர்களில் கவித்தலம் என்ற ஊர் பெருஞ்செல்வரும், தமிழ்ப் பெரும் புலமைச் சான்றோரும் நிறைந்த ஊராகும். அவ்வூரில் சுமார் 70 ஆண்டுகட்கு முன் பொருள்வளமேயன்றி, புலமைவளம் சிறக்கப் பெற்ற மூப்பனார் பெருங்குடியில் துரைசாமி மூப்பனார் என்ற சான்றோர் வாழ்ந்தனர். அவர் கம்பரது இராமாயணத்தில் மிக்க ஈடுபாடு கொண்டு ஒவ்வொரு பாட்டிலும் புதைந்து கிடக்கும் அருங்கருத்துக்களை ஆராய்ந்துரைக்கும் வன்மை படைத்தவர். அந்நாளிலேயே அவர் கம்பராமாயண அருங்கவித்திரட்டு என்ற நூலொன்றைத் தொகுத்துப் பொருளும், விளக்கமும் எழுதி வெளி யிட்டார். மேலும், அவர் வடமொழியிலும் நிறைந்த புலமை பெற்று "ஜானகிபரிணயம்" என்ற நூலைத் தமிழில் மொழி பெயர்த்து, இலக்கியவளம் செறிந்த உரைநடையில் இனிய முறையில் எழுதி வெளியிட்டார். அதனால் 50 ஆண்டுகட்கு முன்பே அவருடைய புலமைப் புகழ் தமிழ்ச் சான்றோரிடையே பெரிதும் விளக்கமுற்று இருந்தது. அவரிடம் திருக்குறள் மூலம் மாத்திரம் எழுதிய ஏடு ஒன்று இருந்தது. அதனை என் பழைய நண்பர்களில் ஒருவரான கதிர்வேல் மூப்பனார் முன்பொருகால் எனக்குக் காட்டக் கண்டேன். சில நாட்களுக்கு முன் நான் மாயூரத்தில் என் நண்பர் வழக்கறிஞர் திரு. இராசேந்திரன், B.A., B.L., அவர்களோடு அளவளாவி விட்டுக் கும்பகோணம் வழியாகத் திருவையாற்றுக்குச் சென்ற பொழுது வழியில் கதிர்வேல் மூப்பனாரைக் காணும் வாய்ப்புக் கிடைத்தது. அவரிடம் இருந்த அந்தத் திருக்குறள் மூல ஏட்டுப் பிரதியைக் காணும் பேறுபெற்றேன். அதன்கண், முதல் அதிகாரத்தின் பெயர் இறைவணக்கம் என்று இருப்பதை மிக்க விருப்போடு எடுத் துரைத்தார். நானும் பார்த்து வியந்தேன். அன்றியும், அதன் இறுதிக் குறளாக, “மலர்மிசை யேகினான் மாணடி சேர்ந்தார், நிலமிசை நீடுவாழ் வார்” என்பதை எழுதிக் “கடவுள் வணக்கம் முடிந்தது” என்ற குறிப்பும் கூறப்பட்டிருந்தது. இதுபோல் வேறுபாடுகள் இவ்வேட்டில் உண்டோ என்று கேட்டபோது, “அதிகாரவைப்பு முறையில் வேறுபாடில்லை; குறட்பாக்களின் வைப்புமுறைகள் வேறுபாடுறுகின்றன; அவற்றுள் சில மணக்குடவரது வைப்புமுறையையும், பல பரிமேலழகரது வைப்புமுறையையும் ஒத்துள்ளன” என்று சொல்லி, “இவ்வேட்டில் ஒரு புதுமையும் உள்ளது” என்று உரைத்து, “முதற்குறளின் இறுதியில் முதலாக உடைமையை உடையனாகவுரைத்த முறையன்றிய கூற்றால் இறைவனாகிய ஆதிபகவனது முதன்மை காணப்படும் உலகின் மேல் வைத்து வற்புறுத்தப்பட்டது” என்ற குறிப்பொன்று காணப்படுகின்றது. இவ்வாறே,“ஊழிற் பெருவலியாவுள” எனவரும் குறட்பாவின் இறுதியில், இஃது ஊழ்வலியின் பெருமை கூறிற்று; அழிக்கலா காமை கூறிற்றன்று; ஊழையும் உப்பக்கம் காண்ப என்பவாகலின்” என்றொரு குறிப்பும், “ஊடுதல் காமத்திற்கின்பம் அதற்கின்பம் கூடி முயங்கப் பெறின் ” என்ற குறட்பாவின் இறுதியில் “பெறாமை துனிபயத்தலின் பெறின் என்றார்” என்றொரு குறிப்பும் காணப் படுகின்றன. வேறு எத்தகைய குறிப்பையும் தாம் இன்னும் காண வில்லை என்று கூறினார். இக்குறிப்புக்களின் சொன்னடையால் அவற்றை யெழுதியவர் உயரிய புலமைச் செல்வர் என்று விளங்கின மையின் அக்குறிப்புக்களை யான் ஆர்வத்தோடு எழுதிப்போந்தேன். முதற்குறிப்பு, “முதலாக உடைமையை உடையவனாக வுரைத்த முறையன்றிய கூற்றால் இறைவனாகிய ஆதிபகவனது முதன்மை, காணப்படும் உலகின்மேல் வைத்து வற்புறுத்தப் பட்டது” என்பது. “ஆதி பகவன் முதற்றே உலகு” என்பது உலகு ஆதிபகவன் முதற்று என உரைநடைப்பட்டு, காணப்படும் உலகம் ஆதிபகவனாகிய முதலையுடையது எனப் பொருள்படுகிறது. முருகன் இப்பொருளை யுடையன் என்றொரு தொடரை எடுத்துக் கொண்டால், அதன்கண் முருகன் உடையவன் என்றும், பொருள் அவற்கு உடைமை என்றும் காணப்படும். உடையவனாகிய முருகனை நோக்க, பொருள் உடைமையாய் அடங்கி அவனுக்கு ஏற்றம் தருகிறது. அவ்வுடைமையை வேட்டவாறு செய்யும் முதன்மையை உடையனாகிய தன்மையால் முருகன் எய்துகிறான். அதுபோல உலகம் ஆதிபகவனாகிய முதலையுடையது என்ற விடத்து, முருகனது போலும் உடையனாம் தன்மை உலகிற்கு எய்துகிறது; உடைமையின் தன்மை ஆதிபகவற்கு அமைகிறது. உலகை உடையவன் ஆதிபகவனும், உடைமை உலகுமாக வைத்துக் கூறுவதுதான் நேரியமுறை. மாறாக, உலகு ஆதிபகவனாகிய முதலையுடையது என்னும் கூற்று முறை மாறி நிற்பது பற்றி, இதனை “முறையன்றிய கூற்று” என்று குறிப்புரை உரைக்கிறது. நூலாசிரியர்கள் நூற்புணர்ப்புக்கு மேற்கொள்ளும் தந்திரவுத் திகள் பல; அவற்றுள் முறைமாறிக் கூறுவது ஒன்று; “ஒன்றறிகிளவி தறட ஊர்ந்த, குன்றியலுகரத் திறுதியாகும்” என்ற நூற்பாவில், டதற எனக் கூறவேண்டிய முறையை மாற்றித் தொல்காப்பியர் “தறட” என்றது முறையன்றிய கூற்று என்னும் தந்திர உத்தி என்பர். முறை மாறிக் கூறுவது வேண்டாவாயினும் வேறு ஒரு கருத்தை வற்புறுத்த வேண்டி இவ்வாறு கூறுவது தகும் என்று கொண்டனர் சான்றோர். ஆசிரியர் சிலவற்றை முறையே கூறிவருங்கால், அதன்கண் இடையே ஒரு மாற்றம் தோன்றுமாயின், கேட்பவர் உள்ளத்தே அம்மாற்றம் கேட்டலிற் செல்லும் கருத்தைத் தடுத்து நிறுத்தி ஆராய்ச்சியுட் புகுத்தும் என்பது இவ்வுத்தி வகையின் குறிப்பாகும். இவ்வாறு, ஆதிபகவன் உலகிற்கு முதலாவன் என்று கூற வேண்டிய முறையை மாற்றி “உலகு ஆதிபகவன் முதற்று” என்று திருவள்ளுவர் கூறுவது “முறையன்றிய கூற்று” எனக் கருதப் படுகிறது. ஆதிபகவன் உலகிற்கு முதல்வன்; அவன் படைத்தலால் உலகு அவனது உடைமையென்பது, கடவுள் உண்டு என்று கருதும் சமயவாதிகள் அனைவரும் கூறுவது; இஃது எல்லாரும் நன்கு அறிந்த செய்தி. அக்கருத்தைத் திருவள்ளுவர் அம்முறையிற் கூறாமல் உலகு ஆதிபகவனை முதலாக உடையது என்று கூறுவது, படிப்பவர் கேட்பவர் உள்ளத்தில் ஏன் இவ்வாறு கூறுகிறார் என்ற தடை எழுப்பி அவரது ஆராய்ச்சியைத் தூண்டுகிறது. உலகையும் அதன் முதல்வனாகிய ஆதிபகவனையும் ஒப்பநோக்கும் ஆராய்ச்சி யறிவு, உலகு காணப்படுதலையும் ஆதியாகிய பகவன் காணப்படாமையும் நோக்கிக் காணப்படும் தன்மை கருதி “உலகு ஆதிபகவனை முதலாக வுடைத்து”என்று கூறுகின்றார் எனத் துணிகிறது. இக்குறட்பாவுக்கு விளக்கம் கூற வந்த பரிமேலழகரும், “காணப்பட்ட உலகத்தால் காணப்படாத கடவுட்கு உண்மை கூற வேண்டுதலின் ஆதிபகவன் முதற்றே என உலகின் மேல் வைத்துக் கூறினார்; கூறினாரேனும் உலகிற்கு முதல் ஆதிபகவன் என்பது கருத்தாகக் கொள்க” என்று கூறுகின்றார். சொன்னயம் நோக் காமையின், ஏனை மணக்குடவர் முதலாயினார் இவ்வாராய்ச்சியில் தலைப்படவில்லை. “ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று சூழினும் தான்முந் துறும்” என்ற குறட்பாவின் இறுதியில் உள்ள குறிப்பு, “இஃது ஊழ்வலியின் பெருமை கூறிற்று; அழிக்கலாகாமை கூறிற்றன்று; ஊழையும் உப்பக்கம் காண்பர் என்பவாகலின்” என்று காணப் படுகிறது. ஊழ் என்பது ஊழ்த்தல் என்னும் வினைமுதல் நிலை. முதனிலைத் தொழிற் பெயராகிய ஊழ் ஈண்டுப் பயன் ஊழ்த்து நிற்கும் வினைமேல் நிற்கிறது; வினையொடு தொடர்ந்து ஊழ்வினை எனப்படும்போது அது ஊழ்கனி, ஊழ்முகை, ஊழ்மலர் என்றாற்போல வினைத்தொகையாய் முக்காலமும் ஏற்றவாறு தொக்குவரும். இவ்வூழ் தங்குமிடம் உயிரது அறிவு, அறிவின்கட் கிடந்து, அது செய்யும் ஆராய்ச்சி யனைத்தினும் ஊடுருவி நிற்கும் இயல்பினால் மற்றொன்று சூழினும், அது சூழ்ச்சியிற் கலந்து நன்மையோ தீமையோ ஒன்றினை விளைவிக்கிறது; அதனால் ஊழ்வினைக்கு நிகர் அதுவேயன்றிப் பெருவலி படைத்தவை வேறு எவையும் இல்லை என்பது விளங்கவே “ஊழிற் பெருவலியாவுள” என்று திருக்குறள் கூறுகிறது. ஊழாகிய வினைக்கு இடம் உயிரே என்பதைப் பரிமேலகழகர் “ஒருமைக்கண் தான் கற்ற கல்வி ஒருவற்கு எழுமையும் ஏமாப்புடைத்து” என்ற குறட்பாவுரையில், கல்வி, “வினைகள் போல உயிரின்கட் கிடந்து அது புக்குழிப் புகுவது” என்று, “நோயெல்லாம் நோய் செய்தார் மேலவாம் நோய் செய்யார் நோயின்மை வேண்டுபவர்” என்ற குறட்பாவுரையில், “உயிர்நிலத்து வினைவித்திட்டார்க்கு விளைவும் அதுவேயாகலின் நோயெல்லாம் நோய் செய்தார் மேலவாம் என்றார்” என்றும் கூறுகின்றார். எனவே, வினையாகிய ஊழிற்கு இடம் உயிராவது தெளிகின்றோம். ஊழ்போலக் கல்வியும் உயிரின்கட் கிடந்து வலிய அரண் செய்தலின், ஊழ் வலிக்குநிகர் கல்வி வலியுளதே எனின், ஊழ் அக்கல்வியறிவின்கட் புகுந்து பேதைப்படுத்தலும் விளக்கம் செய்தலுமாகிய செயல்களைப் புரிவது பற்றியே ஊழிற் பெருவலி யுடையன பிற இல்லை எனல் வேண்டிற்று. இவ்வாறு ஊழ் நிகரற்ற பெருவலியுடையதெனினும், உயிரின்கண் இடையிற் புகுந்து இடையிற் கெடுவதாகும். வினை செய்யத் தோன்றிப் பயன் விளைய ஊழ்த்து, அப்பயன் நுகரப்பட்ட விடத்துக் கெட்டொழியும் அதன் வலியனைத்தும் பயன் நுகரு மளவே யாகும்; அஃதாவது ஊழில் வலி அதன் பயன்மேல் நிற்பதெனக் கொள்ளலாம். பயன் கழிந்த வழி ஊழ்வலி யழியும். ஊழின் தீப்பயனை நற்பயன்போல நுகருமிடத்து அதன் கொடுமை வலி தேய்ந்து போகும். அதுபற்றியே, “நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால் அல்லற்படுவது எவன்” என்று திருவள்ளு வர் தெளிவிக்கின்றார். நல்லவை தீயவை என வேறுபட நோக்காது ஒப்பக் கொள்பவர்க்கு ஊழ்வினை ஒரு பொருளாகாது; அவர் உள்ளம் ஊழ்வினை விளைவிக்கும் இடையூறுகட்கு உலைவுறாது; நிலைகுலையாது. இவ்வுண்மை விளங்கவே, திருக்குறள், “ஊழை யும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித் தாழாது உஞற்று பவர்” என்று எடுத்துரைக்கின்றது. ஊறு செய்யும் ஊழ்வினையை உப்பக்கம் காண்பதற்கு உலைவில்லாமை வழியென்றும், அது கைகூடுதற்கு நலந்தீங்குகளை ஒப்பக் கருதும் திண்மை வழி என்றும் அறிகின் றோம். இத்திண்மை நிலையைச் சித்தாந்த சைவ நூல்கள் “இரு வினை யொப்பு” என்று கூறுகின்றன. “ஊடுதல் காமத்திற் கின்பம் அதற்கின்பம் கூடி முயங்கப் பெறின்” என்ற குறட்பாவின் இறுதிக் குறிப்பு, “பெறாமைதுனி பயத்தலின் பெறின்” என்றார் எனக் காணப்படுகிறது. துனி புலவி கலவி என்ற மூன்றனுள், துனியில்லாத கலவி கனிபோல் இன்பம் செய்வதென்றும், புலவியில்லாத கலவி பழுக்காத கருக்காய் போல் துவர்ப்பு விளைக்கும் என்றும், திருவள்ளுவரே கூறுவர். இதனால் துனி வேண்டப்படாதது எனவும், புலவி முயக்க இன்பத்துக்கு ஆக்கமாதலின் வேண்டத்தக்க தெனவும் பெறப்படும். அதன் சிறப்புணர்த்தவே, “காமம் புணர்தலின் ஊடல் இனிது” என்பர். புலவியும் ஊடலும் ஒரு தன்மையவே; எனினும் புலவி சொன் மேலும், ஊடல் செயன்மேலும் பெரும்பாலும் இயலுவன; பிற்காலத்தார் சொல் வேறுபாட்டின் நுணுக்கம் நோக்காது ஒருபொருட் கிளவியாகவே வழங்கலுற்றனர். அதனாற்றான் இந்நாளில் சொற்களின் நுண்ணிய வேறுபாடு நோக்கும் மனப் பான்மை குன்றி விட்டது; நிகண்டுகள் தோன்றியதும் ஒரு பொருண் மேல் நிற்கும் சொற்களின் பன்மைத் தன்மையை நுணுகியறியும் இயல்பு பெரிதும் மறைந்து போயிற்று. ஆங்கிலம் பயின்றவர்பால் காணப்படும் இவ்வித்தகம், தமிழ் பயின்றார்பால் காணப்படாமைக் குக் காரணம் இதுவேயாம். நிற்க. செயற்பண்பின் மேனிற்கும் ஊடல், துனி பயக்கும் நீர்மை யுடையது. “ஊடலில் தோன்றும் சிறுதுனி” என்பது திருக்குறள். புலவி சொல்லிலும் மெய்ப்பாட்டிலும் நின்று வேட்கையை மிகுவிக்கும் மேன்மையுடையது. புலவி மிகுந்தவழி ஊடல் தோன்றும்; அது மிக்கவழித் துன்பம் பயக்கும் துனியாய் முதிர்ந்து முடிவில் வெறுப்பை விளைவித்துப் பிரிந்தொழியும் கொடுமையைப் பயந்து விடும். ஆதலால், ஊடல் இன்பத்துக்கு ஆக்கமாய், முயக்கத்தால் இன்ப நுகர்ச்சியை நிறைவிக்கும் இயல்பினதாகிறது. “ஊடுதல் காமத்திற் கின்பம்” என உள்ளதன் உண்மையை உள்ளவாறு கூறிய திருவள்ளுவர், கூடி முயங்கும் முயக்கம் அவ்வூடலின்பத்துக்கு நிறைவாம் என்பது உணர்த்துதற்கு “அதற்கின்பம் கூடிமுயங்கப் பெறின் (ஆம்)” என்றார். முயக்கம் பெறாவிடின் அதற்குக் காரணம் ஆராயப்படும். ஆராய்ச்சி, “ஊடலில் தோன்றிய சிறுதுனி’ பெரிதாகி வெறுப்பையும் வெகுளியையும் பயந்தமை வெளிப்படுத்தும். இதனை நுணுகி நோக்கிய குறிப்புரைகாரர், “பெறாமை துனி பயத்தலின் பெறின் என்றார்” எனக் குறிக்கின்றார். இதனால், புலவி மிகுந்த வழியுளதாகும் உவர்ப்பு ஊடலை மிகுவிக்கும் என்றும், அதன் மிகுதி வெறுப்பை விளைவித்து, “கூடிமுயங்கும் இன்பத்தைப் பெறாவாறு சிதைத்தல் பெரும்பான்மை” என்றும் உணரலாம். நுண்மாண் நுழைபுலங் கொண்டு குறட்பாக்களில் நுண்ணிய கருத்தைக் கண்டு சிறு குறிப்புக்களால் எடுத்து வழங்கிய இப்புலவர் பெருந்தகை யாவர் என்று அறிய முடியவில்லை. அவருடைய குறிப்புக்கள் பாட்டுத்தோறும் அமைந்திருக்குமாயின் எத்துணையோ புதுப்புது உண்மைகள் புலப்பட்டிருக்கும். புலமிக்க புலவர் பெருமக்கள் இருந்தும் அவர்களைப் பயன்கொள்ளும் நலம் இடைக்காலத் தமிழ் மக்கள்பால் இல்லாதொழிந்தது தமிழ் நாட்டின் தவக் குறை. - திருவள்ளுவர் ஈராயிரம் ஆண்டு சிறப்புமலர் 19-08-1970 4. ஊழ்வினை திருவள்ளுவர் வழங்கிய திருக்குறளைப் படிப்பதில் இந்நாளைய நன்மக்கட்குப் பேரீடுபாடு உண்டாகியிருக்கிறது. அரசியலறிஞர் முதல் பள்ளிச் சிறார்கள் ஈறாக அனைவரும் இந்நெறியில் ஒத்த கருத்துடையராக இருக்கின்றனர். உலகிற்கே நல்லறமுரைத்த வள்ளுவர்பால் மக்கட்கு நன்மதிப்பு உண்டாகி யிருப்பது நல்வாழ்வுக்கு அறிகுறி. நினைவு, மொழி, செயல் என்ற மூன்று துறையிலும் உரிமை திகழ மக்கள் வாழ்ந்த காலம் திருவள்ளுவர் தோன்றித் திருக்குறள் வழங்கிய காலம்; அத்தகைய காலம் இப்போது வந்திருப்பதால், மக்கட்குத் திருவள்ளுவரிடத்தே இத்துணையீடுபாடு தோன்றிய தெனலாம். இதற்கு முன்னெல்லாம், நம் நாட்டில் கற்றோர் எனப்படுபவர் இந்நாட்டில் வாழ்ந்தார் என்றாலும் அவருடைய எண்ணங்களும் செயலும் பிற நாட்டவர் நல்கியனவாகவே இருந்தமையால் வேற்று நாட்டவராகவே விளங்கினர். குழவிப்பருவத்தே, தாய் தான் தந்த பாலொடு உடன் ஊட்டிய தமிழ் மொழியை இகழ்ந்தனர்; தமிழ் நினைவைக் கைவிட்டனர்; தமிழ் வாழ்வைத் துறந்தனர்; தமிழ் நடையைத் தாழ்த்தினர்; தமிழுடையைமாற்றினர்; தமிழ்க் கல்வியைத் தூற்றினர்; தமிழ்ப்பண்பாட்டைக் கைவிட்டுத் தமிழ் மக்கட்குரிய சான்றாண்மையைக் கைதூவி, காலஞ் சென்ற தேசியகவி பாரதியார் கூறுவதுபோல “நாமமது தமிழரெனக் கொண்டு” உயிர் வாழ்ந்தனர். “தாய் நாட்டி லிருந்து கொண்டே வேறொரு பேய் நாட்டு மக்களாக நம்மை மாற்றி விட்டதே இந்த அந்நியமொழிக் கல்வி” யென அண்ணல் காந்தியடிகள் முதலிய சான்றோர் கழறிய சொற்கள் இன்னும் ஒலி மாறவில்லை. இவ்வாறு உண்டாகிய மன மாசு இன்னும் நீங்கவில்லை; அடிமையுணர்வு அகலவில்லை. சென்ற இருநூறு ஆண்டுகளாக மெல்ல மெல்ல உடையைப்பற்றி, உடலைப்பற்றி, உதிரத்தைப் பற்றி, உயிரைப் பற்றிப் பிணைத்துக் கொண்ட அடிமைப் பண்பு நீங்கி விடுமா? வந்தது போல இல்லாவிடினும் ஒளிவர நீங்கும் இருள் போல விரைய நீங்காதன்றோ? உரிமை வாழ்வுபெற்று இயலும் நாம் உள்ளத்தாலும், உரையாலும், செயலாலும் இன்னும் அந்த அடிமைப் பண்பு நீங்காதேயிருக்கின்றோம். அதனால் தூய உரிமைக் கண்கொண்டு எழுதப் பெற்ற திருவள்ளுவரை நாம் அடிமைக் கண்கொண்டு காண்கின்றோம். அதுதான் இப்போது நம்மால் செய்ய முடிகிறது. இந்த வகையில் திருவள்ளுவர் வழங்கிய திருக்குறளில் பல பகுதிகள் தெளிவாய் விளங்கவில்லை. பல ஐயங்கள் உண்டாகின்றன. பல புதிய கருத்துகளைப் புகுத்திப் பார்க்கின்றோம். உண்மைக் கருத்துகள் சிலவற்றை உண்மைக்கு மாறாகக் கொள்கின்றோம். இவை யாவும் இயல்பாக உண்டானவை. உரிமை ஞாயிறு தோன்றுங்கால் இத்தகைய கலக்கங்கள் உண்டாவது இயல்பு. திருவள்ளுவரது திருக்குறள் ஊழ் என்றொரு பகுதியைக் கொண்டுளது. அஃது அறத்துப்பாலின் இறுதியில் பொருட்பாலுக்கு முன்னர் இருக்கிறது. அதனை அங்கே கொணர்ந்து திருவள்ளுவர் வைப்பானேன், என்பது ஒரு கேள்வி. இது நெடுங்காலமாக நின்று நிலவும் பழமையான கேள்வி. திருவள்ளுவர் இதனைக் கூறியிருப்பாரா? ஊழையும் உப்பக்கம் காண்டல் கூடும் என அறிவுறுத்தும் திருவள்ளுவர், “ஊழிற் பெருவலியாவுள” என அதற்கும் பெருமை பேசும் இப்பகுதியைக் கூறுவாரா? என்பன போன்ற சில கேள்விகள் இப்போது புதியனவாய் எழுகின்றன. நெருப்பிற் புகை தோன்றுவது போல நற்சொல் நற்செயல்களில் தீமை தோன்றுவதும், தீச்செயல்களில் நன்மை தோன்றுவதும் இயற்கை யெனப் பகவற்கீதையில் வியாசர் கூறுவதுபோல் பழமையில் தீமையும் புதுமையில் நன்மையும் உண்டாக லாமாதலால் இப் புதுக்கேள்விகளால் நன்மையும் விளையும் என்ற உறுதியால் இவற்றை மேற்கொண்டு மதித்து ஆராய்வது அறிஞர்க்குக் கடன். அதுபற்றி இச் சிற்றாராய்ச்சி இங்கே செய்யப்படுகிறது. நல்லறிஞர்கள் ஆராய்ந்து நலங் கொள்வார்களாக. திருவள்ளுவப் பெருமான் வழங்கிய திருக்குறளின் அடிப்படையான கருத்துகள் யாவையென முதற்கண் காண்போம். நம் நாட்டு மக்கள் வாழ்வில், பேச்சில், செயலில் சில அடிப்படைக் கருத்துகள் உண்டு. இவற்றுள் சிறப்பாக மூன்றைக் காணலாம். அவை வினை, மறுபிறப்பு, மேலுலக கீழுலக வாழ்வு ஆகிய மூன்றுமாகும். “இருள்சேர் இருவினையுஞ் சேரா” “எனப்பகையுற்றாரும் உய்வர், வினைப்பகை வீயாது பின் சென்றடும்” என்றும், “எழு பிறப்பும் தீயவை தீண்டா” “எழுமையெழுபிறப்பும் உள்ளுவர்,” “இம்மைப் பிறப்பிற் பிரியலம் என்றேமா” என்றும், “மேலுலகம் இல்லெனினும் ஈதலே நன்று,” “ஒருமைச் செயலாற்றும் பேதை எழுமையும் தான்புக்கழுந்தும் அளறு” என்றும் வருவன இவ்வடிப்படைக்கருத்துகளை எடுத்தோதுகின்றன. இம்மூன்றனுள் வினையே மறுப்பிறப்புக்கும் மேலுலக கீழுலக வாழ்வுக்கும் காரணம். நல்வினை செய்தார் மறுபிறப்பில் மேலுலக வாழ்வு பெறுவர்; தீவினை செய்தார் மறுபிறப்பிற் கீழுலகடைந்து துன்புறுவர். நலந்தீங்கு கலந்த வினை செய்தார் பிறப்புகளை யெய்துவர். இக்கருத்துகளையும் நாம் இத்திருக்குறளிலேயே காணலாம். ஆகவே, வினையால் மறுபிறப்புற்று, மேலும், கீழும், நடுவுமாகிய உலக வாழ்வுகளில் பிறந்து உழலுவதை விடுத்து வினையின் நீங்கிப் பிறப்பறுத்து வீட்டுலகம் சென்று சேர்வதே வாழ்வின் குறிக்கோளாகும். வீட்டுலகத்தைத் திருவள்ளுவர் “வானோர்க்கு உயர்ந்த உலகம்” என்றும், “வரன் என்னும் வைப்பு” என்றும், “இறைவன் அடி” என்றும் கூறுகின்றார். மேலுலகத்தைப் “புத்தேளுலகம்” “தாமரைக்கண்ணான் உலகு” “மேலுலகம்” என்று சிறப்பித்துரைப்பர். இவற்றையெல்லாம் நோக்கினால் மேல் கீழ் நடு எனப்படும் மூவகை யுலகங்களின் வாழ்வு வினை காரணமாக உண்டாவன என்பது இனிது விளங்குகிறது. இவ்வினையுணர்வும் மறுபிறப்புணர்வும் பிறவும் திருவள்ளுவரே படைத்து மொழிவன அல்ல. அவர்க்கு முன்னிருந்த சான்றோர்களே கூறியிருக்கின்றனர். “வாழச்செய்த நல்வினையில்லது, ஆழுங்காலைப் புணை பிறிதில்லை” (புறம்) “யாம்செய் தொல்வினைக்கெவன் பேதுற்றனை” (நற்) என வினையுணர்வும், “சாதலஞ்சேன் அஞ்சுவல் சாவின் பிறப்புப் பிறிதாகுவதாயின், மறக்கு வென்கொல் என் காதலன் எனவே” (நற்) “இம்மை மாறி மறுமையாயினும், நீயாகிய ரெங்கணவனை, யானாகியர் நின் நெஞ்சு நேர்பவளே” (குறுந்) “இம்மை யுலகத்திசையொடும் விளங்கின மறுமை யுலகமும் மறுவின் றெய்துப” (அகம்) என மறுபிறப்புணர்வும் “வாராவுலகம் புகுதலொன்றெனப் படை தொட்டனனே குரிசில்” (புறம்), “தொய்யா வுலகத்து நுகர்ச்சியும் கூடும்” (புறம்) என மேலுலக வுணர்வும் சங்கச் சான்றோர்களால் கூறப்பட்டிருப்பதைக் காணலாம். இவ்வாறே மிகப் பழைய தமிழ் நூலாகிய தொல்காப்பியத்தும் இம்மூவகையுணர்வும் குறிக்கப்பெறுகின்ன. வடநூல்களிலும் வேதங்கள் தவிர ஏனை எல்லா நூல்களிலும் இவை கூறப்படு கின்றன. உலகாயதம் ஒழிந்த ஏனையச் சமயங்கள் யாவும் இவற்றை மேற்கொண்டுள்ளன. ஆதி வைதிகம் ஒழிந்த இந்திய சமயங்கள் பலவற்றிற்கும் வினையுணர்வு அடிப்படை எனத் தெளிய உணர வேண்டும். வினை யென்பது யாது? மனம், வாய், உடம்பு என்ற கருவிகளின் இயக்கமும் இயக்கமில்லாமையும் வினையென்று கூறப்படும். நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் வினையாகும். உலகில் நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் பயன் உண்டு. இராசராசன் தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டினான் என்றால் கட்டுதல் வினையும், பெரிய கோயில் செயப்படு பொருளுமாகும். அதனால் அவன் அடைந்த பயன் இன்பமாம். இப்படியே ஒவ்வொரு வினைக்கும் செயப்படு பொருளும் பயனும் உண்டு. தொடக்கத்தில் சமய நூல்கள், செய்கையை வினையென்றும், செயப்படுபொருளைக் கன்மம் என்றும் கூறின. ஒரு செயல் செயப்பட்டபோதேயன்றிச் செயப்படாத போதும் வினையெனவே நின்றதனால் பின்வந்த சமய அறிஞர்கள், செய்யப்படும்போதும் படாதபோதும் செயப்படுபொருள் உள்ளடங்கியிருப்பது கண்டு, செயலையும் செயப்படு பொருளையும் ஒருங்கு கூட்டி வினையெனவும், கன்மமெனவும், இன்பமும் துன்பமுமாகிய பயன்களை வினைப்பயன் என்றும், கன்ம பலன் என்றும் வழங்கினர். ஒருவினை செயப்படுங்கால் அதனால் விளையும் பயனும் உருவாகிறது. அவ்வினை செயப்பட்டதும் பயனும் உருவாகி இன்பமோ, துன்பமோ நல்குகிறது. சில வினைகள் முடிந்தபின் சிறிது காலங்கழித்துப் பயனைத் தருகின்றன. இவையெல்லாம் நாம் உலகியல் வாழ்வில் நாளும் காணும் காட்சியாகும். இவ்வினைக் குறிப்பு வேதங்களில் காணப்படவிலையென அவற்றை யாராய்ந்த அறிஞர் கூறுகின்றனர். ஆயினும், அவ்வேதங்களிற் குறிக்கப்படும் மந்திரங்களைப் பிழை சிறிதுமின்றி ஓதினால் கருதிய பயன் விளையுமெனப் பிற்காலவைதிகர்கள் கூறுவர். மந்திரங்களை வாயால் பிழை சிறிதுமின்றி ஓதுவதும் வினையே யென்பது நன்கு தெளிய வேண்டியதொன்று. எனவே, தமிழ் நூன்முறைப்படி எல்லா நாட்டு எவ்வுயிரிடத்தும் வினையுணர்வு உண்டு என்பது தேற்றம். இனி மந்திரங்களை ஓதுங்கால் அவற்றின் பயன் அருவாய் உருவாகிறது. அம்மந்திரங்களை விதிப்படி யோதி முடித்தவழி, மந்திரப்பயன் உருவாகி ஓதுவோர் விரும்பிய பயனை நல்குகிறது. அருவாய் உருவாகும் மந்திரப்பயனை ‘அதிருஷ்டம்’ என வட நூல்கள் ஓதுகின்றன. இவ்வேதங்களைத் தொடர்ந்து நிற்கும் சங்கிதைகள் இவ்வினையியல்பை வற்புறுத்தாவிடினும் நல்வினை செய்பவன் துறக்கவுலக இன்பமும், தீவினை செய்பவன் நிரயத் துன்பமும் பெறுவர் என்று இசைக்கின்றன. இதனால் வினையுண்டென்பதும் மறு பிறப்புண்டென்பதும் பிறவும் பிற்கால வைதிகர்களுக்கும உடன்பாடானமை தெளிகின்றோம். செய்வினையின் முடிவில் நிற்கும் வினைப்பயன் உடனே வந்தெய்துவதும், காலங்கழித்து வந்தெய்துவதும் உண்டெனக் கண்டோம். வினை முடிவில் எய்தக்கூடிய பயன், வினை முடிந்த சிறிது காலத்திற்குப் பின்னர் வந்து எய்துவானேன்? ஏன் உடனே எய்துவதில்லை? என்பன முதலிய ஐயங்கள் எழுவதற்கு இடமுண்டு. வினை நிகழுங்கால் அருவாய் உடன் பிறக்கும் ‘அதிருஷ்டம்,’ தனக்குரிய பயனை விளைவித்தற் குரிய பக்குவம் எய்த வேண்டியிருக்கிறது. வினையைச் செய்தவர், அதற்குரிய பயனை நுகர்தற்குரிய காலம் வரும்வரையில், அதிருஷ்டம் பக்குவம் பெற்றுக் கொண்டு வரும். பக்குவமானவுடன் தன் பயனை அந்த அதிருஷ்டம் நுகர்வித்து விடும். செய்வினையின் பயனைச் செய்தவர் பெறுதற்குரிய அதிருஷ்டம் பக்குவப்படுவதைச் சார்ந்திருக்கிறது. அதிருஷ்டமும் செயப்படு பொருள் போல வினையிடத்தே தோன்றுவதால் தமிழ் நூலார் கூறும் வினைக்கண் அடங்கிநிற்கும். ஒருவினை (அதிருஷ்டம்) பக்குவப்படுவதற்குள் வேறுபல வினைகள் வந்து சேர்ந்துவிடும். இவற்றில் பக்குவப்பட்டவை இப்பிறப்பிலேயே பயனை நல்கும். எஞ்சியற்றை நுகர்வது குறித்து மறுபிறப்பு வந்து சேர்கிறது. வினைப்பயன்களின் கூறுபாட்டிற் கேற்ப மறுபிறப்பில் புல் முதல் தெய்வமீறாகப் பல்வகையுடம்புகள் தோன்றுகின்றன. இதனால் எடுக்கும் பிறப்புகளும் பலவாகின்றன. பிறவிதோறும் எடுக்கும் உடம்பு கருவியாகக் கொண்டே வினைப் பயன்களை நுகரவேண்டும். நுகருந் திறம் உடம்பு தோறும் வேறுபடும். அதற்கேற்பச் சில பயிற்சிகள் உண்டாகிக்குணம் போல ஒன்றிவிடும். அவையே அவ்வுடம்புகருவியாக வினைப்பயன் நுகர்வதற்கு வாயிலாய்ச் செயற்படுகின்றன. இவற்றை வாதனை என்பர். தமிழ் நூல்கள் வாதனையை அவா என்று குறிக்கும். பக்குவமெய்தி நிற்கும் வினைப்பயன் வாதனையின் வாயிலாக உயிரை வந்து அடைகிறது. வினைகள் பக்குவப்படுவதற்குரிய காலமும் பயன்களின் அளவும் அவ்வினைகளின் வன்மைகளைச் சார்ந்திருக்கின்றன. சில வினைகள் பக்குவமுற்றுப் பயன் நல்குங்கால் வேறான சில வினைகளும் பக்குவமெய்தி நிற்கலாம். அவற்றுள் வலியதனால், மெலியது பக்குவமெய்திருப்பினும் பற்றுக் கோடாகிய வாதனை யில்லாமையால் கெட்டழியும். சீவன் முத்தன் ஒருவன், தன் உடம்பளவாய் நிற்கும் வாதனையைப் (அவாவை) பற்றி வந்து அடையும் வினைப்பயனை நுகரும்போது, பக்குவ மெய்தி யிருக்கும் ஏனை வினைகட்குப் பற்றுக்கோடாகாதபடி வாதனைகளைத் தன் பால் நிலையா வண்ணம் அறுத்து விடுகின்றான். அதனால் அவன் வினைத் தொடர்புகளின் நீங்கி வீடுபெறும் திறம் பெறுகின்றான். நம் நாட்டு அறிவு நெறிச் சமயங்கள் பலவும் இறைவன், உலகம், உயில், என்ற மூன்று பொருள்களையும் கண்டிருந்தன. கடவுள் என்ப தொன்றுண்டு என்பதைத் தொடக்கத்தில் வற்புறுத்தாத நையாயிகரும் சாங்கியரும் பின்னர் அதனை யுணர்ந்து மேற்கொண்டனர். பிரமப்பொருள் ஒன்றேயுளது; ஏனை உலகம் உயிர் என்பன பொய்யென்று கொண்ட பிரமவாதிகளும், விவகார மென ஒரு நிலை வகுத்து அதன்கண் இம்மூன்றும் உண்டெனக் கொண்டு சமயப்பணி புரிந்தனர். இம்மூன்றனுள் இறைவன் உயிர் என்ற இரண்டும் அறிவுடைப் பொருள் என்றும் பிறவெல்லாம் அறிவில்லா தவையென்றும் கூறுவர். வினையும், வினைப்பயனும் வாதனையும் ஆகிய யாவும் அறிவில்லாதவை. அறிவில்லாத வினைப்பயன் அறிவில்லாதவாதனையைப் பற்றுக் கோடாகக் கொள்வதும், இன்பமும், துன்பமுமாகிய வினைப்பயன்களை உயிர்கட்கு நல்குவதும் கூடா. அறிவுடைய உயிரை அறிவில்லாத வினைப்பயன்கள் வந்து எய்துவதற்கு அறிவுடைய இறைவன் வேண்டப்படுகின்றான். அவன் உலகைப்படைத்து அவரவர் செய்த வினைப் பயன்களை அவரவரோடு கூட்டி நுகரச்செய்வதும் அந்த இறைவன் வேலை என்று கண்டனர். அது பற்றியே தொல்காப்பியரும் கடவுளைப் “பால்வரை தெய்வம்” என்றார். உலகுயிர்களைக் கடந்து நிற்கும் நிலையில் இறைவனைக் “கடவுள்” என்றும், அவற்றோடு தொடர்புற்று நிற்கும் நிலையில் “தெய்வம்” என்றும் தொல்காப்பியரை யுள்ளிட்ட தமிழ் நூலார் கூறினர். இனி வடநூலாருள் யோக சமயத்தார் இவ்வினைகளைச் சுக்கில கன்மம், கிருஷ்ண கன்மம், சுக்கில கிருஷ்ண கன்மம், அசுக்கில கிருஷ்ண கன்மம் என நால்வகைப்படுத்திக் கூறுவர். சுக்கில கன்மம் நல்வினை; கிருஷ்ண கன்மம் தீவினை; இரண்டு மிலாத வினை அசுக்கில கிருஷ்ண கன்மம். இறுதியிற் கூறிய அசுக்கில கிருஷ்ண கன்மத்தையே செய்பவன் வீடு பெறுபவன் என்பதும் அவன் அது செய்வதால் அவனுடைய புத்தி தத்துவத்திற் கிடந்து அவனையடைவதற்குப் பக்குவமுற்றுவரும் முன்னை வினைகள் (அவாவென்று தமிழில் கூறப்படும்) வாதனையாகிய பற்றுக்கோடு இல்லாமையால் கெட்டுப்போம் என்பதும் யோகநூலார் கொள்கை.* ஒரு மனிதனுடைய நினைவு, சொல், செயல்களால் கன்ம மென்னும் நுண்ணிய பொருள் உண்டாகிறது. அவனுடைய விருப்பு வெறுப்புகள் பசைபோல் ஊறி அக்கன்மத்தைத் தன்பால் ஈர்த்துக்கொண்டு சீவ பதார்த்தத்தில் ஒட்டிக்கொள்ளும். இவ்வாறு, பல பிறவிகளிலும் ஈட்டப்படும் கன்மம் சீவனைச் சூழ்ந்துகொண்டு கன்ம சரீரமாகிறது. பிறப்பு மாறுங்கால் சீவன் கன்ம சரீரத்தோடே நீங்கும் இன்ப துன்பங்களை ஒப்ப நோக்கி நுகரும் மேலோர்க்கு அக்கன்மம் முதிர்ந்து உதிர்ந்தொழியும்; அல்லாதவர்பால் அக்கன்மம் பெருகி வெண்மை கருமை முதலிய “இலேசியம்” பெறும். ஐவகைச் சீலங்களிலும் சிறிதும் பிழையின்றி யொழுகும் சான்றோர் புதிய கன்மங்களைச் செய்யாமையால் முன்னைக் கன்ம பலங்கள் முற்றும் நுகர்ந்து கழிந்தபின் உடம்பின் நீங்கி உலகத்து உச்சியில் வாழும் வீடுபெற்று முத்தர்களோடு கூடி இன்புறுவர் என்று சமண நூல்கள் கூறுகின்றன. புத்த சமயம் ஆன்மா உண்டென்பதை மேற்கொள்ளா தொழியினும் வினையும், மறுபிறப்பும் பிறவும் மேற்கொண்டொழு கிறது. யோகர்கள் போலப் புத்தர்களும் வினையை நலம் பயப்பன, தீங்கு பயப்பன, இரண்டும் பயவாதன என நால்வகைப்படுத்தி இறுதியிற் கூறிய வினைவகையால் ஏனை வினைகளெல்லாம் கெடும் என்பர்* வினைகட்கெல்லாம் இச்சையே காரணம். இச்சையை நீக்கியவன், அறியாமை வெறுப்பு ஆசை முதலியவற்றைக் கெடுத்துப் பிறப்பறவுயரும் பெரியோனாவான். அவன் முன்னை வினைப்பயன்களை மட்டில் இப்பிறப்பில் நுகர்வான். அவன் வினைத் தொடர்பால் கீழ்நிலை எய்தான். அவன் அருக பதம் பெற்ற பரமேட்டி எனவுரைக்கின்றனர். இவ்வண்ணம் நம் நாட்டில் தோன்றிய சமயங்கள் பலவும் வினையும் மறுபிறப்பும் பிறவும் மேற்கொண்டுள்ளன வாயினும் உலோகாயதம் ஒன்றுதான் இவற்றைக் கொள்ளவில்லை. உலகாயதருள்ளும் சுசிட்சித சாருவாகர் என்போர் ஆன்மா என ஒன்று உண்டெனக்கொண்டு அதுவும் இறக்குங்கால் உடம்போட அழிந்துவிடுகிற தென்பர். ஆசீவகருள் வினையும் மறு பிறப்பும் பிறவுமாகிய கொள்கைகளை ஏற்பதிலர். இவர்களை அஜிதகேச கம்பளர் என்பர். ஆசிரியர் திருவள்ளுவர் வினையும் மறுபிறப்பும் பிறவும் மேற்கொண்டொழுகும் கொள்கையினர் என்பதை முன்பே கண்டோம். ஒருவருடைய நினைவு, சொல், செயல்களாகத் தோன்றும் வினைப்பயன் பழுத்து நிற்கும் நிலையில் ஊழ்வினை என்று கூறப்படுகிறது. ஊழ்த்தல் என்பது “இணர் ஊழ்த்தும் நாறாமலர் அனையர்” என்றும் “தீஞ்சுளைப் பலவின்பழம் ஊழ்க்கும்மே” (புறம்) என்றும் சான்றோர் வழங்குவதால் ஒரு வினைச் சொல்லாதலைக் காண்கிறோம். இதன் பொருள் பயனுண்டாக முதிர்தல் என்பதும் அறிகின்றோம். மலர்ந்து மணமாகிய பயன் நல்கும் பூ, ஊழ்முகை (நற். 115) என்றும், கனிந்து பயன்படும் பழத்தை ஊழுறுபழம் (அகம். 117) என்றும் சான்றோர் வழங்குகின்றனர். இதனால் ஊழ்வினை யென்பது முதிர்ந்து பயன் நல்கும் வினை என்று பொருள்படுமாறு இனிது விளங்குகிறது. பழுத்த பழம் மரத்தில் நில்லாது என்பது உலகுரை, நன்கு முதிர்ந்த கனி தன்பால் முதிரும் விதையாகிய பயனை எவ்வண்ணமேனும் அதன் முதலிலிருந்து நீக்கி அப்புறப் படுத்திவிடுமேயன்றித் தன்னிடமே கொண்டொழியாது என்பது கருத்தாம். மரம் ஒன்று பழம் ஊழ்த்தல் விதை பயந்து தன் இனம் பெருக்கும் குறிப்பிற்றாதல்போல் வினை ஊழ்த்தல் தன்பயனைத் தன்னைச் செய்தோர்க்கு நல்கி மேலும் வினைகளாகிய தன் இனத்தைப் பெருக்கும் இயல்பிற்றாம். பழுத்த பழம் விதைப்பயனை வெளிப்படுத்தாது ஒழியாமை போல ஊழ்வினையும் தன் பயனை ஊட்டாது கழியாது என்பது விளங்குகிறது. ஊழ்கனிக்கு அஃது இயற்கையறமா தல்போல ஊழ்வினைக்குப் பயன் நல்குதல் இயற்கையறமாம். இயற்கையறம் எல்லா ஆற்றலினும் வலிமிக்கதாதலால் ஊழ்வினையின் வலிமிகப் பெரிது என்பதுபற்றி ஆசிரியர் 'ஊழிற்பெருவலி யாவுள’ என்று அதன் வலிமிகுதியை விளக்குகின்றார். பழுத்து வரும் பழம் இடையே மாறுபட்ட பொருள்களால் வெம்பிப் பயன் ஊழ்க்காது போதலும் உண்டு. அதுவும் இயற்கை நிகழ்ச்சி. அதனால் ஊழ்த்துவரும் வினையும் பயன் நல்காது கெடுதற்கு வாய்ப்புண்டு என்பது பெறப்படும். கனி வகைகள் பலவும் பெரும்பாலும் ஊழ்த்துப் பயன்படுதலும் மிகச் சிலவே இடையிற் கெடுதலும் இயல்பு. அதுபோல ஊழ்வினையுள் ஒரு சில மாறுபட்ட வினைகளால் பயன் ஊழ்க்காது கெடுதற்கு இடமுண்டு என்று சான்றோர் கண்டனர். அதனை ஆராய்ந்தவர், உலையா முயற்சியால் ஊழ்வினையும் பயன் ஊழ்க்காது கெடும் என்று தெறிந்து, “ஊழையும் உப்பக்கம் காண்பர்” என்றனர். ஊழையும் ஊழ்க்காது கெடும் என அதன் வினையால் கூறாமல் ஊழையும் ஊழ்க்காவாறு இடையூறு செய்வர் என்பது தோன்ற, உப்பக்கம் காண்பர் என்று ஆசிரியர் கூறுவது நினைவு கூரத்தக்கது. பள்ளம் நோக்கி ஓடுவதை இயற்கை யறமாகக் கொண்ட தண்ணீரும் இடை நிகழ்த்தும் தடையால், நின்றுவற்றுதல்போல் ஊழ்வினையும் இடை நிகழ்த்தும் முயற்சிகளால் நின்று வற்றுவது இயல்பாதலின், ஊழை உப்பக்கம் காண்பது உயிர்கட்கு இயல்வதொன்றாயிற்று. ஆகவே, ஊழ்வினை தனக்குரிய பயனை ஊழ்த்தும் நல்குவதில் பெருவலி இயற்கையறமாக வுடையதென்பதும், எனினும், மாறுபட்ட வினையால் அவ்வலி தடையுற்று நின்று வற்றும் என்பதும் முடிவாயின. இது பற்றியே, ‘சார்புணர்ந்து சார்புகெட ஒழுகின் மற்றழித்துச் சார்தரா சார்தரும் நோய்’(359) என்ற திருக்குறளும் தோன்றுவதாயிற்று. சான்றோரும் வினை பெருவலியுடையதாயினும், வெல்லத்தக்கது; கெடுத்தற் குரியது என்றெல்லாம் பேசுவராயினர். (அருந்தமிழ் உரைவளங்கண்ட பெருந்தமிழ்ப் பேராசிரியர் ஒளவை அவர்கள் இற்றைக்கு முப்பது ஆண்டுகட்கு முன்னர் பன்னெறிச் சமயப் பனுவல்களில் தோய்ந்த நிலையில், மணிமேகலைக்கு உரைகண்ட திளைப்பில் திகழ்ந்தபோது இக்கட்டுரை எழுதினார். 1954-ஆம் ஆண்டு மயிலம் திருப்பெருந்திரு சிவஞான பாலய சுவாமிகள் மணி விழா மலரில் வெளிவந்த இக்கட்டுரையைப் பேராசிரியரது நான்காம் ஆண்டு நினைவாக வெளியிட்டுப் புகழ் வணக்கம் செலுத்துகின்றோம்.) 5. உரையனுபவம் தமது தமிழ் மொழிக்குப் பெருமை தருகின்ற நூல்களில் தொல்காப்பியம். திருக்குறள் என்ற இரண்டு நூல்களும் தலை சிறந்தனவாகும். அவற்றுள், தொல்காப்பியம் எழுத்தும் சொல்லும் பொருளுமாகிய மூவகை நெறியில் தமிழருடைய எழுத்தும் சொல்லும் உணர்வும், ஒழுக்கமும், வாழ்வும், பண்பாடும், பிறவும் உரைக்கின்றது. திருக்குறள் தமிழரிடை நிலவிய அறமும், பொருளும், இன்பமுமாகிய நினைவும் - சொல்லும் செயலுமாகிய கூறுகளைக் குறட்பாக்களால் உரைக்கின்றது. அதற்கு உரைகண்ட ஆசிரியர் பலர். அவர்களில் நுண்மாண் நுழைபுலச் செல்வராய். தமிழ் மரபோடு வடநூல் மரபும் நன்குணர்ந்த தமிழ்ச் சான்றோராய் விளங்கியவர் பரிமேலழகர். அவர் திருக்குறளுக்கு எழுதியுள்ள உரை தனிப்பெரும் நூலாகப் பயிலத் தக்க பண்பு அமைந்தது. தமிழில் மேன்மையான நூல்கள் எனச் சிலவற்றை நானூறு, ஐந்நூறு ஆண்டுகட்கு முன் ஒரு பெரியவர் ஆராய்ந்து தொகுத்துக் கூறினார். அவர் இன்னார் என்று திட்டவட்டமாகத் தெரியவில்லை. ஆயினும், அவர் உரைத்தது வெண்பா வடிவில் இருக்கிறது. “வள்ளுவர் மெய் யன்பர்மொழி வாசகம் தொல்காப்பியமே தெள்ளு பரிமேலழகர் செய்த உரை - ஒள்ளியசீர்த் தொண்டர் புராணம் தொகுசித்தி ஓராறும் தண்டமிழின் மேலாம் தரம்.” என்பது அவ்வெண்பா. இவ்வெண்பாவை நோக்குமின்; திருக்குறள், தொல்காப்பியம், தொண்டர் புராணம் எனப் பல நூற்களைத் தொகுத்த அந்தப் பெரியவர், அவற்றிற்கு ஒப்பாகப் பரிமேலழகர் உரையையும் நிறுத்தி உரைப்பது, பரிமேலழகர் உரைக்குப் பழங்காலப் புலவர் பெருமக்கள் எத்தகைய மதிப்பு வைத்திருந்தனர் என்று நமக்கு அறிவிக்கின்றது. மேலும், பரிமேலழகர் சங்க இலக்கியங்களில் எட்டுத் தொகையுள் ஒன்றாகிய பரிபாடலுக்கு உரை எழுதியிருக்கிறார். என்றாலும், அது திருக்குறள் உரை போல வளமும், வனப்பும், திட்பமும், நுட்பமும் செறிந்தில்லை. அதனால் அந்த உரை பரிமேலழகர் உரைதானோ? என்று ஐயுறுவாரும் உண்டு. நிலைமை இப்படி இருப்பதால்தான் பரிமேலழகர் உரை என்றால் யாவரும் திருக்குறள் உரை ஒன்றையே நினைக்கிறார்கள் - இந்த வெண்பாவில் “தெள்ளு பரிமேலழகர் செய்த உரை” என்பது திருக்குறளுக்கு அவர் எழுதிய உரையையே என்று பலரும் சொல்கிறார்கள். இத்தகைய சிறப்போடு விளங்குவதால் தான் பரிமேலழகர் உரையின் அழகு காண்பதில் அறிஞர்களுக்குப் பெரும் விருப்பம் உண்டாயிற்று. அதனை நோக்குவோம்: “செவிக் குணவு இல்லாத போழ்து சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்” என்பது ஒரு திருக்குறள். செவிக்குணவாகிய நல்ல அறிவுடைக் கருத்துக்களைக் கேட்கும் வாய்ப்பில்லாத போது, வயிற்றுக்கு உணவு தரவேண்டும் என்பது இதன் பொருள். இதற்குப் பரிமேலழகர் செவிக் குணவாகிய கேள்வியில்லாத பொழுது வயிற்றுக்கும் சிறிது உணவு இடப்படும் என்று உரை கூறுகின்றார். இனி இந்த உரையிற் கருத்தைப் புகுத்திப் பரிமேலழகர் அழகு செய்வதைக் காண்போம். திருவள்ளுவர் செவிக்குணவு என்பது எதனை? செவிக் குணவாவது கேள்வி என்று சொல்லுகிறார் திருவள்ளுவர். செவிக்குணவு இல்லாதபோது வயிற்றுக்குத் தரப்படும் என்றால், செவிக்குணவு இருக்கும்போது வயிற்றுக்கு உணவு தரப் படாது என்று தெரிகிறது. உணவு எனப்படுவதால் செவிக்குணவு போல வயிற்றுணவும் யாவருக்கும் வேண்டத்தக்கது; செவிக் குணவு தந்து கொண்டே வயிற்றுணவு கொண்டாலென் எனின், வயிற்றுணவினும் செவிக்குணவு சுவைமிகுந்தது. ஆகையால், இரண்டையும் சமமாக்குவதற்குப் பரிமேலழகருக்கு விருப்பம் இல்லை. அவர் வயிற்றுணவை விடச் செவி உணவு சிறந்தது என்பாராய்ச் “சுவை மிகுதியும் பிற் பயத்தலுமுடையது கேள்வி; அது உள்ள பொழுது வயிற்றுணவு அறிஞர்களால் விரும்பப்படாது ஒழிகிறது என்று பரிமேலழகர் கண்டு, இதனால் தான் திருவள்ளுவர் செவிக்குணவு இல்லாத போது. வயிற்றுக்கு உணவு தரப்படும் என்றார்” எனக் குறிக்கின்றார். இனி, செவிக்குணவு இல்லாத போது தரப்படும் வயிற்றுணவையும் “சிறிது” ஈயப்படும். என்பது எவ்வாறு பொருந்தும் என்று ஒரு கேள்வியை மாணவன் பரிமேலழகரிடம் கேட்கிறான். அதற்கு விடை கூறும் பரிமேலழகர், வயிற்றுணவு மிகுமானால் இடையூறு உண்டாகும் என்று நினைக்கிறார். ஆகவே, அவர் வயிற்றுணவு பெரியதாய வழி - வயிற்றுணவு மிகுமானால் - அது நோயும், காமமும், விளைவித்தலின் திருவள்ளுவர் “சிறிது” என்பதுதான் பொருத்தம் என்று பரிமேலழகர் கூறுகிறார். இது கேட்ட மாணவன். “சிறிது” என்பது ஏன்? சிறிதும் இல்லையானால் நோய் முதலியன குறையும் அல்லவா? என்று வினவுகிறான் அவனுக்குப் பரிமேலழகர் விளக்கம் தருகிறார். “அது தானும் பின்னிருந்து கேட்டற் பொருட்டு” என்று சொல்லுகிறார். பின்னிருந்து கேட்டற் பொருட்டு என்பதாயின், அவ்வாறு கேட்பதற்குரிய வலிமையும், தெளிவும் தருவது வயிறு. அவ்வயிற்றிற்குத் தருகின்ற உணவை இழிந்தோர்க்குச் சொல்வது போல “ஈயப்படும்” என்று சொல்வது பொருத்தமா? என மாணவன் கேள்வி கேட்கிறான். இக் கேள்வியை நினைத்துப் பார்த்த பரிமேலழகர் அது பொருத்தம்தான் என்பாராய், “ஈதல் வயிற்றது இழிவு தோன்ற நின்றது” என்று கூறுகிறார். அது எவ்வாறு பொருந்தும் என்றால், உணவு மிகுமானால் வயிறு காமமும் நோயும் உண்டு பண்ணுவதால்தான் “ஈயப்படும்” என்று சொல்லுதல் பொருந்தும் என்கிறார். இவ்வாறு ஒவ்வொரு குறட்பாவுக்கும் அழகொழுகத் தருக்க நெறியில் உரை எழுதும் பரிமேலழகர் கி.பி. 13-ஆம் நூற்றாண்டில் காஞ்சிபுரத்தைச் சூழவுள்ள நாட்டில் வாழ்ந்தவர். அவர் காலத்தில் மன்றாம் இராசராசனும், மூன்றாம் இராசேந்திரனும் சோழ நாட்டை ஆண்டனர். திக்கன் என்ற விசயகண்ட கோபாலன் காஞ்சிபுரப் பகுதியில் நாடு காவல் புரிந்தான். அந்நாளில் வாழ்ந்தவர் பரிமேலழகர், திரிபுவனச் சோழனான ஆனைமேலழகர், (கல். IV 852) நச்சினார்க்கினியர், வண்டுவரைப் பெருமாளான பரிமேலழகர் (கல் IV 854) முதலிய சான்றோரின் தூய தமிழ்ப் பெயர்கள் பின்னாளில் மறைந்து வீழ்ந்தன. அவ்வீழ்ச்சி நீர்வளமும், நிலவளமும் பொருந்திய ஊர்கள் சதுர்வேதி மங்கலங்களாக மாறி, பின்னர் அனைத்தும் மறைந்த வரலாற்றோடு ஒத்த தனி வரலாறு ஆகும். இப் பரிமேலழகர் திருக்குறட்கு எழுதியுள்ள உரை மிகவும் சிறந்ததெனத் தமிழறிஞர் அனைவரும் ஒரு முகமாகப் பாராட்டு கின்றார்கள். பரிமேலழகருக்கு முன்னும் பின்னும் தமிழ்ப் புலவர்கள் தோன்றித் திருக்குறட்கு உரை கண்டாரேனும், பொது வகையில் நோக்கினால் பரிமேலழகர் உரைத்த உரைக்கு ஒப்பாகவோ, உயர்வாகவோ உரை எழுதினோர் இல்லை என்று கூறுவது மரபு. இதனை வற்புறுத்துவது போல், “பாலெல்லாம் நல்லாவின் பாலாமோ, பாரிலுள்ள நூலெல்லாம் வள்ளுவர் செய் நூலாமோ நூலில், பரித்தவுரை எல்லாம் பரிமேலழகன், தெரித்தவுரையாமோ தெளி” என்றொரு பழம் பாட்டு நாட்டில் நிலவுகிறது. அன்றியும், பரிமேலழகர் உரையைத் தழுவியும், ஒற்றியும் எழுதின உரைகளை அறிஞர்கள் மெற்கொண்டதோடு வேறுபட்டும் மாறுபட்டும் செய்த உரைகளை ஏலாது ஒழிந்தமையே ஒரு சான்றாகும். பழந்தமிழ் நூல்கட்கு உரை காண்பது படிப்பிப்போர், நூல்களைப் பிறர் படித்துப் பொருள் விளங்கிக் கொள்ளுமாறு செய்யும் செயல் வகையில் ஒன்று. அருஞ் சொற்களுக்கும், சொற்றொடர்களுக்கும் பொருள் உரைத்தலும், அவற்றிற்குப் பொழிப்புரைத்தலும் ஒரு வகை. அவற்றுன் முதல் வகையை அரும் பதவுரை என்றும், கண்ணழித்துரை என்றும், பதவுரை என்றும், பின்னதைப் பொழிப்புரை என்றும கூறுவர். உரைக்கப்பட்ட உரையின்கண் அடங்கிய கருத்துக்களை வினா - விடை வாயிலாக விளக்கி நூலாசிரியர் உள்ளக்கிடையை அறிவாராய்ச்சி நெறியில் தெளிய உரைத்தலும் ஒரு வகை. இன்றுள்ள, தொல்காப்பியம் முதலிய இலக்கணங்கட்கும் இலக்கியங்கட்கும் உரைகாரர் தோன்றி, உரையெழுதியது சுமார் ஆயிரம் ஆண்டுகட்கு உள்ளேதான் என்று கூற வேண்டும். அதற்கு முன்னே நிலவிய உரைகளைப் பற்றி ஒன்றும் அறிய முடியவில்லை. எனினும் இறையனார் களவியலுக்கு நக்கீரர் கண்ட உரை பழமை வாய்ந்தது. அதனையும் தொல்காப்பியம், திருக்குறள் முதலிய நூல் உரைகளையும் ஒப்பவைத்து நோக்கும் போது உரைகாரர் வழி வழியாக மேற்கொண்டிருந்த மரபு ஒன்று வெளிப்படுகிறது. எடுத்தோத்து, இலேசு, உத்தி என்ற மூன்று நெறிகளால் மேற்கொண்ட இலக்கண இலக்கியங்கட்கு உரை காண்பது அம்மரபு. அம்மரபு, பிற்கால நூல்களான நன்னூல். நேமிநாதம், யாப்பருங்கலம் முதலிய இலக்கண நூல் உரைகளில் மேற்கொள்ளப் பெற்றிருக்கிறதேயன்றி, இலக்கியங்கட்கு எழுதிய உரைகளில் தெளிவாகக் காணப்படுவதில்லை. பழைய உரை முறையே மறவாது கடைப்பிடித்த தொன்றே, பரிமேலழகர்க்குத் தனிச் சிறப்பையும் அவர் உரைக்கு அழகையும் தருகிறது. எடுத்தோத்து, இலேசு, உத்தி என்ற மூன்றாலும் பொருள் காணும் மரபு, நூலாசிரியன் உள்ளக் கருத்தை ஆழ அகழ்ந்து கண்டு, அறிவு நெறியால் ஆராய்ந்து உரைக்கும் மாண்பும், அருமையும் அமைந்ததாகும். மேற் போக்காக நுனிப்புல் மேயும் விலங்கு நோக்கம் இந்நாளில் வேற்றுமொழிப் பயிற்சியால் மக்களிடையே பெரிதும் பரவி இருக்கிறது. அன்றியும், கல்வியின் நோக்கம், அறிவும், ஒழுக்கமும் பெறுவது என்பதைக் கைவிட்டு, ஏலாதன செய்தேனும் வயிறு வளர்ப்பது என்பது கொள்கையாக மாறியதனால், இவ்விழி நிலை உண்டாயிற்று. இக்கருத்துடை யாரே வழி வழியாக வாழ்வியல் தலைவர்களாக வந்தமையால், இந் நிலைமை மேன் மேலும் ஆதரவு பெற்று வளர்ந்து வருகிறது. நூலாசிரியர் கூறும் கருத்துகளை, “ஏன்? எப்படி?” என எழும் வினா விடைகளால் நுண்ணறிவு கொண்டு தூய்மை செய்து கொள்வது உயர்நிலை மாணவர் கல்வி முறையிலேயே கைவிடப்பட்டுள்ளது. அதனால், கல்வி பயில்வோரிடையே காரண, காரிய முறையில் ஆராய்ந்து உண்மை காணும் பயிற்சி தேய்ந்து போயிற்று. பரிமேலழகர் ஒருவரே, அதனை ஓரளவு விடாது கடைப்பிடித்து உண்மை உரை காண்பதில் பெரிதும் முயன்று வெற்றி பெற்றுள்ளார். எனினும், அவர் வேற்று மொழி மரபும், தமிழ் மரபும் வேறு வேறு இயல்பின என உணர்ந்தும், வாதனை வயத்தால் சில பல குறட்பாக்களில் குழறுபடி செய்து குற்றப்படுகிறார். ஆனாலும், அது பற்றி அவரது உரை மாண்பும் அழகும் குன்றுவதில்லை. எடுத்தோத்து என்பது எடுத்து ஓதப்படும் பாட்டும் அதன் கருத்துமாகும். இதனை எடுத்துரை என்பது வழக்கம். பொறுப்பவர்க்குப் புகழுண்டாகும்: பொறாது ஒறுப்பவர்க்கு ஒரு நாளை இன்பமேயாம் என்ற கருத்தை, “ஒறுத்தார்க் கொருநாளை யின்பம் பொறுத்தார்க்குப் பொன்றுந் துணையும் புகழ்.” என்ற குறட்பா எடுத்துரைக்கின்றது அதனால், இது எடுத்தோத்து அல்லது எடுத்துரை ஆகும். இங்ஙனம் எடுத்தோதப்படும் உரையில் “ஒரு நாளை இன்பம்” என்பதும் “பொன்றுந் துணையும் புகழ்” என்பதும் விளக்கப்பட வேண்டுவன. அதனை விளக்கும் பரிமேலழகர், “ஒரு நாளை இன்பம், அந்நாள் ஒன்றினும் கருதியது முடித்தேம் எனத் தருக்கியிருக்கும் பொய்யின்பம்” என்று கூறுகிறார். “பொன்றுந் துணையும் புகழ்” என்பதில் பொன்றுதல், இறத்தல்; பொறுத்தார்க்கு இறக்கும் துணையும் புகழ் என்பது கருத்தாய்ப் பொருள் குற்றமாகிறது; புகழ் நிற்குமிடம் உலகமே தவிர புகழைச் செய்பவரல்ல: அவர் இறந்து போனாலும் புகழ் இறந்து போவதில்லை. இதனை விளக்குதற்குப் பரிமேலழகர் ஒரு சூழ்ச்சி செய்கிறார். புகழுக்கு ஆதாரம் உலகம் என்று காட்டி, “ஆதாரமாகிய உலகம் பொன்றப் புகழும் பொன்று மாகலின், ஏற்புடைய உலகம் என்னும் சொல் வருவித்துரைக்கப் பட்டது” என உரைத்து, “பொறுத்தார்க்கு உலகம் அழியும் வரைப் புகழ் நிற்கும்” எனக் குறட்பாவின் எடுத்துரையை விளக்கம் செய்கிறார். எடுத்துரை, விதியும் விலக்குமென இரண்டாகப் பிரிந்து, பொதுவும் சிறப்பும் என வகைப்பட்டு, எய்தாதது எய்துவிப்பது, எய்தியது விலக்குவது எய்தியதன் மேற் சிறப்பு விதி கூறுவது, எய்தியது விலக்கிப் பிறிது வகுப்பது. எய்தியது இகந்து படாமைக் காப்பது எனப் பல கூறுகளாகப் பிரிந்து செல்வது “விதியெல்லாம் எய்தாததனை எய்துவிப்பதும், ஒரு கால் எய்தி ஒருகால் எய்தாதா கற்பாலதனை அவ்வழியும் இகந்து படமாற் காத்து நியயமாக எய்துவிப்பதும், ஈரிடத்தும் எய்தற்பாலதனை ஒரு மருங்கு மறுப்பதும் என மூவகைப்படும்” என மாதவச் சிவஞான முனிவர் முதலாயினோர் கூறுவர்: அவற்றைக் கருத்திற் கொண்டுரைப்பது, (உரை காண்பது) உரைகாரர் மரபு: ஆயினும் அவற்றை விரித்துரைப்பதற்கு இங்கு இடம் இல்லை. இலேசு என்பது எடுத்துரைக்கும் கூற்றில் வேண்டாத சொற்களைப் பெய்தலும், வேண்டுவதைத் தொகவைத்தலும். முறை பிறழ்ந்து உரைத்தலும் எனப் பலதிறமாக வரும். அவற்றால், பாட்டைப் பாடும் புலவற்கு உள்ளத்தில் ஒரு குறிப்பு உண்டு: அது ஆராய்ந்து காணத் தக்கது என்பது இலேசின் குறிக்கோள். “ஒழுக்க முடையவர்க்கு ஒல்லாவே தீய வழுக்கியும் வாயாற் சொலல்.” என்ற குறட்பா நல்லொழுக்க முடையவர்க்குத் தீய சொற்களைச் சொல்வதென்பது ஆகாத தொன்று என உரைக்கின்றது. தீய சொற்களைச் சொல்வதைத் “தீய வாயாற் சொலல்” எனத் திருவள்ளுவர் கூறுகின்றார். “தீய சொலல்” என்றாலே தீய சொற்களை வாயினாற் சொல்லுதல் என்று பொருள்பட நிற்பதால். “வாய்” என்ற சொல் இலேசு. இந்த இலேசினால் திருவள்ளுவருடைய உள்ளக் குறிப்பு யாது? எனக் காணலுற்று “வாயாற் சொலல்” என்றால் ஏன்? எனக் கடாவிக் கொண்டு “வாய் என வேண்டாது கூறினார். நல்ல சொற்கள் பயின்றதுஎனத் தாம் வேண்டியதன் சிறப்பு முடித்தற்கு” என உரைக்கின்றார். இலேசினால் பொருள் கொள்ளப்படும் இம்முறை வட மொழியிலும் உண்டு என அறிவிக்க “இதனை வட நூலார் தாற்பரியம்” என்று கூறுவர் எனப் பரிமேலழகர் உரைக் கின்றார். உத்தி என்பது நூல் உரைக்கும் ஆசிரியன் கைக்கொள்ளும் அறிவு நெறி. அறிவுப் பெருக்கத்துக்கும் நுண்மைக்கும் ஏற்ப அது விரிந்து செல்லும் என்று இலக்கணப் புலவர் இயம்புவர். ஊழ் என்ற பகுதியில், “நல்லவை யெல்லாஅம் தீயவாம் தீயவும் நல்லவாம் செல்வம் செயற்கு.” என்ற குறட்பா வருகிறது. இதனைக் கிடந்தபடியே கொள்ளின் இக்குறட்பா செல்வம் பெற முயல்பவர்க்கு நல்லவை தீயவையாம் தீயவை நல்லவையாம் என்று பொருள் பட்டுத் தெளிவில்லாமல் கெடுகிறது. இது எடுத்தோத்து, இலேசு என்ற இரண்டாலும் விளக்கம் பெறாமல் உத்தியை நாடி நிற்கிறது. “அதிகார முறை” என்ற உத்தியால் தீயூழ் வயப்பட்டார் செல்வம் செய்யுங்கால் நல்லவை யெல்லாம் தீமையாய் முடியும்: நல்லூழ் உற்ற போதில், தீயவை செயினும் நல்லவையாய்ச் செல்வம் எய்துவிக்கும் என உரை செய்யப்படுகிறது. இவ்வாறு எடுத்துரை, இலேசு, உத்தி என்ற நெறிகளில் உத்தி வகை, இலக்கணவமைதி காட்டல், தருக்க நெறியில் விளக்கம் கூறல், வினாக்கட்கு விடை வழங்கல், கருத்துரை தருதல் என வருவன பலவற்றையும் நினைவிற் கொண்டு திருக்குறட்குப் பொருள் விளக்கம் செய்கிறார் பரிமேலழகர். “செய்துஏமம் சாராச் சிறியவர் புன்கேண்மை எய்தலின் எய்தாமை நன்று.” என்பது குறட்பா, அதன்கண், ‘செய்து ஏமம் சாராச் சிறியவர்” என்ற தொடர் பரிமேலழகரது இலக்கண அறிவை ஈர்க்கின்றது. “ஏமம் சாரா” என்ற தொடர் சிறியவர் என்ற சொல்லோடு இயைவது பொருத்தமா? “புன்கேண்மை” என்ற சொல்லோடு இயைவது பொருத்தமா? என்று ஒரு மயக்கம் உண்டாகிறது. அதை எண்ணிய பரிமேலழகர் “ஏமம் சாராச் சிறியவர்” என்று இயைப்பது உண்டு; அது கூடாது. “சிறியவர் என்பதனைக் கொள்ளின் செய்து என்பது நின்று வற்றும்” என உரைக்கின்றார். உரை எழுதும்போது இத்தகைய குற்றம்படக் காண்பது முறையா காது. இதைக் கருத்திற் கொண்டு, “இதற்குப் பிறரெல்லாம் சொல்லிலக்கணத்தோடு மாறுகொள உரைத்தார்” என்பதொன்றே பரிமேலழகர் நன்கு எண்ணி எழுதுகிறார் என்பது விளங்கும். (817) “மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீய பிறத்தல் அதனால் வரும்.” என்பது வேறொரு குறட்பா. இதன்கண் இரண்டு கருத்துக்கள் கூறப்படுகின்றன. ஒன்று வெகுளியை மறத்தல் வேண்டும் என்பது. மற்றொன்று அதனால் தீயவை பிறக்குமென்பது. இவ்விரண்டிற்கும் ஒரு தொடர்பு காட்டினாலன்றி, இரண்டும் ஒரு குறட்பாவில் கூறுதற்கு ஆகா. கூறப்பட வேண்டுமாயின் இரண்டிற்கும் ஒரு தொடர்பு இருத்தல் வேண்டும். தொடர் பில்லாத இரண்டு கருத்துக்கள் ஒரு குறட்பாவில் கூறப்படா என்பது உரை மரபு. ஆனால், இரண்டிற்கும் தொடர்பு காணும் போது வெகுளியை மறவாவிடத்து தீமை உண்டாகும் என இரண்டிற்கும் காரண காரியத் தொடர்பு கண்டு, மறத்தல் வெகுளியை அதனால் வரும் என்பதை ஏதுவாகவும் நிறுத்திப் பரிமேலழகர் பொருள் உரைக்கின்றார். அது அவரது உரைக்கு ஏற்றமும் அழகும் தருகிறது. “கற்றதனால் ஆய பயன்என்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின்.” “செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள் அவியினும் வாழினு மென்:” எனச் சில குறட்பாக்களைத் திருவள்ளுவர் வினா வடிவில் தருகின்றார். உரைகாரன் அதற்கு விடை கூறவேண்டும். அது உரை மரபு. “பயன் என்கொல்” என்பதற்கு விடை கூறும் பரிமேலழகர் “பயன் இல்லை” என்று கூறல் வேண்டும். இங்ஙனம் கூறுபவர் “என்கொல்” என்பதைப் பற்றிக் கொண்டு. இதன்கண் “எவன்” எனும் வினாப் பெயர் “என்னென்றாய் ஈண்டு (பயன்) இன்மை குறித்து நின்றது” என்கின்றார். “செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள் அவியினும் வாழினு மென்.” என்ற இக்குறளுக்கு உரை எழுதும் பரிமேலழகர் வாயுணர்வின் மாக்கள் அவியினும் வாழினும் பயன் இல்லை என்றல் வேண்டும். ஆனால், அவர் அதனை, “செத்தால் இழப்பதும் வாழ்ந்தால் பெறுவதும் இன்மையில் இரண்டும் ஒக்கும் என்கின்றார்.” இவ்வாறே, “உறினட் டறினொரூஉம் ஒப்பிலார் கேண்மை பெறினும் இழப்பினும் என்.” என்ற திருக்குறள் உரையில் நட்பால் பயனும், பிரிவால் இழப்பது ஒன்றுமில்லை என்று சொல்ல வரும் பரிமேலழகர் “அவர் மாட்டு நொதுமற் றண்மையே அமையும்” என உரைக்கின்றார். இனித் திருவள்ளுவர் பொதுவாக உரைக்கின்ற சில கருத்துக்களைத் தெளிவுபட விளக்குவதே உரைகாரர் கடன் என்ற உண்மையைக் கடைப்பிடித்துப் பரிமேலழகர் விளக்குகின்ற திறம் இனிது தோன்றுகிறது. “யாம்மெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும் வாய்மையின் நல்ல பிற.” என்ற குறளில் “யாம் மெய்யாக் கண்டவை” எனச் சிலவற்றைப் பொதுவகையாற் கூறுகின்றார் திருவள்ளுவர். அவை யாவை? எனக் கேட்கும் மாணவருக்கு விடை கூறுவது உரையாசிரியர் கடன். இக் கடமையை அறிந்தாற்றுகின்ற பரிமேலழகர், உரையின்கண் “மெய்யாக் கண்டவை, ஆகமங்கள் என உரைக்கின்றார்”. அது எங்ஙனம் எனும் வினாவிற்கு விளக்கம் எய்தும் பொருட்டு, தங்கண் மயக்க மின்மையின் பொருள்களை உள்ளவாறு உணரவல்லாராய்க் காம வெகுளி களின்மையின் அவற்றை யுணர்ந்தவாறே உரைக்கவும் வல்லாராய இறைவர் அருளான் உலகத்தார் உறுதி யெய்துதற் பொருட்டுக் கூறிய ஆகமங்கள் என்று தெரிவிக்கின்றார். ஆகமங்களை மெய்ந் நூல்கள் என விளக்கக் கருதும் பரிமேலழகர், ஆகமங்களை உரைத்த ஆசிரியர்களை, பொருள்களை உள்ளவாறு உணர வல்லவர் என்றும், உணர்ந்தவற்றை உரைக்க வல்லவர் என்றும் அவரே இறைவர் என்றும் தெரிவிக்கின்றார். ஆகமங்களை அவர் ஏன் எழுதினார் என்பதற்குக் காரணமும் காட்டுகின்றார். உலகத்து மக்கள் மேல் உண்டான அருள் உணர்வால், அவர்கள் உறுதி எய்தும் பொருட்டு இந்த ஆகமங்கள் எழுதப்பட்டன என விளக்கும் வகையில் “அருளான் உலகத்தார் உறுதி எய்துதற் பொருட்டு” என்கின்றார். இனி பொய்யாமை, கொல்லாமை ஆகிய இரண்டு அறங்களை வற்புறுத்துகின்ற திருவள்ளுவர், “ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன் பின்சாரப் பொய்யாமை நன்று.” என உரைக்கின்றார். இக்குறளைக் கேட்கும் மாணவன் உள்ளத்தில், இரண்டறத்துள்ளும் யாது சிறந்தது என்ற ஐயம் எழுகிறது. திருவள்ளுவரே, முதன்மையைக் கொல்லாமைக்கு வைத்து அதற்குப்பின் பொய்யாமையை வைத்து உரைக்கின்றார் என்று சொல்வது ஒருவாற்றால் விடையாகும். அதன்கண், காரணம் காட்டப்படாமையால், காரண காரிய முறையில் வைத்து உரைப்பது உரைகாரர் கடமையாகிறது. அதனால், பரிமேலழகர் “பொய்யாமை பொய்யாமை யாற்றின்” எனவும், “யாமெய்யாக் கண்டவற்றுளில்லை” எனவும் கூறினாராகலின், இரண்டறத் துள்ளும் (கொல்லாமை, பொய்யாமை) யாது சிறந்ததென்று ஐயம் நிகழுமன்றே, அது நிகழாமைப் பொருட்டு ஈண்டு அதன் பின்சாரப் பொய்யாமை நன்றென்றார்; முற்கூறியதிற் பிற்கூறியது வலியுடைத் தாகலின், அதனைப் “பின்சார நன்றென்றது” “நன்மை பயக்கும் வழிப் பொய்யும் மெய்யாயும், தீமை பயக்கும் வழி மெய்யும் பொய்யாயும் இதனைப் பற்ற, அது திரிந்து வருதலான் என உணர்க” என எழுதுகிறார். இதனை இந்நாளைய சீர்த்த இலக்கிய விமர்சகர்கள் (Advanced literary Critics) Logical interpretation with psychological with psychological segeence என்று கூறுகின்றனர். இனி, “மெய்யுணர்தல்” என்ற பகுதியில் மெய்ப் பொருளுக்குச் செம்பொருள் என்ற பெயர் குறித்து, “பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும் செம்பொருள் காண்பது அறிவு.” எனத் திருவளுவர் கூறுகின்றார். “செம்பொருள்” என்பதை விளக்க வந்த பரிமேலழகர் “தோற்றக் கேடுகள் இன்மையின் நித்தமாய், நோன்மையால் அதனை யொன்றும் கலத்தல் இன்மையின் தூய் தாய், தான் எல்லாவற்றிலும் கலந்து நிற்கிற முதற்பொருள் என்றார்” என உரைக்கின்றார். இது ஒரு சமய சாத்திரம் படிக்கின்றோமோ என நம்மை மருட்டி இன்பம் செய்கிறது. இனி, “வாய்மை யெனப்படுவது யாதெனின் யாதொன்றும் தீமை யிலாத சொலல்.” என்ற குறட்பா உரையில், “எனப்படுவது” என்பதற்கு “என்று சிறப்பித்துச் சொல்லப்படுகிறது” எனப் பொருள் கூறுகின்றார் பரிமேலழகர். “எனப்படுவது” என்பதற்கு, “என்று சிறப்பித்துச் சொல்லப்படுவது” என்று பொருள் கூறுதல் பொருத்தமா? என்று வினா எழுப்பிய மாணவனுக்கு விடை கூறுகிறார் பரிமேலழகர். வழக்கில், ஊர் என்று சிறப்பித்துச் சொல்லப்படும் உறையூரை எடுத்துக்காட்டி, “ஊரெனப்படுவது உறையூர்” என்றாற் போல என உரைக்கின்றார். நூல் உரை காண்பவர் இலக்கணத்தையோ, வேறு நூற்களையோ காட்டாமல் வழக்கினை எடுத்துக் காட்டுவது முறையாகுமோ? எனின், “வழக்கு எனப்படுவது உயர்ந்தோர் மேற்றே நிகழ்ச்சி அவர்கட்டாக லான.” என்று தொல்காப்பியம் வழக்கினைக் காட்டுவது நேரிது எனக் காரணத்தோடு கட்டுரைக்கின்றது. ஆகையால், “என்று சிறப்பித்துச் சொல்லப்படுவது” என்று வழங்குதல் பொருத்தமே என உய்த் துணர வைக்கின்றார் பரிமேலழகர். ஒரு தலைவரின் கீழ் பணிபுரிபவன் தன்னை அவர் ஐயுறத் தக்க வகையில் நடந்து கொள்ளக்கூடாது; ஐயம் பிறந்து விடுமானால், பிறகு தெளிவிக்க ஒருகாலும் ஆகாது என்ற கருத்துப்பட, “போற்றின் அரியவை போற்றல் கடுத்தபின் தேற்றுதல் யார்க்கும் அரிது.” என்று திருவள்ளுவர் கூறுகிறார். “கடுத்தபின் (ஐயம் தோன்றிய பின்) தேற்றுதல் யார்க்கும் அரிது” என்பது எவ்வாறு பொருந்தும் என மாணவன் கேட்கின்றான். இங்ஙனம், ஐயம் தெளிவு பெற வேண்டுங்கால் உரைகாரர்கள் இலக்கணம், வழக்கு, ஏது, எடுத்துக் காட்டு என்ற நான்காலும் விளக்கம் செய்வர். இங்கே நான்கனுள் இதனை எடுத்துக்காட்டால் விளக்கம் செய்கின்றார் பரிமேலழகர், “கடன் கொண்டான் தோன்றப் பொருள் தோன்றுமாறு போலக் கண்டுழி யெல்லாம் நினைக்கப்படுதலின் தேற்றுதல் யார்க்கும் அரிது” என எடுத்துக்காட்டினால் உரைக்கின்றார். பரிமேலழகரது உரையிற் காணப்படும் பல்வேறு அழகுகளில் அரிய சொல்முடிவு காட்டி இலக்கண அமைதி கூறுவது ஒன்று. “கவ்வையாற் கவ்விது காமம்” என்ற குறட்பாவில் “கவ்விது” என்பது சவ்வையென்னும் சொல் அடியாக வந்தது; ஆனால், அங்ஙனம் வருதற்குத் தமிழ் இலக்கணத்தில் இடமில்லை. செய்யுளினும் வழக்கு வலியுடைத்து என்பது பற்றி, “செவ்வையுடையதனைச் செவ்விது என்றாற் போலக் கவ்வையுடையதனைக் கவ்விது என்றார்” என்று பரிமேலழகர் உரைப்பது இலக்கணப் புலவர்க்கு வியப்பும் இன்பமும் தருகிறது. காரணம் என்ன எனின், செவ்வை உடையதனைச் செவ்விது என்றல் தொல்காப்பியர் மரபு. “எவ்வயிற் பெயரும் வெளிப்படத்தோன்றி அவ்வியல் நிலையல் செவ்விது என்ப,” என்பது தொல்காப்பியம். அதை நினைவிற் கொண்டு பரிமேலழகர், “செவ்விது” என்றாற் போல என உரைக்கின்றார். இவ்வாறே ஒரு குறட்பாவில் “புலப்பாயாக” என்பது “புலத்தி” என்று வராமல் “புலத்தை” என வருகிறது. அவ்வாறு வருதற்குச் சொல்லியல் காண்கின்ற பரிமேலழகர், தமிழ் மரபு காணாது புதியதொரு சூழ்ச்சி செய்கின்றார். புலாதை என்பதன் ஈற்றெழுத்தைப் பிரித்து விகுதி என்று பெயரிட்டு. அதற்கு மேற்கோளாகக் கலித்தொகைப் பாட்டில் ஒன்றைப் பற்றிக் கொண்டு “புலத்தை என்புழி ஐகாரம். கடம் பூண்டு ஒருகால் நீவந்தை, என்புழிப் போல முன்னிலை வினை விகுதி” என உரைக்கின்றார்; விகுதி யென்று நிறுத்தி இலக்கணம் காண்பது தொல்காப்பியர் காலத்திலோ வள்ளுவர் காலத்திலோ மரபன்று. பரிமேலழகரே மேற்கொண் டுரைப்பது புது மரபு; பல்லவர் காலத்திற்குப் பின் வந்த இலக்கணப் புலவர் செயல் வகை. வடமொழி முதலிய மொழிகளின் மரபும், தமிழ் மரபும் வேறு வேறு இயல்பின என உணர்ந்து ஆங்காங்கு அவ் வேற்றுமையை எடுத்துரைத்து மகிழ்விப்பதிலும் பரிமேலழகர் சிறப்புடையவர். தன் உயிரைக் காக்க வேண்டி வருமிடத்து, ஒருவன் மானம் கருதல் ஆகாது என்பது வடநூல் மரபு. “இன்றியமையாச் சிறப்பின ஆயினும் குன்ற வருப விடல்” என்று திருக்குறள், வடநூல் மரபுக்கு மாறுபட நிற்பது காண்கிறார் பரிமேலழகர். ஆதலால் “இறப்ப வருவழி இளிவந்தன செய்தாயினும் உய்க” என்ற வடநூல் முறைமையை மறுத்து, “உடம்பினது நிலையின்மையையும், மானத்தினது நிலை உடைமையையும் தூக்கி, அவை செய்யற்க என்பதாம்” என உரைக்கின்றார். இவ்வாறே, “ஈன்றாள் பசிகாண்பான் ஆயினும் செய்யற்க சான்றோர் பழிக்கும் வினை.” என்ற திருக்குறளில் தமிழ்மரபின் தனி இயல்பை விளக்கு கின்றார். இனி அக்காலத்தில் ஏடும், எழுத்தாணியும் கொண்டு எழுதுவது மரபாகலின், திருக்குறள் உரையின்கண், சில இடங்களில் பரிமேலழகர் முன் எழுதியதை மறந்து தவறுதலும் செய்கின்றார். “நாளென ஒன்றுபோற் காட்டி உயிரீரும் வாள துணர்வார்ப் பெறின்.” என்பது திருக்குறள். இதற்குத் தாம் ஓர் உரை வகுத்துக் கொண்டு, பிறர் கூறும் உரையை மறுத்து ஒதுக்குகின்றார். பரிமேலழகர் இதற்குப் பிறர் கூறும் உரை, “நாள் என்பது ஒரு பொருள் போலத் தோன்றி உயிரை ஈர்வதொரு வாள்” என்பது. இதன்கண், “நாளென ஒன்று” என்பதற்கு “நாள் என்பது ஒன்று” எனப் பொருள் பிறரால் உரைக்கப்படுகிறது. இவ்விடத்து “என” என்ற சொல் என்பது எனப் பொருள்படுகிறது. (1) “என” என்பது ஓர் இடைச் சொல்லேயன்றி பெயர்ச்சொல் அன்று என்பது பரிமேலழகர் கொள்கை. அது (என) “என்பது” எனப் பொருள்படக் கூடாது. (2) ஒன்று போல் காட்டி என்பதற்கு “ஒரு பொருள் போலத் தோன்றி” என்று பொருள் உரைக்கப் பட்டிருக்கிறது. அப்படிச் சொல்வதில் பொருள் சிறப்பு இல்லை என்பது பரிமேலழகர் கொள்கை. “வாளது” என்றவிடத்து “அது” என்பது குற்றியலுகரம் அன்று. ஆகவே, பரிமேலழகர் கருத்துப்படி “அது உணர்வார்” என புனராது முறைப்பட வர வேண்டுமாயின் “அஃதுணர் வார்ப் பெறின்” என வருதல் வேண்டும். அவ்வாறு இல்லாமையால் இதற்கு பிறர் கூறுவது பொருந்தாது என்ற கருத்துப்படி “என” என்பது பெயரன்றி. இடைச்சொல் ஆகலானும், “ஒன்று போற்காட்டி” என்பதற்கு ஒரு பொருட் சிறப்பின்மையாலும், “அது” என்பது குற்றியலுகரம் அன்மையாலும், அஃது உரையன்மை அறிக என்று பரிமேலழகர் மறுக்கின்றார். இனி பரிமேலழகர் கருத்தை ஆராய்வோம். “என” என்னும் சொல் இடைச்சொல்லே யன்றி பெயர்ச் சொல் அன்று எனப் பரிமேலழகர் கருதுவது தொல்காப்பியத்திற்கு முரண் ஆனது. ‘என’ என்னும் இடைச்சொல் பெயர்ப் பொருளிலும் வரும் என்ற கருத்துப்பட “வினையே குறிப்பே இசையே பண்பே, எண்ணே பெயரோடு அவ்வாறு கிளவியும் கண்ணிய நிலத்தே, என என் கிளவி” (தொல். இடை - 10) என்று தொல்காப்பியம் கூறுகிறது. அடுத்து “ஒன்றுபோல் காட்டி” என்பதற்கு ஒரு பொருள் போலக் காட்டி என்றதில் பொருள் சிறப்பில்லை என்கிறார். ஆனால், அவர் இல்லை என்பதற்குத் தக்க காரணம் கூறாமையால் அவர் உரை செல்லாதாகிறது. மூன்றாவதாக “வாளது” என்பதிலுள்ள “அது” என்னும் சொல் குற்றியலுகரமன்று எனக் காட்டி மறுப்பது, அவர் பிறிதொரு இடத்தில் உரைத்த உரையையே மறுக்கிறது. அதாவது “உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன், புண்ண துணர்வார்ப் பெறின்” என்ற குறட்பாவின் உரையில் “புண்ண துணர்வார்” எனப் புணர்ந்ததற்கு, “அஃது என்னல் வேண்டும் ஆய்தம் விகாரத்தால் தொக்கது” என உரைத்தார் பரிமேலழகர். அவரே, “நாளென ஒன்று போல் காட்டி” என்ற திருக்குறள் உரையில் “வாளது” என்ற விடத்து, “அஃது என்னல் வேண்டும் ஆய்தம் விகாரத்தால் தொக்கது” என்று தானே கொள்ளவேண்டும். அவ்வாறு கொள்வது உரை முறைமையன்று. இனி ஓரிடத்தில் எழுவாய் பயனிலையைத் தெளிய நோக்காமல் தடுமாறுகின்றார் பரிமேலழகர். “வித்தும் இடல்வேண்டுங் கொல்லோ விருந்தோம்பி மிச்சில் மிசைவான் புலம்.” என்ற திருக்குறட்கு “மிசைவான்” என்பது எழுவாயும் “வேண்டுங் கொலோ” என்பது பயனிலையும் ஆகும். அதனைத் தெளியாமல் “இடல் வேண்டும்” என்பதை எழுவாயும் பயனிலையுமாகக் கொண்டு “மிசைவான் புலம் வித்தில்லாமலே வினையும்” எனப் பொய்யுரை புகலுகின்றார். இக்குறட்பாவை உண்மை நெறியில் நின்று நோக்குவோ மாயின் விருந்தோம்பி மிச்சில் மிசைபவன் (தன் பால்) உள்ளது வித்தே ஆயினும் விருந்திற்கு இடுவதே தவிர, புலத்திற்கு இடவிரும்பான் என்பது நேரிய பொருளாம். இங்ஙனம் ஒரு சில தவறுகள் ஆங்காங்கே காணப்படினும் பழமையிற் புதுமையும், தருக்கத்தில் இலக்கணமும், விளக்கத்திற் சுருக்கமும். நூல் வழக்கொடு உலகியலும் புகுத்தி நுண்மையும் மாண்பும் அழகும் தெளிவும் பரிமேலழகர் உரைக்கென்றமைந்த சிறப்புக்கள் என்பது யாவரும் நினைவிற் கொள்ளத் தக்கது. 6. இறைமாட்சி இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன் திருவள்ளுவர் வாழ்ந்த போது நாட்டில் பேரரசும், சிற்றரசுமாகப் பல அரசுகள் நிலவின. அவற்றுள் நல்லரசும், வல்லரசும் பொல்லா அரசுகளும் இருந்தன. அவற்றையெல்லாம் நுணுகிக் கண்டவர் திருவள்ளுவர். அவற்றின் வளர்ச்சியும், தேய்வும், உயர்ச்சியும், வீழ்ச்சியும் நோக்கினார். அவற்றிற்குரிய காரண காரியங்களை ஆராய்ந்தார். நன்மை தீமைகளைத் தெளிந்தார். உலகில் அரசுகள் யாவும் நிலைபெறத் தக்க உண்மைகளை எண்ணித் தமது திருக்குறளில் உரைக்கின்றார். முதலில் அரசுக்குத் தலைவனான மன்னனைப் பொறுத்த அளவில் அவனிடம் இருக்கவேண்டிய பண்புகளையும், செயல் வகை களையும் முறையாக உரைக்கின்றார். முடிசூடி நாடாளும் தலைவனைத் தமிழ் முன்னோர் அரசன், மன்னன், வேந்தன் என்று குறிப்பது வழக்கம். திருவள்ளுவரும் அரசருள் ஏறு, பண்புடை மன்னன், வேந்தர்க்கு இயல்பு என்றுதான் குறிக்கின்றார். ஆனால் மன்னவர் மாட்சி கூறும் இவ்வதிகாரத்துக்கு இறைமாட்சி என்று பெயர் குறிக்கின்றார். என்ன காரணம்? முறை செய்வதும் நாடு காவல் புரிவதும் மன்னவன் பணியாகும். அவற்றை சிறப்புறச் செய்தால் அவன் மக்கட்கு இறையாகின்றான். இதனை, “முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு இறையென்று வைக்கப் படும்” என்று திருவள்ளுவர் கூறுகிறார். வீட்டுக்குத் தலைவன் வாழ்வாங்கு வாழ்வானாயின், அவன் தெய்வத்துள் வைக்கப்படுவான் என்றா ரல்லவா? அதுபோலவே நாட்டுக்குத் தலைவன் முறையும் காவலும் செம்மையாய்ச் செய்வானாயின், நாட்டு மக்கட்கு இறை என்று வைக்கப்படும் என்று கூறுகின்றார். முறை செய்தல், காப்பாற்றல் என்ற இரண்டினுள் முறை என்பது யாது? யார் மாட்டும் கண்ணோட்டம் இன்றி நடுநின்று உண்மையை ஓர்ந்து வேண்டுவதும் வேண்டா தேர்ந்து செய்வது தான் முறை என்று திருவள்ளுவரே பிறிதோர் இடத்தில் விளக்கி இருக்கிறார். நடு நின்று யார் மாட்டும் கண்ணோட்டம் இன்றி ஆராய்வதற்கு அறிவும், ஊக்கமும் , அஞ்சாமையும் உண்மை காணும் பொருட்டு ஈகைப் பண்பும் வேந்தர்க்கு வேண்டப்படு கின்றன. அதுபற்றியே, “அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும் எஞ்சாமை வேந்தர்க் கியல்பு” என்று கூறுகின்றார். முறை செய்யும்போது, வேண்டுவதும் வேண்டாததும் தேர்ந்த பின், வேண்டுவதை செய்வதிலும், வேண்டாததை விலக்குவதிலும் கலக்கம் இல்லாமல் தெளிந்து செய்தற்குத் துணிவுடைமையும், செய்யுமிடத்துக் காலம் நீடிக்காமல் விரைந்து செய்யும் தன்மையும் இவைகளைக் குற்றமற நூல் முறை பிழையாமல் செய்தற்குக் கசடற்ற கல்வியும் வேண்டும். அதற்காகவே, “தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும் நீங்கா நிலனாள் பவற்கு” என்று கூறுகின்றார். முறை செய்தற்குரிய இம்மாட்சிகள் அரசன்பால் நிறைந்திருந் தாலும் முறை வேண்டியும் குறை வேண்டியும் வருகின்ற மக்களை, இனிது வரவேற்கும் நற்பண்பு உடையனாக வேண்டும். வறியவரும் வேண்டும் போது வந்து காண்பதற்கு எளியனாகவும், அவர்கள் தங்கள் முறைகளையும், குறைகளையும் ஒழுங்காகச் சொல்லும் திறமில்லாதவராயின், அவர்களைக் கடுஞ்சொல்லால் வெருட்டாமல், முக மலர்ந்து செவிசாய்த்துக் கேட்கும் செம்மையுடையனாக வேண்டும். இச் செவ்விய பண்பு இல்லையாயின் வேந்தனைப் பேய் என்று நாட்டவர் தூற்றுவர். அது நினைந்தே, “காட்சிக் கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல் மீக்கூறும் மன்னன் நிலம்” என்று கூறுகின்றார். நிலம் மீக்கூறுதலால் நிலத்தவர் புகழ்தல் இவ்வாறு முறை செய்தற்குரிய மாட்சிகளையுரைத்த திருவள்ளுவர், நாடு காவற்கு வேண்டும் மாண்புகளை உரைக்கின்றார். நாட்டின் அரசியல் அமைப்பு, படை, குடி, கூழ், அமைச்சு, நட்பு, அரண் என ஆறு கூறுபடுகிறது. நாட்டின் பாதுகாப்புக்கு வேண்டுவது படை; அதற்குரிய ஆள் தருவது குடி; படைக்கும் குடிக்கும் வன்மை தருவது கூழ், அதாவது பொருள்; இவற்றை முறையே இயக்குதற்கு ஏற்ற அறிவும் கருத்தும் நல்குவது அமைச்சு; இந்த நான்காலும் உண்டாவது தற்காப்பு; பிற நாடுகளின் துணையும் ஒரு காப்பாத லால் நட்பும், மலையும், காடும், ஆறும், கடலும் நாட்டுக்கு இயற்கைக் காப்பாகிய அரணும் நகரத்துக்குக் காப்பாகிய மதிலும், அகழியுமாகிய அரணும் என்ற இரண்டும் அடங்க அரணும் கண்டு, “படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும் உடையான் அரசருள் ஏறு” என்று கூறுகின்றார். முதலாவதாகிய படையையும் குடிகளையும் ஆளுகின்ற வேந்தன்பால் அறம் பிறழாமையும் மறம் இழுக்காமையும், மனவுணர்வும் நன்கு அமைய வேண்டும். அறமாவது மனை வாழ்க்கையில் புகழ் விளைவிக்கும் நற்செயல்; மறமாவது போர் முதலிய புற வாழ்க்கையில் புகழ் விளைவிக்கும் ஆண்மைச் செயல்; மானமாவது மனைவாழ்விலும் புற வாழ்விலும் குற்றமும் பழியும் தோன்றுமாயின் உயிர் வாழாமை. இந்த அறவுணர்வும் மறப் பண்பும், மானமும் தலைவன்பால் அமையின் அவன்வழி நின்று பணி புரியும் படையும், குடியும், பிறவும் அறம் பிழையாமல், தன்மையறியாது அல்லது தோன்றுமாயின், அதனைப் பற்றறக் களைந்து, மறப்புகழ் பெற்ற மாண்புறும். அது பற்றியே, “அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா மானம் உடைய தரசு” என்று கூறுகின்றார். இங்கே வகுத்துரைத்த படையும் குடியும் நேராக ஆளப் படுவன. அமைச்சும் நட்பும் ஆட்சிக்குத் துணை. இவை இரண்டும் அரசுக்கு இன்றியமையாதவை. ஆயினும் பொருள் இல்லையாயின் இவை பயன்படா. இப்பொருளை விளைவிப்பவர் குடிகள். உழவாலும் தொழிலாலும் தான் பொருள் விளையும். இவை இரண்டுக்கும் அரசு பொருள் உதவியும், விளைவிப்போரை அன்புடை நன்மொழிகளால் ஊக்கியும், செங்கோன்மையால் அவர்களை நேர்மைவழியில் நிறுத்தியும் பகைவராலும் எதிர்பாராத இன்னல்களாலும் தளர்ந்த குடிகட்கு வேண்டுவன உதவியும் நல்வாழ்வு நிகழ்விக்கும் பண்பு மன்னவன்பால் மன்னுதல் வேண்டும். அதனைக் கருதியே திருவள்ளுவர், “கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும் உடையானாம் வேந்தர்க் கொளி” என்று எடுத்துரைக்கின்றார். இத்தகைய நன்மாட்சி ஒரு வேந்தனிடம் அமையுமாயின் ஏனை அரசரெல்லாம் அவன்வழி நின்று தாமும் புகழ் பெறுவர் என்று விளக்கவே, கொடை முதலிய நான்கும் உடையான் வேந்தர்க்கு ஒளியாம் என்று கூறுகின்றார். இத்தகைய கொடை, அளி முதலிய மாண்பினால் நாட்டில் பொருள் விளைவு மிகுதிப்படும். பொருட் பெருக்கம் மேலும் அப்பொருளைப் பெருக்குதற்கே உள்ளத்தை ஊக்குமாதலால், அந்நெறியில் நின்று பொருள் பெருகும் வழிமுறைகளைக் கண்டு அறிந்து அமைப்பது முதற்கண் செய்யப்பட வேண்டுவதாம். பின்னர் விளைவனவற்றை ஒருங்கு திரட்டுவதும், திரட்டியதை வீண்போகாமல் காப்பதும், காத்தவற்றை அரசியல் துறை பலவற் றிற்கும் வகுத்தலும் அரசின் கடனாகும். ஆதலால், “இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த வகுத்தலும் வல்ல தரசு” என்று கூறுகின்றார். ஈட்டற்குச் செல்லும் உள்ளம், இயற்றலை நாடாது ஒழிவதும், காத்ததை வகுத்தலில் பிழைபடுவதும் இயல்பு. அதனால் அரசியலில் வல்லவர்க்கின்றி, இச்செயல், நலம் பரவாமல் ஒழிவது அறிந்து தக்கவாறே செய்யவல்லது எதுவோ, அதுவே நல்லரசு என்பாராய் திருவள்ளுவர் “வல்லது அரசு” என்று வற்புறுத்துகின்றார். இனி, இறைமைக்குரிய செயல் வகைகைள ஆய்ந்துரைக்கும், அமைச்சர் முதலிய அரசியல் அறிஞர்களோடு அவைக்கண் இருந்து ஆராய்வது அரசியல் அறமாதலால் அந்நிலையில் அரசன் பால் சில அருங் குணங்கள் அமைதல் வேண்டும். அரசியற் செயல் வகைகளில் குறையோ, குற்றமோ கண்டு எடுத்துரைக்கும்போது உரைப்பவர் உரைகளில் செவியும் நெஞ்சும் சுடத்தக்க வகையில் சொற்கள் வந்து விழும். சினம் உண்டாகக்கூடிய சிறு சொற்களும் பேசப்படும். அவற்றால் அறிவு அறை போகாமல் பொறுத்து ஆற்றும் பண்பும் வேந்தனுக்கு மிகவும் வேண்டற்பாலதாம். இல்லையாயின், அறிஞர் நீங்குவர்; அரசு அல்லற்படும். ஆதலால் தான் திருவள்ளுவர், “செவிகைப்பச் சொல்பொறுக்கும் பண்புடை வேந்தன் கவிகைக்கீழ்த் தங்கும் உலகு” என்று கூறுகின்றார். இறுதியாக நண்பரது நட்பு, நாடு காவற்குச் சிறந்த ஆக்கம்; அதனை உணர்கின்ற அரசன், அவர்களைத் தன்னோடு பிரியாத வாறு பார்த்துக் கொள்ள வேண்டும். அஃது எங்ஙனம் எனில், அவர்கட்கு வேண்டுவதை அறிந்து ஈதல் வேண்டும். சில சமயங் களில் அது ஈகையோடு நின்று விடுவதுண்டு; ஆதலால் ஈவதை, இன்சொல்லும், இன்முகமும் கொண்டு செய்ய வேண்டும்; அன்றியும் அவரது நிலை இரங்கத் தக்கதாயின், மிகைபடத் தந்து அன்பால் அணைத்து அளிசெய்ய வேண்டும். இதனை, “இன்சொலால் ஈத்தளிக்க வல்லார்க்குத் தன்சொலால் தான்கண் டனைத்திவ் வுலகு” என்று கூறுகின்றார். இப் பண்பும் சூழ்ச்சியும் வன்மையுடையார்க்கே அமைவது என்று குறிக்கவே, வல்லார்க்கு என்று உரைக்கின்றார். இதனால் நாடாளும் வேந்தன் முறை செய்தும், காப்பாற்றியும் மக்கட்கு இறையாகின்றான் என்றும் அவன் செய்தற்கமைத்த மாண்புகள் இவை என்றும், நாடு காத்தற்கமைந்த உறுப்புக்கள் படை முதலிய ஆறும் என்றும், அவை ஒவ்வொன்றையும் ஆளுதற் கமைந்த பண்பும் செயலும் இவையென்றும் நாம் அறிகின்றோம். 7. கல்வி கல்வியின் நோக்கம் திருவள்ளுவர் காலத்தில் அறிவு பெறு வதும், ஒழுக்கத்தைப் பெறுவதுமாக இருந்தது. இன்றைய கல்வி தொழில் நோக்கமும் வேலை தேடும் நோக்கமும் குறிக் கொண்டு நிற்கிறது. இதற்கு ஏற்ப கற்பிக்கும் முறையும் கற்பிக்கும் சாதனங் களும் மாறியிருக்கின்றன. அரசியல் தொழில் இயக்கங்களும் கல்வி பயிலும் மாணவர் களிடையே புத்துணர்ச்சியை உண்டாக்கி அவர்கள் மனத்தை வேறு துறைகளில் மாற்றி உள்ளன. இந்நிலையில் கல்வி நெறியில் மிகப்பல கசடுகள் நிறைந்துள்ளன. அவற்றை அறவே நீக்குவது கல்வியாக இருக்கவேண்டும். கல்வி கற்கும் இளைஞர்கள், கற்கப்படும் நூல்களும், கற்பிக்கும் முறைகளும் காலந்தோறும் வேறுபடுகின்றன. ஆயிரம் ஆயிரம் ஆண்டுகட்கு முன் தோன்றிய நூல்களும் 50 ஆண்டுகளுக்கு முன் தோன்றியனவும் இருக்கின்றன. இவை அவ்வக்காலச் சூழ்நிலைக்கும், சமுதாயத்தின் நோக்கத்துக்கும் ஏற்றவாறு அமைந்துள்ளன. காலச்சூழ்நிலை மாற்றத்தால் இக்காலத்தில் அக்கால வாழ்க்கை முறைகளைக் கடைப்பிடிக்க நினைப்பது முறையாகாது. இக்காலக் கண்கொண்டு அவற்றிற்குப் பொருள் செய்து நடைமுறையில் அமையச் செய்வது வேண்டப்படுகிறது. இறைபுரிந்து முறை செய்யும் வேந்தனுக்கு மாட்சி தருவன வற்றுள் ஒன்றாகக் கல்வியைக் கூறினராதலால் திருவள்ளுவர் இறைமாட்சியை அடுத்துக் கல்வி கேள்விகளை மூன்று அதிகாரங் களாக வகுத்துரைக்கின்றார். நாட்டின் நல்லரசுக்கு வேண்டிய படை, குடி, பொருள், அமைச்சு, நட்பு, அரண் என்ற ஆறனுள் பொருளை நடுவண் வைத்து, ஏனை ஐந்திற்கும் அதன் இன்றியமையாமையை உய்த்துணர வைத்தார் திருவள்ளுவர். “பொருளிலார்க்கு இவ்வுலகம் இல்லை” என்பதையும் வெளிப்படையாகப் பிறிதோரிடத்தில் விளம்பினார். அப்பொருள் ஒருவனுக்குப் பிறக்கும் போதே வருவதில்லை. அவனால் இடையிலே தேடப்படுவது; அது போல இடையிலே தேடிப் பெறுவதாகிய கல்வியைப் பொருளோடு ஒப்ப நிறுத்தி இரண்டையும் சீர்தூக்குகின்றார். செலவிட்ட இடத்துப் பொருள் குறையும். கல்வியோ பிறர்க்கு ஈயும்போது குறைபடலின்றிப் பெருகும். இந்த இயல்பைக் காண்கின்றார் திருவள்ளுவர். “கேடில் விழுச்செல்வம் கல்வி; ஒருவற்கு மாடல்ல மற்றை யவை” என்று எடுத்துரைக்கின்றார். மாடு என்றால் செல்வம். இங்ஙனம் கொடாமையும் பெருகும் சிறப்பும் உடைய கல்வி, மக்கட்கு இரு கண்கள் போல எண்ணும் எழுத்தும் என இயலு கின்றது. அது பற்றியே, “எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு” என்று கூறுகின்றார். வலக்கண், இடக்கண் என இரண்டாயினும் கண்கள் ஒன்றையே நோக்குவது போல, எண்ணும் எழுத்துமெனக் கல்வி இரண்டாயினும் நல்லறிவு என்ற ஒன்றையே நல்குகிறது என்பதற்காகவே இவ்விரண்டும் கண்ணென்ப என்று குறிக்கின்றார். அவ்வறிவு எவ்வாறு கல்வியால் எய்துகிறது? கல்வி ஒரு மணற்கேணி அதாவது கிணறு போல். கேணி தோண்டத் தோண்ட நீர் சுரப்பது போலக் கல்வியும் கற்கக் கற்க அறிவு விளங்கிப் போகும். “தொட்டனைத்து ஊறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத்து ஊறும் அறிவு” என்று கூறுகிறார். ஒருவனிடத்தில் இருக்கும் பொருளைப் பெற வேண்டு மானால், அவனோடு அன்பாய்ப் பணிவாய், உரையாடிப் பெற வேண்டியிருக்கிறது. வீட்டில் இருப்பதை எடுத்துக் கொடுப்பதற்கே இத்தனை அன்பும், பணிவும் வேண்டும் என்றால், ஒருவன் உள்ளத்தில் இருக்கும் நுண்ணிய கருத்தைப் பெறுவதென்றால் புறநானூறு சொல்வதுபோல் உற்றுழியுதவியும், உறுபொருள் (மிக்க பொருள்) கொடுத்தும் - அதாவது அன்பு முகமும், பணிந்த நடையும் வணங்கிய சொல்லும் உடையனாய்க் கேட்டால்தான் ஆசிரியன் உள்ளம் உவந்து அந்த நுண்ணிய கருத்தை எடுத்து உரைப்பான். ஆனால் ஒன்று பொன்னும் பொருளும் போல இக்கல்வி, ஒருவன் தானே கண்டு எடுத்துக் கொள்ளத் தக்கதன்று. கற்றவர் ஒருவரையடைந்து கற்றால் வருவது. வேறு எவ்வகையாலும் பெற முடியாதது.அங்ஙனமாயின் அதனை எங்ஙனம் கற்பது எனின், இல்லாதவன் செல்வமுடையாரை அடைந்து வணங்கி நின்று விரும்பிய பொருளைப் பெறுகிறான். அது போல கல்வியுடை யவன் முன் அன்பும் பணிவும் உடையவனாய் நின்றால், அவன் மனம் உவந்து கல்வியை வழங்குவான். இவ்வுண்மை விளங்கவே, “உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார் கடையரே கல்லா தவர்” என்று திருவள்ளுவர் கூறுகிறார். அன்பால் வணங்கிக் கற்பவன் உயர்வான்; அவ்வாறு வணங்கி வழிபடாதவன் கல்லாதவனாய்க் கீழ்மையடைவான். அதற்குத்தான் எக்கற்றுக் கல்லாதவர் கடையரே என்று குறித்துக் காட்டுகிறார். எக்கூறுதல், வணங்குதல். இவற்றைக் கேட்டதும், இவ்வண்ணமே கற்பேன் என்று எழுகின்றவனைப் பார்க்கிறார் வள்ளுவர். “கற்க கசடற கற்பவை; கற்றபின் நிற்க அதற்குத் தக” என்று கூறுகிறார். கற்பவற்றைக் கற்பதென்றால் கசடறக் கற்க வேண்டும். கற்றல் என்னும்போது கற்பவன், கற்பிப்பவன், கற்கப்படும் நூல், அக்கல்வி யால் பயன் அடையும் மக்கள் எனப் பல கூறுகள் உள்ளன. இவை எல்லாவற்றிலும் குற்றம் குறைகள் உண்டு. அவற்றைக் கசடு என்பர். இக்கசடு நீங்கி நிறைவும் தெளிவும் உண்டாகுமாறு கற்க வேண்டும் என்பதற்காகவே, கற்க கசடு அறக் கற்பவை என்று கூறுகிறார். இங்ஙனம் கல்வியைக் கற்றவரேயன்றி கல்லாதவரும் இவ் வுலகில் வாழத்தானே செய்கிறார்கள். வாழும் உயிர்க்குக் கல்வி இன்றியமையா என்பது ஏன்? எனில், மக்களும் உயிர் வாழ்கின்றனர்; விலங்குகளும் உயிர் வாழ்கின்றன. அது போலக் கற்றவர்களும் கல்லாதவர்களும் வாழ்க்கை நடத்துகிறார்கள். என்றாலும் விலங்கு களோடு ஒப்பாக மக்களை எண்ணுவதில்லை. ஏனெனில் விலங்கி னிடத்து மனவுணர்வு அதாவது பகுத்துணர்வு இல்லை. அது போலக் கற்றவனிடத்து விளங்கும் தெளிவுணர்வு கல்லாதவனிடத்து இல்லை; அதனால் கற்றவனோடும் கல்லாதவன் ஒப்பாக முடியாது. அதனால், “விலங்கொடு மக்கள் அனையர், இலங்குநூல் கற்றாரோடு ஏனை யவர்” என்று கூறுகிறார். கற்றவர்க்கு இத் தெளிவும் விளக்கமும் எவ்வாறு உணர் கின்றன? எனின், அவர்கள் கற்பவை, உயிரறிவைத் தெளிவித்து விளங்கச் செய்வன என்று கூறுவாராய் இலங்குநூல் கற்றார் என்று உரைக்கின்றார். கல்லதவரும் ஒட்பம் உடையவராக, அதாவது தெளிவு பெற்றவர்களாக இருககிறார்களே என்றால், அவர் தெளிவு மிகவும் நன்றாக இருப்பினும் நிலையாக நில்லாது; அவர்களால் அறிவாராய்ச்சி நெறியில் நிலை நாட்ட முடியாது. அது கருதியே, “கல்லாதான் ஒட்பம் கழியதன் றாயினும் கொள்ளார் அறிவுடை யார்” என்று திருவள்ளுவர் கூறுகிறார். நீங்கள் இவ்வாறு சொல்லுகிறீர்கள்; உலகில் கல்லாதவர் சிலர் தகைசான்ற சொல்லும் சிறப்பும் உடையவர் களாக உள்ளனரே எனின் கற்றவன் ஒருவன், சென்று கண்டு, அறிவு நெறியில் சொல்லாடுவானாயின், எனின், கல்லாதவன் கொண்டு உள்ள, தகைமை எல்லாம் தவிடு பொடியாய் விடும். அதனால்தான், “கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து சொல்லாடச் சோர்வு படும்” என்று திருவள்ளுவர் கூறுகிறார். நம்முடைய கண், காது, மூக்கு, வாய், உடம்பு ஆகிய ஐந்தும் அறிவு பெறுதற்குக் கருவிகளாகும். ஆயினும், இவற்றுள் கண்ணும் செவியும் சிறப்புடையவை. தொல்காப்பியரும், “கண்ணினும் செவியினும் திண்ணிதின் உணரும் உணர் வுடை மாந்தர்” என்று கூறுகிறார். கண்ணால் உலகியற் பொருள்களைக் கண்டும் அவற்றின் பண்பும் செயலும் உரைக்கும் நூல்களைப் படித்தும் அறிவு பெறுவது கல்வி. நம்மாற் காணமாட்டாத பொருள்களையும் நூல்களால் காட்டப்படாத நுட்பங்களையும், அறிந்தோர் சொல்லக் கேட்பது கேள்வி. கற்பவை கற்கும்போது காணப்படும் கசடுகள் கேள்வியால் தான் எளிதில் நீங்கும். அதனால்தான் கல்வியாகிய செல்வத்திலும் கேள்விச் செல்வம் சிறப்பு உடையது என்பாராய், “செல்வத்துள் செல்வஞ் செவிச்செல்வம்; அச்செல்வம் செல்வத்துள் எல்லாந் தலை” என்கிறார் திருவள்ளுவர். கல்வியிலும் கேள்வி சிறந்ததாயின், கல்லாதவர் இதனைப் பெறலாமோ? எனின், கல்விக்குத்தான் கேள்வி துணை; என்றா லும் கல்வியில்லாதவனும் கேள்வியறிவு பெறலாம்; அவனுக்குச் சமயத்தில் அவ்வறிவு துணை செய்யும் என்பாராய், “கற்றில னாயினும் கேட்க; அஃதொருவற்கு ஒற்கத்தின் ஊற்றாந் துணை” என்று உரைக்கின்றார். ஊன்றுகோல் துணை செய்யும் என்பதற்கு, ஊற்றாம் துணை என்கின்றார். கல்வியைத்தான் சாகும் வரை கற்க வேண்டும் என்கிறீர்கள்; கேள்வி எவ்வளவில் கேட்பது என்று கேட்கலாம். அதற்குத் திருவள்ளுவர் எவ்வளவு நல்லது கேட்கிறோமோ அவ்வளவும் நமக்கு அது பெருமையே தரும் என்று சொல்கிறார். “எனைத்தானும் நல்லவை கேட்க; அனைத்தானும் ஆன்ற பெருமை தரும்” என்பது அவரது திருக்குறள். கற்றறிவுடையவர் கேள்வியறிவும் உடையவர் என்பதை எங்ஙனம் அறிவது எனின், அதனை அவருடைய சொல்லால் அறியலாம். எப்படி எனில் கல்வியும் கேள்வியும் உடையவர், ஒன்றைத் தவறாக உணர்ந்து கொண்டாலும் சொல்லும்போது பேதைமைப்படச் சொல்ல மாட்டார்கள். இதனை, “பிழைத்துணர்ந்தும் பேதைமை சொல்லார் இழைத்துணர்ந் தீண்டிய கேள்வி யவர்” என்று இசைக்கின்றார். ஒருவன் கல்வி பெறாமல் கேள்வி மாத்திரம் உடையனாயின் அவனை எப்படி அறிவது எனில், அதனையும் அவன் வாயினால் அறியலாம் என்கிறார். நுணுக்கமான பொருள்களைக் கேட்டிருப் பானாயின், அவன் வாயில் வணக்கமும் தெளிவும் உடைய சொற் களே வரும் என்பாராய், “நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கிய வாயின ராதல் அரிது” என்று கூறுகிறார். கல்வியுமில்லை; கேள்வியும் இல்லை; இப்படி ஒருவன் இருந் தால் என்ன செய்வது என்று ஒருகேள்வி எழுகிறது. திருவள்ளுவர்க்கு ஓரளவு ஆத்திரம் வருகிறது. அவன் இருப்பதாலும் மக்கட்கு ஒருவகை நன்மையும் இல்லை; இல்லாமல் இறப்பதாலும் ஒருவகை நட்டமும் இல்லை என்கிறார். “செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள் அவியினும் வாழினும் என்” என்று வருந்துகிறார். இதனை அறிந்தே இக்கால அரசுகள் நாட்டில் கல்லாதவரே இல்லாமற் செய்வதே நோக்கமாகக் கொண்டு பெரும் பொருளைச் செலவிடுகின்றன. “ஞானம் உண்டாக்குதல் நலமாகும் நாட்டிற்கே” என்ற திருமந்திரம் நன்கு உருவாகி வருகிறது. உயர்ந்த பண்பாடுகள் இளைஞரிடத்தே உருக்கொண்டு வருகின்றன. 8. அறிவுடைமை கல்வி கேள்விகளால் மனிதனுடைய அறிவு கூர்மையும், விளக்கமும் பெறுகிறது. அந்த அறிவு நம்மிடத்தில் எங்கே இருக்கிறது? அந்த அறிவு மனித உயிரில் உணர்வு வடிவாய் உளது; ஆயினும் அதனிடத்தே இருளொன்று தங்கி, வருவதை முன்கூட்டி அறியாமல் மறைப்பதும் கண்டறிந்ததை நினைவில் நில்லாமல் மறப்பதும் செய்கிறது. அந்த மறைப்பையும் மறதியையும் நீக்கி, அறிவை ஒளிவிட்டு விளங்கச் செய்வது தான் கல்வி கேள்வியின் பயன். அதனால் கல்வி கேள்வியால் உண்டாகும் அறிவு செயற்கை என்றும், தாமே கற்பதும் கேட்பதும் செய்யும் அறிவை இயற்கை அறிவு என்றும் கூறுவர். இவ்விரண்டும் ஒன்று சேர்ந்ததுதான் உண்மையறிவு. அந்த அறிவை உடையவரையே அறிஞர் என்றும் அறிவுடையவர் என்றும் கூறுவர். அவர்களை எவ்வாறு அறியலாம் எனின் அதற்கு இரண்டு வழி கூறுகிறார். தமக்கு ஆனது இது, ஆகாதது இது என்று முன்கூட்டி அறிந்து தம்மைக் காத்துக் கொள்கிறவர் அறிவுடையார்; அறிய மாட்டாமல் இடப்படுகிறவர் அறிவில்லாதவர் என்று அறியலாம். “அறிவுடையார் ஆவது அறிவார்; அறிவிலார் அஃதறி கல்லா தவர்.” என்பது அவரது திருக்குறள். அடுத்தது அவர்கள் அஞ்சவேண்டியதற்கு அஞ்சுவார்கள். அறிவில்லாதவர் அஞ்சமாட்டார்கள். இதனை, “அஞ்சுவது அஞ்சாமை பேதைமை; அஞ்சுவது அஞ்சல் அறிவார் தொழில்” என்று கூறுகிறார். இப்படி வருவதை அறிவதற்கும் அஞ்சத் தகுவதை அஞ்சு வதற்கும் காரணம் அறிவு என்றால், அதன் இயல்பு யாது என்று அறிந்துகொள்ள வேண்டாமா? அதைத் திருவள்ளுவர் நமக்கு வடித்துக் கூறுவதைக் கேளுங்கள். நாம் பார்க்குமிடந்தோறும் நல்லதும், தீயதும் இன்பமும், துன்பமும் நிறைந்துள்ளன; நம்முடைய மனமோ கண்டவிடத் தெல்லாம் கண்ட பொருளெல்லாம் நாடும் இயல்புடையது. அதனைத் தன் போக்கில் விட்டால் இன்பத்தை விடத் துன்பம்தான் மிகுதியாய்க் கிடைக்கும். ஆகையால், கண்டபடி ஓடாமல், தீயதை விலக்கி நல்லதையே நாடும்படி மனத்தை அடக்கியாள்வது அறிவு. “சென்ற இடத்தால் செலவிடா தீதுஓரீஇ நன்றின்பால் உய்ப்பது அறிவு” என்று கூறுகிறார். அறிவுக்கு இந்த ஆற்றல் இருப்பதால்தான் உலகில் உயர்ந்த பண்புடைய நன்மக்கள் தோன்ற இடம் இருக்கிறது. அதனால்தான் இராமலிங்க வள்ளலார் “மனம் எனும் ஓர் பேய்க் குரங்கு மடப்பயலே” என்று கடிந்துரைக்கின்றார். அன்றியும் நம்மைச் சூழ்ந்துள்ள மக்களில் நமக்கு நண்பரும் உண்டு, பகைவரும் உண்டு, தீயவரும் உண்டு. இவ்வாறன்றிப் பொதுவானவரும் உண்டு. இவர்களோடு பேசும்போது, நல்லதும் சொல்லுவார்கள், தீயதும் சொல்லுவார்கள். அறிவுடையவரோ சொல்வார் சொல்வதையெல்லாம் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள், யார் எதைச் சொன்னாலும் கேட்டு அவர் சொல்லின் மெய்ம்மை யைத்தான் காண்பார்கள். ஏனெனில், எப்பொழுதும் எப்பொருளி லும் உள்ள மெய்ம்மையைக் காண்பதுதான் அறிவுக்கு இயல்பு. அதனால்தான், “எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும், அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு” என்று திருவள்ளுவர் கூறுகிறார். இத்தகைய அறிவுடையவர் சொல்லாடுவதே ஒரு தனி முறையாகும். தான் சொல்லும் பொருள் எவ்வளவு அருமை வாய்ந்ததாக இருந்தாலும், கேட்பவர் எளிதாக அறிந்து கொள்ளத்தக்க சொற்களினால் உரைப்பார்கள். அதே சமயத்தில் மற்றவர் சொல்லக் கேட்கும் போது, அவர்களுடைய சொல்லைப் பார்க்காமல், சொல்லப்படும் பொருள் நலத்தையே நுணுகிக் காண்பார்கள். நுணுகிச் சொல்வதுதானே இயல்பு. அதுபற்றியே, “எண்பொருள் வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய் நுண்பொருள் காண்பது அறிவு” என்று திருவள்ளுவர் சொல்லுகிறார். அறிவுக்கு நுட்பமும் வளர்ச்சியும் விளக்கமும் தருவது உலகம். அது பற்றியே உயிர்க்கு உலகத்தின் தொடர்பு உண்டாகி யிருக்கிறது. ஆதலால் உலகம் எவ்வாறு இயங்குகிறதோ அவ்வாறு இயங்கித்தான் அறிவு வளர்ச்சியும் விளக்கமும் பெறுகிறது. அதை கருத்திற்கொண்டே, “எவ்வது உறைவது உலகம் உலகத்தோடு அவ்வது உறைவது அறிவு” என்று திருக்குறள் கூறுகிறது. உலகமோ இன்பத்தில் மகிழ்ந்து மலர்வதும், துன்பத்தில் வருந்திச் சுருங்குவதும் இயல்பாகவுடையது; அறிவுடையவரும், அறிவில்லாதவரும் கலந்தது; ஒரு தன்மையின்றிக் காலந்தோறும் மாறும் இயல்புடையது; ஆகவே இவ்வுலகத்தினின்றும் நீங்கித் தனித்து ஒழுகுவது நல்லது என்று நினைப்பவர் உண்டு. அது கூடாது. மாறுவது உலகின் தன்மையாயினும் அறிவுக்கு விளக்கம் தருவதில் மாறுதல் கிடையாது. அறிவும் மேன்மேலும் விளக்கம் பெறும் இயல்பினதே அன்றி விரிவதும் சுருங்குவதுமாகிய மாறும் தன்மை உடையதல்ல.... ஆதலால் விளக்கம் தரும் உலகத்தை விடாது தழுவிச் செல்வதுதான் அறிவுடைமை. அதனால்தான், “உலகம் தழீஇயது ஒட்பம் மலர்தலும் கூம்பலும் இல்லது அறிவு” என்று திருவள்ளுவர் கூறுகிறார். இவ்வாறு உலகத்தோடு கலந்து உறைவதாலும், அதனைத் தழுவி நடப்பதாலும் உண்டாகும் அறிவு விளக்கம் என்ன பயனைச் செய்யும் எனில், அறிவில் கலந்து நின்று மறைக்கும் இருள் நீங்கும்; நிகழ்ச்சிகளின் காரணகாரியம் விளங்கிவிடும். வரப்போவதை முன்கூட்டியறியும் திறம் உண்டாகும். அப்போது நம்மைக் காத்துக் கொள்ளும் ஆற்றல் பெற்றுத் துன்பம் இன்றி இருக்கலாம். இது பற்றித்தான் திருவள்ளுவர், “எதிரதாக் காக்கும் அறிவினார்க்கு இல்லை அதிர வருவதோர் நோய்” என்று கூறுகிறார். வருவது தெரியாமல் துன்பம் வந்து தாக்குமானால் நமது உடம்பும், உள்ளமும் அதிர்ச்சியடைந்து நடுங்கும். வருவது முன்பே தெரியுமானால், மனதில் அதிர்ச்சியோ உடம்பில் நடுக்கமோ உண்டாகாது. அதனால் தான் இல்லை அதிரவருவதோர் நோய் என்று கூறுகிறார். இனி, நடந்ததை மறந்து குற்றப்படும் நிலைமை யும் உண்டு. அந்த நிலையை “அற்றம்” என்பர். ஒரு பொருளை மறந்து விட்டோம் எனில், ஒன்றை இருட்டறையில் வைத்து விட்டது போலாம். அதை மீள எடுப்பதற்கு விளக்கொளி கருவி யாவது போல, மறந்த பொருளை அறிவு கொண்டு சிந்திப்போ மாயின் அது நினைவிற்கு வந்துவிடுகிறது. அதனால் மறந்ததை நினைவில் கொணர்வதற்கு அறிவு சிறந்ததொரு கருவியாவதைக் காணலாம். இவ்வாறு கருவியாகவும், மனதை அடக்கி நன்னெறிப் படுத்துவதில் தலைமைப் பொருளாகவும், மேலே வருவதை முன்கூட்டித் தெரிவிப்பதால் ஒளிப்பொருளாகவும் உணர நிற்கும் அறிவு, அன்றாட வாழ்வில் குற்றங்கள் வந்து தாக்காதபடி தடுக்கும் அரணாகவும் இருக்கிறது. அதனைத் திருவள்ளுவர், “அறிவுஅற்றம் காக்கும் கருவி; செறுவார்க்கும் உள்ளழிக்க லாகா அரண்” என்று கூறுகிறார். அரண் என்னும்போதே அது பகைவர் உட்புகுந்து அழிக்காத படி தடுப்பது குறித்து அமைக்கப்படுவது என்ற கருத்து நினைவில் எழுகிறது. பகைவருக்கும் அரண்களைத் தகர்த்து உட்புகுந்து அழிப்பதே நோக்கம். அறிவை அரண் என்போமாயின் அதனைத் தாக்கும் பகைவரும், உட்புகுந்து அழிக்கும் செயலும் யாவை என்ற கேள்வி எழும். அக்கேள்விக்கு விடை கூறுவது போலத் திருவள்ளுவர் உலகியலில் அரசர் அமைக்கும் அரண் போலப் பகைவர் தாக்கி உட்புகுந்து அழிக்க முடியாத அரண் இந்த அறிவு என்பதற்காகவே, “செறுவார்க்கும் உள் அழிக்கலாகா அரண்” என்று சொல்லுகிறார். எனவே அறிவு ஒருவனது வாழ்க்கைக்கு எவற்றாலும் அழிக்க முடியாத பாதுகாப்பு என்று அறிகின்றோம். அறிவு சிறந்த கருவியாக இருப்பதால் எல்லாப் பொருளையும், படைத்துக் கொள்ளும் தகுதியும், அரணாக இருப்பதால் படைத்துக் கொண்ட எல்லாவற்றையும் அழிவுறாமல் காத்துக் கொள்ளும் தகுதியும் அறிவுடையோர்க்கு அமைந்துவிடுகின்றன. அதனால் அவர்கள் எல்லாவற்றையும் உடைய செல்வராகின்றார். அறிவு இல்லாதவர் எல்லாம் உடையராயினும், ஆக்கிப் பெருக்கிக் கொள்ளும் திறமையும், அழிவதைக் காத்துக் கொள்ளும் வன்மையும் இன்றி விரைவில் கெட்டு ஒன்றும் இல்லாதவராய் விடுகிறார்கள். இதையே சுருக்கமாக, “அறிவுடையார் எல்லாம் உடையார்; அறிவிலார் என்னுடைய ரேனும் இலர்” என்று திருக்குறள் கூறியது. எனவே, அறிவில்லாதவன் வறுமை எய்திக் கெடுவான் அறிவுடையவன் எல்லாம் பெற்று இன்பமாக வாழ்வான் என்று அறிகின்றோம். 9. தன்குறை நீக்குதல் அறிவுடைமை பற்றிப் பேசியபோது “அறிவு அற்றம் காக்கும் கருவி” என்று திருவள்ளுவர் சொன்னார். அற்றம் என்பது மறதி; அதுதான் நம் குற்றங்கள் எல்லாவற்றிற்கும் முதற்காரணம். அதனால் நமக்குப் பலருடைய வெறுப்பும் அறவழியாகப் பகைமையும் உண்டாகின்றன. குற்றம் செய்யாமல் இருக்க முடியுமா? குற்றமே உடையவரும் குணமே நிறைந்து வரும் உலகத்தில் இல்லை அல்லவா? சிறந்த அறிவுடையவரு ஓரொரு காலத்தில் குற்றம் செய்வ தில்லையா? என்று கேட்பவர் உண்டு. மனிதன் குற்றம் செய்யக் கூடியவன்தான். என்றாலும், அறிவு பெற்றவன் குற்றத்தை அறிந்து தன்னிடத்தில் உண்டாகாமல் காத்துக்கொள்ள வேண்டும் என்பதற் காகத்தான், அறிவுடைமையை உரைத்த திருவள்ளுவர் அடுத்த படியாகக் குற்றத்தைப்பற்றிப் பேசுகிறார். நமக்கு இன்பம் செய்பவரை நண்பர், அன்பர் என்றும், துன்பம் செய்பவரை வேண்டாதவர், பகைவர் என்றும் சொல்லுவது உலகியல். எனவே இன்பம் தருவது நட்பு என்றும், துன்பம் தருவது பகை என்றும் நூல்கள் கூறுகின்றன. குற்றம் துன்பம் பயப்பதால் அது நமக்குப் பகையாகிறது. ஆகவே நம்மிடமுள்ள குற்றம் குறைகளே நமக்குப் பகையாய்த் துன்பம் செய்கின்றது. எனவே, அவைகளை அறிந்து நம்மிடம் உண்டாகாமல் இல்லாமல் நீக்க வேண்டியது கடமையாகிறது. அதை வற்புறுத்துவதற்கே திருவள்ளுவர், “குற்றமே காக்க பொருளாகக் குற்றமே அற்றம் தரூஉம் பகை” என்று கூறுகிறார். முன்னே சொன்னபடி குற்றத்தைவிட நமக்குப் பகையாய்த் துன்பம் தருவது வேறே இல்லையாதலால், அதை நீக்குவதே நமது குறிக்கோளாக இருக்க வேண்டும் என்பதற்காகவே, குற்றமே காக்க பொருளாக என்று கூறுகிறார். இங்ஙனம், நம்மிடம் உண்டாகாமல் காக்க வேண்டிய குற்றங்கள் யாவை? அவை, செருக்கு, சினம் சிறுமை இவறல், மாண்பிறந்த மானம், மாணா உவகை என ஆறாகும் என்று திருக்குறள் கூறுகிறது. இவற்றில் முற்படக் குறிக்கும் செருக்கு, சினம், சிறுமை என்ற மூன்றில் சிறுமை என்பது காமம்; அதாவது ஆசை. பொருள்மேலும், பெண்ணுக்கு ஆண்மேலும், ஆணுக்குப் பெண் மேலும் உண்டாகிற ஆசை. எத்தகைய பெரியவனாயினும் இந்த ஆசைவழிச் செல்வானாயின், பொது மக்கள் எதிரில் பெருமை குன்றிச் சிறுத்துப் போவதால், அதனை ஆசையென்றோ காமம் என்றோ கூறாமல் சிறுமை என்று கூறுகிறார். தன்பால் உள்ள செல்வத்தாலும் பிறந்த பிறப்பாலும், பெற்றுள்ள பதவியாலும் பலர் மதிக்கும் கல்வியாலும் ஒருவனுக்குச் செருக்கு என்னும் குற்றம் உண்டாகிறது. சினம் அதாவது கோபம் குற்றம் என்று எல்லாரும் அறிந்தது. இம்மூன்றும் ஒருவனுடைய வாழ்வில் தன்னையறியாமல் தோன்றுபவையாதலால் இவை முதலில் எடுத்துக் கூறப்படுகின்றன. “செருக்கும் சினமும் சிறுமையும் இல்லார் பெருக்கம் பெருமித நீர்த்து” என்று திருவள்ளுவர் கூறுகிறார். செருக்கில்லாதவனை மக்கள் அனைவரும் நன்கு மதிப்பர்; சினமில்லாதவனை யாவரும் பரிந்து ஆதரிப்பர். ஆசை அற்றவனை எவரும் விரும்புவர். இதனால், செருக்கும், சினமும், ஆசையும் இல்லாதவர் செல்வம், மக்கள் ஆதரவு, புகழ் முதலிய நலங்களைப் பெருக அடைவர். அப் பெருக்கம் அவர்க்கேயன்றி அவரைச் சூழ்வுள்ள மக்களுக்கும் பெருமிதம் உண்டுபண்ணுவது உறுதி. அதனால், பெருக்கம் பெருமித நீர்த்து என்கிறார். இனி இச்செருக்கு முதலிய மூன்று குற்றங்களையும் அடுத்து, இவறல், பொய்யான மானம், பொல்லாத களிப்பு என மூன்று குற்றங்களைத் திருவள்ளுவர் கூறுகிறார். அவற்றுள், இவறல் என்பது கடுமையான பற்றுள்ளம்! அதாவது கடுஞ்சிக்கனம். பொய்யான மானம் என்பது தாழ்ந்து ஒழுக வேண்டிய தாய், தந்தை முன்னும் பிறந்தோர் சால்புடைய பெரியோர் முதலியோரிடத்திலும் தாழாமல் தலைநிமிர்ந்து நிற்பது. இதனால் அவருக்கு மாண்போ மதிப்போ உண்டாகாது; அதனால் மாண்பு இறந்த மானம் என்று திருவள்ளுவர் உரைக்கின்றார். தன்னைத் தவிர மற்றைய எல்லாரையும் இகழ்ந்து நகையாடிக் களிப்பது சிலரிடத்தே காணப்படும் குற்றம். அதைத் திருவள்ளுவர் மாணா உவகை என்று குறிப்பர். ஆக கடுஞ்சிக்கனம், பொய்யான மானம், பொல்லாத களிப்பு என்ற மூன்றையும் தொகுத்து, “இவறலும் மாண்பிறந்த மானமும் மாணா உவகையும் ஏதம் இறைக்கு” என்று திருக்குறள் கூறுகிறது. முறை செய்வதும் காப்பாற்றுவதும் தொழிலாகவுடைய தலைவனிடம் இந்தக் குற்றங்கள் இருக்கு மாயின், மக்கள் நன்மதிப்பும் நம்பிக்கையும் இன்றி நீங்குவர்; அவனுடைய தலைமையும் போய்விடும். அதுபற்றியே இம் மூன்றும் “ஏதம் இறைக்கு” என்று திருவள்ளுவர் கூறுகின்றார். ஏதம் என்பது குற்றம் அல்லது தீங்கு என்று பொருள். பொய்யான மானம் பொல்லாத எக்களிப்பு என்பவைகளைக் காட்டிலும் கடுஞ்சிக்கனம் உற்ற நண்பரையும் நெருங்கின உறவின ரையும் அருகில் சேரவிடாது பிரித்துவிடும். கடுஞ்சிக்கனம் என்ற குணமுடையவர், வயிறார உண்ணமாட்டார். கட்டாயம் செய்ய வேண்டிய கடமைகளையும் செவ்வையாகச் செய்யார்; தங்களுக் கும், தங்கள் உடைமைக்கும் பாதுகாப்பான செயல்களையும் செய்து கொள்ள நினையார்; இக்குற்றத்தால், சில நாட்களில் காப்பாக இருக்கும் மக்களும் உறவினரும் போற்றுகின்ற நண்பரும் சுற்றமும் நீங்கிவிடுவதால், கடுஞ்சிக்கனமாகத் தேடி வைக்கிற செல்வம் நிலைபெறாமல் சீரழிந்து தொலைந்து போகும். அது கண்டே, “செயற்பால செய்யாது இவறியான் செல்வம் உயற்பால தன்றிக் கெடும்” என்று திருவள்ளுவர் தெரிவிக்கின்றார். கடுஞ்சிக்கனமாக இருக்கும் இயல்பு ஒருவனுக்கு எப்படி உண்டாகிறது என்று திருவள்ளுவர் சிந்திக்கின்றார். தனக்கு என்ன துன்பம் வந்தாலும் தனக்காகக்கூடச் செலவு செய்யவாராத மனநிலை ஒருவனிடம் காணப்படுவதற்குக் காரணம், பொருள் தேடுங்கால் அவனுக்கு அதன்மேல் உண்டாகும் ஆசையும் அது வழியாக அப்பொருளை விட்டுப் பிரியமாட்டாத பற்றுமே ஆகும் என்று தெளிந்து, “பற்றுள்ளம் என்னும் இவறன்மை எற்றுள்ளும் எண்ணப்படுவ தொன்று அன்று” என்று கூறுகின்றார். இவறன்மை எனப்படும் பற்றுள்ளம் அதாவது உலோபத்தனம் என்பது தனியான குற்றம். செருக்கு, சினம் முதலிய மற்றைய குற்றங்கள் செய்கிறவனுக்கு ஓரளவும் மற்றவர்களுக்கு ஓரளவும் வருத்தம் செய்யும். பற்றுள்ளம் என்னும் இந்தக் குற்றம் செய்பவனையே கெடுத்து அழித்துவிடுவதால், குற்ற வகைகள் எதிலும் அடங்குவ தில்லை. அதனால் குற்றங்கள் எற்றுள்ளும் எண்ணப்படுவதொன் றன்று என்று கூறுகிறார். மக்களிடம் அமைந்து வாழ்க்கையைத் துன்பத்து உள்ளாக்கும் இக்குற்றங்கள் எவ்வாறு கெடுக்கின்றன? இதனை எண்ணுகிற திருவள்ளுவர் ஓர் உண்மையைக் கண்டு கூறுகின்றார். “அறிவுடையார் ஆவது அறிவார்” என்றாரல்லவா? இக்குற்றங்கள் ஆவதை அறியும் அந்த அறிவை மறைத்து விடுகின்றன. அதனால், அவர்கள் வருவது முன் அறிந்து காக்கும் வாய்ப்பை இழந்துவிடுகிறார்கள். மலை போன்ற செல்வம் இருப்பினும் வருவதறிந்து காவாத குற்றம், சிறு தீயால் பெரிய வைக்கோல் போர் எரிந்து சாம்பலாவது போலக் கெட்டழிந்து போம் என்கிறார். இதுபற்றியே அறிவுடையவர்கள் தங்கள்பால் ஒரு சிறு குற்றம் தோன்றினாலும் அதனால் வரும் பழிபாவங்களுக்கு அஞ்சி, அதனை மிகவும் பெரிதாகக் கருதுகின்றனர். அதனை, “தினைத்துணையாம் குற்றம் வரினும் பனைத்துணையாக் கொள்வர் பழிநாணு வார்” என்று திருவள்ளுவர் கூறுகிறார். அங்ஙனமாயின், இக்குற்றங்கள் நம்மிடத்தில் உண்டாகாமல் தடுப்பதற்கு திருவள்ளுவர் ஏதேனும் வழி சொல்லுகிறாரா? எனின், குற்றவியல்களைக் கண்டறிந்து சொல்லுபவர், அதைச் சொல்லாமல் இருப்பாரா? அறிவுடையவருக்கு தம்மிடத்திலும், பிறரிடத்திலும் உள்ள குற்றங்கள் நன்றாகத் தெரியும். குற்றங்களைக் கண்டால் திருத்து வதற்குத்தான் மனம் ஓடும். பிறருடைய குற்றம் கண்டு அதனை நீக்கி முறை செய்வது அரசனுக்கும், தலைவர்களுக்கும் கடனாகும். ஆனால், பிறர் குற்றத்தைக் கண்டு நீக்க முயல்பவர் தம்மிடத்தில் அத்தகைய குற்றம் இல்லாதிருக்க வேண்டும். குற்றமுடையவன் பிறர் குற்றத்தை நீக்க முடியாது. அதனால் வேந்தன் முதலில் தன் குற்றம் கண்டு நீக்கிக் கொண்டு பிறர் குற்றம் காண்பானாயின், பின்பு அவனிடத்தில் ஒரு குற்றமும் உண்டாகாது. இதனை, “தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றம் காண்கிற்பின் என்குற்ற மாகும் இறைக்கு?” என்று கூறுகிறார். இக்குற்றங்கள் எப்படி உண்டாகின்றன எனின், ஒவ்வொரு வனுக்கு தன்னை மற்றவனைவிடத் தாழ்வாக நினைப்பதில்லை. தன்னை உயர்வாகவே மதிப்பது இயற்கை. குற்றம் தோன்றுவதற்கு அது ஒரு வழி; அடுத்தபடியாக வினையே ஆடவர்க்கு உயிர் என்பர். அவ்வினைகளில் நன்மை விளைவதும் உண்டு; தீமை விளைவதும் உண்டு. “நன்றி விளைவும் தீதொடு வரும்” என்று நற்றிணையில் ஒரு பெண் கூறுகிறாள். ஆனால் வினைகளை செய்து புகழும் இன்பமும் காணும் பழக்கத்தால், தன்னை வல்லவனாக எண்ணும் மனநிலை தோன்றும்; எதையும் செய்யலாம் என்ற எழுச்சியும் உண்டாகும். அந்நிலையில் செய்யப்படும் வினையில் குற்றம் தோன்றி தீமை விளைவித்துவிடும்; அதனால், “வியவற்க எஞ்ஞான்றும் தன்னை; நயவற்க நன்றி பயவா வினை” என்று கூறுகிறார். பொருள்மேல் ஆசையும், காமமும், குற்றம் வருவதற்கு வழியாகும். இவையிரண்டும் மற்றவைபோல வேரோடு களைந் தெறியக் கூடியவை அல்ல; இவற்றை நுகர்ந்தே கழிக்க வேண்டும்; அதையும் பிறர் அறியாதபடி நுகர வேண்டும்; அது மிகவும் வல்லவர்க்குத்தான் முடியும். அவர்களை எத்தனை நுண்ணிய சூழ்ச்சி படைத்த பகைவராலும் ஒன்றும் செய்ய முடியாது. இதனை, “காதல காதல் அறியாமை உய்க்கிற்பின் ஏதில ஏதிலார் நூல்” எனத் திருக்குறள் கூறுகிறது. எத்தகைய பெரியவரும் தமது விருப்பத்தையும் காதலையும் எவ்வகையாலும் பிறர் அறியாமல் நுகர்வது என்பது அருமை என்பதற்காகவே அறியாமை உய்க்கிற்பின் என்று திருவள்ளுவர் உரைக்கின்றார். 10. தகுந்த துணை தனி மனிதனுடைய அறிவு ஒரு சுருங்கிய எல்லைக்குள் அடங்குவது. அன்றியும், அது, கல்வி, கேள்விகளின் அளவையும் வாழ்க்கைச் சூழ்நிலையின் தன்மையையும் சார்ந்திருப்பது. அவன் பரந்த உலகில் பல வேறுபட்ட மக்களிடையே வாழ வேண்டி யிருப்பதால் அதற்கு வேண்டிய அறிவும் பரந்த பண்புடையதாக வேண்டும். அப்பண்பு உண்டாவதற்கு அறிவும் ஆற்றலும் உடைய பெரியோர்களின் துணை இன்றியமை யாததாகும். வாணிகம் செய்யும் ஒருவனுக்கு முதல் வேண்டியிருப்பதுபோல, நன்கு வாழ விரும்புபவனுக்குப் பெரியோர்களின் துணைதான் முதலீடு. முதல் இல்லை யானால் வாணிகமும் இல்லை; ஊதியமும் இல்லை; அது போலப் பெரியோர்களின் துணையில்லாதவனுக்கு வாழ்வும் இல்லை;நிலைபேறும் இல்லையாம். அது விளங்கவே, “முதல்இலார்க்கு ஊதியம் இல்லை மதலையாம் சார்புஇல்லார்க்கு இல்லை நிலை” என்று திருவள்ளுவர் கூறுகின்றார். எதனையும் தூண் போலத் தாங்குவதால் பெரியோர்களின் துணையை மதலையாம் சார்பு என்று குறிக்கின்றார். இத்தகைய பெரியோர்களின் இயல்பைத் தெரிந்தால்தான் அவர்களிடையே துணையின் சிறப்பை நாம் அறிய முடியும். இப்பெரியவர்கள் பலதிறமாக இருப்பர். அறம் பலவற்றையும் உணர்ந்து உலக வாழ்வில் தோய்ந்து முதிர்ந்து பண்பட்ட பெரியோர்களும் உண்டு. அவர்களுடைய அறிவின் திறத்தை இயல்பை அறிந்து அவரது நட்பைப் பெறுதற்கேற்ற நெறியைத் தேர்ந்து அவ்வழியில் அவரது துணையைப் பெற வேண்டும். அதனை, “அறன்அறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை திறன்அறிந்து தேர்ந்து கொளல்” என்று தெரிவிக்கின்றார். இவர்களின் துணை அறிவு வடிவாய் இருப்பது; அதனால், அறிவுடையார் கேண்மை என்று குறிக்கின்றார். நமக்கு இடர் வந்தபோது தாங்கி அதனை நீக்கி, மேற் கொண்டு துன்பங்கள் வராதபடி முன்னறிந்து துணைபுரியும் பெரியோர்கள் சிலர். அவரது துணைசெயல் வடிவில் இருப்பது பற்றி, அதனை விரும்பிப் பெற வேண்டும். அதற்காகவே, “உற்றநோய் நீக்கி உறாமை முற்காக்கும் பெற்றியார்ப் பேணிக் கொளல்” என்று அறிவுறுத்துகின்றார். வேறு சிலர், நாம் நெறிமயங்கித் தவறு செய்யும் காலத்தில் செவி சுடத்தக்க சொற்களால் இடித்துரைக்கும் இயல்புடையவ ராவர். அவருடைய துணை ஒரு காலும் ஒரு கேடும் உண்டாகாமல் காக்கும் நிலைத்த துணையாகும். ஆவது பற்றியே அப்பெரிய வர்களை இடிக்கும் துணையென்றும், அவர்களின் துணை பெற்ற நன்மக்களை ஒருவராலும் கெடுக்க முடியாது என்றும் அறுதியிட்டு, “இடிக்கும் துணையாரை ஆள்வாரை யாரே கெடுக்கும் தகைமை யவர்?” என்று கிளந்துரைக்கின்றார். இங்ஙனம் மூத்த அறிவும், முன்னறிந்து காக்கும் தன்மையும், இடித்துரைக்கும் இயல்பும் வாய்ந்த பெரியோர்களின் துணையும், படைபொருள் ஆகியவற்றால் தானே பயன்படும். ஆதலால், பெரியோர் துணையை விடப் படை முதலியவற்றின் வலிமை தானே பெருந்துணை என்றொரு கேள்வி எழுகிறது படைவன்மை, பொருள், வன்மை ஆகிய வன்மைகளை ஆராய்ந்து நோக்கினால் இவ்வன்மைகள் எல்லாவற்றிலும் பெரியோர்களின் துணையே தலைசிறந்த வன்மையாகும். காலமும் கருவியும் இடமும் வாய்ந்த போதுதான் படை முதலியவற்றின் வன்மை செயற்பட்டுப் பயன் படும். அப்படைக்கு ஊக்கமும் பொருட்கு ஆக்கமும் நல்குவதே இப்பெரு மக்களின் துணை. ஆதலால் பெரியோர்களின் துணை போல வேந்தனுக்கு வன்மை தருவது வேறில்லை. அதனால், “தம்மின் பெரியார் தமரா ஒழுகுதல் வன்மையுள் எல்லாம் தலை” என்று கூறுகிறார். மேலும், நாம் வாழும் உலகமே பெரியோர்களின் வழியிலே செல்வது. “உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே” என்ற பழமொழியே இதற்குச் சான்று. உலக நிகழ்ச்சிகளைக் கண்டு உதிர்காலத்தின் இயல்பை உணர்ந்து மக்களுக்கு வழிகாட்டிடுவதால், உலகம் அவர்களைக் கண் போலக் கருதி ஒழுகுகிறது. அதனால் உலகம் காக்கும் வேந்தன் அவர்களது நட்பின் நலத்தை அறிஞர்களோடு ஆராய்ந்து தெளிந்து தனக்குப் பிரியாப் பெருந் துணைவராகக் கொள்வது கடனாகும். அது பற்றியே, “சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன் சூழ்வாரைச் சூழ்ந்து கொளல்” என்று திருவள்ளுவர் வற்புறுத்துகிறார். நாட்டில் வாழும் மக்களில் பெரியோர்களின் துணையை எடுத்துக் கூறுகின்றவர் ஏனை மக்களும் உள்ளனரே அவர்களை ஏன் ஒதுக்குகிறார் என்றொரு வினா எழுகிறது. பெரியோர்க்கு மாறாக ஒரு கூட்டம் இயக்கத்தான் செய்கிறது. அதனைச் சிற்றினம் என்று கூறுவர். அதனைக் கண்டாலே பெரியோர் அஞ்சி நீங்குவர். ஏனெனில், ஒட்டுவார் ஒட்டி போல அருகில் நெருங்கினால் நம்மைப் பற்றிக் கொண்டு சுற்றத்தாராய்ச் சூழ்ந்து கொள்ளும். இது பற்றியே, “சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான் சுற்றமாச் சூழ்ந்து விடும்” என்று திருவள்ளுவர் கூறுகிறார். சிற்றினமும் மக்களினம்தானே; அது சுற்றமாய்ச் சூழ்ந்து கொள்வதற்காகவா அதனை வெறுப்பது எனின், எது பெரியோர் இனம் போல நன்மை செய்யாமல் துன்பத்தையே உண்டு பண்ணு கிறது. நெஞ்சில் தீய நினைவையும், செயலில் தீய செயலும் தோற்றுவித்துக் கெடுக்கிறது. அது கண்டே, “நல்லினத்தின் ஊங்குந் துணையில்லை தீயினத்தின் அல்லற் படுப்பதூஉம் இல்” என்று கூறுகிறது. மக்கள் உயிர்க்கு அறிவு, மனம் என்ற இரண்டும் சிறந்த உட்கருவிகள். நல்லதன் நன்மையும் தீயதன் தீமையும் உள்ளவாறு கண்டுகொள்வது அறிவு. அறிவுக்கும் உடம்பிலுள்ள கண், காது முதலிய பொறிகளுக்கும் இடையில் நின்று அறிவு வழியிலும் பொறி வழியிலும் இயங்குவது மனம். அறிவு தன்னிலையில் தூய்மை யானது; ஆனால் எதனைச் சார்கிறதோ அதன் இயல்பை அடையும் தன்மை வாய்ந்தது. அது பற்றியே, சார்ந்ததன் வண்ணமாம் தன்மையுடையது அறிவு என்பர். இதனைத் திருவள்ளுவர், “நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு இனத்தியல்ப தாகும் அறிவு” என்று கூறுகிறார். நீர் நிலத்திலே காணப்படுவது போல, மக்களும் தத்தம் இனத்திடையே காணப்படுகின்றனர். நீருக்குத் தன்னளவில் நிறமோ சுவையோ கிடையாது. ஆயினும் அது சார்ந்துள்ள நிலத்தின் நிறத்தையும், சுவையையும் அடையும். அதுபோல மக்கள் அறிவும் சார்ந்த இனத்தின் இயல்பால் பெருமையும், சிறுமையும் வருகிறது. ஒருவனுடைய பேச்சிலும், செயலிலும் அவனுடைய அறிவின் இயல்பைக் காண்கிறோம். பேச்சுக்கும், செயலுக்கும் நேரிய கருவி மனம்; அதனால் ஒருவனது அறிவு அவன் மனத்தில் இருப்பது போலத் தோன்றும். ஆனால் நீரின் இயல்பை நிலம் மாற்றுவது போல ஒருவனுடைய அறிவு அவன் சார்ந்துள்ள இனத்தால் மாற்றம் அடைகிறது. இதனை, “மனத்து உளதுபோலக் காட்டி ஒருவற்கு இனத்துள தாகும் அறிவு” என்று திருவள்ளுவர் தெளிவுபடுத்துகிறார். இதனால் அறிவு வெளிப்படுதற்கு மனம் இடமாகுமேயன்றி மனமே அறிவாவதில்லை. அறிவு தூயதானால் மனம் அதன்வழி நின்று தூய்மையுடன் இயங்கும்; பேச்சும் செய்கையும் தூய்மையாக - நல்லவையாக - இருக்கும். ஆகவே ஒருவனுடைய மனத் தூய்மைக்கும், செவியின் தூய்மைக்கும் பற்றுக்கோடு அறிவின் தூய்மை என்று அறிகிறோம். அறிவுக்குத் தூய்மை தருவது அது சார்ந்துள்ள இனம் என்பதை முன்பே கூறினார். ஆதலால், “மனம்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும் இனம்தூய்மை தூவா வரும்” என்று கூறுகிறார். மனம் அறிவின்வழி நிற்பதாயினும், பொறி புலன்களின்வழி நின்று உணர்வுகளைக் கொணர்ந்து ஊட்டி அறிவை வளர்க்கும் தனிச்சிறப்புடையது. அது பற்றியே திருவள்ளுவர் “மனத்தானாம் மாந்தர்க்கு உணர்ச்சி” என்று கூறுகிறார். ஆனால் மனம் பொறிக ளோடு கூடிச் செயல்படும் பொது அறிவு கலந்து கொண்டு தனக்குச் சார்பான இனத்தின் பெருமை சிறுமைகளைக் காட்டிவிடும். ஒருவன் அறிவுக்குப் பெரியோர் சார்பு இருக்குமானால், அவன் தக்கோன் என்று பாராட்டப்படுகிறான். சிற்றினத்தின் சார்புடைய னானால், மக்களால் கீழோனாகப் பழிக்கப்படுவான். அதுபற்றியே, “மனத்தான்ஆம் மாந்தர்க் குணர்ச்சி, இனத்தான்ஆம் இன்னான் எனப்படும் சொல்” என்று கூறுகின்றார். எனினும், மனம் வழி நிற்பது போல, அறிவையடக்கித் தன்வழி நடக்கச் செய்யும் தன்மையும் மனத்துக்கு உண்டு என்றா லும், அறிவின் சார்பாகிய இனத்துக்குள்ள வலிமை மனத்துக்குக் கிடையாது. மனம் அறிவை நல்வழியில் செலுத்துமாயின், இனமும் அதற்கு ஏற்ப நலமுடையதாய் இருக்க வேண்டும். “மனநலம் நன்கு உடையாராயினும் சான்றோர்க்கு இனநலம் ஏமாப் புடைத்து” என்கிறார். மனம் நல்லதாய்த் தன்னை இயக்கும் அறிவையும் தன்வழியில் நிற்கச் செய்வதாயின், சான்றாண்மை வந்து அமைந்துவிடும். அதனால்தான் மனநலம் மிக உடையவரைத் திருவள்ளுவர் சான்றோர் என்று சிறப்பிக்கின்றார். இத்தகைய மனநலமும், இனநலமும் ஒருங்கு பெறுவதுதான் மக்களுடைய நோக்கமாக இருக்கவேண்டும். மனநலம் இவ்வுலக வாழ்விற்கு வேண்டிய செல்வத்தை நல்கும்; இனநலம் எல்லாப் புகழையும் எய்துவிக்கும் என்பாராய், “மனநலம் மன்னுயிர்க்கு ஆக்கம்; இனநலம் எல்லாப் புகழும் தரும்” என்று கூறுகிறார். அதோடு நில்லாமல், மனநலம் உடையவர்க்கு நல்ல பேரும் புகழும் உண்டாகும்; இன நலத்தால் அவர்கள் செய்யும் செயல் அனைத்தும் நன்மையாகவே முடியும் என்று கூறுலுற்று, “மனம்தூயார்க்கு எச்சம்நன் றாகும் இனம்தூயார்க்கு இல்லைநன் றாகா வினை” என்று உரைக்கின்றார். 11. செயல்முறை உலகில் வாழ்கின்ற நாம் ஏதேனும் வேலை செய்து கொண்டே இருக்கிறோம். நினைப்பதும், பேசுவதும், செய்வதும் எல்லாம் வேலைதான். வேலை என்ற சொல்லை இலக்கண நூல்கள் வினை யென்று கூறும். சமயநூல்கள் குறிக்கும் வினையும் இந்த வேலை யைத் தான். சங்ககால இலக்கியங்களும், திருக்குறள் முதலிய அறநூல்களும் நாம் செய்யும் செயல்கள் யாவற்றையும் வினை யென்றே குறித்துள்ளன. இந்த வினை காரணமாகத்தான் நாம் உலகில் பிறக்கிறோம். வினை செய்து வாழ்கிறோம். வினை செய்வதால்தான இறக்கின் றோம். நம் உடம்பு “வினையின் வந்தது வினைக்கு விளைவாயது” என்று மணிமேகலை கூறுவதும் இக்கருத்தை உட்கொண்டுதான். இப்போது உலகில் பெறுகின்ற இன்ப துன்பங்கட்குக் காரண மாய் நாம் முன்பு செய்த செயல்வகையாக உள்ளவற்றை வினை என்றும், வாழ்வதற்காக, வாழ்வில் பொருளுக்காகவும் புகழுக்காக வும் செய்கின்ற செயல்களை வேலை என்றும் வழங்குகிறோம். உலகில் மக்களையும் அவர்கள் செய்யும் வேலைகளையும் பார்த்தால் வேலை செய்யா ஆணோ, பெண்ணோ இல்லை. செய்யப்படும் வேலை எல்லாம் உற்று நோக்கினால், அவை யாவும் உண்ணும் உணவுக்கும், உடுக்கும் உடைக்கும், இருக்கும் இடத்துக் கும் நோய் வந்த போது மருந்துக்குமாகவே உள்ளன. வேலையால் வருகின்ற பயனை அதன் அளவை நோக்கி இவ்வேலைகள் பெரிய வேலை, சிறு வேலை என்று பேசப்படுகின்றனவே அன்றி வேறுபாடு இல்லை. இவ்வாறு பார்க்கின் கோடிக்கணக்கில் வருவாய் தரும் வேலையும், பைசா கணக்கில் வருவாய் தரும் வேலையும் வேலை என்றுதான் ஆகிறது. ஆகவே நாடாளும் அரசனும் வேலை செய்கிறவன் தான்; அவன் அரண்மனையில் கூட்டிப் பெருக்கும் வேலைக்காரனும் வேலை செய்கிறவன்தான். அரசனுக்குரிய வேலையை முறை செய்தல், காப்பாற்றுதல் என்றும், இயற்றல், ஈட்டல், காத்தல், காத்தவற்றை வகுத்தல் என்றும் திருவள்ளுவரே கூறுகின்றார். இவ்வேலை ஒவ்வொன்றும் காலம் நோக்கியும், இடம் பற்றியும் செய்யத் தக்கதும், தகாததும் என இருவகைப்படுகின்றது. செய்யத்தக்கதைச் செய்தே தீரவேண்டும். செய்யாவிட்டால் துன்பம் உண்டாகும். செய்யுமிடத்துத் தவறான முறையில் செய்தா லும், செய்யத் தகாததைச் செய்தாலும் துன்பம் துன்பமேயாகும். இதுபற்றியே திருவள்ளுவர், “செய்தக்க அல்லதுசெயக் கெடும் செய்தக்க செய்யாமை யானும் கெடும்” என்று தெரிவிக்கிறார். இனி, ஒரு வேலை செய்யத்தக்கது என்று கண்டவுடனே செய்ய முற்படலாகாது. அதைப் பற்றி நன்கு சிந்தித்துச் செயலில் இறங்கவேண்டும். இறங்கின பிறகு அதற்கு வேண்டியவைகளை எண்ணிக் கொள்ளலாம் என்று சிந்திப்பதைவிட நினைப்பது தவறு. சோம்புகின்றவர்கள் உண்டு; அது குற்றம். அதனை, “எண்ணித் துணிக கருமம்; துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு” என்று திருக்குறள் கூறுகிறது. ஒரு வேலை செய்யத் தக்கது என்று பட்டபின் எண்ண வேண்டியவை யாவை என்ற கேள்வி எழுகிறது. ஒரு வேலையை எடுத்துக் கொண்டால் அதற்கு ஆகும் செலவு, அதனால் பெறப் படும் வரவு, செலவுபோக மிஞ்சும் ஊதியம் ஆகிய இவைகளை எண்ணிப் பார்க்க வேண்டும். உழைப்பவனுக்கு ஊதியமில்லை என்றால் அது பயனற்ற வேலையாய்விடும். அதற்காகவே, “அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும் ஊதியமும் சூழ்ந்து செயல்” என்று திருவள்ளுவர் சொல்லுகிறார். வேலையை மேற்கொண்டு தொடங்குதற்கு முன்பே அதற் காகும் செலவு வரவுகளை எங்ஙனம் எண்ணுவது என்று கேட்கலாம். அதுபோன்ற வேலைகளைச் செய்து பயன்கண்ட நண்பர்களைக் கலந்து ஆராய்தல் வேண்டும். ஆராய்ந்து செய்தால் எல்லாம் எளிதில் முடியும். முடியாதது ஒன்றும் இராது. இதனை, “தெரிந்த இனத்தொடு தேர்ந்துஎண்ணிச் செய்வார்க்கு அரும்பொருள் யாதொன்றும் இல்” என்று திருக்குறள் உரைக்கின்றது. வேலையின் பல்வேறு பகுதிகளையும், நுட்பங்களையும் தெரிந்த உண்மையான நண்பர்களையும் சுற்றத்தாரையும் “தெரிந்த இனம்” என்று குறிக்கின்றார். அவர்களோடு கலந்து அவர்கள் கூறுவதைக் கேட்பதோடு தானும் உடனடியாக எண்ணிப் பார்க்க வேண்டும். அதற்காகத்தான் “தெரிந்த இனத்தொடு தேர்ந்து” என்பதோடு நில்லாமல் “எண்ணிச் செய்வார்க்கு” என்று குறட்பா கூறுகிறது. ஒழுங்காய் வேலை செய்து இன்பமாக இருப்பவரைக் கண்டு மகிழ்வது இன்றைய மக்கள் சூழலில் பொதுவாகப் பெரும்பாலும் இல்லை. பொறாமையும், பகைமையும் கொண்டு குற்றம் குறை ஏற்படின் தூற்றுவதில்தான் இன்பம் காணப்படுகிறது. ஆகையால் அரசனாயினும் வேலைக்காரனாயினும், தெரிந்த இனத்தாரோடு ஆராய்கின்றபோது, எடுத்துக்கொண்ட வேலைக்கு ஏற்ற காலம், கருவி, இடம் செலவு, வரவு முதலிய கூறுகளை வகைவகையாகக் கூறுசெய்து ஒவ்வொன்றையும் நன்றாக ஆராய்தல் வேண்டும். இல்லையானால், பகைவர் என்ற முட்செடியைப் பாத்தி கட்டி நீரூற்றி வளர்ப்பதுபோல ஆகும் என்று சொல்லுகிறார் திருவள்ளுவர். “வகைஅறச் சூழாது எழுதல் பகைவரைப் பாத்திப் படுப்பதோர் ஆறு” ஒழுங்குற வேலை செய்பவனுக்கு மானவுணர்வு மிகுந் திருக்கும், செய்யும் செயலில் எங்கே குற்றம் தோன்றி பிறர் இகழ்ச்சிக்கு இடமாய்விடுமோ என்று அஞ்சியவண்ணம் இருப்பர்; அதனால் அவர்கள் மேலே சொன்னபடி வகையற ஆராய்ந்து தெளியாத வேலைகளைத் தொடங்கவே மாட்டார்கள். ஒரு வேலை செய்யத் தக்கது என்று தெளியப் பட்டாலும், செய்பவர் தகுதிக்கும், நிலைக்கும் ஒத்ததாகவும், உலகம் நன்று என்று கொண்டு பாராட்டத் தக்கதாகவும் இருக்கவேண்டும். அதற்காகவே, “எள்ளாத எண்ணிச் செயல்வேண்டும்; தம்மொடு கொள்ளாத கொள்ளாது உலகு” என்று கூறுகிறார் வள்ளுவர். இனி மேற்கொண்ட வேலையின் கூறுகளையும் அவற்றின் இயல்புகளையும் தெளிவாக அறிந்திருந்தாலும் ஒவ்வொரு பகுதிக் கும் செயல்முறை வேறுபடும்; செய்பவரும் வேறு வேறாவர். ஆதலால், இவ்வேறுபாடுகட்கு ஏற்ப உரியவற்றை முறைப்படி செய்து வேலையைத் தொடர்ந்து செய்ய வேண்டும். இந்த ஏற்பாட்டை நேரிய வழியில் செய்யாவிடின், குற்றமும் குறையும், தோன்றி மிக்க வருத்தத்தை விளைவிக்கும். பின்பு எத்தனை பேர் வந்து தாங்கிச் செம்மை செய்தாலும் குறை குறையாகவே இருக்கும். இதற்காகவே, “ஆற்றின் வருந்தா வருத்தம், பலர்நின்று போற்றினும் பொத்துப் படும்” என்று திருக்குறள் கூறுகிறது. இனி, மேற்கொண்ட வேலையின் ஒவ்வொரு பகுதிக்கும் நிலைக்கும் தக்க ஆட்கள் வேண்டும். அவ்வவ் வேலைகளைச் செய்து பயின்றவராயினும், தகுதியிலும், திறமையிலும் எல்லாரும் ஒரு தன்மையராக இருக்கமாட்டார்கள். ஒருவர்க்கொருவர் ஓரளவு மிக்கும் குறைந்தும் இருப்பர்; பண்பு செயல்களிலும் வேறுபடுவர். இவர் அனைவரையும் சமமாகக் கருதுவோமாயின், வேலையின் செயற்பாடு சிறப்பாக இல்லாமல் போய்விடும். அவரவரின் தகுதியும், திறமையும், பண்பாடும் தனித்தனி நன்கு கண்டு அவை கட்கு ஏற்ற வகையில் மதிப்பளித்துப் போற்ற வேண்டும். அதுதான் அவர்கள் மனதை வேலையை நேர்மை வழியில் செய்யுமாறு பிணிக்கவல்லதாகும். இதனைக் கருத்தில் கொள்ளாமல் எல்லார்க்கும் எத்தனை நலங்களைச் செய்தாலும் தவறுண்டாகும். இதுபற்றியே, “நன்றாற்ற லுள்ளும் தவறுண்டு அவரவர் பண்பறிந்து ஆற்றாக் கடை” என்று திருவள்ளுவர் சுருக்கமாகக் காட்டித் தெரிவிக்கிறார். இதுதான் வேலை வாங்கும் மேலாளரிடம் இருக்கவேண்டிய மதிநுட்பம். இத்தகைய செயல் முறைகளில் தெளிந்த அறிவுடையார் என்று வேறு சிலர் தாம் செய்ய நினைக்கும் வேலைகளைப்பற்றி எளியன வாய், ஆய்ந்து வகுக்கும் திட்டப்படி கைகூடுவனவாகவும் மிக்க ஆக்கம் தருவனவாகவும் தோன்றும். தொடங்கி நடத்துங்கால் முதலையே விழுங்கி முன் நிற்பவர்களைப் பேதைகளாக்கி மற்றவர் இகழ்ந்து பேசும் அளவுக்கு இழிவையும் அவர்கட்கு உண்டாக்கு வதுண்டு; அத்தகைய வேலைகளை ஒருகாலும் தாமும் ஊக்கமோடு மேற்கொள்ள மாட்டார்கள். பிறரையும் செய்யுமாறு ஊக்கப்படுத்த மாட்டார்கள். அதுபற்றியே, “ஆக்கம் கருதி முதல்இழக்கும் செய்வினை ஊக்கார் அறிவுடை யார்” என்று திருவள்ளுவர் கூறுகிறார். முதலுக்குக் கேடில்லாமல், கால மாறுபாட்டால் ஊதியத்தின் அளவில் குறைவு தோன்றக் கண்டு சோர்வடையும்போது ஒரு முறைக்கு இருமுறை ஊக்கப்படுத்துவதுதான் அறிவுடையோர்க்குத் தகுதி. முதலுக்கே அழிவு தருவதாயின் அவ்வேலையைச் செய் வதற்கு அறிவுடையோர் தாமும் ஊக்கம் கொள்ள மாட்டார்; பிறரையும் ஊக்கமாட்டார். அதனால் தான், முதல் இழக்கும் செய்வினை ஊக்கார் அறிவுடையார் என்று மொழிகின்றார். 12. தொழில் நுணுக்கம் ஒரு நாட்டின் செல்வ வளத்துக்கு உழவும், தொழிலும் சிறந்த வருவாய்கள். நிலத்தில் பொருள் விளைவிப்பது உழவு; உழவுக்குரிய கருவிகளையும் விளையும் பயிர்க்கு வேண்டும் எரு வகைகளையும், உணவு, உடை, உறையுள், கல்வி, மருந்து, போக்குவரவு முதலியவற் றிற்கு வசதி தரும் கருவிகளையும் புதிய புதிய வகையில் செய்து தருவது தொழில். தனிக் குடும்ப அளவில் நில்லாது மக்களினம் முழுதும் பயன்படும் அளவில் உழவும், தொழிலும் பொருள்களைப் பெருத்த அளவில் படைத்துத் தரவேண்டியிருத்தலால், இத் தொழில்கள், செம்மையான முறையில் நிலைபெற அமைதற்குரியவா கின்றன. இவற்றின் அமைப்புக்கு அரசும் மக்களும் முதல்வராவர். ஆகவே, இத்தொழில் வகைகளைச் செய்யக் கருதுவோர், முதற்கண் தங்கள் பொருள் வலிமையையும், தொழிற்கு வேண்டும் செல்வ வலிமையையும், துணை செய்பவர் வலிமையையும், இவற்றைக் கெடுக்கக் கருதும் பகைவர் வலிமையையும் கண்டு சீர்தூக்கிச் செய்வது தலையாய கடன். இதனைத் திருவள்ளுவர், “வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும் துணைவலியும் தூக்கிச் செயல்” என்று கூறுகிறார். வினை என்பது தொழில். இங்ஙனம் வலியளவறிந்து தொழில் ஒன்றைச் செய்யத் தலைப்படுங்கால் அது தம் எல்லையில் இயலக்கூடியதா, அதற் கேற்ற அறிவு நிறைந்துளதா என்பதை ஆராய்வது அடுத்து நிற்கும் செயல். தொழிலின் இயல்பும் அது தமக்கு இயலக்கூடிய தன்மை யும் தெரிந்துகொள்வது மட்டும் போதாது; அதனை முறையே இயக்குதற்கேற்ற தொழிலறிவும், இனிது நடத்துதற்கேற்ற செயலறி வும் தம்மிடம் உண்டா என்று ஆராய்ந்து காணவேண்டும். கண்டு தெளிந்த பின் தொழிலின் கருத்தூன்றித் திண்மையோடு நிற்க வேண்டும். அதன் பெருக்கம் கண்டு மலைப்பதும், சுருக்கம் கண்டு சோர்வதும் இன்றி விடாது தொடர்ந்து செல்வதுதான் வெற்றி. இதுபற்றியே, “ஒல்வது அறிவது அறிந்துஅதன் கண்தங்கிச் செல்வார்க்குச் செல்லாதது இல்” என்று திருவள்ளுவர் கூறுகிறார். இங்ஙனம் மேற்கொண்டே தொழில் நன்கு நடைபெற்றுப் பயன் விளைவிக்குமிடத்து, உதவி நாடி வருபவர் உண்டு. ஒருவர்க் கொருவர் உதவி வாழ்வதுதான் வாழ்வு. உதவி செய்பவர் தமது அளவறிந்து அதற்கு ஒத்த நிலையில் பிறர்க்குப் பொருளை ஈதல் வேண்டும். அதுதான் பொருள் வலி குறையாமல் நின்று நிலவுதற்கு உரிய வழியாகும். இதனை எண்ணியே, “ஆற்றின் அளவறிந்து ஈக அதுபொருள் போற்றி வழங்கும் நெறி” என்று கூறுகிறார். பொருள் இருப்பது ஒன்றையே நோக்கி அளவு நோக்காமல் ஒருவன் செலவும் உதவியும் செய்வானாயின், அப்பொருளும் இருப்பதுபோலத் தன்னைக்காட்டி முடிவில் இல்லையாய் வறுமையை எய்துவிக்கும். நேற்றுவரையிற் பெருஞ்செல்வராய்க் காட்சி அளித்தவர் இன்று வறியராய்த் துன்புறுதற்கு இதுவே காரணம். இதற்காகத்தான், “அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல இல்லாகித் தோன்றாக் கெடும்” என்று திருக்குறள் அறிவிக்கிறது. இப்பொருளுக்கு வருவாய் தொழில்; அத்தொழில் காலத்தைச் சார்ந்தது. காலமோ எப்போதும் மாறிக் கொண்டே இருப்பது. தனக்குரிய காலம் வரும்போது தான் தொழிலும் வளம் பெறும். அதனால்தான் சில காலத்தில் நடக்கும் தொழில் வேறு காலங்களில் நடப்பதில்லை. விதைக்கும் தொழில் அறுவடைக் காலத்தில் நடவாது. மழைக் காலத்தில் நடப்பது வேனிற்காலத்தில் பயன்படாது. காலம் அறிந்து செய்யும் தொழில்தான், இடையறாமல் பொருளைத் தந்துகொண்டிருக்கும். அதுபற்றித்தான், “பருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினைத் தீராமை ஆர்க்கும் கயிறு.” என்கிறது வள்ளுவம். செல்வ மகளான திரு, ஓரிடத்தும் நில்லாமல் நீங்கியவண்ணம் இருப்பாள்; அவளை நீங்காமல் பிணித்து ஓரிடத்தே நிறுத்தும் கயிறு காலமறிந்து செய்யும் தொழிலன்றி வேறில்லை. அதனை விளக்கவே திருவினைத் தீராமை ஆர்க்கும் கயிறு என்று கூறுகிறார். எதனையும் காலமறிந்து செய்யும் அறிஞர் ஒவ்வாக் காலத்தில் ஒன்றும் இல்லாதவர்போல ஒடுங்கியிருப்பர். காலம் வந்தவுடன், அவர் செயல்படுவது தெரியாது. பொருளைக் குவிப்பது தெரியாது. காலம் கழிவதற்குள் மேற்கொண்ட வேலையை முடித்து வெற்றி யோடு விளங்குவார்கள். அதனை மீன் வேட்டம் புரியும் கொக்கின் மேல் வைத்து, “கொக்கொக்கக் கூம்பும் பருவத்து, மற்றதன் குத்தொக்க சீர்த்த விடத்து” என்று திருவள்ளுவர் சொல்லுகிறார். அரிசியும் பருப்பும் உண்டானால் அடை மழையிலும் மணம் நடத்தலாம் என்பது பழமொழி. அதாவது ஆட்படையும் ஆற்றலும் இருந்தால் காலம் பார்க்க வேண்டியதில்லை என்று சிலர் கூறுவர். அவர்களுக்குக் காலத்தின் சிறப்புத் தெரியாது என்று சொல்லுகிறார் திருவள்ளுவர். கூகைகள் கூட்டமாய் வாழ்பவை; இரவில் அவற்றால் ஒன்றும் செய்ய முடியாது. அதைக் காட்டி, “பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும் வேந்தர்க்கு வேண்டும் பொழுது” என்று கூறுகிறார். பெரும்படை உடையராயினும், காக்கைக்குப் பகற்காலம் வேண்டும் என்று இதனால் விளக்குகின்றார். காலமல்லாக் காலத்தில், கடல்போன்ற படைகொண்டு சென்றாலும் வேந்தர் காக்கையின் கூட்டம் இரவில் கூகையால் கொல்லப்படுவதுபோல வெற்றி பெற மாட்டாமல் வீழ்வர் என்பது இக்குறட்பாவின் கருத்து. ஆனால், காலம் பொருந்தாமை கண்டு ஒடுங்கியிருக்கும் போது மனதைச் செம்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். அவ்வாறின்றி ஒடுங்கியிருக்கும் போது மனநிலையைக் கலக்கக் கூடிய எண்ணங்கள் எழுந்து பெருகிப் பெருங்கலக்கத்தை உண்டு பண்ணும். மேற்கொண்ட தொழில் சுருங்கி வலியிழந்து போன தாகவும் பொய் நினைவுகள் தோன்றி அலைக்கும். அவற்றிற் கெல்லாம் இடம் கொடுக்காமல் மேல் செய்ய வேண்டியவற்றைத் தெளிவாகச் சிந்தித்துக் காலமே நோக்கி மனத்தைத் திட்பமுடைய தாக நிறுத்த வேண்டும். அதுபற்றியே திருவள்ளுவர், “காலம் கருதி யிருப்பர் கலங்காது ஞாலம் கருது பவர்” என்று கூறுகிறார். ஞாலம் கருதுவதாவது, உலகில் உழைப்பால் உயர்ந்து நிலைத்த புகழ் நிறுவுவது. தொழில் செய்வதற்கு இதுகாறும் சொல்லிய வலியும், காலமும் அறிந்தால் மாத்திரம் போதாது. அதனை நடத்துவதற்கு ஏற்ற இடம் அறிய வேண்டும். எத்தகைய தொழிலுக்கும் இடம்தான் ஆதாரம். தொழிலுக்கு முதனிலை கூற வந்த தொல்காப்பியர் உறுப்பாகிய தொழிலையும், அதனைச் செய்பவனையும் அதனால் செய்யப்படும் பொருளையும் கூறி அடுத்துத் தொழிலைச் செய்வதற்கு இன்றியமையாமை விளக்க நிலம் கருவி காலம் என்ற மூன்றையும் முறையே கூறினார். திருவள்ளுவரும் தொழிலுக்கு வேண்டிய வலியும், காலமும் தெளிந்துகொண்டாலும், இடங் கண்ட பின்பே தொடங்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறார். “தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க; முற்றும் இடம்கண்ட பின்னல் லது” என்று கூறுகிறார். அரசர்க்குரிய தொழில்களில் போர்த்தொழில் பெரிதாகை யால் அதற்குப் பகைவரை முற்றுகையிடும் இடம் கண்ட பின்பே, முன்னணியாக எத்தகைய செயலை யும் தொடங்க வேண்டும். அது நோக்கியே முற்றும் இடம் கண்ட பின்னலல்லது எவ்வினையும் தொடங்கற்க என்று சொல்லுகிறார். இவ்வண்ணம் இடம் கண்ட வேந்தன் மேற் கொண்ட போர்த் தொழிற்குரிய எல்லாக் கூறுகளையும் நன்கு எண்ணி அமைத்துக் கொண்டானாயின் போர் தொடங்குவது நல்லது. அந்நிலையில் அவனுக்கு அஞ்சாமை என்ற ஒன்று தான் பெருந்துணை. பலவகை வன்மைகளும், காலமும் தக்கவாறு அமைந்த போதிலும் நெஞ்சில் அஞ்சும் இயல்புடையனானால் அவனுக்கு எளிதில் வெற்றி பெறக் கூடிய அருமையான இடம் கண்டு நிறுத்திய போதும் அது பயன்படாது. அதனால், “அஞ்சாமை யல்லால் துணைவேண்டா எஞ்சாமை எண்ணி இடத்தால் செயின்” என்று கூறுகிறார். போர் மேற்கொண்டு செல்லும் வேந்தனுக்கு போர் நிகழ்த் தற்கு அமைந்த இடம் சிறப்பாக அமைந்துவிடுமானால், பகைவர் படையினும் தன் படை சிறிதாயினும் வெற்றி உறுதியாம். அவ் விடத்தின் அருமைப்பாடு பெரும் படையுடையனானாலும் பகை மன்னனது ஊக்கத்தை அழித்துவிடும். இதனை, “சிறுபடையான் செல்லிடம் சேரின் உறுபடையான் ஊக்கம் அழிந்து விடும்” என்று அறிவுறுத்துகிறார். போர் தொடுக்கும் வேந்தன் வேறு பல மன்னர்களை வென்று வீறு கொண்டவனாய் இருக்கலாம்; ஆயினும் சிறப்பில்லாத இடத்திற் சிக்கிக் கொள்வானாயின், மிக்க ஒரு சிற்றரசன் அவனை வென்று அழித்துவிடுவான். எங்ஙனம் எனில் வேலேந்திய வீரர் பலரைக் குத்திக் கொம்பில் கோத்து வரும் பெரிய யானை ஒன்று கால் புதையும் சேற்றில் சிக்கிக் கொள்ளுமானால், ஒரு சிறு குள்ளநரியும் அதனைக் கொன்றுவிடும் எனறு விளக்குகிறார். “கால்ஆழ் களரில் நரிபடும் கண்ணஞ்சா வேலாள் முகத்த களிறு” என்பது திருக்குறள். இனி போர், செய்து வெற்றி பெறுவதற்கு இடம் ஒரு சிறந்த காரணமாயினும், அது பகைவர் நாட்டில் உள்ளதாயின், வென்றி காண்பது அரிதாகும். பகை மன்னன் வலிய அரண்களும் பிற சிறப்பும் இல்லாதவனாயினும் அவனது நாட்டுட் புகுந்து போர் தொடுப்பது கூடாது. அதனை வற்புறுத்தவே, “சிறைநலனும் சீரும் இலர்எனினும் மாந்தர் உறைநிலத்தோடு ஒட்டல் அரிது” என்று திருவள்ளுவர் உரைக்கின்றார். இதனை நீரில் வாழும் முதலையைக் காட்டி விளக்க முற்பட்டு, முதலை ஆழமான நீரில் இருக்குமாயின் பெரிய விலங்குகளையும் வென்று வீழ்த்திவிடும். அதுவே நீர் நிலையை விட்டு நிலத்தின் மேல் வந்து விடுமாயின் சிறு விலங்கும் அம் முதலையைக் கொன்றுவிடும். “நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்;புனலின் நீங்கின் அதனைப் பிற” என்று கூறுகிறார். 13. தலைமைச் சிறப்பு நாடாளும் அரசு பல்வேறு துறைகளை உடையது. அவை எல்லாவற்றையும் வேந்தன் ஒருவனே பார்ப்பது என்றால் முடியாது. ஆதலால் ஒவ்வொரு துறைக்கும் தக்க தலைவரைத் தேர்ந்து நிறுத்துவது முறை. அத்தலைவர்களைத் தேர்ந்தெடுப்பது ஓர் அரிய செயலாகும். ஒவ்வொரு தலைவரும் நாட்டு மக்களின் நலம் கருதி நடக்கும் அரசின் கருத்தை நெஞ்சில் அத் தகுதி ஒருவனுக்குக் குடிப்பிறப்பாலும் கல்வியாலும், சூழ்நிலையாலும் உண்டாகும். அவன் பிறந்த குடிக்கு ஏற்ப, குற்றமில்லாமல், பழிப்புக்கு அஞ்சி நாணும் தன்மையடையவனாக இருக்க வேண்டும். அதனை, “குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி வடுப்பரியும் நாணுடையான் கட்டே தெளிவு” என்கிறார் திருவள்ளுவர். பழிப்புண்டாகுமானால் அது புண் வடுப்போல எப்போதும் மாறாதாகையால், வடு என்று கூறுகிறார். நிரம்பக் கற்றிருக்கின்றான் என்பது கொண்டு ஒருவனுக்கு தலைமை தருதல் கூடாது; ஏனெனில் கற்ற வல்லவரிடத்தும் அறியாமைக் குற்றம் இல்லாமல் இருப்பதில்லை என்று கூறுகிறார். “அரியகற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால் இன்மை அரிதே வெளிறு” என்கிறது திருக்குறள். அறியாமை இங்கே வெளிறு என்று குறிக்கப்படுகிறது. தலைமைக்குரிய அறிவுத் தகுதியில்லையாயினும் ஒருவனு டைய உறவினரும் சுற்றத்தாரும் உயர்நிலையில் அரசுக்கு வேண்டியவர் களாயிருப்பர். அந்தத் தொடர்பு பற்றி ஒருவனுக்குத் தலைமைப் பதவி அளிக்கப்படுவதுண்டு. அத் தலைவனிடம் தோன்றும் குற்றங்களாலும், குறைகளாலும், அவனைத் தலைவனாக்கிய பெரியோர்களுக்கும், அரசுக்கும் பேதைகள் என்ற பழிவந்து சேரும் என்கிறார் திருவள்ளுவர். “காதன்மை கந்தா அறிவறியார்த் தேறுதல் பேதைமை எல்லாம் தரும்” என்று கூறுகிறார். ஒருவனைத் தலைவனாகத் தேர்ந்து எடுப்பதாயின் அவனுடைய குணங்களையும் குற்றங்களையும் ஆராய்ந்து காணவேண்டும். குணமே உருவாக அமைந்தவர் ஒருவரும் இல்லை. குற்றமே வடிவாக உள்ளவரும் உலகத்தில் இல்லை. இரண்டும் கலந்தவரே மக்கள். ஆகையால் குணமும் குற்றமும் நாட வேண்டியது முறை யாகும். அங்ஙனம் நாடியபோது குணம் மிகுதியாகவும் குற்றம் குறைவாகவும் இருந்தால் அவனைத் தேர்ந்துகொள்ள வேண்டும். குற்றம் மிகுதியாக உடையவனைத் தள்ள வேண்டும். இதனை, “குணம் நாடிக் குறற்மும்நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல்” என்று திருக்குறள் உரைக்கின்றது. இந்த முறையில் தலைவர்களைத் தேர்ந்தெடுப்பதென்றால் மிகவும் கடினமாகவே இருக்கும். அதுபற்றியே தலைவர்களை ஆராயாமல் ஏற்படுத்தவும் கூடாது என்கிறது திருக்குறள். இன்ன துறைக்கு இத்தகைய தலைவர் வேண்டும் எனத் தேடுவது அருமை. மக்களில் தலைமைப் பண்புடையவர் பலர் உண்டு. முதலில் அவர்களைத் தேர்ந்து, அதன்பின் அவர்களுக்குத் தக்க துறை யாது எனத் தேர்ந்து அதற்குத் தலைவராக்க வேண்டும். “தேறற்க யாரையும் தேராது; தேர்ந்தபின் தேறுக தேறும் பொருள்” என்று திருவள்ளுவர் கூறுகின்றார். தேர்ந்தபின் எவ்வாறு தேறுவது எனின், அதற்கு அவர்கள் செய்துள்ள செயல்களே துணை புரியும். கட்டளைக் கல்லாவது உரைக்கப்படும் பொன்னின் மாற்றைக் காட்டுவது போல அவர் களுடைய செயல்களே அவரிடம் உள்ள பெருமைப் பண்பையும் சிறுமைத் தன்மையையும் காட்டி விடும் என்று சொல்லுகிறார். இதனை, “பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்குத் தத்தம் கருமமே கட்டளைக் கல்” என்கிறார். மேலே சொல்லிய முறையில் தலைவர்களைத் தேர்ந்து கொள்ளும்போது, ஓர் எச்சரிக்கையையும் திருவள்ளுவர் தருகின் றார். நல்லறிவும், நற்செயலும் உடையவர் ஒருவரைக் கண்டதும் தலைமைக்குத் தக்கவர் என்ற எண்ணமுண்டாகும். அவரது வளர்ந்த சூழ்நிலை யாது? உற்றார் உறவினர் எத்தகையார் என நாடறிய வேண்டும். குடிச்சிறப்போ, உறவினர் தொடர்போ ஒன்றும் இல்லாதவரானால், அரசியல் தலைமைப் பதவிகட்குத் தக்கவரல்ல என்று விலக்கச் சொல்லுகிறார். ஒரு தொடர்பும் அற்றவர், வாழ்க்கையில் பற்றில்லாதவராவர்; மக்களின் நல்வாழ்க்கையை நாடிப் பணிபுரிவது அரசு. கருத்து முரண்படுவதால் அரசியல் தலைமைக்கு ஆகாதவரா கின்றார். இத்தகைய பற்றில்லாதவர் பழிபாவங்களுக்கு நாணவும் மாட்டார்களாம். இதனை, “அற்றாரைத் தேறுதல் ஓம்புக; மற்றவர் பற்றிலர், நாணார் பழி” என்று திருவள்ளுவர் கூறுகின்றார். இவ்வகையில் தக்கவரைத் தேறியபின், அவர்களைத் தலைமை நிலையில் வைத்து ஆளும் திறமை ஒரு பெருஞ் செயலாகும். எவ்வளவு தெளிவாக ஆராய்ந்து தேர்ந்தெடுத்த போதிலும், பதவி பெற்றதும் மிகப் பலர் முன்னை நிலையிலிருந்து வேறாக மாறிவிடு கின்றார்கள். தேர்தல் நிகழும்போது பண்பும், பரிவும் தோன்ற நிற்பவர்கள் பதவியேற்றதும் வேறுபடுவதை உலகியலில் நாளும் காணலாம். அது கண்டே, “எனைவகையான் தேறியக் கண்ணும் வினைவகையான் வேறாகும் மாந்தர் பலர்” என்று கூறுகின்றார். பலரிடத்தில் இந்த மாறுதல் உண்டாவது ஏன் எனில், மேற் கொண்ட தொழிலின் தன்மைதான் காரணம் என்பதற்கே, வினை வகையால் வேறாகும் மாந்தர் என்று குறிக்கின்றார். இவ்வாறு வேறுபாடும், மாறுபாடும் கொள்ளாமல் செம்மை நிலையில் இருப்பவர் குணம் செயல்கள் யாவை எனின், நான்கு பண்புகளைத் திருக்குறள் எடுத்துக் கூறுகிறது. “அன்புஅறிவு தேற்றம் அவாவின்மை நான்கும் நன்குடையான் கட்டே தெளிவு.” சிக்கலான நிலையிலும் தெளிந்த உள்ளம் உடையராவதற்குத் தேற்றமும் நேர்மை தவறாமல் செயல் புரிவதற்கு அவா இல்லாமை யும் வேண்டப்படுகின்றன. அதனால், தேற்றம் அவா இன்மை என்பவைகளை எடுத்து மொழிகின்றார். பதவிக்குரிய செயல் புரியும்போது, அவனுடைய மனம் எவ்வாறு இயங்குகிறது என்பதை ஆட்சியாளர் அறிய வேண்டும். செய்யும் செயலால் விளைவிது நன்மையாக இருக்க வேண்டும் என நினைப்பவனே அவ்வப் பதவிக்கும் தக்கவன். “நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த தன்மையான் ஆளப் படும்” என்று கூறுகின்றார் திருவள்ளுவர். பதவியேற்பவன் அறிவு முற்றும், தான் பணிபுரியும் துறையால் நாடு வருவாய் பெருகி வளம் பெறுதற்கேற்ற செயல்முறைகளையே ஆராய்ந்த வண்ணம் இருக்க வேண்டும். “வாரி பெருக்கி வளம்படுத்து உற்றவை ஆராய்வான் செய்க வினை” என்று திருக்குறள் கூறுகின்றது. வருவாயைப் பெருக்குவது நாட்டை வளப்படுத்துவதற்கே என்பது அரசியல் செலவைச் சுருக்கி ஊதியத்தைப் பெருக்குவது வாணிகத்தின் குறிக்கோள். சில வாணிகச் செல்வர் அரசியல் தலைமை ஏற்கும்போது நாடு வளம்படாமல் போவதற்கு இவ்வேறு பாடு அறியாமையே காரணம். அதனால்தான் வருவாய் மிகுவித்து வளம்படுத்தலையும் அதற்கு நாட்டின் நலங்களை ஆராய்வதையும் இங்கே எடுத்து வற்புறுத்துகிறார். செல்வத்தாலும் சுற்றம் நிறைந்த சூழ்நிலையாலும் சிறந்துள் ளான் என்பது கொண்டு ஒருவனைத் தலைமை தாங்கிப் பணிபுரியச் செய்வது கூடாது. வருவாய்க்குரிய வழி முறைகளை அறிந்து, இடைநிற்கும் தடைகளைத் தாங்கி செயற்படும் ஆற்றலுடை யவனே தலைவனாதல் வேண்டும். “அறிந்துஆற்றிச் செய்கிற்பார்க்கு அல்லால் வினைதான் சிறந்தான்என்று ஏவற்பாற் றன்று” என்று அறிவிக்கின்றார் திருவள்ளுவர். இங்கே தலைமை ஏற்றுச் செய்பவன் என்று சொல்லாமல், செய்கிற்பான் அதாவது செய்யும் ஆற்றலுடையவன் என்று கூறுவது ஏன் என்று கேட்கலாம். செய்தற்குரிய செயலின் இயல்பையும், அதற்குரிய காலத்தையும், நேர்நின்று செய்பவன் திறமையையும் எண்ணிச் செய்யவேண்டும். அதற்கு ஏற்ற ஆற்றல் இன்றியமை யாதது. அதனை விளக்குவதற்காகவே, “செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோடு எய்த உணர்ந்து செயல்” என்று திருவள்ளுவர் கூறுகிறார். இவ்வாறு தக்கோர் தலைமையில் அரசின் துறை பலவும் நன்றாக இயங்கினும், நாடாளும் வேந்தன் நாள் தவறாமல் மேற்பார்வை செய்தல் வேண்டும். ஏனெனில் பணிபுரிவோர் நேர்மை தவறுவாராயின் நாடு ஊழல்களும், கொடுமைகளும் மலிந்து கெடும். இதனை நினைந்தே, “நாடோறும் நாடுக மன்னன்; வினைசெய்வான் கோடாமை கோடாது உலகு” என்று கூறுகிறார். நாடோறும் இவ்வாறு மேற்பார்வை செய்வதால் சிலவகைச் செயல்களுக்குத் தலைமை தாங்குவோர் பொருந்தாதொழிவதும், வேறு சிலர் பொருந்துவதும் காணப்படும். பலருடைய திறமை களும் தெரிந்து கொள்வதற்கு இது பயன்படுகிறது. அரசின் ஆட்சிமுறை, தலைவர்களின் தகுதி கண்டு ஏற்ற பணியும், பொறுப் பும் தந்து செயல்படச் செய்வதில்தான் சிறப்படையும், அதுபற்றி, “இதனை இதனால் இவன்முடிக்கும் என்றுஆய்ந்து அதனை அவன்கண் விடல்” என்று திருக்குறள் கூறுகிறது. இவ்வகையில் செயல் தலைவர்களைத் தேர்ந்தெடுக்கும் போது, செயல் அளவுக்கு ஒவ்வொருவர்க்கும் தன் உரிமை இருக்க வேண்டும். செயல்படும்போது ஒவ்வொரு நிலைமையிலும் ஏவின செய்யும் அடிமைபோல மேலவரைக் கேட்டுக் கேட்டுச் செய்வ தாயின், மேற்கொண்ட செயலும் முற்றுப்பெறாது; கருதிய பயனும் கைகூடாது. இதுபற்றியே, “வினைக்குரிமை நாடிய பின்றை, அவனை அதற்குரிய னாகச் செயல்” என்கிறார் வள்ளுவர். இத்தகைய உரிமையோடு செயல் புரிபவர்களில் சிலர் ஒரு செயலை, வேலையை மேற்கொண்டதும், ஊன் உறக்கம் இன்றி அதன்கண் மூழ்கிக் கிடப்பர்; இரவும் பகலும் அதனையே எண்ணு வதும், பேசுவதும் ஆக இருப்பர். அவனுடைய ஊக்கமிகுதி கண்டு பாராட்டி ஓய்வின்றி உழைப்பதால் வரும் உடல்நலக் குறைவை அறிவித்து, செய்வினை சீர்பெற நடத்துவதுதான் தலைவர்களின் தலைமைக்குச் சிறப்பு. அது காணும்போது வேறு வகையாக நினைக்கும் தலைவர்கள் சிலர் உண்டு. இவ்வேலையில் இவன் இவ்வாறு அழுந்திக் கிடப்பதால் ஏதோ தனக்கென ஒரு பயன் பெறுகிறான் போலும் என்று ஐயுறுவர்; சிலர் மனம் பொறாமல் இகழ்வர். அவர்களால் மேற்கொண்ட வேலை இனிது நிறைவுறாது; பெருங்கேடுதான் விளையும். இதையும் திருவள்ளுவர் காண்கின்றார். “வினைக்கண் வினையுடையான் கேண்மைவே றாக நினைப்பானை நீங்கும் திரு” என்று வருந்திக் கூறுகின்றார். 14. சுற்றமும் பணிவும் அரசியல் தலைமைப் பணிக்குரியவர்களைத் தேர்ந்து சென்ற அத்தியாயத்தில் கொள்ளும் திறமும் அவர்களைச் செயல் முறையில் வைத்தாளும் இயல்பும் பற்றித் திருவள்ளுவர் உரைத்தது கண்டோம். பல்வேறு துறைகளின் தலைவர் வேந்தனைச் சூழ இருப் பினும், தனி நிலையில் அவனுக்கு உறவினரும் அறிவுடைய நண்பரும் உண்டு. அவர்கள் அவனுடைய உடலோடும், உயிரோடும் அன்பால் பிணிப்பூண்டவர், அதனால் சுற்றம் எனப்படுகின்றார்கள். ஒருவனது தனி வாழ்வில், அவனைப் பிறர் வந்து சார்தற்குப் பற்றாக உள்ளவை அவனின் வேறாகவுள்ள செல்வமும் நிலையு மாகும். அவை அவனிடத்தில் நிலையாக இருப்பதில்லை. ஆதலால், அவை தொலைந்த வழி நீங்குவோர் சுற்றமாக எண்ணப்படுவ தில்லை. அதனை வேறுபடுத்திக் காட்டவே, “பற்றற்ற கண்ணும் பழமைபா ராட்டுதல் சுற்றத்தார் கண்ணே உள” என்று திருவள்ளுவர் கூறுகின்றார். நில்லாது நீங்கும் செல்வமும் சிறப்பும் நிலைக்குமாறு அறிவும், செயலும் அவற்றிற்கு உடன் வேண்டிய உதவியும் செய்பவர் சுற்றத்தார். அவர்களால் ஒருவனுக்கு உண்டாவன ஆக்கமே. அதனை, “விருப்பறாச் சுற்றம் இயையின் அருப்பறா ஆக்கம் பலவும் தரும்” என்று கூறுகிறார். சுற்றத்தார் விளைவிக்கும் நலங்கள் பலவகையிற் கிளைப்பதால், அவைகளை அருப்பறா ஆக்கம் என்று வள்ளுவர் உரைக்கின்றார். செல்வம் பெற்றவிடத்து அதனைப் பேணிக் காப்பதற்குப் பிறர் துணை வேண்டும். துணையில்லையாயின் செல்வமே, உடையவனைக் கொன்றுவிடும். துணைவகையில் அன்புடைய சுற்றத்தாரைவிட உலகில் வேறுயாரும் இல்லை. ஆதலால் அச்சுற்றத் தார் எப்போதும் சூழ இருக்கும் நிலையும், அதற்கு ஏற்ப ஒழுகும் திறமையும் செல்வமுடையவனுக்கு மிகவும் வேண்டப்படுகின்றன. அதை வற்புறுத்தவே, “சுற்றத்தால் சுற்றப் படஒழுகல் செல்வம்தான் பெற்றத்தால் பெற்ற பயன்” என்று சொல்கிறார். இனி, சுற்றத்தார் தன்னை நிழற்போற் சுற்றிச் சூழ்ந்திருக்கச் செய்வது எப்படி? எனின் அவர்க்கு வேண்டுவன அறிந்து கொடுப்பன ஒன்று; சொற்களைப் பேசி மகிழ்விப்பது ஒன்று. இவைகளை, “கொடுத்தலும் இன்சொலும் ஆற்றின் அடுக்கிய சுற்றத்தாற் சுற்றப் படும்” என்று கூறுகிறார். இனிமையான சொல்லைச் சொல்வது போதாது. வேண்டு வது கொடுத்தால்தான் சுற்றம் துணை செய்யும் என்பது விளங்கவே, கொடுத்தலும், இன்சொல்லும் எடுத்து மொழிகின்றார். இவ்வாறு சுற்றம் சூழ வாழ்பவர் குறையாத நலம் பல உடையராவர் என்பதை ஒரு எடுத்துக்காட்டால் விளக்குகிறார். காக்கைகளில் ஒன்று ஏதேனும் இரை கிடைக்குமாயின் தான் தனித்து உண்பதில்லை. தன் இனமான காக்கைகளைக் கூவி அழைத்து உடன் இருந்து உண்ணும்; அந்த இயல்புடைய செல்வர்களுக்கே ஆக்கம் மேன்மேலும் உண்டாகும் என்பாராய், “காக்கை கரவா கரைந்துண்ணும்; ஆக்கமும் அன்ன நீரார்க்கே உள” என்று கூறுகிறார். இனி இச் சுற்றத்தார் நீங்காமல் எப்போதும் சூழ்ந்திருக்க வேண்டுமே என்றால், அதற்கு வழி கொடுப்பதை மிகுதியாகக் கொடுப்பதும், அவர்களிடம் தவறு உண்டானாலும் சினம் கொள் ளாமல் பொறுத்துத் தழுவிச் செல்வதும் வேண்டும். “பெருங்கொடையான் பேணான் வெகுளி, அவனின் மருங்குடையார் மாநிலத்து இல்” என்று மொழிகின்றார். மருங்கு என்பது சுற்றம். இச் சுற்றத்தாரின் உறவினரின் பேறாய் அறிவும் ஆற்றலும் கொண்ட சான்றோர் சுற்றம் மிகவும் சிறந்ததாகும். அவர்களோடு அளவளாவுவது எப்போதும் வேண்டியதொன்று. அரசன் “ஏரி நிறைந்தனைய செல்வனாக” இருக்கலாம்; அளவளாவுவது அந்த ஏரியின் கரையை வலிமைப்படுத்துவதாகும். இல்லையானால், கரையில்லாமல் ஏரியைக் குளத்தை நீரால் நிறைக்க முயன்றால் நீரனைத்தும் நில்லாது போய்விடுவதுபோல் எய்தும் செல்வ மெல்லாம் இல்லாமல் கெட்டொழியும். இதனை, “அளவளா வில்லாதான் வாழ்க்கை, குளவளாக் கோடின்றி நீர்நிறைந் தற்று” என்று கூறுகிறார். குளவளா என்பது குளம் அல்லது ஏரி; கோடு என்பது கரை. இச்சான்றோர் சுற்றம் ஏனைய உறவினர் போல்வதன்று. கொடுத்தலும் இன்சொல்லும் மட்டும் இச்சான்றோர் சுற்றத்தை ஈர்க்கவோ, கட்டிப் பிடிக்கவோ போதாது. சுற்றத்தார் என்ற வகையில் பொதுப்படி நோக்காமல் அவரவர் சிறப்பறிந்து அதற் கேற்ப ஒழுகவேண்டும். சான்றோருள் பலர் அச்சிறப்புக்கென்றே உயிர் வாழ்பவர். இதனை, “பொதுநோக்கான் வேந்தன், வரிசையா நோக்கின், அதுநோக்கி வாழ்வார் பலர்” என்று கூறுகிறார். “பொது நோக்கு ஒழிமதி புலவர்மாட்டே” என்று சங்கச் சான்றோரும் கூறுவர். மேலும், சுற்றத்தாரைத் தழுவி ஒழுகும்போது சிலர் வேறு பட்டு நீங்கிவிடுவர். நீங்கினால் வேந்தனது வன்மையும், செல்வமும் குறைதற்கு வழி உண்டாகும். அதனால் நீங்கினதற்குக் காரணம் யாது என்று ஆராய்ந்து அறிந்து அதற்கு ஒத்தது செய்து பிரிந்தவரைச் சேர்த்துப் பிணித்துக்கொள்ள வேண்டும். பிரிந்தவர் தாமாகவே வந்தாலும், காரணத்தை நன்கறிந்து ஏற்பதுதான் முறை என்பர். “உழைப்பிரிந்து காரணத்தின் வந்தானை வேந்தன் இழைத்திருந்து எண்ணிக் கொளல்” என்பர். இவ்வாறு உறவினர், உயர்ந்த சான்றோர், உண்மை நண்பர் ஆகிய சுற்றம் என்றும் நீக்காதபடி பிணித்து ஒழுகினாலும், சிலர் பிரிந்து போவதும் உண்டென்றால், அதற்குள்ள காரணங்களில் வேந்தனுடைய மனநிலையும் ஒன்று. அரசனும் மனிதனாகையால் அவனுக்கும், மறதியும் சோர்வும் ஆகாதவையே. இம்மறதி சோர்வுகளை ஒரு சொல்லில் அடக்கிப் பொச்சாப்பு என்கிறார் திருவள்ளுவர். பொச்சாப்பு எப்பொழுது தோன்றும் எனில், மகிழ்ச்சியும், கிளர்ச்சியும் தோன்றி ஒருவனை உவகைக் கடலில் அழுத்தும்போது இப்பொச்சாப்பு என்ற குற்றம் தோன்றுகிறது. அதனால் விளைகிற தீமை அளவிறந்த சினத்தினால் உண்டாவதைவிடப் பெரிது என்று சொல்லுகிறார். “இறந்த வெகுளியின் தீதே, சிறந்த உவகை மகிழ்ச்சியின் சோர்வு” என்பது திருக்குறள். இப் பொச்சாப்பு, உள்ளத்தில் நிலவுகிறபோது அறிவு மழுங்கி விடும். அதனால் வருவதை முன் அறிந்து காக்கும் திறம் இழந்து விடுகிறான். அதனால் பின்னே துன்பம் வந்து தாக்கும்போது பெரிதும் வருந்துகின்றான். இதனை, “முன்னுறக் காவாது இழுக்கியான் தன்பிழை பின்ஊறு இரங்கி விடும்” என்று கூறுகிறார். முன்னறிந்து காத்துக் கொள்ளாமை ஒருபுறம் இருக்க, எந்த எந்தச் செயல்களை நல்லவை என்று சான்றோர் புகழ்கின்றார்களோ அச் செயல்களை இகழ்ந்து செய்யாது ஒழிகின்றான். அதனால் பொச்சாப்புடையவன் இவ்வொரு பிறப்போடு நில்லாமல் எழுபிறப் பும் துன்பத்துக்குள்ளாகின்றான் என்று திருவள்ளுவர் வருந்துகிறார். “புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டும் செய்யாது இகழ்ந்தார்க்கு எழுமையும் இல்” சோர்வும், மறதியும் இன்றி யாரிடத்தும் தெளிந்த மனதுடன் எப்போதும் இருக்கின்ற தன்மை ஒருவனிடத்தில் தவறாமல் அமைந்துவிடுமாயின் அதற்கு நிகரான நல்லியல்பு இல்லை என்று கண்ட திருவள்ளுவர், “இழுக்காமை யார்மாட்டும் என்றும், வழுக்காமை வாயின் அஃதுஒப்பது இல்” என்று கூறுகிறார். ஒருவனுக்கு வறுமை வந்துவிடுமாயின், அது அவனுடைய அறிவையே கெடுத்து விடுகிறது. அது போலப் பொச்சாப்புடை யவர்க்குப் புகழ்பெறும் தன்மை இல்லாதொழியும் என்று கூறுகிறார் வள்ளுவர். “பொச்சாப்பார்க்கு இல்லை புகழ்மை அதுவுலகத் தெப்பால்நூ லோர்க்கும் துணிவு” என்று உரைக்கின்றார். மறதி என்ற இப்பொச்சாப்பு ஒருவனிடம் உண்டாகாதபடி அவ்வப்போது ஒவ்வொன்றையும் நினைவு கூர்ந்து செய்வானாயின், முடியாது என்று சொல்லக்கூடிய செயல் ஒன்றுமே இல்லையாம் என்று கூறுவாராய், “அரியஎன்று ஆகாத இல்லைபொச் சாவாக் கருவியால் போற்றிச் செயின்” என்று கூறுகிறார். நினைப்பும், மறதியும், மனத்தில் நிகழ்வதால் அதனைப் பொச்சாவாக் கருவி என்று புகழ்கின்றார். மனதில் கருதிய கருத்துக்களை மறவாமல், மறதிக்கும் சோர்வுக்கும் இடம் கொடாமல், நினைத்த வண்ணம் இருக்க வேண்டும். நினைந்து கொண்டே இருப்பவன் நினைத்ததை நினைத்தபடியே முடிப்பான்; பயனும் நினைந்த அளவே எளிதில் வந்து சேரும் என்று கூறுகிறார். “உள்ளியது எய்தல் எளிதுமன் மற்றும்தான் உள்ளியது உள்ளப் பெறின்” எவ்வளவு விழிப்பாகவும், சோர்வு படாமலும் இருந்தாலும் மறதி புகுந்து விடுகிறதே என்று கேட்டால், எப்பொழுது என்று கேட்கிறார். சோர்வில்லாமல் மகிழ்ச்சியோடு இருக்கும்போதே மறதி வந்துவிடுகிறதே என்று விடை வருகிறது. மகிழ்ச்சி தோன்றும் போது அறிவு மயங்கும்; அந்நிலையில், இத்தகைய மகிழ்ச்சிக் காலத்தில் தான் செய்ய வேண்டியதை இகழ்ந்து கெட்டவர்களை நினைக்க வேண்டும். சோர்வு வரும்போது சோர்வினால் அழிந்தவரை நினைக்க வேண்டும். அப்படிச் செய்தால் மறதியும் சோர்வுமாகிய பொச்சாப்பு தலை காட்டாது, நீயும் புகழ் பெறுவாய் என்று அறிவுறுத்துகிறார். “இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக, தாம்தம் மகிழ்ச்சியில் மைந்துறும் போழ்து” என்பது அத் திருக்குறள். 15. நீதிமுறை நாடாளும் வேந்தன் மறதியும் சோர்வுமாகிய பொச்சாப்பு என்னும் குற்றம் கல்லாதவனாயின் அவனது ஆட்சியில் உண்டாகும் நன்மைகள் பல. அவற்றில் நீதிமுறை தலைசிறந்ததாகும். உலகில் வாழும் உயிர்வகை அனைத்தும் மழையை எதிர்நோக்கும். ஆனால் மனவுணர்வுடைய மக்களினம் மழைக்குக் காரணம் ஆட்சி புரியும் மன்னனது நீதிமுறை என்று அறிந்து அதையே நோக்கி வாழ்கிறது. இது பற்றியே. “வான்நோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன், கோல்நோக்கி வாழும் குடி” என்று கூறுகிறார். மக்களினம் குடும்பம் குடும்பமாக வாழ்வது. குடும்பம் என்பது கணவன், மனைவி என்ற இருவர் சேர்ந்தது; இதைக் குடி என்று கூறுவர். அதனால் தான் மக்கள் என்று கூறாமல் குடி என்று குறிக்கின்றார். குடும்ப வாழ்வுக்கு நீதியும், முறையும், பாதுகாப்பும் இனறியமையாதவை. அதனால் மன்னவன் செய்யும் நீதிமுறையை மக்கள் நோக்குகின்றார்கள். நீதிமுறை என்பது மன்னவனால் எங்ஙனம் செய்யப்படுகிறது? மக்களிடம் குணமும், குற்றமும் கலந்திருப்பதால் மன்னவன் நடுவுநிலையுடையவனாக வேண்டும். வேண்டியவர், வேண்டாதவர், நண்பர், பகைவர் செல்வர், வறியவர், கற்றவர், கல்லாதவர், பெரியவர், சிறியவர் என்ற வேறுபாடின்றி யாரையும் ஒப்பக் கருதி நன்மதிப்பும், இரக்கமும் கொண்டு யார்பக்கமும் சாயாமல் நடு நிற்பது இறை எனப்படும். இறை புரிந்து உண்மையை ஓர்ந்து உணர்வது நீதி வழங்குதற்கு அடிப்படைக் குற்றம் எனக் கண்ட போது, தக்க முறையில் தண்டிப்பது நீதி வழங்குவதாகும். இதை, “ஓர்ந்து கண்ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும் தேர்ந்துசெய் வஃதே முறை” என்று திருக்குறள் கூறுகிறது. இதை செங்கோன்மை என்று நூல்கள் குறிக்கும். இவ்வாறு மன்னவன் மேற்கொள்ளும் இறைமைச் செயல் தான் நாட்டுமக்களின் நல்வாழ்வுக்குச் சிறந்த பாதுகாப்பாகிறது. இந்த மன்னவனுக்குப் பாதுகாப்பு யாது எனின், மக்களுக்கு நேர்மை கெடாமல் அவன் வழங்கும் நீதியேயாகும். ஆதலால்தான், “இறைகாக்கும் வையகம் எல்லாம் அவனை முறைகாக்கும் முட்டாச் செயின்” என்று திருவள்ளுவர் செப்புகின்றார். உலக நாடுகள் எல்லாவற்றிற்கும் இது பொதுவுண்மை. ஆதலால் வையகம் எல்லாம் இறை காக்கும் என்று குறிக்கின்றார். இறைபுரிந்து முறை செய்வதைத்தான் செங்கோல் செலுத்துதல் என்று கூறுவர். இதனைச் செய்யுங்கால் வேந்தன் குடிகளின் வேறு பட்டவனாய்த் தனிமகனாய் இருத்தல் கூடாது. அரசு இருப்பதே குடிகளுக்காக ஆதலால், எதனையும் அவன் குடிகளைத் தழுவியே செய்தல் வேண்டும். அப்போதுதான் குடிகள் அவன்பால் அன்பு கொண்டு அவனைச் சூழ்ந்து நின்று வாழ்வார்கள். “குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன் அடிதழீஇ நிற்கும் உலகு” என்று கூறுகிறார். இடைக் காலத்தவர், நாட்டு மக்களினின்றும் வேந்தனைப் பிரித்து வேறுபடுத்தி தனியினமாக அமைத்தனர்; அதனால் குடிதழுவி இயங்க வேண்டிய அரசு முறை பிறழ்ந்தது; மன்னர்கள் மறைந்தனர். மக்களாட்சி மலர்ந்தது. எல்லா மக்களையும் அன்புடன் தழுவிச் செல்வது வேந்தர்கள் நிலைபெறுவதற்குக் காரணமாயின், குற்றம் செய்தவர்களை வேந்தன் சிறை செய்து வருத்துவதும், கொல்லுவதும் முறையாகுமா என்று கேட்கலாம். உணவுக்கென நெற்பயிரை வளர்க்கிறோம். அதனிடையே களை தோன்றுவது போல, இன்பம் பெறுவதே நோக்கமாக நடத்தப்படும் மக்கள் வாழ்வில் குற்றம் செய்யும் சிலர் களைபோலத் தோன்றுகின்றனர். அவர்களுக்குக் கொலைத் தண்டனை அளிப்பது களை எடுப்பது போல்வதாம். அதுகுறித்தே, “கொலையிற் கொடியாரை வேந்துஒறுத்தல் பைங்கூழ் களைகட் டதனொடு நேர்” என்று கூறுகிறார். சிறை செய்வது ஏனெனின் குற்றவாளிகள் தாம் செய்த குற்றத்தை உணர்ந்து திருந்துவதற்காகும். மக்களினத்தில் ஒதுக்கப்படும் வறுமையில் கிடந்து வருந்தும் குடிகளில் குற்றப் பண்புமிகுந்து கொடியவர் தோன்றுவதுபோல, மக்களிடையே வேடுக உயர்த்தப்பட்டுச் செல்வக் களிப்பில் மகிழும் வேந்தர் குடியில் கொடியவர் தோன்றுவர். அவர் அரசு புரிவா ராயின் கொடுங்கோன்மை தலைவிரித்தாடும். மக்களாட்சியிலும் நேர்மையறிவில்லாதார் பெரும்பாலராயின் நாடு துன்பத்துக் குள்ளாகும். நீதிமுறை பிறழ்ந்து நல்லவர்களைக் கலந்து ஆராயாமல் வேந்தனது அரசு இயங்குமானால், நாட்டில் குடிகளின் தொகை குறையும்; பொருள் வளமும் சுருங்கிவிடும். “கூழும் குடியும் ஒருங்கிழக்கும் கோல்கோடிச் சூழாது செய்யும் அரசு” என்று திருவள்ளுவர் கூறுகிறார். செங்கோன்மையின்றிச் சான்றோரது துணையும் இல்லாத போது, ஆள்வலியும் பொருள்வலியும் தேய்ந்து அரசு கவிழ்ந்து விடும்; அரசன் நிலையின்றிக் கொலையுண்டு மடிந்து போவான். அதனால்தான், “மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை; அஃது இன்றேல் மன்னாவாம் மன்னர்க்கு ஒளி” என்று கூறுகிறார். செங்கோல் செலுத்தும் அரசன், கொடுத்தலும் அருள்புரிவதும், குடிகளைத் தழுவி ஒழுகுவதும் இயல்பாகவுடையவனாவன். ஆதலால் அவனுக்கு ஆள் வலியும், படைவலியும், துணைவலியும் மிகுந்து விடுவதால் அவனுக்குக் கேடு செய்யும் செயல்களோ, பகைவர்களோ தோன்றுதற்கு இடமில்லையாம். அவன் புகழும் உலகமுழுதும் பரவி ஒளி செய்யும். அரசின்பால் கொடுங் கோன்மை யும் அரசனிடம் கொடுமைப் பண்பும் இருக்குமானால் சிறிது காலத்திற்குள்ளே நாட்டில் அகப் பகையும், புறப்பகையும் தோன்றி அரசனை ஒழித்துவிடும். அதனால்தான் மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை என்று திருக்குறள் கூறுகிறது. முன்பே கொடை யாளி செங்கோல் குடியோம்பல் என்ற நான்கும் உடையான் வேந்தர்க்கு ஒளியாம் என்று கூறினாராதலால் இங்கே ஒளிமன்னா வாம் என்கிறார். அரசு கொடுமையுடையதாயின் ஏழை எளியவர் தான் துன்பப்படுவார்கள். செல்வர்கள் தங்கள் செல்வத்தால் தம்மைக் காத்துக் கொள்வார்கள் அல்லவா? அங்ஙனம் இருக்க கொடுங்கோல் வேந்தன் ஆட்சியில் நாட்டவர் அனைவரும் நாடோறும் துன்புற்றுத் தேய்ந்து கெடுவர் என்பது எங்ஙனம்? என்று கேட்கலாம். எளியவர் துன்பத்திலே ஆழ்ந்து கிடப்பதால் அவர்களுக்கு அரசின் கொடுமை தெரியாது. செல்வர்களுக்குத் துன்பம் மிகுதியாக இருக்கும். அந்த அரசில் முறையோ, பாதுகாப்போ இல்லாமையால் அரசேயன்றி வலியுள்ளவர் பலரும் செல்வர்களின் செல்வத்தைப் பல வகையில் துன்புறுத்திப் பறித்துக் கொள்வர். இரவும் பகலும், அச்சமும் அவலமும் செல்வர்களை அலைத்த வண்ணம் இருக்கும். அது பற்றியே, “இன்மையின் இன்னாது உடைமை முறைசெய்யா மன்னவன் கோற்கீழ்ப் படின்” என்று கூறுகிறார். வறுமையால் எளிமையுற்றவரின் துன்பத்தை விடச் செல்வர்களுக்குச் செல்வத்தால் உண்டாகும் துன்பம் பெரிதாகும் என்பதை விளக்குவதற்காக, இன்மையின் இன்னாது உடைமை என்று திருக்குறள் கூறுகிறது. கொடுங்கோல் மன்னன் குடிகளிடத்தில் வரி வாங்குவதே தனிமுறை, வழிப்பறி செய்யும் கள்வர், கையில் வாளும், வேலும் காட்டி உள்ள பொருளைக் கொடுக்கிறாயா? கொல்லட்டுமா? என்று கேட்பதுபோலத் தான் கொடுங்கோலரசும் குடிகளை வேலும், வாளும் கொண்டு அச்சுறுத்திப் பொருள் பறிக்கும். இதனை, “வேலொடு நின்றான் இடுஎன் றதுபோலும் கோலோடு நின்றான் இரவு” என்று திருவள்ளுவர் தெரிவிக்கின்றார். இத்தகைய அரசில் மக்கள் என்ன வருமா என்ற அச்சத் தாலும் பொறுக்கமாட்டாத துன்பத்தாலும் கண்ணீர் சொறிந்த வண்ணம் இருப்பர். ஏழை அழுத கண்ணீர் சும்மா விடுமா? கொடுங்கோல் அரசின் வாழ்வும் கொடுமை செய்பவர் செல்வமும் நெடுநாள் இருக்காது என்று ஆறுதல் கூறுகிறார் திருவள்ளுவர். “அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே செல்வத்தைத் தேய்க்கும் படை” என்பது அவரது அருளுரை. செங்கோல் வேந்தன் நாட்டிலும் மக்களுக்கு முறை செய்யும் போது குற்றத்துக்குத் தண்டனை உண்டல்லவா? தண்டனை என்றால் அச்சந்தானே என்று கேட்கலாம். செய்யப்பட்ட குற்றத் தைத் தக்க முறையில் தேர்ந்து நீதி நெறியில் ஆராய்ந்து, மீளவும் அத்தகைய குற்றம் செய்யாதபடி உலகியலுக்கு ஒத்த அளவில் ஒறுப்பது செங்கோல் அரசின் செயல். அதனால் குற்றம் செய்பவன் தன் குற்றத்தை உணர்ந்து தண்டனையை அச்சமின்றி ஏற்றுக் கொள்ளுகிறான். இதனை விளக்குதற்கே, “தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால் ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து” என்று கூறுகிறார். தண்டனை அளிக்கும்போது அச்சுறுத்துவது போலக் காட்டிக் குற்றவாளியின் அறிவு கலங்காதபடி மென்மை குன்றாமல் ஒறுப்பர், நல்லரசர். அதனால் நாட்டில் நலம் பலவும் பெருகும் என்பர். இதனை, “கடிதோச்சி மெல்ல எறிக நெடிதாக்கம் நீங்காமை வேண்டு பவர்” என்று கூறுகின்றார். செங்கோல் செலுத்தும் வேந்தன் வந்து காண்பதற்கு எளிய வனாகவும், கடுஞ்சொல் இல்லாமல் இனிமையாகப் பேசும் இயல் பினனாகவும் இருப்பதால், அவனைக் காண்பது தெய்வத்தைக் காண்பதுபோல மக்கள் கருதி மகிழ்வர். கொடுங்கோல் மன்னனைக் காண்பதே அரிது. காண நேரின், முகம் கறுத்து, ‘ஏன்தான் இவனைப் பார்த்தோமோ?’ என்று மக்கள் வருத்தத்தோடு பேயைக் கண்டவர் போலத் துன்பப்படுவர் என்பது விளங்கத் திருக்குறள், “அருஞ்செவ்வி இன்னா முகத்தான் பெருஞ்செல்வம் பேஎய்கண் டன்ன துடைத்து” என்று கேட்கின்றது. இங்ஙனம், கண்டார்க்கு அச்சமும், வாழ்வார்க்குத் துன்பமும் செய்யும் வேந்தனுக்கு எல்லாரும் பகையாவர்; அதனால் காலமும் இடமும் வாய்க்கும்போது அவனைக் கட்டாயம் கொன்றுவிடுவர்; இது யாவரும் அறிந்தது. அதனால், “வெருவந்த செய்தொழுகும் வெங்கோலன் ஆயின் ஒருவந்தம் ஒல்லைக் கெடும்” என்று திருவள்ளுவர் உரைக்கின்றார். மேலும், அவனைச் சூழ்ந்து நல்லோர் ஒருவரும் இரார்; கல்லாக் கீழ்மக்களே அவனைச் சுற்றியிருப்பர். அவர்களுக்கு வருவதும் தெரியாது. கேடு வந்தால் காத்துக்கொள்ளவும் தெரியாது. அவன் தன் சுற்றத்துடன் ஒருங்கே அழிவான். அவ்வுண்மை விளங்கவே வெங்கோலன் ஒருவந்தம் ஒல்லை கெடும் என்று ஓதுகின்றார். அத்தகைய வேந்தன் இருப்பது நிலத்துக்கே சுமை என்று நல்லோர் கருதுதலால் அவன் கெட்டழிவதற்கு ஒருவரும் மனம் இரங்கார். 16. இரக்கம் மக்களினம் எக்காலத்தும், எவ்விடத்தும் தம்மில் கூடி வாழும் இயல்புடையது. அதற்குக் காரணம் அவர்களை அறியாமலே ஒருவகைத் தொடர்பு அவர்களை ஈர்த்துக் கொண்டிருக்கிறது. இத் தொடர்பு சில விலங்குகளிடத்தும் பறவைகளிடத்தும் எறும்பு முதலிய சிற்றுயிர்களிடத்தும் உண்டு என்றாலும், மக்களிடத்திற் போல வெளிப்படையாய் விளங்குவதில்லை. தம்மவரையும் தம்மினும் தாழ்ந்தவரையும் கண்டால் மனம் நெகிழ்ந்து மதிப்பும், பரிவும், இரக்கமுமாக மக்களிடையே வெளிப்படுகிறது. இப்பண்பும், செய்கையும் ஒருவரையொருவர் கண்ணால் கண்டபோது வெளியா வதால், பரிவும் - இரக்கமுமாகிய இவைகளை ஒருசேரத் தொகுத்துக் கண்ணோட்டம் என்று திருவள்ளுவரும் அவர்க்கு முன்னோரும் பெயரிட்டுக் குறித்திருக்கிறார்கள். இக்கண்ணோட்டம் உடையவர்கள், தம்மைச் சேர்ந்தவர் களையோ, நண்பர்களையோ, தம்மினும் தாழ்ந்தவர்களையோ கண்டபோது வேண்டுவதை உதவுவார்கள்; சொல்வதை மறுக்க மாட்டார்கள். இந்தப் பண்புதான் சமுதாய வாழ்வில் ஊடுருவி நிற்கும் உயிர்நாடி. இவ்வுயிர்நாடி இல்லையாயின் சமுதாயம் அதாவது உலகியல் வாழ்வு சீர்குலைந்து போகும். இதுபற்றியே திருவள்ளுவர், “கண்ணோட்ட மென்னும் கழிபெருங் காரிகை உண்மையான் உண்டிவ் வுலகு. என்று கூறுகிறார். கண்ணோட்டம் என்னும் இந்த இரக்கப் பண்பு மக்கள் ஒவ்வொருவருக்கும் அழகு தருவது. அரசர், செல்வர் முதலிய உயர்ந்தோரிடத்தில் இருக்குமாயின், மிக்க அழகும் விளக்கமும தருவதால் கண்ணோட்டமென்னும் கழிபெருங் காரிகை என்று திருவள்ளுவர் கூறுகிறார். இக்கண்ணோட்டமாகிய இரக்கப்பண்பு ஒவ்வொருவரிடத் திலும் இருந்தால்தான் இவ்வுலகியல் வாழ்வு நிலைபெறும்; இப்பண்பு இல்லாமல் ஒருவன் இருப்பானாயின், அவன் நிலத்துக்குச் சுமை என்று எண்ணி, “கண்ணோட்டத் துள்ளது உலகியல் அஃதிலார் உண்மை நிலக்குப் பொறை” என்று உரைக்கின்றார். உளத்தில் இடம் பெற்றிருக்கும் பரிவும், இரக்கமுமாகிய நற்பண்புகளைத் தட்டி எழுப்பும் கருவி அவரவர் முகத்திலும் உள்ள கண்களாகும். கண்களுக்கும், இரக்கப் பண்புக்கும் நெருங்கிய தொடர்புண்டு. இத்தொடர்பு பாட்டுக்கும், இசைக்கும் உள்ளது போன்றதாகும். பாட்டோடு தொடர்பு இல்லையானால் பண்ணா கிய இசை பயன்படாது. அதுபோலவே கண்ணும் இரக்கமென் னும் கண்ணோட்டத்தோடு தொடர்பு படாதாயின் பயனில்லை என்பாராய், “பண்என்னாம் பாடற்கு இயைபின்றேல் கண்என்னாம் கண்ணோட்டம் இல்லாத கண்” என்று கூறுகிறார். இசையால் பாட்டுக்குப் பெருமையும் அழகும் உண்டா கின்றன. இழுக்குடைய பாட்டாயினும் நல்ல இசை பொருந்து மானால் அப்பாட்டு எல்லாராலும் போற்றப்படுகிறது. அவ்வாறே கண்ணோட்டம் என்ற பண்பு ஒருவனுடைய கண்ணுக்கு அழகு தருகிறது. அந்த அழகு அமையவில்லையாயின் கண் காண்கின்ற தனக்கும் காணப்படுகிற மக்களுக்கும் தொடர்பில்லாமல் போவ துடன், மனநோயை விளைவிக்கிறது. அது கண்டே, “கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் அஃதின்றேல் புண்ணென்று உணரப் படும்” என்று கூறுகிறார். இத்தகைய கண்ணோட்டம் இல்லாதவர் உலகில் இருக்கத் தானே செய்கிறார்கள், அவர்களும் சமுதாயத்தில் மக்களாக உலவுகின்றார்களல்லவா? என்கிற கேள்வி எழுகிறது. உலகில் கிளை விட்டுத் தழைத்த மரங்கள் இருக்கின்றன. அவைகளில் கணு என்ற கண்கள் உள்ளன. அக்கண் பார்ப்பதும் கண்ணோட்டம் செய்வதும் இல்லை. அக்கண்களுக்கும் கண்ணோட்டமில்லாத மக்கள் கண் களுக்கும் வேறுபாடு ஒன்றுமில்லை. ஆகவே, மண்ணிடை நிற்கும் மரமும், அதன்மேல் கண்ணோட்டமில்லாமல் இயங்கும் மக்களும் ஒன்றே என்று விளக்குகின்றார். “மண்ணோடு இயைந்த மரத்தனையர், கண்ணோடு இயைந்துகண் ணோடா தவர்” என்கிறார் திருவள்ளுவர். அன்றியும், மரத்தின் கண்ணுக்குப் பார்வையில்லை; மக்கள் கண்ணுக்குப் பார்வையுண்டு. பார்வையில்லாதவர் குருடராவர்; கண் பார்க்கும் என்றால் காணப்பட்ட உயிர்களின் மேல் கண்ணோட்டம் உண்டாகாமல் போகாது. ஆதலால், கண்ணோட்ட மில்லாதவரைக் கண்ணிருந்தும் பார்வை இல்லாத குருடர் என்றே கூற வேண்டும். அதனை, “கண்ணோட்டம் இல்லவர் கண்ணிலர் கண்ணுடையார் கண்ணோட்டம் இன்மையும் இல்” என்று கூறுகிறார். பார்க்கப்படுகின்ற மக்களிடத்தில் மதிப்பும் பரிவும் இரக்க மும் ஒருவன் கொள்வானானால், அதாவது கண்ணோட்டம் செய்வானானால், இருக்கிற பொருளெல்லாம் இழந்து நாளடைவில் வறியனாகத்தானே வேண்டும்? பரிவும், இரக்கமும் வாயளவில் இருப்பது போதாது. பரிவால் இரக்கத்தால் ஏதேனும் பொருளுதவி செய்யவேண்டும்; இதைச் செய்து கொண்டே போனால் வேலை செய்பவர் ஒழுங்காக வேலை செய்ய மாட்டார்கள்; வேலை கெடுமானால் பொருள் வருவாய் குறைந்து போம்; பொருளில்லை யானால் உலகியல் வாழ்வு இல்லாமற் போகுமே என்று மனத்தல் சிந்தனை எழுகிறது. இதனைத் திருவள்ளுவர் எண்ணாமல் இல்லை. கண்ணோட்டம் என்பது கண்ணை மூடிக்கொண்டு செய்வ தில்லை. கண்ணால் பார்த்துச் செய்வது. பார்க்கும்போது, காணப் பட்ட மக்களைப் பற்றிப் பரிவும், இரக்கமும் கொள்ளும்போது பார்ப்பவர் மனதில் தம்மிடத்தில் உள்ள பொருள் அளவையும் பார்ப்பர். கண்ணோட்டத்தைச் செய்யும்போது அந்த அளவைப் பார்க்காமல் செய்யமாட்டார். இரக்கத்தையும், பரிவையும் தட்டி எழுப்புகிற கண், அவருடைய தகுதியின் அளவையும் காட்டும். அதைக் காட்டாத கண்பயன்படாது; அளவை அறியாமல் செய்வது கண்ணோட்டமுமாகாது. அதுபற்றியே, “உளபோல் முகத்துஎவன் செய்யும், அளவினால் கண்ணோட்டம் இல்லாத கண்?” என்று கூறுகிறார். கண்ணோட்டம் செய்பவர் தமது பொருள் பெருக்கும் ஆற்றல் முதலியவற்றின் அளவறிந்து செய்யவேண்டும். அளவறி யாமல் செய்யும் கண்ணோட்டம் கழிகண்ணோட்டம் என்றும், அது குற்றம் என்றும் சான்றோர் கூறுவர். இக் கழிகண்ணோட்டம், “அறம் தெரி திகிரிக்கு வழியடையாகும் தீது” என்று சங்கச் சான்றோரும் கூறுகின்றார்கள். அதுபற்றியே அளவினால் கண்ணோட்டமில்லாத கண் பயனில்லை என்று கூறுகிறார். கண்ணோட்டம் செய்யப்படுபவர், அதாவது இரங்கத் தக்கவர், உதவி பெறத் தக்கவர் என்று பார்த்தால் மட்டும் போதுமா? உழைத்து வாழத்தக்க தகுதியுடையவர் சிலர், காண்பவர் தம்மைக் கண்டு பரிவும் இரக்கமும் கொள்ளுமாறு நடிக்கிறார்களே; அவர்கள்பால் கண்ணோடுவது பொருட்கேடும், உழைக்காமல் ஏய்க்கின்றவர் கூட்டத்தைப் பெருக்குவதும் செய்து சமுதாயத்தின் சிறப்பைச் சீரழிக்குமல்லவா? என்று ஒரு கேள்வி எழுகிறது. இதற்கும் திருவள்ளுவர் விடை கூறுகிறார். வையத்தார் உள்ளுவ வெல்லாம் உள்ளுபவர் அல்லவா? கண்ணோட்டம் உடைய அரசரும் செல்வரும், தாம் காட்டும் பரிவாலும், இரக்கத்தாலும் தமது வேலையோ, தொழிலோ கெடாமல் பார்க்க வேண்டும். வேலையை ஒழுங்காகச் செய்யாதவர், வேலைக்கு இடையூறும் கேடும் செய்பவராவர். அவர்பால் கண்ணோடுவது குற்றம். அது பற்றியே முறை செய்து நீதி வழங்கு கிறவர் கண்ணோடுதல் கூடாது. “ஓர்ந்துகண் ணேடா திறைபுரிந்து யார்மாட்டும் தேர்ந்துசெய் வஃதே முறை” என்று திருவள்ளுவர் கூறியுள்ளார். வேலையை ஒழுங்காகச் செய்யாமலும் தவறாகச் செய்தும் குற்றம் புரிபவர்களை ஒறுப்பது செய்தக்க செய்யும் செயல் முறையாகும். ஆயினும் குற்றத்தின் இயல்புக்கு ஏற்பத் தண்டனை யும் குறைந்த அளவும் மிகுந்த அளவுமாக இருக்கும். குற்றத்தைக் காணும் போது கண்ணோடுவது கூடாதே தவிர, ஒறுக்கும்போது கண்ணோடிப் பரிவும் இரக்கமும் ஓரளவு வேண்டும்; இல்லை யானால், “கையிகந்த தண்டமாய்க்” கொடுங்கோன்மையாகிவிடும் அது பற்றியே, “ஒறுத்துஆற்றும் பண்பினார் கண்ணும் கண்ணோடிப் பொறுத்துஆற்றும் பண்பே தலை” என்கிறது திருக்குறள். மேலும், பரிவும், இரக்கமும் கொண்டு கண்ணோடுவது வேலை செய்வோர் வேலையை ஒழுங்காகச் செய்வதற்கே ஆகும். வேலை செய்வோரும் தமக்குக் காட்டப்படும் பரிவையும், இரக்கத் தையும் கண்டு ஊக்கம் மிகுந்து ஒழுங்காகவும், அன்பாகவும் செய்வர்; அதனால் பொருள் பெருகும்; உலகியல் வாழ்வு இன்பம் செய்யும். சுருங்கச் சொன்னால், கண்ணோட்டம் உடையவர்க்குத் தான் வேலை தந்து பொருள் பெருக்கி வாழ்வை வளம்படுத்தும் வல்லமையும், உரிமையும் உண்டு. இது கண்டே, “கருமம் சிதையாமல் கண்ணோட வல்லோர்க்கு உரிமை யுடைத்துஇவ் வுலகு” என்று திருவள்ளுவர் கூறுகின்றார். கண்ணோட்டம்தான் நாகரிகம் என்று சங்ககால மக்கள் கருதினர். அன்பும், பரிவும், இரக்கமும் கொண்டு ஒழுகுபவரையே நாகரிகர் என்றனர். இரக்கமற்ற தன்மையும், விலையுயர்ந்த உடை யுடுப்பதும், இவை போன்ற பிறவும் நாகரிகம் என்று இந்நாளில் கருதப்படுகிறது. நாகரிகம் அரக்கப் பண்புக்கு வழி செய்வதால், இதனை விரும்பத்தக்க நாகரிகமாக எண்ணுதற்கில்லை. இரக்கமும், பரிவும் உடைய பண்பாடுதான் விரும்பத்தக்கது; யாவர்க்கும் வேண்டப்படுவது; திருவள்ளுவர் கூறுவது போல நயத்தக்க நாகரிகமாகும். இந்த நாகரிகப் பண்பாட்டுக்குத் திருவள்ளுவர் எல்லையொன்றையும் கூறுகிறார். தமக்கு வேண்டியவர் ஒருவர், கண் முன்னே நஞ்சு கலந்து கொடுத்தாலும் மறுக்காமல் உண்பது நயத்தக்க நாகரிகமாம். அதனை, “பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்க நாகரிகம் வேண்டு பவர்” என்று உரைக்கின்றார். வேண்டியவர் ஒருகாலும் நஞ்சுதரமாட்டார். கண் முன்னே கலக்கவும் மாட்டார். கண்முன்னே நஞ்சு கலந்து தருவற்கு ஒரு நல்ல காரணம் இருக்க வேண்டும் என்று எண்ணி, அதனை மறுக்காமல் உண்பதோடு, தமது கண்ணோட்டப் பண் பாட்டுக்கு மாறாக அவர்பால் வெறுப்புக் கொள்ளமாட்டார்கள். அக்கருத்து விளங்கவே, நஞ்சு பெயக்கண்டும் உண்டு அமைவர் என்று கூறுகிறார். இப்பண்பாடுதான் பெரிய நாகரிகம் என்பது புலப்படச் சங்கச் சான்றோர், “முந்தையிலிருந்து நட்டோர் கொடுப்பின் நஞ்சும் உண்பர் நனி நாகரிகர்” என்று கூறுகின்றார். 17. பிறர் மனம் அறிதல் நமது வாழ்வில் நாம் பலரோடு கூடிப் பேசிச் செய்வதைச் செய்கிறோம். அப்பலருள் நம்மில் உயர்ந்த வரும், ஒத்தவரும், தாழ்ந்தவரும், வேண்டியவரும், வேண்டாதவரும் எனப் பல வேறு வகையினர் உண்டு. நம்மிடையே அரசியல் தலைவர்களும், செல்வர் களும் உள்ளனர். அவர்களை நாடிச் சூழ்ந்திருப்பவரும் பலர். அவரவர் மனம் அறிந்து நடப்பதில்தான் தலைவர்களின் தலைமை யும், செல்வர்களின் செல்வமும் சிறப்படைகின்றன. ஆதலால் பிறருடைய மனக்கருத்தையும் செயல் வகையையும் நேரிற் கண்டும் பிறர் வாயிலாகக் கேட்டும் அறிந்துகொள்வது பொதுவாக எல்லார்க் கும் நல்லது. எனினும் சிறப்பாக நாடு காக்கும் வேந்தர்க்கு மிகவும் இன்றியமையாதது. மற்றவர்களின் நினைவு செயல்களைப் பிறர் வாயிலாக அறிந்துகொள்வது ஒற்றாடல் என்று நூல்கள் கூறுகின்றன. பிறர் பேசுவதையும், செய்வதையும் அவர்கள் அறியாதபடி தெரிந்து கொள்வது ஒற்று, நாட்டு மக்களிடையிலும் மறைந்திருந்து கேட்பதை ஒற்றுக்கேட்டல் என்று கூறுகிறார்கள். நாட்டில் வாழும் மக்களில் நல்லவரும், தீயவரும், பகைவரும் எனப் பல திறத்தினர் உள்ளனர். நாட்டின் இயல்பு கூறவந்த திருவள்ளுவர் பல் குழுவும் பாழ் செய்யும் உட்பகையும் வேந்து அலைக்கும் கொல் குறும்பும் உண்டு. ஆனால் அவர்கள் இல்லாமல் இருப்பது நாட்டுக்கு நலம் என்று கூறுகிறார். அவர்கள் தங்களுடைய தீச் செயல்களை மிகவும் மறைவாகவே செய்வர். பொதுமக்களுக்கு அவர்கள் இருப்பது ஓரளவு தெரிந்தாலும் அவர்களுடைய தீமைக்கு அஞ்சி வெளிப்படுத்தமாட்டார்கள். தெரிந்து கொள்பவர் ஏழை எளியவராய் இருந்தால், அவர்களுக்கு வேண்டிய பொருள்களைக் கொடுத்து வாயை அடக்கி விடுவர். ஓரளவு செல்வமும், சிறப்பும் உடையவராயின், இரக்கமின்றி அவர்ளைக் கொன்று விடுவர். இந்நிலையில் அக்கொடியவர்களைக் கண்டறிந்து உடனடியாக அவர்கள் செயலுக்கு முடிவு காணவேண்டும்; சிறிது சுணங்கி னாலும், புறக்கணித்தாலும் சிறு நெருப்புப் போலப் பையப் பெருகிப் பரவி நாட்டின் நல்லரசையும் கவிழ்த்துவிடும்; பகையரசு புகுந்து கேடு செய்வதற்கு இடம் அளிக்கும். நாட்டவரின் நல்வாழ்வுக்கு இடையூறு செய்யும் இக் குழுக்களையும், குறும்பர்களையும் உடனுக்குடன் கண்டறிந்து ஒடுக்குவது பெரிய பாதுகாப்பாவதால், ஒற்றறிவது அரசுக்கு உரிமைத் தொழிலாகும். இதைச் செய்யும் ஒற்றர் தன் நாட்டார் பிற நாட்டார் என்றும் நல்லவர் தீயவர் என்றும், நண்பர் பகைவர் என்றும், உற்றார் உறவினர் என்றும் வேறுபாடு நோக்காமல் எல்லாருடைய செயலையும் ஆராய்ந் தறிவர்; அன்றியும், இரவு பகலென்று பாராமல் எக்காலத்திலும் செய்தவண்ணமே இருப்பர். செல்வக் காலம், வறுமைக்காலம், அமைதியான காலம், அல்லலான காலம் என வரும் எல்லாக் காலங்களிலும் ஒற்றறியும் தொழில் நடக்க வேண்டும். இதுபற்றியே, “எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை, எஞ்ஞான்றும் வல்லறிதல் வேந்தன் தொழில்” என்று திருவள்ளுவர் கூறுகிறார். அரசுக்கு மாறு நினைப்பவர் வேறு நாடுகளில் மாத்திரமின்றி உள்நாட்டிலும், அரசனை நெருக்கமாகச் சூழ்ந்திருக்கும் சுற்றத்தாரி லும் அரசியல் அலுவலர் சூழலிலும் இருப்பர். அவர்கள் செய்கை களையும் அரசனுக்கு வேண்டாதார் செயல் வகைகளையும் ஒற்றர்கள் விடாமல் சூழ்ந்து அறிந்து அரசுக்கு அறிவிப்பர். “வினைசெய்வார் தம்சுற்றம் வேண்டாதார் என்றாங்கு அனைவரையும் ஆராய்வது ஒற்று” என்று கூறுகிறார். இவ்வொற்றர்கள் எத்தகையவர் எனின், அரசனிடத்தில் அசைக்க முடியாத அன்பும், கண்டறிந்ததை எவர்க்கும் உரைக்காத மனவுரமும் படைத்தவர். எவர்க்கும் எதற்கும் எவ்விடத்தும் அஞ்சாத நெஞ்சினர். அவர்களைக் காண்பவர் எவராலும் இவர் ஒற்றர் என்று அறிய முடியாது. இவர்களின் இயல்பை, “கடா வுருவொடு கண்ணஞ்சாது யாண்டும் உகாமை வல்லதே ஒற்று” என்று உரைக்கின்றார். தப்பித்தவறி இவர்கள் ஒற்றர் என்று கண்டு பிடிக்கப்பட்டால், எவ்வளவு சிறப்புச் செய்து மகிழ்வித்தாலும், எத்தனைக் கொடுமை புரிந்து துன்புறுத்தினாலும் தாம் கண்டறிந்ததைத் தம்முடைய மன்னனுக்கன்றி ஒருக்காலும் பிறர்க்கு வெளியிட மாட்டார்கள். அதுபற்றித்தான் இக்குறட்பாவில், “யாண்டும் உகாமை வல்லது ஒற்று” என்று கூறுகின்றார். இடத்துக்கும், காலத்துக்கும் ஏற்ப மாறு வேடம் கொள்வதிலும் வல்லவர் இவ்வொற்றர்கள். தவச்சிறந்த துறவிகள் போலவும், மிகவுயர்ந்த விரதியர் போலவும் வேடம் தாங்கி ஞானநூற் கருத்துக் களையும் விரதங்களின் நலங்களையும் விரித்துரைத்து ஆங்காங்கு நிகழ்வதை நுணுக்கமாக அறிந்து கொள்வர். எவரும் புகமுடியாத இடங்களிலெல்லாம் இவ்வொற்றர்கள் புகுந்து நடப்பவை, பேசு பவை யாவற்றையும் தெரிந்து கொள்வர். ஒற்றறியும்போது அகப்பட்டுக் கொண்டாலும் பற்றினவர் என்ன தீங்குகளை எப்படிச் செய்தாலும் மறந்தும் வாய்தவறியும் தாங்கள் அறிந்ததை வெளியிட மாட்டார்கள். இவர்களை நன்கு அறிந்தவரானதால் திருவள்ளுவர், “துறந்தார் படிவத்தார் ஆகி இறந்தாராய்ந்து என்செயினும் சோர்வுஇலது ஒற்று” என்று வடித்துரைக்கின்றார். இவ்வொற்றர்களை அறியாமல் சில இடங்களில் சில செயல் கள் நிகழும். என்றாலும், எவ்வகையிலேனும் அச்செயல்களை அறிந்த மக்களையோ, அவர்களைச் சார்ந்தவர்களையோ அறிந்து கேட்டுத் தெரிந்துகொள்வர். கேட்கின்றபோதும் அதில் தொடர்பு இல்லாதவர் போல நடிப்பர். கேட்டவைகளையும் மறுபடியும் ஆராய்வதற்கு இடமில்லாதபடி ஐயமறத் தெளிந்து கொள்வர். இதை, “மறைந்தவை கேட்கவற் றாகி அறிந்தவை ஐயப்பாடு இல்லதே ஒற்று” என்று கூறுகிறார். இத்தனைக் கூர்த்த மதியும் சீர்த்த செய்கையும் உடையராயினும் இவ்வொற்றர்களை ஆள்கின்ற அரசியல் தலைவர்கள் இவர்கட்கு ஒப்பாகவோ உயர்ந்த வகையிலோ இருக்க வேண்டும். இவர்களில் ஒருவர் கூறுவதை மாத்திரம் ஏற்றல் கூடாது. வேறு ஒற்றர்களை விடுத்து இருதிறத்தார் கூறுவனவற்றையும் ஒப்பநோக்கித் தெளிய வேண்டும். இதுதான் ஒற்றரை ஆளும் முறை. இதனை, “ஒற்றுஒற்றித் தந்த பொருளையும் மற்றும்ஓர் ஒற்றினால் ஒற்றிக் கொளல்” என்று உரைப்பர். ஒருவர் ஒற்றி வந்ததை வேறோர் ஒற்றரை விடுத்து அறிய முற்பட்டால், இருவரும் தம்மில் கலந்து வந்து தானே உரைப் பார்கள்; அதனால் என்ன பயன்? எனின் ஒற்றரை ஆள்பவர், எப்பொழுதும் ஒருவருக்கொருவர் அறியாமலே விருப்பர். உண்மை தெளிவதற்காக எத்தனை ஒற்றர்களை விடுக்கலாம் என்றால் சில சமயங்களில் ஒருவர் இருவரை விடுவது போதாது. இருவர் இடைப்பட்ட மறைபொருள் பிறர் அறியாதபடி புதைந்துவிடும். இருவர்க்கு மேற்படின், எந்த மறுபொருளும் எப்படியும் வெளிப் பட்டுவிடும். அதை எண்ணியே ஒரு பொருள் பற்றி ஒற்றறிய விரும்புகிற அரசர், மூன்று பேரை ஒருவரை ஒருவர் அறியாமல் விடுவர். மூவரும் ஒருமுகமாக உரைப்பாராயின் அதனையே உண்மையென்று தெளிய வேண்டும். “ஒற்றுஒற்று உணராமை ஆள்க உடன்மூவர் சொல்தொக்க தேறப் படும்” என்று திருவள்ளுவர் தெரிவிக்கின்றார். இங்ஙனம் நாட்டின் நல்வாழ்வுக்கும், அரசனுக்கும் ஊறு செய்யும் தீயவைகளை தானே நேரில் சென்று கண்டறிவது போல இவ்வொற்றர்கள் அறிந்து வந்து சொல்வதால், அவர்களை வேந்த னுக்குக் கண் என்று அரசியற் சான்றோர் உரைக்கின்றனர். முறை செய்யும்போதும், நீதி ஆராயும் போதும் நாட்டின் நிலைமை அறிந்து செய்வன செய்யும்போதும், அறிவு நிறைந்த சான்றோர் எழுதி வைத்த நூல்கள், அறிவுக்கு எட்டாத நுட்பங்களை உரைக் கின்றன. ஆதலால் அவற்றையும் கண்ணென்பர். அந்த நூல்களைப் போலவே, நேரே சென்று காணக்கூடாத செயல்களைக் கண்டறிந்து வந்து உரைப்பதால் ஒற்றர்களின் செய்கையும் சான்றோர் நூலின் செய்கையும் ஒத்திருப்பதால் இரண்டையும் சேர்த்து, இவை அரசுக்குக் கண்கள் என்று தெளியவேண்டும் என்று திருவள்ளுவர் தெரிவிக்கின்றார். “ஒற்றும் உரைசான்ற நூலும் இவையிரண்டும் தெற்றென்க மன்னவன் கண்” என்பது திருக்குறள். இனிக் காலந்தோறும் மக்களுடைய எண்ணமும் செய்கையும் மாறுபடும். இவ்வாறு மாறுவது உலக வாழ்வின் இயல்பு. அதை ஒருவரும் தடுக்கவோ, ஒடுக்கவோ முடியாது. மாறும் இயல்பினால் எண்ணங்கள் விரியும்; அவற்றிற்கு ஏற்ப மக்களின் செயல்களும், செய்முறைகளும் மாற்றமடையும். இவற்றிற்கென அவ்வப்போது நூல்களை எழுதுவது எனின், அது எல்லையின்றிப் பெருகும். இதனை உட்கொண்டே, நூல் வகுக்கும் சான்றோர் விதிமுறைகள் காலத்துக்கும், நடைமுறைக்கும் ஏற்ப விரிந்து கொடுக்குமாறு சொற்களை அமைத்து எழுதுவர். அவை ஒரு காலத்தே தோன்றினவாயினும் காலத்துக்கேற்ப உரைகாரர்கள் அவற்றின் விதிகளை இலக்கண வரம்பு கடவாமல் உரை கூறி அமைத்துக் காட்டுவர். அது பற்றியே அரசர்க்குக் கண்போல் அறிவு விளக்கும் நூல்களை உரைசான்ற நூல் என்று திருவள்ளுவர் உரைக்கின்றார். இனி, நாடாளுமிடத்து வேந்தர், தீயவரின் தீங்குகளை அறிந்து போக்குவது போல நல்லவரின் நன்மைகளைப் போற்றிச் சிறப்பிப் பதும் அரசு முறைக்கு அறமும் மாண்புமாகும். அதுபோல ஒற்றரது ஒற்றும் நாட்டுக்கு ஆக்கமும் அரணும் ஆதலால், ஒத்தவகையில் ஒற்றர்களுக்குச் சிறப்புச் செய்வது முறையாகும்; அதனைப் பெறுவது அவர்கட்கு உரிமையுமாகும். ஆயினும் இச் சிறப்புக் களைச் செய்வதில் வேறுபாடு உண்டு. அரசறிய நலம் புரியும் நன்மக்களுக்கு வேந்தர் நாடறியச் சிறப்புச் செய்யவேண்டும். அது நாட்டில் வாழும் பிறரையும் நல்லது செய்தற்கு எழுச்சியும், ஊக்கமும் அளிக்கும். ஆனால் ஒற்றர் களுக்குச் செய்யும் சிறப்பு மிகவும் மறைவாக நடத்தல் வேண்டும். வெளிப்படையாக நிகழுமாயின், அச்செயல் ஒற்றர்களை வெளிப் படுத்திவிடும். அதனால் கேடு நினைக்கும் பல் குழுவும் கொல் குறும்பும் தம்மைக் காத்துக்கொள்ளும்; தீமைகள் தோன்றுதற்கு இடம் உண்டாகும். ஆகையால் நாட்டின் நல்வாழ்வுக்கும், பாதுகாப்புக்கும் ஊறு விளையும். இதனைக் கருத்திற் கொண்டே, “சிறப்புஅறிய ஒற்றின்கண் செய்யற்க செய்யின் புறப்படுத்தா னாகும் மறை” என்று திருவள்ளுவர் அறிவுறுத்துகின்றார். 18. ஊக்கம் நாட்டில் வாழ்கின்ற மக்களில் உயர்ந்தவரும், தாழ்ந்தவரும் எங்கும் உள்ளனர். உயர்ந்தவர் வரலாற்றைக் கேட்டால் அவர்கள் எளியவராய் இருந்து உயர்ந்த கதையையே சொல்கிறார்கள். அதைக் கேட்டால் அவர்களுடைய உயர்வுக்கு ஊக்கமும், உழைப்பும் காரண மாவதை அறியலாம். ஊக்கம் முந்தியதா, உழைப்பு முந்தியதா என்று நோக்கினால் உழைப்புச் சிலரிடத்திலும், ஏக்கம் சிலரிடத்திலும் முந்தியிருப்பது தெரிகிறது. உழைப்பு என்பது சிறுவரிடத்திலும் பெரியவரிடத்திலும் உண்டு. என்றாலும் உழைப்பினால் வரும் பொருளும், சிறப்பும் இன்பம் தருவதைக் கண்டு மேன்மேலும் மனம் கிளர்ச்சியுற்று மிகவும் உழைத்து பொருள் மிகுந்து உயர்கின் றார்கள். அவ்வாறு உயர்பவர்களைப் பார்த்து மற்றவரும் மன எழுச்சி கொண்டு உழைத்து உயர்வு பெறுகின்றார்கள். இங்ஙனம் உழைக்குமாறு தூண்டும் கிளர்ச்சியும், எழுச்சியும், ஊக்கம் என்ற சொல்லால் குறிக்கப்படுகின்றன. உழைப்பின் பயனாக வரும் பொருளையும், இன்பங்களையும் அறிவில் கொள்ளாதவர் உழைப்பை புறக்கணிக்கின்றார்கள்; அதை விரும்பாமல் கைவிடுகிறார்கள். இச்செயலை மடிமை அல்லது சோம்பல் என்று பெரியோர் குறிப்பர். இதனால் ஊக்கத்துக்கு எதிர் மறுமொழி சோம்பல் என்று அறிகின் றோம். இவ்வாறு பகுத்து அறிவதால் ஓர் உண்மை தெரிகிறது. ஊக்கமுடையவர் பொருள் உடையவராய் உயர்கின்றார்கள். இல்லாதவர் உள்ள பொருளையும் இழந்து தாழ்ந்து போகின்றார்கள். இது கண்டே, “உடையர் எனப்படுவது ஊக்கம் அஃதுஇல்லார் உடையது உடையவரோ மற்று?” என்று திருவள்ளுவர் கூறுகின்றார். இந்த ஊக்கம் இருக்கும் இடம் ஒருவனுடைய உள்ளமாகை யால், ஊக்கத்தை உள்ளம் என்றும் கூறுவர். ஊக்கத்தையும், அதனால் வரும் பொருளையும் திருவள்ளுவர் சீர்தூக்கினார். பொருளோ நிலையில்லாமல் நீங்கிவிடும் இயல்புடையது; ஊக்கம் எப்போதும் உள்ளத்தில் இருப்பது. அதனால் பொருளைவிட ஏக்கம் குன்றாமல் இருப்பதுதான் பொருள்உடையவராய் வாழ் வதற்குக் காரணம் என்று காண்கிறார். அதனால், “உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை நில்லாது நீங்கி விடும்” என்று கூறுகிறார். பொருளை நோக்காமல் ஊக்கம் மாத்திரம் இருப்பது போதுமா எனின் ஊக்கம் இருக்குமானால், விளக்கு எரிந்தால் ஒளி நிலவுவது போல உழைப்பு நடந்து கொண்டே இருக்கும். உழைப்புத்தான் பொருளுக்கு வருவாய். பள்ளமிருந்தால் நீர்ஓடி நிறைவதுபோல், உழைப்பவரிடம் பொருள் வந்து சேரும். அது பற்றியே, “ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா ஊக்கம் உடையான் உழை” என்று கூறுகின்றார். என்ன இடையூறும் சோர்வும் வந்தாலும் தளராத ஊக்க முடையவர் எங்கே உள்ளானோ, அவனிடம் பொருளும், உயர்வும் வழி கேட்டுக்கொண்டு வரும்; அதாவது வேலையும் அது வழியாகச் செல்வமும் தானாகவே வந்து சேரும். அதை வற்புறுத்தவே, இக்குறட்பாவின், ஊக்கமுடையவனை நாடி ஆக்கம் அதர் அதாவது வழிவினாய்ச் செல்லும் என்று திருவள்ளுவர் உரைக்கின்றார். ஊக்கம் இத்தகைய சிறப்புடையதானால் இதற்கு ஏதேனும் அளவு உண்டோ? ஆசைக்கும் ஓர் அளவு வேண்டும் என்று சொல்கிறார்கள் அல்லவா? அதுபோல ஊக்கத்துக்கும் ஓர் அளவு இருக்கவேண்டுமே என்றால் உண்டு என்று கூறுகிறது திருக்குறள். யாவரும் உயர்வையே விரும்புவார்கள். அவரவர் விரும்பும் உயர்வு எவ்வளவோ அவ்வளவுதான் ஊக்கத்துக்கும் அளவு. ஒரு தாமரைக் குளம் இருக்கிறது. அக்குளத்தில் தண்ணீர் எத்தனை அடி இருக் கிறதோ, அதற்கேற்பத் தாமரையின் நீளம் இருக்கிறது. பத்தடி நீர் என்றால் கொடியும் பத்தடி நீள்கிறது; ஐந்தடி என்றால் கொடியும் ஐந்தடி அளவில் இருக்கிறது. அதுபோல ஊக்கத்தின் அளவே உயர்வாகும் என்று விளக்குகிறார் திருவள்ளுவர். “வெள்ளத்து அனைய மலர்நீட்டம் மாந்தர்தம் உள்ளத்து அனையது உயர்வு.” ஒருவனுக்கு ஊக்கம் மலைபோல உயர்ந்தும் கடல் போல விரிந்தும் இருக்கிறது. அதை மனத்திற் கொண்டே உழைக்கின்றான். ஆனால் அந்த ஊக்கத்தளவு உயர்வு வரவில்லையே என்று கேட்கலாம். இக் கேள்வியைத் திருவள்ளுவரும் நினைக்கின்றார். ஊக்கம் மிகுதியாக இருக்கிறது. உழைப்பிலும் குறைவில்லை எனின், உயர்வு கட்டாயம் வந்தே தீரும். ஊக்கத்தை விடக்கூடாது. உழைப் பாகிலும் காலம், இடம், கருவி, உடல்வலி ஆகியவற்றைச் சார்ந்திருக் கிறது. இச்சார்புகள் தவறுவதற்கு இடமுண்டு; அதனால், கருதிய பொருளும், உயர்வும் நினைந்த அளவு வராமல் போகலாம். அதனை எண்ணி ஊக்கம் குறையக்கூடாது. ஒரு காலத்தில் குறையினும் பிறிதொரு காலத்திலேனும் வந்தே தீரும் என்று சொல்லுகிறார். “உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது தள்ளினும் தள்ளாமை நீர்த்து” இந்நிலையில், உயர்வு பெற்ற பெருமக்களின் வாழ்க்கை வரலாறுகளைப் பார்ப்போமானால் திருவள்ளுவர் கூறுவது முழுதும் உண்மையாவதைக் காணலாம். அரசியல் விடுதலை என்ற உயர் வையே எண்ணி நம் நாட்டுக் காந்தியடிகள் போன்றவர்கள் உழைத்தார்கள்; எத்தனையோ சமயங்களில் உழைப்புக்கு இடை யூறுகள் தோன்றி அலைத்தன. ஆனால் ஊக்கம் குறையவில்லை; அதை அவர்கள் கைவிடவும் இல்லை... முடிவு என்னாயிற்று? இன்று நாம் விடுதலை வாழ்வு பெற்று, உலக நாடுகள் நன்கு மதிக்கும் அளவுக்கு உயர்வு பெற்றிருக்கிறோம். இந்த ஊக்கத்துக்கு இத்தனை ஆற்றல் எப்படி அமைந்தது? இதையும் திருவள்ளுவர் சிந்திக்கிறார். காடுகளில் புலியும் உண்டு... யானைகளும் உண்டு. பருத்த உடம்பும் கூர்மையான கொம்பும் உடையது யானை. புலிக்கு உடம்பும் சிறியது; கொம்பும் கிடையாது. ஊக்கமும், வலிமையுமே அதனிடம் உள்ளன. ஆனால் புலி தாக்கு மாயின் பெரிய யானையும் எதிர் நிற்கமாட்டாமல் தோற்றுப் போகும். அதுபோலவே ஊக்கத்துக்கு எதிராக எந்த வகையான தடையும் நிற்கமாட்டாது. இதனை, “பரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானை வெரூஉம் புலிதாக் குறின்” என்று விளக்குகின்றார். இந்த ஊக்கத்துக்கு மாறான தன்மை மடி அல்லது சோம்பல் என்று முன்னமே கூறினேன். மாசு மறுவில்லாத ஆடையில் மாசு படிவதுபோல, ஊக்கம் நிறைந்த உள்ளத்தில் இந்த மடியென்னும் சோம்பல் பையப் படிந்துவிடும். இதற்கு இடம் கொடுக்கக் கூடாது, என்பதற்காகவே, ஊக்கத்தை அடுத்து மடியைப் பற்றி திருவள்ளுவர் உரைக்கின்றார். உழைக்கின்ற மக்களைக் கெடுத்து வறுமைக்கு உள்ளாக்கும் தீய தன்மைகளில் சோம்பல் முதன்மைவாய்ந்தது. இதற்கு இனமாக மறதி, தூக்கம், எதனையும் காலம் நீட்டித்துச் செய்யும் தன்மைகள் உடன்வந்து சேர்கின்றன. இந்த நான்கு விரும்பத்தக்கவை போலத் தம்மைக் காட்டும். மேற்கொண்டவுடன், துன்பத்தில் கொண்டு சேர்க்கும். இவ்வியல்பு பற்றியே இவைகளைக் காமக் கலன் என்று பெயர் குறித்து, “நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும் கெடுநீரார் காமக் கலன்” என்று கூறுகின்றார். மடியென்னும் சோம்பல் மாசுபோல, வருவது தெரியாமல் வந்து படிவது நன்றாக உழைத்துத் தனது குடும்பத்தை விளக்கமுறச் செய்யும் நன்மைகளை இச்சோம்பல் என்னும் மடி வந்து அடையு மானால், அவனுடைய குடும்பமாகிய விளக்கு அவிந்துபோகும். “குடியென்னும் குன்றா விளக்கம் மடிஎன்னும் மாசூர மாய்ந்து கெடும்” என்று திருவள்ளுவர் கூறுகிறார். இக்கொடிய சோம்பல் ஒருவனிடம் பொருந்துமாயின், அவனுடைய இயல்பான மானவுணர்ச்சியே கெட்டுப் போகிறது. எவர் இகழ்ந்தாலும் பொறுத்துக் கொள்வான்; நெஞ்சு சுடுவது போலும் கடுஞ்சொற்களைப் பேசினாலும் அவன் காதில் ஏறாது. வெறும் புன்சிரிப்பே அவன் பாழ் முகத்தில் காணப்படும். அதனால், மாண்புதரும் செயல்கள் எவற்றையும் அவனால் செய்யமுடியாது. அதுபற்றியே, “இடிபுரிந்து எள்ளுஞ்சொல் கேட்பர் மடிபுரிந்து மாண்ட உஞற்றி லவர்” என்று கூறுகின்றார். இம் மடி என்னும் சோம்பல், காலத்தில் செய்ய வேண்டிய தைச் செய்யாமல் நீடித்து, உறக்கத்தில் வீழ்த்துகிறது. அதனால் தன் குடிக்கு எத்தகைய பாதுகாப்பையும் அவன் செய்துகொள்ள மாட்டான். பகைவர் எளிதில் அவனைக் கைப்பற்றி அடிமை யாக்கிக் கொள்வர். அரசனாயினும் சோம்பலுற்றவன், பின்பு தன்னுரிமை யிழந்து துன்பப்படுவான். “மடிமை குடிமைக்கண் தங்கின்தன் ஒன்னார்க்கு அடிமை புகுத்தி விடும்” என்று கூறுகிறார். சோம்பலுக்கு இரையாகி மடிந்து ஒடுங்குகின்றவன் குடும்பம் தன் செல்வப் பொலிவை இழக்கும்; அதனோடு, பல்வேறு குற்றங்கள் தோன்றிப் பெருகுதற்கு இடமாகிவிடும். “குடிமடிந்து குற்றம் பெருகும் மடிமடிந்து மாண்ட உஞற்றி லவர்க்கு” என்று உரைக்கின்றார். மக்களாகப் பிறந்தவர் மாண்புடைய செயல்களையே செய்தல் வேண்டும். சோம்பல் கொண்டு மடிந்து கிடப்பவர் அச்செயல் களைச் செய்யமாட்டாதவராவர் என்பதற்காகவே, அவர்களை மாண்ட உஞற்றிலவர் என்று திருக்குறள் பல முறையும் கூறுகிறது. மழுங்குகின்ற விளக்கத்தை தூண்டுவது போலத் தக்கவர் துணையாகி நின்று சோம்பலைப் போக்கி ஊக்கமுறச் செய்யலாம் அல்லவா? எனின், சோம்பேறிக்கு அவர்கள் துணையிருந்து தூண்டினாலும் பயன்படாது. இதனை, “படியுடையார் பற்றமைந்தக் கண்ணும் மடியுடையார் மாண்பயன் எய்தல் அரிது” என்று கூறுகிறார். நினைத்தால் நிலமுழுதும் தான் ஆணைவழி நிறுத்தக் கூடிய ஆற்றலுடையோர் பக்கம் இருந்து ஊக்கினாலும், சோம்பல் உடையவர், அவர் சிறிது நீங்கினவுடன், சோம்பல் அற்று வீழ்ந்து போவதால்,அவரால் பெரும் பயன் உள்ள செயலைச் செய்ய முடிகிறதில்லை என்று வற்புறுத்தவே, படியுடையார் பற்றமைந்தக் கண்ணும் என்று கூறுகின்றார். இவர்கள் கடைத்தேற வழி இல்லையா? உண்டு; அவன் தன்னைப் பற்றியிருக்கும் சோம்பலை மாற்ற வேண்டும். மாற்ற, தனக்கும், தன் குடும்பத்துக்கும் வந்த குற்றம் நீங்கி வாழ்வு பெறுவான். “குடியாண்மை யுள்வந்த குற்றம் ஒருவன் மடியாண்மை மாற்றக் கெடும்” என்று தெரிவித்துத் தடித்த சோம்பேறியும் வாழ்வு பெறுவதற்கு வழி வகுக்கின்றார். 19. வள்ளுவர் கண்ட இன்பம் இன்பம் என்பது எல்லா வுயிர்களுக்கும் இயல்பிலே ஊறி நிற்கும் விருப்பம் என்பர் தொல்காப்பியர். “எல்லா வுயிர்க்கும் இன்பம் என்பது தான் அமர்ந்து வரூஉம் மேவற்றாகும்” என்பது தொல்காப்பியம். இன்பத்தை விரும்பாத உயிர் எங்கும் கிடையாது; இன்பம் நாடுவது உயிர் வாழ்வின் பண்பு. உயிர்கள் நினைப்பதும் செய்வதும். யாவும் வினை யெனப்படும். வினையால் விளைவது பொருள் என்றும், அப் பொருளால் உண்டாகும் பயன் இன்பம் என்றும் யாவரும் அறிவர். வினையும் அறமாதலால், அறத்தாற் பொருளாதலால், அறம் பொருள் இரண்டாலும் இன்பம் உண்டாகிறது என்று திருவள்ளுவர் உரைக் கின்றார். “அறத்தால் வருவதே இன்பம்” (39) என்றும், “அறன் ஈனும் திறனறிந்து தீதின்றி வந்த பொருள்” (754) என்றும் திருவள்ளுவர் கூறுவதனால் அறிகின்றோம். ஒருவர்க்கு இன்பமாக இருப்பது மற்றொருவருக்குத் துன்பமாகத் தோன்றுவதுண்டு. அதனால் இன்னது தான் இன்பம், இன்னது துன்பம் என்று வரையறை செய்வது அரிது. இன்பம் என்பது உணர்பவர் உணர்வு வகைக்கு ஏற்ப அமைவது. உணர்வுடையவர் துன்பத்தையும் இன்பமாக உணர்வர் என்பாராய், “இன்னாமை இன்பம் எனக் கொளின் ஆகும்தன் ஒன்னார் விழையும் சிறப்பு” (630) என்று கூறுகின்றார். “ஈத்துவக்கும் இன்பம் (228) என்றார் போல வரும் திருக்குறளையும் பிறவற்றையும் நோக்குமிடத்து, உணர்ச்சி வடிவாய், ஒய்வின்றி அலைந்து கொண்டிருக்கும் மனத்தை அசையாமல் நிறுத்தி அமைதி பெறச் செய்வதே இன்பம் என்ற முடிபுக்கு வருகின்றோம். இதுவே “தான் அமர்ந்து வரூஉம் மேவற்று” என்ற தொல்காப்பியக் கருத்துக்கும் ஒத்து நிற்கின்றது. “அறத்தால் வருவதே இன்பம்” என்ற குறள், இந்த இன்பம் வரும் வழியைக் குறிக்கின்றது. அறம் என்பது செய்கை. எனவே, ஒருவன் ஒரு செய்கையைச் செய்வதற் குரிய வழிகள் எவையோ அவையே இன்பம் தோன்றுவதற்கு வழியாம். உடம்பு, உள்ளம், அறிவு முதலியன செய்கைக்கு இன்றியமையாத வாயில்களாகும். “மக்கள் மெய் தீண்டல் உடற்கு இன்பம் மற்று அவர் சொற்கேட்டல் இன்பம் செவிக்கு” (65) என்பதனால் இன்பத் தோற்றத்துக்கு உடம்பு கருவி யாவது பெறப்படும். “சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும் இம்மையும் இன்பம் தரும்” (98) என்பது வாயாற் பேசும் சொல்லும் இன்பத்துக்கு வாயிலாவதைக் காட்டுகிறது. ஒருவனுடைய உள்ளமும் இன்பம் பெறுதற்குக் காரணம் என்பதற்காகத் திருவள்ளுவர் உள்ளத்தில் எழும் அவாவை ஏதுவாகக் கொண்டு, “இன்பம் இடையறாது ஈண்டும் அவா என்னும் துன்பத்துள் துன்பம் கெடின்” (369) என்று இயம்புகின்றார். “இருள் நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி மாசறு காட்சியவர்க்கு” (35) என்ற திருக்குறளால், தெளிந்த அறிவும் ஒருவர் இன்பம் பெறுவதற்குரிய காரணமாக இருப்பது இனிது தெரிகிறது. இவ்வாறு பெறப்படும் இன்பத்தில் உயிர்களுக்கு ஈடுபாடு உண்டாவதால் அந்த இன்பத்தைப் பெருக்கிக் கொள்வது உயிர்களின் முயற்சியாக இருக்கிறது. “துன்பம் உறவரினும் துணிவாற்றிச் செய்க, இன்பம் பயக்கும் வினை” (669) என்பது இதற்குச் சான்றாகும். இன்பம் பயக்கும் வினையை மிகுதியாகச் செய்யின், அதனால் பெறப்படும் இன்பம் பெரியதாகிறது. “சிற்றின்பம் வெஃகித் திறனல்ல செய்யாரே மற்றின்பம் வேண்டுபவர்” (173) என்ற குறள், இன்பம் சிறிதும் பெரிதுமாக வகைப்படுவதைக் காட்டுகிறதன்றோ! சிற்றின்பம் என்பது சிறிதுகால மிருந்து மறைந்து போவது; நெடிதிருந்து மகிழ்விப்பது இன்பத்துக்குப் பெருமை. உலகில் வாழும் மக்களுக்கு இன்பம் ஒன்றே வேண்டப்படுவ தாகையால், அதைப் பெறுவதிலும் அதற்கு மறுதலையாய்த் துன்பம் தருபவைகளைப் போக்கி விலக்குவதிலுமே கண்ணுங் கருத்துமாக உள்ளனர். துன்பத்தை வென்று இன்பத்தைப் பெறுவதே வாழ்க்கை; அது குறித்துச்செய்யும் செய்கை வாழ்க்கைப் போராட்டம் எனப்படுகின்றது இன்பத்துக்கு மாறாகிய துன்பத்தையும் அதனை உண்டாக்கும் காரணங்களையும் நன்கு அறிந்து அவற்றைக் களைவது தான் இன்பம் வேண்டுவோர் செய்யத் தக்கது. துன்பத்துக் குரிய காரணங்களில் இகல் என்பது ஒன்று. அதாவது, எதற்கும் பிறரோடு மாறுபடுத்தி முரணுவதாகிய செய்கை. இதனால் துன்பம் எளிதில் புகுந்து விடுவது கண்டே வள்ளுவனார், “இகல் என்னும் துன்பத்துள் இன்பம் கெடின், இன்பத்துள் இன்பம் பயக்கும்” (854) என்று உரைக்கின்றார். ஒருவர் ஒரு செயலை மேற்கொண்டு செய்யலுற்றால், அதனால் அவர் கருதிய பொருள் கருதியவாறே கை கூடும்போது அவருக்கு இன்பம் உண்டாகிறது. இச் செயல் வகைகளில் மிகவும் கடினமான செயலாகத் திருவள்ளுவர் கருதுவது ஒருவரிடம் சென்று இன்றை வேண்டி இரப்பது. ரத்தலின் இன்னாது மன்ற (229) “இரவு உள்ள உள்ளம் உருகும்” (1069) என்ற திருக்குறள்கள் திருவள்ளுவர் உள்ளத்தை நன்கு தெளிவுபடுத்திக் காட்டுகின்றன. இவ்வண்ணம் நினைத்தாலும் நெஞ்சுக்கு வேதனையும் துன்பமும் தரும் இரத்தல் என்ற தொழிலையும், ஒருவன் துணிந்து மேற்கொண்டு சென்று ஒருவரிடம் சாணுடம்பும் ஒருசாணாய்ச் சுருங்கி இரக்கும் போது, ஒரு துன்பமும் இன்றி இரந்த பொருள் அவனுக்கு ஈயப்பட்டால் அவனுக்கு அது இன்பத்தைத் தருகிறது. இதனை “இன்பம் ஒருவற்கு இரத்தல், இரந்தவை துன்பம் உறாஅ வரின்” (1052) என்று வள்ளுவர் வடித்துக் கூறுகின்றார். வாய்க்கும் மனத்துக்கும் இனிமை தரும் பொருள் கிடைப்பின் அதனை உண்பதில் துன்பமுண்டாகியது. ஆயினும் அந்த இன்பத்தைப் பெருகப்பெற வேண்டுமென்று வேட்கை எழுவது இன்பம் நாட்ட முடைய உயிர்க்கு இயல்பு. வேட்கை வயப்படாமல் கொள்ளும் அய்வறிந்து உண்பதுதான், அதனால் பெறப்படும் இன்பத்தை நுகரும் வழியாம். அவ்வாறின்றி மிக்கஅளவில் உண்ணக் கருதினால், கருதிய இன்பம் பெருகாமல் நோய் புகுந்து துன்பமும் செய்யும் என்பாராய், “இழிவறிந்து உண்பான்கண் இன்பம் போல், கழி பேரிரையான்கண் நோய்நிற்கும்” (946) என்று இசைக்கின்றார். இன்ப நுகர்ச்சி பற்றி மேலும் ஒரு கருத்தைத் திருவள்ளுவர் வற்புறுத்துகின்றார். ஒருவர் தாம் பெற்ற இன்பத்தை நுகருங்கால் அதனையே விரும்பி அதன் கண்ணே அழுந்திவிடுவது கூடாது; அஃது இன்பத்தைத் தாராது துன்பத்துள் மிக்க துன்பத்தை விளைவிக்கும் என்று வற்புறுத்தி, “இன்பத்துள் இன்பம் விழையர் தான் துன்பத்துள் துன்பம் உறுதல் இலன்” (629) என்று உரைக்கின்றார். இவ்வாறு ஒழுகுவதுதான் இன்பத்தை நன்முறையில் பயன்கொண்டு பிறர்க்கும் தனக்கும் பயன்பட வாழும் நன்வாழ்க்கையாகும். “இன்பம் விழையான் வினைவிழைவான் தன் கேளிர் துன்பம் துடைத் தூன்றும் தூண்.” (615) என்றும், இன்பமே நினைந்து துன்பம் வரின் அதற்கு அஞ்சிச் செயலற்று மடிபவன் இன்பத்தைப் பெற முடியாது; துன்பம் வரின் அதனை இயல்பாக வரும் தடையாக எண்ணி அதனை மதியாமல் தனக்கு உரிய அறத்தைச் செய்பவன் இன்பத்திலே சிறந்து விளங்குவான் என்பதை “இன்பம் விழையான் இடும்பை இயல்பு என்பான் துன்பம் உறுதல் இலன்” (628) என்றும் திருவள்ளுவர் தெளிய உரைக்கின்றார். இன்பத்தைப் பெறும் வாயில்களில் நாம் மேலே கண்டவற்றில் வேறாக ஒருவனும் ஒருத்தியும் ஒருவர்க் கொருவரை வாழ்க்கைத் துணையாகக் கொண்டு வாழ்வதையும் ஆசிரியர் திருவள்ளுவர் எடுத்துரைக்கின்றார். இல்வாழ்க்கை மேற்கொண்ட ஒருவன் ஒருத்தியாகிய இருவர் உள்ளத்திலும் ஒத்த காதலுணர்ச்சி அமைந்தால் அது இன்பத்துக்கு சிறந்த வாயிலாகும். காதல்வழிப் பிறக்கும் இன்பம் கடல் போன்ற பெருமை யுடையது என்றும், காதல் நோய் மிக்க விடத்து அதனால் விளையும் துன்பம் கடலினும் மிகப் பெரிதாம் என்றும் கூறுகின்றார். காதலால் களிப்புண்ட இருவர் தம்மில் விளையாட்டாகப் பிணங்கும் போது இன்பம் பெருகுகிறது என்றும், அப் பிணக்கு நீங்கி இருவரும் கூடும்போது அவ் வின்பம் மிகச் சிறந்து விளங்குகிற தென்றும் காதலின்பத்தை நுகரும் முறையை அழகுறக் கூறுகின்றார். சுவைத்து உண்ணப்படும் பொருளுக்கு அதனுடைய சுவை மிகுமாறு சுவையில்லாத உப்புப் போடுவது போல்வது காதல் வாழ்வில் அதற்கு மாறான சிறு பிணக்குகள் உண்டாவது என்று கூறி அப் பிணக்குகளால் இன்பம் உண்டாவது கண்டு நுகர்வோர்,அந்த இன்பம் பெருகுமென்று நினைத்துப் பிணக்குகளை மிகுதிப்படுத் தினால், உப்பு மிக்கவிடத்து, பொருளின் சுவை கெட்டழிவது போல் காதல் வாழ்வு இன்பமாகாது சீரழியும் என்பதை, “உப்பமைந் தற்றால் புலவி அதுசிறிது மிக்கற்றால் நீளவிடல்” என அறிவுறுத்து கின்றார். இதுகாறும் கூறியதனால், இன்பம் என்பது எல்லா வுயிராலும் விரும்பப்படுவதொரு நல்உணர்ச்சி என்றும், அஃது அறம் பொருள் என்ற இரண்டாலும் விளைவது என்றும், இந்த இரண்டிலும் மெய், வாய், மனம், அறிவு முதலியன வாயிலாக இன்பம் வருகிறது என்றும், இன்பம் பெற்ற உயிர் அதனைப் பெருக்கிப் கொள்வதில் ஈடுபடுவதால் சிற்றின்பம், பெரிய இன்பம் என இன்பம் வகைப் படுகிற தென்றும், இன்பத்தைப் போற்றுவோர் இகல்என்னும் குற்றத்தையும் ஏனைத் துன்பச் செயல்களையும் வாராமல் தடுக்க வேண்டும் என்றும், இன்பத்தை நுகருமிடத்து அதனுள் அழுந்தி அதன் வயப்படாமல் நம்மைக் காத்துக் கொள்ள வேண்டு மென்றும், அதுவே பிறர்க்கும் நமக்கும் பயன்பட வாழும் வாழ்க்கைமுறை யென்றும், வாழ்க்கைத் துணையாகிய இருவர் உள்ளத்தையும் பிணித்து நிறுத்தும் காதலும் இன்பத்துக்கு வாயிலாம் என்றும், அங்கே அவ்வின்பம் சிறு பிணக்குகளால் சிறிது பெருகித் தோன்றிப் பிணக்கு நீங்கிக் கூடுவதால் சிறப்பு எய்துகின்றது என்றும் திருவள்ளுவர் கண்ட இன்பத்தின் இயல்பு ஒருவாறு விளக்கப் பெற்றது. 20. முயற்சி “வினையே ஆடவர்க்கு உயிர்” என்பர் சங்கச் சான்றோர். வினை என்பது உழைப்பு. உழைப்பு என்றால் எடுத்த வேலையைச் சோர்வு படாமல் செய்வது. வேலையை வினையென்றும், அதனை முடித்தற்காகச் செய்யும் உழைப்பை வினையாளுதல் என்றும் இலக்கியங்கள் கூறுகின்றன. வினையாளுதற்கு வேண்டிய மனவுறுதி யினை முயற்சி என்றும் ஆள்வினையுடைமை என்றும் கூறுவதுண்டு. அதனால், சோம்பலின்றி ஊக்கத்தோடு செயலாற்றும் உழைப்பாளி யிடத்தில் காணப்படும் முயற்சியை ஆள்வினையுடைமை என்று அழகிய பெயரிட்டுத் திருவள்ளுவர் உரைக்கின்றார். உண்மையோடு உழைக்கும்போது கருதிய அளவு பயன் கிடைக்காமல் போவதுண்டு. அதற்குக் காரணம் ஊழ்வினை என்று சொல்லுவரே தவிர உழைப்பாளியை, யாரும் குறை கூறிப் பழிப்ப தில்லை. எடுத்த வேலைக்கு வேண்டிய கூறுகளை நன்கு அறிந்து உண்மையாக முயன்று செய்யாதவனைப் பழிப்பார்கள். அவன் ஊழ்வினை என்று சொல்வானானால் அதைவிட மானக்கேடு வேறில்லை. இதனை, “பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்து ஆள்வினை இன்மை பழி” என்று திருவள்ளுவர் கூறுகிறார். இக்குறட்பாவின் பொறி என்பது ஊழ்வினை. ஊழ்வினை என்றால் என்னவெனில் நம்மால் முன்பு செய்யப்பட்ட வினையின் பயன். அது இன்பவடிவிலோ, துன்ப வடிவிலோ இருக்கும் அது நமக்குத் தெரிவதில்லை யாதலால், அதை நாம் எடுத்துக் கொள்ள முடியாது. வினைப் பயனும் அறிவில்லாதது; ஆதலால் அதுவும் தானாக நம்மை வந்து அடைய முடியாது. தெய்வத்துக்குத் தெரிவதால், வினைப்பயனைத் தெய்வம் நம்மிடம் சேர்த்து நுகரப் பண்ணுகிறது. அதனால் ஊழ்வினையை தெய்வம் என்று கூறுவதுண்டு. ஊழ்வினைப் பயன் நாம் செய்யும் வினையில் விளைவதாகையால், நாம் இப்போது செய்யும் வினை வழியாக, முன்னை வினைப் பயனைத் தெய்வம் ஊட்டுகிறது. ஊழ்வினைப் பயன் நல்லதாயின், நாம் செய்யும் வினைவழியாக, மிக்க நன்மை விளைவிக்கிறது; துன்பமாயின் செய்யும் வினைகள் தவறுமிடத்து, உடன் கலந்து மிக்க துன்பம் உண்டாக்குகிறது. இந் நிலையில் நாம் ஒரு வேலையில் முயலும்போது அறிவு மயங்கியோ, முயற்சிக்குரிய கருவியும், துணையும் குறைவுபட்டோ, தவறுண் டாகும் காலத்தில் தெய்வம் ஊழ்வினையைப் புகுத்தி எடுத்த வேலையைக் கெடுத்துவிடுகிறது. இவ்வாறு ஊழ்வினை புகுந் தாலும், நம் முயற்சியின் முழுப்பயனையும் கெடுக்காது; இன்றைய நமது முயற்சியளவுக்குரிய பயன் நமக்கு வந்தே தீரும். அதுபற்றியே, “தெய்வத்தால் ஆகாது எனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்” என்று கூறுகிறார். ஊதியம் ஊழ்வினையால் கெட்டாலும் தக்க வகையில் முயற்சி செய்பவர்க்கு முதல் கெடாது என்று உரைக் கின்றார். மேலும், உண்மையூக்கத்தோடு செய்யும் முயற்சிக்கு, ஊழ்வினையையும் எதிர்த்து, ஓரளவு பயன் அடையக் கூடிய ஆற்றல் உண்டு என்று இதனால் தெரிகிறதல்லவா? இந்த ஊழ்வினையும் நம்மால் செய்யப்பட்ட வினையே; முயற்சியும் நாம் செய்யும் வினையே. ஊழ்வினை ஒரு குறிப்பிட்ட காலத்தைச் சார்ந்திருப்பது; காலமோ நிலையின்றி ஓடிக்கொண்டே யிருப்பது. ஊழ்வினைக்குரிய காலம் குறைவாகையால் அவ்வூழ் வினையைப் பொருளாக எண்ணாமல் நமது முயற்சியை விடாப் பிடியாய்த் தொடர்ந்து செய்வோமாயின், ஊழ்வினைவலி குன்றி மெலிந்துபோகும். இதுபற்றியே, “ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித் தாழாது உஞற்று பவர்” என்று அறிவிக்கின்றார். நம் முயற்சிக்கிடையே ஊழ்வினை புகுந்து இடுக்கண் செய்தாலும், ஊக்கம் குன்றி மனச் சோர்வு கொள்ளாமல், தொடர்ந்து விடாது முயல வேண்டும் என்பதற்காகவே, உலைவின்றித் தாழாது உஞற்றுதல் வேண்டும் என்று கூறுகின்றார். முயற்சிக்குச் சிந்தனை ஆற்றலுண்டோ எனின், முயற்சியும் நம்மால் செய்யப்படுவது; முன்னை வினையென்ற ஊழும் நம்மால் செய்யப்பட்டது. நம்மால் செய்யப்பட்டதை நம்மால் அழிக்க முடியாதா? மேலும் ஊழ்வினை செயலின்றிக் கிடப்பது; முயற்சி யாகிய செய்வினையோ, தொடர்ந்து செல்லும் வலியுடையது. ஊழ்வினை இன்ப வடிவாகவும், துன்ப வடிவாகவும் இருக்கும் குறையுடையது; முயற்சியோ இன்பமே வடிவாக இருப்பது. அதுபற்றி, “முயற்சி திருவினையாக்கும் முயற்சி யின்மை இன்மை புகுத்தி விடும்” என்று கூறுகிறார். செல்வத்தைத் தந்து இன்பம் பெறுவிக்கும் என்பதைத் திருவினையாக்கும் என்கிறார். இங்ஙனமாயின் ஒருவன் முயற்சியுடையவனாவதற்கு என்ன செய்யவேண்டும் என்ற கேள்வி எழுகிறது. முதலாவது இன்பம் என்று சொல்லப்படுபவைகளை அவன் விரும்பமாட்டான்; மேன் மேலும் வேலை செய்வதையே விரும்புவான். தனக்கு இன்பம் வேண்டானாயினும் தனக்கு வேண்டியவர்க்குத் துன்பம் வரக் கண்டால் விரைந்து சென்று அத் துன்பத்தைப் போக்கி மேலும் துன்பம் நேராதபடி தூண்போல் நின்று காப்பான். இதனை, “இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர் துன்பம் துடைத்தூன்றும் தூண்” என்று கூறுகின்றார். இவ்வாறு இன்பத்தை வேண்டாமல், வேலைகளையே விரும்புவது நல்லதுதான். பிறர் துன்பம் துடைக்க முற்படுவது ஏன் என்று திருவள்ளுவரைக் கேட்டால், குடும்ப வாழ்வு நடத்துவதே பிறர்க்கு உதவி செய்வதற்கே யாதலால், முயற்சியுடையவன் அதனைச் செய்யாமல் இருக்கமாட்டான் என்பதற்காகத்தான் “தன் கேளிர் துன்பம் துடைத்துத் தூண் போல் தாங்குகிறான்” என்று கூறுகிறார். இங்ஙனம் பிறர்க்கு உதவி வாழ்வதுதான் வேளாண்மை. அதுதான் ஒருவனுக்குப் பெருந்தன்மை. அதனைச் சார்ந்துதான் அவனுக்கு மேம்பாடு உண்டாகிறது. இதற்கெல்லாம் அடிப்படை அவனது முயற்சி. “தாளாண்மை என்னுந் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னுஞ் செருக்கு” என்று கூறுகிறார். இக்குறளில் முயற்சியைத் தாளாண்மை என்றும், பிறர்க்கு உதவி செய்வதை வேளாண்மை என்றும் குறிக்கின்றார். இந்நாளில் வேளாண்மை என்பது பயிர்த்தொழிலுக்குப் பெயராய் விட்டது. வேளாளர் என்பது புலால் உண்ணாத ஒரு சாதியைக் குறிப்பதாயிற்று. இது காலத்தால் வந்த கோளாறு. பிறர்க்கு உதவி செய்வதைக் குறிக்கும் வேளாண்மை, முயற்சி செய்பவனுக்கே உரியது என்று திருவள்ளுவரே கூறுகின்றாரே, முயற்சியில்லாதவரும் பிறர்க்கு உதவி செய்கிறார்களே, அவர் களுக்கு மேன்மை வராதோ என்று கேட்கலாம். முயற்சியில்லாதவன் வேளாண்மை செய்வானானால் ஒரு சில நாட்களில் உள்ள பொருளை யிழந்து தனக்கே கேடு செய்து கொள்வான். அவனை அதைச் செய்யச் சொல்வதே குற்றம். முயற்சியில்லாதவன் பேடி; அவனைப் பிறர்க்கு உதவும் வேளாண்மை என்னும் பெருமை வாய்ந்த செயலைச் செய்யவிடுவது. பேடியின் கையில் கூரியவாளைக் கொடுத்துப்போர்க்கு விடுவதுபோல் ஆகும். ஆதலால்தான், “தாளாண்மை இல்லாதான் வேளாண்மை, பேடிகை வாளாண்மை போலக் கெடும்” என்று கூறுகிறார். முயற்சியை விரும்பாமல் சோம்பியிருக்கும் செல்வர்களும் உலகில் உண்டு. தம்மை அனைவரும் பாராட்டவேண்டியும் போலிப் புகழ் வேண்டியும் வருபவர் அனைவர்க்கும் வேண்டிய உதவியைச் செய்வர். அது சுரக்காத கிணற்றில் உள்ள தண்ணீரை மேன்மேலும் இறைப்பதுபோலாகும். முடிவில் முயற்சியில்லாதவன் செல்வ மெல்லாம் இழந்து வறுமைக்கு இரையாகிக் கெடுவான்.*  * அந்தணர் என்னும் சொல் முற்றத் துறந்த முனிவர்க்கே உரியதென்பது திருவள்ளுவர் கருத்து; சாதிப் பெயரன்று என்பது அவர் நூலகத்தே விளங்கும். நச்சினார்க்கினியர் உரையும் இக்கருத்தை வலியுறுத்துகின்றது. * வியாசபாடியமும் தத்துவ வைசாரதியும் IV - II * அத்த சாலினி பக். 89 * பச்சையப்பர் கல்லூரிப் பேராசிரியரும் மறைமலையாரின் மாணவருமான மணி. திருநாவுக்கரசரின் தம்பி மணி. கோடீசுவரரன். வேலூர் மகந்தை உயிர்நிலைப்பள்ளித் தலையாசிரியர். ஆங்கிலத்தில் சிறந்த பேச்சாளர். 1. இதிகாசங்கள் என்ற தலைப்பில், இதன் சுருக்கம், திருச்சி அகில இந்திய வானொலி நிலையத்தால் ஒலிபரப்பப்பட்டது. * இக் கட்டுரையின் தொடர்ச்சி கிடைக்கவில்லை. பொதுமணித்திரள் (கட்டுரைகள்) 1. புரட்சிக் கவிஞன் வாழ்க! சுமார் அறுநூற்றைம்பது ஆண்டுகட்கு முன் நம் தமிழ் நாட்டுத் தில்லை நகரின் கண் ஒரு புரட்சிக்கவி தோன்றினார். அவருடைய புரட்சியுள்ளம் சைவ சமயத் துறைக்கண் சென்றது. அக்காலத்தே அது வேண்டியிருந்தது போலும். அவரைக் கொற்ற வன் குடி உமாபதி சிவனார் என்று கூறுவர். அவர் காலத்துக்கு முன்பும் பின்பும் சைவ உலகில் பௌராணிக சமயமும் வேறு பல சமயங்களும் புகுந்து உண்மையறிவுக்கு ஒவ்வாத பல கருத்துக் களை நாட்டிற் புகுத்திப் பெருங் கலக்கத்தை விளைவித்தன. அக் கலக்கத்திலின்றும் மக்களைத் தெளிவுறுத்தற்கு எளிய முறையில் அமைந்த தமிழ் நூல்கள் மிகச் சிலவே இருந்தன. அவையும் பழமைக்கண் வேட்கையும், புதுமைக்கண் வெறுப்புமுடைய மக்களால் புறக்கணிக்கப்பட்டன. பலரும், பழமையான நூல்கள் குற்றமில்லாதன; புது நூல்கள் பலவும் குற்றமுடையன என்றனர். மக்களும் தமக்குப் பகுத்தறிவென்ப தொன்றுண்டென வுணராது, பலர் புகழின் தாமும் புகழ்வதும், இகழ்வாராயின் இகழ்வதும் செய்து திரிந்தனர். இதனைக் கண்ட கொற்றவன் குடியார், மக்கள் அறிவு பெற்றிருந்தும் அதனைப் பயன்படுத்தாது அடிமையால் மடிகின்றன ரேயெனக் கண்டு, "தொன்மைய வாமெனு மெவையும் நன்றாகா இன்று, தோன்றிய நூலெனு மெவையும் தீதாகா" என அறிவுறுத்தி, பகுத்தறிவில்லாத மக்களைத் "தவறுநலம் பொருளின்கண் சார் வாராய்ந்திடுதல் இன்மையினார்" என்றும், அவர்கள். ஒன்றைக் கண்டு பலரும் புகழ்ந்தால் தாமும் அதைப் புகழ்வர்; இகழ்ந்தால் தாமும் இகழ்வர் என்பார், "தவறுநலம் பொருளின் கண் சார்வா ராய்ந்தறிதல் இன்மையினார் பலர் புகழில் ஏத்துவர், ஏதிலர் உற்று இகழ்ந்தனரேல் இகழ்ந்திடுவர்" என்றும், இவர் அறிவால் வறியரா வர் என்பார், "தமக்கென ஒன்று இலரே" என்றும் கூறினார். இவருக்குப் பின் பல நூற்றாண்டு கழிந்தும் நம் நாட்டில் "தமக்கென ஒன்று இலர்" எனப்பட்ட மக்களே நிரம்புவாராயினர். சாதி சமயங்களின் பெயரால் மக்கட் குழுவில் உயர்வு தாழ்வுகளும் கருத்துப் பிளவுகளும் பல்கின; அதனால் தமிழரினம் சூறையிற் பட்ட பஞ்சுத் துய்போலப் பல்வேறு வகையில் சிதறித் தனித்துப் பிறர்க்கு அறிவு ஆண்மை பொருள் முதலிய துறையின் பிற்பட்டு அடிமையாய் போயிற்று. தமிழன் பிறருடைய அறிவு ஆண்மை பொருள் முதலிய வகையில் தனித்து நிற்கும் சிறப்பிலன் என்பார் போலத் தமிழ் மொழி, வடமொழி முதலிய மொழிகளின் நீங்கித் தனித்தோங்கும் சிறப்பில்லாதது என்றெல்லாம் பலரும் கூறத் தொடங்கினர். தமிழ்ச் சான்றோரும் தமக்கென வொன்றிலராய் அவர் வழி யொழுகுவதே நெறியெனக் கொண்டனர். அந்நெறி அண்மையில் தோன்றிய பாரதியாரையும் விட்டிலதென்பதை "ஆரியநாட்டினர் ஆண்மையோடியற்றும் சீரிய முயற்சிகள் சிறந்து மிக்கோங்குக" என்று பாடுதலாலும் துணியலாம். இன்றும் தமிழ் நாட்டுச் சட்டசபை உறுப்பினர் தமக்குரிய தலைவரைத் தாமே தேர்ந்து கொள்ளும் தகுதியிலரென அவர்தம் மேலதிகாரக் குழுவினர் கருதுவதும், பல்வகையால் அலைப்பதும், தமிழ்நாட்டுக் கல்வி நிலையங்களில் தமிழ் முதன் மொழியாக இல்லாமையும் போதிய சான்றுகளாகும். இந்நிலையில் மக்களது நல்லறிவையெழுப்பி அவர்களை ஒடுக்கி நிற்கும் தடைகளையுணருமாறு பண்ணும் ஒருவரைத் தமிழகம் எதிர்பார்ப்பதாயிற்று. முன்னாளில் தமிழகத்தில் மக்கள் வாழ்வுக்கு வேண்டிய அறிவு நெறிகளை வழங்குந் தொழிலை மேற் கொண்டிருந்தவர் இனிய கவி வழங்கும் புலவர்களேயாவர். நாட்டில் ஏரி குளங் களைப் பெருக்கி, நீர் நிலைகள் மிகுவித்தோரும், போர்வரின் அஞ்சாது சென்று பொருது வென்றி மேம்படுவித்தோரும் புலவரே யென்பதைத் தமிழகத்தின் வரலாறு காண்போர் நன்கறிவர். இடைக் காலத்தில் வாழ்ந்த புலவர்கள், மக்கள் நலத்தைப் போற்றுவதிலும் தம்மை யாதரித்த வள்ளல்களின் புகழ் பாடுவதே செயலெனத் தொண்டாற்றியதனால் தம் தலைமை நிலையை இழந்தனர். இந்நாளில் அவர்கள் மீளத்தலையெடாவாறு பிற மொழியும் பிற தொடர்புகளும் மேம்படலாயின. ஆயினும் மக்கள் தம்மைத் தமிழரென்றும் தமது தொன்மை நலம் இதுவென்றும் மெல்லத் தெரிந்து கொண்டனர். தமிழ்ப் புலவர்களின் தமிழ்ப் பணியின் தவறு நலங்களைப் பகுத்தறியலானார்கள். அவர்களிடையே பாரதிதாசனார் போலும் தகவுடைய கவிகள் தோன்றலாயினர். அவருட் பாரதிதாசனார் தலைமையிடம் பெற்றுத் திகழ்கின்றார். இக்காலத்தே தோன்றும் கவிகள் உலகில் பிறந்து நிலவும் மக்கள் நல்வாழ்வு வாழ்வதற்குரிய நெறிகளைக் காண்பதும், அந்நெறிகட்குத் தடையாயிருப்பவற்றின் கொடுமைகளையுருப் படுத்தி மக்கட்கு உணர்த்துவதும் கடமையாகக் கொண்டுள்ளனர். இதுகாறும் மக்கள் வாழ்க்கைக்கு மேம்பட்ட தேவ வாழ்க்கை களும், மக்களியல்புக்கு அகப்படாத வாழ்க்கைகளுமே கவிகளால் பெரிதும் பாட்டுருவிற் காட்டப்பட்டு வந்தன. அவற்றின் அறிவு, மக்களை ஒருசிறிதும் முன்னேற்ற வில்லை. "வையத்து வாழ்வாங்கு வாழ்வதே வாழ்வு" எனத் திருவள்ளுவர் முதலிய சான்றோர்கள் அறிவுறுத்திய செய்தி மக்கட்கு நன்கு உணர்த்தப்படவில்லை. இக்குறைபாட்டால் தமிழரினம் தலைமையிழந்து இன்றைய தாழ்நிலை எய்திற்று. இந்நிலை இக்காலப் புலமையுள்ளத்தைப் பணி கொள்வதாயிற்று. ஆகவே இக்கவிகள் பலவும் இம்மை வாழ்வின் செம்மை நிலை குறித்தே அழகிய கருத்துக்களை வழங்குவதற்குரிய கருக்கொள்ளுவ வாயின. உரிய காலம் நன்கு வாயாதிருந்த காலம், இராமலிங்க அடிகள் காலம். எனினும் அவருள்ளம் தமிழரினத்தைக் கெடுக்கும் தடைகளையும் தளைகளையும் தகர்த்தெறியப் பெரும்பாடு பட்டுள்ளது. "குலத்திலே சமயக் குழியிலே நரகக் குழியிலே குமைந்து வீண் பொழுது, நிலத்திலே போக்கி மயங்கியே மாந்து நிற்கின்றார்" என்பது முதலிய கருத்துக்கள் அவரால் வெளிவரலாயின. அக் காலைத் தமிழரினத்துப் பிளவுகளையும் பிரிவுகளையும் தமக்குப் பயன்படுத்தி கொண்ட தன்னலக் கூட்டம் பெரும் போர் உடற்றிற்று. பின்னர்த் தோன்றிய பாரதியார் காலத்தில் உரிமைப்போர் நிலவுவதாயிற்று. அக்காலம் ஓரளவு பயன்படுவது கண்ட புலமை யுள்ளம் பாரதியாரைப் பணி கொண்டது. அவரது முயற்சி நாட்ட வரை அரசியலுரிமைப் பேற்றில் வேட்கை மிகுவித்துக் கற்றார் கல்லார், ஆடவர் - பெண்டிர் அனைவரையும் ஓரளவு ஒருசேரத் தொகுக்கத் தலைப்பட்டது. அவ்வாறு மக்கள் தொகுவதைக் கண்ட தன்னலக் கூட்டம் அத்தொகுதிக்குட் புகுந்து, தன் செல்வாக்கால் தலைமையேற்றுத் தமிழரினம் ஒருமையுறுவதற்குத் தடையாயுள்ள வற்றைப் போக்கும் முயற்சியை விடுத்துத் "தேசியம்" என்ற போலிப் போர்வை கொண்டு மூடி, ஒற்றுமை யெய்தாமைக்குரிய கொடுமைகளை யுள்ளுற வளர்த்து வருவதாயிற்று. இது புலமை வரலாறு. கவிபாடும் புலமையுள்ளம் இக்கால வெள்ளத்தைக் கண்ட வண்ணம் இருந்தது. மேனாட்டுப் போக்கு வரவும் கலையறிவும் புலமையுள்ளத்துக்குத் துணிவும் ஆக்கமும் பயந்தன. கொக் கொக்கக் கூம்பியிருந்த தமிழ்க் கவி, வேற்றுமைக் கொடுமைகளாம் மீனினத்தைக் குத்தியண்டு தேக்கெறியும் செவ்வி இதுவெனத் தெளிந்து தன் செயலைச் செய்யத் தொடங்கிற்று. தாழ்ச் சமூக ஊழல்களையும் - தடைகளையும் - தளைகளையும் தமிழ்க் கவியுள்ளம் நன்கு கண்டு பாட்டுருவில் எடுத்துக் காட்டலுற்றது. இப் பாட்டுகள் பாரதிதாசனார் பாடும் பாட்டு; அவருள்ளம் பண்டைத் தமிழ் வாழ்வின் செம்மை யுணர்ந்து இன்றை வாழ்வின் இழிவு கண்டொறுக்கும் எழிலுள்ளம். இவர் காணும் தமிழரினத்தை ஒரு சிறிது காட்டி என்பணியை நிறைவு செய்வேன். தமிழ் மகன் ஒவ்வொருவனும் சஞ்சீவி பருவத்தின் சாரலில் தோன்றும் குப்பன்; தமிழ்மகள் அவனோடு போந்து அறிவு கொளுத்தும் வஞ்சி. சஞ்சீவி பருவதம் பல மூலிகைகள் கொண்டு நிற்கிறது. ஒரு மூலிகையைத் தின்ற குப்பனும் வஞ்சியும் புதுக் காட்சி பெறுகின்றனர். "வஞ்சிக்கும் குப்பனுக்கும் வையத்து மாந்தர்களின் நெஞ்சம் வசமாக நேரிலவர் பேசுதல் போல் செந்தமிழில் தங்கள் செவியிற் கேட்கப்" பெறுகின்றார்கள். இங்கே இவர்களுண்ணும் மூலிகை கலை யறிவோடு கலந்தூறியெழும் பகுத்தறிவாய் நின்று உண்மை நிலையையுணர்த்துவது காண்மின்! இப்பகுத்தறிவாகிய மூலிகை யால் தமிழ் மக்களாகிய வஞ்சியும் குப்பனும், பிராஞ்சியரும் அமெரிக்கரும் இங்கிலாந்து தேசத்தாரும் தங்களுக்குள் கொண்டிருக்கும் மனக் கருத்தையறிந்து, தம் நிலையை யெண்ணத் தொடங்குகின்றனர். தமிழ் மக்களுள் பெண் மக்கள் தம் தமிழகத்தின் தாழ் நிலையை முன்னுறவுணர்ந்து தெளிந்து செயல் மேற்கொள்கின்றனர். இதனைப் பாரதிதாசனார் வஞ்சியின் வாய்மொழியாக வைத்து, " பச்சிலையைத் தந்த பருவதத்தைக் கும்பிட்டாள் ' இந்த இலையால் இனி நன்மை கொள்க' என்று சொந்தத் தாய்நாட்டுக்குச் சொன்னாள் பெருவாழ்த்து வல்லமைகொள் பச்சிலையின் மர்மத்தைக் கண்டபடி சொல்லியெனைத் தூக்கிவந்து சூட்சுமத்தைக் காட்டிய கண் ணாளர் தாம் வாழ்வடைக" என்று வாழ்த்துகின்றார். சஞ்சீவி பருவதத்தில் ஏறமாட்டாத வஞ்சியைக் குப்பன் தூக்கிச் செல்வது, தமிழ் மகளிர் பகுத்தறி வெல்லையில் சொல்லமாட்டாது கிடப்பதும், கொண்டு செலுத்திய வழி, அவர்கள் முன்னதாகவே கொள்வன கொண்டு வேண்டுவன தெளிந்து செயற்படத் தொடங்குவதும் குறித்து நிற்பது காண்மின்! பருவதத்தின் சாரலில் இருக்கும் குப்பன், நம் நாட்டில் பாகவதர் இராமாயண காலக்ஷேபம் செய்வதும், அனுமார் சஞ்சீவி பருவதத்தையெடுக்கச் சென்று திரும்பும் காட்சியை அப்பாகவதர் சொல்ல மக்கள் கேட்டு மதிமயங்குவதும் கேட்டும் கண்டும் அறிவு மருளுகின்றான். இதுதானே இந்நாளைய தமிழ் மக்களின் நிலை! சாதி சமூக சமயவேற்றுமைகளையும் பிறவற்றையும் மேடையிலும் திண்ணையிலும் விரியப் பேசுவதும், ஆங்காங்கே நிகழக் காண்ப தும் செய்வதும், மீளமனமருண்டு செயல் மடிந்து உளந்தேய்ந்து போகின்றார்களன்றோ! இவர்களை நோக்கி நம் பாரதிதாசனார், அறிவுறுத்தத் தொடங்கி, குப்பனாகிய தமிழ் மகற்கு வஞ்சியாகிய தமிழ் மகள் கூறுவதாக வைத்து, "வானளவும் அங்கங்கள் வானரங்கள் ராமர்கள் ஆனது செய்யும் அனுமார்கள் சாம்பவந்தர் ஒன்றல்ல ஆயிரம் நூல்கள் உரைக்கட்டும்; விஸ்வரூபப் பெருமை மேலேறும் வன்மைகள் உஸ்ஸென்ற சத்தங்கள் அஸ் என்ற சத்தங்கள் எவ்வளவோ நூலில் எழுதிக் கிடக்கட்டும்; செவ்வைக் கிருபை செழுங்கருணை யஞ்சலிக்கை முத்தி முழுச் சுவர்க்கம் முற்றும் உரைக்கட்டும்: இத்தனையும் சேரட்டும்; என்ன பயனுண்டாம்? உள்ளபகுத் தறிவுக் கொவ்வாத ஏடுகளால் எள்ளை யசைக்க இயலாது; மானிடர்கள் ஆக்குவதை யாகா தழிக்குமோ? போக்குவதைத் தேக்குமோ? சித்தம் சலியாத் திறன்வேண்டும்! மக்கள் உழைப்பில் மலையாத நம்பிக்கை எக்களிக்க வேண்டும் இதயத்தில் ஈதன்றி நல்லறிவை நாளும் உயர்த்தி யுயர்த்தியே புல்லறிவைப் போக்கிப் புதுநிலை தேடல் வேண்டும் மக்கள் உழைக்காமுன் மேலிருந்து வந்திடுமோ? எக்காரணத்தாலும் இன்மையிலே யுண்மையுண்டோ? மீளாத மூடப் பழக்கங்கள் மீண்டுமுமை நாடா திருப்பதற்கு நான் உங்களையின்று சஞ்சீவி பர்வதத்தில் கூப்பிட்டேன் தற்செய லாய் அஞ்சும் நிலைமையே ஆங்கே நிகழ்ந்ததுண்டாம் உங்கள் மனத்தில் உறைந்து கிடந்திட்ட பங்கஞ்செய் மூடப் பழக்க வழக்கங்கள் இங்கினி மேல்நில்லா எனநான் நினைக்கின்றேன்" என்று கூறுகின்றார். இதனைக் கேட்கும் தமிழ் மக்கள் குப்பன் கூறுவது போல, "இன்பஞ் செறிந்திருக்கும் இப்பெரிய தேசத்தில் முப்பது முக்கோடி மாந்தர்கள் மொய்த்தென்ன செப்பும் இயற்கை வளங்கள் செறிந்தென்ன? மூடப் பழக்கம் முடிவற்ற கண்ணுறக்கம் ஓடுவதென்றோ உயர்வதென்றோ நானறியேன்." என்ற ஒவ்வொரு தமிழ் மகனும் தமிழரினத்தைப் பார்த்து உரைக்கும் நிலையில் இருந்து வருகின்றான். இது பாரதிதாசனார் காட்டும் தமிழுலகம்; உண்மையும் இதுவே. இவ்வாறு உண்மையை உள்ளவாறு காட்டுவதே புலமையும் கவி வன்மையுமாகும். அன்று இரண்டாயிர மாண்டுகட்கு முன்பு ஒரு புலவன், உலக வாழ்வில் காணப்படும் துன்பங்களைக் கண்டு "இன்னா தம்ம உலகம்" என்று கூறி, மேலும் இன்னாதாயினும் மனம் மழுங்காது, ஊக்கங் குன்றாது, அறிவு குறைவு படாது "இனிய காண்க இதன் இயல்புணர்ந்தோரே" என்று ஊக்கங் காட்டினான்; பின்னே வந்தவர், பின்னே கூறியதை மறந்து முன்னே கூறியதை மேற் கொண்டு, "இன்னா தம்ம உலகம்" என்பதை வற்புறுத்தினர்; தலைமை சான்ற தமிழரினம் அதனால் மடிமை சான்ற அடிமைக் கண் அழுந்திற்று; இன்று தோன்றிய புலவனாகிய பாரதிதாசன், "இனிய காண்க இதன் இயல்புணர்ந்தோரே" என்ற கருத்தை வற்புறுத்துவது இக்காலத்து வேண்டும் இன்பத் தமிழ்த் தொண்டா கும். இத்தகைய தொண்டால் தமிழரினத்தை மேம்படுவிக்கும் இன்றமிழ்ப் புலவன் பாரதிதாசன் இனிது வாழ்க. 2. நாற்பது ஆண்டுகட்கு முன் நான் கண்ட மணிமொழியார் திரு. காஞ்சி மணிமொழியார்க்கு எழுபது ஆண்டு நிறை வுற்றமை அறிந்ததும் எனக்கு ஒரே வியப்புத் தோன்றியது. நாற்பது ஆண்டுகட்கு முன் நான் திருவத்திபுரத்தில் தமிழ்ப்பணி புரிந்த போது, காஞ்சியில் என் கண்முன் நின்று பணிவமைந்த இன்பவுரை வழங்கிய மணிமொழியாரின் கட்டாண்மைத் தோற்றம் என் மனக்கண்ணில் காட்சி தருகிறது. அதனால்தான், இந்த வியப்பு. திரு. காஞ்சி கலியாணசுந்தரத்தோடு கலந்து உரையாடும் போதெல்லாம் மணிமொழியாரின் உரைகளும் உண்மையுழைப்பும் ஊக்கமும் எங்கள் பேச்சின் பொருளாகும். மணிமொழியார் வணிகராகவும் தமிழாசிரியராகவும் கழகத் தொண்டராகவும் அரும்பணி புரிந்தவர். ஒருநாள் இரவு, அறிஞர் அண்ணா அவர்கள் முதல் அமைச்சரானமைக்கு என் வாழ்த்தைக் கூறும்போது காஞ்சி மணிமொழியாரும் இதுவே கூறினார் என்றது, இப்போது நினைவில் தோன்றி மகிழ்விக்கிறது. கழகத்தின் வளர்ச்சியும் சிறப்பும், சுடச் சுடர்விடும் பொன்போல் இலங்குவன. அதன் தொடக்கம் கண்டு, வளர்ச்சி எண்ணிப், பயன்தருவது காணும் பேரின்பத்தில், என்னினும் மணிமொழியார் மிக்க வுரிமையுடையவர். தமிழார்வம் இளைஞர் உள்ளத்தில் தோன்றிப் பெருகுவதில் எனக்கிருந்த தமிழ்ப்பற்று, தமிழினத்தின் நல்வாழ்வு காணவுழைத்த கழகப் பணியில் நேர்முகமாகக் கலந்துகொள்ள விடவில்லையே யன்றிக் கழக வளர்ச்சியில் தமது வாழ்வையே உரிமை செய்த பெரு மக்கள்பால் என் நன்மதிப்பும் நல்லன்பும் என்றும் குறைவ தில்லை. என் மனம் விரும்பும் மாண்பும், மதிப்பளிக்கும் மேதகவும் உடைய நண்பர் திரு. காஞ்சி மணிமொழியார் பல்லாண்டு வாழ்தல் வேண்டும். அவரது பழுத்த அறிவும் பண்பின் நீங்காத ஆக்கவுரையும் இப்போதைய தமிழினத்துக்குப் பெறலரும் பேறுகள். வாழ்க காஞ்சி மணிமொழியார்; வளர்க அவரது அரும்பணி. - காஞ்சி மணிமொழியார் 71வதுஆண்டு பிறந்த நாள் மலர், 1970 3. அறிஞர் அண்ணாவின் அடிச்சுவடு மாண்புமிகு கல்வி அமைச்சர் திரு. நெடுஞ்செழியனார்க்குப் பொன்விழா என்ற செய்தியை அறிந்ததும் என் முதுமையுள்ளம் பெருவியப்பில் ஆழ்ந்தது. அவரை நினைக்கும் போதெல்லாம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் முதுகலைவகுப்பில் "கடாவுருவும் கண்ணஞ்சா" நெஞ்சமும், தெள்ளிய செந்தமிழ் வழங்கும் செந்நாவும், சிவந்து தோன்றும் செம்மல் மேனியும் பீடு நடையும் கொண்டவுருவமே என் மனக்கண்ணில் தோன்றுவது வழக்கம். தமிழ் நாட்டரசியல் மன்றத்தில் எதிர் கட்சித் தலைவராய்ப் பணிபுரிந்த நாளிலும், அவரைக் காணும்போது தோற்றத்திலோ வழங்கும் மாற்றத்திலோ மாணவர் நிலையிலிருந்த கடமை கட்டுப் பாடு பெருந்தகைமை என்ற மூவகைப் பண்பாடும் உருக்குலை யாமல் இருக்கக் கண்டு இறும்பூது எய்தினேன். இன்றும் இளமைக் கோலத்தோடு என்கண் முன் காட்சி தரும் இளஞ்செம்மலுக்கு ஐம்பது ஆண்டு நிரம்புகிறது என்பதை என்னால் நம்ப முடியவில்லை. இன்றைய நமது தமிழ்நாட்டரசுப் பேரவையில் இருந்து மாண்புமிகு தலைமைப் பணியும் அமைச்சுப் பணியும் மேற்கொண்டு, "மருள்நெறிசேர் சுயநலமாம் மாயவிருள் இரிந்தோட மதிக்க வொண்ணாக் கருணையெனும் அளிக்கதிர்கள் தமைவீசிப் புகழ்பரப்பும்" இன்ப இளஞாயிறுகளான புலவர் கோவிந்தனார், நாவலர் நெடுஞ் செழியனார், மதியழகனார், மாதவனார் ஆகிய இவர்களை இதனை எழுதுங்கால் என் மனக்கண் தன்முன் கொணர்ந்து நிறுத்துகிறது. இவர்களுடைய கூர்த்த நோக்கமும் சீர்த்த முகமும் அன்று பார்த்த இளமை வளமே கொண்டு என் முன் தோன்றி இன்பம் செய்கின்றன. மாண்புமிகு முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியவர்களை அன்று கோவை மாநாட்டில் "மணிப்பயல்" என்று மனமகிழ்ந்து பாராட்டிய என் "சிறுசெந்நா" இப்போதும் அதனையே கூறி மகிழச் செய்கிறது. அன்று என் உடன் இருந்து என் கருத்திற் பங்குகொண்டு உவகை மீதூர்ந்து "நீங்கள் பல மாணவரை அறியும் ஆசிரியர்" என்றார்க்கு, "இந்த மணிப் பயலால் நம் தமிழகம் சிறந்து ஒளிபெறும்; இவனைக் கண்ணும் கருத்துமாய்ப் பார்க்க வேண்டும்" என்று தமிழ்த்தாய் எனக்குள் உணர்த்த யான் அறிஞர் அண்ணாவின் துடையை நன்கு தட்டி வற்புறுத்தினேன். மணிப்பயலின் தமிழ் நாட்டரசு மாட்சியை (நெஞ்சு கலங்கிக் கண்ணீர் கண்களை, மறைக்கினும் துடைத்துக் கொண்டு சொல்லுகிறேன்) அறிஞர் அண்ணா இன்று இருந்து காண்டல் வேண்டும்; அவரது கருத்துரை யைக் கேட்கும் தவப்பேறுயான் இல்லாதவனாயினேன். ஏனெனில் தமிழக முதலமைச்சரான பின் நான் கண்டபோது "உங்கள் 'மணிப் பயல்' அமைச்சரில் ஒருவன்; உங்களுக்குத் திருப்திதானே" என்று விடை தந்தார். இங்ஙனம் உள்ளத்தில் ஊற்றெழுந்து வரும் நினைவுகள் பல; ஒரு சில கூறுவது இக்கட்டுரை. நெடுஞ்செழியன் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தமிழ் முதுகலை மாணவராய்ப் பயின்றபோது, தமிழாராய்ச்சித் துறையிற் பணிபுரிந்த என்னைச் சிவப்பிரகாசம் என்ற மெய்கண்ட சாத்திரத்தை முதுகலை வகுப்பிற் குரைக்குமாறு தமிழ்த் துறைத் தலைவர் தாகூர் சட்டக் கலைப் பேராசிரியர் கா. சுப்பிரமணியப் பிள்ளையவர்கள் பணித்தார்கள். அந்நிலையில் ஒருநாள் மன்னார்குடி அரங்கசாமி முதலியார் அறக் கட்டளையில் நடைபெறும் புலவர வைக்கு என்னை அழைக்க வேண்டி என் வீட்டிற்கு நெடுஞ் செழியன் வந்தது இன்றும் என் நினைவில் இருக்கிறது. மிடுக்கான தோற்றமும் கள்ளமில்லாத உள்ளப் பொலிவும், தெளிந்த நா நலமும் உடையவராய் பொன்போன்ற மேனியராய், "அறக் கட்டளையின் மாண்புகளை முன் மொழிந்து பின்னை அதன்சார்பில் அழைத்தது அவர் ஒரு சிறந்த நாவலராவர் என்பதை வற்புறுத்திற்று. பல்கலைக் கழகத்தின் நீங்கிய சில்லாண்டுகளில் அவர் இயற்பெயர் முன்னர் நாவலர் என்ற சிறப்புப் பெயர் சேர்ந்து கொண்டது; இன்று "நாவலர்" என மொழியின் தமிழ் நாடு முழுவதும் அச்சொல் இரா. நெடுஞ்செழியனைக் குறிப்பது தொடக்கப் பள்ளிச் சிறுவர் சிறுமி யரிடத்தும் நன்கு தெரிந்திருக்கிறது. பின்பு, அவர் புது மணவாளராய்த் தமது துணைவி திருமதி விசாலாட்சியம்மை யாருடன் "சோழவந்தான் புகை வண்டி நிலையத்தில் நான் இருந்த பெட்டியில் வந்து அமர்ந்தார். அவரவர் நலங்களை அளவளாவி மகிழ்ந்திருக்கையில் எதிரில் இருந்தவர் பேச்சுக் கொடுத்தார். அவர் வேலூர் மாவட்டக் கூட்டுறவுத் தலைமையலுவலகத்தவர் என்று அறிமுகம் செய்து கொண்டு சமயச் சார்பாகச் சில கருத்துக்களை வினவத்தலைப்பட்டார். நெடுஞ் செழியனார் அவர்க்கு விடை கூறித் தாம் வேறு வினவத் தொடங் கியதும் அக்கூட்டுறவுத் தலைமையலுவலர்க்கு விடையிறுக்கும் திறம் குறையலுற்றது. அதனால் அவர் "அண்ணாமலைப் பல்கலைக் கழகம் நாத்திகம்தானே வளர்க்கிறது; வேறு என்ன செய்கிறது?" என வெகுண்டார். அப்போது நன்கு சிரித்த நெடுஞ்செழியனார், மிக்க பரிவுடன் உங்கட்கு நாத்திகம் ஆத்திகம் என்ற இரண்டும் நன்கு விளங்க வேண்டும்; என்று சொன்னதும் அவர் அயர்ந்து விட்டார். முடிவில் அவர் நாவலர் சொல்வதை அமைவுறக் கேட்பவராகி, "இன்றைய சமயம் மக்களின் அறியாமை மேல் நிற்கிறது. அறிவாராய்ச்சி தோன்றிப் பரவும் வரை உங்கள் ஆத்திகம் நிற்கும்; பின்னர்ப் பறந்துபோம்" என்றது அவரது நா நலத்தை நான் கண்டு மனம் மகிழ்ந்து வியக்கச் செய்தது. சில ஆண்டுகட்குப்பின் நமது நாவலர் சென்னைச் சட்டமன்றத்து எதிர்க்கட்சித் தலைவராய் ஏற்றம் பெற்றார். அவருடைய வினாக் களும் விளக்கங்களும் மக்கள் மனதில் அவரிடத்தே நன் மதிப்புத் தோற்றுவித்தன. ஆளுங்கட்சி யுறுப்பினர்களின் பொருளாசையும் பதவிமயக்கமும், நினைப்பவர் நினைவில் தோன்றி நிற்கும் வகையில் எதிர்க்கட்சித் தலைவராய்ப் பெருந்தகவும் கடமையுணர்வும் இனிது விளங்கத் தக்கவகையில் நெடுஞ்செழியனார் பல சமயங்களில் அரசவையில் உரை நிகழ்த்தினர். அறிஞர் உரையாடல்களில் அவருடைய உரைகள் ஆழ்ந்து சிந்திக்கப்படுவதுண்டு. அன்றைய ஆளுங்கட்சியின் கல்வியமைச்சர், "தமிழ் நாடு" பெயர் பற்றி எழுந்த வாதத்துக்கும் மொழிபற்றி நாட்டில் தோன்றிய கிளர்ச்சி பொருளாக வும் தெளிவில்லாத கருத்துக்களை வழங்குமாறு எதிர்கட்சித் தலைவர் மடக்கியது கண்ட தமிழறிஞர் 'எதிர் க்கட்சித் தலைவர் ஆளுங்கட்சி படு பள்ளத்திற் புதையுமாறு குழிதோண்டி விட்டார்' என வியந்து உரையாடினர். நேர்முகமாகச் சொல்லம்பு தொடுத்தலும், சுடுசொல் வழங்கலும் இன்றி, மெல்லிய இனிய அமைதி சான்ற சொற்களால் நாவலர் நிகழ்த்திய உரைகள் ஆளுங்கட்சியை அலைத்த திறம் அறிவுடையோர் கூட்டத்தில் அவர்பால் பெரு மதிப்பு உண்டுபண்ணியதை நாட்டவர் நன்கு அறிவர். சிலகாலங்களில் கட்சித் தொண்டர்களின் புல்லிய வேண்டு தல்கள் அவரது கட்சியின் தகைமைக்கு இழுக்குத் தருவன போல் தோன்றும்; உடனே அவற்றைக் கண்ணறக் கடிந்துரைத்துக் கட்சியின் பெருந் தன்மையை நிலைநாட்டியதைத் தொண்டர் போந்து தனிமுறையில் உரைப்பர். தம்முள் பேசுவர். அவற்றைக் கேட்குந்தோறும் அறிஞர் குழுவில் தக்கார் தலைமையின் நாவலரது தகவுடையின் சிறப்பு இனிது வெளிப்படும். நாவலரது கட்சி அடுத்து வந்த தேர்தலில் ஆளுங்கட்சி யாயிற்று; அறிஞர் அண்ணாவின் அருமந்த அமைச்சரவையில் நாவலர் நல்ல கல்வியமைச்சரானார். மதுரைத் தியாகராசர் கல்லூரியில் அவர் உரை நிகழ்த்திய போது அரசியல் எந்திரத்தை ஒரு குதிரைவண்டியாகவும் அமைச்சரவையை அதனை ஓட்டு வோனாகவும் உருவகம் செய்தது இன்றைய அரசியலமைப்பை மக்கள் நன்கு உணர்ந்து மகிழச் செய்ததுடன் அவருடைய நா நலம் கிளர்ந்து நின்று இன்பம் செய்தது. இவர் தம்மை நெடுஞ்செழியன் என்று பெயர் புனைந்து கொண்டதுபற்றி மதுரைத் தியாகராசர் கல்லூரி முதுகலை வகுப்பு மாணவர் என்னொடு கலந்து உரையாடினர். அப்போது, சொற் பொழிவு ஒன்றில் தம்மை எனக்கு மாணவர் என அவர் குறித்தது இளையர் உள்ளத்தில் வியப்பை உண்டுபண்ணிற்று. அவர் பல்கலைக் கழக மாணவராயிருந்தபோது, "பதிவுப்புத்தகங்கள் நாராயணசாமி என்றனவாயினும் நெடுஞ்செழியன் என்ற புனை பெயரே இயற் பெயர்போல யாவரும் அறிய விளங்கிற்று" என்றேன். பொருந்துமா என்பது பற்றிச் சொல்லாடல் பிறந்தது. தொடக்கத்தில் நாவலர், பாண்டி நாட்டவர், அவர் உறவினர் சோழவந்தானில் உளர் என்பது தெளிவானது. அவ்விளைஞர்க்கு மகிழ்ச்சி மலர்ந்தது. பின்னர் சங்க காலப் பாண்டியருள் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் தமிழ் பயிலும் மாணவர் பலர்க்கும் தெரிந்தவன். ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன், நம்பி நெடுஞ் செழியன் எனப் பலர் உளரெனினும் தலையாலங்கானத்து வென்ற நெடுஞ்செழியனே வீறு கொண்டவன். வெற்றிப் புகழேயன்றி உயர் நிலைப் புலவர் பெருமக்களின் பால் நலம் துய்த்துப் பரவும் பண்பு மேம்பட்டவன்; புலவராற் பாடப்படுவது நாட்டுக்கும் நாட்டின் நல்லரசுக்கும் ஆக்கமும் அரணுமாம் என்று கருதுபவன். இளங்கோவடிகள் புகழும் நெடுஞ்செழியன் கோன்முறை தவறிய மானம் பொறாது உயிர் கொடுத்த உரவோன். இவ்வேந்தரது கடமையுணர்வும் பெருந்தகை மானமும் நாவலர் நெடுஞ் செழியன்பாலும் நன்கு நிலை பெறுகின்றன. நெடுஞ்செழியன் என்ற பழங்கால நெடுந்தகைகளின் இனிய பெயரை நாவலர் தமக்குப் பெயராகக் கொண்டது சாலவும் பொருந்துவதே எனத் தெளிந்தனர். இங்ஙனம் நல்லமைச்சால், நல்லியல்பால், நண்ணாரும் வேட்ப விளங்கிய அறிஞர் அண்ணாவின் அடிச்சுவடு பற்றி அறம் நின்று நிலவ விளங்கிவரும் நாவலர் நெடுஞ்செழியன் பல்லாண்டு பல்லாண்டு நல்வாழ்வு நிரம்பி இப்பொன் விழாப்போல மணி விழாக்களும் நூற்றாண்டு விழாக்களும் பொலிந்து வாழ்க எனத் தமிழ்க் கடவுளின் தாமரையடிகளைப் பரவி வாழ்த்துகிறேன். - நாவலர் நெடுஞ்செழியன் பொன்விழா மலர் 11-7-1970 4. வியப்பிறந்த மேன்மையர் சிறந்த உள்ளமும், சீர்த்த பண்பும், உயர்ந்த ஒழுக்கமும், பணிந்த மொழியுமுடைய அவரது பண்பாடு நினைக்கும் நெஞ்சிற்கு நேரிய இன்பம் தருவது. நுண்மாண் புலமையும், தெளிவான எழுத்து வன்மையும் இனிமை சுரக்கும் சொல்வன்மையும், எல்லோரையும் மகிழ்விக்கும் நன்னீர்மையும் அவர்பால் இருந்து அழகு பெற்றன. அவருடைய கற்பனைப் புதினங்களும் கலைதெளி கட்டுரைகளும் தொண்டை நாட்டுச் சான்றோர்களின் புலமைக் காட்சியை என் நினைவிற் கொணர்ந்து இன்புறுத்துவது வழக்கம். மொழி நூல் துறையில் அவரது மதிநுட்பத்தை நூல் வாயிலாகப் படித்துணரும் மாணவர் அனைவரும் தெளிந்த அறிவும் நிறைந்த அமைதியுமுற்று மலர்ந்த முகத்தினராவதைக் கண்டு என்மனம் வியப்புறுவதுண்டு. வாழ்வில் உயர்ந்தோரை நாடின், அவர்கள் சிலர்க்கு ஆனவரும் சிலர்க்கு ஆகாதவருமாகப் பேசப்படுவதுண்டு. ஆனால் பேராசிரியர் மு. வரதராசனார் அவர்களை ஆகாதவரெனப் பேசுபவரை நான் கண்டதில்லை. புலமைத் துறையாயினும் ஆட்சித் துறையாயினும் எவ்விடத்தும் ஒப்ப உயர்ந்த அவரது ஒட்பம். "வியத்தொறும் வியத்தொறும் வியப்பிறந்த" மேன்மை சான்றது என்பேனாயின் அது மிகையாகாது. - டாக்டர் மு.வ. நினைவுமலர் நவம்பர் 1974 செந்தமிழ்ச் செல்வி 5. ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும்... "ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன் மகனைச் சான்றோன் எனக் கேட்ட தாய்" எனத் தெய்வப் புலவர் உரைத்த திருமொழியை இப்போது உணர்ந்து இன்புறுகின்றேன். நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு சேயாற்றங்கரையில் நான் தமிழ்ப்பணி செய்த பொழுது கரிய இளஞ்சேய் வடிவில் என் எதிரில் வந்த கோவிந்தன், இன்று தமிழகச் சட்டப் பேரவையின் தலைவராக வீற்றிருந்து, சான்றோர் புகழ விளங்கும் சால்பு கண்டு எல்லையில்லாத இறும்பூது எய்துகின்றேன். சீர்த்த நோக்கமும், கூர்ந்த அறிவும் சிறுவன் கோவிந்தன்பால் அடங்கி இருந்தமையை அறிந்ததாலேயே, அவர் தந்தையும் பிறரும் தடுத்த காலையும் நான் தமிழ்க் கல்வியிலேயே புலவர் கோவிந்தன் ஊன்றிய உள்ளம் உடையனாமாறு ஊக்கிவந்தேன். அதனைப் புலவரின் தந்தையார் நாலைந்து ஆண்டுகளுக்கு முன்பு என்னோடு உரையாடிய பொழுது எடுத்துரைத்து இன்பக் கண்ணீர் விடுத்ததை என்னால் மறக்க முடியவில்லை. ஆன்றமைந்து அடங்கிய அறிஞர் பெருந்தகை அண்ணாவும், ஆண்மையோடு ஆவன அறிந்தாற்றும் செயற்பெருஞ் செம்மலாகிய கலைஞர் கருணாநிதியும் தமிழ்ப் புலவரையே சட்டப் பேரவைக்குத் தலைமை பூணுமாறு செய்வித்த தகைமையைப் புலவர் கோவிந் தனுடைய இம்மணிவிழாவில் நினைந்து மகிழ்கின்றேன். என்பால் தமிழ்பயின்ற நன் மாணாக்கர்களில் தலைமை தாங்கும் புலவர் கோவிந்தன். அன்று யான் எழுதிய ஐங்குறு நூற்று உரைப் பகுதியை முதன் முதலாகத் தமிழுலகு அறிய வெளியிட்ட பெருமையாளர்; இனி எனக்குப் பின்னர் யான் தொடர்ந்து செய்து வருகின்ற தமிழ் நூல் உரைப்பணியை முற்றுவிக்கும் கடப்பாட்டி னையும் இம்மணிவிழா முதல் அவர் மேற்கொள்ள வேண்டும். அதற்குரிய சான்றாண்மை அவர்பால் இருப்பதால் இப்பணியையும் அவர்பால் சேர்ப்பிக்கிறேன். புலவர் கோவிந்தனும் அவர் மனை மக்களும் நீடிய வாழ்வும், சூடிய புகழும், கூடிய செல்வமும் நிறைந்து மாநிலத்துப் பல்லாண்டு மருவிவாழ்க என அங்கயற் கண்ணியோடமர்ந்த ஆலவாய் அண்ணல் வண்ணத் திருவடிகளைப் பலகாலும் எண்ணி வாழ்த்துகிறேன். (இவ்வாழ்த்துரை, புலவர் அவர்களின் மணிவிழாவின் போது வழங்கியது.) - புலவர் கா. கோவிந்தன் பவளவிழா மலர் 1990 6. புலமைப் புரவலர் "என்ன துரைசாமிப் பிள்ளை சௌக்கியமா?" என்று சொல்லிக் கொண்டே ஒருநாள் மாலை ஆறு மணி அளவில், ஒரு பெரியவர் என் எதிரிலே வந்து உட்கார்ந்தார். மதுரைத் திருப்பரங்குன்றம் சாலையில் உள்ள மீனாட்சி பங்களாவின், கலைநலத்தால் கண் கவர்ந்து விளங்கும் முகப்பு; முகப்பின் எதிரில் இருள்படத் தழைத்து நிற்கும் ஆலமரத்தில், எத்தனையோ வகையான பறவைகள் இருந்து இன்னிசை வழங்கி, வந்த பெரியவருக்கு வரவேற்பு வழங்குவன போல இன்பம் செய்தன. மன்றல் கமழும் தென்றல் போந்து மெல்லென, சில்லென வீசி, மெய் குளிர, மனம் களிக்க உலவிக் கொண்டிருந்தது. அகன்ற மார்பும் உயர்ந்த தோளும் அன்றலர்ந்த மலர் போன்ற முகமும் அருள் ஒழுகும் கண்ணும் அன்பு வழியும் அறிவுடை மொழியும் கொண்டு தோன்றிய செட்டிநாட்டு அரசர் டாக்டர் திரு. முத்தைய செட்டியார் அவர்களது எழில் வரவும், "சௌக்கியமா?" என்ற இன்னுரையும் மிக்க இன்பம் தந்து, என் அறிவை மயக்கிவிட்டன. "வணக்கம்" என்ற ஒரு சொல்லைத்தான் அப்பொழுது என் நாவால் மொழிய முடிந்தது. எங்கள் தலைவரின் திருவளர் தலைமகனான திரு. சுந்தரம் செட்டியார் அவர்கள், அரசர் பெருமான் அவர்களை நிழல்போல் தொடர்ந்து வந்து உரிய சிறப்புச் செய்து உயர்வு செய்தார். அப்பொழுது, எங்கள் திருமிக்க தலைவர் செம்புலச் செல்வர் கருமுத்து. தியாகராசர் அவர்களும் மனைமாண் தலைவி திரு. இராதா அம்மையார் அவர்களும் வெளியூர் சென்றிருந்தனர். பணிபுரியும் இளைஞர், ஒளி மிக்க குவளையில் தெளிந்த இனிய பருகுநீர் கொணர்ந்தனர். அதனைப் பெற்ற அரசர் பெருந்தகை அவர்கள், நீர் கொணர்ந்த பையனை நோக்கி, "புலவர்க்கு முன்பு கொடு; புலவர்கள் தாம் நமது நாட்டுக்குப் புகழ் தேடித் தருபவர்கள்" என்று சொல்லிச் சுந்தரம் செட்டியாரை நோக்கி, "நான் சொல்வது சரிதானே?" என்று கேட்டார்கள். உடனே, அவர்கள், "இவர் புலவர் மாத்திரமல்லர்; நமது குடும்பத்தவருள் ஒருவர்" என்று சொல்லவும், "அப்படித்தானே நமது புலவர்களெல்லாம் இருந்திருக்கிறார்கள்" என்று விடை கூறி என்னை இவர்கள் அன்புடன் நோக்கியது, என்னைப் பெருவியப்பில் ஆழ்த்தியது. மல்லல் மலையனைய மாண்புடைய மன்னர் பெருமான் அவர்கள், புல்லிய என்பால் காட்டிய அன்பு, பன்னாள் கழிந்தும் என் நெஞ்சை விட்டு அகலாது இன்பம் செய்கின்றது. அண்ணாமலைப் பல்கலைக் கழகத் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் திரு. லெ. ப. கரு. இராமநாதன் செட்டியார் அவர்களின் பெருமனையில் நடந்த திருமண விழாவிற்கு நாங்கள் சென்றிருந் தோம். "தம்மையும் தங்கள் தலைமையையும் பார்த்து உயர்ந்தோர். தம்மை மதியார்" என்ற பொருளுரைக்கு ஒப்பச் செட்டிநாட்டு அரசர் அவர்கள் மிகவும் எளியராய், வருவோர் பலரையும் வரவேற்கும் பணியில் முன்னின்று, வரவேற்பு வழங்கியும், இனிய முகமன் உரைத்தும் திருமணத்தைச் சிறப்பித்தது கண்ட என் உள்ளம் அரசர் பெருமான் அவர்களுக்குப் பேராசிரியர் திரு. லெ. ப. கரு. இராமநாதன் செட்டியார் அவர்கள்பால் இருந்த நன்மதிப்பை உயர்த்திக் காட்டிற்று. மணவிழா நிறைவுற்றவுடன், தமிழாசிரியர் சிலர் பிறிதொரு வீட்டில் இருப்பது கண்டு, அரசர் அவர்கள் அங்கே வந்து ஒவ்வொருவரையும் தனித்தனியே அளவளாவி இன்புறுத்தினார்கள். அப்பொழுது இவர்கள் வழங்கிய அன்புரையும், செய்த சிறப்பும் பண்டைத் தமிழ் மன்னர்கள் புலவரைப் பேணிய நிகழ்ச்சிகளைத் திரைப்படக் காட்சிபோல் என் நெஞ்சக் கிழியில் நேர்பட நிறுத்தின. மதுரைத் திருவள்ளுவர் கழகம், ஆண்டுதோறும் முதுமைப் புலமைச் சிறப்புடைய ஒருவரை வருவித்துப் பாராட்டுவது வழக்கம். அம் முறையில், அண்ணாமலைப் பல்கலைக் கழகத்து ஆராய்ச்சித் துறையில் பல்லாண்டு பணி புரிந்து புலமை பழுத்து விளங்கிய திரு. சதாசிவப் பண்டாரத்தார் அவர்களுக்குப் பொன்னாடை போர்த்தும் சிறப்புடைய பணியைச் செட்டிநாட்டு அரசர் திரு. முத்தைய செட்டியார் அவர்கள் பேரன்புடன் ஆற்றி, அவ் விழாவிற் கூடியிருந்த பல்லாயிரக் கணக்கான மக்களுடைய மனமெல்லாம் மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைக்கச் செய்தார்கள். அப்பொழுது அரசர் பெருந்தகை அவர்கள், தமிழ் ஆராய்ச்சி யின் பெருமையையும், அதனைச் செய்தற்கண் அண்ணாமலைப் பல்கலைக் கழகம் கொண்டுள்ள ஊக்கத்தையும். பண்டாரத்தார் அவர்களுடைய பண்பு நலன்களையும் அழகிய முறையில் மக்களெல்லாம் மனம் கொண்டு போற்றும்படியாக உரைத்தது மிக்க உருக்கமாக இருந்தது. தமிழகத்தில் தமிழ்த்துறையில் அரும்பணி புரிந்து பெரும்புகழ் விளைவிக்கும் அறிஞர்களை ஓரிடத்தே தொகுத்து, அவரது புலமை நலங்களை நாடு பெற வேண்டும் என்பது தமது பெரிய ஆர்வம் என்றும், அதற்கு ஏற்ற இடம் அண்ணாமலைப் பல்கலைக் கழகம் என்றும், அந்த இனிய கருத்தை உட்கொண்டே சிறப்புடைய புலவர் பலரும் அப் பல்கலைக் கழகத்தில் அமைக்கப் பெறுகின்றனர் என்றும் அரசர் அவர்கள் எடுத்துரைத்தது, புலவரைப் புரக்கும் புரவலர் செட்டிநாட்டு அரசர் என்ற சிறப்புரையை நன்கு வற்புறுத்தியது. அரசர் பெருமான் அவர்களின் உள்ளம் அறிவரிய அகல முடையது; அளக்கலாகா ஆழமுடையது. மண் மக்கள் அனை வரையும் தம் மக்களெனப் போற்றிக் கல்வியால் யாவரும் சால்புடையராக வேண்டுமென்ற அன்பு நிறைந்தது, இவர்களின் அருமை மனம். ஒருகால், இவர்கள் மதுரைத் தியாகராசர் கலைக் கல்லூரி ஆண்டு விழாவில் பேசும்போது, நமது நாடு தொழிலிலும் வாணிகத்திலும் விஞ்ஞான நெறியிலும் ஏனைய உலக நாடுகளுடன் ஒப்ப உயர்ந்து விளங்க வேண்டுமாயின், ஆங்கில மொழியறிவு பெறுவதில் இளைஞர்கள் அயராது உழைத்தல் வேண்டும் என வற்புறுத்தினார்கள். தமிழ்த் துறையில் எம். ஏ. முதலிய பட்டம் பெறுபவர்கள் ஆங்கிலத்தைப் புறக்கணிக்கக் கூடாது. மொழி வெறி கொண்டு, உலக மொழியாய் இலங்கும் ஆங்கிலத்தைப் புறக் கணிக்கும் மனப்பான்மை, நாட்டின் எதிர்கால நன்மைக்கு இடையூறாகும் என இயம்பியது, அறிவுடைய எல்லா நன்மக்கட்கும் இன்பம் தந்தது. பிற துறைகளில் பயிலும் மாணவரினும், தமிழ் மாணவர் ஆங்கிலத்தில் நற்பெரும் புலமை பெறுவதன் இன்றி யமையாமையைச் செட்டிநாட்டு அரசர் அவர்கள், செப்பமாகவும் தெளிவாகவும் உரைத்துத் தமது தமிழன்பும் தமிழ்மொழியின் வளர்ச்சியில் தமக்குள்ள பேராதரவும் யாவர்க்கும் இனிது விளங்க எடுத்து மொழிந்து எல்லாருடைய உள்ளங்களையும் கொள்ளை கொண்டார்கள். செட்டிநாட்டு நகரத்தார் வாழும் சிறப்புடைய ஊர்களுள் ஒக்கூர் என்பது, சங்க இலக்கிய காலந் தொட்டே சான்றோர் உறையும் சால்புடையது. அவ் ஊரவரான திரு. சோமசுந்தரம் செட்டியார் அவர்கள், உலகம் தழீஇய ஒட்பமும், மலர்வதும் கூம்புவதும் இல்லாத அறிவும், வாணிகத் துறையின் நுட்பமும் ஒருங்குபெற்ற ஒள்ளியோராவர். அவர், செட்டிநாட்டு அரசர் குடும்பத்துடன் நெருங்கிய தொடர்புடையவர்; அக் குடும்பத்தின் தொடர்பினால் தாம் உயர்வு பெற்றதாகத் திரு. சோமசுந்தரம் செட்டியார் அவர்கள் அடிக்கடி கூறுவார். அவர், தமது ஒக்கூரில் உயர்தொடக்கப் பள்ளி ஒன்றை நிறுவி, அதற்கு எனப் பெரும் பொருட் செலவில் வனப்பு மிக்க கட்டடங்களையும் அமைத்துத் தந்துள்ளார். கடல் பெரியதாயினும், சிறு கழியினும் புகுந்து மக்கட்கு நலம் செய்வது போல, மிகப் பெரிய பல்கலைக் கழகத்தை நிறுவி வானளாவ உயர்ந்த கட்டடங்களை அமைத்து ஆயிரக் கணக்கான மாணவர் இருந்து மாண்பு தரு கலையும் விஞ்ஞானமும் பயில உதவிய செட்டிநாட்டு அரசர் அவர்கள், ஒக்கூர் தொடக்கப் பள்ளியின் சிறப்புடைய நிகழ்ச்சி ஒவ்வொன்றிலும் கலந்துகொண்டு பெருமை செய்கின்றார். பெருமை சிறுமைக்குள் அடங்காது; சிறுமை பெருமைக்குள் அடங்கும் என்பது தகுந்த நூல் முடிபு. அதனால், பெரியது, என்றும் சிறியதைப் புறக்கணியாது தன்னொடு சேரத் தழுவிச் செல்கிறது என்பர். இவ்வுண்மைக்குச் சான்றாக விளங்குவது, செட்டிநாட்டு அரசர் குடியின் செப்பரும் பெருமை நலம். பெருங் கலைக் கல்லூரிகளைத் திறந்து வைத்துச் சிறப்பளிக்கும் செட்டிநாட்டு அரசர் அவர்களின் திருக்கைகள், எளிய தொடக்கப் பள்ளிக் கட்டடத்தையும் திறந்துவைத்தருளும் திறம், நினைக்குந்தோறும் வியப்பைத் தருகிறது. செட்டிநாட்டு அரசர் அவர்கள், மிக விரிந்த மனம் உடை யவர்கள். அதனால், இவர்களுடைய நிறுவனங்களில் பல்வேறு இனத்தவரும் பணிபுரிகின்றனர். இன வளர்ச்சி பற்றிய எண்ண முடையோர் சிலர், அரசர் பெருந்தகை அவர்களின் பரந்த மனப் பான்மையை ஒரு குறையாக எண்ணிச் சில பல ஆண்டுகட்கு முன் உரைத்தனர்; சமுதாயத்தின் வளர்ச்சி, அதன் உட்கூறுகளாகிய இன வளர்ச்சியைச் சார்ந்திருக்கிறது என்று அவர்கள் அதற்குக் காரணமும் காட்டினர். செல்வச் செழுங்குடியாகத் திகழ்ந்த நகரத்தார் பெருங் குடி, இன்று செல்வ வருவாய் சுருங்கி இருப்பதால், இத்தகைய இன வளர்ச்சி குறித்த ஆதரவு வேண்டுவது, நேர்மையும் முறைமையு மாகும் என்பதை உண்மையறிவுடைய எவரும் உடன்படுவர். இக் கருத்தை எவ் வண்ணமோ செட்டிநாட்டு அரசர் அவர்கள் அறிந்துகொண்டு, அன்பு நிறைந்த அறிவுரை ஒன்றை ஒக்கூர் உயர்தொடக்கப்பள்ளி விழாவில் தமது தலைமையுரையில் அழகாக உரைத்தார்கள். "நகரத்தார் இனத்து இளைஞர்கள் உயர்ந்த கல்வி பெற வேண்டும்; ஆடவரையொப்ப மகளிரும் உயர்கல்வி பெறுவதில் ஊக்கம் கொள்ளவேண்டும். வெளிநாட்டுப் போக்குவரவு சீர்குலைந்தமையின் நம் நாட்டிலேயே பணிபுரியும் பண்பாளராதல் வேண்டும். ஆனால் சிறு ஊதியம் நல்கும் சிறு பணிகளை நகரத்தார் இளைஞர்கள் விரும்பலாகாது. உயர்நிலைப் பணிகளை அடை வதிலும் புரிவதிலும் அவர்களுடைய கருத்து, ஒன்றுதல் வேண்டும்" என்றார்கள். இந் நாளில் நம் நாட்டில் செல்வமுடைமை, குறைவாகக் கருதப்படுகிறது. ஒரு கூட்டம், செல்வமுடைய செல்வர்களை வெறுத்த உள்ளமும் கறுத்த நோக்கமும் கொண்டு நோக்குகிறது. செல்வர்களின் செல்வத்தைத் தேய்த்துச் சீர்குலைத்துத் தரை மட்டமாக்குவது. சமுதாயப் பணி என்று ஒரு கூட்டம் கருதுகிறது. இக் கூட்டங்களின் நச்சுக் கருத்துக்கள், சிற்றூதியம் பெறும் பணி யினர் மனத்திற் படிந்து அவர்களுடைய நினைவு, செயல்களை மாசு படுத்துகின்றன. இன்னோரன்ன கருத்துக்களை இனிது விளக்கி, நகரத்தார் உள்ளங்களை உயர்பணியில், உயர் நிலைத் துறையில் ஈடுபடுத்தி, நமது அரசர் பெருந்தகை அவர்கள் விளக்கவுரை தந்த நுண்மாண் நுழைபுலச் சான்றாண்மையைக் கேட்டிருந்த அனைவரும் வியந்து பாராட்டினர் எனின் வேறு கூறுவது எற்றுக்கு? மணி விழாவில் அணி கொண்டு திகழும் திருமிக்க செட்டி நாட்டு அரசர் உயர்திரு. முத்தைய செட்டியார் அவர்கள், சென்னை மாநில அரசின் கல்வியமைச்சராகவும், அரசவை உறுப்பினராகவும், சென்னை நகரத் தந்தையாகவும், தொழில் நிறுவனங்கள் பலவற்றின் இயக்குநராகவும், பல்கலைக் கழகப் புரவலராகவும் பல கோடி மக்களுக்கு வாழ்வளிக்கும் வள்ளலாவார்கள். இவர்களது பெரு வாழ்வு, நம் நாட்டின் பெறலருஞ் செல்வமாகும். மணிவிழாக் கொள்ளும் இவர்கள், பொன் வயிரம் முதலிய பெயர் பெற்ற விழாக்களைக் கொண்டு விளக்கமுறுக என, அங்கயற்கண்ணியுடன் அமர்ந்த ஆலவாய் வள்ளல் கோலவார் கழலைக் கும்பிட்டு அமைகின்றேன். 7. அருள் திரு. விபுலானந்த அடிகள் (அகத்தியர் வளர்த்த தமிழ் என்று படிக்கின்றோம்; கண்ட தில்லை. தமிழனுக்கு இசைஉண்டு என்று ஆராய்ந்து காட்டினவர் ஆபிரகாம் பண்டிதர். 'யாழ்' என்னும் தமிழரின் தொன்மை இசைக் கருவிபற்றி ஆராய்ந்து ஒரு நூலைத் திறம்பட அமைத்துத்தந்த, தமிழ்இசை தெளித்த நம் அடிகளார் அண்மையில் நம்மை விட்டுப் பிரிக்கப் பட்டார்கள். தமிழகம் தாங்கவொண்ணாப் பேரிழப்புக் களில் அடிகளார் பிரிவும் ஒன்று. அவர்களின் வாழ்க்கை வரலாறு இக்கட்டுரை.) நம் தமிழகத்தில் அருளறம் பூண்ட அறவோர் பலர் தோன்றித் தங்கள் அறவாழ்வில் கண்ட அறங்கள் பலவற்றை யெடுத்தோதி நம்மை அவ்வப்போது தெருட்டியுள்ளனர். ஆசிரியர் தொல்காப்பியர், திருவள்ளுவர் முதலிய அறவோர் மிக்க பெரும் பழங்காலத்தே தோன்றித் தொல்காப்பியமும் திருக்குறளும் வழங்கி, நம் செந்த மிழைச் சிறப்புறுத்தினர். அவர்கட்குப் பின் சேரன் இளங்கோ தோன்றிச் சிலப்பதிகாரம் வழங்கி முத்தமிழின் மும்மை வடிவும் செம்மையுறக் காட்டினர். இப்பெருமக்கட்குப் பின் பலப்பல அறவோர் தோன்றினராயினும், அவர்கள் தத்தம் சமயத்துறைக்கு வேண்டும் அறவுரைகளை மட்டில் வழங்கி மறைந்தனர். இடைக்காலத்தே தமிழகம் தமிழரசும் தமிழ் வாழ்வும் இழந்து தலைதடுமாறிச் சாதுயர் உற்றதை வரலாறு கூறுகிறது. அத்தடுமாற்றத்தால் தமிழ்மொழியின் முக்கூற்றினுள் ஒன்றாகிய இயற்கூறு மட்டில் தூய்மை யிழந்தேனும் பல வடிவிற் றிரிந்தேனும் தன் முதன்மை யுரிமை யிழந்தேனும் இன்றுகாறும் பொன்றாது வழங்கி வரும் பேறு பெற்றது. ஏனை இசையும் கூத்தும் இருந்தவிடம் தெரியாத அளவு ஒளிமழுங்கின. அறத்துக்குக் கேடு வருங்கால் அறக்கடவுள் தோன்றி அதனை நிலை நிறுத்துமென அறவோர் கூறுவதுண்டு. தமிழர் கட்குத் தமிழே அறம்; அத்தமிழறம் கெட்டுளது; ஆகவே தமிழறவோர் தோன்றித் தமிழை நிலைநிறுத்துவரெனத் தமிழகம் எதிர்நோக்கிற்று. தமிழன்னையின் தவம் அவமாகவில்லை. இற்றைக்கு ஐம்பத்தை யாண்டிற்கு முன், ஈழ நாட்டு யாழ்ப்பாணத்து மட்டக்களப்பிலுள்ள காரேறு என்னு மூரில் உள்ள தமிழ்க் குடும்பத்தின் தமிழ்த் தவப்பயனாய் நம் அடிகள் திரு. விபுலானந்த ரென்னும் தமிழ் அறவோர் தோன்றித் தமிழறத்தை நாட்டும் தகவு பெற்றார். கருவிலே தமிழறம் பேணும் திருவுடையராகிய அடிகள் பிள்ளைப் பெயர் மயில்வாகனனா ரென்பது. தமது பதினாறும் ஆண்டில் கேம்பிரிட்சு சீனியர் தேர்வுபெற்று, சில ஆண்டுகட்குப் பின் ஆசிரியர் பயிற்சிபெற்றுஇருபத்தெட்டாமாண்டு வரையில் ஆசிரியராக இருந்துகொண்டு, இலண்டன் பல்கலைக் கழக விஞ்ஞான மாணி (b.sc) த் தெர்வில் வெற்றிபெற்றார். இதற்கிடையே மதுரைத் தமிழ்ச் சங்கத்தார் நடத்தும் பண்டிதத் தேர்விலும் வெற்றி பெற்றுப் பண்டிதராகவும் விளக்க முற்றார். அடிகளார்க்கு முப்பதாண்டு நிறைவதற்குள் பெற்றோர் பெரும்பிறி துற்றமையின், 1922-ஆம் ஆண்டில் சென்னை இராம கிருட்டின சங்கத்தைச் சேர்ந்து அறவோராகி, பிரபோத சைதன்யர் என்ற திருப்பெயர் பூண்டு தொண்டாற்றி, இரண்டாண்டிற்குப் பின் சுவாமி விபுலானந்தாயினர். அடிகள் அருள் திரு விபுலானந்தராகி இலங்கையில் ஐந்தாண்டுகள் இராமகிருட்டின சங்கப் பள்ளிக்கூடங்களைப் பேணும் அறத்தொண்டாற்றினர். பின்பு அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராக மூன்றாண்டுகள் இருந்து சீரிய தமிழ்ப்பணி புரிந்தார்கள். அக்காலையில் ஞானசம்பந்தப் பெருமானோடு உடனிருந்து இசைகொண்டு புரிந்த திருநீலகண்ட யாழ்ப்பாணனார் கைக்கொண்டிருந்த யாழியல்பைக் காணவேண்டுமென்ற திருவுள்ளம் அடிகளார்க்கு எழுந்தது. அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின்றும் நீங்கிய அடிகளார் இலங்கையிலும் இமயவரையடியிலும் இருந்து தொண்டாற்றிய போதும் யாழாராய்ச்சியினைச் செய்து கொண்டே வந்தனர். யாழ்நூன் முடிவுகள் உருவாக அடிகளார் இலங்கையில் புதுவதாகத் தோன்றிய பல்கலைக் கழகத்துத் தமிழ் பகுதித் தலைவர் நிலையினைப் பெற வேண்டிய வர்களானார்கள். இதற்குள் யாழ்நூலின் பண்ணியல், தேவாரவியல், ஒழிபியல் என்னும் பகுதிகளை எழுதி முடித்தார்கள். சென்ற 1943 ஆம் ஆண்டுமுதல் இறுதி நாள்காறும் அடிகளார் இலங்கைப் பல்கலைக் கழகத் தமிழ்த் துறைத்தலைவராய் இருந்து வந்தார்களாயினும், விடுமுறைக் காலங்களில் அவரது ஓய்வு முழுதையும் யாழ்நூலே வாங்கிக் கொண்டது. அடிகளாரது அருள் மாண் புலமை நலத்தை அருகிருந்து துய்த்த பெருநலம், பெருஞ் செல்வர் ஒருவருக்கும் பெரும் புலவர் ஒருவருக்குமே நன்கு கிடைத்தது. பெருஞ்செல்வர் கோனூர் சமீன்தார் திரு. பெ. ராம. ராம. சிதம்பரஞ் செட்டியா ரவர்கள்; பெரும்புலவர் அண்ணா மலைப் பல்கலைக் கழக ஆராய்ச்சிப் பகுதி விரிவுரையாளர் திரு. வித்துவான். க. வெள்ளைவாரணனார் அவர்கள். அடிகளாரது திருத்தொண்டு பெரிதும் உயர்நிலை மாணவர் கட்குத் தமிழறிவு வழங்குவதில் அமைந்திருந்ததெனினும் இராமகிருட்டின சங்கத்தார் வெளியிடும் ஆங்கிலத் திங்கள் தாட்களான “வேதாந்த கேசரி”, “பிரபுத்தபாரதா” என்பன வற்றின் ஆசிரியப்பணியிலும் இயங்கிற்று. மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் வாயிலாக ஆங்கிலநாட்டு செகுபியர் நாடக மாண்பும் சிலப்பதிகார மாண்பும் ஒப்பவைத்து நோக்கிக் கண்ட ஆராய்ச்சி நலத்தை மதங்கசூளாமணி யென்னும் நூல்வடிவில் வெளிப்படுத்தினார்கள். 1935ல் சென்னைச் சைவ சித்தாந்த மகா சமாசத்தின் தலைவராக விளங்கினார்கள். தமிழன் னையின் வரவுருவாய் வந்த அடிகள், இசைத் தமிழ்க் கூறாகிய யாழியலை உருப்படுத்தித் தந்து அரங்கேற்றிய காலத்தே திருக் கொள்ளம் புரூர் அழகியநாச்சியார் மீது நான்மணிமாலை யென்னும் நூலொன்றையும் செய்தருளினர். துறவறத்தின் தூய்மை வடிவேயாகிய அடிகளார் தம் வாழ்வில் வந்தடைந்த செல்வத்தை அறவழியிலே செலவிட்டதேயன்றி, எஞ்சிய பொருளைக்கொண்டு மட்டக்களப்பில் “தம் அருட்குரவர் சிவானந்த சுவாமிகளின் திருப்பெயரால் நிறுவிய கலைக்கழகமே சிவானந்த வித்தியாலய மாகும்.” இவ்வண்ணம் பிறந்து மொழிபயின்ற பின்னெல்லாம் அருளறத்திற் காதல் சிறந்து, அதனையே வளர்ந்து, அதற்குத் துணையாகும் இசைத்தமிழ்க் கூற்றின் உயிர்க்கருவியாகிய யாழ் நூலைப் பயந்து, தமிழுலகின் தனிமாண்பினை நிலைநாட்டிய அடிகளார் 19-7-47 சனிக்கிழமை இரவு ஒன்றேகால் மணிக்கு இறைவன் திருவருள் ஞானவாழ்வில் ஞானவடிவில் தோய்ந் திருப்பாராயினர். வாழ்க அருளறம்; வாழ்க அறவோர். 8. அருள்திரு. விபுலானந்த அடிகள் மறைந்தது குறித்துப் பாடியவை. சாமிவிபு லானந்தர் தரணியைவிட் டகன்றார் தமிழ்மகளும் தகுபுலமைத் தனிமகனைத் துறந்தாள் ஆமிதனுக் கென்செய்வ தெனநைந்து நொந்தார் அன்பர்களும் அருளுடைய அறவோரு மெல்லாம் ஏமிழந்த தெம்தஞ்சைக் கரந்தைநகர்ச் சங்கம் எனநினைந்தேன் அலமந்த தென்றனது நெஞ்சம் ராமசிதம் பரனார்தம் மாபெரிய வுள்ளம் இணைவதனை நினைந்தேன்கண் ணருவியினில் நனைந்தே உயர்புலமை மிக்கதிரு வார்கந்த சாமி ஒழுக்கநெறி மிகுதிருவார் கணபதியா பிள்ளை அயர்வில்பரி வொடுபணிசெய் அன்புநிறை புலமை அமைவெள்ளை வாரணந்தான் அருகுறநின் றருளும் மயர்வில்நிழ லோவியத்தை மனமாரக் கண்டேன் மாண்புடைய சாமிவி புலானந்தர் தமையும் துயர்மிகக்கண் கலுழநீர் துடைத்தினிது கண்டேன் தூய்மையறம் அருள் புலமைத் தோற்றமிது வென்றேன் திருக்கொள்ளம் பூதூரில் திகழ்ந்தஅரங் கேற்றம் செந்தமிழ்ப்பே ராசிரியர் வந்திருந்த காட்சி உருக்கொள்ளும் யாழ்நூலும் ஒண்கருவி பலவும் ஒங்குயர்ந்த செல்வர்களும் அரசாளுங் குழுவும் கருக்கொள்ளும் எதிர்கால இசைத்தமிழின் மேன்மை காட்டக்கண் டேன்ஞான சம்பந்தர் கழற்கீழ் மருக்கொள்ளும் இருக்கையினில் அடிகள்மகிழ்ந் திருந்த மருமம் அறி யேன்அன்றங் கின்றறிந்தேன் இங்கே. கரிதுதிரு திகழ்மேனி வெளியமலர்க் கண்கள் கல்லாடை யுடைசொற்குக் கனிகள்நிக ராகா பெரிதுதமிழ்ப் புலமைவட மொழியாங்கி லங்கள் பிறங்குவன நல்லுள்ளம் பேசுவன அறங்கள் உரிதுபிறர் பெருநலமே யுள்ளுவது உறுவார்க் குதவுவது அடிகள்உயர் செயல்நினைவு மாண்பே அரிதுபிற ரினிஇவர்போல் அருளறத்தார்க் காண்டல் ஆதலினால் அடிகள்விபு லானந்தர் அறவோர். கயிலாயக் காட்சியினைக் கட்டுரைத்தார் பல்லோர் கட்டுரைகள் நெட்டுரையாய்க் கருத்தினில் நின்றிலவே குயிலாயம் பாடுபொழிற் கரந்தையினில் எங்கள் குரவர்அருள் திருவிபுலா னந்தர் அவைமேவிப் பயிலரிய கயிலைமலை படர்ந்தநெறி காட்டித் பரவுதிரு நாவரசர் படர்ந்தநெறி காட்டித் துயிலரிய கண்ணராய்க் கேட்டோர்தம் முள்ளே தோன்றுகாசியிற் களிக்கச் சொன்மாரி சொரிந்தார். முன்னாளைத் தமிழகத்து இசைத்தமிழர் கொண்ட முளரியாழ் முதலாய யாழியலைக் கண்ட அந்நாளில் இடைக்கால மாக்கியபல் கொடுமை அத்தனையும் கணக்கறிவால் ஆய்ந்தறிந்த போதும் இந்நாளில் பலரந்தக் கொடுமையே எண்ணல் இனிதறிந்த போதும்அருட் குரவனா ரெங்கள் சொன்னாடும் அடிகள்விபு லானந்தர் சொல்லில் சுடுசொல்லோ துயர்சொல்லோ ஒன்றும்தோற் றிலதே. எண்ணாள ரென்கோமற் றெழுத் தாள ரென்கோ இயலாய தமிழாளர் இசையாள ரென்கோ கண்ணாளும் விஞ்ஞானக் கலையாள ரென்கோ கருத்தாளும் செஞ்சொல்லின் கவியாள ரென்கோ எண்ணாளும் இவ்வண்ணம் எண்ணிமகிழ்ந் தோமை எண்ணி யெண்ணிப் புண்ணாக இனிச்செய்த தந்தோ தண்ணாளர் அருள்விபுலா னந்தரெங்கள் இறையைத் தனிக்கொண்டு பிரிவித்த தறமில்லாக் கூற்றே. வன்சொல்லால் கூற்றுவனை வையலாம் வம்மினோ இன்சொல்லால் நம்மை இனிதளிர்த்த -தென்முனிக்கு மேலாம் அருள்விபு லானந்த மாமுனிவிண் பாலாகச் செய்த பழிக்கு. 8. பாராட்டற்குரியது உலக வாழ்வில் இன்றைய நிலை பெரிதும் வியந்து யாவரும் விரும்பும் சிறப்புடையதாகும். மக்களினத்தின் விஞ்ஞான அறிவு மிகவும் வளர்ந்திருக்கிறது. லுகாம்தே தூனாய் என்பவர் கூறுவது போல இன்று காலத்தாலும், இடத்தாலும் பிரிந்து நிலவுலகின் மூலை முடுக்குகளில் வாழ்பவர் அனைவரும் மிக்க அண்மையில் நெருங்கியுள்ளனர். பல்லாயிர மைல்களுக்கு அப்பாலுள்ள நாடு களில் வாழ்பவர் வானவூர்திகளாலும் வானொலியாலும் தொலை பேசிகளாலும் ஓர் ஊரில் வாழ்பவர் போலவும், ஒரு வீட்டில் வாழ்பவர் போலவும் போக்குவரவு புரிந்தும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டும் வாழ்கின்றனர். புராண இதிகாசங்களிலும் கற்பனைக் கதைகளிலும் மக்கள் இவ்வாறு போக்கு வரவு புரிந்த தாகப் படித்திருக்கிறோம். பெரியோர் ஞானக்கண் கொண்டு நெடுந்தொலைவில் நடந்த நிகழ்ச்சிகளை அறிந்து கொண்டதாக அந்நூல்கள் கூறுகின்றன. அக்கற்பனைக் காட்சிகள் இன்று உண்மை நிகழ்ச்சியாய் நம்முன்னே நிகழ்வதைப் பார்க்கிறோம். பண்டை நாளில் வாழ்ந்தோர் மண்ணுலகத்துக்கும் தேவருலகத் துக்கும் போவதும், வருவதும் செய்து வந்தனர் என்று அந்தப் பழைய நூல்கள் நுவலுகின்றன. அவற்றைத் தான் இன்று நம்மால் காணமுடியவில்லை. ஆனால் இக்கால விஞ்ஞானிகள் வானத்தில் தோன்றும் கோள்களைக் கண்டு அங்கே போய்வர நினைக்கின்றனர். மண்ணுலகத்தில் மக்கள், விஞ்ஞானக் காட்சியால் கண்டகருவி களின் வாயிலாக அக்கோள்களின் தொடர்பு பெற முயன்று வருகின்றனர். இயற்கையின் அகத்தே நுழைந்து அதன் நுட்பங்கள் பலவற்றை அறிந்து கொள்ள முயன்று பெற்ற வெற்றியாலும் அறிவுக்காட்சியாலும் இம்முயற்சிகளில் காலப்போக்கில் வெற்றி பெறுவர் என்று உறுதியாகக் கூறலாம். ஒரு காலத்தில் மக்கள் பலரும் நிலம் நீர் காற்று முதலிய எல்லாவற்றிற்கும் முதற்காரணம் அணு என்றே கூறிவந்தனர். வைசேடிகர் முதலிய சமயக் கணக்கர் எல்லாவற்றுக்கும் காரணம் அணு என்றுதான் இசைத்துள்ளனர். இன்று அணுவைத் துளைத்து உடைத்து அதற்கு முதற்காரணம் ஆற்றல் (சக்தி) என்ற முடிவுக்கு விஞ்ஞானம் வந்திருக்கிறது. சிவநெறிக்கண் நின்ற பண்டையோர், எல்லாவற்றுக்கும் முதற்காரணம் மாயை என்ற ஓர் ஆற்றல் கூறி, மாயைஎன்ற சொல்லையும் மாய் + தல், ஆ + தல் என்று பிரித்து இரண்டிற்கும் பொதுவாய் நிற்கும் தல், என்னும் விகுதியை நீக்கி, மாயா எனக்கூட்டி உலகு ஒடுங்குதற்கும் மீளத் தோன்றுதற்கும் காரணமான - இன்னதென்று அறிய வராத - ஆற்றல் என்று இயம்பினர். இன்றைய அணு விஞ்ஞானிகளும் அணுவுக்குள் அடங்கி இன்ன தென்று அறிய வராமல் இருக்கும் ஆற்றல் (Unknown energy) தான் அதன் ஆக்கத்துக்குக் காரணம் என்று கண்டு உள்ளனர். இவ்வா ராய்ச்சிகளால் முன்பு கற்பனை நிலையிற்கண்ட காட்சிகளும் காட்சிக்கு அகப்படாதவை எனக் கைவிட்டவையும் கண்கூடாக வைத்து ஆராயப்படுவதை நாம் அறிகிறோம். இந்த அறிவால் இன்ன தன்மையதென்று எந்த அறிவியற் புலவராலும், உயிர் நூற்புலவராலும் காணப்படாமல் நமது உடலுக்குள் நிலவும் உயிரையும் அதற்கு உள்ளீடாகிய பரம்பொருளையும் நாம் காண்டல் கூடும் என்ற நம்பிக்கை மக்களினத்துக்கு இப்போது உண்டாகி இருக்கிறது. உலகு உயிர்களின் இயல்பையும் இவற்றிற்கு அப்பாற்பட்ட முழுமுதற் பொருளையும் காணமுடியும் எனத் துணிவு கொள்ளும் மக்களினத்துக்கு வாய்த்த கருவியாக இருப்பது விஞ்ஞானக் கல்வி (Scientific Education) என்பதை அறிவுடையோர் மறுக்க முடியாது. இக்கல்வி வளமுற வளர்ந்திருப்பது மேனாடுகளிலும், அமெரிக்கா விலும் என்பதை நாம் அறிந்திருக்கின்றோம். அந்நாடுகளுள்ளும் உருசிய மொழி வழங்கும் உருசியாவும் ஆங்கில மொழி வழங்கும் அமெரிக்காவும் இத்துறையில் முன்னேறியுள்ளன. அதனால் “நாடு என்ப நாடா வளத்தன” என்ற திருக்குறளுக் கொப்பப் பொருள் வளத்தாற் செல்வமும், சிறப்பும் சிறக்கப் பெற்றுத் திகழ்கின்றன. ஏனை இங்கிலாந்து, பிரான்சு, செர்மனி முதலிய நாடுகளும் கிழக்காசியாவிலுள்ள சப்பான் நாடும் ஓரளவு முன்னேறிப் பொருள் வளம் பெற்றுப் பொலிகின்றன. நமது நாடும் இத்துறையில் முயன்று வருகின்றது. இம்முயற்சியில் நல்ல வெற்றி காண்பதற்கு அறிவியற் கல்வியும் கலைகளும் நாட்டவர் உள்ளத்தில் நன்கு பரவ வேண்டும் என்பது சொல்லாமலே விளங்கும். இந்த அறிவியற் கலையும், கல்வியும் நமது நாட்டு மொழி களில் பெறுதற்கு வாய்ப்பில்லை. இவற்றை அறிந்து கொள்ளுதற்கு இன்று ஆங்கில மொழிதான் சிறந்த வாயிலாக இருக்கிறது. ஆங்கில மொழி நமது நாட்டிற் பரவக் கால் கொண்டது ஒரு நூற்றைம்பது ஆண்டுகட்கு முன்புதான். அதனை முதற்கண் புகுத்தியபோது நமது நாட்டை ஆண்டவர் ஆங்கிலேயர். அவர்கள் தமது ஆட்சியைத் தமக்குத் தெரிந்த மொழியில் நடத்துதற்கு நம் நாட்டு மக்களில் கற்றவரைத் துணைக் கொள்ள வேண்டியவராயிருந்தனர். தாம் சொல்வதை அறிந்து எழுதவும், சொல்லவும் கூடிய ஆங்கில அறிவு நம்மவர்க்கு உண்டாகும் வகையில் கல்வி முறையை வகுத்தனர். அந்த வழியிலேயே நெடுங்காலம் கழிந்தமையின் அவர்களால் அறிவியல் அறிவு (Scientific Knowledge) பெற்று ஏனை நாட்டு உரிமை மக்களைப்போல அறிவியற் புலவராய் (Scientists) விளக்கம் பெறும் நல்லுதவி நம்மவர் பெறாராயினர். அவர்கள் தந்த ஆங்கில மொழியறிவு பெருகியபோது அரசியல் வாணிகம், நீதிமன்றம் ஆகிய துறைகள் யாவும் ஆங்கிலமொழியில் நடைபெறலாயின. கல்வியின் குறிக்கோளும் அரசியல் முதலிய மூன்று துறையிலும் வேலைபெற்று அதனால் எய்தும் ஊதியங்கொண்டு வயிறு வளர்ப்பது என்று மாறுவதாயிற்று. இதற்கேற்ற வகையில் அமைந்த கல்வியும் ஆங்கிலத்தில் நடைபெறத் தொடங்கியது. கற்போர் வேலை எதிர்பார்த்த துறைகளுள் கல்வி கற்பிக்கும் ஆசிரியர் தொழிலும் ஒன்றாயிற்று. இவ்வாற்றால் நம் நாட்டில் கற்பதற்கும் வேலை தேடி வயிறு வளர்ப்பதற்கும் உரியது ஆங்கிலமே என்ற எண்ணம் மேலிட்டது. நாட்டு மொழிகள் வாழ்க்கைக்குத் துணையாகா என வெறுத்துப் புறக்கணிக்கப்பட்டன. ஆங்கிலேயருடைய ஆட்சி நிலைபெறுமுன் தமிழகத்தில் அரசு நிலையின்மையும் போர் அச்சமும் எங்கும் நிலவின. அதனால் மக்களிடையே அமைதியான வாழ்வு இல்லாதொழிந்தமையால் வறுமையும் பிணியும் கல்லாமையும் நாட்டிற் பெருகியிருந்தன. ஆங்கிலேயர் ஆட்சி நிலைகொண்டதும் போர் அச்சம் ஒழிந்தது. வாழ்வில் மக்கட்கு ஓரளவு அமைதி தோன்றிற்று. பொருளும் வாணிகமும், தொழில்களும் தொன்று தொட்டு வந்த முறையில் உயிர்ப்புப் பெற்றன. அதுகண்ட மக்கள் அரசினர் மனமகிழத்தக்க வகையில் தங்கள் வாழ்க்கையை நடத்த முற்பட்டனர். தமக்கென ஒன்று இன்றித் தமக்கு வேண்டுவனவற்றைச் சிந்திப்பதும் அரசினர் செயல் எனத் தேர்ந்து அவர்கட்கு முழுத்த அடிமையாயினர். அரசின் செல்வாக்குப் பெற்றோருடைய சொல்லும், செயலுமே அவர்கட்கு வழிகாட்டியாயின. இடைக்காலச் சோழ பாண்டியர் காலத்தில் இல்லாத சாதி வேற்றுமைகள் புது முறையில் தோன்றி மக்களை அக்குவேறு ஆணி வேறாகப் பிரித்தொழிந்தன. கல்வியும், செல்வமும் செல்வாக்குடையோரிடமே இருந்து வரலாயின. நாளடைவில் ஆங்கிலேயர்களுக்குத் தம்மால் ஆளப்படும் மக்களிடையே காணப்படும் கல்லாமை, வறுமை, வேற்றுமைகள் தெரியவந்தன. இந்த மக்களை ஆங்கிலேயரினும் சிறந்த ஆங்கிலப் பான்மையுடையராக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டு ஆங்கில மொழியறிவை முன்னையினும் சிறிது மிகுதியாகப் பரப்ப முயன்றனர். ஆங்கில மொழியிற் காணப்படும் அரசியல், வாணிகம், விஞ்ஞானம் முதலிய கலைகளை நம்மவர்க்கு வழங்கினர். மருத்துவம், பொறியியல் முதலிய கலைகளும் நாட்டு வரலாறு, பொருளாதாரம், மெய்யுணர்வு (Philosophy) முதலியனவும் வந்து புகுந்தன. இதனால் அவர்கள் ஆட்சியில் கல்விமுறையிற் குற்றம் குறைகள் இல்லை என்பது கருத்தன்று. அவற்றால் நமது முன்னேற்றம் தடைப்பட்டது உண்மை, ஆயினும், அவர்பால் பெற்ற நலங்களால் - அவருடைய மொழிப் பயிற்சியால் - இன்று நாமும் ஓரளவு கலைஞர்களாய் விளங்குகிறோம். இத்தனைக் கலைகளும் கலையுணர்ச்சிகளும் நிறைந்து இன்று உலகப் பொது மொழியாக ஆங்கில மொழி இடம் பெற்று விட்டது. ஆங்கிலேயரை வெறுப்பவரும் அவர்களுடைய ஆங்கில மொழியின் கலைவளம் கண்டு அதனைப் பெரிதுங் காதலித்துக் கற்கின்றனர். அதற்கு அச்சிறப்பு எங்ஙனம் உண்டாயிற்று? ஆங்கிலேயருடைய நாடு மேலை நாட்டுக் கடற்கண் உள்ள சிறு தீவு என்பது யாவரும் அறிந்தது. மேலும் அது குளிர் மிகுந்து ஓராண்டில் பலதிங்கள் வெளியே செல்ல முடியாதவாறு பனி யுறைந்து கிடக்கும் இயல்பினதாகும். அக்காலத்தே அவர்கள் தங்கள் மனைகளில் அடைபட்டுக் குளிர் காய்ந்து கொண்டும் தனியே இருந்து சிந்தித்துக் கொண்டும் இருப்பர். இவ்வியல்பால் குளிர்காலத்துக்கெனப் பொருளீட்டுவது அவர்கட்கு இயற்கை வேட்கையாயிற்று. குளிர்காயும் நெருப்புக்கு விறகு தேடப் புகுந்த சிந்தனை அவர்களை நிலத்தைக் குடைந்து நிலக்கரி காணச் செய்தது. நிலக்கரிக்குப் பின் நீராவி கண்டனர்; புகை வண்டி விடுத்தனர். இடையிடையே இவற்றுக்கு வேண்டும் கருவிகளையும் படைத்தனர். உணவுக்கும், உடைக்கும் உரிய பொருள்மேற் சென்ற அவர்கள் விருப்பம், ஏனைப் பெருநாடுகளிற் பெறலாகும் பொருள் நலமெல்லாம் தாமும் பெறவேண்டுமென்ற வேட்கையாக மாறிற்று. அதனால் கடலிற் கலம் செலுத்தி வேறு நாடுகட்குச் சென்று பொருளீட்டும் செயலை மேற்கொண்டனர். வேறு நாடுகட்குச் சென்றபோது அந்த நாடுகளின் இயற்கையமைதிகளையும் கால நிலைமைகளையும் ஆங்கு வாழும் மக்களினத்தின் பண்பாடு களையும் அறிந்துகொள்ளும் வாய்ப்பைப் பெற்றனர். இவ்வகையில் அவர்களுடைய உலக அறிவும் பொருளறிவும் பெருகவே போக்கு வரவுக்கும் பொருள் செய்தற்கும் வேண்டப் படும் பொருளும் கருவிகளும் மிகுதியும் உண்டாயின. அவற்றால் அவர்களுடைய மொழியிலுள்ள சொற்களும் பலவாய்வளர்ந்து பெருகத் தலைப்பட்டன. அவர்களைப் போலவே அவர்கள் வாழும் கடலின் கரையிலுள்ள நாட்டினரான ஐரோப்பியர் பலரும் பொருள் வேட்கையும் அதுவே வாயிலாக நாடுகாணும் நாட்டமும் கொண்டு கடலில் திரிவாராயினர். அவர்களாலும் பற்பல புதுப் பொருட்கள் காண்டலும் புதுக் கருவி படைத்தலும் உண்டாயின. நாளடைவில் அவைகள் அவர்களிடையே விரவத் தொடங்கின. இவ்வாறு தோன்றி வளர்ந்ததன் பயனே இன்று நாம் ஆங்கிலத்திற் காணும் கலைப் பெருக்கமாகும். வாழ்க்கை நலமும் அதற்கு இன்றியமையாத பொருள் வேட்கையும் கொண்டே வேறு நாடுகட்குச் சென்றாராயினும், தங்கள் நாட்டோடு ஒத்த இயற்கைச் சூழ்நிலையமைந்த நாடுகளில் குடியேறுவதிலும் அவர்கள் பின்வாங்கவில்லை. நல்ல காலத்தின் குறியாக ஆங்கிலர் நாட்டில் சமயக் கொடும்பூசல் ஒன்று சுமார் நானூறு ஆண்டுகட்கு முன் தோன்றிற்று. வலியார் பலர் எளியாரைத் துன்புறுத்தினர். அவர்கள் கடல் கடந்து அமெரிக்கா முதலிய நாடுகளிற் குடியேறினர். இவ்வாறே பலர் ஆப்பிரிக்காவின் தென் பகுதியிலும் ஆத்திரேலியாவிலும் அமெரிக்காவின் வட பகுதியிலும் குடியேறி ஆங்கிலம் வழங்கும் நாடுகளை அமைத்துக் கொண்டனர். இவ்வாறு நிலவுலகு முற்றும் பொருள் வேண்டியும் இடம் வேண்டியும் திரிந்த ஐரோப்பியர்பால் அரும் பண்பு ஒன்று அமைந்திருந்தது. தாம் தம் இயற்கையறிவாலும் வாழ்க்கை வாயிலாலும் கண்ட காட்சிகளை எழுதிவைப்பதும் ஒளிவு மறை வின்றிப் பிறர்க்குரைப்பதும் ஐரோப்பியரிடம் அந்நாளில் நன்கு அமைந்திருந்த செயல்களாகும். அவற்றோடு தாம் காணும் இயற்கை நலங்களையும் கண்டு பயிலும் மக்களுடைய பண்பாடுகளையும் செயல் வகைகளையும் குறித்துக்கொண்டு தம்மோரன்னோருக்கு வெளியிடுவது யாவர்பாலும் அமைந்திருந்தது அவர்கள் நம் நாட்டிற் புகுந்து தங்கியபோது வடமொழியிற் காணப்படும் வேதங்களையும் மிருதிகளையும் உபநிடதங்களையும் பிறவற்றையும் கற்றோரைத் துணையாகக் கொண்டு தமது மொழியிற் பெயர்த்துக் கொண்டனர். கிரையர்சன் முதலியோர் மக்கள் பேசும் மொழிக்கூறுகளைக் கண்டு குறித்தனர். தர்ச்டன் முதலியோர் மக்களினத்தின் பல்வேறு பிரிவுகளையும், அவர்களுடைய வாழ்க்கை முறை, குணம், செயல் ஆகியவற்றையும் தொகுத்துரைத்தனர். ஊல்சு முதலியோர் கல்வெட்டுக்களை கண்டனர். மெக்கன்சி முதலியோர் பழங்கால வரலாற்றுக் குறிப்புக்களைத் தொகுத்து வைத்தனர். செர்பாட்சிகி முதலியருசியர், பௌத்தம் முதலிய சமய தத்துவங்களை ஆராய்ந்து கண்டனர். இவை யாவும் ஆங்கில மொழியின் செல்வங்களாகத் திகழ்கின்றன. இவ்வாறே இந்த ஐரோப்பியர் எந்த எந்த நாடுகட்குச் சென்றார்களோ அந்த அந்த நாட்டின் இயற்கை நலங்களையும் மக்களினத்தின் பண்பாடு, மொழி முதலிய இயல்புகளையும் கண்டும் தேடியறிந்தும் எழுதி வைத்துள்ளனர். இம்மட்டோ? நிலவுலகைச் சூழ்ந்துள்ள கடல்களின் இயல் பையும் அவற்றுள் வாழும் உயிர்வகைகள், பறவைகள் முதலிய வற்றையும் நிலத்திடை நிற்கும் மலை, காடு, ஏரி குளங்களையும் ஆறுகளையும் ஆங்காங்கு வாழும் பறவை, விலங்கு முதலிய உயிரினங்களையும் கண்டு அவற்றின் இயல்புகளையும் வெளியிட் டுள்ளனர். இவ்வாறேதான் நிலம், நீர், நெருப்பு, காற்று முதலிய வற்றின் கூறுகளைக் கண்டாற்போல வானத்தையுங் கண்டு காற்று நிலவும் பகுதி, அதன்மேலுள்ள மென்காற்பகுதி, அதற்கு மேலே ஒன்றுமில்லாத வெற்றிடப் பகுதிகளையும் வானத்திற் காணப்படும் நாள் கோள் முதலியவற்றையும் ஆராய்ந்துள்ளனர். இன்னோரன்ன செயல்வகைகளால் இன்றைய ஆங்கில மொழி, ஒருவன் நிலவுலகின் அகக்கூறு புறக்கூறுகளையும் அவற்றின் நுட்பங்களையும் இருந்த இடத்திலிருந்து நேரிற் சென்று கண்டோன் போல இனிது அறிந்துகொள்ளுதற்கேற்ற அறிவுக்கலைக் கண்ணாடியாக உலகெலாம் பரவிய உயர்தனிச் செம்மொழியாக விளங்குகிறது. இந்த ஆங்கில மொழி போலத்தான் நமது நாட்டிலும் வடமொழி தோற்றம் பெற்றது. ஐரோப்பியர் மொழிக்குப் பேச் சொலியோடு எழுதப்படும் எழுத்தும் இருந்தது. ஆனால் வடமொழியாளருடைய வடமொழிக்கு எழுதுதற்குரிய எழுத்து இலதாயிற்று. அவர்கள் தமிழகத்துக்கு வந்தபோது அவர்களது வடமொழி ‘எழுதாக்கிளவி’யாகவே இருந்தது. அவர்களும் இந்த நாட்டைப் பார்க்க வந்தவர் என்ற பொருள்படத் தம்மைப் “பார்ப்பனர்” என்றே கூறிக் கொண்டனர். அவர்கள் இன்றைக்கும் வடமொழியல்லாத ஏனைத் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் முதலியவற்றைப் “பிரதேச பாசை” என்று கூறுவதே இதற்குச் சான்றாகும். தொடக்கத்தில் அவர்கள் ஆறுவகைத் தொழில்களே மேற்கொண்டிருந்தனர். அவை வேதம் ஓதல், ஓதுவித்தல், வேள்வி வேட்டல், வேட்பித்தல், ஓதல், ஓதுவித்தல் என்ற இரண்டிற்கும் வேண்டும் பொருளை உடையவரிடம் இரத்தல், ஓதுவித்தல் வேட்பித்தல் ஆகிய இரண்டிற்கும் உரிய பொருளை ஈதல் என்று கூறப்படுகின்றன. “ஓதல் வேட்டல் அவை பிறர்ச் செய்தல் ஈதல் ஏற்றல் என்று ஆறு புரிந்தொழுகும் அறம்புரி அந்தணர்” என்று பதிற்றுப்பத்தும், “அறுவகைப் பட்ட பார்ப்பன பக்கம்” எனத் தொல்காப்பியமும் கூறுவது காணலாம். எனவே, அவர்கட்கு உழவு வாணிகம் முதலிய தொழில்கள் இல்லை என்பது தானே பெறப்படும். படவே, அவர்கள் பண்டை நாளில் பொருள் மிகவும் உடையவரான அரசர் சார்பிலும் செல்வர் ஆதரவிலும் வாழ்ந்து வந்தனர். ஏனை உலகியல் தொழில்களைச் செய்து வாழும் மக்கள் தொடர்பு இல்லாமையால் நெடுங்காலம் வரையில் அவர்களது வடமொழி, அவர்கள் சூழலில் இருந்து வந்ததேயன்றி நாட்டு மக்கள் அறியும் எல்லைக்கு வரவில்லை. வேற்றவர்களான பல்லவர் ஆட்சி நிலைகண்ட போதுதான் அரசியற் செப்பேடுகளில் வேந்தர் களின் குடிவரவு கூறும் பகுதியில் வடமொழி இடம் பெறுவதாயிற்று. அவர்கட்குப்பின் வந்த பாண்டியர் காலத்தில் அம்மரபு சின்னாளிருந்தது. பின்பு தோன்றிய சோழ பாண்டியர் காலத்தில் அவ்வழக்காறு வீழ்ந்து போயிற்று. இன்னும் பல்லவர் அவரை அடுத்த பாண்டியர் சேப்பேடுகளில் குடிவரவு கூறும் பகுதி வட மொழியிலும் ஏனையாவுந் தமிழிலும் இருப்பதைக் காணலாம். அவ்வடமொழிப் பகுதியும் தேவநாகரி என்ற எழுத்தில் உள்ளது. அவ்வெழுத்தும் மராட்டர் மொழிக்குரிய எழுத்துக் களாகும். பிற்காலத்தே புத்தரும் ஆருகதரும் தமிழகம் போந்த போது தான் தமிழ் எழுத்துக்களைச் சிறிது திரித்துக் கிரந்த எழுத்துக்கள் அமைத்துக் கொள்ளப்பட்டன. என்றாலும் மேலை நாட்டு ஐரோப்பிய மக்களைப் போலவே தாம் சென்ற பகுதிகளில் வாழ்ந்த மக்களிடையே வழங்கிய வரலாறுகளையும் பொருள் இடம் முதலியவற்றின் இயல்புகளையும் கண்டும் கேட்டும் தங்கள் மொழியில் பெயர்த்துக் கொள்ளும் இயல்பு வட மொழியாளரி டத்தும் நன்கு அமைந்திருந்தது. அரசர், வணிகர், உழவர், பாணர், கூத்தர் முதலியோரிடத்து இருந்த அறநூல், பொருள் நூல், இசை நூல், கூத்து நூல், முதலிய பலவேறுகலை. நுட்பம் கூறும் நூல்களைப் பெற்றுத் தமது வடமொழியில் ஆக்கிக் கொண்டனர். அந்தணர்கட்கு அவை தொழில்கள் அல்லவாயினும் சிறந்த கலை நூற்களைத் தமது மொழியில் பெயர்த்துக் கொள்வது அவர்களுடைய நல்ல பண்பாகும். அவர்கள் எப்போதும் அரசர், குறுநிலத்தலைவர், வணிகர் முதலிய செல்வர் சார்பிலேயே இருந்து வந்ததால் இச்செயல்கள் அவர்கட்கு எளிதில் இயன்றன. இவ்வாறே செல்வர் அருள் வேண்டி நின்ற இயற்புலவர், ஓவியப் புலவர், கோயில் களின் அமைப்பும் முறையும் கூறும் ஆகமப் புலவர் முதலிய பலவகைப் புலவர்களின் கலை நூல்களும் மருத்துவ நூல்களும் பிறவும் வடமொழியில் மாறின. அரசு நிலையில்லாமையால் நாட்டில் அடிக்கடி நிகழ்ந்த போர்களில் பார்ப்பனர் ஒழிய ஏனையாவரும் கலந்து கொள்ளும் கடமையுடையவர். அதனால் அவர்களுடைய கலைச் செல்வங்கள் பலவும் வடமொழியாளரிடம் இருப்பது நலம் என்றும் அந்நாளை யோர் கருதினர். அவ்வாறு கருதியிருந்ததில் தவறில்லை. மேலை நாட்டு ஐரோப்பியரிடம் காணப்படாத ஒரு தீயபழக்கம் வடமொழியாளரிடம் இருந்தது. ஐரோப்பியர் தாம் கேட்கும் செய்தியும் கற்கும் பொருளும் யாவரிடம் கிடைத்திருக்கின்றனவோ அவரையும் அவர்களின் நூலையும் விடாமற் குறிப்பது அவர்கள் வழக்கம். அவர்களுடைய நூல்களைக் காண்போமாயின் “இது இன்னார் கூறியது; இதைக் கூறியவர் இன்ன நூலிற் கூறியுள்ளார்.” என்பதைத் தவறாமற் குறிப்பர். பின்பு எந்தப் பொருளேனும் புதிதாகக் காணப்படின் அப்பொருள் காணப்படும் இடத்தே அதற்கு எப்பெயர் வழங்குகிறதோ அதனைத் தங்கள் மொழியொலிக் கேற்பத் திரித்துக் கொள்வர்; ஊர்ப்பெயர், மக்கட்பெயர் ஆகிய வற்றையும் அவ்வாறே திரித்துக் கொள்வது அவர்கள் இயல்பு. வடமொழியாளரோ எனில் அப்பெயரை வடமொழியில் மொழி பெயர்த்து அவர்களுடையதாகத் தோன்றுமாறு செய்துகொள்வர். விரிஞ்சிபுரத்திலுள்ள இறைவனுக்குப் பழம்பெயர் வழித்துணை நாயனார் என்பது. விருத்தாசலத்துக்குப் பழமையான பெயர் முதுகுன்றம் என்பது. வழி என்பதை மார்க்க மென்றும் துணை என்பதைச் சகாயம் என்றும் மொழிபெயர்த்து மார்க்க சகாயர் என்றும்; முதுமை - விருத்தம்; குன்றம் - அசலம் -ஆகவே முதுகுன்றம் -விருத்தாசலம் என்றும்; வெண்காடன் என்பதைச் சுவேதாரணியன் என்றும் கூறினர். இவ்வாறே விரிஞ்சிபுரத்துக்கு அண்மையில் ஓடும் பாலாற்றை க்ஷீரநதி என்றும், அழகர் மலை யிலுள்ள சிலம்பாற்றை நூபுரகங்கையென்றும், அறம் வளர்த்தாள், பெரியநாயகி என்ற பெயர்களைத் தர்மசம்வர்த்தனி, பிரகந்நாயகி என்றும் மொழி பெயர்த்துக் கொண்டனர். இவ்வாறே சைவத் திருமுறைகளிலும் நாலாயிரப் பிரபந்தங்களிலும் காணப்படும் பலபெயர்கள் வடமொழியில் பெயர்க்கப் பட்டுள்ளன. வழித்துணை நாயனாரை ஐவே கைடு (Highway guide) என்றோ முதுகுன்றை குட் ஓல்டு இல்லக் (Good old hillock) என்றோ ஆங்கிலேயரோ வேறு ஐரோப்பியரோ மாற்றியதோ, மாற்றுவதோ கிடையாது. இத்தீச்செயலையே பல நூற்றாண்டுகளாகச் செய்துவந்த மையின் பிற்காலத்தே வாழ்வில் அமைதி தோன்றியதும் மக்கள் தங்கள் நூல்களை எழுதத் தொடங்கியபோது வடமொழியிலிருந்து பெறவேண்டிய நிலைமை தோன்றியது. அப்போது தமிழ்நாட்டுத் தமிழர் ஊர்க்குரிய வரலாற்றை வேறு எவரோ எந்த நாட்டிலோ கூறியதாக வரலாறுகள் வேறுபடலாயின. இசையும் கூத்தும் சமயக் கருத்தும் பிறவும் பழம்பெயர் மறைந்து போக வடமொழிப் பெயரால் வெளிவரலாயின. பின்வந்தோர் உண்மை உணர மாட்டாமல் எல்லாம் வடமொழியிலே உள்ளன; தமிழ் மொழியே வடமொழியிலிருந்து தோன்றியதுதான் என்று கூறலுற்றனர். வேள்வி செய்தோர்க்கும் செய்வித்தோர்க்கும் பண்டைநாளில் வேந்தரும் செல்வரும் காமக்காணி என்று சிறப்புப் பெயர் நல்குவது வழக்கம். இடைக்கால கல்வெட்டுக்கள் மிகப்பல இதனைக் கூறுகின்றன. இவ்வாறு சிறப்புப் பெயர் பெற்ற சான்றோர் ஒருவர் சங்க இலக்கியத்தில் வருகிறார். அவர் பெயரை ஏட்டில் எழுதினோர் காமக்கணி என்று எழுதிவிட்டனர். அதைக் கண்ட இக்கால அறிஞர் அது காமாட்சி என்பதன் மொழிபெயர்ப்பு என்று எழுதி யொழிந்தார். காஞ்சிபுரத்திலுள்ள காமக்கோட்டத்துக் காமாட்சிக்கு அப்பெயர் மிகவும் பிற்காலத்தே உண்டானது என்பது வரலாறு கூறும் உண்மை. இவ்வண்ணமே கோயில்களில் இறைவன் முன் சொல்லப்படும் அருச்சனைகள் பல திருமுறைகளிலும் பிரபந்தங் களிலும் காணப்படும் சிறப்புப் பெயர்களின் மொழிபெயர்ப்பாகவே உள்ளன. இதனால் விளைந்த பயன் என்னையெனில் சென்ற நூற்றாண்டின் இறுதியிலும் இந்த நூற்றாண்டின் தொடக்கப் பகுதியிலும் இருந்து பள்ளி மாணவர் பாடநூல்களுக்கு உரை எழுதினோரும் பிறரும் பின்விளைவு கருதாமல் தமிழில் வழங்கும் மணி, நீர், முத்து, சேரி,மீன், பழம் முதலிய யாவும் வடமொழித் திரிபுகள் என்றே எழுதினார்கள். உலகில் அறவாழ்விற் சிறந்த சான்றோர்களைத் தமிழர் கடவுளர் என்பர். அப்பேயரைத் தெய்வ மாகவும் “ ரிசி ”களாகவும் மொழி பெயர்த்து அவர்கள் வரலாற்றுள் பலவற்றைத் தெய்வச் செயல்களாக உரைக்கலாயினர். சாதிசமுதாய வேற்றுமைகள் நிலைபெறு தற்கேற்பப் புராணங்கள் பல வடமொழி வாயிலாகத் தோன்றின. தமிழ் மொழியிற்காணப்படும் அறவுரைகளும் பொருளுரைகளும் யாவும் வடநூல்களிலிருந்தே தோன்றின என்ற கருத்து நாட்டவர் தெரியவும் மேனாட்டவரும் பிறரும் தமிழர்க் கெனத் தனித்த அறிவோ, பண்பாடோ, சமய ஒழுக்கமோ இல்லையென உணரவும் உரைத்தனர்; நூல்வடிவில் எழுதியும் வந்தனர். ஆங்கில அறிவும் அதன் வாயிலாக வடநூற்கருத்துக்களும் வரலாற்றுண்மை களும் தமிழ் மக்கட்குத் தெரியவந்தன. அதனால் தமிழகட்குவட மொழிபால் வெறுப்பு உண்டாயிற்று.இவ்வெறுப்பு வளர்தற்கேற்ப மேனாட்டவரும் தமிழரல்லாத பிறரும் இரு மொழியும் பயின்று பெற்ற அறிவால் வடமொழியில் உள்ள வரலாறு பலவும் புளுகுக் குப்பைகள் (“A farrago of legendary nonsense”W. Logan’s Malabar) என்று திட்ட வட்டமாகக் கூறுவாராயினர். இதற்கிடையே நல்ல காலமாக மொழிநூல் நெறி (PHILOLOGY)பொய்யான கருத்துக்களை மறுத்து விட்டது. உண்மை ஒளிவிட்டுத் திகழ்வதாயிற்று. இப்போது இந்தியப் பேரரசு வடமொழிப் பல்கலைக் கழகங்களை நிறுவி வடமொழியை நாட்டிற் பரப்ப முயலுகின்றது. வடமொழியை யாவரும் எளிதிற் கற்பதற்கேற்ற வழிமுறைகளை ஆராய்தற்கென அறிஞர்குழு ஒன்றை அமைத்துள்ளனர். இப்போது பரவியுள்ள வடநூலறிவே வடநூற் கடலுட் புதைந்து மறைந்து கிடக்கும் தமிழ்ச் சொற்கள் கருத்துக்கள் பலவற்றை எடுத்துக்காட்டி வருகிறது. வடநூல் அறிவு நாட்டில் பலரும் அறியப் பரவுமாயின் மேலே கூறிய தமிழ் வரலாறுகளும் உண்மைகள் பலவும் மக்கட்குத் தெரிந்துவிடும். அவ்வந்நாட்டு மொழிகள் தத்தம் தனியியல்பை யுணர்ந்து தழைத்து வளரத் தலைப்படும். வடமொழியின் துணை யில்லையாயின் வளம்பெறா என உரைக்கப்படும் பொய்யடிமையி லிருந்து நீங்கி அவை உரிமையும் சிறப்பும் பெற்று உயர்வு பெறும். நீதி மன்றங்களில் நிலவும் சட்டங்களில் புகுத்தப்பட்டிருக்கும் வழக்குக் கொவ்வாத கருத்துக்கள் பலவற்றின் புன்மை நாட்டு மக்களுக்கு நன்கு விளங்கும். ஆதலால் நமது பேரரசு வடமொழி பரவுதற்குச் செய்யும் இந்த முயற்சி பெரிதும் தமிழர் பாராட்டற்குரியதாகும். வடமொழியை யாவரும் படிக்கச் செய்யும் வகையில் கல்வியாளர்கள் அதனை ஆங்கில மொழிக்குரிய இடத்திலோ நாட்டாட்சிக்குரிய இடத்திலோ வைப்பது, காலநிலைக்கும் மக்களின் அறிவு வளர்ச்சிக்கும் ஒத்ததாகாது. தமிழ் நாட்டுக்குரிய தமிழ், உலகியலுக்குரிய ஆங்கிலம் என்ற மொழிகளைப் போல, வடமொழி இன்றைய வாழ்க்கைக்குப் பயன்படும் தகுதியுடைய தன்று. அதனால் அதனை மூன்றாவது மொழியாக நிறுத்திப் பலரும் எளிதிற் பயின்று மொழிநலம் பெறச் செய்வது தான் நாட்டின் எதிர்கால அறிவுநலத்தை எண்ணும் நல்லறிஞர் கடனாகும். தமிழ்ப்பொழில், 32ஆம் துணர், மார்ச்சு 1957. 10. கன்றும் உதவும் கனி கன்றும் கனி உதவும் என்ற தொடர், கனியுதவும் வாழைக் கன்றைக் குறிப்பது யாவரும் அறிந்த தொன்று, ஒரு வாழை மரம் தான் நிற்குமளவும் நின்று கனியாகிய பயனை யுதவியதும் இறந்து விடும். அப்போது அதனடியில் வேறொரு கன்று தோன்றிவிடும். தன் தாய் கனியுதவி இறந்ததென எண்ணி மடியாது தானும் அது போலவே கனியுதவி மடியும் இதுபற்றியே “நின்று பயன் உதவி நில்லா அரம்பையின் கீழ்க் கன்றும் உதவும் கனி” என்று சான்றோர் நன்னெறி கண்டனர். இதனால் தந்தையின் அரிய இனிய நன்செயல் ஒன்று மகனிடத்தும் தோன்றுமானால், “கன்றும் கனியுதவுமல்லவர?” என்ற தொடர் பிறிது மொழியும் அணியாக வழங்குவ துண்டாயிற்று. வேள் பாரியின் வள்ளன்மை அவன் மகளிரிடத்தும் இருந்தமையால், அவரது வரலாற்றை ஆராய்ந் தெழுதிய புலவர் திரு. க.உலகநாதபிள்ளை யவர்கள் அவ்வரலாற்று நூலுக்குக் “கன்றும் கனியுதவும்” என்று பெயரிட்டார், இங்ஙனம் கன்று கனியுதவும் செயல் வாழையினத்தில் இன்றும் நடைபெறுவது போல மக்கள் இனத்திலும் பொய்யாமலே இருந்து வருகின்றது. செல்வம் மிக்க தந்தை மேற்கொண்ட நற்செயலை மக்கள் மேற்கொண்டு செய்வதும், அவர்கட்குப் பின் அவர் தம் வழித் தோன்றல்கள் செய்வதுமாக வழி வழியாக நிலவுவதுண்டு, இதனைத் தமிழ் நாட்டுத் தனவணிகர் இனத்தில் இன்றும் காணலாம். இவ்வாறு வழி வழியாக வந்த செயற் பண்பால் இன்று தமிழகத்தில் சிவன் கோயில்கள் மிகப் பல சிறந்த திருப்பணி பெற்று அழகுற இருக்கின்றன. முன்பொருநாள் திருவேடகம் சென்றிருந்தபோது, அக்கோயில் திருப்பணி குறித்துப் பேசிய பெரியவர் ஒருவர், சட்டென “அரம்பையின் கீழ்க் கன்றும் கனியுதவும்” அல்லவா? என்று சொல்லக் கேட்டதும், எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி யுண்டா யிற்று. வாழையினிடத்து வழி வழியாக வழங்கி வரும் நற்பண்பு செல்வ மக்களிடத்துச் சிறப்புற நிற்கக் காண்பதே இன்பம்; அதனை நன்மக்கள் எண்ணி மகிழ்ந்து எடுத்துரைக்கும் போது பேரின்பம். இத்தகைய செயலொன்று சென்ற வாரத்தில் நடைபெற்றது. மதுரை மீனாட்சி மில் முதல்வர் கரு.முத்து. தியாகராசன் செட்டி யார் தம்மை யடைபவர்க்கு வேண்டும் உதவி செய்யும் வள்ளன்மை யுடைய ரென்பது தமிழறிந்தோர் அனைவரும் நன்கறிந்த செய்தி. தமிழ்ப் புலமை நிறைந்தோர்க்குப் பெரும் பொருள் உதவி இனிது வாழச் செய்வது பிறர் அறியா வகையில் நடைபெறும் அவரது தனித்த வண்மைச் செயல். உயர்கலாசாலை களும், உயர்நிலைக் கல்லூரியும் நிறுவிக் கல்வியை நாட்டு மக்கட்கு வழங்குவது அவரது பொதுத் தொண்டு. “தமிழ்நாடு” என்னும் நாள் தான் வாயிலாக நல்ல தமிழில் உலக நிகழ்ச்சிகளை நாடோறும் வெளியிடுவது ஒரு சிறப்புத் தமிழறமாகும். இதற்காக ஒரு வகை ஊதியமும் இன்றி இதுகாறும் இரண்டு லட்சரூபாய்க்கு மேல் செலவாகியிருக்கிறது. தமிழ் வளர்ச்சி குறித்தும் தமிழ் மக்களின் உலகியல் அறிவு மிகுவது குறித்தும் உதவப்படும் இப்பெருவண்மை நாடோறும் நடந்த வண்ணம் இருக்கிறது. இவற்றைச் சீர்தூக்கிக் காணும் நல்லோர் கூட்டம், கரு.முத்து. திரு. அவர்களைத் “தமிழ் வள்ளல்” என்று கூறிப் பாராட்டி வருகிறது. இன்றைய தமிழறிஞர் உலகம் ஒருவர்பால் விளங்கும் நற்பண்பு களை மறைத்தாலும் மறைக்குமேயன்றி இல்லாத நற்பண்புகள் உள்ளன எனப் பொய்யாக ஏற்றிப் புனைந்துரைப்பதில் ஈடுபடு வதில்லை. இல்லது புனையும் இயல்பு இக்காலத்தில் இல்லை யென்பது உண்மை. உள்ளதன் உண்மையை உள்ளபடி யெடுத் துரைத்து இன்புறும் இன்றைய அறிஞர் உலகம் கரு.முத்து. தி. அவர்களைத் “தமிழ் வள்ளல்” என்று பாராட்டுகிறது என்றால், வேறு கூறல் வேண்டா. இத்தமிழ் வள்ளலுக்கு மக்கள் இருவர் உள்ளனர். இருவரும் தந்தையைப் போலவே தமிழார்வம் நிறைந்தவர். தமிழறிஞர்களை நன்கு மதித்துச் சிறப்பிக்கும் நலம் வாய்ந்தவர். அவர்களில் முன்னவர் சுந்தரம் என்றும், இளையவர் மாணிக்கவாசகம் என்றும் பெயர் பூண்டவர். இவ்விருவர் பெயர்களே இவர் தந்தையான நம் தமிழ் வள்ளலின் சிவநெறிப் பற்றினைச் சிறப்புறக் காட்டுகின்றன. இது நிற்க, திரு. சுந்தரம் அவர்கள் ஆங்கிலத்தில் நல்ல புலமையுடையவர்; ஆங்கில மொழி வழங்கும் அமரிக்கா ஐரோப்பா முதலிய நாடுகட்குச் சென்று அவ்வந் நாட்டு மக்கட் பண்பை நன்கு அறிந்தவர். எது செய்வதாயினும் அதனை நன்றாக ஆராய்ந்து குறித்த காலத்தில் முடிக்கும் குறிக்கோள் உடையவர். விரிந்த மனப் பண்பும் சிறந்த நோக்கமும் அவர்நெஞ்சில் நிலவுவதை அவரோடு சொல்லாடுந் தோறும் விளங்குவதை யாவரும் எளிதில் காணலாம். தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார் நற்றிணையை உரையுடன் வெளியிட வேண்டுமென மேற் கொண்டபோது என்னை அதற்குரிய பணியினைச் செய்யுமாறு திரு.வ.சுப்பையா பிள்ளையவர்கள் தெரிவித்தார்கள். தூத்துக்குடி வணிகர் திரு. E.K. சேதுராமலிங்கம் பிள்ளையவர்களுடன் திருச் செந்தூர் சென்று செந்திலாண்டவன் திருமுன் வைத்து அப்பணியைத் தொடங்கினேன். சின்னாட்களுக் கெல்லாம் நற்றிணை மூல ஏடு ஒன்று கிடைத்தது. அதனை அண்ணாமலைப் பல்கலைக் கழக விரிவுரையாளரான திரு.வெள்ளை வாரணம் அவருடன் ஆராய்ந்ததில் பல பாடவேறுபாடுகள் கிடைத்தன. முயன்றால் வேறு ஏடுகளும் பெறலாம் என்ற ஊக்கமும் உண்டாயிற்று. அதன் பின் மதுரையில் உள்ள மதுரைக் கல்லூரி மாணவர் ஒருவர் துணையால் போடி நாய்க்கனூர்க்கு அண்மையிலுள்ள டொம்மிச்சேரியில் நற்றிணை யேடு ஒன்று கிடைத்தது. அதனால் ஆசிரியர் பெயர் காணப்படாத நற்றிணைப் பாட்டுக் கட்கு ஆசிரியர் பெயரும், சில பாட்டுகளில் விடுபட்டிருந்த அடிகளும் சொற்களும் சொற்றொடர்களும் கிடைத்தன. இந்நிகழ்ச்சியை உடனே “தமிழ் நாட்”டில் வெளியிட்டேன். செட்டி நாட்டுப் பகுதியில் மிதிலைப் பட்டியில் டாக்டர் திரு. உ.வே.சா.ஐயரவர்கட்குப் பழைய ஏடுகள் சில கிடைத்த செய்தி கேள்வியுற்று, அப்பகுதியில் எங்கேனும் ஏடுகள் கிடைக்குமோ என நண்பர் சிலரைக் கேட்டிருந்தேன். அவர்களில் தெக்கூர் விசாலாட்சி காலாசாலைத் தமிழாசிரியர் திரு.வித்துவான், கதி. சுந்தரமும் ஒருவர். சென்ற வெள்ளிக்கிழமை (10-4-53) இரவு யான் “தமிழ் நாடு” அலுவலகத்தில் இருந்தேன். அப்போது திரு.தி.சுந்தரம் செட்டியார் அவர்கள் வந்து, “என்ன அவ்வை, நாளைக்கு ஊருக்குப் போகலாம் வருகிறீர்களா?” என்றார். எனக்கிருந்த வேலையைக் காட்டி வர இயலாமையைத் தயக்கத்தோடு யான் மொழிந்தேன். ‘என்றைக்கும் தான் வேலை இருக்கும்; வாருங்கள் தெக்கூர்க்குப் போய் வரலாம்” என்று மறுபடியும் கூறவே, யானும் மறுக்க மாட்டாமல் “வருகிறேன்” என்றேன். “நாளைக் காலை 6.45 மணிக்குத் தயாராய் இருங்கள்” என்று சொல்லிவிட்டுப் போய் விட்டார். சிறிது நேரத்திற் கெல்லாம் அங்கே திரு. மாணிக்க வாசகம் செட்டியார் வந்து சேர்ந்தார். அவரோடு பேசிக் கொண்டிருக்கையில் “நாமும் ஓலை யேடுகளைத் தொகுக்க வேண்டும்; அதற்கான முயற்சிகளைச் செய்வோம்” என்று தாமாகவே விரும்பிக் கூறினார். அவர் பேச்சில் எப்போதும் போலவுள்ள கிளர்ச்சியும் வேலைத் திட்டமும் மிக்கிருந்தன என்றாலும், “ஏடுகளைத் தேடித் தொகுப்போம்” என்றது மட்டில் புதுமையாக இருந்தது. நாளை நடப்பதை யாவர் அறிவார்? மறுநாட் காலையில் குறித்த நேரம் கடந்து விலையுயர்ந்த மோட்டார்கார் ஒன்று என் வீட்டுநோக்கி வந்தது. அது திரு.தி. சு. அவர்கள் வழக்கமாக வரும் கார் அன்று; அவர் தம்பி திரு. தி.மா. வரும் காராகும். அது கண்டதும் என் மனதில் தோன்றிய திகைப்பு திரு.தி.சு. அவர்கள் குரலால் நீங்கிற்று. பிறகு தி.சு. அவர்கள் தான் வரும் கார் வரஇயலாது போனதை யுரைத்து என் ஐயத்தை நீக்கினார்கள். பின்பு நாங்கள் இருவரும் காலை நேரத்தேயே தெக்கூர் சென்று சேர்ந்தோம். தெக்கூரில் திரு.கரு.முத்து. தி. அவர்களின் தமிழ்ப் பேரகம் ஒரு சிறந்த அமைப்புடன் விளங்குவது; கொடுங்கோடையை நெடு நல் வாடையாக மாற்றும் குளிர்ச்சி மாண்பும், மன மாசு நீக்கி அறிவுவொளி வீசும் தூய்மையும் தனிப் பண்பாகவுடையது. அங்கே நீராடி வழிபாடு முடித்துச் சிற்றுண்டி கொண்ட யான், சிறிது போதில் திரு. கதி. சுந்தரம் அவர்கள் வரக்கண்டேன். அவர் வலையப்பட்டிக்குச் செல்ல விருப்பதாகச் சொன்னார். திரு. தி.சு. அவர்கள் “நாமும் வலையப்பட்டிக்குப் போகலாமே” என்றார். எனக்கென்னவோ, தெக்கூர்ப் பேரகத்திலே தங்கிஎன்னோடு கொண்டு சென்ற குறை வேலையை முடிப்பதிலே கருத்து ஊன்றி யிருந்தது. அப்போது, கதி. சுந்தரம் என்னை நோக்கி, “வலையப் பட்டிக்கருகில் புதுப்பட்டி யென்றொர் ஊர் உண்டு; அங்கே ஒரு வீட்டில் ஏடுகள் பல இருக்கின்றன; போய்ப் பார்க்கலாம்” என்றார். பின்பு நாங்கள் அனைவரும் வலையப்பட்டிக்குச் சென்றோம். வலையப் பட்டியில் ஒரு வீட்டில் திரு.தி.சு அவர்கள் இருந்து கொண்டு, ‘நீங்கள் காரைக் கொண்டு புதுப்பட்டிக்குப் போய் வாருங்கள்’ என்றார். இப்பகுதியில்தான் முதலைப்பட்டி (மிதிலைப்பட்டி) உள்ளது என்றபோது எனக்கு இங்கே பழைய ஏடுகள் கிடைக்கலாம் என்ற எண்ணமுண்டாயிற்று. சிறிது போதில் நாங்கள் சென்ற கார் ஒரு வீட்டின் வாயிலில் நின்றது. அதைக் கண்டதும் எப்படியோ என் உள்ளத்தில் இங்கே சில நல்ல ஏடுகள் கிடைக்கலாம் என்ற நம்பிக்கை உறுதியாயிற்று. யான் சென்ற காரைக் கண்டதுமே, அவ்வீட்டில் உள்ளவர்க்கு என்பால் நன்மதிப்பு உண்டாயிற்று. உள்ளே சென்ற கதி. சுந்தரம், வீட்டு ஆச்சிக்கு வந்த நோக்கத்தைத் தெரிவித்து விட்டு என்னை உள்ளே அழைத்துச் சென்றார். அங்கே இருந்தோர் பலரும் என்னை அன்போடு வரவேற்றார்கள். நான் இருந்ததும், வீட்டு ஆச்சியார், ஒரு பெட்டி நிறைய இருந்த ஓலை யேடுகளை என் முன் கொண்டுவந்து வைத்து “இவைகளைச் செல்லரிக்காதபடி காத்து வருகிறோம்” எனமிக உருக்கமாகச் சொன்னார்கள். ஏடுகளின் காட்சியும் ஆச்சியின் மொழியும் என் உள்ளத்தைச் சிறிது நேரம் அசைவின்றி நிறுத்தின. பின்பு யான் ஏடுகளனத்தையும் ஒன்று விடாமல் பார்க்கத் தலைப்பட்டேன், சிறியவும் பெரியவுமாகிய பலவற்றையும் பார்த்து வருகையில், ஏடொன்றின் சிதறிய முதலேட்டில் “சாறுகழி வழி நாள் சோறு நசையுறாது, வேறு புலமுன்னிய விரகறி பொருள்” என்று தொடங்கும் அடிகளைக் கண்டதும் இது பொருநராற்றுப் படை யென வுணர்ந்தேன்; அதன் உள்ளே சில ஏடுகளைத் தள்ளிப் பார்க்கையில் முருகாற்றுப்படையும் அதன்கண் இருப்பது தெரிந்தது. பிறிதோரேட்டின் தொடக்கத்தில் “வான் பெயனனைந்த புறத்த நோன்பியர்தை யூணிருக்கையிற் றோன்று நாடன்” என்ற அடிகள் காணப்பட்டன. அதன் இறுதியில் “இது நல்லேட்டினார்” என்பதும் எழுதப்பட்டிருந்தது. உடனே இது நற்றிணை யென்பது தெரிந்தேன்; என் உள்ளத்தில் உண்டான மகிழ்ச்சிக்கு எல்லையில்லை. இவற்றோடு என் நெஞ்சிலெழுந்த ஆசை நிற்கவில்லை. எல்லா ஏடுகளையும் பார்த்து விடுவதெனத் துணிந்தேன். விறலி விடு தூதன், மன்னராயன் மடல் முதலிய வேறு சில நூல்கள் கிடைத்தன. மணியும் 1 1/2 மணிக்கு மேலாயிற்று. பின்பு தனது மனைக்குச் சென்றிருந்த கதி. சுந்தரம் வந்தார். அவருடன் வீட்டாரது அன்பார்ந்த விடையும் ஏடுகளும் பெற்றுக் கொண்டு திரு.தி.சு. அவர்கள் இருந்த வீட்டுக்கு வந்தேன். அவர் முகம் பசியாலும், வெயிற் கடுமையாலும் வாடியிருந்தது. நண்பகற்போதில் நெடிது நேரம் கழிந்தது பற்றித் திரு.தி.சு. அவர்கள் வருத்தப்படுவரோ என்ற அச்சம் என் மனதில் தோன்றி, யான் கொண்ட மகிழ்ச்சியனைத்தையும் மாற்றியது. அதற்கு மாறாக ஏடுகள் கிடைத்தது பற்றி அவர் என்னிலும் மிக்க மகிழ்ச்சி கொண்டார்; “போகட்டும்; இன்று நாம் தமிழ்க்கு நல்ல தொண்டு செய்தோம்” என்றார். என் மன நிலையை யறிந்து அவர்கள் அன்போடு உரைத்த மொழிகள் எனக்கு ஊக்கத்தை யளித்தன. நாங்கள் வேறொரு வீட்டில் விருந்துண்டு, நெற்குப்பையில் களைப்பாறி மாலையில் தெக்கூர் வந்து சேர்ந்தோம், பின்னர், திரு. தி. சு. அவர்கள் தெக்கூர் கலாசாலையின் சார்பாக செய்ய வேண்டிய அலுவல்களைச் செய்தாராக, யான் என் வேலைகளையும் செய்து முடித்தேன். இரவு 7 மணிக்குத் தெக்கூரிலிருந்து புறப்பட்டு 9 மணிக்குள் மதுரை வந்து சேர்ந்தோம். இதற்கிடையில், அன்று மாலை ஏடுகளைக் கண்டு, “நாம் இன்று தமிழ்க்கு நல்ல தொண்டு செய்தோம்” என்ற அவருடைய சொற்கள் அடிக்கடி என் காதில் ஒலித்துக் கொண்டேயிருந்தன. அன்றிரவு உறங்குகையில் ஒரு பழைய நினைவு நெஞ்சில் தோன்றிற்று. தமிழ் வள்ளல் திரு. கரு. முத்து. தி. அவர்கள் “தமிழ் நாடு” வெளியீடு பற்றி நிகழ்ந்த பேச்சிடையே திங்கள் தோறும் பதினையாயிரம் ரூபாய் தமிழ் நாட்டுக்காகச் செலவாவது, ஒரு பயன் கருதியல்ல; தமிழுக்குச் செய்யும் தொண்டு என்று உரைத் தார்கள். அவர்கள் நெஞ்சில் நிலவும் தமிழ்த் தொண்டு என்று என்னும் கருத்து, அவர் வழித் தோன்றலின் உள்ளத்திலும் தோன்றி நின்று பயன்படுவதை என் மனக்கண் இனிது எடுத்துக் காட்டிற்று. “அரம்பையின் கீழ்க்கன்றும் உதவும் கனி” என்ற சான்றோரது நல்லரையின் சால்புதான் என்னே! வாழ்க தமிழ் வள்ளல். தமிழ்ப்பொழில் , 11. முன்னணியில் நிற்பவர் இன்றைய தமிழ் நன்மக்களுக்குத் திருவள்ளுவரது திருக்குறள் பெறலரும் அறிவு ஒழுக்கக் கருவூலமாவது தெரியத் தொடங்கி விட்டது. எங்கும் யாவரும் திருக்குறளைப் பற்றிப் பேசுகின்றனர். எவருடைய பேச்சிலும் திருக்குறள் கருத்து ஒளிர்கின்றது. இந்நிலைமை எய்துவதற்கு முயன்று பயன்கண்டு மகிழ்ப வருள் நண்பர் கி.ஆ.பெ. விசுவநாதம் முன்னணியில் நிற்கின்றார். அவருடைய பேச்சிலும், எழுத்திலும், திருக்குறளின் சொல்லும் பொருளும் திகழ்வது யாவரும் அறிவர். இனிய மொழி நடையும் இடையிடையே நகை நலமும் கனிந்து, தெளிந்த ஆறுபோல் ஓடுவது அவரது சொற் பெருக்கு. 12. தலைமையானவர் முன்னாளில் தமிழகத்தில் மக்கள் வாழ்வுக்கு வேண்டிய அறிவு நெறிகளை வழங்குந் தொழிலை மேற்கொண்டிருந்தவர் இனிய கவி வழங்கும் புலவர்களே யாவர். நாட்டில் ஏரி குளங் களைப் பெருக்கி, நீர் நிலைகள் மிகுவித்தோரும், போர்வரின் அஞ்சாது சென்று பொருது வென்றிமேம்படுவித்தோரும் புலவரே யென்பது தமிழகத்தின் வரலாறு. வரலாறு காண்போர் நன்கறிவர். இடைக் காலத்தில் வாழ்ந்த புலவர்கள் மக்கள் நலத்தைப் பேணுவதிலும் தம்மை ஆதரித்த வள்ளல்களின் புகழ் பாடுவதே செயலெனத் தொண்டாற்றியதனால் தம் தலைமை நிலையை இழந்தனர். இந் நாளில் அவர்கள் மீளத் தலையெடாவாறு பிறமொழியும் பிற தொடர்புகளும் மேம்படலாயின. ஆயினும் மக்கள் தம்மைத் தமிழர் என்றும், தமது தொன்மை நலம் இதுவென்றும் மெல்லத் தெரிந்து கொண்டனர். தமிழ்ப் புலவர்களின் தமிழ்ப் பணியின் தவறு நலங்களைப் பகுத்தறியலானார்கள். அவர்களிடையே பாரதிதாசனார் போலும் தகவுடைய கவிகள் தோன்றலாயினர். அவருள் பாரதிதாசனார் தலைமையிடம் பெற்றுத் திகழ்கின்றார். பாவேந்தர் நிதிஅளிப்பு மலர் 1946 . 13. இரு துருவங்கள் உரைவேந்தர் ஒளவை சு. துரைசாமி பிள்ளை பழுத்த சைவர்; ஆத்திகர். பாவேந்தர் பாரதிதாசன் பழுத்த சீர்திருத்தவாதி; நாத்திகர். என்றாலும் தமிழ் இந்த இரு துருவங்களையும் இணைக்கும் பாலமாக இருந்து, இவர்கள் நட்பை வளர்த்தது. கொள்கை வேறுபாடு எப்போதும் இவர்கள் குறுக்கே நின்றதில்லை. இத் திரு நீற்றுச் செல்வர் தம் உள்ளத்தில் பாவேந்தருக்காக ஒதுக்கியிருந்த இடத்தை நம் பார்வையில் படும்படி இக்கட்டுரையில் திறந்து காட்டுகிறார். என் சொந்ததவூர் வடவார்க் காடுமாவட்டத்தைச் சேர்ந்த ஒளவையார் குப்பம். நான் செய்யாற்றில் ஆசிரியராகப் பணிபுரிந்த நேரத்தில் பாவேந்தர் புதுவையில் ஆசிரியராகப் பணிபுரிந்து கொண்டிருந்தார். மயிலம் முருகன் பேரில் எனக்கும் ஈடுபாடு; அவருக்கும் ஈடுபாடு. அவர் மயிலம் முருகன் மீது ‘சுப்பிரமணியர் துதியமுது’ பாடினார். நானும் முருகனைப்பற்றிப் பாடல் எழுதும் பண்புடையேன். மயிலம் கோவிலில் அவரும் நானும் சந்தித்து அளவளாவுவோம். நான் கரந்தைத் தமிழ்ச்சங்கத்தில் நூலகராக இருந்து கொண்டு கரந்தைக் கவியரசு வெங்கடாசலம் பிள்ளையிடம் தமிழ்ப் பயின் றேன். அப்போது பாரதிதாசனார் தஞ்சாவூர் வரும்போதெல்லாம் தமிழ்ச் சங்கத்துக்கு வருவார். எங்கள் நட்பு வளர்ந்தது. சுயமரியாதைக் கூட்டங்களுக்கும் மாநாடுகளுக்கும் நான் செல்வதுண்டு; ஆனால் தீவிரமாகப் பங்கேற்பதில்லை. திருவாரூர்ச் சுயமரியாதை மாநாட்டில் சந்தித்தோம்; ஒன்றாகத் தங்கியிருந்தோம். நான் உரை எழுதிய ஐங்குறு நூறு - மருதத்திணை வெளிவந்தபோது பாரதி தாசனாரின் பாடல் முதல் தொகுதி வெளியாயிற்று. ஞானியார் சுவாமிகள் தலைமையில் சைவ சமாஜக் கூட்டம் புதுவையில் நடைபெற்றது. நானும் மணி. கோடீசுவரனும் கூட்டத்துக்குச் சென்றிருந்தபோது பாரதிதாசனார் வீட்டில் தங்கியிருந்தோம். தமிழைப் பற்றியும் சைவத்தைப் பற்றியும் ஆர்வத்தோடு பேசுவார். நான் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பணிபுரிந்த போது, அடிக்கடி மனைவியோடு எங்கள் வீட்டுக்கு வருவார். அவர் மனைவிக்கும் என் மனைவிக்கும் நெருங்கிய நட்பு. தங்கள் சுகதுக்கங்களை நீண்டநேரம் பரிமாறிக் கொள்வர். சில சமயங் களில் மனைவியை எங்கள் வீட்டில் விட்டுவிட்டு இரண்டொரு நாள் வெளியூர் சென்று விட்டு மீண்டும் வந்து அழைத்துப் போவார். தஞ்சை, நாகர்கோவில், திருநெல்வேலி ஆகிய இடங்களில் நடைபெற்ற புலவர் குழுவில் நாங்கள் ஒன்றாகக் கூடியிருக்கும் வாய்ப்புக் கிடைத்தது. நாகர்கோவில் புலவர் குழுவுக்குச் சென்றிருந்த போது என் மாணவன் நாஞ்சில் ஆரிது வீட்டில் தங்கியிருந்தோம். காலையில் கன்னியாகுமரி சென்று எழுகதிரின் அழகைக் கண்டு களித்துத் திரும்பினோம். நாங்கள் தனியாக இருக்கும்போது ‘நான் பாடும் பாட்டி லுள்ள குறை பற்றிச் சொல்லு பார்ப்போம். நீர் சொன்னால் சரியாக இருக்கும்’ என்று கேட்பார். ‘நான் குறை சொல்லமாட்டேன்; குறையும் இல்லை’ என்று நான் சொல்லுவேன். ‘புதுவையிலே ஆட்சிக்குவரும் தலைவர்களெல்லாம் நீங்கள் திட்டினால் பொறுத்துக் கொள்கிறார்களே! ஏன்?’ என்று நான் கேட்பேன். ‘எல்லாத் தலைவனும் 1932லிருந்தே எனக்குப் பழக்கம்’ என்று அவர் சொல்லுவார். நாங்கள் அரசியல் வாதிகளாயிருந்தால் அடிக்கடி சந்திக்கும் வாய்ப்புண்டு; நாங்கள் இலக்கிய வாதிகள். எப்போதாவது இலக்கியக் கூட்டங்களில் சந்திப்போம். சந்திக்கும்போது ஒருவரை யொருவர் கேலிசெய்து சிரித்துப்பேசி மகிழ்வது எங்கள் வாடிக்கை. நாங்கள் கூடியிருப்பதையும் பேசிமகிழ்வதையும் எல்லாரும் வியப்போடு பார்ப்பார்கள். - குயில் கூவிக் கொண்டிருக்கும் - முருகு சுந்தரம் 14. நிலையான அறிஞர் நண்பர். திரு.சி.என். அண்ணாதுரை அவர்கட்கு ஆண்டு ஐம்பது ஆகிறது என்ற செய்தி அறிய எனக்கு வியப்பு உண்டாயிற்று. அவரை நினைக்கிறபோது அவருடைய உருவம். இளமை நலமும் அறிவொளியும் கொண்டு என் மனக் கண்ணில் தோன்றுவது இயல்பு. பகட்டான உடையும் பரபரப்புக் கலந்த நடையும் எந்தக் காலத்தும் அவரிடம் தோன்றியதில்லை. குளிர்ந்த பார்வையும், கனிந்த சொல்லும், பணிந்த ஒழுகலாறும் சிறந்த மனப்பண்பும், நிறைந்த அன்பும் என் மனத்திரையில் தோன்றும் அன்பர் அண்ணா துரையின் கூறுகளாகக் காண்பேன். திரு. அண்ணாதுரை யவர்களை யான் முப்பத் தொன்பது ஆண்டுகட்கு முன்பே அறிவேன். அவருடைய பேச்சும் எழுத்தும் அந்த நாளிலேயே அறிவு மணம் கமழ்ந்து. கேட்போர் படிப்போர் உள்ளத்தை ஈர்த்துப் பிணிக்கும் இயல்பு பெற்று விளங்கின. இதழாசிரியராய் தமிழ் மக்களை இருளின் நீங்கி நல்ல அறிவொளி பெறுமாறு இயக்கந் தொடங்கிய காலத்தில். இளங்கதிர் ஞாயிறு ஒன்று தமிழ் வானத்தில் எழுகிறது என எண்ணி இறும்பூது கொண்ட நண்பர்களில் யானும் ஒருவன். எதிர்காலத் தமிழகத்துக்குரிய இளைஞர் உள்ளங்களை அரசியல் பொருளியல், சமுதாய இயல்களில் ஈடுபடுத்திப் பணி செய்யத் தூண்டும் அண்ணாவின் திறமையும் பண்பும் என்னால் பாராட்டாமல் இருக்க முடியாது. நண்பர் திரு. அண்ணாதுரை அவர்களால் தமிழ்ப் படிப்பும் தமிழ்ச் சொல்வன்மையும் எழுத்து நடையும் புது மலர்ச்சி பெற்றன. செந்தமிழின் செம்மை சிறப்புறத் தோன்றிற்று. அவருடைய அறிவு செறிந்த ஆதரவால் செந்தமிழில் செம்பாகமான செய்யுள் பிறந்தது. தீவிய இனிய செய்யுள் நூல்கள் எழுந்தன; செய்தித்தாள்கள் சீரிய நடைகொண்டன; அரசியல் வாழ்வில் புதிய நோக்கம் துலங்கிற்று. பொருளியல் அறிவு தமிழ் நாட்டைக் கூர்ந்து நோக்கத் தலைப் பட்டது; சமுதாயத்தை மூடிக்கிடந்த மூடக் கருத்துக்கள் பல உடைபட்டுப் பறந்து போயின. எதிர் காலத் தமிழ் வாழ்வின் பொறுப்பை ஏற்று நடத்தற்கேற்ற மனத்திட்பமும் அறிவு ஒட்பமும் வினை செயல்திறமும் இளைஞரிடையே வளம் பெற்றுள்ளன. இத்துணை நலங்கட் கெல்லாம் தலைமை இளைஞராய். நிலைகுலையா அறிஞராய். நன்னெறி காட்டும் முது தோன்றலாய் விளங்கும் நண்பர் அண்ணாதுரை எண்பதாம் ஆண்டு நிறைவும் நூற்றாண்டு நிறைவும் பெற்றுப்பிறங்க அருளுக என்று:- “ஞாலம் நின்புகழே மிகவேண்டும்-தென் ஆலவாயில் உறையும் எம் ஆதியே” என மன மொழிகளால் பரவுகின்றேன். வாழ்க அண்ணாதுரை! வளர்க தமிழ் உணர்வு! - முரசொலி பொன் விழா மலர் - 1959 அண்ணா 50 ஆண்டு நிறைவு விழா 15. தமிழன்னையின் தனிப்பெருந் தொண்டர் 46 ஆண்டுகட்கு முன் கரந்தைத் தமிழ்ச் சங்கப் பணியாளனாக இருந்தபோது என் நண்பர் சிவ. குப்புசாமிப் பிள்ளை அவர்கள் காலஞ்சென்ற உயர்திரு திருவரங்கம் பிள்ளை அவர்களின் தொடர்பு பெற்றுச் சில திங்களில் நண்பனாயினேன். அவர்கள் என்னைச் செப்பறைத் திருமடத்துக்கு அழைத்துச் சென்று அதன் அதிபர் சிவத்திரு அழகிய கூத்த தேசிகர் அவர்கள் பால் தகுவன சொல்லி ஞானாமிர்த ஏடு பெற உதவினர். அன்று முதல் கழகத்தின் தொடர்பு பெருகிற்று. அந்நாளில் அவருடைய அருமைத் தம்பியும் உழைப்பின் உருவும் தமிழ் அன்னைக் கென்று சமைந்த தனிப் பெருந் தொண்டரும், அவர்க்குப் பின் கழகத்தின் வளர்ச்சியில் பெருங்கருத்தருமாய் விளங்குபவர் தாமரைச் செல்வர் திரு. வ. சுப்பையா பிள்ளை அவர்கள். கழகம் வளரத் தாம் வளர்ந்து, தாம் உயரக் கழகம் வளர்த்துத் தனி மாண்பு பெற்றவர். உயிர் வேறு உணர்வு வேறெனப் பிரித்தறிய இயலாதவாறு போலத் திரு. வ.சு. வேறு கழகம் வேறு என பிரித்துக் காணவியலாதவாறு பிரிப்பறப் பின்னிப் பிணைந்து நிற்கும் பெருமகனாவர். - வ. சுப்பைய்யா பிள்ளை பவள விழா மலர் 16. முத்தமிழ்க் காவலன் கவிதை வாழியரோ முத்தமிழ்க் காவலன்நம் மாவளவன் ஆழி யனையன் பேராண்மைக் - கேழில் விசும்பின் உதவுதிரு மேன்மைக் கி. ஆ.பெ. விசுவநா தன்சீர் மிகுந்து! 17. எழுத்தாளர் மன்றம் செய்தித்தாள்களிலும் திங்கள் வெளியீடுகளிலும் பிறவற்றிலும் சிறுகதை கட்டுரைகளை எழுதும் அறிஞர் பலர் இந் நாளில் தோன்றி யுள்ளனர். அவர்களில் சிலர்க்கு அவரது எழுத்துப் பணியை ஊக்குதற் பொருட்டுச் சில செய்தித் தாள்களும் திங்கள் தாள்களும் ஓரளவு கையுறையும் தருகின்றன. இதனால் எழுத்தாளர் தொகை வளர்ந்து வருகிறது. இது மிகவும் வரவேற்கத் தக்க நற்செயலாகும். எழுத்தாளர் என்ற பெயர், எழுத்தை ஆள்பவர் என்ற பொருளைத் தரும் மிகப் பழைய தொரு தமிழ்ச் சொல்லாகும். இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பே தோன்றி இடைக்காலத்தும் நிலவியிருந்த இச்சொல் மறைந்து போயிற்று. சேந்தம்பூதனார் என்ற சங்கச் சான்றோர் ஒருவர் குறுந்தொகையிற் காணப்படும் சான்றோர் நிரலில் உள்ளார். அவர் அந்நாளில் மதுரையில் வாழ்ந்த எழுத்தாள ராவர். அதுபற்றி அவரை மதுரை எழுத்தாளன் சேந்தம் பூதனார் என்றனர். சங்க காலத்துக்குப்பின் வந்த பல்லவ பாண்டிய சோழர் காலத்தும் எழுத்தாளன் எழும் போதழகியான், எழுத்தாளன் செம்பிய தரையன் எனப் பலர் இருந்தமை கல்வெட்டுக்களால் தெரிகிறது. இந்த எழுத்தாளர் பெரும்பாலும் ஏடு எழுதுவோரும் நீதிமன்றங் களின் துணிபுகளை எழுதுவோரும், மக்களிடையே தோன்றும் அறவழக்குக் (Civil Cases) குரிய விண்ணப்பம், உடன்படிக்கை, நிலவிற்பனை முதலியவற்றை வக்கணை குன்றாமல் எழுதுவோரும் மறவழக்குக் (Criminal Cases) கட்குரிய செயல் முடிவுகளை எழுதுவோருமாக இருந்துள்ளனர். பிற்காலத்தே, இவ்வெழுத்தாளர் பெயர், வடமொழி வியாகரணிகட் கொப்ப எழுத்திலக்கணம் அறிந்த மக்கட்குச் சிறப்புப் பெயராகவும் நிலவ முயன்றது. “எழுத்தறியார் கல்விப் பெருக்கம் அனைத்தும், எழுத்தறிவார் காணின் இலையாம்” என்பதனால், எழுத்து இலக்கணத்தையும் அதனை ஆளுதல் இலக்கணம் கற்று விளங்குதலையும் குறிப்பது காணலாம். சென்ற இருநூறு ஆண்டுகளில் இச்சொல் மறைந்து போயிற்று. ஆங்கிலமே அரசியல் மொழியாக இருந்தபடியால், அதனைப் பிழையற எழுதுவதும் பேசுவதுமே கல்வி நிலையங்களில் குறிக் கொண்டுபேணப்பட்டன. ஏனைத் தமிழ் மொழியைப் பிழைபட எழுதினாலும் பேசினாலும் குற்றமாகக் கருதாத புறக் கணிப்பு நிலை உண்டாயிற்று. இதற்கிடையே, வடமொழியின் துணை யின்றியே, தனித்து நிற்கவும் சிறப்பு எய்தவும் மேன்மேலும் வளர்ச்சி பெருகவும் தமிழ்மொழி பழமையும் வளமையும் உடையதாக இருப்பது கண்ட வடமொழியடிமைகள், அதன் தனிச் சிறப்பைச் சிதைத்து ஏனை ஆந்திரம், கன்னடம், மலையாளம்போல வடமொழியின் துணையின்றி ஒருநாளும் வாழ மாட்டாத சவலை மொழியாக்கப் பலவகையாக முயன்றும் வெற்றி காணாமையால் இந்தப் புறக்கணிப்பு நிலையைப் பயன்கொள்ள எண்ணினர். ஏனை ஆந்திரர் மலையாளர் முதலியோர் துணைகொண்டு வடமொழியை அதற்குரிய ஒலி குன்றாமல் தமிழில் நுழைத்துப் பார்த்தனர். “வடசொற்கிளவி வட எழுத்து ஒரீஇ (நீக்கி) எழுத்தொடு புணர்ந்த சொல்லாகும்மே” என்ற தொல்காப்பியத்தைச் செல்லாக் காசாக்கக் கருதினர். கலைச்சொற்களை ஆக்கும் முயற்சியில் நுழைந்து அவற்றை வடமொழியில் ஆக்கித் தமிழில் பரப்ப முயன்றனர். எப்படியோ காலப்போக்கில் தமிழர் விழித்துக்கொள்வாராயினர். தமிழின் தனிமையும் தலைமையும் இனிமையும் கெடாத வகையில் வேற்று மொழிக் கருத்துக்களையும் சொற்களையும் தமிழர் தமது தமிழ்மொழியில் சேர்த்து வளர்க்க முன்வந்தனர். தமிழின் இயல்பான ஒசைக்கேற்ற வகையில் வடமொழி முதலிய பிறமொழிக் கருத்துக் களையும் சொற்களையும் வரவேற்றுத் தமிழை வளர்க்கும் முறையை நன்கு தெரிந்தவராதலால், அம்முறையில் தமிழ்ச் சொற்களை ஆக்கவும் தொடங்கி விட்டனர். பிறதாயரின் வண்ணமும் யாவரை யும் சிதைந்து மாறவேண்டுமென முயலும் கீழ் மக்கள் அல்லர் மான முடைய தமிழர் என்பதையும் நன்றாக உணர்ந்து வடவெழுத்துக் களை மறுத்து ஒதுக்கத் தொடங்கினர். வட மொழியின் வேண்டா நுழைவுக்குக் கருவியாகத் நாளிதழ்களும் திங்கள் வெளியீடுகளும் செய்த சூழ்ச்சி தெரிந்ததும், தூய தமிழில் அவற்றைத் தமிழர் வெளியிடுவாராயினர். அரசியல் மேடைகளிலும், பொது மேடை களிலும், இசையரங்குகளிலும், திரைப்படங்களிலும் நல்ல தமிழ் தோன்றி இனிமை செய்வதாயிற்று. அரசியலையும் இனிய தமிழில் நடத்தும் மேன்மை தமிழர்க்குத் தோன்றிவிட்டது. நாடோடிகள் போலத் தமக்கென ஒரு மொழிப்பற்று இல்லாமையால் வடமொழிக்கு அடிமையான ஒரு கூட்டம், தமிழர் பெருங்கூட்டத்தின் முன் தான் ஒருசிற்றினம் என உணராது தனது நிலையற்ற செல்வாக்கைக் கொண்டு தனது தீச்செயலைத் தொடர்ந்து நடத்தி வருகின்றது. இந்நிலையில் திங்கள் வெளியீடுகளும் கிழமை வெளியீடு களும், சிறுகதைகளையும் கட்டுரைகளையும் வெளியிடத் தலைப் பட்டன. அவையாவும் ஆங்கில நெறியைப் பின்பற்றித் தோன்றியன வாகும். அவற்றை எழுதும் அறிஞர்களை ‘ரைட்டர்கள்’ என்பது ஆங்கில நெறி. அச்சொல்லை வேரோடுமொழிபெயர்த்தனர். அது நாம் முன்னே கண்ட எழுத்தாளர் என்ற சொல்லாயினமையின், சிறுகதை முதலியன எழுதுவோரை எழுத்தாளர் எனக் குறித்து வழங்கத் தொடங்கினர். நாளடைவில் சிறுகதைகளும் கட்டுரை களும், செல்வாக்கும் முன்னே கூறியபடி பொருள் வருவாயும் நலகின. அதனால் எழுத்தாளர் பலர் தோன்றுவது இயல்பாயிற்று. ஆயினும் அவ்வெழுத்தாளர் கூட்டத்தில் எழுத்து அறிந்தோரும், அறியாதோரும், பிறமொழி அடிவருடிகளும் வேற்றுமையின்றிக் கலந்து இடம் பெற்றனர். அதனால் அவர் வரைவனவற்றுள் தமிழுக்குக்கேடு செய்யும் எழுத்துக்களும் சொற்களும் கலந்து தோன்றுவனவாயின. அவற்றைக் கண்டதும், விழிப்புற்ற தமிழ் மக்கள் “பழம்பகை நட்பாகாது” என்ற உண்மையை உணர்ந்தனர். உள்ளம் மலர்ந்தனர். இம்மலர்ச்சியின் பயனாகத் தமிழ்வளர்க்கும் எழுத்தாளர் மன்றங்கள் ஆங்காங்கே தோன்றி, மொழிப் பகையைப் போக்கித் தமிழ் மக்களின் பொது அறிவையும் சமுதாய வளர்ச்சியையும் எண்ணி இனிய பணியாற்றி வருகின்றன. இவற்றுள் கலந்து தொண்டாற்றுவதில் கற்ற இளைஞர்கள் பெரிதும் ஈடுபட்டு இருக்கின்றனர். அவர்கள் முயற்சியும் தொண்டும் உறுதியான பயனை விளைத்து வருகின்றன. ஆங்கில எழுத்தாளருள் உயரிய சிந்தனையாளர் (Thinkers) கலந்து பணி புரிகின்றனர். சிறுகதையாளரும் அரிய கட்டுரை யாளரும் பாவாணரும் சேர்ந்த எழுத்தாளர் மன்றங்கள், அரசியல், பொருளியல், சமுதாய இயல் முதலிய இயல் வளம் பற்றிய சிந்தனை யாளர்களின் சீரிய பணியால் சிறப்புறுதல் வேண்டும். இசையறிஞரும் நாடக நன்மக்களும் எழுத்தாளர் மன்றத்தின் இனிய உறுப்பினராவர். எல்லாரும் இன்புற்று இருக்கும் நல்வாழ்வு நாட்டில் அமைவதே இம்மன்றங்களின் குறிக்கோள். உளத்தூய்மை யும் வினையாண்மையும் மொழிவன்மையும் இந்த எழுத்தாளர்க்கு இன்றியமையாத இலக்கணமாகும். வழுப்பட்ட கொச்சை வழக்கும் வேற்று மொழி கலந்த சவலை நடையும் இழிந்த கீழ்மைக் கருத்தும் எழு ஞாயிறு போல ஒளி விட்டுத் தோன்றும் இந்த எழுத்தாளர் எழுத்தின் கண் இடம் பெறாவாறு நோக்குவது இன்றைய சிறப்புப் பணியாகும். இவ்வகையில், மதுரை எழுத்தாளரின் இந்த மன்றம், இன்பம் நிறைந்த தமிழ் எழுத்தால், தமிழினம், பொருளும் அறமும் அறிவும் ஆண்மையும் சிறந்து ஒங்க முயலும் தன்தளரா முயற்சியில் வீறும் வெற்றியும் பெறுவதாக. 18. வள்ளலார் கண்ட வள்ளன்மை பொருள்களை நோக்கும் சான்றோர் இரு திறத்தார். ஒருவர் பொருள் நோக்கினர்; மற்றவர் அருள் நோக்கினர். பொருள் நோக்கினர் நாம் வாழும் உலகினை நோக்குமிடத்து முதலில் கீழுள்ள நிலத்தையும் மேலுள்ள வானத்தையும் நோக்குவர். சேரமன்னனைப் பாடப்புகுந்த முடிநாகனார் பொருள் நோக்கினர். அவர் மன்னனை வாழ்த்தக் கருதி, “மண்திணிந்த நிலனும் நிலன்ஏந்திய விசும்பும்” என்று தொடங்குகின்றார். முதலில் கீழே மண்படிந்த நிலமும் மேலே வானமும் பின்னர் இரண்டின் இடைப்பட்ட பூதங்களும் அவரால் காணப்படுகின்றன. மணிவாசகப் பெருமான் அருள் நோக்கினர். அவர் இறை வனை வாழ்த்தக் கருதி, “வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி” என முதலில் மேலுள்ள வானத்தையும் கீழுள்ள மண்நிறைந்த நிலத்தையும் நோக்கிப் பின்பு இடையிலுள்ள பூதங்களையும் பார்க்கின்றார். பொருள் நெறிக்கு நிலமும் நீரும் நெருப்பும் முறையே வேண்டப்படும். அருள் நெறிக்கு வானமும் காற்றும் முறையே நினைக்கப்படும். மேலே வானமும் பின் காற்றும் நெருப்பும் நீருமாக அமைந் திருக்கும் பூதங்களையும் அவற்றால் சூழப்பட்ட நிலத்தையும் கண்ட அருளாளர் அந்நிலத்தில் கண்ணுக்குத் தெரியாத அணுவுயிர் முதல் உடம்பொடு கூடிவாழும் மக்கள் ஈறாக அனைத்துயிரையும் காண்கின்றார். இங்கே காணப்பட்ட உயிரில் பொருளான வான் முதலிய பூதகாரியங்கள் - பௌதிகங்கள் தாமே உருவாகாமல் இறைவன் திருவருளால் ஆகி இருப்பதை யுணர்ந்து வானாகி மண்ணாகி என்று உரைக்கிறார். உயிர்ப்பொருள்களும் திருவருளால் உடம்பும் உயிருமாய் இயைந்திருப்பதை எண்ணுகிறார். இவை ஒருகாலத்தில் இலவாதலும் கண்டு, உண்மையும் இன்மையும் ஆவது இப்பொருட் குத் திருவருளால் அமையும் இயல்பு என்பதும் நன்கு தெரிகிறது. திருவருட் கண் கொண்டு நோக்கும்போது பூத பௌதிகங்களுக்கும் அவற்றின் இடையில் கிடந்துவாழும் உயிர்களுக்கும் முழுமுதல் பரமசிவன் என்று உணருமாறு “கோனாகி” என்று மணிவாசகர் நமக்கு அறிவுறுத்துகின்றார். முழுமுதல் என்னாமல் அரசன் என்று கூறுவது நாட்டுமக்களை வாழவைக்கும் மன்னன் போல இறைவன், மக்களும் மற்ற உயிர்களும் உலகில் பல்வகைச் செயல்களைச் செய்து வாழச் செய்கின்றான் என்பதற்காக வாகும். அவற்றைச் செய்யும்போது நான் செய்கிறேன், நான் பேசுகிறேன், நான் நினைக்கிறேன், என்று மக்கள் ஒவ்வொரு வரும் நினைந்தும், பேசியும், செய்தும், வாழ்கிறார்கள். இப்படி நினைந்தும், பேசியும், செயல் செய்தும், பொருள் ஈட்டுகின்றார்கள். இது எனது கருத்து, இது எனது சொல், இது எனது பொருள் என்று பொருளிடத்து உரிமையும் பற்றும் கொள்கிறார்கள். இவைபோலும் செயல்களைச் செய்வதற்கும் அவற்றால் பொருள்பெற்று வாழ் வதற்கும் துணைபுரிகின்றன. நான், எனது, என்ற இருவகை உணர்ச்சிகளும் இல்லையானால் உலக வாழ்வு இன்பம் தராது; உலகில் வாழ்வு நன்கு அமையாவிடில்; வாழ்வுதரும் இன்பம் பெருகாவிடில்; மேலுலகப் பேரின்பம் எய்தாது. அதற்காகத்தான் இறைவன் “அவரவரைக் சுத்தாட்டுவானாகி நின்றான்” என்று மணிவாசகர் உரைத்தருளினார். நான், எனது, என்ற உணர்வுடன் வாழ்வில் செய்வன; செய்து வாழுங்கால், அவ்வாழ்வுதரும் இன்பம் சிறியதாய்ச் சிறிது பொழுதில் கழிந்து போவதாயினும், மக்கள் அதன் சுவையில் மயங்கி அதனைத் தாங்கும் பொருளில் பற்றுக்கொண்டு; சிவஞானமும் பேரின்பமும் தரும் பரம் பொருளின்பால் பற்றுக்கொள்ளாமல் ஒழிகின்றார்கள். உலகியல் இன்பம்தரும் பொருள்மேல் உண்டான பற்றை விட்டா லன்றி பொய்ப்பொருள் அறிவும் மெய்யின்பமும் பெறலாகாது. இனிமைச் சுவை தரும் இன்பத்தால் இனிப்புப் பொருள்மேல் பற்று விட்டாலன்றி சர்க்கரை நோய் நீங்கா தல்லவா? அதனால்தான் திருவள்ளுவர், “பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப் பற்றி விடாஅ தவர்க்கு” என்றார். அதாவது பொருள்மேல் உண்டாகும் பற்றினைப் பற்றிக் கொண்டு விடாப்பிடியாய் இருப்பவரை நோய்கள் பற்றிக்கொண்டு விடாமல் இருந்து துன்பம் செய்யும் என்று திருவள்ளுவர் கூறுகின்றார். இதனால் பற்றை விடுவதுதான் நல்லது என்று தெரிகிறது. ஆனால் அதை விடுவது எப்படி? அதுதானே அருமை என்று கேட்கலாம். அக் கேள்விக்கு விடைகூறுவது போலத் திருவள்ளுவர், “பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு” என்று கூறுகின்றார். இதனைச் சிந்திக்கின்றார் நம் வடலூர் அருள் வள்ளல். நம்மிடத்தில் பேரருள் உடையவராகையால் அவருடைய பேருள்ளம் இதனைச் சிந்திக்கின்றது. எங்ஙனம் பற்றை விடுவது? என்று சிந்தனை எழுகின்றது. தேனினும் இனிய சொற்களால் தெரிவிக் கின்றார். சுகம் பெறுதற்கு “எவ்வாறு இருந்தால் இயலும் எனின், அம்ம! இவ்வாறு இருந்தால் இயலாது” என்று கண்ட அவரது சிந்தனையில் இத்திருக்குறள் தோன்றி ஒளி செய்கிறது. “பற்றற்றான் பற்றினையே பற்றியிடல்வேண்டும்-அது பற்றற்றால் அன்றி பலியாதால் - பற்றற்றல் வேதனையால் ஈங்கு விரியும் சகப்பழக்கம் வாதனைபோய் நீங்கிலன்றி வாராதால் - வாதனையுற் ஈனம் அந்தோ இவ்வுலகம் என்றருளை நாடுகின்ற ஞானம் வந்தாலன்றி நலியாதால் - ஞானமது போகமுற்றும் பொய்யெனவே போதும் அநித்தியவி வேகமுற்றா லன்றி விளங்காதால் - ஆக அஃது உண்ணவந்தாற் போலும் இவன் உற்றுவிசாரித்திடுமோர் எண்ணம் வந்தாலன்றி இசையாதால்-எண்ணமது பங்கம் அடைந்தார் அளவையைப் பாராது சாதுக்கள் சங்கம் அடைந்தாலன்றிச் சாராது” என்று திருவருட் செல்வத்தை வாரி வழங்குகின்றார் நமது வடலூர் வள்ளல். அவரது அருளுரையைப் பாருங்கள்; பற்றற்றான் பற்றினைப் பற்றுக என்று திருக்குறள் கூறுகிறது. இறைவன் பற்றற்றவனாதலால், அவனைப் பற்ற வேண்டின் நாமும் பற்றற்றவராக வேண்டும்; பற்றுடையவரானால் அவனை அடைய முடியாது என்று இத்திருக் குறளால் கண்டு நமது வள்ளலார். “பற்றற்றான் பற்றினையே பற்றியிடல் வேண்டும், அது பற்றற்றா லன்றிப் பலியாது” என்று விளக்குகின்றார். யான், எனது, என்ற பற்று இருந்தாலொழிய நாம் உலகில் வாழ முடியாது; நான் என்ற பற்றில்லையானால் செயல்பட்டு நல்லறிவு பெற முடியாது; எனது என்ற பற்று இல்லையானால் வறுமைக்கு இரையாகி வருந்தவேண்டிவரும். ஆகவே, இப்பற்றறுதல் என்பதை வள்ளலார் நமக்காக நன்கு எண்ணி “பற்றற்றால் வேதனையால்” என்றும், பற்றுக்குரிய விளைநிலமாகிய பொருள் உலகம் வரம்பு கடந்து விரிந்துபோவது என்று கண்டு “ஈண்டுவிரியும் சகப்பழக்கம்” என்றும் கூறியருளுகின்றார். இவ்வாறு பற்றின் வன்மையைக் கூறிய வள்ளலார். அதனை விடக்கூடாது என்று சொல்லவில்லை. விட்டே தீர்தல்வேண்டும் என்கிறார். “ஈங்குவிரியும் சகப்பழக்க வாதனைபோய் நீங்கிலன்றி வாராதால்” என்று கூறுகிறார். அதாவது மேன்மேல் விரிந்து பெருகிடும் உலகியல் பழக்கம் நீங்கினாலன்றிப் பற்றறும் தன்மை உண்டாகாது என்று உரைக்கின்றார். அங்ஙனமானால் உலகியலான சகப் பழக்கத்தை எவ்வாறு விட்டொழிவது என்று வள்ளலார் வளமாகச் சிந்திக்கின்றார். உலகமும் உலகப்பொருளும் அவை தரும் இன்பமும் அதனை நுகரும் நமது உடம்பும் மனமும் யாவும் அனாதி நித்தப் பொருளான மாயையிலிருந்து உண்டாயின. அதனால் மாயா காரியங்களில் உண்டாகும் பழக்கம் பற்றை விளைவிக்கிறது. அந்த மாயையைக் கலக்கி உலகமாகவும் பொருள்களாகவும் தோன்றச் செய்வது திரு வருள்; அந்த அருளை நோக்க இவ்வுலகம் கீழானதென்று அறிந்து இத்திருவருளை நாடவேண்டும் என்று வள்ளலார் உரைக்கின்றார். அதாவது திருவருள் ஞானத்தால் சகப்பழக்க வாதனை நீங்கும்; வாதனை நீங்கின் பற்றறும்; பற்றற்றால் இறைவனை அடையலாம். “ஈனம் அந்தோ இவ்வுலகம் என்று அருளை நாடுகின்ற ஞானம் வந்தான்றி நலியாதால்” அப்படியானால் திருவருள் ஞானத்தைப் பெறுவது எப்படி என்று கேள்வி தோன்றும். அதற்கு அநித்திய நித்திய விவேகம் வேண்டும் என்று அறிவுறுத்துகின்றார். பின்பு அவ்விவேகத்தால் ஒவ்வொன்றையும் விசாரிக்கும் எண்ணம் வேண்டும்; அவ்வெண்ணமும் நல்லார் இணக்கத்தால், சாதுசங்கத்தால், சிவனடியே சிந்திக்கும் நன்மக்கள் கூட்டுறவால் கைகூடும் என்று அருளுகின்றார். வடலூர் வள்ளலாரின் இவ்வள்ளன்மை சிவஞான நூலறிஞர்க்குப் பெரும்பேறாகும். 19. 1பாரத சமுதாய ஒருமை நலம் பாரத சமுதாயத்தின் பண்பு பலவற்றையும் காண்பதற்கு, அதனிடையே நிலவும் இலக்கியங்கள் பெருந்துணையாகும். அவற்றுள் வேதங்களை அடுத்துத் தோன்றிய புராணங்களும் இதிகாசங்களும் பழமை வாய்ந்தவை. இதிகாசம் என்ற சொல், அதர்வ வேதத்திலும், பிராமணங் களிலும், உபநிடதங்களிலும் காணப்படுகிறது. இதிகாசம் என்ற அச்சொல்லுக்கு வரலாறு என்று பொருள். பாரதம் ஒன்றுதான் முன்னாளில் இதிகாசம் என்று குறிக்கப் பட்டது. இராமாயணத்தைப் பலரும் ஆதிகாவியம் என்றே வழங்கினர். பிற்காலத்தில்தான் பாரதமும், இராமாயணமும் இதிகாசம் என வழங்கலாயின. இராமனது வரலாறு கூறும் இராமாயணம் முதலில் வான்மீகி யாரால் எழுதப் பெற்றது. அதனை அவர் முதலில் இராமனுடைய மக்களுக்குச் சொன்னார், என்று வான்மீகியின் வரலாறு கூறுகிறது. கோசல நாட்டுவேந்தனான தசரதன் மகன் இராமன் சீதையை மணந்து, காடு சென்று வாழ்கையில், இலங்கை வேந்தனான இராவணன் சீதையைச் கவர்ந்துசென்றான். தன் தம்பி இலக்கு வனுடன் சீதையைத் தேடிச் சென்ற இராமன், சுக்கிரீவன், அனுமன் என்போருடைய உதவியால், சீதை இருக்குமிடம் அறிந்து, இலங்கையில் இராவணனோடு போர் செய்து அவனைக் கொன்று மீளத் தன் மனைவியுடன் அயோத்தி அடைந்து, முடிசூடி அரசு புரிந்த வரலாறுதான் இராமாயணம். சீதையைச் சிறப்பிக்கும் வகையில் இராமாயணத்தைச் “சீதாசரிதம்” எனவும், இராவணன் வீழ்ச்சி கூறுவது பற்றிப் “புலத்திய வதம்” எனவும் கூறுவர். இராமாயண ஆராய்ச்சியாளர், அதனை வரலாற்றுக் கண் கொண்டு நோக்கி, ஆரிய வர்த்தத்தில் வாழ்ந்த ஆரியர்கள் தென்னாட்டவரை வென்றதைக் குறிக்கிறது இராமாயணம் என்பர். சமய வரலாறாகக் கருதிய வேபர் (Weber) என்பவர், வேத வழக்காகிய வைதிக சமயம் தென்னாட்டிலும், இலங்கையிலும் பரவிய செய்தியே இவ்வாறு இராமாயணமாகக் காப்பியக் காட்சியளிக்கிறது, என்று உரைக்கின்றார். நம் நாட்டு அறிஞர், இராமனைத் திருமாலின் அவதார மெனக் கருதுவர். இராமன் திருமாலின் தோற்றம் என்ற கருத்தை முதற்கண் வெளியிட்டவர் வான்மீகி. அது பின்பு பாரத நாடு முழுதும் பரவி, ஆங்காங்க வாழ்ந்த சான்றோர் உள்ளத்தில் வேரூன்றியது. தமிழில் சிலப்பதிகாரம், மணிமேகலை என்ற இருபெருங் காப்பியங்களும் இராமனைத் திருமாலின் அவதார மாகவே குறிக்கின்றன. இராமன் “வேத முதல்வற் பயந்தோன் என்பது நீயறிந்திலையோ, நெடுமொழியன்றோ” என்று இளங்கோ அடிகள் எடுத்துரைக்கின்றார். இது பற்றியே, இராமா யணத்தை விரிவாகத் தமிழில் செய்த கம்பர், தமது நூலை “இராமா வதாரப் பேர்த் தொடை நிரம்பிய தோமறு மாக்கதை” என்று குறித்ததோடு, இராமன் பரம்பொருளே என்ற கருத்தை, “வானின் றிழிந்து வரம்பிகந்த மாபூ தத்தின் வைப்பெங்கும் ஊனும் உயிரும் உணர்வும்போல் உள்ளும் புறத்தும் உளன்என்ப கூனும் சிறிய கோத்தாயும் கொடுமை இழைப்பக் கோல்துறந்து கானும் கடலும் கடந்து இமையோர் இடுக்கண் காத்த கழல்வேந்தை” என்று தெரிவிக்கின்றார். இராமனுடைய குணநலன்கள், “தந்தை சொல்மிக்க மந்திர மில்லை, தாயிற் சிறந்ததொரு கோயிலுமில்லை” என்ற பாரதப் பண்பாட்டை விளக்குகின்றன. போர்க்களத்தில் இராவணன், படையிழந்து வெறுங்கையனாய் நின்றபோது, அவன்மேல் இரக்கங் கொண்டு “அறத்தினாலன்றி அருஞ்சமம் அமரர்க்கும் கடத்தல் மறத்தினால் அரிது என்பது மனத்திடை வலித்தி” என இராமன், அறம் கூறுவதும், “இன்று போய்ப் பொரற்கு நாளைவா,” என அருளுவதும், பாரத நாட்டு மறப்பண்பைக் காட்டுகின்றன. உடன் பிறந்தாரோடு உண்மையன்பால் பிணிப்புண்டு உள்ளமொத்து ஒழுகும் தம்பியர் மாண்பு, இலக்குவன், பரதன் என்ற இருவரிடத்தும் விளங்குகிறது. அறத்திற்கு மாறுபடுவாராயின், உடன் பிறந்தாரையும் வெறுத்து நீங்கும் நல்லியல்பு சுக்கீரிவனிடத்தும், விபீடணனிடத்தும் விளங்கித் தோன்றுகிறது. கணவனையல்லாது மகளிர்க்கு உயிர்த்துணை வேறில்லை என்றொழுகும் பாரத சமுதாயத்தின் கற்பு நெறிக்குச் சீதையின் குணநலங்கள் சான்று பகர்கின்றன. சுக்கிரீவன் பொருட்டு இராமன் மறைந்து நின்ற வாலியைக் கொன்றதும், பிறிதொருகால் சீதையின் கற்பில் இராமன் ஐயுற்றதும், “அரியகற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால் இன்மை அரிதே வெளிறு” என்ற உண்மையை நிறுவுகின்றன. கங்கை பாயும் வடபுலத்து நிகழ்ச்சியாயினும், இராமாயணம் இரண்டாயிரமாண்டுகட்கு முன்பே, அதாவது சங்க காலத்தேயே தமிழ் மக்களுக்கு நன்கு தெரிந்திருந்தது. இலங்கை செல்ல வேண்டி இராமன் தனுக்கோடியில் தங்கியிருந்த நிகழ்ச்சியை அகநானூறும், இராவணனால் கவரப்பட்டுச் செல்லுங்கால் சீதை கழற்றி எறிந்த அணிகலன்களைக் கிட்கிந்தையில் குரங்குகள் எடுத்தணிந்து மகிழ்ந்த செய்தியைப் புறநானூறும் குறிக்கின்றன. இராமன் அயோத்தியின் நீங்கிக் காடு சென்றபோது அயோத்தி நகர் பொலிவு இழந்ததைச் சிலப்பதிகாரமும், குரங்குகள் இலங்கை செல்லுதற்கு கடலில் அணைகட்டிய செய்தியை மணிமேகலையும் காட்டுகின்றன. இவ்வாறே சீவக சிந்தாமணி, பெருங்கதை என்ற பெருநூல்களும் ஞானசம்பந்தர் முதலியோருடைய தேவாரத் திருமறைகளும் இராமாயணக் குறிப்புக்களை நிரம்பக் கொண்டுள்ளன. நம்மாழ்வார் முதலியோர், “கற்பார் இராமபிரானையல்லாமல் மற்றும் கற்பரோ,” என்கின்றனர். இதனால் இராமாயணத்தில் தமிழ் மக்கட்கு இருந்த ஆர்வ மிகுதியை நன்கு காணலாம். இராமாயணத்தை அடுத்து நிற்கும் பாரதத்தை இதிகாசம் என்றும், ஐந்தாம் வேதம் என்றும் கூறுவர். வில்லி புத்தூரரும், “மறை நாலொடு ஐந்து என்று நிலை நிற்கவே, வாடாத தவவாய்மை முனிராசன் மாபாரதம் சொன்னார் என்று கூறுகின்றார். பரத கண்டத்து மன்னர்களான கௌரவரும், பாண்டவரும் நாடு பொருளாகப் போர் செய்த காலத்தில் இமயம் முதல் தென்குமரி வரை ஆண்ட அரசர் அனைவரும் இரு திறத்தாராகப் பிரிந்து, ஒரு பிரிவினர் கௌரவர் பக்கமும், மற்றொரு பிரிவினர் பாண்டவர் பக்கமும் பொருதனர். அப்போரைக் கூறுவதால் இது, பாரதம் எனப் பெயர் கொண்டது. பாரதம் என்ற சொல்லும் பாணினி இலக்கணப்படி இப்பொருளே தருகிறது. துரியோதனனைத் தலைவனாகக் கொண்ட கௌரவரை “நிலம் தலைக் கொண்ட பொலம்பூந் தும்பை, ஈரைம் பதின்மர்” என்றும், பாண்டவரை, “அலங்குளைப் புரவி ஐவர்” என்றும் புறநானூறு கூறுகிறது. இப்பாரதத்தை முதலில் நூல் வடிவில் வடமொழியில் எழுதியவர் வியாசர். இது உசனகவி என்ற யோக வியாசரால் பாரத சூத்திரமாய்த் தோன்றி, பார்க்கவ வியாசரால் பாரதமாயிற்று. அவர்க்குப் பின் சுமந்து,சைமினி முதலியோர் வழிவந்து முடிவில், வைசம்பாயனரால் பாண்டவ கௌரவர் வரலாற்றோடு ஆயிரக் கணக்கான கதைகளும், ஒழுக்க நெறிகளும், தத்துவக் கருத்துக்களும் அரச நீதிகளும் சேர்ந்து, மாபாரதம் ஆகிவிட்டது. மாபாரதம் பதினெட்டுப் பருவங்களை யுடையது. முதலாவதான ஆதிபருவம், பாண்டவ கௌரவர்களின் குலமுறை வரலாறும், அவர்களின் பிறப்பு வளர்ப்பும் பிறவும் கூறுகிறது. அப்பருவத்தில் திரோபதையின் சுயம்வரக் காட்சியும் விராட பருவத்திலும், துரோண பருவத்திலும் உள்ள துர்க்கை வழிபாடும், சபாபருவத்தில் துரோபதையின் துகில் களைந்த செய்தியும், ஆரணிய பருவத்தில் துருவாசர் வரவும், ஊர்வசி அருச்சுனனை மயக்கியதும், பிறவும் இடைச் செருகல் எனப் படினும் இலக்கிய வளம் சிறந்துள்ளன. பொதுவாக நோக்கின், இப்பாரதத்தில் நாம் காண நிற்கும் பீஷ்மர், துரோணர்,கண்ணன், விதுரன் முதலிய பெரியோர்களின் குணநலங்கள் பாரத சமுதாயத்தின் பெருமையைச் சிறப்பிக்கின்றன. பீஷ்மர், தம் தந்தை பொருட்டு உலகியல் இன்பத்தைத் துறந்த உரவோர், படைப் பயிற்சி நல்குவதில் தமக்கு ஒப்புயர்வு இல்லாதவர் துரோணர்; ஆனால் தம்முடைய மாணவர்களான கௌரவப் பாண்டவரின் வேறாகப் பிறர் படைப் பயிற்சியால் மிக்கு விளங்குவது காண மனம் பொறாத குறையொன்று அவரிடம் காணப்படுகிறது. கண்ணபிரான் திருமாலின் அவதாரமாகக் கருதப்படுகிறான். தான் ஒரு பேரரசனாக இருந்தும், அருச்னனுக்குத் தேரோட்டியான எளிமையால் பெருமை எய்துகிறான். உற்றார், உறவினர், நண்பர், ஆசிரியர் என்ற தொடர்பு உணர்ச்சியால் போர்க்களத்தில் மனத் தடுமாற்றம் எய்திய அருச்சுனனுக்குக் கீதையை அறிவுறுத்தி அவனைக் கடமை வீரனாக்கிய பெருமை, கண்ணபிரானுக்கே உரியது. அதனை வியந்தே,வில்லி புத்தூரர். “பன்னு பாரதப் பெருமையும் பாரேன் மன்னு மாதவன் சரிதமும் இடையிடை வழங்கும், என்னும் ஆசையால் யானும்ஈது இயம்புதற் கிசைந்தேன்” என்று பாடுகின்றார். விதுரனை, “ஞான கஞ்சுக விதுரன்” எனப் பாராட்டுவர். கர்ணன் தன் செல்வத்தை எல்லார்க்கும் “கொடுத்தல் அல்லது தனக்கென ஒன்றும் எடுத்தல் இல்லாதவன்.” அதனால், அவனை “வண்மையினால் உயிர் அங்கர் குலாதிபன்” என்றும், “அல்லாதவர்க்கும் இரவிமகன் அரியதானம் அளிக்கின்றான்” என்றும் சான்றோர் புகழ்கின்றனர். கர்ணன் துரியோதனனிடத்தில் பேரன்புடையவன்; அவன் தனக்குச் செய்த நன்றியை நினைத்து “ஆரென்றறியத் தகாத என்னை அரசு மாக்கி முடிசூட்டிச் சீரும், திறமும், எனது பெருந் திருவும் எனக்கே தெரிந்தளித்தான்” என்றும், பிறவும் கர்ணன் கூறுவது கற்போர் நெஞ்சையுருக்குவதாகும். துரோபதையின் துகிலைக் களையுமாறு துரியோதனன் கட்டளையிட்டபோது, வீமன் முதலியோர் சினம் மிகுந்து, உடல் துடிப்பது கண்டும், யுதிட்டிரன் அவர்களைக் கையமர்த்தி “ஆய பொருள்கள் அம்முறையே போம், போது அனைத்தும் போம், முன்னம் பொறுத்தீர் இன்னும் பொறும்” என்கிறான்; பாரதப் போர் உண்டாகாதவாறு, தவிர்ப்பது கருதி கண்ணபிரானிடம், “கயிரவமும், தாமரையும் கமழ் பழனக் குரு நாட்டில் கறந்து வாழ, உயிரனையாய் சந்து பட உரைத்தருள்;” என வேண்டுகிறான்; துரியோதனன், நாடு ஒன்றும் நல்கானாகில் ஐந்து ஊர் வேண்டு; அவை இல்லெனில் ஐந்து இல்லம் வேண்டு, அவை மறுத்தால் அடு போர் வேண்டு,” என்று உரைக்கின்றான். அது கேட்டு மனம் வருந்திய வீமன் முதலிய தம்பியரை நோக்கி, “ஒரு குலத்தில் பிறந்தவர்கள் உடன் வாழும் வாழ்வினைப்போல் உறுதியுண்டோ, இருவருக்கும் வசையன்றோ, இருநிலம் காரணமாக எதிர்ப்பது” என்பது தருமனுடைய உள்ளத்தின் மாண்பை யுயர்த்துகிறது. பாண்டவர் மனைவியாகிய துரோபதையின் மாண்பு பெருமை வாய்ந்தது. பெருவேந்தர் கூடிய பேரவையில் துச்சாதனன் தன்னைத் தீண்டித் துகில் களைய முற்பட்டபோது உடல் சோர்ந்து, உளம் சோர்ந்து நிற்பினும், அறிவு சோர்வு படாமல் உண்மை நிலையை ஓர்ந்து, “வேறு ஓர் சொல்லும், கூறாமல் கோவிந்தா, கோவிந்தா!” என்று அரற்றியது, “தீய வழுக்கியும் வாயாற் சொல்லாத” அவளது நல்லொழுக்க விழுப்பத்தை நிலைநாட்டுகிறது. பழம் பொருந்து சருக்கத்தில் தன் உள்ளக் கருத்தைச் சிறிதும் ஒளிக்காமல் “இன்னும் வேறொருவன் என்பெரும் கொழுநன் ஆவதற்குருகும் இறைவனே எனது பேரிதயம்” என்பது துரோபதையின் வாய்மை நலத்தை வற்புறுத்துகின்றது. பாரதத்தை ஐந்து தொகுதிகளாக 2000 பக்கங்களில் ஆராய்ச்சி புரிந்த N.V. தாடணி என்ற பேரறிஞர், பாண்டவ கௌரவர் சூதாடியது நியாய சமயமும், வைசேடிக சமயமும் போராடு வதாகவும், வேதாந்தமும், வைசேடிகமும் பொருவதாகவும் கொள்கின்றார். பாண்டவர்களை வைசேடிக தந்துவங்களாகக் கொண்டு தருமனைப் புத்தியாகவும், வீமனை மணமாகவும், அருச்சுனனைப் பிராணவாயுவாகவும் நகுல சகாதேவர்களை இந்திரியங்களாகவும், குந்திதேவியை நிலமாகவும், கண்ணனைப் புருட தத்துவமாகவும், துரோபதையைக் கருமத்தியாகவும் பேராசிரியர் தாடணி பொருள் செய்கிறார். பாரதத்தின் பெருமைக்குப் பேரிலக்காக நிற்பது பகவத் கீதை. அது பாரதத்தின் ஒரு பகுதியா, தனி நூலா என்ற ஆராய்ச்சி இன்றுவரை முடிவாகவில்லை. வரலாற்றறிஞர். வைசம்பாயனரால் தொகுக்கப்பட்ட மாபாரதத்திலிருந்து, சுத்த தரும மண்டலத்தாரால் முதன் முதலிற் பகவத் கீதை தனி நூலாக வெளியிடப்பட்டது என்பர். அதனைச் சங்கரர், இராமானுசர் முதலிய சான்றோர் பலரும் பாராட்டி விரிவுரை கண்டிருக்கின்றனர். இப்பாரதம் சங்க காலத்துக்கு முன்பிருந்தே தமிழ் நாட்டில் நன்கு போற்றப்பட்டிருக்கிறது, இடைக்காலத்தில் பல்லவர், பாண்டியர், சோழர் முதலியோர் ஆட்சியில் ஆங்காங்கே இராமாயண விருத்தி, பாரத விருத்தி என்ற பெயரால் நிவந்தங்கள் விட்டிருப்பதைக் கல்வெட்டுக்களும், செப்பேடுகளும் குறிக்கின்றன. பாரத இராமாயணமான இதிகாசங்கள் நமது நாட்டில் சிற்பம், ஓவியம், நாடகம், சிற்றியலக்கியங்கள் முதலிய கலைத் துறையின் பெரு வளர்ச்சிக்கு அடிப்படையாய் வளம் செய்திருக் கின்றன. இவற்றில் காணப்படும் அகலிகை வரலாற்றைத் திருப்பரங் குன்றத்து ஓவியங்களிலமைத்துச் சங்ககால மக்கள் இன்புற்றனர் என்று பரிபாடல் கூறுகிறது. இதிகாசம் உரைத்த கதைகள் பல மாமல்லபுரக் கற்கோயிலில் காட்சி தருகின்றன. இராமன், அனுமார், பாண்டவர், கண்ணன் முதலியோர்களை வரம் தரும் தெய்வமாக்கிக் கோயில் கட்டி, விழாக்கள் எடுத்து நம் நாட்டவர் மகிழ்கின்றார்கள். பாரத இராமாயண வீரர்களின் பெயரைத் தாம்பெற்ற மக்கட்கு இட்டு இன்புறுவது, பாரத நாடு முழுதும் பொது இயல்பாக இருக்கிறது. பகவத்கீதை உரைக்கும் கடமையுணர்வும் சமயவுண்மைக் கருத்தும் இந்நாளில் விளங்கிய பாலகங்காதர திலகர், அண்ணல் காந்தி அடிகள் முதலியோர்களின் உள்ளங்களைக் கவர்ந்து அவர்கள் வாழ்வை உயர்த்தியிருக்கின்றன. திரோபதை, அரசவையில் நின்றுரைத்த வஞ்சினங்கள் பாரத நாட்டுப் பெண்மையின் பெருமையை விளக்கியது கண்டு விம்மிதம் எய்திய அமரகவி பாரதியார், பாஞ்சாலி சபதம் என்ற இனியதொரு நூலை எழுதி இன்புற்றார். பாரதநாடு மட்டுமன்றிக் கிழக்காசிய நாடுகளான பர்மா, கம்போடியா, இந்தோனேசியா முதலிய நாடுகளிலும் இந்த இதிகாசங்கள் பரவி, அவரவர் இலக்கியங்களில் இடம் பெற்றிருக் கின்றன. புத்தார், சயினர் இடையிலும் இவை போற்றப் பட்டுள்ளன. இவ்வகையில் பாரத சமுதாயத்தின் ஒருமைப் பாட்டு வளர்ச்சிக்கு இந்த இதிகாசங்கள் செய்திருக்கும் தொண்டு அளப்பரியது. இவை மாநிலத்துப் பல்லாண்டு மருவி வாழ்க என வாழ்த்தி அமைகின்றேன். - செந்தமிழ்ச் செல்வி 20. விஞ்ஞானம் அணிமையில் அமெரிக்க நாட்டு ஆற்றல்மிக்க ஆடவர் மூவர் மதிமண்டலத்துக்குச் சென்று அதன்மேல் இறங்கிய போது, தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்துத் தலைமை இயக்குநர் தாமரைச் செல்வர் திரு.வ. சுப்பையா பிள்ளையவர்கள் ஒரு கடிதம் விடுத்தார்கள். அதன் உள்ளுறை. “மதிமண்டலம் சென்றடைந்த விண்வெளிவீரர், மக்களினம் இன்றுவரையும் செய்யாத அருஞ்செயலைச் செய்து வெற்றிகண்டுள்ளனர். அவர்கள் செம்மையாக நமது நிலவுகிற்குத் திரும்பி வந்து சேரவேண்டும்; அதற்காக அன்பர்கள், எல்லாம் வல்ல ஆண்டவன் திருவருள்துணை புரிக என வழிபடவேண்டும்” என்பது. அதனை என் நண்பர் ஒருவர்க்குக் காட்டினேன். வியப்பு மிகுந்த அவர் “இது செய்யத்தக்க சிறப்புடைய - இன்றியமையாத செயல்” என்று தமது இசைவைத் தெரிவித்தார். பின்பு, செய்தித்தாள், ஆந்திர நாட்டுப் பத்திரசாலத்தில் விண்வெளி வீரர்களின் வீறு நினைந்து இறைவனை வழிபட்ட செய்தியைக் கொணர்ந்தது. இது கண்டதும், அந்த நண்பர் விரைந்து ஓடிவந்து, திரு. வ. சு. பிள்ளையவர்களின் எண்ணத்தின் உயர்வையும் விஞ்ஞான அறிவில் அவர்க்கிருக்கும் ஆர்வத்தையும் வியந்து புகழ்ந்தார். அந்நிலையில் அவர் கண்ணீர் துளிக்க, வாயிதழ் துடிக்க, தழு தழுத்த குரலுடன், “தமிழகமே! உனக்கு இருள்நீங்க வில்லையே; செயற்கரிய செயல் இது என்று தெரியவோ, அதுபற்றி இறைவனிடம் உன் சிந்தையைச் செலுத்தவோ, அறிவோ, விழைவோ, செயலோ புரிய உன்னால் முடியவில்லையே; மடமை யிருளிலிருந்து நீங்கி, வாழ்வுக்கு ஒளியும் வளமும் தந்துகொண்டிருக்கும் விஞ்ஞான ஒளிக்கதிர் உனது இருண்ட உள்ளத்தில் நுழைவது எக்காலம்?” என ஏங்கினார். ஈழநாட்டுமக்களின் எழுச்சியையும் ஆர்வத்தையும் எடுத்துரைத்துப் பாராட்டினார். உடனிருந்த நண்பர், “தேய்தல் உண்மையும் பெருகல் உண்மையும், மாய்தல் உண்மையும் பிறத்தல் உண்மையும், அறியாதோரையும் அறியக் காட்டித் திங்கட்புத்தேள் திரிதரும்” என்று திங்களைப் புத்தேளாகவும், அதனை உவமமாக வைத்து “மாரிவானத்து மீன் நாப்பண் விரிகதிர்வெண்டிங்களின் விளங்கித் தோன்றுக... அவன் கலங்கா நல்லிசை” என வாழ்த்துக்குரிய தாகவும் போற்றினான் பழந்தமிழன். கோயிலில் நவக்கிரங்களில் ஒன்றாய், வழிபடப்படும் திங்கட்புத்தேள்-சந்திரபகவான்-மனிதன் காலடிக் கீழ் மண்ணுருண்டையாய் விட்ட தென வருந்தி, வாய்திற வாமல் இருக்கிறான் இந்நாளைய தமிழன். அன்று விண்வெளியை “வளிஇடை வழங்கா வழக்கரும் நீத்தம்” (புறம்) என்றுரைத்த தமிழன், இன்று ஏன் வாய் மூடி, அந்த “நீத்தம்” கடந்து நிற்கும் அருஞ்செயலின் அருமை நினைந்து பாராட்டும் எழுச்சியின்றி இருக்கின்றான்? என்றொரு வினாவை எழுப்பினார்! விஞ்ஞான அறிவின் மெய்ம்மை காணாத சிறுமை என்று விடை வந்தது. விஞ்ஞானம் என்பது யாது? நாம் வாழும் நிலவுருண்டையின் அகத்தும் புறத்தும் சூழ்ந்து காணப்படும் விண்ணையும் அதன்கண் காணப்படும் நாளும் கோளுமாகிய அண்டங்களையும் நோக்கி அவற்றின் மெய்ம்மையும் கண்டு ஆய்ந்து பெறும் அறிவும் புல்பூடு முதல் மக்கள் ஈறாகவுள்ள உயிர்ப்பொருள்களின் அகக்கூறு புறக்கூறு களையும், நிலம் நீர் தீ வளி வானம் என்பவற்றின் உண்மை மெய்ம்மைகளையும் கண்டாய்ந்து பெறும் அறிவும் விஞ்ஞானமாகும். பொருள்களைக் கண்டும் கேட்டும் உண்டும் உயிர்த்தும் உற்றும் பெறும் அறிவு இயற்கையறிவு. இதனை ஞானசம்பந்தர்” இயல் ஞானம்” என்றும், பொருள்களின் பண்பையும் செயலையும் கண்டு ஆய்ந்து இவை ஏன் இங்ஙனம் ஆயின, ஆகின்றன எனக் காரணகாரிய நெறியில் அறிவது வயஞானம் என்றும் கூறுகின்றார். பொருள்களின் அமைப்பையும் அவற்றின் ஆக்கக் கூறுகளையும் நோக்கி, அவை எப்படி அமைந்துள்ளன? எம்முறையில் ஆகியுள்ளன? என அறிவது விஞ்ஞானம். நம்மவர் வயஞானத்தை விஞ்ஞானமாகக் கொண்டு உலகவுண்மை யறியும் விஞ்ஞானத்தைக் கைவிட்டதுதான், இன்றும், மதிமண்டலத்திற் கால்வைக்கும் அளவிற்கு அது வளர்ந்தது கண்டும் நயந்து வியந்து மகிழும் நலம் நம்மிடையே விளங்கித் தோன்றாமைக்குக் காரணமாயிற்று. வயஞானம், விஞ்ஞானம் என்ற இரண்டும்,பொதுவான-இயற்கையான-இயல்ஞானத்தினை அடிப்படையாகக் கொண்டு வளர்பவை. இளஞ்சிறுவர்களின் உள்ளத்தே இந்த இயல் ஞானம் தன்னியல்பில் ஆர்வ வடிவில்-விழைவு வடிவில்-இயங்குகிறது. அவர்கள் எப்பொருளைக் காணினும் விழைவுணர்வால் உந்தப்பட்டு, ஆர்வத்தோடு கண்டு கேட்டு உண்டுயிர்த்து உற்றறிய முற்படு கின்றனர். இந்த அறிவை எத்துணையளவு ஊக்கி வளர்க்கின்றோமோ, அத்துணையளவு வயஞானமும் விஞ்ஞானமும் நாட்டில் பெருகும். விஞ்ஞானம் இம்மையுலகில் பொருளின்ப வாழ்வு பெறவும் வயஞானம் அம்மை வாழ்வில் அருளின்ப வாழ்வு பெறவும் நன்கு அமைந்தவை. “சிவன் உய்யக் கொள்கின்ற ஆறு இந்தப் பூமி” என்று மணிவாசகப் பெருமான் உரைப்பதை வெறிதே சொல்லுவதைவிட, அவர் கூறியது போலச் “சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து” சிந்திக்க வேண்டும். சிந்தித்தால் இவ்வுண்மைகள் விளக்கமுறும். இந்த விஞ்ஞானம், மக்களின் உள்ளத்தில் இளமையில், “இந்த வானம் எவ்வளவு உயரத்தில் இருக்கிறது? மேலே எறிந்த கல் ஏன் நிலத்தில் விழுகிறது?” என்பன போன்ற கேள்வி வடிவில் இயல் ஞானத்தில் முளைக்கிறது. இது விலக்கமுடியாதது; விலக்கக் கூடாததுமாகும். நமக்கு இரண்டும் தெரியாமல் போனது குற்றம். “சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்ற ஐந்தின் வகை தெரிவான் கண்ணதே உலகு” என்று திருவள்ளுவப்பெருமான் இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பே அறிவுறுத்தினார். ஆயிரம் ஆண்டுகட்குமுன், “வல்லான் ஒருவன் கைம் முயன்று எறியினும், மாட்டா ஒருவன் வாளா எறியினும், நிலத்தின் வழாஅக் கல்” என்று பட்டினத்தடிகள், வானத்தில் எறிந்த கற்கள் நிலத்தில் வீழ்வது தப்பாமையைக் கண்டு உரைத்தார். உரைத்தும் என்? ஆண்டுகள் உருண்டனவேயன்றி அக்கருத்துக்கள் அறிவில் தோயவில்லை; சிந்தையில் - ஞானக் கண்ணினில்-சிறந்து படியவில்லை. காணப்பட்ட உலகைக் கொண்டே காணப்படாத கடவுள் உண்மை கண்டவர் பண்டைப் பெருமக்கள்; கடவுளைக் காட்டிய உலகைப் பின்னோர் நன்றி மறந்து அதனைக் காண விழையாவாறு மக்கள் கருத்தை மாற்றினர். கடவுளை உலகு கருவியாகக் கண்ட போது, அது, தன்பால் உள்ள நுட்பங்களையும் அவை தம்மில் முறைபிறழாது ஒழுகும் ஒழுகலாற்றையும் நன்கு காட்டிற்று. “அவன் அவள் அது எனும் அவை”, கடவுள் ஒன்றாய் உடனாய் இருக்கும் இடமாய், உணர்வார் உணர்வுக்கு உண்மைகளை ஒளிவு மறைவு இன்றி உணர்த்தும் ஒட்பம் உடையது என்றும் உணரச்செய்தது. “வாழ்தல் வேண்டும் இவண் வரைந்த வைகல்; ஆருயிர் முறைவழிப் படூஉம் என்பதைத் திறவோர் காட்சியில் தெளிந்தனம்” என்று சங்க காலத் தமிழர் கண்டனர்; அந்நாளில் உறவு கொண்டிருந்த கிரேக்கரும் அறிந்திருந்தனர். ஆயிரம் ஆண்டுக்குப் பின்னர், உலகின் உண்மைத் தன்மை கண்ட மணிவாசகர் நம்மை “மண்ணகத்தே வந்து வாழச் செய்தான்” என இறைவனைப் பரவிக் கூறினார். ஞானாமிர்த ஆசிரியர், இறைவன், உயிர்களாகிய நாம் விஞ்ஞானமும் வயஞானமும் (Science and Philosophy) பெறுதற்கே இவ்வுலகைச் செய்தான் என்ற கருத்தும் விளங்கக் “கொன்னே செய்யான் தன் நேர் இல்லான்” என்றார். பன்னூ றாண்டுகட்குப் பின்னர்த் தோன்றிய ஆல்பர்ட்டு ஐன்ஸ்டன் என்ற விஞ்ஞானச் செல்வர், “கடவுள் நுணுக்கரிய நுண்ணுணர்வாய் இருக்கலாம்; ஆனால் அவர் நமக்குப் பகையாய்க் கேடு செய்பவரல்லர்” (“God may be subtle but he is not malicious”) என்று கூறினார். அந்நாளில் மற்றொரு கருத்தும் மக்கள் உள்ளத்தில் மாண்புடன் விளங்கி யிருந்தது. இயற்கையுலகம், தன்பால் உள்ள பொருள்களின் அகத்தும் புறத்தும் ஊடுருவியிருக்கும் இயல் முறை நுட்பங்களை (Laws of Nature) நுணுகிக் காணமுயல்வார்க்குக் காட்டும் தன்மையுடையது என்று எண்ணி இனிது நம்பினர். “காண்பார் ஆர் கண்ணுதலாய் காட்டாக்காலே” “நானேதும் அறியாமே என்னுள் வந்து நல்லனவும் தீயனவும் காட்டா நின்றாய்” என்று திருநாவுக்கரசர் கூறுவது இக்கொள்கையை வற்புறுத்துகிறது. மேலும், இது மக்களி னத்தின் மனத்தை விட்டு என்றும் நீங்கின தாகவும் தெரியவில்லை. உலக முழுதும் இந்த நன்னம்பிக்கை இருந்திருக்கிறது. இதனால்தான் ஓரிடத்தில் இன்றேனும் பிறவிடங்களில் விஞ்ஞானம் வளர்ந்து வந்துள்ளது. மொழிக்கு இலக்கணம் கண்டு உரைக்கும் மூத்த அறிஞர் போல விஞ்ஞானிகளும் சில உத்திகளை மேற்கொண்டுள்ளனர். இலக்கணங்கள் கூறும் உத்திகள் போலப் பலவாகாமல், மூன்று உத்திகளே விஞ்ஞானப் பேற்றுக்கு வேண்டப்படுகின்றன. முதலாவது தொகுத்தல், இஃது இலக்கண நூல்களிலும் உள்ளது; அங்கே தொகுத்துக் கூறல் எனப்படுகிறது. விஞ்ஞானம் செயல்மேல் இருப்பதாகலின், இதனைத் தொகுத்தல் எனச் சொல்லி விடுகிறது. விரிந்து பரந்து கிடக்கும் உலகியற் பொருள்களை நேரிற் கண்டு தொகுப்பது முதலாவது செயலாகும். இரண்டாவது வகுத்தல்; கண்டகாட்சிப் பொருள்களை இனம் இனமாக வகுப்பது; இலக்கணவுத்திகளில் இது வகுத்து மெய்ந் நிறுத்தல் எனப்படுகிறது. இவ்வாறு வகுப்பதால் பொருள்களின் பண்பும் தொழிலும் மாற்றமடையா. சீட்டாட்டத்தில் இனமான சீட்டுகளை மதிப்புக் கேற்ப வகுத்துக் கையில் தாங்குவதுபோல, இவ்வகுத்தல் ஆராய்ச்சிக்கு அமைந்திருக்கிறது என விஞ்ஞானிகள் கொள்கின்றனர். மூன்றாவது மெய்ம்மை துணிதல். வகுத்துக் கொள்ளப்பட்ட பொருள்களிடையே அமைந்து கிடக்கும் பொதுப்பண்பைத் துணிந்து கொள்வதாகும். பொருள் வகை அனைத்தினும் ஒன்றிய மெய்ம்மையாதலால் இதனை இறுதியாகக் கொள்கின்றனர் விஞ்ஞானிகள். அறிவாராய்ச்சி செய்யும் அறிஞர் எல்லார்க்கும் இந்த நெறி ஒப்பமுடிந்ததாயினும், பழங்கால அறிஞர் பலர், ஒரு சில உண்மைகளைப் பலரும் அறிந்தவை என மேற்கொண்டு அவை ஆராய வேண்டாதவை (Axioms) எனக் கொண்டொழிந்தனர். அது பின்பு வரையறுத்த விதியாகவே, காணும் காட்சிப் பொருள்களின் அறிவை அவற்றுள் அடக்கிக் காண்பது என்ற செயலில் வந்து முடிந்தது. சில சட்ட விதி வரம்புகளை வைத்துக் கொண்டு, வழக்குகளை அவற்றுள் அடக்குதற்காக வாதம் புரிய வேண்டிய சூழ்நிலையை உண்டுபண்ணிற்று. இதனை வழக்குரைத்து முடிவு செய்யும் நீதிமன்றங்களிலும், இலக்கண இலக்கிய சமய நூலுரை களிலும் மிகவும் விளங்குவது காணலாம். இம்முறை காண்பதற்கு இன்பமாகவே தோன்றும்; அறிவியல் விளையாட்டாகவே இது கருத நிற்கிறது. இத்துறையில் பண்டை நாளில் நம்நாட்டு அறிஞர்கள் பேரூக்கங்கொண்டு பிறங்கினர். பழைய உரைகாரர்களான சேனா வரையரும் பரிமேலழகரும் நச்சினார்க்கினியரும் சிவஞான முனிவரும் சிறந்த எடுத்துக்காட்டுக்களாவர். பிற்காலத்தில் சைவசித்தாந்த சண்டமாருதம் சோமசுந்தர நாயகர், மறைமலை யடிகள், அரசஞ் சண்முகனார், நாவலர் சோமசுந்தர பாரதியார் முதலியோர் முன்னின்று மேன்மை எய்தினர். இந்த முறையில் ஆராய்ச்சிக் கல்வியில் சில குறைபாடுகள் தோன்றலாயின. அவர்கள் சூழலில் நிலவிய விதிவரம்புகளை அறிவதும் அவற்றிற்குரிய கொள்கைகளையும் நூற்பொருள்களையும் கற்பதுமே மெய்யான ஞானப் பேறாகிவிட்டது. பண்டையோர் இதற்கே ஏற்றமளித்தனர். “எப்பால் நூலோர்க்கும் துணிவு” என்றும் “நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை” என்றும், “மதிநுட்பம் நூலோடுடையார்” என்றும் திருவள்ளுவர் கூறுதலால் அறியலாம். இந்நூற்பொருள்களும் கொள்கைகளும் நுண்ணிய ஆராய்ச்சியின் விளைவாக இருக்கலாம்; அவற்றை வழங்கியோரும் நுண்மாண் நுழைபுலச் செல்வர்களாக விளங்கலாம். ஆயினும், அவர்களது நூலறிவு பின்தொடரும் மக்களது அறிவுப் பேற்றுக்கு ஓர் எல்லையை வரையறுத்துவிட்டது. சிந்தையை நிலைக்களனாகக் கொண்டு அருவாய் நுண்ணிதாய் விரிந்து செல்லும் அறிவினிடையே உலகியற் பொருளறிவைப் புகுத்துவது கூடாது; அது நிறைவுடைய ஞானக் காட்சியில் குறைவுடைய அறிவைப் புகுத்தி மாசுபடுத்துவதாகும் என்று அவர்கள் கருதினர். இரண்டாவதாக, இக்கருத்து, ஏறிய ஏணியை மேலே சென்றபின் உதைத்துத் தள்ளும் சிறு செயலாகும் குற்றத்துக்கு உள்ளாக்கிற்று. அவர்களின் ஞானத்துக்கு வாயிலாக இருந்த உலகியலை வெறுத்து இகழ்ந்துரைப்பாராயினர்; உலகியலறிவு நிலையாமையும் பொய்ம் மையும் உடையது என ஒதுக்கினர். இறைவன், காணப்படும் உலகின்கண் ஒன்றாயும் உடனாயும் கலந்து உயிர்களாகிய நம்மை வாழச்செய்து உய்தி பெறுவிக்கின்றான் என்பதையும் மறந்தனர். இதுபோன்ற கருத்தே கிரேக்க அறிஞரிடையேயும் இருந்தது. புதியன காண்டல், (Inventions) அவற்றைச் செய்முறையில் வைத்து ஆராய்தல், (Experiments) இயற்கையில் உள்ள பொருட்பண்புகளை நோக்குதல் (Study of Nature) ஆகியவற்றைச் செய்வதில் அவர்கட்கு விழைவும் ஆர்வமும் இல்லாதொழிந்தன. மருத்துவக்கலையில், நம்நாட்டில் எத்துணையோ ஆற்றல் மிக்க மருந்துகளைக் கண்ட சித்தர்கள் தாம் மேற்கொண்ட செயம்முறைக் கூறுகளை வெளிபடுத் தாமல் மறைந்தனர்; பன்னூறடி உயரமுள்ள மாடமாளிகை, கோயில் விமானங்கள், ஆற்றணைகள் கட்டிய கட்டிடப் புலவர்கள், அவற்றிற்கு அடிப்படையான கருத்துக்களையும் அவற்றைக் கண்டறிந்த முறையையும் பிறரறிய எழுதிவைத்திலர். நாட்டில் வாழ்ந்த கல்வியாளரும் அவற்றை எழுதாமையைக் குற்றமெனக் கூறவில்லை. அதனால் அவற்றை ஆதரிக்கும் உள்ளம் மக்களிடையே தோன்றவில்லை. இதே நிலைதான் முன்னாளைய கிரேக்கரிடமும் பொருந்தியிருந்தது. விஞ்ஞானத் துறைக்குரிய அடிப்படைக் கருத்துக்களைக் கண்டாய்ந்து உரைத்தவர் சைரப்கூசு என்னும் ஊரவரான ஆர்க்கிமிடீசு என்ற அறிஞர். தாம் கண்ட உண்மையை அறிதற்கு மேற்கொண்ட செய்ம்முறையை எழுத மறுத்துவிட்டார். மற்றொரு குறையும் அவர்கள் பால் இருந்தது. “முன்னோர் மொழிபொருளேயன்றி அவர் மொழியும் பொன்னேபோல் போற்றுவம்” என்பது அவர்களுடைய கொள்கைகளில் ஒன்று. முன்னோர் வகுத்துரைத்த கொள்கைகளும் கருத்துக்களும் சிறந்த நிலைபெற்ற உண்மைகள். அவை ஒரு காலத்தும் பொய்படா. எல்லா அறிவும் அவற்றால் பெறப்படும் என்றே நம்பினர். இக்கருத்தே தோன்றச் “சிதைவில என்ப முதல்வன் கண்ணே” என்று தொல்காப்பியர் கூறுவர். மேலும் அவர் “என்ப” என்பதனால், அவர்க்கு முன்னால் காலத்தேயே இக்கொள்கை தோன்றி நிலவிற்றென அறிகின்றோம். இதுவே கிரேக்க நாட்டு அறிஞரிடையே இருந்தது. அவர்கள், காணப்படும் உலகப் பரப்பில் நிலவுலகு ஒன்றுமே இயக்கமும் சுழற்சியுமின்றி விரிந்து பரந்து கிடப்பது. ஏனை நாளும் கோளும் நிலவுலகை மையமாகக் கொண்டு சுற்றிவந்தன; வருகின்றன என்பது அவர்கள் கொண்டிருந்த கொள்கைகளில் ஒன்று. மற்றொன்று இந்த அண்டத்துக்கு மேலேயுள்ள வானுலகு என்றும் ஒருதன்மைத்தாய், குறையும் குற்றமும் இல்லதாய் முழுமை பெற்றது; மண்ணுலகு குற்றமும் குணமும் கலந்து முழு நிறைவின்றிக் குறைபாடுற்றுக் கிடப்பது எனவும், இவை எவராலும் மாற்ற முடியாத. என்றும் மாறாத உண்மைகள் எனவும் எண்ணி மேற்கொண்டிருந்தனர். மேலைநாட்டு வரலாற்றில் புத்துணர்ச்சியும் புரட்சியும் தோன்றியபோது மக்களிடையே மேற்கண்ட கொள்கைகட்கு நேர்மாறான உணர்ச்சிகள் தோன்றி மலரத் தலைப்பட்டன. பொய்யா மெய்ம்மைகள் என மேற்கூறிப் போந்தவை, உண்மையுலகின் பண்பையும் செயலையும் உள்ளவாறு முற்றவும் காணாது குறைபடக் கண்டவை; யாவும் பல்பொருட் காட்சியால் ஆயந்து காணத்தக்கவை; ஒரு கருத்துப் பல்லாயிரம் பேர் பல்காலமாகக் கண்டு ஆய்ந்து கொண்டதென்னினும், ஒருவரது உண்மையாராய்ச்சியில், அது மாறாய், உண்மைக்கு ஒவ்வாததாய்த் தோன்றுமாயின், அதனை மாற்றியமைப்பதே முறை என்ற கொள்கை உருவாயிற்று, இதனால் பலபேர் அரிதின் முயன்று கண்ட தென்றாலும், ஒரு கொள்கை முடிந்த முடிவு என்று கொள்ளப்படுவது ஒழிந்தது; பிறிதொருகால் நிகழும் ஆராய்ச்சியால் முறிந்து பொய்படலாம் என்ற உணர்வு தலையெடுத்தது. இந்நாளைய விஞ்ஞானச் சூழலில் ஒருவர் பன்முறை சிந்தித்தும் செய்முறைகளால் (Experiments) ஆராய்ந்தும் தெளிந்து ஒரு கொள்கையை நிறுவி வெற்றி கண்டாலும், அதனைப் பிறரொருவர் தனித்தோ, பிற துணைவருடன் கூடியோ மனங்கலந்து ஆராய்ந்து அஃது உண்மையே எனக் காட்டினாலன்றி ஏற்றுக்கொள்ளப் படுவதில்லை. “அரியகற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால் இன்மை அரிதே வெளிறு” என்று திருவள்ளுவரும் கூறினர். இது நமக்கு இன்று இயல்பாய்விட்டது; முற்காலத்திலும் இடைக் காலத்திலும் வாழ்ந்து விளங்கிய ஞானிகட்கு முறையாகத் தோன்றவில்லை. தாம் கண்டு தெளிந்த உண்மைகளைப் பிறர்க்குக் காட்டாமல் மறைத்தே ஒழுகினர். கிரேக்க ஞானிகள் இதற்கு விலக்கல்லர். பைதாகரசு (Pythogoras) முதலியோர் இவ்வாறு மறைத்தொழுகிய மாந்தராவர். இடைக் காலத்தில் வாழ்ந்த இதர விஞ்ஞானிகளிற் பலர் (Alchemist) வேண்டுமென்றே தாங்கள் கண்ட உண்மைகளைத் தமது சிறு சூழலுக்குள்ளே ஒளித்து வைத்திருந்தனர். கி.பி.பதினாறாம் நூற்றாண்டில் வாழ்ந்த கணக்கியற் புலவர் நிக்கலோ தார்த்தா கிலியா (Nicclo Tartaglia) என்பார் மூவுறழ்ச் சமனம் (Cubical equation) என்ற கணக்குத் தான்கண்ட வழிமுறையைப் பிறர்க்குக் காட்டாமலே வைத்திருந்தார்; பின்பு செர்மினோ கார்டனோ என்பவர் அதனை அறிந்து தாம் கண்டது போல வெளியிட்டார். அது கண்டு மனம் வெதும்பிய தார்த்தாகிலியா தெளிவெய்திய போது, “இது காணப் பட்டவுடன் வெளியிடப் பட்டிருக்க வேண்டும். இது போன்றவை அவ்வப்போது பிறர் அறிய வெளியாதல் நன்று” என்று கூறினார். புதிதாகக் காணப்படும் விஞ்ஞானவுண்மையோ, கருத்தோ, கொள்கையோ நன்கு தெளிவாகி வெளிவந்த போதிலும், குறைந்த அளவில் ஒருவராயினும் பன்முறையும் கண்டு ஆய்ந்து அதன் மெய்ம்மைத்தன்மையை நிறுவ வேண்டும் என்பது விஞ்ஞானத்தின் வியத்தகு நிலைமையாகும். விஞ்ஞானம் ஒருவரது உடைமையன்று; விஞ்ஞானிகளின் கூட்டியக்கம். கி.பி. 1645 இல் இலண்டன் ராயல் சொசைட்டி என்ற கழகம் தோன்றி கி.பி.1660 இல் இரண்டாம் சார்லஸ் மன்னரின் ஆதரவு பெற்றது. இக்கழகம் அவ்வப்போது கூடும்போது தாம்தாம் செய்த ஆராய்ச்சிகளை வெளிப்படையாக விளக்கி அரங்கேற்றுவர்; அவற்றை லத்தீன் முதலிய வேற்றுமொழிகளிலின்றி ஆங்கிலத்திலேயே எழுதுவர். ஆங்கிலத்திலே எழுத வேண்டும் என்றது லத்தின் மொழி மேல் வெறுப்பன்று; நாட்டவர் பலரும் அறிந்து கொள்ள வேண்டு மென்பது கருத்து. நம் நாட்டில் இவ்வாறு ஓர் ஆராய்ச்சிக் கழகம் கூறுமாயின் இது மொழிவெறியென்ற மூடமதி யினர் சிலர் தலை விரித்து ஆடுவர்; அலறுவர்; செய்தித்தாள்களில் தலையங்கத்தில் ஒப்பாரி வைப்பர். அது கண்டு சிலர் அஞ்சி நீங்குவர். இந்த மாறுதல் ஐசக் நியூட்டன், இக்கழக்கத்தின் உறுப்பின ரானபோது ஏற்பட்டது. கலிலேயோ, டேனிஷ்நாட்டு விஞ்ஞானியான டைக்கோ பிராகி, செருமனி வான விஞ்ஞானி ஜானசு கெப்ளர் ஆகியோர் கண்ட நெறியைப் பின்பற்றி நியூட்டன் செய்ம்முறைக் காட்சியால் (Experimentation) இயக்க விதி மூன்றும் புவியீர்ப்பும் கண்டார். கொள்கைகளையும் விதிவகைகளையும் முன்வைத்துப் பின்னர் அவற்றின் உண்மை காணும் நெறியைக் கைக்கொண்டி ருக்குமாயின், ஏனை இலக்கியம், இலக்கணம், வரலாறு முதலியன போல, விஞ்ஞானமும் பொதுக் கல்வியாய் மக்களின் பண்பாடு உணர்த்தும் கலைத் துறையாய் மாறியிருக்கும். செய்ம்முறைக் காட்சியை - அஃதாவது பொருள்களை வகைப்படுத்திக் காண்பதும், ஒவ்வொன்றின் பண்பறிவதும், ‘வகுத்து மெய்ந்நிறுத்’தலும் ஆகிய நெறியை மேற்கொண்டதனால், விஞ்ஞானக் காட்சியும் உணர்வும், மிக்க பேர் உழைப்பாய் இருக்கின்றன; பொருட்செலவுக்கு உள்ளாயிருக்கின்றன. விஞ்ஞானத்தின் விளைப்பயனை நோக்க இஃது ஒரு குற்றமாகாது. நாட்கள் செல்லச் செல்ல விஞ்ஞானத்தின் எல்லை மிக்க விரிவடைந்தது. ஆழ்ந்தகன்ற அறிவு பெறுவதற்கு விஞ்ஞானிகள் தத்தமக்கேற்ப ஒரு கூற்றையே வரைந்து கொண்டனர்; இதனால் தனித்துறைச் சிறப்பாராய்ச்சி (Specialisation) விஞ்ஞானச் சூழலுட் புகுவது இன்றியமையாதாயிற்று. வழிவழியாக வந்த விஞ்ஞானி களால் ஒவ்வொன்றும் புலமை வளம் பெருகி விரிந்து செல்கிறது. விஞ்ஞானத்தின் பொதுவியல்பில் கருத்தைச் செலுத்திய ஐசக் ஆசிமோவ் என்ற விஞ்ஞானப் பேரறிஞர், விஞ்ஞானிகள் எழுதும் நூல்களின் மொழி நடைபற்றி நல்ல கருத்துக்களை வழங்குகின்றார். விஞ்ஞானம் காட்டும் பொருள்களும் நல்கும் கருத்துக்களும் புதிய சொற்களும் புதுமை நுட்பங்களும் நிறைந்திருப்பதால், அவர்களின் மொழி நடையைக் கண்டோர் எளிதில் விளங்காமை கண்டு வெருண்டனர்; மக்களில் வேறு பட்டவராகவே கருதலுற்றனர். அவர்களது புலமை நலம் கண்டு வியந்து பாராட்டுவது ஒருபுறம் இருக்க நெஞ்சில்அச்சம் மிகுந்தனர்; இளைஞருட் சிலர் அஞ்சி யோடினர். அஃது ஒரு காலம். விஞ்ஞானிகள் இந்த நிலையைக் கண்டு கருத்து மாறலுற்றனர். தமது ஆராய்ச்சியறிவும் அதனால் விளையும் பயனும் எதிர்காலப் பெருமக்களான இளைஞர் உலகை நோக்கி யிருப்பதை உணர்ந்தனர். தம்முடைய புதுமைக் காட்சிகளும் கருத்துக்களும் பொதிந்த எழுத்து நடை, எளிய மொழியில் மக்கள் படித்துணரும் வகையில் அமையவேண்டும் என எண்ணுவாராயினர் சிலர் இதனைக் கருத்திற்கொண்டு எழுதலுற்றனர். பலர், தாங்கள் எழுதுவனவற்றை அறிந்துகொள்ள விரும்புவோர் விஞ்ஞானப் பயிற்சியும் உணர்வும் உடையராக வேண்டும்; அத்தகுதியில்லையாயின் பயனில்லை என்று உரைப் பாராயினர். “நாங்கள் உங்கள் நிலைக்கு இறங்குவதை விட நீங்கள் உயர்வது நல்லது” என அறங்கூறவும் சிலர் முற்பட்டனர். இந்நிலையில் மக்களிடையே விஞ்ஞானத்தை அறிதற்கு இளைஞர் உள்ளத்தில் விழைவும் ஆர்வமும் பெருகின. கல்வியாளர் கூட்டங்களில் இதனை ஒட்டியும் வெட்டியும் பேசுவோர் மிகுந்தனர். துள்ளி வீழ்ந்து சுழன்று கலங்கும் நீர் பின்னர்த் தெளிவது போல விஞ்ஞானக் கல்வியாளர் குழுவில் தெளிவு பிறந்தது. விஞ்ஞானக் கருத்துக்களை அறிந்துமகிழ விரும்புவோன் விஞ்ஞானியாக இருக்க வேண்டும் என்பது சீரிதன்று; சேக்சுபியரின் நாடகங்களைப் படித்தறிந்து இன்புறக் கருதுபவன் நாடகம் ஆடுபவனாக இருக்க வேண்டும் என்பது இல்லை; சிறந்த இசையைக் கேட்டு இன்புறுவோன் இசைப் புலமையுடையனாதல் வேண்டும் என்பது இல்லை; நன்கு சமைத்த உண்பொருளை உண்டு களிப்பவன் ஒரு சமையற்காரனாக இருத்தல் நல்லது என்பார் இல்லை. அஃது “சாதல் துன்பத்தைச் செத்துக் காண வேண்டும் என்பது போலாகும்” என்று கருத்தரங்கு ஒன்றில் பேசிய செருமானிய விஞ்ஞானி யொருவர் கூறினார். இவ்வகையில் நடந்த சொற்போர்களால் விஞ்ஞானத்துறையிற் புகுந்து செய்ம்முறைக் காட்சியில் திளைக்கும் மனப்பான்மை யில்லாதாராயினும் ஒருவர் விஞ்ஞான நூல்களைப் படித்து இன்புறலாம்; அதற்கு அவர்க்கு உரிமையுண்டு; மறுப்பது அறமாகாது என்ற துணிவு பிறந்தது. “விஞ்ஞானத்தினால் விளைந்துள்ள நலங்கள் பலவற்றையும் பயன் கொண்டுவாழும் மக்களிடையே விஞ்ஞான உணர்வு நன்கு பரவவேண்டும்; அதன் அடிப்படையறிவு எல்லார்க்கும் எளிதாக எய்த வேண்டும். விஞ்ஞானக் கருவிகளை இன்று எல்லா மக்களும் வேற்றுமையின்றிக் கையாளுகின்றார்கள். அவர்களை அறியாமை இருளில் அழுத்துவது கொடுமையாகும்,” என்கிறார் ஐசக் ஆசிமோவ். வாழ்க விஞ்ஞானம்; வளர்க விஞ்ஞானிகள். - செந்தமிழ்ச் செல்வி 21. எழில் உருவம் திரு. வி.க. அவர்களின் மறைவு தமிழ்ப் புலமைப் செல்வர் ஒருவரது மறைவாகும். கால நிலையும் மக்கள் மனநிலையும் வாழ்க்கை நிலையும் நன்கறிந்து அவற்றிற்கேற்ப உயரிய கருத்து வழங்கும் அவரது பேச்சும் எழுத்தும் நாட்டில் பெரும்பணி செய்துள்ளன. தமிழ் இலக்கிய உலகில் நம் திரு. வி.க.சிறு சிறு வாக்கியங் களால் திருந்திய கருத்துக்களை அழுத்தம் திருத்தமாக எழுதும் புதுமுறை எழுத்து நடை கண்டவர். எழுத்து நடையில் திரு.வி.க. நடையென்ற ஒரு சிறப்பு நடையும் நிலவுகிறது. ‘மனிதவாழ்க்கையும் காந்தியடிகளும்’ ‘பெண்ணின் பெருமை,’ ‘முருகன் அல்லது அழகு’ முதலிய நூல்கள் பயிலுந்தோறும் இன்பவொளி வீசி நிற்கின்றன. அரசியல் உலகில் காங்கிரசில் சேர்ந்து தமிழ்நாட்டுக் காங்கிரசு மாநாடுகளிலும் பொதுமேடைகளிலும் திருந்திய செந்தமிழில் அரசியல் உரிமைக் கருத்துக்களைப் பல்லாயிரம் மக்கள் கூடிப் பரிந்துகேட்குமாறு பேசுவார். திரு.வி.க.பேசவருகிறார் என்றால் ஆண்களும் பெண்களுமாக மக்கள் திரண்டு விடுவர். சமயவுலகில் திரு.வி.க. ஒரு தனித்துறவியாக விளங்கினார். அவர் சமயக்கண்முன் குறுகிய நோக்கங்களும் பொருளற்ற கட்டுப் பாடுகளும் எதிர்நிற்பதில்லை. சைவசமயத் திருமுறைகளில் பேரிடம் பெறும் திருத்தொண்டர் புராணத்துக்கு அவர் பொறித்துள்ள முன்னுரையும் கருத்துரையும் அவரது விரிந்த உரையறிவை எடுத்துக்காட்டுவனவாகும். சமுதாய உலகில் தொழிலாளர் இயக்கம், பெண்ணுரிமை இயக்கம், சமதரும இயக்கம் ஆகியவை திரு. வி.கவின் பேராதரவு பெற்றவையாகும். புத்தர், காந்தி, இராமலிங்கர், தாயுமானவர் முதலிய பெருமக்கள் வழங்கும் உயரிய கருத்துக்களுக்கும் புதுமுறையில் விளக்கந்தந்து இன்றைய வாழ்வுக்கு ஆக்கமாகும் வகையில் திரு.வி.க.எழுதியுள்ளவை என்றும் யாவரும் கற்றுப் பயன்படும் நிலையில் உள்ளன. எளிமையில் அருமையும் பணிவில் பெருமையும், வறுமையில் செம்மையும் திரு.வி.கவின் உருவில் திகழ்ந்து நின்றன. வெள்ளிய கதராடையுடுத்து நெற்றியிற் சந்தன மிலங்க மெல்ல நடந்துவரும் அவருடைய மேதக்க திருவுடல் மறைந்தது. மென்னகை தவழும் முறுவல் மறைந்தது. மெல்லிய தமிழ் ஒழுகும் பேச்சிடையே இடதுகையெழுந்து எண்ணத்தைக் காட்டும் திரு.வி.க.வின் எழில் உருவம் மறைந்தது. எல்லாம் மறையினும் அவருடைய எழுத்தும் பேச்சும் எம்முடைய நெஞ்சைவிட்டு மறையா. அவர்க்கென அவர் நினைவுக்கென, இன்றைய தமிழறிஞர்கள் மண்டபம் நிறுவ முயல்கின்றனர். அம்முயற்சி இனிது நிறை வெய்துக. - செந்தமிழ்ச் செல்வி 22. பண்டிதமணியின் மாண்பு முதுபெரும்புலவர் மகாமகோபாத்தியாய பண்டிதமணி மு. கதிரேசன் செட்டியார் அவர்கள் இந்த நூற்றாண்டில் சிறந்து விளங்கிய புலவர் பெருமக்களுள் தலைமையிடம் பெற்றுத் திகழ்ந்தவர். தமது தனியுழைப்பு ஒன்றாலே உயர்ந்த பெரியவர். செட்டி நாட்டிலுள்ள மகிபாலன்பட்டியில் தன வணிகர்குடியிற் பிறந்து தமிழிலும் வடமொழியிலும் நல்ல புலமைபெற்று உயர்ந்து அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப்பேராசிரியராய் இருந்து தமிழ்ப்பணிபுரிந்து ஓய்வு பெற்றுத் திருவாசகத்துக்கு உரையெழுதும் பணியை மேற்கொண்டு அது முடியுமுன்பே மறைந்து இறைவன் திருவடிப் பெருவாழ்வு பெற்றார். மகிபாலன்பட்டிக்கு அப் பெயர் இடைக்காலச் சோழ மன்னர் காலத்தில் உண்டாயிற்று; அதற்கு முன்பெல்லாம் அவ்வூர் ‘பூங்குன்றநாட்டுப் பூங்குன்றம்’ என்று வழங்கிவந்தது. சங்ககாலச் சான்றோர்களுள் கணியன் பூங்குன்றன் என்னும் சான்றோர் இவ்வூரினர்; “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்று தொடங்கும் பாட்டு அப் பூங்குன்றனாருடையது. பரந்த புலமையும் சால்புமுடைய அத் தக்கோர் நிலவிய ஊரே நம் பண்டிதமணிக்கும் பிறந்த வூராய்த் தமிழ்ப்பெரும்புலமை யெய்துதற்கு ஏற்ற இடமாய் அமைந்தது; இஃது அவர்கள் கருவிலே வாய்ந்த தமிழ்த்திருவாகும். சான்றோர் பாராட்டும் தகவுடைப்புலமை எய்தியதும் பண்டிதமணியவர்கள் தாம் பயின்ற வடமொழிக்கண் சிறந்து நிலவிய நூல்களுள் சுக்கிரநீதியைத் தமிழில் மொழிபெயர்த்தார்கள். அதன்பின்சுலோசனா, மிருச்சகடிகம், உதயணகாவியம் ஆகியவற்றை இனிய தமிழில் மொழிபெயர்த்தார்கள். பண்டிதமணியவர்கட்கு முன்னோரும் பின்னோருமாகப் பலர் தோன்றி வடமொழிநூல்கள் மொழிபெயர்த்தோர் உண்டு. அவர் பலரும் தமிழில் நிரம்பிய புலமையில்லாக் குறையால் கற்பவர் விரும்பத்தக்க நிலையில் அம்மொழிபெயர்ப்புக்களைச் செய்யும் திறம் குன்றினர். பண்டித மணியின் மொழிபெயர்ப்புக்கள் முதனூலினும் சிறந்த சொன்னலமும் பொருள்வனப்பும்கொண்டு சிறப்புற்றன. சுக்கிரநீதி, மிருச்சகடிகம் (மண்ணியல் சிறுதேர்) என்ற இரண்டன்மொழிபெயர்ப்புக்கள் அச்சாகி வெளிவந்துள்ளன. இந்நிலையில் மேலைச்சிவபுரியில் சன்மார்க்க சங்கத்தை நிறுவி ஆண்டுதோறும் விழாக்கள் நடத்துவதுடன், பல மாணவர் களை மதுரைத் தமிழ்ச்சங்கத்தார் நிறுவி நடத்திய தேர்வுகளுக்கு அனுப்பும் முறையில் கல்லூரிநிறுவி இடையறவின்றி நடைபெறச் செய்தது பண்டிதமணியின் கல்விப்பணியாகும். சன்மார்க்க சங்க நிகழ்ச்சிகளில் தமிழகத்தில் சிறந்து விளங்கிய தமிழ்ச்சான்றோர் பலரும் கலந்து இன்புறுவது வழக்கம். இப் புலவர்பெருமக்கள் பண்டிதமணியவர்களின் புலமை நலத்தை வியந்து தம்மிற்கலந்து நல்கிய சிறப்புத்தான் “பண்டிதமணி”யென்னும் பட்டம். பண்டிதமணி யவர்களின் பெரும் புலமைநலத்தை நேரிற் கண்டு வியந்து பாராட்டி இன்புற்ற தஞ்சைக் கரந்தைத்தமிழ்ச் சங்கத் தலைவர் த.வே. உமாமகேசுவரன்பிள்ளை அவர்கள் வாயிலாக அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தார் பண்டிதமணியவர்களின் புலமைச் சிறப்புணர்ந்து பல்கலைக்கழகத்திற் பேராசிரியராகக் கொண்டு பெருமை யெய்தினர். அக்காலத்தே அவரது புலமை விளக்கத்தை யறிந்து இந்திய அரசியலார் அவர்க்கு மகாமகோபாத் தியாயர் என்ற சிறப்புப் பெயர் தந்தனர். பண்டிதமணி யவர்கள் “வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறும் நல்லுலகம்” முற்றும் சுற்றி ஆங்காங்குள்ள தமிழறிஞர் கூட்டத்தில் இனிய சொற்பொழிவாற்றி இன்பம் செய்தவராவர். அவருடைய சொற்பொழிவு எளியநடையில் அரிய கருத்துக்களை இலேசாக உரைக்கும் இயல்பினதாகும். எல்லோரும் நன்கு தெரிந்த பாட்டேயாயினும், அது பண்டித மணியவர்களின் சொற்பொழிவில் அகப்படின், அவர் அனைவரும் அதுகாறும் கேட்டிராத நயங்கள் பல உட்கொண்டிருப்பது வெளிப்பட்டுக் கேட்டார் உள்ளத்தைப் பிணித்து இன்பம் செய்யும், பெரிய புராணம், சிலப்பதிகாரம், கம்பராமாயணம் என்ற தொடர்நிலைச் செய்யுட்கள் வரலாறு கலந்தவையாகலின், இயல்பாகவே இனிமையுறச் சொல்லாடும் பண்டிதமணிபால் இவை பெரிய அறிவின்பநிலையமாய்க் காட்சி யளிப்பது ஒரு புறம் இருக்க, இறையன்பில் பேரீடுபாடுகொண்ட திருவாசகப் பாட்டுக்கள் வந்துவிடின், பண்டிதமணியவர்களின் சொன்னலம் காலமும் கருத்தும் கடந்து இறையின்ப வெள்ளத்தில் ஆழ்த்தி மகிழ்விக்கும் இயல்பிற்றாகும். பண்டிதமணியவர்கள் ஒரு கூட்டத்தில் தலைமை தாங்குகின்றார்கள் என்றால், சொற்பொழிவாளர் பலரும் மிக்க விழிப்புடன் தமது பணியை ஆற்ற முற்படுவர். சொற்பொழிவில் பொறுக்குமளவினும் மிக்க அளவில் குற்றம் நிகழின்,அவற்றைக் கண்ணோட்டமின்றி எடுத்துக் காட்டுவதில் பண்டிதமணியவர்கள் பின்வாங்கு வதில்லை. ஒருகால் அதுபற்றி அவரோடு சொல்லாட நேர்ந்தபோது அவர்கள் சொன்ன கருத்து மிக்க வியப்பை அளித்தது. அவர் சொன்னது: “ஒருவன் ஒரு பொருள்பற்றிச் சொற்பொழிவு செய்யவருகின்றான் என்றால், அவனுக்காகப் பலரும் தமது காலத்தை ஒதுக்கிக்கொண்டுவருவர். அக்காலம் அவர்களது வாழ்நாளின் ஒருகூறு; அது கழிந்தால் மீளப்பெறலாகாதது. அதன் அருமையை எண்ணாது, குற்றம் நிறைந்த கருத்துக்களை ஒருவன் சிறிதும் சிந்தனையின்றிச் சொல்லி வீணாக்குவானாயின், அஃது அவனுக்கும் கேட்போர்க்கும் நன்மை விளைவிக்காது; அவனை அது செய்யுமாறு நாம் விட்டுவிட்டால் மேன்மேலும் காலக்கேடு செய்யும் குற்றம் பெருகும் என்பதுபற்றியே யான் இவ்வாறு கண்டிக்கும் கடமையை மேற்கொண்டேன்” என்று கூறினார். சென்னையில் நடந்த தமிழ்க்கூட்டம் ஒன்றில் அரசியலில் அமைச்சராம் செல்வாக்குப் பெற்ற ஒருவர் தமிழாசிரியர்களைக் குறைகூறுவதில் ஓர் இன்பம் கண்டு, தமிழ்ப்புலவர்களுக்கு, க,கா என்ற இரண்டுக்குமேல் ஒன்றும் தெரியாது; க என்பது கடவுள்; கா என்பது காதல் என்றார். எல்லோரும் கை கொட்டி அமைச்சரின் அறிவுரையைப் பாராட்டினர். அதன் பின் அங்கே சொற்பொழி வாற்றிய பண்டிதமணியவர்கள், “தமிழாசிரியர்களுக்கு க,கா என்ற இரண்டிற்குமேல் ஒன்றும் தெரியாது என அமைச்சர் கூறுவது உண்மை; அதற்குமேல் இவர் அறிந்தது என்ன? இவ்வுலகில் கடவுளுக்கும் காதலுக்கும் மேலாக எப்பொருள் இருக்கிறது? இந்த வகையில் தமிழ்ப் புலவர்கள் மாத்திரமல்ல, இங்கிலீஷ் புலவர்களும் அரசியல் நிபுணர்களும் எல்லாரும் ஒன்றுதான். இந்த அறியாதவர் கூட்டத்தில் அமைச்சர் விலக்கல்ல” என்று கூறினார்கள்.. எல்லோரும் பண்டிதமணியவர்களின் நுண்மாண் புலமையைப் பாராட்டிப் பரவினர். திருவாசகத்துக்கு உரைகாண்பது என்பது நெடுங்காலமாகத் தமிழறிஞர்கள் உலகில் பேரச்சத்தை விளைத்துக் கொண்டிருந்தது. பின்னர் அறிஞர் சிலர் தோன்றி உரையெழுதி வெளியிட முற்பட்டனர். அவ்வுரைகளுள் மறைமலையடிகள் முதல் நான்குபகுதிகட்கு எழுதியவுரை கற்றோரிடையே செல்வாக்குப் பெறுவதாயிற்று. ஏனைப் பகுதிகட்கு அவர் உரைவாராதாகவே, திரு.கா.சு. பிள்ளைய வர்கள் திருவாசக முழுதிற்கும் உரைகண்டு வெளியிட்டார். அவ்வுரைக்குத் துணையாக அறிஞர் சிலர் உரைவகுத்து அளித்தனர். இந்நிலையில் பண்டிதமணியின் திருவாசகச் சொற்பொழிவுகளின் நயங்கண்டு வியந்த அறிஞர் அவரையே திருவாசகத்துக்கு உரையெழுதுமாறு வேண்டினர். மறைமலையடிகள் எழுதிய பகுதி கட்கு மேலுள்ள திருச்சதகம், நீத்தல் விண்ணப்பம், திருவெம்பாவை என்ற மூன்றுக்கும் பண்டிதமணியவர்கள் கதிர்மணிவிளக்கம் என்ற பெயரால் உரைகண்டு வெளியிட்டனர். அடுத்துள்ள திருவம்மானையில் முதல் மூன்று செய்யுட்களுக்கு ஒருவகையாக உரையெழுதி முடித்தற்குள் அவர்கள் இம்மண்ணுலக வாழ்வைத் துறந்து சென்றார்கள். திருவாசக முழுதுக்கும் உரை நிரம்புதற்குள் பண்டிதமணி மறைந்தது சைவத் தமிழுலகின் தவக்குறையென்று சொல்லவேண்டும். தமிழ், நம் தமிழ்நாட்டில் அரசியல் மொழியாதல் வேண்டும்; அரசியல் அவைகளிலும் நீதிமன்றங்களிலும் தமிழ்மொழியே இடம்பெறல் வேண்டும். உயர்கலைகள் பலவும் தமிழிலே கற்பிக்கவும் எழுதவும்பட வேண்டும் என்பனபோன்ற கருத்துக்களை நம் பண்டிதமணியவர்கள் அடிக்கடி கூறிவந்தனர். அவரது பெரும் பிரிவால் தமிழ்நாடு சால்புடைய தமிழ்ச்சான்றோரை இழந்தது; தமிழ்மக்கள் சிறந்த பேராசிரியரை இழந்தனர்; தமிழ்மொழி பிறமொழிநலங்களைத் தமிழாக்கி அணிசெய்யும் தமிழ்ப்பெரும் புலவரை இழந்தது; தமிழ்ச்சமயமாகிய சைவம், எட்டாம் திருமுறை யாகிய திருவாசகத்துக்குப் பெருமைசான்ற உரைகூறும் பெருமகனை இழந்தது. இன்னாதம்ம உலகம்! - செந்தமிழ்ச் செல்வி 23. சித்தாந்தப் பேராசிரியர் தூத்துக்குடி சித்தாந்தப் பேராசிரியர், ந. சிவகுருநாதப் பிள்ளை அவர்கள் மறைந்தார்கள் என்ற செய்தி இன்று பரவுகின்றது. சின்னாட்குமுன் திரு.வி.க. மறைந்தார்; அவர்க்குப்பின் மகாமகோ பாத்தியாய பண்டிதமணி மறைந்தார் என்ற செய்தி இடிபோல் வந்தது. அது வந்த ஒரு கிழமைக்குள் தூத்துக்குடி சித்தாந்தப் பேராசிரியர், ந.சிவகுருநாதப்பிள்ளை அவர்கள் மறைந்தார் என்ற செய்தி இடிமேல் இடி வீழ்ந்தாற் போல் வருகின்றது. பழுத்த சமய வாழ்வும் முழுத்த கேள்வியும் உடைய பெரியவர்கள் ஒருவர்பின் ஒருவராக மறைகின்றனரே! இஃது என்னையோ? தமிழ்க்கு வரம்பாகிய தக்கோரும் சைவவரம்பாகிய மிக்கோரும் இவ்வாறு மறையின் தமிழும் சைவமும் வாழ்க என வாழ்த்துவது என்னாவது? உள்ளம் வேதனை தானே எய்துகின்றது? தமிழ்மடந் தைக்குச் சென்னை திருமுடியும், செட்டி நாடு திருமார்பும், தென்பாண்டிநாடு திருவடியும் போல்வன. இம் மூன்றிடத்தும் முறையே முடிமணியும் மார்பணியும் சிலம்பணியும்போலத் திரு.வி.க.வும் பண்டிதமணியும் சித்தாந்தப் பேராசிரியரும் தமிழ் அன்னைக்கு இதுகாறும் தமிழ்ப் பணியும் சமயப்பணியும் சால்புடன் புரிந்து தமிழ்க்கு அணி செய்துவந்தனர். அவர்களது மறைவு, தமிழன்னை முடிமணியும் மார்பணியும் சிலம்பணியும் கெடுத்து வருந்தும் கீழ்நிலையைக் காட்டி நினைக்கும் உள்ளத்தை நீராய் உருக்குகின்றது. கையறு நிலை 1. பெரிய நெறி சித்தாந்தப் பேராசிரியர்மன் அரியசிவ குருநாத அண்ணல்மன் ஐயன்மன் உரியபொருள் பலவுணர்ந்த ஒருவன்மன் ஒழுக்கத்தால் விரியவரு நலமெல்லாம் மிகவுடைய மேலோன்மன். 2. சிலசொல்லிப் பலவுணர்த்தும் செம்மையோன் சிவம்பெருகும் தலம்பலவும் கண்டயர்ந்த தகவுடையோன் தமிழ்ப்புலமை நலவுரைகள் பலநிகழ்த்தி நயங்காட்டும் நல்லோன்மன் அலகில்சிவ குருநாத அண்ணல் மறைந்தான்மன்னோ. 3. திருஞான சம்பந்தர் திருவடியே தினம்பரவி வருவோன்காண் மெய்கண்டவள்ளல்தாள் மறவான்காண் பெருமுனிவன் சிவஞான யோகிநலம் பேசுவதே உருவாழ்வென் றோதுசிவ குருநாத உரவோனே. 4. சித்தியுரை தெளிப்பார்யார்? திருவந்தி விரிப்பார்யார்? அத்துவிதப் பொருளதனை அகலவுரைத் திடுவார்யார்? அத்துவா ஆறனையும் அணிதிகழ அறைவார்யார்? மெத்துசிவ குருநாத மேதக்கோய் மறைந்தாயே! 5. திருமந் திரநகரில் செந்தூரில் சிவநெறியில் வருமந் திரமுரைக்க வழித்துணையாய் வந்தாயால்; அருமந்த சிவஞானம் அறியுநெறி எனக்குரைத்த பெருந்தந் தையேநீயும் பிரிந்தாயே மறைந்தாயே. 6. பலகூறிப் புலம்புவதென்; பரவுசிவ குருநாதன் நிலவுலகு நீத்ததனை நினைந்தினிநெஞ்சே, அவன்தாள் இலகுபிறை அணிந்தருளும் இறைவனருட் பேரின்பம் நிலவுவாழ் வதில்நிற்கும் நீர்மையினை நினைகுவையே. - செந்தமிழ்ச் செல்வி 24. கரந்தைக்கவியரசு மறைவு கரந்தைக்கவியரசு திரு.R. வேங்கடாசலம்பிள்ளை அவர்கள் மறைந்தசெய்தி தமிழகத்துக்கு இவ்வாண்டில் உண்டான இழப்புகளில் ஒன்று. இனிய தமிழ்க்கவி செய்ய வல்ல இனிய புலவரைத் தமிழன்னை இழந்து வருந்துகிறாள். கரந்தைத் தமிழ்ச்சங்கத்தின் தோற்றம், வளர்ச்சி, பெருமை, பணி முதலிய கூறுகள் எல்லாவற்றிலும் நேரடியாகத் தொடர்பு கொண்ட ஒருவரை, சங்கத்தின் தந்தையாய்த் தாயாய்ப் பணி புரிந்த தக்கோரைக் கரந்தைத் தமிழ்ச்சங்கம் இழந்துவிட்டது. யாங்கள் எங்கள் ஆசிரியரை இழந்தோம். கண்டர் கோட்டை எனப்படும் கந்தருவக் கோட்டைக்கு அண்மையில் உள்ள மோகனூர் கவியரசர் தோன்றிய நல்ல ஊர். தமிழ்ப்புலமை நலம் சிறந்த பழங்குடி அவரது உயர்ந்த குடி. தமிழ்க் கல்வி சிறந்ததும் தஞ்சைக்குப் போந்து தமிழாசிரியராக இருந்து அரும்பணியால் அயராத தமிழ்த் தொண்டால் கவியரசாக மேன்மை யுற்றவர் ஆசிரியர் வேங்கடாசலம் பிள்ளையாவார்கள். அவரது தமிழ்வாழ்வு கரந்தைத் தமிழ்ச்சங்கத்தோடு இணைந்து விளங்குவது. சங்கத்தின் வாழ்வும் அவரது வாழ்வும் ஒன்றுபட்டவையாகும். தஞ்சைத் தமிழவேள் த.வே.உமாமகேசுவரம்பிள்ளை அவர்கள் தலைமை தாங்க, கவியரசர் R.வேங்கடாசலம்பிள்ளையவர்கள் அமைச்சராய்ச் செயலாற்றக் கரந்தைத் தமிழ்ச்சங்கம் சிறந்த. தமிழ்ப்பணி புரிந்து நாடெங்கும் நல்ல புகழ்பெற்று மேம்பட்டது. அதன் வெள்ளிவிழா விளக்கத்தால் வீறு பெற்றது; அதன்பின்னர்ச் சங்கத்திற்குப் பொருள் சிறிது சேர்ந்தது; கடமைகள் பெருகின. தமிழவேள் மறைந்தார்; பொருள் வளம் சுருங்கிற்று; செயலொளி குறைந்தது. கடுகு சிறுத்தாலும் காரம் போகாது என்றபடி பொருளளவு சிறுமையுற்றுப் பெரும்பணி ஆற்றி வருகிறது. இதற்கிடையே, கவியரசர் தமது தமிழ்ச்சங்க அமைச்சுக் கடைமையைத் தக்க இளைஞர்பால் இருத்தித் திருவையாற்று அரசினர்கல்லூரியில் தமிழ்ப்பேராசிரியர் பதவியேற்றுத் திருவையாறு சென்று சேர்ந்தார். பல ஆண்டுகள் தமிழ்ப் பேராசிரியராய் இருந்த தன் விளைவாக மிகப்பல சிறந்த தமிழ்ப் புலவர்கள் நாட்டில் தோன்றுவாராயினர். பின்னர் அவர்கள் கரந்தைக்கே வந்து கரந்தைத் தமிழ்ச்சங்கம் நடத்தும் புலவர் கல்லூரியிற் பேராசிரியராய் இருந்து முதுமையும் தளர்ச்சியும் எய்தித் தமிழ்த்தாயின் தண்ணிய திருவடி நீழலை யடைந்தார்கள். கவியரசர் க.த.சங்க அமைச்சராய் இருந்தபோது தமிழ்ப் பொழில் என்னும் திங்கள்வெளியீடு தோன்றிற்று. அதன் இரண்டா மாண்டில் எனக்குத் தமிழ்ச்சங்கத் தொடர்ப்பு உண்டாயிற்று. சங்கக் கல்விநிலையத்தில் ஆசிரியர்பணியும் நூல் நிலையப்பணியும் புரியும்பேறு எனக்குக் கிடைத்தது. அக்காலைக் கவியரசர் எனக்குத் தமிழ் கற்பிக்கும் பேருதவியைச் செய்யலுற்றார்கள். தொல்காப்பியச் சொல்லதிகாரத்திற்குத் தெய்வச் சிலையார் எழுதிய உரையை வெளியிடும் பணி வந்தது. ஏடு படித்தலும், பெயர்த் தெழுதலும் என் பணியாயின. இடையிடையே எழும் ஐயங்களை அகற்றுமுகத்தால் ஒரே காலத்தில் இளம்பூரணர், சேனாவரையர், நச்சினார்க்கினியர் என்ற உரையாசிரியகளின் உரைநலங்களை எனக்குக் கற்பித்து இன்புறுத்துவது கவியரசரின் கல்விப்பணியாய் இயங்கிற்று. உரை நலங்களைப் படித்து முடித்தேன். நூலும் வெளியாயிற்று. யானும் வடஆற்காடு மாவட்டத்தில் தமிழ்ப்பணி புரியும் செயல்மேற் கொண்டு சென்றேன். எனக்கு இலக்கணம் கற்பிக்கும் பணி தெய்வச்சிலையார் உரை வெளியீடாய் நிலவினமையின் அக்காலை சங்கத்தில் நெருங்கிய தொடர்புற்றிருந்த பேராசிரியர்களான பண்டித நாவலர், ந.மு. வேங்கடசாமிநாட்டார், பண்டிதமணி. மு. கதிரேசன் செட்டியார், எல்.உலகநாதபிள்ளை முதலியோர்களின் தொடர்பு எனக்கு எய்துவதாயிற்று. அவரது தொடர்பு அன்பு செய்வதோடு நில்லாது தமிழறிவு நல்கும் ஆசிரியர்களாக இருந்து எனக்கு ஐயமகற்றி அவரது நன்றி மறவா மாணவனாய் நிலவுமாறு செய்தது. அவர்கள்பால் என்னைப் பற்றி அன்புரை வழங்கி ஆதரவுசெய்த கவியரசரின் கல்விநலத்தை இன்று நினைப்பினும் என் நெஞ்சு கரைந்துருகுகிறது. ஒருகால் திருக்காட்டுப்பள்ளிக்கு டாக்டர் உ.வே.சாமிநாதையர் வந்திருந்தபோது ஒருவர் தேட்கடியில் வருந்தி மருந்துண்டு தேறினார். அப்போது நாட்டார், கவியரசர், தண்டாயுதபாணிக் காடவராயர், தமிழ்வேள் அனைவரும் சூழ இருக்க, “கடித்த இடம்தான் கடுக்கிறது,” என்று காடவராயர் சொன்னார். கடியும் கடுக்கிறதும் ஒன்றுதானே என்று நாட்டார் அவர்கள் கூற எல்லோரும் நகைத்தனர். அது எப்படி யெனத் தமிழவேள் ஐயரவர்களைக் கேட்க, அவர்கள் என்னை விடை கூறப் பணித்தார்கள். யான் கடியென்னும் உரிச்சொல் கடுக்கிறது எனத் திரிந்து வினையாயிற்று: “கடுத்தது காட்டும் முகம், என்றாற்போல” என்றேன். அப்போது ஐயரவர்கள் எனக்கு இலக்கணம் கற்பித்த கவியரசரைப் பாராட்டியது இப்போது என் நினைவுக்கு வருகிறது. அவரது பிரிவு என் அறிவைப் பேதுறுவிக் கின்றது. தெய்வச்சிலையார் உரை எழுதிய ஏட்டைத் திரு. ஐயரவர் கள்பால் பெற்றுவந்தபோது அவர்கள் கவியரசர் புலமையைப் பாராட்டி, தாம் சீவகசிந்தா மணியைப் பதிப்பித்து வெளியிட்ட போது, “பெயர் விழையான்” என்னும்புனைபெயரில் சில திருத்தங் களை மிக்க நுட்பமாக ஆய்ந்துரைத்தாரெனவும் பின்பே அவர்கள் கவியரசரைத் தெரிந்துகொண்டாரெனவும் கூறியது என் நினைவில் எழுகின்றது. தமிழவேள் மகன் பஞ்சாபகேசன் மறைந்தபோது கவியரசர், தமிழவேள் மனநிலையையும் தமிழன்பையும் வியந்து, “மன்மக்கள் எல்லாம் தன் மக்களெனக் கொள்வானை, என்னையினிச் செய்வது இடர்,” என்று பாடியதுகேட்டுப் பண்டிதமணியவர்களும், நாட்டார் அவர்களும் பாராட்டி யுரைத்ததும், தமிழவேள் அவர்களின் கலங்கிய வுள்ளம் தெளிந்ததும் இன்று நிகழ்வனபோல் நெஞ்சில் தோன்றுகின்றன. இதைநினைவில் கொண்டிருந்து பண்டிதமணி யவர்கள் திரு. வேங்கடாசலம் பிள்ளையவர்கட்குக் கவியரசர் என்ற பட்டம் தந்தபோது பாராட்டி யதும் திருப்பாதிரிப் புலியூர் ஞானியார் அடிகள் முறுவலித்து மகிழ்ந்ததும் இன்று நினைக்கினும் இன்பம் தருகின்றன. என் இனிய ஆசிரியர் அவர்களின் நலங்கள் பல நினைவுக்கு வருகின்றன. எதனை நினைப்பேன்! எதனை எழுதுவேன்! இவ்வாண்டு என் மனதுக்கு அமைதி நிலவாதவகையில் பல இழப்புக்களை நல்கிவிட்டது. பொதுநோக்கால் புகழ்பெருகிய திரு. வி.க.மறைந்தார்; அன்பால் நட்பால் அறிவுபெருகிய பண்டித மணி மறைந்தார்; ஆர்வத்தால் அருளால் சித்தாந்த நுண்பொருள் காட்டிய தூத்துக்குடி சித்தாந்தப் பேராசிரியர் சிவகுருநாத பிள்ளை மறைந்தார்; இறுதியாகப் பழந்தமிழ்ச் செல்வம் எனக்கு நல்கிய கவியரசர் மறைந்தார். இக் கொடுங்காலம் இப் பெருமக்களை மறைக்கலாம். வேறே என்ன செய்ய முடியும்? அவர் தம் புகழ் பொன்றாது நிற்பது. வாழ்க அவர் புகழ், வளர்க தமிழ். - செந்தமிழ்ச் செல்வி 25. வாணிக மந்திரம் வாணிகம் என்பது நமது நாட்டில் பொதுவாக யாவரும் செய்யக் கூடிய தொழில் என்று பலரும்கருதுகின்றனர். உடம்பை வருத்திச் செய்யக் கூடிய உழவு முதலிய தொழில்கள் இழிந்தவை என்றும், அரசியலில் அரைப்பணச் சம்பளத்துக்காயினும் வேலை பார்ப்பதுதான் உயர்ந்தது என்றும், வாணிகம் செய்வது நடுத்தரமானது என்றும் இடைக்காலத்தில் மக்கள் மனதில் ஒரு கருத்துத் தோன்றி நிலவுவ தாயிற்று. இதன் விளைவாகக் கற்றவர் அரசியல் வேலையாட் களாகவும், பணிபுரிபவர்களாகவும் அலுவலாளர் களாகவும் புகுந்து வாழ்க்கை நடத்துவாராயினர். கல்லாதவர் பலரும் உழவு முதலிய தொழில்களை மேற்கொண்டனர். சிறிது கற்று இடைநிலையில் நின்றவர் வாணிகம் செய்து வாழலாம் என்று கருதும் அளவுக்கு வாணிகம் பொதுவுடைமை நிலையில் நடக்கத் தலைப்பட்டது. சிறந்த கல்வியறிவும் வலிய உடலுழைப்பும் இல்லாதவர் பலரும் வாணிகத்தில் நுழைந்தமையால் வாணிகத் தொழில் ஒரு சில இடங்களில் தாழ்வாகவும் கருதப்படுவதாயிற்று. சில இடங்களில் கயவர்களும் வஞ்சகர்களும் இதி பண்புடையவர்களும் சூதுபுரியும் தொழிலாகவும் பயன்பட்டது. ஒரு சிலர்க்குப் பொழுது போக்காகவும் பயன்பட்டது. இத்தகைய நிலையில் வாணிகத்தில் வளர்ச்சியும் வளமையும் உண்டாதற்கு வழி இல்லாமையால் நட்டம் வருவதும், நிலைதவறிவீழ்வதும், ஒரு சிறிது எழுதுவதும் இயற்கை யென்று நட்டம் வருவதும், நிலைதவறிவீழ்வதும், எழுவதும் இயற்கை யென்று மக்கள் கருதுகின்றார்கள். “முப்பதாண்டு வாணிகம் செய்து வாழ்ந்தவரும் இல்லை, கெட்டவரும் இல்லை” என்றொரு பழமொழியும் உலகில் நிலவுகின்றது. மேனாட்டு வணிகர்கள் தங்கள் வாணிகத்திற்கு வெள்ளிவிழா (50 ஆம் ஆண்டுவிழா) பொன்விழா (20ஆம் ஆண்டுவிழா) மணிவிழா (80ஆம் ஆண்டுவிழா) நூற்றாண்டு விழா என விழாக் கொண்டாடுகிறார்களே; அதுபோல் நம்மவர் ஏன் செய்யமுடிவதில்லை? அவர்கட்கு மாத்திரம் நிலையாக நின்று இப்படி விழாக்கள் நடத்த இயலுகின்றது ஏன்? என்று நினைப்பது இல்லை. செய்யும் வாணிகத்தில் உயர்ச்சி யுண்டானால் “நல்ல காலம்” என்றும், “ திசை நல்ல யோகம்” என்றும், வீழ்ச்சியுண்டானால் “திசை கெட்டுப் போயிற்று”, எனவும் “கிரகம் சரியா யில்லை” என்றும் சொல்லிப் பழி பாவங்களைக் காலத்தின் மேலும் கிரகங்களின் மேலும் தள்ளிவிட்டுத் தாம் குற்றமற்றவர்களாகக் கருதிக்கொள்வது நம்மவர் இயல்பாக இருக்கிறது. விதி யென்றும், வினையென்றும், கருமம் என்றும் சொல்லிக் கொள்வது பெருவழக்கு. விதி வினைகளின் மேல் பழிபோட்டுக் கெடுகின்றவருக்குநமது பெரியோர்கள் நல்ல அறிவுரையும் சொல்லியுள்ளார்கள்; செய்யும் தொழிலில் விதி வினைகள் குறுக்கிட்டாலும் நாம் நமது உழைப்பாலும், அறிவு வன்மையாலும் வென்று விடலாம் என்று நம் முன்னோர் நன்றாக அழுத்தம் திருத்தமாக அறிவுறுத்தியுள்ளார்கள். அப்படியிருந்தும் மிகப்பலர் தெளிவில்லாமல் “ஐயோ; வினையே” என்று அழுவதும், அதற்காக நவக்கிரகங்களுக்கு வழிபாடு செய்வதும் மேற்கொண்டு அவதிப்படு கின்றார்கள். அவர்களுக்குத் திருஞானசம்பந்தர் முதலியோர் அறிவுறுத்யத்உரை செவியில் ஏறுவதில்லை; தெளிவில்லாத சோதிடரும் திறமையில்லாத கோயில் பூசாரியும் சொல்லுவது தான் நல்ல அறிவுரையாக விளங்குகிறது. வணிகர் சமுதாததில் இந்த இழிவானநிலை எப்படி உண்டாயிற்று? ஏன் உண்டாயிற்று? என்பன போன்ற ஐயங்கள் இப்பொழுது எழுந்துள்ளன. அவற்றை ஆராய்ந்தால் அது பெரிய புதிர் பாரதமாய் விரியும். வாணிகத்தின் கீழ்நிலைக்குக் காரணமாக ஒன்றைமாத்திரம் இப்போது தெளிவாகக் கூறலாம். வாணிகம் என்பது மக்கட் சமுதாயத் துக்குச் செய்யும் சிறந்த தொண்டு என்பது மேனாட்டவர் கொள்கை நம் நாட்டவர் அதனை ஒரு சூதாட்டமென்று கருதுகின்றார்கள். பெருத்த நிலையில் வாணிகம் செய்து ஒருவர் கெட்டு விடுவாரானால் ‘சூதாட்டத்திலும் எப்படி வெற்றிதோல்விகள் நிலையில்லையோ அப்படியே வாணிபத்திலும் இலாப நட்டங்கள் நிலையில்லை’ என்று சொல்வது வழக்கமாக இருப்பது யாவரும் தெரிந்த செய்தி. வாணிபம் ஒரு சூதாட்டம் என்று எவன் எக்காலத்தில் சொன்னானோ தெரியவில்லை. அந்தப் படுபாவியின் சொல்லால் நமது நாடு வாணிகவுலகில் மதிப்பிழந்து போயிற்று. வணிகரிடையே பொய்யும் வஞ்சனையும் மோசமும் இயற்கைப் பண்பாக அமைந்து விட்டன. தூயநிலையில் பொருளை விற்பதும் கிடைக்கச் செய்வதும் பாவம் என்று இந்நாளைய வணிகர். உலகம் மறைவாகத் தனக்குள் நினைக்கிறது. சொல்லுகிறது. நமது நாட்டுப் பாராளுமன்றத்தில் ஒருமுறை நமதுநாட்டு வாணிகத்தைப்பற்றிப் பேச்சுவந்தபோது வணிகத்துறை அமைச்சரா யிருந்த அறிஞர் எழுந்து நின்று நம்நாட்டு வணிகரிடம் உள்ளதென ஒரு பெருங்குறையை எடுத்துக்கூறினார். நம் நாட்டு வணிகர் தாம் விற்கும் பண்டங்களில் மோசமும் வஞ்சனையும் செய்கிறார்கள்; அதனால் வெளிநாட்ட வர்க்கு நம்பிக்கை குறைந்துவிட்டது என்று வருந்திக் கூறினார். வெளிநாட்டு மக்கள் இகழ்ந்து வெறுத்துத் தள்ளக்கூடிய அளவு பண்டங்களில் மோசம் செய்யப்படுகிற தென்றால், உள்நாட்டு வாணிகத்தில் நடக்கும் வஞ்சனைக்கு அளவு சொல்ல முடியுமா? வஞ்சமும், மோசமுத் தானே வணிகர் வாயிலும் கையிலும் நிலவுகின்றன. மக்களுக்குத் தேவையான பொருள்களுள் அரிசி, பருப்பு, புளி, மிளகு, மிளகாய்ப்பொடி முதலியன மிகவும் சிறந்தவை. நமது நாட்டுக் கடைத்தெருவில் விற்கப்படும் அரிசி முதலியவைகளை ஆராய்ந்தால் கல்லும் மணலும் கலவாத அரிசியும், பருப்பும் கிடையாது. புளியில் களிமண்ணையும், மிளகில் வேறு விதை களையும் மிளகாய்ப் பொடியில் செங்கற் பொடியையும் கலந்துவிடு கிறார்கள். நல்லெண்ணெயில் வேறு எண்ணெய்களைக் கலப்பதும், சீனியில் மணலைக் கலப்பதும், பாலில் நீரையும் வெண்ணெயில் மெழுகையும் கலப்பதும் இயல்பாகவுள்ளன. துணிக்கடையில் நடக்கும் மோசங்களுக்கு எல்லையில்லை. எட்டு முழம் துணி வாங்கினால் அது மீள அளக்கும்போது ஏழரை முழத்துக்கு மிகுவ தில்லை; எழு முழச்சீலை யென்பான்! அளந்தால் அது ஆறரை கசமே யிருக்கும்; ஆறு முழம் வேட்டி யென்பதை அளந்தால் அது ஐந்தரை முழந்தான் இருக்கும். இவற்றை நாடோறும் காண்பதால் மக்கள் மனதில் வாணிகம்என்பது சூதும் வஞ்சனையும் கலந்ததொழில் என்ற கருத்து வேரூன்றிவிட்டது. மக்களில்பெரும்பாலோர் போதிய கல்வியறி வில்லாதவர்களாதலால் வாணிகத்திற்கு இந்த இழிநிலை இயல்பாய்ப் போய்விட்டது; இந்த மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட மக்களும் இவர்களில் வேறானவரல்லர். ஆதலால், அவர்கள் நடத்தும் அரசியலும் இதைத் தீங்கு என்று நினைக்கவோ, இத்தீங்கை ஒழித்துக்கட்டுவதற்கேற்ற நடவடிக்கை மேற்கொள்ளவோ முன்வர வில்லை. உள்நாட்டில் இப்படிச்செய்து பழகிய மோசம் வெளிநாடு களுக்கு ஏற்றுமதிசெய்யும் பொருள்களில் பெருமிதமாகப் புகுந்து வெளிநாட்டவர் இகழ்ந்து வெறுத்துத் தள்ளுதற்குரிய அவக்கேட்டை விளைவித்திருக்கிறது. பொருள் துறையில் படிப்படியாக முன்னேற முயன்றுகொண்டிருக்கும் நமது நாட்டுக்கு இந்தஇழிசெயல் பெருத்ததீங்கை உண்டுபண்ணி வருவதை நமது நாட்டு வணிகர்கள் நினைப்பதாகவும் தெரியவில்லை; சமுதாயத்துக்கு இதனால் எவ்வளவுபெரிய துரோகம் செய்யப்படுகிறது என்பதும் அவர்கள் அறிவுக்கு எட்டியதாகத் தோன்றவில்லை. இன்றும் இந்த வஞ்சனையும் மோசமும் துரோகமும் நமது நாட்டு வணிகம் சூழலில் வளமாக நிலைபெற்றிருப்பதே இதற்குத் தக்க சான்று பகருகின்றது. இந்தநிலை நமதுநாட்டு வாணிகத்துறையில் நிலவுவதால் ஒருவர் பல ஆயிரக்கணக்கில் வைத்து வாணிகம் செய்தாலும் அவர் சொல்லும் விலையில், சொல்லும் சொல்லில், ஏழைமக்களும் நம்பிக்கை வைப்பதில்லை. ஒரு பொருளின் விலை அவர் ஒரு ரூபா என்பாரானால், வாங்குபவர் அதைச் சிறிதும் நம்பாமல் முக்கால்ரூபா அல்லவா? என்று கேட்பார். பின்பு சிறிதுபோது சொல்லாடல் நிகழும்; முடிவில் அவர் அந்தப் பொருளை முக்கால் ரூபாய்க்கோ என்பது பைசாவுக்கோ வாங்கிக்கொண்டு போவார்; பல்லாயிரம் ரூபாய் முதல்வைத்து வாணிகம் செய்யும் முதலாளியின் சொல் மதிப்பிழந்து பொய்பட்டே போகும். தனது சொல்பொய்படுவதையோ அதனால் தனது நாணயம் பொதுமக்கள் முன்பு கெட்டு நிற்பதையோ அவர் நினைப்பதும் இல்லை; உணருவதும் இல்லை. வேறு சிலர் தமது சொல்லுக்கு மதிப்போ நாணயமோ பொது மக்கள் வையாமை கண்டு “ஒரே விலை” என்று வாணிகம் செய்யத் தலைப்பட்டடனர்; ஆயினும் ஒரே விலைக் கேற்ற உயர்ந்த பொருளை அளவு குறையாமல் விற்பதைநெகிழ விட்டனர்; ஒரேவிலை என்பாரிடத்தும் பொது மக்களுக்கு நம்பிக்கை இல்லாமல் போய்விட்டது. மக்கள் சமுதாயத்தில் நம்பிக்கையும் நாணயமும் உண்டு பண்ணாத வாணிகமோ தொழிலோ எதுவும் பலநாள் நீடிக்க இயலாதாகையால்,நிறுவிய ஒரு சில ஆண்டுகளில் மிகப்பல வணிகர் வீழ்ச்சியுற்று இருந்த இடம் தெரியாமல் மறைந்து போயினர்; போகின்றனர். நமதுநாட்டு வணிகர் சொல்லும் சொற்களில் நம்பிக்கை இல்லாது போனபடியாலும், அவர்கள் விற்கும் பொருள்களில் வஞ்சனையும் மோசமும் கலந்துள்ளமையாலும், வாங்கும் பொது மக்கள் எந்தக் கடைக்குச் சென்றாலும், கடைக்காரர் சொல்லும் விலையைக் குறைத்துக் கேட்கும் (பேரம் பேசும்) வழக்கமும், அவர்தரும் பொருளின் தன்மையிலும் அளவிலும் ஐயப்படும் வழக்கமும் இயல்பாய் உள்ளன. இதனால் நமது நாட்டின் பெயரும் மதிப்பும் கெடுவதுகண்டே நமது அரசியலார் வெளிநாடு செல்லும் நமது நாட்டவர்க்குச் சில அறிவுரைகளை அச்சடித்துத் தருகின்றார்கள். அவற்றில் ஒன்று: “நீங்கள் வேறு நாடுகளில் கடைக்குச் சென்றால், வாங்கவிரும்பும் பொருளுக்கு என்ன விலை சொல்லப்படுகிறதோ, அதை அப்படியே கொடுத்துவிடவேண்டும்; பேரம் பேசக்கூடாது” என்பது. சென்ற சில ஆண்டுகட்குமுன் நமது தென்னாட்டிலிருந்து அமெரிக்கநாட்டிற்குச் சென்றிருந்த ஒருவர், ஒருகடையில் ஒரு பொருளின் விலையைக் கடைக்காரர் சொன்ன விலைக்குக் குறைவாகக் கேட்டாரென்பதற்காக அக்கடைமுதல்வர் அவர்மேல் “மானநட்ட வழக்குத்தொடுத்த” செய்தி நாடறிந்த தொன்று. அதனால் நமது நாட்டு வாணிகத்தின் மானம் “கப்பலேறி விட்டது.” இப்படியே மிளகுப் பொதியில் வேறு பொருள் கலந்தும், புளியில் மண்ணைக் கலந்தும் நமதுநாட்டு வாணிகம் நமது நாட்டின் புகழுக்கும் பெருமைக்கும் பொல்லாத பழியும் வசையும் கொண்டு வந்ததைச் செய்தித்தாள்கள் தெரிவித்துள்ளன. வட அமெரிக்காவில் இல்லினாய்ஸ் என்பது ஒரு மாகாணம்; அங்கே சிகாகோ என்றெரு பெரிய நகரம் உளது. அந்நகரத்தில் ஒரு வாணிக நிலையம் சிறப்புடன் தொடங்கி வாணிகம் புரிந்துவந்தது. பலசெல்வர்கள் அதற்குப் பங்காளிகளாக இருந்தனர். சில ஆண்டு கட்குப் பின் அதன் வாணிகத்தில் ஏதோ ஒரு குறையுண்டாக, அவ்வாணிக நிலையம் பெரு நட்டத்துக்கு உள்ளாகி வீழ்ச்சியடையத் தொடங்கிற்று. பங்காளிகளுக்கு மனவேதனை மிகுந்தது. “முதலிலார்க்கு ஊதியம் இல்லை” என்றாற்போல முதலுக்கே கேடு தோன்றத் தலைப்பட்டது. அப்போது அதன் பங்காளிகளில் ஒருவரான ஹர்பார்ட் டெயிலர் (Herbart Teylor) என்பவர் தலைமையில் அதனை ஒப்படைத்தனர். அப்போது அவர் வேறோரிடத்தில் மிக்க வருவாயுள்ள தொழிலில் ஈடுபட்டிருந்தார், ஆயினும் அவர் அதனைத்துறந்து விட்டு இந்த வணிக நிலையத்தை ஏற்று நடத்தும் பொறுப்பை மேற்கொண்டார். டெயிலர் (H.Teylor) முதல்வராய் சிறிது காலம் அதன் நடை முறைகளை நன்கு ஆராய்ந்தார். தொழிலாளிகளின் சொற்களையும் செயல்களையும் ஊன்றி நோக்கினார். விற்கப்படும் பொருள்களின் நலம் தீங்குகளை நன்றாகப் பார்வையிட்டார். வாணிகத்தின் மதிப்புக்கும் நாணயத்துக்கும் மாசுஉண்டாக்கிய காரணங்களைக் கண்டார்; அவற்றைப் போக்கும் துறையில் அவர் கருத்து ஆழ்ந்து நின்றது. முடிவில் அவர் மாசு துடைத்து மதிப்பை உயர்த்திப் பொதுமக்கள் மனத்தில் நம்பிக்கை உண்டுபண்ணுதற்கென்று மறக்கலாகா மத்திரங்கள் நான்கு கண்டு பிடித்தார். அவற்றைப் பின்பு ஒவ்வொரு தொழிலாளிக்கும் “உபதேசித்து” மறவாமல் கைக்கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தினார். தொழிலாளரின் மனதில் வேரூன்றிய “மந்திரம்”, விரைவில் செயல்பட்டது. சிறிது காலத்திற்குள் அவரது வாணிக நிலையத்தின் புகழ் காட்டுத் தீப்போல் எங்கும் பரவிற்று; வாணிகம் பெருகிற்று; ஊதியம் மிகுந்தது; விழும் நிலையிலிருந்த நிலையம் 20000 டாலர் வருவாயுள்ள பெரு வாணிகமாய் இன்று பிறங்கியுளது. மக்கள் அனைவருக்கும் அதன்பால் மிக்க நம்பிக்கையும் நன்மதிப்பும் உண்டாகவே, இப்போது யாவரும் பாராட்டும் பெருமை பெற்று விளங்குகிறது. அப்படியானால் அந்த “மந்திரம்” யாது என அறிய வேண்டு மன்றோ? அதனை அவர் ரோட்டரி யென்னும் சுழல்கழகத்தின் வாயிலாக உலக மக்கள் அறிந்து பயன்படுமாறு விளக்கமாகத் தெரிவித்துள்ளார். 1. யாரேனும் தமது வாணிக நிலையத்துக்கோ கடைக்கோ வந்து ஏதேனும் ஒரு பொருளைக் கேட்டால், அப்பொருள் இருக்கு மானால், அதை ஆராய்ந்து, “இது உண்மையான பொருள்தானா?” என்று முதலில் பார்க்கவேண்டும். இது தான் முதல் மந்திரம், போலியாகவோ மோசமானதாகவோ அந்தப் பொருள் இருக்கக் கூடாது, உண்மையானதாக இருந்தால்தான் கொடுக்கவேண்டும். 2. ஒரு பொருளின் விலையைச் சொல்லி வாங்கும்போது நாம் வாங்கும் விலை நேர்மையானதா? என்று காணவேண்டும். இஃது இரண்டாவது மந்திரம். நேர்மையில்லாத வழியில் விலை குறிப்பதும் விற்பதும் மக்கள் மனதில் அருவருப்பை உண்டாக்கும்; அதனால் வாணிகம் தடைப்பட்டுச் சீரழியும். 3. நாம் இப்படிச் சொல்லுவதாலும் செய்வதாலும் நம்மிடத்தில் பொதுமக்களுக்கு நல்ல நம்பிக்கை உண்டாகுமா? பொதுமக்களுக்கும் நமக்கும் இடையே உயர்ந்த நட்பு உண்டாகுமா? என்று ஆய்ந்தறிய வேண்டுவது மூன்றாவது மந்திரம். நம்பிக்கையால் வாணிகம் பெருகும்; நட்பினால் அது செழிக்கும். நாட்டில் நமது தொழிலுக்கு மதிப்பும் புகழும் தோன்றிச் சிறக்கும். 4. நமது இந்தச் செய்கையால் எல்லோர்க்கும் நன்மை விளையுமா? என்று நோக்குவது நான்காவது மந்திரம். பிறர்க்கு நன்மை செய்வது குறித்தே வாணிகத் தொழில் உண்டாகியிருக்கிறது. அவரவர்க்குத் தேவைப்படும் பொருள்களை அவரவரும் தாமே தேடிக்கொள்வது எளிதில் நடக்கக்கூடியதன்று. ஒருவர் உண்டு பண்ண, உண்டு பண்ணிய பொருள்களை ஒருவர் ஓரிடத்தே கொண்டு சேர்த்துத் தொகுக்க, ஒருவர் அவற்றைப் பலருக்கும் வகுக்க, ஒருவர் எடுத்து விற்க, இப்படிப் பலரும் பலவகையில் உழைக்க வேண்டும். நமது செயலால் வாங்குபவரும் விளைவிப்பரும் இடையில் பல நிலைகளில் வேலை செய்பவரும் யாவரும் நன்மை பெறவேண்டும். மேலும், தேவைப்பட்டு வாங்குவோருள்ளும் ஏழை எளியவர், சிறியவர் முதியவர், தெரிந்தவர் தெரியாதவர் யாவரும் இதனால் நன்மையடைய வேண்டும். தேவைப் பட்ட பொருள் செம்மையான நிலையில் கிடைக்கப் பெற்றால் பெறுகின்ற மக்கள் மனதில் அமைதியும் இன்பமும் உண்டாகும். இவ்வாறு மக்கட் சமுதாயம் தேவையானவைகளைச் சிறந்த நிலையில் பெற்று அமைதியாகவும் இன்பமாகவும் மனநிறைவோடும் வாழுமாறு தன் செயலை நாணயமாகவும் ஒழுங்காகவும் செய்வது தான் உண்மையான வாணிகம்; இது பற்றியே, பொதுமக்கட்குச் செய்யும் தொண்டுகளில் தலைசிறந்தது வாணிகம் என அறிஞர் கூறுகின்றனர். இந்த மறக்கலாகா மந்திரம் உரிமைகொண்டு வாழும் உலகில் முன்னேறிய நாடுகளில் வணிகர் சமுதாயத்தில் நன்கு பரவியிருப்பதால், அந்த நாடுகள் செல்வமும் புகழும் சிறப்புறப் பெற்றுத் திகழ்கின்றன. நமது நாட்டு வணிகர்களும், வாணிகம் என்பது பொதுமக்கட்குச் செய்யும் பெரிய தொண்டு என்பதை அறிய முடியாத பேதைகளல்லர்; அதனால் அவர்கள் இந்த “நால்வகை மந்திரங்களையும்” கற்று நடைமுறையில் தவறாமல் கையாளுவார்களானால் சிறப்பும் செல்வமும் பெற்று மகிழும் ஏனைய நாடுகளைப் போல நமது நாடும் பொருளும் புகழும் பூத்துப் பொன்னாடாய்ப் பொற்புமிகும். வளர்க வாணிகம்! வாழ்க தமிழகம்! 26. சுந்தரகாண்டம் முதற்பகுதி (மாதிரிப்பதிப்பு) மதிப்புரை (கம்பர் பாடிய இராமாயணத்தின் சுந்தரகாண்டத்தில் உள்ள படலங்களுள் முதல் ஐந்து படலங்களைத் தொகுத்து மாதிரிப் பதிப்பாக வெளிவந்திருக்கும் இந்த நூல் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் வெள்ளி விழா மலர்; இதனை அண்ணாமலைப் பல்கலைக் கழகம், துணை வேந்தராய் முன்னாள் இருந்த திரு. C.P. இராமசாமி ஐயர் அவர்களின் ஆங்கில முன்னுரையும் அவர்க்கு உதவியாய் இருந்த திரு. இராமநாதபிள்ளையவர்களின் தமிழ் முன்னுரையும் சேர்த்து வெளியிட்டுள்ளது. இந்நிலையில் இது விற்பனைக்குரிய தன்மையில் விலை குறிக்கப்படவில்லை போலும்.) இடைக்காலச் சோழவேந்தர் காலத்தில் தமிழில் தோன்றிய பெருங்காப்பிய நூல்களில் கம்பரது இராமாயணம் தலைசிறந்தது. அஃது ஏழு காண்டங்களையுடையது; எனினும் முதல் ஆறு காண்டங்களே கம்பர் பாடியவை என்ற கருத்துத் தமிழகத்தில் நன்கு வேரூன்றியுளது. ஏழாவதாகிய உத்தரகாண்டம் கம்பர் செய்தது அன்று என்றும்; ஒட்டக்கூத்தர் பாடியது என்றும் ஒரு கருத்து, கம்பரும் ஒட்டக் கூத்தரும் என்ற தலைப்பில் பிற்காலத்தார் புனைந்து விட்ட ஆதாரமற்ற பொய்க்கரைகளை அடிப்படையாகக் கொண்டு நிலவுகிறது. கம்பராமாயணம் மூலம் மட்டில் சென்ற எழுபது ஆண்டுகளில் பல அறிஞர்களால் பல வேறு சமயங்களில் அச்சிட்டு வெளிப்படுத்தப் பெற்றுள்ளது. இவற்றின் பொதுவாக அச்சுத் தொழிலிலும் கையெழுத்து வகையிலும் எத்தனை வகையான பிழைகள் செய்யப் படுமோ அத்தனையும் ஒருங்கே காணத்தக்க வகையில் இவ்வெளியீடுகள் இருந்து வந்தன. இப்போது கடைத்தெருக்களில் கம்பராமாயண மூலமே கிடைப்பது அரிதாய் விட்டது. சென்ற சில பல ஆண்டுகளாகக் கம்பராமாயணத்தைப் படிப்பதிலும் ஆராய்வதிலும் தமிழ்மக்களிடையே பேரூக்கம் எழுந்து நல்ல பயன் விளைத்து வருகிறது. அதன் பயனாக அண்ணாமலைப் பல்கலைக் கழகம் நாட்டில் கிடைக்கப் பெறும் ஓலைச்சுவடிகளையும் அச்சுப்படிகளையும் கொண்டு பாடவேறு பாடகளை ஆராய்ந்து மிகச்சிறந்தமுறையில் வெளியிடுதற்கு முன்வந்துள்ளது. தமிழகத்தின் நடுநாயகமாய் விளங்கும் தில்லையில் அமைந்துள்ள அண்ணாமலைப் பல்கலைக் கழகம் தமிழ்ப் பல்கலைக் கழகமெனப் பாராட்டப்படும் தகுதியும் பணியும் உடையதாகையால், இந்துப் பெருங் காப்பியத்தை நன்கு ஆராய்ந்து வெளியிடுவது பெரிதும் பொருத்தமும் சிறப்புமாகும். அது பற்றித் தமிழகம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்துக்கு நன்றி செலுத்தப் பெரிதும் கடமைப்பட்டுள்ளது. இதனைப் பல்கலைக்கழகம் வெளியிடுதற்குக் காரண முதல்வராயிருந்தவர் அதன் துணைவேந்தராய் விளங்கிய திரு. ஆர். கே. சண்முகம் செட்டியார் அவர்களாவர். அவர்களுடைய இந்த அரும்பணியைத் தமிழகம் ஒருகாலும் மறவாது. இதற்கு ஆதரவளித்த தமிழ்ப் பெருமகனார் ராஜா. சர்.முத்தையா செட்டியார் அவர்கட்கும் பெரு நன்கொடை வழங்கிச் சிறப்பித்த திருப்பனந்தாள் ஸ்ரீ காசிமடத்துத் தலைவர் ஸ்ரீலஸ்ரீ அருணந்தி தம்பிரான் சுவாமிகள் அவர்கட்கும் இன்றைய தமிழ் மக்களின் நன்றி பெரிதும் உரியதாகும். இப்போது அண்ணாமலைப் பல்கலைக் கழக வெள்ளி விழா மலராக வெளி வந்திருப்பது கம்ப ராமாணத்துச் சுந்தரகாண்டத்தின் முதற்பகுதியின் மாதிரிப் பதிப்பு, இதனை வெளியிடு முகத்தால் தமிழகத்து அறிஞர்களை இதன்கண் கருத்தைச் செலுத்தி இவ்வெளியீடு சிறந்தமுறையில் அமைவதற்கேற்ற திருத்தங்களை வழங்குமாறு பதிப்பாசிரியர்கள் தெரிவிக்கின்றனர். இம் மாதிரிப் பதிப்பின் முன்னுரை, கம்பராமாயணத்துக்கு இராமாவதாரம் எனக் கம்பர் பெயரிட்டதிறமும், அவதார மென்பதன் பொருள் விளக்கமும் இராமாவதாரத்தின் அமைப்பும் இராமாவதார நூலாசிரியரான கம்பரது வரலாற்றுக் குறிப்பும் அவர் வாழ்ந்த காலமும் மிகவும் தெளிவாக எடுத்துரைக்கின்றது. இந்நூற்கள் பல காண்டங்கள் இருப்ப, சுந்தரகாண்டத்தை முதற்கண் வரைந்து கொண்டதற்குக் காரணம், “உலகநூன் முறையாலும் அறிவுனூன் முறையாலும் பல்வேறு உறுதிப் பொருள்களை நுவலுதலால் சுந்தரகாண்டம் மற்றைக்காண்டங்களிலும் சிறப்புடைத்து என்பது” என்றும், “சுந்தர காண்டம் பல்லோராலும் சிறப்பாகப் போற்றிப் பாராயணம் செய்யப்படுதல் உலகம் அறிந்த தொன்று” என்றும் இப் பதிப்பின் முன்னுரை எடுத்து மொழிகின்றது. சுந்தரகாண்டத்தின் முதற்பகுதியாகிய இம் மாதிரி பதிப்பில் முதல் ஐந்து படலங்களே எடுத்துக் கொள்ளப்பட்டன. சுந்தரகாண்டம் நுதலிய பொருளும் படலந்தோறும் படலம் நுதலிய பொருளும் முறையே தொடக்கத்தில் தந்திருப்பதும் பாட்டுக்களின் பொருளைப் படிப்பவர் இனிது உணர்ந்து கொள்ளுமாறு அருஞ்சொற் றொடர்கட்கப் பொருளும், வேண்டுமிடங்களில் வினை முடிபும், சிறிது விரிவாகத் தொடர்க்கருத்தும் எழுதியிருப்பதும் இப் பதிப்புக்கு மிக்க அழகு தருகின்றன. முடிவில் ஒவ்வொரு பாட்டிலும் காணப்பட்ட பாட வேறுபாடுகள் கண்ணும் கருத்துமாய் ஆராய்ந்து காட்டப்பட்டிருப்பது பதிப்பாசிரியர்களின் உழைப்பின் பெருமையை உலகறியச் செய்கின்றது. இந் நூற்பதிப்பை அச்சிடும் வகையில் மாசுமறுவின்றிக் கண் கவரும் வகையில் அச்சிட்டுத் தந்தவர்களின் திறம் கண்டு வியந்து பணிகொண்ட பல்கலைக் கழகத்தின் செயல்வன்மை பெரிதும் பாராட்டற்குரிய தொன்று. இத்தகைய அச்சு வேலைப்பாடு இது காறும் வெளிவந்துள்ள அண்ணாமலைப் பல்கலைக் கழக வெளியீடுகளுள் எதற்கும் வாய்த்ததில்லை. இம் மாதிரிப்பதிப்பு இம்முறையிலே நடைபெறுவதுதான் யாவரும் விரும்புவது. எனினும், ஒவ்வொரு பாட்டையும் சந்தி பிரிக்காமல் சீர் முதலிய யாப்பமை குன்றாத வகையில் ஒரு முறையும், “சந்தி பிரித்துப் பொருள் இயைபிற் கேற்பச் சீர் வரையறை நோக்காது சொற்களைக் கூட்டியும், தொடர்மொழிக் குறியீடுகளை ஆங்காங்கு இட்டும்” ஒரு முறையுமாக இரண்டுமுறை அச்சிடுவது வேண்டத் தக்கதன்று. யாதேனும் ஒன்றைக் கடைப் பிடிப்பது நல்லது; இரண்டனுள் யாப்பமைதி குன்றாமல் முதற்கண் பதித்த முறையே பல்கலைக் கழகப்பதிப்புக்கு மாண்பு தருவதாகும். சீர்களைச் சிதைத்து யாப்பமைதி கெடுத்து எழுத்தெழுத்தாகப் பிரித்து அச்சிடுவது கம்பருடைய பாட்டிசையைக் கேட்க விரும்பாதார் செய்யவிரும்பும் செய்யுட் கொலையாம் என்பதை வருத்தத்தோடு தெரிவிப்பதுடன், இக் கொலை வினையைப் பல்கலைக் கழகம் செய்தல் அறமன்றென்பதையும் வற்புறுத்த விரும்புகிறோம். பல்லாயிரக்கணக்கில் உள்ள கம்பராமாயணப் பாட்டுக்கட்கு உரைக்குறிப்பு எழுதிச் சேர்ப்பது இக்காலத்துக்கு வேண்டுவ தொன்றே. இத்தகைய பெருங்காப்பியத்துக்குப் பள்ளிமாணவர் பாடங்கட்கு எழுதப்படும் உரைபோலப் பதவுரை பொழிப்புரை எழுதிச் சேர்ப்பதும் மிக விரிந்த குறிப்புரை எழுதிச் சேர்ப்பதும் இப்பதிப்புக்களை எல்லோரும் வாங்கிப்படிக்கும் அத்துணை எளிய நிலைக்குக் கொண்டுசெல்லா. “சீவகசிந்தாமணி என்ற பெருங்காப் பியத்துக்கு நச்சினார்க்கினியர் எழுதிக்காட்டியிருக்கும் உரை முறை தான் கம்பராமாயணம் கந்தபுராணம் பாரதம் முதலிய பொருள் காப்பியங்கட்கு எழுதத்தக்க உரை முறை” என்று காலஞ்சென்ற டாக்டர் திரு.உ.வே. சாமிநாதையர் முதல் அண்மையில் நம்மிடை இருந்து மறைந்த திரு. பண்டிதமணி மு.கதிரேசன்செட்டியார் உள்ளிட்ட அறிஞர் பலரும் கூறிச்சென்றனர். இனி வரும் பதிப்பில் நச்சினார்க்கினியர் காட்டிய உரைநெறி மேற்கொள்ளப்படுமாயின், யாவரும் எளிதில் வாங்கிப்படித்துப் பயன் பெறத்தக்க சிறப்பு இப்பதிப்புக்கட்கு உண்டாகும் என்பது உண்மை. இனி, கம்பருடைய வரலாறு கூறுமிடத்து இவரைப் பற்றி நாட்டில் வழங்கும் பல்வேறு குறிப்புக்களையும் தொகுத்துக் காட்டிப் பொய்யும் புனைந்துரையு மாவனவற்றைக் களைந்து எறிதலும் கம்பருடைய காலநிலை பற்றிய பலவேறு குறிப்புக் களையும் எடுத்தோதி முடிவு காட்டுதலும் இப் பதிப்புக்களின் முன்னுரையில் இடம் பெறுவது சிறப்பு. இறுதியில் காட்டப் பெற்றிருக்கும் பாடவேறுபாடுகள் அனைத்தையும் அவ்வப் பாட்டின் அடிக்குறிப்பில் காட்டுவதுதான் படிப்போர் உண்மை யுணர்தற்கு அமைந்த முறை; அப்பொழுதும் பொருள் வேறுபாடும் சொல் வேறுபாடும் பொருந்திய பாடலகளை மாத்திரம் மேற்கொண்டு ஏடு படித்தோராலும் ஏடு எழுதினோராலும் பெயர்த்துக் காகிதத்தில் எழுதினோராலும் ஆக்கப்பட்ட பிழைப் பாடல்களை ஆங்காங்கே கையுதிர்த் தொழிதலே செய்யத்தக்கதாகும். இதற்கு டாக்டர் உ.வே.சா.ஐயர் வெளியிட்டுள்ள பாலகாண்டம் நேரிய வழிகாட்டியாகும். 27. வாழ் நாள் உலகின்கண் தோன்றி, நின்று, மடியும், உயிர்கள் உடலோடு தோன்றி நிலவுதலைக் காண்பவர், “இவ்வுயிர்கள் வாழ்கின்றன,” என்றும், தான் நின்ற உடம்பின் நீங்கி உயிர்பிரிந்த வழி, “இவ்வுயிர் கள் வாழ்நாள் முடிந்தன,” என்றும் வழங்குவர். இவ்வழக்கம், “வாழ்நாள்” என்னும் தொடர்க்கு “உயிர் உடலோடு கூடியுறையும் காலம்” என்னும் பொருளைத் தருகின்றது. உடலோடு கூடியுறையும் உயிர், அவ்வுடலைத் துணைகொண்டு வினைசெய்யுமிடத்து நுகரும் இன்பம், துன்பம் என்னும் இரண்டனுள் இன்பமே மிக்கு அவ்வுயிரால் நுகரப்படும்போது, “இவ்வுயிரின் வாழ்வே வாழ் வாகும்” எனச் சிறப்பித்தும், ஏனையது மிக்க வழி, “இவ்வுயிரின் வாழ்வு வாழ்வாகாது” என்றும் கூறும். கருத்துப் பற்றி, “முப்பது வருஷம் வாழ்ந்தவரும், நிகழ்வு முதலிய வேறுபாடே பற்றிக் காலம் பலவென்றல் சாலாதெனின்! - அற்றன்று; ஒருவன் தானே தந்தையை நோக்கி மகனும், மகனை நோக்கித் தந்தையுமாதலும், நெடியனை நோக்கிக் குறியனும், குறியனை நோக்கி நெடியனுமாதல்போல, பலவேறு வகைப்பட்ட பொருள்களை நோக்கிப் பலவேறு வகைப்பட வழங்கும் இறப்பு முதலியன மாறுபட்ட தன்மைய வல்லவாகலின், அவற்றை நோக்கிக் காலம் ஒன்றேயாயினும், ஒரு குடத்தின் கண்ணவாகிய இறப்பு, நிகழ்வு, எதிர்வு என்பன மாறுபட்ட தன்மையவாதல் காட்சிப் புலனாகலின், அவற்றைநோக்கி காலம் பலவாதல் சாலும் என்க,” என்று விரித்துரைத்தருளினர். இவ் விரிவுரையாற் காலம் உள்ளதே என்பதும், அது பலவாமென்பதும் பெறப்பட்டனவாம். ஒருபொருள் மற்றொரு பொருளொடு தொகுமிடத்து, அவ்விரண்டற்கும் தொடர்பொன்றும் இல்லையேல் தொகுதல் ஆகா தென்பது யாவரும் அறிந்தது. அப்பொருளிடமாக நிகழும் சொற்களும் அன்னவாகலின், வாழ்நாள் என்ற தொகைச்சொற்கண் வாழ்தல் என்ற வினையும், நாள் என்னும் பெயரும்தொக்கு நிற்றற்குரிய தொடர்புவேண்டும். அத்தொடர்புகள் பலவாயினும், ஆசிரியர் தொல்காப்பியனார் வினைச்சொல் பெயர்ச்சொல் லொடுதொக்கும், எச்சமாய் நின்று பெயர்கொண்டும் முடிதற்கு “நிலனும் பொருளும் காலமும் கருவியும், வினை முதற் கிளவியும் வினையுமுளப்பட, அவ்வறு பொருட்கும் ஓரன்னவுரிமைய” (தொல். சொல். 234) என்னும் சூத்திரத்து நிலம் முதலியன தொடர்புடைய என்றனராகலின், இத்தொகைச் சொல்லினும் வாழ்தல் வினைக்குரிய காலம் முடிக்குஞ் சொல்லாய், வினையொடு தொக்கு ஒரு சொல்லாய் நிற்பதாயிற்று. ஆகலின், வினைக்கும் காலத்துக்கும் தொடர்புண்மையும் பெற்றாம். உயிர்கள் உணருந் தன்மையுடையவாகலின் வினை முதலா தற்குரியனவாகும். இன்ப துன்பங்களை யுணர்தலும் நுகர்தலுமே உயிருணர்வின் பயனாகலின், அவ்வுயிர்கள் அவற்றைப் பெறுதற் குரிய வினைகட்கு வினைமுதலாகின்றன. உயிர்கள் உடலோடு கூடுதலே வினைப்பயனாகிய இன்பதுன்பங்களை நுகர் தற்பொருட் டேயாகலின், உடலோடு ஒன்றிய உயிர்தோன்றும் பொழுதே வினையும் உடன் தோன்றுகின்றது. அங்ஙனம் தோன்றும் வினைக்கு அது வினைமுதலாய், அவ்வினையை நிகழ்த்துமிடத்து அதன் பயன் தோன்றாதொழிதல் ஒருகாலுமில்லை. ஆதலால், தான் நுகர்தற் பாலதாகிய வினைப்பயன் குறித்து உயிர் வினை முதலாதலும் வினையுளதாதலும் ஒருதலை யென்று கோடல்வேண்டும். அங்கு உளதாகத் துணிந்த வினைமேல் வினைமுதலாகிய உயிர்கள் சென்று அதனைச் செய்தற்குரிய நெறியினைச் சமய நூல்கள் கலாதத்துவம் என்றும் கூறும், உயிர் கட்கு அறிவு, இச்சை, தொழில் என மூன்று நிலையுண்டென்றும், அவ்வுயிர்கள் வினைப்பயன் நுகர்தல் கருதித் தொழின் மேற் செல்லுமாறு அத்தொழில் நிலையை விளக்குவது இக்கலாதத்துவமாகும் என்றும் கூறுப. வினை, தொழில், செய்கையென்பன ஒரு பொருளன. இனி, கலையால் விளக்கமுற்று வினைபுரிவான் வினை முதலாகிய உயிர்க்கு வேண்டுவது வினைப்பயனேயன்றி வேறு ஒன்றும் அன்று. அப்பயனை விளைக்கும் வினை, அதற்குக் காரண மாயினும், அதனை வரையறைப்படுத்து, உயிரை நுகர்விக்கு மிடத்து, காலம் பெருந்தொடர்பு பெறுகின்றது. இப்பெருந் தொடர்பு தானும் துணைக்காரணத் தொடர்பேயாம். ஒருவன் தன் நுகர்ச்சிக்கென ஈட்டிய பொருள் மலையெனக் குவிந்தகாலையும், ஒருநாளை நுகர்ச்சி, இருநாளை நுகர்ச்சியெனக் காலத்தால் வரையறை செய்யப்பட்டு அந்நுகர்பொருள் கழிதலை நாடோறும் நாம் காணுதலின், பயனாகிய நுகர்பொருளைக் காலம் நுகர்விக்கும் துணைக்காரணமாய் நிற்றல் அறியப்படுகின்றது. அன்றியும், ஒரு வினை தொடங்கியவுடனே பயன் காண்டல் இன்மையின், அது தொடங்கி, நிலவி, முடிதற்கும் காலம் துணை செய்தலின், வினை நிகழ்ச்சிக்கும் காலம் துணைக்காரணமாதல் பெறப்படும். இது பற்றியே, “அருத்திமிகம் கலைகால நியதியுடன் வித்தையராகமிவை அனந்தரான் மாயை தனிலாகும்” எனச் சிவப்பிரகாசம் என்னும், தண்டமிழ் நூலும், “கலாதத்துவம், காலமும் நியதியும் தனக்குத் துணைக்கருவியாகக்கொண்டு, முதற்காரணமாய் நின்று, வித்தை, அராகம் முதலிய தத்துவங்களெல்லாவற்றையும் தன்பால் நின்றும் தோற்றுவிக்கும்,” எனத் தத்துவப் பிரகாசம் என்னும் வடநூலும் ஓதுகின்றன. தொல்காப்பியமென்னும் செந்தமிழ் இலக்கணமும், “வினையெனப்படுவது வேற்றுமை கொள்ளாது நினையுங்காலைக் காலமொடு தோன்றும்” என்றும், காலமொடு தோன்றாதனபோல் தோன்றும் குறிப்புவினையும் நினையுங்காற் காலமொடு தோன்று மென்பதனை “நினையுங்காலை” என்ற இலேசினால் எய்துவித்து, “அம்முக்காலமும் குறிப்பொடுகொள்ளும், மெய்ந்நிலையுடைய” எனவரும் சூத்திரத்தால் யாப்புறுத்தும் கூறுவதாயிற்று. இனி, வினைக்கும், வினைப்பயன் நுகர்ச்சிக்கும் துணைக் காரணமாய் நிற்கும் காலம், வினையின், திட்பநுட்பங்கட்கும், வினைப்பயன்களின் பெருமை சிறுமைகட்கும் தக நீண்டும் குறுகியும் நிலவும் என்பது போதரும். ஒரு வினைமுதல் ஈட்டிய வினைப்பயன் பெரிதாயவழி, அதுதான் நின்ற உடலோடு நெடிதுநின்று அதனைத் துய்த்துத் தீரும்; அப்பயன் கழியுமளவும் அதனை வரையறை செய்து அவ்வுயிரை நுகர்வித்தல் வேண்டுதலின், அதன் வாழ்நாள் நீடுதல் தானே அமையும். இதனை நினையாது ஓருயிர்க்கு வாழ்நாள் இத்துணை என வகுத்தல் வாய்மையாகாது கழிதல் பெரும்பான்மை. ஓருயிர் நுகர்தற்குரிய வினைப்பயனும், அதற்குரியவினையும் அவ்வுயிரால் அறியமுடியாமையின், வாழ்நாளை வரையறுத்துக் கூறுதல் கூடாமையின்பாற் படுவதாயிற்று. முற்றத்துறந்த முனிவரரும், கற்றுத் துறைபோகிய காட்சியரும் இந்நெறியில் மயங்குகின்றனர். நெடிது வாழலாமெனக் கருதுமோருயிர், கடிதுபொழுதில் உடல் விட்டேகுதல் நாடோறும் நிகழும் நிகழ்ச்சியாயிற்று. இதனைக் கண்ணுற்றே நம் வன்றொண்டப் பெருந்தகையார், “ஒன்றலா வுயிர்வாழ்க்கையை நினைந்திட் டுடல்தளர்ந்தருமா நிதியியற்றி என்றும் வாழலாம் எமக்கெனப் பேசும் இதுவும் பொய்யெனவே நினையுளமே” என்றும், திருவாரூர்ச் செல்வனார், “தந்தையார் தாயாருடன் பிறந்தார் தாரமார் புத்திரரார் தாந்தாமாரே வந்தவாறெங்ஙனே போமாறேதோ மாயமாம் இதற்கேது மகிழவேண்டா” என்றும், சீகாழிப் பிள்ளையார், “மற்றிவ் வாழ்க்கை மெய்யெனும் மனத்தினைத் தவிர்ந்துநீர் பற்றிவாழ்மின் சேவடி பணிந்துவந் தெழுமினோ” (கோடிகா. 8) என்றும் கூறிப்போயினர். இனி, இக்காலத்தையும் ஒருவாறு துணிந்து கூறுதலுமுண்டு. இத்துணிபிற்குரிய பொருள்கள் திண்ணியவாய்க் கிடைத்தில வாயினும், உயிர்களுட் பல நெடிது வாழ்தலைக்கண்டு அந்நெடு வாழ்வின் முறையே பிறவுயிரும் வாழலாம் என எதிர்நோக்கிக் கூறுவதேயாம். அளவைகளாலும் பொருந்துமாற்றாலும் பொருள் களையாராய்ந்து கூறிய தெய்வப்புலமைத் திருவள்ளுவனாரும் “நெருநல் உளன் ஒருவன் இன்றில்லையென்னும், பெருமை யுடைத்திவ்வுலகு” என்றதையன்றி, வாழ்நாளெல்லையை வரையறுத்துக் கூறிற்றிலர். “வேதநூற் பிராயம் நூறு” என ஓதிய பெரியார் வாய்மொழியினையும், பிறவாழ்க்கை நிலைகளையும் கண்டு மக்களுயிர்க்கு வாழ்நாளெல்லை நூறாண்டாகும் என்ப. இனி, மேனாட்டார் கருதிக் கூறுவனவற்றை யாராய்வாம்: மக்களுயிருள் ஒன்று உலகிற்றோன்றித் தானே தன் வாழ்க்கையைத் தொடங்குதற் கெய்துங்காலம் அதற்குரிய வளர்ச்சிக் காலமாகும். அக்காலத்திற்குவேண்டும் யாண்டுகளின் தொகையினை ஆறாதல் ஏழாதல்கொண்டு பெருக்கியவழியெய்தும்யாண்டுகளின் தொகை அவ்வுயிர் உடலோடுகூடி வாழுங் காலநிலை யென்று ஒரு முடிபு கொண்டு, மேனாட்டறிஞர் பலர் வாழ்நாளெல்லையை வரை யறுக்கப் புகுந்தனர். அவருட்டலையாயவர் பபூன் என்பாராவர். அவர், “மக்கள் வளர்ச்சிக்குரிய வாலப்பருவம் பதினான் காண்டுகளாதலின், அவர் தம் வாழ்நாளும் எண்பத்து நான் காண்டாதல் தொண்Qற்றெட்டு யாண்டுகளாதல்வேண்டும்,” என்று கூறினர். அவர் கூற்று, நூறாண்டென்பார் கூற்றோடு நெருங்குதலின், உடன்படற்பாலதாயினும், வளர்ச்சிக் காலமாகிய வாலப்பருவத்துக்கு வகுத்த யாண்டுகள் சாலா. அவ் “வாலப்பருவம்” பதினான்கினும் மிக்க யாண்டுகள் வேண்டி நிற்பதை இன்றும் காணலாம். அன்றியும், மக்களுட் பலர் தொண்ணுற்றெட்டி யாண்டு கழிந்த காலையும் கட்டுக்குலையா உடல்வன்மையும், நிறப் பொலிவும் ஒளியும் உடையராய்த் திகழ்வார் உளராகலின், அவ்வரையறை வாழ்நாள் எல்லையாதற் கியைவதன்றாம். இவர் கூற்றினால் ஊக்கப்பெற்றெழுந்த பிளாரன்ஸ் என்பார், மக்களுயிரோடு விலங்கினங்களின் உயிரையும்கொண்டு, உயிர்கட் குரிய வாழ்நாளெல்லையை வரையறை செய்யத் துணிந்தார். விலங்கினம் வாலப்பருவம் வாழ்நாளெல்லை ஒட்டகம் 8 ஆண்டு 40 ஆண்டு குதிரை 5 ” 25 ” ஆனேறு 4 ” 15,20 ” அரியேறு 4 ” 15,20 ” நாய் 2 ” 10,12 ” மக்கள் 20 ” 100 ” மிகுதி. இவற்றை நோக்குமிடத்து, பபூன் என்பார் கூறியதுபோலாது, வளர்ச்சிக்குரிய யாண்டுகள் வாழ்நாளெல்லைக்குவேண்டும் யாண்டுகளுட் சற்றேறக்குறைய ஐந்தனுள் ஒரு பகுதியாமென்பது பெறப்படுகின்றது. இனி, டேவிட் என்பவர் மக்கட்கு வயது எழுபஃதென்றும், அவருள் உயர்குலமக்கட்கு ஐம்பதும், வணிகர் முதலிய மடியிலா மக்கட்கு ஐம்பத்தைந்தும், உழப்பிற் காழ்த்த உடலுடையார்க்கு ஐந்து தலையிட்ட அறுபஃது என்றும், கைத்தொழிற்சாலையில் உழைக்கும் கருங்கை வினைஞர்க்கு எழுபஃது என்றும் வாழ் நாள் எல்லை வகுப்பர். மற்று, இவர் கூறிய ஆண்டெல்லை, மேலே துணிந்த நூறாண்டெல்லைக்கு முப்பஃது குறைதலும், அவலக் கவலை முதலியவற்றால் தவலா வாழ்வினர் பலர் இவர் கூறிய எல்லையின் மிக்குவாழ்தலுமுண்மையின், பொருந்தாமை எய்துகின்றது. இனி, ஒரு சாரார் வாழ்வாவது இணைவிழைச்சுப் பெற்று இன்பநுகர்தற்குரிய நிலைமை யென்றும், அதற்குரிய காலமே வாழ்விற்குச் சிறந்த காலமாவது என்றும் கூறுவர். இந்நுண்ணுணர் வில்லார் இன்பத்தோடியைந்த வாழ்வு, இணைவிழைச்சின்பத் தோடியைந்த வாழ்வு இரண்டுநாளைய வாழ்வாயினும் அமையும் என்பர். உயிர்கள் வாழ்க்கைச்சாகாட்டையுகைக்கு மிடத்து, விரையச்செலுத்தலுறின், இளமை, முதுமை முதலிய நிலைவகை யல்லற்பட்டு, ஏனை நிலைக்குரிய வலியும் திறலுமிழந்து, முதிரா முதுமையுற்றுப் பெரும் பிறிதுறுவர் என்பது அறிஞர்துணிபு. இத்துணிபினையுட்கொள்ளாராய், இப்பெற்றியோர், முதுக்குறைவும் இணைவிழைச்சும்பெற்று, முதுமையும், முடிவுநிலையாகிய சாக்காடும் விரையப்பெற்றுக் கழிவர். இது மேலேகூறிய கருங்கை வினைஞர்குழுவில் என்றும் காணப்பெறும் காட்சியாகும். பத்து மூன்றும் கடந்ததும் மகளிர் பருவ அச்சீமாட்டிக்கு வயது நூற்று நாற்பதிற்குக் குறையாது; அவர்க்கு மூன்று முறை பற்கள் விழுந்து முளைத்தன, என்று வரைந்துள்ளார். 7 வின்னிங்டன் (winnington) நாட்டு ஆல்பர்பரி (alberbury) என்னுமிடத்தில் 1483 ஆம் ஆண்டில் ஜான் பார் என்பாருக்குத் தாமஸ்பார் (thomas parr) என்பவர் பிறந்து எண்பது ஆண்டுகாறும் மண வினையின்றியிருந்து பின், ஜேன் (jane), என்னும் பெண் ணொருத்தியை மணந்து, அவரோடு முப்பத்திரண்டு யாண்டுகள் வாழ்ந்தார். அக்காலவெல்லைக்குள். அப்பெண் இரண்டுமக்களைப் பயந்தாள், அவற்றுள் ஒன்று ஒரு திங்களும், மற்றொன்று சிலயாண்டுகளுமிருந்து, பின்னர் இறந்தொழிந்தன. பத்துயாண்டுகட்குப்பின், இவர்தம் நூற்றிருபதாம் ஆண்டில் காதரைன் மில்டன் (catharine milton) என்னும் குமரியைக்காதலித்து மணந்து, ஒருமகனைப் பெற்று, தம்நூற்றியைம்பத்திரண்டாமாண்டில் உயிர்துறந்தார். இவர் இறப்பதற்கு இருதிங்களின்முன் அருண்டேல் நாட்டுத்தலைவரான தாமஸ் (thomas, earl of arundale) என்பார் வெஸ்டு மினிஸ்டர் (westminister) என்னுமிடத்திற்குக் கொண்டு போந்தனர். இதனை நோக்க ஆசிரியர் நக்கீரனார் “அறுநான் கிரட்டியிளமை நல்லியாண்டு, ஆறினிற் கழிப்பிய அறன்நவில் கொள்கை” யரைக்கூறியது புனைந்துரையன்மை புலனாம். அங்கு, இவர் பெரும் பாலானகாலத்தை உறங்கியே கழித்தார். அக்காலத்து இவரைக் காணப் போந்த மக்கள் மிகப்பலர்; தாம்தங்கியவிடமும், உண்ட உணவும் தம்முடலுக்கு ஒவ்வாமையின், விரைவில் 1635 ஆம் ஆண்டின் நவம்பர்த்திங்கள் பதினைந்தாம் நாள் விண்ணுலக நெடுவாழ்வை விரும்பியேகினர். இவ்வகைய நீடியவாழ்க்கையர் அரியர் ஆகலின், இவருடல் வெஸ்ட் மினிஸ்டரைச்சார்ந்த இடு காட்டுக் கோட்டத்தே இடப்பெற்றுளது. 8 “யார்க்ஷயர் (yorkshire) நாட்டைச் சேர்ந்துள்ள போல்டன் (bolton) என்னுமிடத்தே என்ரிஜென்கின்ஸ் (henry jenkins) என்னும் பெயருள்ள ஒருவர் இருந்தனர். அக்காலத்தே நீதிமன்றத்தில் நிலவழக்கொன்றின் பொருட்டுச் சான்று பகர்தல் வேண்டி இவர் போந்திருந்தார். இவருடன் அம்மன்றத்தே எண்பது வயது நிரம்பியசான்றோர் இருவர் வந்திருந்தனர். அக்காலை, நீதிபதி, ஹென்ரியை நோக்கி, “ஐயன்மீர், முதுமைமிக்க சான்றோர் இருவர் வேறே உளர் என்பதனையுட்கொண்டு, நீவிர் கூறுவதனை நன்கு நினைந்து கூறுமின்”, என்றனர். என்றார்க்கு இவர், “அறிஞர் பெரும, அவ்விருவரையும் அவர்தம் இளமை யினின்றே யறிந்துளேன்; அவர் பிள்ளைப்பருவத்தே துள்ளி யாடியசெய்கை என்நினைவின்கண்நிற்கின்றது,” என்று இசைத்தனர். அதுகேட்ட நீதிபதி, வியப்புற்று, அவ்விருவரையும் நோக்கினாராக, அவர்தாமும், “அறவோர் தலைவ, இப்பெரியார்யாம் அறிந்தவரே. யாங்கள் பள்ளியிற்பயிலும் போதே, இவர் எம்மிற்பலயாண்டு மூத்துத் தோன்றினர்; எம்மின் மூத்துளயாண்டுகள் இத்துணைய வென்றலும் எங்கட்காகாது,” என்று வலியமொழிந்தனர். இச்செய்தியைக் கூறும் தாங்க்ரைட்ராபின்சன் (tankrite robinson) என்னும் அறிஞரும், “ஹென்ரி ஜான்கின்சனுக்கு ஹென்ரி viii என்னும் இங்கிலாந்து வேந்தனும், பிளாடன் பீல்டு (flodden field) என்னுமிடத்து நிகழ்ந்த போரும் நன்குதெரியும்; அக்காலத்து அவர்க்கு வயது பன்னிரண்டு; இவர் 1670 ஆண்டு டிசம்பர்திங்கள் எட்டாம் நாள் தம் நூற்றி யறுபத்தொன்பதாம் ஆண்டில் எலர்ட்டன் அப்பான்ஸ்வேல் என்னுமிடத்தே தம் இம்மை வாழ்வுநீத்தார்,” இனி, நம்நாட்டிலும் நீண்ட ஆயுளையுடைய மக்கள் இருந் திருப்பர் என்றதற்கு ஐயமில்லை, எனினும் எடுத்துக் காட்டு தற்குரிய சான்றுகள் கிடைத்தல் அருமையென்று கோடல் வேண்டு மேயன்றி, அப்பெற்றியோர் இருந்திலர் என்று கோடலாகாது. மீசை மயிரின் கருமை குலையாதிருந்த ஜூரன்பார் என்பாரைப்போல யாண்டுபலவாகியும் நரை திரையின்றி உடலுரங்கொண்டிருந்த பிசிராந்தையார், அருநெல்லிக்கனி யுண்டு பலவாண்டுகள் வாழ்ந்த ஒளவையார் முதலியபலரும் உளர் என்று உணர்தல் வேண்டும். “இன்றுளேம் நாளையில்லோம்,” “இன்றைக்கிருப்பாரை நாளைக்கிருப்பரென் றெண்ணவோ திடமில்லை,” என்றெல்லாம் கூறியபெரியார் சொற்களின் கருத்தை உணராமல், “நாளைக்கிருப்பது நாமறியோம்” என்றுகூறி மடியுற்று, தாளாண்மை கல்வியறிவுடைமை, ஒப்புரவுடைமை முதலிய நற்செய்கைகளைக் கைவிட்டுத் திரியாது, நாம் நூறாண்டினும் மிக்கயாண்டு வாழ்தல் கூடும் என்னும் உணர்வுடன் வாழ்தலே யாவரும் வேண்டுவதாகும். ஆகுங்கால் வினைப்பயன்களின் பெருமை சிறுமைகட்கேற்பக் காலம் நீடலும் குறுகலும் உண்டென்பதனை யுட்கொண்டு, அதனால் பயன் நுகர்ச்சியை நெடிது துய்த்து, அத்துய்ப்புக்குத் துணையாகும் காலத்தை நல்வினையாக்கத்தே செலவிடுதல் அயராவின்பம் அடைதற்குரிய ஆக்கமாம் என்றறிந்தமைதல் வேண்டும். “வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன் வாழ்நாள் வழியடைக்கும் கல்.” - தமிழ்ப் பொழில் 28. கருவிலே வாய்த்த திரு உலகில் மக்கள் பலவேறுவகையான செயல்களைச் செய் கின்றனர். ஒருசிலர் தாம் செய்ய வேண்டியவற்றைப் பிறர்துணை யன்றி தாமாகவே நினைந்து செய்கின்றனர்; ஒருசிலர், பிறர்துணை கொண்டு செய்கின்றனர்; வேறுசிலர் பிறர் ஏவல் வழிநின்று, அவர் காட்டக் கண்டு செய்கின்றனர். செய்வோர் திறம் இதுவாக, செயப்படு பொருள்கள், ஒருசில யாவராலும் மதிக்கத்தகுவனவாகவும், ஒருசில வியக்கத் தகுவனவாகவும், வேறு சிலவியப்பும் மதிப்பும் இலவாகவும் இருக்கின்றன. யாவராலும் வியக்கத்தகும் செயப்படு பொருள்கள் தாமும், பிறர் துணையின்றி ஒருவரால் தனிமையிற் செய்யப்படின், செய்தவரது அறிவுமாண்பும் கருவிமாண்பும் பிறவும் வியப்போரால் நினைத்துப் பாராட்டப் படுகின்றன. இவ்வாறு பாராட்டப்பெறும் தக்கோரது செயலின் சிறப்பியல்பினை ஆராய்ந்து உண்மை காண முயல்வோர் சிலரே; அத் தக்கோரது தகவு கருவிலேயே வாய்த்ததிரு என்று கூறியமைவோரோ பலர். உண்மைகாணும் அறிவுரம் பெற்றாரும் உயர்ந்தோர் ஒருவர்பால், நிகழும் வினையாற் பிறக்கும் செயப்படுபொருள்கள், உயர்ந்த தோர் பலரும் உவந்துபாராட்டக் தக்க நிலையில் நிற்ப. அவற்றைகாணுங்கால், அவர்பால் அச்செயற்குறிய தளர்ச்சியும், சோர்வும் புலனாகாமை கண்ட விடத்து, “இன்னோரன்னவற்றைச் செய்வது இவர்கட்கு எளிதன்று. இச் செயல்வன்மை இவர்கட்குக் “கருவிலேவாய்த்த திரு,” என்கின்றனர். எனவே, செயற்கரிய செய்யும் பெரியார்பால், அரிய செய்கை யொன்று நிகழ்ந்த விடத்து, செயலருமை காணும் சிறப்புடைய மக்கள், அச்செயலின் சிறப்புத் தோன்ற, “கருவிலே வாய்த்த திரு” என்ற தொடரைச் சிறக்கக் கூறிப்பாராட்டுவர் என்பது விளங்குகிறது. கருவிலே வாய்த்ததிரு என்ற தொடருள், கருவென்பது பிறப்பையும், திருவென்பது சிறப்பையும் சுட்டிநிற்கின்றன. கருவாய்க்கிடந்து உருவு சிறந்து பிறவி பெறுதல் உயிர்கட்கு இயல்பு. ஆதலால், இத்தொடரும் உயிருடைப் பொருளையே சுட்டி வருதலுடையதாகும். மேலும், திருவென்பது கண்டாரால் விரும்பப்படும் தன்மை யென்பவாகலின், ஓருயிரிடத்து கண்டாரால் விரும்பிப் பாராட்டப்பெறும் செயற் சிறப்புத் தோன்றினும், அதுதானும், எல்லாவுயிர்க்கும் பொதுவாய். அமையாது. சிலவற்றின் பால் சிறப்பாய் அமைந்து தோன்றினும், அச்சிறப்பும் அமைதியும் ஒருங்க விளங்குதற்கு, கருவிலே வாய்த்த திரு என்ற சொற்றொடர் அழகுற வழங்கப் பெறும். மனிதவுயிர் மண்ணிற் றோன்றிப் பலநாள் கழித்த பிறகே தனக்குறியவற்றைத் தானே தேடிச் செய்வன செய்யும் திறம் பெறுகிறது. ஏனைமாக்களுட் சிலவும், புள்ளினத்துப் பலவும் பிறக்கும்போதே, தாம் வாழும் இடம், காலம் முதலியவற்றின் நிலைக்கேற்ப, வினையறிவும், வினையினை ஆற்றற்குறிய திட்பமும் பெற்றுத் திருவுடையவாய் விளங்குகின்றன. ஏனைவுயிர்களை நோக்கப் புள்ளுயிர்கள், சில இயல்புகளைக் கருவிலேயே திருவுறப் பெற்றிருத்தலை நாம் நாளும் காணலாம். இவற்றின் திருவுடைமை யினை ஆராய்ந்து கண்ட மில்ட்டன் மெக்காயி (milton mackaye) என்னும் அமெரிக்க நாட்டு அறிஞர் கூறிய செய்தியினை ஈண்டுத் தமிழில் எழுதுகின்றேன். ஆஸ்திரேலியாவில் ஒருவகை வான் கோழிகள் வாழ்கின்றன. அவற்றைத் தர்மா மீட்டர் (Thermometer) பறவை யென்று அங் குள்ளவர் கூறுகின்றனர். அவை ஆணும் பெண்ணுமாகக் கூடிவாழும் அமைதியுடையவாகும். அவை கூடமைக்கும் முறை மிக அழகிது. அவற்றுட் பெண்கோழி முட்டையிடுதற்குரிய காலம் நெருங்குகையில், ஞாயிற்றின் வெயில் உறைப்பதும், மணற்பாங்கானதுமான ஓர் இடத்தைக் கண்டு, ஓரடியாழமுள்ள குழியொன்றைச் செய்யும், பின்பு, அதனுள் சருகும் புல்லும் கொணர்ந்து பெய்து, அவை வெயிலாலும் மழையாலும் உறைபட்டு மட்குவிக்கும், அவை மட்கத்தொடங்குங்கால், அக்குழியின்மேல் தன் கூட்டினைக் கட்டத்தொடங்கும் சேவற்கோழியும், அச்செயற்குத் தன்னின் இயன்ற உதவியினைச் செய்கின்றது. இக் கோழி யமைக்கும் கூடு மூன்றடி உயரம் பெற்று வட்டமாக சமைந்து நிற்கிறது. இதன் குறுக்களவு (Diameter) நான்கடியாகும். கூட்டின்புறம் குச்சிகளாலும் சிறுசிறு கொம்பு களாலும் சன்னல் பின்னலாகத் தொடுக்கப்பட்டுளது. மேலும், இது, மிக்க வன்மை யுடையதாகலின், காற்றிற்கும் மழைக்கும் பிறவற்றிற்கும் சிறிதும் தளர்வுறுவதும் இல்லை. இத்துணை வன்மை யுறக் கட்டப் பெற்ற இக்கூடு முடிவு பெற்றதும், இப்பறவைகள், இதன்கண் வந்து தங்குவதில்லை. ஆறுநாட்களோ, ஒன்பதுநாட்களோ கழிந்தபிறகுதான், இக்கூட்டிற்குவரும். வரும்போது பெண்கோழி, புறத்தே வழியொன்று செய்து கூட்டின் உட்புகுந்து முட்டை யொன்றையிடும். பின்பு, அதனை மூடி விட்டுச் சேவலொடு நீங்கிவிடும்; மறுபடியும் மூன்று நாள் கழித்தே கூடுநோக்கி வரும். வரும்போதும், அது, முன்போலவே குழிசெய்து, உட்புகுந்து ஒரே முட்டை யிட்டுவிட்டு நீங்கிவிடும். இவ்வாறு அது, மூன்று நாட்களோ, நான்கு நாட்களோ, இடை யிட்டு இடையிட்டு, பதினான்கு முட்டைகளை இடும். அதற்குமேல், பெண்கோழி முட்டையிடுவதாகத் தெரியவில்லை. இவ்வாறு பதினான்கு முட்டைகளும் இடப்பட்டவுடன், அக்கோழி, அக்கூட்டிற்குள் நுழையாமல், புறத்தே தான் செய்த வழியையும் மூடிவிடுகிறது. அதனால், கூட்டின் உட்புறத்தே புழுக்கம் உண்டாகிறது; வெப்பமும் மிகுகின்றது. முட்டைக்குத் தொண்Q று திகிரி (Degree)யளவுள்ள வெப்பமே வேண்டப்படுகிறது. கூட்டின் அகத்தேநிலவும் வெப்பம் அவ்வளவில் மிகுமாயின், அதனைத் தாய்க்கோழி எவ்வண்ணமாகவோ தெரிந்து கொண்டு, புறத்தே வழியொன்று செய்து, அதன் வழியாகக் குளிர் காற்று உள்ளே செல்லவிடுகின்றது. மிக்குற்ற வெப்பம் அத்தொண்Q று திகிரிக்கு இறங்கியதும், குளிர் காற்று நுழைந்து, மேலும் இறங்காத வாறு தாய்ப்பறவை தடைசெய்து விடுகின்றது. இவ்வாறு, கூட்ட கத்தில் தொண்Qறு திகிரி யளவுள்ள வெப்பமே நிலவுமாறு செய்யும் இத் தருமாமீட்டர் பறவையின் வித்தகம் நினைக்குந் தோறும் வியப்புத் தருகின்றது. இவ்வகையில் சுமார் நாற்பத்தைந்து நாட்கள் சென்றதும் முட்டைகள் பொரிக்கின்றன. குஞ்சுகள் வெளிப்பட்டு, அக் குழியிலிருந்து மண்வழியே மேலேறி வெளிவருகின்றன. தாம் இருக்குமிடத்து வெப்பம் தமக்குப் போதாதென்று அக்குஞ்சுகள் வெளிவந்து விடுகின்றன என்பர். இவ்வாறு தன்னைச்சுற்றி நிலவும் காற்றினது வெப்பநிலையை அளந்து காண்டலும், ஓரளவிலேயே வெப்பநிலையை நிறுத்திக் கொள்ளலும் ஆகிய இச்செயல்கள், மக்களுள், இயற்கை நூற்புலவர் பெரு மக்களுள் சிறந்தவர்க்கும் எளிதில் முடியாதனவாக இருக்க, இவற்றைச் சிறு வருத்தமும் முயற்சியும் கருவியும் பிறவுமின்றி, இவ்வாஸ்திரேலிய வான் கோழிகள் செய்துகொள்ளும் திறம் இவற்றிற்கு கருவிலேயே வாய்த்த திரு என்று கொள்ளவேண்டும். நம் தமிழ் நூல்களில், புள்ளினங்களை அறிஞர் ஐயறிவுயிராகக் கொண்டுளராயினும், இவற்றிற்கு மனவுணர்வு உண்டென்று கூறுவதிலர். ஆசிரியர் தொல்காப்பியனாரும் “மாவும் மாக்களும்” என்றற்றொடக்கத்து விதிகளால், பறவைகட்கு மனவுணர்வு இன்மை தோன்றவே கூறினர். மற்று, மேனாட்டு மக்கள் பலரும் புள்ளினங்கள் நுண்ணறிவுடையவென்றே கருதி வந்தனர். உயிர் நூற் புலவர்கள், ஆண்டுதோறும், இவற்றின் குணஞ்செயல்களை ஆராய்ந்து கொண்டே வருகின்றனர். அவர்கள், “புள்ளினம் நுண்ணுணர்வுடையவென்றல் உண்மையன்று. அவற்றிற்கு நினைத்தல் என்ற செய்கையே கிடையாது; நினைக்கவேண்டிய நியதியும் அவற்றிற்கு வேண்டா. அவற்றின் உயிர்த் தன்மையே (Instinct), அவை செய்தற்குரிய செயற் பன்மைக் காகிய செம்மை நெறிக்கண் அவற்றைச் செலுத்துகிறது.” என்றே கூறுகின்றனர். அமரிக்க நாட்டு நியூயார்க் நகரத்தில், உயிராராய்ச்சிக் கழகம் ஒன்று உளது. அங்கு உயிராராய்ச்சிப் புலவர்களுள் தலைமைப் புலமை நடாத்தும் ராபாட் குஷ்மான் மர்பி* என்பார் பின் வருமாறு கூறுகின்றார். புள்ளினங்களுள் உயர்வுடையன எனக் கருதப்படும் கிளியும், காக்கையும், பிற இன்னிசைப் பறவைகளும் நினைத்தற்குரிய மனப்பொறி, மிகச் சிறிதே யுடையவாகும். சிறு புழுக்களுக்குரிய மனப்பொறியும், இவற்றின் மனப்பொறியும் பெரும்பாலும் ஒத்திருக்கும். ஆயினும், உயிர்த்தன்மையினையே (Instinct) உணர்வுக் கருவியாகக் கொண்டு, செய்வனசெய்து, உயிர்வாழும் புள்ளினங்கள், பல அரிய செயல்களைக் காரணம் தேராமலே, செய்து வருகின்றன. ஒரு செயலைச் செய்தல் வேண்டும் என்றெழும் உயிர்க்கிளர்ச்சியும், செய்கையாற் பிறக்கும் அமைதியும் ஒன்றையொன்று இன்றி யமையாது தொடர் புற்றிருக்கின்றன. *அத்தொடர்புக்குரிய உயிர்ப்பண்பே, பறவைகளின் அருஞ்செயற்குப் போதிய ஏதுவா கின்றது. எவ்வகையாலேனும் இத்தொடர்பு இடையறுமாயின், அவற்றிற்கு உளதாகும் கையறவு நம் நினைவு நிலையினைக் கடந்து நிற்கும் என்பது அப்பெரியார் கூறும்பொருள். பறவைகள் சில காலங்களில் பாடுதலில் வேட்கை மிகுகின்றன. அக்காலத்து அவ்வேட்கையினை அடக்கிக்கொள்ளும் மனநிறை அவற்றிற்கு இருப்பது கிடையாது. வேண்டுங் காலத்துப் பாடுதலும், வேண்டாக் காலத்துப் பாடாதமைதலும் அவற்றிற்கு ஒல்லுவதில்லை. நீர் வழிச் செல்லும் மிதவை போல, வேட்கை வழிச் செல்லும் இயல்பே யுடைமையின், புள்ளினம் உயிர்த் தன்மையினையே உறுவ ஆகின்றன. ஒரு பறவை இட்டு வைத்துள்ள முட்டைகளை நீக்கிவிட்டு, அவற்றைப்போல உருவமும், நிறமும் உடைய கோலி (ரவை) குண்டுகளை வைப்போமாயின், அப்பறவை, உண்மை துணிய மாட்டாது, அவற்றை முட்டையென்றே கருதி யமைந்துவிடக் காணலாம். இதனாலும், அவற்றிற்கு நினைவுச் செய்கை இல்லை யென்பது விளங்குகின்றது. இதைக்காணும் அறிஞர்க்கு, இக்காலத்திற் சிலர் கோழி முட்டைகளோடு வாத்துக்களின் முட்டைகளை வைத்துப் பொரிப்பிக்கும் இயல்பு புதுமையாகா தென்பது தோன்றும். புனைந்துரை வழக்கிலும், புலவர்கள் சங்கீன்ற முத்துக்களை அன்னம் தன் முட்டையெனக் கருதி அடைகாக்க முயலும் எனப் புனைந்துரைத்தற்கும் இயைபுண்டென்று அறியலாம். ஒரு பறவை தன் கூட்டைவிட்டு, இரைதேடற் பொருட்டு நெடுந் தொலைவு செல்லும், செல்லினும்,பொழுது சாய்ந்ததும் அது தன்கூடு இருக்கும் இடத்தைத் தப்பாது சென்று சேர்ந்து விடும். இதனால் இதற்கு உண்மையறிவு உண்டு என்று காணலாம் ஆயினும்,அப்பறவை யில்லாதபோது, அக்கூட்டினை எடுத்து ஒரு கச தூரத்தில் பெயர்த்து வைத்துவிடின், திரும்பிவரும் அப்பறவை நேரே தன் கூட்டைத் தேடியடைவது கிடையாது. முன்னே அமைந்த இடத்தில் அக்கூடு இன்மை கண்டதும், அது விரைந்து பறந்து நெடுந்தூரம் சென்று மீண்டு அவ்விடத்துக்கேவரு கின்றது. இவ்வாறுபலமுறையும் போவதும் வருவது மாகவுழன்று, முடிவில் குருட்டுநெறியாகத் தன் கூட்டை அடைவது உண்டே தவிர, தான்சமைத்த கூட்டினையே சிறிது அமைதியுடன் தேடிக் காணும் திறமை அதன்பால் காணப்பட்டிலது, இரண்டு கசதூரத்தில் பெயர்த்து வைக்கப் பட்டிருந்த தன் கூட்டை யடைவதற்கு ஒரு பறவைக்கு மூன்றுமணி நேரம் வேண்டியிருந்ததாகவும், அத்துணை நேரம் வருந்தி யலைந்தும் முடிவில் தற்செயலாக அக்கூட்டைக் காணமுடிந்ததேயன்றி, தன் அறிவுப்பொறியால் ஆராய்ந்து காணமுடிந்தததாகத் தெரியவில்லை யென்றும் ஆங்கில நாட்டு உயிர் நூலாராய்ச்சியாளர் கூறுகின்றார். “பறவைக் கூட்டைக் கலைக்காதே, பாவம் அது தான் பொல்லாதே” என்று தமிழ் நாட்டில் ஒருபொருளுரை நிலவுவதும், பறவையின் இம்மடமை நிலை கருதியே போலும்! பறவைகள் தம் கூடுகட்கு வருவதும் போவதும் செய்யுமிடத்து, சிறப்புடைய செயலொன்று அவற்றாற் செய்யப்படுகின்றது. வரும்போது ஏதாவதொன்றைக் கொணருவதும் போம்போது ஏதாவதொன்றைக் கொண்டேகுவதும் அவற்றிற் கமைந்த உயிர்த் தன்மை. இத்தன்மை அவை தம் கூட்டைச் “சுகாதார நிலையில்” தூய்தாக, வைத்துக் கோடற்கு உபகாரமாகின்றது. அவைதம் கூடுகளில் தங்கியிருக்குங் காலத்தில் அவற்றால் இடப்பெறும் எச்சங்களால், அக் கூடுகள் தூய்மையின்றிக் கெடலாம். போம் போது ஏதாவதொன்றைக் கொண்டேகுவதாகிய உயிர்த்தன்மையால், அவை குடம்பை நீங்கிப் போம்போது, அவ்வெச்சங்களை எடுத்தேகி விடுகின்றன. அதனால், அக்கூடுகள் எப்போதும் தூயநிலையில் அமைந்து நிற்கின்றன. இதனை நோக்கின், பறவைகள் மக்களைவிட எத்துணைச் சீரிய “சுகாதார” நெறியினவாக இருக்கின்றன என்பது தோன்றும்! இவ்வாறு செய்வதால், குடம்பைகள் தூயவாதலோடு, பகையினங்கள், எச்சங்களின் நாற்றம் உணர்ந்து போந்து தீங்கு செய்தற்கும் ஏது இலதாகின்றது. இவ்வியல்பினை முதன் முதலாகக் கண்ட அறிஞர் சிலர், இவ்வண்ணம் தம் உறையுளை மாசுபடா வகையிற் காக்கும் பறவைகட்கு இந் நன் மாண்புடைமை அவற்றின் இயற்கை மதிநுட்பத்தின் பயன் என்றே துணிந்தனர். கேம்பிரிட்ஸ் சர்வகலாசாலை (cambridge university) யினுள்ள மாணவர் சிலர், இதன் உண்மை துணிய வேண்டி, ஒருபறவையின் கூட்டை, அப்பறவை புறத்தே சென்றது திரும்பிவருவதற்குள், அதன் பார்ப்புக்கள் இட்டிருந்த எச்சம் முதலிய கழிபொருள்களைத் தாமே களைந்து, தூய்மை செய்துவைத்தனர். திரும்பி வந்த பறவை தான் கொணர்ந்த இரைப்பொருளைத் தன் காதற் பார்ப்புகட்கு அருத்திவிட்டு, ஒரு குச்சியினை எடுத்தேகிற்று. அம்மாணவர்கள் முன்போலவே, அக்கூட்டினை அடிக்கடித் தூய்மை செய்து வரலாயினர்; அப்பறவையும் போம்போதெல்லாம் கூட்டிலிருந்தே ஒரு குச்சியினை எடுத்தேகிக் கொண்டே வந்தது. இதற்குள் பார்ப் புக்களும் முதிர ஆரம்பித்தன. முடிவில் அக்கூடு கலைந்தே போயிற்று. “வரும்போதொன்றைக் கொண்டு வருவதும், போம்போ தொன்றைக் கொண்டு செல்வதும் அவற்றிற்கு, ஒரு காரணமுமின்றி நிகழும் செயல்வகையாகலின், புழு முதலிய இரைப்பொருள் கொண்டுவந்த தான், கொண்டு போதற்குரிய எச்சமாதல், பிறவாதல் ஏதும் இல்லாமையால், கூட்டின் குச்சியையே கொண்டு போவ தாயிற்று,” என்று டாக்டர் மர்பி என்னும் பேராசிரியர் காரணங் கூறுகின்றார். ஆப்பிரிக்கா நாட்டில் தூக்கணங் குருவி யினத்தைச் (Weaver bird) சேர்ந்த ஒருவகைப் பறவை இருக்கிறது. சிறு சிறு நார்களையும், குச்சிகளையும் கொணர்ந்து இறுகப் பிணித்து ஒள்ளிய முடிச்சுகளை இட்டுக் குடம்பை (கூடு) யமைத்தல் அதற்கு இயல்பு. உலகில் நல்லறிவுடைய உயிர்களால் அமைக்கப்பெறும் முடிச்சுகளைவிட இதன் முடிச்சுகள் அருமையும் செம்மையும் உடையவாய் இருத் தலின், இவற்றை ஒள்ளிய முடிச்சுகள் என்றாம். இவற்றைக்கண்ட உயிர்நூல் அறிஞர்க்கு, இப்பறவைக்கு இவ்வாறு முடியிடும் வன்மை எவ்வாறு உண்டாயிற்றெனும் ஆராய்ச்சி தோன்றுவதாயிற்று. பலர் பல முடிவுகளைக் கூறுவாராயினர். ஒரு சிலர், இப்பறவையின் தோற்றத்துக்கு முதற்காரணமாக இருந்த முதற்பறவைவகை இவ்வண்ணம் குடம்பை நெய்தமைக்கும் நேர்மையுடையவாய் இருந்திருத்தல் வேண்டும்; அந்நேர்மையே அவற்றின் வழிவந்த இப்பறவைபால் விளங்குவதாயிற்று என்று கூறினர். இக்காலத்து அறிஞர் சிலர் இதன் உண்மை நிலையினைத் துணிந்து காண விரும்பி, இப்பறவையின் முட்டைகளைச் செயற்கை முறையால் பொரிக்கச் செய்து, அப்பொரித்த பார்ப்புக்களையும் தனிப்பட வளர்த்து வந்தனர்; வளர்ந்த அவை, திருந்திய பறவையாகிய வழி, அவற்றின் இனத்துள் எதனோடும் கூடாமலும், காண்பதின்றியும் தனிப்பட வளர்ந்தனவாயினும், தாய்ப் பறவையும் பிறவும் எவ்வாறு அமைத்தனவோ, அவ்வாறே முடிச்சுகள் அமைத்துக் குடம்பை யமைக்கத்தொடங்கின. குலவிச்சை கல்லாமற்பாகம் படுமன்றோ! இதைக்கண்டதும், அவ்வுயிர் நூல் அறிஞர், இச்செய்கை பரமனது திருவருளால் இப்பறவைகட்குக் கருவிலே வாய்ந்த திருவாதல் வேண்டும் என்றே துணிபு கொண்டனர். உயிர் நூலாராய்ச்சியாளர்களால் இதுகாறும் ஆராய்ந்து கூறப் பட்டவற்றால் பறவைகள் மிக்க நுண்ணிய பொறியுணர்வுடையன என்பது தெரிகிறது. ஏனைய உயிரினங்களை நோக்க, பறவையின் பொறியுணர்வு சிறந்ததென்றே ஒரு சிலர் கூறுப. நாகரிகக் குறை வுடைய மக்கள் வாத்து, கோழி முதலியவற்றைத் தங்கள் உறை விடங்களில் மிகுதியாக வைத்து வளர்ப்பர். ஆஸ்திரேலியாவில் வாழும் மக்கள் இவ்வாறு வைத்திருப்பதைக் கண்ட காப்டன் ரெயினாள்ஸ் (Reynolds) என்பவர், அவர்களைக் காரணம் வினவ, அவர்க்கு அவர்கள் பகைவர் வரவை முன்னறிந்துணர்த்தும் முதுக் குறைவு அவற்றின்பால் உண்டு என்று கூறினராம். பகைவர்கள் சேய்மையில் வரும்போதே அவர் வரவினால் எழும் ஓசையை முன்பேகேட்டு, அப்புள்ளினம் சிலைக்கத் தொடங்கும்; அதனைக் கேட்டு நாய்கள் குரைக்கும்; அதனால் அவற்றையுடைய மக்கள் தம்மைக் காத்துக்கோடற்கு வேண்டு வனவற்றை விரைவில் செய்து கொள்வர். நடந்த “மகா யுத்தத்தில்” பிரஞ்சுக்காரருடைய கோட்டைகளுள், ஏபல்டவர் (Eiffel Tower) என்ற விடத்தில் வளர்க்கப்பட்டு வந்தகிள்ளைகள், வான விமானங்கள் மக்கள் கண்ணுக்கும், கண் செய் பொறிக்கும் (Observers) புலனாவதற்கு முன்பே, தமது ஒள்ளிய செவிப் புலனால் இனிதுணர்ந்து அஞ்சி இரைச்சலிடத் தொடங்கினவாம். டாகர் பாங்க் (Dogger Bank) என்னுமிடத்தில் 1915 ஆம் யாண்டில் நடந்த கடற்போரில் இருநூற்றுப் பதினாறு மைல் தூரத்துக்கப்பால் இருந்த சிறு பறவைகள், துப்பாக்கிகளின் வெடிப்போசை கேட்டுச் சிலம்பின என்று குறித்திருக்கின்றனர். அருகிலிருந்த மக்களுள் ஒருவரேனும் அப்போர் முழக்கத்தைக் கேளாதிருக்கவும், இப் பறவைகள் அவ்வோசையினைக் கேட்டுப் பேராவாரம் செய்தன என்பதைச் சிறிது நினைத்துப் பார்க்கின், நுண்ணிய செவிப்புலனுடைமையும் இவற்றிற்குக் கருவிலே பரமனருளால் வாய்த்த திரு என்பது விளங்கும். இவ்வாறு பறவைகள் நேரிய செவிப்புலன் உடையவாத லோடு மிக்க சீர்மையும் கூர்மையுமுடையகட்புலனும் உடையவா மென்பது உயிர் நூலாராய்ச்சியால் அறியப் பட்டிருக்கிறது. அவற்றின் கண்கள் தலையின் இருபக்கத்திலும் நிற்றலின், அவற்றின் இருபார்வையும் நடுநிலைக்கண் ஒன்றும் (Focus) தகுதிப்பேறு பெற்றில. நமது முகத்துக் கண்கள் நேர்முகமாக நின்று பொருளைப் பார்க்குமிடத்து நடுநிலைஒற்று (Focus) பெறுமாறு அமைந்துள. அதனால் நாம் இருகண்களாலும் ஒரு பொருளையேநோக்கும் தகுதிப்பேறு உடையேமாயினோம்; கண்களும் நிலைபெயராது நின்றாங்கு நோக்குகின்றன. பறவையின் பார்வையோவேறுபட்டுளது; ஒரு கண்ணால் ஒரு பொருளை நோக்கு மிடத்து மற்றொருகண் செயலின்றித் தாழ்ந்துவிடுதலும். மூடப் பெறுதலும் உண்டு. ஒரு கட்பார்வை நிகழுமிடத்துக் காக்கைக்கு, மற்றைக்கண் மூடப்படுதல் உண்மை கண்ட திருக்கோவை புடையார், “காகத் திருகண்ணிற் கொன்றே மணிகலந்தாங்கு இருவர் ஆகத்துள் ஓருயிர் கண்டனம் யாம் இன்று” (71) என்று கூறியருளினர். இவ்வாறுவேறுபடும் இக் கண்கள், நேர்பொருளை ஆழ்ந்துநோக்கற்கண், தம்மிற்றாமே ஒப்ப அமைந்துகொள்ளும். இதனை நெடிதாய்ந்தறிந்த வில்லியம் பீபீ (William Beebe) என்பவர், “பறவையின்கண் ஒருசிறு பொழுதிற்குள் தூரதிட்டி யிலிருந்து சூக்குமதிட்டி யாகவும், சூக்குமத்திலிருந்து தூரதிட்டியாகவும் மாறுவது இயல்பாகக் கொண்டு விளங்குகிறது,” என்று துணிந்து கூறியுள்ளனர். இதனாற்றான் விரைந்துபறக்கும் வன்மையினையுடைய பருந்து, கழுகு முதலியன, வானத்தே மிக்க உயரத்தே பறக்கும்போதே தரையில் நகர்ந்து செல்லும் சிறுபூச்சி யினையும் கட்புலனால் தெரிந்து ஞெரேலெனப் பாய்ந்து பற்றுதலும், இவற்றின் வரவினைக் கோழிகள் முன்னறிந்து தம் பார்ப்புக்களைப் புறங்காத்தலும் செய்கின்றன. மணிக்கு எண்பதுமைல் வீதம் பறந்தேகும் புள்ளினம், தரையில் குண்டூசியின் நுனியளவிற்றாய பூச்சியினையும் காண்டலும், கண்டாங்குக் குறிதவறாது அதன்மேற் பாய்ந்து கவர்ந்தேகுதலும் செய்கின்றன. இன்னோரன்ன திருவுடைக் காட்சி யுணர்வு, இவற்றிற்குப் பரமன் திருவருளால் கருவிலே வாய்த்துள தெனக் கூறுவதல்லது பிறிதுயாதும் கூறுதற்கில்லேம். பறவைகளின் சிறப்பியல்புகளை ஆராயப்புகுந்த அறிஞர் பலரும் வேறுபுலம் பெயர்தல் (Migration) என்னும் செய்கை யொன்று பறவைகளின்பால் சிறந்து நிற்கிறதென்கின்றனர். இதனைப் பண்டைக்காலத்துத் தமிழறிஞரும் அறிந்திருந்தனர். “வெள்ளமும் பறவையும் விலங்கும் வேசையர், உள்ளமும் ஒரு வழி ஓட நின்றவன்” என்று கூறும் கம்பர் மொழியின்கண், பறவையின் சிறப்பியல்பு உணரப்பட்டமை நாம் உணர நிற்கின்றது. பறவைகள் ஒருசில பருவகாலங்களில் ஓரிடத்திலும், வேறு காலங்களில் வேறிடங் களிலும் காணப்படுவதுண்டு. தமக்கு உரிய இரைப்பொருள் கிடைத்தற்கு அமைந்த காலங்களில், அக்கால நிகழ்ச்சியுள்ள இடத்தில் இருப்பதும், இவ்வழி வேறிடத்துச் செல்லுதலுமாகிய இச்செய்கை யியல்பே வேறுபுலம் பெயர்தல் எனப்படுகிறது. பருவ வரவு தேர்தலும் தேர்ந்து செய்வன செய்தலும் கூரிய உணர்வுடை யுயிர்கட்கே ஒல்லும் செய்கையாகும். அவ்வியல்பினால், பறவைகள் வேறுபுலம் பெயரும் இயல்பினவாதற்குக் காரணம் யாதாகும் எனச்சில அறிஞர் ஆராய்வாராயினர். அவருட் பலரும், “பருவ வரவின்கண், பறவைகளின் யாக்கையமைப்பில் எழும் சில ரசாயனக் கிளர்ச்சியே, வேறுபுலம் பெயர்தற்கு ஏதுவாகும்” என்கின்றனர். (Scientists generally accept the theory that these seasonal flights are the result of some chemical disturbance in the bird itself) இதனாற்றான், வீடுகளில் கூடமைத்து வளர்க்கப் பெறும் பறவையினமும் அவ்வப் பருவ வரவின்கண் அமைதியின்றி அலைப்பும் சிலைப்பும் கொள்கின்றன என்றும் கூறுப. இவ்வண்ணம் பருவ வரவு தேர்ந்து வேறுபுலம் படரும் பறவைகளின் செலவினைச் சில அறிஞர் ஆராய்ந்து வருகின்றனர். இவ்வாராய்ச்சியின்கண் அரிய செய்திகள் பல அறியப்படுகின்றன. தாட்டரல் (Dotteral) என்னும் பறவை மாலையில் வடவாப்பிரிக்கா வில் உணவுகொண்டு, மறுநாட்காலையில் ஸ்காந்தி நேவியக் கடற்கரையில் (Scandinavian shores) இரைதேர்ந்துண்டு இன்புறுகிறது. திரசி (Thrush) என்னும் புள்ளினத்துள் சாம்பல் நிறமுடையவை, ஏப்பிரல் திங்களில் வட அமரிக்கநாட்டு ஐக்கியமாகாணத்தின் தென்பகுதியில் தங்கி, ஒருதிங்கட்கு பின், அலாஸ்கா என்னும் நாட்டையடைகின்றன. அவற்றின் செலவு நாளொன்றுக்கு 130 மைல் ஆகிறதெனக் கணக்கிட்டிருக்கின்றனர். அந்நாட்டுப் பறவைகளுள் இராபின் (Robin) என்பது நம் நாட்டுக் காக்கையைப் போல ஆங்காங்குத் தங்கி இரைகொள்ளும் இயல்பிற்று. வேறுபுலம் பெயரும் விரகின்கண், அஃது வடவமரிக்காவின் வடபகுதியினைச் சாரச்சார, நாளொன்றுக்கு பதின்மூன்றுமைல் விழுக்காடு செலவு கொண்டு, பின்பு மின்னஸ் டோவா (Minnestoa) என்னும் இடத்தினைக் கடந்ததும், அலாஸ்காநாட்டை நோக்கி, ஏனைப் பறவையினத்தோடு கூடி, மணிக்கு எழுபதுமைல் விழுக்காடு செலவு பெற்றுச்செல்கிறது. இனி, இவ்வண்ணம் வேறுபுலம் பெயரும் விரகுடை உயிர் கட்குத் திசைநிலை காட்டுவது யாதாகும்? பரந்த கடலிலும், விரிந்த மணற்பாலையிலும், உறைந்த பனிவெளியிலும் விரைந்து பறந்தேகும் புள்ளினங்கள், தாம் படர்ந்துசெல்லும் நாடு இருக்கும் திசை தப்பி மயங்கி விடுகின்றனவா? இல்லையே! தாம் படர்ந்த நாட்டைத் தப்பாது சென்றடைதலின், இவற்றிற்குத் திசைகாட்டி நிற்கும் திருவுடைக் கருவியாது கொல்லோ? இவை செல்லுநெறி யில், பிழையாது சேறற்கண் துணைபுரிதற்கு யாதானுமொன்று இருந்தே தீர்தல் வேண்டுமன்றோ! அக்கருவியின் முன், -அத்திப்பியக் கருவியின்முன், -மனிதவுணர்வால் செய்யப்பட்ட செயற்கைத் திசையறி கருவி முன்னிற்றல் கூடுமா? கூடாது, கூடாது. இயற்கை வழியியங்கும் இயல்புடைக்கருவி முன், செயற்கை வழி இயலும் செய்வினைக்கருவி யாது செய்யவல்லதாம்? மேலை அமரிக்காவில் வாழும் புலாவர் (Plover) என்னும் பறவைகள் அலாஸ்கா நாட்டிலிருந்து தெற்குநோக்கி அலூஷியன் தீவுகட்குச் செல்கின்றன. அவற்றின் எதிரே பசிபிக் கென்னும் பரந்த பாய்திரைப் பெருங்கடல்,மாசு மறுவின்றி, நாற்றிசையும் தன் பரப்பே தோன்ற, கருநிறங் காட்டிக் கலக்க மின்றிக் கிடக்கின்றது. பின்பு, அதன் நடுவே ஒருபுறத்தே, நீலப்பெரும் புடவையின் ஒருபுறத்தே வெண்ணித்திலம் பதித்தாற்போல ஹாவாய் (Howai) என்னும் சிறிய தீவு காணப் பெறுகிறது. அச்சிறு நிலப் பகுதியினை நோக்கி இப்பொன்னிறப் புலாவரினம் படர்ந்து வருகின்றது! அட்லாண்டிக் என்னும் பெருங் கடற்கரையில் வாழும் புலா வரினங்கள் நோவாஸ் கோஷியாவிலிருந்து, தரையைத் தீண்டாமலே தென்னமரிக்காவின் தென்பகுதியினை யடைகின்றன, அடைபவை திரும்பு காலையில் வேறு வழியைத் தொடர்ந்து வருகின்றன; மிசிசிப்பி நதிபாயும் வளநாட்டின் வழியே படர்ந்து, உள் நாட்டைக் கடந்து, வடகடற்கரையை யடையும். ஆர்க்டிக் உலகத்தில் தரன் (Tern) என்னும் பறவைகள் வாழ்கின்றன. வடதுருவத்தைக் காணப் புகுந்த வீரர்கள், தாம் இவற்றின் கூடுகளை வடதுருவத்துக்கு நானூற்றைம்பது மைல் தூரத்தே கண்டதாகக் கூறுகின்றனர். அங்குள்ள இவை மாரிக்கால வரவு தேர்ந்து, பதினோராயிரமைல் தூரத்தில் உள்ள தென் துருவ அன்டார்க்டிக் உலகுநோக்கிச் செல்கின்றன. இவ்வரிய காரியத்தை இவை எவ்வண்ணம் செய்கின்றன? இச்செயற்கண் இவை பிழையின்றி ஒழுகுதற்குத் துணையாவது யாது? இவையாவும் இவற்றால் இயல்பாகவே நடைபெறுவன; இஃது இவற்றிற்குக் கருவிலே வாய்த்ததிரு என்பதல்லது பிறிதில்லை. - செந்தமிழ்ச் செல்வி 29. ஞானியார் சுவாமிகள் பொன்விழாப் பாராட்டுரைகள் உலகெலாம் மலர்ந்த பரமன் திருவருள் நலம் நிலவும் நம் தமிழ் நாட்டில் திருந்திய செல்வமுடையார் பலர் உளர்; சீரிய குணஞ் செயல்களுடையாரும் அவரொப்பவுளர். எனினும் இவர்தம் பெயர்க்கும், குணஞ் செயல்கட்கும் ஒற்றுமை பெரிதும் காண்பதரிது. அவ்வாறு காணப்பெறும் தகுதி யுடையார் ஒருவர் உளரெனின், அவருண்மை அந்நாட்டின் அரும் பேறுகளுள் பெரும் பேறாகும். அவரைத் தம்மிடையே பெற்று, அவரது சொல்லும் செயலும் கேட்டும் கண்டும் பேரின்பமடையும் மக்களே பெருமக்களாவ ரெனின், அஃது அனைவரும் விரும்பி யேற்கப்பெறுவ தொன்றாகும். அத்தகைய பெருமக்களாம் பெருமை இன்று நமக்கு எய்தியுளது. இப்பெருமை யெய்தற்குரிய சொல்லும் செயலும், அவற்றிற்கியைந்த பெயரொற்றுமையும் யாவும் ஒப்பவுடைய பெருமகனார், இதுபோது நமக்கு அறிவுச்சுடர் வழங்கிச் சமயவுண்மையும் தமிழ்ப்பெருநூல் நுண்மாண்பும் இனிதுகாட்டி நம்மை உய்வித்து வரும் வள்ளலாகிய தமிழ் மாண்புலமைச் சைவப் பெருந்திரு, சிவசண்முக மெய்ஞ்ஞான சிவாச்சாரிய அடிகளாராவர். இவர்களை இன்று தமிழுலகம், “சிவமணம்கமழும் செஞ்சொல்லும் சண்முகப் பரமனது தனியருள் காட்டும் தகுசெயலும், பொய்யறிவும் பொய்யொழுக்கமும் போக்கி மெய்யறிவும் மெய்யொழுக்கமும் விளக்கி யாவரும் சிவமாந்தன்மை யெய்துவிக்கும் ஆசாரியநெறிடையும், குறைவற நிறைந்த அடிகள், எங்கள் சிவசண்முக மெய்ஞ்ஞான சிவாசாரிய அடிகளே” எனப் பொன்விழாக் கொண்டாடிப் புகழ்ந்து மகிழ்கின்றது. எங்கள் ஆசிரியப் பெருந்தகையாகிய இப்பெருமான் திருவடிகள் இம்மாநிலத்துப் பல்லாண்டு மருவி வாழ்க! எங்கும் என்றும் இன்பமே நிலவுக! நல்லதன் நலனும், தீயதன் தீமையும், உள்ளவாறு காண்டல் அறிவு என்பர். “எப்பொருள் எத்தன்மைத் தாயினும், அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு” என்பர் நம் திருவள்ளுவப் பெருந்தகையார். இவ்வறிவு மக்களினத்து ஒவ்வொருவரிடத்தும் நிலவுகிறதெனினும், செயலாற் பலருமறிய விளங்கி நிற்குமிடத்திற்றான், தன்னுண்மையினை எடுத்துக் காட்டுகின்றது. அதனையுடையாரே அறிவுடையார் என உலகம் போற்றி மகிழ்கின்றது. அவ்வறிவும், பிறர் அறிவுக்கு எளிதிற் புலனாகாச்சமய நுண்பொருளையெடுத்து விளக்குமிடத்து, “ஞானம்” என இந்நாளில் வழங்குகின்றது. இந்த உயரிய ஞான முடையவரையே, “ஞானியார்” என்று பாராட்டி வழங்கற்கு அறிவுடையுலகம் ஒருப்படும். இன்று, “நீவிர் ஞானியார் சுவாமிகளை அறிதிரோ?” என்றும், “ஞானியார் சுவாமிகள் பேசுதல் வேண்டும்; நாம் கேட்க வேண்டும்” என்றும் பலரும் சொல்லாடுவது பெருவழக்காகவுளது. இவ்வழக்கில் வரும் “ஞானியார்” என்னும் சொல்லின் பொருளாக விளங்குபவர் ஒருவர் உளராயின், அவர், மக்களின் மனநிலத்தில் எத்துணை உயரிய இடம் பெற்றுள்ளனர் என்பது, இனிது தோன்றி இன்பம் செய்யும். அந்த, இனிய, அரிய, பெரிய, தூய சொல்லாய 'ஞானியார்’ என்னும் சொற்பொருள் ஆகிய பெருமான், நம் சிவசண்முக மெய்ஞ்ஞான சிவாசாரிய அடிகளேயாவர். “லோககுரு” “மடாதிபதி” எனவரும் சிறப்புப் பெயரையும், “ஞானியார்” என்னும் சிறப்புப் பெயரையும் ஒப்பு நோக்கின், “உண்மை ஞான நிலையம் யாண்டுளது என்பதை நன்கு அறிந்தே, இத்தமிழுலகம் இப்பெருமானைப் பொன்விழா வெடுத்துப் பொலிகின்ற” தென்று அறிவுடையார் அனைவரும் துணிபு காண்பார். தமிழ்நாட்டில், அறிஞர் உலகில், மூன்று பெருமொழிகள் வழக்கில் உள்ளன. அவை, தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம் என்பன வாகும். இம்மூன்றினும் ஒத்த புலமையுடையர் மிகச்சிலரேயாவர். அவருள்ளும் கேட்டார்ப் பிணிக்கும் தகைமையுடைய சொல்வன்மை பெற்றார் மிகச்சிலரே; அச்சிலர் தம் முடிமணியாய்த் திகழும் செம்மை, நம் “ஞானியார் சுவாமிகட்கே உண்டு” என்பது மிகையென மேலோர் நினையார்கள். நம் “ஞானியார் சுவாமிகள்” சீரிய சொல்வன்மையுடையர் என்பது உலகறிந்த செய்தி. “கேளாரும் வேட்பமொழிவதாம் சொல்” என்னும் திருமறை, இவர்தம் சொல்லையே பேரிலக்கிய மாகக் கொண்டது என்னின், அது புனைந்துரையாகாது. இவர்தம் விரிவுரையின் பெருநலத்தை வியந்த எங்கள் கரந்தைக் கவியரசர், “இமையவர் நாட்டமிழ்தினிலும் இனிதினிக்கும் விரிவுரையின் ஏற்றம் ஓரின், இமையமொடு குமரியிடை இந்நாட்டன்றெந் நாட்டும் இணையொன்றுண்டோ” என்றும், “தெய்வமணப்பாங்கு” பெற்றது என்றும் பாடிப் பரவியுள்ளார் எனின், யாம் வேறு கூறுவ தென்னை? எனினும், இவர்தம் சொல்வன்மையின் சிறப்பியல்புகளுள் இரண்டொன்றினை ஈண்டுக் கூறிப் பாராட்டற்கு எம் உள்ளம் விழைகின்றது. நல்லிசைப் புலமை நலம் மிக வாய்க்கப்பெற்ற ஒருவர், தம் புலமைக்கண் தோன்றிய நுண்பொருள்களைப் பிறர்க்கு உணர்த்த வேண்டுமென விழைவது இயல்பு. அச்செயற்கு உரிய துணை செய்யும் சிறப்பு சொல்வன்மைக்கேயுண்டு. சொல்லப்படும் நுண்பொருளைக் கேட்போர் ஏற்கும் வகையறிந்து அவர் பயின்றுள்ள சொல்வழியாக உணர்த்துந்திறம் சொல்வன்மையின் முதற்பண்பாகும். சொல்வோரது அறிவு நிலைக்கும், கேட்போரது அறிவு நிலைக்குக் வேறுபாடு பெரிது உண்டெனினும், சொல்லுங்கால், கேட்போரறிவைத் தம் சொற்பொருளை ஏற்கும் நிலைக்குக் கொணர்ந்து, அதனை யூட்டும் வினைத்திறம், மிக அரியதொன்றாகும். ஒருகால் கொணர்ந்தபின், அறிவு வுரம் இன்மையின், கேட்போர் மனம் சொல்லப்படும் சொற்பொருள்வழி நில்லாது மெலிந்து நெகிழ்வது முண்டன்றோ! அதனையறிந்து, அதற்குப் பிறவாற்றால் வன்மை யூட்டி, சொற்பொருளைக் கேட்குமாறு செய்வது சொல் வன்மைக் குரிய வேறொரு பண்பாகும். இன்னோரன்ன பண்புகளால், சொல்வன்மையைப் பெருந்துணைகொண்டு கல்லா மாக்கட்கும் கலைச்சுவை காட்டிச் சமயவுண்மையின் நுண்மை நலங்களை யறிவுறுத்திச் செம்மை செய்யுந்திறம் நம் ஞானியார் அடிகளின் சொற்பொழிவில் இனிது விளங்குகின்றது. “அத்து விதம்”, “சிவோகம் பாவனை” “மாயேயமலம்” முதலிய சமய நூல் நுட்பங்கள் பல்லாயிரக்கணக்கினராய மக்கட்கு, அடிகளின் சொற்பொழிவால் நன்கு விளக்கப்பெற்றிருக்கின்றன. சைவசித்தாந்தம், விசிட்டாத்து வைதம், ஆருகதம், கௌமாரம் பௌத்தம். முதலிய சமயஞானமும், இவற்றைக் காய்தல், உவத்தலின்றி ஆராய்ந்து கூறும் ஆராய்ச்சித் திறமும் கலைப்புலமை மிக்க நுண்ணியார்க்கும் தெளியக்காட்டொணாத அருமை வாய்ந்தவையாயினும், இவை, நம் ஞானியார் சுவாமிகளின் சொற்பொழிவில், இளஞ்சிறாரும் இனி துணரும் நிலையில், எளியவாய் வெளிப்பட்டு மிளிர்வதுண்டு. இனி, ஒருவரது சொல்வன்மையும், புலமைச் சிறப்பும் அவர்தம் சொற்பொழிவில் வழங்கும் உவமைகளால் கேட்போர் அறிந்து பரவுதற்குரிய தகுதி பெறுவது இயல்பு. வாழ்க்கை, நூலாராய்ச்சி, தக்காரொடு பயிறல் முதலிய நிகழ்ச்சிகளிற் காணப்பெறும் பொருள்கள், ஒருவர்உள்ளத்தே உணர்வு வடிவாய் நின்று; வேண்டுங்கால் உவம முகத்தாலும், எடுத்துக் காட்டாலும், சொல்வன்மைக்கு ஆக்கஞ்செய்து, கேட்போர் உணர்வை வளம் படுக்கும் என்பது மேனாட்டு உள நூற் புலவரான தாண்டைக் (thorndike) முதலியோரது முடிப்புரையாகும். அந்நெறியே நோக்கின், நம் அடிகளார் சொற்பொழிவில் மிகவுயர்ந்த கருத்தமைந்த உவமைகள் பல்கித்தோன்றக் காண்கின்றோம். சென்ற யாண்டில் அடிகளார் போளூர் போர்டு உயர்கலாசாலை மாணவர் கட்குச் “சமயக் கல்வி” என்றபொருள்பற்றிய சொற்பொழிவொன்று ஆற்றினர். அச்சொற்பொழிவின் முடிபொருள், “பரம்பொருள் ஒன்று உண்டு; அதனைப்பரவுவது அனைவர்க்கும் கடன். அப்பொருள் சிவனாயினு மாகுக; திருமாலாயினும் ஆகுக; அல்லாவாயினு மாகுக; யாவராயினு மாகுக. யாவும் ஒன்றே; ஒவ்வொன்றையும் வழிபடுவோர் ஒரு முடிவையே பெறுவர்; அதனால் அவரைக் காய்தலும், பூசலிடுதலும் கூடா ” என்பதாகும். இதனை விளக்குதற்குக் கையாண்டவுவமை அந்தக் கலாசாலைக்கு, கல்விப்பயனும், மாணவரும், அவர்கள் பலாசாலைக்கு வரும் வழிநெறிகளு மேயாயின, முடிவில் சைவரும் வைணவரும், திருநீறும் திருமண்ணும் அணிதல் வேண்டுமென வற்புறுத்தப்புகுந்த அடிகளார், அம்மாணவர்கள், கலாசாலைக்கு வருங்கால் தூயவுடையும் சட்டையும் அணிந்துவரும் செய்தியை அரியவுவமையாகக் காட்டியது, வந்திருந்த அறிவுடைப் பெருமக்கள் அனைவரையும், “உலகமக்கட்குச் கமயஞானமளிக்கும் ஞானியார் என்பது இவர்க்கே தகும் தகும் ” எனத் தம் மனம் குளிர, வாய் குளிர நினைந்து பரவிப் பாராட்டச் செய்ததெனின் வேறே என்னென்பது! இனி, அடிகளார் தம் சொற்பொழிவில் ஆங்காங்கே பல இன்றமிழ்ச் செய்யுட்களை எடுத்துக்காட்டி, மக்கள் மனத்தில் அச்செய்யுளின் பொருளை விளக்கி மகிழ்விப்பது இயல்பு. இவ்வியல்பு சொற்பொழிவாளர் பலரிடத்தும் பெருகக் காணக் கிடப்பதே யெனினும், அப்பல்லோரிடத்தும் காணப் பெறாத ஒரு சிறப்புநலம் அடிகளார் சொற்பொழிவில் இனிது திகழ்கின்றது. அடிகளார்; ஒரு செய்யுளை எடுத்துக்காட்டலுறுவா ராயின், அதனைப் பொருள் நிலைக்கியையப் பதச் சேதம் செய்து இசைத்து, அப்பொருள் நிலையை, கேட்போர் செவிப்புலம், நிறைய வாங்கி, உள்ளத்தே விரையத் தேக்கிக்கொள்ளுமாறு அமையக் கூறுவர். பின்னர், அவர், அதனைப் புரை புரையாகப் பகுத்துச் சொல் ஒவ்வொன்றினும் பொதிந்து நிற்கும் பொருளை அடைவேகாட்டி, வற்புறுத்துந் திறம் நினைத்தொறும், கேட்டோர்க்கு இன்பவுணர்வை எழுப்பு கின்றது. அடிகள், வேலூரிற் கூடிய சைவசித்தாந்த மகாசமாசப் பெருவிழாவில் தலைமை தாங்கி நிகழ்த்திய சொற்பொழிவுகள் ஒன்றில், அப்ப மூர்த்திகள் பாடியருளிய திருவிருத்த மொன்றை யெடுத்துக் காட்டியது இன்றும் என் நினைவில் நின்று இன்புறுத்துகின்றது. அத்திருவிருத்தம், 'ஊனத்தைநீக்கி யுலகறிய பென்னை யாட்கொண்டவன், தேனொத்தெனக் கினியான் தில்லைச்சிற்றம் பலவன் எங்கோன், வானத்தவருய்ய வன்னஞ்சை யுண்டகண்டத் திலங்கும், ஏனத்தெயிறுகண்டாற் பின்னைக் கண்கொண்டு காண்பதென்னே, யென்பது. இதன்கண், பரமன் நாவேந்தரை ஆட்கொண்ட திறத்தை அவையினர்க்கு வற்புறுத்தத் திருவுளங் கொண்ட அடிகளார், “என்னையாட் கொண்டவன்” என்ற தொடரை வாங்கி, சீரிய வினாக்களால் அவையினர் உள்ளத்தில் அவாவையெழுப்பி, “என்னையாட்கொண்டான்” என்றால் அதனை யார் அறிவார்? யாவரும் அறிய என்னை ஆட்கொண்டான். யாவர் என்றால் இன்னார் என்ன வேண்டாமா? உலகு அறிய என்னை ஆட்கொண்டான்; “உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே” என்று கூறுவரல்லவா? உயர்ந்தோர் அறிய என்னை ஆட்கொண்டான். அப்படி யாயின், உன்னை எவ்வாறு ஆட்கொண்டான்? நீக்கி உலகறிய ஆட்கொண்டான். நீக்கி என்றால் எதனை நீக்கினான்? ஊனத்தை நீக்கி உலகறிய என்னை ஆட்கொண்டான்” என்று ஒவ்வொரு சொல்லையும் அதன்பொருள் நிலை நிரம்பச் சொல்லியருளினர். இவ்வாறு அவாய்நிலைமுறையால் செய்யுட்குப் பொருளுரைக்குந்திறம் நம் அடிகளார் சொல்வன்மையின் பலநலங்களில் ஒன்றாகும். இம்முறையைப் பின்பற்றிச் சொல்லப் புகுவோர் சிலர் இப்போது உளர். ஆயினும், அவர் பால் அது வித்தகம் பெறாது கேட்போருள்ளத்தை மகிழ்விக்கும் வன்மை யிழந்து நிற்றலால், இத்திறம் அடிகட்கே இயல்பாய் அமைந்த பெருநலம் என்பதனை யாம் போற்றிப் பரவுகின்றோம். இனி, அடிகளார் சொற்பொழிவு செய்யும்போது அதனைக் கேட்கும் மக்களது உள்ளப்பான்மைனய அறிந்து காலத்தை நீட்டுதலும் சுருக்குதலும் செய்துகொள்வர். சீரிய கூரிய அறிவினர் பாலும் பெருகக் காணப்பெறாத இவ்விரகு, இவர்கள்பால் மிக எளிதாய் உளது. மூன்று மணி நேரம், நான்கு மணி நேரம் என மணிக்கணக்கான காலம் சொற் பொழிவு நிகழ்த்துவது என்பது அடிகட்கு மிக எளிமையாகவுளது. அத்துணை நெடுநேரத்தை மக்கள் ஒரு சிறு வருத்தமுமின்றி இருந்து கேட்குமாறு அவர் மன நிலையறிந்து நகைச் சுவையும், உவகைச்சுவையும் என்ற சுவை பலவும் தோன்றச் சொற்பொழிவாற்றும் வன்மை இவரது நா நலத்தின் ஆக்கமாக வுளது. நகைச்சுவை தோன்ற வுரைக்குமிடத்து அவையினர் நகைப்பொலி யெழுந்து அவையகம் முழுதும் குழுமுங்கால், இவரது அரியதிருவாயின் இதழ்கள் சிறிதே விரிந்து, உண்ணிற்கும் பற்களைச் சிறிதும் காட்டாது முகிழ்த்து மலரிதழ்போல் முறுவலிப்ப தொன்றையே செய்ய, முகத்தின் ஞானவொளி அறிவுடையார் உள்ளத்தில் வியப்பும் நன்மதிப்பும் பயக்கின்றது. மக்களின் ஒழுக்கக் குறைவுகளை எடுத்தியம்பித் திருத்த முயலுமிடத்துச் சில இனிய வுரைகள் பகர்வர். அக்குறையுடையாரும் அவற்றை இனிதேற்கும் முறையில் சொற்கள் “தென்னுண் தேனின் தேக்கிய” வாய் அமைந்து நிற்கின்றன. இனி, அடிகளோடு தனித்து உரையாடுமிடத்து இனிய நயமொழிகள் போந்து உள்ளுதோறுள்ளுதோறும் உள்ளம் உருக்கி நிற்கும். யான் அடிகளோடு ஒருகால் உரையாடுங்கால் துறவி யொருவரைப் பற்றிய பேச்சு நிகழ்ந்தது. அப்போது, அடிகளார், முகம் மலர்ந்து, இன்பமொழுக, “அவர்கள்.................. ஆதீன சம்பிரதாயங்களை நன்கறிவார்கள். மகா சந்நிதானங்களை எப்படிக் காண்பது; காணச்செல்வோர் எவ்வாறு உடைதரிப்பது; எவ்வாறு கை கட்டுவது; எவ்வகையில்வாய் பொத்துவது; எவ்வாறு உண்பது; எப்படி கைகால்களைத் தூய்மை செய்வது என இவற்றைச் செவ்வையாக அறிவார்கள். எவ்வெந்நூல்களை யாராய்வது என்பதை நோக்குதற்கு மட்டில் போதிய அவகாசம் அவர்கட்குக் கிடைத்திலது” என்றார்கள். பின்னர் யான் அவர்கூறிய அனைத்தும் உண்மையாதல் கண்டதும் மெய்குளிர்ந்தது ஒரு புறம் இருக்க, அவர் மொழிந்தவற்றிற் பிறந்த நகைச்சுவையின் மாண்பு பெரிதும் இன்புறுத்துகின்றது. மற்றொரு ஞான்று, இந்நாளில் நிலவும் தமிழ்க்கல்வி நிலையைப்பற்றிய பேச்சு எழுந்தபோது, இக்காலத்துக் கலாசாலையிலுள்ள “சரித்திரம், பூகோளம், அறிவுநூல்” முதலியவற்றைப் பற்றிக்கூறும்போது, மேனாட்டறிஞர்களான மெக்காலே, அக்சிலி முதலியவர்கள் எழுதிய “சரித்திரம்” “அறிவுக்கலை முதலிய உரை நூல்கள், சிறந்த உரையிலக்கியங்களாகத் திளழ்தல்போல, தமிழில் எவையும் இல்லை; மாணவர்கள் வகுப்பு உயரவுயர, அவர் படிக்கும் இந்நூல்களின் நடையும் பொருளும் உயரவில்லை யென்ற சொற்கள் பிறந்தன. அது போது, அடிகளார் ஒர் அரிய பொருளுரை விளம்பினார்கள்.” “இக்காலக் கல்வியாளர்கட்கோ, ஆசிரியர்கட்கோ அத்தகைய அறிவு வேட்கை யிருப்பதாகவே தோன்றவில்லை” என்று கூறினார்கள். அவர்கள் கூற்றின் உண்மையை, இதுபோது வெளியாகும் தமிழ் உரை நூல்களின் இழிந்த தமிழ் நடையும் பொருளுயர்வின்மையும் இனிது காட்டுகின்றன. இவற்றை நோக்கின் அடிகள் சமயவொழுக்கத்துக்குரிய உண்மையாராய்ச்சியோடு சிறார்களின் கல்விவளர்ச்சியிலும் மிக்கநாட்டமுடையவர் என்பது நன்கு விளங்கும். இன்ன நலமுடைய அடிகள் தம் கருத்தை அயன்ற அளவில் செயல் முறையிலும் காட்டுவார்போல, தமிழ்க்கல்லூரி யொன்று நிறவியும், தனித்தமிழ் மாணவர்கட்குத் தமிழ்க்கல்வி வழங்கியும் தமிழ்ப்பெருந்தொண்டாற்றி வருகின்றனர். இதனை நினைக்கும்போது நம் கரந்தைக் கவியரசர் அடிகளைப் பாராட்டிக் கூறிய இனிய பாட்டொன்று நினைவிற்கு வருகிறது. “கல்லூரி நாட்டுவித்தாய்; கணக்காயன் தானேயாய்க் கற்பித்திட்டாய்; சொல்லாடுந்திறமையினில் துணையில்லாக் கழகமது தோன்றச் செய்தாய்; பல்லூரும் சைவநெறிப் பாங்குயர விரிவுரைகள் பகருமாறு செல்வார் தம் செலவினுக்காம் செல்லலறப் பொருளளிக்கும் சிந்தை கொண்டாய்! ” இவ்வினிய பாட்டின் நான்காவதடி யுணர்த்தும் பொருள் யாரும் குறிக்கொள்ளற்குரிய பொன் மொழியாகும். இதன் கண், அடிகள் தம் ஆதரவில் நடத்தும் சொற்பொழிவு விழாக்களில் வந்து, தம் சொற்பொழிவால் தொண்டாற்றும் அறிஞர்கட்கு நிரம்பப் பொருளளித்துச் சிறப்பிக்கும் வள்ளன்மை குறிக்கப் பெறுகின்றது. சொற்பொழிவு செய்பவர் மிகக் குறைந்த தகுதியினராயினும், அவர்க்கு அடிகள் இருபது வெண்பொற்காசுகட்குக் குறையாத தொகையருளுகின்றார்கள். அருளுங்கால், அவர்கள் “இத்தொகை உங்கள் புலமையை மதிப்பிட்டுத் தருவதன்று; உங்களுடைய வரவுசெலவுகட்கு வேண்டும் படிச்செலவே. எம்பெருமான் திரு முருகக் கடவுள் திருவருளே உங்கட்கு எல்லாம் அருளவல்லது” என்பர். இவ்வாறு தாம் போற்றி மகிழும் தமிழ்நலம் பிறர்பால் இருப்பக்கண்டு மகிழ்தலும், மகிழ்ச்சிக்குறியாக வேண்டுவன வருளும் வள்ளன்மையும் நம் அடிகள் பால் காணப்பெறும் சிறப்பியல்களாகும். ஒருஞான்று, செந்தமிழ்ப் புரவலரைப் பற்றிக் கூறுங்கால், “யாம் ஆண்டவனைப் பரவுமிடத்து, ஒரு சிலரை எம் உள்ளத்து உள்ளுவதுண்டு. அச்சிலருள், செந்தமிழ்ப் புரவலரின் சீரிய பெயர் தலை சிறந்து நிற்கும்” என்றார்கள். எனவே, அடிகளது உள்ளம் எத்துணைத் தூய்மை யுடையதென்பதும், தக்காரை யறிந்துள்ளும் தகைமை எத்துணை வீறுடன் இவர்தம் உள்ளத்து இலங்குகின்ற தென்பதும் யாவரும் இனிது காணத்தெளிவாகும். இன்னோரன்ன பண்பு மேம்பட்டுப் பொலியும் எங்கள் அருட்குரவர், தீவிய செந்தமிழ்ச் செல்வர், திருநெறியாய சைவம் வளர்க்கும் திருவருட் செம்மலாகிய திருமிக்க அடிகள், சிவசண்முக மெய்ஞ்ஞான சிவாச்சாரிய அடிகள் செழுமைமிகும் உடல் நலமும் விழுமிய பொருணலமும் சிறந்து, செந்தமிழும் திருநெறிச் சைவமும் தவமுயன்று பெற்ற தனிப்பெருந் தோன்றலாய் என்றும் நின்று நிலவுகவென எண்ணியாங்கருளும் கண்ணுதற் பண்ணவனது வண்ணத் திருவடிகளை மனமுற வணங்கிப் பரவுகின்றேம். - தமிழ்ப் பொழில் 30. இருபெரும் தமிழறிஞர்கள் உயர்திரு திருவரங்கனார், கா. சு. பிள்ளை ஆகிய இரண்டு பெருமக்களின் திருவுருவப் படங்களைத் திறந்துவைக்கும் பெருமையை எனக்களித்தமைக்கு நன்றி செலுத்துகிறேன். பெரியார்களின் படங்களைத் திறந்து வைப்பதைவிட மிகவும் பழகிய நண்பர்களின் படங்களைத் திறந்து வைப்பதில் எனக்குப் பெருமகிழ்ச்சியுண்டு. சிந்தனையில் - அறிவு வளர்ச்சியில் - புதுப்பார்வை, புது உணர்ச்சி இன்று உண்டாகியிருக்கின்றன. நன்கு சிந்தித்தல் வேண்டும் என்ற உணர்வு தலைதூக்கி நிற்கிறது. எந்த நாட்டு மக்கள் அறிவியல் துறை அறிவைத் தங்கள் தாய் மொழியிலேயே பெறுகிறார்களோ அந்த நாட்டு மக்களதாம் புதுப்புதுக் கருவிகள் கண்டுபிடிப்புக்கள் கருத்துக்களிலும், விஞ்ஞானத் துறையிலும் ஏனை நாட்டினரை மிஞ்சி நிற்கின்றனர் என்பதை நாம் அறிய முடிகிறது. எல்லாக் கலைகளையும் தமிழில் பெறவேண்டும் என்ற உணர்ச்சி இன்று தோன்றியுள்ளது. எல்லாக் கலைகளையும் தமிழ் மொழி வாயிலாகவே பெறவேண்டும் என்ற சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்த நல்ல சூழ்நிலைக்கு அரசியலாரும் துணை நிற்கின்றனர். “தமிழ் வாத்தியாருக்குத் தமிழ் தவிர வேறென்ன தெரியும் என்ற காலமொன்றிருந்தது. ஆங்கிலம் அறிந்தவருக்கு உலகியல் தெரியும் என்று கருப்பட்ட காலமது. தமிழில் ஆங்கிலத்தைக் கலந்து பேசினால் பெருமைப்பட்ட காலம் நாற்பது நாற்பத்தைந்து ஆண்டுக்கு முன்பிருந்தது. அந்தந்தக் காலத்தில் ஆங்கிலம் அறிந்த வர்களும் தமிழ் அறிந்தவர்களும் ஒதுங்கி வாழ்ந்தார்கள். இரு சாராரும் கலந்து பழகும் வாய்ப்பு - சூழ்நிலை இல்லை. தமிழ் கற்றவர்களையும், ஆங்கிலம் கற்றவர்களையும் கலந்து எண்ணவைத்த முதல் தமிழன் கா. சு. பிள்ளைதான். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராக இருந்தபோது சட்டக் கருத்துக்களையும், தத்துவக் கருத்துக்களையும் நல்ல தமிழில், மாணவர்களுக்கு எடுத்துக் கூறுவார். கேட்கும் மாணவர்கள் இக்கருத்துக்கள் தமிழ் நூல்களில் உள்ள நல்ல கருத்துக்கள் என எண்ணுவர். இக் கருத்துக்கள் ஆங்கில நூல்களில் உள்ளன என எடுத்துக் கூறி மாணவர்களை வியப்பில் ஆழ்த்துவார். ஆங்கில நூல்களின் கருத்துக்களைத் தமிழில் மிக நயமாக எடுத்துக் கூறுவார்கள். ஆங்கிலத்தில் வல்லுநர்கள் அதன் நயத்தை நல்ல தமிழில் மிகத் தெளிவாக எடுத்துக் கூறினால் கேட்போர் தமிழிலேயே சிந்திக்கத் துவங்குவார்கள். இந்த அரும் பணியை ஆரம்பத்தில் எடுத்துப் பரப்பிய முதல் தமிழ் மகன் கா. சு. பிள்ளைதான். இதனைத் தமிழன் மறக்கமுடியாது. வாழ்க்கைக்கு ஏற்ற கல்வி பெறவேண்டும் என்ற உணர்ச்சியைத் தூண்டியவர் அவரே. படிப்பது வேலை செய்ய என்ற சூழ்நிலை மாறி, படிப்பது அறிவுவளர என்ற சூழ்நிலை ஏற்படவேண்டு மென்று எண்ணினார். அவரிடம் பயின்ற மாணவர் பலர் அரசியல் வாதிகளாக மாறிவிட்டனர். இன்று அமைச்சர்களாகவும் உள்ளனர். கா. சு. பிள்ளையவர்கள் திருமுறையில் மிகவும் ஈடுபாடு கொண்டவர்கள். சிவபூசையினால்தான் அறிவில் தெளிவு பெறமுடியும் என்ற திடமான நம்பிக்கை கொண்டவர். தஞ்சையில் ஒரு முறை மாணவர்கள் சைவ சித்தாந்தக் கருத்துக்களை விளக்கிக் கூறக்கேட்ட போது சைவத்தின் கருத்தை 5 நிமிடத்தில் விளக்கிக் கூறினார். எந்தக் கருத்தையும் விரிவாகவும் சுருக்கமாகவும் கூறவேண்டும். அதுதான் அறிவுத் தெளிவு என்று கூறினார்கள். ஆயிரத்தில் ஒருவர் இருவர்தாம் சித்தாந்த நூல்களைப் பயில்கின்றார்கள். காரணம் தமிழ் இலக்கண இலக்கியத்தில் நல்ல புலமை பெற்றிருந்தால்தான் சித்தாந்த நூல்களைப் படித்தறிய முடியும். எளிமையாகச் சித்தாந்த நூல்களை அனைவரும் படித்துணரும் வண்ணம் மெய்கண்ட சாத்திர நூல்கள் பதினான்கை முதன் முதலில் இனிய எளிய தமிழ் எரை நடையில் தந்தவர்கள் கா. சு. பிள்ளை அவர்கள்தாம். அதேபோல் இலக்கிய வரலாறு தமிழில் முதலில் தந்தவர் எம். எல். பிள்ளைதாம். ஆங்கிலத்தில் தமிழ் இலக்கிய வரலாறு இயற்றியவர் எம். எஸ். பூரணலிங்கம் பிள்ளையவர்கள். தமிழகத்தில் கற்றோர்க்கு அணியாகத் திகழ்ந்தவர் கா. சு. பிள்ளையவர்கள். இயற்கையறிவின் வரிவடிவம்தான் திருவரங்கனார். எங்கே யார் எந்த வேலையைச் செய்தாலும் அவர்களால் என்ன செய்ய முடியும் என்பதை அவருடன் ஒரு நிமிடம் பேசினால்போதும் அறிந்து விடுவார்கள். செயற்கரிய காரியமாற்றுவதில் நுண்மாண் நுழைபுல மிக்கவர்கள். கழக வாயிலாகத் தமிழில் உள்ள நூல்கள் அனைத்தும் வெளிவரவேண்டுமெனத் திருவரங்கனார் எண்ண மிட்டார்கள். எடுத்த காரியத்தை முடிக்கப் பெருமுயற்சி மேற் கொள்வார்கள். திருவரங்கனார் அவர்கள் கழகத்தைத் துவங்கிய காலத்தில் மிக அஞ்சாநெஞ்சத்தோடு தொடங்கினார்கள். தொல்காப்பியம் எழுத்ததிகாரம், தேவாரம் ஆகிய நூல்களைக் கண்ணைப் பறிக்கும் விதத்தில் அந்தக் காலத்திலேயே வெளியிட்டார்கள். வெள்ளித் தகட்டில் பொன்னெழுத்துக்களில் பொறித்தாற்போல இந் நூல் களைப் பதிப்பித்தார்கள். அப்போது மூவர் தேவாரத்தின் விலை ரூ. 16 என எண்ணுகிறேன். அந்தக் காலத்தில் அவ்வளவு விலை கொடுத்து நூல்கள் வாங்குவோர் மிகக் குறைவு. திருவரங்கனார் கூறுவார் புத்தக மதிப்புக்கன்று இந்த வில்லை. வாங்குகிறார்களோ இல்லையோ அது வேறு. அழகான காகிதத்தில் அச்சிட வேண்டும். நூல்களின் மதிப்பு - தரம் குறையக் கூடாது. இப்படிப் போனால் லாபம் வராதே என்று சிலர் குறைபட்டுக் கொண்டனர். ஆனால் திருவரங்கனார் அஞ்சாமல் காரியமாற்றினார். தான் ஈடுபட்ட தமிழ்த் தொண்டில் தம் இளவலையும் ஈடுபடுத்தினார். வேறு துறைக்குப் பயின்ற திரு. சுப்பையா பிள்ளை யைத் தம்மோடு அழைத்துத் தம் துறையில் புகுத்தினார். அதன் விளைவு தமிழ்நாட்டுக்குப் பெரும் பயனாக அமைந்தது. தவங் கிடந்தார் திருவரங்கனார். தவப் பயனாக வந்தவர் சுப்பையா பிள்ளை. அவர்கள் எந்த வேகத்தோடு எந்த ஊக்கத்தோடு பணி யாற்றினார்களோ, அந்த வேகத்தில் அந்த ஊக்கத்தோடு அவர் தம்பியும் பணியாற்றுகிறார். உடலைக் கொடுத்து, உயிரைக் கொடுத்து உழைக்கும் ஒரு தம்பியைப் பெற்றார் என்றால் அதுமிகை இல்லை. தாமும் தம் உடன் பிறந்தாரும் கழகத்திற்கே உரியவர்களாகி அதன் மூலம் தமிழ் மணம் எங்கம் பரப்பி வருகிறார்கள். இன்று எழுந்துள்ள 'திருவரங்கனார் நிலையக் கட்டிடம்’ அவர்களின் உழைப்பின் பலனாகும். அன்னார் திருவுள்ளம் போல் கழகம் மேலும் மேலும் வளர்க, வாழ்க என வாழ்த்துகிறேன். 31. செய்தி மடலில் ஓர் இனிய காட்சி “செய்தி மடல்” என்பது சக்தி சர்க்கரை ஆலையிலிருந்து வெளிவரும் திங்கள் வெளியீடு. இவ்வாண்டு சூலைத் திங்கள் வெளியீட்டில் பல காட்சிகள் தோன்றிக் காண்பார்க்கும் படிப்பவர் க்கும் இன்பம் செய்கின்றன. அவற்றுள் ஓன்று ஆலைத் தொழிலாளர் ஒருவர்க்கு நடந்த திருமணக் காட்சி. அது, பார்த்து மகிழ்ந்த என் மனத்தைப் பரவசப் படுத்தியதுடன் நல்ல பல எண்ணங்களைத் தூண்டி விட்டது. ஆலை முதல்வர், அருள்வள்ளல் திரு நா. மகாலிங்கம் அவர்கள் மணமகனுக்குப் பரிசு வழங்கும் அரிய காட்சி. மணமக்களின் பெற்றோர்கள் கீழே அமர்ந்திருக்க, வள்ளல வர்கள் ஒருதட்டில் பரிசுகளை வைத்து நின்று அன்பு நிறைந்த முகமும் அருள் தவழும் முகிழ் நகையும் கொண்டு. வழங்குகிறார். பரிசு வழங்குவதும் பெறுவதுமாகிய நிகழ்ச்சி காட்டும் நிழற் படங்களில் இருவரும் படமெடுக்கும் கருவியை நோக்குவதுதான் பெரும்பான்மை; இங்கே, வழங்குவோரும் பெறுவோரும் ஒருவரை யொருவர் பார்த்து மகிழ்ந்த வண்ண முள்ளனர். இதனால், இருதிறத்தார்க்கும் படமெடுப்பதில் கருத்தில்லாமை இனிது விளங்குகிறது. பரிசு பெறுவோர் வழங்குபவரின் பெருந்தன்மையை வியக்கின்றார்கள். வழங்குகிற வள்ளல் பெறுவோரின் இன்முகம் கண்டு உவகை நிறைந்த உள்ளத்தராய் அகம் மலர்கின்றார். பரிசு வழங்கும் வள்ளால் திரு. நா. மகாலிங்கம் அவர்கள் உலவாப் புகழ் பெற்ற ஒரு பெருந் தொழிலதிபர். பரிசு பெறுவோர் அவ்வள்ளலின் தொழில் நிறுவனங்களில் வேலை செய்யும் தொழி லாளர் பல்லாயிரவருள் ஒருவர். எளிய தொழிலாளி யொருவரின் திருமணத்தில் பெறலரும் புகழால் பாரத நாட்டுப் பண்புடைச் செல்வர் பலரும் நன்கறிந்து பாராட்டப் பெறும் தொழிலதிபர் கலந்து கொண்டு பரிசு தந்து சிறப்பிப்பது காண்டற் கரிய காட்சி யாகும். இந்தக் காட்சியின் உள்ளீடாக இருப்பது பெரிய தொழிலதிபர்க்கும் எளிய தொழிலாளிக்கும் இடையே நிலவும் உண்மையன்புத் தொடர்பாகும். இத்தகைய இனிய தொடர்பு நாட்டில் உள்ள தொழில் நிறுவன முதல்வர் எல்லார்பாலும் உளதாயின் நம் நாடு எத்துணைச் சிறந்த தொழில் வளம் பெற்றிருக்கும் என நினைந்த என் மனம், இக் காட்சியால் குளிர்ப் பெய்தி இறும்பூது கொண்டது. எங்கோ அடித்த புயல் எங்கள் வீட்டுக் கூரையைப் பிய்த்துக் கெடுத்தது என்பதுபோல, மேலை நாட்டில் தொழிலதிபர்களுக்கும் தொழிலாளர் கட்கும் உண்டான வேறுபாடு நம் நாட்டுத் தொழில் வளர்ச்சியைக் கெடுத்து விட்டது. மேலை நாட்டுத் தொழிலதிபர்கள் தொடக்கத்தில் பொருளாசைப் பேய் பிடித்துத் தொழிலாளர்களை விலங்கினும் கீழாக மிதித்துக் கொடுமை செய்தனர். அதனால், தொழிலாளர் உள்ளத்தில் தொழிலதிபர் முதல்வர் ஆகியோர் மேல் உண்டான வெறுப்புப் பின்னர்ப் பகைமையாய்க் கேடு செய்ய லுற்றது. நம் நாட்டுத் தொழிலதிபர்கள் தொழில் வளர்க்கத் தொடங்கியபோது அத்தகைய தீமைக்கு இடமில்லாமல் இருந்தது. தொழிலதிபரும் தொழிலாளர்பால் அருளுள்ளமும தொழிலாளர் அறவுணர்வும் கொண்டு பொருட் பெருக்கத்துக்குப் பாடுபட்டனர். இருபாலாரிடத்தும் முகிழ்த்து மலர்ந்து நறுமணம் கமழ்ந்தது தொழில் வளம். அரைகுறை நூலறிவு படைத்து வாய்ப்பறை கொட்டும் தீய சக்திகள் தொழிலாளர் சூழலிற் புகுந்து அவர்களது அறியாமையைத் துணைக்கொண்டு பொருளுற்பத்தி பெருகா வண்ணம் கேடு சூழ்ந்தன. வேலை நிறுத்த வுருவிலும் அரசியற் கட்சிப் பூசலுருவிலும் உற்பத்திப் பெருக்கத்துக்கு அத்தீய சக்திகள் தீது புரிகின்றன. அவை தொழிலாள ரினத்தையும் சாராமல், தொழில் முதல் வரினத்தையும் சாராமல், வாழ்தல் வேண்டி இடை நுழைந்து தொழிலாளரை உறிஞ்சி யுண்ணும் வம்பர் இனமாகும். அந்த இனத்தின் சொல் வழித் தொழிலாளர் இயங்குவது அரிசன முன்னேற்றப் பணி, நாட்டு மக்களை அரிசனங்களாக்கி யொதுக்கிய இனத்தின் தலைமையில் இயங்கச் செய்வது போலாம். அத்தீய சக்திகள் நுழையாதபடி தொழிலாளரும் தொழிலதிபரும் கூடிக் கலந்து நிலைமையை ஆய்ந்து செய்வன தவிர்வன தெளிந்து கொள்ளும் நன்னாள் தோன்றி நலம் புரியத் தொடங்குமாயின் தொழிலாளர் நலம் பெறுவர்; தொழிலதிபர் வளமுறுவர். பொருள் உற்பத்தி மிகப் பெருகும்; நம் நாடும் பொன்னாடாகும். - செந்தமிழ்ச் செல்வி 32. உயிர்களின் நுண்ணறிவு மக்களுயிரையும் ஏனை உயிர்களையும் வேறுபடுத்தி நோக்கு கின்றவர்கள், மக்களுக்கும் பிராணிகளுக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளைக் கூறுங்கால், மக்களுயிர், தான் செய்யும் ஒவ்வொரு வேலையையும் காரணங்கொண்டே செய்கின்றது என்றும், ஏனை உயிர்கள் செய்யவேண்டுமென்ற கட்டாயமின்றித் தாமாகவே செய்கின்றன என்றும் கூறுகின்றனர். உதாரணமாக ஒரு பறவை, கூடு கட்டுவதாக வைத்துக் கொள்வோம்; அப்பறவை, வைக்கோல், காகிதம், நார், குச்சி முதலியவற்றைக் கொண்டுவந்து, தன் முன்னையவினம் செய்துவந்தபடியே கூடு கட்டுகிறது. அதற்குக் கூடு கட்டுவதாகிய அச்செயலைக் கற்றுக்கொடுத்தவர் யார்? ஒருவருமில்லை. ஆனால், அதற்குக் காரணம் ஒன்று உண்டு. அஃது அதற்குத் தானாகவே ஏற்பட்டுள்ள ஒரு குணம்; இயற்கையறிவு - ( Instinct). மனிதன் மட்டும் காரணத்துடன் வேலை செய்யவில்லை; சில தந்திரமான பிராணிகளும், நுண்ணறிவு படைத்த மிருகங்களும் காரணங்கண்டு உழைக்கின்றன. அவற்றுள் சிறப்புடையவை யானையும் நாயுமாகும். அவை செய்யும் தொழில்கள் சிலவற்றை உற்றுநோக்கின், காரணமின்றித் தாமாகவே செய்தல் அவற்றிற்கு இயலாதென்பது உள்ளங்கை நெல்லிக்கனிபோல் தெளிவாய் விளங்கும். உயிர்களுள், மக்களுயிர் ஒழிய ஏனையவற்றுள், மிக்க நுண்ணறிவு உடையது யானை என்றே கூறலாம். அந்நுண்ணறிவை விளக்கும் கதைகள் மிகப்பல கூறப்படுகின்றன. பழகிய யானையின் செய்வகை களை என்னென்று கூறமுடியும்! ஓர் யானை மரக்கட்டை யொன்றைத் தூக்கி வைக்கவேண்டிய விடத்தில் சிறிதும் தவறுதலின்றி வைக்குமானால், அவ்யானையின் மதிநுட்பத்தை என்னென்பது? அதற்குச் சிந்திக்கும் சக்தி யில்லையானால், இவ்வாறு செய்தல் கூடுமா? ஒரு சிற்றெறும்பை எடுத்துக்கொள்வோம். அதனுடைய நுண்ணறிவு வியப்புத் தருவதாகிறது. இதைக் குறித்ததொரு கதையும் உண்டு. இது கதையாயினும், இதன்கட் கூறப்படும் நிகழ்ச்சிகள் உண்மையாய் நடப்பனவேயாகும். உயிர்நூலறிஞர் ஒருவர், ஒருநாள் தம்முடைய வீட்டிலிருந்த சர்க்கரைப் பாத்திரத்தில் எறும்புகள் நிறைந்திருக்கக் கண்டார். உடனே தம்முடைய மேசையின் மீது அப்பாத்திரத்தை வைத்து, மேசைக்கும் சுவருக்கும் சம்பந்த மின்றி விலக வைத்துவிட்டார். சிறிது நேரத்துக்கெல்லாம் எறும்புகள் அங்கே வந்து சூழ்ந்துகொண்டன. பிறகு, அவற்றை முற்றிலும் ஓட்டிவிட்டு, அப்பாத்திரத்தைக் கொண்டு சென்று ஓர் உரியின்மீது வைத்தார். அங்கும், அவை சுவரின் வழியாகச் சென்று உரிக்கயிற்றின்மூலம் ஊர்ந்துவந்து குழுமிவிட்டன. என்ன செய்வார்? மறுபடியும் ஓர் உயர்ந்த பீடத்தின்மீது நீர்நிறைந்த தட்டொன்றின் நடுவில் அப்பாத்திரத்தை வைத்தார்; ஆனால் அப்பாத்திரத்தின் வாயைத் திறந்து வைத்திருந்தார்.. எறும்பனைத்தும் தட்டின் அருகில் வந்தன; பார்த்தன; யோசித்தன. அப் பாத்திரம் வைக்கப்பட்டிருந்த இடத்திற்கு நேர்மேற்புறச் சுவரில் ஒரு துவாரமிருந்தது. அதன் மூலம் ஒவ்வோர் எறும்பும் ஏறிவந்து சர்க்கரைப் பாத்திரத்துள் துணிச்சலுடன் குதித்தது. மறுநாள் அந்த அறிஞர் பாத்திரத்துள் எறும்புகள் இருக்கக் கண்டு பேராச்சரியம் கொண்டார். கடைசிமுறையாக வேறொரு தடை செய்துபார்ப்பது எனக்கருதி, அவர்தம் தோட்டத்தின் மத்தியில் ஒரு பீடத்தை வைத்துத் தண்ணீர் நிறைந்த தட்டொன்றை அதன்மேல் இருத்தி, அந்நீர் நடுவே சர்க்கரைப் பாத்திரத்தை வைத்திருந்தார். இப்பொழுது சிற்றெறும்புகள் யாது செய்தன? சில வைக்கோல்களையும், இலைகளையும் கொணர்ந்து, தட்டிற்கு வெளியிலிருந்து, பாத்திரம் வரைக்கும் பாலம்போன்ற ஒரு பாதை கட்டி முடித்தன. என்ன நுண்ணறிவு பார்மின்! பின்னர் அவையனைத்தும் பாத்திரத்தை அடைந்தன. உயிர்நூலறிஞர் அவற்றின் உலையா முயற்சியினையும், அறிவின் ஒட்பத்தையும் கண்டு பிரமித்துவிட்டனராம். எறும்பிற்கு அடுத்ததாக இடையனுடைய நாயைக் கூறலாம். அந்நாய் தன் தலைவனுடைய மந்தையிலுள்ள ஓர் ஆடு, தவறி மற்றொரு மந்தைக்குட் புகுந்து சேர்ந்துவிடுமாயின், அஃது அதனைக் கண்டுபிடித்து விடுகிறது. தலைவனிடும் பணிகளைத் தவறின்றிச் செய்யும் தகுதிப்பாடு மிகவுடையது. குதிரையும், குரங்கும் மேற்கூறியவற்றைப்போல் அவ்வளவு நுண்ணறிவு உடையவல்ல; எனினும் அவை தந்திரம் மட்டும் சிறிது உடைய எனக் கூறலாம். ஆகவே, உயிர்வகைதோறும் நுண்ணறிவு உளதென்பது இதனாற் கூறியவாறாம். 33. அருள் விருந்தளிக்கும் அழகரடிகள் திருக்குறள் பீடம் குருகுலம் அழகரடிகள் மணிவிழாமலர் 2.5.1965 குருகுலம் அழகரடிகளின் மணிவிழா நிகழ்வது கேட்க என் உள்ளம் பெருமகிழ்ச்சி எய்துகின்றது. மக்கட்குப் பெரும்பயன் நல்கும் நல்வாழ்வு வாழ்ந்த நல்லோர் ஒருவருக்கு மணிவிழா நிகழ்வது யாவரும் மனங் குளிரக்கண்டு இன்புறத்தக்க தொரு பெருவாய்ப்பு. அடிகளார் பாலசுந்தரமாகவும், இளவழகனாராகவும் இருந்து அரிய தமிழ்ப் பணி ஆற்றியது எனக்கு நினைவில் வருகிறது. அன்று கரந்தைத் தமிழ்ச் சங்க ஆண்டு விழாவில் சிவத்திரு. மறைமலை யடிகள் தலைமை தாங்கிய போது அவரோடு உடன் வந்து உடனிருந்து செய்த இனிய சொற்பொழிவு மறக்கத்தக்க தன்று. அவர்கள் இளவழகனாய்ச் சென்னையில் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தில் புலமைப்பணி செய்த காலத்தில் அடிகளாரை அடிக்கடி கண்டு அளவளாவி இன்புறும் வாய்ப்பு எனக்கு உண்டா யிற்று. சங்க இலக்கிய இன்கவித்திரட்டின் முதற்பகுதி அச்சாகிய காலத்தே அதன்நலங்கண்டு மிக்க இன்புற்றவர்களில் நானும் ஒருவன். நெல்லையில் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார் நடத்திய மெய் கண்டான் மாநாட்டில் அழகர் அடிகள் கலந்து கொண்டதும், அவர்கள் சித்தாந்த சைவத் தத்துவங்களை விளக்கிய திறமும் மாநாட்டிற் கூடியிருந்த அறிஞர் பலர்க்கும் அருள் விருந்தாக விளக்கமும் இன்பமும் தந்தன. அவரைக் காணும் போதெல்லாம் எனக்கு என்னையறி யாமலே ஓர் நன்மதிப்பும் அன்பும் உண்டாகும். திருவள்ளுவரைப் பற்றியும் திருக்குறளைப் பற்றியும் அவர் உள்ளத்தில் தோய்ந்து உருவாகியிருந்த செயல்திட்டம் ஒன்றை என்னிடம் சொன்ன போது, எனக்கே மிக்க வியப்புத் தோன்றிற்று. பெருஞ்செல்வமும் செல்வாக்கும் உள்ளதோடு திருக்குறள் வழங்கும் உண்மையறத்தில் ஊற்றமும் உடைய பெருமகன் மேற்கொள்ளற் கமைந்த திட்டம் இது; இக்கனவு நனவாயின் தமிழகம் பெருநலம் எய்தும் என்றேன். அண்மையில் அடிகளாரும் நானும் திருப்புத்தூரில் கலந்து உரையாடிய போது, திருக்குறட் குருகுலம் உருவாகியிருப்பது கேட்டறிந்து பெருமகிழ்ச்சி கொண்டேன். மாம்பாக்கத்தில் அக் குருகுலம் தோன்றி அரும்பணி புரிந்து வருவது அறிய என்மனம் மட்டிலா மகிழ்ச்சி கொண்டது. அன்று இராமலிங்க வள்ளலார் வடலூரில் இடம் கண்டு சமரச சுத்த சன்மார்க்க சங்கமும் சத்திய ஞானசபையும் கண்டது நினைவிற்கு வந்தது. “பெரிதே உலகம்; பேணுநர் பலரே” என்ற சங்கச் சான்றோரது உரை மெய்ம்மை யுரையாவது கண்டேன். அடிகளார் பணிந்த நடையும், வணங்கிய மொழியும், இணங்கிய முகப் பொலிவும் உடையர். யாரொடும் இனிமை கனியப் பேசும் இயல்பினர். சில சொற்களால் தமது ஈடு எடுப்பற்ற புலமை நலம் நன்கு புலப்படச் செய்யும் அவரது உரையாடல் கேட்போரைப் பிணிக்கும் தன்மை நிறைந்தது. அடிகளாரின் கையெழுத்து எனக்கு உயர்திரு மறைமலையடிகளாரின் கையெழுத்தை நினைப்பிக்கும். குரலிசையும் மறைமலை யடிகளாரின் நெருங்கிய தொடர்பால் மாறியிருக்குமோ என்று எண்ணி ஒரு முறை அவரையே கேட்டு விட்டேன். மறைமலையடிகளார் அதற்கு விடைகூறாமல் நகைத்து, “இளவழகனுக்குத் துறவுள்ளம் உண்டு” என்றார்கள். அரிய கருத்தமைந்த நூற்பொருளை விளக்குவதில் குருகுலம் அடிகளார் ஒருதனிநலம் வாய்ந்தவர். எதனையும் நன்கு எண்ணித் தெளிவு கொண்ட பின்பே வெளியிடுவர். வெளியிடுங்கால் இடையிடையே எழும் ஐயங்களையும் தாமே எண்ணித் தெளிவு படுத்துவர். குருகுலம் அடிகளார் ஒழுக்கம் விழுப்பம் தரும் என்பதில் உறுதியான கடைப்பிடியுடையர். இழுக்கு எய்தாத ஏற்றமுடைய ஒழுக்கம் உண்மை அறிவாலும் திண்ணிய மனத்தாலும் விழுப்பம் உறும் என்பதை அடிகளார் நன்கு தெளிந்தவர், அவ்வொழுக்கம் நாடு முழுதும் பரவவேண்டும் என்ற நாட்டம் அவர் மனத்தில் பல்லாண்டுகட்கு முன்பே குடிகொண்டது. அதன் விளைநிலமாக மாம்பாக்கம் குருகுலம் அமைந்துள்ளது. இவ்வாறு தம் நினைவிற் பலகாலும் உருப்படுத்திய நல்லறப் பணியைச் செயற்படுத்திக் கண்குளிரக் கண்டு மனமார மகிழும் பேறு தவமுடையார்க்கன்றி ஆகாது. தவச்செல்வராகிய அடிகள் இவ்வகையில் பெருவெற்றி எய்தியவராதலால் அவரது மணி விழா மாண்புடைய விழாவாகும். இம்மணிவிழா இன்பத் திருவிழாவாகுக என வாழ்த்தி அடிகளார் இவ்வாறே பொன்விழா, வயிர விழா எனப்படும் பலவிழாக்களைக் கண்டு பல்லாண்டு பல்லாண்டு இன்புற அங்கயற் கண்ணியோடு அமர்ந்த ஆலவாய் அண்ணலின் வண்ணத் திருவடி களை யெண்ணிப் பரவுகின்றேன். - திருக்குறள் பீடம் குருகுலம் அழகடிரகள் மணிவிழா மலர் 2.5.1965  * அந்தணர் என்னும் சொல் முற்றத் துறந்த முனிவர்க்கே உரியதென்பது திருவள்ளுவர் கருத்து; சாதிப் பெயரன்று என்பது அவர் நூலகத்தே விளங்கும். நச்சினார்க்கினியர் உரையும் இக்கருத்தை வலியுறுத்துகின்றது. * வியாசபாடியமும் தத்துவ வைசாரதியும் IV - II * அத்த சாலினி பக். 89 * பச்சையப்பர் கல்லூரிப் பேராசிரியரும் மறைமலையாரின் மாணவருமான மணி. திருநாவுக்கரசரின் தம்பி மணி. கோடீசுவரரன். வேலூர் மகந்தை உயிர்நிலைப்பள்ளித் தலையாசிரியர். ஆங்கிலத்தில் சிறந்த பேச்சாளர். 1. இதிகாசங்கள் என்ற தலைப்பில், இதன் சுருக்கம், திருச்சி அகில இந்திய வானொலி நிலையத்தால் ஒலிபரப்பப்பட்டது.