உரைவேந்தர் தமிழ்த்தொகை 22 புறநானூறு – 2 உரையாசிரியர் ஒளவை துரைசாமி பதிப்பாசிரியர்கள் முனைவர் ஒளவை நடராசன் முனைவர் இரா. குமரவேலன் இனியமுது பதிப்பகம் சென்னை - 600 017. நூற் குறிப்பு நூற்பெயர் : உரைவேந்தர் தமிழ்த்தொகை - 22 உரையாசிரியர் : ஒளவை துரைசாமி பதிப்பாளர் : இ. தமிழமுது பதிப்பு : 2009 தாள் : 16 கி வெள்ளைத்தாள் அளவு : 1/8 தெம்மி எழுத்து : 11 புள்ளி பக்கம் : 16 + 632 = 648 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) விலை : உருபா. 405/- படிகள் : 1000 நூலாக்கம் : பாவாணர் கணினி தி.நகர், சென்னை - 17. அட்டை ஓவியம் : ஓவியர் மருது அட்டை வடிவமைப்பு : வ. மலர் அச்சிட்டோர் : ஸ்ரீ வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்சு இராயப்பேட்டை, சென்னை - 14. வெளியீடு இனியமுது பதிப்பகம் பி.11 குல்மொகர் குடியிருப்பு, 35 செவாலிய சிவாசி கணேசன் சாலை, தியாகராயர் நகர், சென்னை - 600 017. தொ.பே. 2433 9030 பதிப்புரை ஒளவை சு.துரைசாமிப் பிள்ளை தமது ஓய்வறியா உழைப்பால் தமிழ் ஆய்வுக் களத்தில் உயர்ந்து நின்றவர். 20 ஆம் நூற்றாண்டில் தமிழ் மறுமலர்ச்சிக்கு புத்துயிர் ஊட்டிய தமிழ்ச் சான்றோர்களுள் முன் வரிசையில் நிற்பவர். நற்றிணை, புறநானூறு, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து ஆகிய சங்க நூற் செல்வங்களுக்கு உரைவளம் கண்டவர். சைவ பெருங்கடலில் மூழ்கித் திளைத்தவர். உரைவேந்தர் என்று தமிழுலகம் போற்றிப் புகழப்பட்ட ஒளவை சு.துரைசாமிப் பிள்ளை 1903இல் பிறந்து 1981இல் மறைந்தார். வாழ்ந்த ஆண்டுகள் 78. எழுதிய நூல்கள் 38. இதனை பொருள் வழிப் பிரித்து “உரைவேந்தர் தமிழ்த்தொகை” எனும் தலைப்பில் 28 தொகுதிகளாக வெளியிட்டுள்ளோம். இல்லற ஏந்தலாகவும், உரைநயம் கண்ட உரவோராகவும் , நற்றமிழ் நாவலராகவும், சைவ சித்தாந்தச் செம்மலாகவும் , நிறைபுகழ் எய்திய உரைவேந்தராகவும், புலமையிலும் பெரும் புலமைபெற்றவராகவும் திகழ்ந்து விளங்கிய இப்பெருந்தமிழாசானின் நூல்கள் அனைத்தையும் ஒரு சேர வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம். இவருடைய நூல்களில் எம் கைக்குக் கிடைக்கப் பெறாத நூல்கள் 5. மற்றும் இவர் எழுதிய திருவருட்பா நூல்களும் இத் தொகுதிகளில் இடம் பெறவில்லை. “ பல்வேறு காலத் தமிழ் இலக்கியங்கள், உரைகள், வரலாறு, கல்வெட்டு, சமயங்கள் என்றின்ன துறைப் பலவற்றில் நிறைபுலமை பெற்றவர் ஒளவை சு .துரைசாமி அவர்கள்” என்று மூதறிஞர் வ.சுப. மாணிக்கம் அவர்களாலும், “இரவுபகல் தானறியான் இன்தமிழை வைத்து வரவு செலவறியான் வாழ்வில் - உரமுடையான் தன்கடன் தாய்நாட்டு மக்கட் குழைப்பதிலே முன்கடன் என்றுரைக்கும் ஏறு” என்று பாவேந்தர் பாரதிதாசன் அவர்களாலும் போற்றிப் புகழப் பட்ட இப்பெருந்தகையின் நூல்களை அணிகலன்களாகக் கோர்த்து, முத்துமாலையாகக் கொடுத்துள்ளோம். அவர் காலத்தில் வாழ்ந்த சமகால அறிஞர்களால் போற்றிப் புகழப் பட்டவர். சைவ உலகில் தனக்கெனத் தனியிடத்தைப் பெற்றவர். இவர் எழுதிய அனைத்து நூல்கள் மற்றும் மலர்கள், இதழ்களில் வெளிவந்த கட்டுரைகளையெல்லாம் தேடித் தேடி எடுத்து ஒரே வீச்சில் வெளியிடுகிறோம். இத்தொகுதிகள் அனைத்தும் மிகச்சிறப்பாக வெளிவருவதற்கு முழுஒத்துழைப்பும் உதவியும் நல்கியவர்கள் அவருடைய திருமகன் ஒளவை து.நடராசன், மருகர் இரா.குமரவேலன், மகள் வயிற்றுப் பெயர்த்தி திருமதி வேனிலா ஸ்டாலின் ஆகியோர் ஆவர். இவர்கள் இத் தமிழ்த்தொகைக்கு தக்க மதிப்புரையும் அளித்து எங்களுக்குப் பெருமைச் சேர்த்து உள்ளனர். இவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றி தன் மதிப்பு இயக்கத்தில் பேரீடுபாடு கொண்டு உழைத்த இவ்வருந்தமிழறிஞர் தமிழ்ப் பகைவரைத் தம் பகைவராகக் கொண்ட உயர் மனத்தினராக வாழ்ந்தவர் என்பதை நினைவில் கொண்டு இத் தொகை நூல்களை இப்பெருந்தமிழ் அறிஞரின் 107 ஆம் ஆண்டு நினைவாக உலகத் தமிழர்களுக்குப் பயன்படும் வகையில் வெளியிடுவதில் பெருமகிழ்வு கொள்கிறோம். தமிழ் நூல் பதிப்பில் எங்களின் இந்த அரிய முயற்சிக்குத் தோள் தந்து உதவுங்கள். நன்றி - பதிப்பாளர் உள்ளடக்கம் பதிப்புரை iii நூலடக்கம் பாடப்பட்டவர் அகர வரிசையும் பாடல் எண்களும் x பாடியவர் அகர வரிசையும் பாடல் எண்களும் xiii 1. இருங்கோவேள் 1 2. சோழன் பாமுளூரெறிந்த நெய்தலங்கானல் இளஞ்சேட் சென்னி 10 3. வல்விலோரி 13 4. கடிய நெடுவேட்டுவன் 16 5. அதியமான் நெடுமானஞ்சி 20 6. இளவெளிமான் 23 7. அதியமான் நெடுமான் அஞ்சி 26 8. மூவன் 29 9. சேரன் குடக்கோச்சேரலிரும்பொறை 33 10. கோப்பெருஞ் சோழன் 41 11. பிசிராந்தையார் 56 12. கோப்பெருஞ் சோழன் 61 13. சோழன் கரிகாற்பெருவளத்தான் 71 14. சோழன் நலங்கிள்ளி 74 15. சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் 77 16. சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் 82 17. கோச்சேரமான் யானைக்கட் சேய்மாந்தரஞ் சேரலிரும்பொறை 85 18. அதியமான் எழினி 90 19. அதியமான் நெடுமானஞ்சி 93 20. வேள் எவ்வி 96 21. அதியமான் நெடுமான் அஞ்சி 100 22. வேள்பாரி 103 23. இளவெளிமான் 105 24. வெளிமான் 109 25. நம்பி நெடுஞ்செழியன் 112 26. ஆய் அண்டிரன் 116 27. ஒல்லையூர்கிழான் மகன் பெருஞ்சாத்தன் 120 28. கையறுநிலை 125 29. சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை 127 30. பூதபாண்டியன் தேவி பெருங்கோப்பெண்டு 129 31. ஒக்கூர் மாசாத்தனார் 134 32. தும்பைச் சொகினனார் 136 33. தாயங்கண்ணியார் 139 34. மாரிப்பித்தியார் 141 35. குளம்பந்தாயனார் 145 36. கயமனார். 147 37. வன்பரணர் 150 38. தனிமகள் புலம்பிய முதுபாலை 152 39. உண்டாட்டு 154 40. உலோச்சனார் 157 41. கோடை பாடிய பெரும்பூதனார் 160 42. வடமோதங்கிழார் 162 43. ஆவூர் மூலங்கிழார் 167 44. மதுரைப் பேராலவாயார் 172 45. கையறுநிலை 173 46. உறையூர் இளம்பொன் வாணிகனார் 176 47. சோணாட்டு முகையலூர்ச் சிறுகருந்தும்பியார் 178 48. சோழன் உருவப்பஃறேர் இளஞ்சேட்சென்னி 180 49. ஒளவையார் 183 50. கழாத்தலையார் 186 51. வெறி பாடிய காமக்காணியார் 189 52. மோசி சாத்தனார் 192 53. எருமை வெளியனார் 193 54. உலோச்சனார் 196 55. ஒரூஉத்தனார் 198 56. மதுரைப்பூதன் இளநாகனார் 200 57. பூங்கண் உத்திரையார் 202 58. காக்கைபாடினியார் நச்செள்ளையார் 204 59. ஒக்கூர் மாசாத்தியார் 207 60. மாறோக்கத்து நப்பசலையார் 210 61. அரிசில்கிழார் 214 62. சேரமான் பாலைபாடிய பெருங்கடுங்கோ 216 63. அண்டர்நடுங்கல்லினார். 219 64. ஓரம்போகியார் 222 65. அரிசில் கிழார் 224 66. ஒளவையார் 227 67. சாத்தந்தையார் 230 68. கழாத்தலையார் 233 69. ஒளவையார் 238 70. நெடுங்களத்துப் பரணர் 241 71. விரிச்சியூர் நன்னாகனார் 244 72. நொச்சிநியமங்கிழார் 246 73. பெருந்தலைச் சாத்தனார் 249 74. ஒளவையார் 252 75. வெள்ளை மாறனார் 255 76. உண்டாட்டு 257 77. ஆவியார் 259 78. பொன்முடியார் 261 79. அரிசில் கிழார் 264 80. ஆவூர் மூலங்கிழார் 266 81. வெறிபாடிய காமக்காணியார் 269 82. எருமைவெளியனார் 272 83. அரிசில்கிழார் 274 84. மதுரை வேளாசான் 277 85. அள்ளூர் நன்முல்லையார் 279 86. களிற்றுடனிலை 282 87. கோவூர் கிழார் 284 88. மதுரை இளங்கண்ணிக் கோசினார் 287 89. பொன்முடியார் 289 90. ஒளவையார் 291 91. பொன்முடியார் 293 92. மாங்குடிகிழார் 295 93. ஐயூர்முடவனார் 298 94. அதியமான் நெடுமான் அஞ்சி 300 95. மதுரைக் கள்ளிற் கடையத்தன் வெண்ணாகனார் 302 96. வேம்பற்றூர்க் குமரனார் 305 97. பெருங்குன்றூர்கிழார் 306 98. ஆலங்குடி வங்கனார் 309 99. வீரைவெளியனார் 313 100. உறையூர் மருத்துவன் தாமோதரனார் 316 101. ஆவூர்கிழார் 319 102. வல்லாண்முல்லை 322 103. ஆலத்தூர்கிழார் 324 104. உறையூர் முதுகண்ணன் சாத்தனார் 327 105. தங்காற் பொற்கொல்லனார் 331 106. மூதின் முல்லை 334 107. மூதின் முல்லை 337 108. மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார். 339 109. மதுரைக் கணக்காயனார். 342 110. உறையூர் முதுகூத்தனார் 344 111. விரியூர் நக்கனார் 347 112. மூதின்முல்லை 349 113. மதுரைத் தமிழக் கூத்தனார் 353 114. மாங்குடி கிழார் 356 115. பரணர் 359 116. கபிலர் 362 117. குன்றூர்கிழார் மகனார் 366 118. மகட்பாற் காஞ்சி 368 119. அள்ளூர் நன்முல்லையார் 371 120. பரணர் 374 121. அரிசில் கிழார் 377 122. பரணர் 380 123. அண்டர் நடுங்கல்லினார் 383 124. அண்டர் மகன் குறுவழுதியார் 389 125. கபிலர் 391 126. பரணர் 394 127. மதுரை மருதனிளநாகனார். 396 128. மதுரை மேலைக்கடைக் கண்ணம்புகுத்தா ராயத்தனார் 399 129. மதுரைப் படைமங்க மன்னியார் 402 130. பரணர் 404 131. காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார் 407 132. கடுமான் கிள்ளி 410 133. கதையங் கண்ணனார் 411 134. பிரமனார் 414 135. வான்மீகியார் 417 136. அந்துவன் கீரன் 419 137. தந்துமாறன் 423 138. கயமனார் 427 139. சிறுவெண்டேரையார் 431 140. ஐயாதிச் சிறுவெண்டேரையார் 435 141. கூகைக்கோழியார் 439 142. மார்க்கண்டேயனார் 442 143. கோதமனார் 445 144. ஒளவையார் 449 145. சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன் 453 146. சேரமான் கடலோட்டிய வேல்கெழு குட்டுவன் 457 147. சோழன் செருப்பாழியெறிந்த இளஞ்சேட்சென்னி 463 148. தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் 468 149. தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் 473 150. சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் 476 151. ஆய் அண்டிரன் 484 152. ஓய்மான் நல்லியக் கோடன் 491 153. சோழன் இராயசூயம் வேட்ட பெருநற்கிள்ளி 497 154. சோழன் செருப்பாழி யெறிந்த இளஞ்சேட்சென்னி 502 155. ஓய்மான் வில்லியாதன் 508 156. நாஞ்சில் வள்ளுவன் 512 157. கரும்பனூர்கிழான் 516 158. சோழன் நலங்கிள்ளி 521 159. மாறோக்கத்து நப்பசலையார் 525 160. கரும்பனூர் கிழான் 531 161. அம்பர்கிழான் அருவந்தை 535 162. சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் 539 163. சேரமான் சிக்கற்பள்ளித் துஞ்சிய செல்வக் கடுங்கோவாழியாதன் 543 164. சிறுகுடி கிழான் பண்ணன் 551 165. நல்லேர் முதியன் 555 166. அதியமான் நெடுமான் அஞ்சி 559 167. பொறையாற்றுகிழான் 565 168. அதியமான் பொகுட்டெழினி 569 169. சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் 575 170. சோழியவேனாதி திருக்குட்டுவன் 580 171. சோழநாட்டுப் பிடவூர் கிழான்மகன் பெருஞ்சாத்தன் 585 172. வாட்டாற்று எழினியாதன் 592 173. சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் 598 174. சேரமான் வஞ்சன் 605 175. தாமான் சோன்றிக்கோன் 611 176. சோழன் நலங்கிள்ளி 618  பாடப்பட்டவர் அகர வரிசையும் பாடல் எண்களும் அகுதை 233, 347 அதியமான் தகடூர் பொருது வீழ்ந்த எழினி 230 அதியமான் நெடுமான் அஞ்சி 87-95, 97-101, 103, 104, 158, 206, 208, 231, 232, 235, 310, 315, 390 அதியமான் நெடுமான் அஞ்சி மகன் பொகுட்டெழினி 96, 102, 392 அந்துவஞ்சாத்தன் 71 அந்துவன் கீரன் 359 அம்பர் கிழான் மகன் அருவந்தை 385 அவியன் 383 ஆதன் அழிசி 71 ஆதனுங்கன் 175, 389 ஆந்தை 71 ஆய் 127-136, 158, 240, 241, 374, 375, இயக்கன் 71 இருங்கோவேள் 201, 202 இளங்கண்டீரக்கோ 151 இளங்குமணன் 165 இளந்தத்தன் 47 இளவிச்சிக்கோ 151 இளவெளிமான் 207, 237 ஈர்ந்தூர் கிழான் தோயன் மாறன் 180 எயினன் 351 எவ்வி 24, 202, 233, 234 எழினி 158, 230, 392 ஏறைக்கோன் 157 ஏனாதி திருக்கிள்ளி 167 ஒல்லையூர் கிழான் மகன் பெருஞ் சாத்தன் 242, 243 ஓய்மான் நல்லியக் கோடன் 176 ஓய்மான் நல்லியாதன் 376 ஓய்மான் வில்லியாதன் 379 கடிய நெடு வேட்டுவன்205 கண்டீரக் கோப்பெருநள்ளி 148 - 151, 158 கண்ணகி143 - 147 கபிலர் 53, 126, 174 கரும்பனூர் கிழான்381, 384 காரியாற்றுத்துஞ்சிய நெடுங்கிள்ளி 44, 45, 47. கானப்பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதி 21, 367 குமணன் 158-165 கோச் சேரமான் யானைக்கட் சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை 17, 20, 22, 53, 125, 229 கோப்பெருஞ்சோழன் 67, 191, 212-223 சிறுகுடிகிழான் பண்ணன் 70, 173, 388 சேரமான் அந்துவஞ் சேரல் இரும் பொறை 13 சேரமான் கடலோட்டிய வேல்கெழு குட்டுவன் 369 சேரமான் கடுங்கோ வாழியாதன் 8, 14, 387 சேரமான் கருவூர் ஏறிய ஒள்வாள் கோப்பெருஞ் சேரல் இரும்பொறை 5 சேரமான் குட்டுவன் கோதை 54 சேரமான் குடக்கோ சேரல் இரும்பொறை 210, 211 சேரமான் குடக்கோ நெடுஞ்சேர லாதன் 62, 63, 368 சேரமான் கோக்கோதைமார்பன் 48, 49 சேரமான் சிக்கள்பள்ளித் துஞ்சிய செல்வக்கடுங்கோ வாழியாதன் 8, 14, 387 சேரமான் தகடூர் எறிந்த பெருஞ் சேரல் இரும்பொறை 50 சேரமான் பாமுளூர் எறிந்த நெய்தலங் கானல் இளஞ்சேட்சென்னி 203 சேரமான் பாலை பாடிய பெருங் கடுங்கோ 11, 282 சேரமான் பெருஞ்சேரலாதன் 65, 66 சேரமான் பெருஞ்சோற்று உதியஞ் சேரலாதன் 2 சேரமான் மாவண்கோ 367 சேரமான் வஞ்சன் 398 சோணாட்டுப் பூஞ்சாற்றூர்ப் பார்ப்பான் கௌணியன் விண்ணந்தாயன் 166 சோழன் இராச சூயம் வேட்ட பெருநற்கிள்ளி 16, 125, 367, 377 சோழன் இலவந்திகைப் பள்ளி துஞ்சிய நலங்கிள்ளி சேட்சென்னி 61 சோழன் உருவப்பஃறேர் இளஞ்சேட்சென்னி 4, 266 சோழன் கரிகால் பெருவளத்தான் 7, 65, 66, 224 சோழன் குராப்பள்ளித் துஞ்சிய கிள்ளிவளவன் 373 சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவன் 58, 60, 197 சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் 34-42, 46, 69, 70, 173, 226-228, 386, 393, 397 சோழன் செங்கணான் 74 சோழன் செருப்பாழி எறிந்த இளஞ்சேட்சென்னி 370, 378 சோழன் நலங்கிள்ளி தம்பி மாவளத்தான் 43 சோழன் நெய்தலங்கானல் இளஞ்சேட்சென்னி10 சோழன் போரவைக்கோப் பெரு நற்கிள்ளி 80-85 சோழன் முடித்தலைக் கோப் பெரு நற்கிள்ளி 13 சோழன் வேற்பஃறடக்கைப் பெரு நற்கிள்ளி 62, 63, 368 சோழிய ஏனாதி திருக்குட்டுவன் 394 தந்துமாறன் 360 தருமபுத்திரன் 366 தலையாலங்கானத்துச் செருவன்ற நெடுஞ்செழியன்17-19, 23-26, 72, 76-79, 371, 372 தழும்பன் 348 தாமான் தோன்றிக்கோன் 399 தித்தன் 80, 352, 358, 395 தொண்டைமான் 95 நம்பி நெடுஞ்செழியன் 239 நன்னன் 151 நாஞ்சில் வள்ளுவன் 137-140, 380 நாலை கிழவன் நாகன் 179 நெடுங்கிள்ளி 44, 45, 47 நெடுவேளாதன் 338 பரதவர் 378 பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன் 55-57, 196, 198 பாண்டியன் கருங்கை ஒள்வாள் பெரும்பெயர்வழுதி 3 பாண்டியன் கீரஞ்சாத்தன் 178 பாண்டியன் கூடகாரத்துத் துஞ்சிய நன்மாறன் 51, 52 பாண்டியன் சித்திரமாடத்துத் துஞ்சிய நன்மாறன் 59 பாண்டியன் பல்யாக சாலை முது குடுமிப் பெருவழுதி 6, 9, 12, 15, 64 பாண்டியன் வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதி 58 பாரி 105-120, 158, 176, 200-202, 236 பாரி மகளிர் 112, 200 - 202 பிசிராந்தையார் 184 பிட்டங்கொற்றன் 168-172 புல்லி 385 பூத பாண்டியன்தேவி பெருங் கோப்பெண்டு 246, 247 பேகன் -வையாவிக் கோப்பெரும் பேகன் காண்க. பொகுட்டெழினி 96, 102, 392 பொறையாற்று கிழான் 391 மல்லிகிழான் காரியாதி 177 மலையமான் சோழிய ஏனாதி திருக்கண்ணன் 174 மலையமான் திருமுடிக்காரி 121-124, 158 மலையமான் மக்கள் 46 மாங்குடி மருதனார்72 மாவளத்தான் 43 முக்காவானாட்டு ஆமூர் மல்லன் 80 முதியன், ஆதனுங்கன் காண்க. மூவன் 209 வடிம்பலம்ப நின்ற பாண்டியன் 9 வல்லார் கிழான் பண்ணன் 181 வல்வில் ஓரி 152, 153, 158, 204 வாட்டாற்று எழினியாதன் 396 விச்சிக்கோ 200 வெளிமான் 162, 237, 238 வேங்கைமார்பன் 21 வேள்எவ்வி 24, 202, 233, 234 வேள்பாரி பாரியைக் காண்க. வையாவிக் கோப்பெரும்பேகன் 141-147, 158 பாடியவர் அகர வரிசையும் பாடல் எண்களும் அண்டர் நடும் கல்லினார் 283, 344, 345 அண்டர் மகன் குறுவழுதி 346 அரிசில் கிழார் 146, 280, 281, 285, 300, 304, 342 அள்ளூர் நன்முல்லையார் 306, 340 ஆலங்குடி வங்கனார் 319 ஆலத்தூர் கிழார் 34, 36, 69, 225, 324 ஆவடுதுறை மாசாத்தனார் 227 ஆவியார் 298 ஆவூர் கிழார் 322 ஆவூர் மூலங்கிழார் 38, 40, 166, 177, 178, 196, 261, 301 இடைக்காடனார் 42 இடைக்குன்றூர் கிழார் 76 - 79 இரும்பிடர்த் தலையார் 3 உலோச்சனார் 258, 274, 377 உறையூர் இளம் பொன் வாணிகனார் 264 உறையூர் ஏணிச்சேரி முடமோசி யார் 13, 127 - 135, 241, 374, 375 உறையூர் மருத்துவன் தாமோதரனார் 60, 170, 321 உறையூர் முதுகண்ணன் சாத்தனார் 27-30: 325 உறையூர் முது கூத்தனார் 331 ஊன்பொதி பசுங்குடையார் 10, 203, 370, 378 எருக்காட்டூர்த் தாயங்கண்ணனார் 397 எருமை வெளியனார் 273, 303 ஐயாதிச் சிறுவெண் தேரையார் 363 ஐயூர் முடவனார் 51, 228, 314, 399 ஐயூர் மூலங்கிழார் 21 ஒக்கூர் மாசாத்தனார் 248 ஒக்கூர் மாசாத்தியார் 279 ஒரு சிறைப் பெரியனார் 137 ஒரூஉத்தனார் 275 ஒல்லையூர் தந்த பூதபாண்டியன் 71 ஓரம் போகியார் 284 ஓரேருழவர் 193 ஒளவையார் 87 - 104, 140, 187, 206, 231, 232, 235, 269, 286, 290, 295, 311, 315, 367, 390, 392 கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி 182 கண்ணகனார் 218 கணியன் பூங்குன்றனார் 192 கதையங்கண்ணனார்192 கதையங்கண்ணனார் 356 கபிலர் 8, 14, 105 - 111, 113, - 124, 143, 200, 202, 236, 337, 347 கயமனார் 254, 361 கருங்குள வாதனார் 7, 224 கருவூர்க்கதப்பிள்ளை 380 கருவூர்க் கதப்பிள்ளை சாத்தனார் 168 கருவூர்ப் பெருஞ்சதுக்கத்துப்பூத நாதனார் 219 கல்லாடனார் 23, 25, 371, 385, 391 கழாத்தலையார் 62, 65, 270, 288, 289, 368 கழைதின் யானையார் 204 கள்ளில் ஆத்திரையனார் 175, 389 காக்கை பாடினியார் நச்செள்ளை யார் 278 காரிகிழார் 6 காவற் பெண்டு 86 காவிட்டனார் 359 காவிரிப் பூம்பட்டினத்துக் காரிக் கண்ணனார் 57, 58, 169, 171, 353 குட்டுவன் கீரனார் 240 குடபுலவியனார் 18, 19 குடவாயில் கீரத்தனார் 242 குளம்பந்தாயனார் 253 குறமகள் இளவெயினியார் 157 குறுங்கோழியூர் கிழார் 17, 20, 22 குன்றுகட் பாலியாதனார் 387 குன்றூர் கிழார் மகனார் 338 கூகைக் கோழியார் 364 கூடலூர் கிழார் 229 கோடை பாடிய பெரும்பூதனார் 259 கோதமனார் 366 கோப்பெருஞ்சோழன் 214 - 216 கோவூர் கிழார்31 - 33, 41, 44 - 47, 68, 70, 308, 373, 386, 400 கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரைக்குமரனார் 54, 61, 167, 180, 197, 394 சங்கவருணர் என்றும் நாகரையர் 360 சாத்தந்தையார் 80 - 82, 287 சிறுவெண் தேரையார் 362 சேரமான் கணைக்கால் இரும் பொறை 74 சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை 245 சோணாட்டு முகையலூர்ச் சிறுகருந்தும்பியார் 181, 265 சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் 173 சோழன் நல்லுருத்திரன் 190 சோழன் நலங்கிள்ளி 73, 75 தங்கால் பொற்கொல்லனார் 326 தாமப்பல் கண்ணனார் 43 தாயங்கண்ணியார் 250 திருத்தாமனார் 398 தும்பைச் சொகினனார் 249 துறையூர் ஓடை கிழார் 136 தொடித்தலை விழுத்தண்டினார் 243 தொண்டைமான் இளந்திரையன் 185 நரிவெரூஉத்தலையார் 5, 195 நல்லிறையனார் 393 நெட்டிமையார் 9, 12, 15 நெடுங்களத்துப் பரணர்291 நெடும் பல்லியத்தனார் 64 நொச்சி நியமங்கிழார் 293 பக்குடுக்கை நன்கணியார் 194 பரணர் 4, 63, 141, 142, 144, 145, 336, 341, 343, 348, 352, 369 பாண்டரங்கண்ணனார் 16 பாண்டியன் அறிவுடை நம்பி 188 பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் 183 பாரதம் பாடிய பெருந்தேவனார் 1 பாரிமகளிர் 112 பாலைபாடிய பெருங்கடுங்கோ 282 பிசிராந்தையார்67, 184, 191, 212 பிரமனார் 357 புல்லாற்றூர் எயிற்றியனார் 213 புறத்திணை நன்னாகனார் 176, 376, 379, 381, 384 பூங்கண் உத்திரையார் 377 பூதபாண்டியன் தேவி பெருங் கோப்பெண்டு 246 பெருங்குன்றூர் கிழார் 147, 210, 211, 266, 318 பெருங்கோழி நாய்கன் மகள் நக்கண்ணையார் 83 - 85 பெருஞ்சித்திரனார் 158 - 163, 207, 208, 237, 238 பெருந்தலைச் சாத்தனார் 151, 161-165, 205, 206, 294 பெரும்பதுமனார் 199 பேய்மகள் இளவெயினி 11 பேரெயின் முறுவலார் 239 பொத்தியார் 217, 220, 223 பொய்கையார்48, 49 பொருந்தில் இளங்கீரனார் 53 பொன்முடியார் 299, 310, 312 மதுரை அளக்கர் ஞாழலார் மகனார் மள்ளனார் 388 மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார் 309 மதுரைக் கணக்காயனார் 330 மதுரை இளங்கண்ணிக் கோசிகனார் 309 மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் 56, 189 மதுரைக் கள்ளில் கடையத்தன் வெண்ணாகனார் 316 மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் 59 மதுரைத் தமிழக் கூத்தனார் 334 மதுரை நக்கீரர் 395 மதுரைப் படைமங்க மன்னியார் 351 மதுரைப் பேராலவாயார் 247, 262 மதுரை மருதனின் நாகனார்52, 55, 138, 139, 249 மதுரை மேலைக்கடைக் கண்ணம் புகுந்தாராயத்தனார் 350 மதுரை வேளாசான் 305 மாங்குடி கிழார் 24, 26, 313, 335, 372, 396 மார்க்கண்டேயனார் 365 மாரிப்பித்தியார் 251, 252 மாறோக்கத்து நப்பசலையார் 37, 39, 126, 174, 226, 280, 383 முரஞ்சியூர் முடிநாகரையர் 2 மோசி கீரனார் 50, 154 - 156, 186 மோசி சாத்தனார் 272 வடநெடுந்தத்தனார் 179 வடம வண்ணக்கன் தாமோதரனார் 172 வடம வண்ணக்கன் பெருஞ் சாத்தனார் 125 வடம வண்ணக்கன் பேரி சாத்தனார் 198 வடமோதங்கிழார் 260 வன்பரணர்148 - 150, 152, 153, 255 வான்மீகியார்358 விரிச்சியூர் நன்னாகனார் 292 விரியூர் நக்கனார் 332 வீரை வெளியனார் 320 வெண்ணிக் குயத்தியார் 66 வெள்ளெருக் கிலையார்233, 234 வெள்ளை மாறனார் 296 வெறிபாடிய காமக் காணியார் 271, 302 வேம்பற்றூர்க் குமரனார் 317 புறநானூறு மூலமும் உரையும் 201. இருங்கோவேள் இருங்கோவேள் என்பான் பதினெண்குடி வேளிருள் ஒருவன் தமிழகத்தின் வடபகுதியாகிய எருமை (மைசூர்) நாட்டைச் சேர்ந்த துவரை யென்னும் நகர்க்கண்ணிருந்து ஆட்சி புரிந்த வேந்தர் வழியினன். இத் துவரை துவார சமுத்திரம் எனப்படுகிறது. இருங்கோவேள் அவ் வேளிருள் நாற்பத்தொன்பதாவது தலை முறையினன். புலி கடிமால் என்பது இவன் குடி முதல்வனுக்குப் பெயர். இவ் வேளிர் வள்ளன்மை சிறந்தவர்; போர்வன்மை மிக்கவர். இவர் நாடு புதுக்கோட்டைச் சீமையிலுள்ளமலைநாடு. இவற்றிற்கு மேற்கிலுள்ள கோடைமலைத்தொடர் பொன்படுமால் வரையென (Imp. gazette, Coimbatore) ஆராய்ச்சியாளர் கூறியுள்ளனர். பாரிமகளிரைக் கொணர்ந்த கபிலர் இவனையடைந்து, “இம் மகளிரை யான்தர மணந்து கொள்க” என வேண்டுகின்றவர், “இவர்கள் முல்லைக்குத் தேரீந்து நல்லிசை நிறுவிய பறம்பிற் கோமானாகிய பாரியின் மகளிர்; யான் இவருடைய தந்தையாகிய வேள்பாரிக்குத் தோழன்; அந்தணன் புலவன்” என்று கூறுகின்றார். இவரியார் என்குவை யாயி னிவரே ஊருட னிரவலர்க் கருளித் தேருடன் முல்லைக் கீத்த செல்லா நல்லிசைப் படுமணி யானைப் பறம்பிற் கோமான் 5 நெடுமாப் பாரி மகளிர் யானே தந்தை தோழ னிவரென் மகளிர் அந்தணன் புலவன் கொண்டுவந் தனனே நீயே, வடபான் முனிவன் றடவினுட் டோன்றிச் செம்புபுனைந் தியற்றிய சேணெடும் புரிசை 10 உவரா வீகைத் துவரை யாண்டு நாற்பத் தொன்பது வழிமுறை வந்த வேளிருள் வேளே விறற்போ ரண்ணல் தாரணி யானைச் சேட்டிருங் கோவே ஆண்கட னுடைமையிற் பாண்கட னாற்றிய 15 ஒலியற் கண்ணிப் புலிகடி மாஅல் யான்றர விவரைக் கொண்மதி வான்கவித்து இருங்கட லுடுத்தவிவ் வையகத் தருந்திறற் பொன்படு மால்வரைக் கிழவ வென்வேல் உடலுந ருட்குந் தானைக் 20 கெடலருங் குரைய நாடுகிழ வோயே. திணை - பாடாண்டிணை; துறை - பரிசிற்றுறை. பாரி மகளிரை இருங்கோவே ளுழைக்கொண்டு சென்ற கபிலர் பாடியது. உரை : இவர் யார் என்குவையாயின் - இவர் யாரென்று வினவு வாயாயின்; இவர் - இவர்தாம்; ஊருடன் இரவலர்க்கு அருளி - ஊரெல்லாவற்றையும் இரப்போர்க்கு வழங்கி; தேருடன் முல்லைக்கீத்த - தேரை ஏறுதற்கேற்பச் சமைத்த அணியோடும் புரவியோடும்கூட முல்லைக்கு வழங்கிய; செல்லா நல்லிசை - தொலையாத நல்ல புகழையும்; படுமணி யானை - ஒலிக்கும் மணியையுடைய யானையையுமுடைய; பறம்பின் கோமான் நெடுமாப் பாரிமகளிர் - பறம்பிற்குத் தலைவனாகிய மிக்க பெரிய பாரியுடைய மகளிர்; யான் தந்தை தோழன் - யான் இவர் தந்தையின் தோழனாதலான்; இவர் என் மகளிர் - இவர் என்னுடைய மகளிர்; அந்தணன் புலவன் கொண்டுவந்தனன் - அந்தணனாகிய புலவன் யான் கொண்டுவந்தேன்; நீயோ - நீதான்; வடபால் முனிவன் தடவினுள் தோன்றி - வடபக்கத்து முனிவனுடைய ஓமகுண்டத்தின்கண் தோன்றி; செம்பு புனைந்தி யற்றிய சேண் நெடும் புரிசை - செம்பால் புனைந்து செய்தா லொத்த சேய்மையுடைத்தாகிய நெடிய மதிலையுடைய; துவரை ஆண்டு - துவரா பதி யென்னும் படை வீட்டையாண்டு; உவரா ஈகை - வெறுப்பில்லாத கொடையினையுடையராய்; நாற்பத்தொன்பது வழிமுறை வந்த - நாற்பத்தொன்பது தலைமுறை தொன்றுபட்டு வந்த; வேளிருள் வேள் - வேளிருள் வைத்து வேளாயுள்ளாய்; விறற்போர் அண்ணல் - வென்றிப் போரையுடைய தலைவ; தாரணி யானைச் சேடு இருங்கோவே - தாரணிந்த யானையினையுடைய பெரிய இருங்கோவே; ஆண்கடன் உடைமையின் பாண்கடன் ஆற்றிய - ஆண்டன்மையைக் கடப்பாடாக வுடைமையால் பாணர்க்குச் செய்யக்கடவ முறைமையை யுதவிய; ஒலியல் கண்ணிப் புலிகடி மாஅல் - தழைத்த கண்ணியையுடைய புலிகடிமாலே; யான் தர இவரைக் கொண்மதி - யான்நினக்குத்தர இவரைக் கொள்வாயாக, வான் கவித்து - வானாற் கவிக்கப்பட்டு; இருங்கடல் உடுத்த இவ் வையகத்து - பெருங்கடல் சூழ்தரப்பட்ட இவ் வுலகத்தின் கண்; அருந்திறல் பொன்படு மால் வரைக் கிழவ - அணுகுதற்கரிய வலியையுடைய பொன்னுண்டாகும் பெரிய மலைக்குத் தலைவ; வென்வேல் உடலுநர் உட்கும் தானை - வெற்றி வேலையுடைத்தாகிய பகைவரஞ்சும் படையையுடைய; கெடலரும் நாடு கிழவோய் - கேடில்லாத நாட்டுக்குரியவனே; என்றவாறு. உவரா வீகை வேளிர் எனக் கூட்டுக. “வடபால்முனிவன் தடவினுள் தோன்றி” என்பதற்குக் கதையுரைப்பிற் பெருகும். அது கேட்டுணர்க, புலிகடிமால் என்பது இவனுக்கொரு பெயர். வேளே, அண்ணல், இருங்கோவே, புலிகடிமாஅல், கிழவ, நாடு கிழவோய், நீ இப்படிப்பட்ட உயர்ந்த குடியிற் பிறந்தவனாதலால், யான்தர இவரைக் கொண்மதி யெனக் கூட்டி வினை முடிவு செய்க. யான் இவருடைய தந்தை தோழனாதலானும் அந்தணனாதலானும் யான் தர இவரைக் கோடற்குக் குறையில்லை யென்பது கருத்து. விளக்கம் : இருங்கோவேளுக்குப் பாரிமகளிரை முன்னர்க் காட்டிப் பின் அவர்கட்கும் தனக்கும் உண்டாகிய தொடர்புகாட்டி, “யான்தர இவரைக் கொள்க” என்கின்றாராகலின், முதலில் பாரிமகளிரைக் கூறினார். இரவலர்க்கு ஊரும், முல்லைக்குத் தேரும் தந்தான் என்பவர், “தேருடன்” என்பதற்குத் “தேருடனே புரவியும் ” முல்லைக் கீத்தான் என்று உரைகாரர் கூறுகின்றார். இவ்வாறு கூறாது. முல்லைக் கொடியின் நிலைகண்டு பிறந்த அருளால் முன்பின் நினையாது உடனே, தேரை ஈந்தான் என்றிருப்பின் சிறப்பாக இருக்கும். பறம்பு - பறம்பு மலை. இவர் தந்தைக்குத் தோழன் அதனால் யானும் இவர்கட்குத் தந்தையென்பார், “இவர் என் மகளிர் என்றார். அந்தணரும் மகட்கொடை நேர்தற்குரிய ரென்பது தோன்ற “அந்தணன்” என்றார். விசுவபுராண சாரமென்னும் தமிழ்நூலையும் இரட்டையர் செய்த தெய்விகவுலாவையும் துணையாகக் கொண்டு, வடபால் முனிவன் என்றது சம்புமுனிவனாக இருக்கலாமென டாக்டர். உ.வே.சா ஐயரவர்கள் “ஊகிக்கின்றார்கள்.” துவரை யென்றது, வடநாட்டில் “நிலங்கடந்த நெடுமுடி யண்ணல்” இருந்து ஆட்சிபுரிந்த துவரை யென்றும் அவன்பாலிருந்து மலயமாதவனான குறுமுனிவன் கொணர்ந்த வேளிர்கள் என்றும் பதினெண் குடியின ரென்றும் நச்சினார்க்கினியர் குறிக்கின்றார். “துவரைமாநகர் நின்று போந்த தொன்மை பார்த்து” கிள்ளிவேந்தன், நிகரில் தென்கவிர் நாடு தன்னில் நிகழ்வித்த நிதியாளர்” எனவரும் கல்வெட்டால், துவரை வரலாறு பன்னிரண்டாம் நூற்றாண்டிலேயே தொன்மையுடையதாகக் காணப்படுவது, நச்சினார்க்கினியர் கூற்றை வற்புறுத்துகின்றது. மைசூர் நாட்டுத் துவரை பன்னிரண்டாம் நூற் றாண்டின் தொடக்கத் திலேயே உண்டாகிய நகரம். இத்துவரையிற் றோன்றி மேம்பட்ட ஹொய்சள வேந்தரோடு புலிகடிமாலாகிய இருங்கோவேளை இணைத்துக் கண்டு, புலிகடிமால் என்றது ஹொய்சள என்ற தொடரின் தமிழ்ப் பெயராகக் கருதுவதுமுண்டு. பன்னிரண்டாம் நூற்றாண்டில் மைசூர் நாட்டில் இருந்து ஆட்சி செலுத்திய ஹொய்சள வேந்தருடைய கல்வெட்டுக்களுள், பண்டை நாளில் யதுகுலத்தில் தோன்றிய சளவென்ற பெயரினனான வேந்த னொருவன் சஃகிய மலைகளிடையே மேலை வரைத் தொடர் (Western Ghats) வேட்டை புரியுங்கால் முயலொன்று புலியொடு பொருவது கண்டு வியப்புற்று இந்நிலம் மிக்க வன்மை நல்கும் பெருநிலம் போலும் என எண்ணி யவனாய் அவற்றைத் தொடர்ந்து சென்றானாக, அங்கே தவம் புரிந்து வந்த முனிவ னொருவன் புலியைக் கண்டு, “சளனே, போய்ப் புலியைக் கொல்க” (அதம் ஹொய்சள) என வேந்தனைப் பணித்தலும், அவன் உடை வாளையுருவிப் புலியைக் கொன்றான்; முனிவன் அருள் பெற்று மீண்ட சளவேந்தன் அதுமுதல் ஹொய்சளன் எனப்பட்டான்; அவன் வழிவந்தோர் தம்மை ஹொய்சளர் எனக் கூறிக்கொள்வா ராயினர் என மைசூர்நாட்டுப் பேலூர் மாவட்டத்துப் பேலவாடியில் உள்ள நரசிம்ம ஹொய்சள தேவர் கல்வெட்டொன்று (Ep Car. Vol.I.B1: 171) கூறுகிறது. அந்நாட்டு ஹொன்னாவரத்துக் கேசவப் பெருமாள் கோயில் கல்வெட்டு (Ibid : Hn. 65) இவ்வரலாற்றிற் கண்ட முயலைப் பற்றிய செய்தியை நீக்கி எஞ்சியவற்றைக் கூறுகிறது. காட்டிலிருந்த முனிவன் மந்திர வலிமையுடையனென்று சளன் என்பான் அறிந்து அவன் திருவடியில் வீழ்ந்து வணங்கினனென்றும், அதனால் மகிழ்ச்சியுற்று, அவனுக்குச் சசகபுரத்தைத் தலைமையாகக் கொண்ட பேரரசை வழங்க வேண்டுமென விரும்பிய முனிவன் அதற்கேற்ற மந்திரச் செயல்களைச் செய்தானென்றும் அதனை அழித்தல் வேண்டிச் சசகபுரநகரத் தெய்வமாகிய வாசந்திகை யென்பாள் ஒரு புலியுருக் கொண்டு வந்தாளென்றும், அது கண்டு முனிவன் அப் புலியைக் கொல்லுமாறு பணிப்பான் “ஹொய்சள” என்றானென்றும், அவன் அவ்வண்ணமே செய்து ஹொய்சள வேந்தனானானென்றும் (Ibid. Ak. 71) அரிசிற் கரையில் உள்ள வீரவல்லாள தேவன் கல்வெட்டொன்று கூறுகிறது. இப் புறப்பாட்டில் முனிவனென்றும், துவரை யென்றும் புலிகடிமால் என்றும் வருவனவற்றைக் கொண்டு, இந்த ஹொய் சளக் கதை ஈண்டு நினைக்கப்படுகிறது. மற்று, மேற்கு மலைத் தொடர்ப்பகுதியினர் நாற்புறமும் மலைமுடிகள் சூழ்ந்த இடை. நிலத்தைத் தடவென்றும் கோட்டமென்றும் கூறுதலால், முனிவன் தடவென்றது, முனிவ னொருவன் இருந்த மலைமிசை யிடைநில மென்றும், அந்நிலத்து வாழ்ந்த வேளிர் தலைவனொருவன், அப் பகுதிக்குக் கிழக்கில் உள்ள புலிநாடென்றும் பன்நாடென்றும் வழங்கிய கன்னட நாட்டு வேந்தனை வென்றது பற்றிப் புலிகடிமால் எனப்பட்டான் என்றும் கொள்வது நேரிதாகத் தோன்றுகிறது. அந் நாளில் அப் பகுதியை யாண்ட ஆந்திர சாதவாகன வேந்தருள் புலிமாய் என்பான் சிறந்து விளங்கினமையின் ஒருகால் அவனை வென்றதுபற்றி இருங்கோவேள் புலிகடிமால் எனப்படுவானாயினன் என்றும் கொள்ளலாம். மேனாட்டு யவனரான தாலமியும் இப் புலிமாய் வேந்தனைக் குறித்துரைத் துள்ளார்; சாதவாகனாட்சி கி.மு. மூன்றாம் நூற்றாண்டிலிருந்தே தொடர்ந்திருக்கிறது; அந்நாளிலேயே துவராவதி (துவரை) நகரம் அந் நாட்டில் இருந்திருக்கிறது. ஸ்ரீ புலுமாவி, புலிமாயி எனக் காணப் படினும் கன்னட மொழியில் அது புலிமெய் என வழங்கும் என்றும், புலிபோலும் மெய்வலியுடைய னென்பது பொருளென்றும் ஆராய்ச்சி யாளர் கூறுகின்றனர். இவ்வாற்றால் ஹொய்சளக் கதை யினும் இது பொருத்தமாதல் காணப்படும். இப் புலிகடிமால் வழிவந்த இருங் கோவேளிர்களுட் பலர் புதுக்கோட்டைப் பகுதியில் வாழ்ந் திருந்தனரென அப்பகுதியி லுள்ள கல்வெட்டுக்கள் காட்டுகின்றன. கொடும்பாளூரிலிருந்து வாழ்ந்த வேளிரும் இருங்கோ வேளிரே; பிற்காலத்தே அவர்கள் இருக்குவேளிர் எனத் தம்மைக் கூறிக் கொள்வாராயினர் இவ் வேளிர்கள் வேளகத்தி (Bailgam)லிருந்து கங்கநாடு கொங்குநாடு களின் வழியாகத் தென்னாடடைந்தவர். இனி, வேளிர்கள் முதற்கண் வாழ்ந்த மலைநாடு பொன்வளம் படைத்தவை யாதலின் “பொன்படு மால்வரைக் கிழவ” என்றாரென்றுமாம். 202. இருங்கோவேள் “பாரிமகளிரை யான்தர நீ மணந்து கொள்க” என வேண்டிக் கொண்ட கபிலர் வேண்டுகோளை இருங்கோவேள் மறுத்து விட்டான். அம் மறுப்புக் கபிலரது செந்நாப்புலமையை இகழ்ந்த குறிப்புடைத் தாயு மிருந்தது. வேள்பாரி எவ்விகுடியிற் பிறந்த செவ்வியன் என்றும் அப் பெரியோனுடைய மகளிர் இவரென்றும் தாம் தெளியக்கூறிய கூற்றை அவன் தெளிந்துகொள்ளாமைக்கு வருந்தினார். தம் சொல்லைப் பொய்ப் படுத்திய இருங்கோவேள் பால் கபிலர்க்கு அருவருப்பும் சினமும் உண்டாயின; “வேளே, நின்னாட்டில் பொன்வளஞ் சிறந்தோங்கிச் சிற்றரையம் பேரரைய மென இருபகுதித்தாய் விளங்கிய அரையமென்னும் மூதூர் இன்று அழிந்து கிடத்தற்குக் காரணம் அறியாய்; கூறுவேன் கேள்; நின் முன்னோருள்” நின்னைப் போலும் அறிவுடைய ஒருவன் செந்நாப் புலவரான கழாஅத்தலையாரை இகழ்ந்தனன்; அவ்விகழ்ச்சி பொறாது அவரும் சினந்தனர். அதனால் விளைந்த கேடுதான் அரையத்துக் குண்டாகிய கேடு. இவர்கள் எவ்வி குடியிற் பிறந்தவரென்றும் பாரிமகளிரென்றும் கூறிய என்சொல், தெளி வில்லாப் புன்சொல்லென எள்ளி இகழ்ந்தனை; யான் கூறி யதனைப் பொறுத்துக் கொள்க. யான் விடை பெற்றுச் செல்வேன், நின்வேல்வென்றி யெய்துக வென இப் பாட்டின்கட் பாடிக் காட்டிவிட்டு நீங்கினார். இப் பாட்டின்கண் ஆங்காங்கு இவர் இகழ்ந்து கூறும் பகுதி இலக்கிய இன்பந்தருவனவாம். வெட்சிக் கானத்து வேட்டுவ ராட்டக் கட்சிக் காணாக் கடமா நல்லேறு கடறுமணி கிளரச் சிதறுபொன் மிளிரக் கடிய கதழு நெடுவரைப் படப்பை 5 வென்றி நிலைஇய விழுப்புக ழொன்றி இருபாற் பெயரிய வுருகெழு மூதூர்க் கோடிபல வடுக்கிய பொருணுமக் குதவிய நீடுநிலை யரையத்துக் கேடுங் கேளினி நுந்தை தாய நிறைவுற வெய்திய 10 ஒலியற் கண்ணிப் புலிகடி மாஅல் நும்போ லறிவி னுமரு ளொருவன் புகழ்ந்த செய்யுட் கழாஅத் தலையை இகழ்ந்ததன் பயனே யியறே ரண்ணல் எவ்வி தொல்குடிப் படீஇயர் மற்றிவர் 15 கைவண் பாரி மகளி ரென்றவென் தேற்றாப் புன்சொ னோற்றிசிற் பெரும விடுத்தனென் வெலீஇயர்நின் வேலே யடுக்கத் தரும்பற மலர்ந்த கருங்கால் வேங்கை மாத்தகட் டொள்வீ தாய துறுகல் 20 இரும்புலி வரிப்புறங் கடுக்கும் பெருங்கல் வைப்பி னாடுகிழ வோயே. திணை - பாடாண்டிணை; துறை - பரிசிற்றுறை. இருங் கோவேள் பாரி மகளிரைக் கொள்ளானாகக் கபிலர் பாடியது. உரை : வெட்சிக்கானத்து வேட்டுவர் ஆட்ட - வெட்சியையுடைய காட்டின் நடுவண் வேட்டுவர் அலைப்ப; கட்சிக்காணாக் கடமா நல்லேறு - தனக்குப் புகலிடங் காணாத கடமாவினது நல்ல ஏறு; கடறு மணிகிளர - வரைச்சாரல் மணி மேலே கிளம்பவும்; சிதறு பொன்மிளிர - சிதறிய பொன் விளங்கவும்; கடிய கதழும் நெடுவரைப்படப்பை - விரையவோடும் மலைப்பக்கத்து; வென்றி நிலைஇய விழுப்புகழ் ஒன்றி - வெற்றி நிலைபெற்ற சிறந்த புகழ் பொருந்தி; இருபால் பெயரிய உருகெழு மூதூர் - சிற்றரையம் பேரரையமென இருகூற்றாற் பெயர்பெற்ற உட்குப்பொருந்திய பழைய வூரின்கண்; கோடி பல அடுக்கிய பொருள் நுமக்கு உதவிய - பல கோடியாக அடுக்கப்பட்ட பொன்னை நுங்களுக்கு உதவிய; நீடுநிலை அரையத்துக் கேடும் - நீடிய நிலையையுடைய அரையத்தினது கேட்டையும்; இனி கேள் - இனிக் கேட்பாயாக, அது கெடுதற்குக் காரணம்; நுந்தை தாயம் நிறைவுற எய்திய - நினது தாளால் தரப்பட்ட பொருளையன்றி நுந்தையுடைய உரிமையை நிறையப்பெற்ற; ஒலியல் கண்ணி புலிகடி மாஅல் - தழைத்த கண்ணியையுடைய புலிகடிமாலே; நும்போல் அறிவின் நுமருள் ஒருவன் - நும்மை யொக்கும் அறிவினையுடைய நுங்குடியுள் ஒருவன்; புகழ்ந்த செய்யுள் கழாஅத் தலையை இகழ்ந்ததன் பயன் - புகழ்ந்த செய்யுளையுடைய கழாஅத் தலையா ரென்னும் புலவரை அவமதித்ததனாலுண்டான பயன்; இயல்தேர் அண்ணல் - இயற்றப்பட்ட தேரையுடைய தலைவ; இவர் எவ்விதொல் குடிப் படீஇயர் - இவர் எவ்வியுடைய பழைய குடியிலே படுவார்களாக; மற்று இவர் கைவண் பாரிமகளிர் என்ற - பின்னை இவர் கைவண்மையையுடைய பாரிமகளிரென்று சொல்லிய; என்தேற்றாப் புன்சொல் நோற்றிசின் - எனது தெளியாத புன்சொல்லைப் பொறுப்பாயாக; பெரும - பெருமானே; விடுத்தனென் - யான் நின்னை விடை கொண்டேன்; நின்வேல் வெலீஇயர் - நின்வேல் வெல்வதாக; அடுக்கத்து அரும்பு அற மலர்ந்த கருங்கால் வேங்கை - அரைமலையில் முகையற மலர்ந்த கரிய காலையுடைய வேங்கையினது; மாத்தகட்டு ஒள்வீ தாய துறுகல் - கரிய புறவிதழையுடைய ஒள்ளிய பூப்பரந்த பொற்றைக்கல்; இரும்புலி வரிப்புறம் கடுக்கும் - பெரும்புலியினது வரியையுடைய புறத்தை யொக்கும்; பெருங்கல் வைப்பின் நாடுகிழவோய் - பெரிய மலையிடத் தூர்களையுடைய நாட்டையுடையோய் எ-று. புலிகடிமாஅல், அண்ணல், நாடுகிழவோய், அரையத்துக் கேடுங்கேள் இனி; அது கழாத்தலையை இகழ்ந்ததன் பயன்; இப்பொழுது, எவ்வி தொல்குடிப்படீஇயர், இவர் பாரிமகளிர் என்ற புன்சொல்லைப் பொறுப்பாயாக; பெருமானே, நின்னை விடுத்தேன்; நின் வேல் வெல்வதாகவெனக் கூட்டி வினை முடிவு செய்க. ஒலியல் கண்ணி, தளிர்மாலை யெனினுமமையும். நீடுநிலை அரையத்துக் கேடும் கழாத்தலையை இகழ்ந்ததன் பயன் என்ற உம்மையான், இவ்விகழ்ச்சியும் நினக்குக் கேடு தரும் என்பதாயிற்று. அது கெடுதற்குக் காரணம், கழாத் தலையை நுமருள் ஒருவன் இகழ்ந்ததனால், அவன் வாக்குத் தப்பாதாகலின் அவன் வசையாகப் பாடினானென்று சொல்லுவர், அதுவே என்பதாம். வெலீஇயர் நின் வேல் என்றது குறிப்புமொழி. நுந்தை தாயம் நிறைவுற வெய்திய என்பதூஉம், நும்போலறிவின் என்பதூஉம் இகழ்ச்சி தோன்ற நின்றன. வேங்கைவீ தாய துறுகல் இரும்புலி வரிப்புறம் கடுக்கும் என்ற கருத்து, ஏதம் செய்யாததும் ஏதம் செய்வது போலக் கண்டார்க்கு அச்சம் வரத் தோன்றுமென்றமையான் இதுவும் இகழ்ச்சி தோன்ற நின்றது. விளக்கம் : கட்சி - புகலிடம். இக்காலத்தே ஒரு சில கருத்துடன்பாட்டால் ஒற்றுமைப்பட்டு நிற்கும் மக்கள் குழுவைக் கட்சியென்பர். இருங் கோவேளுக்குரிய அரையம் பண்டை நாளிலே அழிந்தமையின் இப்போது அஃது இருக்குமிடம் தெரிந்திலது. இருங்கோவேள் மரபினர் இப்போது பாண்டி நாட்டில் கொற்கையைச் சூழ்ந்தவூர் களில் வாழ்கின்றனர். கழாத்தலை யென்னும் புலவர் கழாத்தலையார் எனப்படுவர். கழாத்தலை என்பது, சீத்தலை, பெருந்தலை முதலிய வூர்களைப் போல்வ தோரூர். அவ்வூரினராதலின், கழாத்தலையார் எனப்பட்டமையின், ஈண்டு வாளாது கழாத்தலை யென்றார். அவர் பாடிய பாட்டொன்று இத்தொகை நூற்கண் உளது. (புறம். 270) முகையற மலர்ந்த வேங்கை யென்றது, வேங்கை மரத்தில் இனிப் பூத்தற்கு அரும்பு ஒன்றும் இல்லை யென்னுமாறு முற்றவும் மலர்ந்து நிற்கும் வேங்கை மரம் என்றவாறு. பிறரும் “அரும்பற வள்ளிதழவிழ்ந்த தாமரை, நள்ளிரும் பொய்கை” (புறம். 247) என்று கூறுவது காண்க. வேங்கைப் பூப் பரந்த துறுகல் இரும்புலிபோல் தோன்று மென்றது, “யான் இவர் எவ்வி குடியிற் பிறந்த செவ்வியர், கைவண் பாரிமகளிர்” என்றது நினக்குப் பகை தோற்றுவிப்பது போன்றதோர் அச்சத்தைப் பயப்பித்தது போலும் என இகழ்ந்த குறிப்பும் உடையதாதல் அறிக. “வெலீஇயர் நின் வேல்” என்றது நின்வேல் கெடுக என்ற எதிர்மறைப் பொருள் பயந்து நிற்றலின் குறிப்பு மொழியென்றார், “எழுத்தொடும் சொல்லொடும் புணராதாகிப், பொருட்புறத்ததுவே குறிப்பு மொழி யென்ப” (செய். 177) என்று ஆசிரியர் கூறுவது காண்க. நுந்தை தாயம் நிறைவுற எய்திய என்றது, நீயே நின் ஆற்றலாற் கொண்டிலை எனவும், “நும்போ லறிவி னுமரு ளொருவ” னென்றது, நின்னைப்போலவே நல்லறிவில்லாத நின் முன்னோருள் ஒருவன் எனவும் பொருள் இசைத்து நிற்றலின், “இகழ்ச்சி தோன்ற நின்றன” என்று உரைத்தார். 203. சோழன் பாமுளூரெறிந்த நெய்தலங்கானல் இளஞ்சேட் சென்னி இவ்விளஞ்சேட் சென்னியைச் சேரமான்பாமுளுர் எறிந்த இளஞ்சேட் சென்னியென்றும், நெய்தலங்கானல் இளஞ்சேட் சென்னி யென்றும், செருப்பாழி யெறிந்த இளஞ்சேட்சென்னி யென்றும் கூறுவர். நெய்தலங்கானல் இவன் பிறந்தவூர் என்றும், இளஞ்சேட்சென்னியென்பது இவற்குப் பெயரென்றும், செருப்பாழி சோழர்க்குரிய தென்றும் பாமுளூர் சேரமான்களுக்குரியதென்றும் முன்பு கூறினாம்; செருப்பாழியைச் சேரர்க்குரியதெனக் கருதுவதும் உண்டு. இச் சென்னி தன்னொடு பகைத்துப் பொருதசேரமன்னனை அவற்குரிய பாமுளூரிடத்தே எதிர்த்துப் பொருது வெற்றி பெற்றிருக்கையில் இவனைச் சான்றோராகிய ஊன்பொதி பசுங்குடையார் சென்று கண்டார். நெய்தலங்கானலில் தான் இருக்கும்போதே, இவர் தன்பாற் போந்து அறிவுரை வழங்கிச் சிறப்பித்ததைப் பாராட்டிப் பெரும்பரிசில் நல்கினானாயினும். இச் சோழன், போரில் உழந்த வருத்தத்தால் தான் நல்க இருந்த பரிசிலை நீட்டித்துத் தந்தான். அதனால் பரிசிலர் கூட்டத்துக்கும் சிறிது அசைவுண்டாயிற்று. ஊன்பொதி பசுங்குடையார் அவனை நன்கறிவாராயினும், ஏனைப் பரிசிலரும் பிறரும் அறியாராகலின் அவர் வேறுபட நினைப்பதனைச் சோழற்குத் தெரிவிக்க எண்ணினார், மேலும், முன்னே தன்பாற் பரிசில் பெற்றவர்களாதலின் அவர்கள் சிறிது தாழ்த்துப்பெற்றுப் போகலாமெனும் கருத்துடையனானான் என்பதையும் ஊன் பொதி பசுங்குடையார் அறிந்து கொண்டார். அக் கருத்து நன்றன்றென்பதையும் சோழற்கு அறிவுறுத்த வேண்டிய கடமையுடையரானார். சோழனைக் காண்டற்கு வேண்டும் செவ்வி பெற்றதும், பரிசிற்றுறையாகத் தாம் பாடிய இப் பாட்டைப் பாடிக்காட்டினார். இதன்கண், முன்னே நல்ல மழையைப் பெய்தேமென நினைந்து மழை இப்போது பெய்யா தொழியுமாயின் விளைநிலங்களும் தாம் முன்னே நிறைய விளைந்தேமென்று இப்போது விளையாது போமாயின் எவ் வுயிருக்கும் இவ்வுலகில்உயிர் வாழ்க்கையில்லையாகும்; முன்னேயும் நீ நிறையத்தந்தனை யாதலின் இப்போதும் அவ்வாறே தருக என எம்போலும் பரிசிலர் நின்னை இரப்பர்; இரப்பாராயின், நீர்முன்னர் நிறையக் கொண்டீராதலின் இப்போது வறிதே சென்மின் என்று சொல்லி நின்போல்வார் மறுப்பாராயின் அது மிகக்கொடிதாகும். தங்களை நாடிவரும் இரவலர்க்கு வறுமையால் ஒன்றும் கொடுத்தற்கியலாது அவர் முகம் காண்பதற்கு அஞ்சிநாணி முகமறைந்து வருந்தும் தன்மையுடையோர் இனத்தைச்சேர்பவன் நீ அல்லை. பகைவரை வென்று கொள்ளா முன்பே அவர் அரணை நினதாகக் கொண்டு அதனைப் பரிசிலர்க்கு வழங்கும் பேராண்மையுடைய நீ இரவலரைப் புரத்தல் நினக்கு மேற்கோடற் குரிய சீரிய கடமையாம் என வற்புறுத்தியுள்ளார். கழிந்தது பொழிந்தென வான்கண் மாறினும் தொல்லது விளைந்தென நிலம்வளங் கரப்பினும் எல்லா வுயிர்க்கு மில்லால் வாழ்க்கை இன்னுந் தம்மென வெம்மனோ ரிரப்பின் 5 முன்னுங் கொண்டிரென நும்மனோர் மறுத்தல் இன்னா தம்ம வியறே ரண்ணல் இல்லது நிரப்ப லாற்றா தோரினும் உள்ளி வருநர் நசையிழப் போரே 10 ஆரெயி லவர்கட் டாகவு நுமதெனப் பாண்கட னிறுக்கும் வள்ளியோய் பூண்கட னெந்தைநீ யிரவலர் புரவே. திணை - பாடாண்டிணை; துறை - பரிசிற்றுறை. சேரமான் பாமுளூரெறிந்த சோழன் நெய்தலங்கானல் இளஞ்சேட் சென்னியை ஊன் பொதி பசுங்குடையார் பாடியது. உரை : கழிந்தது பொழிந்தென - கழிந்த காலம் பெய்தேனெனக் கருதி; வான்கண் மாறினும் - மழை பெய்யாது மாறினும்; தொல்லது விளைந்தென - முற்காலத்து விளைந்தேனெனக் கருதி; நிலம் வளம் கரப்பினும் - நிலம் விளைவை யொழியினும்; எல்லா உயிர்க்கும் வாழ்க்கை இல் - எல்லா வுயிர்கட்கும் உயிர் வாழ்க்கையில்லை அதுபோல; இன்னும் தம்மென எம்மனோர் இரப்பின் - இன்னமும் எமக்குப் பரிசில் தாருமென்று சொல்லி எம்போல்வார் இரப்பின்; முன்னும் கொண்டிர் என நும்மனோர் மறுத்தல் இன்னாது - அவர்க்கு முன்னும் பரிசில் கொண்டீ ரென்று நும்போல்வார் மறுத்தல் இன்னாது; அம்ம - கேளாய்; இயல்தேர் அண்ணல் - இயற்றப்பட்ட தேரையுடைய அண்ணலே; இல்லது நிரப்பல் ஆற்றாதோரினும் - இல்லாத பொருளைத் தேடி நிரப்பமாட்டாது வறுவியோரினும்; உள்ளிவருநர் நசை இழப்போர் - அவராற் பரிசில் நினைந்து வரப்படுவார் கொடாராயின் அவ்விரப்போரால் நச்சப்படும் இன்பத்தை இழப்பர்; அனையையும் அல்லை நீ - தம் வறுமையாற் கொடுக்க முடியாமையின் நாணி அவரெதிர் முக நோக்கமாட்டாது இன்பமிழக்கும் மாந்தர் தன்மையையு மல்லை நீ, இறந்து படுவை; ஒன்னார் ஆரெயில் அவர் கட்டாகவும் - பகைவரது அரிய அரண் அவரிடத்ததாகவும் அதனை அழித்துக் கொள்ளு வதன் முன்னே; நுமது எனப் பாண்கடன் இறுக்கும் வள்ளி யோய் - நும்முடைய தெனப் பாணர்க்குக் கடனாகக் கொடுக்கும் வென்றியோடு கூடிய வண்மையையுடையோ யாதலான்; எந்தை -எம் இறைவ; நீ இரவலர் புரவு கடன் பூண் - நீ இரப்போரைப் பாதுகாத்தலை முறைமையாகப் பரிகரிப்பா யாக; எ-று. அனையையுமல்லை யென்பதற்கு இரவலர் வேண்டுமளவும் பாணியாது முன்னேயளித்தலின், நசையிழப்போர் தன்மையை யுடையாயல்லை யென்றுமாம். எம்மனோரென்றது பிறரை நோக்கியன் றெனவுணர்க. “பொழிந்தென” “விளைந்தென” என்பனவற்றை வினையெச்சமாக்கி மாறினும் கரப்பினு மென்னும் வினையொடு முடிப்பினு மமையும். விளக்கம் : வான் கண்மாறுதலாவது மழையாகிய கண்ணோட்ட மின்றி யொழிதலாதலின் வான் கண்மாறினும் என்றதற்கு மழை பெய்யாது மாறினும் என்றார். நசை, ஈண்டு நச்சப்படும் இன்பங்குறித்து நின்றது, அனையையுமல்லை யென்றதற்கு ஏது இதுவென்பார், “வறுமையாற் கொடுக்க முடியாமையின் நாணி” என்றும், நாணத்தால் “அவரெதிர் முகநோக்கமாட்டாது” என்றும், உள்ள தன்மையைக் குறிப்பாராய், “இறந்து படுவை” யென்றும் உரைகாரர் கூறினார். ஆகவே, நீ பெரிதும் மான முடையை யென்றாராயிற்று. “எம்மனோ” ரென்றது, தன்னைப் பிறன்போற் கூறும் குறிப்பிற்றாதல் தோன்ற, “எம்மனோர் என்றது பிறரை நோக்கியன்றென வுணர்க ” என்றுரைத்தார். ஒன்னார் மதிலைக் கொள்ளுமுன்பே பாணர்க்குக் கொடுத்தலின், அவர் அதனைப் பெறுங்காறும் பாணர்க்குக் கடன்பட்டான் போறலின், பாண்கடன் என்றாரென்றுமாம். பாணர் பொருநர் புலவர் முதலாயினார்க்கு வறுமை யெய்தியபோது அவர் வேண்டுவன தந்து புறந்தருதல் பண்டைநாளைச் செல்வர்க்குக் கடனாகக் குறிக்கப்பட்டிருந்தது. செல்வர் அது செய்யாவழி, வறியோரது வறுமை செல்வர்பால் பகைமையுணர்வை யெழுப்பிச் செல்வரது செல்வ வருவாய் கெடுதற்கேற்ற சூழ்ச்சியும் கிளர்ச்சியும் நாட்டில் எழுப்பிச் செல்வர் வாழ்வைச் சீரழிக்கும்மென்பதைப் பண்டையோர் நன்கறிந்தமை இதனால் விளக்க முறுகிறது. 204. வல்விலோரி பெருங்கொடை வள்ளலாகிய வல்வில் ஓரி கொல்லிமலைக் குரியனாய் அருளாட்சி புரிந்து வருகையில் வன்பரணர் முதலிய சான்றோர் அவன் பால் பரிசில் பெற்றுச் சிறப்பெய்தினார். அவருள் கழைதின் யானையார் என்றசான்றோர் ஒருகால் வல்விலோரிபால் சென்றிருந்தார். அக்காலத்தே பரிசிற்றுறைப் பொருளில் இப் பாட்டைப் பாடினார். இதன்கண் ஈவோர்க்கும் ஏற்போர்க்கும் உள்ள உயர்வு தாழ்வுகளை எடுத்தோதி, ஈவோர் ஈயேனென்பதால், ஏற்போரினும் இழிந்தவராவ ரென்றும், ஏற்போர் கொள்ளேனென்பதால் ஈவோரினும் உயர்ந்தவராவ ரென்றும் விளக்கி, உண்ணும் நீர்நிலை வற்றிச் சேறு பட்டதாயினும் அதனை நாடிச் செல்வோர் பலராவதுபோல, வரையா ஈகை யுடையோரை நாடிப் பலரும் வருவர்; வருவோர் ஒருகால் தாம் வேண்டியது பெறாவிடின், அவர் தம்மை நொந்து கொள்வ தன்றிக் கொடாத வள்ளியோரை நோவார் என்று குறிக்கின்றார். கழைதின் யானையார் என்ற இச் சான்றோரின் இயற்பெயர் தெரிந்திலது. யானையைக் கழைதின்யானையெனச் சிறப்பித்த நயங்கொண்ட சான்றோர் இவரை இச் சிறப்புப் பெயரிட்டு வழங்கினர். இவர் பாடிய பிற பாட்டுகள் கிடைக்கவில்லை. ஈயென விரத்த லிழிந்தன் றதனெதிர் ஈயே னென்ற லதனினு மிழிந்தன்று கொள்ளெனக் கொடுத்த லுயர்ந்தன் றதனெதிர் கொள்ளே னென்ற லதனினு முயர்ந்தன்று 5 தெண்ணீர்ப் பரப்பி னிமிழ்திரைப் பெருங்கடல் உண்ணா ராகுப நீர்வேட் டோரே ஆவு மாவுஞ் சென்றுணக் கலங்கிச் சேறொடு பட்ட சிறுமைத் தாயினும் உண்ணீர் மருங்கி னதர்பல வாகும் 10 புள்ளும் பொழுதும் பழித்த லல்லதை உள்ளிச் சென்றோர்ப் பழியல ரதனாற் புலவேன் வாழிய ரோரி விசும்பிற் கருவி வானம் போல வரையாது சுரக்கும் வள்ளியோய் நின்னே. திணை - பாடாண்டிணை; துறை - பரிசிற்றுறை. வல்வில் ஓரியைக் கழைதின் யானையார் பாடியது. உரை : ஈ என இரத்தல் இழிந்தன்று - இழிந்தோன் கூற்றால் ஈ எனச் சொல்லி யிரத்தல் இழிந்தது; அதன் எதிர் ஈயேன் என்றால் - அவ்வீயென்றதன் எதிர் ஈயேன் என்று சொல்லி மறுத்தல்; அதனினும் இழிந்தன்று - அவ்விரத்தலினும் இழிந்தது; கொள் எனக் கொடுத்தல் உயர்ந்தன்று - ஒருவன் இரப்பதன் முன்னே அவன் குறிப்பை முகத்தான் உணர்ந்து இதனைக் கொள்வாயாக என்று சொல்லித் தான் இரந்து கொடுத்தல் ஒருவற்கு உயர்ந்தது; அதன் எதிர் கொள்ளேன் என்றல் - அதனை அவன் அவ்வாறு கொடுப்ப அதன் எதிர்கொள்ளேனென்று சொல்லி மறுத்தல்; அதனினும் உயர்ந்தன்று - அக் கொடையினும் உயர்ந்தது; தெள்நீர் பரப்பின் இமிழ்திரைப் பெருங்கடல் - தெளிந்த நீர்ப்பரப்பான் ஒலிக்கும் திரையையுடைய பெரிய கடல்நீரை; உண்ணாராகுப நீர்வேட்டோர் - உண்ணாராவர் தண்ணீரை விரும்பினோர்; ஆவும் மாவும் சென்றுணக் கலங்கி - ஆவும் மாவும் சென்று நீரையுண்ணக் கலங்கி; சேறொடுபட்ட சிறுமைத்தாயினும் - சேற்றொடுகூடிய சிறுமையை யுடைத் தேயாயினும்; உண்ணீர் மருங்கின் அதர் பலவாகும் - உண்ணு நீரையுடைய தாழ்ந்தவிடத்துச் செல்லும் வழி பலவாகும்; புள்ளும் பொழுதும் பழித்தல் அல்லதை - தாம் புறப்பட்டுச் செல்லப்பட்ட வழியிடத்து அப்பொழுது செய்யும் புள் நிமித்தத்தையும் புறப்பட்ட முழுத்தத்தையும் பழித்தலல்லது; உள்ளிச்சென்றோர்ப் பழியலர் - தாம் பரிசில் பெறக் கருதிச் செல்லப்பட்டோரை அவர் ஈத்திலராயினும் பரிசிலர் பழியார்; அதனால் புலவேன் - அதனால் நீ எனக்கு இன்னையாயினும் வெறேன்; வாழியர் ஓரி - வாழ்வாயாக ஓரி; விசும்பில் கருவி வானம்போல - ஆகாயத்தின்கண் மின் முதலிய தொகுதியை யுடைய மழைபோல; வரையாது சுரக்கும் வள்ளியோய் நின்னே - யாவர்க்கும் எப்பொருளையும் வரையாது வழங்கும் வண்மையையுடையோய் நின்னை எ.று. ஓரி, வள்ளியோய், பரிசிலர் புள்ளும் பொழுதும் பழித் தலல்லது உள்ளிச் சென்றோர்ப் பழியலர்; அதனால் யானும் நின்னைப் புலவேன், வாழியர் எனக் கூட்டுக. மேற்கூறிய இரத்தல் முதல் நான்கிற்கும் ஈயென இரத்தலால் இழிவுபெற்று, கொள்ளேன் என்னும் உயர்வு யான் பெற்றிலேன் என்பதூஉம், அவ்வாறு இரப்பவும், ஈயேன் என்றாற்போலப் பரிசில் நீட்டித்தலால் உள்ள இழிபுபெற்று, கொள்ளெனக் கொடுக்கும் உயர்ச்சி நீ பெற்றிலை யென்பதூஉம் கருத்தாகக் கொள்க. இதனால் ஈயேனென்னும் இழிபினும் கொள்ளெனக் கொடுக்கும் உயர்பினும் நினக்குத் தக்கதறிந்து செய்யென்பது கூறினாராம். “பெருங்கடல் உண்ணாராகுப நீர்வேட்டோர் ” என்பத னாற் செல்வரேயாயினும் வள்ளியோரல்லார்பாற் செல்லே னென்பதூஉம், “உண்ணீர் மருங்கின் அதர்பல வாகும்” என்பத னால் நீ வள்ளியை யாகலின் நின்பால் வந்தேன் என்பதூஉம் கொள்ளப்படும். விளக்கம் : ஈயென இரத்தலும், ஈயேன் என மறுத்தலும், இழிவென்றும்; இரப்போர் குறிப்பறிந்து கொள்ளெனக் கொடுத்தலும், கொடுத்த வழிக் கொள்ளேன் என மறுத்தலும் உயர்வு என்றும் எடுத்தோதி இவ் விரண்டினுள் நீ விரும்புவதொன்றனைச் செய்க என ஆசிரியர் கழைதின்யானையார் வல்விலோரிக்குக் கூறுகின்றார். இரத்தலின் இழிவு விளங்க இழிந்தோன் கூற்றால் ஈயெனச் சொல்லி யிரத்தல் இழிந்ததென்றார், “ஈயென் கிளவி யிழிந்தோன் கூற்றே” (தொல். எச்ச. 49) என்பவாகலின், இழிவு பயக்கும் இன்மைச் சொல்லைச் சொல்லி யிரப்பார்க்கு இன்மையுண்மை யான் இரத்தலாலுண்டாகும் இழிவன்றிப் பிறிதில்லை; ஈயேனென்ன மறுக்கும் செல்வர்க்குத் தாமுடைமையை மறைத்துப் பொய்ம்மொழிந்து, அவ்வின்மைச் சொல்லாற் பிறக்கும் இழிவையும் மேற்கொண்டு அதனைக் கூறி மறுத்தலால், இலன் என்னும் எவ்வமும் பொய்ம்மொழியால் உள தாகும் இழிதகவும் ஆகிய மிக்க இழிவு உண்டாதல் பற்றி, “ஈயே னென்றல் அதனினும் இழிந்தன்று” என்றார். ஏற்பார்பால் ஈயென்னும் சொல் பிறவாமையின், கொள்ளெனச் சொல்லிக் கொடுத்து ஏற்பிப்பதால், செல்வர்க்குப் பிறர்பால் உளதாகும் இழிவை மறைத்து ஓம்புதலாற் புகழ் உண்டாகி உயர்வு தருதலின், “கொள்ளெனக் கொடுத்தல் உயர்ந்தன்று” என்றார். தான் இரந்து கொடுத்தலாவது ஏற்பாரைத் தான் பணிந்து நின்று தான் கொடுப்பதை ஏற்பித்தல்; இப் பணிவு செல்வர்க்குப் பெருஞ்செல்வமாம் தகைமையினை யுடையதெனத் திருவள்ளுவர் கூறுவர். கொள்ளேன் என்பதாற் பிறக்கும் பெருமிதம், கொடுக்கப் படும் பொருள் பிறர்க்குக் கொடுக்கப்பட்டுப் பயன்படுமாற்றால் பிறக்கும் புகழினும் தான் உரிமையெய்தி மேம்படுதலின், “அதனினும் உயர்ந்தன்று” என்றார். சிறுமை, ஈண்டு நீர் சிறிதாதல். உண்ணீர் மருங்கு, பலரும் நீர் குறித்துச் செல்லுதலால் வழிபலவுடையதாம். தாழ்ந்த இடத்தே நீர் நிற்குமாகலின், மருங்கு தாழ்ந்த இடமாயிற்று. கொடுப்போர் கொடாராதற்கும் கொடை மறுத்தற்கும் காரணம் புள்ளும் பொழுதுமேயெனக் கொண்டு பழித்தொழிவதன்றிப் பரிசிலர் செல்வரைப் பழிப்பதிலர் என அவரது இயல்பு கூறுமாற்றால் உயர்த்துக் கூறினார். இனி, ஆசிரியர் நச்சினார்க்கினியர், “ஈயென இரத்த லென்னும் புறப்பாட்டினுள், தெண்ணீர்... வேட்டோரே யென்ற வழி, நின்செல்வம் கடல்போற் பெரிதேனும் பிறர்க்கு இனிதாய் நுகரப்படாதென வசையைச் செம்பொருளாகாமற் கூறியவாறு காண்க” (தொல். செய். 126. உரை) என்பது ஈண்டு நோக்கத்தக்கது. 205. கடிய நெடுவேட்டுவன் வேட்டுவனெனப் பொதுப் பெயராற் கூறப்படினும், இத் தலைமகனது இயற்பெயர் நெடுவேட்டுவன் என்பதாம். கடிய மென்பது நெடுவேட்டுவனது ஊர்; இது கோடைமலைக் கடியிலுள்ளது. இவ்வூர் பிற்காலத்தே நன்னியார் என்னும் சான்றோர் பிறந்து விளங்குதற்கு இடமாய் விளங்கிற்று. அச் சான்றோர் கடியநன்னியார் எனப்படுவர். அவர் எழுதிய செய்யுளிலக்கணத்தைப் பேராசிரியரும் யாப்பருங்கலவிருத்தி யுரைகாரரும் மேற்கொள்ளுகின்றனர். (தொல். செய். 161; யாப். விரு. செய். 2) இவன் தன்னைத் துணைவேண்டியவர்க்குப் பெரும்புகலாகி, ஆதரவு நல்குபவன்; பகைத்துப் பொரக்கருது வாரை அவர் வலியறுத்துக் கருத்தழிவிக்கும் கட்டாண்மை யுடையவன். கொடைவண்மையால் இவன்பால் பரிசிலர் கட்கு மிக்க தொடர்புண்டு. அதனால், கடலுக்குச் சென்ற முகில், நீர் பெற்றன்றி வாராதவாறு போல, இந் நெடுவேட்டுவனைக் காணும் பரிசிலர் இவனது கொடை நலத்தைப் பெற்றன்றிப் பெயர்ந்து போகாரென்னும் பெருமை இவனுக்குப் பிறங்கி யிருந்தது. கோடைமலை இவனுக்கு உரியது. இக்காலத்தே மதுரைநாட்டில் கோடைக்கானல் என்ற பெயரால் சிறப்புற்று விளங்கும் மலையே இக் கோடைமலை. கோடைக்காலத்தில் வேனில் வெம்மை பொறாது செல்லும் செல்வமாக்கட்கு இக் கோடைமலை இன்னும் பெருந்தட்பந் தந்து இன்புறுத்தி யிலங்குகிறது. இக் கோடைமலைத் தொடராகிய பழனிமலைத் தொடரின் வட சார்க் குன்றாகிய முதிர மலைக்குரிய குமணனைப் பாடிச் சிறப்பெய்திய பெருந்தலைச் சாத்தனார், ஒருகால் இவனைக் காணச் சென்றார். பெருந்தலை யென்பது சாத்தனாரது ஊர். அது கொங்குநாட்டில் உளது. இந் நெடுவேட்டுவனுடைய புகழ் சாத்தனார்க்கு இன்பந் தந்தது. இவனைப் பாடிவந்த பரிசிலர் களிறும் பொருளும் பெற்றுச் செல்லும் சிறப்பு இவர்க்குப் பேருவகையளித்தது. கடிய நெடுவேட்டுவன் எக்காரணத்தாலோ இச் சாத்தனார்க்கு வேண்டும் பரிசிலைத் தந்து விடைதராது நீட்டிப்பானாயினன். அவன் கருத்தறியாத சாத்தனார்க்கு வருத்த முண்டாயிற்று. வேட்டுவ, முடிவேந்தர்பாற் சென்றால் அவர்கள் கொடையில் விருப்பின்றி , அது வேண்டிவரும் பரிசிலர்க்கு நீட்டித்து நல்குவது இயல்பு, அதனையறிந்தே எம்போலும் பரிசிலர் அவர் விருப்பின்றி நல்குவதை விரும்புவதில்லை. நின்பால் வரும் பரிசிலர் அவர் விருப்பின்றி நல்குவதை விரும்புவ தில்லை. நின் பால் வரும் பரிசிலர், கடற்குச் சென்ற முகில் நீரின்றிப் பெயர்ந்து செல்லாதது போலப் பரிசிலின்றிப் போவது கண்டிலேன். இன்று யான் பரிசிலின்றி வறிது செல்லுமாறு நீட்டித்தனை; யான் வருந்தும் மனத்தோடு செல்கின்றேனாயினும், நீ வருத்தமின்றி வாழ்வாயாக என்ற கருத்துப்பட இப் பாட்டைப் பாடினார். முற்றிய திருவின் மூவ ராயினும் பெட்பின் றீதல் யாம்வேண் டலமே விறற்சினந் தணிந்த விரைபரிப் புரவி உறுவர் செல்சார் வாகிச் செறுவர் 5 தாளுளந் தபுத்த வாண்மிகு தானை வெள்வீ வேலிக் கோடைப் பொருந சிறியவும் பெரியவும் புழைகெட விலங்கிய மான்கணந் தொலைச்சிய கடுவிசைக் கதநாய் நோன்சிலை வேட்டுவ நோயிலை யாகுக 10 ஆர்கலி யாணர்த் தரீஇய கால்வீழ்த்துக் கடல்வயிற் குழீஇய வண்ணலங் கொண்மூ நீரின்று பெயரா வாங்குத் தேரொ டொளிறுமருப் பேந்திய செம்மற் களிறின்று பெயரல பரிசிலர் கடும்பே. திணை - பாடாண்டிணை; துறை - பரிசிற்றுறை. கடியநெடுவேட்டுவன் பரிசில் நீட்டித் தானைப் பெருந்தலைச் சாத்தனார் பாடியது. உரை : முற்றிய திருவின் மூவராயினும் - நிறைந்த செல்வத்தை யுடைய மூவேந்தராயினும்; பெட்பு இன்று ஈதல் யாம் வேண்டலம் - எம்மைப் பேணுதலின்றி யீதலை யாங்கள் விரும்பேம்; விறல் சினம் தணிந்த - வென்றியான் உளதாகிய சினம் தீர்ந்த; விரை பரிப் புரவி - விரைந்த செலவையுடைத்தாகிய குதிரையை யுடைய; உறுவர் செல் சார்வாகி - அஞ்சி வந்து அடைந்த பகைவர்க்குச் செல்லும் புகலிடமாய்; செறுவர் தாள் உளம் தபுத்த - அவ்வாறன்றிப் போர் செய்யும் பகைவருடைய முயற்சியையுடைய கிளர்ந்த உள்ளத்தைக் கெடுத்த; வாள் மிகுதானை - வாட்போரின் மிக்க படையினையுடைய; வெள்வீ வேலிக் கோடைப் பொருந - வெள்ளிய பூவை யுடைத்தாகிய முல்லை வேலியையுடைய கோடை யென்னும் மலைக்குத் தலைவ; சிறியவும் பெரியவும் புழைகெட விலங்கிய - சிறியனவும் பெரியனவுமாகிய புழைகளைப் போக்கற விலக்கிய; மான்கணம் தொலைச்சிய - மானினது திரட்சியைத் தொலைத்த; கடுவிசைக் கதநாய் நோன் சிலை வேட்டுவ - கடிய செலவையுடைய சினமிக்க நாயையும் வலிய வில்லையுமுடைய வேட்டுவ; நோயிலை யாகுக - நீ நோயின்றி யிருப்பாயாக; ஆர்கலியாணர்த் தரீ இய - இடியினது மிக்க ஓசையையுடைய புதுப்பெயலைத் தர வேண்டி; கால் வீழ்த்துக் கடல்வயின் குழீஇய - கால்வீழ்த்துக் கடலிடத்தே திரண்ட; அண்ணலங் கொண்மூ - தலைமையை யுடைய முகில்; நீரின்று பெயரா ஆங்கு - நீரின்றி மீளாதவாறு போல; பரிசிலர் கடும்பு - பரிசிலரது சுற்றம்; தேரொடு ஒளிறு மருப்பு ஏந்திய செம்மல் களிறு இன்று பெயரல - தேருடன் விளங்கிய கோடுயர்ந்த தலைமையையுடைய களிற்றையின்றி மீளா; எ-று புரவியையுடைய விறற்சினம் தணிந்த உறுவரென இயையும் செல்சார் வாகித் தாளுளம் தபுத்த பொருந என இயையும். புழை கெட விலங்கிய நாயென இயையும். வெள்வீ யென்றது. அதனையுடைய முல்லையை. மூவ ராயினும் என்ற உம்மை சிறப்பும்மை. கோடைப் பொருந, வேட்டுவ, பெட்பின்றீதல் யாம் வேண்டலம்; பரிசிலர் கடும்பு களிறின்று பெயரல; நீ நோயிலையாகுக வெனக் கூட்டுக. யான் களிறின்றிப் பெயரா நின்றேனென்பது கருத்தாகலின், நோயிலையாக வென்பது இகழ்ச்சிக்குறிப்பு. புழை கெட விலங்கி யென்பதூஉம் பாடம். விளக்கம் : முற்றுதல், நிறைதல். வென்றி யெய்துங்காறும் சினம் தணியாது நின்று பொருதவர் அவ் வென்றி யெய்தியபின் தணிதலின், விறல் சினம் தணிந்த உறுவர் என இயையுமென்றார். இவ்வியல்பினோரும் தமது மாட்டாமையுணர்ந்து புகலடைதற்குரிய பெருமை நெடுவேட்டுவற் குண்டென்பர், “உறுவர்செல் சார்வாகி” யென்றார். தாள் முயற்சி குறித்த தாகலின், தாள் உளம் என்றதற்கு முயற்சியையுடைய கிளர்ந்த உள்ளம் என்று உரைத்தார். கோடைமலை வெள்ளிய முல்லைப் பூவாற் புகழ் மிக்கதாகலின், “வெள்வீயென்றது அதனையுடைய முல்லையை” யென்றும், வெள்வீவேலி யென்றதற்கு வெள்ளிய பூவையுடைத்தாகிய முல்லைவேலி யென்றும் உரைத்தார். பரிசிலர் கடும்பு களிறின்று பெயரல வென்றது. யான் களிறின்றிப் பெயரா நின்றேன் என்பது குறிப்பாய்ப் பெறவைத்து நிற்கிறது. “நோன்சிலை வேட்டுவ” என்றவர் நீ நீடுவாழ்க என வாழ்த்தாது நோயிலையாகுக என்றது, பரிசிலர் கடும்பு போலாது யான் களிறின்று பெயருமாறு விடுக்குமாற்றால் என் நெஞ்சுநோவச் செய்கின்றாய், “நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம்” (குறள். 320) என்பவாகலின், நீ நோயுறா தொழிக என்று இகழ்ந்து கூறியவாறாயிற்று. கலி - முழக்கம்; நிறைந்த முழக்கத்தை யுடைமைபற்றி இடியேறு ஆர்கலி யெனப்பட்டது. யாணர், ஈண்டுப் புதுப்பெயல் மேற்று. செம்மல், தலைமை. 206. அதியமான் நெடுமானஞ்சி அதியமான் நெடுமான் அஞ்சி கொங்கு நாட்டில் தருமபுரி யெனப் படும் தகடூரிலிருந்து ஆட்சிபுரிந்து வருகையில், அவனது கொடைப் புகழ் தமிழகமெங்கும் பரந்திருந்தது. கடல் நோக்கி செல்லும் ஆறுகள் போலப் புலவரும் பாணரும் பொருநரும் கூத்தருமாகிய பரிசிலர் பலரும் அவனை நோக்கிவந்து பரிசில் பெற்றுச் சென்ற வண்ணம் இருந்தனர். அக்காலத்தே தமிழகத்தே முடிவேந்தர்களையும் வேள்பாரி முதலிய வள்ளல்களையும் பாடிப் புகழ்நிறுவி நிலவிய ஒளவையார்க்கு அதியமானது புகழ் செவிப்புலனாகியதும் அவனைக் காணவேண்டுமென்ற விருப்பம் எழுந்தது. வழக்கம்போலப் பரிசிலர் உடன்வர ஒளவையார் தகடூருக்குச் சென்றார். புகழ் வள்ளலாகிய அதியமானும் ஒளவை யாருடைய புலமை நலமும் மனநலமும் கேள்வியுற்றிருந்தான். ஒளவையார் தன் பெருமனைக்கு வரப்பெற்றதும், அவரைச் சின்னாள் தன்னோடே இருத்தவேண்டி உடன் வந்த பரிசிலர் வேண்டும் பரிசிலை நல்கி விடுத்தான். எத்துணைச் சிறந்த புலவராயினும் ஒருவரது உள்ளத்தின் உள்ளே நிகழும் எண்ணங் களை அறிவது அரிதன்றோ? அதியமான் கருத்தறியாத ஒளவையார் அவன் பரிசில் நீட்டிப்பது குறித்து மனத்தே கவலையுற்றார். ஒருநாள் அவனைக் கண்டு தமது கருத்தை யறிவித்துவிட்டு விடைபெற நினைத்தார். அவனது செவ்வி பெறுவது அரிதாயிற்று. பெருமனையில் உள்ளார் அனைவரும் ஒளவையார்பால் பெருமதிப்பும் பேரன்பும் கொண்டு ஒழுகினர். வாயில்காவலர் முதல் அமைச்சர் ஈறாக அனைவரும் ஒளைவையாரைப் பேணிச் சிறப்பித்தா ராயினும், அவர்க்குமட்டில் மனக் கவலை நீங்கவே இல்லை. அதியமானது செவ்வி பெறவேண்டி ஒளவையார் முயலும்தோறும் வாயில் காவலர் அன்பமைந்த சொற்களால் அவர் கருத்து நிறைவுறாத வாறு செய்தொழிந்தனர். உடைந்த மனத்தராகிய ஒளவையார், வாயில் காவலரை நோக்கினார்;அவனோ அவர் மனநிலையை யறியானாயினன். ஒளவையார் உள்ளத்தில் வெம்மையுண்டாயிற்று. அதனால் சில சொற்கள் அவர் வாயிலிருந்தெழுந்தன. அச் சொற் கூட்டம் ஒரு பாட்டாயிற்று. அதுவே இப் பாட்டு. இதன்கண், “வாயிலோனே, நீ எப்போதும் பரிசிலர் பரிசிற்கு வருந்தும் வாழ்க்கையுடைய ரென்பதறிந்து அவர்க்கு அவ் வாயிலை அடைப்பதில்லை. ஆயினும், என்மாட்டு வாயிலையடைக் கின்றாய். இது நின் செயலன்றென்பதை அறிவேன். நின் தலைமகனான அதியமான் ஒன்று, தன் தகவுடைமையை அறியானாக வேண்டும்; அன்றி என் தரத்தை அறியானாகவேண்டும்; அறிவும் புகழுமுடைய வேள்பாரி முதலிய நல்லோர் இறந்ததனால், இவ் வளமிக்க உலகம் வறிதாய்விடவில்லை. யாங்கள் எத்திசையேகினும் எங்கட்குச் சோறு குறை கிடையாது. சோறொன்றே யான் வேண்டுவது என எண்ணி எனக்கு விடைதர நீட்டிப்பது விழுமி தன்று.” என்று அவர் கூறுகின்றார். இந் நிகழ்ச்சிக்குப் பின்புதான் அதியமான் ஒளவைக்கு நெல்லிக்கனி தந்ததும், தொண்டைமா னுழைத் தூது விடுத்ததும் பிறவும் நிகழ்ந்தன. வாயி லோயே வாயி லோயே வள்ளியோர் செவிமுதல் வயங்குமொழி வித்தித்தாம் உள்ளியது முடிக்கு முரனுடை யுள்ளத்து வரிசைக்கு வருந்துமிப் பரிசில் வாழ்க்கைப் 5 பரிசிலர்க் கடையா வாயி லோயே கடுமான் றோன்ற னெடுமா னஞ்சி தன்னறி யலன்கொல் லென்னறி யலன்கொல் அறிவும் புகழு முடையோர் மாய்ந்தென வறுந்தலை யுலகமு மன்றே யதனாற் 10 காவினெங் கலனே சுருக்கினெங் கலப்பை மரங்கொஃறச்சன் கைவல் சிறா அர் மழுவுடைக் காட்டகத் தற்றே எத்திசைச் செலினு மத்திசைச் சோறே. திணை - பாடாண்டிணை; துறை - பரிசிற்றுறை. அதியமான் நெடுமான் அஞ்சி பரிசில் நீட்டித்தானை ஒளவையார் பாடியது. உரை : வாயிலோய் வாயிலோய் - வாயில் காப்போய் வாயில் காப்போய்; வள்ளியோர் செவிமுதல் வயங்கு மொழி வித்தி - வண்மையுடையோரது செவியிடத்தே விளங்கிய சொற்களை விதைத்து; தாம் உள்ளியது முடிக்கும் - தாம் நினைத்த பரிசிலை விளைக்கும்; உரன் உடை உள்ளத்து - வலியையுடைத்தாகிய நெஞ்சினையுடைய; வரிசைக்குவருந்தும் இப்பரிசில் வாழ்க்கைப் பரிசிலர் இப் பரிசிலான் வாழும் இல்வாழ்க்கையையுடைய பரிசிலர்க்கு; அடையா வாயிலோய் - அடையாத வாயில் காப்போய்; கடுமான் தோன்றல்- விரைந்த குதிரையையுடைய குருசிலாகிய; நெடுமான் அஞ்சி - நெடுமானஞ்சிதான்; தன் அறியலன் கொல் - தன் தரம் அறியான் கொல்லோ; என் அறியலன் கொல் - அதுகிடக்க என் தரம் அறியான் கொல்லோ; அறிவும் புகழு முடையோர் மாய்ந்தென - அறிவும் புகழுமுடையோர் இறந்தாராக; வறுந்தலை உலகமும் அன்றே - வறிய இடத்தையுடையது உலகமும் அன்றே; அதனால் - ஆகலான்; காவினெம் கலன் - காவினேம் கலங்களை; சுருக்கினெம் கலப்பை - கட்டினேம் முட்டுக்களை; மரம்கொல் தச்சன் மழுவுடைக் கைவல் சிறாஅர் - மரத்தைத் துணிக்கும் தச்சன் பயந்த மழுவையுடைய கைத்தொழில் வல்ல மகார்; காட்டகத்து அற்று - காட்டிடத்துச் சென்றால் அக் காட்டகம் பயன்படுமாறு அவர்க்கு எத் தன்மைத்து; எத்திசைச் செலினும் அத்திசைச் சோறு அற்று - எமக்கும் யாதொரு திசைக்கட் போகினும் அத்திசைக்கண் சோறு அத்தன்மைத்து எ-று. கலம் யாழுமாம். உள்ளத்தையுடைய பரிசிலரெனினுமமையும் மழுவென்றது வாய்ச்சியை; தறிகையுமாம். காட்டகமென்றா ரேனும் கருதியது அதன்கண் மரமாகக் கொள்க. பரிசிலர்க்குச் சிறாரும், கல்விக்கு மழுவும், செல்லுந் திசைக்குக் காடும், சோற்றிற்குக் காட்டுள் மரமும் உவமையாகக் கொள்க. விளக்கம் : பரிசிலர் சொல்லேருழவராகலின், அவர் தம் சொற்களாகிய விதையை வள்ளியோர் செவியாகிய புலத்தில் விதைத்துப் பரிசிலாகிய நெல்லை விளைவித்துக் கொள்வர் என்பது விளங்க, உள்ளியது முடிக்கும் என்றதற்கு, “நினைந்த பரிசிலை விளைக்கும்” எனவுரைத்தார். உலகம் அறிவும் புகழுமுடையாரையே சார்ந்து நிற்பதாகலின், அவர் மாய்ந்த வழி உலகம் வறுந்தலையாம் என்பது மேற்கோள். உலகம் வறுந்தலை யன்றெனவே, அறிவும் புகழுமுடையார் இலரல்லர்உளர் என்பது குறித்தவாறாம் நும்போல் வேந்தர்க்கரிதேயன்றி எமக்குச் சோறு அரிதன்றென்பார், “எத்திசைச் செலினும் அத்திசைச் சோறு” என்றார். கைவல் சிறார் மழுவேந்திக் காட்டுட் செல்லின், அவர்க்கு மரக்குறைவு இல்லாதவாறுபோல யாமும் எம் கல்வி கொண்டு எத்திசைக்குச் சென்றாலும் எங்கட்கு உணவுக் குறைபாடு உண்டாகாதென்பதாம். ஆகவே, யாங்கள் வெறுஞ்சோறு வேண்டியன்று இப் பரிசில் வாழ்க்கை மேற்கொண்டது என்பது குறிப்பு. 207. இளவெளிமான் வெளிமான் என்பவன் ஒரு சிறந்த கொடையாளி. இவன் பெயரால் தமிழகத்தில் பல பகுதிகளிலும் ஊர்கள் பல உள்ளன. வெளிமானல்லூர் என்று கல்வெட்டுக்கள் கூறுகின்றன. இவ்வெளி மானுக்குப் புலவர் முதலிய பரிசிலர்பால் பெருமதிப்பும், அவர்கட்கு அவன்பால் பேரன்பும் உண்டு. ஒருகால் பெருஞ் சித்திரனார் வறுமைத் துயர்போக்கும் முயற்சியராய் வெளிமானை யடைந்தார். அவன் துஞ்சும் காலையில் இருந்ததனால் தன் தம்பி இளவெளிமானை அழைத்து “இவர்க்கு வேண்டும் பரிசில் நல்குக” எனப் பணித்தான். பெருஞ்சித்திரனார் அவன் துஞ்சியபின் சென்று இளவெளிமானைக் கண்டார். அவன் ஈத்துவக்கும் இன்ப மறியாத மடவோன்; செல்வத்துப் பயன் ஈதல் என்பது அவர்க்குத் தெரியாது. புலவர்களால் இயற்றமிழும், பாணரால் இசைத் தமிழும், கூத்தரால் நாடகத் தமிழும் என்ற மூன்றும் வளருவன என்னும் தெளிவு அம் மடவோனுக்குக் கிடையாது. அறிவின்மையும், செருக்கும், இளவெளிமான் கண்ணிலும், கருத்திலும், களிக் கூத்தாடின. பெருஞ்சித்திரனார் முன்பே தன் பெருமனைக்கு வந்திருந்ததை அறிந்து வைத்தும் அறியாதான்போல அவரைப் பார்த்தான். புலவரைக் காண்பார்க்குளதாகிய முகமலர்ச்சி அவன்பால் உண்டாகவில்லை.வருக எனச் சொல்லுதற்கும் அவன் வாய் வறுமையுற்றது. இரப்பவர் என்பெறினும் கொள்வ ரெனக் கருதி யீவாரைப் போலப் பொருள் சிறிது கொணர்ந்து கொடுத்தான். வெளிமானென்னும் பெரியோனுக்குத் தம்பியென்னும் தன் தகுதியையோ பெருஞ்சித்திரனாரது வரிசையையோ நோக்கிற் றிலன். பெருஞ்சித்திரனாருக்குப் பேதுறவு பெரிதாயிற்று. “அறிவிலா மடவோனை யிரந்தது குற்றம்; இவனை அறிவு நெறி யில் தெருட்டுவதும் நம் கடனே; அதனைப் பின்பு செய்வோம்,” எனத் தமக்குள்ளே நினைந்தார். இனித் தம்நெஞ்சில் எழுந்த சிவப்பை மாற்றி, “நெஞ்சே, அருகில் இருப்ப இருகண்களால் கண்டு வைத்தும் காணார்போல் முகங் கசந்து நல்குவார் நல்கும் பரிசில் பெரிதாயினும் , தாளாளர் விரும்பார். வருகென வரவேற்று நல்குவது சிறிதாயினும் ஏற்றல் தக்கது; அதுவே நம் வரிசைக்கும் தகுதி. வரிசையுடைய நமக்கு உலகம் பெரிது; நம்மை விரும்பியேற்றுப் பேணும் பெரியோர் பலர் உளர். ஆளிபோல மீளிமை குன்றாத நெஞ்சே! நீ உள்ளம் உடையற்க. கனியாத பழங்கருதி உழல்பவர் யாவரும் இரார்; எழுக, வேறிடஞ் செல்வேம்” என மொழிந்து கொண்டார். அதனோடமையாது, எடுத்தார் ஏட்டையும் எழுத்தாணியையும். தாம் தம் நெஞ்சோடு நேர்ந்தவற்றை யெழுதினார்; அது சிறந்த பாட்டாயிற்று அப் பாட்டு இது. எழுவினி நெஞ்சஞ் செல்கம் யாரோ பருகு வன்ன வேட்கை யில்வழி அருகிற் கண்டு மறியார் போல அகனக வாரா முகனழி பரிசில் 5 தாளி லாளர் வேளா ரல்லர் வருகெனல் வேண்டும் வரிசை யோர்க்கே பெரிதே யுலகம் பேணுநர் பலரே மீளி முன்பி னாளி போல உள்ள முள்ளவிந் தடங்காது வெள்ளென 10 நோவா தோன்வயிற் றிரங்கி வாயா வன்கனிக் குலமரு வோரே. திணை - பாடாண்டிணை; துறை - பரிசிற்றுறை. வெளிமான் துஞ்சியபின் அவன் தம்பி இளவெளிமானைப் பரிசில் கொடுவென, அவன் சிறிது கொடுப்பக் கொள்ளாது பெருஞ்சித்திரனார் பாடியது. உரை : நெஞ்சம் எழு இனி செல்கம் - எம்முடைய நெஞ்சமே எழுந்திருப்பாயாக, இனி யாம் போவேமாக; பருகு அன்ன வேட்கை இல்வழி - கண்ணாற் பருகுவது போலும் விருப்ப மில்லாதவிடத்து; அருகிற் கண்டும் அறியார் போல - தம்மருகே கண்டுவைத்தும் கண்டறியாதார்போல; அகன்நக வாரா - உள்ளம் மகிழவாராத; முகனழி பரிசில் - தம் முகமாறித்தரப் பட்ட பரிசிலை; தாளிலாளர் - பிறிதோரிடத்துச் செல்ல முயலும் முயற்சியில்லாதோர்; வேளாரல்லர் - விரும்பாரல்லர்; வருகெனல் வேண்டும் - இங்ஙனம் வருவீராகவென்று எதிர்கோடல் வேண்டும்; வரிசையோர்க்கு - தரமுடையோர்க்கு; பெரிதே உலகம் - பெரிது உலகம்; பேணுநர் பலர் - விரும்புவோரும் பலர்; மீளிமுன்பின் ஆளிபோல- ஆதலால் மறம் பொருந்திய வலியையுடைய யாளியை யொப்ப; உள்ளம் உள்ளவிந்து அடங்காது - உள்ளம் மேற்கோளின்றித் தணியாது; வெள்ளென - கண்டோர் யாவர்க்கும் தெரிய; நோவாதோன்வயின் திரங்கி - தம்மைக் கண்டு இரங்காதவனிடத்தே நின்று திரங்கி; வாயாவன்கனிக்கு உலமருவோர் யாரோ - உள்ளுறக்கனியாத வலிய பழத்தின் பொருட்டுச் சுழல்வோர் யார்தாம் எ-று. வன்கனியென்றது நெஞ்சு நெகிழ்ந்து கொடாத பரிசிலை. உலமரலும் அலமரல் போல்வதோர் உரிச்சொல். வாயாவன் கனிக்கு உலமருவோர் யாரோ, நெஞ்சமே, உள்ளம் உள்ளவிந் தடங்காது, யாளிபோல இனி எழுவெனக் கூட்டி வினைமுடிவு செய்க. வரிசையோர்க்கு யாளி போல உள்ளம் உள்ளவிந் தடங்காது என முற்றாக்கி யுரைப்பாருமுளர். விளக்கம் : முகனழி பரிசிலைத் தாளிலாளர் விரும்பியேற்பர்; தாளாளர் அப்பரிசிலை விரும்பாது, வருகென எதிர்கோடலை விரும்புவர்; அவர் வரிசையுடையோர்; அவர்க்கு உலகம் பெரிது; அவரைப் பேணுவோரும் பலர்; ஆதலால், நெஞ்சே, நீ, உள்ளம் உள்ளவிந் தடங்காமல், இனி எழு. செல்கம்; எவரும் வெள்ளென, வன்கனிக்கு உலமருவாரல்லர் எனக் கொள்க. இனி வரிசையோர்க்கு உலகம் பெரிது; அவரைப் பேணுவோரும் பலர்; அவரது உள்ளம் உள்ளவிந் தடங்காது; அதனால் இனி எழுக செல்கம்; வன்கனிக்கு உலமருவோர் யாரும் இல்லை என உரை கூறுவதும் பொருந்தும் என்பார், “வரிசையோர்க்கு....உரைப் பாருமுளர்” என்றார். அன்புவழிப்பட்ட ஆர்வ நோக்கம், நோக்கப்படும் பொருளை எடுத்துப் பருகுவது போலும் இயல்பிற்றா மென்றற்குச் சான்றோர் அதனைப் “பருகு வன்ன நோக்கம்” என்ப. ஈண்டுப் பருகுவன்ன வேட்கை யென்றாற் போலப் பிறரும் “பருகுவன்ன காதலுள்ளமொடு” (அகம். 399) என்பது காண்க. அருகிற் கண்டும் அறியார்போல் ஒழுகுவது செருக்கின் பாலதாய்ப் பரிசிலரை இகழ்ந்து மறுக்கும் குறிப்பிற்றாதலின் , அதனை யெடுத்தோதி வெறுக்கின்றார். திரங்குதல், ஏக்கத்தால் உள்ளம் வெதும்பி உடல் வாடுதல் குறித்து நின்றது, நின்னைத் தவிர வேறே எம்மை ஆதரிப்பார் இல்லெனக் கருதற்க என்பார், “பெரிதே யுலகம் பேணுநர் பலரே” என்றார். 208. அதியமான் நெடுமான் அஞ்சி அதியமான் நெடுமானஞ்சி தகடூரில் இருக்கையில் பெருஞ் சித்திரனார் அவனைக் காணச் சென்றார். பெருஞ்சித்திரனார் தமது வறுமைத் துன்பத்தைப் போக்குவ தொன்றே கருதித் தமது புலமை நலத்தைச் செலவிடுகின்றாரென்று கருதியோ, இளவெளி மான் முதலிய இளையோர் மடமை கருதாது நேர்வைத்து இழித்தமை கருதியோ தன்பால் அரசியல் அலுவல் மிகுதியாக இருந்ததனாலோ எதனாலோ அதியமான் இவரை நேரிற்கண்டு அளவளாவ இயலாதவனாயினான். அவன் இறந்த பின்னும். பெருஞ்சித்திரனார் இருந்து குமணனைப் பாடிப் பரிசில் பெற் றுள்ளாராகலின், அவனைக் காணச் சென்றபோது அவன் ஒருகால் உடல்நலங் குன்றியிருந்தும் இருக்கலாம். ஆயினும் அக்கொடைவள்ளல் பெருஞ்சித்திரனார் வரிசை நோக்காது பரிசிலும் நல்காது விடுத்தானல்லன். தன் தகுதிக்கும் புலவரது வரிசைக்கும் ஏற்ற பரிசிலை வரக்கண்டதும் அவர்க்கு வருத்தம் பெரிதாயிற்று. “அறிவும் அதற்கேற்ற கொடையும் அழகுறக் கொண்ட இந்த அதியமான்” என்னைக் காணாது நல்கும் பரிசிலையான் ஏலேன்; குன்றுகளையும் மலைகளையும் கடந்து நெடுவழி நடந்து பரிசிலொன்றே கருதி யான் இங்கே வந்துள்ளே னென்பது இக்கொடை வள்ளல் எங்ஙனம் அறிந்தான்? வருகெனல் வேண்டும் வரிசையுடையேனாகிய என்னைக் கண்ணாற் காணாமே நல்கும் இப்பரிசிலை யேற்றுக்கோடற்கு யானோர் வாணிகப் பரிசிலன் அல்லேன்; என்னை விரும்பி வருகென எதிர் கொண்டு, என் புலமையளவும் கண்டு, பின் எனக்கு நல்கும் பரிசில் மிகச்சிறிதாயினும் எனக்கு அது மிக்க இன்பந் தருவதாம்” என்று பாடிவிட்டார். அதியமான் மனங்கனிந்து நேரிற்கண்டு பிழை பொறுக்குமாறு வேண்டிப் பெருஞ்சித்திரனாரது புலமை யன்பு பெற்று உடல் பூரித்தான். பெருஞ்சித்திரனார் பின்பு அவன் தந்த பரிசில் பெற்று விடைகொண்டு சென்றார். குன்று மலையும் பலபின் னொழிய வந்தனென் பரிசில் கொண்டனென் செலற்கென நின்ற வென்னயந் தருளி யீதுகொண் டீங்கனஞ் செல்க தானென வென்னை 5 யாங்கறிந் தனனோ தாங்கருங் காவலன் காணா தீத்த விப்பொருட் கியானோர் வாணிகப் பரிசில னல்லேன் பேணித் தினையனைத் தாயினு மினிதவர் துணையள வறிந்து நல்கினர் விடினே. திணையும் துறையு மவை. அதியமான் நெடுமான் அஞ்சியுழைச் சென்ற பெருஞ்சித்திரனாரைக் காணாது இது கொண்டு செல்க என்று அவன் பரிசில் கொடுப்பக் கொள்ளாது அவர் சொல்லியது. உரை : குன்றும் மலையும் பல பின் ஒழிய - குன்றுகளும் மலை களும் பல பின்னே கழிய; வந்தனென்பரிசில் கொண்டனென் செலற்கு - வந்தேன் யான் பரிசில் கொண்டேனாய்ப் போதற்கு; என நின்ற என் நயந்தருளி - எனச் சொல்லிநின்ற என்னை அன்புற்றருளி; ஈதுகொண்டு ஈங்கனம் செல்க தான் என - இப்பொருளைக் கொண்டு இவ்வாறு போக தான் எனச் சொல்ல; என்னை யாங்கறிந்தனனோ - என்னை எப்பரிசறிந்தான்; தாங்கருங் காவலன் - பகைவரால் தடுத்தற்கரிய வேந்தன்; காணாது ஈத்த இப்பொருட்கு - என்னை யழைத்துக் காணாதே தந்த இப் பொருட்கு; யான் ஓர் வாணிகப் பரிசிலன் அல்லேன் - யான் ஓர் ஊதியமே கருதும் பரிசிலன் அல்லேன்; பேணி - விரும்பி; தினையனைத்தாயினும் இனிது - தினைத்துணை யள வாயினும் நன்று; அவர் துணையளவறிந்து நல்கினர்விடின் - அந்தப் பரிசிலரது கல்வி முதலாகிய பொருந்திய எல்லையை யறிந்து கொடுத்து விடின் எ-று. ஈங்கனம் செல்கவென்றது காணாதே அவன் சொல்லிவிட்ட வார்த்தையை, அவர் துணையளவறிந்து பேணி நல்கினர்விடின், தினையளவாயினும் இனிது எனக்கூட்டி வினைமுடிவு செய்க. யான் தரங்கெடப் பொருள்கொடு போமவனல்லேன்; அவனா யின் இதுவும் கொடுபோவன்; நீ எனக்குத் தரமறிந்து தர வேண்டுமென்பதாம். அவர் துணையளவெனத் தம்மை உலகின் மேலிட்டுக் கூறினார். விளக்கம் : வழிச்செலவின் அருமை யுணர்த்துவதற்கு “குன்றும் மலையும் பல பின்னொழிய” என்பது கூறப்பட்டது “நயந்தருளி”, யென்றது “அன்பு மிகவுடைமை” யென்ற குற்றங்காட்டி நின்றது. “என்னைக் காணுதல் வேண்டா; இவற்றைப் பெற்றுக்கொண்டு செல்லட்டும்” என்பதுபட நின்றவாறு தோன்ற, “ஈங்கனம் செல்கதான் ” என்றானாகக் கொள்கின்றார். தன் வரவறிந்ததுணையே பரிசில் நல்கித் தன்னொடு உரையாடாதே செல்க என விடையும் விடுத்ததனால் மதி மருண்டமை தோன்ற, “யாங்கறிந்தனனோ” என்றார். “தாங்கருங்காவலன்” என்றது, என்னைக் காணுமளவுதானும் இடைபெறாதவன் என்பதும் சுட்டி நின்றதாயினும், இச்செயலால் பெருஞ்சித்திரனார் தாங்கரிய மனக் கவலை கொண்டு வருந்தினமையுணர்த்தி நிற்பது காண்க. இப்பொருட்கு - இப்பொருளைப் பெற்றுச் செல்லுதற்கு, பெறக்கருதும் ஊதியத்தின் மேலே கருத்துச் செலுத்துவது வணிகர் இயல்பு; அவ்வாறே பயன் பரிசில்மேலே கருத்துச் செலுத்தும் புலவன் என்று கருதினன் போலும் என நினைந்து வருந்துகின்றாராதலால், “யான் ஒரு வாணிகப் பரிசிலேனல்லேன்” என்றார். “தினையனைத்தாயினும் பேணித் துணையளவறிந்து நல்கினர்விடின்” என்றது, தமது கோட்பாடு இதுவெனப் பெருஞ்சித்திரனார் குறிப்பதாம். 209. மூவன் மூவனென்பது இயற்பெயர்; மூப்பனென்னும் சொல் போல்வது அம் மூவனாரென்பதும் இப்பெயரடியாக வருவதே. சேரமான் கணைக் கால் இரும்பொறை காலத்திலும் மூவனென்பானொரு தலைவன் காணப் படுகின்றான். அவன் சேரனொடு பொரும் வகைசெய்து கொண்டு தீங்கு பல செய்தான். அதுபொறாத சேரமான் அவனைப் போரில்வென்று கொன்று அவனுடைய பல்லைப்பிடுங்கித் தன் தொண்டிநகர் வாயிற்கதவில் வைத்து இழைத்துக் கொண்டான் எனப் பொய்கையார் புகன்றுரைக் கின்றார். இவன் அந்த மூவனோ வேறொ தெரிந்திலது; ஆயினும் இவனை அவன் குடியில் தோன்றியவன் என்று கொள்ளுவது இழுக்காகாது. இவன் சேய் என்றும் குறிக்கப்படுகின்றான். இவனுடைய நாடு கடற்கரையைச் சார்ந்த நெய்தற் பகுதியில் மருதவளஞ்சான்ற நாடாகும்; பெருஞ்செல்வமும் கொடை நலமுமுடையவன் என நாட்டில் இவன் பெயர் பரவியிருந்தது. அதனைக் கேள்வியுற்ற பெருந்தலைச் சாத்தனார் ஒருகால் இவனைக் காணச் சென்றார். இவன் மகளிர் நாப்பண் இன்பத் துறையில் எளியனாய் ஒழுகினான். சான்றோரது சால்பினை யறியும் தகைமை இவன்பால் குறைந்து காணப்பட்டது. குமணன்பால் பெருந்தலைச்சாத்தனார் செய்த பெரும்புலமையருஞ்செயல் நலத்தையும் இவன் அறிந்திலன். புலவர்க்கு வழங்கற்கெனக் கடமைப்பட்டிருக்கும் தன் தகுதியையும் இவன் நோக்காது சாத்தனார் மனம் புண்படத்தக்க நிலையில் இவறலை மேற் கொண்டான். ஒரு காரணமுமின்றி இந்த மூவன் தம்மை இகழ்ந்தது சாத்தனார், “எம்மை இகழ்ந்த வினைப் பயத்தால், இவர்க்கு என்ன தீங்கு நேருமோ?” என்று அஞ்சி, “நோயிலை யாகுமதி பெரும” என்று வாழ்த்துவாராய், “நன்செய் வளஞ்சான்ற நன்னாட்டுக்குத் தலைவ, பெருமலை விடரொன்றில் நின்ற பழுமரம் பழுத்து மாறிற்றாயின, அதனைச் சார்ந்து வாழ்ந்த புள்ளினம் செயலற்று வேறுமரம் நாடிச் செல்லும்; அப் புள்ளினம் போல நின்னை நாடி வந்தேன், யான் வெறுங்கையுடனே செல்லவேண்டிய நிலையினே னாயினேன்; நீ ஈயாயாயின் யான் அது குறித்து வருந்து வேனல்லேன்; நீ நோயின்றி வாழ்தலையே வேண்டுவேன். மேலும் யான் நின்பால் வந்து வறிது செல்லும் செய்தி மகிழ்ந் திருக்கும் நினது திருவோலக்கத்தே நினக்கு மிக அண்மியோர் அன்றிப் பிறர் அறியாராக வேண்டும்; அது நினக்கும் எனக்கும் நலம் தரும் என்று கூறினார். இதுவே இப்பாட்டு. பொய்கை நாரை போர்விற் சேக்கும் நெய்தலங் கழனி நெல்லரி தொழுவர் கூம்புவிடு மென்பிணி யவிழ்ந்த வாம்பல் அகலடை யரியன் மாந்தித் தெண்கடற் 5 படுதிரை யின்சீர்ப் பாணி தூங்கும் மென்புல வைப்பி னன்னாட்டுப் பொருந பல்கனி நசைஇ யல்குவிசும் புகந்து பெருமலை விடரகஞ் சிலம்ப முன்னிப் பழனுடைப் பெருமரந் தீர்ந்தெனக் கையற்றுப் 10 பெறாது பெயரும் புள்ளினம் போலநின் நசைதர வந்துநின் னிசைநுவல் பரிசிலேன் வறுவியேன் பெயர்கோ வாண்மேம் படுந ஈயா யாயினு மிரங்குவே னல்லேன் நோயிலை யாகுமதி பெரும நம்முட் 15 குறுநணி காண்குவ தாக நாளும் நறும்ப லொலிவருங் கதுப்பிற் றேமொழித் தெரியிழை மகளிர் பாணி பார்க்கும் பெருவரை யன்ன மார்பிற் செருவஞ் சேஎய்நின் மகிழிருக் கையே. திணை - பாடாண்டிணை; துறை: பரிசில் கடாநிலை. மூவன் பரிசில் நீட்டித் தானைப் பெருந்தலைச் சாத்தனார் பாடியது. உரை : பொய்கை நாரை - பொய்கைக்கண் மேய்ந்த நாரை; போர்வில் சேக்கும் - போரின்கண்ணே யுறங்கும்; நெய்தலங் கழனி நெல்லரி தொழுவர் - நெய்தலையுடைய அழகிய வயற்கண் நெல்லை யறுக்கும் உழவர்; கூம்புவிடு மென்பிணி அவிழ்ந்த ஆம்பல் அகல் அடை - முகை யவிழ்கின்ற மெல்லிய இதழ்கள் நெகிழ்ந்த ஆம்பலினது அகன்ற இலையதனாலே; அரியல் மாந்தி - மதுவை யுண்டு; தெண்கடல் படுதிரை இன்சீர்ப்பாணி தூங்கும்- தெளிந்த கடலினது ஒலிக்கும் திரையின் இனிய சீராகிய தாளத்தேயாடும்; மென்புல வைப்பின் நன்னாட்டுப் பொருந - மென்புலத்தூர்களையுடைய நல்ல நாட்டுக்கு வேந்தே; பல்கனி நசைஇ - பல பழத்தையும் நச்சி; அல்கு விசும்பு உகந்து - தாம் வாழ்வதற்கிடமாகிய ஆகாயத்தின் கண்ணே உயரப் பறந்து; பெருமலை விடரகம் சிலம்ப முன்னி - பெரிய மலையின் முழை எதிரொலி முழங்கச் சென்று ; பழனுடைப் பெருமரம் தீர்ந்தெனக் கையற்று - அவ்விடத்துப் பழமுடைய பெரிய மரம் பழுத்து மாறிற்றாக வருந்தி; பெறாது பெயரும் புள்ளினம்போல - பழம் பெறாதே மீளும் புள்ளினத்தை யொப்ப; நின் நசைதர வந்து - நினது நச்சப்படுந்தன்மை கொடுவர வந்து; நின் இசை நுவல் பரிசிலேன் - நின் புகழைக்கூறும் பரிசிலேன் யான்; வறுவியேன் பெயர்கோ - வறியேனாய் மீளக்கடவேனோ; வாள் மேம்படுந - வாட்போரின்கண் மேம்படுவோய்; ஈயாய் ஆயினும் இரங்குவேன் அல்லேன் - நீ ஒன்றை ஈத்திலையாயினும் யான் அதற்கு வருந்துவேனல்லேன், நோயிலை யாகுமதி - அதுநிற்க நோயின்றிருப்பாயாக; பெரும நம்முன் குறுநணி காண்குவதாக - பெரும நம்மிடத் துளதாகிய அணிய அணுமையைக் காண்பதாக; நாளும் - நாடோறும்; நறும்பல் ஒலிவரும் கதுப்பின் - நறிய பலவாகிய தழைத்த மயிரையும்; தேமொழித்தெரியிழை மகளிர் - தேன்போலும் சொல்லையும் ஆராய்ந்த ஆபரணத்தினையுமுடைய மகளிர்; பாணி பார்க்கும் - ஒருவரினொருவர் புணர்தற்குக் காலம் பார்க்கும்; பெருவரையன்ன மார்பின் - பெரிய மலைபோலும் மார்பினையுடைய; செரு வெஞ் சேஎய் - போரை விரும்பும் சேயை யொப்பாய்; நின் மகிழிருக்கை -நினது மகிழ்ச்சியை யுடைய நாளோலக்கம்; எ-று பாணி பார்க்கும் மார்பு, பாணி பார்த்தற்கு ஏதுவாகிய மார்பு. நம்முட் குறுநணி காண்குவதாக என்றது, நீ என் மாட்டுச் செய்த அன்பின்மையை அவ்விருக்கையன்றி, பிறர் அறியாதொழிவாராக வென்னும் நினைவிற்று. பொருந, வாண்மேம்படுந, சேஎய், நின் இசை நுவல் பரிசிலேன், வறுவியேன் பெயர்கோ, ஈயாயாயினும் இரங்குவேனல்லேன்; பெரும, நோயிலையாகுமதி; நம்முட்குறுநணியை நின்னிருக்கை காண்குவதாக; பிறர் காணாதொழிகவெனக் கூட்டுக. நோயிலையாகென்பது, நீ செய்த தீங்கால் நோயுறுவை; அஃதுறா தொழிகவென்பதாம். இனி, நின் மகிழிருக்கைக்கண் நம்முள் மிக அணித்தாகக் காணும் காட்சி உளதாகவென்றுமாம். இதனாற் காட்சி யுண்டாகாதென்பது குறிப்பு. இனி, “குறுநணி காண்குவதாக” என்பதற்கு நம்மிடத்து மிகவும் மனத்தாற் காணும் காட்சி உளதாகவென்பது கூடாது நீ செய்த கொடுமையான் என்றுரைப்பினு மமையும். விளக்கம் : பாணி, காலம்; ஈண்டுப் புணர்தற்குரிய காலத்தின் மேல் நின்றது. பார்ப்பவர் மகளிரும், பார்க்கப்படுவது பாணியுமாகலின், அவற்றொடு மார்பு இயைதற்கு விளக்கங் கூறுவாராய், “பாணி பார்க்கும் மார்பு, பாணி பார்த்தற்கேதுவாகிய மார்பு” என்றார். குறுநணி, அணிய அணுமை; அஃதாவது மிக்க நெருக்கம். இது குறிப்பு மொழியாய் நெஞ்சத்தால் நெடுந்தொலையில் இயைபின்றி யிருப்பது என்பதுபட நின்றது. கொடுக்கும் வள்ளன்மை யில்லாதாரை முன்னறிந்து கொள்ளாது. சென்று பரிசில்பெறப் பாடி வறுவியராய்ச் சேறல் புலவரது புலமைக்கு இழிவு பயக்குமாகலினாலும், புலவரை யிகழ்ந்த செல்வரை ஏனைப் புலவர் பாடாது வரைவாராதலாலும், “நம்முட் குறுநணி காண்குவதாக”என்பதனால் “நீ என்மாட்டுச் செய்த... பிற ரறியா தொழிவாராக” என்று விளக்கினார். எனவே, காட்சியோடமைந் தொழியல் வேண்டுமேயன்றிக் கண்டதனைப் பிறர்க்கு உரைத்தலு மாகாது என்பதாம். “நோயிலையாகுக” என்றதற்குக் கருத்து இதுவென விளக்குவாராய், “நோயிலையாகென்பது.... என்பதாம்” என்றார். இன்றில்லையாயினும் பிறிதொருகால் “நின்மகி ழிருக்கைக்கண் நம்முள் மிக அணித்தாகக் காணும் காட்சியுளதாக” என்ற கருத்தால் “நோயிலை யாகுமதி” யென்று கூறற்கும் இடமுண்மையின், உளதாகுக என்றுமாம்” என்றும், எனினும், உள்ளக்குறிப்பு, “இதனால் காட்சியுண்டாகா தென்பது” என்றும் உரைத்தார். “குறுநணிக் காண்குவது ஆக” என நிறுத்தி, காண்குவது “மனத்தாற் காணும் காட்சியுளதாக என்றாரேனும் குறிப்பு, அத்தகையதொரு காட்சியுண்டாதல் “கூடாது” என்றும், அதற்கு ஏது அவன் செய்த கொடுமைதான் என்றும் விளக்குவார். இனி குறுநணி......உரைப்பினுமமையும் என்றார். 210. சேரன் குடக்கோச்சேரலிரும்பொறை குடநாட்டுக்குத் தலைவனாய்ச் சேரநாடுமுற்றும் தனக்குரித் தாகப் பெற்றுச் சிறப்புற்றிருந்த சேரமான்களில் இக் குடக்கோச்சே ரலிரும் பொறை சிறந்தவன். இவன் பின்னவன் குடக்கோ இளஞ்சேரலிரும் பொறை யெனப்படுவன். இவன் பொறையர் நாட்டினனாதலால், இரும்பொறை யெனப்பட்டான். இவன் முடியுடை வேந்தனாய்ச் செல்வக் குறைபாடிலனாய்ப் புலவரைப் போற்றும் வேந்தர்வழித் தோன்றலாய் விளங்குவது கேள்வியுற்ற பெருங்குன்றூர் கிழார் ஒருகால் தன் மனையில் நின்று வருத்தும் வறுமைத்துயர் போக்கக்கருதி இவனையடைந்தார். பகைவேந்தர் மருளப்போருடற்றிக்கொற்றமெய்தும் இவனது ஆண்மை யினையும், உள்ளியது முடிக்கும் உரனுடைமையினையும் விதந்தோதித் தமது வறுமைநிலையினையும் விளங்கவுரைத்தார். சேரமானும் அவர் விருப்பத்துக்கேற்பக் கொடுப்போன்போலக் காட்டிக் கொடை வழங்க நீட்டித்தான். உள்ளம் உடைந்த பெருங்குன்றூர்கிழார், “உலக மக்களைப் புரக்கும் நினது உயர்வு நினையாது எம்பால் அன்பு இலனாயினை; நின்னைப்போலும் வேந்தர் உலகத்தில் உளராயின் என்னைப் போலும் இரவலர் இவ்வுலகிற் பிறக்கவேமாட்டார்கள், வறுமை வருத்தினும் என மனையவள் தன் கற்புக்கொள்கை தவறாத பொற்புடையவள் வறுமையால் அவள் ஒருகால் உயிரிழந்திருப்பாள்; இறவா திருப்பளாயின், என்னை நினையாதிராள்; நினைக்கும்போது, தன்னைப் பிரிந்துறையும் யான் இறந்தொழிந்தேனோ என நினைந்து “என் உயிரும் ஒழிக” என வருந்தியுரைத்துக் கொள்வள். அவளது இடுக்கண் தீர்த்தல் வேண்டி, நின்னைப் பகைத்துத் தோற்றவர் செயலற்றொழிவது போல, யானும் செய்வதறியாது தனிமைத் துயரை முன்னிட்டுக் கொண்டு செல்கின்றேன்” என்று சொல்லி நீங்கினார். அச் சொற்கள் இப்பாட்டில் உள்ளன. பின்னர் அவன் அவர் வேண்டுவன நல்கிவிடுத்தான். மன்பதை காக்குநின் புரைமை நோக்காது அன்புகண் மாறிய வறனில் காட்சியொடு நும்ம னோருமற் றினைய ராயின் எம்ம னோரிவட் பிறவலர் மாதோ 5 செயிர்தீர் கொள்கை யெம்வெங் காதலி உயிர்சிறி துடைய ளாயி னெம்வயின் உள்ளா திருத்தலோ வரிதே யதனால் அறனில் கூற்றந் திறனின்று துணியப் பிறனா யினன்கொ லிறீஇயரென் னுயிரென 10 நுவல்வுறு சிறுமையள் பலபுலந் துறையும் இடுக்கண் மனையோ டீரிய விந்நிலை விடுத்தேன் வாழியர் குருசி லுதுக்காண் அவல நெஞ்சமொடு செல்வனிற் கறுத்தோர் அருங்கடி முனையரண் போலப் 15 பெருங்கை யற்றவென் புலம்புமுந் துறுத்தே. திணை - பாடாண்டிணை; துறை: பரிசில் கடாநிலை. சேரமான் குடக்கோச்சேர லிரும் பொறை பரிசில் நீட்டித் தானைப் பெருங்குன்றூ கிழார் பாடியது. உரை : மன்பதை காக்கும் நின் புரைமை நோக்காது - உயிர்ப் பன்மையைக் காக்கும் நினது உயர்ச்சியைப் பாராது; அன்பு கண்மாறிய அறனில் காட்சியொடு - காதல் கண்மாறிய அறமல்லாத பார்வையுடனே கூடி; நும்மனோரும் மற்று இனையராயின் - நும்போல்வார் யாவரும் இதற்கொத்த அறிவையுடையராய் அருள்மாறுவாராயின்; எம்மனோர் இவண் பிறவலர் - எம்போல்வார் இவ்வுலகத்துப் பிறவா தொழியக்கடவர்; செயிர் தீர் கொள்கை எம் வெங் காதலி - குற்றந்தீர்ந்த கற்பினையுடையளாய எம்மை விரும்பிய காதலி; உயிர் சிறிது உடையளாயின் இறந்துபடாது உயிர்வாழ்வுடை யளாகக் கூடின; எம்வயின் உள்ளாதிருத்தலோ அரிது - எம்மிடத்து நினையாதிருத்தல் அரிது; அதனால்-; அறனில் கூற்றம் திறனின்று துணிய - அறனில்லாத கூற்றம் திறப்பா டின்றி உயிர்கொளத்துணிய; பிறனாயினன் கொல் - இறந்து பட்டான் கொல்லோ; இறீஇயர் என் உயிர் என - என்னுயிர் கெடுவதாகவென்று; நுவல்வுறு சிறுமையள் - சொல்லுதலுற்ற நோயையுடையளாய்; பலபுலந் துறையும் - பல படவெறுத் துறையும்; மனையோள் இடுக்கண் தீரிய - மனைவியது துன்பம் தீர்க்கவேண்டி; குருசில் வாழியர் - இறைவ வாழ்வாயாக; உதுக்காண் - இதனைப் பாராய்; அவல நெஞ்சமொடு செல்வல் - இன்னாமையையுடைய நெஞ்சத்துடனே போவேன்; நிற்கறுத்தோர் அருங்கடி முனையரண்போல - நின்னை வெகுண்டாரது அணுகுதற்கரிய காவலையுடைய முனை யிடத்து அரணைப்போல; பெருங்கையற்ற என் புலம்பு முந்துறுத்து - பெரிய செயலற்ற எனது வறுமையை முன்போக விட்டு; எ-று. குருசிலே, நும்மனோரும் இனையராயின், எம்மனோர் இவண்பிறவார்; எங் காதலி உயிர் சிறிதுடையளாயின் நினையா திருத்தல் அரிது; அதனால் அம்மனையோள் இடுக்கண் தீர்க்க வேண்டி இப்பொழுதே விடுத்தேன்; நிற்கறுத்தோர் முனையரண் போலக் கையற்ற என் புலம்பு முந்துறுத்துச் செல்வேன், வாழி யரெனக் கூட்டி வினைமுடிவு செய்க. “உதுக்காண்” என்றது அச் செலவை. என் வறுமை என்னைவிட்டு நீங்கப் போதலையொழியப் புலம்பை முந்துறுத்துக் கொண்டு போகாநின்றேனென இரங்கிக் கூறியவதனால் “வாழியர் குருசில்” என்பது இகழ்ச்சிக் குறிப்பாயிற்று. உயிர்வெங் காதலி யென்று பாடமோதுவாருமுளர். விளக்கம் : பின்னர்த் தாம் செல்கின்ற செலவை “உதுக்காண்” எனச் சுட்டினார். நும்மனோர், எம்மனோர் என்புழி அன்னோரென்பது, “இடைச்சொல் முதனிலையாகப் பிறந்த குறிப்புப் பெயர்” என்று சேனாவரையர் முதலியோர் கூறுவர். இனையர், இதற்கொத்த அறிவுடையராய் அருள்மாறுவர், எம்மனோர் இவ்வுலகிற் பிறத்தற்கேது, நும்மனோர்பால் கிடந்த அன்பும் அறமுமேயாம்; நும்மனோர்பால் அவை இலவாயின், எம்மைப்போல்வார் பிறவார் என்பார், “மன்பதை....மாதோ” என்றார். புரைமை - உயர்வு “புரையுயர் பாகும்” (தொல். சொல்-300)என்பது காண்க. மன்பதை காக்கும் புரைமைக்கு அன்பும் அறமும் அடிப்படையெனவறிக. பொருளின்மை கருதி என் மனைவி என்னை வெறுப்பவளல்லள்; அவட்கு என் உயிரே பொருள்; பொருளை யுயிராகக் கருதும் புன்மை என் மனைவிபாலும் கிடையாதென்பார், “செயிர்தீர் கொள் கை யெம் வெங் காதலி” என்றும், என் பிரிவு அவளைப் பெரிதும் வருத்துமாகலின், அவ்வருத்தம் இல்லையாமாறு யான் செல்கின்றேன் என்பார், “அறனில் கூற்றம்.......விடுத்தேன்” என்றார். பெறக் கருதிய பரிசிலின்றி வறிது செல்லுமாறு தோன்ற, “புலம்பு முந்துறுத்து ” என்றார். வேறு பிற செல்வர்பாற் சென்று பரிசில் பெறவும் கருதிற்றிலேன் என்பார். “பெருங்கை யற்ற” என்று குறித்தார். கை - செய்கை. நின்னால் வெகுளப்பட்ட பகைவருடைய அரண் நின்னால் அலைப்புண்டு தன்னைக் காப்பாராற் கைவிடப்பட்டு அழிவது போல, யானும் அவல நெஞ்சமொடு பெருங்கையற்ற புலம்புமுந்துறுத்து மனமழிந்து செல்கின்றேன் என்பது சேரமான் தன்னை வெகுண்டு பரிசில் தாராதொழிவது அறமன்றென் பதனைக் குறித்து நிற்கிறது. அரண்போலப் பெருங்கை (முயற்சி) அற்றென்க. புலம்பு ஈண்டு வறுமைமேல் நின்றது; வறுமையின் பயன் அதுவாகலின். “வாழியர் குருசில்” என்றது நின் வாழ்வு பயனற்றதென்பது குறித்து நின்றது. உயிர்வெங்காதலி யென்பதற்கு என்னுயிரை விரும்பியுறையும் என் மனைவி என்று பொருள் கூறுக. எம்மென்றது உயிரையும் தன்கண் உளப்படுத்தி நிற்றலின், அப்பாடம் அத்துணைச் சிறப்பின்றெனவறிக. 211. சேரமான் குடக்கோச்சேரலிரும்பொறை சேரமான் குடக்கோச்சேரலிரும்பொறைபால் பரிசில் வேண்டி வந்த பெருங்குன்றூர்குழார் சின்னாள் அவன்பால் தங்கிப் பரிசில் எதிர் நோக்கியிருந்தார். அவன் வேண்டும் பரிசில் நல்கிவிடாது நீட்டித் தான். அவர் இருந்த காலத்தும் அதற்கு முன்பும் அவ்விரும் பொறை முரசு முழங்கும் தானைகொண்டு பகையரசர்மேற் சென்று அவரொடு வஞ்சியாது பொருது வெற்றி மேம்படுதலைக் கண்டிருந்தார். அவன் கொற்றத்தையும் அவ்வப் போது நம் பெருங்குன்றூர்கிழார் பாடி அவனைச் சிறப்பித்தார். அவனும் அவரது செய்யுணலத்தை நுகர்ந்து வியந்து இன்புற்றான். அதனால் பெருங்குன்றூர்கிழார் தாம் கருதியவாறு அவன் சிறந்த பரிசில் நல்கி விடுப்பனென எண்ணி யின்புற்றார். அவனும் அவர் எதிர் பார்த்தற்கேற்ற வகையில் பரிசில் நல்குவான் போலும் செயல்கள் சில செய்தான். இவ்வாறு நாட்கள் பல கழிந்தன. முடிவில் அவன் செயலெல்லாம் ஏமாற்றமாமாறு அவர் எதிர்பார்த்த பரிசிலை அவன் நல்குவனென எண்ணற்கிடமில்லை யாயிற்று. பெருங்குன்றூர் கிழார்க்கு ஏமாற்றமும் வருத்தமும் பெருகின. அவர், சேரமானை நோக்கி, “தோன்றலே! நின்னை நினைந்து நீ தரும் பரிசிலை விரும்பிவந்த பரிசிலருள் யான் ஒருவன். நீ என்னைச் சேர்ந்தார்க்கும், வீரர்க்கும் செய்யும் வள்ளன்மையையும் அன்பையும் கண்டு இவ்வாறு அன்பால் தாழ்ந்து எமக்கும் வண்மை புரிகுவாய் எனக் கருதி, நினக்கு எம்மை யெதிரேற்றுப் பரிசில் கொடாது மறுத்த பிறரது கொடுமையை விரியக் கூறினேன். கூறவும், நீ நின் கருத்திற் கொண்டவாறே செய்து முடித்துவிட்டாய். முன்னாள் நீ செய்த குறிப்பால் “பரிசில் என் கைக்கு வந்துவிட்டதென்றே நான் கருதச்செய்தாய்; பின்னாள் அது குறித்து ஏமாந்து வருந்துமாறு என்னைச் செய்தாய். என் வருத்தங் கண்டு நீ சிறிதும் நாணாயாயினை. யானோ நீ நாணுமாறு என் நாவால் நின் புகழைப் பன்முறையும் பாடினேன்; என் பாடுபுகழை நீ ஏற்றுக் கொண்டாய். உண்ண உணவின்மையின் என் மனையில் வாழும் எலிதானும் பசித்து மடிந்து கிடக்கும் சுவரைச் சார்ந்து என் மனைவி மெலிந்திருக்க, பாலில்லாமையால் மார்பிற் பால் சுவைத்து அது பெறாது பாலுண்டலையே மறந்தொழிந்த நிலையிலிருக்கும் பிள்ளையை யுடைய அவளைநினைந்து கொண்டு செல்கின்றேன். செல்லும் யான் நின்னைத் தொழுது விடைபெற்றுப் போகின்றேன்” என்ற கருத்தமைந்த இப்பாட்டைப் பாடினார். இப்பாட்டைப் பாடிய இரண்டொருநாள் கழிந்தபின்னரும் சேரமான் பரிசில் நீட்டித்தானாக, “மன்பதை காக்கும்” என்று தொடங்கும் பாட்டைப் பாடி நீங்கினார். இப்பாட்டுக்கள் பலவும் வரலாற்று முறை பற்றித் தொடுக்கப்பட்டன வல்லவென முன்பே கூறினோம், கடைப் பிடிக்க. அஞ்சுவரு மரபின் வெஞ்சினப் புயலே றணங்குடை யரவி னருந்தலை துமிய நின்றுகாண் பன்ன நீண்மலை மிளிரக் குன்றுதூ வெறியு மரவம் போல 5 முரசெழுந் திரங்குந் தானையோடு தலைச்சென் றரைசுபடக் கடக்கு முரைசா றோன்றனின் உள்ளி வந்த வோங்குநிலைப் பரிசிலென் வள்ளியை யாதலின் வணங்குவ னிவனெனக் கொள்ளா மாந்தர் கொடுமை கூறநின் 10 உள்ளியது முடித்தோய் மன்ற முன்னாட் கையுள் ளதுபோற் காட்டி வழிநாட் பொய்யொடு நின்ற புறநிலை வருத்தம் நாணா யாயினு நாணக் கூறியென் நுணங்கு செந்நா வணங்க வேத்திப் 15 பாடப் பாடப் பாடுபுகழ் கொண்டநின் ஆடுகொள் வியன்மார்பு தொழுதனென் பழிச்சிச் செல்வ லத்தை யானே வைகலும் வல்சி யின்மையின் வயின்வயின் மாறி இல்லெலி மடிந்த தொல்சுவர் வரைப்பிற் 20 பா அ லின்மையிற் பல்பாடு சுவைத்து முலைக்கோண் மறந்த புதல்வனொடு மனைத்தொலைந் திருந்தவென் வாணுதற் படர்ந்தே. திணை - பாடாண்டிணை; துறை: பரிசில் கடாநிலை. அவனையவர் பாடியது. உரை : அஞ்சுவரு மரபின் வெஞ்சினப் புயலேறு - அஞ்சத் தக்க முறைமையுடைய வெய்ய சினத்தையுடைய மழையின்கண் உள்ள இடியேறு; அணங்குடை யரவின் அருந்தலை துமிய - அச்சமுடைய பாம்பினது அணுகுதற்கரிய தலை துணிய; நின்று காண்பன்ன நீள்மலை மிளிர - நிலவகலத்தை நின்று பார்ப்பதுபோன்ற நீண்டமலை பிறழ; குன்று தூவெறியும் அரவம்போல - சிறுமலை தூவ எறியும் ஓசைபோல; முரசு எழுந்து இரங்கும் தானையொடு தலைச்சென்று - வீரமுரசு கிளர்ந்தொலிக்கும் படையுடனே மேற்சென்று; அரைசுபடக் கடக்கும் உரைசால் தோன்றல் - வேந்தர்பட எதிர் நின்று கொல்லும் புகழமைந்த தலைவ; வள்ளியை யாதலின் - நீ வள்ளியை யாதலான்; வணங்குவன் இவன் என - எமக்குத் தாழ்ந்து பரிசில் நல்குவன் இவன் என்று; நின் உள்ளி வந்த - நின்னை நினைந்து வந்த; ஓங்கு நிலைப் பரிசிலென் - உயர்ந்த நிலைமையையுடைய பரிசிலேனாகிய யான்; கொள்ளா மாந்தர் கொடுமை கூற - நினக்கு எம்மை எதிரேற்றுக் கொள்ளாத மாந்தரது கொடுமையைச் சொல்லவும்; நின் உள்ளியது முடித்தோய் மன்ற - நின்னுடைய நினைவே செய்தாய் நிச்சயமாக; முன்னாள் கையுள்ளது போல் காட்டி - முன்னைநாள் பரிசில் கையிலே புகுந்ததுபோலக் காட்டி; வழிநாள் பொய்யொடு நின்ற புறநிலை வருத்தம் - பிற்றைநாள் பொய்யைப் பெற்று நின்ற நினது புறநிலைமைக்குயான் வருந்திய வருத்தத்திற்கு; நாணாயாயினும் - நீ தான் நாணாய் ஆயினும்; நாணக் கூறி - நீ நாணச்சொல்லி; என் நுணங்கு செந்நா - எனது நுண்ணிய ஆராய்ச்சியையுடைய செவ்விய நா; அணங்க ஏத்தி - வருந்தப் புகழ்ந்து; பாடப்பாடப் பாடுபுகழ் கொண்ட - நாடோறும் பாடப் பாடப் பின்னரும் பாடவேண்டும் புகழை யேற்றுக்கொண்ட; நின் ஆடு கொள் வியன் மார்பு - நினது வென்றிபொருந்திய அகன்ற மார்பை; தொழுதனென் பழிச்சிச் செல்வல் யான் - வணங்கி வாழ்த்திப் போவேன் யான், வைகலும் வல்சி இன்மையின் - நாடோறும் உணவில்லாமை யான்; வயின் வயின் மாறி - இடந்தோறும் மாறி மாறி அகழ்தலால்; இல்லெலி மடிந்த தொல் சுவர் வரைப்பின் - இல்லெலி மடிந்த பழைய சுவராகிய எல்லையையுடைய; பாஅல் இன்மையின் பல்பாடு சுவைத்து - பாலில்லாமையாற் பலபடி சுவைத்து; முலைக்கோள் மறந்த புதல்வனொடு - முலையுண்டலை வெறுத்த பிள்ளையுடனே; மனைத்தொலைந்திருந்த - மனையின் கண்ணே தோன்றல், நின்னுள்ளிவந்த பரிசிலேனாகிய நான் கூற, நின் உள்ளியது செய்தாயாதலான், வருத்தம் கூறி ஏத்தித் தொழுதனென் பழிச்சி, வரைப்பின் மனைக்கண்ணே புதல்வனொடுதொலைந் திருந்த என் வாணுதலை நினைந்து செல்வல் யானெனக்கூட்டி வினைமுடிவு செய்க. நாணக்கூறி யென்றதன் பின்னே ஏத்திப் பழிச்சிச் செல்வல் என்றமை யான் அவை குறிப்பு மொழி, வரைப்பின் மனை யென இயையும். “வள்ளியனாகலின் வணங்குவன் இவனென” என்று பாட மாயின், வண்மையை யுடையனாதலால் இவன் எமக்குத் தாழ்ந்து பரிசிலளிப்பனெனக் கருதி யென்க. “வள்ளியை யாதலின் வணங்குவனிவனெனக், கொள்ளா மாந்தர் கொடுமை கூற” என்றதற்கு வள்ளியை யாதலின் இவனை வணங்குவே னென நினைந்து வணங்க அது பாராது நின்பாற் பரிசில் பெறாத மாந்தர் நினது கொடுமை.....” தூவவெறியு மென்பது தூவெறியுமென வகரங்கெட முடிதல், புறநடையாற் கொள்க. விகாரமெனினு மமையும். “தூவ வெறியும்” என்பதூஉம் பாடம். புறநிலை யென்பதற்குப் புறங் கடை நின்றநிலை யென்றுமாம். இல்லெலி மடிந்த தொல்சுவர் என்பதற்கு இல்லெலிதான் தொழில் மடிந்த தொல் சுவர் என்று உரைப்பினு மமையும். நின்னைக் கொடுமைகூற வென்றுரைப்பினு மமையும். விளக்கம் : புறநிலை வருத்தம் - புற நிலைமைக்கு யான் வருந்திய வருத்தம். புறநிலைமை, அன்புகண் மாறிய நிலைமை; அகநிலைமையன் பாதலின், அதற்கு மாறாய் மறுக்கும் நிலைமை புறநிலைமையாயிற்று ஆராய்ச்சியது நுணுக்கம், அதனை யுரைக்கும் நாவின்மேல் ஏற்றப் பட்டது இனி, ஏத்துதல் வேண்டா வென்னும் நாநோவ ஏத்தினமை குறிப்பார், “செந்நா அணங்க ஏத்தி” யென்றார். நாவின் செம்மை ஏத்துதல்; அணங்குதல் தீது என்பது குறிப்பு. நாணுமாறு கூறியவர் பின்பு ஏத்துதலும் பழிச்சுதலும் பிறவும் செய்தல் அந் நாணத்தை மிகுதிப் படுத்துவதனால், அவை ஏத்துதல் முதலியன ஆகாது பழிப்பாதல் பற்றிக் குறிப்புமொழி யென்றார். “வள்ளியை யாகலின்” என்ற பாடத்தைக் கொள்ளாது “வள்ளியனாகலின்” என்ற பாடங்கொள்வது முண்டென்றும், அவ்வாறு கொண்டால், “வள்ளியையாகலின்... பெறாத மாந்தர் கொடுமைகூற...” என்று உரைகூறிக் கொள்க என்றார். புறநடை, எழுத்ததிகாரத்திறுதியிற் கூறிய, “கிளந்தவல்ல செய்யுளுள் திரிநவும், வழங்கியன் மருங்கின் மருவொடு திரிநவும், விளம்பிய வியற்கையின் வேறுபடத் தோன்றின், வழங்கியன் மருங்கின் உணர்ந்தன ரொழுக்கல், நன்மதி நாட்டத் தென்மனார் புலவர்” (எழுத்து. 483) என்ற புறநடை, புறநிலை யென்பதற்குப் புறங்கடை நின்றநிலையென்று பொருள் கூறினும் பொருந்தும் என்றார்; புறங்கடை நின்றார் ஒன்று ஈத்தல் இல்லை யாதல் பற்றி. இல்லெலிதான் மாறிமாறிப் பலவிடங்களை யகழ்ந்தும் பயன் இல்லாமையால் மடிகொண்ட தென்றதற்கு வேறாக, இல்லெலியும் தொழிலின்றி மடிந்த தொல்சுவர் என்று உரைப்பினும் பொருந்தும் என்றார். இல்லெலி பலவிடங்களில் அகழ்ந்தும் பயன் பெறாது மடி கொண்டாற் போல, புதல்வனும் தாய் முலையைப் பன்முறை சுவைத்தும் பாலின்மையால் பாலுண்டலையே வெறுத் தொதுங்கினான். தொலைவு பொருட்குறைவாதலின், தொலைந்திருந்த என்றதற்கு வறுமையுற்றிருந்த என்று உரை கூறினார். 212. கோப்பெருஞ் சோழன் உறையூரிலிருந்து ஆட்சி புரிந்த சோழ வேந்தருள் கோப்பெருஞ் சோழன் அறிவு நலமும் ஆட்சி நலமும் ஒருங்குடையவன்; மானத்திற் கவரிமா வனையன்; மற மாண்புகளில் சான்றோர் மெய்ம்மறை. சான்றோர் சால்பறிந்து அவர் கூட்டுறவு விரும்பியுறைபவன். பிசிராந்தையார் பால் பேரன்புடையவன். இவன் நெடுங்காலம் ஆட்சி புரிந்தவன். ஒரு கால் இவனுடைய மக்கள் இவன்பால் பகைத்தீக் கொளுவப் பெற்றுப் போர்க்கெழுந்தனர். தெருண்டவர் தெருட்டவும் தெருளாது முரணிய மக்களை ஒறுத்தற் கெண்ணிக் கோப்பெருஞ் சோழனும் போர்க் கெழுந்தனர். அது கண்ட சான்றோரான புல்லாற்றூர் எயிற்றியனாரென்பார் கோப்பெருஞ் சோழன் மனங்கொள்ளத் தக்க நல்லுரைகளை எடுத்தோதி அவனைப் போரைக் கைவிடுமாறு செய்தார். முடிவில் அவன் மானம் பொறாது வடக்கிருந்து உயிர்துறந்தான். அக்காலத்தே இவனுடனே உயிர்துறந்த சான்றோர் பலர். கேள்விமாத்திரையே பெருநட்புக் கொண்டிருந்த பிசிராந்தையார் இவன் வடக்கிருந்து உயிர் துறந்து நடுகல்லாயின பின் போந்து தாமும் வடக்கிருந்து உயிர் துறந்தார். இவர் காலத்தே இவன் நட்புச் சுற்றமாயிருந்த சான்றோர் கருவூர்ப் பெருஞ்சதுக்கத்துப் பூதநாதனார், நத்தத்தனார், புல்லாற்றூர் எயிற்றியனார், பிசிராந்தையார் முதலியோராவர். பிசிராந்தையார் பாண்டிநாடடுப் பிசிரென்னும் ஊரில் இருந்து வருகையில், கோப்பெருஞ்சோழனுடைய அறிவு நலமும் ஆட்சி நலமும் கேள்வியுற்று, அவன்பாற் பெருங் காதல் கொண் டொழுகினார். பாண்டி நாட்டிலிருந்தது அவருடல் எனினும், அவரது உயிர் உறையூரிலிருந்த கோப்பெருஞ் சோழனையே சூழ்ந்து கொண்டிருந்தது. பிசிர் இப்போது பிசிர்க் குடியென வழங்குகிறது. அவரது நினைவுமுற்றும் சோழன்பால் ஒன்றியிருந் தமையின், யாவரேனும் நம்முடைய வேந்தன் யாவன் என்று கேட்பின், “எம் வேந்தன் கோப்பெருஞ் சோழன். அவன் உறையூரில் பொத்தியாரென்னும் புலவர் பெருந்தகையுடன் இனிதிருக்கின்றான்” என்று கூறுவர். இவ்வாறு பன்முறையும் கூறிப் பயின்ற அக்கூற்று இப் பாட்டாய் உருக்கொண்டு நிற்கின்றது. நுங்கோ யாரென வினவி னெங்கோக் களமர்க் கரித்த விளையல் வெங்கள் யாமைப் புழுக்கிற் காமம் வீடவாரா ஆரற் கொழுஞ்சூ டங்கவு ளடாஅ 5 வைகுதொழின் மடியு மடியா விழவின் யாணர் நன்னாட் டுள்ளும் பாணர் பைதற் சுற்றத்துப் பசிப்பகை யாகிக் கோழி யோனே கோப்பெருஞ் சோழன் பொத்தி னண்பிற் பொத்தியொடு கெழீஇ 10 வாயார் பெருநகை வைகலு நக்கே. திணை - பாடாண்டிணை; துறை: இயன்மொழி. கோப்பெருஞ் சோழனைப் பிசிராந்தையார் பாடியது. உரை : நுங் கோ யார் என வினவின் - உம்முடைய இறைவன் யார்தானென்று கேட்பீராயின்; எங் கோ - எம் முடைய இறைவன்; களமர்க்கு அரித்த விளையல் வெங்கள் - களமர்க்கு அரிக்கப்பட்ட முதிர்ந்த விரும்பத்தக்க மதுவை; யாமைப் புழுக்கின் - ஆமையிறைச்சியுடனே; காமம் வீடஆரா - வேட்கைதீர அக்களமர் உண்டு; ஆரல் கொழுஞ்சூடு அங்கவுள் அடாஅ - ஆரல் மீனாகிய கொழுவிய சூட்டை அழகிய கதுப்பகத்தே அடக்கி; வைகு தொழில் மடியும் மடியா விழவின் - மதுவுண்ட மயக்கத்தால் வைகு தொழிலொழியும் நீங்காத விழவினை யுடைய; யாணர் நல் நாட்டுள்ளும் - புதுவருவாயுளதாகிய நல்ல சோழநாட்டுள்ளும்; பாணர் பைதற் சுற்றத்துப் பசிப் பகையாகி - பாணருடைய வருத்தமுற்ற சுற்றத்தினது பசிக்குப் பகையாய்; கோழியோன் - உறையூரென்னும் படைவீட்டிடத் திருந்தான்; கோப்பெருஞ் சோழன் -; பொத்தில் நண்பின் பொத்தியொடு கெழீஇ - புரையில்லாத நட்பினையுடைய பொத்தியென்னும் புலவனொடு கூடி; வாயார் பெருநகை வைகலும் நக்கு - மெய்ம்மையார்ந்த மிக்க மகிழ்ச்சியை நாடொறும் மகிழ்ந்து; எ-று. நன்னாட்டுள்ளும் என்ற உம்மை சிறப்பும்மை. கோழி - உறையூர் நுங்கோ யாரென வினவின் எங்கோக் கோப்பெருஞ் சோழன்; அவன் பசிப்பகையாகிப் பொத்தியொடு வைகலும் நக்குக் கோழியிடத் திருந்தானெனக் கூட்டி வினைமுடிவு செய்க. ஆகிக் கெழீஇ நக்கென்னும் செய்தெனெச்சங்களைக் கோழியோ னென்னும் வினைக்குறிப் போடு முடிக்க. விளக்கம் : களமர் பொருட்டு வடித்தெடுக்கப்பட்ட அரியலை அக்களமரே யுண்பர். அரியலாகிய கள்ளை வெறிக்க வுண்பரென்பதற்கு “காமம் வீட ஆரா” என்றார். ஆர்தல் - உண்டல். கள்ளுண்ட மயக்கத் தால் விளைவது தொழிலில் ஈடுபடாது மடிவது. விழவுதோன்றி, கள்ளுண்ட களமரைத் தன்பால் ஈடுபடச் செய்வது விளங்க, “வைகு தொழில் மடியும் மடியாவிழவு” என்றார். பசியால் வாடியிருக்கும் சுற்றமென்பது தோன்றப் “பைதற் சுற்றம்” என்பது குறிக்கப்பட்டது. உறையூர்க்குக் கோழி யென்றும் பெயருண்டு. கோழியென்றது, ஒரு கோழி “நிலமுக்கியத்தால் யானையோடு பொருது, அதனைப் போர் தொலைத்தல் கண்டு அந்நிலத்திற் செய்த நகர்க்குப் பெயராயிற்று; முறஞ்செவி வாரண முன்சம முருக்கிய, புறஞ்சிறை வாரணம் (சிலப். 10:247-8)என்பர். மேலும் என்று அடியார்க்கு நல்லார் கூறுவது காண்க. பொத்து, புரைபடுதல்; “பலர் நின்று போற்றினும் பொத்துப் படும்” (குறள். 468) என வருதல் காண்க. ஈண்டுப் புரைபடுவதாவது அறைபோகுதல். புரையில்லாத நல்லமைச்சரோடு கூடியிருக்கும் வேந்தனுக்கு மெய்ம்மையின்பம் ஒருதலையாதலின், “வாயார் பெருநகை” என்று வியந்தோதினார். கோழியோன் என்பது கோழியின் கண் உள்ளான் என்பதுபட நிற்றலின், “கோழியிடத் திருந்தானெனக் கூட்டி வினைமுடிவு செய்க.” என்று உரைத்தார். பெருநகை யென்ற விடத்துப் பெருமை மிகுதி குறித்துநின்றது. செய்தெனெச்சங்கள் வினைக்குறிப்போடு முடியலாம்; “வினையெஞ்சு கிளவிக்கு வினையுங் குறிப்பும், நினையத் தோன்றிய, முடிபாகும்மே” (எச்ச. 36) என்பது தொல்காப்பியம். ஆகி, கெழீஇ, நக்கென்னும் செய்தெனெச்சங்கள் காரணமாகாமையின் ஆக்கச்சொல் விரிக்கப்படவில்லை. 213. கோப்பெருஞ் சோழன் கோப்பெருஞ் சோழன் உறையூரிலிருந்து ஆட்சிபுரிந்து வருகையில், அவன் மக்கள் சிற்றினச் சேர்க்கையால் அறிவு பேதுற்று அவன் பால் பகைகொண்டு போர்க்கெழுந்தனர். அவர் அறிவு திருந்த வேண்டிச் சான்றோர் செய்த முயற்சிகள் பயனில வாயின. அவர்கட்குத் துணைசெய்யக் கூடிய புல்லர்களும் உளராயினர். தந்தையொடு போருடற்றுவ தொழியப் பிறிதொன்றும் கருதாத பேதைகளான மக்கள் செயல் கோப்பெருஞ்சோழன் உள்ளத்திற் கொதிப்பை யுண்டுபண்ணிற்று. மறமும் மானமும் பொங்கி யெழுந்து கோப்பெருஞ் சோழனைப் போர்க் கெழுமாறு தூண்டின. இருதிறத்தாரும் போர்க்குரிய வற்றைச் செய்யத் தொடங்கினார். இச் செயல் நாட்டிலிருந்த நல்லிசைச் சான்றோருக்குப் பெருங் கலக்கத்தை யுண்டு பண்ணிற்று. நல்லறிவு நிறைந்த சொற் களைக் கேட்டற்கு ஒருப்படா உள்ளம் படைத்த மக்களைத் தெருட்டுதலைவிடக் கோப்பெருஞ் சோழன் உள்ளத்தை மாற்றுவதே மாண்பெனக் கண்டனர். தந்தையும் மக்களும் போர்செய்தலால் விளையும் தீங்குகளையும் பழியையும் எடுத்து இயம்பினர். தொடக்கத்தில் கோப்பெருஞ்சோழனும் அவர் கூற்றுக்கு இடங் கொடானாயினன். முடிவில் சோழன் தன் மக்கள்மேல் செல்ல லுற்றான். அதனைப் புல்லாற்றூர் எயிற்றியனார் என்னும் சான்றோர் கண்டார். புல்லாற்றூர் என்பது காவிரியின் வடகரையில் உள்ள ஊர்களுள் ஒன்று. அவர் போர் மேற் செல்லும் சோழனை யடைந்தார். போர்க்களத் திருப்பினும், சான்றோர் அவைக்களத் திருப்பினும் அறிவுடையோர் அறிவுரை கேட்கும் அமைதி யுடையனாகிய கோப்பெருஞ் சோழன் அவரை வரவேற்றான். அவர் அவனது மேற்செலவை விலக்கும் கருத்தினராய், “வேந்தே! நின்னொடு பொர வந்திருப்போரையும் நின்னையும் நோக்கின், அவர் தொன்றுதொட்டுவந்த நின் பகை வரல்லர்; பகைவரான சேர பாண்டியர் குடியினரல்லர்; நீயும் சோழர்க்கு மாறான சேரபாண்டியர் குடியினனல்லை; இவ்வுலகில் இம்மையில் நீ இப் போரையுடற்றி நல்ல புகழ் நிறுவி மறுமை யுலகமெய்துவையாயின், நினக்குப் பின் இவ்வரசுரிமை நின்னொடுபொர வந்திருக்கும் அவர்க்குத் தானே உரியதாய்ச் சென்று சேரும்; இது நீ நன்கறிந்த தொன்று. மேலும் இப்போரில் நின்னொடு பொரும், நல்லறிவில்லாத இளையவர்கள் தோற்பரேல், நின்பெருஞ் செல்வத்தை யார்க்குத் தரப்போகின்றாய்? ஒருகால் நீ இப்போரில் தோற்பாயாயின், பெரும்பழிதானே நிலைநிற்கும். ஆதலால், போரைக் கைவிடுவதே பொருத்தமாகும். அன்றியும், நின் திருவடி அஞ்சினோர்க்கு அரணாகும் அழகுடையது; அச் சிறப்புக் குன்றா வண்ணம் செய்யத்தக்கது ஒன்றே உளது. இப்போரைத் தவிர்த்து வானோரு லகத்து மேலோருவப்ப அறம்புரிவதே கடன். அதனைச் செய்க” என்ற கருத்தமைந்த இப்பாட்டைப் பாடிக் கோப்பெருஞ் சோழன் உள்ளத்தை மாற்றினார். சோழனும் சான்றோர் உரையின் சால்பினைத் தெளிந்தான். படைவீரர்க்குப் போரைக் கைவிடுமாறு பணித்தான். போர் நிகழ்ச்சி கண்டு வருந்திய சான்றோர். மகிழ்ச்சி கொண்டனர். மகிழ்ச்சி கொண்டிருந்த பகைவர் மனந்தடுமாறினர். முடிவில் கோப்பெருஞ் சோழன் மக்கட் செயலால் விளைந்த மானம் பொறாது வடக்கிருந்து உயிர் துறந்தான். மண்டம ரட்ட மதனுடை நோன்றாள் வெண்குடை விளக்கும் விறல் கெழு வேந்தே பொங்குநீ ருடுத்தவிம் மலர்தலை யுலகத்து நின்றலை வந்த விருவரை நினைப்பிற் 5 றொன்றுறை துப்பினின் பகைஞரு மல்லர் அமர்வெங் காட்சியொடு மாறெதிர் பெழுந்தவம் நினையுங் காலை நீயு மற்றவர்க் கனையை யல்லை யடுமான் றோன்றல் பரந்துபட நல்லிசை யெய்தி மற்றுநீ 10 உயர்ந்தோ ருலக மெய்திப் பின்னும் ஒழித்த தாய மவர்க்குரித் தன்றே அதனால். அன்ன தாதலு மறிவோய் நன்றும் இன்னுங் கேண்மதி யிசைவெய் யோயே நின்ற துப்பொடு நிற்குறித் தெழுந்த 15 எண்ணில் காட்சி யிளையோர் தோற்பின் நின்பெருஞ் செல்வம் யார்க்கெஞ் சுவையே அமர்வெஞ் செல்வ நீயவர்க் குலையின் இகழுந ருவப்பப் பழியெஞ் சுவையே அதனால் ஒழிகதி லத்தைநின் மறனே வல்விரைந் 20 தெழுமதி வாழ்கநின் னுள்ள மழிந்தோர்க் கேம மாகுநின் றாணிழன் மயங்காது செய்தல் வேண்டுமா னன்றே வானோர் அரும்பெற லுலகத் தான்றவர் விதும்புறு விருப்பொடு விருந்தெதிர் கொளற்கே. திணை : வஞ்சி, துறை - துணைவஞ்சி. அவன் மக்கள் மேற் சென்றானைப் புல்லாற்றூர் எயிற்றியனார் பாடியது. உரை : மண்டு அமர் அட்ட மதனுடைய நோன்றாள் - மடுத் தெழுந்த போரின்கண் பகைவரைக்கொன்ற மிகுதி பொருந்திய வலிய முயற்சியையுடைய; வெண்குடை விளக்கும் - வெண் கொற்றக்குடையான் உலகத்தை நிழல் செய்து புகழால் விளக்கும்; விறல்கெழு வேந்தே - வென்றியையுடைய வேந்தே; பொங்கு நீர் உடுத்த இம் மலர்தலை உலகத்து - கிளர்ந்த நீரையுடைய கடலாற் சூழப்பட்ட இப்பரந்த இடத்தையுடைய உலகத்தின் கண்; நின்றலை வந்த இருவரை நினைப்பின் - நின்னிடத்துப் போர் செய்ய வந்த இருவரையும் கருதின்; தொன்றுறை துப்பின் நின் பகைஞரும் அல்லர் - பழையதாய்த் தங்கப்பட்ட வலியையுடைய நின் பகைவேந்தராகிய சேர பாண்டியருமல்லர்; அமர் வெங் காட்சியோடு - போரின்கண் விரும்பிய காட்சியுடனே; மாறு எதிர்பு எழுந்தவர் - நின்னொடு பகையாய் வேறு பட்டெழுந்த அவ்விருவர்தாம்; நினையுங்காலை - நினையுங்காலத்து; நீயும் அவர்க்கு அனையையல்லை - நீயும் அவர்க்கு அத்தன்மையையாகிய பகைவனல்லை; அடு மான் தோன்றல் - பகையைக் கொல்லும் யானையினையுடைய தலைவ; நீ பரந்து படு நல்லிசை எய்தி - நீ பரந்துபட்ட நல்ல புகழை இவ்வுலகத்துப் பொருந்தி; உயர்ந்தோர் உலகமெய்தி - தேவருலகத்தின்கட்போய்; பின்னும் ஒழிந்த தாயம் - பின்பு நீ ஒழித்த அரசாட்சியுரிமை; அவர்க்கு உரித்தன்று - அவர்க்கு உரித்து; அதனால் - ஆதலால்; அன்னது ஆதலும் அறிவோய் - அப்பெற்றித்தாதலும் அறிவோய்; நன்றும் இன்னும் கேண்மதி - பெரிதும் இன்னமும் கேட்பாயாக; இசை வெய்யோய் - புகழை விரும்புவோய்; நின்ற துப்பொடு - நிலைபெற்ற வலியொடு; நிற்குறித்து எழுந்த எண்ணில் காட்சி இளையோர் தோற்பின் - நின்னைக் கருதிப் போர்செய்தற்கு எழுந்திருந்த சூழ்ச்சியில்லாத அறிவையுடைய நின் புதல்வர் தோற்பின்; நின் பெருஞ்செல்வம் யார்க்கு எஞ்சுவை - நினது பெரிய செல்வத்தை அவர்க்கொழிய யாவர்க்குக் கொடுப்பை; அமர் வெஞ் செல்வ - போரைவிரும்பிய செல்வ; நீ அவர்க்கு உலையின் - நீ அவர்க்குத் தோற்பின்; இகழுநர் உவப்ப - நின்னை யிகழும் பகைவர் உவப்ப; பழி எஞ்சுவை - பழியை யுலகத்தே நிறுத்துவை; அதனால் - ஆகலான்; ஒழிகதில் நின் மறன் - ஒழிவதாக நின்னுடைய மறன்; வல்விரைந்து எழுமதி - கடிதின் விரைந்தெழுந்திருப்பாயாக; நின் உள்ளம் வாழ்க - நின்னுடைய உள்ளம் வாழ்வதாக; அழிந்தோர்க்கு ஏமமாகும் நின் தாள் நிழல் - அஞ்சினோர்க்கு அரணாகும் நினது அடிநிழல்; மயங்காது செய்தல் வேண்டுமால் நன்று - மயங்காமற் செய்தல் வேண்டும் நல்வினையை; வானோர் அரும் பெறல் உலகத்து ஆன்றவர் - விண்ணோரது பெறுதற் கரிய உலகத்தின்கண் அமைந்தவர்; விதும்புறு விருப்பொடு - விரைந்த விருப்பத்தோடு, விருந்து எதிர் கொளற்கு - விருந்தாக ஏற்றுக்கொள்ள; எ-று. மற்று: அசை. தில்; விழைவின்கண் வந்தது. வானோருல கென்றது ஒட்டன்றி ஒருபெயராய் நின்றது. வேந்தே, நின்மறன் ஒழிக; ஆன்றவர் விருந்தெதிர் கொளற்கு நன்று செய்தல் வேண்டும்; ஆதலால், அதற்கு விரைந்தெழுவாயாக; நின்னுள்ளம் வாழ்வதாக எனக் கூட்டி வினைமுடிவு செய்க. செல்வமும் பழியும் சினைவினைப்பாற்பட்டு முதல் வினை கொண்டன - எஞ்சுதல், இவர்க்குப்பின்னும் நிற்றல். தாணிழல் மயங்காதென்பதற்கு நினக்கு ஒரு தீங்கும் வாராம லென்றதாகக் கொள்க. இனி, “அதனால் அன்னதாதலு மறிவோய்” என்றதற்கு உயர்ந்ததோர் உலகமெய்துவது காரணத்தால் அத்தாயம் அவர்க்கு அப்படியேயுரித்து; அன்னதாதல் நீ யறிவையென முற்றாகவும், அழிந்தோர்க்கு ஏமமாகும் நின் தாணிழலென முற்றாக்கி மயங்காது தெளிந்துநின்று நன்று செய்தல் வேண்டுமென வுரைப்பாருமுளர். “மாவெங் காட்சி யோடு மாறெதிர்ந் தெழுந்தவர்” என்று பாடமோதுவாருமுளர். விளக்கம் : வெண்குடை நிழல் செய்யும் நீர்மைத்தாதலின், ஆனுருபைவிரித்து, விளக்குதற்குரிய புகழை வருவித்து, “வெண்கொற்றக் குடையான் உலகத்தை நிழல் செய்து புகழால் விளக்கும் வேந்தே” யென்றார். ஓரினமாய் ஒருகுடியில் தோன்றித் தெளிந்த சூழ்ச்சியில்லாமையால் பகைத்தெழுந்தமையால், புதல்வர்களை “மாறெதிர்பு எழுந்தவர்” என்று ஆசிரியர் கூறியதனால், உரைகாரர், அதற்கு, “நின்னொடு பகையாய் வேறுபட்டெழுந்த அவ்விருவர்” என்றுரைத்தார். புகழுக்கு இடம் இவ்வுலகமாதலால், “நல்லிசையெய்தி” என்றதற்கு, “நல்ல புகழை இவ்வுலகத்துப் பொருந்தி” யென்றார். எண்ணில் காட்சி யென்புழி எண் சூழ்ச்சி மேலும் காட்சி அறிவின் மேலும்நின்றன. அறிவுடைய ராயினும், சூழுந்திறன் உடையரல்லராதலின் “எண்ணில் காட்சி”, யென்றும், புதல்வ ரென்னாது இளையரென்றது, அஃதிலராதற்கேது அவரது இளமை யென்றும் கூறினாராம். வேந்தனை நோக்கி, “நீ தோற்பின்” எனத் தோல்வி கூறுதலின், அது கேட்டு அவன் மனம் வேறுபடாமைக்கு “அமர்வெஞ்செல்வ” என்றார். மற்றென்பது வினை மாற்றன்றென்பது விளங்க “மற்று அசை” என்றார். சோழனும் அவன் புதல்வர்களும் “பகைஞராய்” “மாறெதிர்பு எழுந்து” நிற்றலால், “நினைப்பின்” என்றும், “நினையுங்காலை” என்றும் கூறினார். வானோ ருலகென்புழி, ஓர் என்பதை அசையாக்கி, வானாகிய உலகென ஒட்டாக்காது, வானோரென ஒரு பெயராக்கி, வானோரது உலக மெனவுரைக்க வென்பார், “வானோருலகென்றது ஒட்டன்றி ஒரு பெயராய் நின்ற” தென்றார். செல்வமும் பழியும் எஞ்சுவனவாதலால் அவற்றிற் குரிய எஞ்சுதலாகிய வினையை, “எஞ்சுவை” எனச் சோழனுக்குரிய வினையாகக் கூறினமையின், அதற்கு அமைதி கூறுவார், செல்வமும் பழியும் அவற்றைச் செய்தோர்க்குச் சினையு முதலும்போல இயைபுறுதலால், “செல்வமும் பழியும் சினைவினைப் பாற்பட்டு முதல்வினை கொண்டன” என்றார். “மாவெங் காட்சியொடு மாறெதிர்ந் தெழுந்தவர் என்ற பாடத்துக்கு யானைப்படையால் விரும்பத்தக்க காட்சியோடு மாறுபட்டுப் போர்க்கு எழுந்தவர்கள்” என்று கூறுக. “யானையுடைய படை காண்டல் முன்னினிதே” யென்பவாகலின், “மாவெங்காட்சியொடு” என்றாரெனக் கொள்க. 214. கோப்பெருஞ் சோழன் மக்கள் செயலால் மானம் பொறாத கோப்பெருஞ்சோழன் துறவு பூண்டு வடக்கிருந்து உயிர்துறந்து புகழ்நிறுவக் கருதினான். வடக்கிருந்தலாவது, ஊர்ப்புறத்தே தனியிடங்கண்டு, அறமுரைக்கும் சான்றோர் புடைசூழப் புல்லைப்பரப்பி அதின்மீதிருந்து உண்ணா நோன்பு மேற் கொண்டு அறங்கூறும் தவம் செய்தலாகும். இத் தவம் செய்து உயிர் துறப்போர் வானோர் உலகம் புகுந்து இன்புறுவர். இதுவே பெருந்தவமாயின் வானுலகிற்கு மேலாகிய வீட்டின்கண் சென்று பிறவாநிலையினை யெய்துவர். கோப்பெருஞ் சோழன் வடக்கிருக்கத் தொடங்கியவுடன், அதுபற்றிப் பலரும் பலபடப் பேசலுற்றனர். வடக்கிருத்தலாகிய நல்வினையை நன்றெனக் கருதாதவரும் என்றும்பிறவா நிலையென்பது கிடையா தென்பவரும்இருந்தனர். இதனையறிந்த அறிவுமிக்கவனான கோப்பெருஞ்சோழன் “இத்தவத்தைச் செய்தற்குரிய வாய்ப் புண்டானபோது தெளிந்த அறிவில்லாதவர்களே, இதனைச் செய்யலாமோ செய்யாதொழியலாமோ என ஐயுற்று அலமருவர். யானை வேட்டைக்குச் செல்வோன் தவறாது வேட்டம் வாய்க்கப் பெறுவதும், சிறுபறவைகளை வேட்டையாட விழைந்து செல்வோன், அவற்றைப் பெறாது தப்பி வெறுங்கையுடனே திரும்புவதும் கண்கூடு. இதனால் உயர்ந்தது உள்ளுவோர் வெற்றியும், சிறியது கருதுவோர் தோல்வியும் பெறுவரென்பது துணிவாம். அதனால், உயர்ந்ததாகிய இத்தவத்தை மேற்கொண்டோர், தொய்யாவுலகாகிய துறக்கவுலக இன்பத்தைப் பெறுவர்; தவத்தின் பெருமைநோக்க அவ்வின்பம் சிறிதாயின், தொய்யாவுலக நுகர்ச்சி வேண்டாது பேரின்பவீட்டைப் பெறுவர். அவ்வீடெய்தினோர் மீளப் பிறவார். இனி மறுபிறப்பு இல்லையென்று கருதுவோர்க்கு இது தெரிந்த உண்மையாகும்; ஏனெனில், இத்தவம் செய்வோர், மாறிப் பிறவாராயினும், தம் புகழை நிறுவிப் புகழுடம்பு கொண்டு நிலைபெறுவர்” என எடுத்தோதும் கருத்தால் இப் பாட்டைப் பாடினான். சூழ இருந்தோர் இது கேட்டு மனந் தெளிவடைந்தனர். செய்குவங் கொல்லோ நல்வினை யெனவே ஐய மறா அர் கசடீண்டு காட்சி நீங்கா நெஞ்சத்துத் துணிவில் லோரே யானை வேட்டுவன் யானையும் பெறுமே 5 குறும்பூழ் வேட்டுவன் வறுங்கையும் வருமே அதனால், உயர்ந்த வேட்டத் துயர்ந்திசி னோர்க்குச் செய்வினை மருங்கி னெய்த லுண்டெனிற் றொய்யா வுலகத்து நுகர்ச்சியுங் கூடும் தொய்யா வுலகத்து நுகர்ச்சி யில்லெனின் 10 மாறிப் பிறப்பி னின்மையுங் கூடும் மாறிப் பிறவா ராயினு மிமயத்துக் கோடுயர்ந் தன்ன தம்மிசை நட்டுத் தீதில் யாக்கையொடு மாய்தறவத் தலையே. திணை : பொதுவியல். துறை : பொருண்மொழிக் காஞ்சி. அவன் வடக்கிருந்தான் சொற்றது. உரை : நல்வினை செய்குவங்கொல்லோ என - அறவினையைச் செய்வேமோ அல்லேமோ என்று கருதி; ஐயம் அறா அர் - ஐயப்பாடு நீங்கார்; கசடு ஈண்டு காட்சி நீங்கா நெஞ்சத்து - அழுக்குச் செறிந்த காட்சி நீங்காத உள்ளத்தினையுடைய; துணிவில்லோர் - தெளிவில்லாதோர்; யானை வேட்டுவன் யானையும் பெறும் - யானைவேட்டைக்குப் போவோன் யானையையும் எளிதாகப் பெறுவன்; குறும்பூழ் வேட்டுவன் வறுங்கையும் வரும் - குறும்பூழ் வேட்டைக்குப் போவோன் அது பெறாது வறிய கையினனாயும் வருவன்; அதனால் -; உயர்ந்த வேட்டத்து உயர்ந்திசினோர்க்கு - உயர்ந்த விருப்பத்தை யுடைய உயர்ந்தோர்க்கு; செய்வினை மருங்கின் - தாம் செய்யப்பட்ட நல்வினைக் கூற்றிலே; எய்தல் உண்டெனில் - அதனை யனுபவித்த லுண்டாமாயின்; தொய்யாவுலகத்து நுகர்ச்சியும் கூடும் - அவர்க்கு இருவினையும் செய்யப்படாத உம்பருலகத்தின்கண் நுகர்ச்சி யில்லையாயின்; மாறிப் பிறப்பின் இன்மையும் கூடும் - மாறிப் பிறத்தலிலே கூடும் பிறப்பின்கண் இன்மை எய்தவும் கூடும்; மாறிப் பிறவாராயினும் - மாறிப் பிறவாரென்று சொல்லுவா ருளராயின்; இமயத்துக் கோடு உயர்ந்தன்ன - இமயமலையின் சிகரம் ஓங்கினாற்போன்ற; தம் இசை நட்டு - தமது புகழை நிலைபெறுத்தி; தீதில் யாக்கை யொடு மாய்தல் தவத்தலை - வசையில்லாதவுடம்போடு கூடி நின்று இறத்தல் மிகத் தலையாயது, அதனால் எவ்வாற்றானும் நல்வினை செய்தல் அழகிது; எ-று. உயர்ந்திசினோர்க்கென்னும் நான்காவதன்றியும் உயர்ந்திசினோர் செய்வினை மருங்கின் எய்தலுண்டெனின், இவர்க்கு நுகர்ச்சியுங் கூடுமென்றுரைப்பினுமமையும். பிறவாராயினும் என்னும் உம்மை அசை நிலை; உம்மையின்றி யோதுவாருமுளர். காட்சியொடு நீங்கா நெஞ்சத்து என்பதூஉம் பாடம் விளக்கம் : அல்லேமோ என்பது எஞ்சிநின்றது. கசடு, அழுக்கு தெளிந்த நீரைத் துணிநீரென்றாற்போலத் தெளிவில்லதாரைத் “துணிவில்லா” ரென்றார்; “துணிநீர் மெல்லவல்” (மதுரை. 283) என்றும், “துணிநீரருவி” (ஐங். 223) என்று சான்றோர் வழங்குதல் காண்க. வேட்டம், விருப்பம். உயர்ந்தது விரும்பி முயல்வார் உயர்ந்து சிறப்பரென்பதுபற்றி, “உயர்ந்த வேட்டத் துயர்ந்திசி னோர்க்கு” என்றார். நல்வினைக் கூற்றின்பயன் இன்பமாதலின், அவ்வின்பத்தை, “அதனை” யென்று குறித்தார். தொய்தல் வினைக்கண் ஈடுபடுதல், தொழிலாகிய வினைக்குரியது இவ்வுலகமென்றும், வினையீடுபாடின்றி இன்ப நுகர்ச்சி யொன்றிற்கே யுரியது உம்பருலகென்றும் சான்றோர் கூறுவர். இது பற்றியே வடநூலார் இம்பருலகைக் கன்மபூமியென்றும், உம்பருலகைப் போகபூமியென்றும் வழங்குவர். மாறிப் பிறப்பு - உம்பருலக நுகர்ச்சி கழிந்தவழி மண்ணுலகில் மீளப்பிறக்கும் பிறப்பு - பிறப்பு தொழிற்பெயர். பிறப்பின் இன்மை பிறத்தற்கண் பிறத்தலுக் குரிய நுகர்ச்சியேது இல்லாமையால் பிறப்பில்லையாதல்; அஃதாவது வீடுபேறு உண்டாம். தொய்யாவுலகத்தில் நுகர்ச்சியில்லையாயின், அதற்கப்பாற் பட்டதாகிய வீடுபேறுண்டாம்; அதனைப் பண்டையோர் வானோர்க் குயர்ந்த வுலகம், என்றும் ஈண்டு வாராநெறி யென்றும் கூறுப. “மாறிப் பிறவாராயின்” என்பதனை “இமயத்துக் கோடுயர்ந்தன்ன தம்மிசை நட்டுத் தீதில் யாக்கையொடு மாய்தல்” என்பது தொடர்ந்து சிறப்பிப்பது கொண்டு, “மாறிப்பிறவா ரென்று சொல்லுவாருளராயின்.... தலையாயது” என்று உரைத்தார் அதனால் எவ்வாற்றானும் நல்வினையே செய்தல் அழகிது என்றது குறிப்பெச்சம். ஆகவே நல்வினை செய்தார் இம்மையிற் புகழும் மறுமையில் இன்பமும் வீடுபேறும் பெறுவர் என்பதாம் 215. கோப்பெருஞ் சோழன் கோப்பெருஞ்சோழன் வடக்கிருக்கையில் சான்றோர் பலர் அவனைச் சூழ இருந்தனர். வேறு பலரும் அவ்வப்போது வந்து பார்த்த வண்ணமிருந்தனர். இவ்வாறு நண்பர்களாகிய சான்றோர் பலரும் இருந்தாராயினும், சோழனது எண்ணம் பிசிராந்தையார் பால் ஒன்றியிருந்தது. அவ்வப்போது அவன் அவரை நினைந்து சான்றோர்பால் உரையாடினான். “சோழன் வடக்கிருக்கும் செய்தி. ஒருகால் பிசிராந்தையார்க்குத் தெரியாது போலும்; பிசிரென்னும் ஊர் பாண்டிநாட்டில் நெடுந்தொலைவில் உளது; அவர்க்கு இச்செய்தி சென்று சேர்தலும் எளிதன்று. செய்தி தெரிந்தாலும் அவர் தவறாது வருவார் என்பதும் ஐயப்படற்குரியது. சோழன் அவரை நினைந்து காட்சியார்வத்தால் கருத்தழிதல் நன்றன்று” என்று சான்றோர் தம்முட் பேசிக்கொண்டனர். இது கோப்பெருஞ் சோழன் செவிக்கெட்டியது. ஆந்தையாருடைய ஆன்றவிந்தடங்கிய அருமையும் அன்பும் அவர்க்குரைப்பானாய், “ஆந்தையார் பாண்டி நாட்டுப் பிசிர் என்னும் ஊரினரே; ஆயினும், அவர் என் உயிரை விரும்பும் உண்மை நண்பர். செல்வக்காலத்தே அவர் போந்து என்னைக் கண்டதிலர். காணா ராயினும் அல்லற்காலமாகிய இப்போது போந்து என்னைக் காணதொழியார்; காண்டற்கு விரைய வருவார்” என்ற கருத்தமைய இப்பாட்டைப் பாடினான். கவைக்கதிர் வரகி னவைப்புறு வாக்கல் தாதெரு மறுகிற் போதொடு பொதுளிய வேளை வெண்பூ வெண்டயிர்க் கொளீஇ ஆய்மக ளட்ட வம்புளி மிதவை 5 அவரை கொய்யுந ரார மாந்தும் தென்னம் பொருப்ப னன்னாட் டுள்ளும் பிசிரோ னென்பவென் னுயிரோம் புநனே செல்வக் காலை நிற்பினும் அல்லற் காலை நில்லலன் மன்னே. திணை : பாடாண்டிணை. துறை : இயன்மொழி. கோப்பெருஞ்சோழன் பிசிராந்தையார் வாரார் என்ற சான்றோர்க்கு அவர் வருவாரென்று சொல்லியது. உரை : கவைக்கதிர் வரகின் அவைப்புறு ஆக்கல் - கவர்ந்த கதிரினையுடைய வரகினது குற்றுதலுற்ற வடிக்கப்பட்ட சோற்றையும்; தாதெரு மறுகில் போதொடு பொதுளிய வேளை வெண்பூ - தாதாக உதிர்ந்த எருவையுடைய தெருவின் கண் போதொடு தழைத்த வேளையினது வெள்ளிய பூவை; வெண் தயிர்க்கொளீஇ - வெள்ளிய தயிரின்கட்பெய்து; ஆய்மகள் அட்ட அம்புளி மிதவை - இடைமகள் அடப்பட்ட அழகிய புளிங்கூழையும்; அவரை கொய்யுநர் ஆரமாந்தும் - அவரை கொய்வார் நிறையவுண்ணும், தென்னம் பொருப்பன் நன்னாட்டுள்ளும் - தென்றிசைக்கண்பொதியின் மலையை யுடைய பாண்டியனது நல்ல நாட்டினுள்ளும்; பிசிரோன் என்ப - சேய்த்தாகிய பிசிரென்னும் ஊரிடத்தானென்று சொல்லுவர்; என் உயிரோம்புநன் - என்னுயிரைப் பாதுகாப்போனை; செல்வக்காலை நிற்பினும் - அவன் எமக்குச்செல்வ முடைய காலத்து நிற்பினும்; அல்லற்காலை நில்லலன் - யாம் இன்னாமையுறுங் காலத்து ஆண்டு நில்லான்; எ- று. மன், அசைநிலை. விளக்கம் : அவைப்பு குற்றுதல். “இதைப்புன வரகின் அவைப்பு மாண் அரிசி” (அகம். 394) என்று பிறரும் கூறுதலால், வரகரிசிக்கு நன்கு குற்றுதல் மாண்பாதல் காண்க. மறுகென்றது ஆகுபெயரால் அதனையடுத்துள்ள சிறையிடத்தின் மேற்று. சிறையைச் “சிறகம்” எனவும் வழங்குவர். வேளைப்பூவை உப்பிட்டு வேகவைத்து வெள்ளிய தயிர் கலந்து நன்கு பிசைந்து மிளகுத்தூளிட்டுத் தாளிதம் செய்யப்பட்ட புளிங்கூழ் ஈண்டு “அம்புளி மிதவை” யெனப்பட்டது. மிக்க வுடலுழைப் பில்லாரும் நிறைய வுண்பரென்றற்கு “அவரை கொய்யுநர் ஆர மாந்தும்” என்றார். தென்னம் பொருப்பு, பொதியின் மலை. பிசிர் மதுரை நகரினின்றும் தொலைவில் இருப்பது தோன்ற “நாட்டினுள்ளும் சேய்த்தாகிய” என்று உரைத்தார். “என்னுயிர் ஓம்புநன்” என்று பிசிராந்தையாரைக் கூறினான், சோழன் இறந்த பின்பு தானும் அவன் பின்னே உயிர் துறக்கும் அவரது துணிவு நினைந்து; இதனையுட்கொண்டே, உரைகாரரும் “உயிர் ஓம்புநன்” என்றதற்கு “உயிரைப் பாதுகாப்போன்” என்று உரைத்தார். மன்னைச் சொற்குரிய ஏனைப் பொருள்களைக் கொள்ளாது அசைநிலைப் பொருளே கொள்க என்பாராய், “மன் அசைநிலை” யென்றார். “உயிரோம்புதற்குச் செல்வக் காலையினும்” அல்லற்காலமே ஏற்ற காலமாதலின், அக்காலமே நோக்கியிருக்கும் அவர் வாராதொழியா ரென்பான், “அல்லற்காலை நில்லலன்” என்றான். 216. கோப்பெருஞ் சோழன் “வேந்தே! பிசிராந்தையார் நின்னைக் கேள்விப்பட்டிருக் கின்றாரே யன்றி நேரில் கண்டதிலர்; பல யாண்டுகளாகப் பழகிய நண்பராயினும், நேரில் வருவது அரிது; நட்பு நெறியில் திரியாது ஒழுகுவது அரிது;” என்று சான்றோர், சோழன் ஆந்தையாரை நினைந்து மனங் கவலாவாறு கூறினர். அதுகேட்ட சோழன், “அறிஞர்களே!நீவிர் இவ்வாறு ஐயங்கொள்ளல் வேண்டா; நட்புத் திரிந்து என்னை இகழும் சிறுமை அவர்பால் கிடையாது; இனிமை நிறைந்த குணங்களையுடையர்; உயிரின் நீங்காது பிணிப்புற்ற நண்புடையர்; பொய்யாமை புகழ்தருவதாகையால், புகழைக் கெடுக்கும் பொய்ம்மையை விரும்புவது இலர்; தனது பெயரைச் சொல்லவேண்டு மிடத்து, என்னின் வேறன்மை விளங்க என் பெயரைத் தன் பெயராக “என் பெயர் கோப்பெருஞ் சோழன்” என்று சொல்லுவர்; இக்காலத்தே இப்பொழுது வாரா தொழியார்; அவர்க்கு ஓர் இடம் ஒழித்து வைப்பீராக” என்று கூறினான். அக்கூற்று இப்பாட்டேயாகும். கேட்டன் மாத்திரை யல்ல தியாவதும் காண்ட லில்லா தியாண்டுபல கழிய வழுவின்று பழகிய கிழமைய ராகினும் அரிதே தோன்ற லதற்பட வொழுகலென் 5 றையங் கொள்ளன்மி னாரறிவாளீர் இகழ்வில னினிய னியாத்த நண்பினன் புகழ்கெட வரூஉம் பொய்வேண் டலனே தன்பெயர் கிளக்குங் காலை யென்பெயர் பேதைச் சோழ னென்னுஞ் சிறந்த 10 காதற் கிழமையு முடைய னதன்றலை இன்னதோர் காலை நில்லலன் இன்னே வருகுவ னொழிக்கவவற் கிடமே. திணை : பாடாண்டிணை. துறை : இயன்மொழி. அவன் வடக்கிருந்தான் பிசிராந்தையார்க்கு இடனொழிக்க வென்றது. உரை : கேட்டல் மாத்திரையல்லது - நின்னையவன் கேட்டிருக்கும் அளவல்லது; யாவதும் காண்டல் இல்லாது - சிறிது பொழுதும் காண்டல் கூடாது; யாண்டு பல கழிய - பல யாண்டு செல்ல; வழுவின்று பழகிய கிழமையராகினும் - தவறின்றாக மருவிப் போந்த உரிமையையுடையோராயினும்; அரிது - அரிதே; தோன்றல் - தலைவ; அதற்பட ஒழுகல் - அவ்வழுவாத கூற்றிலேபட ஒழுகுதல்; என்று ஐயங்கொள்ளன்மின் - என்று கருதி ஐயப்படா தொழிமின்; ஆர் அறிவாளீர் - நிறைந்த அறிவினையுடையீர்; இகழ்விலன் - அவன் என்னை என்றும் இகழ்ச்சியிலனாய; இனியன் - இனிய குணங்களையுடையன்; யாத்த நண்பினன் - பிணித்த நட்பினையுடையன்; புகழ்கெட வரூஉம் பொய் வேண்டலன் - புகழ் அழிய உரூஉம் பொய்ம்மையை விரும்பான்; தன் பெயர் கிளக்குங்காலை - தனது பெயரைப் பிறர்க்குச் சொல்லும்பொழுது; என் பெயர் பேதைச் சோழன் என்னும் - என்னுடைய பெயர் பேதைமையையுடைய சோழ னென்று எனது பெயரைத் தனக்குப் பெயராகச் சொல்லும்; சிறந்த காதற்கிழமையும் உடையன் - மிக்க அன்புபட்ட உரிமையுமுடையன்; அதன்றலை - அதற்குமேலே; இன்னதோர் காலை நில்லலன் - இப்படி யான் துயரமுறுங்காலத்து ஆண்டு நில்லான்; இன்னே வருகுவன் - இப்பொழுதே வருவன்; அவற்கு இடம் ஒழிக்க - அவனுக்கு இடமொழிக்க; எ-று. “அதற்பட” என்பதற்கு அவ் விறந்து பாட்டிலே பட என்றும், “இகழ்விலன்” என்பதற்கு இகழப்படுவன குணமிலனென்று முரைப்பினு மமையும். பேதைச் சோழனென்றது தான் தன்னை இழித்துக் கூறியது விளக்கம் : “கேட்டல் மாத்திரை யல்லது யாவதும், காண்டல் இல்லாது யாண்டு பலகழிய வழுவின்று பழகிய கிழமைய ராகினும், அரிதே தோன்றல், அதற்பட வொழுகல்” என்பது சான்றோர் கூற்று. அவர் கூற்றுக்கு மாறாகப் பிசிராந்தையார் தவறாது வருவரென்னும் துணிவு பற்றி அவர் கூற்றைக் கொண்டெடுத்து மொழிந்தான். “வழுவின்று பழகிய கிழமை” ஈண்டு அது என்பதனால் சுட்டப்படுகின்றமையின், அதற்கு, “அவ்வழுவாத கூற்று” என விளக்கினார். துணிவின் கண் நின்ற தன் அறிவை அச் சான்றோரது ஐயம் பேதுறுவித்து நோய் செய்யுமாகலின், “ஐயங் கொள்ளன்மின்” என்றும், ஆர்ந்த அறிவின் பயன் பிறரறிவைப் பேதுறுவித்தல் கூடாதென்பது தோன்ற, “ஆரறிவாளீர்” என்றும் கூறினான். இகழ்விலன் என்ற வினைக்குறிப்பு எக்காலும் என்ற காலத்தைக் குறிப்பாய்க் கொண்டிருத்தலின், அதற்கு “என்றும் இகழ்ச்சியிலனாய்” என்று உரைத்தார். பொய்யாமை யன்ன புகழில்லை (குறள் - 296) என்பர் திருவள்ளுவர். தன் பெயரை ஆந்தை யென்னாது சோழன் என்பவன், நெஞ்சாலும் தான் வேறு சோழன் என்ற பெயர் வேறு என வேறுபாட்டுணர்வின்றி உயிரொன்றிய உணர்வின னென்பதுபடப் “பேதைச் சோழன் என்னும்” என்றான். இஃது உயிரொன்றிய அன்புடைமையின் பயனாக உண்டாகும் செயலாதல் தோன்ற, “சிறந்த காதற் கிழமையும் உடையன்” என்றான். இகழ்வில னென்றதற்கு இகழப்படுவனவாகிய குணமிலன் என்பது பொருளாயின், சான்றோரை ஐயுற வேண்டா என்றதற்கு ஏதுக் கூறியவாறாம். 217. பிசிராந்தையார் கோப்பெருஞ்சோழன்பால் பெரு நட்புக்கொண்டு சூழ இருந்த சான்றோர்களுள் பொத்தியார் என்பவர் ஒருவர். சோழனுக்கும் பிசிராந்தையாருக்கும் உண்டாகியிருந்த நட்பின் திறமும், அச் சோழனது ஆட்சி நலமும் மனப்பண்பும், அவன் வடக்கிருக்க நேர்ந்த திறமும் பிறவும், நேரில் அறிந்து அவன்பால் பிரியா அன்புகொண்டிருந்தார். கோப்பெருஞ் சோழன் வடக்கிருக்கச் சென்றபோது பொத்தியாருடைய மனைவியார் கருப்பமுற்றிருந்தார். ஆயினும், பொத்தியாரும் அவனுடன் சென்று ஏனைச் சான்றோர் போல வடக்கிருக்க விரும்பினார். சோழனோ அதனையறிந்து “நின் மனைவி கருவுயிர்த்த பின்பு வடக்கிருக்கலாம்”என்று அவரைத் தடுத்துவிட்டான். பொத்தியார் அதனை யுடன்பட்டு வடக்கிருத்தலை அப்போது மேற்கொண்டிலர். ஆயினும், வடக்கிருந்த அவன் உயிரோடிருக்குங்காறும் அடிக்கடி சென்று கண்டுகொண்டு வந்தார். சின்னாட்களில் கோப்பெருஞ்சோழன் உண்ணா நோன்பால் உயிர் துறந்தான். அவன் பிரிவால் பெரிதும் கையற்று மனங்கவன்ற சான்றோர் ஒருவாறு தேறி அவற்கு நடுகல் நிறுவிச் சிறப்புச் செய்தனர். அவன் நடுகல்லான சில நாட்களில் பிசிராந்தையார் வந்து சேர்ந்தார். அவன் அவனது நடுகல்லையும் சூழ இருந்த சான்றோரையும் கண்டு பெரு வருத்த முற்றார். கோப்பெருஞ்சோழன் சொன்ன குண நலமுற்றும் பிசிராந்தையார் பால் இருக்கக்கண்ட சான்றோர்க்கு மிக்க வியப்பும் விம்மிதமும் உண்டாயின. பொத்தியார்க்கு உண்டான வியப்பு அவருள்ளத்தைக் கவர்ந்து ஒரு பாட்டாய் வெளிப்பட்டது. அப் பாட்டு இது. நினைக்குங் காலை மருட்கை யுடைத்தே எனைப்பெருஞ் சிறப்பினோ டீங்கிது துணிதல் அதனினு மருட்கை யுடைத்தே பிறனாட்டுத் தோற்றஞ் சான்ற சான்றோன் போற்றி 5 இசைமர பாக நட்புக் கந்தாக இனையதோர் காலை யீங்கு வருதல் வருவ னென்ற கோனது பெருமையும் அதுபழு தின்றி வந்தவ னறிவும் வியத்தொறும் வியத்தொறும் வியப்பிறந் தன்றே 10 அதனால், தன்கோ லியங்காத் தேயத் துறையும் சான்றோ னெஞ்சுறப் பெற்ற தொன்றிசை அன்னோனை யிழந்தவிவ் வுலகம் என்னா வதுகொ லளியது தானே. திணை : பொதுவியல். துறை : கையறுநிலை. அவன் வடக்கிருந்தானுழைச் சென்ற பிசிராந்தையாரைக்கண்டு பொத்தியார் பாடியது. உரை : நினைக்குங்காலை மருட்கையுடைத்து - கருதுங் காலத்து வியக்குந்தன்மையையுடைத்து; எனைப்பெருஞ் சிறப்பினோடு ஈங்கு இது துணிதல் - எத்துணையும் பெரிய தலைமையுடனே கூடியும் இவன் சிறப்புக்களைக் கைவிட்டுவரத் துணிதல்; அதனினும் மருட்கையுடைத்து - இவன் அவ்வாறு துணிந்தது அதனினும் வியக்குந் தன்மையையுடைத்து; பிறன் நாட்டுத் தோற்றம் சான்ற சான்றோன் - போற்றி - பாதுகாத்து; இசை மரபாக - புகழ்மேம்பாடாக; நட்புக் கந்தாக - நட்பே பற்றுக் கோடாக; இனையதோர் காலை - இத்தன்மைத்தாகிய ஓர் இன்னாக்காலத்து; ஈங்கு வருதல் - இவ்விடத்து வருதல்; வருவன் என்ற கோனது பெருமையும் - இவ்வாறு வருவா னென்று துணிந்து சொல்லிய வேந்தனது மிகுதியும்; அது - பழுதின்றி வந்தவன் அறிவும் - அவன் சொல்லிய சொற் பழுதின்றாக வந்தவனது அறிவும்; வியத்தொறும் வியத்தொறும் வியப்பிறந்தன்று - வியக்குந்தோறும் வியக்குந்தொறும் வியப்புக் கை மிக்கது; அதனால் - ஆதலால்; தன் கோல் இயங்காத் தேயத்து உறையும் - தன் செங்கோல் செல்லாத் தேயத் துறையும்; சான்றோன் நெஞ்சுறப்பெற்ற - அமைந்தோனது நெஞ்சைத் தன்னிடத்தே யுரித்தாகப்பெற்ற; தொன்றிசை அன்னோனை இழந்த இவ்வுலகம் - பழைய புகழையுடைய அப்பெற்றிப்பட்ட பெரியோனையிழந்த இத் தேயம்; என்னாவது கொல் - என்ன இடும்பை யுறுங் கொல்லோ; அளியது - இது தான் இரங்கத்தக்கது; எ-று. இது வென்பது அரசினைக் கைவிட்டு இறந்துபடத் துணிதலென்றுமாம் விளக்கம் : “புணர்ச்சி பழகுதல் வேண்டா வுணர்ச்சிதான். நட்பாம் கிழமை தரும்” (குறள். 785) என்பதன் உரையில் “உணர்ச்சி தான் நட்பாங் கிழமை தரும்” என்றதை விளக்கத் தொடங்கிய பரிமேலழகர், “கோப்பெருஞ் சோழனுக்கும் பிசிராந்தையாருக்கும்போல உணர்ச்சி யொப்பின், அதுவே உடனுயிர் நீங்கும் உரிமைத்தாய நட்பினைப் பயக்கும்” என்று வியந்து கூறியுள்ளார். இனி, நச்சினார்க்கினியார், “தோழி தாயே பார்ப்பான்” (கற்பு 52) என்ற சூத்திரம் “யாத்த சிறப்பின்” என்றதனால் துறவு நோக்குகிறது என்று கூறி, “இதற்குக் கோப்பெருஞ்சோழன் துறந்துழிப் பிசிராந்தையாரும் பொத்தியாரும் போல்வார் துறந் தாரென்று கூறும். புறச்செய்யுட்கள் உதாரணம் என்றவா” றென்று கூறுகின்றார். “வியத்தொறும் வியத்தொறும் வியப்பிறந்தன்று” என்றது, “கோனது பெருமையும்” என்பதனோடும், “வந்தவனதறிவும்” என்பதனோடும் தனித் தனியே சென்று இயையும். மரபு - மேம்பாடு. கந்து - பற்றுக் கோடு. இன்றியென்பது இன்றாகவெனத் திரிக்கப் பட்டது. தன்கோல் இயங்காத் தேயத் துறையும் இரவலர் புரவலர் ஆகியோர் நெஞ்சுறப் “பெறுதலினும் சான்றோர் நெஞ்சுறப்பெறுதல் அரிதாகலின், அதனைப் பாராட்டினார். ” 218. பிசிராந்தையார் கோப்பெருஞ் சோழனும் பிசிராந்தையாரும் தம்மில் ஒருவரை யொருவர் கண்ணிற் கண்டு பழகாதே, கேள்வி மாத்திரையே உணர்ச்சி யொத்த நண்பினராய் ஒழுகிய திறமும், கோப்பெருஞ் சோழன் கூறிய சொல் பொய்யாகாதவாறு பிசிராந்தையார் போந்த திறமும் கண்டு வியந்த சான்றோருள் கண்ணகனார் என்பவர் ஒருவர். இவரும் கோப்பெருஞ் சோழனைச் சூழ இருந்த சான்றோர். பிசிராந்தையார் வந்தபோது அவரை வரவேற்றுச் சொல்லாடி யின்புற்றவர். இக் கண்ணகனார் உள்ளது உள்ளவாறு பாடும் உயர்ந்த புலமைநலம் உடையவர். தலைமக்களிருவர் ஒருவனும் ஒருத்தியுமாய் மனைவாழ்க்கை நடத்துமிடத்து, தலைமகன் வினைவயிற் பிரிந்திருந்து மீண்டுவந்து தன் மனைக் கண் தலைவியொடு கூடி இன்புற்றிருக்கையில் மறுவலும் பிரியவேண்டிய கடமையுடையனானான். தலைமகட்கு அவனைப் பிரிந்திருக்கும் துயர் மிகுந்து வருத்திற்று. வேறு செய்வகை அவட்குத் தெரியவில்லை. தனது காதற்காம மிகுதியை எடுத் துரைப்பது ஆண்மகற்கமையுமே யன்றிப் பெண்மகட்குப் பெண்மை தடுக்குமாதலின் கூடாது. எனினும், அவ்வரம்பு கடந்து எடுத்துரைப்பது தக்கதென எண்ணுகின்றாள்; உரையாவிடின், அவன் பிரிந்தால் தனது உயிரும் தன்னுடம்பி னின்றும் நீங்கிவிடும் என உணர்கின்றாள். அலமரல் பெரிதாகின்றது. தன் தோழியுடன் இதனை யுசாவுகின்றாள். இதனைக் கண்ணகனார், “பிரிந்தோர் வந்துநப் புணரப் புணர்ந்தோர், பிரிதல் சூழ்தலின் அரியதும் உண்டோ, என்றுநாம் கூறிக் காமம் செப்புதும், செப்பாது விடினே உயிரொடும் வந்தன்று, அம்ம வாழி தோழி, யாதெனில் தவிர்க்குவம் காதலர் செலவே” (நற். 79) என்று பாடியுள்ளார். இவ்வாறு பட்டாங்குப் பாடும் பாவன்மை படைத்த கண்ணகனார், பிசிராந்தையார் போந்து கோப்பெருஞ் சோழனைக் காணப்பெறாது அவன் வடக்கிருந்து நடுகல்லானது கண்டு, தாமும் வடக்கிருந்து உயிர் துறந்தது கண்டார்; வியப்பு கைம்மிகுந்தது, கோப் பெருஞ்சோழனும் பிசிராந்தையாரும் வேறுவேறு நாட்டிற் றோன்றிச் சிறந்த சான்றோர்களாயினும், உலகிற்குச் சான்றாண்மையை நிலைபெறக் காட்டுதற்கு ஒருவழிப்படுவரென்ற சிறப்பை எடுத்தோத விரும்பினார். அவ்விருப்பம் இப் பாட்டினைப் பயந்தது. பொன்னுந் துகிரு முத்து மன்னிய மாமலை பயந்த காமரு மணியும் இடைபடச் சேய வாயினுந் தொடைபுணர்ந் தருவிலை நன்கல மமைக்குங் காலை 5 ஒருவழித் தோன்றியாங் கென்றுஞ் சான்றோர் சான்றோர் பால ராப சாலார் சாலார் பாலரா குபவே. திணை : பொதுவியல். துறை : கையறுநிலை. பிசிராந்தையார் வடக் கிருந்தாரைக் கண்ட கண்ணகனார் பாடியது. உரை : பொன்னும் துகிரும் முத்தும் - பொன்னும் பவளமும் முத்தும்; மன்னிய மாமலை பயந்த காமரு மணியும் - நிலைபெற்ற பெரிய மலை தரப்பட்ட விரும்பத்தக்க மணியும்; இடைபடச் சேய ஆயினும் - ஒன்றற்கொன்று இடை நிலம்படச் சேய்நிலத்தின வாயினும்; தொடை புணர்ந்து அருவிலை நன்கலம் அமைக்குங் காலை - கோவை பொருந்தி அரிய விலையினையுடைய நல்ல அணிகலன்களைச் செய்யுங்காலத்து; ஒருவழித்தோன்றி யாங்கு - ஓரிடத்துத் தோன்றினாற்போல; என்றும் - எந்நாளும்; சான்றோர் சான்றோர் பாலராப - அமைந்தோர் அமைந்தோர் பக்கத்தராவர்; சாலார் சாலார் பாலராகுப - அமைதியில்லார் அமைதியில்லார் பக்கத்தராவார்; எ-று. சான்றோர் குழுவினைப் புகழுங் கருத்தாகலின், அவர்க் கேற்ற உவமம் கூறினார்; சாலாதார்க்கும் ஏற்ற உவமம் வருவித்துக் கொள்க. தொடை புணர்ந்து தோன்றி யாங்கென இயையும். விளக்கம் : மணியை மாமலை பயந்த மணியென்றமையின், ஆறு பயந்த பொன்னும் எனவும் கடல் பயந்த துகிரும் முத்து மெனவும் கூறிக் கொள்ளல்வேண்டும். கோவையும் தொடுக்கப் படுவது பற்றித் தொடை யெனப்பட்டது. புணர்ந்தென்னும் வினையெச்சம் தோன்றியாங் கென்னும் வினைகொண்டது. “சான்றோர் சான்றோர் பால ராப” எனவே, சாலார் எப்பாலராகுப வென்னும் ஐயமறுத்தற்குச் “சாலார் சாலார் பால ராகுப” வென்றார். 219. கோப்பெருஞ் சோழன் பண்டைநாளில் பேரூர்களிலுள்ள பெருஞ் சதுக்கங்களில் பூதங்கட்குக் கோயில் எடுத்து அதற்கு வழிபாடு செய்தல் மரபு. காவிரிப்பூம்பட்டினம், மதுரை, உறையூர் முதலிய நகரங்களில் சதுக்கப் பூதங்கட்குக் கோயில் இருந்ததாகப் பண்டை நூல்கள் கூறுகின்றன. கருவூரும் பண்டை நாளைப் பெருநகரமாதலின் அந் நகர்க்கண் இருந்த பெருஞ்சதுக்கத்துப் பூதத்தின் பெயர் கொண்ட சான்றோர் ஒருவர் உண்டு. அவரைக் கருவூர்ப் பெருஞ் சதுக்கத்துப் பூதநாதனார் என்பர். இப்பெயர் நானூறாண்டுகட்கு முன்பும் மக்களிடையே வழங்கியிருக்கிற தென்பது கல்வெட்டுக்களால் தெரிகிறது. அவர் உறையூரிலிருந்து ஆட்சிபுரிந்த கோப்பெருஞ் சோழன்பால் பேரன்புடையவர். சோழன் வடக்கிருந்து உண்ணா நோன்பு கொண்டு உயிர் துறக்கக் கருதி அதனை மேற்கொண்ட திறத்தைக் கேள்வியுற்றார். உண்ணா நோன்பால் உடம்பு வாடிப் பேசும் ஆற்றல் இன்றி உயிரிழக்கும் நிலையில் கோப்பெருஞ் சோழன் இருக்குங்கால் பூதநாதனார் அவண் போந்தார்; அங்கே சோழனுடன் சான்றோர் பலர் வடக்கிருத்தலையுங் கண்டார். தாமும் முற்படப் போந்து அவனொடு வடக்கிருக்க இயலாது போனது குறித்துப் பூத நாதனார்க்கு வருத்த முண்டாயிற்று. சோழன் பேச்சு மூச்சின்றி இருக்கும் நிலை அவருள்ளத்தைப் பெரிதும் வாட்டிற்று. கையறவு மிகுந்தது. ஆற்று நடுவேயுள்ள தீவில் மர நிழலில் இருந்து உண்ணா நோன்பால் உடம்பை வாட்டி வடக்கிருத்தலை மேற்கொண்டிருக்கும் வேந்தே! நின் கருத்துப்படியே சான்றோர் பலர் வடக்கிருப்ப அவருள் ஒருவனாய் யானும் முற்பட வாராமையால் என்னோடு புலந்து வாய்பேசாது இருக்கின்றனை போலும்” எனக் கல்லுங்கனியும் கருத்தமைந்த இப் பாட்டைப் பாடினார். உள்ளாற்றுக் கவலைப் புள்ளி நீழல் முழூஉ வள்ளூர முணக்கு மள்ள புலவுதி மாதோ நீயே பலரா லத்தைநின் குறியிருந் தோரே. திணையும் துறையு மவை. அவன் வடக்கிருந்தானைக் கருவூர்ப் பெருஞ் சதுக்கத்துப் பூதநாதனார் பாடியது. உரை : உள்ளாற்றுக் கவலை - யாற்றிடைக் குறையுள்; புள்ளி நீழல் - புள்ளிப்பட்ட மரநிழற்கண் இருந்து; முழூஉ வள்ளூரம் உணக்கும் மள்ள - உடம்பாதி முழுத்தசையை வாட்டும் வீர; நின் குறியிருந்தோர் - நின் கருத்திற்கேற்ப நின்னோடு வடக் கிருந்தார்; பலரால் - பலராதலால்; புலவுதி நீ - அவரோடு சொல்லி வெறுத்தி நீ; எ-று. யான் பிற்பட வந்தற்கு என்னைப் புலந்து என்னோடு சொல்லாடா திருந்தாய் நீ என்றும், இவனுடனே வடக் கிருந்தோர்களும் எதிரேற்றுக் கொள்ளாமை நோக்கி நின் குறிப்பிற்கேற்பப் புலந்தார் பலரென்றும் உரைப்பினு மமையும். “உள்ளாற்றுக் கவலை” யென்பதற்கு வழிக்குள்ளாகிய நாற்றிசையுங் கூடிய இடமென்றுமாம்; கவர்ந்த வழிக்குள் என்று உரைப்பாரு முளர். அரசு துறந்து வடக்கிருந்து உயிர் நீத்த உள்ள மிகுதியான் “மள்ள” என்றார். விளக்கம் : கோப்பெருஞ் சோழனுக்குரிய உறையூர் காவிரிக் கரைக் கண்ணதாகையால், ஆற்றிடைக் குறை யென்றது, காவிரியாற்றின் இடைப்பட்ட நிலப்பகுதியாயிற்று. கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்த இடம் திருவரங்கத்துக்கு மேற்கிலாதல் கிழக்கிலாதல் உளதாகும். யாற்றிடைக் குறை, துருத்தியெனவும்படும்; ஆற்றின் நடுவேயுள்ள நிலத்தை உள்ளாற்றுக் கவலையென்றார்; பிறரும் “செல்லாற்றுக் கவலை” (குறுந். 258) என்பர். கவலை, கவர்ந்தவழி, வள்ளூரம், முழுத்தசை. குறி, குறிப்பு; ஈண்டுக் கருத்துணர்த்திநின்றது. மள்ளன். உள்ள மிகுதியுடையவன். வள்ளுரத்தை வாட்டுதலாவது உண்ணா நோன்பு மேற்கொண்டு மழை வெயில் பனி காற்று முதலியவற்றிற்குச் சிறிதும் நெஞ்சடையாது நிலைபெயராதிருந்து உயிர் நீப்பது. உயிர் நீங்கிய உடம்புகண்டு கூறியது இப்பாட்டு. 220. கோப்பெருஞ் சோழன் கோப்பெருஞ் சோழன் வடக்கிருந்த காலையில் சான்றோராகிய பொத்தியார் தாமும் வடக்கிருக்கச் சென்றார். பொத்தியார் கோப் பொருஞ்சோழனுக்குச் சிறந்த நண்பராவார். கோப்பெருஞ் சோழன் பெயரொடு பொத்தியார் பெயரும் இணைந்தே நாடு முழுவதும் பரவியிருந்தது. பிசிராந்தையார் கோப்பெருஞ் சோழனை நினைக்கும் போதெல்லாம் பொத்தியாரையும் உடன்நினைந்து “பொத்தில் நண்பிற் பொத்தி” (புறம். 212) என்று பாராட்டுவர் சோழன் பிரிவாற்றாது பொத்தியாரும் வடக்கிருக்கக் கருதியது கண்ட கோப்பெருஞ்சோழன் “கருவுற்றிருக்கும் நின் மனைவி கருவுயிர்த்தபின்பு வருக” என அன்பாற் பணிக்கவே, அவர் திரும்பி உறையூர்க்கு வந்தார். கோப்பெருஞ்சோழனில்லாத உறையூர் அவர்க்குப் பாழ்பட்டுத் தோன்றிற்று. அவன் இருந்த அரண்மனை பொலிவிழந்து அவருக்கு அழுகையை யுண்டு பண்ணிற்று. பலயாண்டுகளாகப் பெருஞ் சோறளித்துப் பேணிப் பாதுகாத்து வந்த யானை இறந்ததாக, அஃது இருந்த இடத்தைக் காணும் அன்புடைய பாகன் அழுது புலம்புவதுபோல, கோப் பெருஞ்சோழன் இல்லாத இந்த உறையூர் மன்றத்தைக் கண்டு யான் கலங்கிக் கையற்றுப் புலம்புகின்றேன்” என்ற கருத்தமைந்த இப்பாட்டைப் பாடி வருந்தினார். பெருஞ்சோறு பயந்து பல்யாண்டு புரந்த பெருங்களி றிழந்த பைதற் பாகன் அதுசேர்ந் தல்கிய வழுங்க லாலை வெளில்பா ழாகக் கண்டுகலுழ்ந் தாங்குக் 5 கலங்கினே னல்லனோ யானே பொலந்தார்த் தேர்வண் கிள்ளி போகிய பேரிசை மூதூர் மன்றங் கண்டே. திணை : பொதுவியல். துறை : கையறுநிலை. அவன் வடக்கிருந்தா னுழைச் சென்று மீண்டுவந்து உறையூர் கண்ட பொத்தியார் அழுது பாடியது. உரை : பெருஞ்சோறு பயந்து - பெரிய சோற்றையுண்டாக்கி; பல் யாண்டு புரந்த - பல்யாண்டு பாதுகாத்த; பெருங்களிறு இழந்த பைதல்பாகன் - பெரிய களிற்றை யிழந்த வருத்தத்தினையுடைய பாகன்; அது சேர்ந்து அல்கிய அழுங்கல் ஆலை - அவ்வியானை சேர்ந்து தங்கிய இரக்கத்தையுடைய கூடத்தின் கண்; வெளில் பாழாகக் கண்டு கலுழ்ந் தாங்கு - கம்பம் வறிதே நிற்கப் பார்த்துக் கலங்கின தன்மைபோல; யான் கலங்கினேன்; அல்லேனோ - யான் இறந்துபடுதலின்றிக் கலங்கினேனல்லனோ; பொலம் தார்த் தேர் வண்கிள்ளி போகிய - பொன்னான் இயன்ற மாலையையுடைய தேர் வண்மையைச் செய்யும் கிள்ளி போகப் பட்ட; பேரிசை மூதூர் மன்றங் கண்டு - பெரிய புகழினை யுடைய பழைய உறையூரின் மன்றத்தைப் பார்த்து; எ-று. மூதூர் மன்றங்கண்டு கலங்கினேனல்லனோ எனக் கூட்டுக. மன்றம் ஈண்டுச் செண்டுவெளி. அழுங்கல், முன்புள்ள ஆரவாரமு மாம். இறந்தவென்று சொல்லுதல் இன்னாமையால் “போகிய” என்றார். விளக்கம் : பண்டைநாளில் களிறுகட்கென வேந்தரும் செல்வரும் நெல்விளை வயல்களை விட்டு, அவற்றில் நெல்விளைவித்து அந் நெல்லைக் களிறுகளின் உணவுக்கும் பயன்படுத்துவது மரபு. அவ்வயல்கட்கு யானை மானியம் என்று பெயர் கூறுவர். இவ்வாறு பல ஆண்டுகளாக நெல்லை விளைத்துக் களிற்றைப் பேணிவந்த பாகன் என்பது விளங்க, “பெருஞ்சோறு பயந்து பல்யாண்டு புரந்த பாகன்” என்றார். “காய் நெல்லறுத்துக் கவளங் கொளினே, மாநிறை வில்லதும் பன்னாட்காகும், நூறுசெறு வாயினுந் தமித்துப்புக் குணினே, வாய்புகுவதனினும் கால்பெரிது கெடுக்கும்” (புறம். 184) என வருதல் காண்க. பைதல், துன்பம். பெருங்களிறு தங்கிய ஆலையைக் காணுந்தோறும் பாகற்கு வருத்தம் மிகுதலின், “அழுங்கல் ஆலை” யென்றார். அழுங்கல் என்பதற்கு ஆரவாரமென்பதும் பொருளாதலின், அழுங்கல் ஆலை யென்றது, பெருங்களிறு இறப்பதற்கு முன்பெல்லாம் ஆரவாரத்தோடு கூடியிருந்த ஆலையென்று உரைத்தலும் பொருந்தும் என்று உரைக் கின்றார். கிள்ளி சோழர்கட்குரிய பெயர்களுள் ஒன்று. கோப்பெருஞ் சோழனுடைய இயற்பெயருமாம். இறந்தானெனல் சீரிதன்மையின், “போகிய” என்றார். இன்னாமை; ஈண்டு அமங்கலம். 221. கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்த கோப்பெருஞ்சோழன் உயிர்துறந்ததும் சான்றோர், அவன் தன் குடிச்சிறப்பும் மானமும் நல்லிசையும் கெடாமை குறித்து வடக்கிருந்த பெருமையும் பீடும் கருதி அவற்கு நடுகல் நிறுவிச் சிறப்புச் செய்தனர். அந்நடுகல்லில் அவன் பெயரும் பீடும் எழுதி மயிற்பீலி சூட்டி விழாவயர்ந்தனர். அவன் உயிர் நண்பரான பொத்தியார் அவன் பிரிவாற்றாது அவன் நடுகல்லைக் கண்டு பரவினார். அவர் நெஞ்சில் அவனுடைய புகழும் அன்பும் செங்கோன்மையும் பேரறிவும் பிறவும் தோன்றி அவன் புகழுடம் பின் முழுவடிவும் புலப்படச் செய்தன. அவர்க்கு ஆற்றாமை மீதூரக் கண்ணீர் பெருகிற்று. அவனுயிரைக் கொண்ட கூற்றுவனை நினைந்தார். நெஞ்சில் வெகுளியும் பிறந்தது. சூழ நின்ற சான்றோரை நோக்கினர். தமிழ் கூறும் நல்லுலகம் பெருந்துயர் கொள்ளச் சோழவேந்தன் புகழ்மாலை சூடி நடுகல்லாய் விளங்குகின்றான். அவனை இவ்வுலகினின்றும் மறைவித்த கூற்றுவனை நாம் ஒருங்கு கூடி வையலாம் வம்மின் என்று அறைகூவியழைத்தார். அந்த அழைப்பு அவர் நாவினின்றும் இந்த இனிய அழகிய பாட்டாய் வெளிவந்தது. பாடுநர்க் கீத்த பல்புக ழன்னே ஆடுநர்க் கீத்த பேரன் பினனே அறவோர் புகழ்ந்த வாய்கோ லன்னே திறவோர் புகழ்ந்த திண்ணன் பினனே 5 மகளிர் சாயன் மைந்தர்க்கு மைந்து துகளறு கேள்வி யுயர்ந்தோர் புக்கில் அனைய னென்னா தத்தக் கோனை நினையாக் கூற்ற மின்னுயி ருய்த்தன்று பைத லொக்கற் றழீஇ யதனை 10 வைகம் வம்மோ வாய் மொழிப் புலவீர் நனந்தலை யுலக மரந்தை தூங்கக் கெடுவி னல்லிசை சூடி நடுக லாயினன் புரவல னெனவே. திணை : பொதுவியல். துறை : கையறுநிலை. அவன் நடுகற்கண்டு அவர் பாடியது. உரை : பாடுநர்க்கு ஈத்த பல் புகழன் - பாடுநர்க்குக் கொடுத்த பல புகழினையுமுடையன்; ஆடுநர்க்கு ஈத்த பேரன்பினன் - கூத்தர்க்குக் கொடுக்கப்பட்ட மிக்க அன்பினையுமுடையன்; அறவோர் புகழ்ந்த ஆய் கோலன் - அறத்திறமுடையோர் புகழப்பட்ட நீதிநூற்குத் தக ஆராய்ந்து நடத்திய செங்கோலினையுடையன்; திறவோர் புகழ்ந்த திண்ணன் பினன் - சான்றோர் புகழப்பட்ட திண்ணிய நட்பினை யுடையன்; மகளிர் சாயன் - மகளிரிடத்து மென்மையுடையன்; மைந்தர்க்கு மைந்து - வலியோரிடத்து மிக்க வலியை யுடையன்; துகளறு கேள்வி உயர்ந்தோர் புக்கில் - குற்றமற்ற கேள்வியையுடைய அந்தணர்க்குப் புகலிடம்; அனையன் என்னாது - அத்தன்மையையுடையோ னென்று கருதாது; அத் தக்கோனை நினையாக் கூற்றம் - அத் தகுதியையுடையயோனை அவ்வாறு கருதாத கூற்றம்; இன் னுயிர் உய்த்தன்று - இனிய உயிர்கொடு போயிற்று; பைதல் ஒக்கல் தழீஇ - அதனால் பையாப்புற்ற நம்முடைய சுற்றத்தை அணைத்துக்கொண்டு; அதனை வைகம் வம்மோ - அக் கூற்றத்தை வைவேமாக வாரீர்; வாய்மொழிப் புலவீர் - மெய் யுரையை யுடைய புலவீர்; நனந்தலை யுலகம் அரந்தை தூங்க - நல்ல இடத்தினையுடைய உலகம் துன்பமாக; கெடுவில் நல்லிசை சூடி - கேடில்லாத நல்ல புகழ்ச்சிமாலையைச் சூடி; நடுகல் ஆயினன் புரவலன் எனவே - நடப்பட்ட கல்லாயினான் எம்மைப் பாதுகாப்போன் எனச் சொல்லி; எ-று. ஈத்த புகழ், ஈதலால் உளதாகிய புகழ் எனவும், ஈத்த அன்பு ஈத்தற்கு ஏதுவாகிய அன்பெனவும் கொள்க. வாய்மொழிப் புலவீர், அத்தக்கோனைக்கூற்றம் இன்னுயிருய்த்தது; அதனால் புரவலன் கல்லாயினானென ஒக்கல் தழீஇ அதனை வைகம் வம்மோ எனக் கூட்டி வினை முடிவு செய்க. சாயல், மைந்து, புக்கில் என்பன ஆகுபெயர் . புக்கில்; வினைத் தொகை. கேடென்பது கெடுவெனக் குறைந்துநின்றது. விளக்கம் : அறவோர் புகழ்தற்கமைந்தது அறநூன்முறை யாதலின், ஆராய்ந்து நடத்தும் முறைமைக்குக் கருவியாகிய நீதி நூல் அவாய் நிலையால் வருவித்து நீதி நூற்குத் தக என்பது கூறப்பட்டது. கோல், உவமை யாகுபெயராய் அரசுமுறை குறித்துநின்றது. முறையாவது, “ஓர்ந்துகண்ணோடா திறைபுரிந் தியார்மாட்டுந், தேர்ந்து செய்வஃதே முறை” (குறள். 541) என்பது காண்க. சான்றோரென்றது மறவர்களுட் சிறந்தவர்களை “சான்றோர் மெய்ம்மறை” (பதிற். 14) என்று பிறரும் கூறுவர். மகளிர் மெல்லிய இயல்பினராதலின் அவர்பால் மென்மையும், வலியுடைய மைந்தர்க்கு வலிமையும் கொண்டொழுகினானென்பார், “மகளிர் சாயல் மைந்தர்க்கு மைந்து” என்றார். “வணங்கிய சாயல் வணங்கா வாண்மை” (பதிற். 48) என்று பிறரும் கூறுதல் காண்க. புக்கில் என்பது புகும் இல் என விரிவது பற்றி, அதனை வினைத்தொகை யென்றார். தக்காரது தகுதி பற்றியே உலகம் உளதாகின்றதாகலின், கூற்றம் அதனை நினைப்பது கடனாகவும், அக்கடனை நினையா தொழிந்ததென்பார், “நினையாக் கூற்றம்” என்றும், பொய்கூறி வைதார்க்கு வசை பயன் தாராமையின், “வாய்மொழிப் புலவீர்” என்றும் கூறினார். கூற்றின் நினையாச் செயல் நனந்தலையுலகிற்குத் துன்பம் தருவதாயிற்றென்றற்கு, “உலகம் அரந்தை தூங்க” என்றார். கெடுவென்பதனை முதனிலைத் தொழிற்பெயர் என்பர். 222. கோப்பெருஞ்சோழன் கோப்பெருஞ்சோழன் வடக்கிருக்கச் சென்றபோது உயிர்த் தோழரான பொத்தியாரும் வடக்கிருக்க ஒருப்பட்டனர். அப்போது அவர் மனைவியார் கருவுற்றிருந்ததை யறிந்திருந்த சோழன், “நினக்கு மகன் பிறந்தபின் வருக” என்று பணித்தான். பொத்தியாரும், சான்றாண்மை மிக்க சான்றோராகலின், அதற்கு உடன்பட்டு மனைவாழ்வில் இருந்து வந்தார். ஆயினும் கோப்பெருஞ்சோழன் இறந்த போதும் நடுகல் நிறுவிச் சிறப்புச் செய்தபோதும் உடனிருந்து எல்லாப் பணிகளையும் சிறப்புறச் செய்தவரும் பொத்தியாரேயாவர். சின்னாட்களுக்குப்பின் பொத்தியார்க்கு மகனொருவன் பிறந்தான். “எப்பொழுது தன் மனைவி கருவுயிர்ப்பது? எப்பொழுது தாம் கோப்பெருஞ் சோழனுடன் வடக்கிருப்பது?” என்று எண்ண மிட்டுக் கொண்டிருந்த பொத்தியார்க்கு மனக்கவலை நீங்குவ தாயிற்று. வடக்கிருக்கச் செல்வோர் செய்யும் ஏற்பாடுகளைச் செவ்வையாகச் செய்துவிட்டு ஒரு நன்னாளில் பொத்தியார் கோப்பெருஞ்சோழன் நடுகல்லாயிருக்கும் இடத்திற்குச் சென்றார். அவன்பால் அவர்க்கிருந்த அன்பும் நட்பும் பெருக்கெடுத்தன. அந்நடுகல் சோழனது மெய்யுருவை அவர் மனக் கண்ணிற்குக் காட்டிற்று. அவர் மனங்குழைந்து “வேந்தே! யான் வடக்கிருக்க வேண்டும்; அதற்கு ஏற்ற இடம் யாது? கூறுக” என்று வேண்டினார். அவ்வேண்டுகோளே இப்பாட்டு. அழலவிர் வயங்கிழைப் பொலிந்த மேனி நிழலினும் போகாநின் வெய்யோள் பயந்த புகழ்சால் புதல்வன் பிறந்தபின் வாவென என்னிவ ணொழித்த வன்பி லாள 5 எண்ணா திருக்குவை யல்லை என்னிடம் யாதுமற் றிசைவெய் யோயே. திணை : பொதுவியல். துறை : கையறுநிலை. அவனைத் தன்மகன் பிறந்த பின் பெயர்த்துச் சென்று பொத்தியார் எனக்கு இடந்தா வென்று சொற்றது. உரை : அழல் அவிர் வயங்கிழைப் பொலிந்த மேனி - தீயால் விளங்கிய ஒளியையுடைய ஆபரணத்தாற் சிறந்த வடிவினை யுடையளாய்; நிழலினும் போகா நின் வெய்யோள் பயந்த - நின் நிழலினும் ஒருபொழுதும் நீங்காத நீ விரும்பத்தக்க மனைவி பெறப்பட்ட; புகழ்சால் புதல்வன் பிறந்தபின் வாவென - புகழமைந்த பிள்ளையானவன் பிறந்தபின் வா எனச் சொல்லி; என் இவண் ஒழித்த அன்பிலாள - என்னை இவ்விடத்தினின்றும் போக்கிய என்னோடு உறவில்லாதவனே; எண்ணாது இருக்குவை யல்லை - உன்னோடு என்னிடை நட்பைக் கருதாது இருப்பை யல்லை; இசை வெய்யோய் - புகழை விரும்புவோய்; என்னிடம் யாது - நீ எனக்குக் குறித்த இடம் யாது சொல்வாயாக; எ-று. மற்று : அசை. அழல்போலப் பாடஞ்செய்யும் மேனியெனினு மமையும். விளக்கம் : தீயாற் சுடச்சுடப் பொன் விளக்கமுறுதலின், பொன்னாற் செய்யப் பட்ட இழைகள் “அழலவிர் வயங்கிழை” யெனப்பட்டன. அழலை மேனிக்கு இயைபுபடுத்து, அழலவிர்மேனி யென்பதற்கு “அழல் போலப் பாடஞ்செய்யும் மேனி” எனினுமமையும்” என்று உரைகாரர் கூறினர். பாடஞ்செய்தல், ஒக்குமாறு மஞ்சள் முதலியனவணிந்து செம்மையுறுத்தல். நீக்கமின்றியுறைதற்கு நிழல் உவமை; “செல்வுழிச் செல்வுழி மெய்நிழல்போல, ஆடுவழி யாடுவழி யகலேன் மன்னே” (அகம். 49) என்று பிறரும் கூறுதல் காண்க. அறிவறிந்த மகனைப் பெற்றோர் இம்மையில் நற்புகழ் பெறுதலின் “புகழ்சால் புதல்வன்” என்றார்; “இம்மை யுலகத் திசையொடும் விளங்கி மறுமை யுலகமும் மறுவின் றெய்துப..சிறுவர்ப் பயந்த செம்மலோர்” (அகம் 66) என்று சான்றோர் கூறுவது காண்க. ஒழித்தது பற்றி “அன்பிலாள” என்றார்; அன்புமிகவுடையனென்பது கருத்தாதலின், “என்னிடம் யாது” என்றார். 223. கோப்பெருஞ் சோழன் மேற்கூறியவாறு வடக்கிருக்க விரும்பித் தனக்குரிய இடம் குறிக்குமாறு வேண்டிய பொத்தியார் மனக்கண்ணில் கோப்பெருஞ் சோழன் தோன்றித் தான் வடக்கிருந்த இடத்தருகே இடம் காட்டினார். அதனைத் தெளிந்துணர்ந்த பொத்தியார்க்கு வியப்புப் பெரிதாயிற்று; சோழன்பால் உண்டாகிய பேரன்பும் மேன்மேலும் மிகுந்தது; அவனது நட்பின் பெருமாண்பு விளங்கித் தோன்றிற்று. ஆகவே அவர்க்கு வடக்கிருப்பதில் உள்ளம் உறைத்துநின்றது. குறித்த இடத்தில் இருந்து வடக்கிருக்கும் நற்றவத்தை மேற் கொண்டார். சோழன் நட்புரிமையால் இடங்குறித்த பேரன்பு நெஞ்சின்கண் மிக்கிருந்தமையின், அதனை இப்பாட்டால் வெளிப்படுத்துகின்றார். பலர்க்குநிழ லாகி யுலகமீக் கூறித் தலைப்போ கன்மையிற் சிறுவழி மடங்கி நிலைபெறு நடுக லாகியக் கண்ணும் இடங்கொடுத் தளிப்ப மன்ற வுடம்போ 5 டின்னுயிர் விரும்புங் கிழமைத் தொன்னட் புடையார் தம்முழைச் செலினே. திணை : பொதுவியல். துறை : கையறுநிலை. கல்லாகியும் இடங்கொடுத்த கோப்பெருஞ்சோழனை வடக்கிருந்த பொத்தியார் பாடியது. உரை : பலர்க்கு நிழலாகி - பலர்க்கும் அருளுடைமை யான் நிழலையொத்து; உலகம் மீக்கூறி - உலகத்தார் மிகுத்துச் சொல்ல; தலைப்போகன்மையின் - உலகத்தையாளுந் தன்மை முடியச் செலுத்துதற்கு மறுமையை நினைத்தால் முடிவு போகாமையின்; சிறுவழி மடங்கி - வடக்கிருத்தற்கு வரைந்த சிறிய இடத்தின்கண் இருந்து; நிலைபெறு நடுகலாகியக் கண்ணும் - உயிர் நீத்தலின்நிலைபெற நடப்பட்ட கல்லான விடத்தும்; இடம் கொடுத்தளிப்ப - மன்ற - இடங்கொடுத் தளிப்பர் நிச்சயமாக; உடம்போடு இன்னுயிர்விரும்பும் கிழமை - உடம்போடு இனிய உயிர் விரும்பு மாறுபோல விரும்பும் உரிமையையுடைய; தொன்னட்புடையார் தம்முழைச் செலின் - பழையதாகிய நட்பையுடையோர் தம்மிடத்தே செல்லின்; எ-று. மீக்கூறி யென்பது மீக்கூற வெனத் திரிக்கப்பட்டது; ஆணை கூறி யென்றுமாம். தொன்னட்புடையோர் தம்முழைச்செலின் இடங்கொடுத்தளிப்ப வெனக் கூட்டி வினைமுடிவு செய்க. அவன் நட்பினை வியந்து கூறியது. விளக்கம் : மீக்கூறி யென்பது செய்தெனெச்சமாய் இயைபுறாமையான், “மீக்கூற வெனத் திரிக்கப்பட்ட” தென்றார். உலகாளுந் தன்மையை முடிவுபோகச் செலுத்தமாட்டாமைக்கு இடையில் தோன்றும் மறுமை யுணர்வு ஏதுவா மென்றற்கு அதனை வருவித்தார். ஆகவே, கோப்பெருஞ் சோழன், துறவுமேற்கோடற்கேற்ற செவ்வி யெய்து முன்பே அதனை மேற்கொண்டான் என்பதாம். தனது ஒளி, பரந்த உலகெங்கும் விளங்க இருந்த வேந்தன் “உள்ளாற்றுக் கவலைப்புள்ளி நீழற்கண்” ஒடுங்கியிருந்தமைபற்றி, “சிறுவழி மடங்கி” யென்றார். உயிர் கொடுத்துப் புகழ் கொண்ட சான்றோரது புகழ் உலகில் என்றும் நிலை பெறும்பொருட்டே அவர் பெயரும் பீடு மெழுதிய கற்கள் பண்டை நாளில் நடப்பட்டன என்பது இனிது விளங்க, “நிலைபெறு நடுகல்” என்றார். தமிழ் நாட்டில் இவ்வழக்கம் இரண்டு மூன்று நூற்றாண்டு கட்குமுன் வரையில் இருந்துள தென்பதைக் கல்வெட்டுக்கள் கூறுகின்றன. சிறந்த நட்புக்கு உடம்பும் உயிரும் இயைந்துநிற்கும் இயைபு உவமமாதல் இயல்பு. “யாக்கைக் குயிரியைந் தன்ன நட்பு” (அகம். 339) என்றும், “உடம்போடுயிரிடை யென்ன மற்றன்ன மடந்தையொடெம்மிடை நட்பு” (குறள். 1122) என்றும் வருதல் காண்க. “இடங்கொடுத்தளிப்பமன்ற,” என்றது, “செத்துங் கொடுத்தான் சீதக்காதி” என்ற பிற்கால வழக்கை நினைவுகூர்விப்பது காண்க. 224. சோழன் கரிகாற்பெருவளத்தான் சோழவேந்தருள் கரிகாற் பெருவளத்தான் மிக்க சிறப்புடையவன். அவன் காலத்தே உறையூரும் காவிரிப்பூம் பட்டினமும் சோழநாட்டின் அரசியல் சிறப்புடைய நகரங்களாக விளங்கின. சோழ நாட்டின் புகழ் அக்காலத்தே மிக உயர்ந்த நிலையை யெய்தியிருந்தது. இடைக்காலத் தெலுங்கச் சோழர் களும் தங்கள் குடிவரவு கூறுமிடத்துத் தங்களைக் கரிகாலன்வழி வந்தோர் என்றே கூறிக்கொள்கின்றனர். கரிகாலன் வாழ்க்கையைப் பற்றிய குறிப்புக்கள் பல பண்டைத் தமிழ் நூல்களிற் காணப்படு கின்றன. போர் பல வுடற்றிய பேராண்மையும், இரப்பார்க் கீத்துப் பெற்ற இறவாப் புகழும், வேதியர்கள் விருப்பத்திற் கியைந்து வேள்விபல முடித்த வீறுடைமையும், பிறவும் கரிகாலனுடைய புகழ்க் கூறுகள் பலவற்றுட் சிறப்புடையவாகும். இவன் நெடுங் காலம் அரசு புரிந்து உயிர் நீத்தகாலை இவன் பிரிவாற்றாது வருந்திய சான்றோர்களுள் கருங்குளவாதனார் ஒருவர். அவர் கரிகாலன் பெரும்பிறிதுற்றது கண்டு ஆற்றாது கையற்றுப் பாடிய பாட்டு இப் பாட்டு. இப் பாட்டின் கண் அவர் கரிகாலன் புகழ்க்கூறுகள் சிலவற்றை யெடுத்தோதி, “இத்தகைய அறிவுடைய வேந்தனை இழந்த உலகம் இரங்கத்தக்கது. பெருவறங் கூர்ந்த காலத்தில் இடையர்கள், தம் நிரைகட்கு இரையாதல் வேண்டிப் பூத்துத் தழைத்துச் செறிந்திருந்த வேங்கை மரத்தைக் கூரிய வாள்கொண்டு கழித்தவழி, அம்மரம் பொலி விழந்து நிற்பது போலக் கரிகாலன் இறந்தபின் அவனுடைய உரிமை மகளிர் தம் இழைகளைக் களைந்து பொலிவிழந்து வருந்தா நின்றனர்” என இரங்கிக் கூறுவது மிக்க உருக்கமாக இருப்பது நினைவுகூரத்தக்கது. அருப்பம் பேணா தமர்கடந் ததூஉம் துணைபுண ராயமொடு தசும்புடன் றொலைச்சி இரும்பா ணொக்கற் கடும்பு புரந்ததூஉம் அறமறக் கண்ட நெறிமா ணவையத்து 5 முறைநற் கறியுநர் முன்னுறப் புகழ்ந்த தூவியற் கொள்கைத் துகளறு மகளிரொடு பருதி யுருவிற் பல்படைப் புரிசை எருவை நுகர்ச்சி யூப நெடுந்தூண் வேத வேள்வித் தொழின்முடித் ததூஉம் 10 அறிந்தோன் மன்ற வறிவுடை யாளன் இறந்தோன் றானே யளித்திவ் வுலகம் அருவி மாறி யஞ்சுவரக் கடுகிப் பெருவறங் கூர்ந்த வேனிற் காலைப் பசித்த வாயத்துப் பயனிரை தருமார் 15 பூவாட் கோவலர் பூவுட னுதிரக் கொய்துகட் டழித்த வேங்கையின் மெல்லியன் மகளிரு மிழைகளைந் தனரே. திணை : பொதுவியல். துறை : கையறுநிலை. சோழன் கரிகாற்பெரு வளத்தானைக் கருங்குளவாதனார் பாடியது. உரை : அருப்பம் பேணாது அமர் கடந்ததூஉம் - அரிய அரண் களைப் பாதுகாவாது போரைச் செய்தழித்ததுவும்; துணை புணராயமொடு - துணையாய்க் கூடிய இனத்துடனேயுங் கூட; தசும்புடன் தொலைச்சி - மதுக்குடங்களைச் சேர நுகர்ந்து தொலைத்து; இரும்பாண் ஒக்கல் கடும்பு புரந்ததூஉம் - பெரிய பாண் சுற்றமாகிய சுற்றத்தைப் பாதுகாத்ததுவும்; அறம் அறக்கண்ட நெறிமாண் அவையத்து - அறத்தைத் தெளிய வுணர்ந்த ஒழுக்கம் மாட்சிமைப்பட்ட அந்தணரது அவைக் களத்தின்கண்; முறை நற்கு அறியுநர் முன்னுற - வேள்விக்குரிய முறைமையை நன்றாக அறியும் சடங்கவிகள் அம் முறைமையை முன்னின்று காட்ட; புகழ்ந்த - பலரானும் புகழப்பட்ட; தூ இயல் கொள்கைத் துகளறு மகளிரொடு - தூய இயல்பை யுடைத் தாகிய கற்பொழுக்கமாகிய கொள்கையுடைய குற்றம் தீர்ந்த குல மகளிரொடு; பருதியுருவின் பல்படைப் புரிசை - வட்ட மாகிய வடிவினை யுடைத்தாகிய பல படையாகச் செய்யப் பட்ட மதிலாற் சூழப்பட்ட வேள்விச் சாலையுள்; எருவை நுகர்ச்சி யூபநெடுந்தூண் - பருந்து விழுங்குவதாகச் செய்யப் பட்ட விடத்து நாட்டிய யூபமாகிய நெடிய கம்பத்து; வேத வேள்வித் தொழில் முடிந்ததூஉம் - வேதத்தாற் சொல்லப் பட்ட வேள்வியினைச் செய்து முடித்ததுவுமாகிய; மன்ற அறிந்தோன் - இவற்றானாய் பயனை நிச்சயமாக அறிந்த அறிவினையுடையோன்; அறிவுடையாளன்தான் இறந்தோன் - அவன் தான் துஞ்சினன்; இவ்வுலகம் அளித்து - ஆதலால் இனி இவ்வுலகம் இரங்கத்தக்கது; அருவி மாறி அஞ்சுவரக் கடுகி - அருவிநீர் மறுத்து உலகத்தா ரஞ்சும் பரிசு வெம்மை யுற்று; பெருவறங் கூர்ந்த வேனிற் காலை - பெரிய வற்கடமிக்க வேனிற் காலத்து; பசித்த ஆயத்துப் பயன் நிரை தருமார் - பசித்த ஆயமாகிய பயன்படும் ஆனிரையைப் பாதுகாத்தலைச் செய்வாராக; பூவாள் கோவலர் பூவுடன் உதிரக் கொய்து - கூர்மை பொருந்திய கொடுவாளாற் கோவலரானவர்கள் பூக்களுடனே யுதிரக் கொம்புகளைக் கழித்து; கட்டழித்த வேங்கையின் - அதன் தழைச் செறிவையழித்த வேங்கையினை யொப்ப; மெல்லியல் மகளிரும் இழை களைந்தனர் - மெல்லிய இயல்பினையுடைய உரிமை மகளிரும் அருங்கலவணி முதலாகிய அணிகளை யொழித்தார்; எ-று. முறை நற்கு அறியுநர் முன்னுறவேள்வித் தொழில் முடித்ததூஉமென இயையும். எருவை யென்றது, பருந்தாகச் செய்யப்பட்ட வடிவினை. அறிவுடையாளன் இறந்தான்; மகளிரும் இழை களைந்தனர்; இவனை இழந்த உலகம் அளித்தெனக் கூட்டி வினைமுடிவு செய்க. எருவை நுவற்சி யென்று பாடமோதுவாரு முளர். ஆயத்துப் பயனிரை என்பதற்கு ஆயத்திற்குப் பயனாகிய இரை யெனினு மமையும். விளக்கம் : கருங்குளவாதனார் பெயர் கருங்குழலாதனார் என்று அச்சுப்படியிற் காணப்படுகிறது. அது பொருந்தாது. கருங்குளம் என்னும் ஊரினரான ஆதனார் என்பது கருங்குளவாதனா ரென்பதன் பொருள். இக் கருங்குளம் பாண்டிநாட்டில் இப்போது கோட்டைக் கருங்குளமென வழங்குகிறது. இடைக்காலத்தே, இது “கருங்குள வளநாட்டுக் கரிகால சோழ நல்லூரான கருங்குளம்” (Annual Report on Epigraphy, Madras No. 269 of 1928) எனப்பட்டது. இதனால் இவ்வூர், கரிகாற் சோழனால் ஆதனார்க்குத் தன் பெயரால் தரப்பட்ட தென்பதும் தெளிவாம். இவ்வூரில் பாண்டியன் இராசசிங்கன் காலத்தில் இராசசிம்மேச்சுரம் என்னும் சிவன் கோயில் கட்டப்பட்டுளது. இவ்வூர் பின்பு சீகண்ட நல்லூ ரெனவும் பெயர் பெற்றது. (A.R.No. 277 of 1928) இவ்வூர்க் கோயிலுக்குத் திருவாங்கூர் வேந்தரும் திருப்பணி (A.R.No. 287 of 1928) செய்துள்ளனர். இதனால் சேரர் குடிக்கும் இவ் வூர்க்கும் தொடர் புண்மை துணியப்படும். சடங்கவிகள் ஆறங்கங்களையும் உணர்ந்த வர்கள். இவருள் நேர்நின்று செய்வோ ரொழியச் செயல் முறையைக் காட்டுவோரை உபதிருட்டாக்கள் எனவும், பருந்து விழுங்குவதாகச் செய்யப்படுவதைக் கருடசயனமெனவும் கூறுவர். சடங்கவிக் குறிச்சி யென்றோர் ஊரும் பாண்டியநாட்டில் உண்டு (A.R. 453 of 1930) அமர் கடத்தல், கடும்பு புரத்தல், வேள்வித் தொழின் முடித்தல் என்ற இவற்றால் ஆகும் இம்மை மறுமைப் பயன்களை நன்கறிந்தவன் கரிகாலன் என்பர், “அறிந்தோன் மன்ற அறிவுடையாளன்” என்றார். வேங்கைப்பூ மகளிரணியும் பொற்றாலிபோல் இருத்தலின், அப்பூவுதிர்ந்த வேங்கை இழை துறந்த மகளிர்க்கு ஏற்ற உவம மாயிற்று. “முறைநற்கறியுநர் முன்னுறப் புகழ்ந்த” என்றதற்கு உரைகாரர் கூறும் உரையினும், “முறைவழங்கும் சான்றோர் தன்முன் வீற்றிருக்கவும் தன் இளமை தோன்றாவாறு நரை முடித்து முதியோன் கோலம் பூண்டு முறை வழங்கிய கரிகாலன் புகழப் பட்ட திறத்தை ஏற்றி யுரைகூறுவது சீரிது. 225. சோழன் நலங்கிள்ளி சோழன் நலங்கிள்ளி உறையூரில் இருந்து ஆட்சிபுரிந்து வருகையில், உறுபகை ஒடுக்கி உலகோம்புந் துறையில் மேம்பட்டு விளங்கினான். ஏனைவேந்தர் பலரும் இவனுக்கு அஞ்சியே வாழ்ந்தனர். ஒவ்வொரு வேந்தரிடத்தும் வெற்றி குறித்தூதும் வலம்புரிச் சங்கு இருந்ததெனினும், அதனை முழக்கின் சோழன் நலங்கிள்ளி செவிக் கெட்டும்; அது கேட்பின் அவன் பொறாது போந்து நம் வலியை யழிப்பனென அஞ்சி அதனைத் தம் மனையின் ஒரு புடையே கட்டிவைத்திருந்தனர். வேந்தர் மனை களில் பள்ளி யெழுச்சிக் காலத்தில் அவ்வலம்புரி முழக்கப்படின், அதுகேட்டு, நலங்கிள்ளியை நினைந்து என் னெஞ்சு வருந்துவது வழக்கம். மேலும் நலங்கிள்ளியின் படைமிக்க பெருமையுடையது. அவனது படை புறப்படுங்கால் முன்னே செல்லும் தூசிப் படையிலுள்ளார் பனையின் நுங்கினைத் தின்னுங் காலமாயின், இடைப்படையிலுள்ளார் அப்பனையிருக்கும் இடம் சேரும் போது பனை நுங்கு முற்றிக் காய்த்துக் கனிந்துவிடும்; அவர்கள் அதனைத் தின்னக்கூடிய காலமாகும்; படையின் கடையிற் செல்வோர் அவ்விடத்தை யடையும்போது, பனங்கனியும் போய்ப் பிசிரொடு கூடிய பனங்கிழங்கு பெற்றுச் சுட்டுத் தின்னும் காலமாகும். இத்துணைப் பெரும் படையை வைத்தாளும் பேராற்றல் படைத்தவன் சோழன் நலங்கிள்ளி. இவன் வலிமுற்றும் இப்போது புறங்காட்டிடத்ததாயிற்றே என அவன் இறந்துபட்ட போது, சோழநாட்டு ஊர்களுள் காவிரிக்கரைக் கண்ணதாகிய ஆலத்தூரில் வாழ்ந்த சான்றோர், பிரிவாற்றாது இப் பாட்டைப் பாடி இதன் கண் மேற்கூறிய கருத்தெல்லாம் தொகுத்துரைத்துக் கையற்று இரங்கினார்; இச் சான்றோர் ஆலந்தூர்கிழார் எனப் படுவர். இவர் சோழன் குள முற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனைப் பல பாட்டுக்களாற் பாடிச் சிறப்பித்துள்ளனர். தலையோர் நுங்கின் றீஞ்சேறு மிசைய இடையோர் பழத்தின் பைங்கனி மாந்தக் கடையோர், விடுவாய்ப் பிசிரொடு சுடுகிழங்கு நுகர நிலமலர் வையத்து வலமுறை வளைஇ 5 வேந்துபீ டழித்த வேந்துவேற் றானையொ டாற்ற லென்பதன் றோற்றங் கேளினிக் கள்ளி போகிய களரியம் பறந்தலை முள்ளுடை வியன்காட் டதுவே நன்றும் சேட்சென்னி நலங்கிள்ளி கேட்குவன் கொல்லென 10 இன்னிசைப் பறையொடு வென்றி நுவலத் தூக்கணங் குரீஇத் தூங்குகூ டேய்ப்ப ஒருசிறைக் கொளீஇய திரிவாய் வலம்புரி ஞாலங் காவலர் கடைத்தலைக் காலைத் தோன்றினு நோகோ யானே. திணை : பொதுவியல். துறை : கையறுநிலை. சோழன் நலங்கிள்ளியை ஆலத்தூர் கிழார் பாடியது. உரை : தலையோர் - முன்செல்லும் தூசிப்படையோர்; நுங்கின் தீஞ் சேறு மிசைய - பனையின்கண் உளதாகிய நுங்கினது இனிய செறிவை அயில; இடையோர் - இடைச் செல்வோர்; பழத்தின் பைங்கினி மாந்த - பழத்தினது செவ்விக்கனியை நுகர; கடையோர் - பின் செல்வோர்; விடுவாய் பிசிரொடு சுடு கிழங்கு நுகர - நீங்கிய வாயையுடைய பிசிருடனே சுடப்பட்ட கிழங்கினை நுகர; நிலம் மலர் வையத்து வலமுறை வளைஇ - இப்படி யொழுங்குடைத்தாகி இடமகன்ற உலகத்து வலமுறை யாகச் சூழ்ந்து; வேந்து பீடழித்த ஏந்து வேல் தானையோடு - மன்னரை வலிகெடுத்த மேம்பட்ட வேலையுடைய சேனையுடனே கூடிய; ஆற்றல் என்பதன் தோற்றம் - வலியென்று சொல்லப் பட்டதன் விளைவை; இனி கேள் - இனிக் கேட்பாயாக; கள்ளி போகிய களரியம் பறந்தலை - கள்ளி யோங்கிய களர் நிலமாகிய பாழ்பட்ட விடத்து; முள்ளுடை வியன் காட்டது - முள்ளுடைத் தாகிய பெரிய புறங்காட்டின் கண்ணதாயிற்று; நன்று பெரிதும்; சேட்சென்னி நலங்கிள்ளி -; கேட்குவன் கொல்லென - கேட்பான் கொல்லோ என அஞ்சி; இன்னிசைப் பறையொடு வென்றி நுவல - இனிய ஓசையையுடைய முரசுடனே வெற்றியைச் சொல்லாநிற்க; தூக்கணங் குரீஇ தூங்குகூடு ஏய்ப்ப - முன்பு தூக்கணங் குருவியினது தூங்கப்பட்ட; வலம்புரி திரிவாய் - வலத்திலேபுரிந்த திரிந்த வாயையுடைய சங்கம்; ஞாலங் காவலர் கடைத்தலை - இப்பொழுது உலகங்காக்கும் அரசரது வாயிலிடத்தே; காலைத் தோன்றினும் - பள்ளியெழுச்சிக் காலத்தே தோன்றினும்; யான் நோகு - யான் அதனைக்கேட்டு இறந்து படாது நோமளவினே னாயினேன்; எ-று. முன்பு நலங்கிள்ளி சேட்சென்னி கேட்குவன் கொல்லென ஒரு சிறைக் கொளீஇய வலம்புரி இன்று வென்றி நுவலா நிற்க, பறையொடு காலைத் தோன்றினும் யான் நோவேன் எனக் கூட்டி வினைமுடிவு செய்க. கேள் இனி யென்றது நெஞ்சினை. “வென்றிநுவலா” வென்றும், “காலை தோன்றின” என்றும் பாட மோது வாருமுளர். விளக்கம் : ஆலத்தூர் கிழாருடைய ஆலத்தூர் சோழநாட்டுக் காவிரித் தென்கரையிலுள்ளதோரூர். இதனை இடைக்காலக் கல்வெட்டுக்கள் “ஆவூர்க் கூற்றத்து விக்கிரமசோழன் பேராலத்தூர்” (A.R. No. 481 of 1922) என்றும், “தென்கரை நித்த விநோத வள நாட்டு ஆலத்தூர்” (A.R. No. 360 of 1929) என்றும் கூறுகின்றன. திருச்சிவபுரத்துக் கல்வெட்டொன்றில் “நித்தவிநோத வளநாட்டு ஆவூர்க்கூற்றத்து ஆலத்தூர் கிழான்” (A.R. No. 273 of 1927) ஒருவன் காணப்படுகின்றான். இக் குறிப்புகளால், இப்பாட்டைப் பாடிய ஆலத்தூர்கிழாரும் இவ் வூரினரேயெனத் துணியலாம். நிலமலர் வையம் இடமகன்ற உலகம். தோற்றம், ஈண்டு விளைவு குறித்து நின்றது. தோற்றத்தின் விளைவு வியன்காட்டதாயிற்று என்க. வெற்றி நுவல் அத் திரிவாய் வலம்புரி என இயைத்து, வெற்றியைப் பலரும் அறியத் தெரிவிப்பதாகிய அத் திரிவாய் வலம்புரி யென வுரைப்பது சீரிது. பள்ளி யெழுச்சிக் காலத்தே வேந்தர் மனைமுன்றிலில் வலம்புரி முழங்குவது மரபு. “இரங்குகுரல் முரசமொடு வலம்புரி யார்ப்ப ”(புறம். 397) என்று பிறரும் கூறுதல் காண்க. தோற்றத்தைச் சிறப்பித்து அதன்கண் ஈடுபட்டு நின்ற நெஞ்சை மாற்றி நலங்கிள்ளி இறந்த நிகழ்ச்சிக்கட் செலுத்துதலின், “கேள் இனி” என்றார். “இனி” யென்றதனால், இப்பாட்டிற் கூறப்பட்ட சிறப்புக்கள் பலவும் முன்பு நிகழ்ந்தவையென்பது பெறப்பட்டன. “கொளீஇய” என இறந்த காலத்தாற் கூறினமையின், “முன்பு” என்பதும், “தோன்றினும்” என்றதனால், “இப்பொழு”தென்பதும் வருவிக்கப் பட்டன. “வெற்றி நுவலா” என்ற பாடத்துக்கு “வெற்றியைச் சொல்லாமல்” என்றும், “காலைத் தோன்றின” என்ற பாடத்துக்குக் காலையில் முழங்கின என்றும் உரைக்க. 226. சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் சோழன் கிள்ளிவளவன் பேராண்மையும் பெருவண்மையும் படைத்தவன். ஆசிரியர் ஆலத்தூர்கிழார், “மன்னர் அடுகளிறு உயவும் கொடிகொள் பாசறைக், குருதிப் பரப்பின் கோட்டுமா தொலைச்சிப், புலாஅக் களஞ் செய்த கலா அத் தானையன்” என்றும், “பொருநர்க்கு ஓக்கிய வேலன்” என்றும் (புறம். 69) இவனது ஆண்மை நலத்தைச் சிறப்பிப்பர். வெள்ளைக்குடி நாகனாரென்பார், “மண்டிணி கிடக்கைத் தண்டமிழ்க் கிழவர், முரசு முழங்குதானை மூவருள்ளும், அரசெனப் படுவது நினதே பெரும” (புறம். 35) என்று எடுத்தோதிப் பாராட்டுவர்; “செஞ்ஞாயிற்று நிலவு வேண்டினும், வெண்டிங்களுள் வெயில் வேண்டினும், வேண்டியது விளைக்கும் ஆற்றலை” என இவனுடைய ஆண்மை மிகுதியை ஆவூர்மூலங்கிழார் மிகுத்துரைப்பர்; கோவூர்கிழார் என்பார், “காலனும் காலம் பார்க்கும் பாராது, வேலீண்டுதானை விழுமியோர் தொலைய, வேண்டிடத் தடூஉம் வெல்போர் வேந்” தென விளம்புகின்றார். இங்ஙனம் சான்றோர் பலராலும் பல்வேறு வகையிற் பாராட்டப்பெற்ற இவ் வளவன் குளமுற்றம் என்னும் இடத்துள்ள அரண்மனையில் இறந்தான். அக்காலத்தே மாறோக்கத்து நப்பசலையார் என்னும் பெருமாட்டியார் அச்செய்தியைக் கேள்வி யுற்று ஆறாத் துயருற்றார். கிள்ளிவளவனுடைய ஆண்மையும் வன்மையும் கொடைவண்மையும் அவர் நினைவுக்கு வந்தன. அவனது பேராண்மையை நினைந்தவர்க்கு அவனது இறப்பு அமைதி தரவில்லை. “வளவன் உயிர் கொண்ட கூற்றம், அவன் நேர்நின்று மெய்தீண்டியோ, வெகுண்டோ, மனதிற் பகைமை கொண்டோ அவனுயிரைக் கொண்டிருக்க முடியாது; இம் மூன்றனுள் எது செய்யினும் கூற்றமே தோற்றோடிப்போம்; அக் கூற்றம் உயிர்கொண்டொழிந்த திறம் வேறொன்றாக வேண்டும். அஃது இரவலர் உருவில் வந்து அவன் எதிர் நின்று கைதொழுது பாடி அவனுயிரை இரந்து அவன் ஈயப்பெற்றுச் சென்ற தாகல் வேண்டும்” என்று நினைத்து நினைக்குந்தோறும் நெஞ்சுருகப் பாடிப் புலம்பினார். அதுவே இப்பாட்டு. செற்றன் றாயினுஞ் செயிர்த்தன் றாயினும் உற்றன் றாயினு முய்வின்று மாதோ பாடுநர் போலக் கைதொழு தேத்தி இரந்தன் றாகல் வேண்டும் பொலந்தார் 5 மண்டமர் கடக்குந் தானைத் திண்டேர் வளவற் கொண்ட கூற்றே திணை : பொதுவியல். துறை : கையறுநிலை. சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனை மாறோக்கத்து நப்பசலையார் பாடியது. உரை : செற்றன்றாயினும் - தன் மனத்துள்ளே கறுவு கொண்ட தாயினும்; செயிர்த்தன் றாயினும் - வெளிப்பட நின்று வெகுண்ட தாயினும்; உற்றன் றாயினும் - உற்று நின்று கையோடு மெய் தீண்டி வருத்திற்றாயினும்; உய்வின்று - அதற்குப் பிழைத் தலுண்டாகாது; பாடுநர் போலக் கைதொழுது ஏத்தி இரந்தன் றாகல் வேண்டும் - பாடுவோரைப் போலத் தோன்றி நின்று கையால் தொழுது வாழ்த்தி இரந்து உயிர் கொண்ட தாகல் வேண்டும்; பொலந்தார் - பொன்னானியன்ற மாலை யினையும்; மண்டமர் கடக்கும் தானை - மண்டிய போரின்கண் எதிர் நின்று வெல்லும் படையினையும்; திண்டேர் வளவன் கொண்ட கூற்று - திண்ணிய தேரினையுமுடைய வளவனைக் கொண்ட கூற்று; எ-று. பொலந்தார் வளவனென இயையும். கூற்றம் இரந்ததாகல் வேண்டும்; இம் மூன்றனுள் ஒன்று செய்யினும் பிழைப்பின்று எனக் கூட்டுக. இஃது அவன் ஆண்மை மிகுதியினையும், வண்மையினையும் வியந்து இரங்கிக் கூறியவாறு. விளக்கம் : செற்றம் - கறுவு. செற்றம் மனத்துள்ளே வெகுளுவது; செயிர்த்தல், வெளிப்படையாக வெகுளுதல். உறுதல், மெய் தீண்டுதல். இரந்தன்று இரந்துகொண்டது. கடத்தல், வஞ்சியாது பொருவது; அஃதாவது நேர்நின்று பொருதுவெல்வது. காஞ்சித் திணையில் கூறப்படும் துறைவகைகளுள், “கழிந்தோர் தேஎத்துக் கழி படர் உறீஇ, ஒழிந்தோர் புலம்பிய கையறு நிலை” (புறத். 19) என்ற துறைக்கு இளம்பூரணர் இதனை எடுத்துக் காட்டுகின்றார். இனி, நச்சினார்க் கினியர், இதனை “மன் அடாது வந்த மன்னைக் காஞ்சி” (புறத். 24) என்று கூறுகின்றார். செற்றும் செயிர்த்தும் உற்றும் உயிர்கோடல் ஆகாதென்றது ஆண்மை மிகுதி; பாடுநர் போலக் கைதொழுதேத்தி இரந்தன்றாகல் வேண்டும்” என்றது வண்மை மிகுதி. 227. சோழன் குளமற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் குளமுற்றத்தில் கிள்ளிவளவன் துஞ்சியது அறிந்த சான்றோர் களில் மாசாத்தனார் என்பவர் ஒருவர். அவர் சோழநாட்டு ஆவடு துறை யென்னும் ஊரினர். திருவாவடுதுறைக்குச் சாத்தனூர் என்பது பழம் பெயரென அவ்வூர்க் கல்வெட்டுக்களும் (A.R.No. 124 of 1925) திருத் தொண்டர் புராணமும் கூறுகின்றன. சாத்தனூர் என்பது ஊர்ப் பெயர்; திடுவாவடுதுறை யென்பது திருக்கோயிலுக்குப் பெயர். நாளடைவில் சாத்தனூர் என்பது மறைந்து போகவே, திருவாடுதுறையென்ற பெயரே ஊர்க்கும் பெயராய்விட்டது. ஆவடுதுறை யென இருத்தற்குரியது ஆடுதுறையெனப் பிழைக்கப் பட்டது. இச் சாத்தனூர் என்னும் பெயர் மாசாத்தனார் பெயரால் பண்டைச் சோழமன்னரான கிள்ளிவளவன் முதலிய சோழ மன்னரால் வழங்கப்பட்டதாகல் வேண்டும். அதனால் அவர் ஆவடுதுறை மாசாத்தனார் என ஏடுகளில் வழங்கப்படு கின்றனர். அவர்க்குக் கிள்ளியின் பேராண்மையும் பெருவன்மையும் நன்கு தெரிந்திருந்தமையின் அவன் உயிரைக் கவர்ந்து கொண்ட கூற்றுவன்பால் மிக்க சினமுண்டாயிற்று. வளவனது உயிருண்ட கூற்றினது கொடுமை ஒருபுறமிருக்க, மன்னுயிரை யுண்பதையே நோக்கியிருக்கும் இயல்புபற்றிக் கூற்றம் தன் செயலுக்கே கேடுசெய்து கொண்டதை நினைந்து அதன் பேதைமைக்கு இரங்குவார் போல அதை வையலுற்றார். வளவன் இறந்ததனால் பிறந்த ஆற்றாமை காரணமாக இவ் வைவினைச் செய்கின்றா ராயினும் இதன்கண், அவருடைய வருத்தமும் இரக்கமும் தோன்றிப் படிப்போர் உள்ளத்தை உருக்குகின்றன. அதனை இப் பாட்டின்கட் காண்க. இதன்கண், கூற்றுவனை நோக்கி, “இரக்க மில்லாத கூற்றமே! விதையைக் குற்றியுண்டு மேல் விளைவுக்கு ஏங்கிநிற்கும் பேதை யுழவனைப்போல நீ நின் பசிக்கு வேண்டும் உயிர்களை நாடோறும் தன் போர்ச் செயலால் கொன்று தரும் கிள்ளிவளவனுயிரையே இப்போது உண்டொழிந்தாய்; அவன் இருக்குமளவும் பசி வாட்ட முண்டாகாவாறு வேண்டும் உயிர்களை அவன் நல்க உண்டு வாழ்ந்தாய்; இத்தீச்செயலால் இனி நின் பசி தணிப்போரைப் பெறாது வருந்தப் போகின்றாய், காண்” என்ற கருத்தமையக் குறித்துள்ளார். நனிபே தையே நயனில் கூற்றம் விரகின் மையின் வித்தட் டுண்டனை இன்னுங் காண்குவை நன்வா யாகுதல் ஒளிறுவாண் மறவருங் களிறு மாவும். 5 குருதியங் குரூஉப்புனற் பொருகளத் தொழிய நாளு மானான் கடந்தட் டென்றுநின் வாடுபசி யருத்திய பழிதீராற்றல் நின்னோ ரன்ன பொன்னியற் பெரும்பூண் வளவ னென்னும் வண்டுமூசு கண்ணி 10 இனையோற் கொண்டனை யாயின் இனியார் மற்றுநின் பசிதீர்ப் போரே. திணை : பொதுவியல். துறை : கையறுநிலை. அவனை ஆவடுதுறை மாசாத்தனார் பாடியது. உரை : நயனில் கூற்றம் - ஈரமில்லாத கூற்றமே; நனிபேதை - மிகவும் அறிவுடையையல்லை; விரகு இன்மையின் - நினக்குப் போவதொரு விரகில்லாதமையினால்; வித்து அட்டு உண்டனை - மேல்விளைந்து பயன்படும் விதையைக் குற்றியுண்டாய்; நன்வா யாகுதல் இன்னும் காண்குவை - ஆயின் நினக்கு இவ்வாறு சொல்லிய வார்த்தை நல்ல மெய்யாதல் இன்னமும் காண்பை; ஒளிறுவாள் மறவரும் களிறும் மாவும் - ஒளி விளங்கிய வாட்போரை வல்ல வீரரும் யானையும் குதிரையும்; குருதியங் குரூஉப் புனல் பொருகளத் தொழிய - உதிரமாகிய நிறமுடைய அழகிய நீர் மிக்க போர்க்களத்தின்கண் மாய; நாளும் ஆனான் கடந்து அட்டு - நாடோறும் அமையானாய் எதிர்நின்று கொன்று; என்றும் நின் வாடுபசி அருத்திய பழிதீர் ஆற்றல் - நாடோறும் நினது மெய் வாடுதற் கேதுவாகிய பசி தீர்தற்கு ஊட்டிய வசையற்ற வலியையுடைய கொலைத் தொழிலுக்கு; நின்னே ரன்ன - நின்னையொத்த ; பொன் இயல் பெரும்பூண் வளவனென்னும் - பொன்னானியன்ற பேரணி கலத்தையுடைய வளவனென்று சொல்லப்படும்; வண்டு மூசு கண்ணி இனை யோன் கொண்டனை யாயின் - வண்டுகள் மொய்க்கப்படுங் கண்ணியை `யுடைய இத் தன்மையினை யுடையோனை நீ கொண்டாயாயின்; இனி நின்பசி தீர்ப்போர் யார் - இனி நின் பசியைக் கெடுப்போர் யார், சொல்லுவாயாக; எ-று. கூற்றமே, இத்தன்மையோனைக் கொண்டாயாயின், நின் பசியைத் தீர்ப்போர் இனி யார்? விரகின்மையின் வித்தட்டுண்டனை; நன்வாயாகுதல் இன்னும் காண்குவை எனக் கூட்டி வினைமுடிவு செய்க. நயன் - நியாயமுமாம். விளக்கம் : “நனிபேதையே” என்ற துணிவை வற்புறுத்தற்கு “வித்தட் டுண்டனை” என்றார். வேறே செய்தற்குரியவற்றை யெண்ணும் அறிவில்லையாயினை யென்பார், “விரகின்மையின்” என்று காட்டினார். வித்து, மேல் விளைந்து பயன் படுவதாகலின், “மேல் விளைந்து பயன்படும் விதை” யெனவே உரை கூறப்பட்டது. வித்தென்றமையின், அட்டுண்டனை யென்றதற்குக் “குற்றியுண்டாய்” என்றார். நல்ல மெய்யாதலாவது சொல்லும் சொல் ஒவ்வொன்றும் மெய்யாவது. என்றும் - நாடோறும். வாடுபசி.வாடுதற்குரியது மெய் யாதலின், மெய் வாடுதற்கேதுவாகிய பசி அருந்துதற்கேற்ற காரணம் இதுவென்பார் “வளவனது ஆற்றல்” என்றும், நின்னுடைய ஆற்றல் எம்மனோரால் பழிக்கப் படும் குற்றமுடைய தென்பார், வளவனது ஆற்றலை, “பழிதீராற்றல்” என்றும், நின்னோடு வளவனுக்குள்ள ஒப்புமை கொலைத்தொழில் ஒன்றே யென்றதற்கு, “நின்னோரன்ன” என்றும் கூறினார். ஆயின் என்பதற்கு, இனி நினக்கு வளவன்போல் உதவுவோர் யாவருளரென ஆராயுமிடத்து என்று உரைப்பினும் அமையும். நயன், என்றதற்கு நியாயம் என்பது பொருளாயின், தனக்கு வேண்டும் உணவு நல்கித் தான் செய்யும் தொழிலை எளிதாக்கி உதவுவோரைக் கொல்வது ஒருவருக்கு முறைமையன்று என்பது பற்றி “நயனில் கூற்றம்” என்றார் என்று கோடல்வேண்டும். 228. சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் கிள்ளிவளவன் குளமுற்றத்தில் துஞ்சியதறிந்து வருந்திய சான்றோருள் ஐயூர் முடவனாரும் ஒருவர். அவர் பெயரை ஐயூர் மூவனாரென்றும் சில ஏடுகள் கூறுகின்றன. பாண்டிநாட்டிற் காணப்படும் சிற்றையூர் பேரையூர் என்பனவற்றுள் இவரது ஐயூர் இன்னதெனத் தெரிந்திலது. இச்சான்றோர் பாண்டியன் கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதியைப் பாடிச் சிறப்புப் பெற்றவர். இவர் ஒருகால் கிள்ளிவளவனைக் காண வந்தார். இடைவழியில் இவர்க்கு மாட்டாமை உண்டாக, தோன்றிக் கோன் என்பவன் ஊர்தி தந்து இவரை ஊக்கினான். பின்னர், கிள்ளி வளவனைக்கண்டு பாடி அவனால் சிறப்புச் செய்யப் பெற்றார். இவர்க்குக் கிள்ளி வளவனது பிரிவு பெருவருத்தத்தைச் செய்தது. அக்காலத்தே இறந்த மக்களை நிலத்திற் புதைக்குமிடத்து அவர்மேல் பெரிய தாழியைக் கவித்துப் புதைப்பது மரபு. கிள்ளிவளவனையும் தாழியிற் கவித்து வைத்தனர். அவர் மனக்கண்ணில் கிள்ளிவளவனுடைய பூதவுடம்பு புல னாகாது புகழுடம்பு புலனாயிற்று, தாழியாற் கவிப்பதாயின் அப் புகழுடம்பைத் தான் கவிக்க வேண்டுமென எண்ணினார். அவ்வுடம்பு நிலவுலகு முழுதும் பரந்து வானளாவ உயர்ந்து தோன்றிற்று. அதற்கேற்ற தாழி வேண்டின், நிலவுலகைக் குயவன் ஆழியாகவும் மேருமலையை மண் திரளாகவும் கொண்டு பெரியதொரு தாழி செய்ய வேண்டும்,” என எண்ணினார். குயவனை நோக்கி “இவ்வாறு ஒரு தாழி செய்ய இயலுமோ” என்பார் போல இந்தப் பாட்டைப் பாடியுள்ளார். கலஞ்செய் கோவே கலஞ்செய் கோவே இருடிணிந் தன்ன குரூஉத்திரட் பரூஉப்புகை அகலிரு விசும்பி னூன்றுஞ் சூளை நனந்தலை மூதூர்க் கலஞ்செய் கோவே 5 அளியை நீயே யாங்கா குவைகொல் நிலவரை சூட்டிய நீணெடுந் தானைப் புலவர் புகழ்ந்த பொய்யா நல்லிசை விரிகதிர் ஞாயிறு விசும்பிவர்ந் தன்ன சேண்விளங்கு சிறப்பிற் செம்பியர் மருகன் 10 கொடி நுடங்கு யானை நெடுமா வளவன் தேவ ருலக மெய்தின னாதலின் அன்னோற் கவிக்குங் கண்ணகன் றாழி வனைதல் வேட்டனை யாயி னெனையதூஉம் இருநிலந் திகிரியாப் பெருமலை 15 மண்ணா வனைத லொல்லுமோ நினக்கே. திணை : பொதுவியல். துறை : ஆனந்தப்பையுள். அவனை ஐயூர் முடவனார் பாடியது. உரை : கலம் செய் கோவே - அடுகலம் வனையும் வேட்கோவே; கலம் செய் கோவே - அடுகலம் வனையும் வேட்கோவே; இருள் திணிந்தன்ன குரூஉ - இருள்நீங்கி ஓரிடத்தே செறிந்து நின்றாற் போன்ற நிறமுடைத்தாய்; திரள் பரூஉப் புகை - திரண்ட மிக்க புகை; அகல் இருவிசும்பின் ஊன்றும் - அகலிய பெரிய ஆகாயத்தின்கண் சென்று தங்கும்; சூளை நனந்தலை மூதூர்க்கலம் செய் கோவே - சூளையையுடைய அகலிய இடத்தினையுடைய பழையவூரின்கண் கலம் வனையும் வேட்கோவே; அளியை நீ - இரங்கத்தகுவை நீ; யாங்காகுவை கொல் - என்ன வருத்த முறுவைதான்; நிலவரை சூட்டிய நீணெடுந்தானை - நிலவெல்லையின்கண் பரப்பிய மிக்க பெரிய சேனையினையுடைய; புலவர் புகழ்ந்த பொய்யா நல்லிசை - அறிவுடையோர் புகழ்ந்த பொய்யாத நல்ல புகழினையும்; விரிகதிர் ஞாயிறு விசும்பு இவர்ந்தன்ன - பரந்த சுடரினையுமுடைய ஆதித்தன் வானத்தின்கண் பரந்தாலொத்த; சேண் விளங்கு சிறப்பின் - சேய்மைக்கண்ணே விளங்கும் தலைமையையுடைய; செம்பியர் மருகன் - செம்பியர் மரபி னுள்ளான்; கொடி நுடங்கு யானை நெடுமாவளவன் - கொடிகள் நுடங்காநின்ற யானையினையுடைய மிகப்பெரிய வளவன்; தேவருலக மெய்தினன் - அவன் தேவருடைய விண்ணுலகத்தை யடைந்தானாகலான்; அன்னோற் கவிக்கும் இடமகன்ற தாழியை; வனைதல் வேட்டனையாயின் - வனை தலை நீ விரும்பினாயாயின்; எனையதூஉம் - எப்படியும்; இருநிலம் திகிரியா - பெரிய நில வட்டம் உருளியாக; பெருமலை மண்ணா - பெரிய மேருமலை மண்ணாக; வனைதல் ஒல்லுமோ நினக்கு - வனைய இயலுமோ? இயலாதன்றே நினக்கு; எ -று. அடுக்கு விரைவின்கண் வந்தது. கலஞ்செய் கோவே, வளவன் தேவருலக மெய்தினானாதலான், அன்னோற் கவிக்கும் தாழி வனைதல் வேட்டனையாயின் இருநிலம் திகிரியாக, மாமேரு மண்ணாக வனைதல் ஒல்லுமோ? ஒல்லாமையின் யாங்காகுவை; நீ இரங்கத்தக்காய் எனக் கூட்டி வினை முடிவு செய்க. இது சுற்றத்தார் இரங்கிக் கூறுதலின், ஆனந்தப்பையு ளாயிற்று. விளக்கம் : சூளையினின்றெழுந்து கருத்துத் திரண்டுசென்று வானத்தில் ஒடுங்கும் புகையை நீங்கி இருள் ஓரிடத்தே நின்றாற்போன்ற நிறத்தையுடைத்தாய் வானத்திற் சென்று தங்கும் என்றார். குரு, நிறம்; அது குரூஉவென நீண்டது. வானத்தின்கட்சென்று ஒடுங்கிவிடுதலின். புகையை “ஊன்றும்” என்றார். செய்தற்குரிய தொழிலைச் செய்ய மாட்டாமையும் ஒருவற்கு மிக்க வருத்தத்தை நல்குமாகலின், “யாங்காகுவை” என இரங்கினார். நல்லிசையும் விரிகதிரையும் உடைய ஞாயிறு என இயையும், ஞாயிறு பலராலும் புகழப்படு மென்பது, “உலகமுவப்ப வலனேர்பு திரிதரு பலர்புகழ் ஞாயிறு” (முருகு. 1-2) என்று சான்றோர் கூறுதலாலும் தெளியப்படும். ஞாயிறு வானத்தின் கண் தோன்றிப் பொழுதை வரையறுத்து அவரவரும் தத்தம் தொழில் தரீஇயர் வலனேர்பு விளங்கி” (அகம். 298) எனப் புலவர் புகழுமாறு காண்க. செம்பியர் சோழர்க்கொரு பெயர்; “தூங்கெயி லெறிந்த தொடித்தோட் செம்பியன்” என்றாற் போல, வளவனது புகழுடம்பு நிலவுலக முற்றும் பரந்து வானளவும் உயர்ந்து விளங்குதலின், அதனை முற்றும் மூடிக் கவிக்க வல்ல தாழியன்றோ செயற்பாலது; அதனைச் செய்வதாயின் நிலவட்டம் திகிரியாகவும் மேருவென்னும் பெருமலை மண் திரளாகவும் கொண்டு தாழி வனைதல் வேண்டுமே! அதனைச் செய்யவல்லுவையோ? நினக்கு அஃது இயலாதன்றோ என்பாராய், “இருநிலந் திகிரியாப் பெருமலை மண்ணா வனைதல் ஒல்லுமோ நினக்கு” என்று கூறுகின்றார். ஆனந்தப் பையுளாவது இன்னதென்பார், “விழுமங் கூர வேய்த்தோளரிவை, கொழுநன் வீயக் குழைந்துயங்கின்று” (பு.வெ.மா.சிறப்.பொது.13) என்பதை எடுத்துக்காட்டி, இதனைப் பாடுபவர் ஐயூர் முடவனாராதல் கண்டு, “இது சுற்றத்தார் இரங்கிக் கூறுதலின் ஆனந்தப்பையுளாயிற்று” என்றார். ஐயூர் முடவனார் பெயர் ஐயூர் மூவனார் என்றும் ஏட்டில் காணப்படுகிறது. உறையூர் முடவனார் என்றும் பாடமுண்டெனத் திரு. சாமிநாதையரவர்கள் குறிக்கின்றார்கள். 229. கோச்சேரமான் யானைக்கட் சேய்மாந்தரஞ் சேரலிரும்பொறை கோச்சேரமான் யானைக்கண்சேய் மாந்தரஞ் சேரல் இரும் பொறையின் இறுதிநாளில், அவன் இறத்தற்கு ஏழு நாட்களுக்கு முன் நாட்டில் புதுமையான நிகழ்ச்சி யொன்றுண்டாயிற்று. தீ நிமித்தங்கள் பல உண்டாயின. அவற்றைக் கண்ட சான்றோருள் கூடலூர் கிழார் என்பார் ஒருவர். அவர் வானநூல் வல்லவர்; விண்ணிடத்தே ஒருவிண்மீன் தீப் பரக்கக்காற்றாற் பிதிர்ந்து கிளர்ந்து வீழ்ந்தது கண்டார். கார்த்திகை, அனுடம், உத்திரம், மிருகசீரிடம் முதலிய விண்மீன்களின் நிலையினைக் கண்டார்; இந் நிகழ்ச்சிக்கு ஏழாம் நாளில் உலகாளும் வேந்தன் உயிர் நீப்பன் என்று உணர்ந்தார். வேந்தன் யானைக்கண்சேய் மாந்தரஞ் சேரலிரும் பொறையாகலின் அவற்கு என்ன தீங்குநேருமோ எனக் கலக்கமுற்றார். அவர் கலங்கியவாறே ஏழாம் நாளில் சேரமான் உயிர் துறந்தான். யானைகள் கையை நிலத்தே நீட்டிவைத்து உறங்கின; முரசம் தானே கண் கிழிந்து போயிற்று; வெண்குடை கால் துணிந்து வீழ்ந்தது; குதிரைகள் செல்லும் கதியின்றிக் கிடந்தன. இத் தீநிமித்தங்கள் வேந்தன் முடிவை வலியுறுத்தின. இவற்றால் மனம் அழுங்கிய ஆசிரியர் கூடலூர்கிழார் இப் பாட்டின்கண் இந் நிகழ்ச்சிகளை எடுத்தோதி வருந்துகின்றார். கூடலூர் கிழாரது கூடலூர் பொறைநாட்டுப் பாலைக் காட்டு வட்டத்து (Palghat Tq) நடுவட்டம் என்ற நாட்டிலுள்ள தோரூர். இவர் இனிய பாட்டுக்கள் பாடவல்லவர். இவராற் பண்டை மரந்தை நகரம் சிறப்புறக் குறிக்கப்படுகிறது. கணவனொடு கூடிக் கடிமனைக்கண் வாழும் தலைமகள், கணவற்குப் புளிப்பாகர் சமைத்து உண்பிக்கும் திறத்தை, நினைக்குந்தோறும் இன்பம் ஊறுமாறு இவர் பாடிய பாட்டுக் குறுந்தொகைக்கண் காணப் படுகிறது. சேரமான் யானைக் கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும் பொறை விரும்பியது கொண்டு இவர் எட்டுத் தொகையுள் ஒன்றாகிய ஐங்குறுநூற்றைத் தொகுத்தார். இவரைப் “புலத்துறை முற்றிய கூடலூர் கிழார்” என ஐங்குறுநூற்றின் ஈற்றுக் குறிப்புக் கூறுவது இவரது சிறப்பை இனிதெடுத்துக் காட்டுகிறது. ஆடிய லழற்குட்டத் தாரிரு ளரையிரவின் முடப்பனையத்து வேர்முதலாக் கடைக்குளத்துக் கயங்காயப் 5 பங்குனியுய ரழுவத்துத் தலைநாண்மீ னிலைதிரிய நிலைநாண்மீனதனெதி ரேர்தரத் தொன்னாண்மீன் றுறைபடியப் பாசிச் செல்லா தூசி முன்னா 10 தளக்கர்த்திணை விளக்காகக் கனையெரி பரப்பக் காலெதிர்பு பொங்கி ஒருமீன் விழுந்தன்றால் விசும்பினானே அதுகண், டியாமும் பிறரும் பல்வே றிரவலர் பறையிசை யருவி நன்னாட்டுப் பொருநன் 15 நோயில னாயி னன்றுமற் றில்லென அழிந்த நெஞ்ச மடியுளம் பரப்ப அஞ்சின மெழுநாள் வந்தன் றின்றே மைந்துடை யானை கைவைத் துறங்கவும் திண்பிணி முரசங் கண்கிழிந் துருளவும் 20 காவல் வெண்குடை கால்பரிந் துலறவும் காலியற் கலிமாக் கதியின்றி வைகவும் மேலோக ருலக மெய்தின னாகலின் ஒண்டொடி மகளிர்க் குறுதுணை யாகித் தன்றுணை யாய மறந்தனன் கொல்லோ 25 பகைவர்ப் பிணிக்கு மாற்ற னசைவர்க் களந்து கொடை யறியா வீகை மணிவரை யன்ன மாஅ யோனே. திணையுந் துறையு மவை. கோச்சேரமான் யானைக் கட்சேஎய் மாந்தரஞ் சேரலிரும்பொறை இன்ன நாளிற் றுஞ்சுமென அஞ்சி, அவன் துஞ்சிய விடத்துக் கூடலூர் கிழார் பாடியது. உரை : ஆடு இயல் அழற்குட்டத்து - மேடவிராசி பொருந்திய கார்த்திகை நாளில் முதற்காலின்கண்; ஆரிருள் அரை இரவின் - நிறைந்த இருளையுடைய பாதியிரவின்கண்; முடப் பனையத்து வேர் முதலா - முடப்பனை போலும் வடிவையுடைய அனுட நாளில் அடியின் வெள்ளி முதலாக; கயம் குளத்துக் கடை காய - கயமாகிய குள வடிவுபோலும் வடிவையுடைய புனர்பூசத்துக் கடையில் வெள்ளி எல்லையாக விளங்க; பங்குனி உயர் அழுவத்து - பங்குனி மாதத்தினது முதற்பதினைந்தின்கண்; தலை நாண் மீன் நிலை திரிய - உச்சமாகிய உத்தரம் அவ் வுச்சியினின்றும் சாய; நிலை நாண் மீன் அதன் எதிர் ஏர்தர - அதற்கு எட்டாம் மீனாகிய மூலம் அதற்கெதிரே எழா நிற்க; தொல் நாண் மீன் துறை படிய - அந்த உத்தரத்திற்கு முன் செல்லப்பட்ட எட்டா மீனாகிய மிருகசீரிடமாகிய நாண் மீன் துறையிடத்தே தாழ; பாசிச் செல்லாது - கீழ்த் திசையிற் போகாது; ஊசி முன்னாது -வடதிசையிற் போகாது; அளக்கர்த் திணை விளக்காக - கடலாற் சூழப்பட்டது பூமிக்கு விளக்காக; கனை எரி பரப்ப - முழங்காநின்ற தீப்பரக்க; கால் எதிர்பு பொங்கி - காற்றாற் பிதிர்ந்து கிளர்ந்து; ஒரு மீன் வீழ்ந்தன்றால் விசும்பினான் - ஒரு மீன் வீழ்ந்தது வானத்தி னின்றும்; அது கண்டு - அதனைப் பார்த்து; யாமும் பிறரும் பல்வேறு இரவலர் - யாமும் பிறருமாகிய பல்வேறு வகைப் பட்ட இரவலர்; பறையிசை அருவி நன்னாட்டுப் பொருநன் - பறையொலி போலும் ஒலியையுடைய அருவியையுடைய நல்ல மலை நாட்டுக்கு வேந்தனாகியவன்; நோயிலனாயின் நன்று என நோயை யுடையனல்லானாகப் பெறின் அழகிதென; அழிந்த நெஞ்சம் மடிஉளம் பரப்ப - இரங்கிய நெஞ்சத்துடனே மடிந்த உள்ளம் பரப்ப; அஞ்சினம் - யாம் அஞ்சினேம்; எழுநாள் வந்தன்று - அஞ்சினபடியே - ஏழாம் நாள் வந்ததாகலின்; இன்று வலியையுடைய யானை கையை நிலத்தேயிட்டு வைத்துத் துஞ்சவும்; திண் பிணி முரசம் கண் கிழிந்துருளவும் - திண்ணிய வாராற் பிணிக்கப்பட்ட முரசம் கண் கிழிந்து உருளவும்; காவல் வெண்குடை கால் பிரிந்து உலறவும் - உலகிற்குக் காவலாகிய வெண்கொற்றக்குடை கால் துணிந்து உலறவும்; காலியல் கலிமா கதியின்றி வைகவும் - காற்றுப்போலும் இயலையுடைய மனஞ்செருக்கிய குதிரைகள் கதியின்றிக் கிடக்கவும்; மேலோருலகம் எய்தினன் - இப்படிக் கிடக்கத் தேவருலகத்தை யடைந்தான்; ஆகலின் - ஆகையாலே; ஒண்டொடி மகளிர்க்கு உறுதுணையாகி - ஒன்றிய வளையையுடைய மகளிர்க்கு மேவப்பட்ட துணையாகி; தன் துணை ஆயம் மறந்தனன் கொல்லோ - தனக்குத் துணையாகிய மகளிரையும் மறந்தான் கொல்லோ; பகைவர்ப் பிணிக்கும் ஆற்றல் - பகைவரைப் பிணித்துக் கொல்லும் வலியையும்; நசைவர்க்கு அளந்து கொடை அறியா ஈகை - நச்சியோர்க்கு அளந்து கொடுத்தலறியாத வண்மையையுமுடைய; மணிவரையன்ன மா அ யோன் - நீல மலைபோலும் மாயோன்; எ-று. மன்னும் தில்லும் அசை. கயத்துக் குளக்கடை யென்க. நற்றிசை யாகிய கிழக்கும் வடக்கும் செல்லாது தீத்திசையாகிய தெற்கும் மேற்குமாகிய இரண்டனுள் ஒரு திசைக்கண் வீழ்ந்த தென்று ஆம்; அன்றி, வடக்கும் கிழக்கும் செல்லாதெனவே, வடகிழக்கே வீழ்ந்த தென்றுமாம். படவென்றல், இன்னாமையிற் கைவைத் துறங்கவும், கண் கிழிந்துருளவும், கால் பிரிந்துலறவும், கதியின்றி வைகவும் எனத் தகுதி பற்றிக் கூறப்பட்டன. மாயோன், மகளிர்க்குத் துணையாகி, தன்றுணையாயம் மறந்தனனோ, இல்லையோ; யாம் மறவா நிலைமைய மாயினம் என இரங்கிக் கூறியவாறு. “அஞ்சினம் எழுநாள் வந்தன் றின்றென” என்றும் பாடம். விளக்கம் : அழல் சேர் குட்டம் என்பது கார்த்திகை நாள், “அக்னியை அதிதேவதையாக வுடைமையின், கார்த்திகைக்கு அழலென்பது பெயராயிற்று” என்ப. ஆட்டினை, வடநூலார் மேடராசியென்பர். ஆடு முதல் மீன் ஈறாகவுள்ள இராசி பன்னிரண்டுக்கும் அசுவனி முதல் இரேவதி ஈறாகவுள்ள நாள் இருபத்தேழினையும் வகுத்தளிக்கின், முதல் இரண்டேகால் நாள் ஆடாகிய மேடத்துக்குரியவாதலின், கார்த்திகையின் முதற்காலை “ஆடியல் அழற் குட்டம்” என்றார். அனுடமென்பது ஆறு மீன்களின் தொகுதி; அது வளைந்த பனை மரம்போ லமைதலின், “முடப் பனையம்” எனப்பட்டது. வேர்முதலா - அடியின் வெள்ளி; அஃதாவது முதல் நாண்மீன். உயரழுவம் - முதற் பதினைந்து நாள். தலை நாண்மீன் உத்தரநாள். நிலை நாண் மீன் - எட்டாம் மீன்; “உச்சி மீனுக்கு முன் எட்டாவது மீன் அத்த மித்தலும் பின் எட்டாவது மீன் உதித்தலும் இயல்பு; “உச்சி மீனுக் கெட்டாம் மீன் உதய மீன்” என்ப. தொன்னாண் மீன் - எட்டாம் மீனாகிய மிருகசீரிடம். பாசி - கிழக்குத் திசை. ஊசி - வடக்குத் திசை. பங்குனித் திங்களில் நட்சத்திரம் வீழின். இராச பீடை யென்பர்; “ஆடுகயல் தேள் தனுச்சிங்கத் தெழுமீன் விழுமேல் அரசழிவாம்” என்பர். கயமாகிய குளம் என்றது கயங்குளம் என்றார். அஃதாவது புனர்பூசம்; இது குளம்போலும் வடிவுடையது. இதுபற்றியே, பிங்கலந்தையும், “அதிதி நாள் கழையா வணமேரி புனர்தங் கரும்பிவை புனர்பூச மாகும்” என்று கூறுவதாயிற்று. தகுதியாவது, செத்தாரைத் துஞ்சினாரென வழங்குவது போல்வது. மணிவரை, நீலமணிபோலும் மலை; அஃதாவது நீலமலை. இப்பகுதி தேவி குளம் என்னும் இடத்தைச் சார்ந்தது. 230. அதியமான் எழினி தகடூரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சிபுரிந்துவந்த அதியமான்களுள் எழினி யென்பான் ஒருவன். இவன் காலத்தே சேரநாட்டைச் சேரமான் பெருஞ்சேர லிரும்பொறை ஆண்டு வந்தான். சேரமானுக்கும் அதியமானுக்கும் எவ்வகையாலோ பகைமையுண்டாயிற்று. அது வாயிலாக இருவர்க்கும் போருண் டாயிற்று. சேரமான் பெரும்படையுடன் வந்து தகடூரைச் சூழ்ந்து கொண்டான். தகடூர்ப் போரில் எழினி பேராற்றலுடன் பொருது வீழ்ந்தான். பெருஞ்சேரன் இரும்பொறையைப் பாடிச் சிறப்பித்த சான்றோராகிய அரிசில்கிழார் எழினியின் குணமாண்பையும் போர் வன்மையையும் நன்கறிந்திருந்தார். இப்போர் நிகழாவாறு அவர் செய்த முயற்சி வெற்றிதரவில்லை. ஆயினும், இரு திறத்தார்பாலும் அவர்க்கு மன வேறுபாடு தோன்றவில்லை. இருவர் நலங்களையும் எடுத்தோதிப் பாடிச் சிறப்பிப்பதில் அரிசில்கிழார் தவறினதில்லை. தகடூரில் பொருது வீழ்ந்த எழினியை இழந்த தகடூர் நாடு தாயையிழந்த குழவிபோல நெஞ்சு தடுமாறி வருந்துவது கண்டு அரிசில்கிழார் அவலமுற்று இப் பாட்டின்கண் வருந்திப் பாடுகின்றார். எழினியது வீழ்ச்சிக்கு ஏதுவாகிய சேரமானை நோவாது, அவனுயிரையுண்ட கூற்றுவனையே இப்பாட்டில் நொந்து, “கூற்றமே! வீழ்குடியுழவன் வித்தினையட் டுண்டது போல, பலவுயிர்களை உணவாகத் தரக்கூடிய போர் மறவனாக எழினி இருப்ப, அவனுயிரை யுண்டு நினக்கே கேடு சூழ்ந்து கொண்டாய்” என இரங்கிக் கூறியுள்ளார். தகடூர் நாட்டில் அதியமான்களின் கோட்டையிருந்த வூர் இந்நாளில் “அதமன் கோட்டை” யென வழங்குகிறது. தகடூரும் இந்நாளில் தருமபுரி யென வழங்குகிறது. இந்த எழினியின் வழிவந்தோர் கி.பி. எட்டாம் நூற்றாண்டிலும் தகடூர்ப் பகுதியில் இருந்தனரென்று தகடூர்க்கருகிலுள்ள ஒட்டப் பட்டிக் கல்வெட்டுக்கள் (A.R.No.211 of 1910) தெரிவிக்கின்றன. கன்றம ராயங் கானத் தல்கவும் வெங்கால் வம்பலர் வேண்டுபுலத் துறையவும் களமலி குப்பை காப்பில வைகவும் விலங்குபகை கடிந்த கலங்காச் செங்கோல் 5 வையகம் புகழ்ந்த வயங்குவினை யொள்வாட் பொய்யா வெழினி பொருதுகளஞ் சேர ஈன்றோ ணீத்த குழவி போலத் தன்னமர் சுற்றந் தலைத்தலை யினையக் கடும்பசி கலக்கிய விடும்பைகூர் நெஞ்சமொடு 10 நோயுழந்து வைகிய வுலகினு மிகநனி நீயிழந் தனையே யறனில் கூற்றம் வாழ்தலின் வரூஉம் வயல்வள னறியான் வீழ்குடி யுழவன் வித்துண் டாஅங் கொருவ னாருயி ருண்ணா யாயின் 15 நேரார் பல்லுயிர் பருகி ஆர்குவை மன்னோவவ னமரடு களத்தே. திணை : பொதுவியல். துறை: கையறுநிலை. அதியமான் தகடூர்ப் பொருது வீழ்ந்த எழினியை அரிசில்கிழார் பாடியது. உரை : கன்றமராயம் கானத்து அல்கவும் - கன்றை மேவிய ஆனிரை மேய்ந்த காட்டிடத்தே பிறிதொன்றால் ஏதமின்றிக் கிடப்பவும்; வெங்கால் வம்பலர் வேண்டு புலத்து உறையவும் - சுரத்தில் நடத்தலால் வெம்மையுற்ற காலினையுடைய வழி போவார் தாம் வேண்டியவிடத்தே தங்கவும்; களமலி குப்பை காப்பில வைகவும் - களத்தின்கண் நிறைந்த நெற்பொலி காவலின்றியே கிடப்பவும்; விலங்கு பகை கடிந்த கலங்காச் செங்கோல்- எதிரில் நின்று தடுக்கும் பகையைத் துரந்த நிலங்கலங்காத செவ்விய ஆட்சியினையும்; வையகம் புகழ்ந்த வயங்கு வினை - உலகத்தார் புகழ்ந்த விளங்கிய போரைச் செய்யும்; ஒள்வாள் பொய்யா எழினி பொருது களம் சேர - ஒள்ளிய வாளினையும் தப்பாத மொழியினையுமுடைய எழினி பொருது போர்க்களத்தின் கண்ணே வீழ; ஈன்றோள் நீத்த குழவி போல - பெற்ற தாயாற் கைவிடப்பட்ட உண்ணாத குழவியை யொப்ப; தன் அமர் சுற்றம் தலைத்தலை இனைய - தன்னை மேவிய கிளை இடந்தோறும் இடந்தோறும் வருந்த; கடும்பசி கலக்கிய இடும்பை கூர் நெஞ்சமோடு - மிக்க பசி வருத்திய கலக்கமுற்ற துன்ப மிக்க நெஞ்சமோடு; நோய் உழந்து வைகிய உலகினும் - அவனை யிழந்து வருத்த முற்றுக் கிடந்த உலகத்து விதனத்தினும்; மிக நனி நீ இழந்தனை - மிகப் பெரிதாக நீ இழந்தாய்;அறன் இல் கூற்றம் - அற மில்லாத கூற்றமே; வாழ்தலின் வரூஉம் - வாழ்தல் ஏதுவாக வரும்; வயல் வளன் அறியான் - வயலிடத்து விளையும் வருவாயை யறியானாய்; வீழ்குடி யுழவன் - தளர்ந்த குடியை யுடைய உழவன்; வித்து உண்டாங்கு - விதையை யுண்டாற் போல; ஒருவன் ஆருயிர் உண்ணாயாயின் - இந்த ஒருவனது பெறுதற்கரிய உயிரையுண்டிலையாயின்; நேரார் பல்லுயிர் பருகி ஆர்குவை - பகைவருடைய பல உயிரையும் பருகி நிறைவை; அவன் அமர் அடுகளத்து - அவன் போரில் பகைவரைக் கொல்லும் களத்தின்கண்; எ-று. மன்; கழிவின்கண் வந்தது. உயிர் உண்ணவும் பருகவும் படுவதன்றாயினும் அவ்வாறு கூறுதல், “அகலிரு விசும்பிற் பாயிருள் பருகிப், பகல்கான் றெழுதரு பல்கதிர்ப் பருதி” (பெரும்பாண். 1-2) என்றாற்போல ஓர் அணிகுறித்து நின்றது. எழினி, களஞ்சேர, ஒருவன் ஆருயிர் உண்ணாயாயின், அவன் அமரடு களத்துப் பல்லுயிரும் பருகியார்குவை; அது கழிந்ததேயெனக் கூட்டி வினைமுடிவு செய்க. “கடும்பசி துளங்கிய” என்றும் பாடம். விளக்கம் : “வம்பலர் வேண்டுபுலத் துறையவும்” எனவும், “களமலி குப்பை காப்பில் வைகவும்” எனவும் கூறியதனால், அல்கவும் என்றதற்குப் “பிறிதொன்றான் ஏதமின்றிக் கிடப்பவும்” என்று உரை கூறப் பட்டது. பகைவராற் கலக்கமுண்டாகிய வழிச் செங்கோன்மையால் நிலத்து வாழும் வாழ்வு கலங்கிச் சீர்குலையு மென்பது பற்றி, கலங்காச் செங்கோல் என்றதற்கு நிலங்கலங்காத செவ்விய ஆட்சியென வுரை கூறினார். செங்கோன்மை ஒன்றே கொண்டு பகைகடியுந்திறன் இல்வழி, வேந்தனது நிலம் கலக்கமுறும் என்பது பற்றி, “விலங்குபகை கடிந்த கலங்காச் செங்கோல்” என்றார். உட்பகை, புறப்பகை யென்ற இரண்டுமடங்க, “விலங்கு பகை” யெனல் வேண்டிற்று. ஒருவன், தனக்குக் கூட்டாக வேறு எவரையும் வேண்டாதவன். ஒருவன் ஆருயிரை யுண்டொழிந்ததனால், “நேரார் பல்லுயிர் பருகும் நற்றிறம் நினக்கு இல்லாது கழிந்தது என்பது பட” “ஆர்குவைமன்” என்றார். அணியாவது சமாதி யெனப்படுவது; சிவஞான முனிவர் இதனை விட்டும் விடாத இலக்கணை யென்பர். ஆர்தல், நிறைதலாதலின், பருகி ஆர்குவை யென்றதற்கு, “பருகிநிறைவை” என்று உரைத்தார். ஆருயிர், கொள்ளுதற்கரிய வுயிர் எனப் பொருள் கொள்ளப்படும். 231. அதியமான் நெடுமானஞ்சி தகடூரில் இருந்து நல்லாட்சிபுரிந்த அதியமான்களில் நெடுமான் அஞ்சி மிக்க புகழ் படைத்தவன். தன்னையுண்டாரை நெடிது வாழப் பண்ணும் நெல்லிக்கனியை ஒளவையார்க் களித்துப் பெருநலம் செய்தவன். இவன் முடிவில் சேரமானோடு போருடற்றி உயிர் துறந்தான். இவன் இறந்த காலத்தில் இவனுக்காக நெஞ்சு கலங்கிப் புலம்பிய சான்றோர்களுள் ஒளவையார் தலைசிறந்தவர். அதியமான் இறந்தபின் அவனை ஈமத்திற்குக் கொண்டு எரிவாய்ப்பெய்து இறுதிக் கடன்களை உரியவர் செய்து முடித்தனர். அங்கிருந்த சான்றோர் “இதுகாறும் புகழ் மேம்பட்டு விளங்கிய அதியமான் மறைந்தான்” என வருந்தினர். அவரோடு உடனிருந்த ஒளவையார், “அதியமான் உடம்பு எரியிற் பட்டு வெந்து கரியினும், வேகாது நேரே விண்ணுலகு புகினும்,அவன் பெற்ற புகழ்கள் ஒருகாலும் அழியா எனக் கையற்றுப் பாடினர். அப் பாட்டு இது. ” எறிபுனக் குறவன் குறைய லன்ன கரிபுற விறகி னீம வொள்ளழற் குறுகினுங் குறுகுக குறுகாது சென்று விசும்புற நீளினு நீள்க பசுங்கதிர்த் 5 திங்க ளன்ன வெண்குடை ஒண்ஞாயி றன்னோன் புகழ்மா யலவே. திணை : பொதுவியல். துறை: கையறுநிலை. அதியமா னெடுமானஞ்சியை ஒளவையார் பாடியது. உரை : எறிபுனக் குறவன் குறையல் அன்ன - வெட்டிச் சுட்ட கொல்லை நிலத்துக் குறவனால் தறிக்கப்பட்ட துண்டம் போன்ற; கரிபுற விறகின் ஈம வொள்ளழல் - கரிந்த புறத்தை யுடைய விறகால் அடுக்கப்பட்ட ஈமத்தின்கண் எரிகின்ற ஒள்ளிய அழலின்கண்; குறுகினும் குறுகுக - உடல் சுடச் சென்று அணுகினும் அணுகுக; குறுகாது சென்று - அவ்வாறு அணுகாது போய்; விசும்புற நீளினும் நீள்க - வறிதே ஆகாயத்தை உற ஓங்கினும் ஓங்குக; பசுங்கதிர்த் திங்களன்ன வெண்குடை - குளிர்ந்த சுடரையுடைய மதிபோலும் வெண்கொற்றக் குடையை யுடைய; ஒண் ஞாயிறன்னோன் - ஒள்ளிய ஞாயிற்றையொப் போனது; புகழ் மாயல - புகழ் மாயா; எ-று. ஈமமென்பது பிணஞ்சுடுதற்கு அடுக்கும் விறகடுக்கு. இனி, ஈமவொள்ளழல் இவனுடல் சிதையாமல் சிறுகினும் சிறுகுக; அன்றிச் சிதையும்படி சென்று நீளினும் நீளுக; இவன் புகழ் மாயாவெனினும் அமையும். “எரிபுனக் குறவன்” என்று பாடமோதுவாரு முளர். விளக்கம் : எறி புனம் - எறிந்த புனம்; இறந்தகாலந்தொக்க வினைத்தொகை. குறைபட வெட்டிய கட்டைத்துண்டு “குறையல்” எனப்பட்டது. “கரிபுற விறகின் ஈமம்” என்றதனால், எரிந்து குறைபட்ட கட்டைகளையே பண்டை நாளில் ஈமத்தில் எரிமூட்ட அடுக்குவரென்பது தெரிகிறது அதியமான் உடல் ஈமத்தீயில் எரிவது கண்டு ஆற்றாது கூறுகின்றா ராகலின் “குறுகினுங் குறுகுக” என்றும் , சில கட்டைகள் தீக்கொழுந்து விட்டெரியினும் தங்கண் இட்ட பொருள் நன்கு வேகச் செய்யாது போவதுண்மையின், “குறுகாது சென்று விசும்புற நீளினும் நீளுக” என்றும் கூறினார். “ஒண் ஞாயிறன்னோன்” என்றார், ஞாயிற்றின் ஒளியை மறைக்க முடியாதவாறுபோல அதியமான் புகழ்களும் மாயாவென்று கட்டுரைக்கின்றாராகலான்; “புதைத்தலொல்லுமோ ஞாயிற்ற தொளியே” (ஐங்.71) என்று பிறரும் கூறுதல் காண்க. குறுமை, சிறுமையு முணர்த்துமாதலால், குறுகினுங் குறுகுக என்றதற்கு, “இவனுடற் சிதையாமற் சிறுகினும் சிறுகுக” என்றும், “நீளினும் நீளுக என்றதற்கு, சிதையும்படி சென்று நீளுக, இவன் புகழ் மாயாவெனினு மமையும்” என்றும் உரைத்தார். 232. அதியமான் நெடுமான் அஞ்சி அதியமான் நெடுமான் அஞ்சி இறந்தபின், அவன் உடலை அடக்கம் செய்த சான்றோர் நன்னாளில் அவனுக்கு நடுகல் நாட்டினர், அதன்கண் அவன் பீடும் பெயரும் எழுதி மயிற்பீலி சூட்டி நடுகல் விழா அயர்ந்தனர். அவ்விடத்தே சான்றோர் பலரும் கூடியிருந்தனர். அவருடன் ஒளவையாரும் இருந்தார். நடுகல்லாகிய அதியமானுக்குச் சிறு கலங்களில் நாரால் வடிக்கப் பட்ட தேறலை வைத்துப் படைத்து வழிபட்டனர். அதுகண்ட ஒளவையாருக்கு நெஞ்சில் எழுந்த துயரத்துக்கு அளவில்லை; அவர் கண்களில் நீர் ஆறாய் ஒழுகிற்று. “பகைவர் தமது நாடு முழுவதும் கொடுப்பினும் கொள்ளாத மறமாண்புடைய இந்த அதியமான் இந்தச் சிறுகலங்களில் பெய்து தரப்படும் தேறலைக் கொள்வானோ? ” என்ற இந்தப் பாட்டைப் பாடினார். இல்லா கியரோ காலை மாலை அல்லா கியர்யான் வாழு நாளே நடுகற் பீலி சூட்டி நாரரி சிறுகலத் துகுப்பவுங் கொள்வன் கொல்லோ 5 கோடுயர் பிறங்குமலை கெழீஇய நாடுடன் கொடுப்பவுங் கொள்ளா தோனே திணையும் துறையு மவை. அவனை யவர் பாடியது. உரை : காலை மாலை இல்லாகியர் - அவனையின்றிக் கழிகின்ற காலையும் மாலையும் இனி இல்லையாகுக; யான் வாழும் நாள் அல்லாகியர் - யான் உயிர் வாழும் நாளும் எனக்கு ஒருபயன் படாமையின் அவை யல்லவாக; நடுகற் பீலி சூட்டி - நடப்பட்ட கல்லின்கண் பீலியைச் சூட்டி; கலத்தான் உகுப்பவும்; கொள்வன் கொல்லோ - அதனைக் கொள்வனோ கொள்ளானோ; கோடு உயர் பிறங்குமலை கெழீஇய - சிகரமோங்கிய உயர்ந்த மலை பொருந்திய; நாடு உடன் கொடுப்பவும் கொள்ளாதோன் - நாடு முழுவதும் கொடுப்பவும் கொள்ளாதவன்; எ-று. நாடுடன் கொடுப்பவும் கொள்ளாதோன் நாரரி சிறுகலத் துகுப்பவும் கொள்வன் கொல்லோ எனக்கூட்டி வினைமுடிவு செய்க. விளக்கம் : காலை பகற்போதின் தொடக்கமாய்ப் பகலையும், மாலை இரவுப் போதின் தொடக்கமாய் இரவையும் குறித்து நின்றன. பயன் படாத நாள் வீணாள் எனப்படுதலின், “அல்லாகியர்” என்றார். நடுகல்லில் இறந்த தலைவனுடைய பெயரையும் பீடுகளையும் எழுதி மயிற்பீலி சூட்டி நடுவது மரபாதலின் நடுகற் பீலி சூட்டி யென்றார். “ நல்லமர்க் கடந்த நாணுடை மறவர், பெயரும் பீடு மெழுதி யதர்தொறும், பீலி சூட்டிய பிறங்குநிலை நடுகல்” (அகம். 67)என வருதல் காண்க. நடுகல்லாயினானைத் தெய்வமாக்கி, அவன் விரும்பும் உணவைப் படைத்துப் பரவுவது பண்டையோர் வழக்கு. அதனால் சிறுகலங்களில் தேறலைப் பெய்து படைத்தனரென அறிக. “ஒலிமென் கூந்த லொண்ணுதலரிவை, நடுநகற் கைதொழுது பரவும்” (புறம்: 306) என நடுகல் தெய்வமாகப் பரவப்படுவது காண்க. 233. வேள் எவ்வி வேளிர்குலத் தோன்றலாகிய எவ்வி பறம்புமலைத் தலைவ னாகிய வேள் பாரி பிறந்த குடிக்கு முதல்வன். இவனது ஊர் நீடூர் என்பது. இது மிழலைக் கூற்றத்தில் உள்ளது. இஃது அறந்தாங்கி வட்டத்துத் தென் பகுதியும் இராமநாதபுர மாவட்டத்தின் கீழ்ப் பகுதியும் தன்கண் கொண்டது. அதனால் இவன் “நீடூர் கிழவன்” எனப் படுவன். இவன் பெருங்கொடை புரியும் வள்ளல். இவன் பால் பாணர்கட்குப் பேரன்புண்டு. வாட்படையும் வேற்படையும் சிறக்க உடைய இவன் புலவர் பாடும் புகழ் மிகப் படைத்தவன். ஒருகால் இவன் தன் ஏவலைக் கொள்ளாது பகைத்த பசும்பூண் பொருந்திலர் என்பாரை வென்று அவர்க்குரிய அரிமணம் உறத்தூர் என்பன புதுக்கோட்டை வட்டத்தில் உள்ளன. அரிமணம் இப்போது அரிமளம் என வழங்குவது போலும். பேணப்பட்ட பாணர் தம் இசைக்கருவியாகிய யாழை முறித்திட்டு அவனைப் பரவி வருந்தினர்; அவர்கள் பின்பு எய்திய வறுமை புலவர் பரிந்து எடுத்தோதும் அத்துணை மிகுதி பெற்றிருந்தது. இந்த எவ்வியின் முகத்தினும் மார்பினும் பட்ட புண்கள் பலவாகும்” எனப் போரிடையிருந்து வந்த செய்தி வெள்ளெருக்கிலையார்க்கு விடியற்காலத்தே வந்தது. வேள் எவ்வியின் வாள் வன்மையும் பேராண்மையும் நன்கறிந்தவராதலின், அச் செய்தியை அவர் உண்மையென ஏற்கவில்லை. ஆயினும், அவர் மனம் அமைதி பெறவில்லை. “இச் செய்தி பொய்யுரையாகுக” என அவர் தமக்குள்ளே விழைந்தார். அவ்விழைவின் வெளியீடே இப்பாட்டு. வெள்ளெருக்கின் இலையைச் சிறப்பித்துப் பாடியதனால் இவர்க்கு இப்பெயர் எய்திற்றாகல் வேண்டும். பொய்யா கியரோ பொய்யா கியரோ பாவடி யானை பரிசிலர்க் கருகாச் சீர்கெழு நோன்றா ளகுதைகட் டோன்றிய பொன்புனை திகிரியிற் பொய்யா கியரோ 5 இரும்பா ணொக்கற் றலைவன் பெரும்பூட் போரடு தானை யெவ்வி மார்பின் எஃகுறு விழுப்புண் பலவென வைகுறு விடிய லியம்பிய குரலே. திணை : பொதுவியல். துறை: கையறுநிலை. வேள் எவ்வியை வெள்ளெருக்கிலை யார் பாடியது. உரை : பொய்யாகியரோ பொய்யாகியரோ - பொய்யாகுக பொய்யாகுக; பாவடியானை பரிசிலர்க்கு அருகா - பரந்த அடியினையுடைய யானையைப் பரிசிலர்க்குக் குறைவறக் கொடுக்கும்; சீர் கெழு நோன்றாள் - சீர்மை பொருந்திய வலிய முயற்சியையுடைய; அகுதைகண் தோன்றிய - அகுதையிடத்து உளதாகிய; பொன்புனை திகிரியின் பொய்யாகியர் - பொன்னாற் செய்யப்பட்ட ஆழிபோலப் பொய்யாகுக; இரும்பாண் ஒக்கல் தலைவன் - பெரிய பாண் சுற்றத்திற்கு முதல்வன்; பெரும்பூண் போர் அடு தானை எவ்வி மார்பின் - பேரணிகலத்தினையுடைய; போரின் கட் கொல்லும் படையினையுடைய எவ்வியது மார்பின்கண்; எஃகுறு விழுப்புண் பல என - வேல் தைத்த சிறந்த புண் பலவென; வைகுறு விடியல் இயம்பிய குரல் - வைகுதலுற்ற விடியற்காலத்துச் சொல்லிய வார்த்தை; எ-று. பெரும்பூண் மார்பென இயையும். திகிரியென்றது திகிரிதைத்ததென்று பிறந்த வார்த்தை; பொன் ஈண்டு இரும்பு. அடுக்கு விரைவின் கண் வந்தது. இயம்பிய குரல் பொய்யாகியர் எனக் கூட்டுக. விளக்கம் : அகுதை யென்பவன் பண்டை நாளில் கடல் சார்ந்த ஊராகிய கூடல் என்ற ஊர்க்குத் தலைவன். மறப்போர் புரியும் சான்றாண்மையும் பரிசிலர்க்குக் களிறு வழங்கும் கைவண்மையும் உடையவன். இவன் பெரிய தானையையுமுடையன் என்ப. இவன்பால் பொற்றிகிரி யுண்டு; ஆதலின், இவனை வெல்வது எவர்க்கும் ஆகாதென்றொரு பெருமொழி நாடெங்கணும் பரவியிருந்தது. அதனால் பலரும் அவனையஞ்சி யிருந்தனர்; முடிவில் ஒருகால் போருண்டாகிய போது அகுதை கொல்லப்பட்டான். பெற்றிகிரியுண்டென்பது பொய் யாயிற்று. அச் செய்தி போல எவ்வி மார்பிற் புண்ணுற்றிறந்தானென்ற சொல்லும் பொய்யாகுக வென்பார், “அகுதைகண் தோன்றிய பொன்புனை திகிரி போலப் பொய்யாகியர்” என்றார். 234. வேள் எவ்வி வெள்ளெருக்கிலையார் விடியலிற் கேட்ட செய்தி உண்மை யேயாயிற்று. அவர்க்குண்டாகிய வருத்தத்துக்கு அளவில்லை. யாவர்க்கும் வரையாது அளித்துப் பலரோடு இருந்துண்டலையே பெரிதும் விரும்பி வாழ்ந்த வேள் எவ்வியின் பிரிவு வெள்ளெருக் கிலையார் நெஞ்சில் நிலைபெற நின்று வருத்திற்று. நாட்கள் பல கழிந்தன. ஒரு நாள் அவர் எவ்வியின் மனைக்கு வந்தார். கைம்மை நோன்பு நோற்கும் அவன் மனைவியர் எவ்வி கிடந்து உயிர்நீத்த இடத்தை மெழுகிப் புல்லைப் பரப்பி அதன் மேல் இனிய சிறு உணவை வைத்துப் படைத்து வழிபடுவதைக் கண்டார். “உலக முழுதும் வரினும் வருவார்க்குத் தடை யாது மின்றித் திறந்த வாயிலை யுடையனாய்ப் பலரோடும் இருந்துண்ணும் வள்ளலாகிய வேள் எவ்வி புல்மேல் வைக்கப்பட்ட இச் சிறு பிண்டத்தை விரும்பி யேற்பானோ” என எண்ணிப் புண்ணுற்ற நெஞ்சினராய்க் கதறிப் புலம்பினார். அப் புலம்புரை இப் பாட்டாகும். நோகா யானே தேய்கமா காலை பிடியடி யன்ன சிறுவழி மெழுகித் தன்னமர் காதலி புன்மேல் வைத்த இன்சிறு பிண்டம் யாங்குண் டனன்கொல் 5 உலகுபுகத் திறந்த வாயிற் பலரோ டுண்டன் மரீஇ யோனே. திணை : பொதுவியல். துறை: கையறுநிலை. அவனையவர் பாடியது. உரை : நோகோயான் - நோவக்கடவேனோ யான்; மாகாலை தேய்க - எனது வாழக்கடவ மிக்க நாள் மாய்வதாக; பிடியடி யன்ன சிறுவழி மெழுகி - பிடியினது அடிபோன்ற சிறிய இடத்தினை மெழுகி; தன் அமர் காதலி - தன்னை மேவப்பட்ட காதலி; புல்மேல் வைத்த இன் சிறு பிண்டம் - புல்மேல் வைக்கப்பட்ட இனிய சிறிய பிண்டத்தை; யாங்கு உண்டனன் கொல் - எவ்வி உண்டான் கொல்லோ; உலகு புகத் திறந்த வாயில் - உலகத்தார் யாவரும் புகும் பரிசு திறந்த வாயிலையுடைய; பலரோடு உண்டல் மரீஇயோன் - பலரோடுங் கூடி யுண்டலை மருவியோன்; எ-று. இன் சிறு பிண்டமென்றது இகழ்ச்சிக் குறிப்பு. பலரோடு உண்டலை மரீ இயோன் பிண்டம் யாங்கு உண்டனன்கொல் எனக் கூட்டுக. விளக்கம் : எவ்வி கிடந்து உயிர் நீத்த இடத்தை வட்டமாக மெழுகினமை தோன்றப் “பிடியடியன்ன சிறு வழி” யென்றார். இலையிட்டு அதன் மேல் தருப்பைப்புல்லை வைத்து அதன்மேல் இனிய சுவையில்லாத உணவைப் பெய்து படைத்துக் கைம்பெண்கள் உண்பது இயல்பாதலால், அதனை, “புன்மேல் வைத்த இன்சிறுபிண்டம்” என்றார். இனிய சுவையின்றி ஒரு பொழுதைய உணவாதலால், அதனை “இன் சிறு பிண்டம்” என்றது குறிப்பாய் இகழ்ந்தவாறாயிற்று. எவ்வியின் வள்ளன்மையை நினைந்து வியந்து கூறலின் “யாங்குண்டனன் கொல்” என்றார். இவ்வாறே அதியமானைப் பாடிய ஒளவையார், “நாரரி சிறு கலத் துகுப்பவும் கொள்வன் கொல்லோ” (புறம்: 232) என்பது காண்க. 235. அதியமான் நெடுமான் அஞ்சி அதியமான் இறந்தபின் ஒளவையாரை யுள்ளிட்ட சான்றோர் கூட்டத்தில் அஞ்சியின் கொடை நலமும், புலவர் முதலியோரை அவன் பேணுந் திறமும் பொருளாகப் பேசப்பட்டன. ஒளவையார் அவனோடு இருந்து அவனது வள்ளன்மையைத் தெளிய அறிந் திருந்தாராதலின், அதனை இப் பாட்டின்கண் விரியக் கூறி யுள்ளார். அஞ்சியின் மார்பில் தைத்து அவன் உயிருண்ட வேல், பாணர் புலவர் முதலியோர் வாழ்க்கையையே சீரழித்து விட்ட தென்றும், எனவே, நாட்டில் பாடுவோரும் பாடுவோர்க்கு ஈவோரும் இலராயினர் என்றும், ஈயாது வைத்து உயிர் துறந்து கெடும் கீழ்மக்களே மிகப் பலராக இவ்வுலகில் உள்ளனர் என்றும் படிப்போர் நெஞ்சுருகிக் கண்கலுழுமாறு பாடியுள்ளார். சிறியகட் பெறினே யெமக்கீயு மன்னே பெரியகட் பெறினே யாம்பாடத் தான்மகிழ்ந் துண்ணு மன்னே சிறுசோற் றானு நனிபல கலத்தன் மன்னே 5 பெருஞ்சோற் றானு நனிபல கலத்தன் மன்னே என்பொடு தடிபடு வழியெல்லா மெமக்கீயு மன்னே அம்பொடு வேனுழை வழியெல்லாந் தானிற்கு மன்னே நரந்த நாறுந் தன்கையாற் புலவு நாறு மென்றலை தைவரு மன்னே 10 அருந்தலை யிரும்பாண ரகன்மண்டைத் துளையுரீஇ இரப்போர் கையுளும் போகிப் புரப்போர் புன்கண் பாவை சோர அஞ்சொனுண் டேர்ச்சிப் புலவர் நாவிற் சென்றுவீழ்ந் தன்றவன் 15 அருநிறத் தியங்கிய வேலே ஆசா கெந்தை யாண்டுளன் கொல்லோ இனிப், பாடுநரு மில்லைப் பாடுநர்க்கொன்றீகுநரு மில்லைப் பனித்துறைப் பகன்றை நறைக்கொண் மாமலர் சூடாது வைகியாங்குப் பிறர்க்கொன் 20 றீயாது வீயு முயிர்தவப் பலவே. திணை : பொதுவியல். துறை: கையறுநிலை. அதியமான் நெடுமான் அஞ்சியை ஒளவையார் பாடியது. உரை : சிறிய கள் பெறினே - சிறிய அளவினையுடைய மதுவைப் பெறின்; எமக்கு ஈயும் மன் - எங்களுக்கே தருவன், அதுகழிந்தது; பெரிய கள் பெறின் - பெரிய அளவினையுடைய மதுவைப் பெற்றானாயின்; யாம் பாட - அதனை யாம் உண்டு பாட; தான் மகிழ்ந்துண்ணும் மன் - எஞ்சிய மதுவைத்தான் விரும்பி நுகர்வான், அது கழிந்தது; சிறு சோற்றானும் நனி பல கலத்தன் மன் - சோறு எல்லார்க்கும் பொதுவாதலால் சிற்றளவினை யுடைய சோற்றின் கண்ணும் மிகப்பல கலத்தோடுங்கூட உண்பன், அது கழிந்தது; பெருஞ்சோற்றானும் நனிபல கலத்தன்மன் - மிக்க அளவினையுடைய சோற்றின்கண்ணும் மிகப்பல கலத்தோடுங்கூட உண்பன், அது கழிந்தது; என்பொடு தடிபடு வழியெல்லாம் - என்போடு வடிய ஊன்றடியுளதாகிய இடமுழுதும்; எமக்கு ஈயும் மன் - எங்களுக்கு அளிப்பன், அது கழிந்தது; அம்பொடு வேல் நுழை வழி யெல்லாம் - அம்பொடு வேல் தைத்து உருவுமிடமாகிய போர்க்கள முழுதும்; தான் நிற்கும் மன் - தானே சென்று நிற்பன் அது கழிந்தது; நரந்தம் நாறும் தன் கையால் - தான் காதலிப்பார்க்கு மாலை சூட்டுத லான், நரந்தப்பூ நாறும் தன்னுடைய கையால்; புலவு நாறும் எம் தலை தை வரும் மன் - தான் அருளுடைமையின் புலால் நாறும் எம்முடைய தலையைத் தடவுவன் அது கழிந்தது; அருந்தலை இரும் பாணர் அகல் மண்டைத் துளைஉரீஇ - அரிய தலைமையையுடைய பெரிய பாணரது அகலிய மண்டையின் கண் துளையையுருவி; இரப்போர் கையுளும் போகி - இரப்பவர் கையுள்ளும் தைத்துருவி; புரப்போர் புன்கண் பாவை சோர - தன்னாற் புரக்கப்படும் சுற்றத்தாரது புல்லிய கண்ணிற் பாவை ஒளி மழுங்க; அம் சொல் நுண் தேர்ச்சிப் புலவர் நாவில் சென்று வீழ்ந்தன்று - அழகிய சொல்லை யாராயும் நுண்ணிய ஆராய்ச்சியையுடைய அறிவினையுடையோர் நாவின்கண்ணே போய் வீழ்ந்தது; அவன் அருநிறத்து இயங்கிய வேல் - அவனது அரிய மார்பத்தின்கண் தைத்த வேல்; ஆசாகு எந்தை - எமக்குப் பற்றாகிய எம் மிறைவன்; யாண்டு உளன் கொல்லோ - எவ்விடத்துள்ளான் கொல்லோ; இனிப் பாடுநரும் இல்லை பாடுநர்க்கொன்று ஈகுநரும் இல்லை - பாடுவாரும் இல்லை பாடுவார்க்கு ஒன்று ஈவாரும்இல்லை; பனித்துறைப் பகன்றை நறைக்கொள் மாமலர் - குளிர்ச்சியையுடைய நீரையுடைய துறையின்கண் பகன்றையினது தேனைப் பொருந்திய பெரிய மலர்; சூடாது வைகி யாங்கு - பிறராற் சூடப்படாது கழிந்தாற் போல; பிறர்க்கு ஒன்று ஈயாது வீயும் உயிர் தவப்பல - பிறர்க்கு ஒரு பொருளைக் கொடுக்காது மாய்ந்து போம் உயிர் மிகப் பல; எ-று. அவன் நிறத்து உருவிய வேல் அவனுக்கு இறந்து பாட்டைச் செய்தலோடே பாணர் முதலாயினார்க்கும் இறந்து பாட்டினைச் செய்தலான், ஒரு காலத்தே யாவரிடத்தும் தைத்தது என்றாராகக் கொள்க. மன்;கழிவின்கண் வந்தது. விளக்கம் : “சிறியகட் பெறினே எமக்கீயு மன்னே என்புழி மன்னைச் சொல் இனி அது கழிந்தது காண் என்னும் பொருள் குறித்து நின்றது; காண் என்றால், பொருளுணராதானை, அரிதாகப் பெற்றகள்ளை எக்காலமும் எமக்குத் தருகின்றவன் துறக்கத்துச் சேறலின் எமக்குக் கள்ளுண்டல் போயிற்றென்றல் இதன் பொருள் எனத் தொடர்மொழி கூறிப் பொருளுணர்த்துக” என்பர் (சொல். உரி. 94) நச்சினார்க்கினியர். அஞ் சொல் நுண் தேர்ச்சிப் புலவர் என்றதற்குச் சொல்லழகும் பொருளழகு மென்ற அழகமையச் சொல்லுதலும், பிறர் சொல்வனவற்றின்கண்ணும் நூலின் கண்ணும் ஆழ்ந்து கிடக்கும் நுண் பொருளைத் தேர்தலுமுடைய புலவர் என்று உரைத்தாலும், பொருள்நலம் குறையாதென வுணர்க. ஆசு, பற்றுக்கோடு, பற்றாசு என்றாற்போல அவன் இறந்தது குறித்து கையற்றுப் பாடுதலால், “யாண்டுளன்கொல்லோ” என்றார். பகன்றை பலரும் சென்று படியும் நீர்த்துறைக்கட் பூத்திருப்பினும், பெரிதாயும் நிறைந்ததாயும் இருப்பினும் அதன் பூ எவர்க்கும் பயன்படா தென்றற்குப் “பனித்துறைப் பகன்றை” யென்றும், “நறைக்கொண் மாமல”ரென்றும் மிகுத்துக் கூறினார். காஞ்சித் திணைக்குரிய துறைகளுள், “இன்னனென் றிரங்கிய மன்னை” யென்ற துறைக்கு இப்பாட்டு முழுதையும் எடுத்துக் காட்டுவர் (தொல். புறத். 19) இளம்பூரணர். “ஈயாது வீயும் உயிர்” என்ற வழி, உயிரென்பது உடம்பொடு கூடிநிற்கும் மக்களையேயாயினும், உடம்பின் தொடர் பாலுண்டாகும் ஈத்துவக்கும் இன்பமும். ஈகையாலுள தாகும் புகழும் அறியாமையின் வாளா “உயிர்” என்றார். “தோன்றலின் தோன்றாமை நன்று” (குறள். 236) என்றதற்குப் பரிமேலழகர் கூறும் உரை ஈண்டு நினைவுகூரத்தக்கது. 236. வேள்பாரி வேள்பாரி இறந்தபின் அவன் மகளிர் இருவரையும் அந்தண ராகிய கபிலர் வேந்தர் சிலரிடம் கொண்டு சென்று மணம் புரிவிக்க முயன்றனர். அவர் முயற்சி பயன்படவில்லை. முடிவில் மலையமான் நாட்டுத் தலை நகராகிய திருக்கோவலூரை யடைந்து அம் மகளிரை அவ்வூர்ப் பார்ப்பாரிடத்தே அடைக்கல மாகத் தந்தனர். பார்ப்பனரிடையுள்ள பொருட்கும் உயிர்கட்கும் பிறர் எவரும் தீங்கு செய்தலாகாது என்பது அந்நாளைய முறை. பிறர்பால் மகட்கொடை வேண்டிச் செல்வதும், மகள் மறுத்தால் அது குறித்துப் போர்தொடுத்து உடற்றுவதும் பண்டையோர் மரபு; ஆயினும், பார்ப்பாரிடம் மகட்கொடை விழைவதும் அதுவே வாயிலாகப் போர் மேற்கொள்வதும் இல்லை. இதனை ஆசிரியர் கபிலர் நன்கறிந்தவராதலாற்றான், பாரி மகளிரைப் பார்ப்பாரிடத்தே அடைக்கலப் படுத்தார். அவர்கட்கு ஒரு தீங்கும் உண்டாகாதென வுணர்ந்த கபிலருக்குப் பெருஞ்சுமை நீங்குவதாயிற்று. வேள் பாரியின் உயிர்த் துணைவராதலின், அவனையில்லாத இந்நிலவுலகு அவர்க்கு உயிரிலாத உடல் போலப் பொலிவிழந்து தோன்றிற்று. பாரியை நினைந்து நினைந்து அவர் தம் தூய நெஞ்சு துயரத்தால் புண்பட்டது. இனி வடக்கிருத் தலை மேற்கொண்டு உண்ணா நோன்பால் உயிர் துறந்து மறுமை யுலகில் அவனைக் கண்டு கூடிப் பண்டேபோல் நட்புக் கிழமையால் நல்வாழ்வு வாழ்தல் வேண்டுமென அவர் எண்ணினார். தென் பெண்ணையின் நட்டாற்றுத் துருத்தியில் ஓரிடங்கண்டு வடக் கிருக்கலானார் இன்றும் கோவலூர்க் கருகில் தென்பெண்ணை யாற்றில் கபிலக்கல்லென ஒரு கல்லிருந்து கபிலர் வடக்கிருந்த செய்தியை நினைவுறுத்துக் கொண்டு நிற்கிறது. அக்காலை அவர், வேள் பாரியை மனக்கண்ணிற்கண்டு, “மாவண் பாரி, என்னை நீ பல யாண்டுகள் பேணிப் பாதுகாத்தாய்; அக்காலமெல்லாம் நீ என்னோடு உயிர்கலந்தொன்றிய கேண்மையுடையனாய் ஒழுகி னாய்; ஆயினும், நீ இவ்வுலகினின்றும் பிரியுங்கால், என்னையும் உன்னோடு உடன்வரவிடாது “இருந்து வருக”எனக் கூறிப் பிரிந்தாய்; இதனால் நீ என்பால் வேறு பட்டாய் போலும்; யான் நினக்குப் பொருந்தாதவன் போலும்; எவ்வாறாயினும் ஆகுக; இனி, இப் பிறப்பில் நம்மிருவரையும் கூட்டி ஒன்றிய நட்பால் உயர் வாழ்வு வாழச்செய்த நல்லூழ், மறுமையிலும் நின்னொடு உடனுறையும் வாழ்வை நல்குவதாக” என்று மொழிந்தார். அம் மொழியே இப்பாட்டு. கலையுணக் கிழிந்த முழவுமருள் பெரும்பழம் சிலைகெழு குறவர்க் கல்குமிசை வாகும் மலைகெழு நாட மாவண் பாரி கலந்த கேண்மைக் கொவ்வாய் நீயெற் 5 புலந்தனை யாகுவை புரந்த யாண்டே பெருந்தகு சிறப்பி னட்பிற் கொல்லா தொருங்குவரல் விடாஅ தொழிகெனக் கூறி இனையை யாதலி னினக்கு மற்றியான் மேயினே னன்மை யானே யாயினும் 10 இம்மை போலக் காட்டி யும்மை இடையில் காட்சி நின்னோ டுடனுறை வாக்குக வுயர்ந்த பாலே. திணை : அது, துறை: கையறுநிலை. வேள்பாரி துஞ்சியவழி, அவன் மகளிரைப் பார்ப்பார்ப்படுத்து வடக் கிருந்த கபிலர் பாடியது. உரை : கலையுணக் கிழிந்த முழவுமருள் பெரும்பழம் - முசுக்கலை கழித்துண்டலாற் பீறிய முழவுபோலும் பெரிய பலாப் பழம்; சிலைகெழு குறவர்க்கு அல்கு மிசைவாகும் - வில்லையுடைய குறவர்க்கு அதன் பெருமையால் சில நாளைக்கு இட்டுவைத் துண்ணும் உணவாம்; மலைகெழு நாட - மலையையுடைய நாட்டையுடையோய்; மாவண் பாரி - பெரிய வண்மையுடைய பாரி; கலந்த கேண்மைக்கு ஒவ்வாய் - நீயும் யானும் கலந்து நட்பிற்குப் பொருந்த ஒழுகாயாய்; நீ என் புலந்தனையாகுவை - நீ யென்னை வெறுத்தாயாகக் கடவை; புரந்த யாண்டு - நீ எனக்கு உதவி செய்த யாண்டுகளும்; பெருந்தகு சிறப்பின் நட்பிற்கு ஒல்லாது - பெருமைதக்க தலைமையினையுடைய நட்பிற்குப் பொருந்தாமல்; ஒருங்கு வரல் விடாது - யானும் நின்னோடுகூடப் போதுதற்கு இயையாது; ஒழிக எனக் கூறி - நீ ஈண்டுத் தவிர்க எனச் சொல்லி; இனையை யாதலின் - இப்படி வேறுபட்ட தன்மையையுடைய யாதலின்; நினக்கு யான் மேயினேன் அன்மையான் - நினக்கு யான் பொருந்தினே னல்லாமையான்; ஆயினும் - இங்ஙனம் பொருந்திற்றிலே னாயினும்; இம்மை போலக் காட்டி - இப்பிறப்பின் கண் நீயும் யானும் கூடி இன்புற்றிருந்தவாறு போலக் காட்டி; உம்மை - மறுபிறப்பினும்; இடையில் காட்சி நின்னோடு - இடைவிடாத காட்சியினையுடைய நின்னோடு; உடனுறைவு உயர்ந்த பால் ஆக்குக - கூடி வாழ்தலை உயர்ந்த விதி கூட்டுவதாக; எ-று. உலந்த யாண்டு என்று பாடமாயின், கழிந்த யாண்டு என்க. மற்று: அசைநிலை விளக்கம் : கலந்த கேண்மையை விளக்கற்கு, நீயும் யானும் கலந்த நட்பு என்றார். இம்மையில் தன்னோடு கூடியிருந்து கலந்த கேண்மையால் இடைவிடாத காட்சி நல்கி இன்புறுத்தினா னாதலின், “உம்மைப் பிறப்பில் உடனுறை வாக்குக பால்” என்றார். பால், விதி, “உயர்ந்த பால்” என்றார், இம்மையிற்போல மறுமையிலும் உடனிருந்து பயன் தரும் உயர்வுடைமைபற்றி, பிறரும் “வாழச்செய்த நல்வினை யல்லது, ஆழுங் காலைப் புணைபிறி தில்லை” (புறம்: 367) என்று விதியின் உயர்வை எடுத்தோதுவது காண்க. 237. இளவெளிமான் வெளிமானாகிய வள்ளலைக் காண்டற்குப் பெருஞ் சித்திரனார் அவனுடைய ஊர்க்குச் சென்றதும், அக்காலை அவன் துஞ்சும் நிலையில் இருந்ததும், தன் தம்பி இளவெளிமானை நோக்கிப் பெருஞ்சித்திரனாரை நன்கு மதித்துப் பேணுமாறு அவன் பணித்ததும், பின்னர் அவன் இறந்ததும், இளவெளிமான் தனக்கு மூத்தோன் உரைத்ததை மதியாது பெருஞ்சித்திரனார்க்குச் சிறிதளவே தந்து இகழ்ந்ததும் முன்பே நாம் கண்டுள்ளோம். அப்போது அவர் அவன் கொடுத்த சிறு பரிசிலைப் பொருளாக மதியாது தமது நெஞ்சொடு நொந்து “உலகம் பெரிது; நம்மைப் பேணுவோர் பலர்; செல்வோம் வருக” என எழுந்து சென்றதும் நாம் அறிந்த செய்தியே. வெளிமானைக் கண்டு பரிசில் பெற விழைந்தவர், வெளிமான் இறந்ததனால் உள்ளம் உடைந்தார்; அதனால் உண்டாகிய கவலை, இளவெளிமான் சிறிது கொடுத்து இகழ்ந்ததனால் மிகவும்பெரிதாய்க் கையறவினைப் பயந்தது. சோறாக்குதற்கேற்றிய உலைப்பானையில் சோறு வாராது நெருப்பு வந்தது போல, நாம் நாடிப் போந்த நல்லோன் நம்நசை பழுதாக மாய்ந்தான்; தான் கொல்லக் கருதிய களிறாகிய இரை தவறுமாயின், வயப்புலி, வேறோர் எலியை வேட்டம்புரிந்து கொன்று பசிதீர நினையாது; அதுபோல் நாமும் இச் சிற்றளவாகிய பரிசிலை விரும்பி யேற்றல் முறையன்று; வேற்றிடம் சென்று பெரும் பரிசிலைப் பெறலாம்” எனத் தமது நெஞ்சோடு இனைந்து வருந்தித் தேறினார். அத் தேற்றம் இப் பாட்டுருவில் வெளி வந்தது. நீடுவாழ் கென்றியா னெடுங்கடை குறுகிப் பாடி நின்ற பசிநாட் கண்ணே கோடைக் காலத்துக் கொழுநிழ லாகிப் பொய்த்த லறியா வுரவோன் செவிமுதல் 5 வித்திய பனுவல் விளைந்தன்று நன்றென நச்சி யிருந்த நசைபழு தாக அட்ட குழிசி யழற்பயந் தாஅங்கு அளியர் தாமே யார்க வென்னா அறனில் கூற்றந் திறனின்று துணிய 10 ஊழி னுருப்ப வெருக்கிய மகளிர் வாழைப் பூவின் வளைமுறி சிதற முதுவா யொக்கற் பரிசில ரிரங்கக் கள்ளி போகிய களரியம் பறந்தலை வெள்வேல் விடலை சென்றுமாய்ந் தனனே 15 ஆங்கது நோயின் றாக வோங்குவரைப் புலிபார்த் தொற்றிய களிற்றிரை பிழைப்பின் எலிபார்த் தொற்றா தாகு மலிதிரைக் கடன்மண்டு புனலி னிழுமெனச் சென்று நனியுடைப் பரிசிற் றருகம் 20 எழுமதி நெஞ்சே துணிபுமுந் துறுத்தே. திணை : பொதுவியல். துறை: கையறுநிலை. வெளி மானுழைச் சென் றார்க்கு அவன் துஞ்ச இளவெளிமான் சிறிது கொடுப்பக் கொள்ளாது பெருஞ்சித்திரனார் பாடியது. உரை : நீடு வாழ்க என்று - நெடுங்காலம் வாழ்வாயாக என்று; யான் நெடுங்கடை குறுகி - யான் நெடிய வாயிலை யணுகி; பாடி நின்ற பசி நாட்கண் - பாடி நின்ற பசியையுடைய காலத்தின்கண்ணே; கோடைக் காலத்துக் கொழு நிழலாகி - கோடையான் வெம்மையுற்ற பொழுதின்கண் அடைந்தார்க்குக் கொழுவிய நிழலையொத்து; பொய்த்தல் அறியா உரவோன் - யார் கண்ணும் பொய் கூறுதலறியாத அறிவையுடையோனது; செவிமுதல் வித்திய பனுவல் - செவியிடத்து நல்லோர் விதைத்த கேள்வியாகிய பயிர்; நன்று விளைந்தன்று என - நன்றாக விளைந்ததென நினைத்து; நச்சியிருந்த நசை பழுதாக - பரிசிலை விரும்பியிருந்த அவ் விருப்பம் பயனில்லையாக; அட்ட குழிசி அழல் பயந்தாங்கு - அடப்பட்ட பானை யினின்றும் சோறின்றி எரிபுறப்பட்டாற்போல; அளியர் - அளிக்கத்தக்கார்; ஆர்க என்னா அறனில் கூற்றம் - உண்பாராக வென்று கருதாத அறமில்லாத கூற்றம்; திறனின்று துணிய - கூறுபாடின்றாகி அவன் உயிரைக் கொள்ளத் துணிய; ஊழின் உருப்ப எருக்கிய மகளிர் - முறையான் வெய்தாக மார்பின்கண் அறைந்து கொண்ட மகளிர்; வளை முறி வாழைப் பூவின் சிதற; முதுவாய் ஒக்கல் பரிசிலர் இரங்க - முதிய வாக்கினையுடைய சுற்றத்தோடு கூடிய பரிசிலர் இரங்க; கள்ளி போகிய களரியம் பறந்தலை - கள்ளி யோங்கிய களர் நிலமாகிய பாழ்பட்ட புறங்காட்டின்கண்; வெள்வேல் விடலை சென்று மாய்ந் தனன் - வெளிய வேலையுடைய வீரன் போய் இறந்துபட்டான்; அது நோய் இன்றாக - கூற்றம் நோயின்றியிருப்பதாக; ஓங்கு வரை -உயர்ந்த மலையிடத்து; புலி பார்த்து ஒற்றிய - புலி பார்த்து வீழ்த்த; களிற்றிரை பிழைப்பின் - களிறாகிய இரை தப்பின்; எலி பார்த்து ஒற்றாதாகும் - தனக்கு இரையாதற்குப் போதாத எலியைப் பார்த்து வீழ்த்தாதாகும்; மலி திரைக் கடல் மண்டு புனலின் - மிக்க திரையையுடைய கடலின் கண் மண்டிய ஆற்று நீர்போல; இழுமெனச் சென்று விரையப்போய்; நனியுடைப் பரிசில் தருகம் - மிகுதியை யுடைத்தாகிய பரிசிலைக் கொண்டு வருவேமாக; எழுமதி நெஞ்சே - எழுந்திராய் நெஞ்சே; துணிபு முந்துறுத்து - தெளிவை முன்னிட்டுக்கொண்டு; எ-று. நசை பழுதாக அழற் பயந்தாங்குக் கூற்றம் துணிய விடலை மாய்ந்தன னெனவும், மகளிர் வளைமுறி வாழைப்பூவிற் சிதற வெனவும் துணிபு முந்துறுத்து நெஞ்சமே எழுவெனவும்கூட்டுக. நோயின்றாக வென்றது “குறிப்பிற்றோன்றல்” (தொல். பெய. 3) ஆங்கது நோயின்றாக வென்றது இளவெளிமான் சிறிது கொடுப்ப அதனை இகழ்ந்து கூறிய தென்பாருமுளர். “புலி பார்த்தொற்றிய களிற்றிரை பிழைப்பின். எலி பார்த் தொற்றாதாகும்” என்பதூஉம் இவன்பின் கொடுத்த பரிசிலின் சிறுமை நோக்கி நின்றது. “ஊழை யுருப்ப எருக்கிய மகளிர்” என்று பாடமோதி விதியை வெறுப்ப எருக்கிய மகளிர் என்றுரைப்பினு மமையும். விளக்கம் : “கோடைக் காலத்துக் கொழு நிழலாகி” என்ற விடத்து ஆகுதல் ஒப்புப் பொருள் உணர்த்திநின்றது. “பொய்த்தலறியா வுரவோ” னென்றதனால், பொய்யாமையாகிய நல்லறம் மிக்க திண்மையுடையார் பாலே காணப்படும் என்பதும் தெரிகிறது. பனுவல், நல்லோர் உரைத்த நல்லுரை. நன்று விளைந்தன்று என இயைத்து நன்றாக விளைந்த தெனப் பொருள் கூறப்பட்டது. பழுது - பயனின்மை. “அட்ட குழிசி யழற் பயந்தாங்கு” என்பது பழமொழி. திறன் - கொள்ளத்தக்கார், தகாதார் எனக் கூறுபடுத்தறியும் அறிவு. அறிவின்மையான், உயிர் கொள்ளத்தகாத வெளிமான் உயிரைக் கொன்றதென வருந்திக் கூறுகின்றாராதலால், “திறனின்று துணிய” என்றார். எருக்குதல் மார்பிலறைந்து கொள்ளுதல்; இஃது அருக்குதல் எனவும் வழங்கும்; “மகளிர் குரூஉப் பைந்தார் அருக்கிய பூசல்” (அகம். 208) என வருதல் காண்க.களர் நிலமே புறங்காடாக வகுக்கப்படுவது பற்றி, “கள்ளி போகிய களரியம் பறந்தலை” யென்றார். “பாறிறை கொண்ட பறந்தலை, மாறுதகக், கள்ளி போகிய களரி மருங்கு” (புறம். 360) என்று பின்னரும் கூறுதல் காண்க. வெளிமான் முதுமை யெய்து முன்பே இறந்தமை தோன்ற, “வெள்வேல் விடலை சென்று மாய்ந்தனன்” என்றார். அது, அக் கூற்றம்; சுட்டினைக் கூற்றுக் கேற்றாது இளவெளிமான் சிறிது கொடுத்ததற்கேற்றுதலும் உண்டென்பது தோன்ற “ஆங்கது....என்பாருமுளர்” என்று உரைத்தார். களிறாகிய இரையைத் தின்னும் புலிக்கு எலி சிறிதும் ஆற்றாதாகலின், தனக்கு இரையாதற்குப் போதாத எலியென்று உரைத்தார். இள வெளிமான் சிறிது கொடுப்ப மனத்தே கலக்கமும் சினமும் கொண்டாராதலால், “துணிபுமுந்துறுத்து எழுமதி” என நெஞ்சை ஒருப்படுத்தினார். பெருவேந்த னல்லனாதலின் இவ்வண்ணம் கூறினார். பெருவேந்தன் மறுத்த வழிப் “புலம்புமுந் துறுத்துச்” (புறம். 210) செல்லுப என அறிக. 238. வெளிமான் வெளிமானது நல்லூர்க்குப் போந்து அவன்பால் பரிசில் பெற்றுத் தமது வறுமைத் துன்பத்தைப் போக்கிக்கொள்வது கருத்தாக வந்தவர் ஆசிரியர் பெருஞ்சித்திரனார். அவர் வந்தபோது வெளிமான் துஞ்சும் நிலையில் இருந்தான். ஆயினும், பெருஞ்சித்திர னாரது பெருமையும் புலமையும் நன்கறிந்திருந்தமையின் முகத்தால் அன்புற நோக்கி இன்புற இருத்தி அவரை வரவேற்றான். தன் தம்பி இளவெளிமானை நோக்கிப் பெருஞ்சித்திரனாருக்கு வேண்டும் பரிசில் நல்கிச் சிறப்பிக்குமாறு பணித்தான். பின்பு சிறிது போதில் வெளிமான் துஞ்சினான். அது கண்டு ஆற்றாது பெருஞ்சித்திரனார் பெரிதும் மனம் வருந்தி, “அவனது மறைவால் பாடுவார் கூட்டம் பரிவுற்று வருந்துமென்றும், போர் முரசும் போர்க்களிறும் பிறவும் கையற்று மெலியுமென்றும் நினைந்து, மாரிக் காலத்திரவில் கலமொன்றிற் போந்த கண்ணில்லாத ஊமன், கலம் சிதைதலால் கடலில் வீழ்ந்து கலங்குவதுபோல யானும் கலங்குகின்றேன்; என் சுற்றம் என்னாகுமோ, அறியேன்; இறந்துபடுதலே தக்கது போலும்” என்ற கருத்தமைந்த இப் பாட்டைப் பாடி வருந்தினார். கவிசெந் தாழிக் குவிபுறத் திருந்த செவிசெஞ் சேவலும் பொகுவலும் வெருவா வாய்வன் காக்கையுங் கூகையுங் கூடிப் பேஎ யாயமொடு பெட்டாங்கு வழங்கும் 5 காடுமுன் னினனே கட்கா முறுநன் தொடிகழி மகளிரிற் றொல்கவின் வாடிப் பாடுநர் கடும்பும் பையென் றனவே தோடுகொண் முரசுங் கிழிந்தன கண்ணே ஆளில், வரைபோல் யானையு மருப்பிழந் தனவே 10 வெந்திறற் கூற்றம் பெரும்பே துறுப்ப எந்தை யாகுத லதற்பட லறியேன் அந்தோ வளியேன் வந்தனென் மன்ற என்னா குவர்கொலெற் றுன்னி யோரே மாரி யிரவின் மரங்கவிழ் பொழுதின் 15 ஆரஞ ருற்ற நெஞ்சமொ டொராங்குக் கண்ணி லூமன் கடற்பட் டாங்கு வரையளந் தறியாத் திரையரு நீத்தத் தவல மறுசுழி மறுகலின் தவலே நன்றுமற் றகுதியு மதுவே. திணையும் துறையு மவை. வெளிமான் துஞ்சியபின் அவர் பாடியது. உரை : கவி செந்தாழிக் குவி புறத்து இருந்த - பிணமிட்டுப் புதைக்கப்பட்ட கவிக்கப்பட்ட செய்ய தாழியினது குவிந்த புறத்தே யிருந்த; செவி செஞ்சேவலும் பொகுவலும் வெருவா - செவி சிவந்த கழுகின் சேவலும் பொகுவலென்னும் புள்ளும் அஞ்சாவாய்; வாய்வன் காக்கையும் கூகையும் கூடி - வாய் வலிய காக்கையும் கோட்டானும் கூடி; பேஎய் ஆயமொடு பெட்டாங்கு வழங்கும் - பேயினத்துடனே தாம் விரும்பிய வழியே யியங்கும்; காடு முன்னினன் கள் காமுறுநன்- சுடுகாட்டைத் தலைப்பட்டான் வீர பானத்தைக் காமுறுவான்; தொடி கழி மகளிரின் - அவனுடைய வளை கழிக்கப்பட்ட உரிமை மகளிரைப் போல; தொல் கவின் வாடி - பழைய அழகு தொலைந்து; பாடுநர் கடும்பும் பையென்றன - பாடுவாரது சுற்றமும் ஒளி மழுங்கின; தோடு கொள் முரசும் கண் கிழிந்தன - தொகுதி கொண்ட முரசங்களும் கண் கிழிந்தன; ஆளில் வரை போல் யானையும் மருப்பு இழந்தன - பாகர் முதலாயின ஆளில்லாத மலைபோன்ற யானைகளும் மருப்பிழந்து விட்டன. வெந்திறல் கூற்றம் பெரும்பேது உறுப்ப - இவ்வாறு வெவ்விய திறலையுடைய கூற்றம் பெரிய இறந்து பாட்டை எய்துவிப்ப; எந்தை ஆகுதல் - என்னிறைவன் பேதுறவெய்தி; அதற்படல் - அவ்விறந்து பாட்டிலே படுதலை அறியேன் - அறியேனாய்; அந்தோ - ஐயோ; அளியேன் வந்தனென் - அளித்தலை யுடையேன் வந்தேன்; மன்ற என்னாகுவர்கொல் என் துன்னியோர்- நிச்சயமாக என்ன துயரமுறுவர் கொல்லோ என்னையடைந்த சுற்றத்தார்; மாரி இரவின் - மழையையுடைய இரவின்கண்; மரங்கவிழ் பொழுதின் - மரக்கலங் கவிழ்ந்த காலத்து; ஆரஞர் உற்ற நெஞ்சமொடு - பொறுத்தற்கரிய துன்பமுற்ற நெஞ்சுடனே; ஓராங்கு - ஒரு பெற்றிப்பட; கண்ணில் ஊமன் கடற்பட்டாங்கு - கண்ணில்லாத ஊமன் கடலின்கண் அழுந்தினாற்போல; வரையளந் தறியாத் திரையரு நீத்தத்து - எல்லையளந்தறியப்படாத திரையரிதாகிய வெள்ளத்தின் கண்; அவல மறுசுழி மறுகலின் - துன்பமாகிய மறுசுழியின் கட்பட்டுச் சுழலு மதனில்; தவலே நன்றுமன் - இறந்துபடுதலே நன்று; தகுதியும் அதுவே - நமக்குத் தக்க செய்கையும் அதுவே; எ- று. யான் அது செய்யப் பெற்றிலேன் என்னும் நினைவிற்று. மன்: கழிவின்கண் வந்தது. வெருவா வழங்குமென இயையும். முரசும் கண் கிழிந்தன; யானையும் மருப்பிழந்தன என்ற கருத்து, அவற்றால் தொழில் கொள்வார் இன்மையின் அவை பயனிழந்தன என்பதாம். விளக்கம் : செவி செஞ் சேவ லென்பது எதுகை நோக்கி மொழி மாறி நின்றது; அது செஞ் செவிச் சேவலென நிற்றற்பாலதென்று தெய்வச் சிலையார் (கிளவி. 25) கூறுவர். இவ்வுரைகாரர், கிடந்தபடியே கொள்வர். “செவி சிவந்தசேவ” லென்பது, “வாய்வன் காக்கை” யென்பதற்குக் கூறப்படும் உரையோடு வைத்து ஒப்புநோக்கத்தக்கது. ஆகுதல், கூற்றம் புணர்க்கும் பேதுறவுக்கு இயைதல். அளியே னாதலின் வந்தனென் என்க. காணுந்திறமும் தன் துயரத்தை அரற்றி யுணர்த்தும் திறமும் இல்லாதவன் என்றற்குக் “கண்ணிலூமன்” என்றார். துன்பமாகிய வெள்ளமென்பது கருத்தாதல் பற்றி, “திரையரு நீத்தம் ”எனப்பட்டது. வெள்ளமோடும் நெறியே யோடாது மறித்துச் சுழன்று கழிதலால், மறுகழி யென்றார். நன்று விளைவின் மேலும், தகுதி செய்கை மேலும் நின்றன. நினைவிற் றென்பது குறிப் பெச்சத்தாற் கொள்ளக் கிடந்த தென்றவாறு. களிறுகள் மருப் பிழத்தலாவது, தொழில் கொள்ளும் பாகர் இல்லாமையால் பயன் படுதல் இழந்தன என விளக்கினார். 239. நம்பி நெடுஞ்செழியன் முடியுடைய வேந்தராகிய பாண்டியர்க்கு வினைவேண்டிய விடத்து அறிவும், படை வேண்டுமிடத்து வெல் படையும் தந்து புகழ் மேம்படு வித்த குறுநிலத் தலைவர் பலருண்டு. அவருள் வினை வகையில் வீறு எய்தியோர்க்குப் பாண்டிவேந்தர் தம்முடைய பெயர்களையே பட்டமாக வழங்குவர். இவ் வழக்கு ஏனைச் சோழர்பாலும் சேரர்பாலும் காணப்படும். இடைக்காலச் சோழ பாண்டியர் காலத்தும் இவ்வழக்காறு இருந்து வந்தது. இவ்வகையில் நம்பி யென்னும் பாண்டிநாட்டுக் குறுநிலத் தலைவன் அரிய வினையைச் செய்து முடிவேந்தனாகிய பாண்டியன் நெடுஞ் செழியன் பெயரைத் தனக்குப் பட்டமாகப் பெற்றான். அதனால் இவனைச் சான்றோர் நம்பி நெடுஞ்செழியன் என வழங்கினர். இவன் காலத்து முடியுடைப் பெருவேந்தன் பாண்டியன் நெடுஞ் செழியன் எனக் கருதலாம். இப் பாண்டிநாட்டுக் குறுநிலத் தலைவன்பால் இந் நாட்டு வெண்புல நாட்டுப் பேரெயில் (A.R. No. 96 of 1894) என்னும் ஊரினரான முறுவலார் என்ற நல்லிசைச் சான்றோர் பேரன்பு கொண்டொழுகினார். இவனுடைய பல வாகிய நற்பண்புகள் அனைத்தையும் அவர் பன்முறையும் கண்டு பயின்றிருந்தனர். இருக்கையில், நம்பி நெடுஞ்செழியன் எதிர் பாராவகையில் உயிர் துறந்தான். பிறர் படையால் இறவாமல் கூற்றத்தாற் கொள்ளப்படுபவர் நோலாதவர் என்ற கருத்தால், அக்காலத்துச் சான்றோர், வேல் வாள் முதலிய படைகளால் இறவாதார் உடம்பை, அடக்கம் செய்யுங்கால் படையால் போழ்ந்து நிலத்திற் புதைத்தலோ சுடுதலோ செய்வர். நம்பி நெடுஞ்செழியன் வாள் முதலிய படையாற் புண்பட்டிறவாமையால், செய்யத் தகுவது அறிய வேண்டி அக் காலையில் அங்கே கூடியிருந்த சான்றோர், நல்லிசைச் சான்றோராகிய பேரெயில் முறுவலாரை அறிவு வழங்குமாறு வேண்டினர். நெடுஞ்செழியனது எதிர்பாரா இறப்பு அவர்க்குப் பெரும் பேதுறவை விளைத்தது. அவர், “நம்பிநெடுஞ்செழியன் அறத்துறை, பொருட்டுறை, இன்பத்துறை யென்ற எல்லாத் துறையிலும் மாசறக் கடைபோகி மாண் புற்றவன். சுருங்கச் சொல்லுமிடத்து அவன் செய்யத் தகுவன வெல்லாம் சிறப்புறச் செய்தானாதலால், அவன் தலையை வாளாற் போழினும் சுடினும் எது செய்யினும் தகுவதாம்” என்ற கருத் தமைந்த இப்பாட்டைப் பாடிக் காட்டிப் பரிவுற்றார். தொடியுடைய தோண்மணந்தனன் கடிகாவிற் பூச்சூடினன் தண்கமழுஞ் சாந்துநீவினன் செற்றோரை வழிதபுத்தனன் 5 நட்டோரை யுயர்புகூறினன் வலியரென வழிமொழியலன் மெலியரென மீக்கூறலன் பிறரைத்தா னிரப்பறியலன் இரந்தோர்க்கு மறுப்பறியலன் 10 வேந்துடை யவையத் தோங்குபுகழ் தோற்றினன் வருபடை யெதிர் தாங்கினன் பெயர்படை புறங்கண்டனன் கடும்பரிய மாக்கடவினன் நெடுந்தெருவிற் றேர்வழங்கினன் 15 ஓங்கியல களிறூர்ந்தனன் தீஞ்செறி தசும்புதொலைச்சினன். பாணுவப்பப் பசிதீர்த்தனன் மயக்குடைய மொழிவிடுத்தனன். ஆங்குச் செய்ப வெல்லாஞ் செய்தன னாகலின் 20 இடுக வொன்றோ சுடுக வொன்றோ படுவழிப் படுகவிப் புகழ்வெய்யோன் றலையே. திணை : பொதுவியல். துறை: கையறுநிலை. நம்பி நெடுஞ்செழியனைப் பேரெயில் முறுவலார் பாடியது. உரை : தொடியுடை தோள் மணந்தனன் - இளைய மகளிரது வளையணிந்த தோளை முயங்கினான்; கடிகாவில் பூச்சூடினன் - காவலையுடைய இளமரக்காக்களில் பூவைச் சூடினான்; தண் கமழும் சாந்துநீவினன் - குளிர்ந்த மணம் நாறும் சாந்தைப் பூசினான்; செற்றோரை வழி தபுத்தனன் - பகைத்தோரைக் கிளையொடும் கெடுத்தான்; நட்டோரை உயர்பு கூறினன் - நட்டோரை மிகுத்துக் கூறினான்; வலியரெனவழி மொழியலன் - இவர் நம்மில் வலியரென்று கருதி அவர்க்கு வழிபாடு கூறி யறியான்; மெலியரென மீக் கூறலன் - இவர் நம்மில் எளிய ரென்று கருதி அவரின் மிகுத்துச் சொல்லியறியான்; பிறரைத் தான் இரப்பறியலன் - பிறரைத் தான் ஒன்று ஈயெனச் சொல்லி இரந்தறியான்; இரந்தோர்க்கு மறுப்பறியலன் - சூழ்ந்து நின்று இரந்தோர்க்கு யாதும் இல்லையென்று மறுத்தலை யறியான்; வேந்துடை அவையத்து ஓங்கு புகழ் தோற்றினன் - அரச ருடைய அவைக்களத்தின்கண் தனது உயர்ந்தபுகழை வெளிப் படுத்தினான்; வருபடை எதிர் தாங்கினன் - தன்மேல் வரும் படையைத் தன்னெல்லையுட் புகுதாமல் எதிர்நின்று தடுத்தான்; பெயர் படை புறங்கண்டனன் - புறக்கொடுத்துப் பெயரப்பட்ட படையினது புறக்கொடை கண்டு அதன்பின் செல்லாது நின்றான்; கடும்பரிய மாக்கடவினன் - விரைந்த செலவை யுடைய குதிரையைத் தன் மனத்தினும் விரையச் செலுத்தி னான்; நெடுந்தெருவில் தேர் வழங்கினன் - நெடிய வீதியின் கண் தேரைச் சூழ இயக்கினான்; ஓங்கு இயல களிறு ஊர்ந்தனன் - உயர்ந்த இயல்புடையவாகிய களிற்றைச் செலுத்தினான்; தீஞ் செறி தசும்பு தொலைச்சினன் - இனிய செறிவை யுடைத்தாகிய மதுவையுடைய குடங்களைப் பலர்க்கும் வழங்கித் தொலைவித்தான்; பாண் உவப்பப் பசி தீர்த்தனன் - பாணர் உவப்ப அவர் பசியை மாற்றினான்; மயக்குடைய மொழி விடுத்தனன் - நடுவு நிலைமையின் மயங்குதலையுடைய சொற் களை அந் நடுவு நிலைமையின் பிழையாதபடி மயக்கந்தீரக் கூறினான்.; ஆங்குச் செய்ப எல்லாம் செய்தனன் ஆகலின் - அப்படிச் செய்யத் தகுவனவெல்லாம் செய்தானாகலான்; இப் புகழ் வெய்யோன் தலை - இப் புகழை விரும்புவோனது தலையை; இடுக வாளானறுத்துப் போகடினும் போகடுக; சுடுக - அன்றிச் சுடினும் சுடுக; படுவழிப் படுக - பட்டபடி படுக; எ-று. “நட்டோரை உயர்பு கூறினன்” என்றது, தான் உயர்த்துக் கூறவே யாவரும் உயர்த்துக் கூறுவரென்பதாம். “மயக்குடைய மொழி விடுத்தனன்” என்பதற்கு உலகவொழுக்கத்தில் மயக்க முடைய சொற்கள் தன்னிடைப் புகுதாமல் விடுத்தானென்றும், பொருள் மயங்கிய சொற்களைத் தன்னிடத்துப் புகுதாமல் விடுத்தானென்றும் உரைப்பினும் அமையும். ஒன்றோ வென்பது எண்ணிடைச் சொல். விளக்கம் : பேரெயில் என்றோரூர் சோழநாட்டிலும் உளது. ஆயினும், முறுவலார் பாண்டித் தலைவனைப் பாடியிருப்பதாலும், பாண்டி நாட்டிலும் இப் பெயருடையதோரூர் இருத்தலாலும், இவர் பாண்டி நாட்டினரென்பது வலியுறுகிறது. நம்பிநெடுஞ்செழியன் பெயர். நெடுமொழியனென்றும் காணப்படுகிறது. நம்பிநெடுமொழியன் என்பதே பாடமாயின், நெடுமொழியனூரென்றோரூர் தென்னார்க்காடு மாவட்டத்தில் உண்மையின், பேரெயின் முறுவலார் சோழநாட்டினரெனத் துணியலாம். தொடி, மகளிர்க்குரிய சீரிய அணியாதலின், அதுவே இளமகளிரைக் குறிப்பதாயிற்று. “சுடர்த்தொடீஇ கேளாய்” (கலி. 51) என வருதல் காண்க. அதனால் தொடியுடையதோள் என்றதற்கு “இளைய மகளிரது வளையணிந்த தோள்” என உரை கூறப்பட்டது. பழம்பகை ஒருகாலும் நட்பாகாமை குறித்து, அதனை “வழிதபுத்தனன்” என்றார். வழிமொழிதலாவது, யாது கூறினும் தலை குனிந்து உடன் பட்டொழுகுதல். “வேந்துடை அவையத் தோங்கு புகழ் தோற்றினன்” எனவே, இந்நெடுஞ்செழியன் முடி வேந்தனல்ல னென்பது தெள்ளி தாம். புறங்கண்ட வழி, அப் புறங்காட்டினாரை யெறிதல் மறத்துறை யாகாமையின், “புறக் கொடை கண்டு அதன்பின் செல்லாது நின்றான்” எனவுரைத்தார். கடவுதல் விரையச் செலுத்துதலாதலால், கடவினன் என்றதற்கு “மனத்தினும் விரையச் செலுத்தினான் என்றார். தசும்பு - கட்குடம். தீஞ்செறி,இனிய செறிவை யுடைத்தாகிய கள். தொலைச் சினன் என்றது பலர்க்கும் வழங்கித் தீர்த்தான் என்பதாம். மயக் குடைய மொழியென்பது மயங்குதலையுடைய மொழியெனவும் மயக்கமுடைய சொற்கள் எனவும், பொருள் மயங்கிய சொற்கள் எனவும் மூவகையாகப் பொருள்பட நிற்றலால் மூன்று பொருளும் எடுத்துக் காட்டினார். இடுகவென்றதற்குப் புதைக்க என நேர் பொருள் கூறாது, “வாளால் அறுத்துப் போகடினும் போகடுக” என்றது, இவ்வாறு வாளாற் போழப்பட்டாரைச் சுடுவது மரபன்மையின், அப்பொருள் தானே பெறப்படவைத்தார். மேலும், இங்கு இடுதல், சுடுதல் என்பனவற்றைப் பற்றியன்று ஆராய்ச்சி. எது செய்யினும் கேடில்லை யென்றற்கு, “படுவழிப்படுக” என்றார். 240. ஆய் அண்டிரன் பொதியமலையைச் சூழ்ந்த வேணாட்டுக்குரியனாய் ஆய் குடியிலிருந்து ஆட்சிபுரிந்துவந்த வள்ளலாகிய ஆய் அண்டிரன், புலவர் பாணர் முதலிய பலர்க்கும் ஈத்துப் புகழ் நிறுவி என்றும் பொன்றா இசைவடிவினனாய் இருந்துவந்தான். மேலைக் கடற்கரையில் பொதியின் மலையை நடுவாகக் கொண்டு வடக்கிலும் தெற்கிலும் பரந்து கிடந்த நாடுவேளிர்க்குரிய வேணாடாகும். இதன் வடக்கில்குட்டநாடும் தெற்கில் குமரிப் பகுதியான தென்பாண்டி நாடும் இருந்தன. இவ்வேணாட்டை மேனாட்டுத் தாலமி முதலிய அறிஞர்ஆவி (Avi) நாடெனக் குறித்தனர். இதனை ஆண்டவேந்தர், வேள், வேளிர், வேண்மான் என்றும் வேணாட்டடிகள் என்றும் தம்மைக் கூறிக் கொண்டனர். இந் நாட்டின் தென்பகுதியில் பொதியிலைச் சூழ்ந்து ஆய் அண்டிரனது நாடு இருந்தது. செங்கோட்டை வட்டத்தில் ஆய்குடியைத் தலைமையாகக் கொண்டு ஆய்குடிப்பகுதி யென்றொரு பகுதியுளது. குட்டநாட்டுச் சேரர்களுக்கும் தென் பாண்டி வேந்தர்க்கும் இடையிலிருந்த ஆய் நாடு கி.பி. எட்டு ஒன்பதாம் நூற்றாண்டுவரையில் பல இன்னல்களுக்கிடையே ஆய் குடியில் தோன்றிய வேந்தராட்சியில் இருந்து வந்தது. ஆய் அண்டிரன் ஆய்குடியைத் தோற்றுவித்த முதல்வனாகலாம் எனக் கருதுவர். பழுமரந் தேர்ந்து வரும் பறவை போலப் புலவர் பலரும் அவனை நோக்கி வந்துகொண்டிருந்தனர்; அவன் வாழ்நாள் முடிந்தது. கண்ணிலாக் காலன் அவன்பால் உயிர்கவர்ந் தொழிந்தான். உயிர் கொடுத்துப் புகழ் கொண்ட அண்டிரன் மேலுவலகம் சென்றான். சான்றோர் அவன் உடம்பை ஈமத்தெடுத்த எரியில் இட்டனர்; அவன் உருவுடம்பு மாய்ந்தது; அதனோடு அவன் உரிமை மகளிரும் மாய்ந்தனர். அந் நிகழ்ச்சி கண்ட புலவர் பலரும் கையற்றுக் கண்ணீரும் கம்பலையுமாய் வேறு நாடு செல்வாராயினர். இவற்றை உடனிருந்து கண்ட சான்றோருள் குட்டுவன் கீரனார் என்பவர் ஒருவர். அவர் குட்ட நாட்டுச் சிறப்புடைய குட்டுவர் குடியிற் பிறந்தவர். கீரன் என்பது அவரது இயற்பெயர். அவர் அண்டிரன் இறந்ததும் உரிமை மகளிர் உடனுயிர் விடுத்ததும் கண்டு கலங்கிய தொருபுறம் நிற்க, கற்று வல்ல புலவர் பலரும் வேறுநாடு செல்வது கண்டு மிகவும் மனங்கலங்கினார். அக் கலக்கத்திடை இவ்வினிய பாட்டையும் பாடினார். ஆடுநடைப் புரவியுங் களிறுந் தேரும் வாடா யாணர் நாடு மூரும் பாடுநர்க் கருகா வாஅ யண்டிரன் கோடேந் தல்குற் குறுந்தொடி மகளிரொடு 5 கால னென்னுங் கண்ணிலி யுய்ப்ப மேலோ ருலக மெய்தின னெனாஅப் பொத்த வறையுட் போழ்வாய்க் கூகை சுட்டுக் குவியெனச் செத்தோர்ப் பயிரும் கள்ளியம் பறந்தலை யொருசிறை யல்கி 10 ஒள்ளெரி நைப்ப வுடம்பு மாய்ந்தது புல்லென் கண்ணர் புரவலர்க் காணாது கல்லென் சுற்றமொடு கையழிந்து புலவர் வாடிய பசிய ராகிப்பிறர் நாடுபடு செலவின ராயின ரினியே. திணையும் துறையு மவை. ஆயைக் குட்டுவன் கீரனார் பாடியது. உரை : ஆடுநடைப் புரவியும் - தாளத்திற்கேற்ப நடக்கும் அசைந்த நடையையுடைய குதிரைகளும்; களிறும் தேரும் - யானைகளும் தேர்களும்; வாடாயாணர் நாடும் ஊரும் - அழியாத புது வருவாயையுடைய நாடும் ஊர்களும், பாடுநர்க்கு அருகா ஆஅய் அண்டிரன் - பாடுவார்க்குக் குறைவறக் கொடுக்கும் ஆயாகிய அண்டிரன்; கோடு ஏந்து அல்குல் குறுந்தொடி மகளிரொடு - கோடேந்திய அல்குலினையும் குறிய வளைகளையு முடைய உரிமை மகளிரோடு; காலன் என்னும் கண்ணிலி உய்ப்ப - காலனென்று சொல்லப்படாநின்ற கண்ணோட்ட மில்லாதவன் கொண்டுபோக; மேலோர் உலகம் எய்தினன் எனாஅ - தேவருலகத்தை யடைந்தானாகக் கொண்டு; பொத்த அறையுள் - பொந்தாகிய தான் வாழுமிடத்து; போழ்வாய்க் கூகை - போழ்ந்தாற் போலும் வாயலகையுடைய பேராந்தை; சுட்டுக்குவி எனச் செத்தோர்ப் பயிரும் - சுட்டுக் குவியென்று செத்தோரை அழைப்பதுபோலக் கூவும்; கள்ளியம் பறந்தலை - கள்ளியையுடைய பாழிடமாகிய புறங்காட்டுள்; ஒரு சிறை அல்கி - ஒருபுடையிலே தங்கி; ஒள்ளெரி நைப்ப உடம்பு மாய்ந்தது - ஒள்ளிய தீச்சுட உடம்பு மாய்ந்துவிட்டது; புல்லென் கண்ணர் - பொலிவழிந்த கண்ணினையுடையராய்; புரவலர்க் காணாது - தம்மைப் பாதுகாப்போரைக் காணாது; கல்லென் சுற்றமொடுகையழிந்து - ஆரவாரிக்கும் கிளையுடனே செயலற்று; புலவர் - அறிவுடையோர்; வாடிய பசியராகி - தம் மெய்யுணங்கிய பசியையுடையராய்; பிறர் நாடுபடு செலவினராயினர் இனி - பிறருடைய நாட்டின்கண் தலைப்படும் போக்கையுடைய ராயினார். இப்பொழுது, இஃதொரு நிலையிருந்த வாறென்னை; எ-று. “மேலோருலகம் எய்தினன் எனவே” எனவும், “ஒள்ளெரி நைப்ப வுடம்பு மாய்ந்தனனென” எனவும் பாடமோதுவாரு முளர். விளக்கம் : ஆஅய் அண்டிரன் இறந்தபின் அவனுடைய வழியினர் இடைக் காலப் பாண்டியர் காலத்திலும் இருந்தனர்; இதனை வேள்விக் குடிச் செப்பேடுகள், சீமாறவன்மன், அரிகேசரி பாண்டியன் மகனான கோச்சடையன் இரணதீரனென் பவன் “கொற்றவேல் வலனேந்திப் பொருதூருங் கடற்றானையை மருதூருள் மாண்பழித்து, ஆய்வேளையகப் படவே யென்னாமை யெறிந்தழித்து” மண்ணினிதாண்டான் என்று கூறுவது காண்க. ஆடு நடை - அசைந்த நடை; விரைந்து செல்லும் இயல்பினதாகிய குதிரையை இவ்வாறு கூறுதற்குக் காரணம் காட்டு வாராய்த் “தாளத்திற் கேற்ப நடக்கும் அசைந்த நடை” யென்றார் அருகுதல், குறைதல்; அருகாது கொடுப்பன். எனவே, “குறைவறக் கொடுக்கும்” என்றார். தன் செயலாற் புலவர்க்குளதாகும் துன்பத்தைக் கண்டு வைத்தும் கண்ணோட்டஞ் செய்து ஆய் அண்டிரன் உயிரைக் கொண்டு போகும் கருத்தைக் கைவிடாமையின், “காலனென்னுங் கண்ணிலி” யென்றார் செத்தோரை யழைத்தலாவது, புறங்காட் டிலிருந்து பேராந்தை அலறுகுரல் செய்தல்; அதுசெத்தவர்களை விரையத் தன்பால் வருமாறு அழைப்பது போலிருத்தலின். “சுட்டுக் குவியெனச் செத்தோர்ப் பயிரும்” என்று உரைத்தார். ஓர்த்தது இசைக்கும் பறை யென்றதற்கேற்ப, ஆந்தையின் பறைக்குரல் இவ்வாறு ஓர்க்கப் பட்டது. 241. ஆய் அண்டிரன் ஆய் அண்டிரன் இறந்தபோது அவனை யடக்கம் செய்த சான்றோரிடையே உறையூர் ஏணிச்சேரி முடமோசியாரும் இருந்தனர். அண்டிரனோடு பன்னாள் நெடிதிருந்து பயின்று பழகிய கேண்மைய ராதலின், மோசியாருக்கு அவனது பிரிவு பெருந்துயரத்தை விளைத்தது. அந் நிலையில் அண்டிரன் உடம்பு ஈமவெரியில் எரிவதும், அவனுடைய உரிமை மகளிர் உடன் வீழ்ந்து எரிவதும் கண்டார். தம்முடைய இரு கண்களையும் ஆற்றாமையால் மூடிக்கொண்டார்; அவர் மனக்கண்ணில் ஆய் அண்டிரன் அவன் உரிமை மகளிர் உடன் சூழ்வரத் தேவருவலகம் சென்று சேரும் காட்சி புலனாயிற்று, இம்மையில் அற வாழ்வு வாழ்ந்து, மறுமையில் நுகர்தற்குரிய இன்ப வாழ்வு வாழ்தல் வேண்டிவரும் ஆயைத் தேவருலக வேந்தன் பெருவிருப்பத் தோடு வரவேற்கும் திறத்தை மனமே கண்ணாகக் கண்டார்; தேவர்கோன் பெருங் கோயிலுள் வரவேற்பு முரசு முழங்குகிறது; தேவர் கூட்டத்தில் பேராரவாரம் எழுகிறது; வானமெங்கும் பெருமுழக்கம் எதிரொலிக்கின்றது. இதனை இப் பாட்டின்கட் குறிக்கின்றார் நம் ஏணிச்சேரி முடமோசியார். திண்டே ரிரவலர்க் கீத்த தண்டார் அண்டிரன் வரூஉ மென்ன வொண்டொடி வச்சிரத் தடக்கை நெடியோன் கோயிலுட் போர்ப்புறு முரசங் கறங்க 5 ஆர்ப்பெழுந் தன்றால் விசும்பி னானே. திணை : பொதுவியல். துறை: கையறுநிலை. அவனை உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் பாடியது. உரை : திண் தேர் இரவலர்க்கு ஈத்த - திண்ணிய தேரை இரவலர்க்கு ஈத்த; தண் தார்அண்டிரன் வரூஉம் என்ன - குளிர்ந்த மாலையையுடைய ஆய் வருகிறான் என்று; ஒண்தொடி - ஒள்ளிய தொடியினையும்; வச்சிரத் தடக்கை நெடியோன் கோயிலுள் - வச்சிராயுதத்தையுமுடைய விசாலமாகிய கையை யுடைய இந்திரனது கோயிலுள்ளே; போர்ப்புறு முரசம் கறங்க - போர்த்தலுற்ற முரசம் முழங்க; விசும்பினான் ஆர்ப்பெழுந் தன்று - வானத்தின்கண் ஓசை தோன்றிற்று; எ-று. இப் பெற்றிப்பட்ட வள்ளியோனை வானோர் எதிர்கோடல் தப்பா தென்றவாறு. இது தற்குறிப்பேற்ற மென்பதோர் அணிப் பொருட்டாய் நின்றது. விளக்கம் : மோசியின் பெயரால் தமிழ்நாட்டில் பல வூர்களுண்டு; தொண்டை நாட்டில் மோசிப்பாக்கம் என்றும், நடு நாட்டில் மோசு குளத்தூரென்றும், பாண்டி நாட்டில் மோசி குடியென்றும் இருத்தல் காண்க. அண்டிரன் என்பதற்கு ஆய் என உரை கூறப்படுவதால், ஆய் என்பது குடிப்பெயரென்றும், அண்டிரன் என்பது இயற்பெயரென்றும் உணர்தற்கு இடமுண்டாகிறது. நெடியோன், இந்திரன். “இப்பெற்றிப் பட்டதென்றவாறு” என்றது குறிப்பெச்சம். அண்டிரனைத் தேவருலகத்து வேந்தன் எதிர்கொண்டு வரவேற்பன் என்பது மோசியார் குறிப்பு; இதனை இந்திரன் கோயிலுள் ஆங்கு வரும் அண்டிரனை வரவேற்றற் பொருட்டு முரசு முழங்குகிறது என உயர்த்துக் கூறுதலால் தற்குறிப் பேற்றமாயிற்று. 242. ஒல்லையூர்கிழான் மகன் பெருஞ்சாத்தன் ஒல்லையூர் என்பது புதுக்கோட்டைத் தனியரசின்கீழிருந்த ஊர்களுள் ஒன்று. இப்போது அதற்கு ஒலியமங்கலம் என்ற பெயர் வழங்குகிறது. இதனைச் சூழவுள்ள பகுதி ஒல்லையூர் நாடெனப்படும். சோழ நாட்டிற்கும் பாண்டிநாட்டிற்கும் எல்லையாக ஓடும் தென்வெள்ளாற்றின் தென்கரை தென்கோனாடு என்றும் வடகரை வடகோனாடு என்றும் வழங்கின. தென் கோனாட்டின் மேலைப்பகுதி ஒல்லையூர் நாடு. இந்த ஒல்லையூரில் வாழ்ந்த கிழானுக்குப் பெருஞ்சாத்தன் இனிய மகனாய்ப் பாண்டி நாட்டின் வடகோடியில் இருந்து சோழர்க்கும் பாண்டியர்க்கும் அடிக்கடி நிகழ்ந்த போரில் ஈடுபட்டுப் பாண்டியர்க்கு வெற்றி பயந்து வந்தான். சாத்தனது பெருமை முற்றும் அவனுடைய போராண்மையிலும் தாளாண்மையிலும் கொடையாண்மையிலும் ஊன்றி நின்றது. இந் நலமுடைமை கண்ட நல்லிசைச் சான்றோர் இவனை நயந்து பாடிச் சிறப்பித்தனர். பெருஞ்சாத்தன் நல்வாழ்வு வாழ்ந்து முடிவில் வானுலகு பெயர்ந்தான். அப்போது அவன் பிரிவாற்றாது வருந்திய சான்றோருள் குட வாயில் கீரத்தனார் என்பாரும் ஒருவர். குடவாயில் சோழநாட்டில் உள்ளதோர் ஊர். கீரத்தனார் அவ் வூரினராயினும் அவர்க்கு “யாதும் ஊரே யாவரும் கேளிரே”. அதனால் அவர் மனத்தின்கண் பெருஞ்சாத்தன் பிரிவு பெரு வருத்தத்தை யுணடாக்கியது. பெருஞ்சாத்தன் இறந்தபின் கீரத்தனார் குடவாயில் நோக்கிச் செல்வாராயினர். அக்காலையில் ஒல்லையூர் நாட்டைக் கடந்து வருபவர் வழியில் முல்லைக் கொடி பூத்திருப்பக் கண்டார். அதன் அழகும் மணமும் கீரத்தனார் உள்ளத்தில் பல எண்ணங்களை எழுப்பின. இன்பக் காலத்தில் முல்லைப் பூவை இளையர் பலரும், செவ்வி மகளிரும் வரைவின்றிச் சூடிக் கொள்வர்; பாணருள்ளும் பாண்மகன் அதனைத் தன் யாழ்க் கோட்டால் வாங்கிச் சூடிக் கொள்வான்; பாண்மகளும் தன் கூந்தலிற் சூடி இன்புறுவாள். பெருஞ்சாத்தன் இறந்தபின் இவர்கள் துயருறுகின்றனர். இன்பக் காட்சியும் துன்பக் காட்சியும் கீரத்தனார் கண்களில் மாறி மாறித் தோன்றின. முல்லைக் கொடியை நோக்கினார்; “முல்லையே, பெருஞ்சாத்தன் இறந்தபின் இத் துன்பக் காலத்தில் நின்னை இளையரும் சூடார்; வளையணியும் பருவ மகளிரும் கொய்து குழலிற் சூடார்; பாணனும் சூடான்; பாடினியும் அணியாள், இந்த ஒல்லையூர் நாட்டில் நீ ஏனோ பூத்துள்ளாய்” என்பாராய் இப்பாட்டைப் பாடினார். இளையோர் சூடார் வளையோர் கொய்யார் நல்லியாழ் மருப்பின் மெல்ல வாங்கிப் பாணன் சூடான் பாடினி யணியாள் ஆண்மை தோன்ற வாடவர்க் கடந்த 5 வல்வேற் சாத்தன் மாய்ந்த பின்றை முல்லையும் பூத்தியோ வொல்லையூர் நாட்டே. திணை : பொதுவியல். துறை: கையறுநிலை. ஒல்லையூர் கிழான் மகன் பெருஞ்சாத்தனைக் குடவாயிற் கீரத்தனார் பாடியது. உரை : இளையோர் சூடார் - இளைய வீரர் சூடார்; வளையோர் கொய்யார் - வளை யணிந்த இளைய மகளிர் பறியார்; நல்லி யாழ் மருப்பின் மெல்ல வாங்கி - நல்ல யாழ்க் கோட்டின் மெல்ல வளைத்து; பாணன் சூடான் - பாணன் பறித்துச் சூடிக் கொள்ளான்; பாடினி அணியாள் - பாடினி சூடாள்; ஆண்மை தோன்ற - தன்னுடைய ஆண்மைப்பாடு யாவர்க்கும் வெளிப்பட; ஆடவர்க்கடந்த - வீரரை எதிர் நின்று கொன்ற; வல்வேல் சாத்தன் மாய்ந்த பின்றை - வலிய வேலையுடைய சாத்தன் இறந்துபட்ட பின்பு; முல்லையும் பூத்தியோ - முல்லையாய நீயும் பூக்கக் கடவையோ; ஒல்லையூர் நாட்டு - அவனது ஒல்லையூர் நாட்டின்கண்; எ-று. “அவனையிழந்து கொடியேனாய் வாழ்கின்ற யானேயன்றி நீயும் கொடியையாய்ப் பூக்கின்றாயோ?” என எச்சவும்மையாய் நின்றது; என்றது, பூச்சூடி நுகர்வார் இன்மையின் பயனில்லை யென்றதாம். விளக்கம் : குடவாயிற் கீரத்தனார் பெயர் குடவாயில் நல்லாதனாரென்றும் ஏடுகளிற் காணப்படுகிறது. பெயர் வகையில் வேறுபாடுண்டாயினும் ஊர் வகையில் அஃதில்லாமை குறிக்கத்தக்கது. கொங்கு நாட்டிலும் குடவாயில் என்றோர் ஊர் பொங்கலூர்க்கா நாட்டிலுள்ளதெனக் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள இடிகரைக் கல்வெட்டொன்று (A.R. No.6 of 1923) கூறுகிறது. தம்மைப் புரக்கும் புரவலர் இறப்பின், புரக்கப்படும் மகளிரும் வீரருமேயன்றிப் பரிசிலராகிய பாணரும் பிறரும் தம்மை ஒப்பனை செய்து கொள்ளாராகலின், “பாணன் சூடான் பாடினியணியாள்” என்றார்; பிறரும் “தொடிகழி மகளிரின் தொல்கவின் வாடிப், பாடுநர் கடும்பும் பையென் றனவே” (புறம். 238) என்பது காண்க. முல்லை மிக மென்மையுடையதாகையால், அதனை யாழ்பாணன் யாழ்கோட்டால் “மெல்ல வாங்கி”ச் சூடுவானாயினான் யாழ்க்கோட்டின் மென்மைபற்றி இவ்வாறு செய்வன் எனினுமாம். யாழ்க்கோடு வளைந்திருத்தல் பற்றி, முல்லையை வாங்குதற்கு ஏற்றதாயிற்று. “கொடிது யாழ்கோடு” (குறள். 279) என்பர் திருவள்ளுவர். இதன் அமைதியை விபுலாநந்த அடிகள் கண்ட யாழ்நூல் யாழுறுப் பியலிற் காண்க. இளையோர் முதல் பாடினி யீறாகப் பலர்க்கும் பயன் படாமையின், “பூத்தியோ” என்றார். இதற்குப் பழையவுரைகாரர் கூறும் உரை அறிந்து இன்புறத்தக்கது. 243. ஒல்லையூர்கிழான் மகன் பெருஞ்சாத்தன் ஒல்லையூர் கிழான் மகனான பெருஞ்சாத்தன் பேரிளையனாய் இருந்த காலத்தில் ஒருகால் தொடித்தலை விழுத்தண்டினார் என்னும் சான்றோர் அவனைக் காணச் சென்றார். சாத்தனும் அவரை மிக்க அன்புடன் வரவேற்று இனிமை மிகப்பேசி அளவளாவினான். வேறுபல சான்றோரும் அங்கே கூடியிருந்தனர். அக் கூட்டத்தில் இளமையின் வளமை பற்றிப் பேச்சுண்டாயிற்று. இளமையிற் சிறந்த வளமை இல்லாமையும், அக்காலத்தே இளைஞர் உள்ளம் இன்பக் களி யாட்டில் பெரிதும் ஈடுபடும் திறமும் பிறவும் விரிய ஆராயப்பட்டன. அக்கூட்டத்திருந்த சான்றோருள் தொடித்தலைவிழுத்தண்டினாரும், வேறு சிலரும் மிக்க முதியராய் இருந்தனர். முதுமையிலும் கழிந்த இளமைபற்றி அவரையுள்ளிட்ட சான்றோர் வளமையுறப் பேசுவது எல்லோர்க்கும் இன்பத்தை யுண்டு பண்ணிற்று. முடிவில் நம் தொடித்தலை விழுத் தண்டினார் இளமைச் செய்கைகளை ஒரு வகையால் தொகுத் துரைப்பாராய், மறையும் மாயமும் அறியாத இளையரொடு கூடி நீரிற் பாவை வைத்து விளையாடியதும், நெடுநீர்க் குட்டங்களிற் குதித்து மணல் காட்டி மகிழ்ந்ததும், பிறவும் கூறி, “இத்தகைய இளமை இப்போது எங்கோ சென்று ஒளிந்துவிட்டது; இப்போது அது கழிந்துவிடவே, மேனியில் நடுக்கமும் இருமல் கலந்த சொல்லும் தண்டூன்றியல்லது நடவாத தளர்ச்சியுமுடைய முதியராயி னோம்; யாம் இப்போது இளமையை நினைப்பின் நெஞ்சில் இரக்க முண்டாகிறது” என்பவர் இதனையே ஒரு பாட்டின் கண் வைத்துப் பாடினார். அப் பாட்டே இது. இதன்கண் தாம் கைக் கொண்டு செல்லும் தண்டினைத் “தொடித்தலை விழுத்தண்டு” என்று சிறப்பித்த நலங்கண்ட சான்றோர் இவரைத் “தொடித்தலை விழுத்தண்டினார்” என அழைக்கலுற்றனர். அது பெரு வழக்கான மையின், அவரது இயற்பெயர் மறைந்துபோயிற்று. இனிநினைந் திரக்க மாகின்று திணிமணற் செய்வுறு பாவைக்குக் கொய்பூத் தைஇத் தண்கய மாடு மகளிரொடு கைபிணைந்து தழுவுவழித் தழீஇத் தூங்குவழித் தூங்கி 5 மறையென லறியா மாயமி லாயமொ டுயர்சினை மருதத் துறையுறத் தாழ்ந்து நீர்நணிப் படிகோ டேறிச் சீர்மிகக் கரையவர் மருளத் திரையகம் பிதிர நெடுநீர்க் குட்டத்துத் துடுமெனப் பாய்ந்து 10 குளித்துமணற் கொண்ட கல்லா விளமை அளிதோ தானே யாண்டுண்டு கொல்லோர் தொடித்தலை விழுத்தண் டூன்றி நடுக்குற் றிருமிடை மிடைந்த சிலசொற் பெருமூதாளரே மாகிய வெமக்கே. திணை : பொதுவியல். துறை: கையறுநிலை. அவனைத் தொடித்தலை விழுத்தண்டினார் பாடியது. உரை : இனி நினைந்து இரக்கமாகின்றது - இப்பொழுது நினைந்து இரக்கமாகாநின்றது; திணி மணல் செய்வுறு பாவைக்கு செறிந்த - மணலிடத்துச் செய்யப்பட்ட வண்டற் பாவைக்கு; கொய்பூத் தைஇ - பறிக்கப்பட்ட பூவைப் பறித்துச் சூடி; தண் கயம் ஆடும் மகளிரொடு கை பிணைந்து - குளிர்ந்த பொய்கையின்கண் விளையாடும் மகளிரோடு கை கோத்து; தழுவு வழித் தழீஇ - அவர் தழுவினவிடத்தே தழுவி; தூங்கு வழித் தூங்கி - அசைந்தவிடத்தே அசைந்து; மறை எனல் அறியா மாயமில் ஆயமொடு - ஒளித்துச் செய்யும் அஃதறியாத வஞ்சனை யில்லாத இளமைந்தருடனே கூட; உயர்சினை மருதம் -உயர்ந்த கோடுகளுடைய மருதினது; துறையுறத் தாழ்ந்து - துறையிலே வந்து உறத் தாழ்ந்து; நீர் நணிப் படி கோடு ஏறி - நீர்க்கு அண்ணிதாகப் படிந்த கொம்பிலே யேறி; சீர் மிக - அழகு மிக; கரையவர் மருள - கரையிடத்து நிற்போர் வியப்ப; திரையகம் பிதிர - திரையிடத்துத் திவலையெழ; நெடு நீர்க் குட்ட த்துத் துடும் எனப்பாய்ந்து குளித்து - ஆழத்தான் நெடிய நீரையுடைய மடுவின்கண் துடுமென்றொலிப்பக் குதித்து மூழ்கி; மணல் கொண்ட கல்லா இளமை - மணலை முகந்து காட்டிய கல்வியில்லாத இளமை; அளிது - இரங்கத்தக்கது; யாண்டு உண்டு கொல்லோ - அவ்விளமை எவ்விடத்துண்டு கொல்லோ; தொடித்தலை விழுத்தண்டு ஊன்றி - பூண் செறிந்த தலையையுடைய பரிய தண்டுக்கோலை யூன்றி; நடுக்குற்று - தளர்ந்து; இரும் இடைமிடைந்த - இருமல் இடையே நெருங்கின; சில சொல் பெரு மூதாளரேம் ஆகிய எமக்கு - சில வார்த்தையை யுடைய பெரிய முதுமையையுடையேமாகிய எங்களுக்கு; எ-று. எமக்கு இளமை யாண்டுண்டு கொல்லோ; அதுதான் இரங்கத்தக்கதெனக் கூட்டுக. இளமை கழிந்து இரங்கிக் கூறுதலான் இதுவும் கையறு நிலையாயிற்று. “மறையென வறியார்” என்று பாடமோதுவாருமுளர். விளக்கம் : தொல்காப்பிய வுரைகாரரான பேராசிரியர், இளிவர லென்னும் மெய்ப்பாட்டுக்கு இதனை யெடுத்துக்காட்டி, “தன் கண் தோன்றிய மூப்புப் பொருளாக இளிவரல் பிறந்தது; என்னை, இளமைக் காலத்துச் செய்தன செய்யமாட்டாது இளிவந்தனம் இக் காலத்து என்றமையின்” (தொல். மெய். 9) என்பர். நச்சினார்க்கினியார், “கழிந்தோர் ஒழிந்தோர்க்குக் காட்டிய முதுமை” (தொல். புறத். 24) யென்பர். பாவை, வண்டற் பாவை. “சிறுவீ ஞாழல் தேன்றோய் ஒள்ளிணர், நேரிழை மகளிர் வார்மண் விழைத்த, வண்டற் பாவை வனமுலை முற்றத், தொண்பொறிச் சுணங்கின் ஐதுபடத் தாஅம்” (நற். 191) எனப் பிறரும் கூறுதலாலறிக. மறைப்பறியாதவழி மாயமும் இல்லையாதலால், “மறையெனலறியா மாயமில் ஆயம்” என்றார். ஆயம், ஈண்டு இளைய மைந்தர் மேற்று. இரும், இருமல். 244. கையறுநிலை ஒருவன் தான் உறுகின்ற துன்பத்தை மான் கலை ஒன்று எய்தி வருந்துவது போல இப் பாட்டைப் பாடியுள்ளான். இப்பாட்டு முழுவதும் கிடைத்திலது; பாடினவர் பெயரும் பாடப்பட்டோர் பெயரும் தெரியவில்லை. உரையின் இறுதிப்பகுதி கிடைத் திருக்கிறது. ஆகவே, உரைகாரர் காலத்தே செம்மையுற இருந்த இப்பாட்டு, தமிழன் அறிவறை போகித் தன் தமிழின்பால் மெய்யன்பிலனாகிய, காலத்தே தன் உருவம் சிதைந்து அழிந்து போயிற்று. இன்றும் அதுவே நிலை. பாணர் சென்னியும் வண்டுசென் றூதா விறலியர் முன்கையுந் தொடியிற் பொலியா இரவன் மாக்களும். . . . . . . . . . . . . . . திணை : பொதுவியல். துறை: கையறுநிலை. உரை : பாணர் சென்னியும் - பாணர்களுடைய தலையும்; வண்டு சென்று ஊதா - வண்டுகள் படிந்து தாதூதுவதொழிந்தன; விறலியர் முன்கையும் - விறலியருடைய முன்கைகளும், தொடியின் பொலியா - தொடியணிந்து விளங்குவதொழிந்தன; இரவன் மாக்களும் - இரவலர்களும்............. முசுக்கலையினீக்குதற்கு இரலையென விசேடித்தனர்... சாதலென்பது இன்னாதாகலின் பெரும் பிறிதாயின்றோ என்றான். தானுறுகின்ற துன்பத்தைக் கலைமேல் வைத்துக் கூறியவாறு. விளக்கம் : தம்மைப் புரப்பவர் இனிய செவ்வியராகிய வழி பாணர் தம் தலையிற் பூக்களைச் சூடி யின்புறுவர். அப் பூவின் தேனாடி வண்டுகள் சென்று படிந்து ஊதும். விறலியர் தம் முன்கையில் தொடியணிந்து விளங்குவர். பாணர் முதலியோரைப் பேணும். தலை மகன் துன்புற்றானாக, அதனால் கையறவுற்ற சான்றோர் ஒருவர், “பாணர் சென்னியும் வண்டு சென்...றூதா” விறலியர் முன்கையும் தொடியிற் பொலியா, இரவன்மாக்களும்....” என்று பாடியுள்ளார். பரிசில் பெற்ற பாணர் புதுப் பூக்களைத் தலையிலணிந்து வாயில் விருந்தினுண்ட கள் மணங்கமழ வருங்கால் வண்டு மொய்த்தரற்று மாகலின், அந்நிலையைப் பிறர், “கண்டோர் மருளும் வண்டு சூழ்நிலை” (பொருந. 97) என்பர்; அந்நிலை கழிந்தமை குறித்து நிற்றலின், “பாணர் சென்னியும் வண்டு சென்று ஊதா” என்றார். பாணர்க்குத் தாமரையும் விறலியர்க்குத் தொடி முதலிய இழையும் பரிசிலாகத் தரப்படும். கையறவு எய்துங் காலத்து மகளிர் தொடி கழித்து வருந்தும் நிலைமை விளங்க, “விறலியர் முன்கையும் தொடியிற் பொலியா” என்றார்; “தொடிகழி மகளிரின் தொல் கவின் வாடிப், பாடுநர் கடும்பும் பையென்றனவே” (புறம். 238) என்று பிறரும் கூறுதல் காண்க. இப்பாட்டின் சிதைந்த பகுதியில் கலையாகிய இரலையென்று காட்டில் பெருந்துன்பமுறுதலைக் கண்டு அதன் துன்ப நிகழ்ச்சியைக் குறித்துப் பாடியுள்ளார். அப்பகுதி கிடைத்திலது. அதன்கண் கலையென்று வாளாகூறாது, கலையாகிய இரலையெனக் கூறியுள்ளார். அதற்கு விளக்கம் கூறலுற்ற உரைகாரர், “முசுக் கலையினீக்குதற்கு இரலையென விசேடித்தார்” என்று உரைத் துள்ளார். அப்பகுதியில் ஒருவன் கலைமான் உற்ற துன்பம் கண்டு கூறுபவன் அதன் காதற் பிணையாகிய மான் இறந்து போயிற்றுப் போலும் என ஐயுற்று, அவ்வாறு கூறாது “பெரும் பிறிதாயின்றோ” என்று இசைத்துள்ளான். அதுகுறித்து விளக்கம் கூறவந்த உரைகாரர், “சாதலென்பது... என்றான்” என்று கூறுகின்றார். இப் பாட்டு முழுவடிவும் காண்டற்குரிய நற்பேறு நமக்கு இல்லை. 245. சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை கோட்டம்பலமென்பது சேரநாட்டூர்களுள் ஒன்று. இக் கோட்டம்பலம், இப்போது அம்பலப்புழை யென்னும் இட மாகும்; கடற்கோட்டில் உள்ள அம்பலமாதலின், இது கோட் டம்பலம் எனப் பண்டை நாளில் பெயர் பெற்றுப் பிற்காலத்தே அம்பலப் புழையென மாறிற்றாதல் வேண்டும்; இன்றும் இது தொன்மைச் சிறப்புடைய ஊராகவே விளங்குவதும், இப்பகுதியில் மாக்கோதை மங்கலமென ஓர் ஊர் இருப்பதும் இக்கருத்தை வலியுறுத்துகின்றன. இது சில ஏடுகளில் கூத்தம்பலம் எனப் பாடம் வேறுபடுகிறது. சேரநாட்டில் பல கூத்தம்பலங்கள் உள்ளன. கூத்தம்பல மென்பதே பாடமாயின், இறைவன் கோயில்களிற் காணப்படும் இக் கூத்தம்பலங்களுள் ஒன்றிலிருந்து இம் மாக்கோதை துஞ்சினான் எனக் கோடல்வேண்டும். திருவாங்கூர் நாட்டு அரிப்பாடு முதலிய இடங்களில் கூத்தம்பலங்கள் இருந்திருக்கின்றன என அந்நாட்டுக் கல்வெட்டறிக்கைகள் (T.A.S. Vol. VI of 1927, P.35) கூறுகின்றன. சேரமான் மாக்கோதை தன் இறுதி நாளில் இக் கோட்டம்பலத்தில் இருந்து இறந்தான். அதனால் அவனைச் சான்றோர் சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை என வழங்குவாராயினர். இவன் மனைவி பெருங்கோப்பெண்டு என்பவள் இவனுக்குப் பேரிளமைப் பருவமெய்து முன்பே இறந்தாள். அவள் பிரிவு மாக்கோதையின் மனத்தே பெருந் துயரத்தை விளைவித்தது. அவளது உடலம் ஈமத்தில் மூட்டிய எரியில் வெந்து கரிவதாயிற்று. அதனை மாக்கோதை தன் கண்களாற் கண்டான். அவள்பால் தான் கொண்டிருந்த காதலை நினைத்தான்; அவள் பிரிந்தால் தானும் உயிர் பிரிவதாக எண்ணிய காதல்நிலை அவன் கருத்தில் தோன்றிற்று. அதனை உடனிருந்த சான்றோர் குறிப்பால் உணர்ந்து “வேந்தே, காதலி பால் கொண்ட காதலினும் நாடு காவலை மேற்கொள்வதால் உளதாகும் கடமை பெரிதாகும். கடமையின் சிறப்பு நோக்காது, காதல் வாழ்விற் பிரிவால் உளதாகும் துன்பம் மிகவும் பெரிதெனச் சிறப்புற நோக்கி அதற்கு இரையாகி உயிரிழப்பது நன்றன்று” எனத் தெளிவித்தனர். காதலி யிறப்பின் காதலற்குண்டாகும் துன்பம் மிகப் பெரிதாம் என்றதை மறுப்பான் போல், “எத்துணைப் பெரிதாகத் தோன்றினும் காதல் நோய் அத்துணை வலியுடை யதன்று; இதோ, என் கண்ணெதிரே என் ஆருயிர்க்காதலி இறந்தாள்; அவள் உடலும் தீயில் மாய்ந்தது. இதனைக் கண்டு வைத்தும் யான் இன்னும் உயிர் வாழா நின்றேன்; இதன் பண்பை என்னென்பது” என்று உரைப்பானாய் இப் பாட்டினை நெஞ்சுருகிப் பாடினான். யாங்குப்பெரி தாயினு நோயள வெனைத்தே உயிர்செகுக் கல்லா மதுகைத் தன்மையிற் கள்ளி போகிய களரியம் பறந்தலை வெள்ளிடைப் பொத்திய விளைவிற கீமத் 5 தொள்ளழற் பள்ளிப் பாயல் சேர்த்தி ஞாங்கர் மாய்ந்தனள் மடந்தை இன்னும் வாழ்வ லென்னிதன் பண்பே. திணை : பொதுவியல். துறை: கையறுநிலை. சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை தன் பெருங்கோப்பெண்டு துஞ்சிய காலைச் சொல்லிய பாட்டு. உரை : யாங்கு பெரிதாயினும் - எப்படிப் பெரிதாயினும்; நோய் அளவு அனைத்து - யானுற்ற நோயினது எல்லை எவ்வளவாயிற்று; உயிர் செகுக்கல்லா மதுகைத்து அன்மையின் - என்னுயிரைப் போக்கமாட்டாத வலியை யுடைத்தல்லாமையால்; கள்ளி போகிய களரியம் பறந்தலை - கள்ளி வளரப்பட்ட புறங்காட்டுள்; வெள்ளிடைப் பொத்திய - வெள்ளிடையில் மூட்டிய; விளை விறகு ஈமத்து - தீயை விளைக்கும் சிறிய விறகையுடைய படுக்கையின்கண்; ஒள்ளழல் பள்ளிப் பாயல் சேர்த்தி - ஒள்ளிய அழலாகிய பாயலின்கண்ணே பொருந்தப் பண்ணி; ஞாங்கர் மாய்ந்தனள் மடந்தை - மேலுலகத்தே போயினாள் மடவாள்; இன்னும் வாழ்வல் - அவள் மாயவும் இன்னமும் உயிரிருந்து வாழ்வேன்; இதன் பண்பு என் - இவ்வுலகியற்கை இருந்தவாறு என்னோ? எ-று. எனைத் தென்றது, உயிரைப் போக்கமாட்டாமையின் நோயை இகழ்ந்து கூறியவாறு. பாவை சேர்த்தி யென்றோதி அவளுடம்பை அழகுபடப் பள்ளியுட் கிடத்தி யென்றுரைப் பாருமுளர். உயிர் செகுக்கலாமைக்குக் காரணம் மதுகையுடைத் தல்லாமையென வுணர்க. பாயல் சேர்த்தி இன்னும் வாழ்வல் என இயையும். சேர்த்த எனத் திரிப்பினு மமையும். ஞாங்கர் மாய்ந்தன ளென்பதற்கு என்னை நீத்துமுன்னே இறந்தாளென்றுமாம். விளக்கம் : யாங்குப் பெரிதாயினும் என்றதற்கு ஒருவற்குத் தன் காதலியால் உண்டாகும் காதல் மிக்க பெருமையுடையதெனினும் என்றும், நோய் என்றதற்குக் காதலையுடைய காதலி யிறப்பின் உண்டாகும் நோய் என்றும் உரைப்பினும் அமையும். காதல் வாழ்வின் மாண்பை “விரிதிரைப் பெருங்கடல் வளைஇய வுலகமும், அரிதுபெறு சிறப்பின் புத்தேணாடும், இரண்டுந் தூக்கின் சீர்சா லாவே” (குறுந். 101) என்று சான்றோர் கூறுதல் காண்க. 246. பூதபாண்டியன் தேவி பெருங்கோப்பெண்டு பாண்டி நாட்டின் வடவெல்லைப் பகுதியாகிய ஒல்லையூர் நாட்டைச் சோழவேந்தர் கைப்பற்றிக் கொண்டதனால் பாண்டியர் குடிக்குண்டாகிய சிறுமையைச் சோழனோடு பொருது வென்று போக்கிய பெருமையுடையவன் பூதபாண்டியன். அதனால் அவன் ஒல்லையூர் தந்த பூத பாண்டியன் என்றும் சான்றோரால் பாராட்டப்பெற்றான். அவன் பெயர் இன்றும் நினைவுறுமாறு நாஞ்சில் நாட்டில் பூதபாண்டி யென்ற பெயருடையதோர் ஊர்உளது. செந்தமிழ்ப் பாண்டி நாட்டில் சிறப்புற அரசு செலுத்திய பூதபாண்டியன் இறந்தானாக. அவன் மனைவி பெருங்கோப் பெண்டென்பாள், தீப்பாயக் கருதினாள். அவள் மண்ணாளும் வேந்தர்க்குக் கண்ணென்று ஓதப்படும் அரசியல் நீதிகளை நன்கு பயின்றவள்; மூதில் மகளாதலால் மறத்திலும் வாடாத மாண் புடையவள் பூதபாண்டியனுக்குப்பின் பாண்டி நாட்டைக் காக்கும் பண்புடைய வேந்தர் இன்மையின், அரசியற் சுற்றத்தாராகிய சான்றோர் பலர் அவளை வேண்டித் தீப்புகாது அரசுகட்டி லேறி ஆட்சிபுரியுமாறு வேண்டினர். அவர் உரை நாட்டு மக்களின் நலம் குறித்து நவிலப்பட்டது. ஆனால், பெருங்கோப் பெண்டோ அதனை அவ்வாறு கொள்ளாது, தன் காதலன் உயிருடன் தன்னுயிரை ஒன்றுவித்து மறுமையிற் பிரிவிலாக் காதல் வாழ்வு தனக்குண்டாகா வாறு விலக்கும் விலக்குரையாகக் கருதினாள்; விலக்குண்டு உயிர் வாழக் கருதின் கைம்மைநோன்பு மேற் கொண்டு துன்புற வேண்டி யிருத்தலையும் சீர்தூக்கிப் பார்த்தாள். ஆற்றாமை மீதூர்ந்தது; பலவாறு வேண்டி நிற்கும் சான்றோர் பால் வெகுளியும் மிக்கெழுந்தது. அந்த வெகுளியுரை கண்ணீர் சோரக் கதறி நிற்கும் அவள் வாயினின்றும் ஒரு பாட்டாய் வெளிவந்தது. அதுவே இப்பாட்டு. பல்சான் றீரே பல்சான் றீரே செல்கெனச் சொல்லா தொழிகென விலக்கும் பொல்லாச் சூழ்ச்சிப் பல்சான் றீரே அணில்வரிக் கொடுங்காய் வாள்போழ்ந் திட்ட 5 காழ்போ னல்விளர் நறுநெய் தீண்டா தடையிடைக் கிடந்த கைபிழி பிண்டம் வெள்ளெட் சாந்தொடு புளிப்பெய் தட்ட வேளை வெந்தை வல்சி யாகப் பரற்பெய் பள்ளிப் பாயின்று வதியும் 10 உயவற் பெண்டிரே மல்லே மாதோ பெருங்காட்டுப் பண்ணிய கருங்கோட் டீமம் நுமக்கரி தாகுக தில்ல வெமக்கெம் பெருந்தோட் கணவன் மாய்ந்தென வரும்பற வள்ளித ழவிழ்ந்த தாமரை 15 நள்ளிரும் பொய்கையுந் தீயுமோ ரற்றே. திணை : பொதுவியல். துறை : ஆனந்தப்பையுள். பூதப் பாண்டியன் தேவி பெருங் கோப்பெண்டு தீப்பாய்வாள் சொல்லியது. ஆனந்தப் பையுளாவது: “விழுமங்கூர வேய்த்தோ ளரிவை, கொழுநன் வீயக் குழைந்துயங் கின்று” (பு.வெ.மா.சிறப். பொது. 13) உரை : பல் சான்றீரே பல் சான்றீரே - பல சான்றவிரே பல சான்றவிரே; செல்க எனச் சொல்லாது - நின் தலைவனோடு இறப்ப நீ போ என்று கூறாது; ஒழிக என விலக்கும் - அதனைத் தவிர்க என்று சொல்லி விலக்கும்; பொல்லாச் சூழ்ச்சி பல் சான்றீரே - பொல்லாத விசாரத்தையுடைய பல சான்றவிரே; அணில் வரிக் கொடுங்காய் வாள் போழ்ந்திட்ட காழ்போல் - அணிலினது வரிபோலும் வரியையுடைய வளைந்த வெள்ளரிக் காயை அரிவாளால் அரிந்திடப்பட்ட விதைபோன்ற; நல் விளர் நறுநெய் தீண்டாது - நல்ல வெள்ளிய நறியநெய் தீண்டாமல்; அடையிடைக் கிடந்த கைபிழி பிண்டம் - இலை யிடையே பயின்ற கையாற் பிழிந்து கொள்ளப்பட்ட நீர்ச் சோற்றுத் திரளுடனே; வெள்ளெள் சாந்தோடு - வெள்ளிய எள்ளரைத்த விழுதுடனே; புளி பெய்து அட்ட வேளை வெந்தை - புளி கூட்டி யடப்பட்ட வேளையிலை வெந்த வேவையுமாகிய இவை; வல்சியாக- உணவாகக் கொண்டு; பரல் பெய் பள்ளி - பருக்கைகளாற் படுக்கப் பட்ட படுக்கை யின்கண்; பாய் இன்று வதியும் - பாயுமின்றிக் கிடக்கும்; உயவல் பெண்டிரேம் அல்லேம் - கைம்மை நோன்பால் வருந்தும் பெண்டிருள்ளே மல்லேம் யாம்; பெருங்காட்டுப் பண்ணிய கருங்கோட்டு ஈமம் - புறங்காட்டின்கண் உண்டாக்கப் பட்ட கரிய முருட்டால் அடுக்கப்பட்ட பிணப்படுக்கை; நுமக்கு அரிதாகுக - உங்களுக்கு அரிதாவதாகுக; எமக்கு எம் பெருந் தோள் கணவன் மாய்ந்தென - எமக்கு எம்முடைய பெரிய தோளையுடை யனாகிய கொழுநன் இறந்துபட்டானாக; அரும்பு அற வள்ளிதழ் அவிழ்ந்த தாமரை - முகையில்லையாக வளவிய இதழ் மலர்ந்த தாமரையையுடைய; நள்ளிரும் பொய்கையும் - நீர் செறிந்த பொய்கையும்; தீயும் ஓர் அற்று - தீயும் ஒரு தன்மைத்து; எ -று. தில் விழைவின்கண் வந்தது. எமக்குப் பொய்கையும் தீயும் ஒரு தன்மைத்து; நுமக்கு அரிதாகுக எனக் கூட்டுக. விளக்கம் : பல குணங்களால் நிறைந்தமைந்தவராதலின் “பல சான்றவிரே” என்றுரைத்தார். பன்மை, அமைந்த குணங்கண்மேனின்றது. கைம்மை மேற்கொண்டொழுகும் மகளிரை, “உயவற்பெண்டிர்” என்றாள். கண்ணகியார், “இன்புறு தங்கணவரிடரெரி யகமூழ்கத் துன்புறுவன நோற்றுத் துயருறு மகளிரைப்போல், மன்பதை யலர் தூற்ற மன்னவன் தவறிழைப்ப, அன்பனை யிழந்தேன்யான் அவலங் கொண் டழிவலோ” என்றும், துயருறு மகளிரை, “துறைபல திறமூழ்கித் துயருறு மகளி” ரென்றும், “கைம்மைகூர் துறைமூழ்குங் கவலைய மகளி” ரென்றும் இகழ்ந்து கூறுதல் (சிலப். 18:34 - 51) காண்க. சுடுகாட்டை முதுகாடென்றலும் பெருங்காடென்றலும் வழக்கு. அற்றென்பதனைப் பொய்கைக்கும் தீக்கும் தனித்தனி கூட்டி முடிக்க ஆனந்தம், சாக்காடு; பையுள் - அது காரணமாகப் பிறக்கும் துன்பம். 247. பூதபாண்டியன் தேவி பெருங்கோப்பெண்டு பூதபாண்டியன் இறந்தபோது அவன் தேவி தீப்புகுந்தாளாக, அங்கிருந்த சான்றோர்களுள் மதுரைப் பேராலவாயாரென்னும் சான்றோரும் ஒருவர். மதுரையில் உள்ள சொக்கப்பெருமான் திருக்கோயிலுக்கு ஆலவாய் என்பது பெயர். அதனால் அங்கே எழுந்தருளியுள்ள இறைவனைஆலவாயார் என்பதும் வழக்கம். அந்தத் திருப்பெயரே இந்தச் சான்றோருக்கும் பெற்றோரால் இடப்பட்டுள்ளது. சான்றோராகிய பேராலவாயார், மதுரையை, “மலைபுரை நெடுநகர்க் கூடல்”என்றும், பாண்டியனை “பேரிசைக் கொற்கைப் பொருநன், வென்வேல், கடும் பகட்டியானை நெடுந் தேர்ச்செழியன்” என்றும் பாராட்டிப் பாடியுள்ளார். இவர் பூத பாண்டியன் தேவி பெருங்கோப் பெண்டு தீப்புகுந்ததை நேரிற் கண்டவர். அக் காட்சி அவர் நெஞ்சில் நன்கு பதிந்திருந்தது. அதனை அவர் இந்த அழகிய பாட்டின்கண் பெருங்கோப் பெண்டு தீப்பாய்ந்தவிடம், காட்டிடத்தே காடுகிழாள் கோயிலுக்கு முன்பாகும். கோயில் திருமுன் அரசமாதேவி தீப்புகுதற்குத் தீ மூட்டப் பட்டிருந்தது; தீ நன்கு எரியத் தொடங்கியதும், அவள் நீராடிக் கூந்தலைப் பிழிந்துகொண்டு புறங்காட்டை நோக்கி வந்தாள். தன் பெருமனைக்கண் கணவனாகிய பூதபாண்டியன் சிறிது போது பிரியினும் பிரிவாற்றாது வருந்தும் இயல்பினளாகிய அவள் “தனித்துப் புறங்காடு நோக்கி நடந்தது காண்பார்க்கு மிக்க வருத்தத்தைத் தந்தது. புறங்காட்டில் காடுகிழாள் கோயில் திரு முன்றிலில் எரிந்துகொண்டிருந்த தீயை, நீர் துளிக்கும் கூந்தல் முதுகிடத்தே கிடைந்தசையக் கண்களில் நீர் பெருகிச் சொரிய வலம் வந்தான்; பின்பு தீயுட்குளித்து மாண்டாள்,” என்று இசைத் துள்ளார். யானை தந்த முளிமர விறகிற் கானவர் பொத்திய ஞெலிதீ விளக்கத்து மடமான் பெருநிரை வைகுதுயி லெடுப்பி மந்தி சீக்கு மணங்குடை முன்றிலின் 5 நீர்வார் கூந்த லிரும்புறந் தாழப் பேரஞர்க் கண்ணள் பெருங்காடு நோக்கித் தெருமரு மம்ம தானேதன் கொழுநன் முழவுகண் டுயிலாக் கடியுடை வியனகர்ச் சிறுநனி தமிய ளாயினும் 10 இன்னுயிர் நடுங்குந்த னிளமைபுறங் கொடுத்தே. திணை : பொதுவியல். துறை : ஆனந்தப்பையுள். அவள் தீப்பாய்வாளைக் கண்டு மதுரைப் பேராலவாயார் சொல்லியது. உரை : யானை தந்த முளிமர விறகில் - யானை கொண்டு வரப்பட்ட உலர்ந்த மரத்து விறகால்; கானவர் பொத்திய ஞெலி தீ விளக்கத்து - வேடரால் மூட்டப்பட்ட கடைந்து கொள்ளப் பட்ட எரியாகிய விளக்கினது ஒளியின்கண்; மடமான் பெரு நிரை - மடவிய மானாகிய பெரிய நிரை; வைகு துயில் எடுப்பி - வைகிய உறக்கத்தை எழுப்பி; மந்தி சீக்கும் - மந்தி தூர்க்கும்; அணங்குடைத் தேவியுடைய முற்றத்து; நீர் வார் கூந்தல் இரும்புறம்தாழ - நீர் வடிந்த மயிர் மிக்க புறத்தில் வீழ; பேரஞர்க்கண்ணள் - பெரிய துன்பமேவிய கண்ணையுடையளாய்; பெருங்காடு நோக்கித் தெருமரும் - புறங்காட்டைப் பார்த்துத் தான் சுழலும்; தன் கொழுநன் - தன் தலைவன்; முழவுகண் துயிலா - முழவினது கண் மார்ச்சனை யுலராத; கடியுடைய வியன்நகர் சிறுநனி தமியளாயினும் - காவலையுடைய அகலிய கோயிலுள் மிகச் சிறிதுபொழுது தனித்திருப்பினும்; இன்னுயிர் நடுங்கும் தன் இளமை புறங்கொடுத்து - இனிய உயிர் தளரும், தன் இளமை புறங்கொடுத்து; எ-று. ......யான் அதற்கு அஞ்சி நடுங்குதல் ..... இளமை புறங் கொடுத்துப் பெருங்காடு நோக்கித் தான் தெருமரும் எனக் கூட்டுக. அம்ம; அசை. விளக்கம் : காட்டில் வெட்டி வீழ்த்தப்பட்ட மரங்களைப் பழகிய யானைகளைக் கொண்டு கொணர்விப்பது இன்றும் நிகழும் நிகழ்ச்சி. தீ விளக்கத்தின் கண் மானிரை துயிலுவது இயல்பு; பிறரும், “சிறுதலை நவ்விப் பெருங்கண் மாப்பிணை, அந்தி யந்தண ரருங்கட னிறுக்கும், முத்தீ விளக்கில் துஞ்சும்” (புறம். 2) என்பது காண்க. அணங்கு - அணங்குடைய தேவி, முழவினை இடையறாது இசைத்தலால் சூடேறிக் கிழியாதபடி மார்ச்சனையை ஈரப்படுத்துதலால்” முழவுகண் துயிலா என்றதற்கு “முழவினது கண் மார்ச்சினையுலராத” என்று உரை கூறப்பட்டது. படவே, முழவு எப்போதும் முழங்கிக்கொண்டிருக்கும் என்பதாம். இளமைக்குப் புறங்கொடுத்தலாவது இளமை யுணர்ச்சிகட்கு அடிமையாய் உணர்வு மடிந்தொழுகுதலெனக்கொள்க. காதலனொடு கூடி யுறையும் நலங்கனிந்த இளமகளிர்க்குப் பிரிவினும் துன்பந்தருவது பிறிதில்லை; “இன்னாது இனனில்லூர் வாழ்தல் அதனினும், இன்னாது இனியார்ப் பிரிவு” (குறள். 1158) என்று சான்றோர் உரைப்பது காண்க. 248. ஒக்கூர் மாசாத்தனார் ஒக்கூர் என்ற பெயருடைய ஊர்கள் சோழ நாட்டிலும் பாண்டி நாட்டிலும் உள்ளன. மாசாத்தன் என்பது இவரது இயற்பெயர். மாசாத்தியார் என்னும் சான்றோர் ஒருவரும் இவ்வூரில் தோன்றியிருந் திருக்கிறார். சாத்தனார் பாடிய பாட்டுக்கள் ஏனைத் தொகை நூல்களிலும் உண்டு. சிறப்புடைய தன் கொழுநன் மாய்ந்தானாக, ஒருவன் மனைவி உடனுயிர் விடுதலை மேற்கொள்ளாது கைம்மை நோன்பினை மேற்கொண்டொழுகலானாள். அதனால் மறுபிறப்பில் தன் காதலனைக் கூடிவாழும் வாழ்க்கையெய்தும் என்பது கருத்து. இவனை மணிமேகலை யாசிரியர், “அன்பரோடு உடனுறை வாழ்க்கைக்கு நோற்று உடம்படுவர்” (மணி. 3:46 -7) என்பது காண்க. இக் கைம்மை மகள் ஒருகால் ஆம்பலை நோக்கினாள். இளமைக்காலத்தில் அந்த ஆம்பல் தழை தொடுத் தணிதற்குப் பயன்பட்டதும். கைம்மைக் காலத்தில் புல்லரிசி யுதவுவதாயதும் கண்டு வருந்திக் கூறினாள். அக் கூற்றினை மாசாத்தனார் இப்பாட்டின்கண் நமக்குரைக்கின்றார். அளிய தாமே சிறுவெள் ளாம்பல் இளைய மாகத் தழையா யினவே, இனியே பெருவளக் கொழுநன் மாய்ந்தெனப் பொழுதுமறுத் தின்னா வைக லுண்ணும் 5 அல்லிப் படூஉம் புல்லா யினவே. திணை : பொதுவியல். துறை: தாபத நிலை ............ஒக்கூர் மாசாத்தனார் பாடியது. தாபதநிலையாவது “குருந்தலர்க் கண்ணிக்கொழுநன் மாய்ந்தெனக், கருந்தடங் கண்ணி கைம்மை கூறின்று” (பு. மா. சிறப். பொது. 4) உரை : அளிய சிறு வெள்ளாம்பல் - இரங்கத்தக்கன சிறிய வெளிய ஆம்பல், இளையமாக - அவை தாம் யாம் இளையே மாயிருக்க; தழையாயின - முற்காலத்துத் தழையாயுதவின; இனியே - இக்காலத்து; பெருவளக் கொழுநன் மாய்ந்தென - பெரிய செல்வத்தையுடைய தலைவன் இறந்தானாக; பொழுது மறுத்து - உண்ணுங்காலை மாறி; இன்னா வைகல் உண்ணும் - இன்னாத வைகும் பொழுதின்கண் உண்ணும்; அல்லிப்படூஉம் புல்லாயின - தம் அல்லியிடத்துண்டாம் புல்லரிசியாய் உதவின; எ-று. தாம் இன்புறுங்காலத்தும் துன்புறுங்காலத்தும் துணையா யுதவின வாதலான் அளியவாயினவென ஆம்பலை நோக்கிக் கூறியவாறாயிற்று. நெல்லலா வுணவெல்லாம் புல்லென்றல் மரபு. விளக்கம் : இளமகளிர் ஆம்பற் பூவாற்றொடுக்கப்பட்ட தழையுடை யணிந்து தம்மை யழகு செய்துகொள்வது பண்டைநாளில் இயல்பு; “அயவெள் ளாம்ப லம்பகை நெறித்தழை தித்திக் குறங்கி னூழ்மா றலைப்ப வரும்” (குறுந். 293) என்று சான்றோர் கூறுதல் காண்க. புல்லரிசி யுதவுமாறு, “தொன்றுதா முடுத்த வம்பகைத் தெரியற், சிறுவெள் ளாம்ப லல்லி யுண்ணும், கழிகல மகளிர்” (புறம். 280) என வருவதனாலும் அறியப்படும். நெல்லரிசி போற் பயன்படுவதனைப் புல்லென்றதற்கேது கூறுவாராய், “நெல்லலா.....மரபு” என்றார். 249. தும்பைச் சொகினனார் தும்பை யென்பது இவரது ஊர் எனவும், சொகினன் என்பது இவரது பெயரெனவும் கொள்க. தும்பையூர் “தொண்டை நாட்டுப் பையூரிளங் கோட்டத்துப் பட்டையநாட்டுத் தும்பையூர்” (Nel. Ins. Sulur. 15) என்றும், திருவேங்கடத்துக்கண்மையிலுள்ள திருச்சொகினூர் (திருச்சானூர்) (A.R. No. 452 of 1924) சொகின்னூ ரென்றிருந்து திருச்சொகினூரென மருவியிருக்க வேண்டுமென்றும், எனவே இச் சான்றோர் தொண்டை நாட்டுச் சான்றோருள் ஒருவரா மென்றும் செந்தமிழ்ச் செல்வி (23-4, 152)யில் ஆராய்ந்து காட்டப்பட்டுள்ளன. சொகினன் - சொகினம் (நிமித்தம்) கூறுபவன்; சொகினம் பிற்காலத்தே சகுனம் என மருவிவிட்டது. இவர் பெயர் ஏடுகளில் தும்பி சொகினனாரென்றும், தும்பைச் சொகினனாரென்றும், தும்பி சோகீரனாரென்றும் காணப்படுகின்றன. நற்றிணையுரைகாரர், தும்பி சோகீரனாரென்பதன் பொருள் விளங்காமையால் தும்பிசேர்கீரனாரெனப் பதிப்பித்ததாக வுரைக் கின்றார்; தும்பி சொகினனா ரென்றே டாக்டர் உ.வே. சாமிநாதையர் குறிக்கின்றார். சொகினனார், சோகீரனார் என்று பாடங்களைக் காட்டிலும் சேர்கீரனார் என்பது விளக்கமாய் இருப்பது கண்டு முன்னைப் பதிப்புகள் தும்பி சேர்கீரனாரென்று கொண்டன; சங்கவிலக்கியப் பதிப்பாளரும் இப் பாடமே கொண்டுள்ளனர். “அம்ம வாழியோ மணிச்சிறைத் தும்பி” (குறு. 392) எனத் தும்பியைப் பாராட்டியும், “கொடியை வாழி தும்பி”(நற். 277) என அதனை நொந்தும் கூறியவாற்றால தும்பியொடு தொடர்புடைய இவரது சொன்னலம், தும்பிசேர் கீரனார் என்ற பாடத்தை ஏற்றுக் கோடற்கு இடந்தந்து நின்றது. இச் சொகினனார் கணவனை யிழந்தாள் ஒருத்தி கைம்மை நோன்பு மேற்கொண்டு, அவனுக்கு உணவுபடைப்பது கருதி ஒரு சிறிய இடத்தை ஆவின் சாணத்தால் மெழுகுவதும், அக்காலை யவள் நெஞ்சு கணவனை நினைத்து கலக்கமுறக் கண்ணீர் சொரிவதும் கண்டார். அதனை அவர் கணவனோடு கூடி வாழ்ந்த காலத்துக் கண்டிருந்தோர் கூற்றில் வைத்து இப் பாட்டைப் பாடியுள்ளார். இதன்கண் அவள் கணவன் அகன்ற நாட்டுக்குத் தலைவன்; அவன் உயிர்வாழ்ந்த காலத்துப் பலரொடு சூழ விருந்துண்ணும் பரந்த இடமாயிருந்தது; இப்போது அவன் மேலுலகம் சென்றதனால், அவள் தன் கண்ணீரால் ஆவின் சாணங்கொண்டு மெழுகும் சுளகுபோன்ற சிறிய இடமாயிற்று என்று இரங்கிக் கூறுகின்றார். கதிர்மூக் காரல் கீழ்ச்சேற் றொளிப்பக் கணைக்கோட்டு வாளை மீநீர்ப் பிறழ எரிப்பூம் பழன நெரித்துடன் வலைஞர் அரிக்குரற் றடாரியின் யாமை மிளிரப் 5 பனைநுகும் பன்ன சினைமுதிர் வராலொ டுறழ்வே லன்ன வொண்கயன் முகக்கும் அகனாட் டண்ணல் புகாவே நெருநைப் பகலிடங் கண்ணிப் பலரொடுங் கூடி ஒருவழிப் பட்டன்று மன்னே யின்றே 10 அடங்கிய கற்பி னாய்நுதன் மடந்தை உயர்நிலை யுலக மவன்புக வார நீறாடு சுளகிற் சீறிட நீக்கி அழுத லானாக் கண்ணள் மெழுகு மாப்பிகண் கலுழ்நீ ரானே. திணை : பொதுவியல். துறை : ஆனந்தப்பையுள். தும்பைச் சொகினனார் பாடியது. உரை : கதிர் மூக்கு ஆரல் கீழ்ச் சேற்று ஒளிப்ப - கதிர் நுனை போலும் மூக்கையுடைய ஆரல்மீன் சேற்றின்கீழே செருக; கணைக்கோட்டு வாளை நீர் மீப் பிறழ - திரண்ட கோட்டை யுடைய வாளைமீன் நீர்மேலே பிறழ; எரிப்பூம் பழனம் நெரித்தது - எரிபோலும் நிறத்தவாகிய பூவையுடைய பொய்கை களை நெருங்கி; உடன் - உடனே; வலைஞர் - வலைஞரானவர்; அரிக்குரல் தடாரியின் யாமை மிளிர - ஒலி நிரம்பா ஓசையை யுடைய கிணையினது முகமேபோலும் யாமை பிறழ; பனை நுகும்பன்ன சினை முதிர் வராலொடு - பனையினது நுகும்பை யொத்த சினைமுற்றிய வராலோடு; உறழ் - மாறுபடும்; வேல் அன்ன ஒண் கயல் முகக்கும் - வேல்போன்ற ஒள்ளிய கயலை முகந்துகொள்ளும்; அகல் நாட்டண்ணல் புகா - முன் அகன்ற நாட்டையுடைய குருசிலது உணவு; நெருநை - நெருநலை நாளால்; பகல் இடம் கண்ணி - பகுத்த இடத்தைக் கருதி, பலரொடுங் கூடி ஒருவழிப் பட்டன்றுமன் - பலருடனே இயைந்து ஒருவழிப்பட்டது. அது கழிந்தது; இன்று-; அடங்கிய கற்பின் ஆய் நுதல் மடந்தை - தன்கண்ணே யடங்கிய கற்பினை யும் சிறிய நுதலினையுமுடைய மடந்தை; உயர்நிலை யுலகம் அவன் புக வார - உயர்ந்த நிலைமையையுடைய விண் ணுலகத்தை அவன் சென்று புக அவனுக்கு உணவு கொடுத்தல் வேண்டி; நீறாடு சுளகின் சீறிடம் நீக்கி - புழுதியாடிய சுளகள வாகிய சிறியவிடத்தைத் துடைத்து; அழுதலானாக் கண்ணள் - அழுதலமையாத கண்ணையுடையளாய்; கண்கலுழ் நீரான் ஆப்பி மெழுகும் - தன் கண் கலுழ்கின்ற நீராலே சாணாகத்தைக் கொண்டு மெழுகுகின்றாள், எ-று. மெழுகுமளவாயிற்றென்றது பொருளென வுரைக்க. மன்: கழிவின்கண் வந்தது. இது கண்டார் நிலையாமை கூறி இரங்கியவாறு. விளக்கம் : ஆரல்மீன் கூரிய மூக்கினையுடையதாகலின், அதனைக் “கதிர் மூக்காரல்” என்றார். நீர்க்கீழ்ச் சேற்றிற் புதைந்து கிடப்பது அதற்கியல்பு. “அள்ளல் நாரை யாரல் வாரு மந்தணா ரூரென்பதே” ( திருஞான. 237:6) எனச் சான்றோர் கூறுவது காண்க. வாளை மீனின் மீசை ஈண்டுக் கோடெனப்பட்டது. “கணைக்கோட்டு வாளைக் கமஞ்சூல் மடநாகு” (குறுந். 164) என்று பிறரும் கூறுவர். எரிப்பூ, எரிபோலும் நிறத்தையுடைய தாமரைப்பூ. நெரித்தலாவது, சேறு பிறழக் குழப்புதல் அரித்த குரலை யுடைய தடாரிப் பறையோசை “ஒலி நிரம்பா ஓசை” யெனப்பட்டது; கம்புட் கோழியின் குரல்போலும் ஓசை அரிக் குரலோசை யென வுணர்க; “வெண்ணுதற் கம்புள் அரிக்குரற் பேடை” (ஐங். 85) என்று சான்றோர் வழங்குப. “இன்று” என்றதற்கேற்ப “முன்” னென்பது வருவிக்கப்பட்டது. “ஆறிய கற்பின் அடங்கிய சாயல்” (பதிற். 16) என்றாற் போல அடங்கிய கற்புக் கூறப்பட்டது. இப்பாட்டின் இடையே சில சொற்களும், அவற்றிற்குரிய உரையும் சிதைந்திருக் கின்றன. பகலிடம் முன் ஒரு வழிப்பட்டன்று; இன்று மெழுகு மளவிலே முடிந்தது என முடித்துக் கொள்க. என்பார், “மெழுகுமள வாயிற்றென்றது போருளென வுரைக்க” என்றார். 250. தாயங்கண்ணியார் தாயன் என்பார்க்கு மகளாதல் தோன்ற இவர் தாயங் கண்ணியார் எனப்படுகின்றார். கண்ணியார் என்பது இவரது இயற்பெயர். சங்க கால நல்லிசைப்புலமை மெல்லியலாருள் இவரும் ஒருவர். முடத்தாமக் கண்ணியார் என்றாற்போல இவர் பெயரும் கண்ணியாரென நிற்றலின், இவரை ஆண்பாலராகக் கருதுவோரும் உண்டு. கணவன் மாய்ந்தானாக, மனைவி கைம்மை மேற்கொண்டு நோற்று வந்தனள். சான்றோராகிய தாயங்கண்ணியார், அவள் கணவன் இருந்த காலத்துத் தாம் சென்றாற் போல இக் காலத்தும் சென்றார். கைம்மை மேற்கொண்ட மனைவியும் மக்களும் மனையின்கண் இருந்தனர். அவர்களது நெடுமனை யாகிய திருநகர் பொலிவிழந்திருந்தது. மனையாட்டியும் மழித்த தலையும் வளை கழித்த வறுங்கையும் அல்லியரிசி யுணவும் உடையளாய் இருப்பது தாயங்கண்ணியார்க்கு மிக்க வருத்தத்தை யுண்டுபண்ணிற்று. அப் பெருமனையின் பண்டை நிலையும் அவர் நினைவுக்கு வந்தது. அவையெல்லாம் நினைத்தார்க்கு அவை ஒரு பாட்டுருவில் வெளிப்பட்டன. அப் பாட்டு இது: குய்குரன் மலிந்த கொழுந்துவை யடிசில் இரவலர்த் தடுத்த வாயிற் புரவலர் கண்ணீர்த் தடுத்த தண்ணறும் பந்தர்க் கூந்தல் கொய்து குறுந்தொடி நீக்கி 5 அல்லி யுணவின் மனைவியோ டினியே புல்லென்றனையால் வளங்கெழு திருநகர் வான்சோறு கொண்டு தீம்பால் வேண்டும் முனித்தலைப் புதல்வர் தந்தை தனித்தலைப் பெருங்காடு முன்னிய பின்னே. திணை : பொதுவியல். துறை : ஆனந்தப்பையுள். தாயங்கண்ணியார் பாடியது. உரை : குய்குரல் மலிந்த கொழுந்துவை அடிசில் - தாளிப்போசை மிக்க கொழுவிய துவையோடு கூடிய அடிசில்; இரவலர்த் தடுத்த வாயில் - இரவலரைத் தன்கண்ணே தகைத்த வாயிலினையும்; புரவலர் கண்ணீர் தடுத்த தண்ணறும் பந்தர் - தன்னாற் புரக்கப்படுவோர் கண்ணீரை மாற்றிய குளிர்ந்த நறிய பந்தரினையுமுடைய மனையிடத்து; கூந்தல் கொய்து - மயிரைக் குறைத்து; குறுந்தொடி நீக்கி - குறிய வளையைக் களைந்து; அல்லி உணவின் மனைவியோடு - அல்லியரிசியாகிய உணவையுடைய மனையாளுடனே; இனி - இப்பொழுது; புல்லென்றனை - பொலிவழிந்தாய்; வளம் கெழு திருநகர் - செல்வம் பொருந்திய அழகாகிய நகர்; வான் சோறு கொண்டு - வான் சோற்றைக் கொண்டு; தீம்பால் வேண்டும் - இனிய பாலை வேண்டும்; முனித்தலைப் புதல்வர் தந்தை - வெறுப்பைத் தம்மிடத்தேயுடைய புதல்வர் தந்தை; தனித்தலைப் பெருங்காடு முன்னிய பின் - தனியிடத்தையுடைய புறங்காட்டை அடைந்த பின்; எ - று. கொய்து நீக்கி என்னும் வினையெச்சங்களை உணவினை யுடைய வென்னும் குறிப்புவினையோடு முடிக்க. நகரே, நீ புதல்வர் தந்தை காடுமுன்னியபின் புல்லென்றனை யெனக் கூட்டுக. முனித்தலை, குடுமித்தலையெனினு மமையும் விளக்கம் : தன்கண் வந்த இரவலர்க்கு வேண்டும் உணவை நிரம்ப நல்கி அவரை மீளத் தம் மனையை நோக்கித் திரும்பிப் போகாத வாறு தன்கண்ணே இருத்தற்குரிய விருப்பத்தை யுண்டு பண்ணுதலின், “இரவலர்த் தடுத்த வாயில்” என்றார். அல்லற்பட்டு ஆற்றாது அழுது கொண்டு வருவோர்க்கு அல்லலைப்போக்கி அவர் கண்ணீர் விட்டுக் கலுழாமல் ஊக்குதல் பற்றி, “புரவலர் கண்ணீர்த் தடுத்த பந்தர்” என்றார். புரவலர் என்றது, புரக்கப்படுவோர்மேல் நின்றது. திருநகர் என்றது அண்மை விளி. வான்சோறு , வெள்ளிய சோறு. புதல்வர் தந்தை, புதல்வர்க்குத் தந்தை. உணவின் மனைவி யென்றதை உணவினை யுடைய மனைவியென விரித்து, விரிந்த உடைய வென்னும் குறிப்புவினையோடு, கொய்து, நீக்கியென்னும் வினையெச்சங்களை முடிக்க என்று கூறுகின்றார் உரைகாரர். 251. மாரிப்பித்தியார் மாரிப்பித்தியார் என்னும் இப் பெயர் மாற்பித்தியார் என்றும், மரற்பித்தியாரென்றும் காணப்படுகிறது. மாரிக்காலத்து மலரும் பித்திகத்தைப் பொற்புறத் தொடுத்துப் பாடிய சிறப்புக் குறித்து இவர்க்கு இப் பெயரெய்திற்றுப் போலும். அப் பாட்டுக் கிடைத்திலது. இனி மாற்பித்தியாரென்றே கொண்டு வேறு வேறு பொருள் கூறுவாருமுளர். புகழ்புரியும் புதல்வரையும் அறம்புரியும் சுற்றத்தாரையும் முடையனாய்ச் சிறப்புற வாழ்ந்த தலை மகனொருவன் காமஞ் சான்ற கடைக்கோட் காலையில் வீடுபேறு குறித்துத் தவமேற்கொண்டு காட்டில் உறைவானாயினான். அவன் பெயர் ஏடுகளில் சிதைந்துபோய்விட்டது. அவன் இல்வாழ்வில் இருந்த காலத்து அவனைப்பாடிச், சிறப்பித்தவராதலான், பித்தியார் துறவு நிலையில் சடைமுடித்துத் தவம் புரியும் அவனது தாபத நிலையை வியந்துநோக்கினார். அவன் அருவியில் நீராடிக் காட்டகத்து யானைகள் கொணரும் விறகு கொண்டு தீ வேட்பதும், அவன் முடியிலுள்ள சடைமுதுகிடத்தே கிடந்து புலர்வதும் கண்டார். கண்டார்க்கு அவனது இளமைக் காலத்து அழகிய இனிய தோற்றம் நினைவிற்கு வந்தது. அக்காலத்தே அவனைக் கண்ட மகளிர் அவன்பால் கொண்ட காதற் காமத்தால் தொடி நெகிழ்ந்து உடம்பு நனி சுருங்கி உயங்கியதும் அவன் உயங்காது விளங்கியதும் நினைவிற்கு வந்தன. அவற்றை இந்த அழகிய பாட்டால் வெளிப்படுத்தியுள்ளார். ஓவத் தன்ன விடனுடை வரைப்பிற் பாவை யன்ன குறுந்தொடி மகளிர் இழைநிலை நெகிழ்த்த மள்ளற் கண்டிகும் கழைக்க ணெடுவரை யருவி யாடிக் 5 கான யானை தந்த விறகிற் கடுந்தெற்ற செந்தீ வேட்டுப் புறந்தாழ் புரிசடை புலர்த்து வோனே. திணை : வாகை : துறை : தாபத வாகை...... மாரிப்பித்தியார் பாடியது. உரை : ஓவத்தன்ன இடனுடை வரைப்பின் - ஓவியம் போலும் அழகினையுடைத்தாகிய இடமுடைய இல்லின்கண்; பாவை யன்ன குறுந்தொடி மகளிர் - கொல்லிப்பாவை போன்ற வடிவினையுடைய சிறிய வளையணிந்த மகளிருடைய; இழை நிலை நெகிழ்ந்த மள்ளன் கண்டிகும் - அணிகலன்களை அவை நிற்கும்நிலையினின்றும் கழலும் வகை ஆதரஞ் செய்தவனைக் கண்டோம்; கழைக்கண் நெடுவரை அருவி யாடி - மூங்கி லிடத்தை யுடைய நெடிய மலையிடத்து அருவி நீரை யாடி; கான யானை தந்தவிறகின் - காட்டு யானை கொண்டு வரப்பட்ட விறகால்; கடுந்தெறல் செந்தீ வேட்டு - மிக்க வெம்மையையுடைய செந்தீயை வேட்டு; புறந்தாழ் புரிசடை புலர்த்துவோன் - முதுகின்கண்ணே தாழ்ந்த புரிந்த சடையைப் புலர்த்துவோன்; எ. று. ஆடி வேட்டுப் புலர்த்துவோன் என இயையும். முன்பு இழைநெகிழ்த்த மள்ளற் கண்டேம்; அவன் இப்பொழுது புறந்தாழ்புரிசடை புலர்த்தா நின்றான் என அவனைக் கண்டு வியந்துகூறியவாறு. பாவையென்றது பிறிது எவ்வுணர்வு மின்றிக் காமவேட்கையாகிய ஒரு குறிப்பினை. கானயானை தந்தவிறகென்றது, இவன் தவ மிகுதியான், அதுவும் ஏவல் செய்தல். விளக்கம் : ஓவம், ஓவியம்.உரையாசிரியரான பேராசிரியர், “ஓவத்தன்ன இடனுடைய வரைப்பின் என்புழி அந் நகரினதுசெயற்கை நலந்தோன்றக் கூறினமையின், அதற்கு நிலைக்களன்நலனாயிற்” (தொல். உவ.4) றென்பர். பூவெனப்படுவது தாமரையாதல் போலப் பாவை யென்றது கொல்லிப்பாவைக்காயிற்று. கொல்லிப் பாவை, கொல்லிமலையில் பூதத்தாற் காமக் குறிப்புக் கிளரப் புணர்க்கப்பட்ட பாவை. குறுந்தொடி யென்றதில் குறுமை மகளிரது இளமை யுணர்த்திற்று. மள்ளன்என்றது., மகளிர் தொடி நெகிழ்ந்து வருந்தத் தான் வருந்தாதொழுகிய சிறப்புப் பற்றி. மள்ளன் இளையனுமாம். கழைக்கண் - மூங்கில் வளரும் இடம் கானயானை, தொழிற் பயிற்சியின்றிக்கொன்னே காட்டில் பிறந்து வளர்ந்த யானை; இத்தகைய யானையும் அவன் தவமிகுதியால் ஏவல் செய்வது உணர்த்தியவாறாயிற்று “செந்தீப் பேணிய முனிவர் வெண்கோட்டுக்களிறு தருவிறகின்...மலைகிழ வோனே” (பெரும் பாண். 498 -500) என்று பிறரும் குறிப்பது காண்க. புரிசடை இறந்தகாலந் தொக்கவினைத்தொகை. புரிசடை புலர்தற்குக் கடுந்தெறல் செந்தீ துணை யாதல் அறிக. கண்டிகும்; இறந்தகாலத் தன்மைவினைமுற்று. 252. மாரிப்பித்தியார் மேலே கண்ட தமிழ்த்தாபதன், மகளிர் இழை நெகிழ்த்துக் காமக்கலவிப் போரில் திண்மையுடையனாய் விளங்கிய திறத்தை யெடுத்தோதிக் காட்டில் அவன் தவமேற்கொண்டொழுகுவதை மாரிப்பித்தியார் இனிய பாட்டால் பாராட்டியது கேட்ட சான்றோர் சிலர், “இத்தாபதன் பண்டு மணம்புரிந்து இல்வாழ்ந்த காலத்தில் ஒழுகிய திறம் யாது?,” என்று வினவினர். அதனையும் நன்கறிந்தவராதலால், மாரிப் பித்தியார், “சொல்வேன், கேண்மின்” எனவுரைத்து அவனைக் காட்டினார். அவன் அருவியில் பலகாலும் நீராடுதலால் அவன் தலையிலுள்ள சடை தில்லந்தளிர்போல புற்கென்று பொலிவிழந்து காணப்பட்டது. அவன் ஆங்காங்குச் செறிந்திருந்த தாளியிலையைப் பறித்துக்கொண்டிருந்தான். “மனைவாழ்வில் இவன் தன் மனையாள்பால் பேராக் காத லுடையனாய் ஒழுகினான். ஓதுவது குறித்தும் பொருள் குறித்தும் பகை தணிக்கும் வினை குறித்தும் போர் மேற்கொண்ட வேந்த ரிடையே சந்து செய்தற்கும் இவன் பிரிந்தொழுகியதுண்டு. இவன் மனையாள் இவனது பிரிவைச் சிறிதும் ஆற்றாத சிறந்த காதலுடையள். பிரியுங்கால் அவள் தெளியத்தக்க சொற்களைச் சொல்லித் தன் பிரிவை ஆற்றியிருக்குமாறு பண்ணினான்; அவட்குத் தன்பால் ஊடலுண்டாயினும் அவ் வூடலில் தேனும் பாலும் போலும் செஞ்சொற்களை வழங்கி அவளைத் தெளிவித்துத் தன் சொல்வழியமைந்தொழுகுமாறு பண்ணினான். இவ்வாறு தன்னுடைய இனிய சொற்களால் தன்மனையாளின் மனத்தைத் தன்பாற் பிணித்து நல்லறம் புரிந்தான்” என்ற கருத்தமைய இந்தப் பாட்டைப் பாடிக் காட்டினார். கறங்குவெள் ளருவி யேற்றலி னிறம்பெயர்ந்து தில்லை யன்ன புல்லென் சடையோ டள்ளிலைத் தாளி கொய்யு மோனே இல்வழங்கு மடமயில் பிணிக்கும் 5 சொல்வலை வேட்டுவ னாயினன் முன்னே. திணை : வாகை : துறை : தாபத வாகை...... மாரிப்பித்தியார் பாடியது. உரை : கறங்கு வெள்ளருவி யேற்றலின் - ஒலிக்கும் வெள்ளிய அருவி நீரை ஏற்றலால்; நிறம் பெயர்ந்து - பழைய நிறம் மாறி; தில்லை அன்ன புல்லென் சடையோடு - தில்லந்தளிர் போன்ற புற்கென்ற சடையோடு கூடி நின்று, அள் இலைத் தாளி கொய்யுமோனே - செறிந்த இலையையுடைய தாளியைப் பறிப்போன்; இல் வழங்கும் மடமயில் பிணிக்கும் - மனையின் கண் இயங்கும் மடப்பத்தையுடைய மயிலை அகப்படுத்திக் கொள்ளும், சொல் வலை வேட்டுவனாயினன் முன் - சொல் லாகிய வலையையுடைய வேட்டைக் காரனாயினன் முன்பு; எ-று. இதுவும் அவன் நிலைமையைக் கண்டு வியந்து கூறியது. விளக்கம் : கல்லலைத்து இழுமெனும் ஓசையுடன் வீழும் அருவி தெளிவாய் வெள்ளிதாதலால், “கறங்கு வெள்ளருவி” யென்றார். பெயர்ந்தெனவே பழைய நிறம் மாறின்மை பெற்றாம். அள்ளிலை - செறிந்த இலை. மனையாளை மயில் என்றமையின்; அதற்கேற்பத் தன்னையின்றி யமையாதவளாகச் செய்த மள்ளனை, “மயில் பிணிக்கும் சொல் வலை வேட்டுவனாயினன்” என்றார். “வேட்டுவ னாயினன் முன்னே” என்றதனால் இப்போது சடையோடு தாளி கொய்வோனாயினன் என்றார். கொய்யுமோன் என்றதே நிகழ் கால முணர்த்தி நிற்றலின் இப் போழ்தெனக் கூறாராயினர். இதனை “நாலிரு வழக்கிற் றாபதப் பக்கம்” (தொல். புறத். 5)என இளம்பூரணர் காட்டுவர். பேராசிரியர் இதனைப்பிறன் கட்டோன்றிய அசைவு பற்றிய அவலச் சுவைக்கு (மெய். 5) மேற்கோளாகக் காட்டுவர். கொய்யுமோன் முன்னேவேட்டுவனாயினன் என இயையும். 253. குளம்பந்தாயனார் தாயனார் என்பது இப் பாட்டினைப் பாடிய ஆசிரியர் இயற்பெயர். இவர் தந்தை பெயர் குளம்பன் என்பது. குளம்பன் மகன்தாயனார் என்பது குளம்பந்தாயனார் என வந்தது; குளம்பன் என்னும் இயற் பெயர் மக்கள் முறையில் தாயனார் என்ற பெயர்வரவே, ஈற்று அன்சாரியை கெட்டு அம்மென்னும் சாரியைபெற்றுக் குளம்பந்தாயனாரென வரும்; இதற்குவிதி, “அப்பெயர் மெய்யொழித்து அன்கெடு வழியும், நிற்றலும் உரித்தே அம்மென்சாரியை. மக்கள்முறை தொகூஉம் மருங்கினான” (பள்ளி. 55) எனத் தொல்காப்பியனார் கூறுவதனால் அறியலாம். குளம்பன் என்னும் பெயர் இடைக்காலத்தும் குழம்பன் என மக்கட்கு இடப்பட்டுளது; “சிவப்பிராமணன் பாலாசிரியன் சாத்தன் சிவப்பிரியனான குழம்பன் நாயகன்” (S.I.I. Vol. VIII. No. 330)என வருதல் காண்க. குளம்பனாரென்றொரு நல்லிசைச் சான்றோர் நற்றிணை பாடிய ஆசிரியர் வரிசையுட் காணப்படுகிறார். அவரின்வேறுபடுத்தற்குக் குளம்பனார் மகனார் தாயனாரென்னாது குளம்பந்தாயனார் என்று சான்றோர் இவர் பெயரைக்குறித்திருக் கின்றனர். தலைமகனொருவன் போர்க்குச் சென்று களத்திற்பட்டு வீழ்ந்தான். அச் செய்தியறிந்த அவன் மனைவி களத்துக்குச் சென்று அவன் கிடப்பது கண்டு கதறிப் புலம்பினாள். அவள் அவனை நோக்கி, “நின்னோடு உடன் வந்த இளைய வீரர் போரிற்கலந்து வினைசெய்கின்றனர். நீயோ இனி யான் இவரோடு கூடமகிழேன் என்றுஇறந்துபட்டாய். இனி யானும் இறந்துபடுவதை விடுத்து நின்இறப்பை, என் கையைத் தலைமேல் மோதிக்கொண்டு ஊர்க்குட்சென்று நின் சுற்றத்தார்க்குத் தெரிவிப்பேனோ; யாது செய்வேன்; எனக்குச் சொல்லுவாயாக” எனக் கரைந்துருகி வினவினாள். இதனைக் கண்டிருந்த தாயனார் இப் பாட்டின்கண் குறிக்கின்றார். என்றிறத் தவலங் கொள்ள லினியே வல்வார் கண்ணி யிளையர் திளைப்ப நகா அலென வந்த மாறே யெழாநெற் பைங்கழை பொதிகளைந் தன்ன விளர்ப்பின் 5 வளையில் வறுங்கை யோச்சிக் கிளையி ளொய்வலோ, கூறுநின் னுரையே. திணை : பொதுவியல்; துறை: முதுபாலை ......... குளம்பந்தாயனார் பாடியது. முதுபாலையாவது : “காம்புயர் கடத்திடைக் கணவனையிழந்த பூங் கொடியரிவை புலம்புரைத்தன்று.” உரை : என் திறத்து அவலம் கொள்ளல் இனி - நின்னைப் பிரிந்து ஆற்றேனாகின்றேன் என்னுடைய திறத்து வருத்தங் கொள்ளா தொழிவாயாக இப்பொழுது; வல் வார் கண்ணி இளையர் திளைப்ப - வலிய வாராற் சுற்றப்பட்ட கண்ணியையுடைய நின் னோடு கூடி விளையாடப் போந்த இளையோர் விளையாடா நிற்ப; நகாஅல் என வந்த மாறு - அவரோடு நகுகின்றிலே னென்று கருதவந்த நின் இறந்துபாட்டை; நெல்எழா பைங்கழை பொதிகளைந்தன்ன - நெல்லெழாத பசிய மூங்கில் பட்டை யொழித்தாற் போன்ற; விளர்ப்பின் வளையில் வறுங்கை ஓச்சி - வெளுத்திருந்த வளையில்லாத வறிய கையைத் தலைமேலே ஏற்றிக் கொண்டு; கிளையுள் ஒய்வலோ - நின் சுற்றத்திடத்தே செலுத்தச் செல்லுவேனோ இன்னும் இறந்து படினல்லது; நின் உரைகூறு - நின் வார்த்தையை எனக்குச் சொல்லுவாயாக; எ-று. அவல மென்றது, பிரிந்த வழி ஆற்றேனென்று வருந்தும் அவலத்தைக் கூறு. நின் உரையென அவன் சொற் கேட்டல் விருப்பினாற் கூறுவாள் போன்று மயங்கிக் கூறியவாறு. விளக்கம் : நின்னைப் பிரிந்து ஆற்றேனாகின்றேன் என்பது அவல மென்றதனால் பெறப்பட்டதெனக் காட்டற்கு “அவலமென்றது.... அவலத்தை” யென்று உரைகாரர் கூறுகின்றார். அவலம் மிக்க வழி, வாய்திறந்து பேசவியலாமை யுண்டாகுமாதலால், சொற்கேட்கும் விருப்பத்தால் “என்திறத் தவலங் கொள்ளல் இனி” என்றாள். நகுதல் விளையாட்டுக் குறித்து நின்றது: “நகையேயும் வேண்டற்பாற் றன்று” (குறள். 871) என்ற விடத்துப்போல. மாறு இறந்துபாடு ‘எழா நெல்’ என்றது மூங்கிற்கு வெளிப்படை. பொதி ஈண்டுப் பொதிந்திருக்கும் தோலாகிய பட்டைமேல் நின்றது. வளைகிடந்த முன்கையிடம், அது நீங்கியபோது, வளை வடிவில் வெளுத்திருப்பதற்குப் பட்டை நீங்கிய மூங்கில் பட்டை வடிவில் வெளுத்திருப்பது உவமமாயிற்று. செலுத்துதல், தெரிவித்தல். தானும் இறந்துபடத் துணிந்துள்ளமை தோன்ற “அவலங் கொள்ளல்” என்றது கொண்டு “ஒய்வலோ” என்றாளாக, “இறந்துபடினல்லது” என உரைகாரர் உரைப்பாராயினர். இறந்த வனைக் “கூறு” என்கின்றமையின் “மயங்கிக் கூறியவாறு” என்றார். 254. கயமனார். கயமனார் என்னும் இச் சான்றோர் சோழநாட்டினர். கயவென்பது பெருமைப் பொருளுணர்த்தும் சொல்லாதலால், கயமனாரென்பது பெரியவரென்னும் பொருளதாம். இவர் பாடியபாட்டுக்கள் பல ஏனைத் தொகை நூல்களினும் உள்ளன. அப்பாட்டுக்களில் தாயரின் தாய்மையன்பின் திறத்தைப் பெரிதும் எடுத்துப் பேசியுள்ளார். சோழநாட்டில் குறுக்கையைத் தலைநகராகக் கொண்டு திதியன் என்பான் வாழ்ந்து வந்தான். அவனது காவல் மரம் புன்னை. அன்னி யென்னும் வேறொருவனும் இந் நாட்டில் வாழ்ந்தான். இருவர்க்கும் எவ்வகையாலோ போருண்டாயிற்று. அதில் அன்னியென்பவன். திதியனொடு குறுக்கைப் பறந்தலையில் போருடற்றித் தொலைந்தான். தொலையுங்கால், திதியனது காவல் மரத்தை அன்னி வெட்டி வீழ்த்தினான். இச் செய்தியைக் கயமனார் குறிக்கின்றார். போர்முடிவில் படாது எஞ்சிய மறவருள் இளையரும் முதியருமாகியோர் பலரும் தத்தமக்குரிய இடஞ்சென்று சேர்ந்தனர். ஒருவீரனுடைய மனைவி போர்க்குச் சென்ற தன் கணவன், மீளவா ராமை கண்டு போர்க்களத்துச் சென்றாள். அங்கே அவன் மார்பிற் புண்பட்டு மாண்டு கிடந்தான். கவிழ்ந்து கிடந்த அவனை அவள் தூக்கியிருத்தி, “அன்ப, மார்பு நிலத்திற்பட இச்சுரத்திடையே கிடக்கின்றாய்; யான் எடுக்கவும் எழுகின்றாயில்லை. யான் வளை கழித்து என் வறுங்கையைத் தலைமேல் வைத்து அழுதுகொண்டே நம்முடைய வூர் நோக்கி, இளையனாகிய என்காதலன் இங்ஙன மாயினன் என்று சொல்லிப் புலம்பிச் செல்வேன்; யான் மனைக்குச் சென்று சேருமுன் சுற்றத்தார் பலரும் சூழ்ந்து கொள்வர்; நின் செல்வத்தையும் தலைமையையும் சிறந்தோதி மகிழ்வுறும் நின் தாய் கேட்பாளாயின், அவள் என்னாவாள்; ஐயோ, இதுவோ நின் முடிவு” என்று அரற்றிய அவலத்தை ஆசிரியர் கயமனார் கண்டார். இஃது அவர்நெஞ்சில் நன்கு பதிந்துவிடவே, ஒரு பாட்டாய் வெளி வருவதாயிற்று. வீழ்ந்த போர்மறவன் பெயர் ஏடுகளில் சிதைந்து போயிற்று. இளையரு முதியரும் வேறுபுலம் படர எடுப்ப வெழாஅய் மார்பமண் புல்ல இடைச்சுரத் திறுத்த மள்ள விளர்த்த வளையில் வறுங்கை யோச்சிக் கிளையுள் 5 இன்ன னாயின னிளையோ னென்று நின்னுரை செல்லு மாயின் மற்று முன்னூர்ப் பழுனிய கோளி யாலத்துப் புள்ளார் யாணர்த் தற்றே யென்மகன் வளனுஞ் செம்மலு மெமக்கென நாளும் 10 ஆனாது புகழு மன்னை யாங்கா குவள்கொ லளிய டானே. திணை : பொதுவியல்; துறை: முதுபாலை ....... கயமனார் பாடியது. உரை : இளையரும் முதியரும் வேறுபுலம் படர - இளையோரும் முதியோரும் வேற்றுநிலத்தே விலங்கிப்போக; எடுப்ப எழா அய் - யான் எடுப்பவும் நீ எழுந்திராயாய்; மார்பம் மண்புல்ல - நினது மார்பம் நிலத்தைப் பொருந்த; இடைச்சுரத்து இறுத்த மள்ள - சுரத்திடை மேம்பட வீழ்ந்தஇளையோய்; விளர்த்த வளையில் வறுங்கையோச்சி - வெளுத்த வளையில்லாத வறிய கையைத் தலைமேலே வைத்து; கிளையுள் - சுற்றத்தின்கண்; இன்னனாயினன் இளையோன் என்று நின்னுரை செல்லுமாயின் - இத்தன்மையனாயினான் இளையனென்று யான்சொல்ல நின் இறந்துபாடு கூடிய வார்த்தை செல்லுமாயின்; முன்னூர் பழுனிய கோளி ஆலத்து - ஊர் முன்னர்ப் பழுத்த கோளியாகிய ஆலமரத்தின்கண்; புள்ளார் யாணர்த்தற்று - புள்ளுக்கள் மிகும் புதுவருவாயையுடைய அத்தன்மைத்து; என் மகன் வளனும் செம்மலும் எமக்கென - என்னுடைய மகனது செல்வமும் தலைமையும் எமக்கென்று; நாளும் ஆனாது புகழும் அன்னை - நாடோறும் அமையாது புகழும் நின்னுடைய தாய்; என்னாகுவள்கொல் அளியள்தான் - எவ்வாறாவாள் கொல், அவள் இரங்கத்தக்கவள் தான்;எ-று. வளனும் செம்மலும் புள்ளார் யாணர்த்தற்று என்றது, புள்ளெல்லாம் சென்றணுக ஆலமரம் பயன்பட்டு நின்றாற் போல இவனும் தன் சுற்றத்தாரும் பிறரும் நாட்டாரும் நுகரும்படி நின்றமை தோன்ற நின்றது. நின்னுரை செல்லுமாயின் யாங்காகுவள் கொல் என்ற கருத்து, யான் நீ இறந்துபட்டவாறு சொல்லின், அன்றே அவள் வருத்த முறுவள்; அது யான் மாட்டேனென்பதாம். முன்னூர், முன் மொழி நிலையல் மற்று; அசைநிலை விளக்கம் : சுரத்திடை யென்பது இடைச்சுரமென முன் பின்னாகத் தொக்கது; ஈண்டிது போர்க்களத்தின்மேல் நின்றது. இறந்து கிடந்தா னாக அதனால் மயங்கிக் கூறுதலால். “எடுப்ப எழா அய்” என்றும், இறந்தானெனக் கூற விருப்பமின்மையின், “இன்ன னாயினன் இளையோன்” என்றும் கூறினாள்; உள்ளூரென்றாற்போல முன்னூ ரென்றார். தன் கணவனையும் உளப்படுத்துமாறு தோன்ற, “எமக் கென” என்று தாய் கூறுவள். நின் உயிரைப் பற்றுக் கோடாகக் கொண்டு வாழ்கின்றாள் நின் தாய்; அவள் இறந்துபடுதலும் ஒருதலை யென்றற்கு “அன்னையென்னா குவள்கொல் அளியன்” என்றாள். அவனுயிரும் தன்னுயிரும் வேறென்னாது ஒன்றிய காதல ளாதலின் அவனுடைய அன்னையையும் தனக்கு அன்னையாகக் கோடலின் நாளும் ஆனாது புகழும் அன்னையென்னா குவள் கொல்லெனப் பொதுப்படக் கூறினாள். காதலன் கைப் பற்றிய ஞான்றே. அவள் தன் தாயையும் தந்தையையும் மறந்தாளென்றுணர்க; “அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள்” (திருநா. 239:7) என்று சான்றோர்கள் உரைப்பது பற்றியும் சங்க இலக்கியங்களிற் காணப்படும் வழக்கு நோக்கியும் ஓர்ந்து கொள்க. 255. வன்பரணர் ஆசிரியரான வன்பரணர் திருச்சிராப்பள்ளிக்கு அண்மையிலுள்ள நெடுங்களம் என்னும் ஊரினரான நெடுங்களத்துப் பரணரெனவும், இவர் ஓரியின் வன்மையை அவன் வில்மேலேற்றி வல்விலோரி யெனச் சிறப்பித்துப் பாடியதனால் வன்பரணரென்று கூறப்படு வாராயினரெனவும் செந்தமிழ்ச் செல்வியில் (சிலம்பு: 23 பரல் 12) ஆராய்ந்து காட்டினாம். தலைமகனொருவன் போரில் புண்பட்டு வீழ்ந்து மாண்டான். அவன் திரும்ப வாராமையால் பெருங்கலக்கமுற்ற அவன் மனைவி அவன் வீழ்ந்த இடத்துக்குச் சென்றாள். அந்த இடம் புலி முதலியகொடிய விலங்குகள் வாழும் காட்டருகே இருந்தது. அண்மையில் மலையொன்று காடடர்ந்து நின்றது. அவள் சென்று சேர்ந்தபோது பொழுதும் வெயில் மாலையாக இருந்தது. கணவனைக் கண்டதும், அவளுக்குண்டான கையறவு பெரிதாயிற்று. அவன் உடலைத் தழுவிக் கண்ணீர் சொரிந்து கலங்கினாள். “அன்ப, நின்னைக் கண்டு வருந்தும் யான் ‘ஐயோ’ என வாய்விட்டுக் கதறியழுவேன்; அந்த ஓசைகேட்டுக் காட்டிலுள்ள புலிகள் வந்துநின் உடலைக் கொண்டுபோய்விடும்; பின்பு யான் அதனையுங் காணப்பெறாது ஒழிவேன்; இந்த அச்சத்தால் கதறிப் புலம்புகின்றேனல்லேன்; நின்னை எடுத்துக்கொண்டு போகலாமே யெனின், நினது அகன்ற மார்பு பெரிதாகையால் என்னால் இயலாது; ஒரு தீங்கும் செய்தறியாத என்னை இப்பெருந்துயரத்துள் அழுத்தி நடுக்கமுறுவிக்கும் கூற்றம் என்னைப் போலப் பெருந்துன்பம் உறுவதாக; நீ என்னுடைய வளையணிந்த கைகளைப் பற்றிக் கொண்டு மெல்ல நடந்து வருக; யாம் இம் மலையின் நிழலை யடையலாம்; வெயில் வெம்மை வருத்தாது” எனக் குழைந்து மொழிந்தாள். இக் காட்சி வன்பரணர் உள்ளத்தைக் குழைவித்தது. அக் குழைவின் வடிவே இப்பாட்டு. இப்பாட்டுடைத்தலைமகன் பெயர் தெரிந்திலது. ஐயோ வெனின்யான் புலியஞ் சுவலே அணைத்தனன் கொளினே யகன்மார் பெடுக்கவல்லேன் என்போற் பெருவிதிர்ப் புறுக நின்னை இன்னா துற்ற வறனில் கூற்றே 5 நிரைவளை முன்கை பற்றி வரைநிழற் சேர்க நடத்திசிற் சிறிதே. திணை : பொதுவியல்; துறை: முதுபாலை ....... வன்பரணர் பாடியது. உரை : ஐயோ எனின் - ஐயோவென்று அரற்றுவேனாயின்; யான் புலி அஞ்சுவல் - அவ்வுரைவழியே வந்து நின் உடம்பாயினும் யான் காணப்பெறாமல் ஏதஞ்செய்யுமோவென்று புலியை யஞ்சுவேன்; அணைத்தனன் கொளின் - இவ்விடத்தி னின்றும் எடுத்துக் கொண்டு போவேனென்று நினைப்பின்; அகல்மார்பு எடுக்கவல்லேன் - நினது அகலிய மார்பை எடுக்கமாட்டேன்; என்போல் பெருவிதிர்ப்பு உறுக - என்னை யொப்பப் பெரிய நடுக்கத்தை உறுவதாக; நின்னை இன்னாதுற்ற அறனில் கூற்று - உன்னை யிறந்துபடும் பரிசு வந்து தாக்கிய அறமில்லாத கூற்று; வரை நிழல் சேர்கம் - யாம் மலையினது நிழற்கண்ணே அடைவோமாக; நிரைவளை முன்கை பற்றிச் சிறிதுநடத்திசின் - எனது நிரைத்த வளையையுடைய முன்கையைப்பிடித்து மெல்ல நடப்பாயாக; எ-று, நடவாயென்னும் முன்னிலை வினைச்சொல் சின்னென்னும் இடைச்சொல்லான் அசைக்கப்பட்டு நின்றது. விளக்கம் : யான் காண இருப்பது நின் உடம்பேயாயினும், அதனையும் யான் காண இயலாது போகுமேயென்று அஞ்சுகின்றேனென்பாள் “புலியஞ்சுவல்” என்றாள். இன்னாது, இறந்துபாடு, “இன்னுயிர் கழிவினும் நனியின்னாது” (நற்.227) என்றும், சாதலின் இன்னாத தில்லை” (குறள். 230) என்றும் சான்றோர்விதந்தோதுதலின், சாக்காடு ஈண்டு இன்னாது எனப்பட்டது. உற்ற என்பது உறுவித்த என்னும் பொருளது. இறந்த உடம்புகண்டு மயங்கிக் கூறுகின்றாளாதலால் “சிறிது நடத்திசின்” என்று சொல்லுகின்றாள். எனவே, அவனை அவள் மெல்லச் சுமந்து கொண்டு செல்லுமாறு பெற்றாம். நடத்திசின் என்பதில் சின்முன்னிலையசை; எஞ்சி நிற்கும் நடத்தி யென்பது நடவாய் என்னும் பொருட்டு. “இகுமுஞ் சின்னும் ஏனையிடத்தொடுந், தகுநிலையுடைய என்மனார் புலவர்” (தொல். இடை 27) என்று ஆசிரியர் கூறுதல் காண்க. அவல மிகுதியாற் பிறக்கும் அரற்றாதலின் இரண்டாமடி நீண்டு நெடிலடியாமாறு காண்க. 256. தனிமகள் புலம்பிய முதுபாலை இப்பாட்டைப் பாடிய ஆசிரியர் பெயரும் பாட்டுடைத் தலைவி பெயரும் தெரிந்தில; அதனால், இப் பாட்டின்கண் அமைந்த துறைநோக்கி, “தனிமகள் புலம்பிய முதுபாலை” யெனப்பெயர் கொள்ளப்பட்டது. தனிமகள் ஒருத்தி தன் காதற் கொழுநனுடன் சுரத்திடை வந்து கொண்டிருக்கையில், கொழுநன் ஆண்டு உண்டாகிய போரின் கண் விழுப்புண்பட்டு உயிர் கொடுத்துப் புகழ் கொண்டான். அதனால் தனிமையுற்றுக் கொழு கொம்பிழந்த கொடிபோல் வருந்தும் அவள், கலம் செய்யும் ஊர்க்குயவனை நோக்கி, “வேட்கோவே, சிறப்புண்டாகப் போரிடை மாண்டாரை ஈமத்தே தாழி கவித்து வைப்பது குறித்து வேண்டும் தாழியாகிய கலத்தைச் செய்பவனாதலின், நின்பால் வேண்டுவ தொன்றுண்டு. இப்போது என் கொழுநனைக் கவித்தற்குத் தாழி யொன்று வேண்டியுளது; நின்பால் இருப்பது ஒருவரைக் கவித்தற் குரிய அகலமுடையது. சகடத்தைக் கொண்டேகும் உருளை (சக்கரம்) யிலுள்ள ஆர்க்காலைப் பொருந்தியிருக்கும் பல்லி யொன்று, அவ்வார்க்காலை நீங்காமல் பற்றிக் கொண்டு வருவது போல யானும் என் கொழுநனைத் தொடர்ந்து வந்துள்ளேன். என்னையும் சேர்த்து ஒருங்கே கவிக்கக்கூடிய அகலமுடையதாக என்பால் அருள் கூர்ந்து செய்வாயாக” என வேண்டினாள், அவ்வேண்டுகை இப்பாட்டின் பொருளாக அமைந்துள்ளது கலஞ்செய் கோவே கலஞ்செய் கோவே அச்சுடைச் சாகாட் டாரம் பொருந்திய சிறுவெண் பல்லி போலத் தன்னொடு சுரம்பல வந்த வெமக்கு மருளி 5 வியன்பல ரகன்பொழி லீமத் தாழி அகலி தாக வனைமோ நனந்தலை மூதூர்க் கலஞ்செய் கோவோ. திணை : பொதுவியல்; துறை: முதுபாலை ....... உரை : கலம் செய் கோவே கலம் செய் கோவே - கலம் வனையும் வேட்கோவே கலம் வனையும் வேட்கோவே; அச்சுடைச் சாகாட்டு ஆரம் பொருந்திய - சகடம் செலுத்தும் உருளின் கண்ஆரத்தைப் பொருந்தி வந்த; சிறு வெண் பல்லிபோல - சிறியவெளிய பல்லிபோல; தன்னொடு சுரம்பல வந்த எமக்கும் - நெருநலை நாளால் பல சுரமும் தன்னொடு கழிந்து வந்த எமக்கும்; அருளி - அருள்பண்ணி; வியன் மலர் அகன் பொழில் ஈமத்தாழி - யானும் அவனோடு கூடியிருக்கும்படி பெரிய பரப்பினையுடைய அகலிய பூமியிடத்துக் காட்டின்கண் முதுமக்கட்டாழியை; அகலிதாக வனைமோ - இடமுடைத்தாக வனைவாயாக; நனந்தலை மூதூர்க் கலம் செய் கோவே - பெரிய இடத்தினையுடைய பழைய வூரின்கண் கலம் வனையும் வேட்கோவே; எ-று. எமக்கு என்றது பன்மையும் தலைமையும் கருதாது மயங்கக் கூறிநின்றது. கோவே, கோவே, மூதூர்க் கலம் செய் கோவே, எமக்கும் அருளி அகலிதாக வனைக எனக் கூட்டுக. அடுக்கு விரைவின்கண் வந்தது. விளக்கம் : கலஞ் செய்யும் எனச் சிறப்பிக்கவே, கோ, வேட்கோவென்பதாயிற்று. ஆரம், ஆர்க்கால், அருள், தொடர்பு கருதாது யாவர் மாட்டும் செய்யப் படும் அன்பு. வியன் பெருமையும் மலர்பரப்பையும் குறித்து நிற்றலின், ‘பெரிய பரப்பு’ என்றார். பொழில், பூமி; “வண் புகழ் மூவர் தன் பொழில்” (தொல். செய். 78) என ஆசிரியர் கூறுவது. காண்க. ஈமத்தாழி முதுமக்கள் தாழி, யாமும் எம் தலைவனோடே இறக்கவிருக் கின்றோமாதலால் எமக்கும் அவனோடே இடம் அமையத்தக்க அகலமுடைத்தாகப் பெரியதொரு தாழி செய்ய வேண்டுமென வேண்டுதலின், “எமக்கும் அருளி அகலிதாக வனைமோ” என்றாள். “எமக்கும்” என்றது கூற்றுநிகழ்த்துவோரிடத்துத் தலைமையும் பன்மையும் இல்லாமையால், “பன்மையும் தலைமையுங் கருதாது” நின்றது என்றும், வழுவாயினும் மயங்கக் கூறுதலின் அமைக்க வென்பார், “மயங்கக் கூறி நின்றது” என்றும் உரைத்தார். சாகாட்டாரம் பொருந்திய பல்லிபோலக் கணவனைப் பற்றித் தொடர்ந்துவந்தவள் “எனக்கும்”என அவனிற் பிரித்திசைக்கும் சொல்லை நெஞ்சாலும் நினையாளாதலின், “எமக்கு” என்றாளெனினுமமையும். அங்ஙனம் வனைதற்கு ஈமம் இடம்பெறாதெனத் தடை நிகழ்த்தாவண்ணம், “வியன் மலரகன் பொழில் ஈமம்” எனச் சிறப்பித்தாள். அகலிதாக வனைதற்குரிய வாய்ப்பும் கலஞ்செய் வேட்கோவற் குண்டென்பது, “நனந்தலை மூதூர்” என்று சிறப்பித்ததனால் விளங்குகிறது. பற்றுக் கோள்விடாமைக்குப் பல்லி உவமமாயிற்று. 257. உண்டாட்டு இரு தலைவர்கட்கிடையே எக்காரணத்தாலோ பகைமை யுண்டாயிற்று. அதுவாயிலாக ஒரு திறத்தார் மற்றவருடைய ஆனிரைகளைக் கவர்ந்தனர். அதனை யறிந்த நிரையுடைய கரந்தையார் எதிர்நின்று போருடற்றினர். கவர்ந்துகொண்ட வெட்சியார் அக் கரந்தையாரை வென்று வெருட்டிவிட்டு ஆனிரைகளைத் தாம்கொண்டு சென்று தம் மூரிற்பிறர்க்கு வழங்கி இன்புற்றனர். கரந்தையாரை வென்ற வெற்றிகுறித்துத் தானைத் தலைவருடனே கள்ளுண்டு மகிழ்ந்தாடினர். அந்த உண் டாட்டிடையே தலைவனது பேராண்மையை எடுத்தோதும் ஒருவன், “பகைவர் நிரை கொணர்ந்த வெட்சித்தலைவன். பகைவர்க்குத் துன்பம் செய்வதில் செருப்பிடையுற்ற பரற்கல் போல்வன்; திரண்ட காலும் அகன்ற மார்பும் நல்ல மீசையும் செவிமறைய வளர்ந்த தலை மயிரும், உயர்ந்த வில்லுமுடையன்; அவன் மிகவும் அளியன்; ஆராயுமிடத்து அவன் தன் ஊரைவிட்டு மிகுதியும் நீங்கியதில்லை; பகைவர்க்கஞ்சிக் காட்டை யரணாக அடைந்ததும் இல்லை; இன்று காலையில் பகைவருடைய நிரைகள் இருக்கும் இருப்பை யறிந்தான்; அவர் நிரையைக் கவர்தற்குரிய சூழ்ச்சியை மெல்ல எண்ணினான்; கரந்தையார் நிரையைக்காத்தற்குச் செய்த போரை மிக விரைவில் மாற்றி வென்றான்” என வியந்தோதி இன்புறுகின்றான். அந்த இன்பப் பாட்டு இது. செருப்பிடைச் சிறுபர லன்னன் கணைக்கால் அவ்வயிற் றகன்ற மார்பிற் பைங்கட் குச்சி னிரைத்த குரூஉமயிர் மோவாய்ச் செவியிறந்து தாழ்தருங் கவுளன் வில்லொ 5 டியார்கொலோ வளியன் றானே தேரின் ஊர்பெரி திகந்தன்று மிலனே யரணெனக் காடுகைக் கொண்டன்று மிலனே காலைப் புல்லா ரினநிரை செல்புற நோக்கிக் கையிற் சுட்டிப் பையென வெண்ணிச் 10 சிலையின் மாற்றி யோனே யவைதாம் மிகப்பல வாயினு மென்னா மெனைத்தும் வெண்கோ டொன்றாக் குழிசியொடு நாளுறை மத்தொலி கேளா தோனே. திணை : பொதுவியல்; துறை: முதுபாலை ....... உரை : செருப்பிடைச் சிறுபரல் அன்னன் - பகைவன் மேற் செல்லாதவாறு துன்பம் செய்தலால் செருப்பிடையுற்ற சிறுபரற் கல்லை யொப்போன்; கணைக்கால் - திரண்ட காலையும்; அவ்வயிறு - அழகிய வயிற்றினையும்; அகன்ற மார்பின் - பரந்தமார்பினையும்; பைங்கண் - பசிய கண்ணினையும்; குச்சின் நிரைத்த குரூஉ மயிர் மோவாய் - குச்சுப்புல் நிரைத்தாற் போன்ற நிறம்பொருந்திய மயிரினையுடைய தாடியினையும்; செவியிறந்து தாழ்தரும் கவுளன் - செவியிறந்து முன்னே தாழ்ந்த கதுப்பினையுமுடையனாய்; வில்லொடு யார்கொலோ அளியன் - வில்லுடனே யார் தான் இவ்வளிக்கத்தக்கான் தான்; தேரின் - ஆராயின்; ஊர் பெரிது இகழ்ந்தன்றும் இலன் - ஊரைப் பெரிதும் நீங்கினதுமிலன்; அரண்எனக் காடு கைக்கொண்டன்றும் இலன் - தனக்கு அரண் எனக் கருதிக் காட்டைக் கைக்கொண்டதும் இலன்; காலை - இற்றைநாட் காலையே; புல்லார் இனநிரை செல் புறம் நோக்கி - பொருந் தாதாரது இனமாகிய நிரை போகின்ற இடத்தைப்பார்த்து; கையின் சுட்டிப் பையென எண்ணி - தன் கையாற் குறித்து மெல்ல எண்ணி; சிலையின் மாற்றியோன் - கரந்தையார் செய்யும்பூசலை மாற்றி வில்லாலே கொடு போந்தனன்; அவைதாம் மிகப்பல வாயினும் என்னாம் எனைத்தும் - அந்நிரைதாம் மிகப்பலவே யாயினும் என்ன பயன்படும் எத்தன்மைத்தும்; வெண்கோள் தோன்றாக் குழிசியொடு - பால் முதலியன பெய்யப்படாமையின் சிறிதும் வெள்ளிய முகம் தோன்றாத பானையைக் காண்டலுடனே; நாளுறை மத்தொலி கேளாதோன் - நாட்காலத்து உறை தெறிப்பக் கடையும் மத்தின் ஒலியைக் கேளாதபடி பிறருக்கு நேராகக் கொடுத்தல் வல்லனாயினான் அவனுக்கு; எ-று. பகைவர் மேல்நடக்கவொட்டாது எதிரினின்று விலக்குதலின் “செருப்பிடைச் சிறுபர லன்னன்” எனப்பட்டான். அன்ன என்று பாடமோதிச் செருப்பிடைச் சிறு பரலோசைபோல நெடிய ஓசையை யுடைய காலென்றுரைப்பாருமுளர். யார்கொல் என்றது அறியான் வினாதலன்றி வியப்பின்கண் வந்தது. “ஊர் பெரி திகந்தன்றுமிலனே” என்பது நிரைகோட் கடுமை. சிறுபரலன்னன் கவுளனாகிய அளியனானவன் தான் யார் கொல்லோ, தேரின், வில்லொடு ஊர் பெரிது இகந்தன்று மிலனாய், காடு கைக்கொண்டதுமிலனாய், நோக்கி எண்ணி மாற்றினான்; மாற்றிக் குழிசி காண்டலோடு மத்தொலி கேளாதோனாயினான்; அவனுக்கு அவைதாம் மிகப்பலவாயினும் என்னாமெனக் கூட்டுக. கேளாதோற் கென வுருபு விரித் துரைப்பினு மமையும். விளக்கம் : நெருப்பிடைச் சிறுபரல் என்பது பழமொழி. “தருக்கியொழுகித் தகவல்ல செய்தும், பெருக்க மதித்தபின் பேணாமை செய்தும், கரப்பிடை யுள்ளங் கனற்று பவரே, செருப்பிடைப்பட்ட பரல்”(பழ 224) என வருதல் காண்க, குச்சி, குச்சிப்புல். கவுள் என்றது, செவி மருங்கிருந்து மோவாய்வரை வளர்ந்து நன்கு ஒதுக்கப்பட்டிருக்கும் மயிர். “ஊர் பெரிது இகந்தன்றுமிலன்”. எனவே, அச்சமுடைய னென்பது படாமை விலக்கற்கு “அரணெனக்காடுகைக் கொண்டன்றுமிலன்” என்றான். பகைவருடைய இனநிரை முன்னின்று நோக்கினும் மருங்கிருந்தெண்ணினும், அவர்கள் அயிர்த்தற்கிடனாமென்றெண்ணிப் புறமிருந்து நோக்கினமை தோன்ற, “செல்புறம் நோக்கி” யென்றும், நிரை கோடற்குச் சூழ்ச்சியை விரைந்தெண்ணுதல் முறையன்மையால் “பைய வெண்ணி’ யென்றும், கரந்தையாரைத் தொலைவிலே நிறுத்திப் பொருது சாய்த்தமை விளங்க, “சிலையின் மாற்றியோன்” என்றும் கூறினார். பகைவர் முன்னேறவிடாது முன்னோக்கி அடிவைக்குந் தோறும் அவரைத் தடுத்து மாற்றுவது பற்றி, “பகைவர்..... எனப் பட்டான்” என்றும் பரலன்னனென்னாது அன்ன என்று பாடங் கோடலும் உண்டாதலின், அதற்குப் பொருள் இதுவென்பார் “அன்ன....உளர்” என்று கூறினார். “ஊர் பெரிது....கடுமை” யென்றது, “ஊரிலேயிருந்துகொண்டுதான் இருந்தான்; பகைவர் நிரை கவர்ந்து கொணரப்பட்டது” என்று உலகுரை காட்டி நின்றது. நிரைவந்ததும் பிறர்க்குப் பகுத்ததும் பிறர் அறிதற்குமுன்பே மிக மிக விரைவாக விடிவதற்குள் நிகழ்ந்தன என்பது, “அனைத்தும்... கேளாதோன்” என்பதனால் பெறப்படுகிறது. 258. உலோச்சனார் சோழநாட்டுச் சான்றோர்களுள் இவரும் ஒருவர். இவர் பெயர் உலோச்சனாரென்றும் காணப்படுகிறது. இவர் நெய்தல் நிலக்கருப் பொருள்களை நுணுகி நோக்கி இனிமையுறக் கூறுவதால் இவர் நெய்தல் நிலத்தவராவர். சோழநாட்டு நெய்தல் நிலத்தூர்களுள் பொறையா றென்னு மூரையும் ஆங்கிருந்து ஆட்சி புரிந்த தலைவனான பெரியன் என்பானையும் சிறப்பித்து,” பாடுநர்த் தொடுத்த கைவண் கோமான், பரியுடைநற்றேர்ப் பெரியன்” (அகம்: 100) என்றும், “நற்றேர்ப் பெரியன் கட்கமழ் பொறையாறு” (நற். 131) என்றும் பாடியுள்ளார். கண்ப வாயில் என்னும் ஊரை இவர் குறித்திருக்கும் நலம் கண்ட நற்றிணையுரைகாரர் (38); இதுவே இவரது ஊராகவும் இருக்கலாம் என்று கருதுவர். இவர் காலத்தே சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி உறையூரிலிருந்து ஆட்சிபுரிந்து வந்தான். அவனை இவர் ஒருகால் சென்று கண்டார். அவனும் இவர் சேய்மை நாட்டில் இருப்பவரென அறிந்து மணியும் பொன்னும் முத்தும் உடையும் பிறவும் நிரம்பத் தந்து மகிழ்வித்தான். இவ்வண்ணம் சிறப்புற்று விளங்கிய இவர், ஒருகால் ஒரு தலைவன் பகைவர் நாட்டிற்குச் சென்று அவர்தம் நிரைகளைக் கவர்ந்துவந்த திறத்தைக்கண்டார். அவன் மறுபடியும் வேற்று நாட்டிற்கு நிரை கவரச்செல்வது கருதினான். அது குறித்து வீரரிடையே உண்டாட்டு நிகழ்ந்தது. உலோச்சனாரும் ஆங்கே இருந்தார். அவர்வீரருக்குக் கள் வழங்குவோனைப் பார்த்துக் கூறுவது போல “கள் வழங்குபவனே, முன்பு இத்தலைவன் கந்தார நாட்டிற்குட் புகுந்துநிரை கவர்ந்து கொணர்ந்து கள் விலைக்கு ஈடாக வழங்கினன்; இன்றும் அவ்வாறே செல்லச் சமைந்துள்ளான்; சென்றுள்ளானெனவே கூறலாம். நின்பால் உள்ள கள்ளை வழங்குவாயாயின் முடிவில் அவற்கு இல்லையாய்விடும்; அவன் ஆனிரைகளைக் கொணருங்கால், விடாய் மிகவுடையனாவன். அப்போது வழங்குதற்கு முதுகட்சாடி யொன்றைப் பேணி வைப்பாயாக” என்று இப்பாட்டைப் பாடினார். முட்காற் காரை முதுபழ னேய்ப்பத் தெறிப்ப விளைந்த தேங்கந் தாரம் நிறுத்த வாயந் தலைச்சென் றுண்டு பச்சூன் றின்று பைந்நிணம் பெருத்த 5 எச்சி லீர்ங்கை லிற்புறந் திமிரிப் புலம்புக் கனனே புல்லணற் காளை ஒருமுறை யுண்ணா வளவைப் பெருநிரை ஊர்ப்புற நிறையத் தருகுவன் யார்க்கும் தொடுத லோம்புமதி முதுகட் சாடி 10 ஆதரக் கழுமிய துகளன் காய்தலு முண்டக் கள்வெய் யோனே. திணை : பொதுவியல்; துறை: முதுபாலை ....... உலோச்சனார் பாடியது. உரை : முட்கால் காரை முதுபழன் ஏய்ப்ப - முட்டாளையுடைய காரையினது முதிர்ந்த பழத்தை யொப்ப; தெறிப்ப விளைந்ததேம் கந்தாரம் - முற்ற விளைந்த இனிய மதுவையுடைய கந்தார மென்னும் பெயரையுடைய வேற்றுப்புலத்து; நிறுத்த ஆயம் தலைச் சென்று உண்டு - தான் கொண்டுவந்து நிறுத்தின நிரையைக் கள் விலைக்கு நேராகக் கொடுத்து உண்டு; பச்சூன் தின்று - செவ்வித் தசையைத் தின்று; பைந்நிணம் பெருத்த - செவ்விநிணமிக்க ; எச்சில் ஈர்ங்கை வில்புறம் திமிரி - எச்சிலாகிய ஈரமுடைய கையை வில்லினது புறத்தே திமிர்ந்து; புலம் புக்கனன் புல்லணல் காளை - வேற்று நாட்டின்கண்புக்கான் புல்லிய தாடியையுடைய காளை; ஒருமுறை உண்ணா அளவை - இவ்விருந்தமறவர் ஒருகால் உண்பதன் முன்னே; பெருநிரை ஊர்ப்புறம்நிறையத் தருகுவன் - பெரிய ஆனிரையை இவ்வூர்ப் புறமெல்லாம் நிற்பக் கொடு தருகுவன்; யார்க்கும் தொடுதல் ஓம்புமதி - யாவர்க்கும் வாராது அதற்பொருட்டுத் தொடுதலைப் பாதுகாத்து வைப்பாயாக; முதுகள் சாடி - முதிர்ந்த மதுவை யுடைய சாடியை; ஆதரக் கழுமிய துகளன் - ஆவைக் கொண்டு வரக் கலந்த தூளியை யுடையனாய்; அக் கள்வெய்யோன் - அம்மதுவை விரும்புவோன்; காய்தலும் உண்டு - விடாய்த் தலும் உண்டாம்; எ-று. தலைச் சென்றென்பது தலைச் செலவெனத் திரிக்கப்பட்டது. கள் விலையாட்டியிடத்தே செல்ல வென்றுமாம். “தீங்கட்டாரம்” என்றோதிக் கள்ளாகிய இனிய பண்டமெனினுமமையும். “காய்தலும் உண்டு” என்பதற்குக் கள் வெய்யோனாதலின் நின்னைவெகுளவுங்கூடு மென்பாருமுளர். இவன் நிரை கொள்ளச் செல்கின்றமை கண்டார். கள் விலையாட்டிக்குக் கூறியது. விளக்கம் : காரையென்பது முட்செடி; அதனால் அதனை “முட்கால் காரை” யென்றார். தெறித்தல் - முற்றவும் புளித்தல். தேன் என்பது தேம் என வந்தது. கந்தாரம் என்பது காவிரிக்கரையைச் சார்ந்த ஓர் ஊர். இவ் வூரினைத் தலைமையாகக்கொண்ட சிறு நாடும் இருந்தது; இதனை “நித்தா வினோதவளநாட்டுக் கந்தார நாடு” (M.E.R. 1936- 37 : No. 31:) எனக் கல்வெட்டுக் கூறுவது காண்க. கவர்ந்து போந்த நிரைகளைக் கொண்டோர் அவற்றைத் தாமுண்ணும் கள்ளுக்கு விலையாகமாறுவது வழக்காதலால், “நிறுத்த ஆயந் தலைச் சென்றுண்டு ” என்றார். பிறரும், “அங்கட் கிணையன் றுடியன் விறலிபாண், வெங்கட்கு வீசும் விலையாகும், செங்கட், செருச்சிலையா மன்னர் செருமுனையிற் சீற, வரிச்சிலையாற் றந்த வளம்” (பு.வெ.மா. 19) என்பது காண்க. காளை புக்கனன் என்றபின், “ஒருமுறை யுண்ணாவளவை” யெனவே, உண்பவர், புலத்துக்குச்செல்லாது கள்ளுண்டற் கிருந்த மறவரென்பது பெறப் படுதலால், “இவ்விருந்த மறவர்” என்பது வருவிக்கப்பட்டது. உண்ணாவளவையென்றது, நிரைகோட் கடுமையுணர நின்றது. யாவர்க்கும் வாராது - எல்லார்க்கும் பெய்து கொடுக்காமல். கள்விற் போர்பால் செல்ல ஆநிரைகளை விற்றுவிடுதலின், “தலைச்செல்ல எனத் திரிக்கப்பட்ட” தென்றார். காய்தலும் என்புழியும்மை, எதிர்மறை மிக்க வலியுடையார்க்கு வெகுளி மிகவிரைவில் உண்டாகாதென வறிக. பெருநற்கிள்ளியின் பெயருடையார் புதுக்கோட்டைப்பகுதியிலுள்ள வூர்களிற் காணப்படுதலால், (A.R. No. 297 of 1974) இப் பாட்டு அவ் வூர் நிகழ்ச்சியாகக் கோடற்கு இடனாகிறது. இது மேலும் ஆராய்தற் குரியது. 259. கோடை பாடிய பெரும்பூதனார் கோடை யென்பது மலை; இப்போது அது கோடைக்கானல் என வழங்குகிறது. இதனைச் சான்றோர் பலரும் வியந்து பாராட்டுமாறு பாடிய சிறப்பால் பெரும்பூதனார் “கோடைபாடிய பெரும்பூதனார்” என்று குறிக்கப்படுகின்றார். நாட்டில் மறவர் பகைவரது நிரை கவர்தலும், கவர்ந்த நிரையைமீட்டலுமாகிய செயல்களில் ஈடுபட்டுத் தங்கள் மறமாண்பை நிறுவிப்புகழ் பெறுந்துறையில் கருத்தூன்றி யிருந்தனர். அதனைப் பெரும் பூதனார் கண்டு மகிழ்ந்து வந்தார். ஒருகால் பகைவரூர்நிரைகளை மறவர்கவர்ந் தேகினர். அஃதறிந்து மனம் பொறாத நிரைக்குரிய மறவர் மீட்டற்குச் செல்ல விரைந்தனர். அவர்களுடைய தலைவன் நிரை மீட்கும் வேட்கைகொண்டு முன்னே செல்லலுற்றான். அந்நிரை கவர்ந்தேகும் பகைவர்காட்டிடத்தே மறைந்திருந்து காவல் புரிந்தனர். ஆனிரைகள், தெய்வமருள் கொண்ட புலை மகளிர் தாவித் துள்ளிக் குதிப்பதுபோலத் தாவித் துள்ளிச் சென்று கொண்டிருந்தன. அந்நிரைகளைமீட்கச் செல்லும் மறவர் அவற்றின் நிலையும் காவல்புரியும்மறவரது மறமாண்பும் அறியாது செல்லுதல் கூடாது; நிலைமையை ஒருவாறறிந்து கொண்ட ஒரு சான்றோர், அம் மறவனைநோக்கிக் காட்டில் மறைந்திருந்து காவல்புரியும் பகைவர்களைக்கண்டு அவர் காவலைக் கட்டழித்தபின் னல்லது நிரைமீட்க அவரிடையே செல்வது நன்றன்று என அறிவுறுத்தினார். அவ்வறிவுரை இப்பாட்டு வடிவில் தரப்பட்டுள்ளது. ஏறுடைப் பெருநிரை பெயர்தரப் பெயரா திலைபுதை பெருங்காட்டுத் தலைகரந் திருந்த வல்வின் மறவ ரொடுக்கங் காணாய் செல்லல் செல்லல் சிறக்கநின் னுள்ளம் 5 முருகுமெய்ப் பட்ட புலைத்தி போலத் தாவுபு தெறிக்கு மான்மேற் புடையிலங் கொள்வாட் புனைகழ லோயே. திணை: கரந்தை. துறை: செருமலைதல்; பிள்ளைப்பெயர்ச்சியுமாம். செருமலைதலாவது, “வெட்சியாரைக் கண்ணுற்று வளைஇ, உட்குவரத் தாக்கி யுளர் செருப்புரிந்தன்று” உரை : ஏறுடைப் பெருநிரை பெயர்தர - தாம் கொள்ளப் பட்ட ஏற்றையுடைய பெரிய ஆனிரை முன்னே போக; பெயராது மீட்கவருவாரைக் குறித்து அந்நிரையோடு தாம் போகாது; இலை புதை பெருங்காட்டு - தழையால் மூடிய பெரிய காட்டின்கண்; தலைகரந்திருந்த வல்வில் மறவர்ஒடுக்கம் காணாய் - தலைகரந்திருந்தவலிய வில்லையுடைய மறவரது ஒடுங்கிய நிலையைக் கருதாய்; செல்லல் செல்லல் - போகா தொழி போகாதொழி; நின் உள்ளம் சிறக்க - நினது மேற்கோள் சிறப்பதாக; முருகு மெய்ப்பட்ட புலைத்தி போல - தெய்வம் மெய்யின்கண் ஏறிய புலைமகளை யொப்ப; தாவுபு தெறிக்கும் ஆன்மேல் - தாவித்துள்ளும் ஆனிரைமேல்; புடை இலங்கு ஒள் வாள் புனை கழலோய் - மருங்கிலேவிளங்காநின்ற ஒள்ளிய வாளினையும் வீரக் கழலினையு முடையோய்; எ-று. புனைகழலோய், காணாய்; ஆன்மேற் செல்லல், செல்லல்; நின்னுள்ளம் சிறப்பதாக எனக் கூட்டுக. செல்லலென்றது அவரைக்கண்டு பொருது கொன்றன்றிச் செல்லலென்பதாம். விளக்கம் : வெட்சியாரை .............செருப்புரிந்தன்று; “வெட்சியாரைக் கிட்டிச் சூழ்ந்து அஞ்சத் தாக்கி யெடுப்பும் சாய்ப்புமான பூசலை மேற்கொண்டது.” (பு.வெ. 25.உரை) பெருநிரை பெயர் தரப் பெயராது என்றதனால் முன்பின்பெயர்தல் வருவித்து, மறவர் பிற்பெயர்தற்குக் காரணமும் “மீட்கவருவாரைக் குறித்து” என வருவித்துரைத்தார். செல்லல் என விலக்கியது, செல்வோனது உள்ளத்தின் சிறுமை கருதிக் கூறப்பட்ட தன்றாதல் விளங்க, “சிறக்க நின் உள்ளம்” என்றார். தெய்வ மருள் கொண்டு ஆடும் புலைத்தியை, “முருகு மெய்ப்பட்டபுலைத்தி” யென்றார். “சிலம்பிற்சூர் நசைந்தனையை யாய்நடுங்கல் கண்டே” (குறுந். 52) என்று பனம்பாரனாரும் கூறுதல்காண்க. கரந்திருந்த மறவர் வெட்சியார் புனை கழலோன் கரந்தையார் தலைவன்; மறவனுமாம். செல்லல் செல்லல் என அடுக்கியது, அவரைக் கண்டு பொருது கொன்றன்றிச் செல்லலாகா தென்பது வற்புறுத்தி நின்றமையின், “செல்லென்றது... என்பதாம்” என்று உரைத்தார். நார்த்தாமலைப் பகுதியிலுள்ள குன்றுகளில் ஒன்றான கோடைமலை இவராற் பாடப்பட்ட தென்றும் கொள்ளலாம். 260. வடமோதங்கிழார் வடமோதம் என்பது ஓரூர். அது தொண்டை நாட்டிலுள்ளது. சித்தூர் மாவட்டத்திற் சீகாளத்தி திருத்தணிகை வட்டங்களிலுள்ள மாதம் என்னும் ஊர் பண்டைநாளில் மோதம் என இருந்து இந்நாளில் மாதம் என அரசியல் ஏடுகளில் வழங்குகிறது. மதுரை மாவட்டத்திலும் மோதம் என்ற பெரியதோர் ஊரிருந்தமையின் தொண்டை நாட்டின் வடபால் இருந்த மோதம் வடமோதம் என வழங்குகிற்று. இத் தென்மோதம் இப்போது மோதகம் என வழங்குகிறது. வடமோதங்கிழார் பாடிய பாட்டொன்று அகத்திலும் காணப்படுகிறது. இவர் பொருள்களைக் கூர்ந்துநோக்கி, ஓவியம் எழுதுபவர்க்கு வேண்டுங் குறிப்புத்தருபவர் போலச் சொற்களால் ஓவியம் செய்து காட்டும் ஒள்ளியபுலமை படைத்தவர். முருக்கம்பூவின் அரும்பு இளமகளிரின்நிறமூட்டிய உகிரை நிகர்க்கும் என்பதும், குரவமலர் வண்டூதுதோறும் உதிர்வது , வெள்ளி நுண்கோல் அரத்தால் அறுக்கப் படுங்கால் உதிர்வது போல வுளதென்பதும், உடம்பொழித்து உயிர் நீங்கும் ஒருவனைத் தன் தோலையுரித்துக் கொண்டேகும் பாம்பின் செயலோடு உவமித்துரைப்பதும் மிக்க இன்பம்தருவனவாகும். பிற்காலத்தே சிவஞானபோதமருளிய மெய்கண்ட தேவரும் இடைக் காலத்தே சீவக சிந்தாமணி பாடிய திருத்தக்கதேவரும் உடம்பை விட்டுயிர் நீங்குதற்கிவர் காட்டிய உவமையை வியந்தெடுத்துத் தாமும் ஓதுவாராயினர். தலைமகளொருத்தி, தன் காதலன் பிரிந்து சென்றவன் விரைய வாராமையால் வேறுபட்டு வருந்தினாள், அவளது மெலிவு மிகுந்தமையின் அவன் வரவு இன்றியமையா தாயிற்று. அந் நிலையில் அவனை மிக நினைந்து வருந்தினள்; அவ்வருத்த முடிவில் அவனும் வந்து சேர்ந்தான். அதனை முன்னறிந்து உணர்த்த வந்ததோழி “மெல்ல நோக்கி நினைந்தனம் இருந்தனமாக; நயந்தாங்கு, உள்ளிய மருங்கின் உள்ளம் போல, வந்து நின்றனரே காதலர்” (அகம். 317) என மொழிவது மிக்க இன்பம் தருகிறது. ஒருகால் பகைவர் தன்னூர் ஆனிரைகளைக் கவர்ந்தேகியது அறிந்து பின்னே சென்று அப்பகைவரை வென்று நிரைகளை மீட்டுக்கொண்டு ஊரின்கண் உய்த்தான் ஒரு தலைமகன். அவன் நிரைமீட்குங்கால் செய்த போரில் அவன் மார்பில் பகைவர் எய்த அம்பு தைத்து அவன் உயிர் உடம்பைவிட்டு நீங்கும் நிலையைப் பயந்தது. ஊரருகே வந்ததும், அவன் உயிர் நீங்கிற்று; உடம்பும் கீழேவீழ்ந்தது. ஊரவர் அவற்கு நடுகல் நாட்டிப் பெயரும் பீடும் எழுதிச் சிறப்பித்தனர். அவன் உயிர் வாழ்ந்த காலத்தில் அவன் பாணர்க்கும் புலவர்க்கும் நிலனும் பொருளும் வழங்கி இசை பெற்றவன். அவன் நடுகல்லானது அறியாத பாணனொருவன் அவனை நோக்கி வந்துகொண்டிருந்தான். அவற்கு வழியில் தீநிமித்தங்கள் உண்டாயின. அதனால் அவன் இத்தலைவனைக் காண்டல் இயலாது போலும் எனும் கவலையால் விழுங்கப் பட்டு வாடிய முகத்தனானான். அவனை இடைவழியில் வேறொரு பாணன்கண்டு, “பாண, இனி நீ தலைவன் தந்த நிலத்தில் உழுதுண்டல் செய்வதோ, வேறு வேறிடஞ் சென்று இரந்துண்பதோ இவையே செய்யத்தக்கன; தலைமகனோ நிரைமீட்டு வந்தவன் “நிரையொடு வந்த உரையனாகி, உரி களை யரவம் மான, அரிதுசெல்லுலகிற் சென்றனன்” என்று சொல்லி, “அவன் பெயர் கல்லில் எழுதப் பட்டுள்ளது; சென்று கண்டு வழிபடுக” எனக் கையறவுபடவுரைத் தான்; இதனை நம் வடமோதங்கிழார், இந்த இனியபாட்டால் நம் நெஞ்சுருகுமாறு பாடியுள்ளார். வளரத் தொடினும் வௌவுபு திரிந்து விளரி யுறுதருந் தீந்தொடை நினையாத் தளரு நெஞ்சந் தலைஇ மனையோள் உளருங் கூந்த னோக்கிக் களர 5 கள்ளி நீழற் கடவுள் வாழ்த்திப் பசிபடு மருங்குலை கசிபுகை தொழா அக் காணலென் கொல்லென வினவினை வரூஉம் பாண கேண்மதி யாணரது நிலையே புரவுத்தொடுத் துண்குவை யாயினு மிரவெழுந் 10 தெவ்வங் கொள்குவை யாயினு மிரண்டும் கையுள போலுங் கடிதண் மையவே முன்னூர்ப் பூசலிற் றோன்றித் தன்னூர் நெடுநிரை தழீஇய மீளி யாளர் விடுகணை நீத்தந் துடிபுணை யாக 15 வென்றி தந்து கொன்றுகோள் விடுத்து வையகம் புலம்ப வளைஇய பாம்பின் வையெயிற் றுய்ந்த மதியின் மறவர் கையகத் துய்ந்த கன்றுடைப் பல்லான் நிரையொடு வந்த வுரைய னாகி 20 உரிகளை யரவ மானத் தானே அரிதுசெல் லுலகிற் சென்றன னுடம்பே கானச் சிற்றியாற் றருங்கரைக் காலுற்றுக் கம்பமொடு துளங்கிய விலக்கம் போல அம்பொடு துளங்கி யாண்டொழிந் தன்றே 25 உயரிசை வெறுப்பத் தோன்றிய பெயரே மடஞ்சான் மஞ்ஞை யணிமயிர் சூட்டி இடம்பிறர் கொள்ளாச் சிறுவழிப் படஞ்செய் பந்தர்க் கன்மிசை யதுவே. திணை : கரந்தை. துறை : கையறுநிலை. பாண்பாட்டு மாம்....... வடமோதங்கிழார் பாடியது. உரை : வளரத் தொடினும் - ஓசை மிக வேண்டுமென்று எறியினும்; வௌவுபு திரிந்து - ஓசையை யுள்வாங்கி வேறு பட்டு; விளரி உறுதரும் தீந்தொடை நினையா - இரங்கற் பண்ணாகிய விளரியைச் சென்றுறுகின்ற இனிய நரம்புத் தொடை யினது தீங்கை நினைந்து; தளரும் நெஞ்சும் தலைஇ - நடுங்கும் நெஞ்சத்தைத் தலைப்பட்டுப் புறப்பட்ட அளவில்; மனையோள் உளரும் கூந்தல்நோக்கி - நிமித்த வழியாக ஒரு மனைவி விரித்து வருகின்றமயிரைப் பார்த்து; களர கள்ளி நீழல் கடவுள் வாழ்த்தி - களர் நிலத்துள்ள கள்ளி மரத்தின் நிழற்கண் உண்டாகிய தெய்வத்தை ஏத்தி; பசி படு மருங்குலை - பசி தங்கிய வயிற்றையுடையாய்; கசிபு கை தொழாஅ - இரங்கிக் கையால்தொழுது; காணலென் கொல் என வினவினை வரூஉம் - நம்குரிசிலைக் காணமாட்டேன் கொல்லோ என்று எதிர்வருவாரைப் பார்த்துக் கேட்டு வருகின்ற; பாண கேண்மதியாணரது நிலை - பாண கேட்பாயாக நமது செல்வம் பட்டநிலைமை; புரவுத்தொடுத் துண்குவை யாயினும் - இனி நீ அவன் நமக்குவிட்ட பண்டங்களைக் கைப்பற்றி உண்பா யாயினும்; இரவு எழுந்து எவ்வம்கொள்குவையாயினும் - அன்றி அவனோடு கூடி இன்புற்றிருந்தவிடத்து அவனையின்றி உயிர் வாழ்தற்பொருட்டு இரக்கக்கடவோ மென்றெழுந்திருந்து வருத்தம் கொள்வா யாயினும்; இரண்டும் கையுள போலும் - இரண்டும் நினது கையகத்துள்ளன; கடிது அண்மைய முன்னூர்ப் பூசலில் தோன்றி - மிக்க அணுமையையுடைய ஊர் முன்னாகச் செய்யப்பட்ட பூசலின்கண் தோன்றி; தன்னூர் நெடுநிரை தழீ இய மீளியாளர் - தன்னுடைய ஊரின்கண் மிக்க நிரையைக் கொண்ட மறத்தினையுடைய வீரர்; விடுகணை நீத்தம் துடி புணையாகவென்றி தந்து - எய்யப்பட்ட அம்பு வெள்ளத்தைத் தன் துடியேபுணையாகக் கடந்து; கொன்று - பகைவரைக் கொன்று; கோள் விடுத்து - அவர் கொண்ட நிரையை மீட்டு; வையகம்புலம்ப - உலகம் தனிப்ப; வளைஇய பாம்பின் வையெயிற்று உய்ந்தமதியின் - சூழ்ந்துகொண்ட பாம்பினது கூரிய பல்லினின்று பிழைத்துப் போந்த திங்களைப் போல; மறவர் கையகத் துய்ந்த கன்றுடைப் பல்லான் நிரையொடு வந்த - மறவருடைய கையினின்றும் பிழைத்துப்போந்த கன்றை யுடைய பலவாகிய ஆனிரையுடனே வந்த; உரையனாகி - சொல்லையுடையனாய்; உரிகளை அரவமான - தோலுரித்த பாம்பு போல; தானே அரிது செல்லுலகில் சென்றனன் - தான் ஒருவனுமேயாக அரிதாகச் செல்லப்படும் தேவருலகத்தின்கட் போயினான்; உடம்பு - அவனது உடம்பு; கானச் சிற்றியாற்று அருங்கரை - காட்டுட் சிற்றியாற்றினது அரிய கரையிடத்து; காலுற்றுக்கம்பமொடு துலங்கிய இலக்கம் போல - காலுற நின்று நடுக்கத்தோடு சாய்ந்த இலக்கத்தை யொப்ப; அம்பொடு துளங்கி ஆண்டு ஒழிந்தன்று - அம்பாற்சலித்து அவ்விடத்து வீழ்ந்தது; உயர் இசை வெறுப்பத் தோன்றியோன் பெயர் - உயர்ந்த கீர்த்தி மிகவும் தோன்றிய மறவன் பெயர்; மடஞ்சால் மஞ்ஞை யணிமயிர்சூட்டி - மென்மை யமைந்த மயிலினது அழகிய மயிராகிய பீலியைச்சூட்ட; பிறர் இடம் கொள்ளாச் சிறுவழி - பிறர் இடங்கொள்ளப்படாத சிறிய விடத்து; படஞ்செய் பந்தர்க்கல்மிசையது - புடைவையாற் செய்யப் பட்ட பந்தர்க்கீழ் நட்டகல்மேலது; எ-று. சூட்டியென்பது சூட்டவெனத் திரிக்கப்பட்டது; சூட்டப் பட்டெனினுமமையும். மனையோள் கூந்தனோக்கி என்பதற்குப் “பாண, என்மனைவியது சரியும் மயிரை நோக்கி” யெனவும், புரவுத் தொடுத்தென்பதற்கு அன்று உம்மைப் புரந்த பரிசைப் பாடியெனவும் உரைப்பாரு முளர். விளக்கம் : உரையில் ஒரு மனைவி யென்றதில், மனைவி, மனைக்கு உரிய வளாகிய ஒருத்தி யென்பதுபட நின்றது. வழிச்செல்வோர் எதிரே, விரித்த தலைமயிருடன் ஒருத்தி முற்படவரின், அதனைத்தீநிமித்தமாகக் கருதுவது இயல்பு. தீநிமித்தத்தால் உண்டாம் எனக் கருதிய தீங்கை விலக்குதல் வேண்டித் தெய்வம் பரவினமையின், “கள்ளி நீழல் கடவுள் வாழ்த்தி” யென்றார். அணங்கெனவும் தெய்வமெனவும் கூறாது கடவுள் என்றது, மனமொழிகளின் எல்லை கடந்து நின்று, உயிர்கள் நுகர்தற்குரிய வினைப்பயன்கள் தாமே சென்று செய்தவுயிரைச் சாரமாட்டாமையான், அவ்வினைப்பயனை வினை முதலாகிய உயிர்கள் நுகரச் செய்யும் முழுமுதற் பொருள், தீநிமித்தம் காட்டும்தீப்பயன் வந்து சாராமை விலக்க வல்லதா மென்பதனால் அதனைக் கடவுள் எனவும், கடவுள் வாழ்த்தி யெனவும் கூறினார். “கோட்பாலனவும் வினையுங்குறு காமை யெந்தை, தாட்பால் வணங்கித் தலை நின்றிவை கேட்க தக்கார்” (திருஞான. மூன், பதி: 54) என்று சான்றோர் தெளிய வுரைப்பது காண்க. குருசிலைக் காணச் செல்லுதற்குக் காரணம், வயிற்றிடை நின்று வருத்தும் பசியாதலால், “பசிபடு மருங்குலை” யென்பது கூறப்பட்டது. யாணர், புதுவை; ஈண்டு ஆகுபெயரால் புதியவாய்ப் பெறப்படும் பொருண்மேனின்றது. ஒருகாலத் தோரிடத்தே ஒருவர் தமக்குரிய அன்பரைக் கண்டு, பிறிதொருகால் அவரையின்றி அவ்விடத்தைக் காணின், அஃது அன்பரைப்போல் இன்பஞ்செய்யுமென்பது இயல்பு. இதனால் “இரவெழுந்து எவ்வங்கொள்குவையாயின்” என்றதற்குப் பொருள் கூறுவாராய்”, அவனோடு கூடி யின்புற்றிருந்த விடத்து அவனையின்றி உயிர் வாழ்தற் பொருட்டு இரக்கக் கடவோம் என்றெழுந்திருந்து வருத்தங்கொள்வாயாயினும்” என்று உரைகாரர் கூறுவாராயினர். போலும்: உரையசை. போலும் என்பதை உவம வுருபாகவே கொண்டு கையுள்ளனபோல மிக்க அணுமையையுடைய என இயைத்துரைப்பின், ஈண்டுக் கூறிய உண்டலும் கோடலும் என்ற இரண்டும் தொழின்மேனின்ற சொற்களாய், அண்மைச் சொற்கு இயையாதனவாய் இருத்தலின் பொருந்தாமை கண்டே உரைகாரர், கடிதண்மைய வென்றதை ஊரோடியைத்துரைத்தாரென அறிக. அம்பு வெள்ளம் - அம்புகளாகிய வெள்ளம் பாம்பின் வையெயிற் றுய்ந்த மதியின் மறவர் கையகத்துய்ந்தன ஆனிரையென்ற இவ்வுவமவழகைக் கண்ட திருத்தக்கதேவர், சீவகன்நிரை மீட்ட செய்தி கூறலுற்ற விடத்து, “வாள் வாயுமின்றி வடிவெங் கணையு மின்றிக், கோள்வாய் மதியம் நெடியான் விடுத்தாங்கு மைந்தன், தோள்வாய் சிலையினொலி யாற்றொறுமீட்டு மீள்வான், நாள்வாய் நிறைந்த நகை வெண்மதிசெல்வதொத்தான்” (சீவக: 454) என்று தாம் மேற்கொண்டமைத்துப் பாடுவது கண்டு இன்புறுவது தக்கது. அறமும் புகழுமுடையார்க்கல்லது செல்லுதல் அரிதாகலின், மேலுலகம் “அரிது செல்லுலகு” எனப்பட்டது. நிலத்தே படியவீழாது சாய்ந்து நிற்குமாறு தோன்ற, காலுற்றுத் துளங்கியகம்பம் என்றார். இலக்கம், விற்பயிற்சி பெறுவார் அம்பு எய்துபயிறற்கு நிறுத்தும் கம்பம். தோன்றி யென்பதே பாடமாயின் அதுதோன்றியோன் என்று பொருள்பட வந்த பெயராம். 261. ஆவூர் மூலங்கிழார் பாண்டி நாட்டில் மல்லியைத் தலைநகராகக் கொண்ட சிறு நாடு மல்லிநாடெனப்படும். அதற்குரிய தலைவன் காரியாதி யென்னும் பெயரினன். அவன்பால் ஆவூர் மூலங்கிழார் பேரன்புடையவர். ஒருகால் அவர் அவன் நெடுமனைக்குச் சென்றிருந்தார். அவன்தன்பால் வருபவர்க்குத் தடையின்றி வரவேற்பு நல்கி நல்லவுணவளித்துச் சிறப்புச் செய்தான். அதனைக் கண்ட ஆவூர்மூலங்கிழார்க்கு வியப்பு மிகுந்தது. அவனைப் புகழ்வாராய் அவனது நெடுமனையின் சிறப்பை இனிய பாட்டொன்றில் சிறப்பித்தார். பின்பு அவன் தந்த மிக்க பரிசிலைப் பெற்றுத் தமதுஊரையடைந்தார் ஆவூர் மூலங் கிழார். பல நாட்குப்பின் அவர் காரியாதி யுறையும் மல்லிக்குச் சென்றார். இடையில் நிகழ்ந்தது அவர்க்குத் தெரியாது. காரியாதியின் பகைவர் அவனூர் ஆனிரைகளைக் கவர்ந்து சென்றனர். அது கேட்ட காரியாதி விரைந்து சென்று அவரோடு போருடற்றி அந்த நிரைகளை மீட்டுக் கொணர்ந்து மேம்பட்டான். ஆயினும், பகைவர் அவன்மேல் எறிந்த படைகள் அவற்கு இறுதியை விளைத்தன. ஊரவர் அவனது பெறலரும் பீடும் பெயரும் நடு கல்லிற் பொறித்து நட்டு வழிபட்டனர். இது நிகழ்ந்த பின்பே ஆவூர் மூலங்கிழார் மல்லிக்கு வந்ததாகும். அதனால் மனம் புண்பட்டு வருந்தியவர் காரியாதியின் பெருமனை பொலிவிழந்து தோன்றுவது கண்டு இந்தப் பாட்டினைப் பாடினார். காரியாதியின் பெயர் ஏடுகளிற் சிதைந்துபோயிற்று. கி.பி. எட்டு ஒன்பதாம் நூற்றாண்டில் கரந்தைப் போரில் நிரைமீட்டுப்பட்டான். ஒருவன் நடுகல் “தஞ்சை கொண்டகோப்பரகேசரி பன்மர்க்கு யாண்டு 3-வது: கற்பூண்டி நாட்டு அத்தீயூர் கரம்பை, கலிதொடான்” முக்கண் அணியன் தொறுக்கொள (அத்) தொறு மீட்டுப் பட்டான்.” (A.R. for 1935-6. பக்.72) என வருவது பண்டைநாளில் நடுகல்லிற் பீடுபெற எழுதிய திறத்தை எடுத்துக்காட்டுகிறது. தஞ்சைகொண்ட பரகேசரி விசயாலயன் என்னும் சோழவேந்தன். அந்தோ வெந்தை யடையாப் பேரில் வண்டுபடு நறவிற் றண்டாமண்டையொடு வரையாப் பெருஞ்சோற்று முரிவாய் முற்றம் வெற்றியாற் றம்பியி னெற்றற் றாகக் 5 கண்டனென் மன்ற சோர்கவென் கண்ணே வையங் காவலர் வளங்கெழு திருநகர் மையல் யானை யயாவுயிர்த் தன்ன நெய்யுலை சொரிந்த மையூ னோசை புதுக்கண் மாக்கள் செதுக்க ணாரப் 10 பயந்தனை மன்னான் முன்னே யினியே பல்லா தழீஇய கல்லா வல்வில் உழைக்குரற் கூகை யழைப்ப வாட்டி நாகு முலை யன்ன நறும்பூங் கரந்தை விரகறி யாளர் மரபிற் சூட்ட 15 நிரையிவட் டந்து நடுக லாகிய வென்வேல் விடலை யின்மையிற் புலம்பிக் கொய்ம்மழித் தலையொடு கைம்மையுறக் கலங்கிய கழிகல மகடூஉப் போல புல்லென் றனையாற் பல்லணி யிழந்தே. திணை : கரந்தை. துறை : கையறுநிலை. ஆவூர் மூலங்கிழார் பாடியது. உரை : அந்தோ -; எந்தை அடையாப் பேரில் - என்னிறைவனது அடையாத பெரிய இல்லே; வண்டுபடுநறவின் தண்டா மண்டையோடு - வண்டுகள் படியும் மதுவினால் ஒழியாத மண்டையுடனே; வரையாப் பெருஞ்சோற்று முரிவாய் முற்றம்-யாவர்க்கும் வரையாமல் வழங்கும் மிக்க சோற்றை யுடைய முரிந்த குறட்டையுடைத்தாகிய முற்றம்; வெற்று யாற்று அம்பியன் எற்று - நீரற்ற யாற்றின் ஓடம் எத்தன்மைத்து; அற்றாக கண்டனென் மன்ற - அத்தன்மைத்தாகக் கண்டேன் நிச்சயமாக; என் கண் சோர்க - என் கண்மணி சோர்ந்து வீழ்வனவாக; வையங் காவலர் வளங்கெழு திருநகர் - உலகத்தைக்காக்கும் வேந்தருடைய செல்வமிக்க திருநகரின் கண்; மையல்யானை அயா வுயிர்த்தன்ன - மதத்தான் மயங்கிய யானை உயங்குதலான் நெட்டுயிர்ப்புக் கொண்டாற் போன்ற; நெய்யுலை சொரிந்த மையூன் ஓசை - நெய் காய்கின்ற உலையின் கண் சொரியப்பட்ட ஆட்டிறைச்சியினது ஓசையையுடைய பொரியலை; புதுக்கண் மாக்கள் செதுக்கண் ஆர - புது மாந்தருடைய ஒளிமழுங்கிய கண்கள் நிறைய; பயந்தனை முன்மன் - உண்டாக்கினாய் முன்பு அது கழிந்தது; இனியே - இப்பொழுது; பல் லா தழீஇய - பல ஆனிரையைக் கைக் கொண்ட; கல்லா வல்வில் - கற்கவேண்டாத வலிய விற்படையை; உழைக்குரல் கூகை அழைப்ப - தன்னிடத்தே குரலையுடைய கூகை தன் இனத்தை அழைக்கும்படி; ஆட்டி - அலைத்து; நாகு முலையன்ன - நாகினது முலை போன்ற; நறும் பூங் கரந்தை -நறிய பூவையுடைய கரந்தையை; விரகறியாளர் மரபின் சூட்ட - அறிவுடையோர் சூட்டும் முறைமையிலே சூட்ட; நிரை இவண் தந்து - நிரையை இவ்வூரின்கண் மீட்டுத் தந்து; நடுகல் ஆகிய வென்வேல் விடலை இன்மையின் - நடப்பட்ட கல்லாகிய வென்றி வேலையையுடைய இறைவன் இல்லாமையால்; புலம்பி - தனித்து; கொய்ம்மழித் தலையொடு - கொய்யப்பட்ட மொட்டையாகிய தலையுடனே; கைம்மை உறக் கலங்கிய - கைம்மை நோன்பு மிகக் கலக்கமுற்ற; கழிகல மகடூஉப் போல - ஒழிக்கப்பட்ட அணிகலத்தையுடைய அவன் மனைவியை யொப்ப; புல்லென்றனை பல்லணி இழந்து - பொலி வழிந்தனை - பல அழகும் இழந்து; எ-று. அம்பியின் என்புழி இன் அசைநிலை. அம்பியின் அற்றாக என்று பாடமோதுவாருமுளர். கண்; அசை; மன் : கழிவின்கண் வந்தது. எந்தை பேரில்லே! செதுக்கணாரப் பயந்தனை முன்; இனி, மகடூஉப் போலப் பல அணியும் இழந்து புல்லென் றனையாய் அம்பியற்றாகக் கண்டேன்; கண்ட என் கண் சோர்க எனக் கூட்டுக. ஓசை யென்றது ஆகுபெயரான் ஓசையை யுடைய கறியை; இஃது ஒரு திசைச்சொல். செதுக்கணார வென்பதற்குச் செதுக்கின் குடர் நிறைய என்றுமாம்; கைம்மிஞ்ச என்றுமாம். விளக்கம் : பொலிவிழந்த மனையைக் கண்டதும் மனம் கலங்கி வருந்து கின்றாராதலின், “அந்தோ! எந்தை அடையாப் பேரில்” என்றார். வரையாத வண்மையுடையன் என்பது தோன்ற, “அடையாப் பேரில்” எனப்பட்டது. நறவுண்ணும் கலம் மண்டை; நறவு குறையாமையால் மண்டையும் ஒழியாதாயிற்று. முரிவாய் முற்றம் என்பதில் வாயென்றது குறடு; அது பலரும் சார்தலால் தேய்ந்து முரிந்து கொண்டு “முரிவாய் முற்றம்” எனப்பட்டது. நீர் வற்றிய யாற்றில் ஓடம் பயன் படாமையால் அதனை நாடுவார் இலர்; அவ்வாறே பேரில்லமும் மக்கள் வழக்கற் றமையின், பொலிவற்றுக் கிடக்கின்றது என்பதாம். இத்தகைய நிலை எய்துமென எக்காலத்தும் எதிர்பார்த் திலராதலால், எய்தக் கண்ட ஆசிரியர் பிறரறிய வற்புறுத்துவாராய் “கண்டனென் மன்ற” என்றும் பெருஞ் செல்வ நிலையிற் கண்ட கண்கள், அவ்வண்ணமே காணாது இந்நிலையிற் காண்டலின் வருந்துவார், “சோர்கவென் கண்ணே” என்றும் கூறினார். காரியாதி குறுநிலத் தலைவனாதலால், முடிவேந்தர் மனையை ஒப்பாக நினைக்கின்றார். முடிவேந்தர் பெருமனை முன்றிலில் மதங்கொண்ட யானைகள் நின்று நெட்டுயிர்ப்புக் கொள்வதால் எழும் ஓசைபோல, இத்தலைமகன் பேரில்லத்தின் முன்றிலில் “நெய்யுலை சொரிந்த மையூனோசை” எழுந்தது. இது முன்பு வந்தபோது ஆசிரியர் கண்டகாட்சி. புதுவோர் புதுமை காரணமாகப் பிறந்த மருட்கை கொண்டு அதனை நோக்கினாராதலால், “செதுக்கண் ஆர” என்றார். செதுக்கண், ஒளி மழுங்கின கண். புதுக் கண் என்ற விடத்துக் கண்ணென்பது அசைநிலை; அதனால் புதுக்கண் மாக்கள் என்பதற்குப் “புது மாந்தர்” என உரை கூறப்பட்டது. ஓசை யுடைமை பற்றிக் கறி யெனப்பட்டதாயினும் ஒரு நாட்டார் கறியை ஓசையென்றே வழங்குகின்றனரென்பார். “இஃதொரு திசைச்சொல்” என்று உரைகாரர் குறிக்கின்றார். கல்லா வல்வில் என்றவிடத்து வில்லென்றது வில்லேந்திய வீரர்களை. அவர்கள் வழிவழியாக வில்லேருழவரா யிருத்தலால், “குலவிச்சை கல்லாமற் பாகம்படும்” என்பதற்கேற்ப அவர் தனியே கற்க வேண்டாராயினரென்பார், “கல்லா வல்வில்” என்றார். வல்வில் ஆட்டியென இயையும். ஆட்டுதல் அலைத்தல்; “ஒருவனாட்டும் புல்வாய்போல” (புறம். 193) என்பதன் உரை காண்க. வில் வீரரை யலைத்தலால் கூகை முதலியன வேண்டும் இரை கிடைப்பதுகண்டு தம் இனத்தை யழைப்பவாயின என்பதுபட, “உழைக்குரற் கூகை யழைப்ப ஆட்டி” என இயைய வுரைத்தார். பெருங்குரலுடைமைபற்றி, “உழைக் குரல்” என்றார். நாகினது முலை எழுந்து காட்டாது மேலே பரந்து காட்டுவது போலக் கரந்தைப் பூவும் கொடியினின்றும் எழுந்து நில்லாது அதனோடே படிந்து விரிந்து காட்டுவது கண்கூடு. இதுபற்றியே “நாகு முலையன்ன நறும்பூங் கரந்தை ” யென்றார். விரகு நுண்ணறி வுடையார்பால் உளதாகலின் விரகறியாள ரென்றதற்கு “அறிவுடை யோர்” என வுரைத்தார். நிரை கவரச் செல்வார்க்கு வெட்சியும் மீட்போர்க்குக் கரந்தையும் சூடுவது மரபாதலால், கரந்தை சூடிப் பொருது வென்று வந்தார்க்குக் கரந்தை சூட்டுதலை, “மரபிற் சூட்ட” என்றார். காரியாதி இறக்குங்கால் முதுமை யெய்தினவனல்லன் என்பதற்கு “வென் வேன் வேல் விடலை” என்றார். கலங்கிய மகடூஉ , கழிகல மகடூஉ என்க. கணவனை யிழந்தமையால் அணிகலன்களைத் துறந்து நிற்பது பற்றி “கழிகல மகடூஉ” என்றார். பேரில்லினும் கலங்கழித்து நிற்கும் மகளிரது நிலை பொலி விழப்பினை விளங்கக் காட்டுதலால், “கழிகல மகடூஉப்போல” என உவமையின் வைத்தோதினார். செதுக்கணார வென்பதற்கு வேறு வகையிலும் பொருள் கூறலாமென்பதற்கு, “செதுக்கணார.....என்றுமாம்” என்றார். 262. மதுரைப் பேராலவாயார் ஒருகால் மதுரைப்பேராலவாயார் என்னும் சான்றோர் தாம் அறிந்த தலைவனொருவனைக் காணச் சென்றிருந்தார். அக்காலை அவன் பகைவர் நாட்டுட் சென்று அவர்தம் நிரைகளைக் கவர்ந்து வரச் சென்றிருந்தான். அவன் வரவு நோக்கிப் பேராலவாயார் அங்கே தங்கியிருந்தார். சிறிது போதில் அவன் தன்னொடு போந்த துணைமறவர் புடை சூழப் பகைவர்போல் கவர்ந்த ஆனிரையுடன் திரும்பி வந்தான். மக்கள் பேராரவாரத்துடன் அவனை வரவேற்றனர். அச்சிறப்புக்குறித்து அங்கே உண்டாட்டு நிகழ்ந்தது. அதன்கண் சிறப்புடையோர் சிலர் உண்டாட்டுக்குரிய இடத்தை ஒப்பனை செய்தற்கும் நறவு முதலிய உணவுப் பொருள்களை யமைப்பதற்கும் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவரிடையே நிகழ்ந்த பேச்சுக்கள் நம் சான்றோராகிய மதுரைப் பேராலவாயார் புலமைக்கு நல்விருந்தாயின. அதன் பயனாக இப் பாட்டு எழுந்தது. நறவுந் தொடுமின் விடையும் வீழ்மின் பாசுவ லிட்ட புன்காற் பந்தர்ப் புனறரு மிளமண னிறையப் பெய்ம்மின் ஒன்னார் முன்னிலை முருக்கிப் பின்னின்று 5 நிரையொடு வரூஉ மென்னைக் குழையோர் தன்னினும் பெருஞ்சா யலரே. திணை : வெட்சி. துறை : உண்டாட்டு; தலைத் தோற்றமுமாம்........ மதுரைப்பேராலவாயார் பாடியது. தலைத் தோற்றமாவது, “உரவெய்யோ னினந்தழீஇ, வரவுணர்ந்து கிளைமகிழ்ந்தன்று,” (பு.வெ.மா.வெட்சி. 12) உரை : நறவும் தொடுமின் - மதுவையும் அலைத் துண்ணும்படி பிழிமின்; விடையும் வீழ்மின் - ஆட்சி விடையையும் படுமின்; பாசுவேல் இட்ட புன்கால் பந்தர் - பசிய தழையாலே வேயப்பட்ட புல்லிய காலையுடைய பந்தரின்கண்; புனல் தரும் இளமணல் நிறையப் பெய்ம்மின் - நீர் கொழித்துக் கொடுவரப் பட்ட இளைய மணலை நிரம்பப் பரப்புமின்; ஒன்னார் முன்னிலை முருக்கி - பகைவரது தூசிப்படையை முறித்து; பின்னின்று நிரையொடு வரூஉம் என்னைக்கு - பெயர்ந்து போதுகிற தனது படைக்குப் பின்னே நின்று நிரையுடனே வருகின்ற என் இறைவனுக்கு; உழையோர் - பக்க மறவராய் நிரை கொண்டு வருவோர்; தன்னினும் பெருஞ் சாயலர் - அவன் தன்னினும் பெரிய இளைப்பை யுடையர்; எ-று. சாயல் விடாயாலுண்டான மென்மை. என்னைக்கு உழையோர் தன்னினும் பெருஞ்சாயலர்; அவர்க்கு நறவும் தொடுமின்; விடையும் வீழ்மின்; பெய்ம்மின் எனக் கூட்டுக. விளக்கம் : “உரவெய்யோன் இனந்தழீஇ, வரவுணர்ந்து கிளை மகிழ்ந்தன்று” என்பதற்குப் பொருள் “வலியினை விரும்பினோன் ஆனினத்தைக் கைக்கொண்டு வருதலையறிந்து உறவுமுறையார் மன மகிழ்ந்தது” என்பது. தொடுதல், பிழிதல், பிழியுங்கால் கோது நீக்கித் தூய நறவு பெறப்படுதலின் அது தெளிந்து தேறலாகிய வழி உண்பார்க்கு வேண்டுங் களிப்புண்டாகாது; ஆதலாற்றான் கலங்கிய நறவு சிறந்ததாகக் கருதப்படுகிறது. “எமக்கே கலங்கல் தருமே” (புறம். 298) என்று பிறரும் கூறுவது காண்க. பாசு உவல், பசிய தழை; “உவலைக் கூவல்” (ஐங்.10) என வருதல் காண்க. இளமணல் - புதுமணல். என்னை - என் தலைவன். பகைவர் தூசிப்படையை வென்றெறிந்து முன்னே வருதலால், உழையோர்க்குத் தலைவனைக் காட்டிலும் இளைப்புப் பெரிதாயிற்றென அறிக. விடாய் - வேட்கை. சாயல் மென்மையாதலால் அதற்குக் காரணம் விடாய் என்பார். “சாயல், விடாயாலுண்டாகும் மென்மை” யென்றார். 263. கையறுநிலை பகைவர் தன்னூர் நிரைகளைக் கவர்ந்து சென்றனர். என ஆயர்வந்து முறையிடக் கேட்டான் ஒரு தலைமகன். உடனே தன் பக்க மறவர் சூழச் சென்று அப்பகைவரினின்றும் ஆனிரைகளை மீட்டுக் கொண்டு வந்தான். வருங்கால் முன்னே மறவர் ஆனிரை களைச் செலுத்திக் கொண்டு செல்லத் தான் பின்னே நின்று காவல் புரிந்து வந்தான். வருகையில் பின்னிட்ட வெட்சியார் மீளவும் திரண்டுவந்து நிரை கவரும் பொருட்டுப் போருடற்றினர். பெருகி வரும் புனலை எதிர்நின்று சிறைக்கும் கல்லணை போல் இத்தலை மகன் எதிர்த்துநின்று பொருதான். அவர் பலராய்த் தம் அம்புகளை மிகுதியும் சொரியவே அவை அவன் உடம்பில் ஊடுருவி அவன் உயிரையுண்டன. ஊரவர் அவன் பெயரும் பீடும் எழுதிய நடுகல்லை அவன் பொருட்டு நிறுவி சிறப்புச் செய்தனர். பின்பு, அங்கே உடனிருந்து அவன் புகழ்பாடிய சான்றோர் மீளத் தம்மூர்க்குச் சென்றுகொண்டிருக்கையில் எதிரே கிணையுடைய பாணனொருவன் வரக்கண்டு அவனுக்குக் கூறுவாராய், “பாண, நீ இவ்வழியே செல்கின்றாயாயின், வழியில் உடன்வந்த மறவர் அஞ்சி நீங்கவும் நீங்காது நின்று வெட்சியாருடன் பொருது நடுகல்லாகிய தலைமகனைக் காண்பாய்; அங்கே அந்நடுகல்லைக் கண்டு வழிபடாது செல்லற்க; வழிபடுவையேல், வறங்கூர்ந்திருக்கும் இவ்வழி வண்டு மேம்பட்டுவாழும் வளமுடையதாம்,” என்று இப்பாட்டினைப் பாடுகின்றார். பெருங்களிற் றடியிற் றோன்று மொருகண் இரும்பறை யிரவல சேறி யாயின் தொழாதனை கழித லோம்புமதி வழாது வண்டுமேம் படூஉமிவ் வறநிலை யாறே 5 பல்லாத் திரணிரை பெயர்தரப் பெயர்தந்து கல்லா விளையர் நீங்க நீங்கான் வில்லுமிழ் கடுங்கணை மூழ்கக் கொல்புனற் சிறையின் விலங்கியோன் கல்லே திணை : கரந்தை. துறை: கையறுநிலை.................. உரை : பெருங்களிற்று அடியின் தோன்றும் - பெரிய களிற்றின் அடிபோலத் தோன்றும்; ஒருவன் இரும்பறை இரவல - ஒரு கண்ணினையுடையதாகிய பெரிய பறையினையுடைய இரவலனே; சேறியாயின் - நீ போகின்றாயாயின்; தொழாதனை கழிதல் ஓம்புமதி - தொழாயாய்ப் போதலை நீ பரிகரிப்பாயாக; வழாது வண்டு மேம்படூஉம் இவ் வறநிலை யாறு - தவறாதே தொழவே இடைவிடாது வண்டுகள் மேம்பட்டு வாழும் இக்கொடிய வழி; பல்லாத் திரள் நிரை - மீண்டு தன்னோடு போதரப் போந்து; கல்லா இளையர் நீங்க - இயல்பாகிய போர்த் தொழிலை யுடைய வீரர் இரிந்தோட; நீங்கான் - தான் போகானாய்; வில்லுமிழ் கடுங்கணை மூழ்க - வில்லுமிழப் பட்ட விரைந்த அம்பு குளிப்பு; கொல் புனல் சிறையின் - கரையைக் கொல்லும் புனலின்கண் அணைபோல; விலங்கியோன் கல் - எதிர்நின்று விலக்கியவனது கல்லை; எ-று. புனற் சிறையில் விலங்கியோன் கல்லைத்தொழாதனை கழிதலை யோம்பு; தொழவே இவ்வறநிலை யாறு வண்டு மேம்படுமெனக் கூட்டுக. தொழுது போகவே, கொடுங்கானம் மழை பெய்தலாற் குளிருமென்பான், காரியமாகிய வண்டு மேம்படுதலைக் கூறினான். வண்டென்பது மறவருள் ஒரு சாதியென்பாருமுளர். ஆறு வண்டு மேம்படுமென இடத்து நிகழ் பொருளின் தொழில் இடத்துமேலேறி நின்றது. விளக்கம் : கிணைப்பறைக்குக் களிற்றின் அடியை யுவமித்தல். மரபு; பிறரும், “கடாஅ யானைக் கால்வழி யன்னவென், தடாரித் தெண் கண்” (புறம். 368) என்பது காண்க. தொழுது செல்கவென்னாது தொழாது செல்லுதலை ஒழிக என்றது. தொழுதாற் பிறக்கும் பயனை யறிதற்கு நினைவுறுத்தியவாறு. இவ்வறநிலை யாறு எனச் சுட்டியது, வறங்கூர்ந்து பசுமையற்ற வழியை யுணர்த்திற்று. போர்த் தொழிலையன்றி வேறெத் தொழிலும் பயிலாதவரென் றதற்குக் “கல்லா விளையர்” என்றார். கரையைக் கல்லி அணையை உடைத்துக் கொண்டுபோகும்பெரு வெள்ளம் என்பது போதர, “கொல்புனல் சிறையின் விலங்கியோன்” எனல் வேண்டிற்று. கொல்லுதலாவது கரையை அலைத்துக் கெடுத்தல்; விலங்குதல், குறுக்கிட்டு நிற்றல். தொழுதவழி நடுகல்லில் நிற்கும் மறவன் தெய்வமாய்ப்பின் மழைபெய்விக்கும் மாண்புடையனாவன் என்பது கருத்து. இவ்வறனில் யாறே என்றும் பாட வேறுபாடுண்டு. வண்டின் வினையாகிய மேம்படுதல், வழியின்மேல் நின்றது. சேரநாட்டு மலைமுடியில், குட்டநாட்டுக்குக் கிழக்கில் வண்டரென மறவருள் ஒருவகையினர் வாழ்ந்தனர். அவர்களுக்குத் தலைவன் வண்டன்; அவனை, “கடவுளஞ்சி வானத்திழைத்த தூங்கெயிற் கதவம் கொண்ட, எழூஉ நிவந்தன்ன பரே ரெறுழ் முழவுத்தோள் வெண்டிரை முந்நீர் வளைஇய உலகத்து, வண்புகழ் நிறுத்த வகைசால் செல்வத்து வண்டன் (பதிற் 31) எனக் காப்பியாற்றுக் காப்பியனார் கூறுதல் காண்க. இவ் வண்டன் வழியினரை நினைத்து, “வண்டென்பது மறவருள் ஒருசாதி யென்பாருமுளர்” எனப் பழைய வுரைகாரர் கூறுகின்றார். அம் மலைப்பகுதி இப்போது “வண்டன் மேடு” என வழங்குகிறது. பொன் னானி வட்டத்து மூதூர்களுள் வண்டூர் என்பது இந்தக் குறிப்புக்கு ஆதரவு தருகிறது. தூய்மையில்லாதான் ஒருவனை வையுமிடத்து, மக்கள் “இவன் ஒரு வண்டல்” என்பது ஈண்டு நினைவு கூரத்தக்கது. 264. உறையூர் இளம்பொன் வாணிகனார் இளம் பொன்னென்பது ஓடுதலுடைய மாற்றுக் குறைந்த பொன்னாகும். இதனை வாணிகம் செய்தது பற்றி இவர் இளம்பொன் வாணிகராயினார். இத்தகைய வாணிகர் காவிரிப்பூம்பட்டினத்திலும் மதுரையிலும் வஞ்சியிலும் காஞ்சியிலும் பிற நகரங்களிலும் இருந்தனர். பொன்வகையுள் சாதரூபமும் கிளிச்சிறையும் இளம் பொன்னாதலால், இவற்றை உரைத்து உரையால் அறுதியிட்டு வாணிகம் செய்வோர் இளம்பொன் வாணிகராயினர். செயலூர் இளம்பொன் சாத்தன் கொற்றனாரென்னும் சான்றோருடைய தந்தையாரும் இவ்வகையினரே. முல்லைப்பாட்டின் ஆசிரியராகிய நப்பூதனாருடைய தந்தையும் பொன் வாணிகரே; என்றாலும் அவர் இளம்பொன் வாணிகரல்லர். சான்றோர் கூட்டத்துள் இவர் இயற்பெயர் வழங்காது இளம்பொன் வாணிகரென்ற பெயரே பயில வழங்கினமையின், இந்நூலைத் தொகுத்த ஆசிரியர் உறையூர் இளம்பொன் வாணிகனாரென்றே குறித்தொழிந்தார். ஒரு தலைவன் தன்னூரினின்றும் நிரைகளைக் கவர்ந்து சென்ற பகைவரை வென்று வெருட்டியோட்டி, அவற்றை மீட்டுக் கொணர்ந்து ஊரில் உரியவர்க்குக் கொடுத்தான். அவன் அவ்வாறு கொடுப்பினும், நிரை மீட்கும் போரில் புண்பட்டமையின், அதுவே வாயிலாக உயிர் துறந்தான். சான்றோர் அவன் பெயரும் பீடும் எழுதிய நடுகல்லை அவன் பொருட்டு நாட்டி மயிற் பீலியும் பூமாலையும் சூட்டிச் சிறப்புச் செய்தனர். அங்கேயிருந்த சான்றோருள் உறையூர் இளம்பொன் வாணிகனாரும் ஒருவராவர். அவர், “இத்தலைவன் உயிரோடிருந்த காலத்தில் நெடுஞ்சுரத்து நின்ற நிழல் மரம்போல் பாணர் முதலிய இரவலர்க்கு இனிய அருள் புரிந்து வந்தவன்; இவன் நடுகல்லாகியது பாண் சுற்றத்தார்க்குத் தெரியுமோ தெரியாதோ? பாணர் தெரியாது வந்து மன்றம் புகுந்து மறுகுசிறை பாடுவரேல், கேட்போருக்குக் கையறவு மிகுமே; பாணர் கூட்டம் அறியாது இன்னும் வருமோ? வாராமை நன்றன்றோ” என இரங்கி இப்பாட்டைப் பாடினார். பரலுடை மருங்கிற் பதுக்கை சேர்த்தி மரல்வகுந்து தொடுத்த செம்பூங் கண்ணியொ டணிமயிற் பீலி சூட்டிப் பெயர்பொறித் தினிநட் டனரே கல்லுங் கன்றொடு 5 கறவை தந்து பகைவ ரோட்டிய நெடுந்தகை கழிந்தமை யறியா தின்றும் வருங்கொல் பாணரது கடும்பே. திணை : வெட்சி. துறை : உண்டாட்டு; தலைத் தோற்றமுமாம்........ உறையூர் இளம்பொன் வாணிகனார் பாடியது. உரை : பரலுடை மருங்கின் பதுக்கை சேர்த்தி - பருக்கைகளையுடைய இடத்துத் திட்டையைச் சேர்த்தி; மரல் வகுந்து தொடுத்த செம்பூங் கண்ணியொடு - ஆண்டுள்ள மரலைக் கீறித் தொகுக்கப் பட்ட சிவந்த பூவையுடைய கண்ணியுடனே; அணி மயில் பீலி சூட்டி - அழகிய மயிலினது பீலியைச் சூட்டி; பெயர் பொறித்து - பெயரை எழுதி இனி நட்டனர் கல்லும் - இப்பொழுது நட்டார் கல்லையும்; கன்றொடு கறவை தந்து - கன்றுடனே கறவையையும் மீட்டுக் கொண்டுவந்து; பகைவர் ஒட்டிய நெடுந்தகை - மறவரை யோட்டி நோக்கிய நெடுந்தகை; கழிந்தமை அறியாது - பட்டமை அறியாது; இன்னும் வரும்கொல் பாணரது கடும்பு - இன்னும் வருங்கொல்லோ பாணரது சுற்றம்; எ-று. பட்டமையறிந்து வாராதொழியுமோ, அறியாது வருமோ என ஐயமாக்குக. பதுக்கை சேர்த்ததேயன்றிக் கல்லும் நட்டன ரென உம்மை எஞ்சிநின்றது. விளக்கம் : பருக்கைக்கற்கள் நிறைந்திருக்கும் இடம் பரலுடைய மருங்கு எனப்பட்டது. பதுக்கையென்றது மேடையென்னும் பொருள் பட நின்றது. மரலிடத்து எடுத்த நார் கொண்டு செம்பூங்கண்ணி தொடுத்தனர் என்பார், “மரல்வகுந்து தொடுத்த செம்பூங் கண்ணி” என்றார். மரல், கற்றாழை யினத்தைச் சார்ந்தது. செம்பூங்கண்ணியும் மயிற்பீலியும் சூட்டியென்றவாறு. பெயரும் பீடும் எழுதி நீர்ப்படுத்துக் கண்ணியும் பீலியும் சூட்டிக் கல் நாட்டுவது முறையாக நீர்ப்படுத்துக் கண்ணியும் பீலியும் சூட்டிப் பெயர் பொறித்தபின் கன்னடுவது கூறுவது கண்ட நச்சினார்க்கினியர், “அணிமயிற் பீலி சூட்டிப் பெயர் பொறித்து, இனி நட்டனரே கல்லும்” எனக் கன்னாட்டுதல் பெரும் படைக்குப் பின்னாகக் கூறிற்றாலெனின், நீர்ப்படுத்த பின்னர்க் கற்படுத்துப் பெயர் பொறித்து நாட்டுதல் காட்டு நாட்டோர் முறைமையென்பது, “சீர்த்தகு சிறப்பிற் பெரும்படை” (தொல். புறத். 5) “என்புழிச் சீர்த்தகு சிறப்பின் என்பதனாற் கொள்க” என்பர். மரல் நார் கொண்டு கண்ணி தொடுப்ப துண்டென்பதை, “தளிரொடு மிடைந்த காமர் கண்ணி, திரங்குமரல் நாரிற் பொலியச் சூடி” (மலைபடு. 430) என்று சான்றோர் கூறுவதனாலுமறிக. இது தலைவன் பட்டது கண்டு பாணன் கூற்றில் வைத்துக் கையற்றுப் பாடியது. 265. சோணாட்டு முகையலூர்ச் சிறுகருந்தும்பியார் காட்டு நாட்டு ஊர்களுள் வல்லாரென்பது ஒன்று. அவ்வூர்க்குத் தலைவனான பண்ணன் என்பவன் வாள் வன்மையும் கை வண்மையும் உடையவன். அவனைப் பாடிச் சிறப்பெய்தியவர் சோணாட்டு முகையலூர்ச் சிறுகருந்தும்பியார். பண்ணன் கரந்தைப் போர் செய்து மாண்டான். நிரை மீட்டுத்தந்து புகழ் கொண்டதுபற்றிக் கோவலர் அவனுக்கு நடுகல் நாட்டிச் சிறப்புச் செய்தனர். அக்காலையிற் சிறுகருந்தும்பியாரும் வந்திருந்தார். அவர்க்கு அவனது நடுகல்லைக் காணவே மிக்க வருத்த முண்டாயிற்று. அவனுடைய கைவண்மையால் பாணர் முதலிய இரவலர் இனிது வாழ்ந்து வந்தனர்; அவனுடைய வாள் வன்மையால் முடிவேந்தரும் குறுநில வேந்தரும் வென்றி மேம்பட்டனர். பண்ணன் நடுகல்லானமையால், இருதிறத்தாரும் பெரு வருத்த மெய்துவது கண்டார். கையறவு பெரிதாகவே இக்கையறுநிலைப் பாட்டைப் பாடினார். ஊர்நனி யிறந்த பார்முதிர் பறந்தலை ஓங்குநிலை வேங்கை யொள்ளிணர் நறுவீப் போந்தையந் தோட்டிற் புனைந்தனர் தொடுத்துப் பல்லான் கோவலர் படலை சூட்டக் 5 கல்லா யினையே கடுமான் றோன்றல் வானேறு புரையுநின் றாணிழல் வாழ்க்கைப் பரிசிலர் செல்வ மன்றியும் விரிதார்க் கடும்பகட் டியானை வேந்தர் ஒடுங்கா வென்றியு நின்னொடு செலவே. திணை:வெட்சி. துறை: உண்டாட்டு; தலைத் தோற்றமுமாம்... சோணாட்டு முகைய லூர்ச் சிறுகருந்தும்பியார் பாடியது. உரை : ஊர் நனி இறந்த - ஊரை மிகவும் கடந்த; பார்முதிர் பறந்தலை - முரம்பு நிலமாகிய முதிர்ந்த பறந்தலையிடத்து; ஓங்கு நிலை வேங்கை ஒள்ளிணர் நறுவீ - உயர்ந்த நிலையை யுடைய வேங்கையினது ஒள்ளிய கொத்தாகிய நறிய பூவை; போந்தையந் தோட்டிற் புனைந்தனர் தொடுத்து - பனை யோலையால் அலங்கரித்துத் தொடுத்து; பல்லான் கோவலர் படலை சூட்ட - பல ஆக்களையுடைய கோவலரானவர்கள் இலை மாலைகளைச் சூட்டி வழிபட; கல்லாயினை - கல்லிலே நின்றாய்; கடுமான் தோன்றல் - விரைந்த குதிரைகளையுடைய தலைவனே; வான் ஏறு புரையும் நின் தாள் நிழல் வாழ்க்கை - மழையிடத்துத் தோன்றும் இடியேறு போன்ற நின்னுடைய தாணிழற்கண் வாழும் வாழ்க்கையையுடைய; கடும்பகட்டு யானை வேந்தர் ஒடுங்காவென்றியும் - விரைந்த செலவை யுடைய களிற்றியானைகளையுடைய வேந்தரது மடியாத வென்றியும்; நின்னொடு செல - நின்னோடே கழிய; எ-று. வானேறு புரையும் நின் தாணிழல் என்றது மழைபோலும் வண்மையுடைமையும் பகைவர்க்கு இடிபோலும் முரணுடைமையும் கருதி. தன்னுடைய வேந்தனுக்குப் போருண்டாகிய போழ் தெல்லாம் வென்றி தந்துபோந்தமையின் வென்றியும் அவனோடே கழிந்த தென்றார். தோன்றல், செல்வமன்றியும் வென்றியும் நின்னோடு செலக் கல்லாயினை எனக் கூட்டுக. சூட்டவென்றது சூட்டி வழிபட எனக் காரியத்தின்மேல் நின்றது. விளக்கம் : முகையலூர் என்பது இடைக் காலத்தில் முகலாறு என (M.Ep. A.R. no. 214 of 1936- 7) வழங்கி இப்போது மொகலாரென வழங்குகிறது. இதற்கு முகையலென்றும் பெயருண்மையின் சோணாட்டு முகையலூர் இதுவென்று துணியலாம். பண்டைக்காலத்துச் செங்கைமா வென்பது இடைக்காலத்தில் செங்கமா (S.I.I. Vol. VIII No. 117) என வழங்கி இக்காலத்துப் பொதுமக்களாலும் அரசியல் ஏடுகளாலும் செங்கம் என்று வழங்குவது இதற்குத் தக்கதோர் எடுத்துக்காட்டு இப்பாட்டின் முதன் மூன்றடிகட்கே பழையவுரை கிடைத்துளது. “பல்லான் கோவலர்” என்பது முதல் இறுதி வரையுள்ள பகுதிக்குப் புத்துரை இப்போது வகுக்கப்பட்டுளது. பார்- முரம்பு. இம்முரம்பினைத் தொண்டைநாட்டார் பாரெனவே வழங்குவர். கரந்தைப் போருடற்றிக் கல்லாயினனாதலின், பல்லான் கோவலர் படலை சூட்டி வழிபட்டனரெனவறிக. பரிசிலரைத் தாணிழல் வாழ்க்கையரென்றார்; பிறரும் “யானே பெறுகவன் றாணிழல் வாழ்க்கை, யவன் பெறுக வென்னாவிசை நுவறல்” (புறம். 379) என்று பரிசிலன் கூறுவதாக வுரைப்பது காண்க. “வேந்தர் வென்றியும் நின்னொடு செல” வென்றது, வேந்தர்க்குத் துணையாய் நின்று பொருது வெற்றி யெய்துவிக்கும் விறலுடைமை விளக்கி நின்றது; இது, கன்னின்று “கடவுளாகியபின் கண்டது” (புறத். 5) என்பர் நச்சினார்க்கினியார். 266. சோழன் உருவப்பஃறேர் இளஞ்சேட்சென்னி சோழன் உருவப்பஃறேர் இளஞ்சேட்சென்னி உறையூரிலிருந்து ஆட்சிபுரிந்து வருகையில் பெருங்குன்றூர்கிழார் தாமுற்ற வறுமைத் துயர்க்காற்றாது அவன்பால் பரிசில் பெறச் சென்றார். அவனும் அவரை வரவேற்றுச் சின்னாள் தன்பால் வைத்திருந்து அவரது புலமை நலத்தைத் துய்த்து வந்தான். அவன்பால் அவர் பன்முறையும் குறிப்பால் தமது வறுமைத் துன்பத்தைக் கூறினார். அவன் அதனை யுணராதவன்போல் அவருடைய துணைமை யின்பத்தை விழைந் திருந்தான். முடிவில் பெருங்குன்றூர்கிழார் தமது கருத்தை வெளிப்படையாக எடுத்துரைப்ப தென்று துணிந்தார். அத்துணிவின் பயனாக இப்பாட்டுப் பிறந்தது. இதன்கண், “வேந்தே, சான்றோர் இருந்த அவையின்கண் ஒருவன் போந்து தன் குறையை முறை யிட்டுத் தனக்குப் பற்றாக வேண்டினானாயின், அவர்களால் அவனது குறை கடிதில் தீர்த்து வேண்டுவன செய்யப்படும்; எனக்குப் பிறிதொரு குறையில்லையாயினும் விருந்து கண்டால் அவரை ஓம்பமாட்டாத வறுமையாகிய குறையொன்று என்பால் தங்கி வருத்துகிறது; என் அறிவும் தடுமாற்றம் அடைகிறது; அதனால் என் வறுமையைத் தீர்ப்பாயக” என்று வேண்டினார். உடனே அவனும் அவர் வேண்டும் பரிசிலை நிரம்ப நல்கிச் சிறப்பித்தான். பயங்கெழு மாமழை பெய்யாது மாறிக் கயங்களி முளியுங் கோடை யாயினும் புழற்கா லாம்ப லகலடை நீழற் கதிர்க்கோட்டு நந்தின் சுரிமுக வேற்றை 5 நாகிள வளையொடு பகன்மணம் புகூஉம் நீர்திகழ் கழனி நாடுகெழு பெருவிறல் வான்றோய் நீள்குடை வயமான் சென்னி சான்றோ ரிருந்த வவையத் துற்றோன் ஆசா கென்னும் பூசல் போல 10 வல்லே களைமதி யத்தை யுள்ளிய விருந்துகண் டொளிக்குந் திருந்தா வாழ்க்கைப் பொறிப்புண ருடம்பிற் றோன்றியென் அறிவுகெட நின்ற நல்கூர் மையே. திணை : பாடாண்டிணை; துறை: பரிசில் கடாநிலை. சோழன் உருவப் பஃறேர் இளஞ்சேட்சென்னியைப் பெருங் குன்றூர்கிழார் பாடியது. உரை : பயங்கெழு மாமழை பெய்யாது மாறி - பயன் பொருந்திய பெரிய முகில் பெய்யா தொழிதலால்; கயம் களி முளியும் கோடையாயினும் - நீர் நிலைகள் களியாய் முளியும் கோடைக் காலமாயினும்; புழற்கால் ஆம்பல் அகலடை நீழல் - துணை பொருந்திய தாளையுடைய ஆம்பலினது அகலிய இலையின் நீழற்கண்; கதிர்க்கோட்டு நந்தின் கரிமுக ஏற்றை - கதிர்போலும் கோட்டையுடைய நத்தையினது கரியமுகத்தையுடைய ஏற்றை; நாகிள வளையொடு பகல் மணம் புகூஉம் - நாகாகிய இளைய சங்குடனே பகற்காலத்தே மணங் கூடும்; நீர் திகழ் கழனி நாடு கெழு பெருவிறல் - நீர் விளங்கும் வயலையுடைத்தாகிய நாட்டையுடைய பெரியவெற்றியையுடையோய்; வான் தோய் நீள்குடைவயமான் சென்னி - ஆகாயத்தைப் பொருந்தும் நெடிய குடையினையும் வலிய குதிரை யினையுமுடைய சென்னி; சான்றோர் இருந்த அவையத்து உற்றோன்- அறிவான் அமைந்தோர் தொக்கிருந்த அவையின்கண் சென்று பொருந் தினானொருவன்; ஆசா கென்னும் பூசல் போலயானுற்ற துன்பத்திற்குத் துணையாய் எனக்கு நீர் பற்றாக வேண்டும் என்னும் ஆரவாரத்தை அவர் விரையத் தீர்க்குமாறு போல; வல்லே களைமதி - விரையத் தீர்ப்பாயாக; உள்ளிய விருந்து கண்டு ஒளிக்கும் திருந்தா வாழ்க்கை - என்னைக் கருதி வரப்பட்ட விருந்தினரைக் கண்டுவைத்து அவர்க்கு விருந்தாற்றமாட்டாமல் ஒளிக்கும் நன்மையில்லாத இல்வாழ்க்கையையுடைய; பொறிப் புணர் உடம்பில் தோன்றி - ஐம்பொறியும் குறைவின்றிப் பொருந்திய எனது யாக்கையின்கண் தோன்றி; என் அறிவு கெட நின்ற நல்கூர்மை - அவற்றானாய பயன் கொள்ளாதபடி எனது அறிவுகெட நிலைபெற்ற வறுமையை; எ-று. மதியும் அத்தையும் அசைநிலை. பெருவிறல், சென்னி, சான்றோர் இருந்த அவையத்துற்றோன் பூசலை அவர் விரையக் களைந்தாற்போல எனது நல்கூர்மையை வல்லே களையெனக் கூட்டி வினைமுடிவு செய்க. நந்து வளையொடு பகல் மணம் புகூஉம் என்ற கருத்து; அவை தம் செருக்கினால் சாதியறியாது மயங்கிப்புணரும் என்று நாட்டின் மிகுதி கூறியதனால் அவன் செல்வ மிகுதி கூறியவாறு. “நாகிளந் தவளையொடு பகல் மணல் புகூஉம்” என்று பாடமோதி நந்தினேற்றை நாகிளந் தவளையுடனே தத்தம் இனத்தொடு மணம் புகூஉமென்றுரைப்பினு மமையும். ஆசாகு என்பதனை இரங்கற் குறிப்புப்படு மொழி யென்பாரு முளர். பெரு விறலையுடைய வயமான் சென்னி யெனினுமாம். “பொறிப் புணருடம்பிற் றோன்றி” யென்பதற்குப் பாவை போலும் வடிவு மாத்திரையே தோன்றித் தோன்றிய பயன் கொள்ளாமையால் என் அறிவு கெட நின்ற நல்கூர்மை யென்றும், “விருந்து கண்டொளிக்கும்” என்பதற்கு வறுமைகண்டு வந்த விருந்து தாம் அது காணமாட்டாது ஒளிக்குமென்றும் உரைப்பாருமுளர். மாறியென்பது மாறவெனத் திரிக்கப்பட்டது. விளக்கம் : களியாய் முளிதலாவது, ஆழ அகழ்ந்தாலும் நீர் ஊறாதொழிவது. நத்தையின் நீண்ட மயிர்போற்றோன்றும் இருதண்டுகளும் கோடு எனப்பட்டன அத்தண்டுகளின் முனையில் நத்தையின் கண்கள் உள்ளன. அவை நத்தைக்கு உணர் கருவியுமாம். ஏற்றை, ஆண். நாகு, பெண்பால் குறித்துநின்றது. பேராசிரியர், “நீர்வாழ் சாதியுணந்து நாகே” (தொல்.மரபு. 63) என்பதற்கு “நாகிள வளையொடு பகன் மணம் புகூஉம்” எனும் இதனை யெடுத்துக் காட்டுவர். உற்றோன், இடம்பற்றித் துன்பமுற்றோன் என்பதுபட நின்றது. ஆசாக என்னும், ஆசாகென்னும் என முடிந்தது. ஆசாக என்னும் பூசல், பற்றாகல் வேண்டுமென முறையிடும் ஆரவாரம். “வல்லே கலைமதி” யென்பதற்கேற்ப உவமைக் கண் பூசலை அவையத்தோர் விரையத் தீர்க்குமாறு வருவிக்கப்பட்டது. உள்ளிய, உள்ளிவந்த விருந்து வரக் கண்டதும் விரும்பி வரவேற்பதைவிடுத்து ஒளித்தற்குக் காரணம் வருவிக்கப் பட்டது. செல்விருந்தோம்பி வருவிருந்து பார்த்திருப்பது இல்வாழ்வுக்குச் சிறப்பாதலின், விருந்து கண்டொளிக்கும் வாழ்க்கை திருந்தா வாழ்க்கையெனப் பட்டது. திருந்தாமை, நன்மை யில்லாமை நல்கூர்மை, இன்மையெனப்படும்; அறிவுடைமையே உடைமை; ஆகவே, நல்கூர்மையுளதாய வழி அறிவுகெடுதல் ஒரு தலை யாதலின், “அறிவு கெட நின்ற நல்கூர்மை” யென்றார். “ஆசாகு” என்பது அந்தோ, அன்னோ என்றாற்போல இரங்கல் பொருண்மை யுணர்த்தும் குறிப்பு மொழியாகவும் கோடல் உண்டு என்பார் “ஆசாகு....முளர்” என்றார்; “ஆசா கெந்தை யாண்டுளன் கொல்லோ” (புறம். 235) என ஒளவையார் கூறுவது காண்க. விருந்துகண்டு என்புழி, விருந்தை எழுவாயாகவும், கண்டென்றதை அதன் வினையாகவும் கொண்டு, விருந்தினரே வறுமை நிலவுவது கண்டு நீங்குவர் என்றுரைப்பது முண்டென்பார், “விருந்து கண்டொளிக்கும் .....என்று உரைப்பாருமுளர்” என்றார். 267 .... ...... 268 .... ..... 269. ஒளவையார் ஒருகால் ஒரு தலைவன் தன் பகைவர்மேல் வெட்சிப்போர் செய்ய நினைந்து படை திரட்டினான். வீரர் ஒருங்கு கூடினர். நிரை கவர்தற்குப் புறப்படுமுன் உண்டாட்டு நிகழ்ந்தது. அக்காலை ஆங்குப் புலியினது கண்போல வெவ்விய கள்ளுணவு யாவர்க்கும் தரப்பட்டது. மறவர் எல்லோரும் அவ்விடத்தேயிருந்து அதனை ஒரு முறைக்கு இருமுறை யுண்டு மகிழ்ந்து களியாட்டயர்ந்தனர். நிரைகோட்குப் புறப்படச் சிறிது பொழுதிற்கு முன்பு துடி கொட்டுவோன் வந்து துடியைக் கொட்டிப் புறப்பாட்டிற் குரியராமாறு தெரிவித்தான். யாவர்க்கும் பிழிந்தெடுத்த தேறலாகிய உணவு வழங்கினர். அவருள் தானைத் தலைவன்பால் சென்று அதனைக் கொள்ளுமாறு பிழி வழங்குவோர் வேண்டினர்; அவன் அதனை யேலாது தனக்குரிய வாளைக் கொணர்ந்து தருமாறு பணித்தான் என்று அக்கூட்டத்திற் கூடியிருந்த சான்றோர் பேசிக்கொண்டனர். வெட்சிப்போர்க்குச் சென்ற மறவர் வெற்றி யொடு திரும்பினர். அவர்கட்கு மறுபடியும் உண்டாட்டு நிகழ்ந்தது. அப்போது அவர் அவனது மற மாண்பை எடுத்தோதிப் பாராட்டு வாராய். சான்றோருடன் இருந்த ஒளவையார், “நிரை கோட்குப் புறப்படும் பணியைத் துடியோன் வந்து தெரிவித்தானாக, பிழி வழங்குவோர் வந்து பிழி மகிழாகிய தேறலை யுண்ணுமாறு வேண்டினர்; நீ இது தாவெனக் கொள்ளாது வாள்தரக் கொண்டனை; இப்போது நிகழ்ந்த வெட்சிப் போரில் கரந்தையாரைக் கொன்று அவருடைய ஆனிரைகளைத் தழீஇப் போந்தபோது அவரது மாறுபாட்டினைக் கெடுத்த இவ்வாளைத் தானே அப்போது தரக் கொண்டனை; நின் வென்றி மேம்படுவதாக” என இந்த அழகிய பாட்டைப் பாடினார். குயில்வா யன்ன கூர்முகை யதிரல் பயிலா தல்கிய பல்காழ் மாலை மையிரும் பித்தை பொலியச் சூட்டிப் புத்தகற் கொண்ட புலிக்கண் வெப்பர் 5 ஒன்றிரு முறையிருந் துண்ட பின்றை உவலைக் கண்ணித் துடியன் வந்தெனப் பிழிமகிழ் வல்சி வேண்ட மற்றது கொள்ளா யென்ப கள்ளின் வாழ்த்திக் கரந்தை நீடிய வறிந்துமாறு செருவிற் 10 பல்லா னினநிரை தழீஇய வில்லோர்க் கொடுஞ்சிறைக் குரூஉப்பருந் தார்ப்பத் தடிந்துமாறு பெயர்த்தவிக் கருங்கை வாளே. திணை : வெட்சி, துறை : உண்டாட்டு. ஒளவையார் பாடியது. உரை : குயில் வாய் அன்ன கூர்முகை அதிரல் - குயிலினது வாயலகுபோன்ற கூரிய மொட்டுக்களையுடைய புனலிக் கொடியினது; பயிலாது அல்கிய பல்காழ் மாலை - பயில மலராமல் தங்கிய பல காழாகிய பூவால் தொடுக்கப்பட்ட மாலையை; மையிரும் பித்தை பொலியச் சூட்டி - கரிய தலைமயிர் பொலிவு பெறச்சூடி; புத்தகல் கொண்ட புலிக்கண் வெப்பர் ஒன்று - புதிய அகலிடத்தே கொள்ளப்பட்ட புலியின் கண்ணைப் போலும் நிறத்தையுடைய வெம்மையான நறவு ஒன்றையே; இருமுறை இருந்துண்ட பின்றை - இரண்டுமுறை இங்கே இருந்து உண்ட பின்பு; உவலைக் கண்ணி துடியன் வந்தென - பசிய தழை விரவித் தொடுத்த கண்ணியையுடைய துடிகொட்டுவோன் அதனைக் கொட்டி வெட்சிப் போர்க்கு எழுச்சியினைத் தெரிவித்தானாக; பிழிமகிழ் வல்சி வேண்ட - வடித்த கள்ளையேந்தி யுண்கவென வேண்டியும்; கள்ளின் வாழ்த்தி அது கொள்ளாய் - கள்ளினை வாழ்த்தி வேண்டாவென அது கொள்ளாய் வாளைக் கொண்டனை; என்ப - என்று சான்றோர் கூறா நிற்பர்; கரந்தை நீடிய அறிந்துமாறு செருவில் - கரந்தையார் நெடியராய் மறைந்திருத்தலை யறிந்து மாறிச்சென்று செய்யும் போரில்; பல்லான் இன நிரை தழீஇ - அவர் களுடைய பலவாகிய இனமான ஆனிரைகளைக் கவர்ந்து கொண்டு; கொடுஞ்சிறைக் குரூஉப் பருந்து ஆர்ப்ப - வளைந்த சிறகினையும் நிறத்தினையுமுடைய பருந்துகள் ஆரவாரிக்கும் படி; வில்லோர் தடிந்து மாறு பெயர்த்த இக்கருங்கை வாளே - கரந்தையாராகிய வில் மறவர்களைக் கொன்று மாறு பாட்டினைப் போக்கிய இப்பெரிய கை வாள்தானே அது; எ-று. மற்று; வினைமாற்று. காழ் போறலின், அதிரற்பூ காழெனப் பட்டது. கொடி முழுதும் நிரம்பப் பூவாது ஆங்காங்கொன்றாகப் பூத்துக்கிடத்தலால் “பயிலாது அல்கிய பூ” என்றார். வெட்சிப் போர்க்குச் செல்வோர் அதிரற் பூவைச் சூடிக்கொள்வது மரபு. “கொய்குழையதிரல் வைகுபுல ரலரி, சுரியிரும் பித்தை சுரும்பு படச் சூடி, இகல் முனைத் தழீஇ ஏறுடைப் பெருநிரை” (அகம். 213) எனச் சான்றோர் கூறுமாற்றால் அறிக. கள்ளினை வேண் டானாயினும், அதன்மேல் அவற்கு வெறுப்பில்லை யென்றதற்குக் “கள்ளின் வாழ்த்தி” யென்றார். நிரையைக் காப்பவர் கரந்தைப்பூ சூடுவராதலின், அவரது நெடும்படையைக் “கரந்தை” என்றார். வல்சி வேண்ட, இது கொள்ளாயாய்க் கொண்டனை வாள் என்ப; பெயர்த்த இக் கைவாளே அது என முடிக்க. கரந்தைப் படையின் பன்மை விளங்க “நீடிய” என்றார். வாளே என்புழி ஏகாரம் வினா. இது வாளைப் புகழுமுகத்தால் தலைவனது வாளாண்மையை வியந்து பரவியது. விளக்கம் : உண்டாட்டாவது, “தொட்டிமிழுங் கழல், மறவர் மட்டுண்டு மகிழ் தூங்கின்று” (பு.வெ.மா.வெட் 14) அதிரற் பூவைப் பயிலா தல்கிய பல்காழ் என்றது போலப் பிறரும் “வைகுபுலர் அலரி” என்பது குறிக்கத்தக்கது. தெளிந்த நறவு புலியின் கண்போலும் நிறமும் ஒளியுமுடைய தென்றற்குப், “புலிக்கண் வெப்பர்” என்றார். துடியன், பாணன் பறையன் என வரும் குடிவகையுள் ஒரு குடியினன். போர் மறவர்க்கு அவர் தம் தலைவரிடும் பணியைத் துடி கொட்டித் தெரிவிப்பவன். வந்தென என்றது அவன் வந்து வெட்சிப் போர்க்கு எழுதல் வேண்டுமென்று தெரிவித்தானென்பதை யுணர்த்திற்று. பெயர்த்த என இறந்தகாலத்தாற் குறித்தது, நிகழ்ந்த வெட்சிப்போரை; அதன் முடிவில் இவ்வுண்டாட்டு நிகழ்வது பற்றி, பெயர்த்து என்ற பாடத்துக்கு இறந்தகாலம் விரைவுக் குறிப்பிற்றென வுரைக்க. 270. கழாத்தலையார் பகைவர், தம்மூர் நிரைகளைக் கவர்ந்தேகக் கண்ட ஊர்மறவர் கரந்தை சூடிச்சென்று அவரோடு கடும்போர் செய்து வென்று நிரைகளை மீட்டற்குச் சமைந்தனர். வெட்சியார் நிரை கவர்ந்த செய்தியறிந்த வேந்தன் தன்னூர் மறவரைத் தண்ணுமை முழக்கி யறிவித்தழைப்ப, அவர்கள் வென்றிபெறும் வேட்கையும் பலரும் காண மன்றத்தில் நின்று போருடற்றி மறப்புகழ் பெறும் வேட்கையும் உடையராய்ச் சென்று பொருதனர். அவருள் ஒரு மறவன் அப்போரில், கோடரியால் வெட்டுண்டு வீழ்ந்த மரம்போல் பகைவர் வாளால் வெட்டுண்டு வீழ்ந்தான். அதனைக் கண்டோர் பலர்; அவருள் கழாத்தலையாரும் ஒருவர். அவன் வீழ்ந்து கிடப்பதைச் சான்றோர் சூழ வேந்தன் சென்று கண்டு வியந்து பாராட்டிக் கண்ணீர் சொரிந்தான். “புரந்தார்கண்ணீர் மல்கச் சாகிற்பின் சாக்கா டிரந்துகோட்டக்க துடைத்து” (குறள். 780) என்பவாகலின், கழாத்தலையார் அவன் பொருட்டு வேந்தன் முதலிய சான்றோர் வருந்திய வருத்தத்தை அவனைப் பெற்ற தாய்க் குரைப்பாராய் இப்பாட்டினைப் பாடியுள்ளார். பன்மீ னிமைக்கு மாக விசும்பின் இரங்கு முரசி னினஞ்சால் யானை நிலந்தவ வுருட்டிய நேமி யோரும் சமங்கண் கூடித் தாம் வேட் பவ்வே 5 நறுவிரை துறந்த நாறா நரைத்தலைச் சிறுவர் தாயே பேரிற் பெண்டே நோகோ யானே நோக்குமதி நீயே மறப்படை நுவலு மரிக்குரற் றண்ணுமை இன்னிசை கேட்ட துன்னரு மறவர் 10 வென்றிதரு வேட்கையர் மன்றங் கொண்மார் பேரம ருழந்த வெருவரு பறந்தலை விழுநவி பாய்ந்த மரத்தின் வாண்மிசைக் கிடந்த வாண்மையோன் றிறத்தே. திணை : கரந்தை. துறை : கையறுநிலை. கழாத் தலையார் பாடியது. கண்டார் தாய்க்குச் சொல்லியது. உரை : பன்மீன் இமைக்கும் மாக விசும்பின் - பலவாகிய விண்மீன் கள் திகழும் மாகமாகிய உயர்ந்த வானத்தின்கண் முழங்கும் முகில்போல; இரங்கும் முரசின் - முழங்கும் முரசினையும்; இனம் சால் யானை - இன மமைந்த யானையினையும்; நிலம் தவ உருட்டிய நேமியோரும் - நிலத்தின்கண் நெடிது செலுத்திய ஆணையாகிய ஆழியினையுமுடைய வேந்தரும்; சமம் கண் கூடி வேட்ப - போர்க் களத்தின் கண் ஒன்றுகூடி அன்பால் வருந்தா நின்றார்; நறுவிரை துறந்த நாறா நரைத்தலை - நறுமணப் பொருள்களைத் துறந்தமையால் நறிய மணங் கமழாத நரைத்த தலையையுடைய; சிறுவர் தாயே - இளையோர்க்குத் தாயே; பேரில் பெண்டே - பெருங்குடிப் பெண்டே; நோகு யான் - நோவேன்யான்; நீயே நோக்குமதி - நீயே பார்ப்பாயாக; மறப்படை நுவலும் அரிக்குரல் தண்ணுமை - மறம்பொருந்திய வீரரைப் போர்க்கழைக்கும் அரித்த குரலையுடைய தண்ணுமை யது; இன்னிசைகேட்ட துன்னரும் மறவர் - இனிய ஓசையைக் கேட்ட நெருங்குதற்கரிய மறவர்; வென்றிதரு வேட்கையர் - வென்றி பெறும் வேட்கையுடையராய்; மன்றம் கொண்மார் - மன்றத்தைக் கொள்ளும்பொருட்டு; பேரமர் உழந்த வெருவரு பறந்தலை - பெரிய போரைச்செய்த அச்சம் பொருந்திய பறந்தலையின் கண்; விழுநவி பாய்ந்த மரத்தின் - பெரிய கோடரியால் வெட்டப்பட்டு வீழ்ந்த மரம்போல; வாள்மிசைக் கிடந்த ஆண்மை யோன் திறத்து - வாளின்மேல் வீழ்ந்துகிடந்த ஆண்மையையுடைய மறவனாகிய நின் மகன் திறத்தில்; எ-று. ஓவும் மதியும் அசைநிலை. தவ, மிக; ஈண்டு நெடிதெனக் காலத்தின் மேற்று. மன்றம், போர்க்களத்தின் நடுவிடம். தாயே, பெண்டே, யான் நோகு, நீயே நோக்கு; மறவர் வேட்கையராய் மன்றம் கொண்மார், உழந்த பறந்தலையில், வாண்மிசைக் கிடந்த ஆண்மையோன் திறத்து நேமியோரும் வேட்ப எனக் கூட்டி வினைமுடிவு செய்க. வாண்மிசைக் கிடந்த ஆண்மை யைத் தம் கண்ணீர் சொரிந்து வேட்பதுபற்றி “வேட்ப” என விதந்துரைக்கப்பட்டது. விளக்கம் : கரந்தையிற் கையறுநிலையாவது, “வெருவரும் வாளமர் விளிந் தோற் கண்டு, கருவி மாக்கள் கையற வுரைத்தன்று” (பு.வெ.மா. 2: 10) எனவரும். கருவி மாக்களாவார் பாணர் விறலியர் முதலியோராயினும் இனம்பற்றிப் புலவரும் சான்றோரும் கொள்ளப்படும். “மாக விசும்பின் நடுவுநின் றாங்கு” (புறம். 35) என்றதற்குப் பழையவுரை காரர் “மாகமாகிய உயர்ந்த வானம்” என்றது கடைப்பிடிக்க. விசும்பு, ஆகு பெயராய் மழைமுகில் மேனின்றது; “விசும்பிற் றுளிவீழி னல்லால்” (குறள். 16) என்றாற்போல. முரசும், யானையும் நேமியுடையோர் என இயையும். வேட்ப, பகரவீற்றுப் பல்லோர் படர்க்கை வினைமுற்று. பேரில் வேட்கையராய் மன்றங் கொள்ளற்குப் பேரமர் உழந்தும் நின் மகன் பெற்ற மறப் புகழைப் பெறாராயினார் என்பது தோன்ற, “பேரம ருழந்த வெருவரு பறந்தலை” யென மிகுத்தோதினார். வாளால் எறியுண்டு வீழ்ந்தானாயினும், மறங்குன்றா ஆண்மையால் வேந்தரும் மறவரும் கையற்றுப் பாராட்டும் பெரு நலத்தை, யாம் கூறக் கேட்பதே யன்றி நீயும் கண்ணாற் காண்பாயாக என்றற்கு, “சிறுவர் தாயே பேரில் பெண்டே, நோக்குமதி நீயே” என்றார். வீழ்ந்த மறவனை யல்லது வேறுபற்றுக் கோடில்லாதவள் என்பது தோன்ற, “நறுவிரை துறந்த நாறா நரைத்தலை” யுடையவளே என்றார். 271. வெறி பாடிய காமக்காணியார் சங்கச் சான்றோருள் காமக்கண்ணியென்றும் காமக்கணி யென்றும் வழங்கப்படுவோர் உளர்; இப்பெயர் காமக்காணியென வரற்பாலது. இம்மையிற் புகழ் மக்கட்பேறு முதலிய பயன் களையும் மறுமையில் துறக்க வின்பத்தையும் கருதிச் செய்யும் வேள்வி காமியம் எனப்படும்; அது காமம் எனவும் வரும்; இவ்வேள்விகளை முடித்துத்தரும் வேதியர்கட்குத் தரப்பெறும் சிறப்பு, காமக்காணி யெனப்படும். இது பல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதி காலத்தும் நிகழ்ந்த தென்பது வேள்விக் குடிச் செப்பேட்டால் புலனாகிறது. அண்ணாமலைப் பல்கலைக் கழக வெளியீட்டில் (Journal of the annamalai University, Vol. XV.) இது விரிவாக ஆராய்ந்து காட்டப்பெற்றுள்ளது. இத்தகைய காமக் காணிகள் இடைக் காலத்திலும் பலர் இருந்திருக்கின்றனர். இக் காமக்காணி யென்பது ஏடெழுதினோரால் காமக்கணி யென்றும் காமக்கண்ணியென்றும் எழுதப்பட்டுவிட்டது. களவுக் காலத்தில் மகளிர் வரைவு நீட்டித்த விடத்து மேனி வேறுபாடெய்தி வருந்துவர். களவுண்மையறியாமல் பெற்றோர் அவ்வேறுபாடு முருகனால் உண்டாயிற்றெனக் கருதி வெறியாட்டெடுத்து வழிபடுவர். அவ்வெறியாட்டை மிக விளக்கமாக எடுத்துப் பாடுவதில் இக்காமக்காணியார் தலைசிறந்தவர். இவர் வெறி யாட்டினை விதந்து பாடும் பாட்டுக்களுட் சில அகத்தில் தொகுக்கப்பட்டுள்ளன. இத்தகைய, சான்றோர் ஒருகால் அரசர் இருவர் போருடற்றக் கண்டார். ஒருவர் மற்றவருடைய நகரத்து அரணை முற்றிக்கொண்டனர். அடைமதிற்பட்ட மற்றவருடைய மறவர் மதிலிடத்தே நின்று நொச்சிமாலை சூடி அதனைக் காக்குமாற்றால் பெரும்போர் புரிந்தனர். அப்போரில் ஒரு மறவன் அணிந்திருந்த நொச்சி மாலை, அவன் பகைவர் வாளால் வெட்டுண்டு வீழ்ந்தபோது, அறுப்புண்டு அவன் குருதியிற் படிந்து உருமாறிப் போயிற்று. போரிடைப்பட்டு வீழ்ந்த பிணங் களைத் தின்றற்குப் பருந்து முதலிய பறவைகள் அங்கே சூழ்ந்து கொண்டிருந்தன. அவற்றுள் ஒரு பருந்து குருதியிற்படிந்து உருமாறிய நொச்சிமாலையை ஊன் எனக் கருதித் தூக்கிக் கொண்டு உயரத்திற் பறந்துபோயிற்று. அதனைக் காமக் காணியார் கண்டார். அக்காட்சி அவர் புலமையுள்ளத்திற் படிந்துஇந்த அழகிய பாட்டை வெளிப்படுத்திற்று. நீரற வறியா நிலமுதற் கலந்த கருங்குர னொச்சிக் கண்ணார் குரூஉத்தழை மெல்லிழை மகளி ரைதக லல்குற் றொடலை யாகவுங் கண்டன மினியே 5 வெருவரு குருதியொடு மயங்கி யுருவுகரந் தொறுவாய்ப் பட்ட தெரிய லூன்செத்துப் பருந்துகொண் டுகப்பயாங் கண்டனம் மறம்புகன் மைந்தன் மலைந்த மாறே. திணை : நொச்சி ; துறை : செருவிடை வீழ்தல். வெறி பாடிய காமக் காணியார் பாடியது. உரை : நீரறவு அறியா நிலமுதல் கலந்த - நீர் தொலைவறியாத நிலமாகிய முதலொடு ஒன்றி நிற்கும்; கருங்குரல் நொச்சி கண்ணார் குரூஉத் தழை - கரிய கொத்துக்களையுடைய நொச்சியினது கண்ணுக்கு நிறைந்த அழகிய நிறமுடைய தழை; மெல்லிழை மகளிர் ஐது அகல் அல்குல் தொடலையாகவும் கண்டனம் - மெல்லிய இழைகளையணிந்த இளமகளிருடைய அழகிதாக அகன்ற அல்குலிடத்தே தழையுடையாக அணியப் படவும் கண்டேம் முன்பு; இனி - இப்பொழுது; வெருவரு குருதியொடு மயங்கி - அச்சம் தருகின்ற குருதியில் கலந்து; உருவு கரந்து - உருமாறி; ஒறுவாய்ப்பட்ட தெரியல் - துணிபட்டுக் கிடந்த நொச்சி மாலையை; ஊன் செத்து - ஊனென்று கருதி; பருந்து கொண்டு உகப்ப - பருந்து கவர்ந்து உயரத்திற் கொண்டு போகவும்; யாம் கண்டனம் - யாம் கண்டேம்; மறம் புகல் மைந்தன் மலைந்த மாறு - மறத்தை விரும்பும் இளையோன் அணிந் திருந்ததனால்; எ-று. நொச்சி முதலிய கருப்பொருட்கு நிலம் முதலாதலின், “நிலமுதல்” என்றார். நிலமுதல் கலந்த நொச்சி யென்றதற்கு நிலத்தின்கண் நின்ற அடி மரத்தில் தழைத்த நொச்சி யென் றுரைப்பினுமமையும். இளைய மகளிர் அணியும் தழையில் நொச்சியும் ஒன்று; “ஐதக லல்குல் தழை யணிக் கூட்டும் கூழை நொச்சி” (அகம். 275) என்று பிறரும் கூறுதல் காண்க. ஒறுவாய்ப் பட்ட தெரியல் - ஒறுக்கும் வாள்வாய்ப்பட்டுத் துணிபட்ட மாலை. மறவன் செருவில் வாளால் வெட்டுண்டு வீழ்ந்தமை, அவன் அணிந்திருந்த தெரியல் மேல் வைத்தோதியவாறு. நொச்சிக் குரூஉத் தழை, முன்பு, தொடலை யாகவும் கண்டனம்; இனி, மைந்தன் மலைந்தமாறு, பருந்து கொண்டு கப்பவும், யாம் கண்டனம் என மாறிக் கூட்டி வினைமுடிவு செய்க. விளக்கம் : செருவிடை வீழ்தலாவது, “ஆழ்ந்துபடு கிடங்கோடருமிளை காத்து, வீழ்ந்த வேலோர் விறல்மிகுத் தன்று” (பு.வெ.மா. 514) என்பது. தொடலை, தொடுக்கப்படுவது; தழையும் மாலை போலத் தொடுக்கப் படுவது பற்றித் தொடலை யெனப்பட்டது. நொச்சித்தழை காண்டற்கு நிறைந்த அழகுடையதென்பார், “கண்ணார் குரூஉத்தழை” யென்று சிறப்பித்தார்; ஆகவே, அதன் அழகு தழையிடைத் தொடுக்கப்படும் தொழிற் பாட்டால் மேம்படுமாறு பெற்றாம்; “கண்ணார் கண்ணி” (பொருந. 148) என்பது காண்க. மெல்லிழை மகளிா என்றவிடத்து மென்மையை மகளிர்க் கேற்றுக. மயங்குதல், கலத்தல். குருதி காண்பார்க்கு அச்சமுண்டாதல்பற்றி “வெருவரு குருதி” யெனப்பட்டது. உருவுகரத்தல், குருதி படிந்து நிறம் வேறு பட்டுத் தசைத் துண்டம் போறல். “நிறம் பெயர் கண்ணிப் பருந்தூறளப்ப” (பதிற். 51) எனப்பிறரும் கூறுவது ஈண்டு நோக்கத்தக்கது. உகப்பு, உயர்தல்; “உகப்பே யுயர்தல்” (தொல். உரி. 8) புகலுதல், விரும்புதல். “குடையும்வாளும்” என்று தொடங்கும் புறத்திணைச் சூத்திரத்து (11) “அன்றி முற்றிய அகத்தோன் வீழ்ந்த நொச்சியென்றதற்கு இளம்பூரணர் இப்பாட்டினை யெடுத்துக் காட்டுவர். நிலமும் காலமும் முதற்பொருள் எனவும், நிலத்தில் உள்ள உயிருள்ளனவும் இல்லனவு மாகிய பொருள் கருப்பொருளெனவும் வழங்கும். இனியென்றதற் கேற்ப, முன்பு என்பது வருவிக்கப்பட்டது. முன்பு தொடலையாகவும் கண்டனமென்பதனால், பருந்து கொண்டு உகப்பவும் என உம்மை விரித்துக் கூறப்பட்டது. பருந்து ஊன் எனக் கருதுதற்கேது கூறுவார், “குருதி மயங்கி உருவுகரந்து” என்றும், நொச்சி அவ்வாறாதற் கேது, “மைந்தன் மலைந்த மாறு” என்றும் கூறினார். 272. மோசி சாத்தனார் மோசி யென்பது பாண்டிநாட்டில் உள்ளதோர் ஊர். இஃது இப்போது மோசிகுடி யென வழங்குகிறது. இவ்வூர், சான்றோர் பலர் பிறந்த பெருமையுடையது. பகைவர் கைப்பற்றாதபடி மதிலிடத்து நொச்சி சூடிப் பொருத மறவன் ஒருவன் அப்போரில் புண்பட்டு மாண்டான். அவன் சென்னியில் சூடிக்கொண்டிருந்த நொச்சியும் அவனோடே கிடந்தது. அது கண்ட சாத்தனார்க்குக் கையறவு பெரிதாயிற்று. எதிரே இருந்த ஒரு நொச்சி மரத்தையும் பார்த்தார். பார்த்த அளவில் அவர் உள்ளத்தில் கருக் கொண் டெழுந்தது இப்பாட்டு. மணிதுணர்ந் தன்ன மாக்குர னொச்சி போதுவிரி பன்மர னுள்ளுஞ் சிறந்த காத னன்மர நீமற் றிசினே கடியுடை வியனகர்க் காண்வரப் பொலிந்த 5 தொடியுடை மகளி ரல்குலுங் கிடத்தி காப்புடைப் புரிசை புக்குமா றழித்தலின் ஊர்ப்புறங் கொடாஅ நெடுந்தகை பீடுகெழு சென்னிக் கிழமையு நினதே. திணையும் துறையு மவை. மோசிசாத்தனார் பாடியது. உரை : மணி துணர்ந்தன்ன மாக்குரல் நோக்கி - மணிகள் கொத்துக் கொத்தாய் அமைந்தாற்போன்ற கரிய கொத்துக்களையுடைய நொச்சியே; போது விரி பன்மரனுள்ளும் - பூக்கள் மலர்ந்த பலவாகிய மரங்களுள் வைத்து; சிறந்த காதல் நன்மரம் நீ - மிக்க அன்பு செய்தற்குரிய மரம் நீயாவாய்; கடியுடை வியல் நகர் காண் வரப் பொலிந்த - காவலையுடைய அகன்ற நகரின் கண்அழகுவர விளங்கிய; தொடியுடை மகளிர் அல்குலும் கிடத்தி - தொடியையுடைய இளமகளிர் அல்குலிடத்தே தழையாகவும் கிடப்பாய்; காப்புடைப் புரிசைபுக்கு - காவலை யுடைய எயிலிடத்தே நின்று; மாறு அழித்தலின் - கோடல்கருதி வருவாரையடர்த்து அவர்கள் மாறுபாட்டை யழிப்பதால்; ஊர்ப்புறம் கொடா நெடுந்தகை - நகர்ப்புறத்தைக் கைவிடாது காக்கும் நெடுந்தகையினுடைய பீடுகெழு சென்னிக் கிழமையும் நினது - பெருமை பொருந்திய தலையில் அணியப்படும் உரிமை யும் நின்னுடையதாம்; எ-று. துணர் - கொத்து. மறவராற் காக்கப்படுவதேயன்றி, அமைப்பாலும் பொறி முதலியனவுடைமையாலும் காப்பமைந்திருப்பது பற்றிக் “காப்புடைப்புரிசை” யென்றார். ஊர்ப்புறம் கொடாஅ நெடுந் தகையென்றதற்கு, அடுத்தூர்ந்து பொரும் போரின்கண் புறங் கொடாத நெடுந்தகை யெனினுமமையும். நெடுந்தகை - நெடிய தகைமையினை யுடையோன். சென்னிக்கிழமை - சென்னியிற் சூடப்படும் உரிமை. மற்று, இசின் என்பன அசைநிலை. மாக்குரல் நொச்சி பன்மரனுள்ளும் சிறந்த காதல்மரம் நீ, அல்குலும் கிடத்தி; நெடுந்தகை சென்னிக்கிழமையும். நினது என வினைமுடிவு செய்க. விளக்கம் : “முற்றிய அகத்தோன் வீழ்ந்த நொச்சி” (தொல் புறத். 13) என்பதற்கு இதனைக் காட்டி, “இது சூடின நொச்சியைப் புகழ்ந்தது” என நச்சினார்க்கினியர் கூறுவர். நொச்சித்துணரை, “மணிக்குரல் நொச்சி” (நற். 293) எனப் பிறரும் கூறுதல் காண்க. “பன் மரனுள்ளும் சிறந்த காதல நன்மரம் நீ” என்றது மேற்கோள்; மகளிரும் மைந்தரும் ஒப்ப விரும்புதலான் என்றது ஏது. இதனை வற்புறுத்தற்கு “மகளிர் அல்குலுங் கிடத்தி” யெனவும், “நெடுந்தகை சென்னிக் கிழமையும் நினது” எனவுங் கூறினார். தழையில் ஆம்பல் முதலிய பிறவற்றோடு விரவும் நொச்சி, நொச்சிப் போரில் தனித்துச் சூடப்படும் உரிமை யுடைமையின் “கிழமை” என்றார். 273. எருமை வெளியனார் எருமை யென்பது ஓர் ஊர். தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனோடு பொருத எழுவருள் எருமையூரன் என்பவன் ஒருவன். அவனை நக்கீரனார், “நாரறி நறவின் எருமையூரன்” (அகம். 36) என்று கூறுவர். மைசூர்நாட்டுக்குப் பண்டைநாளில் எருமைநாடு என்றும், மைசூர் எருமையூரென்றும் வழங்கின. அப்பகுதியிலுள்ள கல்வெட்டுக்களுள் கன்னட மொழியிலுள்ளவை எருமைநாடு (Eq. car. Vol. X cu. 20) என்றும் தமிழ்க் கல்வெட்டுக்கள் எருமைநாடு (A.R. for 1907. Para. 1) என்றும் கூறுகின்றன. தகடூர் அதியமான்களில் எழினியென்பான் எருவாயில் என்னும் ஊரைக் கைப்பற்றிய போரில் எழினியின் படைமறவன் ஒருவன் போரில் வீழ்ந்து நடுகல் நிறுவப்பட்டான். அவனை எருமைய நக்கன் என்று கல்வெட்டு (A.R. No. 211 of 1910) கூறுவதால், இந்நக்கன் எருமைநாட்டு எருமையூரினனாம். இந்த எருமையூரில் தோன்றிய இந்தச் சான்றோரது இயற்பெயர் வெளியன் என்பது. இந்நாட்டில் வெளியமென்றோ ரூருமுளது. இவர் பாடிய பாட்டொன்று அகத்திலும் காணப்படுகிறது இவர்க்குக் கடலன் என்ற பெயருடைய மகன் உண்டு. கடலனாரும் நல்லிசைச் சான்றோராவர். ஒருகால் ஒரு மறவன் தும்பை சூடிப் பகைவருடன் போர்செய்ய நேர்ந்து அழகிய குதிரையூர்ந்து சென்றான். அவனோடு வேறு பல குதிரை மறவரும் சென்றனர். போர் முடிந்த பின், சென்ற குதிரை வீரர்களின் குதிரைகள் திரும்ப வந்தன. அம்மறவனுடைய குதிரைமட்டில் வாராதாயிற்று. அதனால் அவன் மனையோள் மனவமைதி பெறாது கலக்கமுறலானாள். வாராமைக்குரிய காரணத்தைப் பலரையும் வினவினாள். அவளது நிலைகண்ட வெளியனார் மிக்க வியப்புற்றார். குதிரை இறந்தது கொல்லோ என அவள் வருந்தியது அவர் உள்ளத்தில் இப்பாட்டினை எழுவித்தது. மாவா ராதே மாவா ராதே எல்லார் மாவும் வந்தன வெம்மிற் புல்லுளைக் குடுமிப் புதல்வற் றந்த செல்வ னூரு மாவா ராதே 5 இருபேர் யாற்ற வொருபெருங் கூடல் விலங்கிடு பெருமரம் போல உலந்தன்று கொல்லவன் மலைந்த மாவே. திணை : தும்பை; துறை : குதிரைமறம். எருமை வெளியனார் பாடியது. உரை : மாவாராது மாவாராது - குதிரை வாராதாயிற்று குதிரை வாராதாயிற்று; எல்லார் மாவும் வந்தன - ஏனைமறவர் எல்லாருடைய குதிரைகளும் வந்து சேர்ந்தன; எம்இல் புல்லுளைக் குடுமிப் புதல்வன் தந்த செல்வன் ஊரும் மா வாராது - எம் மனையின் கண் புல்லிய உளைபோலும் குடுமியையுடைய புதல்வனைப்பெற்ற செல்வனாகிய கொழுநன் ஊர்ந்து செல்லும் குதிரையே வாராதாயிற்று; இருபேர் யாற்ற ஒரு பெருங்கூடல் - இரண்டு பெரிய யாறுகள் கூடும் ஒரு பெரிய கூடற் பெருக்கை; விலங்கிடுபெருமரம்போல - குறுக்கிட்டு நின்று தடுக்கும் பெரிய மரம் அலைப்புண்டு வீழ்வதுபோல; அவன் மலைந்த மா உலந்தன்று கொல் - அவனைச் சுமந்து சென்று போருடற்றிய குதிரை பட்டு வீழ்ந்து போயிற்றுப் போலும்; எ-று மக்கட்பேறுடையாரைச் செல்வரெனச் சிறப்பித்துரைப்பது பண்டையோர் மரபு; “செல்வக் கொண்கன்” (ஐங். 104) எனப் பிறரும் கூறுதல் காண்க. இரண்டு பெரிய யாறுகள் கூடுமிடத்தே இடைநிற்கும் மரம். நீர்ப்பெருக்கால் வேரலைக்கப்பட்டு வீழ்தல் ஒருதலை யாதலின், “விலங்கிடு பெருமரம் போல” என்றார். எத்துணைப் பெருமையுடையதாயினும் பயனின்றென்றதற்குப் “பெருமரம்” எனச்சிறப்பிக்கப் பட்டது. எல்லார் மாவும் வந்தன; செல்வனூரும் மாவராது; ஆகலான் அவன் மலைந்த மா உலந்தன்று கொல்லென வினைமுடிவு செய்க. விளக்கம் : தும்பையிற் குதிரை மறமாவது, “எறிபடை யானிக லமருள், செறிபடை மான்திறங் கிளந்தன்று” (பு.வெ:மா. 7:7) என வரும். மகனால் தந்தை தாயருடைய புகழ் மேம்படுதலால், “புதல்வன் தந்த செல்வன்” என்றார். இளஞ்சிறார் குடுமியைப் புல்லுளைக் குடுமி யென்பது பெருவழக்கு; “புல்லுளைக்குடுமிப் புதல்வன்” (புறம். 160) எனவும், “புல்லுளைக் குடுமிப் புதல்வற் பயந்து” (அகம். 176) எனவும் சான்றோர். வழங்குதல் காண்க. “எல்லார் மாவும்” என்றது, செல்வனூரும் மாவொழிய ஏனை யெல்லாருடைய மாவும் என்பது படநின்றது; “ஆறுபோயினா ரெல்லாங் கூறைகோட்பட்டார்” என்றாற் போல. ஒருபுடை நின்று பொருத வழி, மாவைப்படுத்தல் இயலாது என்பது தோன்ற, இருபேர்யாற்றுக் கூடற் கண் குறுக்கிட்டு நிற்கும் பெருமரம் உவமை கூறப்பட்டதெனவறிக. பெரும் போரிடை நின்று பொருது வீழ்ந்த மறச் சிறப்புணர்த்தலின், இது குதிரை மறமாயிற்று. 274. உலோச்சனார் இரண்டு பெருவேந்தர் கடல்போன்ற படையுடன் கைகலந்து தும்பை சூடிப் போருடற்றினர். அப்போரின்கண் மறவனொருவன் இடையிற் கச்சையால் இறுகிய உடையும், தலையில் மயிற்பீலி யால் தொடுக்கப்பட்ட கண்ணியும் உடையனாய் வேலேந்தி நின்று கடும்போர் புரிந்தான். அக்காலை அவன்மேற் பெரிய களிறொன்று அடர்க்க வந்தது.உடனே அவன் தன் கைவேலை அக்களிற்றின் நெற்றியிற் பாய்ந்துருவச் செலுத்தினான். அக்களிறு வேலுடனே பிறக்கிட்டுச் சென்று வீழ்ந்துபட்டது. இதற்கிடையே பகைவர் பலர் வேலேந்திப் பரந்து வந்தனர். அவனே, அவர் செலுத்திய வேலை வாங்கி மடித்து அவர் தம் தலைவனையும் தோளுறப்பற்றி நிலத்தில் மோதி உயிர் நீங்கிய அவனது உடலைக் கைக்கொண்டு நின்றான். அந்நிலையில் ஒழியாது மேலும் பொர வருவாரை நோக்கி நின்றமையின், அவனை உலோச்சனார் கண்ணாரக் கண்டார். அவனது நிலைதான் உயிர் முடியுங்காறும் பொருதொழிவது துணிபாக உடையன் என்றுணரக் காட்டிற்று. அதனை இப்பாட்டின்கண் உரைத்துள்ளார். நீலக் கச்சைப் பூவா ராடைப் பீலிக் கண்ணிப் பெருந்தகை மறவன் மேல்வருங் களிற்றொடு வேறுரந் தினியே தன்னுந் துரக்குவன் போலு மொன்னலர் 5 எஃகுடை வலத்தர் மாவொடு பரத்தரக் கையின் வாங்கித் தழீஇ மொய்ம்பி னூக்கி மெய்க்கொண் டனனே. திணை : தும்பை; துறை : எருமை மறம். உலோச்சனார் பாடியது. உரை : நீலக்கச்சை - நீலநிறமுடைய கச்சையினையும்; பூவார் ஆடை - பூத்தொழில் செய்யப்பட்ட ஆடையினையும்; பீலிக் கண்ணி - மயிற் பீலியால் தொடுக்கப்பட்ட கண்ணியினையு முடைய; பெருந்தகை மறவன் - பெருந்தகையாகிய மறவன்; மேல்வருங் களிற்றொடு வேல் துரந்து - தன்மேல் கொலை குறித்து வந்த களிற்றின் நெற்றியிலே வேலைச் செலுத்திப் போக்கி; இனி - இப்பொழுது; தன்னும் துரக்குவன் போலும் - தன்னுயிரையும் செலுத்திப் பொருவான்போலும்; ஒன்னலர் எஃகுடை வலத்தர் மாவொடு பரத்தர - பகைவர் வேலை வலத்தில் ஏந்தினவராய்க் களிற்றுடனே பரந்து வரக்கண்டு; கையின் வாங்கி - அவர் எறிந்தவேல் தன் மெய்க்கண்ணதாக அதனைப் பிடுங்கி அவர் திரளை மடித்து; தழீஇ - அவர்தம் தலைவனைத் தோளுறத் தழுவி; மொய்ம்பின் ஊக்கி - தன் மெய் வலியாற் கிளர்ந்து உயரத்தூக்கி நிலத்தில் மோதி; மெய்க் கொண்டனன் - உயிர்நீங்கிய அவனது உடலைப் பற்றிக் கொண்டு நிற்கின்றானாதலால்; எ-று. விலங்கெனக் கருதித் தான் களிற்றின்மேற் செல்லாத பெருந்தகை யாதலின், அவனாற் கொல்லப்பட்ட களிற்றை, “மேல்வருங் களி” றென்றார். வாங்குதல், மடித்தல்.கையின் வாங்கி யென்றதற்கு, கை வேலைக் களிற்றொடு போக்கினமையின், தன்மேல் வந்த மறவரைக் கையால் வளைத்து என்றுரைப்பினுமாம். சிறப்புப் பற்றித் தழுவப் பட்டவன் தானைத் தலைவ னென வுணர்க. மெய் வலி வாடாது மேன் மேல் ஊக்குதலால் உயரத் தூக்கி நிலத்தில் மோதுவது பயனாதல் பற்றி, “மொய்ம்பின் ஊக்கி” யென்றார். மெய்க்கொண்டு நிற்பது, “மெய்க் கொண்டனனே” என்று அறிவிக்கின்றார். ஆண்டு தன்னுயிர் முடியுங்காறும் பொருவது கருதினமை. புலப் படுதலின், “தன்னும் துரக்குமவன் போலும்” என்றார். விளக்கம் : எருமை மறமாவது, “வெயர்பொடிப்பச்சினங்கடை இப் பெயர் படைக்குப் பின்னின் றன்று” (பு.வெ. மா. 7 :13) களிறு மனவுணர்வில்லாத விலங்காதலின், அது தம்மேல்வரினன்றித் தாம் அதன் மேற் செல்லுதல் மறச்சான்றோர் சால்புக்கு நாணுத் தருவ தொன்றென்பர். “வான்வணக்கி யன்ன வலிதரு நீள்தடக்கை, யானைக்கீ தென்கையி லெஃகமால் - தானும், விலங்கால் ஒருகைத்தால் வெல்கைநன் றென்னும், நலங்காணேன் நாணுத் தரும்” எனத் தகடூர் யாத்திரை கூறுவது காண்க. “தானை யானை” (தொல். புறத். 17) என்ற சூத்திரத்து, “படையறுத்துப் பாழி கொள்ளும் ஏமம்” என்பதற்கு இப்பாட்டை யெடுத்துக் காட்டுப. 275. ஒரூஉத்தனார் எண்ணுப்பெயராகிய ஒருத்தன் என்பதனின் வேறுபடுத்தற்கு இவர் பெயர் ஒரூஉத்தனாரென நின்றது. இவர் பாடியதாகத் தொகை நூல்களுள் இவ்வொரு பாட்டே காணப்படுகிறது. போர்க்களத்தே பெரிய போரைச் செய்யும் மறவன் ஒருவன் தன் தோழன் பிறிதொரு புறத்தே பகைவர் வளைத்துக்கொள்ள அவர் நடுவேநின்று பொருவது கண்டான். உடனே, அவற்குத் துணை செய்யக் கருதி நெடிய வேலைக் கையிலேந்திக்கொண்டு விரைந்து செல்லலுற்றான். அது கண்ட பகைவர் அவனைத் தடுத்தற்கு முயன்றனர்; அவன் தடைப்படாது சென்று தோழர்க்குத் துணை யாயினான். அவன் செயலைக்கண்ட ஒரூஉத்தனார் இப்பாட்டின் கண் அதனை வைத்துப் பாடியுள்ளார். கோட்டங் கண்ணியுங் கொடுந்திரை யாடையும் வேட்டது சொல்லி வேந்தனைத் தொடுத்தலும் ஒத்தன்று மாதோ விவற்கே செற்றிய திணிநிலை யலறக் கூழை போழ்ந்துதன் 5 வடிமா ணெஃகங் கடிமுகத் தேந்தி ஓம்புமி னோம்புமி னிவணென வோம்பாது தொடர்கொள் யானையிற் குடர்கா றட்பக் கன்றமர் கறவை மான முன்சமத் தெதிர்ந்ததன் றோழற்கு வருமே. திணையும் துறையு மவை. ஒரூஉத்தனார் பாடியது. உரை : கோட்டம் கண்ணியும் - வளையத்தொடுத்த கண்ணி சூடுதலும்; கொடுந்திரை யாடையும் - வளைந்து திரைந்த ஆடை யுடுத்தலும்; வேட்டது சொல்லி வேந்தனைத் தொடுத்த லும் - வேந்தன் விரும்பியதுவே தானும் விரும்பிச் சொல்லி அவனை வளைத்தலும்; இவற்கு ஒத்தன்று - இவன்கண் பொருந்தியுள்ளன; செற்றிய திணிநிலை அலறக் கூழை போழ்ந்து - பகைவர் கறுவு கொண்டு சூழ்ந்த திணிநிலையி லுள்ள மறவர் அஞ்சியலறிச் சிதையுமாறு அவருடைய பின்னணிப்படையைப் பிளந்து கொண்டு; தன் வடிமாண் எஃகம் கடிமுகத் தேந்தி - தனது வடித்து மாட்சியுள்ள வேலைப் படைமுகம் நோக்க ஏந்தி; இவண் ஓம்புமின் ஓம்புமின் என - இவ்விடத்தேயே இவனைச் செல்லாத படி பரிகரியுங்கோள் பரிகரியுங்கோள் என ஏனைத் தானை வீரர் தம்மிற் கூறித் தடுக்கவும்; ஓம்பாது - அவர் தடையைக்கடந்து; தொடர் கொள் யானையின் - சங்கிலியாகிய தளைபூண்டு செல்லும் யானை போல; குடர்கால் தட்ப - கொலையுண்டு வீழ்ந்த மறவர்களின் குடர் தன் காலைத் தளைக்கவும்; கன்றமர் கறவை மான - கன்றைக் காதலிக்கும் கறவைப் பசுப்போல; முன் சமத்து எதிர்ந்த தன் தோழற்கு வரும் - முன்னணிப்போரில் பகைவரை நேர்பட்டு அவரால் வளைப்புண்டிருக்கும் தோழன்பால் வருவானாயினன்; எ-று. கண்ணி முதலிய மூன்றனோடும் ஒத்தன் றென்றதைத் தனித் தனியே கூட்டுக. வளைத்தல் என்றதற்கேற்பச் சூடலும் உடுத்தலும் வருவிக்கப் பட்டன. கண்ணி சூடல் முதலிய மூன்றும் செயல் வகையால் மாண்புற வேண்டுதலின், “ஒத்தன்று” என்றார். திணிநிலை, இருதிறத்து வீரரும் செறிந்து போருடற்றும் களத்தின் நடுவிடம். வில்லும் வேலும் வாளும் ஏந்தி அணிநிலை பெற்றுக் காண் பார்க்கு அச்சமுண்டாக நிற்கும் படை வரிசையின் முன்னணி “கடிமுகம்” எனப்பட்டது.இனித் தான் செல்லும் திசை நோக்கி வேலின் இலைமுகத்தை யேந்திச் செல்கின்றான் எனினுமாம். கடிமுகம், வேலின் இலைமுகம். “ஓம்புமின் ஓம்புமின் இவண்” என்றது, பகைவர் கூற்றினைக்கொண்டு கூறியது. தோழற்கு வருமாகலின், இவற்கே ஒத்தன்று எனக் கூட்டி வினை முடிவு செய்க. விளக்கம் : “தானையானை” யென்ற சூத்திரத்து (தொல். புறத் 17) “ஒருவ னொருவனை யுடைபடை புக்குக், கூழை தாங்கிய எருமை” யென்பதற்கு இப்பாட்டை யெடுத்துக் காட்டுப. “தானையானை குதிரையென்ற, நோனா ருட்கும் மூவகை நிலையுள்” தானை நிலைக்கு இதனைக் காட்டி, “இஃது உதவியது” என்பர் நச்சினார்க்கினியர். கோட்டம், வளைவு. “ஒத்தல்”, “உவமையும் பொருளும் ஒத்தல் வேண்டும் ” (தொல். உவம. 8) என்றாற்போல. கூவை போழ்ந்து என்ற பாடத்துக்குக் கூவைக்கிழங்கைப் பிளப்பதுபோலப் பிளந்துசென்று எனவுரைக்க. பின்னோக்காத பெருமித நடையும், வழியிடையுள்ள இடையீடுகளை மதியாது செல்லும் மாண்பும் உடையனென்றதற்குத் “தொடர்கொள் யானை” யுவமமும், தோழன் பாலுள்ள அன்பு விளங்குதற்கு, கன்றமர் கறவை யுவமமும் கூறப்பட்டன. “கன்றமர் கறவை” யெனப் பொதுப் படக் கூறினாராயினும், விரைவுடைமையும் உடன்தோன்ற, தன் கன்று பிறர் கைப்பட்டிருக்கக் காணும் கறவை அவர்பால் விரைந்து செல்வது போலத் தோழன்பால் சென்றாரெனினும் அமையும்; “கன்று சேர்ந்தார்கட் கதவிற்றாய்ச் சென்றாங்கு, வன் கண்ணன் ஆய்வரல் ஓம்பு” (கலி.116) என்று சான்றோர் கூறுவது காண்க. ஓம்புமின் ஓம்புமின் என்ற அடுக்கு அச்சம் பொருளாகப் பிறந்த விரைவுக் குறிப்புணர நின்றது. 276. மதுரைப்பூதன் இளநாகனார் மதுரையில் வாழ்ந்த பூதன் என்பாருடைய மகனாதலால் இளநாகனார், இவ்வாறு வழங்கப்பட்டார். இளநாகன் என்பது இவரது இயற்பெயர். மதுரை மருதன் இளநாகனாரென வேறொரு சான்றோருண்மையின், அவரின் வேறுபடுத்தற்கு இவர் பூதன் இளநாகனார் என்று சிறப்பிக்கப் பெறுகின்றார். பெருவேந்தர் இருவர் தும்பை சூடிப்போருடற்றினர். அவருடைய இருபடை களும் கைகலந்து போர் செய்தன. அத் தானையின் நிலையினை இளநாகனார் கண்டார். மறவருள் ஒருவன் பகைவர் படைநிலை முழுதும் கலக்கி வென்றிமேம்படுவது தெரிந்தது. அதனை இப்பாட்டின்கண் அழகு திகழக் கூறியுள்ளார். நறுவிரை துறந்த நரைவெண் கூந்தல் இரங்கா ழன்ன திரங்குகண் வறுமுலைச் செம்முது பெண்டின் காதலஞ் சிறா அன் மடப்பா லாய்மகள் வள்ளுகிர்த் தெறித்த 5 குடப்பாற் சில்லுறை போலப் படைக்குநோ யெல்லாந் தானா யினனே. திணை : தும்பை; துறை: தானைநிலை. மதுரைப் பூதனிள நாகனார் பாடியது. உரை : நறு விரை துறந்த நரைவெண் கூந்தல் - நறிய விரைப் பொருள்களைத் துறந்த நரைத்த வெளிய கூந்தலையும்; இரங்காழ் அன்ன திரங்குகண் வறுமுலை - இரவமரத்தின் விதை போலத் திரங்கிய கண்ணையுடைய வற்றிய முலையையு முடைய; செம்முது பெண்டின் காதலம் சிறாஅன் - செம்மைப் பண்பு பொருந்திய முதியவளுடைய அன்புடைய மகன்; மடப்பால் ஆய்மகள் வள்ளுகிர் - இளமைப் பான்மையை யுடைய ஆய்க்குல மகளுடைய வளவிய உகிரினால்; குடப்பால் தெறித்த சில்லுறை போல - குடம் நிறையவைத்த பாலின்கண் தெளித்த சிலவாகிய பிரை அக்குடவளவிற்றான பால் முற்றும் கலங்கிக் கெடுதற்குக் காரண மானாற்போல; படைக்கு நோயெல்லாம் தானாயினன் - பேரளவினதாகிய பகைவர் படைத்திரள் உடைந்து கெடுதற்குரிய நோய் முழுதுக்கும் தான் ஒருவனே காரணனாயினான்; எ-று. முதுபெண்டின் முதுமையைச் சிறப்பித்தற்குத் தலைமயிர் முதலியன எடுத்துரைத்தார். செம்மைப்பண்பு கூறியது, மாற்றார் படைக்குண்டாய நோய் முழுதுக்கும் அவள் வயிற்றிற் பிறந்த காதல் மகனது மறமாண்பு காரணமென்பது விளக்கு தற்கு. மடமையுடைய ஆய்மகள் என்றமையின் அதற்கேற்ப வள்ளுகிரால் தெறித்தாள் என்றார். முது பெண்டின் சிறாஅன் சில்லுறைபோலத் தானாயினன் எனக் கூட்டி வினைமுடிவு செய்க. விளக்கம் : ஒப்பனை செய்துகோடற்குரிய செவ்வி கழிந்தமை தோன்ற, “நறுவிரை துறந்த” என்றும், இளமை கழிந்தமை தோன்ற, “நரைவெண் கூந்த” லென்றும் விளக்கினார். இரங்காழ், இராவென்னும் மரத்தின் விதை. மறப்பண்பு குன்றாமை விளங்க, “செம்முது பெண்டு” என்றார். பால், பருவம், மடம், இளமை. “மடவளம்ம நீ இனிக் கொண்டோளே” (ஐங்.67) என்றாற்போல. மடப்பால், இளமைச்செவ்வி. குடவளவிற்றாய பாலில் அளவறிந்திட்ட பிரை அதனை யுறையப் பண்ணும்; அதனிற் குறையின், பால் தன் தன்மை கெட்டுத் தயிராய் உறைதலுமின்றிக் கலங்கித் தோன்றுமாதலின், அக்கருத்து விளங்க, “ஆய்மகள் வள்ளுகிர்த்தெறித்த குடப்பால் சில்லுறை” யென்றார். தும்பைத் தானைநிலையாவது, “இருபடையும் மறம்பழிச்சப் பொரு களத்துப் பொலிவெய்தின்று” (பு.வெ.மா. 7:22) என்பர். இதனைத் தொல்காப்பிய வுரைகாரர்கள் “தானையானை” என்ற சூத்திரத்துத் தானை நிலையின்பாற்படும் என்பர். செம்முதுபெண்டின் முதுமையை விரித்துக் கூறியது, அவள் முதியளாயினும், அவள் வயிற்றிற் பிறந்து அவள் மார்பிற் பாலுண்டு வளர்ந்த சிறுவன் மாற்றார் படை முழுதும் கலங்கி யலமரச் செய்யும் பெருமறம் உடைய பெருந்தகையாயினான் என வியந்தோதியவாறு. “வறுந்தலை முதியாள் அஞ்சுதக்கனளே, வெஞ்சமத், தென்செய் கென்னும் வேந்தர்க், கஞ்சலென்னுமோர் களிறீந்தனளே” (புறத். 1372) என்று பிறரும் கூறுதல் காண்க. 277. பூங்கண் உத்திரையார் பூங்கண் என்பது காவிரியின் வடகரையிலுள்ள தோரூர் எனக் கல் வெட்டுக்களால் (M.E.R. No. 153 of 1932) அறிகின்றோம். இவரது இயற்பெயர் உத்திரையென்பது. இஃது ஆதிரை யென்றாற் போலப் பிறந்த நாளால் வந்த பெயர். களவுக் காதலொழுக்க மேற்கொண்ட தலைமக்களுள் வரைவு நீட்டித்தவிடத்துத் தலைவி பிரிவாற்றாது வேறுபடும் திறத்தை இனிய பாட்டுக் களால் நயம்படவுரைக்கும் நலம்வாய்ந்தவர் இவர். ஒரு மறவன் காளைப் பருவத்தே வேந்தன் பொருட்டுப் போர்க்குச் சென்றான். அவன் தாய் மிக்க முதுமை யெய்தி அவனையே பற்றுக்கோடாகக் கொண்டிருந்தாள். அவன் போரில் விழுப்புண்பட்டு மேலோராகிய சான்றோர் வருந்த இறந்தான். இச்செய்தியை அவர்கள் அம்முதிய வட்கு மெல்ல அறிவித்தனர். அது கேட்டு அவள் கழிபேரு வகை யெய்திக் கண்ணீர் சொரிந்து மகிழ்ச்சியுற்றாள். மறக்குடி மகளாகிய அவளது மறமாண்பு முதுமையால் வாடாத திறம் கண்ட உத்திரையார் வியந்தார். அவ்வியப்பின் உண்மை வடிவே இப்பாட்டு. மீனுண் கொக்கின் றூவி யன்ன வானரைக் கூந்தன் முதியோள் சிறுவன் களிறெறிந்து பட்டன னென்னு முவகை ஈன்ற ஞான்றினும் பெரிதே கண்ணீர் 5 நோன்கழை துயல்வரும் வெதிரத்து வான்பெயத் தூங்கிய சிதரினும் பலவே. திணை : அது; துறை: உவகைக் கலுழ்ச்சி. பூங்கண் உத்திரையார் பாடியது. உரை : மீன் உண் கொக்கின் தூவி யன்ன - மீன் கவர்ந்துண்ணும் கொக்கினுடைய தூவிபோன்ற; வால் நரைக் கூந்தல் முதியோள் சிறுவன் - வெள்ளிய நரைத்த கூந்தலையுடைய முதியவளுடைய மகனாகிய இளையோன்; களிறு எறிந்து பட்டனன் என்னும் உவகை - போரில் தன்மேல் வந்த களிற்றைக் கொன்று தானும் இறந்தானெனச் சான்றோர் உரைத்த செய்தி கேட்டதனால் எய்திய உவகை; ஈன்ற ஞான்றினும் பெரிது - அவனையீன்ற பொழுது அவட்குண்டாகிய உவகையினும் பெரிதாயிருந்தது; கண்ணீர் - அவ்வுவகையால் அவளுடைய கண்கள் சொரிந்த நீர்; நோன்கழை துயல்வரும் - வலிய கழையாகிய மூங்கிலிடத்து அசையும்; வெதிரத்து வான்பெயத் தூங்கிய சிதரினும் பல - மூங்கிற் புதரின்கண் மழைபெய்தவழித் தங்கித் தூங்கித் துளிக்கும் நீர்த்துளியினும் பலவாகும்; எ-று. முதியோள் சிறுவன் என்றது முதுமைக்காலத்துப் பற்றுக் கோடாய் நெடுநாள் பெறாதிருந்து பெற்ற மகன் என்பதுபட நின்றது. என்னுமென்ற பெயரெச்சம் காரியப்பெயர் கொண்டது. தனித்த மூங்கிற்கழி கழையெனவும். பலவாய் அடர்ந்திருக்கும் கழைத்தொகுதியாகிய புதர் வெதிரெனவும் வழங்கும். வெதிர மென்றதனை ஒரு மலை யென்பாருமுளர். உவகை ஈன்ற ஞான்றினும் பெரிது; கண்ணீர் சிதரினும் பலவெனக் கூட்டி வினைமுடிவு செய்க. பட்டனனென்னு முரை நோய் பயவாது உவகை பயந்து முதுமையினும் வாடாத மறமுடையளாதலைக் காட்டுதலின் இதனை விதந்து பாடினார். விளக்கம் : உவகைக் கலுழ்ச்சியாவது, வாள்வாய்த்த வடுவாழ் யாக்கை, கேள்கொண்டு கலுழ்ந் துவந்தன்று என்பதாம். “மாற்றருங் கூற்றம்” என்ற சூத்திரத்து, “பேரிசை, மாய்ந்த மகனைச் சுற்றிய சுற்றம், ஆய்ந்த பூசல் மயக்கத் தானும்” (புறத். சூ.24) என்பதற்கு இதனைக் காட்டுவர் நச்சினார்க்கினியர். நரைத்த தலைமயிரின் வெண்மை நிறத்துக்குக் கொக்கின் தூவி உவமங் கூறப்பட்டது. என்னும், என்று சொல்லக் கேட்டவழி உள்ளத்துப் பிறக்கும் என்றவாறு. “ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன் மகனைச் சான்றோனெனக் கேட்ட தாய்” (குறள். 69) என்றவிடத்துச் சான்றோனென்றது, மறமாண் குணங்களால் நிறைந்தோனையும் குறிக்குமாகலின், ஈண்டும் அத் திருக்குறள் இயையுமாறு கண்டுகொள்க. கண்ணீரின் மிகுதி யுணர்த்தற்கு “வெதிரத்து வான் பெயத் தூங்கிய சிதரினும் பல” என்றார். வெதிரமென்பது வெதிரமென்னும் மலைக்குப் பெயர் அது பற்றி வெதிரமென்றது “வெதிரமலை யென வுரைப்பாருமுளர் எனப்பட்டது. டாக்டர்; திரு. உ.வே. சாமிநாதையரும் “வெதிரம் ஒரு மலை” யென்று குறித்திருப்பது காண்க. 278. காக்கைபாடினியார் நச்செள்ளையார் “விருந்து வருமாயின் கரைந்து காட்டுக, வாராதாயின் நடந்து காட்டுக” என இளமகளிர் காக்கை மனைக்கண்வரின் அது கண்டு சொல்வது வழக்கம். இவ்வழக்காறு தமிழகத்தில் தொன்று தொட்டு வருவது. இதனைப் பொருளாக வைத்துப் பாடிய சிறப்பினால் நச்செள்ளையார் காக்கைபாடினியார் எனச் சிறப்பிக்கப்படுகின்றார். செள்ளையென்பது இவரது இயற்பெயர். சிறப்புணர்த்தும் எழுத்தாகிய நகரம் புணர்ந்து நச்செள்ளையென வந்தது. கீரனாரென்பது நக்கீரனார் என்றும், பூதனாரென்பது நப்பூதனாரென்றும் வருவது காண்க. இனி, நற்கீரன் நற்பூதன் என்பன நக்கீரன் நப்பூதன் எனவரும்; அவ்வாறே நற்செள்ளை யென்பது நச்செள்ளையென வந்தது என்று கூறுவாருமுளர். இச்சான்றோர் கண்டீரக்கோப்பெருநள்ளியின் கானத்தையும் தொண்டி நகரத்தையும் பாடியவர். ஆடுகோட்பாட்டுச் சேரலாதனைப் பதிற்றுப்பத்துள் ஆறாம்பத்தைப் பாடிக் கலன்களுக்கென ஒன்பது காப்பொன்னும் நூறாயிரம் காணமும் பெற்று. அதியமான் நெடுமான் அஞ்சிபால் ஒளவையார் இருந்தாற்போல அவன் பக்கத்துப் புலவராகும் சிறப்பு பெற்றாரென்ப. ஒருகால் ஒரு மறவன் போரில் பகைவர் வாளால் வெட்டுண்டிறந்தான்; அவன் பீடுடைய போருடற்றியதனால் அவன் உடல் துணிபட்டுச் சிதைந்து வேறு வேறாய்க் கிடப்பதாயிற்று. அதனையறியாத பலர், போர் முடிவில் ஊர்க்குப் போந்து அவன் தாயைக் கண்டு “நின் மகன் பகைவர்க்கு முதுகு காட்டி மாண்டான்” என்று பொய்யாகக் கூறினர். அவள் அப்போது மிக்க முதுமையெய்தி யிருந்தாளாயினும் அச்சொல் தனது மறக்குடி மாண்புக்கு இழுக்காதலை யெண்ணினாள்; கண்ணைத் தீயெழத் திறந்து நோக்கி, “என் மகன் இவ்வாறு மாண்டானாயின், அவன் வாய் வைத்துண்ட என் மார்பை அறுத்தெறிவேன்” என வஞ்சினம் கூறிக் கைவாளொன்றை எடுத்துக் கொண்டு போர்க்களத்துக்குச் சென்றாள். அங்கே மறவர் பிணங்கள் மலிந்து கிடந்தன. அவளுக்குத் தன் மகனுடலைக் காண்பது அரிதாயிருந்தது. கள முழுதும் பிணங்களைப் புரட்டிப் புரட்டிப் பார்த்தாள். முடிவில் ஓரிடத்தில் வெட்டுண்டு சிதறிக்கிடக்கும் அவன் உடலைக் கண்டாள்; வேறு வேறாகக் கிடந்த துண்டங்களைத் தொகுத்து ஒழுங்குற அமைத்து நோக்கினாள்;அவள் முகத்தினும் மார்பினும் விழுப்புண்பட்டு வீழ்ந்தானேயன்றிப் புறப்புண்ணுற்று உயிர் போயிற்றிலன் எனத் தெரிந்தாள். அக்காலை அவள் உள்ளத்தில் நிலவிய வெம்மை நீங்கிற்று; குடிப்பெருமையை நிறுவினானென உண்டாகிய உவகை மிகுந்தது. அதுதானும் அவனை அவள் பெற்றகாலையிற் பிறந்த உவகையினும் பெரிதாயிருந்தது. இது காக்கைபாடினியார்க்குப் பெருவியப்பை விளைத்தது. அதுவே காரணமாக இப்பாட்டினைப் பாடுவாராயினர். நரம்பெழுந் துலறிய நிரம்பா மென்றோள் முளரி மருங்கின் முதியோள் சிறுவன் படையழிந்து மாறின னென்றுபலர் கூற மண்டமர்க் குடைந்தன னாயி னுண்டவென் 5 முலையறுத் திடுவென் யானெனச் சினைஇக் கொண்ட வாளொடு படுபிணம் பெயராச் செங்களந் துழவுவோள் சிதைந்துவே றாகிய படுமகன் கிடக்கை காணூஉ ஈன்ற ஞான்றினும் பெரிதுவந் தனளே. திணை : தும்பை; துறை: தானைநிலை. காக்கை பாடினியார் நச்செள்ளையார் பாடியது. உரை : நரம்பு எழுந்த உலறிய நிரம்பா மென்றோள் - நரம்பு தோன்றி வற்றிய நிரம்பாத மெல்லிய தோள்களையும்; முளரி மருங்கின் முதியோள் - தாமரையிலைபோன்ற அடிவயிற்றினையு முடைய முதியவள் ஒருத்தி; சிறுவன் படையழிந்து மாறினன் என்று பலர் கூற - நின் மகன் பகைவர் படை கண்டு அஞ்சிப் புறங்கொடுத்து மாண்டான் என்று அறியாதார் பலர் வந்து சொல்ல; மண்டமர்க்கு உடைந்தனனாயின் - நெருங்கிச் செய்யும் போர் கண்டு அஞ்சி யிறந்தானென்பது உண்மையாயின்; உண்ட என் முலை யறுத்திடுவென் யான் எனச் சினைஇ - அவன் வாய் வைத்துண்ட என் முலையை யறுத்தெறிவேன் யான் என்று சினந்து சொல்லி; கொண்டவாளொடு - சொல்லிய வண்ணமே செய்தற்கு வாளைக் கையிலேந்திப் போர்க்களம் சென்று; படு பிணம் பெயரா - அங்கே இறந்து கிடக்கும் மறவர் பிணங்களைப் பெயர்த்துப் பெயர்த்துப் பார்த்துக் கொண்டே; செங்களம் துழவுவோள் - குருதி படிந்து சிவந்த போர்க்கள முற்றும் சுற்றி வருபவள்; சிதைந்து வேறாகிய படுமகன் கிடக்கை காணூஉ - விழுப்புண்பட்டுச் சிதைந்து வேறு வேறாகத் துணி பட்டுக் கிடக்கின்ற தன் மகனது கிடக்கையைக் கண்டு; ஈன்ற ஞான்றினும் பெரிது உவந்தனள் - அவனைப் பெற்ற நாளிற் கொண்ட உவகையினும் பேருவகை கொண்டாள்; எ-று. முதியோள் கேட்டுச் சினைஇ, பெயரா, துழவுவோள், கிடக்கை காQஉப் பெரிதுவந்தனள் எனக் கூட்டி வினைமுடிவு செய்க. முதுமையால் தோள் சரிந்தமையின், “நிரம்பா மென்றோள்” எனறார். நரம் பெழுந்து திரைந்து முளரியிலையின் அடிப் பகுதிபோல் பசுமையின்றி யிருத்தலின், முதியோளது அடி வயிற்றை “முளரிமருங்” கெனக் குறித்தார். படையென்புழி நான்கனுருபு விரிக்கப்பட்டது. ஒவ்வொரு பிணமாக ஆராய்தலின், “துழவுவோள்” என்றார். சிதைந்து வேறாகிய உடலைப் பொருந்த வைத்து விழுப்புண் பட்டு வீழ்ந்தனம் கண்டு தெளிந்தமை தோன்ற படுமகற் காணூஉ” வென்னாது, “படுமகன் கிடக்கை காQஉ” வென்றார். படுபிணம் பெயராச் செங்களமென இயைத்துப் படுபிணம் நீங்காத சிவந்த போர்க்களமென வுரைப்பாருமுளர். விளக்கம் : முதுமையால் மேனி பசுமை குன்றி நரம்பு மேலெழுந்து இனிது காணத்தோன்றுதலால் “நரம்பெழுந்து உலறிய தோள்” என்றார். பசுமையின்றி விளர்த்து நரம்பு தோன்றத் திரங்கி நிற்பதுபற்றி வயிற்றுக்கு முளரி யுவமமாயிற்று. நன்றெடுத்து மொழிவாரினும் தீதெடுத்து மொழிவார் உலகத்துப் பலராதலால், “பலர் கூற” என்றார். கூறுவோரது பன்மை கண்டாட்குத் தன் மகனது மறத்தின்கண் ஐயந்தோன்றவே, ஒரு தலையாகத் துணியமாட்டாளாய், “மண்டமர்க் குடைந்தனனாயின் உண்ட வென்முலை யறுத்திடுவன் யான்” எனச் சினந்துரைத்தாள். மகனது மாண்பை அவள் ஓரளவு அறிந்திருந்தமையின், “உடைந் தனனாயின்” எனக் கூறினாள். “அறுத்திடுவென்” என்ற சொல் வாயினின்று வெளிவரும் போதே அவள் கை தன் மறக்குடிக் குடைமையாகிய வாளைத் தேர்ந்து கொண்டமையின் “கொண்ட வாள்” எனப்பட்டது. பட்ட வீரர்களின் குருதி படிந்து போர்க்களம் சிவந்தமையின் செங்களம் என்றும் , இனிது கண்டறியத் தக்க வகையில் அவள் மகன் கிடவாமையின், “துழவுவோள்” என்றும், சிதைந்து வேறாகிய மகனது உடம்பைக் கண்டதும் காதல் மிகுதியால் கட்டியழுதலின்றிப் பட்ட புண்ணைத் தேர்ந்து பழியின்மைகண்டு உவகையால் உள்ளம் வீங்குதலால், “சிதைந்து வேறாகிய படுமகன்” என்றும் விளங்க வுரைத்தார். சிதைந்து வேறாகிய மகனது கிடக்கை அவளது உள்ளத்தை யழித்திலது என்பது இதனால் வற்புறுத்தப் பட்டது. விழுப்புண்பட்டு வீங்குபுகழ் பெற்றதோடு குடிப்பழியும் போக்கினமையின், உவகை பெரிதாயிற்றென வறிக. 279. ஒக்கூர் மாசாத்தியார் மாசாத்தனாரைப்போல மாசாத்தியாராகிய இருவரும் ஒக்கூரிற் பிறந்தவராவர். ஒக்கூரெனப் பெயரிய ஊர்கள் பாண்டி நாட்டிலும் சோழநாட்டிலும் உள்ளன. இந்த ஒக்கூர் இன்ன நாட்டதெனத் துணிய முடியவில்லை. சங்ககாலத்து நல்லிசை மெல்லியலாருள் இந்த மாசாத்தியாரும் ஒருவர். போர் நிகழுங் காலத்தில் மறக்குடி யொன்றிற்கு மாசாத்தியார் சென்றிருந்தார். அங்கே நிகழ்ந்த நிகழ்ச்சி யொன்று இவர் கருத்தைக் கவர்ந்தது. அந்த இல்லக்கிழத்தியான மறக்குடிமகள் முகத்தில் மறத்தீக் கிளர்ந்து நின்றது. அன்றைய முன்னாளில் அவளுடைய கொழுநன் ஆனிரைகளைப் பகைவர் கவர்ந்தேகாவாறு குறுக்கிட்டுப் பொருது நின்று மாண்டான்; அதற்கு முன்னாள் அவளுடைய தந்தை போரில் தன்மேல் வந்த பெருங் களிற்றைக் கொன்று தானும் பட்டு வீழ்ந்தான். மாசாத்தியார் இச்செய்திகளை உசாவிக் கொண்டிருக்கையில் தெருவில் செருப்பறை முழங்கிற்று. தெருவில் விளையாடிக்கொண்டிருந்த அவளுடைய ஒரு மகன் ஓடிவந்துரைத் தான். மறமகள் முகத்தில் உவகை பிறந்தது. உலறிக்கிடந்த அவன் தலையில் எண்ணெய் தடவிக் குடுமியை ஒப்பனை செய்தாள்; அரையில் வெள்ளிய ஆடையை எடுத்துடுத்தினாள்; வேலொன்றை யெடுத்து அவன் கையில் தந்தாள். மகன் முகத்தைத் தன் முகத்துக்கு நேரே திருப்பி, “மகனே, உன் தந்தையும் தன்னையரும் போருடற்றித் தமது கடனைக் கழித்து நம் மறக்குடியின் புகழை நிறுவினர்; நீ இப்போது செல்க!” என விடுக்கலுற்றாள். புலவர் பாடும் புகழமைந்த இச்செயலை மாசாத்தியார் வியந்து இப்பாட்டின் கண் இதனை அழகுறப் பாடியுள்ளார். கெடுக சிந்தை கடிதிவ டுணிவே மூதின் மகளி ராத றகுமே மேனா ளுற்ற செருவிற் கிவடன்னை யானை யெறிந்து களத்தொழிந் தனனே 5 நெருந லுற்ற செருவிற் கிவள் கொழுநன் பெருநிரை விலங்கி யாண்டுப்பட் டனனே இன்றும், செருப்பறை கேட்டு விருப்புற்று மயங்கி வேல்கைக் கொடுத்து வெளிதுவிரித் துடீஇப் பாறுமயிர்க் குடுமி யெண்ணெய் நீவி 10 ஒருமக னல்ல தில்லோள் செருமுக நோக்கிச் செல்கென விடுமே. திணை : வாகை. துறை : மூதின் முல்லை. ஒக்கூர் மாசாத்தியார் பாடியது. உரை : சிந்தை கெடுக - இவளது சிந்தை கெடுக; இவள் துணிவு கடிது - இவளது துணிவு அச்சம் பொருந்தியதாகவுளது; மூதில் மகளிராதல் தகும் - இவள் முதிய மறக்குடியில் பிறந்த மகளா மெனல் தக்கதே; மேனாள் உற்ற செருவிற்கு - முன்னாளில் உண்டாகிய போரின்கண்; இவள் தன்னை யானை எறிந்து களத்தொழிந்தனன் - இவளுடைய தந்தையானவன் யானையைக் கொன்று தானும் வீழ்ந்து மாண்டான்; நெருநல் உற்ற செருவிற்கு - நெருநற்றுண்டாகிய செருவின்கண்; இவள் கொழுநன் பெருநிரை விலங்கி ஆண்டுப்பட்டனன் - இவளுடைய கணவன் பெரியவாகிய நிரைகளைக் கவர்ந்து செல்லாவாறு பகைவரைக் குறுக்கிட்டு நின்று பொருது அவ்விடத்தே மாண்டான்; இன்றும்-; செருப்பறை கேட்டு - போர்க்கெழுமாறு வீரரை யழைக்கும் பறையொலி கேட்டு; விருப்புற்று - மறப் புகழ்பால் விருப்பங்கொண்டு; மயங்கி - அறிவு மயங்கி; வேல் கைக் கொடுத்து - வேலைக் கையிலே தந்து; வெளிது விரித்து உடீஇ - வெள்ளிய ஆடையை எடுத்து விரித்து அரையில் உடுத்தி; பாறு மயிர்க்குடுமி எண்ணெய் நீவி - உலறிய மயிர் பொருந்திய குடுமியில் எண்ணெயைத் தடவிச்சீவி; ஒரு மகன் அல்லது இல்லோள் - இந்த ஒரு மகனையல்லது இல்லாதவளே யாயினும்; செருமுகம் நோக்கிச் செல்க என விடும் - போர்க் களம் நோக்கிச் செல்வாயாக எனச் சொல்லித் தன் மகனை விடுக்கின்றாள்; எ-று. மூதில், முதுகுடி; “கற்றோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளோடு, முற்றோன்றி மூத்த குடி.” தன்னை, தன் உடன் பிறந்த மூத்தோருமாம். பெருநிரை யென்றது அவள் கொழுநனது ஆண்மை மிகுதி புலப்படுத்தாநின்றது. தன்னொரு மகனும் மிக இளையனாதலையறியாது செருமுக நோக்கிச் செல்க என விடுத்தற்கேது இது வென்பார், “மயங்கி” யென்றும், அதற்குக் காரணம் மறப்புகழ்பால் அவட்குள்ள விருப்பமென்பார் “விருப்புற்” றென்றும் கூறினார். சிந்தையையும் துணிவையும் வியந்து பாராட்டும் கருத்தினராதலின், “கெடுக சிந்தை கடிதிவள் துணி” வென்றது எதிர்மறைக் குறிப்புமொழி. விளக்கம் : மூதின் முல்லையாவது, “அடல்வே லாடவர்க் கன்றியும் அவ்வில், மடவரன் மகளிர்க்கு மறமிகுத்தன்று” (பு.வெ.மா. 8:21) எனவரும். மூதில் மகளிர், முதிய மறக்குடியிற் பிறந்த பெண்டிர்; “மூதிற் பெண்டிர் கசிந்தழ” (புறம். 19) என்பதன் உரை காண்க. மூதில், முதுமையான குடி; அஃதாவது, “வையகம் போர்த்த வயங்கொலி நீர் கையகல,கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளோடு, முன்தோன்றி மூத்தகுடி” (பு.வெ.மா. 1:14) என்பதாம், இம்முதுகுடி மகளிர், உலக வாழ்வில் உயிரினும் மறத்தையேபெரிதும் விரும்புபவர். கெடுக சிந்தை யென்றும், கடிதிவள் துணிவு என்றும் கூறியது இகழ்வது போலப் புகழ்ந்தவாறு. “மூதின் மகளிராதல் தகும்” என்றது. மேற்கோள்; தன்னை யொழிந் தனனெனவும் கொழுநன் பட்டனனெனவும், மகனை விடுமெனவும் கூறியது அதனைச் சாதித்தற்கு வந்த ஏது. விலங்குதல்,குறுக்கிடுதல். ஆண்டு, பெருநிரை குறித்துச் செய்த போர்க்களத்தின்கண். விருப்பு மறப்புகழ் மேலாதலின், செருப்பறை கேட்டெழுந்த விருப்பத்தால் செய்வதறியாது மயங்கினளென்பார், “விருப்புற்று மயங்கி” யென்றார். வெளிது, வெள்ளாடை. பாறு மயிர், விரிந்த தலைமயிர். ஒரு மகனல்ல தில்லோள் என்றது, முதுமகளின்மறப்பண்பைச் சிறப்பித்து நின்றது. இனி, இளம்பூரணர், “மறங்கடை கூட்டிய குடிநிலை சிறந்த, கொற்றவை நிலையு மத்திணைப் புறனே” (தொல்.புறத்.4) என்று கொண்டு, குடி நிலையில் மகளிர் இயல்பு இது வென்பாராய், இப்பாட்டை யெடுத்துக் காட்டுவர்; நச்சினார்க்கினியார், குடிநிலை யென்னாது துடிநிலை யென்று பாடங்கொண்டு, “வெறியறி சிறப்பின்” (தொல். புறத். 5) எனத் தொடங்கும் சூத்திரத்து வரும் “வாள் வாய்த்துக் கவிழ்தல்” என்றதற்கு எடுத்துக்காட்டுவர். 280. மாறோக்கத்து நப்பசலையார் மாறோக்கத்து நப்பசலையார் மாறோக்கமென்னும் பகுதியைச் சேர்ந்தவர். கொற்கையைச் சூழ்ந்த பகுதி மாறோக்கமெனப்படும். இப்பகுதியிலுள்ள மாறமங்கலம் என்பது மாறோக்கம் என்னும் பழையவூரென்று சிலர் கூறுவர்; இது மாறவன்மன் மங்கலமெனவும், மான மங்கலமெனவும் கல்வெட்டுக்களிற் கூறப்படுகிறதன்றி மாறோக்க மெனக் கூறப்படவில்லை. இம் மாறோக்கம் மாறோக மென்றும் வழங்குகிறது. ஒருகால் நப்பசலையார், போர்முடிவில் ஒரு தலைவன் மனைக்குச் சென்றார். அவன் போர்ப் புண்பட்டு இறுதிநிலையில் இருந்தான். “எவ்வகையிலும் அவன் இறுதி யெய்தவான்” என்பதைப் பல குறிகளால் அவன் மனையோள் உணர்ந்துகொண்டாள். மறக்குடி மகளாதலால் ஒருவாறு தேறியிருந் தாளாயினும், தலைவன் தாணிழலில் வாழ்ந்த துடியன் பாணன் விறலி முதலியோர் வாழ்வு சீர்குலையுமே என நினைந்தாள்; அவர்களும் ஆங்கே இருந்தனர். அவர்களை நோக்கி, “தலைவன் மார்பில் உண்டாகிய புண்கள் பெரியவாய் உள்ளன; நண்பகற் போதில் முரலாத தும்பிகள் அப்போதில் வந்து ஒலிக்கின்றன; ஏற்றிய விளக்கும் நில்லாது அவிகிறது; என்னையறியாமல் எனக்கும் உறக்கமுண்டாகிறது; மனைக் கூறையில் இருந்து கூகை குழறுகிறது; விரிச்சி நிற்கும் முதுபெண்டிர் சொற்களும் பொய்படு கின்றன; ஆகவே தலைமகன் இறுதியெய்துவது உறுதி; இனி உங்கள் நிலை யாதாகுமோ, அறியேன்; இனி நீங்கள் இங்கே இருந்து வாழ்வதென்பதும் அரிது; அதனினும் அரிது யான் உயிர் வாழ்ந்திருப்பேன் என நினைப்பது” என மொழிந்தாள். இதுகண்டு நெஞ்சு கரைந்துருகினார் நப்பசலையார். மனையோளது மறமாண்பை யெண்ணினார்; எண்ணிய எல்லையில் அவளுரைத்த சொற்கள் நெஞ்சிற் பதிந்தமையின் அவற்றை இப்பாட்டில் தொகுத்துப் பாடியுள்ளார். என்னை மார்பிற் புண்ணும் வெய்ய நடுநாள் வந்து தும்பியுந் துவைக்கும் நெடுநகர் வரைப்பின் விளக்கு நில்லா துஞ்சாக் கண்ணே துயிலும் வேட்கும் 5 அஞ்சுவரு குராஅற் குரலுந் தூற்றும் நென்னீ ரெறிந்து விரிச்சி யோர்க்கு செம்முதுபெண்டின் சொல்லு நிரம்பா துடிய பாண பாடுவல் விறலி என்னா குவிர்கொ லளியிர் நுமக்கும் 10 இவணுறை வாழ்க்கையோ வரிதே யானும் மண்ணுறு மழித்தலைத் தெண்ணீர் வாரத் தொன்றுதா முடுத்த வம்பகைத் தெரியற் சிறுவெள் ளாம்ப லல்லி யுண்ணும் கழிகல மகளிர் போல 15 வழிநினைந் திருத்த லதனினு மரிதே. திணை : பொதுவியல். துறை : ஆனந்தப்பையுள். மாறோக்கத்து நப்பசலையார் பாடியது. உரை : என்னை மார்பில் புண்ணும் வெய்ய - என் தலைவனுடைய மார்பிலுண்டாகிய புண்களும் பெரியவாயுள்ளன. நடுநாள் வந்து தும்பியும் துவைக்கும் - நண்பகற்காலத்தே வந்து வண்டு களும் மொய்த்து ஒலிக்கின்றன; நெடுநகர் வரைப்பில் விளக்கும் நில்லா - நெடிய மனையின்கண் ஏற்றிவைத்த விளக்குகளும் நின்றெரியாமல் அவிந்து விடுகின்றன; துஞ்சாக்கண் துயிலும் வேட்கும் - உறங்குதல் ஒழிந்த என் கண்களும் உறக்கத்தை விரும்புகின்றன; அஞ்சுவரு குராஅல் குரலும் தூற்றும் - அச்சத்தைத்தரும் கூகையும் தன் குழறு குரலெடுத்து ஒலியா நிற்கிறது; நெல் நீர் எறிந்து விரிச்சியோர்க்கும் - நெல்லும் நீரும் சொரிந்து விரிச்சி கேட்கும்; செம்முது பெண்டின் சொல்லும் நிரம்பா - செம்மையுடைய முதுபெண்டானவள் சொல்லிய சொற்களும் குறையுடையவாயுள்ளன; துடிய - துடி கொட்டு பவனே; பாண - பாண் மகனே; பாடுவல் விறலி - பாடல்வல்ல விறலியே; என்னாகுவிர் கொல் - எங்ஙனமாவீர்களோ; அளியீர் - இரங்கத்தக்கீர்; நுமக்கும் இவணுறை வாழ்க்கையரிது - இதுகாறும் இருந்தாற்போல இவ்விடத்தே இருந்து வாழலா மென்பது உங்கட்கும் இனி அரிதாம்; மண்ணுறு மழித்தலை தெண்ணீர் வார - கழுவுகின்ற மொட்டையான தலையினின்றும் தெளிந்த நீர் ஒழுக; தொன்று உடுத்த அம்பகைத்தெரியல் - முன்பு இளமைக் காலத்தில் உடுத்த அழகிய பகைத்தழையா யுதவிய; சிறு வெள்ளாம்பல் அல்லியுண்ணும் - சிறிய வெள்ளிய ஆம்பலிடத் துண்டாகும் அல்லியரிசியை யுண்ணும்; கழிகல மகளிர்போல - கழித்த அணிகலங்களையுடைய கைம்பெண்டிர் போல; வழி நினைந்திருந்தல் அதனினும் அரிது - தலைவன் இறந்த வழிப் பின்னே வாழுந் திறம் நினைந்து யானும் இங்கே உயிர் வாழ்ந்திருப்பது அதனினும் அரிதாம். எ-று. உயிர்க்கிறுதி பயவா தொழியாத புண்களாதலால் “வெய்ய” என்றாள். தும்பி முதலியவற்றின் செயல் கூறியது தலைவன் சாக்காட்டினை முன்னறிவிக்கும் தீக்குறி. இதுகாறும் தலைவன் தாணிழலில் வாழ்ந்தவராதலால், அவன் இறந்தவழி அவர்கள் துன்புறுவரென இரங்குவாள், “என்னாகுவிர் கொல் அளியீர்” என்றாள். மழித்ததலை மழித்தலையென வந்தது. வழிநினைந் திருத்தல் அதனினும் அரி தென்றது, இறத்தல் ஒருதலை யென்ற வாறாம். புண்ணும் வெய்ய; தும்பியும் துவைக்கும்; விளக்கும் நில்லா; கண் துயில் வேட்கும்; குராஅல் குரல் தூற்றும்; சொல்லும் நிரம்பா; ஆதலால் துடிய, பாண, விறலி, என்னவாகுவிர் கொல், அளியீர்; நுமக்கும் அரிது; யானும் இருத்தல் அதனினும் அரிது எனக்கூட்டி வினைமுடிவு செய்க. விளக்கம் : ஆனந்தப்பையுளாவது, “விழுமங் கூர வேய்த்தோளரிவை, கொழுநன் வீயக் குழைந்துயங்கின்று” (பு.வெ.மா. 10:13) என வரும் . என்னை - எனக்குத் தலைவன்; ஈண்டுக் கணவன் என்பது படநின்றது. “அன்னை யென்னை யென்றலு முளவே, தொன்னெறி முறைமை சொல்லினும் எழுத்தினும், தோன்றா மரபின் என்மனார் புலவர்” (தொல். பொருள். 52) என ஆசிரியர் கூறுதல் காண்க. தலைவன் உறக்கமின்றி வருந்துவது காண்பாள் மனைவி யுறங்காளாயினமையின், “துஞ்சாக் கண்” என்றாள். கூகையின் குரல் கேட்போர்க்கு அச்சம் தருவதுபற்றி, “அஞ்சவரு குராஅல்” எனப்பட்டது. “நெல்லொடு நாழி கொண்ட நறுவீ முல்லை அரும்பவி ழலரி தூஉய்க் கைதொழுது; பெருமுது பெண்டிர் விரிச்சி நிற்ப” (முல்லை. 8-11) என்று பிறரும் கூறுவதால் விரிச்சியின் இயல்புணரப்படும். நிரப்பாமை, பொய்படுதல் துடியன் துடியும், பாணன் யாழுமாகிய கருவியுடையர்; விறலி தன்மிடறொன்றே கருவியாகப் பாடுபவளாதலின், “பாடுவல் விறலி யென்றாள். தலைமகன் வாழ்ந்த நாளில் பகைப்புலத்துப் பொருது கொணர்ந்த பொன்னும் பொருளும் மாவும் களிறும் துடியன் முதலாயினார்க்குப் பரிசிலாக வழங்கப் பட்டமையின், அவர்கள் வறுமையினார்க்குப் பரிசிலாக வழங்கப் பட்டமையின், அவர்கள் வறுமையின்றி இனிது வாழ்ந்தனராதலின், அவர் வாழ்வு சீர் குலைவது நினைந்து வருந்திக் கூறுவாள், “என்னாகுவிர் கொல்” என்றும், பெற்றவை செலவான பொழுதெல் லாம் தலைவன்பால் வந்து வேண்டுவன நிரம்பப்பெற்று மகிழ்ந்த அவர் தம் நிலைமைக்கு இரங்கி, “அளியீர்” என்றும் கூறினாள். வாழ்க்கை, வறுமைத்துன்ப மின்றி வாழ்தல். அருமை, இன்மை குறித்து நின்றது. மகளிர் கணவனையிழந்தபின், அவரொருவ ரானன்றிப் பிறரால் தீண்டப்படாத தம் கூந்தலைக் கழித்துவிடுவது பண்டையோர் மரபு. “கூந்தல் கொய்து குறுந்தொடி நீக்கி அல்லி யுணவின் மனைவி” (புறம்:250) எனப் பிறரும் கூறுவது காண்க. “மென்சீர்க் கலிமயிற் கலாவத்தன்ன இவள், ஒலிமென் கூந்தல் உரியவாம் நினக்கே” (குறுந்:225) எனவும், “குறுந்தொடி மகளிர், நாளிருங் கூந்தற் கிழவரைப் படர்ந்து” (புறம் : 113) எனவும் சான்றோர் கூறுவனவற்றால் மகளிர் கூந்தலைத் தீண்டும் உரிமை கணவ னொருவற்கே யுண்டென்பதும், எனவே, கூந்தற்குரியர் இறந்தவழி, கூந்தலும் உடன்கழிதல் முறைமையென்பதும் பண்டையோர் கொள்கையாதல் தெளியப்படும். மழித்தல் தலை, மழித்தலை யெனவும்; வைத்த தலை, வைத்தலை (பதிற்:44) யெனவும் வருதல் விகாரம். 281. அரிசில்கிழார் முடிவேந்தருள் சேரமான் தகடூரெறிந்த பெருஞ்சேரலிரும் பொறையையும் குறுநில மன்னருள் வையாவிக் கோப்பெரும் பேகன், அதியமான் எழினி முதலியோரையும் பாடிப் பெருஞ் சிறப்புப் பெற்றவர் சான்றோராகிய அரிசில்கிழார். இவரது அரிசில் என்னும் ஊர் சோழ நாட்டுக் குடந்தை நகர்க்கண்மையில் இருந்ததோரூர்; குடந்தையிலுள்ள கல்வெட்டொன்று (A.R. 255 of 1911) அரிசிலூரைக் குறிக்கின்றது. அஃது இப்போது இருக்குமிடம் தெரிந்திலது. வேந்தன் பொருட்டுப் போரில் புகழுண்டாகப் பொருது விழுப்புண்பட்ட வீரனொருவன் தன் மனைக்கண்ணே யிருந்தான். மனையுறை மகளிர் அவன் புண்ணை யாற்றிவந்தனர். அரிசில் கிழார் அவனைக் காண்டற்பொருட்டு அவன் மனைக்குச் சென்றிருந்தார். அக்காலை அவன் மனையோள் தன் தோழியுடன் சொல்லாடியது கேட்டார். அது மறக்குடி மகளொருத்தியின் மாண்பை எடுத்துக்காட்டு தலின் அதனை இப் பாட்டில் வைத்துப் பாடியுள்ளார். தீங்கனி யிரவமொடு வேம்புமனைச் செரீஇ வாங்குமருப் பியாழொடு பல்லியங் கறங்கக் கைபயப் பெயர்த்து மையிழு திழுகி ஐயவி சிதறி யாம்ப லூதி 5 இசைமணி யெறிந்து காஞ்சி பாடி நெடுநகர் வரைப்பிற் கடிநறை புகைஇக் காக்கம் வம்மோ காதலந் தோழி வேந்துறு விழுமந் தாங்கிய பூம்பொறிக் கழற்கா னெடுந்தகை புண்ணே. திணை: காஞ்சி. துறை: தொடாக் காஞ்சி, அரிசில்கிழார் பாடியது. உரை : தீங்கனி இரவமொடு வேம்புமனைச் செரீஇ - தீவிய கனிகளைத் தரும் இரவமரத்தின் தழையுடனே வேப்பிலையும் சேர்த்து மனையிறைப்பில் செருகி; வாங்கு மருப்பு யாழொடு பல்லியம் கறங்க - வளைந்த கோட்டையுடைய யாழும் பலவாகிய இயங்களும் இயம்ப; கைபயப் பெயர்த்து மை யிழுது இழுகி - கையை மெல்ல எடுத்து மையாகிய மெருகினையிட்டு; ஐயவி சிதறி - வெண் சிறுகடுகைத் தூவி; ஆம்பல் ஊதி - ஆம்பற்குழலை யூதி; இசைமணி எறிந்து - ஓசையைச் செய்யும் மணியையியக்கி; காஞ்சி பாடி, - காஞ்சிப் பண்ணைப் பாடி; நெடுநகர் வரைப்பில் கடி நறை புகைஇ - நெடிய மனையின்கண் நறுமணம் கமழும் அகில் முதலியவற்றைப் புகைத்து; காதலம் தோழி - அன்புடைய தோழியே; காக்கம் வம்மோ - காப்போமாக வருக; வேந்துறு விழுமம் தாங்கிய - வேந்தனைக்குறித்துச் செய்யப் பெற்ற இடுக்கணைத் தானேற்றுக் காத்த; பூம்பொறிக் கழற்கால் நெடுந்தகை புண் - பூத்தொழில் பொறிக்கப்பட்ட கழலை யணிந்த காலையுடைய நெடுந்தகையாகிய தலைவற்குண் டாகிய புண்களை; எ-று. நகர் வரைப்பில் மனைச்செரீஇ, கறங்க, இழுகி, சிதறி, ஊதி, எறிந்து, பாடி, புகைஇ, நெடுந்தகை புண்ணை, தோழி, காக்கம் வம்மோ என மாறிக்கூட்டி வினைமுடிவு செய்க. இரவமொடு வேம்புமனைச் செருகுதல் முதலிய செயல்கள் பேய்கள் புண்ணுற் றோனை வந்து தொடாவாறு காத்தற்குச் செய்வன நெடுந்தகை புண்ணுற்றதற்குக் காரணம் கூறுவாள், “வேந்துறு விழுமம் தாங்கிய நெடுந்தகை” யென்றாள். நோய்க்கெல்லாம் காரணம் பற்றாதலின், பற்றறுதி குறித்துக் காஞ்சிப் பண் பாடப்பட்டது. விளக்கம் : இப்பாட்டுப் பேய்க்காஞ்சியென ஏடுகளில் துறை வகுக்கப் பட்டுள்ளது; பேய்க்காஞ்சியாவது “பிணம் பிறங்கிய களத்து வீழ்ந்தார்க்கு, அணங்காற்ற வச்சுறீஇ யன்று” (பு.வெ.மா. 4:17) என வரும் இப்பாட்டு அதற்குப் பொருந்தாது; “அடலஞ்சா நெடுந்தகை புண், தொடலஞ்சித் துடித்து நீங்கின்று” (பு.வெ.மா. 4: 19) என வரும். தொடாக் காஞ்சிக்கண் அடங்கும்; எங்ஙனமெனின், பேய் தொடுதற் கஞ்சி நீங்குமாறு புண்ணுற்று வீழ்ந்த மறவனுடைய மனைவி காப்பது இதன்கட் கூறப்படுகின்றது; (தொல். புறத். 24) என ஆசிரியர் கூறுவது காண்க. நச்சினார்க்கினியரும் இப் பாட்டைத் தொடாக்காஞ்சித் துறை யென்றே கொள்வர். இரவமரத்தின் தழையும் வேம்பின் தழையும் பேய் நெருங்காவாறு கடிவன. வாங்கு மருப்பு - வளைந்த கோடு மையிழுது கொண்டு மனையை ஒப்பனை செய்தற்கண் கைபையச் செல்லுமாதலின், ஒப்பனை செய்தலைக் “கைபயப் பெயர்த்” தென்றாள். “பிறந்த பொழுதேயும் பெய்தண்டார் மன்னார்க் குடம்பு கொடுத்தாரே மூத்தார்” (புறத். 1318) என்ற கருத்தால், “வேந்துறு விழுமந் தாங்கி” னானென்றும், அதனால், “பழிதீர் கொடைக் கடனாற்றிய புகழ்” (புறத். 1274) பெற்று மேம்படுதலின், “நெடுந்தகை” யென்றும் கூறினாள். போரிற் பெரும்புண்பட்டு வீழ்ந்த மறவர்க்கு மருத்துவம் செய்வோர் மனையைத் தூய்மை செய்து ஒப்பனை செய்வதும், இனிய இசை பாடுதலும் நறிய விரைப் பொருள்களைப் புகைத்து எங்கும் நறுமணங் கமழுமாறு செய்வதும் பண்டைத் தமிழ் மக்கள் மரபு. 282. சேரமான் பாலைபாடிய பெருங்கடுங்கோ சேரமான் பாலைபாடிய பெருங்கடுங்கோ முடிவேந்தருள் ஒருவனாதலேயன்றி நல்லிசைச் சான்றோர் வரிசையிலும் ஒருவனாகத் திகழ்பவன். அருந்திறல் படைத்த மறவனொருவன் போரில் புண்பட்டு இறந்தான். அவனது பேராண்மை புலவர் பாடும் புகழ் படைத்தது. அவன் புகழ் நாடுமுற்றும் பரவியிருந்தது. அவனைக் காண்பது குறித்துச் சான்றோர் ஒருவர் அவனூர்க்குச் சென்று வினவினார். வினாவப்பட்டோர், “ஐய பகைவரொடு செய்த போரில், வேல் மார்பில் ஊடுருவவும், அஞ்சாது பொருது செய்தற்கரிய செயலால் பெறற்கரிய வென்றியும் புகழும் எய்திய வீறுடையவன் அவன்; அவன் யாண்டுளன் என வினவுகின்றீர்; போரிற் பகைவர் அவன் உடம்பு தெரியாதவாறு அழித்துச் சிதைத்தனர். அதனால் உயிர் நீங்கிற்று. ஆயினும், அவன் தன் நல்லிசையை உலகில் நிறுவிப் புலவர் பெருமக்களின் நாநவில் செய்யுளில் நிலைபெற்றுள்ளான்” என்றனர். இவ்விடை பெருங்கடுங்கோவின் புலமையுள்ளத்தை இயக்கி இப்பாட்டு வெளி வருவதாயிற்று. இப்பாட்டு இடையிடையே சிதைந்துள்ளது. எஃகுளங் கழிய விருநில மருங்கின் அருங்கட னிறுத்த பெருஞ்செ யாளனை யாண்டுள னோவென வினவுதி யாயிற் . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . வருபடை தாங்கிய கிளர்தா ரகலம் 5 அருங்கட னிறுமார் வயவ ரெறிய உடம்புந் தோன்றா வுயிர்கெட் டன்றே மலையுநர் மடங்கி மாறெதிர் கழியத் . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . அலகைபோகிச் சிதைந்துவே றாகிய பலகை யல்லது களத்தொழி யாதே 10 சேண்விளங்கு நல்லிசை நிறீஇ நாநவில் புலவர் வாயு ளானே. திணை......பாலைபாடிய பெருங்கடுங்கோ பாடியது. உரை : எஃகு உளம் கழிய - பகைவர் எறிந்த வேல் நெஞ்சிற் பாய்ந்துருவிச் செல்ல; இருநில மருங்கின் - பெரிய நிலத்தின் கண் இருந்து; அருங்கடன் இறுத்த பெருஞ் செயாளனை - ஆற்றுதற்கரிய கடமையினை ஆற்றிய மிக்க செய்கையை யுடைய சான்றோனாகிய மறவனை; யாண்டுளன் என வினவுதி - எவ்விடத்துள்ளான் என வினவுகின்றாய்; ஆயின் - ஆராயு மிடத்து;....... வருபடை தாங்கிய கிளர்தார் அகலம் - தன்னைக் குறித்துவரும் மாற்றார் படையை எதிரேற்றற்குக் கிளர்ந்தெழும் மாலையணிந்த மார்பை; அருங்கடன் இறுமார் வயவர் எறிய - தம்முடைய அரிய கடனையாற்றுதல் வேண்டிப் பகைவர் எறிதலால்; உடம்பும் தோன்றா உயிர் கெட்டன்று - அம்பும் வேலும் மொய்த்து உடம்பும் கட்புலனாகாத உயிரும் கெட்டன; மலையுநர் மடங்கி மாறு எதிர் கழிய - பொருகின்ற பகைவர் பிறக்கிட்டு முரணவிந்து கெடுதலால்.............அலகை போகிச் சிதைந்து வேறாகிய பலகையல்லது - காக்கும் அமைதி கெட்டுச் சிதைந்து துணி துணியாகிய கேடக மொழிய; களத்து ஒழியாது - போர்க்களத்தே கிடந்தொழியாமல்; சேண் விளங்கு நல்லிசை நிறீஇ - திசைமுற்றும் பரவி விளங்கும் நல்ல புகழை நிலைநாட்டி; நா நவில் புலவர் வாயுளான் - நாவால் நல்லுரை பயிலும் புலவ ருடைய வாயிலிருந்து வரும் செய்யுளிடத்தே யுள்ளான்; எ-று. இறுத்தற்கரிய கடன்களை முற்றவும் ஆற்றினமையின், “பெருஞ்செயாளன்” என்றார். செய் என்னும் முதனிலைத் தொழிற்பெயர் அரிய வினை குறித்து நின்றது. தாங்கிய என்னும் வினையெச்சம் கிளரகலமென இயையும் வினைத்தொகையது வினையொடு முடிந்தது. கிளர் தாரென வியைத்து வண்டு கிளரும் மாலையென வுரைப்பினு மமையும்; அவ்வழி, தாங்கிய அகலம் என இயையும் கிளரகல மென்றவழித் தார் இடை நிலை. இம் மறவன் தன்னோடு ஒத்த மறவரோடே பொருது வீழ்ந்தான் என்பார். “அருங்கடன் இறுமார் வயவர் எறிய” என்றார். கட்புலனாகத் தோன்றும் உடம்பும் தோன்றாத உயிரும் கெட்டன என உடம்பையும் உயிரையும் பிரித்தோதினார். இருத்தற்குரிய இடங் காட்டலாகாமை விளக்குதற்கு கெட்டன்றென்பதை உடம்புக்கும் கூட்டுக. இனி உடம்பும் தோன்றாதெனக் கொண்டு தோன்றாதென்பது ஈறு தொக்க தென் றுரைப்பினுமமையும். அலகை, காப்பாகும் அளவு. வாயென்ற ஆகு பெயரால் அதனால் உரைக்கப்படும் செய்யுள் மேல தாயிற்று. பெருஞ் செயாளனை வினவுதி; ஆயின் அவன் உடம்பும் உயிரும் கெட்டன; பலகையல்லது ஒழியாது; அவன் புலவர் வாயுளன் என வினைமுடிபு செய்க. விளக்கம் : எஃகு, வேலும் வாளும் குறித்துநின்றது; இது முதலாகுபெயர். அருங்கடன் என்றது ஏனைப் பாண்கடன், புரவுக் கடன் முதலியன போலாது போரிற் பகைவரை வஞ்சியாது பொருந் தொழில்; இது படைக்கடன் (புறத். 1279) “செஞ்சோற்று நிலை” (புறம். 1354) எனவும் கூறப்படும். இது பெருஞ்செயலாகப் பேணப்படுவதுபற்றி, இதற்குரிய மறவரைப் பெருஞ்செயாளரென்றும், பெருஞ் செயாடவர் (புறத். 199) என்றும் சான்றோர் சிறப்பிப்பர். செய்கையென்னும் வினைப்பெயரின் செய்யென்னும் முதனிலை மட்டும் நின்று பெயராய் வினையை யுணர்த்துதலால், இது முதனிலைத் தொழிற் பெயரெனப்படுவ தாயிற்று. தோன்றாவுயிரெனவே, உடம்பு தோன்றும் என்பது வருவிக்கப்பட்டது. உயிர்க்குக் கேடு கூறியது, உடம்பின்கண் நில்லாது நீங்கிய நீக்கம் குறித்து நின்றது. புலவர் வாயுளான் என்றமையின், கேடு உடம்பிற்கும், நீக்கப் பொருண்மை உயிர்க்கும் கொள்க. மாறு எதிர் கழறிய என்பது பாடமாயின், எதிர் மாறு கழறிய என இயைத்து எதிர்மாற்றம் கழறிக் கூறிய என்று உரைக்க. சேண்விளங்கு நல்லிசை, நாடிடையிட்டும் காலமிடையிட்டும் சென்று நிற்றல்பற்றிச் சேண்விளங்கு நல்லிசை யென்றார். சேண் என்ற தற்குத் துறக்கவுல கென வுரைத்து, “புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின், வலவனேவா வான வூர்தி, யெய்துப வென்பதஞ் செய்வினைமுடித்” (புறம்.27) தென்பதைக் காட்டுவாருமுளர். 283. அண்டர்நடுங்கல்லினார். கரந்தைப் போருடற்றி மேம்பட்ட வீரனொருவனைக் கல் நாட்டி ஆயர் சிறப்புச் செய்ய, அதனை அண்டர் நடுங் கல்லெனப் பாராட்டிப் பாடியதனால், இவர் அண்டர் நடுங்கல்லினார் எனப்படுகின்றார். இவர் பெயர் அடைநெடுங்கல்லியாரென்றும் காணப்படுகிறது. அடைநெடுங் கல்வியாரென்றோதி, இவர் ஒருவரையடுத்து அரிதிற் பெறுதற்குரிய கல்வியை எளிதில்பெற்று நெடிதுடையார் என்று பொருள் கூறவும்படுகிறது. இவரைப் பற்றித் தெரிந்துகோடற்குரிய குறிப்புக்கள் கிடைத்தில. இவர் மகட்பாற் காஞ்சியை விரும்பிப் பாடியுள்ளார். ஈண்டுக் காணப்படும் இவரது பாடாண்பாட்டு ஏடுதோறும் சிதைந்து காணப்படுகிறது. அழும்பில் என்னும் ஊரையும் கோசரது அவைக் களத்தையும் இப் பாட்டின்கட் குறித்துள்ளார். இதுபுதுக்கோட்டைப் பகுதியில் உளது; இப்போது அம்புக் கோயில் என வழங்குகிறது; இங்குள்ள கல்வெட்டு “இராஜராஜ வளநாட்டுப் பன்றியூர் நாட்டு அழும்பில்” (p.s.Ins. 458) என்று குறிக்கிறது. ஒருவன் பகைவர் எறிந்த வேல் தைத்துத் தங்கிய மார்புடனே, வண்டியின் ஆழிக்குடம் தன்பாற் செருகிய ஆர்க் காலொடு நின்றாற்போல உயிரிழக்கும் நிலையை யெய்த அவன் துணைவன் தும்பை சூடிப் போர்க்கெழுதலை இதன்கண் உரைக் கின்றார். இப் பாட்டு இடையிடையே சில அடிகள் சிதைந்துளது. ஒண்செங் குரலித் தண்கயங் கலங்கி வாளை நீர்நாய் நாளிரை பெறூஉப் பெறாஅ வுறையரா வராஅலின் மயங்கி மாறுகொண் முதலையொ டூழ்மாறு பெயரும் 5 அழும்பில னடங்கான் றகையு மென்னும் வலம்புரி கோச ரவைக்களத் தானும் மன்று ளென்பது கெட . . . . . . தானே பாங்கற் கார்சூழ் குறட்டின் வேனிறத் திங்க உயிர்புறப் படாஅ வளவைத் தெறுவரத் 10 தெற்றிப் பாவை திணிமண லயரும் மென்றோண் மகளிர் நன்று புரப்ப இமிழ்ப்புற நீண்ட பாசிலைக் கமழ்பூந் தும்பை நுதலசைத் தோனே. திணை : தும்பை. துறை : பாண்பாட்டு. அண்டர்நடுங் கல்லினார் பாடியது. உரை : ஒண் செங் குரலித் தண் கயம் கலங்கி - ஒள்ளிய செங்குரலிக்கொடி நிறைந்த தண்ணிய நீர்நிலை கலங்க; வாளை நீர்நாய் நாளிரை பெறூஉ - வாளைமீனை நீர்நாய் தன் நாட் காலை யுணவாகப் பெற்றுண்டு; பெறாஅ உறை அராஅ வராலின் மயங்கி - உணவு பெறாமல் அங்கே யுறையும் பாம்பு களை வரால் மீன் எனக் கருதி மயங்கி; மாறுகொள் முதலை யொடு ஊழ்மாறு பெயரும் அழும்பிலன் - மாறுகொள்ளும் முதலைகளோடு முறை முறை மாறுபட்டு நீங்கும் அழும்பில் என்னும் ஊரையுடையோன்; அடங்கான் தகையும் என்னும் - அடங்கானாய் எதிர் நின்று பொருவன் என்று கருதியெழும்; வலம்புரி கோசர் அவைக்களத்தானும் - வெற்றி விரும்பும் கோசருடைய அவைக்களத்தின் கண்ணும்; மன்றுள் என்பது கெட..............போர்க்களத்தின் நடுவிடமென்பது இல்லையாக ........; தானே பாங்கற்கு - தான் தோழன்பொருட்டு; ஆர்சூழ் குறட்டின் வேல் நிறத்து இங்க - ஆரக்கால்கள் சூழச் செருகப்பட்டுத் தோன்றும் குடம்போல வேல் மார்பிடைப் பாய்ந்தழுந்தித் தங்க; உயிர் புறப்படா அளவை - உயிர் உடம்பின் நீங்கற் கூசலாடுமளவில்; தெறுவர - வெகுட்சி தோன்ற; தெற்றிப் பாவை திணிமணல்அயரும் - திண்ணைமேல் வைத்து விளையாடும் பாவையைத் திணிந்த மணலின்கண் வைத்து விளையாட்டயரும்; மென்றோள் மகளிர் நன்று புரப்ப - மெல்லிய தோளையுடைய பெண்கள் மிகவும் பேணி வளர்க்க; இமிழ்ப்புற நீண்ட பாசிலைக் கமழ்பூந் தும்பை விளக்கமிக - நீண்ட பசிய இலை களையுடைய மணங்கமழும் தும்பைப் பூவால் தொடுக்கப் பட்ட கண்ணியை; நுதலசைத்தோன் - தன் நெற்றியிலே கட்டினான்; எ-று. நீர்நாய் வாளையை இரையாகப்பெற்று, இரைபெறாமல் மாறுகொள் முதலைகளோடு மயங்கி ஊழ் மாறு பெயரும் என இயைத்துரைக்க. வாளை யுண்டதனோடமையாது மயங்கி முதலையொடு மாறுபடும் என்றது, முன்னே பகைவரை வென்ற தனோ டமையாது தம்மின் வலிமிக்க பகைவரோடு மாறுபட்டு நீங்கும் மறவர் பண்புணர்த்தி நின்றது. அழும்பில் வேளிர்க் குரியது; “மானவிறல்வேள் அழும்பில்” (மதுரை: 344-5) என மாங்குடிமருதனார் குறிப்பது காண்க. கோசர், சொல் வன்மைமிக்க ஒருவகை வீரர். மன்றுள் - போர்க்களத்தின் நடுவிடம்; தெற்றியிடத்தே வைத்தாடுதற்குரிய பாவையை மணலிடத்தே வைத்தாடும் இளமைப் பருவத்து மகளிரென்றதற்கு “தெற்றிப்பாவை மணலயரும் மென்றோள் மகளிர்” என்றார். நுதலிடத்தே தோன்றச் சென்னியிற் கட்டுதலின், தும்பைக் கண்ணியை நுதலிடத்தே கட்டினான் என்றார். நீர்நாய், நாளிரை பெற்று, மயங்கி முதலையொடு ஊழ்மாறு பெயரும் என இயையும், வேல் நிறத்து இங்க பாங்கற்கு உயிர் புறப்படாஅ அளவைத் தும்பையை நுதலசைத்தான் என வினைமுடிவு செய்க. விளக்கம் : பாண்பாட்டாவது, “வெண்கோட்ட களிறெறிந்து செங்களத்து வீழ்ந்தார்க்குக், கைவல் யாழ்ப்பாணர் கடனிறுத்தன்று” (பு.வெ.மா. 7:11) என வரும். இதனிடையே சில அடிகள் சிதைந்தமையின் இத்துறையமைதி நன்கு காண வியலவில்லை. பாடாண் பாட்டு என்றும் பாட வேறு பாடுண்டு. இரை பெறா துறையும் அரவினை வராலென மயங்கிச் செல்லும், நீர் நாயொடு முதலை மாறுகொண்டு பொரும்; நீர்நாய் தோற்பின் வேறு நீர்நாய் வென்ற முதலையொடும், முதலை தோற்பின் வென்ற நீர்நாயொடு வேறு முதலையும் முறையே பொரும் என்பது விளங்க “ஊழ்மாறு பெயரும்” என்றாரென்க. “அழும்பில்” சோழ வேந்தர்க்குரிய தென்பது, ‘பிணையலங்கண்ணிப் பெரும் பூண் சென்னி அழும்பில்’ (அகம். 44) என்பதனாலறிக. 284. ஓரம்போகியார் ஓரம்போகியார் மருதத்திணையைப் பாடுவதில் சதுரப் பாடுடையவர். ஆதனவினியென்னும் சேரமான் ஒருவன் காலத்தவர். அவினியின் பெயரால் அவினியாறு என்றோர் ஆறு பூழிநாட்டில் இருந்திருக்கிறது எனக் கல்வெட்டுக்களால் (A.R. 96 of 1906) அறியப்படுகிறது. ஐங்குறு நூற்று மருதப் பகுதியைப் பாடியவர், மகளிர் தாம் விரும்புவனவற்றுள் தம் நாட்டு வேந்தன் இனிது நெடிது வாழ்தலை ஒன்றாக விரும்புவரென்பதைப் பல பாட்டுக்களில் எடுத்தோதி யுள்ளார். இயற்கைப் பொருள்களின் நலங்களையும் ஏனை உயிர்களின் அமைதிகளையும் நுனித்து நோக்கி அழகுறப் பாடும் ஆற்றலுடையவர். இவர் பாடியவாகப் பல பாட்டுக்கள் தொகை நூல்களுள் உள்ளன. ஒருகால் ஒரு வேந்தன் போர் குறித்து வீரர் பலரும் வந்து தொகுமாறு தூது விடுத்தான். வீரர் பலரும் திரண்டு வந்தனர். ஒரு மறவன் நூலரி மாலையணிந்து கையில் வாளொன்றேந்திக் காலால் நடந்து வந்தான். பகைவரும் வந்து போர்முகத்து நின்றனர். போர் கடுமையாக நிகழ்ந்தது. அப்போரில் வாளேந்திவந்த மறவன் பகைவர் படையில் களிறுகளையும் வீரர்களையும் பொருதழித்து மேம்பட்டான். அவனுடைய போர்ச் செயல்கள் ஓரம்போகியாரது காட்சியைக் கவர்ந்தன; தக்கதோரிடத்தே யிருந்து போரை நோக்கி நின்ற இச் சான்றோர் இம் மறவனைக் கூர்ந்து நோக்கினார். அப்போது அவன் கைவாள் எதிர்நின்று பொருத பகைவீரன் களிற்றை யெறிந்து வீழ்த்திற்று. களிறும் விழ்ந்தது; வாளும் கோணிப் போயிற்று, உடனே அதன்மேனின்றும் வீழ்ந்த வீரன் எழுந்து வந்து பொருதற்குள், வீழ்ந்த களிற்றின் மருப்பிடையே வாளைத் தொடுத்துக் கோணலைப் போக்கிச் செம்மை செய்து கொண்டு அவன் வரவு நோக்கி நின்றான். அவ்வீரன் தான் தப்பியது தன் நல்வினையெனக் கருதித் தான் கைக்கொண்ட வேலுடன் இம் மறவற்கஞ்சியோடத் தலைப்பட்டான். அதுகண்டவன் நாணி நகைப்பானாயினான். இம் மறச்செயல் ஓரம்போகியார்க்கு உவகை பயந்தது. அஃது இப் பாட்டாய் வெளிப்பட்டது. வருகதில் வல்லே வருகதில் வல்லென வேந்துவிடு விழுத்தூ தாங்காங் கிசைப்ப நூலரி மாலை சூடிக் காலின் தமியன் வந்த மூதி லாளன் 5 அருஞ்சமந் தாங்கி முன்னின் றெறிந்த ஒருகை யிரும்பிணத் தெயிறு மிறையாகத் திரிந்த வாய்வா டிருத்தாத் தனக்கிரிந் தானைப் பெயர்புற நகுமே. திணை : தும்பை. துறை : பாண்பாட்டு. ஓரம் போகியார் பாடியது. உரை : வல் வருகதில் வல் வருகதில் என - விரைய வருக விரைய வருக என்று; வேந்துபடு விழுத்தூது ஆங்காங்கே இசைப்ப - வேந்தன் விட்ட பெரிய தூதுவர் போந்து வீரருறையும் இடந்தோறும் ஆங்காங்குச் சென்று தெரிவிக்க; நூலரி மாலைசூடி - நூலை யரிந்து கட்டிய நூலரிமாலையைச் சூடிக் கொண்டு; காலில் தமியன் வந்த மூதிலாளன் - காலால் நடந்து தனியனாய் வந்த மறக்குடி மறவன்; அருஞ்சமம் தாங்கி - தடுத்தற்கரிய போரில் பகைவரை மேற்செல்லாவாறு தடுத்து; முன்னின்றெறிந்த ஒருகை இரும்பிணத்து எயிறு - தான் முன்னே நின்று வாளால் வெட்டி வீழ்த்தின களிறாகிய பிணத்தினது கோட்டிடையே; மிறையாகத் திரிந்த வாய் வாள் திருத்தா- வளைவாகக் கோணிய கூரிய வாளை நிமிர்த்துக் கொண்டு; தனக்கு இரிந்தானைப் பெயர் புறம் நகும் - தன்னைக் கண்டு அஞ்சியோடிய பகைவனை அவன் பெயர்த்துக் காட்டிய புறங்கண்டு நகாநிற்கும்; எ-று. உயர்ந்தோன் தூதாகலின் “விழுத்தூது” என்றார். பொன்னரி மாலையின் வேறுபடுத்த “நூலரிமாலை” யெனப்பட்டது. இறந்த யானையின் உடம்பை “ஒருவகை யிரும்பிணம்” என்றார். மிறை - வளைவு. வாள் திருத்தங்கண்ட மறவன் அஞ்சிப் புறங் கொடுத்தோடக் கண்ட மூதிலாளன், அவன் செயல் மற முடையார்க்கு இழிவு தருவது பற்றி நாணமுற்று நகைத்தானாதலின், “நகும்” என்றார். இசைப்ப சூடி, வந்த மூதிலாளன், திருத்தா, நகும் என வினை முடிவு செய்க. விளக்கம் : இது பாண்பாட்டு என்னும் துறை; புலவர் ஆக்கித் தரும் இதனைப் பாணன் தன் யாழிலிட்டுப் பாடுதலின், துறை அவன் மேலதாயிற்று. தூதிசைத்தது செவியிற்பட்ட மாத்திரையே ஊர்தி யொன்றும் கருதாது விரையப் போந்தமை தோன்ற, “காலில் தமியன் வந்த மூதிலாளன்” என்றார். யானைபோலும் வயவர் பிணமும் கிடத்தலின் யானைப் பிணத்தை “ஒருவகை யிரும்பிணம்” என்று வெளிப்படுத்தார். வாள் திரிந்ததாயினும் அதன் வாய் மடியாமையின், எயிற்றின் இடையே தொடுத்து வளைவு போகத் திருத்தினானென்பார், “திரிந்த வாய் வாள் திருத்தா” என்றார். இதனை வஞ்சித்திணைத் துறைகளுள், “அழிபடை பட்டோர் தழிஞ்சிக்கும்,” “வருவிசைப் புனலைக் கற்சிறைபோல, ஒருவன் தாங்கிய பெருமைக்கும்,” “திறம்பட வொருதான் மண்டிய குறுமை” க்கும் காட்டுப. 285. அரிசில் கிழார் ஒருகால் ஒரு தலைவன் பகைவருடன் போர்செய்ய நேர்ந்தான். இருதிறத்தாருடைய படைகளும் கைகலந்து போர் செய்தன. நெல் மூடைகளைப் போல இருமருங்கும் பிணங்கள் குவிந்தன. அவற்றிடையே நின்று அவன் போருடற்றுங்கால் பகைவர் எறிந்த வேல் அவன் மார்பிற் பாய்ந்து உருவிற்று. புண்ணினின்றும் குருதி பெருக்கெடுத்தொழுகிற்று. அவனும் நின்று போர் செய்ய மாட்டாது நிலத்தே சாய்ந்தான். அவன் கையிலிருந்த வேலைத் துடியன் தாங்கினன்; தோற்படையைப் பாணன் வாங்கிக் கொண்டான். சான்றோர் பலர் அவனைச் சூழ்ந்து கொண்டனர். இச் செய்தி பாசறைக்குத் தெரிவிக்கப்பட்டது. தெரிவித்தவருள் சால்புடைய மறவன் ஒருவன். தலைவன் வீழ்ந்தது தெரிவிக் குங்கால், “பாசறையில் உள்ளவர்களே! நம் தலைவன் கையதாகிய வேல் துடி கொட்டுவோன் கையில் உளது; தோலாகிய கேடயம் பாணன் கையில் உளது; அவன் சூடிய மாலையும் வாடிவிட்டது; தலைவன் வேல் மார்பில் ஊடுருவிப்போக, குருதி சோர நிலம் சேர்ந்தான்; சான்றோர் பலரும் அவனைச் சூழ்ந்து நின்று அவன் சால்பினைப் பாராட்டினர்; பாராட்டுமிடத்து, தலைவன் தன்னுடைய நாட்டு மருத நிலத்தூர்களை முன்வந்த இரவலர்க் கீத்தொழிந்தான், இறுதிக்கண் வந்த இரவலர் தலைவனுக்கு எஞ்சிநின்ற கரம்பை மிக்க சீறூரைக் கொடுத்தான் என்றனர்; அது கேட்டுத் தலைமகன் நாணித் தலை கவிழ்ந்தான்; என்னே அவன் சால்பிருந்தவாறு” என்று தெரிவித்தான். இதனை உடனிருந்து கேட்டார் அரிசில் கிழார். தலைவனது தலைமைப் பண்பறிந்து பாராட்டும் தானை வீரர் சொல் அவர்க்கு மிக்க வுவகையைத் தந்தது; இப் பாட்டினைப் பாடினார். இதனுள் சில பகுதிகள் கிடைக்கவில்லை. பாசறை யீரே பாசறை யீரே துடியன் கையது வேலே யடிபுணர் வாங்கிரு மருப்பிற் றீந்தொடைச் சீறியாழ்ப் பாணன் கையது தோலே காண்வரக் 5 கடுந்தெற்று மூடையின். . . . . . . . . . . வாடிய மாலை மலைந்த சென்னியன் வேந்து தொழி லயரு மருந்தலைச் சுற்றமொடு நெடுநகர் வந்தென விடுகணை மொசித்த மூரி வெண்டோள். . . . . . . . . . . . . 10 சேறுபடு குருதிச் செம்மலுக் கோஒ மாறுசெறு நெடுவேன் மார்புளம் போக நிணம்பொதி கழலொடு நிலஞ்சேர்ந் தனனே அதுகண்டு, பரந்தோ ரெல்லாம் புகழத் தலைபணிந் திறைஞ்சி யோனே குருசில் பிணங்குகதிர் 15 அலமருங் கழனித் தண்ணடை யொழிய இலம்பா டொக்கற் றலைவற்கோர் கரம்பைச் சீறூர் நல்கின னெனவே. திணை : வாகை. துறை : சால்புமுல்லை. அரிசில் கிழார் பாடியது. உரை : பாசறையீரே பாசறையீரே - பாசறையில் உள்ளவர்களே பாசறையில் உள்ளவர்களே; துடியன் கையது வேல் - துடிப் பறை கொட்டுவோன் கையில் உளதாயிற்று வேல்; அடிபுணர் வாங்கு இருமருப்பின் - அடிகாறும் புணர்க்கப்பட்ட வளைந்த கரிய கோட்டினையும்; தீந்தொடை - இனிய இசையை யெழுப்பும் நரம்பினையுமுடைய; சீறியாழ்ப் பாணன் கையது தோல் - சிறிய யாழையுடைய பாணன் கையதாயிற்று கேடயம்; காண்வரக் கடுந்தெற்று மூடையின் - காட்சியுண்டாக நெருங்க அடக்கிய மூடைகள் போல; .............. வாடிய மாலை மலைந்த சென்னியன் - வாடிய மாலையையணிந்த தலையையுடைய நம் தலைவன்; வேந்து தொழில் அயரும் அருந்தலைச் சுற்றமொடு - அரசன் தனக்குரிய அரசியற்றொழிலைச் செய்யும் அரிய தலைமையினையுடைய அமைச்சர் முதலிய சுற்றத்துடனே; நெடுநகர் வந்தென - நெடிய நகர்க்கு வந்தானாக; விடுகணை மொசித்த - பகைவர் எய்த அம்புகள் மொய்த்த; மூரி வெண்டோள்..........மூரிய வெள்ளிய தோள்........; செம்மல் - தலைவனாகிய அவன்; சேறுபடு குருதி உக்கு - நிலத்தைச் சேறு செய்யும் குருதியைச் சொரிந்து; ஓ - ஐயோ; மாறு செறும் நெடுவேல் மார்புளம் போக - மாற்றார் செற்றங் கொண் டெறிந்த நெடிய வேலானது மார்பை உருவிக்கொண்டு உள்ளே புதைய; நிணம் பொதிகழலொடு நிலம் சேர்ந்தனன் - பிணங்க ளிடையே நின்று பொருதலால் நிணம் படிந்த கழலுடனே நிலத்தில் வீழ்ந்தான்; அது கண்டு - அவன் வீழ்ந்தது கண்டு ; பரந்தோர் எல்லாம் - அலமரலுற்ற சான்றோரெல்லாம்; பிணங்கு கதிர் அலமரும் கழனித் தண்ணடை யொழிய - கதிர்கள் தம்மிற் பின்னிக்கொண்டசையும் நெற்கழனிகளையுடைய மருத நிலத்தூர்களை முன்னே இரவலர்க்குக் கொடுத் தொழிந்தத னால்; இலம்பாடு ஒக்கல் தலைவற்கு - வறுமையுற்ற இரவல ராகிய சுற்றத்தின் தலைவனுக்கு; ஓர் கரம்பைச் சீறூர் நல்கினன் எனப் புகழ - எஞ்சிநின்ற தொரு கரம்பையையுடைய சிறிய ஊரைக் கொடுத்தான் என்று புகழ்ந்தோத; குருசில் - குரிசி லாகிய அவன்; தலை பணிந்து இறைஞ்சியோன் - நாணித் தலை குனிந்து தாழ்ந்தான். அவன் சால்பிருந்தவாறு என்னே; எ-று. வேலும் தோலும் பாணன் முதலாயினார்க்குச் செல்வம் வழங்கற்குத் துணை செய்தமையின், அவை அவர் கையகத்துச் சேர்ந்தன; அவற்றைக் கையாண்டதலைவன் இனிக் கையாளான் என்பது குறித்தற்கு. பிறர்பால் காண்டற்கரிய ஆற்றலும் அறிவு முடையாரே அரசியற்றலைமைச் சுற்றமாதல் பற்றி அவரை “அருந்தலைச்சுற்ற” மென்றார். உயிர் இழக்கும் நிலையிலும் சான்றாண்மை குன்றாமை தோன்ற, “புகழ்த்தலை பணிந்து இறைஞ்சியோன்” என்றார் பாசறையீரே, துடியன் கையது வேல், பாணன் கையது தோல்; சென்னியன், செம்மல் நிலம் சேர்ந்தனன்; கண்டு எல்லாம் நல்கினன் எனப் புகழ, குருசில், இறைஞ்சியோன் எனக் கூட்டி வினைமுடிவு செய்க. விளக்கம் : சால்புமுல்லையாவது, “வான்றோயு மலையன்ன சான்றோர் தம் சால்புரைத்தன்று” (பு.வெ.அ: 31) என வரும். இசை தொடுத்தற்குரிய நரம்பு தொடையெனப்பட்டது. “பொன் வார்ந்தன்ன புரியடங்கு நரம்பின் தொடையமை கேள்வி” (பெரும்பாண், 15-16) என்று பிறரும் கூறுவது காண்க. கடுந்தெற்று மூடை, “கடுந்தெற்று மூடையின் இடங்கெடக் கிடக்குஞ்சாலி நெல்லின் சிறைகொள் வேலி” (பொருந. 245 : 6) என்பதன்கண் கடுந்தெற்று மூடை யென்றதற்கு நச்சினார்க் கினியர், “நெருங்கத் தெற்றின குதிர்” என்று பொருள் கூறுவர். மாறுபாட்டால் உண்டாகும் செற்றம் காரணமாக எறியப்படும் வேல், மாறு செறு நெடுவேல் எனப்பட்டது. புறத்தே மார்பிற்பட்டு உள்ளே ஊடுருவிச் செல்வது குறித்து. “மார்பு உளம் போக” என்றான். பரந்தோர், ஆங்காங்குப் பரந்து நின்ற சான்றோர்கள். பிறர் தம்மைப் புகழுங்கால் சான்றோர் நாணுதல் இயல்பு; “தம் புகழ் கேட்டார்போல் தலை சாய்ந்து மரன் துஞ்ச” (கலி. 119) என்று பிறரும் கூறுதல் காண்க. ஈண்டுக் கூறியது, சான்றாண்மையுடையோர் உயிர் இறக்கும் எல்லையிலும் அது குன்றார் என்பது வற்புறுத்தி நிற்பது காண்க. 286. ஒளவையார் வேந்தரிடையே போர் நிகழ்ந்த காலத்தில் ஒருகால் ஒளவையார் மறக்குடி மகளொருத்தியைக் கண்டார். நாட்டில் பல இளைஞர்கள் வேந்தன் பொருட்டுப் போர்க்குச் சென்றனர். அவருள் வென்றோர் சிலர்; வீழ்ந்தோர் பலர். வென்றி மேம்பட்டுப் போந்த வீரருள் அம் மறக்குடி மகளின் மைந்தனும் ஒருவனாவன். அது குறித்து அவள் முகத்தில் உவகைக் கிளர்ச்சி மீதூர்ந்திருந்ததாயினும், வேந்தன் திறத்து அவட்கிருந்த அன்பால் ஒரு குறையுடையாள் போன்ற பேச்சு நிகழ்ந்தது. அதனை வினவியபோது வேந்தற்காகப் போருடற்றி உயிர் கொடுத்துப் புகழ் நிறுவுதலினும் மேதக்க செயல் பிறிதியாதுமில்லை யென வற்புறுத்தினாள். அவள் கருத்தை விளங்க வுரைக்குமாறு வேண்டினார் ஒளவையார் “என் மகன் போல இளையர் பலர் எங்கள் வேந்தன் படையில் உளர்; அவர் அனைவரும் அவன் சென்ற நெறியே வெள்ளாடுபோல் அன்போடு அவனைப் பின் தொடரும் வீறு பெற்றவர். ஆயினும் உண்டாட்டு முதலிய சிறப்புக்கள் நிகழுங்கால், அவரனைவரையும் விடுத்து என் மகனைச் சிறப்பாகப் பேணி யாவர்க்கும் மேலாகக்கள் வழங்குவன். அத்தகைய சிறப்புப் பெறுபவன் அவ் வேந்தன் கண்ணீர் மல்கச் சாதல் பெறற்கரிய தொன்றாகும். அவன் தந்த கள் அப்பேற்றினை என் மகன் பெறுமாறு இன்னமும் செய்திலது” என்றாள். இச் சொற்களிடையே திகழும் மறமாண்பு ஒளவையார்க்கு வியப்பினைப் பயந்தது. அவள் நிலையில் தன்னை யொத்த மகளிரனைவரும் மறமகளிராதல் வேண்டுமென விழைந்தார். தான் அவளாக நினைந்த ஒளவையார் அவள் கூறிய சொற்களை ஒரு பாட்டு வடிவில் தந்தார். அப் பாட்டு இது; வெள்ளை வெள்யாட்டுச் செச்சை போலத் தன்னோ ரன்ன விளைய ரிருப்பப் பலர்மீது நீட்டிய மண்டையென் சிறுவனைக் கால்கழி கட்டிலிற் கிடப்பித் 5 தூவெள் ளறுவை போர்ப்பித் திலதே. திணை : கரந்தை. துறை : வேத்தியல். ஒளவையார் பாடியது. உரை : வெள்ளை வெள் யாட்டுச் செச்சைபோல - வெள்ளிய நிறத்தையுடைய வெள்ளாட்டுக் கிடாய்களைப்போல; தன்னோ ரன்ன இளையர் இருப்ப - தன்னையொத்த இளையர் பலர் நிறைந்திருக்கவும்; பலர் மீது நீட்டிய மண்டை - அப் பலர்க்கும் மேலாக என் மகனுக்கு நீட்டித் தரப்பட்ட கள்; என் சிறுவனை - என் மகனாகிய அவனை; கால்கழி கட்டிலில் கிடப்பி - காலில்லாத கட்டிலாகிய பாடையிற் கிடத்தி; தூவெள்ளறுவை போர்ப்பித்திலது - தூய வெள்ளிய ஆடையால் மூடுவியா தாயிற்று. அஃதன்றோ வேண்டுவது; எ-று. மண்டையில் தரப்படுவதுபற்றிக் கள்ளினை “மண்டை” யென்றது ஆகு பெயர். யாடுகள் ஒன்று சென்ற வழியே ஏனைய யாவும் செல்வது போல, வேந்தன் சென்றாங்குச் செல்லும் சிறப்புடைய பண்பும் தொழிலுமுடைய ரென்றற்கு “வெள்ளை வெள்யாட்டுச் செச்சை” உவமை கூறப்பட்டது; அதனை விளக்கற்கு அவ் யாட்டினும் உயர்ந்த உவமப் பொருள் பிறிதின்மையின், இஃது இறப்ப இழிந்த உவமையன்மை யறிக. தன் மகன் மேலாகச் சிறப்பிக்கப்பட்டது காட்டுவார், “பலர்மீது நீட்டிய மண்டை” என்றார். கால் கழி கட்டில் என்றது பாடைக்கு வெளிப்படை, வேந்தன் பொருட்டுச் சாவும் சாக்காட்டின் மேன்மை வற்புறுத்துவது கருத்தாதலின், “அறுவை போர்ப்பித்திலதே” யென்றது, மகன் சாகவில்லையே யெனத் தாய் இரங்கினாளென்பதன்று என அறிக. போர்ப்பித்திலது என வினைமுடிவு செய்க. விளக்கம் : வெள்யாட்டுச் செச்சை, ஆட்டுக் கிடாய். வேந்தனை யடியொற்றிப் பின் தொடரும் மறவர்களின் ஒருமைப் பண்பும் “யான் கண்டனைய ரென்னிளையரும்” (புறம். 191) என்றாற்போல, இவ் விளையர் தம் வேந்தன் கண்டனையராதலும் உடைமை தோன்ற “வெள்யாட்டுச் செச்சைபோல” என்றார். மீது, மேம்பட தன் மகன்பால் வேந்தன் முதல் வரிசை நல்குதற்குரிய தலைமைப் பண்புண்டென்று கூறுவாள், “பலர்மீது நீட்டிய மண்டை யென் சிறுவனைக் கிடப்பிப் போர்த்திலது” என்றாள் “புரந்தார்கண்ணீர்மல்கச் சாகிற்பின் சாக்கா, டிரந்துகோட் டக்க துடைத்து” (குறள். 780) என்றும், “பிறந்த பொழுதேயும் பெய்தண்டார் மன்னர்க் குடம்பு கெடுத்தாரே மூத்தார் - உடம்பொடு, முற்றுழிக் கண்ணு மிளையவரே தங்கோமாற், குற்றுழிக் காவா தவர்” (புறத். 1318) என்றும் பண்டைத் தமிழ்ப் பெருமக்கள் கருதினராகலின், இவ்வாறு கூற்று நிகழ்வதாயிற்றென வறிக. வேத்தியலாவது, (பு.வெ.மா. 2:13) என வரினும் இதற்குக் காட்டப்பட்ட, “அங்கையு ணெல்லியதன் பயமாதலால், கொங்கலர் தாரான் குடைநிழற் கீழ்த் தங்கிச் செயிர் வழங்கும் வாளமருள் சென்றடையார் வேல்வாய், உயிர்வழங்கும் வாழ்க்கை யுறும்” என்ற வெண்பா கருத்தொத்திருத்தல் ஈண்டு நோக்கத்தக்கது. 287. சாத்தந்தையார் சோழன் போரவைக் கோப்பெருநற்கிள்ளி முக்காவல் நாட்டு ஆமூர் மல்லனைப் பொருதுவென்ற திறத்தை நேரிற்கண்டு வியந்து பாடியவர். முக்காவல் நாட்டு ஆமூர் திருச்சிராப்பள்ளி வட்டத்தில் காவிரியின் வடகரையைச் சார்ந்த நாட்டிலுள்ள ஊர்களுள் ஒன்று. இன்றும் அப்பகுதி முக்காவல் நாடென வழங்குகிறது. பெருநற்கிள்ளியின் மற்போர் மாண்பு கண்டு பாடியதொன்றே இவரது மறப்பண்பினை இனிதெடுத்துக் காட்டும். இக்கிள்ளி அரசு கட்டிலேறுதற்கு முன் தந்தையொடு கருத்து வேறுபட்டு வேறோரிடத்தில் இருந்து ஆங்குள்ள வேந்தன் ஆதரவில் இருந்து வந்தான். அக்காலத்தே அவ்வேந்தன் கரந்தைப் போருடற்ற வேண்டிய கடமை யொன்றுண்டாயிற்று. அவன் தானைக்குத் தலைவனாய் நின்று போரை நடத்தும் பொறுப்புப் போரவைக்கோப் பெருநற்கிள்ளிக்குண்டாகவே, சாத்தந்தை யாராகிய சான்றோர்அதனைத் தாமும் உடனிருந்து காணச் சென்றார். தானை மறவர்க்கு அசைவும் அச்சமும் தோன்றாத வாறு நீண்மொழி பேசி அவர்களை ஊக்குவது தலைமக்கள் கடனாகும். ஆகவே, அவன் துடி கொட்டுவோனையும், முரசறை வோனையும் வருவித்து மறவர் பலரும் அறியும்படி தானுரைக்கும் நீண்மொழியைத் தெரிவிக்குமாறு பணித்தான். அதனைச் சாத் தந்தையார் இப்பாட்டின் பொருளாக வைத்து நமக்கு வழங்கி யுள்ளார். இதன்கண், அம்பு தைப்பினும், வேல்வந்து பாயினும், களிறுகள் கோடு கொண்டு தாக்கினும், அஞ்சிப் பிறக்கிட்டு ஓடாமையே மறவர்க்குப் பீடு தருவதாம். அத்தகைய பீடுடையோர் வேந்தனால் மருதநிலத்தூர்கள் பல தரப் பெறுவது உண்மை. ஆயினும் அவர்கள் ஊர் பெறுவதை ஒரு பொருளாக மதியார்; போரில் உயிர் கொடுத்துப் புகழ் பெறுவதையே நன்கு மதிப்பர். மேலும் அங்ஙனம் புகழ் பெற்றோர் மறுமையில் உயர்நிலையுலகம் சென்று அங்குள்ள உயர் நிலை மகளிரை மணந்து பேரின்பம் நுகர்வர். அதனால் அந்த இன்பம் பெறுவது குறித்து நிரை கவர்ந்து பேரின்பம் நுகர்வர். அதனால் அந்த இன்பம் பெறுவது குறித்து நிரை கவர்ந்து குறும்பு செய்யும் வெட்சி வேந்தன் தானை வருவதனை இங்கு நின்றும் காண்பீராக” என்று அவனுரைத்த நீண்மொழி விளக்கப்படுகிறது. துடியெறியும் புலைய எறிகோல் கொள்ளு மிழிசின கால மாரியி னம்பு தைப்பினும் வயற்கெண்டையின் வேல் பிறழினும் 5 பொலம்புனை யோடை யண்ணல் யானை இலங்குவான் மருப்பி னுதிமடுத் தூன்றினும் ஓடல் செல்லாப் பீடுடை யாளர் நெடுநீர்ப் பொய்கைப் பிறழிய வாளை நெல்லுடை நெடுநகர்க் கூட்டு முதற் புரளும் 10 தண்ணடை பெறுதல் யாவது படினே மாசின் மகளிர் மன்ற னன்றும் உயர்நிலை யுலகத்து நுகர்ப வதனால் வம்ப வேந்தன் றானை இம்பர் நின்றும் காண்டிரோ வரவே. திணை : கரந்தை. துறை : நீண்மொழி. சாத்தந்தையார் பாடியது. உரை : துடி எறியும் புலைய - துடிப்பறை கொட்டும் புலையனே; எறிகோல் கொள்ளும் இழிசின - பறையை முழக்கும் குறுந் தடியைக் கைக்கொண்டு நிற்கும் புலையனே; கால மாரியின் அம்பு தைப்பினும் - கார் காலத்து மழைத் தாரைபோல அம்புகள் வந்து உடம்பின்கண் தைக்குமாயினும்; வயல் கெண்டையின் வேல் பிறழினும் - வயல்களிற் பிறழும் கெண்டை மீன்போல் வேற்படை வந்து பாயினும்; பொலம்புனை யோடை அண்ணல் யானை - பொன்னாற் செய்யப்பட்ட முகப்பட்ட மணிந்த பெருமை பொருந்திய களிறு போந்து; இலங்கு வால் மருப்பின் நுதி மடுத்து ஊன்றினும் - விளங்குகின்ற தன் கோட்டின் கூரிய நுனியை நாட்டிக் குத்துவதாயினும்; ஓடல் செல்லாப் பீடுடையாளர் - அஞ்சிப் புறங்கொடுத்தோடு தலைக் கருதாத மறப் பெருமையுடைய மறவர்; நெடுநீர்ப் பொய்கை பிறழிய வாளை - ஆழ்ந்த நீரையுடைய பொய்கைக் கண் கிளர்ந்தெழுந்த வாளைமீன்; நெல்லுடை நெடுநகர்க் கூட்டு முதல் பிறழும் - நெல்லையுடைய நெடுமனையின் புறத்தே நிறுத்தப்பட்ட நெற்கரிசையிடத்து வீழ்ந்து புரளும்; தண்ணடை பெறுதல் - மருதநிலத்தூர்களைப் பெறுவது; யாவது - யாது பயனாம்; படின் - போர்க்களத்தே பட்டால்; உயர் நிலை யுலகத்து மாசில் மகளிர் மன்றல் நன்று நுகர்ப - வீரர் புகும் துறக்க வுலகத்துக் குற்றமில்லாத துறக்க மகளிரை மணந்து பேரின்பம் நுகர்வர்; அதனால் ---; வம்ப வேந்தன் தானை வரவு இம்பர் நின்றும் காண்டிர் - குறும்பு செய்யும் பகை வேந்த னுடைய தானை வருவதை இங்கிருந்தே காண்பீராக; எ-று. புலைய, இழிசின, பீடுடையாளர் பெறுதல் யாவது; படின் மன்றல் நன்றும் நுகர்ப; அதனால் வரவு காண்டிர் என வினை முடிவு செய்க. காண்டிர் என்றது கண்டு யாவர்க்கும் தெரிவித்து ஊக்குக என்பதாம். வேலின் முகம் கெண்டைமீன் போலும் வடிவினதாகலின், “கெண்டையின் வேல் பிறழினும்” என்றார். ஓடல் செல்லா வென்றதை ஒரு சொன்னீர்மைத்தாகக் கொண்டு ஓடாத என்று ரைத்தலு மொன்று. கூட்டு, நெற்கூடாகிய கரிசை. தண்ணடைப் பேற்றினும் மகளிர் மன்றல் உயர்ந்ததாகலின், “யாவது” என்றார்; என்றது நிரம்பிய பயனுடைத்தன்று என்றவாறாம். இன்பமும் துன்பமும் விரவிய இந் நிலவுலகினும் இன்பமே நிலவும் மேலுலகினை “உயர் நிலை யுலகம்” எனவும், போரிற்படின், நேரே உயர்நிலை யுலகில் மணம் புணர்ந்தின்புறுவதையன்றிப் போர்க்களத்தே கெட்டொழி வதிலரென்பார், “படின் மாசில் மகளிர் மன்றல் நன்றும் நுகர்ப” எனவும் கூறினார். வம்பு, குறும்பு செய்தல். வாளா இருந்த நம்முடைய நிரைகொண்டு போர் தொடுக்கும் வேந்தன் என்பான் “வம்ப வேந்தன்” என்றும், நின்றாங்கு நின்று வருபடையின் அணிநிலை சிதறி வீற்று வீற்றோடிக் கெடுந்திறம் காண்மின் என்பான், “இம்பர் நின்றும் காண்டிர்” என்றும் மொழிந்தான். விளக்கம் : கரந்தையில் நீண்மொழியாவது, “மன் மேம்பட்ட மதிக் குடையோர்க்குத், தன் மேம்பாடு தானெடுத் துரைத்தன்று” (பு.வெ.மா. 2:11) என வரும். துடியற்கும் பறைகொட்டும் புலையற்கும் கூறலின், “காண்டிர்” எனப் பன்மையாற் கூறினான். எறிகோலை விதந்தமையின், இழிசினன், பறை கொட்டும் பறையன் என்பது உணரப்படும். தண் ணுமையியக்குவோனையும் பிறர் “மடிவாய்த் தண்ணுமை யிழிசினன்” (புறம். 289) என்பது காண்க. காலமாரி, கார் காலத்துப் பெய்யும் மழை. வேலுக்குக் கெண்டை மீன் வடிவுவமம். வால்மருப்பு - வெள்ளிய மருப்பு; “வான்சுதை” (குறள். 714) எனச் சான்றோர் கூறுதல் காண்க. புன்செய் நிலம் சிறந்த சீறூர்களினும் நன்செய் மிக்க மருதநிலத்தூர் சிறந்ததாகலின் அதனை விதந்து கூறினான்; வேல் பாய்ந்த மார்புடன் நிற்கும் மறவர்க்கு, “தண்ணடை பெறுதலு முரித்து” (புறம் 297) என்று பிறரும் கூறுவது காண்க. போர்க்களத்து உயிர் கொடுக்கும் மறவர் துறக்க வுலகடைந்து தேவ மகளிரை மணந்து இன்புறுவரென்பது பண்டையோர் கொள்கை; அதனால், “உயர்நிலை யுலகத்து நுகர்ப” என்றார்; பிறரும், “தம்மனை மகளிர்க்கு, வதுவை சூட்டிய வான் படர்ந்தனரே” (புறத். 1354) என்பது காண்க. வம்பு புதுமை. போரில் வஞ்சியாது நின்று பொருது மடிவது, துறக்க வுலகில் அயரா இன்பம் நல்குமென்னும் உணர்வைப் பயத்தலின், வயவர் நெஞ்சில் அஞ்சாமை விளைதல் பயனாயிற்று “இது தண்ணடை பெறுகின்றது சிறிது, சுவர்க்கம் பெறுதல் நன்று (பெரிது) என்று நெடுமொழி கூறியது” என்பர் (தொல். புறத். 8) நச்சினார்க்கினியர். 288. கழாத்தலையார் ஒருகால் குடக்கோ நெடுஞ்சேரலாதனும் சோழன் வேற்பஃறடக் கைப் பெருவிறற்கிள்ளியும் தும்பை சூடிப் பொருது வீழ்ந்தனர். அவர்களைக் காண்டற்குச் சான்றோராகிய கழாத்தலையார் போர்க்களத்துக்கே சென்றார். பெருவேந்தர் இருவரும் வீழ்ந் தொழிந்ததனைக் கண்ட அவர், அவர்தம் தானை வீரர் செய்த போர்த்திறத்தையும் கண்டனர். களத்தின் நடுவே போர் முரசுகள் முழங்கிக்கொண்டிருந்தன. அவற்றின் பெரு முழக்கத்தால் மூடிய தோலமைதியை யறிந்தார். கூரிய மருப்புக்களையுடைய இரண்டு ஏறுகளைத் தம்முட் பொரவிடுத்து அவற்றுள் வென்றி பெற்ற ஏற்றின் தோலையுரித்து மயிர் களையாது முரசுகட்குப் போர்த் திருந்தனர். போர் கடுமையாக நடந்தது. வேல் மறவர், எதிர்ந்தார் மேல் தத்தம் வேற்படையை மிகத் திறலுடன் செலுத்தினர்; எதிர் வந்த வேலைக் கேடகத்தால் ஆண்மையுடன் தடுத்தனர். இவ்வாறு ஒருவயவீரன் தன்னை நோக்கி வந்த வேல்களைத் தடுத்து அவற்றைச் செலுத்தினோரைத் தன் வேல் கொண்டு தாக்கி வீழ்த்தினான். எங்கும் அச்சம் பரந்தது. வயவரிடையே ஆரவாரமும் கலக்கமும் உண்டாயின. திடீரென ஒரு வேல் வந்து அவ் வேல் வலவன் மார்பிற் பாய்ந்து ஊடுருவியது. தான் அத்துணை விழிப்போடு போர் செய்தபோதும் மாற்றாரெறிந்த வேல் மார்பிற் பாய்ந்ததற்கு அவன் வருத்த மெய்தாது நாணம் பெரிதுமெய்தித் தலை குனிந்து நிலத்தைச் சேர்ந்தான். பெருகி யொழுகும் குருதியுடன் அவன் மார்பு அசைவதாயிற்று. சிறிது போதில் பருந்து முதலிய பறவைகள் மொய்க்கத் தொடங்கின. அவனைக் காண்டற்கு அவன் மனைவியும் வந்து சேர்ந்தாள். அவள் சிறிதுமஞ்சாது அவன் உடம்பருகே வந்து மார்பிற் புண்ணிருக்கக் கண்டு முகம் மலர்ந்து தழீஇக் கொண்டாள். பருந்துகள் அவள் அணுகி முயங்குதற்கு எளிதில் இடந்தராது மொய்த்தன. இக் காட்சி கழாத்தலையார் உள்ளத்தை யுருக்கிற்று. அதனை உருப்படுத்திக் காட்டும் வகையில் இப் பாட்டு வெளிவருவதாயிற்று. மண்கொள வரிந்த வைந்நுதி மருப்பின் அண்ண னல்லே றிரண்டுடன் மடுத்து வென்றதன் பச்சை சீவாது போர்த்த திண்பிணி முரச மிடைப்புலத் திரங்க 5 ஆரமர் மயங்கிய ஞாட்பிற் றெறுவர நெடுவேல் பாய்ந்த நாணுடை நெஞ்சத் தருகுறை. . . . . . . . . . . . . . . . மன்ற குருதியொடு துயல்வரு மார்பின் முயக்கிடை யீயாது மொய்த்தன பருந்தே. திணை : தும்பை, துறை : மூதின்முல்லை; கழாத் தலையார் பாடியது. உரை : மண்கொள வரிந்த வைந்நுதி மருப்பின் - மண்ணைக் குத்திக் கொள்ளுவதால் வரி வரியாகக் கீறப்பட்ட மிக்க கூரிய கோட்டினையுடைய; அண்ணல் நல்லேறு இரண்டுடன் மடுத்து - பெருமை பொருந்திய நல்ல ஆனேறு இரண்டினைத் தம்முட் போர் செய்ய விடுத்து; வென்றதன் பச்சை சீவாது போர்க்கப்பட்ட; திண் பிணி முரசம் இடைப் புலத்து இரங்க - திண்ணிதாய்க் கட்டப்பட்ட போர்முரசு போர்க்களத்தின் நடுவிடத்தே முழங்க; ஆரமர் மயங்கிய ஞாட்பில் - தடுத்தற் கரிய போர் நிகழ்ந்த போர்க்களத்தின்கண்; தெறுவர - வெகுட்சி தோன்ற; நெடுவேல் பாய்ந்த நாணுடை நெஞ்சத்து - மாற்றாரெறிந்த நெடிய வேல் வந்து பாய்ந்ததனால் நாண முண்டாகிய நெஞ்சுடனே; அரு குறை..............; மன்ற - நிச்சயமாக; குருதியொடு துயல் வரும் மார்பின் - குருதி சோர்வதனோ டசையும் மார்பினை; முயக்கு இடை ஈயாது பருந்து மொய்த்தன - தழுவுதற்கிடந்தராது பருந்துகள் மொய்த்தன, காண்; எ-று. மண்ணைக் குத்திக் கோட்டில் மண் கொள்ளுங்கால் ஆனேற்றின் கொம்பு கீற்றுக்களாக அறுப்புண்டல் இயல்பாதல் பற்றி, ‘மண்கொள விரிந்த மருப்பு என்றார். ’ முரசுக்குத் தோலை மயிர் சீவாது போர்த்தல் மரபு, இடைப்புலம், இடைச்சுரம் என்றாற் போலப் பின் முன்னாகத் தொக்கது. ஞாட்பு, போர் நிகழும் களம். தோலைக் கைக்கொண்டிருந்தும் முன்னறிந்து தடாது வேலேறுண்டதற்கு நாணுதலின் “நாணுடை நெஞ்சத்” தென்றார்; இது சால்பு முல்லை. வீழ்ந்த மறவன் மனையோள் அவன் மார்பைத் தான் தழுவுவதற்குப் பருந்துகள் இடந் தந்தில வாக, அவற்றை விலக்கித் தழீஇக் கொண்டா ளென்பதுபடக் கூறுதலின், இது மூதின் முல்லைத் துறை ஆயிற்று. விளக்கம் : இம் மூதின் முல்லைத் துறையைப் புறப்பொருள் வெண்பா மாலையுடையார் “சிருங்காரநிலை” (7:24) என்பர். அஃதாவது , “பகை புகழக் கிடந்தானை, முகை முறுவலார் முயக்கமர்ந்தன்று” என வரும், முரசுக்குத் தோல் மயிர் நீக்காது போர்க்கப்படுமென்பதை “கொல்லேற்றுப் பைந்தோல் சீவாது போர்த்த, மாக்கண் முரசம்” (மதுரை. 732-3) என்று பிறரும் கூறுவர். தோலுக்குரிய ஏறு மறஞ் சிறந்ததாக இருக்கவேண்டுமென்பது மரபு; அதனால் சான்றோர் “ஓடா நல்லேற்றுரிவை” யென்றும், “கொல்லேற்றுப் பைந்தோல்” என்றும் தெரிந்தோதினர்; ஈண்டும் ஆசிரியர் ஏற்றின் பீடு காணும் திறம் எடுத்தோதுவாராய் ‘அண்ணல் ஏறு இரண்டு உடன்மடுத்து, வென்றதன் பச்சை’ என்றார். ஞாட்பு, போர்க்களம், மார்பிற்பட்ட புண், குருதி மிகக் கான்று பருந்தினம் படிந்துண்ணும் பெரு நிலையாயிற் றென்பார், “முயக்கிடையீயாது மொய்த்தன” என்றார். அந்நிலை கண்டார்க்கு அச்சம் பயக்கும் இயல்பிற்றாக, அவன் மனையோள் அப் புண்ணால் உண்டாகி நிலைபெறும் புகழ் கருதி யெழுந்த உவகை பெரிதுற்று, பருந்தினம் இடந்தராது மொய்ப்பவும், சிறிதும் அஞ்சாது அவனைத் தழீஇ மகிழ்ந்தாள் என்பது எச்சவகையாற் கொள்ளப்படும். இப் பாட்டு இடையே சிதைந்துளது. 289. கழாத்தலையார் ஒருகால் ஒரு வேந்தன் வெட்சிப்போர் தொடுக்கவேண்டிப் போர்ப் பறை யறைவித்தான். நாட்டிலுள்ள வீரர் பலரும் திரண்டனர். வேந்தன் அவர்களோடிருந்து விருந்துண்டான். அப்போது வீரரனை வருக்கும் கள் வழங்கப்பட்டது. அந்நிலையில், அவன் மறக்குடியில் தோன்றி மறச் செயலால் மாண்புற்ற மறவரைத் தேர்ந்து அவர் வரிசைக் கேற்ப முகமன் கூறிச் சிறப்புச் செய்தற்குரியன். அவ்விடத்தே சான்றோர் பலரும் கூடியிருப்பர். அதனால் சான்றோராகிய கழாத்தலையாரும் அங்கே வந்திருந்தனர். வரிசையால் உயர்ந்த முதுகுடி மறச் சான்றோர் ஒருவரைச் சிறப்புற நோக்கி அவர்க்குக் கள் வழங்குமாறு வேந்தன் பணியாளரை யேவிச் சிறப்பித்தான். அதனை வியந்து நோக்கின பாணனை அச் சான்றோர் அழைத்து, “பாணனே! இவ்வாறு வேந்தன் செய்யும் சிறப்பை வியத்தலை யொழி; பாசறைக் கண்ணே, இனி நிகழ்தற்குரிய போர்க்குரிய பூவைப் பெறுமாறு புலையன் தண்ணுமை யறைகின்றான்; அதனைக் கேட்பாயாக” எனப் பேச்சு நிகழ்த்தலானார். கழாத்தலையார் வேந்தனது தேர்ச்சித் திறனையும் முதுகுடிச் சான்றோரது சால்பினையும் எண்ணியெண்ணி இன்புற்றார். அந்த இன்பப் பயனாக வந்தது இப் பாட்டு. ஈரச் செவ்வி யுதவின வாயினும் பல்லெருத் துள்ளு நல்லெருது நோக்கி வீறுவீ றாயு முழவன் போலப் பீடுபெறு தொல்குடிப் பாடுபல தாங்கிய 5 மூதி லாள ருள்ளுங் காதலின் தனக்குமுகந் தேந்திய பசும்பொன் மண்டை இவற்கீ கென்னு மதுவுமன் றிசினே கேட்டியோ வாழி பாண பாசறைப் பூக்கோளின்றென் றறையும் 10 மடிவாய்த் தண்ணுமை யிழிசினன் குரலே. . . . . . . . . . . . . கழாத்தலையார் பாடியது. உரை : ஈரச் செவ்வி உதவினவாயினும் - ஈரமாகிய பருவம் கழிவதன்முன் உழுதற்கு உதவிசெய்தனவெனினும்; பல்லெருத் துள்ளும் நல்லெருது நோக்கி - பலவாகிய எருதுகளுள்ளும் நல்ல எருதுகளையே தேர்ந்து கொள்வானாய்; வீறு வீறாயும் உழவன் போல - வேறு வேறாக வைத்து ஆராய்ந்து தேரும் உழவனைப்போல; பீடு பெறு தொல் குடிப் பாடு பல தாங்கிய மூதிலாளருள்ளும் - பெருமை பெற்ற பழைமையான குடியில் பிறந்தாரிடத்து வழிவழியடிப்பட்டு வரும் நற்பண்புகளனைத் தையும் சோர்வுபடாது காத்துவரும் முதுகுடி மறவருள்ளும்; காதலின் - தன்பாலுள்ள அன்பால்; தனக்கு முகந்தேத்திய பசும்பொன் மண்டை - தனக்காக முகந்தெடுத்துத் தந்த பசும் பொன்னாலாகிய மண்டையிலுள்ள கள்ளை; இவற்கு ஈக என்னுமது - தன்னருகேயுள்ள இவனைக் காட்டி இவ் வீரனுக்கு நல்குவாயாக வெனச் சொல்லிச் செய்யும் அச் சிறப்பை; அன்றி சின் - மனங்கொண்டு வியத்தலை யொழி; பாண - பாணனே; பாசறை - பாசறையிடத்தே; பூக்கோள் இன்று என்று அறை யும் - போர்க்குரிய மறவர்க்குப் போர்ப் பூவைத் தரும் பொழுது இப்பொழுது என்று தெரிவியா நிற்கும்; இழிசினன் மடிவாய்த் தண்ணுமை குரல் கேட்டி - புலையன் இசைக்கும் தோலை மடித்துப் போர்த்த வாயையுடைய தண்ணுமையின் ஓசையைக் கேட்பாயாக; எ-று. நல்லெருது ஆயும் உழவன் போல வேந்தன் இவனை ஆய்ந்து தேர்ந்து தனக்கு முகந்தேந்திய மண்டையை இவற்கீக என்னுமது அன்றிசின்; பாண, தண்ணுமைக் குரலைக் கேட்டி என வினை முடிவு செய்க. அவனைத் தேர்ந்து கொண்டதற்குக் காரணம் கூறுவார், “காதலின்” என்றும், சிறந்தார்க் கன்றிப் பிறர்க்குக் கொடுக்கப்படாதென்றற்குப் “பசும்பொன் மண்டை” என்றும் கூறினார். அதுவும் என்புழி உம்மை, சிறப்பு. அன்றுதல், மறுத்தல்; “அன்றி நின்ற அவுணர்” (ஞானசம். 29,7) என்று சான்றோர் வழங்குதல் காண்க. சின்: முன்னிலையசை. தன்னை வற்புறுத்தாமை வேண்டிப் பாணனை வேறுபட அழைத்துப் பூக்கோளேய தண்ணுமைக் குரலைக் கேட்பித்தான் என அறிக. கள்ளினும் பூக்கோளைச் சிறப்புற நோக்குதலும், தன் முன்னே தான் பெறும் சிறப்புக்கு நாணுதலும், தொல் குடிப்பாடு. விளக்கம் : உழவுவினை வென்றியுற முடிதற்கு உழவன் நல்லெருது தேர்ந்து கோடல்போல, வேந்தனும் வினைக்குரியாரை ஆராய்ந்து தேர்ந்துகோடல் இன்றியமையாதாகலின், “வீறு வீறாயும் உழவன் போல” என்றார்; அரசன் வினைக்குரியாரைத் தேர்ந்துகொள்ளும் முறையைத் திருவள்ளுவர், அறம், பொருள், இன்பம், உயிரச்சம் என்ற நால்வகையால் தேர்ந்து வினைசெய்க என்பர். பீடு பெறு தொல் குடிப் பாடுபல தாங்கிய மூதிலாளரைப் பிறர், “பிறப்பும் பெருமையுஞ் சிறப்புஞ் செய்கையும், அரசறி பெயரும் உரைசெயலாண்மையும், உடையோராகிய படைகோண் மாக்கள்” (புறத். 1354) என்பர். தனக்கு என்றது வேந்தனைக் குறித்து நின்றது. பசும் பொன் வள்ளத்தை மண்டை யென்றான். பாணனொடு சொல்லாடுதலின். பாணற்குக் கள்ளுண்ணும் கலன் மண்டையாகும். பசும்பொன் வள்ளத்திற் பெய்து தரப்படும் சிறப்பிற்றாயினும், அதனைப் பொருளாகக் கொள்ளாது அதனைத் தருதற்கேதுவாயிருக்கும் வேந்தன் மனத்து அன்பினையே பொருளாகக் கருதும் சான்றோரது சால்பு, “இவற்கீ கென்னு மதுவும் அன்றிசின்” என்றதனாலும், பூக்கோளேய தண்ணுமைக் குரல் “கேட்டியோ” என்றதனாலும் விளங்கித் தோன்றுகிறது. இளம்பூரணர் “மறங்கடைக் கூட்டிய துடிநிலை” க்கு (புறத். சூ. 4) இதனைக் காட்டுவர். 290. ஒளவையார் ஒரு வேந்தன் வேறொரு வேந்தனொடு பகைகொண்டு வெட்சி மலைந்து அவன் நாட்டு ஆனிரைகளைக் கவர்ந்து கொண்டான். அதனை யறிந்த அவன் கரந்தை சூடித் தன்னாட்டு ஆனிரைகளை மீட்கும் குறிப்பால் போர்க்கெழச் சமைந்தான். கரந்தைப் போரைத் தெரிவிக்கும் போர்ப்பறை நாடு முற்றும் முழங்கிற்று. நாட்டிலுள்ள வீரர் அனைவரும் திரண்டனர். வேந்தன் தானைத் தலைவர்களைக் கூட்டி உண்டாட்டொன்றினை நிகழ்த்தினான். அப்போது தலைவர் பலரையும் நேரிற் கண்டு அவரவர் நலங்களையும் தெரிந்து சிறப்புச் செய்வது அவன் கடமையாகும். அவரவர் குடிவரவும் பண்பும் எடுத்தோதுவது சொல் நலம் வாய்க்கப்பெற்ற சான்றோர் செயல். இத்தகைய உண்டாட்டில் ஒளவையார் சென்றிருந்தார். தானைவீரர் குடி நிலையும் செயற்றிறமும் எடுத்தோதும் அரும்பணியைச் சான்றோ ராகிய ஒளவையார் மேற்கொண்டார். வீரர் ஒவ்வொருவரையும் பற்றிச் சான்றோர் எடுத்தோதக் கேட்கும் வேந்தன் மகிழ்ந்து தகுவது கூறிப் பொன் வள்ளத்தில் கள்ளேந்தித் தருவன். இவ்வாறு வீரர் குடிநிலை யுரைக்கப்புக்க ஒளவையார், வீரனொருவன் குடி நிலையைக் கூறுவாராய் இனிய பாட்டொன்றைப் பாடினார். அதன்கண், “வேந்தே! இக் கள்ளை முன்னர் இவர்க்குத் தந்து பின்னர் நீ உண்பாயாக; இவன் தந்தைக்குத் தந்தை நின் தந்தை தந்தைக்குக் கண்ணிமையாது காத்து, ஆர் செறிப்புண்டு நிற்கும் ஆழிக்குடம்போலப் பகைவர் எறிந்தவேல் பாய்ந்து நிற்ப நின்று மாய்ந்தான்; அவன் பெயரனாகிய இவன் கடுமழை காக்கும் பனங்குடைபோல நின்னைக் குறித்து மாற்றார் எறியவரும் வேலைத் தான் இடை நின்றேற்றுக் காத்து நிற்பன்; இவன் வெல்போர் பல செய்து மறப்புகழ் நிறைந்தவன்,” என்று அவன் குடிநிலையை அழகுறக் காட்டியுள்ளார். அப் பாட்டு இது. இவற்கீத் துண்மதி கள்ளே சினப்போர் இனக்களிற் றியானை யியறேர்க் குருசில் நுந்தை தந்தைக் கிவன்றந்தை தந்தை எடுத்தெறி ஞாட்பி னிமையான் றச்சன் 5 அடுத்தெறி குறட்டி னின்றுமாய்ந் தனனே மறப்புகழ் நிறைந்த மைந்தினோ னிவனும் உறைப்புழி யோலை போல மறைக்குவன் பெருமநிற் குறித்துவரு வேலே. திணை : கரந்தை. துறை : குடிநிலையுரைத்தல். ஒளவையார் பாடியது. உரை : கள் இவற்கு ஈத்து உண்மதி - கள்ளை முன்னர் இவனுக்குத் தந்து பின்னர் நீ யுண்பாயாக; சினப்போர் இனக் களிற்று யானை இயல் தேர்க் குருசில் - சினந்து செய்யும் போரினையும் இனமான களிற்றியானைகளையும் செய்யப்பட்ட தேர்களையு முடைய தலைவனே; நுந்தை தந்தைக்கு - நின் தந்தையின் தந்தைக்கு; இவன் தந்தை தந்தை - இவனுடைய தந்தைக்குத் தந்தை; எடுத்தெறி ஞாட்பின் இமையான் - படைகளையெடுத்துப் பகைவர்மேலெறிந் தழிக்கும் போரின்கண் கண்ணிமையாமல்; தச்சன் அடுத்தெறி குறட்டின் நின்று - தச்சனால் ஆர்க்காலைச் சேர்த்து எறியப்பட்ட குடம்போலப் பகைவர் எறிந்த படை களைத் தானேற்று நின்று; மாய்ந்தனன் - மாண்டான்; மறப் புகழ் நிறைந்த மைந்தினோன் இவனும் - மறப்போர் செய்து பெற்ற புகழ் நிறைந்த வலியை யுடையனாகிய இவனும்; உறைப்புழி ஓலை போல - மழை பெய்யுமிடத்து இடைநின்று நம்மை அதனினின்று காக்கும் பனையோலைக்குடை போல; பெரும---; நிற் குறித்து வருவேல் மறைக்குவன் - பகைவர் நின்னைக் குறித்து எறிய வரும் வேலைத் தான் இடை நின்று ஏற்றுத் தாங்குவனாதலால்; எ.று. முன்னர் பின்னரென்பன அவாய் நிலையால் வந்தன. யானையும் தேரும் உடையையாயினும் இவன் சிறப்பாக வேண்டற்பாலன என்பது தோன்ற, “இனக் களிற்றியானை யியல்தேர்க் குருசில்” என்றார். குறடு, ஆர்க்கால் செறிந்திருக்கும் குடம். காக்கும் திறப்பாடு விளங்க, “கண்ணிமையான்” என்றார். இமைப்பது வீரர்க்குப் புறக்கொடை போல் இழிவு தருவதெனக் கருதி இமையானாயினா னென்பாருமுளர். இவன் தந்தைக்குத் தந்தை செயல்கூறி இவன் செயல் கூறாதொழிவது மயங்க வைத்தலென்னும் குற்றமாதலின், இவன் சிறப்பை “மறப்புகழ் நிறைந்த மைந்தினோன் இவனும்” என்றார். “தந்தைய ரொப்பர் மக்கள்” (தொல். கற். 6) என்பதனால், தந்தை செயல் தானே விளக்கமுறுதலின் கூறாராயினர். குருசில், பெரும, இவற்கீத் துண்மதி, தந்தை மாய்ந்தனன், இவனும் மறைக்குவன் என வினைமுடிவு செய்க.ஓலை. ஆகுபெயர். விளக்கம் : குடிநிலையுரைத்தலென்பது, “மண்டிணி ஞாலத்துத் தொன்மையும் மறனும், கொண்டுபிற ரறியுங் குடிவர வுரைத்தன்று” (பு.வெ.மா. 2:14) என வரும். பொருதற்குரிய சினமும், களிற்றி யானைகளும் தேரும் இருப்பினும் தொல்குடிப் பிறந்த மறச் சான்றோர் காப்பில்வழி வெற்றி யுண்டாகாதென்பது தோன்றச், “சினப்போர் இனக்களிற் றியானை யியல் தேர்க் குருசில்” என்றார். உயரிய மறப் புகழையுடைய இவன் தொன்று தொட்டுநின் குடியோடு பெருந்தொடர்புற்று அரிய மறப்பணி செய்த குடியில் தோன்றியவன் என அவன் குடிநிலை கூறுவார், நுந்தை தந்தைக்கு இவன் தந்தை தந்தையும், நுந்தைக்கு இவன் தந்தையும் போர்செய்து மாய்ந்தனரென்று கூறுவதாயின், மாய்ந்தனரெனப் பன்மைவினை வருதல் வேண்டும்; அவ்வாறின்மையின், அஃது ஆசிரியர் கருத்தன்றென வுணர்க. மைந்து, வலிமை; மறப் புகழ்க்கு ஏது மைந்தாதலால், “மறப்புகழ் நிறைந்த மைந்தினோன்” என்றார். பனை, தெங்கு, தாழை முதலியவற்றால் மழையை மறைத்தற்காகச் செய்யப்படுவது குடை இக்குடைதான் தன்னைப் பிடிப்பானை மழையில் நனையாவாறு இடைநின்று காப்பதுபோல, இவனும் நின்னைத் தாக்கவரும் வேலிற்கும் நினக்கும் இடையே நின்று அதனைத் தானேற்றுக் காப்பன் என்பதாம். 291. நெடுங்களத்துப் பரணர் நெடுங்களத்து பரணர் நெடுங்களம் என்னும் ஊரினர். இவ்வூர் திருச்சிராப்பள்ளிக்குக் கிழக்கே காவிரியின் தென் கரையிலுள்ளது. பரணரென்ற பெயருடைய சான்றோர் ஒருவர் இருத்தலால் அவரின் வேறுபடுத்தறிதற்குப் பண்டையோர் இவரது ஊராகிய நெடுங்களத்தைச் சேர்த்து நெடுங்களத்துப் பரணரென்று வழங்கினர். ஏடுகளில் நெடுங்களத்து என்பது நெடுங்கழத்து எனப் பிழைபட்டுப் பின்னர் நெடுங்கழுத்தெனத் திரிந்ததன் மேலும் திரிபடைவதாயிற்று. இத் தொடரினை நோக்கின் பலரும், சீத்தலைச் சாத்தனார் என்பது பற்றிப் பல பொருள் கூறியதுபோல இவர் நெடிய கழுத்தையுடையராதல் பற்றி நெடுங்கழுத்துப் பரணரென உறுப்புப் பற்றிப் பெயர் பெற்றனரெனக் கூறினர். இதுபற்றிய விரிந்த ஆராய்ச்சியுரை, உரைகாரரால் “சங்க காலப் பரணர்கள்” (செந்தமிழ்ச் செல்வி, சிலம்பு : 23; பக். 481) என்ற கட்டுரையில் கூறப்பட்டுள்ளது. ஒருகால் ஒரு தானைத்தலைவன் பகைவர் கவர்ந்துசென்ற ஆனிரைகளை மீட்பது கருதிக் கரந்தை சூடிப் போர்க்குப் புறப்படலானான். மறக்குடி மகளாகிய அவன் மனையோள் அவன்பாற்கொண்ட பெருங் காதலால் தான் சூடியிருந்த மாலையை அவற்குச் சூட்டி அவன் மார்பில் அணிந்திருந்த மாலையைத் தான் அணிந்து கொண்டு விடை கொடுத்து விட்டாள். இஃது அக்கால மறவர் குடி மரபு. அவன் செல்லுங் கால் உடுத்திருந்த வெள்ளிய தூய ஆடை அவனுடைய கரிய உடம்பிற்படிந்து பேரொளி கொண்டு திகழ்ந்தது. அக் காட்சி அவள் நெஞ்சிற் படிந்து மிக்க இன்பத்தைச் செய்தது. போருக்குச் சென்ற தலைவன் நேரே தன் தலைவனான வேந்தனைக் கண்டான். வேந்தனும் அவன்பால் பேரன்பும் பெருமதிப்பும் உடையன். அவனை விடைகொடுத்து வழிவிடுவான், தான் அணிந்திருந்த பல வடங்களோடு கூடிய மணிமாலையை அவன் கழுத்தில் அணிந்து, அவ் வீரர் தலைவன் அணிந் திருந்ததாகிய ஒற்றை வட மாலையைத் தான் அணிந்து மகிழ்ந்தான். இதனைக் கண்டிருந்தோர் சென்று தானைத் தலைவன் மனையோட்குரைத்து மகிழ்வித்தனர். வெட்சியாரை நோக்கிச் சென்ற தலைவன் கரந்தை சூடிப் போருடற்றும் தன் தானை வீரர்க்கு முன்னே, காட்டில் மறைந்து சென்று வெட்சிப் பகைவரொடு கடும்போர் உடற்றினான். ஆனிரைகள் மீட்கப் பட்டு ஊர் நோக்கிச் செல்லத் தொடங்கின; அங்கே அந் நிலையில்; பகைவர் எறிந்த வேலொன்று தலைவன் மார்பை யுருவிச் சென்றது. அவனும் வீழ்ந்து மாண்டான். பிணங் களைச் சூழ்ந்துகொண்டிருந்த பருந்து முதலிய புள்ளினங்கள் அவன் பிணத்தையும் சூழ்ந்து ஆரவாரித்தன. இதற்குள் செய்தியறிந்த அவன் மனையோள் அவன் வீழ்ந்த இடம் நாடி வந்தாள். அங்கே போருடற்றி வெற்றிபெற்ற வீரர் பலரும் ஆனிரைகள் பின் வந்தனர். போர் நிகழ்ந்தவிடத்தே துடியரும் பாண்மக்களும் பிறரும் இருந்தனர். காட்டில் குறுநரிகள் ஊளையிட்டன. அக் காட்சியைக் கண்டவள், துடியர் முதலாயினாரை யழைத்து “இப் புள்ளினங்கள் சூழ்ந்து செய்யும் ஆரவாரத்தை நீக்குமின்; யான் விளரிப் பண்ணைப் பாடிக்கொண்டு சென்று குறுநரிகள் நெருங்காவாறு ஓட்டி வருகிறேன்” என்று சொல்லி நரிகளை வெருட்டிவிட்டுத் தலைவன் பிணத்தருகே வந்தாள். அவன் புண்பட்ட மார்பில் வேந்தன் அணிந்த பன்மணி கலந்த பல் வட மாலையைக் கண்டாள். வேந்தன் சிறப்புச் செய்யினும் செய்யா தொழியினும் பயன் நோக்காதே வெறிதேயும் வேந்தன் பொருட்டுச் சாதலை விரும்புவோன் என் தலைவன்; இப் பெற்றியோனுக்குக் காதலால் தன் மாலையை யணிந்து இவன் மாலையைத் தான் அணிந்து கொண்டான் வேந்தன்; என்போல் வேந்தனும் இவன்பால் காதலுடையனாதலால், யான் இவனைப் பிரிந்து ஆற்றாது பெருநடுக்கம் கொள்வது போலத் தானும் பெருவிதுப்பு எய்துவானாக என வாய்விட்டரற்றினாள். இதனை யறிந்த நெடுங்களத்துப் பரணர் இந்த இனிய பாட்டின்கண் அவள் கூற்றைப் பொருளாகத் தொடுத்துப் பாடியுள்ளார். சிறாஅர் துடியர் பாடுவன் மகா அஅர் தூவெள் ளறுவை மாயோற் குறுகி இரும்புட் பூச லோம்புமின் யானும் விளரிக் கொட்பின் வெண்ணரி கடிகுவென் 5 என்போற் பெருவிதுப் புறுக வேந்தே கொன்னுஞ் சாதல் வெய்யோற்குத் தன்றலை மணிமருண் மாலை சூட்டி யவன்றலை ஒருகாழ் மாலை தான்மலைந் தனனே. திணை : கரந்தை. துறை : வேத்தியல். நெடுங்களத்துப் பரணர் பாடியது. உரை : சிறா அஅர் - சிறுவர்களே; துடியர் - துடிப்பறை கொட்டு பவர்களே; பாடுவல் மகா அஅர் - பாடுதல்வல்ல பாணர் மக்களே; தூவெள் அறுவை மாயோன் குறுகி - தூய வெள்ளிய ஆடையையுடைய கரியவனை யணுகி; இரும்புள் பூசல் ஓம்புமின் - கரிய பறவைகள் சூழ்ந்து செய்யும் ஆரவாரத்தை நீக்குவீர் களாக; யானும் விளரிக் கொட்பின் வெண்ணரி கடிகுவென் - யானும் விளரிப் பண்ணைச் சுழற்சியுறப் பாடித் தின்னவரும் குறுநரிகளை யோட்டுவேன்; என்போல் வேந்து பெருவிதுப்புறுக - என்னைப் போல வேந்தனும் பெரிய நடுக்கத்தை எய்துவானாக; கொன்னும் சாதல் வெய்யோற்கு - வேந்தன்பொருட்டு வெறிதேயும் உயிர் கொடுத்தற்கு விழைபவனாகிய என் தலைவனுக்கு; தன் தலைமணி மருள் மாலை சூட்டி - தன்னிடத்து மார்பிலிருந்த பல மணிகள் விரவிய பல வடமாலையைத் தலைவனுக் கணிந்து; அவன் தலை ஒரு காழ் மாலை தான் மலைந்தனன் - என் தலைவனாகிய அவனிடத்து மார்பிலிருந்து ஒற்றை வடமாலையைத் தான் அணிந்துகொண்ட பேரன்பின னாதலால்; எ-று. போர்க்குச் செல்வோர் தூயவெள்ளாடையணிந்து செல்ப வாதலால் “தூவெள்ளறுவை மாயோன்” என்றார்; பிறரும் “வெளிது விரித்துடீஇ” என்பது காண்க. காக்கை, கழுகு, பருந்து முதலிய பிணந்தின்னும் பறவைகள் சூழ்ந்து மொய்த்து ஆரவாரித்துச் செய்யும் பேரொலியை, “இரும்புட் பூசல்” என்றார். பருந்து வட்டமிடுவது போல இசைக்கப் படுவதுபற்றி, “விளரிக் கொட்பு” என்றார். யான் அவன்பாற்கொண்ட காதலால் நெஞ்சு நடுங்கு துயரம் எய்தியதுபோல வேந்தன் தன் மாலையை மாற்றிப் பெருங்காதலுடையனா தலால் மிக்க துயரம் எய்துவனென்பாள், “என்போல் வேந்தனும் பெருவிதுப் புறுக” என்றாள். ஓம்புமின், கடிகுவென்; மலைந்தன னாதலால் “வேந்து பெருவிதுப்புறுக” எனக் கூட்டி வினை முடிவு செய்க. விளக்கம் : “தோள் வலிய வய வேந்தனை, வாள்வலி மறவர் சிறப்புரைத் தன்று” என்பது வேத்தியல் (பு.வெ.மா. 2 :13) இதன்கண் வேந்தனை யென்றவிடத்து நான்காவதன்கண் இரண்டாவது மயங்கிற்றாகக் கொண்டு, வேந்தன் பொருட்டு உயிர் கொடுத்த வாள்வலி மறவர் சிறப்புரைப்பது வேத்தியல் என ஈண்டு அமைத்துக்கொள்க. “என்போற் பெருவிதுப் புறுக வேந்” தென்றது, மேற்கோள்; வெய்யோற்கு மாலை சூட்டித் தான் மாலை மலைந்தனனாகலான் என்பது அதனைச் சாதிக்கும் ஏது. 292. விரிச்சியூர் நன்னாகனார் விரிச்சியூர் என்பது பாண்டி நாட்டில் உள்ளதோர் ஊர். வேந்தன் பொருட்டு விரிச்சி நின்று கூறியது, அக் கூறியவாறே வேந்தற்கு வேண்டும் பயனை நல்கிற்றாக, அவ் வேந்தனால் இவ்வூர் விரிச்சி நின்றவளுக்கு வழங்கப்பட்டதாகல் வேண்டும். அதனால் இவ்வூர் விரிச்சியூர் எனப்படுவதாயிற்று. கணியூர், மருத்துவக்குடி , பிரமதேயம் முதலிய ஊர்கள் இவ் விரிச்சியூர் போலப் பெயர் எய்தினவாகும். இவ்வூர் இடைக்காலத்தே பெரிச்சியூர் என (A.R.No. 66 of 1924) மருவி வழங்குவதாயிற்று. நன்னாகனாரென்ற பெயருடனே சான்றோர் வேறே இருத்தலால் அவரிற் பிரித்தறிதற்கு இந்த நன்னாகனார், ஊர்ப்பெயரோடு இணைந்து விரிச்சியூர் நன்னாகனார் என வழங்கப்பட்டனர். இவர் பாடியதாக இவ்வொரு பாட்டுத்தான் கிடைத்துள்ளது. இதன்கண், உண்டாட்டு நிகழுமிடத்து ஒரு வீரன் முறை தவறினா னென. வெகுண்டவர்க்குச் சான்றோராகிய நன்னாகனார் அவனது ஆண்டகைமையை எடுத்தோதிப் பாராட்டியுள்ளார். வேந்தற் கேந்திய தீந்தண் ணறவம் யாந்தனக் குறுமுறை வளாவ விலக்கி வாய்வாள் பற்றி நின்றனெ னென்று சினவ லோம்புமின் சிறுபுல் லாளர் 5 ஈண்டே போல வேண்டுவ னாயின் என்முறை வருக வென்னான் கம்மென எழுதரு பெரும்படை விலக்கி ஆண்டு நிற்கு மாண்டகை யன்னே. திணை : வஞ்சி. துறை : பெருஞ்சோற்று நிலை. விரிச்சியூர் நன்னாகனார் பாடியது. உரை : வேந்தற்கு ஏந்திய தீந்தண் நறவம் - வேந்தன் பொருட்டுப் பசும்பொன் மண்டையில் எடுத்துக் கொடுத்த தீவிய குளிர்ந்த நறவை; தனக்கு உறும் முறை யாம் வளாவ - தனக்குரிய முறைப்படியே யாங்கள் கலந்து கொடுத்தேமாக; விலக்கி வாய் வாள் பற்றி நின்றனன் என்று சினவல் ஓம்புமின் - இவன் அதனை மறுத்துத் தன் வாய் வாளைக் கைப்பற்றி எழுந்து நிற்பானாயினான் என்று சொல்லி இவனை வெகுளுதலை விட்டொழிவீர்களாக; சிறு புல்லாளர் - சிறிய புல்லாண்மை யுடையவர்களே; ஈண்டேபோல வேண்டுவனாயின் - இங்கே எவ்வாறு ஆண்மையுடன் வாளைப் பற்றினானோ அவ்வாறே போர்க்களத்தும் செய்ய விரும்புவானாயின்; என் முறை வருக என்னான் - யான் பகைவரை நேர்படுதற்குச் செல்லும் முறை வருக என்று இரானாய்; கம்மென - விரைய; எழுதரு பெரும் படை விலக்கி - தனக்கு முன்னே எழுகின்ற பெரிய படையைக் குறுக்கிட்டு விலக்கி; ஆண்டு நிற்கும் ஆண்டகையன் - அவ் விடத்தே முந்துற்று நிற்கும் ஆண்டகைமையையுடையன் என்று அறிவீர்களாக; எ-று. புல்லாளர், தாம் புல்லிய ஆண்மையை யுடையராயிருந்தே பிறர் தம்மைப் பேராண்மையுடை யாரென வுயர்த்துக் கூறுவ ரென மெய்ம்மையாகப் பேராண்மையுடையார் செய்கைகளை ஏறட்டுக் கூறுபவர். இஃது சிறுமையுடையாரிடத்தே காணப் படுதலின், சிறு புல்லாளர் என்றார்; அண்மைவிளி. சினந்த வழிப் போர்க்குரிய அமைதி கெடுமாதலின், “சினவல் ஓம்பு மின்” என்றார். நும்மைப்போற் சொல்லளவின்றிச் செயலிலும் தன் ஆண்மையைத் தோற்றுவிப்பவன் என்பதைத் தெளிய உணர்வீர்களாக என்பார், “பெரும்படை விலக்கி ஆண்டு நிற்கும் ஆண்டகையன்” என்றார். படைவீரர் அனைவரும் முறைகெட ஒழுகுவராயின், போர்வினை வென்றி பயவாதாகலின், முறைக்கேட்டினை அவன் செய் பவனல்லன் என்றதற்கு “வேண்டுவனாயின்” என்றார். வேண்டு வனாயின் என்றது முறைகெட ஒழுகும் சிறுமை அவன்பால் இல்லை என்பது தோற்றிநின்றது. சிறுபுல்லாளர், சினவல் ஓம்புமின்; வேண்டுவ னாயின், என்னான், கம்மென, விலக்கி, நிற்கும் ஆண்டகையன் என வினைமுடிவு செய்க. விளக்கம் : பெருஞ்சோற்று நிலையாவது, “திருந்தார் தெம்முனை தெறுகுவ ரிவரெனப், பெருஞ்சோ றாடவர் பெறுமுறை வகுத்தன்று” (பு.வெ. 3:23) என வரும். வேந்தருண்ணும் நறவம் களிப்பு மிகவுடைய தன்மையின், அதனை ஏனை மறவர்க்குக் கொடுக்குமிடத்து அவர்க்கேற்பக் களிப்புத்தரும் கலங்கல் நறவம் கலந்து தருவது முறை. அம் முறையிற் சிறிதுபோது தாழ்த்தது பொறாது அதனை விலக்கிப் போர்க்குச் செலவு மேற்கொண்டு வாள்பற்றி நின்றான் என்பது போதர, “யாந்தனக்கு உறுமுறை வளாவ விலக்கி, வாய்வாள் பற்றி நின்றனன்” என்று சிறுபுல்லாளர் கூற்றினைக் கொண்டு கூறினார். இவ் வண்ணம் கழிசினமுடையான்போல் வாள் பற்றி நின்றதுகொண்டு அவனை எள்ளித் துயருறேன்மின் என்பார், “சினவல் ஓம்புமின்” என்றும், சிறுபுல்லாளராகிய நும் சினம் செல்லாது, அவன் சினம் செல்லும் என்பார், “வேண்டுவனாயின்.......ஆண்டகை யன்னே” யென்றும் கூறினார். பெரும்படை வரினும் அஞ்சாது ஒருவனே கற்சிறை போல் விலங்கி நின்று வென்றி யெய்துவனென்றற்குப் “பெரும்படை விலக்கி ஆண்டு நிற்கும்” என்றார். 293. நொச்சிநியமங்கிழார் இச் சான்றோர்க்கு நியமம் என்னும் ஊர் உரியதாகும்.இப் பெயருடைய ஊர்கள் பல இருத்தலால் , நொச்சிவேலி சூழ்ந்து பிறவற்றின் வேறுபடுதலின், இந் நியமம் “நொச்சிநியமம்” எனப் பட்டது. இஃது இப்போது நொச்சியமென வழங்குகிறது. இது திருச்சிராப்பள்ளியிலிருந்து முசிறிக்குச் செல்லும் வழியில் உத்தமர் கோயிலுக்கு அண்மையில் உளது. இந் நொச்சி நியமங் கிழாருடைய இனிய பாட்டுகள் அகத்திலும், நற்றிணையிலும் உள்ளன. காட்டில் குறமகளிர் வேங்கைப் பூவைப் பறித்தற்கு மாட்டாது புலி புலியென இரைச்சலிடுவதும், அது கேட்கும் குறவர் வில்லேந்தி ஓடிவருவதும், அவர்களைக் கொண்டு இம் மகளிர் தாம் வேண்டும் பூவைப் பெறுவதும் இவர் பாட்டில் அழகுறக்குறிக்கப் படுகின்றன. மனை வாழ்வில் தலைவன் பிரிந்தவிடத்து வேறுபட் டாற்றாத தலைமகட்குத் தோழி தலைவன் அன்புநிலையை எடுத்தோதி ஆற்றுவிக்கும் திறம் இவரால் மிக்க நயமுறப் பாடப்பெறுகின்றது. களவின்கண் தலைவி அறத்தொடு நிற்கும் விரகும், வேண்டுமிடத்து வழங்கும் முன்னிலைப் புறமொழியும் இலக்கிய இன்பவூற்றாக உள்ளன. நகர்ப்புறத்தே போர் நிகழும் காலத்தே, அரண் சூழ்ந்த நகர்க் குள்ளிருந்த நெடுமனை யொன்றிற்கு இச் சான்றோர், ஒருகால் சென்று அங்கே இருந்து மறக்குடி மகளிரின் செயல் நலங்களைக் காணும்பேறு பெற்றார். தானை வீரரும் தானைத் தலைவரும் வாழும் தெருவழியே வருகையில் பூ விற்கும் மகளிர் அத் தெருவில் இயங்காது வேறு தெருக்களை நோக்கிச் செல்வது கண்டார். ஒரு வீரனது மனைக்குட்சென்று அவன் மனையோளைக் கண்டு சொல்லாடுங்கால் தாம் கண்ட இக் காட்சியைத் தெரிவித்தார். மறக்குடி மகளாகிய அவள், “சான்றீர்! வள்ளுவன் யானைமேலிருந்து தனது தண்ணுமையை ஒலித்து, அரணுக்குப் புறத்தே முற்றி நிற்கும் பகைவரை யெறிதற்குச் செல்லும் வீரர்க்குக் காஞ்சிப்பூ உரியதாதலால், அதனைச் சென்று பெறுமாறு பணிப்பன். அவ்வொலி ஈண்டு மனையிடத்துள்ளார் செவியிற் கேட்குமாறு ஒலிக்கின்றது. போர்ப்பறை கேட்ட அளவிலே புறப்பட்டுச் செல்லற்பாலராகிய வீரருள் நாணமில்லாதார் சிலர் இப்பூக்கோள் குறித்த தண்ணுமையொலி கேட்குமளவும் மனையிடத்தேயிருப்பர். அவரை விரைய வருமாறு அழைப்பதும் அதன் கருத்தாகும். இத் தண்ணுமை யொலி கேட்டபின் பூவிலைப் பெண்டு, ‘போர் தொடங்கிவிட்டது; இனி ஆடவர் மனைக்கண் இரார்; அதனால் இம்மனை மகளிர் நம்பால் பூக்களை வாங்கமாட்டார்’ என்று கருதிப் பிறர் மனைக்கண் செல்கின்றாள்; அளியள்” என்று பூவிலைப் பெண்டின் பொருட்டு இரங்குவாள்போல எடுத் துரைத்தாள். இது கேட்ட நொச்சிநியமங்கிழார் வியப்பு மிகக் கொண்டு அவள் கூற்றுப் பொருளாக இப்பாட்டைப் பாடியுள்ளார். நிறப்படைக் கொல்கா யானை மேலோன் குறும்பர்க் கெறியு மேவற் றண்ணுமை நாணுடை மாக்கட் கிரங்கு மாயின் எம்மினும் பேரெழி லிழந்து வினையெனப் 5 பிறர்மனை புகுவள் கொல்லோ அளிய டானே பூவிலைப் பெண்டே. திணை : காஞ்சி; துறை : பூக்கோட்காஞ்சி. நொச்சி நியமங்கிழார் பாடியது. உரை : நிறப்படைக்கு ஒல்கா யானை மேலோன் - குத்துக்கோற்கு அடங்காத யானைமேலிருப்போனாகிய வள்ளுவன்; குறும்பர்க்கு எறியும் ஏவல் தண்ணுமை - அரண் புறத்தே நின்று பொரும் பகைவர் பொருட்டு முழக்கும் பூக்கொள்ளுமாறு ஏவுதலை யுடைய தண்ணுமையொலி; நாணுடை மாக்கட்கு இரங்கும் - போர்ப்பறை கேட்ட துணையானே புறப்படாத நாணமில்லாத வீரர் இதனைக்கேட்டு விரையச்சென்று போர்ப்பூவைப் பெறுமாறு ஒலியாநிற்கும்; ஆயின் - ஆதலால்; எம் மினும் பேரெழில் இழந்து - மனைமகளிராகிய எம்மினும் பெரிய தனது எழுச்சி குன்றி; வினையென - போர் நிகழுங் கால மாதலின் தனித்துறையும் மனைமகளிர் இனிப் பூக்கொள்ளா ரென்று கருதி; பூவிலைப் பெண்டு - பூ விற்கும் பெண்டு;பிறர் மனை புகுவள் - பிற மகளிர் வாழும் மனைகட்குச் செல்லு கின்றாள் போலும்; அளியள் - அளிக்கத்தக்காள்; எ-று. நிறப்படை - குத்துக்கோல், வலிமிக்க பட்டத்தியானை யென்றற்கு “நிறப்படைக் கொல்கா யானை” யென்றார். தன்பால் எழும் ஒலியால் வேந்தனால் தரப்படும் காஞ்சிப்பூவைப் பெறு மாறு வீரரைப் பணித்தலைச் செய்தலின், “ஏவல் தண்ணுமை” என்றார். போர்க்களத்தில், பகைவரை மேற்சென்றெறியுமாறு ஏவுவது “ஏவல் வியன்பணை” (பதிற். 39) எனப்படும். நாணுடை மாக்கள்; எதிர்மறைக் குறிப்பு மொழி. தனிமைத் துயருழந்து எழிலிழக்கும் எம்மினும், எம்போற்பலருடைய தொடர் பிழந்து பூ வாணிகம் குன்றவரும் இன்னாமையும் கொண்டு பெருந்துன் பமுழத்தலின் பேரெழிலிழந்து” என்றும். எனவே அவள் இரங்கத் தகும் நிலையினளென்பது தோன்ற, “அளியள்” என்றும் கூறினாள். தண்ணுமை இரங்கும்; ஆயின் பூவிலைப் பெண்டு இழந்து, வினையெனப் பிறர்மனை புகுவள்; அளியள் என வினைமுடிவு செய்க. விளக்கம் : பூக்கோட் காஞ்சியாவது “காரெதிரிய கடற்றானை, போரெதிரிய பூக்கொண்டன்று” (பு.வெ.மா. 4:10) என வரும். நுதலிற் பாய்ந்து நோய் செய்வது பற்றி, குத்துக் கோல் “நிறப்படை” யெனப்பட்டது. குறும்பர், அரண்புறத்தே முற்றிநின்று போரெதிர்ந்து நிற்கும் பகைவர்; அவரொடு பொருவது குறித்துப் பூக்கோள் அறையப்படுவதனால், “குறும்பர்க்கெறியும் ஏவல் தண்ணுமை” யென்றாள். நாணுடைமாக்கள் என்றதற்கு நாண் உடைந்த மாக்கள் என்று உரைத்தலுமுண்டு. பிறர் மனை, போர்க்கு ஆகாரென விலக்கப்பட்ட பார்ப்பனர், நோயுற்றார், மகப்பெறாதார் முதலாயினார் மனை. “விலையெனப் புகுவள்” என்று பாடமோதுதலுமுண்டு. மறக்குடி மகளிர் பூவிலைப் பெண்டிர்க்கு நன் கலங்களை வீறுபட வழங்கும் இயல்பினர்; காஞ்சி சான்ற உள்ளமும், போர்செய்து பெற்ற அருங்கலன்களும் அம் மகளிர் உடையர்; அவர்பூவை விலக்கியது பூவிலை மகட்குப் பெருவருத்தத்தைச் செய்ததென வறிக. அவளது வருத்தத்தை அவள் கூறும் பூவிலை யொலியே எடுத்துக் காட்டுதலால்” “அளியள்” என இரங்கினாள். 294. பெருந்தலைச் சாத்தனார் பெருந்தலைச் சாத்தனார் சிறந்த மறப்பண்புடையரென்பதை இளங்கண்டீரக்கோவும், இளவிச்சிக்கோவும் ஒருங்கிருந்தவழிச் சென்று இளங்கண்டீரக்கோவைப் புல்லி இளவிச்சிக்கோவைப் புல்லாதொழிந்த செயலாலும், புல்லாமைக்குக் கூறிய காரணத் தாலும் நன்கறிந்துள்ளோம். குமணன் தந்த வாள் கொண்டு அவன் தம்பி இளங்குமணன் உள்ளத்தை மாற்றிச் செம்மை செய்த அவரது சிறப்பு நாடறிந்தது. ஒருகால், பரிசில் வேண்டிச் சென்ற நம் பெருந்தலைச் சாத்தனார்க்குக் கடியனெடுவேட்டுவனும், மூவன் என்பானும் பரிசில்தர நீட்டித்தாராக, சாத்தனார் வேட்டுவனை, “நோன்சிலை வேட்டுவ நோயிலை யாகுக”என்றும் மூவனை. “ஈயாயாயினும் இரங்குவெனல்லேன், நோயிலை யாகுமதி” என்றும் கூறியது அவரது பெருந்தகைமையை இனிது காட்டி நிற்கிறது. இத்தகைய சான்றோர் ஒருகால் போர்க்கள நிகழ்ச்சி யொன்றை நேரிற் காண நேர்ந்தது. இரவில் பாசறைக் கண் தங்கிய தானைத் தலைவன், பகலில் போர்க்களத்தில் நின்றான். இருதிறத்துப் படை வீரரும் எதிர் நின்று பொருபவர் தமரென்றும் பிறரென்றும் பாராது கடும்போர் புரிந்தனர். தானைத் தலைவன் போர்க்களத்துட் சென்று பகைவரை நோக்கி, நும்பெயரையும் நுங்கள் இறைவன் சிறப்பையும் விளக்கி நுங்கள் வாழ்நாள் முறையையும் முடித்துக்கொண்டவர் இங்கு எம்பால் போர்க்கு வருக எனச் சொல்லி எதிர்ந்த பெருவீரர் பலரை வென்று ஒருபால் நின்றான். அவனது போர்த்திறங்கண்ட மாற்றார், பாம்புமிழ்ந்த மணியைஎவ்வாறு எவரும் குறுகுதற் கஞ்சுவரோ அவ்வாறே அவனைக் குறுகுதற்கு அஞ்சினர். இதனைக்கண்டு வியப்புற்ற பெருந்தலைச்சாத்தனார் போர் முடிந்தபின் அத் தலைவன் தன் மனைக்கண் இருக்கையில் சென்று அவன் மனைவி கேட்ப அவன் செயலையுரைத்து மகிழ்வித்தார். அவ்வுரை இப் பாட்டில் எடுத்துக் கூறப்படுகிறது. இவருடைய வூராகிய பெருந்தலை, பெருந்தலையூரென்னும் பெயரோடு கோயமுத்தூர் மாவட்டத்தில் உளது. வெண்குடை மதிய மேனிலாத் திகழ்தரக் கண்கூ டிறுத்த கடன்மருள் பாசறைக் குமரிப்படை தழீஇய கூற்றுவினை யாடவர் தமர்பிற ரறியா வமர்மயங் கழுவத் 5 திறையும் பெயருந் தோற்றி நுமருள் நாண்முறை தபுத்தீர் வம்மி னீங்கெனப் போர்மலைந் தொருசிறை நிற்ப யாவரும் அரவுமிழ் மணியிற் குறுகார் நிரைதார் மார்பினின் கேள்வனைப் பிறரே. திணை : தும்பை; துறை : தானை மறம். பெருந்தலைச் சாத்தனார் பாடியது. உரை : வெண்குடை மதியம் மேல் நிலாத் திகழ்தர - வெண் குடைபோலும் முழுத்திங்கள் வானத்தின்மேனின்று நிலவைப் பொழிந்து விளங்க; கண் கூடு இறுத்த கடல்மருள் பாசறை - படை வீரர் ஒருங்கு கூடித் தங்கியிருந்த கடல்போன்ற பாசறை யின் நீங்கிச் சென்று; குமரிப்படை தழீஇய கூற்றுவினை யாடவர் - புதுமையுறச் செம்மை செய்யப்பட்ட வேல் முதலிய படைகளைக் கைக்கொண்ட கொலைத் தொழிலையுடைய போர்வீரர்; தமர் பிறர்அறியா அமர் மயங்கு அழுவத்து - எதிர்வோர் உறவின ரென்றும் பிறரென்றும் பாராமல் கை கலந்து செய்யும் போர்க் களத்தில்; இறையும் பெயரும் தோற்றி இறையும் பெயரும் தோற்றுவித்து; நுமருள் நாண்முறை தபுத்தீர் - நும்மில் வாழ்நாண் முறை முடிந்தவர்; வம்மின் ஈங்கு என போர் மலைந்து ஒரு சிறை நிற்ப - வருக இவண் என்னோடு பொருதற்கென்று சொல்லி வந்த பெரு வீரர் பலரையும் வென்று ஒரு புறத்தே நின்றானாக; அரவு உமிழ் மணியின் பிறர் யாவரும் குறுகார் - பாம்புமிழ்ந்த மணியை எவரும் குறுகாதொழிவது போலப் பகைவர் யாவரும் குறுகாராயினர்; நிரைதார் மார்பின் நின் கேள்வனை - நிரையாகத் தொடுக்கப்பட்ட மாலையை யுடைய நின் கொழுநனை; எ-று. வெண்மதியத்தின் நிழலினும் வேந்தன் வெண்குடை நீழல் சிறந்த தாதலின், வெண்குடைபோலும் மதியம் எனப்பட்டது. வாய்தீட்டி நெய்பூசப் பெற்றுச் செம்மையுற்றிருக்கும் வேலும் வாளும் பிறவுமாகிய படை குமரிப்படை உயிரை உடம்பினின்றும் நீக்கும் தொழிலைச் செய்வது கூற்றின் செயலாதலின், அதனைச் செய்யும் போர் வீரரைக் “கூற்றுவினை யாடவர்” என்றார். சீரிய வீரருடன் நேரிய முறையில் போர் புரிவது வீரர்க்குப் புகழும் அவரை யாளும் வேந்தர்க்குப் பெருமையும் பயத்தலின், “இறையும் பெயரும் தோற்றி” யென்றார். பாசறை யென்பதில் ஈற்றில் நீக்கப் பொருட்டாகிய இன்னுருபு தொக்கது. விளக்கம் : தானை மறமாவது, “தாம் படைத்தலைக் கொள்ளாமை ஓம்படுத்த வுயர்பு கூறின்று” (பு.வெ.மா. 7:3) என வரும். நச்சினார்க்கினியரும், “தானை யானை குதிரை யென்ற, நோனாருட்கும் மூவகை நிலையும்” (தொல். புறத். 17) என்றவிடத்துத் தானைநிலை யென்பதற்கு இப்பாட்டினை யெடுத்துக் காட்டுவர். உவமம் பொருளினும் உயர்வுடைய தென்பது பற்றி, “வெண்மதியத்தின்......எனப்பட்டது” என வுரைக்கப்பட்டது. குமரிப்படை யென்றது, புதியவாய்ச் செய்து வாய் தீட்டி நெய் பூசப்பெற்று முதன் முதலாக எறிதற்கேந்தும் படை யென்றுமாம். ஓரிடத்தே கூடி நிறைந்திருக்கும் பாடி வீடு, “கண்கூடிறுத்த பாசறை” யெனப்பட்டது. இது கட்டூர் என வழங்கும்; “கடல் கிளர்ந்தன்ன கட்டூர்” (புறம். 295) என்று பிறரும் கூறுவது காண்க. போர் எதிர்ந்தவழித் தமரென்றும் பிறரென்றும் பாராது பொருவது மறவர் இயல்பாதலால் “தமர் பிறர் அறியா அமர்” என்றார். இதனைச் சிலர் படைமடம் என்ப. படைமடம் மறவர்க்கு இழுக்காதலின், அது சிறவாமையறிக; “கொடைமடம் படுதலல்லது, படைமடம் படான் பிறர் படை மயக்குறினே” (புறம் 142) என்றும், “படைமட மென்றது வீரரல்லாதார் மேலும் முதுகிட்டார் மேலும் புண்பட்டார் மேலும், மூத்தார் இளையார்மேலும் செல்லுதல்” (பழையவுரை) என்றும் சான்றோர் உரைப்பது காண்க. நிலைமக்கள் சால வுடைத்தெனினும் தானை, தலைமக்கள் இல்வழி இல்” (குறள். 770) என்பதனால் வெற்றியுற நிகழும் போரில் தலைவன் பெயரும் விளக்கம் பெறுதலின், “இறையும் பெயரும் தோற்றி” யென்றார். வாணாட்கோள் பகை மறவர் நீணாட்கோள் எனப்படும் வழக்குப் பற்றி, நாண் முறை தபுத்தீர் என்றதற்கு வாழ்நாள் முறை முடிந்தவர்களே என்று உரை கூறப்பட்டது. பிறரும் “யாவருங், குறுகலோம்புமின் குறை நாண் மறவீர்” (புறத். 134.2) என்பது காண்க. இனி நாண் முறை யென்புழி நாண், நாணம் என்பாரு முளர். நாணிழந்தவர் ஒத்த பண்புடைய மறவ ராகாமையின், அவரைத் தமிழ்மறவர் போர்க்கு அழையாரென அறிக. “மறமானம் மாண்டவழிச் செலவு தேற்றம், என நான்கே யேமம் படைக்கு” (குறள். 766) வந்த வழி நாள் முறை கெடுதல் தப்பா தென்றற்குப் தபுத்தீர் என இறந்த காலத்தாற் கூறினான். 295. ஒளவையார் ஒருகால் வேந்தர் இருவர் தும்பை சூடிப் போருடற்று வாராயினர். இருவர் பக்கத்தும் வீரர் பலர் பொருது வீழ்ந்தனர். வீழ்ந்த வீரருள் பலர் அரிய போருடற்றிப் பகைவரால் வேறு வேறாகத் துணிக்கப்பட்டனர். அவருள் வீரனொருவனுடைய தாய்க்குப் போர் முடிவில் அவன் மாண்ட செய்தியைத் தெரிவித்தனர். அவன் வீழ்ந்த திறத்தைக் காண்பதற்கு அவளும் போர்க்களஞ் சென்றாள். அதனை ஒளவையார் அறிந்து அவள் செயலை உற்று நோக்கினார். அத்தாய் மிகவும் முதியள். போர்க்களத்தே வீழ்ந்து கிடக்கும் வீரரிடையே அவள் மகன் சிறப்புறப் பொருததன் பயனாக உடல் சிதைக்கப்பட்டிருப்பது கண்டு சிறப்புடைய அவன்பால் உள்ளங் கரைந்தாள். அன்பின் முதிர்வால் வற்றி வாடிய அவள் மார்பில் பால் சுரந்தது. ஒளவையாருக்கு வியப்பு மிகுந்தது. அம்மிகுதி இப் பாட்டினுருக் கொண்டு வெளிப்பட்டது. கடல்கிளர்ந் தன்ன கட்டூர் நாப்பண் வெந்துவாய் வடித்த வேறலைப் பெயரித் தோடுகைத் தெழுதரூஉத் துரந்தெறி ஞாட்பின் வருபடை போழ்ந்து வாய்ப்பட விலங்கி 5 இடைப்படை யழுவத்துச் சிதைந்துவே றாகிய சிறப்புடை யாளன் மாண்புகண் டருளி வாடுமுலை யூறிச் சுரந்தன ஓடாப் பூட்கை விடலை தாய்க்கே. திணை : தும்பை; துறை: உவகைக் கலுழ்ச்சி, ஒளவையார் பாடியது. உரை : கடல் கிளர்ந்தன்ன கட்டூர் நாப்பண் - கடல் கிளர்ந்தாற் போன்ற பாசறையொடு கூடிய போர்க்களத்தின் நடுவில்; வெந்து வாய் வடித்த வேல் தலைப்பெயரி - நெருப்பில் வேகவைத்து வாயைக் கூரிதாகத் தீட்டிய வேலைப் பகைவர் பால் திருப்பி; தோடு உகைத்து எழுதருஉ - மறவர் தொகுதியை முற்படச் செலுத்தித் தானும் முற்பட வெழுந்து சென்று; துரந்தெறி ஞாட்பின் - அம்பும் வேலும் செலுத்திப் பகைவரைக் கொல்லும் போரில்; வருபடை போழ்ந்து வாய்ப்பட விலங்கி - மேல்வரும் பகைவர் படையைப் பிளந்து தானும் துணைவரும் நின்று பொருதற்கு வேண்டும் இட முண்டாகக் குறுக்கிட்டுத் தடுத்து; இடைப்படை யழுவத்து - படைத்திரளின் இடை நடுவில் உண்டாகிய களத்தில்; சிதைந்து வேறாகிய சிறப் புடையாளன் மாண்பு கண்டு - வெட்டுண்டு துணி துணியாய் வேறு பட்டுக்கிடந்த சிறப்புடையாளனாகிய தன் மகனுடைய மற மாண்பைக் கண்டு; அருளி - அன்பு மிகுந்து; வாடு முலை யூறிச் சுரந்தன - வற்றிய முலைகள் மீண்டும் பாலூறிச் சுரந்தன; ஓடாப் பூட்கை விடலை தாய்க்கு - பின்னிடாத கொள்கை யினையுடைய காளைக்குத் தாயாகிய இவளுக்கு; எ-று. வீரர் தொகுதியைத் தன்னோடே முன்வரச் செலுத்துதலின், தானைத் தலைவன் என்பது விளங்கிற்று. துரந்தெனவே, அம்பும் வேலும் கொள்ளப்பட்டன. துரத்தற்கமைந்தன அவையாகலின், பகைவரும் வெள்ளம்போல் அணியணியாய் வருதல் தோன்ற “வருபடைபோழ்ந்து” என்றார். வாய்ப்படை விலங்கி யென்று பாடமாயின், பகைவரிடையே தப்பாத படைகொண்டு குறுக்கிட்டு நின்றெனவுரைத்தலுமொன்று. இடைப்படை யழுவம் புகுந்து போருடற்றுவது சிறப்புடையாளர் செயலாதலின், சிறப்புடையாளன் என்றார். ஈன்ற ஞான்றைய அன்பிலும் மாண்பு கண்டவழிப் பிறந்த அன்பு மீதூர்ந்தமை தோன்ற, “அருளி” யென்றார். முலையூறிச் சுரந்தன என்புழி இடத்து நிகழ் பொருளின் வினை இடத்தின் மேனின்றது. தலைப்பெயரி, உகைத்து, எழுதரூஉ, போழ்ந்து, விலங்கி, சிதைந்து வேறாகிய என இயையும்; கண்டு, அருளி, தாய்க்கு, ஊறிச் சுரந்தன என மாறிக் கூட்டி வினைமுடிவு செய்க. விளக்கம் : போர்மேற் செல்லுந் தானை தங்குதற்காகப் புதிதாகக் கட்டப்படும் பாசறை, கட்டூர் எனப்பட்டது. அணியணியாய்த் தங்கும் தானைநிலை தெருப்போலக் காட்சியளித்தலின், ஊரெனப்பட்டது. பின்னர் இவ்விடமே ஊராக மாறியது முண்டென அறிக; தொண்டை நாட்டூர்களுள் “பெருங் கட்டூர்” என்றோர் ஊருமுண்டு. “கட்டூர் நாப்பண் வெந்து வாய் வடித்த வேல் பெயரி” என்பதனால், கட்டூரிடையே கொல்லருலைக்கள மிருந்து, போரிடை மடியும் வேலும் வாளும் செம்மை செய்தலும் வடித்தலும் செய்துகொண்டிருக்குமென்பது துணியப்படும். வெந்து வாய்மடித்து என்ற பாடத்துக்குப் போர் குறித்தெழுந்த சினத்தீயால் உடலகம் வெந்து வாயிதழ் கடித்து என வுரைக்க. தோடு, தொகுதி, வெள்யாடு போலத் தலைமகனைப் பின்தொடர்வது பற்றி, தானைத் தொகுதி தோடெனப் பட்டதென்றுமாம். ஞாட்பு, போர்க்களம், அழுவம் ஆழ்ந்த இடம், களத்தின் நடுவிடம் அழுவம் போறலின் அழுவம் எனப்பட்டது. சிறப்பு, ஏனைமறவர் பலர்க்கும் இல்லாத போர்ச்சிறப்பு. மாண்பு, போரிடை வஞ்சியாது பொருது விழுப்புண் பட்டு வீழ்ந்தது; “நோற்றோர் மன்றதாமே கூற்றம், கோளுற விளியார் பிறர்கொள விளிந்தோர்” (அகம். 61) என்று சான்றோர் இம் மாண்பினை விளங்கக் கூறுமாறு காண்க. உயிரின்றிச் சிதைந்து வேறாகிய உடம்பின் சிதைவு கண்டு அன்பு பெருகி நிற்றலின், “அருளி” என்றும், அதனால் மார்பிடைப் பால் சுரந்ததென வியந்து கூறுவார், “வாடுமுலையூறிச் சுரந்தன” என்றும் கூறினார். ஓடாப் பூட்கை, பிறக்கிடாத மேற்கோள், உவகைக் கலுழ்ச்சியாவது, “வாள் வாய்த்த வடு வாழ் யாக்கைக், கேள் கண்டு கலுழ்ந்து வந்தன்று” (பு.வெ.மா. 8:25) என வரும். 296. வெள்ளை மாறனார் வெள்ளை மாறனார் என்ற இச் சான்றோர் பெயர் அச்சுப் பிரதிகளில் வெள்ளை மாளரென்று காணப்படுகிறது. இப் பெயர் வெள்ளை மாளனார் என்று கொள்ளக் கிடக்கின்றது. இவரைப் பற்றி வேறு குறிப்பொன்றும் கிடைத்திலது. இவர் பாடியதாக இந்த ஒரு பாட்டுத்தான் உளது. முன்னைப் பதிப்பாசிரியராகிய திரு. உ.வே. சாமிநாதையரவர்கள், “இவர் பாடிய ஏறாண் முல்லைத்துறை மிக்கபொருள் நயமுடைய” தென்ற ஒரு கருத்தையே இவரைப்பற்றிக் குறித்துள்ளார். போர்க்குச் சென்றிருந்த வீரருள், இறந்தோரொழியப் புண்பட்ட வீரர் பலர் ஓரூரில் தத்தம் இல்லம் வந்துசேர்ந்தனர். அவர் மனைகளில் புண்ணையாற்றுவது குறித்து வேப்பிலை கொணர்ந்து மனையிறைப்பில் செருகுவதும் காஞ்சிப் பண் பாடுவதும் ஐயவி புகைப்பதுமாகிய செயல்களால் கல்லென்னும் ஓசை மிக்கிருந்தது. போர் முடியும் நிலையில் இருந்தமையின் வீரர் சிலர் வரத்தாழ்த்தனர். சிறப்புடைய வீரனொருவனது தேர் நெடிது தாழ்த்து வந்தது. அது கண்டு மகிழ்ச்சியுற்ற அவன் தாய், தாழ்த்தற்குக் காரணம் காண்பாளாய், பகைவேந்தனை வீழ்த் தல்லது மீளலாகாதெனத் தன்மகன் பொருகின்றான் போலும்; இன்றேல் அவன் தேர் நெடித்து வாராதென்றாள். இதனை யுவகையுடன் கண்ட ஆசிரியர் வெள்ளை மாறனார் இப் பாட்டின் கண் அவள் கூற்றினைத்தாம்கொண்டு கூறியுள்ளார். வேம்புசினை யொடிப்பவுங் காஞ்சி பாடவும் நெய்யுடைக் கைய ரையவி புகைப்பவும் எல்லா மனையுங் கல்லென் றவ்வே வேந்துடன் றெறிவான் கொல்லோ 5 நெடிதுவந் தன்றா னெடுந்தகை தேரே. திணை : வாகை. துறை : ஏறாண் முல்லை. வெள்ளை மாறனார் பாடியது. உரை : வேம்பு சினை யொடிப்பவும் - வேம்பின் கிளையை யொடித்து அதன் இலை கொணர்வதிலும்; காஞ்சி பாடவும் - காஞ்சிப் பண் பாடுவதிலும்; நெய்யுடைக் கையர் ஐயவி புகைப்பவும் - நெய்யுடைக் கையராய் மனையோர் வெண் சிறு கடுகைப் புகைப்பதிலும்; எல்லா மனையும் கல்லென்ற - எல்லா ருடைய மனைகளும் கல்லென்ற ஆரவாரத்தை யுடையவா யிராநின்ற; வேந்து உடன்று எறிவான் கொல்லோ - பகை வேந்தனைச் சினந்து அவனை வீழ்த்தவல்லது மீளலா காதெனப் பொருகின்றான் போலும்; நெடுந்தகை தேர் நெடிது வந்தன்று- நெடுந்தகையாகிய இவனுடைய தேர் நெடிது தாழ்த்து வந்தது. எ-று. நெடித்தென்பது நெடிதென வந்தது. எல்லா மனையும் கல்லென்ற; தேர் நெடிது வந்தன்று; அதனால் எறிவான் கொல்லோ என வினைமுடிவு செய்க. வந்ததன்றென்பது வந்தன்றென விகார மாயிற்றெனக் கொண்டு, பொழுது நெடிதாகியும் வாராதாயிற்று; எறிவான் கொல்லோ என்றுரைத்தலு மொன்று. விளக்கம் : ஏறாண் முல்லையாவது “மாறின்றி மறங்கனலும் ஏறாண் குடி யெடுத்துரைத்தன்று” (பு.வெ.மா. 8:22) என வரும். வேம்பின் தழையை மனையின்கட் செருகுவதும் காஞ்சிப்பண் பாடுவதும் புண்ணுற்றுவந்த வீரர் பொருட்டு அவர் மனையோர் செய்வது மரபு. அதனால் புண்ணுற்றோரைப் பேய்கள் அணுகா என்பது பண்டையோர் கருத்து. ஐயவி, வெண் சிறுகடுகு. அப்போழ்து ஐயவி புகைப்பதும் உண்டென்பதை, “நீயே ஐயவி புகைப்பவுந் தாங்காது ஒய்யென, உறுமுறை மரபின் புறநின்றுய்க்கும்........கூற்றத் தனையை” (புறம். 98) என்பதனாலு மறிக. ஏனை மனைக்குரிய வீரர்கள் விழுப்புண் பட்டுப் பேய்க்கோட்படாமை கருதி யேமமாவன செய்யப்பட்டனரெனவே, நெடித்து வந்த வீரன் புண்ணொன்றுமின்றி வந்தமை விளங்க, அவனை “நெடுந்தகை” யென்றாள். வெந்துடன்றென்பது பாடமாயின், சினமிக்குப் பகைவரை எறிதலையே மேற்கொண்டு போர் செய்யா நிற்கின்றான் போலும் என்றுரைக்க. 297. உண்டாட்டு வேந்தனொருவன் வெட்சிப் போர் புரியுங் கருத்தினனாகித் தானை வீரரை வருவித்தான். தானைவீரரும் அரசியற் சுற்றத்தாரும் ஒருங்கு கூடினர் உண்டாட்டு நிகழ்ந்தது. அக்காலை, தானைத் தலைவரிடையே போரில் மாண்புறப் போர்புரிபவர்க்குச் செய்யப்படும் சிறப்புகளைப் பற்றிப் பேச்சு நிகழ்ந்தது. போரில் பகைவர் எறியும் வேல் பல பாய்ந்து மடலொடு நிற்கும் பனை மரம்போல் சலியாது நிற்கும் தானை வீரர்க்குப் பைம்பயறு விளையும் சீறூர்கள் இறையிலிப் புரவாக வழங்கப்படின் யாம் அவற்றை விரும்பி யேலேம்; ஏற்க நேரில் நெல்லும் கரும்பும் விளையும் மருதநிலத்தூர்களையே யாம் விரும்புவேம் என்று ஒரு தலைவன் மொழிந்தான். அக் கூற்றில் யாம் பெறற்குரியது மறப்புகழே; பிறிதன்று; புகழோடு வேந்தன் தரும் ஊர்களைப் பெறுவதாயின் மருத நிலத்தூர்களையே யாம் விரும்புவேம் என்று விளம்புவதனால் வெளியாகும் உள்ளப் பெருமை புலவர் பாடும் பொற் புடையதாதலைக் கண்ட சான்றோர் ஒருவர் இப் பாட்டினைப் பாடியுள்ளார். அவர் பெயர் ஏட்டில் விடப்பட்டுள்ளது. பெருநீர் மேவற் றண்ணடை யெருமை இருமருப் புறழு நெடுமா ணெற்றின் பைம்பய றுதிர்த்த கோதின் கோலணைக் கன்றுடை மரையாத் துஞ்சுஞ் சீறூர்க் 5 கோளிவண் வேண்டேம் புரவே நாரரி நனைமுதிர் சாடி நறவின் வாழ்த்தித் துறைநணி கெழீஇக் கம்பு ளீனும் தண்ணடை பெறுதலு முரித்தே வைந்நுதி நெடுவேல் பாய்ந்த மார்பின் 10 மடல்வன் போந்தையி னிற்கு மோர்க்கே. திணை : வெட்சி; துறை : உண்டாட்டு......... உரை : பெருநீர் மேவல் தண்ணடை எருமை இருமருப்பு உறழும் - மிக்க நீரின்கண் இருத்தலை விரும்பும் மருதநிலத்தூர்களில் வாழும் தண்ணிய நடையினையுடைய எருமையினது பெரிய கொம்பைப்போலும்; நெடுமாண் நெற்றின் பைம்பயறு உதிர்த்த கோதின் - நெடிய முற்றிய நெற்றுக்களையுடைய பசிய பயற்றின் பயறு நீக்கப்பட்ட கோதுகளின்; கோல் அணை - திரட்சியைப் படுக்கையாகக் கொண்டு, கன்றுடை மரையா துஞ்சும் - கன்றை யுடைய மரையான் கிடக்கும்; சீறூர் புரவு கோள் இவண் வேண்டேம் - சிறிய ஊர்களைப் புரவாகக் கொள்வதை இவ் விடத்து வேண்டேம் - நாரரி நனைமுதிர் சாடி நறவின் வாழ்த்தி - நாரால் வடிக்கப்பட்டுப் பூக்களையிட்டு முதிர்வித்த சாடி யிலுள்ள கள்ளை வாழ்த்தி; துறைநணி கெழீஇக் கம்புள் ஈனும் - நீர்த்துறையிலிருக்கும் புதல்களைப் பொருத்திக் கம்புட்கோழி முட்டைகளையீனும்; தண்ணடை பெறுதலும் உரித்து - மருத நிலத்தூர்களைப் பெற்றால் பெறுவது உரியதாம்; வைந்நுதி நெடுவேல் பாய்ந்த மார்பின் - மிகக் கூரிய நெடிய வேல் தைத்து நிற்கும் மார்புடனே; மடல்வன் போந்தையின் நிற்கு மோர்க்கு - மடல் நிறைந்த வலிய பனைமரம்போல் நிற்கும் போர் வீரர்க்கு; எ-று. நிற்கு மோர்க்குத் தண்ணடை பெறுதலும் உரித்து; சீறூர்ப்புரவு கோள் வாழ்த்தி இவண் வேண்டேம் என வினை முடிவு செய்க. தரப் படுவதொன்றை வேண்டாவென விலக்கு மிடத்து நறவினை வாழ்த்துவது பண்டைப் போர்மறவர் மரபு. மரை ஆ - காட்டுப் பசு. பெறுதலும் என்ற உம்மை பெறாமையும் உரித்தென்பதுபட நிற்றலின் எதிர்மறை; மறப்புகழ் பெறுதலே இவண் பெரிதும் வேண்டப்படுவது என்பது எஞ்ச நிற்றலின் எச்சவும்மையுமாம். மறமுடையோர் புகழையல்லது பிற எவற்றையும் கொள்ளேம் என மறுப்பது சிறப்பு. மடல்வன் போந்தையுவமையால் மறவர் மார்பில் தைத்து வேலோடு நிற்பது பெற்றாம். விளக்கம் : உண்டாட்டாவது, “தொட்டிமிழுங் கழன்மறவர் மட்டுண்டு மகிழ்தூஉங்கின்று” (பு.வெ.மா. 1:15) எனவரும் . மருத நிலத்தூர் களின்கண்ணே மறவர் கருத்து ஒன்றி நிற்றலின், உவமையினும் , மருதநிலத் தெருமை மருப்பே கூறப்படுவதாயிற்றெனவறிக. பயற்றின் நெற்றுக்கு எருமை மருப்புவமம். பயற்றங் கோதுகளை அணையாகப் பரப்பி அதன் மீது மரையான் படுத்து உறங்கும். புரவு, இறையிலி, முற்றூட்டு என்பன பண்டை வேந்தர் சிறந்தேர்க்கு அளிக்கும் நிலக்கொடை வகை. புரவாவது விளைநிலம்; இதற்கு அரசிறையுண்டே யன்றிப் புரவுவரி கிடையாது. இறையிலியாவது அரசிறையன்றி யேனைப் புரவுவரி, கிடையாது இறையிலியாவது அரசிறையன்றி யேனைப் புரவுவரி முதலியன உளப்பட வழங்கும் நிலம். முற்றூட்டாவது, அரசிறை, புரவுவரி, பாடிகாவல் முதலிய வரியின்றி முழுதும் உரிமையாக வழங்கும் நிலம். பயறும் மரையாவும் கூறவே, சீறூரென்பது முல்லை நிலத்தூராயிற்று. இறையிலி கோயில்கட்கும், முற்றூட்டு வினை மேம்பட்ட சான்றோர்க்கும் கற்றுவல்ல நல்லிசைச் சான்றோர்க்கும் பண்டை மன்னரால் வழங்கப் பட்டமை இடைக்காலக் கல் வெட்டுகளால் அறியலாம். துறைக்கு அணித்தாக வளர்ந்துள்ள சண்பங்கோரைப்புதல் “துறைநணி” யெனப் பட்டது. “வெறியறி சிறப்பின்” (தொல்.புறத். 5) என்ற சூத்திரத்து, “தலைத்தாணெடுமொழி தன்னொடு புணர்த்தல் என்பதற்கு இதனை யெடுத்துக் காட்டி, “ மடல்வன் போந்தைபோல் நிற்பலென நெடுமொழி தன்னொடு புணர்த்தவாறு காண்க.” என்றும், “சீறூர் புரவாகக் கொள்ளேன் தண்ணடை கொள்வேன் எனத் தன்னுறு தொழில் கூறினா” னென்றும் கூறுவர் நச்சினார்க்கினியர். 298. ஆவியார் ஆவியாரென்னும் இச் சான்றோர், திருவாவிநன்குடியி லிருந்து ஆட்சிபுரிந்த வேளிர் குடியினர். “முருக னற்போர் நெடுவேளாவி” (அகம்.1) என்றும், “முழவுறழ் திணிதோள் நெடுவேள் ஆவி” (அகம். 61) என்றும் ஆவியர் குடி முதல்வன் சான்றோரால் குறிக்கப்படுகின்றான். அவனுடைய தலைநகர் பொதினி யெனப்படும். அதனைப் “பொன்னுடை நெடுநகர்ப் பொதினி” (அகம்.61) என்ப; அது பிற்காலத்தே பழனியென மருவிற்று. இந்த ஆவியர் வழியினர் பிற்காலத்தே நன்குடி வேளாளரென்றாகித் தென் பாண்டியில் வாழ்வாராயினர். அவருட் பலர் தொல்பெயரான ஆவியாரென்ற பெயர் தாங்கியிருக் கின்றனர். ஆலியா ரென்றும் பாட வேறுபாடுண்டு. அதுவே பாடமாயின் அவர் ஆலியென்னும் சோழநாட்டு ஊரினரெனக் கோடல் வேண்டும். பல்லவர் காலத்தே திருமால் அடியாராகச் சிறப்புற்றிருந்த திருமங்கை மன்னன் ஆலியென்னும் ஊரினராவர்; அவரைத் திருவாலிநாடர் என்பதும் வழக்கம். இத் திருவாலி சோழ நாட்டில் சீர்காழியிலிருந்து திருவெண் காட்டுக்குச் செல்லும் வழியில் உளது. கரந்தை சூடிப் போர்க்குச் சென்ற மறவருள் ஒருவன் முந்துற்றுச் செல்லும் விருப்பினனாக, போரை முன்னின்று நிகழ்த்தும் வேந்தன் பிறனொருவனைச் செலுத்தினான். அதனால் மனவிதுப் படங்காத அவன், “உண்டாட்டுக் காலங்களி லெல்லாம் முன்பு வேந்தன் சிறப்புடைய கலங்கற்கள்ளையே எமக்குத் தந்து களிப்புச் சிறப்பில்லாத தேறலைத் தானுண்பான்; இப்பொழுது அப்பெற்றியோன் எம்பால் அன்பிலனா யினான். தெளிவாக; எவ்வாறெனின், போரில் நீ முந்திச் செல்க என்று ஏவானாதலால்” என்றான். அதனை உடனிருந்து கேட்ட ஆவியார் அவனுடைய மறமாண்பை நினைந்து இப் பாட்டின்கண் உருப் படுத்தி நிலைநாட்டியுள்ளார். எமக்கே கலங்க றருமே தானே தேற லுண்ணு மன்னே நன்றும் இன்னான் மன்ற வேந்தே யினியே நேரா ராரெயின் முற்றி 5 வாய்மடித் துரறிநீ முந்தென் னானே. திணை : கரந்தை. துறை: நெடுமொழி. ஆவியார்பாடியது. உரை : எமக்குக் கலங்கல் தரும் - எமக்குக் கலங்கிய கள்ளையே கொடுப்பான்; தான் தேறல் உண்ணும் மன் - தான் தெளிந்த தேறலையே யுண்பான் பெரும்பான்மையும் முன்பு; இனி - இப்பொழுது; நன்றும் இன்னான் மன்ற - பெரிதும் அன்பில்லா தவனானான் தெளிவாக; வேந்து - வேந்தன்; நேரார் ஆரெயில் முற்றி பகைவருடைய கொள்ளற்கரிய அரணைச் சூழ்ந்து; வாய் மடுத்து உரறி - வாயிதழைக் கடித்து உரப்பி; நீ முந்து என்னான் - நீ முற்படச் செல்லென ஏவானாதலால்; எ-று. மன், பெருமை, இனியெனவே முன்னென்பது வருவிக்கப் பட்டது. கலங்கிய கள் களிப்பு மிகுதியும் உடையது. தேறல் தெளிவும் இனிமையு முடையது. வேந்தனது அன்புடைமையை விளக்குதற்குக் “கலங்கல் தரும்” தான் தேறல் உண்ணும் என்றான். தன்னைமுந்திச் செல்க என ஏவாமையால் ஆராமையுற்றுக் கூறுதலின், “நன்றும் இன்னான் மன்ற” என்றான். ஆயினும் வேந்தன் அன்பிலானல்லன் என்பது கருத்து. விளக்கம் : தன்னோடொத்த வயவர் பலரையும் உளப்படுத்திக் கூறுதலால், “எமக்கே” எனப் பன்மையாற் கூறினான். இப்பொழுதும் வேந்தன் கலங்கலை வீரர்க்குத் தந்து தேறலைத் தானுண்டலிற் றீராமையின், மன் ஒழியிசையன்றென்று தெளிக. மன்னே என்பதற்கு மன்னன் என்று பொருள் கூறுதலுமுண்டு; அதற்கு மன்னனென்றும் வேந்தென்றும் பன்முறை கூறியது ஆராமைபற்றி யெனவறிக. போரெனில் முந்துற்றுச் செல்லும்மறமும்போர் வேட்கையும்மிகவுடையான் வேந்தனென்பது பெறப்பட்டது. நேரார் ஆரெயில் என்றது குறிப்பால், பகைத்த வேந்தர் மதிலகத்திலே ஓடுங்கிக்கிடக்குமாறும், கூற்று நிகழ்த்தும் மறவன் தானை அவரை முற்றியிருக்குமாறும் தெளிவாகின்றன. 299. பொன்முடியார் சங்ககாலத்துப் பெண்பாற் புலவர் பெருமக்களுள் இவரையும் ஒருவராகக் கருதுவர்; மறக்குடியில் பிறந்து நல்லிசைப் புலமை பெற்றுச் சான்றோரினத்துள் ஒருவராய் மறச்செயல்களைப் பாராட்டிப் பாடும் பண்பு மிக்கவர். இவர் சேரநாட்டுக் குட்ட நாட்டின் வடபகுதியில் வாழ்ந்தவர். இவர் பெயரால் இந் நாட்டில் பொன்முடி யென்றோர் ஊரும் உளது. இப்போது இப் பகுதி வெள்ளாத்திரி நாடு என மக்களிடையே வழங்குகிறது. இங்குள்ள முதியோர் “இதனை முன்னோர் பொன்முடி நல்லூர் என வழங்கின” ரென மொழிகின்றனர். காக்கை பாடினியாரது ஊரைக் காக்கை யூரெனச் சேரநாட்டவர் வழங்கக் காண் கின்றோமாதலால் இவ்வூரைப் பொன்முடியாரது ஊர் எனக் கருதுதற்கு இடமுண்டாகிறது. ஒருகால் சிற்றரசனொருவற்கும் பெருவேந்தனொருவற்கும் போருண்டாயிற்று. அப் போரில் பெருவேந்தன் தோற்றோடினான். போரியல்பைக் கண்டிருந்த பொன்முடியார் வேந்தர்களின் போர்நலத்தைக் குதிரைகளின் மறப்பண்பையெடுத்தோதுமுகத்தால் இப் பாட்டின்கண் சில சொற்களால் விளங்கக் கூறியுள்ளார். சிற்றரசன் குதிரைகள் எளியவுணவுண்டு வளர்ந்தன; பேரரசன் குதிரைகள் நெய்பெய்த உணவுண்டு வளர்ந்தன; போர்க்களத்தை யடைந்ததும் சிற்றரசன் குதிரைகள் கடலலைகளைப் பிளந்தேகும் தோணி போலப் பகைவர் படைவரிசைகளைப் போழ்ந்து சென்று போர் உடற்றின; பேரரசன் குதிரைகள் படையணி கண்டு அஞ்சி முன்செல்லாது முருகன் கோயிலில் பூப்பால் விலக்குண்ட மகளிர் தலை கவிழ்ந்து ஒதுங்கி நிற்பது போல ஒதுங்கிப் பின்னிடலாயின என நகை யுண்டாகக் கூறுகின்றார். பருத்தி வேலிச் சீறூர் மன்னன் உழுத்தத ருண்ட வோய்நடைப் புரவி கடன்மண்டு தோணியிற் படைமுகம் போழ நெய்ம்மிதி யருந்திய கொய்சுவ லெருத்தின் 5 தண்ணடை மன்னர் தாருடைப் புரவி அணங்குடை முருகன் கோட்டத்துக் கலந்தொடா மகளிரி னிகழ்ந்துநின் றவ்வே. திணை : நொச்சி; துறை : குதிரை மறம். பொன் முடியார் பாடியது. உரை : பருத்தி வேலிச் சீறூர் மன்னன் - பருத்தியை வேலியாக வுடைய சிறிய ஊர்க்கு மன்னனுடைய; உழுத்ததர் உண்ட ஓய் நடைப்புரவி - உழுந்தின் சக்கையைத் தின்று வளர்ந்த தளர்ந்த நடையையுடைய குதிரை; கடல் மண்டு தோணியின் படைமுகம் போழ - கடல்நீரைப் பிளந்துகொண்டு செல்லும் தோணிபோலப் பகைவருடைய தானைத்திரளை இட முண்டாகப் பிளந்து சென்று போரைச் செய்ய; நெய்ம்மிதி அருந்திய கொய்சுவல் எருத்தின் - நெய் பெய்து மிதித்தமைத்த உணவையுண்ட ஒழுங்குறக் கத்திரிக்கப்பட்ட பிடரியினையுடைய; தண்ணடை மன்னர் தாருடைப் புரவி - மருதநிலத்தூர்களையுடைய பெரு வேந்தர்களின் தாரணிந்த குதிரைகள்; அணங்குடை முருகன் கோட்டத்து வருத்துதலையுடைய முருகன் கோயிலில்; கலந் தொடா மகளிரின் - புழங்கும் கலங்களைத் தொடுதற் கில்லாமல் விலக்குடையராகிய மகளிரைப்போல; இகழ்ந்து நின்ற போர்க்கஞ்சிப் பின்னிட்டு நின்றொழிந்தன; எறு. தார், கிண்கிணிமாலை. செல்வவுணவன்றாதலின், சீறூர் மன்னன் குதிரைகள் ஓய்ந்த நடையுடையன என்பார் “ஓய்நடைப் புரவி” யென்றார். முருகன் மகளிரை வருத்துவனென்ற கொள்கை யால், “அணங்குடை முருகன்” என்றார். பூப்புக் காலம் கூட்டத்துக்காகா தென்பது பற்றி, பூப்புற்ற மகளிர் மனைகளில் கலந்தொடாது விலகியிருந்து தாம் பூப்புற்றமை தெரிவிப்பது தமிழர்மரபு. பூப்புத் தோன்று மகளிர்க்கு அதன் வரவு முன்கூட்டி அறிய வாராமையின், அதன் வரவைத் தாம் விலகிநின்று நாணிக் காட்டும் இயல்புபற்றி, “கலந்தொடா மகளிரின் இகழ்ந்துநின் றவ்வே” யென்றார். இனி ஈராறு நாட்கு நீவிர் எம்மை நீத்த கன்றுறைவது கூடாதென்பது போலும் புணர்குறி யாதலின், அதன் வரவு மகளிர்க்கு நாணடச் சாய்ந்து கவிழ்ந்து நிற்கும் நலம் பயப்பதாயிற்றென்றுமாம். ஓய் நடைப் புரவி படைமுகம் போழ, தாருடைப் புரவி இகழ்ந்து நின்றன என வினைமுடிவு செய்க. விளக்கம் : குதிரை மறமாவது, “ஏமாண்ட நெடும்புரிசை, வாமானது வகையுரைத்தன்று” (பு.வெ.மா. 5:15) என வரும். பருத்தி வேலிச் சீறூர் எனவே, நீர்வளமின்றிக் கரிசில் மண்ணுள்ள நிலப்பகுதியில் உள்ள சீறூர் என்றும், அம் மட்பாங்கு உழுந்தும் கொள்ளும் விளைதற்கேற்ற தென்றும் தெளியப்படும். ஊறவைத்து அரைக்கப்பட்ட உழுந்து ஈண்டுச் சக்கையெனப்பட்டது; அதன் உமியே சக்கையெனப் பட்டதென்றும் கூறுவர். போர்க் குதிரைக்கு ஓய்நடை குற்றமாகும். நெய் பெய்து நறுமணமும் சுவையுமுடைய தாகச் சமைத்த உண வென்றற்கு நெய்ம்மிதியென்றார். குதிரை யுணவுக்கு மிகச் சிறந்தது பன்றி நெய்யென்பர். தண்ணடை, நிலத்துக் கணியாகிய நெல்லுங் கரும்பும் விளையும் நீர்வளம் சான்ற நிலப்பகுதி. பூப்புத்தோன்றக் கண்ட மகளிர், அணங்குடை முருகன் கோட்டத்தை அணுகற்கஞ்சி நீங்குவதுபோலக் குதிரைகளும் படை கண்டு அஞ்சிப் பின்னிட்டுப் பெயர்ந்தன என்றவாறாயிற்று. 300. அரிசில் கிழார் வேந்தர் இருவர் தும்பை சூடிக் கடும்போர் புரிந்தனர். இருதிறத்து வீரரும் மறலி மைத்துற்று மண்டமர் உடற்றினர். ஒரு வீரன் தன் முன்பிறந்தோனை முன்னாளைப் போரில் மாற்றார் படையிடத்து மறவனொருவன் கொன்றானென்று வெஞ்சினங் கொண்டு வஞ்சினம் பேசி அவனைப் போர்க்கழைத்தான். அம் மறவனும் அதற்குப் பின்னிடானாய்த் தன் பக்கலுள்ள இளையரைத் தன் கேடகத்தைக் கொண்டுவந்து தருமாறு விரைந்தான். அது கண்ட வீரனொருவன் இருவர் திறலையும் தூக்கி நோக்கி “மறவா! நீ கேடகத்தைக் கொணருமாறு பணிக்கின்றாய்; அது கொண்டு நின்னை மறைப்பதை விடுத்துத் துறுகல்லைத் தோலாகக் கொண்டு மறைக்கினும் உய்குவாய்போலும்; நெருநல் நின்னால் எறியப் பட்டோன் தம்பி இந்நாள் கண் சிவந்து பேரூரில் காய்ச்சிய பெருங் கள்ளைப் பெறுதற்குத் தன் மனைக்கண் நுழைந்து ஒரு கலத்தைத் தேடுவானைப் போல நின்னைத் தேடி வருகின்றான், காண்” என்றுரைத்தான். இவ்வுரை போர் மறவர்க்கு நல்லூக்கங் கொளுத்தும் நல்லுரையாக இருப்பதுகண்ட சான்றோராகிய அரிசில்கிழார் இப் பாட்டினுள் அக்கருத்தை வைத்துச் சிறப் பித்துள்ளார். தோறா தோறா வென்றி தோலொடு துறுகன் மறையினு முய்குவை போலாய் நெருந லெல்லைநீ யெறிந்தோன் றம்பீ அகற்பெய் குன்றியிற் சுழலுங் கண்ணன் 5 பேரூ ரட்ட கள்ளிற் கோரிற் கோயிற் றேருமா னின்னே. திணை : தும்பை ; துறை : தானை மறம். அரிசில் கிழார் பாடியது. உரை : தோல்தா தோல்தா என்றி - கேடகத்தைக் கொணர்ந்து தருக, கேடகத்தைக் கொணர்ந்து தருக என்று கேட்கின்றாய்; தோலொடு துறுகல் மறையினும் - கேடகத்தோடு துறுகல் லொன்றைக் கேடகமாகக் கொண்டு நின் மார்பை மறைப் பாயாயினும்; உய்குவை போலாய் - உய்குவாய் போல்கின்றாய்; நெருநல் எல்லை - நேற்றைப் பகலில்; நீ எறிந்தோன் தம்பி - நின்னால் கொல்லப்பட்டோனுடைய தம்பி; அகல்பெய் குன்றியின் சுழலும் கண்ணன் - அகலின்கண் பெய்த குன்றி மணியுருளுதல் போலச் சுழலுகின்ற கண்ணையுடையனாய்; பேரூர் அட்ட கள்ளிற்கு - பெரிய ஊரின்கண் காய்ச்சிய கள்ளைப் பெறும் பொருட்டு; ஓர் இல் கோயின் நின் தேரும் - மனைக்குட்புகுந்து ஒரு கட்கலயத்தைத் தேடுவதுபோல நின்னைத் தேடா நின்றான்; எ-று. கலயம் அகப்படாதொழியாதவாறு நீ அவற்கு அகப்படா தொழியாய் என்பதாம். அவனது படைக்குத் தன் மார்பு ஆற்றாரெனத் தோல் வேண்டுதலை இகழ்ந்து தோலேயன்றித் துறுகல் கொண்டு காக்கினும் நீ உய்தல் அரிதென்பான், “தோலொடு துறுகல் மறையினும் உய்குவை போலாய்” என்றான். தன் படையைப் பிறர்பால் கொடுத்து வேண்டுங்கால் அது பெறாது இறப்பவன் பேதையாமென்பது பற்றி உய்குவையல்லை யென்னாது “உய்குவை போலாய் ” என்றான். அகலிடத்துக் குன்றிமணி யுருளுவதுபோலக் கண்ணில் விழி சுழலுவது கூறியது சினமிகுதியினால் வீரனுடைய கண்கள் சினத்தால் சிவந்திருக்கும் திறத்தையும் உணர்த்தி நின்றது. கோய் - கள் முகக்கும் கலம். என்றி, போலாய்; தம்பி, கண்ணன், தேரும் என வினைமுடிவு செய்க. விளக்கம் : தானை மறமாவது, “பூம்பொழிற் புறங் காவலனை யோம்படுத்தற்கு முரித்தென மொழிப” (பு.வெ.மா. 7:4) என்பது காண்க. மறையினும் என்புழி உம்மையை இசை நிறையாக்கி, மறையின் உய்குவை; இன்றேல் உய்தல் இன்று என வுரைக்கினும் அமையும். நீ எறிந்தோன் - நீ எறிய அதனால் உயிர் துறந்தோன். போர்ச் சினத்தால் சிவந்த கண்ணை யுடையனாதலால், குன்றி யுவமமாயிற்று. இவ்வுவம நயத்தை இனிது துய்த்த பரஞ்சோதியார், “வென்றிக் கணத்தை விடுத்தானகல் மீதுபெய்த, குன்றிக்கணம்போற் சுழல் கண்ணழல் கொப்புளிப்ப” (திருவிளை. 5:30) என்று பாடுகின்றார். ஒருமை, கலயத்துக் கேற்றுக. 301. ஆவூர் மூலங்கிழார் இரு வேந்தர் பெரும்படை கொண்டு பொரத் தொடங்கினர். அப்போரில் பகை வேந்தன் பாசறை யமைத்து அதனைச் சுற்றி நல்ல முள்வேலியிட்டு மிக்க பாதுகாவலில் இருந்தான். ஏனை வேந்தன் போர் முகத்து நின்று போரை நடத்தினான். போர் கடுமையாக நடந்ததாயினும் பகை வேந்தன் முன் வரவில்லை. அது கண்ட தானைவீரன், பகைவேந்தன் பாசறையோரைப் பார்த்து, “சான்றோர்களே! நும் பாசறையை முள்வேலியிட்டு அதனுள்ளே நும்முடைய வேந்தனையும் களிறுகளையும் நன்கு காக்கின்றீர்கள்; எத்தனை நாள் இவ்வாறு தங்குவதாகக் கருதுகின்றீர்கள்; எத்தனை நாள் தங்கினும் அத்தனை நாளும் தம்மை வேல் முதலிய படையெறிந்து தாக்காதாரைத் தாம் மேற்சென்று தாக்குவதென்பது யாங்குளது? தன்மேற் படையெறிந்த வீரர் தனக்கு நிகரன்மையால் எங்கள் இறைவன் மேற்சென்று அவரை எறியக் கருதிற்றிலன். அவன் கருதுவதனை நும்மில் அறிந்தவர் யார்? அறியாது யாம் பலராகவுள்ளேம் எனத் தருக்குதலை யொழிவீராக. இப்போது இரவாதலின் எங்களுடைய தலைவன் பாசறைக்குச் சென்றுள்ளான். அவன் தன் வேலை நும்முடைய வேந்தன் ஊர்ந்துவரும் யானையை யெறிதற்பொருட்டு ஏந்துவனே தவிரப் பிறர் பொருட்டு ஏந்தும் கருத்துடையனாகத் தோன்றுகின்றானில்லை என உணர்வீர்களாக” என்று கூறினான். அதனை ஆசிரியர் ஆவூர் மூலங்கிழார் இப் பாட்டின்கட் குறித்துள்ளார். பல்சான் றீரே பல்சான் றீரே குமரி மகளிர் கூந்தல் புரைய அமரி னிட்ட வருமுள் வேலிக் கல்லென் பாசறைப் பல்சான் றீரே 5 முரசுமுழங்கு தானைநு மரசுமோம்புமின் ஒளிறேந்து மருப்பினுங் களிறும் போற்றுமின் எனைநாட் டங்குநும் போரே யனைநாள் எறியா ரெறிதல் யாவண தெறிந்தோர் எதிர்சென் றெறிதலுஞ் செல்லா னதனால் 10 அறிந்தோர் யாரவன் கண்ணிய பொருளே பலமென் றிகழ்த லோம்புமி னுதுக்காண் நிலனளப் பன்ன நில்லாக் குறுநெறி வண்பரிப் புரவிப் பண்புபாராட்டி எல்லிடைப் படர்தந் தோனே கல்லென 15 வேந்தூர் யானைக் கல்ல தேந்துவன் போலான்ற னிலங்கிலை வேலே. திணை : தும்பை ; துறை : தானை மறம். ஆவூர் மூலங்கிலார் பாடியது. உரை : பல்சான்றீரே பல்சான்றீரே - பலசான்றவீரே பலசான்ற வீரே; குமரி மகளிர் கூந்தல் புரைய - மணமாகாத நலங்கனிந்த மகளிருடைய கூந்தல்போல; அமரின் நட்ட அருமுள் வேலி - போர் கருதி நடப்பட்ட கடத்தற்கரிய முள்வேலி சூழ்ந்த; கல்லென் பாசறைப் பல்சான்றீரே - கல்லென ஆரவாரிக்கும் பாசறையிலுள்ள பலசான்றவீரே; முரசு முழங்கு தானை நும் அரசும் ஓம்புமின் - முரசு முழங்கும் தானையையுடைய நும்முடைய அரசனையும் நன்கு பாதுகாப்பீராக; ஒளிறு ஏந்து மருப்பின் நும் களிறும் போற்றுமின் - விளங்குகின்ற உயர்ந்த கொம்புகளையுடைய நும்முடைய களிறுகளையும் நன்கு காப்பாற்றுவீராக; எனை நாள் நும் போர் தங்கும் - எத்தனை நாட்கள் நும்முடைய போர் இங்கே நிகழும்; அனை நாள் - அத்தனை நாளும்; எறியார் எறிதல் யாவணது - தன்மேற் படையெறிந்து போர் தொடுக்காதவரைத் தான் எறிவது யாங்குளது; எறிந்தோர் எதிர்சென்று எறிதலும் செல்லான் - தன்மேற் படைகளை எறிந்தோரையும் எங்கள் இறைவன் தனக்கு நிகராகாமையான் எதிரே சென்று எறிவதிலன்; அதனால் - ஆதலால்; அவன் கண்ணிய பொருள் அறிந்தோர் யார் - அவன் கருதிய பொருளை நும்முள் அறிந்தவர் யார், அவர் எம்முன் வருக; பலம் என்று இகழ்தல் ஓம்புமின் - யாம் பலராகவுள் ளோம் எனத் தருக்கி இகழ்வதை ஒழிவீராக; உதுக்காண் - இதனைப் பார்; நிலன் அளப்பன்ன - நிலத்தைத் தாவடி யிட்டளப்பது போல; குறுநெறி நில்லா - மிகக் குறுகிய வழி யிலும் நில்லாது விரைந்து பாய்ந்தோடும்; வண்பரிப் புரவி பண்பு பாராட்டி - வளவிய செலவினையுடைய குதிரையின் போர்ப் பண்புகளைப் புகழ்ந்துகொண்டு; எல்லிடைப் படர் தந்தோன் - இரவுப்போது வந்தமையின் தன் நெடுமனை சென் றுள்ளான்; கல்லென ---; வேந்தூர் யானைக் கல்லது - நும்முடைய வேந்தன் ஊர்ந்துவரும் யானையை எறிவதற்கன்றி; தன் இலக்கிலை வேல் ஏந்துவன் போலான் - தன்னுடைய விளங்குகின்ற இலை முகத்தையுடைய வேலைக் கையில் ஏந்தான் போல்கின்றானா கலான் நாளையே நும் வேந்தனை வரவிடுமின்; எ-று. பல் சான்றீரே, அரசும் ஓம்புமின், களிறும் போற்றுமின், எனை நாள் தங்கும் அனை நாள் எறிதல் யாவணது; எறிதல் செல்லானாதலால், கண்ணிய பொருள் அறிந்தோர் யார்; அறிந்தோர் எம்முன் வருக; ஓம்புமின்; உதுக்காண்; பாராட்டிப் படர்ந்தான்; ஏந்துவன் போலான் என வினைமுடிவு செய்க. குமரியின் கூந்தல் பிறரால் தீண்டப்படாதவாறு போல முள்வேலி அணுகப்படாதென்பது தோன்ற, “குமரி மகளிர் கூந்தல் புரைய” என்றார். அரசனையும் களிற்றையும் சான்றோர் பெரிதும் பேணிக் காப்பதறிந்து கூறுகின்றானாகலின், “நும்மரசும் ஓம்புமின், நம் களிறும் போற்றுமின்” என வற்புறுத்துவான் போல் இகழ்ந்தான். மேல் வந்த வேந்தனே முதற்கண் போர் தொடுக்க வேண்டிய வனாக, அது செய்யாதிருந்தமையின், “எறியாரெறிதல் யாவணது” என்றும், நிகர்த்து மேல் வந்த வேந்தனையல்லது நிகராகா தாரோடு பொருதல் மானமுடைய வேந்தர் செயலன்மையின் “எறிந்தோர் எதிர் சென்றெறிதலும் செல்லான்” எனத் தன்னிறைவனை மிகுத்தோதினான். எதிர்வாரின்மையால் செயல் பிறிதின்மையின், குதிரைகளின் பண்புகளைப் பார்த்துப் பாராட்டினான். எங்கள் இறைவன் என்பான், ‘புரவிப் பண்பு பாராட்டி’ யென்றான். குடங் கொண்டான் வீழின்குடம் வீழ்தல் தானே பெறப்படுதல் போல வேந்தூரும் யானையை வீழ்த்த வழி வேந்தனை வீழ்த்துவது சொல்லாமே தோன்றுதலின், “வேந்தூர் யானைக்கல்லது ஏந்துவன் போலான் தன் இலங்கிலைவேல்” என்றான். விளக்கம் : தானை மறமாவது, “பூம்பொழிற் புறங் காவலனை, ஓம் படுத்தற்கு முரித்தென மொழிப” (பு.வெ.மா. 7 : 4) என வரும். அருமுள்வேலி யென்றதன்கண், அருமையை வேலிக்கேற்றி, கடத்தற்கரிய வேலி யெனவுரைக்க. “கல்லென் பாசறை” யெனச் சிறப்பித்தார், கல்லென்னு மோசை யல்லது வெற்றிக்குரிய விறல் காணப்படாமை குறித்தற்கு. பல் சான்றீர் என்புழிப் பன்மை சான்றோர் மேனின்றது. எறியாரை எறியாத வேந்தன்முன் எறிவதன்றி எத்தனை நாள் தங்கினும் பயனின் றென்பார், “எனைநாள் தங்கும் நும் போரேயனைநாள், எறியா ரெறிதல் யாவணது” என்றார். “எறிந்தோர் எதிர் சென்றெறிதலும் செல்லான்” என்றது, எதிர்சென்றெறியும் படையை விலக்கித் தற்காப் பொன்றே செய்தானேயல்லது தான் மேற்சென் றெறிந்திலன் என்றும், எனவே, எதிர்சென்றெறிந்தோர் நிகர்க்கும திறனில்லாதவரென்றும் அறிக. “பலமென்றிகழ்த லோம்புமின்” என்பது, பலராய்க் காக்கைபோற் கூடிக்கொண்டு நீவிர் கரைவது பயனின்று என்றவாறு. நிலன் அளப் பன்ன நெறி நில்லாக் குறுநெறி என இயைத்து நிலத்தின் எல்லையை யளந்து காண்டற்கு வகுத்த நெறிபோலும் நெறியெனவும், எல்லை காணப்படாமையின் நில்லாது நெடுகும் நெறியெனவும், அதுவும் அகலிதாகவன்றிக் குறுகிய தெனவும் கொள்ளினும் அமையும். இந்நெறியினும் அயராது சேறல்பற்றி, “வண்பரிப் புரவி” யென்றா ரென்று கொள்க. வேந்தரூரும் யானையை யெறிதலில் வீரர்க்கு வேட்கை மிகுதி யென்ப. “கட்டியன்ன காரி மேலோன், தொட்டது கழலே கையது வேலே, சுட்டி யதுவுங் களிறே ஒட்டிய, தானை முழுதுடன் விடுத்துநம், யானை காமினவன் பிறிதெறியலனே” (புறத். 1372) என வேந்தனொருவன் தானையைப் பணிப்பது காண்க. “இகழ்த லோம்புமின் புகழ்சான் மறவீர்,. கண்ணிமைப் பளவிற் கணைசெல் கடுவிசை, பண்ணமை புரவிப் பண்பு பாராட்டி எல்லிடைப் படர்தந் தோனே கல்லென, வேந்தூர் யானைக்கல்ல தேந்துவன் போலான்றன் னிலங்கிலை வேலே” (புறத். 1370) என்ற பாட்டு இதனோடொத்திருத்தல் காண்க. 302. வெறிபாடிய காமக்காணியார் புன்புலங்கள் சூழ்ந்த சீறூர்களையுடைய தலைமகனொருவன், வேந்தரிருவர் தும்பை சூடிப் பொருத போர்க்களத்தில் ஒரு வேந்தன் பக்கலில் தானைத்தலைவனாய் நின்று கடும்போர் புரிந்தான். வெறிபாடிய காமக்காணியார் அவன் போர்த் திறத்தைக் காணும் பேறு பெற்றார். அத்தலைவனுடன் குதிரைமேல் வீரரும் போர் செய்தனர். குதிரைகள் வளைத்துவிட்ட மூங்கில்கள் மேலெழுவது போலப் போரில் தாவித் துள்ளிப் பாய்ந்து வென்றி விளைத்தன. அவன் போரிற்பெற்ற பொற் பூக்களை அவனுடைய விறலியர் கூந்தலில் அணிந்து கொண்டனர். புகழ்பாடிப் பரவிய பாணர் களுக்கு அவன் ஊர்கள் பல நல்கினான். இப்பெற்றியோன் போரில் எறிந்து வீழ்த்திய களிறுகளை யெண்ணின் மழைத் துளியினும் பலவாயிருந்தன. இக்காட்சி இப் பாட்டின்கண் அழகுறப் பாடப்பட்டுளது. வெடிவேய் கொள்வது போல வோடித் தாவு புகளு மாவே பூவே விளங்கிழை மகளிர் கூந்தற் கொண்ட நரந்தப் பல்காழ்க் கோதை சுற்றிய 5 ஐதமை பாணி வணர்கோட்டுச் சீறியாழ்க் கைவார் நரம்பின் பாணர்க் கோக்கிய நிரம்பா வியல்பிற் கரம்பைச் சீறூர் நோக்கினர்ச் செகுக்குங் காளை யூக்கி வேலி னட்ட களிறுபெயர்த் தெண்ணின் 10 விண்ணிவர் விசும்பின் மீனும் தண்பெய லுறையு முறையாற் றாவே. திணை : தும்பை; துறை : குதிரைமறம். வெறிபாடிய காமக்காணியார் பாடியது. உரை : வேய் வெடி கொள்வது போல - வளைத்து விட்ட மூங்கில் மேனோக்கி யெழுவது போல; தாவுபு ஓடி உகளும் மா - பாய்ந்தோடித் திரியா நின்றன குதிரைகள்; பூ - பொற்பூக்கள்; விளங்கிழை மகளிர் கூந்தல் கொண்ட - விளங்கிய அணிகளை யணிந்த விறலியர் கூந்தலை இடங்கொண்டன; நரந்தப் பல் காழ்க் கோதை சுற்றிய - நரந்தப் பூவால் பல வடங்களாகத் தொடுக்கப்பட்ட மாலை சுற்றப்பட்ட; ஐதமை பாணி - மென்மை யாக அமைந்த தாளத்துக்கேற்ப; வணர்கோட்டுச் சீறியாழ் - வளைந்த கோட்டையுடைய சிறிய யாழி னுடைய; கைவார் நரம்பின் பாணர்க்கு ஓக்கிய - கைவிரலால் இசைத் தொழில் புரிய இசைக்கும் நரம்பினை இயக்கிப் பாடுதலை யுடைய பாணர்களுக்குக் கொடுக்கப்பட்டன; நிரம்பா இயவின் கரம்பைச் சீறூர் - குறுகிய வழிகளையுடைய கரம்பைகள் நிறைந்த சிற்றூர்கள்; நோக்கினர் செகுக்கும் காளை - தன்னைப் பகைத்துப் பார்த்த பகைவரைக் கொல்லும் காளைபோல் வானாகிய அவன்; ஊக்கி வேலின் அட்ட களிறு பெயர்த்து எண்ணின் - ஊக்கம் கிளர்ந்து தன் வேலாற் கொன்ற களிறு களை ஒவ்வொன்றாக எண்ணிப் பார்க்குமிடத்து; விண்ணிவர் விசும்பின் மீனும் - முகில்கள் பரந்துலவும் விசும்பி லுள்ள விண்மீன்களும்; தண் பெயல் உறையும் - குளிர்ந்த மழை சொரியும் துளிகளும்; உறையாற்றா - அளவிடற்காகா; எ-று. மா உகளும்; பூ கூந்தற் கொண்ட; சீறூர் பாணர்க் கோக்கிய; காளை அட்ட களிறு எண்ணின் மீனும் உறையும் உறையாற்றா எனக் கூட்டி வினைமுடிவு செய்க. கோதை சுற்றிய சீறியாழ் என இயையும். வார், வார்தல்; சுட்டுவிரற் செய்தொழில் என்பர் அடியார்க்கு நல்லார்; இசைக் கரணம் எட்டனுள் ஒன்று. காளைபோல்வானைக் காளை யென்றார். விளக்கம் : வளைத்து விட்ட மூங்கில் சிவ்வென்று மேலெழுதல் போலக் குதிரையும் மேலெழுந்து பாயும் என்றார்; பிறரும் “விட்ட குதிரை விசைப்பினன்ன, விசும்பு தோய் பசுங்கழைக் குன்ற நாடன்” (குறுந் - 74) என்று கூறுதல் காண்க. சீறூர்க்குச் செல்வோர் சிலராதலின், செல்லும் வழியும் மிகக் குறுகியிருக்குமாகலின், “நிரம்பாவியவு” எனப்பட்டது. இயவு - வழி. “வரம்பிடை விலங்கி வழங்குதற்கரிதாய், நிரம்பாச் செலவின் நீத்தருஞ் சிறுநெறி” (பெருங். 1 : 19 : 30-1) என்று பிறரும் கூறுவது காண்க. “நிரம்பா வியல்பின்” என்று பாடமாயின், நிரம்ப விளையாத வியல்பினையுடைய கரம்பை யென்றுரைத்துக் கொள்க. “நோக்கினர்ச் செகுக்கும்” என்றதனால் நோக்கத்தின்கண் செகுத்தற்குரிய பகைமைக் குறிப்புண்மை பெற்றாம்; “எள்ளுநர்ச் செகுக்குங் காளை” (புறத். 303) என வருதல் காண்க. “அவன் எறிந்ததை, கழல் தொட்டேந்து வரையிவரும் புலிபோல், வேந்து வந்தூரும் வெஞ்சினக் களிறே” (புறத். 1375) என்பதனால், களிறே ஈண்டு எண்ணப்பட்டன. அட்டகளிறுகள் சிதைந்து வேறாகிக் குவிந்து கிடத்தலின், கிடந்தாங் கெண்ணலாகாதென்பார், “பெயர்த் தெண்ணின்” என்றும், வீழ்வன பலவாய் எண்ணலுறுவார் எண்ணத்தை ஈர்த்துக் கொள்ளுதலால், வீழ்ந்தவற்றை எண்ண வியலாதென்பதற்கு “எண்ணின்” என்றும், தொகையாக நோக்குமிடத்து விண்மீன் தொகையும் மழைத்துளியின் தொகையும் உறையிடற்காகா என்பார். “விண்ணிவர் விசும்பின் மீனும் தண்பெயலுறையும் உறையாற்றா” என்றும் கூறினார். 303. எருமைவெளியனார் போர்க்களமொன்றில் தானை வீரரிடையே நிகழ்ந்த நிகழ்ச்சி களை ஆசிரியர் எருமைவெளியனார் கண்டு வந்தார். அவற்றுள் ஒரு நிகழ்ச்சி அவர் கருத்தைக் கவர்ந்தது. வீரனொருவன், பகை வேந்தன் காண அவனது கடல்போன்ற தானைப் பரப்பைக் கடலைப் பிளந்தேகும் தோணி போலப் பிளந்து சென்று பகைவருடைய களிற்றியானைகளைக் கொன்று வீழ்த்தினான். களிற்றின் பிரிவாற்றாத மடப்பிடிகள் புலம்பிப் பிளிறின. மறுநாள் அவ்வீரன் படையணியில் முன் நிற்கையில் பகைவர் படையிலிருந்து ஒரு காளை குதிரையொன்றின்மேல் வந்தான். வருகையில் அவனை வீரர் பலர் எதிர்த்து மார்பிற் புண்பட்டு வீழ்ந்தனர். இங்ஙனம் வென்றி மேம்பட்டு வேலை அலைத்துக் கொண்டு வருபவன் தன்னை நோக்கி வருதலை அவ்வீரன் அறிந்து, “இவன் என்னைப் பொருது வென்றி காண வருகின்றான். வருக” என்று மறத்தீக் கிளர மொழிந்தான். அதனைக் கேட்ட இச்சான்றோர் அவனது மறமாண்பை வியந்து இப் பாட்டினைப் பாடியுள்ளார். நிலம்பிறக் கிடுவது போற்குளம்பு கடையூஉ உள்ள மொழிக்குங் கொட்பின் மான்மேல் எள்ளுநர்ச் செகுக்குங் காளை கூர்த்த வெந்திற லெஃக நெஞ்சுவடு விளைப்ப 5 ஆட்டிக் காணிய வருமே நெருநை உரைசால் சிறப்பின் வேந்தர் முன்னர்க் கரைபொரு முந்நீர்த் திமிலிற் போழ்ந்தவர் கயந்தலை மடப்பிடி புலம்ப இலங்குமருப் பியானை யெறிந்த வெற்கே. திணை : தும்பை; துறை : குதிரைமறம்.. எருமை வெளியனார் பாடியது. உரை : நிலம் பிறக்கிடுவது போல் குளம்பு கடையூஉ - நிலம் பின்னிடுவதுபோலக் காற்குளம்பை யூன்றி; உள்ளம் ஒழிக்கும் கொட்பின் மான்மேல் - காண்போர் ஊக்கத்தைக் கெடுக்கும் விரைந்த செலவினையுடைய குதிரைமேல் வரும்; எள்ளுநர்ச் செகுக்கும் காளை - தன்னை யிகழும் பகைவரைக் கொல்லும் காளையாவான்; கூர்த்த வெந்திறல் எஃகம் நெஞ்சு வடு விளைப்ப ஆட்டி - கூரிய வெவ்விய வலியினையுடைய வேலால் எதிர்ந்தார் மார்பைக் குத்திப் புண் செய்து அலைத்துக் கொண்டு; காணிய வரும் காண்டற்கு வருகின்றான்; நெருநை - நேற்று; உரைசால் சிறப்பின் வேந்தர் முன்னர் - புகழமைந்த தலைமை யினையுடைய வேந்தர்கள் காண; கரை பொரு முந்நீர்த் திமிலின் போழ்ந்து - கரையை யலைக்கும் கடலைப் பிளந்து செல்லும் தோணியைப் போலப் பகைவர் படையைப் பிளந்து; அவர் கயந்தலை மடப்பிடி புலம்ப - அவர்களுடைய மெல்லிய தலையை யுடைய இளமையான பிடியானைகள் தனிமையுற்று வருந்த; இலங்கு மருப்பு யானை எறிந்த எற்கு - விளங்குகின்ற கோட்டினை யுடைய களிறுகளைக் கொன்ற என் பொருட்டு; எ-று. குதிரை செல்லும் கடுமையால் நிலம் பின்னிட்டோடுவது போறலின், “நிலம் பிறக்கிடுவது போல்” என்றார். விரைந்த செலவால் காண்போர் மனமாகிய உள்ளமும் நிகராமை செய்யும் என்றுரைப்பாருமுளர். விளைத்தென்பது விளைப்பவென நின்றது. என்னொடு பொருதுவென்றி காணவருகின்றான், வருக என்பான், “காணிய வரும்” என்றான். “வேந்தர் முன்னர்” என்றான், தங்களுடைய கண் முன்னே யான் செருவிளைப்பவும் அவர் அஞ்சி யெதிர்ந்திலரென்பது வற்புறுத்தற்கு. கயந்தலை யென்றதற்குப் பெரிய தலையென் றுரைப்பினு மமையும். நெருநை வேந்தர் முன்னர், போழ்ந்து, எறிந்த எற்கு மான்மேல் காளை எஃகம் ஆட்டிக் காணிய வரும் என வினை முடிவு செய்க. விளக்கம் : நிலவுலகு பிற்பட்டு நிற்ப மேலுலகு செல்வதுபோலக் காற் குளம்பை யூன்றி மேனோக்கிப் பாய்ந்தோடுவதுபோற் சேறலின், “நிலம் பிறக்கிடுவதுபோற் குளம்பு கடையூஉ” என்றார். கடையூஉ - கடைந்து, கடவி யென்பது பொருளாயின் கடைஇ யென்று பாடமிருத்தல் வேண்டும்; “ஊக்கறக் கடைஇ” (பதிற் 31) எனவருதல் காண்க. செகுத்து வருவானைச் “செகுக்கும்” என்றார். கூர்த்த எஃகம் என இயையும்; வெந்திறலென்பது இடைநிலை. விளைப்ப வென்பதனை விளைத் தென்பதன் திரிபாக்காதவிடத்து, கைவில் ஏந்திய எஃகம் எதிர்ந்தார் நெஞ்சு வடுப்படுத்திவர, காளையாயினான், அதனைத் திரித்துக் கொண்டு வாராநின்றான் என்பது போந்த பொருளாகக் கொள்க. காணுதல், வெற்றி காண்பது. காணிய : செய்யியவென்னும் வினையெச்சம். உரை, புலவர் பாடும் புகழ். கரையை மோதியலைக்கும் கடற்றிரைகளை அக் கரையினின்று செல்லும் தோணி போழ்ந்து செல்வதுபோல, எம்முடைய தானையொடு பொரற்கு அவனுடைய அணியணியாய்த் திரைத்து வந்த தானையை யான் பிளந்து சென்று யானைகளை யெறிந்தேன் என உவமம் விரித்துரைத்துக் கொள்க. “தடவுங் கயவு நளியும் பெருமை” (தொல். உரி. 28) என்பதனால் பெரிய தலை யென்றலும் உண்டு. களிறு பட்டவழிப் பிடியானைகள் புலம்பு மென்றார்; “யானையும், புல்லார் பிடிபுலம்பத் தன் கண் புதைத்ததே, பல்யானை பட்ட களத்து” (புறத். 1433) என்று பிறரும் கூறுவது காண்க. நச்சினார்க்கினியர் இதனைக் “குதிரை நிலை” யென்னும் துறைக்கு (தொல். புறத். 17) எடுத்துக் காட்டுவர். 304. அரிசில்கிழார் வேந்தர் இருவர் தும்பை சூடிப் போர் உடற்றினர். போர் நிகழுங்கால், களஞ்சென்று போர் செய்ய வேண்டிய முறைவரப் பெற்ற தானைத் தலைவனொருவன் ஆங்குள்ள குதிரைகளுள் விரைந்து செல்லும் வன்மையுடைய குதிரையைத் தேர்ந்து அதனைத் தான் இவர்ந்து செல்லக் கருதி ஒப்பனை செய்து கொண்டிருந்தான். பகைவருடைய ஒற்றர் அவன் செயலை ஒற்றிச் சென்று தங்கள் பாசறையில் உள்ள தலைவர்களைக் கண்டு, போர்க்கு வரும் முறையுடைய வீரர் தலைவன் தமையனை நேற்று நம் படைவீரருட் சிறந்தோனொருவன் எறிந்து கொன்றான்; அது கண்டு அத்தலைவன், “என் தமையனை யெறிந்தவன் எவனோ அவனையும் அவன் தம்பியையும் நாளைக் கொன்றல்லது உணவு கொள்ளேன்” என்று நெடுமொழி கூறினன்; கூறியவாறே இன்று “தனக்குரிய குதிரையை யாராய்ந்து கொண்டிருக்கின்றா” னெனத் தெரிவித்தனர். அவ்வுரைகளைக் கேட்டிருந்த பாசறை யிலுள்ளார் “அவன் கூறியது இரண்டாகா” தெனத் தம்முட் பேசிக்கொண்டதோடு அஞ்சி நடுக்கமும் கொண்டனர். இச் செய்தியைச் சான்றோராகிய அரிசில்கிழார் அறிந்தார். அவர் அத்தானைத் தலைவனை முன்பே அறிந்தவராதலின் அவன் பாற்சென்றார்; அவர் கேள்வியுற்றவாறே, அவன் தனக்குரிய குதிரை யைப் பண்ணுதற்கு விரைகுவது கண்டார்; மாற்றாருடைய ஒற்றர் இவண் வந்து ஒற்றிக்கொண்டு தம் பாசறைக்குச் சென்றுரைத் ததும் அப் பாசறையோர் அஞ்சி நடுங்கினதும் அவற்கு எடுத்துரைப்பவர், இஃது அத் தலைவன் புகழை நிலைநாட்டும் நீர்மையுடையதாதலை யெண்ணி இப்பாட்டினைப் பாடியுள்ளார். போர் செய்யும் வேந்தர் பெயரும் தானைத் தலைவன் பெயரும் கிடைத்தில. கொடுங்குழை மகளிர் கோதை சூட்டி நடுங்குபனி களைஇயர் நாரரி பருகி வளிதொழி லொழிக்கும் வண்பரிப் புரவி பண்ணற்கு விரைதி நீயே நெருநை 5 எம்முற் றப்பியோன் றம்பியொ டொராங்கு நாளைச் செய்குவெ னமரெனக் கூறிப் புன்வயி றருத்தலுஞ் செல்லான் பன்மான் கடவு மென்ப பெரிதே யதுகேட்டு வலம்படு முரசின் வெல்போர் வேந்தன் 10 இலங்கிரும் பாசறை நடுங்கின் றிரண்டா காதவன் கூறிய தெனவே. திணை : தும்பை; துறை : குதிரைமறம். அரிசில்கிழார் பாடியது. உரை : கொடுங்குழை மகளிர் கோதை சூட்டி - வளைத்த குழை யணிந்த தேவியர் மாலை சூட்டி மகிழ்விக்க; நடுங்கு பனிகளை இயர் நாரரி பருகி - நடுக்கத்தைச் செய்யும் குளிரைப் போக்கு தற்காக நாரால் வடிக்கப்பட்ட நறவையுண்டு; வளி தொழில் ஒழிக்கும் வண்பரிப் புரவி - காற்றின் கடுமையைத் தனக்கு நிகராகாமை செய்யும் வளவிய, செலவையுடைய குதிரையை; பண்ணற்கு விரைதி நீ - போர்க்கேற்பச் சமைத்தற்கு விரை கின்றாய் நீ; நெருநை - நேற்று; என் முன் தப்பியோன் தம்பி யொடு - என் தமையனைக் கொன்றவனோடும் அவன் தம்பியோடும்; நாளை ஒராங்கு செய்குவென் அமர் எனக் கூறி - நாளை ஒருசேரப் பொருது அழிப்பேன் என்று வஞ்சினம் கூறி; புன் வயிறு அருத்தலும் செல்லான் - வயிற்றுப் பசிதீரச் சிறிதுணவு தானும் உண்ணானாய்; பன்மான் பெரிது கடவும் என்ப - பல குதிரைகளையும் பெரிதும் ஆராய்கின்றான் என ஒற்றர் கூறுவர்; அது கேட்டு - அவ் வொற்றுரை கேட்டு; வலம்படு முரசின் வெல்போர் வேந்தன் - வெற்றியுண்டாக்கும் முரசினையும் வெல்லும் போரையுமுடைய வேந்தனுடைய; இலங்கிரும் பாசறை - விளங்குகின்ற பெரிய பாசறையி லுள்ளார்; அவன் கூறியது இரண்டாகாதென நடுங்கின்று - அவன் கூறிய வஞ்சினம் சொல்வேறு செயல்வேறென இரண் டாகாதென்று நடுங்குகின்றனர்; எ-று. சூட்டி யென்றதனைச் சூட்டவெனத் திரிக்க. தன்னை யுண்டார்க்கு வெம்மை யுண்டுபண்ணுவதுபற்றிக் கள்ளுண்டதனை, “நடுங்குபனி களைஇயர் நாரரி பருகி” யென்றார். செலவின் கண் தளராத வலிமையுடைமை தோன்ற, “வண்பரிப் புரவி” யென்றார். அமர்செய்குவனென்றது, அமரில் கொல்வேனென்னும் குறிப்பிற்று. இருவரையும் கொன்றல்லது உணவு கொள்ளேனென வஞ்சினம் கூறினமை விளங்க “புன் வயிறருத்தலும் செல்லான்,” என்றார். உணவினது புன்மை வயிற்றின் மேனின்றது. புன்மை ஈண்டுச் சிறுமை மேற்று. பகைவேந்தனை “வலம்படு முரசின் வெல்போர் வேந்தன்” என்றது இகழ்ச்சிக் குறிப்பு. நீ சூட்டப்பருகி விரைதி; கடவும் என்ப; அது கேட்டுப் பாசறை, இரண்டாகாதென நடுங்கின்று என வினைமுடிவு செய்க பாசறை : ஆகுபெயர். விளக்கம் : போர்க்குச் செல்லும் வீரர்க்கு அவர்தம் மகளிர் சாந்தணிந்து மாலைசூட்டி வழிவிடுவது பண்டையோர் முறை. அது விளங்க, “கொடுங்குழை மகளிர் கோதை சூட்டி” யென்றார்; ஆகலாற்றான் சூட்டி யென்றது சூட்டவெனத் திரிக்கப்பட்டது. குளிர் காலத்திற் போர்க்குச் சேறல் தோன்ற, “நடுங்குபனி களைஇயர் நாரரி” பருகினா னென அறிக. நாரால் வடிக்கப்படுவது பற்றிக் கள் “நாரரி” யெனப்பட்டது. கள் வெம்மையுடையதென்பதைச் சான்றோர், “வெப்புடையமட்டு” (புறம். 24) என்பதனாலறிக. விரைந்தேகுந் தொழிலில் காற்றுச் சிறந்த தாயினும், அதன் தொழிலினும் குதிரையின் செலவாகிய தொழில் மேற்படுமாறு விளங்க, “வளிதொழி லொழிக்கும் புரவி” யென்றும், ஒழித்தற்கு ஏது கூறுவார், “வண்பரிப் புரவி” யென்றும் கூறினார். இத்தகைய குதிரையைத் தேர்ந்து அதனை யிவர்ந்து போர்க்குச் செல்லக்கருதி அதனைச் சமைக்கின்றானாகலான், “பண்ணற்கு விரைதி நீ” என்றார். நின் விரைவை ஒற்றிக்கண்ட ஒற்றர் வேறாகக் கருதித் தம் பாசறையோர்க்கு உணர்த்தினரென்பார், “நெருநை...... என்ப” என்றார். “இன்றினிது நுகர்ந்தனமாயின் நாளை, மண்புனை யிஞ்சி மதில்கடந் தல்லது, உண்குவ மல்லேம் புகாவெனக் கண்ணி கண்ணிய வயவர் பெருமகன்” (பதிற். 58) என்று வஞ்சினம் கூறுவது மறவர் இயல்பாதலின், பகைவரொற்றர் இவ்வாறு கருதிக்கொண்டு சென்று பாசறையோர்க் குரைத்தொழிந்தனரென்று கொள்க. வலம்படு முரசு என்றதற்குத் தன் முழக்கத்தாலே பகை வேந்தர் வெருவியோடப் பண்ணித் தன்னையுடைய வேந்தர் போரைச் செய்யாமே வெற்றி தோற்றுவிக்கும் முரசு என்று உரை கூறுதலுமுண்டு. வெல்போர் என்றதற்கு இதுகாறும் செய்து போந்த போர்களிலெல்லாம் வெற்றியே பெற்றுச் சிறந்த போர் என்று உரைத்தலுமுண்டு. இவ்வகையால் போர்ப்புகழ் விளங்கும் பாசறை யென்பார், “இலங்கிரும் பாசறை” யென்றார். என்றது, இத்துணைச் சிறந்த பகைவரும் நின் விரைவு கண்டு அஞ்சி நடுங்குகின்றனர் என்றவாறாம். 305. மதுரை வேளாசான் வேள்வாசான் என்னும் பெயர் வேளாசான் என மருவிற்று. மதுரையில் பார்ப்பனரிடையே வேள்வித் தொழிற்கு ஆசானாக இருந்ததனால் இவர் மதுரை வேளாசான் எனப்படுவாராயினர். வேள்வி வேள்வு எனவும் வழங்கும். “விழவும் வேள்வும் விடுத்த லொன்றின்மையால்” (சீவக. 138) என்று தேவர் வழங்குவது காண்க. இவரது இயற்பெயர் இறந்து போயிற்று. ஒருகால் வேந்தரிடையே போர்க்குரிய பகைமையுண்டாயிற்று. இரு வேந்தரும் போர்க்கு வேண்டும் படைகளைத் தொகுத்தனர். இருவரும் போர்க்கெழாவாறு தகுவன கூறுதற்குப் பார்ப் பானொருவன் தூதனாய்ச் சென்றான். முற்பட்ட வேந்தனை யடைந்து தக்கது கூறி அவனது போர் வேட்கையை மாற்றினான். பின்பு அவனுடைய மாற்றானாகிய, வேந்தனை யடைந்தான். அடைதற்குள், நாட்டில் போர்ப் பறை முழங்கிற்று. தானை வீரரும் தொகு வாராயினர். பகைவர் மதில்கோடற்பொருட்டு ஏணிகளும் மதில் காத்தற்பொருட்டுச் சீப்புகளும் நன்கமைந் திருந்தன. தூது போந்த பார்ப்பான் இரவில் வேந்தனைக் கண்டு போரைக் கைவிடற்கு வேண்டுவன பலவும் சுருங்கச் சொல்லி விளக்கினன். வேந்தன் உடன் பட்டான்; விடிந்தது பொழுது; ஏணியும் சீப்பும் களையப்பட்டன; தானை வீரரைத் தத்தம் மனையேகுமாறு வேந்தன் பணித்தான். அது கண்ட வேளாசானுக்கு அப் பார்ப்பான் தூதின்பால் வியப்பு மிகுந்தது. அதனை இப் பாட்டின் கட் பொருளாக வைத்துரைத்துள்ளார். வயலைக் கொடியின் வாடிய மருங்குல் உயவ லூர்திப் பயலைப் பார்ப்பான் எல்லி வந்து நில்லாது புக்குச் சொல்லிய சொல்லோ சிலவே யதற்கே 5 ஏணியுஞ் சீப்பு மாற்றி மாண்வினை யானையு மணிகளைந் தனவே. திணை : வாகை; துறை : பார்ப்பன வாகை. மதுரை வேளாசான் பாடியது. உரை : வயலைக் கொடியின் வாடிய மருங்குல் - வயலைக் கொடி போல வாடிய இடையினையும்; உயவல் ஊர்தி - வருத்தத்தால் ஊர்ந்து செல்வதுபோலும் நடையினையும்; பயலைப் பார்ப்பான் - இளமையினையுமுடைய பார்ப்பான்; எல்லி வந்து நில்லாது புக்கு - இரவின்கண் வந்து நில்லாமல் உள்ளே சென்று; சொல்லிய சொல்லோ சில - சொல்லிய சொற்களோ பலவல்ல சிலவே; அதற்கு - அதன் பயனாக; ஏணியும் சீப்பும் மாற்றி - ஏணியையும் சீப்பையும் நீக்கி; வினைமாண் யானையும் மணி களைந்தன - போர் பல செய்து மாட்சிமைப்பட்ட யானை களையும் அவற்றின் பக்கத்தே கட்டப்பட்ட மணிகளையும் நீக்கிவிட்டனர்; எ-று. வயலைக்கொடி இக்காலத்தே வசலைக்கொடியென வழங்கும். ஊர்ந்து செல்வது ஊர்தி; ஈண்டு நடைக்காயிற்று. இதனைக் “குந்தி மிதித்துக் குறுநடை கொண்டு” செல்லுதல் என்பர் பேராசிரியர். “சொல்லிய சொல்லோ சிலவே” என்றதனால், செய்யப்பட்டிருந்த ஏற்பாடுகள் பலவென்பது விளங்கிற்று. மதில் கோடற் கேணியும் மதில் வாயிலைக் காத்தற்குச் சீப்பும் கருவிகளாம். சீப்பென்றது, உள்வாயிலில் கதவுக்கு வலியாக நிலத்தே விழஇடும் மரம் என்பர் அடியார்க்கு நல்லார். யானைகள் மணி களைந்தன எனவே அவை வேந்தன் ஊரும் பெருங் களிறுகள் என்பதும், ஏனைப் படை வகை களும் கலைந்து தத்தம் இடம் சேர்ந்தன என்பதும் பெறப்படும். பார்ப்பான் வந்து நில்லாது புக்குச் சொல்லிய சொல்லோ சில; அதற்கு மாற்றிக் களைந்தன எனக் கூட்டி வினைமுடிவு செய்க. விளக்கம் : இது பார்ப்பன வாகையெனத் துறை வகுக்கப்பட்டுளது பார்ப்பன வாகையாவது, “கேள்வியாற் சிறப்பெய்தி யானை, வேள்வியான் விறன் மிகுத்தன்று” (பு.வெ.மா. 8:9) எனப் படுகின்றது. இது பார்ப்பன முல்லை யென்றிருப்பின் சீரிதாம். பார்ப்பன முல்லையாவது: “கான்மலியு நறுந்தெரியற் கழல் வேந்த ரிகலவிக்கு, நான்மறையோ னலம் பெருகு நடுவுநிலை யுரைத்தன்று” (பு.வெ.மா: 8:18) என வரும். இதன்கண் பார்ப்பான் வந்து சொல்லிய சொல் சிலவென்றும், போரொழிந்ததென்றும் கூறுவது. இது பார்ப்பனமுல்லையாதலை வற்புறுத்துகின்றது. வினைமான் யானை யென்றது, போர் வினையில் நன்கு பயின்று மாட்சியுற்ற யானை யென்றவாறு. “வினை நவில் யானை,” “தொழில் நவில் யானை,” (பதிற்.82-84) என்று சான்றோர் யானையைச் சிறப்பித்தல் காண்க. வயலைக் கொடியின் வாடிய மருங்குல் என்னும் புறப்பாட்டில் அந்தணன் தூதுசென்றவாறு உணர்க’ (தொல்.அகத். 26) என்றும் “இது தூதருரை கேட்ட அகத்துழிஞையோன் திறம் கண்டோர் கூறியது” (தொல். புறத். 12) என்றும் நச்சினார்க்கினியர் உரைப்பர். 306. அள்ளூர் நன்முல்லையார் நல்லிசைப்புலமை மெல்லியலாருள் நன்முல்லையாரும் ஒருவர். இவரது ஊர் அள்ளூர் என்பது. தஞ்சை மாநாட்டிலுள்ள திருவாலங்காட்டிற்கும் அள்ளூரென்பது பெயரென அவ்வூர்க் கல்வெட்டு (A.R.No. 79 of 1926)கூறுகிறது. திருநெல்வேலிக் கோயில் கல்வெட்டொன்றில் (S.I.I. Vol. V. No. 438) அள்ளூர் ஒன்று காணப்படுகிறது. இவரும், “கொற்றச் செழியன் பிண்ட நெல்லின் அள்ளூர்” (அகம். 46) என்று பாண்டியனைக் குறித்துள்ளார். ஆதலால், இவர் பாண்டிநாட்டு அள்ளூரினரெனத் தெளியலாம். தலைமகனொருவன் கற்புடைய மனையாளொடு இல்லிருந்து நல்லறஞ் செய்து வருகையில் புறத்தொழுக்க முடையனானான். அதனால் அவன் மனையாட்கு வருத்தமுண்டாயிற்று. அவள் உடல் நலம் குறைந்தது; மேனி நலமும் வாடியது. அது கண்ட தோழி அவளது வருத்த நீங்கற்கென அவனைக் கொடுமை கூறினாள். தலைமகளோ அது பொறாது, “நன்னலம் தொலைய நலமிக்கச் சாஅய், இன்னுயிர் கழியினும் உரையல், அவர் நமக்கு அன்னையும்; அத்தனும் அல்லரோ” (குறந். 93) என்றாளென நன்முல்லையார் பாடுவது அவரது சான்றாண்மையைச் சிறப்புறக் காட்டுகின்றது. ஒருகால் நன்முல்லையார் காடு சேர்ந்த நாட்டுக்குச் சென்று ஒரு மறக்குடி மகளைக் கண்டார். அவள் தன் குடியின் முன்னோர் புகழ் நிலவப் பொருது நடுகல்லாகியது அறிந்து அவர் நடுகல்லை நாடோறும் தவறாமல் வழிபட்டு வந்தாள். அவ் வழிபாட்டில், அவள், தான் நாளும் விருந்தினர் வரப்பெறுதல் வேண்டும் என்றும், தன் கொழுநன் போரில் வென்றிபெறுக வென்றும், போர் செய்யும் பகைவேந்தரும் உண்டாக வேண்டு மென்றும் வேண்டிக் கொண்டாள். அவள் செயல் மாண்பு கண்டு வியப்புற்ற நன்முல்லையார் இப் பாட்டினைப் பாடியுள்ளார். களிறுபொரக் கலங்கு கழன்முள் வேலி அரிதுண் கூவ லங்குடிச் சீறூர் ஒலிமென் கூந்த லொண்ணுத லரிவை நடுகற் கைதொழுது பரவு மொடியாது 5 விருந்தெதிர் பெறுகதில் யானே யென்னையும் ஒ...........வேந்தனொடு நாடுதரு விழுப்பகை யெய்துக வெனவே. திணை : வாகை; துறை: மூதின்முல்லை. அள்ளூர் நன்முல்லையார் பாடியது. உரை : களிறு பொரக் கலங்கும் -களிறு படிந்துழக்கக் கலங்கிச் சேறாகும்; அரிதுண் கூவல் - உண்ணும் நீர் அரிதாகிய நீர்நிலையும்; முள் கழல் வேலி அங்குடிச் சீறூர் - முள்ளை யுடைய கழற்கொடியாலாகிய வேலி சூழ்ந்த அழகிய குடிகளை யுடைய சிறிய வூரில் வாழும்; ஒலிமென் கூந்தல் ஒண்ணுதல் அரிவை - தழைத்த மெல்லிய கூந்தலையும் ஒள்ளிய நுதலையு முடைய அரிவையாவாள்; ஒடியாது நடுகல் கைதொழுது பரவும் - நாளும் தவிராமல் நடுகல்லைக் கைகூப்பித் தொழுது வழிபடா நின்றாள்; விருந்தெதிர் பெறுக யான் - விருந்தினர் எதிர்வரப் பெறுவேனாக யான்; என்னையும்- என் கொழுநனும் ............ வேந்தனொடு நாடுதரு விழுப்பகை எய்துக என - வேந்தனும் மண்ணாசையால் அவன் உண்டாக்கும் பெரிய போரும் உண்டாகுக என்று; எ-று. கலங்கும் கூவல், வேலிச்சீறூர் என நிரல்நிறையாக இயைக்க. கழல் முள்வேலியெனக் கிடந்தவாறே கொண்டு கழற் கொடியாகிய முள்ளையுடைய வேலி யென்றுரைப்பினுமமையும், ஒடியாது பரவும் என இயையும். எதிர்பெறுதல் - எதிர்கொண்டோம்புதல். இல்லற மகளிர்க்கு நல்லறமாகலின், விருந்தெதிர் பெறுகதில் லெனவும், வேந்தனும் நாடு தரும் பகையும் உண்டாவதால் கணவற்கு மறப்புகழும், விருந்தெதிர் பெறுதல் முதலிய அறங் கட்கு வேண்டும் பொருளும் உண்டாதலின் விழுப்பகை யெய்துக வெனவும் விரும்பிப் பரவினாள். பகை; ஆகுபெயர் “மாறுகொள் மன்னரும் வாழியர் நெடிதே” (புறம். 172) என்றுபிறரும் விழைந்தவாறு காண்க. சீறூர் அரிவை. பெறுக, எய்துகவென ஒடியாது பரவும் எனக் கூட்டி வினைமுடிவு செய்க. தில், விழைவின்கண் வந்தது. விளக்கம் : மூதில் முல்லையாவது “அடல்வே லாடவர்க் கன்றியும் அவ்வில், மடவரன் மகளிர்க்கு மறமிகுத்தன்று” (பு.வெ.மா.8:21) என வரும் மறக்குடிமக்கள் வாழும் ஊராதலின், “அங்குடிச்சீறூர்” என்றும், நடுகல்லைத் தெய்வமாகக் கருதி வழிபடுதல் மரபாதலின், “நடுகல் கைதொழுது ஒடியாது பரவும்” என்றும் கூறினார். “அடும்புகழ் பாடியழுதழுது நோனா, திடும்பையுள் வைகிற்றிருந்த - கடும்பொடு, கைவண் குருசில்கற் கைதொழூஉச் செல்பாண, தெய்வமாய் நின்றான் திசைக்கு” (பு.வெ.மா. 10:13) என்று பிறருங் கூறுதல் காண்க. “கற்புங் காமமும் நற்பா லொழுக்கமும், மெல்லியற் பொறையும் நிறையும் வல்லிதின் விருந்து புறந் தருதலும் சுற்ற மோம்பலும். பிறவு மன்ன கிழவோண் மாண்புகள்” (தொல். கற். 11) என்று ஆசிரியர் கூறுதலின், “விருந்தெதிர் பெறுகதில் யானே” என விருந்தோம்பல் விதந்து கூறப்பட்டது. பகையை வேறலால் நாடும் செல்வமும் பெறப் படுதலால். “நாடு தரு விழுப்பகை” யென்றார். எஞ்சா மண்ணசை கொண்டு செய்யும் வஞ்சிப்போர் நாடுதரு பகையெனப்படுகிறது. மறக்குடி மகளின் செயலை வியந்து கண்டோர் கூறியது. ஏட்டில் இதன் அடியில் “இது கண்டோர் கூற்று” என்றொரு குறிப்புக் காணப்படுகிறது. இப் பாட்டு இடையே சிதைந்துளது. 307. களிற்றுடனிலை ஒரு போர்க்களத்தில் ஒரு வீரன் பகைவர் யானைகளை யெறிந்து தானும் இடம் பெயர்ந்து இனிதியங்காதவாறு புண்பட்டு நின்றான். அந்நிலையினும் தன்னைத் தாக்க வந்த களிற்றைக்கொன்று தன் வேந்தன் பொருட்டு உயிரை விட்டான். இங்ஙனம் தானெறிந்த களிற்றோடு ஒரு வீரன் தானும் உடன் வீழ்ந்து மாண்டானாயின் அச்செயல் களிற்றுடனிலை யெனப்படும். தன் பொருட்டு உயிர்கொடுத்த வீரனது வீழ்ச்சியை வேந்தன் கண்டான். வீழ்ந்த வீரர் பலரும் பெரும் புகழ் நிறுவி வீறுபெறுவது அவற்குப் பேரின்பம் தந்தது. இக்களத்தில் தானும் பொருது உயிர் கொடுத்துப் புகழ்பெறுவதினும் சிறந்தது பிறிதொன்றும் இல்லை யெனவும், இது புலவர் பாடும் புகழ் விளைக்கும்; அப்புகழ் பெறலரிதெனவும் எண்ணினான்; எழுச்சி மிக்குக் கடும்போர் உடற்றிக் காண்போர் கையற்றினைய வீழ்ந்து பெருமை பெற்றான். அவன் செயல் இப் பாட்டில் குறிக்கப்படுகிறது. ஆசா கெந்தை யாண்டுளன் கொல்லோ குன்றத் தன்ன களிற்றொடு பட்டோன் வம்பலன் போலத் தோன்று முதுக்காண் வேனல் வரியணில் வாலத் தன்ன 5 கான வூரின் கழன்றுகு முதுவீ அரியல் வான்குழற் சுரியற் றங்க நீரும் புல்லும் மீயா துமணர் யாருமி லொருசிறை முடத்தொடு துறந்த வாழா வான்பக டேய்ப்பத் தெறுவர் 10 பேருயிர் கொள்ளு மாதோ வதுகண்டு வெஞ்சின யானை வேந்தனு மிக்களத் தெஞ்சலற் சிறந்தது பிறிதொன் றில்லெனப் பண்கொளற் கருமை நோக்கி நெஞ்சற வீழ்ந்த புரைமை யோனே. திணை : தும்பை ; துறை : களிற்றுடனிலை........... உரை : ஆசா கெந்தை யாண்டுளன் கொல்லோ - எமக்குப் பற்றாகிய எம் தலைவன் எவ்விடத்தே யுள்ளானோ; குன்றத் தன்ன களிற்றொடு பட்டோன் - மலைபோன்ற களிற்றை யெறிந்து அதனோடே அவன் இறந்தான்; வம்பலன் போலத் தோன்றும் - அயலான்போலத் தோன்றுகின்றான்; உதுக்காண் - அங்கே அவனைப் பார்; வேனல் - வேனிற் காலத்தில்; வரி யணில் வாலத்தன்ன - வரிகளையுடைய அணிலினது வாலைப்போன்ற; கான ஊகின் கழன்றுகு முதுவீ அரியல் - காட்டிடத்து ஊகம் புல்லினின்றும் உதிர்ந்த பழைய பூ அரியரி யாகத் திரண்டவை; வான் குழல் சுரியல் தங்க - பெரிய தலை மயிரிடத்துச் சுருள் களில் தங்குதலால்; நீரும் புல்லும் ஈயாது - நீரையும் புல்லையும் கொடாமல்; உமணர் -உப்பு வாணிக ரால்; யாரும் இல் ஒரு சிறை - யாருமில்லாத தோரிடத்தே; முடத்தொடு துறந்த வாழா வான் பகடு ஏய்ப்ப - முடம்பட்டதனால் கைவிடப்பட்ட வாழும் திறனில்லாத பெரிய எருதுபோல; தெறுவர் பேருயிர் கொள்ளும் - பகைவருடைய மிக்க உயிர்களைக் கவர்வான்; அது கண்டு - அச்செயலைக் கண்டு; வெஞ்சின யானை வேந்தனும் - வெவ்விய சினத்தையுடைய வேந்தனும்; இக்களத்து எஞ்சலில்சிறந்தது பிறிது ஒன்று இல்லென - இக்களத்தில் இறத்தலினும் சிறந்த செய லொன்று வேறியாதும் இல்லை யென்று கருதியும்; பண் கொளற்கு அருமை நோக்கி - புலவர் பாடும் பாட்டை வேறு வகையால் பெறுதலின் அருமை நோக்கியும்; நெஞ்சற வீழ்ந்த புரைமையோன் - தன்னுயிர்மேல் ஆசையின்றி வீழ்ந்து பெருமை யுடையனாயினான்; எ-று. பட்டோன், முதுவீயரியல் சுரியலில் தங்குதலால், உதுக்காண், வம்பலன்போலத் தோன்றும்; வான்பகடேய்ப்பத் தெறுவர் பேருயிர் கொள்ளும்; அது கண்டு வேந்தனும் இல்லெனவும் நோக்கியும் வீழ்ந்த புரைமையோன்; ஆசா கெந்தை யாண்டுளன் கொல்லோ என மாறிக் கூட்டி வினை முடிவு செய்க. உமணரால் துறக்கப்பட்ட வான்பகடுதான் இருக்கும் சூழலில் எத்தகைய புல் கிடைப்பினும் அதனை யுண்டொழித்தல்போல இவனும் தன்னைச் சூழநின்ற பகைவர் எத்துணைப் பெரியராயினும் அவரைக் கொன்று மேம்பட்டானென்பார் “வான்பகடேய்ப்பத் தெறுவர் பேருயிர் கொள்ளும்” என்றார். பேருயிர், தன்னை யொப்பாரும் மிக்காரு மாகிய பகைவருயிர். உமணர் பகட்டைத் துறந்ததற்குக் காரணம் கூறுவார், “முடத்தொடு” என்றார். ஓடு, ஆனுருபின் பொருட்டு. வாழா வான் பகடென்றது, தன் சூழலிற்பட்டவை யொழிந்தபின் பகடு இறப்பது போலத் தன்னை யெதிர்ந்தவர் பட்டபின் தானும் பட்டான் என்பது எய்துவித்தது. முடத்தொடு துறந்த பகடென்ற உவமையாற்றலால் களிறொடுபட்ட இவனும் புண்பட்டு நின்று தெறுவர் பேருயிர் கொண்டானென்றறிக. இன்னோரன்ன அரிய செயல் புலவர் பாடும் புகழ்க்குரிமையும் அருமையும் உடைய தாதலின், “பண்கொளற் கருமை நோக்கி” யென்றார். தன்னெஞ்சைத் தனக்காக்காது தன்பொருட்டுயிர்கொடுத்தானுக்காக்கி வீழ்ந்ததனால், “நெஞ்சற வீழ்ந்த” என்றும். அதனால் ஏனை வேந்தர் பலரினும் உயர்வு பெறுவது பற்றி,“புரைமையோன்”என்றும் கூறினார். வீழ்ந்தவென்னும் பெய ரெச்சம் காரணப்பொருட்டு ஆக்கவினை விகாரத்தாற்றொக்கது. விளக்கம் : களிற்றுடனிலையாவது, “ஒளிற்றெஃகம் படவீழ்ந்த, களிற்றின்கீழ்க் காண்படுத் தின்று” (பு.வெ.மா. 7.:20) என வரும். “தானை யானை” (தொல். புறத். 14) என்ற சூத்திரத்துக் “களிறெறிந் தெதிர்ந்தோர் பாடு” என்றதற்கு இளம்பூரணர் இதனை யெடுத்துக் காட்டுவர். களிற்றின்கீழ் வீழ்ந்து உருச் சிதைந்து போனமையின், “வம்பலன் போலத் தோன்றும்” என்றார். ஏனைக் காலத்தாயின் மழையாலும் பனியாலும் நனைந்து மயிர் படிந்து வேறுபடத் தோன்றுவது பற்றி, வேனிற் காலத்துத் தோன்றும் அணில் வால் ஊகம் பூவுக்கு உவமம் கூறப்பட்டது. வால், வாலமென வந்தது. சுரியல், சுருண்ட தலைமயிர். 308. கோவூர் கிழார் கோவூர் தொண்டைநாட்டு ஊர்களுள் ஒன்று. இப்போது இது செங்கற்பட்டு மாநாட்டில் உளது. சோழன் நலங்கிள்ளி, சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் முதலிய முடிவேந்தர் களைப் பாடிச் சிறப்புப்பெற்ற இவர், சீறூர் மன்னன் ஒருவனுக்கும் பெருவேந்தனொருவனுக்கும் நடந்த போரொன்றைக் கண்டார். சீறூர் மன்னன் கோவூர்கிழார்பால் பேரன்பும் பெருமதிப்பும் உடையனாதலோடு போர் புரிவதிலும் பேராண்மை பெற்றவன். அவன் பெயர் தெரிந்திலது. அப்போரில் பெருவேந்தன் குன்றுபோ லுயர்ந்த களிறொன்றின் மேலிருந்து போர் செய்யச் சீறூரரசன் நிலத்தில் நின்று போரிட்டான். இருவரும் வேற்போர் பொருத காலையில், சீறூர் மன்னன் தன் வேலைச் சினந் தெறிந்தான்; அது சென்று களிற்றின் நெற்றியிற் பாய்ந்து ஊடுருவி யழுந்திற்று. உடனே அவ் வேந்தன் தன் வேலைச் சீறூர் மன்னன்மேல் எறிய, அஃது அவன் மார்பிற்பட்டுத் தைத்தது. அவன் அதனைத் தன் கையிலேந்திப் பெருவேந்தன் யானையை எறிந்தானாக, அவ் யானைகள் அஞ்சிப் புறங் கொடுத்தோடின. இதனைக் கண்டு மகிழ்ச்சி மிக்க கோவூர்கிழார் அச் சீறூர் மன்னனுடைய பாணனுக்கு அவன் மனையோள் கூறும் கூற்றில் வைத்துக் கூறுவாராய் இப் பாட்டினைப் பாடியுள்ளார். பொன்வார்ந் தன்ன புரியடங்கு நரம்பின் மின்னேர் பச்சை மிஞிற்றுக்குரற் சீறியாழ் நன்மை நிறைந்த நயவரு பாண சீறூர் மன்னன் சிறியிலை யெஃகம் 5 வேந்தூர் யானை யேந்துமுகத் ததுவே; வேந்துடன் றெறிந்த வேலே யென்னை சாந்தா ரகல முளங்கழிந் தன்றே உளங்கழி சுடர்ப்படை யேந்திநம் பெருவிறல் ஓச்சினன் றுரந்த காலை மற்றவன் 10 புன்றலை மடப்பிடி நாணக் குஞ்சர மெல்லாம் புறக்கொடுத் தனவே. திணை : வாகை. துறை: மூதின்முல்லை. கோவூர் கிழார் பாடியது. உரை : பொன் வார்ந்தன்ன புரியடங்கு நரம்பின் - பொற் கம்பியினை யொத்த முறுக்கடங்கின நரம்பினையும்; மின் நேர் பச்சை - மின்னலைப்போலும் தோலினையும்; மிஞிற்றுக் குரல் - வண்டிசைபோலும் இசையினையுமுடைய;சீறி யாழ் நன்மை நிறைந்த நயவரு பாண - சிறிய யாழை இசைக்கும் புலமை நிறைந்த கேட்டார் நெஞ்சில் விருப்பம் எழுவிக்கும் பாணனே, சீறூர் மன்னன் சிறியிலை எஃகம் - சிறிய ஊரையுடைய சிற்றரசனது சிறிய இலையையுடைய வேல்; வேந்தூர் யானை ஏந்து முகத்தது - பெருவேந்தன் ஊர்ந்துவந்த யானையின் உயர்ந்த நுதலிற்றைத்து அதன்கண்ணே அழுந்திக் கிடந்தது; வேந்து உடன்று எறிந்த வேல் - பெருவேந்தன் சினந்தெறிந்த வேல்; என்னை சாந்தார் அகலம் உளம் கழிந்தன்று – என்னிறை வனுடைய சாந்தணிந்த மார்பிற்றைத்து உருவிச்சென்றது; உளம் கழி சுடர்ப்படை யேந்தி - மார்பினுள் உருவிய ஒளிவிளங்கும் வேலைப் பிடுங்கிக் கையிலேந்தி; நம் பெருவிறல் - நம்முடைய மிக்க வலி படைத்தவனான தலைவன்; ஓச்சினன் துரந்த காலை - ஓக்கிச் செலுத்தியவிடத்து; மற்றவன் குஞ்சரமெல்லாம் - பகைவனான பெருவேந்தனுடைய களிறு களெல்லாம்; புன்றலை மடப்பிடி நாண - புல்லிய தலையையுடைய இளமையான பிடியானைகள் கண்டு நாணுமாறு; புறக்கொடுத்தன - பின்னிட்டு அஞ்சியோடின; எ-று. பாண, எஃகம் முகத்தது; வேல் கழிந்தன்று; ஏந்தி ஓச்சினன் துரந்த காலை, குஞ்சரமெல்லாம் பிடி நாணப் புறக் கொடுத்தன என வினைமுடிவு செய்க. சீறூர் மன்னன் எஃகம், பேரூர் வேந்தன் யானையின் நெற்றியில் பிடுங்கவாராதபடி அழுந்திய தென்றதற்கு “ஏந்து முகத்தது” எனவும், வேந்தன் வேல் எளிதிற்பிடுங்கி எறியும் அளவில் மார்பிற் சென்றதென்றற்கு “உளங்கழிந்தன்” றெனவும் கூறினார். களிறுகளின் புறக்கொடை பிடியானைகட்கு நாணம் விளைத்ததென்றதனால் வேந்தன்பட்ட இளிவரவு சொல்ல வேண்டாதாயிற்று. என்னையென்றும் நம் பெருவிறல் என்றும் கூறியதனால், இக் கூற்று மனையோள் கூற்றாமென வுணர்க. இன்றேல் மூதின் முல்லை யாகாமை யறிக. விளக்கம் : மூதின்முல்லையாவது, “அடல்வே லாடவர்க் கன்றியு மவ்வில், மடவரன் மகளிர்க்கு மறமிகுத் தன்று” (பு.வெ.மா. 8:21) என வரும் சீறூர் மன்னன் எனப்பட்டவன் தன் கணவன் என்பது தோன்ற, “என்னை” என்றும், “நம் பெருவிறல்” என்றும் ஆர்வமுடைமை விளங்கக் கூறினாள். இக் கூற்றில் வேந்தனெறிந்த வேல், தன் கணவன் மார்புளங் கழியச் சென்றது கூறுங்கால் அவல வுணர்வின்றி மறவுணர்வே மிக்கு நிற்பக் கூறுவது மனையோளது மற நிலையை எடுத்துக் காட்டுகிறது. நேர் நின்று எறிந்திருப்பானாயின், வேந்தன் ஒழிவது ஒருதலை யென்பது “வேந்துடன் றெறிந்த வேல்” என்றார். உடன்றெறிந்த வேல் என்றதனால் வேல்பட்டு யானை வீழ்ந்ததென்றும், எனவே வேந்தன் சினந்து தன்வேலைச் செலுத்தினனென்றும், அது தானும் மார்பில் நெடிது செல்லாது, சீறூர் மன்னனால் வாங்கி மீள மாற்றார்மேல் எறியப்பட்டதென்றற்கு, உளங்கழி சுடர்ப்படையேந்தி ஓச்சினன்” என்றும் கூறினாள். வேந்தூரும் பேரியானை வீழ்ந்தது கண்ட ஏனைக் களிறுகள் அஞ்சிப் புறக்கொடுத்தோடின வென்றும், அது கண்டு மடப்பிடிகள் நாணினவென்றும் கூறியது மறக்குடி மகளின் மற மாண்பைச் சிறப்பித்து நிற்கிறது. 309. மதுரை இளங்கண்ணிக் கோசிகனார் இளங்கண்ணி யென்பது இவரின் தந்தை பெயர். முடத்தாமக் கண்ணியார், புல்லாளங் கண்ணியார் எனச் சான்றோர் பலர் இருந்திருத்தல்போல இளங்கண்ணியார் என்றொருவர் இருந் துள்ளார். இவர் தந்தை சிறப்புடைய சான்றோரன்மையால், இளங்கண்ணியாரென்று கூறப்படாது இளங்கண்ணி யென்றே கூறப்பட்டனர் போலும். இவர்க்குப் போர் வீரரது மறம் பாடுவதில் பெருவிருப்புண்டு. இவர் பாடினவாகப் பல பாட்டுகள் கிடைத்தில வாயினும் இவ்வொரு பாட்டே போதிய சான்றாகிறது. ஒரு வீரன் போரில் பகைவர் பலரையும் களிறுகள் பலவற்றையும் கொன்று குவிப்பதனால் மட்டில் சிறப்புடையனாதலில்லை; அஃது வீரர் பலர்க்கும் பொதுவாயமைந்த செயலே; தன்போர் நலத்தால் கேட்ட பகைவர் உள்ளத்தே உட்குண்டாமாறு மேம்படும் ஒளியைப் பெறுவதே சீரிதாம் என்று இப்பாட்டில் விதந்தோதுவது, இவர் அறத்தாற்றிற் போராற்றிப் புகழ் பெறும் மறவர் மறத்தை நயப்பவரென்ற நலத்தை நாமறிய விளக்குகின்றது. இரும்புமுகஞ் சிதைய நூறி யொன்னார் இருஞ்சமங் கடத்த லேனோர்க்கு மெளிதே நல்லரா வுறையும் புற்றம் போலவும் கொல்லேறு திரிதரு மன்றம் போலவும் 5 மாற்றருந் துப்பின் மாற்றோர் பாசறை உளனென வெரூஉ மோரொளி வலனுயர் நெடுவே லென்னைகண் ணதுவே. திணை : தும்பை : துறை: நூழிலாட்டு. மதுரை இளங்கண்ணிக் கோசிகனார் பாடியது. உரை : இரும்பு முகம் சிதைய ஒன்னார் நூறி - இரும்பாலாகிய வேல் வாள் முதலிய படைகள் வாய்மடிந்து ஒடியும்படியாகப் பகைவரைக் கொன்று; அருஞ்சமம் கடத்தல் - அவரது கடத்தற் கரிய போரை வஞ்சியாது செய்து வெல்லுதல்; ஏனோர்க்கும் எளிது - ஏனை வீரர் எல்லாருக்கும் எளிதாகும்; நல்லரா உறையும் புற்றம் போலவும் - நல்லபாம்பு வாழும் புற்றுப் போலவும்; கொல்லேறு திரிதரும் மன்றம் போலவும் - கண்டாரைக் கொல்லும் ஆனேறு திரியும் மன்றுவெளி போலவும்; மாற்றருந் துப்பின் மாற்றோர் - கெடுதற்கரிய வலியினையுடைய பகைவர்; பாசறை உளன் என வெரூஉம் ஓர் ஒளி - பாசறைக் கண்ணே உள்ளான் எனக் கேட்டு நெஞ்சு நடுங்குதற்கேதுவாகிய சிறந்ததொரு ஒளியானது; வலன் உயர் நெடுவேல் என்னை கண்ணதே - வெற்றியால் உயர்ந்த நெடிய வேலையுடைய என் தலைவன் பாலே யுளது; எ-று. என்னை கண்ணதே என எடுத்தோதுதலின் ஏகாரம் தேற்றம். மன்றம், கொல்லேறு தழுவுதற்கு ஆயர் சமைக்கும் பொதுவிடம். ஒளியாவது “தான் உளனாய காலத்து மிக்குத் தோன்றுதலுடைமை” என்பர் பரிமேலழகர்; “ஒளி ஒருவற்குள்ள வெறுக்கை” (குறள். 971) என்பர் திருவள்ளுவர். கடத்தல் ஏனோர்க்கும் எளிது;ஒளி என்னை கண்ணதே என வினைமுடிவு செய்க. விளக்கம் : இரும்பென்றது ஆகுபெயரான் அதனாற் செய்யப்பட்ட வேல், வாள் முதலிய படைகளைக் குறித்து நின்றது. ஒன்னார் அருஞ்சமம் என்றது, ஒன்னார் செய்யும் வெல்லுதற்கரிய கடும்போர் என்பதுணர நின்றது. ஏனோர் ஒளியில்லாத ஏனை மறவர். வலிமிக்க போர் விலங்குக்கும் ஒளியில்லாத போர் மறவர்க்கும் வேறுபாடின்மையின், விலங்குபோலப் பொருது வேறல் மக்களாகிய மறவர்க்கு எளிதென்றது, வலியும் வெற்றியும் உடையனாதலோடு மாற்றார் தன்னுண்மை கேட்ட துணையானே அஞ்சி நடுங்கத்தக்க சிறப்புடையனாதல் அரிதென்பது வற்புறுத்தற்கு இச்சிறப்பு ஒளியெனப்படுகிறது. ஒடுங்கி யிருக்குங்கால் உளதாகும் ஒளிக்குப் பாம்புறையும் புற்றும், போரெதிர்ந்து நிற்க வுளதாகும் ஒளிக்குக் கொல்லேறு திரியும் மன்றமும் உவமமாயின. “வரிமிடற்றரவுறை புற்றத்தற்றே நாளும், புரவலர் புன்கண் நோக்காது இரவலர்க் கருகாதீயும் வண்மை, உரைசால் நெடுந்தகை யோம்பு மூரே” (புறம். 329) எனச் சான்றோர் கூறுவது காண்க. கொல்லேறு திரியும் மன்றம் அச்சந்தரும் தன்மைத் தென்பதை, “கொள்வாரைக் கொள்வாரைக் கோட்டுவாய் சாக்குத்திக் “கொள்வார்ப் பெறா அக்குரூஉச் செகில் காணிகா, செயிரிற் குறை நாளாற் பின்சென்று நாடி, உயிருண்ணுங் கூற்றமும் போன்ம்” (கலி.105) என்பதனா லறியலாம். நூழிலாட்டாவது, “களங்கழுமிய படை உளங்கழிந்த வேல்பறித் தோச்சின்று” (பு.வெ.மா. 7:16) என வரும்; இப் பாட்டு நூழிலாட்டின் விளைவாகப் பிறந்த ஒளி யுணர்த்தலின், நூழிலாட் டெனப்பட்டதெனக் கொள்க. 310. பொன்முடியார் வேந்தரிருவர் தும்பை சூடிப் போருடற்றினாராக, அப்போரில் முன்னாளில் கடுஞ்சமர் புரிந்து வீழ்ந்த பெருவீரனொருவனுடைய மகன் பகைவர் களிறுகள் பலவற்றைக் கொன்றான். அக்காலை, பகைவர் எறிந்த அம்பொன்று அவன் மார்பில் பாய்ந்து தைத்துக் கொண்டது. ஆயினும் அவன் அதனைப் பொருட்படுத்தாது மேலும் போரை நடத்தி முடிவில் தன் கைக்கொண்ட கேடகம் கீழ்ப்பட அதன்மேல் வீழ்ந்தான். அதனைக் கண்ட தாய், அவனது பிள்ளைப்பருவ நிலைமையை நினைந்து வருந்தினாள். சிறிது போதில் மறக்குடி மகளாகிய அவள் தன் மனத்தைத் தேற்றி, “மனமே, இவன் பிள்ளைப் பருவத்தில் வள்ளத்தில் பாலேந்தி யுண்பித்தபோது உண்ணானாகக் கண்டு சிறு கோலை யெடுத்து ஓச்சின காலையில் நம்மைக்கண்டு அஞ்சினான்; இப்போது, இவன் முன்னாள் போரில் வீழ்ந்த பெருவீரற்கு மகனாதற்கேற்ப, பல களிறுகளைக் கொன்றதனோடு அமையானாய், தன் கேடகம் கீழ்ப்படத் தான் அதன்மேல் வீழ்ந்து கிடக்கின்றான்; இடையே தன் மார்பிற் புண்ணில் பகைவர் எய்த அம்பொன்று தைத்திருப்பதைக் காட்டியபோது யான் இதனைக் கருதிற்றிலேன் என்கின்றான்; இவன் மறம் இருந்தவாறென்னே!” எனத் தனக்குள் வியந்து கூறிக் கொண்டாள். இதனை நம் சான்றோராகிய பொன்முடியார் இப்பாட்டினுள் அழகுறப் பாடியுள்ளார். பால்கொண்டு மடுப்பவு முண்ணா னாகலிற் செறாஅ தோச்சிய சிறுகோ லஞ்சியொ டுயவொடு வருந்து மனனே யினியே புகர்நிறங் கொண்ட களிறட் டானான் 5 முன்னாள் வீழ்ந்த வுரவோர் மகனே உன்னிலெ னென்னும் புண்ணொன் றம்பு மானுளை யன்ன குடுமித் தோன்மிசைக் கிடந்த புல்லண லோனே. திணை : தும்பை : துறை: நூழிலாட்டு. பொன் முடியார் பாடியது. உரை : பால் கொண்டு மடுப்பவும் உண்ணானாகலின் - முன்பு இளமைக் காலத்தில் வள்ளத்தில் பாலை யேந்திக் கையால் இவனைப் பற்றிக் கொண்டு வாயில்வைத்து உண்பிக்கவும் உண்ணானாகவே; செறா அது ஓச்சிய சிறுகோல் அஞ்சியொடு - உள்ளத்தே சினவாமல் புறத்தே சினந்தாற்போல் யான் கையில் கொண்டு ஓங்கிய சிறுகோலுக்கு அஞ்சியுண்டவனான இவன் பொருட்டு; உயவொடு வருந்தும் மனனே - கவலை கொண்டு வருந்துகின்ற மனமே; இனி - இப்பொழுது; முன்னாள் வீழ்ந்த உரவோர் மகன் - முன்னை நாளில் பகைவரோடு புகழுண்டாகப் பொருது வீழ்ந்த வலியுடையோருக்குப் புலவனாதற்கேற்ப; இனி - இப்பொழுது; புகர்நிறங் கொண்ட களிறட்டானான்; புள்ளி பொருந்திய நுதலையுடைய யானைகளைக் கொன்றும் அமையானாய்; புண்ணொன்று அம்பு உன்னிலென் என்னும் - இடையே மார்பிற் புண்ணிடத்துத்தைத்துக்கொண்டு நிற்கும் அம்பைக் காட்டிய வழி யான் இதனையறியேன் என்று சொல்லாநிற்கின்றான்; மான் உளை யன்ன குடுமி - குதிரையின் உளைமயிர்போலும் குடுமியுடனே; தோல் மிசைக் கிடந்த புல்லணலோன் - கேடகம் கீழ்ப்பட அதன்மேல் வீழ்ந்து கிடக்கும் புல்லிய தாடியையுடையான்; எ-று. மனனே, உரவோர் மகன், களிறட்டானான் கிடந்த புல்லண லோன், அம்பு உன்னிலென் என்னும் எனக் கூட்டி வினை முடிவு செய்க. மகன் வீழ்ந்து கிடந்தமை கண்டு வருந்தும் நெஞ் சிற்குக் கூறுதலின், “உயவொடு வருந்தும் மனனே” என்றாள். அஞ்சுதல் உடையானை “அஞ்சி” யென்றாள். சிறு கோலஞ்சி யென்ற நினைவால் வருந்துகின்றனை; அவன் இப்பொழுது அம்பு உன்னிலனென்னும்; அதனால் வருந்துதல் ஒழிக என்பதாம். விளக்கம் : பாலை வள்ளத்திற் கொண்டு மகன் வாயில் வைத்துண்பித்த காலையில், அவன் விளையாட்டு விருப்பால் பசியறியாது மறுக்கவும், அவ் விருப்பத்தை மாற்றிப் பசிதீர வுண்டல் வேண்டும் காதலால் சிறு கோல் கொண்டு அச்சுறுத்தும் தாய்மைப் பண்பை, “பால் கொண்டு மடுப்பவும் உண்ணானாகலின்; செறாஅ தோச்சிய சிறுகோல்” என்றார். தாயின் செயலில் செற்றமின்மை தோன்ற, “செறா அதோச்சிய” எனப் பட்டது. கொல்லுதலுடையானைக் கொல்லி யென்பது போல அஞ்சுதலுடையானை அஞ்சியெனப் பெயர் கொடுத்தார். செறா அச் சிறுகோற் கஞ்சியவன் இன்று பகைவர் மார்பிலெறிந்த அம்பாகிய வெய்ய கோற்கு அஞ்சாது “புண்ணொன்றம்பு உன்னிலென என்னும்” என வியந்து கூறியவாறு. முன்னாளில் பொருது வீழ்ந்த தந்தையரும் தன்னையரும் ஆகிய சான்றோரை “உரவோர்” என்றாள். “மானுளை யன்ன குடுமிப் புல்லணலோன்” என்றது பிள்ளைமைச் செவ்வி முற்றவும் நீங்காமை யுணர நின்றது. உன்னிலன் என்று பாடவேறுபாடுண்டு. 311. ஒளவையார் பலர்க்கும் பலவகையிலும் பேருதவி புரிந்தொழுகிய பெரு வீரனொருவன் போரொன்றில் கடுஞ்சமர்புரிந்து மேம்பட்டான். அவன் உதவி பெற்றவர் பலர் போர்க்களத்தே யிருந்தனர். அவனைப் பகைவர் திறத்து வீரர் பலர் தம்முடைய படைகளை யெறிந்து தாக்கினர். அவர் அனைவருடைய படைகளையும் அப்பெருவீரன் தன் ஒரு கேடகத்தையே கொண்டு தடுத்து வென்றான். கண் சிவந்து தீப்பொறி பறக்கவேறே துணை வேண்டாது அவன் ஒருவனே வென்று மாண்புறும் சிறப்பைக் கண்டார் ஒளவையார்.அக்காட்சியால் அவர் உள்ளத்தே உவகை மிகுந்து இப்பாட்டுருவில் வெளிவருவதாயிற்று. களர்ப்படு கூவற் றோண்டி நாளும் புலைத்தி கழீஇய தூவெள் ளறுவை தாதெரு மறுகின் மாசுண விருந்து பலர்குறை செய்த மலர்தா ரண்ணற் 5 கொருவரு மில்லை மாதோ செருவத்துச் சிறப்புடைச் செங்கண் புகையவோர் தோல்கொண்டு மறைக்குஞ் சால்புடை யோனே. திணை : தும்பை; துறை: பாண்பாட்டு. ஒளவையார் பாடியது. உரை : களர்ப்படு கூவம் தோண்டி - களர்நிலத்துண்டாகிய கூவலைத் தோண்டி; நாளும் புலத்தி கழீஇய தூவெள்ளறுவை - நாடோறும் வண்ணாத்தி துவைத்து வெளுத்த தூய வெள்ளிய ஆடை; தாது எரு மறுகின் மாசுண இருந்து - எருப்பொடி பரந்த தெருவில் எழும் அழுக்குப்படிய இருந்து; பலர் குறை செய்த - பலர்க்கும் இன்றியமையாத செயல்களைச் செய்துதவிய; மலர்தார் அண்ணற்கு - பூக்களால் தொடுக்கப்பட்ட மாலையை அணிந்த இத்தலைவனுக்கு; செருவத்து ஒருவரும் இல்லை - போர்க்களத்தில் துணையாக ஒருவரும் இல்லை; சிறப்புடைச் செங்கண் புகைய - சிறப்புடைய கண்கள் சினத்தால் சிவந்து புகையெழ நோக்கி, ஓர் தோல் கொண்டு மறைக்கும் சால்புடை யோன் - தன் ஒரு கேடகத்தைக் கொண்டே பகைவர் எறியும் படைகளைத் தடுக்கும் வலியமையுடையனாயுள்ளான்; எறு. அறுவை மாசுண இருந்து, பலர் குறைசெய்த அண்ணற்குச் செரு வந்து ஒருவரும் இல்லை; சால்புடையோனாயினன் என வினைமுடிவு செய்க ஆக்கவினை வருவிக்க. பலர்க்கு அவர் குறை முடித்து உதவிய அண்ணல் உயிர்போங்காறும் பிறர் செய்யும் ஓருதவியும் வேண்டானாயினன் என்பார், ஒருவரும் இல்லை யென்றார் சிறப்புடைய கண்ணோட்டம் நிறைந்த கண்கள் சிவப்பச் சினந்து தன் ஒரு தோலைக் கொண்டு பகைவர் எறியும் பல படைகளைத் தடுத்தலின், “சிறப்புடைச் செங்கண்புகைய ஓர் தோல்கொண்டு மறைக்கும் சால்புடையோன்” என்றார். சால்புடையோன் என்றது, ஒரு தோலே அவற்கு அமைவதாயிற் றென்பதை வற்புறுத்துகிறது. மாதும் ஓவும் அசைநிலை. சால்புடையோர் என்பதே பாடமாயின், சால்புடை யோர் ஒருவரும் இல்லை எனக் கூட்டி யுரைத்துக் கொள்க. இலரானமைக்குக் காரணம் அவ்வண்ணல் “கூட்டொரு வரையும் வேண்டாக்” கொற்றமுடையன் என்பது என்க. விளக்கம் : களர்நிலத்து ஊறும் உவர்நீர் ஆடையிற்பற்றிய மாசு போக்கும் இயல்பிற்றாதலால், புலைத்தி “களர்ப்படு கூவல் தோண்டி” அறுவை வெளுக்கும் தொழில் புரிவாளாயினளென்க. புலைத்தி - வண்ணாத்தி. தாது, துகள். இன்றியமையாது வேண்டுவதொன்று குறையெனப்படும். மலர்த்தாரெனற்பாலது எதுகைநோக்கி மலர் தாரண்ணலென நின்றது.தார் என்பதை ஆகுபெயராய் அது கிடந்து விளங்கும் மார்புக்காக்கி, மலரென்றது மார்புக்கு அடையென்றாக்கி, தாரணிந்து விளங்கும் அகன்ற மார்பு என்றுரைப்பினுமமையும். பிறர் துணை வேண்டாது தான் ஒருவனே நின்று போருடற்றும் மற மாண்பைச் சிறப்பிப்பார், “செருவத்து ஒருவருமில்லை மாதோ” என இரங்குவார் போலக் கூறினார். “தலைவனது ஆற்றல் கூறியதனால் பாண்பாட்டாயிற்” றென்றொரு குறிப்பு ஏட்டிற் காணப்படுகிறது. பாண்பாட்டாவது, “வெண்கோட்ட களிறெறிந்து செங்களத்து வீழ்ந்தார்க்குக், கைவல் யாழ்ப் பாணர் கடனிறுத் தன்று” (பு.வெ.மா. 7:11) எனவரும். 312. பொன்முடியார் ஒருகால் சான்றோர் கூட்டத்திடையே போர்நிகழ்ச்சி பற்றியும், அதன்கண் மக்கள் ஈடுபட்டுப் போர் செய்வதுபற்றியும் பேச்சுக்கள் நிகழ்ந்தன அக்கூட்டத்துச் சான்றோருள் பொன் முடியாரும் ஒருவர். அவர் மறக்குடியில் பிறந்து நல்லிசைப் புலமைபெற்ற புலவர் பெரு மாட்டியா ராதலால்,மக்கள் நன்னடை யுடையராய் இருத்தல் வேண்டுமென்ற நோக்கங்கொண்டு அளியும் தெறலும் புரிவது வேந்தர்க்குக் கடன், தெறல் குறித்துப் போர் உளதாமாகலின் அப்போர்க்குச் சென்று வென்றியுறப் பொருது மேம்படுவது காளையர்க்குக் கடன்; அவர்களைப் பெற்று வளர்ப்பது தாயர் கடன்; வளரும் மக்கள் அறிவாலும் ஆண்மையாலும் சான்றோராகச் செய்வது தந்தைக்குக் கடன் என எடுத்துரைத்தார். அவர் கூறியது ஏனைச் சான்றோரனைவர்க்கும் பெருமகிழ்ச்சியை விளைவித்தது. அது பலர்க்கும் பயன்படுமாறு பொன்முடியார் மறக்குடி மகளொருத்தியின் கூற்றில்வைத்து இப் பாட்டு வடிவில் தந்துள்ளார். ஈன்றுபுறந் தருத லென்றலைக் கடனே சான்றோ னாக்குத றந்தைக்குக் கடனே வேல்வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே 5 ஒளிறுவா ளருஞ்சம் முருக்கிக் களிறெறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே. திணை: வாகை; துறை: மூதின்முல்லை. பொன் முடியார் பாடியது. உரை : ஈன்று புறந்தருதல் என் தலைக்கடன் - மகனைப் பெற்று வளர்த்துவிடுதல் என்னிடத்துக் கடமையாகும்; சான்றோ னாக்குதல் தந்தைக்குக் கடன் - அவனை நற்பண்புகளால் நிறைந்தவனாக்குவது தந்தைபால் உள்ள கடமையாகும்; வேல் வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடன் -அவனுக்கு வேண்டும் வேலை வடித்துக் கூரியதாக்கித் தருவது கொல்லனது கடமை யாகும்; நன்னடை நல்கல் வேந்தற்குக் கடன் - நல்லொழுக்கத்தைக் கற்பிப்பது நாடாளும் வேந்தனது கடமையாகும்; ஒளிறுவாள் அருஞ்சமம் முருக்கி - விளங்குகின்ற வாளைக் கையிலேந்திச் சென்று தடுத்தற்கரிய போரைச் செய்து; களிறெறிந்து பெயர்தல் காளைக்குக் கடன் - பகைவர் களிற்றியானைகளைக் கொன்று வென்றியொடு மீளுவது காளையாகிய மகனுக்குக் கடமை யாகும்; எ-று. பெற்ற தாய் பசியறிந்து உணவூட்டி உடம்பை வளர்த்தலின், “புறந்தருதல்” என்றார். சான்றாண்மை உயிரோடியையும் அமைதி யாதலின், அதனையடுத் தோதினார். நல்லாரை இன்புறுத்தியும் அல்லாதாரை ஒறுத்தும் நல்லொழுக்கம் நிலவச் செய்தலின், “நன்னடை நல்கல் வேந்தற்குக் கடன்” என்றார். அருஞ்சமத்து அஞ்சாது சென்று வஞ்சியாது பொருது பகைவரது பகைமை யெஞ்சாவகை வென்று மேம்படுதல் மறக்குடியிற் பிறந்த மகனது கடன் என்பதை வற்புறுத்தற்கு இறுதிக்கண் வைத்தோதினார். விளக்கம் : உறக்கம் வரினும் பசியெடுக்கினும் குழந்தைகள் அழுமாகலின், அவற்றின் பசிக்குறிப்பறிந்து பாலூட்டும் ஒட்பம் தாய்மையின் தனிப்பெருஞ்சிறப்பாதலால், மணிவாசகரும் “பானினைந் தூட்டுந்தாய்” என்று விதந்து கூறுவது காண்க. தாய் உடலையும் தந்தை உடலகத்து நிலவும் உயிரறிவையும் ஓம்புங் கடப்பாட்டினராதலால், “புறந்தருதல்” தாய்க்குக் கடனாதலும், சான்றோனாக்குதல் தந்தைக்குக் கடனாதலும் எடுத்தோதப்பட்டன. அவ்வவ்வூர்களிலிருக்கும் கொல்லர் முதலியோர் அவ்வவ்வூரவர்க்கு வேண்டுவன செய்தல் வேண்டுமென்றும் அயலூர் சென்று பணி செய்வது குற்றமென்றும் முதற் குலோத்துங்க சோழன் காலத்தும் ஒரு கட்டுப்பாடிருந்ததெனத் திருபுவனையிலுள்ள கல்வெட்டொன்று (A.R. No. 205 of 1919) கூறுவது பொன் முடியார் இப்பாட்டின் கட் கடனாக வகுக்கும் கொள்கையை வற்புறுத்துகிறது. ஈன்றாள் முதலியோர்க்கு முறையே புறந்தருதல் முதலாகவுள்ள தொழிற் பண்புகளைக் கடனாகக் கூறியது அவற்றை நன்குணர்ந்து வழுவாது ஆற்றல்வேண்டும் என்றற்கென வறிக. 313. மாங்குடிகிழார் வேந்தர் இருவர் பொருத போர்க்களத்தில் சான்றோர் பாராட்டிப் புகழ்தற்குரிய வெற்றி பெற்று வாகைசூடி நின்றான் ஒரு தானைத்தலைவன், அவன் பேராண்மையே யன்றிக் கொடை வண்மையும் பெரிதுடையன்; கொடுத்தற்குரிய கைப்பொருள் மிகவுடையனல்லனாயினும் தன்பால் வரும் இரவலர் களிறும் தேரும் வேண்டினாலும், பகைவர் பால் உள்ளவற்றைத் தான் உடையான்போல வழங்கும் உரவோனாவான். அவன் அவ்வாறு கருதற்கேதுவாகிய உள்ள நிலை இகழும் பான்மையுடைய தன்று என அவன் தலைமையின்கீழ் நின்று பொரும் வீரர் பேசிக் கொண்டனர். இதனை மாங்குடிகிழார் கேட்டனர். உண்மையும் அதுவாதல் கண்டு இப்பாட்டில் அழகுறக் கூறியுள்ளார். மாங்குடி கிழார் பாண்டியன் தலையாலங் கானத்துச் செருவென்ற நெடுஞ் செழியனைப் பல பாட்டுகளிற் பாராட்டிப் பாடி மாங்குடி யென்னும் ஊர்க்குக் கிழாராயினர். மருதனென்பது இவரது இயற்பெயர். அதனால் இவர் மாங்குடி மருதனாரென்றும் கூறப்படுவர். பத்துப் பாட்டுள் ஒன்றாகிய மதுரைக் காஞ்சியும் இவர் பாடியது. இதனால் இவர் மதுரைக்காஞ்சிப் புலவரென்றும் சான்றோரால் பாராட்டப்பெறுவர். இவர் தென்பாண்டி நாட்டு வாட்டாற்று எழினியாதன் என்பவனையும் பாடியுள்ளார். அத்த நண்ணிய நாடுகெழு பெருவிறல் கைப்பொருள் யாதொன்று மிலனே நச்சிக் காணிய சென்ற விரவன் மாக்கள் களிறொடு நெடுந்தேர் வேண்டினுங் கடவன் 10 உப்பொய் சாகாட் டுமணர் காட்ட கழிமுரி குன்றத் தற்றே எள்ளமை வின்றவ னுள்ளிய பொருளே. திணை : தும்பை; துறை : வல்லாண்முல்லை. மாங்குடி கிழார் பாடியது. உரை : அத்தம் நண்ணிய நாடு கெழு பெருவிறல் - வழிகள் பல பொருந்திய நாட்டையுடையனாகிய பெரிய வலிமிக்க தலைவன்; கைப்பொருள் யாதொன்றும் இலன் - கையிலே பொருள் யாதுமுடையனல்லனெனினும்; நச்சிக் காணிய சென்ற இரவல் மாக்கள் - பொருளை விரும்பி அவனைக் காண்டற்கு அவன்பாற் சென்ற இரவலர்; களிறொடு நெடுந்தேர் வேண்டினும் கடவன் - யானையும் தேரும் வேண்டினாராயினும் பகைவர்பால் உள்ள வற்றைக் காட்டித் தரும் கடப்பாடுடையன்;அவன் உள்ளிய பொருள் - அவன் அவ்வாறு தருதற்கேற்ப அவன் உள்ளத்தே கருதும் கருத்து; உப்பொய் சாகாட்டு உமணர் காட்ட கழிமுரி குன்றத் தற்று - உப்பைக் கொண்டு செல்லும் வண்டிகளை யுடைய உப்பு வாணிகரது காட்டிடத்தாகிய கழி நீரால் அலைக்கப்பட்ட குன்றம் போன்றதாய்; எள் அமைவின்று இகழப்படும் பான்மையுடைத்தன்று; எ-று. மக்கள் இடையறாது அச்சமின்றி வழங்குதற் கேதுவாகிய காவலமைந்த நாடென்பார் “அத்தம் நண்ணிய நாடு” என்றும், இத்துணைக் காவற் சிறப்புடையவன் பெருஞ்செல்வ முடைய னல்லன் என்றற்கு “கைப்பொருள் யாதும் இலன்” என்றும், அதனால் இரவலர்க்கு இலனென்னும் எவ்வம் உரையாது அவர் வேண்டும் களிறு தேர் முதலிய பெருஞ்செல்வமும் வழங்குங் கொடைக்கடன் இறுப்பவன் என்பார், “களிறொடு நெடுந்தேர் வேண்டினும் கடவன்” என்றும். கூறினார். இவன் கருதும் புகழ், போருடற்றிப் பொருளீட்டியும் ஈத்தும் பெறற் குரித் தாயினும் அதனாற் சலிப்புறாத திண்மை அவன் பால் உண்டென் றற்கு, “கழிமுரி குன்றத்தற்றாய் எள்ளமைவின்” றென்றார். பெருவிறல், இலன், எனினும் கடவன், உள்ளிய பொருள் குன்றத் தற்றாய எள்ளமை வின்றென மாறிக் கூட்டி வினைமுடிவு செய்க. விளக்கம் : வல்லாண்முல்லையாவது, “இல்லும் பதியும் இயல்புங் கூறி, நல்லாண்மையை நலமிகுத்தன்று” (பு.வெ.மா. 8:23) என வரும். “வெறியறி சிறப்பின்” (தொல். புறத். 5) என்ற சூத்திரத்து “சீர்சால் வேந்தன் சிறப்பெடுத்துரைத்தல்” என்றதற்கு “வேந்தர்க்கு உரிய புகழ் அமைந்த தலைமைகளை ஒருவற்குரியவாக அவன்றன் படையாளரும் பிறரும் கூறுதல்” என்றுரைத்து, இப் பாட்டை யெடுத்துக் காட்டி, “இது படையாளர் கூற்று. இதற்கு முடியுடை வேந்தன் சிறப்பெடுத்துரைத் தலென்று கூறின், அது பொதுவியலிற் கூறலாகாதென்றுணர்க” என்று கூறுவர். நன்னீர் உளதாயவிடத்துச் செல்லும் வழி பலவாதல் போலப் பயன்படும் செல்வம் நிறைந்த செல்வமுறையும் நாட்டிற்குச் செல்லும் வழி பலவாமாதலால், “அத்தம் நண்ணிய நாடு கெழு பெருவிறல்” என்றார்; “உண்ணீர் மருங்கின் அதர் பலவாகும்” (புறம். 204) என்று சான்றோர் கூறுவது காண்க. ஆண்மைவாயிலாகப் பெறும் பொருளத்தனையும் ஓம்பா தீயும் உயர்ந்த கொடையுடையன் என்பது விளங்க, “கைப்பொருள் யாதொன்று மிலனே” யென்றும் இரவலர் வருங்கால் கைப்பொருளில்லை யாயினும், வாடாத ஆண்மை யுளதாகலின், பகைவருடைய களிறுகளையும் தேர்களையும் தான் கொண்டதாகத் துணிந்து வழங்கும் சிறப்புடையவன் என்றற்கு, “களிறொடு நெடுந்தேர் வேண்டினும் கடவன்” என்றும் கூறினார். “ஒன்னாராரெயிலவர்கட்டாகவும் நுமதெனப், பாண்கட னிறுக்கும் வள்ளியோய்” (புறம். 203) என்று பிறரும் கூறுவது காண்க. கழிமுரி குன்றம், கழி சூழ்ந்த குன்றம் உமணர்க்குரிய செல்வ வருவாயாகிய கழி சூழ்ந்த குன்றம் உப்பு விளையும் நிலத்தே யுளதாயினும் சலியாமையால் சிறப்புறுவது போல, பொருளின்மையாகிய நிலையி லிருந்தே வள்ளன்மை குன்றாத மனமாண்பால் எள்ளற் பாடெய்தாமை தோன்ற, “எள்ளமை வின்று” என்றார். 314. ஐயூர்முடவனார் போரில் புகழ் உண்டாகப் பொருது வென்றி மேம்பட்ட வீரர் தலைவனொருவனைப்பற்றி அவனுடைய வீரர்கள் தம்முட் பாராட்டிப் பேசிக்கொண்டனர். அதனையறிந்த ஐயூர் முடவனார் இப்பாட்டில் அவர் கூற்றைக் குறித்துள்ளார். அத்தலைவன் போலவே அவன் மனைவியும் புகழ் புரியும் நன் மாண்புடையவள் போர் முனையில் அவன் தானைக்கு வரம்பாய் நின்று பொரும் வேல் வன்மையால் நெடும்புகழ் பெற்றவன். அவனைப் போல அவன் இருக்கும் ஊரவருள் முன்னோர் பலர் கடும்போர் உடற்றிக் கன்னின்றமையின்,நடுகற்கள் பல அவன் ஊரில் உண்டு. ஊரில் இருக்குங்கால் அவன் ஊர் வாழும் குடிகளுள் ஒருவனாய்த் தன் குடிக்கடனை யாற்றுவான். போர் வரின் படையாய் நிற்கும் அவன், போரில் தன் வேந்தன் துன்பமெய்துவானாயின், அக்காலை கொடியும் படையுங் கொண்டு மண்டி மேல்வரும் பகைவர் தானைக்குக் கற்சிறைபோல் தடையாய் நின்று வென்றியெய்தும் விறல்மிக்கவன் என இதன்கட்கூறியுள்ளார். மனைக்குவிளக் காகிய வாணுதல் கணவன் முனைக்குவரம் பாகிய வென்வே னெடுந்தகை நடுகற் பிறங்கிய வுவலிடு பறந்தலைப் புன்காழ் நெல்லி வன்புலச் சீறூர்க் 5 குடியு மன்னுந் தானே கொடியெடுத்து நிறையழிந் தெழுதரு தானைக்குச் சிறையுந் தானேதன் னிறைவிழு முறினே. திணை : தும்பை; துறை : வல்லாண்முல்லை. ஐயூர் முடவனார் பாடியது. உரை : மனைக்கு விளக்காகிய வாணுதல் கணவன் - மனைவியின் கண் ஒளி செய்யும் விளக்குப்போலத் தன் மாட்சியால் புகழாகிய விளக்கத்தைச் செய்யும் ஒளிபொருந்திய நுதலையுடைய வட்குக் கணவனும்; முனைக்கு வரம்பாகிய வென்வேல் நெடுந்தகை - போரில் தன் படைக்கு எல்லையாய் நின்று காக்கும் வெற்றி பொருந்திய வேலேந்திய நெடிய புகழையுடையவனுமாகிய எம் தலைவன்; நடுகல் பிறங்கிய உவலிடு பறந்தலை - நடு கற்களால் உயர்ந்த தழைகள் உதிர்ந்த பறந்தலைகளையும்; புன்காழ் நெல்லி வன்புலச் சீறூர்- புல்லிய கொட்டையை யுடைய நெல்லி மரங்கள் நிற்கும் புன்செய் நிலங்களையு முடைய சீறூரின் கண் வாழும்; குடியும் தானே - குடிகளுள் ஒரு குடியாகி இருப்பவனும் அவன்; தன் இறை விழுமுறின் - போரில் தன் வேந்தன் துன்பமுறுங்காலமாயின் அக்காலத்தே; கொடி யெடுத்து நிறையழிந்துஎழுதரு தானைக்கு -கொடியை யுயர்த்தி நிறுத்தப்படும் நிறைக்கடங்காது முந்துற் றெழுந்து வரும் பகைவர் படைக்கு; சிறையும்தானே - மேற்செல்லாத படியாகக் குறுக்கிட்டுத் தடுத்து நின்று காக்கும் அணையாய் நிற்பவனும் அவனேயாம்; எ-று. கணவனும் நெடுந்தகையுமாகிய தலைவன்குடியும் தானே, சிறையும் தானே எனக்கூட்டி வினைமுடிவு செய்க. வாணுதல் கணவன் என்றதற்கேற்பக் “குடியுமன்னும் தானே” என்றும், முனைக்கு வரம்பாகிய நெடுந்தகை யென்றதை வலியுறுத்தச் “சிறையும் தானே” என்றும் கூறினார். மன்னும் உம்மையும் அசைநிலை, வீரர் தொகை மிகுதியும் மற மிகுதியும் நிறுத்தப் படும் நிறையழிதற் கேது.விழுமமென்பது விழுமெனக் குறைந்து நின்றது. பிறாண்டும் இவ்வாறே கொள்க. விளக்கம் : மகளிர் தம்முடைய நற்குண நற்செயல்களால் மாண்புற்ற விடத்து மனைகள் தாம் பெறுவனநிறைந்து இன்ப வொளி விளங்கப் புகழ் மேம்படுவது குறித்து, மகளிரை “மனைக்கு விளக்காகிய வாணுதல்” என்று சிறப்பித்தார். சிறப்புடைய ஆண்மக்களைப் பாடுமிடத்து அவர் மனைவியரையும் சார்த்திப் பாராட்டுவது சான்றோர் மரபு; அதுபற்றியே “மனைக்கு விளக்காகிய வாணுதல் கணவன் ” என்றார்; “அடங்கிய கொள்கை ஆறிய கற்பின் தேறிய நல்லிசை வண்டார் கூந்தல் ஒண்டொடிகணவ” (பதிற். 60) என்றும், “பெண்மை சான்று பெருமடம் நிலைஇக், கற்பிறை கொண்ட கமழும் சுடர்நுதல் புரையோள் கணவ” (பதிற். 70) என்றும் சான்றோர் கூறுவது காண்க. மனைவி மனைக்கு விளக்கமாய்த் திகழ, கணவன் போர் முனைக்கு விளக்கமமைந்த வரம்பாய் நின்றான் என்றார். நன்மனையாளை மணந்து புகழ் புரிந்து வாழும் ஒருவன், மனைவாழ்வு மேற்கொள்வது தன் குடியைச் சீர்பெறத் திகழ்வித்தற்காதலால், அதற்கேற்பக் “குடியுமன்னுந்தானே” யென்றார். நிற்ப நில்லாது படைச்செருக்கால் மேனோக்கி வந்து தாக்கும் பகைவர் தானைக்கு முன்னாக நின்று பொருது வெற்றி பெறு மாற்றால், அத் தானை மேலே செல்லாதவாறு விலக்கிப் பொருதழித்து நிற்பதனால், “சிறையுந் தானே தன் வேந்தன் விழுமுறினே” என்றார். 315. அதியமான் நெடுமான் அஞ்சி அதியமான் நெடுமான் அஞ்சி பகைவரை வென்று மேம்பட்டு வாழ்ந்த காலத்தில் அவன் அவைக்களத்திலிருந்து சிறப்புச் செய்த சான்றோராகிய ஒளவையார், அவன் வாழ்க்கை நலத்தைச் சான்றோர்க்கு அறிவிப்பாராய் இப்பாட்டினைப் பாடியுள்ளார். இதன்கண், “நெடுமான் அஞ்சி, மிகவுடையனாயின் பிறர்க்கீத்து எஞ்சியதைத் தான் உண்பான்; தான் கொடுத்தற்குக் கடமைப் பட்டவர்க்கு அவன் கொடுக்குமளவினும் இரப்பவர்க்கு மிகுதியாகத் தருவன்; திறனில்லாத மடவரோடும் உடனிருந்துண்டு மகிழும் எண்மையுடையவன்; மனையிறைப்பில் செருகிய தீக்கடைகோல் கடையாதபோது தீத்தோன்றாதவாறு போலத்தன் வலி தோன்றா திருப்பதும், கடைந்த வழித் தீயைத் தோற்றுவிப்பது போலப் போருண்டாகியபோது தன் வலியைத் தோற்றுவிப்பதும் அவன் பண்பு” என்பதைத் தெரிவித்துள்ளார். உடைய னாயி னுண்ணவும் வல்லன் கடவர் மீது மிரப்போர்க் கீயும் மடவர் மகிழ்ந்துணை நெடுமா னஞ்சி இல்லிறைச் செரீஇய ஞெலிகோல் போலத் 5 தோன்றா திருக்கவும் வல்லன் மற்றதன் கான்றுபடு கனையெரி போலத் தோன்றவும் வல்லன்றான் றோன்றுங் காலே. திணை : தும்பை; துறை : வல்லாண்முல்லை: நெடுமானஞ்சியை ஒளவையார் பாடியது. உரை : உடையனாயின் உண்ணவும் வல்லன் - மிகவுடையனாயின் பரிசிலர்க்கு ஈந்து எஞ்சியதைத் தான் உண்ணவல்லன்; குறைந்த தாயின் அவர்கட்கீந்து தான் உண்ணாதிருக்கவும் வல்லன்; கடவர்மீதும் இரப்போர்க்கு ஈயும் - தான் தரக் கடன்பட்ட வர்க்குக் கொடுப்பதைவிட மிகுதியாகத் தன்னை இரப்பவருக்குக் கொடுப்பன்; மடவர் மகிழ் துணை - அறிவில்லாரோடும் உடனிருந்து உண்டு மகிழும் துணைவனாவான். நெடுமான் அஞ்சி -; இல்லிறை செரீ இய ஞெலிகோல் போல - மனையின் இறைப்பில் செருகப்பட்ட தீக்கடை கோலைப்போல; தோன்றா திருக்கவும் வல்லன் - தன் வலி தோற்றாது ஒடுங்கியிருக்கவும் வல்லன்; அதன் கான்றுபடு கனையெரி போல - அதனைக் கடையவெளிப் படும் மிக்க தீயைப்போல; தோன்றுங்கால் - தன் வலிதோற்ற வேண்டுமிடத்து; தோன்றவும் வல்லன் - பலரும் அறியத் தோற்றுவிக்கவும் வல்லனாவான்; எ-று. எதிர்மறை யும்மையால் உண்ணாமையும் உண்ணல் உண்ணாமைகட் கேற்பப் பெரிதுடைமையும் சிறிதுடைமையும் வருவிக்கப்பட்டன. கடவர், தன்னால் தரப்படும் கடனுடைய தானைவீரர் முதலியோர். இரப்போர், இன்மையால் துன்புறு தலின் அவர்கட்குக் கடவரினும் மேற்படத் தருதலை மேற் கொண்டான். அஞ்சியின் கைவண்மையும் கொடை மடமும் விளங்க “மடவர் மகிழ்துணை” யென்றார். பெருவலி படைத் தவனாயினும் அடக்க முடையானென்றற்குத் “தோன்றா திருக்கவும் வல்லன்” எனவும், அடக்கங் கண்டு வலியிலனெனப் பகைவர் கருதி எள்ளாமை குறித்து, “தோன்றுங்கால் தோன்றவும் வல்லன்” எனவும் கூறினார். அஞ்சி, வல்லன், ஈயும், மகிழ்துணை. தோன்றா திருக்கவும் வல்லன், தோன்றவும் வல்லன் எனக் கூட்டி வினை முடிவு செய்க. விளக்கம் : உடையன் எனப் பொதுப்படக் கூறவே, மிக்க பொருளுடைமை கொள்ளப்பட்டது. பிறரை யுண்பித்தலிலே பேரீடுபாடு உடைய அஞ்சி அவருண்டு மகிழ்ந்து பாடக்கண்டு நுகரும் இன்பத்திலே திளைக்கின்றவனாதலால், தானே தனித்துண்ணும் இன்பமில் செயலை விரும்புதல் மிக்க வன்மையாற் செய்ய வேண்டுவதுபற்றி, “உண்ணவும் வல்லன்” என்றார். தானைவீரர், முதலாயினோர்க்குத் தலைவராயினோர் அவ்வக் காலங்களில் மிக்க சிறப்புக்களை நல்குவது கடனாகும். அவ்வகையில் அவர்கள் கடவர் எனப்படு கின்றனர். அக் கடவரினும் இரப்போர்க்கு மிக அளிப்பது ஆண்மைச் சிறப்பாகும். இன்மையால் இளிவந்து இரப்பவர், யாதும் இரக்கமின்றிச் செய்யும் துணிவுடையராதலின், கடவரினும் மிகுதியாக ஈவது பெறுதற் குரிய ரென்பதுபற்றி, “கடவர் மீதும் இரப்போர்க்கு ஈயும்” என்றார் என்று கொள்ளினு மமையும். கடவர்க்கும் அது மிக்க இன்பத்தைச் செய்வதொன்று. மடவர், இளையருமாம். தீக்கோல் கடையப்பட்ட வழிப் பிறக்கும் தீயை, கான்றுபடு கனையெரி யென்றது, அஞ்சியின் சினப் போர்த்திறத்தை விளக்கிற்று. 316. மதுரைக் கள்ளிற் கடையத்தன் வெண்ணாகனார் கள்ளில் என்பது தொண்டைநாட்டில் உள்ளதோர் ஊர். இவ்வூரினரான கடையத்தன் என்பவருக்கு மகனார் நம் சான்றோ ராகிய வெண்ணாகனார். இவர் மதுரையில் வந்து தங்கியிருந் தமையின், மதுரைக் கள்ளிற் கடையத்தன் வெண்ணாகனார் எனப்படுவாராயினர். கடையம் என்றோர் ஊருண்டு. ஒருகால் ஒரு வேந்தன் வேறொரு வேந்தனுடன் போருடற்றி வெற்றி யெய்தினான். பகை வேந்தன் இறந்துபட்டான். வெற்றிபெற்ற வேந்தனுடன் தானைத்தலைவரும் பிற சான்றோரும் கள்ளுண்டு மகிழ்ந்தனர். தன் மனைக்கு மீண்டு வந்த தலைவன் கள்ளை விடியலிலும் மிகவுண்டு அக்கள்ளை வாழ்த்தி உறங்குவானாயினன். அவன்பாற் சென்று பரிசில் பெற்றுவரும் பாணர் தலைவன், வழியில் வேறுசில பாணரைக் கண்டான். இப் பாண் தலைவன் அவர் களுடைய தலைவனை நோக்கி, “மனை முன்றிலில் துஞ்சு வோனாகிய அவனே எம் தலைவன்; யாம் அவன் பாணரேம்; நேற்று வந்த விருந்தை ஓம்பும் வகையின்றி அதன் பொருட்டுத் தன் இரும்புடைப் பழவாளை ஈடு வைத்தனன். அப் பெற்றியோன், பகை வேந்தன் துன்புற்று வீழவென்று அவ் வெற்றியாற் பெற்ற பொருளை எமக்கு ஈந்து சிறப்பித்தான். நீவிரும் சென்று பரிசில் பெற்று உண்பனவுண்டு வாய் சிவந்து வருவீராக” என்று தெரிவித்தான். இதனைக் கேட்ட வெண்ணாகனார் இப் பாட்டில் அவன் கூற்றுப் பொருளாக வரப் பாடியுள்ளார். கள்ளின் வாழ்த்திக் கள்ளின் வாழ்த்திக் காட்டொடு மிடைந்த சீயா முன்றில் நாட்செருக் கனந்தர்த் துஞ்சு வோனே அவனெம் மிறைவன் யாமவன் பாணர் 5 நெருநை வந்த விருந்திற்கு மற்றுத்தன் இரும்புடைப் பழவாள் வைத்தன னின்றிக் கருங்கோட்டுச் சீறியாழ் பணைய மிதுகொண் டீவதி லாள னென்னாது நீயும் வள்ளி மருங்குல் வயங்கிழை யணியக் 10 கள்ளுடைக் கலத்தேம் யாமகிழ் தூங்கச் சென்றுவாய் சிவந்துமேல் வருக சிறுகண் யானை வேந்துவிழு முறவே. திணை : தும்பை; துறை : வல்லாண்முல்லை. மதுரைக் கள்ளிற் கடையத்தன் வெண்ணாகனார் பாடியது. உரை : சிறுகண் யானை வேந்து விழு முறவே - சிறிய கண்களை யுடைய யானையை யுடையோனாகிய பகை வேந்தன் போரில் வீழ்ந்து இறந்தானாக; கள்ளின் வாழ்த்தி கள்ளின் வாழ்த்தி - கள்ளினை வாழ்த்திக் கள்ளினை வாழ்த்தி; காட்டொடு மிடைந்த சீயா முன்றில் - செத்தைகளால் நிறைந்து தூசி துடைக்காத முற்றத்தின்கண்; நாட் செருக்கு அனந்தர் துஞ்சு வோன் - விடியற்காலத்தே யுண்ட கள்மயக்கத்தால் உறங்கு பவனாகிய; அவன் எம் இறைவன் - அவனே எம்முடைய தலைவன்; யாம் அவன் பாணர் - யாங்கள் அவனுடைய பாணராவேம்; நெருநை வந்த விருந்திற்கு - நேற்றுத் தன்பால் வந்த விருந்தினரை யோம்புதற்பொருட்டு; தன் இரும்புடைப் பழவாள் வைத்தனன் - தனது பெரிய பக்கத்தேயிருக்கும் பழைய வாளை ஈடு வைத்தான்; இக் கருங்கோட்டுச் சீறியாழ் பணையம் - ஈது உண்மை யென்றற்கு இக் கரிய கோட்டை யுடைய சிறிய யாழைப் பணயமாக வைக்கின்றேம்; இது கொண்டு - இதனால்; இன்று ஈவது இலாளன் என்னாது - இன்று அவன் சென்றால் ஈதற்கு ஒன்றும் இல்லாதவனாவான் என்று நினையாமல்; நீயும்-; வள்ளி மருங்குல் வயங்கிழை அணிய -கொடி போலும் இடையையுடைய நின் பாடினி விளங்குகின்ற இழையாகிய பொற்பூ வணிய; கள்ளுடைக் கலத்தேம் யாம் மகிழ் தூங்க - கள்ளையுடைய கலங்களை யுடையராகிய யாம் மகிழ்ச்சி கொள்ள; சென்று வாய் சிவந்து மேல் வருக - அவன்பாற்சென்று விருந்துண்டு வாய் சிவந்து பின்பு வருக; எ-று. வேந்து விழுமுறவே கள்ளின் வாழ்த்தித் துஞ்சுவோனாகிய அவன் இறைவன்; யாம் பாணரேம்; நெருநை வைத்தனன்; சீறியாழ் பணையம் இது கொண்டு ஈவதிலாளனென்னாது, நீயும், அணிய, தூங்கச் சென்று சிவந்து மேல் வருக என மாறிக் கூட்டி வினைமுடிவு செய்க. வேந்து விழுமுறவே பெரும் பொருள் கிடைத்தமையின் வருவிருந் தோம்புதற் கிடையூரின்மையால் களித்து உறங்குகின்றான் என்பார். நாட்செருக்கனந்தர்த் துஞ்சு வோன்” னென்றும், போர் எய்துதற்கு முன் வருவிருந்தோம்புதற்குரிய பொருளில்லாமையால் வாடினான் என்பான்; “இரும்புடைப் பழவாள் வைத்தன” னென்றும் அதனை ஏலாதான்போல எதிர்வந்த பாணன் நோக்கினானாகத் தன் கூற்று மெய்யென்பது வற்புறுத்தச் “சீறியாழ் பணையம்” என்றும், இப்போது பெரும்பொரு ளுடையனாதலின் செல்க என்பான், “ஈவதிலாளன் என்னாது நீயும் சென்று வருக” என்றும் கூறினான். பாடினி இழைபெறுதல் கூறவே பாணன் தனக்குரிய வரிசை பெறுவது தப்பாதென்றற்கு “வயங்கிழை யணிய” என்றார். யாம் எனத் தன்னையும் உளப் படுத்தான்; இனம் பற்றி; அன்றித் தானும் உடன் வருவது உணர்த்தியவாறுமாம். வாய் சிவந்து வருவதாவது, உண்ணாமையால் வெளுத்திருக்கும் வாய் உண்பன நிரம்ப உண்டு மகிழ்ச்சி மிக்கு வருதல். விளக்கம் : காட்டு, செத்தை; காட்டிடத்துதிர்ந்த சருகு முதலிய வற்றைக் காற்றுக் கொணர்ந்து தொகுத்தலால் துகள்பட்ட குப்பைகாட் டெனப்பட்டது. துப்புரவு செய்யப்படாத முன்றிலை, “சீயா முன்றில்” என்றார். நன்கு துப்புரவு செய்யப்பட்டவிடத்தே கிடந்து உறங்குவோனாகிய வேந்தன் கண்மயக்கால் “காட்டொடு மிடைந்த சீயா முன்றிற் கண் நாட்செருக்குற்று உறங்குகின்றா” னென்பதாம். இவ்வாறு, தன்னைப் பேணாமல், கிடக்குமிடத்தின், புன்மையும் நோக்காதான், நீ செல்லின் நினக்கு நின் ஒக்கலின் பன்மை நோக்காது வேண்டுவன ஓம்பாது நல்குவனென்றா னாயிற்று. களிமயக்குற்றோர் முன்றிற் கிடத்தலை, “முன்றிற் கிடந்த பெருங்களியாளன்” (புறம். 317) என்று பிறரும் கூறுதல் காண்க. 317. வேம்பற்றூர்க் குமரனார் வேம்பற்றூர் என்ற பெயருடைய ஊர்கள் சோழநாட்டிலு முள்ளன. பாண்டிநாட்டு வேம்பற்றூர் இன்றுவரையும் நல்ல புலவர்கள் பிறந்து சிறக்கும் ஊராக இருந்து வருகிறது. சான்றோ ராகிய குமரனார் பாண்டி நாட்டு வேம்பற்றூரினர் எனத் துணிந்துரைப் போருமுளர். வேம்பற்றூரிற் பிறந்தது பற்றி இவர் வேம்பற்றூர்க்குமரனார் எனச் சான்றோரால் வழங்கப்படு வாராயினர். தன் உயிர்க்காதலனைப் பிரிந்திருக்கும் தலைமகள், அவன் பிரிவாற்றாது மேனி வேறுபட்டிருக்கும் திறத்தை “பெயலுற நெகிழ்ந்து வெயிலுறச் சாஅய், வினையறி பாவை”யை (அகம். 157) உவமங் கூறி விளக்குவது இவரது புலமை நலத்தைச் சிறப்பித்துக் காட்டுகிறது. போர்வீரரை “செருவேட்டுச் சிலைக்கும் செங்கண்ணாடவர்” எனத் திருந்த மொழிகின்றார். இவர் பாடின வாக அகத்தில் ஒன்றும் புறத்தில் இப் பாட்டொன்றுமே கிடைத் துள்ளன. போரில் வென்றி பெற்று வாகைசூடி மேம்படும் வீரனொருவன் வல்லாண்மையை இப்பாட்டில் குறித்துள்ளார். இதன் முழுவடிவும் தோன்றாதவாறு சிதைந்துளது. வென்வேல். . . . . . . . . . . . . வந்து முன்றிற் கிடந்த பெருங்களி யாளற் கதளுண் டாயினும் பாயுண் டாயினும் யாதுண் டாயினுங் கொடுமின் வல்லே 5 வேட்கை மீளப. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . குமெமக்கும் பிறர்க்கும் யார்க்கு மீய்ந்து துயிலேற் பினனே. திணை : தும்பை; துறை : வல்லாண்முல்லை. வேம்பற்றூர்க் குமரனார் பாடியது. உரை : வென் வேல் - வென்றி பயக்கும் வேல்...........வந்து முன்றில் கிடந்த பெருங் களியாளற்கு - வந்து முற்றத்தேயுள்ள பெரிய களிப்பேறிய இவனுக்கு; அதளுண்டாயினும் - மான் தோல் இருக்குமாயினும்; பாய் உண்டாயினும் - ஓலையால் செய்யப் பட்ட பாயிருக்குமாயினும்; யாதுண்டாயினும் வல்லே கொடுமின் - யாதிருப்பினும் விரையக் கொடுப்பீர்களாக; வேட்கை மீள எமக்குப் பொருள்மேற் சென்ற விருப்பம் மீண்டொழிய;............. எமக்கும் பிறர்க்கும் யார்க்கும் ஈய்ந்து துயிலேற்பினன் - பாண ராகிய எங்கட்கும் பிற இரவலர்க்கும் எல்லோருக்கும் பொருள் மிகத் தந்து உறங்குதலை மேற் கொள்வானாயினன்; எ-று. கள்ளுண்டு பெருமயக்குற்று வந்தவன் நம்மைக் கேளாதே முற்றத்திற்கு கிடந்து உறங்கக்கருதுகின் றானென்பார், “முன்றிற் கிடந்த பெருங்களியாளற்கு” என்றும், அவனை வெறிதே தரையில் உறங்கச் செய்வது நன்றன் றென்பார், “யாதுண்டாயினும் கொடு மின் வல்லே”என்றும் கூறினார். “யாதுண்டாயினும் கொடுமின்” என்றது, போர்க்களத்தினும் தன் தோல் (பரிசை) மேல் கிடக்கும் இயல்பினன் என்பது குறித்து நின்றது. இக் களியாளனைப் பெருங்களியாளன் என்றதற்கேற்ப, அவனது பெருமைக்குரிய கொடைநலத்தை “எமக்கும் பிறர்க்கும் யார்க்கும் ஈய்ந்து” என்றார். பொருள் பெற்று மகிழும் பாணன் ஏனைப் பாணர்க்குக் கூறியது. விளக்கம் : தஞ்சைமாநாட்டில் உள்ள திருமங்கலக்குடிக்கருகே வேம் பற்றூரென ஊர் ஒன்றும் உளதெனக் கல்வெட்டு (A.R.No. 224 of 1927) கூறுகிறது; களிமயக்கால், கிடத்தற்கெனச் சிறிது இடம் கிடைத்தாற் போதுமென வருவார்க்குத், துப்புரவில்லாத முன்றில் கிடைக்கின், அதனைத் தூய்மை செய்து பாய் பரப்பி அதன்மேற் கிடத்தற்கு நினைவோடாதாகலின், அதனை அவன் தகுதி கண்டோர் தாமே செய்யும் கடப்பாட்டினராவதுபற்றி, “வந்து முன்றிற்கிடந்தபெருங்களி யாளற்கு அதளுண்டாயினும் பாயுண்டாயினும் யாதுண்டாயினும் வல்லே கொடுமின்” என்றனர். இரவலரை நன்கு உண்பித்து இனிது துயிலப்பண்ணுந் தலைவற்கு அவர் தம்பால் உள்ளன நல்கி இனிது துயில்வித்தல் முறையாதலின், “யாதுண்டாயினும் வல்லே கொடுமின்” என்றாரென வறிக. இப் பாட்டிடையே அடிகள் சிதைந்தமையின், பாட்டின் பொருள் நலம் இனிது காண்டற்கியலாதவாறு கிடக்கின்றது. 318. பெருங்குன்றூர்கிழார் குடக்கோ இளஞ்சேரல் இரும்பொறையைப் பாடி “மருளில்லார்க்கு மருளக் கொடுக்கவென்று, உவகையின் முப்பத் தீராயிரம் காணம் கொடுத்து, அவர் அறியாமை ஊரும் மனையும் வளமிகப் படைத்து, ஏரும் இன்பமும் இயல்வரப் பரப்பி, எண்ணற்காகா அருங்கல வெறுக்கையொடு, பன்னூறாயிரம் பாற்பட வகுத்துக் காப்புமறம்” அவனால் விடப்பெற்றவர் பெருங்குன்றூர்கிழார். வையாவிக்கோப் பெரும்பேகனைப் பாடி அவன் மனைவி கண்ணகியோடு கூடி வாழுமாறு அவன் உள்ளத்தைத் திருத்தியவருள் இவரும் ஒருவர். தம்பால் “அறிவு கெட நின்ற நல்கூர்மை”யை ஒழிப்பது குறித்துச் சோழன் உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னியைப் பாடிப் பெரும் பரிசில் பெற்றவர். இத்தகைய சான்றோர். ஒருகால் பெரும் போருடற்றி வெற்றிகொண்டு வாகைசூடி மேம்பட்ட தலைவனொருவனைக் கண்டார். அவன்தன் வேந்தன் பொருட்டுக் கடும்போர் புரிந்தான். அவ் வேந்தன் போரில் துன்புற்றிருப்பானாயின், தலைவனாகிய இப் பெருந்தகையின் ஊர் பசியால் பெருந்துயர் உழக்கும் என்று இப் பாட்டின்கட் குறித் துரைத்து மகிழ்கின்றார். கொய்யடகு வாடத் தருவிற குணங்க மயிலஞ் சாயன் மாஅ யோளொடு பசித்தன் றம்ம பெருந்தகை யூரே மனையுறை குரீஇக் கறையணற் சேவல் 5 பாணர் நரம்பின் சுகிரொடு வயமான் குரற்செய் பீலியி னிழைத்த குடம்பைப் பெருஞ்செய் நெல்லி னரிசி யார்ந்துதன் புன்புறப் பெடையொடு வதியும் யாணர்த் தாகும் வேந்துவிழு முறினே. திணை : தும்பை; துறை : வல்லாண்முல்லை. பெருங்குன்றூர்கிழார் பாடியது. உரை : கொய்யடகு வாட - கொய்யப்பட்ட இலைக்கறி வாடி வதங்கவும்; தரு விறகு உணங்க - கொண்டுவந்த விறகு உலர்ந்து கெடவும்; மயிலஞ் சாயல் மாயோளொடு -மயில் போன்ற சாயலும் மாமை நிறமுமுடைய மனையாளோடு கூடி வாழும்; பெருந்தகையூர் - பெரிய தகைமையினையுடைய தலைவனதூர்; வேந்து விழு முறின் - வேந்தன் போரில் துன்புறுவானாயின்; பசித்தன்று - பசியால் வருந்தும்; மனையுறை குரீஇக் கறை யணல் சேவல் - மனையிறைப்பில் வாழும் ஊர்க்குருவியின் கரிய கழுத்தையுடைய ஆண்; பாணர் நரம்பின் சுகிரொடு - பாணருடைய யாழ் நரம்பின் கோதுகளுடன்; வயமான் குரல் செய் பீலியின் இழைத்த குடம்பை - வலிமிக்க சிங்கத்தின் கதிர்த்த பீலிபோன்ற மயிரைக்கொண்டு செய்த கூட்டின்கண்; பெருஞ்செய் நெல்லின் அரிசி ஆர்ந்து - பெரிய வயலிடத்து விளைந்த நெல்லரிசியை யுண்டு; தன் புன் புறப் பெடையொடு வதியும் - தனது புல்லிய புறத்தையுடைய பெண்ணோடு தங்கும்; யாணர்த்தாகும் - புதுவருவாயினையுடையதாம்; எ-று. வேந்து விழுமுறின், ஊர் பசித்தன்று; யாணர்த்தாகும் எனக் கூட்டி வினைமுடிவு செய்க. சேவல் அரிசியார்ந்து பெடையொடு குடம்பைக்கண் வதியும் யாணர்த்தாம் என இயையும். பசித்தல் தெளிவாகலின், இறந்த காலத்தாற் கூறினார். வேந்தன் விழுமமுறாதவாறு பகைவரொடு பொருது வென்றி கண்டானாதலின் “பெருந்தகை” யென்றார். குருவியின் ஆண் கருத்த கழுத்தையுடையதாகலின், “கறையணல்” என்றார், நரம்பைச் சீவிச் செம்மை செய்யுங்கால் நீக்கப்படும் நார் போன்ற கோது, “சுகிர்” எனப்பட்டது. முதிர்ந்த மயிர் கதிர் விட்டுத் துய்போற் கவைத்து நிற்றலின், அதனைக் “குரல் செய்பீலி” யெனவும், நெல்லைப் பொறுக்கி உமியை நீக்கி அரிசியையே தின்றலின், “நெல்லின் அரிசி யார்ந்து”எனவும் கூறினார். விளக்கம் : சோற்றிற்கு வேண்டும் அரிசியின்றி அடகும் விறகும் பெறப் படுமாயின், அவை உணவுக்காகாமையின், பயப்பாடின்றி வீணா மென்பார், “கொய்யடகு வாட” வெனவும், “தருவிறகுணங்க” வெனவும் வகுத்தோதினார். மாமை நிறமும் மயில்போலும் சாயலு முடையாள் பசியால் மேனி மெலிந்து நிறங் கரிந்து சாயலுடைந்து கெடுவது ஒருதலை. வேந்தன் விழுமமுறுவானாயின் பெருந்தகையது ஊர் பசித்துக் கெடும் என்றவர், அவ்வூரின் நலம் கூறுவாராய்க் குரீஇச் சேவல் அரிசி யார்ந்து பெடையொடு வதியும் யாணர்த்தாகும் என்றார். விழுமுறின் எனவே, உறாமை பெறப்பட்டது. மனையுறை குருவியின் ஆண் கழுத்திற் கறையுடையதாதல் கண்கூடு. இதனை விதந்து சான்றோரும் “உள்ளிறைக் குரீஇக் காரணற் சேவல்” (நற்.181) என்பர். பெருஞ் செய் நெல் லென்றவிடத்துப் பெருமை நெல்லிற்குரியது; அஃது இடத்தின்மேல் நின்றது, செய், வயல், பெடைசாம்பல் நிறத்ததாகலின், அதனைப் புன்புறப் பெடை யென்றார்; பிறரும் ஆம்பற்பூவின் சாம்பலன்ன, கூம்பிய சிறகர் மனையுறை குரீஇ (குறுந். 46) என்பர். மனையுறை குருவி பெருஞ்செய், நெல்லின் அரிசி யுண்ணும் என்றதனால் , ஊர்க்கு அணிமையிலே நெல் விளை யும் வயலுள்ள வளவிய ஊராதல் பெறப்படும். பெருந்தகையூர் என்றதற்குப் பெரியதகைமையினை யுடைய வூரென வுரைப்பினு மமையும். வேந்து விழுமமுறின், யாணர்த்தாகும் பெருந்தகையூர் பசித்தன்று எனச் சொல்லி, விழுமம் உறா வகையில் மறவர் பொருது காத்தவாறு கூறியதூஉமாம். 319. ஆலங்குடி வங்கனார் ஆலங்குடி யென்னும் ஊர்கள் பல தமிழ் நாட்டில் உள்ளன. இவ்வங்கனார் சோழருடைய உறையூரையும், அவ்வூரிலுள்ள அறங்கூறவையத்தையும் “மறங்கெழு சோழர் உறந்தை யவையத்து, அறங்கெட அறியாது” (நற்.400) எனச் சிறப்பித்துக் கூறலின், இவர் சோழ நாட்டவர் எனத் துணிந்து கூறலாம். பரத்தையிற் பிரிந்து புறத்தொழுகும் தலைமகனுக்குத் தோழி, “பரத்தையர் புன்மனமுடையவர்; அவரை நின் மனைக்கண் வைத்துப் பேணுவாயாயினும் அவர்” பைந்தொடி மகளிரொடு சிறுவர்ப் பயந்து நன்றி சான்ற கற்போடு, எம்பாடாதல் அரிது” எனத் தெருட்டுவது மிக்க இன்பந் தருவதொன்று. ஒரு தலைவன் தன்வேந்தன் பொருட்டுப் போர்க்குச் சென்றிருந்தான். அவன் மனையவள் தன் மனைக்கண் இருந்து தனக்குரிய அறத்தைச் செய்து வந்தாள். அக்காலை அவன் அருள் பெற்று வாழும் பாணன் அவள்மனை நோக்கி வந்தான். அவன் வந்தபொழுது மாலைப் பொழுதாயிற்று; அவன் கருத்தையறிந்த மனைக்கிழத்தி, “பாண, பொழுது மறைந்தது. யாம் என்பாலுள்ளது முயற்கறியே யாயினும் தருகுவேம்; உண்டு இங்கேயிருந்து செல்க; நேற்று வேந்தன் பொருட்டுப் போர்க்குச் சென்றுள்ள தலைவன் நாளை வாகை சூடிப் பெரும் பொருளுடனே வந்துவிடுவன். நின் பாடினி பொன்னரி மாலையணிய நீ பொற்றாமரை சூடத்தருவன்” என்றாள். அதனைக் கேள்வியுற்றார் ஆசிரியர் ஆலங்குடி வங்கனார். மறக்குடி மகளாகிய அவள் கூற்றில் தன் காதலனைப்பற்றிய நினைவிடைக் கலக்கம் சிறிதுமில்லாமலிருந்தது அவருக்கு மிக்க வியப்பினைத் தந்தது. அதனை இப்பாட்டின்கண் வைத்து இனிமை மிகப்பாடியுள்ளார். பூவற் படுவிற் கூவற் றொடீஇய செங்கட் சின்னீர் பெய்த சீறில் முன்றி லிருந்த முதுவாய்ச் சாடி யாங்கஃ டுண்டென வறிது மாசின்று 5 படலை முன்றிற் சிறுதினை யுணங்கல் புறவு மிதலு மறவு முண்கெனப் பெய்தற் கெல்லின்று பொழுதே யதனால் முயல்சுட்ட வாயினுந் தருகுவேம் புகுதந் தீங்கிருந் தீமோ முதுவாய்ப் பாண 10 கொடுங்கோட் டாமா னடுங்குதலைக் குழவி புன்றலைச் சிறாஅர் கன்றெனப்பூட்டும் சீறூர் மன்ன னெருநை ஞாங்கர் வேந்துவிடு தொழிலொடு சென்றனன் வந்துநின் பாடினி மாலை யணிய 15 வாடாத் தாமரை சூட்டுவ னினக்கே திணை : தும்பை; துறை : வல்லாண்முல்லை. ஆலங்குடி வங்கனார் பாடியது. உரை : பூவல் படுவில் கூவல் தொடீஇய செங்கண் சின்னீர் பெய்த - செம்மண் நிலத்து மடுவில் உள்ள நீர்நிலையைத் தோண்டியதனால் உண்டாகிய சிவந்த இடத்துச் சிறிதாக வூறிய நீரை முகந்துவைத்த; சீறில் முன்றில் இருந்த - சிறிய வீட்டின் முற்றத்தில் உள்ளதாகிய; முது வாய்ச் சாடி அஃடு உண்டென அறிதும் - முதிய வாயையுடைய சாடியின் அடிப் பகுதியில் நீர் சிறிது உண்டென்று அறிகின்றேம்; மாசின்று - அது குற்ற மின்றாகவும் உளது; படலை முன்றில் சிறு தினை யுணங்கல் - படல் கட்டிய முற்றத்தில் சிறிய தினையாகிய உலர்ந்ததை; புறவும் இதலும் அறவும் உண்க எனப் பெயதற்கு ----; புறாக்களும் இதற்பறவைகளும் முற்றவும் உண்க என்று தெளித்து அவற்றைப் பிடித்துச் சமைத்தற்கு; பொழுது எல்லின்று - ஞாயிறு மறைந்து இரவாயிற்று; அதனால் -; முயல் சுட்டவாயினும் தருகுவேம் - உள்ளது முயலினது சுட்ட கறியேயாயினும் அதனை உண்ணத்தருவேம்; புகு தந்து ஈங்கு இருந்தீமோ - எம் மனைக்குட்புகுந்து இவ்விடத்தே இருப்பாயாக; முதுவாய்ப் பாண - அறிவு முதிர்ந்த பாணனே; கொடுங் கோட்டாமான் நடுங்குதலைக் குழவி - வளைந்த கொம்பை யுடைய ஆமானது அசைகின்ற தலையையுடைய இளங் கன்றை; புன்றலைச் சிறா அர் - புல்லிய தலையையுடைய சிறுவர்கள்; கன்றெனப் பூட்டும் சீறூர் மன்னன் - தம்முடைய சிறு தேர்க்குச் சேங்கன்றெனப் பூட்டி விளையாடும் சிறிய வூரையுடைய மன்னனாகிய கொழுநன்; நெருநை ஞாங்கர் - நேற்றைய நாளில் வேந்து விடு தொழிலொடு சென்றனன் - பெருவேந்தன் பொருட்டுப் போர்த்தொழிலை மேற்கொண்டு சென்றுள்ளான்; வந்து - நாளை வினைமுடித்து வந்து நின்பாடினி மாலை யணிய - நின்னுடைய பாடினி பொன்னரி மாலை அணிந்து மகிழ; நினக்கு வாடாத்தாமரை சூட்டுவன் - நினக்குப் பொன்னாற் செய்த தாமரைப் பூவைச் சூட்டுவான்; எ-று. பாண, சாடி, மாசின்று; பொழுது எல்லின்று; அதனால், தருகுவேம்; புகுந்தது ஈங்கிருந்தீமோ; மன்னன் நெருநை ஞாங்கர் சென்றனன்; நாளை வந்து, அணிய, சூட்டுவன் எனக் கூட்டி வினைமுடிவு செய்க. ஆங்கென்ப தசைநிலை. செம்மண் நிலத்துக் கூவலில் தோண்டிய சிறிய இடம் சிவந்திருந்தலின், “செங்கண்” எனப்பட்டது. சாடியின் வாய் உயர்ந்திருத்தலின் “முதுவாய்ச் சாடி” யென்றார். அகட்டிலுள்ள நீர் கசடு கலந்து மாசுடைத்தாமா யினும், இஃது அன்னதன்று என்றதற்கு “மாசின்று” என்றாள். தினையுணங்கலைத் தெளித்து அவற்றை யுண்ணவரும் புறாவையும் இதலையும் பிடித்துக் கொன்று சமைத்தற்கு இல்லாதபடி இரவு வந்துவிட்ட தென்பாள் “புறவும் இதலும் உண்கெனப் பெய்தற்கு எல்லின்று பொழுது” என்றாள். மிக்க இளங்கன்றை “நடுங்குதலைக் குழவி” யென்றும், இளைய சேங்கன்றினை வாளாது “கன்” றென்றும் கூறினார். பூட்டும் என்றதற்கேற்பச் சிறுதேர் வருவிக்கப்பட்டது. நெருநை ஞாங்கர் என்றமையின் நாளை என்பது பெற்றாம். வினை முடிந்து வாகைசூடி வருதல் ஒருதலை யென்பது கருத்தாதல் தோன்ற, “பாடினி மாலையணிய, வாடாத்தாமரை சூட்டுவன் நினக்கே” யென்றாள். வாடாத்தாமரை, பொற்றாமரைக்கு வெளிப்படை ஆங்கு; அசைநிலை. விளக்கம் : பூவல், செம்மண் நிலம், படு, பள்ளம்; இது மடுவெனவும் வழங்கும். தொடீஇய செங்கண், தோண்டுதலாலுண்டாகிய சிவந்த ஊற்றிடம். செம்மண் பாங்கினதாகலின் செங்கண் எனப்பட்டது; இயல்பாகவே சிவந்திருத்தல்பற்றிச் செங்கண் என்றார்; திருமாலின்கண் இயல்பாகவே சிவந்திருத்தல் கண்டு சான்றோர் “செயிர் தீர் செங்கண் செல்வ” (பரி. 4) என்றாற்போல, முதுவாய், உயர்ந்த வாயென்றுமாம். அகடு, அஃடு என வந்தது; செய்வது “செய்வஃது” எனவும், அகுதை அஃதை யெனவும் வருவதுபோல ஆய்தம் விரிந்தது. பொழுது மறையின், புறாவும் இதலுமாகிய பறவைகள் தத்தம் சேக்கைக்கண் ஒடுங்கிவிடு மாகலின், பொழுதும் எல்லின்று என்றாள். சிறுதினைகளை உணக்கற்குப் பெய்தவழி, அவற்றை யுண்டற்கு வரும் புறா முதலியவற்றைக் கண்ணிவைத்துப் பிடிப்ப; கண்ணிவைத்துப் பிடித்தற்கு இது பொழுதன்று என்பாள், “உணங்கல் பெய்தற்கு எல்லின்று பொழுது” எனத் தகுதியுற மொழிந்தாள். புதிய இறைச்சி நல்குதற்குக் காலமன்மையின், உள்ளது பழையதாகிய சுட்ட முயற்கறி; அதனை நல்குதற்கு இயலுமென்றது, இல்லென்னாது விருந்தோம்பும் மனையவளது மாண்பு தெரிவித்து நின்றது. கொடுமை, வளைவு. ஆமான் ஈன்ற இளங்கன்றினை, “நடுங்குதலைக் குழவி” யென்றதுஅதன் இளமைமிகுதி குறித்து. கன்றொடு விளையாட்டயரும் சிறார், ஆமானுடைய இளங் குழவியைப் பற்றித் தம் சிறுதேர் ஈர்க்கும் கன்றெனப் பூட்டி விளையாடுவது, மிக்க இளமையுடையாரும் மறச் செயலில் ஈடுபட்டுப் பயிலும் திறம் கூறுகிறது நெருநை ஞாங்கர் என்றதற்கு நெருநைக்கு முன்னாள் என்றும், இடையில் கழிந்த ஒரு நாளைய நிகழ்ச்சி கேட்டறிந்து, வெற்றி யுண்டாதலை நன்கு தெளிந்து நாளை வந்து நினக்குத் தாமரையும் நின் பாடினிக்குப் பொற்றாமரையும் நல்குவன் தன்கண வனென்றும் கூறினாளென வுரைப்பினு மமையும். 320. வீரைவெளியனார் வெளியன் என்பது இவரது இயற்பெயர்; வீரை யென்பது இவரதூர். இது பெண்ணையாற்றின் வடகரையிலுள்ள நாட்டைச் சேர்ந்தது; புதுச்சேரிக் கருகில் வீராம்பட்டினமென இப்போது வழங்குகிறது. அகநானூற்றிற் காணப்படும் சான்றோர்களுள் ஒருவரான வீரைவெளியன் தித்தனார் இவருடைய மகனாராவர். மழையை நோக்கித்தோழி கூறுவதாக இத்தித்தனார் பாடியுள்ள பாட்டைப் படிப்பவர் இவரது புலமை நலங் கண்டு பெருவியப் படைவர். இத்தகைய புலமை நலஞ்சான்ற மகனைப் பெற்ற வெளியனாரை நினையாதிருப்பதற்கும் இடமிராது. வெளியனாரும் நல்லிசைப் புலமை நலம் சிறக்க வாய்ந்தவரென்பதை இப் பாட்டு எடுத்துக் காட்டுகின்றது. தானைத் தலைவனொருவன் தன் வேந்தன் பொருட்டுப் போர்க்குச் சென்று வெற்றி மேம்பாட்டால் வாகை சூடிச் சிறக்கின்றான். அவனைக் காண்பது குறித்துப் பாணனொருவன் செல்கின்றான். அவனைக் காணும் வெளியனார், அத் தலைவனது ஊர்நலத்தையெடுத்தோதி அங்குச் சென்று தங்கிச் செல்லுமாறு இப் பாட்டால் அறிவுறுத்துகின்றார். அத் தலைவன் வேந்தன் பால் பெற்றுவரும் பெருஞ் செல்வத்தைத் தன்பால் வரும் பரிசிலர்க்கும் இரவலர்க்கும் வரையாது வழங்கும் வண்மை யுடையவனென்றும், அதனால் அவன் பாட்டும் உரையும் பெற்ற பண்புடைய நெடுந்தகையாக விளங்குகின்றானென்றும் குறிக் கின்றார். இப் பாட்டில் வேட்டுவர் மனையில் நிகழும் நிகழ்ச்சி யொன்றைச் சொல்லோவியம் செய்து காட்டுகின்றார். அது படிப்போர் தம் மனக்கண்ணிற் கண்டு மகிழ்தற்குரியதாகும். முன்றின் முஞ்ஞையொடு முசுண்டை பம்பிப் பந்தர் வேண்டாப் பலாத்தூங்கு நீழற் கைம்மான் வேட்டுவன் கனைதுயின் மடிந்தெனப் பார்வை மடப்பிணை தழீஇப் பிறிதோர் 5 தீர்தொழிற் றனிக்கலை திளைத்துவிளை யாட இன்புறு புணர்நிலை கண்ட மனையோள் கணவ னெழுதலு மஞ்சிக் கலையே பிணைவயிற் றீர்தலு மஞ்சி யாவதும் இல்வழங் காமையிற் கல்லென வொலித்து 10 மானதட் பெய்த வுணங்குதினை வல்சி கானக் கோழியொ டிதல்கவர்ந் துண்டென ஆர நெருப்பி னார னாறத் தடிவார்ந் திட்ட முழுவள் ளூரம் இரும்பே ரொக்கலொ டொருங்கினி தருந்தித் 15 தங்கினை சென்மோ பாண தங்காது வேந்துதரு விழுக்கூழ் பரிசிலர்க் கென்றும் அருகா தீயும் வண்மை உரைசா னெடுந்தகை யோம்பு மூரே. திணை : தும்பை; துறை : வல்லாண்முல்லை. வீரை வெளியனார் பாடியது. உரை : முன்றில் முஞ்ஞையொடு முசுண்டை பம்பி - முன்னைக் கொடியும் முசுண்டைக் கொடியும் செறிந்திருத்தலால்; பந்தர் வேண்டா பலாத் தூங்கு நீழல் - வேறே பந்தல் வேண்டாது தாமே பந்தலாய்ப் பலவின் கனி தொங்கும் நீழலில்; கைம்மான் வேட்டுவன் கனை துயில் மடிந்தென - யானை வேட்டம் புரியும் வேட்டுவன் மிக்க வுறக்கத்தைக் கொண்டானாக; பார்வை மடப்பிணை தழீஇ -பார்வையாகிய இளைய பெண்மானைத் தழுவி; பிறிதோர் தீர்தொழில் தனிக்கலை திளைத்து விளையாட - தொழி லொன்றுமில்லாத பிறிதொரு தனி ஆண்மான் கலந்து விளையாட்டயர; இன்புறு புணர்நிலை கண்ட மனையோள் - இன்பமிக்க அவற்றின் புணர்ச்சி நிலையைக் கண்ட மனையவள்; கணவன் எழுதலும் அஞ்சி - தன் கணவன் உறக்கம் நீங்கி யெழுவனென் றஞ்சியும்; கலை பிணைவயின் தீர்தலும் அஞ்சி - அக் கலையாகிய மான் பிணை மானை விட்டு நீங்கி யோடிப் போமென்று அஞ்சியும்; யாவதும் - சிறிதும்; இல்வழங்காமையின் - மனையிடத்தே நடமாடாமல் ஒருபுடை யொதுங்கி அமைந் தனளாதலால்; கல்லென ஒலித்து - கல்லென ஆரவாரித்து; மானதள் பெய்த உணங்கு தினை வல்சி - மான்தோலின் மேல் பரப்பி யுலர வைத்த தினையரிசியை; கானக் கோழியொடு இதல் கவர்ந்துண்டென - காட்டுக் கோழியும் இதற் பறவையும் கவர்ந்துண்டு அகப்பட்டனவாக; ஆர நெருப்பின் - சந்தனக் கட்டையாலாகிய நெருப்பில் சுட்டு; தடிவு ஆர்ந்திட்ட முழு வள்ளூரம் - துண்டு துண்டாக அறுத்து நிறைந்த இறைச்சியை; ஆரல் நாற - ஆரல் மீனின் நாற்றமும் உடன் கமழ; இரும்பேர் ஒக்கலொடு ஒருங்கு இனிதருந்தி - கரிய பெரிய சுற்றத்தா ரோடே ஒருங்கு கூடியிருந்து இனிதுண்டு; தங்கினை சென்மோ- அவ்விடத்தே தங்கிச் செல்வாயாக; தங்காது - குறையாமல் ; வேந்து தரு விழுக்கூழ் - தனக்குப் பகைவேந்தர் திறையாகத் தந்தனவும் தன் வேந்தன் சிறப்பாகத் தந்தனவு மாகிய பெருஞ் செல்வத்தை; என்றும் பரிசிலர்ககு அருகாது ஈயும் - எந்நாளும் தன்பால் வரும் பரிசிலர்க்குக் குறையாமல் கொடுக்கும்; வண்மை - கொடையும்; உரைசால் நெடுந்தகை ஓம்பும் ஊர் - புகழமைந்த நெடிய தகைமையினையுமுடைய தலைவன் காக்கும் ஊரின்கண்; எ-று. ஊர் தங்கினை சென்மோ, பாண எனக் கூட்டி வினைமுடிவு செய்க. வேட்டுவன் துயில் மடிந்தென, பிணைதழீஇக் கலை விளையாட, எழுதலுமஞ்சி, தீர்தலுமஞ்சி, மனையோள் இல்வழங்காமையின், கோழியோடு இதல் கவர்ந்துண்டென, வள்ளூரம் ஆரல் நாற, ஒக்கலொடு இனி தருந்திச் சென்மோ என இயையும். பார்வை மடப்பிணை,பிற மான்களைப் பிடிப்பதற்காகப் பயிற்சி செய்யப்பட்ட மடப்பினை திணையுணங் கலைப் பரப்பிக் கண்ணி வைத்து, அவற்றை யுண்ணும் கோழியையும் இதலையும் புறா முதலியவற்றையும் பிடித்தல் மரபு. உண்டென என்பது உண்டு பிடிபட்டனவாக எனக் காரியத்தின் மேல் நின்றது. பலர் தூங்கு நீழலென்றும், ஆரநாறவென்றும் பாடமோதி, பலர் உறங்கும் நீழலெனவும் சந்தனத்தின் மணங் கமழ வெனவும் முறையே பொருளுரைப்பாருமுளர். விளக்கம் : முன்னைக் கொடியும் முசுண்டைக்கொடியும் முன்றிலில் நிற்கும் பலாமரத்திற் படர்ந்து பந்தர் வேய்ந்ததுபோல் இனிய நிழல்செய்தலின், பந்தர் வேண்டாப் பலாத் தூங்கு நீழல் என்றார். பலர் தூங்கும் நீழல் என்ற பாடத்துக்குப் பலரும் கள்ளுண்டு கிடந்துறங்கும் நீழலிடம் என்று உரைப்பினும் அமையும். கைம்மான், யானை. மேய்தலாகிய தொழிலைக் கைவிட்டுப் பிணையோடு புணர்ச்சிவேட்கை கொண்டு அதனொடு கூடி யுறைதலை விளக்குதற்குப் “பிறிதோர் தீர் தொழில் தனிக்கலை திளைத்து விளையாட” என்றார். கலையும் பிணையும் புணர்நிலைக்கண் விளையாட்டயரக் காண்பனேல் வேட்டுவனாகிய கணவன், கலையை யருளாது வீழ்த்துவன் என்றுணர்ந்து அவன் உறக்கத்தினீங்கி யெழுவனோ எனவும், தன் வரவு காணின் புதிதுவந்த கலைமான் அஞ்சியோடியவழிப் பிணைமானது புணர்நிலை யின்பம் சிதையுமெனவும் அஞ்சி ஒருபுடையில் ஒடுங்கினள். அவளது ஒடுக்கம் தினை யுணங்கலைக் கானக் கோழியும் இதலும் அஞ்சாது கவர்ந்துண்டற்கு இடந்தந்தது, கானக்கோழி முதலியவற்றின் இறைச்சியும் ஆரல்மீன் கறியும் ஏனை மான் முதலியவற்றின் இறைச்சித் துண்டமும் சந்தன விறகிற் சுட்டு விருந்தினர்க்களித்து ஓம்புவர் எனக் கானவருடைய விருந்தோம்புந் திறன் கூறியவாறு. இதனைத் தொகுத்துச் சுருங்க வுரையாது விரித்தோதியது கேட்கும் பாணற்கு உள்ளத்தில் வேட்கை எழுப்பி, உரைக்கப்படும் உரைவழி நிற்கப்பண்ணுவது குறித்ததாம். சந்தனவிறகிற் சுடுவது நறுமணம் ஊட்டற்கென வுணர்க தங்கியவழி. இவ்விறைச்சி வகையுடனே, பகைப் புலத்துப் பெறும் உயரிய பொருளையும் தரப்பெறுதல் ஒருதலையென்பார், “தங்கினை சென்மோ” எனவும், “அருகாது ஈயும் வண்மை உரைசால் நெடுந்தகை” யெனவும் கூறினார். போரிடையே செய்யப்படும் அருஞ்செயலை வியந்து பாராட்டி வேந்தன் நல்கும் சிறப்பும் உளப்பட “விழுக்கூழ்” என்றார். 321. உறையூர் மருத்துவன் தாமோதரனார் சோழன் குராப்பள்ளித் துஞ்சிய திருமாவளவன், பிட்டங் கொற்றன் என்ற இவர்களைப் பாடிச் சிறப்பெய்தியவர் இச் சான்றோர் இவர் உறையூரின்கண் இருந்து மருத்துவத்தொழில் செய்துவந்தவராதலால், உறையூர் மருத்தவன் தாமோதரனார் என இவர் கூறப்படுகின்றார். போரில் புகழுண்டாகப் பொருது வாகை மிலைந்து சிறப்புற்ற தலைவன் ஒருவனைப்பற்றிப் பாணரிடையே பேச்சுண்டாக, அதனைக் கேட்டிருந்த தாமோதரானார் அவர்கட்கு விடைகூறுவார்போல இப்பாட்டைப் பாடியுள்ளார். இதன்கண் தலைவனது ஊர் அமைந்த நாட்டின் இயல்பை விரித்துரைப் பாராய்,அந்தநாடு நன்செய் வளமின்றிப் புன்செய் வளமிக்கது என்றும் அங்கே வரகே மிகுதியும் விளைவதென்றும், வரகுக் கொல்லைகளில் வாழ்வனவற்றுள் ஒன்றான பூழ்ச்சேவல் வரப்புகளில் வாழும் சுண்டெலிகளைப் பிடித்துத் தின்னுமாற்றால் அவற்றை யலைக்குமென்றும், அவற்றிற்கஞ்சும் எலிகள் ஓடிக் கொல்லையில் உதிர்ந்து கிடக்கும் தோகைகளிடையே பதுங்குமென்றும் சொல்லி, இத்தகைய நாட்டிடையுள்ள ஊரையுடைய தலைவன் சென்னி, போரில் பகைவருடன் பொருதலால் வாள்வடுவால் சிறப்புற்றுத் திகழுமென்றும் அவன் போரைப் பெரிதும் விரும்பும் வல்லாண்மை யுடைய னென்றும் எடுத்துரைத்துள்ளார். இப் பாட்டு இடையே சில அடிகள் சிதைந்துள்ளது. பொறிப்புறப் பூழின் போர்வல் சேவல் மேந்தோல் களைந்த தீங்கொள் வெள்ளெட் சுளகிடை யுணங்கற் செவ்வி கொண்டுடன் வேனிற் கோங்கின் பூம்பொகுட் டன்ன 5 குடந்தையஞ் செவிய கோட்டெலி யாட்டக் கலியார் வரகின் பிறங்குபீ ளொளிக்கும் வன்புல வைப்பின் னதுவே சென்று தின்பழம் பசீஇ. . . . . . . . . னனோ பாண வாள்வடு விளங்கிய சென்னிச் 10 செருவெங் குருசி லோம்பு மூரே திணை : தும்பை; துறை : வல்லாண்முல்லை. உறையூர் மருத்துவன் தாமோதரனார் பாடியது. உரை : பொறிப்புறப் பூழின் போர்வல் சேவல் - புள்ளி பொருந்திய புறத்தையுடைய குறும்பூழ்ப் பறவையின் சேவல்; மேந் தோல் களைந்த தீங்கொள் வெள்ளெள் - மேலுள்ள தோல் நீக்கப் பட்ட இனிமை பொருந்திய வெள்ளிய எள்ளாகிய; சுளகிடை யுணங்கல் செவ்வி கொண்டு - முற்றத்தில் வைத்து உலர்த்தப் பட்டவற்றைக் கவர்ந்துண்டு; உடன் - உடனே; வேனற் கோங்கின் பூம்பொகுட்டன்ன - வேனிற் காலத்து மலரும் கோங்கினது பூவிடத்துள்ள கொட்டையைப்போன்ற; குடந்தையம் செவிய - வளைந்த அழகிய காதுகளையுடையவாகிய; கோட்டெலி யாட்ட - கொல்லை வரப்பில் வாழும் எலியை யலைக்க; கலியார் வரகின் பிறங்கு பீள் ஒளிக்கும் - தழைத்தலைப் பொருந்திய வரகின் உயர்ந்த தோகையிடையே அவ்வெலி சென்று மறையும்; வம்புல வைப்பினது - வன்புலமாகிய நாட்டின் கண்ணேயுளது; சென்று தின்பழம் பசீஇ - சென்று பறித்துத் தின்னப் படும் பழம் பசந்து ........... பாண - பாணனே வாள் வடு விளங்கிய சென்னி - வாளால் வடுப்பட்டு விளங்கும் தலையையுடைய செருவெங் குரிசில் ஓம்பும் ஊர் - போரை விரும்பும் குரிசிலாகிய தலைவன் காத்தளிக்கும் ஊர்; எ - று. ஊர், சேவல் உணங்கல்கொண்டு கோட்டெலியாட்ட, (அவ்வெலி) பீள் ஒளிக்கும் வன்புல வைப்பினது எனக் கூட்டி வினைமுடிவு செய்க. ஆட்டப் பீள் ஒளிக்கும் என்றதற்கு ஆட்டின் பொருட்டுப் பீளின்கண் ஒளிக்கும் என வுரைப்பினுமமையும். எள்ளின் மேல்தோல் நீங்கியவழி அதன் உள்ளீடு வெளுத்துத் தின்பார்க்கு இனிமை பயப்பதாகலின், “தீங்கொள் வெள்ளெள்” என்றார். செவ்வி கொண்டென்றார், காவலின்மையறிந்து அக்காலத்தே தப்பாது கவர்ந்துண்பது பூழ்ப் பறவைக்கு இயல்பாதலின், வரகு விளையும் கொல்லையின் வரப்பில் வளையமைத்து வாழ்வது பற்றிச் சுண்டெலியைக் “கோட்டெலி” யென்றார். வரகின் உதிர்ந்த வைக்கோல் ஈண்டுப் பீளெனப்பட்டது; அதனைத் தோகை யென்றலும் வழக்கு. வன்புலம் - முல்லைநிலம். சென்னி யில் உண்டாகிய வாள்வடு, தலைவனது வாட்போர்வன்மையைச் சிறப்பித்துக் காட்டலின் “வாள்வடு விளங்கிய சென்னி” யென்றார். ஓம்புமூரென்றது ஆற்றலால் ஈன்ற தாய் தன் குழவியை யோம்புவது போல ஓம்புகின்றானென்பது விளங்க நின்றது. விளக்கம் : கோழிகளை வளர்த்துப் போர் செய்து வெற்றி பெறப் பயிற்றுவது போலப் பண்டைநாளில் குறும்பூழையும் பயிற்றுவது மரபு; இவ்வகையால் போர் செய்தலின் வன்மைமிக்க சேவலை, “பூழின்போர்வல் சேவல்” என்றார். குறும்பூழ்களைப் போரிற் பயிற்சி செய்து விடுவோரைக் குறும்பூழாடிகள் என்ப. குறும்பூழ்க்கு அரிசி யுண்ணத் தருதலும், பச்சிலை பிசைந்து தடவுதலும் அவ்வப்போது அதற்கு மந்திரம் பல வோதுவதும் உண்டு. குறும்பூழ்களுள் வெல்லும் திறலுடையவற்றிற்கு இலக்கணங்களும் பண்டைநாட்புலவர் கண்டிருந்தனர். குறும்பூழைக் காடை யென்றும், காடையின் வேறாகிய கவுதாரி யென்றும் கூறுவர். நன்கு நனைத்துத் தேய்த்து மேல்தோலை நீக்கிய வெள்ளெள்ளை ஈரம் புலரச் சுளகிடைப் பரப்பி உணக்குப. உணக்கினாரது அற்றம் நோக்கி வெள்ளெள்ளைக் கவர்தலின், “செவ்வி கொண்” டென்றார். செவ்வி யுணங்கல் கொண்டு எனக் கொண்டு சுளகிடைச் செவ்வி யுண்டாக உணக்கியதனைக் கவர்ந்து கொண்டென வுரைப்பினும் அமையும். குடந்தை, வளைவு. முடம் முடந்தை (பதிற் 32)யென வருதல்போல, குடம் குடந்தையென வந்தது; “குடந்தையஞ் செவிய” (அகம். 284) என வருதல் காண்க. இதனைப் “பெயர்த் திரிசொல்; இனிப் பழ வழக்கென்பது மொன்று” (பதிற் 27) என்பர் பதிற்றுப்பத்தின் பழைய வுரைகாரர். வேனிற்காலத் தரும்பும் கோங்கின் அரும்பு சுண்டெலியின் காதுக்கு உவமை. பாணன் தங்கிச் செல்வானாயின் அவற்குத் தரப்பெறுவனவற்றை யுரைக்கும் அடிகள் சிதைந்துள்ளன. வாட்போர் செய்வார்க்குத் தலையிற் புண்ணுண்டாதல் இயல்பாதலின், “வாள்வடு விளங்கிய சென்னி” என்றார். திருக்கோயிலூர் வட்டத்தின் மேலைப்பகுதியிற் காணப் படும் கல்வெட்டுக்களுள் வாட்போர் செய்து தலையிற் புண்பட்ட வீரர்களைக் குறித்திருப்பது காணத்தக்கது. 322. ஆவூர்கிழார் ஆவூர்கிழாரது இயற்பெயர் தெரிந்திலது. ஆவூரென்ற பெயருடைய ஊர்கள் தஞ்சை மாநாட்டிலும் வடவார்க்காடு மாநாட்டிலும் உள்ளன. திருவண்ணாமலைப் பகுதியிலுள்ள ஆவூரே இச்சான்றோரது ஊராக இருக்கலாமென எண்ணுதற் கேற்ப, முல்லை நிலத்தையே இவர் சிறப்பித்துப் பாடியிருக் கின்றார். இவர்க்கு மகனாரொருவருளர். அவரும் நல்லிசைச் சான்றோருள் ஒருவர். அவர் பெயர் கண்ணனார் என்பது. ஆவூர்கிழார் மகனாரான கண்ணனார் பாடிய பாட்டொன்று அகத்தில் காணப்படுகிறது. அதுவும் குறிஞ்சி நிலச் சிறப்பை யெடுத்துக் கூறுகிறது. தஞ்சை மாநாட்டு ஆவூர் காவிரியின் தென்கரையில் உளது. அஃது ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த திருஞானசம்பந்தராற் சிறப்பித்துப் பாடப்பெற்றதெனினும் மருத வளஞ்சார்ந்து அண்ணாமலை நாட்டு ஆவூரின் வேறுபடுகிறது. ஆவூர்கிழார் பாடியதாக இந்த ஒரு பாட்டுத்தான் இந் நூலில் நமக்கு கிடைத்துள்ளது. இதன்கண்வெள்வேல் வீரனொருவன் போரில் கடுஞ்சமம் புரிந்து பகைவேந்தர் அவனை நினைக்குந் தோறும் அச்சம் மிகுந்து உறங்காக் கண்ணராய்த் துன்ப முழக்குமாறு வென்றி மேம்பட்டான். அவனது ஊரைச் சிறப்பிக்கின்றார் ஆசிரியர் ஆவூர்கிழார். அந்த ஊர் வன்புலமாகிய முல்லை நிலத்தில் உளது; அந்த நாட்டு வில்லேருழவருடைய சிறுவர்கள் வரகுக் கொல்லை களில் வரகினது அரிகாலைப் பொருந்தியிருக்கும் காட்டெலிகளை வேட்டமாடுவர்; எலியொன்றைக் கண்டதும் அவர்கள் வில்லை வளைத்து ஆரவாரிப்பர்; அவ்வோசை கேட்டதும் அருகே மேயும் குறுமுயல்கள் அண்மையில் அவர்கள் மனைமுற்றத்தில் இருக்கும் கரிய மட்கலங்களிடையே, அவை யுருண்டோடி யுடைந்து கெடுமாறு பாய்ந்தோடும், என அவ் வன்புலத்தியல்பை இப் பாட்டில் அழகுறக் கூறியுள்ளார். உழுதூர் காளை யூழ்கோ டன்ன கவைமுட் கள்ளிப் பொரியரைப் பொருந்திப் புதுவர கரிகாற் கருப்பை பார்க்கும் புன்றலைச் சிறாஅர் வில்லெடுத் தார்ப்பிற் 5 பெருங்கட் குறுமுயல் கருங்கல னுடைய மன்றிற் பாயும் வன்புலத் ததுவே கரும்பி னெந்திரஞ் சிலைப்பி னயல திருஞ்சுவல் வாளை பிறழு மாங்கட் டண்பணை யாளும் வேந்தர்க்குக் 10 கண்படை யீயா வேலோ னூரே திணை : தும்பை; துறை : வல்லாண்முல்லை. ஆவூர் கிழார் பாடியது. உரை : உழுதூர் காளை யூழ்கோடு அன்ன - நிலத்தை யுழுததனால் ஓய்ந்த நடை கொண்டு செல்லும் காளையின் தலையில் முளைத்த கொம்புபோல்; கவைமுள் கள்ளி பொரியரைப் பொருந்தி - கவைத்த முட்களையுடைய கள்ளி மரத்தின் பொரிந்த அடிப் பகுதியைப் பொருந்தியிருந்து; புது வரகு அரிகால் கருப்பை பார்க்கும் - புதிது விளைந்த வரகை யரிந்தபின் உண்டாகிய அரிகாலின்கண் வந்து மேயும் எலியைப் பிடிப்பதற்குச் செவ்வி பார்க்கும்; புன்றலைச் சிறாஅர் வில்லெடுத் தார்ப்பின் - புல்லிய தலையையுடைய சிறுவர்கள் கையில் வில்லையெடுத்துக் கொண்டு ஆரவாரிப்பாராயின்; பெருங்கண் குறு முயல் - பெரிய கண்ணையுடைய குறுமுயல்; கருங்கலன் உடைய மன்றில் பாயும் - கரிய புறத்தையுடைய மட்கலங்கள் உருண்டுடைந்து கெடமன்றிலே பாய்ந்தோடும்; வன்புலத்தது - வன்புலத்தின் கண்ணே யுளது; கரும்பின் எந்திரம் சிலைப்பின் - கரும் பாட்டும் ஆலை யொலிக்குமாயின்; அயலது - அயலதாகிய நீர் நிலையிலுள்ள; இருஞ்சுவல் வாளை பிறழும் ஆங்கண் - பெரிய பிடரையுடைய வாளைமீன்கள் துள்ளிப் பாயும் அழகிய இடத்தையுடைய; தண் பணையாளும் வேந்தர்க்கு - குளிர்ந்த மருதநிலத்தூர் களை யாட்சி செய்யும் அரசர்கட்கு;கண்படை ஈயா வேலோன் ஊர் - கண்ணுறக்கத்தை யெய்தாமைக் கேதுவாகிய அச்சத்தைத் தரும் வேலையுடையவன் ஊர்; எ-று. ஊர் வன்புலத்தது என வினை முடிவு செய்க. கொம்பு முளையாத இளங்காளைகளை உழுதற்குப்பயன்படுத் தாராகலின், “உழுதூர் காளையூழ் கோடு” என்றார்; ஊர்தல், ஓய்ந்து நடத்தல். ஊழ்கோடென்றார். எருத்திலிட்ட நுகம் முகத்தே சரியாதவாறு தாங்கும் அளவாகத் தோன்றிய கோடு என்பது விளக்குதற்கு. பொரித்தாற்போல் பொருக்குடைய அரை, பொரியரை யெனப் பட்டது. புதுவரகறிந்த அரிகாலில் உதிர்ந்து கிடக்கும் வரகையுண்டற்கு வரம்பளையில் வாழும் எலி வருமாதலால் அதனைக் கண்டதும் சிறுவர்கள் அதன்மீது அம்பு எய்யும் பொருட்டு ஆரவாரிப்பது இயல்பென்பதுகொண்டு “ஆர்ப்பின்” என்றும், சிறாரின் ஆர்ப்புக் கேட்டு அஞ்சியோடும் குறுமுயல் கருங்கலங்களினிடையே துள்ளிப்பாய்ந் தோடுங்கால், அவை யுருண்டு தம்மிற்றாக்குண்டு கடைதலால், “கருங்கலனுடைய மன்றிற் பாயும் ” என்றும் கூறினார். வேலோனது பகைமைக்கஞ்சி இரவெல்லாம் உறக்கமிலராயினர் என்பார். கண்படை ஈயா வேலோன்’ என்றார்; “முரசு முழங்கு நெடுநகரரசு துயிலீயாது, மாதிரம் பனிக்கும் மறம் வீங்கு பல்புகழ்” (பதிற். 12) என்று பிறரும் கூறுதல் காண்க. விளக்கம் : ஊழ்கோடு என்றதற்கு முதிர்ந்த கோடு எனவும் கூறுவர். இளமைச் செவ்வியிற்றோன்றி வெளிப்பட்டு நிமிர்ந்திருக்கும் இளங்கோடே கள்ளியின் கவைமுட்டு உவமமாதற் கேற்புடைமையின், ஊழ்கொ டென்றதற்கு முளைத்த கோடென வுரை கூறப்பட்டது. அக்கோடு மிக நீளாது குறுகியிருக்கும் என்பது தோன்றக் “குண்டைக் கோட்ட குறுமுட் கள்ளி” (அகம். 184) என மதுரை மருதனிள நாகனார் கூறுவது காண்க. கள்ளிகள் நிற்கும் வேலியடியைப் பொருந்தியிருந்து எலியின் வரவைச் சிறுவர் பார்த்திருப்பரென்றற்கு, கள்ளிப் பொரியரைப் பொருந்திக் கருப்பை பார்க்கும் சிறார் “என்றார். அரிகால்அரிந்தவழி அடியில் நிலத்தோடு பொருந்தியிருக்கும் தாள். அரிகாலின் அடியில் வளை செய்துகொண்டு எலிகள் வாழுமாதலால், அவற்றை அரிகாற் கருப்பை” யெனச் சிறப்பித்தார் சிறுவர்கள், வேட்டுவச் சிறார்கள் என்பது தோன்ற, “வில்லெடுத்தார்ப்பின்” என்றார். முயல், குறுகிய உருவிற்றாயினும் கண் பெரிதாதல் பற்றிப் பெருங்கட் குறுமுயல்” எனப்பட்டது. சிறாராதலால், வில்லை வளைத்து அம்பை யெய்யுமிடத்து ஆரவாரிப் பாராயினர், ஆர்ப்புக் கேட்டு அஞ்சியோடும் குறுமுயல் அருகே மனை முன்றிலில் இருக்கும் மட்கலங்கள் உருண்டுடையமாறு தாவியோடும் என்றார். புன்புல வூர்களில் இத்தகைய காட்சிகள் இக்காலத்தும் உண்டென வறிக. கரும்பின் எந்திரம்,- கரும்பை ஆட்டும் ஆலை. கரும்பரைக்கும் ஆலையில் எழும் ஓசை சிலைப்பது போறலின், “சிலைப்பின்” என்றார். “கரும்பி னெந்திரம் களிற்றெதிர் பிளிற்றும்”, (ஐங். 55) என்று ஐங்குறு நூறு கூறுவது காண்க. சுவல், கழுத்துமாம், புன்புலத்திலுள்ள ஊரில் வாழ்வோனாயினும் வேலோன் தண்புல நாட்டு வேந்தர்க்கு அச்சம் விளைவிக்கும் விறலுடையனாவன் என மறவனது வல்லாண்மையே கூறியவாறாயிற்று. 323. வல்லாண்முல்லை வல்லாண் முல்லை யென்பது, “இல்லும் பதியும் இயல்பும் கூறி, நல்லாண்மையை நலமிகுத்தன்று, “ என்று புறப்பொருள் வெண்பாமாலை (8:22) கூறுகிறது. இப் புறப் பாட்டுக்களைத் தொகுத்துத் திணையும் துறையும் வகுத்தவர் புறப்பொருள் வெண்பாமாலையை மேற்கொண்டு சென்றிருத்தலின், அது கொண்டே இவ்விளக்கம் கூறப்பட்டது. இப்பாட்டுப் பெரிதும் சிதைந்து கிடக்கிறது. இதனைப் பாடிய ஆசிரியர் பெயரும் பாடப்பட்ட தலைவன் பெயரும் தெரியாவாறொழிந்தன. ஒரு தலைவனது ஊர் நலமும் அவனுடைய போர் நலமும் எடுத்துக் கூறவந்த ஆசிரியர், பரிசிலர்க்கு அவர் கருதியதைக் கருதியவளவே கொடுக்கவல்ல கொடையும், ஏந்திய தன் வேல் கெடுமாயின், தன் வாளைப் பெரிய யானையை எறிதற்பொருட்டு எடுத்தால் எடுப்பனே தவிரப் பிறசெயற்கு அதனை எடான் எனப் போர்ச் சிறப்பும் கூறியுள்ளார். அவனது ஊர் நலத்தை யுரைக்கும் பகுதி தெளிய விளங்காவாறு சிதைந்துளது.” புலிப்பாற் பட்ட வாமான் குழவிக்குச் சினங்கழி மூதாக் கன்றுமடுத் தூட்டும் கா. . . . . . . . . . . பரிசிலர்க் குள்ளியது சுரக்கு மோம்பா வீகை 5 வெள்வே லாவமாயி னொள்வாள் கறையடி யானைக் கல்ல துறைகழிப் பறியா வேலோ னூரே. திணை : தும்பை; துறை : வல்லாண்முல்லை.............. கிழார் பாடியது. உரை : புலிப்பாற்பட்ட வாமான் குழவிக்கு - புலியிடத் தகப் பட்டிருந்த தாவும் மானினுடைய கன்றுக்கு; சினங்கழி மூதா - சினமில்லாத முதிய கறவைப்பசு; கன்று மடுத்து ஊட்டும் - தன் கன்றெனச் சேர்த்துத் தன் பாலை யுண்டற் கமைந்திருக்கும்; ........பரிசிலர்க்கு உள்ளியது சுரக்கும் ஓம்பா ஈகை - பரிசிலராகிய பாணர் முதலாயினார்க்கு அவர் கருதியதனைக் கருதியவளவே வழங்கும் தள்ளாத ஈகையினையும்; வெள்வேல் ஆவமாயின் - வெள்ளிய வேல் ஏந்திச் செய்யும் போர் உளதாயின்; கறையடி யானைக்கல்லது - உரல்போன்ற காலையுடைய களிற்றைக் கொல்லுதற்கன்றி; ஒள் வாள் உறை கழிப்பறியா - ஒள்ளிய வாளை அதன் உறைக் கூட்டினின்றும் கழித்தலைச் செய்யாத; வேலோன் ஊர் - வேற்படையையுடைய தலைவனது ஊர்; எ-று. தன் கன்றை யொழித்துப் பிறிதொரு கன்று வரின் அதனை அணுக விடாத சினமுடைய நல்லாவின் வேறுபடுத்தற்கு “சினங்கழி மூதா” என்றார். சினங்கழிந்ததற்கு ஏதுக் கூறுவார், “மூதா” எனக் குறித்தார். மான் கன்றைத் தன் கன்றுபோற் சேர்த்துப் பாலுண் பித்தலின் “கன்றுமடுத் தூட்டும்” என்றார். யானை சேய்மையில் வரின் வேற்படையும், அண்மைக் கண்ணதாயின் வாட்படையும் வேண்டுவனவாம். “வேந்தூர் யானைக் கல்லது, ஏந்துவன் போலான்றன் இலங்கிலை வேலே” (புறம். 301) என்பதனால் வேற் படையும் யானைக்கல்ல தெறியப்படா தென்றறிக. விளக்கம் : ஆவம், போர். வேலெறிந்து செய்யும் போர்; வெள்வேலாவம் எனப்பட்டது. வேல் கொண்டு யானையை யெறிவதில் வீரர்க்கு வேட்கை மிகுவது சிறப்பு. 324. ஆலத்தூர்கிழார் ஆலத்தூர் என்னும் பெயருடைய ஊர்கள் பல இருப்பினும். இச் சான்றோரது ஊர் சோழநாட்டுக் காவிரித் தென்கரை நித்தவினோத வளநாட்டு ஆவூர்க் கூற்றத்து ஆலத்தூ (A.R. No. 273 of 1927) ராகலாம்; இவர் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனையும், சோழன்சேட் சென்னி நலங்கிள்ளியையும் பாடிச் சிறப்புற்றவர், ஒரு கால் ஒரு தலைவன் போரில் புகழுண்டாகப் பொருது வென்றியால் வீறுகொண்டு விளங்கினான். அவன் வன்புல நாட்டுச் சீறூர் ஒன்றிற் குரியன். தன் வேந்தனுக்குப் படை வேண்டுமிடத்து வாளுதவியும், வினை வேண்டுமிடத்து அறிவுரை வழங்கியும் சிறந்து நின்றமையின், வேந்தன் அவனைத் தனக்கு நெஞ்சறிந்த நற்றுணைவனாகக் கொண்டு பேணினான். வேந்தனுக்கு நற்றுணைவனாகப் பெற்றும் அவன் தன் மனநிறை நெகிழாமல் பண்டுபோல் ஒரு தன்மையனாய் ஒழுகினான். ஒருநாள் தன் சீறூரில் தனக்குரிய பாணருடன் அவன் கூடி இன்புற்றிருந்தான். அப் போழ்து அவன்பாற் சென்றிருந்த ஆலத்தூர் கிழார், அவனது வல்லாண்மையை எடுத்துக் கூறலுற்று அவன் தன் பெருமை கருதாது பரிசிலர் நடுவண் மிக எளியனாய்க் கூடியிருப்பதைப் பாராட்டி “இப்பெற்றியோன் வெற்றி தரும் பெரிய தானையை யுடைய வேந்தனுக்கு உயிர்த்துணைவன் அவன் இறப்பின் அவனோடு உடன் இறக்கும் ஒள்ளிய நண்பன்” என்ற கருத்தமைய இப்பாட்டைப் பாடினார். வெருக்குவிடை யன்ன வெருணோக்குக் கயந்தலைப் புள்ளூன் றின்ற புலவுநாறு கயவாய் வெள்வாய் வேட்டுவர் வீழ்துணை மகாஅர் சிறியிலை யுடையின் சுரையுடை வான்முள் 5 ஊக நுண்கோற் செறிந்த வம்பின் வலாஅர் வல்விற் குலாவரக் கோலிப் பருத்தி வேலிக் கருப்பை பார்க்கும் புண்புலந் தழீஇய வங்குடிச் சீறூர்க் குமிழுன் வெள்ளை மறுவாய் பெயர்த்த 10 வெண்காழ் தாய வண்காற் பந்தர் இடையன் பொத்திய சிறுதீ விளக்கத்துப் பாணரொ டிருந்த நாணுடை நெடுந்தகை வலம்படு தானை வேந்தற் குலந்துழி யுலக்கு நெஞ்சறி துணையே. திணை : தும்பை; துறை : வல்லாண்முல்லை. ஆலத்தூர் கிழார் பாடியது. உரை : வெருக்குவிடை யன்ன வெருள் நோக்குக் கயந்தலை - காட்டுப் பூனையின் ஆணைப்போல வெருண்ட பார்வை யினையும் பெரிய தலையினையும்; புள்ளூன் தின்ற புலவுநாறு கயவாய் - பறவைகளின் ஊனைத் தின்பதனால் புலால் நாற்றம் கமழும் மெல்லிய வாயினையுமுடைய; வெள் வாய் வேட்டுவர் - வெளுத்த வாயையுடைய வேட்டுவர்களின்; வீழ் துணை மகாஅர் - தம்மில் ஒருவரை யொருவர் விரும்பி நட்புக் கொண்டுறையும் சிறுவர்கள்; சிறியிலை உடையின் சுரையுடை வான் முள் - சிறிய இலைகளையுடைய உடைவேல் மரத்தின் உள்ளே புழையையுடைய வெள்ளிய முள்ளை; ஊக நுண் கோல் செறித்த அம்பின் - ஊகம்புல்லின் நுண்ணிய கோலில் செருகிய அம்பை; வலாஅர் வல்வில் குலாவரக் கோலி - வளாரால் செய்யப்பட்ட வில்லின் வைத்து வளைவுண்டாக வலித்து; பருத்தி வேலிக் கருப்பை பார்க்கும் - பருத்தியாலாகிய வேலியடியில் உறையும் காட்டெலியை வீழ்த்தற்குக் குறிபார்த் திருக்கும்; புன்புலம் தழீஇய அங்குடிச் சீறூர் - புன்செய்கள் சூழ்ந்துள்ள அழகிய குடிகள் வாழும் சீறூரின்கண்; குமிழ் உண் வெள்ளை மறுவாய் பெயர்த்த வெண்காழ் தாய - குமிழம் பழத்தை யுண்ணும் வெள்ளாடுகள் எருவாய் வழியாக வெளிப் படுத்த வெள்ளியகொட்டைபோலப் பிழுக்கைகள் பரந்து கிடக்கின்ற;வண் கால பந்தர் - வளவிய கால்கள் நிறுத்தப்பட்ட பந்தரின் கீழ்; இடையன் பொத்தியசிறுதீ விளக்கத்து - இடையன் கொளுத்திய சிறிய சுடரையுடைய விளக்கொளியில்; பாண ரொடு இருந்த நாணுடை நெடுந்தகை - பாணர் சூழ்ந்திருக்க அவரிடையே வீற்றிருந்த நாணமாகிய நற்பண்பை யுடைய நெடுந்தகையாகிய தலைவன்; வலம்படு தானை வேந்தற்கு - வெற்றியுண்டாகும் தானையையுடைய வேந்தனுக்கு; உலந்துழி உலக்கும் - கேடு வந்தவிடத்துத் தானும் உடன்கெடும்; நெஞ்சறி துணை - மனமறியக்கொண்ட உயிர்த் துணைவனாவான்; எ-று. வெருக்கின் ஆண் விடையெனப்பட்டது. நோக்கும் தலையும் வாயுமுடைய மகாஅர் என இயையும். வெற்றிலை தின்னாத வாயென்றதற்கு “வெள்வாய்” என்றார். இடக்கர் மொழிகளை இடையிடையே கூசாது மொழியும் வாயெனினுமமையும்; அல்லதூஉம், எக்காலத்தும் கரவில்லாத சொற்களையே வழங்கும் வாயென்றுரைப்பினுமாம். வேலிகளில் பருத்திச் செடிகள் நிரல் நிரலாக நிற்ப அவற்றின் அடியின் வளையமைத்து வாழும் காட்டெலியைப் “பருத்திவேலிக் கருப்பை” யென்றார். எருவை வெளியிடும் வாயை மறுவாயெறன்து அவையடக்கு. காழ் போல் வதனைக் “காழ்” என்றார். பாணரிடத்து மிக்க அன்பு செய்து எளியனாயுள்ளானென்றற்கு “பாணரொடு இருந்த நெடுந்தகை” யென்றும், மறத்துறைக்குரிய அறநெறி பிறழ நிகழ்வன காண்டற்கும் செய்தற்கும் உள்ளம் சுருங்குதற் கேதுவாகிய மானம் நிறைந்து அதனால் நெடும்புகழ் பெற்றவன் என்பது தோன்ற, “நாணுடை நெடுந்தகை” யென்றும் கூறினார். “உலந்துழி யுலக்கும் நெஞ்சறி துணை” யென்றார், உற்றவிடத் துயிர் வழங்கும் உணர்ச்சி யொத்த உண்மை நண்பன் என்றற்கு. சீறூர் நெடுந்தகை, வேந்தற்கு நெஞ்சறி துணையெனக் கூட்டி வினைமுடிவு செய்க. பகுவா யென்றும் பாடம். விளக்கம் : பாண்டிமண்டலத்து மதுரோதய வளநாட்டு ஆலத்தூர் நாட்டு ஆலத்தூரும், தொண்டை நாட்டுப் புலியூர்க்கோட்டத்து ஆலத்தூரும் பல்குன்றக்கோட்டத்து ஆலத்தூருமெனப் பல இருத்தலின், ஆலத்தூர் கிழாரது ஆலத்தூர் இன்னதெனத் துணியமுடியாவிடினும். இவர் சோழ வேந்தர்களையே பாடியிருத்தலின், இது சோழ நாட்டு ஆலத்தூர்களில் ஒன்றென்பது தெளிவாம். கருவிழியின் நடுவிட மொழிய ஏனைப்பகுதி செங்கருமை நிறம் பரந்திருத்தலின் வெருணோக்கு எனப்பட்டது. புலவு நாறும் வாயென்றவழி, நாற்றத்தின் பொதுத்தன்மை விளங்காமையின், “புள்ளூன் தின்ற புலவு” எனச் சிறப்பித்தார். ஏனை யிறைச்சியினும் புள்ளினங்களின் இறைச்சியே பெரிதும் தின்னப்படுவ துணர்த்தற்கு இவ்வாறு கூறினாரென்றுமாம். வேட்டுவர் மக்களாதலால் பிள்ளைப் பருவத்தே வில்லேந்தி எலி வேட்டம் புரிகின்றனரென வறிக. உடை, உடையென்னும் வேலமரம்; இதனைக் குடை வேலென்றலும் வழக்கு. வெண்மை நிறமுடைமை யின் வான் முள் எனப்பட்டது. ஊகம்புல்லைத் துண்டித்து அதன் நுனியில் முள்ளைச் செருகி, வில்லிடைவைத்து எலியின் மேல் எய்து விளையாடு வர் வேட்டுவச் சிறாஅர் என்பது கூறியவாறு. வலார் மலார் எனவும் வளாரெனவும் வழங்கும். இது வலிய மரக் கொம்பாதல் காண்க. குலாவரல் வளைதல்; இது குலாவல் எனவும் வரும்; “கொடுந்தொழில் வல்விற் கொலைஇய கானவர்” (முருகு. 194) என வருதல் காண்க. புன்புலந் தழிஇய சீறூராயினும் ஊரிடத்து வாழுங்குடிகள் மறப்பண்பும் கொடைப் பண்பும் ஒருங்குடைய நற்குடிகள் என்றற்கு அங்குடிச் சீறூர் எனச் சிறப்பித்தார். குமிழ், குமிழம் பழம், வெள்ளை, வெள்யாடு, குமிழின் கொட்டையும் வெள்யாட்டின் பிழுக்கையும் வேறுபாடறப் பரந்து கிடக்குமாறு தோன்ற “வெள்ளை பகுவாய் பெயர்த்த வெண்காழ்தாய வண்காற் பந்தர் ” என்று பாடங்கொண்டுரைத்தலுமுண்டு. வேந்தர்க்குத் துணை யாகச் செல்லும் புறத்துறைக்கு (தொல். புறத். 5) நச்சினார்க்கினியர் இதனை யெடுத்துக் காட்டுவர். 325. உறையூர் முதுகண்ணன் சாத்தனார் இளங்கண்ணன் முதுகண்ணன் என்பவை பண்டையோர் மக்கட்கு இட்டு வழங்கிய பெயர்கள். உறையூரில் வாழ்ந்த முதுகண்ணன் என்பவருடைய மகனாதலால். இச் சாத்தனார், உறையூர் முதுகண்ணன் சாத்தனார் எனப்படுவாராயினர். ஒருவர் மிக்க இளைஞரொருவர்க்குப் பாதுகாப்பாளராய் இருப்பராயின் அவரை முதுகண் (Guardian) என்பது பழையநாளை வழக்கு. பன்னிரண்டாம் நூற்றாண்டிலெழுந்த கல்வெட்டொன்று, “வாச்சியன் இரவி கூத்தனை முதுகண்ணாகவுடைய இவன் பிராமணி தேவன் நீலியும் இவன் மகன் கூத்தன் இரவியும்” (S.I.Ins. Vol. IV. No. 227) என்று கூறுகிறது. இது கொண்டு முது கண்ணன் சாத்தனாரை மிக்க இளையனொருவற்கு முதுகண்ணாயிருந்து சிறந்தவராகக் கருதுதலும் உண்டு. ஆனால் சொற்கிடக்கை அவ்வாறு கோடற்கு இடந்தருகின்றிலது. இச் சாத்தனார் சோழன் நலங்கிள்ளி காலத்த வராகலின் அவனைப் பலபடியும் பாராட்டி நல்லறிவு கொளுத்தி யுள்ளாரென்பதை முன்னைய இவருடைய பாட்டுக்களால் அறிகின்றோம். இவர் ஒருகால் போரில் பெற்ற வென்றிமேம் பாட்டால் வாகை சூடி மாண்புற்று வரும் தலைவனொருவனைக் கண்டார். அவனுடைய வல்லாண்மையால் அவன் பெற்ற பொருளனைத்தும் பிறர்க்கீத்துப் புகழ் நடுவதில் பெரிதும் பயன்படுவது இவருக்குப் பெருவியப்பினைப் பயந்தது. அவ் வியப்பின் சொல்வடிவு இப் பாட்டு. இதன்கண் அவனது ஊர் நலமும் கொடை நலமும் குறிக்கப்பட்டுள்ளன. தலைவன் பெயர் தெரியவில்லை. களிறுநீ றாடிய விடுநில மருங்கின் வம்பப் பெரும்பெயல் வரைந்துசொரிந் திறந்தெனக் குழிகொள் சின்னீர் குராஅ லுண்டலிற் சேறுகிளைத் திட்ட கலுழ்கண் ணூறல் 5 முறையி னுண்ணு நிறையா வாழ்க்கை முளவுமாத் தொலைச்சிய முழுச்சொலாடவர் உடும்பிழு தறுத்த வொடுங்காழ்ப் படலைச் சீறின் முன்றிற் கூறுசெய் திடுமார் கொள்ளி வைத்த கொழுநிண நாற்றம் 10 மறுகுடன் கமழு மதுகை மன்றத் தலந்தலை யிரத்தி யலங்குபடு நீழற் கயந்தலைச் சிறாஅர் கணைவிளையாடும் அருமிளை யிருக்கை யதுவே வென்வேல் வேந்துதலை வரினுந் தாங்கும் 15 தாங்கா வீகை நெடுந்தகை யூரே. திணை : தும்பை; துறை : வல்லாண்முல்லை. உறையூர் முதுகண்ணன் சாத்தனார் பாடியது. உரை : களிறு நீறாடிய விடுநில மருங்கில் - பன்றிகளால் புழுதி யாக்கப்பட்ட விடுநிலத்தின்கண்; வம்பப் பெரும்பெயல் வரைந்து சொரிந்து இறந்தென - புதிதாக வந்த பெருமழை அவ்விடத்தை வரைந்துகொண்டு பெய்து நீங்கிற்றாக; குழி கொள் சின்னீர் குரால் உண்டலின் - பள்ளங்களில் தங்கிய சிறிதாகிய நீரைக் கன்றையுடைய பசுவானது ஆங்கே முளைத் திருந்த புல்லை மேய்ந்து உண்டொழிதலால்; சேறு கிளைத் திட்ட கலுழ்கண்ணூறல் - சேற்றை நீக்கித் தோண்ட வூறிய கலங்கலாகிய நீரை; முறையின் உண்ணும் - முறை முறையாகச் சென்று முகந்துண்ணும்; நிறையா வாழ்க்கை - நிரம்பாத வாழ்க்கையையுடைய; முளவுமாத் தொலைச்சிய முழுச் சொல்லாடவர் - முள்ளம் பன்றியைக் கொன்ற முழுத்த சொல்லையுடைய வீரர்; அறுத்த உடும்பிழுது - அறுத் தெடுத்த உடும்பின் தசையை; ஒடுங்காழ்ப் படலைச் சீறின் முன்றில் - ஒடு மரத்தின் வலிய கழிகளாற் செய்யப்பட்ட படல் சார்த்தப்பட்ட சிறிய மனை முற்றத்தில்; கூறு செய்திடுமார் - பகுத்தளித்தற் பொருட்டு; கொள்ளி வைத்த கொழுநிண நாற்றம் - நெருப்பில் வேகவைத்த கொழுவிய நிணத்தின் மணம்; மறுகுடன் கமழும் - தெருவெல்லாம் மணக்கும்; மதுகை மன்றத்து அலந்தலை இரத்தி அலங்கு படு நீழல் - வலிய மன்றத்தில் நிற்கும் உலர்ந்த தலையையுடைய இரத்திமரத்தின் அசைகின்ற நிழலில்; கயந்தலைச் சிறா அர் - மெல்லிய தலையையுடைய சிறுவர்கள்; கணை விளையாடும் - அம்பெய்து விளை யாட்டயரும்; அருமிளை இருக்கையது - கடத்தற்கரிய காவற் காடுகளையுடைய நாட்டின்கண்ணே யுளது; வென்வேல் வேந்து தலைவரினும் தாங்கும் - வெல்லும் வேலையுடைய வேந்தர்தம் தானைச் சுற்றத்துடனே திரண்டு தன்பால் வந்தாலும் தாங்கக்கூடிய; தாங்கா ஈகை நெடுந்தகை ஊர் - குன்றாத ஈகையையுடைய நெடுந்தகையாகிய தலைவனது ஊர்; எ-று. விடுநிலம், ஆனிரைகளின் மேய்ச்சலுக்கென ஊரவரால் பொதுவாக விடப்பட்ட நிலம். குரால், கன்றையுடைய பசு; ஒருவகைப் பசுவுமாம் கலுழ்கண் நீர் - கலங்கிய இடத் துண்டாகிய நீர். நீர் சிறிதே யூறுதலின், ஒருவன் பின்னொருவராக முறைகொண்டு சென்று (queue system) முகந்துண்ணுமாறு தோன்ற “முறையின் உண்ணும்” எனவும், அதனால் தமது வேட்கை தீரவுண்டு, பிறர்க்கும் அவ்வாறுவழங்குதற்கு வேண்டு மளவு கிடைக்கப் பெறாமையால், “நிறையா வாழ்க்கை” யெனவும் கூறினார். செப்பிய வஞ்சினம் தப்பாது செய்து முடிக்கும் மறமாண்பு உடைமை தோன்ற, “முழுச் சொல்லாடவர்” என்றார்; சொல்லினும் செய்கையே பெரிதுடைய ரென்றுரைப்பினுமமையும். காழ் பொருந்திய கழியைக் காழென்றார். வெயில் மழைகாற்று முதலியவற்றால் சலியா திருத்தலின் மன்றம் “மதுகை மன்ற” மெனச்சிறப்பிக்கப்பட்டது. வேந்து வரினும் எனவே வேந்தன் தன் தானைச் சுற்றம் புடைசூழ வருதலும், தாங்கும் என்றத னால், அவர் வேண்டுவன தந்து ஓம்பும் வளனுடைமையும் பெற்றாம். ஆடவர், முன்றில் கூறு செய்திடுமார் வைத்த நிணம் கமழும் மன்றத்து நீழல் சிறார் விளையாடும் இருக்கையது நெடுந் தகையூர் எனக் கூட்டி வினைமுடிவு செய்க. விளக்கம் : “கேழற் கண்ணும் கடிவரை யின்றே” (தொல். மர. 35) என்றதனால், களிறு பன்றிக்காயிற்று. பெரும் பெயல், பெருமழை. எங்கும் பரந்து பெய்யாது ஒருகாலத் தோரிடத்தே மிகுதியாகப் பெய்த மழையை “வரைந்து சொரிந் திறந்தென” என்றார். பெயலை யெதிர் நோக்காத காலத்தில் பெய்த மழையை “வம்பப்பெயல்” என்றமையின். அது பெரும் பெயலாயினும் நீர் நிலத்தே சுவறிவிடுதலால், குழிகளில் நின்ற நீர் சிறிதானமைபற்றி, “குழிகொள் சின்னீர்” எனல் வேண்டிற்று. குராற் பசு நீருண்ணவரின் அதனைத் தடாராதலின், “குராலுண்டலின்” என்றார். கிளைத்தல் , தோண்டுதல். துளி துளியாக வூறும் நீரூற்று, “கலுழ்கண் ணூறல்” எனப்பட்டது. முள்ளையுடைய பன்றி, முளவுமா என வழங்கும். “முளவுமாத் தொலைச்சிய பைந்நிணப் பிளவை” (மலைபடு. 171) எனப் பிறரும் கூறுதல் காண்க. வேட்டுவர் வாழும் வன்புலச்சீறூராதலால், அங்கு வாழ்பவர் சிறப்பாக வுண்ணும் உணவை யெடுத்தோதினார். ஊனுணவுண்போர் உடும்பின் இறைச்சியும் நிணமும் மக்களுடம்புக்கு மிக்க வன்மை தருவது என்பர். உடும்பினைப் பற்றிக் கொணர்ந்த வேட்டுவர் அதனைத் தம்முன்றிலில் வைத்து அறுத்துத் தம்மவரிடையே கூறுசெய்து கோடல் இயல்பு. இரத்தி, இரத்தி, யென்னும் மரம்; இதனை இலந்தை மரமென்றும் கூறுவர். “இரத்தி நீடியவகன்றலை மன்றம்” (புறம். 34) எனப் பிறரும் கூறுதல் காண்க. அலந்தலை; அலந்த தலையென்பதன் விகாரம். முதியோராகிய வேட்டுவர் உடும்பு கொணர்ந்து அதன் ஊனைச் சுட்டுத் தம்மிற் கூறுசெய்துண்டு இன்புறா நிற்ப, அவருடைய இளஞ்சிறார்கள் வில்லெடுத்து அம்பு தொடுத்து விளையாடா நிற்பர் எனச் சீறூர் வாழ்நர் சிறப்புக் கூறிய ஆசிரியர் அவ்வூர்க்குரிய தலைவன் தகைமையை, “வேந்து தலைவரினுந் தாங்குந் தாங்கா ஈகை நெடுந்தகை” யென்று சிறப்பிக்கின்றார். தாங்கா ஈகை யென்றது, “ஓம்பா வீகை” யென்பது போல நின்றது. மதுகை விளைவிக்கும் மன்றத்தை மதுகை மன்றம் என்றார் என்று உரைப்பினுமமையும். குறிஞ்சி நிலத்தவர் சுனை விளையாடியும்; முல்லை நிலத்தவர் கொல்லேறு தழுவியும் தமது மதுகை மாண்புறுவிக்கும் இடம் மன்றமென வறிக. 326. தங்காற் பொற்கொல்லனார் தங்காலென்பது விருதுநகர்க்கு அருகிலுள்ளதோரூர். இளங்கோவடிகள் இதனைத் “தடம்புனற் கழனித் தங்கால்” (சிலப். மதுரைக். 23:118) என்று சிறப்பிப்பார். இடைக்காலப் பாண்டியர் காலத்திலும் இவ்வூர் சிறப்புற்றிருந்தது. இதனை இராசராச பாண்டிநாட்டு மதுராந்தக வளநாட்டுக் கருநீலக்குடி நாட்டுத்திருத்தங்கால் (A.R. No. 564 of 1922) என்று கல்வெட்டுக்கள் கூறும். மாறவன்மன் சுந்தர பாண்டியன் (1) காலத்தில் இவ்வூரிலுள்ள மடமொன்றில் பாரதமும் இராமாயணமும் படிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாகக் கல்வெட்டொன்று (A.R. No. 546 of 1922) கூறுவதனால் இவ்வூர் கல்விவளம் சிறந்த நல்லூராதலை யறியலாம். சங்கத் தொகை நூலாசிரியர்கள் காலத்தில் இவ்வூரில் நல்லிசைச் சான்றோர் பலர்தோன்றியிருக்கின்றனர். ஆத்திரேயன் செங் கண்ணனார் என்னும் சான்றோரும் இப் பாட்டைப் பாடிய பொற் கொல்லன் வெண்ணாகனாரும் அவருள் சிறந்திருக்கின்றனர். செங்கண்ணனார் பாட்டொன்று நற்றிணையிலும்,இவர் பாடிய வற்றுள் சில அகத்திலும், குறுந்தொகையிலும் நற்றிணையிலும் தொகுக்கப்பட்டுள்ளன. புறத்தில் இவ்வொரு பாட்டுத்தான் காணப் படுகிறது. இதன் கண், இவர் பெயர் தங்காற் பொற்கொல்லனா ரெனக்குறிக்கப்பட்டுள்ள தாயினும் அகத்தில் இவர் பெயர் பொற்கொல்லன் வெண்ணாகனாரெனக் காணப்படுதலால், இவரது இயற்பெயர் வெண்ணாகன் என்று அறிகின்றோம். தங்காலைத் தண்காலென்றும் பொற்கொல்லனாரென்பதைப் பூட்கொல்லனா ரென்றும் சில ஏடுகள் குறிக்கின்றன. ஒருகால் இவர் மறக்குடித் தலைவன் ஒருவன் மனைக்குச் சென்று அவனைக் கண்டார் அவன் மனைவி விருந்தோம்பும் விருப்பு நிறைந்தவளாகவும், அவன் பெரும் போரில் பகைவருடைய பெருங் களிறுகளைக் கொன்று அவற்றின் ஓடைப் பொன்னைக் கொணர்ந்து தன்பால் வரும் பாணர் முதலாயினார்க்குப் பரிசில் நல்கும் பண்புடையனாகவும் இருப்பதுகண்டு இப் பாட்டின்கண் வியந்து பாடியுள்ளார். ஊர்முது வேலிப் பார்நடை வெருகின் இருட்பகை வெரீஇய நாகிளம் பெடை உயிர்நடுக் குற்றுப் புலாவிட் டரற்றச் சிறையுஞ் செற்றையும் புடையுந ளெழுந்த 5 பருத்திப் பெண்டின் சிறுதீ விளக்கத்துக் கவிர்ப்பூ நெற்றிச் சேவலிற் றணியும் அருமிளை யிருக்கை யதுவே மனைவியும் வேட்டச் சிறாஅர் சேட்புலம் படராது படுமடைக் கொண்ட குறுந்தா ளுடும்பின் 10 விழுக்கு நிணம் பெய்த தயிர்க்கண் விதவை யாணர் நல்லவை பாணரொ டொராங்கு வருவிருந் தயரும் விருப்பினள் கிழவனும் அருஞ்சமந் ததையத் தாக்கிப் பெருஞ்சமத் தண்ணல் யானை யணிந்த 15 பொன்செ யோடைப் பெரும்பரி சிலனே. திணை: வாகை. துறை: மூதின் முல்லை. தங்காற் பொற்கொல்லனார் பாடியது. உரை : ஊர் முதுவேலி பார்நடை வெருகின் இருட்பகை வெரீஇய நாகு இளம் பேடை - ஊரிலுள்ள பழையதாகிய வேலியடியில் தங்கும் மெத்தென்ற நடையையுடைய காட்டுப் பூனையாகிய இருளில் வந்து வருத்தும் பகைக்கு அஞ்சிய மிக்க இளமை பொருந்திய பெட்டைக்கோழி;- உயிர் நடுக்குற்று புலா விட்டரற்ற - உயிர்ப்பும் நடுக்கமும் கொண்டு தொண்டைத் தசையைத் திறந்து கூவி; சிறையும் செற்றையும் படையுநள் எழுந்த - பக்கங்களையும் குப்பைகளையும் புடைத்து நீக்குவாளாய் எழுந்திருந்த; பருத்திப் பெண்டின் சிறு தீ விளக்கத்து - பருத்தி நூற்கும் பெண்டினுடைய சிறிய விளக்கொளியில்; கவிர்ப்பூ நெற்றிச் சேவலின் தணியும் - முருக்கம்பூவை யொத்த கொண்டையையுடைய சேவற் கோழியைக் கண்டு அச்சம் தணியும்; அருமிளை இருக்கையது - கடத்தற்கரிய காவற்காடு சூழ்ந்த இடத்தின்கண்ணது; மனைவியும் - மனையிலுள்ள மனைக்கிழத்தியும், வேட்டச் சிறார் - வேட்டுவருடைய சிறுவர்கள்; செண்புலம் படராது - நெடுந்தொலைவு செல்லாமல்; படுமடைக் கொண்ட குறுந்தாள் உடும்பின் - மடுக்கரையில் பிடித்துக் கொண்டு வந்த குறுகிய காலையுடைய உடும்பினது; விழுக்கு நிணம் பெய்த தயிர்க்கண் விதவை - விழுக்காகிய தசையைப் பெய்து சமைக்கப்பட்ட தயிரோடு கூடிய கூழையும்; யாணர் நல்லவை - புதியவாக வந்த வேறு நல்ல உணவுப் பொருளையும், பாணரொடு வருவிருந்து ஒராங்கு அயரும் விருப்பினள் - பாணருக்கும் அவரொடு வந்த ஏனை விருந்தினர்க்கும் ஒரு சேரக் கொடுத்து உண்பிக்கும் விருப்பமுடையளாயுள்ளாள்; கிழவனும் - அவள் கணவனும், அருஞ்சமம் ததையத் தாக்கி - கடத்தற்கரிய போர் கெடும்படியாகத் தாக்கி; பெருஞ்சமத்து அண்ணல் யானை அணிந்த - பெரும்போரில் தலைமையை யுடைய யானைகள் அணிந்த பொன் செய் ஓடைப் பெரும் பரிசிலன் - பொன்னாற் செய்யப் பட்ட பட்ட முதலியவற்றைப் பெரிய பரிசிலாக வழங்குபவனா யுள்ளான்; எ-று. ஊர் இருக்கையது, மனைவியும் விருப்பினள், கிழவனும் பரிசிலன் எனக்கூட்டிவினைமுடிவு செய்க. பார் நடை, பழகிய நடை தனக்குரிய இரையைக் கவர்தற் பொருட்டு மெத்தென்ற நடை பயின்றதாகலின் வெருகின்நடையை, “பார்நடை” யென்றார். வெருகு இருளிற் போந்து தீங்கு செய்வதுபற்றி “வெருகாகிய இருட் பகை” யெனப்பட்டது. புலா விட்டரற்றுவதாவது, தொண்டைத் தசை இறுகவிடாது திறந்து கூவுவது. பருத்தியைக் கொட்டை நீக்கித் தூய்மை செய்யுமிடத்து மனையின் சுவரோரங்களிலும் சுவரிலும் தரையிலும் பஞ்சியின் துய் பரந்து கிடப்பதனை இருந்தபடியே கொட்டை நூற்ற பருத்திப் பெண்டு எழுந்து நின்று புடைத்து நீக்குமாறு தோன்றப் “புடைநள்” என்றார். சிறையைப் பஞ்சியின் புறத்தோலாகவும் கொட்டையும் தூசியும் செற்றை யாகவும் கொண்டு இவற்றைப் புடைத்து நீக்குவது தோன்றப் புடையுநளென்றாரென்றுமாம். படு, மடு, மடுக்கரைகளிலும் வயல் திடர்களிலும் வளைசெய்து வாழ்வது உடும்பு; அதனை அவ்விடங்களிலே வேட்டை யாடிக்கொள்ள வேண்டுதலின், “படுமடைக் கொண்ட உடும்பு” என்றார். விளக்கம் : மூதின் முல்லையாவது, “அடல்வே லாடவர்க் கன்றியும் அவ்வில், மடவரன் மகளிர்க்கு மறமிகுத்தன்று” (பு.வெ.மா. 8:21) என வரும். மறக்குடி மகளொருத்தியின் மறமாண்பு கூறலுற்ற இவ்வாசிரியர், அவளுடைய ஊரமைதியும், அவளுடைய செயன் மாண்பும், அவள் கணவனது மறமாண்பும் அழகுறக் கூறியிருப்பது, தென்பாண்டி நாட்டு விருதுநகர்ப் பகுதிக்குச் சென்று காண்பார்க்குப் பெருவியப்புத் தருவதாம். இந்நாளிலும் அப்பகுதி பருத்தி விளைவுக்குச் சீர்த்த இடமாக இருப்பது குறிக்கத்தக்கது. வெருகின் இருட்பகை வெரு காகிய இருட்பகை; இன்: அல்வழிக்கண் வந்தது. பார் நடை, பார்த்து மெல்ல நடக்கும் நடை யென்றுரைத்தலுமுண்டு. பெடைக்கோழி இருள்வரக் கண்டு, இதன்கண் வெருகு போந்து தன்னை வருத்து மென்றஞ்சி அரற்றும் எனவும், அக்காலை, பருத்திப் பெண்டின் சிறுதீ விளக்கால் இருள் நீங்குதலின் அப்பெடை அவ்விளக்கொளியில் தன்னருகே தன் காதற் சேவல் இருப்பதறிந்து அச்சந் தணியு மெனவும் ஊரின் இயல்பு கூறினார். இஃது ஊரின் இயல்பு கூறிற்றாயினும், நாட்டு மகளிரது பண்பும் உள்ளுறுத்துரைத்ததாகவும் கொள்ளக் கிடக்கின்றது. மகளிர், பகை தோன்றியவிடத்து பகைவர் வரவு நினைந்து ஓலமிடுவரெனவும் இடைநின்று பகையை விலக்கும் மறவர் வென்றியெய்தக்கண்டும், அவ்வென்றி மறவரிடையே தம் காதற் கணவன் இருப்பது கண்டும் உவகை மிகுகின்றனரெனவும் கொள்ளப்படும். இது மகளிர்க்குரிய பொதுப் பண்பாகலின் வெளிப் படையாகக் கூறப்படாதாயிற்று. விருந்தோம்பும் நன்மாண்பு வெள்ப்படக் கூறப்பட்டது. சேவற்கோழியின் கொண்டையும் கழுத்துமயிரும் கவிரின் பூப்போலுமென்பதை, “மனையுறை கோழி மறனுடைச் சேவற், போர்புரி யெருத்தம் போலக் கஞலிய, பொங்கழன் முருக்கி னொண்குரல்” (அகம். 277) எனச் சான்றோர் கூறுவது காண்க. 327. மூதின் முல்லை இப்பாட்டைப் பாடிய ஆசிரியர் பெயர் தெரிந்திலது. மூதின்முல்லையாவது “அடல்வே லாடவர்க் கன்றியு மவ்வில், மடவரல் மகளிர்க்குமற மிகுத்தன்று” எனப் புறப்பொருள் வெண்பாமாலை கூறும். சீறூர்த் தலைவன் ஒருவன் சிலவாய் விளைந்த வரகையறுத்துக் காலால் மிதித்துக் கொண்டதைக் கடன்காரர்க்குக் கொடுத்து எஞ்சியதைப் பசித்துவந்த பாணருக்கு அளித்தான்; அவரும் உண்டு நீங்கினாராக, பின்வந்த சுற்றத் தாருடைய வறுமையைத் தீர்த்தல் வேண்டிப் பிறரிடம் வரகு கடன் பெறுவானாயினான். இவ்வாறு வறுமை களையும் செயலில் வெற்றி மேம்படும் இத் தலைமகன், பேரரசர் பொர வரினும், அவர் படையை எதிர் நின்று தாங்கி வெல்லும் வீறுடையனாவான் என்று அவனது மற மிகுதியை இப் பாட்டு எடுத்துக் கூறுகிறது. எருதுகா லுறாஅ திளைஞர் கொன்ற சில்விளை வரகின் புல்லென் குப்பை தொடுத்த கடவர்க்குக் கொடுத்த மிச்சில் பசித்த பாண ருண்டுகடை தப்பலின் 5 ஒக்க லொற்கஞ் சொலியத் தன்னூர்ச் சிறுபுல் லாளர் முகத்தளவ கூறி வரகுகட னிரக்கு நெடுந்தகை அரசுவரிற் றாங்கும் வல்லா ளன்னே திணை: வாகை. துறை: மூதின் முல்லை............. உரை : எருது கால் உறாது - எருதுகளைப் பிணித்து அவற்றின் காற் கீழ்ப் பெய்து கடாவிடுதலின்றி; இளைஞர் கொன்ற சில்விளைவரகின் புல்லென் குப்பை - இளையர்கள் காலால் மிதித் தெடுத்த சிலவாக விளைந்த புல்லிய குவியலில்; தொடுத்த கடவர்க்குக் கொடுத்த மிச்சில் - வளைத்துக்கொண்ட கடன் காரருக்குக் கொடுத்ததுபோக எஞ்சியதை; பசித்த பாணர் உண்டு கடை தப்பலின் - பசித்து வந்த பாணர் உண்டு வெளி யேகினாராகப் புறங்கடை வறிதாகலின்; ஒக்கல் ஒற்கம் சொலிய- வறுமையுற்று வந்த சுற்றத்தாருடைய வறுமையைக் களைய வேண்டி; தன்னூர்ச் சிறு புல்லாளர் முகத்து அளவ கூறி - தன்னூரில் வாழும் சிறிய புல்லாளர் முன்னே தனக்கு வேண்டு மளவைச் சொல்லி; வரகு கடன் இரக்கும் - வரகினைக் கடனாகக் கேட்டுப் பெறும்; நெடுந்தகை நெடிய புகழுடைய தலைவன்; அரசுவரின் தாங்கும் வல்லாளன் - பெருவேந்தர் போர் குறித்து வருவாராயின் அவரது நெடும்படையைத் தாங்கி வெல்லும் வல்லாண்மையால் வீறுடையனாவன்; எ-று. மிக விளைந்த வரகையே எருது கொண்டு கடாவிட்டு மிதித்தெடுப்ப தமையுமாகலின், சிலவாய் விளைந்தமைபற்றி இளைஞர் காலால் மிதித்துக் கொள்வாராயினரென வறிக. ஒக்கல் ஒற்கம் களைவது இல்வாழ்வானுக்கு இன்றியமையாக் கடனாதலால், “ஒக்கல் ஒற்கம் சொலிய” என்றார். சிறு புல்லாளர், தமது உடைமை சிறிதாயினும் பெரிதுபோலக் காட்டும் புல்லியோர். அவர்பால் கடன் இரத்தல் குற்றமாயினும் ஒக்கற் குதவல் வேண்டிச் செய்தலில் எடுத்தோதினார். அளவ கூறுதலாவது இத் துணையள வாகிய வரகு தருக என அறுதியிட்டுக் கேட்பது. பொருட் குறையுடையனாயினும் போர்வரின் பெருவேந்தரையும் வெல்லும் பேராண்மையுடையனென்பதாம். உண்டவென என்பது உண்டென நின்றது. விளக்கம் : எருது கால் உறாது இளைஞர் கொன்ற எனவே, இளைஞர் காலான் மிதித்துக் கொள்ளப்பட்டது வரகென்றவாறாயிற்று. வளம்பட விளையாது சிலவாய் விளைந்தமையின் வரகின் தொகுதி புல்லெனத் தோன்றுதலின். “புல்லென் குப்பை” யென்றார். வரகு விளைத்தற்கு முன் அதனைக் கடன் கொடுத்தவர், விளைந்துவரக் கண்டதும் பெற வருதலின், அக்கடன் காரரை, “தொடுத்த கடவர்” என்றார். அவர்க்குத் திரும்பக் கொடுக்க வேண்டியவளவும் கொடுத்தபின் எஞ்சி நிற்கும் வரகைத் தன்பால் பசித்துவரும் பாணர்க்குக் கொடுத் தலால், ஏனைத் தன்னைச் சுற்றி வாழும் சுற்றத்தார்க்கு உதவுவான் வரகின்மை கண்டு, அவர் தன் மனைக்கடையில் வாராதொழிவரென்றஞ்சிப் பிறர் பாற் கடன் பெறுவானாயினன் என்றார். ஒக்கல் வாராத புறங்கடை குற்றமுடைத்தென்பதுபற்றிக் “கடைதப்பலின்” என்பது கூறப் பட்டது. ஒற்கம், வறுமை, சிறுபுல்லாள ரென்றதற்கு மனஞ் சிறியராகிய புல்லிய தானாண்மையுடையோர் என்று உரைப்பினுமமையும் முகத்தவை கூறி யென்று பாடங்கொண்டு புல்லாளர் முன்னின்று உள்ளது கூறி என்றலுமொன்று. வாகைத் திணைத் துறைகளுள் “புல்லா வாழ்க்கை வல்லாண் பக்கம்” (தொல். புறத். 17) என்பதற்கு இளம்பூரணர் இதனை எடுத்துக் காட்டுவர். 328. மூதின் முல்லை இப்பாட்டைப் பாடிய ஆசிரியர் பெயரும் தெரிந்திலது. இப்பாட்டு இடையிடையே சிதைந்துள்ளது இதனால் இப் பாட்டுக்குரிய திணையும் துறையும் அமையும் திறத்தை ஆராய்வதும் இயலாதாகின்றது. . . . . புல்லெ னடைமுதற் புறவுசேர்ந் திருந்த புன்புலச் சீறூர் நெல்விளை யாதே வரகுந் தினையு முள்ளவை யெல்லாம் இரவன் மாக்களுக் கீயத் தொலைந்தன 5 . . . . . . . . . . . டமைந் தனனே அன்ன னாயினும் பாண நன்றும் வள்ளத் திடும்பா லுள்ளுறை தொடரியொடு . . . களவுப் புளியன்ன விளைகள். . . . . . . . . . . . . . . . . . . . . . வாடூன் கொழுங்குறை 10 கொய்குர லரிசியோடு நெய்பெய் தட்டுத் துடுப்பொடு சிவணிய களிக்கொள் வெண்சோ றுண்டினி திருந்த பின்றை. . . . . . . . . . . . . . . . . . . . . . தருகுவண் மாதோ தாளிமுத னீடிய சிறுநறு முஞ்ஞை 15 முயல்வந்து கறிக்கு முன்றிற் சீறூர் மன்னனைப் பாடினை செலினே. திணை: வாகை. துறை: மூதின் முல்லை. உரை : .........புல்லென் அடைமுதல் புறவு சேர்ந்திருந்த - புல்லென்ற தழையும் அடிமரமுமுடைய காடாகிய முல்லை நிலத்தைச் சேர்ந்துள்ள, புன்புலச் சீறூர் - புன்செய்க் கொல்லைகளை யுடைய சீறூர்களில்; நெல் விளையாது - நெற்பயிரும் விளையாது; வரகும் தினையும் உள்ளவை யெல்லாம் - விளைவனவாகிய வரகும் தினையுமென உள்ளவை யெல்லாம் இரவல் மாக்களுக்கு ஈயத் தொலைந்தன - இரவலர்க்குக் கொடுத்ததனால் குறைந்து போயின; ...........அமைந்தனன் - பொருந்தினான்; அன்னனாயினும் -அத்தன்மையுடையனாயினும்; பாண - பாணனே; வள்ளத்திடும் பால் உள்ளுறை தொடரியொடு - வள்ளத்திற் பெய்து உண்ணப் படும் பாலினது உள்ளே உறைந்த தயிரும் தொடரிப் பழமும்; களவுப் புளியன்ன விளைகள் - களாப் பழத்தின் புளிப்புப் போலப் புளிப்பேறிய கள்ளும்...................வாடூன் கொழுங் குறை - வெந்து வாடிய தசையாகிய கொழுவிய துண்டங்களை, கொய் குரல் அரிசியொடு - நெய் பெய்தட்டு கொய்யப்பட்ட கதிரிடத்துப் பெற்ற அரிசியுடனே நெய் கலந்து சமைத்து; துடுப்பொடு சிவணிய களிக்கொள் வேண் சோறு - துடுப்பால் துழாவப்பட்ட களிப்பைத் தன்பால் கொண்ட வெள்ளிய சோற்றை; உண்டு இனிதிருந்தபின் - பசி தீரவுண்டு இனிதிருந்த பின்னர்; .....................தருகுவன் - கொடுப்பான்; தாளி முதல்நீடிய சிறு நறு முஞ்ஞை - தாளி மரத்தின் அடியில் நீளப் படர்ந் திருக்கும் சிறிய நறிய முன்னைக் கொடியை; முயல் வந்து கறிக்கும் முன்றில் - குறு முயல்கள் வந்து மேயும் முற்றத்தை யுடைய; சீறூர் மன்னனைப் பாடினை செலின் - சிறிய வூர்களை யுடைய வேந்தனைப் பாடிச் செல்வாயாயின்; எறு. புன்புலச் சீறூரெனவே நெல்விளையாமை பெறப்படு மாயினும் “நெல் விளையா” தென்றது, வரகும் தினையும் மிக விளையுமென்பதை வற்புறுத்தற்கு, நெல் விளையும் நாட்டை யுடைய பெருவேந்தன்பாற் காணப்படாத கொடைநலம் சீறூர் மன்னன்பால் உண்மையுணர்த்தி நின்றது. ஊன் துண்டங் களைச் சோற்றிற் கலந் தடுதல் பண்டையோர் மரபு. தாளி, ஒருவகைப் பனைமரம் “தாளித் தண்பவர்” (குறுந். 104) என்றலின் ஒரு வகைக் கொடியுமாம். பாண, சீறூர், நெல் விளையாது; எல்லாம் ஈயத்தொலைந்தன; அமைந்தனன்; அன்னனாயினும் பாடினை செலின் தருகுவன் எனக் கூட்டி வினைமுடிவு செய்க. விளக்கம் : திணையும் துறையு மவை யென்றதன்பின் “பங்கு......” என ஏட்டிற் காணப்படுகிறது. கிடைத்த ஏட்டில் சில சொற்களும் எழுத்துக் களுமே கிடைத்தன. நெல் விளையாதாயினும் வரகுந் தினையும் விளையும்; அவையும் இரவலர்க்கீயப்பட்டன என்றான்; எனவே, சீறூர் மன்னனுடைய ஓம்பா ஈகை யுரைக்கப்பட்டதாம். வெள்ளத் திடும்பால் என்று பாடமாயின், வெள்ளம் போற் சொரியப்படும் பால் என்றுரைக்க. தொடரி, ஒருவகைப் பழமரம். கொங்கு வேளிர் இதனைக் “கொடுமுள் தொடரி” (பெருங். 1:52 - 38) என்பதனால். இதற்கு வளைந்த முள்ளுண்டெனத் தெரிகிறது. முஞ்ஞை முன்னைக் கொடி இப் பாட்டு மிகச் சிதைந்திருத்தலால் வேறே விளக்கம் காண இயலவில்லை. 329. மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார். மதுரை நகரத்தவரான இளவேட்டனார் அறுவை வாணிகம் செய்தவராதலால் மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார் எனப் படுவாராயினர். இவர் அகப்பொருள்நெறியில் பல திணைகளையும் இனிமையுறப் பாடும் நல்லிசை வாய்ந்தவர். களவின்கண் ஒழுகும் தலை மகன் ஒருவன் ஒருகால் தலைவியின் நெடுமனைக்கு வத்தானாக, அவனைக் கண்ட தலைவியின் நற்றாய் முருகன் எனப் பிறழவுணர்ந்து அவனை வழிபட்டனள். அதனால் வியப்புமிக்க தலைமகள், “முருகென, வுணர்ந்து முகமன் கூறி, உருவச் செந்தினை நீரோடு தூஉய், நெடுவேள் பரவும் அன்னை” யெனத் தன் தோழியொடு சொல்லாடுவதும், புனங்காவல் புரியுமிடத்து அவள் தலைவனோடு கூடி அருவி யாடுதலும் சோலையில் விளையாட்டயர்தலும், தலைமகள் விளையாடுங் கால் சென்ற தலைவன் அவளைக் கண்டு “விளையாட்டாயமொடு வெண்மணலுதிர்த்த, புன்னை நுண்டாது பொன்னி னொண்டு, மனைபுறந் தருதி யாயின் எனையதூஉம், இம்மனைக் கிழமை யெம்மொடு புணரின், தீதுமுண்டோ மாதராய்” எனச் சொல்லி நட்புக் கொள்வதும் பிறவும் மிக்க இன்பந் தருவன வாகும். காந்தட்பூ பாம்பு படம் சுருக்கியது போல வீழும் என்பதை, “பாம்பு பையவிந்தது போலக் கூம்பிக், கொண்டலின் தொலைந்த ஒண்செய் காந்தள், கல்மிசைக் கவியும்” (குறுந். 185) என்பதும், இல்லிருந்து நல்லறம் புரியும் தலைமகளை “விருந்து விருப்புறூஉம் பெருந்தோட் குறுமகள்” (நற். 221) என்பதும் பிறவும் இவரது புலமை நலத்தைச் சிறப்பிப்பனவாகும். இவர் பாடியனவாகப் பல பாட்டுக்கள் தொகை நூல்களுள் உள்ளன. ஒருகால் இவர் பேராண்மை மிக்க தலைவன் ஒருவனது சிற்றூருக்குச் சென்றார். அவ்வூரில் உறையும் மறக்குடி மகளிர் நடுகல்லுக்கு நீராட்டி வழிபடுவது கண்டார். அத்தலைமகனும் புரவலராகிய செல்வர்க்குண்டான இடுக்கணைப் பெரிதும் நினையாது இன்மையால் இரந்துண்டு வாழும் இரவலர் இடுக்கண் தீர்ப்பதே சிறந்த செயலாகக் கருதியிருப்பதையும், பாம்புறையும் புற்றுப் போல அவ்வூர் பகைவர் நெருங்குதற்கஞ்சும் அச்சம் பயந்து விளங்குவதையும் கண்டார். இக் காட்சி இளவேட்டனார்க்குப் பெரு மகிழ்ச்சியைத் தந்தது. அதன் விளைவாக இப் பாட்டினைப் பாடியுள்ளார். இல்லடு கள்ளின் சில்குடிச் சீறூர்ப் புடைநடு கல்லி னாட்பலி யூட்டி நன்னீ ராட்டி நெய்ந்நறைக் கொளீஇய மங்குன் மாப்புகை மறுகுடன் கமழும் 5 அருமுனை யிருக்கைத் தாயினும் வரிமிடற் றரவுறை புற்றத் தற்றே நாளும் புரவலர் புன்க ணோக்கா திரவலர்க் கருகா தீயும் வண்மை உரைசா னெடுந்தகை யோம்பு மூரே. திணை: வாகை. துறை: மூதின் முல்லை. மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார் பாடியது. உரை : இல்லடு கள்ளின் சில்குடிச் சீறூர் - இல்லங்களில் அடப்படும் கள்ளினையுடைய சிலவாகிய குடிகள் வாழும் சீறூர்; புடை நடு கல்லின் - பக்கத்தே நடப்பட்ட நடுகல்லுக்கு; நாட்பலி யூட்டி - விடியற் காலத்தும் பலியைப் படைத்து; நன்னீராட்டி - நல்ல நீரையாட்டி; நெய் நறை கொளீஇய - நெய் விளக்கேற்று தலாலுண்டாகிய; மங்குல் மாப்புகை மறுகுடன் கமழும் - மேகம் போலும் புகையெழுந்து தெருவில் மணக்கும்; அரு முனை இருக்கைத்தாயினும் - அரிய முதன்மையான இடத்தை யுடையதாயினும்; வரிமிடற்று அரவுறை புற்றத்து அற்று - வரி பொருந்திய கழுத்தையுடைய பாம்பு தங்கும் புற்றையொக்கும்; நாளும் - நாடொறும்; புரவலர் புன்கண் நோக்காது - வேந்த ராகிய செல்வர்கட் குண்டான துன்பத்தைப் பாராமல், இரவலர்க்கு அருகாது ஈயும் வண்மை - இரவலரது வறுமைத் துன்பத்தைப் பார்த்து அவர்கட்கு அது நீங்கக் குறைவறக் கொடுக்கும் வள்ளன்மையையும்; உரைசால் நெடுந்தகை புகழமைந்த - நெடிய தகைமையையுமுடைய தலைவன்; ஓம்பும் ஊர் - பாதுகாக்கும் ஊர்; எ-று. ஊர் புற்றத் தற்று எனக் கூட்டி வினைமுடிவு செய்க. ஆற்றிடைக் குறையினும் கவர்ந்த வழியிடையிலும் நடப்பெறும் கல் சீறூர்களின் பக்கத்திலும் நடப்பெறுதலின், “சீறூர்ப்புடை நடுகல்” என்றும், புகை மேகம் போல் தெருவெங்கும் பரவிய தென்பார், “மறுகுடன் கமழ” வென்றும் கூறினார். முனை, பகைவர் வந்து தாக்குதற்குரிய முதன்மை பெற்ற இடம்; அது பகைவர் கொள்ளற்கரிய காவலுடைத்தாகிய வழி அரு முனையாம்; அவ்விடத்தே யுள்ள ஊர் என்பார், “அரு முனை இருக்கைத்து” என்றார். நெடுந்தகையின் ஆண்மை யொளியை விளக்குதற்கு, “அரவுறைபுற்றத்தற்று” என்றார். புரவலர்க் குண்டாகும் துன்பம் தன்னாண்மையால் நீங்குமாதலின், அதனை ஒரு பொருளாக நோக்காது, இரவலர் இன்மை தீர்ப்பதையே பெரிதும் நோக்கினான் என்பார், “இரவலர்க் கருகாது ஈயும் வண்மை நெடுந்தகை” யென்றும், அதனால் புகழ் உண்டாதலின், “உரைசால் நெடுந்தகை” யென்றும் கூறினார். புரவலர்பாலுள்ள செல்வத்தைக் கொணர்ந்து இரவலர்க்கு இன்மைதீர வழங்குபவனாதலால், புரவலர் புன்கண் நோக்கானாயினா னென்றலு மொன்று. விளக்கம் : சீறூர்க்கண் சில குடிகளேயுள்ளன வாயினும் அவரனைவரும் மறக்குடியிற் றோன்றிய மாண்புடைய ரென்றற்கு, நடுகல்லைப் பரவி நாட்பலியூட்டும் நற்செயலை விதந்தோதினார். நடுகல்லைப் பரவுவது, தாமும் நடுகல்லில் நின்ற தம் முன்னோரைப்போல மறத்துறையில் மாண்புகழெய்தும் மனமுடையராதலை விளக்கிநின்றது. நறை, தூபம், இத்தகைய மறவர் உறைவிடம் பகைவர் அணுகுதற்கரிய தென்பது தோன்ற, “அருமுனை இருக்கைத்து” என்றும், பாம்புறையும் புற்றுப் போலப் பகைவர். நெஞ்சில் அச்சத்தை விளைவிக்கும் ஒளியுடைய தென்றும் கூறினாராம். போர்வல்ல இளையரைப் பாம்பாகக் கூறுவது மரபு. “ஒள்வாள் புனிற்றான்றரவின் இளையர்” (அகம். 179) என்பது காண்க. புரவலர் புன்கண், புரவலருக்கு அவர் பகைவரால் விளையும் பகை. அதனை ஒரு பொருளாகக் கருதாமை தோன்ற, ‘புன்கண்’ என்றும் அதனைத் தன்னாண்மையால் மிக எளிதில் மாற்றவல்லவனாகலின், “நோக்காது” என்றும், இரவலர்க்குண்டாகும் புன்கணைப் பெரிதாகக் கருதி அஃது அற நீங்குதற்கேற்பக் குறைவற நல்கும் வண்மையுடையன் என்றும் கூறினார். வண்மையால் உறையும், புரவலர் புன்கண் நோக்காத வல்லாண்மையால் நெடுந்தகைமையும் சீறூர்த் தலைவற்குரிய வாயின. கல்நட்டுக் கால் கொண்டதற்கு இதனைக் காட்டுவர் நச்சினார்க்கினியர் (தொல். புறத். 5) 330. மதுரைக் கணக்காயனார். நல்லிசைச் சான்றோருள் மிகச்சிறப்புற்று விளங்கிய நக்கீரனார்க்குத் தந்தையார் இந்த மதுரைக் கணக்காயனார். இவர் பாண்டிவேந்தன் பால் பேரன்புடையவர். அவனைப் பசும்பூண் பாண்டியன் என்று கூறுவர். இப் பாண்டியன் “அறங் கடைப் பிடித்த செங்கோலுடன் அமர், மறஞ்சாய்த்தெழுந்த வலுனுயர் திணிதோள், பலர்புகழ் திருவின் பசும்பூண் பாண்டியன்” என்று பாராட்டுக் கூறப்படுகின்றான். இவர் இவ்வாறே சேரனை “ஒன்னார் தேஎம் பாழ்பட நூறும், துன்னருந் துப்பின் வென்வேற்பொறையன்” என்றும், சோழனை, “பொறாஅர்; விண்பொரக் கழிந்த திண்பிடி யொள்வாள், புனிற்றான் றரவின் இளையர் பெருமகன் தொகு போர்ச் சோழன்” என்றும் சிறப்பிப்பர். பாண்டியர் பாலுள்ள யானைகள் பலவும் வடவேங்கடத்திற் பிறந்தவை யென்றும், கொற்கைப் பெருந்துறைக்கண் முத்துக் குளிக்கப்பெறுமென்றும் இவர் தம் பாடல்களிற் குறித்துள்ளார். இவர்பாடியனவாகப் பல பாட்டுக்கள் தொகை நூல்களுள் உள்ளன. இப்புறப்பாட்டின்கண், சீறூரையுடைய தலைவன் ஒருவனை வியந்து அவன் வழிவழியாகக் கொடைப்புகழ் பெற்ற குடியிற் பிறந்தவனென்றும், தன் படையை யழித்து மேல்வரும் பகைவர் படையைக் கடலைத் தாங்கி நிற்கும் கரைபோல் தாங்கி நிற்கும் கட்டாண்மையுடையனென்றும் அழகுறப்பாடியுள்ளார். அவன் பெயர் தெரிந்திலது. வேந்துடைத் தானை முனைகெட நெரிதர ஏந்துவாள் வலத்த னொருவ னாகித் தன்னிறந்து வாராமை விலக்கலிற் பெருங்கடற் காழி யனையன் மாதோ வென்றும் 5 பாடிச் சென்றோர்க் கன்றியும் வாரிப் புரவிற் காற்றாச் சீறூர்த் தொன்மை சுட்டிய வண்மை யோனே. திணை: வாகை. துறை: மூதின் முல்லை. மதுரைக் கணக்காயனார் பாடியது. உரை : வேந்துடைத்தானை முனை கெட நெரிதர - தன் வேந்த னுடைய படைப் பகுதியின் முன்னணியானது கெட்டழியு மாறு பகைப்படை நெருக்கி யடர்த்தலால்; ஏந்து வாள் வலத்தன் ஒருவனாகி - உயர்ந்த வாளை வலக்கையில் தாங்கிப் பொருவோன் தான் ஒருவனேயாய் நின்று; தன் இறந்து வாராமை விலக்கலின் - நேர்வரும் அப் பகைவரது பெரும்படை தன்னைக் கடந்து மேலே செல்லாதபடி இடைநின்று தாக்கித் தடுக்குமாற்றால்; பெருங்கடற்கு ஆழி யனையன் - பெரிய கடலைத் தடுத்துத் தாங்கிநிற்கும் கரையை யொத்திருக்கின் றான்; என்றும் பாடிச் சென்றோர்க் கன்றியும் - எப்போதும் தன்னைப் பாடிச் சென்ற பரிசிலர்க்கேயன்றி; புரவிற்கு ஆற்றா வாரிச் சீறூர் - புரவுவரி செலுத்துதற்கும் ஆற்றாத வருவாயை யுடைய சீறூரில் வாழும்; தொன்மை சுட்டிய வண்மையோன் - வழி வழியாக வரும் வண்மைக் குணமும் உடையவன்; எ-று. வேந்தனுடைய முன்னணிப்படை நிற்றலாற்றாது கெடும் படி பகைவரது பெரும்படை அடர்த்து வருவது தோன்ற “பெருங்கடற் காழி யனைய” னென்றதனால் பகைவர் தானை கடல்போற் பெருகிவந்தவாறாயிற்று. வாரிச் சீறூர் எனக் கூட்டுக. புரவென்றது, புரவுவரியை, கொடையும் பிறவிக் குணமாகலின், “தொன்மை சுட்டிய வண்மை” என்றார். விளக்கம் : வேந்தன் பொருட்டுப் போர்க்குச் சென்றவன் தானைத் தலைவனாய் நின்று பொருமிடத்து, பகைவர் பெரும் படையொடு போந்து தன் முன்னணிப்படை நில்லாது கெட்டழிந்தோட நெருங்கியடர்க்கக் கண்டான்; கண்டவன் வேறே துணை வேண்டாது தான் ஏந்திய வாளே துணையாக நின்று. பகைவரது கடல்போலும் பெரும்படை தன்னைக் கடந்து மேற்செல்லாவண்ணம் பொருது தடுத்து மேம்பட்டான்; இதனைச் சுருங்க வுரைக்கலுற்ற ஆசிரியர், “ஒருவனாகித் தன்னிறந்து வாராமை விலக்கலின், பெருங்கடற்கு ஆழியனையன் மாதோ” என்று பாராட்டினார். ஆழி, கரை, பாடிச்சென்றோர்க் கன்றியும் பெருங்கடற்கு ஆழியனையன் என இயையும் பாடிச் சென்றோர் கொளக் கொளக் குறையா வண்மையோனாதலின் ஆழியனையன் என்றாரென்க. பாடிச் சென்ற பரிசிலர்க்கேயன்றி, தான் உறையும் சீறூரில் உள்ள தன் சுற்றத்தார்க்கும் அவன் வருவாயாகவுள்ளான் என்றுமாம். வாரி புரவிற் காற்றாச் சீWர் எனவே கொண்டு, வருவாயால் இறையிலியாய் விடுதற்கும் ஆற்றாத சிறியவூர் என வுரைப்பினுமமையும். வருவிசைப் புனலைக் கற்சிறை போல, ஒருவன் தாங்கிய பெருமை” (தொல். புறத். 8) என்பதற்கு இதனை யெடுத்துக் காட்டுவர் நச்சினார்க்கினியர். 331. உறையூர் முதுகூத்தனார் இச் சான்றோர் பெயர் சில ஏடுகளில் முதுகூற்றாரெனவும், உறையூர் முதுகூற்றனாரெனவும் மூதுகூத்தனாரெனவும் காணப் படுகிறது. இவர் வீரைவேண்மான் வெளியன் தித்தன் என்பானைப் புகழ்ந்து பாடுகின்றார். உறையூரில் நடைபெற்ற பங்குனி விழாவை, “விறற்போர்ச் சோழர், இன்கடுங்கள்ளின் உறந்தை யாங்கண், வருபுனல் நெரிதரு மிகுகரைப் பெரியாற்று, உருவ வெண்மணன் முருகுநாறு தண்பொழிற், பங்குனி முயக்கம்” (அகம். 137) என்று சிறப்பித்துப் பாடியுள்ளார். இப் பங்குனி விழாக் காலத்தில் திருவரங்கத்துப் பெருமாளை உறையூர்க்குக் கொண்டு சிறப்புச் செய்வதுண்டென ஸ்ரீரங்கத்துக் கோயில் கல்வெட்டுக்கள் (A.R. No. 16 of 1936 - 7) கூறுகின்றன. இவர் பாடியனவாகச் சில பாட்டுக்கள் தொகை நூல்களில் உள்ளன. இப் பாட்டின்கண், சீறூர்த் தலைவன் ஒருவனுடைய இல்லாண்மையைச் சிறப்பித்துக் கூறியுள்ளார். இவன் நல்குரவு உண்டாகுமாயின், அக் காலையில் தன்பால் இல்லாதவற்றை விரையப் படைத்துக் கொள்ளும் வன்மைமிக்கவன், தன்பால் உள்ளது சிறிதாயினும் வருவோர் வரிசையறிந்து வழங்கும் வண்மையுடையன்; பொருள் மிகவுளதாகிய விடத்துப் பலர்க்கும் வரையாது வழங்குவான் என்று அவன் ஈகை நலத்தை எடுத்தோது கின்றார். கல்லறுத் தியற்றிய வல்லுவர்க் கூவல் வில்லேர் வாழ்க்கைச் சீறூர் மதவலி நனிநல் கூர்ந்தன னாயினும் பனிமிகப் புல்லென் மாலைச் சிறுதீ ஞெலியும் 5 கல்லா விடையன் போலக் குறிப்பின் இல்லது படைக்கவும் வல்ல னுள்ளது தவறிச் சிறிதாயினும் மிகப்பல ரென்னான் நீணெடும் பந்த ரூண்முறை யூட்டும் இற்பொலி மகடூஉப் போலச் சிற்சில 10 வரிசையி னளிக்கவும் வல்ல னுரிதினிற் காவன் மன்னர் கடைமுகத் துகுக்கும் போகுபலி வெண்சோறு போலத் தூவவும் வல்லனவன் றூவுங் காலே. திணை: வாகை. துறை: மூதின் முல்லை. உறையூர் முதுகூத்தனார் பாடியது. உரை : கல்லறுத்து இயற்றிய வல்லுவர்க் கூவல் - கல்லை யுடைத்துச் செய்த வலிய உவர் நீர் ஊறும் கிணறுகளையும்; வில்லேர் வாழ்க்கைச் சீறூர் மதவலி - வில்லைக்கொண்டு வேட்ட மாடி வாழும் வாழ்க்கையையு முடைய சீறூர்க்குரிய வனாகிய மிக்க வலியையுடைய தலைவன்; நனி நல்கூர்ந் தனனாயினும் - மிக்க வறுமையுற்றானாயினும்; பனி மிக - குளிர் மிகுதலால்; புல்லென் மாலை சிறுதீ ஞெலியும் கல்லா இடையன் போல - புல்லென்ற மாலைப்போதில் சிறிய தீக்கடை கோலைக் கடைந்து தீயுண்டாக்கும் கல்லாத இடையன் போல; குறிப்பின் இல்லது படைக்கவும் வல்லன் - மனையில் இல்லாததைக் குறிப்பாயறிந்து அதனை விரையப் படைத்துக் கொள்ளும் வல்லமையுடையன்; உள்ளது தவச்சிறிதாயினும் - தன்பால் உள்ளது மிகவும் சிறிதாக இருப்பினும், மிகப் பலர் என்னான் - பரிசிலர் மிகப் பலராக உள்ளனரே எனக் கருதி மயங்காமல்; நீள் நெடும் பந்தர் ஊண்முறை யூட்டும் இல் பொலி மகடூஉப்போல - நீண்ட நெடிய பந்தர்க் கீழ் இருத்தி உணவை முறைமுறையாகத் தந்து உண்பிக்கும் இல் வாழ்க்கை யில் சிறந்த மகளைப் போல; சிற்சில வரிசையின் அளிக்கவும் வல்லன் - சில சிலவாக அவரவர் வரிசை அறிந்து கொடுக்க வல்லவனாவான்; உரிதினின் - வரையாக் கொடைக்குரிய செல்வக்காலத்தில்; காவல் மன்னர் கடை முகத்தது உகக்கும் - நாடு காத்தலைச்செய்யும் வேந்தரது பெருமனையின் புறக்கடை யில் எறியப்படும்; போகுபலி வெண்சோறு போல - உயர்ந்த பலியாகி வெள்ளிய சோற்றைப்போல; தூவுங்கால் தூவவும் வல்லன் - பலரும் கொள்ளுமாறு தரக்கூடிய செல்வக் காலத் தில் யாவர்க்கும் வரையாது அள்ளி வழங்கவும் வல்லனா வான்; எ-று. இல்லாப் போழ்தினும், உள்ளது சிறிதாய போழ்தினும் உள்ளது மிகுதியான போழ்தினும் சீறூர்த் தலைவனது கொடை நலம் அமைந்தவாறு கூறியது. கற்பாறை நிறைந்த நிலத்தில் அப் பாறைகளையுடைத்து அரிது முயன்று தோண்டப்பட்ட விடத்தும் அதன் கண் ஊறும் நீரும் நன்னீராகாது உவர் நீராயொழிதலின் “கல்லறுத்தியற்றிய வல்லுவர்க் கூவல்” என்றார். இருள் மயங்கும் அந்திமாலை “புல்லென் மாலை” யெனப்பட்டது. ஒன்று இல்வழி அதன்பொருட்டு இரங்காது அதனை முயன்று படைத்துக் கொள்வது ஆண்மையுடையார்க் கமைதியாகலின், “இல்லது குறிப்பின் படைக்கவும் வல்லன்” என்றார். இல்லது குறிப்பின் என்றதற்கு இல்லாத தொன்றனை நல்குமாறு குறித்து இரந்தால் என்றுரைப்பினுமமையும் தன்பால் உள்ளது சிறிதாயின். அதனை இவறுதலின்றி யாவர்க்கும் அவரவர் வரிசைக்குத் தகமுறைப்படுத்தி வழங்குவதனால் கொள்வார்க்கு வருத்தம் பயவாமையின் “வரிசையின் அளிக்கவும் வல்லன்” என்றார். வரிசையறிதலின் அருமைபற்றி “வல்லன்” எனல் வேண்டிற்று. மன்னர் தம்முடைய மனை முன்றிலில் பெருஞ்சோறு சமைத்து நமர் பிறரென்று நோக்காது யாவர்க்கும் வாரி வழங்குவதைபோல இவனும் தன்பால் வருவார்க்கு அது தனக்குச் செல்வக் காலமாயின் அக்காலத்தே தன்னிடத்துள்ள மிக்க பொருளை வாரி வழங்குவன் என்பார், “தூவவும் வல்லனவன்; தூவுங்காலே” என்றார். மதவலி நல்கூர்ந்தனனாயினும் படைக்கவும் வல்லன்; சிறிதாயினும் அளிக்கவும் வல்லன்; உரிதினின் தூவவும் வல்லன்; எனக் கூட்டி வினைமுடிவு செய்க. செல்வக் காலம் கொடைக் கடன் இறுத்தற்கு உரிய காலமாகலின், அதனை ‘உரிது’ என்றார். விளக்கம் : சீறூர்த் தலைவனது ஊர்வளம் கூறலுற்று, அது நல்ல நீர்வள மில்லதென்றும், அதனால் அங்கு வாழ்பவர் வில்லேந்தி வேட்டம் புரிந்து வாழ்பவரென்றும் கூறினார். “களவேர் வாழ்க்கை” (பெரும்பாண், 40) என்றாற்போல “வில்லேர் வாழ்க்கை” யென்றார். பனிமிக்க வழி இடையன் தன்பால் உள்ள ஞெலிகோல் கொண்டு இல்லாத சிறுதீயைப் படைத்துக் கொள்வது போல தன்பால் இல்லாத பொருளை விரைந்தீட்டி வழங்கும் தாளாண்மை மிக்கவன் என்பார், “இல்லது படைக்கவும் வல்லன்” என்றார்; என்றது, இல்லதன் இன்மை கூறியமையான் என்றவாறாம். படைக்கும் பொருள் சிறிதாயினும், படைக்கும் திறனுடைய ஒருத்திபடைக்கலுறின், ஏற்போர் பலராயினும், அவரது பன்மையைமனங் கொள்ளாது யாவரும் ஏற்றமையுமாறு படைத்து மேம்படுமாறுபோல், சிற்சில வரிசையில் அளிக்கவும் வல்லன் என்றார். குடநீரட்டுண்ணு மிடுக்கட் பொழுதும், கடனீரற வுண்ணுங் கேளிர் வரினும் , கடனீர்மை கையாறாக் கொள்ளு மடமொழி, மாதர் மனைமாட்சி யாள்” (நாலடி. 382)என்று பிறரும் கூறுவது காண்க. மன்னர் மனைகளில், எக்காலத்தும் வருவோர் பலர்க்கும் வரையாது சோறு வழங்குவதுமரபு. இடைக்காலத்திலும் இவ்வாறு சோறளித்து வாழ்ந்த செல்வர் பலர் உண்டு. இதனைப் பலியூட்டு என்பது வழக்கம். அது சங்ககாலத்துச் செல்வர் மேற்கொண்டிருந்த பெருந்தொழில் என்பது இதனால் விளக்கமுறும். இல்லாக்காலத்தும் சிறிதுளதாய காலத்தும் நிலவும் வண்மை கூறவே, செல்வக் காலத்துக்கொடை விரித்துரைக்கப் படாதாயிற்று. 332. விரியூர் நக்கனார் விரியூர் என்பது சேரநாட்டு வள்ளுவ நாட்டிலுள்ளதோர் ஊர். இப்போது மலையாளச் சில்லாவில் இவ் வள்ளுவநாடு ஒரு தாலுகாவாகவுளது. நக்கன் என்பது இச் சான்றோரது இயற்பெயர். இப் பாட்டொன்றொழிய வேறே இவர் பாடின பாட்டுக்கள் கிடைத்தில. சீறூரையுடைய தலைவன் ஒருவனுடைய மறமாண்பை எடுத்தோதவந்த இவர், அவனது வேலின் செயலைக் கூறிச் சிறப்பித் துள்ளார். இப் பாட்டின்கண், அவனது வேல் பிறருடைய வேல் போல்வதன்று; அது பெருந்தகைமையுடையது; போரில்லாக் காலத்தில் அது புழுதி படிந்து ஒரு மூலையிலோ வீட்டின் கூரையில் செருகப்பட்டோ கிடக்கும்; மங்கல மகளிர் பாடிவர, யாழ் இசைப்ப, நீர்நிலைக்குச் சென்று நீராடி மாலையணிந்து தெருவில் உலாவருவதும் உண்டு; போர் உண்டாகுமாயின் சிறப்புடன் போர்க்களம் நோக்கிச் செல்லும்; அங்கே வேந்தருடைய பெருங்களிறுகளின் முகத்திற் றைத்து உருவிச்செல்லும் என்று வியந்து கூறியுள்ளார். பிறர்வேல் போலா தாகி யிவ்வூர் மறவன் வேலோ பெருந்தகை யுடைத்தே இரும்புற நீறு மாடிக் கலந்திடைக் குரம்பைக் கூரைக் கிடக்கினுங் கிடக்கும் 5 மங்கல மகளிரொடு மாலை சூட்டி இன்குர லிரும்பை யாழொடு ததும்பத் தெண்ணீர்ப் படுவினுந் தெருவினுந் திரிந்து மண்முழு தழுங்கச் செல்லினுஞ் செல்லுமாங் கிருங்கடற் றானை வேந்தர் 10 பெருங்களிற்று முகத்தினுஞ் செலவா னாதே. திணை: வாகை. துறை: மூதின் முல்லை. விரியூர் நக்கனார் பாடியது. உரை : பிறர்வேல் போலா தாகி - பிறர் ஏந்தும் வேல் போல வன்றி; இவ்வூர் மறவன் வேல் - இந்த ஊரையுடைய மறவனாகிய தலைவனது வேல்; பெருந்தகை யுடைத்து - பெரிய தகமை யினையுடையதாகும்; இரும்புறம் நீறும் ஆடி - பெரிய இலைப் பக்கம் புழுதி படிந்து; குரம்பைக் கூரைக் கலந்து இடைக் கிடக்கினும் கிடக்கும் - குடிலின் கூரையில் செருகப்பட்டு அதனோடொன்றாய்க் கலந்து கிடப்பினும் கிடக்கும்; மாலை சூட்டி - மாலையணியப் பெற்று; மங்கல மகளிர் இன்குரல் இரும்பை யாழொடு ததும்ப - மங்கல மகளிரின் இனிய குரலானது பெரிய பையிடத்தே வைக்கப்படும் யாழிசை யோடு கலந்திசைக்க; தெண்ணீர்ப் படுவினும் தெருவினும் திரிந்து - தெளிந்த நீருண்டாகிய மடுக்களிலும் தெருக்களிலும் ஊர்வலம் சென்று; மண் முழு தழுங்கச் செல்லினும் செல்லும்; பகைவர் நிலத்திலுள்ளார் அனைவரும் வருந்தச் சென்றாலும் செல்லும்; ஆங்கு - அவ்விடத்து; இருங்கடல் தானை வேந்தர் பெருங்களிற்று முகத்தினும் செலவானாது - பெரிய கடல் போன்ற தானையையுடைய வேந்தர் மார்பினும் பெரிய களிற்றி யானைகளின் முகத்தினும் சென்று பாய்தலில் தப்பா தாகும்; எ-று. வேல் பெருந்தகையுடைத்து; என்னை, கிடக்கும், செல்லும், செலவானா தாகலின் என இயைத்து வினைமுடிவு செய்க. கூரையின் வேறாகாமல் நீறு படிந்து புழுதிகலந்துகாணப்படு தலின், “கலந்திடைக் கிடப்பினும் கிடக்கும்” என்றார். துருவேறி யதனை நீறாடிய தென்றார். மகளிர் பாட, யாழ் இசைப்ப, படுவில் நீராட்டி மாலைசூட்டித் தெருவில் ஊர்வலம் செல்வதுண்மையின் “செல்லும்” என்றார். கருவி கருத்தாவாயிற்று. முகத்தினும் என்ற எச்சவும்மை வேந்தர் மார்பைத் தழுவி நின்றது. விளக்கம் : தென்னார்க்காடு மாவட்டத்தில் கள்ளக்குறிச்சிப் பகுதியில் விரியூ ரென்னுமோரூர் உளது; ஆயினும் அதன் தொன்மையறிதற் குரிய சான்றொன்றும் கிடைத்திலது. வடபெண்ணைக் கரையிலும் விரியூரொன்றைப் பன்னிரண்டாம் நூற்றாண்டுக் கல்வெட்டொன்று, “ஜயங்கொண்ட சோழ மண்டலத்துப் பாக்கை நாட்டு விரியூர்ப் பெண்ணாற்று வடகரையில் ஸ்ரீசங்கமீச்சுரமுடை யார்” (Nell Ins No. 108)எனக் கூறுகிறது. “மாணார்ச் சுட்டிய வாண் மங்கலத்” (தொல். புறத். 30) துக்கு இளம்பூரணர் இதனைக் காட்டுவர். “வென்றவாளின் மண்ணல்” (தொல். புறத். 13) என்பதனுரையில், “ஒன்றென முடித்தலால் இருவர் வேற்கும் சிறுபான்மை மண்ணுதல் கொள்க” என்று கூறி, இதனை யெடுத்துக்காட்டுவர் நச்சினார்க்கினியர். “மங்கல மகளிரொடு மாலை சூட்டி” யென்றதற்கு, மறக்குடி மகளிர்க்கு மண வினை நிகழுமிடத்து வாள், வேல் முதலியவற்றை நீராட்டி மாலை சூட்டி மணம் புரிவதாகிய செயலை எடுத்துக் காட்டுவதும் உண்டு. 333. மூதின்முல்லை இப் பாட்டைப் பாடினோரும் பாடப்பட்டோரும் இன்னா ரென்றறியக் கூடவில்லை. குறிஞ்சி நிலத்தின் வழியாகச் சேறற்குச் சமைந்த புலவர்களை வேறொரு புலவன் கண்டு அந்நிலத்து வாழும் வேளாண்பெருமகன் ஒருவனது மனை நலத்தையும் அவனுடைய பொருள் மாண்பையும் இதன்கண் எடுத்தோது வானாய், அந்நிலத்து ஊரவர் தம்பால் வருவோர் குறிப்பறிந்து உணவு நல்கும் ஒட்பமுடையவரல்லர்; ஆயினும் நீவிர் அவ்விடம் விட்டு நீங்குதல் கூடாது; அங்கே தங்குவீராயின், மனையுறையும் மகள் வந்து நீவிர் உண்ணவும் கொள்ளவும் தக்க வரகும் தினையும் இல்லையாயினும், இல்லென்னாது தினைக்கதிரிடத்தே விதைக் கென விடப்பட்ட தினையைக் கொணர்ந்தேனும் குற்றி உணவாக்கித் தருவள்; அச் செயலில் தவறாள். அவள் கணவனான வேளாண் பெருமகன் தன்பால் வேந்தனே வந்தாலும் உண்பது அதுவே யாகும். அவன் போருடற்றிப் பெற்ற பெருவளங்களைப் பாணர் முதலிய பரிசிலர்க்கு உதவி விடுவான் என்று கூறுகின்றான். நீருட் பட்ட மாரிப் பேருறை மொக்கு ளன்ன பொகுட்டுவிழிக் கண்ண கரும்பிடர்த் தலைய பெருஞ்செவிக் குறுமுயல் உள்ளூர்க் குறும்புதற் றுள்ளுவன வுகளும் 5 தொள்ளை மன்றத் தாங்கட் படரின் உண்கென வுணரா வுயவிற் றாயினும் தங்கினர் சென்மோ புலவிர் நன்றும் சென்றதற் கொண்டு மனையோள் விரும்பி வரகுந் தினையு முள்ளவை யெல்லாம் 10 இரவன் மாக்க ளுணக்கொளத் தீர்ந்தெனக் குறித்துமா றெதிர்ப்பை பெறா அ மையிற் குரலுணங்கு விதைத்தினை யுரல்வாய்ப் பெய்து சிறிது புறப்பட்டன் றேவில டன்னூர் வேட்டக் குடிதொறுங் கூட்டு. . . . . . . . . . . 15 . . . . . . . . . . . உடும்புசெய் பாணி நெடுந்தேர் வல்லரோ டூரா வம்பணி யானை வேந்துதலை வரினும் உண்பது மன்னு மதுவே பரிசின் மன்னுங் குரிசில்கொண்டதுவே. திணை: வாகை. துறை: மூதின் முல்லை.................. உரை : நீருட் பட்ட மாரிப் பேருறை மொக்குள் அன்ன - நீர்க்குள் வீழ்ந்த மழையினுடைய பெரிய தாரையாலுண்டாகிய குமிழி போல; பொகுட்டுவிழிக் கண்ண - கொட்டை போன்ற விழி பொருந்திய கண்ணையும்; கரும்பிடர்த் தலைய - கரிய பிடரி பொருந்திய தலையையும்; பெருஞ்செவிக் குறுமுயல் - பெரிய செவியையுமுடைய குறுமுயல்; உள்ளூர்க் குறும்புதல் துள்ளுவன உகளும் - ஊருக்குள்ளேயிருக்கும் குறிய புதலிடத்தே துள்ளி விளையாடும்; தொள்ளை மன்றத்து ஆங்கண் படரின் - வளைகள் பொருந்திய மன்றத்துக்குச் சென்றால்; உண்கென உணரா உயவிற்றாயினும் - உண்மின் எனக் குறிப்புணர்ந் துரைப்ப தல்லாத வருத்தமுடைய தாயினும்; நன்றும் தங்கினிர் சென்மோ - பெரிதும் தங்கிச் செல்வீர்களாக; புலவீர் - அறிஞர் களே; சென்றதற் கொண்டு - சென்றதனால்; மனையோள் விரும்பி - மனையவள் விருப்பமுற்று; வரகும் தினையும் உள்ளவை யெல்லாம் - வரகும் தினையுமாகத் தன் மனையில் உள்ளவற்றை யெல்லாம்; இரவல் மாக்கள் உணக்கொளத் தீர்ந்தென - இரவலர் உண்டதனாலுங் கொண்டதனாலும் தொலைந்தனவாக; குறித்துமாறு எதிர்ப்பை பெறாமையின் - குறி யெதிர்ப்பைத் தானும் பெறமுடியாமையால்; குரல் உணங்கு விதைத்தினை - கதிரிடத்தே முற்றியுலரவிட்ட விதைத் தினையை; உரல்வாய்ப் பெய்து - உரலிடத்தே பெய்து குற்றி யுண்பிப்பாளே யல்லது; சிறிது புறப்பட்டன்றோ விலள் - சிறிதும் இன்மை கூறி நீவிர் வறிதேகுமாறு விடுவாளல்லள்; தன்னூர் வேட்டக்குடி தொறுங் கூட்டும் - தன்னூரிலுள்ள வேட்டுவர் மனைதோறும் கூட்டப்படும்; ...................உடும்பு செய் பாணி நெடுந்தேர் வல்லரோடு - உடும்பின் தோலாற் செய்யப் பட்ட கைச்சரடு அணிந்த நெடிய தேரைச் செலுத்தவல்ல வீரருடனே; ஊரா - ஊர்ந்து; வம்பணி யானை வேந்து தலைவரினும் - கச்சணிந்த யானையையுடைய வேந்தர் தன்பால் வந்தாலும்; உண்பது அதுவே - உண்பிப்பது அதுவேயாம்; பரிசில் - அவன் தன்பால் வரும் பரிசிலர்க்கு நல்கும் பரிசில்; குரிசில் கொண்டது - குரிசிலாகிய அவன் பகைவரை வென்று பெற்ற பொருளேயாம்; எ-று. புலவீர் மன்றத்துத் தங்கினிர் சென்மோ; சென்றதற் கொண்டு மனையோள் விரும்பி, தீர்ந்தென, பெறாமையின், புறப்பட்டன்றோவிலள்; வேந்து தலைவரினும் உண்பது அது; பரிசில் குரிசில் கொண்டது எனக் கூட்டி வினைமுடிவு செய்க. மன்னும் உம்மும் அசை. பொகுட்டு விழி, வன்மையாலும் வடிவாலும் பொகுட்டுப்போலும் விழி. குமிழி நிறமும் ஒளியும் பற்றிய உவமமாதலின். “அடுக்கிய தோற்ற மன்று” மொக்குள் அன்ன கண், பொகுட்டு விழிக் கண் என இயையும். எலியும் பிறவும் தோண்டியவளைகள் மிக்க மன்றம் என்றற்கு, “தொள்ளை மன்றம்” என்றார். மன்றம் என்றது புறந்திண்ணை யெனக் கொள்க. வந்த விருந்தினரது குறிப்பறிந்து ஓம்புவார் செயல் விருந்தினர்க்கு இன்பந் தருவதாகலின், குறிப்பறியும் திறனில்லாத வேட்டக்குடி மன்றத்தை “உண்கென உணரா வியல்பிற்” றென்றான். உணராமை காரியத்தின் மேனின்றது. உணரார் மனைக்கண் புலவர் விருந்தாதலை விழையா ராதலின், அது செய்யற்க என்பது, “உணரா இயல்பிற்றா யினும் நன்றும் தங்கினிர் சென்மோ புலவீர்” என்றான். இரத்தல் இழிவெனக் கருதாது மேற்கோடலின், இரவலரை “இரவன் மாக்கள்” என்றார். குறித்துமாறு எதிர்ப்பை, குறியெதிர்ப்பை; அஃதாவது கைம்மாற்றுக் கடன். முற்றிய தினைக்கதிர்களை மனைக்கூரையிற் கட்டித் தொங்க விட்டு வைப்பது இயல்பாதலால், அதனை யுரல் வாய்ப்பெய்து சமைத்து மனையோள் விருந்தோம்பு வாளாயினள். புறப்படுதல் - வெளியே செல்லவிடுதல்; வெளிவருதலுமாம். விருந்தினர் உண்டொழியுங் காறும் வெளிப்பட்டிலள் என்றுமாம். இரவலர் உண்டதனால் ஒரு பகுதியும் தரக் கொண்டதனால் எஞ்சிய பகுதியும் ஆக எல்லாம் தொலைந்தமையின் “இரவலன் மாக்கள் உணக்கொளத் தீர்ந்தென” என்றார். வித்தை யுண்டல் முறையன்றாயினும் விருந்தோம்பற்கு அதுவும் அமையுமெனக் கொண்டனளென்பார், “விதைத்தினை” என விதந்தோதினார்; குறித்துமாறெதிர்பை பெறாமையின்” என்றது, அது முறையன்மை யுணரப்பட்டமை குறித்து நின்றது. “நனி பேதையே நயனில் கூற்றம், விரகின்மையின் வித்தட்டுண்டனை (புறம். 227)” எனச் சான்றோர் கூறுதல் காண்க. உடும்பு; ஆகுபெயர். பாணி, கை; ஆகு பெயராற் கைச்சரடு குறித்து நின்றது. இதனை வம்பென்பதும் வழக்கு; “வம்புகளை வறியாச் சுற்றம்” (பதிற். 19) என்பது காண்க. புரவலர் வரினும் இரவலர் வரினும் விருந்தோம்பற்கண் வேறுபாடின்மை காட்டியவாறு. இப் பெற்றியோன் இரவலர் புரவலனாவதற்குக் காரணம் கூறுவார், “பரிசில் மன்னும் குரிசில் கொண்டதுவே” யென்றார். விளக்கம் : புலவர்களை ஆற்றுப்படுத்துகின்றாராதலால், தொடக்கத்தே ஊரினது இயல்பைக் கூறுகின்றார். ஊர்தொறும் மனைதோறும் பரிசிலர் வந்து தங்குதற்கு மன்றங்களுண்மையின், ஊர்க்குச் செல்லும் புலவர்கள் அம் மன்றங்களிற் றங்குவரென்பது கொண்டு, “தொள்ளை மன்றத் தாங்கண் படரின் ” என்றார். மன்றத்தின் பொலிவழிந்த தோற்றம் தன்னைக் காண்பார் உள்ளத்தில் அருவருப்பை யுண்டுபண்ணி, உணவு வேட்கை யெழாவாறு செய்யுமென்பது தோன்ற, “உண்கென வுணராவுயவிற்றாயினும்” என்றார். தங்கிய வழி, மனைக்குரியன் விரைந்தேற்று விருந்தோம்புவள் என்றற்கு “விரும்பி” என்றார். புறப்பட்டன்றோ இலள், புறத்தேசெல்ல விடுவாளல்லள்; தன்பால் இன்மையினைப் புறத்தே நீவிர் அறியச் செய்குவாளல்லள் என்றரைப்பது முண்டு. இஃது இல்லுறை மகளின் நன்மாட்சி யுணர்த்தி நின்றது. விதைத்தினையையுண்டல் முறையன்றாதலின், குறி யெதிர்ப்பை நாடினளெனவும், அது பெறாமையின், விருந்தோம்பலோம்பா மடமையினும் வித்தட்டுண்டல் குற்றமன்றெனத் தேர்ந்தனளெனவும் அறிக. “வித்துமிடல் வேண்டுங் கொல்லோ விருந்தோம்பி, மிச்சில் மிசைவான்புலம்,” (குறள்: 85) என்றது. ஈண்டுநினைவு கூரத்தக்கது விருந்தோம்பி மிச்சில்மிசைவான் விருந்து வந்தவிடத்துத் தன் புலத்துக்கு வித்து இடல் வேண்டுங் கொல்லோ; அதனையும் விருந்தோம்புதற்குச் செலவிடுவன் என உரை கூறற்கும் இக்குறள் அமையுமாறு காண்க; புலவர்களாகிய நும்மையேயன்றி, நாடாளும் பெருவேந்தர் வரினும் அவரையும் இவ்வாறே உண்பிக்கும் இயல்பினன் அவள் கணவன் என்றார். இத்துணை யெளியோனாகிய மனைக் கிழவன் வேந்தன்பால் மாராயமாகப் பெறும் பாசில்களைத் தனக்கென வோம்பாது பரிசிலர்க்கு நல்கி மேம்படுமியல்பினன் என்பது விளங்க, “பரிசில் மன்னும் குரிசில் கொண்டதுவே” யென்றார். 334. மதுரைத் தமிழக் கூத்தனார் சிலப்பதிகார வுரையில் அடியார்க்கு நல்லார் (சிலப். 3:12) இருவகைக் கூத்தாவன “வசைக் கூத்து, புகழ்க்கூத்து, வேத்தியல், பொதுவியல்; வரிக் கூத்து வரிசாந்திக் கூத்து, சாந்திக் கூத்து, விநோதக் கூத்து, ஆரியம் தமிழ்; இயல்புக் கூத்து, தேசிக் கூத்தெனப் பல்வகைய, இவை விரிந்த நூற்களிற்காண்க” என்றனர். இதனால் கூத்து ஆரியக் கூத்து, தமிழ்க்கூத்து என இருவகைப் படுமென்று, இவ் வகைகளின் இயல்புகள் விரிந்த நூற்களிற் காணப்படுமென்றும் அறிகின்றோம். ஆயினும் விரிந்த நூல்கள் இப்போது இறந்தன. உலகவழக்கில் “ஆரியக் கூத்தாடினாலும் காரியத்திற் கண்ணாயிருக்கவேண்டும்” என்றொரு பழமொழி யுண்டு. ஆதலால், ஆரியக் கூத்தும் தமிழ்க் கூத்தும் வழக்கிற் பயின்று வந்தன என்பது பெற்றாம். முதற் குலோத்துங்க சோழன் காலத்தில் கும்பகோண வட்டத்து மானம்பாடியிலுள்ள நாக நாதசாமி கோயிலில் உண்டான கல்வெட்டொன்று, அங்கே விக்கிரமாதித்தன் திருமுதுகுன்றனான விருதராச பயங்கர ஆசாரியன் என்றொரு கூத்தன் இருந்தானென்றும், மிழலைநாட்டு வீரநாராயண புரத்துக் கயிலாயமுடைய மகாதேவர்க்குரிய சித்திரை விழாவில் ஐந்து முறை தமிழக் கூத்தாட வேண்டுமென்றும், அதற்காக அவனுக்கு நகரத்தாரும் கோயிலார்களும் கூடி நாகன்பாடி (மானம்பாடி) யென்றவூரிற் சில நிலங்களைக் கூத்தாட்டுக் காணியாகக் கொடுத்தனரென்றும் கூறுகிறது. (A.R.No. of 1931-32)பண்டை நாளில் மதுரையிலிருந்து தமிழ்க் கூத்து வகையிற் சிறந்து விளங்கிய சான்றோர் தமிழ்க்கூத்த ரெனப்பட்டார். இச் சிறப்பு மிகுதியால் இச் சான்றோருடைய இயற்பெயர் மறைந்து போக, தமிழக்கூத்தர் என்ற பெயரே நிலவுவதாயிற்று. மதுரைத் தமிழக்கூத்தன் நாகன் தேவனாரென்று வேறொரு சான்றோர் பெயர் தொகை நூல்களிற் காணப்படுகின்றது அவர் பெயரைக் காண்போர் அவர் மதுரைத் தமிழக்கூத்தனாரான நாகனாரென்றும், அவருக்கு மகனே மதுரைத் தமிழ்கூத்தன் நாகன் தேவனாரென்றும் கருதுவர்.தமிழக்கூத்தன் நாகன் தேவன் என்ற சான்றோர் பெயரால் சோழநாட்டு நாகன்பாடி தோன்றியிருக்குமென நினைத்தற்கு இடமுண்டாதலால், மதுரைத் தமிழக்கூத்தன் என்பாரைப் பாண்டிநாட்டுச் சான்றோரென்றும், தமிழக்கூத்தன் நாகன் தேவனாரைச் சோழநாட்டுச் சான்றோரென்றும் மதுரை யென்பது ஏடெழுதினோரால் நேர்ந்த கைப்பிழை யென்றும் தெளிய வேண்டும். இந் நூலைத் தொகுத்தோர் இவரை மதுரைத் தமிழக்கூத்தனாரென்றே குறித்துள்ளார். இவர் பாடியனவாக வேறே பாட்டுக்கள் இல்லை. இவ்வொரு பாட்டும் சிதைந்து கிடக்கிறது. இதுவும் மூதின்முல்லைப் பாட்டாகும் இதன்கண் வேந்தனொருவனுடைய ஊரியல்பு கூறி, அவ்வூர் வாழும் தலைவன் தனக்குரிய கொடை நலத்தால் மேம்பட்டுப் பரிசிலர்க்குப் பொற்பட்டமணிந்த யானைகளை வழங்குவதில் தவறுவதிலன் என்றும், அவன் மனைவிதனக்குரிய விருந்தோம்புந் துறையில்சிறந்து பாணர்க்கும் ஏனைப் பரிசிலர்க்கும் பேருணவு தந்து பேணுவதில் பிழைபடுவதிலள் என்றும் கூறுகின்றார். காமரு பழனக் கண்பி னன்ன தூமயிர்க் குறுந்தா ணெடுஞ்செவிக் குறுமுயல் புன்றலைச் சிறாஅர் மன்றத் தார்ப்பிற் படப்பொடுங் கும்மே. . . . . . . . . . பின்பு. . . . . 5 . . . . . . . . . . . றூரே மனையோள் பாண ரார்த்தவும் பரிசில் ரோம்பவும் ஊணொலி யரவமொடு கைதூ வாளே உயர்மருப் பியானைப் புகழ்முகத் தணிந்த பொலம் புனையோடை. . . . . . . . . . . ப் 10 பரிசில் பரிசிலர்க் கீய உரவுவேற் காளையுங் கைதூ வானே. திணை: வாகை. துறை: மூதின் முல்லை. மதுரைத் தமிழக்கூத்தனார் பாடியது. உரை : காமரு பழனக் கண்பின் அன்ன - அழகிய நீர் நிலைகளில் வளர்ந்திருக்கும் சண்பங் கோரையின் கதிர்போன்ற; தூமயிர்க் குறுந்தாள் நெடுஞ்செவிக் குறுமுயல் - தூய மயிரடர்ந்த குறுகிய கால்களையும் நெடிய காதுகளையுமுடைய குறுமுயல்; புன்றலைச் சிறாஅர் மன்றத் தார்ப்பின் - புல்லிய தலையையுடைய சிறுவர்கள் மன்றத்தின்கண் விளையாடுவோர் செய்யும் ஆரவாரத்துக் கஞ்சி; படப்பு ஒடுங்கும் - வைக்கோற் போருக்குள்ளே பதுங்கும்; ..............பின்பு...........வேந்தனூர் - வேந்தனது ஊர்; மனையோள் பாணர் ஆர்த்தவும் - மனையவள் பாணர்களை யுண்பிக்கவும்; பரிசிலர் ஓம்பவும் - பரிசிலராகிய புலவர் முதலாயினாரை வரவேற்றுப் புறந்தரவும்; ஊணொலி யரவமொடு கைதூவாள் அவர்கள் உண்பதனாலுண்டாகும் ஆரவாரத்திடையே அச் செயலிற் கையொழி யாளாயினாள்; உயர் மருப்பு யானைப் புகர் முகத்து அணிந்த பொலம்புனை யோடை - உயர்ந்த கோடு களையுடைய யானைகளின் புள்ளிபொருந்திய முகத்தில் அணியப் படும் பொன்னாலாகிய பட்டம்;.........., பரிசில் பரிசிலர்க்கீய - பரிசிற் பொருளைப் பரிசிலர்க்கு வழங்குதலின்; உரவுவேல் காளையும் கைதூவான் - வலிபொருந்திய வேலையுடைய காளையாகிய அவள் கணவனும் கையொழியான்; எ-று. கண்பைச் சண்பங் கோரை யென்பர் நச்சினார்க்கினியர்; இக் காலத்தில் இதனைச் சம்பு என்பர்; ஈண்டு; ஆகுபெயர், பழனம், மருத நிலமுமாம். தூமயிரென்றது, மென்மையுடைமைபற்றி, படப்பைக்கண் தொகுக்கப் பட்டிருத்தலின், வைக்கோற்போர் படப்பு எனப்பட்டது. கைதூவல் ஓய்ந்து செயலறுதல். உயர் மருப்பு யானை யென்றது. பகைவருடைய யானைகளை. அவற்றின் ஓடைப் பொன்னைப் பாணர்முதலியோர்க்கு வழங்குவது மரபு. “ஒன்னார் யானையோடைப் பொன் கொண்டு, பாணர் சென்னிப் பொலியத் தைஇ” (புறம். 126) என்று சான்றோர் கூறுவது காண்க. முயல் படப்பொடுங்கும்; மனையோள் கைதூவாள்; காளையும் கைதூவான் என வினை முடிவு செய்க. விளக்கம் : ஊரியல்பு கூறுவார், சிறுவர் மன்றத்திலிருந்து ஆர்ப்பராயின், அது கேட்டுக் குறுமுயல் அஞ்சிப் படப்பைக்கண் ஒடுங்கும் என்றார்; பாணர் ஆர்த்தலாவது, பாணர்க்கு உணவும் கள்ளும் தந்து உண்பித்தல். பொருநர், கூத்தர் முதலிய பரிசிலர்க்கு அவர் வேண்டுவன நல்கிச் சிறப்பித்தலை, பரிசிலரோம்பல் என்றார். ஊணொலியரவம், உணவினை யுண்போரால் உண்ணுங்காலுண்டாகும் ஆரவாரம். உரவு வேல் காளை யென்றது. மறத்துறையால் பொருளீட்டுவன் என்பது பட நின்றது. காளையாவான் மறத்துறையாற் பொருளீட்டுபவன். 335. மாங்குடி கிழார் மாங்குடி கிழார் முல்லை நிலத்துச் சிற்றூரொன்றில் வாழும் மக்களுடைய வாழ்க்கைக் கூறுகளை அவரணியும் பூவும் உண்ணும் உணவும் அவரிடை நிலவும் குடிவகையும் பரவுங் கடவுள் நிலையும் இப் பாட்டின் கண் வகுத்தோதுகின்றார். ஓர் ஊரில் வாழ்பவர் தம் கூற்றிலே நின்று வாழ்வாங்கு வாழ்ந்து மேம்படுவதும் வாகைத்திணையின்பாற் படுவதாகலான், இப் பாட்டும் வாகைப் பாட்டாய் மூதின்முல்லைத் துறைக்குரியதாய்த் தொகுக்கப் பட்டது. முல்லை நிலத்தூர் குடியெனவும் வழங்கும். இச் சிறு குடியில் வாழ்வோர்குரவும் தளவும் குருந்தும் முல்லையும் என்ற பூக்களை யணிவர்; அவர்க்கு உணவாவன வரகு, தினை, கொள், அவரையென்ற நான்குமாகும்; அவரிடையே நிலவும் குடிவகை துடியன், பாணன், பறையன் கடம்பன் என்ற நான்குமாகும். இவ்வாறு பலவகைப் பூவணிதலும், உணவுண்டலும், குடிவகை கோடலும் இச் சிறு குடியிலுள்ளார்க் கியல்பாயினும், கடவுள் வழிபாட்டில் மட்டில் பல்வகை கோடல் இயல்பன்று, ஒரு கடவுளையே வழிபடுவர். அக் கடவுள் தானும் கன்னின்ற பெரு வீரராகும். இவற்றை இச் சிறு பாட்டிற் காணலாம்; இதுவும் தொடக்கப் பகுதியில் சிறிது சிதைந்து விட்டது. அடலருந் துப்பின். . . . . . . . . . குரவே தளவே குருந்தே முல்லையென் றிந்நான் கல்லது பூவுமில்லை கருங்கால் வரகே யிருங்கதிர்த் தினையே 5 சிறுகொடிக் கொள்ளே பொறிகிள ரவரையொ டிந்நான் கல்ல துணாவு மில்லை துடியன் பாணன் பறையன் கடம்பனென் றிந்நான் கல்லது குடியு மில்லை ஒன்னாத் தெவ்வர் முன்னின்று விலங்கி 10 ஒளிறேந்து மருப்பிற் களிறெறிந்து வீழ்ந்தெனக் கல்லே பரவி னல்லது நெல்லுகுத்துப் பரவுங் கடவுளு மிலவே. திணை: வாகை. துறை: மூதின் முல்லை. மாங்குடி கிழார் பாடியது. உரை : அடலருந் துப்பின் - வெல்லற்கரிய வலியினையுடைய..... குரவே தளவே குருந்தே முல்லை யென்ற இந் நான் கல்லது பூவும் இல்லை - குரவ மலரும் தளவு மலரும் குருந்த மலரும் முல்லை மலரும் என்று சொல்லப்பட்ட இந்த நால்வகைப் பூவல்லது வேறு பூக்கள் இல்லை; கருங்கால் வரகு இருங் கதிர்த்தினை - கரிய காலையுடைய வரகும் பெரிய கதிரை யுடைய தினையும்; - சிறிய கொடிக்கொள் பொறிகிளர் அவரை - சிறிய கொடி யாகிய கொள்ளும் பொறிகளை யுடைய அவரையும்; இந் நான்கல்லது உணவும் இல்லை - இந்த நான்குமன்றி உணவுப் பொருள் வேறே யில்லை; துடியன் பாணன் பறையன் கடம்பன் என்ற இந்நான்கல்லது குடியும் இல்லை - துடியன்குடி பாணன்குடி பறையன்குடி கடம்பன் குடியென்று சொல்லப்பட்ட இந் நால் வகைக் குடிகளன்றி வேறு குடிகள் இல்லை; ஒன்னாத் தெவ்வர் முன்னின்று விலங்கி - மனம் ஒன்றாத பகைவர் முன்னே அஞ்சாது நின்று அவர் மேற்செலவைக் குறுக்கிட்டுத் தடுத்து; ஒளிறு ஏந்து மருப்பின் களிறு எறிந்து வீழ்ந்தென - விளங்குகின்ற உயர்ந்த கோட்டினையுடைய யானைகளைக் கொன்று தாமும் விழுப்புண் பட்டு வீழ்ந்திறந்தாராக; நல்லே பாவின் அல்லது - அவர் பெயரும் பீடும் எழுதி நட்டகல்லைக் கடவுளாகக் கருதி வழிபடுவதல்லது; நெல் உகுத்துப் பரவும் கடவுளும் இல - நெல்லைச் சொரிந்து வழிபடும் கடவுள் வேறேயில்லை; எ-று. பூவகையும் உணாவகையும் குடிவகையும் கடவுள் வகையும் வேறு பிறவுளவாயினும் அவை இந்நாட்டில் இல்லையென விதந்தோதியவாறு. பூவைக் குரவு முதலியவற்றோடும் உணாவை வரகு முதலியவற்றோடும் குடியைப் பாணன் முதலியவற் றோடும் கூட்டுக. கொள்ளுச் செடியாயினும் சிறு சிறு கொடியுடைமையின், “சிறுகொடிக் கொள்” என்றார். மக்கள் வலி யெல்லையைக் கடந்துள்ள கடவுளை விலக்கி நடுகல்லைக் கடவுளாகப் பரவு வதற்குக் காரணம் கூறுவார், “ஒன்னாத் தெவ்வர் முன்னின்று விலக்கி, யொளிறேந்து மருப்பிற் களிறெறிந்து வீழ்ந்தெனக் கல்லே பரவினல்லது” என்றார். ஈண்டு நெல்லென்றது நெற்பொரியினை. “வேலன் புனைந்த வெறியயர் களந்தொறும், செந்நெல் வான் பொரி சிதறி,” (குறுந். 18) என்று சான்றோர் கூறுதல் காண்க. விளக்கம் : பல்வேறு பூக்களும் உண்டெனினும் மக்களால் சிறப்பாக அணியப்படுவன இந்நான்குமே யென்றற்கு, “குரவே தளவே குருந்தே முல்லை யென்ற இந்நான் கல்லது பூவும் இல்லை” என்றார். “குரவே தளவே” என்ற பாடம் அச்சுப் பிரதியில் இல்லை. உணவாகும் சிறப்புப் பற்றி வரகு முதலியவற்றை முறையே கருங்கால் வரகெனவும் இருங்கதிர்த்தினை யெனவும், சிறுகொடிக் கொள்ளெனவும், பொறிகிளர் அவரை யெனவும் சிறப்பித்தார். குடிவகையில் வேளாளரும் வணிகரும் அரசரும் அந்தணரு மெனப் பொதுவகையின் பல குடிகள் இருக் கின்றன வெனினும், மேலே கூறிய பூவணிந்து வரகு முதலிய வற்றைக் கொடையாகப் பெற்றுண்ணும் வகையில் சிறந்த குடிக ளாதலின் துடியன் என்றார். மறங்கிளர்வித்துப் புகழ்பாடிச் சிறப் பெய்துவித்தலின், அணியோடும் உணவோடும் ஒன்றாக நால்வர் குடியினையும் எண்ணியுரைத்தார். அணியப்படுவனவும், உண்ணப் படுவனவும், புரக்கப் படுவனவும் கூறினமையின், பரவப்படுவன நடுகற்களன்றி வேறே கடவுளில்லை யென்றார். 336. பரணர் ஆசிரியர் பரணர் முதலிய சான்றோர், நாட்டில் போர் நிகழுங்கால் பல நல்ல ஆடவர் உயிரிழப்பதால் நாடு சீரழிவதும் பொருட் குறையும் பசியும் பிணியுந் தோன்றி உயிர்கட்கு உலக வாழ்வைத் துன்ப நிலைய மாக்குவதுங் கண்டு போர்கள் நிகழாத வாறு வெளிப்படையாகவும் குறிப்பாகவும் போர்க்குரிய தலை மக்கட்கு வேண்டுவன அறிவுறுத்துவர். போர்கள் உண்டாதற் குரிய ஏதுக்களுள் மகட்கொடை வேண்டிய வேந்தர்க்கு மகண் மறுத்தலும் அதுவே வாயிலாகப் போருண்டாதலும் கண்டு வருந்திப் பலவகையாகப் பாடியிருக்கின்றனர். ஒரு வேந்தன் பிறனொருவன் மகளை மணஞ்செய்து கொடுக்குமாறு வேண்டு கின்றான். இவ் வேந்தன்வெஞ்சின்முடையவன். மகளைக் கொடுத் தற்குரிய தந்தை வெஞ்சினமுடைமை முதலிய ஏதுக்களைக் கருதி மகட்கொடை மறுக்கின்றான். அவனுடனிருக்கும் மறவர் தாமும் மறுத்தற்குத் துணையாகின்றனரேயன்றி, நேர்தற்குத் துணையாகாது வாய் வாளாதிருக்கின்றனர். வேட்ட வேந்தன் சினங்கொண்டு போர்ப்பறை முழக்குகின்றான். ஊரிற் பெருங் கலக்க முண்டா கிறது. மகளைப் பெற்ற தாயும் தன் கணவற்கு வேண்டுவன கூறிப் போரைத் தடுக்குங் குறிப்பால் ஒன்றும் கூறாளாய் அவள் விரும்பியதையே தானும் விரும்புகின்றாள். அவளை மகள் வளர்த்து சிறந்தாளென்னாது பகை வளர்த்துப் பண்பிலளென்பதால், “பண்பில் தாய் அறனிலள்” என்று இப் பாட்டிற் கூறுகின்றார். வேட்ட வேந்தனும் வெஞ்சினத் தினனே கடவன கழிப்பிவ டந்தையுஞ் செய்யான் ஒளிறுமுகத் தேந்திய வீங்குதொடி மருப்பிற் களிறுங் கடிமரஞ் சேரா சேர்ந்த 5 ஒளிறுவேன் மறவரும் வாய்மூழ்த் தனரே இயவரு மறியாப் பல்லியங் கறங்க அன்னோ, பெரும்பே துற்றன்றிவ் வருங்கடி மூதூர் அறனிலண் மன்ற தானே விறன்மலை வேங்கை வெற்பின் விரிந்த கோங்கின் 10 முகைவனப் பேந்திய முற்றா விளமுலைத் தகைவளர்த் தெடுத்த நகையொடு பகைவளர்த் திருந்தவிப் பண்பி றாயே. திணை : காஞ்சி. துறை: மகட்பாற் காஞ்சி. பரணர் பாடியது. உரை : வேட்ட வேந்தனும் வெஞ்சினத்தினன் - மகட்கொடை விரும்பிய வேந்தனும் செவ்விய சினமுடையன்; கடவன கழிப்பு இவள் தந்தையும் செய்யான் - செய்யத்தக்க கடமைகளைச் செய்தலை இவள் தந்தையும் செய்ய விரும்புகின்றிலன்; ஒளிறு முகத்து ஏந்திய வீங்குதொடி மருப்பின் - விளங்குகின்ற முகத்தின்கண் உயர்ந்துள்ள பெரிய தொடியணிந்த கோட்டினை யுடைய; களிறும் கடிமரம் சேரா - களிறுகளும் கடிமரத்தைச் சேர்ந்து நில்லாவாயின். சேர்ந்த ஒளிறு வேல் மறவரும் வாய் மூழ்த்தனர் - வேந்தனும் தந்தையுமாகிய இருவரையும் சேர்ந் துள்ள விளங்குகின்ற வேலேந்திய வீரரும் வாய்மூடி யொன்றும் உரையாடாராயினர்; இயவரும் அறியாப் பல்லியம் கறங்க - வாச்சியக்காரராலும் அறியப்படாத பல பல வாச்சியங்கள் முழங்க இவ்வருங்கடி மூதூர் பெரும் பேதுற்றன்று - இந்தக் கடத்தற்கரிய காவலையுடைய பழைமையான வூர் பெரிய பேதுறவினை யெய்தியுள்ளது; அன்னோ - ஐயோ, விறன்மலை வேங்கை வெற்பின் - விறல்படைத்த மலையாகிய வேங்கை மலையின்கண்; விரிந்த கோங்கின் முகைவனப் பேந்திய முற்றா இளமுலை - பூவிரிந்த கோங்க மரத்தினுடைய அரும்பினது வனப்புடைய முதிராத இளமுலையினையுடைய மகளது; தகை வளர்த்தெடுத்த நகையொடு - அழகு மிக வளர்த்தலால் உண்டாகிய மகிழ்ச்சியினையும்; பகை வளர்த்திருந்த பண்பில் தாய் ஊர்க்குப் பகைவர் மிகவுளராக இருத்தலால் பண்பின்மை யினையுமுடைய இத் தாய்; அறன் இலள் மன்ற - அறப் பண்பில்லாள், ஒருதலையாக; எ-று. வேந்தன் சினத்தினான் தந்தை செய்யான்; களிறு சேரா; மறவர் வாய் மூழ்த்தனர்; ஊர் பேதுற்றன்று தாய் அறனிலள் எனக் கூட்டி வினை முடிவு கொள்க. வேந்தற்குச் செய்யக்கடவனவும், மகட்கொடை வேண்டினார்க்குச் செய்யக்கடவனவும் அடங்க “கடவன” எனப்பட்டன. மகட் கொடை யும் பெற்றோர்க்குச் செயற்குரிய கடனாம், உற்றார்க்குத் தம் மகளைக் கொடுத்து உரியராக்குவது பெற்றோர்க்குக் கட னாதலின், அதனைச் செய்யாது தாழ்ப்பது குறித்து, “கடவன கழிப்பிவள் தந்தையும் செய்யான்” என்றார் களிறுகளும் காவல் மறவரும் போர்க்கு உடன்பட்டு நிற்குமாறு தோன்ற, “களிறுங் கடிமரஞ் சேரா சேர்ந்த ஒளிறுவேன் மறவரும் வாய் மூழ்த்தனர்” என்றும் கூறினார். மூழ்த்தல் - மூடுதல் இயங் களின் பன்மை மிதத்தற்கு “இயவரு மறியாப் பல்லியம்” என்றார். பேதுறவு கலக்கம்; மயக்குமாம். மகட் கொடையை விரும்பித் தந்தை தன்னையரை அதற்குடன்படச் செய்யாமையும் போர்க்குரியராதலைத் தடாமையும் “அறனிலள்” என்றற்கு ஏதுவாயின. அறப்பண்பில்லாது மறப்பண்பேயுடைய ளென்றற்குப் “பண்பில் தாய்” என்றார். வேங்கைமலை, தமிழ் நாட்டிலுள்ள மலைகளுள் ஒன்று; “அருவி வேங்கைப் பெருமலை” (குறுந். 94) என்று அள்ளூர் நன்முல்லையாரும் கூறுவர். வேங்கை மரங்கள் மிக வளர்தலாலும், வேங்கைப் புலிகள் வாழ்வதாலும் இம் மலை வேங்கைமலை யெனப்பட்டதெனக் கருதுதலுமுண்டு. முற்றா இளமுலை யென்றது, பெதும்பைப் பருவமெய்திய அணிமைச் செவ்வியுடையளென்பதைத் தோற்றுவித்து நிற்கிறது; இஃது அன்மொழித்தொகை. மகளழகு கதிர்த்துத் தோன்றிக் காண்பார்க்கு மகிழ்ச்சி மிகுவித்தலின் “தகை வளர்த்தெடுத்த நகை” யென்றார். வளர்த்தென்னும் வினையெச்சம் முன்னது காரணப் பொருட்டு; பின்னது காரியப் பொருட்டு. விளக்கம் : மகட்பாற் காஞ்சியாவது, “ஏந்திழையாள் தருகென்னும், வேந்தனொடு வேறு நின்றன்று” (பு.வெ.மா. 4:24) என வரும். “வேட்ட வேந்தனும் வெஞ்சினத்தினன்” என்றது, மகண் மறுத்த வழி, வெவ்விய சினங்கொண்டு போர்செய்தல் ஒருதலையென்பது குறித்து நின்றது. போர்க்குச் செல்லும் களிற்றின் மருப்புக்குத் தொடியணிதல், செயற்கை வலியூட்டற்கு. தந்தையும், களிறும் மறவரும் இருக்கும் நிலையினை விதந்தோதியது மகண் மறுக்கும் தந்தையும் போர்க்குச் சமைந்திருக்கின்றானென்பதை யுணர்த்தி நின்றது. பகைவளர்த் திருந்தாளென்றற்கேற்பப் பண்பில் தாய் என்றார். இம் மகளைப் பெறா திருந்தாளாயின், இப் போர் நிகழ்ச்சிக்கேதுவின்றா மென்பதுபற்றி இவ்வாறு கூறினராதலின் பண்பில் தாய் என்றது குறிப்பு மொழியாயிற்று. 337. கபிலர் ஆசிரியர் கபிலர் இப்பாட்டின்கண் சோழநாட்டுத் தலைவன் ஒருவன் ஊருக்குச் செல்லுகின்றார். அவனுடைய அருமை மகள் தன் பேதைப் பருவங்கடந்து பெதும்பைப் பருவமெய்தி இற்செறிக்கப் படும் இயல்பினாளாகின்றாள். அச் செய்தி ஊர் முழுவதும் பரவுகிறது. சூழவுள்ள நாட்டிலும் படர்கிறது. அவளுடைய குடிநலனும் மெய்ந்நலனும் அறிவு நலனும் யாவராலும் புகழ்ந்து பேசப்படுகின்றன. இச்செய்திகளை ஆசிரியர் கபிலர் அறிகின்றார். இப் பாட்டின்கண் கபிலர் அப் பெண்ணின் தந்தையின் இயல்பும் தன்னையர் இயல்பும் கண்டு, “இச் சோணாட்டண்ணல் பேராரவார முடையன்; இவளுடைய தன்னையர் போர் செய்து சிறந்த நெடுவேலைப் பற்றிக் குருதிபடிந்த தலையினையுடையராய் மறமிக்குள்ளனர்; வேந்தரும் ஒருவர்பின் ஒருவராய் வந்து மகட்கொடை வேண்டிய வண்ணமிருக்கின்றனர். இவளை மணஞ்செய்து கொள்ளும் பேறுடைய வேந்தர் யாவரோ, அது காண்டற்குரியது என இசைக்கின்றார். ஆர்கலி யினனே சோணாட் டண்ணல் மண்ணாள் செல்வ ராயினு மெண்ணார் கவிகை வாள்வலத் தொழியப் பாணரிற் பாடிச் சென்றார் வரறோ றகமலர் 5 பீத லானா விலங்கு தொடித் தடக்கைப் பாரி பறம்பிற் பனிச்சுனை போலக் காண்டற் கரிய ளாகிய மாண்ட பெண்மை நிறைந்த பொலிவொடு மண்ணிய துகில்விரி கடுப்ப நுடங்கித் தண்ணென 10 அகிலார் நறும்புகை யைதுசென் றடங்கிய கபில நெடுநகர்க் கமழு நாற்றமொடு மனைச்செறிந் தனளே வாணுத லினியே அற்றன் றாகலிற் றெற்றெனப் போற்றிக் காய்நெற் கவளந் தீற்றிக் காவுதொறும் 15 கடுங்கண் யானை காப்பன ரன்றி வருத லானார் வேந்தர் தன்னையர் பொருசமங் கடந்த வுருகெழு நெடுவேற் குருதி பற்றிய வெருவரு தலையர் மற்றிவர் மறனு மிற்றாற் றெற்றென 20 யாரா குவர்கொ றாமே நேரிழை உருத்த பல்சுணங் கணிந்த மருப்பிள வளமுலை ஞெமுக்கு வோரே. திணை : காஞ்சி. துறை: மகட்பாற் காஞ்சி. கபிலர் பாடியது. உரை : சோணாட்டண்ணல் ஆர்கலியினன் - சோணாட்டுத் தலைவன் நிறைந்த ஆரவாரத்தையுடையன்; மண்ணாள் செல்வராயினும் - நிலவுலகத்தையாளும் அரசியற் செல்வ முடையராயினும்; எண்ணார் - அதனை யெண்ணாராய்; கவிகை வாள் வலத்து ஒழிய - இடக்கவிந்த தம்முடைய கையில் வலமுண்டாக ஏந்தும் வாளை நீக்கி; பாணரிற் பாடிச் சென்றார் - பாண்மக்கள் போலப் பாடி வந்தோர்; வரல் தோறும் அகம் மலர்பு - வருந்தோறும் மனமலர் விரிந்து; ஈதல் ஆனா - கொடுத்தலமையாத; இலங்கு தொடித் தடக்கை - விளங்கு கின்ற தொடியணிந்த பெரிய கையையுடைய; பாரி பறம்பின் பனிச்சுனை போல - வேள் பாரியின் பறம்புமலையிலுள்ள குளிர்ந்த சுனைநீர் போல; காண்டற் கரியளாகி - பிறர் காண்ப தற்கு அரியவளாய்; மாண்டபெண்மை நிறைந்த பொலிவொடு - மாட்சிமையுற்ற பெண்மை நலம் நிறைந்த பொற்புடனே; மண்ணிய துகில்விரி கடுப்ப நுடங்கி - கழுவப்பட்ட துகிலை விரித்தவழி அது நுடங்குவது போல நுடங்கி; தண்ணென அகிலார் நறும்புகை ஐது சென்று அடங்கிய - தண்ணென்று அகிற் கட்டையினின் றெழுந்த நறிய புகையானது மெல்லச் சென்று படிந்த; கபில நெடு நகர்க் கமழும் நாற்றமொடு - கபில நிறம் பெற்ற நெடிய மனை முழுதும் கமழும் மணம் பொருந்திய; மனைச் செறிந்தனள் வாணுதல் - இல்லிடத்தே செறிக்கப் பட்டாள் ஒளிபொருந்திய நுதலையுடையவள்; இனி - இப் பொழுது; அற்றன்றாகலின் - அத்தன்மைக்கிடமன்றாதலால்; தெற்றெனப் போற்றி - தெளிவாக வோம்பி; காய் நெல் கவளம் தீற்றி - விளைந்த நெல்லிடத்துப் பெற்ற அரிசியாலுண்டாகிய கவளத்தை யுண்பித்து; காவுதொறும் - காக்கள் தோறும்; கடுங்கண் யானை காப்பனர் அன்றி - வன்கண்மையை யுடைய யானைகளைக் காப்பதல்லது; வருதல் ஆனார் வேந்தர் - வருதலமையார் வேந்தர்கள்; தன்னையர் - இவளோடு உடன் பிறந்தவர்கள்; பொருசமம் கடந்த உருகெழு நெடுவேல் - பொருந்திய நெடிய வேலையும்; கருதி பற்றிய வெருவரு தலையர் - பகைவரை யெறிதலால் அவர் குருதி தோய்ந்த - கண்டார்க்கு அச்சம் தரும் தலையையுமுடையராயினர்; இவர் மறனும் இற்று - இவரது மறப்பண்பும் இத்தன்மைத்தாய் இராநின்றது; நேரிழை உருத்த பல்சுணங் கணிந்த - நேரிய இழையணிந்த இவட்குரிமையாகத் தோன்றிய பலவாகிய தேமல் பரந்த; மருப்பு இள வனமுலை ஞெமுக்குவோர் - யானைக்கோடு போன்ற அழகிய இளமுலை யழுந்தப் புல்லுவோர், தெற்றென யாராகுவர் கொல் - தெளிவாக யாவரோ; எ-று. நிரல் அல்லோர்க்கு மகட்கொடை மறுத்தலும் அது வாயிலாகப் போருண்டாதலும் எதிர்நோக்கிப் படைபண்ணப் படுதலின், “சோணாட்டண்ணல் ஆர்கலியினன்” என்றார். மண்ணாள் வேந்தர் என்னும் தாம் பிறரால் இரக்கப் படுவதல்லது தாம் பிறரை இரப்பதிலராதல் முறை; அதனை யெண்ணாது தாம் இரவலராகிய பாணர் முதலியோர் போல வருதலின் “எண்ணார் வாள்வலத் தொழியப் பாணரிற் பாடிச் சென்றாஅர்” என்றார். பிறர்க் கிடக் கவிந்த கை, தான் ஏந்துதற்குரிய வாளை யேந்தாது பாடுநர் ஏந்தும் இசைக்கருவி யேந்துதல் கண்டு இகழ்வார், “கவிதை வாள் வலத் தொழிய” என்றார். கவிகை பாடியென மமையும். அன்றிக் கவிகை செல்வர் என இயைத்து இடக் கவித்த கையையுடைய செல்வ ரெனினுமாம் புகைபடிதலால் சுவர் கபிலநிறம் பெறுவதால் “கபில நெடுநகர்” என்றார். பாரியின் காவல் கடுமைபற்றி அவனது சுனை பிறர் காண்டற்கரிதானது பற்றி, இற்செறிப்புண்ட பெண்ணுக்கு அதனை யுவமம் கூறினார். அண்ணல் ஆர் கலியினன்; வாணுதல், சுனைபோலக் காண்டற்கரியளாகிய மனைச் செறிந்தனள்; இனி அற்றன்றகலின், வேந்தர் வருதலானார்; தன்னையர் வெருவருதலையர்; மறனும் இற்று; ஞெமுக்குவோர் யாராகுவர்கொல் என இயைத்து வினைமுடிவுசெய்க. விளக்கம் : இப் பாட்டின் முற்பகுதி அச்சுப்பிரதியில் சிதறிக் கிடக்கின்றது. வேள்பாரியொடு பகைத்துப் பன்னாள் முற்றியிருந்தும் வென்றி யெய்தமாட்டாராகிய வேந்தர்க்குப் பண்டு கபிலர், “சுகிர்புரி நரம்பின் சீறியாழ் பண்ணி, விரையொலி கூந்தனும் விறலியர் பின்வர, ஆடினிர் பாடினிர் செலினே, நாடுங் குன்று மொருங்கீயும்மே எனவும் யாமும் பாரியுமுளமே குன்று முண்டு நீர் பாடினிர் செலினே” (புறம். 109. 110) எனவும் கூறினாராக, அவர் குறிப்பறியாது பட்டாங்கே கொண்டு மகட்கொடை வேண்டிவந்தனரென்னும் குறிப்புத் தோன்ற, “மண்ணாள் செல்வராயினும்......... ஈதலானா இலங்கு தொடித் தட்க்கைப் பாரி” என்றாரென வறிக. பாரியினது பறம்பின்கண்ணதாகிய சுனை மிக்க அருமையும் பெருமையுமுடைய தென்பதைப் பிறரும், “பாரி பறம்பிற் பனிச்சுனைத் தெண்ணீர்” (புறம். 176) என்று கூறுதல் காண்க. களவிற் கொண்டு தலைக்கழிதல் முதலிய செயல்கட்கு இப்போது இடமில்லையென்பார் “அற்றன்றாகலின்” என்றார். காக்களில் மரந்தொறும் களிற்றைப் பிணித்துக் காத்தலைச் செய்வதையன்றி மகள் வேண்டி வருதலிலும் கையொழி யாராயின ரென்பார், “காப்பனரன்றி வருதலானார் வேந்தர்” என்றார். வேந்தரெனப் பன்மையாற் கூறியது. மகட்கொடை வேண்டிவருவோர் சான்றோர் உட்படப்பலராதல் தோன்ற, “இற்றால்” என்றது, மகண் மறுத்தல் ஒருதலை யென்றவாறு. 338. குன்றூர்கிழார் மகனார் குன்றூர் என்பது ஓரூர். இவ்வூரினரான குன்றூர்கிழார் பெயர் இன்னதெனத் தெரிந்திலது. நற்றிணையில் குன்றூர்கிழார் மகனார் கண்ணத்தனாரென ஒருவர் காணப்படுகிறார். இங்கே குன்றூர்கிழார் மகனாரென்றே காணப்படினும், கண்ணத்தனார் என்ற இவரது இயற்பெயர் ஏட்டில்விடுபட்டதாகக் கருதுதற்கிட முண்டு. அவர் காலத்தே நெடுவேளாதன் என்பான் சோழநாட்டிற் போந்தை யென்னும் ஊர்க்குரியனாய் விளங்கினான். இச் சான்றோரை அவன் பரிசு நல்கிச்சிறப்பித்துள்ளான். இவர் ஒருகால் ஓரூரிலுள்ள தலைவன் மகள் மணப்பருவ மெய்தியிருப்பது கண்டு, அவள் தந்தை தன்னையருடைய மறப்பண்பையும் உடனுணர்ந்து இவளால் இவ்வூரில் கடும்போர் நிகழும் என எண்ணி மகட்கொடை வேண்டுவோர் இவள் தந்தையின் தகுதிக் கேற்ற வணக்கஞ்செய்து இவளைத் தரப் பெறுக எனக் குறிப்பிற் பெறவைத்து இப் பாட்டினை வழங்குகின்றார். ஏர்பரந்தவய னீர்பரந்தசெறுவின் நென்மலிந்தமனைப் பொன்மலிந்தமறுகிற் படுவண் டார்க்கும் பன்மலர்க் காவின் நெடுவே ளாதன் போந்தை யன்ன 5 பெருஞ்சீ ரருங்கொண் டியளே கருஞ்சினை வேம்பு மாரும் போந்தையு மூன்றும் மலைந்த சென்னிய ரணிந்த வில்லர் கொற்ற வேந்தர் வரினுந் தற்றக வணங்கார்க் கீகுவ னல்லன்வண் டோட்டுப் 10 பிணங்குகதிர்க் கழனி நாப்ப ணேமுற் றுணங்குகல னாழியிற் றோன்றும் ஓரெயின் மன்ன னொருமட மகளே. திணை : காஞ்சி. துறை: மகட்பாற் காஞ்சி. குன்றூர் கிழார் மகனார் பாடியது. உரை : வண்தோட்டுப் பிணங்கு கதிர் கழனி நாப்பண் - வளவிய தோட்டினையும் ஒன்றோடொன்று தம்மிற் பின்னிக் கிடக்கும் கதிர்களையுமுடைய கழனிகட்கு நடுவே; ஏமுற்று உணங்கு கலன் ஆழியின் தோன்றும் - கரையிற் பிணிக்கப்பட்டு உலர்ந்து தோன்றும் மரக்கலமும் கடலும்போலக் காட்சி யளிக்கும்; ஓர் எயில் மன்னன் ஒரு மடமகளே - ஒற்றை மதில் சூழ்ந்த நகரிடத் தேயுள்ள வேந்தனுடைய இளையளாகிய ஒரு மகள்; ஏர் பரந்த வயல் - ஏர்கள் உழுத வயல்களையும்; நெல் மலிந்த மனை - நெல் நிரம்பிய வீடுகளையும்; பொன் மலிந்த மறுகின் - பொன் நிறைந்த தெருக்களையும்; படுவண்டு ஆர்க்கும் பன்மலர்க் காவின் - மொய்க்கின்ற வண்டுகள் ஒலிக்கும் பலவாகிய மலர் களையுடைய சோலைகளையுமுடைய நெடுவேள் ஆதன் போந்தை யன்ன - நெடுவேள் ஆதன் என்பானது போந்தை யென்னும் ஊரைப்போன்ற; பெருஞ்சீர் அருங்கொண்டியள் - பெருத்த சீருடனே அரும்போர் உடற்றிப் பகைவரிடத்தே கொண்ட செல்வமுடையவளாவள்; கருஞ்சினை வேம்பும் - கரிய கொம்புகளையுடைய வேப்பமாலையும்; ஆரும் - ஆத்தி மாலையும்; போந்தையும் மூன்றும் - பனந்தோட்டு மாலையு மாகிய மூன்றையும்; மலைந்த சென்னியர் - சூடிய தலையை யுடையராய்; அணிந்த வில்லர் - வரிந்து கட்டப்பட்ட வில்லை யுடையராய்; கொற்ற வேந்தர் வரினும் - வெற்றி மிக்க முடி வேந்தர் மூவரும் மகட்கொடை வேண்டி வந்தாலும்; தன் தக வணங்கார்க்கு ஈகுவனல்லன் - தன் தகுதிக்கேற்பத் தன்னை வணங்கி இரந்து கேட்டார்க்கல்லது இவள் தந்தை இவள் மகட்கொடை நேரான்; எ-று. பள்ளப்பாங்கான நன்செய் வயலென்றும், மேட்டுப் பாங்கு செறுவென்றும் தெரிந்துணர்க. வயலும் செறுவும் மனையும் மறுகும் காவுமுடைய போந்தையென இயையும், பெருஞ்சீரும் அரிய போர் செய்து பகைவரிடத்தே கொண்ட பெருஞ் செல்வமும் தன் மகட்குத் தந்தையால் தரப்படுதலின், “பெருஞ் சீரருங் கொண்டியள்” என்றார்; இனி, பெரிய சீருடனே கோடற் கரிய கொள்மகளாயின ளெனினுமாம். கொள்மகள், மணந்து கோடற்குரிய செவ்வியெய்தினவள். ஓரெயிற்குக் கலனும், கழனிக்கு ஆழியும் உவமம். செல்லும் வலியழிந் தமையின் கரையிற் பிணிக்கப்பட்டிருக்கும், கலம், “ஏமுற் றுணங்கு கலன்” எனப்பட்டது. மருதஞ்சான்ற சீறூர் மன்னன் என்றதற்கு, “வண்டோட்டு.....ஓரெயில் மன்னன்” என்றார். சீறூர் மன்னனை ஓரெயில் மன்னனென்றலும் வழக்கு. “முரவு வாய் ஞாயில் ஓரெயில் மன்னன்” (அகம். 373) என்று பிறரும் கூறுவது காண்க. மன்னன் ஒரு மடமகள், அருங் கொண்டியள்; அவளை வேந்தர் வரினும் தன்தகவணங்கார்க் கீகுவனல்லன்; ஆதலால் மகட் கொடை வேண்டினோர் வணங்கிப் பெறுக என்பது குறிப்பு. விளக்கம் : போந்தையென்ற பெயருடைய வூர்கள் தமிழ்நாட்டில் பல பகுதிகளிலும் உள்ளன. இப் போந்தை யென்னும் ஊர் மிறைக் கூற்றத்துப் போந்தை யென்று கல்வெட்டுகளில் (A.R. No. 5 of 1920) கூறப்படுகிறது. குறும்பொறை நாட்டிலும் ஓய்மா நாட்டிலும் உள்ளவை பொற்போந்தை (S.I.I. Vo XII. No. 97) யென்றும், அரும்போந்தை (A.R. No. 33 of 1919) யென்றும் குறிக்கப்படுகின்றன. மிறைக்கூற்றத்துப் போந்தைக் கண்மையில் ஆதமங்கலம் (A.R. No. 193 of 1927-8) என்றோர் ஊர் இருத்தலால், நெடுவேளாதனது போந்தை மிறைக் கூற்றத்துப் போந்தையாதல் வேண்டுமென்று கருதப் படுகிறது. மிறைக்கூற்றம் திருப்பழனம் முதலிய வூர்களைத் தன்பால் உடையது. வேளிர் குடியிற் சிறந்து விளங்கியவன் என்பது தோன்ற, ஆதன் நெடுவேளாதன் எனப்படுகின்றான்; இவ்வாறு நெடுவேள் எனச் சிறப்பிக்கப்படுகிறவன், பொதினி நகர்க்குரியனும் வேளிர் தலைவனுமான ஆவி யென்பானவன்; அவன் நெடுவேள் ஆவி எனப்படுவது (அகம். 1) ஈண்டு நினைவு கூரத்தக்கது. வயலும் செறுவும் மனையும் மறுகும் கலமும் பிறவும் சிறப்பித்துக் கூறலின், இப் போந்தை அந்நாளில் மேன்மையுற்ற நகரமாக இருந்ததென்பது தேற்றம். மிளையும் அகழியுமாகிய அரண் பிற இல்லாமையின், “ஓரெயில்” என்றார். 339. மகட்பாற் காஞ்சி ஓரூரில் வாழ்ந்த தலைமகன் ஒருவனுடைய மகள் மணத்திற் குரிய செவ்வி யெய்தலுற்றாள். அவளது உருநலங்கண்ட வேந்தர் பலர் அவளை மணந்துகொள்ள முயல்வராயினர். மறக்குடியிற் றோன்றிய மாண்புடைய அவள் தந்தை தன்னோடொத்த மாண்புடையார்க்கே அவளை மகட் கொடை நேருங் கருத்தினனாய் இருந்தான். தந்தையின் கருத்துக்கேற்ப மகட் கொடை வேண்டும் வேந்தர் மாணாராயின் போர் நிகழும் என்பது ஒருதலை. இதனைக் கண்ட சான்றோர் ஒருவர், அப் பெண்ணின் இள நலமும் அவளை மணக்க விழையும் வேந்தர் மன விருப்பமும் அறிந்து, “ இவள் வேந்தர் உள்ளத்தைக் கவர்ந்துகொண்டாள்; அதனால் போர் நிகழுமென்பதையறிந்தும் அவள் அதனை விரும்புவாள் போன்றனள்; இவள் இன்னும் செவ்வி நிரம்பிற்றிலள்; அது நிரம்புதற்கு இவள் மேலும் பன்னாள் வளர்தல் வேண்டும்” என இப்பாட்டால் விரும்பிக் கூறியுள்ளார். இச் சான்றோர் பெயர் தெரிந்திலது. இப் பாட்டும் இடையிடையே சிதைந்துள்ளது. வியன்புலம் படர்ந்த பல்லா நெடுவேறு மடலை மாணிழ லசைவிடக் கோவலர் வீததை முல்லைப் பூப்பறிக் குந்து குறுங்கோ லெறிந்த நெடுஞ்செவிக் குறுமுயல் 5 நெடுநீர்ப் பரப்பின் வாளையொ டுகளுந்து தொடலை யல்குற் றொடித்தோண் மகளிர் கடலாடிக் கயம்பாய்ந்து கழிநெய்தற் பூக்குறூஉந்து பைந்தழை துயல்வருஞ் செறுவிற் றதைந்த 10 . . . . . . . . . . . கலத்தின் வளர வேண்டு மவளே யென்றும் ஆரம ருழப்பது மமரிய ளாகி முறஞ்செவி யானை வேந்தர் மறங்கெழு நெஞ்சம் கொண்டொளித் தோளே. திணை : காஞ்சி. துறை: மகட்பாற் காஞ்சி, குன்றூர் கிழார் மகனார் பாடியது. உரை : வியன் புலம் படர்ந்த பல்லா நெடு வேறு - அகன்ற புல் வளர்ந்த நிலத்திற் பரந்து மேய்ந்த பல ஆக்களோடு கூடிய நெடிய ஆனேறுகள்; மடலை மாணிழல் அசைவிட - பூக்களை யுடைய மரங்கள் பயந்த பெரிய நீழலில் தங்கி யசையிடாநிற்க; கோவலர் வீததை முல்லைப் பூப் பறிக்குந்து - கோவலர் பூக்கள் நெருங்கிய முல்லையினுடைய பூவைப் பறிக்கும்; குறுங்கோல் எறிந்த நெடுஞ்செவிக் குறுமுயல் - குறுகிய கோலால் எறியப் பட்ட நெடிய காதுகளையுடைய குறுமுயல், நெடுநீர்ப் பரப்பின் வாளையொடு உகளுந்து - ஆழ்ந்த நீர்நிலையிலுள்ள வாளை மீன்களோடு ஒப்பத் துள்ளித் தாவும்; தொடலை யல்குல் தொடித்தோள் மகளிர் - மேகலை யணிந்த அல்குலையும் தொடியணிந்த தோளையுமுடைய பெண்கள், கடலாடி - கடல் நீரில் விளையாடி; கயல் பாய்ந்து - கானற் சோலையிலுள்ள குளத்தில் மூழ்கி; கழி நெய்தற் பூக்குறூஉந்து - கழியிடத்துப் பூத்த நெய்தற் பூக்களைப் பறிக்கும்; செறுவில் ததைந்த வயலிடத்தே நெருங்கிய; பைத்தழை துயல் வரும் - பசிய தழை யசையும்; ......................கலத்தின் - .......................கலத்தைப்போல; அவள் என்றும் வளரவேண்டும் - எப்போதும் அவள் வளரவேண்டியவளாக இருத்தலை இவ்வூரவர் வேண்டாநிற்பர்; ஆரமர் உழப்பதும் அமரியளாகி - தன் பொருட்டு வேந்தர்கள் கடத்தற்கரிய போர்செய்வதை விரும்பினவள்போல்; முறஞ்செவி யானை வேந்தர் - முறம்போலும் செவியையுடைய யானைகளை யுடைய வேந்தர்களின்; மறங்கெழு நெஞ்சம் கொண்டொளித் தோள் - மறம் பொருந்திய நெஞ்சைக் கவர்ந்து புறத்தே எவரும் காணாவாறு ஒளித்துக்கொண்டாளாகலான்; எ-று. ஒளித்தாளாகலான், வளரவேண்டும் என வினைமுடிவு செய்க. ஒளித்தாள் என்புழி ஆகாரம் செய்யுளாகலின் ஓவாயிற்று. பறிக்கும், உகளும், குறூஉம் என வரும் செய்யுமென் வினை யிடத்து உம் உந்தாயிற்று. மடல் பூ பூக்களையுடைய மரம் மடலையெனப்பட்டது. நெட்டேறு, நெடு வேறு என வந்தது. ததைதல், நெருங்குதல்; செறிதலுமாம். “வீததை கானல்” (குறுந். 304) என்றாற்போல, மேய்ந்த நிரைகள் மரநீழலிற் றங்கி யசையிடாநிற்ப, கோவலர் வறிதிராது முல்லைப் பூக்களைப் பறித்துக் கண்ணி தொடுத்து அணிந்து மகிழ்வது இயல்பு. குறுமுயல் நிலத்திலும், வாளை நீர்ப்பரப்பிலும் உகளுமென வறிக. கடலாடிய உவர் நீங்கக் கயம் படிவது நெய்தல் நிலத்து நிகழ்ச்சி, நாடோறும் பெண்மை நலஞ்சிறந்து வருதலால், தன்னலம் விரும்பி வரும் வேந்தராற் போருண்டாதலை விரும்பினாள் போன்றாள் என்பார், “ஆரம ருழப்பதும் அமரிய ளாகி” யென்றார். யானையின் செவிக்கு முறம் உவமை; “முறஞ்செவி யானையுந் தேருமாவும்” (மணி. 19:121) என்பது காண்க. வேந்தரது மறங்கெழு நெஞ்சைக் கொண்டொளியாளாயின், அவர் மகட்கொடை வேண்டிப் போர்குறித் தெழாரென்பது கருத்து. வளர்ச்சி முற்றிய வழி வேந்தர் வருதலும் அதுவே யேதுவாகப் போருண்டா தலும் ஒருதலையாகலின், முற்றாத இளையளாகவே யிருத்தல் வேண்டு மென்பார், “வளர வேண்டுமவளே யென்றும்” என்றார். விளக்கம் : “செறுவிற்றதைந்த.....கலத்தின்” என இடம்விட்டே ஏட்டிலும் எழுதப்பட்டுளது. புலம்படர்ந்த நெடிய ஏறுகள் புல்லை மேய்ந்து மரநிழலிற் றங்கி அசைவிடாநிற்ப, மேய்க்கும் கோவலர் முல்லைப் பூவைப் பறித்தணிந்து கொள்ளாநிற்ப, குறுமுயல் கரையிடத்துத் தாவியோட, நீர்நிலையில் வாளைமீன் உகள, மகளிர் கடலாடிக் கழிகளிற் பூத்த பூக்களைப் பறித்துத் தழை தொடுத்தணிய இன்பமே நிலவும் ஊர் எனக் கொள்க. கலத்தின் வளரவேண்டும் என்றவிடத்து உவமப்பொருளை விளக்கும் தொடர்கள் விடுபட்டமையின், வளர வேண்டும் என்றதன் கருத்து விளங்கவில்லை. வரைய வேண்டும் என்று பாடமாயின், மகட்கொடையிரந்து பெற்று வேந்தர் தாம் மணக்கக் கருதும் கருத்தைக் கைவிடவேண்டும் என்றாதல், உற்றார்க்குத் தந்தை வரைவுடன்படுதல் வேண்டுமென் றாதல்உரைக்க. தந்தை தன்னையர் செயலால் வேந்தர் சேட்படுக்கப்பட்ட வழியும், விடாது மகட்கொடையை வேட்டவண்ணமிருத்தல் தோன்ற, “வேந்தர் மறங்கெழு நெஞ்சங்கொண்டு” என்றும், தான் கவர்ந்து கொண்ட திறத்தைப் புலப்படுத்தாது இல்லிடத்தே யொடுங்கினாளாகலின், “ஒளித்தோள்” என்றும் மறங்கெழு நெஞ்சத்தைக் கவர்ந்து கொண் டொளித் தமையின், அவ் வேந்தர் மகண் மறுத்தவழி மானம்பொறாது மறத்தீக்கிளரப் பொருவது ஒருதலையாதல்பற்றி, அறத்தொடு நின்று பெற்றோரை வரைவுடன்படுப்பதோ கொண்டு தலைக்கழிதற் குடம்படுவதோ செய்யாமையின். அவளை, “ஆரமருழப்பதும் அமரியளாகி” என்றும் கூறினார். அமர்தல், விரும்புதல். அமருழப்பது அவள் பொருட்டாகலின், “அமரியளாகி” என்றார். காதற் காமவயப் பட்டான் ஒருவன், காதலியை, “என்நிறையரு நெஞ்சங் கொண்டொளித் தோளே” (ஐங். 191) என்று கூறுதல் காண்க. 340. அள்ளூர் நன்முல்லையார் இவர் பெயர் இப் பாட்டின் குறிப்பில் பள்ளியூர் ஆசிரியர், திரு. கிருட்டினசாமி சேனை நாட்டரது கையெழுத்துப்படியிற் காணப்பட்டது. புறநானூற்று அச்சுப் படிகளுள் இப்பெயர் காணப்படவில்லை. இப் பாட்டின் சிலவடிகள் சிதைந்து விட்டன. மூதின் முல்லைத் துறைப் பாட்டொன்று இவர் பாடியதாக இத் தொகை நூற்கண் உள்ளதனை (புறம். 306) முன்பே கண்டோம். ஓடாப் பூட்கையையுடைய உரவுவேற் காளை யொருவன் வேந்தனொடு பொருதற்குச் செல்பவன் வெற்றி மேம்பட்டு மீள்வனென்ற துணிபால் அவன் மனைவி நடுகல்லைப் பரவுவதும், பரவுங்கால் தான் விருந்துபெற வேண்டும் எனவும் தன் கணவனும் வேந்தனும் வென்றிபெற வேண்டுமெனவும் கருதுவதும் இவரால் தேனொழுகப் பாடப்பெற்றிருப்பது நம் நினைவுக்கு வருகிறது. அப்பாட்டின் சிதைவு எவ்வாறு நம் உள்ளத்தே வருத்தத்தை யெழுப்பிற்றோ அவ்வாறே இப் பாட்டின் சிதைவும் பெரு வருத்தத்தை எழுப்புகிறது. இப்பாட்டின்கண், மாந்தளிர் புரையும் மேனிநலஞ்சிறந்து இளமகளொருத்தியைக் கண்ட தலைவ னொருவன் அவளை மகட்கொடையாற் பெறக்கருதி அருகிருந்த சான்றோரை நோக்கி அவளுடைய பெற்றோர் திருவும் குடிமையும் பிறவும் கேட்கலுற்றானாக, அவற்கு, “இளமைச் செவ்வியும் மாமை நிறமும் உடைய இம் மகள் யார் மகளெனக் கேட்கின்றாய். யான் கூறுவதைக்கேள், இவள் தந்தை இவளைக் கருங்களிறு பெயர்க்கும் கைவேல் மன்னருக்குக் கொடைநேர்தல் வேண்டுமென வரைந்து கொண்டுள்ளான்” என்று கூறுவதைப் பாடியுள்ளார். அணித்தழை நுடங்க வோடி மணிப்பொறிக் குரலங் குன்றி கொள்ளு மிளையோள் மாமகள். . . . . . . . . . . யார்மகள் கொல்லென வினவுதி கேணீ 5 எடுப்பவெடாஅ. . . . . . . . . . . . . . . . . . . . . . மைந்தர் தந்தை இரும்பனை யன்ன பெருங்கை யானை கரந்தையஞ் செறுவிற் பெயர்க்கும் பெருந்தகை மன்னர்க்கு வரைந்திருந் தனனே. திணை : காஞ்சி. துறை: மகட்பாற் காஞ்சி. அள்ளூர் நன்முல்லையார் பாடியது. உரை : அணித் தழை நுடங்க ஓடி - இடையில் அணிந்த அழகிய தழை யுடை யசைய ஓடிச் சென்று; மணிப்பொறிக்குரலம் குன்றி கொள்ளும் - செம்மணிபோல நிறமும் பொறியுமுடைய குன்றிமணிக் கொத்துகளைத் தொகுக்கும்; இளையோள் மாமகள் - இளமைச் செவ்வியும் மாமை நிறத்தையும் உடையவள்; .....யார் மகள் கொல் என வினவுதி....... இவள் யாவர் மகள் என வினவுகின்றாய்! நீ கேள் - யான் கூறுவதனை நீ கேட்பாயாக; எடுப்ப எடாஅ ...... - தன் கையில் படையெடுக்க அதனை நேர்ந்து படையெடாத .............; ............மைந்தர் தந்தை - .............மைந்தர்களுக்குத் தந்தையானவன்; இரும்பனை யன்ன பெருங்கை யானை - கரிய பனைபோன்ற பெரிய கையையுடைய யானைகளை; கரந்தையஞ் செறுவிற் பெயர்க்கும் - கரந்தைக் கொடி படர்ந்த வயலின் கண்ணே நின்று பொருது வீழ்த்தும்; பெருந்தகை மன்னர்க்கு வரைந்திருந்தனன் - பெரிய ஆண்டகைமையினையுடைய வேந்தர்கட்கென வரைந்துள்ளான்; எ-று. குரல், கொத்து, பூவுந்தளிரும் கொண்டு இளமகளிர் தழை தொடுத்துத் தம் இடையில் அணிந்து கொள்வது மரபு. அழகுறத் தொடுத்தமை தோன்ற “அணித்தழை” யென்றார்; “அம்பூந் தொடலை யணித்தழை யல்குல்” (புறம். 341) என்று பிற சான்றோரும் கூறுதல் காண்க. இளைய மகளிரணிவரென்பதை, “இளையமாகத் தழையாயினவே” (புறம். 248) என்பதனா லறிக. மாநிறமுடைய மகளை மாமகள் என்றார். கரந்தைக் கொடிபடர்ந்த வயலிடத்தே தானைகள் தங்கிப் போர்செய்வதியல்பு. “காய்த்த கரந்தை மாக்கொடி விளைவயல், வந்திறை கொண்டன்று தானை” (பதிற். 40) என ஆசிரியர் காப்பியாற்றுக் காப்பியனார் கூறுதல் காண்க. விளக்கம் : கொத்துக் கொத்தாகக் காய்த்திருக்கும் குன்றிமணிகளைப் பறித்து விளையாடலை விரும்பும் இளமகள் என்றற்கு, “குரலங் குன்றி கொள்ளும் இளையோள்” என்றார். உருவும் நலனுங் கண்டு, அவன்பால் தன் கருத்தைச் செலுத்திநின்று வினவுதல் தோன்ற, “யார் மகள் கொல்லென வினவுதி” யென்று பெயர்த்தும் ஓதினார். இவள் தந்தை பெரிய வேந்தருள்ளும் யானையை வீழ்த்துவெல்லும் பெருவலியுடைய வேந்தர்க்கே இவளை மணஞ் செய்துதர வரைந் துள்ளான் என்பார், “பெருங்கை யானை பெயர்க்கும் பெருந்தகை மன்னர்” என்றார். யானையைப் பெயர்த்தற் கேதுவாகிய பெருவன்மை பெருந்தகை யெனப்பட்டது. தகை, அழகு, பெருவன்மையே வேந்தர்க்கு அழகும் தகுதியுமாம் என்றறிக. 341. பரணர் மகள் மறுத்தல் காரணமாக இருவரிடையே போர் நிகழும் திறமொன்றை ஆசிரியர் பரணர் இப் பாட்டின்கட் குறிக்கின்றார். ஒரு தலைவன்பால் அழகிய மகளொருத்தி நலஞ்சிறந்து விளங்கக் கண்ட வேந்தனொருவன் அவளைத் தனக்கு மகட்கொடை நேருமாறு வேண்டினான். தலைவனாகிய தந்தை மகட்கொடை மறுத்தான். வேந்தன் தன் வேட்கை மிகுதியால் அவனை இரந்து பின்னின்று குறைமொழிந்து கேட்டான். அதற்கும் அத்தந்தை கொடுத்தற்கு இசையவில்லை. வேந்தற்கு வெகுளி பெரிதாயிற்று. இருவர்க்கும் போர்மூண்டது. தந்தை தன் தானை மறவரைப் போர்க்குரியராமாறு பணித்து அவரவரும் போந்து போர்ப்பூப் பெற்றுக் கொள்ளுமாறு ஏவிவிட்டுத் தானும் போர்க்குச் செல்வான் நீர்நிலைக்கு நீராடச் சென்றான். வேந்தனும் இவ்வாறே தன் தானை மறவரைப் பணித்து மிக்க சினத்துடனே நாளை இம் மாமகளை மணம் புணரும் நாளாதல் ஒன்று; விழுப்புண்பட்டு மேம்படு வடுவுடன் விண்ணுலகுபுகும் நாளாதல் ஒன்று இரண்டினுள் ஒன்று நிகழ்தல் வேண்டுமென வஞ்சினம் மொழிந்து வாளைக் கையிற் கொண்டான். இவர் இவ்வகையராதலால். இவ்வூர் தனதுபேரழகை இழந்தழியும் போலும் என ஆசிரியர் பரணர் இரங்கிப் பாடுகின்றார். வேந்துகுறை யுறவுங் கொடாஅ னேந்துகோட் டம்பூந் தொடலை யணித்தழை யல்குல் செம்பொறிச் சிலம்பி னிளையோ டந்தை எழுவிட் டமைத்த திண்ணிலைக் கதவின் 5 அரைம ணிஞ்சி நாட்கொடி நுடங்கும் . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . புலிக்கணத் தன்ன கடுங்கட் சுற்றமொடு மாற்ற மாறான் மறலிய சினத்தன் பூக்கோ ளெனவேஎய்க் கயம்புக் கனனே 10 விளங்கிழைப் பொலிந்த வேளா மெல்லியற் சுணங்கணி வனமுலை யவளொடு நாளை மணம்புகு வைக லாகுத லொன்றோ ஆரம ருழக்கிய மறங்கிளர் முன்பின் நீளிலை யெஃக மறுத்த வுடம்பொடு 15 வாரா வுலகம் புகுத லொன்றெனப் படைதொட் டனனே குருசி லாயிடைக் களிறுபொரக் கலங்கிய தண்கயம் போலப் பெருங்கவி னிழப்பது கொல்லோ மென்புல வைப்பினித் தண்பணை யூரே. திணை : காஞ்சி. துறை: மகட்பாற் காஞ்சி. பரணர் பாடியது. உரை : வேந்து குறை யுறவும் கொடான் - வேந்தன் தானே வந்து குறையுற்று நின்று மகட்கொடை வேண்டினானாகவும் கொடா னாய்; அம்பூந் தொடலை அணித்தழை - அழகிய பூக்கள் விரவித் தொடுத்தலையுடைய அழகிய தழையினையும்; ஏந்துகோட்டு அல்குல் - உயர்ந்த பக்கத்தையுடைய அல்குலினையும்; செம் பொறிச் சிலம்பின் - செவ்விய பொறிகள் பொறிக்கப்பட்ட சிலம்பினையுமுடைய; இளையோள் தந்தை - இளையவட்குத் தந்தை யாயினான்; எழுவிட்டு அமைத்த திண்ணிலைக் கதவின் - கணைய மரத்தைக் குறுக்கிட்டமைத்த திண்ணிய நிலையை யுடைய கதவையும்; அரைமண் இஞ்சி - அரைத்த மண்ணா லமைந்த மதிலையும் நாட்கொடி நுடங்கும் - நாடோறும் பெற்ற வெற்றிக்குறியாக எடுத்த கொடியசையும்; .............புலிக்கணத் தன்ன கடுங்கண் சுற்றமொடு - ......புலிக்கூட்டத்தை யொத்த தறு கண்மையுடைய வீரர்சுற்றத்துடனே; மாற்றம் மாறான் - தான் கொண்ட வஞ்சின மாற்றம் தப்பானாய்; மறலிய சினத்தன் - போர்குறித்துண்டாகிய சினமுடையனாய்; பூக்கோள் என ஏஎய் - வீரரனைவரும் போந்து போர்ப்பூவைப் பெற்றுப் போர்க்கெழுந்தேகுமாறு பணித்துவிட்டு; கயம் புக்கனன் - நீராடற்குக் குளத்துக்குட் புகுந்தான்; குருசில் - வேந்தனாகிய தலைவன்; விளங்கு இழைப் பொலிந்த வேளா மெல்லியல் - விளங்குகின்ற இழைகளால் பொற்பு மிக்க மணமாகாத மெல்லிய இயல்பினையும்; சுணங்கணி வனமுலையவளொடு - சுணங்கு பரந்த அழகிய முலையினையுடைய அவளுடனே; மணம் புகு வைகல் - மணம் புரிந்து கொள்ளும் நாள்; நாளை யாகுதல் ஒன்று; நாளையேயாவது ஒன்று; ஆரமர் உழக்கிய மறம் கிளர் முன்பின் - கடத்தற்கரிய போரைச் செய்தற்குரிய மறத்தீக் கிளரும் வலி யினையும்; நீள் இலை எஃகம் மறுத்த உடம்பொடு - நீண்ட இலையையுடைய வேலாற் புண்ணுற்று வடுப்பட்ட வுடம் போடே, வாராவுலகம் புகுதல் ஒன்று - மேலுலகு புகுதல் ஒன்று, இரண்டனுள் யாதாயினும் ஒன்று ஆகுக; என - என்று வஞ்சினம் கூறி; படை தொட்டனன் - தன் படையைக் கையிலே ஏந்தினான்; ஆயிடை - அவ்விடத்து, மென் புலவைப்பின் இத் தண்பணையூர் - நன்செய் வயல்கள் பொருந்திய வூராகிய இந்தமருதநிலத்தூர்; களிறு பொரக்கலங்கிய தண்கயம் போல - நீராடும் களிறுகள் தம்முட் பொருவதால் கலங்கிச் சேறாகும் குளிர்ந்த குளம்போல; பெருங்கவின் இழப்பது கொல் - இருவரும் செய்யும் போரால் பெரிய தன் அழகை இழக்கும் போலும்; எறு. ஏந்து கோட்டல்குல், அணித்தழை யல்குல் என இயையும், தொடுத்தல், தொடலையென வந்தது. தொடலை, மாலையுமாம். செம்பொற் சிலம்பென்றும் பாடமுண்டு. பொறி, தொழிற்பாடு, எழு, கணையமரம். மண்ணை யரைத்துக் கல்லறுத்து இஞ்சி யெடுத்தல் முறையாதலால் “அரைமண் இஞ்சி” யென்றார். தமர் பிறரெனத் தெரியாது பகைவரைப் பொருதழிக்கும் தறுகண் மறவரைக் “கடுங்கண் சுற்றம்” என்றார். மறுத்த - மறுப்படுத்த; அறுத்த வென்றுமாம். துறக்க வுலகு வாராவுல கெனப்பட்டது; எதிர்காலத்தை வாராக் காலம் என்பது போல. நாட்டுக்கழகு தருவது அதன் பெருவளமாதலின், அதனைப் பெருங்கவின் என்றார். மென்புல வைப்பென்றும் பாடமுண்டு. தந்தை கொடானாய், மாறானாய், சினத்தனாய்க் கயம்புக் கனன்; குரிசில், நாளை ஆகுதல் ஒன்று, புகுதல் ஒன்று எனப் படை தொட்டனன். இத்தண்பணையூர் கவின் இழப்பது கொல்லோ எனக் கூட்டி வினைமுடிவு செய்க. விளக்கம் : ஒருவர்பாலுள்ள அரிய பொருளொன்றினைப் பெற விரும்பும் பிறர், உடையாரை வேண்டிப் பெறுவது முறை; விலை வரம்பிட வியலாததாயும் அவர்க்கன்றிப் பிறர்க்கே பயன்படுவதாயுமிருப்பின் அப் பொருளைப் பிறர் இரந்து குறையுற்றுத் தரப் பெறுவது வழுவாகாது; அதனால் அன்ன தன்மையளான மகளைப் பெற விரும்பிய பிறனொரு வேந்தன் குறையுற்றுக் கேட்டான் என்பார், “வேந்து குறையுறவும்” என்றும், கொடைக்குரிய மரபினையுடைய தந்தை கொடை மறுத்தான் என்பார். “கொடாஅன்” என்றும் கூறினார். வேந்தன் விழைந்த மகளை, தழையணிந்தியலும் அல்குலும் சிலம் பணிந்து பொலியும் இளமையும் உடையளெனச்சிறப்பித் தோதுதலின், தந்தை ஒருகால் தன் மகளது இளமை கூறிக் கொடை மறுத்தான் போலும் என எண்ணற்கிடமுண்டாகிறது மாற்றம், மாறுபட்டுரைக்கும் சொல்; இது வஞ்சினம் கூறுவது; போரிடையே எதிர்நின்று பொரும் வீரர் மாறுபட்டுரைக்கும் சொற்களுக்குத் தானும்மாறுபட்டுரைக்கும் உரையெனினும் அமையும். மாற்றம் மாறாமைக்குக் காரணம் மிக்க சினம் என்றற்கு “மறலிய சினம்” எனப்பட்டது. போர்க்குச் செல்லும் மறவர் நீராடி மாலையணிந்து ஒப்பனை செய்து கொண்டேகுவது மரபு. “மூதூர் வாயிற் பனிக்கயம் மண்ணி, மன்ற வேம்பி னொண் குழை மலைந்து, தெண்கிணை முன்னர்க் களிற்றின் இயலி, வெம்போர்ச் செழியனும் வந்தனன்” (புறம். 76) என்று பிறரும் இதனை எடுத் தோதுவது காண்க. ஒன்று மணமனை புகுதல், ஒன்று வாராவுலகம் புகுதல் இரண்டனுள் ஒன்று செய்தல் வேண்டுமென்ற உறுதியுடன் படையைக் கையேந்தினனென்றது மகட்கொடை வேண்டிய வேந்தனது துணிபு. இதனால் கடும்போர்நிகழ்தல் ஒருதலை யென்பதும், அதனால் உயிர்க்கேடும் பொருட்கேடும் உண்டாதல் தேற்றமென்பதும், கண்டு ஆசிரியர் இத் தண்பணையூர்” பெருங் கவின் இழப்பது கொல்லோ என இரங்கினார். 342. அரிசில் கிழார் மறக்குடியில் தோன்றிய தமிழ்மகள் ஒருத்தியின் நலங்கண்டான் ஒருகாளை, அவளை மணந்து கொள்ள விரும்பிச் சான்றோராகிய அரிசில் கிழாரைக் கண்டு உசாவினன். அவர் அவனது பெருவிதுப் புணர்ந்து “நெடுந்தகாய்! இவள் திருநயத்தக்க செவ்வியும் பண்பும் உடையளே. ஆனால், இவளுடைய தந்தை ஒரு தண்பணைக் கிழவன்; இவளை மணத்தல்வேண்டி வேந்தர் பலர் முயன்று இவளைப் பெறாராய்ப் பொருது தோற்றோடினர். போரிற் பலரைக் கொன்று குவித்த பெருமாட்சியுடையர் இவள்உடன் பிறந்தோர். நீ இதனையறிந்து செய்வன தேர்ந்து செய்வாயாக” என இப் பாட்டால் அவனைத் தெருட்டுகின்றார். கானக் காக்கைக் கலிச்சிற கேய்க்கும் மயிலைக் கண்ணிப் பெருந்தோட் குறுமகள் ஏனோர் மகள்கொ லிவளென விதுப்புற் றென்னொடு வினவும் வென்வே னெடுந்தகை 5 திருநயத் தக்க பண்பினிவ ணலனே பொருநர்க் கல்லது பிறர்க்கா காதே பைங்காற் கொக்கின் பகுவாய்ப் பிள்ளை மென்சேற் றடைகரை மேய்ந்துண் டதற்பின் ஆர லீன்ற வையவி முட்டை 10 கூர்ந லிறவின் பிள்ளையொடு செறூஉம் தண்பணைக் கிழவனிவ டந்தையும் வேந்தரும் பெறாஅ மையிற் பேரமர் செய்தலிற் கழிபிணம் பிறங்குபோர் பழிகளி றெருதா வாடக வைகலு முழக்கும் 15 மாட்சியர் மற்றிவ டன்னை மாரே. திணை : காஞ்சி. துறை: மகட்பாற் காஞ்சி. அரிசில் கிழார் பாடியது. உரை : கானக் காக்கைக் கலிச்சிற கேய்க்கும் - காட்டுக் காக்கையின் தழைத்த சிறகையொத்த; மயிலைக் கண்ணிப் பெருந்தோள் குறுமகள் - இருள்வாசிப்பூவாற் றொடுக்கப்பட்ட கண்ணியையும் பெரிய தோளையுமுடைய இளையவள்; இவள் ஏனோர் மகள்கொல் என விதுப்புற்று - இவள் மறப்பண்பில்லாத பிறருடைய மகளாவாள் போலும் எனக் கருதி வேட்கையால் விரைவுற்று; என்னொடு வினவும் வென்வேல் நெடுந்தகை - என்னைக் கேட்கும் வெற்றிபொருந்திய வேலையுடைய நெடுந் தகையே; திரு நயத்தக்க பண்பின் இவள் நலன் - திருமகளும் விரும்பத்தக்க நற்பண்புடைய இவளது நலம்; பொருநர்க் கல்லது பிறர்க்கு ஆகாது - போர்மறவர்க்குரியதேயன்றிப் பிறருக்கு எய்துவதரிது, பைங்கால் கொக்கின் பகுவாய்ப் பிள்ளை - பசிய காலையுடைய கொக்கினது அகன்ற வாயை யுடைய குஞ்சு; மென் சேற்று அடைகரை மேய்ந்து உண்டதற்பின் - மெத்தென்ற சேறு பொருந்திய அடைகரையில் மேயும் மீன்களை மேய்ந்துண்டபின்; ஆரல் ஈன்ற ஐயவி முட்டை - ஆரல்மீன் ஈன்ற ஐயவிக் கடுகுபோன்ற முட்டையையும்; கூர்நல் இறவின் பிள்ளையொடு பெறூஉம் - மிகவும் நல்ல இறாமீனின் குஞ்சுகளையும் தாய் தரப் பெற்றுண்ணும்; தண்பணைக் கிழவன் இவள் தந்தையும் - தண்ணிய மருதநிலத்தூர்களுக்குத் தலைவனாவன் இவளுடைய தந்தையும்; இவள் தன்னைமார் - இவளுடைய உடன்பிறந்தோர்களும்; வேந்தரும் பெறாமையின் - வேந்தர்களும் தாம் மகட்கொடை பெறாமையால்; பேரமர் செய்தலின் - பெரிய போரைச் செய்தலால்; கழிபிணம் பிறங்கு அழிபோர்பு - போரிற் கழிந்தோருடைய பிணக்குவியல் உயர்ந்த வைக்கோற் போராகவும், களிறு அழி எருதா - களிற்றியானைகள் வைக்கோலை மிதித்தொதுக்கும் எருது களாகவும்; வாள் தக - தமது வாளாண்மைக்கேற்ப; வைகலும் உழக்கும் மாட்சியர் - நாடோறும் வாளுழவு செய்யும் மாண் புடையராவர்; எ-று. காட்டுக் காக்கை. கள்ளிக் காக்கையெனவும் வழங்கும். மறமாண்புடைய தந்தை தன்னையரை எடுத்தோதுதலின், அஃதில்லாரை “ஏனோர்” என்றார். வேட்கை மிகுதியால் உள்ளத் தெழும் விரைவுத் துடிப்பு,விதுப்பெனப்படும்; அது கட்பார்வையிலும், சொற்செயல்களினும், மெய்ப்பட்டுத் தோன்றும். உருவும் குணமும் தொழிலும் அகப்படப் “பண்பு” என்றார் பொருநர், மறக்குடிப்பிறப்பும் பேராண்மையும் உடையராய், அவற்றால் பிறர்க்கு உவமமாகும் உயர்ந்தோர். ஐயவிபோலும் முட்டையை ஐயவி முட்டையென்றார். மகட் கொடை வேண்டியெழுந்த வேட்கை அது பெறாவழி வெகுளி யாய் மாறிப் போர் செய்தற்கண் செலுத்தலின். “பெறாமையின் பேரமர் செய்தலின் ” என்றார். நெடுந்தகை இவள் நலன், அல்லது, ஆகாது தந்தையும் கிழவன்; தன்னைமார் மாட்சியர் எனக் கூட்டி வினைமுடிவு செய்க. மற்று அசைநிலை. விளக்கம் : இருள்வாசிப் பூவினை இருவாட்சி யென்பதும் வழக்கு. இப்பூ இரவில் மலர்வது. இப் பூவாற் றொடுக்கப்பட்ட கண்ணியணிந் திருக்குமாறு தோன்ற, “மயிலைக் கண்ணி பெருந்தோட் குறுமகள்” என்றார். தோள் பெருத்திருத்தல் மகளிர்க்கு மாண்பு. “அகலல்குல் தோள் கண்ணென மூவழிப் பெருகி” (கலி. 108) என்று சான்றோர் கூறுவது காண்க. கேட்போனுடைய கட்பார்வையில், அவன் அவளை மறப்பண்பில் லாதார் மகள் எனக்கருதும் கருத்துநிலவக் காண்டலின், ஏனோர் மகள்கொல் இவள் என விதுப்புற்று வினவும் நெடுந்தகை யென்றார். விதுப்புறவும் வென்வேல் ஏந்தும் தகைமைவழிப் பிறந்த செருக்கும் அவன் கருத்துக்கு ஏதுவாயின. “திருநயத்தக்க பண்பின் இவள் ” என்றது, நீ விரும்புதல் பெரிதன்று என்றவாறு கொக்கின் பிள்ளை தானே மேய்ந்துண்டதோடமையாது ஆரல் முட்டையும் இறவின் பிள்ளையும் தாய் நல்கப் பெறுமென்றது, தாமாக மறம்மிக்கு மறலும் இவள் தன்னைமார் தந்தையால் மிக்க போர்ப் பயிற்சியுடைய ரென்பது குறித்தவாறு. 343. பரணர் திரு மிக்கதோர் ஊர்த்தலைவனை மகட்கொடை வேண்டிப் பலர் சென்று கேட்டனர். “அறிவு ஆண்மைகளால் ஒவ்வாரை என் மகளாகிய இவள் வரைந்து கொள்ளாள்: ஆதலால் நீவிர் மகட் கொடை வேண்டுதலைக் கைவிடுமின்” என்று சொல்லி மறுத்து விட்டான். இம்மறுப்பு வந்தோர் பலரையும் கீழோராக்கினமையின் அவர் உள்ளத்தே சினங்கொண்டு போர்க்கு ஆயத்தராயினர். அதனையறிந்த சான்றோராகிய பரணர், தந்தையின் மறுப்பால் அவ்வூர்க்குப் போரால் எய்தக்கூடிய துன்பத்தை யெண்ணி இப்பாட்டின்கண் இரங்கிக் கூறுகின்றார். மீனொடுத்து நெற்குவைஇ மிசையம்பியின் மனைமறுக்குந்து மனைக்குவைஇய கறிமூடையாற் கலிச்சும்மைய கரைகலக்குறுந்து 5 கலந்தந்த பொற்பரிசம் கழித்தோணியாற் கரைசேர்க்குந்து மலைத்தாரமுங் கடற்றாரமும் தலைப்பெய்து வருநர்க்கீயும் புனலங் கள்ளின் பொலந்தார்க் குட்டுவன் 10 முழங்குகடன் முழவின் முசிறி யன்ன நலஞ்சால் விழுப்பொருள் பணிந்துவந்து கொடுப்பினும் புரைய ரல்லோர் வரையல ளிவளெனத் தந்தையுங் கொடாஅ னாயின் வந்தோர் வாய்ப்பட விறுத்த வேணி யாயிடை 15 வருந்தின்று கொல்லோ தானே பருந்துயிர்த் திடைமதிற் சேக்கும் புரிசைப் படைமயங் காரிடை நெடுந லூரே. திணை : காஞ்சி. துறை: மகட்பாற் காஞ்சி. பரணர் பாடியது. உரை : மீன் நொடுத்து நெல் குவைஇ - மீன்களை விற்று விலைக்கு மாறாகப் பெற்ற நெற்குவைகளால்; மனைமிசை யம்பியின் மறுக்குந்து - வீடும் உயர்ந்த தோணிகளும் பிரித்தறியவாராத படி காண்பார் மயங்கச் செய்யும்; மனைக் குவைஇய கறி மூடையால் - மனையிடத்தே குவிக்கப்பெற்ற மிளகு மூடைகள்; கலிச் சும்மைய கரை கலக்குறுந்து - ஆரவாரத்தையுடைய கரையினின்றும் பிரித்தறியவியலாதபடி காண்பார் மயங்கச் செய்யும்; கலந்தந்த பொற்பரிசும் கழித்தோணியால் கரை சேர்க்குந்து - கலங்கள் கொணர்ந்த பொன்னாகிய பொருள்கள் கழிகளில் இயங்கும் தோணிகளால் கரை சேர்க்கப்படும்; மலைத் தாரமும் கடல்தாரமும் தலைப்பெய்து - மலைபடு பொருளும் கடல்படு பொருளும் கலந்து; வருநர்க்கீயும் - இரவலராகிய வருவார்க்கு அளிக்கும்; புனலங் கள்ளின் - தண்ணீர் போலக் கள்ளை மிகுதியாகவுடைய; பொலந்தார்க் குட்டுவன் - பொன் மாலை யணிந்த குட்டுவனுடைய; முழங்கு கடல் முழவின் முசிறியன்ன - முயங்குகின்ற கடலாகிய முழவையுடைய முசிறி நகரத்தையொத்த; நலஞ்சால் விழுப்பொருள் பணிந்துவந்து கொடுப்பினும் - நலஞ்சான்ற உயர்ந்த பொருள்களைக் கொண்டுவந்து உவகையுடன் கொடுத்தாலும்; இவள் புரையர் அல்லோர் வரயலள் என - இவள் ஒப்போரும் உயர்ந்தோரும் அல்லாதாரை மணந்துகொள்ளாள் என்று சொல்லி; தந்தை யும் கொடான் - தந்தையும் கொடுக்கமாட்டான்; ஆயின் - இதனை ஆராயுமிடத்து; வந்தோர் - மகட்கொடை வேண்டி வந்தவர்கள்; பருந்து உயிர்த்துச் சேக்கும் இடைமதிற் புரிசை - பருந்து இளைப்பாறியிருக்கும் இடைமதில் பொருந்திய புரிசையும்; படை மயங்கு ஆரிடை - படை யேந்திய மறவர் நின்று காக்கும் அரிய வழிகளையுமுடைய; நெடுநல் ஊர் - நெடிய நல்ல வூரின்கண்; வாய்ப்பட இறுத்த ஏணி - அரண் கொள்ளுதற் பொருட்டு மேலேறுதற்கு வழியுண்டாகச் சார்த்திய ஏணிகள்; வருந்தின்று கொல் - வருந்தும் போலும்; எ-று. நொடுத்தல், விலைக்கு விற்றல். மீனை நெல்லுக்கு விற்றலின், “மீனொடுத்து நெற்குவைஇ” யென்றார். உயர்ந்த அம்பிகளும் மனைக் கூரைகளும் தம்மில் ஒத்து விளங்குதலின், வேறு பாடறிய இயலாமையின், “மறுக்குந்து” என்றார். உம் உந்தாயிற்று. பழைய வாய்க் கடலிற் செலுத்துதற்காகாது கெட்ட அம்பிகளை நிறுத்தி அவற்றின் மேற் குவித்த நெற்குவையும் மனைக்கூரையும் வேறுபாடறிய வாராத படிமறுக்கஞ் செய்யுமெனவுரைப் பினுமமையும். அவ்வகையில், மிசை நெற்குவை யென இயைத்து மேலே நெல்லைக் குவித்தலாலென வுரைக்க. கறி மூடையும் கடற்கரையும் தம்மில் ஒத்துக் காண்பார் காட்சியைக் கலக்கும் என்றற்குக். “கறி மூடையாற் கரைக் கலக்குறுந்து” என்றார். மூடைகளை ஏற்றலும் இறக்குதலும் செய்தலால் ஆரவாரம், உண்மை யுணர்க. பொன்னாகிய பொருள் பரிசமாயிற்று. தாரம் - பண்டங்கள். ஈண்டுக் குட்டுவனென்றது, கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவனை யென்றறிக. கடல் முழங்கு முழவின் முசிறியென இயைத்துக் கடல்போல் முழங்கும் முழவினை யுடைய முசிறி யெனினுமாம். புரைதல், உயர்தலும் ஒத்தலுமாம் வாய்ப்பட - வழியுண்டாக. பருந்துயிர்த்துச் சேர்க்கும் என்பதைப் பருந்து தங்கி உயிர்க்குமெனக் கொள்ளினுமமையும். உயிர்த்தல், இளைப்பாறுதல். உழிஞைப்போர் நிகழ்தல் ஒருதலையென்பார் “ஏணி வருந்தின்று கொல்” என்றார். அரண் கோடற்குச் சார்த்திய ஏணி அசைவின்றி நிலை பெறத் தாங்குதல்பற்றி “இறுத்த ஏணி” யெனல் வேண்டிற்று. மறவர் பலரும் ஏறிப் பொருதலின், விரைவுதோன்ற “வருந்தின்று கொல்லோ” என இறந்த காலத்தாற் கூறினார் மறுக்கும், கலக்கும், சேர்க்கும் முசிறி, குட்டுவன் முசிறி, முழவின் முசிறி யென இயையும்; ஈயும் குட்டுவன் என முடிக்க. கொடுப்பினும், தந்தையும் கொடான். ஊர்க்கண் வந்தோர். இறுத்த ஏணி வருந்தின்று கொல்லோ எனக் கூட்டி வினை முடிவு செய்க. ஏணியை எல்லையாக்கி ஏணிக்கும் ஊர்க்கும் இடையிலுள்ள நிலம் வருந்தின் றென்றுரைப்பினுமாம். விளக்கம் : மகட்கொடை நேர்தற்பொருட்டு நலமெல்லாம் நிறைந்த விழுமிய பொருளைக் கொடுப்பினும் இவள் தந்தைகொடான் என்பது கூறவந்த ஆசிரியர், “நலஞ்சால் விழுப்பொருள் ” பெறலாகும் இடம் இஃது என்பார், குட்டுவனது முசிறி நகரை விதந்து விரித் துரைத்தார். மீன் விற்போர் ஈட்டிய நெல்லும். மனையவர் தொகுத்துக் கலத்திலேற்றி வெளிநாடுகட்கு விடுதற்குக் கடற்கரையில் தொகுத்த கறி மூடையும், வெளிநாடுகளிலிருந்து கலங்களில் வந்து கரையிற் றொகுக்கப்பட்ட பொன்னும் முசிறி நகரின் நலஞ்சால் விழுப்பொருள் உடைமையை விளக்குகின்றன. கடலில் நிற்கும் கலத்திலிருந்து பொற்பரிசம் கழித் தோணியால் கரைசேரும் என்றாராயினும், கழியாய் ஆண்டுப் பயன்பட்டது சுள்ளியாறு எனக் கொள்க. “சேரலர், சுள்ளியம் பேரியாற்று வெண்ணுரை கலங்க யவனர்தந்த வினைமாணன் கலம், பொன்னொடு வந்து கறியொடு பெயரும் வளங்கெழு முசிறி” (அகம். 149) எனப்பிறரும் கூறுவது காண்க. குட்டநாடு மலை வளமும் கடல் வளமுமாகிய இரண்டுமே யுடையதாகலின். குட்டுவன், தன்பால் வருவோர்க்கு “மலைத் தாரமும் கடற்றாரமும் தலைப்பெய்து” நல்குவன் என்றார். விழுப்பொருள் கொடுப்போன் “பணிந்து வந்து” கொடுத்தல் வேண்டாவாயினும், அப் பொருளினும் சிறந்தவள் “மகள்” என்பது தேர்ந்தமையும், விழுப்பொருளோடு பணிவு தோற்றுவிப்பின், தந்தை மகட்கொடைக்கு உடன்படுவன் எனவுணர்ந்தமையும் தெரிய நின்றன. “நெடுநல்லூர்” என்று சிறப்பித்தது, அதற்கு உளதாக இருக்கும் கேட்டினை நினைந்தெனக் கொள்க. 344. அண்டர் நடுங்கல்லினார் இவர் பெயர் அடை நெடுங்கல்லினாரென்றும், அண்டர் நடுங்கல்லியார். அடை நெடுங் கல்லியாரென்றும் காணப்படுகிறது. இப் பாட்டு இடையிற் சில அடிகள் சிதைந்துள்ளது. அதனால் பொருள் முடிவு தெளிய விளங்கவில்லை. திணையும் துறையும் முன்னைப் பாட்டுக்களிலுள்ளனவே என்பதனால், மகட்கொடை பற்றியது இப்பாட்டு என்று அறியலாம். கொடை நேர்ந்தவழி மகளைப்பெற்ற தந்தை மிக்க பொருளும் மருத நிலத்தூர்களும் தரப்பெறுவனென்பதும் நேராது மறுத்தவழிப் போர்தோன்றி ஊரை யழிக்குமென்பதும் உணரப்படுகின்றது. செந்நெ லுண்ட பைந்தோட்டு மஞ்ஞை செறிவளை மகளி ரோப்பலிற் பறந்தெழுந்து துறைநணி மருதத் திறுக்கு மூரொடு நிறைசால் விழுப்பொரு டருத லொன்றோ 5 புகைபடு கூரொரி பரப்பிப் பகைசெய்து பண்பி லாண்மை தருத லொன்றோ இரண்டினு ளொன்றா காமையோ வரிதே காஞ்சிப் பனி முறி யாரங் கண்ணி.......... கணிமே வந்தவ ளல்குலவ் வரியே. திணை : காஞ்சி. துறை: மகட்பாற் காஞ்சி. அண்டர் நடுங்கல்லினார் பாடியது. உரை : செந்நெல் உண்ட பைந்தோட்டு மஞ்ஞை - செந்நெற்கதிர் களை யுண்ட பசிய சிறகையுடைய மயில்; செறிவளை மகளிர் ஓப்பலின் - செறிந்த வளையணிந்த இளமகளிர் ஓட்டுவதால்; பறந்தெழுந்து - பறந்து சென்று; துறைநனி மருதத்து இறுக்கும் ஊரொடு - துறைக்கணித்தாக நிற்கும் மருதமரத்தில் தங்கும் ஊர்களுடனே; நிறைசால் விழுப்பொருள் தருதல் ஒன்று - நிறையமைந்த விழுமிய பொருள்களைக் கொணர்ந்து தருவது ஒன்று, பகைசெய்து புகைபடு கூர் எரி பரப்பி - பகைமை மேற் கொண்டு புகையெழும் மிக்க தீயானது ஊர்களிற் பரந்தெரியக் கொழுவி; பண்பில் ஆண்மை தருதல் ஒன்று - அருட் பண்பில்லாத மறச் செயல் செய்வது ஒன்று; இரண்டனுள் ஒன்றாகாமை அரிது - இவ்விரண்டினுள் ஒன்று உளதாதல் ஒருதலை; காஞ்சிப் பனிமுறி ஆரம் கண்ணி - காஞ்சியினது குளிர்ந்த தளிருடனே ஆத்திப்பூவை விரவித் தொடுத்த கண்ணி ............ கணி மேவந்தவள் - வேங்கைத் தாதினை விரும்பும் இளையவளுடைய; அல்குல் அவ்வரி - அல்குலிடத்தே பரந்த அழகிய வரிகள்; எ று. இப் பாட்டில் சில அடிகள் சிதைந்து போனமையின் பிற்பகுதியின் பொருணிலை விளங்கவில்லை. செறிவளை மகளிரெனவே இளையவரென்பது பெறுதும். நீர்த்துறைக் கணிமையில் மருதம், நிற்கும் “துறைநணி மருதமேறி” (பதிற். 27) என்றும். “மருதிமிழ்ந் தோங்கிய பெருந்துறை” (பதிற். 23) என்றும் சான்றோர் விளம்புதல் காண்க. நிறுக்கப்படும் பொன்னும் பொருளும் அடங்க “நிறைசால் விழுப்பொருள்” என்றார். பெண்ணின் நிறையளவு பொன்னும் நிறுத்துத் தரப்படும் என அறிக; பண்பில் ஆண்மையாவது, மக்கட் பண்பாகிய அருளும் அறமும் இன்றிக் கொலை விலங்கு போல உயிர்கட்குத் தீமை தருவது. இஃது இழித்தக்கதாயினும் மேற்கொண்டு செய்யப்படுமென்பார், “பண்பிலாண்மை தருதல் ஒன்றோ” என்றார்; ஒரு மகளைக் கொள்வோன், அவளுடைய தந்தை தன்னையரைக் கொன்று, அவள் பிறந்த வூரையும் மனையையும் தீக்கிரையாக்கிக் கோடல் பெரிய தொரு பண்பில் செயலாதலின், அதனைத் தனக்கு ஆண்மையாக மேற்கொண்டு செய்தல், பண்பிலாண்மையாதல் காண்க. ஆர், ஆத்தி; அஃது அம்முப் பெற்று ஆரம் என வந்தது. முலை முற்றத்தணிந்த சந்தனக்குழம்பு புலர்வது குறித்து வேங்கையின் நுண்ணிய தாதினை அப்பிக்கொள்வதில் இளமகளிர்க்கு விருப்பு மிகுதியாதல்பற்றி, “வேங்கை மேவந்தவள்” என்றார். வேங்கை மரத்திலிருந்து பூப்பறித்து விளையாடும் விருப்ப முடைமை தோன்ற இவ்வாறு கூறினாரெனினுமையும். மேவருதல், விரும்புதல்; முறி - தளிர். விளக்கம் : செறிவளை மகளிர், மனையுறையும் பெண்டிர், இவர்கள் தாம் உணக்கிய நெல்லை மயில் கவர்ந்துண்ணுமிடத்து அதனைக் கடிவர்; அக்காலை மயில் பறந்து சென்று நீர்த்துறையிடத்து நிற்கும் மருத மரத்தில் தங்கும் என்றது, அவ்வூரிடத்து இளமகளிரை விரும்பும் இளையர் கொண்டுதலைக்கழிதல் முதலிய களவுத்துறையில் ஈடுபடவியலாவண்ணம் காவல் மிக வுடையரென்று கூறியவாறாம். ஆகவே அவர்கள் விழுப்பொருள் தருவதோ, அன்றி பண்பி லாண்மை தருவதோ இரண்டினுள் ஒன்றைச் செய்தலல்லது விரும்பும் மகளிரைப் பெறலாகாதென்பது வலியுறுத்தப்பட்டது. செந் நெல் பைந்தோடு உண்ட மஞ்ஞை யென மாறியியைத் துரைப்பினும் அமையும். அகன்ற அல்குலிடத்து வரிபரந்திருத்தல் அழகு ஆதனாற்றான், “அல்குல் அவ்வரி” யென்றார். அல்குல், இடைக்கும் முழந்தாளுக்கும் இடைப்பகுதியாகும். 345. அண்டர் நடுங்கல்லினார் மறக்குடித் தலைவன் ஒருவன் மகள் திருமணத்துக்குரிய செவ்வி யெய்தியிருந்தாளாக, அவளை நயந்து மகட்கொடை வேண்டிச் சீறூர் வேந்தரும் பேரூர் வேந்தருமாகிய பலர் அவள் தந்தைபால் வந்தனர். அவர்களை “நிரலல் லோர்க்குத் தரலோ இல்” என்று கூறி மறுத்தான். அவள் தந்தை உற்றார்க்குரியர் பொற்றொடி மகளிர் என்பது கொண்டு யாவரேனும் ஒருவர்க்கு மகட்கொடை நேரச் சமைந்தானாயினும், அவளுடைய தன்னையர் மகள் வேண்டி வந்தோரது நிரலுடைமையைக் கூர்ந்து நோக்கும் குறிக்கோள்கொண்டு மகட்கொடை மறுத்தலில் முற்பட்டிருந்தனர். மகட் கொடை வேண்டி வந்தோர் பெரும்பொருள் நல்குவதாகக் கூறியவழியும் நிரலுடைமை நோக்கி மறுப்பதே அத் தன்னையர் செய்தனர். இது கண்டார் சான்றோராகிய அண்டர் நடுங் கல்லினார். வந்த வேந்தர்களின் பெருமையும் தன்னையரின் தறு கண்மையும் இவர்களாற் போர் நிகழ்ந்தவழி அவ்வூர்க்குளதாகும் தீமையும் தூக்கி நோக்கி இப் பாட்டால் இரங்கிக் கூறுகின்றார். களிறணைப்பக் கலங்கின, காஅ தேரோடத் துகள்கெழுமின, தெருவு மாமறுகலின் மயக்குற்றன. வழி கலங்கழா அலிற், றுறை கலக்குற்றன 5 தெறன்மறவ ரிறைகூர்தலிற் பொறைமலிந்து நிலனெளிய வந்தோர் பலரே வம்ப வேந்தர் பிடியுயிர்ப் பன்ன கைகவ ரிரும்பின் ஓவுற ழிரும்புறங் காவல் கண்ணிக் 10 கருங்கண் கொண்ட நெருங்கல் வெம்முலை மைய னோக்கிற் றையலை நயந்தோர் அளியர் தாமேயிவ டன்னை மாரே செல்வம் வேண்டார் செருப்புகல் வேண்டி நிரலல் லோர்க்குத் தரலோ வில்லெனக் 15 கழிப்பிணிப் பலகையர் கதுவாய் வாளர் குழாஅங் கொண்ட குருதியம் புலவொடு கழாஅத் தலையர் கருங்கடை நெடுவேல் இன்ன மறவர்த் தாயினு மன்னோ என்னா வதுகொ றானே 20 பன்னல் வேலியிப் பணைநல் லூரே. திணை : காஞ்சி. துறை: மகட்பாற் காஞ்சி. அண்டர் நடுங்கல்லினார் பாடியது. உரை : தெறல் மறவர் இறை கூர்தலின் - பொருதலை யியல் பாகவுடைய மறவர் வந்து தங்குதலால்; கா களிறு அணைப் பக்கலங்கின - காவிலுள்ள மரங்களில் களிறுகளைக் கட்டுவதால் அவற்றால் திமிரப்பட்டு நிலைகலங்கின; தேர்ஒட தெருவு துகள் கெழுமின - தேர்கள் செல்லுவதால் தெருக்கள் புழுதியால் நிரம்பின; மா மறுகலின் வழி மயக்குற்றன - குதிரைகள் சாரி போவதால் வழிகள் உருத்தெரியாது மறைந்தன; கலம் கழாஅலின் துறை கலக்குற்றன - படைக்கலங்களைக் கழுவுவதால் நீர்த் துறைகள் குழம்பிவிட்டன; பிடி உயிர்ப்பன்ன கைகவர் இரும்பின் - பிடியானை மூச்சுவிட்டாற்போலக் காற்றுவிடும் கைகோப்புப் பொருந்திய உலைத்துருத்தியின் வாயிரும்பு போலும்; ஓவுறழ் இரும்புறம் - இரட்டைக் கதவமைந்த சுருங்கை வழி; காவல் கண்ணி - காக்கப்படுவது கருதி; வம்ப வேந்தர் - புதியரான வேந்தர்கள்; பொறை மலிந்து நிலன் நெளிய - சுமை மிகுவதால் நிலமும் சுளியும் படியாக; வந்தோர் பலர் - வந்தவர் பலராவர்; கருங்கண் கொண்ட நெருங்கல் வெம்முலை - கரிய கண்ணை யுடைய நெருங்கிய விருப்பத்தையுண்டாக்கும் முலைகளையும்; மையல் நோக்கின் கண்டார்க்குப் பேதுறவு விளைக்கும் பார்வையினையுமுடைய; தையலை நயந்தோர் அளியர் - பெண்ணை விரும்பியவர்கள் அளிக்கத்தக்கவராவர்; இவள் தன்னைமார் - இவளுடைய அண்ணன் மாராகிய உடன் பிறந்தோர்; நிரல் அல் லோர்க்குத் தரலோ இல்லென - குடிமை ஆண்மை முதலியவற்றால் ஒவ்வாதாருக்குத் தருவதில்லை யென்று சொல்லி; செல்வம் வேண்டார் - மகள் வேண்டினோர் தரும் செல்வத்தை விழையாராய்; செருப்புகல் வேண்டி - போர் செய்வதையே விரும்பி; கழிப்பிணிப் பலகையர் - கழிகளாற் பின்னிக் கட்டப்பட்ட கேடயத்தையேந்தி; கதுவாய் வாளர் - வடுவினைச்செய்யும் கூரிய வாயையுடைய வாளேந்தி; குழாம் கொண்ட குருதியம் புலவொடு - கூட்டம் கொண்டு குருதி நாறும் புலால் நாற்றத்துடனே; கழாத்தலையர் - கழுவாத தலையுடையராயுள்ளனர்; கருங்கடை நெடுவேல் - வலிதாய்க் கடையப்பட்ட காம்பினையுடைய நெடுவேலேந்தும்; இன்ன மறவர்த்தாயினும் - இத்தகைய வீரர்களையுடையதெனினும்; அன்னோ - ஐயோ; பன்னல் வேலி - பருத்தி வேலி சூழ்ந்த; இப் பணை நல்லூர் - இந்த வளவயல் சூழ்ந்த நல்ல வூர்; என்னாவது கொல் - என்ன வாகுமோ,தெரிந்திலதே; எ-று. இறுத்தல் இறையென வந்தது. இறை கூர்தல் என்ற தொடர் ஒரு சொல்லாய்த் தங்குதல் என்னும் பொருள் குறித்துநின்றது. கா கலங்கின; தெருதுகள் கெழுமின, வழி மயக்குற்றன, துறை கலக்குற்றன, காவல் கண்ணி வந்த வம்ப வேந்தர் பலர்; தன்னைமார், வேண்டி, வேண்டாராய், பலகையராய், வாளராய், கழாத்தலையரா யுள்ளனர்; இன்ன மறவர்த்தாயினும், நல்லூர் என்னாவது எனக் கூட்டி வினைமுடிவு செய்க. கன்னி மாடத்துச் சுருங்கையாயினும் ஓவிய வேலைப்பாட்டால் மிக்கதென்பார். “ஓவுறழ் இரும்புறம்” என்றார். ஓவுறழ் இரும்புறம் என்றதற்குக் கதவுநின்றியங்கும் இரும்புறம் எனினுமமையும். சுருங்கை தூம்பு போறலின், அதன் கதவினை ஒவென்றாரென்று கொள்க. இரும்பின் இடையே கைவிரல் நுழைந்து கோத்துப்பிடி இயக்கப்படுவதுபற்றி, “கைகவர் இரும்பு” எனல் வேண்டிற்று. கைகவர் இரும்பின் இரும்புறம், ஓவுறழ் இரும்புறம் என இயையும். மையல் நோக்கு, காமச் செவ்வி தோன்றியது புலப்படுத்தும் நோக்கமென்றுமாம். தையல், ஒப்பனை செய்யப்படுபவள். கதுவாய் வாள், போரிற் பகைவரைத் தாக்கி வாய் மடிந்த வாள் என்றுரைப்பினுமமையும். வயிரமேறிய மரக்கட்டையைக் கடைந்த காம்பு கரிதாகலின், “இருங்கடை நெடுவே” லெனப்பட்டது. வேறலும் தொலைதலும் ஒருவர் பாங்கில் எப்போதும் நிற்பனவல்லவாதலின், “இன்ன மறவர்த் தாயினும் என்னாவது கொல்” என்றும் போர் விளைவு கருதி யிரங்குதலின், அன்னோ என்றும் கூறினார். “செல்வம் வேண்டார்” என்றதனால், செல்வமுடைமை நிரலுடைமைக்கு உறுப்பாகக் கொள்ளப்படாமை விளங்குகிறது. விளக்கம் : தையலை நயந்துவந்த வம்ப வேந்தர் பலர்; அவர் வருங்கால் களிறும் மாவும் தேரும் உடன் வருதலால், களிறு முதலியவற்றால் முறையே காவும், தெருவும்,வழியும், துறையும் கலங்கிப் பொலி வழிந்தன; மகள் வேண்டி வரும்போதே இவ்வூர்த் தெருவும் பிறவும் இன்ன கலக்க மெய்துமாயின் இவர்கள் போர்குறித்துவரின் இம்மக்களுடைய தந்தை தனையரின். களிறும் மாவும் தேரும் மறவர் தொகையும் உடன் கலந்து இயங்குமாதலால் இவ்வூரது நிலை சொல்லற்கரிய கலக்கமெய்து மென்பது தெளிய விளங்குவது கண்டு, “என்னாவது கொல்” என்றும், இவளுடைய தன்னையர் பலகையரும் வாளரும் தலையருமாதலால், இவ்வூர் கலக்கமெய்தாவாறு காக்கப் படுமன்றோ வெனின் காக்கப்படுமென்பது தெளிவேயெனினும், அதனையும் பொருதே செய்யவேண்டியிருத்தலின், “இன்ன மறவர்த் தாயினும்” என்றும் கூறினார். இதனையும் விலக்கலா மெனினும், தன்னையர், மகட்கொடை வேண்டி வந்த வேந்தர் நிரல் நன்குடையரல்லரென்றும் அவர்தரும் செல்வத்தைப் பெற்று தம்மோடுஒப்பக் கோடற்கொருப் படுகின்றிலரென்றும் விலக்கு வாராய் நிரல் அல்லோர்க்குத் தரலோ வில்லெனச் செல்வம் வேண்டார், செருப்புகல் வேண்டின” ரென்றார். நிரல் என்பதன் இயல்பை, “இளமையும் வனப்பும் இல்லொடு வரவும், வளமையுந் தறுகணும் வரம்பில் கல்வியும், தேசத்தமைதியு மாசில் சூழ்ச்சியோ, டெண்வகை நிறைந்த நன்மகற் கல்லது, மகட்கொடை நேரார் மதியோர்” (பெருங். 1:26: 89 - 93) என்று பிறரும் கூறுவதனால் அறிந்துகொள்க. மகட்பாற் காஞ்சிக்கு இதனைக் காட்டி, “நிரலல் லோர்க்குத் தரலோ வில்லென வென்றலின், அரசர்க்கு மகட்கொடைக் குரியரல்லாத அனைநிலை வகையோர்பாற் பட்ட” தென்பர் நச்சினார்க்கினியர்; (தொல், புறத். 24) 346. அண்டர் மகன் குறுவழுதியார் இக் குறுவழுதியார் அண்டர் நடுங்கல்லினார்க்கு மகனார் போலும். பாண்டி வேந்தர்க்கீழ் விளங்கிய தானைத்தலைவர்களும் ஏனைத் தலைவர்களும் பாண்டிவேந்தர் சிறப்புப் பெயர்களுட் சிலவற்றைத் தாமும் கொண்டிருந்தனர். இதனை இடைக்காலச் சோழ பாண்டியர்களின் கல்வெட்டுக்களிற் காணலாம். சடைய வன்மன் சுந்தரபாண்டியன் காலத்துக் கல்வெட்டொன்று (P.S. No. 492) ஒரு தலைவன் பெயரைச் சுந்தரபாண்டிய வாணாதிராயர் என்று குறிப்பது காணலாம். ஆதலால், இவரும் குறுவழுதி யென்ற பெயருடையராயினாரெனக் கருதலாம். பாண்டியர்க்குப் பெருவழுதி யென்ற பெயருண்டு; சிறு வழுதி யென்றலினும் குறுவழுதியென்பது சிறப்புடையதாதலின் இவர்குறுவழுதியெனப் பட்டார். இவர் பாடியனவாக அகத்தில் இரண்டு பாட்டுக்களும் குறுந்தொகையில் ஒரு பாட்டும் காணப்படுகின்றன. கருப்பொருள் களில் நெய்தலையும் உரிப் பொருளிற் குறிஞ்சியையும் இவர் பெரிதும் விரும்பிப் பாடுவர். இவர் மறக்குடி யொன்றில் தோன்றி மனச்செவ்வி யெய்திய மகளொருத்தியை நயந்து பலர் மகட் கொடை வேண்டி நின்றதும், அவளுடைய தந்தையும் தன்னையரும் மறுத்ததும் கண்டு, போர் நிகழ்தல் ஒருதலை யென்றும், அதனால் அவ்வூர் பெரும்பாழாம் என்றும் நினைந்து இப் பாட்டால் வருந்திக் கூறுகின்றார். பிறங்கிலை யினியுள பாலென மடுத்தலின் ஈன்ற தாயோ வேண்டா ளல்லள் கல்வியெ னென்னும் வல்லாண் சிறாஅன் ஒவ்வே னல்ல னதுவா யாகுதல் 5 அழிந்தோ ரழிய வொழிந்தோ ரொக்கற் பேணுநர்ப் பெறா அது விளியும் புன்றலைப் பெரும்பாழ் செயுமிவ ணலனே. திணை : காஞ்சி. துறை: மகட்பாற் காஞ்சி அண்டர் மகன் குறுவழுதியார் பாடியது. உரை : பிறங்கிலை இனி உளபால் என மடுத்தலின் - பசி தீரு மளவறியும் அறிவால் நீ முதிர்ந்தாயில்லை இனியும் சிறிது பாலுளது உண்க. என - வள்ளத்தை வாயில்வைத்து உண்பித்த லால்; ஈன்ற தாய் வேண்டாள் அல்லள் - இவளை யீன்ற தாயும் இதனை விரும்பாதாளல்லள்; வல்லாண் சிறாஅன் கல்வி யென் என்னும் - வல்லாண்மையுடைய இளையனாகிய இவள் தமையன் சிறிது கல்வியறிவுடையேன் என்று சொல்லா நின்றான்; ஒள் வேல் நல்லன் - ஒள்ளிய வேலேந்திப் பொரு தலில் நல்ல வீறுடையன் இவட்குத் தந்தை; ஒழிந்தோர் அழிய - பகைவரொடு பொருது கெட்டோர் ஒழிய; ஒழிந்தோர் ஒக்கல் - கெடாது மேம்படுவோர்க்கு உரிய சுற்றமாய்த் தலையளிசெய்வன்; இவள் நலன் - இவளது நலமோ எனின்; பேணுநர்ப் பெறாது விளியும் - விரும்புவோர் இல்லாது கெடும்; புன்றலைப் பெரும்பாழ் செய்யும் - புல்லிய இடமாகிய பெரிய பாழிடமாக இவ்வூரைச் செய்யும்; அது ஆகுதல் வாய் - அஃது உண்மையாதல் ஒருதலை; எறு. நீ உண்டற்குரிய பாலின் அளவை அறியும் அறிவு நிரம்பினா யில்லை; இன்னும் சிறிது பால் உளது; இதனை உண்க எனப் பரிந்துண்பித்தலால், ஈன்ற தாய்க்கும் இவள்பால் பேரன்பு உண்டு என வற்புறுத்தி யவாறு. பெருங்கல்வியுடையார்க் கல்லது “யானும் சிறிது கல்வியுடையே” னென்னும் பணிந்த மொழி பகரும் பண்பு உண்டாகாதாகலின், இவள் தமையனும் இவள்பால் மிக்க அன்பு செய்பவனாதல் விளங்குகிறது. இவ்வாறு தாயும் தமையனும் அவர் வாயிலாக ஊரவரும் தன்பால் பேரன்புடைவ ராகவும், இவளது நலம் இவரனைவரும் கெட ஊர் பாழ்படச் செய்வதாயிற்றென இரங்குவது தோன்ற, “பேணுநர்ப் பெறாது விளியும், புன்றலைப் பெரும்பாழ் செய்யும் இவள் நலன்” என்றும், இஃது ஒருதலை காண்க. என்பார், “அதுவாயாகுதல்” என்றும் கூறினார். இவள் நலம் பெரும்பாழ் செய்யும்; அஃதொருதலை அதனைப் பின்னர்க் கண்டுகொள்க என்பது குறிப்பெச்சம். சிறாஅனென்றது, தமையன் மேனின்றது. விளக்கம் : சிறிதாகிய நீரைச் சின்னீர் என்பது போலச் சிறிதள விற்றாகிய பால் சிலவெனப்படுவதுபற்றி உளபால் எனப் பண்மைவினை கூறப் பட்டது. ஈன்ற தாயது அன்பும், சிறாஅன் எனவே உடன் பிறந்தோனது அன்பும் கூறப்படவே, நல்லன் என்றது தந்தையாயிற்று. இனி, தாயையும் உடன்பிறந்தானையும் கூறலின். தந்தை முன்பே இறந்தொழிந் தானென்னும், வல்லாண் சிறான், ஒழிந்த தாய்க்கும் உடன் பிறந்தார் சுற்றத்தார் முதலியோர்க்கும் ஒக்கலாய் நின்று பேணு கின்றானென்றும் உரைப்பினு மமையும். ஒவ்வானல்லன் அதுவா யாகுதல் என்று கொண்டு புரையரல்லோர்க்கு இவளை மகட் கொடை நேர்தற்கு உடன்படுவானல்லன்; அஃது உண்மையாதல் காணப்படும் என்று உரைத்தலுமாம். இவள் நலங் குறித்து நிகழ விருக்கும் போரில், கெட்டு அழிபவர் அழிய, இறவாது எஞ்சுவோர்க்கு ஒக்கலாய் நின்று பேணுவார் ஒருவரும் இலராமறு இவ்வூர் பெரும் பாழாகும் எனினுமாம். நலங்காரணமாக நிகழும் போரால் விளையும் செயலை நலத்தின்மேலேற்றிக் கூறினார். தாய் அன்புடையள்; தந்தை ஒக்கல்; உடன்பிறந்தான் கல்வியென் என்னும்; மகள் நலன் பெரும்பாழ் செய்யும் என அவரவர் கூறுபாடும் வகுத்துரைத்தவாறு. 347. கபிலர் மகட்கொடை வேண்டிய வேந்தர் போந்து தம் போர்யானை களைக் காவிலுள்ள மரங்களிற் பிணித்திருப்ப, தந்தை மகள் மறுக்கும் கருத்தினனாய் இருத்தலைக் கபிலர் கண்டார். அவனது மறுப்பால் போர் நிகழுமெனக் கருதிய கபிலர் தந்தை மகட் கொடை நேரானாயின், இவ்வூர் போரால் வருந்துவது ஒருதலை; இவ் வேந்தருடைய யானைகள் பிணிக்கப்பட்டிருக்கும் மரங்கள் பருத்த அரையையுடைய வாயினும், யானைகளின் வலிக்கு ஆற்றாது துளங்குவன வாயின. ஆகவே, இவ்வூரும் பெருவருத்தம் எய்தும் போலும் என இரங்கி இப் பாட்டைப் பாடியுள்ளார். உண்போன் றானறுங் கள்ளி னிடச்சில நாவிடைப் பஃறேர்பு கோலச் சிவந்தாங் கொளிறொள் வாளடக் குழைந்தபைந் தும்பை எறிந்திலை முறிந்த கதுவாய் வேலின் 5 மணநாறு மார்பின் மறப்போ ரகுதை குண்டுநீர் வரைப்பிற் கூட லன்ன குவையிருங் கூந்தல் வருமுலை சேப்ப . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . வென்னா வதுகொ றானே நன்றும் 10 விளங்குறு பராரைய வாயினும் வேந்தர் வினைநவில் யானை பிணிப்ப வேர்துளங் கினநம் மூருண் மரனே. திணை : காஞ்சி. துறை: மகட்பாற் காஞ்சி. கபிலர் பாடியது. உரை : உண்போன் தான் நறுங்கள்ளின் சில இட - நறிய கள்ளையுண் பவன் அதற்குத் துணையாகச் சில வெஞ்சனங்களை அதன்கண் இட்டுண்ணுகையில்; பல் இடை நா தேர்பு கோல சிவந்தாங்கு - பற்களின் இடையே ஒட்டிக்கொண்டவற்றை நாவை அவற்றின் இடையில் தொடுத்துத் தேர்ந்து பல்லால் அரைபடுமாறு செலுத்துவதால் நாச் சிவப்பேறினாற்போல்; ஒளிறு ஒள் வாள் அட - சிவந்த ஒளிபொருந்திய வாள் எதிரேற்ற பகைவரை வெட்டுதலால்; குழைத்த பைந் தும்பை - சாம்பிய பசிய தும்பை மாலையினையும்; எறிந்து இலை முறிந்த கதுவாய் வேலின் - பகைவரை யெறிந்து இலை முறிந்து வடுப்பட்ட வாயையுடைய வேலினையும்; மணநாறு மார்பின் - சந்தனத்தின் மணங் கமழும் மார்பினையுமுடைய; மறப்போர் அகுதை - மறம் பொருந்திய போரைச் செய்யும் அகுதை யென்பானது; குண்டு நீர் வரைப்பின் கூடல் அன்ன - ஆழ்ந்த நீர்நிலைகளையுடைய இடமாகிய கூடல் நகரைப் போன்ற; குவை இருங் கூந்தல் - குவிந்த கரிய கூந்தலையுடையவளை; வருமுலை சேப்ப - தோன்றுகிற இளமுலை சிவக்கும்படி; .................; நம் ஊருள் மரன் - நம்முடைய ஊர்க்குள்ளேயிருக்கும் மரங்கள்; நன்றும் விளங்குறு பராரைய வாயினும் - பெரிதாய் விளங்குதல் பொருந்திய பருத்த அடியையுடைய வாயினும்; வேந்தர் வினை நவில் யானை பிணிப்ப - வேந்தர்கள் தம்முடைய போர் வினை பயின்ற யானைகளைக் கட்டுவதால்; வேர் துளங்கின - வேர்கள் தளர்ந்து அசையத் தொடங்கின வாதலால்; என்னாவது கொல் இவ்வூர் என்னாகுமோ எ-று. கள்ளுண்போர் இடையிடையே கறித்தற்பொருட்டு இஞ்சியும் இறைச்சி வற்றலும் மீனும் தின்ப. அவற்றுட் சில பற்களிடையே புகுந்து கொள்ளின் நாவாற் கோலுதலும், அதனாலும் இயலாதவழித் துரும்பு கொண்டு குத்தி யெடுத்த லும் இயல்பு. இவ்வகையில் பன்முறையும் பல்லிடை நுழைந்து சிவப்பேறுதல் கண்டு, அச் சிவப்பைக் குருதி தோய்ந்து விளங்கும் வாள் வாய்க்கு உவமம் கூறினார். கள்ளுண் போர் இடையே சிலவற்றை யுண்பரெ ன்பதை “இஞ்சி வீவிராய பைந்தார் பூட்டி” (பதிற். 43) என்பதன் பழைய வுரையிற் காண்க. அகுதை யென்பான் சங்கத் தொகை நூல்களில் காணப்படும் வள்ளல்களுள் ஒருவன். பெருங் காற்று மழை களால் தாக்குண்டும் பல்லாண்டு களாய்ச் சலியாது நின்று அடி பருத்திருப்பதால் “நன்று விளங்குறு பராரைய” என்றார் போர் செய்யும் துறையில் நன்கு பயின்ற யானைகளை “வினை நவில் யானை” யென்பது வழக்கு; செறுநர் செல்சமந் தொலைத்த வினை நவில் யானை”(பதிற். 82) எனச் சான்றோர் வழங்குவது காண்க. “ஊருள் மரம் வேர் துளங்கின” வெனவே, ஊரழிதல் சொல்ல வேண்டாமையின் என்னாவது கொல் என்றார் தானே என்பது கட்டுரைச்சுவை குறித்து நின்றது. இடையே அடிகள் சில சிதைந்தமையின், பொருண்முடிவு விளங்கவில்லை. நறுங்கள்ளின் சில இட, உண்போன், பல்லிடை நாதேர்பு கோலச் சிவந்தாங்கு ஒளிறு வாள் அடக் குழைந்த தும்பையும், வேலும் மார்புடைய அகுதையது கூடலன்ன கூந்தலுடையாள் என இயையும். மரன் பராரைய வாயினும், வேந்தர் யானை பிணிப்ப, வேர் துளங்கின; ஆகலின், என்னாவது கொல் எனக் கூட்டி வினை முடிவு செய்க. விளக்கம் : கதுவாய் வேல், முரிந்து வடுப்பட்ட வேல், அகுதையை, “இன்கடுங் கள்ளின் அகுதை” (குறுந். 298) என்றும் “நன்மா வீசும் வண்மகிழகுதை” (அகம். 112)என்றும் சான்றோர் கூறுவதால், அகுதை கள்ளால் சிறப்பெய்தியவனென்பதை இனிது காணலாம். குண்டு நீரென்றது, ஆழ்ந்தநீர் நிறைந்த கடலுமாம். கூடலென்ற பெயர் கொண்ட வூர்கள் தமிழகத்திற் பல இருத்தலின், அகுதையின் கூடல் இன்னதெனத் துணிய முடியவில்லை. அகுதை ஒரு வேளிர் தலைவன்; அவன் கோசர்களைத் தன் படைமறவராகக் கொண்டிருந்தான். அவனது நாடு கடற்கரைப் பகுதியைச் சேர்ந்ததென, “குண்டு நீர் வரைப்பு” என இப் பாட்டினும், “நெய்தலஞ் செறுவின் வளங்கெழு நன்னாடு” (அகம். 113) என்று கல்லாடனார் பாட்டிலும் கூறப்படுதலால், அறிகின்றோம். இவ்வகையில் அகுதையின் கூடல், மேற்காநாட்டுக் கூடல் (A.R. No. 62 of 1918)என்றும் கூடன்மங்கலம் (S.I.I. Vol. VII No. 757)என்றும் கூறப்படும் கூடலூராகக் கொள்ளலாம். அஃது இப்போது கடலூர் (Cuddalore O.T) எனப்படும் பேரூராகும். 348. பரணர் மகட்கொடை வேண்டி வந்தோர்க்குத் தந்தையும் தன்னையரும் மகள் மறுத்தமையின், போர் நிகழுமென்பது ஒருதலையாகத் துணியப் பட்டது. வந்தோர் ஊரிடத்தேயுள்ள பெருந்துறைக்கண் தம் களிறுகளைக் கொணர்ந்து ஆங்குள்ள மரந்தோறும் அவற்றை நிறுத்திப் பிணித்தனர்; போர்க்குரிய குறிப்புகள் தோன்றியதும் களிறுகள் மரங்களை யீர்த்துச் சவட்டத் தலைப்பட்டன. இது கண்ட சான்றோராகிய பரணர் இந்த மகள் பொருளாகவன்றோ இவ்வூரின்கட்போரும், அதனால் ஊர்க்குக் கேடும் உண்டாக விருக்கின்றன. இவளை இவளுடைய தாய் பெறாதிருப்பாளாயின் நன்றாம்; பெற்று வளர்த்து விட்டமையின் அது கழிந்தது என இரங்கிக் கூறுவாராயினர். வெண்ணெல் லரிஞர் தண்ணுமை வெரீஇக் கண்மடற் கொண்ட தீந்தே னிரியக் கள்ளரிக்குங் குயஞ் சிறுசின் மீன்சீவும் பாண்சேரி 5 வாய்மொழித் தழும்ப னூணூ ரன்ன குவளை யுண்க ணிவளைத் தாயே ஈனா ளாயின ளாயி னானாது நிழறொறு நெடுந்தேர் நிற்ப வயின்றொறும் செந்நுதல் யானை பிணிப்ப 10 வருந்தின மன்னெம் பெருந்துறை மரனே. திணை : காஞ்சி. துறை: மகட்பாற் காஞ்சி. பரணர் பாடியது. உரை : வெண்ணெல் அரிஞர் தண்ணுமை வெரீஇ - வெண் ணெல்லை யறுக்கும் தொழுவர் தொடக்கத்தே இசைக்கும் தண்ணுமையோசை கேட்டஞ்சி; கண் மடல் கொண்ட தீந்தேன் இரிய - கணுவிடத்தே தோன்றும் மடலிற் கட்டப் பட்டிருந்த இனிய தேன் கூட்டினின்றும் தேனீக்கள் நீங்கியத னால்; கள்ளரிக்கும் குயம் - தேனடையிலுள்ள தேனை வடித்துக்கொள்ளும் குயவர் சேரியும்; சிறு சின்மீன் சீவும் பாண் சேரி - சிலவாகிய சிறுமீன்களைப் பிடித்துண்ணும் பாண் சேரியுமுடைய; வாய்மொழித் தழும்பன் ஊணூரன்ன- தப்பாத மொழியினையுடைய தழும்பன் என்பானது ஊணூரைப் போன்ற; குவளை யுண்கண் இவளை - குவளைப் பூப்போலும் கண்களையுடைய இம் மகளை; தாய் ஈனாளாயின ளாயின் - தாய் பெறாதொழிந்திருப்பாளாயின்; ஆனாது - அமையாமல்; நிழல்தொறும் நெடுந்தேர் நிற்ப - மரநிழல் தோறும் நெடிய தேர்கள் நிற்க; வயின்தொறும் - இடந்தோறும், செந்நுதல் யானை பிணிப்ப - சிவந்த நுதலையுடைய யானைகளைக் கட்டுதலால்; எம் பெருந்தறை மரம் வருந்தினமன் - எம்மூர்ப் பெருந்துறைக் கணின்ற மரங்கள் வேர் துளங்கிப் பெரிதும் கெட்டன; எ-று. நெற்கதிர் முற்றிய வயலில் பல்வகைப் புள்ளினங்கள் கூடு கட்டி வாழுமாதலின், அறுவடைக்காலத்தில் அவை ஊறின்றி நீக்குதல் குறித்து நெல்லரியுந் தொழுவர் தொடக்கத்தே தண்ணுமை இசைப்பது பண்டை மரபு. வயலருகே நின்ற தெங்கு முதலிய மரங்களின் மடலிற் கட்டிய தேன் கூட்டினின்றும் தேனீக்கள் தண்ணுமையோசை கேட்டஞ்சி நீங்கிவிடுதலால், ஆங்கு வாழும் குயவர் தேனடையைக் கைக்கொண்டு இனிய தேனை வடித்துக் கொள்வர் என்பதுபட, “கண் மடற் கொண்ட தீந் தேன் இரியக் குயம் கள்ளரிக்கும்” என்றார். அரித்தல், வடித்தல் சேரியைக் குயத்துக்குங் கூட்டுக. குயவர் சேரி குயம் எனப்பட்டது. வேட்கோவருட் சிறந்தோர்க்குப் பெருங்குயம் என்று சிறப்பித்தல் இடைக் காலத்தும் தமிழகத்து வழக்காக இருந்தது. சிறு வலை கொண்டு மீன் பிடிக்குஞ் செயலை மீன் சீவுதல் என்றார். மன், பெருமை இனி இதனை ஒழியசையாக்கி, ஆனாது மன் எனக் கூட்டி, ஈனாளாயினளாயின் ஆனாது மன்னென்று கொண்டுஈனா தொழிந்திருப்பளேல் இந்நிலை வந்து அமையாது; அது கழிந்தது என வுரைப்பினும் அமையும். விளக்கம் : வெண்ணெல் அரிபவர், அரியப் புகுமுன் தண்ணுமை முழக்கி நெல் வயலில் வாழும் புள்ளினங்களை ஒப்புவரென்பதைச் சான்றோர் “வெண்ணெல் அரிநர் தண்ணுமை வெரீஇப் பழனப் பல் புள்ளிரிய” (நற். 350) எனவும், “வெண்ணெ லரிநர் பின்றைத் ததும்பும், தண்ணுமை வெரீஇய தடந்தா ணாரை” (அகம். 40) எனவும், “வெண்ணெலரிநர் மடிவாய்த் தண்ணுமை, பன்மலர்ப் பொய்கைப் படுபுள் ளோப்பும்” (அகம். 204) எனவும் கூறுவது காண்க. தழும்பனுடைய ஊணூர் மருங்கூர்ப்பட்டினத்துக்கு அண்மையில் இருப்பதென நக்கீரர் (அகம். 227) கூறுகின்றார். வேட்கோவருட் சிறந்தோர்க்குப் பெருங்குயம் என்று பட்டந் தந்து சிறப்பிப்பதை, “இலாவா ணகவழிச் சாதக னென்னும், குலாலற்கேற்பப் பெருங்குய மருளி” (பெருங். 4; 9:47- 8) என்று கொங்குவேளிர் கூறுவது காண்க. ஈன்று வளர்த்துவிட்டமையின், ஈனாளாயினளாயின் என்றார். 349. மதுரை மருதனிளநாகனார். சோழநாட்டு உட்பிரிவுகளுள் சிக்கல் நாடு என்பது ஒன்று. இஃது இந் நாளில் திருவாரூர்க்குக் கிழக்கிலுள்ள பகுதியாகும் இதன் தலை நகரம் சிக்கல் எனப்படும். இக்காலத்தும் அது சிக்கல் என்றே வழங்குகிறது.சிக்கல் நாட்டுத் தலைநகரமாகிய பெருமை யுடைமையால் பெருஞ் சிக்கல் என்பது பண்டை நாளை வழக்கு. அதன்கண் மருதனிளநாகனார் காலத்தே வேளாண் தலைமக னொருவன் இருந்தான். அவனைப் பெருஞ்சிக்கல் கிழான் என்பர். அவனுடைய மகள் பெண்மை நலங் கனிந்து வேந்தர் விரும்பி வேட்கும் வீறுகொண்டு விளங்கினாள். அவளை மணக்க விரும்பினானொரு வேந்தன். பெருஞ்சிக்கல் கிழான் அவன்பால் தன் மகளை மணத்தற்கு வேண்டும் நலம் குறைந்திருப்பது கண்டு மகட்கொடை மறுத்தான். அதனால் இருவரிடையே பகைமை தோன்றிற்று. சினம் சிறந்த வேந்தன் தன் நுதல் வியர்வையைத் தன் கைவேலாற் றுடைத்துக் கடிய சொற்களையே கூறலுற்றான். பெருஞ்சிக்கல் கிழானும் வேந்தனது வலிமிகுதி யறிந்து பணிந்து மொழிந்தடங்காது நெடுமொழி நிகழ்த்தினான். இருவர் நிலை களையும் மருதனிளநாகனார் கண்டார். “இவர் தம் இயல்பு இதுவாயின், இதற்கெல்லாம் காரணம் இக்கிழான் பெற்ற மகளேயாவாள்; விறகிற் றோன்றும் தீ விறகையே யழிப்பதுபோல இவ்வூரிற் பிறந்த இவள் இவ்வூர் அழிதற்குக் காரணமாயினள்” எனப் பாட்டின்கண் வருந்திக் கூறியுள்ளார். நுதிவேல் கொண்டு நுதல்வியர் துடையாக் கடிய கூறும் வேந்தே தந்தையும் நெடிய வல்லது பணிந்துமொழி யலனே இஃதிவர் படிவ மாயின் வையெயிற் 5 றரிமதர் மழைக்க ணம்மா வரிவை மரம்படு சிறுதீப் போல அணங்கா யினடான் பிறந்த வூர்க்கே. திணை : காஞ்சி. துறை: மகட்பாற் காஞ்சி. மதுரை மருதனிளநாகனார் பாடியது. இது பெருஞ் சிக்கல் கிழான் மகண் மறுத்தது என்பர் இளம்பூரணர். உரை : வேல் நுதிகொண்டு நுதல்வியர் துடையா - தன் கைவேலின் கூரிய இலையால் தன் நெற்றி வியர்வையைத் துடைத்து; வேந்து கடிய கூறும் - வேந்தனும் கேட்டார் அஞ்சத் தக்க மொழி களைக் கூறாநின்றான்; தந்தையும் நெடிய வல்லது பணிந்து மொழியலன்: இவள் தந்தையும் நெடுமொழிகளைத் தவிரப் பணிவைப் புலப்படுத்தும் சொற்களைச் சொல்லுகின்றானில்லை; இஃது இவர் படிவம் - இஃது இவர்கள் கொள்கையாகும்; ஆயின் - இதனை ஆராயுங்கால்; வை எயிற்று அரிமதர் மழைக்கண் அம்மா அரிவை - கூரிய பற்களையும் அரிபரந்து மதர்த்துக் குளிர்ந்த கண்களையும் அழகிய மாமை நிறத்தையுமுடைய அரிவையாவாள்; மரம்படு சிறு தீப்போல - மரத்தைக் கடையு மிடத்துத் தோன்றும் சிறுதீ அம் மரத்தை யழிப்பது போல, தான் பிறந்தவூர்க்கு அணங்காயினள் - இவள் தான் பிறந்த வூர்க்கு வருத்தம் விளைவிப்பவ ளாயினாள் என்பதல்லது வேறில்லை, எ-று. மகட்கொடை மறுக்கவே, வேந்தன் உள்ளத்தில் மகள் பாற் கொண்ட காதல் முற்றும் பகைமையாய் முறுகிவிட்டமையின் மேற் செயற்பாலது போரே எனத் துணிந்த செயலும் சினந்த சொல்லு முடையனானான் என்பது தோன்ற, “நுதிவேல் கொண்டு நுதல்வியர் துடையாக் கடிய கூறும்” என்றார். தந்தையும் அஞ்சா நெஞ்சினனாதல் விளங்க “தந்தை யும் நெடியவல்லது பணிந்த மொழியலன்” என்றார். படிவம், கொள்கை. மரக்கட்டையைக் கடைந்தவழிப் பிறக்கும், தீ , தான் தோன்றும் மரமே எரிந்து கெடுதற்குக் காரணமாவதுபோல் இவள் தான் பிறந்தவூர் கெட்டு வருந்துதற்குக் காரணமாயி னள் என்பார், “மரம்படு சிறுதீப் போல, அணங்காயினள் தான் பிறந்த வூர்க்” கென்றார். வேந்து துடையா கூறும்; தந்தையும் மொழியலன்; இவர் படிவம் இஃது; ஆயின், இவள் தீப்போல ஊர்க்கு அணங்காயினள் எனக் கூட்டி வினைமுடிவு செய்க. விளக்கம் : மகட்கொடை மறுக்கப்பட்டவழி, மறுக்கப்பட்டவனும் மறுத்தவனு மாகிய இருதிறத்தாரும் போர் செய்தற்குச் சமைந்தது கண்ட மருதன் இளநாகனார் இப் பாட்டைப் பாடுகின்றார்; மகட்கொடை விழைந்த வேந்தன் உள்ளத்தில் நிலவிய விழைவு முற்றும் வெகுளியாய்ப் போர்க்கண் அவனைச் செலுத்திற்று; கொடைபுரிதற்குரிய தந்தை கொள்ளற்குரிய அமைதி விழைந்த வேந்தன்பால் இல்லாமை கண்டு மறுத்து, மறுக்கப்பட்ட வேந்தன் போர்க்கெழுதலை யறிந்து சினங் கொண்டு போர்க்குச் சமைவானாயினன். “தந்தையும் நெடியவல்லது பணிந்து மொழியலன்” என்றதனால், மகட்கொடை மறுப்பவன் வேந்தனல்லன் என்றும், வேந்தன் மகட்கோடற்குரிய தகுதியுடைய னென்றும் அறியலாம். வேந்தர்க்கு மகட்கொடை நல்கும் மாண்புடைய குடியினனாதலால், அதற்கேற்ப, “நெடிய மொழிதல்” அவற்கு இயல் பாயிற்று. “நிகர்த்து மேல்வந்த வேந்தனொடு முது குடி, மகட் பாடஞ்சிய மகட்பாற் காஞ்சி” (தொல். புறத். 24) என்பதற்கு இதனைக் காட்டிய இளம்பூரணர், “இது பெருஞ்சிக்கல் கிழான் மகட் கொடை மறுத்தது” என்பர். 350. மதுரை மேலைக்கடைக் கண்ணம்புகுத்தா ராயத்தனார் மேலைக்கடைய மென்பது தென்பாண்டி நாட்டிலுள்ள தோரூர். இவ்வூர் நல்லிசைச் சான்றோர் பலர்பிறந்த சிறப்புடையது. கடையம் என்பது குறைந்து கடையெனச் சுருங்கிற்று இப்போதுள்ள மேற் கடையம் கீழ்க்கடையம் என்ற வூர்கள் இடைக் காலத்தே “கோனாட்டு விக்கிரம பாண்டிய நல்லூரான கடையம்” (A.R. No. 522 of 1916) என்றும் “கோனாட்டுக் கடையம்” (A.R. No. 525 of 1916) என்றும் வழங்கியதைக் கல்வெட்டுக்களால் அறிகின்றோம். மேலைக் கடையத்தார் எனற்பாலது மதுரையோலைக்கடையத்தார் என ஏடெழுதினோரால் பிழைக்கப் பட்டுள்ளது. இக் கடையத்தைச் சார்ந்த ஒரு குடியினர் மதுரையிற்றங்கிருந்தமையின் அவர் மதுரை மேலைக் கடையத்தாரென வழங்கப் பட்டனர். மதுரை மேலைக் கடையத்தாரான நல்வெள்ளையார் என்ற சான்றோரொருவர் நற்றிணை பாடிய ஆசிரியன்மார்களுள் ஒருவராகக் காணப்படு கின்றார். மதுரைக் கடையத்தார் மகனார் வெண்ணாகனார் என்றொருவர் குறுந்தொகையிற் காணப்படுகின்றார். ஆக, கடையத்திலிருந்து வந்து மதுரையிற்றங்கி வாழ்ந்த கடையத்தார் குடி சிறந்த நல்லிசைப் புலவரைப் பெற்று மேன்மையுற்று விளங்கினமை தெளிவாகும். புண்ணம் புகுத்த போரின்கண், கண்ணீர் சொரிந்து நின்றாரைக் கண்ணம் புகுத்தாரெனப் பாடிய சிறப்பு பற்றி இவர் கண்ணம்புகுத்தாரென்று சான்றோரால் சிறந்தோதப்பட்டனர் போலும். இவரது இயற்பெயர் ஆயத்தனார் என்பது. மறக்குடி யொன்றில் வளர்ந்த மகளொருத்தி திருமணத்துக் குரிய செவ்வி முதிர்ந்து சிறந்திருந்தாளாக, அவளை மணத்தாற் பெறல் வேண்டி வேந்தர் பலர் அவ்வூர்க்கு வந்து போகின்ற வராயிருந்தனர். அவளுடைய தன்னையர் இவள், “புரையரல்லோரை வரையலள்” என்று கொண்டு மறங்கிளர்ந்து நின்றனர். வேந்தர் மணக்கோளும் தன்னையர் மறமாண்பும் கண்ட ஆயத்தனார் இவள் மார்பில் சுணங்கு பரந்து வேந்தர் உள்ளத்தைக்கவர்ந்து கொள்ளுதலால் மகள் மறுத்தல் பொருளாகப் போருண்டாதல் ஒரு தலை; இவ்வூர்க் கிடங்கும் ஞாயிலும் இஞ்சியும் போதிய காவல் வலியில்லன; அதனால் இவ்வூரது நிலை யாதாகுமோ என இரங்கிப் பாடியுள்ளார். தூர்ந்த கிடங்கிற் சோர்ந்த ஞாயிற் சிதைந்த விஞ்சிக் கதுவாய் மூதூர் யாங்கா வதுகொறானே தாங்காது படுமழை யுருமி னிரங்க முரசிற் 5 கடுமான் வேந்தர் காலை வந்தெம் நெடுநிலை வாயிற் கொட்டுவர் மாதோ பொருதா தமைகுவ ரல்லர் போருழந் தடுமுரண் முன்பிற் றன்னைய ரேந்திய வடிவே லெஃகிற் சிவந்த வுண்கண் 10 தொடிபிறழ் முன்கை யிளையோள் அணிநல் லாகத் தரும்பிய சுணங்கே. திணை : காஞ்சி. துறை: மகட்பாற் காஞ்சி. மதுரைக் கடைக்கண்ணம் புகுத்தாராயத்தனார் பாடியது. உரை : தூர்ந்த கிடங்கின் - தூர்ந்துபோன அகழியினையும்; சோர்ந்த ஞாயில் - தளர்ந்த மதிலுறுப்பினையும்; சிதைந்த இஞ்சி - இடிந்த மதிலையுமுடைய; கதுவாய் மூதூர் - பகைவர் செய்த அழிவால் வடுப்பட்ட பழைய வூர்; தாங்காது யாங்காவது கொல் - போரைத் தாங்காதாகலின் என்னாகுமோ; படுமழை உருமின் இரங்கு முரசின் - ஒலிக்கின்ற மேகத்தின் இடிபோல் முழங்கும் முரசினையும்; கடுமான் வேந்தர் - விரைந்து செல்லும் குதிரைகளையுமுடைய வேந்தர்கள்; காலை வந்து எம் நெடு நிலை வாயில் கொட்குவர் - எம்முடைய நெடிய நிலையையுடைய வாயிலின்கண் சுற்றித்திரிகின்றனர்; பொருதாதமைகுவரல்லர் - மறுத்த வழி போர் உடற்றியன்றி அமையார் போல்கின்றனர்; அடு முரண் முன்பின் தன்னையர் - அடுகின்ற மாறுபாட்டுக் கேதுவாகிய வலியினையுடைய தமையன்மார்; போர் உழந்து ஏந்திய வடிவேல் எஃகின் - போரை வென்றியுண்டாகச் செய்து கையில் ஏந்திய வடித்த வேலின் இலைபோல்; சிவந்த உண்கண் தொடி பிறழ் முன்கை இளையோள் - சிவந்த மை தீட்டிய கண்களையும் தொடியானது கையின் முன்னும் பின்னுமாக இயங்கும் முன் கையினையுமுடைய இளமகளது; அணி நல்லாகத்துச் சுணங்கு அரும்பிய - அழகிய நல்ல மார்பின்கண் சுணங்கு தோன்றிப் பரந்தன வாகலான்; எ-று. சுணங்கு அரும்பியவாகலின், வேந்தர் கொட்குவர்; அமைகுவரல்லர். மூதூர் தாங்காதாகலின் யாங்காவது கொல் என மாறிக் கூட்டி வினைமுடிவு செய்க. இடந்தோறும் இடிந்து பொலிவின்றி யிருத்தலின் “கதுவாய் மூதூர்” என்றார். இம் மூதூர் வருபடையைத் தாங்காதென்பது சொல்லாமலே யமையுமாயினும் வேண்டாதே கூறியது “யாங்காவது கொல்” என்பதை மிகுத்துக் காட்டுதற்கு. வளைகட்கு முன்னும் பின்னு மாக இயங்குதலின், “தொடிபிறழ் முன்கை” எனப்பட்டது. சுணங் கரும்பினமையின் மகட் கொடை வேண்டி வேந்தர் வாரா திருத்தலும், மகண் மறுத்தவழிப்போர் செய்யாதொழிதலும் இலர் என்பார் “நெடுநிலை வாயிற் கொட்குவ” ரென்றும், “பொருதா தமைகுவரல்ல” ரென்றும் கூறினார். விளக்கம் : ஞாயில், மதிலினது உறுப்பு. அதனிடத்தேயிருந்து அகத்தோராகிய வில் மறவர் புறத்தார் மேல் அம்புமாரி பொழிவர். இஞ்சி, மதில், கிடங்கு, அகழ். கிடங்கும் ஞாயிலும் இஞ்சியும் சீரிய அரண்களாதலின், போர்க்குச் சமைபவர் இவற்றின் வலியறிதல் முதற் கண் செய்ய வேண்டுவது பற்றி இவற்றை யெடுத்தோதுகின்றார். குடி வளங்குன்றி வலியழிந்திருத்தல் “கதுவாய் மூதூர்” என்றதனால் பெறப்படுகிறது. “எம்நெடுநிலை வாயில்” என்றது, சிதைந்த இஞ்சி சூழ்ந்த எம்மூரின் நெடுவாயில் வந்து இடவலி முதலிய வலி காணுகின்றனர் என்பதுபட நின்றது. “கொட்குவர்” என்றது, மகட்கோடற்கண் இருக்கும் பெரு வேட்கையினை யுணர்த்துகிறது. “பொருதாது அமைகுவரல்ல” ரென்றது. இருதிறத்தாருடைய உட்கோளுமாம். இளையோள் ஆகத்தில் சுணங்கு அரும்பினமையின் வேந்தர் வேட்டலும். இவளுடைய தன்னையர் போர்க்குரியராதலும் நிகழ்தலின் அதனை ஏதுவாக்கினர். கண்ணம் புகுத்தார் ஆயத்தனார் என்பன இந்த ஆசிரியர் பெயராயின. 351. மதுரைப் படைமங்க மன்னியார் ஒருகால் ஓரிடத்தே நிகழ்ந்த போரின்கண் தானைத் தலைவ னொருவன் தானேந்திய படை முழுதும் கெட்டபின்னரும் பகைவரொடு பொருது வென்றியாற் புகழ் நிறுவினானாக, அவனைப் படைமங்க மன்னினான் என்று சிறப்பித்துப் பாடிய நலங்கருதிச் சான்றோர் இந்த ஆசிரியரைப் படைமங்க மன்னியார் என்று வழங்கினர்போலும். இவர் மதுரையில் வாழ்ந்த சான்றோருள் ஒருவர். இவருடைய இயற்பெயர் முதலியன கிடைத்தில. இவர் வாகை யென்னும் ஊரில் வாழ்ந்த எயினன் என்னும் தலைவனால் சிறப்புற ஆதரிக்கப்பெற்றவர். மறக்குடித் தலைவன் மகளொருத்தி பெண்மைநலங்கனிந்து மணஞ் செய்யும் செவ்வி யெய்தி விளங்கினா ளாக, அவளை மணம்புரிந்து கோடல் குறித்து வேந்தர் பலர் மகட்கொடை வேண்டி நின்றனர். அவள் தந்தையோ அவர் களை மறுத்தான். அவர் தானை பண்ணிப் போர்க்குச் சமைந்தனர். அது கண்ட மதுரைப் படைமங்க மன்னியார், அப் போர் வினையால் ஊரெய்தும் கேடு நினைந்து வருந்தி இப் பாட்டைப் பாடியுள்ளார். படுமணி மருங்கின பணைத்தாள் யானையும் கொடிநுடங்கு மிசைய தேரு மாவும் படையமை மறவரொடு துவன்றிக் கல்லெனக் கடல்கண் டன்ன கண்ணகன் றானை 5 வென்றெறி முரசின் வேந்த ரென்றும் வண்கை யெயினன் வாகை யன்ன இவணலந் தாரா தமைகுவ ரல்லர் என்னா வதுகொறானே தெண்ணீர்ப் பொய்கை மேய்ந்த செவ்வரி நாரை 10 தேங்கொண் மருதின் பூஞ்சினை முனையிற் காமரு காஞ்சித் துஞ்சும் ஏமஞ்சால் சிறப்பினிப் பணைநல் லூரே. திணையும் துறையு மவை : மதுரைப் படைமங்க மன்னியார் பாடியது. உரை : படுமணி மருங்கின பணைத்தாள் யானையும் -ஒலிக்கின்ற மணி கட்டப்பட்ட பக்கத்தையுடைய பருத்த காலையுடைய யானைகளும்; கொடி நுடங்கும் மிசைய தேரும் மாவும் - கொடி நின்றசையும் உச்சியையுடைய தேர்களும் குதிரை களும்; படை அமை மறவரொடு துவன்றி - படைக்கலமேந்திப் போர்க்கமைந்த வீரருடனே நெருங்கி; கல்லெனக் கடல் கண்டன்ன - கல்லென்னும் முழக்கத்தோடே கூடிய கடலைக் கண்டாற் போன்ற; கண்ணகன் தானை - இடமகன்ற தானையை யுடைய; வென்றெறி முரசின் வேந்தர் - வென்றெறிந்த முரசினை யுடைய அரசர்; என்றும் - எப்போதும்; வண்கை எயினன் வாகை யன்ன - வள்ளன்மையுடையனாகிய எயினன் என்பானுக் குரிய வாகை யென்னும் நகரத்தைப் போன்ற; இவள் நலம் - இவள் பெண்மை நலத்தை; தாராது - தந்தையானவன் மணஞ்செய்து தாரா தொழியின்; அமைகுவ ரல்லர் - வறிது அமைந்து மீளார்; தெண்ணீர்ப் பொய்கை மேய்ந்த செவ்வரி நாரை - தெளிந்த நீரையுடைய பொய்கையின் மீனை மேய்ந்த செவ்வரி நாரைகள்; தேங்கொள் மருதின் பூஞ்சினை முனையின் - தேன் பொருந்திய மருதமரத்தின் பூவொடு கூடிய கிளைகளில் தங்குதலை வெறுப்பின்; காமரு காஞ்சி துஞ்சும் - அழகிய காஞ்சிமரத்தின்கண் உறங்கும்; ஏமம் சால் சிறப்பின் இப்பணை நல்லூர் - காப்பமைந்த சிறப்பினையுடைய நன்செய் வயல் வளம் நிறைந்த இந்தவூர்; என்னாவது கொல் - என்னவாகுமோ, தெரிந்திலதே; எ-று. வேந்தர் பலராதலின், அவர் தானைகளும் பலவாயின; ஆதலால் கடல் கண்டன்ன தானை எனப் பன்மைவினையான் முடித்தார். கடல் கண்டன்ன தானையையுடைய வேந்தர் அமைகுவரல்லர்; நல்லூர் என்னாவது கொல் எனக் கூட்டி வினைமுடிவு செய்க. பொருள் வளம் குன்றிப் பெருவறம் உண்டாகியபோதும் தன் வண்மையில் எயினன் குன்றுவதிலன் என்பார், “என்றும் வண்கை யெயினன்” என்றார். தாரானாயின் என்பது தாராது என நின்றது. தருதற்குரிய வினைமுதலாகிய தந்தை வருவிக்கப்பட்டது. செவ்வரி நாரை நாரையினத்துள் ஒன்று; “நந்து நாரையொடு செவ்வரி யுகளும்” (பதிற். 23) என்று சான்றோர் கூறுவது காண்க. ஏமஞ்சால் சிறப்பு - இன்பம் அமைந்த வாழ்க்கையுமாம். விளக்கம் : மிசைய தேர், மிசையென்னும் பெயரடியாகப் பிறந்த பெயரெச்சக் குறிப்பு. தேரென்னும் பெயர் கொண்டது. நால்வகைப் படையுள் யானைப் படை சிறப்புடைய தென்பதுபற்றி அதனை யெடுத்தோதினார். துவன்றி யென்னும் வினையெச்சம் அன்னவென்னும் வினைக் குறிப்புக் கொண்டது. வாகை, எயினனுக்குரிய வூர். வாகைப் பறந்தலை, வாகைப் பெருந்துறை என்பவற்றின் வேறு; இவ் வாகைக்குரிய எயினன், ஏனை ஆய் எயினனின் வேறாவான். இந்த வாகை மதுரை நாட்டில் உள்ள தோரூர். மதுரைக் கண்மையிலுள்ள மோகூர்போல இவ்வூரும் பண்டை நாளிற் சிறப்பெய்திருந்தது. படை மங்க மன்னியாரது ஊரும் இவ் வாகையாகலாம். தாராதமைகுவ ரல்லரென ஒரு தொடராகக் கொண்டு கொள்ளா தொழியார் என்றலு மொன்று. நாரை பூஞ்சினை முனையின் காஞ்சிச் சினையிற் றுஞ்சும் சிறப்பினை யுடைய நல்லூரென வேண்டாது கூறியது. மகண் மறுத்தவழி நிகழும் போரால் அவ்வூர் பாழ்படுவது குறித்து இரங்கிக் கூறியது இக்கருத்தே பற்றி “என்னாவது கொல்” என்றார். படையமை மறவர் என்பதற்குப் பழைய வுரைகாரர். “படைக்கலத் தொழிலமைந்த வீரர்” (புறம். 72 உரை) என்று உரைப்பர். நிறைவுடைய தானைக்கு யானை முதலிய நான்கும் நிரலே நன்கமைவது சிறப்பு; “நெடுநல் யானையுந்தேரு மாவும், படையமை மறவரும் உடையம்” (புறம். 72) என்று பிறரும் கூறுவது காண்க. 352. பரணர் மகட்கொடை வேண்டிய வேந்தன் தந்தைக்கு மிக்க செல்வந் தருவதாக வுரைத்தானாக, நெடுந்தகையாகிய தந்தை மறுத்தலே பொருளாகக் கொண்டான்; கொடைக்குரிய மகளும், பெண்மை கனிந்து சுணங்கு பரந்த மார்புடனே கதிர்த்து விளங்கினாள்; இவள் தன்னையர் தாமும் போர்வெறி கொண்டு நின்றனர். இதனைக் கண்ட ஆசிரியர் பரணர் இப் பாட்டினைப் பாடியுள்ளார். உறையூரில் வாழ்ந்த தித்தன் என்ற வண்மை யோன்பால் பரணர்க்குப் பேரன்புண்டு. இப் பாட்டுப் பெரிதும் சிதைந்திருத்தலின் பொருண் முடிவு இனிது விளங்கவில்லை. தேஎங்கொண்ட வெண்மண்டையான் வீங்குமுலை. . . . . . . . . . . கறக்குந்து அவல்வகுத்த பசுங்குடையாற் புதன்முல்லைப் பூப்பறிக்குந்து 5 ஆம்பல் வள்ளித் தொடிக்கை மகளிர் குன்றேறிப் புனற்பாயிற் புறவாயாற் புனல்வரையுந்து. . . . . . . . . . . . . . . . நொடைநறவின் மாவண் டித்தன் வெண்ணெல் வேலி 10 உறந்தை யன்ன வுரைசா னன்கலம் கொடுப்பவுங் கொளாஅ னெடுந்தகை யிவளே விரிசினைத் துணர்ந்த நாகிள வேங்கையிற் கதிர்த்தொளி நிகழு நுண்பல் சுணங்கின் மாக்கண் மலர்ந்த மலைய டன்னையும் 15 சிறுகோ லுளையும் புரவியொடு. . . . . . . . . . . . . . . . . . யாரே திணை : காஞ்சி. துறை: மகட்பாற் காஞ்சி. பரணர் பாடியது. உரை : தேஎங்கொண்ட வெண் மண்டையான் - கள் நிரம் பக்கொண்ட வெள்ளிய மண்டையின்கண்; வீங்குமுலை ........கறக்குந்து - பருத்த மடியில் ...............கறக்கும்; அவல் வகுத்த பசுங்குடையால் - பள்ளமுண்டாகச் செய்யப்பட்ட பசிய ஓலைக் குடையில்; புதல் முல்லைப் பூப்பறிக்குந்து - புதலிடத்தே மலர்ந்த முல்லைப்பூக்களைப் பறிக்கும்; ஆம்பல் வள்ளித் தொடிக்கை மகளிர் - ஆம்பலின் தண்டால் செய்யப்பட்ட வளையணிந்த கையையுடைய மகளிர்; குன்றேறிப் புனல் பாயின் - மணற்குன்றின் மேலேறி நீர் நிலையில் விளையாடப் பாய்வாராயின்; புறவாயால் புனல்வரையுந்து - புறத்தே நீர் செல்லுதற்குரிய கோடியில் வழிந்து நீங்கும்; ......... நொடை நறவின் ............ விலைப் பொருட்டாகிய கள்ளினையுடைய; மாவண் தித்தன் - பெரிய வண்மையையுடைய தித்தனது; வெண்ணெல் வேலி உறந்தை யன்ன - வெண்ணெல் வயல்கள் வேலியாகச் சூழ்ந்துள்ள உறையூரைப்போல; உரைசால் நன் கலங் கொடுப்பவும் - புகழ் நிறைந்த நன்கலங்கள் பலவற்றைக் கொடுக்கவும்; நெடுந்தகை கொளா அன் - நெடிய தகைமை யினையுடைய தந்தை அவற்றைக் கொள்ளானாயினான்; இவள் - இம் மகள் தானும்; விரி சினைத் துணர்ந்த நாகிள வேங்கையின் - விரிந்த கிளையிடத்துக் கொத்துக் கொத்தாகப் பூத்துள்ள இளைய வேங்கை மரத்தினைப்போல; கதிர்த்து ஒளி திகழும் - கதிர்விட்டு ஒளி செய்யும்; நுண் பல் சுணங்கின் நுண்ணிய பலவாகிய சுணங்கு பரந்த; மாக்கண் மலர்ந்த முலையள் - கரிய கண் தோன்றிய முலையையுடையளாயினாள்; தன்னையும் - தமையனும்; சிறுகோல் உளையும் புரவியொடு - சிறு கோலுக்கு வருந்தும் குதிரைகளுடன்; .........யாரே........யாவர்; எ-று. மண்டை, கள் முதலியன வுண்டற்குரிய மட்கலம். பனை யோலை யால் உட்குடைவாகச் செய்யப்படுவதுபற்றி, “அவல் வகுத்த பசுங்குடை” என்றார். கொடிமுல்லை யன்மை தோன்ற, “புதல் முல்லை” யெனப்பட்டது. இதனைத் தளவுமுல்லை யென்பர். நீர்நிலைகளில் மிக்கு நிறையும் நீர் வழிந்தோடற் கமைந்த வழிகரை, கோடி யெனப்படும், அதனைப் “புறவாய்” என்றார்; மதகென்றுமாம். உறையூர், உறந்தையென வருவது மரூஉ; “நொச்சி வேலித் தித்தன் உறந்தை” (அகம். 122) என வருதல் காண்க. வள்ளி - வளை. விளக்கம் : இப் பாட்டு இடையிடையே சிதைந்துள்ளது. சிதைந்தவற்றுள் சிற்சில சொற்களே கிடைத்துள்ளன. பழைய தமிழ்ச் செல்வர் மனைகளில் அழிந்தனபோக ஒழிந்த ஏடுகளைக் காணும் வாய்ப்பு நேரில் சிதைந்தவை கிடைப்பினுங்கிடைக்கும். இதன்கண் அடிகள் சில சிதைந்திருத்தலின் வினைமுடிவு காண்பது இயலவில்லை. தேஎம், தேன், தேன் கோடற்குரிய வெண்மண்டையில் ஆவின்பால் கறக்கப்படும் போலும். பனையோலை, தெங்கின் ஓலை யென்றிவற்றால் உட்குடைவாகச் செய்யப்பட்டவை பசுங்குடை யெனப்பட்டன. அவற்றை உணவுண்டற்குப் பயன்படுத்துவது பண்டையோர் முறை யெனினும், ஈண்டு அது முல்லைப் பூப்பறித்தற்குப் பயன்படுகிறது. குன்று, மணலாலாகிய செய்குன்று மணற்குன்றேறி நீரிற் பாய்ந்து விளையாட்டயர்தல் பண்டைநாளை இளையர் விளையாட்டு. குன்றேறிப் பாய்தலால் நீர்நிலையிலுள்ள நீர் அலைந்து புறத்தே நீர் செல்லும் வாய் வழியாக வழிந்தோடும் என்பார். “குன்றேறிப் புனல் பாயின் புறவாயாற் புனல் வரையுந்து” என்றார். உறந்தை உறையூரின் மரூஉ; பொறையாறு புறந்தையென வருதல்போல. உறையூர் சோழராட்சிக்கு வருமுன் தித்தன் முதலியசெல்வர் பாதுகாப்பிலிருந் தமையின், தித்தன் ....... உறத்தை யென்றார். உறந்தையன்ன உரைசால் நன்கலன் என்றது, உறந்தைநகர் புலவர் பாடும் புகழ் படைத்த தாகலின், அப் புகழுடைமை வெளிப்பட, “உரைசால் நன்கல” மென விதந்து கூறினார். கொள்ளாமைக்கேது தந்தைபாலுள்ள நெடுந்தகைமை யென்பார், “உறந்தையன்ன உரைசால் கலம்” என்றார். நாகிள வேங்கை, மிக்க இளமையையுடைய வேங்கை. 353. காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார் வேந்தர் குடித்தோன்றல் ஒருவன் இளமகளொருத்தியின் மெய்ந் நலங்கண்டு அவள்பால் தன் கருத்தைச் செலுத்தி அறிவழிந்து நின்றான். இடையில் மேகலையும் தலையிற் பொற்கண்ணியும் அணிந்து தன் மனைப்பெய்ம் மணல் முற்றத்தில் இனிதியங்கிய அவளது இனிய காட்சி அவளை மணந்துகொள்ள வேண்டு மென்ற வேட்கையை அவன் உள்ளத்தே எழுப்பிற்று. அவன் தான் ஊர்ந்துவந்த தேரை ஒரு புடையில் நிறுத்திச் சான்றோராகிய காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனாரைக் கண்டு அவரைத் தன் பொருட்டு மகட்பேசி வருமாறு தன் கண்ணாற் குறையிரந்து நின்றான். வெள்ளைப்பார்வையால்,தன்னை நோக்கிய அவன் உள்ளக் குறிப்பை யோர்ந்த சான்றோர் “அண்ணால் இவள் யாவர் மகள் என்று வினவுகின்றாய்; இவள் ஒரு தொல்குடி மன்னன் மகள், மகட்கொடை வேண்டி முன்னால் வேந்தர் பலர் வந்து கொடை மறுக்கப்பட்டுச் சென்றனர். அது காரணமாக நிகழ்ந்த போரை வென்றியுண்டாக நடத்திய இவள் தமையன்மார் இன்னும் அப் போர்ப் புண்ணாறாது புண்ணிடை வைத்த பஞ்சி யொடு விளங்குகின்றனர். அவர் காண்பதற்கே அச்சம் தருபவராக இருப்பர், காண்” என்று இப் பாட்டாற் கூறியுள்ளார். ஆசில் கம்மியன் மாசறப் புனைந்த பொலஞ்செய் பல்கா சணிந்த வல்குல் ஈகைக் கண்ணி யிலங்கத் தைஇத் தருமண லியல்வோள் சாய னோக்கித் 5 தவிர்த்த தேரை விளர்த்த கண்ணை வினவ லானா வெல்போ ரண்ணல் யார்மக ளென்போய் கூறக் கேளினிக் குன்றுகண் டன்ன நிலைப்பல் போர்பு நாட்கடா வழித்த நனந்தலைக் குப்பை 10 வல்வி லிளையர்க் கல்குபத மாற்றாத் தொல் குடி மன்னன் மகளே முன்னாட் கூறி வந்த மாமுது வேந்தர்க்கு . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . செருவா யுழக்கிக் குருதி யோட்டிக் 15 கதுவாய் போகிய துதிவா யெஃகமொடு பஞ்சியுங் களையாப் புண்ணர் அஞ்சுதக வுடையரிவ டன்னை மாரே. திணை : காஞ்சி. துறை: மகட்பாற் காஞ்சி. காவிரிப் பூம்பட்டினத்துக் காரிக் கண்ணனார் பாடியது. உரை : ஆசில் கம்மியன் மாசறப் புனைந்த - குற்றமில்லாத பொற் கொல்லன் பழுதறச் செய்த; பொலஞ்செய் பல்காசு அணிந்த அல்குல் - பொன்னாலாகிய பல மணியணிந்த மேகலையும்; ஈகைக் கண்ணி இலங்கத் தைஇ - பொன்னாற் செய்த கண்ணியும் விளக்கமுற ஒப்பனை செய்துகொண்டு; தருமணல் இயல்வோள் சாயல் நோக்கி - புதிது கொணர்ந்து பரப்பப்பட்ட மணலின் கண் நடந்து செல்பவளுடைய சாயலை நோக்கி; தவிர்த்த தேரை - செல்லாது நிறுத்திய தேரையுடையனாய், விளர்த்த கண்ணை-வெளுத்த பார்வையினையுடையனாய்; வினவலானான வெல்போர் அண்ணல் - கேட்டல் அமையாத வெல்லும் போரை யுடைய தலைவ; யார் மகள் என்போய் - இவள் யார் மகள் என்று கேட்கின்றாய்; இனி கூறக் கேள் - இப்பொழுது யான் கூறக்கேட்பாயாக; குன்று கண்டன்ன நிலைப் பல் போர்பு - மலையைக் கண்டாற்போன்ற நிலையினையுடைய பல நெற் போர்களை; நாள் கடா அழித்த நனந்தலைக் குப்பை - நாட் காலையில் அழித்துக் கடாவிடப்பட்ட இடத்திற் குவிந்த நெல்லை; வல்வில் இளையர்க்கு அல்கு பதம் மாற்றா - வலிய வில் வீரர்களுக்கு நாளுணவாக நல்குவதில் மாறுதல் இல்லாத; தொல் குடி மன்னன் மகள் - பழைமையான குடிகள் நிறைந்த வூர்க்கு வேந்தன் மகளாவாள்; முன்னாள் கூறிவந்த மாமுது வேந்தர்க்கு - முன்னாளில் மகட் கொடை வேண்டி வந்த பெரிய முதிய வேந்தராகிய சான்றோர்க்கு .............. செருவாய் உழக்கிக் குருதி யோட்டி - போர்க்களத்தில் பகைவரைக் கொன்று அவர் குருதியையாறாக வோடச் செய்து; கதுவாய் போகிய - வாய்மடிந்து வடுப்பட்ட; துதி வாய் எஃகமொடு - கூரிய வாயையுடைய வாளுடனே; பஞ்சியும் களையாப் புண்ணர் - சீலை நீக்கப்படாத புண்ணையுடையராய்; அஞ்சு தகவு உடையர் - கண்டார் அஞ்சத்தக்க தகுதிப்பாட்டினையுடையரா யிரா நின்றார்; இவள் தன்னைமார் - இவளுடைய தமையன்மார்கள்; எ-று. தனக்குரிய தொழிலைக் குற்றமற வுணர்ந்த பொற்கொல்லனை “ஆசில் கம்மியன்” என்றும், எனவே அவன் புனையும் பொற்பணி பழுதறவியன்றதா மென்றற்கு “மாசறப்புனைந்த என்றும் கூறினார். அல்குலிடத்தே யணியப்படும் மேகலை, அல்குலெனப்பட்டது; “பல்காசு நிரைத்தசில்கா ழல்குல்” (முருகு. 16) என்று சான்றோர் வழங்குவது காண்க. தருமணல், புதிது கொணர்ந்து பரப்பப்பட்டமணல். மகளது சாயல் வெல் போரண்ணலின் கண்ணைக் கவர்ந்து கருத்தைப் பிணித்தலின், அவன் தேரை நிறுத்திக்கொண்டைமைதோன்ற, “சாயல் நோக்கித் தவிர்த்ததேரை” யென்றார். மலர்ந்தநோக்கமின்றி மையல் நோக்கங்கோடலின், “விளர்த்த கண்ணை” யென்றார். மாற்றா - வழங்கு தலை இல்லையென்று நீக்காத போரிற் பட்டபுண் இன்னும் ஆறிற்றில வென்றற்கு, “பஞ்சியும் களையாப் புண்ணர்” என்றும், அதனால் அவர் அஞ்சுதகவுடையரென்றும் குறித்தார். விளக்கம் : இது மகட்பாற்காஞ்சியாதலின், மகளது மாண்பும் அவளைக் கோடற்கு விரும்புவோன் இயல்பும் கொடைக்குரியமரபினரான தந்தைதன்னையர் இயல்பும் முறையே கூறலுற்ற ஆசிரியர்காரிக் கண்ணனார் மகளது மாண்பை இயலும் சாயலும் காட்டி இன்புறுத்து கின்றார். அவள் இடையில் அணிந்திருந்த மேகலை பல்காசு நிரையாகத் தொடுக்கப்பட்டுளதென்றும், தலையிற் சூடியிருந்த பொற்கண்ணி இனிது விளங்கப் புனையப்பட்டுளதென்றும் கூறலுற்று, மேகலையிலுள்ள காசுகள் கைத்திறன் வல்ல கம்மியினால் செய்யப் பட்டவை யென்பாராய் “ஆசில் கம்மியன் மாசறப் புனைந்த பொலஞ்செய் பல்காசு” என்றார். இதனால் அவளது செல்வமிகுதியும் சுட்டியவாறாயிற்று. புதுமணல் பரப்பிய முற்றத்தில் இடையிலும் தலையிலும் மேகலையும் பொன்னங்கண்ணியும் பொற்புடன் திகழ அன்னத்தின் நடையும் மயிலின் சாயலும்கொண்டு காட்சியளித்தமை குறிப்பாராய், “தருமண லியல்வோள் சாயல் நோக்கி” என்றார். தருமமொடியல் வோள் என்றும் பாடமுண்டு; இளமைக்குரிய பண்பும் செயலும் கொண்டு இயல்வோளென்பது அதற்குப் பொருள். பொருட் குரிய குணமும்செயலும் தருமமெனப்படும். இயல்கண்டு செலவுதவிர்த்தச் சாயல்கண்டு கருத்திழந்தானாயினும் மறமாண்புடையன் அம் மகள் வேட்ட மைந்தன் என்பார், “வெல்போரண்ணல்” என்று சிறப்பித்தார். இதனாற் பயன், கருதியது முடிக்கும் கட்டாண்மையுடையன் என்பது. கொடைக்குரிய மரபினையுடைய தந்தை தொல்குடி மன்னன் என்றது, குடிநன்குடைமை சுட்டியவாறு. துதிவாய் எஃகம், கூரிய வாயையுடைய வேல். 354. பரணர் மகள் மறுத்தது காரணமாக ஓருர்த் தலைவன் மகள்வேண்டி வந்து மறுக்கப்பட்ட ஏனைத் தலைவரொடு போர் செய்ய வேண்டிய நிலை எய்திற்று. அதனால் அவன் தனக்குரிய தானை மறவருடன் தன் வேலை நீர்ப்படை செய்தலாகிய மண்ணு மங்கலத்தைச் செய்யலுற்றான். இதனையறிந்த ஆசிரியர் பரணர், மணத்திற்குரிய இந்த மடந்தையின் நோக்கம் இவ்வூர்க்கு நலஞ் செய்வதேயன்றி கேடு உண்டாதற்கும் ஏதுவாயமையும் போலும் என வியந்து வருந்தி இப் பாட்டினைப் பாடியுள்ளார். அரைசுதலை வரினு மடங்க லானா நிரைகா ழெஃக நீரின் மூழ்கப் புரையோர் சேர்ந்தெனத் தந்தையும் பெயர்க்கும் வயலமர் கழனி வாயிற் பொய்கைக் 5 கயலார் நாரை யுகைத்த வாளை புனலாடு மகளிர் வளமனை யொய்யும் ஊர்கவி னிழப்பவும் வருவது கொல்லோ சுணங்கணிந் தெழிலிய வணந்தேந் திளமுலை வீங்கிறைப் பணைத்தோண் மடந்தை 10 மான்பிணை யன்ன மகிழ்மட நோக்கே. திணை : காஞ்சி. துறை: மகட்பாற் காஞ்சி. பரணர் பாடியது. உரை: அரைசு தலைவரினும் அடங்கல் ஆனா - முடி வேந்தர் நேர் நின்று பொர வரினும் அடங்குதலமையாத; நிரைகாழ் எஃகம் நீரின் மூழ்க - நிரைத்த காம்பணிந்த வேலை நீர்ப்படை செய்தற்பொருட்டு; புரையோர் சேர்ந்தென - சான்றோர்களாகிய உயர்ந்த வீரர்கள் வந்து தொக்கனராக; தந்தையும் பெயர்க்கும் - தந்தையாகிய தலைவன் நீர்நிலைக்குச் செல்ல விடுக்கின்றான்; வயலமர் கழனி வாயிற் பொய்கை - வயல்கள் பொருந்திய கழனிகட்கு வாயிலாகிய பொய்கைக் கண்; கயலார் நாரை உகைத்த வாளை - கயல்மீனை யுண்ணும் நாரையால் துரத்தப்பட்ட வாளைமீனை; புனலாடு மகளிர் வளமனை ஒய்யும் - நீரில் விளையாட்டயரும் மகளிர் பிடித்துத் தம் வளவிய மனைக்குக் கொண்டு செல்லும்; ஊர் கவினிழப்பவும் - ஊர் தன் பொலிவிழந்து கெடவும்; வருவது கொல் - வரும் போலும்; சுணங்கணிந்து எழிலிய அணந்து ஏந்து இளமுலை - தேமல் பரந்து உயர்ந்த அண்ணாந்து நிற்கும் இளமுலையும்; வீங்கு இறைப்பணைத் தோள் - பெருத்த சந்து பொருந்திய மூங்கில் போலுந் தோளையு முடைய; மடந்தை மான் பிணையன்ன மகிழ்மட நோக்கு - மடந்தையது பிணைமான்போலும் மருண்ட மடவிய நோக்கம்; எ-று. எஃகம் நீரின் மூழ்கப் புரையோர் சேர்ந்தெனத் தந்தை பெயர்க்கும்; மடந்தை மடநோக்கு ஊர்கவின் இழப்பவும் வருவது கொல் எனக் கூட்டி வினைமுடிவு செய்க. அரைசெனப் பொதுப்படக் கூறினமையின், உயர்ந்த முடிவேந்தர் என்பது கொள்ளப்பட்டது. புரையோர், போர் வினையாற் புகழ் மேம்பட்ட சான்றோர். சான்றோரை முன்னிட்டு மண்ணுமங்கலம் செய்வது மரபு. போர் தொடங்குமுன், மண்ணுமங்கலம், வாண்மங்கலம் முதலியன செய்வது பண்டையோர் போர்த்துறை இயல்பு. வயல், பொது; கழனி, நீர்வளத்தாற் சிறந்தது. வயலமர்வாயிலும் கழனிகட்கு வாயில்போறலின், வாயிலெனப்பட்டதென்றுமாம். மடந்தையின் மடவிய நோக்கு, ஊர்க்குப் பொலிவினைச் செய்வதேயன்றிக் கேட்டினைச் செய்தற்கும் ஏதுவாயிற்றென நிற்றலின், உம்மை, எச்சப்பொருட்டு. நாரைக்கு அடங்காதோடும் வாளை, மகளிர் விளையாடும் நீர்நிலைக்கண் கைப்பற்றப் படுவதுபோல முன்னாள் பெருவேந்தர்கட் கரியவளாயிருந்த இம் மடந்தை ஊர் கவினிழப்பப் பிறவேந்தர் கைப்படுவள்போலும் என இறைச்சி தோன்றியவாறு காண்க. விளக்கம்: மகள் மணத்திற்குரிய செவ்வி யெய்தினமையும், மகட்கொடை வேண்டி வேந்தர் வந்தமையும், கொள்ளற்குரிய நிரலுடைமை அவர்பால் இன்மைகண்டு கொடைக்குரிய மரபின் தந்தை தன்னையர் மகன் மறுத்தமையும், அதனாற் சினங்கொண்ட வேந்தர் போர்க்குச் சமைந்தமையும் எடுத்தோதாராயினும், தந்தை “புரையோர் சேர்ந்துவர நிரைகா ழெஃகம் நீரின் மூழ்கப் பெயர்க்கும்” என்றதனால் பெறப்பட்டன. அரைசு தலைவரினும் அவரைத் தாக்கி யெறியும் வகையால் மேம்பட்டு நிற்பதன்றி அவர்க்கு அடங்கி யொடுங்கும் சிறுமை தந்தைபால் இன்மை தோன்ற, “அரைசு தலைவரினு மடங்கலானா” என்றார். இனி, மடங்கலானா என்று எஃகத்தின் செயலாக்கி, தந்தையின் மடங்காத் தன்மையை அதன் மேலேற்றிக் கூறியதாகக் கொள்ளினும் அமையும். மடந்தையின் மடநோக்கம் மான்பிணையது போல மருண்டநோக்கமாயினும் காண்பார்க்கு மகிழ்வை விளைக்கும் என்பார் “மடந்தை மான்பிணை யன்ன மகிழ்மட நோக்கம்’ என்றும், எனவே இத்தகைய நோக்கம் இவ்வூரவர்க்கு இன்பத்தைச் செய்வதோடு, நிகழவிருக்கும் போரால் துன்பத்தையும் விளைவிக்கின்றதே, இஃதென்னையென்றற்கு “ஊர்கவின் இழப்பவும் வருவது கொல்லோ” என்றார். ஊர்க்கு அரணும் ஆக்கமுமாதற்குரிய நோக்கம் இவ்வூரவர்க்கு இன்பத்தைச் செய்வதோடு, நிகழவிருக்கும் போரால் துன்பத்தையும் விளை விக்கின்றதே, இஃதென்னை யென்றற்கு “ஊர்கவின் இழப்பவும் வருவது கொல்லோ” என்றார். ஊர்க்கு அரணும் ஆக்கமுமா தற்குரிய நோக்கம் கவின் இழப்பவும் வருமோ என்று கொள்ளு மிடத்து, உம்மை எதிர்மறையுமாம். 355. கடுமான் கிள்ளி இப் பாட்டுச் சிதைந்து பாடினோராதல் பாடப்பட்டோராதல் இன்னா ரென்றறிய வாராதபடி யுள்ளது. இதன் இறுதியில், அச்சுப் படியினும் கையெழுத்துப்படியில் இரண்டடிகள் மிகுதியாகக் காணப்படினும் பொருண் முடிவு காட்டும் அடிகள் காணப்பட வில்லை. கிடைத்தவற்றின் இறுதியில் கடுமான்கிள்ளி யென்ற பெயர் காணப்பட்டமையின்,அஃது ஈண்டுக் குறிக்கப்பட்டது. இதுவும் மகண் மறுத்தல் காரணமாக நிகழவிருக்கும் போர் குறித்து ஒரு சான்றோராற் பாடப் பெற்றுளதென்பது தெளிவு. இடைக்காலத் தமிழ் நன்மக்கள் தங்கள் பெறலரும் தமிழிலக்கியப் பெருஞ் செல்வத்தைப் புறக்கணித்துச் சீரழிந்ததற்கு இதுவுமோர் எடுத்துக் காட்டாக விளங்குகிறது. மதிலு ஞாயி லின்றே கிடங்கும் நீஇ ரின்மையிற் கன்றுமேய்ந் துகளும் ஊரது நிலைமையு மிதுவே மற்றே எண்ணா மையலன் றந்தை தன்னையர் 5 கண்ணார் கண்ணிக் கடுமான் கிள்ளி . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . திணை : காஞ்சி. துறை: மகட்பாற் காஞ்சி ......... உரை : மதிலும் ஞாயில் இன்று - இவ்வூர் மதிலுக்கும் அதன் உறுப்பாகிய ஞாயில் இல்லை; கிடங்கும் நீஇர் இன்மையின் கன்று மேய்ந்து உகளும் - அகழியிலும் நீரில்லாமையால் கன்றுகள் மேய்ந்து திரியும்; ஊரது நிலைமையும் இது - ஊரின் காப்புநிலை இத்தன்மையாகவுளது; தந்தை எண்ணா மையலன் - இம் மகளுடைய தந்தையும் இதனை யெண்ணாமைக் கேதுவாகிய மயக்கத்தையுடையன்; தன்னையர் - இவளுடைய தமையன்மார்; கண்ணார் கண்ணிக்கடுமான் கிள்ளி - கண்ணுக்கு அழகுநிறைந்த ஆத்திமாலையும் விரைந்து செல்லும் குதிரைகளையுமுடைய கிள்ளி;.......... எ-று. மதிலுக்கு ஞாயிலும் அகழிக்கு அரணும் வலிதருவன வாகலின் அவை அரணாகாமையான் இவ்வூர் பகைவர் கைப்பட்டழிவது ஒரு தலை யென்பார், “ஊரது நிலைமையு மிதுவே” என்றார். தந்தை, இடத்தின் வலியின்மை நோக்கி மகட்கொடை நேராமையான், “எண்ணாமையல” னானான். 356. கதையங் கண்ணனார் இக் கண்ணனார் கதையன் என்பாருடைய மகனாவர். கதையன் என்பவர் பெயரால் கதையன்குடி யென்றோர் ஊரும் பாண்டிய நாட்டில் உண்டு. அதுவே பின்பு கதவங்குடி யென மருவித் திருத்தியூர் முட்டத்துக் கதவங்குடி (A.R. No. 183 of 1935 - 36) எனத் திருப்புத்தூர்க் கல்வெட்டுக்களில் வழங்குகிறது. கண்ணனா ரென்ற பெயருடைய சான்றோர் பலர் உளராதலின், அவரின் வேறுபடுத்த இவர் கதையங் கண்ணனார் எனப்பட்டார். இவரைத் தாயங் கண்ணனாரெனக் கொண்டு, இப்பாட்டை எருக்காட்டூர்த் தாயங்கண்ணனார் பாட்டாகத் தொகுப்பாருமுளர். ஏடுகளில் கதையங் கண்ணனாரென்பதே காணப்படுகிறது. முதுகாட்டின் முதுமைப்பகுதியை மிகுத்துரைக்கும் துறையில் இவர் பாடியுள்ள இப் பாட்டு கற்றோர்க்குப் பெருஞ்சுவை நல்கும் சிறப்புடையது. சுடுகாட்டைப் பொருளாகக் கொண்டு உயிர் வாழ்க்கையின் நிலையா இயல்பைக் கூறக்கருதிய இச்சான்றோர், “முதுகாடு கூகையும் பேய்மகளிரும் உறைதலால் காண்பார்க்கு அச்சம் தரும் தன்மையுடையது; இறந்தோர் தன்கண் வந்து எரிந்து சாம்பராக, அதனை அவர்பாற் காதலன்புடையார் சொரியும் கண்ணீர் அவிக்கும்; ஆயினும், அஃது எல்லாருடைய முதுகை யும் காண்கின்றது; எத்தகைய மக்கட்கும் தானே முடிவிடமாய்த் தனி நின்று விளங்குகிறது. இம் முது காட்டின் புறங்காண்போர் ஒருவரும் இலர். இக் காடுதானும் தன் முதுகு காண்பாரை இதுகாறும் கண்டதில்லை. சுருங்கச் சொல்லுமிடத்து, எல்லா மக்களும் வீய, தான்மட்டில் வீயாது நிற்கும் வீறுடையது இம் முதுகாடென்ற கருத்தமைய இப் பாட்டைப் பாடியுள்ளார். களரி பரந்து கள்ளி போகிப் பகலுங் கூவுங் கூகையொடு பேழ்வாய் ஈம விளக்கிற் பேஎய் மகளிரொ டஞ்சுவந் தன்றிம் மஞ்சுபடு முதுகாடு 5 நெஞ்சமர் காதல ரழுத கண்ணீர் என்புபடு சுடலை வெண்ணீ றவிப்ப எல்லார் புறனுந் தான்கண் டுலகத்து மன்பதைக் கெல்லாந் தானாய்த் தன்புறங் காண்போர்க் காண்பறி யாதே. திணை : காஞ்சி. துறை: மகட்பாற் காஞ்சி. கதையங் கண்ணனார் பாடியது. உரை : களரி பரந்து கள்ளி போகி - காடு படர்ந்து கள்ளி மிகுந்து; பகலும் கூவும் கூகையொடு -பகற்காலத்தின்கண்ணும் கூவும் கூகைகளாலும்; ஈம விளக்கின் - பிணஞ்சுடு தீயாகிய விளக்காலும்; பேழ்வாய் பேய் மகளிரொடு -அகன்ற வாயையுடைய பேய் மகளிராலும்; இம் மஞ்சுபடு முதுகாடு - இந்தப் புகை தவழும் சுடுகாடு; அஞ்சுவந் தன்று - காண்பார்க்கு அச்சம் வரப்பண்ணு கிறது; நெஞ்சமர் காதலர் அழுத கண்ணீர் - மனம் விரும்பும் காதலர்கள் அழுதலால் ஒழுகும் கண்ணீர்; என்பு படு சுடலை வெண்ணீறு அவிப்ப - எலும்பு கிடக்கும் சுடலை கண்ணுள்ள சாம்பலை யவிப்ப; எல்லார் புறனும் தான் கண்டு - எல்லாரையும் தான் முதுகு கண்டு; உலகத்து மன்பதைக் கெல்லாம் தானாய் - உலகத்து மக்கட்டொகுதிகளுக்கெல்லாம் தானே தனி முடி விடமாய்; தன் புறம் காண்போர்க் காண்பறியாது - அம் மன்பதை யுள் தன்னைப் புறங்காண வல்லவர்களை அம் முதுகாடு தானும் கண்டதில்லை; எ-று. ஒடு, ஆனுருபின் பொருட்டு, முதுகாடு, பரந்து, போகி, கூகை யொடும் பேய்மகளிரொடும் விளக்கினாலும் அஞ்சு வந்தன்று; கண்ணீர் அவிப்ப, உலகத்துத் தானாய்க் காண்போர்க் காண்பறியாது எனக் கூட்டிவினைமுடிவு செய்க. பேழ்வாய்ப் பேஎய் மகளிர் என இயைக்க. வெண்ணீறு, நீறுபூத்த நெருப்புமாம். சுடலையீமத்திற் சுடப்படும் பிணமெல்லாம், ஈமப்பள்ளியில் பிணத்தின் முதுகு பொருந்தக் கிடத்துபவாதலின், “எல்லார் புறனுந்தான் கண்டு” என்றும் எல்லாம் ஒடுங்குங் காலத்துத் தானொன்றே ஒடுங்காது நிற்றலின் “மன்பதைக் கெல்லாந் தானாய்” என்றும், எல்லா மக்களும் தன்கண் ஒடுங்கிவிடுதலின், தனது ஒடுக்கங் காணும் மக்கள் எவரும் இலராதலின தன்புறங் காண்போர்க் காண்பறி யாதே” என்றும் கூறினார். விளக்கம் : இப் பாட்டு முதுகாட்டின் முதுமைக் கூற்றை மிகுத்துக் கூறுதலின், முன்னைத் திணையும் துறையு மமையுமெனத் துறை வகுத்தோர் “திணையுந் துறையு மவை” யென்றனர் போலும். ஆசிரியர் இளம்பூரணரும் நச்சினார்க்கினியரும், இதனை “மலர்தலை யுலகத்து மரபு நன்கறியப் பலர் செல்லச் செல்லாக் காடு வாழ்த்து” (தொல். புறத். 24) என்பதற்கு எடுத்துக்காட்டாகக் கொள்வர். உலகத்துப் பலரும் சென்றாராகவும் தான்மட்டில் செல்லாது முதுகாடு நிற்றற்குக் காரணம் இதுவென்பார் ஆசிரியர், “மலர்தலை யுலகத்து மரபுநன் கறிய” என்றார். அம் மரபு, இப்பாட்டால் இனிது விளக்கப்பட்டிருப்பது காணலாம். இனிப் புறப்பொருள் வெண்பாமாலை யுரைகாரர், “பல்லவர்க் கிரங்கும் பாடிமிழ் நெய்தல், கல்லெனவொலிக்கும் காடு வாழ்த்தின்று” (பு.வெ.மா. 10:6) எனக் காடு வாழ்த்தின் இயல்பு கூறி, இதற்குக் காட்டலுற்ற வெண்பாவில், இப் புறப்பாட்டின் கருத்தையே யமைத்து, “இன்புறந் தான்காணு மிவ்வுலகை யிவ்வுலகில் தன்புறங்கண்டறிவார் தாமில்லை - அன்பின் அழுதார் கண்ணீர் விடுத்த வாறாடிகூகை, கழுதார்ந் திரவழங்குங் காடு” எனக் கூறியிருப்பதும், இதன்கண் “காதலர் அழுத கண்ணீர் என்புபடு சுடலை வெண்ணீறவிப்ப” என்ற கருத்து, அன்பின் அழுதார் விடுத்த கண்ணீ ராகிய ஆறாடிக் கூகையும் கழுதும் வழங்கும் எனக் குறித்திருப்பதும் ஒப்பு நோக்கத் தக்கனவாம். புறக்கொடை வழங்காத போர் வேந்தரெனப் பட்டார் யாவரையும் முடிவில் புறங்கண்டு நிற்கும் பொற்புடைமை “எல்லார் புறனுந்தான்கண்” டென்பதனாற் பெறவைத்தார். 357. பிரமனார் இப் பிரமனாரைப்பற்றி ஒன்றும் தெரிந்துகொள்ள முடிய வில்லை. பிரமனார் என்ற இவர் பெயர் இடைக்காலத்தும் மக்களுக்கு வழங்கிற்றென்பது திருமழபாடிக்கல்வெட்டொன்று, “செம்பிய தரையகோன் மகன் பிரமன்” (S.I. Ins. Vol. V. No. 648)என்பதனால் விளங்குகிறது. இவர் துறவின்கண் நின்று அறத்தை வலியுறத்துவது மிக்க இன்பந்தருவதொன்று. இப் பாட்டின்கண், இத் தமிழகம் சேர சோழ பாண்டியர் மூவர்க்கும் பொதுமை கருதியது; மூவருள் ஒருவர், ஒவ்வொரு காலத்தில் ஏனை யிருவர்க்கும் அது பொதுவென்பதை மறுத்து, அவரது நாட்டைத் தாம் கவர்ந்து தமது ஒரு மொழி வைத்தாண்டதுண்டு; ஆயினும் அவ்வாறு பொதுமையின்றி ஆண்ட வேந்தரும் வாழ்நாள் கழிய இறந்தனர்; அவர் ஈட்டிய செல்வமும் அவர்க்குத் துணையாய்ச் சென்றதில்லை. அவரவர் செய்யும் அறவினையே மேலுலகத்து இன்பவிளைவிற்கு வித்தாகும்; இவ்வுலக வாழ்வாகிய கடலைக் கடந்து மேலுலகமாகிய அக்கரை சேர்தற்கு அறவினையே தெப்பமாய்த் துணை செய்யும்; அதனை விரைந்து செய்ம்மின் என வற்புறுத்தி யுள்ளார். குன்றுதலை மணந்த மலைபிணித் தியாத்தமண் பொதுமை சுட்டிய மூவ ருலகமும் பொதுமை யின்றி யாண்டிசி னோர்க்கும் மாண்ட வன்றே யாண்டுக டுணையே 5 வைத்த தன்றே வெறுக்கை வித்தும் அறவினை யன்றே விழுத்துணை யத்துணைப் புணைகை விட்டோர்க் கரிதே துணையழத் தொக்குயிர் வௌவுங் காலை இக்கரை நின்றிவர்ந் துக்கரை கொளலே. திணை : காஞ்சி . துறை : மறக்காஞ்சி; பெருங் காஞ்சியு மாம்; பிரமனார் பாடியது. உரை : குன்றுதலை மணந்த மலை பிணித்து யாத்த மண் - குன்றுகளோடு கூடிய மலைகளைத் தன்பாற் பிணித்துக் கட்டி நிற்கும் மண்ணுலகத்தில்; பொதுமை சுட்டிய மூவருலகமும் - பொதுவெனக் கருதப்பட்ட மூவேந்தருடைய நாடு மூன்றையும்; பொதுமையின்றி ஆண்டிசினோர்க்கும் - பொதுவெனப் போற்றாது தமக்கே யுரியவெனக் கொண்டாண்ட வேந்தருக்கும்; ஆண்டுகள் மாண்டவன்றே - வாழ்நாட்கள் கழிந்தன;வெறுக்கை துணைவைத்ததன்று - அவர் ஈட்டித்தொகுத்து வைத்த செல்வமும் அவர் செல்லுயிர்க்குத் துணையானதில்லை; வித்தும் அறவினையன்றே விழுத்துணை - அவரவர் செய்யும் அறவினையே மறுமைத் துணையாய் இன்பம் தருவதாம்; துணை தொக்கு அழ - துணைவர்கள் தம்மிற் கூடி யழ; உயிர் வௌவுங்காலை - உயிர் கூற்றுவனாற் கவர்ந்து கொள்ளப்படுங் காலத்தில்; இக்கரை நின்று இவர்ந்து உக்கரை கொளல் - இவ்வுலகினின்றும் உயர்ந்து வீட்டுலகைப் பெறுதற்கு; அத்துணை புணை - அறவினையாகிய துணையேதெப்பமாவது; கைவிட்டோர்க்கு அரிது - அத்துணையைக் கைவிட்டவர்க்கு மேலுலகப்பேறு இல்லையாம்; எ-று. பெருமலைகளின் முடியிலும் அடியிலும் சிறு சிறு குன்றுகள் நிற்பது பற்றி, “குன்று தலை மணந்தமலை” யென்றும், வானில் ஒரு பற்றுக் கோடு மின்றி நிலவுலகு தனித்துச் சுழலுமிடத்து மலையும் குன்றும் நீங்காதவாறு பிணித்துக்கொடு நிற்றலின், “பிணித்து யாத்த மண்” என்றும் கூறினாரென்க. மூவர், சேர சோழ பாண்டியர். உலகம் “சேயோன் மேய மைவரை யுலகமும்” (தொல். அகத். 5) என்றாற்போல, நாடென்பது பட நின்றது. இத்தமிழகம் மூவர்க்கும் பொது வென்பது நன்கு விளங்க, “பொதுமை சுட்டிய மூவருலகமும்” என்றார். “வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பு” (தொல். செய் 78) என்று ஆசிரியர் கூறுவது காண்க. உடம்பு நீங்குங்கால் உயிரோடு தொடராமையின், “துணை வைத்ததன்றே வெறுக்கை” யென்றார் அன்றே யென்பதை அசைநிலையாக்கி, அறவினை செய்தற்கு வெறுக்கை துணையேயன்றி அறவினை போல உயிர்க்குத் துணையாவதில்லை யெனினுமமையும். இம்மைக்கண் வித்தாய் நின்று மறுமை வீடுபேற் றின்பங்களை விளைவித்தலின், “வித்தும் அறவினை” என்றார். விழுமிய வென்பவற்றுள் விழுமியது. வீடுபேறாதலின், அதனைப் பெறுதற்குத் துணையாகும் அறவினை “விழுத்துணை” யெனப்பட்டது. துணையாதல் எங்ஙனம் என்பார்க்குப் புணையாகிய உவமையில் வைத்து, “அத்துணைப்புணை” யென்றார். புணையென்றதற் கேற்ப, இம்மையம்மைகள் “இக்கரை உக்கரை” எனப்பட்டன. அக்கரை யெனின், அது மறுமையாகிய துறக்க வுலகாய் மீளவும் பிறத்தற் கேதுவாகலின் அதனின் மேலதாகிய வீட்டுலகு என்றற்கு உக்கரை யென்றார். ஆண்டிசினோர்க்கும் ஆண்டுகள் மாண்ட; வெறுக்கை வைத்த தன்று; விழுத்துணை அறவினையே; அத்துணைப் புணை, கைவிட்டோர்க்கு உக்கரைகொளல் அரிது எனக்கூட்டி வினைமுடிவு செய்க. விளக்கம் : தமிழகம் சேர சோழ பாண்டியர் மூவர்க்கும் பொது வென்பது பண்டையோர் கொள்கை. இவருள் யாவரேனும் ஒருவர் பொதுமை யின்றித் தாமே யாண்ட காலமு முண்டாதலின், “பொதுமையின்றி யாண்டிசினோர்க்கும்” என்றார், “போகம் வேண்டிப் பொதுச்சொல் பொறாது” (புறம். 8) “பொதுமையின்றி வெண்குடை நிழற்றிய ஒருமையோர்” (புறம். 186) என வருதல் காண்க. வேந்தர் பொதுமை யின்றித் தாமே யாண்ட காலத்தும் சேர சோழ பாண்டிய நாடுகளின் எல்லை மாறியது இல்லை; சோழன் பாண்டி நாட்டைக் கொண்ட போதும், பாண்டியன் சோழ நாட்டைக் கொண்ட போதும் பாண்டி நாட்டின் பெயரையோ சோழ நாட்டின் பெயரையோ எல்லை களையோ மாற்றியது கிடையாதென்பதை இடைக்காலப் பல்லவ சோழ பாண்டியர் கல்வெட்டுக்கள் கூறுகின்றன. பிரமனாரென்ற பெயர்கொண்டு இவரைப் பார்ப்பனரென்பது பொருந்தாதென்பது மேலே காட்டிய கல்வெட்டால் விளங்கும். 358. வான்மீகியார் வடமொழியில் இராமாயணம் எழுதிய வான்மீகியார் வேறு, இவர் வேறு. தமிழ் நல்லிசைச் சான்றோராகிய இவர் வடமொழிப் புலவரான வான்மீகியாரது நூலிற் பேரீடுபாடு கொண்டிருந்தத னாலோ, இவர் தந்தையார்க்கு வடவான்மீகிபால் உண்டாகிய அன்பினாலோ இவர்க்கு இப் பெயருண்டாயிற்றெனக் கொள்ளலாம். இனி, “இவர் பெயர் வான்மீகனாரெனவுங் வழங்கப்படுமென்பது ‘அறுவகைப் பட்ட பார்ப்பனப்பக்கமும்’ (தொல்; புறம்:20) என்பதன் உரைக்கணுள்ள வழக்காற் றெரிவது. வடமொழியில் வல்லமுனிவர் பெயர்களைப் பண்டைத்தமிழாசிரியர் புனைந்து விளங்கினர் என்பது செந்தமிழ்நாட்டு நல்லிசைப் புலவர் பெயர்கள் பல கொண்டு தெரியலாம். இனி வட மொழியிலுள்ள வான்மீகி முனிவர் வழியினர் இவராவரென்று கருதுவாருண்டு (தமிழ் வரலாறு. பக். 246) என்று திரு. ரா. இராகவையங்கார் அவர்கள் கூறுவர். இதனால் இப் புறப்பாட்டாசிரியர் காலத்தில் வடவர் கூட்டுறவு தமிழகத்தில் நன்கு பரவியிருந்ததென்பது தெளிய விளங்குகிறது. இவர்க்கு மனையறத்தினும் துறவறம் சிறந்ததென்பது கருத்து. அதனை வற்புறுத்துமாற்றால் இவ் வான்மீகியார் இப் பாட்டினைப் பாடியுள்ளார். இதன்கண் உலகியல் எழுவர் தலைவராக நிலவும் செயல்முறை போல்வது; வையத்து வாழ்வாகிய இல்லறத்தையும் தவமாகிய துறவறத்தையும் சீர்தூக்கி நோக்கின், தவத்துக்கு வையம் சிறுகடுகளவும் நிகராகாது; அதனால் அறிந்தோர் தவத்தைக் காதலித்து வையத்திற் பற்றுவிட்டனர். திருமகள் பற்றுவிட்டோரை நீங்காள். விடாது பற்றிலே யழுந்தியிருப்போரைத் திருமகள் கைவிட்டு நீங்குவள்; ஆதலால் தவமே செயற்பாலதென்று வற்புறுத்தியுள்ளார். பருதி சூழ்ந்தவிப் பயங்கெழு மாநிலம் ஒருபக லெழுவ ரெய்தி யற்றே வையமு தவமுந் தூக்கிற் றவத்துக் கையவி யனைத்து மாற்றா தாகலிற் 5 கைவிட் டனரே காதல ரதனால் விட்டோரை விடாஅ டிருவே விடாஅ தோரிவள் விடப்பட் டோரே. திணை : காஞ்சி. துறை: மனையறம் துறவறம். வான் மீகியார் பாடியது. உரை : பருதி சூழ்ந்த இப் பயங்கெழு மாநிலம் - ஞாயிற்றால் வலமாகச் சுற்றப்படும் இப் பயன் பொருந்திய பெரிய நிலவுலகம்; ஒரு பகல் எழுவர் எய்தியற்று - ஒரு நாளில் எழுவரைத் தலைவ ராகக் கொண்டாற்போலும் தன்மைத்து; வையமும் தவமுந் தூக்கின் - உலகியலாகிய இல்லறத்தையும் தவ வாழ்வாகிய துறவறத்தையும் சீர் தூக்கினால்; தவத்துக்கு ஐயவி யனைத்தும் ஆற்றாது - தவத்துக்கு வையம் சிறு கடுகளவும் நேர்படாதாம்; ஆகலின் - ஆதலால், காதலர் கைவிட்டனர் - வீடு காதலித்தோர் இல்வாழ்விற் பற்றுவிட்டனர்; திரு விட்டோரை விடாள் - திருமகள் தன்பாற் பற்றுவிட்டோரை நீங்காள்; இவள் விடப் பட்டோர் - இத் திருமகளால் விடப்பட்டோர்; விடார் - இல் வாழ்விற் பற்றுவிடாது அதனுள் அழுந்தி வருந்துவர் எ-று. பருதியாற் சூழ்வரப்பட்டது நிலம் என்றாராயினும் நிலத்தாற் சூழ்வரப்பட்டது பருதி யென்பது கருத்தாகக் கொள்க. எழுவர் தலைவராகிய வழி, அவர்கீழ் வாழ்வோர்க்கு ஒருகாலும் இன்பமில்லையாம்; இன்பம் போலத் தோன்றுவதெல்லாம் துன்ப மேயாதலின் “ஒரு பகல் எழுவரெய்தியற்று” என்றார். எழுவர் என்பது பலர் என்னும் பொருள்பட நின்றது. இல்வாழ்க்கை உற்ற நோய் பொறாது வருந்துதலும் உயிர்க்கு உறுகண் செய்தாரை முறையும் மானமுங் கருதி வருத்துதலு முடைமையின் தவத்துக்குச் சிறிதுமாற்றாதெனப்பட்டது. தன்பாற் பற்று வைத்தார் கடும் பற்றுள்ள முடையராய் அறஞ்செய்தலும் இன்ப நுகர்தலுமின்றித் திருவுடைமைக் கேதுவாகிய அறப்பயனை யிழத்தலின், “விடாதோர் இவள் விடப்பட்டோர்” என்றார். “இலர்பல ராகிய காரணம் நோற்பார், சிலர் பலர் நோலாதவர்” (குறள். 270) என்பது ஈண்டு ஒப்புநோக்கத்தக்கது. விளக்கம் : இந்தப் பாட்டைப் பாடிய ஆசிரியர் பெயர் வான்மீகையாரெனவும் காணப்படுகிறது. வான்மீகையா ரென்பது உண்மைப் பாடமாயின், இது செந்தமிழ்ச் சான்றோரொருவரது தமிழியற் பெயராய் வட வான்மீகி யாரோடு தொடர்பு யாதும் இல்லதாம். வான்மீகையார் என்பது மழையினும் மேம்பட வழங்கும் வண்கையுடைய வரென்று பொருள் படும். ஒரு பகலில் பலர் தலைவராகியவழி அவர் தலைமையின் கீழ் எவர்க்கும் எத்துணையும் இன்பமில்லையாம். “எழுவரென்றது ஒரு பகவலவைக்குள் இறந்த அரசர் ஒருவர்பின் னொருவராக அரசெய்திய எழுவரைக் குறித்தது; எழுவர் “ஒரு குடியினரல்லாத எழுவ ரெனினுமைமையும்” என்று திரு. ரா. இராகவையங்கார் கூறுவர். தவம், துறவறத்துக்குச் சிறந்தமையின் வையம் இல்லறத்துக்குரிய தாயிற்று. இல்வாழ்வில் செய்வனவும் தவிர்வனவும் பொருள்மேற் பற்றின்றிக் கடனெனச் செய்தவழி, திருமகள் செய்வோனை நீங்காது உறைவள் என்பார், “விட்டோரைத் விடாள் திருவே” என்றார். திருமகள் தவத்தை விரும்புவளாதலால், தவத்தைக் கைக்கொண்டு வையத்தைக் காதலியாது விட்டாரைத் திருமகள் தவம் பற்றி விரும்பியுறைதலால், தவங் கைவிட்டு வையத்தைக் காதலிப்பாரை “இவள் விடப்பட்டா” ரென்றார். “திரு - இறைவன் அருட்சத்தியாதலின்; பற்றற்றவர் இறைவனருளாற் பற்றப்பட்டவரென்பதும், பற்றுவிடாதார் அருளாற் பற்றப்படாது விடப்பட்டவரென்பதும், கருத்தாதல் கொள்க” என்று திரு. ரா. இராகவையங்கார் கூறுவர். 359. அந்துவன் கீரன் அந்துவன் கீரன் என்பவன் ஒரு சிறந்த தமிழ்த் தலைவன். அந்துவன் என்பாற்கு மகனாதலின், இக் கீரன் அந்துவன் கீரன் எனக் குறிக்கப்பெறுகின்றான். நல்லிசைச் சான்றோர்பால் பேரன் புடைய இவன் அவர் சொல்வழி நின்று பெரும் பொருள்ஈட்டிச் சிறந்த புகழ் கொண்டு விளங்கினான். ஆயினும், அவற்கு உலகியலிற் பெரும்பற்று உண்டாயிருந்தது. அவன் வேட்கை பொருளீட்டற்கண் மிக்க ஊற்றமோடிருந்தது. அதனை மாற்றி அவன் கருத்தைப் புகழ் பயக்கும் பெருந்துறையில் செலுத்தச் சான்றோர் பலர் முயன்றனர். அவருள் காவிட்டனார் அவனை நெருங்கித் தெருட்டற்கு வேண்டும் செவ்வி பெற்றார். அப்போது அவர் கூறக் கருதிய அறவுரை இப் பாட்டாய் வெளிவருவதாயிற்று. பெருநாடுகளை வென்று கொண்ட முடிவேந்தராயினோரும் முடிவில் முதுகாட்டை யடைந்தார்களேயன்றி நிலைபெற இருந்தாரில்லை. நினக்கும் அவ்வாறு ஒருநாள் வருதல் தப்பாது; இவ்வுலகில் இசையும் வசையுமே ஒப்ப நிற்பனவாம். ஆதலால் வசை நீக்கி இசை நடுதலும், ஒருபாலும் கோடாது முறை வழங்குதலும், இரவலர்க்குக் களிறும் மாவும் தேரும் பிறவும் கொள்ளெனக் கொடுத்தலும் செய்க; செய்வாயாயின், நீ மேலுலகம் புக்க வழியும் நீ எய்தும் புகழ் இவ்வுலகம் உள்ளளவும் நிலைபெற நிற்குங்காண் என்று இப் பாட்டின் கண் அறிவுறுத்தியுள்ளார். ஆசிரியர் காவிட்டனாரைக் கானட்டரென்றும் சில ஏடுகள் குறிக்கின்றன. கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டில். காவிட்டன் என்ற இப் பெயர் கோயில்பட்டர்களிடையே பயில வழங்கியிருந்த தென்று சோழவந்தானுக் கண்மையிலுள்ள தென்கரைக் கல்வெட்டுக்கள் கூறுகின்றன. “அதிஜய மங்கலத்து காவிட்டன் முத்தசீராமபட்டன்; காவிட்டன் வடுகனாதித்தன்” (S.I.I. Vol. V. No. 294) என வருவது காண்க. களவுக் காலத்தில் தலைவி தலைவனைக் காணப் போவதில் எய்துந் துன்பத்தைப் “பெருங்கல் நாடன் பிரிந்த புலம்பும், உடன்ற அன்னை அமரா நோக்கமும், ஞாயிறு குடகடல் சேரும் படர்கூர் மாலையும், அனைத்தும் அடூஉ நின்று நலியும்” (அகம். 378) என வகுத்துக் கூறும் இவரது அகப்பாட்டு இவரது புலமை நலத்தைக் காட்டி இன்புறுத்துகின்றது. பாறுபடப் பறைந்த பன்மாறு மருங்கின் வேறுபடு குரல வெவ்வாய்க் கூகையொடு பிணந்தின் குறுநரி நிணந்திகழ் பல்ல பேஎய் மகளிர் பிணந்தழூஉப் பற்றி 5 விளரூன் றின்ற வெம்புலான் மெய்யர் களரி மருங்கிற் கால்பெயர்த் தாடி ஈம விளக்கின் வெருவரப் பேரும் காடுமுன் னினரே நாடுகொண் டோரும் நினக்கும் வருதல் வை கலற்றே 10 வசையு நிற்கு மிசையு நிற்கும் அதனால், வசைநீக்கி யிசை வேண்டியும் நசைவேண்டாது நன்று மொழிந்தும் நிலவுக் கோட்டுப் பலகளிற்றோடு பொலம்படைய மாமயங்கிட 15 இழைகிளர் நெடுந்தே ரிரவலர்க் கருகாது கொள்ளென விடுவை யாயின் வெள்ளென ஆண்டுநீ பெயர்ந்த பின்னும் ஈண்டுநீடு விளங்குநீ யெய்திய புகழே. திணை : காஞ்சி. துறை : பெருங்காஞ்சி. அந்துவன் கீரனைக் காவிட்டனார் பாடியது. உரை : பாறுபடப்பறைந்தபல்மாறு மருங்கின் - முற்றவும் கெட்டுத் தேய்ந்தழிந்த பல முட்கள் கிடக்கின்ற பக்கத்தில்; வேறுபடு குரல - வேறுபட்ட குரலினையும்; வெவ்வாய்க் கூகையொடு - வெவ்விய வாயையுமுடைய கூகையொடு கூடி; பிணந்தின் குறுநரி நிணம் திகழ் பல்ல - பிணங்களைத் தின்னும் குறுநரிகள் தசை யொட்டிய பற்களையுடையவாய்த் தின்று கொண்டிருக்க; பேஎய் மகளிர் பிணம் தழூ உப்பற்றி - பேய்ப் பெண்டிர் பிணங் களைத் தழுவிப் பற்றிக் கொண்டு; விளர் ஊன் தின்ற வெம்புலால் மெய்யர் - வெள்ளிய தசையைத் தின்றதனால் வெவ்விய புலால் நாறும் மெய்யினையுடையராய்; களரி மருங்கில் கால் பெயர்த்தாடி பிணம் வைத்துச் சுடும் - களர் நிலத்தில் காலைப் பெயர்த்து வைத்துக் கூத்தாடி; ஈம விளக்கின் வெருவரப்பேரும் சுடுகாட்டுத் தீயின்கண் அச்சம்வர நீங்கும்; காடு - சுடுகாட்டை; நாடு கொண்டோரும் முன்னினர்; பெரு நாடுகளை வென்ற முடி வேந்தரும் சென்றடைந்தனர், நினக்கும் வைகல் வருதல் அற்று நினக்கும் காடு முன்னும் நாள் வருதல் அத்தன்மைத்தாம் வசையும் நிற்கும் இசையும் நிற்கும்; இவ் வுலகில் ஒருவன் செய்த பழியும் நிலைபெறும் புகழும் நிலை பெறும் அதனால் -; வசை நீக்கி இசை வேண்டியும் - பழி நீக்கிப்புகழ் நிறுவியும், நசைவேண்டாது நன்று மொழிந்தும் - கைக்கூலி பெற்றுக் கோடுதலை விரும்பாது நடுவுரையாகிய அறமே மொழிந்தும்; நிலவுக் கோட்டுப் பல களிற்றோடு; விளங்குதலையுடைய கொம்புகளையுடைய பலவாகிய களிறும்; பொலம்படைமா - பொற் கலனணிந்த குதிரைகளும்; மயங்கிட - கலந்து வர; இழைகிளர் நெடுந்தேர் - பொன்னிழை யணிந்த நெடிய தேர்களை, இரவலர்க்கு அருகாது கொள்ளென விடுவை யாயின் - கொள்வீராகவென இரவலர்க்குக் குறைவறக் கொடுத்துச் செல்லவிடுவாயாயின்; வெள்ளென - வெளிப்படையாக; நீ ஆண்டுப் பெயர்ந்த பின்னும் - நீ மேலுலகத்துக்குச் சென்ற பின்னரும்; நீ எய்திய புகழ் - நின் ஈகையாலுளதாகும் புகழ்; ஈண்டு நீடு விளங்கும் - இவ்வுலகில் நெடிது நிலைநிற்கும்; எ-று. இது யாக்கை நிலையாமை கூறிப் புகழுண்டாக வாழ்தலை வற்புறுத்தியது. பேணுவாரற்ற பாழிடமென் றற்குப் “பாறுபடப் பறைந்த பன்மாறு மருங்கின்” என்றார். மாறு வற்றியுலர்ந்த முட்கள் உயர்த்தியும் தாழ்த்தியும் உருட்டியும் குழறும் கூகையின் குரலை, “வேறுபடு குரல்” என்றார். பிணத்தின் ஊன் குருதியின்றி வெளுத்திருக்கு மாகலின், “விளரூன்” எனப்பட்டது. களரி - ஈண்டுப் பிணஞ் சுடும் இடம்; களர் நிலமுமாம். பொதுச்சொல் பொறாது மைந்து மலிந்து பிற நாடுகளைத் தம் ஒரு குடைக்கீழ்க் கொணர்ந்த முடிவேந்தரை, “நாடு கொண்டோர்” என்றார். வைகல், நாள். உலகியலில் பகலும் இரவும் நிலைபெறுமாறுபோல, இசையும் வசையும் நிலைபெறுவதனால், “இசையும் நிற்கும் வசையும் நிற்கும்” என்றார். வசைக்கேது நசையும் இசைக்கேது நன்றுமாதலின், “நசை வேண்டாது நன்று மொழிந்து” என்றாரென அறிக. நசை பொருண்மேனின்று தீநெறியிற் செலுத்துவது. வெள்ளெனல் வெளிப்படையாக யாவரும் காண விளங்குதல். கூகையொடு குறுநரி பல்லவாய்ப்பேருங் காடு, பேய் மகளிர் பற்றித்தின்ற மெய்யராய், ஆடிப் பேருங் காடு என இயையும். நாடு கொண்டோரும் காடு முன்னினர்; நினக்கும் அற்று; நிற்கும், நிற்கும்; வேண்டியும் மொழிந்தும், விடுவை யாயின், வெள்ளெனப் பெயர்ந்த பின்னும், புகழ் நீடு விளங்கும் எனக் கூட்டி வினைமுடிவு செய்க. விளக்கம் : பெருங் காஞ்சியாவது “மலையோங்கிய மாநிலத்து, நிலையாமை நெறியுரைத்தன்று” (பு.வெ.மா. 10:2) என வரும். அந்துவன்கீரனுக்கு ஆசிரியர் காவிட்டனார் இப் பாட்டால் நிலையாமையை வற்புறுத்தி, நிலையாமைகொண்டு நிலையுதலுடையவற்றைச் செய்துகோடல் வேண்டுமெனக் கூறுகின்றார். முதற்கண் நிலையாமை காட்டும் முது காட்டின் இயல்பை எடுத்தியம்புவாராய், முதுகாட்டில் கூகையும் குறுநரியும் பேய் மகளிரும் இருக்கும் இருப்பை விளக்குகின்றார். கூகை குழறா நிற்ப, பிணங்களை ஒருபால் பேய்மகளிரும், ஒருபால் குறுநரியும் ஈர்ந்து நிணந் தின்பதைக் காட்டுகின்றார்; வேண்டும், நிணத்தை ஆரவுண்ட பேய்மகளிர் சுடுகாட்டில் பிணஞ் சுட்டெரியும் கொள்ளிக் கட்டையின் ஒளியை விளக்காகக் கொண்டு கால் பெயர்த் தாடிக் கூத்தாடுவரெனவும், அது காண்பார்க்கு அச்சம் தருமெனவும் குறிப்பார், “களரி மருங்கிற் கால்பெயர்த்தாடி, ஈம விளக்கின் வெருவரப் பேரும்” என்றார். களரி யென்றது, சுடுகாட்டிடத்துப் பிணஞ்சுடற்கு அமைத்த மன்றம். இதன்கண் கிடக்கும் மரக்கட்டை யெரியுங் கால் உண்டாகும் ஒளியை விளக்காகக்கொண்டு களரி மன்றத்தைச் சூழ்வந்து கூத்தயரும் என்றுமாம். எனவே, இத்தகைய இடத்துக்கு யாவரும் செல்ல விரும்பா ரென்பது தேற்றம். ஆயினும், கண்ணுக்கினிய காட்சி வழங்கும் கடலும் வயலும் காடும் மலையும் பொருந்திய நாடுகளின் வளமும் நலமுமாகிய இவை தமக்கேயுரிய வாதல் வேண்டுமென விழைந்து கைப்பற்றிக் கொண்ட முடியொடு விளங்கும் பெரு வேந்தரும் முடிவில் இம் முதுகாட்டையே அடைந்தனரென்பார், “காடு முன்னினரே நாடு கொண்டோரும்” என்றார். நீ யெய்திய புகழ் ஒன்றே இவ்வுலகில் நீடு விளங்கி நிற்பதென வற்புறுத்துகின் றாராதலால், அப் புகழைப் பயக்கும் கொடையினை, “நிலவுக்கோட்டு....விடுவையாயின்” என்றார். 360. தந்துமாறன் தந்துமாறன் என்பான் பாண்டிவேந்தர் ஆணைவழி நின்ற தலைவர்களுள் ஒருவன்; இவன் நல்லொழுக்கமும் சான்றோர் உரைக்கும் சால்புரைகளிற் பேரீடுபாடும் உடையவன். மிக்க செல்வத்தால் நற்புகழ் நிறுவிச் சிறக்கும் இவனைச் சங்கவருண ரென்னும் நாகரியர் கண்டு இவ்வறவுரையை வழங்கியுள்ளார். இதன்கண் சிறு சினமும், பல கேள்வியும், நுண்ணுணர்வும் பெருங் கொடையும் பணிமொழியுமாகிய நற்பண்பு நற்செய்கை களால் பலர்க்குப் பயன்பட வாழ்ந்து இன்பமாக அரசியல் நடத்திய வேந்தர் மிகச் சிலரேயாவர்; அவ்வாறு வாழ்வதை யறியாதவர் பலர்; அவர்தம் செல்வம் நிலை பெற்றதில்லை; இக்காலத்தும் அதன் பண்பு அத்தன்மையாகவேயுளது; அதனால் நீ ஒழுக்கம் குன்றாமல்,இரவலர் இன்மை தீரக் கொடுத்தலைக் கைவிடா தொழிக; மேற் கூரிய ஒழுக்கக் குறைவின்றித் தாம் உடையது பகுத்துண்டு வாழ்வோருள்ளும் ஈமத்தின்கண் எரிவாய்ப்புக்க பின்னும் புகழ் வாய்த்திலர் பலர் எனச் சொல்லித் தெருட்டியுள்ளார். சங்கவருணர் என இச் சான்றோர் ஈண்டு வழங்கப்பட்டன ராயினும், இவரது இயற்பெயரை நாகரையர் என்று உணர்தற் கேற்பச் சங்கவருண ரென்னும் நாகரையர் எனப்படுகின்றார். இவர் பெயர் நாகரிகரென்றும் காணப்படுகிறது. சங்கவருண னென்பதற்கு வளைவணன் என்பது தமிழ். இப் பெயர் இங்கே வடமொழியில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. வளைவணன் என்றொரு நாகநாட்டரசன் மணிமேகலையிற் காணப்படுகின்றான். இப்புலவர் பெயரும் நாகரையர் எனக் காணப்படுவதால், இவர் நாகநாட்டிற் பிறந்து தமிழகமடைந்து தமிழ்ப் புலமை பெற்றுச் சான்றோராயின ரென்று உணரலாம். சோழ வேந்தற்குத் திரையனைப் பயந்தளித்த பீலி வளைக்குத் தந்தையாகிய வளைவணனே முடிவில் துறவுபூண்டு சான்றோனாகித் தமிழகமடைந்து சான்றோர் குழுவிடை யிருந்தானென்றும், அக்காலத்தே தந்து மாறனைக் கண்டு இப் பாட்டால் நிலையாமையாகிய அறத்தை வற்புறுத்தினான் என்றும் கோடற்கு இடமுண்டு. இவர் பாடிய இப் பாட்டொன்று தவிர வேறே பாட்டுக்கள் தொகை நூல்களிற் காணப்படவில்லை. பெரிதாராச் சிறுசினத்தர் சிலசொல்லாற் பலகேள்வியர் நுண்ணுணர்வினாற் பெருங்கொடையர் கலுழ்நனையாற் றண்டேறலர் 5 கனி குய்யாற் கொழுந்துவையர் தாழுவந்து தழுஉ மொழியர் பயனுறுப்பப் பலர்க்காற்றி ஏமமாக விந்நில மாண்டோர் சிலரே பெரும கேளினி நாளும் 10 பலரே தெய்யவஃ தறியா தோரே அன்னோர் செல்வமு மன்னி நில்லா தின்னு மற்றதன் பண்பே யதனால் நிச்சமு மொழுக்க முட்டிலை பரிசில் நச்சுவர நிரப்ப லோம்புமதி யச்சுவரப் 15 பாறிறை கொண்ட பயந்தலை மாறுதகக் கள்ளி போகிய களரி மருங்கின் வெள்ளி னிறுத்த பின்றைக் கள்ளொடு புல்லகத் திட்ட சில்லவிழ் வல்சி புலைய னேவப் புனமே லமர்ந்துண் 20 டழல்வாய்ப் புக்க பின்னும் பலர்வாய்த் திராஅர் பகுத்துண் டோரே. திணையும் துறையுமவை. தந்துமாறனைச் சங்கவருண ரென்னும் நாகரையர் பாடியது. உரை : பெரிதாராச் சிறு சினத்தர் - மிகைபட வுண்ணாத சிறிதே சினமுடையவரும்; சில சொல்லால் பல கேள்வியர் - சிலவாகிய சொற்களைச் சொல்லுதலோடு பல பொருள்களைச் சான்றோர் சொல்லக் கேட்டலையுடையவரும்; நுண்ணுணர்வினால் பெருங்கொடையர் - நுண்ணுணர்வோடு பெருங்கொடை வழங்குபவரும்; கலுழ் நனையால் தண் தேறலர் - கலங்கிய கள்ளோடு தண்ணிய கட்டெளிவை யளிப்பவரும்; கனி குய்யால் கொழுந்துவையர் - கனிந்த தாளிதத்தோடு கூடிய கொழுவிய துவையலைப் பிறர்க்களிப்பவரும்; தாழுவந்து தழூஉமொழியர் - எல்லோர்க்கும் பணிவை விரும்பி அவரை வணங்கிய சொல்லால் தழுவிப் பேசும் இன்சொல்லை யுடையவருமாய்; பலர்க்குப் பயனுறுப்ப ஆற்றி - பலர்க்கும் பயனுண்டாகத்தக்க செயல்களைச் செய்து; இந் நிலம் ஏமமாக ஆண்டோர் - இந்நிலவுலகம் இன்பநிலைய மாமாறு ஆண்ட வேந்தர்; சிலர் - சிலராவர்; பெரும - பெருமானே; இனி கேள் - இப்பொழுது யான் சொல்வதைக் கேட்பாயாக; அஃது அறியாதோர் பலர் - அவ்வாறு அவர் வாழுந்திறத்தையறி யாதவர் பலர்; அன்னோர் செல்வமும் மன்னி நில்லாது - அவ்வறியாதாருடைய செல்வமும் நிலைத்து நில்லாது; அதன் பண்பு இன்னும் அற்று - அச் செல்வத்தின் நிலையாப் பண்பு இப்பொழுதும் அவ்வாறேயாம்; அதனால் நிச்சமும் ஒழுக்கமும் முட்டிலை - ஆதலால் நாடோறும் நினக்குரிய ஒழுக்கத்தில் குன்றாதொழிக; பரிசில் நச்சுவர நிரப்பல் ஓம்புமதி - நின்பாற் பொருள்நச்சி வருவார் வர அவர்கட்கு வேண்டும் பொருளை நிரம்ப நல்குதலைப் பாதுகாப்பாயாக; அச்சுவரப் பாறு இறை கொண்ட பறந்தலை - கண்டார்க்கு அச்சமுண்டாமாறு கேடு பொருந்தியிருத்தலால் பாழிடமாகிய; மாறுதக - மாறுபட்ட இடத்துக்குத் தக; கள்ளி போகிய களரி மருங்கின் - கள்ளிகள் ஓங்கியுள்ள பிணஞ்சுடு களத்தின்கண்; வெள்ளில் நிறுத்த பின்றை - பாடையை நிறுத்திய பின்பு; புல்லகத்துக் கள்ளொடு இட்ட சில்லவிழ் வல்சி - பரப்பிய தருப்பைப் புல்லின்மேல் கள்ளுடனே படைக்கப்பட்ட சில சோறாகிய உணவை; புலையன் ஏவ - புலையன் உண்ணுமாறு படைக்க; புல்மேல் அமர்ந்துண்டு - தருப்பைப் புல்லின்மேல் இருந்து உண்டு; அழல்வாய்ப் புக்க பின்னும் - சுடலைவாய்த் தீயில் வெந்து சாம்பரானது கண்ட பின்னும்; பகுத்துண்டோர் பலர் வாய்த் திரார் - பகுத்துண்டு வாழும் பலருள்ளும் பலர் ஒழுக்கங் குன்றாத புகழ் வாய்த்திலர்; எ-று. பெரிதுண்டல் நோயும், கழிசினம் தீமையும் பயத்தலின், “பெரிதாராச் சிறு சினத்தர்” என்றும், தெளிந்த அறிவுடைமை தோன்ற, “சில சொல்லுவரென்றும் ” கூறினார். பல கேள்வியின் பயன் நுண்ணுணர்வுடைமை நுண்ணுணர் வுடையார்க்குப் பணிவின்கண் உவப்பும் பிறரை இன்சொல்லாற் றழீஇக் கோடலும் இயல்பு . பிறர் பிழைபட்ட பல சொற்கள் கூறினும் பொருள் தேர்ந்து தழீஇக் கொள் வரெனினுமாம்; வல்லா ராயினும் புறம றைத்துச் சென்றோரைச் சொல்லிக் காட்டிச் சோர்வின்றி விளக்கி, நல்லிதின் இயக்கும்” (மலைபடு. 78-80) நயனு டைமை தோன்ற, “தாழுவந்து தழூஉமொழியர்” என்றாரென்றுமாம். பலர்க்கும் உதவும்போது மிக்க பயன் தருவன வற்றைத் தேர்ந்து உதவுவரென்பார், “பயனுறுப்ப பலர்க் காற்றி” என்றார். இப்பெற்றியோர் இருப்பு,உலகர்க்கு அரணாய் இன்பத்துக் காக்கமாதலின், “ஏமமாக இந்நிலை மாண்டோர்” எனல் வேண்டிற்று. ஏமம், இன்பம் தெய்ய; அசைநிலை. தகையென்பதே பாடமாயின் பெருந்தகையேயென விளியாக்குக. இன்னோர் பெரிய தவமுடைய ராதலின், ஆண்டோர் சிலராயினர். தவமுடையாராதற்கேது நிலையாமையறிவாகலின், அதனை “அஃது” என்றொழிந்தார் அறியாரது அறியாமை பற்றிச் செல்வம் நிலை பெறாதென்பார், “அன்னோர் செல்வமும் மன்னி நில்லா” தென்றும், நிலையாமை செவ்வத்துக்கென்றுமுள்ளதோரியல் பென்றற்கு “இன்னும் அற்றதன் பண்பே” யென்றும் கூறினார். முட்டுதல் குறைதல் - அஞ்சுவர வென்பது எதுகை யின்பம் குறித்து வலித்தது. ஈமத்தில் எரிவாய் இடுவதன்முன், பிணத்தைப் பாடையின் நீக்கித்தருப்பையின் புன்மேற் கிடத்தி, எதிரே பரப்பப்பட்ட தருப்பையில் சோற்றை வைத்துப் புலையன் படைப்பன் என்பது. புல்லகத் திட்ட வல்சி புலையனேவப் புன்மேலமர்ந்துண்டென்பதனாற் பெற்றாம். பின்பு, போர்ப் புண்படாது நோயுற்றிறந்தாரை வாளாற் போழ்ந்து ஈமத்திடுவது பண்டையோர் மரபு. வாய்த்தல், ஒழுக்கங்குன்றாது கொடையாற் பெறும் புகழ் வாய்த்தல். பருத்துண்டோர் என்று பாடமாயின், உண்டு பருத்தோர் எனத் திருத்திக் கொள்க. உண்டியால் உடல் பருத்தனரேயன்றி கல்வி கேள்விகளால் உணர்வு பெருகாதோர் என்பதாம். சினத்தரும் கேள்வியரும் கொடையரும் தேறலரும் மொழியரு மாகி, இந்நிலம் ஏமமாக ஆண்டோர் சிலர்; பெரும; இனி; கேள், அஃது அறியாதோர் பலர்; அன்னோர் செல்வமும் நில்லா; பண்பு இன்னும் அற்று; அதனால் முட்டிலை, நிரப்பல் ஓம்புமதி; பகுத் துண்டோர் பலர் வாய்த்திரார் எனக் கூட்டி வினை முடிவு செய்க. விளக்கம் : நிலையாமையறிந்து இந்நிலமாண்டோராகிய சிலரும், அறியாதார் பலருமாகிய இருதிறத்து வேந்தர் செல்வமும் நில்லாது; அதனால் நீ ஒழுக்கம் முட்டிலையாய் நிரப்பல் ஓம்புமதியென்பவர், இவ்வுண்மையறிந்து பகுத்துண்பவர் பலரும் செல்வமும் வாழ்வும் நிலை பெறப் பெறுவர் போலும் என்னும் ஐயமறுத்தற்குப் “பலர் வாய்த்திரார் பகுத்துண்டோர்” என்றார். இனி, தாம் உடையது பகுத்துண் போருள்ளும் ஒழுக்கமுட்டாது புகழ் வாய்ந்திருந்தவர் சிலரே; பலர் அது வாய்த்திரார் என வுரைப்பினுமமையும். இதற்குப் புகழ் என ஒருசொல் வருவித்துக் கொள்க. 361. கயமனார் அச்சுப்பிரதிகளில் இப்பாட்டைப்பாடின ஆசிரியர்பெயர் காணப்படவில்லை. கிடைத்த கையெழுத்துப்படியில் இப்பாட்டைப் பாடியவர் கயமனாரென்று குறிக்கப்பட்டிருந்தது; இடையிற் சிதைந்திருந்த அடிகள் நிறைவுற்றும் இருந்தன; ஆயினும், இதன் இறுதிப்பகுதி கிடைக்கவில்லை. அதனால் அக் கையெழுத்துப் படியை மேற்கொண்டே ஈண்டு உரையும் பிறவும் கூறப்படுகின்றன. இப்பாட்டின்கண் ஆசிரியர் கயமனார் செல்வச் சிறப்புமிக்க தலைவனொருவனைக் கண்டு நிலையாமையை அறவுறுத்தி நன்னெறிபல எடுத்துரைப்பாராய்க் கூற்றுவனை நோக்கி. “கூற்றமே, எங்கள் தலைவன், நின் வரவுக்கு அஞ்சுபவனல்லன்; அவன் அந்தணர்க்கு அருங்கலங்களை நீர் பெய்து தந்துள்ளான்; பலர்க்கும் தாயினும் சாலப் பரிந்து அவர்வேண்டுவன பெரிதும் நல்கியவன்; தன் அருணிலைபாடும் புலவர் பொருநர் முதுலாயினார்க்குக் களிறும் மாவும் கொடுத்தவன்; தன் தாள் பணிந்து அன்பராகின்றவர்க்குப் பகைவர்களை வென்று பெற்ற பெருவளங்களைத் தந்தவன்; பாடினிக்குப் பொன்னரிமாலையும் பாணருக்குப் பொற்றாமரையும் அளித்தவன்; பொற்கலத்தில் தேறலேந்தி மகளிர் தாவுண்டு மகிழ்பவனாயினும், ஒருபொழுதும் யாக்கை செல்வ முதலியவற்றின் நிலையாமையியல்பை மறப்பதிலன் அவற்கு உலகவாழ்வின் நிலையாமை நீ தெரிவித்தல் வேண்டா; அவன் யாவையும் முன்பேயறிந்து உணர்வன முழுவதும் உணர்ந்து கேட்பன் தெளியக் கேட்டுச் சிறந்துளான்” என்று கூறியுள்ளார். காரெதி ருருமி னுரறிக் கல்லென ஆருயிர்க் கலமரு மாராக் கூற்றம் நின்வர வஞ்சலன் மாதோ நன்பல கேள்வி முற்றிய வேள்வி யந்தணர்க் 5 கருங்கல நீரொடு சிதறிப் பெருந்தகைத் தாயி னன்று பலர்க்கீத்துத் தெருணடை மாகளி றொடுதன் அருள்பா டுநர்க்கு நன்கருளியும் உருணடைப் பஃறே ரொன்னார்க் கொன்றதன் 10 தாள்சேருநர்க் கினிதீத்தும் புரிமாலையர் பாடினிக்குப் பொலந்தாமரைப் பூம்பாணரொடு கலந்தளைஇய நீளிருக்கையாற் பொறையொடு மலிந்த கற்பின் மானோக்கின் 15 வில்லென விலங்கிய புருவத்து வல்லென நல்கி னாவஞ்சு முள்ளெயிற்று மகளிர் அல்கு றாங்கா வசைஇ மெல்லென கலங்கலந் தேறல் பொலங்கலத் தேந்தி அமிழ்தென மடுப்ப மாந்தி யிகழ்விலன் 20 நில்லா வுலகத்து நிலையா மைநீ சொல்ல வேண்டா தோன்றன் முந்தறிந்த முழுதுணர் கேள்விய னாகலின். . . . . . . . . . . . . . . . . . விரகி னானே. . . . . . . . . . . . கயமனார் பாடியது. உரை : கார் எதிர் உருமின் உரறி - கார் காலத்திற்றோன்றும் இடி போல் சட்டெனத் தோன்றி; கல்லென; ஆருயிர்க்கு அலமரும் ஆராக் கூற்றம் - நிறைந்த உயிர்களை யுண்டற் பொருட்டுத் திரியும் நிரம்பாக் கூற்றமே; நின் வரவு அஞ்சலன் - நின் வருகைக்கு அஞ்சதல் இல்லான்; நன்பல கேள்வி முற்றிய வேள்வி யந்தணர்க்கு - நல்ல பல நூல்களைக் கேட்டு அறிவு நிரம்பிய வேள்வி செய்தலையுடைய அந்தணர்களுக்கு; அருங்கலம் நீரொடு சிதறி - பெறற்கரிய பொற்கலங்களை நீர் வார்த்துக் கொடுத்து; பெருந்தகை - பெரிய தகைமையை யுடைய எம் தலைவன்; தாயின் நன்று பலர்க்கு ஈத்து - தாயினும் பெரிய அன்புடையனாய் இரவலர் பலர்க்கும் வேண்டுவன கொடுத்து; தெருள் நடை மா களிறொடு - தெருண்ட நடையினையுடைய குதிரையும் யானையும்; தன் அருள் பாடுநர்க்கு - அருணலம் பாடும் பொருநர் முதலாயி னார்க்கு; நன்கு அருளியும் - மிகக் கொடுத்தும்; ஒன்னார்க் கொன்ற தன் தாள் சேருநர்க்கு உருள் நடைத் தேர் பல இனி தீத்தும் - பகைவரைக் கொன்ற தன் தாளாண்மையைப் பாராட்டிப் பாடும் புலவர்க்கு உருண்டு செல்லும் தேர்கள் பல வுவந்தளித்தும்; புரிமாலையர் பாடினிக்கு - பொன்னரிமாலை பெறற்குரிய பாடினிகட்கும்; பொலந்தாமரைப் பூம்பாணரொடு - பொன்னாற் செய்த தாமரைப் பூவைப் பெறற்குரிய பாணர்கட்கும்; கலந்தளைஇய நீள் இருக்கையால் - தம்மிற் கலந்து வேண்டுவன நல்கி அளவளாவியிருக்கும் நெடிய இருக்கைக் கண்; பொறையொடு மலிந்த கற்பின் - பொறுமைக் குணங் களால் நிறைந்த கற்பினையும்; மான் நோக்கின் - மான்போலுங் கண்களையும்; வில்லென விலங்கிய புருவத்து - வில்போல் வளைந்த புருவத்தையும்; வல்லென நல்கின் - வல்லென ஒரு சொல் வழங்கின்; நாவஞ்சும் முள்ளெயிற்று மகளிர் - நா அஞ்சு தற்கேதுவாகிய முட்போன்ற பற்களையு முடைய மகளிர்; அல்குல் தாங்கா அசைஇ - அல்குலிலணிந்த மேகலையைத் தாங்க மாட்டாது தளர்ந்து; மெல்லென - மென்மையாக; கலங்கலந் தேறல் பொலங்கலத் தேந்தி - கலங்கலாகிய கள்ளைப் பொன் வள்ளத் தேந்தி; அமிழ்தென மடுப்ப மாந்தி - அமிழ் துண்பிப்பாரைப் போல வுண்பிக்க வுண்டும்; இகழ்விலன் - நிலையாமை யுணர்வை மறப்பதிலன்; நில்லா உலகத்து நிலையாமை நீ சொல்ல வேண்டா - நிலைபே றில்லாத உலகியலின் நிலையாமை யியல்பை நீ எடுத்துச் சொல்ல வேண்டா; தோன்றல் - எங்கள் தலைவனாகிய அவன்; முந்தறிந்த முழுதுணர் கேள்வியன் - முன்பே யறிந்து மறவா தொழுகும் உணரத்தகுவனவற்றை முற்றவுணர்ந்த கேள்வியறி வுடையன்; ஆகலின் - ஆதலால்..............; விரகினான் - விரகின்கண்: எ-று. கார்காலத்து மழைமுகிலிற் றோன்றும் இடி எதிர்பாரா வகையில் திடீரெனத் தோன்றி முழங்குவது போலக் கூற்றுவன் தோன்றி யச்சுறுத்தலின் “காரெதிர் உருமு” எடுத்தோதப் பட்டது. அளவிறந்த உயிர் இரவு பகலென்னாது ஓய்வின்றி யுண்டும் அமையாது மேன் மேலும் உண்ட வண்ணமிருத்தலின், “ஆருயிர்க் கலமரும் ஆராக் கூற்றம்” என்றார். கூற்றம். விளி. வேள்வி செய்தலையுடைய அந்தணர்தாம் பெறுவனவற்றை நீர்வார்த்துத் தரப் பெறுவதையே இயல்பாகவுடைய ரென்பதுபற்றி, அருங்கலம் நீரொடுசிதறி யென்றார். “ஏற்ற பார்ப்பார்க்கும் ஈர்ங்கை நிறைய, பூவும் பொன்னும் புனல்படச் சொரிந்து” (புறம். 367) என்றார். பிறரும். கதியும் சாரியையும் நன்கு பயின்ற குதிரையின் நடை மிகவும் தெளிவாக இருத்தலின், “தெருணடைமா” எனச் சிறப்பிக்கப்பட்டது. தாயினும் சிறந்த அன்புகொண்டு ஈதலின், பலரென்றது இரவலரை யாயிற்று. தான் சேருநர் என்றது அருள் வேண்டிய வேந்தரையென்றுமாம். பாணரொடு என்புழி மூன்றாவது நான்காவதன்கண் மயங்கிற்று. பாடினி மாலையும் பாணர் தாமரையும் பெறுதலை, “வாடாமாலை பாடினியணியப், பாணன்சென்னிக் கேணி பூவா, எரிமரு டாமரைப் பெருமலர் தயங்க” (புறம். 364) எனப்பிறரும் கூறுதல் காண்க. உரிமை மகளிராதலின் அவருடைய பொறையும் கற்பும் விதந்தோதினார். வல்லென்ற சொற்களை விரைந்துபேசின் மேலும் கீழும் உள்ள பற்கள் துன்புறத்துமென அஞ்சினமை தோன்ற, “வல்லென நல்கின் நாவஞ்சு முள்ளெயிற்று மகளிர்” என்றார்; “அமிழ்து பொதிசெந் நாவஞ்ச வந்த, வார்ந்திலங்கு வையெ யிற்றுச் சின்மொழி யரிவை” (குறுந். 14) என்று சான்றோரும் கூறுவது காண்க. அல்குல் ஆகுபெயர். இகழ்தல் ஈண்டு மறத்தன் மேனின்றது; தன்னுயிரைக் கொள்ள வருகின்ற நின் கொடுமைபற்றி நின்னை இகழ்விலன் என்றற்கு ஏது கூறுதலின், “முந்தறிந்த முழுதுணர் கேள்வியனாகலின்” என்றார். கூற்றம் பெருந்தகை; சிதறி , ஈத்து அருளியும் ஈத்தும் அளைஇய இருக்கையில், மடுப்பமாந்தி இகழ்விலன்; அதனால் நின் வரவு அஞ்சலன்; நீ நிலையாமை சொல்ல வேண்டா; தோன்றல் கேள்வியனாகலின் எனக்கூட்டி வினைமுடிவு கொள்க. இதன் ஈற்றடியின் முதலிரு சீர்களும் சிதைந்து விட்டன. விளக்கம் : எத்தனை வலியுடையாராயினும் போரெதிர்ந்தவழி அஞ்சாது நின்று பொருது வெல்லும் பேராண்மையுடையவனாதல் கண்டு, அவன் அஞ்சுமாறு இடிபோல் உரறிவருமாயினும் கூற்றத்துக்கு அஞ்சான் என்பது விளங்குதற்கு. “காரெதிர் உருமின் உரறிக் கல்லென வரும் கூற்றம்” என்றார். இனி எந்நாளாயினும் ஒரு நாள் கூற்றம் வருவது ஒருதலை யென்றும், அது வருமுன் செய்தற்குரிய நல்வினை செய்தல் வேண்டுமெனக் கருதி அவற்றைச் செய்துள்ளா னென்றும், அதனால் அவன்முன் கூற்றம் அச்சமுண்டாகத்தோன்றி வருதல் பயனில் செயலென்றும் கூறுவார், “கூற்றம் நின்வர வஞ்சலன்” என்றாரென்றுமாம் அந்தணர், அரசர் பாணர், விறலியார் முதலிய பலர்க்கும் அவரவர் வரிசையறிந்து நல்கினான் எனவே, நிலையாமை யுணர்வு நன்கு வாய்த்திருப்பது விளங்கிற்று, கலங்கலந் தேறலை மகளிர் மடுப்ப மாந்தி இன்பக் களிப்பில் மூழ்கியிருந்த காலத்தும் நிலையாமைபற்றிய நல்லுணர்வு அவன் நினைவின்கண் நீங்காது நிலை பெற்றிருந்தது காட்டுவார், “இகழ்விலன்” என்றார். இவ்வாற்றால் அவற்குக் கூற்றம் போந்து நிலையாமையைக் காட்டுவது மிகையென்னும் குற்றமென்பார், “நில்லா வுலகத்து நிலையாமை நீ, சொல்ல வேண்டா” என்றும், இதனை அவன் தன் வாழ்க்கையான் மட்டுமன்றிக் கற்றுவல்ல நூலோர் நூல்களைக் கற்றும், அவர்பாற் கேட்டும் பேரறி வினனாயின னென்பார், “முழுதுணர் கேள்வியன்” என்றும் கூறினார். 362. சிறுவெண்டேரையார் இச் சான்றோரைப்பற்றி ஒன்றும் தெரிந்திலது. கயமனாராற் பாடப்பெற்றதலைவனே இவரால் இப்பாட்டிற் பாடப் பட்டிருத்தலின் , இவரும் கயமனாரும் ஒருகாலத்தவரென்று அறியலாம். “அந்தணர்களே, எங்கள் தலைவன் கணங்கொண்ட தானையொடு சென்று பகைவரைத் தாக்குங் குரலைக் கேட்பீராக; அருளாகாமையின், இஃது நுங்கள் நான்மறைகளிற் குறிக்கப் படுவதன்று; புறத்துறையாகிய பொருளாதலால் ஒழுக்கங்கூறும் அறநூல்களில் குறிக்கப்படுவதுமன்று; பார்ப்பார்க்குத் தண்ணடை நல்கி, இரவலர்க்குச் சோறளித்துப் பரிசிலர்க்கு நன்கலம் வீசி, கல்லென்னும் சுற்றம் பெருகியவழித்தாம் சிறிய இடத்தில் ஒதுங்கியிருந்தற்கஞ்சி, உயர்ந்தோருலகத்துப் போர்வடுவுற்ற உடம்போடு செல்லும் பொருட்டேயாகும்,” என இப்பாட்டின்கண் போர் வேந்தரது போர் வேட்கையின் கருத்தை விளக்கியுள்ளார். ஞாயிற் றன்ன வாய்மணி மிடைந்த மதியுற ழார மார்பிற் புரளப் பலிபெறு முரசம் பாசறைச் சிலைப்பப் பொழிலகம் பரந்த பெருஞ்செய் யாடவர் 5 செருப்புகன் றெடுக்கும் விசய வெண்கொடி அணங்குருத் தன்ன கணங்கொ டானைக் கூற்றத் தன்ன மாற்றரு முன்பிற் றாகுரற்கேண்மி னந்த ணாளிர் நான்மறைக் குறித்தன்றருளா காமையின் 10 அறங்குறித் தன்று பொருளா குதலின் மருடீர்ந்து மயக்கொரீஇக் கைபெய்தநீர் கடற்பரப்ப ஆமிருந்த வடைநல்கிச் சோறு கொடுத்து மிகப்பெரிதும் 15 வீறுசா னன்கலம் வீசிநன்றும் சிறுவெள் ளென்பி னெடுவெண் களரின் வாய்வன் காக்கை கூகையொடு கூடிப் பகலுங் கூவு மகலு ளாங்கட் காடுகண் மறைத்த கல்லென் சுற்றமொ 20 டில்லென் றில்வயிற் பெயர மெல்ல இடஞ்சிறி தொதுங்க லஞ்சி உடம்பொடுஞ் சென்மா ருயர்ந்தோர் நாட்டே. திணை : பொதுவியல்; துறை : பெருங்காஞ்சி. அவனைச் சிறு வெண்டேரையார் பாடியது. உரை : ஞாயிற் றன்ன ஆய்மணி மிடைந்த - ஞாயிறு போல் ஒளிதிகழும் ஆராய்ந்தெடுத்த மணிகள் பதித்த; மதியுறழ் ஆரம் மார்பிற் புரள - பிறைமதிபோல வளைந்த மாலை மார்பிற் கிடந்தசைய; பலிபெறு முரசம் பாசறைச் சிலைப்ப - பலியூட்டப்பெற்ற முரசு பாசறைக்கண் ஒலிக்க; பொழிலகம் பரந்த பெருஞ்செய் ஆடவர் - பொழிலிடங்களிற் பரந்து நின்ற பெரிய மறச்செயலைப் புரியும் வீரர்; செருப்புகன்று எடுக்கும் விசய வெண்கொடி - போரை விரும்பி யுயர்த்திய வெற்றியை யுடைய வெண்மையான கொடியேந்திய; அணங்கு உருத்தன்ன கணங்கொள் தானை - வருத்தம் செய்யும் தெய்வம் உருத்து வந்தாற்போன்ற கூட்டங்கொண்ட தானையிடத்தேயிருந்து; கூற்றத்தன்ன மாற்றரு முன்பின் - கூற்றுவனைப்போல் விலக்கு தற்கரிய வலியுடனே; தாக்குரல் கேண்மின் - பகைவரைத் தாக்குதற்குச் செய்யும் முழக்கத்தைக் கேட்பீராக; அந்தணாளிர் - அந்தணர்களே; அருளாகாமையின் நான்மறைக் குறித்தன்று - இஃது அருட்செயலன்மையால் நும் நான்மறைக்கண் குறிக்கப் படுவதன்று; பொருளாகுதலின் அறம் குறித்தன்று - புறத் துறையாகிய பொருள் குறித்தலின் ஒழுக்கம் கூறும் அற நூல்களிற் குறிக்கப்படுவதுமன்று; மருள் தீர்ந்து மயக்கு ஒரீஇ- மருட்கையினின்றும் நீங்கி அம்மருள் காரணமாகத் தோன்றும் மயக்கத்தையும் போக்கி; கைபெய்த நீர் கடற்பரப்ப- பார்ப்பார்க்குக் கொடுக்குங்கால் அவர் கையிற் பெய்த நீர் கடலளவும் பரந்து செல்லுமாறு; ஆம் இருந்த அடை நல்கி - நீர்வளம் மிகுந்த மருத நிலத்தூர்களைக் கொடுத்தும்; மிகப் பெரிதும் சோறு கொடுத்து - பசித்து வரும் இரவலர்க்கு மிகுதியாகச் சோறளித்தும்; வீறுசால் நன்கலம் நன்றும் வீசி - பரிசிலர்க்குச் சிறப்பமைந்த நல்ல அணிகளைப் பெரிதும் கொடுத்தும்; சிறு வெள்ளென்பின் நெடுவெண் களரின் - சிறு சிறு வெள்ளிய எலும்புகள் கிடக்கும் நெடிய வெண்மையான களர் நிலத்தின் கண்; வல்வாய்க் காக்கை கூகையொடு கூடி - வலிய வாயையுடைய காக்கையும் கூகையும் கூடி; பகலும் கூவும் அகலுள் ஆங்கண் - பகற்போதிலும் கூவும் அகன்றவிட மாகிய அவ்விடத்து; காடுகண் மறைத்த கல்லென் சுற்றமொடு - சுடுகாட்டுண்மை புலனாகாதபடி செறிந்த கல்லென்ற சுற்றத்தார் நிறைதலால்; மெல்ல - மெல்லென; இல்வயின் இல்லென்று பெயர இல்லிடத்தே - இனித் தமக்கு இடமில்லையென்று அதனின் நீங்கக் கருதியும்; இடஞ் சிறிது ஒதுங்கல் அஞ்சி - நிலவுலகு சிறிதாகலால் இனிதியங்குதற் கியலாமைக்கு அஞ்சி யும்; உயர்ந்தோர் நாட்டு உடம்பொடுஞ் சென்மார் - வீரத்தால் சிறந்த உயர்ந்தோர் உலகிற்குத் தம்முடம்போடே செல்லற் பொருட்டுப் பொருகின்றனர்; எ-று. அந்தணாளிர், தானை தாக்குரல் கேண்மின் நான்மறைக் குறித்தன்று; அறம் குறித்தன்று; தீர்ந்து, ஒரீஇ, நல்கி, கொடுத்து, வீசி, அஞ்சி, உயர்ந்தோர் நாட்டு உடம்பொடுஞ் சென்மார் பொரு கின்றனரென ஒரு சொல் வருவித்துக் கூட்டி வினைமுடிவு செய்க. மணி யொளிக்கு ஞாயிறும், மாலைக்குப் பிறை மதியும் உவமம். போர்க்குச் செல்லும் வேந்தர், முதற்கண் முரசுக்குப் பலியிடுவது மரபு; “கோற்றொழில் வேந்தன் கொற்ற முரசம், பெரும்பணைக் கொட்டிலுள் அரும்பலி யோச்சி” (பெருங். II. 2:29 - 30) என வருதல் காண்க. அணங்கு உருத்தன்ன என்ப தற்குத் தெய்வம் வருத்துதற் பொருட்டு உருக்கொண்டாற் போன்ற என்றுரைப்பினுமமையும். தாக்கு குரல், தாக்குரல் என வந்தது; தழங்கு குரல் முரசமென்பது தழங்குரல் முரசம் என வருதல் போல. மிக்க வலியும் செல்வமும் இளமை யுமாகிய அவற்றை நிலையுடையவாகக் கருதிற் கடும் பற்றுள்ளம் கொள்ளச் செய்யுமாகலின், அதற்கேது வாகிய மருட்சியும் மயக்கமும் தீர்ந்தாலன்றிப் பொருட் கொடையாற் புகழும் உயிர்க்கொடையாற் துறக்க வின்பமும் எய்தாமைபற்றி, “மருள் தீர்ந்து மயக் கொரீஇ” என்றார். கல்லென்னும் சுற்றம் கூடி நிலையாமையுணர்த்தும் சுடுகாட்டின் உண்மை நினையாத வாறு அறிவுக்கண்ணை மறைத்தலின், “காடு கண் மறைத்த கல்லென் சுற்றம்” என்றார். பேராண்மையாலும் சிறந்த கைவண்மையாலும் உண்டாகும் புகழ் உலக முழுவதும் பரவப் பெற்றார்க்கு உறையுளாகிய உலகிடம் சிறிதாதலின், “இடஞ் சிறிது ஒதுங்கல் அஞ்சி” யென்றும், போரிற் புண்பட்டுப் புகழுண்டாக வீழ்பவர், தம் புகழுடம்போடே துறக்கவுலகு புகுவரென்பதனால், “உடம்பொடுஞ் சென்மார் உயர்ந்தோர் நாட்டே” யென்றும் உரைத்தார்; ஏனைச் சான்றோரும், “நீளிலை யெஃக மறுத்த வுடம்பொடு, வாராவுலகம் புகுதலொன்றோ” (புறம். 341) என்பது காண்க. உயர்ந்தோர், துறக்கவுலகு சென்றுள்ள சான்றோர். விளக்கம் : மறவர் பலரும் போர் வேட்கை மிகக்கொண்டு நாளும் போரே விரும்பியும் அதற்கேற்ப மெய்வலி பெருக்கியும் ஒழுகுவது கண்ட அந்தணர், இவ் வேட்கைக்குக் காரணமறியுங் கருத்தினராய் வந்து நிற்ப, ஆசிரியர், அந்தணாளரே, ஆரம் மார்பிற் புரள, முரசம் பாசறைக்கண் சிலைப்பத் தானைவீரர் மாற்றரும் முன்புடனே பகைவர் மேற் சென்று தாக்கும் முழக்கத்தைக் கேண்மின் என்று அவர்க்குப் போர்நிகழ்ச்சியைக் காட்டி மறவரது போர் வேட்கை மிகுதியைக் கண்ணெதிரே காண்பித்தார். கண்ட அந்தணாளருக்கு வியப்புப் பெரி தாயிற்று. ஆகவே, ஆசிரியர், இது நுங்கள் நான்மறையிலும் அறநூல் களிலும் காணப்படாது; இது பொருட்டுறை. நுமக்கு இது வேண்டாத தொன்று என்றும், பொருட்பேறு தன்னலங் குறித்தன்று; பார்ப்பாரையும் ஏனை இரவலரையும் உண்பித்தல் கருதியது என்பார், “கை பெய்த நீர் கடல் பரப்ப, ஆம் இருந்த அடைநல்கிச் சோறு கொடுத்து மிகப் பெரிதும் வீறுசால் நன்கலம் வீசி” என்றும் குறிப்பித்தார். இவ்வாறு இரப்போர் சுற்றமும் புரப்போர் கொற்றமும் வளர்க்கு முகத்தால் தாமும் நிலவுலகு முற்றும் தம் புகழ்பரப்பி, மக்களும் ஒக்கலுமாகிய சுற்றம்சூழவாழ்வதால், நிலையாமை யுணர்த்தும் முதுகாட்டுண்மை மறைக்கப்படுமாயினும், இப் போர்வேட்கை மிக்கு நிற்கும் சான்றோர் அதனால் மறைப்புண்ணாது நிலையாமை நிலவும் நெஞ்சினராய், இனித்தாம் உறையும் இல்லம் நிலைத்த இன்பந்தரும் நிலையமாகா தெனவுணர்ந்து அதனின் நீங்கும் கருத்தாலும், இந் நிலவுலகு முழுதும் தம் புகழ் பரவி விழுங்கினமையின் இனி அது சென்று பரவுதற்கு இடந்தேடுங் கருத்தாலும் உயர்ந்தோர் உறையும் துறக் கவுலகு செல்லும் கருத்தினராயினர். அது போர்ப்புண்பட்டு வீழுமாற்றால் பெறக்கடவதாகலின், “உடம்பொடுஞ்சென்மார்” என்றும், அது குறித்துப் போர் வேட்கை மிகுவாராயினரென்றும் கூறினாராயிற்று. 363. ஐயாதிச் சிறுவெண்டேரையார் முன்பு கண்ட சிறுவெண்டேரையாரின் வேறுபடுத்த இவர் ஐயாதிச் சிறுவெண்டேரையாரெனப்படுகின்றனர். ஐயாதி யென்பது இவரதூர் இந்த ஐயாதி யென்பதுவே இடைக்காலத்தே ஐயாறாயிற்றோவென வெண்ணுதற்கும் இடந்தருகின்றது. தொண்டை நாட்டிற் சலவாறு என்று மூர்சலவாதியென வழங்குவது காண்க, தேரையார் என்னும் பெயர் பிற்காலத்தும் வழக்கிலிருந்துளது. தேரையார் என்றொரு சான்றோர் பதார்த்தகுண சிந்தாமணி யென்னும் நூலை யெழுதியுள்ளார். ஆதி யென்னும் பெயரால், ஆதியூர் (A.R. No. 778 of 1933) என்றும், ஆதிகுடி (A.R. No. 105 of 1920) என்றும் ஊர்கள் பல இருந்திருக்கின்றன. இவரும் வேந்தனை நோக்கி, இந்நிலவுலகில் உடை வேல் மரத்தின் சிறிய இலையளவு இடமும் பிறர்க்கின்றித் தாமே யாண்ட வேந்தர் பலர் இருந்தனர். முடிவில் தம் நாட்டைப் பிறர் கொள்ள, அவர் இறந்தனர்; அதனால் “இறவாது நின்றோர் ஒருவருமில்லை; இறத்தல் உண்மை; பொய்யன்று; இன்னா நாளாகிய இறக்கும் நாள் வருமுன்னே நீ இவ்வுலகியலைத் துறந்து நினக்குரிய நல்வினையாகிய தவத்தைச் செய்வாயாக” என இப்பாட்டின்கண் அறிவுறுத்தியுள்ளார். இருங்கட லுடுத்தவிப் பெருங்கண் மாநிலம் உடையிலை நடுவண திடைபிறர்க் கின்றித் தாமே யாண்ட வேமங் காவலர் இடுதிரை மணலினும் பலரே சுடுபிணக் 5 காடுபதி யாகப் போகித் தத்தம் நாடு பிறர்கொளச் சென்றுமாய்ந் தனரே அதனால், நீயுங் கேண்மதி யத்தை வீயா துடம்பொடு நின்ற வுயிரு மில்லை மடங்க லுண்மை மாயமோ வன்றே 10 கள்ளி யேய்ந்த முள்ளியம் புறங்காட்டு வெள்ளில் போகிய வியலு ளாங்கண் உப்பிலாஅ வவிப்புழுக்கல் கைக்கொண்டு பிறக்குநோக்கா திழிபிறப்பினோ னீயப்பெற்று 15 நிலங்கல னாக விலங்குபலி மிசையும் இன்னா வைகல் வாரா முன்னே செய்ந்நீ முன்னிய வினையே முந்நீர் வரைப்பா முழுதுடன் றுறந்தே. திணை : பொதுவியல்; துறை : பெருங்காஞ்சி. ஐயாதிச் சிறுவெண் டேரையார் பாடியது. உரை : இருங்கடல் உடுத்த இப் பெருங்கண் மாநிலம் - கரிய கடல் சூழ்ந்த இப் பெரிய இடத்தையுடைய நிலவுலகத்தை; நடுவணது உடைஇலை இடை பிறர்க்கு இன்றி - நடுவே உடை வேலமரத்தின் இலையளவாகிய இடமும் பிறர்க்கு இல்லையாக; தாமே ஆண்ட ஏமம் காவலர் - தாமே தமக்குரியதாக முழுதுமாண்ட இன்பக் காவலரான வேந்தர்; திரையிடு மணலினும் பலர் - கடற்றிரைகள் கொழித்தொதுக்கும் நுண்மணலினும் பலராவர்; சுடு பிணக்காடு பதியாக - பிணஞ் சுடும் சுடு காட்டைத் தமக்கு முடிவிடமாக; போகி - சென்று சேர்ந்து; தத்தம் நாடு பிறர்கொள - தத்தமக்குரிய நாட்டை மற்றவர் கொள்ள; சென்று மாய்ந்தனர் - இறந்து போயினர்; அதனால்-; நீயும் கேண்மதி - நீயும் கேட்பாயாக; வீயாது உடம்பொடு நின்ற உயிரும் இல்லை - இறவாமல் உடம்போடே என்றும் இருந்தவர் யாரும் இல்லை; மடங்கல் உண்மை - இறப்பு உளது; மாயம் அன்று - பொய் யன்று; கள்ளி ஏய்ந்த முள்ளியம் புறங்காட்டு - கள்ளிகள் பரந்து மூடிய முட்செடிகள் நிறைந்த முது காட்டின்;வெள்ளில் போகிய வியலுள் ஆங்கண் - வெள்ளிடையே யோங்கிய அகன்ற இடத்தின்கண்; உப்பிலா அவிப் புழுக்கல் - உப்பின்றி வேகவைத்த சோற்றை; கைக்கொண்டு பிறக்கு நோக்காது - கையிற்கொண்டு பின்புறம் பாராது; இழி பிறப்பினோன் ஈயப் பெற்று - இழிசினனாகிய புலையன் கொடுக்கப் பெற்று; நிலம் கலனாக விலங்கு பலி மிசையும் - நிலத்தையே உண்கலமாகக் கொண்டுவைத்து வேண்டாத பலியுணவை யேற்கும்; இன்னா வைகல் வாராமுன் - துன்பம் பொருந்திய இறுதி நாள் வருமுன்பே; முந்நீர் வரைப்பகம் முழுதுடன் துறந்து - கடல் சூழ்ந்த நிலவுலக வாழ்வைப் பற்றறத் துறந்து; நீ முன்னிய வினைசெய் - நீ கருதிய தவமாகிய நல்வினையைச் செய்வாயாக; எ-று. இருமை, கருமை, பெருமை, பரப்பு உடையிலை மிகச் சிறியது; “சிறியிலையுடை” (புறம். 124) என்பது காண்க. நாடாளும்வேந்தர் இறப்பின், அவர் நாட்டரசை அவர்தம் மக்களே பெறினும் அவரைப் “பிறர்” என்றார். இறக்குங்கால் உயிர்த் துணையாக வாராமைபற்றி. தோன்றிய வுடம்பு வளர்ந்து முதிர்ந்து மீள மடங்கிச் சென்று ஒடுங்குதற்கிடனாதலின் சாக்காடு மடங்க லெனப்பட்டது. தான் கொள்ளக் கருதிய உயிரைக் கொண்டன்றி மீளாமைபற்றிக் கூற்று மடங்கலெனப்பட்ட தெனினுமமையும். சுடுகாட்டில் ஈமத்தில் இடுமுன், புலையன் உப்பில்லாச் சோறட்டு நிலத்தில் வைத்துப் படைத்தலும் அதனை யவன் கையிலேந்திப் படைக்குங்கால் பின்புறம் பாராமல் படைக்கும் முறைமையும் ஈமத்திற் பண்டையோர் செய்த சடங்குகள் முன்னிய வினையாவது மீளவும் வேந்தர் குடியிற்றோன்றி அரசவின்பம் துய்க்கவேண்டுமென்பது; இன்றேல், பிறவா வாழ்க்கை பெற்று உயர்ந்தோருலகத்து உலவாப் பேரின்பம் நுகர்தல்வேண்டு மென்பது; இவ் வினைக்கு முன்னே செயற் பாலது தவமென்றும் அதற்கு உரு துறவென்றும் அறிக. காவலர் பலர் மாய்ந்தனர்; அதனால் கேண்மதி; உயிரும் இல்லை; உண்மை, மாயமன்று; வாரா முன்னே துறந்து நீ முன்னிய வினையைச் செய் என்று கூட்டி வினைமுடிவு செய்க. யாக்கையும் செல்வமும் நிலையாமை கூறித் துறவுபூண்டு தவஞ்செய்யுமாறு வலியுறுத்தவாறு. விளக்கம் : “மாற்றருங் கூற்றம் சாற்றியபெருமையும்” (தொல். புறத். 19) என்ற சூத்திரத்து “மாற்றருங் கூற்றம்சாற்றியபெருமை” என்பதற்கு இதனைக் காட்டுவர் இளம்பூரணர். இனி, ஆசிரியர் பேராசிரியர் இப்பாட்டை வாயுறை வாழ்த்துக்கு எடுத்துக்காட்டுவர். இந்த மாநிலம் ஏனையோர்க்கும் உரியதாகலின் பொதுவெனக் கருதாது தமக்கே உரித்தாகக் கருதி வென்று தாமே நிலவுலகிற்கு வேந்த ரென்னுமாறு ஆட்சி செலுத்திய பெரு வேந்தரும் பின்னர் இறந்தொழிந்தனர்; ஆகவே, ஏனை எளியோர் இறப்பது சொல்ல வேண்டா. எனவே, எத்திறத்தோரும் இறத்தல் ஒருதலையாம் என்பார், “வீயாது உடம்பொடு நின்ற உயிருமில்லை” யென்றார். இறக்கும் நாளில் நிகழும் நிகழ்ச்சிகள் இன்பந்தாராவாகலின், அவை நிகழும் நாளை, “இன்னா வைகல்” எனக் குறிக்கின்றார். இன்னாமையை விளக்குதல் வேண்டி, புறங்காட்டு வியலுளாங்கண், இழிபிறப்பினோன் உப்பிலா அவிப் புழுக்கலை நிலங்கலனாக வைத்துப் படைத்தலை எடுத்தோதினார். இறத்தற்குரிய வைகல் நெருங்குங்கால் சொல்லும் செயலும் கை கூடாது போதலின், முன்னிய வினை செய்யப்படாவென்பார், “இன்னா வைகல் வாரா முன்னே செய்நீ முன்னிய வினை” யென்றார். நினைத்த நினைவைச் செயற்படுத்தற்குரிய வாயும் உடம்புமாகிய கருவிகள் பயன்படாது கெடுதலின், இறக்கும் நாள் “இன்னா வைகல்” எனப் படுவது இயல்பு. மாறிப் பிறப்பதாயின் வேந்தர் குடியிற் பிறத்தலையே வேந்தர் வேண்டுவதை, “மன்பதை காக்கும் நீள்குடிச்சிறந்த, தென்புலங் காவலினொரீஇப் பிறர், வன்புலங்காவலின் மாறியான் பிறக்கே” (புறம். 71) என வருதல் கண்டு கொள்க. 364. கூகைக்கோழியார் பேராந்தையைக் கூகைக்கோழியென்று சிறப்பித் துரைத்த நயம் கண்டு சான்றோர் இவரைக் கூகைக்கோழியார் என வழங்கினார். இதனால் இவரது இயற்பெயர் மறைந்துபோயிற்று. இவரைப்போல ஆசிரியர் பரணரும், பசும்பூண் பாண்டியனுடைய தானைத் தலைவனான அதிகன் என்பான் களிறொடு பொருது வீழ்ந்த வாகைப் பறந்தலையை “கூகைக்கோழி வாகைப்பறந்தலை” (குறுந். 339) யெனச் சிறப்பித் துரைத்தது இக் கூகைக்கோழியார் வழங்கிக்காட்டிய இத் தொடரை நல்லிசைச் சான்றோர் விரும்பி யேற்றுக் கொண்டாரென்பதை வலியுறுத்துகிறது. இதனால் இவர் பண்டைச்சான்றோரால் நன்கு மதித்துப் போற்றும் பெருமை பெற்றவரெனஅறியலாம், ஐயாதிச் சிறு வெண்டேரையார் பாடிய தலைவனையே இவரும் பாடியிருத்தலின், இருவரும் ஒரு காலத்தவரென்பது தெளிவு. இப் பாட்டின்கண், போர் வேட்கை கொண்டு நாளும் அதனையே செய்து சிறந்த வேந்தனொருவனைக் கண்டு, “வேந்தே பாணற்குத் தாமரையும் விறலிக்கு மாலையும் தந்து அவரும் பிறருமாகிய சுற்றம் சூழ விருந்து ஆட்டுக் கறியும் கள்ளும் உண்டு, இரவலரை இவ்வாறே யுண்பித்து மகிழ்வோமாக; முதுமரப் பொந்திலிருந்து கூகைக்கோழி கூவும் இடுகாட்டையாம் அடைவோமாயின், இவ் வுண்டாட்டினைப் பெறுவது அரிது” என அறிவுறுத்தியுள்ளார். வாடா மாலை பாடினி யணியப் பாணன் சென்னிக் கேணி பூவா எரிமரு டாமரைப் பெருமலர் தயங்க மைவிடை யிரும்போத்துச் செந்தீச் சேர்த்திக் 5 காயங் கனிந்த கண்ணகன் கொழுங்குறை நறவுண் செவ்வாய் நாத்திறம் பெயர்ப்ப உண்டுந் தின்று மிரப்போர்க் கீய்ந்தும் மகிழ்கம் வம்மோ மறப்போ ரோயே அரிய வாகலு முரிய பெரும 10 நிலம்பக வீழ்ந்த வலங்கற் பல்வேர் முதுமரப் பொத்திற் கதுமென வியம்பும் கூகைக் கோழி யானாத் தாழிய பெருங்கா டெய்திய ஞான்றே. திணை : பொதுவியல்; துறை : பெருங்காஞ்சி. அவனைக் கூகைக்கோழியார் பாடியது. உரை : பாடினி வாடா மாலை யணிய - பாண்மகளாகிய பாடினி பொன்மாலை யணியவும்; பாணர் சென்னிக் கேணி பூவா எரிமருள் தாமரைப் பெருமலர் தயங்க - பாணன் தன் சென்னியின்கண் நீர்நிலையிற் பூவாத எரிபோலும் பெரிய பொற்றாமரைப் பூவணிந்து விளங்கவும்; மைவிடை இரும் போத்து - கரிய ஆட்டுக்கிடாயை வீழ்த்து; செந்தீச் சேர்த்தி - அதன் ஊனைத் தீயிலிட்டுச் சுட்டு; காயம் கனிந்த கண்ணகன் கொழுங்குறை - காயம் பெய்தட்ட இடமகன்ற கொழுவிய ஊனுணவை; நறவுண் செவ்வாய் நாத்திறம் பெயர்ப்பத் தின்றும் உண்டும் - கள்ளுண்ணும் சிவந்த வாயிலிட்டு நாவானது இரு மருங்கும் புரட்டிக் கொடுக்கத் தின்றும் உண்டும்; இரப் போர்க்கு ஈந்தும் - இரவலரை யுண்பித்தும்; மகிழ்கம் வம்மோ - மகிழ்வோம் வருவாயாக; மறப்போரோய் - மறம் பொருந்திய போரைச் செய்பவனே; நிலம்பக வீழ்ந்த அலங்கல் பல்வேர் - நிலம் பிளவுபடக் கீழே சென்ற அசைகின்ற பலவாகிய வேர் களையுடைய; முதுமரப் பொத்தின் - முதுமரத்தின் பொந்து களிலிருந்து; கதுமென இயம்பும் கூகைக்கோழி ஆனா - கதுமெனக் கூவும் பேராந்தைகள் நீங்காத; தாழிய பெரும் காடெய்திய ஞான்று - தாழிகளையுடைய சுடுகாட்டை யடைந்தபோது; பெரும - பெருமானே; அரியவாகலும் உரிய - இவைகள் உண்ணப்படாவாம்; எ-று. பொன்னாற் செய்த தாமரைப் பூவுக்குக் கேணி பூவாத் தாமரைப் பெருமலர் என்றது வெளிப்படை. எரிமருள் தாமரை யென்பது இனம் பற்றி வந்தது. மைவிடை யிரும் போத்து - ஆட்டுக்கிடாய். காயம் - உறைப்பு. தீயிற் சுட்டவூனை வாயிற் பெய்து நாப்புடை பெயர்ப்ப இரு மருங்கினும் மென்று தின்னும் செயலை, “காழிற் சுட்ட கோழூன் கொழுங் குறை, ஊழி னூழின் வாய்வெய்தொற்றி” (பொருந. 105- 9) என்று பிறரும் கூறுதல் காண்க. தாமே தமியருண்டலினும் இரவலர்க் கீத்துண்ணப் பிறக்கும் இன்பம் பெரிதாகலின், “இரப்போர்க் கீய்ந்தும்” என்றார். முதுகாட்டில் உள்ள மரங்களில் முதியவற்றிற் பொந்துகள் உளவாதல் பற்றி “முதுமரப் பொத்து” எனல் வேண்டிற்று. அப் பொந்துகளில் பேராந்தையும் கோட்டானும் வாழ்தல் கண்கூடு. கூகை கூவுதலைப் பிறரும் “பொத்தவரையுட் போழ்வாய்க் கூகை, சுட்டுக் குவியெனச் செத்தோர்ப் பயிரும், கள்ளியம் பறந்தலை” (புறம். 240) என்று கூறுவர். தாழி, ஈண்டுப் பிணங்களைக் கவிக்கும் தாழி; இவற்றை இக்காலத் தார் முதுமக்கள் தாழி யென்ப. மறப் போரோய், பெரும மகிழ்கம் வம்மோ; பெருங் காடெய்திய ஞான்று, அரியவாகலுமுரிய என்று கூட்டி வினைமுடிவு செய்க. எய்தஞான்றெனற்பாலதனை எய்திய வென இறந்த காலத்திற் கூறியது விரைவுக் குறிப்பு என அறிக. விளக்கம் : நாளும் போருடற்றலும் பொருளீட்டலும் மேற்கொண்டு நிலவும் தானைத் தலைவன் ஒருவனைக் கண்டு அவன் கருத்தில் யாக்கை நிலையாமையையும், அது நின்றவழிச் செய்தற்குரியனவும் கூறி நன்னெறிப்படுத்தும் கூகைக்கோழியார், செய்தற்குரியது இது வெனமுதற்கண் கூறலுற்று, பாடினிக்குப் பொன்னரி மாலையும், பாணர்க்குப் பொற்றாமரையும் நல்குக என்பார், “பாடினி அணிய” என்றும், “பாணன் சென்னித் தாமரைப் பெருமலர் தயங்க” என்றும் கூறினார். பின்பு தின்றற்குரிய வூனும் உண்டற்குரிய நறவும் இரப்போரும் சுற்றத்தாரும் தின்றும் உண்டும் மகிழ்ச்சியுற அவரொடுடனுண் டின்புறுக என்பார், உண்டுந் தின்றும் இரப்போர்க் கீய்ந்தும் மகிழ்கம் வம்மோ” என்றார். எந்நாளேனும் முதுகாடடைதல் ஒருதலையாதலால் “பெருங்காடெய்திய ஞான்று” என்றும் ஈத்துவக்கும் இன்பம் இறந்தபின் எய்தும் துறக்கவுலகில் இல்லை யென்றற்கு “அரியவாகலும் உரிய” என்றும் கூறினார். உம்மை இசை நிறை. “ஈவாரும் கொள்வாரும் இல்லாத வானத்து வாழ்வாரே வன் கணவர்” (குறள்; 1058. பரி . மேற்) என்று சான்றோர் கூறுதல் காண்க. பெருங்காடென்ப தன் பொதுமை நீக்கத், “தாழிய” வெனச் சிறப்பித்தார். 365. மார்க்கண்டேயனார் காஞ்சி பாடிய புலவருள் இம் மார்க்கண்டேயனாரும் ஒருவர் நிலையாமை யுணர்வால் தவம் பூண்டு வாழும் அறவோர் வரிசையுள் நிற்கும் இச் சான்றோர், இப்பாட்டின்கண், விசும்பு முகமாக இரு சுடரும் கண்களாகக் கொண்ட நிலமாகிய மகள், முன்னோராகிய வேந்தர் பலர் மறையவும் யான் மறையாது உள்ளேனே என அழும் நிலையும் உண்டென அறிந்தோர் கூறுவர் என்று நிலையாமைப் பண்பை இனிமையுறக் கூறுகின்றார், மார்க்கண்டேயனாரைப்பற்றிய குறிப் பொன்றும் கிடைத்திலது. இவர் பெயர் மாக்கடையனாரென்றும் பாடவேறுபாடு காணப் படுகிறது. மயங்கிருங் கருவிய விசும்புமுக னாக இயங்கிய விருசுடர் கண்ணெனப் பெயரிய வளியிடைய வழங்கா வழக்கரு நீத்தம் வயிரக் குறட்டின் வயங்குமணி யாரத்துப் 5 பொன்னந் திகிரி முன்சமத் துருட்டிப் பொருநர்க் காணாச் செருமிகு முன்பின் முன்னோர் செல்லவும் செல்லா தின்னும் விலைநலப் பெண்டிரிற் பலர்மீக் கூற உள்ளேன் வாழியர் யானெனப் பன்மாண் 10 நிலமக ளழுத காஞ்சியும் உண்டென வுரைப்பரா லுணர்ந்திசி னோரே திணை; காஞ்சி; துறை; பெருங்காஞ்சி. மார்க்கண் டேயனார் பாடியது. உரை : மயங்கு இருங் கருவிய விசும்பு முகனாக - தம்மிற் கலந்த மழை மின் முதலியவற்றின் தொகுதியையுடைய விசும்பை முகமாகவும்; இயங்கிய இருசுடர் கண்ணென - விசும்பின்கண் இயங்கும் ஞாயிறும் திங்களுமாகிய சுடர் இரண்டையும் கண்களாகக்கொண்ட; பன்மாண் நிலமகள் - பலவகையாலும் மாண்புற்ற நிலமாகிய மகள்; பெயரிய வளியிடை வழங்கா வழக்கரு நீத்தம் - இடம் விட்டுப் பெயர்தலையுடைய காற்று இயங்காத இடமாகிய எவ்வுயிரும் செல்லுதற்கரிய விசும்பைக் கடந்து; வயிரக் குறட்டின் வயங்குமணியாரத்து - வயிரத்தாற் செய்யப்பட்ட குறட்டின்கண் செறிந்து விளங்குகின்ற மணி களாலாகிய ஆர்க்காலை யுடைய; பொன்னந் திகிரி முன் சமத்துருட்டி - பொன்னாற் செய்யப்பட்ட ஆழிப்படையைப் போரின் முன்னே நின்று செலுத்தி; பொருநர்க் காணா பகைவரையழித்து - மேலே வரக்கடவ பகைவர் வரப் பெறாமையால்; செருமிகு முன்பின் - போர்க்கண் மேம்பட்ட வலியினையுடைய; முன்னோர் செல்லவும் செல்லாது - முன்னுள்ளோராகிய வேந்தர் விண்ணுலகு செல்லக் கண்டு வைத்தும் உடன் செல்லாது; விலை நலப் பெண்டிரின் - தம் நலத்தைப் பிறர்க்கு விற்கும் மகளிர் போல; பலர் மீக்கூற - பலர் என் நலத்தைப் பாராட்டிப் புகழ; யான் இன்னும் உள்ளேன் வாழியர் - யான் இப்பொழுதும் நிலையாக இருக்கின்றேன், யான் வாழ்க; என - என்று; அழுத காஞ்சியும் உண்டென - புலம்பிய காஞ்சியும் உண்டென்று; உணர்ந்திசினோர் உரைப்பர் - அறிவுடையோர் கூறுவர்; எ-று. விசும்பு முகனாக, சுடர் கண்ணாகக்கொண்ட நிலமகள் முன்னோர் செல்லவும் செல்லாது விலைநலப் பெண்டிரின் பலர் மீக்கூற யான் உள்ளேன். வாழியர் என அழுத காஞ்சியும் உண்டென உணர்ந்திசினோர் உரைப்பார் எனக் கூட்டி வினைமுடிவு செய்க. நில மண்டிலமும், நீர் மண்டிலமும், தீ மண்டிலமும், வளி மண்டிலமும்,கடந்து நிற்கும் விசும்பு நீத்த மெனப்பட்டது. நில முதலாகிய மண்டிலங்களை நீத்து நிற்பது நீத்தமாயிற்று; இதன் கண் வளி வழங்குத லின்மையின், வளியிடை வழங்கா வழக்கருநீத்தமெனப்படு வதாயிற்று; குறடு, திகிரியின் நடுவிட மாகிய குடம். அதனைச் சுற்றி ஆர்க்கால் செறிந்திருப்பது கொண்டு, இதனை “ஆர் சூழ்குறடு” (புறம்ட. 283) என்று சான்றோர் வழங்குப. ஆர், ஆரம் என வந்தது. திகிரி, ஆழிப் படை பொன்னாலாகிய திகிரியாதலின், வயிரமணியாற் குறடும் ஏனை மணிகளால் ஆரமும் அமைக்கப்பெற்றன வென்றறிக. விலைமகளிர் பொருளுடையார் பாற்சேர்வது போல, நிலமகள் வலியும் சூழ்ச்சியு முடைய வேந்தர்பால் தங்குதலின் “விலை நலப் பெண்டிரின்” என்றார். வாழியர்; எதிமறைக் குறிப்பு மொழி. பொறைக் கெல்லையாகிய நிலமகளும் நிலையாமை யுணர்ந்து பொறாது அழுதனளெனின் நாம் அதனை முன் னுணர்ந்து துறத்தலே சீரிது என்பது கருத்து. விளக்கம் : வளிமண்டிலம் சூழவிருப்பது ஞாலமாதலின் அதனைக் கடந்து நிற்கும் விசும்பை நீத்தமென்றாரென அறிதல் வேண்டும்; திருவள்ளுவரும், ஞாலத்தை “வளிவழங்கு மல்லன்மா ஞாலம்” (குறள். 245) என்பது காண்க. “விசும்பு நீத்தம்” (புறம். 376) என்பதும் இக்கருத்தேபற்றி வந்தது. “நிலனேந்திய விசும்பும்” (புறம். 2) என நிலத்துக்கு மேலெல்லை கூறி, இடைப்பட்ட காற்றும், தீயும், நீரும் ஞாலத்தின் பகுதியாகச் சான்றோர் கூறுவது ஈண்டுக் குறிக்கத்தக்கது. விசும்பை முகமென்றலின், ஆண்டு நிலவும் இரு சுடரையும் நிலமகட்குக் கண்ணாகக் கூறினார். திகிரி யுருட்டிச் செங்கோலோச்சி நிலவுலகு முற்றும் நெடிதாண்ட வேந்தரும் இறந்தாராயினும் தான் உடன் இறவாது நிற்பதுபற்றி, “முன்னோர்செல்லவும் செல்லாது” என்று பரிந்து கூறுகின்றார். நிலமகளை விலைமகட்கு ஒப்பக் கூறிய இக் கருத்தைத் தோலாமொழித்தேவர், மேற்கொண்டு தாம்பாடிய சூளமாணியில் முத்தி சருக்கத்தில், “நிலமக ணிலைமையும் நெறியிற் கேட்டிரேல், குலமிலர் குணமில ரென்னுங் கோளிலள், வலமிகு சூழ்ச்சியார் வழியள் மற்றவள், உலமிகு வயிரத்தோள் உருவத் தாரினீர்” எனவும், “தன்னுயிர் மணலினும் பலர்க டன்னலம், முன்னுகர்ந் திகந்தவர் மூரித் தானையீர் பின்னும் வந்தவரொடும் சென்று பேர்ந்திலள், இன்னுமஃ தவடன தியற்கைவண்ணமே” எனவும், “வெற்றிவேன் மணிமுடி வேந்தர் தம்மொடும், உற்றதோருரிமைகளில்லள் யாரொடும், பற்றிலள் பற்றினார் பாலளன்னதால், முற்றுநீர்த்துகிலுடை முதுபெண்ணீர்மையே” எனவும், “அடிமிசை யரசர்கள் வணங்க வாண்டவன், பொடிமிசை யப்புறம் புரள விப்புறம், இடிமுர சதிரவோ ரிளவ றன்னொடு, கடிபுகுமவளது கற்பின் வண்ணமே” (சூளா. முத்தி 19-22) எனவும் கூறுதல் காண்க. 366. கோதமனார் இவரின் வேறுபடுத்தவே, பல்யானைத் செல்கெழு குட்டுவனைப் பதிற்றுப்பத்து மூன்றாம் பத்தைப் பாடிச் சிறப்பித்த கோதமனார் பாலைக்கோதமனார் எனப்பட்டனர். இவர் இப் பாட்டைத் தருமபுத்திரன் பொருட்டுப் பாடியதாக அச்சுப்படியிற் காணப் படுகிறது. இப் பாட்டின்கண் “அறவோன் மகனே” யென வந்திருப்பதுகொண்டு அதனைப் பிற்காலத்தார் யாரோ தரும புத்திரன் என மொழிபெயர்த்துக் கொண்டனர். பாண்டவர் தலைவரான தருமபுத்திரனே இப் பாட்டுடைத் தலைவனெனவும், மூன்றாம் பத்தைப் பாடிய கோதமனாரே இவரெனவும் கருதுபவரு முண்டு. பாலை பாடிய கோதமனாராயின், இப் பாட்டுடைத் தலைவன் பல்யானைச் செல்கெழு குட்டுவனாதல் வேறொரு சேரமானாதல் வேண்டும். இப் பாட்டின்கண், ஆசிரியர் கோதமனார், “உலக முழுவதும் தமது ஒரு மொழியே வைத்து உலகாண்ட பெருமையுடைய வேந்தரும் தம் புகழை நிறுவிவிட்டுத் தாம் சென்று மாய்ந்தனர்; அதனால் யான் உனக்கு ஒன்று உரைப்பேன் கேட்பாயாக:நின்வலியைப் பிறர் அறியாவகை காத்துக் கொண்டு, பிறர் கூறுவனவற்றின் மெய்ம்மையைத் தெரிந்துணர்ந்து, பகற்போதில் ஆள்வினைக் குதவி, இரவுப்போதில் மேல் செய்யக் கடவன வற்றை ஆராய்ந்து வினையாளரை வினைக்கண் செலுத்துதல் வேண்டும். நின் மனையிடத்தே மகளிர்தரும் தேறலை யுண்டு மகிழ்க; சூட்டிறைச்சியும் புழுக்கலுமாகிய மடை வேண்டுபவர்க்கு இலை யிலையாகத் தந்தும், சோறு வேண்டுபவர்க்குச் சோறளித்தும் நீ உண்பாயாக; நீர்யாற்றடை கரையில் இழைத்த வெறியாடு களத்து வீழ்த்தற் பொருட்டுத் தொகுத்த ஆடுகளைப்போல இறப்பது உண்மை; அது பொய்யன்று” எனச் செய்வன செய்து நுகர்வன நுகர்ந்து புகழ் நிறுவி மேம்படுமாறு அறிவுறுத்தியுள்ளார். இப் பாட்டின் இடையே சில அடிகள் சிதைந்துள்ளன. விழுக்கடிப் பறைந்த முழுக்குரன் முரசம் ஒழுக்குடை மருங்கி னொருமொழித் தாக அரவெறி யுருமி னுரறுபு சிலைப்ப ஒருதா மாகிய பெருமை யோரும் 5 தம்புகழ் நிறீஇச் சென்றுமாய்ந் தனரே அதனால், அறவோன் மகனே மறவோர் செம்மால் நின்னொன் றுரைப்பக் கேண்மதி நின்னூற்றம் பிறரறியாது பிறர் கூறிய மொழி தெரியா 10 ஞாயிற் றெல்லை யாள்வினைக் குதவி இரவி னெல்லை வருவது நாடி உரைத்திசின் பெரும நன்றும் உழவொழி பெரும்பக டழிதின் றாங்குச் செங்கண் மகளிரொடு சிறுதுனி யளைஇ 15 அங்கட் டேற லாய்கலத் துகுப்பக் கெடலருந் திருவ வுண்மோ. . . . . . . . விடை வீழ்த்துச் சூடு கிழிப்ப மடை வேண்டுநர்க் கடையருகா 20 தவிழ்வேண்டுநர்க் கிடையருளி நீர்நிலை பெருத்த வார்மண லடைகரைக் காவு தோறிழைத்த வெறியயர் களத்தின் இடங்கெடத் தொகுத்த விடையின் மடங்கலுண்மை மாயமோ வன்றே திணை; காஞ்சி; துறை; பெருங்காஞ்சி. ........... கோதமனார் பாடியது. உரை : விழுக் கடிப்ப அறைந்த முழுக் குரல் முரசம் - பெரிய குறுந் தடியால் அடிக்கப்பட்ட பெரு முழக்கத்தையுடைய முரசம்; ஒழுக் குடை மருங்கின் - மறவொழுக்கமுடைய வீரரிடத்தே சென்று; ஒரு மொழித்தாக - அரசாணை யென்ற ஒரு குறிப்பே தோன்ற; அரவு எறி உருமின் உரறுபு சிலைப்ப - பாம்பை எறியும் இடி முழங்குவதுபோல முழங்க; ஒருதாமாகிய பெருமை யோரும் - பெருமையுடையோர்க்குத் தாம் எல்லையாகிய பெருமையுடைய வேந்தரும்; தம்புகழ் நிறீஇச் சென்று மாய்ந்தனர் - தங்கள் புகழை நிறுவிவிட்டுத் தாம்மாண்டு மறைந்தனர்; அதனால்-; அறவோன் மகனே - அறத்தை யுடைய வேந்தனுக்கு மகனே; மறவோர் செம்மால் - வீரர் கட்குத் தலைவனே; நின் ஒன்று உரைப்பக்கேண்மதி - நினக்கு ஒன்று சொல்லக் கேட்பாயாக; நின் ஊற்றம் பிறர் அறியாது - நின்னுடைய வலியைப் பிறர் அறியாமலும்; பிறர் கூறிய மொழி தெரியா - பிறர் கூறுவனவற்றின் உள்ளுறு கருத்தை யறிந்துகொண்டும்; ஞாயிற்றெல்லை ஆள்வினைக் குதவி - ஞாயிறு விளங்கும் எல்லையாகிய பகற்போதில் வினை செய்வார்க்கு உதவி செய்வதும்; இரவின் எல்லை வருவது நாடி - வினைசெய்வோர் பலரோடும் இருந்து மறுநாள் செய்யக்கடவவற்றை யாராய்ந்தும்; உரைத்திசின் - வினைஞர் கட்கு உரைப்பாயாக; பெரும - பெருமானே; நன்றும் - பெரிதும்;............................. உழவு ஒழி பெரும்பகடு அழிதின்றாங்கு ..................உழுதலைச் செய்து நீங்கிய பெரிய எருது வைக்கோலைத் தின்றாற்போல; செங்கண் மகளிரொடு சிறுதுனி அளைஇ - சிவந்த கண்ணையுடைய மகளிருடனேசிறிதாகியதுனி கலந்து; அங்கள்தேறல் ஆம்கலத்து உகுப்ப - அழகிய கள்ளினது தெளிவை ஆராய்ந்து கலத்திற் பெய்து தர; கெடல் அருந்திருவ - கெடுவதில்லாத செல்வத்தையுடையவனே; விடைவீழ்த்துச் சூடு கிழிப்ப - ஆட்டுக்கிடாயையறுத்துச் சூட்டுக் கோலிற் கோத்து சுட்ட - சூட்டிறைச்சியைச் சமைத்து; மடைவேண்டுநர்க்கு அடையருகாது தெய்வங்கட்கிடும் மடை போலச் சூட்டிறைச்சியும் புழுக்கலும் வேண்டுமவர்கட்கு இலையிலையாகக் குறையாமல் கொடுத்து; அவிழ் வேண்டுநர்க்கு இடையருளி உண்மோ - சோறுவேண்டி வருபவர்க்கு உரிய இடமளித் துண்பித்து நீயும் உண்பாயாக; நீர்நிலை பெருத்த வார்மணல் அடைகரை நீர்நிலையிடத்தே பெருகியுள்ள ஒழுகிய மணல் பரந்த கரையின்கண் நிற்கும்; காவுதோறு இழைத்த வெறியயர் களத்து - காக்கள் தோறும் அமைக்கப் பட்ட வெறியாட்டிடங்களில்; இடம்கெடத் தொகுத்த விடையின் - இனி இடமில்லை யென்னுமாறு தொகுத்து நிறுத்தப்பட்ட ஆடுகளைப் போல; மடங்கல் உண்மை - இறத்தல் ஒருதலை; மாயம் அன்று - பொய்யன்று; எ-று. அறவோன் மகனே, செம்மால், பெரும, திருவ, பெருமை யோரும் மாய்ந்தனர்; கேண்மதி; உரைத்திசின்; கிழிப்ப, அருகாது அருளி உண்மோ, மடங்கல் உண்மை மாயமோ அன்று என வினைமுடிவு செய்க. பெரு முழக்கம், முழுக்குரல் எனப் பட்டது. செம்மல் செம்மாலென விளியேற்றது. பிறர் கூறுவன பொய்யும் வழுவும் நிறைந்திருப்பினும் உண்மை தேர்ந்து செய்வன செய்தல் வேண்டு தலின், “பிறர் கூறிய மொழி தெரியா” என்றார். பகற்போது, வினை செய்வதற்கும், இரவுப் போது வினைசெயல் வகையைச் சூழ்தற்கும், உரியவாகலின், “ஞாயிற் றெல்லை ஆள் வினைக்குதவி, இரவினெல்லை வருவது நாடி யுரைத்திசின்” என்றார். கலங்கலான கள்ளுண்டு களித்திருக்கு மாறு தோன்றச் “செங்கண் மகளி” ரெனவும், சிறப்புடைய கலங்கலைத்தாராது தேறலைத் தருவது பற்றித் துனித்தாய்போல மகளிரை மகிழ்வுறுத்துகவென்பார், “சிறு துளியளைஇ யுண்மோ” எனவும் கூறினார். “எமக்கே கலங்கல் தருமோ” (புறம், 298) என்பது காண்க. தெய்வங்கட்குத் தேக்கிலை களில் வைத்து மடை கொடுப்பது போலச் சூட்டிறைச்சியும் புழுக்கலும் தமக்கு இலைகளில் மடைபோலத் தரப் பெறுதலை விழைவார்க்கு அவ்வாறுதருக வென்பார். “அடையருகாது” என்றார். “தெய்வ மடையின் தேக்கிலைக் குவைஇநும் பைதீர் சுற்றமொடு பலமிகப் பெறுகுவீர்” (பெரும்பாண், 104 -5) என்று பிறரும், கூறுதல் காண்க. கிழித்தெனற் பாலது கிழிப்பவெனத் திரிந்து நின்றது. வெறியயர் களத்தின்கண் விடை வீழ்த்து வழிபடுவ ராதலின் “வெறியயர் களத்து விடங்கெடத் தொகுத்த விடையின்” என்றார். விளக்கம் : நிலவுலகு முற்றும் ஒரு தாமாக ஆண்ட வேந்தரும் சென்று மாய்ந்தன ரென்பதனால் இப் பாட்டுடைத் தலைவனும் ஓர் அரசன் என்பது விளங்குகிறது. தமிழகத்தில் தருமபுத்திரனெனப் பெயரிய அரசர் இருந்தனரென்றற்குச் சான்றின்மையின், இவன் சேர நாட்டுநிலத்தலைவருள் ஒருவனாதல் வேண்டும். வடவாரியர் முதற்கண் குடிபுகுந்த தமிழ்ப்பகுதி சேரநாடேயென்பது ஆராய்ச்சி யாளர் துணிபு வடவாரிய வழக்க ஒழுக்கங்களையும் மொழி யமைதிகளையும் முழுவதும் மேற்கொண்டு தமது தொன்மைநிலை தெரியாதொழுகும் தமிழ் நிலத்தாருள் சேரநாட்டுக் கேரளர்களே முன்னணியில் நிற்பவர். அதனால் தருமபுத்திரன் என ஒருவன் இருந்தானெனின், அவன் சேரநாட்டவனே என்பது தேற்றம் அசோக மன்னனுடைய கல்வெட்டுக்கள் கேரளரைக் “கேரளபுத்திரர்” என வழங்குவது இதற்குப் போதிய சான்றாகும். கோதமனார் இவனுக்கு உரைக்கும் அறவுரையை நோக்கின் இவன் மிக்க இளையனென்பது விளங்கும், பகலின், ஆள்வினைக்குதவலும் இரவில் வருவது நாடலும் செய்க. என்ற வழி அவன் உள்ளம் மறநெறியே செல்லுமென்று கொண்டு, மறமொன்றே யன்று இவ்வுலக வாழ்வுக்கு வேண்டுவது, அறமும் செய்தல் வேண்டுமென்பார், தேறல் மகளிரோடு உண்டு மடைவேண்டுநர்க்கும் அவிழ் வேண்டுநர்க்கும் நிரம்பத் தந்து உண்பித்து நீயும்உண்டு அன்புடையனாகுக என்றார். வெறிக்களத்துத் தொகுக்கப்பட்ட விடைகள் வீழ்தல் ஒரு தலையாதல் போல இவ் வுலகிடைத் தொக்க வுயிர்கள் இறப்பது ஒருதலை யென்பதாம். “உழவொழி பெரும்பகடு அழிதின்றாங்கு”என்றது, “தனக்கென வாழாப்பிறர்க் குரியாளனாய்” வாழ்க என்றவாறு. 367. ஒளவையார் சேரமான் மாவண்கோவும், பாண்டியன் கானப்பேர் தந்த பெருவழுதியும், சோழன் இராயசூயம் வேட்ட பெருநற்கிள்ளியும் ஒரு காலத்தே ஓரிடத்தே ஒருங்கு கூடியிருந்தனர் சேரமான் மாவன் கோவைச் சேரமான் மாரிவெண்கோவென்றலும் பாடம். இச் சேரமான் சேரமான்களுட் காலத்தாற் பிற்பட்டவனாகக் கருதப்படுகின்றான். அவரிடையே வேறுபடுத்தற்கேதுவாகிய பகைமையில்லை. தமிழகம் இம் மூவர்க்கும் பொதுவாக உரியதென்பது தொன்று தொட்டுவரும் கொள்கை. இக்கருத்தே தோன்றச்சான்றோர் “குன்று தலை மணந்த மலைபிணித்துயாத்த மண், பொதுமை சுட்டிய மூவருலகமும்” (புறம். 357) என்று வற்புறுத்தியிருப்பது காண்க. இவர் தம்முட் பகைத்துப் பொருது கெடுவரேல், வேறு நாட்டவர் புகுந்து தமிழகத்தைக் கைப்பற்றித் தமிழியற் பண்பாட்டைச் சிதைத்துத் தமிழ்நாட்டுச் செல்வம், கலை, சமயம், மொழி, ஒழுக்கம் முதலியவற்றைச் சிதைத்த ழிப்பரென்று சான்றோர் முன்னரே யறிந்திருந்தனர். அதனால் அச் சான்றோர், வேந்தர் மூவரும் அன்பால் ஒருங்கு கூடியிருக்கும் செவ்வி காணும் போதெல்லாம் ஒன்றிய வாழ்வின் வென்றி நலத்தை எடுத்தோதிச் சிறப்பிப்பர். அவ் வழியில் வந்த சான்றோ ராகிய ஒளவையார் வேந்தர் மூவரும் ஒருங்கிருப்பக் கண்டதும், பெருமகிழ்வுகொண்டு, “வேந்தர்களே! நிலவுலகம் வேந்தர்க்குரித் தாயினும், அவர் இறந்துபோங்கால், உலகமும் உடன் போவ தில்லை; அரசியற் பேற்றுக்குரிய நோன்மையுடையோர் வேற்று நாட்டவரேயாயினும், அவர்க்கு உரியதாய்ச் சென்றொழியும்; ஆதலால், அரசியலை அறநெறியிற் செலுத்திப் பொருளீட்டி இரவலர்க்கு வழங்கி உங்கள் வாழ்நாள் முற்றும் இன்பமுற வாழ்வீர்களாக. உங்களை வாழச் செய்த நல்வினையே உங்கள் இறுதிக்காலத்தில் உயிர்த் துணையாகும். ஆதலின், அந் நல் வினையையே செய்வீர்களாக. யான் அறிந்த அளவு இதுவே. நீவிர் வானிற்றோன்றும் மீனினும் மழைத்துளியினும் பல காலம் வாழ்வீர்களாக” என்று இப் பாட்டால் அறிவுறுத்தினார். இவ்வாறு சான்றோர் பலர் மூவேந்தரும் ஒருமை மனத்தவராய் வாழ வேண்டு மென வற்புறுத்தியிருப்பவும், அவர் அவ்வன்புரையை மறந்து பொருது கெட்டனர்; கெடவே, வடநாட்டு வடவரும், களப்பிரரும் , வடுகரும், மோரியரும், பல்லவரும், துருக்கரும் மேலைநாட்டு வெள்ளையருமாகப் பலர் புகுந்து தமிழகத்து அரசியல், சமயம், மொழி, பொருணிலை சமுதாயம் முதலியவாழ்க்கைக் கூறுகளை யழித்துத் தமிழர் என்றும் பிறர்க்கே யுழைத்து ஏழையாகும் இழி நிலையை யுண்டாக்கி விட்டனர். நாகத் தன்ன பாகார் மண்டிலம் தமவே யாயினுந் தம்மொடு செல்லா வேற்றோ ராயினு நோற்றோர்க் கொழியும் ஏற்ற பார்ப்பார்க் கீர்ங்கை நிறையப் 5 பூவும் பொன்னும் புனல்படச் சொரிந்து பாசிழை மகளிர் பொலங்கலத் தேந்திய நாரரி தேறன் மாந்தி மகிழ்சிறந் திரவலர்க் கருங்கல மருகாது வீசி வாழ்தல் வேண்டுமிவண் வரைந்த வைகல் 10 வாழச் செய்த நல்வினை யல்ல தாழுங் காலைப் புணைபிறி தில்லை ஒன்றுபுரிந் தடங்கிய விருபிறப் பாளர் முத்தீப் புரையக் காண்டக விருந்த கொற்றவெண்குடைக் கொடித்தேர் வேந்திர் 15 யானறி யளவையோ விதுவே வானத்து வயங்கித் தோன்று மீனினு மிம்மென இயங்கு மாமழை யுறையினும் உயர்ந்துமேந் தோன்றி பொலிக நுந் நாளே. திணை : பாடாண்டிணை. துறை : வாழ்த்தியல். சேரமான் மாவண்கோவும் பாண்டியன் கானப்பேர் தந்த உக்கிரப்பெருவழுதியும், சோழன் இராயசூயம் வேட்ட பெருநற்கிள்ளியும் ஒருங்கிருந்தாரை ஒளவையார் பாடியது. உரை : நாகத் தன்ன பாகார் மண்டிலம் - நாகலோகத்தைப் போன்ற வளவிய பகுதிகளையுடைய நிலவட்டம்; தமவே யாயினும் - தம்முடையவேயென வுரிமை கொள்ளப்பட்டன வாயினும்; தம்மொடு செல்லா - வேந்தர் தாம் இறக்குங்கால் அவரோடே மறைந்தொழியாமல் நின்று; வேற்றோராயினும் நோற்றோர்க்கு ஒழியும் - அவர்க்குப் பின்வரும் வேந்தர் ஒரு தொடர்பு மில்லாத வேற்று நாட்டவராக இருப்பினும் நோன்மையுடையராயின் அவர்க்குரிய தாய்விடும்; ஏற்ற பார்ப்பார்க்கு ஈர்ங்கை நிறைய - பொருள் வேண்டி இரந்து நின்ற பார்ப்பனருக்கு அவருடைய நனைந்த கை நிறையும்படி; பூவும் பொன்னும் புனல்படச் சொரிந்து - பொற்பூவும் பொற் காசும் நீர் வார்த்துக் கொடுத்து; பாசிழை மகளிர் பொலங் கலத்து ஏந்திய நார் அரிதேறல் மாந்தி மகிழ்சிறந்து - பசிய இழையணிந்த மகளிர் பொன்வள்ளங்களில் எடுத்துக் கொடுத்த நாரால் வடிக்கப்பட்ட கட்டெளிவை யுண்டு களித்து; இரவலர்க்கு அருங்கலம் அருகாது வீசி - இரவலர்க்கு அவர் வேண்டிய அரிய பொருள்களைக் குறைவறக் கொடுத்து; இவண் வரைந்த வைகல் வாழ்தல் வேண்டும் - இவ்வுலகில் வாழ்தற்கென வரையறுக்கப்பட்ட வாழ்நாள் முழுதும் நன்றாக வாழ்தலே வேண்டுவது; வாழச் செய்த நல்வினை யல்லது - வாழ்தற்கேது வாகிய அந்த நல்வினையின்றி; ஆழுங் காலைப் புணை பிறிது இல்லை - இறக்கும்போது உயிர்க்குத் துணையாவது வேறே யாதும் இல்லை; ஒன்று புரிந்து அடங்கிய இரு பிறப்பாளர் முத்தீபுரைய - வீடுபேறொன்றையே விரும்பிப் புலன்கண்மேற் செல்லுகின்ற ஆசைகளை யடக்கியமைந்த அந்தணர் எடுக்கும் முத்தீயைப்போல; காண்தக இருந்த - அழகுதக வீற்றிருந்த கொற்றவெண் குடைக் கொடித் தேர்வேந்தீர் - வெண்கொற்றக் குடையும் கொடி யுயர்த்திய தேரு முடைய வேந்தர்களே! யான் அறி அளவை இதுவே - யானறிந்த அளவில் முடிவாகத் தெரிந்தது இதுவேயாகும்; வானத்து வயங்கித் தோன்றும் மீனினும் - வானத்தில் விளங்கித் தோன்றும் விண்மீன்களிலும்; இம்மென இயங்கும் மாமழை உறையினும் - இம்மென்று முழங்கிப் பெய்யும் பெரிய மழைத் துளியினும்; உயர்ந்து மேந் தோன்றி மிக்கு - மேம்பட்டு; நும் நாள் பொலிக - நும்முடைய வாழ்நாட்கள் விளங்குவனவாக; எ று நாகம், இன்பமே நிலவும் தேவருலகம், பாகு - பகுதி மண்டிலம் வட்டம்; ஈண்டுச் சேரமண்டலம், சோழமண்டலம் மென்றாற்போல நாட்டின்மேல் நின்றது. வேற்றோர் தமிழ ரல்லாத பிறர். நோன்றல்,நோன்மையாதலின், அதனை யுடையாரை நோற்றோரென்றார். “தவத்தளவே யாகுமாம் தான் பெற்ற செல்வம்” என்பது பற்றி, அரசவாழ்வாகிய செல்வப் பேற்றுக் கேதுவாகிய நோன்மை குறிக்கப்பட்டது. வலிய போர்ப்படை யேந்திப் போருடற்றும் பண்பினரல்லராகலின், பார்ப்பார் கை உண்டற் றொழி லொன்றிற்கே பயன்பட்டமை தோன்ற ஈர்ங்கை யென்றார். பூ, பொன்னாற்செய்த பூ; பார்ப்பார் இதனைச் “சொர்ண புட்பம்” என்பர். பார்ப்பார் என்போர் ஓதல் ஓதுவித்தல் முதலிய அறுதொழிலைச் செய்யும் வேதியராவர். அந்தண ரென்போர், பார்ப்பார், அரசர் வணிகர், வேளாளரெனவரும் பலருள் அருளறம் மேற்கொண்டு முற்றத் துறந்த துறவிகளாவர். மகிழ வுண்டு பெருகக் கொடுத்துப் புகழுண்டாக வாழ்தலே வாழ்வு; ஈதலும் இசைபடவாழ்தலும் வாழ்வின் ஊதியமென்பது தமிழரறம். எத்திறத் தோர்க்கும் வரைந்த வாழ்நாள் எல்லை கடவாதாகலின் “வரைந்தவைகல்” என்றார். ஒன்று - வீடு பேறு. சுவை முதலாகிய புலன்கண்மேற் சென்ற ஆசை யால் நுகரப்படுவது உலகியலின்பமாய்க் கருதும் வீடு பேற்றுக்கு மாறு படுதலின், வீடு காதலிப்பவரால் ஆசை யாகிய உலகியலின்பம் விடப்படுமென்பதுபற்றி, “ஒன்றுபுரிந் தடங்கிய இரு பிறப்பாளர்” என்றார். இரண்டாவது பிறப்பும் வீடுபேறு குறித்த தென்றுணர்க. தமிழ் வேந்தர் மூவருக்கும் முத்தீ உவமம். சொரிதலும் உண்டலும் ஈதலும் புகழை நிறுவி நாட்டு மக்களை அன்பால் பிணிப்பித்து வலிமிகச் செய்தலின் வேந்தர் இவற்றைச் செய்து வாழவேண்டு மென்றார். வேந்தீர், மண்டிலம் செல்லா ஒளியும்; சொரிந்து சிறந்து வீசி வாழ்தல் வேண்டும்; இல்லை; மீனினும் உறையினும் தோன்றிப் பொலிக எனக் கூட்டி வினைமுடிவு செய்க. சொரிதல் அறப்பொருட்டும், சிறத்தல் பொருட் பொருட்டும், வீசுதல் இன்பப்பொருட்டும் எனக் கொள்க. விளக்கம் : தமிழ்வேந்தர் மூவரும் மனத்தால் ஒன்றுபடாமைக் கேது ஒவ்வொருவருக்கும் தாம் ஒருவரே மேம்பட்டு நிற்க ஏனையோர் தம் ஆணைவழியடங்கி நடக்க வேண்டுமென் றெழுந்த வேட்கை யாகும்; அவ்வேட்கை நாட்டின்மேல் நிற்றலின், அதனை விலக்கி ஒருமை மனமுடையராதல் வேண்டும் என்று கருதினார் ஒளவையார். இத்தமிழகம் “நாகத்தன்ன பாகார் மண்டிலம்” என்று குறித்து, “இதனைத் தாமேயாள வேண்டுமென்று எண்ணி, அதனால் ஏனையிருவரையும் பொருது வென்று நாட்டையடிப்படுத்த வேந்தரும் இறந்தனர்; இறந்தபோது தமிழகம் அவர்பின் சென்றொழியாது, வேற்றோர்க்கு உரியதாயிற்று . இவர் வழி வழியாக வருவர்; இவர் வேற்றார். என்று கருதாது, யாவர் தன்னைத் தாங்குகிறார்களோ, அவர்கள் அடிக்கீழ் இவ்வுலகம் நிற்கும் இயல்பிற்று. ஆதலால், நீவிர் நும்முடைய நாட்டை இனிது தாங்கு முகத்தால், பார்ப்பார்க்கும் இரவலர்க்கும் வேண்டுவன நல்கி வாழ்தல் வேண்டும். இதுவே நீவிர் செய்யத்தக்க நல்வினை. இந் நல்வினையே நும்மை இனிது வாழச் செய்வது. இந்நல்வினையொழிய வேறே துணையில்லை; இவ்வளவே யான் அறிந்தது என்று கூறினார். இந்நல்வினையை மேற்கொண்டு நீவிர் மூவிரும் ஒருமை மனத்தோடு வாழ்வீராயின் வானத்திற்றோன்றும் விண்மீனினும் பெருமழையிற்றோன்றும் நீர்த்துளியினும் பல்லாண்டு நெடிது வாழ்வீர்; இன்றேல், நீவிர் வேரொடு ஒழிவது ஒருதலை; இத் தமிழகமும் வேற்றவர் ஆட்சிக்குட்பட்டுத்தன் மொழி, கலை, பண்பாடு, செல்வம், வாணிகம் முதலியதுறை பலவற்றினும் சீரழிந்து வேற்றோர்க்கு அடிமை நாடாய்விடும் என்று உய்த்துணர வைத்தார். அப் பேதைவேந்தர் அவர் கூற்றை மனங்கொள்ளாராயினர். அன்று அவர் செய்த தீச்செயலால், இன்று இத் தமிழகம், மொழியும், கலையும் பொருளும், பண்பாடும் குன்றிப் பிற நாட்டவர் ஆட்சியாணைக்குத் தலைதாழ்ந்து செல்வதாயிற்று; அடிமையில் மடிந்தூரும் மடமை யிற்றலைமை பெறுவதாயிற்று; நாட்டுக்கு வறுமை உரிமையாயிற்று. 368. சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன் சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதனும், சோழன் வேற் பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளியும் யாது காரணத்தாலோ பெரும் பகை கொண்டு திருப்போர்ப்புறம் என்னுமிடத்தே கடும்போர் உடற்றினர். திருப்போர்ப்புறம் என்பது இப்போது தஞ்சை மாவட்டத்தில் கோவிலடியென வழங்குகிறது. இதனைக் கல்வெட்டுகள் திருப்பேர்த் திருப்புறம் (S.I.I. Vol. VII. No. 497) என வழங்கும் இவ்விடத்தே சோழன் செங்கணானுக்கும் சேரமான் கணைக்காலிரும்பொறைக்கும் போர் நிகழ்ந்ததும் அதன்கண் சேரமான் பற்றுக்கோட்பட்டதும். (புறம். 74) ஈண்டுநினைவு கூர்தற்குரியன. அப்போரில் இருவேந்தரும் புண்பட்டுப் போர் களத்தே வீழ்ந்தனர். அக்காலத்தே கழாத்தலையாரென்னும் சான்றோர் போர்க்களஞ் சென்று இருவரும் வீழ்ந்து கிடப்பது கண்டார். அக்காலத்தே அவர் சேரமானைப் பார்க்கையில் அவன் குற்றுயிராய்க் கிடந்தான். அந்நிலையில் அவன் தன்னைப் பாடி வந்த கோடியர்க்குத் தன் கழுத்தில் இருக்கும் ஆரத்தைக் காட்டிப் பரிசிலாக எடுத்துக்கொள்ளுமாறு அவர்க்குக் குறிப்பாயுணர்த் தினான். அது கண்டு கையறவுமிக்க கழாத்தலையார் இப் பாட்டினைப் பாடினார். இதன்கண், “வேந்தே! களிறு பெறுவே மென்னின், அவை அம்புபட்டு புண்ணுற்று வீழ்ந்தொழிந்தன தேர் பெறலாமென்னின் அவை பீடழிந்து சிதைந்து நிலத்தே கிடக்கின்றன; குதிரைகளோ வெனின், அவை வாள்வடுப்பட்டுக் குருதி வெள்ளத்தில் வீழ்ந்து கிடக்கின்றன; இதனால் பெறற்குரிய பெருவளம் பெறாமையின் இரவலர் இரங்குவாராயினர். தடாரிப் பறையை யறைந்துகொண்டு யான் வந்தது நின் தோளிடத்தே அரவுபோற் சுற்றிக்கொண்டிருக்கும் ஆரத்தைப் பெறற் பொருட்டே போலும்” என ஆசிரியர் அவனது மறமாண்பும் கொடை நலமும் தோன்றப் பாடியுள்ளார். களிறு முகந்து பெயர்குவ மெனினே ஒளிறுமழை தவிர்க்குங் குன்றம் போலக் கைம்மா வெல்லாங் கணையிடத் தொலைந்தன கொடுஞ்சி நெடுந்தேர் முகக்குவ மெனினே 5 கடும்பரி நன்மான் வாங்குவயி னொல்கி நெடும்பீ டழிந்து நீலஞ்சேர்ந் தனவே கொய்சுவற் புரவி முகக்குவ மெனினே மெய்ந்நிறை வடுவொடு பெரும்பிறி தாகி வளிவழக் கறுத்த வங்கம் போலக் 10 குருதியம் பெரும்புனல் கூர்ந்தொழிந் தனவே, யாங்க முகவை யின்மையி னுகவை யின்றி இரப்போ ரிரங்கு மின்னா வியன்களத் தாளழிப் படுத்த வாளே ருழவ கடாஅ யானைக் கால்வழி யன்னவென் 15 தெடாரித் தெண்கண் டெளிர்ப்ப வொற்றிப் பாடி வந்த தெல்லாங் கோடியர் முழவுமரு டிருமணி மிடைந்ததோள் அரவுற ழார முகக்குவ மெனவே. திணை : வாகை. துறை: மறக்களவழி. சேரமான் குடக்கோ நெடுஞ் சேரலாதன் சோழன் வேற்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளியொடு போர்ப் புறத்துப் பொருது வீழ்ந்து ஆரம் கழுத்தினதாக உயிர் போகாது கிடந்தானைக் கழாத்தலையார் பாடியது. உரை : களிறு முகந்து பெயர்குவம் எனினே - களிறுகளைத் தரப்பெற்றுச் செல்வேமென்று கருதினால்; ஒளிறு மழை தவிர்க்கும் குன்றம்போல - விளங்குகின்ற மழைமுகிலைத் தடுக்கும் குன்றுகளைப் போல; கைம்மா எல்லாம் கணையிடத் தொலைந்தன - யானைக ளெல்லாம் நின் அம்புபட்டு இறந்தன; கொடுஞ்சி நெடுந்தேர் முகக்குவம் எனின் - கொடுஞ்சியொடு கூடிய நெடிய தேர்களைத் தரக்கொண்டு செல்வோ மென்றால்; கடும்பரி நெடுமான் வாங்கு வயின் ஒல்கி - கடிய செலவையுடைய குதிரைகள் வளைத்தீர்த் தோடுதலால் இடந்தோறும் நொடித்துத் தளர்ந்து; நெடும் பீடு அழிந்து நிலம் சேர்ந்தன - தம் நெடிய வலியழிந்து முறிந்து நிலத்தே சிதறி வீழ்ந்தன; கொய் சுவல் புரவி முகக்குவம் எனின் - கொய்யப்பட்ட பிடரி மயிரையுடைய குதிரைகளைத் தரப் பெற்றுச் செல்வோமென்றால்; மெய் நிறை வடுவொடு பெரும் பிறிதாகி - உடல் முழுவதும் நிறைந்த வாட்புண்களுடனே வீழ்ந்திறந்து; வளி வழக் கறுத்த வங்கம் போல - காற்றியக்க மின்றி நிற்கும் மரக்கலம்போல; குருதியம் பெரும்புனல் கூர்ந்தொழிந்தன - குருதி வெள்ளத்தில் நிறைந்து மிதக்கலாயின; முகவை இன்மையின் உகவை இன்றி - பெறுதற்குப் பரிசி லொன்றும் காணப்பெறாமையால் உவகை யின்றி; இரப்போர் இரங்கும் இன்னா வியன் களத்து - இரவலராகிய பரிசிலர் வருந்தும் துன்பமுற்ற அகன்ற போர்க்களத்தில்; ஆள் அழிப் படுத்த வாளேர் உழவ - காலாட்களாகிய வைக்கோலைக் கடாவிட்டொதுக்கிப் போரெனக் குவித்த வாளாகிய ஏரை யுடைய உழவனே; கடா யானைக் கால்வழி யன்ன - மதமுடைய யானையின் அடிச்சுவடுபோன்ற; என் தெடாரித் தெண்கண் தெளிர்ப்ப வொற்றி - என்னுடைய தடாரியினது தெளிந்த கண் ஒலிக்க இசைத்து; பாடி வந்ததெல்லாம் - யான் பாடி வந்ததெல்லாம் காரணம்; கோடியர் முழவு மருள் திருமணி மிடைந்த தோள் - கூத்தரது முழவுபோன்ற அழகிய மணியாற் செய்யப்பட்ட வாகுவலயம் அணிந்த தோளிடத்துக் கிடக்கும்; அரவுறழ் ஆரம் முகக்குவம் என -பாம்பு போலும் ஆரத்தைப் பெறலாமென்று போலும்; எ-று. எனவென்புழிப் போலும் என ஒரு சொற்பெய்து முடித்துக் கொள்க. உழவ, களிறு தொலைந்தன; தேர் நிலஞ் சேர்ந்தன; புரவி கூர்ந்தொழிந்தன; பாடிவந்ததெல்லாம் ஆரம் முகக்குவ மென்று போலும் எனக் கூட்டி வினைமுடிவு செய்க. போரிற் பகைவரை வென்று பெறும் களிறும், தேரும், குதிரையும், பிறவும் பொருநர் பாணர், கூத்தர் முதலாயினார்க்கு வழங்குவது பண்டைவேந்தர் மரபு. ஈண்டு இவற்றைப் பெறலா மென வந்த இரவலர் களிறு கணையிடத் தொலைந்தவாறும், தேர் பீடழிந்து நிலஞ் சேர்ந்தவாறும், குதிரைகள் குருதி வெள்ளத்திற் கூர்ந்தொழிந்தவாறும் கண்டு வியந்தனரென்பார், “முகவை யின்மையின் உகவை - யின்றி, இரப்போர் இரங்கும் இன்னா வியன்களம்” என்றார். உகவை, மகிழ்ச்சி, கால்வழி - கால் நிலத்தில் அழுந்த வுண்டாகும் சுவடு. தடாரி, தெடாரி யென வந்தது. பாம்பு ஆரத்திற்குவமை; ‘விரவுமணி யொளிர்வரு மரவுற ழாரமொடு’ (புறம். 398) என்று பிறரும் கூறுதல் காண்க. ஆக; அசைநிலை, மெய்ந் நிறைந்த வடுவொடு என்றும் பாடம். விளக்கம் : அரசர்பொரும் போர்க்களத்துக்குச் சென்று வெற்றி பெறும் வேந்தர்களைப் பாடும் பாணர் முதலிய பரிசிலருக்குப்போரிடத்துத் தோற்ற வேந்தருடைய களிறு, தேர், குதிரை முதலியனவும், அவரணிந்த கலங்களும் கொடுக்கப்படுவதுமரபு. கழாத்தலையார் குடக்கோ நெடுஞ்சேரலாதன் பொருது வீழ்ந்த போர்க்களத்தில் இரு வேந்தரும் வீழ்ந்தமையின், இரவலர் அக் களிறு முதலியன பெறாது வருந்தினமை தோன்ற, “முகவை இன்மையின் உகவை யின்றி, இரப்போர் இரங்கும் இன்னா வியன்களம்” என்று குறித்தார். தன்னைக் காண்டற்கு வந்த கழாத்தலையார் காணத் தன் கழுத்திடத்துக் கிடந்த ஆரத்தைச் சேரலாதன் கோடியர்க்கு நல்கினானாக, இறுதிக் காலையினும் கொடைநலம் குன்றாத அவனது வள்ளன்மையை வியந்து கூறலுற்றவர், “கோடியர் பாடிவந்தது ஆரம் முகக்குவம் எனவே” என்றார்; எனவே, இரப்போர்இரங்கும் வியன் களத்துக் கோடியர் நின் ஆரம் பெற்றனர்; யான் நின் புகழ் பாடும் பேறு பெற்றேன் எனக் குறிப்பெச்சத்தாற் பெறவைத்தார். வேறலும் தொலைதலும் ஒருவர் பாங்கல்லவாதலால் தோற்றோர்வருந்தாரென்பதும், இரவலரே தாம் பெறற்கு இன்மை கண்டு வருந்துவாரென்பதும் விளங்க இருவரும் வீழ்ந்த போர்க்களம் “இன்னா வியன் களம்” எனப்பட்டதென்க. 369. சேரமான் கடலோட்டிய வேல்கெழு குட்டுவன் சேரமன்னருள், குட்டுவர், குடவர், இரும்பொறையர் எனப் பலர் பல்வேறு காலங்களில் சேரநாட்டு முடிவேந்தராய் விளங்கினார். அவருள் வேல்கெழுகுட்டுவன் ஒருவன். சேரவேந்தர் மேலைக்கடற்கரை நாட்டிலிருந்து கடற்படைகொண்டு வேறு நாடுகட்குச் சென்று வாணிகம் செய்தலில் மேம்பட்டிருந்தனர். இவருடைய கடற்படையின் வன்மை நாடெங்கும் பரந்திருந்தது. சேரர்களது வங்கம் கடலிற் செல்லுமாயின் ஏனை நாட்டவர் தத்தம் வங்கங்களைத்தம் கரையில் நிறுத்திக் கொள்வரேயன்றிக் கடலிற் கலஞ் செலுத்துதற் கஞ்சுவர். “சினமிகுதானை வானவன் குடகடற், பொலந்தரு நாவாயோட்டிய வவ்வழிப், பிறர்கலஞ் செல்கலா” (புறம். 126) தென்று மாறோக்கத்து நப்பசலையார் கூறுவது காண்க. இவ் வண்ணம் செந்தமிழ்ப் பெருவேந்தர் கடற்படையால் உலகுபுகழும் உயர் வுற்றிருந்தபோது வேறுநாட்டவர் கடலில் கலஞ் செலுத்திக் குறும்புசெய்து வந்தனர். அவர்தம் குறும்பு மிகுவது கண்டவேல்கெழு குட்டுவன், கடற்படை ஒன்று கொண்டு சென்று அவரை வென்று வேரறுத்து வாகை சூடினான். அன்று முதல் அவனுக்குச் சேரமான் கடலோட்டிய வேல்கெழுகுட்டுவன் என்ற சிறப்புண்டாயிற்று. இக் குட்டுவனைச் செங்குட்டுவன் என்றும் கூறுவர். இப் பாட்டைப் பாடிய ஆசிரியர் பரணரால் பதிற்றுப்பத்து ஐந்தாம் பத்திற் கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன் பாராட்டிக் கூறப்பட்டுளன். பரணர் காலத்துப் கடல்பிறக் கோட்டிய குட்டுவன் செங்குட்டுவனென்றும், வேல்கெழுகுட்டுவனென்றும் நூல்களிற் கூறப்படுவதனால் இருவரும் ஒருவராதல் தெளிவாம். இப் பாட்டு ஆசிரியர் பரணர் குட்டுவன் கடல் பிறக்கோட்டும் செயல்செய்தற்கு முன்னர் அவனைப் பாடியது. பின்னர்ப்பாடிய பாட்டுக்களான பதிற்றுப்பத்து இச் செய்தியைச் சிறப்பாகக் குறிக்கின்றன. இதன்கண், “உழவுத் தொழிலுக்கு இன்றியமையாத மேகமும், அது கருத்து மழை பெய்யுங்காலத்துச் செய்யும் மின்னலும், உடன் தோன்றும் இடி முழக்கமும், மின்னியிடித்து மழை பெய்யுங்கால் நாற்றிசையும் பரவிப் பொழியுமாறு வீசும்வளியும், இவற்றால் ஈரங் கொண்ட நிலமும், அதனை யுழுதற்கு வேண்டும் ஏரும், உழுதவழி யுண்டாகும் படைச்சாலும், அதன்கண் விதைக்கப்படும் வித்தும், அது விளைந்து முற்றிக் கதிர் தலைசாய நிற்றலும், அவற்றை யறுத்துப் போரிடுதலும் வயலுழவர்பால் நிகழ்தல் போல, போர்க்களத்தில் கருங்கை யானை மேகமாக, மறவர் எறிதற்குயர்த்த வான் மின்னலாக, போர்முரசு முழக்கமாக, மிக விரைந்த செலவினை யுடைய குதிரை வீசு வளியாக, வல்வில் வீங்கு நாண் செலுத்திய கணைகள் மழைத் தாரையாக இவற்றால் கொலையுண்ட மாக்களின் குருதி தோய்ந்து ஈரமுற்ற போர்க்களம் வயலாக, தேர் ஏராக, ஆயுதமாகிய படைகளால், கீழ்மேலாக மறிக்கப் பட்ட படை முதலியவற்றின் நிரை படைச்சாலாக, வெள்வேலும் கணையமும் எறியப்பட்டுச்சிதறி வீழ்வன விதையாக, பகைவரை வெட்டிச் சாய்த்தலால் மிதிப்புண்டு நசுங்கிய நிணங்களின் அச்சந்தரும் நிலை பைங்கூழாகப் பேய்மகளிர் பிணங்களின் முன்சூழ்ந்துவர, சிதைந்த பிணங்களின் குவைபோராக, அவற்றைப் பூதம், பேய், நரி முதலியன முகத்துண்ணும் வகையில் தான் தன்னைப் பாடி வருவோர்க்கு அவர் வேண்டுவன ஈதற்பொருட்டுச் செங்குட்டுவன் “வீற்றிருக்கின்றான்; அவனைத் தடாரிப் பொருநன் ஒருவன் சென்று கண்டு, “வேந்தே! யான் என் தடாரியை யறைந்து நின்விறற்புகழ் பாடிவந்தேன்; என்வறுமை தீரக் கன்றும் பிடியும் விரவிய, இமயம் போலுயர்ந்த, களிறு களைப் பரிசிலாக நல்குவாயாக” என்று கேட்கும் வகையில் ஆசிரியர் பாடியுள்ளார். இருப்புமுகஞ் செறித்த வேந்தெழின் மருப்பிற் கருங்கை யானை கொண்மூவாக நீண்மொழி மறவ ரெறிவன ருயர்த்த வாண்மின் னாக வயங்குகடிப் பமைந்த 5 குருதிப் பலிய முரசுமுழக் காக அரசராப் பனிக்கு மணங்குறு பொழுதின் வெவ்விசைப் புரவி வீசு வளியாக விசைப்புறு வல்வில் வீங்குநா ணுகைத்த கணைத் துளி பொழிந்த கண்ணகன் கிடக்கை 10 ஈரச் செறுவயிற் றேரே ராக விடியல் புக்கு நெடிய நீட்டிநின் செருப்படை மிளிர்த்த திருத்துறு பைஞ்சாற் பிடித்தெறி வெள்வேல் கணையமொடு வித்தி விழுத்தலை சாய்த்த வெருவரு பைங்கூழ்ப் 15 பேய்மகள் பற்றிய பிணம்பிறங்கு பல்போர்பு கணநரி யோடு கழுதுகளம் படுப்பப் பூதங் காப்பப் பொலிகளந் தழீஇப் பாடுநர்க் கிருந்த பீடுடை யாள தேய்வை வெண்காழ் புரையும் விசிபிணி 20 வேய்வை காணா விருந்திற் போர்வை அரிக்குரற் றடாரி யுருப்ப வொற்றிப் பாடி வந்திசிற் பெரும பாடான் றெழிலி தோயு மிமிழிசை யருவிப் பொன்னுடைய நெடுங்கோட் டிமயத் தன்ன 25 ஓடை நுதல வொல்குத லறியாத் துடியடிக் குழவிய பிடியிடை மிடைந்த வேழ முகவை நல்குமதி தாழா வீகைத் தகைவெய் யோயே. திணை : வாகை. துறை: மறக்களவழி. துறை: ஏர்க்கள உருவகமு மாம். சேரமான் கடலோட்டிய வேல்கெழு குட்டுவனைப் பரணர் பாடியது. உரை : இருப்பு முகம் செறித்த ஏந்தெழில் மருப்பின் - இரும்பாற் செய்யப்பட்ட பூண் நுனியிற் செறிக்கப்பட்ட உயர்ந்த அழகிய கொம்பினையும்; கருங்கை யானை - பெரிய கையினையு முடைய யானை; கொண்மூவாக - முகிலாகவும்; நீள் மொழி மறவர் எறிவனர் - உயர்ந்த வாள் மின்னாக நெடுமொழியை யுடைய வீரர்கள் பகைவர்மேல் எறிதற்காக ஏந்திய வாள் மின்னலாகவும்; வயங்கு கடிப்பு அமைந்த குருதிப் பலிய முரசு முழக்காக - விளங்குகின்ற குறுந்தடிகொண் டடிக்கப்படுகின்ற குருதிப்பலி யூட்டப்பெற்ற முரசொலி மழையின் முழக்க மாகவும்; அரசு அராப் பனிக்கும் அணங்குறு பொழுதின் - அரசர்களாகிய பாம்புகள் அஞ்சி நடுங்கும் வருத்தமிக்க பொழுதின் கண்; வெவ்விசைப் புரவி வீசு வளியாக - வெவ்விய செலவையுடைய குதிரைகள் மோதுகின்ற காற்றாகவும; விசைப்புறு வல்வில் வீங்கு நாண் உகைத்த கணைத் துளி பொழிந்த கண்ணகன் கிடக்கை - விசைத்துக் கட்டப்பட்ட வலிய வில்லினுடைய பெரிய நாண் செலுத்திய அம்புகளாகிய மழை பொழிந்த இடமகன்ற போர்க்களத்தில்; ஈரச் செறுவயின் - குருதி தோய்ந்து ஈரமாகிய செருக்களத்தின்கண்; தேர் ஏராக - தேர்கள் ஏர்களாகவும்; விடியல் புக்கு - விடியற்காலத்தே புகுந்து; நெடிய நீட்டி நின் செருப்படை மிளிர்த்த - திருத்துறு பைஞ்சால் நெடியவாகிய நின் வேல் முதலிய படைக் கருவிகளை நீட்டி மாற்றார்ப் படைக் கலங்கள் கீழ் மேலாக மறிக்கப் பட்டாழ்ந்தமைந்த பசிய படைச் சாலின்கண்; பிடித்தெறி வெள் வேல் கணைய மொடு வித்தி - பிடித்தெறியும் வெள்ளிய வேலும் கணையமரமுமாகிய படைகளைத் துகள்படச் சிதைத் தெறிதலால் அவை விதைபோல் நிலத்திற் புதையுண்ணச் செய்து; விழுத்தலை சாய்த்த வெருவருபைங் கூழ் - பெரிய தலைகளை வெட்டிச் சாய்த்து மூளையும் நிணமும் குழம்பிய கண்டார்க்கு அச்சம்பயக்கும் பிணங்களாகிய பசிய பயிரி னுடைய; பேய் மகள் பற்றிய பிணம் பிறங்கு பல் போர்பு பேய்மகளிர் மொய்த்துச் சூழும் பிணங்கள் குவிக்கப்பட் டுயர்ந்த பல போர்களை; கண நரி யோடு கழுது களம் படுப்ப - கூட்டமான நரிகளும் பேய்களும் ஈர்த்துண்ண; பூதம் காப்ப - பூதங்கள் காவலைச் செய்ய; பொலி களம் தழீஇ - பிணங் களாகிய நெல் பொலிந்த போர்களத்தே பொருந்தி; பாடுநர்க் கிருந்த பீடுடையாள - போர்க்களம் பாடும் பொருநர் முதலியோர் பாடக் கேட்டற்பொருட்டு வீற்றிருந்த பெருமை யுடையவனே; தேய்வை வெண்காழ் புரையும் - கல்லிற் றேய்த்து அரைக்கப்படும் வெள்ளிய சந்தனக்கட்டை போலும்; விசி பிணி வேய்வை காணா விருந்தின் போர்வை - இறுக விசித்துக் கட்டப்பட்ட குற்றமில்லாத புதிதாகப் போர்க்கப்பட்ட; அரிக்குரல் தடாரி உருப்ப ஒற்றி - அரித்த ஓசையுடைய தடாரிப் பறையைச் சூடேற்றி யறைந்து; பாடி வந்திசின் - பாடி வந்தேன்; பெரும - பெருமானே; பாடான்று - ஓசை நிறைந்து; எழிலி தோயும் இமிழிசையருவி- முகில்கள் படியும் ஒலிக்கின்ற ஓசையையுடைய அருவிகள் பொருந்திய; பொன்னுடை நெடுங்கோட்டு இமயத்தன்ன - பொன்னின் நிறம் பொருந்திய நெடிய உச்சியையுடைய இமயத்தைப் போல; ஓடை நுதல - பட்டமணிந்த நெற்றியினையும்; ஒல்குதல் அறியா - சுருங்கு தலில்லாத; துடியடிக் குழவிய பிடி - துடிபோன்ற அடியை யுடைய கன்றையுடைய பிடி யானைகள்; இடை மிடைந்த - இடையிடையே செறிந்துள்ள; வேழ முகவை நல்குமதி - களிறுகளாகிய பரிசிலை நல்குவாயாக; தாழா ஈகைத்தகை வெய்யோய் - குன்றாத ஈகையாற் பிறக்கும் புகழை விரும்பு பவனே; எ-று. யானைகள் மழை மேகமாகவும் மறவருடைய வாள் மின்னலாகவும், முரசொலி இடி முழக்காவும், அது கேட்டு அஞ்சும் வேந்தர் பாம்பாகவும், புரவிகள் காற்றாகவும், கணை மழைத்துளியாகவும், குருதியீரம்பட்ட போர்க்களம் வயலாகவும், தேர் ஏராகவும், தேர் சென்று ஆழ்ந்த ‘விடம்’ படைச்சாலாகவும், பலரும் திரிந்து மிதிப்புண்பது திருத்தப்படும் மறுசாலாகவும், கையறுப்புண்டு வீழும் வேலும் கணையமும் விதையாகவும், தலைசாய்ந்து வீழும்வீரர் வளைந்து தலைசாய்ந்து நிற்கும் பசிய பயிராகவும், பிணக்குவை போர்பாகவும் உருவகம் கொள்க. பொலி களம், நெற்பொலி நிறைந்த களம். உழவர் போர்க்களத்தே நின்று ஏர்க்களம் பாடும் பொருநர் பாட, அப் பாட்டையேற்று அவர்கட்கு நெல்லைத் தருவதுபோல, வேந்தரது போர்க்களத்தில் பொருநர் பாடும் புகழை ஏற்றலின், “பாடுநர்க்கிருந்த பீடுடையாள” என்றார். தோலிலும் தோலாற் செய்யப்படும் வார்களிலும் நரம்பு களிலும் காணப்படும் ‘பிசிர்’ வேய்வை யெனப்படும். அது குற்றமாய் இசைக் கருவிக்குச் சிறப்புத் தாராமையின், “வேய்வை காணா விருந்திற்போர்வை” யென்றார். “வேய்வை போகிய விரலுளர் நரம்பு” (பொருந. 17) என்று பிறரும் கூறுதல் காண்க. சூடேற்றிய வழி தடாரியின் ஓசை மிகுவது பற்றி “உருப்ப வொற்றி”யென்றார். தகை, அழகுமாம். வெய்யோய், வேண்டற் பொருட்டாகி வெம்மையடி யாகப் பிறந்தவினைப்பெயர். பீடுடையாள, பெரும, தடாரி ஒற்றிப் பாடி வந்திசின், வெய்யோய், குழவிய பிடியிடை மிடைந்த வேழமுகவை நல்குமதி என்று கூட்டி வினை முடிவு செய்க. விளக்கம் : மறக்கள வழியாவது, “முழவுறழ் திணிதோளானை உழவனாக வுரைமலிந்தன்று,” (பு.வெ.மா. 85)என வரும். இனி “கூதிர் வேனில்” (தொல். புறத். 17) என்ற சூத்திரத்து, “ஏரோர் களவழி யன்றிக் களவழித், தேரோர் தோற்றிய வென்றியும்” என்ற தன் உரையில் இதனை யெடுத்துக்காட்டி “இஃது ஏரோர் களத்தின் வழி கூறியது ” என்பர் இளம்பூரணர். இப்பகுதிக்கு நச்சினார்க்கினியர். “நெற்கதிரைக் கொன்று களத்திற் குவித்துப் போர் அழித்து அதரி திரித்துச்சுற்றத் தொடுநுகர்வதற்கு முன்னே கடவுட்பலி கொடுத்துப் பின்னர்ப் பரிசிலாளர் முகந்துகொள்ள வரிசையின் அளிக்குமாறு போல, அரசனும், நாற்படையையுங் கொன்று களத்திற் குவித்து எருது களிறாக வாள்மட லோச்சி அதரி திரித்துப் பிணக்குவையை நிணச்சேற்றோடு உதிரப் பேருலைக்கண் ஏற்றி ‘ஈனா வேண்மான் இடந்துழந்தட்ட’ கூழ்ப்பலியைப் பலியாகக் கொடுத்து எஞ்சி நின்ற குதிரை யானைகளையும் ஆண்டுப் பெற்றன பலவற்றையும் “பரிசிலர் முகந்துகொள்ளக் கொடுத்தலாம்” (தொல். புறத். 24) என்று கூறுவர். இப்பாட்டினும், குட்டுவனை உழவனாகவும், அவனுடைய போர்க்கள நிகழ்ச்சியை ஏர்க்களத்தின் செயலில் வைத்தும் உருவகம் செய்து கூறினமையின், இதனை ஏர்க்கள வுருவகம் என்றார்போலும். இப் பாட்டுப் போர்க்களம் பாடும் பொருநன் ஒருவன் கூற்றில் வைத்துக் கூறுதலின், “அரிக்குரல் தடாரி உருப்ப வொற்றிப் பாடி வந்திசின் பெரும” என்றும், பாடி வந்ததன் கருத்து விளங்குதற்கு, “வேழ முகவை நல்குமதி” யென்றும், நீட்டியாது தருக வென்பார், “தாழா வீகைத் தகை வெய்யோய்” என்றும் கூறினார். ஆசிரியர் பரணர் பெயரால் பரணர் பள்ளி யென்றோர் ஊர் கோயமுத்தூர் மாவட்டத்துக் காங்கேயப் பகுதியில் உள்ளது (A.R.No. 560 of 1908) இப்போது இது பரஞ்சேர்வளியென வழங்குகிறது. 370. சோழன் செருப்பாழியெறிந்த இளஞ்சேட்சென்னி சோழன் இளஞ்சேட்சென்னி சோழநாட்டுக்கு வேந்தனானபின் வட வடுகர் அடிக்கடி அவனது தொண்டை நாட்டிற்குட் புகுந்து குறும்பு செய்தனர். அவர்களை அவ்வப்போது அவன் வெருட்டி யோட்டினானாயினும் வடுகரது குறும்பு குறைந்தபாடில்லை. முடிவில் அவன் பெரும் படை யொன்று கொண்டு சென்று.பாழி, யென்னுமிடத்தே தங்கியிருந்த வடுகரைச் சவட்டி வென்றி யெய்தினான். பாழி நகர் நல்ல அரணும் காவலும் பொருந்தி யிருந்தமையின் அதனை வடுகர்கைப்பற்றிக் கொண்டு அதனைத் தமக்கு இடமாகக் கொண்டிருந்தனர், சோழன் வடுகரை வென்று அவருடைய வலிய அரண் சூழ்ந்த பாழி நகரையும் அழித்துச் செரு மேம்பட்டான். அதனால் அவனைச் செருப்பாழி யெறிந்த இளஞ்சேட் சென்னி யென வழங்கினர். இடையன் சேந்தன் கொற்றனாரென்னும் சான்றோர், சென்னி, செருப்பாழி யெறிந்த திறத்தை,எழூஉத் திணிதோள் சோழன் பெருமகன் விளங்கு புகழ் நிறுத்த இளம்பெருஞ் சென்னி, குடிக்கடனாகலிற் குறைவினை முடிமார், செம்புறழ் புரிசைப் பாழி நூறி வம்ப வடுகர் பைந்தலை சவட்டி” (அகம். 375) வென்றானென்று குறிக்கின்றார். இப் பாழி யென்பது தொண்டைநாட்டு நெடுங்குன்றத்துக் கல்வெட்டொன்றில் ‘பாழி ஒபிளியான திருவாஞ்சேரி’ (A.R.No. 26 of 1934 - 5)என்று கூறப்படுகிறது. இது செங்கற்பட்டு தாலூகாவில் உளது. வடுகரைச் சவட்டியது கொண்டு செருப்பாழி தொண்டைநாட்டுப் பாழி யாகலாம் என்று கருதப்பட்டது. ஏனை நாடுகளிலும் பாழியெனப் பெயரிய ஊர்கள் பலவுண்டு, சோழநாட்டுப் பாழி அரதைப் பெரும்பாழி யென்றும் இக்காலத்து அரித்துவாரமங்கல மென்றும் வழங்கும். இந்த இளஞ்சேட்சென்னி, நெய்தலங் கானல் இளஞ் சேட்சென்னி யெனவும், சேரமானுடைய பாமுளூரை யெறிந்த இளஞ்சேட்சென்னி யெனவும், செருப்பாழியெறிந்த இளஞ்சேட் சென்னி யெனவும் இத்தொகை நூலாற் குறிக்கப்படுகின்றான். இனி, இடையன் சேந்தன் கொற்றனார் பாழி யெறிந்த சென்னியை இளம்பெருஞ் சென்னி யென்றலின், நெய்தலங்கானல் என்னு மிடத்தே தோன்றிச் சேரமானது பாமுளூரை யெறிந்த இளஞ்சேட் சென்னி, இளம்பெருஞ் சென்னியின் வேறாவன் என்றும் செருப்பாழி யெறிந்த இளம்பெருஞ் சென்னியும், பாமுளூரெறிந்த இளஞ்செட் சென்னியும் உடன்பிறந்தோராகலாமென்றும், இருவரும் ஒருகாலத்தவராதலின் ஊன்பொதி பசுங்குடையாராற் பாடப்பெற்றன ரென்றும் கருதலுமுண்டு. இக்கருத்து உண்மையா மாயின், செருப்பாழி யெறிந்த இளம்பெருஞ் சென்னி யெனற்பாலது ஏடெழுதினோரால் இளஞ்சேட் சென்னி யெனத் தவறாக எழுதப்பட்டதெனக் கோடல் வேண்டும். இந்த இளஞ்சேட் சென்னி வடுகரை வென்று களங்கொண்ட செய்தியறிந்த ஊன் பொதி பசுங் குடையார் அவன்பாற் சென்று, பகைவர்பால் அவன் பெற்ற களிறுகளைப் பரிசிலாகப் பெறக் கருதி இப் பாட்டினைப் பாடினார். இதன்கண், தம்மைப் புரப்போர் இல்லாமையால் தம்முடைய சுற்றத்தார் பசியால் வருந்த அவருடனே தாம் காடு பல கடந்து அவன்பால் வந்ததாகவும், அவன் பகைவரைக் கொன்று, பேய்மகள் குரவையயரப், பருந்தும் கழுகும் இருந்து பிணம் தின்ன வென்றி மேம்பட்டிருந்ததாகவும், தாம் புகர்முக முகவை விரும்பி வந்திருப்பதாகவும் குறித்துரைக்கின்றார். வள்ளியோர்க் காணா துய்திற னுள்ளி நாரும் போழுஞ் செய்தூண் பெறாஅது பசிதினத் திரங்கிய விரும்பே ரொக்கற் கார்பதங் கண்ணென மாதிரந் துழைஇ 5 வேருழந் துலறி மருங்குசெத் தொழியவந் தத்தக் குடிஞைத் துடிமரு டீங்குரல் உழுஞ்சிலங் கவட்டிடை யிருந்த பருந்தின் பெடைபயிர் குரலொ டிசைக்கு மாங்கட் கழைகாய்ந் துலறிய வறங்கூர் நீளிடை 10 வரிமாற் றிரங்கிய கானம் பிற்படப் பழுமர முள்ளிய பறவை போல ஒண்படை மாரி வீழ்கனி பெய்தெனத் துவைத்தெழு குருதி நிலமிசைப் பரப்ப விளைந்த செழுங்குர லரிந்துகால் குவித்துப் 15 படுபிணப் பல்போர் பழிய வாங்கி எருதுகளிறாக வாண்மட லோச்சி அதரி திரித்த வாளுகு கடாவின் அகன்கட் டடாரி தெளிர்ப்ப வொற்றி வெந்திறல் வியன்களம் பொலிகென் றேத்தி 20 இருப்புமுகஞ் செறித்த வேந்தெழின் மருப்பின் வரைமருண் முகவைக்கு வந்தனென் பெரும வடிநவி லெஃகம் பாய்ந்தெனக் கிடந்த தொடியுடைத் தடக்கை யோச்சி வெருவார் இனத்தடி விராய வரிக்குட ரடைச்சி 25 அழுகுரற் பேய்மக ளயரக் கழுகொடு செஞ்செவி யெருவை திரிதரும் அஞ்சுவரு கிடக்கைய களங்கிழ வோயே. திணை : வாகை. துறை: மறக்களவழி. சோழன் செருப்பாழி யெறிந்த இளஞ் சேட்சென்னியை ஊன்பொதி பசுங் குடையார் பாடியது. உரை : வள்ளியோர்க் காணாது - வள்ளன்மையுடைய பெரு மக்களைக் காணப்பெறாமையால்; உய் திறன் உள்ளி நாரும் போழும் செய்து - உய்யும் வகையை யெண்ணிப் பனை மடற்கண் பெறப்படும் நாரும் பனங்குருத்தும் கைக்கொண்டு; ஊன்பெறாதுபசிதினத் திரங்கிய இரும்பே ரொக்கற்கு - உணவு கிடைக்கப் பெறாமையாற் பசிநின்று வருத்த வருந்திய என்னுடைய பெரிய சுற்றத்தார்க்கு; ஆர்பதம் கண்ணென - நிறைந்த உணவு பெறவேண்டுமென்பதிலே நோக்கம் இருப்ப தறிந்து; மாதிரம் துழைஇ - நாற்றிசையும் தேடி; வேர் உழந்து உலறி - மேனியில் வியர்வை யொழுக அலைந்து புலர்ந்து; மருங்கு செத்து ஒழிய வந்து - வயிறொட்டி வாட வந்து; அத்தக் குடிஞைத்துடி மருள் தீங்குரல் சுரத்தின் கண் வாழும் கோட்டான்களின் துடியோசைபோலும் கடிய குரலோசை; உழுஞ்சில் அம் கவட்டிடை இருந்த - உழுஞ்சின் மரத்தின் கவடுகளிலிருந்த; பருந்தின் பெடை பயிர் இசைக்கும் - பெடைப் பருந்தையழைக்கும் சேவற்பருந்தின் குரலோடு கலந்தொலிக்கும்; ஆங்கண் - அவ் விடத்து; கழைகாய்ந்து உலறிய வறங்கூர் நீள் இடை - மூங்கில் காய்ந்து உலறிக் கிடக்கும் நீரின்றி வறம்மிக்க நீண்ட வழி யிடத்தே; வரி மரல்திரங்கிய கானம் பிற்பட - வரிகளையுடைய மரற் பழங்கள் வற்றித் திரங்கிக் கிடக்கும் காடுகள் பிற்பட்டொழிய; பழு மரம் உள்ளிய பறவை போல - பழுத்த மரங்களை நினைந்து செல்லும் வௌவால்களைப் போல; ஒண் படை மாரி வீழ் கனி பெய்தென - ஒள்ளிய வில்லும் வாளுமாகிய படையாகிய மழை முகில் விரும்பிய தலைகளாகிய கனிகளைப் பெய்ததாக; துவைத் தெழு குருதி நிலமிசைப் பரப்ப - முழங்கிவரும் குருதி வெள்ளம் நிலத்தின்மேற் பரவிச் செல்ல; விளைந்த செழுங்குரல் அரிந்து கால் குவித்து -விளைந்த செழுமையான கதிர்களாகிய கழுத்தை யறுத்துக் காலொன்றக் குவித்து; படு பிணப் பல்போர்பு அழிய வாங்கி - இறந்த பிணங்களாகிய பல போர்கள் அழியும்படி வளைத்து; களிறு எருதாக - யானைகளை எருதாகவும்; வாள் மடல் ஓச்சி - வாட் படையைப் பனைமடலாகவும் கொண்டு செலுத்தி; அதரி திரித்த ஆளுகு கடாவின் - புணைகட்டிச் சூழ் வரச்செய்த காலாட்கள் வீழ்ந்த கடாவிடுமிடத்து; அதன்கண் தடாரி தெளிர்ப்ப ஒற்றி - அகன்ற கண்ணையுடைய தடாரிப்பறை யொலிக்க அறைந்து; வெந்திறல் வியன்களம் பொலிக என்று ஏத்தி - வெவ்விய திறலையுடைய நின் பெரிய போர்க்களம் புகழால் விளக்கமுறுக எனப் பாராட்டி; இருப்பு முகம் செறித்த ஏந்து எழில் மருப்பின் - இரும்பினாற் செய்யப்பட்ட பூண் செறிக்கப்பெற்ற உயர்ந்த அழகிய மருப்பினையுடைய; வரை மருள் முகவைக்கு வந்தனென் - மலை போலும் களிறாகிய பரிசில் பொருட்டு வந்தேன்; பெரும - பெருமானே; வடிநவில் எஃகம் பாய்ந்தென - வடிக்கப்பட்ட கோடரி பாய்ந்து வெட்டிற்றாக; கிடந்த தொடியுடைத் தடக்கை ஓச்சி - துணிப் பட்டுக்கிடந்த தொடியணிந்த பெரிய கை யொன்றை எடுத்து மேலே யுயர்த்தி; வெருவார் இனத்து அடிவிராய வரிக்குடர் அடைச்சி - அஞ்சாத வீரர் கூட்டத்தின் தன்னுடைய கால்களைச் சுற்றிக்கொள்ளும் வரிபொருந்திய குடரை ஒருங்கு சேர்த்து; பேய்மகள் அழுகுரல் அயர - பேய்மகள் தன் அழுகுரலை யெடுத்துப் பாடிக் கூத்தாட; கழுகொடு செஞ்செவி யெருவை திரிதரும் - கழுகுகளும் சிவந்த செவியையுடைய பருந்துகளும் இருந்து வட்டமிட்டுத் திரியும்; அஞ்சுவரு கிடக்கைய களம் கிழவோய் - கண்டார்க்கு அச்சம் பயக்கும் இடத்தையுடைய போர்க் களத்தைத் தனதாக்கிக் கொண்ட உரிமையுடையவனே; எ-று. வள்ளியோரது வள்ளன்மை பற்றுக்கோடாகத் தன் இனத்தவர் உயிருய்கின்றன ரென்பான், “வள்ளியோர்க் காணாது உய்திறனுள்ளி” என்றான். நார், பனைமடலிற் பெறப்படும்நார் போழ், பனங்குருத்து முழாஅரைப் போந்தையரவாய் மாமடல் நாரும் போழும் கிணையொடு சுருக்கி (புறம். 375) என்று பிறரும் கூறுதல் காணக். “நாரும் போழும் செய்துண்” டென்றும் பாடவேறுபாடுண்டு. பசி மிகுதியால் உணவு தருவாரையே நோக்குதலின், “ஒக்கற்கு ஆர்பதம் கண்” என்றார். துடியோசை போன்றதாயினும், கேட்டற்கு இன்னாதா யிருத்தலின் “துடிமருடீங்குரல்” எனப்பட்டது. மாரி கனி பெய்தென வென்றது இல்பொருளுவமை. வீழ்கனி, உண்ண, விரும்பிய இனிய கனி. குரல், கழுத்துமாம் களிறுகளை நிரையாகப் பூட்டிப் பிணங்களை மிதித்துக்கொண்டுசுற்றி வரச்செய்வதால், உடல்குழைந்து தலை வேறுபட்டு நீங்குதலின், “அதரி திரித்த ஆளுகு கடாவின்” என்றார். “வரைமருள் முகவை” யென்றதனால், களிற்றுப் பரிசில் என்பது பெற்றாம், வெருவார் - அஞ்சாத வீரர். கிடக்கைய; பெயரெச்சக் குறிப்பு. களத்தை வென்று தனதாக்கிக் கோடலின், “களங் கிழவோய்” என்றார். கிழவோய், பெரும, பறவை போல, ஏத்தி, முகவைக்கும் வந்தனன் எனக் கூடி வினை முடிவு செய்க. விளக்கம் : நெல்லுழவர் நெல்லரிந்து தொகுத்த நெற்களத்துக்குச் சென்று பாடி நெல்பெற்று மகிழும் பொருநருட் சிலர் வேந்தர் போருடற்றி வெற்றி யெய்தும் போர்க்களத்துக்குச் சென்று பாடிக் களிறும், தேரும், மாவும், கலன்களும் பெறுவது பண்டையோர் மரபு. அவ்வாறு போர்க் களம் பாடிச்சென்ற பொருநன் ஒருவன் கூற்றில் வைத்து ஆசிரியர் ஊன்பொதி பசுங்குடையார் செருப்பாழி யெறிந்த சோழன் இளஞ்சேட் சென்னியைப் பாடுகின்றார். பெருவளம் பெறும் போதெல்லாம் அவற்றைத் தம்மை யெர்த்த பொருநர்க்கும் ஏனை இர வலர்க்கும் பகுத்தளித்து உண்பது அவர்களுக்கு இயல்பு. அதனால் வறுமை எய்தி வருந்துவது அவர்கள் வாழ்வில் அடிக்கடி யுண்டாகும்நிகழ்ச்சியாகும். வறுமை மிக்கவழி ஏர்க்களமோ, போர்க்களமோ நாடிச் செல்வரென்பது விளங்கும். போர்க்களம் பாடும் பொருநன் வறுமையுற்று வருந்திய வருத்தத்தைத் தொடக்கத்திலே குறிப்பிப்பார், உய்திறன் உள்ளி வள்ளியோர்க் காணாது ஊன் பெறாது பசிதினத் திரங்கிய ஒக்கல் பொருட்டு,மாதிரம் துழைஇ, கானம் பிற்படப் பழுமரம் உள்ளிய பறவைபோல வந்தேன் என்றான். என்றார், தான் பாடும் ஏர்க்களத்துக்கும்,போர்களத்துக்கும், ஒப்புமை காட்டி ஏர்க்களம் பாடினோர்க்கு வழங்குவது போலப் போர்க்களம் பாடின எனக்கும் வழங்குதல் வேண்டும் என்பான், “வெந்திறல் வியன்களம் பொலிக என்றேத்தி வரைமருள் முகவைக்கு வந்தனென்” என்றான். ஒண்படை மாரி வீழ்கனி பெய்தன என்பது முதல் அதரி திரித்த ஆளுகு கடாவின் என்பது வரை ஏர்க்களத்தோடு போர்க் களத்தை உருவகம் செய்தவாறு. சென்னியின் போர்த்திறம் புகன்று கூறுவார், பேய்மக்களும் கழுகும், எருவையும் திரியும் போர்க்களம் கண்டார்க்கு அச்சம் உண்டாகும் வகையில், போரிற்பட்டோருடைய பிணக்குவை யால் காட்சி வழங்கச் செய்து அக் களத்தில் வெற்றிக் குரியோன் சென்னியேயாய் மேம்பட்டான் என்பது பற்றிக் “களங்கிழவோய்” என்று குறித்துள்ளார். 371. தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் தலையாலங்கானத்துச், செருவென்ற நெடுஞ்செழியன் ஒருகால் தன்னை யெதிர்த்த பகைவரை வென்று களங்கொண்டு மேன்மையுற்றான். பகைவீரர் பலர் பட்டு வீழ்ந்தனர். அவருடைய குதிரையும் களிறும் பலவாய்ப் பட்டு வீழ்ந்தன. சிதைந்து வீழ்ந்த பிணங்களைப் பேய்மகளிருண்டு களித்து நெடுஞ்செழியனை வாழ்த்திக் கூத்தாடினர். அக் காலத்தே போர்க்களம் பாடும் பொருநன் ஒருவன் அவனைப்பாடிப் பரிசில் பெறும் கருத்துடன் சென்று காணும் வகையில் ஆசிரியர் கல்லாடனார். இப் பாட்டைப் பாடியுள்ளார். கல்லாடனார் தொண்டை நாட்டினரென்பது நினைவுகூரத் தக்கது. (செந். செல்வி. சிலம்பு 23 பக்கம்: 113) இதன்கட் கூறப்படும் பொருநன் தன்னைப் புரக்கும் தலைவர்கள் வேறேயில்லாமை யால் வறுமையால் உணவின்றி வாடி ஒரு மரத்தடியில் தங்குகின்றான். பின்பு, தன் கரவடியின் ஒரு தலையில் பறையையும் மற்றையதில் இசைக் கருவிகளை வைத்துக் கட்டிய பையையும் கட்டிக் கொண்டான். தலையில் நாரால் தொடுக்கப் பட்ட பூமாலையையணிந்தான். சோறு சமைக்கும் மட்பானையைத் தோளிற் கொண்டான். தான் இருந்த மன்றத்தின்கண் நின்ற வேம்பின் பூ மழைத்துளி போல் உதிர, அவ்விடத்தினின்றும் நீங்காமல் , வேறு இன்றியமையாது செய்தற்குரிய செயலையும் செய்ய விரும்பாதுபொருளே விரும்பிய வுள்ளத்தனாய் நெடுஞ்செழியன் இருக்கும்போர்க்களம் நாடி வழிகள் பல கடந்தும் சென்று அவனைக்கண்டு, “வில்லேருழவின் நின்நல்லிசையுள்ளி, நின்பாற் பெறலாகும் புகர்முக முகவைக்கு வந்தேன்” என்று கூறுகின்றான். இப்பாட்டின் இடையே சில அடிகள் சிதந்து விட்டன. கிடைத்த ஏடுகளில் அவை காணப்படவில்லை. அகன்றலை வையத்துப் புரவலர்க் காணாது மரந்தலைச் சேர்ந்து பட்டினி வைகிப் போதவி ழலரி நாரிற் றொடுத்துத் தயங்கிரும் பித்தை பொலியச் சூடிப் 5 பறையொடு தகைத்த கலப்பையென் முரவுவாய் ஆடுறு குழிசி பாடின்று தூக்கி மன்ற வேம்பி னொண்பூ வுறைப்பக் குறைசெயல் வேண்டா நசைய விருக்கையேன் அரிசி யின்மையி னாரிடை நீந்திக் 10 கூர்வா யிரும்படை நீரின் மிளிர்ப்ப வருகணை வாளி. . . . . . . . . . . . . . . . . . . . . . அன்பின்று தலைஇ இரைமுரை சார்க்கு முரைசால் பாசறை வில்லே ருழவினின் னல்லிசை யுள்ளிக் 15 குறைத்தலைப் படுபிண னெதிரப் போர்பழித் தியானை யெருத்தின் வாண்மட லோச்சி அதரி திரித்த வாளுகு கடாவின் மதியத் தன்னவென் விசியுறு தடாரி அகன்க ணதிர வாகுளி தொடாலிற் 20 பணைமரு ணெடுந்தாட் பல்பிணர்த் தடக்கைப் புகர்முக முகவைக்கு வந்திசிற் பெரும களிற்றுக்கோட் டன்ன வாலெயி றழுத்தி விழுக்கொடு விரைஇய வெண்ணிணச் சுவையினள் குடர்த்தலை மாலை சூடி யுணத்தின் 25 ஆனாப் பெருவளஞ் செய்தோன் வானத்து வயங்குபன் மீனினும் வாழியர் பலவென் உருகெழு பேய்மக ளயரக் குருதித்துக ளாடிய களங்கிழ வோயே. திணை : வாகை. துறை: மறக்களவழி. தலையாலங் கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனைக் கல்லாட னார் பாடியது. உரை : அகன்றலை வையத்துப் புரவலர்க் காணாது - அகன்ற இடத்தையுடைய நிலவுலகத்தின்கண் எம்மைப் பாதுகாக்கும் வேந்தரைக் காணப் பெறாமையால்; மரந்தலைச் சேர்ந்து - மன்றத் தின்கண் நிற்கும் வேப்பமரத்தின் அடியிலே இருந்து; பட்டினி வைகி - பட்டினி கிடந்த; போதவிழ் அலரி நாரின் தொடுத்து - அரும்பு மலர்ந்த பூக்களை நாரால் மாலையாகத் தொடுத்து; தயங்கு இரும்பித்தை பொலியச் சூடி - விளங்கு கின்ற தலைமயிர் அழகுறச் சூடிக்கொண்டு; பறையொடு தகைத்த கலப்பையென் - பறையொடு கட்டப்பெற்ற கலங்கள் வைத்த பையை யுடையேனாய்; முரவு வாய் ஆடுறு குழிசி பாடின்று தூக்கி - சிதைந்த வாயையுடைய சமைத்தற்கமைந்த பானையைக் கெடாதபடி மெல்ல எடுத்து வைத்து; மன்ற வேம்பின் ஒண்பூ உறைப்ப - மன்றத்தின் கண் நின்ற அந்த வேம்பினது ஒள்ளிய பூவுதிர; அரிசியின்மையின் - சோற்றுக் குரிய அரிசியில்லாமையாலே; குறை செயல் வேண்டா நசைய இருக்கையேன் - மிக இன்றியமையாத வேறு எச் செயலையும் செய்ய விரும்பாது பொருள் நசையே கொண்ட இருக்கையினை யுடையேனாய்; ஆரிடை நீந்தி - பின்பு அரிய வழிகள் பல கடந்து; கூர் வாய் இரும்படை நீரின் மிளிர்ப்ப - கூரிய வாயையுடைய பெரிய வாட்படைகள் தம்முடைய நீர்மைப்படி மேலும் கீழுமாகச்சுழல; வருகணை வாளி - தம்மை நோக்கி வரும் அம்புகளை; ........................அன்பின்று தலைஇ ...................அன்பின்றிப் பகைவரை ஏறட்டு மேற்சென்று; இரை முரைசு ஆர்க்கும் உரைசால் பாசறை - ஒலிக்கின்ற முரசு முழங்கும் புகழமைந்த பாசறைக்கண்ணே தங்கி; வில்லேர் உழவின் நின் நல்லிசை யுள்ளி - வில்லை யேராகக் கொண்டு போராகிய உழவினைச் செய்யும் நின்னுடைய நல்ல புகழை நினைந்து; குறைத்தலைப் படு பிணன் எதிர - தலைகள் வெட்டுண்டு குறை யுடலங்களாய் வீழும் பிணங்கள் தன்னெதிரே குவிய; போர்பு அழித்து - அப் பிணக்குவையாகிய போரையழித்து; யானை யெருத்தின் வாள் மடலோச்சி - யானைகளாகிய எருதுகளை வாளாகிய பனைமடல் கொண்டு சூழ்வரச் செலுத்தி; அதரிதிரித்த ஆள் உகு கடா வின் - கடாவிடுதலால் தலை வேறு உடல் வேறாகப் பிரிந்து தொக்க களத்தின்கண்; மதியத்தன்ன என் விசியுறு தடாரி- முழுமதிபோன்ற வாராற் கட்டப்பட்ட என் தடாரிப் பறையை; அகன்கண் அதிர அகன்ற - கண்ணதிரும்படி யறைந்து; ஆகுளி தொடாலின் - ஆகுளிப் பறையைக் கொட்டிக் கொண்டு; பணை மருள் நெடுந்தாள் - பறைபோன்ற நெடிய கால்களையும்; பல்பிணர்த் தடக்கை -பலவாகிய சருச்சரை களையுடைய பெரிய கையையும்; புகர் முக முகவைக்கு வந்திசின் - புகர்பொருந்திய முகத்தையுமுடைய களிறாகிய பரிசில்பொருட்டு வந்தேன்; பெரும - பெருமானே; களிற்றுக் கோட்டன்ன வாலெயிறு அழுத்தி - பன்றியின் கோடுபோன்ற வெள்ளிய பற்களாற் கடித்தீர்த்து; விழுக்கொடு விரைஇய வெண்ணிணச் சுவையினள் - தசையொடு விரவிய வெள்ளிய கொழுப்பைத் தின்று சுவை காண்பவளாய்; குடர்த்தலை மாலை சூடி - குடர்களைத் தன் தலையில் மாலையாக அணிந் துகொண்டு; உணத் தின ஆனா - யாம் நிரம்ப வுண்ணவும் தின்னவும் குறையாதவாறு; பெரு வளம் செய்தோன் - மிக்க பிணங்களாகிய பெரிய வளத்தைக் கொடுத்தவனாகிய இவ் வேந்தன்; வானத்து வயங்கு பன் மீனினும் பல வாழியர் என - வானத்தின்கண் விளங்கும் பலவாகிய விண் மீன்களினும் பல்லாண்டுகள் வாழ்வானாக என்று; உருகெழு பேய்மகள் அயர - அச்சம் பொருந்திய பேய் மகள் பாடிக் குரவைக் கூத்தாடி; குருதித் துகளாடிய களம் கிழவோய் - குருதி யுலர்ந்து துகள் பட்ட போர்க்களத்தை யுரிமைகொண்டவனே; எறு. சுவையினளாகிய பேய்மகள் வாழியர் பலவென அயர; துகளாடிய களங்கிழவோய், பெரும, காணாது, வைகி, சூடி தகைத்த கலப்பையேனாய், தூக்கி, உறைப்ப, இனமையின் வேண்டா இருக்கையேனாய் நீந்தி உள்ளி, வந்திசின் என மாறிக் கூட்டி வினை முடிவுசெய்க. காவடியின் ஒருதலையிற் கலப்பையும் ஒருதலையிற் பறையும் கட்டித் தூக்கிக் காவிச் செல்லுவது தோன்றப் “பறையொடு தகைத்தகலப்பையென்” என்றான். கலப்பை இசைக்கருவிகளை வைத்து கட்டும் பை. பித்தை தலைமயிர். “அலரி, சுரியிரும்பித்தை பொலியச் சூட்டி” (அகம். 213) என்று பிறரும் கூறுதல் காண்க. சமைத்தற்குரிய மட்பானையைத் தனியே தோளிற் சுமந்து வருமாறு விளங்க அதனைத் தனி யாகக் கூறினான். பாடுற்ற வழி, பானை அசைந்து உடைந்து போமாதலால், “பாடின்று தூக்கி” யெனல் வேண்டிற்று. வேம்பின் பூ மழைத்துளிபோல் உதிர்தலின் “ஒண்பூ வுறைப்ப” என்றார். குறைசெயல், இன்றியமையாதசெயல். நசைய விருக்கையேன் என்றற்கு வாளா இருத்தலை விரும்பிய இருக்கை யுடையேன் என்றலுமாம். கடா விடுங்களம், கடாவெனப் பட்டது; கடாவிடுஞ் செயல் குறித்ததென்றுமாம். பணை, வட்டமான வாயையுடைய ஒருவகைப் பறை. உரலெனினு மமையும்; பிணர், சருச்சரை; இது வரி வரியாய்ப் பலவா யிருத்தலின், ‘பல்பிணர்’ என்றார். புகர்முக முகவை, வகரக் கிளவி யென்றாற் போல்வ தோராகு பெயர். களிறு, பன்றி. விழுக்கு, ஊன்வகையுள் ஒன்று. (சீவக; 1584உரை) உணத்தின், உண்ணவும் தின்னவும். உண்டல் - விழுங்குதல்; தின்றல், மென்று உண்பது. அயர்தல், ஈண்டுக் கூத்தின் மேனின்றது. விளக்கம் : போர்க்களம் பாடும் பொருநன் தான் வறுமையுற்று வருந்திய வருத்தத்தை. புரவலர்க் காணாது பட்டினி வைகி, கலப்பை யேனாய்க்குழிசி பாடின்று தூக்கி நசைய இருக்கையேனாய் ஆரிடைநீந்தி வருவேனாயினேன் என்று முதற்கட் கூறுகின்றான். பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் போர்க்களத்திற்பகை வரை யெறிந்து பிணக்குவை பெருகச் செய்த பெருமையைப் பின்பு ‘படுபிணன் எதிரப் போர் பழித்து, வாண்மடலோச்சி அதரி திரித்த ஆளுகு கடாவின்’ எனப் பிரித்தோதினான்; இது கேட்கும் வேந்தன் உள்ளத்தில் உவகை தோன்றி அவன் முகத்தே முறுவலால் வெளிப்படக் கண்டு, அச் செவ்வி நோக்கித் தான் தடாரியும் ஆகுளியும் இசைத்துக்களம்பாடிய திறத்தைக் கூறித் “தடக்கைப் புகர்முக முகவைக்கு வந்திசின் பெரும” என்று மொழிந்தான். வேந்தன் செய்த போர் நலத்தால் பேய்மகள் விழுக்கும் வெண்ணிணமும் தின்று குடர்களை மாலையாக அணிந்து உவகை மிகுந்து போர்க்களத்தே நின் தேர்ப்பின்னே குரவையாடி மகிழ்கின்றாள்; மகிழ்பவள் யாம் உண்ணவும் தின்னவும் குன்றாத பெருவளத்தைச் செய்தான் பாண்டியன்; அவன் வானத்து வயங்கும் பன்மீனினும் பல்லாண்டு வாழியர் என வாழ்த்துகின்றாள். பேய்மகள் தனக்குரிய விழுக்கும் நிணமும் பிணமும் பெற்றுப் பாடியாடி வாழ்த்துவதுபோல யாமும் களிறும் மாவும் கலமும் தேரும் பெற்றுப்பாடியாடி மகிழ்ச்சி மிகுமாறு செய்வாயாக என வேண்டினான். “கூதிர் வேனில்” எனத் தொடங்கும் சூத்திரத்து (தொல். புறத். 17) “தேரோர் வென்ற கோமான் முன்தேர்க் குரவை” என்பதற்கு இளம்பூரணர் இங்கே பேய்மகளாடிய பகுதியை எடுத்துக் காட்டுவர்; “ஒன்றிய மரபின் பின்தேர்க் குரவை” என்றதற்கு இப்பகுதியை எடுத்துக் காட்டுவர் நச்சினார்க்கினியர் (தொல். புறத். சூ. 21) பிறரும் வென்று களங்கொண்ட வேந்தன் போர் வென்றதன்பின், பேய்கள் பிணந்தின்று குரவையாடின என்பது காண்க; (புறத்திரட்டு. 1429) 372. தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ் செழியன் பகைவரை வென்று களத்தைத் தனதாகக் கொண்டு அவ்விடத்தே களவேள்வி செய்தான். அப்போது பகைவருடைய வெட்டுண்ட தலைகளை அடுப்பாக வைத்துக் கூவிளங்கட்டையை விறகாக இட்டு மண்டை யோட்டை அகப்பையாகவும் வன்னிக் கொம்பை அதிற் செருகிய கொம்பாகவும் கொண்ட அகப்பையைக் கொண்டு, உலையிற் பெய்த ஊனும் நிணமும் குடரும் பொங்க, வேண்மாள் கூழாக்க, அதனை வாலுவன் தேவர்க்குக் காட்டிக் கலயத்திற் பெய்த நீரை யாவர்க்கும் தெளித்து வேள்வி செய்தான். விழாவின்கண் புதுவோர் பலர் வருவது போலப்புதியர் பலர் வந்திருந்த வேள்விச் சாலைக்கு ஆசிரியர் மாங்குடி மருதனாரும் வந்திருந்தார். அப்போது அவர் பாண்டியனைப் பாராட்டிப் புகழ்வாராய், போர்க்களம் பாடும் பொருநனொருவன் பாசறைக்கண் வேந்தனைக் கொண்டு, களவேள்விசெய்து சிறக்கும் வேந்தே, யான் என் தடாரிப்பறையைக் கொட்டிக்கொண்டு நின் புகழைப் பாடிவந்த தெல்லாம் நீ நல்கும் முத்துமாலையைப் பெறலா மென்றே யாகும் என்று கூறுவதாக இப் பாட்டினைப் பாடியுள்ளார். விசிபிணித் தடாரி விம்மென வொற்றி ஏத்தி வந்த தெல்லா முழுத்த இலங்குவா ளவிரொளி வலம்பட மின்னிக் கணைத்துளி பொழிந்த கண்கூடு பாசறைப் 5 பொருந்தாத் தெவ்வ ரருந்தலை யடுப்பிற் கூவிள விறகி னாக்குவரி நுடங்க ஆனா மண்டை வன்னியந் துடுப்பின் ஈனா வேண்மா ளிடந்துழந் தட்ட மாமறி பிண்டம் வாலுவ னேந்த 10 வதுவை விழவிற் புதுவோர்க் கெல்லாம் வெவ்வாய்ப் பெய்த புதுநீர் சால்கெனப் புலவுக்களம் பொலிய வேட்டோய்நின் நிலவுத்திக ழார முகக்குவ மெனவே. திணை : வாகை. துறை : மறக்கள வேள்வி. அவனை மாங்குடிகிழார் பாடியது. உரை : விசிபிணித் தடாரி இம்மென ஒற்றி - விசித்துக் கட்டப் பட்ட கிணைப்பறை இம்மென வொலிக்கும்படி யறைந்து; ஏத்தி வந்ததெல்லாம் - நின்னைப் பாராட்டி வந்ததற் கெல்லாம் காரணம்; முழுத்த இலங்குவாள் அவிரொளி வலம்பட மின்னி - குறைவின்றி விளங்கும் வாளினுடைய மிக்க ஒளி வெற்றியுண்டாக மழைமின்னுப்போல மின்னி; கணைத் துளி பொழிந்த கண்கூடு பாசறை - அம்புகளாகிய மழையைப் பெய்த இடம் நிறைந்த பாசறைக்கண்ணே; பொருந்தாத் தெவ்வர் அருந்தலை யடுப்பின் - மனம் பொருந்தாத பகைவர் உடலினின்றும் நீங்கிய அரிய தலைகளாற் செய்யப்பட்ட அடுப்பிலே; கூவிளவிறகின் ஆக்குவரி நுடங்க - கூவியங் கட்டையாகிய விறகிட்டெரிந்து ஆக்கப்படும் கூழிடையே, வரிக்குடர்கள் பிறழ்ந்து பொங்க ஆனா மண்டை வன்னியந் துடுப்பின் - தலையிற் பொருந்தாது நீங்கிய மண்டை யோட்டை அகப்பையாகவும் வன்னிமரத்தின் கொம்பை யதிற் செருகப்பட்ட காம்பாகவும் கொண்ட துடுப்பினால்; ஈனா வேண்மாள் - ஈனாத பேய்மகள்; இடந்து துழந்து அட்ட - தோண்டித் துழாவிச் சமைத்த; மா மறுபிண்டம் - மாக்களும் உண்ண மறுக்கும் ஊன்சோறாகிய பிண்டத்தை; வாலுவன் ஏந்த - பேய்மடையன் எடுத்துக் கொற்றவைக்குப் படைப் பானாய் ஏந்திக்காட்ட; வதுவை விழாவின் - திருமணவிழாவில் நிகழ்த்துவதுபோல்; புதுவோர்க்கேல்லாம் வெவ்வாய்ப் பெய்த புதுநீர் சால்க என - விருந்தினர் எல்லோருக்கும் கலயத்தின் வெவ்விய வாய் வழியாகப் பெய்த புதுநீர் அமைவதாக என்று சொல்லி நீரைத் தெளித்து; புலவுக் களம் பொலிய வேட்டோய் - புலால் நாறும் போர்க்களம் விளங்கக் களவேள்வி செய்தவனே; நின் நிலவுத் திகழ் ஆரம் முகக்குவம் என - நினது நிலவுபோல் ஒளி திகழும் மாலையைப் பெறலாமென்றே யாகும்; எ-று. தடாரிஒற்றி ஏத்தி வந்ததெல்லாம், வேட்டோய், நின் ஆரம் முகக்குவம் எனவேயாகும் எனக்கூட்டி வினைமுடிவு செய்க. வாளின் ஒளி மின்னலாகவும் அம்புகள் மழைத்தாரை யாகவும் உவமம் செய்தவாறு. மனம் பொருந்தாமையின் தெவ்வ ராயினமை தோன்றப் “பொருந்தாத் தெவ்வர்” என்றார். பகைவர் உடற் றசையைக் குடரோடே உலையில் பெய்து அடுங்கால் சூடேறவேறக் குடர்கள் வெந்து மென்மை யெய்து தலின், “ஆக்குவரி நுடங்க” வென்றார். வரிகளையுடைய குடர் வரியெனப் பட்டது. வேண்மாள் அடும் கூழைத் துழாவுதற்குக் கொள்ளும் துடுப்பிற்குக் கொம்பு வன்னிமரக் கொம்பு என்றும் அகப்பை மண்டையோடென்றும் விளக்குதற்கு. “ஆனா மண்டை வன்னியந் துடுப்பின்” என்றும் கூறப்பட்டது. இவ்வாறு அட்டகூழ் பொறுத் தற்கரிய புலால்நாற்றமுடையதாகலின் எத்தகைய விலங்கும் அதனை விரும்பாது மறுக்குமாறு தோன்ற, “மாமறுபிண்டம்” என்றார். புதுநீர், வழிபடுங்கலத்துப்புதிது பெய்தநீர். அதன் குறுகிய வாயிடத்தொழுகும் நீர் தெய்வக் காப்புடையதாய் யாவராலும் விரும்பப் படுவதாயிருத்தலின் அதனை, “வெவ்வாய்ப் புதுநீர்” என்றார். நிலவொளி போல் தண்ணிய வொளியைச் செய்தலின்.முத்துமாலை, “நிலவுத்திகழார” மெனச் சிறப்பிக்கப்பட்டது. ஆம் என ஒரு சொற்பெய்து முடிக்க. விளக்கம் : மறக்கள வேள்வியென்பது, “அடுதிற லணங்கார, விடுதிறலான் களம் வேட்டன்று” (பு.வெ.மா. 8:1) என வரும். பகைவர் தலையை அடுப்பாகவும், கூவிளங் கட்டையை அடுப்பெரிக்குங் கட்டையாகவும் கொண்டு மண்டையோடும் வன்னிமரக்குச்சியும் கொண்டமைத்த அகப்பையால் ஈனாவேண்மாள் கூழடுவதும், அதனைப் பேய்கட்கு அளித்து உண்பிப்பதும் களவேள்வியாகக் கூறப்படுகின்றன. “அஞ்சு வந்த போர்க்களத்தான். ஆண்டலை யணங்கடுப்பின் வயவேந்தரொண் குருதி, சினத் தீயின் பெயர்வு பொங்கத், தெறலருங் கடுந்துப்பின், விறல் விளங்கிய விழுச்சூர்ப்பின், தொடித்தோட்கை துடுப்பாக, ஆடுற்றவூன் சோறு நெறியறிந்த கடிவாலுவன், அடியொதுங்கிப் பிற்பெயராப், படையோர்க்கு முருகயர” (மதுரை. 28-38) எனக் களவேள்வி செய்யுந் திறத்தை இவ்வாசிரியரே பிறாண்டும் கூறுவர். இது பூதநீர் என்று அச்சுப்படியிற் காணப்படுகிறது. பூத நீரை, பூத தீர்த்தமென்று, அஃதாவது “பஞ்ச தீர்த்தங்களில் பூதங்களின் பொருட்டு உள்ளங்கையினின்று விடப்படும்நீர்” என்றும் சைவ சமய நெறி (பொது. 66) கூறுகிறது. பூதநீர் என்பதே பாடமாயின், தருப்பைப்புல் வளர்ந்த பொய்கையிடத்து நீர் என்றும், புது மட்கலத் துப்புதுநீர்என்றும், பூதமும் நீரும் எனப்பிரித்து எள்ளும் நீரு மென்றும்பொருள் கொள்ளப்படுதலின், “பல்பொருட் கேற்பின் நல்லது கோடல்” என்றதற்கேற்ப ஈண்டைக்குப் பொருந்துவதறிந்து கொள்க. ஆசிரியர் நக்கீரனார், “ஒருமுகம், செறுநர்த் தேய்த்துச் செல்சம முருக்கிக், கறுவுகொள் நெஞ்சமொடு களம்வேட் டன்றே” (முருகு. 98-100) என்பதனால், இவ்வாறு முருகன் களவேள்வி செய்து காட்டியது கொண்டு, பின்வந்த வெற்றி வேந்தர் பலரும் இக் களவேள்வி செய்தொழுகினரென வறியலாம். மறக்களவேள்வி யென்றொரு நிகழ்ச்சியினை ஆசிரியர் தொல்காப்பியர் குறித்திலர் என்பது ஈண்டு நினைவு கூரத்தக்கது. ஏர்க்களம் பாடும் இரவலர்க்கு ஏரோர் கொடைபுரிவது போலப் போர்க்களம் பாடும் இரவலர்க்குத் தேரோர் கொடைபுரிவது போர்க்கள வேள்வியென அறிக. 373. சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் இச் சோழன், கிள்ளிவளவன் என்னும் பெயரினன். இவன் குளமுற்ற மென்னுமிடத்தே இறந்ததனால், பிற்காலச் சான்றோர் இவனைக் குளமுற்றத்துத்துஞ்சிய கிள்ளிவளவன் எனக் குறிப்பா ராயினர். சில ஏடுகளில் இப் பெயர் குராப்பள்ளித் துஞ்சிய கிள்ளிவளவன் என்று காணப்படுவது ஏடெழுதினோரால் நேர்ந்த பிழை. குராப்பள்ளித் துஞ்சியவன் பெருந்திருமாவளவன் எனப் படுவன். அவன் வேறு; சோழன் நலங்கிள்ளிக்குத் தம்பியான மாவளத்தான்வேறு. ஒருகால் இந்த மாவளத்தானே குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவன் என வழங்கப்பட்டிருக்கினும் இருக்கலாம். அஃது ஈண்டைக்கு வேண்டிய ஆராய்ச்சியன்று. குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனது இறுதிக் காலத்தில் விளங்கியவர் கோவூர்கிழார். கிள்ளிவளவனுக்குப் பின்வந்தவன் சோழன் நலங்கிள்ளி. சோழநாட்டில் நலங்கிள்ளி ஒருபாலும் காரியாற்றுத் துஞ்சிய நெடுங்கிள்ளி ஒருபாலும் இருந்து ஆட்சி செய்தனர். இப்பாட்டின் இடையே சில அடிகள் சிதைந்திருக் கின்றன. இனி, குராப்பள்ளியென்பது தஞ்சை மாநாட்டிலுள்ள திருவிடைக்கழியென்னும் ஊராகும். இங்குள்ள இறைவனுக்குத் திருக்குராவுடையார் (A.R.No. 269 of 1925) என்பது பெயர். இத் திருக்குராவுடைய இறைவனை முருகனாகக்கொண்டே கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த செப்புறைச் சேந்தனார் தமது திருவிசைப் பாவைப் பாடியுள்ளார். இங்கே மிகப் பழையதொரு சிவன் கோயில் சோளேச்சுரம் என்ற பெயருடன் இருப்பதாகவும், அது குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவனது பள்ளிப் படைக் கோயிலாக இருக்கலாம் என்றும் காலஞ்சென்ற சீகாழி, சைவத்திரு, முத்துத்தாண்டவராய பிள்ளை கூறுவர். இக் கிள்ளிவளவனை, ஆசிரியர் கோவூர் கிழார், இப் பாட்டின்கண் களம்பாடும் இளம்பொருநன் ஒருவன் கூற்றில் வைத்துப் பாராட்டியுள்ளார். இவ் வளவன், முரசம் மழையென முழங்க, களிறுகள் முகில்போல் திரள, தேரும் குதிரைகளும் மழைத் துளிபோற் சிதைந்து வீழ அம்புகள் காற்றெனச் செல்ல வீரருடனே கூடிக் கொங்கரொடு பொருது அவர் புறந்தந்தோடச் செய்தா னெனவும், இவ்வாறே குடநாட்டுவஞ்சிநகர் முற்றத்திற் போருடற்றி வயக்களனாக்கினனெனவும், குறிக்கின்றார். முன்னோராகிய பொருநர் பலர் உயர்ந்த வேந்தருடைய களந்தொறுஞ் சென்று பாடிக் களிறாகிய பரிசில் பல பெற்றனரெனப் பெரியோர் கூறக்கேட்ட இப் பொருநன் தானும் அவ்வாறே வளவனை யொத்த வேந்தர் பிறரில்லாமை கண்டு கிள்ளிவளவன்பால் பகைப் புறத்துப் பெற்றவற்றைப் பரிசிலாகப் பெறவேண்டி வந்ததாக இப் பாட்டின்கட் கூறுகின்றான். உருமிசை முரச முழக்கென விசைப்பச் செருநவில் வேழங் கொண்மூ வாகத் தேர்மா வழிதுளி தலைஇ நாமுறக் கணைக்காற் றெடுத்த கண்ணகன் பாசறை 5 இழிதரு குருதியொ டேந்திய வொள்வாட் பிழிவது போலப் பிட்டையூ றுவப்ப மைந்த ராடிய மயங்குபெருந் தானைக் கொங்குபுறம் பெற்ற கொற்ற வேந்தே . . . . . . . . . . . தண்டா மாப்பொறி 10 மடக்கண் மயிலியன்று மறலி யாங்கு நெடுஞ்சுவர் நல்லில் புலம்பக் கடைகழிந்து மென்றோண் மகளிர் மன்றம் பேணார் புண்ணுவந்து. . . . . . . . . . . . . . . . . . . . . .உளையணிப் புரவி வாழ்கெனச் 15 சொன்னிழ லின்மையி னின்னிழற் சேர நுண்பூண் மார்பிற் புன்றலைச் சிறாஅர் அம்பழி பொழுதிற் றமர்முகங் காணா . . . . . . . . . . .வாளிற் றாக்கான் வேந்துபுறங் கொடுத்த வீய்ந்துகு பறந்தலை 20 மாட மயங்கெரி மண்டிக் கோடிறு புருமெறி மலையி னிருநிலஞ் சேரச் சென்றோன் மன்ற கொலைவற் சென்றெறி வெம்புண் ணறிநர் கண்டுகண் ணலைப்ப வஞ்சி முற்றம் வயக்கள னாக 25 அஞ்சா மறவ ராட்போர் பழித்துக் கொண்டனை பெரும குடபுலத் ததரி பொலிக வத்தைநின் பணைதயங்கு வியன்களம் விளங்குதிணை வேந்தர் களந்தொறுஞ் சென்று புகர்முக முகவை பொலிகென் றேத்திக் 30 கொண்டன ரென்ப பெரியோர் யானும் அங்கண் மாக்கிணை யதிர வொற்ற முற்றிலே னாயினுங் காதலி னேத்தி நின்னோ ரன்னோர் பிறரிவ ணின்மையின் மன்னெயின் முகவைக்கு வந்திசிற் பெரும 35 பகைவர் புகழ்ந்த வாண்மை நகைவர்க்குத் தாவின் றுதவும் பண்பிற் பேயொடு கணநரி திரிதரு மாங்க ணிணனருந்து செஞ்செவி யெருவை குழீஇ அஞ்சுவரு கிடக்கைய களங்கிழ வோயே. திணை : வாகை. துறை : மறக்களவழி; ஏர்க்கள உருவகமுமாம். சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன் கருவூரெறிந் தானைக் கோவூர் கிழார் பாடியது. உரை : உருமிசை முரசம் முழக்கென இசைப்ப - இடியினது ஓசையைத் தன்பாலுடைய முரசு மழையிடத்து முழக்கம் போல முழங்க; செருநவில் வேழம் கொண்மூவாக - போரிற் பயின்ற யானைகள் முகில்களாகவும்; தேர்மா அழிதுளி தலைஇ - தேர்களும் குதிரைகளும் சிதைந்து பரந்து மழைத் துளியாக வீழ்ந்து கெட; நாம் உறக்கணைக்காற் றெடுத்த கண்ணகன் பாசறை - அச்சமுண்டாக அம்புகளாகிய காற்று வீசுகின்ற இடமகன்ற பாசறையும்; இழிதரு குருதியொடு ஏந்திய ஒள்வாள் - சொரிகின்ற குருதியோடே கையிலேந்திய வாட்படையால்; பிழிவதுபோல - உடலைப் பிழிந்தெடுத்தற்குப் பிளந்தாற் போல்; பிட்டை ஊறுஉவப்ப - பிளத்தலா லுண்டாகிய புண்ணுற்று மகிழ்ச்சி யெய்த; மைந்தர் ஆடிய மயங்கு பெருந்தானை - வலியுடைய வீரர் போர்செய்தற்காக விரும்பிச் சேர்ந்திருக்கின்ற பெரிய தானையால்;கொங்கு புறம் பெற்ற கொற்றவேந்தே - கொங்கு நாட்டவரைப் புறந்தந் தோடச்செய்த வெற்றியையுடைய வேந்தனே; .............தண்டா மாப்பொறி - குறையாத பெரிய பொறிகளையும்; மடக் கண் மயில் - மடவிய கண்களையுமுடைய மயிற்பெடை; இயன்று மறலியாங்கு - மாறுகொண்டு முன்னும் பின்னும் பன்முறை நடந்ததுபோல; நெடுஞ் சுவர் நல்லில் புலம்ப -நெடிய சுவர் களையுடைய நல்ல தம் இல்லங்கள் தனிமைப்பட; கடை கழிந்து - அவற்றினின்றும் அகன்று சென்று; மென்றோள் மகளிர்- மெல்லிய தோளையுடைய மகளிர்; மன்றம் பேணார் - மன்றத்தை நாடிச் செல்லாது; புண் உவந்து - தம் கணவன் போரிற் பெரும் விழுப்புண்ணைக் காணவிரும்பி; ................ உளையணிப் புரவி வாழ்கென - தலையாட்டமாகிய அணி யணிந்த குதிரை வாழ்வதாக என்று வாழ்த்தி; சொல் நிழலின்மையின்- புகழமைந்த புகலிடம் பிறி தில்லாமையால்; நின்னிழல் சேர - நின்னுடைய சிறந்த தாணிழலாகிய புகலைச் சேர்வாராக; நுண்பூண் மார்பின் புன்றலைச் சிறாஅர் - நுண்ணிய பூணணிந்த மார்பினையும் புல்லிய தலை யினையுமுடைய சிறுவர்கள்; அம்பு அழிபொழுதில் - தாம் தொடுத்து விளையாடிய அம்பு இல்லையாகும்போது; தமர் முகம் காணார் - தமக்கு அவற்றைச் செய்து தரும் தந்தை தன்னையரைக் காணாராய்; .................................வாளில் தாக்கான் - வாளால் எறியானாய்; வேந்து புறங் கொடுத்த வீய்ந்துகு பறந் தலை - வேந்தர்கள் புறந்தந் தோடியதனால் அழிந்து கெட்ட போர்களத்தில்; மாடமயங்கெரி மண்டி - பெருமாடங்களைப் பற்றி யெரிக்கும் தீப்போல நெருங்கி; உரும் எறிமலையின் - இடியேற்றால் தாக்குண்டு வீழும் மலைபோல; கோடிறுபு நிலஞ் சேர - கோடொடிந்து நிலத்தே வீழுமாறு கொன்று; சென்றோன் மன்ற - வெற்றியொடு சென்றான் தெளிவாக; கொலைவன் - கொலையைச் செய்யும் தலைவன்; சென்றெறி வெம்புண் அறிநர் கண்டு கண் அலைப்ப - அவன்மேற் சென்று அவனை யெறியுங்கால் உண்டாகும் வெவ்விய புண்ணைக் கண்டு பஞ்சியிட்டாற்றுவோரும் தம் கண்களால் அப் புண்ணைக் காண ஆற்றாரய்க் கண்கலுழ்ந்து வருந்த; வஞ்சிமுற்றம் வயக் களனாக - வஞ்சிமாநகரின் முற்றம் வெற்றி பொருந்திய போர்க்களமாய் மாற; அஞ்சா மறவர் ஆட்போர்பு அழித்து - அஞ்சாத இயலபினரான வீரர்களின் பிணப்போரை யழித்து; குடபுலத்து அதரி கொண்டனை - குடநாட்டின்கண் கடா விட்டாய்; நின்பணை தயங்கு வியன்களம் பொலிக - நின் னுடைய முரசு முழங்கும் அகன்ற போர்க்களம் விளங்குக; விளங்குதிணை வேந்தர் களந்தொறுஞ் சென்று - விளக்க முடைய உயர்குல வேந்தருடைய போர்க்களந் தோறுஞ் சென்று; பொலிய என்று ஏத்தி - விளங்குக என்று பாராட்டிப் பரவி; புகர்முக முகவை கொண்டனர் என்ப பெரியோர் - புள்ளி பொருந்திய முகத்தையுடைய யானையாகிய பரிசிலைப் பெற்றனர் என்று சொல்லுவர் பெரியோர்; யானும்-; அங்கண் மாக்கிணை அதிர வொற்றி - அழகிய கண்ணையுடைய தடாரிப் பறை யதிரும்படியறைந்து; முற்றிலெனாயினும் இசையறிவு நிரம்பப் பெற்றிலேனாயினும்; காதலின் ஏத்தி - அன்புடன் பரவி; நின்னோரன்னோர் இவண் பிறர் இன்மையின் - நின்னை யொப்பவர் இவ்வுலகிற் பிறர் இல்லாமையால்; பெரும - பெருமானே; மன்னெயில் முகவைக்கு வந்திசின் - பகை மன்னருடைய எயிலிடத்துக் கொண்ட பொருள்களைப் பரிசிலாகப் பெறுதற்பொருட்டு வந்தேன்; பகைவர் புகழ்ந்த ஆண்மை - பகைவரும் புகழ்ந்து பாராட்டும் ஆண்மையும்; நகைவர்க்குத் தாவின்று உதவும் பண்பின் - நண்பர்கட்குக் குறைவில்லாதவாறு உதவும் நற்பண்பும் உடையனாய்; பேயொடு கணநரி திரிதரும் ஆங்கண் - பேய்க்கூட்டமும் நரிக்கூட்டமும் ஊனுண்டு திரியும் அவ்விடத்தே; நிணன் அருந்து செஞ்செவி எருவை குழீஇ - ஊன் தின்று சிவந்த செவியையுடைய கழுகுகள் கூடி; அஞ்சுவருகிடக்கைய களம் கிழவோய் - கண்டார்க்கு அச்சம் பயக்கும் இடமாகிய போர்க்களத்தை உரிமையாகக் கொண்டவனே; எ-று. கொங்கு புறம்பெற்ற வேந்தே, வஞ்சி முற்றம் வயக்களனாக, குடபுலத்து அதரி கொண்டனை; பெரும, கொண்டனரென்ப பெரியோர்; யானும் முற்றிலெனாயினும் ஒற்றி ஏத்தி, இன்மையின் முகவைக்கு வந்திசின், பெரும, ஆண்மையும் பண்பும் கொண்டு களம் கிழமை பெற்றோய் எனக் கூட்டி வினைமுடிவு செய்க. மழை உருவகம் செய்யப் படுதலின், முழக்கெனப் பொதுப்படக் கூறினார். தேர்மா சிதைந்து துகள்பட்டுச் சிதறிப் பரந்து விழுமாறு தோன்ற, “தேர்மா வழிதுளி தலைஇ ” என்றார். தேர்மா வழி துளி தலைஇ என்றதற்குத் தேரிற்பூட்டிய குதிரைகளின் வாயில் வழியும் நுரையினது துளி, பிசிராகத் துளிக்கும் மழைக்கு உவமமாயிற் றென்றுமாம். பிளவுண்டது பிட்டை; பிளக்கப் பட்டுண்டாகிய புண்பிட்டையூறெனப்பட்டது. ஆடுதல், போராடுதல். மகளிர் தம் கணவன் போர்க்களத்தினின்றும் திரும்பி வாராமையின் தாம் மன்றம்சென்று எரிவளர்த்து உடனுயிர் போக்க நினையாது போர்க்களம் சென்று அவர்பெற்ற புண்ணைக் காண்டற்குப் புறம் போந்தனரென்பார், நல்லில் புலம்பக் கடைகழிந்து மன்றம் பேணார் புண்ணு வந்து....” என்றார். புரவி வாழ்க எனச்சொல்லி வாழ்த்திப் பரவுதற்கு உரிய தம் வேந்தனின்மையின் நின்னை வேந்தனாகக் கொண்டு நின் தாணிழலை யடைந்தனரென்பான், “சொன்னிழலின்மையின் நின்னிழல்சேர” என்றான். வேட்டுவச் சிறார்கள் தந்தையும் தன்னையரும் செய்துதரும் வில்லும் அம்புங் கொண்டு விற் பயிற்சி செய்தலும் செய்யுங்கால் கையம்பு தொலைந்த வழிவேறே அம்பு செய்து தருமாறு தந்தை தன்னையரை நோக்குதலும் செய் வராதலின் “அம்பழி பொழுதில் தமர்முகம்காணா” என்றார். ஆளைக்கொல்லற்கு வேண்டும் வாளைக்கொண்டு யானையை யெறிதல் கூடாமையின் “வாளிற்றாக்கா” னென்றார். தன் தலைவனான வேந்தன் புறங்கொடுத் தோடியதனால் சினந்த ணியாது செல்லும் களிற்றுக்குத் தீயையுவமித்து, “மாடமயங் கெரி” யென்றார், மாடங்களில் மண்டி யெரியுந்தீ தன்னைப் பிறர் அணுகாதவாறு வெம்மை செய்து திரிந்து எதிர்ப்பட்ட எல்லா வற்றையும் எரித்தழித்தல்போலக் களிறும் பகைவர் படைத்திரள் நடுவுட்புகுந்து தீதுசெய்துதிரிந்தமை பெற்றாம். எரியின் என ஒப்புப் பொருட்டாய் இன்னுருபு தொக்கது. களிற்றின் வெஞ்சினங் கண்டு பொறாத பகைவரது தானைத் தலைவனொருவன் அதனை வேலெறிந்து வீழ்த்திவிட்டு மேல்வந்த சோழன் தானையை எதிர்ந்து சென்று நேர்ந்தா ரனைவரை யும் உயிர் குடித்துத் திரிந்தா னென்பான், “இரு நிலஞ்சேரச் சென்றோன் மன்ற கொலைவன்” என்றான். அவ்வாறு வெற்றியொடு வீறுற்று வந்த தலைவனை முன்சென்று தாக்கி வெம்புண்ணுறுவித்தனை யென்பார். “வெம்புண்ணறிநர் கண்டு கண்ணலைப்ப” என்றார். உயிரைப் போக்காது வெம்புண் தந்து வீழ்த்தியது அவன்தன் வலியின் சிறுமையும் சோழன் வலியின் பெருமையும் தெரிந்துணர்ந் தொடுங்குவனென்றற்கு. குறுநில மன்னரினும் முடிமன்னர் உயர்ந்தமை விளங்க, “விளங்கு திணைவேந்த” ரென்றார். எம்மிற் பெரியோர் செய்ததனையே யானும் செய்தேன் என்பான். “மன்னெயின் முகவைக்கு வந்திசின்” என்றும், பெரியோர் போல அத்துணைப் பெருமை யுடையேனல்லே னென்பான், “முற்றிலெனாயினும்” என்றும் கூறினான். பகைவர் என்புழிச் சிறுப்பும்மை தொக்கது. பகைவர் புகழ்ந்த ஆண்மை, “நண்ணாரு முட்குமென் பீடு” (குறள். 1088) என்றாற் போல வந்தது. உடுக்கை இழந்தார்க்குக் கை சென்றுதவுதல் போல நண்பரது இடுக்கண் களைவது பண்பாதல் பற்றி “நகைவர்க்குத் தாமின்றுதவும் பண்பின்” என்றார். போர் நிகழுமிடங்களிலெல்லாம் வென்று களங் கொள்வதைத் தவறாதே செய்து வந்தமை தோன்ற, “களங்கிழவோய்” என்றார். ஆர்ந்தென்பது அருந்தென வந்தது. விளக்கம் : குளமுற்றத்துத்துஞ்சிய கிள்ளிவளவன் கொங்குபுறம் பெற்ற செய்தியும் வஞ்சிமுற்றம் வயக்களனாக வென்ற செய்தியும் இப் பாட்டின்கட் சிறந்தெடுத்துக் கூறப்படுகின்றன. கொங்கு நாட்டிற்கு மேற்கின்கண்ணதாய் மேலைக்கடற் கரையை யடுத்திருக்கும் வஞ்சிநகர் முற்றத்தே போருடற்றி மேம் படுதலின், “குடபுலத்ததரி கொண்டனை” யென்றார். குடபுலமென்றும் வஞ்சி யென்றும் கூறியதனால், ஈண்டுக் கூறப்படும் வஞ்சி, கருவூரான வஞ்சிநகர் அன்றென்பதாம். குடபுலத்து வஞ்சிநகர், இடைக்காலத்தே அஞ்சைக் களமெனமருவி (S.II. Vol. V. No. 789) இப்போது திருவஞ்சிக் களமென வழங்குகின்றது. சேரமான் கருவூரேறிய ஒள்வாட் கோப் பெருஞ்சேரல் இரும்பொறை காலத்தே காவிரிக்கரையிலுள்ள கருவூர்க்கு வஞ்சியென்ற பெயரும், அமராவதி யாற்றுக்கு ஆன்பொருநையென்ற பெயரும், அதற்கு வடகிழக்கில் காவிரியின் வடகரையிலுள்ள மூதூர்க்கு முசிறி யென்ற பெயரும் உண்டாயின. அதனை இவ்வுரைகாரர் எழுதிய “பண்டைநாளைச் சேரமன்னர்கள்” என்ற நூலிற் காண்க. கருவூர்க்கு உண்டான வஞ்சி யென்னும் பெயர் இப்போது வழக்கு வீழ்ந்தொழிந்தது . இடைக்காலத்தும் கருவூர் வஞ்சிநகரமென வழங்கினமை “வீரசோழ மண்டலத்து வெங்கால நாட்டுக் கருவூரான வஞ்சிமாநகர்” (A.R. No. 335 of 1927 - 28) என்பத னாலறியப்படும். தாராபுரமும் கொங்குவஞ்சி (A.R.No. 146 of 1920) எனப்படுவது கருவூரேறிய ஒள்வாட்கோப்பெருஞ் சேரலுக்கு முன்னொரு காலத்தில் உண்டாகியது. இவ்வளவனால் எறியப்பட்ட கருவூர் மேலைக் கடற்கரையில் வஞ்சிநகர்க் கண்மையிலுள்ள கருவூர், முரசம் இடியென முழங்க, களிறுகள் மேகக்கூட்டம்போல் அடர்ந்து செல்ல, குதிரைகள் மழைத் தாரைபோலப் பாய்ந்தோட, வில்வீரர் எறிந்த அம்புகள் காற்றுப் போற் சென்று மோதக் கொங்கு நாட்டவர் எதிரூன்றி நிற்க ஆற்றாது புறந்தந்தோடினர். “கொங்கு புறம் பெற்ற கொற்ற வேந்தே” என்பதற்கும், “வேந்துபு றங்கொடுத்த வீய்ந்துகுபறந்தலை” என்பதற்குஇடையிற் கிடந்த அடிகள் பல சிதைந் தொழிந்தமையின், அவற்றாற் குறிக்கப்படும் பொருள் தெளிய விளங்கவில்லை. அச்சமுற்ற மயில் முன்னும் பின்னும் மேலும் கீழுமாக மிக விரைந்து நடந்தும் பறந்தும் அலமருவது இயல்பு. அது போலப் போர்க்குச் சென்ற கணவன் வாராமையால் மனையோள் மனவமைதி பெறாது இல்லின்கண் அலமருகின்றாள் என்பது உவமத்தாற் பெறப்படுகிறது. சுடுகாட்டில் பிணங்களைச் சுடுதற்கமைந்த இடம் மன்றம் எனப்படுவதும், அங்கே எரிவளர்த்துக் கணவனை யிழந்த மகளிர் அதன்கண் வீழ்ந்து உயிர் கொடுப்பதும் வழக்காயினும், இம் மகளிர் அவற்றை உடனே செய்யக் கருதாது போர்க்களம் சென்று கணவன் பெற்ற புண்ணின் திறங்காண்டற்குக் களத்திற்கு விரைந்தேகு கின்றன ரென்பது தோன்ற, “மயில் இயன்று மறலியாங்கு நல்லில் புலம்பக் கடைகழிந்து மன்றம் பேணார் புண்ணுவந்து படுகளம் நோக்கிச் சென்றனர்,” என்று கூறுகின்றார். இனி மன்றம் என்பதற்குப் பலரும் கூடுமிடம் எனக்கொண்டு, அங்கே சென்று அவர் கூறுவன கேட்டுத் தெரிந்துகொள்ள விரும்பாது களத்துக்குச் சென்றனர் எனக் கொள்ளினும் அமையும். இதனால் போரிற்பட்ட கணவன் புறப்புண்பட்டு வீழ்ந்தானெனப் பழிப்புரை வந்தது போலும் எனக் கருதலாம்; அடிகள் சிதைந்தமையின் உண்மை விளங்கிற்றன்று. புண்திறம் காணச் சென்ற மனையோள் கணவன் போர்செய்த திறம் வாளிற்றாக்கான் வேலிற்றாக்கிக் களிறு கோடிறுபு நிலஞ்சேரக் கொன்று வீழ்த்தி வெற்றியோடு சென்றோன் மன்ற கொலைவன் உற்ற வெம்புண் அறிநர் கண்டு கண்ணலைத்து வருந்தினரெனக் கூறப்படுகிறது போலும். இருநிலஞ்சேரக் கொன்றோன் மன்ற என்றும் பாடம். 374. ஆய் அண்டிரன் வேள் ஆய் அண்டிரன் தன்னுடைய பொதியின் மலைக் கடியிலுள்ள ஆய்க்குடியிலிருக்கையில் உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் அவனை யடைந்து இந்தப்பூவைநிலைப்பாட்டைப் பாடினார். இதன்கண் அண்டிரனது வண்மையை வியந்து ஞாயிற்றை நோக்கி, “ஞாயிறே, விசும்பின்கண் வறிதே விளங்குகின்ற நீ அண்டிரன்போலக் கை வண்மை யுடையையோ, கூறுக” என்று கேட்கின்றார். மேலும், அண்டிரனுடைய கைவண்மையை விளக்கலுற்று, விடியற்காலத்தே கிணைப் பறையைக் கொட்டி அண்டிரனது குறிஞ்சிமரங்கள் நிறைந்த மலைப்பக்கத்தைப் பாடுவராயின், உறக்கத்திற் றீர்ந்த மான்கலைகள் அவர் தம் இசையைச் செவி சாய்த்துக் கேட்கும்; மலைவாணர், இப் பொருநர்கட்கு நல்ல விருந்தைச் செய்து, புலித்தோலைப்பரப்பி அதன் மேல் மான்கறியும் சந்தனக்கட்டையும் யானைக்கோடு மாகிய மூன்றையும் குவையாகப் பெய்து நல்குவர் என அவனது நாட்டவர் விருந்தோம்புங் கூறுபாட்டில் வைத்துக் கூறியுள்ளார். கான மேய்ந்து வியன்புலத் தல்கும் புல்வா யிரலை நெற்றி யன்ன பொலமிலங்கு சென்னிய பாறுமயி ரவியத் தண்பனி யுறைக்கும் புலரா ஞாங்கர் 5 மன்றப் பலவின் மாலரைப் பொருந்தியென் தெண்கண் மாக்கிணை தெளிர்ப்ப வொற்றி இருங்கலை யோர்ப்ப விசைஇக் காண்வரக் கருங்கோற் குறிஞ்சி யடுக்கம் பாடப் புலிப்பற் றாலிப் புன்றலைச் சிறாஅர் 10 மான்கண் மகளிர்க் கான்றோ ரகன்றுறைச் சிலைப்பாற் பட்ட முளவுமான் கொழுங்குறை விடர் முகை யடுக்கத்துச் சினை முதிர் சாந்தம் புகர்முக வேழத்து மருப்போடு மூன்றும் இருங்கேழ் வயப்புலி வரியதட் குவைஇ 15 விருந்திறை நல்கு நாட னெங்கோன் கழறொடி யாஅ யண்டிரன் போல வண்மையு முடையையோ ஞாயிறு கொன்விளங் குதியால் விசும்பி னானே. திணை : பாடாண்டிணை; துறை : பூவைநிலை, ஆய் அண்டிரனை உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் பாடியது. உரை : கானம் மேய்ந்து வியன்புலத்தல்கும் - காட்டின் கண் மேய்ந்துவிட்டு அகன்ற கொல்லைக்கண் தங்கும்; புல்வாய் இரலை நெற்றியன்ன - புல்வாயென்னும் மானினது ஆணின் நெற்றிமயிர் போல; பொலம் இலங்கு சென்னிய - பொற் றாமரை விளங்கும் சென்னியிலுள்ள; பாறுமயிர் அவிய - சிதறிக்கிடக்கும் தலைமயிர் அடங்கிப் படியுமாறு; தண்பனி யுறைக்கும் புலரா ஞாங்கர் - தண்ணிய பனி துளிக்கும் நன்கு புலராத விடியற் காலத்தில்; மன்றப் பலவின் மாலரைப் பொருந்தி - மன்றத்தில் நிற்கும் பலாமரத்தின் பெரிய அடியில் இருந்து; என் தெண்கண் மாக்கிணை தெளிர்ப்ப ஒற்றி - என்னுடைய தெளிந்த கண்ணையுடைய பெரிய கிணைப்பறை நன்கு ஒலிக்குமாறு கொட்டி; இருங்கலை ஓர்ப்ப இசைஇ - பெரிய கலை மானினம் செவிசாய்த்துக் கேட்குமாறு இசைத்து; காண்வர - அழகுண்டாக; கருங்கோற் குறிஞ்சியடுக்கம் பாட - பெரிய தண்டினையுடைய குறிஞ்சிமரஞ் செறிந்த மலைப் பக்கத்தைப் பாடவே; புலிப்பற்றாலிப் புன்றலைச் சிறா அர் - புலிப்பல் கோத்த கழுத்தணி யணிந்த புல்லிய தலையையுடைய குறச் சிறுவர்களைப் பயந்து; மான்கண் மகளிர்க்கு ஆன்றோர் - மான் போலும் கண்ணையுடைய மகளிர்க்கமைந்த கணவன்மார்; அகன்றுறைச் சிலைப்பாற்பட்ட முளவுமான் கொழுங்குறை - அகன்ற நீர்த் துறைக்கண் தம் வில்லால் வீழ்த்தப்பட்ட முள்ளம் பன்றியின் கொழுவிய வூனும்; விடர்முகையடுக்கத்துச் சினை முதிர் சாந்தம்- மலைப்பிளவுகளையும் குகைளையு முடைய மலைப்பக்கத்தே கிளை தழைத்து நிற்கும் சந்தனக் கட்டையும்; புகர்முக வேழத்து மருப்பொடும் மூன்றும் - புள்ளி பொருந்திய முகத்தையுடைய யானைக்கொம்புமாகிய மூன்றையும் இருங்கேழ் வயப்புலி வரியதள் குவைஇ - மிக்க நிறம் பொருந்திய வலிய புலியினுடைய வரியமைந்த தோலின்மேற் குவித்து; விருந்து இறை நல்கும் நாடன் -விருந்தினர்க்குக் கொடுக்கும் நாட்டையுடையனாகிய; எங்கோன் -எங்கள் தலைவனான; கழல் தொடி ஆஅய் அண்டிரன் போல - கழலவிடப்பட்ட தொடியணிந்த ஆஅய் அண்டிரனைப் போல; ஞாயிறு - ஞாயிறே; வண்மையும் உடையையோ - வள்ளன்மையு முடையையோ; விசும்பின் கொன் விளங்குதி - வானத்தின்கண் வறிதே ஒளிதிகழ்கின்றா யாகலின்; எ-று. செல்வர் தந்த பொற்றாமரை கிடந்து விளங்குந்தலையைப் “பொல மிலங்கு சென்னி” யென்றார். நன்கு புலராப் போதிற் பெய்யும் பனி பாறிய தலைமயிரைப் படிவிக்குஞ் செயலை; “பனி பழுனிய பல்யாமத்துப் பாறு தலைமயிர் நனைய (புறம். 377) என்று பிறரும் கூறுதல் காண்க. உறக்கத்திற் சிதறிப் பரந்த தலைமயிர், ஈண்டு பாறுமயிர் எனப்பட்டது. கருங்கோல், பருத்தகொம்பு. சிறாரை யுடைய” மகளிரும் அவர்க்கமைந்த கணவன்மாரும் விருந்திறை நல்கும் நாடன் என இயைக்க. சிறுவர்க்குப் புலிப்பற் கோத்த தாலி யணிதலை, “புலிப் பற்றாலிப்புதல்வர்” (குறுந். 16) என்பதனாலு மறியலாம். அகன்றுறை. அகன்ற நீர்த்துறை. நீர்த்துறைக்கண் ணிருந்தே முள்ளம் பன்றியை வேட்டஞ் செய்தல் வேட்டுவர் மரபு. முளவுமான், முள்ளையுடைய மாவாகிய பன்றி, ஆய் அண்டிரன் வள்ளன்மையால் இசைகொண்டு விளங்குதல்போல விளக்கமுறாது வறிதே திகழ்கின்றா யென்பார், “கொன் விளங்குதியால்” என்றார். பனிவுறைக்கும் ஞாங்கர், பொருந்தி, தெளிர்ப்ப ஒற்றி, பாட, ஆன்றோர், கொழுங்குறையும், சாந்தமும் மருப்பு மென்ற மூன்றும், குவைஇ, விருந்திறை நல்கும் நாடன், எங்கோன் அண்டிரன்போல, விளங்குதி யாகலின், வண்மையு முடையையோ கூறுக எனக் கூட்டி வினைமுடிவு செய்க. விருந்து இறைநல்கும் என்பதற்குப் புதிய புதியவாக வழங்கும் என வுரைப் பினுமமையும். விளக்கம் : பூவை நிலையாவது. “கறவை காவல னிறனொடு பொரீஇ, புரவலர் பூவைப்பூப் புகழ்ந்தன்று” (பு.வெ.மா. 9:4) எனவரும். ஆசிரியர் தொல்காப்பியரும், இதனை, “மாயோன் மேய மன்பெருஞ் சிறப்பின், தாவா விழுப்புகழ்ப் பூவைநிலை” (தொல். புறத். 5) என்று கூறுவர். பூவைநிலை யென்பதற்குப் புறப்பொருள் வெண்பாமாலைகாரர் கூறுவது பொருந்தாதென்பது நச்சினார்க்கினியர் கருத்து. இப் பொருந்தாமையை இளம்பூரணர்க்கு முன்னிருந்த உரை காரரும் கண்டுள்ளனர்; அவரெல்லாம், “மாயோன் முதலாகிய தேவர்களோடு உவமித்தலே பூவைநிலை யென்ப” என்று கூறி, “அங்ஙனமாயின், ஒன்றின முடித்தல் தன்னின முடித்தல் என்பது பற்றி வேறு கடவுளரை நோக்கி உவமித்து வருபவையெல்லாம் பூவைநிலையாகக் கொள்க” என்பர் இளம்பூரணர். அதனால் ஞாயிற்றோடு உவமித்து வரும் இப்பாட்டு பூவைநிலையெனப்படுவதாயிற்று. ஆய் அண்டிரனைப் போல ஒளியுடையை யாயினும், அவனைப்போல வண்மையுடையையோ என்றது, ஞாயிற்றோடு உறழ்ந்து நின்றது; உறழ்வும் பொரூஉ வகையே யெனக்கொள்க. இப் பாட்டு, “கடந்தடு தானைச் சேரலாதனை யாங்கன மொத்தியோ வீங்குசெலன் மண்டிலம்... அகலிரு விசும்பி னானும் பகல் விளங்குதியாற் பல்கதிர் விரித்தே” (புறம். 8) என்பத னோடு ஒப்புநோக்கத்தக்கது. அப் பாட்டையும் “பூவைநிலையுமாம்” எனக் குறித்திருப்பது காண்க. இடைக்காலக் கல்வெட்டுகள் சில முடமோசி நாரணக் கிரம வித்தன் என்று கூறுவதை நோக்கின் முடமோசி என்பது குடிப்பெயர்போலும் என நினைப்பிக்கின்றது. 375. ஆய் அண்டிரன் ஆய் அண்டிரனை ஒருகால் ஏணிச்சேரி முடமோசியார் இனிய பாட்டொன்றைப் பாடி மகிழ்வித்தாராக, அவன் அவர்க்குப் பெரும் பொருளைப் பரிசில் நல்கினான். அதுகொண்டு அவர் அவனை வாழ்ந்துவாராய், இப் பாட்டால், “ஆயே, பெருமழைக் கூட்டம் கடற்குச் சென்றாற் போல யான் என் சுற்றத்தாருடனே நின்பால் வந்தேன்; நீ புலவர்கட்குப் புகலிடமாய் இந்நிலவுலகில் நெடிது வாழ்க; நீ இல்லாத வழி இவ்வுலகம் வறுமையுறும்; அந்நாளில் இவ்வுலகிற் புலவர் இல்லாது ஒழிவாராக; ஒருகால் உளராயின் அப் பீடின்றிப் பெருகிய பாடிலாச் செல்வரை என்றும் எம்மினத்தவர் பாடாதொழிவாராக” என்று எடுத்தோதியுள்ளார். அலங்குகதிர் சுமந்த கலங்கற் சூழி நிலைதளர்வு தொலைந்த வொல்குநிலைப் பல்காற் பொதியி லொருசிறைப்பள்ளி யாக முழாஅரைப் போந்தை யரவாய் மாமடல் 5 நாரும் போழுங் கிணையோடு சுருக்கி ஏரின் வாழ்நர் குடிமுறை புகாஅ ஊழிரந் துண்ணு முயவல் வாழ்க்கைப் புரவெதிர்ந்து கொள்ளுஞ் சான்றோர் யாரெனப் பிரசந் தூங்கு மறாஅ யாணர் 10 வரையணி படப்பை நன்னாட்டுப் பொருந பொய்யா வீகைக் கழறொடி யாஅய் யாவரு மின்மையிற் கிணைப்பத் தவாது பெருமழை கடற்பரந் தாஅங் கியானும் ஒருநின் னுள்ளி வந்தனெ னதனாற் 15 புலவர் புக்கி லாகி நிலவரை நிலீஇய ரத்தை நீயே யொன்றே நின்னின்று வறுவி தாகிய வுலகத்து நிலவன் மாரோ புலவர் “துன்னிப் பெரிய வோதினுஞ் சிறிய வுணராப் 20 பீடின்று பெருகிய திருவிற் பாடின் மன்னரைப் பாடன்மா ரெமரே. திணை: பாடாண்டிணை. துறை: வாழ்த்தியல். அவனை யவர் பாடியது. உரை : அலங்குகதிர் சுமந்த கலங்கற் சூழி - அசைகின்ற கதிர்கள் நிரம்பிக் கலங்கிக் கிடக்கும் நீர்நிலைபோல; நிலைதளர்வு தொலைந்த ஓங்கு நிலைப் பல்காற் பொதியில் ஒருசிறை பள்ளியாக - நிலை தளர்ந்து பாழ்பட்ட வெடித்துச் சீரழிந்த தரையையும் பல கால்களையுமுடைய மன்றத்தின் ஒரு பக்கத்தைப் படுக்கையிடமாக் கொண்டு; முழாஅரைப் போந்தை யரவாய் மாமடல் நாரும் போழும் - முழவின் வாய்போன்ற அடியினை யுடைய பனையின் அரம்போலும் கருக்குப் பொருந்திய பெரிய மடலினின்று மெடுத்த நாரையும் பனங்குருத்தையும்; கிணை யொடு சுருக்கி - கிணையொடு சேர்த்துக் கட்டி; ஏரின் வாழ்நர் குடி - ஏரால் உழுதுண்டு வாழ்வோர் மனையின்கட் சென்று; ஊழ்முறை புகாஅ இரந்துண்ணும் உயவல் வாழ்க்கை - முறையே அவர் நல்கும் உணவை இரந்துண்ணும் வருத்தம் பொருந்திய வாழ்வையுடைய எம்மை; புரவு எதிர்ந்து கொள்ளும் சான்றோர் யார் என = பாதுகாத்தலை மேற்கொள்ளும் சான்றோர் யாவருளர் என்று நினைந்து; பிரசம் தூங்கும் அறாஅயாணர் - தேன் கூடுகள் தொங்குகின்ற நீங்காத புது வருவாயையுடைய; வரையணிபடப்பை - மலைசார்ந்த தோட்டங் களை யுடைய; நன்னாட்டுப் பொருந - நல்ல நாட்டையுடைய பொருநனே; பொய்யா ஈகைக் கழல்தொடி ஆஅய் - பொய்யாத வள்ளன்மையும் கழலவிடப் பட்ட தொடியுமுடைய ஆயே; கிணைப்ப யாவரும் இன்மையின் - கிணையைக்கொட்டிப் பரவுதற்கேற்ப எம்மைப் புரப்போர் பிறர் இல்லாமையால்; தவாது- நின்றாங்கு நின்று கெடாமல், பெரு மழை கடல் பரந்தாங்கு - பெரிய மழை முகில்கள் நீர் கோடற் பொருட்டுக் கடற்குச் சென்றாற்போல; யானும் ஒருநின் உள்ளி வந்தனென் - யானும் ஒப்பற்ற நின்னை நினைந்து வருவேனாயினேன்; அதனால் புலவர் புக்கிலாகி - புலவர்கட்குப் புகலிடமாய்; நீ நிலவரை நிலிஇய - நீ இவ்வுலகில் நிலைபெற்று வாழ்வாயாக ஒன்று - ஒன்றாக; நின்னின்று வறுவிதாகிய வுலகத்து - நீ இல்லாமையால் வறிதாகும் இவ்வுலகின்கண்; புலவர் நிலவன் மார் - புரப்பாரை நோக்கி வாழும் புலவர் இலராயொழி வாராக; துன்னிப் பெரிய வோதினும் சிறிய உணரா - நெருங்கிச் சென்று பல சொற்களால் எடுத்துரைத்தாலும் சிறிதளவுதானும் உணரும் உணர்ச்சியில்லாத; பீடின்று பெருகிய திருவின் பாடில் மன்னரை - சிறப்பின்றி மிக்குள்ள செல்வத்தையுடைய பெருமையில்லாத வேந்தர்களை; எமர் பாடன்மார் - எம் மினத்தவர் பாடாதொழிவாராக; எ-று. காற்றால் அலைப்புண்டு புலர்ந்து நீங்கிப் பறந்துவரும் கதிர்கள் வீழ்ந்துகலங்கிய சேற்றுநீரிற் படிந்து கிடக்கும் நீர்நிலை, “அலங்குகதிர் சுமந்த கலங்கற் சூழி” யெனப்பட்டது. ஒப்புப் பொருட்டாய இன்னுருபு விரித்துக் கொள்க. வட்டமாயிருத்தல் பற்றி நீர்நிலையைச் சூழியென்றார். இச் சூழி போலவே பொதியிலிடமும் தரைவெடித்துக் குப்பையும் கூளமும் நிறைந்து குழிந்து பொலிவின்றிக் காணப்படுதலின் சூழியை யுவமம் கூறினார். தரை வெடித்துக் குழிதலால் பொதியிலின் கட்டும் கோப்பும் தளர்ந்தமையின் “நிலைதளர்வு தொலைந்த ”என்றும் தளர்ந்த விடந்தோறும் பல கால்களை நிறுத்தி வீழாமற் காக்கப் படுமாறு தோன்ற “ஒல்குநிலைப்பல்காற் பொதியில்” என்றும், உழவர் மனையில் இரந்து நின்று அவர் நல்கும் உணவையிரந்துண்பது வறுமையைப் போக்காது துயர் மிகுத்தலின் “ஏரின் வாழ்நர் குடி முறைபகாஅ வூழிரந் துண்ணும் உயவல் வாழ்க்கை” யென்றும், போருழந்து மேம்பட்ட சான்றோரையே நாடிச் செல்லுமாறு தோன்றப் “புரவெதிர்ந்து கொள்ளும் சான்றோர் யாரென வந்திசின்” என்றும் கூறினார். புகா உணவு. கிணைத்தல், கிணைப் பறையைக் கொட்டிப் பாடுதல். கிணையென்னும் பெயரடியாகப் பிறந்த வினை. தவாது பரந்தாங்கு என இயையும் கண்டென ஒரு சொல் வருவிக்கப்ட்டது. மழை கடற்பரந்தாங் கென்றதனால் ஆஅய் அண்டிரன் கடல் போலும் செல்வமுடைய னென்பது பெற்றாம். புலவரது புலமை உணவு குறித்து வருந்துமாயின் சீரிய இலக்கி யங்கள் பிறவாமலும், மக்கள் அறிவு அவற்றின் வாயிலாக நாட்டிற்குப் பயன்படாமலும் கெடுமாகலின், “வறுவிதாகிய வுலகத்து, நிலவன் மாரோ புலவர்” என்றான். இரவலரென்பது பாடமாயின் இரவலர் இன்மை காண மாட்டாத புரவலனான ஆய் அண்டிரனுக்குப் பின் அத்தகைய புரவுக் கடன் புரியும் சான்றோர் உளராவ தரிதென்னுங் கருத்தால், “நிலவன் மாரோ இரவலர்” என்றான் எனக் கொள்க. பீடின்று பெருகுந் திருவுடைமையிலே கண்ணுங் கருத்தும் ஒன்றியிருத்தலின், பாடிலராகிய வேந்தர்க்கு அறியுந்திறம் இலதாமென்பார், “பெரிய வோதினும் சிறிய வுணரா” என்றார். அவரைப் பாடிய வழிப் புலவரது புலமை பாடுபெறா தழியும் என்பார், பாடன்மார் எமரே என்றார். இடைக்காலத்தும் இக்காலத்தும் தாயிருக்கப் பேய்க்கு வழிபாடு செய்யும் பாடின் மன்னர்களும் தலைவர்களும் உளரானதன் பயனாகப் பண்டை நாளைச் செந்தமிழ் மூன்றும் சீரழிந்து போனதை வரலாறு வற்புறுத்து தலால் ஏணிச்சேரி முடமோசியார் அன்று கூறியது வாய்மை யாதல் தெள்ளிதாம். விளக்கம் : வாழ்த்தியல் என்பதுதலைமகனொருவனுடைய வென்றியும் குணமும் ஏத்தி வாழ்த்துவதாகும். “அடுத்தூர்ந் தேத்திய இயன்மொழி வாழ்த்து” (தொல். புறத். 29) என்பதனை இளம்பூரணர் முதலியோர் “இயன்மொழி யெனவும் வாழ்த்தெனவும் இயன்மொழி வாழ்த்தெனவும் மூவகைப்படும்” என்பர் இம் மூன்றனுள் ஒன்றாகிய வாழ்த்து ஈண்டு “வாழ்த்தியல்” எனப்பட்டது. இப்பாட்டின்கண் கிணைப் பொருநன் புரப்போர் பிறர் இன்மை தேர்ந்து ஆய் அண்டிரன் பால் அடைந்து அவனை வாழ்த்தும் கருத்தில் இப்பாட்டு அமைந்துள்ளது. ஆய் அண்டிரன் தென் பாண்டி நாட்டுப்பொதியின் மலையடியில் ஆய்க்குடியி லிருந்து ஆட்சிபுரிந்து வருகையில் புலவர், கூத்தர், பாணர், பொருநர் முதலியோர் நலம் தேர்ந்து புரக்கும் நற்குடிச் செல்வர் குறைந்தனர் ஏணிச்சேரி முடமோசியார் அவர் குறிப்பனைத்தும் பொருளீட்டுதலிலே ஒன்றியிருந்ததை யுணர்ந்தார். இந்நிலை கி.பி. நான்காம் நூற்றாண்டிலும் இருந்ததென்பதை அக்கலத்தே நம் நாட்டிற்கு வந்த சீனச்சான்றோர் எழுதியுள்ள குறிப்புகள் எடுத்தோது கின்றன. புரப்போர் புறக் கணித்தமையின் பொருநன் ஏர் வாழ்நர் குடிகட்குச் சென்று முறையே உணவு இரந்துண்ணும் நிலையடைந்து வருந்திய திறத்தை, “ஏரின் வாழ்நர் குடிமுறைப் புகாஅ, ஊழிரந்துண்ணும் உயவல் வாழ்வு” என்று குறித்தார். சான்றோர் யாரென நோக்கினேன்; நோக்கினேனுக்கு ஒருவரும் காணப்பட்டிலர் என்பார், “யாவரும் இன்மையின்” என்றார். “பெருமழை கடற்பரந்தாங்கு நின்னுள்ளி வந்தனென்” என்றது, கடனீரை முகந்த மழை அதன் உவர்ப்பை நீக்கி நன்னீராய் மக்கட்கு உதவுமாறு போல யாமும் செல்வர் தரும் பெருவளத்தின் தீமை போக்கி நன்மையை உலகுயிர்கள் பெறச்செய்வேம் என்பது. 376. ஓய்மான் நல்லியக் கோடன் புறத்திணையைப் பாடுதலில் மிகச்சிறந்த நல்லிசைப் புலவராகிய நன்னாகனார் ஒருகால் ஓய்மான் நல்லியக் கோடனைக் காண்டற்கு அவனூரில் அவனது நெடுமனையை யடைந்தார். அக்கால பகற்போது கழிந்ததனால் அந்திமாலை வந்திருந்தது. ஒளிகுறைய மெல்லிய இளையிருள் பரந்தது. பாணர் உணவுண்டற்கமைந் திருந்தனர். அவ்வளவில், வறுமையுற்று மெலிந்து உருமாறியிருந்த நாகனார் நல்லியக்கோடனுடைய நெடுமனைக் கண்ணின்ற நெற்கூட்டின் அடியில் நின்றனர். நல்லியக் கோடன் அவரைக் கண்டமாத்திரையே அவரை இன்னாரென ஆராயாமலே அவர் இடையில் சிதறிப் பீறிக்கிடந்த உடையை மாற்றி வேறோ ருடைதந்து மெலிவுகண்டு பொறானாய்ப் பாடிநின்ற அவரது கைத் தாளத்தைத் தான் வாங்கிக்கொண்டு கட்டெளிவும் சூட் டிறைச்சியுந் தந்து, உண்பித்து, இரவுப்போதாயிற்றே என்று சிறிதும் நினையாது அவரைப்பற்றி நிரயத் துன்பத்தைத் தந்துகொண்டிருந்த வறுமை நீங்கப் பெருஞ் செல்வத்தை நல்கினான். அது பெற்றுப் பெரு மகிழ்ச்சி கொண்ட நன்னாகனார் கிணைப் பொருநன் ஒருவன் கூற்றின் வைத்து இப்பாட்டைப் பாடினார். இதன் கண் பொருநன் நல்லியக் கோடன் தனக்குச்செய்த கொடைநலத்தை யெடுத்தோதி, “அன்று முதல் யான் வரையாது வழங்கும் பெரு வள்ளியோராயினும் பிறர் மனைவாய் நின்று இரத்தற்கு நினையே னாயினேன். என்கிணைப்பறையின் சிறு குரல் தானும் பிற செல்வரது நெடுமொழியைப் பாடி இசைக்காதாயிற்று,” என்று குறித்துள்ளான். விசும்பு நீத்த மிறந்த ஞாயிற்றுப் பசுங்கதிர் மழுகிய சிவந்துவாங் கந்தி சிறுநனி யிறந்த பின்றைச் செறிபிணிச் சிதா அர் வள்பினென் றெடாரி தழீஇப் 5 பாண ராரு மளவை யான்றன் யாணர் நன்மனைக் கூட்டுமுத னின்றனென் இமைத்தோர் விழித்த மாத்திரை ஞெரேரெனக் குணக்கெழு திங்கள் கனையிரு ளகற்றப் பண்டறி வாரா வுருவோ டென்னரைத் 10 தொன்றுபடு துளையொடு பெருவிழை போகி நைந்துகரை பறைந்தவென் னுடையு நோக்கி விருந்தின னளிய னிவனெனப் பெருந்தகை நின்ற முரற்கை நீக்கி நன்றும் அரவுவெகுண் டன்ன தேறலொடு சூடுதருபு 15 நிரயத் தன்னவென் வறன்களைந் தன்றே இரவி னானே யீத்தோ னெந்தை அன்றை ஞான்றினொ டின்றி னூங்கும் இரப்பச் சிந்தியே னிரப்படு புணையின் உளத்தி னளக்கு மிளிர்ந்த தகையேன் 20 நிறைக்குளப் புதவின் மகிழ்ந்தனெ னாகி ஒருநாள், இரவலர் வரையா வள்ளியோர் கடைத்தலை ஞாங்கர் நெடுமொழி பயிற்றித் தோன்றல் செல்லாதென் சிறுகிணைக் குரலே. திணை: பாடாண்டிணை. துறை: இயல்மொழி. ஓய்மான் நல்லியக் கோடனைப் புறத்திணை நன்னாகனார் பாடியது. உரை : விசும்பு நீத்தம் இறந்த ஞாயிற்றுப் பசுங்கதிர் மழுகிய - விசும்பின்கண்ணதாகிய நீத்தத்தைக் கடந்து சென்ற ஞாயிற் றினுடைய பசிய கதிர் ஒளி குறைந்த; சிவந்து வாங்கு அந்தி சிறுநனி இறந்த பின்றை - செந்நிறங்கொண்டு மேற்றிசையில் வளைந்து தோன்றும் அந்திமாலைப்போதின் மிகச் சிறு பொழுதுகழிந்த பின்னர்; செறிபிணிச் சிதாஅர் வள்பின் என் தெடாரி தழீஇ - செறியப் பிணிக்கும் துண்டான வார்களாற் கட்டப்பட்ட எனது தடாரிப் பறையை ஒருபால் தழுவிக் கொண்டு; பாணர் ஆரும் அளவை - பாணர்கள் உணவு உண்ணும் அளவில்; யான்தன் யாணர் நன்மனைக் கூட்டுமுதல் நின்றனென் - யான் அவனுடைய புதுமையறாத நல்ல பெரு மனைக்கண் நின்றநெற்கரிசையின் அடியில்நின்று பாடினே னாக; இமைத்தோர் விழித்த மாத்திரை - இமைத்த கண் விழிக்குமளவிலே; ஞெரேரென - விரைவாக; குணக்கெழு திங்கள் கனையிருள் அகற்ற - கிழக்கே யெழுந்த மதியம் செறிந்திருந்த இருளை நீக்க; பண்டு அறிவாரா உருவோடு முன்பிருந்த எனது நிலையையறிய இயலாதவாறு மாறியிருந்த உருவோடு; என் அரை -எனது இடையிலேயிருந்த, தொன்று படு துளையொடு பருவிழை போகி - பழைமையுற்றுத் துளை களுடனே பருத்த இழைகள் கெட்டு; நைந்து கரை பறைந்த - மெலிந்து கரை கிழிந்து கிடந்த; என் உடையும் நோக்கி - எனது உடையையும் பார்த்து; இவன் விருந்தினன் அளியன் என் - இவன் புதியன் அளிக்கத் தக்கானாவன் என்று சொல்லி; பெருந்தகை - பெரிய தகைமையினையுடையனாகிய அவன்; நின்ற முரற்கை நீக்கி - என் கையில் நின்ற தாளத்தைத் தான் வாங்கிக்கொண்டு; நன்றும் அரவு வெகுண்டன்ன தேறலொடு - பாம்பு சீறினாற்போற் பெரிதும் களிப்புற்ற கட்டெளிவுடனே; சூடு தருபு - சூட்டிறைச்சி தந்து; நிரயத்தன்ன என் வறன் களைந்து - நிரயம் போலத் துன்பம் செய்த என் வறுமையைப் போக்கி; அன்று இரவினான் ஈத்தோன் - அவ்விரவுப் போதிலே வேண்டுவன கொடுத்தான்; எந்தை - என் தலைவன்; நிரப்படு புணையின் - வறுமையாகிய கடலைக் கடக்கும் தெப்பமாக அவன் இருத்தலால்; அன்றை ஞான்றினோடு இன்றினூங்கும் - அந்நாளிலிருந்து இன்றும் இனி மேலும்; இரப்பச் சிந்தியேன் - பிறர்பாற் சென்று இரத்தலை நினை யேனாயினேன்; உள்ளத்தின் அளக்கும் மிளிர்ந்த தகையேன் - பிறர் உளத்தின்கண் நிகழ்வனவற்றை உள்ளத்தா லளந்தறியும் விளங்குகின்ற புலமை யழகினை யுடையேனாகிய யான்; நிறைக்குளப் புதவின் மகிழ்ந்தனெனாகி - நீர் நிறைந்த குளத்தின் வாய்த்தலை போல உண்ணிறைந் துந்தும் மகிழ்ச்சியுடையேனாய்; ஒரு நாள் இரவல வரையா வள்ளியோர் கடைத்தலை - ஒரு நாளும் தம்பால் வரும் இரவலரை மறுத்தலில்லாத வள்ளன்மை யுடையோர் தலைவாயிலும்; ஞாங்கர் நெடுமொழி பயிற்றி - அவர் பக்கத்து நெடும்புகழ் விளைக்கும் நலங்களைப் பாராட்டி ஒன்று பெறுதற்கு; தோன்றல் செல்லாது - இசையாதாயிற்று; என் சிறு கிணைக்குரல் - எனது சிறியதாகிய கிணைப்பறையின் ஓசை; எ-று. நிலமுதல் வளியீறாகவுள்ள நால்வகை மண்டிலங்களையும் கடந்து நிற்றலின் விசும்புநீத்த வெனப்பட்டது; “வளியிடை வழங்காவழக்கரு நீத்தம்” (புறம். 365) என்று பிறரும் குறித் துரைப்பது காண்க. நீத்த மென்றதனைக் கடற்காக்கி, விசும் பாகிய கடலை ஞாயிறு நீந்திச்செல்வதாகக் கொண்டு உரைத் தலுமுண்டு. மாலைவெயில் வெம்மை குன்றித் தட்பமும் செம்மையும் பெறுகலின் “பசுங்கதிர்” என்றார். “சுடர்கெழு மண்டில மழுக ஞாயிறு, குடகடல் சேரும் படர்கூர் மாலை” (அகம். 378) என்று பிறரும் கூறுவர். அந்திமாலையின் செவ் வொளி மழுக இளையிருள் பரவும் மருண்மாலைப் போதினைக் காட்டற்கு “அந்தி சிறு நனி பிறந்த பின்றை” என்கின்றார்; அந்திமாலையின் ஞாயிற்றின் செங்கதிர் நேரே நிலவுலகிற் பாயாமல், அதனைச் சூழ்ந்துள்ள வளிமண்டிலத்தால் வளைந்து (Refracted) வீழ்விக்கப்படுதல் பற்றி, “வாங்கந்தி” என்றும் வளி மண்டிலத்துப்பரவிச் செறிந்திருக்கும் துகளொளியாற் செங் கதிர் பசுங்கதிராகிற் றென்பது விளங்கப் “பசுங்கதி” ரென்றும் வழங்குகின்றமை உணர்ந்துகொள்க. இருள் பரந்த மருண் மாலைப்போதில் பாணரும் நுளையரும் சோறுண்பது மரபு; “மலையின் வாயிற்போதும் பாணன் வாயிற் சோறும்” என்பது பழமொழி. இப்பழமொழியே நெய்தனிலத்தில், “மலையின் வாயிற்போதும் நுளையன் வாயிற்சோறும்” எனவழங்கும். கூடு, நெற்கூடு; கரிசையுமாம். ஞெரேரென; விரைவுக் குறிப்பு. பண்டறிவாரா வுருவென்றது, நன்னாகனார் நல்லியக்கோட னால் முன்பே அறிவிக்கப்பட்டவரென்பது சுட்டி நின்றது. கரைப்பகுதி பருவிழையா லமைந்ததாகலின், “பருவிழை போகி நைந்து” கரைபறைந்ததென்றார். பண்டறிவாரா உருவென்றமையின் தன் விருந்தின்னென அவன்கூறியதை வற்புறுத்தி நின்றது. நாட்பட்டுக் களிப்புமிக்குற்ற கள்ளை “அரவு வெகுண்டன்ன தேறல்” என்றார்; “பாம்பு வெகுண்டன்ன தேறல்” (சிறுபாண். 237) எனப் பிறரும் கூறுவர். ஒப்பதும் மிக்கது மில்லாத துன்ப நிலையம் நிரயமாகலின், தனக்குத் தானே யொப்பாகிய (குறள். 104) வறுமை “நிரயத்தன்ன, வறன்” “இரவி னானேயீத்தோ” னென்றார். “நிரப்படு புணையின்” என்றது, இரப்பச் சிந்தியாமைக்கு ஏதுவாய் நின்றது. தன் னுள்ளத்தால் பிறர் உளத்தின்கண் நிகழ்வன அளந்தறியும் ஒள்ளிய புலமை தன்பால் உண்மையினை அடங்கிய வாய்ப் பாட்டாற் கூறுதலின், “உளத்தின் அளக்கும் மிளிர்ந்த தகையே” என்றார். மிளிர்ந்த தகை, விளங்குகின்ற புலமையழகு. கரை புரண்டு வழிந்தெழும் மகிழ்ச்சி வெள்ளத்தை அறிவால் அடக்கினும் அடங்காது முகத்தின்வழிப் புலப்பட நிற்கும் தமது நிலையை, “நிறைக்குளப் புதவின் மகிழ்ந்தெனனாகி” யென்றார். இரவலர் வரையா “வள்ளியோ ரிடத்தில் இரவலர் இரத்தல் இனிதாயினும் (குறள். 1053) அதனையும் யான் செய்ய விழைந்திலேன் என்பார், “இரவலர் வரையா வள்ளியோர் கடைத்தலைத் தோன்றல் செல்லாது என்சிறு கிணைக்குரல்”, என்றார். நெடும்புகழ் குறிக்கும் சொற்களை “நெடுமொழி” யென்ப. அந்தி இறந்த பின்றை, தழீஇ நின்றெனனாக, திங்கள் இருளகற்ற, உருவோடு உடையும் நோக்கி, நீக்கி களைந்து, பெருந்தகை, ஈத்தோன் தகையேன் மகிழ்ந்தனெனாகி, புணை யின் சிந்தியேன்; சிறுகிணைக்குரல்; தோன்றல் செல்லாது எனக்கூட்டி வினை முடிபு செய்க. அவ்விரவினான் என்புழிச் சுட்டு அன்றென நின்றது; “அன்றி யனைத்தும் பெயர்ப் பயனிலையே” (தொல். சொல்.சேனா. 66) என்புழிப்போல. அன்றே என்பதனை அசை நிலை யெனினும், அப்பொழுதே யெனினு மமையும். விளக்கம் : இயன்மொழியாவது, “இன்னோரின்னவை கொடுத்தார் நீயும், அன்னார்போல வவையெமக் கீகென, என்னோரு மறிய வெடுத்துரைத் தன்று” (பு.வெ.மா. 96) எனவரும். இயன்மொழி வாழ்த்தாவது, “வென்றியும் குணனும் அடுத்துப் பரந்தேத்துவது” (தொல். புறத். 29) என இளம்பூரணர் கூறி, இதனை இயன்மொழி எனவும் வாழ்த்தெனவும், இயன்மொழி வாழ்த்தெனவும் மூவகைப் படுத்துரைத்தலின். இயன் மொழி யாவது, வென்றியாவது, குணமாவது, இரண்டுமாவது எடுத்தோதப் பரவுதல் எனக் கொள்ளலாம். இவ்வகையில் ஈண்டு நன்னாகனார் நல்லியக்கோடனது கொடை நலத்தையே அடுத்துப் பரந்தேத்தி மொழிதல் பற்றி, இப்பாட்டுஇயன் மொழி யெனப்பட்டதெனக் கோடல்வேண்டும். இப்பாட்டின்கண் கூற்று நிகழ்த்தும் பொருநன், கோடனது நன்மனைக் கூட்டு முதல் நின்றானாக, நைந்து கரைபறைந்த அவனது உடையை நோக்கி, புறக்கணியாது கொடைப்பண்புடையனா தலால் “இவன் விருந்தினன் அளியன்” என இன்மொழிநல்கித் தன் பெருந்தகைமையைப் புலப்படுத்தினான் நல்லியக்கோடன். இரவுப் போது ஈத்தற்குச் சிறந்த தன்றாயினும், அது நோக்கிற்றிலன் என்றும், இரப்பவர் என்பெறினும் கொள்வர் என்பதுபற்றிச் சிறிது நல்காது பெரிது நல்கினன்; அதனால், யான் என்றும் பிறரைச் சென்று இரக்கும் வறுமை எய்துதல் இல்லேனாயினேன் என்றும் கூறுவான், “இரவினானே ஈத்தோன் எந்தை” என்றும், “அன்றை ஞான்றினோ டின்றினூங்கும் இரப்பச் சிந்தியேன்” என்றும் கூறினான். நல்லியக்கோடன் வழங்கிய கொடையின் பெருமையைப் புலப்படுக்கலுற்றவன், வள்ளியோர் கடைத்தலை நாடியோடும் என்னுள்ளம் அச்செலவை மீளச் சிறிதும் கருதா வகையில் அமைந்த தென்றற்கு, “ஒரு நாள்............சிறுகிணைக் குரலே” என்றான். எனவே, இத்துணையும் கொடைநலமே புகழ்ந் தோதியவாறு காண்க. நல்லியக்கோடன் என்பது நல்லியனாகிய கோடன் என விரியும். கோடன் என்பது இயற்பெயர்; குயக்கோடன் (த.நா.சரிதை. 10) எனப் பிற்காலத்தும் இப்பெயர் வழக்கிலிருந்திருக்கிறது. “மேல் வெம்பா நாட்டுக் கோடனூர்” (A.R.No.20 of 1932 - 33) எனப் பாண்டி நாட்டிலும், கோடன்பாக்கம் எனத் தொண்டை நாட்டிலும் ஊர்கள் பல இருப்பது நோக்கத் தக்கது. இதனைச் சிலர் கோஷனூர் என்பதன் திரிபாகக் கூறுவது பொருந்தாமை காண்க. 377. சோழன் இராயசூயம் வேட்ட பெருநற்கிள்ளி சோழன் இராயசூயம் வேட்ட பெருநற்கிள்ளி சங்ககாலச் சோழ வேந்தருள் காலத்தாற் பிற்பட்டவன். இவனை ஒருகால் உலோச்சனா ரென்னும் நல்லிசைச் சான்றோர் காணச்சென்றார். இவர் பெயர் உவோச்சனார் என்றும் காணப்படுகிறது. அக் காலத்தே யானைப்படை, குதிரைப்படை, தேர்ப்படை, வாட்படை முதலிய படைத்தலைவர்கள் இவனை அன்புடன் சூழ்ந்திருந்தனர். அவர் நடுவண் இருந்த கிள்ளி உலோச்சனாரை வரவேற்றுப் பெரும் பொருளை வழங்குவானாய், மலையிற் பிறந்த மணியும், காட்டிடத்துப் பெற்ற பொன்னும், கடலிற் பெறப்பட்ட முத்தும், பல்வேறுவகை உடையும் பிறவுந் தந்து சிறப்பித்தான். அப்போது அவர் கிணைப்பொருநன் ஒருவன் கூற்றில் வைத்து இப்பாட்டினைப் பாடினார். இதன்கண் பொருநன், தன் கிணைப் பறையைக் கொட்டி, அவியுண்ணும் ஆன்றோர் காப்ப, அறம்புரியும் நெஞ்சினனாகிய கிள்ளி நெடிது வாழ்க என வாழ்த்தியச் சான்றோர் வரிசைபெற்றுச் செல்வது கண்டு வியப்பு மிக்கு மதிமழுங்கி நின்றான். அவனைக் கிள்ளி கண்டு “நீ சேய்நாடு செல்லும் கிணைவன் போலும், நின்னையும் யாம் புரப்போம், கவலற்க” என வுரைத்து மணியும் பொன்னும், முத்தும், உடையும் பிறவும் நிரம்ப நல்கினன். அவை பெற்ற பொருநன், “நாடெனப் படுவது சோழன் நாடே; வேந்தெனப் படுபவன் இராயசூயம் வேட்ட பெருநற் கிள்ளியே, ஆகவே, வேந்தே, நீ நெடிது வாழ்க” என்று வாழ்த்தி யுள்ளான். பனிபழுனிய பல்யாமத்துப் பாறுதலை மயிர்நனைய இனிது துஞ்சுந் திருநகர் வரைப்பின் இனையலகற்ற வென் கிணைதொடாக் குறுகி 5 அவியுணவினோர் புறங்காப்ப அறநெஞ்சத்தோன் வாழ்நாளென் றதற்கொண்டு வரலேத்திக் கரவில்லாக் கவிவண்கையான் வாழ்கவெனப் பெயர்பெற்றோர் 10 பிறர்க்குவமந் தானல்லது தனக்குவமம் பிறரில்லென அதுநினைந்து மதிமழுகி ஆங்குநின்ற வெற்காணூஉச் சேய்நாட்டுச் செல்கிணைஞனை 15 நீபுரவலை யெமக்கென்ன மலைபயந்த மணியுங் கடறுபயந்த பொன்னும் கடல்பயந்த கதிர்முத்தமும் வேறுபட்ட வுடையஞ் சேறுபட்ட தசும்பும் கனவிற் கண்டாங்கு வருந்தாது நிற்ப 20 நனவி னல்கியோ னசைசால் தோன்றல் நாடென மொழிவோரவன் நாடென மொழிவோர் வேந்தென மொழிவோரவன் வேந்தென மொழிவோர் புகர்நுதலவிர் பொற் கோட் டியானையர் கவர்பரிக்கச்சை நன்மாவினர் 25 வடிமணி வாங்குருள கொடி மிசைநற் றேர்க்குழுவினர் கதழிசை வன்கணினர் வாளின் வாழ்ந ரார்வமொ டீண்டிக் கடலொலி கொண்ட தானை 30 அடல்வெங் குரிசின் மன்னிய நெடிதே. திணை: பாடாண்டிணை. துறை : வாழ்த்தியல்; சோழன் இராய சூயம் வேட்ட பெருநற்கிள்ளியை உலோச்சனார் பாடியது. உரை : பனி பழுனியபல் யாமத்து - பனி மிக்க பல யாமங்கள் உறங்கியதனால்; பாறு தலைமயிர் நனைய - பரந்து சிதறித் தோன்றும் தலைமயிர் பனியால் நனைந்துபடிய; இனிது துஞ்சும் திருநகர் வரைப்பின் - தான் இனிதுறங்கும் செல்வ மனையின்கண்; இனையல் அகற்ற - யான் எனது வறுமை வருத்தம் நீக்கக்கருதி; என் கிணை தொடாஅக் குறுகி - என் தடாரிப் பறையை இசைத்துக் கொண்டு சென்று; அவியுணவி னோர் புறங்காப்ப - அவியாகிய உணவை யுண்ணும் தேவர்கள் புறத்தே நின்று பாதுகாக்க; அறநெஞ்சத்தோன் நாள் வாழ என்று - அறஞ் செய்யும் நெஞ்சினையுடை வேந்தன் பன்னாள் வாழ்வானாக என்று வாழ்த்த; அதற் கொண்டு வரல் ஏத்தி - அது கொண்டு வாழ்த்தி வந்தவர்களை அவன் வரவேற்க; கரவு இல்லாக் கவி வண்கையான் - இரவலர்க்கு மறைத்தல் இல்லாமல் இடக் கவிந்த வளவிய கையையுடையராதலால்; வாழ்க எனப் பெற்றோர் - நெடிது வாழ்க எனப் புலவர் வாழ்த்தும் வாழ்த் தாகிய பொருளைப் பெற்றோராகிய; பிறர்க்கு - ஏனை வேந்தர்கட்கு; தான் உவமம் அல்லது - இவ்வேந்தன் உவம மாவனே யன்றி; தனக்கு - இவ்வேந்தனுக்கு; பிறர் உவமம் இல்லென - ஏனைவேந்தர் உவமமாகும் ஒப்பும் உயர்வும் இலர் என்று சொல்லி வந்த சான்றோர் பலரும் பாராட்ட; அது நினைந்து மதி மழுகி - அப் பாராட்டைக் கேட்டு அறிவான் ஆராய்ந்த யான் அவனது பெருமை என் அறிவெல்லை யிறந்து விளங்குவதை நினைந்து மதிமயங்கி; ஆங்கு நின்ற என் காணூஉ - அவ்விடத்தே நின் றொழிந்த என்னைக் கண்டு; சேய்நாட்டுச் செல் கிணைஞணை - புரவலரை நாடிச் சேய்மையி லுள்ள - நாடுகட்குச் செல்லும் கிணைப்பொருநனே; நீ எமக்குப் புரவலை என்ன - நீ எம்மாற் புரக்கப்படுதலையுடையை என்று சொல்லி; மலைபயந்த மணியும் - மலையிடைப் பெறப்பட்ட மணிகளையும்; கடறுபயந்த பொன்னும் - காட்டிற் பெறப்பட்ட பொன்னையும்; கடல் பயந்த கதிர் முத்தமும் - கடலிடத்தே பெறப்பட்ட ஒளியையுடைய முத்துக்களையும்; வேறுபட்ட உடையும் - வேறு வேறு வகையவான உடைகளையும்; சேறு பட்ட தசும்பும்கள் நிறைந்த குடங்களையும்; வருந்தாது நிற்ப - யான் இனி வறுமையுற்று வருந்தாமல் செல்வ நிலையிலே நிலை நிற்குமாறு; நசைசால் தோன்றல் - அன்பு நிறைந்த தோன்ற லாகிய தலைவன்; கனவிற் கண்டாங்கு நனவில் யான் கொள்ளு மாறு தந்தான்; நாடு என மொழிவோர் - நாடுகளிற் சிறந்த நாடொன்றினை ஆராய்ந்து சொல்லுவோர்; அவன் நாடென மொழிவோர் - மிகச் சிறந்த நாடாவது அவனது சோழ நாடென்று சொல்லுவர்; வேந்தென மொழிவோர் - வேந்தர்கள் பலருள்ளும் சிறந்த வேந்தரைத் தேர்ந்துரைப்பவர்; அவன் வேந்தென மொழி வோர் - அவனொருவனையே சிறந்த வேந்தனென்று சொல்வர்; புகர் நுதலவிர் பொற் கோட்டுயானையர் - புள்ளி பொருந்திய நெற்றியும் விளங்குகின்ற கிம்புரியணிந்த கொம்பினையுமுடைய யானைப்படைத் தலைவரும்; கவர்பரிக் கச்சை நன்மாவினர் - கதியும் சாரியையுமாகப் பகுக்கப்படும் செலவினையும் கச்சினையு முடைய குதிரைப் படைத்தலைவரும்; வடிமணி வாங்குருள - வடித்த வோசையையுடைய மணியினையும் வட்டமாக வளைந்த உருளைகளையும்; கொடிமிசை நல்தேர்க் குழுவினர் - மேலே கொடியையுமுடைய நல்ல தேர்ப்படைத்தலைவரும்; கதழிசை வன்கணினர் - விரைவும் புகழும் வன்கண்மையு முடைய விற்படை வேற்படைகட்குத் தலைவர்களும்; வாளின் வாழ்வர் - வாள்கொண்டு போர் செய்து வாழும் வாண் மறவ ருடைய தலைவரும்; ஆர்வமொடு ஈண்டி - ஆர்வத்துடனே கூடி யிருத்தலால்; கடல் ஒலி கொண்டதானை - கடலினது முழக்கத்தை யுடைய தானையையுடைய;அடல் வெங்குரிசில் - போரை வெல்லுதலின் விருப்பமுடையனான வேந்தனாகிய தலைவன்; நெடிது மன்னிய - நெடுங்காலம் வாழ்வானாக; எ-று. உறக்கத்திற் கழியும் இடையாமம் இரண்டும் “பல் யாமம்” எனப் பட்டன; ஒன்றின் மிக்கனவாதலின் திருநகரென்றலின் அதற்கேற்ப அதன்கண் வாழ்வோரெய்தும் உறக்கத்தை “இனிது துஞ்சும் திருநகர்” எனச் சிறப்பித்தார். தான் வறுமையால் வருந்தும் வருத்தத்தைப் போக்கும் கருத்தோடு வந்திருத்தலின், “இனைய லகற்ற” என்றான். தெய்வம் புறங்காப்பச் செல்வதோடு வழி வழி சிறந்து பல்லாண்டு வாழ்க என வுயர்ந்தோர் வேந்தனை வாழ்த்துவது புறநிலை வாழ்த்தெனும் மரபாதலால் “அவியுணவினோர் புறங் காப்ப அறநெஞ்சத்தோன் வாழ நாள் என்று” வாழ்த் தினரென்றான்; “வழிபடுதெய்வ நிற்புறங்காப்பப் பழிதீர் செல்வ மொடு வழிவழி சிறந்து,பொலிமின் என்னும் புறநிலை வாழ்த்து” (தொல். செய். 109) என ஆசிரியர் உரைப்பது காண்க. பெயர், ஈண்டு வாழ்த்துரையாகிய பொருண்மேனின்றது. மக்களானும் பிறவுயிர்களானும் உண்டாகும் துன்பங்களை முன்னறிந்து காத்துக் கொள்ளும் ஆற்றலுடைய வேந்தருக்குத் தெய்வத்தான் உண்டாவன அவ்வாறுகாக்கப்படாவாதலின், அவற்றிற் கரணாவன புறநிலை வாழ்த்துக்கள் என்ற கருத்தால் அது, பொருள் எனப் பட்டதென வறிக. உயர்பொருளே உவமமாவன வாகலின், ‘பிறர்க்குவமந் தானல்லது தனக்குவமம் பிறரில்லென’ என்றார். “உயர்ந்ததன் மேற்றேயுள்ளுங்காலை” (தொல். உவம. 3) என்ப. பிறரும், “பிறர்க்கு நீ வாயினல்லது நினக்குப்பிறருவம மாகா வொருபெருவேந்தே” (பதிற். 3) என்பது காண்க. உவமத்திற்குரிய உயர்ந்தோர்களை யெண்ணி ஒருவரையும் காணாமையால் அறிவு மழுங்கினமையின், “மதிமழுகி என்றான். புரவலை; புரத்தலையுடையை அஃதாவது பாதுகாக்கப்படுவை யென்பதாம். “கனவிற் கண்டாங்கு நனவின் நல்கியோன்” என்றது பெருநற்கிள்ளி தந்த வளத்தின் பெருமையும் அருமையும் சுட்டி நின்றது. யானையரும் மாவினரும் தேரினரும் வன்கணினருமாகிய வேந்தரென்றுமாம். அச்சத்தால் ஈண்டாது அன்பால் ஈண்டுவதே உயர்ந்த அரசியற்கு மாண்பாதலின. அதுதோன்ற, “ஆர்வமொடீண்டி” யென்றார். அடல் வெற்றியு மாம். அகற்ற, குறுகி, பிறர்இல்லென, நினைந்து, மழுகி, நின்ற எற்காணூஉ, என்ன, நிற்ப, தோன்றல், நல்கியோன்; மொழிவோர் மொழிவோர்; மொழிவோர்; மொழிவோர்; யானையர், மாவினர், குழுவினர், வன்கணினர், வாழ்நர், ஈண்டுக்கொண்ட தானையையுடைய குரிசில் நெடிது மன்னிய எனக் கூட்டி வினைமுடிவு செய்க. விளக்கம் : வாழ்த்தியலாவது “அலங்குகதிர்” (புறம். 375) என்ற பாட்டுரையின் விளக்கப் பகுதியிற் கூறினாம். இப்பாட்டின்கண் ஆசிரியர் உலோச்சனார் கிணைப்பொருநன் ஒருவன் கூற்றில் வைத்துச் சோழன் இராயசூயம் வேட்ட பெருநற்கிள்ளியின் கொடைப் பண்பை எடுத்தோதி வாழ்த்து கின்றார். பெயர் பெற்றோர் என்றது, புலவர் புகழ்ந்து வாழ்த்தும் வாழ்த்துக்களைப் பொருளாகப் பெற்ற வேந்தர்களை யென அறிக. கிள்ளியைப் பாடிச்சென்ற கிணைப்பொருநன், அவனைக் கண்ட போது, அவனைச் சூழ்ந்திருந்த சான்றோர் புலவர்பாடும் புகழ்பெற்ற வேந்தருள் “இவனுக்குவமம் இவனே யன்றிப் பிறர் இல்லை” யென்று கூறினார். அது கேட்டுக் கிணைவன் மதிமருண்டு நிற்க, பெருநற்கிள்ளி அவனையடைந்து “நீயும் எம்மாற் புரக்கப்படுந் தகுதி யுடையை” என்று சொல்லி மணியும் பொன்னும் முத்தும் கள்ளும் கனவிற் கண்டாங்கு நனவின் நல்கினான்; அவன் நெடிது மன்னுக என்று கிணைவன் வாழ்த்தினான். கிள்ளி இராயசூயம் வேட்ட வேந்தனாகலின், அவனைத் தொடக்கத்தில், “அவியுணவினோர் புறங்காப்ப, அற நெஞ்சத்தோன் பன்னாள் வாழ்க” என்று வாழ்த்திச் சென்றான். அவனை வேந்தன் வரவேற்றலும், ஆங்கிருந்த சான்றோர் அவன் மதிமருளத்தக்க வகையில், “வாழ்க எனப்பெயர்பெற்றோர் .........பிறர் இல்” என்று மொழிந்தனர். கிள்ளியைக் காண விழைந்தகாலத்தில் கனவின் கண் அவன் மிகு பொருள் வழங்குவதாகக் கனாக்கண்டு நனவில் அவனை யடைந்தபோது அவன் கனவின் கண்டது போல வழங்கினான் என்பான், “கனவிற்கண்டாங்கு வருந்தாது நிற்ப, நனவின். நல்கியோன் நசைசால்தோன்றல்” என்றான். கொடைக்கேற்பமறத்திலும் குறைபாடிலனென்றற்குத் தானையை விதந்தோதினான். 378. சோழன் செருப்பாழி யெறிந்த இளஞ்சேட்சென்னி சங்ககாலச் சோழன் காலத்தில் வடபுலத்திருந்து வடுகரும், தென் புலத்திலிருந்து பரதவரும் தமிழகத்திற்குட் புகுந்து குறும்பு செய்து வந்தனர். இவ்வடுகரே இடைக்காலப் பல்லவ பாண்டியர் காலத்திற் சீரழிந்து வலியழிந்தொழிந்த களப்பிரராவர். தென்பரதவர் தென்னாட்டுக் கடற்கரையில் தங்கிக் குறும்புசெய்தனர் இவர்கள் இடைக்காலப் பாண்டியர் காலத்தில வலியழிந்தொடுங்கினர். சங்ககாலத்தில் வடுகரும் பரதரும் குறும்பு செய்வான் தலைதூக்கும் போதெல்லாம் ஒடுக்கி வந்தவருள் சோழவேந்தரும் சிறந்து நின்றனர். இக் காலத்தே மேலைக் கடற்கரைப் பகுதியாகிய சேரநாட்டில் கடம்பரென்பார் கடல் வழியாகப் போந்து அரம்பு செய்தனர். இன்றும் மேலைக் கடற்கரையில் தென் கன்னட சில்லாவில் கடம்பத்தீவு என ஒருதீவு இருந்து பண்டைய கடம்பரை நினைவு கூர்வித்து நிற்கிறது. அவர்களை இமய வரம்பன் நெடுஞ் சேரலாதனும் சேரமான் கடல் பிறக்கோட்டிய வேல்கெழு குட்டுவனும் கடற்போருடற்றி வென்றொடுக்கினர். இங்ஙனம் சங்ககாலத்தில் தமிழகத்தின் வடக்கில் வடுகரும், தெற்கில் பரதவரும், மேற்கில் கடம்பரும் அடிக்கடி வந்து அரம்பு செய்த செயல்களைச் சங்கத்தொகை நூல்கள் குறிக்கின்றன. வடபுலத்திலிருந்து வடுகராகிய களப்பிரரேயன்றி மோரியரும் பிறரும் வந்தன ராயினும், அவர்கள் தொடக்கத்திலேயே தலைமடங்கி நின்றொழிந்தனர். களப்பிரர் மட்டில் இடைக்காலப் பல்லவ பாண்டியர் காலங்கள் வரை போராடியுள்ளனர். அவர்கள் காலத் திற்றான் வடபுலத்துப் புத்தரும், சமணரும் தமிழகத்திற் புகுந்து இடம்பெறுவாராயினர். செந்தமிழின் செல்வாக்குக்குக் கேடுண் டாகத் தொடங்கியதும் அவர்கள் காலத்தேயாகும். செந்தமிழ்ச் செல்வரிடையும் வேந்தரிடையும் புறஞ்சுவர் கோலஞ்செய்யும் புன்மையுண்டாகத் தொடங்கியது அக் களப்பிரர் காலத்தேயாம் என்பது மனங்கொள்ளற்பாற்று. அந்நாளில் களப்பிரரான வட வடுகரையும் தென்பரதவரையும் ஒடுக்கிய செயலில் ஒருகால் சோழன் செருப்பாழி யெறிந்த இளம்பெருஞ்சென்னி (சேட்சென்னி) வென்றி மேம்பட்டு விளங்கினான். அவனை ஆசிரியர் ஊன்பொதி பசுங்குடையார் காணச் சென்றார். அவன் அவர்க்குப் பல அணிகலன்களையும் செல்வங்களையும் நல்கினான். அவற்றைப் பசுங்குடையாருடன் போந்த சுற்றத்தினர் பகிர்ந்து கொண்டு தாம்தாம் அணிந்து மகிழ்ந்தனர். இம்மகிழ்ச்சியைக் கிணைப் பொருநன் ஒருவன் கூற்றில் வைத்து இப்பாட்டைப் பாடியுள்ளார். இதன்கண் தென் பரதவரை, மிடலழித்து வடவடுகரது வாள் வன்மையைக் கெடுத்து மேம்பட்ட சோழனுடைய வெண்சுதை மாடத்தின் நெடுநகர் முற்றத்தே நின்று பொருநன் அவனுடைய வஞ்சித் துறையைப் பாடி நின்றானாக, பொருநர்க்கெனச் சமைக்கப் படாது அரசர்க்கும் செல்வர்க்குமாக அமைக்கப் பெற்றனவும் போரிற் பகைவர் பாற் கொண்டனவுமாகிய அணிகலன்கள் பல வழங் கினன்; அவற்றுள் விரலில் அணிவன வற்றைச் செவியிலும் செவிக்குரியவற்றை விரலிலும், அரைக் குரியவற்றைக் கழுத்திலும், கழித்தணியை இடையிலும் வகை தெரியாது அப் பொருநனுடைய சுற்றத்தினர் அணிந்து, காண்பார் கைகொட்டி நகைக்குமாறு விளங்கினார்; அவர்செய்கை பண்டு இராமனுடன் போந்த சீதையை இராவணன்தூக்கிச் சென்ற போது அவள் கழற்றியெறிந்த அணிகலன்களைக் குரங்கினம் அணிந்து கொண்டது போல இருந்தது; அவர்கள் கொண்டிருந்த வறுமைத் துன்பமும் மறைந்து போயிற்றென்று கூறியுள்ளார். தென்பரதவர் மிடல்சாய வடவடுகர் வாளோட்டிய தொடையமை கண்ணித் திருந்துவேற் றடக்கைக் கடுமா கடைஇய விடுபரி வடிம்பின் 5 நற்றார்க் கள்ளின் சோழன் கோயிற் புதுப்பிறை யன்ன சுதைசெய் மாடத்துப் பனிக்கயத் தன்ன நீணகர் நின்றென் அரிக்கூடு மாக்கிணை யிரிய வொற்றி எஞ்சா மரபின வஞ்சி பாட 10 எமக்கென வகுத்த வல்ல மிகப்பல மேம்படு சிறப்பி னருங்கல வெறுக்கை தாங்காது பொழிதந் தோனே யதுகண் டிலம்பா டுழந்தவென் னிரும்பே ரொக்கல் விரற்செறி மரபின செவித்தொடக் குநரும் 15 செவித்தொடர் மரபின விரற்செறிக் குநரும் அரைக்கமை மரபின மிடற்றியாக் குநரும் மிடற்றமை மரபின அரைக்கியாக் குநரும் கடுந்தெற லிராம னுடன்புணர் சீதையை வலித்தகை யரக்கன் வௌவிய ஞான்றை 20 நிலஞ்சேர் மதரணி கண்ட குரங்கின் செம்முகப் பெருங்கிளை யிழைப்பொலிந் தாஅங் கறாஅ வருநகை யினிதுபெற் றிகுமே இருங்கிளைத் தலைமை யெய்தி அரும்பட ரெவ்வ முழந்ததன் றலையே. திணை: பாடாண்டிணை. துறை : இயன்மொழி; சோழன் செருப்பாழி யெறிந்த இளஞ்சேட் சென்னியை ஊன்பொதி பசுங்குடையார் பாடியது. உரை : தென்பரதவர் மிடல்சாய - தென்னாட்டிற் புகுந்து குறும்பு செய்த பரதவருடைய வலிகெட்டொடுங்க; வடவடுகர் வாள் ஓட்டிய - வடநாட்டினின்றும் போந்து குறும்பு செய்த வடுகரது வாட்படையைக் கெடுத்தழித்த; தொடையமை கண்ணி - நன்கு தொடுக்கப்பட்டமைந்த கண்ணியையும்; திருந்துவேல் தடக்கை- திருந்திய வேலேந்திய பெரிய கையையும்; கடுமா கடைஇய விடுபரி வடிம்பின் - கடுகிச் செல்லும் குதிரையைச் செலுத்தற் கென்று காலில் இடப்பெற்ற பரிவடிம்பென்னும் காலணியை யும்; நற்றார்க் கள்ளின் - நல்ல தாரினையும் கள்ளினையு முடைய; சோழன் கோயில் - சோழவேந்தனுடைய அரண்மனைக் கண்ணுள்ள; புதுப்பிறை அன்ன கதைசெய் மாடத்து - புதிது முளைத்த பிறைபோன்ற வெள்ளிய சுதையால் இயன்ற மாடத்தையுடைய; பனிக்கயத்தன்ன நீணகர் நின்று - குளிர்ந்த நீர்நிலை போல் குளிர்ச்சி பொருந்திய நெடிய பெருமனையின் முன்னே நின்று; என் அரிக்கூடு மாக்கிணை இரிய ஒற்றி - எனது அரித்த ஓசையைச் செய்யும் பெரிய தடாரிப்பறை கண் கிழியுமாறு கொட்டி; எஞ்சா மரபின் வஞ்சிபாட - வலி குன்றாத முறைமையினையுடைய பகைமேற் செல்லும் செல வாகிய வஞ்சித்துறைப் பாட்டுக்களை இசைத்துப்பாட; எமக் கென வகுத்தவல்ல - எம்மைப் போலும் பரிசிலர்க் களித்தற் கெனச் செய்யப்படாதனவான; மிகப்பல - மிகப்பலவாகிய; மேம்படு சிறப்பின் அருங்கல வெறுக்கை - மேன்மையான சிறப்பினையுடைய பெறற்கரிய அணிகலங்களும் பிற பொருள் களுமாகிய செல்வத்தை; தாங்காது பொழிதந்தோன் - எம்மால் தாங்கமாட்டாத அளவில் வழங்கினான்; இலம்பாடு உழந்த என் இரும்பேர் ஒக்கல் - வறுமையால் வருந்திய என் சுற்றத்தார்; அதுகண்டு - அக் கொடைப் பொருளைக் கண்டு பேரார்வத்தோடு தத்தம் கைக்கொண்டு; விரல்செறிமரபின செவித்தொடக்குநரும் விரல்களில் அணியத் தகுவனவற்றைக் காதில் அணிபவரும்; செவித்தொடர் மரபின விரல் செறிக்குநரும் - செவியல் அணியத் தகுவனவற்றை விரலில் அணிபவரும்; அரைக்கமை மரபின மிடற்று யாக்குநரும் - அரைக்கு அமைந்தவற்றைக் கழுத்தில் அணிபவரும்; மிடற்றமை மரபின அரைக்கு யாக்குநரும் - கழுத்தில் அணிவனவற்றை இடையிற் கட்டிக்கொள்பவருமாய்; கடுந்தெறல் இராமன் உடன்புணர் சீதையை கடியதெறுதற்றொழிலையுடைய இராமனுடன் கூடிப்போந்த சீதையை: வலித்தகை அரக்கன் வௌவிய ஞான்றை - மிக்க வலியுடைய அரக்கனாகிய இராவணன் கவர்ந்து சென்றபோது; நிலஞ்சேர் மதர் அணி கண்ட குரங்கின் - சீதை கழற்றியெறிய நிலத்தே வீழ்ந்த அழகிய அணிகலன்களைக் கண்டெடுத்த குரங்கினுடைய; செம்முகப் பெருங்கிளை இழைப்பொ லிந்தாங்கு - சிவந்த முகத்தையுடைய மந்திகளாகிய பெரிய சுற்றம் அவ் விழைகளைத் தாம் அணிந்து விளங்கக் கண்டோர் சிரித்து மகிழ்ந்தாற்போல; இருங்கிளைத் தலைமை யெய்தி - பெரிய சுற்றத்துக்குத் தலைமை தாங்கி; அரும்படர் எவ்வம் உழந்ததன் தலை - அவர் வறுமைகளைதற் பொருட்டுப் பல அரிய நினைவுகளாலுண்டாகும் துன்பத்தால் வருந்தியது போக; அறாஅ அருநகை இனிது பெற்றிகும் - நீங்காத அரிய மகிழ்ச்சியை மிகவும் அடைந்தோம்; எ - று. தென்பரதவர், தென்பாண்டிநாட்டின் கடற்கரையிலிருந்து குறும்பு செய்தவர். இவர்கள் சில காலங்களில் பாண்டியர்க்குப் பகைவராகவும், சில காலங்களில் துணைவராகவும் இருந் துள்ளனர். வடுகர் தொண்டை நாட்டுத் திருவேங்கடத்திற்கு வடக்கிலுள்ள நாட்டவ ராதலால் வடுகர் எனப்பட்டனர். பரிவடிம்பு குதிரையிவர்ந்து செல்பவர் அதனை விரையச் செலுத்தற்பொருட்டுக் காலில் அணியும் இரும்பு; இதுவடிம்பு போறலின் வடிப்பெனப் பட்டது; பிறரும், “மாவுடற்றிய வடிம்பு” எனக் கூறுதல் காண்க. மறுவில்லாத பிறைத்திங்கள் மிக வெள்ளிதாக இருக்குமாறு விளங்க, “புதுப்பிறையன்ன சுதை” என்றார். அரித்த ஓசை அரியெனப்பட்டது; ஓசை கூட்டப்பெற்ற “அரிக்கூடு” கிணையை யென்றார்; “அரிக்கூடின்னியம்” (மதுரை: 612) என வருதல் காண்க. எஞ்சா மண்ணசையால் வந்த வேந்தன் எதிர்சென்று பொருது மேம்பட்டு மேற்சேறலின், “எஞ்சா மரபின் வஞ்சி” என்றார். வேந்தனது பரிசில் அவரவர் வரிசைக்கேற்ப வழங்கப் படுமாயினும். ஈண்டு அவரவர் வரிசை நோக்காது மிக்க பரிசில் தரப்பட்டதென்பதும் விளங்க. “எமக்கென வகுத்தவல்ல மிகப்பல மேம்படு சிறப்பினருங்கல வெறுக்கை தாங்காது பொழிதந் தோனே” யென்றார். இலம்பாட்டால் அறிவு மயங்கிச் செய்வது தெரியாது தன் சுற்றத்தார் விரைந்தனரென்பார், கலங்களை முறைமை மாறியணிந்து காண்பார்க்கு நகைவிளைத்தனர் என்றார். அரக்கன் வலியால் தகைமைபெற்றவனேயன்றி ஒழுக்கத்தால் தகைமை பெற்றவனல்ல னென்பார், “வலித்தகை யரக்கன் ” என்றார். இவ்வாசிரியர் காலத்தில் இராமராவணப்போர் வட புலத்தவர்க்கும் தென்புலத்தவர்க்கும் நடந்த போரென்னும் பொய்க்கருத்து நாட்டில் நிலவவில்லை. மதர் - அழகு, ஒளி மிகுதியுமாம். செம்முகப் பைங்கிளை மந்திக்கூட்டம். எவ்வம் இருந்த எம்பால் நகைச்சுவை நுகரும் இன்பம் உளதாயிற் றென்பான், “எவ்வமுழந்ததன்றலை அறாஅ வருநகையினிது பெற்றிகும்” என்றான், தலைமையெய்திப் பெற்றது எவ்வமே; மகிழ்ச்சியன்று; சோழன் அருங்கலவெறுக்கை பொழிந்து இன்ப முறுவித்தான் என்பதாம். சோழன் கோயில் நீணகர் நின்று, ஒற்றி, பாட, பொழி தந்தோன்; ஒக்கல் அதுகண்டு தொடக்குநரும், செறிக்குநரும், யாக்குநரும், யாக்குநருமாய், கிளை பொலிந்தாங்கு, தலைமை யெய்தி உழந்ததன்றலை அருநகை இனிது பெற்றிகும் எனக் கூட்டி வினை முடிவு செய்க. விளக்கம் : இயன் மொழியின் இலக்கணம் முன்பே கூறப்பட்டது. “பெற்ற பின்னரும் பெருவள னேத்தி, நடைவயிற்றோன்றிய இருவகை விடை” (தொல். புறத். 30) என்ற சூத்திரத்திற்கு, “பரிசில் பெற்ற பின்னரும் அவன் கொடுத்த மிக்கவளனை யேத்தியது, வழக்கின்கண் தோன்றிய இருவகைவிடை” யென்றும், “அவையாவன, தான் போதல் வேண்டு மெனக் கூறுதலும், அரசன் விடுப்பப் போதலும்” என்றும் உரைத்து, வளன் ஏத்தலும் இருவகை விடையுமாக மூன்று பகுதியாக்க, வளன் ஏத்தியதற்கு இப்பாட்டைக் காட்டுவர் இளம்பூரணர்; நச்சினார்க்கினியர், இத்துறைக்கே இதனைக் காட்டி, “இதுதானே போவென விடுத்தபின் அவன் கொடுத்த வளனையுயர்த்துக் கூறியது” (தொல். புறத். 36) என்பர். கிணைப்பொருநன் சென்னியின் நீணகர் நின்று வஞ்சி பாடுதலும், இளஞ்சேட் சென்னி பெருவளன் நல்குதலும், பெற்றுச் சென்ற பொருநனுடைய சுற்றத்தார் செய்கையுமென இப் பாட்டு மூன்று பகுதிக்கண் அடங்கும். இளஞ்சேட் சென்னியின் கோயிலைக் கூறுபவன் அவனுடைய சிறப்பைப் பரதவர்மிடல் சாய்த்ததும், வடுகரது வாளாண்மை கெடுத்ததும் எடுத்தோதி, அவன் கோயில் வெள்ளிய சுதையாலமைந்து தண்ணிய காற்றும் ஒளியும் நிலவத்தக்க சிறப்புக் கொண்டிருந்த தென்பான் “புதுப்பிறையன்ன சுதைசெய்மாடத்துப், பனிக்கயத்தன்ன நீணகர்” என்று புகழ்கின்றான். வஞ்சியாவது, “எஞ்சா மண்ணசை வேந்தனை வேந்தன், அஞ்சுதகத் தலைச்சென் றடல்குறித் தன்று” (தொல். புறத். 7) எனவரும். எனவே, மண்ணாசை கொண்டு பகைத்துக் காலங்கருதியிருக்கும் பகைவேந்தர் மேற் சென்று அவரை வென்று அவர் நசையைக் கெடுத்தோங்கும் வினை செயல் வகையைப் பாடுவது வஞ்சியாயிற்று. இதனை விரித்துரைத்தற் கிடமின்மையின், “எஞ்சா மரபின் வஞ்சி பாட” எனச் சுருங்க வுரைக் கின்றான். இவ் வண்ணம் வஞ்சிப்போருடற்றித் தோற்ற வேந்தர் பணிந்து நல்கிய அருங் கலங்களைப் பொருநர் முதலாயினார்க்கு இளஞ்சேட் சென்னி நல்குகின்றானென்பான், “எமக்கென வகுத்த வல்ல......பொழிதந் தோனே” என்று இசைக்கின்றான். “பொழிதந்தோன்” என்றது, மழைபோல் சொரிந்தமை தோன்ற நின்றது. அருங் கலங்களைக் கண்ட கிணைப் பொருநன் சுற்றத்தார், “அவை தமக்கென வகுத்த வல்ல” என்பது காணாமல், சீதையின் “மதரணி கண்ட குரங்கின் செம்முகப், பெருங்கிளை இழைப் பொலிந் தாங்கு”க் கொண்டார் நகைக்கத்தக்க வகையில் அவ்வருங் கலன்களை அணியும் இடமும் முறையுந் தெரியாது அணிந்து மகிழ்ந்தனர் என்று சொல்லியின்புறு கின்றான். சுற்றத்துக்குத் தலைமை தாங்கிய தான் பெற்று வந்தது “அரும்பட ரெவ்வம்” எனவும், இப்போது பெறுவது “அறாஅ வருநகை” எனவும், கூறுவது பொருட்பேற்றிற் பிறந்த மருட்கை. 379. ஓய்மான் வில்லியாதன் ஓய்மான் வில்லியாதன் ஓய்மான் நல்லியக்கோடனுடைய வழித்தோன்றலாவன். “அரம்பையின் கீழ்க் கன்றும் உதவுங் கனி” யென்பது போல, இவனும் நல்லியக் கோடன்போலக் கொடைக் கடன் இறுக்கும் விரிந்த உள்ளம் படைத்தவன். தன் முன்னோன் காலத்தே தனது ஊராகிய மாவிலங்கைக்குப் போந்து, அவனைப் பாடிப் பெருஞ் சிறப்புச்செய்யப் பெற்றவர் புறத்திணை நன்னாகனா ரென்பதை நன்கு அறிந்திருந்தான் இந்த வில்லியாதன். புறத்திணை நன்னாகனார் நல்லியக் கோடனுக்குப் பின் அரசு கட்டிலேறித் தன் முன்னோனைப் போலவே வண்புகழ் நிறைந்து விளங்கும் வில்லியாதனைக்கண்டு இப் பாட்டினைப் பாடிச் சிறப்பித் துள்ளார். இதன்கண் தாம் வருங்கால் வில்லியாதனுடைய கிணைப் பொருநன் ஒருவனைத் தாம் கண்டவாறும், அவன் தமக்குக் கூறியவாறும் எடுத்தோதி அவன்கூற்றே தாம் இப்போது வருதற்கோ ரேதுவாயிற் றென்பதுபட வுரைத்துள்ளார். “நெல்வயல் நிறைந்து சூழ்ந்தது மாவிலங்கை; அதற்குரியவன் வில்லியாதன். அவனுடைய கிணைப்பொருநன் யான்; நெய்யிற் பொரித்த பன்றியூனும் சோறும் நாட்காலத்தே தந்து பசிதீர்க்கும் பண்புடையவன் என் தலைவன். அவன் தாணிழல் வாழும் வாழ்வே எனக்கு உண்டாகுக; என் நாவிசையெழும் பாட்டு அவற்கேயுரியவாகுக” என்ற அப்பொருநன் தமர் கூற, நாகனார், அதுகேட்டு, “அத்தகைய வள்ளியோனைக் காண்டல் வேண்டுமென்றெழுந்த வேட்கை உண்ணின்று உந்த, நின் திரு மனைக்கண் எழும் இனிய புகை யெழுந்து மறுகெங்கும் பரவி மழை முகில்போன் மறைக்கும் ஊர்க்கும் யான் வந்தேன்” என்ற இக் கருத்தே யமைய இப் பாட்டினைப் பாடியுள்ளார். மாவிலங்கை ஆழ்ந்த அகழும் நீண்ட மதிலும் உடையது. இது தென்னார்க்காடு சில்லாவில் திண்டிவனம் தாலுகாவில் இன்றும் இப் பெயர் திரியாமல் இருக்கிறது. ஓவியர் பெருமான் என்பது ஓய்மான் என மருவிற்று, அருமருந்தன்ன என்பது ‘அருமந்த’ என்பதுபோல. யானே பெறுகவன் றாணிழல் வாழ்க்கை அவனே பெறுகவென் னாவிசை நுவறல் நெல்லரி தொழுவர் கூர்வாண் மழுங்கிற் பின்னை மறத்தோ டரியக் கல்செத் து 5 அள்ளல் யாமைக் கூன்புறத் துரிஞ்சும் நெல்லமல் புரவி னிலங்கை கிழவோன் வில்லி யாதன் கிணையேம் பெரும குறுந்தா ளேற்றைக் கொழுங்க ணல்விளர் நறுநெய் யுருக்கி நாட் சோறீயா 10 வல்ல னெந்தை பசிதீர்த் தல்லெனக் கொன்வரல் வாழ்க்கைநின் கிணைவன் கூறக் கேட்டதற் கொண்டும் வேட்கை தண்டாது விண்டோய் தலைய குன்றம் பின்பட நசைதர வந்தனென் யானே வசையில் 15 தாயிறூஉங் குழவி போலத் திருவுடைத் திருமனை யதுதோன்று கமழ்புகை வருமழை மங்குலின் மறுகுடன் மறைக்கும் குறும்படு குண்டகழ் நீண்மதி லூரே திணை: பாடாண்டிணை. துறை : பரிசிற்றுறை. ஓய்மான் வில்லி யாதனைப் புறத்திணை நன்னாகனார் பாடியது. உரை : அவன் தாணிழல் வாழ்க்கையே யான் பெறுக - அவனது அருணிழலில் வாழும் வாழ்வே எனக்கு உண்டாகுக; என் நாவிசை நுவறல் அவனே பெறுக - என் நாவால் புகழ்ந்து பாடப்படும் பாட்டிசையை அவன் ஒருவனே பெறுவானாக; நெல்லரி தொழுவர் கூர்வாள் மழுங்கின் - நெல்லறுக்குங் களமர் தம்முடைய கூரிய அரிவாள் வாய் மழுங்குமாயின், பின்னை - பின்னையும்; மறத்தோடு அரிய - மறங்குன்றாது அரிய வேண்டி; கல் செத்து - தீட்டுக் கல்லாகக் கருதி; அள்ளல் யாமைக் கூன் புறத்து உரிஞ்சும் - சேற்றிற் பதிந்திருக்கும் யாமையின் வளைந்த முதுகோட்டில் தீட்டும்; நெல் லமல் புரவின் இலங்கை கிழவோன் - நெற்பயிர் நெருங்கிய விளைவயல் களையுடைய மா விலங்கையென்னும் ஊர்க்குத் தலைவனான; வில்லியாதன் கிணையேம் - ஓய்மான் வில்லியாதனுக்குக் கிணைப் பொருநராவோம்; பெரும - பெருமானே; எந்தை - எங்கள் தலைவனான அவன் குறுந்தாளேற்றைக் கொழுங்கண் நல்விளர் - குறுகிய கால்களையுடைய பன்றியின் கொழுவிய வூன் துண்டங்களான நல்ல வெள்ளிய வூனை; நறுநெய் உருக்கி - நறிய நெய்யையுருக்கி அதன்கட் பெய்து பொரித்து; நாட்சோறு ஈயாப் பசி தீர்த்தல் வல்லன் - நாட்காலையில் சோற்றுணவோடு கொடுத்து எம்முடைய பசியைப் போக்க வல்லவனாவான்; என- என்று; கொன்வரல் வாழ்க்கை நின் கிணைவன் கூற - விடியற்காலத்தே வந்து பாடும் மரபினையுடைய நின் கிணைப் பொருநன் வந்து எனக்குச் சொல்லவே; கேட்டதற் கொண்டும் வேட்கை தண்டாது - கேட்டதுகொண்டு நின்னைக் காண வேண்டுமென்றெழுந்த விருப்பம் அமையாமையால்; விண்தோய் தலையகுன்றம் பிற்பட - வானளாவிய உச்சியையுடைய குன்றுகள் பிற்பட்டொழிய; வசையில் தாயில் தூஉங் குழவி போல - குற்ற மில்லாத தாயிடத்துப் பாலுண்டற் கோடிவரும் குழவிபோல - நசைதர வந்தனன் யானே - நின்பாற் பெறலாகும் பரிசின்மேற் சென்ற ஆசை செலுத்த வந்தேன் யான்; திருவுடைத் திருமனை யது தோன்று கமழ்புகை - செல்வமுடையநின் திருமனைக்கண் மெல்லிதாகத் தோன்றும் நறிய புகை; வருமழை மங்குலின் மறுகுடன் மறைக்கும் - பெய்தற்கு வரும் மழைமுகில் படிந்து மறைப்பதுபோலத் தெருவெல்லாம் ஒருங்கு மறைக்கும்; குறும்படு குண்டகழ் நீள் மதிலூர் - அரணை யடுத்த ஆழ்ந்த அகழினையும் நீண்ட மதிலினையுமுடைய வூர்க்கு எ-று. ஆங்க: அசைநிலை, நின்கிணைவன் எம்மைநோக்கி, பெரும, கிணையேம், நாட்சோறீயா பசி தீர்த்தல் வல்லன் எனக்கூற என இயைக்க. வில்லியாதனுடைய ஆதரவு பெற்று வாழும் வாழ்க்கை நலத்தை நினையுமாற்றால் தன் நன்றியறிவும் கடப்பாடும் ஓதுவான், “யானே பெறுகவன் தாணிழல் வாழ்க்கை” என்றும், “அவனே பெறுகவென் நாவிசை நுவற” லென்றும் கூறினான். ஏகாரம் இரு வழியும் தேற்றம்; எதிர்வரும் கிணைவனையும் ஆற்றுப்படுக்கும் குறிப்பிற்றாமென அறிக. தொழுவர், களவர், புரவு விளைபுலம். இக்காலத்தும் மாவிலங்கை நாட்டவர் நெல்விளைவயலைப் புரவடை யென்ப. குறுந்தாளேற்றை யெனவே பன்றியாயிற்று. கொன், விடியற்காலம். விடியலிற் போந்து துயிலெடை நிலை பாடுவது கிணைப்பொருநன் கடனாதலின், “கொன்வரல் வாழ்க்கை நின் கினைவன்” என்றார். வேட்கையெழுந்து பரிசிற் பேற்றிற் கருத்தைச் செலுத்துதலின், “வேட்கை தண்டா” தென்றும், அதன் வயப்பட்டெழும் உள்ளம் பொருணசை நிறைந்து உந்துதலின், நசைதர வந்தனெ னென்றும் கூறினார். வசையில் தாய் என்றது, தாய் தன் குழவியின் பசிநிலையைத் தானே நினைந்தறிந்து பால் சுரந்தளிப்பதுபோல நீயும் எம் குறிப்பறிந்து நல்குதல் வேண்டு மென்றவாறு. தூஉங்குழவி, தூஉவரும்குழவி. மனையிடத்தெழுந்த கமழ்புகை மறுகுடம் மறைக்கு மென்றது, நின்புகழெழுந்து உலக முழுதும் பரவும் என்றவாறாம். நின் கிணைவன், என, கிணைவன் கூறக் கேட்டதிற்கொண்டும், தண்டாது பிற்பட, நசைதர, ஊர், குழவிபோல, வந்தனென் எனக் கூட்டி வினைமுடிவு செய்க. விளக்கம் : பரிசிற் றுறையாவது, “மண்ணகங் காவன் மன்னன் முன்னர், எண்ணிய பரிசில் இதுவென வுரைத்தன்று” (பு.வெ.மா. 9:5) என வரும். இவ்வகையில் உரைக்குமிடத்துத் தானே கூறுதலும், பிறர் கூறியதனைக் கொண்டெடுத்துக் கூறுதலும் எனப்பல வகை யுண்மையின், இப்பாட்டின்கண் புறத்திணை நன்னாகனார் கிணைப் பொருநன் கூற்றைக் கொண்டெடுத்து மொழிவது பரிசில் இதுவென வுரைப்பதாதலின், இப் பாட்டுப் பரிசிற்றுறை யெனத் துறை கூறப் படுவதாயிற்றென வறிக. வில்லியாதன் நல்கிய பெருவளம் பெற்ற கிணைவன் “யானே பெறுகவன் தாணிழல் வாழ்க்கை, அவனே பெறுக வென் நாவிசை” என்பது அவனது உள்ள நிறைவைக் குறிக்குமாயினும், பெற்ற வளத்தின் சிறப்பியல்பை வெளிப்படுத்தாமையின், அதனை யெடுத்து மொழிந்த நன்னாகனார், “குறுந்தாளேற்றை..... பசி தீர்த்தல் என” என அவன் கூறியதனை இறுதிக்கண் உரைத்தார். கொன்னைச் சொல் பெருமையும் (தொல். இடை. 6) குறிக்குமாகலின், கொன்வரல் வாழ்க்கை யென்றதற்குப் பெருவளப் பேற்றால் பெருமிதத் தோடு வரும் வாழ்க்கையை யுடைய கிணைவன் எனினும் பொருந்தும். மாவிலங்கை யென்பது தென்னார்க்காடு மாவட்டத்தில் திண்டிவனப் பகுதியில் மேன்மாவிலங்கை யெனவும் கீழ்மாவிலங்கை யெனவும் இரு கூறுற்று வழங்குகிறது. “நெல்லமல் புரவின் இலங்கை யென்றலின், இஃது இன்று போலப் பண்டும் நல்ல நெல்வளம் பொருந்தியவூராக இருந்திருந்த தென்பது குறிக்கத் தக்கது.” இப்பகுதியில் ஆதவில்லிக்கூத்தனூர் என்றோர் ஊருமுளது; இதனை நோக்கின், வில்லியாதனுடைய வழிவந்தோன் ஒருவன் ஆதன் வில்லி யெனப் பெயர் கொண்டிருந்து. தன்காலத்துக் கூத்தன் ஒருவனுக்கு ஆதவில்லிக் கூத்தன் என்ற சிறப்பளித்து அப்பெயரால் ஆத வில்லிக் கூத்தனூரை நல்கினான் என்பது தெரிகிறது. சென்ற 1938 முதல் தமிழ்நாட்டில் எடுக்கப்பெற்ற கல்வெட்டுக்களைப்பற்றிய ஆண்டறிக்கைகளேனும் இதுகாறும் வெளியிடப்படாமையால், இதனை மேலும் ஆராய்ந்து காண்பதற்கு வாய்ப்பில்லை. 380. நாஞ்சில் வள்ளுவன் நாஞ்சில்மலைத் தலைவனான இவ்வள்ளுவனை ஒருகால் கருவூர்க் கதப்பிள்ளை யென்பார் காணச்சென்றார். கருவூர்க் கதப்பிள்ளை சாத்தனாரென வேறொரு சான்றோர் இத்தொகை நூலுட் காணப்படுகின்றார். இவர் அச்சாத்தனார்க்குத் தந்தையெனக் கொள்ளல் தகும். இவர் வள்ளுவனைக் கண்டபோது, அவன் பெருவளந் தந்து இவரைச் சிறப்பித்தான் அக்காலை இப்பாட்டுப் பாடப் பெற்றது. இதன்கண், “வள்ளுவன் தென்னவனுக்குத் தானைத் தலைவன்; நாஞ்சில்மலைக்குத் தலைவன்; பகைமையுற் றோர்க்கு நினைவுக்கெட்டா நெடுஞ் சேய்மையில் உள்ளவன்; நட்புக்கொண்டு தன்பால் வருவோர்க்கு அங்கையினும் அண்மை யிலுள்ளவன்; அத்தகையனாதலால், எங்கும் எவர்க்கும் இன்மைத் துன்பம் வந்துவருத்துமாயினும் என் சுற்றத்தார் அத்துன்ப மின்றி இனிது மகிழ்ந்துள்ளனர்” என்று குறித்துள்ளார். இப் பாட்டு இடையிடையே சிதைந்துள்ளது. இதனிடையே “வல்வேற்சாத்தன் நல்லிசை” என்றோரு தொடர் காணப்படுகிறது. அதனை யடுத்து வரும் அடி சிதைந்து போனமையின் அஃது இன்னாரைக் குறிக்கிறதென்றறிய இயலவில்லை. டாக்டர். திரு.உ.வே. சாமி நாதையர் வல்வேற்கந்தனென்று பாடங் கொண்டு “கந்தனென்பது நாஞ்சில்மலைத் தலைவர் பரம்பரையி லுள்ளானும் இப்பாட்டுடைத் தலைவனுமாகிய ஒருவன் பெயர்” என்று கூறியுள்ளார். இந் நூலாராய்ச்சிக்குக் கிடைத்த ஏட்டில் “வல்வேற் சாத்த னல்லிசை” யென்று காணப்படுகிறது. தென்பவ் வத்து முத்துப் பூண்டு வடகுன் றத்துச் சாந்த முரீஇ . . . . . . . . . . .ங்கடற் றானை இன்னிசையை விறல்வென்றித் 5 தென்னவர் வயமறவன் மிசைப்பெய்தநீர் கடற்பரந்து முத்தாகுந்து நாறிதழ்க் குளவியொடு கூதளங் குழைய வேறுபெ. . . . . . . . . . .த் துந்து தீஞ்சுளைப் பலவி னாஞ்சிற் பொருநன் 10 துப்பெதிர்ந் தோர்க்கே யுள்ளாச் சேய்மையன் நட்பெதிர்ந் தோர்க்கே யங்கை நண்மையன் வல்வேற் சாத்த னல்லிசை..... . . . . . . . . . . .சிலைத்தார்ப் பிள்ளையஞ் சிறாஅர் அன்ன னாகன் மாறே யிந்நிலம் 15 இலம்படு காலை யாயினும் புலம்பல் போயின்று பூத்தவென் கடும்பே. திணை : பாடாண்டிணை. துறை : இயன்மொழி. நாஞ்சில் வள்ளுவனைக் கருவூர்க் கதப்பிள்ளை பாடியது. உரை : தென்பவ்வத்து முத்துப்பூண்டு - தெண்கடலிற் குளித் தெடுத்த முத்துமாலை சூடி; வடகுன்றத்துச் சாந்தம் உரீஇ - வடமலையிற் பெற்ற சந்தனத்தை யணிந்து;........... கடல்தானை - கடல் போன்ற தானையையும்; இன்னிசைய விறல் வென்றி - இனிய புகழையுடைய போர் வென்றியையு முடைய; தென்னவர் வயமறவன் - பாண்டியருடைய வலிமிக்க தானைத் தலைவனும்; மிசைப் பெய்த நீர் மேலே - விசும்பிலிருந்து மழை பொழிந்த நீர்; கடல் பரந்து முத்தா குந்து - கடற்குட் சென்று முத்தாகும்; நாறிதழ்க்குளவியொடு கூதளங் குழைய - நறுமணம் கமழும் மலைமல்லிகையோடு கூதாளி தழைத்து விளங்க; வேறு பெ....... துந்து-; தீஞ்சுளைப்பலவின் நாஞ்சிற்பொருநன் - தீவியசுளை களையுடைய பலா மரங்கள் நிறைந்த நாஞ்சில்மலையை யுடையவனுமாகிய தலைவன்; துப்பு எதிர்ந்தோர்க்கு உள்ளாச் சேய்மையன் - வலிகொண்டு போர் செய்ய வரும். பகைவர் களுக்கு நினைவுக்கெட்டாத சேய்மையிலுள்ளவனாவன்; நட்பு எதிர்ந்தோர்க்கு அங்கை நண்மையன் - நட்புக்கொண்டு நேர்படுபவருக்கு அவரது உள்ளங்கைபோல நெருங்கிய அண்மையனாவன்; வல்வேற் சாத்தன் நல்லிசை யல்லது - வலிய வேலையுடைய சாத்தனது நல்ல புகழையன்றி; .................சிலைத்தார்ப் பிள்ளையஞ் சிறார் - வில்லைப்போல் வளைந்த மாலையணிந்த பிள்ளைப்பருவத்தையுடைய சிறுவர்கள்; அன்னனாகன்மாறு - அத்தன்மையனாதலால்; இந்நிலம் இலம்படு காலையா யினும் - இந்நிலவுலகத்து மக்கள் வறுமையுற்று வருந்துங்காலம் வந்தபோதிலும்; பூத்த என் கடும்பு புலம்பல் போயின்று - பொற்பூவும் பொன்மாலையும் கொண்டு மகிழும் என் சுற்றத்தார் வருந்துதல் இலராயினர்; எறு. தென்கடல் முத்துக்கும் வடமலை சந்தனத்துக்கும் பெயர் பெற்றவையாதலின், அவற்றை விதந்தோதினார். வடமலை யென்றது இமய மலையை; வேங்கடமலையுமாம். வடவர் தமிழ் நாட்டிற்குள் வந்தபோது ஒருவகைச் சந்தனங் கொணர்ந்தனரென்ப; “வடவர் தந்த வான்கேழ் சந்தம்” (அகம். 340) என்பது காண்க. போர் செய்து பெற்ற வென்றி யென்பது விறல் வென்றி யெனப்பட்டது. பாண்டிவேந்தர்க்குத் துணையாய் அவன் தானைக்குத் தலைமை தாங்குபவன் என்றற்குத் “தென்னவர் வயமறவன்” என்றார். கடலில் மழைபெய்யுங்கால் முத்தீனும் நத்தைகள் நீர்மேல் வந்து தம் ஓட்டைத் திறந்து கொண்டிருக்குமென்றும், ஒரு துளி தன் ஓட்டிற்குள் வீழ்ந்ததும், ஓட்டை மூடிக்கொண்டு நீர்க்குட் சென்று விடு மென்றும், அதுவே பின்பு முத்தாகு மென்றும் பண்டையோர் கருதியிருந்தனராதலின், அக்கருத்தே தோன்ற, “மிசைப் பெய்தநீர் கடற்பரந்து முத்தாகுந்து”, என்றார். ஆகுமென்னும் உம்மை உந்தாயிற்று. நாஞ்சில், பொதியின் மலைத் தொடர்களுள் ஒன்று; இப்போது இது மருத்துமலை என வழங்குகிறது; முன்னாளில் இது நஞ்சிலாமலை என வழங்கிற்றென்பர். இது நாஞ்சில் நாட்டில் நாகர்கோயிலுக்கும் தென் குமரிக்கும் இடையில் உளது. இம் மலைக்கு வடகிழக்கில் உள்ள வள்ளியூர் இவ்வள்ளுவரது ஊராகலாம் என்பர். அவ்வூரில் பண்டைநாளில் இனிய கோட்டையிருந்ததெனக் கல்வெட்டு (A.R.No. 254 of 1927 - 28) கூறுகிறது. “உயர் சிமைய வுழாஅ நாஞ்சில்” (புறம். 139) என்று பிறரும் கூறுதல் காண்க. துப்பு, வலி; ஈண்டு அதனுடைமை காரணமாகக் கொள்ளும் பகைமை மேனின்றது. பகைமைகொண்டு போரெதிர்ந்தோர் பின்பு பகைமையின்றி அன்பு காட்டி யொழுகினா ராயினும், “பழம்பகைநட்பாதல் இல்” (பழ. 296) என்ற முதுமொழிகொண்டு அவரை நெருங்கவிடாத நேர்மை யுடையனென்றற்கு, “துப்பெதிர் தார்க்கேயுள்ளாச் சேய்மையன்”, எனவும் உண்மை யன்புடையார்க்குக் கைபோன் மிக்க வுதவியினைச் செய்பவனென்றற்கு, “நட்பெதிர்ந்தோர்க்கே அங்கை நண்மையன்” எனவும் எடுத்துரைத்தார் நணிமை, நண்மையென வந்தது. சாத்தன், இவனை வள்ளுவ னென்றோ, அவன் முன்னோருள் ஒருவ னென்றோ இன்னா ரென அறிய இயல வில்லை. மறவனும், பொருநனும், சேய்மை யனும் நண்மையனு மாகிய சாத்தன் என இயையும். புலம்பு, ஆதரிப்பாரின்றித் தனிமையுற்று வருந்தும் வருத்தம். இலம்படு காலை - வற்கடம். பூத்தல் செல்வத்தாற் சிறந்திருத்தல். விளக்கம் : இயன்மொழியாவது இன்னதென முன்னர்க் கூறினாம். திருக் குறளை வழங்கிய திருவள்ளுவரைக் கண்ட பிற்காலத்தார் இந் நாஞ்சில் வள்ளுவனைக் காணாதொழிந்தனர்; கண்டிருப்பின் திருவள்ளுவரை வள்ளுவர் மரபிற் பிறந்தவரென்றும் ஒரு புலைச்சிக்குப் பிறந்தவரென்றும் பொய்க்கதைகள் புனைந்து பொய் கூறியிருக்க மாட்டார்கள். நாஞ்சில் மலைக்குத் தலைவனாகிய வள்ளுவனும், திருக்குறளாசிரியராகிய திருவள்ளுவனாரும் வள்ளுவன் என்ற சிறப் புப்பெயர் கொண்டு விளங்கியவராவர். இவர்கள் வழிவந்தோர் வள்ளுவர்களாய் இடைக்காலத்தே அரச காரியம் பார்த்துவந்த மேலோராவர். மலையாளசில்லாவைச் சேர்ந்த பொன்னானிப் பகுதியிலுள்ள சுகபுரத்துக் கல்வெட்டொன்று, “சொகிரத்துப் பருடையாரும்.... இராயசேகரராயின வள்ளுவரும் கூடிச் செய்த கச்சமாவது” (S.I. Ins. Vol. V No. 772) என வள்ளுவர்களை “இராயசேகரர்” என்பது இக்கருத்தை வற்புறுத்தும். இப் பாட்டு இடையே பெரிதும் சிதைந்துள்ளது. “தென்னவர் வய மறவன்” என்றும், “நாஞ்சிற் பொருநன்” என்றும், வருவன இடைக்கால வள்ளுவர்கள் “இராயசேகரராய்” இருந்ததற்குத் தக்க சான்றாகும். துப்பெதிர்ந்தோர், பகைத்தெழுந்தோர்; “கடுமான் கோதை துப்பெதிர்ந் தெழுந்த நெடுமொழி மன்னர்” (புறம். 54) எனவும், “துப்பி னெவனாவர் மற்கொல் துயர்வரவு, நட்பினுள் ஆற்றுபவர்” (குறள். 1165) எனவும் வருதல் காண்க. வள்ளுவனது கொடைநலத்தைச் சிறப்பித் துரைப்பாராய், “இந்நிலம் இலம்படு காலையாயினும் பூத்தவென் கடும்பு புலம்பல் போயின்று” என்று கூறினார். மறவன், பொருநன், சேய்மையன், நண்மையன், வல்வேற் சாத்தன் என்றலின், இப் பாட்டுடைத்தலைவன், நாஞ்சில் வள்ளுவன் சாத்தன் என்று பெயர் கூறப்படுவன்போலும். 381. கரும்பனூர்கிழான் கரும்பனூர் என்பது தொண்டைநாட்டுத் திருவேங்கடக் கோட்டத்திலுள்ள தோரூர். திருக்கழுக்குன்றத்துக் கல்வெட் டொன்று, “கரும்பனூர் வணிகன் ஆதித்த” (A.R. No. 76 of 1932 - 3) னென்பவனைக் குறிக்கின்றது. இவனை ஒருகால் நன்னாகனா ரென்னும், சான்றோர் கிணைவரும் பாணருமாகிய சுற்றத்தாருடன் கரும்பனூர் சென்று கண்டார். அவன் இவர்களை வரவேற்று நல்விருந்து செய்து சிறப்பித்தான். அங்கே அவர்கள் சின்னாள் தங்கியிருந்து பின் பொருநாள் தம்மூர் போதற்கு அவன் பால் விடைவேண்டினர். அவன் சான்றோர் பிரிவைப் பெரிதும் விரும்பானாய் அஞ்சிச் சின்னாள் தன்பால் இருக்க வைத்தான். இதற்கிடையே நாட்டில் வறனுண்டாயிற்று; கோடையும் மிகுந்தது. மீளவும் ஒருநாள் அவர் விடை வேண்டவே, அவர்க்கும் அவர் சுற்றத்தார்க்கும் மிக்க செல்வத்தை நல்கி நீவிர் நாடுவறங்கூர நின்று வருத்தும் கோடை நீங்கிய காலத்து ஈயாத புல்லராகிய வேந்தர் மனைக்குச் சென்று வருந்திப் பாடித் துன்புறல் வேண்டா; எம்பால் வருக; யாம் நுமக்கு வேண்டுவன நல்கிப் போற்றுவேம்; நீவிர் சேய்மை யிலிருப்பினும் இந்நாட்டிலிருப்பினும் கவலை யுறாது; வருக; அக்காலை யாம் செய்வதனை இது கொண் டறிந்து கொள்க” என்றான். அவன் அறத்துறையம்பிபோல் விளங்கு வதனை இப் பாட்டின்கண் ஆசிரியர் எடுத்துரைத் துள்ளார். ஊனு மூணு முனையி னினிதெனப் பாலிற் பெய்தவும் பாகிற் கொண்டவும் அளவுபு கலந்து மெல்லிது பருகி விருந்துறுத் தாற்றி யிருந்தனெ மாகச் 5 சென்மோ பெருமவெம் விழவுடை நாட்டென யாந்தன் னறியுந மாகத் தான்பெரி தன்புடை மையி னெம்பிரி வஞ்சித் துணரியது கொளாஅ வாகிப் பழமூழ்த்துப் பயம்பகர் வறியா மயங்கரின் முதுபாழ்ப் 10 பெயல்பெய் தன்ன செல்வத் தாங்கண் ஈயா மன்னர் புறங்கடைத் தோன்றிச் சிதாஅர் வள்பிற் சிதர்ப்புறத் தடாரி ஊன்சுகிர் வலந்த தெண்க ணொற்றி விரல்விசை தவிர்க்கும் மரலையில் பாணியின் 15 இலம்பா டகற்றல் யாவது புலம்பாடு தெருமர லுயக்கமுந் தீர்க்குவெ மதனால் இருநிலங் கூலம் பாறக் கோடை வருமழை முழக்கிசைக் கோடிய பின்றைச் சேயை யாயினும் மிவணை யாயினும் 20 இதற்கொண் டறிநை வாழியோ கிணைவ சிறுநனி ஒருவழிப் படர்கென் றோனே யெந்தை ஒலிவெள் ளருவி வேங்கட நாடன் உறுவருஞ் சிறுவரு மூழ்மா றுய்க்கும் அறத்துறை யம்பியின் மான மறப்பின் 25 றிருங்கோ ளீராப் பூட்கைக் கரும்ப னூரன் காதன் மகனே. திணையுந் துறையுமவை. கரும்பனூர் கிழானைப் புறத்திணை நன்னாகனார் பாடியது. உரை : ஊனும் ஊணும் முனையின் - இறைச்சியும் சோறுமாகிய வற்றைத் தெவிட்டி வெறுத்தால்; பாலிற்பெய்தவும் பாகிற் கொண்டவும் - பால் கலந்து செய்தனவும் வெல்லப் பாகு கொண்டு செய்தனவுமாகிய பண்ணியங்களை; இனிதென அளவுபு கலந்து - இது மிக வினி தென்னுமாறு நன்கு கலந்து; மெல்லிது பருகி - மென்மையுண்டாகக் கரைத்துக் குடித்துண்டு; விருந்து உறத்து - விருந்தாகி; ஆற்றி இருந்தெனமாக - பசி போக்கிப் பன்னாள் இனிதிருந்தேமாக; பெரும - பெருமானே; எம் விழவுடைநாட்டுச் சென்மோ என - எம்முடைய விழாப் பொருந்திய நாட்டிற்குச் செல்ல வேண்டினேம் விடையருளுக என்று; யாம் தன் அறியுநமாக - யாங்கள் அவனுக்கு அறிவித் தேமாக; தான் பெரிய அன்புடைமையின் - அவன் தான் மிக்க அன்புடையனாதலால்; எம் பிரிவு அஞ்சி - எம்மைப் பிரிதற்கு அஞ்சி; துணரியது கொளாவாகிப் பழமூழ்த்து - குலை குலையாகப் பூத்துள்ளதாயினும் எவ்வுயிர்களாலும் கொள்ளப் படாவாய்ப் பழுத்துக் கனிந்து; பயம் பகர்வறியா - பயன்படுதற் கியலாதவாறு; மயங்கரில் முதுபாழ்ப் பெயல்பெய்தன்ன - முட்கள் கலந்த கொடிகள் பின்னிக்கிடக்கும் புதரிடையே நின்று வற்றும் முதிய பாழிடத்தின்கண் மழைபெய்தாற் போன்ற; செல்வத் தாங்கண் - செல்வமிக்க இடத்தையுடைய; ஈயா மன்னர் புறங்கடைத் தோன்றி - இரவலர்க்கு ஈயாத வேந்தர் முற்றத்தில் நின்று; சிதாஅர் வள்பின் சிதர்ப்புறத் தடாரி - துண்டித்த வார்களாற் கட்டப்பட்ட சிதர்ந்த புறத்தை யுடைய தடாரிப்பறையை; ஊன் சுகிர் வலந்த தெண்கண் ஒற்றி - ஊனால் தெற்றப்பட்ட தெளிந்த கண்ணிடத்தேயறைந்து; விரல் விசை தவிர்க்கும் அரலையில் பாணியின் - விரலால் நொடிக்கும் நொடி விசையின் மேம்பட்ட குற்றமில்லாத தாளத்தோடு கூடிய பாட்டால்; இலம்பாடகற்றல் யாவது - வறுமையைப் போக்குவது கூடாதாம்; புலம்பொடு - ஆதர வற்ற தனிமைத் துயரத்துடனே, தெருமரம் உயக்கமும் தீர்க்குவெம் - வள்ளியோரைச் சூழ்ந்து திரியும் வருத்தத்தையும் யாம் போக்குவோம்; அதனால் -; இரு நிலம் கூலம் பாற - பெரிய இந்நிலவுலகம் கூலமின்றிக் கெடுமாறு நின்ற;கோடை - வேனில் வெம்மை மிக்க வறற்காலம்; வருமழை முழக்கிசைக்கு ஓடியபின்றை - வருகின்ற மழை முகிலினது முழக்கிசையுடன் பெய்து நீங்கியபின்பு; சேயையாயினும் - நெடுந்தொலைவிலுள்ள நாட்டில் இருப்பினும், இவணையாயினும் - இந்த நாட்டிடத்தே யிருந்தாயாயினும்; இதற்கொண்டு அறிநை - இது கொண்டு நினைவாயாக; கிணைவு - கிணைவனே; வாழி - வாழ்வாயாக; சிறுநனி ஒருவழிப் படர்க - ஒருவழியே சிறிது பெரிது நினைந்து ஒழுகுவாயாக; என்றோன் - என்று சொன்னான்; எந்தை - எங்கள் தலைவன்; ஒலி வெள்ளருவி வேங்கடநாடன் - ஒலிக்கின்ற வெள்ளிய அருவி பொருந்திய வேங்கடநாட்டுக் குரியவன் ; உறுவரும் சிறுவரும் ஊழ்மாறு உய்க்கும் - அறத்துறை அம்பி யின் மான பெரியவராயினும் சிறியவராயினும் வருவோரை இருகரையினும் மாறிமாறிக் கொண்டுபோய்விடும் நீர்த்துறை யிடத்துள்ள அறத்துக்குழைக்கும் தெப்பம் போல; மறப்பின்று - மறவாமல்; இருங்கோள் ஈராப்பூட்கை - பெரிய கடைப் பிடியும் பிறரால் ஈர்த்து விலக்கப்படாத கொள்கையையு முடைய; கரும்பனூரன் காதல் மகன் - கரும்பனூர் கிழானுக்கு அன்புடைய மகன்; எ-று. ஊனுணவும் நெல்லுணவும் மிகவுண்டலால் வெறுப்புண் டாகிய வழி, அதனை மாற்றப் பாற்பெய்து சமைத்த பாயசம் போல்வனவும் வெல்லப்பாகுகொண்டு மிக்க இனிப்புச்சுவை கனிந்த பண்ணிகாரங்களும் உண்பது கூறுவான், “பாலிற் பெய்தவும் பாகிற் கொண்டவும் ” என்றான். ஊனுஞ் சோறுந்தின்று பல் கூர்மை மழுகிக் கெட்டமை தோன்ற “அளவுபு கலந்து மெல்லிது பருகி”யென்றார். மென்மையானவற்றைத் தின்றல் கூடாமையின் “பருகி”யென்றார். பருகுமிடத்து விழுங்குதலும் நிகழுமாகலின். இருந்தன மென்றது, பன்னாள் இனி திருந்தமை புலப்படுத்தி நின்றது. அறிவித்தனமென்பது அறியுந விடைவேண்டற்குக் காரணம் கூறுவான், “எம் விழவுடை நா” டென்றான். விழவுக் காலத்தில் பிரிந்தவர் தத்தம் ஊர் மீளச்செல்ல வேண்டுமென்பது பண்டையோர் முறை. துணர்தல், கொத்துக்களையுடையதாதல். முட்கள் நிறைந்த கொடிகள் பின்னிக் கிடக்கும் புதரிடையே பூத்துக் கனிந்திருக்கும் பழங்கள் கொள்ளப்படா லாகலின். “பழமூழ்த்துப்பயம் பகர்வரிய மயங்கரில்” என்றார். மயங்கரில் ஊழ்த்த பழமும் முதுபாழிற் பெய்த மழையும் பயன்படாதவாறு போல ஈயாத மன்னரிடத் துண்டாகிய செல்வமும் அவர்முன் சென்று பாடும்பாட்டும் பயன்படாவென்பது கருத்து. ஊன்கதிர் - தோலின்கண் ஒட்டிக்கிடந்து காய்ந்து பொருக்காக இருக்கும் ஊன்பிசிர். வலத்தல், தெற்றுதல். பாட்டிசை முடுகுமிடத்துத் தாளத்தின் கடுமைக்கு விரல் நொடியின் விசை ஆற்றாமைகண்டு, “விரல்விசை தவிர்க்கும் பாணி” யென்றும், அவ்வாற்றால் பாட்டின் அமைதி குறைவுபடாமை தோன்ற “அரலையில் பாணி” யென்றும் கூறினார். யாவது, ஈண்டு, இன்மை குறித்து நின்றது. தெருமரல் உயக்கம், வள்ளியோர் உண்மை சூழ்ந்து அவரிருக்கும் இடநாடிப் பறவைபோலத் திரிவதாற்பிறக்கும் துன்பம். அறிநை மறவாதொழிக. அறிதல் ஈண்டு செய்ந்நன்றி யறிதல் என்புழிப்போல நின்றது. கோள், கடைப்பிடி. கண்ணன்ன கேளிர் வந்து விலக்கினும் விலகாத உரம்பற்றி, “ஈராப் பூட்கை” யென்றார். இருங்கேள் ஈராப் பூட்கை யென்றும் பாடவேறுபா டுண்டு. கலந்து, பருகி, விருந்துறுத்து, ஆற்றி இருந்தனமாக, அறியுநமாக, நாடன், மகன், அஞ்சி, தோன்றி, ஒற்றி, அகற்றல் யாவது; தீர்க்குவெம், அதனால் கிணைவ, சேயையாயினும் இவணையாயினும், அறிநை படர்க என்றானெனக் கூட்டி வினை முடிவு செய்க. விளக்கம் : கரும்பனூர் என்னும் தொண்டைநாட்டூர் இப்போது கரும்பூர் என வழங்குகிறது. “ஊனும்....ஊணும் விருந்துறுத்தாற்றி யிருந்தெனமாக” என்பது கரும்பனூர்கிழான் கிணைப்பொருநர்க்குச் செய்த விருந்தின் சிறப்புணர்த்தி நிற்கிறது; கரும்பனூர்கிழான் கிணைவனுக்கு விடை தருங்கால், நீவிர் ஈயா மன்னர் புறங்கடைத்தோன்றி, அரலையில் பாணியின் இலம்பா டகற்றல் யாவது, புலம்பொடு தெரு மரல் உயக்கமும் தீர்க்குவெம்; இலம்பாடு உற்றவழி இவணையாயினும் சேயையாயினும் எம்பால் வருக. என்பான். “இதற்கொண்டறிநை” என்பது, அவனது வேளாண்மையை விளக்கி நிற்கிறது. இனி விழவு தோன்றிய காலத்துப் பிரிந்தோர், மனையகம் வந்து சேர்தல் வேண்டுமென விழைவது இயல்பாதலை, “மழைகால் நீங்கிய மாக விசும்பின், குறுமுயன் மறுநிறங் கிளர மதிநிறைந், தறுமீன் சேரு மக லிரு ணடு நாள், மறுகு விளக்குறுத்து மாலை தூக்கி, பழவிறன் மூதூர்ப் பலருடன் துவன்றிய, விழவுட னயர வருகதில் அம்ம (பிரிந்த காதலர்)” (அகம் :141) என்று சான்றோர் கூறுவது காண்க. “பெற்ற பின்னரும் பெருவளன் ஏத்தி, நடைவயின் தோன்றிய விருவகை விடையும்” (தொல். புறத். 30) என்றவிடத்து இருவகை விடையாவன; “தான் போதல் வேண்டுமெனக் கூறுதலும், அரசன் விடுப்பப் போதலும்” என்றுரைத்துத்தான். பிரிதல் வேண்டிக் கூறியதற்கு இளம்பூரணர் இப்பாட்டைக் காட்டுவர். “தாவில் நல்லிசை” (தொல். புறத். 36) என்ற சூத்திரத்தில், “பரிசில் கடைஇய கடைக்கூட்டுநிலை” என்பதில், “நிலையென்றதனானே பரிசில் பெறப் போகல் வேண்டுமென்னும் குறிப்பும் பரிசில் நிலையும் பல்வகை யாற் கூறுதல் கொள்க” என்று ஓதி, இப் பாட்டை யெடுத்துக் காட்டி, “இது மேலும் இக்காலத்தும் இங்ஙனம் தருவ லென்றானெனக் கூறினமை யின் அவன் பரிசில்நிலை கூறிற்” றென்பார் நச்சினார்க்கினியர். 382. சோழன் நலங்கிள்ளி சோழன் நலங்கிள்ளிபால் ஆசிரியர் கோவூர் கிழார் பேரன்புடையவரென்பதை முன்பே கண்டுள்ளோம். நலங்கிள்ளி சிறந்த போராண்மையும் மிகுந்த கைவண்மையும் உடையன். ஒரு கால் அவர் நலங்கிள்ளியிட மிகுந்த பொருநர் சிலரைக் கண்டார். அவர்கள் வறுமைச் சிறுமையின்றி மிக்க மகிழ்ச்சியுடனிருந்தனர். அவர்களோடு கோவூர்கிழார் சிறிது போது உரையாடினார். பொருநர் தலைவன் தான் சோழ நாட்டு மறம்பாடும் பொருநன் என்றும், தானும் தன் சுற்றத்தாரும் சோழன் நலங்கிள்ளியின் போர்க்களம் பாடும் பொருநர் என்றும் கூறி, “யாங்கள் பாடினால் சோழன் நலங்கிள்ளியைப் பாடுவோமேயன்றிப் பிறரைப் பாடுவதை விரும்ப மாட்டோம் அவனையே பாடுவோம்; அவன் முயற்சி வெல்க,” என்று சொல்லி, அவன்பாற் செல்லின் நின்பசித்துன்பம் நீங்க அவன் நெய்யிற் பொரித்தவூனும் பல்வகைச்சோறும் சுவையுடைய பிறவும்நல்குவன்” என்று ஆற்றுப்படுத்தினர். இதனான் வியப்பு மிகக்கொண்ட கோவூர்கிழார் சோழனையடைந்து, “பெரும, நின் பொருநர் இவ்வாறு கூறுகின்றனர்; அதுகேட்டு நீ முன்னால் பரிசில் நல்கிச் செலவிட்ட பொருநராகிய சிறாருடனே யான் வழிவினாய் வந்துள்ளேன். என்னைப் பாம்புபோல் தீண்டி வருத்தும் வறுமை நீங்க, யானும் என்பால் வருவோர்க்கு வழங்கு தற்கேற்ப வளம் பல தந்துவிடுவாயாக இவ்வியனுலகு பலரும் அறிய நினதேயாகும். அவ்வாறே, இக்கிணைப்பறை எனதாகும். இக்கிணையின் கண் சிறுகோலால் எறியுந் தோறும் நுடங்குவது போல் பிற வேந்தர் கேட்குந்தோறும் உள்ளம் நுடங்குமாறு நின் மாண்புகழை அவர் அவைக்களஞ் சென்று அவர் எதிரே நின்று பாடுவேன். காண், என்று கிணைப் பொருநன் ஒருவன் கூற்றில் வைத்து இப்பாட்டைப் பாடியுள்ளார்.” கடற்படை யடற்கொண்டி மண்டுற்ற மறனோன்றாள் தண்சோழ நாட்டுப் பொருநன் அலங்குளை யணியிவுளி 5 நலங்கிள்ளிப் நசைப்பொருநரேம் பிறர்ப்பாடிப் பெறல் வேண்டேம் அவற்பாடுது மவன்றாள் வாழியவென நெய்குய்ய வூனவின்ற பலசோற்றா னின்சுவைய 10 நல்குவனின் பசித்துன்பற என்பநின் பொருநர் பெரும வதற்கொண்டு முன்னாள் விட்ட மூதறி சிறா அரும் யானும், ஏழ்மணியங் கேழணி யுத்திக் கட்கேள்விக் கவை நாவின் 15 நிறனுற்ற வராஅப் போலும் வறனொரீஇ வழங்குவாய்ப்ப விடுமதி யத்தை கடுமான் றோன்றல் நினதே. முந்நீ ருடுத்த விவ் வியனுல கறிய எனதே, கிடைக்கா ழன்ன தெண்கண் மாக்கிணை 20 கண்ணகத் தியாத்த நுண்ணரிச் சிறுகோல் எறிதொறு நுடங்கி யாங்குநின் பகைஞர் கேட்டொறு நடுங்க வேத்துவென் வென்ற தேர்பிறர் வேத்தவை யானே. திணை : பாடாண்திணை. துறை: கடைநிலை. சோழன் நலங் கிள்ளியைக் கோவூர்கிழார் பாடியது. உரை : கடற்படை அடல் கொண்டி - கடலிற் படை கொண்டு சென்று பகைவரை யடுதலாற் கொள்ளலாகும் பெரும் பொருள்; மண்டுற்ற மற நோன்றாள் - நெருங்கிப் பெருகிய மறம் பொருந்திய வலிய தாளையுடைய; தண் சோழநாட்டுப் பொருநன் - தண்ணிய சோழரது நாட்டில் வாழும் பொருநன்; அலங்குஉளை அணி இவுளி நலங்கிள்ளி - (யாங்கள்) அசை கின்ற தலையாட்டமணிந்த குதிரைகளையுடைய நலங்கிள்ளியது; நசைப் பொருநரேம் - விருப்பத்துக்குரிய பொருநராவோம். பிறர்ப் பாடிப் பெறல் வேண்டேம் - பிற வேந்தரைப் பாடி அவர் ஒன்று தரப்பெறுவதை விரும்ப மாட்டேம்; அவன் தாள்வாழிய என - அவனது முயற்சியால் நடைபெறும் அரசியல் வாழ்வதாக என்று; அவற்பாடுதும் - அவனையே பாடுவோம்; நெய் குய்ய ஊன் நவின்ற பல சோற்றான் - நெய்யால் தாளிதம் செய்யப்பட்ட வூன் கலந்த பலவகையான சோற்றுடனே; இன் சுவைய - இனிய சுவையுடைய பிற பொருள்களையும்; நின் பசித்துன்பற நல்குவன் - நீ செல்லின் நின் பசித் துன்பம் நீங்குமாறு கொடுப்பன்; என்ப நின் பொருநர் - என்று கூறாநின்றனர் நின்னுடைய பொருநர்; பெரும - பெருமானே; அதற்கொண்டு - அதனால்; முன்னாள் விட்ட மூதறி சிறாரும் - முன்னாள் நீ பரிசில் தந்து விட்ட தொன்முறையறிந்த சிறுவரும்; யானும் -; ஏழ்மணியங்கேழ் அணி உத்தி - எழுச்சியையுடைய மணியையும் நிறம் பொருந்திய பொறிகளையும்; கட்கேள்விக் கவைநாவின் - கண்ணிற் பொருந்திய செவியையும் சுவைத்த நாவையுமுடைய; நிறன் உற்ற அரா அப் போலும் - நிறம்பொருந்திய பாம்பு தன் தோலை யுரித்து நீக்கினாற்போல; வறன் ஒரீஇ - வறுமையின் நீங்கி; வழங்கு வாய்ப்ப - பிறர்க்கும் யாம் வழங்குதல் அமைய; கடுமான் தோன்றல் - கடுகிச் செல்லும் குதிரைகளையுடைய தலைவனே; விடுமதி - எமக்கு வேண்டுவன தந்து விடை தருவாயாக; முந்நீர் உடுத்த இவ்வியனுலகு அறிய நினதே - கடல் சூழ்ந்த இவ்வகன்ற உலகம் சான்றோர் பலரும் அறிய நின்னுடையதேயாகும்; கிடைக்காழ் அன்ன தெண்கண் மாக்கிணை அறிய - எனது நெட்டியின் காம்புபோன்ற தெளிந்த கண்ணையுடைய பெரிய தடாரிப்பறை பலருமறிய என்னுடையதாதல்போல; கண்ணகத்து யாத்த நுண்ணரிச் சிறுகோல் - இதன் கண்ணிற் கட்டப்பட்ட நுண்ணிய அரித்த வோசையை யெழுப்பும் சிறியகோலானது; எறிதொறும் - அடிக்குந்தோறும்; நுடங்கியாங்கு - தடாரியின் கண் நடுங்குவது போல; நின் பகைஞர் கேட்டொறும் நடுங்க - நின் பகைவர் கேட்குந்தோறும் மனம் நடுங்குமாறு; பிறர் வேத்தவையான் - பிற வேந்தருடைய அவையின்கண்; வென்ற தேர் ஏத்துவென் - நின்னால் வெல்லப்பட்ட தேர்களைச் சொல்லிப் பாராட்டிப் புகழ்வேன்; எ-று. கலங்களிற் சென்று அருமணம் (பர்மா) சாவகம் சீனம் ஈழம் முதலிய நாடுகளிலிருந்து பெரும்பொருள் ஈட்டி வருவது பண்டைத் தமிழர் மரபு அந்நிலையிற் பகைவர் கடலிற் கலஞ்செலுத்திப் போந்து சூறையாடுபவாதலின் அவர்களொடு பொருது அவர் செய்யும் குறும்பினைக் களைதல் வேண்டிக் கடற்படை வேண்டியிருந்தமையின், கடற்படையும் அதுகொண்டு பெறும் பெரும்பொருளும் எடுத்தோதப்பட்டன. சோழன் நலங்கிள்ளியைப் பாடிய நாவால் பிறவேந்தரைப் பாடி அவர்தரும் பொருளை விரும்பேம்; பொருள் குறித்துப் பிறர் பாற் செல்லவேண்டாத அளவு அவன் எங்கட்கு வேண்டுவன நிரம்பத் தருவன், அவனது நெடுவாழ்வே எங்கட்குப் பெருஞ் செல்வமாம் என்பான்,” அவற் பாடுதும் அவன்றாள் வாழிய என்றான். முன்னாள் விட்ட சிறாரென்றது . முன்னாள் பரிசில் தந்துவிடப்பட்ட சிறுவர். ஆண்டால் இளையராயினாரை, “சிறாஅர்” என்றார். மூதறிவு, பொருநர்க்கெனப் பழைமை யாய்த் தொன்றுதொட்டு வரும் பாடற்றுறை யறிவு. ஏழ்மணி, எழுச்சியையுடையமணி. எழுச்சி, உயர்ந்த மதிப்பு. பாம்பின் கட்பொறியே செவிப்புலனையு முடைய தென்பது பண்டை யோர் கொள்கை; பாம்பைக் கட்செவியென்றும் வழக்கும் நாட்டில் உண்மையறிக. பாம்பிற்கு அதன் தோல்போல எமக்கு வறுமை யமைந்துளது என்பார், “அராஅப்போலும் வறனொரீஇய” என்றார். வழங்கு. முதனிலைத் தொழிற்பெயர். கிணையின் கண்ணிடத்தே சிறுகோலைப் கட்டி வைப்பது இயல்பு. “நுண்கோற் சிறுகிணை” (புறம். 383) என்பர் பிறரும். கிணைவன் கூற்றாதலின் அதற்கேற்ப அவன் பயின்ற சிறு கோலும் தடாரிக்கண்ணின் நடுக்கமும் உவமமாகக் கூறப் பட்டன. சோழ நாட்டுப் பொருநன்; பொருநரேம்; வேண்டேம்; வாழிய எனப்பாடுதும், நின் துன்பற நல்குவன் என்ப; பெரும, அதற் கொண்டு, சிறாரும் யானும் அராஅப் போலும் வறன்ஒரீஇ, வாய்ப்ப, தோன்றல், விடுமதி, உலகம் நினதே; மாக்கிணை உலகறிய எனதுபோல சிறுகோல் நுடங்கியாங்கு, பகைஞர் நடுங்க, வேத்தவையான் ஏத்துவென் எனக் கூட்டி வினை முடிவு செய்க. அத்தை, அசைநிலை. விளக்கம் : கடை நிலையாவது, ஆசிரியர் தொல்காப்பியனாரால் “பரிசில் கடைஇய கடைக்கூட்டுநிலை” (தொல். புறத். 36) எனப்பட்டதாக, புறப் பொருள் வெண்பாமாலைக்காரரால் பரிசினிலை யெனப்பட்டது. அஃதாவது “புரவலன்மகிழ் தூங்க, இரவலன் கடைக்கூடின்று” (பு.வெ.மா. 9:25) என வரும். “பரிசில் கடைஇய கடைக்கூட்டு நிலை” யென்றதனை, பரிசில் கடைஇய நிலையும் கடைக்கூட்டு நிலையும் என்று இரண்டாகக் கொண்டு, கடைக்கூட்டு நிலையாவது “வாயிலிடத்தே நின்று தான் தொடங்கிய கருமத்தினை முடிக்கும் நிலை” யென்றுரைத்து, “நிலையென்றதனானே பரிசில்பெறப் போகல் வேண்டுமென்னும் குறிப்பும் பரிசில் நிலையும் பல்வகையாற் கூறுதல் கொள்க.” என்பார் நச்சினார்க்கினியர். ஆசிரியர் கோவூர்கிழார் இப்பாட்டு, சோழன் நலங்கிள்ளியின் கிணைப்பொருநன் கூற்றைக் கொண்டெடுத்து மொழியும் பகுதியும், தான் வேண்டும் பரிசுநிலை கூறும் பகுதியும், தான்வேண்டும் பரிசில் நிலை கூறும் பகுதியும், பரிசில் பெறும் தான் செய்யக்கருதும் செயல்நிலை கூறும் பகுதியுமென்று மூன்று பகுதிகளையுடையது. கிணைப்பொருநன் கூறுவன தாம் நன்கறிந்தனவாயினும், தாம் நேரே வேந்தன் முன்னின்று கூறுதல் சிறப்பன்மையின்,கிணைவன் கூற்றில் வைத்துக் கொண்டு கூறினார்; அவன் கூறியன தமக்கும் உடன்பாடே யென்பதும் இதனால் பெறுவித்தாரென அறிக. “பிறர்பாடிப் பெறல்வேண்டேம், அவற்பாடுதும் அவன்றாள் வாழிய” எனப் பொருநன் கூறவதனோடு, புறத்திணை நன்னாகனார், “யானே பெறுகவன் றாணிழல் வாழ்க்கை, அவனே பெறுகவென் னாவிசை நுவறல்” (புறம். 379) என்பது ஒப்பு நோக்கத்தக்கது. இவ்வாறு கூறுவது கிணைப்பொருநர் இயல்பென அறிக. அரவின் தோல் புதுத்தோலுண்டாக நீங்குவதுபோல, வறுமையும் செல்வமுண்டாக நீங்கத் தக்கதென்பது விளங்க,” அரா அப்போலும் வறன் ஒரீஇ” என்றார். எனக்கு வழங்குவதால், நின் பகை யொடுக்கம் பயனாகக் காண்பாய் என்பார், “நின்பகைஞர்..... வேத்தவை யானே” என்றார். 383. மாறோக்கத்து நப்பசலையார் மாறோக்கம் என்பது கொற்கையைச் சூழ்ந்த பகுதியாகும். இஃது இடைக்காலத்துக் குட நாட்டையும் முள்ளிநாட்டையும் தன்கண் கொண்டிருந்தது. இப்பகுதியிலுள்ள மாறமங்கலத்தை நற்குடி வேளாளர் வரலாறென்னும் தமிழ்நூல் (அகத். 38) ஓகமகாநக ரென்று குறிக்கிறது. மாறமங்கலமாகிய ஓகமாநகர்ப் பகுதி குட நாட்டுப் பகுதி; மாறோக்கத்து முள்ளிநாட்டில் கல்லிடைக்குறிச்சியும் சேரலன்மாதேவியும் இருந்தன எனக் கைந்நிலையென்னும் நூற்குறிப்பால் அறிகின்றோம். இப்பகுதிக் குரியராகிய ஆசிரியர் நப்பசலையாரென்னும் புலவர்பெரு மாட்டியார், இப்பாட்டின் கண் அவியன் என்னும் குறுநில மன்னனொருவனைக் குறித்துப் பாடியுள்ளார். அவியன் திருமுனைப்பாடி நாட்டில் வாழ்ந்தவன். அவன் பெயரால் அவியனூரென்றோர் ஊர் பண்டைநாளில் இருந்தது. அஃது அவியனூர் நாட்டுக்குத்தலைநகராகவும் இருந்ததெனத் திருவதிகைக்கல்வெட்டொன்று (A.R. No. 419 of 1921) கூறுகிறது. இந்த அவியன் வழி வந்த வேந்தர் இடைக்காலத்தே வேற்றுப் புல வேந்தர் வரவால் வலியழிந்து பலநூற்றாண்டுகாறும் அரசிய லுலகில் தலைமறைவாக இருந்து வந்தனர். பதின்மூன்று, பதினான்காம் நூற்றாண்டுகாறும் அவ்வப் போது தோன்றிய வேந்தருடைய தானைத் தலைவராகவும், தானை மறவராகவும் இருந்துவந்து போதிய வலிபெற்றவுடனே குறுநில மன்னராய் விளங்கலாயினர். இவர்கள் பாண்டி நாட்டுத் திருப்பத்தூர்ப் பகுதியைச் சேர்ந்த சூரைக்குடி யென்னுமூரைத் தலைநகராகக் கொண்டு பிற்காலத்தே விளக்கமுற்றிருந்தனர். அவருள் சிலர் விசயாலயதேவரென்றும் மாளவ சக்கரவர்த்தியென்றும் தம்மைக் கூறிக்கொள்வாராயினர். ஆயினும் பழைய தம் குடி முதல்வனான அவியன் பெயரையும் மறவாது பேணிவந்தனர். சடாவன்மன் வீரபாண்டியன் காலத்தில் அவியன் பெரியநாயனான விசயாலய தேவன் (A.R. No. 119 of 1908)என்பவனுடைய கல்வெட்டொன்றும் அவியன் மாளவ சக்கரவர்த்தி (A.R. No. 122 of 1908) என்பவன் கல்வெட்டொன்றும் திருப்பத்தூர் திருத்தளியாண்டார் கோயிலில் உள்ளன. இந்த அவியர்கட்குக் குடி முதல்வனான அவியனைத் தான் மாறோக்கத்து நப்பசலையார் “குன்று பலகெழீஇய கான் கெழுநாடன் கடுந்தேர் அவியன்” என்றும், காவிரிப் பூம்பட்டினத்துச் செங்கண்ணனார், களமலி கள்ளின் நற்றே ரவியன்” (அகம்.271) என்றும் சிறப்பித்துள்ளனர் இந்த அவியன் கைவண்மை மிகவுடையன்; புலவரை யோம்பும் பெருந்தகைமை யுடையவன். ஒரு கால் நப்பசலையார் வறுமையால்வாடி அவனிருந்த ஊருக்குச் சென்றார். அவன், அவர் வருகையறிந்து தன்பாற் போந்து தன்னைக் காணு முன்னே சிறந்த உணவும் உயர்ந்த ஆடையுந்தந்து பின்பு தன்னை வந்து அவர் காணச்செய்து அவரது புலமை நலத்தை நுகர்ந்து இன்புற்று அவர்க்குப் பெருஞ் சிறப்புச் செய்தான். நப்பசலையாரும் வறுமையின் நீங்கி மறுபிறப்புக் கொண்டவரைப்போல் பேருவகை கொண்டார். பின்பு அவன் அவருக்குப் பொருள் வேண்டும் போதெல்லாம் வேண்டியவாறு அளித்து வந்தான். அவனுடைய ஆதரவு பெற்று இனிதிருக்கையில் வெள்ளிமீன் தென்புலம் சாய்ந்து நாட்டில் வறனுண்டாதற்குரிய குறிப்பைக் காட்டிற்று அது கண்ட சான்றோர் வருந்தினராக, நப்பசலையார், “யான் அவியன் என்ற வள்ளியோனது ஆதரவு மிகவுடையேன்; அதனால் வெள்ளியன் நிலைபிறழ்ச்சிக்குச் சிறிதும் வருந்தேன்” என்ற கருத்தமைந்த இப் பாட்டைக் கிணைப்பொருநன் ஒருவன் கூற்றில் வைத்துப் பாடியுள்ளார். இப் பாட்டின் இடையே சில அடிகள் சிதைந்து விட்டன. ஒண்பொறிச் சேவ லெடுப்பவேற் றெழுந்து தண்பனி யுறைக்கும் புலரா ஞாங்கர் நுண்கோற் சிறுகிணை சிலம்ப வொற்றி நெடுங்கடை நின்று பகடுபல வாழ்த்தித் 5 தன்புக ழேத்தினெ னாக வென்புலத் திடுக்க ணிரியல் போக வூன்புலந் தருங்கடி வியனகர்க் குறுகல் வேண்டிக் கூம்புவிடு மென்பிணி யவிழ்த்த வாம்பற் றேம்பா யுள்ள தங்கமழ் மடருணப் 10 பாம்புரி யன்ன வடிவின காம்பின் கழைபடு சொலியி னிழையணி வாரா ஒண்பூங் கலிங்க முடீஇ நுண்பூண் வசிந்துவாங்கு நுசுப்பி னவ்வாங் குந்திக் கற்புடை மடந்தை தற்புறம் புல்ல 15 மெல்லணைக் கிடந்தோன். . . . . . . . . . . வெற்பெயர்ந்த. . . . . . நோக்கி. . . . . . . . . . . . . . . .யதற்கொண் டழித்துப் பிறந்தனெ னாகி யவ்வழிப் பிறர், பாடுபுகழ் பாடிப் படர்பறி யேனே 20 குறுமுலைக் கலமரும் பாலார் வெண்மதி நரைமுக வூகமொ டுகளும் வரையமல். . . . . . . . . . . . . . . . .குன்றுபல கெழீஇய கான்கெழு நாடன் கடுந்தே ரவியனென ஒருவனை யுடையேன் மன்னே 25 அறானெவன் பரிகோ வெள்ளியது நிலையே. திணை : பாடாண்திணை. துறை: கடைநிலை. ..... மாறோக்கத்து நப்பசலையார் பாடியது. உரை : ஒண்பொறிச் சேவல் எடுப்ப - ஒள்ளிய பொறிகளை யுடைய சேவற்கோழி கூவித் துயிலெடுப்ப; ஏற்றெழுந்து - படுக்கையினின் றெழுந்து போந்த; தண்பனி உறைக்கும் புலரா ஞாங்கர் - தண்ணிய பனிதுளிக்கும் புலராத விடியற்காலத்தே; நுண்கோல் சிறுகிணை சிலம்ப ஒற்றி - நுண்ணிய கோல் கட்டப்பட்ட தடாரிப் பறையைக் கொட்டி; நெடுங்கடை நின்று - நெடிய மனை முற்றத்திலே நின்று; பகடுபல வாழ்த்தி - பலவாகிய உழவெருதுகளை வாழ்த்தி; தன்புகழ் ஏத்தினெனாக - அவற்றை யுடையனான அவியன் புகழ்களைச்சொல்லிப் பாராட்டிப் பாடினேனாக; ஊன் புலந்து என்வலத் திடுக்கண் இரியல் போக - உடல் மெலிவித்து என்பால் தங்கியிருந்த வறுமைத்துயர் நீங்குமாறு; .......கூம்புவிடு மென்பிணி யவிழ்ந்த ஆம்பல் - குவிந்திருந்து விரியும் மெல்லிய அரும்பு மலர்ந்த ஆம்பற்பூவைப் போன்ற; தேம்பாய் உள்ளது அம்கமழ் மடருண - தேன் பரந்துள்ளதாகிய கட்டெளிவை அழகிய மணங் கமழும் மடாரிற் பெய்து உண்ணச் செய்து; அருங்கடி வியன்நகர் குறுகல் வேண்டி - அரிய காவலையுடைய அகன்ற தன் பெருமனைக்குள் தான் காண யாம் அணுகுதலை விரும்பி; பாம்புரி அன்ன வடிவின - பாம்பின் தோல் போன்ற வடிவினையுடையவாய்; காம்பின் கழைபடு சொலியின் - மூங்கிற்கோலின் உட்புறத்தேயுள்ள தோல் போன்ற; இழை யணி வாரா - நெய்யப்பட்ட இழைகளின் வரிசை யறிய வியலாத; ஒண்பூங் கலிங்கம் உடீஇ - ஒள்ளிய பூவாலே செய்யப்பட்ட ஆடையையுடுப்பித்து; நுண்பூண் வசிந்து வாங்கு, நுசுப்பின் - நுண்ணிய பூண்களை யணிந்து மின்னுப் போன் மின்னி வளைந்த இடையினையும்; அவ்வாங்கு உந்தி - அழகுறச் சுழிந்த கொப்பூழையும்; கற்புடை மடந்தை - கற்பையு முடைய மடந்தையாகிய தன் மனைவி; தற்புறம் புல்ல - தன் புறத்தே புல்லிக் கிடக்க; மெல்லணைக் கிடந்தோன் - மெல்லிய அணைமேற் கிடந்து உறங்கினவன்................எற்பெயர்ந்த - என்னின் நீங்கிய;........... நோக்கி - பார்த்து; ............... அதற்கொண்டு - அது கொண்டு; அழித்துப் பிறந்தனெனாகி மீளப் பிறந்தேன் போன்று; அவ்வழி - அவ்விடத்தே; பிறப் பாடுபுகழ் பாடிப் படர்பு அறியேன் - பிறருடைய பாடுதற்கமைந்த புகழைப் பாடிச் செல்லுதலைக் கருதிற்றிலேன்; குறுமுலைக்கு அலமரும் பாலார் வெண்மறி - குறுகிய முலையை யுண்டற் . . . . .பொருட்டுத் தாயைச் சுற்றித் திரியும் பாலுண்ணும் ஆட்டுக்குட்டி; நரை முகவூகமொடு உகளும் - வெளுத்த முகத்தையுடைய குரங்குக் குட்டி யுடனே தாவும்; வரையமல் - மூங்கில்கள் நிறைந்த;...... குன்று பல கெழீ இய -...........குன்றுகள் பல பொருந்திய; கான்கெழு நாடன் - கானநாடனாகிய; கடுந்தேர் அவியன் என ஒருவனை உடையேன்மன் - கடுகிச் செல்லும் தேர்களை யுடைய அவியன் எனப்படும் ஒருவனை யான் எமக்குத் தலைவ னாகவுடையேன் அறான் - அவன் புரவுக்கடனாகிய தன்னறத் தினின்றும் நீங்கான்; வெள்ளியது நிலை எவன்பரிகோ - வெள்ளியாகிய மீன் நிலை பிறழ்ந்து நிற்பது குறித்து இவ்வுலகு என்னாகுமோ என வருந்துவேனல்லேன்; எ-று. வைகறை யாமத்தில் துயிலெழுவது முறையாயினும் அக்காலத்தே கோழிச் சேவல் கூவுவது சார்பாகக் காட்டி “ஒண்பொறிச் சேவல் எடுப்ப” என்றும் கிணையின் கண்புறத்தே அதனையறையும் சிறுகோலைக் கட்டி வைப்பது மரபாதலால் “நுண்கோற் சிறுகிணை” யென்றும் கூறினார். விளைபுலப் பயனை வளம்பட நல்கும் சிறப்புக் குறித்துப் பகடுகளை எடுத்தோதி வாழ்த்துதல் முறையாயிற்று; “பால்பல வூறுக பகடுபல சிறக்க” (ஐங். 3) என மகளிர் விழைந்து கூறுமாறு காண்க. ஊன்; ஆகுபெயர். புலந் தென்றது பிறவினைப் பொருட்டு இடுக்கண் - வறுமைத் துன்பம். இரியல் போக - நீங்க; “அந்நிலை யிடுக்கண் இரியல் போக” (புறம். 388) எனப் பிறரும் கூறுதல் காண்க. மடார் தேறலையுண்ணும் வள்ளம். ஆம்பல், மடாருக்கு வடிவுபற்றி வந்த உவமம். உண்பித்தென்னும் வினை யெச்சம் உணவெனத் திரிந்தது. சொலி, தோல். இழை யறிவாரா வென்ற பாடத்துக்கு இழையறியப்படாதவெனப் பொருள் கொள்க. வசிந்து வாங்கு நுசுப்பு, முகிலிடைத் தோன்றும் மின்னு அதனைப் பிளந்து தோன்றி விளங்குதல் போல விளங்குகின்ற நுசுப்பு. வசிவு. பிளவு. “வானமுன்னு வசிவு பொழிய” (மலைபடு. 97) என்று சான்றோர் கூறுதல் காண்க. இனி, வசிந்தென்பதற்கு வேறு கூறுவாருமுளர். உந்திக்கு வாங்குதல், சுழிதல் மடந்தை புறம் புல்லிக் கிடக்க அணையிற்கிடந்து உறங்குவது இயல்பு; “புதல்வற் கவைஇயினன்றந்தை மென்மொழிப், புதல்வன்றாயோ விருவருங் கவையினள், இனிது மன்றவவர் கிடக்கை” (ஐங் 409) எனப் பிறரும் கூறுதல் காண்க. நரைமுகவூகம், வெள்ளிய மயிர் பரந்த முகமுடைய குரங்கு. மன்: ஒழியிசை பொருள்வளம் இடையறாமையே யன்றி எம்மைப் புரத்தலினும் இடையறவு படான் என்பது தோன்றப் பொதுப்பட, “அறான்” என்றும், வெள்ளிமீன் நிலைபிறழு மாயின் நாட்டில் நலங்குன்று மென்று சான்றோர் வருந்துபவாகலின், தாம் அது செய்யாமைக்கு ஏது கூறுவாராய், “ஒருவனையுடையேன், அறான் எவன் பரிகோ வெள்ளியது நிலையே” என்றார். எழுந்து, ஒற்றி, நின்று வாழ்த்தி ஏத்தினெனாக, இரியல் போக, உண வேண்டி, உடீஇ, மடந்தை, புல்லக்கிடந்தோன்...... நோக்கி.....ஆகி, படர்பு அறியேன்; அவியனென ஒருவனை யுடையேன், அறான், நிலைக்கு எவன் பரிகோ எனக் கூட்டி வினைமுடிவு செய்க. விளக்கம் : இப் பாட்டின் இடையே சில அடிகள் சிதைந்து விட்டமையின் பொருள்விளக்கம் நன்கு உண்டாகவில்லை. இதுவும் முன்னைப் பாட்டுக்களைப் போலக் கிணைவன் கூற்றைக் கொண்டெடுத்துக் கூறும் குறிப்பினதாகும். பசித்து வருவாரை முதற்கண் நீராட்டி நல்லாடை தந்து டுப்பித்து இனிய வுணவு தந்துண்பித்த பின்னர்த் தான் காண வருவித்தல் தமிழ்ச் செல்வர் கொடைப்பண்பாதலின், அருங்கடி வியனகர்க் குறுகல் வேண்டிக்கள்ளுண்பித்ததும், ஒண்பூங் கலிங்கம் உடுப்பித்ததும் கூறினா னென வறிக. பிறரும், “தன்னுழைக் குறுகல் வேண்டி யென்னரை முதுநீர்ப் பாசி யன்ன வுடை களைந்து, திருமல ரன்ன புதுமடிக் கொளீஇ, மகிழ்தரன் மரபின் மட்டு” (புறம். 360) நல்கியது கூறுதல் காண்க. வறுமையுற்ற குடியிற்பிறந்த பிறப்பு மாற்றிச் செல்வக் குடியிற் பிறந்தார் போலச் செல்வம் மிக வுடையனானது கண்டு தன்னையே வியந்து கூறுகின்றானாதலால், “அழித்துப் பிறந்தனெனாகி” யென்றும் குறைபடாச் செல்வம் நல்கினமை தோன்ற “அவ்வழிப் பிறர் பாடுபுகழ் பாடிப்படர் பறியேன்” என்றும் கூறினான். வேண்டுங்காலத்து வேண்டுவன குறை வின்றாக நல்கும் அவியனது தூய அன்பை உடையேனாதலால், எங்கெழினென் வெள்ளி யென விருக்கின்றேன் என்றான். இவ்வாறே பிறரும் அன்னோனை யுடையேமென்ப. வினிவறட் கியாண்டு நிற்க வெள்ளி” (புறம். 384) என்று கூறுதல் காண்க. 384. கரும்பனூர் கிழான் வெள்ளியாகிய மீன் தென்றிசைக்கண் நிற்கின் நாட்டிற்கு நல முண்டாகாதென்பது கோணிலையறிந்தோர் கொள்கை. நாடு நலங்குன்றுவது தெரிந்து சான்றோர் வருந்துவது இயல்பு. அன்னதொரு காலத்தில் புறத்திணை நன்னாகனார் வெள்ளியது நிலையறிந்தும் வருத்தமோ கவலையோ இன்றி இனிதிருந்தார். அவரைக் கண்ட சான்றோர் வியப்புக் கொண்டனர். அவர் கருத்தறிந்த நன்னாகனார் இப்பாட்டால் தம்முடைய மனக்கோளை எடுத்துரைத்தார். இதன்கண், தொண்டை நாட்டுக் கரும்பனூர் கிழான் நெல்லும் பொன்னும் நறவும் ஊனும் நிரம்பவுடையன்; யான் அவற்றாற் குறைவுறுங் காலத்து அவன் அவற்றைத் தந்து என்னை நிறைத்தலிற் குறைவதிலன்; மண்ணாணப் புகழ்வேட்டு நீர்நாண நெய் வழங்கும் நீர்மையுடையன்; அவனைத் தலைவனாக யாம் உடையோமாகலின், நாட்டில் வறம் உண்டாதல் குறித்து வெள்ளி எவ்விடத்து நிற்பினும் நிற்க; இதுகாறும் அவனது பேராதரவால் உண்டுந் தின்றுமே என் நாட்கள் கழிந்தன; அந் நாட்களை யான் வரக்கண்ட துண்டே யன்றி அவை யெத்துணை கழிந்தன வென்பது அறிந்திலேன்; அவனுடைய கரும்பனூர் இயற்கை நலம் மிகச் சிறந்ததாம்; மென் புலத்து மீனுண்டு பசி தீர்ந்த நாரை, வஞ்சி மரத்தின் கிளையிற்றங்கிப் பின் கரும்பின் பூ வருந்த அதன்பால் தங்கும்; வரகரிந்த அரிகாலில் வாழும் எலியை யலைக்கும் இயல் பிற்றாகிய குறும் பூழ்க்கு அங்கே வாழும் முயல் அஞ்சியோட, அதனால் இருப்பைப் பூ உதிரும்; ஊரில் விழாவொன்றும் இல்லையாயினும், உழவர் உண்கலமாகிய மண்டையில் கெடிற்று மீனாகிய வுணவுடனே கள் நிறைந்திருக்கும். மென்பாலா னுடனணைஇ வஞ்சிக்கோட் டுறங்கு நாரை அறைக்கரும்பின் பூவருந்தும் வன்பாலாற் கருங்கால்வரகின் 5 அரிகாற் கருப்பை யலைக்கும் பூழின் அங்கட் குறுமுயல் வெருவ வயல கருங்கோட் டிருப்பைப் பூவுறைக் குந்து விழவின் றாயினு முழவர் மண்டை இருங்கெடிற்று மிசையொடு பூங்கள் வைகுந்து 10 கரும்ப னூரன் கிணையேம் பெரும நெல்லென்னாம் பொன்னென்னாங் கனற்றக் கொண்ட நறவென்னாம் மனைமன்னா வவைபலவும் யான்றண்டவுந் தான்றண்டான் 15 நிணம் பெருத்த கொழுஞ்சோற்றிடை மண்ணாணப் புகழ்வேட்டு நீர்நாண நெய்வழங்கிப் புரந்தோ னெந்தை யாமெவன் றொலைவதை அன்னோனையுடையே மென்ப வினிவறட் 20 கியாண்டு நிற்க வெள்ளி மாண்டக உண்ட நன்கலம் பெய்து நுடக்கவும் தின்ற நண்ப லூஉன் றோண்டவும் வந்த வைக லல்லது சென்ற வெல்லைச் செலவறி யேனே. திணை : பாடாண்திணை. துறை: கடைநிலை. கரும்பனூர் கிழானைப் புறத்திணை நன்னாகனார் பாடியது. உரை : மென்பாலான் - மென்புலமான மருதவயற்கண்; உடன் அணைஇ - தன் இனத்துடனே மேய்ந்துண்டு; வஞ்சிக் கோட்டு உறங்கும் நாரை - வஞ்சிமரத்தின் கிளையின் கண் தங்கியுறங்கு தலைச் செய்யும் நாரை; அறைக்கரும்பின் பூ அருந்தும் - முற்றிய கரும்பினுடைய பூவைக் கொழுதும்; வன்பாலான் - வன்புலமாகிய முல்லை நிலத்தின்கண் விளையும்; கருங்கால் வரகின் அரிகால் கருப்பை அலைக்கும் பூழின் - கரிய தாளை யுடைய வரகின் அரிகாலின்கண் வாழும் எலியைப் பிடிப்ப தற்கு முயலும் குறும்பூர்ப் பறவையின் ஆரவாரத்தால், அங்கண் குறுமுயல் வெருவ - அவ்விடத்தே யுறையும் குறுமுயல் அஞ்சி யோட; அயல - அயலிடத்தே நிற்கும்; கருங்கோட்டு இருப்பைப்பூ உறைக்குந்து - கரிய கிளைகளையுடைய இருப்பை மரத்தின் பூக்கள் உதிரும்; விழவின்றாயினும் - விழாவொன்றும் நிகழா வழியும்; உழவர்மண்டை - உழவருடைய வுண்கலத்தில்; இருங்கெடிற்று மிசையொடு - பெரிய கெடிற்று மீனாகிய உணவுடனே; பூக்கள் வைகுந்து - இஞ்சி முதலிய பூ விரவிய கள் நிறைந் திருக்கும்; கரும்பனூரன் கிணையேம் - கரும்பனூர் கிழா னுடைய கிணைவ ராவோம்; பெரும - பெருமானே; நெல் லென்னாம் பொன்னென்னாம் - நெல்லும் பொன்னும் என்ன வாகும்; கனற்றக் கொண்ட நறவு என்னாம் - உடல் வெதும்பு மாறு கொண்ட கள்ளுந்தான் என்ன பயனுடைத்தாம்; மனை மன்னா அவை பலவும் - மனையிடத்து இல்லாத அவை பலவற்றையும்; யான் தண்டவும் - யான் குறைபடவும்; தான் தண்டான் - தான் சிறிதும் குறைவிலனாய்; நிணம் பெருத்த கொழுஞசோற்றிடை - நிணம் கலந்த கொழுவிய சோற் றுணவில்; நீர் நாண நெய் வழங்கி - நீரினும் மிகுதியாக நெய்யைப் பெய்து; மண் நாணப் புகழ் வேட்டு - மண்ணவர் கண்டு நாணும்படியாகப் புகழைச் செய்து; புரந்தோன் - எம்மை விரைந்தேற்று ஆதரிப்பன்; எந்தை - எங்கள் தலைவன்; யாம் தொலைவதை எவன் - யாங்கள் வறுமை குறித்து நெஞ்சழுங்குவது இல்லையாம்; அன்னோனையுடையேம் - அத் தகையவனைத் தலைவனாக வுடையே மாதலின்; இனி - இப்பொழுது; வறட்கு - வறற்காலத்தைச் செய்தற்பொருட்டு; வெள்ளி யாண்டும் நிற்க - வெள்ளியாகிய மீன் எத்திசைக்கண் நிற்பினும் நிற்பதாக; மாண்டக - மாண்புண்டாக; உண்ட நன் கலம் பெய்து நுடக்கவும் - உணவுண்ட நல்ல கலங்களில் உண்ணமாட்டாதொழித்த மிக்கவற்றை அக்கலத்திடையே வைத்து மடித்தெறியவும்; தின்றநன்பல் ஊஉன் தோண்டவும் - ஊனைத் தின்றதனால் பற்களின் இடையிலே சிக்கிக் கொண்ட வூனைத் தோண்டியெடுக்கவும்; வந்த வைகல் அல்லது - நிகழ்ந்த நாட்கள் உண்டேயன்றி; சென்ற எல்லைச் செலவறியேன் - இவ்வகையாக உண்ணக்கழிந்த நாட்களை எண்ணியறிந்திலேன்; எ-று. நீர்வளத்தால் மருதம் மென்பாலென்றும் அவ் வளம் இன்மையால் முல்லை வன்பாலென்றும் கூறப்படும். உடன் அணைஇ யென்றதனால் இனமும் கொள்ளப்பட்டது. வஞ்சி, வஞ்சிமரம். முற்றிய கரும்பே யறுக்கப் படுமாகலின், அஃது அறைக்கரும் பெனப்பட்டது. இருப்பைப் பூ மழைத்துளிபோ லுதிர்வதுபற்றி, “இலுப்பைப்பூ வுறைக்குந்து” என்றார். உம், உந்தாயிற்று. கருப்பை, எலி. குறும்பூழ் கருப்பையைப் பிடித்தற்கு முயலுதலைப் பிறரும், “பொறிப்புறப் பூழின் போர்வல்சேவல் - குடந்தையஞ் செவிய கோட்டெலியாட்ட” (புறம். 321) என்பர். கள்ளுண்பார்க்கு வியஞ்சனமாக இஞ்சிப் பூ முதலியவற்றை மாலையாகத் தொடுத்துக் கட்குடத்துக்குக் கட்டுவது பண்டை யோர் மரபு. நீர் பெய்தற்கு வருந்தாமைபோல நெய்பெய்தற்குச் சுருங்காமை தோன்ற “நீர் நாண நெய் வழங்கி” யென்றார். மண் - ஆகுபெயர் மண்ணுலகென்றே கொண்டு மண்ணாணு தலாவது மண் பரப்புச் சுருங்கப் புகழ்விரிதல் என்றலுமொன்று. எங்கள் தலைவன் இனிதிருத்தலின், வெள்ளியது நிலைகுறித்து யாம் உளமழிந்து நலந்தொலைவது வேண்டா என்பார் “யாமெவன் தொலைவதை” என்றார். எவன் என்பது இன்மை குறித்து நின்றது. வெள்ளியாகிய மீன் கெடுதிசையில் நிற்பினும் எமக்கு வருத்த மில்லையென்றலின், “யாண்டும் நிற்க” என்பது கூறப்பட்டது. உணவுண்டற்குப் பரப்பப்படும் இலையும் நன்கலமாதலின், நன்கலமெனப் பட்டது; பிற்காலத்தார் பரிகலம் என்பது இக் குறிப்பேபற்றி வந்தது. உண்ணப்படாது மிக்கு நின்றவற்றை இலையிடை வைத்து மடித்துப் புறத்தே யெறிதலின் “உண்ட நன்கலம் பெய்து நுடக்கவும்” என்றும், ஒவ்வொரு நாளும் வந்தநாளிற் போல உண்பனவும் தின்பனவும் ஆரப்பெற்று, இறப்பும் எதிர்வுமாகிய நாட்களை எண்ணாது மகிழும் திறம் கூறுவார் “வந்த வைகலல்லது சென்ற வெல்லைச் செலவறியேனே” என்றார். எல் - பகல். பெரும, யாம்கிணையேம்; தண்டவும், தண்டான்; வழங்கி, வேட்டு, புரந்தோன்; எந்தை; தொலைவதை எவன்; அன்னோனையுடையேம்; நிற்க, நுடக்கவும் தோண்டவும் வந்த வைகல் அல்லது எல்லை செலவறியேன் எனக் கூட்டி வினை முடிவு செய்க. என்ப : அசைநிலை. விளக்கம் : இப்பாட்டின்கண்புறத்திணை நன்னாகனார் கரும்பனூர் கிழானது கரும்பனூரையும், அவனது கொடை நலத்தையும், அந்நலத்தைத்தாம் நுகர்ந்த சிறப்பையும் விளக்கியுள்ளார். கரும்பனூரின் சிறப்பை இவர் குறித்தபடியே இப் பாட்டுரையின் முன்னுரைக்கண் கூறினாம். கொடைநலம் குறிக்கும் வகையில் கரும்பனூரன் தந்த நெல்லும் பொன்னும் நறவும், பிறவும் சுருங்கக் குறித்து, நிணத்தோடு கூடிய சோற்றில் நீரென்னுமாறு நெய்யைச் சொரிந்து, தன்பால் வந்த கிணைப்பொருநருக்கு உணவளித்து விருந்தோம்பிய சிறப்பை, “நிணம் பெருத்த.... புரந்தோன் எந்தை” என்று கூறியுள்ளார். இச் செயலால் கரும்பனூரனுக்கு உண்டாகிய பயன் பெரும்புகழ் என்பார், “மண்ணாணப் புகழ்வேட்டுப் புரந்தான்” என்றார். உண்பனவும் தின்பனவும் உடுப் பனவும் குறைவின்றிப் பெறுமிடத்து வாழ்க்கையைப் பற்றிய நினைவே மறந்து போயிற்றென அவனது கொடைநலத்தைத் தாம் நுகர்ந்த வாற்றை விளக்கி, வறுமையைப் புறங்கண்டு பெருமித முற்ற நிலையை, “வறட்கு யாண்டு நிற்க வெள்ளி” என்று வெளிப்படுத்தி யுள்ளார். வந்த வைகல் அல்லது சென்ற வெல்லைச் செலவறியேனே என்றது, வாழ்க்கையைப் பற்றிய நினைவு மறந்து கிடந்ததற்குச் சான்றாயிற்று. இத்துணையும் கிணைப்பொருநன் கூற்றில் வைத்துக் கூறியது குறிக்கொள்ள வேண்டுவதொன்று. பாணன் கூற்றாகவும் கிணைவன் கூற்றாகவும் கூறும் புலமை வகையை யறியாது வேறு படக் கூறுவர் தமிழறியாதார். 385. அம்பர்கிழான் அருவந்தை அம்பர் என்பது சோழநாட்டில் தஞ்சை மாநாட்டில் நன்னிலந் தாலுகாவில் உள்ளதோரூர். இஃது அருவந்தை யென்னும் தலைவன் ஒருவனுக்கு உரியது. இவனைத் திவாகரமுடையார் “கற்ற நாவினன் கேட்ட செவியினன், முற்றவுணர்ந்த மூதறிவாளன், நாகரிக நாட்டத்தாரியன் அருவந்தை” யென்றும், “நாடே பிறர்நாட்டிற் குவமையாறே, காலமறிந்துதவுங் காவிரி தானே, ஆடவர் திலகனம்பர் மன்ன, னீடிசைத் தலைவன் அருவந்தை” யென்றும் குறித்துரைத்துள்ளார். இதனால் அம்பர் காவிரி பாயும் நாட்டில் உள்ளதோரூரெனவும், அவ்வூர்த் தலவனான அருவந்தை கல்வி கேள்விகளால் நிறைந்தவன் எனவும், முழுதுணரும் ஒண்புலவ னெனவும் கண்ணோட்டமுடைய காவலனெனவும் அறியலாம். இவனது அழியாப்புகழ் அவ்வூர்க்கே பேரணியாய் நின்று பிரிவின்றி இயலுவதாயிற்று; ஆகவே, இடைக்காலத்தில் இவ்வூர் அம்பர் அருவந்தையெனவே வழங்குவதாயிற்று; “உய்யக் கொண்டார் வளநாட்டு அம்பர்நாட்டு அம்பர் அருவந்தை” (A.R. No. 175 of 1927-8) எனத் திருப்பழனத்துக் கல்வெட்டொன்று கூறுவது காண்க. இந்த அருவந்தையின் குடிப்பிறந்தவர் பிற்காலத்தே தொண்டைநாட்டில் இருந்திருக்கின்றார். பதின்மூன்றாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் விளங்கிய கோப்பெருஞ்சிங்கன் காலத்தில் வந்தவாசிக் கண்மையிலுள்ள பொன்னூரில் அருவந்தை யொருவன் இருந்துள்ளான் என அவ்வூர்க் கல்வெட்டுக் கூறுகிறது. அது “பொன்னூரான அழகிய சோழநல்லூர் அருவந்தை ஆண்டான் திருச்சோற்றுத் துறையுடையான் சொறப்பிள்ளை” (S.I. Ins. Vol. XII. No. 220) என வருவது காண்க. இந்த அருவந்தைக்குடி முதல்வனான அம்பர் அருவந்தையைக் கல்லாடனாரென்னும் சான்றோர் இப் பாட்டில் வியந்து பாராட்டியுள்ளார். ஒருகால் கல்லாடனார் அம்பருக்குச் சென்று அங்கு வாழ்ந்த செல்வன் ஒருவனைப் பாடலுற்றார். அவன் மனைக்கு அண்மையில் அருவந்தையின் பெருமனையும் இருந்தது. அவர் பாடிய பாட்டிசை அருவந்தையின் செவியிற் பட்டது. அருட்கடலாகிய அவன் உள்ளம் பாட்டிற் குருகிற்று. அவரையுடனே தன்பால் வருவித்து, அழுக்கேறிப் பீறிக்கிடந்த அவரது உடையைக் களைந்து வேறொரு வெள்ளாடை தந்து உடுப்பித்து இனிய உணவு தந்து பசிகளைந்தான். அது கண்டு கழிபேரு வகையால் தம்மை மறந்து இன்புற்ற கல்லாடனார் இப்பாட்டைப் பாடி இதன்கண், காவிரி பாயும் அம்பர் கிழவனான அருவந்தை, புல்லியென்பானுக்குரிய வேங்கடமலையிற் பெய்த மழைத்துளியினும் பல்லாண்டு வாழ்க” என வாழ்த்தியுள்ளார். கல்லாடனார் தொண்டை நாட்டுச் சான்றோருள் ஒருவர். சென்னைக்கு வடகிழக்கிலுள்ள பொன்னேரிக் கண்மையில் புகைவண்டி நிலையமாய் நிற்கும் மீஞ்சூர் பண்டை நாளில் கல்லாடமென்று வழங்கிற்று. (செந். செல்வி Vol. 23 பக். 113-22) இவர் தலையானலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ் செழியனையும், சேரமான் களங்காய்க் கண்ணி நார் முடிச்சேரலையும், மலையமான் திருமுடிக் காரியையும், சோழநாட்டு அம்பர் அருவந்தை, பொறையாற்றுக் கிழான் என்பாரையும், தொண்டை நாட்டுத் தொண்டையரையும், வேங்கடத்துக்குரிய புல்லி யென்பானையும் பாடியிருத்தலால் இவர் தமிழ் முழுதறிந்த தண்டமிழாசிரியரென்பது ஒருதலையாம். இவர், தம் பாட்டுக் களில் தொண்டை நாட்டு வேங்கடத்தையும் அதற்குரிய புல்லியென் பானையும் பன்முறை பாடியிருப்பது கொண்டு இவர் தொண்டை நாட்டுக்குரியரென்பது ஒருவாறு கருதப்படுமாயினும், மீஞ்சூர்ச் சிவன் கோயிற் கல்வெட்டு (A.R. No. 133 of 1916) அதனை நன்கு வற்புறுத்துகின்றது. “பொருவார் மண்ணெடுத்துண்ணும் அண்ணல் யானை, வண்டேர்த் தொண்டையர்” (குறுந் 260) என்பது இவர் தொண்டையரைக் குறித்துரைப்பது. வெள்ளி தோன்றப் புள்ளுக்குர லியம்பப் புலரி விடியற் பகடுபல வாழ்த்தித் தன்கடைத் தோன்றிற்று மிலனே பிறன்கடை அகன்கட் டடாரிப் பாடகேட் டருளி 5 வறனியா னீங்கல் வேண்டி யென்னரை நிலந்தினச் சிதைந்த சிதாஅர் களைந்து வெளிய துடீஇயென் பசிகளைந் தோனே காவிரி யணையுந் தாழ்நீர்ப் படப்பை நெல்விளை கழனி யம்பர் கிழவோன் 10 நல்லரு வந்தை வாழியர் புல்லிய வேங்கட விறல் வரைப் பட்ட ஓங்கல் வானத் துறையினும் பலவே. திணை : பாடாண்திணை. துறை : வாழ்த்தியல் : அம்பர்கிழான் அருவந்தையைக் கல்லாடனார் பாடியது. உரை : வெள்ளி தோன்ற - வெள்ளியாகிய மீன் வானத்தே தோன்றவும்; புள்ளுக்குரல் இயம்ப - புள்ளினங்கள் எழுந்து ஒலிக்கவும் வந்த; புலரி விடியல் - இரவுப்பொழுது புலரும் விடியற்காலத்தில்; பகடு பல வாழ்த்தி - எருதுகளாகிய செல்வத்தை வாழ்த்தி; தன்கடைத் தோன்றிற்றுமிலன் - யான் அவன் பெருமனை முற்றத்துக்குச் சென்றிலேன்; பிறன் கடை அகன்கண் தடாரிப்பாட்டு கேட்டு - பிறன்மனை முற்றத்தில் நின்று கொட்டிய அகன்ற கண்ணையுடைய தடாரிப் பறையினது ஓசையைக் கேட்டு; அருளி - அருள் கூர்ந்து; யான் வறன் நீங்கல் வேண்டி - யான் வறுமையின் நீங்குதலைத்தான் விரும்பி; என் அரை நிலந்தினக்குறைந்த சிதாஅர் களைந்து - என் அரையில் யான் உடுத்திருந்த மண் தின்னும்படி பழைதாய்க் கிழிந்திருந்த உடையை நீக்கி; வெளியது உடீஇ - வெள்ளிய ஆடை தந்து உடுப்பித்து; என்பசி களைந்தோன் - எனது பசித் துன்பத்தைப் போக்கினான்; காவிரி அணையும் தாழ்நீர் படப்பை - காவிரியாறு பாயும் தாழ்ந்த நிலப்பாங்கினை யுடைய தோட்டங்களையும்; நெல்விளை கழனி - நெல் விளையும் கழனிகளையு முடைய; அம்பர் கிழவோன் - அம்பரென்னும் ஊர்க்குரியோனாகிய; நல் அருவந்தை - நல்ல அருவந்தை யென்போன்; புல்லிய வேங்கடவிறல் வரைப்பட்ட - புல்லி யென்பவனுடைய வேங்கட மலையிற் பெய்த; ஓங்கல் வானத்து உறையினும் பல வாழியர் - உயர்ந்த வானத்திலிருந்து பொழிந்த மழைத்துளியினும் பல ஆண்டுகள் வாழ்வானாக; எ-று. வெள்ளி முளைத்தலும் புள்ளுக்குரல் தோன்றலும் விடியற் காலத்துக் காட்சியாதலின், அவற்றை யெடுத்தோதினார். “வெள்ளியு மிருவிசும் பேர்தரும் புள்ளு, முயர்சினைக் குடம்பைக் குரல் தோன்றினவே” (புறம். 397) என்று பிறரும் கூறுதல் காண்க. இயைபில்லாத என் பால் அன்பு செய்தான் என்றற்குத் “தன்கடைத் தோன்றிற்றுமிலனே” என்றும், “அருளி” யென்றும் கூறினார். காவிரியிற் பிரிந்தோடும் அரிசிலாறு அம்பர்க்கருகிலோடு கின்றதாகலின், அதனைக் காவிரி யென்றார். சோழநாட்டின் அம்பர்ப் பகுதி நோக்கி ஆறு ஓடி வருதலின், அது தாழ்ந்திருக்கும் பான்மை குறித்து “தாழ்நீர்ப் படப்பை” யெனப்பட்டது. புல்லியென்பவன் கள்வர் கோமான் என்றும், வேங்கடமலை அவற்கு உரித்தென்றும் சான்றோர் பலரும் கூறுப. தோன்ற, இயம்ப, வாழ்த்தித் தோன்றிற்றுமிலன்; கேட்டு அருளி, வேண்டி, களைந்து, உடீஇக் களைந்தோன், கிழவோன்; கிழவோனாகிய அருவந்தை, உறையினும் பல வாழியர் எனக் கூட்டி வினை முடிவு செய்க. விளக்கம் : வாழ்த்தியலை “அலங்குகதிர்” (புறம். 375) என்ற பாட்டுரை விளக்கப் பகுதியிற் கூறினாம். அம்பர்கிழான் அருவந்தையின் கொடைநலத்தை முதற்கண்ணோதி அவனை வாழ்த்தும் வாழ்த்துரையினைப் பின்னர்க் கூறியுள்ளார். “யான் வறனுற்று வருவதை யான் உரையாமே முன்னறிந் தழைத்து, யான் வறுமையின் நீங்குதலை அவன் தானே விரும்பிப் புத்தாடை யுடுப்பித்துப் பசி களைந்தான்,” என்பது அருவந்தையின் சிறந்த கொடைநலத்தை விளக்கி நிற்கிறது. மாற்றுடை யின்மையின் அழுக்கேறி மட்கிக் கிழிந்து குறைந்திருந்த பீறல்உடை யென்றற்கு “நிலத்தினக் குறைந்த சிதாஅர்” என்றார். காவிரியிற் பிரிந்து வருதலின், அம்பர் அருகே யோடிவரும் அரிசிலாற்றைக் காவிரி யென்றார். கல்லாடனார் திருவேங்கட நாட்டுக் குரியவராதலின், காவிரி மணலினும் பலவென்னாது, வேங்கடமலையிற் பெய்த மழைத்துளியினும் பல வாழ்க என வாழ்த்துவாராயினர். ஒருவன் தன்னாட்டினின்றும் நீங்கி நெடிது செல்லச் செல்ல, அவன் பிறந்த நாட்டுத் தொடர்பு அவனை யறியாதே பிணித்து நிற்குமென அறிக. இதனை ஆங்கில நாட்டுக் கவிகளிடையே பரக்கக் காணலாம். 386. சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனால் பெரிதும் ஆதரவு செய்யப் பெற்றவர் ஆசிரியர் கோவூர் கிழாராவர். ஒருகால் சான்றோரிடை வெள்ளி மீனினது நிலைபற்றியொரு பேச்சு நிகழ்ந்தது. வெள்ளிமீன் தெற்கேகின் நாட்டிற்கு வறனுண் டாகும்; நல்லுயிர்கள் உணவின்றி வாடும் என்பது வான நூன் முடிபு. அக்காலைக் கோவூர் கிழார் தமக்குக் குளமுற்றத்துத் துஞ்சிய சோழன் கிள்ளிவளவன் செய்த உதவிகளை விரிய எடுத்தோதித் தாம் அவனுடைய பொருநரென்றும், அவன் தமக்கு வேண்டியவற்றைக் குறிப்பானுணர்ந்து உதவுவன் என்றும், அதனால் தான் வெள்ளியது நிலையைப் பொருளாகக் கருதுவ தில்லை யென்றும் இப்பாட்டால் உரைத்தார். இதன்கண் தொடக்கத்தில் சோழனது கொடை நலமும் பின்பு நாட்டின் நலமும் அழகுறக் கூறப்பட்டுள்ளன. நெடுநீர நிறைகயத்துப் படுமாரித் துளிபோல நெய்துள்ளிய வறைமுகக்கவும் சூடு கிழித்து வாடூன் மிசையவும் 5 ஊன்கொண்ட வெண்மண்டை ஆன்பயத்தான் முற்றழிப்பவும் வெய்துண்ட வியர்ப் பல்லது செய்தொழிலான் வியர்ப்பறியாமை ஈத்தோ னெந்தை யிசைதன தாக 10 வயலே, நெல்லின் வேலி நீடிய கரும்பின் பாத்திப்பன்மலர்ப் பூத்த தும்பின்று புறவே, புல்லருந்து பல்லாயத்தான் வில்லிருந்த வெங்குறும்பின்று கடலே, காறந்த கலனெண்ணுவோர் 15 கானற் புன்னைச் சினை யலைக்குந்து கழியே, சிறுவெள் ளுப்பின் கொள்ளை சாற்றி பெருங்க னன்னாட் டுமணொலிக் குந்து அன்னநன் னாட்டுப்பொருநம் யாமே பொராஅப்பொருநரேம் 20 குணதிசை நின்று குடமுதற் செலினும் குடதிசை நின்று குணமுதற் செலினும் வடதிசை நின்று தென்வயிற் செலினும் தென்றிசை நின்று குறுகாது நீடினும் யாண்டு நிற்க வெள்ளியாம் 25 வேண்டிய துணர்ந்தோன் றாள்வா ழியவே. திணை : பாடாண்திணை. துறை: கடைநிலை. சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனைக் கோவூர் கிழார் பாடியது. உரை : நெடுநீர் நிறைகயத்து - மிக்க நீர்நிறைந்த நீர்நிலையின் கண்; படுமாரித் துளிபோல - வீழ்கின்ற மழைத்துளிபோல; நெய் துள்ளிய வறை முகக்கவும் - நெய்யினது துளியையுடைய வாய் வறுக்கப்பட்ட வறுவல்களை முகந்துண்ணவும்; சூடுகிழித்து வாடூன் மிசையவும் - சூட்டுக்கோலாற் கிழித்துச் சுடப் பட்டவூனைத் தின்னவும்; ஊன்கொண்ட வெண்மண்டை - ஊனைப் பெய்துவைத்த வெள்ளிய மண்டையானது; ஆன் பயத்தான் முற்றழிப்பவும் - ஆவின்பால் நிறைந்து வழியவும்; வெய்துண்ட வியர்ப்பல்லது - உண்பனவற்றைச் சுடச்சுடவுண்டு வியர்த்தலையன்றி; செய்தொழிலான் வியர்ப்பறியாமை - தொழில் செய்து மெய் வருந்தி வியர்வை கொள்ளாவண்ணம்; இசை தனதாக ஈத்தோன் - உலகில் நிலைபெறும் புகழ் தனக்கேயுரியதாமாறு கொடுத்தான்; எந்தை - எங்கள் தலைவன்; வயல் - நெல் வயல்; நெல்லின் வேலி நீடிய கரும்பின் பாத்தி - நெல்லுக்கு வேலி போல நெடிது வளர்ந்து நின்ற கரும்பு நடுதற்கிட்ட பாத்தியின் கண்; பன்மலர் பூ ததும்பின்று - பல்வகைப் பூக்கள் நிறைந்திருக்கும்; புறவு - முல்லைக்காடு; புல்லருந்து பல்லாயத்தான் - புன்மேயும் பலவாகிய ஆனிரை களுடனே; வில் இருந்த வெங்குறும்பின்று - வில் வீரர்கள் காவலிருந்த வெவ்விய அரணுடைய தாயிருக்கும்; கடல் கடல்சார்ந்த நெய்தற்பகுதி; கால்தந்த கலன் எண்ணுவோர் - காற்றாற் கொணரப்பட்ட மரக்கலங்களை யெண்ணும் மகளிர் தங்கும்; கானற் புன்னைச் சினை அலைக்குந்து - கானற் சோலையிலுள்ள புன்னையின் கிளைகள் கடலலையால் அலைப்புண்டிருக்கும்; கழி - கழிசார்ந்த பகுதி; சிறு வெள்ளுப் பின் கொள்ளை சாற்றி - சிறிய வெண்மையான உப்பின் விலையைச் சொல்லி; பெருங்கால் நன்னாட்டு உமண் ஒலிக்குந்து - பெரிய மலைகள் பொருந்திய நல்ல நாடுகட்குக் கொண்டுசென்று விற்கும் உமணர் குடி தழைத்திருக்கும்; யாம் அன்ன நன்னாட்டுப் பொருநம் - யாங்கள் அத்தகைய நல்ல நாட்டுப் பொருநராவோம்; பொராஅப் பொருநரேம் - பொருநருள்ளும் யாங்கள் போருடற்றும் பொருநரல்லேம்; குணதிசை நின்று குடமுதற் செலினும் குடதிசை நின்று குணமுதற் செலினும் - கீழ்த்திசையினின்று மேற்றிசைக்கும் மேற்றிசையினின்று கீழ்த்திசைக்கும் சென்றாலும்; வடதிசை நின்று தென்வயிற் செலினும் - வடக்கிலிருந்து தெற்கேகுமாயினும்; தென்றிசை நின்று குறுகாது நீடினும் - தெற்கிற் சின்னாள் இராது பன்னாள் நெடிது நிற்குமாயினும்; வெள்ளி யாண்டும் நிற்க - வெள்ளியாகிய மீன் எங்கு நிற்பினும் நிற்க; யாம் வேண்டிய துணர்ந்தோன் தாள் வாழிய - யாம் வேண்டு வனவற்றை எம் குறிப்புக்கண் டுணர்ந்து அவ்வளவும் நல்குவோனாகிய வளவ னுடைய தாள் வாழ்க; எ-று. நெடுநீர், ஆழமான நீர், நிறைகயத்தில் மழை பெய்யுங்கால் நீர்த் துளி துள்ளித் துளிப்பது போலக் காய்ச்சிய நெய்யில் வறுவல்களைப் பொரிக்குமிடத்து அது துள்ளித் துளிக்குமாதலின் அதனைச் செய்யும் வறுவலை “நெய் துள்ளிய வறை” யென்றார். நெய்யில் வறுத்த வறையின்கண் நெய்த்துளிகள் நிறைந்திருப்பது பற்றி இவ்வாறு கூறினாரெனினும் அமையும். வறுக்கப்படுவது வறை : அறுக்கப்படுவது அறையென்றாற்போல. வறைகள் கைந்நிறைய முகந்து உண்ணப்படுவதனால் “முகக்கவும்” என்றார். சூட்டுக் கோலாற் கிழித்துச் சுடப்படும் ஊன், “சூடுகிழித்து வாடூன்” எனப்பட்டது. மண்டை, உண்கலம். அது நிரம்பி வழியுமளவு ஆன்பால் சொரியப்படுமாறு தோன்ற, “ஆன்பயத்தான் முற்றழிப்பவு” மென்றார். மெய்வருந்த உழையாமல் வேண்டுவன பெற்றுண்டற் கேற்ற பெருஞ் செல்வம் தந்தமை கூறுவார். “வெய்துண்ட வியர்ப்பல்லது செய் தொழிலான் வியர்ப்பறியாமை யீத்தோன்” என்றார். ஈவார்மேல் புகழ் நிற்குமாகலின்; ஈத்த வளவற்கே இசையுரிய தாயிற் றென்பது “இசை தனதாக” எனப்பட்டது. வயல் பூத்ததும்பின்று, புறவு வெங்குறும்பின்று, கடல்புன்னைச் சினை யலைக்குந்து கழி உமண் ஒலிக்குந்து என இயையும். கொள்ளை, விலை. “சில்பதவுணவின் கொள்ளை சாற்றி” (பெரும்பாண். 64) என்புழிப்போல. பொருநர் போர்செய்யும் மறவர்க்கும் போர்க் கள ஏர்க்களங்களைப் பாடும் பொருநர்க்கும் பொதுப் பெயராகலின் போர்செய்யும் பொருநரினீக்குதற்கு “பொருநம் யாம்” என்றவர், “பொரா அப் பொருநரேம்” என்றார். வெள்ளி நிற்றற்குரிய நிலைகளெல்லாம் சொன்னவர், “யாண்டும் நிற்க” என்று மறுபடியும் சொன்னது யாப்புறவு குறித்து நின்றது. தாம் வளவனது தாணிழல் வாழும் செம்மாப்புத்தோன்ற இங்ஙனம் கூறியவர், அதனை நல்கும் அவன் தாளை “தாள் வாழிய” என வாழ்த்தினார், முகக்கவும் மிசையவும் முற் றழிப்பவும், வியர்ப் பறியாமை இசைதனாதாக ஈத்தோன்; எந்தை; வயல் பூத்ததும்பின்று, சினையலைக்குந்து, வெங் குறும்பின்று. உமணொலிக்குந்து; அன்ன நன்னாட்டுப் பொருநம் யாம்; பொரா அப் பொருநரேம், செலினும், நீடினும், யாண்டும் நிற்க உணர்ந்தோன் தாள் வாழிய எனக் கூட்டி வினை முடிவு செய்க. விளக்கம் : சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனுடைய கொடையை யெடுத்தோதி வாழ்த்தலுற்ற கோவூர்கிழார், கொடை வளத்தைக் கொடை யெதிர்ந்தோர்பால் உளதாகிய பயனால் உரைக்கும் புலமைத் துறையை மேற்கொண்டு, “வெய்துண்ட வியர்ப் பல்லது செய்தொழிலான் வியர்ப்பறியாமை, ஈத்தோன்” என்று உரைப்பது அறிந்து இன்புறத்தக்கது. கொடையினை யேற்றோர்க்கு இது விளைவாக, அக்கொடையினால் வளவற்கு உளதாகிய பயன் இதுவென்பார், “இசைதனதாக” என்றார். வயல்பூத் ததும்பின்றென்றதனால் மருதவளமும், புறவு வெங்குறும் பின்று என்றதனால் முல்லை வளமும், கடல்புன்னைச் சினையலைக் குந்து என்றதனால் நெய்தல் வளமும், கழிபெருங்கல் நன்னாட்டு உமணொலிக்குந்து என்றதனால் குறிஞ்சி வளமும் திணை மயக்கமும் கூறினாராயிற்று. நாட்டின் நலங்காணுமிடத்துப்பாலை சிறந்த தன்மையின் நானிலமே எடுத்து மொழிதல் மரபு. ஆசிரியர் தொல் காப்பியரும் “முல்லை குறிஞ்சி மருதம் நெய்தலெனச்” (அகத்திணை:5) சொல்லிய முறை காண்க. புறவு கூறுமிடத்து, “வில்லிருந்த வெங்குறும் பின்” றென்றதனால் பாலையும் ஓராற்றால் கூறப்பட்டதெனக் கோடலுமொன்று, “பொருநம் யாம்” எனப் பொதுப் படக் கூறினமையின், பொதுநீக்கிச் சிறப்பிப்பார் “பொராஅப் பொருநரேம்” என்றார். வேண்டியது குறிப்பான் உணர்ந்து நல்கும் வளவன் பால் இரத்தலும் “ஓர் ஏர் உடைத்” (குறள். 1053) தாதலால், அச்சிறப்பால் “யாண்டுநிற்க வெள்ளி” எனப்பெருமிதம்படப் பேசுகின்றார். 387. சேரமான் சிக்கற்பள்ளித் துஞ்சிய செல்வக் கடுங்கோவாழியாதன் சோழநாட்டில் சிக்கலென்னு மோரூர் இருப்பதுபோலப் பாண்டி நாட்டிலும் ஓர் ஊர் உளது. பாண்டி நாட்டுச் சிக்கற் பள்ளியிற் செல்வக் கடுங்கோ வாழியாதன் துஞ்சியதுபற்றி அவன்சிக்கற்பள்ளித் துஞ்சிய செல்வக் கடுங்கோ வாழியாதன் எனப்படுவானாயினன். பதிற்றுப் பத்தினுள் ஏழாம்பத்தாற் பாடப்பெற்ற செல்வக்கடுங்கோ வாழியாதனும் சிக்கற் பள்ளித் துஞ்சிய வாழியாதனும் ஒருவரேயாவர். செல்வக் கடுங்கோ வாழியாதன் சிக்கற்பள்ளிக்கண் துஞ்சியபின் இப்புறப்பாட்டுத் தொகுக்கப் பட்டமையின். தொகுத்தோர் இவ்வாறு குறித்துள்ளன ரென அறிக. பறம்புமலைக் குரியனான வேள்பாரி யிறந்தபின் கபிலர் இச்செல்வக் கடுங்கோ வாழியாதன், “ஈத்த திரங்கான் ஈத்தொறு மகிழான், ஈத்தொறு மாவள்ளியன்” என்று சான்றோர் கூறக்கேட்டு வாழியாதனைச் சென்று கண்டார். சேரமான் நகையினும் பொய்யாத வாய்மையும் புறஞ்சொற் கேளாத ஒண்மையும் உடையவன். வயிரியர் முதலாயினார்க்குப் பெரும் பொருள் நல்குபவன். அவனுடைய போர்வண்மையும் கைவண்மையும் அவனுடைய திருவோலக்கத்திலிருந்து கண்ட கபிலர், அவனை, “பார்ப்பார்க் கல்லது பணிபறி யலையே, பணியா வுள்ளமோ டணிவரக் கெழீஇ, நட்டோர்க் கல்லது கண்ணஞ் சலையே வணங்குசிலை பொருதநின் மணங்கமழகல, மகளிர்க் கல்லது மலர்ப் பறியலையே, நிலந்திறம் பெயருங் காலை யாயினும், கிளந்த சொன்னீ பொய்ப்பறி யலையே” (பதிற். 63) எனவும், “தொலையாக் கொள்கைச் சுற்றஞ் சுற்ற, வேள்வியிற் கடவு ளருத்தினை கேள்வியின் உயர்நிலை, யுலகத் தையரின்புறுத்தினை, வணங்கிய சாயல் வணங்கா வாண்மை, இளந்துணைப் புதல்வரின் முதியர்ப் பேணித், தொல்கட னிறுத்த வெல்போ ரண்ணல்” (பதிற். 70) எனவும் பாராட்டினார். ஒரு முற்றுகையில் இரு பெருவேந்தரை வென்ற அவனது ஆண்மையும் போர்செய ஆற்றாது அடிபணியும் பகைவர்பால் அருள் செய்யும் ஊராண்மையும் கபிலராற் சிறப்பிக்கப்படுகின்றன. இவன் மனைவியார் கடவுளும் தன் ஏவல் செய்யும் கற்பினையுடையர். “பெண்மை சான்று பெருமடநிலைஇக், கற்பிறைகொண்ட கமழுஞ் சுடர்நுதற்புரையோள்” (பதிற். 70) என்று கபிலர் அவரைப் பாராட்டுகின்றார். இவர்க்குச் சேரமான் “சிறுபுறமென நூறாயிரங் காணங் கொடுத்து, நன்றாவென்னுங் குன்றேறி நின்று தன் கண்ணிற் கண்ட நாடெல்லாம் காட்டிக் கொடுத்தான்” என்று ஏழாம்பத்தின்பதிகம் கூறுகிறது. இவ்வண்ணம் கபிலரைச் சிறப்பித்த செல்வக் கடுங்கோ இப் புறப்பாட்டைப் பாடிய குன்றுகட் பாலியாதன் என்னும் சான்றோரையும் ஆதரித்துள்ளான். இச் சான்றோரது இயற்பெயர் ஆதன் என்றும், ஊர் குன்றுகட் பாலியென்றும் அறிக. குன்றின்கட் பாலியாதனார் என்பது இவரது பெயர்; இது நாளடைவில் குன்றுகட் பாலியாதனாரெனச் சுருங்கிப் பின் குண்டுகட் பாலியாதனார் எனத் திரிந்துவிட்டது. குன்றுகட் பாலி யென்பது இப்போது பாலிக்குன்னு என்ற பெயருடன் மலையாளம் சில்லாவைச் சேர்ந்த கோழிக்கோட்டுப் பகுதியில் (Calicut) உளது. ஆதனார் சேரநாட்டுப் புலவர் பெருமக்களுள் ஒருவராவர். செல்வக் கோவுக்குரிய நன்றா என்னும் குன்று இடைக்காலத்தே நணா எனத்திரிந்துவிட்டது. அக் குன்றேறி நின்று கபிலர்க்குக் காட்டிக் கொடுத்த நாட்டுப் பகுதியில் கபிலக் குறிச்சியென்னும் ஊர் இருந்து அந்தப் பண்டைக்கால நிகழ்ச்சிக்குச் சான்று கூறி நிற்கிறது. இதன் விளக்கத்தை இவ்வுரைகாரருடைய பண்டை நாளைச் சேரர் என்ற நூலிற் காண்க. இனி, இவ்வாதனார் சேரமான் செல்வக் கடுங்கோ வாழியாதனைக் காணச்சென்று அவன் பகைவரை வென்று அவர் தந்த திறையை ஏற்று இனிதிருந்து தன் நண்பர்க்கும் பரிசிலர்க்கும் அவற்றை நல்குதலைக் கண்டார். தாமும் அவன் வென்றிமாண்பை எடுத்துரைத்துப் பாடினார். கபிலர் போலப் பெரும்புலவ ரல்லராயினும்,இவ் வாதனாரைச் சேரமான் இழித்து நோக்காது தன் பெருமைக் கேற்பத் தகவுற நோக்கிக் களிறும் மாவும் நிரையும் பிறவும் கனவென அவர் மருளுமாறு வழங்கினான். “சேரமானைக் காணச் செல்லுமிடத்து வழியிடையே வேறு சில வேந்தர் எதிர்ப்படின், அவர்க்கு யாம் செல்வக் கடுங்கோ வாழியாதனால் புரக்கப் படும் இரவலர் என்னின், அவர்கள் தம் குடையைப் பணித்து அன்புடன் வழிவிடுவர்” என்று இதன்கண் அவனது ஒளியினையுயர்த்திக் கூறி, அவன் பொருநையாற்று மணலினும் அதனைச் சுற்றியுள்ள வயல்களில் விளையும் நெல்லினும் பல்லாண்டு வாழ்வானாக என்று வாழ்த்தி யுள்ளார். வள்ளுகிர வயலாமை வெள்ளகடு கண்டன்ன வீங்குவிசிப் புதுப்போர்வைத் தெண்கண் மாக்கிணை யியக்கி யென்றும் 5 மாறுகொண்டோர் மதிலிடறி நீறாடிய நறுங்கவுள பூம்பொறிப் பணையெருத்தின வேறுவேறு பரந்தியங்கி வேந்துடைமிளை யயல்பரக்கும் 10 ஏந்துகோட் டிரும்பிணர்த் தடக்கைத் திருந்துதொழிற் பலபகடு பகைப்புல மன்னர் பணிதிறை தந்துநின் நகைப்புல வாணர் நல்குர வகற்றி மிகப்பொலியர்தன் சேவடியத்தை யென் 15 றியாஅ னிசைப்பி னனிநன்றெனாப் பலபிற வாழ்த்த விருந்தோர்தங் கோன்........ மருவவின்னக ரகன் கடைத்தலைத் திருந்துகழற் சேவடி குறுகல் வேண்டி வென்றிரங்கும் விறன் முரசினோன் 20 என்சிறுமையி னிழித்து நோக்கான் தன்பெருமையின் றகவுநோக்கிக் குன்றுறழ்ந்த களிறென்கோ கொய்யுளைய மாவென்கோ மன்றுநிறையு நிரையென்கோ 25 மனைக்களமரொடு களமென்கோ ஆங்கவை, கனவென மருள வல்லே நனவின் நல்கி யோனே நசைசா றோன்றல் ஊழி வாழி பூழியர் பெருமகன் பிணர்மருப் பியானைச் செருமிகு நோன்றாட் 30 செல்வக் கடுங்கோ வாழி யாதன் என்னாத் தெவ்வ ருயர்குடை பணித்திவண் விடுவர் மாதோ நெடிதே நில்லாப் புல்லிலை வஞ்சிப் புறமதி லலைக்கும் கல்லென் பொருநை மணலினு மாங்கட் 35 பல்லூர் சுற்றிய கழனி எல்லாம் விளையு நெல்லினும் பலவே. திணை : பாடாண்திணை. துறை: கடைநிலை. சேரமான் சிக்கற்பள்ளித் துஞ்சிய செல்வக்கடுங்கோ வாழியாதனைக் குன்றுகட்பாலி யாதனார் பாடியது. உரை : வள்ளுகிர வயலாமை - கூரிய நகங்களையுடைய வயலிடத்து வாழும் யாமையினது; வெள்ளகடு கண்டன்ன - வெண்மையான வயிற்றைக் கண்டாற் போன்ற; வீங்கு விசிப் புதுப் போர்வை - பெரிதாய் வலித்துக் கட்டப்பட்ட புதிய தோல் போர்த்த; தெண்கண் மாக்கிணை இயக்கி - தெளிந்த கண்ணையு டைய பெரிய தடாரிப் பறையை யறைந்து; என்றும் மாறு கொண்டோர் மதில் இடறி - எப்போதும் பகைவருடைய மதில்களைத் தகர்த்து; நீறாடிய நறுங்கவுள - நீறு படிந்த நறிய கபோலத்தையுடைய; பூம்பொறிப் பணையெருத்தின - பூவேலை செய்யப்பட்ட பட்டமணிந்த பருத்த கழுத்தை யுடையவாய்; வேறுவேறு பரந்தியங்கி - வேறுவேறாகப் பரந்து சென்று; வேந்துடை மிளை அயல் பரக்கும் - வேந்தர்களுடைய காவற்காட்டின் அயலிடத்தே பரவி யுலவும்; ஏந்துகோட்டு இரும்பிணர்த்தடக்கை - உயர்ந்த கோடுகளையும் பெரிய சருச்சரை பொருந்திய பெரிய கையையுமுடையவாய்; திருந்து தொழில் பல பகடு - திருந்திய தொழில் செய்யவல்ல பலவாகிய யானைகளையுடைய; பகைப்புல மன்னர் பணிதிறை தந்து - பகைநாட்டு வேந்தர் பணிந்து தரற்குரிய திறையைத் தந்து; நின் நகைப்புலவாணர் நல்குர வகற்றி - நினக்கு இன்பச்சுவை நல்கும் அறிவினராகிய இரவலர் நண்பர் முதலியோரது வறுமையைப் போக்கி; மிகப் பொலியர் தன் சேவடி - மிகவும் விளங்குக அவன் திருவடி; என்று-; யா அன் இசைப்பின் நனி நன்று எனா - யான் பாடுவேனாயின் மிகவும் நன்றென்று; பல பிற வாழ்த்த இருந்தோர் - பலவாகிய பிற இயல்புகளைச் சொல்லி வாழ்த்தக் கேட்டு மகிழ்ந்திருந் தோர்க்கு; கோன் - தலைமை தாங்கும் வேந்தன், மருவ இன்நகர் அகன் கடைத்தலை - நெருங்குதற்கினிய பெருமனையின் அகன்ற முற்றத்திடத்து; திருந்துகழற் சேவடி குறுகல் வேண்டி - திருந்திய கழலணிந்த சேவடியை வந்தடையுமாறு; வென்றிரங்கும் விறல் முரசினோன் - போர்க்களத்தில் பகைவரை வென்று முழக்கும் விறல்படைத்த முரசினையுடையவன்; என் சிறுமையின் இழித்து நோக்கான் - என் சிறுமை கண்டும் இகழ்ந்து நோக்காது; தன் பெருமையின் தகவு நோக்கி - தன் பெருமையும் தகுதியும் நோக்கி; குன்றுறழ்ந்த களிறு - மலைபோன்ற களிறுகளும்; கொய்யுளையமா - கொய்யப் பட்ட தலையாட்டமணிந்த குதிரைகளும்; மன்று நிறையும் நிரை - மன்றிடம் நிறைந்த ஆனிரைகளும்; மனைக் களமரொடு களம் - மனைக்கண் இருந்து பணிபுரியும் களமரும் நெற்போர்க்களங்களுமாகிய; அவை - அவற்றை; வல்லே - விரைவாக; கனவென மருள நனவின் நல்கியோன் - கனவென்று மயங்குமாறு நனவின்கண் நல்கினான்; நசைசால் தோன்றல் - அன்பு நிறைந்த தலைவன்; பூழியர் பெருமகன் பூழிநாட்டார்க்குப் பெருந்தலைவனாயவன்; பிணர் மருப்பு யானை- சருச்சரை பொருந்திய கையும் கோடுமுடைய யானைகள் செய்யும்; செருமிகு நோன்றாள் - போரில் மேம்பட்ட வலிய தாளையுடைய; செல்வக் கடுங்கோ வாழியாதன்; என்னா - என்று; தன் பெயர் கூறிய அளவில்; தெவ்வர் உயர்குடை பணித்து - பகைவர் தம்முடைய உயர்ந்த கொற்றக் குடையைத் தாழ்த்தி வணங்கி; நெடிது நில்லாது இவண் விடுவர் - நெடிது தாழ்க்காமல் தாம் செய்தற்குரிய சிற்புக்களைச் செய்து இவண் வரவிடுவராதலால்; புல்லிலை வஞ்சிப் புறமதில் அலைக்கும் - இலையில்லாத வஞ்சியாகிய வஞ்சிமாநகரின் மதிற்புறத்தை யலைக்கும்; கல்லென் பொருநை மணலினும் - கல்லென்னும் ஓசையையுடைய ஆன் பொருநையாற்று மணலினும்; ஆங்கண் - அவ்விடத்து; பல்லூர் சுற்றிய கழனி யெல்லாம் - விளையும் நெல்லினும் பல வூழி வாழி - பலவாகிய வூர்களைச் சூழவுள்ள வயல்களெல்லாவற்றினும் விளையும் நெல்லினும் பலவாகிய வூழிகள் வாழ்வானாக; எ-று. கிணை இயக்கி, தந்து, அகற்றில் பொலியர்தன் சேவடி என்று இசைப்பின் நனிநன்று எனா, வாழ்த்த இருந்தோர் தங்கோன், குறுகல் வேண்டி, இரங்கும், முரசினோன்; நோக்கான் நல்கியோன் தோன்றல், பெருமகன், செல்வக் கடுங்கோ வாழியாதன் என்னாத் தெவ்வர் குடை பணித்து, நில்லாது விடுவராதலின், மணலினும் நெல்லினும் பல வூழி வாழி என்று கூட்டி வினை முடிவு செய்க. ஆமையின் வெள்ளகடுபோல்வது கிணைப்பறை யென்பதை “ஆமை கம்புள் இயவனாக விசிபிணித் தெண்கட் கிணையிற் பிறழும்” (அகம். 356) என்று பிறரும் கூறுதல் காண்க. நாற்றிசையும் பரந்து சென்று காவற் காட்டையழித்தலின், “வேறு வேறு பரந்தியங்கி வேந்துடை மிளையயல் பரக்கும்” என்றார். திருந்து தொழிற் பகடென்றது, தாம் செய்தற்குரிய வினைபலவும் நன்கு பயின்றிருப்பது விளக்கி நின்றது. பகடாகிய திறையென இயையும். பகைப்புல வேந்தர் பணிந்து நண்பராயினமை தோன்றத் திறை பகர்ந்ததோடு அமையாது, சேரமானுடைய நகைப்புலவாணர்க்கு நல்குரவு தீர வழங்குவதும் சேரமான் புகழை அவர் பாடக்கேட்டிருந்து மகிழ்வதும் செய்வரென்பதாம். நகைப்புலவாணர், அறிவுக்கு இன்பச்சுவை நல்கும் புலவர், பாணர், கூத்தர் முதலாயினார். மருவுவார்க்குச் சீர்த்தவுணவும் உடையுந் தந்துசிறப்பித்தலின் “மருவவின்னகர்” என்றார். பெரிய தப்புநராயினும்தன்கழல் பணிந்து திறைதருவரேல் தான் பேரருளுடையனா மென்பதைக் குறித்துத் தெரிவித்தலின், “வென்றிரங்கும் விறன்முரசு” என்றார். ஏற்போர் சிறுமை நோக்காது ஈவோர் தம்தகுதி நோக்கிக் கொடுப்பது மரபு என்கோ, ஆங்கு; அசைநிலை பிணர் மருப்பு என்புழி: பிணர் ஆகுபெயராய்க் கைமேனின்றது. மனைக்களமர், மனையிடத்தே சோறும் கூறையும் பெற்றுப் பணிபுரியும் உழவர். செல்வக் கடுங்கோ வாழியாதன் பெயர்கூறக் கேட்ட அளவிலே பகைவேந்தர் அஞ்சி நெடிது தாழ்த்தாது பெயர் கூறினார்க்கு வேண்டுவன நல்கி வழிவிடுவரென அவனது ஒளியின் இயல்பு கூறுவார், “என்னாத் தெவ்வர் உயர்குடை பணித்திவன் விடுவர் மாதோ நெடிதே” என்றார். புல்லிலை யென்புழி புன்மை இன்மை குறித்து நின்றது; இது வஞ்சிமாநகர்க்கு வெளிப்படை வஞ்சி நகர்க்கண்மையிலோடும் பொருநை ஆன்பொருநையெனப்படும். கருவூர்க்கல்வெட்டும், (A.R.No. 166 of 1936-7) அதனை வஞ்சி நகரென்றும், அமராவதியை ஆன்பொருந்த மென்றும் குறிக்கின்றன. “மண்ணாள் வேந்தே நின் வாணாட்கள், தண்ணான் பொருநை மணலினுஞ் சிறக்க” (சிலப். 28; 125 -6) என அடிகளும் உரைப்பது காண்க. எனவே சேரநாட்டுவஞ்சி தண்பொருநைக் கரையிலும் கொங்கு நாட்டுக்கருவூராகிய வஞ்சி ஆன்பொருநைக்கரையிலும் இருப்பனவென வேறுபடுத்தறியவேண்டுவனவாம். சேரநாடு கேரள நாடாய்ச் செந்தமிழ் மொழியும் நாட்டு மக்களுடைய பண்பாடுகள் பலவும் திரிந்து வேறுபட்ட இடைக்காலத்துச் சேரநாட்டு வஞ்சியும் தண்பொருநையும் பெயருருத் தெரியாது மறைந்தன. இடைக் காலத்தறிஞர் கருவூரையே சேரநாட்டு வஞ்சியாமெனப் பிறழ வுணர்ந்தனர். இதுபற்றிய ஆராய்ச்சிக் குறிப்பைப் “புறநானூற்றுச் சொற்பொழிவுகள்” என்ற நூலிற் (பக். 34-5) காண்க. விளக்கம் : செல்வக்கடுங்கோ வாழியாதன் கொடைவழங்கும் தலைவர் பலர்க்குத் தலைவன் என்பதும், அவனைக் கிணைப்பொருநன் பாடிச் சென்றபோது அவன் பொருநனது சிறுமை நோக்காது இனிது வரவேற்றதும், கொடைபல புரிந்ததும் அவனது ஒளியின் சிறப்பும் கூறிப்பொருநை மணலினும், நெல்லினும் பல வூழி வாழியென்பதும் பாலி ஆதனார் இப்பாட்டின்கட் கூறுவனவாகும் இவற்றுள் முற்றத்தே நின்று கிணைப் பொருநனது செயலை முதற்கண்ணோதிப் பின்னர்ச் சேரமானுடைய வென்றி நலத்தை விரித்தோதுகின்றார். தான் சேரமானைப் பாடவரும்போது தன் கிணைப்பறைக்குப் புதுப்போர்வை யணிந்து செம்மையுற வந்ததாகவுரைத்துச் சேரமான் பகைப்புலத்துத் திறையாகக் கொண்ட யானைகளின் சிறப்பை “மாறுகொண்டோர் மதில் இடறி நீராடிய நறுங்கவுள” என்றும் “பூம்பொறிப் பணை யெருத்தின” என்றும் அவை திருந்திய தொழில்புரியும் பயிற்சி யுடையவை யென்றற்கு, “திருந்து தொழிற் பலபகடு” என்றும் பொருநன் உரைக்கின்றான். அக்காலை அவன் வேந்தனை முன் னிலைப்படுத்தி வேந்தே. நினக்கு நின் பகைப்புலமன்னர் நல்கும் திறைப்பொருளைத் தந்து பொருநர், பாணர், கூத்தர் முதலிய நகைப்புலவாணர் நல்குரவகற்றி மிகப்பொலியர்தன் சேவடி” என்று வாழ்த்தினான். அந்நிலையில் ஆங்கிருந்த சான்றோர் பலரும் அவன் செயலை நனிநன்றென வியந்து அக்கிணைவனை யூக்கின ராக. அவன் இவைபோல்வன பிறவும் எடுத்தோதினன். அச் சான்றோர் பலரும் அவையனைத்தும் செவியும் நெஞ்சும் குளிர இனிதிருந்து கேட்டனர் என்பான், “நனிநன்றெனாப் பலபிற வாழ்த்த இருந்தோர்” என்று இசைக்கின்றான். பின்பு அச் சான்றோர் சென்று சேரமானுக்குரைப்ப, அவன் கிணைப்பொருநனைத் தன்பால் வருவித்து அருளொழுக நோக்கிச் சிறப்பித்த செயலை, “என் சிறுமையின் இழித்து நோக்கான், தன் பெருமையின் தகவு நோக்கி” களிறும் மாவும் நிரையும் பிறவும் நல்கினன் என்று கூறுகின்றான். இழித்து நோக்கற்குரிய சிறுமை என்பால் இருப்பவும், தன்தகுதி நோக்கற்குரிய பெருமையுடையனாதலால் அவன் அது செய்யா னாயினன்” என்றான். “விழையா வுள்ளம் விழையுமாயினும்”, என்றும். “கேட்டவை தோட்டியாக மீட்டாங்கு அறனும் பொருளும் வாழாமை நாடித் தற்றகவுடைமை நோக்கி மற்றதன் பின்னாகும்மே முன்னியது முடித்தல் அனைய பெரியோ ரொழுக்கம்” (அகம்.286) என ஆசிரியர் ஓரம்போகியார் உரைப்பதனால், பெருமை தன்தகவு நோக்கற் கேதுவாதல் காண்க. பூழிநாட்டுக்கும் உரியன் என்பது தோன்ற, “பூழியர் பெருமகன்” என்றார். இவ்வாறு பரிசில்பெற்றுச் செல்லுங்கால் பகைவர் எதிருற்று வளைத்துக் கொள்வாரயின் அவர்க்குச் செல்வக் கடுங்கோ வாழியாதன் செய்த சிறப்பு இஃது என்றால், அவர்கள் தமது வணக்கத்தின் அறிகுறியாகத் தம் குடையைப் பணித்துப் பரிசிலரை இனிது செல்ல விடுவரென்பது. 388. சிறுகுடி கிழான் பண்ணன் சிறுகுடிகிழான் பண்ணனை இப் பாட்டால் ஆசிரியர் மதுரை அளக்கர்ஞாழலார் மகனார் மள்ளனார் என்னும் சான்றோர் பாராட்டிப் பாடியுள்ளார். பண்ணனது சிறுகுடி சோழநாட்டில் திருவீழிமிழலைக்கு அண்மையில் திருஞான சம்பந்தரால் தேவாரம் பாடப்பெற்றவூராகும். இப் பண்ணனைச் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவனும் கோவூர் கிழாரும் பாடியுள்ளனர். முடிவேந்தனான கிள்ளி வளவனே வியந்து பாடும் பாராட்டுப் பெற்றவன் இப்பண்ணன் எனின், இவனுக்கு அக்காலத்தில் தமிழகத்திலிருந்த நன்மதிப்பு மிகப்பெரிதாம். கிள்ளிவளவனை ஒருகாற் பாடிப் போந்த கோவூர் கிழார் அவனால் பெரிதும் விரும்பப்பெற்ற பண்ணன் சிறுகுடியில் உள்ள பாதிரிமரத்தின் மணத்தை வியந்து, “கைவள்ளீகைப் பண்ணன் சிறுகுடிப்பாதிரி கமழுமோதி யொண்ணுதல் இன்னகை விறலி” (புறம்.70) எனச்சொல்லி அவ் வளவனை மகிழ்வித்தார் முடிவேந்தனும் சான்றோரும் பாராட்டும் சிறப்புடைய பண்ணனை ஆசிரியர் மள்ளனார் இப்பாட்டின்கண் பாடுவாராய், இவனை யான் நாடோறும் பாடேனாயின் நன்றி கொன்றேனென்னும் குற்றம் பற்றி என் பெருஞ்சுற்றத்தாரைப் பாண்டியன் அருள் செய்யாமல் ஒழிவானாக என்று கூறுவதுடன் பண்ணன் புலவர்க்கு விளை நிலங்களை வினைப்பகடுளோடே நல்குவன் என்றும், கிணைவ னொருவன் பண்ணன்பாற்சென்று கிணைதொட்டுப் பாடிப் பரவினானாக அவனது வறுமைத் துன்பம் நீங்குமாறு தன்பால் உள்ள செல்வத்தைத் தந்தான் என்றும் குறித்துள்ளார் அளக்கர் ஞாழலார் எனற்பாலது அளக்கர் ஞாழார் எனவும் காணப்படுகிறது. மள்ளனாருடைய தந்தையார் அளக்கர் ஞாழலார் எனப்படுவது நோக்கின், அவரொரு சிறந்த நல்லிசைப் புலவரென்றும், கடலிடும் எக்கர்க்கண் நின்ற ஞாழலை அளக்கர் ஞாழல் என்று சிறப்பித்துப் பாடியதுகொண்டு அவர் அளக்கர் ஞாழலாரெனப்பட்டா ரென்றும் அறியலாம். மள்ளனாரென்பது இவரது இயற்பெயர். இவர் பாடியனவாக அகத்தில் ஏழும் குறுந்தொகையில் இரண்டும் நற்றிணையில் மூன்றும் புறத்தில் ஈது ஒன்றுமாகப் பதின்மூன்று பாட்டுகள் உள்ளன. முல்லைக் காலத்தே பார்ப்பனமகளிர் முல்லை மலரைத்தம் கூந்தலில் அணிவரென்றும், தலைமக ளொருத்தியின் நலத்துக்கு உவமையாக “முருகு புணர்ந் தியன்ற வள்ளி” யென்றும், கொல்லிமலையை “வெல்போர் வானவன் கொல்லி” யென்றும் குறிப்பர். தலைமகன் ஒருவன் பொருள் மேற்சென்ற தன் நெஞ்சை நோக்கி நாளது செலவும் மூப்பினது வரவும், அரிதுபெறு சிறப்பின் காமத் தியற்கையும் கனவு போலக் கழியும் என்பதும், இவை போல்வன பிறவும் இவருடைய புலமைச் சிறப்பை விளக்குவனவாம். இப் பாட்டும் இடையிற் சில அடிகள் சிதைந்துள்ளது. வெள்ளி தென்புலத் துறைய விளைவயற் பள்ளம் வாடிய பயனில் காலை இரும்பறைக் கிணைமகன் சென்றவன் பெரும்பெயர் சிறுகுடி கிழான் பண்ணற் பொருந்தித் 5 தன்னிலை யறியுந னாக வந்நிலை இடுக்க ணிரியல் போக வுடைய கொடுந்தோ னெந்தை கொடைமேந் தோன்றல் நுண்ணூற் றடக்கையி னாமருப் பாக வெல்லும் வாய்மொழிப் புல்லுடை விளைநிலம் 10 பெயர்க்கும் பண்ணற் கேட்டிரவன். . . . . . . . . வினைப்பக டேற்ற மெழீஇக் கிணைதொடா நாடொறும் பாடே னாயி னானா மணிகிளர் முன்றிற் றென்னவன் மருகன் பிணிமுர சிரங்கும் பீடுகெழு தானை 15 அண்ணல் யானை வழுதி கண்மா றலீஇயரென் பெருங்கிளைப்புரவே. திணை : பாடாண்திணை. துறை ; இயன்மொழி - சிறுகுடிகிழான் பண்ணனை மதுரை அளக்கர்ஞாழலார் மகனார் மள்ளனார் பாடியது. உரை : வெள்ளி தென் புலத்துறைய - வெள்ளியாகிய மீன் தென்றிசையில் நிற்க; விளைவயல் பள்ளம் வாடிய பயனில் காலை - விளை வயல்களும் நீர்நிலைகளும் வற்றிய பயனில்லாத காலமாகிய வற்கடத்தில்; இரும்பறைக் கிணைமகன் சென்றவன் - பெரிய பறையாகிய தடாரியை இசைக்கும் பொருநன் சென்று; பெரும்பெயர் சிறுகுடிகிழான் பண்ணற் பொருந்தி - பெரிய புகழையுடைய சிறுகுடிக்குரியனாகிய பண்ணனை யடைந்து; தன்நிலை அறியுநனாக - தனது வறுமைநிலையை யறிவித்தானாக; அந்நிலை - அப்பொழுதே; இடுக்கண் இரியல்போக - அவனுற்ற பசித்துன்பம் நீங்குமாறு; உடைய கொடுத்தோன் - தான் உடைய பொருள்களைக் கொடுத்தான்; எந்தை - எங்கள் தலைவனும்; கொடை மேந் தோன்றல் - கொடையால் மேம்பட்ட தோன்றலுமாகிய பண்ணன்; நுண்ணூல் தடக்கையின் நா மருப்பாக - நுண்ணிய நூற் பொருளே பெரிய கையாகவும் நாவே மருப்பாகவும்; வெல்லும் வாய்மொழிப் புலவர்க்கு - வெல்லுகின்ற வாய்மொழியாகிய களிற்றையுடைய புலவர்கட்கு; புல்லுடை விளைநிலம் பெயர்க்கும் பண்ணன் கேட்டிர் - நெல்லாகிய புல்லையுடைய விளைவயல்களை நல்கும் பண்ணனையான் கூறக்கேட்பீராக; .........அவன் வினைப்பகடு ஏற்றம் எழீஇக் கிணைதொடா - அவனுடைய உழவுவினைக்குரிய எருதுகளையும் ஏற்றத்தையும் யாழிலிட்டிசைத்துக் கிணைப் பறையைக் கொட்டி; நாடொறும் பாடேனாயின் - நாளும் பாடா தொழிவேனாயின்; ஆனா மணிகிளர் முன்றில் - நீங்காத ஆராய்ச்சி மணி கட்டியிருக்கும் முன்றிலையுடைய; தென்னவன் மருகன் - பாண்டியன் வழித் தோன்றலான; பிணி முரசு இரங்கும் பீடு கெழு தானை - வாராற் கட்டப்பட்ட முரசு முழங்கும் பெருமை பொருந்திய தானையையுடைய; அண்ணல் யானைவழுதி - தலைமை பொருந்திய யானைப் படையாற் சிறந்த வழுதி; என் பெருங்கிளைப் புரவு கண்மாறலீயர் - என் பெரிய சுற்றத்தாரைப் புரத்தற்கு வேண்டும் அருளைச் செய்யாதொழிவானாக; எ-று. விளைவயல் பயன்தாராது கெடுதற்குப் பள்ளங்கள் நீர்வற்று தலாதலின், “விளைவயற் பள்ளம் வாடிய பயனில்காலை” என்றார். கிணைப் பொருநனைக் கிணை மகன் என்ப பெரும் பெயர்ப் பண்ணன் என இயையும் பெயரென்றது ஈண்டுப் புகழ்மேனின்றது. கிணைமகன் தன் வறுமையைக் குறிப்பால் உணர்த்திய அப்பொழுதே சிறிதும் தாழ்க்காது தான் உடையவற்றை வழங்கினமை தோன்ற “அந்நிலை” யெனப் பட்டது; “அந்நிலையே கெட்டான் எனப்படுத னன்று” (குறள். 967) என்றாற் போல. தடக்கையும் மருப்பும் கூறி அவற்றையுடைய களிற்றைக் கூறாமையின், இஃது ஏகதேசவுருவகம். நுண்ணிய நூற்கேள்வியாலாகும் அறிவாற் செயல் நலம் சிறப்புறுதலின் அதனைத் தடக்கையாகவும் சொற்போர் வல்லாரை வேறற்கு நற்கருவியாதலின் நாவை மருப்பாகவும் உருவகம் செய்துள்ளார். உழுதற்றொழிலில் நன்கு பயின்ற எருதுகள் வினைப்பகடெனப்பட்டன. வினைப்பகடேற்ற மேழி கிணைதொடா என்ற பாடத்துக்குப் பகடும் ஏற்றமும் மேழியும் பண்ணற்குப் பெருங்கருவியாய் உழவுவளம் மேம்படுதற்குதவுதலின் அவற்றைப் பாடுவது அவனைப் பாடுவதா மென்பது கொண்டு “கிணைதொடாப் பாடேனாயி” னென்றாரெனக் கொள்க. ஏத்துதற்குரியாரை ஏத்தாமை நன்றி கொல்லும் குற்றமாதலின் அதுகுறித்து வழுதி கண்மாறுவானாக என்றார். இது வஞ்சினம், கண்மாறலீயர் - கண்மாறுக; “அருள் கண்மாறலோ மாறுக” (அகம். 144) என இம் மள்ளனார் கூறுவது காண்க. விளக்கம் : இப் பாட்டின்கண் ஆசிரியர் மள்ளனார் தொடக்கத்தில் பண்ணன் கிணைவனுக்கு வழங்கிய கொடையினையும், பின்னர்ப் புலவர் கட்குச் செய்யும் பேருதவியையும் பாடி, இறுதியில் அவன் நலம் பாராட்டா வழிநன்றிகொன்ற குற்றத்துக்காகப் பாண்டியன் தம்பால் அருள் கண்மாறுக என்று உரைக்கின்றார். வறம் மிக்க காலத்தில் கிணைவன் சிறு கிழான் பண்ணனைப் பாடிச் சென்று, “தன்னிலை அறியுநனாக அந்நிலை இடுக்கண் இரியல்போக உடைய கொடுத்தான் ” என்றார். “வெள்ளி தென்புலத்துறைய விளைவயற் பள்ளம் வாடிய பயனில் காலை” என்பதை எடுத்தோதுதலால், சிறுகுடிகிழான் பண்ணன் மழை வளத்தால் விளையும் விளைவே வருவாயாக வுடையன் என்பது பெற்றாம். புலவர்கட்கு விளைநிலம் பெயர்க்கும் என்பது புலவர்பால் அவன்கொண்ட பேரன்பு குறித்து நிற்கிறது. பண்ணன் உழவுத் தொழிலால் பெருவளம் பெற்றுக் கொடைக்கடன் இறுக்கும் புகழுடையனாதலால், அவனுடைய பகடும் ஏற்றமும் புகழ்ந்து பாடப்படுவன வாயின. அருள் செய்தற்குரிய வழுதி, புகழ்தற்குரிய பண்ணனை யான் புகழேனாயின், என் பெருங் கிளைபால் அருள்செய்யா தொழிதல் கொடுமையாகாமையின் அவன் அது செய்க. என்றான். 389. நல்லேர் முதியன் தமிழகத்தின் வடவெல்லையாக விளங்கும் திருவேங்கடத்தின் கண் இருந்து பண்டைநாளில் அப் பகுதியையாண்ட வேந்தர் களான புல்லி ஆதனுங்கன் முதலியோர் வழித்தோன்றல் இந்த நல்லேர் முதியன். இவனுடைய முன்னோனாகிய ஆதனுங்கனைப் பாடிப் பரிசில் பெற்றுச் சிறப்பெய்திய கள்ளில் ஆத்திரை யனாரென்னும் சான்றோர் ஒருகால் முதியனைக் காணச் சென்றார். அக்காலை ஆதனுங்கன் செய்த சிறப்பையோதுவாராய், யான் பண்டு வந்திருந்தபோது இளையனாயிருந்தோன்; என்னை நோக்கி “பிள்ளைப்பொருந, வெள்ளிமீன் வறனுண்டாதற்குரிய திசைக்கட் செல்லுங்கால் நின்னால் நினைக்கப்படுவாருள் எம்மையும் மறவாது நினைப்பாயாக” என்று சொல்லி வேண்டுவன நல்கினன். அத்தகைய வள்ளியோன் இன்று யான் சென்றுகூடும் இடத்தில் இல்லை; சென்றால் காணமாட்டாத இயல்புடையனுமல்லன்; அவன் இவ் வேங்கடத்துக்கு உரியவன்; என்று கூறி, “நல்லேர் முதியனே, அந்த ஆதனுங்கன்போல நீயும் எம் பசிப்பிணி தீர வீறுடைய நன்கலங்களை நல்குக; பெருமானே; நின் நெடுமனை முற்றத்தே நின்மகளிர் சாப்பறை முழக்கம் கேளாதொழிவார்களாக” என்று இப் பாட்டின்கண் கூறியுள்ளார். ஆத்திரையனாருடைய கள்ளில் என்னு மூரைத் “தொண்டை நாட்டுப் புழற் கோட்டத்துக் குன்றிகை நாட்டுத் திருக்கள்ளில்” (A.R. 486 of 1926) என்று கல்வெட்டுக் கூறுகிறது. இவ்வூரிலுள்ள சிவனை திருஞான சம்பந்தர் “கள்ளின் மேய அண்ணல்” (119:1) என்று பாடினா ராகக் கல்வெட்டுக் காலத்தவர் தவறாகக் “கள்ளின” மெனப் பொறிப்பாராயினர். இதற்குக் கள்ளூரென்றும் பெயர் (A.R.No. 490 of 1926) உண்டு. இனி ஆசிரியர் கடுவன் மள்ளனார் கூறும் “தொல்புகழ் நிறைந்த பல்பூங் கழனிக், கரும்பமல் படப்பைப் பெரும்பெயர்க் கள்ளூர்” (அகம். 256) இஃதெனக் கருதுவோரும் உண்டு. இதற் கிப்போது மடவிளாகம் என்பது பெயர். நீர் நுங்கின் கண்வலிப்பக் கானவேம்பின் காய்திரங்கக் கயங்களியுங் கோடையாயினும் ஏலா வெண்பொன் போகுறு காலை 5 எம்மு முள்ளுமோ பிள்ளையம் பொருந என்றீத் தனனே யிசைசா னெடுந்தகை இன்றுசென் றெய்தும் வழியனு மல்லன் செலினே காணா வழியனு மல்லன் புன்றலை மடப்பிடி யினையக் கன்றுதந்து 10 குன்றக நல்லூர் மன்றத்துப் பிணிக்கும் கல்லிழி யருவி வேங்கடங் கிழவோன் செல்வுழி யெழா அ நல்லேர் முதிய ஆத னுங்கன் போல நீயும் பசித்த வொக்கற் பழங்கண் வீட 15 வீறுசா னன்கல நல்குமதி பெரும ஐதக லல்குன் மகளிர் நெய்தல்கே ளன்மார் நெடுங்கடை யானே. திணை : பாடாண்திணை. துறை: கடைநிலை.. நல்லேர் முதியனைக் கள்ளில் ஆத்திரையனார் பாடியது. உரை : நீர் நுங்கின் கண் வலிப்ப - நீர் நிறைந்து மெல்லி தாயுள்ள பனைநுங்கு வற்றிக் கற்போல் வலிதாக; கான வேம்பின் காய் திரங்க - காட்டிலுள்ள வேம்பினுடைய காய்கள் முற்றாது உலர்ந்துகெட; கயங் களியும் கோடையாயினும் - ஆழ்ந்த நீர்நிலை வற்றிப் பிளவுற்றுக்கிடக்கும் கோடைக்காலமாயினும்; ஏலா வெண்பொன் போகுறுகாலை - வெள்ளியாகிய மீன் தெற்கின் கட் சென்று வறம்செய்யும் காலையாயினும்; பிள்ளையம் பொருந - பிள்ளைப்பருவங் கடவாத பொருநனே; எம்மும் உள்ளுமோ -நின்னால் நினைக்கப்படுவோருள் எம்மையும் நினைப்பாயாக; என்று ஈத்தனன் - என்று சொல்லிப் பெருவளம் நல்கினான்; இசைசால் நெடுந்தகை - புகழ் நிறைந்த நெடிய தகைமையினையுடைய தலைவன்; இன்று சென்று எய்தும் - வழியனுமல்லன் - அவன் இன்றைப் போதிலே சென்று காணும் இடத்தில் உள்ளான் அல்லன்; செலின் காணா வழியனுமல்லன் - சென்றால் காணவியலாத அருஞ்செவ்வி யுடையனுமல்லன்; - புன்றலை மடப்பிடி இனைய - புல்லிய தலையையுடைய பிடியானை வருந்த; கன்று தந்து - அதன் கன்றைக் கொணர்ந்து; குன்றக நல்லூர் மன்றத்துப் பிணிக்கும் - குன்றை ஊரகத்தேயுடைய நல்லவூரின் மன்றத்தே பிணித் துவைக்கும்; கல்லிழியருவி வேங்கடம் கிழவோன் - கற்களி னூடே யோடி யிழியும் அருவிகளையுடைய வேங்கடத்துக் குரியவனான; செல்வுழி எழாஅ நல்லேர் முதிய - தன் மனம் செல்லுமிடமெல்லாம் சேறற் கெழாத நல்லேர் முதியனேன்; ஆதனுங்கன் போல - நின் முன்னோனாகிய ஆதனுங்கன் போல; நீயும்-; பசித்த ஒக்கல் பழங்கண் வீட - பசித்த என் சுற்றத்தாருடைய துன்பம் கெட; வீறுசால் நன்கலம் நல்குமதி - சிறப்பமைந்த நல்ல கலன்களை நல்குவாயாக; ஐதகல் அல்குல் மகளிர் - மெல்லிதாய் அகன்ற அல்குலையுடைய நின் மகளிர்; நெடுங்கடை நெய்தல் கேளன்மார் - நின் பெருமனையின் நெடிய முற்றத்தில் நெய்தற்பறையே கேளா தொழிவார் களாக; எ-று. கோடை மிகுந்த காலை பனைநுங்கு நீர்வற்றிக் கற்போல் வலிதாகலும் கயங்கள் வற்றி அடிப்பகுதி வெடித்துப்பிளந்து கிடப்பதும் இயல்பாதலால் “நுங்கின்கண் வலிப்ப” வென்றும் “கயங்களியும்” என்றும் கூறினார். “ஏலா வெண் பொன்” என்றது வெள்ளியாகிய மீனுக்கு வெளிப்படை. போகுறு காலை. வறஞ்செய்தற் பொருட்டுத் தெற்கேகுங் காலம். ஆயினும் என்பதைக் காலைக்குங் கூட்டுக. இதனைப் போருறு காலை என்று பாடங் கொண்டு வெள்ளிமீன் ஏனைக் கோள்களோடு போர்ச்செய்யுங் காலையென்று பொருள் கூறுதலுமுண்டு. ஆதனுங்கனது முதுமையும் தமது இளமையுந் தோன்ற, “பிள்ளையம்பொருந” என்று குறித்தார். ஈவார்மேல் புகழ்நிற்கு மாகலின் “ஈத்தனனே இசைசால் நெடுந்தகை” யென்றார். ஆதனுங்கன் இறந்து உயர்ந்தோருலகில் இருக்கின்றா னென்பார் “இன்று சென்றெய்தும் வழியனுமல்லன்” எனவும், அங்குச் செல்லின் அவனைக் காண்டல் எளிது என்பார், “செலினே காணாவழியனுமல்லன்” எனவும் தெரிவித்தார். இனி ஆதனுங்கன் வேங்கடத்திலும், நல்லேர்முதியன் பிறிதோரிடத்திலும் ஒரு காலத்தவராய் வாழ்ந்தவரென்றும், ஆத்திரையனார்க்கு வேங்கடத்தினும் முதியனூர் அண்மையில் இருந்ததாமென்றும், முதியனுக்கு ஆதனுங்கன் இயல்பு தெரிவித்தற்கு “இன்று சென்றெய்தும் வழியனுமல்லன் செலினே காணாவழியனு மல்லன்” என எடுத்தோதினாரென்றலுமுண்டு; ஆயினும் ஒத்த காலத்து ஒத்த நிலையிலுள்ள வள்ளியோனொருவனைக் காட்டி வேறொரு வள்ளியோனைச் சான்றோர் பாடும் வழக்கம் தொகை நூல்களிற் காணப்படாமையை ஈண்டுக் கருதுதல் வேண்டும் “மடப்பிடியினையக் கன்று தந்து மன்றத்துப் பிணிக்கும் குன்றக நல்லூர்” என்றது, ஆதனுங்கனுடைய நெடுமனை புலம்ப அறக்கடவுள் அவனை உயர்நிலை யுலகிற் கொண்டுய்த்த தென்னும் குறிப்பைத் தன்னுட்கொண்டு நிற்கிறது. இக் குறிப்பையே “மகளிர் நெய்தல் கேளன்மார் நெடுங்கடையானே” என்றது. வற்புறுத்திநிற்கிறது. மனஞ்செல்வுழிச் சேறல் நிறையாகிய நற்பண்பில்லாதார் செய்கை யாய் ஒருவற்குச் சிறுமைபயக்கு மாதலின் அதனை நாடாது பெருமைக்குரிய பண்பும் செயலும் நல்லேர் முதியன்பால் உண்மை தோன்ற, “செல்வுழியெழாஅ நல்லேர் முதிய” என்றார். ஏர், அழகு; நல்லேர் என்றது பெருமையு முரனுமாகிய அழகு குறித்ததாம். செல்வத்துக்குப் பயன் சேர்ந்தோர் புன்கண் அஞ்சி அதனைக் கடிதிற் களையும் மென்மையுடைமை யாதல் பற்றி, “பசித்தோர் பழங்கண் வீட நல்குமதி” என்றும் ஆதனுங்கன் பிரிவால் கறங்கிய நெய்தற்பறை மீளவும் கறங்க லாகாதென்ற கருத்தை வற்புறுத்தலின், “நெய்தல் கேளன்மார்” என்றும், கூறினார். வலிப்பத்திரங்கக் களியும் கோடையா யினும், போகுறு காலையும், பொருந, உள்ளுமோ என்று ஈத்தனன், நெடுந்தகை; அல்லன், அல்லன் கிழவோனாகிய முதிய, நீயும், ஆதனுங்கன் போல, பழங்கண் வீட நன்கலம் நல்குமதி; பெரும மகளிர் நெடுங் கடையில் நெய்தல் கேளன்மார் எனக் கூட்டி வினைமுடிவு செய்க. விளக்கம் : இங்கே குறிக்கப்படும் ஆதன்நுங்கனைப் போல, நுங்கன் என்று பெயர் தாங்கிய வேந்தர்பிற்காலத்தே ஆந்திரநாட்டில் குடிபுரிந்து அரசுபுரிந்துள்ளனர் கி.பி. பதின்மூன்றாம் நூற்றாண்டில் அன்போதி நாயுடு என்பான் தன் சிறிய தந்தையான் பாரி நாயுடுவுக்கும் சிற்றன்னை நுங்கன் சானிக்கும் நன்றுண்டாகக் கல்லூர்க் கங்காதரேசுரர்க்கு எண்ணெயாடும் செக்கு நல்கினான் (Nel. Ins. Darsi. 33) பதினான்காம் நூற்றாண்டில் அசனதேவமகாராயர் காலத்தில் உண்டான கல்வெட் டொன்று, அவருடைய தந்தையார் நுங்கதேவ மகாராயரென்றும், அசனதேவர் மகன் பெயரும் நுங்கராயரென்றும் கூறுகிறது. கி.பி. பதினைந்தாம் நூற்றாண்டில் குண்டூர் சில்லாவிலுள்ள ஒங்கோல் தாலூகாவைச் சேர்ந்த கணுபார்த்தி பகுதியில் வீரனுங்கன் என்றொரு வேந்தன் இருந்தானென்றும், அவன் மகன் வீர அமலன் (அபலன்) என்பான். பிரமகுண்டிகையென்றும் ஆறு கடலொடு கலக்குமிடத்திலுள்ள கோசம்பி நகரத்து வேதியர்களுக்கு நிலம் வழங்கினானென ஆவ்வூர்க் கல்வெட்டொன்று. (Nel. Ins. 0.55pp 988-90) கூறுகிறது. கொண்டவீடு ரொட்டி வேந்தருள் அன்னவேமன் என்னும் வேந்தன் தன் உடன் பிறந்தவளும் நல்லன் நுங்கன் என்னும் வேந்தனுடைய பட்டத் தரசியுமான வேமசானி யென்பவட்கு நன்றாக நடுப்பூரான வேமா யுரத்தைப்பிரமதாயமாகச் செப்பேடு நல்கியுள்ளான். (Ep. Ind. Vol. III. பக். 286-92) இப் பாட்டிற் கூறப்பட்ட குன்றகநல்லூர் என்ற தொடர்நலங் கண்ட சான்றோர் புழற்கோட்டத்தூ ரொன்றற்குக் குன்றகநல்லூர் என்று பெயரிட்டு வழங்கினரெனவும் அதுவே பின்பு புழற் கோட்டத்துக் குன்றக நாட்டுக்குத் தலைமையூராகக் கொள்ளப்பட்ட தெனவும், பின்னர் அக்குன்றகநல்லூர் குன்றிகை நாடெனக் கல்வெட்டுக்களில் குறிக்கப்படுவ தாயிற்றெனவும் கருதுதற் கிட னுண்டு. நல்லேர் முதியன் காலத்தே ஆதனுங்கனும் பிறிதோ ரிடத்தில் வாழ்ந்து சிறந்திருந்தானாயின், அவனை உவமங் கூறுவது வேற்றுமையுணர்வுக் கிடந்தந்து நன்மை விளைவியாதெனத் தெரிதல் வேண்டும். பிடியினையக் கன்றைக் கொணர்ந்து மன்றத்துப் பிணிக்கும் செயலைக் கல்லாடனாரும் “கறையடி மடப்பிடி கானத்தலறக் களிற்றுக் கன்றொழித்தவுவகையர் கலி சிறந்து கருங்கான் மரா அத்துக் கொழுங்கொம்பு பிளந்து, பெரும் பொளி வெண்ணா ரழுந்துபடப் பூட்டி, நெடுங்கொடி நுடங்கு நியம மூதூர் நறவுநொடை நல்லிற்புதவு முதல் பிணிக்கும், கல்லா விளையர் பெருமகன் புல்லி, வியன்றலை நன்னாட்டு வேங்கடம்” (அகம்.83) என்று கூறுவது ஒப்புநோக்கத் தக்கது. கல்லாடனாரும் வேங்கட நாட்டவரென்பது “தண்டுளி பலமொழிந்” (புறம். 391) தெனவரும் அவர் பாட்டால் தெளியப்படுகிறது. 390. அதியமான் நெடுமான் அஞ்சி இப் பாட்டினால் ஒளவையார் அதியமானது கொடை நலத்தைக் கிணைப்பொருநன் ஒருவன் கூற்றில்வைத்துச் சிறப்பிக் கின்றார். இதன் கண் பொருநன் ஒருவன், முல்லை நிலத்து ஆயர் தம்மிற் கூடியெடுக்கும் விழவுக் களம்போல் அணிசிறந்து விளங்கும் அதியமான் பெருமனையை அவன்பால் அன்புடையார் எளிது சென்றடைதல் கூடுமேயன்றி வேறு பட்ட வேந்தர் சேறல் அரிது; அது மிக்க காவலுடையதென்று கூறுகின்றான். ஒருநாள் அவன் அதியமானது தகடூர்க்குச் சென்று அன்றிரவு அவனுடைய மனைமுற்றத்தே நின்று தன் தடாரிப் பறையைக் கொட்டி அதியமானுடைய புகழைப் பாடி நின்றானாக, அதியமான் அப்பொருநனுடைய அழுக்கேறிப் பீறிய உடையைக் களைந்து கள்ளும் அடிசிலும் வெண்கலத்திற்றந்து உண்பித்தான்; பின்பு அவ்வதியமான் அவனுக்கும் அவனுடன் வந்த சுற்றத்தார்க்கும் நெல்லும் பொன்னும் கொடுத்தான். அவற்றைப்பெற்று மகிழ்ந்த அப் பொருநன், “பலபொருநர் எம்பால் நின்று வருத்தும் பசித்துன்பத்தை வானமும் அறிந்தில” என்று வருந்துகின்றனர்; வேந்தனாகிய அதியமான் உளனாதலை அவர் அறிந்திலராதல் அவனைக் கண்டறிந்திலராதல் வேண்டும் என்று இப் பாட்டின்கட் கூறுகின்றான். இப் பாட்டின் இடையே சில அடிகள் சிதைந்து விட்டன. அறவை நெஞ்சத் தாயர் வளரும் மறவை நெஞ்சத் தாயி லாளர் அரும்பலர் செருந்தி நெடுங்கான் மலர்கமழ் விழவணி வியன்கள மன்ன முற்றத் 5 தார்வலர் குறுகி னல்லது காவலர் கனவினுங் குறுகாக் கடியுடை வியனகர் மலைக்கணத் தன்ன மாடஞ் சிலம்பவென் அரிக்குரற் றடாரி யிரிய வொற்றிப் பாடி நின்ற பன்னா ளன்றியும் 10 சென்ற ஞான்றைச் சென்றுபட ரிரவின் வந்ததற் கொண்டு நெடுங்கடை நின்ற புன்றலைப் பொருந னளியன் றானெனத் தன்னுழைக் குறுகல் வேண்டி யென்னரை முதுநீர்ப் பாசி யன்ன வுடைகளைந்து 15 திருமல ரன்ன புதுமடிக் கொளீஇ மகிழ்தரன் மரபின் மட்டே யன்றியும் அமிழ்தன மரபி னூன்றுவை யடிசில் வெள்ளி வெண்கலத் தூட்ட லன்றி முன்னூர்ப் பொதியிற் சேர்ந்த மென்னடை 20 இரும்பே ரொக்கல் பெரும்புலம் பகன்ற அகடுநனை வேங்கை வீகண் டன்ன பகடுதரு செந்நெல் போரொடு நல்கிக் கொண்டி பெறுகென் றோனே யுண்டுறை மலையல ரணியுந் தலைநீர் நாடன் 25 கண்டாற் கொண்டுமனை திருந்தடி வாழ்த்தி.... வானறி யலவென்ப ரடுபசி போக்கல் அண்ணல் யானை வேந்தர் உண்மையோ வறியலர் காண்பறி யலரே. திணை : பாடாண்திணை. துறை: கடைநிலை.. அதியமான் நெடுமா னஞ்சியை ஒளவையார் பாடியது. உரை : அறவை நெஞ்சத்து ஆயர் - அறம்புரியும் நெஞ்சினை யுடைய ஆயர்களும்; வளரும் மறவை நெஞ்சத்து ஆய்இலாளர் - பெருகுகின்ற மறம் பொருந்திய நெஞ்சத்தினையுடைய சிறுகுடி யில் வாழ்பவரும் கூடியெடுக்கும்; அரும்பலர் செருந்தி நெடுங் கான் மலர் கமழ் விழவணி வியன்கள மன்ன - அரும்பு மலர்ந்த செருந்தி முதலிய மரங்கள் செறிந்த நெடிய காட்டிடத்து மலரும் பூக்களின் மணம் கமழும் விழாவாற் பொலியும் அகன்ற மன்றத்தையொத்த; முற்றத்து - நெடுமனை முற்றத்தின்கண்; ஆர்வலர் குறுகினல்லது காவலர் கனவிலும் குறுகாக் கடியுடை வியனகர் - அன்பராயினார்க்கன்றி மாறுகொண்ட வேந்தரா யினார்க்குக் கனவின்கண்ணும் சென்று சேர்தற்கியலாத காவலையுடைய அகன்ற நகரின்கண் புகுந்து; மலைக்கணத் தன்ன மாடம் சிலம்ப - மலைகளின் கூட்டத்தையொத்த மாடங்கள் எதிரொலிக்க; என் அரிக்குரல் தடாரி இரிய ஒற்றி - எனது அரித்த ஓசையைச் செய்யும் தடாரிப்பறை கிழியும்படி யறைந்து; பன்னாள் பாடி நின்ற(து) அன்றியும் - பன்னாள் பாடி நின்றதில்லையாகவும்; சென்ற ஞான்றைச் சென்று படர் இரவில் வந்ததற்கொண்டு - சென்ற நாளில் அன்றைய இரவுப் போதிலே வந்ததுகொண்டு; நெடுங்கடை நின்ற புன்றலைப் பொருநன் அளியன் என - நமது நெடுமனை முன்றிலில் நின்று பாடும் புல்லிய தலையையுடைய பொருநன் அளிக்கத்தக்கவன் என்று; தன்னுழைக் குறுகல் வேண்டி - யான் தன்பால் அணுகு வது குறித்து; என் அரை முதுநீர்ப் பாசி அன்ன உடைகளைந்து - என் இடையிலிருந்த பழைமையான நீர்ப்பாசிபோல் சிதர்ந்திருந்த ஆடையை நீக்கி; திருமலர் அன்ன புதுமடி கொளீஇ - அழகிய பகன்றை மலர் போன்ற புத்தாடை கொடுத்துடுப்பித்து; மகிழ்தரல் மரபின் மட்டேயன்றியும் - களிப்பினைத் தரும் முறைமையினையுடைய கள்ளோடும்; அமிழ்தன மரபின் ஊன்துவையடி சில் - அமிழ்து போற் சுவையுடைய ஊன்துவையலோடு கூடிய சோற்றை; வெள்ளி வெண்கலத்து ஊட்டலன்றியும் - வெள்ளியாலாகிய வெள்ளிய கலத்தே பெய்து உண்பித்ததோடு; முன்னூர்ப்பொதியில் சேர்ந்த - ஊர்க்கு முன்னிடமான மன்றத்தில் தங்கியிருந்த; மென்னடை இரும்பேரொக்கல் பெரும்புலம்பு அகற்ற - தளர்ந்த நடையினையுடைய பெரிய சுற்றத்தார் என் பிரிவால் உண்டாகிய தனிமைப் பெரும்துயரைப் போக்க; அகடுநனை வேங்கை வீ கண்டன்ன - தேனால் உள்ளிடம் நனைந்த வேங்கைப் பூவைக் கண்டாற்போன்ற; பகடுதரு செந்நெல் போரொடு நல்கி - உழவெருது களைக் கொண்டு உழுது விளைவித்த செந்நெல்லை நெற்போரோடே கொடுத்து; கொண்டி பெறுக என்றோன் - கொள்ளத்தக்க இப் பொருளைப் பெற்றுக்கொள்க. என்று சொல்லிக் கொடுத்தான்; உண்டுறை மலை யலர் அணியும் தலைநீர் நாடன் - நீர்கொள்ளும் துறைக்கண் மலையிடத்துப் பூத்த பூக்களைக் கொணர்ந் தொதுக்கும் தலைநீரால் வளம் பொருந்திய நாட்டை யுடையவன்; கண்டால் மனைகொண்டு திருந்தடி வாழ்த்தி - அவனைக் கண்டால் மனையிடத்தே அழைத்துச் சென்று அவனுடைய திருந்திய அடிகளை வாழ்த்தி வணங்கி; .................அடுபசி போக்கல் வான் அறியல என்பர் ........ எம்மை வருத்துகின்ற பசியைப் போக்குதற்கு மழையும் அறிந்து மழை பெய்யாதாயிற் றென்பார்; அண்ணல் யானை வேந்தன் உண்மை யறியலர் காண்பறியலர் - தலைமை யமைந்த யானையையுடைய வேந்த னாகிய அதியமான் உளனாதலை யறியாதவரும் அறிந்தும் அவனைக் கண்டறியாதவரும் எ-று. ஆனிரைகளைக் காத்தோம்பும் ஆயர்களை “அறவை நெஞ்சத் தாயர்” என்றார். அடிகளும், “ஆகாத்தோம்பி யாப்பயனளிக்கும் கோவலர் வாழ்க்கை கொடும்பாடில்லை” (சிலப். 15.120.1) என்றார். வளர்தல் மிகுதல். ஆயில், ஆய்ந்தஇல்; பொருளின்மையாற் சிறுமையுற்ற இல்லம் என்றவாறு. விழாக்காலங்களிற் பலவகைப் பூக்களால் மனைகளையும் மன்றங்களையும் ஒப்பனைசெய்து தாமும் சூடி இன்புறுதலால், எங்கும் பூக்களின் நறுமணம் நிலவுவது பற்றி “அரும்பலர் செருந்தி நெடுங்கான் மலர் கமழ் விழவணி வியன்களம்” என்றும், விழவணி முழுதும் இயல்பாகவே தன்கண்கொண்ட முற்றமென்று சிறப்பித்தற்கு “விழவணி வியன்கள மன்ன முற்றம்” என்றும் சிறப்பித்தார். நெடுங்காற் செருந்தியென இயைப்பினுமமையும். அன்பர்க்கெளிமையும் அல்லார்க்கு அருமையும் உடையனென்பதை அவன் நகர்மேல் வைத்து “ஆர்வலர் குறுகினல்லது காவலர் கனவிலுங் குறுகாக் கடியுடை வியனகர்” என்றார். கோடுயர்ந்த மாடங்கள் நிறைந்திருப்பது பற்றி மலைக்கணம் உவமம் கூறப்பட்டது. சென்ற ஞான்றைச் சென்று படர் இரவென்றது, பகற்போதில் அவனூருக்குச் சென்று ஊர்க்கு முன்னேயுள்ள மன்றத்தே தங்கிப் பகற் போதைக் கழித்து இரவின் கடையாமத்தே கிணைப் பறை கொட்டித்தலைவன் புகழ்பாடுவது கிணைப்பொருநர் செயன்முறை யாதல் பற்றி, பரிசில்தர நீட்டியாது விரைந்து தந்தமைதோன்ற, “பாடிநின்ற பன்னாளன்றியும்” என்றான். பசித்து வருந்தும் வறுமைக் கோலத்தில் பொருநனைக் காணப்பொறாது உண்டியும், உடையுந் தந்து சிறப்பித்த அதியமான் உள்ளத்தின் வள்ளன்மை நலத்தை எடுத்தோதினார். திருமல ரென்பது ஈண்டுப் பகன்றை மலரை. “போது விரி பகன்றைப் புதுமலரன்ன, அகன்றுபடி கலிங்கம்” (புறம். 393) என்று பிறரும் கூறுதல் காண்க. நீர்ப்பாசிக்கு முதுமை கூறியது அதன் மென்மை மிகுதியுணர்த்தற்கு. முதுமையை நீர்க்கேற்றி, முது நீரென்றது புதுநீரிற் பாசிபடாமை பற்றியென்று கூறலுமொன்று. தன்னுடை ஒக்கல் பசியால் மெலிந்து நடக்கும் வலியிழந்திருக்குமாறு விளங்க, “மென்னடை யொக்கல்” என்றான். நெல்விளைவுக்குப், “பகடு இன்றியமையாமையின், “பகடுதரு செந்நெல்” என்றார்; “பகடு நடந்த கூழ்” (நாலடி. 2) என்பர் பிறரும். மலையினின்றிழி தரும் நீர் முதற்கண் மலை யடியிற்கிடந்த நாட்டிற் பாயுங்கால் அதன் புதுமை குன்றாமைபற்றித் தலைநீர் எனப்பட்டது. வேந்தனாகிய அதியமானது உண்மையையறியும் திறமும் அறிந்த வழி அவனைக் கண்டறியுந் திறமும் இல்லாதாரே தம் பசித் துன்பத்தைப் போக்குதற்கு மழைமேற்பழிதூற்றுவர் என்பார் “வானறியலவென்பர் அடுபசி போக்கல் அண்ணல் யானை வேந்தனுண்மையோ வறியலர் காண்பறியலரே” என்றார். “பாரி யொருவனுமல்லன் மாரியு முண்டீண்டு உலகு புரப் பதுவே” (புறம். 107) என்று கபிலர் கூறுவது ஈண்டு ஒப்பு நோக்கத்தக்கது வியன்கள மன்ன முற்றத்து, வியனகர், மாடம் சிலம்ப, தடாரி ஒற்றி, பாடிநின்ற தன்றாக, கொண்டு, என, குறுகல் வேண்டி, களைந்து, கொளீஇ, ஊட்டலன்றியும், ஒக்கல் புலம்பகற்ற, நல்கி, பெறுக என்றேன், நாடன், அறியலரும் காண்பறியலரும் என்பர் எனக் கூட்டி வினை முடிவு செய்க. விளக்கம் : அதியமான் கொடைநலத்தைக் கிணைப்பொருநன் ஒருவன் கூற்றில் வைத்து ஒளவையார் அறிவுறுத்து கின்றாராகலின், முதற்கண் அதியமானது வியனகர் மாடச்சிறப்புக் கூறுகின்றார்; பின்பு அதியமான் தன் நெடுங்கடை நின்று பாடும் கிணைவனை வரவேற்ற நலத்தையெடுத் தோதி அவன் நல்கிய பெருவளத்தை விரித்துரைத்து இறுதியில் அவனைக் கண்டு பரிசில் பெறாது வறுமையுற்று வருந்தும் ஏனை இரவலர் பொருட்டுப் பரிந்து சில கூறி முடிக்கின்றார். அதியமானது வியனகர் ஆயரும் சிறுகுடி மறவரும் சேர்ந்து செய்யும் பூக்கமழ் விழாக்களம்போல் கண்ணுக்கினியகாட்சி வழங்கும் என்பார், “அறவை நெஞ்சத் தாயரும்...... வியன்கள மன்ன முற்றத்து” என்றும், அதன் காவற் பெருமையைக் “காவலர் கனவினுங் குறுகாக் கடியுடை வியனகர்” என்றும் கூறினார். ஏனைப்புரவலர்பால் கிணைப்பொருநர் சென்றால், பன்னாள்நின்று அவரைப்பாடுவர்; பின்னரே அவர் பரிசில் தரப்பெறுவர்; அவ்வாறன்றிச் சென்ற நாளே பரிசில் நல்கப்பெற்றமை தோன்ற, “பாடிநின்ற பன்னாளன்றியும் சென்ற ஞான்றைச் சென்று படர் இரவின் வந்ததற்கொண்டு” என்றான். அவன் தந்த கொடையினை, புதுமடியும் பட்டும் அடிசிலும் நல்கி “அகடுநனை வேங்கை வீ கண்டன்ன, பகடுநரு செந்நெல் போரொடு நல்கிக் கொண்டிபெறு கென்றோனே” என்றவர், இரவலர் பலர், “அடுபசி போக்கல் வான் அறியல என்பர்; அண்ணல் யானைவேந்தன் உண்மையோ அறியலர் காண்பறியலர்” என வருந்துவது கண்டு பரிந்து கூறுகின்றார். இவ் வண்ணம் பரிசில்பெற்ற கிணைப்பொருநன் மகிழ்ந்து கூறுவது பொருளாக ஒளவையார் அதியமான் சிறப்பைத் தாம் நேரிற் கண்டவாறே யுரைத்துள்ளார். 391. பொறையாற்றுகிழான் பொறையாறு என்பது சோழநாட்டில் கடற்கரையிலுள்ள தோரூர், இதனைப் புறந்தையென்றும் சங்கச் சான்றோர் மருவி வழங்குப. “விரியிணர்ப் புன்னையங் கானற் புறந்தை” (அகம். 100) என வருதல் காண்க. கி.பி.பத்துப் பதினோராம் நூற்றாண்டில் இப் பொறையாறு, குறும்பூர் நாட்டுத் தேவதானமான திருவிடைக் கழிக்குப் (A.R.No.267 of 1925) பிடாகையா (A.R.No. 234 of 1925) வழங்கிவந்திருக்கிறது. அப்பகுதியில் இரண்டாம் இராசராசன் காலத்தில் குன்றத்து நாராயணன் என்பவனால் வடமொழி வேதாந்தக் கல்லூரி யொன்று (A.R.No. 276 of 1925)நிறுவப் பெற்றிருந்தது. இந்நாளில் அப்பகுதி கல்வி மணம்குன்றாது வளஞ்சிறந்து விளங்குவது ஈண்டுக் குறிக்கத்தக்கது. இப் பொறை யாற்று கிழான் பெரியன் எனப் படுவன். “நறவுமகி ழிருக்கை நற்றேர்ப் பெரியன், கட்கமழ் பொறையாறு” (நற்.131) என்றும், “பாடுநர்த்தொடுத்த கைவண்கோமான் பரியுடை நற்றேர்ப் பெரியன்” (அகம். 100) என்றும் ஆசிரியர் உலோச்சனார் கூறுதல் காண்க. ஆகவே புலவர் பாடும் புகழ் படைத்த பெரியன். பாடும் பணிமேற்கொண்ட புலவர் பாணர் பொருநர் முதலாயினார்க்குப் பேராதரவு புரிந்து வாழ்ந்த பெருந்தகையென்பது தெளிவாகிறது. இவன்பால் ஒருகால் ஆசிரியர் கல்லாடனார் வந்து பரிசில் பெற்றுச் சென்றார். கல்லாடனார் தொண்டை நாட்டின் வட பகுதியில் உள்ள கல்லாடமென்னும் ஊரில்வாழ்ந்த சான்றோராதலால் ஒருமுறை அவர் தம்முடைய வேங்கடநாடு வற்கடத்தால் வருத்தம் மிகப்பெறவே, தம்முடைய சுற்றத்தாருடனே சோழநாட்டுக்கு வந்தார். சோழநாட்டுப் பொறையாற்றுகிழானான பெரியனைப் பண்டும் ஒருமுறை கண்டு அவனால் சிறப்பிக்கப்பெற்றுள்ளாரா தலால் நேரே பொறையாற்றுக்கு வந்து சேர்ந்தார். அவரைக் கண்டோர் முன்பே அவர் வந்தவராதலின், அவரது நிலைமையை யுணர்ந்து பெரியனைச் சென்று காணுமாறு அறிவித்தனர். அவர்கள் பெரியன் மனக்கோளை நன்குணர்ந்தவராதலின், கல்லாடனாரும் பெரியனைக் கண்டார். அவன் உயர்ந்த உணவும், சிறந்த உடையும் தந்து அவரையும் அவர் சுற்றத்தாரையும் ஆதரித்தான். அதனால் பெருமகிழ்வு கொண்ட கல்லாடனார் “பெரும, நீ நின் செழுமனைக்கண் நின் காதலியுடனே இனிது கண்டுயில்வாயாக; அஃதாவது பசியும் பிணியும் பகையு மென்றி வற்றால் நாடாள்வார்க் குண்டாகும் மனக்கவலை நினக்கு உண்டாகா தொழிக” என்பது, வானம் செவ்வியறிந்து மழை பொழிய “வயல்கள் வேலி ஆயிரமாக விளைக” என்று வாழ்த்தி யின்புற்றார். இந்நிகழ்ச்சி இப் பாட்டாய் உருக்கொண்டு விளங்கு கிறது. இதனிடையேயும் சில அடிகள் சீர் சிதைந்துள்ளன. செந்தமிழ் மக்கட்குண்டான சீரழிவு, அரசியல், வாணிகம், சமயம், சமுதாயம் முதலிய துறைகளோடே நில்லாது இலக்கியத் துறையினும் நுழைந்து எத்துணைக் கேட்டினைச் செய்துளது, காண்மின்: தண்டுளி பலபொழிந் தெழிலி யிசைக்கும் விண்டு வனைய விண்டோய் பிறங்கல் முகடுற வுயர்ந்த நெல்லின் மகிழ்வரப் பகடுதரு பெருவளம் வாழ்த்திப் பெற்ற 5 திருந்தா மூரி பரந்துபடக் கெண்டி அரிய லார்கைய ருண்டினி துவக்கும் வேங்கட வரைப்பின் வடபுலம் பசித்தென ஈங்குவந் திறுத்த வென் னிரும்பே ரொக்கல் தீர்கை விடுக்கும் பண்பின் முதுகுடி 10 நனந்தலை மூதூர் வினவலின். . . . . . . முன்னும் வந்தோன் மருங்கில னின்னும் அளிய னாகலிற் பொருந னிவனென நின்னுணர்ந் தறியுந ரென்னுணர்ந்து கூறக் காண்கு வந்திசிற் பெரும மாண்டக 15 இருநீர்ப் பெருங்கழி நுழைமீ னருந்தும் துதைந்த தூவியம் புதாஅஞ் சேக்கும் ததைந்த புன்னைச் செழுநகர் வரைப்பின் நெஞ்சமர் காத னின்வெய் யோளொ டின்றுயில் பெறுகதில் நீயே வளஞ்சால் 20 துளிபத னறிந்து பொழிய வேலி யாயிரம் விளைகநின் வயலே. திணை : பாடாண்திணை. துறை; கடைநிலை. பொறையாற்று கிழானைக் கல்லாடனார் பாடியது. உரை : தண்டுளி பலபொழிந்து எழிலி இசைக்கும் - தண்ணிய நீர்த்துளிகள் பலவற்றையும் சொரிந்து மேகங்கள் முழங்கும்; விண்டு அனைய விண்தோய் பிறங்கல் - மலைபோன்ற வானளாவிய குவியலாய்; முகடுற வுயர்ந்த நெல்லின் - உச்சி யுண்டாக வுயர்வுறக் குவித்த நெல்லாகிய; பகடுதரு பெருவளம் மகிழ்வர வாழ்த்திப் பெற்ற - எருதுகளின் பேருழைப்பால் உண்டாகிய பெரும் பொருளை மகிழ்ச்சி மிக வாழ்த்திப் பெற்றதை; திருந்தா மூரிபரந்துபடக் கெண்டி - திருந்தாத ஊன்கறியைச் சிறுசிறு துண்டாகப் பரக்குமாறு துண்டித்து; அரியல் ஆர்கையர் உண்டு - கள்ளுண்போர் உடனுண்டு; இனிது உவக்கும் - மிகவும் இன்புறும்; வேங்கட வரைப்பின் வடபுலம் பசித்தென - வேங்கட நாடாகிய வடநாடு வறங்கூர்ந்ததனால்; ஈங்குவந்திறுத்த என் இரும்போரொக்கல் - இங்கே வந்து தங்கிய என் பெரிய சுற்றம்; தீர்கை விடுக்கும் பண்பின் - இந்நாட்டினின்றும் நீங்குதலைக் கைவிடும் பண்பினையுடையவாய்; முதுகுடி நனந்தலை மூதூர் - பழங்குடிகள் நிறைந்த அகன்ற இடத்தை யுடைய மூதூரின்கண்; .......வினவலின் - ........கேட்டலால்; இவன் முன்னும் வந்தோன் மருங்கிலன் - இவன் முன்பேயும் இங்கே வந்தவன் பொருள் இல்லாதவன், பொருநன் - கிணைப் பொருநன்; ஆகலின் இன்னம் அளியன் என - ஆதலால் இப்பொழுதும் அளிக்கத் தக்கவன் என்று;நின் உணர்ந் தறியுநர் என் உணர்ந்து கூற - நின்பால் நெருங்கிப் பயின்று நின் உள்ளக் கிடையை யறிந்த சான்றோர் என் நிலைமையினை நன்குணர்ந்தது எனக்கு அறிவிக்க; பெரும - பெருமானே; காண்கு வந்திசின் - நின்னைக் காண்பான் வந்தேன்; இருநீர்ப் பெருங்கழி துழைஇ மீன் அருந்தும் - கரிய நீர் நிறைந்த பெரிய கழியிடத்தே துழவி மீன் பிடித்துண்ணும்; துதைந்த தூவியம் புதாஅம் சேக்கும் - நெருங்கிய தூவியையுடைய புதா வென்னும் புள்ளினம் தங்கும்; ததைந்த புன்னைச் செழுநகர் வரைப்பின் - தழை செறிந்த புன்னைகளையுடைய செழுவிய நின் நெடுமனையின்கண்; நெஞ்சமர் காதல் நின் வெய்யோளொடு - நெஞ்சமர்ந்த காதலையுடைய நின்னால் விரும்பப்பட்ட மனைவியுடன் இன்துயில் பெறுகதில்நீ - இனிய உறக்கத்தை நீ பெறுவாயாக; வளஞ்சால் பதன் அறிந்து துளி பொழிய - நெல்வளம் நிறையும் செவ்வியறிந்து மழைபொழிய; நின்வயல் வேலி ஆயிரம் விளைக -நின் வயல்கள் வேலி ஆயிரமாக விளைக எ-று. விண்டு, மலை, விண்டோய் பிறங்கலென்றது ஈண்டு நெற்குவியன் மேற்று. “விண்டு வனைய வெண்ணெற் போர்வின்” (ஐங். 58) என்று பிறரும் கூறுவது காண்க. நெல்லாகிய பெருவளம் பெற்றவை என இயையும். திருந்தா மூரி - திருந்தாத வூன்; அதனைத் திருத்துமாறு கூறுவார், “பரந்துபடக் கெண்டி” யென்றார். மூரி, ஊன்; “வெண்ணின மூரி” (புறத். 93) என்பது காண்க. வேங்கட வரைப்பாகிய வடபுலம் என இயைக்க. எழிலிஇசைக்கும் விண்டு. பிறங்கால் நெல்லின் பெருவளம் பெற்ற கெண்டி உண்டு இனிதுவக்கும் வேங்கட வரைப் பின் வடபுலம் என இயையும். வறமுண்டாகியவழி மக்கட்குப் பசிப்பிணி நின்று வருத்தம் பயக்குமாகலின் “பசித்தென” என்றார்; தீர்கை, நீங்குதல். தீர்கை விடுக்கும் பண்பினவாகிய முதுகுடியென இயைத்து “வழங்குவது உள் வீழ்ந்தக் கண்ணும்” (குறள். 95) நீங்காத பண்பினையுடைய பழங்குடி யென்றுரைத்தலுமாம். நின் வள்ளன்மையையும் என் இன்மையையும் நன்குணர்ந்த சான்றோர் கூறக்கேட்டு நின்பால் வந்துள்ளேன் என்பார், “நின்னுணர்ந்தறியுந ரென்றுணர்ந்து கூறக்காண்கு வந்திசின் பெரும” என்றார். புதாவை ஒருவகை நாரை என்பர். இலையும் பூவும் செறிந்து கண்ணுக்கினிய காட்சி வழங்கும் புன்னை “ததைந்தபுன்னை” யெனப்பட்டது. நாட்டில் பசியும் பிணியும் பகையும் இல்வழியே வேந்தர்க்கு இன்றுயில் எய்துதலின், அப் பசி முதலாயின இலவாகுக என்பார் “இன்றுயில் பெறுகதில் நீயே” என்றார். என்றது யானும் வேண்டுவன் பெற்று ஒக்கலுடன் இனிது வாழ்வேனாக என்றவாறாம். வேலியாயிரம் விளைக நின்வயல் என்றது, பகுத்துண்டு பல்லுயிரோம்பும் நல்லறம் நெடிது நிலவற்கு வடபுலம் பசித்தென. இறுத்த ஒக்கல், வினவலின் என, உணர்ந்து கூற, காண்கு வந்திசின்; பெரும, வரைப்பின் வெய்யோளொடு இன்றுயில் பெறுக. துளிபொழிய, வயல் விளைக எனக்கூட்டி வினைமுடிவு செய்க. தில் : விழைவின்கண் வந்தது. விளக்கம் : கடைநிலையாவது “கடற்படை” (புறம். 382) எனத் தொடங்கும் பாட்டின் உரை விளக்கத்தின்கட் கூறப்பட்டது. இப் பாட்டின்கண் ஆசிரியர் கல்லாடனார் வேங்கடநாட்டின் பொது வியல்பை எடுத்துரைத்து, அந்நாட்டினின்றும் தாம் ஒக்கலுடன் பொறையாற்றுக்கு வரநேர்ந்த காரணத்தை, “வேங்கடவரைப்பின் வடபுலம் பசித்தென, ஈங்குவந்திறுத்த என் இரும்பேரொக்கல்” என்று குறித்துள்ளார். இன்றும் வடபுலம் பசித்தெனப் பல்லாயிர மக்கள் சோழநாட்டில் வந்து தங்கியிருப்பது கல்லாடனார் கூற்றை வற்புறுத்துகிறது. பொறையாற்று வாழ்நர், வடபுலத்தினின்றும் வந்திருக்கும் தம்முடைய ஒக்கலை உண்டியும் உறையுளுந் தந்து இனிது பேணிப் புரப்பதால் அவர்கள் தங்கள் வடபுலத்தை நினைந்து செல்லுங்கருத்தே இலராயினர் என்பது பட, “தீர்கை விடுக்கும் பண்பின் முதுகுடி” என்று குறிக்கின்றார். நின்னையும் என்னையும் நன்குணர்ந்த சான்றோர் என்வருகையை நினக்கு அறிவித்தாராக, அதுவே பற்றுக்கோடாக யான் நின்னைக் காணவந்தேன்; எனக்கு வேண்டுவன தந்து யான் சென்று இனி திருத்தற்கு அருளுவாயாக என நேர்நின்று நாவாற் கூறமாட்டாராய், “செழுநகர் வரைப்பில் நெஞ்சமர் காதல் நின் வெய்யோளொடு இன்றுயில் பெறுகதில் நீயே” என்றும், “வேலியாயிரம் விளைகநின் வயலே” என்றும் கூறுகின்றார். இக்குறிப்பறிந்த பொறையாற்று கிழான் வறுமை நோய் கொண்டு வருந்தாவண்ணம் பெருவளன் நல்கி அவரைச் சிறப்பித்தானென்பது பெறப்படுகிறது. 392. அதியமான் பொகுட்டெழினி அதியமான்நெடுமான் அஞ்சியின் மகன் பொகுட்டெழினி. இவன் அதியமான் உயிரோடிருக்கும் போதே தந்தைக்குத் துணையாய் நின்று அரசியலில் ஈடுபட்டிருந்தான். அதியமானால் பெரிதும் ஆதரிக்கப் பெற்ற ஒளவையார்பால் எழினிக்கும் பேரன்புண்டு. அவனைப் பன்முறையும் பாடிப் பரிசில் பெற்றவர் ஒளவையார். ஒருகால் அவர் பொகுட் டெழினியின் தகடூர்க்குச் சென்றிருந்தபோது அவன் செய்த சிறப்பைப் பொருநன் ஒருவன் கூற்றில் வைத்துப் இப்பாட்டைப் பாடியுள்ளார். இதன்கண் பொருநன் ஒருவன் எழினியின் பெருமனையின் முற்றத்தில் விடியற் காலையில் நின்று தன் ஒருகண் மாக்கிணை யென்னும் பறையைக் கொட்டிப் “பணிந்து திறைசெலுத்தாத பகைமன்னர் அரண்களைக் கடந்து சென்று அவரை வென்று கழுதையேர் பூட்டி, வீழ்ந்த வீரர் உடற்குருதி தோய்ந்து ஈரம்புலராத போர்க்களத்தை யுழுது வெள்வரகும் கொள்ளும் வித்தும் மறம்மிக்க வேந்தே, நீ வாழ்வாயாக” என்று பாடி நின்றானாக, அப்பொழுதே பாசிபோற்பீறிக்கிடந்த அவனது உடையைக்களைந்து நுண்ணூல் ஆடையொன்று தந்து அவனை யுடுப்பித்துக் களிப்பு மிக்க தேறலைப் பொற்கலத்திற் பெய்து அவனும் அவனொடு போந்த அவன் சுற்றத்தாரும் உண்டு தேக்கெறியு மளவுந் தந்து விருந்து செய்தான் என்று பாடியுள்ளார். மதியேர் வெண்குடை யதியர்கோமான் கொடும்பூ ணெழினி நெடுங்கடை நின்றியான் பசலை நிலவின் பனிபடு விடியற் பொருகளிற் றடிவழி யன்ன வென்கை 5 ஒருகண் மாக்கிணை யொற்றுபு கொடாஅ உருகெழு மன்ன ராரெயில் கடந்து நிணம்படு குருதி பெரும்பாட் டீரத் தணங்குடை மரபி னிருங்களந் தோறும் வெள்வாய்க் கழுதைப் புல்லினம் பூட்டி 10 வெள்ளை வரகுங் கொள்ளும் வித்தும் வைக லுழவ வாழிய பெரிதெனச் சென்றியா னின்றனெனாக வன்றே ஊருண் கேணிப் பகட்டிலைப் பாசி வேர்புரை சிதாஅர் நீக்கி நேர்கரை 15 நுண்ணூற் கலிங்க முடீஇ யுண்மெனத் தேட்கடுப் பன்ன நாட்படு தேறல் கோண்மீ னன்ன பொலங்கலத் தளைஇ ஊண்முறை யீத்த லன்றியுங் கோண்முறை விருந்திறை நல்கி யோனே யந்தரத் 20 தரும்பெற லமிழ்த மன்ன கரும்பிவட் டந்தோன் பெரும்பிறங் கடையே திணை : பாடாண்திணை. துறை: கடைநிலை. அதியமான் மகன் பொகுட் டெழினியை ஒளவையார் பாடியது. உரை : மதியேர் வெண்குடை அதியர் கோமான் - முழுமதி போன்ற வெண்கொற்றக் குடையையுடைய அதியர் வேந்தனான; கொடும்பூண் எழினி - வளைந்த மாலை யணிந்த எழினியி னுடைய; நெடுங்கடை யான் நின்று - பெருமனையின் நெடிய முற்றத்திலே யான் நின்று; பசலை நிலவின பனிபடு விடியல் - இள நிலவு திகழும் பனி சொரியும் விடியற்காலத்தே; பொரு களிற்று அடிவழி யன்ன - போர்யானையின் அடிச்சுவடுபோல் வட்டமான; என் கை ஒரு கண் மாக்கிணை ஒற்றுபு - என் கையிலிருந்த ஒரு கண் மாக்கினையை யறைந்து; கொடாஅ உருகெழு மன்னர் ஆரெயில் கடந்து - திறை கொடாத உட்குப் பொருந்திய மன்னருடைய அரிய மதிலை வஞ்சியாது பொரு தழித்து; நிணம்படு குருதி பெரும்பாட் டீரத்து - தசையும் குருதியுந் தோய்ந்த பெருக்கா லுண்டாகிய ஈரம் பொருந்திய; அணங்குடை மரபின் இருங்களந்தோறும் - துன்பந்தரும் தெய்வங்களுறையும் முறைமை யினையுடைய பெரிய போர்க் களந்தோறும்; வெள்வாய்க் கழுதைப் புல்லினம் பூட்டி - வெள்ளி வாயையுடைய கழுதையாகிய புல்லிய நிரையைப் பூட்டி யுழுது; வெள்ளை வரகும் கொள்ளும் வித்தும் - கவடியும் குடைவேலும் விதைக்கும்; வைகல் உழவ - இடை யறாத போராகிய உழவைச் செய்யும் வேந்தே; பெரிது, வாழிய என - நீ நெடிது வாழ்வாயாக என்று பாடிக் கொண்டு; சென்று யான் நின்றனென் ஆக - சென்று யான் அவன் முற்றத்தே நின்றேனாக; அன்றே - அப்பொழுதே; ஊருண் கேணிப் பகட்டிலைப் பாசிவேர் புரை சிதாஅர் நீக்கி - ஊரவர் நீர்கொள்ளும் கேணியிற் படர்ந்த பெரிய இலையை யுடைய பாசியினது வேர்போற் கிழிந்த உடையைக் களைந்து விட்டு; நேர்கரை நுண்ணூற் கலிங்கம் உடீஇ - நேரிய கரையை யுடைய நுண்ணிய நூலானியன்ற உடையைத் தந்து உடுப்பித்து; உண்மென - உண்மினென்று; தேட்கடுப் பன்ன நாட்படு தேறல் - தேளினது கடுப்புப்போல் நாள்படப் புளிப்பேறிய கள்ளை; கோள்மீன் அன்ன பொலங்கலத்து அளைஇ - கோளாகிய மீன் போன்ற பொன்வள்ளத்திற் பெய்து ஊண்முறை ஈத்தல் அன்றியும் - உண்ணும் முறைப்படி அளிப்பதன்றி; கோள்முறை விருந்திறை நல்கியோன் - கொள்வார் கொள்ளும் முறையில் விருந்தாய் எம்மை இருத்தி யுண்பித்தான்; அந்தரத்து - கடற்கு அப்புறத்ததாயுள்ள நாட்டிலுள்ள; அரும் பெறல் அமிழ்தம் அன்ன - பெறற்கரிய அமுதம்போன்ற; கரும்பு இவண் தந்தோன் - கரும்பை இந்நாட்டிற்குக் கொண்டுவந்தவனுடைய; பெரும் பிறங்கடை - பெரிய வழித்தோன்றல் எ-று. அதியமான் குடியினரை அதியர் என்ப; பாண்டியர் குடிப்பிறந்தாரைப் பாண்டியரென்றும் தொண்டைமான் குடியினரைத் தொண்டைய ரென்றும் வழங்குவதுபோல, மார்பிலணியும் ஆரம் வளைந்து கிடத்தலின் கொடும்பூண் என்றார். “விளங்குமணிக்கொடும்பூண்ஆய்” (புறம். 130) என வருதல் காண்க. இருள்மயங்கிய இளநிலவினைப் “பசலை நில” வென்றார். கிணைப்பறையின் கண் வட்டமாயி ருத்தலின் யானையின் அடிச்சுவட்டை உவமம் கூறினார். “பெருங்களிற் றடியின் றோன்று மொருகண், இரும்பறை” (புறம்.263) என்று பிறரும் கூறுவர். எழினி, ஆரெயில் கடத்தற்குக்காரணம் கூறுவார் “கொடா உருகெழு மன்னர்” என்றார். பேயும் கூளியும் விரும்புமிடமாதல் பற்றி “அணங்குடை மரபின் இருங்கள” மெனப்பட்ட தென்றுமாம். பகைவர் நாட்டை வென்ற வேந்தன் கழுதையேர் பூட்டி அந்நாட்டைப் பாழ் செய்வது பண்டையோர் போர்முறை; “வெள்வாய்க் கழுதைப் புல்லினம் பூட்டிப், பாழ் செய்தனையவர் நனந்தலை நல்லெயில்” (புறம் 15) என்பர் பிறரும். வெள்ளை வரகு, கவடி, கொள்; குடை ஒருவகை வேலமரம். நாடோறும் இச்செயலே நிகழ்த்துதல்பற்றி. “வைகலுழவ” எனச் சிறப்பித்தார். கிழிந்த ஆடைக்குப் பாசிவேரை உவமம் கூறுதல் இயல்பு; “பாசிவேரின் மாசொடு குறைந்த, துன்னற் சிதாஅர்” (பொருந 153-4) என ஆசிரியர் முடத்தாமக்கண்ணியார் மொழிவது காண்க. நாட்பட்ட தேறல் களிப்புமிகுதியால் தன்னை யுண்டார்க்குப் பெருமயக்கம் விளைத்தலால் அதனை விதந்தோதினார். நாண்மீனினும் கோண்மீன் பெரிதாதலால் அதனைப் பொன் வள்ளத்துக்கு உவமம் செய்தார். ஊண்முறை உண்டற்குரியவற்றுள் தலையும் இடையும் கடையுமாக உண்ணும் முறை; கோண்முறை - கொள்வோர் கொள்வகை யறிந்து படைக்கும் முறை; கரும்பு இவண் தந்த செய்தியை “அமரர்ப் பேணியும்” (புறம்.99) என்னும் புறப்பாட்டிற் குறித்திருத்தலைக் காண்க. எழினி நெடுங்கடை நின்று. யான் மாக்கிணை யொற்றுபு, வாழிய பெரிதெனச் சென்று நின்றனெனாக, அன்றே, கரும்பிவண் தந்தோன் பிறங்கடையாகிய அவன் சிதா அர் நீக்கி, கலிங்கம் உடீஇ, தேறல் அளைஇ,விருந்திறை நல்கினானெனக் கூட்டி வினைமுடிவு செய்க. விளக்கம் : சேலம் மாநாட்டின் வடபகுதியும் மைசூர் நாட்டின் கோலார் நாட்டுப் பகுதியும் சேர்ந்து ஒரு காலத்திற் கங்கநாடென வழங்கிற்று. 1“இப்பகுதியை இடைக்காலச்சோழர் கைப்பற்றி இதற்கு ‘நிகரிலி சோழமண்டல’ மெனப் பெயரிட்டு வழங்கினர். சேலநாட்டின் வட பகுதியை அதியர்கள் 2தகடூரைத் தலைநகராக்கிக் கொண்டு பண்டை நாளில் ஆட்சி செய்து வந்தனர். தகடூருக்கு இப்போது தருமபுரி என்பது பெயர். இடைக்கால அதியமான்கள் சோழர்க்குப் பணிந்து அவர்கீழ்க் குறுநிலமன்னராயிருந்தனர். அக்காலை இவ் வதியமான்கள் கன்னடரை வென்று புகழ் பெற்றிருந்தனர். இவர்களைக் கன்னட நாட்டுக் கல்வெட்டுக்கள் அதியமா3 எனக் குறிக்கின்றன. பிற்கால அதியமான்களான எழினி, விடுகாதழகிய பெருமாள் முதலியோர்கள் தம்மைச்சேரர் குடிக்குரிய ரென்றே4 கூறிக்கொள்வா ராயினர். கல்வெட்டிலாகாவினர் சேரமான் தகடூரெறிந்த பெருஞ்சேர லிரும்பொறை அதியமானை வென்று அவனது தகடூரைக் கைப்பற்றிக் கொண்டதனால், 5அதியமான்கள் சேரர்குடியினராதல் கூடாதெனக் கருதுகின்றனர்.6 “பண்டை நாளைச்சேரர் சோழ பாண்டியர், தனித்தனியே தத்தம் குடியிற் பிறந்து தம் நாட்டின் ஒரு பகுதியி லிருந்து ஆட்சி செய்தோருடனே போர் உடற்றியிருத்தலின், அதனால் அவர் குடி வேறுபட்டவராகக் கருதுவது கிடையாது. ஆதலால் அதியமான்கள் என்றுமே சேரர் குடிக்கு உரியவரென்பது துணிவான செய்தியாகும். இனிப்பாண்டியன்நெடுஞ்சடையனுடைய செப்பேடொன்று7 “மாயிரும் பெரும்புனல் காவிரி வடகரை, ஆயிர வேலிய யிரூர் தன்னிலும், புகழியூரிலுந் திகழ்வேலதியனை ஓடுபுறங் கண்டவன் ஒலியுடை மணித்தேர், ஆடல்வெம்மா வவையுடன் கவர்ந்ததும், பல்லவனுங் கேரளனு மாங்கவற்குப் பாங்காகிப், பல்படையொடு பார்ஞெளியப் பவ்வமெனப் பரந்தெழுந்து, குடபாலுங் குணபாலு மணுகவந்து விட்டிருப்ப, வெல்படையொடு மேற் சென்றங், கிருவரையு மிருபாலு மிடரெய்தப் படைவிடுத்துக், குட கொங்கத்தடன் மன்னனைக், கொல்களிற்றொடுங் கொண்டுபோந்து, கொடியணி மணி நெடுமாடக் கூடன்மதி லகத்துவைத்தும்” என்று கூறுவதனால், நெடுஞ்சடையன் பராந்தகன் காலத்தில் அதியமான் ஒருவன் பல்லவரையும் கேரளரையும் துணைகொண்டு பாண்டிய னோடு பொருது தோற்றுக்கூடல் நகரில் சிறையுற்றானென்று அறிகின்றோம். ஆயினும் இப் போரில் மீகொங்கெனப்படும் மேலைக் கொங்குநாட்டு வேந்தனும் கலந்திருத்தலின், அதியமான்கள் இக் காலத்தே கொங்குநாடு முற்றும் புகழ்கொண்டு விளங்கினரென்பது தெளிவாகிறது. சேலநாட்டு நாமக்கல்லிலுள்ள அரங்கநாதர் கோயில் கல்வெட்டொன்று1 அதியமான் குடியைக் குறிப்பிட்டு, அங்குள்ள கற்குகையை “அதி யேந்திர விஷ்ணுகிரகம்” என்று குறிப்பதால், அதியமான்களின் குடிவரலாறு தமிழகத்தில் பல நற்றாண்டுகள் தொடர்ந்து வந்திருத்தலைக் காணலாம். இதன் விரிந்த செய்தியை இவ்வுரைகாரர் எழுதிய “அதியமான் நெடுமான் அஞ்சி” என்ற தனி நூலிற் கண்டுகொள்க இதன்கட் கிணைப்பொருநன் சென்று பொகுட்டெழினியை யடைந்து பாடி வாழ்த்தியது வரை ஒரு பகுதியும், எழினியின் கொடை நலம் ஒரு பகுதியுமென இரு பகுதிகள் உண்டு. இரண்டும் கிணைவன் கூற்றுக்களேயாம். முதற்பகுதியின் தொடக்கத்தே எழினியை எடுத் துரைக்கும் கிணைவன், அரசியல் நடாத்தும் உயர்குடியிற் பிறந்தவன் எழினியென்றற்கு “மதியேர்... எழினி” என்றான். எழினியின் நெடுமனை முற்றம் சென்றது பின்பனிக் காலத்துத் தேய்மதிப்பக்கத்து விடியற்கால மென்பது விளங்க, “பசலை நிலவின் பனிபடு விடியல்”என்றான். வினைமேற் சென்ற தலைவர் வினைமுடித்து வந்து மனைக்கண் உறையும் போதாகலின் அப்போதில் வினைமுடித்த மார்பினை யெடுத்தோதிப்புகழும் கருத்தால், வினைபுரிந்த செயலை, “கொடா வுருகெழு மன்னர்.....வாழிய பெரிதென” எடுத்தோதி வாழ்த்தினான். எழினி, விடியற்பொழுதில் வந்துதன்வினை வென்றி கூறி வாழ்த்திய கிணைவனுக்கு உரியதொரு புத்தாடை தந்து உடுப்பித்து, நாட்பட்ட தேறலைப் பொன் வள்ளத்திற் பெய்து தந்தானாக அதனைப் பாராட்டி, “ஊருண்.... நல்கியோனே” என்றான். கொடுப்பவன் கொடைநலம் ஏற்போனது ஊண் முறையும் கோண்முறையும் அறிந்து செய்வதென்பது கொடைக்கடன் இறுக்கும் குடிப்பிறந்தார்க்கே இனிது அமைவ தாகலின், “ஊண்முறை யீத்த லன்றியும் கோண்முறை விருந்திறை நல்கி யோனே” எனப்பாராட்டி. அவன் முன்னோர் வேற்று நாட்டி னின்றும் கரும்பு கொணர்ந்த வரலாற்றைக் குறித்து, “அந்தரத்து அரும்பெறலமிழ்த மன்ன கரும்பிவண் தந்தோர் பெரும் பிறங் கடையே” என்று புகழ்ந்தோதினான். 393. சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் குறுந்தொகையிற் காணப்படும் “கொங்குதேர் வாழ்க்கை” என்ற பாட்டைப் பாடிய இறையனாரின் வேறுபடுத்த இப் பாட்டைப் பாடிய சான்றோர் நல்லிறையனா ரெனப்படுகின்றார். இவர் பாடியனவாக வேறு பாட்டுக்கள் இல்லை. இப்பாட்டும் கிணைப்பொருநன் ஒருவன் வறுமையால் பெருவாட்டமுற்றுச் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனைப் பாடிப்பரிசில் கேட்குங் கூற்றாக அமைந்துள்ளது. இதன்கண் கிணைப் பொருநன் ஒருவன் வறுமை மிகுந்து தன்னைப் புரப்போர் எங்கேனும் உளரோ எனத்தேடி ஒருவருங் கிடைக்காமையால் வருந்திக் கிள்ளிவளவனையடைந்து நிகழ்ந்தது கூறி, “அண்ணலே, நின் நல்லிசை நினைந்து நின்பால் வந்துள்ளேன்; என் சுற்றம் உணவு கொண்டு பன்னாட்கள் ஆகின்றன. நிணம் விரவிய சோறும், பகன்றை மலர்போன்ற மெல்லிய ஆடையுந்தந்து எம்மை ஆதரித்தல்வேண்டும். யாங்கள் நின்னுடைய திருவடியைப் பரவி வாய்வாள் வளவன் பன்னாள் வாழ்க என வாழ்த்திப் பாடுவோம் என்று கூறியுள்ளான். பதிமுதற் பழகாப் பழங்கண் வாழ்க்கை குறுநெடுந் துணையொடு கூர்மை வீதலிற் குடிமுறை பாடி யொய்யென வருந்தி அடனசை மறந்தவெங் குழிசி மலர்க்கும் 5 கடனறி யாளர் பிறநாட் டின்மையின் வள்ளன் மையினெம் வரைவோர் யாரென உள்ளிய வுள்ளமோ டுலைநசை துணையா உலக மெல்லா மொருபாற் பட்டென மலர்தா ரண்ணனி னல்லிசை யுள்ளி 10 ஈர்ங்கை மறந்தவெ னிரும்பே ரொக்கல் கூர்ந்தவெவ் வம்விடக் கொழுநிணங் கிழிப்ப கோடைப் பருத்தி வீடுநிறை பெய்த மூடைப் பண்ட மிடைநிறைந் தன்ன வெண்ணிண மூரி யருள நாளுற 15 ஈன்ற வரவி னாவுருக் கடுக்குமென் தொன்றுபடு சிதாஅர் துவர நீக்கிப் போதுவிரி பகன்றைப்புதுமல ரன்ன அகன்றுமடி கலிங்க முடீஇச் செல்வமும் கேடின்றுநல்குமதி பெரும மாசில் 20 மதிபுரை மாக்கிணை தெளிர்ப்ப வொற்றி ஆடுமக ளொல்க லொப்ப வாடிக் கோடை யாயினுங் கோடே வொழுக்கத்துக் காவிரி புரக்கு நல்நாட்டுப் பொருந வாய்வாள் வளவன் வாழ்கெனப் 25 பீடுகெழு நோன்றாள் பாடுகம் பலவே. திணை : பாடாண்திணை. துறை: கடைநிலை.சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவனை நல்லிறையனார் பாடியது. உரை : பதி முதற் பழகாப் பழங்கண் வாழ்க்கை - தொடக்க முதலே பழகி யறியாத துன்ப வாழ்க்கையில்; குறு நெடுந் துணையொடு கூர்மை வீதலின் - இளைய நெடிய துணை யாகிய மனைவியுடனே மதிநுட்பமும் கெடுதலால்; குடிமுறை பாடி - குடிதோறும் முறையே சென்று பாடி; ஒய்யென வருந்தி - ஈவோரின்மையின் மிகவும் நைந்து வருந்தி; அடல் நசை மறந்த எம் குழிசி மலர்க்கும் - சோறு சமைத்தற்கண் உள்ள விருப்பத்தை மறந்த எம்முடைய மட்பானையை நிமிர்த்துச் சமைக்கச் செய்யும்; கடன் அறியாளர் பரவுக்கடனை யறிந்தாளும் செல்வர்; பிற நாட்டின்மையின் - பிற எந்நாட்டினும் இலராத லால்; வள்ளன்மையின் எம் வரைவோர் யார் என - இரப்பார்க்கு இல்லென்னாது கொடுக்குந் தன்மையுடைமையால் எம்மை ஏற்று உதவுவோர் யாருளர் என்று; உள்ளிய உள்ளமொடு - நினைந்த நெஞ்சத்துடனே; உலைநசை துணையா - வருந்துதற்கேது வான விருப்பம் துணையாக; உலக மெல்லாம் ஒருபாற் பட்டென - உலக வாழ்விற்குரிய வளங்களெல்லாம் ஓரிடத்தே யுண்டானாற்போல; மலர்தார் அண்ணல் நின் நல்லிசை உள்ளி - மலர்களால் தொடுக்கப்பட்ட மாலை யணிந்த தலைவனாகிய நீ உள்ளாயென அறிந்து நின்னுடைய நல்ல புகழை நினைந்து; ஈர்ங்கை மறந்த என் இரும்பேரொக்கல் - உண்டு கையீரமாதலைத் துறந்து வருந்தும் என் பெரிய சுற்றம்; கூர்ந்த எல்லாம் விட - மிக்குள்ள பசி வருத்தம் கெடுமாறு; கொழுநிணம் கிழிப்ப - கொழுவிய வூனைத் துண்டாக்கி; கோடைப் பருத்தி வீடு நிறை பெய்த - கோடையிற் கொண்ட பருத்தியினின்று நீக்கிச் சுகிர்ந்த பஞ்சியானது நிறையத் திணித்த; மூடைப் பண்டம் மிடை நிறைந்தன்ன - பொதியாகிய பண்டம் மிடைந்து நிறைந்திருந்தாற்போல; வெண்ணிணமூரி அருளி - வெள்ளிய வூன்துண்டங்களைக் கொடுத்து உண்பித்து, நாளுற ஈன்ற அரவின் நாவுருக் கடுக்கும் - ஈனுதற்குரிய பொழுது எய்த முட்டையீன்ற பாம்பினது நாவின் வடிவைப் போல; என் தொன்றுபடு சிதா அர் துவர நீக்கி - பழமை யுற்றுக் கிழிந்து பிளவு பட்ட என் பீறிய உடையைமுற்றவும் நீக்கி; போது விரி பகன்றைப்புதுமலர் அன்ன- அரும்பி மலர்ந்த பகன்றையின் புதுப்பூப் போன்ற; அகன்று மடி கலிங்கம் உடீஇ - அகல மடிக்கப்பட்ட ஆடைகொடுத் துடுப்பித்து; செல்வமும் கேடின்று நல்குமதி - செல்வத்தையும் குறையாவளவிற் கொடுப்பா யாக; பெரும - பெருமானே; மாசில் மதி புரை மாக்கிணை தெளிர்ப்ப வொற்றி - கலை குறைவில்லாத முழுமதியத்தை யொக்கும் தடாரிப் பறையொலிக்க இசைத்து; ஆடுமகள் ஆடி ஒல்கல் ஒப்ப - ஆடு மகள் ஆடி யிளைத் தொடுங்குவது போல்; கோடையாயினும் - எல்லாம் பசையற்றொடுங்கும் கோடைக் காலம் வந்தபோதும்; கோடா ஒழுக்கத்துக் காவிரி புரக்கும் நன்னாட்டுப் பொருந - தப்பாது நீரொழுகுதலையுடைய காவிரியாறு பாயும் நல்ல நாட்டுக்குத் தலைவனே-; வாய் வாள் வளவன் வாழ்க என - தப்பாத வாட்படையை யுடைய கிள்ளி வளவன் வாழ்வானாக என்று; பீடுகெழு நோன்றாள் பல பாடுகம் - பெருமை பொருந்திய நின் வலிய தாளைப் பல படியும் பாடுவோம்; எ-று. வாழ்க்கை தொடங்கிய நாண்முதல் வறுமைத்துயர் கண்டறியாமை விளங்க, “பதிமுதற் பழகாப் பழங்கண் வாழ்க்கை” எனப்பட்டது. பதிதல் ஈண்டுத் தொடக்கத்தின் மேற்று. குறுநெடுந் துணையென்றவிடத்துக் குறுமை இளமையும், நெடுமை காலமும் குறித்து நின்றன. மனைவியைக் குறுநெடுந் துணை யென்றான். கூர்மை, அறிவின் நுட்பம். சீரிய மதிநுட்பமுடையார்க்கும் வறுமை அந்நுட்பம் மழுங்கச் செய்தலின், “கூர்மை வீதலின்” என்றார். குடி முறை பாடியென்றது, ஏருழுது வாழும் வேளாண்மக்கள் இல்லந்தோறும் பாடி ஊண்பெற்று வாழ்தலைக் குறித்து நின்றது. “ஏரின் வாழ்நர் குடிமுறைபுகாஅ, வூழிரந்துண்ணும் உயவர் வாழ்க்கை ” (புறம். 375) என்று பிறரும் கூறுதல் காண்க. குடிமுறை பாடியிரத்தல், மேன்மேலும் இரத்தற்கே இடனாவதன்றி, இரவாமை பயந்து தம்மில் இருந்து தமது பாத்துண்ணும் தகைமை பயவாமையின் ஒய்யென வருந்தி யென்றான். குழிசியை மலர்த்தலாவது, அரிசி முதலாயின இன்மையால் சமைத்தற்றொழில் நிகழாமையின் கவிழ்த்து வைத்திருக்கும் மட்பானையை, அவ்வரிசி முதலாயின பெற்றவழிச் சமைத்தற்கு நிமிர்த்து அடுப்பேற்றுவது, இல்லாரது இன்மை தீர்ப்பது உடையார்க்குக் கடன் என்பதனை யறிந் தொழுகும் செல்வரை ஈண்டுக் கடனறியாளரென்றார். தம் நாட்டில் தாம் இன்மையுற்று வருந்துவதே அக்கடனறியாளர், தமது நாட்டில் இல்லாமையை யுணர்த்துதலால் பிறநாட்டில் அவர் இல்லாமையை விதந்து “பிற நாட்டின்மையின்” என்றார். உலைவுக் கேதுவாகிய நசை உலை நசையெனப்பட்டது. ஆக வென்பதன் ஈற்றகரம் விகாரத்தாற் றொக்கது. உலகியல் வாழ்க்கைக்கு வேண்டும் வளமெல்லாம் ஓரிடத்தே ஒருங்கு உளவாதல் அரிதாதலால், “உலகமெல்லாம் ஒரு பாற்பட்டென” என்றார். ஒருபாற்பட்டவழி, அது குறித்து அனைவரும் அவ்விடத்தை நினைந்து வருபவாதலால், யான் நின்பால் வருவேனாயினேன் என்பான், “மலர்தா ரண்ணல் நின் நல்லிசை யுள்ளி” வருவே னாயினேன் என்றான். உலகம் - ஈண்டு உலகியல் வாழ்க்கைக்கு வேண்டும் வளம் குறித்து நின்றது; வளமாவது, உண்டியும் உடையுமென இரண்டாகி யடங்குமென்றறிக. உள்ளியதனால் ஒக்கல் பிறரை இரத்தலைக் கைவிட்டு ஈர்ங்கை மறப்பதாயிற்று. கிழித்தெனற்பாலது கிழிப்ப வென வந்தது. கிழித்தல், சூட்டுக் கோலாற் குத்திச் சுட்டுத் துண்டாக்குதல். பருத்திவீடு, பருத்தி யினின்றும் எடுத்துக் கொட்டை நீக்கிச் சுகிரப்பட்ட பஞ்சு பருத்தியினின்றும் விடுபட்டது பருத்தி வீடாயிற்று. முட்டை யீன்ற பாம்பின் நா பெரிதும் பிளவுபட்டுக் காட்டு மென்ப. ஈனுதற்குரிய நாளெய்திய போதே பாம்பு முட்டையீனும் என்பார், “நாளுறவீன்ற வரவு” என்றார். “நாளுற்று நம்பி பிறந்தான்” (சீவக. 10) என்று பிறரும் கூறுதல் காண்க. செல்வ மில்வழி யெய்தும் வறுமைத் துன்பத்தை நன்கு கண்டிருக்கின்றா னாதலின், செல்வமும் கேடின்றி நல்குமதி யென வேண்டி னான். மதிக்கு மாசு,கலை குறைவு. ஆடுமகள் ஆடியொல்குவது போலக் கோடையில் எப்பொருளும் வாடி வதங்குமென வறிக. இடை யறாத நீரொழுக்குடையதாகலின், காவிரியைக், “கோடா வொழுக்கத்துக் காவிரி” என்றார். வளவன் நல்கியவழித் தான் செய்யக் கூடியது இது வென்பான், “வளவன் வாழ்கெனப் பீடுகெழு நோன்றாள் பாடுகம் பலவே” என்றான். வீதலின், வருந்தி, உள்ளமொடு, நசைதுணையாக, ஒருபாற்பட்டென, உள்ளி, மறந்த என் ஒக்கல், கிழித்து, அருளி, நீக்கி, உடீஇ, நல்குமதி, பெரும, தெளிர்ப்ப ஒற்றி, பொருந. வாழ்கெனப் பாடுகம் பலவெனக் கூட்டி வினைமுடிவு செய்க. விளக்கம் : சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனைப் பாடித் தமக்குப் பரிசில் நல்கிவிடுத்தல் வேண்டுமென்ற கருத்தை அவனுக்குத் தெரிவிக்கும் கருத்துடையரான நல்லிறையனார், கிணைப்பொருநன் ஒருவன் கூற்றில் வைத்துத் தாமுற்று வருந்திய வருத்தத்தையும் தமக்கு வேண்டும் பரிசில் நிலையையும் இப் பாட்டின்கட் கூறுகின்றார். முன்பெல்லாங் கண்டிராத வறுமையுண்டாக, அதனால் அறிவு மழுங்கிக் கடனறியாளர் இருக்குமிடம் நாடிச் சென்று அவர் குடி தோறும் சென்று இரந்து வருந்திய வருத்தத்தை “பதிமுதற் பழகா......இன்மையின்” என்றார். தம் வறுமைதீரக் கொடுக்கும் செல்வர்களைப் பிறநாடுகளில் தேடியலைந்ததும், குடிதொறும் சென்று இரந்து வருந்தியதும் தோன்றக் “கடனறியாளர் பிறநாட்டின்மையின்” என்றும் “குடிமுறை பாடி யொய்யென வருந்தி” யென்றும் குறித்தார். கிள்ளி வளவனது கொடைநலம் கேள்வியுற்று அவன் பால் தாம்வருந்தித் திரிதலைக் குறிப்பாராய், “வள்ளன்மையின்... உள்ளி” வந்தனன் என்று கூறு கின்றார். வள்ளன்மை யில்வழி, இரவலரை வரைந்து வரவேற்று உடையும் உண்டியும் நல்கிப் புரக்கும் செந்தண்மையுளதாகாமையின், “வள்ளன்மையின் எம் வரைவோர் யாரென” இறையனாரது உள்ளம் உள்ளுவதாயிற்று. கரவாத உள்ளமுடையாரிடத்தில் இரத்தலே இரவலர்க்கு இன்பமும் எழுச்சியும் தருவதாகலின் வள்ளியோரை நாடுவது இயல்பாயிற்று. இனிய வுணவும், அகன்று மடி கலிங்கமும் தரல்வேண்டுமெனக் குறித்தவர் மீள அளவை குறித்து இரத்தலாகிய செயலை மேற் கொள்ளாவாறு மிகுதியாக நல்குக வென்பாராய்ச் “செல்வமும் கேடின்று நல்குமதி பெரும” என்றும், இதற்குக் கைம்மாறாக யாம்செய்யத் தக்கதொன்று மில்லையாயினும், தளர்ச்சியின்றி நின் பீடுகெழு நோன்றாள் நாடெங்கும் விளங்குமாறு பாடுவோம் என்பார், “மாசில்....பலவே” என்றும் குறிக்கின்றார். 394. சோழியவேனாதி திருக்குட்டுவன் திருக்குட்டுவன் சேரநாட்டின் பகுதியாகிய குட்டநாட்டு அரசர் குடியில் தோன்றியவன்; குட்டநாட்டு வேந்தரைக் குட்டுவர் என்பது வழக்கு சேரவேந்தர் பலர்செங்குட்டுவன், வேல்கெழுகுட்டுவன், சேரமான் குட்வன் கோதை எனத் தொகை நூல்களுட் காணப்படுகின்றனர். குட்டுவன் என்னும் பெயரே பலர்க்குச் சிறப்புப்பெயராகவும் வழங்கப் பட்டிருப்பதை இதனாலும் அறியலாம். இவ்வகையால் இத்திருக்குட்டுவன் தன் குடிமுன்னோர் பெயரையே தனக்குச் சிறப்புப் பெயராகக் கொண்டவன் என அறிகின்றோம். இவன் முன்னோர் சேரநாட்டு முடிவேந்தராய் விளங்கியிருந்தனர். குட்டுவர் குடவர் பொறையர் எனச் சேரவேந்தர் குடிவகை பலவுண்டு. ஒருகாலத்தே குட்டுவர் குடிவலி குன்றியொடுங்கிக் கிடக்கையில் அதன்கண் இத்திருக் குட்டுவன் தோன்றித் தன் வன்மையாலும் வள்ளன்மையாலும் முடிவேந்தனாதற்குரிய சிறப்புடையனாகவில்லையே யன்றிப் புலவர் பாடும் புகழ்குரிய சிறப்புற்றிருந்தான். இனிக் குட்டுவர் குடியில் தோன்றிய சேரமான் குட்டுவன் கோதை யென்பான். முடிவேந்தனாயிருந்தமையின் இவன் ஒரு பகுதிக்குத் தலைவனாயிருந் திருக்கலாமென நினைத்தற்கும் இடமுண்டு. திருக்குட்டுவன் தொடக்கத்தில் சோழ வேந்தன்பால் தானைத்தலைவனாயிருந்து போர்ச்செயல் மாண்பால் சோழீய ஏனாதி யென்று அவனால் மாராயந் தரப்பட்டான். அதனால் இவன் சோழியவேனாதி திருக்குட்டுவன் எனப்பட்டான். இவனுடையவூர் பாலைக்காடு நாட்டிலுள்ள வெண்குடையென்ற வூராகும் இப்போது அது வெங்கொடியென வழங்கும் சீறூராகவுளது. வெண்குடை யென்னும் ஊரில் திருக் குட்டுவன் வழிவந்த குடும்ப மொன்றுளது. அவர்கள் தங்களைக் குட்டுவன் வீட்டார் என்றே கூறிக்கொள்ளுகின்றனர். கோனாடு என்பது புதுக்கோட்டைப் பகுதியில் ஓடும் வெள்ளாற்றின் கரை சேர்ந்த நாடு. இதன் பரப்பு இருபத்து நாற்காத வட்டகையெனக் கல்வெட்டுக்கள் (P.S. Ins. 285) கூறுகின்றன. இது கல்வெட்டுக்களில் கோனாடான இரட்டபாடி கொண்ட சோழவள நாடு (P.S. Ins. 129)என்றும், கேரளாந்தக வளநாடான கோனா (P.S. Ins. 86) டென்றும், கடலடையா திலங்கைகொண்ட சோழவளநாடு (P.S. Ins. 167) என்றும் வழங்கும் இக்கோனாடு, வடகோனாடு, (P.S. Ins. 286) தென்கோனாடு (P.S. Ins. 221) கீழ்கோனாடு, (P.S. Ins. 198) டென்றும் மூவகைப்படும். குமரனாருடைய எறிச்சிலூர் கீழ்க்கோனாட்டில் உள்ளது. கீழ்கோனாடு இளங்கோனா (P.S. Ins. 728) டென்றும் வழங்கும்; இந்நாடு இப்போது தஞ்சைசில்லாவிலுள்ள அறந்தாங்கித் தாலுக்காவின் மேலைப் பகுதியாக இருக்கிறது. இதன் இயல்பு களை இவ்வுரைகாரர் எழுதிய மதுரைக்குமரனார் என்ற நூலிற் பரக்கக்காண்க. ஒருகால் கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரைக் குமரனார் அவனைக் காணச் சென்றார். திருக்குட்டுவன் காலத்தில் அப்பகுதி எல்லாம் தமிழ்நாடாகவே இருந்தது நினைவு கூரத்தக்கது. அவன் குமரனாரை வரவேற்று வேண்டுவன நல்கி இனிதிருக்கச் செய்தான். இருக்கையில் ஒருநாள் தாம் விடைபெற வேண்டியிருக்கும் குறிப்பை அவர் அவனுக்குத் தெரிவித்தார். அவன் போர் பல செய்து வென்றியொடு விளங்கிய வெஞ்சின யானையொன்றை ஒப்பனை செய்து நிரம்பப்பொன்னும் பொருளும் உடன்வரக் குமரனார்க்குப் பரிசில் அளித்தான். யானையின் பெருமாண்பு கண்ட குமரனார் அதனை யணுகற் கஞ்சி அதனைத் திருப்பி விட்டார். தான் விடுத்த யானை திரும்பி வரக்கண்ட திருக்குட்டுவன், தான் தந்த வேழப்பரிசில் தம் வரிசை நோக்கச் சிறிதாமெனக் கருதி விட்டார்போலும் இச் சான்றோர். வரிசையறியும் தரமில்லாது போனேனே எனத் தானே நாணி, அவ் வேழத்தோடு பிறிதொரு பெருங்களிறு கொணரச் செய்து அதனையும் முன்னே விடுத்ததுபோல ஒப்பனை செய்து சான்றோராகிய குமரனார்க் கென விடுத்தான். அவனுடைய அச் செயலறிந்த குமரனார் பெருவியப்புக்கொண்டு இப்பாட்டை ஒரு பொருநன் கூற்றில் வைத்துப் பாடினார். இதன்கண் கிணைப் பொருநனாகிய தான், வெண்குடைக்கிழவோனான திருக்குட்டுவன் பெருமனையை யடைந்து விடியலில் எழுந்து அவன் தந்தையின் வஞ்சிப் போர்திறத்தைப் பாடினதாகவும் அது கேட்டுத் தன்னை அவன் தன்பால் பிரிவின்றி யிருத்தல்வேண்டிக் களிற்றுப் பரிசில் நல்கினானெனவும், அது போரிற் பகைவரைக் கொன்று சினம் தணியாத வெஞ்சின வேழமெனவும் அதுகண்டு கிணைவன் அஞ்சி அதனைப் பெயர்த்தும் அவன்பாற் செல்லவிடுத்த தாகவும், அதனையவன் சிறிதெனத் திருப்பி விட்டதாகக் கருதிப் பிறிதுமொரு களிறு நல்கினானெவும் அவன் தந்த பெருஞ் செல்வத்தால் தான் பின்பு என்றும் இரத்தலை மேற்கொள்ளாத செல்வனானதாகவும் கூறி. வஞ்சப்புகழ்ச்சியாக “அவன் துன்னரும் பரிசில் தந்தான்; அது கொண்டு யான் அவன் பால் என்றுஞ் செல்லேன்; உயர்மொழிப் புலவீர், நீவிரும் அவன் வையகம் புகழும் வள்ளியோனென்ப துண்மையாயினும் அவனை உள்ளுதலை யோம்புமின்” என்று கூறியுள்ளான். கி.பி. 1226 ஆம் ஆண்டில் மாறவன்மன் முதற் சுந்தர பாண்டியன் காலத்தில் வஞ்சி பாடிய புலவன் திருவரன் குளமுடையான் என்பவனுக்கு மறச்சக்கரவர்த்தி பிள்ளை யென்ற சிறப்புப்பெயர் கொடுத்து, விளைநிலம் பல இறையிலி காணியாகக் கொடுத்த செய்தியைக் கல்வெட்டு (P.S. Ins. 278) கூறுவது ஈண்டு நினைதற்குரியது சிலையுலாய் நிமிர்ந்த சாந்துபடு மார்பின் ஒலிகதிர்க் கழனி வெண்குடைக் கிழவோன் வலிதுஞ்சு தடக்கை வாய்வாட் குட்டுவன் வள்ளிய னாதல் வையகம் புகழினும் 5 உள்ள லோம்புமி னுயர்மொழிப் புலவீர் யானும், இருணிலாக் கழிந்த பகல்செய் வைகறை ஒருகண் மாக்கிணை தெளிர்ப்ப வொற்றிப் பாடிமிழ் முரசி னியறேர்த் தந்தை வாடா வஞ்சி பாடினெ னாக 10 அகமலி யுவகையொ டணுகல் வேண்டிக் கொன்றுசினந் தணியாப் புலவுநாறு மருப்பின் வெஞ்சின வேழ நல்கின னஞ்சி யானது பெயர்த்தனெ னாகத் தானது சிறிதென வுணர்ந்தமை நாணிப் பிறிதுமோர் 15 பெருங்களிறு நல்கி யோனே யதற்கொண் டிரும்பே ரொக்கல் பெரும்புலம் புறினும் துன்னரும் பரிசி றருமென என்றுஞ் செல்லேனவன் குன்றுகெழு நாட்டே. திணை : பாடாண்திணை. துறை: கடைநிலை., கடைநிலையாயின வெல்லாம் பாடான்டிணை. சோழிய ஏனாதி திருக்குட்டுவனைக் கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரைக் குமரனார் பாடியது. உரை : சிலையுலாய் நிமிர்ந்த சாந்துபடு மார்பின் - விற்பயிற்சி யால் உயர்ந்தகன்ற சந்தனம் பூசப்பட்ட மார்பினையுடைய; ஒலிகதிர்க் கழனி வெண்குடை கிழவோன் - தழைத்த கதிர்கள் பொருந்திய கழனிகள் சூழ்ந்த வெண்குடையென்னும் ஊர்க்குரிய வனான; வலிதுஞ்சு தடக்கை வாய்வாள் குட்டுவன் - வலி பொருந்திய பெரிய கையையுடைய தப்பாத வாளை யேந்தும் திருக்குட்டுவன்; வள்ளியனாதல் வையகம் புகழினும் - வள்ளன்மை யுடையனென்பதை உலகத்து நன்மக்கள் புகழ்ந்தோதினாலும்; உயர்மொழிப் புலவீர் - உயர்ந்த கருத்தமைந்த சொற்களை வழங்கும் புலவர்களே; உள்ளல் ஓம்புமின் - நினைத்தலைக் கைவிடுவீராக; யானும் -; இருள் நிலாக் கழிந்த பகல் செய் வைகறை - இருட்போதும் நிலவுப்போதும் கழிந்த பகற் போதினைச் செய்தற்குத் தோன்றிய விடியற்காலத்தே; ஒரு கண் மாக்கிணை தெளிர்ப்ப ஒற்றி - ஒரு கண்ணையுடைய பெரிய தடாரிப்பறை மெல்லஒலிக்கு மாறு இசைத்து; பாடு இமிழ் முரசின் இயலதேர்த் தந்தை - ஒலி முழங்குகின்ற முரசினையும் செய்யப்பட்ட தேரினையுமுடைய அவன் தந்தையது; வாடா வஞ்சி பாடினெனாக - வஞ்சித்துறைப் பாட்டொன்றைப் பாடினேனாக; அகமலி யுவகையொடு - மனம் நிறைந்த உவகையினால்; அணுகல் வேண்டி - பிரிவின்றித் தன்பால் அன்பால் நெருங்கியுறைய வேண்டுமென விரும்பி; கொன்று சினந் தணியாப் புலவு நாறு மருப்பின் - பகைவரைக் கொன்ற பின்பும் முன்புகொண்ட சீற்றம் குன்றாத புலான் மணங்கமழும் கோட்டினையுடைய; வெஞ்சின வேழம் நல்கினன் - வெவ்விய சினத்தையுடைய யானையொன்றைத் தந்தான்; அஞ்சி - அது கண்டு அச்சமுற்று; யான் அது பெயர்த்தனெ னாக - யான் அவ் வேழத்தை அவன் பால் திருப்பி விட்டே னாக; தான் அது சிறிதென வுணர்ந்தமை நாணி - அவன் தான் அது என்வரிசைக்குச் சிறிதென உணர்ந்தமை யெண்ணி நாணமுன்று, பிறிதும் ஒருபெருங்களிறு நல்கியோன் - மேலும் வேறே ஒரு பெரிய களிற்றை நல்கினான்; அதற்கொண்டு - அதனால்; இரும்பேரொக்கல் பெரும்புலம்புறினும் - மிக்க பெரிய என் சுற்றத்தார் வறுமையால் பெருந்துன்பம் எய்தினா ராயினும்; அவன் குன்றுகெழுநாட்டு - குன்றுகள் பொருந்திய அவனுடைய நாட்டுக்கு; துன்னரும் பரிசில் தருமென - நெருங்குதற்கரிய பரிசிலை நல்குவானென்று கருதி; என்றும் செல்லேன் - எப்போதும் செல்லுவேனல்லேன்; எ-று. மார்பின் அகன்றுயர்ந்த மாண்புக்கு ஏதுக்கூறுவார், “சிலையுலாய் நிமிர்ந்த மார்பு” என்றார். சாந்து - சந்தனம். வெண்குடை, திருக்குட்டுவனுடைய தலைநகர். ஒருவன் வள்ளி யோனாகிய வழி, அவன் புகழ் உலகெங்கும் பரவுதல் ஒருதலை யாதலின் “வள்ளியனாதல் வையகம் புகழினும்” என்றார். உள்ளல் ஓம்புமின் ஒரு சொல்லா யியைத்து உள்ளன்மின் எனவும் நின்றாங்கே கொண்டு உள்ளுதலை மறவாது போற்றுமின் எனவும், பொருள் கொள்க. முற்பக்கத் திருளும் பிற்பக்கத்து நிலவும் உடைய இரவுப்போது புலருங் காலம், “இருணிலாக் கழிந்த பகல்செய் வைகறை” என்று கூறப்பட்டது. ஏனைத் தேர் போலாது மிக்க கால்வலி யுடையதாக அமைந்த தேர் பல உடையன் என்பார், “இயறேர்த்தந்தை” யென்றார். வாடா வஞ்சி, வஞ்சித் துறைப்பாட்டுக்கு வெளிப்படை அணுகல் வேண்டி வேழம் நல்கினன் என்றதற்குத் தன்பால் குறுகவருதல் வேண்டி வேழத்தை நல்கினன் என்றுரைப்பினுமமையும் உணர்ந்தமை நாணி, உணர்ந்தமையான் நாணியென விரிக்க. புலம்புறினும் செல்லேன் என இயையும், கிழவனான குட்டுவன் வள்ளியனாதல், புகழினும் புலவீர் உள்ள லோம்புமின், யானும், ஒற்றி, பாடினேனாக, வேண்டி நல்கினன்; அஞ்சி, பெயர்த்தனெனாக, நாணி களிறு நல்கினன்; அதற்கொண்டு புலம்புறினும், தருமென, நாட்டுக்குச் செல்வேன் எனக்கூட்டி வினை முடிவு செய்க. விளக்கம் : கிழவன் என்று உரிமையாக வுடையவன் என்பது பட நின்றது. இக் கிழமை பெற்றவர் கிழான் என்றும் கிழாரென்றும் கூறப்படுவர். இதுவேந்தரால் நல்கப்படும் சிறப்பெனவும், இதனைப் பெறற்கண் அந்தணர் முதல் அனைவரும் உரியரெனவும் உணர்தல் வேண்டும். உப்பூரிகுடி கிழான் உருத்திரசன்மன் (இ.அ.உரை) என வருவதும், இடைக்காலத்தே எட்டி சாத்தன் என்பான் இருஞ்சேரநாட்டுக் கூடற்குடி, ‘குளத்தூர், துழாயூர், இருப்பைக்குடி, வெளியங்குடி, ஆலங்குடி என்ற வூர்கட்குரியனாய் இருப்பைக்குடி கிழான் என்று வேந்தனால் சிறப்பிக்கப் பெற்றான் (A.R. No. 334. of 1929-30 and A.R. for -7p. 73-4) என வருவதும் போதிய சான்று பகருகின்றன. திருக்குட்டுவன் செய்த சிறப்புக்கண்டு பெருமகிழ்வுற்ற குமரனார் அவனைப் பழிப்பது போலப் புகழ்கின்றாராதலின், “குட்டுவன்.....புலவீர்”’ என்றும், “இரும்பேரொக்கல்... நாட்டே” யென்றும் கூறுகின்றார். என்றாராயினும் “இது மறைமுகமாக உயர்மொழிப் புலவர் ஒருங்கு திரண்டுவந்து தங்கள் உயர்மொழியால் இக் குட்டுவனது புகழுடம்பை உயர்மொழிப் புலமைச் செய்யுளால் உருப்படுத்தி நிலை நிறுவுதல் வேண்டுமெனப் பணிக்கும் தமிழ்ப்பணி” (மது. கும. பக்க. 118) என்பது கருத்தெனக் கொள்க. துன்னரும் பரிசில் என்னும் தொடர். “நம்போல்வார் பெறுதற்கரிய பெரும் பரிசில்” என்றும் பொருள்படுமாறு அமைந் திருப்பது குறிக்கத்தக்கது. 395. சோழநாட்டுப் பிடவூர் கிழான் மகன் பெருஞ்சாத்தன் பிடவூர் எனப் பெயரியதோரூர் தொண்டை நாட்டிலும் உண்மையின், அதனின் வேறுபடுத்தற்கு இதனைச் சோழநாட்டுப் பிடவூர் என்று பண்டையோர் குறித்துள்ளனர். தொண்டைநாட்டுப் பிடவூர், “மணவிற் கோட்டத்துப் புரிசைநாட்டுப் பிடவூர்” (A.R.No. 68 of 1923)என்றும் சோழநாட்டுப் பிடவூர். “பிடவூர் நாட்டுப் பிடவூர்” (A.R.No. 139 of 1930-31) என்றும் கல்வெட்டுகளிற் காணப்படுகின்றன. இப் பிடவூர்க்குரியராய் வாழ்ந்த வேளாண் மக்களின் குடி முதல்வன் பிடவூர் கிழானாவன். இவனும் இவனைச் சேர்ந்தோரும் அந்நாளில் வேந்தர்க்கு மண்டிலமாக்களும் தண்டத் தலைவருமாய்த் துணைபுரிந்தனர். மூவேந்தர்க்கு மகட்கொடை நேரும் சிறப்பும் இவர்கட்கு உண்டு. இவர்கள் வேளிரெனப் படுதலுமுண்டு. பிடவூர் வேளிர்குடி வழிவழியாக வந்து இடைக் காலத்தும் சிறந்திருந்தது. கல்வெட்டுகளுள் “பிடவூர் நாட்டுப் பிடவூர் வேள் ” என்பானொருவன் (A.R.No. 139 of 1930 31) காணப்படுவதே இதற்குச் சான்று பகருகின்றது. இது நிற்க. இப் பிடவூர் உறையூர்க்குக் கிழக்கில் உளது. பெருஞ் சாத்தன் இப்பிடவூர் கிழான் மகனாவான். இவன் நெடுங்கை வேண்மால் எனவும் வழங்கப்படுவன். இவன்பால் மதுரைச்சான்றோரான நக்கீரனாருக்குப் பேரன்பும் பெருநட்பும் உண்டு. ஒருகால் நக்கீரர் இவனைக் காணச் சென்றபோது, பெருஞ்சாத்தன் அவரை இனிது வரவேற்றுச் சீரிய உணவும் நல்கி மிக்க பெருஞ் செல்வமும் வழங்கிச் சிறப்பித்தான். இவ்வாறு நக்கீரர்க்குப் பெருஞ் சிறப்புகளைச் செய்தும் இப்பெருஞ்சாத்தன் உள்ளம் அமையானாய், தன் மனைவியை வருவித்து அவட்கு நக்கீரரைக் காட்டி, இவரை என்னைப் போற் போற்றுக என்று பணித்தான். அது கண்டதும் நக்கீரருக்குப் பெரும் வியப்புண்டாயிற்று. அக்காலை இப் பாட்டைப் பாடினார். இதன்கண் தம்மை ஒரு கிணைப்பொருநனாக வைத்துத் தமக்கு அவன் செய்த சிறப்பை விரியக் கூறியுள்ளார். இதன் இடையே சில அடிகள் சிதைந்துவிட்டன. மென்புலத்து வயலுழவர் வண்புலத்துப் பகடுவிட்டுக் குறுமுயலின் குழைச்சூட்டொடு நெடுவாளைப் பல்லுவியற் 5 பழஞ்சோற்றுப் புகவருந்தி புகற்றளவின் பூச்சூடி அரிப்பறையாற் புள்ளோப்பி அவிழ்நெல்லி னரியலாருந்து மனைக்கோழிப் பைம்பயிரின்னே 10 கானக்கோழிக் கவர்குரலொடு நீர்க்கோழிக் கூப்பெயர்க் குந்து வேயன்ன மென்றோளால் மயிலன்ன மென்சாயலார் கிளிகடி யின்னே 15 அகலள்ளற் புள்ளிரீஇயுந்து ஆங்கப், பலநல்ல புலனணியும் சீர்சான்ற விழுச்சிறப்பிற் சிறுகண் யானைப் பெறலருந் தித்தன் செல்லா நல்லிசை யுறந்தைக் குணாது 20 நெடுங்கை வேண்மா னருங்கடிப் பிடவூர் அறப்பெயர்ச் சாத்தன் கிணையேம் பெருமவென முன்னா ணன்பகற் சுரனுழந்து வருந்திக் கதிர்நனி சென்ற கனையிருண் மாலைத் தன்கடைத் தோன்றி யென்னுற விசைத்தலிற் 25 றீங்குரல்.......கி னரிக்குரற் றடாரியோ டாங்குநின்று வெற்கொண்டு சிறிது நில்லான் பெரிதுங் கூறான் அருங்கலம் வரவே யருளினன் வேண்டி ஐயென வுரைத்தன்றி நல்கித் தன்மனைப் 30 பொன்போன் மடந்தையைக் காட்டி யிவனை என்போற் போற்றென் றோனே யதற்கொண் டவன்மறவ லேனே பிறருள்ள லேனே அகன்ஞாலம் பெரிது வெம்பினும் மிகவானு ளெரிதோன்றினும் 35 குளமீனொடுந் தாட்புகையினும் பெருஞ்செய் நெல்லின் கொக்குகிர் நிமிரல் பசுங்கட் கருனைச் சூட்டொடு மாந்தி விளை வொன்றோ வெள்ளங் கொள்கென உள்ளது மில்லது மறியா 40 தாங்மைந் தன்றால் வாழ்கவண் றாளே. திணை : பாடாண்திணை. துறை: கடைநிலை.. சோழநாட்டுப் பிடவூர் கிழான் மகன் பெருஞ்சாத்தனை மதுரை நக்கீரர் பாடியது. உரை : மென்புலத்து வயலுழவர் - மென்புலமாகிய மருத நிலத்து வயல்களில் தொழில் புரியும் உழவர்; வன்புலத்துப் பகடு விட்டு - வன் புலமாகிய முல்லை நிலத்தில் தம் எருதுகளை மேயவிட்டு; குறுமுயலின் குழைச்சூட்டொடு - குறுமுயல் களின் குழைந்த சூட்டிறைச்சியுடனே; நெடுவாளைப் பல் உவியல் - நெடிய வாளை மீனைக்கொண்டு பலவாகச் செய்த அவியலை; பழஞ்சோற்றுப் புகவருந்தி - பழையதாகிய சோற் றுணவோடே யுண்டு; புதல் தளவின் பூச்சூடி - புதலிடத்தே மலர்ந்த தளவ முல்லையின் பூவைத் தலையிற் சூடிக்கொண்டு; அரிப்பறையாற் புள்ளோப்பி - அரித்த ஓசையையுடைய கிணைப்பறையைக் கொட்டி வயலில் விளைந்த கதிர்களை யுண்டற்கு வந்துபடியும் புள்ளினங்களையோட்டி; அவிழ் நெல்லின் அரியல் ஆருந்து - நெற்சோற்றினின்றும் இறக்கப் பட்ட வடித்த கள்ளையருந்தும் மனைக்கோழி; பைம்பயிரின் - மனையிடத்துக் கோழிசெய்யும் பசிய அழைப்பினால்; கானக் கோழி கவர்குரலோடு - காட்டுக்கோழி தன் கவர்த்த குரலை யெடுத்தும்; நீர்க்கோழி கூப்பெயர்க்குந்து - நீரில் வாழும் நீர்க்கோழி தன் குரலையெடுத்தும் கூப்பிடுதலைச் செய்யும்; வேயன்ன மென்றோள் - மூங்கில் போலும் தோளையும், மயிலன்ன மென்சாயலார் கிளிகடியின் - மயில் போன்ற மெல்லிய சாயலையுமுடையமகளிர் புனத்திற் படியும் கிளி களை யோப்புவாராயின்; அகல் அள்ளல் புள் இரீ இ யுந்து - அகன்ற சேற்றிடத்தே நின்ற புள்ளினங்கள் அவ்விடத்து நின்றும் நீங்கியோடும்; பலநல்ல புலனணியும் - பலவாகிய நல்ல விளைபுலங்கள் சூழ்ந்திருக்கும்; சீர்சான்ற விழுச் சிறப்பின் - தலைமை யமைந்த செல்வச் சிறப்பும்; சிறுகண் யானைப் பெறலருந் தித்தன் - சிறிய கண்ணையுடைய யானைகளு முடைய பெறுதற் கரிய தித்தன் என்பானுடைய; செல்லா நல்லிசை உறந்தைக் குணாது - கெடாத நல்ல புகழையுடைய உறையூர்க்குக் கிழக்கே; நெடுங்கை வேண்மான் அருங்கடிப் பிடவூர் - நீண்ட கையையுடைய வேண்மானுக்குரிய அரிய காவல் பொருந்திய பிடவூரிலுள்ள; அறப்பெயர்ச் சாத்தன் கிணையேம் - அறத்தாலுண்டாகிய புகழையுடைய சாத்தனுக்குக் கிணைப்பறை கொட்டிப்பாடும் கிணைப்பொருநராவோம்; பெரும- பெருமானே! முன்னாள் நண்பகல் சுரன் உழந்து வருந்தி - முன்னாள் நண்பகலில் காட்டிடத்தே நடந்து வருந்தி, கதிர்நனி சென்ற கனையிருள் மாலை - ஞாயிற்றின் செங்கதிர் மிகக்கழிதலால் செறிந்த இருள் பரவிய மாலைப்போதில்; தன் கடைத்தோன்றி என் உறவு இசைத்தலின் - தன்னுடைய மனைமுன்றிலில் நின்று யான் வந்துற்றிருத்தலை அறிவிக்கு மாற்றால்; தீங்குரல் - தீவிய இசையாகிய குரலையுடைய;...........; அரிக்குரல் தடாரியொடு - அரித்த ஓசையையுடைய தடாரி யுடனே; ஆங்கு நின்ற என் கண்டு - அவ்விடத்தே நின்ற என்னைக் கண்டு; சிறிதும் நில்லான் - சிறிது போதேனும் நின்று தாழ்த்த லின்றி; பெரிதும் கூறான் - மிகுதியாகப் பேசுதலுமின்றி; அருங்கலம் வர வருளினன் - அரிய கலன் களை நல்கி வரவிடுவானாய்; வேண்டி - மிகவும் விரும்பி; ஐயெனவுரைத்து அன்றி - மெல்லிய சில சொற்களைச் சொன்னதுமன்றி; நல்கி - எம்பால் பேரருளுடையனாய்; தன்மனைப் பொன்போல் மடந்தையைக் காட்டி - தன் மனைக் கண்ணுள்ள திருமகள் போலும் மடந்தையாகிய மனையாட்கு என்னைக் காட்டி; இவனை என் போல் போற்று என்றோன் - இவனையும் என்னைப் பேணுவது போல நல்லுணவு தந்து பேணுக என்று சொன்னான்; அதற்கொண்டு - அதனால்; அவன் மறவலேன் - அவனை மறவேனாயினேன்; பிறர் உள்ளலேன் - அவனை நினைத்த நெஞ்சத்தால் பிறரை நினைப்பதில்லே னாயினேன்; அகன் ஞாலம் பெரிது வெம்பினும் - அகன்ற நிலவுலகம் மழையின்றி மிக்க வெம்மையுற்று வாடினும்; வானுள் எரி மிகத் தோன்றினும் - வானகத்தே எரி மீன்கள் மிகுதியாகத் தோன்றிடினும்; குளமீனொடு தாள் புகையினும் - குளமீனும் தாள்மீனுமாகிய விண்மீன்கள் புகைந்து தோன்று மாயினும்; பெருஞ்செய் நெல்லின் கொக்குகிர் நிமிரல் - பெரிய வயலிடத்து விளைந்த நெல்லினுடைய கொக்கின் நகம் போலும் சோற்றை; பசுங்கண் கருணைச் சூட்டொடு மாந்தி - பசிய துண்டுகளாகிய பொரிக்கறியும் சூட்டிறைச்சியுடனும் உண்டு; விளைவு ஒன்று வெள்ளம் கொள்க என - விளைத்த ஒன்று வெள்ளமென்னும் அளவிற்றாக விளையக்கொள்க என்று சான்றோர் வாழ்த்துமாறு; ஆங்கு - அவ்விடத்தே; உள்ளதும் இல்லதும் அறியாது - உள்ளதிதுவென்றும் இல்லாத திதுவென்றும் பாராது; அமைந்தன்று தாள் - வரையாது கொடுத்தலிலே யமைந்தது அவனது தாளாண்மை; வாழ்க - அது வாழ்வதாக; எ-று. மென்புலத்து நன்செய் வயல்களை யுழுத எருதுகளை அண்மையிலுள்ள வன்புலத்துவிடுநிலத்துப் படுபுல் மேயுமாறு விடுவது தோன்ற, “வன்புலத்துப் பகடுவிட்டு” என்றார். வன் புலத்துப்படுபுல் பகடுகட்கு மிக்க உரந்தரும் உணவாமென்பது இன்றைய ஆராய்ச்சியாளர்க்கும் ஒப்ப முடிந்த வுண்மை; ஏனையவற்றின் இறைச்சி போலாது குறுமுயலின் இறைச்சி மிகக் குழைவுடையதென்றற்குக் “குழைச்சூடு” என்றார். உவியல்; அவியல்; “சாந்த விறகின் உவித்த புன்கம்” (புறம். 168) என்பது காண்க. புதற்றளவு புதலிடத்தே மலர்ந்த செம்முல்லை. நெற் சோற்றினின் றெடுக்கப்படும் அரியல், “அவிழ்நெல்லினரியல்” எனப்பட்டது. ஆரும்; ஆருந்தென உம்மை உந்தாயிற்று. பயிர், அழைப்புக்குரல். தழுதழுப்புடைமை தோன்றப் “பைம்பயிர்” என்றார். கோழியின் குரல் இரட்டை யோசைத்தாகலின், “கவர்குரல்” எனப்பட்டது. சேற்றிற் படிந்து கிடக்கும் ஆரல் முதலிய மீன்களை யுண்ணும் நாரை முதலியவற்றைப் புள்ளெனப் பொதுப்படக் கூறினார். புலனணியும்பிடவூர், உறந்தைக்குணா அது பிடவூர்; அருங்கடிப்பிடவூர் என இயையும். சிறப்பினை யும் யானையினையுமுடைய தித்தன் என்க. உறையூர் தித்தற் குரிய தென்பதைப் பிறரும், “மாவண் தித்தன் வெண்ணெல் வேலி உறந்தை” (புறம். 358) என்பது காண்க. நெடுங்கை வேண்மான் என்பான் பிடவூரைக் காக்கும் கிழவன் சாத்தன் அவற்குப் புதல்வன். அறத்தாற்றில் ஈட்டிய புகழாளனாகலின் சாத்தனை, “அறப்பெயர்ச் சாத்தன்” என்றார். பெயர், ஈண்டுப் புகழ்குறித்து நின்றது, உலக வாழ்வின் முடிபொருளாக ஒருவன் செயற்பாலது புகழாதலின், புகழ் பெயரெனப்பட்டதாம். பெயர், பொருள், ஞாயிறு மேலைக்கடலை நெருங்குங் காலம் “கதிர் நனி சென்ற மாலை” யெனவும் அக்காலத்தே இருளும் உடன் பரவிச் செறிதலின், “கனையிருள் - மாலை” யெனவும் கூறப்பட்டது. கண்டவுடனே கொடைக் கடனிறுக்கத் தொடங்கின னென்பான், “சிறிது நில்லான் பெரிதுங் கூறான்” என்றார். நிற்றலும் பெரிதும் பேசுதலும் இரப் போர்க்கு வாட்டந்தருஞ் செயல்களாதலின், அவற்றின்மையை யெடுத்தோதினான். அருளினன்: முற்றெச்சம். பெருஞ்சாத்தனது அன்பின் பெருமையை விளக்குவார். அவன் தன் மனைக்குக் காட்டிச் செய்த தலையளியை விதந்தோதினான், யான் நல்லுணவுண்டு இனிது வாழவேண்டுமென நயந்து பேணுமாறு போல, இப் பொருநனும் வாழவேண்டுமென நயந்து பேணுக எனத் தன் மனைவியைப் பணித்தா னென்பார், “தன்மனைப் பொன் போல் மடந்தையைக் காட்டியிவனை யென்போற் போற்றென் றோனே” என்றான். நான்காவதன்கண் இரண்டாவது வந்து மயங்கிற்று; “அறிவுடை யந்தண னவளைக் காட்டென்றானோ” (கலி. 72) என்றாற்போல, அவனிருந்த என் நெஞ்சில் பிறர் இருக்க இடத்தந்திலேன் என்பான், “அவன் மறவலேனே” என்ற தனோடமையாது “பிறருள்ளலேனே” என்று வற்புறுத்தினான். ஏரி, குளம், தாள் என்பன விண்மீன் வகை. இவற்றின் தோற்றம் நாட்டிற்குக் கேடு தரும் என்பது பண்டையோர் கருத்து. கருணை, பொரிக்கறி, கொடுத்தற்கண் உள்ளது இல்லது நோக்காது விளைவு ஒன்றோ வெள்ளம்கொள்க எனக் கொடுத்தலிலே யமைந்தது அவனது தாள்; அது வாழ்க என முடிக்க. இது கொடைப் பொருள் இயல்பு நோக்காத கொடைமடம். அரியலாரும் கூப்பெயர்க்கும், புள்ளிரியும் புலனணியும் பிடவூர், சாத்தன் கிணையேம் பெரும, வருந்தி, தோன்றி, இசைத்தலின் எற்கண்டு, நில்லானாய், கூறானாய், அருளுவானாய். வேண்டி, உரைத்ததன்றி, நல்கி, காட்டி போற்றென்றான்; அதற்கொண்டு, மறவலேன்; உள்ளலேன் தோன்றினும், புகை யினும், மாந்தி, கொள்கென, அறியாது அவன்தாள் அமைந் தன்று, வாழ்க எனக் கூட்டி வினைமுடிவு செய்க. விளக்கம் : சோழநாட்டுப்பிடவூர் கிழான் மகன் பெருஞ்சாத்தனைக் கண்டு தாம் பெற்ற சிறப்பை மதுரை நக்கீரர் ஒரு கிணைப் பொருநன் கூற்றில்வைத்து இப் பாட்டாற் கூறுகின்றார். கிணைவன் இதன்கண் முதல் இருபது அடிகளால் பிடவூரின் நலத்தைக் கூறி, தொடக்கத்தில் தான் சாத்தனைக் கண்டதும் அவன் சிறப்புச் செய்ததும் விரியக் கூறுகின்றான். பிடவூர் நன்செய் வளஞ் சிறந்த தாதலால், அவ்வூரிடத்து உழவர் வயலுழுத பகடுகளை வன்நிலத்தில் மேயவிடுத்து, முயற்கறியும், வாளைமீன் கறியும் பழஞ்சோற்றோடு உண்டு, பூச்சூடி, புள்ளோப்பி அரியல் உண்டு மகிழ்வர்; ஒருபால் கானக்கோழியும் நீர்க்கோழியும் கூவாநிற்கும்; வேய்போலும் தோளும்மயில்போலும்சாயலுமுடைய உழவர் மகளிர் கிளிகடிகுவராயின், அவரோசைகேட்டு அள்ளற் புட்களாகிய நாரை முதலியன வெறுவியோடும்; இப் பிடவூர் உறையூருக்குக் கிழக்கில் உள்ளதென்னக் கருதும் நக்கீரர் உறையூர்க் குரிய தித்தன் சிறப்பையும் உடன்கூற விழைந்து “பல நல்ல...தித்தன்” என்று கூறுகின்றார், காவிரிப்பூம்பட்டினம் தோன்றிச் சிறந்து விளங்குதற்கு முன்பே விளக்கம் பெற்ற தலைநகர் உறையூர்: “ஊரெனப்படுவது உறையூர்” என்ற சிறப்புடையது. அதனை இவர் “செல்லா நல்லிசை யுறந்தை” என்று குறிக்கின்றார், பிறவிடத்தும். “ஆரங் கண்ணியடுபோர்ச் சோழர், அறங்கெடா நல்லவையுறந்தை” (அகம். 93)எனவும், “கடலந் தானைக் கைவண் சோழன், கெடலரு நல்லிசை யுறந்தை” (அகம். 369) எனவும் கூறுவது காணலாம். கிணைவன் சென்று சாத்தன் மனையை யடைந்து தன் கிணைப்பறையை இசைத்து நிற்பவும், உடனே பரிசில் நல்கக் கருதி நன்கலங்களைத் தருவித்து அவற்குக் கொடுத்து, தன் பேரன்பினை அருஞ்செய லொன்றாற் புலப்படுத்தினா னென்பார், “தன்மனை...என்றோனே” என்றார். இச் செயலைக் கண்டு வியப்பு மிக்க பிற்காலச் சான்றோரொருவர், “யாமாயின் எம்மிலங் காட்டுதுந் தாமாயின், காணவே கற்பழியுமென்பார் போல் - நாணிப், புறங்கடை வைத்தீவர் சோறும் அதனால், மறந் திடுக செல்வர் தொடர்பு” (நாலடி. 293) என்று இசைப்பாராயினர். முடிவில் பெருஞ்சாத்தனுடைய பேரன்பால் பிணிப்புண்ட தமது உட்கோள் இதுவென்பாராய், “அவன் மறவலேனே.... புகையினும்” என்றார். இத்தகைய பெருவள்ளியோனை நினைக்குந்தோறும் பேசுந்தோறும் சான்றோர் அவனை வாழ்த்துவது அவன்பால் அவர்க் கிருக்கும் அன்பின் பயனாதலால், தமது உட்கோள் உரைத்தனோடு நில்லாது, “அவன் தாள் வாழ்க ” என்றும் தாட்பயனை, “விளை வொன்றோ வெள்ளங் கொள்கென. உள்ளதும் இல்லதும் அறியா தாங்கமைந்தன்றால்” என்றும் கூறினார். இப்பாட்டின் இடையே சில அடிகள் சிதைந்திருக்கின்றன. அப் பகுதியில் கிணைவன் பெருஞ் சாத்தன் மனைக்கட் சென்றடைந்த செய்த குறிக்கப்படுகிறது போலும். 396. வாட்டாற்று எழினியாதன் வாட்டாறு என்று பெயர் தாங்கிய ஊர்கள் சோழநாட்டிலும் தென்பாண்டி நாட்டிலும் உள்ளன. ஒன்று சோழநாட்டுத் தஞ்சை சில்லாவில்பட்டுக்கோட்டைத் தாலுக்காவில் உளது. வாட்டாற்றுக்கோட்டை வாட்டாத்திக் கோட்டையென இப்போது மருவி வழங்குகிறது. ஒரு காலத்தில் இது தன்னைத் தலைமை ஆகக்கொண்டு சூழவுள்ள வூர்கட்கு நாடாக விளங்கிற்று. அப்போது இதன்பெயர் வாட்டாற்று நாடென்பதாம். இதன்கண் திருச்சிற்றேமம் என்ற சீருர் இருந்தது. இப்போது அதற்குத் திருச்சிற்றம்பலம் என்று பெயர். இங்குள்ள சிவபெருமானைத் திருஞானசம்பந்தர் இனிய திருப்பதிகம் பாடிப் பரவியுள்ளார். திருச்சிற்றேமாகிய திருச்சிற்றம்பலத்துக் கல்வெட்டொன்று, “இராசராச வளநாட்டுப் புன்றில் கூற்றத்துவாட்டாற்று நாட்டுத் திருச்சிற்றேமம்” (A.R.No. 180 of 1926)என்று கூறுதல் காண்க. மற்றொன்று தென் பாண்டிநாட்டில் இப்போது திருவாங்கூர் அரசில் மேலைக் கடற்கரையில் கல்குளம் தாலுகாவில் பறளி யாற்றின்கரையில் உள்ள திருவாட்டாறு. இதுவும் பழமையான நகரமாகும் (K.P.P. Menon’s Hist. of Kerala P.Vol. ii g¡. 59)இப்பகுதி பண்டைநாளில் வேளிர்களின் ஆட்சியில் இருந்திருக்கிறது. இவ்வாட்டாற்றருகே ஓடும் ஆறு தாமிரவருணியென்றும் கூறப்படுகிறது. வாட்டாற்றின் கண் இருந்து சிறந்து புலவர் பாடும் புகழ்பெற்ற எழினியாதன் எழினி யென்னும் வேளிர் தலைவற்கு மகனாவான். சங்கத் தொகை நூற்கண் எழினியென்னும் பெயருடையார் பலர் இருந்துள்ளனர். அவருள், அதியமான் எழினியும் செல்லிக்கோமான் ஆதன் எழினியும் , கண்ணன் எழினியும் சிறந்து காணப்படுகின்றனர். இவரின் வேறாகத் தலையாலங் கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனோடு பொருது தோற்றோடிய எழுவருள் ஒருவனாக ஓர் எழினியும் சோழநாட்டு மத்தியென்பானால் பல்பிடுங்கப்பட்ட ஓர் எழினியும் உள்ளனர். வாட்டாற்று ஆதனுக்குத் தந்தையாகிய எழினி, தலையாலங் கானத்துத் தோற்றோடிய எழினியாவன். வாட்டாற்று எழினி யாதன் அரசுகட்டிலேறிப் பாண்டியன் நெடுஞ்செழியனுடன் நட்புச் செய்துகொண்டான். இவன் சிறந்த வேற்படை யுடையவன். இவன்பால் இருந்த மறவர். தம் தலைவன் குறிப் பறிந்து அவன் பணிக்கும் தொழிலை வென்றியுற முடித்தலில் பெருவேட்கையுடையர். அவர்கள் கள்ளுண்டு களித்தவழி அக் களிப்பினால் வெவ்விய சுரங்களைக் கடந்து பகைவர் நிரை களைக் கவர்ந்து வரும் இயல்பினரெனத் தாயங்கண்ணனார் (அகம். 105) என்பார். கூறுகின்றார். தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ் செழியனை மதுரைக்காஞ்சி பாடிச் சிறப்பித்தவரும், அவனால், “ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி, மாங்குடி மருதன்” (புறம்-72) எனச் சிறப்பிக்கப் பெற்றவருமாகிய மாங்குடிகிழார் மருதனார் ஒருகால் வாட்டாற்று எழினியாதனைக் கண்டார். அவன் அவர்கள் வேண்டும் வளம் பலவும் நல்கினான். அதனால் மாங்குடிகிழார்க்கு உண்டாகிய உவகைக்கு அளவில்லை. அவர், அவன் நாட்டின் இயல்பையும் அவன் தந்த வளத்தையும் அவனுடைய சிறப்பையும் குறித்து இப்பாட்டைப் பாடினார். இதன்கண், உள்ளம் இழந்தோர்க்கு உரம் படைத்த துணைவனாதலும், சீரிய நண்பரை யில்லார்க்குச் சீர்த்த நண்பனாதலும் வாட்டாற்று, எழினியாதன் செயற் பண் பென்றும். அவன் நல்லிசை தாரகை நடுவண் தண்மதிபோல் விளங்குகவென்றும். புலவர் பாடும் புகழ்படைத்த அவன் பெருவளம் பெருகுவதாக வென்றும் கிணைப் பொருநன் ஒருவன் கூற்றில் வைத்துச் சிறப்பிக்கின்றார். கீழ்நீரான் மீன்வழங்குந்து மீநீராற் கண்ணன்ன மலர் பூக்குந்து கழிசுற்றிய விளைகழனி அரிப்பறையாற் புள்ளோப்புந்து 5 நெடுநீர்தொகூஉ மணற்றண்கான் மென்பறையாற் புள்ளிரியுந்து நனைக்கள்ளின் மனைக்கோசர் தீந்தேற னறவுமகிழ்ந்து தீங்குரவைக் கொளைத்தாங்குந்து 10 உள்ளிலோர்க்கு வலியாகுவன் கேளிலோர்க்குக் கேளாகுவன் கழுமிய வென்வேல் வேளே வளநீர் வாட்டாற் றெழினி யாதன் கிணையேம் பெரும 15 கொழுந்தடிய சூடென்கோ வளநனையின் மட்டென்கோ குறுமுயலி னிணம்பெய்தந்த நறுநெய்ய சோறென்கோ திறந்து மறந்த கூட்டுமுதல் 20 முகந்துகொள்ளு முணவென்கோ அன்னவை பலபல. . . . . . . . . . . . . . . . . . . . . .வருந்திய இரும்பே ரொக்க லருந்தெஞ்சிய அளித்துவப்ப வீத்தோ னெந்தை 25 எம்மோ ராக்கக் கங்குண்டே மாரிவானத்து மீனாப்பண் விரிகதிர வெண்டிங்களின் விளங்கித் தோன்றுகவவன் கலங்கா நல்லிசை யாமும் பிறரும் வாழ்த்த நாளும் 30 நிரைசா னன்கல னல்கி உரைசெலச் சிறக்கவவன் பாடல்சால் வளனே. திணை : பாடாண்திணை. துறை: கடைநிலை.. வாட்டாற் றெழினியாதனை மாங்குடிகிழார் பாடியது. உரை : கீழ்நீரால் மீன் வழங்குந்து - நீரின் கீழே மீன்கள் சென்றுலவும்; மீநீரால் கண்ணன்ன மலர் பூக்குந்து - நீரின் மேற்பரப்பில் குவளையுந் தாமரையுமாகிய மகளிர் கண்போலும் பூக்கள் மலர்ந்திருக்கும்; கழி சுற்றிய விளைகழனி - கழிகளாற் சூழப் பட்ட நெல்விளைந்து கிடக்கும் வயலின்கண்; அரிப்பறையால் புள்ளோப்புந்து - அரித்த ஓசையையுடைய பறையை முழக்கு வதால் கதிர் கவர வரும் கிளி முதலிய புள்ளினங்கள் வெருட்டி யோட்டப்படும்; நெடுநீர் தொகூஉம் மணல் தண்கால் - நீர்மிக்க கடற்கரைக்கண் குவியும் மணலை யள்ளித் தூவும் குளிர் காற்றினால்; மென்பறையால் புள் இரியுந்து - மெல்லிய சிறகுகளோடு கூடிய புள்ளினங்கள் நீங்கிச் செல்லும்; நனைக் கள்ளின் மனைக் கோசர் - மலர்களிடத்திற் பெற்ற கள் நிறைந்த மனைகளையுடைய கோச ரென்பார்; தீந்தேறல் நறவு மகிழ்ந்து - தீவிய கட்டெளியை யுண்டு களிப்பேறி; தீங்குரவைக் கொளைத் தாங்குந்து - இனி குரவையாடுமிடத் தெழும் பாட்டுக்கள் இசைக்கப்படும்; நீர்வள வாட்டாற்று எழினியாதன் - நீர்வளஞ் சிறந்த வாட்டாறென்னும் ஊர்க் குரியனாகிய எழினியாதன்; உள்ளிலோர்க்கு வலியாகுவன் - ஊக்கம் இல்லாதார்க்கு வலி யாகித் துணைசெய்வன்; கேளிலோர்க்குக் கேளாகுவன் - அறிவு வழங்கும் கேளிரை யில்லாதார்க்கு கேண்மையுற்று அறிவுத் துணை செய்வன்; கழுமிய வென்வேல் வேள் - பிற படையொடு கலந்த வெல்லும் வேற்படையுடைய வேளிர் தலைவனாவன்; கிணையேம் - யாம் அவனுடைய கிணைப்பொருநராவோம்; பெரும - பெருமானே; கொழுந்தடிய சூடு என்கோ - அவன் எமக் களித்த கொழுவிய துண்டமாகிய சூட்டிறைச்சியைச் சொல்வேனோ; வளநனையின் மட்டு என்கோ - வளவிய பூந்தேறலாகிய கள்ளைச் சொல்வேனோ; குறுமுயலின் நிணம் பெய்தந்த - குறுமுயலின் தசை விரவித் தந்த, நறுநெய்ய சோறு என்கோ - நறிய நெய்யையுடைய சோற்றைச் சொல்வேனோ; திறந்து மறந்து கூட்டு முதல் - திறந்து பின் மூடுதற்கு மறந் தொழிந்த நெற்கரிசையிடத்து; முகந்துகொள்ளும் உணவென்கோ - தாந்தாம் வேண்டுமளவும் முகந்துகொள்ளப்படும் உணவுப் பொருளைச் சொல்வேனோ; அன்னவை பலபல - அவை போல்வன மிகப்பல; ............வருந்திய..........வறுமையுற்று வருந்திய; இரும்பேரொக்கல் - என் பெரிய சுற்றத்தார்; அருந்து எஞ்சிய - உண்டு கழிந்தவற்றை உவப்ப அளித்து ஈத்தோன் - உவக்கு மாறு தலையளித்து மீளமீளக் கொடுத்தான்; எந்தை - எங்கள் தலைவன்; எம்மோர் ஆக்கம் கங்கு உண்டே - எம்மனோராகிய இரவலர் அவன்பாற் பெற்ற செல்வத்துக்கு எல்லையில்லையாம்; மாரி வானத்து மீன் நாப்பண் - மழைமுகில் நிலவும் விசும்பின் கண் தோன்றும் விண்மீன்களிடையே திகழும்; விரிகதிர வெண்டிங்களின் - விரிந்த கதிர்களையுடைய வெள்ளிய திங்களைப்போல; விளங்கித் தோன்றுக அவன் கலங்கா நல்லிசை - விளக்கமாய் யாவருமறிய நிலவுவதாக; அவனுடைய கெடாத நல்லிசை - விளக்கமாய் யாவருமறிய நிலவுவதாக அவனுடைய கெடாத நல்ல புகழ்; நாளும் யாமும் பிறரும் வாழ்த்த - நாடோறும் யாங்களும் எம்போற் பிறரும் வாழ்த்திப் பாராட்ட; நிரைசால் நன்கலம் நல்கி - களிற்றுநிரைகளோடு அமைந்த நல்ல கலன்களை வழங்கி; உரை செலச் சிறக்க - புகழுண்டாக மேம்படுக; அவன் பாடல் சால்வளன் - அவனது புலவர் பாடும் பாடமைந்த செல்வம்; எறு. நீர்க்கீழென்பது கீழ்நீரென வந்தது. குவளையுந் தாமரையும் மகளிர், கண்ணுக்கு ஒப்பாவனவாதலின் அவற்றைக் “கண்ணன்னமல” ரென்றொழிந்தார். வயல்களில் வேண்டாது மிகும் நீர் கழிதற்கெடுத்த கழிகால் ஈண்டுக் கழியெனப்பட்டது. புள்ளெனப் பொதுப்படக் கூறினாராயினும் சார்புபற்றிக் கிளி முதலியன கொள்ளப்பட்டன. நெடிய நீரையுடைய கடல் நெடுநீராயிற்று. கடற்கரைக்கண் அலைகளாற் றொகுக்குப்படும் மணல் பரந்த கானலில் தண்ணிய கடற்காற்று மோதித் தூவும் நுண்மணற் கஞ்சிக் கானற்சோலை களிலும் உப்பங்கழிகளிலும் தங்கும்நாரை முதலிய புள்ளினம் நீங்கிப் போதலின், “நெடுநீர் தொகூஉ மணற் றண்கால். மென்பறையாற் புள்ளிரியுந்து” என்றார். காற்றுத்தூவும் மணல்மிக்க நொய்ம்மைத்தாயினும் மெல்லிய சிறகுகளை யுடைய நீர்ப்பறவைகள் அதற் காற்றாவாயின என்பதற்கு “மென்பறையாற் புள்ளிரியும்” என்று சிறப்பித்தார். கோசர் கள்ளுண்பவராதலின்,அவரை “நனைக்கள்ளின் மனைக்கோச” ரென்றும், அவர்கள் கள்ளுண்டு களித்துக் குரவைக் கூத்தாடும் கொள்கையினராதலின், “நறவுமகிழ்ந்து தீங்குரவைக் கொளைத் தாங்குந்து” என்றும் கூறினார். உள்ளம். உள்ளென வந்தது. உள்ள மின்மைக்கேது வலி யின்மையாதலால் “உள்ளிலோர்க்கு வலியாகுவன்” என்றார். கேளாந்தன்மை, வழங்கும் அறிவுரை மேற்றாதலின் அறிவு வழங்குந்திறத்தைக் “கேளாகுவன்” என்றார். இக்கருத்து, “படை வேண்டுவழி வாளுதவியும், வினைவேண்டு வழி அறிவுதவியும்” (புறம். 179) என்புழியும் அமைந்திருத்தல் காண்க. என்கோ என்பதை அசைநிலையாகக் கோடலுமொன்று. ஆர்ந்தென்பது அருந்தென வந்தது: வேண்டுவோர் வேண்டியாங்கு முகந்து கொள்ளுமாறு திறந்தகரிசை மூடப்படாமலே யிருந்தமையின், “திறந்துமறந்தகூ” டென்றார். இதனால் வாட்டாற் றெழினி யாதனது வள்ளன்மை யுணர்த்தியவாறு. ஆக்கக் கங்கு, ஆக்கத்துக்குக் கங்கு என விரியும். கங்கு - எல்லை. பாடுவார்க் கருளும் வள்ளலாதலின், எழினியாதன் செல்வத்தைப் “பாடல் சால் வளன்” என்றார். வழங்கும் பூக்கும் முதலியவாக அடுக்கி நின்ற உம்மீற்றுப் பெயரெச்சங்கள் உந்தாயின. வழங்கும், பூக்கும், ஒப்பும், இரியும் தாங்கும் வாட்டாற்று எழனியாதனாகிய வேள்வலியாகுவன், கேளாகுவன்; அவன் கிணையேம், பெரும, சூடென்கோ, மட்டென்கோ, சோறென்கோ, உணவென்கோ; அன்னவை பலபல வருந்திய ஒக்கல் ஆர்ந்து எஞ்சிய, அழித்து உவப்ப ஈத்தான் எந்தை; கங்கு இல்லை; நல்லிசை விளங்கித் தோன்றுக; வளன்சிறக்க எனக்கூட்டி வினைமுடிவு செய்க. விளக்கம் : வாட்டாற்று எழினியாதன் தன்தந்தையாகிய எழினியொடு பொருது அவனை வென்று கொண்டவனாகிய தலையாலங் கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனைப் பெருங்காஞ்சி பாடிச் சிறப்புற்ற மாங்குடிகிழார், தன் வள்ளன்மையை நயந்து பாடிவரக் கண்டு மகிழ்ச்சியுடன் அவரை வரவேற்றுப் பரிசில் பல நல்கிச் சிறப்பித்த திறத்தை இப் பாட்டில் அம் மாங்குடிகிழார் அழகொழுகப் பாடியுள்ளார். இதன் இடையே சில அடிகள் சிதைந்திருப்பது அந்த அழகை நாம் முழுதும் கண்டு இன்புறுதற் கிடையூறு செய்கிறது. எனினும் பாட்டின் நலம் தன்பாலுள்ள இன்பச் சுவையைக் குறையா வண்ணம் காட்டிநிற்பது காணத்தக்கது. வாட்டாற்று நாடு கடற்கரைகாறும் பரந்து கிடப்பதாகலின், அதன் நெய்தல்வளமும் கூறப்படுகிறது. கழனிகள் நீர் நிறைந்திருப்பதால், நீர்மேல் பூக்கள் பூத்திருப்பதும், கீழ்நீர் மீன்கள் வழங்குவதும் இனிய காட்சி வழங்குகின்றன. விளைந்து முற்றிய நெல் வயல்களில் புள்ளினம் படிந்துண்ணாவாறு உழவர் அரிப்பறை முழங்குவதும், மணல்பரந்த தண்கானத்தில் புள்ளினம் நீங்கிப் போவதும், கள் நிறைந்த மனைகளில் கோசர்கள் கள்ளுண்டு மகிழ்ந்து குரவையாடி இன்புறுவதும் வாட்டாற்ற நாட்டிற் காணப்படும் நிகழ்ச்சிகளாகும். வேளிர் அனைவரும் குறுநிலமன்ன ராதலின்,எழினியாதனை, “வென்வேல் வேள்” என்றார் ஆதனுடைய தனிச்சிறப்பை, “உள்ளி லோர்க்கு........எழினியாதன்” என்று சிறப்பிக் கின்றார். கிணைவனுக்கு எழினியாதன் தந்த உணவும் பொருளும் கூறுவார், “கொழுந்தடிய சூடென்கோ.......அன்னவை பலபல” என்றார். என்றவர், வறுமையால் வாடிய இரவலர் வெறுப்பவுண்டு அளப்பரும் பொருள் மீளமீளப் பெற்று உவகை மிக வெய்துமாறு அவன் கொடை நலம் திகழ்ந்தது என்பதனை, “வருந்திய...ஈத்தோன்” என்பதனால் விளக்கினார். சுருங்கச்சொல்லுவாராய், “எம்மோர் ஆக்கக் கங்குண்டே” என்றார். முடிவில் எழினியாதனை வாழ்த்தலுற்ற மாங்குடி கிழார், ஆதனது நல்லிசை “வெண்டிங்களின் விளங்கித் தோன்றுக” என்றார். அவன் பகைப்புலத்துப்பெற்ற செல்வமுழுதையும் கிணைவரும் பிறரும் நாடோறும் வாழ்த்தியதற்குப் பரிசாக நல்குவனெனவும், அதனால் அச்செல்வம் புலவர் பாடும் புகழ் பெற்றதெனவும் கூறுவர் “உரை செலச் சிறக்கவவன் பாடல்சால் வளனே” என்றார். மென்பறை யாற் புள்ளிரியுந்து என்பதற்கு வேறு பொருளுண்டாகக் கூறுவாரு முளர். ஆக்கக் கங்குண்டே யென்பதற்கு வேறு பொருளும்கருதுவர். 397. சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் அறிவும் ஆண்மையுமுடையார் எத்திறத்தாராயினும் அவரைவியந்து பாராட்டிச் சிறப்பிக்கும் பெருந்தகை யென்பது உலகறிந்த செய்தி. தொகை நூல்களுட் காணப்படும் சான்றோர்களிற் பலர் இவனைப் பாடிச் சிறப்பித்திருக்கின்றனர். இவனை இப் பாட்டாற் சிறப்பிக்கும் சான்றோர் எருக்காட்டூர்த் தாயங்கண்ணனாராவர். இவரது எருக்காட்டூர் சோழநாட்டுத் தஞ்சை சில்லாவில் நன்னிலந் தாலூகாவில் உளது. குளிக்கரை புகை வண்டி நிலையத்துக்கு மேற்கில் இவ்வூர் இன்றும் இருந்துவருகிறது. அதனைச் சார இருந்த மணற் குன்று என்னுமூரை எருக்காட்டூர்ச் சேரிக்குப் பிடாகையான எனத் திருக்கடவூர்க் கல்வெட்டுக்கள் (A.R.No. 32 and 38 of 1906) கூறுகின்றன. தாயன் என்பார்க்கு மகனாதலால் இவர் தாயங்கண்ணனாரெனவும், தாயங்கண்ணனாரென்றே பெயருடையார் பலர் இருத்தலின், அவரின் வேறுபடுத்த இவர் எருக்காட்டூர்த் தரயங்கண்ணனா ரெனவும், சான்றோரால் குறிக்கப் படுவாராயினர். தாயங்கண்ணனார், தாயன் என்பார்க்கு மகனாவர். தாயனார் எருக்காட்டூரில் வாழ்ந்தவர். கண்ணனார் எருக்காட்டூரினராதலால், எருக்காட்டூர்த் தாயங்கண்ணனார் எனப்படுவாராயினர். பொருள்வயிற் பிரியக் கருதும் தலைமகனைச் செலவழுங்குவிக்கும் கருத்தினளான தோழி தலைமகள் நலத்தை “அணங்கென வுருத்த நோக்கின் ஐயென, நுணங்கிய நுசுப்பின் நுண்கேழ் மாமைப் பொன்வீ வேங்கைப் புதுமலர் புரைய நன்னிறத் தெழுந்த சுணங்கணி வன முலைச் சுரும்பார் கூந்தல் பெருந்தோள் இவன்” என வனப்பை வகைப்படுத் தோதி, அது கேட்டுத் தலைமகள் நெஞ்சுநெகிழ்வ துணர்ந்து, “கொய்தழைத் தளிரேரன்ன தாங்குரு மதுகையள், மெல்லிய லிளையள் நனி பேரன்பினள், செல்வேமென்னு நும்மெதிர், ஒல்வே மென்னு மொண்மையோ விலளே” (அகம். 319) என்பதனால் இவரது புலமைநலம் மிகச்சிறந்து விளங்குவதை யறிகின்றோம். மேலும் இவர், சேரவேந்தருடைய சுள்ளியம் பேரியாற்றுத் துறையாகிய முசிறியில் யவனர் பொன்கொணர்ந்து தந்து மிளகுகொண்டு சென்றன ரென்பார், “சேரலர் சுள்ளியம் பேரியாற்று வெண்ணுரை கலங்க, யவனர் தந்த வினைமா ணன்கலம், பொன்னொடு வந்து கறியொடு பெயரும்” (அகம். 149) என்று கூறுகின்றார். இம் முசிறி நகரை ஒருகால் பாண்டியனொருவன் வளைத்துக்கொண்டு அரும்போருடற்றி வென்று. அங்கிருந்த பொற்படிம மொன்றைக் கவர்ந்து வந்தான் என்பதையும் அவனுடைய கூடல்நகர்க்கு மேற்கிலுள்ள பரங்குன்றத்து விழாவையும் அங்குள்ள சுனையிடத்து மலரும் நீல மலரையும் “வளங்கெழு முசிறி யார்ப்பெழ வளைஇ, அருஞ்சமங் கடந்து படிமம் வவ்விய, நெடுநல்யானை யடுபோர்ச் செழியன்,கொடி நுடங்கு மறுகிற் கூடற்குடாஅது, பல்பொறி மஞ்ஞை வெல் கொடி யுயரிய, ஒடியா விழவின் நெடியோன் குன்றத்து, வண்டு பட நீடிய குண்டுசுனை நீலம்” (அகம். 149) எனச் சிறப்பித்துப் பாடியுள்ளார். இவர் ஒருகால் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனைக் கண்டு இனிய பாட்டொன்றைப் பாடினார். அதன்கண் விளங்கித் தோன்றிய அவரது புலமை நலத்தை வியந்து நெடிய சூட்டிறைச்சியும், மணங்கமழும் கட்டெளிவும் உயரிய ஆடையும் அரிய கலங்கள் பலவும் நல்கிப் பெருஞ்சிறப்புச் செய்தான் வளவன். அவனது வள்ளன்மைகண்டு பெருவியப்புற்ற தாயங் கண்ணனார், இவ்வுலகில் எத்துணை வறுமைத்துன்பம் உண்டாயினும் எங்கெழிலென் ஞாயிறு எமக்கென இருப்பேம் என்ற கருத்துப்பட இப்பாட்டைக் கிணைப் பொருநன் ஒருவன் கூற்றில் வைத்துப் பாடினார். இதன்கண் கிணைப்பொருநன் சென்று விடியற் காலையில் துயிலெடை நிலை பாடியதும், அதுகேட்டுச் சோழன் கிள்ளிவளவன் சூட்டிறைச்சியும் தேறலும் பிறவும் நல்கிச் சிறப்பித்துதும், ஊழி பெயரினும், ஞாயிறு தென்றிசைச் செல்லினும் வளவன் தாணிழல் வாழ்வு பெற்று தான், சிறிதும் அஞ்சாத ஆதரவு பெற்றதும் அழகுறக் குறிக்கின்றான். வெள்ளியு மிருவிசும் பேர்தரும் புள்ளும் உயர்சினைக் குடம்பைக் குரற்றோற்றினவே பொய்கையும் போதுகண் விழித்தன பைபயச் சுடருஞ் சுருங்கின் றொளியே மாடெழுந் 5 திரங்குகுரன் முரசமொடு வலம்புரி யார்ப்ப இரவுப் புறங்கண்ட காலைத்தோன்றி எஃதிரு ளகற்று மேமப் பாசறை வைகறை யரவங் கேளியர் பலகோட் செய்தார் மார்ப வெழுமதி துயிலெனத் 10 தெண்கண் மாக்கிணை தெளிர்ப்ப வொற்றி நெடுங்கடைத் தோன்றி யேனே யதுநயந் துள்ளி வந்த பரிசில னிவனென நெய்யுறப் பொரித்த குய்யுடை நெடுஞ்சூடு மணிக்கல னிறைந்த மணநாறு தேறல் 15 பாம்புரித் தன்ன வான்பூங் கலிங்கமொடு மாரி யன்ன வண்மையிற் சொரிந்து வேனி லன்னவென் வெப்புநீங்க அருங்கல நல்கி யோனே யென்றும் செறுவிற் பூத்த சேயிதழ்த் தாமரை 20 அறுதொழி லந்தண ரறம்புரிந் தெடுத்த தீயொடு விளங்கு நாடன் வாய்வாள் வலம்படு தீவிற் பொலம்பூண் வளவன் எறிதிரைப் பெருங்கட லிறுதிக்கட் செலினும் தெறுகதிர்க் கனலி தென்றிசைத் தோன்றினும் 25 என்னென் றஞ்சலம் யாமே வென்வேல் அருஞ்சமங் கடக்கு மாற்றலவன் திருந்துகழ னோன்றாட் டண்ணிழ லேமே. திணை : பாடாண்டிணை துறை; பரிசில்விடை; கடைநிலை விடை யுமாம். சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனை எருக்காட்டூர்த் தாயங்கண்ணனார் பாடியது. உரை : வெள்ளியும் இருவிசும் பேர்தரும் - வெள்ளியாகிய மீனும் வானத்தில் எழுவதாயிற்று; புள்ளும் உயர்சினைக் குடம்பைக் குரல்தோற்றின - பறவைகளும் மரத்தின் உயர்ந்த கிளையில் கட்டிய கூட்டிலிருந்து தம்முடைய ஓசையைச் செய்ய லுற்றன; பொய்கையும் போதுகண் விழித்தன - பொய்கைகளில் குவிந் திருந்த தாமரைகள் கண்விழிப்பதுபோல் இதழ் விரியலுற்ன; பையச் சுடரும் ஒளி சுருங்கின்று - மெல்லெனத் திங்களாகிய சுடரும் தன் ஒளியாகிய நிலவு குறையத் தொடங்கிற்று; பாடு எழுந்து - ஒலித்தற்கு முற்பட்டு; இரங்கு குரல் முரசமொடு வலம்புரி ஆர்ப்ப - முழங்குதற்குரிய முரசங்களும் வலம்புரிச் சங்கங்களும் முழங்குதலைச் செய்ய; இரவுப் புறங்கண்ட காலை தோன்றி - இரவுப்புறமாகிய கடையாமங் கழிந்த காலைப்போது தோன்றி; எஃகு இருள் அகற்றும் - எஞ்சிநின்ற குறையிருளைப் போக்கும்; ஏமப் பாசறை - காவலையுடைய பாசறைக்கண்; வைகறை யரவம் கேளியர் - வைகறைப் போதில் எழுகின்ற ஒலிகளைக் கேட்பாயாக; பலகோள் செய்தார் மார்ப - பலவகைத் தொழிற்பாடமையத் தொடுக்கப்பட்ட மாலையணிந்த மார்பையுடைய வேந்தே; துயில் எழுமதி - படுக்கையினின் எழுவாயாக; என - என்று; தெண்கண் மாக்கிணை தெளிர்ப்ப ஒற்றி - தெளிந்த கண்ணையுடைய பெரிய தடாரிப்பறை யொலிக்குமாறு கொட்டி; நெடுங்கடைத் தோன்றியேன் - நெடிய முற்றத்தின்கட் சென்று நின்றேனாக; அது நயந்து - என் வரவை விரும்பி; இவன் உள்ளிவந்த பரிசிலன் என - இவன் நம்மை மறவாது நினைந்து வந்த பரிசிலனாவான் என்று சொல்லி; நெய்யுறப் பொரித்த குய்யுடை நெடுஞ் சூடு - நெய் மிகச் சொரிந்து பொரித்த தாளிதத்தையுடைய நெடிய சூட்டிறைச்சியும்; மணிக்கலன் நிறைந்த மணன் நாறு தேறல் - மணியிழைத்த வள்ளத்தில் நிறையப் பெய்த மணம் கமழும் கட்டெளியும்; பாம்புரித் தன்ன வான்பூங் கலிங்கமொடு - பாம்பினது உரியாகிய தோல் போன்ற வெள்ளிய பூவேலை செய்யப்பட்ட ஆடையும்; மாரி யன்ன வண்மையின் சொரிந்து - முழை போன்ற வண்மை யுடையனாதற்கேற்ப வழங்கி; வேனில் அன்ன என்வெப்பு நீங்க - வேனிற்காலத்து வெம்மைபோல வறுமையால் எனக்குண்டாகிய துன்பமாகிய வெம்மை நீங்குமாறு; அருங்கலம் நல்கியோன் - பெறற்கரிய கலன்கள் பலவும் கொடுத்தருளினான்; என்றும் - எப்போதும்; செறுவிற் பூத்த சேயிதழ்த்தாமரை - வயலிடையே பூத்த சிவந்த இதழ்களையுடைய தாமரை; அறுதொழில் அந்தணர் - அறுவகைத் தொழில்களையுடைய அந்தணர்கள்; அறம்புரிந்து எடுத்த தீயொடு விளங்கும் நாடன் - அறத்தை விரும்பி வளர்த்த தீப்போல விளங்கும் நாட்டையுடையவனும்; வாய் வாள் - தப்பாத வாட்படை கொண்டு சென்று; வலம்படு தீவின் பொலம்பூண் வளவன் - வென்று கொண்ட தீவிடத்திற் பெற்ற பொன்னாலாகிய அணிகளையுடையவனுமாகிய வளவன்; எறிதிரைப் பெருங்கடல் இறுதிக்கண் செலினும் - எறிகின்ற அலைகளையுடைய பெரிய கடல்முடிவெய்தும் ஊழிக்காலமே வரினும்; தெறுகதிர்க் கனலி தென்றிசை தோன்றினும் - வெதுப்புகின்ற கதிர்களையுடைய ஞாயிறு கீழ்த்திசை மாறித் தென்றிசையிற் றோன்றுங் காலமே வரினும்; யாம் என்னென்று அஞ்சலம் - யாங்கள் இதற்குச் செய்வது என்னோவென்று அஞ்சுவே மல்லேம்; வென்வேல் அருஞ்சமம் கடக்கும் ஆற்றல் - வென்றி தரும் வேலைக் கையிலேந்தி அரிய போர்களை வஞ்சியாது செய்து வெல்லும் ஆற்றலையுடைய; அவன் - அக் கிள்ளிவளவனுடைய; திருந்து கழல் நோன்றாள் தண்ணிழலேம் - திருந்திய கழலணிந்த வலிய தாள்கள் செய்யும் தண்ணிய நீழலின்கண் உள்ளேமாதலால்; எ-று. வெள்ளி யெழுந்து விளங்குதலும், புள்ளினம் சிலைத்தலும், தாமரைப் போது விரியத் தொடங்குதலும் திங்களின் ஒளி மழுங்குதலும் விடியற்காலத்து நிகழ்ச்சிகள், பாடு, ஒலி, எழுதல் -முற்படுதல் வேந்தர் அரண்மனைகளில் விடியற்காலையில் முரசமும் வலம்புரியும் முழங்குவது இயல்பு. இரவுப் போதிற்கு அந்தி மாலை அகமுகமும் விடியற்காலை புறமும்போலக் குறிப்பார், விடியலை “இரவுப்புறம்” என்றார். இரவுப்புறம் பெற்ற வேம வைகறை (புறம். 398) என்று பிறரும் கூறுதல் காண்க. காவலாற் சிறப்புடையதாதல் பற்றி, பாசறை ஏமப்பாசறை யெனப்பட்டது. பல வேறு தொழிற் பாடு விளங்கத் தொடுக்கப்படுவது பற்றித் தார், “பலகோட் செய் தார்” என்றார். உள்ளிவந்த என்றது, பண்டு வந்தமை தான் அறிந்துகொண்டமை தெரிந்தவாறு. பூவியல் நறவமென்றற்கு “மணநாறு தேறல்” என்றார். உடைக்குப் பாம்பின் தோலை உவமம் செய்தல் மரபு பிறரும், “பாம்புரியன்ன வடிவின காம்பின், கழைபடு சொலியினிழையணி வாரா வொண் பூங்கலிங்கம்” (புறம். 383) என்று கூறுதல் காண்க. திருவள்ளுவர் நிரப்பின் வெம்மையை நெருப்பிலும் பெரிதென்றராக இவ்வாசியர், “வேனில்லன்ன வெப்பு” என்றார். ஓதல் முதலிய அறுவகைத் தொழிலுடையராதலின் “அறு தொழிலந்தணர்” எனப்பட்டனர். ஓதல் முதலிய தொழில் ஆறும் பார்ப்பார்க்குரிய வாதலின், அறவோராகிய அந்தணர் இம்மைக்குரிய உழவு வாணிக முதலிய தொழில்களைச் செய்யாமைபற்றி “அறு தொழிலந்தணர்” எனப்பட்டன ரென்றல் சிறப்பென அறிக; அறுதொழில் அற்றத்தொழில் என விரியும்; “அறுபொருள் இவன் என்றே அமரர்கணம் தொழுதேத்த” (சிலப். 17) என் புழிப்போல. மேனாட்டுக் கிரேக்கர், உரோமானியர் முதலியோர் நாடுகளும், கிழக்கிலுள்ள கடாரம் சாவகம் முதலிய நாடுகளும் தீவு எனப்படுமாதலால் “வலம்படு தீவின் ” எனப் பொதுப்படக் கூறினார். இறுதி, இறுதிக் காலமாகிய ஊழிக்காலம், வளவனுடைய தாணிழலின் பெருமை கூறுவார். “செலினும் தோன்றினும் அஞ்சலம்” என்றார். ஏர்தரும்; தோன்றின; விழித்தன; சுருங்கின்று; காலை தோன்றி அகற்றும்; கேளியர்; மார்ப துயில் எழுமதியென இத்துணை யும் கிணைவன் பாடிய துயிலெடை நிலையாயிற்று. மார்ப, துயில் எழுமதியென ஒற்றி, தோன்றியேன்; நயந்து, என, சூடும்தேறலும் கலிங்கமும் சொரிந்து, நீங்க, நல்கியோன்; நாடன்வளவன் செலினும் தோன்றினும் யாம் அஞ்சலம்; தண்ணிழலேமாத லால் எனக் கூட்டி வினை முடிவு செய்க. விளக்கம் : பரிசில் விடையாவது, “வேந்தனுண் மகிழ வெல்புகழைந்தோர்க், கீந்து பரிசிலின்புற விடுத்தன்று” (பு.வெ.மா. 9:26) கடையிடத்தே நின்று விடைபெற்றுச் செல்லுதல் கடைநிலை விடையாகும். கிணைவன் நெடுங்கடைத் தோன்றி நின்று பாடி வளவன் பரிசில் நல்கி விடுத்தவழி, வளவன் நோன்றாள் தண்ணிழலேம்; என்னென்றஞ்சலம் என மகிழ்ந்து பாடிச் சேறல்பற்றி இது “கடைநிலை விடையுமாம்” எனப்பட்டது. கிணைப்பொருநன் வேந்தர் முன்றிலில் விடியற் காலத்தே சென்று நின்று தன்னுடைய கிணைப்பறையைக் கொட்டி அவ்வேந்தர்களின் வஞ்சி முதலாகவுள்ள மறத்துறைகளைப் பாடுவது இயல்பு. அங்ஙனம் பாடுவோர் தொடக்கத்தில் வேந்தர்க்குத் துயிலெடைப் பாட்டைப் பாடி, அவர் துயிலுணருங்கால் அவர் செவிப்பட அவர்தம் மற மாண் புகழ்களை யோதியின்புறுத்துவர். இங்கே, எருக்காட்டூர்த் தாயங்கண்ண னார் குளமுற்றத்துத் துஞ்சிய சோழன் கிள்ளி வளவனைத் துயிலெடை பாடிய திறத்தை “வெள்ளியும்...துயிலென” என்று குறிக்கின்றார். ஈண்டு, “போது பிணிவிட்ட கமல்நறும் பொய்கைத் தாதுண் தும்பி போது முரண்றங்கு ஓதலந்தணர் வேதம் பாடச், சீரினதுகொண்டு நரம்பினிது இயக்கி, யாழோர் மருதம் பண்ண.... சூதர் வாழ்த்த மாகதர் நுவல, வேதா ளிகரொடு நாழிகை யிசைப்ப, இமிழ்முர சிரங்க ஏறுமாறு சிலைப்ப, பொறிமயிர் வாரணம் வைகறையியம்ப, யானையங் குருகின் சேவலொடு காமர், அன்னங் கரைய வணிவயமாப் புலியொடு குழும.....தருமணல் முற்றத் தரிஞிமி றர்ப்ப, மென்பூஞ் செம்மலொடு நன்கலஞ் சீப்ப, இரவுத்தலைப் பெயரும் ஏம வைகறை” (மதுரை. 664 - 86) என மாங்குடி மருதனார் பாடுவது ஒப்புநோக்கியின்புறத்தக்கது. திருப் பள்ளியெழுச்சி பாடி வேந்தன் பால் பரிசிலும் விடையும் பெறுவான், கிணைவன் அவ் வேந்தனது மற மாண்புகழைப் பாடு முன்பே அவன் பெருமகிழ்வுகொண்டு உள்ளி வந்த பரிசிலன் இவன் எனக்குய்யுடை நெடுஞ்சூடும் மணனாறு தேறலும் வான்பூங் கலிங்கமும் தந்தானெனப் பரிசில் நிலையைப் பரிந்து கூறுவது தாயங்கண்ணனாருடைய தமிழ் மிகு சால்பினைப் புலப்படுத்து நிற்பது காண்க. வளவனது கொடையை மாரி யென்றலின், அதற்கு ஏற்பத் தம்முடைய வறுமை நிலையை வெப்பு எனப் புணர்ந்து “வேனிலன்ன என் வெப்பு” என்றதும், பூத்த தாமரைகளோடு வேதிய ரெடுத்த தீயை யுவமித்து , ‘செறுவிற் பூத்த சேயிதழ்த் தாமரை, அறுதொழிலந்தண ரறம் புரிந்தெடுத்த, தீயொடு விளங்கும் நாடன் என்றதும் மிக்க இன்பந்தருவனவாகும். ஆசிரியர் ஓரம்போகியார். பகலில் தோன்றும் பல்கதிர்த் தீயின் ஆம்பலஞ் செறுவின் தேனூர் (ஐங். 57) என்பது இங்கே ஒப்புநோக்கத்தக்கது. உலகிற்கு எத்தகைய கேடு வருவதாயினும், தான் கிள்ளிவளவன் ஆதரவு பெற்றிருத்தலின், அக்கேட்டால் வருந்த வேண்டிய நிலைவாராதென்னும் உறுதியுடைமை தோன்ற, பெருங் கடல் இறுதிக்கட் செலினும், கனலிதென்றிசைத் தோன்றினும் “என்னென் றஞ்சலம்” என்றும், “அவன் திருந்துகழனோன்றாள் தண்ணிழலேமே” என்றும் கூறுகின்றார். தீவொன்றிற் பெற்ற பொன்கொண்டமைத்த பூணணிந்த வளவன் என்றவிடத்துத் தீவுக்கு “நன்பொன்விளை தீவம்” (சீவக. 503) எனத் திருத்தக்க தேவர் கூறுவதனை எடுத்துக் காட்டுவாரு முளர். 398. சேரமான் வஞ்சன் சேரர் குடிக்குரிய முடிவேந்தருள் ஒருவன் சேரமான் வஞ்சன். சேரரது வஞ்சிக்களம் அஞ்சைக் களமென்றானது போலச், சேரமான் வஞ்சன் பெயர் பிற்காலத்தே அஞ்சன் என்றாயிற்று; வஞ்சனது பாயல் நாடு பின்னர் வயனாடென்றாகி இப்போது வைநாடு (Introduction of B.L. Rice to Coorg Inscriptions Vol i. p3) என வழங்குகிறது. பாயல் மலைப் பகுதியில் வஞ்சனுக் குரியதாயிருந்த குன்று அஞ்சன் குன்றென்றிருந்து இப்போது அஞ்சுகுன்று என்ற பெருடன் வைநாடு தாலூகாவில் உளது. இவனது ஆட்சியின் கீழிருந்த நாடு வடக்கே பாயல் நாட்டிலிருந்து தெற்கே திருவிதாங்கூர் அரசைச் சேர்ந்த அஞ்சனாடு முடிய இருந்தது. வடபகுதியில் அவன் பெயர் மறைந்ததாயினும் தெற்கில் அப் பெயர் மறையாது அஞ்சனாடு என்றே இப்போதும் வழங்குகிறது. பேரறிவும் பேராண்மையும் கொண்ட இச் சேரமான் தொகை நூல்களுட் காணப்படும் சேரவேந்தருள் மிகவும் பழையோன் எனக் கருததற்கு இடனுண்டு இவனைப் பற்றிய குறிப்பொன்றும் வேறு ஆசிரியர்களாற் குறிக்கப்படவில்லை. இவனது தலைநகரைச் சான்றோர் “பெரும் பெயர் மூதூர்” எனப் பாடுவர். இந் நகர்க்கண் நண்பராகிய வேந்தர் குறுகுவது எளிதேயன்றிப் பகைமைக் கருத்தி னர் எவரும் செல்லுதல் இயலாது. இச்சேரமானும் பரிசிலர் வரிசையறிந்து சிறப்பிக்கும் பண்பு மேம்பட்டவன். சொல் தவறாத திட்பமும் சில சொற்களைக் கொண்டே அவற்றைச் சொல்வோரது உள்ளக்குறிப்பைவிரைந் துணரும் ஒட்பமும் உடையவன். இவனது பாயல் மலை மிகப்பல அருவிகளை யுடைது. இச் சேரமானைப் பாடிச் சிறப்பித்தவர் திருத்தாமனார் என்னும் சான்றோர். தாமன் என்றது இயற்பெயரென்றும், திருவென்பது அவரது சிறப்பைக் குறித்து நிற்பதென்றும் தமிழறிஞர் கருதுகின்றனர். திருத்தாமனாரும் இப் பாட்டொன்று ஒழிய வேறு பாடியதாக ஒரு பாட்டும் இத்தொகை நூல்களில காணப்படவில்லை. தாம் சேரமான் வஞ்சனைக் காணச் சென்ற போது அவன் செய்த சிறப்பை இப்பாட்டில் கிணைப் பொருநன் ஒருவன் கூற்றில் வைத்துப் பாடியுள்ளார். இதன்கண், பொருநன் ஒருவன் சேரமானது மூதூர்க்குச் சென்று விடியலில் அவன் நெடுமனை முற்றத்தில் நின்று தன் கிணைப்பறையைக் கொட்டி இசைத்தான். விடியற்காலத்தே நிலா மறைய வெள்ளி யெழுந்து விளங்கிய போதில் சேவற்கோழி யெழுந்து விடியல் வரவறிந்து கூவுதாயிற்று. பொய்கைகளில் கூம்பிய பூக்கள் மலர்ந்தன ; பாணர் தாம் கொணர்ந்த சீறியாழை முறைமை யறிந்து இசைத்தனர். அந்நிலையில் பொருநன் தன் கிணைப்பறையை யறைந்து “நினைந்து வரும் பரிசிலர் ஏந்திய கலங்களில் அவர் வேண்டுவன தந்து நிறைத்து மகிழ்விக்கும் வேந்தே, எம்மை அருளுபவனாகுக” என்று சொல்லித் தன் வரவை அறிவித்தான். சிலவாகிய இச் சொற்களைக் கேட்டதும் சேரமான் பேருவகை கொண்டு அன்பால் மலர்ந்த முகத்தையுடையவனாய் எதிரே போந்து பொருநன் அரையில் மாசுபடிந்து பீறிக்கிடந்த ஆடையைக் களைந்து, தான் உடுத்தியிருந்த பூந்துகிலைத் தந்து பொருநனை உடுக்கச் செய்தான். பின்பு, அப் பொருநன்பால் இருந்த உண்கலம் நிறைய இனிய கட்டெளிவை நல்கி உண்பித்ததோடு, தான் உண்ணும் கலத்தில் தனக்கென இடப்பட்டிருந்த மானிறைச்சி பொரித்த பொரிக்கறியும் செவ்விய நெற்சோறும் அப்பொருநனும் அவனோடு போந்த சுற்றத்தவரும் இனிதுண்ணுமாறு கொடுத்தான். பின்பு தான் அணிந்திருந்த விலையுயர்ந்த அரிய ஆரத்தையும் தன் மேனியில் அணியப்பெற்றிருந்த அணிகலன்களையும் தந்தருளி னான். அவற்றைப் பெற்ற பொருநரும் பிறரும் அவன் புகழ் நாடெங்கும் பரவுமாறு பாடிச்செல்வாராயினர். இப் பாட்டின் இடையே சில அடிகள் சிதைந்துவிட்டன. மதிநிலாக் கரப்ப வெள்ளி யேர்தர வகைமா ணல்லில். . . . . . . . . . . பொறிமயிர் வாரணம் பொழுதறிந் தியம்பப் பொய்கைப் பூமுகை மலரப் பாணர் 5 கைவல் சீறியாழ் கடனறிந் தியக்க இரவுப்புறம் பெற்ற வேம வைகறைப் பரிசிலர் வரையா விரைசெய் பந்தர் வரிசையி னிறுத்த வாய்மொழி வஞ்சன் நகைவர் குறுகி னல்லது பகைவர்க்குப் 10 புலியின மடிந்த கல்லளை போலத் துன்னல் போகிய பெரும்பெயர் மூதூர் மதியத் தன்னவென் னரிக்குரற் றடாரி இரவுரை நெடுவா ரரிப்ப வட்டித் துள்ளி வருநர் கொள்கல நிறைப்போய் 15 தள்ளா நிலையை யாகிய ரெமக்கென என்வர வறீஇச் சிறிதிற்குப் பெரிதுவந்து விரும்பிய முகத்த னாகி என்னரைத் துரும்புபடு சிதாஅர் நீக்கித் தன்னரைப் 20 புகவிரிந் தன்ன பொங்குதுகி லுடீஇ அழல்கான் றன்ன வரும்பெறன் மண்டை நிழல்காண் டேற னிறைய வாக்கி யானுண வருள லன்றியுந் தானுண் மண்டைய கண்ட மான்வறைக் கருணை 25 கொக்குகிர் நிமிர லொக்க லார வரையுறழ் மார்பின் வையகம் விளக்கும் விரவுமணி யொளிர்வரு மரவுற ழாரமொடு புரையோன் மேனிப் பூத்துகிற் கலிங்கம் உரைசெல வருளியோனே 20 பறையிசை யருவிப் பாயற் கோவே. திணை : பாடாண்டிணை . துறை : கடைநிலை. சேரமான் வஞ்சனைத் திருத்தாமனார் பாடியது. உரை : மதி நிலாக் கரப்ப - திங்களின் நிலவொளி மறைய; வெள்ளி ஏர் தர - வெள்ளியாகிய விண்மீன் எழுந்து விளங்க; வகைமாண் நல்லில் - பலவகையாகக் கட்டப்பட்டு மாண்புற்ற நல்ல பெருமனை; ..................; பொறிமயிர் வாரணம் பொழுதறிந்து இயம்ப - பொறிகள் பொருந்திய மயிரையுடைய கோழிச் சேவல் விடியற்போதின் வரவறிந்து கூவ; பொய்கைப் பூமுகை மலர - பொய்கைக்கண் கூம்பியிருந்த பூக்களின் முகை இதழ் விரிந்து மலர; பாணர் கைவல் சீறியாழ் கடல அறிந்து இயக்க - பாணர் தாம் கைதேர்ந்த சிறிய யாழை முறைமை யறிந்து இசைக்க; இரவுப்புறம் பெற்ற ஏம வைகறை - இரவுப்போது நீங்கும் விடியற்காலத்தில்; பரிசிலர் - பரிசிலர்களை; வரையா விரைசெய் பந்தர் - நீங்காத மணம் கமழும் பந்தரின்கண் .........; வரிசையின் இறுத்த வாய்மொழி வஞ்சன் - அவரவர் வரிசை யறிந்து புரவுக்கடன் செலுத்திய வாய்மையே மொழியும் சேரமான் வஞ்சனுடைய; நகைவர் குறுகினல்லது - இன்பஞ் செய்பவராகிய பாணர் முதலாயினாரும் நட்புடைய வேந்த ராயினாரும் செல்ல வியலுவதன்றி; பகைவர்க்கு - பகைவ ராயினார்க்கு, புலியின மடிந்த கல்லளை போல - புலியினம் கிடந்துறங்கும் கன்முழைஞ்சுபோல; துன்னல் போகிய - நெருங்குதற்காகாத; பெருபெயர் மூதூர் - பெரும் பொருந்திய பெயரையுடைய மூதூர்க்குச் சென்று; மதியத்தன்ன என் அரிக்குரல் தடாரி - முழுமதிபோன்ற வடிவினதாகிய அரித்த ஓசையையுடைய என் தடாரிப் பறையை; இரவுரை நெடுவார் அரிப்ப வட்டித்து - தனது இரப்புரை புலப்படுமாறு அதன் நெடிய வார்கள் அரித்த குரல் எடுத்தியம்ப இசைத்து; உள்ளி வருநர் கொள்கலம் நிறைப்போய் - மறவா வுள்ளத்தால் நின்னை நினைந்துவரும் பரிசிலருடைய கொள்கலம் நிரம்ப - அரிய பொருள்களை வழங்குபவனே; எமக்குத் தள்ளா நிலையையாகியர் என - எம்மிடத்து நீங்காத அன்புற்ற நிலையையுடையனாகுக என்று என் வரவைக் குறிப்பித்து நின்றோனாக; என் வரவு அறீஇ - என் வரவை யறிந்து சிறிதிற்குப் பெரிதுவந்து - என் சின்மொழிக்குப் பெரிதும் மகிழ்ந்து; விரும்பிய முகத்தனாகி - அன்பால் மலர்ந்த முகமுடையனாய்; என் அரைத்துரும்புபடுசிதாஅர் நீக்கி என் இடையில் சிதர்ந்து நார்நாராய்க் கிழிந்திருந்த உடையை நீக்கி தன் அரைப் புகை விரிந்தன்ன பொங்குதுகில் உடீஇ - தன் அரையில் உடுத்திருந்த புகையை விரித்தாற் போன்ற உயர்ந்த உடையைத் தந்து என்னை யுடுப்பித்து; அழல் கான்றன்ன அரும்பெறல் மண்டை நெருப்பைக் கக்கினாற் போன்ற ஒன்றும் பெறுதல் இல்லையாயின என் உண்கலத்தில்; நிழல்காண் தேறல் நிறைய வாக்கி - உண்பார் தமது நிழலைக் காணுமாறு தெளிந்த கட்டெளியை நிரம்பப் பெய்து; யான் உண அருளல் அன்றியும் - யான் உண்டற்கு வழங்கியதேயன்றி; தான் உண் மண்டைய கண்டமான்வறைக் கருனை - தான் உண்ணும் மண்டையிடத்துத் துண்டித்த மானிறைச்சியாகிய வறுத்த பொரிக்கறியையும்; கொக்கு உகிர் நிமிரல் - கொக்கின் நகம் போன்ற முறியாத நெல்லரிசிச் சோற்றையும்; ஒக்கல் ஆர - என் சுற்றத்தார் உண்ண; வரையுறழ் மார்பின் வையகம் விளக்கும் - மலைபோன்ற மார்பிலணிந்த உலகமெலாம் விலைமதிக்கத் தக்க; விரவுமணி ஒளிர்வரும் - பலமணிகள் விரவிக் கோக்கப் பட்டு ஒளி விளங்கும்; அரவு உறழ் ஆரமொடு - பாம்பு போல் வளைந்து கிடக்கும் மாலையும்; புரையோன் மேனிப் பூத்துகில் கலிங்கம் - உயர்ந்தோனாகிய அவன் மேனிக்கண் கிடந்து விளங்கும் பூ வேலை செய்யப்பட்ட உடைகளை; உரைசெல அருளியோன் - தன் புகழ் எங்கும் பரவ நல்கினான்; பறையிசை அருவிப் பாயல்கோ - பறைபோல் முழங்கும் அருவிகளை யுடைய பாயல் என்னும் மலைக்குரியவன்; எ-று. வைகறையில், வஞ்சன் மூதூர்க்கண் தடாரி அரிப்ப வட்டித்து, என, அறீஇ, உவந்து, முகத்தனாகி, நீக்கி, உடீஇ, வாக்கி அருளலன்றியும் ஒக்கல் ஆர, ஆரமொடு பாயற்கோவாகிய அவன் அருளினான் எனக் கூட்டி வினைமுடிவு செய்க. கரப்ப, ஏர்தர, இயம்ப, மலர இயக்க, பெற்ற ஏமவைகறையென இயையும் பெரும்பெயர் மூதூரென்றது, அவன் பெயரே பெற்ற அஞ்சன் குன்று என்னும் நகர் போலும். குடகு நாட்டுக் கல்வெட்டொன்று “அஞ்சனகிரி மாளிகை” (Coorg: Ins. Voli. Co. 10) என்று ஒன்றைக்குறிக்கின்றது. சென்ற நூற்றாண்டு இறுதிகாறும் பாயல்நாடாகிய வயனாடு (Whynad Taluka) குடகு நாட்டோடே சேர்ந்திருந்ததென அந்நாட்டு வரலாறு கூறு கிறது. (Malabar Series - Whynad :P. 5) இப்போதுள்ளநீலகிரி சில்லாவும் வயனாட்டோடு சேர்ந்திருந்து கி.பி. 1887 இல் தான் பிரிந்தது. இது நீலகிரியெனப் படுவதும் இடைக்காலக் கல்வெட்டு அஞ்சன கிரி யென்றும் நோக்கின், இந்நீலகிரி ஒரு காலத்தில் சேரமான் வஞ்சனுக்கு உரியதாயிருந்து . பெரும்பெயர் மூதூர் எனச் சிறப்பிக்கப்பெற்றமை தெரிகிறது. தடாரிக்கு அரிக்குரல் , அதன் நெடிய வார்கள் அரித்தலால் உண்டாவது தோன்ற, “நெடுவார் அரிப்ப ” என்றார். தடாரியின் ஓசை, அதனை இயக்கும் பொருநரது குறிப்பையுணர்த்தும் வகையில் எழுப்பப்படுமாகலின் இரவுவரை நெடுவார் அரிப்ப வட்டித்து என்றார். வட்டித்தல்- இசைத்தல்; “விசிப்புறுத் தமைந்த புதுக்காழ்ப் போர்வை, யலகின்மாலையார்ப்ப வட்டித்து” (புறம். 399) என வருதல் காண்க. சிறுகோல் கொண்டு அதன் தலை வட்டமிடச் சுற்றியடித்தல் பற்றி “வட்டித்து” என்றார். வட்டமென்னும் பெயரடியாகப் பிறந்த வினை. மதியம் வடிவுமம், நார்நாராய்க் கிழிந்த வுடையென்பது தோன்ற, “துரும்புபடுசிதா அர் ” எனப்பட்டது. மண்டையைக் காணுந் தோறும். உணவின்மை தோன்றி வயிற்றுத் தீயை யெழுப்பி வெதுப்புதலின் “அழல் கான்றன்ன மண்டை” யென்றார். அரும்பெறல் என்புழி அருமை இன்மை குறித்து நின்றது; “அருங்கேடன்” (குறள். 210) என்றாற்போல, தேறலின் தெளிவைச் சிறப்பிப்பது குறித்து, அதுநிழல் காண்தேறல் எனப்பட்டது. சேரமான் அணிந்திருந்த மணிமாலை உலகினரால் பெரிதும் மதித்துப் பாராட்டப் படுவதொன்றாதலின், “வையகம் விளக்கும் விரவுமணியொளிர் வரும் ஆரம்” என்றார். அருவிப் பாயல் என்றது பாயல் மலைக்கு வெளிப்படையாயிற்று. விளக்கம் : இதன்கண் ஆசிரியர் திருத்தாமனார் சேரமான் வஞ்சனைக் கண்டு சிறப்பிக்கப்பெற்ற திறம் கிணைப்பொருநன் ஒருவன் கூறும் கூற்றாக இப்பாட்டின்கண் விளக்கப்படுகிறது. கிணைப்பொருநன் சேரமானைக் காணச் சென்ற வைகறைப்போது, “மதிநிலாக் கரப்ப.... வைகறை” என்று குறிக்கப்படுகிறது. மதிநிலாக் கரப்ப என்றது, வளர்பிறை நாளாதலைக் காட்டிற்று. வைகறைப்போதின் வரவறிந்து கூவுதலின் தப்பாமை பற்றி, “பொறிமயிர் வாரணம் பொழுதறிந்து இயம்ப” என்றார். “பொறிமயிர் வாரணம் வைகறை யியம்ப” (மதுரை. 673) என்று பிறரும் கூறுவது காண்க. “பொய்கைப்பூ முகைமலர” என்றது, நெய்தற்பூவைக் குறிப்பதாகக் கொள்க. “நெய்தல் வைகறையில் மலர்வது, “வைகறை மலரும் நெய்தல்”(ஐங். 188) என்பது காண்க. கடன், முறைமை மதிநிலா மறையவும், வெள்ளி யெழவும், வாரணம் இயம்பவும். பொய்கைப்பூ மலரவும் வந்த வைகறைப்போதில் கிணைப்பொருநன் சென்று சேரமான் வஞ்சனைக் காண்கின்றா னென்பது தெளிவாம். அதன்பின், சேரமான் ஊரது காவற்சிறப்பு விளக்குவாராய், அவ்வூர்க்குள் நகைவரவல்லது பகைவர் செல்லுதல் இயலாதென்றற்கு “நகைவர் குறுகினல்லது பகைவர்.. துன்னல் போகியமூதூர்” என்றார். மூதூர் பகைவர் துன்னுதற்காகாமைக்கு ஏது இதுவென விளக்குதற்குப் “புலியின மடிந்த கல்லளை போல” என்றார். பெரும் பெயர் மூதூர், பெரிய பெயரையுடைய மூதூர்; பெயருக்குப் பெருமையாவது, மூதூராளும் பெருமானாகிய வஞ்சனது பெயரையே தனக்கும் பெயராக அமையும் பெருமை. இப்பெருமை அதன் பழம் பெயரை மறைத்து விட்டது; சேரமான் வஞ்சன் பெயர்கொண்டெழுந்த மூதூர் அஞ்சன் குன்றென்றிருந்து அஞ்சு குன்னு என்று இப்போது வழங்கிறது. இதன் பழம்பெயர் குன்றூர் என்பது போலும். கிணைவன் வைகறைப்போதில் கிணைகொட்டிச் சென்றவன் பறையிசையாலே தன்வரவினை அறிவித்தலும், “உள்ளிவருநர் கொள்கலம் நிறைப்போய், தள்ளாநிலையை யாகியர் எமக்” கென உரைத்தலும் மரபு. சேரமான் செய்த சிறப்பையும் தான் பாடிய பாட்டினையும் சீர் தூக்கிக் காணும் கிணைவன், வஞ்சனது பெருமையை நோக்கத் தன் பாட்டு இறப்பவும் சிறிதாதலை யெண்ணி வியக்கின்றானாதலால், “சிறிதிற்குப் பெரிதுவந்து ” என்றான். உயர்ந் தோர்க்குத் தரப்படும் நறவு மிக்க தெளிவுடைத்தாகும்; அத்தகைய தெளிவைத் தனக்கும் தந்தது கொண்டு மகிழ்கின்றவன். “நிழல் காண் தேறல் நிறைய வாக்கி, யான் உண அருளல் அன்றியும் தானுண் மண்டைய கண்ட மான்வறைக் கருணை ஒக்கல் ஆர அருளியோன்” என்று கூறியுள்ளான். ஆற்றொழுக்காகச் செல்லும் திருத்தாமனாரது இப் பாட்டின் இடையிலும் சில அடிகள் சிதைந்து படிப்போர் உள்ளத்தில் வருத்தத்தை விளைவிக்கின்றன. புரையோன், உயர்ந்தோன், “புரையமன்ற புரையோர் கேண்மை” (நற். 2) என்று சான்றோர் கூறுவது காண்க. புரையோனாதலால், இவனது பெயர் இவனது மூதூர்க்கு உரியதாயிற்றென்பது படப் “புரையோ”னென்ற சொல் நிற்பது குறிக்கத்தக்கது. நீலகிரிப் பகுதியிலும் வயனாடு தாலூகாவிலும் குடகுநாட்டிலும் உள்ள மலைகள் பாயல் மலை எனவும். நாடு பா(யல்)நாடெனவும் அதன் ஒரு பகுதி உம்பற் காடெனவும் வழங்கி வந்திருக்கின்றன. 399. தாமான் தோன்றிக்கோன் தோன்றிக்கோன் என்பான் தோன்றிமலைக்குரிய தலைவ னாவான். இம்மலை இருக்குமிடம் தெரிந்திலது. வழிவழியாகச் சிறந்து வந்த பழங்குடியில் தோன்றி அறமும் மறமும் புகழும் கொண்டு விளங்கிய இத்தோன்றிக்கோனுடைய இயற்பெயர் தாமன் என்பது. அது தாமான் என மருவித் தாமான் தோன்றிக்கோன் என வழங்கி வருவதாயிற்று. இவனைப் பாடிச் சிறப்பித்த சான்றோர் ஐயூர் முடவனாராவர். இச்சான்றோர் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன் பால் பேரன்புடையவர். அவ் வளவனை யன்றிப் பிறரைப் பாடுவதில்லையெனவும் அவன்பாலன்றிப் பிறர் எவர்பாலும் ஒன்று வேண்டிச் செல்வதில்லை யெனவும் உறுதி கொண்டவர். ஐயூர்முடவனார் ஒருகால் வறுமை வருத்தத் தமக்குரிய சோழவேந்தனைக் காணச் சென்றார். முடவராதலின் பகடுபூட்டிய பண்டியில்தான் அவர் செல்வது வழக்கம். அவ்வாறு சென்றுகொண்டிருக்கையில் ஈர்த்துச்செல்லும் பகடுகளுள் ஒன்று வலியிழந்து போயிற்று. அவர் வருத்தமுற்றுத் தோன்றிக்கோவின் ஊர் அண்மையிலிருந்தது கேள்வியுற்று மெல்ல அவ்வூரை யடைந்தார். தோன்றிக்கோமானான தாமான் அவரது புலமைச் சிறப்பை முன்பேயறிந்தவனாதலால் அவர் தமக்குற்ற குறையை உரைப்பதற்கு முன்பே வேண்டுவன நல்கி அவரை மகிழ்வித்தான். அம் மகிழ்ச்சி வயப்பட்ட ஐயூர்முடவனார். கிணைவனொருவன் கூற்றாக, இப் பாட்டைப் பாடினர். இதன்கண் அவன் காவிரி பாயும் நாடனாகிய கிள்ளி வளவனை நினைந்து அவன்பாற் செல்கின்றமையும், அவன்பாலன்றிப் பிறர்பால் செல்ல விரும்பாமையும், பிறர்முகநோக்கி அவருடைய அருணோக்கத்தைப் பெற விழையாமையும் மேற்கொண்டதனால் வறுமைமிக்க வருத்த, பொழுது மறுத்துண்ணும் சிறுமையுற்று நெஞ்சழிந்து ஒருபுடையிருந்ததாகவும், கிணைமகள் மீன் விற்று வந்த வருவாய் கொண்டு சமைத்த பாகற்பைங் கூழைப் பொழுது மறுத்துண்டு வருந்தியிருந்ததாகவும் குறித்துள்ளான். அக்காலத்தே அங்குள்ளோரால் தோன்றிக் கோனானதாமானது நல்லிசை அவன் நெஞ்சைக்கவர்ந்தது. தோன்றிக்கோன், “அறவர் அறவன், மறவர் மறவன். மள்ளர் மள்ளன், தொல்லோர் மருகன் ” என்ற புகழ்படைத்து விளங்கினான். வறுமை மிகுதியால் கிணைவனுடைய கிணைப்பறை வார் அறுந்து கண்கிழிந்து பயன் படாவகையில் சீர் குலைந்து கிடந்தது. இப்புகழ் கேட்டதும், தோன்றிக்கோனால் தன் வறுமைத் துயர் கெடுமென்னும் துணிவால், புதுத்தோலும் புதுவாரும் கொண்டு தன் கிணையைப் புதுப்பித்துக் கொண்டு , கிணையுறையும் கடவுட்கு, வழிபாடு செய்யத்தாழ்க்கின் எய்தக் கருதிய பொருள் உரிய காலத்தில் எய்தப் படாமையும் கூடுமென நினைந்து கடவுளையும் வழிபடாது கிணைவன் தோன்றிக் கோனிடம் சென்று, “சேற்று வழியே சேறற்கண் தளர்ச்சி யுறாத பகடு ஒன்றே யான் வேண்டுவது” எனத் தன் குறையை யெடுத்துரைத்தற்கு முன்பே, அவன் குறிப்பானுணர்ந்து பரிசில் தரற்குச் சமைந்து பல நிரைகளை ஊர்தியுடனே நல்கினான் என்று குறித்துரைத்துள்ளான். இப் பாட்டிடையே சில அடிகள் சிதைந்துள்ளன. அடுமகண் முகந்த வளவா வெண்ணெல் தொடிமா ணுலக்கைப் பரூஉக்குற் றரிசி காடி வெள்ளுலைக் கொளீஇ நீழல் ஓங்குசினை மாவின் றீங்கனி நறும்புளி 5 மோட்டிரு வராஅற் கோட்டுமீன் கொழுங்குறை செறுவின் வள்ளை சிறுகொடிப் பாகற் பாதிரி யூழ்முகை யவிழ்விடுத் தன்ன மெய்களைந் தினனொடு விரைஇ. . . . . . மூழ்ப்பப் பெய்த முழுவவிழ்ப் புழுக்கல் 10 அழிகளிற் படுநர் களியட வைகிற் பழஞ்சோ றயிலு முழங்குநீர்ப் படப்பைக் காவிரிக் கிழவன் மாயா நல்லிசைக் கிள்ளி வளவ னுள்ளி யவற்படர்தும் செல்லேன் செல்லேன் பிறர்முக நோக்கேன் 15 நெடுங்கழைத் தூண்டில் விடுமீ னொடுத்துக் கிணைமக ளட்ட பாவற் புளிங்கூழ் பொழுதுமறுத் துண்ணு முண்டியே னழிவுகொண் டொருசிறை யிருந்தே னென்னே யினியே அறவ ரறவன் மறவர் மறவன் 20 மள்ளர் மள்ளன் றொல்லேர் மருகன் இசையிற் கொண்டா னசையமு துண்கென மீப்படர்ந் திறந்து வன்கோன் மண்ணி வள்பரிந்து கிடந்த வென் றெண்கண் மாக்கிணை விசிப்புறுத் தமைந்த புதுக்காழ்ப் போர்வை 25 அலகின் மாலை யார்ப்ப வட்டித்துக் கடியு முணவென்னக் கடவுட்குந் தோடேன் கடுந்தே ரள்ளற் கசாவா நோன்சுவற் பகடே யத்தையான் வேண்டிவந் ததுவென ஒன்றியான் பெட்டா வளவை யன்றே 30 ஆன்று விட்டன னத்தை விசும்பின் மீன்பூத் தன்ன வுருவப் பன்னிரை ஊர்தியொடு நல்கி யோனே சீர்கொள இழுமென விழிதரு மருவி வான்றோ யுயர்சிமைத் தோன்றிக் கோவே. திணை : பாடாண்டிணை. துறை: பரிசில்விடை. தாமான் தோன்றிக் கோனை ஐயூர் முடவனார் பாடியது. உரை : அடுமகள் முகந்த அளவா வெண்ணெல் - சோறாக்கும் பெண் முகந்து கொணர்ந்த அளக்கப்படாத வெண் ணெல்லினுடைய; தொடிமாண் பரூஉ உலக்கை குற்றரிசி - பூணிட்டு மாட்சியுறுவித்த பருத்த உலக்கையால் குற்றப்பட்ட அரிசி கொண்டாக்கிய சோற்றை; காடி வெள்ளுலைக் கொளீஇ - காடி நீர் பெய்த வெள்ளுலையிற் பெய்து கொண்டு; நீழலோங்கு சினைமாவின் தீங்கனி நறும்புளி - நீழலுயர்ந்த கிளைகளோடு கூடிய மாமரத்தின் தீவிய கனியைப் பிசைந்து செய்த நறிய புளிக்குழம்பும்; மோட்டிரு வரா அல் கோட்டுமீன் கொழுங்குறை பெரிய கரிய வராலிறைச்சியும் - கோட்டையுடைய சுறா மீனினது துண்டமாகிய கொழுவிய இறைச்சியும்; செறுவின் வள்ளை - வயல்களிற் படர்ந்த வள்ளைக்கீரையும்; சிறுகொடிப் பாகல் - சிறு கொடியாகிய பாகற்காயும்; பாதிரியூழ் முகை அவிழ் விடுத்தன்ன - பாதிரியின் முதிர்ந்த அரும்பினது இதழை விரித்தாற்போன்ற ; மெய் களைந்து இனனோடு விரைஇ - தோலைநீக்கி இனமாகியவற்றோடு கலந்து; ஐதின் - மென்மை யுண்டாக; மூழ்ப்பப் பெய்த முழு அவிழ்ப் புழுக்கல் - மூடும் படியாகப் பெய்த முழுத்த சோறும்; அழுகளிற் படுநர் களியட வைகின் - வைக்கோல்களிற் பொழுதெல்லாம் உழைக்கும் களமர் தாமுண்ட கள்ளாற் பிறந்த மயக்கத்தால் மடிந்திருப் பாராயின்; பழஞ்சோறு அயிலும் - விடியலிற் பழஞ்சோற்றை யுண்ணும்; முழங்கு நீர்ப்படப்பை - முழங்குகின்ற நீர்நலம் சான்ற தோட்டங்களையுடைய; காவிரிக்கிழவன் - காவிரிபாயும் நாட்டையுடையனாகிய; மாயா நல்லிசைக் கிள்ளி வளவன் உள்ளி - கெடாத நல்ல புகழையுடைய கிள்ளிவளவனை நினைந்து அவன் படர்தும் -அவனை நோக்கிச் செல்கின்றேம்; பிறர் செல்லேன் செல்லேன் முகம் நோக்கேன் - பிறர் பால் ஒருகாலும் செல்லேன், பிறருடைய முகத்தை உதவி கருதிப் பாரேன்; நெடுங்கழைத் தூண்டில் விடுமீன் நொடுத்து - நெடிய மூங்கிலாகிய தூண்டிலாற் பிடித்த மீனை விற்று; கிணை மகள் அட்ட பாவல் புளிங்கூழ் - கிணைமகள் சமைத்த நீர்த்தாய்ப் பரந்த புளிங்கூழை; பொழுது மறுத்துண்ணும் உண்டியேன் - காலமல்லாத காலத்தில் உண்ணும் உணவையுடையேன்; அழிவுகொண்டு ஒருசிறை இருந்தேன் - நெஞ்சழிந்து ஒரு புடையே இருந்தேனாக; என்னே - நின் நல்லூழ் இருந்த வாறென்னே; இனி - இப்பொழுது; அறவர் அறவன் - அறவோர்களிற் சிறந்த அறவோனும் ; மறவர் மறவன் - மறவர்க்குள் சிறந்த மறவனும்; மள்ளர் மள்ளன் - உழவருட் சிறந்த உழவனும், தொல்லோர் மருகன் - பழையோருடைய வழித்தோன்றலு மாகிய அவன் - தாமான் தோன்றிக் கோன்; இசையிற்கொண்டான் - நின்புகழால் நின்பால் அன்புகொண்டு விட்டானாகலின்; நசையமுது உண்க என - நீ விரும்பும் செல்வத்தைப் பெறுவாயாக என அறிந்தோர் கூறவே; மீப் படர்ந்து இறந்து - மேலே செயற்பாலவற்றை நினைந்து சென்று; வன்கோல் மண்ணி - கையிற்கொண்டேகும் வலிய கோலைத் தூய்மை செய்து கொண்டு; வள் பரிந்து கிடந்த என் தெண்கண்மாக் கிணை வார் அறுப்புண்டு - சீர்குலைந்து கிடந்த என் தெளிந்த கண்ணையுடைய மாக்கிணையை; விசிப்புறுத்து - புதுவார்கொண்டு விசித்துக் கட்டி; அமைந்த புதுக்கால் போர்வை - இசைக்குரிய கண்ணமைக்கப்பட்ட புதிய வலிய தோலினுடைய; அலகில் மாலை ஆர்ப்ப வட்டித்து - அளவில்லாத மாலை போன்ற நெடிய வார்கள் ஒலிக்க இயக்கி; கடியும் உணவென்னக் கடவுட்கும் தொடேன் - கிணைக் கண்ணுறையும் தெய்வத்துக்கு வழிபாடாற்றக் கருதியவழிப் பெறற்குரிய உணவைப் பெறுவது தாழ்க்கு மெனக் கருதி அத்தெய்வத்தையும் வழிபடாது; கடுந்தேர் அள்ளற்கு அசாவா - வலிய தேராகிய வண்டி சேற்றில் அழுந்திய வழி அதற்குத் தளராத; நோன்சுவல் பகடே - யான் வேண்டி வந்தது என வலிய கொண்டையையுடைய பகடே யான் வேண்டிவந்தேன் என்று; ஒன்று யான் பெட்டா அளவை - ஒன்றை யான் விரும்பிக் கேளாமுன்பே; அன்றே ஆன்றுவிட்டான் - அப்பொழுதே கொடுத்தற்கமைத்து என்பால் வரவிடுவானாய்; விசும்பின் மீன் பூத்தன்ன - வானத்தே வின்மீன்கள் பூத்தாற் போல; உருவப் பன்னிரை ஊர்தியொடு நல்கியோன் - அழகிய நிறத்தையுடைய பலவாகிய ஆனிரைகளை ஊர்ந்து செல்லற் கேற்ற காளைகளோடே நல்கினான்; சீர்கொள் இழுமென இழிதரும் அருவி - தாளம் அமைய இழுமென்னும் ஓசையுடன் இழியும் அருவிகளையுடைய; வான்தோய் உயர்சிமைத் தோன்றிக்கோ - வானளாவ உயர்ந்த உச்சியுடைய தோன்றி மலைக்குத் தலைவன் எ-று. அடுப்பிலேற்றாது காடி நீரில் சோற்றைப் பெய்து வைத் திருக்கும் உலை, வெள்ளுலையெனப்பட்டது. மாங்கனியிற் சாறுபிழிந் தமைக்கும் நறும்புளியைப் பிறரும், “வண்டளிர் மாஅத்துக், கிளிபோற் காய கிளைத்துணர் வடித்துப் புளிப்பத னமைத்த புதுக்குடம்” (அகம். 37) என்று கூறுதல் காண்க. மோடு, பெருமை, கோட்டுமீன், சுறாமீன். முரியாத அரிசிச் சோற்றை “முழுவவிழ்ப் புழுக்கல்” எனறார். மூழ்த்தல், மூடுதல்; வாய் மூழ்த்தனரென்றாற்போல. வையும் நெல்லும் பிரிக்கும் தொழிலில் பொழுதெல்லாம் கழித்தோயும் களமரை, “அழிகளிற்படுநர்” என்றார். களிமயக்கால் இரவுப்போதில் உணர்வற்றுக் கிடந்தார் விடியலிற் பழஞ்சோ றுண்ணும் இயல்புபற்றி, “களியடவைகின் பழஞ்சோ றயிலு” மென்றார். ஊன் விற்று உணவுப்பொருள் பெற்றுக் கிணைமகள் புளிங்கூழ் சமைப்பது காலவரையறைக்கப் படாமையின், “நெடுங்கழைத் தூண்டில் விடுமீன் நொடுத்துக் கிணைமகளட்ட பாவற் புளிங்கூழ்” என விரித்தோதினார். பாவல் புளிங்கூழ், கூழ் சிறிதும் நீர் பெரிது மாகச் சமைக்கப்பட்ட புளிங்கூழ். புளிக்க வைத்து அடுங்கூழ், புளிங்கூ ழெனப்பட்டது. பொழுது மறுத்துண்ட லாவது உண்டற்குரிய காலவரவு நோக்கியிருந் துண்ணாது. உணவு வரவு நோக்கியிருந்துன்பது; பழைய வுரைகாரர் உண்ணுங் காலை மாறி யுண்ணுதல் (புறம். 248உரை) என்பது காண்க. மறவன் என்பதே போர்க்குரிய மறமும் வீரமும் உடைமை யுணர்த்தி நிற்றலின், மள்ளன் என்பது உழவுத் தொழில் வன்மை யுடையமை குறிப்பதாயிற்று. தோன்றிக்கோவின் தகைமையறிந் துரைப்போர். அவன் இக் கிணைவனது இசை யறிந்து கொடை வழங்கும் உள்ளத்தனாதலை யறிந்து வந்துரைத் தலின், “என்னே” என வியந்தனர். கிள்ளி வளவன்பாற் செல்லக் கருதி வந்தவர். தோன்றிக்கோவின் வள்ளன்மையும் அவன் தன்பாற் கொண்டிருக்கும் பேரன்பையும் மேன்மேலும் நினைந்து அவன்பால் தம் உள்ளத்தைச் செலுத்துகின்றாராகலின், “மீப்படர்ந்திருந்து” என்றார். வளவற்கே யுரித்தாய் அவனையே வரைந்து ஒன்றியிருந்த நெஞ்சம் தோன்றிக் கோவுக்கு உரித்தாய் அவன்பால் அன்பு செய்தற்கிடனாய் நிற்றலின் படர்தலும் இறத்தலும் உளவாயின. கிணைவன் முதலிய இரவலர் கையில் கோல்கொண்டு சேறல் மரபு. போர்வை, போர்க்கப்படும் தோல், மாலை போறலின் நெடியவார்கள் மாலை யெனப் பட்டன. முரசு, கிணை முதலியவற்றில் தெய்வ முறையு மென்பது பண்டையோர் கொள்கை; “கடியுமுணவென்னக் கடவுட்கும் தொடேன் ” என்பதற்கு, என்னவும் என உம்மை தொக்க தாகக் கொண்டு, வழிபடாத வழித் தெய்வம் உணவு பெறாவாறு கடியும் என்று எம்மிற் சான்றோர் சொல்லி யிருப்பவும் விரையச் செல்வது குறித்துக் கடவுட்கும் வழிபாடாற்றாது செல்வேன் என்றுரைப்பினு மமையும். பெட்டல், விரும்புதல் வாயைத்திறந்து கேட்பதற்கு முன்னே பன்னிரையும் ஊர்தியும் பண்ணுமாறு தன் ஏவலரைப் பணித்தாரென்பார், “ஒன்றியான் பெட்டா அளவை யன்றே யான்ற விட்டனன்” என்றார். அத்தை; அசைநிலை. அரிசி உலைக்கொளீஇ நறும்புளியும் கொழுங்குறையும் வள்ளையும் பாகலும் இன்னொடு விரைஇ. புழுக்கலும், படுநர் வைகின், அயிலும் படப்பைக் காவிரிக் கிழவன் என இயையும் கிழவன் வளவன் அவற் படர்தும் செல்லேன் செல்லேன் நோக்கேன் உண்டியேன் இருந்தனெனாக, என, இறந்து மண்ணி விசிப்புறுத்து வட்டித்து, தொடேன், எனப் பெட்டா அளவை அன்றே, ஆன்று விட்டனன்; தோன்றிக்கோ நல்கினான் எனக்கூட்டி வினைமுடிவு செய்க. விளக்கம் : உண்டற்பொருட்டு வரைந்து தொகுக்கப்பட்ட நெல்லை வேண்டும் போதெல்லாம் எடுத்துக் குற்றிக்கொள்ப வாதலால் அடுமகள் முகந்துகொண்ட நெல்லை அளவா வெண்ணெல் என்றார்; இனி அளந்துகொண்ட நெல்லென்றுரைப்பினு மமையும். உலக்கையின் பருமை குற்றலின்மே னின்றது. காடி நீரையும் மோர் பெய்த நீரையும் உலைக்கிடுபவாதலால் காடி வெள்ளுலைக் கொளீஇ யென்றார் நறும்புளியும் பாகலும் வேறு கறிக்கும் இனமான சாந்தும் காயமும் பிறவும் இனமெனக் குறிக்கப்பட்டன. சோறுவேறென்னத் தோன்றாதவாறு புளியுங் கொழுங்குறையும் மென்மையுண்டாக வெந்து குழைந் திருக்குமாறு தோன்ற “ஐதுற மூழ்ப்பப் பெய்த புழுக்கல்” என்றார். வெய்துற என்றும் துய்த்தலையென்றும் காணப்படும் பாடம் பொருள் விளங்கவில்லை. காவிரிக்கிழவனான கிள்ளிவளவனைக் காண்டற்குச் செல்லும் ஐயூர் முடவனார் விழியிடையே சிறப்புற்றிருந்த தோன்றிக் கோமானான தாமான் என்பானைப் பாடுகின்றாராகலான், “காவிரிக் கிழவன்......படர்தும்” என்று கூறுகின்றார், இடையே தாமான் தோன்றிக் கோனை அறிந்தோர் முடவனாருக்குக் கூறியது, “அறவர் .......உண்க” என்றது. முடவனார் தோன்றிக்கோனது ஊர்வயின் தங்கிமேலே உறையூர்க்குச் செல்லும்திறம் இன்றி, பகடொன்றில்லாக் குறை யுற்றிருந்தாராக, அங்கிருந்தோர் அவருக்கு அவனது பெருமையை யெடுத்துக் கூறினர்; அதுகேட்டு அவர், “காவிரிக் கிழவன்........இருந்தேன்” என்றார். அமுது உண்க என்றது, நிறைந்த செல்வம் பெறுக என்பது குறித்து நின்றது; “அமுத முண்க நம் மயலிலாட்டி” (நற்.65) என்றாற்போல. தோன்றிமலை திண்டுக்கல்லுக்கு மேற்கில் பதினைந்து கல்லில் உளது; இப்போது அங்கே தான்றிக் குடியென்றோர் மலையிடை ஊர் உளது; அது காப்பிச் செடியும் ஏலமும் பயிராகும் வளவிய இடம். இனி, கருவூர்க் கண்மையில் தான்தோன்றிமலை யென்றொரு குன்றுண்டு; அது தாமான் தோன்றி மலையாக இருக்கலாமென்றும் கூறுவர். திருச்சிராப்பள்ளிக்குத் தெற்கிலுள்ள குளத்தூர்ப் பகுதியில் இருக்கும் ஐயூர் (சிற்றையூர்) இம் முடவனார்க்குரியதாயின், கருவூர்க் கண்மையிலுள்ள தான்றோன்றி மலையைத் தாமான் தோன்றி மலையாகக் கொள்ளலாம். இது நன்கு ஆராயத்தக்கது. 400. சோழன் நலங்கிள்ளி தமிழகத்தை நினைக்கும்போது, இதனைப் பொதுவாகத் தமக்கு உரிமையாகவுடையவர் தமிழ் மூவேந்தர் என்பது நினைவுக்கு வரும் சான்றோரும் இது பற்றியே இதனைப் “பொதுமை சுட்டிய மூவருலகம்” (புறம். 357) என்று கூறினர். சோழர் பாண்டியர் சேரராகிய மூவரையும் உலகியலில் மக்கட்கு உறுதித்துணையாகப் பண்டையோர் கருதினாராகலின், உறுதிப் பொருளாகிய அறம் பொருள் இன்பங்களைப் போல இவ் வேந்தர் மூவரும் உளர் என்பதும் அந்நாளில் நிலவிய கொள்கையாகும். அதனால் ஒருவர் மேம்பட இருவர் அவர் வழிப்பட நிற்பது இயல்பாயிற்று ஒருகால் சோழ வேந்தனான நலங்கிள்ளி வடபுலத்தரசர் துஞ்சாக் கண்ணராய் நெஞ்சு நடுங்க அவலமுற்று அலமரத்தக்க மறப்புகழ் கொண்டு விளக்க முற்றானாக. அவனைச் சிறப்பித்துப் பாடிய ஆசிரியர் கோவூர்க்கிழார், “சிறப்புடை மரபின் பொருளும் இன்பமும், அறத்துவழிப் படூஉந் தோற்றம் போல, இருகுடை பின்பட வோங்கிய வொருகுடை, உருகெழு மதியி னிவந்துசேண் விளங்க” (புறம். 31) நல்லிசை நிறுவியதை விதந்தோதிப் பண்டைய தமிழ்க் கொள்கையை நிறுவியிருத்தலைக் காணலாம். சோழன் நலங்கிள்ளி சோழநாட்டின் கீழ்ப்பகுதியிலிருந்து ஆட்சி செய்தவன். இவன் புலவர் பாடும் பெரும்புகழ் படைத்தவன் இவனை, “மென்மையின் மகளிர்க்கு வணங்கி, வன்மையின் ஆடவர்ப் பிணிக்கும் பீடுகெழு நெடுந்தகை” (புறம். 68) என்பர். பாணர், பொருநர் முதலிய பரிசிலர்க்குப் பெருவளம் நல்கிப் பேரின்பம் எய்துபவன். இதனால், இவனைப் பாடிப் பரிசில் பெற்றவர் பின்பு பிறரெவரையும் பாடிப் பரிசில் பெற விரும்பார். “நலங்கிள்ளி நசைப்பொருநரேம், பிறர்பாடிப் பெறல்வேண்டேம்” (382) என அவர்கள் கூறுவது காண்க. இத்தகைய சிறப்புடைய வேந்தனுக்கு ஆசிரியர் கோவூர்கிழார்பால் பெருமதிப்புண்டு. பல காலங்களில் கோவூர்கிழார் பலவேறுவகையில் நலங்கிள்ளியைப் பாடிச் சிறப்பித்துள்ளார். இவரால் புகழ் மாசுபடாது உய்த்த வேந்தருள் காரியாற்றுத் துஞ்சிய நெடுங்கிள்ளியும், சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனும் குறிப்பிடத்தக்கவராவர் சோழன் நலங்கிள்ளி யின் புலவருள் ஒருவரான இளந்தத்தனார் உறையூர்க் கொருகால் சென்ற போது அவரை ஒற்று வந்தவரெனப் பிழைப் படக்கருதி, நெடுங்கிள்ளி கொல்லப்புக்கானாக, கோவுர் கிழார் அதனை யறிந்து விரைந்து சென்று புலவரை உய்வித்தார் அதனால் சோழன் குடிக்குண்டாகவிருந்த பெரும்பழியையும் நிகழாவாறு காத்தார். புலவர்கள் பரிசில்பெற்று வாழும் வாழ்வினராயினும் பிறர்க்குத் தீதுசெய்யும் இயல்பினரல்லர்; நண்ணார் நாண அண்ணாந்து செல்லும் ஆண்மை யுடையர்; அவ்விடத்தும் எவ்விடத்தும் இனிது ஒழுகும் இனிமைப் பண்பினர். மண்ணாளும் செல்வமெய்திய மன்னவ ரொப்பச் செம்மலும் உடையர் என ஆசிரியர் கோவூர்கிழார் கூறுவது இந்நாளில் புலவர் பெருமக்களை இகழ்ந்தொழுகும் பேதைமாக்கட்குச் சீர்த்த அறிவுரையாகும். சோழன் நலங்கிள்ளிபால் தாம் பெற்ற வண்மைநலத்தைப் பொருநன் ஒருவன் கூற்றில் வைத்துக்கோவூர் கிழார் இப் பாட்டைப் பாடியுள்ளார். இதன்கண், கிணைப் பொருநன் சென்று விடியற் காலையில் தன் கிணைப் பறையைக் கொட்டி நலங்கிள்ளியின் புகழ் பாடினானாக. அதுகேட்டவன், அப் பொருநன்பால் அன்புகொண்டு,அவன் இடையில் அழுக்கேறிக் கிழித்திருந்த உடையை நீக்கிப் புத்தாடை தந்து உடுப்பித்து உயர்ந்த கலன்கள் பல நல்கினான். பொருநனும் அதுகொண்டு சின்னாள் தங்கி மீள்பவன், “யான் அவன்பால் இருக்கையில் அவனைக் கண்டு பயிலும்போது இதுவெனும் வரையறையின்றிப் பழகினேன்; அவன் தனக்குளதாகும் பகையைக் கடிதலேயன்றித் தன்னைச் சேர்ந்தோர்க் குளதாகும் பசிப்பகை கடிதலிலும் சிறந்தவன்; மறவர் மலிந்த போர்க்களத்தாலும் மறையவர்களின் வேள்விக் களத்தாலும் கடல்வழி பிறநாட்டுக்குச் சென்று பொருளீட்டி வரும கலத்தாலும் புதுவருவாய் இடையறாது உறைதற்கு இனிதாயது அவனது நல்லவூர்,” என்று இதன்கண் குறித்துரைக்கின்றார். இப்பாட்டு இடையிடையே மிகவும் சிதைந்துளது. மாகவிசும்பின் வெண்டிங்கள் மூவைந்தான் முறைமுறைக் கடனடுவட் கண்டன்ன வென் இயமிசையா மரபேத்திக் 5 கடைத்தோன்றிய கடைக்கங்குலாற் பலர் துஞ்சவுந் தான்றுஞ்சான் உலகுகாக்கு முயர்கொள்கைக் கேட்டோ னெந்தையென் றெண்கிணைக் குரலே கேட்டதற் கொண்டும் வேட்கை தண்டாது 10 தொன்றுபடு சிதாஅர் மருங்கு நீக்கி மிகப் பெருஞ் சிறப்பின் வீறுசான் னகலஞ் . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .லவான கலிங்க மளித்திட் டென்னரை நோக்கி நாரரி நறவி னாண்மகிழ் தூங்குந்து 15 போதறியேன் பதிப்பழகவும் தன்பகை கடித லன்றியுஞ் சேர்ந்தோர் பசிப்பகை கடிதலும் வல்லன் மாதோ மறவர் மலிந்ததன். . . . . . . . . . . கேள்வி மலிந்த வேள்வித் தூணத் 20 திருங்கழி யழிதரு மார்கலி வங்கம் தேறுநீர்ப் பரப்பின் யாறுசீத் துய்த்துத் துறைதொறும் பிணிக்கும் நல்லூர் உறைவின் யாணர் நாடுகிழ வோனே. திணை : அது. துறை : இயன்மொழி. சோழன் நலங் கிள்ளியைக் கோவூர் கிழார் பாடியது. உரை : மாக விசும்பின் வெண்டிங்கள் - மாகமாகிய விசும்பின் கண் நிலவும் வெண்மதியம்; மூவைந்தால் முறைமுற்ற - பதினைந்து நாள் முறையே முதிர; கடல் நடுவண் கண்டன்ன - கடலின் நடுவின் அதனைக் கண்டாற் போன்ற; என் இயம் இசையா மரபேத்தி - எனது இயமாகிய தடாரிப்பறையை யறைந்து முறையே அவனுடைய புகழ் பரவினேனாக; கடைக்கங்குலால் - இரவின் கடையாமமாகிய விடியற்காலத்தில்; பலர் துஞ்சவும் தான் துஞ்சான் - பலர் உறங்கவும் தான் மட்டில் உறங்கானாய்; உலகு காக்கும் உயர்கொள்கை - உலகத்தைக் காக்கும் உயர்ந்த கொள்கையையுடைய; எந்தை - எம் தலைவன்; கடைத் தோன்றிய என் தெண்கிணைக் குரல் கேட்டோன் - தன் நெடுமனை முற்றத்தில் நின்று இசைத்த எனது தெளிந்த கிணைப்பறையின் ஓசையைக் கேட்டான்; கேட்டதற் கொண்டும் - கேட்டதனால்; வேட்கை தண்டாது - என்பால் உண்டான அருள் குறையாமல்; தொன்றுபடு சிதாஅர் மருங்கு நீக்கி - பழைமையுற்றுச் சிதர்ந்த பீறிய என் அரையி லிருந்த உடையைக் களைந்து போக்கி; கலிங்கம் அளித்திட்டு - புத்தாடை தந்து உடுப்பித்ததுடன்; என் அரை நோக்கி - அதனை யணிந்து பொலியும் என் அரையைத் தான் பார்த்து மகிழ்ந்து; மிகப்பெருஞ் சிறப்பின் வீறுசால் நன்கலம் - மிகப் பெரிய சிறப்பினையுடைய வீறமைந்த நல்ல கலன்களை;.............. நாரரி நறவின் நாண்மகிழ் தூங்குந்து - நாரால் வடிக்கப்பட்ட கள்ளையுண்ட நாடோறும் மகிழ்ச்சிமிகும்; ...............பதிப்பழகவும் போதறியேன் - அவன் ஊர்க்கண்ணே யிருந்தேனாகக் கழிந்த நாட்களை அறியேனாயினேன்; தன்பகை கடிதலன்றியும் - தன்னை வருத்தக் கருதும் பகையைப் போக்குதலோடு; சேர்ந்தோர் பசிப்பகை கடிதலும் வல்லன் - தன்னைச் சேர்ந்தோருடைய பசியாகிய பகையை உடன்கெடுத்தற்கும் வல்லவனாவன்; மறவர் மலிந்த தன் - மறவர்கள் மலிந்த தன்னுடைய :.... கேள்வி மலிந்த வேள்வித் தூணத்து - மறை களைக் கேட்டுவல்ல அந்தணர் நிறைந்த வேள்விச்சாலையில் நிற்கும் தூண்களையும்; இருங்கழி யிழிதரும் ஆர்கலி வங்கம் - கரிய கழிவழியாக வந்திறங்கும் கடலிற் செல்லுதலுடைய ஓடங்களை; தேறுநீர்ப் பரப்பின் யாறு சீத்து உய்த்து - தெளிந்த நீர்பரந்த கடற்குச் செல்லும் வழியாகிய யாற்றைச் செம்மை செய்து செலுத்தி;துறைதொறும் பிணிக்கும் நல்லூர் - துறைதொறும் பிணித்து நிறுத்தும் நல்ல வூர்களையும்; உறைவினர் யாணர் நாடுகிழவோன் - தங்கி வாழ்தற்கினிய புது வருவாயையுமுடைய நாட்டுக்கு உரியவன்; எ-று. வெண்டிங்கள்; இனச்சுட்டில்லாப் பண்புகொள் பெயர். பதினைந்து நாளும் நிறைந்த திங்கள் கடல் நடுவே வட்டமாய்க் காணப்படுவது பற்றி முழுவட்டமாய்த் தோன்றும் தடாரிப் பறைக்கு உவமம் செய்தார். இயம் எனப் பொதுப்படக் கூறினா ரேனும், திங்களை யுவமம் கூறுவதாலும், கிணைப்பொருநன் கூற்றாதலாலும், தடாரிப்பறை யென்றும் பெறப்பட்டது. “மதியத் தன்னவென் விசியுறு தடாரி” (புறம்: 371) என்று பிறரும் கூறுதல் காண்க. வேத்தியல், பொதுவியல் என இயலும் முறைமை யறிந்து இசையும் பாட்டும் கூத்தும் நிகழுமாதலின், “இயம் இசையா” என்றதனோடு, “மரபேத்தி” என்று கிணைப்பொருநன் உரைக்கின், “பலர் துஞ்சவுந்தான் துஞ்சா” னாதற்கு ஏது கூறுவார், “உலகு காக்கும் உயர்கொள்கை” என்றார். பாணர் பொருநர் புலவர் முதலாயினாரால் வேந்த ருடைய மறமும் புகழும் நாடெங்கும் பரவிப் பகைவர்க்கு அச்சம் பயந்து அரணுமாதலின் அவர்க்குச் சிறப்புச் செய்தற்கண் விருப்பம் மிகவுடையனானான் என்பது வேட்கை தண்டாது” என்பதனால் பெறப்படுகிறது. வறுமை மிக்கவழிப் பதியின்கண் பழகுதல் கூடாமையின், செல்வம் பெற்றுச் சிறக்கும் தனக்கு அஃது எளிதாய் இனிதாய்ப் போது கழிதற்கு வாயிலாயிற் றென்பான், “போதறியேன் பதிப்பழகவும்” என்றான் பிறரும், “பதிமுதற் பழகாப் பழங்கண் வாழ்க்கை” (புறம்: 393) யென்பது காண்க. தான் பகையால் நெருக்குண்டு வருந்தும்போதும் தன்னைச் சேர்ந்தோர் பசியின்றி வாழ்தலிலே வேந்தன் கருத்து நிலவிற்றென்றற்கு, “தன்பகை கடிதலன்றியும் சேர்ந்தோர், பசிப்பகை கடிதலும் வல்லன்” என்றார். இது வன்மை பெரிதுடையார்க்கே இயலுவதாகலின், “வல்லன்” என்றார்; யாற்றுப் பெருக்கால் கடலொடு கலக்குமிடம் மணல் தூர்ந்து வங்கம் கழியிடைப் புகுதற் கியலாவழி, அதனைப் போக்கி வழிசெய்து கோடல் விளங்க, “யாறு சீத்துய்த்து” என்றார். கடைக் கங்குலில், இசையா ஏத்தி, தோன்றிய குரல் கேட்டோன்; கேட்டதற் கொண்டும் தண்டாது நீக்கி, அளித் திட்டு, நோக்கி அறியேன், வல்லன், கிழவன் எனக் கூட்டி வினைமுடிவு செய்க. தூங்கும் பதியென இயையும் தூணத்தை யும். நல்லூரையும் யாணரையு முடைய நாடுகிழவோன் என இயைக்க. விளக்கம் : கடைக் கங்குற்போதில் யாவரும் எழுதற்குமுன் தான் துயிலுணர்ந்து எழுந்து கிணைவன் வரவறிந்து வரவேற்று உடையும் உண்டியுந் தந்து சிறப்பித்த சோழன் நலங்கிள்ளியின் நலத்தைப் “பலர் துஞ்சவுந்......” “வீறுசா னன்கலம் நல்கினான்” என்றார். ஆசிரியர் கோவூர்கிழாரும் கிணைவன் கூற்றில் வைத்துக் கூறுவது நோக்கத்தக்கது. மறக்கள வேள்வியும் அறக்கள வேள்வியும் சோழன் செய்துள்ளான் என்பது, “மறவர் மலிந்ததன்... வேள்வித் தூணத்து” என்பதனால் விளங்குகிறது. வங்கத்தை “யாறுசீத்துய்த்துத் துறைதொறும் பிணிக்கும் நல்லூர்” என்றலின், இச்சோழனது பேரூர் கடற்கரைக் கண்ணதாகிய காவிரிப்பூம்பட்டினம் என்பது உய்த் துணரப்படுகிறது. ஆகவே, இவன் கரிகாலனுக்குக் காலத்தாற் பிற்பட்டவன் என்பது தெளிவாம். கிடைத்த பிரதியில் இரண்டொரு திருத்தம் தவிர இப் பாட்டின் முழுவடிவும் இனிது காணக் கிடைத் திலது இடைக்காலத்துத் தமிழகம் தன் பண்டைய இலக்கியச் செல்வத்தைப் பேணுந்துறையில் கருத்தைச் செலுத்தியிருக்கு மாயின், ஆ! இத்தமிழகம் இகழ்வார் தலைமடங்க, புகழ்வார் புகழ்ச்சி முற்றப் பேரிலக்கியப் பெருமையால் நிலவுலகு பரவும் இசை மிக்கு நிலவுவதாம். இடைக்காலத்தே புன்னேறி வீழ்ந்து அறிவு ஆண்மை பொருள் முதலிய வகையில் அடிமையுற்ற தமிழகம், தனது வீழ்ச்சியால் விளைந்த கேட்டினை நினைக்கின்றது; பிறநாட்டார் தலைவணங்க இருந்த தனது பண்டைச் சிறப்பை எண்ணுகிறது; இடையூறுகளையும் இடையீடுகளையும் போக்கற்கு முயலுகிறது. சுருங்கச் சொல்லின், தமிழகம் பண்டைய தமிழ்கூறும் நல்லுலக மாகும் பணியில் பெரும்பாடு படுகிறது. வாழ்க தமிழ்; வீழ்க பகை. வெல்க தமிழகம்; வெல்க தமிழர். புறநானூறு மூலமும் விளக்கவுரையும் முற்றுப்பெற்றன.  குறிப்புகள் குறிப்புகள் குறிப்புகள்