காவியம் செய்த கவியரசர் முனைவர் மா. இராசமாணிக்கனார் நிலவன் பதிப்பகம் நூற் குறிப்பு நூற்பெயர் : காவியம் செய்த கவியரசர் ஆசிரியர் : முனைவர் மா. இராசமாணிக்கனார் பதிப்பாளர் : இ. தமிழமுது பதிப்பு : 2012 தாள் : 16கி வெள்ளைத்தாள் அளவு : தெம்மி எழுத்து : 11 புள்ளி பக்கம் : 16+80 = 96 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) விலை : உருபா. 60/- படிகள் : 000 மேலட்டை : தமிழ்க்குமரன் நூலாக்கம் : திருமதி வி. சித்ரா அச்சிட்டோர் : வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர் வடபழனி, சென்னை - 26. வெளியீடு : நிலவன் பதிப்பகம் எண். 20/33, பி 3 பாண்டியன் அடுக்ககம், ஸ்ரீநிவாசன் தெரு, தியாகராயர் நகர், சென்னை - 17. 044 2433 9030. பதிப்புரை மொழியாலும், இனத்தாலும், அறிவாலும் சிறந்தோங்கி விளங்கிய பழந்தமிழ்க் குலம் படிப்படியாய் தாழ்ச்சியுற்று மீள முடியாத அடிமைச் சகதியிலும், அறியாமைப் பள்ளத்திலும் வீழ்ந்து கிடந்த அரசியல் குமுகாய வரலாற்று உண்மைகளைத் தேடி எடுத்து வழங்குவதை நோக்கமாகக் கொண்டு தமிழ்மண் பதிப்பகத்iதத் தொலைநோக்குப் பார்வையோடு தொடங்கினேன். நீருக்கும் - நெருப்புக்கும், புதையுண்டும் - மறைக்கப்பட்டும், அழிக்கப்பட்டும் - சிதைக்கப்பட்டவையும் போக எஞ்சிய நூல்களைத் தேடி எடுத்து வெளியிட்ட பழந்தமிழ் அறிஞர்களை வணங்கி எம் தமிழ்நூல் பதிப்புச் சுவடுகளைப் பதித்து வருகிறேன். 19ஆம் நூற்றாண்டின் இறுதிக் காலமும் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கக் காலமும் தமிழ்மொழி, தமிழின வரலாற்றின் மறுமலர்ச்சிக் காலமாகும். இந்த மறுமலர்ச்சி காலத்தில்தான் தமிழை உயிராகவும், மூச்சாகவும், வாழ்வாகவும் கொண்ட அரும்பெரும் தமிழரிஞர்கள் தோன்றி தமிழ் மீட்டெடுப்புப் பணியை மேற்கொண்டனர். எதிர்காலத் தமிழ் தலைமுறைக்கு அழியாச் செல்வங்களாக அருந்தமிழ் நூல்களை கொடையாக வழங்கிச் சென்றனர். இவ்வருந்தமிழ்க் கொடைகள் எல்லாம் தமிழர் இல்லந்தோறும் வைத்துப் பாதுகாக்கத் தக்க புதைபொருள் ஆகும். அந்த வகையில் அறிஞர்களின் செந்தமிழ் கருவூலங்களை எல்லாம் தேடி எடுத்து குலை குலையாய் வெளியிட்டு தமிழ்நூல் பதிப்பில் எம் பதிப்புச் சுவடுகளை ஆழமாக பதித்து வருவதை தமிழ் கூறும் நல்லுகம் நன்கு அறியும். எம் தமிழ்நூல் பதிப்புப் பணியின் தொடர் பணியாக தமிழ்ப்பேரறிஞர் முனைவர் மா. இராசமாணிக்கனார் நூல்களை வெளியிடும் நோக்கில் எம் கைக்குக் கிடைத்த சில நூல்களை முதல் கட்டமாக வெளிகொணர்ந் துள்ளோம். எதிர்காலத்தில் அவருடைய ஆக்கங்கள் அனைத்தையும் தேடி எடுத்து பொருள்வழிப் பிரித்து கால வரிசையில் ஆய்வாளர் களுக்கும் தமிழ் உணர்வாளர் களுக்கும் பயன்படும் நோக்கில் திட்டமிட்டுள்ளோம். அகப்பகையும், புறப்பகையும் தமிழர் வாழ்வில் குடிபுகுந்து தமிழினம் நிலைக்குலைந்த வரலாறு கடந்தகால வரலாறு. தொன்மையும், பெருமையும் வாய்ந்த தமிழ்ப் பேரினம் தம் குடிமை இழந்து தாழ்வுற்று மருளும், இருளும் நிறைந்த மூட பழக்க வழக்கங்களால் தன்மானம் இழந்து தாழ்ந்து கிடந்த வரலாற்றை நெஞ்சில் நிறுத்துவோம். தமிழினம் மறுமலர்ச்சி பெறுவதற்கு தம் வாழ்வின் முழுபொழுதையும் செலவிட்ட அறிஞர்களை வணங்குவோம். இந்நூல்களை உங்கள் கையில் தவழ விடுவதில் மகிழ்ச்சியடைகிறோம். கோ. இளவழகன் நுழையுமுன் மனிதரில் தலையாய மனிதரே! ஆசிரியர், ஆய்வாளர், அறிஞர் என்று தம் உழைப்பாலும் திறமையாலும் விடாமுயற்சியாலும் படிப்படியாக உயர்ந்த இராசமாணிக்கனார் தமிழ்நாடு கண்ட மிகச் சிறந்த சிந்தனையாளர்களுள் ஒருவர். மொழி, இனம், நாடு எனத் தமிழ் கூறும் நல்லுலகம் பற்றி ஆழச் சிந்தித்தவர்களுள் அவர் குறிப்பிடத்தக்கவர். சமயஞ் சார்ந்த மூட நம்பிக்கைகளும், சாதிப் பிணக்குகளும், பிறமொழி ஈடுபாடும், பெண்ணடிமைத் தனமும், சடங்கு நாட்டமும், கல்வியறிவின்மையும் தமிழ்ச் சமுதாயத்தைச் சூறையாடிக் கொண்டிருந்த கால கட்டத்தில்தான் இராசமாணிக்கனார் தம் ஆசிரிய வாழ்க்கையைத் தொடங்கினார். தாமுண்டு, தம் குடும்பமுண்டு, தம் வேலையுண்டு என்று அவரால் இருக்க முடியவில்லை. தமிழ் இலக்கியங்களைப் பழுதறப் படித்திருந்தமையாலும், இந்த நாட்டின் வரலாற்றை அடிப்படைச் சான்றுகளிலிருந்து அவரே அகழ்ந்து உருவாக்கியிருந்தமையாலும் மிக எளிய நிலையிலிருந்து உழைப்பு, முயற்சி, ஊக்கம் இவை கொண்டே உயரத் தொடங்கியிருந்தமையாலும் தம்மால் இயன்றதைத் தாம் வாழும் சமுதாயத்திற்குச் செய்வது தமது கடமையென அவர் கருதியிருந்தார். மொழி நலம், தமிழ்த் திருமணம், சாதி மறுப்பு என்பன அவருடைய தொடக்கக் காலக் களங்களாக அமைந்தன. தாய்மொழித் தமிழ், தமிழரிடையே பெறவேண்டிய மதிப்பையும் பயன்பாட்டையும் பெறாமலிருந்தமை அவரை வருத்தியது. `தமிழ் நமது தாய்மொழி’ ஈன்ற தாயைப் போற்றுதல் மக்களது கடமை. அது போலவே நமது பிறப்பு முதல் இறப்பு வரையில் நமக்கு உறுதுணையாக இருந்து நம்மை வாழச் செய்யும் மொழியைக் காப்பதும் வாழ்விக்கச் செய்வதும் தமிழராகிய நமது கடமை. `இன்றைய தமிழரது வாழ்வில் தமிழ் எவ்வாறு இருக்கின்றது?’ ஒரு தமிழன் மற்றொரு தமிழனோடு பேசும்போது பெரும்பாலும் பிறமொழிச் சொற்களைக் கலந்தே பேசுவதைக் காண்கிறோம். இப்பிறமொழிச் சொற்கள் நம் மொழியிற் கலந்து தமிழ் நடையைக் கெடுத்துவிடுகின்றன. ஒரு தமிழ்ச் சொல்லுக்குப் பதிலாகப் பிற மொழிச் சொல்லைப் பயன்படுத்தினால், அந்தத் தமிழ்ச்சொல் நாளடைவில் வழக்கு ஒழிந்துவிடும்’ `பிறமொழிச் சொற்களைக் கலந்து பேசுவதில் தலைசிறந்தவர் தமிழரே ஆவார். மொழிக் கொலை புரிவதில் முதற்பரிசு பெறத்தக்கவர் நம் தமிழரே ஆவர்! `நம் தமிழ்நாட்டுச் செய்தித் தாள்களில் தமிழ்ப் புலமையுடையார் பெரும்பாலும் இல்லையென்றே கூறலாம். அதனாலும், நல்ல தமிழை வளர்க்க வேண்டும் என்ற ஆர்வம் இன்மையாலும், மிகப் பலவாகிய பிறமொழிச் சொற்களைக் கலந்து தமிழ் எழுதி வருகிறார்கள். இவற்றைத் `தமிழ்ச் செய்தித்தாள்கள்’ என்று கூறுவதற்குப் பதிலாக `கலப்பு மொழிச் செய்தித்தாள்கள்’ என்று கூறுதலே பொருந்தும். இவ்வாறு செய்தித் தாள்களில் மொழிக் கொலை புரிவோர் வேற்று நாட்டவரல்லர், வேறு மொழி பேசும் அயலாரல்லர். தமிழகத்தில் பிறந்து தமிழிலேயே பேசிவரும் மக்களாவர் என்பதை வெட்கத்துடன் கூற வேண்டுபவராக இருக்கிறோம்’. நாடு முழுவதும் மொழி நலம் குன்றியிருந்தமையைத் துறை சார்ந்த சான்றுகளோடும் கவலையோடும் சுட்டிக் காட்டியதோடு இராசமாணிக்கனார் நின்றுவிடவில்லை. மொழியை எப்படி வளர்ப்பது, காப்பாற்றுவது, உயர்த்துவது என்பதே அவருடைய தொடர்ந்த சிந்தனையாக இருந்தது. காலங் காலமாக அடிமைப்பட்டுக் கிடந்த சமுதாயம் அவர் கண் முன் நின்றது. வடமொழி ஆதிக்கமும் ஆங்கிலப்பற்றும் தமிழ் மக்களின் கண்களை மூடியிருந்தன. தம் மொழியின், இனத்தின், நாட்டின் பெருமை அறியாது இருந்த அவர்கட்குத் தமிழின் தொன்மையையும் பெருமையையும் சிறப்பையும் எடுத்துச் சொல்வது தம் கடமையென்று கருதினார் இராசமாணிக்கனார். அக்கடமையை நிறைவேற்ற அவர் கையாண்ட வழிகள் போற்றத்தக்கன. தம்முடைய மாணவர்களை அவர் முதற்படியாகக் கொண்டார். நல்ல தமிழில் பேசவும் எழுதவும் அவர்களுக்குப் பயிற்றுவித்தார். சிறுசிறு கட்டுரைகளை உருவாக்கப் பயிற்சியளித்தார். மொழிநடை பற்றி அவர்களுக்குப் புரியுமாறு கலந்துரையாடினார். மொழி நடையைச் செம்மையாக்குவது இலக்கணமும் பல நூல்களைப் படிக்கும் பயிற்சியுமே என்பதை விளங்க வைத்தார். இலக்கணப் பாடங்களைப் பள்ளிப் பிள்ளைகள் விரும்பிப் படிக்குமாறு எளிமைப்படுத்தினார். அதற்கெனவே நூல்களை உருவாக்கினார். அவரிடம் பயின்ற மாணவர்கள் அவர் இலக்கணம் சொல்லிக் கொடுத்த அழகையும், படிப்படியாக இலக்கணத்தை நேசிக்க வைத்த திறனையும் பல இடங்களில் பதிவு செய்துள்ளனர். பயிலும் நேரம் தவிர்த்த பிற நேரங்களிலும் மாணவர்களுடன் உரையாடித் தமிழ் மொழியின் வளமை குறித்து அவர்களைச் சிந்திக்கச் செய்தார். அவரிடம் பயின்றவர்களுள் பலர் பின்னாளில் சிறந்த தமிழறிஞர்களாகவும், நூலாசிரியர்களாகவும் உருவானமைக்கு இத்தகு பயிற்சிகள் உரமிட்டன. பள்ளி ஆசிரியராக இருந்த காலத்திலேயே ஒத்த ஆர்வம் உடையவர்களைச் சேர்த்துக் கொண்டு அப்பகுதியிலிருந்த பொது மக்களுக்குத் தமிழ்க் கல்வியூட்டும் பணியை அவர் செய்துள்ளார். `வண்ணையம்பதியில் தனலட்சுமி தொடக்கப் பள்ளியில் பேராசிரியரின் தமிழ்த்தொண்டு தொடங்கியது. அங்குத் தொடர்ந்து வகுப்புகள் நடத்தினார்.’ பணிகளில் இருந்தவர்களுக்கு வார இறுதி நாட்களில் தமிழ் வகுப்பெடுத்தhர். உறவினர்களைக் கூட அவர் விட்டு வைக்க வில்லை. `குடியரசு’ இதழில் சொற்ப ஊதியத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த தம் மைத்துனர் பு. செல்வராசனை `வித்துவான்’ படிக்க வைத்து, சென்னை அப்துல் அக்கீம் உயர்நிலைப் பள்ளியில் தலைமைத் தமிழாசிரியராகப் பணிபெறச் செய்தார். தமக்குக் கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் மொழிச் சிந்தனைகளை விதைக்கப் பயன்படுத்திக் கொண்டவர், `தமிழர் நல்வாழ்க்கைக் கழகம்’, `நக்கீரர் கழகம்’, `மாணவர் மன்றம்’ முதலிய பொது நல அமைப்புகளோடு தம்மை இணைத்துக் கொண்டார். 1946 இல் சென்னை நக்கீரர் கழகம் என்ற அமைப்பினைத் தொடங்கிய காலத்துப் பேராசிரியர் அவர்களின் அரவணைப்பும் தொண்டும் கழகத்திற்குக் கிடைத்துக் கழகம் வளர்ந்து சிறந்தது. 1946 ஆம் ஆண்டில் நக்கீரர் கழகம் `திருவள்ளுவர்’ என்ற திங்கள் ஏட்டினை நடத்தத் தொடங்கியபோது, பேராசிரியர் தம் கட்டுரைகளை வழங்கியதோடு அல்லாது, தாம் நட்புப் பூண்டிருந்த தவத்திரு ஈராஸ் பாதிரியாரின் கட்டுரையையும் பெற்றுத் தந்து இதழுக்குப் பெருமை சேர்ந்தார். அடியவனின் தமிழ் தொண்டிற்கு ஊக்கமும், உள்ளத்திற்கு உரமும், துவண்டபோது தட்டி எழுப்பி ஊட்ட உரைகளும் அளித்துச் சிறப்பித்தவர் பேராசிரியர்’ என்று இராசமாணிக்கனாரின் தமிழ்த் தொண்டை நினைவு கூர்ந்துள்ளார் நக்கீரர் கழக அமைப்பாளர் சிறுவை நச்சினார்க்கினியன். கல்வி வழி விழிப்புணர்வில் பெருநம்பிக்கை கொண்டிருந் தமையால், `அரசியலாரும் சமூகத் தலைவர்களும் நாடெங்கும் கல்விக் கூடங்களை ஏற்படுத்த வேண்டும். கல்வி கற்கும் வயதுடைய எந்தச் சிறுவனும் சிறுமியும் கற்காமல் இருத்தல் கூடாது’ என்று முழங்கிய இப்பெருமகனார், தாம் வாழ்ந்த பகுதியில் இருந்த அத்தனை குடும்பங்களின் பிள்ளைகளும் பள்ளிப் படிப்புக் கொள்ளுமாறு செய்துள்ளார். பெண்கள் பின்தங்கிய காலம் அது. `அடுப்பூதும் பெண்ணுகளுக்குப் படிப்பெதற்கு’ என்று கேட்டவர்கள் மிக்கிருந்த காலம். அந்தக் கால கட்டத்தில்தான் பேராசிரியர் பெண் கல்விக்காகக் குரல் கொடுத்தார். எட்டாம் வகுப்பே படித்திருந்த தம் மனைவிக்குத் தாமே ஆசிரியராக இருந்து பயிற்றுவித்து அவரை, `வித்துவான்’ பட்டம் பெறச் செய்தார். `என் கணவர் எனக்கு ஆங்கிலப் பாடமும் தமிழ்ப்பாடமும் கற்பித்து வந்தார். பாடம் கற்பிக்கும் நேரத்தில் பள்ளி ஆசிரியராகவே காணப்பட்டார். ஒவ்வொரு பெண்ணும் தன்னைக் காத்துக் கொள்ளும் வகையில் கல்வி கற்றுப் பொருளீட்ட வேண்டும் என்பது என் கணவர் கருத்து. அதனால், என்னைப் பெண்கள் பள்ளியில் தமிழாசிரியராக அமர்த்தினார். மாணவியர்க்கு மொழியுணர்வும் நாட்டுணர்வும் வருமாறு பேசவேண்டும் என்று அவர் அடிக்கடி கூறுவார்’ என்று `என் கணவர்’ என்ற கட்டுரையில் திருமதி கண்ணம்மாள் இராசமாணிக்கனார் கூறியுள்ளமை இங்குக் கருதத்தக்கது. மொழி, இனம், நாடு இவற்றைப் பற்றி அறிந்திருந்தால் தான் அவற்றை நேசிக்கவும் அவற்றிற்குத் துணை நிற்கவும் முடியுமென்பதில் அவர் தெளிவாக இருந்தமையால்தான், `கல்வி’யில் அக்கறை காட்டினார். அவருடைய ஆசிரியப் பணி அதற்குத் துணையானது. தம்மிடம் பயில வந்தவர்க்கு மொழியுணர்வூட்டினார். `தமிழகத்தில் ஆட்சி தமிழிலேயே இயங்க வேண்டும். எல்லாக் கல்வி நிலையங்களிலும் ஆங்கிலம் ஒழிந்த எல்லாப் பாடங்களையும் தமிழில் கற்பித்தல் வேண்டும்’ என்பது அவர் கொள்கையாக இருந்தது. “அறிவியல் மனப்பான்மையை ஊட்டி வளர்க்கும் முறையில் அமைந்த பாடநூல்களையே பிள்ளைகள் படிக்கும்படிச் செய்தல் வேண்டும்”. உலக நாடுகளோடு தம் நாட்டை ஒப்பிட்டுப் பார்த்துக் குறைகளை நிறைவாக்கும் மனப்பாங்கு வளரும்படியான முறையில் கல்வி அளிக்கப்படல் வேண்டும். கடவுள் பற்றும், நல்லொழுக்கமும், சமுதாய வளர்ச்சியில் நாட்டமும் ஊட்டத் தக்க கல்வியை ஏற்ற திட்டங்கொண்டு நடை முறைக்குக் கொண்டு வருதல் வேண்டும்’ என்று அவர் எழுதியுள்ளார். `பேச்சுத் தமிழே எழுத்துத் தமிழுக்கு அடிப்படை ஆதலால், நமது பேச்சுத் தமிழ் பெரும்பாலும் தூய தமிழ்ச் சொற்களைக் கொண்டதாக இருத்தல் வேண்டும். அப்பொழுது தான் நாம் எழுதும் தமிழ் நல்ல தமிழ் நடையில் இருக்கமுடியும்’ என்பது அவர் கருத்தாக இருந்தமையால், தம்மிடம் பயின்ற மாணவர்களை அவர் நல்ல தமிழில் பேசுமாறு வழிப்படுத்தினார். அதற்காகவே தாம் பணியாற்றிய பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் இருந்த மாணவர் மன்றங்களைச் செயலூக்கம் பெற வைத்தார். தமிழ் மன்றங்கள் இல்லாத கல்வி நிலையங்கள் அவற்றைப் பெறுமாறு செய்தார். பேச்சையும் எழுத்தையும் இளைஞர்கள் வளப்படுத்திக் கொள்ள உதவுமாறு `வழியும் வகையும்’ என்றொரு சிறு நூல் படைத்தளித்தார். எண்ணங்களை எப்படி உருவாக்கிக் கொள்வது, அந்த எண்ணங்களை வெளிப்படுத்த எத்தகு சொற்களைத் தேர்ந்து கொள்வது, அச்சொற்களை இணைத்துத் தொடர்கiள எப்படி அமைப்பது, பின் அத்தொடர்களைக் கேட்டார்ப் பிணிக்கும் தகையனவாய் எங்ஙனம் அழகு படுத்துவது என்பன பற்றி நான்கு தலைப்புகளில் அமைந்த இந்நூல் இளைஞர் களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதுடன் இராசமாணிக்கனாரின் மொழி வழிச் சிந்தனைகளுக்கும் சிறந்த சான்றாக அமைந்தது. தமிழ்மொழியின் தொன்மை, பெருமை இவற்றைத் தமிழர்கள் அறிய வேண்டும் என்பதற்காகவே `தமிழ் மொழிச் செல்வம்’, `தமிழ் இனம்’, `தமிழர் வாழ்வு’, `என்றுமுள தென்றமிழ்’, `புதிய தமிழகம்’ என்னும் அவருடைய நூல்கள் தமிழ் மக்களுக்கு அவர்கள் மறந்திருந்த மொழியின் பெருமையை, சிறப்பை அடையாளப்படுத்தின. `ஒரு மொழி பேசும் மக்கள் தம் மொழியின் பழைமைகளையும் பெருமையையும் வளர்ச்சியையும் நன்கு அறிந்தாற்றான், அம்மொழியினிடத்து ஆர்வமும் அதன் வளர்ச்சியில் கருத்தும் அம்மொழி பேசும் தம்மினத்தவர் மீது பற்றும் கொள்வர். இங்ஙனம் மொழியுணர்ச்சி கொள்ளும் மக்களிடையே தான் நாட்டுப்பற்றும் இனவுணர்ச்சியும் சிறந்து தோன்றும். ஆதலின், ஓரினத்தவர் இனவொற்றுமையோடு நல் வாழ்வு வாழ மொழிநூலறிவு உயிர்நாடி போன்ற தாகும். இம்மொழி நூலறிவு தற்காப்புக்காகவும், தம் வளர்ச்சிக்காகவும் வேண்டற்பாலது என்பதைத் தமிழ் மக்கள் அறிதல் நலமாகும்’ என்ற அவர் சிந்தனைகள் இந்நூல்கள் மக்களிடையே வேர் பிடிக்கச் செய்தன. தமிழ் மக்களுக்கு மொழிப் பற்றையும், மொழியறிவையும் ஊட்டிய அதே காலகட்டத்தில், அவர்களை நாட்டுப்பற்று உடையவர்களாகவும் மாற்றினார். தமிழ் நாட்டின் பெருமையை, வரலாற்றை இந்த நாட்டில் பிறந்த ஒவ்வொரு குடிமகனும் நன்கு அறிந்திருக்க வேண்டும் என்பதற்காகவே, `தமிழக ஆட்சி’, `தமிழ்க் கலைகள்’, `தமிழர் நாகரிகமும் பண்பாடும்’, `தமிழக வரலாறு’ என்னும் நூல்களை எழுதி வெளியிட்டார். நாட்டுக்கhக உழைத்த அறிஞர்களின் வரலாறுகளைச் சிறுசிறு நூல்களாக்கி இளைஞர்கள் அவற்றைப் படித்துய்ய வழிவகுத்தார். இளைஞர்கள் படித்தல், சிந்தித்தல், தெளிதல் எனும் மூன்று கோட்பாடுகளைக் கைக்கொண்டால் உயரலாம் என்பது அவர் வழிகாட்டலாக இருந்தது. மொழி, இனம், நாடு எனும் மூன்றையும் தமிழர்க்குத் தொடர்ந்து நினைவூட்டல் எழுதுவார், பேசுவார் கடமையென்று அவர் கருதியமையால் தமிழ் எழுத்தாளர்கள் எங்ஙனம் அமைதல் வேண்டுமென்பதற்குச் சில அடையாளங்களை முன்வைத்தார். `தாமாக எண்ணும் ஆற்றல் உள்ளவரும் உண்மையான தமிழ்ப்பற்று உடையவருமே நல்ல எழுத்தாளர். தமிழ் எழுத்தாளர் தமிழ் இலக்கண, இலக்கியங்களைப் படித்தவராக இருப்பது நல்லது. தாழ்ந்துள்ள தமிழ்ச் சமுதாயத்தை உயர்த்தப் பயன்படும் நூல்களை எழுதுவதையே எழுத்தாளர்கள் தங்கள் சிறந்த கடமையாகக் கருத வேண்டும். சமுதாயத்தில் இன்றுள்ள தீண்டாமை, பெண்ணடிமை, மூட நம்பிக்கைகள், கண்மூடித் தனமான பழக்கவழக்கங்கள் முதலிய பிற்போக்குத் தன்மைகளை வன்மையாகக் கண்டிக்கும் நெஞ்சுறுதி எழுத்தாளர்க்கு இருக்கவேண்டும்’ அத்தகைய எழுத்தாளர்கள், `தமிழர்’ என்ற அடிப்படையில் ஒன்று கூடுதல் வேண்டும் என்று அவர் விழைந்தார். அதனாலேயே மதுரையில் தியாகராசர் கல்லூரியில் பணியாற்றிய காலத்தில் மதுரை எழுத்தாளர் மன்றத்தை உருவாக்கி அது சிறந்த முறையில் இயங்குமாறு துணையிருந்தார். இம்மன்றத்தின் தலைவராக இருந்து மன்றத்தின் முதல் ஆண்டு விழாவில் அவர் ஆற்றிய உரை தமிழ் எழுத்தாளர் கடமைப் பற்றிய அவருடைய அறை கூவலாக அமைந்தது. `தமிழகத்தில் பல நூற்றாண்டுகளாக ஆட்சி மொழியாக இருந்த நமது தமிழ் பிற்காலத்தில் தனது அரியணையை இழந்தது; இப்பொழுது வளர்ந்து வருகின்றது. எழுத்தாளர்கள் இதனை மனத்தில் பதிய வைத்தல் வேண்டும் அதன் தூய்மையையும் பெருமையையும் தொடர்ந்து பாதுகாப்பதே தங்கள் கடமை என உணர்தல் வேண்டும். `மக்கள் பேசுவது போலவே எழுதவேண்டும் அதுதான் உயிர் உள்ள நடை என்று சொல்லிப் பாமர மக்கள் பேச்சு நடையையே எழுத்தாளர் பலர் எழுதி வருகின்றனர். பாமர மக்களது நடை பொதுமக்களுக்கு நன்கு தெரியும்; அதைத் தெரிந்து கொள்ள எழுத்தாளர் நூல்களை விலை கொடுத்து வாங்க வேண்டிய தேவை இல்லை அல்லவா? கொச்சை மொழி பேசும் மக்களுக்கு வாழ்க்கைக்குத் தேவையான படிப்பினைகளை ஊட்டுவதோடு, இனிய, எளிய, செந்தமிழ் நடையையும் அறிமுகம் செய்து வைப்பதுதான் எழுத்தாளரது கடமையாக இருத்தல் வேண்டும். எழுத்தாளர் தங்கள் எளிய, இனிய செந்தமிழ் நடைக்கு மக்களை அழைத்துச் செல்ல வேண்டுமே தவிர, மக்களுடைய பேச்சு நிலைக்குத் தங்களை இழித்துக் கொண்டு போவது முறையன்று. சிறந்த கருத்துக்களோடு பிழையற்ற எளிய நடையையும் பொதுமக்களுக்கு ஊட்டுவது எழுத்தாளர் கடமை என்பதை அவர்கள் மறந்து விடலாகாது. இதுவே அறநெறிப்பட்ட எழுத்தாளர் கடமை என்பதை நான் வற்புறுத்த விரும்புகிறேன். சாதிகள் ஒழிந்து சடங்குகள் அற்ற சமயம் நெறிப்படத் தமிழர், `தமிழ் வாழ்வு’ வாழ வேண்டுமென்பதில் அவர் கருத்தாக இருந்தார். அதனால் தான், வாழ்க்கையின் தொடக்க நிலையான திருமணம் தமிழ்த் திருமணமாக அமைய வேண்டுமென அவர் வற்புறுத்தினார். இதற்காகவே அவர் வெளியிட்ட `தமிழர் திருமண நூல்’, தமிழ்ப் பெரியார்களின் ஒருமித்த வரவேற்பையும் பாராட்டையும் பெற்றது. தமிழ் நாட்டளவில் அதற்கு முன்போ அல்லது பின்போ, ஏன் இதுநாள் வரையிலும் கூட வேறெந்தத் தமிழ் நூலும் இதுபோல் தமிழ்கூறும் நல்லுலகத்தின் ஒருமித்த அரவணைப்பைப் பெற்றதாக வரலாறு இல்லை. `எல்லோரும் வேலை செய்து பிழைக்கவேண்டும். பிச்சை எடுப்பவரே நாட்டில் இருக்கக் கூடாது’ `வலியவர் மெலியவரை ஆதரித்தால் நாட்டில் அமைதியும் இன்பமும் பெருகும்’ என்று கூறும் இராசமாணிக்கனார், `கல்வி மட்டுமே ஒருவரைப் பண்படுத்துவதில்லை. ஒழுக்கம் வேண்டும். எல்லோரும் ஒழுக்கத்திற்கு மதிப்பைத் தரவேண்டும். ஒழுக்கம் உயிரினும் சிறந்தது. ஒழுக்கத்தோடு உறையும் கல்விதான் மனிதனை உயர்விக்கும்’ என்று தெளிவுபடுத்தியுள்ளார். மொழி, இனம், நாடு, கல்வி, சமயம், மக்கள் நலம், கோயில்கள் எனப் பலவும் கருதிப் பார்த்துத் தமிழ் மொழி சிறக்க, தமிழினம் உயர, தமிழ்நாடு வளம்பெறப் பயனுறு சிந்தனை விதைகளைத் தம் வாழ்நாள் அநுபவ அறுவடையின் பயனாய் இந்த மண்ணில் விதைத்த இராசமாணிக்கனார், `உண்மை பேசுதல், உழைத்து வாழுதல், முயற்சியுடைமை, அறிவை வளர்த்தல், நேர்மையாக நடத்தல், பிறர்க்குத் தீங்கு செய்யாமை முதலியன நேரிய வாழ்க்கைக்குரிய கொள்கைகளாம்’ என்று தாம் கூறியதற்கு ஏற்ப வாழ்ந்த நூற்றாண்டு மனிதர். மறுபிறப்பு நேர்ந்தால், `மீண்டும் தமிழகத்தே பிறக்க வேண்டும்’ என்று அவாவிக் கட்டுரைத்த தமிழ்மண் பற்றாளர். `அவரை முழுமையாகப் படம்பிடித்துக் காட்டும் நூற்பா வடிவிலான ஒருவரி சொல்லட்டுமா?’ எனக் கேட்கும் அவரது கெழுதகை நண்பர் வல்லை பாலசுப்பிரமணியம் சொல்கிறார்: `இராசமாணிக்கனார் மதியால் வித்தகர்; மனத்தால் உத்தமர்’, `மனிதரில் தலையாய மனிதரே’ எனும் அப்பர் பெருமானின் திருப்பூவணப்பதிகத் தொடர் இப்பெருந்தகையைக் கருத்தில் கொண்டே அமைந்தது போலும்! டாக்டர் இரா. கலைக்கோவன் நூல்கள் (கால வரிசையில்) 1. நாற்பெரும் வள்ளல்கள் 1930 2. ஹர்ஷவர்த்தனன் 1930 3. முடியுடை வேந்தர் 1931 4. நவீன இந்திய மணிகள் 1934 5. தமிழ்நாட்டுப் புலவர்கள் 1934 6. முசோலினி 1934 7. ஏப்ரஹாம் லிங்கன் 1934 8. அறிவுச்சுடர் 1938 9. நாற்பெரும் புலவர்கள் 1938 10. தமிழர் திருமண நூல் 1939 11. தமிழர் திருமண இன்பம் 1939 12. மணிமேகலை 1940 13. மொஹெஞ்சொதாரோ அல்லது சிந்துவெளி நாகரிகம் 1941 14. பாண்டியன் தமிழ்க் கட்டுரை (முதல் தொகுதி) 1941 15. பல்லவர் வரலாறு 1944 16. மறைந்த நகரம் (மாணவர் பதிப்பு) 1944 17. சேக்கிழார் (ஆராய்ச்சி நூல்) 1945 18 இரண்டாம் குலோத்துங்கன் 1945 19. கட்டுரை மாலை 1945 20. செய்யுள் - உரைநடைப் பயிற்சி நூல் 1945 21. முத்தமிழ் வேந்தர் 1946 22. காவியம் செய்த கவியரசர் 1946 23. விசுவநாத நாயக்கர் 1946 24. சிவாஜி 1946 25. சிலப்பதிகாரக் காட்சிகள் 1946 26. இராஜேந்திர சோழன் 1946 27. பல்லவப் பேரரசர் 1946 28. கட்டுரைக் கோவை 1946 29. சோழர் வரலாறு 1947 30. ஆராய்ச்சிக் கட்டுரைகள் 1947 31. பண்டித ஜவாஹர்லால் நெஹ்ரு 1947 32. வீரத் தமிழர் - 1947 33. இருபதாம் நூற்றாண்டுப் ஸபலவர் பெருமக்கள் 1947 34. இந்திய அறிஞர் 1947 35. தமிழ்நாட்டு வடஎல்லை 1948 36. பெரியபுராண ஆராய்ச்சி 1948 37. கதை மலர் மாலை (மலர் ஒன்று0 1948 38. இராஜன் சிறுவர்க்குரிய கதைகள் 1948 39. சிறுகதைக் களஞ்சியம் (பகுதி 1- 3) 1949 40. மேனாட்டுத் தமிழறிஞர் 1950 41. தென்னாட்டுப் பெருமக்கள் 1950 42. இந்தியப் பெரியார் இருவர் 1950 43. தமிழ்ப் புலவர் பெருமக்கள் 1950 44. நாற்பெரும் புலவர் 195 45. மறைமலையடிகள் 1951 46. அயல்நாட்டு அறிஞர் அறுவர் 1951 47. சங்கநூற் காட்சிகள் 1952 48. இளைஞர் இலக்கணம் (முதல் மூன்று பாரங்கட்கு உரியது) 1953 49. விஞ்ஞானக் கலையும் மனித வாழ்க்கையும் 1953 50. பாண்டிய நாட்டுப் பெரும் புலவர் 1953 51. சேக்கிழார் (மாணவர் பதிப்பு) 1954 52. திருவள்ளுவர் காலம் யாது? 1954 53. சைவ சமயம் 1955 54. கம்பர் யார்? 1955 55. வையை 1955 56. தமிழர் திருமணத்தில் தாலி 1955 57. பத்துப்பாட்டுக் காட்சிகள் 1955 58. இலக்கிய அறிமுகம் 1955 59. அருவிகள் 1955 60. தமிழ் மொழிச் செல்வம் 1956 61. பூம்புகார் நகரம் 1956 62. தமிழ் இனம் 1956 63. தமிழர் வாழ்வு 1956 64. வழிபாடு 1957 65. இல்வாழ்க்கை 1957 66. தமிழ் இலக்கணம் (இளங்கலை வகுப்பிற்கு உரியது) 1957 67. வழியும் வகையும் 1957 68. ஆற்றங்கரை நாகரிகம் 1957 69. தமிழ் இலக்கண இலக்கியக் கால ஆராய்ச்சி 1957 70. என்றுமுள தென்றமிழ் 1957 71. சைவ சமய வளர்ச்சி 1958 72. பொருநை 1958 73. அருள்நெறி 1958 74. தமிழரசி 1958 75. இலக்கிய அமுதம் 1958 76. எல்லோரும் வாழவேண்டும் 1958 77. தமிழகக் கலைகள் 1959 78. தமிழக ஆட்சி 1959 79. தமிழக வரலாறு 1959 80. தமிழர் நாகரிகமும பண்பாடும் 1959 81. தென்பெண்ணை 1959 82. புதிய தமிழகம் 1959 83. நாட்டுக்கு நல்லவை 1959 84. தமிழ் அமுதம் 1959 85. பேரறிஞர் இருவர் 1959 86. துருக்கியின் தந்தை 1959 87. தமிழகக் கதைகள் 1959 88. குழந்தைப் பாடல்கள் 1960 89. கட்டுரைச் செல்வம் 1960 90. தமிழகப் புலவர் 1960 91. தமிழ் மொழி இலக்கிய வரலாறு (சங்க காலம்) 1963 92. தமிழக வரலாறும் தமிழர் பண்பாடும் 1964 93. தமிழ் அமுதம் (மாணவர் பதிப்பு) 1965 94. சேக்கிழார் (சொர்ணம்மாள் நினைவுச் சொற்பொழிவுகள்) 1969 95. பத்துப்பாட்டு ஆராய்ச்சி 1970 96. கல்வெட்டுகளில் அரசியல் சமயம் சமுதாயம் 1977 97. இருபதாம் நூற்றாண்டில் தமிழ் உரைநடை வளர்ச்சி 1978 98. இலக்கிய ஓவியங்கள் 1979 பதிப்பு ஆண்டு தெரியாத நூல்கள் 99. சிறுவர் சிற்றிலக்கணம் 100. பைந்தமிழ் இலக்கணமும் கட்டுரையும் 101. பாண்டியன் தமிழ்க் கட்டுரை (தொகுதி -2) ஆங்கில நூல் 102. The Development of Saivism in South India 1964 பார்வைக்குக் கிடைக்காத நூல்கள் 1. பதிற்றுப்பத்துக் காட்சிகள் 2. செந்தமிழ்ச் செல்வம் 3. தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் 4. பள்ளித் தமிழ் இலக்கணம் 5. செந்தமிழ்க் கட்டுரை (முதல், இரண்டாம் புத்தகங்கள்) 6. செந்தமிழ்க் கதை இன்பம் (முதல், இரண்டாம் பகுதிகள்) பொருளுடக்கம் இளங்கோ அடிகள் 1 2. மதுரைக் கூலவாணிகன் சாத்தனார் 27 3. சேக்கிழார் 41 4. கம்பர் 67 காவியம் செய்த கவியரசர் 1. இளங்கோ அடிகள் 1. சேர நாடும் சேரரும் தமிழகம் வேங்கட மலைக்குத் தென்பாற்பட்ட நிலப்பரப்புப் பழைய காலத்தில் ‘தமிழகம்’ எனப்பட்டது. இது வடக்கே வேங்கடத்தையும் தெற்கே கன்னி முனையும் கிழக்கில் வங்கக் கடலையும் மேற்கே அரபிக் கடலையும் எல்லைகளாகப் பெற்றிருந்தது. தமிழ் மொழி ஒன்றே பேசப்பட்டு வந்ததால் இப்பகுதி ‘தமிழகம்’ எனப் பெயர்பெற்றது. இப்பகுதி சேர நாடு, சோழ நாடு, பாண்டிய நாடு, கொங்கு நாடு, தொண்டை நாடு என்னும் ஐந்துபெரும் பிரிவுகளாகப் பகுக்கப்பட்டிருந்தது. இவற்றில் தொண்டை நாடு சோழர்க்கும் கொங்கு நாடு சேரர்க்கும் உட்பட்டிருந்த காலமும் உண்டு. மேலும் அவ்விரு நாடுகளும் பழைய காலத்தில் தனித்தனியே ஒரு பேரரசன் ஆட்சியில் இருந்ததென்று கூறக் கூடவில்லை. எனவே, தனிப்பட்ட முறையில் முடியாட்சி பெற்று விளங்கிய நாடுகள் மூன்றே என்னலாம். அம்மூன்றே சேர-சோழ-பாண்டிய நாடுகள் என்பவை. தமிழகப் பிரிவுகள் வேங்கடம் முதல் சிதம்பரத்திற்கு வடக்கேயுள்ள வெள்ளாறு வரையுள்ள நிலப்பகுதி தொண்டை நாடு என்னலாம். இதன்கண் செங்கற்பட்டு, வட ஆர்க்காடு, தென் ஆர்க்காடு ஜில்லாக்களும் சித்தூர், நெல்லூர் ஜில்லாக்களின் சிலபகுதிகளும் அடங்கும். தொண்டை நாட்டின் தலைநகரம் காஞ்சி மாநகரம். முல்லை எனப்பட்ட மஹாபலிபுரம் சிறந்த துறைமுகப் பட்டினமாகும். சிதம்பரத்திற்கு வடக்கேயுள்ள வெள்ளாறு முதல் அறந்தாங்கித் தாலுக்காவில் பாயும் வெள்ளாறு வரையுள்ள நாடு சோழ நாடு எனப் பெயர் பெறும். இது பெரும்பாலும் தஞ்சாவூர், திருச்சி ஜில்லாக்களைக் கொண்ட நிலப் பகுதியாகும். இதன் பழைய தலைநகரம் உறையூர்; பிறகு காவிரிப்பூம்பட்டினம் என்ற துறைமுக நகரமும் தலைநகராக இருந்தது. இந்நாடு, காவிரியாறு தன் துணை யாறுகளுடனும் கிளை யாறுகளுடனும் பாய்வதால் வளமிக்க நாடாக இருந்துவருகிறது. இதனைச் சோழர் என்ற மரபரசர் பல நூற்றாண்டுகளாக ஆண்டு வந்தனர். முன் சொன்ன தென் வெள்ளாறு முதல் கன்னியாகுமரி முனைவரையுள்ள நிலப் பகுதி பாண்டியநாடு எனப்பட்டது. இதன் கண் இன்றைய மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி ஜில்லாக்கள் அடங்கும். இதன் தலைநகரம் மதுரை. கொற்கை என்பது துறைமுகப்பட்டினம் ஆகும். இந்நாட்டைப் பல நூற்றாண்டுகளாக ‘பாண்டியர்’ என்ற மரபினர் ஆண்டுவந்தனர். அவர்கள் மதுரையில் ஒரு தமிழ்ச் சங்கத்தை வைத்துத் தமிழை வளர்த்து வந்தனர். அச்சங்கப் புலவர்களால் செய்யப்பட்ட பாடல்களும் நூல்களுமே இன்று ‘சங்க நூல்கள்’ என்று சொல்லப்படுவனவாகும். அவை தொல்காப்பியம், அகநானூறு, புறநானூறு, கலித்தொகை, ஐங்குறுநூறு, நற்றிணை, குறுந்தொகை, பரிபாடல், பதிற்றுப்பத்து, திருக்குறள், சிலப்பதிகாரம், மணிமேகலை என்பன. அந் நூல்களின் இறுதிக் காலம் ஏறத்தாழக் கி. பி. 400 என்று சொல்லலாம். அந்நூல்களின் துணையைக் கொண்டே கி. பி. 400-க்கு முற்பட்ட தமிழகத்து வரலாற்றைக் கூறக் கூடும். கொங்குநாடு என்பது இன்றைய கோயம்புத்தூர், சேலம், நீலகிரி ஜில்லாக்களைக் கொண்ட நிலப்பகுதியாகும். இதன்கண் தகடூரை ஆண்ட அதியமான்கள், கொல்லிமலை நாட்டை ஆண்ட ஓரிபோன்ற மழவர்கள், முதிரமலை நாட்டை ஆண்ட குமணன் மரபினர் முதலியோர் சிற்றரசர்களாக இருந்து வந்தனர். இந்நாடு சேர, பாண்டிய, சோழநாடுகட்கு இடையில் இருப்பதால், பேரரசர்க்குள் நடந்த போர்களில் கொங்குநாடு போர்க்களமாக வேண்டிய நிலைமை ஏற்பட்டுவந்தது. சேர நாடு சேர நாடு, என்பது கொச்சி, திருவாங்கூர் நாடுகளும் மலையாள ஜில்லாவும் சேர்ந்த நிலப் பகுதியாகும். இந்நாடு மலைநாடு ஆதலின் ‘மலையாளம்’ எனப் பெயர் பெறும்; இந்நாட்டு மக்கள் ‘மலையாளிகள்’ எனப் பெயர் பெறுவர். இந்நாடு இயற்கை அழகிற்குப் பெயர் பெற்றது. வானளாவிய மலைத் தொடர்கள் கண்ணுக்கினிய காட்சியை நல்குவன. அம்மலைகள் மீதும் அவற்றை அடுத்தும் அடர்ந்த காடுகள் பல உண்டு. அவற்றில் யானைகள் மிகுதியாக வாழ்கின்றன. சந்தனம், அகில், தேக்கு மரங்கள் ஏராளமாகப் பயிராகின்றன. சேர நாட்டில் மிளகு மிகுதியாகப் பயிராகின்றது. இவை அனைத்தும் கி. மு. 1000 முதல் அயல் நாடுகட்கு ஏற்றுமதியாயின. இவ் வளமிக்க நாட்டின் தலைநகரம் புகழ்மிக்க வஞ்சி மாநகரம் என்பது. அது கொச்சி நாட்டில் உளளது; இன்று பாழ்பட்ட பல சிற்றூர்களாகக் காட்சி அளிக்கின்றது. முசிறி, தொண்டி என்பன பழைய துறைமுகப் பட்டினங்கள் ஆகும். இந்நாட்டில் ‘பெரியாறு’ என்பது ஒன்றே வளமுடையயாறாகும். சேரர் இச்சேர நாட்டைச் சேரலர் அல்லது சேரர் என்னும் மரபினர் பன்னெடுங் காலமாக ஆண்டு வந்தனர். அவர்கள் வானளாவிய மலைநாட்டினர் ஆதலின் ‘வானவர்’ என்றும் அழைக்கப்பட்டனர். வான்மீகி இராமாயணம் போன்ற பழைய நூல்களிலேயே இச்சேரர் மரபினர் குறிக்கப்பட்டுள்ளனர். கி. மு. மூன்றாம் நூற்றாண்டின் இடைப் பகுதியில் வாழ்ந்த அசோகன் சாஸனங்களிலும் கேரள புத்திரர் குறிக்கப்பட்டனர் எனின், இவர்கள் பழைமையை நன்குணரலாம். சங்க காலச் சேர மன்னர் சங்க நூல்களில் சேரரைப் பற்றியே பாடப்பட்டுள்ள நூல் பதிற்றுப் பத்து ஒன்றே யாகும். அதனில் ஒவ்வொரு சேர அரசனைப் பற்றியும் பத்துப் பாடல்கள் காண்கின்றன. அந்நூலில் முதற் பத்தும் இறுதிப் பத்தும் இல்லை. இடைப்பட்ட எட்டுப் பத்துக்களையும் காணச் சேர அரசர் எண்மர் வரலாறுகளை ஓரளவு அறியலாம். அவ்வெண்மர் யாவர்? அவர்கள், (1) இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் (2) பல்யானைச் செல்கெழு குட்டுவன் (3) களங்காய்க் கண்ணி நார்முடிக் சேரல் (4) கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன் (5) ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் (6) செல்வக் கடுங்கோ வாழியாதன் (7) பெருஞ்சேரல் இரும்பொறை (8) இளஞ்சேரல் இரும்பொறை என்போராவர். Òபுறநானூறு முதலிய பிற நூல்களில் ‘இரும் பொறை’ என்று முடிகின்ற சேர மன்னர் பெயர்கள் சில காண்கின்றன. அவர்கள் சேர அரச மரபினருள் ஒரு கிளையினர் ஆவர். அவர்கள் மாந்தை, தொண்டி முதலிய நகரங்களைச் சூழவுள்ள நிலப் பகுதியை (சேர நாட்டு உட்பிரிவாகிய மண்டலங்களை) ஆண்டு வந்தவராவர். நெடுஞ்சேரலாதன் இங்ஙனம் வஞ்சியைத் தலைநகராகக் கொண்டு சேர நாட்டை ஆண்ட சேரருள் நெடுஞ்சேரலாதன் என்பவன் ஒருவன். இவன் ஏறத்தாழ ஐம்பத்தெட்டு ஆண்டு அரசாண்டான். இவன் இமயம்வரை சென்று மீண்ட காரணத்தால் ‘இமயவரம்பன்’ எனப்பட்டான் போலும்! இவன் சிறந்த போர்வீரன். இவனுக்கு மனைவியர் இருவர். இவருள் மூத்தவளும் கோப்பெருந்தேவியுமானவள் நற்சோணை என்பவள். அவள் ‘மணக்கிள்ளி’ என்ற சோழ அரசன் மகளாவாள். மற்றொரு மனைவி பழநிமலை நாட்டை ஆண்ட பதுமன் என்ற அரசன் மகளாவள். நுற்சோணைக்குப் பிறந்தவர்கள் செங்குட்டுவன், இளங்கோ என்ற ஆண்மக்கள் இருவராவர். இரண்டாம் மனைவிக்குப் பிறந்தவர் நார்முடிச் சேரல், ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் என்னும் ஆண் மக்கள் இருவர் ஆவர். 2. இளங்கோ ‘அடிகள்’ ஆதல் கல்வி பயிற்சி நெடுஞ் சேரலாதன் சிறந்த தமிழ் அறிஞன். அவனைப் புலவர் பலர் பாடிப் பரிசில் பெறுதல் வழக்கம். அவனது அவைக்களப் புலவருள் பண்பட்ட புலமையுடையார் ஒருவர் செங்குட்டுவனுக்கும் இளங்கோவுக்கும் இளமை முதலே தமிழ் கற்பிக்கத் தொடங்கினார். அரசிளங்குமரர் இருவரும் தொல்காப்பியம் முதலிய இலக்கண நூல்களையும் அக்காலத்தில் இருந்து இக்காலத்தில் அழிந்துபட்ட பழைய காவியங்களையும் பழம் புலவர் பாக்களையும் திருக்குறளையும் ஐயந்திரிபறக் கற்றனர். இளங்கோ படிப்பில் பேரூக்கம் செலுத்திப் பெரும் புலமை பெற்றார்; கவி பாடும் ஆற்றலை அடைந்தார். செங்குட்டுவன் சிவபிரான் அருளாற் பிறந்தவன். அவன் படைக்கலப் பயிற்சியில் ஒப்புயர்வற்று விளங்கினான். இளங்கோ இளமை முதலே பல சமயங்களைப் பற்றிய நூல்களைப் படித்து, அவற்றைப்பற்றிய ஆராய்ச்சியில் காலம் கழித்துவந்தார். நெடுஞ்சேரலாதன் இம்மக்கள் இருவரையும் தன் இருகண்கள் எனக் கருதி உள்ளம் பூரித்தான். அரசனது பேரவை கல்வி நிரம்பப்பெற்ற தன் மக்களை நெடுஞ்சேரலாதன் நாள்தோறும் தனது பேரவைக்கு அழைத்துச் செல்லுதல் வழக்கம். தனக்குப் பின் சேரப் பெருநாட்டை ஆளவேண்டிய அம்மக்கள் தன் காலத்திலேயே போதிய அரசியல் அநுபவம் பெற வேண்டும் என்பது அவனது அவாவாகும். மக்கள் இருவரும் தந்தையின் அரியாசனத்திற்கு இருபுறங்களிலும் உள்ள ஆசனங்களில் அமர்ந்து, அவையில் அன்றாடம் நடைபெற்று வந்த அரசியல் காரியங்களைக் கவனித்து வந்தனர். அமைச்சரும் பிற அலுவலாளரும் பெருஞ் செல்வரும் அரசிளங்குமரர்மீது மிக்க அன்பும் மரியாதையும் காட்டி வந்தனர். அரசன் சிற்சில சமயங்களில் தன் மக்களது அரசியல் அறிவைப் பரிசோதிக்கப் பேரவையிலேயே சில கேள்விகள் கேட்பதுண்டு. செங்குட்டுவனும் இளங்கோவும் யோசித்துக் தக்கவாறு பதில் அளித்து அவையோரை மகிழ்வித்தல் வழக்கம். சோதிடன் குறிப்பு இங்ஙனம் நாள்தோறும் நடைபெற்று வந்த பேரவையில் ஒருநாள் அயல்நாட்டுச் சோதிடன் ஒருவன் அரசனைக் காண வந்திருந்தான். அவன் அரசனுக்கு இருபுறங்களிலும் இருந்த அரசிளங்குமரரை உற்றுக் கவனித்தான். பின்னர் அவன் நடு அவையில் எழுந்து சேர வேந்தனைப் பணிந்து, “சேரர் பெருமானே, வாழ்க நும் கொற்றம். உமக்கு இருபுறங்களிலும் வீற்றிருக்கும் இந்த இளஞ் சிங்கங்கள் நும் அருமை மக்கள் என்று நினைக்கின்றேன். இவர்கள் இருவரும் ஒரு தாயீன்ற மக்கள். இவ்விருவருள் இளையவரிடமே உத்தம அரச இலக்கணங்கள் மிகுந்து காணப்படுகின்றன. ஆதலின், உமக்குப் பிறகு சேரப் பெருநாட்டிற்கு இவரே அரசராதற்குரியவர்,” என்று கூறினான். சோதிடன் திடீரென்று பேரவையில் எழுந்து கூறியதைக் கேட்ட அவையோர் திடுக்கிட்டனர்; சேரவேந்தனையும் அரசிளங்குமரர் இருவரையும் மாறிமாறிப் பார்த்தனர். அரசன் ஒன்றும் தோன்றாது விழித்தான். செங்குட்டுவன் முகம் வாட்டமுற்றது. இளங்கோவின் விழிகள் சிவந்தன; உதடுகள் துடித்தன. இளங்கோவின் சீற்றவுரை இளங்கோ அப்பேரவையில் எழுந்து சோதிடனைப் பார்த்து, “அயல்நாட்டுச் சோதிடனே, என்ன சொன்னாய்? சிறிதும் யோசியாது உனக்குப்பட்டதைக் கொட்டிவிட்டனை. நீ என்னிடம் என்ன உத்தம இலக்கணங்களைக் கண்டுவிட்டனை? என் அண்ணனிடம் இல்லாத என்னென்ன அற்புத இலக்கணங்கள் என்னிடம் இருக்கின்றன? நீ கூறியவாறே என்னிடம் பல உத்தம இலக்கணங்கள் இருப்பதாகவே வைத்துக்கொள்வோம். அவை இருப்பதால் நானே அரசனாக வேண்டும் என்பது விதியா? அரசனது ‘மூத்த மகன்’ அரச பட்டத்தை அடைதல் என்பதே தொன்றுதொட்டு வருகின்ற வழக்கமாகும். அரச இலக்கணங்கள் மிக்குடைய அரச குமாரனே அரசு பெற வேண்டும் என்பது எந்நாட்டு வழக்கம்? உனது கொள்கை எந்த நாட்டிலும் நடைமுறையில் இருப்பதாகத் தெரியவில்லையே! நீ சோதிடக் கலையில் வல்லவனாக இருக்கலாம்; ஆனால் நீ அரசியல் அறிவு சிறிதும் இல்லாதவன் என்பது நன்கு தெரிகிறது. ‘உன்னை விட நல்லவன் பரதன். ஆயினும் மூத்தவனான நீ இருக்கையில் இளையவனான பரதன் பட்டம் பெறுதல் முறைமை அன்று,’ என்று அன்று கோசலை இராமனிடம் கூறியதை அறியாயோ? ‘முறைமை’ என்பது ஒன்று அரச மரபில் உண்டு. அதுதான் ‘தந்தைக்குப்பின் மூத்த மகன் அரசனாதல்’ என்பது. சேர மரபினர் அம்முறையிலிருந்து இதுவரை வழுவியதில்லை; இனியும் வழுவார். நீ இதனை நினைவிற்கொள்,” என்றான். துறவு கொள்ளல் இளங்கோவின் சீற்ற மொழிகளைச் செவிமடுத்த சோதிடன் துண்ணென நடுக்குற்றான்; அரசர் தனக்கு என்ன தண்டனை விதிப்பாரோ என்று அஞ்சினான். அதனால் அவன் பணிவுடன் எழுந்து இளங்கோவை நோக்கி, “அரசிளங்குமரரே, உம்பால் அமைந்துள்ள மிகச் சிறந்த அரச இலக்கணங்களைப் பார்த்து, யான் அவ்வாறு கூறினேன். நீர் என்மீது சினங் கொள்ளல் ஆகாது. நான் சோதிடக் கலை அறிவினால் அங்ஙனம் கூறினேனே தவிர, வேண்டும் என்று கூறவில்லை. நான் கூறியது தவறு எனப் பட்டால், என்னைப் பொறுத்தருளு மாறு வேண்டுகிறேன்,” என்று கூறிப் பணிந்தான். சோதிடன் கூற்றைக்கேட்ட இளங்கோவுக்குச் சினம் பொங்கியது. அவர் எழுந்து, “சோதிடனே, நீ என்னிடம் உத்தம அரச இலக்கணங்கள் இருப்பதாகக் கூறினை. என்னிடம் துறவிக்கு உரிய மனப்பான்மை இருப்பதை நீ அறியாய். நான் துறவறம் ஏற்பது நல்லது என்று யோசித்துக் கொண்டிருந்தேன், அதற்குக்காலம் இப்பொழுதே வந்துவிட்டது. என் முன்னோனான செங்குட்டுவனே சேரப் பேரரசனாதல், வேண்டும். யான் இந்நிமிடம் முதல் துறவி யானேன்,” என்றார். தந்தையின் துயரம் உடனே அவையோர் வியப்பும் திகைப்பும் கொண்டனர். அரசன் தன் மைந்தனை அணைத்து, “மகனே, என்ன காரியம் செய்தனை? அவசரப்பட்டுச் சூள் செய்யலாமா? கேவலம், சோதிடன் சொன்னதைப் பெரியதாகக் கருதி உன் அரச வாழ்க்கையைப் பாழாக்கலாகுமா? நீ முடி சூடி அரசாள விரும்பவில்லையாயின், நின் அண்ணனுக்குத் துணையாக இருந்தேனும் அரசியலைக் கவனித்து வரலாம் அல்லவா? மைந்த, நீ அவசரப்பட்டுச் சபதம் செய்தது தவறு,” என்று மனவருத்தமுற்றான். இளங்கோவின் தெளிவுரை இளங்கோ தந்தையைப் பணிந்து, “ ஐயனே, வருந்த வேண்டா. நான் யோசியாது சபதம் செய்யவில்லை; நாட் கழித்துச் செய்யவேண்டிய ஒன்றை இன்று செய்தேனே தவிர வேறில்லை. எனக்கு இளமை முதலே துறவற வாழ்க்கையில் விருப்பமுண்டு. நான் அதனாற்றான் பல சமய நூல்களை ஆராய்ந்து வருகின்றேன், நான் உத்தம இலக்கணங்கள் பொருந்தியவன் என்பது உண்மையாயின், அரசாள வேண்டும் என்னும் உணர்ச்சி என்றேனும் தோன்றலாம். நான் இல்லறத்தில் இருப்பின், அந்த எண்ணம் வளரக்கூடும் நான் துறவறம் மேற்கொள்ளின், அந்த எண்ணமே தோன்ற இடமில்லை. நான் இல்லறத்தில் இருப்பின், எனக்குப்பின் என் மக்கள் இவ்வரசு பெற ஒரு வேளை முயற்சிக்கலாம். நான் துறவு மேற்கொள்ளின், சந்ததியே இல்லாமற் போகுமன்றோ? ஆகவே, அவை அனைத்தையும் நன்கு யோசித்துத்தான் நான் துறவினை மேற்கொண்டேன். நீவிர் இதனைப்பற்றிக் கவலைப்பட வேண்டா. நான் உமது விருப்பம்போல் என் முன்னோனுடன் இருந்து அரச காரியங்களில் துணை செய்வேன்; அவனைவிட்டு நீங்க மாட்டேன். ஆதலின், நான் அண்ணனைப் பிரிந்து அடவி செல்வேன் என்று கவலைக்கொள்ள வேண்டா. என் ஆருயிர்த்தந்தையீர், எனது முடிபை ஏற்று என்னை ஆசீர்வதிப்பீராக!” என்று தம்உள்ளத்தில் இருந்ததைத் தெளிவாகவும் உள்ள முருகவும் உரைத்துத் தந்தையைப் பணிந்தார். தந்தை-தமையன் அன்புரை மைந்தர் உரைத்த மாற்றம் கேட்ட தந்தை என்ன செய்வான்! அவன் இரண்டு கன்றினுக்கு வருந்தும் பசுவின் நிலையை அடைந்தான். அப்பெருமகன் தன் இளங்கோவைத் தழுவி அன்புக் கண்ணீரால் அவரை நனைப்பித்தான்; அவரது மலர்ந்த கவலையற்ற முகத்தை நோக்கி, “ என் செல்வமே, நீ வயதில் சிறியவன் ஆயினும் அறிவிற் பெரியவன். நீ மனவுறுதி மிக்கவன்; ஆதலின், உன் முடிவிலிருந்து மாறப் போவதில்லை. எனவே நான் வேறு வழியின்றி, உன்னை மனமார ஆசீர்வதிக் கின்றேன். நீ துறவுக் கோலம் பூண்டு நின்தமையனுக்கு உறுதுணையாக இருத்தல் வேண்டும் என்பதை மீட்டும் நினைவுறுத்துகின்றேன்,” என்று உளங்குழைந்து உரைத்தான். அதுவரை நடந்தானவெல்லாம் கவனித்து வந்த செங்குட்டுவன் விழிநீர் வாரத் தன் இளவலை மார்புறத் தழுவி, “அன்பிற் சிறந்த எம்பி, நின் குணச் சிறப்பை யாதெனப் பாராட்டுவேன்! சோதிடன் சொல்லைக் கேட்டுத் துறவு பூண்டது பொருத்தமன்று; ஆயினும், உன் மனவுறுதியைப் யாராலும் மாற்றமுடியாது. எனது வேண்டுகோள் ஒன்றே. அஃதாவது, நீ என்னுடன் இருந்து இனிதாகக் காலங் கழிக்க வேண்டும். நீ என்னைவிட்டு ஏகுவை ஆயின், நானும் அரசு துறப்பது திண்ணம்.” என்றான். இளங்கோ அவனைப் பார்த்து, ``அண்ணா, உம்மை விட்டுப் பிரியேன்,” என்று வாக்களித்தார். ‘இளங்கோ அடிகள்’ மேற் சொல்லப்பட்ட நிகழ்ச்சி நடந்த அன்று முதல் அரசிளங் கோவாக இருந்தவர் துறவறம் மேற்கொண்டு விட்டதhல், ‘அடிகள்’ என்ற பெயரைத்தாங்கி, ‘இளங்கோவடிகள்’ எனப்பட்டார். அவர் வஞ்சி மாநகரத்துக் கிழக்கு வாயிலண்டை இருந்த கோவில் ஒன்றில் வாழ்ந்து வந்தார். அவர் சிறந்த இலக்கண-இலக்கியப் பயிற்சியும் சமய நூற் பயிற்சியும் மிக்குடையவராக விளங்கிய காரணத்தால், பல சமயங்களைச் சேர்ந்த துறவிகள், இல்லறத்தார் முதலியோர் அவரைச் சூழ இருந்து தமிழ்ச் சுவையையும் சமய வுணர்ச்சியையும் பற்றிய பல செய்திகளைப் பேசி வந்தனர். சங்க காலத்துச் சேர மரபினருள் வேறெவருமே இங்ஙனம் துறவு பூண்டனர் என்பதற்குச் சான்றில்லை. இவ்வாறு இவர் துறவு பூண்ட வரலாற்றை இப்பெரியாரே தாம் செய்துள்ள சிலப்பதிகாரம் என்னும் செந்தமிழ்க்காவியத்தில் செப்பியுள்ளார்.1 இளங்கோவடிகள் மேற்சொன்ன குணவாயிற் கோட்டத்தில் தங்கியிருந்தாரா யினும், அரசர் பெருமானான தம் தந்தையையும் இளவரசனான தமது தமையனையும் தமது ஆருயிர் அன்னையையும் அவ்வப்போது சென்று காண்பது வழக்கம். அவர் களும் குணவாயிற் கோட்டம் வந்து அவரைக் கண்டு அளவளாவிச் செல்வதும் உண்டு. செங்குட்டுவன் - சேர அரசன் செங்குட்டுவன் அரசனாதல் செங்குட்டுவன் ஏறத்தாழ இருபது வயதினனாக இருக்கையில் நெடுஞ்சேரலாதன் சோழன் (வேல்பல்தடக்கைப்) பெருவிறற்கிள்ளி என்பவனுடன் போரிட்டான். இருவரும் கடுமையாகப் போரிட்டுப் போர்க்களத்திலேயே உயிர் துறந்தனர். சேரலாதன் இறந்ததால் அவனது கோப்பெருந்தேவியான நற்சோணை உயிர் நீத்தாள். செங்குட்டுவன் சேர மன்னனாக முடிசூடப் பெற்றான் இளங்கோ அடிகள் துறவு நிலையை அடைந்தவர் ஆயினும் தம் பெற்றோர் பிரிவிற்கு ஆற்றாது வருந்தினர்; பின்னர் ஒருவாறு தேறித் தமையனுக்கு உறுதுணையாக இருந்து வந்தனர். தாய்க்குக் கோவில் எடுத்தல் சிறந்த பத்தினியும் தன் தாயுமான நற்சோணைக்குக் கோவில் கட்டச் செங்குட்டுவன் விரும்பினான். இளங்கோவடி களும் அவ்விருப்பத்திற்கு உடன்பட்டனர். செங்குட்டுவன் தன் தாயின் உருவத்தை அமைத்தற்குரிய கல்லைக் கொணருமாறு தன் படைவீரருடன் இமயம் நோக்கிச் சென்றான். தென்னாட்டு அரசன் ஒருவன் வடநாடு வருதலைக் கேள்வியுற்ற வடநாட்டு அரசர் பலர், அவனது வடநாட்டு யாத்திரையின் நோக்கத்தை அறியாது எதிர்த்தனர். செங்குட்டுவன் அஞ்சா நெஞ்சினன் ஆதலின், புலிக் கூட்டத்துள் சிங்கம் பாய்வதைப் போலப் பகையரசர் கூட்டத்துள் பாய்ந்தான்; சேர நாட்டு வில்லாளிகள் திறமையாகப் போரிட்டனர்; பகைவர் ஆற்றாது நாலா பக்கங்களிலும் சிதறி ஓடினர். பின்னர்ச் சேர வேந்தன் இமயம் சென்று நல்ல கல் ஒன்றைத் தேர்ந்தெடுத்தான்; அதனைத் தன் நாட்டிற்குக் கொணர்வித்தான்; பின்னர்ச் சிற்பவல்லுநர் அக்கல்லில் நற்சோணியின் உருவத்தைப் பொறித்தனர்; பெயரும் பீடும் அதன்கீழ் எழுதினர். பிறகு நல்ல நாளில் கல்நாட்டு விழாக்கவினுற நடந்தது. கல் நடப்பட்ட பிறகு பெரிய கோவில் ஒன்று கட்டப்பட்டது. நற்சோணை அம்மன் சேரர் குலதெய்வமானாள். இதனை இளங்கோவடிகள் தாம் இயற்றிய சிலப்பதிகாரத்தில் தெளிவாகப் பாடியுள்ளார். செங்குட்டுவன் குடும்பம் செங்குட்டுவன் வேளிர் மரபைச் சேர்ந்த இளங்கோ வேண்மாள்* என்பவளைக் கோப்பெருந்தேவியாகக் கொண்டான். அப்பெருந்தேவி “ஒத்த குணமும் ஒத்த கல்வியும் ஒத்த பண்பும்” உடையவள். சேரர் பெருமான் அவளுடன் கலந்து யோசியாமல் எக்காரியமும் செய்வதில்லை எனின், அவளது கல்வித்திறனும் அரசியல் அறிவும் சிறந்தவை எனக் கூறவேண்டுமோ? அம்மங்கை நல்லாள் நமது அடிகளிடம் அளவற்ற அன்பும் பெருமதிப்பும் உடையவள். அடிகளும் அவளுடைய நல்லியல்பு களைக் கண்டு, தமது தாய்க்குப் பின்னர் அவளையே தம் தாயாகக் கருதி அன்பு செலுத்தி வந்தார். செங்குட்டுவனது வாழ்க்கை இன்ப வாழ்க்கையாக இலங்கியது. அவனுக்குக் ‘குட்டுவஞ் சேரல்’ என்ற மைந்தன் பிறந்து வளர்ந்து வந்தான். போர்ச் செயல்கள் செங்குட்டுவன் பட்டம் பெற்ற சில ஆண்டுகட்குள் சோழனையும் பாண்டியனையும் போரில் முறியடித்தான்; கொங்கர்; கருநாடர், கங்கர் முதலிய வடநாட்டினரை வென்று அடக்கினான்; சேர நாட்டுக் கப்பல்களைக் கடலில் வழிமறித்துக் கொள்ளை அடித்துவந்த கொள்ளைக் கூட்டத்தினரை ஒழித்தான்; தன் அம்மான் மகனான நெடுமுடிக்கிள்ளி பட்டத்திற்கு வருவதைத் தடுத்துப் பூசல் விளைத்த சோழ அரச குமாரர்களை ‘நெரிவாயில்’ என்ற இடத்தில் வென்றான்; வென்று, தன் மாமன் மகனைச் சோழ அரசன் ஆக்கினன். இங்ஙனம் சேரர் பெருமான் செய்த போர்கள் பல. அவை அனைத்தையும் இளங்கோ அடிகள் தமது பெருங் காவியத்தில் குறித்துள்ளார். 4. மலைநாட்டு விசேடம் மலைவளம் காணப் போதல் ஒருநாள் செங்குட்டுவன் தன் கோப்பெருந்தேவியுடனும் இளங்கோ அடிகளுடனும் மலைவளம் காணச் சென்றான். அவனுடன் அவனது கவசப்படையும் சென்றிருந்தது, மன்னன் வானளாவிய மலைகளையும் மலைச்சாரல்களையும் நீர் அருவிகளையும் யானைக் கூட்டங்களையும் கண்டு தன் மனைவியுடனும் தம்பியாருடனும் மகிழ்ச்சியாகப் பேசிக்கொண்டிருந்தான். அவ்வமயம் செங்குட்டுவனையும் அடிகளையும் தேடிக்கொண்டு வஞ்சி மாநகரம் வந்த மதுரைக் கூல வாணிகன் சாத்தனார் என்ற சங்கப் புலவர் அங்கு வந்தார். அவர் மதுரையில் நெல் முதலிய தானியங்களை விற்றுவந்த வணிகர். அவர் அடிக்கடிச் சேர நாடு வந்து அரசனையும் அடிகளையும் கண்டு செல்வது வழக்கம்; அரசனும் அடிகளும் மலைவளம் காணச் சென்றதைக் கேள்வியுற்று நேரே அவ்விடத்தை அடைந்தார். அவரைக் கண்ட சகோதரர் இருவரும் மிக்க மகிழ்ச்சி அடைந்தனர். சாத்தனார் குடும்ப நண்பராதலின் கோப்பெருந் தேவியும் இன்முகம் காட்டி வரவேற்றாள். மூவரும் சாத்தனாருடன் அளவளாவிக் கொண்டு இருந்தனர். மலைவாணர் சொன்ன செய்தி தங்கள் மலைவளம் காணச் சேரர் பெருமான் வந்துள்ளதை அறிந்த மலைவாணர், மலைநாட்டுப் பழங்களையும் கிழங்குகளையும் தேனையும் பலவகைக் காட்டு மலர்களையும் கையுறையாக எடுத்துவந்து அரசனைப் பணிந்தனர், அரசன் மகிழ்ந்து அவர்களை நோக்கி, “உங்கள் மலைநாட்டில் ஏதேனும் சிறப்பு நிகழ்ச்சி உண்டோ?” என்று வினவினான். உடனே அக்குன்றக் குறவர் அரசனைப் பணிந்து, “அரசர் பெருமானே, நின் கொற்றம் வாழ்க. சில நாட்களுக்கு முன் எங்கள் மலைமீதுள்ள வேங்கை மரநிழலில் ஒரு பக்கம் மார்பை இழந்த பெண்மணி ஒருத்தி வந்து நின்றாள்; நின்று, மேலே நோக்கினாள். உடனே விண் வழியே ஒரு விமானம் வந்து இறங்கியது. அதனின் அவள் கணவன் இருந்தனன் போலும்! அவனைக் கண்ட அம்மங்கை நல்லாள் மனமகிழ்ந்து முகமலர்ச்சியுடன் அவ்விமானத்தில் ஏறிக்கொண்டாள். உடனே அந்த விமானம் விண்வழிச் சென்று மறைந்தது. அவள் எந்த நாட்டவளோ? யார் மகளோ?-நாங்கள் அறியோம். அன்று முதல் எங்கள் மலைநாட்டு மக்களுக்குள் இதே பேச்சாக இருந்து வருகின்றனது. வேறு உம்மிடம் கூறத்தக்க சிறப்பு ஒன்றும் இல்லை,” என்று கூறிப்பணிந்து விடை பெற்றுச் சென்றனர். சாத்தனார் விளக்கம் குன்றக் குறவர் கூறியசெய்தி செங்குட்டுவன்-அடிகள்-அரசி இம் மூவரையும் திடுக்கிடச் செய்தது. அவர்கட்கு ஒன்றும் புரியவில்லை. அடிகள், “நம் நாட்டுமலைமீது பெண்மணி ஒருத்தி இங்ஙனம் நின்று வானுலகம் சென்றனள் என்பது அற்புதமாகக் காண்கிறது. ‘அவள் யார்? எந்த நாட்டினள்? என்பன தெரியவில்லையே! அவள் வரலாற்றை நாம் எப்படி அறிவது!” என்று ஏங்கினார். அருகில் இருந்த சாத்தனார் புன்முறுவலுடன்,“அவள் வரலாற்றை நான் அறிவேன். அவள் மதுரையிலிருந்து இங்கு வந்தாள்; சிறந்த பத்தினி” என்றார். உடனே மூவரும் “ஐயன்மீர், எங்களைக் காக்க வையாது உடனே அப்பத்தினி வரலாற்றை உரைத்தருள்க,” என்று கூறி ஆவலோடு அவரை நோக்கினர். சாத்தனார் கீழ்வருமாறு கண்ணகி வரலாற்றைக் கூறினார். 5. கண்ணகி வரலாறு கோவலன் ஒழுக்கக் கேடு “காவிரிப்பூம்பட்டினத்தில் மாசாத்துவான், மாநாய்கன் என்ற வணிகப் பெருமக்கள் இருவர் வாழ்ந்துவந்தனர். மாசாத்துவான் மகனான கோவலனுக்கும் மாநாய்கன் மகளான கண்ணகிக்கும் திருமணம் நடந்தது. உடனே இருவரும் தனி வீட்டில் வாழலாயினர். ஊழ்வினை வசத்தால் கோவலன் மாதவி என்ற புகழ் பெற்ற நடன மாதுடன் நட்புக் கொண்டு, தன் பொருளை இழந்துவறியன் ஆனான், அவன் மாதவியுடன் உறைந்த நாட்களில் கண்ணகி தனியே வாழ்க்கை நடத்திவந்தாள், அவளது துன்பநிலை செப்புந் தரத்ததன்று. மாதவியைப் பிரிதல் காவேரிப்பூம்பட்டினத்தில் ஆண்டுதோறும் இந்திர விழா நடப்பது வழக்கம். அவ் விழாவின் முடிவில் அந் நகரத்தார் கடலாடுதற்குச் செல்வர். கோவலனும் மாதவியும் கடலாடி ஓரிடத்தில் அமர்ந்தனர். கோவலன், மாதவி கையில் இருந்த யாழை வாங்கி வரிப்பாடல் ஒன்றைப் பாடினான். அப்பாடலைக் கேட்ட மாதவி,”இவன் வேறு பெண் மீது நாட்டமுடையவன் என்பதை இப்பாட்டு உணர்த்துகிறது” என்று ஊழ்வினை வசத்தால் தவறாகக் கருதினாள்; கருதி, அந்த யாழைத் தான் வாங்கி ஒரு பாட்டைப் பாடினாள். கோவலனும் ஊழ்வினைப் பயனால் அதனைத் தவறாகக் கருதினான்; கருதி, அக்கணமே அவளை விட்டு நீங்கினான். மதுரைக்குக் செல்லுதல் மாதவியை விட்டு நீங்கிய கோவலன் நேரே கண்ணகியிடம் வந்தான். அவன் வருவதற்குச் சற்று முன்னரே கண்ணகி தன் பார்ப்பனத்தோழியான தேவந்தியிடம் தான் கண்ட கனவினைக் கூறிக் முடித்தான்; தானும் தன் கணவனும் வாணிகத்திற்காக அயல்நாடு செல்வதாகவும் அங்கு அவனுக்குத் தீங்கொன்று நேர்வுதாகவும் தான் கனவு கண்டதாகக் கூறினாள். அவ்வளவில் கோவலன் அவள் கண்ணெதிரே தோன்றினான். கண்ணகி கற்புடை மடந்தை ஆதலால் அவன் அடிகளில் வீழ்ந்து பணிந்தாள். கோவலன் அவளை நோக்கி, “யான்பொருள் அனைத்தையும் தொலைத்துவிட்டு வெட்கப்படுகிறேன்,” என்றான். “மாதவிக்குத் தரப் பொருள் இல்லை போலும்” என்று எண்ணிய கண்ணகி மலர் முகத்துடன்,“என் காற்சிலம்புகள் இருக்கின்றன; அவற்றைக் கொள்க,” என்றாள். உடனே கோவலன், “யான் மதுரைக்குச் சென்று உனது சிலம்பை விற்று வரும் முதலைக்கொண்டு வாணிகம் செய்ய எண்ணுகிறேன். நீயும் என்னுடன் வருக,” என்றான். குற்றமற்ற அக் குலமகள் அதற்கு உடனே ஒருப்பட்டாள். அன்று வைகறையில் இருவரும் தத்தம் பெற்றோர்க்குத் தெரியாமல் பூம்புகார் நகரத்தை விட்டுப் புறப்பட்டனர்; புறப்பட்டு மதுரையை நோக்கி நடக்கலாயினர். வழி நடத்தல் இருவரும் காவிரியின் வடகரை வழியாக மேற்கு நோக்கிச் சென்று ஒரு பூஞ்சோலையில் தங்கினர்; அங்குச் சமணப் பெண் துறவியார் ஒருவரைக் கண்டனர். அவர் பெயர் கவுந்தி அடிகள் என்பது. அம் மூதாட்டியாரும் மதுரை செல்வதாகக் கூறினர். உடனே மூவரும் புறப்பட்டு வழி நடந்தனர்; சோழரது பழைய தலைநகரமான உறையூரில் தங்கினர்; மறுநாள் வழி நடந்தனர். அன்று பிற்பகலில் கோவலன், தண்ணீர் கொண்டு வரத் தனியே சென்ற பொழுது, மாதவியால் அனுப்பப்பட்ட கௌசிகன் என்ற பிராமணைக் கண்டான். அவன் மாதவியால் எழுதப்பட்ட கடிதம் ஒன்றைத் தந்தான். அதனைப் படித்த கோவலன் மனம் வருந்தித் தன் வணக்கத்தைத் தன் பெற்றோருக்குக் கூறுமாறு சொல்லி அனுப்பினான். பிறகு கோவலன் மற்ற இருவருடனும் சேர்ந்து வழி நடந்து, வையை யாற்றைக் கடந்து, மதுரையின் மதிற் புறத்தாகிய முனிவர் ஆஸ்ரமத்தில் தங்கினான். அடைக்கலம் கோவலன் மறுநாள் புறப்பட்டு பீடுமிக்க மாட மதுரைக்குட் புகுந்தான்; அதன் பலவகைச் சிறப்புகளையும் கண்டு மாலையில் ஆஸ்ரமத்தை அடைந்தான். அதற்குள் ஆஸ்ரமத்திற்கு வந்த மாதரி என்ற இடைச்சியர் தலைவியிடம் கவுந்தியடிகள் கண்ணகியை அடைக்கலமாக விட்டார். மறுநாள் காலை, கண்ணகி மாதிரி வீட்டில் தனியாகச் சமையல் செய்து கணவனுக்குப் படைத்துத் தானும் உண்டாள். அன்று கோவலன் அவளைப் பலவாறு பாராட்டி, அவளது காற் சிலம்பு ஒன்றைப் பெற்று அவளிடம் பிரியா விடைபெற்றுச் சிலம்பை விற்கச் சென்றான். கோவலன் கொலை யுண்ணல் கோவலன் கடைத்தெரு வழியே செல்லுகையில் அரண்மனைப் பொற் கொல்லன் ஒருவன் பலர் சூழ அவ்வழிவந்தான். கோவலன் அவனைக் குறுகி, “ஐயா அரசியர் அணியத்தக்க இச் சிலம்பினை விலைமதிக்க வல்லயோ?” என்றான். உடனே பொற் கொல்லன் அச்சிலம்பை வாங்கிப் பார்த்தான். அவன் முகம் வேறுபட்டது. அவன் தனக்குள் ஒருமுடிவுக்கு வந்தவனாய், “ஐயா, நீர் இங்கேயே இரும். நான் அரண்மனைக்குச் சென்று அரச மாதேவியினிடம் இதனைக் காட்டிக் கொணர்வேன்,” என்று கூறி விரைந்தான். விரைந்த பொற் கொல்லன் தனக்குள், “நான் அரசியினது காற் சிலம்பொன்றை முன்னர்க் கவர்ந்துவிட்டேன்; ‘அஃது எங்கோ தொலைந்துவிட்டது; தேடிக் கொண்டு வருவேன்,’ என்று அரசனிடம் சொல்லி யுள்ளேன். இப்பொழுது இதனைக் காட்டிக் ‘கள்வன் அகப்பட்டான்’ என்று கூறி, இவ்வெளி நாட்டானைக் கொல்லச் செய்விப்பின், நான் கவலை யின்றி வாழக்கூடும்,” என்று சொல்லிக்கொண்டே அரண்மனையைக் குறுகினான். அவ்வளவில் பாண்டியன் ஆரியப்படைகடந்த நெடுஞ்செழியன் அவசரமாதத் தன் மனைவியின் ஊடலைத் தீர்க்க அந்தப்புரம் சென்று கொண்டிருந்தான். அதுவே தக்க சமயம் என்று பொற்கொல்லன் வழியில் நின்று வணங்கி, “அரசியாரது சிலம்பினைக் களவாடிய கள்வன் அகப்பட்டான். இதோ பாருங்கள் சிலம்பை,” என்றான். செங்கோல் வழுவாத பாண்டியன் ஊழ்வினை வசத்தால் சிறிதும் ஆராயாது, கொலையாளரை அழைத்து, “இவன் காட்டும் கள்வனைக் கொன்று சிலம்பினைக் கொண்டுவருக” என்று கட்டளை இட்டான். அதிகம் அறைவதேன்? ஒரு குற்றமும் செய்யாத கோவலன் பொற்கொல்லன் சூழ்ச்சியால் கொல்லப்பட்டான். கண்ணகியின் காற் சிலம்பு அரண்மனைக்குக் கொண்டு செல்லப் பட்டது. கண்ணகி வழக்குரைத்தல் குற்றமற்ற தன் கணவன் காவலனால் கொலை செய்யப்பட்டான் என்பதைக் கேள்வியுற்ற கண்ணகி அலறி அடித்துக்கொண்டு மதுரை நகர வீதிவழியே சென்றாள்; வெட்டுண்டு கிடந்த கோவலனைக் கண்டாள்; அவன் உடம்பை ஆர்வமுறத் தழுவினாள். அவ்வளவில் அவன் உயிர் பெற்றெழுந்து, கண்ணகியின் கண்ணீரைக் கையால் மாற்றி, “நீ இங்கிருக்க” என்று கூறிப் பிணமானான். கண்ணகி நடுக்கடலில் திசை யறியாது தவிக்கும் மரக்கலம் போல அப்புதிய நகரத்தில் இன்னது செய்வதென்று தோன்றாமல் விழித்தாள். இறுதியில் தலைவிரி கோலமாக அரண்மனையை அடைந்தாள். அரசனது அநுமதி பெற்று அவன் முன்சென்று வழக்குரைத்தாள்; தன் காற்சிலம்பின் உள்ளே மாணிக்கப் பரல் இருப்பதை உடைத்துக் காட்டினாள். அரசியின் காற்சிலம்பு முத்துப் பரலை உடையது. மாணிக்கப் பரலைக் கண்ட மன்னவன் நடுநடுங்கினான்; “பொற்கொல்லன் பேச்சைக் கேட்டுக் குற்றமற்ற உன் கணவனைச் கொல்வித்த யானே கள்வன்,” என்று கூறி மூர்ச்சித்து வீழ்ந்தான்; ஆவி துறந்தான். அவனது கோப்பெருந்தேவி நிலைகுலைந்து அவன் பாதங்களைப் பற்றினாள். அவ்வளவில் அவளும் பிணமானாள். மதுரையை எரித்தல் கண்ணகியின் சீற்றம் தணியவில்லை. அம்மாபெரும் பத்தினி, “அநியாயமாக என் கணவனைக் கொன்று என் வாழ்வினைக்கெடுத்த அரசன் மாண்டான். அவனது தலைநகரான இந்த மதுரை அழியக்கடவது,” என்று கூறித் தனது இடப்பக்க மார்பை வலக்கையால் திருகி எடுத்து நகரத்தின் மீது எறிந்தாள், உடனே நகரம் தீப்பற்றி எரியத்தொடங்கியது. கண்ணகி ஆவேசமுற்றவளைப் போலக் காணப்பட்டாள். முன் வினைப்பயன் அப்பொழுது மதுராபதி தெய்வம் அவளைக் குறுகிச் சாந்தமாக, அவளது முன்வினையை விளக்க விரும்பி, “அம்மையே, நினைக்கும் நின் கணவனுக்கும் நடந்த இத் தீங்கு முன்வினைப் பயனால் வந்தது. நீ முற்பிறப்பில் சிங்கபுரத்தில் பரதன் என்பவன் மனைவி யாக இருந்தனை. பரதன் தனக்குப் பகைவனான சங்கமனைப் பகையரசனது ஒற்றன் என்று தன் அரசனிடம் கூறிக்கொலை செய்வித்தான். அப்பொழுது அவனது மனைவி, கணவன் பிரிவால் பதினான்குநாள் வருந்திப் பின்னர், ஒரு மலைமீதேறிக் கணவனைச் சேர்தற்பொருட்டு உயிர் விடத் துணிந்தாள்; துணிந்தவள், “எமக்கு இக்கெடுதி செய்தவர் அடுத்த பிறவியில் இதனையே அடைவாராக,” எனச் சபித்து இறந்தாள். அவள் கணவனே இன்று உன் கணவனைக் கொல்வித்த பொற்கொல்லன். இஃதுஊழ்வினைப் பயனால் நடந்த நிகழ்ச்சி. நீ இன்றைக்குப் பதினான்காம் நாளன்று பகல் சென்ற பின்பு நின் கணவனைக் கண்டு சேர்வாய்,” என்று கூறி மறைந்தது. கண்ணகி சேர நாடு வருதல் இதுவரை கண்ணகி வரலாற்றைக் கூறிவந்த சாத்தனார் மேலும், “கண்ணகி ஒருவாறு மனம் தெளிந்து மதுரையை விட்டுப் புறப்பட்டாள்; வையைக் கரை வழியே மேற்கு நோக்கி நடந்தாள்; பதினான்காம் நாள் சேர நாட்டு மலை ஒன்றன் மீதுள்ள வேங்கை மரத்தடியில் வந்து நின்றாள் போலும்! பின்னர் நடந்ததைக் குன்றக் குறவரே கூறிவிட்டனர்,” என்று கூறி முடித்தார். 6. பத்தினிக்குக் கோவில் எடுக்க நினைத்தல் அரசியின் யோசனை மிக்க துயரந்தரும் கண்ணகி வரலாற்றைக் கேட்ட மூவரும் பெருமூச்சு விட்டனர். அரசன் தன் மனைவியைப் பார்த்து, “நங்காய், பாண்டியனுடன் உயிர்விட்ட கோப்பெருந்தேவி சிறந்தவளா? நமது நாட்டை அடைந்த பத்தினி சிறந்தவளா?” என்று கேட்டான். உடனே அரசி, “தலைவரே, கோப்பெருந்தேவி கற்பிற் சிறந்தவள். ஆயினும், நமது நாட்டைத் தேடிவந்து இங்கிருந்து வானுலகம் புகுந்த பத்தினிக் கடவுளை நாம் வழிபடல் நல்லது,” என்றாள். உடனே இளங்கோவடிகளும் அதனை ஆமோதித்தார். அரசன் தன்னுடன் வந்திருந்த அமைச்சரை நோக்கினான் அவர்கள், “இறைவரே! பொதிய மலையிலிருந்து கல்லைக் கொணர்ந்து நடலாம்; இமயத்திலிருந்தும் கொண்டு வரலாம். உமது விருப்பம் போலச் செய்யலாம்,” என்றனர். அரசன் இமயம் சென்று சிலையைக் கொண்டு வருதலே நல்லது எனத் துணிந்தான்; “வட நாட்டரசர் என் வலியை இகழ்வது பேசியதாகக் கேள்விப்பட்டேன்; இப்பொழுது தென்னாட்டு அரசனது ஆற்றலை விளக்கிக் காட்டி இமயத்திலிருந்து சிலையைக் கொண்டு வருவேன்,” என்றான். உடனே இச்செய்தி வஞ்சி மாநகரத்தில் பறையறைந்து தெரிவிக்கப்பட்டது. 7. செங்குட்டுவன் வடநாட்டு யாத்திரை வடநாட்டு யாத்திரை குறித்த நல்ல நாளில் செங்குட்டுவன் தன்பெரும் படைகளுடன் வடநாடு நோக்கிப் புறப்பட்டான். மங்கையர் மலர் மாரி பெய்து தெய்வங்களை வாழ்த்தி வழியனுப்பினர். இளங்கோ அடிகள் வஞ்சி மாநகரத்தில் இருந்து அமைச்சர்களைக் கொண்டு அரசியல் காரியங்களை நடப்பித்து வந்தார். செங்குட்டுவன் நீலகிரி அடிவாரத்திற் சென்று தங்கினான்; அப்பொழுது செங்குட்டுவன் நட்பினரான நூற்றுவர் கன்னர்2 என்ற தெலுங்கு அரசரிடமிருந்து வந்த தூதன் செங்குட்டுவனைக் கண்டான்; கங்கை யாற்றைப் படகுகளின் உதவியால் கடத்தற்குப் போதிய வசதி செய்திருப்பதை அறிவித்தான். பின்னர்ச் செங்குட்டுவன் புறப்பட்டுப் பல நாடுகளைத் தாண்டிச் சென்று கங்கைக்கரையை அடைந்தான்; நூற்றுவர் கன்னர் உதவியால் கங்கையின் வடகரையைத் தன் பெரும் படையுடன் அடைந்தான். பெரும் போர் செங்குட்டுவன் உத்தர கோசலத்தைத் நெருங்கினான். அப்பொழுது வட நாட்டு அரசரான உத்தரன், விசித்திரன், உருத்திரன், பைரவன் முதலிய சிற்றரசர் பலர் கனகன், விசயன் என்ற பெருவேந்தர் இருவருடன் சேர்ந்து திடீரெனச் செங்குட்டுவனைத் தாக்கினர். கனகன், விசயன் என்ற பெருவேந்தரே செங்குட்டுவன் ஆண்மையை இகழ்ந்து பேசிய அரசர் ஆவர். ஆதலின், போருக்கென்றே பண்பட்ட படைகளுடன் சென்றிருந்த செங்குட்டுவன், யானைக் கூட்டத்தின் நடுவே சிங்கம் பாய்வதைப் போலப் பாய்ந்து பகையரசரைக் கலக்கினான். பண்பட்ட சேரன் படை ஆரியப் படையை அலர அடித்தது. முடிவில் கனக-விசயர் சிறைப்பட்டனர்; எஞ்சியோர் தப்பிவிட்டனர். சேரர் பெருமான் உத்தர கோசலத்தில் பெருவெற்றி பெற்றான். வஞ்சி மாநகருக்கு மீளுதல் போர் முடிந்த பிறகு செங்குட்டுவனுடன் சென்ற சிற்ப வல்லுநர் பத்தினியின் உருவத்தைச் செதுக்குதற்குரிய கல்லை இமயமலை அடிவாரம் சென்று தேர்ந்தெடுத்தனர்; அதனைக்கொணர்ந்து கங்கை நீரில் நீராட்டித் தூய்மை செய்தனர். பிறகு அக்கல்லைக் கனக-விசயர் முடிமீது ஏற்றி வஞ்சி மாநகரம் மீண்டனர். சேரர் பெருமான் தமிழ் அரசர் ஆற்றல் அறியாது இழித்துரைத்த ஆரிய மன்னரைப் புறங்காட்டச் செய்து, அவர்கள் தலைவர்களான கனக-விசயர் முடிமீது கல்லைக் கொண்டுவரும் செய்தி வஞ்சி மாநகரத்திற்கு எட்டியது. குடிமக்கள் குதூகலித்தனர். இளங்கோ அடிகள் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. அவர் தம் தமயன் அடைந்த வடநாட்டு வெற்றியைத் தமது சிலப்பதிகார காவியத்திற் பல இடங்களிற் சுட்டி மகிழ்ந்துள்ளார். அதனால் அடிகட்கு இருந்த தமிழ்நாட்டுப் பற்று நன்கு விளங்குகிறதன்றோ? இங்ஙனம் செங்குட்டுவன் வடநாடு சென்று மீண்டமை கயவாகு, யக்ஞ ஸ்ரீ சதகர்ணி என்பவர் ஆட்சிக் காலத்தில் ஆதலால், அக்காலம் ஏறத்தாழக் கி. பி. 171-க்கும் கி. பி. 196-க்கும் உட்பட்டதாக இருத்தல் வேண்டும் என்று அறிஞர் கருதுகின்றனர். செங்குட்டுவன் ஐம்பது ஆண்டுகள் அரசனாக இருந்தான் என்று இளங்கோ அடிகள் கூறுதலால், அவனது ஆட்சிக் காலம் ஏறக்குறையக் கி. பி. 150-200 என்னலாம். இக் காலமே இளங்கோ அடிகள், சாத்தனார் இவர்கள் காலமுமாகும் என்பது கூறாதே அமையும் அன்றோ? 8.கோவில் எடுப்பித்து விழா இயற்றல் வடநாட்டில் வாகை சூடி மீண்ட செங்குட்டுவன் வஞ்சி மாநகரம் வந்து சேர்ந்தான். வந்த அவனை இளங்கோ அடிகளும் அமைச்சர் குழுவினரும் சிற்றரசரும் பிற உயர் அலுவலாளரும் எதிர் சென்று வரவேற்றனர். முப்பத்திரண்டு மாதங்களுக்கு முன் வஞ்சியை விட்டுச் சென்ற சேரர் பெருமான் வந்தான் என்பதைக் கேட்ட கோப்பெருந்தேவி மிக்க மகிழ்ச்சி அடைந்தாள். பின்னர், இமயத்திலிருந்து கொண்டுவரப்பட்ட கல்லில் கண்ணகியின் திருவுருவம் சிற்ப வல்லுநரால் பொறிக்கப்பட்டது. பிறகு நல்ல நாளில் அடிக்கல்நடப்பட்டது. அந்த இடத்தில் அழகிய கோவில் அமைக்கப்பட்டது. குறித்த நாளில் கும்பாபிஷேகம் செய்யத் தீர்மானிக்கப்பட்டது. அவ்விழாவிற்குக் கடல்சூழ் இலங்கைக் கயவாகு மன்னன் (கி.பி. 171 - 193) முதலிய அரசர் பலர் வந்திருந்தனர். விழாச் சிறப்புற நடந்தது. அவ்விழாவில் இளங்கோ அடிகள் சிறந்த பங்கெடுத்துத் தொண்டு செய்தார். இந்தவிழாவினைக் கேள்வியுற்ற கண்ணகியின் செவிலித்தாய், தலைமைத் தோழி, தேவந்தி என்ற பார்ப்பனத் தோழி ஆகிய மூவரும் வஞ்சி நகரத்திற்கு வந்தனர்; செங்குட்டுவனைப் பணிந்து தம் வரலாறு கூறி விழாவிற் கலந்து கொண்டனர் கண்ணகியின் தாயும் கோவலன் தாயும் மாதரி என்ற இடைக்குல மங்கையும் மாண்ட செய்தியைத் தெரிவித்தனர்; மாநாய்கனும் மாசாத்துவானும் துறவறம் மேற்கொண்டதையும், மாதவியும் அவள் மகளான மணிமேகலையும் துறவு பூண்ட செய்தியையும் அறிவித்தான். அவர்கள் கூறிய செய்திகள் அனைத்தையும் இளங்கோ அடிகள் உற்றுக்கேட்டுக்கொண்டிருந்தார். சாத்தனார் கண்ணகி வரலாறு கூறிய அன்று முதல் கண்ணகி வரலாற்றை ஒரு காவியமாக எழுதவேண்டும் என்று எண்ணம் அடிகட்கு உண்டானது. அதனால் அவர், அன்று முதல் கண்ணகித் தொடர்பான வரலாற்றுக் குறிப்புகள் பல தக்கார் வாயிலாகக் கேட்டுத் தொகுத்து வந்தார்; அதனாற்றான் அப்பத்தினிக்குக் கோவில் எடுப்பித்து விழா இயற்றிய அந்நாளிலும் அங்கிருந்து எல்லா நிகழ்ச்சிகளையும் ஊன்றிக் கவனித்து வந்தார். பத்தினிக் கடவுள் விழாத் தொடக்கமாயிற்று. பூம்புகாரிலிருந்து வந்த தேவந்தி முதலிய மூவரும் மாதரியின் மகளான ஐயையைக் கண்ணகித் தெய்வத்தின் முன் நிறுத்தி, “தாயே, உன்னை அடைக்கலமாகக் கொண்டு பாதுகாத்து, நீ அடைந்த பெருந்துன்பத்தைக் கேட்டு வருந்தி உயிர் துறந்த மாதிரி என்பவள் மகள் அவள். நாங்கள் அனைவரும் உன் விழாவிற் கலந்துகொள்ள வந்திருக்கிறோம்” என்றனர். அவ்வளவில் யாவரும் கண்டு அதிசயிக்கும்படி விண்ணில் ஒர் உருவம் தோன்றியது. அது கால்களில் சிலம்பும், கைகளில் வளையல்களும், காதுகளில் தோடுகளும், கழுத்தில் மாலைகளும் கொண்டிருந்தது. அதனைக் கண்ட செங்குட்டுவன் வியப்புடன் நின்றான். அத் தெய்வம், “தோழிகாள், என் கணவனைக் கொல்வித்த பாண்டியன் தவறுடையவன் அல்லன்; யான் அவன் மகள். நான் இம் மலையில் இருந்து விளையாட விரும்பியுள்ளேன். நீங்கள் அனைவரும் என்னுடன் விளையாடுக,” என்றது. அது கேட்ட மகளிர் மகிழ்ச்சி மீதூரப் பலவகைப் பாடல்களைப் பாடிக் கண்ணகித் தெய்வத்திற்கு மகிழ்ச்சியூட்டினர். முடிவில் அத்தெய்வம், “சேரர் பெருமானான செங்குட்டுவன் நீடு வாழ்க,” என்று வாழ்த்தி மறைந்தது. இந்நிகழ்ச்சிகள் யாவற்றையும் இளங்கோவடிகள் இமைகொட்டாது கவனித்து வந்தார். அவருடன் அவரது ஆருயிர் நன்பரான சாத்தனாரும் கவனித்தார். மணிமேகலை வரலாறு செங்குட்டுவன் தேவந்தியை நோக்கி, மணிமேகலை என்பவள் வரலாறு யாதெனக் கேட்டான். அவள், “மணிமேகலை என்பவள் மாதவிக்கும் கோவலனுக்கும் பிறந்தவள். தன் தந்தை கொலையுண்டதைக் கேட்டவுடன் அவளும் அவள் தாயும் பௌத்த பிக்ஷூணிகள் ஆயினர். மணிமேகலை தெய்வ வரப் பிரசாதத்தால் பல ஊர்களில் அன்னதானம் செய்து வருகின்றாள்,” என்று சுருங்கக் கூறினாள். வேற்றரசர் வேண்டுகோள் கண்ணகி விழாவிற்கு வந்த கயவாகு முதலிய வேற்றுநாட்டு வேந்தர் கண்ணகித் தெய்வத்தைப் பணிந்து, “அம்மையே, சேரர் பெருமானுக்குக் காட்சி அளித்ததைப் போலவே எங்கள் நாட்டிற்கும் எழுந்தருளிக் கோவில் கொள்ளவேண்டும்; எங்களுக்கும் காட்சி அளித்து ஆசீர்வதிக்க வேண்டும்,” என்று வேண்டினர். கண்ணகித் தெய்வம் “அங்ஙனமே ஆகுக” என்று கூறி ஆசீர்வதித்தது. அவ்வேற்று நாட்டரசர் தத்தம் நாடுகளில் பத்தினிக்குக் கோவில் கட்டி வழிபட்டனர். கயவாகு மன்னன் எடுப்பித்த பத்தினிச் சிலை இன்று பிரிட்டிஷ் பொருட் காட்சிச்சாலையில் இருந்து வருகின்றது. மாளுவ நாட்டில் ‘பத்தினிக் கோவில்’ என்பது ‘பைதனி கோவில்’ என்று மருவி வழங்குகிறது. சேர நாட்டில் அக்கோவில் ‘பகவதி கோவில்’ என மாறி வழங்குகிறது. 9. சிலப்பதிகார காவியம் இரு பெரும் புலவர்கள் பத்தினி விழாவிற்குப் பிறகு இளங்கோ அடிகளும் சாத்தனாரும் ஒரு நாள் உரையாடிக்கொண்டிருக்கையில் ஒரு முடிவுக்கு வந்தனர். அஃதாவது கண்ணகி வரலாறும், மணிமேகலை வரலாறும் இருபெருங் காவியங்களாக எழுதப்படவேண்டும் என்பதே யாகும். அடிகள் சாத்தனாரை நோக்கி, “புலவர் ஏறே, நீர் மதுரையில் வாழ்பவர்; நேரே கண்ணகியைக் கண்டவர்; மதுரையில் நடந்த நிகழ்ச்சிகளைப் பார்த்தவர்; பின்னர்ச் சேர நாட்டில் நடந்த நிகழ்ச்சிகளையும் நேரே தரிசித்தவர். ஆதலின், நீரே இந்த இரண்டு வரலாறு களையும் எழுத வேண்டும்” என்றனர். உடனே சாத்தனார் தலையசைத்து, “அடிகளே, கண்ணகி வரலாறு சோழ-பாண்டிய-சேர நாடுகளைப் பற்றியது. அவ்வம்மை சோழ நாட்டிற் பிறந்து வளர்ந்தவள்; பாண்டிய நாட்டில் கணவனைப் பறிகொடுத்தவள்; சேர நாட்டில் தெய்வத்தன்மை அடைந்தவள். அஃதன்றி, பாண்டிய அரசனைக் கண்டு வாதிட்டு வென்றவள்; சேர வேந்தனால் கோவில் கட்டி வழிபடப்பட்டவள். மேலும் அவள் சோழநாட்டுத் தலை நகரான பூம்புகாரிற் பிறந்து வளர்ந்து வாழ்க்கை நடத்தியவள்; பாண்டிய நாட்டுத் தலைநகரான மதுரையில் கைம்மைக் கோலத்தை அடைந்தவள்; சேர நாட்டுத் தலைநகரான வஞ்சியில் தெய்வமானவள். இவற்றை நன்கு கவனிக்கையில், முடியுடை மூவேந்தர் வலராறுகளும், நாடுகளும், தலைநகரங்களும் கண்ணகி வரலாற்றிற் குறிக்கப்பட வேண்டும். அரசர் சம்பந்தமான இடங்களைப் பற்றிய விவரங்கள் அரச மரபினர் குறிப்பது எளிதாகும். ஆதலின், முத்தமிழ் நாடுகட்கு உரிய இவ்வரலாற்றை அரச மரபில் வந்துள்ள நீரே ஒரு காவியமாகப் பாடத் தகுதியுடையீர். யான், வேண்டுமாயின், மணிமேகலை வரலாற்றை ஒரு காவியமாகப் பாடி முடிப்பேன். என் வேண்டுகோளை நீவிர் மறுத்தலாகாது,” என்று வற்புறுத்தி வேண்டிக்கொண்டார். அடிகளும் அதற்கு அன்புடன் இசைந்தனர். காவியம் பாடி முடித்தல் பின்னர் அடிகள், தாம் அதுவரை தொகுத்து வைத்திருந்த கண்ணகி வரலாற்றுக் குறிப்புகளைச் சாத்தனாரிடம் காட்டினார். சாத்தனார் தாம் அறிந்த குறிப்புகள் சிலவற்றை உதவினார். சேரர் பெருமானான செங்குட்டுவன் தனது வடநாட்டு யாத்திரையைப் பற்றிய குறிப்புக்கள் அனைத்தும் விளக்கமாகக் குறித்துத் தந்தான். அடிகள் இக்குறிப்புகள் அனைத்தையும் கொண்டு, தாம் நேரிற்கண்ட-கேட்ட செய்திகளையும் உளத்திற் கொண்டு நூல் பாடத் தொடங்கினார்; தொடங்கி, அதே வேலையாக இருந்து சில மாதங்களிற் பாடி முடித்தார். சாத்தனார் அந்நூல் முழுவதையும் படிக்கக் கேட்டு அளவற்ற இன்பம் அடைந்தார். 10. நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் உட் பிரிவுகள் கண்ணகி வரலாறே ‘சிலம்பு பற்றியது’ ஆதலின், சிலப்பதிகாரம் எனப் பெயர் பெற்றது. அது மூன்று தலைநகரங்களைப் பற்றியதாதலின் முறையே (1) புகார்க் காண்டம், (2) மதுரைக் காண்டம், (3) வஞ்சிக் காண்டம் என்ற பெயர்களைக் கொண்ட முப்பிரிவுகளை உடையது; புகார்க் காண்டத்து இறுதியில் சோழன் அரசியற் சிறப்பும், மதுரைக் காண்டத்து ஈற்றில் பாண்டியன் அரசியற் சிறப்பும், வஞ்சிக் காண்ட முடிவில் சேரர் அரசியல் சிறப்பும் திறம்படக் குறிக்கப்பட்டுள்ளது. அந்நூல் முற்பது காதைகளை உடையது. முதற்காண்டத்தில் பத்துக் காதைகளும், இரண்டாம் காண்டத்தில் பதின்மூன்று காதைகளும், மூன்றாம் காண்டத்தில் ஏழு காதைகளும் உள்ளன. காவியச் சிறப்பு இன்றுள்ள தமிழ் நூல்களில் தமிழ் நாடுகள் மூன்றின் தொடர்பினையும் பெற்றுள்ள காவியம் இஃதொன்றே ஆகும்; இயல்-இசை-நாடகம் என்னும் மூன்று தமிழ் வகைகளைப் பெற்றுள்ள காவியமும் இஃதொன்றே என்னலாம். இதன்கண், வேறு எந்நூலிலும் இல்லாத கானல்வரி, வேட்டுவவரி, ஆய்ச்சியர் குரவை, குன்றக் குரவை முதலிய இசைத் தமிழ்ப் பாடல்கள் இடம் பெற்றுள்ளன. உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுளை இதனில் படித்து மகிழலாம். எல்லாச் சமயங்களும் நன்றாகச் சிறப்பிக்கப்பட்டுள்ளன. ஆசிரியரது பெரும் புலமையையும் நிறைந்த ஒழுக்கத்தையும், நடுவுநிலை வாய்ந்த உள்ளத்தையும் இக்காவியத்திற் கண்டு களிக்கலாம். இக்காவிய நடை இனிய-எளிய செந்தமிழ் நடையாகும். இத்தகைய பண்புகளைப் பெற்ற பெருங்காவியம் வேறில்லை என்னலாம். இதனாற்றான் காலஞ்சென்ற பாரதியார் இதனை, நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம்” என்றார். 2. மதுரைக் கூலவாணிகன் சாத்தனார் 1. சீத்தலைச் சாத்தனார் பெயர்க் காரணம் இவர் சங்க காலப் புலவருள் ஒருவர் என்பதும் இவரைப் பற்றிய பிற குறிப்புகளும் சென்ற பகுதியில் ஓரளவு கூறப்பட்டதன்றோ? இளங்கோ அடிகட்கு நெருங்கிய நண்பரான இவர் பெயர் சாத்தனார் என்பது. “இப்பெயர் புத்த பகவானுக்கு உள்ள பெயர்களுள் ஒன்று. ‘சஹஸ்தன்’ என்பதன் திரிபே ‘சாத்தான்’ என்பது” , என்று ஒரு சார் அறிஞர் உரைக்கின்றனர். மற்றொரு சாரார், “ ‘சாத்தன்’ என்பது ஐயனார்க்கு வழங்கும் பெயராகும். அப்பெயரே இவருக்கு இடப்பட்டிருக்கலாம்,” என்று கூறுகின்றனர். சீத்தலை ‘சீத்தலை’ என்பது சோழ நாட்டுப் பதிகளில் ஒன்று. அது, ‘செந்தலை’, ‘பறந்தலை’ என்றார் போன்ற ஊர்ப் பெயராகும். இவர், சீத்தலை என்ற பதியினர் என்பதைக் குறிக்கச் ‘சீத்தலைச் சாத்தனார்’ எனப்பட்டார். சீத்தலை என்பது ஓரூர் என்பதை அறியாத பிற்கால மக்கள், ‘சீழ் பொருந்திய தலை’ என்று பொருள் கொண்டு, “இவர், பொருட் பிழைகளும் சொற் பிழைகளும் உள்ள பாக்களைப் படிக்கும் பொழுதும், கேட்கும் பொழுதும் மனம் வருந்திக் கையில் உள்ள எழுத்தாணி கொண்டு தம் தலையில் குத்திக்கொள்வது வழக்கம். அத்தலையில் உண்டாகும் புண்ணில் சீழ் உண்டாகும். அதனால், இவர் ‘சீத்தலைச்சாத்தனார்’ எனப் பெயர் பெற்றார்,” என்று கதை ஒன்றைக் கட்டிவிட்டனர். கல்விப் பயிற்சி இவர் சோழநாட்டுச் செழும்பதியாகிய சீத்தலையில் வணிகர் மரபில் தோன்றிய பெரியார் ஆவர். இவர் மரபினர் சங்க காலத்தில் சிறந்த புலவராக இருந்திருக்கின்றனர். பொன் வாணிகனார், மதுரை அறுவை வாணிகன் இள வேட்டனார், மதுரைப் பண்ட வாணிகன் இளந்தேவனார் போன்ற புலவர் பெருமக்கள் வணிக மரபினரே ஆவர். இவர்கள் அறிவு ஒன்றுக்காகவே தமிழ்க்கல்வி பயின்றவர். இவர்களைப் போலவே நமது சாத்தனாரும் அறிவு வளர்ச்சிக்காகவே தமிழ்க் கல்வி பயின்றார்; இளமையில் ஒரு நல்லாசிரியரை அடுத்துத்தம் காலத்திலிருந்த தொல் காப்பியம், பெருங்காக்கைப் பாடினியம் போன்ற இலக்கண நூல்களையும் அக்காலத்தில் இருந்த சிகண்டியம், பெருநாரை, பெருங்குருகு, களரியா விரை போன்ற பழைய நூல்களையும் புலவர் பலருடைய தனிப் பாடல்களையும் வேறு அக்காலத்தில் இருந்து இன்று அழிந்துபோன தமிழ்க் காவியங்களையும் பயின்று சிறந்தார். 2. நல்லார் இணக்கம் மதுரைக் கூலவாணிகள் சாத்தனார் மேற்சொன்ன நூல்களுடன் தெய்வப் புலவராகிய திருவள்ளுவர் செய்த திருக்குறள் என்னும் தமிழ் மறையை ஐயந்திரிபற அழுத்தமாகக் கற்றார். இவற்றுடன் இவர் தம் காலத்துச் சைவ-வைணவ-பௌத்த-சமண சமய நூல்களையும் நன்கு பயின்றார். இங்ஙனம் இலக்கண-இலக்கிய-சமய நூல்களில் பெரும் புலமை பெற்ற இப் பெரியார், மதுரையில் தமிழ்ச் சங்கம் நடைபெறுவதைக் கேள்வியுற்றார்; அச்சங்கம் பாண்டிய அரசர் பாதுகாவலில் நடைபெறுவதை அறிந்தார்; தாம் மதுரையில் குடியேறினால் அச்சங்கப் புலவருடன் நெருங்கிப் பழக வாய்ப் புண்டாகும் என்றெண்ணினார்; அதனால், பீடுமிக்க மாட மதுரையை அடைந்தார்; நெல், வரகு, தினை, சாமை, இறுங்கு, தோரை, இராகி முதலிய பதினெட்டு வகைத் தானியங்கள் கொண்ட கடை ஒன்றை வைத்தார். இப்பதினெட்டு வகையும் கூலம் எனப்படும். இவற்றை விற்றவர் ‘கூல வணிகர்’ எனப்பட்டனர். இங்ஙனம் கூலவாணிகம் ஏற்படுத்தி, மதுரை மாநகரத்திலேயே தங்கி இருந்தமையால், ‘சீத்தலைச் சாத்தனார்’ எனப் பெயர் பெற்றிருந்த நமது புலவர் பெருமான், மதுரைக் கூலவாணிகன் சாத்தனார் என்று அழைக்கப் படுவாரா யினார். இதனாற்றான் புறநானூறு, அகநானூறு முதலிய நூல்களில் இவர் பாடியுள்ள பாக்களின் அடியில், ‘சீத்தலைச் சாத்தனார்’ என்றும், ‘மதுரைக் கூலவாணிகன் சாத்தனார் என்றும், ‘மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார்’ என்றும் மூன்று வகையாக இவர் குறிக்கப்பட்டுள்ளனர். சங்கப் புலவர் நட்பு மதுரை மாநகரில் குடிபுகுந்த சாத்தனார், ஒரு நாள் தமிழ்ச்சங்க மாளிகைக்குச் சென்றிருந்தார். அங்கிருந்த நக்கீரர் உள்ளிட்ட புலவர் பெருமக்கள் இவரை வரவேற்றுப் பேசினர்; இவரது உரையாடலைக் கொண்டே இவரது பெருப்புலமையை அளந்தறிந்தனர்; அன்று முதல் சாத்தனாரைத் தம்முடன் ஒரு புலவராகச் சோத்துக்கொண்டனர். சாத்தனார் அச்சங்கத்துச் சான்றோருடன் நெருங்கிப் பழகிப் தமிழ் வளர்ச்சியில் நாட்டம் மிக்குடையாராயினர். சாத்தனாருடைய புலமை, புலன் அடக்கம், மாசற்ற ஒழுக்கம் முதலிய நற்பண்புகளை அறிய அறியச் சங்கப் புலவர் இவரை உத்தம நண்பராகக் கொண்டனர். சாத்தனார் ஓய்வு நேரங்களில் சங்கம் இருந்து தமிழாராய்ந்து வந்தார். மருத்துவன் தாமோதரனார் என்பவர் சாத்தனார்க்கு உயிர் நண்பராயினர். அதனால் அவ்விருவரும் நெருங்கிப் பழகி வந்தனர். 3. முத்தமிழ் மன்னர் சேர வேந்தன் சாத்தனார் மதுரையில் சிறந்த புலவர் பெருமானாக வாழ்ந்து வருகையில் சேர நாட்டை நெடுஞ்சேரலாதன் மகனான-சேர செங்குட்டுவன் ஆண்டு வந்தான். அவனுடைய இளவலான இளங்கோ அடிகள் முத்தமிழிற் சிறந்த வித்தகராக இருந்தார். சேரர் பெருமான் தமிழைத் தம் உயிரினும் மேலாகக் கருதி வளர்த்து வந்தான்; புலவருக்குத் தக்க மரியாதைகள் செய்து புகழ் பெற்றான். இதனால், செங்குட்டுவன் பெயரும் அடிகள் பெயரும் பாண்டிய நாட்டிற் பரவின. சாத்தனார் சேரர் பெருமானையும் அடிகளையும் காண அவாக் கொண்டார். “நல்லவரை நல்லவர் நாடுதல் இயல்பன்றோ?” புலவர் பிரயாணம் சாத்தனார் ஒருமுறை மதுரையை விட்டுப் புறப்பட்டுச் சேர நாடு சென்றார். அக்காலத்தில் மதுரைக்கும் வஞ்சி மாநகர்க்கும், மதுரைக்கும் உறையூர்க்கும், உறையூர்க்கும் பூம்புகார்க்கும் பெரும் பாதைகள் உண்டு. சாத்தனார் அப்பாதை வழியே சென்று சேர நாடிற்குள் நுழைந்தார்; எங்கும் மலைகளையும் குன்றுகளையும் கான்யாறுகளையும் முகில் தவழும் மலைமுகடுகளையும் கண்டார்; இயற்கை அன்னையின் இன்பப் புதல்வராகித் தம்மை மறந்து வழி நடந்தார். அங்கங்கு யானைகளும் புலிகளும் கரடிகளும் மயில்களும் குயில்களும் அவருக்கு காட்சி அளித்தன. சேரரும் புலவரும் இத்தகைய இயற்கைக் காட்சியைக் கண்டு கொண்டே புலவர் பெருமான் வஞ்சி மாநகரத்தை அடைந்தார்; அரண்மனையைக் குறுகித் தமது வரவை வாயிற் காவலருக்கு அறிவித்தார். அவர்கள் உட்சென்று அரசனைப் பணிந்து, “அரசே, வாழ்க நின் கொற்றம். மதுரையிலிருந்து சங்கப் புலவர் ஒருவர் வந்துள்ளனர். அவர் பெயர் சாத்தனார் என்பது,” என்றனர். சேரன் சாத்தனாரது பெரும் புலமையைப் பிற சங்கப் புலவர்பால் கேட்டு அறிந்தவன் ஆதலின், உடனே உளமகிழ்ந்து, “அவரை வரவிடுங்கள்” என்று சொல்லிக் கொண்டே அவரை வரவேற்க எழுந்து சென்றான்; உடனே, குணவாயிற் கோட்டத்தில் இருந்த இளங்கோ அடிகட்கும் செய்தி சொல்லி அனுப்பினான். சாத்தனார் அரண்மனைக்குள் நுழைந்தார். உடனே செங்குட்டுவன் எதிர் சென்று, “சங்கப் புலவரே, வருக, வருக”, என்று சொல்லி வரவேற்று அவரை மார்புறத் தழவி அழைத்துச் சென்றான். பேரரசன் தம்மிடம் இவ்வளவு அன்பு காட்டுவான் என்று சாத்தனார் நினைத்திலர். அரசன் அவரை ஓர் ஆசனத்தில் அமரச்செய்து, பாண்டிய நாட்டுச் செய்திகளையும் புலவருடைய பிறப்பிடம், குடும்பம் பற்றிய செய்திகளையும் விசாரித்துக் கொண்டிருந்தான். அவ்வளவில் அங்கு இளங்கோ அடிகள் துறவுக் கோலத்தில் தோன்றினார். அவரைக் கண்ட சாத்தனார், ‘இவர் தாம் இளங்கோ அடிகள்’ என்று எண்ணி, அவரடிகளில் வீழ்ந்து பணிந்தார். பணிந்த சாத்தனாரை அடிகள் மார்புறத் தழுவி முகமன் கூறினர். பின்னர் மூவரும் உணவு கொண்டனர். அதன் பிறகு மதுரைத் தமிழ்ச் சங்கத்தைப் பற்றியும் தமிழ்ப் புலவரைப் பற்றியும் பேசிக்கொண்டிருந்தனர். இவ்வாறு சாத்தனார் சில நாட்கள் வஞ்சி மாநகரத்தில் தங்கி இருந்து, சேரர் பெருமக்களுடைய பெருநட்பினைப் பெற்று, அவர்கள்பால் மதிக்கத்தக்க பரிசில் வகைகளைப் பெற்று மதுரை மீண்டார். சாத்தனார் அன்று முதல் ஆண்டிற்கு ஒருமுறை அல்லது இருமுறை வஞ்சி சென்று வருதல் வழக்கமாக கொண்டிருந்தனர். சோழன்-நெடுமுடிக்கிள்ளி சேரன்-செங்குட்டுவனுக்கு அம்மான் மகனான நெடுமுடிக்கிள்ளி என்ற சோழ மன்னன் காவிரிப் பூம்பட்டினத்தைத் தலைநகராகக் கொண்டு சோழப்பெரு நாட்டை ஆண்டு வந்தான். அவன் செங்குட்டுவன் தயவினால் அரசனானான். அவனுக்கு மாறாகச் சோழ அரச மரபினர் பலர் கிளர்ச்சி செய்தனர். செங்குட்டுவன் அவர்கள் எல்லோரையும் அடக்கி நெடுமுடிக்கிள்ளியை அரசன் ஆக்கினான். நெடுமுடிக் கிள்ளி பரந்த சிந்தையும் விரிந்த நோக்கமும் உடையவன்; பாண மரபுப் பெண் ஒருத்தியை மணந்தான். அவளே கோப்பெருந்தேவியாக இருந்தாள். அரசன் பூம்புகாரைத் தலைநகராகக் கொண்டு சோழ நாட்டைக் காத்துவந்தான். அவன் தம்பியான இளங்கிள்ளி என்பவன் சோழர் ஆட்சிக்கு உட்பட்டிருந்த தொண்டை நாட்டைக் காஞ்சியில் சோழப் பிரதிநிதியாக இருந்து அரசாண்டான். நெடுமுடிக்கிள்ளி சோழ அரசனாக இருக்கும் பொழுதுதான் மாதவியும் அவள் மகளான மணிமேகலையும், கோவலன் மதுரையிற் கொலையுண்ட பிறகு, பௌத்த பிக்ஷூணிகளாகி அறவண அடிகளிடம் அற வுபதேசம் பெற்றனர். உதயகுமரன் என்பவன் நெடுமுடிக்கிள்ளி மகனாவன். அவனே சோழ இளவரசன். பாண்டியன்-நன்மாறன் சாத்தனார் மதுரையில் குடிபுகுந்த பொழுது பாண்டிய அரசனாக இருந்தவன் நன்மாறன் என்பவன். அவன் ‘சித்திரமாடம்’ என்ற மாளிகையில் இறந்தமையால், ‘சித்திரமாடத்துத் துஞ்சிய நன்மாறன்’ எனப்பெயர் பெற்றான். அவன் காலத்தில் தமிழ்ச்சங்கம் நன்னிலையில் வளர்ச்சி யடைந்து வந்தது. அவன் தமிழ்ப் புலவர்கட்குப் புரவலனாக விளங்கினாள்; சங்கப் புலவரைத் தம் உயிர் போலக் கருதிப் பாதுகாத்தான்; நாள்தோறும் அவர்களைக் கண்டு பேசுவதை வழக்கமாகக் கொண்டிருந்தான். அப்பெருமகன் சாத்தனார் பெரும் புலமையைக் கேள்வியுற்று அவரைப் பார்க்க விழைந்தான் அஃதரிந்த சாத்தனார் அரசர்பெருமானைச் சென்று கண்டார். கோமகன் புலவரை வரவேற்று, நல்விருந்தளித்து உளமகிழ உரையாடிக்கொண்டிருந்தான்; அவரது பெரும் புலமையின் ஒரு பகுதியை அவர் உரையாடலிலிருந்து தெளிந்தான். அவன் சாத்தனார்க்குப் பல பொருள்களைப் பரிசிலாகத் தந்து மகிழ்ந்தான். புலவர், தமிழ்ப் புரவலனது பேரன்பினுக்குக் கட்டுப்பட்டவராய், “பாண்டியர் பெருமானே, ஆரம் தாழ்ந்த அழகு மிக்க மார்பினை உடையாய், முழந்தாள் அளவும் தொங்குகின்ற நீண்ட கையினை உடையாய், அழகு மிக்க வழுதி, நீ புலவர்க்குப் புரவலன்; இரவலர்க்கு வள்ளல். நீ கடலிடத்தே கிளர்ந்து எழுகின்ற செஞ்ஞாயிற்றைப் போலப் பகைவரைச் சுட்டெரிப்பவன்; ஆனால் எம்போன்ற புலவர்-பாணர்-விறலியர்-கூத்தர் இவர்கட்குத் திங்களை ஒப்பவன். அரசே, நீ நீடு வாழ்க”, என்று வாழ்த்தினர். சாத்தனார் அன்று முதல் அடிக்கடி அரசனைக் கண்டு அளவளாவி மகிழ்வதுண்டு. பாண்டியன்-நெடுஞ்செழியன் சில ஆண்டுகள் கழித்து நன்மாறன் காலமானான். அவனுக்குபின் நெடுஞ்செழியன் என்பவன் அரசுகட்டில் ஏறினான். நெடுஞ்செழியன் சிறந்த கல்விமான்; இலக்கண-இலக்கியப் புலவன்; கவிபாடும் ஆற்றல் பெற்றவன். அவன் போரில் சிங்கம் போன்றவன்; அஞ்சா நெஞ்சினன். அவனிடம் பண்பட்ட மறவர் படைகள் பல இருந்தன. அவன் அடிப்படைகளைக் கொண்டு தமிழகத்திற்கு வடக்கே அடிக்கடி எல்லைப்புறப் போர்களை வளர்த்துவந்த ஆரியப் படைகளைப் போரில் முறியடித்தவன்; அதனால், ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் என்ற சிறப்புப் பெயரைப் பெற்றவன். அப்பெருமகன் தம் நாட்டில் கல்லாமையை ஒழித்தவன் என்னலாம். ‘கற்றவனே உயர்ந்தவன்; அவன் எம்மரபினன் ஆயினும் மதிப்புக் குறியவன் ஆவான்,’ என்ற உயரிய கொள்கை உடையவன். கவியரசும் புவியரசுமாகிய நெடுஞ் செழியன் சங்கப் புலவர்க்குத் தாயாக விளங்கினான். அவனது செங்கோற் சிறப்பினால் பாண்டிய நாடு பைந்தமிழ் நாடாக விளங்கியது 4. கணவனை இழந்த கண்ணகி கோவலன் கொல்லப்படல் சாத்தனார் மதுரையில் தங்கி இருந்த நாட்களில் ஒரு நாள் கோவலன் கொலையுண்டான். அயல் நாட்டு வணிகன் ஒருவன்மதுரையில் அரசனது ஆணைப்படி கொலையுண்டான் என்பதைக் கேட்ட சாத்தனார்; ‘உண்மை யாது? அயல் நாட்டு வணிகன் யாவன்? அவன் ஏன் மதுரைக்கு வந்தான்?’ என்பன போன்ற கேள்விகள் அவர் உள்ளத்தே எழுந்தன. அவர் கோவலன் கொல்லப்பட்ட இடம் சென்று கவனித்தார்; கோவலன் பொற்கொல் லனைக் கண்டதும், பொற்கொல்லன் அவனிடம் காற்சிலம்பை வாங்கிக்கொண்டு அரண்மனை நோக்கி நடந்ததும், பிறகு அவன் கொலையாளிகளுடன் திரும்பி வந்ததும், கொலையாளிகள் கோவலனைக் கொன்றதும் அங்கிருந்தோர் விவரமாகக் கூறினர். ஊரார் பேச்சு சாத்தனார் புலமை (அறிவு) உடையவர் ஆதலின், கூட்டத்திற்குள் நுழைந்து, யார்-யார் என்ன என்ன பேசுகிறார்கள் என்பதைக் கவனித்தார். அப்பொழுது இடைக்குல மங்கையார் சிலர் அங்கு வந்து நின்றனர்; வெட்டுண்ட கோவலன் முகத்தைக் கண்டதும் திடுக்கிட்டு, “ஐயையோ, இவன் நமது மாதரி வீட்டில் அடக்கலமாக விடப்பட்ட கண்ணகியின் கணவன் அல்லவா? இவன், ஐயோ! பாவம்! பரத்தையர் லோலனாக இருந்து பொருள் இழந்தவன்; அதனால், தான் பிறந்து வளர்ந்த காவிரிபூம் பட்டினத்தில் இருந்து வாணிகம் செய்ய மனமில்லாது, தன் கற்புக்கரசியான மனைவியுடன் நேற்றுத்தான் இங்கு வந்தான். பாவம்! அவளது காற்சிலம்பை விற்றுவரும் பணத்தை முதலாகக் கொண்டு வாணிகம் செய்ய விரும்பி இங்கு வந்தான்; வந்த இடத்தில் இக்கதி ஏற்பட்டதே! ஐயோ, கண்ணகி வயதில் இளையவள்; பேரழகி; பெருங்குடி வணிகன் மகள். அவள் இதனைக் கேள்விப்பட்டால் என்னபாடு படுவாள்! கொடுமை! கொடுமை! இவன் அரசன் ஏவலால் கொலையுண்டான் என்று இங்குப் பேசிக் கொள்கின்ரனறே! நேற்று இந்த நகருக்கு வந்த இவன், அரசற்கு என்ன தவறு செய்திருத்தல் கூடும்! .......” என்று தங்களுக்குள் பேசிக்கொண்டனர். இப்பேச்சு முழுவதும் சாத்தனார் செவிகளிற் பட்டது. அவருக்குக் கவலை மிகுதியாயிற்று. ஏன்? சாத்தனார் கவலை “கோவலன் காவிரிப்பூம்பட்டினத்து வணிகர் குடியினன்; தன் மனைவியுடன் தனியே வேற்று நாட்டிற்கு வந்தவன்; மனைவியை இடைச்சேரியில் மாதரியிடம் அடைக்கலமாக விட்டு வந்தான். வந்த இடத்தில் ஏதோ வஞ்சனையால் கொலையுண்டிருக்கிறான். முற்றும் புதிய இந்தப் பெரிய நகரில் இளம் பெண்ணாகிய கண்ணகி யாது செய்வாள்! பாவம்! நாம் நடந்தது இன்னது என்பதை அறிதற்கும் வழி இல்லை....... பொறுத்திருந்து பார்ப்போம்,” என்று பலவாறு எண்ணமிட்டுக்கொண்டிருந்தார். கண்ணகி புலம்பல் இங்ஙனம் சாத்தனார் எண்ணமிட்டுக் கொண்டிருக் கையில், கடைத் தெருவில் வைகை யாற்று வெள்ளம் வருதல்போலப் பேரிரைச்சலுடன் மக்கள் திரண்டு வந்தனர்; சாத்தனார் கூர்ந்து அக்கூட்டத்தைக் கவனித்தார். அக் கூட்டத்திற்கு முன் பூங்கொடி போன்ற இளமங்கை ஒருத்தி தன் கையில் சிலம்பு ஒன்றை ஏந்தி வீராவேசத்துடன் வந்துகொண்டிருந்தாள். அவள் கூந்தல் அவிழ்ந்து பறந்தது விழிகளிலிருந்து துன்பக் கண்ணீர் வழிந்த வண்ணமாக இருந்தது. அம்மங்கை நல்லாள், “மதுரை நகரப் பெருமக்களே, இந்த அநியாயம் எங்கேனும் நடந்ததுண்டா?” என் காற்சிலம்பை விற்க வந்த கணவன் கொல்லப்பட்டதேன்? புகழ் வாய்ந்த பாண்டிய அரசு பழுதாகி விட்டதோ!” என்று 1அலறிக்கொண்டு வந்தாள். வெள்ளி அம்பலம் சாத்தனார் கண்ணகியைக் கண்டு கண்ணீர் விட்டார்; அவளது மாந்தளிர் போன்ற மேனி, தாமரை மலர்போன்ற கண்கள், முத்துப் போன்ற பற்கள், முழுமதியை ஒத்த முகம், வாடாத இளமை, கட்டமைந்த உடல், இவை அனைத்தும் புலவர் உள்ளத்தை உருக்கின. கண்ணகி, பின்னர்1 அரண்மனைக்குச் சென்று பாண்டிய னிடம் தன் கணவன் கள்வன் அல்லன் என்பதை மெய்ப்பித்தும், உண்மை உணர்ந்த பாண்டியன் நாணி மயக்குற்று வீழ்ந்திறந்தும், அவனைப் பின்பற்றி அரசி இறந்தும் அன்றிரவே ஊரெங்கும் பரவின. அன்றிரவு சாத்தனார் வெள்ளியம்பலத்தில் தங்கி இருந்தார். அந்த அம்பலத்தில் துறவிகள் முதலிய பற்றற்ற வரும் அயல்நாட்டு யாத்திரிகரும் வந்து தங்குதல் வழக்கம். அங்குக் கண்ணகி சம்பந்தமாக யாதேனும் புதிய செய்திகள் அறியக்கூடுமோ என்ற எண்ணத் துடன் சாத்தனார் அங்குத் தங்கி இருந்தார். அச்சமயத்தில், கண்ணகியின் சாபத்தால் கொடியவர் இல்லங்கள் தீப் பற்றிச் சாம்பராகின்றன என்ற செய்தி எட்டியது. சாத்தனார் திடுக்கிட்டார்; கண்ணகி தெய்வக் கற்புடைய பெண்மணி என்பதை அப்பொழுது , பாண்டியனிடம் தன் கணவன் உணர்ந்தார். அன்றிரவு அவருக்குத் தூக்கம் வரவில்லை. அறிவுடைய அப்புலவர் பெருமான் அன்றைய நிகழ்ச்சிகளை ஒன்றன் பின் ஒன்றாக எண்ணி எண்ணிப் பலவாறு யோசித்துக்கொண்டிருந்தார். மதுரை நகரம் தீப்பற்றி எரிந்துக்கொண்டு இருந்தது. அப்பொழுது கண்ணகி வீராவேசத்துடன், கண்டவர் ‘காளியோ’ என்று அஞ்சத்தக்கவாறு காணப்பட்டாள். அவள் மதுரை எரிவதை பார்த்துக்கொண்டே வெள்ளியம்பலத்திற்கு எதிரில் வந்து நின்றாள். அப்பொழுது மதுரையின் ஆதிதேவதையான மதுராபதி என்னும் தெய்வம் அவளைப் பின் தொடர்ந்து வந்து அவளது முற்பிறப்பின் வரலாற்றை2 விளங்கவுரைத்து, அவளது சீற்றத்தைத் தணிவித்தது. இந் நிகழ்ச்சியைத் திருவருள் வசத்தால் சாத்தனார் தெளிவாகக் கண்டார். பின்னர்க் கண்ணகி சேர நாடு சென்று, முற்பகுதியில் குன்றக்குறவர் கூறியவாறு வானுலகம் சென்றனள். 5. சாத்தனாரும் செங்குட்டுவனும் மதுரை மாநகரம் கேடுற்றதாலும் கொடிய நிகழ்ச்சி ஏற்பட்டுவிட்டதாலும் சாத்தனார் மனநிலை மாறிவிட்டது. அவர் அந்நிலையை மாற்ற மதுரையை விட்டு வஞ்சி செல்லத் துணிந்தார்; துணிந்து, வஞ்சி சென்றார். அவ்வமயம் செங்குட்டுவனும் இளங்கோவடிகளும் கோப்பெருந் தேவியும் மலைவளம் காணச் சென்றனர் என்பதை கேள்வியுற்று, அங்குச் சென்று அவர்களைக் கண்டார். நால்வரும் உரையாடிக் கொண்டிருக்கையில் குன்றக்குறவர் வந்து அரசனைப் பணிந்து, கண்ணகி விண்ணகம் சென்ற வரலாற்றை விரித்துரைத்தனர். அரசன், அடிகள், பெருந்தேவி ஆகிய மூவரும் அப்பெண் மணியின் வரலாறு தெரியாமல் விழித்தனர். சாத்தனார் மேற் கூறப்பெற்றவாறு கண்ணகி வரலாற்றின் முற்பகுதியைக் கேள்வி வாயிலாகவும் பிற்பகுதியை நேராகவும் அறிந்தவராதலின், “யான் அறிகுவன் அவள் வரலாற்றை,” என்று சொல்லி பத்தினிக் கடவுளின் வரலாற்றை விளங்க வுரைத்தார். அதன் பின்னரே அரசன் அப்பத்தினிக்குக் கோவில் கட்டி விழாச் செய்தான். அவ்விவரங்கள் அனைத்தும் முற்பகுதியில் விரிவாகக் கூறப்பட்டுள்ளன அல்லவா? 6. சாத்தனாரும் இளங்கோ அடிகளும் மணிமேகலை கண்ணகி அம்மனுக்கு விழா முடிந்தது. சாத்தனார் அவ்விழாவிற் கலந்து கொண்டார்; பின்னர் மதுரைக்குச் சென்றார். மதுரை புதுப்பிக்கப்பட்டது. நெடுஞ்செழியனுக்குப் பிறகு வெற்றிவேற் செழியன் பட்டம் பெற்று நாட்டை நேர்மையாக ஆண்டு வந்தான். சேர நாட்டில் கண்ணகி, தெய்வமாக வழிப்படப்பட்ட வரலாறு மணிமேகலை கேள்வியுற்றாள். பௌத்த பிக்ஷூணியான அவள், சேர நாட்டை அடைந்து கண்ணகிக் கோவிலைத் தரிசித்தாள்; பின்னர்க் காஞ்சி முதலிய நகரங்களில் இருந்து அன்னதானத் தொண்டு செய்து, காஞ்சியில் தங்கி, நோன்பு நோற்றுத் துறக்கம் அடைந்தாள். தமிழ்நாடு முழுவதும் மணிமேகலையின் புகழ் பரவியது. இதனைச் சாத்தனார் கேள்வியுற்றார்; தம் காலத்தில் நடைபெற்ற கண்ணகி பற்றிய நிகழ்ச்சிகளை ஒரு காவியமாகயும், மணிமேகலை பற்றிய நிகழ்ச்சிகளை மற்றொரு காவியமாகவும் செய்தல் நல்லதென்று எண்ணினார். அடிகளை வேண்டுதல் மேற்சொன்ன நிகழ்ச்சிகள் நடைபெற்றுச் சில ஆண்டுகள் ஆயின. ஆயினும், தமிழ் நாட்டில் கண்ணகி-மணிமேகலை வரலாறுகள் மறக்கப்படவில்லை. பல நாட்டு வணிகரும் பிறரும் சந்திக்கும் இடங்களில் எல்லாம் இவ்வரலாறுகள் பேசப்பட்டு வந்தன. இந்த நிலமையில், ஒருநாள் சாத்தனார் இளங்கோவடிகளுடன் உரையாடிக்கொண்டிருக்கையில், “அடிகள், கண்ணகி அம்மன் வரலாற்றை நீர் ஒரு காவியமாகப் பாடி யருளல் வேண்டும்,” என்று கூறி, அதனை அவர் பாடவேண்டும் என்பதற்குரிய காரணங்களைக் காட்டி வற்புறுத்தி வேண்டினார். அடிகள், “நீர் மணிமே கலை வரலாற்றை ஒரு காவியமாகப் பாடுவதாயின், நான் உமது விருப்பத்தை நிறைவேற்றுவேன்,” என்று கூறச் சாத்தனார் அதற்கு உடன்பட்டனர். இரண்டு பெருங் காவியங்கள் இப்பேச்சுக்குப் பிறகு சில மாதங்கள் கழிந்தன. ஒருநாள் சாத்தனாருக்கு அடிகளிடமிருந்து அழைப்பு வந்தது. அவ்வழைப்பு வருவதற்குள் சாத்தனார் தாம் மேற்கொண்ட வேலையைக் செய்து முடித்துவிட்டார்; ஆதலின், உடனே புறப்பட்டு வஞ்சி மாநகரத்தை அடைந்தார். செங்குட்டுவன் பேரவையில், தமிழ்ப் பெரும் புலவர்கட்கு இடையில், இளங்கோவடிகள் தலைமை வகிக்கச் சாத்தனார் தாம் செய்த மணிமேகலை என்னும் மாண்புறு காவியத்தைப் படித்து விளங்கி அரங்கேற்றினர். பின்னர்ச் சாத்தனார் தலைமை தாங்க, அடிகள் தாம் இயற்றிய சிலப்பதிகாரம் என்னும் முத்தமிழ்க் காவியத்தை முறையாகப் படித்து விளக்கி அரங்கேற்றம் செய்தனர். 7. ‘மணிமேகலை என்னும் காவியம் நூற் பொருள் ‘மணிமேகலை’ என்னும் காவியம் சிலப்பதிகாரத்தைப் போலவே முப்பது காதைகளை உடையது. அது மாதவி மகளான மணிமேகலை என்பவள், நாடகக் கணிகையர் தொழிலை வெறுத்துச் சிறந்த ஒழுக்கத்துடன் பௌத்த பிக்ஷூணியாக இருந்து எல்லா உயிர்களும் அன்னதானத் தொண்டு செய்து, பல சமய ஆராய்ச்சியிற்புகுந்து, இறுதியில் அறவண அடிகள் என்ற பௌத்த குருவிடம் உபதேசம் பெற்றுத் தவம் கிடந்து, முக்தி எய்திய வரலாற்றை விரித்துக் கூறுவது. மணிமேகலை பூம்புகாரிற் பிறந்து வளர்ந்து உதயகுமரன் என்ற அரச குமரனால் காதலிக்கப்பட்டவள். அவளைப் பின் தொடர்ந்த குற்றத்தால் அவன் விஞ்சையன் ஒருவனால் கொல்லப்பட்டான். நெடுமுடிக்கிள்ளியின் மனைவி தன் அருந்தவப் புதல்வன் இறக்கக் காரணமாக இருந்த மணிமேகலையப் பலவாறு துன்புறுத்தித் தீங்கிழைக்க முயன்றாள்; அவள் முயற்சி பயன் அளிக்கவில்லை. மணிமேகலை பூம்புகாரிலும் காஞ்சியிலும் அன்ன தானத் தொண்டு செய்தாள்; வஞ்சி மாநகரத்தில் இருந்த பல சமயவாதிகளை நெருங்கி அவரவர் சமயக் கொள்கைகளைக் கேட்டறிந்தாள்; மந்திர சக்தியால் சாவகம் (ஜாவா), மணிபல்லவம் முதலிய தீவுகட்கு விண்வழியே சென்று மீண்டாள் . . .. . . . . இத்தகைய செய்திகள் அனைத்தும் மணிமேகலை என்னும் காவியத்தில் விரிவாகக் கூறப்பட்டுள்ளன. நூலின் சிறப்பு பண்பட்ட ஓவியக்காரன் பல நிறங்களைக் கொண்டு கண்ணையும் கருத்தையும் கவரத்தக்க ஒப்புயர்வற்ற ஓவியம் ஒன்றை வரைதல் போல-மேற்சொன்ன மணிமேகலையின் வரலாற்றுத் குறிப்புகளைக் கொண்டு சாத்தனாராகிய சங்கப் புலவர் மணிமேகலை என்னும் மாண்புறு காவியத்தைச் செய்தமைத்தார். இந்நூல் எளிய செந்தமிழ் நடைகொண்டு இலங்குவது. அறிவதற்கு அருமையான பல சமயக்கொள்கை களைச் சாத்தனார் எளிய முறையில் விளக்கி யுள்ளார்; சமயத் தொடர்பான சொற்களையும் தொடர்களையும் பொருத்தமாக மொழிபெயர்த்துள்ளார். ஆங்காங்குத் தக்க இடங்களில் சோலை வருணனை-அந்திமாலை வருணனை-காஞ்சி, வஞ்சி, காவிரிப் பூம்பட்டினம் என்ற நகரங்களின் வருணனை-பல ஓவியங்களைப் பற்றிய விளக்கங்கள்-சக்கரவாளக் கோட்ட வருணனை முதலியன கருத்தூன்றிப் படித்து இன்புறத் தக்கன. சாத்தனார் திருக்குறளில் பண்பட்ட புலவர் என்பதை அவர் ஆண்டுள்ள, “தெய்வந்தொழா அவள் கொழுநற்-றொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் பெருமழை’ என்ற அப் பொய்யில் புலவன் பொருளுரை தேராய்,” என்ற திருக்குறளைக் கொண்டே நன்றாகக் கூறலாம். சேரர் தலைநகரான வஞ்சி மாநகரம், இளங்கிள்ளி ஆண்ட காஞ்சி மாநகரம், சோழர் கோநகரமான பூம்புகார் என்ற பழைய பதிகளின் அக்கால அமைப்பை நாம் அறிய இந்நூல் பெருந்துணை புரிகின்றது. அக்கால விழாக்கள், அவற்றைப் பற்றிய விவரங்கள், மக்களுடைய பழக்கவழக்கங்கள், அக்காலத்தில் நடைபெற்றுவந்த கடல் வாணிகம், பிற நாடுகட்கும் தமிழகத்திற்கும் இருந்த தொடர்பு முதலிய ‘வரலாறு’ பற்றிய செய்திகளும் இக்காவியத்திற் கிடைக்கின்றன. கோவலன்-கண்ணகி வரலாற்றைச் சிலப்பதிகாரம் விளக்கிக் கூறுதல்போல, இந்நூல் மாதவி-மணிமேகலை இவர் தம் வரலாற்றை விளங்க உரைக்கின்றது. சாத்தனார் காலத்தில் பௌத்த சமயம் தமிழகத்தில் இருந்த நிலைமையை இந்நூல் கொண்டு நன்றாக அறியலாம்; அதேகாலத்தில் பிற சமயங்கள் இருந்த நிலையையும் ஒருவாறு தெளியலாம். இந் நூலினால் அக்காலத் தமிழரசர் அரசியலைக் தெளிவாக அறியலாம். சுருங்கக் கூறின், சங்க காலத்தில் (கி. பி. இரண்டாம் நூற்றாண்டில்) எழுந்த இந்தக் காவியங்கள் இரண்டும் சங்க காலத் தமிழகத்தைப் படம் பிடித்துக் காட்டுகின்றன என்னலாம். நீங்கள் பெரியவர்களான பிறகு, இந்தப் பழைய காவியங்கள் இரண்டையும் படித்துப் பயன் பெறுவீர்களாக! 3. சேக்கிழார் 1. தொண்டை நாடு தொண்டை நாட்டு வரலாறு கி.பி. 12-ஆம் நூற்றாண்டில் தோன்றிய சைவப் பெருங்காவியம் ஆகிய பெரிய புராணத்தைச் செய்தருளிய் சேக்கிழார் பெருமான் தொண்டை நாட்டைச் சேர்ந்தவராவர். அத்தொண்டைநாடு மணிமேகலை காலத்தில் சோழர் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது என்று படித்தோம் அல்லவா? அஃது ஏறத்தாழக் கி. பி. 300-ல் பல்லவர் என்ற புதிய மரபினர் ஆட்சிக்கு உட்பட்டது; கி. பி. 4, 5, 6-ஆம் நூற்றாண்டுகளில் பல்லவருக்கும் சோழருக்கும் உட்பட்டு ஓயாத போர்கட்கு நடுவிடமாக இருந்து அல்லற்பட்டது; கி. பி. 7, 8, 9-ஆம் நூற்றாண்டுகளில் நிலையாகப் பல்லவர்கையில் இருந்து வந்தது. கி. பி. 9-ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஆதித்த சோழன் என்பவன் அபராஜிதவர்மன் என்ற பல்லவ அரசனைக் கொன்று தொண்டை நாட்டைச் சோழப் பேரரசில் சேர்த்துக் கொண்டான். கி. பி. 10-ஆம் நூற்றாண்டின் முதற் பகுதியில் தொண்டை நாடு இராஷ்டிரகூட அரசனான மூன்றாம் கிருஷ்ணன் வசம் ஏறத்தாழ இருபது ஆண்டுகள் இருந்தது; பின்னர்ப் பழையபடி சோழர் ஆட்சிக்கு உட்பட்டது. இயற்கை அமைப்பு தொண்டைநாடு வேங்கடம், நகரி, திருத்தணி, வாலாஜா நகர், வேலூர், செங்கற்பட்டு முதலிய இடங்களில் தனி மலைகளையும் தொடர்மலைகளையும் மிக்குடைய நாடாகும்; இடையிடையே பெருங்காடுகள் உண்டு. ஆலங்காடு, வேற்காடு, ஆர்க்காடு, காட்டுப்பாடி முதலிய பெயர்கள் இந் நாட்டுக் காட்டு நிலையை நன்குணர்த்துவனவாகும். இந்நாட்டை ஆண்ட பல்லவர், “காடு வெட்டிகள்” என்ற பெயர் பெற்றிருந்தமையும் இவ்வுண்மையை வற்புறுத்தும். வடபெண்ணை ஆறுமுதல் பாலாறுவரை நீண்டுள்ள கடற்கரையின் அமைப்பு அழகானது. எனவே, இந்நாடு நெய்தல் நிலப் பாங்கினையும் நன்கு பெற்றதாகும். ‘பாலாறு’ என்னும் பெரிய ஆற்றின் பாய்ச்சலாலும் சோழர், பல்லவர் அமைத்த எண்ணிறந்த ஏரிகளின் பாய்ச்சலாலும் இந்நாட்டில் மருதவளமும் ஓரளவு அமைந்திருக்கின்றது. ஏரிப் பாய்ச்சல் அற்ற மலைப்பாங்கான இடங்களிலும் பிறஇடங்களிலும் அங்கங்கே ஒன்றும் விளையாத பாலை நிலங்கள் பரந்து கிடைத்தலைக்காணலாம். எனவே, தொண்டை நாட்டில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்னும் ஐவகை நில அமைப்பையும் கண்டு களிக்கலாம். 24 கோட்டங்கள் இத் தொண்டை நாடு சங்க கால முதலே இருபத்து நான்கு கோட்டங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது என்பது தெரிகிறது. அப் பிரிவுகள் பல்லவர் காலத்திலும் பிற்காலச் சோழர் காலத்திலும் அவர்க்குப் பின்வந்த விஜயநகர அரசர் காலத்திலும் மாறாமல் வழங்கி வந்தன என்பது எண்ணிறந்த கல்வெட்டுகளைக் கொண்டு கூறலாம். தொண்டைநாட்டு இருபத்துநான்கு கோட்டங்கள் இவையாகும்: -1. புழல் கோட்டம், 2. ஈக்காட்டுக் கோட்டம். 3. மணவிற் கோட்டம், 4. செங்காட்டுக் கோட்டம், 5. பையூர்க்கோட்டம், 6. எயில் கோட்டம், 7. தாமல் கோட்டம், 8. ஊற்றுக்காட்டுக் கோட்டம், 9. களத்தூர்க் கோட்டம், 10. செம்பூர்க் கோட்டம், 11. ஆம்பூர்க் கோட்டம், 12. வெண் குன்றக் கோட்டம், 13. பல்குன்றக் கோட்டம், 14. இலங்காட்டுக் கோட்டம், 15. கலியூர்க் கோட்டம், 16. செங்காரைக் கோட்டம், 17. படுவூர்க் கோட்டம், 18. கடிகூர்க் கோட்டம், 19. செந்திருக்கைக் கோட்டம், 20. குன்றவட்டான கோட்டம், 21. வேங்கடக் கோட்டம், 22. வேலூர்க் கோட்டம், 23. சேத்தூர்க் கோட்டம், 24. புலியூர்க் கோட்டம். சோழர் காலத்துப் பிரிவுகள் ஆதித்த சோழன் மரபினரான இராஜராஜன், இராஜேந்திரன் காலத்தில் தொண்டை மண்டலம், ‘ஐயங்கொண்ட சோழ மண்டலம்’ எனப் பெயர் பெற்றிருந்தது. அக்காலத்தில் இம்மண்டலம் பலவள நாடுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. வள நாட்டின் பெரும் பகுதி ‘கோட்டம்’ என்று கொள்ளப்பட்டது; அதனால் . . . . வளநாட்டு . . .கோட்டம்’ என்று வழங்கத் தொடங்கியது. ஒவ்வொரு வளநாடும் பர நாடுகளாகப் பிரிந்து இருந்தது. பல ஊர்களைத் தன் அகத்தே பெற்ற சிறிய நிலப்பகுதி ‘நாடு’ எனப்பட்டது. “ஐயங்கொண்ட சோழ மண்டலத்துக் குலோத்துங்க சோழ வள நாட்டுப் புலியூர்க் கோட்டத்துக் குன்றத்தூர் நாட்டுக் குன்றத்தூர். . . . . . . ,” எனவரும் கல்வெட்டுத் தொடர் இவ்வுண்மையை விளக்கி நிற்றல் காண்க. 2. குன்றத்துர் புலியூர்க் கோட்டம் இத்தகைய தொண்டை நாட்டில் புலியூர்க்கோட்டம் என்பது ஒன்றாகும். ‘புலியூர்’ என்பதைத் தலைநகரமாகக் கொண்ட கோட்டம் ‘புலியூர்க் கோட்டம்’ எனப் பெயர் பெற்றது. புலியூர் என்பது சென்னைக்கு அடுத்துள்ள கோடம்பாக்கம் புகைவண்டி நிலையத்தி லிருந்து அரைக்கல் தொலைவில் உள்ள சிற்றூர் ஆகும். அதனைச் சூழவுள்ள கோவூர், பூவிந்தவல்லி, குன்றத்தூர் முதலிய ஊர்களைக் கொண்ட நிலப்பகுதியே புலியூர்க் கோட்டம் என்று வழங்கலாயிற்று. குன்றத்தூர் சேக்கிழார் என்ற நமது செந்தமிழ்ப் புலவர் பிறக்கப் பேறு செய்த இடம் குன்றத்தூர் ஆகும். இது சென்னையை அடுத்துள்ள பல்லாவரம் (பல்லவபுரம்) புகைவண்டி நிலயத்திலிருந்து நான்கு கல் தொலைவில் உள்ள சிற்றூர் ஆகும். இது சென்னையிலிருந்து ஏறத்தாழப் பதினாறு கல் தொலைவில் உள்ளது. இதற்குச் சென்னையிலிருந்து ‘பஸ்’ போகின்றது. இப்பதிமிக்க பழைமை வாய்ந்தது என்பது இதன் பழுதுபட்டுள்ள தோற்றத்தைக் கொண்டே கூறலாம். இவ்வூர் திருநாகேசுவரம், நத்தம் என்னும் இரண்டு பெரும் பிரிவுகளாக இருக்கின்றது. இவ்விரண்டு பிரிவுகளையும் ஏறத்தாழ அரைக்கல் நீளமுள்ள பாதை ஒன்று இணைத்து நிற்கின்றது. பாதையின் இரண்டு பக்கங்களிலும் வீடுகள் அங்கும் இங்குமாகச் சிதறுண்டு காண்கின்றன; இடையிடையே பசிய வயல்கள் இருக்கின்றன. குன்றத்தூரின் முதற் பகுதியாகவுள்ள திருநாகேசுவரம் என்பது சேக்கிழார் பெருமான் கட்டிய ‘திருநாகேசுவரம்’ என்னும் கோவிலைத் தன் அகத்தே பெற்றுள்ளது. அங்குச் செங்குந்த முதலிமார்கள் வாழ்கின்றனர்; அவர்களே ஆண்டு தோறும் பத்து நாட்கள் சிறப்பாகச் சேக்கிழார் திருவிழாக் கொண்டாடி வருகின்றனர். மற்றொரு பகுதி நத்தம் என்பது. அங்குச் சேக்கிழார் வாழ்ந்த இல்லம் இருந்த இடம் அவரது திருக்கோவிலாக இருக்கின்றது. நத்தத்தில் சேக்கிழார் கோவிலுக்கு எதிரில் பழுதுபட்ட பெருமாள் கோவிலும் சிவன் கோவிலும் இருக்கின்றன. அவற்றின் கோபுரங்கள், சுற்றுச் சுவர்கள், கல்வெட்டுகள் முதலியன அழிந்து கிடக்கின்றன. தெருக்கள் மேடு-பள்ளம் உள்ளவையாகவும் பழுதுபட்டும் காண்கின்றன. அங்கங்கு மதிற் சுவர்கள் இடிந்து கிடக்கின்றன. நத்தத்தில் சேக்கிழார் மரபினரான தொண்டை மண்டல வேளாளர் வாழ்ந்து வருகின்றனர். குன்றத்தூர், செம்பரம்பாக்கம் ஏரிப் பாய்ச்சலைப் பெற்றுச் செழிப்பாக இருந்து வருகின்றது. சேக்கிழார் கோவிலை அடுத்துள்ள குளம் ‘பாலறாவாயர்குளம்’ என்ற பெயருடையது. அப்பெயர் இப்பொழுது ‘பல்லவராயர் குளம்’ என்று மாறி வழங்குகின்றது. குன்றத்தூரில் உள்ள திருநாகேசுவரம் கோவில், பெருமாள் கோவில் இவற்றில் உள்ள கல்வெட்டுகளைக் கவனித்தால்-‘அப்பதி சோழர் காலத்தில் பெரிய நகரமாக இருந்தது; அங்குள்ள சைவ-வைணவக் கோவில்கள் நல்ல நிலையில் இருந்தன; கோவில் காரியங்களைக் கவனிக்கச் சபையார் இருந்தனர்; ஊர் ஆட்சியை ஒழுங்காக நடத்த ‘ஊர்-அவையார் இருந்தனர்’ என்பன போன்ற செய்திகளை அறியலாம். சேக்கிழார்’ குடி வேளாளர் குடிகள் தொண்டைநாட்டைக் கைப்பற்றிய கரிகாலன், காடு கெடுத்து நாடாக்கி, அதனை வளப்படுத்த நாற்பத்து எண்ணாயிரம் குடிகளைத் தொண்டை நாட்டில் குடியேற்றினான் என்பது புராண வரலாறு. அங்ஙனம் குடிபுகுந்த வேளாளருள் பல மரபினைச் சேர்ந்தவர் இருந்தனர். அவருள் கூடல் கிழான், புரிசை கிழான், வெண்குளப் பாக்கக்கிழான், சேக்கிழான் என்பவர் குடிகள் குறிப்பிடத்தக்கவை. இவற்றுள் கூடல், புரிசை, குளப்பாக்கம் என்ற ஊர்ப்பெயர்கள் ‘கிழான்’ என்பதனுடன் சேர்ந்து வந்துள்ளன. ‘கிழான்’ என்பது ‘கிழமை’ என்ற பண்படியாகப் பிறந்த பெயர். இதற்கு ‘உரிமை உடையவன்’ என்பது பொருள். அஃதாவது ‘கூடல்’ என்னும் சிற்றூருக்கு ‘உரிமையுடையவன், தலைவன்’ என்ற பொருளில் ‘கூடல்கிழான்” என்பது வழங்கப்பட்ட தாகலாம். அம் முதல் வேளாளன் மரபினர் ‘கூடல் கிழான் மரபினர்’ எனப்பட்டனர். இங்ஙனமே மற்ற இருமரபினரும் பெயர் பெற்றவர் ஆவர். சேக்கிழான் குடி ஆயின், ‘சேக்கிழான்’ குடி அவ்வாறு ஊர்ப்பெயரைக் கொண்டு வந்ததன்று. ‘சே’ என்னும் பெயர் காளையைக் குறிக்கும். ஆதலின், ‘சேக்கிழான்’ என்பது காளையைக் கொண்டு நிலம் உழுது பயிரிடும் வேளாளனுக்குப் பொதுப் பெயராக அமைந்ததாகலாம். அவ்வாறு இல்லாமல், ‘சேக்கிழான்’ என்பது, ‘காளையை வாகனமாகக் கொண்ட சிவபெருமான்’ எனவும் பொருள்படும் அப்பெயரைத் தன் பெயராகக் கொண்ட வேளாளன் ஒருவன் மரபினர் ‘சேக்கிழான் குடியினர்’ எனப் பெயர் பெற்றிருக்கலாம் என்று கோடலும் தவறாகாது. இக்குடியினர் ஒவ்வொருவரும் ‘சேக்கிழான்’ என்ற குடிப்பெயரை முன்னும் தமது பெயரைப் பின்னும் வைத்தே வழங்கி வந்தனர் என்பது கல்வெட்டுகளால் வெளியாகின்றது. சேக்கிழார் குடியினர் இச் சேக்கிழார் குடியினர் தொண்டை நாட்டுக் கோட்டங்கள் பலவற்றில் பரந்து வாழ்ந்து வந்தனர் என்பது, 1. மணவிற் கோட்டத்து மேலப்பழுவூர்ச் சோமு முத்தரையன் எனப்பட்ட சேக்கிழான்-அரையன் சங்கர நாராயணன் . . . . 2. மேலூர்க்கோட்டத்துக் காவனூர்ச் சோழமுத்தரையன் எனப்பட்ட சேக்கிழான்-சத்திமலையன் . . .. 3. புலியூர்க் கோட்டத்துக் குன்றத்தூர் நாட்டுக் குன்றத்தூர்ச் சேக்கிழான் - ஆடவல்லான் . . . . . . . . . என வரும் கல்வெட்டுத் தொடர்களால் நன்கறியலாம். இக்குடியினர் ‘அரையன்’, ‘சோமு முத்தரையன்’ முதலிய பட்டங்களைப் பெற்றுச் சோழ அரசியலில் உயர்ந்த உத்தியோகஸ்தர்களாக இருந்து வந்தவர் என்பதும் இத்தொடர்களால் அறியலாம். குன்றத்தூர்ச் சேக்கிழார் குடியினர் இதுவரை கிடைத்துள்ள கல்வெட்டுகளைக் கொண்டு ஆராய்ந்ததில், குன்றத்தூர்ச் சேக்கிழார் மரபினர் நமது பெரிய புராண ஆசிரியர் கால முதலே சோழர் அரசியலில் பதவிகள் பெற்று கொள்வது பொருத்தமாகும்.1 இவர் பெரிய புராணம் பாடிய பிறகு இவரது செய்யுட் சிறப்பை நோக்கி இவர் ‘அருள்மொழித் தேவர்’ (அருள்வாக்குப் பெற்ற பெரியார்) என அழைக்கப்பட்டிருக்கலாம். “சைவ மரபிற் பிறந்த ஒருவர்க்கு ‘இராமதேவன்’ என்ற வைணவப் பெயர் இடப்பட்டிருக்குமா?” என்று நீங்கள் கேட்கலாம். அறுபத்து மூன்று நாயன்மாருள் ஒருவர் ‘நரசிங்கர்’ என்ற வைணவப் பெயர் தாங்கி யிருந்ததையும், சேக்கிழார் மரபினருள் ஒருவர் ‘வரந்தரு பெருமாள்-திருவூரகப் பெருமாள்’ என்ற வைணவப் பெயர் பெற்றிருந்ததையும் நோக்கினால், இந்த ஐயம் எழ இடமில்லை அல்லவா? பெரிய புராண ஆசிரியர் இயற்பெயர் எதுவாயினும் சரி; இவர் தம் குடிப்பெயரையே சிறப்புப் பெயராகக் கொண்டு விட்டார்; இவர் காலத்திற்குப் பின்னிருந்து இன்றுவரை ‘சேக்கிழார்’ என்ற சொல் இவர் ஒருவரையே குறித்து வந்தமை தெளிவு. ஆதலின் நாமும் இவரைச் ‘சேக்கிழார்’ என்றே அழைப்போம். இவர் தம்பி ‘பாலறாவாயர்’ என்பவர். கல்விப் பயிற்சி சேக்கிழார் சிறந்த சிவபக்தியும் ஒழுக்க மேம்பாடும் உடைய குடும்பத்திற் பிறந்தவர்; ஆதலால் இளமை முதலே அவை இரண்டிலும் சிறந்து விளங்கினார். இவர் இளமையில் பண்பட்ட நல்லாசிரியர் ஒருவரிடம் சேர்ந்து தமிழ்க்கல்வி பயிலத் தொடங்கினார். இவர் சங்க கால நூல்களாகிய தொல்காப்பியம், /புறநானூறு, நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், அகநானூறு, பத்துப்பாட்டு, சிலப்பதிகாரம், மணிமேகலை, திருக்குறள் என்பவற்றை அழுத்தமாகப் பயின்றார்; இடைக்கால நூல்களாகிய நாலடியார் முதலிய கீழ்க்கணக்கு நூல்களையும் அக்காலத்து எழுந்த இலக்கண நூல்களையும் பல்லவர் ஆட்சிக்காலத்தில் செய்யப்பட்ட பெருந்தேவனார் பாரத வெண்பா, இராமாயண வெண்பா, நந்திக்கலம்பகம், பல்லவரைப் பற்றிய தமிழ் நூல்கள், பிற்காலச் சோழர் காலத்தில் எழுந்த சிந்தாமணி, இராஜராஜ விஜயம், இராஜராஜ நாடகம், பூம்புலியூர் நாடகம், கன்னிவன புராணம் முதலிய நூல்களையும் படித்தனர் என்று நினைக்கலாம். இவை அனைத்திற்கும் மேலாகச் சேக்கிழார் சிறந்த சிவபக்தர் ஆதலின் அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர் இயற்றிய தேவாரத் திருமுறைகளையும் திருவாசகத்தையும், நம்பியாண்டார் நம்பிபாடிய நாயன்மார் சம்பந்தமான நூல்களையும் திருமூலர் திருமந்திரத்தையும், பட்டினத்தார் முதலிய சைவப் பெரியார்கள் பாடிய நூல்களையும் பழுதறக் கற்றார்; இவற்றுடன் தம் காலத்திருந்த சைவ ஆகம நூல்களையும்-சமண-பௌத்த சமய நூல்களையும் படித்துப் புலமை பெற்றார். இங்ஙனம் தமிழ் இலக்கண-இலக்கிய நூற் புலமையும் பல சமயநூற் புலமையும் சிறப்பாகச் சைவநூற் புலமையும் ஒருங்கே பெற்ற சேக்கிழார் சிவனெறிச் செல்வராகவும் விளங்கியதால், இவரது புகழ் சிறிது சிறிதாகச் சோழப் பெருநாட்டிற் பரவலாயிற்று. 4, அநபாய சோழன் (கி. பி. 1133-1150) சிறந்த சிவபக்தன் இவன் விக்ரமசோழன் மகன்; முதற்குலோத்துங்கனுக்குப் பெயரன்; சிறந்த சிவபக்தன். இவனை ‘இரண்டாம் குலோத்துங்கன்’ என்றும் கூறுவர். ‘அநபாயன்’ என்பதே இவனது சிறப்புக் பெயராகும். “ இவன் புவன முழுதுடையாள் என்ற அரச மாதேவியுடன் தில்லைக்குச் சென்று கூத்தப்பெருமானைப் பணிந்தான்; கோபுரங்கள், மண்டபங்கள், திருச்சுற்று மாளிகை, சிற்றம்பலம் முதலியவற்றைப் பொன்மயம் ஆக்கினான்; நான்கு திருவீதிகளையும் பொன்னகரப் பெருவீதிகளும் நாணும்படி சிறப்பித்தான்; பேரம்பலத்தைப் பொன் வேய்ந்தான்; தான் பட்டம் பெற்றவுடன் சிறைப்பட்டிருந்த அரசர்களை விடுதலை செய்தான்; நான்மறையாளர்க்குத் தானம் செய்தான்,” என இவன் ஆசிரியராகிய ஒட்டக்கூத்தர் இவன்மீது பாடியுள்ள உலாவிற் குறிப்பிட்டுள்ளார். இவன் தன் தந்தையால் தொடங்கப்பெற்று அரைகுறையாக விடப்பட்ட தில்லைத் திருப்பணிகள் அனைத்தையும் நிறைவுபெறச் செய்தான். இப்பெருமகன் ‘கூத்தப் பெருமான் பாத தாமரையில் உள்ள தேனைப் பருகும் ஈப்போன்றவன்’ என்று திருவாரூர்க் கல்வெட்டுக் குறிக்கின்றது. இவன் அப்பர், சம்பந்தர், சுந்தரர் சிலைகளைத் திருவாரூர்க் கோவிலில் வைத்துப் பூசைக்காக நிலதானம் செய்தான். இவ்வாறு இவன் செய்துள்ள சைவத்திருப்பணிகள் பலவாகும். அமைதியான அரசியல் அநபாயன் காலத்தில் கங்கைகொண்ட சோழபுரம் சோழப் பெரு நாட்டின் தலைநகரமாக இருந்தது. எனினும், அநபாயன் தில்லையில் இருந்த அரண்மனையில் தங்கிச் சமய நூல்களையும் தமிழ் நூல்களையும் புலவர் பலர் படிக்கக் கேட்டு மகிழ்ந்து வந்தான். இவன் சிறந்த புலவன்; கவிபாடும் ஆற்றல் மிக்கவன். இவனது அறிவு தமிழ் வளர்ச்சியிலும் சைவ சமய வளர்ச்சியிலுமே ஈடுபட்டிருந்ததால் இவன் காலத்தில் போர்கள் நடைபெறவே இல்லை. அதனால், சோழப் பெரு நாட்டில் அநபாயன் காலத்தில் அமைதி நிலவி இருந்தது. ‘அரசன் எவ்வழி, அவ்வழிக் குடிகள்’ ஆதலின், குடிகள் மன அமைதியோடு சமயத் துறையில் ஊக்கம் காட்டி அமைதியான வாழ்க்கையை வாழ்ந்து வந்தனர். அநபாயன் காலத்தில் சோழப் பெருநாடு வடக்கே கிருஷ்ணையாறு முதல் தெற்கே குமரிமுனைவரை பரவி இருந்தது. அநபாயன் மகனான இரண்டாம் இராஜராஜன் என்பவனும் தந்தையைப்போலவே சிவ பக்தனாகவும் புலவனாகவும் விளங்கினான். 6. சேக்கிழார்-முதல் அமைச்சர் அநபாயன், தன் பொறுப்பை முழுவதும் ஏற்றுப் பேரரசினை வெற்றிகரமாக நடத்தவல்ல முதல் அமைச்சரைத் தேடினான். அங்ஙனம் வருபவர் கையில் அரசியல் நிருவாகத்தை ஒப்புவித்து விடவேண்டும் என்பது அவனது அவா. அவருக்கு உதவியாகத் தன் மைந்தன் இராஜராஜன் இருந்து பெருநாட்டைப் பாதுகாக்க வேண்டும் என்பது அவன் விருப்பம். அங்ஙனம் தனது பெருநாட்டைப் பொறுப்புடன் கவனிக்கத் தக்க முதல் அமைச்சர் சிறந்த சைவராகவும் பல்கலை விற்பன்ன ராகவும் இருத்தல் வேண்டும் என்பது அவன் அவாவாகும். ஆதனால் அப்பேரரசன் அத்தகைய அமைச்சர் ஒருவரைத் தேடலானான். அவன் குன்றத்தூர்ச் சேக்கிழாரைப் பற்றிக் கேள்விப்பட்டான்; தன்னைக் காண வந்த தொண்டை மண்டலத்துப் புலவர்களையும் அரசியல் அலுவலாளர் களையும் பலவாறு விசாரித்துச் சேக்கிழாரைப் பற்றிய முழுவிவரங்களையும் அறிந்தான்; அப்பெரியவரே தனக்கேற்ற முதல் அமைச்சராக இருத்தற்கு உரியவர் என்று முடிவு செய்தான்; அதனால் அவரை நேரில் அழைத்து வருமாறு செய்தான்; அவரது திருநீற்றுப்பொலிவையும் சிவ வேடச் சிறப்பையும் கண்டு அளவற்ற மகிழ்ச்சி கொண்டான்; பின்னர் அவருடன் அளவளாவி அவருடைய தமிழ்ப் புலமையையும் சைவ சாத்திரப் பயிற்சியையும் பிற துறை அறிவையும் நன்கு உணர்ந்தான்; அன்று முதல் அவரைத் தனது முதல் அமைச்சராக ஏற்றுக் கொண்டான். பட்டம் பெறுதல் சில மாதங்கள் கழிந்தன. சேக்கிழார் சோழப்பெருநாடு முழுவதும் சுற்றிப் பார்த்தார்; பெருநாட்டிற்கு உட்பட்ட சிறுநாடுகளை அங்கங்கே ஆண்டுவந்த தெலுங்க அரசர், தமிழ் அரசர், கன்னட அரசர் முதலியவருடன் பழகினார்; நாடு முழுவதும் இருந்த பல சமயக் கோவில்களைப் பார்வையிட்டார். சிறப்பாகச் சைவசமயக் கோவில்களை ஊன்றிக் கவனித்தார்; ஆங்காங்கு இருந்த அரசியல் அலுவலாளரைக் கண்டு அரசியல் சம்பந்தமான பல விஷயங்களைக் கவனித்தார். முதல் அமைச்சர் சிறந்த பக்தர் ஆதலால் கோவில்கள் நன்னிலைக்குக் கொண்டுவரப்பட்டன. இத்திருத்தொண்டு அநபாயனுக்கு உவகை ஊட்டத்தக்கதன்றோ! சேக்கிழார் நாகப்பட்டினத்தில் இருந்த பௌத்த விஹாரத்தையும் நாட்டின் பல பகுதிகளில் இருந்த சமணப் பள்ளிகளையும் பார்வையிட்டார்; எல்லாச் சமயக் கோவில்களும் வழக்கம் போல நல்ல நிலையில் நடந்துவர ஏற்பாடு செய்தார்; உள்நாட்டு வாணிகம், அயல் நாட்டு வாணிகம் பற்றிய செய்திகளைக் கவனித்தார். இங்ஙனம் சேக்கிழார் பல துறைகளிலும் கவனத்தைச் செலுத்தி நாட்டில் நற்பெயர் பெற்றார். அநபாயன் உவகைக் கடலுள் மூழ்கி, அவருக்கு ‘உத்தம சோழப் பல்லவ ராயர்’ என்ற உயர்ந்த பட்டத்தை அளித்துப் பெருமைப்படுத்தினான். 7. சேக்கிழார் கோவில் திருப்பணி சோழ நாட்டுத் திருநாகேசுவரம் சேக்கிழார் அநபாயனிடம் முதல் அமைச்சராக இருந்து பார்வையிட்ட சிவஸ்தலங்களுள் அவரது உள்ளத்தைப் பெரிதும் கவர்ந்தது, சோழ நாட்டில் உள்ள திருநாகேசுவரம் ஆகும். அவர் அத்தகைய கோவில் ஒன்றைத் தமது சொந்த ஊரில் அமைக்கவேண்டும் என்று எண்ணினார்; அங்ஙனம் எண்ணி அமைத்த கோவிலே குன்றத்தூரில் உள்ள ‘திருநாகேசுவரம்’ என்னும் கோவில் ஆகும். சேக்கிழார் சோழ நாட்டுத் திருநாகேசுவரத்தில் ஈடுபாடு உடையவராக இருந்தார் என்பதை, அங்குள்ள அவரது சிலை, அவர் தம்பியாரான பாலறாவாயர் சிலை, அவர் தாயார் சிலை இவற்றைக்கொண்டு உறுதிப்படுத்தலாம். ‘திருநாகேசுவரம்’ என்பது கோவிற் பெயர். இப்பெயர் நாளடைவில் அக்கோவில் உள்ள ஊருக்கு பெயராகி விட்டது. இவ்வாறே குன்றத்தூரில் உள்ள கோவிலின் பெயரும் பிற்காலத்தில் அஃதுள்ள ஊர்ப் பகுதியைக் குறிக்கத் தொடங்கிவிட்டது. குன்றத்தூர்த் திருநாகேசுவரம் சேக்கிழார் தமது ஊரில் கட்டிய திருநாகேசுவரம் என்ற கோவில் அளவில் சிறியது; சோழர் காலத்து அமைப்புடையது. அதன் வெளிச் சுற்றில் சேக்கிழாருக்குச் சிறிய கோவில் இருக்கின்றது. அங்கு ஆண்டுதோறும் ஜூன் மாதத்தில் சேக்கிழார் விழாச் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. அக்கோவிலில் 44 கல்வெட்டுகள் இருக்கின்றன. அவை யாவும் இரண்டாம் இராஜராஜன், மூன்றாம் குலோத்துங்கன் முதலியவர் (சேக்கிழார்க்குப் பிற்பட்டவர்) கல்வெட்டுகள் ஆகும். எனவே, அக்கோவில் சேக்கிழார்க்கு முற்பட்டதன்று என்பது நன்குணரலாம். அக்கோவிலில் திருவுண்ணாழிகைக் சபையார் இருந்தனர்; கோவிலில் பூசைகள் முறைப்படி நடந்து வந்தன. கோவிலை அடுத்த மடம் ஒன்று இருந்தது. அதனில் ஆலால சுந்தரர் என்ற அடியார் ஒருவர் இருந்தார். கோவிலில் தேவரடியார் பலர் இருந்தனர். அவருள் நாற்பத்தெண்ணாயிர மாணிக்கம், சித்திர மேழி நங்கை, திருவுண்ணாழிகை நங்கை, உய்யவந்தாள் என்பவர் பெயர்கள் கல் வெட்டுகளிற் காண்கின்றன. திருநாகேசுவரம் கோவிலுக்குச் சேக்கிழார் மரபினர் பல நிபந்தங்கள் விடுத்துள்ளனர். 8. ஜீவக சிந்தாமணி அரசன் அவை அநபாய சோழன் ஒட்டக்கூத்தர் மாணவன் அல்லவா? அதனால் அவன் தன் அவைப் புலவர் பலருடனிருந்து தமிழ் நூல்களைப் படித்து இன்பம் துய்த்து வந்தான். இங்ஙனம் பல நூல்கள் அவையிற் படிக்கப்பட்டன. பின்னர், சோழர் காலத்து முதற் பெருங்காவியமாகிய ஜீவக சிந்தாமணி என்ற சமண காவியம் நாள்தோறும் படிக்கப்பட்டு வந்தது. அநபாயன் சிறந்த புலவன் ஆதிலின் திருத்தக்க தேவர் செய்த சிந்தாமணிப் பாடல்களில் உள்ள சொல் அழகையும் பொருள் ஆழத்தையும் உணர்ந்து அனுபவித்தான்; அந்நூலைப் பலபடப் பாராட்டினான். இது நடுவுநிலை கொண்ட நல்லவர் செயல்தானே! இங்ஙனம் நடைபெற்று வந்த பேரவையில் அரசன், இளவரசனான இராஜராஜன், ஒட்டக்கூத்தர், அமைச்சர் பெருமானான சேக்கிழார் முதலியோர் இருந்தனர். சேக்கிழாரும் இராஜராஜனும் ஒருநாள் சேக்கிழாரும் இராஜராஜனும் உரையாடுகையில், சிந்தாமணி காவியம் பற்றிப் பேச்சு வந்தது. அப்பொழுது சேக்கிழார். “சிந்தாமணி சிறந்த காவியமே யாகும். ஆயின், அதன்கண் உள்ள வரலாறு அநபாயரைப் போன்ற ஜீவகன் என்ற அரசனுடையது. தம்போன்ற அரசன் ஒருவனது வரலாற்றைக் கூறும் காவியத்தைப் படிப்பதால் உண்டாகும் இன்பத்தைவிடச் சைவசமயத்திற்கு அரும்பாடு பட்டு மறைந்த நாயன்மார் அறுபத்து மூவர் வரலாறுகளைப் படித்தலோ-கேட்டலோ பேரின்பம் பயப்பதாகும்,” என்றார். இளவரசனான இராஜராஜன் ஒட்டக்கூத்தர் மாணவன்; சிறந்த புலமை உடையவன். அவன் சேக்கிழாரது பெரும் புலமையையும் சைவப்பற்றையும் நன்கறிந்தவன்; ஆதலால், அவர் சொற்களுக்கு மதிப்புத் தருபவனாக இருந்தான். அவர் கூறிய செய்தி அவன் உள்ளத்தில் பதிந்தது அரசனும் அமைச்சரும் இளவரசனான இராஜராஜன், அரண்மனையில் தன் தந்தையைக் கண்டு பேசிக்கொண்டிருக்கையில், சேக்கிழாரது உள்ளக் கருத்தை அறிவித்தான். சிறந்த சிவபக்தனான அநபாயனது உள்ளத்தில் அஃது ஆழமாகப் பதிந்தது. அவன் மறுநாள் சேக்கிழாரைக் தனியே சந்தித்து, “ஐயன்மீர், நீர்நேற்றுக் கூறிய செய்தியை இராஜராஜன் என்னிடம் தெரிவித்தான். நாயன்மார் வரலாறுகள் விரிவான முறையில் கூறக்கூடுமா? சுந்தரரது திருத்தொண்டைத் தொகையும் நம்பியாண்டார் நம்பி திருத்தொண்டர் திருவந்தாதியும் கூறும் குறிப்புகள் பல விளங்கவில்லையே? அவற்றை விளக்கமாகக் கூறச் சான்றுகள் உண்டா? அங்ஙனம் கூறக் கூடுமாயின் கூறுக,” என்றான். சேக்கிழார் பெருமான் அரசரைப் பணிந்து, “சைவ அரசர் பெரும, சுந்தரர் குறிப்பும் நம்பி அந்தாதியும் போதா. நம்பி சம்பந்தரைப் பற்றிப் பாடியுள்ள ஆறு சிறு நூல்களும் அப்பரைப் பற்றிப் பாடியுள்ள சிறு நூலும் சுந்தரரைப் பற்றி அந்தாதியில் குறித்துள்ள பல பாக்களும் இம்மூவர் திருமுறைகளும் கொண்டு இவர்கள் வரலாறுகளை விரிவாகக் கூறலாம். சேர-சோழ-பாண்டிய மரபினரான நாயன்மார் வரலாறுகளை-மேற்சொன்ன நூல்களையும், அவரவர் மரபினரிடம் வாழையடி வாழையடியாக வந்துகொண்டிருக்கும் செவிவழிச் செய்திகளையும் கொண்டு ஒழுங்காகக் கூறலாம். ஏனையோர் வரலாறுகளைத் தொகையும் அந்தாதியும் கொண்டும் அவரவர் ஸ்தலத்தில் வழங்கும் வரலாறு கொண்டும் இன்றுள்ள பல நூல்களைக் கொண்டும் பிறவற்றின் துணைக் கொண்டும் கூறலாம். சான்றாகக் கூற்றுவ நாயனார் வரலாறு தில்லைவாழ் அந்தணரிடையே வழங்கி வருகிறது. கூற்றுவர் தமிழ் நாட்டு மூவேந்தர் மரபினர் அல்லர்; அவர் தமிழ் அரசரை ஒடுக்கிப் பேரரசர் ஆனவர். அவர் தில்லைவாழ் அந்தணரை அழைத்துத் தமக்கு முடி சூட்டுமாறு வேண்டினார். அவர்கள், “சோழ மரபினர்க்கு மட்டுமே நாங்கள் முடிசூட்டுவோம்; ஏனையோர்க்குச் சூட்டோம்,” என்று கூறி, அவர் என்ன செய்வாரோ என்றஞ்சி, ஒருவர் நீங்கலாக அனைவரும் சேர நாடு சென்றுவிட்டனர். அவ்வொருவர் தில்லையில் இருந்து கோவில் காரியங்களைக் கவனித்து வந்தனராம். அவர் இறந்த பிறகு சேர நாடு சென்றிருந்த அந்தணர் மீண்டும் வந்தனராம். இங்ஙனம் நாயன்மார் வாழ்ந்த இடங்களில் வழங்கிவரும் கதைகள் பலவாகும். அவற்றுள் பெரும்பாலும் பொருத்தமானவற்றை நாம கொள்ளலாம் அல்லவா? எனது பெருநாட்டுச் சுற்றுப் பிரயாணத்தில் இத்தகைய குறிப்புகள் பலவற்றைச் சேர்த்து வைத்திருக்கிறேன்; பல முக்கியமான இடங்களில் உள்ள கோவிற் கல்வெட்டுகளும் இவ்வரலாறுகட்கு உதவி செய்கின்றன. நமது கோநகரத்துக் கங்கை கொண்ட சோழீச்சரத்தில் உள்ள ‘சண்டீசப் பதம்’ உணர்த்தும் சிற்பத்தை நீவிர் கவனித்ததுண்டு அல்லவா? இத்தகைய சிற்பங்கள் வாயிலாகவும் சில குறிப்புகள் கிடைக்கின்றன. இராஜராஜப் பெருவேந்தர் கட்டுவித்த தஞ்சைப் பெரிய கோவில் ஓவியங்கள் சுந்தரர் வரலாற்றின் முக்கியமான பாகத்தை (சுந்தரரைச் சிவபெருமான் தடுத்தாட் கொண்ட விவரம், சுந்தரரும் சேரமானும் கயிலை சென்ற விவரம்) உணர்த்துகின்றன அல்லவா? இத்தகைய சிற்பங்களும் ஓவியங்களும் பலவாகும். இவை அனைத்தையும் முறைப்படுத்தி வைத்திருக்கிறேன்,” என்று பணிவு தோன்றப் பகர்ந்தனர். அரசன் வேண்டுகோள் சேக்கிழார் கூறியவற்றைக் கேட்ட சோழர் பெருமான் பெருவியப்படைந்தான்; அவர் நாயன்மார் வரலாற்றுக் குறிப்புகளைச் சேர்க்க எடுத்துக் கொண்ட பெருமுயற்சியைக் கேட்டுத் திகைப்படைந்தான்; தமது முதல் அமைச்சரது மதிநுட்பத்தையும் அவருக்கு நாயன்மார் வரலாறுகள் மீதிருந்த அளவு கடந்த பற்றையும் எண்ணி எண்ணிக்களித்தான். அப்பெருமகன், உள்ளத்தில் ஒருவராலும் கரைசெய்ய அரியதொரு பேருவகைக் கடல் பெருகச் சேக்கிழாரை நோக்கி, “ஐயன்மீர், நீர் கூறிய இச்செய்திகள் எனக்குத் திகைப்பையும் வியப்பையும் ஊட்டுகின்றன. நீர் இவற்றை எல்லாம் ஆராய்ந்து முறைப்படுத்தி வைத்திருக்கின்றபடியே எனக்கு ஒழுங்குபடக் கூறி அருள்க,” என்றான். அமைச்சரும் அதற்கு இசைந்தார்; அன்று முதல் திருத்தொண்டத் தொகையில் உள்ள முறைப்படி நாயன்மார் வரலாறுகளைக் கூறத்தொடங்கிச் சில நாட்களில் சுருக்கமாகக் கூறி முடித்தார். ஒட்டக்கூத்தர் மாணவனும் சிறந்த சிவபக்தனுமாகிய அநபாய சோழன், சுந்தரரது திருத்தொண்டத் தொகையையும் நம்பியாண்டாரது அத்தாதியையும் முன்னரே நன்றாகப் படித்தவன் ஆதலால், சேக்கிழார் கூறிவந்த வற்றைச் செவ்வையாகப் பின்பற்றினான்; முன்னிரண்டு நூல்களிலும் இல்லாத பலசெய்திகளைச் சேக்கிழார் கூறிவந்ததைக் கேட்டான்; அவை செவி வழிச்செய்தி-பல்லவர், சோழர் கால நூல்கள்-கல்வெட்டுகள்-சிற்பங்கள்-ஓவியங்கள் இவற்றை ஆராய்ந்ததன் பயனாக வெளிப்பட்ட உண்மைகள் என்பதை உணர்ந்தான்; இத்தகைய வியத்தகு ஆராய்ச்சி முறையில் வெளியிடப்படும் நாயன்மார் வரலாறுகள் ஒரு நூல் வடிவில் வெளிவருதல் மிகவும் அவசியமானது என்பதை உணர்ந்தான். அவன் விழிகளில் ஆனந்தக் கண்ணீர் துளித்தது. அநபாயன் எழுந்து அமைச்சரைத் தழுவி, “அமைச்சர் ஏறே, நீவிர் இந்த நிமிடம் முதல் உமது அமைச்சர் வேலையிலிருந்து ஓய்வு பெற்றுத் தில்லையில் தங்கித் திருத்தொண்டர் வரலாற்றை ஒரு பெருங்காவியமாகப் பாடியருள வேண்டும். இக்காவியம் பாடி முடிக்க நீரே முற்றிலும் தகுதி உடையவர். உமக்கு வேண்டும் எல்லா வசதிகளும் செய்யப்படும்,” என்று அன்பு பெருகக் கூறினான். பழுத்த சிவபக்தரான சேக்கிழார், “இஃது இறைவன் திருவருள்” என்று எண்ணி, அரசன் வேண்டுகோளுக்கு ஒருப்பட்டனர். 9. சிதம்பரத்தில் சேக்கிழார் ‘உலகெலாம்’ சேக்கிழார் அரசன் விருப்பப்படி சிதம்பரத்தை அடைந்தார்; சோழ வேந்தரது அரண்மனையை அடுத்திருந்த அமைச்சர் மாளிகையில் தங்கினார். அரசன் ஆணைப்படி அவருக்கு வேண்டிய பொருள்கள் யாவும் வந்து சேர்ந்தன. அரசியல் அலுவலாளர் பலர் அவர் இடும் வேலைகளைச் செய்யக் காத்திருந்தனர். சேக்கிழார் ஒருநாள் காலையில் நீராடிப் பூசை முடித்துக் கூத்தப்பிரான் திருக்கோவிலை வலம் வந்து, உட்சென்று முறைப்படி வணங்கி, “எம்பெருமானே, அறிதற்கு அருமையான பெருமையுடைய உன்னுடைய திருத்தொண்டர் வரலாறுகளை ஒரு நூலாகப் பாடவேண்டுமென்பது அரசன் கட்டளையாகும். ஓன்றுக்கும் பற்றாத அடியேன் அப்பெருமக்கள் வரலாறுகளை எங்ஙனம் பாடவல்லேன்! நீ முதல் எடுத்துத் தந்து என்னை ஆசீர்வதிக்க வேண்டும்,” என்று வேண்டி நின்றார். அப்பொழுது ‘உலகெலாம்’ என்ற தொடர் சேக்கிழார் செவியிற் பட்டது. அப்பெரியார் அதனைக் கூத்தப்பெருமான் ஆசீர்வதித்துத் தந்த அருள் வாக்காகக் கொண்டு, தமது மாளிகை சென்று, நூல் பாடத் தொடங்கி, “உலகெ லாமுணர்ந் தோதற் கரியவன் நிலவு லாவிய நீர்மலி வேணியன் அலகில் சோதியன் அம்பலத் தாடுவான் மலர்சி லம்படி வாழ்த்தி வணங்குவாம்.” என்ற கடவுள் வாழ்த்தைப் பாடினார்; அன்று தொடங்கி, நாள்தொறும் அத்திருப்பணியைக் கவனிக்கலானார். பெருங் காவியம் சேக்கிழார், திருத்தொண்டத் தொகை பாடி நாயன்மார் பட்டியலைத் தந்த சுந்தரரையே காவியத்தலைவராகக் கொண்டார்; அவரது வரலாற்றை நான்கு பகுதிகளாகப் பிரித்தார். நூலின் முதலில் ஒன்றும் இடையில் இரண்டும் முடிவில் ஒன்றுமாக வைத்தார்; அவரால் திருத்தொண்டத் தொகையிற்கட்டப்பட்ட நாயன்மார் வரலாறுகளை இந்த நான்கு பிரிவுகட்கும் இடையில் வைத்தார். சுந்தரரது முதற் பிரிவில் அவர் திருவாரூரில் பரவையாரை மணந்து திருத்தொண்டத் தொகை பாடியது முடியவுள்ள அவரது வரலாறு குறிக்கப்பட்டுள்ளது; இரண்டாம் பிரிவில் சுந்தரர் தலையாத்திரை செய்து சங்கிலியாரை மணந்து திருவாரூர் மீண்டது முடியவுள்ளவரலாறு குறிப்பிடப்பட்டுள்ளது; மூன்றாம்பிரிவில் சுந்தரரும் சேரமான் பெருமாள் நாயனாரும் நட்புக்கொள்ளுதல், சுந்தரரது கொங்குநாட்டு-சேரநாட்டுத் தலயாத்திரை பற்றிய விவரங்கள் கூறப்பட்டுள்ளன; நான்காம் பிரிவில் சுந்தரரும் சேரமானும் கயிலை செல்லல் குறிக்கப்பட்டுள்ளது. அத்துடன் திருத்தொண்டர் புராணம் முடிவு பெறுகின்றது. நூலின் உட் பிரிவுகள் சேக்கிழார் நூலை இரண்டு பெரிய காண்டங்களாகப் பிரித்துக் கொண்டார்; முதற் காண்டம் முதலிலிருந்து நமிநந்தியடிகள் புராணம் வரையுள்ள பகுதியாகும். இரண்டாம் காண்டம் சம்பந்தர் புராணம் முதல் இறுதிவரை உள்ள பகுதியாகும். சேக்கிழார் இவ்வாறு காண்டங்களை வகுத்துக் கொண்ட பிறகு தமது நூலைச் சுந்தரரது திருத்தொண்டத் தொகைச் செய்யுட்களைப் பின்பற்றிப் பல சருக்கங்களாக வகுத்தார். ஒவ்வொரு சருக்கத்தின் இறுதிச் செய்யுளிலும் சுந்தரர் வரலாற்றுப் பகுதி ஒன்றைக் கூறிப் பெரிய புராணம் சுந்தரர் புராணமே என்பதை நினைவூட்டிச் சென்றார். இங்ஙனம் சேக்கிழார், பெருங்காவிய முறைக்கு ஏற்பச் சுந்தரரைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டார்; நூலைக் காண்டங்களாகப் பிரித்தார்; ஒவ்வொரு காண்டத்தையும் பல சருக்கங்களாகப் பகுத்துக்கொண்டார்; தாம் அதுவரை தொகுத்து வைத்திருந்த நாயன்மார் வரலாற்றுக் குறிப்புகளை ஒழுங்காக முறைபடுத்திக்கொண்டு நூல் பாடலானார்; தமக்கு இடையிடையே உண்டான ஐயங்களைப் போக்க அந்தந்த இடங்கட்கு அரசியல் அலுவலாளர்களை அனுப்பினார். அவர்கள் சென்று அந்தந்த இடங்களில் இருந்த சிற்றரசரையும் சான்றோரையும் விசாரித்துச் செய்திகளைத் தொகுத்து வந்தனர். சேக்கிழார் இவ்வாறு பல வழிகளிலும் முயன்று தெளிந்த உண்மைகளை வைத்துத் தமது நூலைப் பாடி முடித்தார். இதற்கு ஓராண்டு பிடித்தது. காவிய அரங்கேற்றம் சேக்கிழார் திருத்தொண்டர் புராணம் என்ற பெருங்காவியம் செய்து முடித்தனர் என்பதைக் கேள்வியுற்ற அநபாய சோழன் அளவற்ற மகிழ்ச்சி அடைந்தான்; தன் பெருநாட்டுச் சிற்றரசர்கட்கும் பெரும் புலவர்கட்கும் மண்டலத் தலைவர்கட்கும் நூல் அரங்கேற்ற அழைப்பு விடுத்தான். குறித்த நன்னாள் அன்று கூத்தப்பிரான் திருக்கோவில் மிக்க அழகுபெற அலங்கரிக்கப்பட்டது. தில்லை நகரம் பொன்னகரமாகப் பொலிவுற்றது. அரசன் முன்னிலையில் கூத்தப்பிரான் திருவருளைத் துணையாகப் பற்றிச் சோழப் பெருநாட்டின் முதல் அமைச்சராகிய சேக்கிழார் பெருமான் கடவுள் வாழ்த்தைப் பாடி நூலை அரங்கேற்றத் தொடங்கினார். அப்பேரவையில் புலவர் பெருமானாகிய ஒட்டக்கூத்தர் முதலியோர் இருந்தனர். அரசனே சிறந்த புலவன் அல்லவா? இளவரசனான இராஜராஜனும் சிறந்த புலவன். சேக்கிழார் நாள்தோறும் சொற்பொழிவு செய்யத் தொடங்கி அழகாக நாயன்மார் வரலாறுகளை விளக்கிப் பேசிவந்தார். பல்லோர் பாராட்டு சிற்றரசராக இருந்து நாயன்மாரான (1) திருக்கோவலூரை ஆண்ட மெய்ப்பொருள் நாயனார், (2) திருமுனைப்பாடி நாட்டை ஆண்ட நரசிங்க முனையரையர் முதலியோர் வரலாறுகளைப் படித்துக் காட்டுகையில், அவ்வந் நாட்டுச் சிற்றரர்கள் தலையசைத்து மகிழ்ச்சியுற்றனர். இங்ஙனமே சேர-சோழ-பாண்டிய மன்னராக இருந்த நாயன்மார் வரலாறுகள் விரித்துரைக்கப்பட்ட போது அவ்வம்மரபரசர். தலையசைத்துப் பாராட்டினர். இப்பாராட்டுக்குக் காரணம் என்ன? சேக்கிழார் அவ்வம் மரபைச் சேர்ந்த அரசர்களைக் கலந்து அந்தந்த நாயன்மார் வரலாற்றுக் குறிப்புகளைத் தொகுத்ததே சிறந்த காரணமாகும். சேக்கிழார் தில்லைவாழ் அந்தணரைக் கலந்து (1) தில்லைவாழ் அந்தணர் புராணம், (2) கூற்றுவநாயனார் புராணம், (3) திருநீலகண்ட நாயனார் புராணம், (4) திருநாளைப் போவார் நாயனார் புராணம் முதலியவற்றைப் பாடியிருத்தலால் அவர்கள், அவற்றைச் சேக்கிழார் படித்து விளக்கிய பொழுது புகழ்ந்து பாராட்டினர். (1) கொச்செங்கட் சோழர் புராணம், (2) புகழ்ச் சோழர் புராணம், (3) மங்கையர்க்கரசியார்புராணம், (4) நெடுமாறர் புராணம் இவற்றைப் படித்து விளக்கிய பொழுது அநபாயன் உள்ளிட்ட சோழ மரபினரும் பாண்டிய மரபரசரும் பெருமகிழ்ச்சி அடைந்தனர். நாயன்மார் வாழ்ந்த ஊர்-அதற்கு மேற்பட்ட நாடு-மண்டலம் என்ற முறையில் விளக்கமாகப் பல நாயன்மார் வாழ்ந்த பதிகள் ஐயத்திற்குச் சிறிதும் இடமின்றி மிகவும் விளக்கமாகக் குறிப்பிட்டிருத்தலைக் கண்ட அரசியல் அலுவலாளர்கள் சேக்கிழாரைப் பெரிதும் பாராட்டினார்கள். சைவ சமய சம்பந்தமான கொள்கைகள், சைவ-சமண வாதம், சைவ-பௌத்த வாதம் முதலிய இடங்கள் குறிப்பிடப்பட்ட பொழுது, அவையில் இருந்த சமயப் புலவர்கள் தலையசைத்துத் தங்கள் மகிழ்சியைப் புலப்படுத்தினர். சைவ சித்தாந்தக் கருத்துகள் வந்த இடங்களில் எல்லாம் ஒட்டக்கூத்தர் முதலிய சைவ சமயப் பெருமக்கள் தங்கள் பாராட்டினைப் புலப்படுத்தினார்கள். திருநீலகண்டர், சுந்தரர் புராணங்களில் வரும் நீதிமன்ற வழக்குகளைப் பற்றிய விவரங்கள் குறித்து விளக்கப்பட்ட பொழுது, சோழப் பேரரசில் உயர்ந்த நீதிபதிகளாக இருந்த அறிஞர்கள் கேட்டு அகமகிழ்ந்தார்கள். சேக்கிழார் அப்பர், சம்பந்தர், சுந்தரர் புராணங்களில், அவர்கள் பாடிய திருப்பதிகங்களில் வல்ல சைவப் புலவர்கள் அவரது திறனை வியந்து பாராட்டினர். மருத்துவம், வானநூற் கலை, உளநூற் குறிப்புகள், உடல்நூற் செய்திகள் முதலிய பல கலைத் தொடர்பான செய்திகள் வந்தபொழுது அவற்றின் நுட்பத்தை உணர்ந்த கலை விற்பன்னர்கள் சேக்கிழாரது பல்கலைப் புலமையைப் பலபடப் பாராட்டினர். இங்ஙனம் பேரவையில் கூடியிருந்த பேரரசரும் சிற்றரசரும் அரசியல் அலுவலாளர் களும் தில்லைவாழ் அந்தணரும் பல்கலைப் புலவரும் சமயப் புலவர்களும் சிவனடியார்களும் ஒருங்கே பாராட்டச் சேக்கிழார் பெருமான் தமது திருத்தொண்டர் புராணத்தை அரங்கேற்றம் செய்து முடித்தார். அநபாயன் செய்த சிறப்புகள் இங்ஙனம் சோழப் பெரு நாட்டார் மகிழத்தக்க முறையில் திருத்தொண்டர் புராணம் அரங்கேற்றப்பட்டது. அநபாயன் சேக்கிழாhர் பெருமானுடைய உண்மைத் தகுதிகளை அப்பேரவையிற்றான் கண்டான்; அவரைக் காணக் காண அவனது சைவப் பற்றுக்கொண்ட உள்ளம் குழைந்தது; அவரைப் பேரமைச்சராகக் கொண்ட தனது பேற்றை எண்ணி மகிழ்ந்தான்; அவருக்கு வேண்டிய நிலதானம் முதலிய பலவகைத் தானங்களை மகிழ்ச்சியுடன் ஈந்தான்; கூத்தப் பெருமானுக்கு மெய்யடி யாரானஅப் பெரியாரை யானைமீது ஏற்றினான்; அவரது திருத்தொண்டர் புராணத்தையும் ஏற்றினான்; நூலுக்கும் அந்நூலாசிரியர்க்கும் மாலைகள் அணிவித்தான்; தான், அமைச்சருக்கு அருகில் இருந்து கவரிவீசத் தலைப்பட்டான். சேக்கிழார் அஞ்சி, “அரசே, இக்காரியம் அடாது,” என்றார். அரசன், “குன்றை முனிவரே, நீர் இப்பொழுது எனக்கு அமைச்சர் அல்லர்; சைவ உலகத்தை வாழ்விக்க வந்த தவமுனிவர் ஆவிர். நான் உமக்கு அடிமை”, என்று கூறிக் கவரி வீசி வந்தான். ஊர்வலம் கூத்தப்பிரான் திருக்கோயிலைச் சுற்றியுள்ள நான்கு திருவீதிகளிலும் வந்தது. முடிவில் அனைவரும் கூத்தப்பெருமானைந் பணிந்தனர். பின்னர்ப் பெரிய விருந்து நடைபெற்றது. மீண்டும் யாவரும் பேரவையிற் கூடினர். அப்பொழுது அநபாய சோழன் “தொண்டர் சீர் பரவுவார்” என்ற சிறப்புப் பெயரைச் சேக்கிழாருக்கு அளித்தனன். அறிஞர் அவரைக் “குன்றை முனி சேக்கிழார்” என்று பாராட்டினர். சைவப் பெருமக்கள் அவரை “மாதேவடிகள்” (மஹாதேவனுக்கு அடியவர்) என்று பாராட்டி மகிழ்ந்தனர். அவையில் இருந்த புலவரும் பிறகும் அவருடைய செய்யுட்களின் சிறப்பு நோக்கி அவரை “அருள் மொழித் தேவர்” என்றனர். 10. ஓய்வு பெற்ற சேக்கிழார் அரசன் வேண்டுகோள் இங்ஙனம் திருத்தொண்டர் புராண விழாச் சிறப்புடன் முடிந்தபிறகு, அநபாயன், சேக்கிழார் பெருமானைத் தனியே அழைத்துச் சென்று, “பெரியீர், ஒப்புயர்வற்ற சைவப் பெரும்புலவரும் சிறந்த பக்திமானுமாகிய உம்மை அமைச்சராகக் கொண்டு வேலை வாங்க யான் விரும்பவில்லை. இப்பேரமைச்சர் பதவி உமது தகுதிக்கு ஏற்றதன்று. நீர் நாட்டு நலத்தைக் கருதி இப்பதவியில் இருப்பினும், உண்மை உணராத பொதுமக்கள் உம்மை எனக்குகீழ் ஓர் அமைச்சராக வைத்திருப்பதாகக் குறைகூறி என்னை இழிந்தவனாகக் கருதுவர். ஆதலின், சிவநெறிச் செல்வராகிய நீர் உமது பேரமைச்சர் பதவியிலிருந்து விலகியருள வேண்டும்,” என்று வேண்டிக்கொண்டான். சேக்கிழான்-பாலறாவாயன் சேக்கிழார் மிக்க மகிழ்ச்சியுடன் அன்றே தமது பதவியிலிருந்து விலக்கிக்கொண்டார். அநபாயன் குன்றத்தூர்ச் சேக்கிழார் மரபினரை ஆதரிக்கவேண்டும் என்ற எண்ணத்தால், சேக்கிழாரது இளவலும் சிறந்த படிப்பாளியும் பக்திமானுமாகிய பாலறாவாயர் என்பவரைத் தன் அரசியலில் உயர்ந்த அலுவலாளராக அமர்த்திக்கொண்டான். அவர் தமிழ்நாடு முழுவதும் சுற்றிப் பார்க்கும் ஓர் அலுவலராக இருந்தார் போலும்! அவர் அநபாயனுக்குப் பின் வந்த இரண்டாம் இராஜராஜன் காலத்தில் (கி. பி. 1164-ல்) மாசி, வைகாசி மாதங்களில் நடைபெறும் விழாக்காலங்களில் ஆளுடைய பிள்ளையாரது திருமேனியைத் திரு அரத்துறையிலிருந்து (தென் ஆற்காடு ஜில்லா) திருமாறன்பாடிக்கு எடுத்துச் செல்லும் பொழுது உண்டாகும் பூசைச் செல்விற்காக வரியிலியாக நிலதானம் செய்தார் என்று திரு அறத்துறைக் கல்வெட்டு ஒன்று குறிக்கின்றது. அவரே மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் (கி. பி. 1179-ல்) கோட்டூர் (தஞ்சை ஜில்லா)க் கோவிலில் விளக்கு எரிக்கப் பொருள்தானம் செய்தார் என்று கோட்டூர்க் கல்வெட்டுக் குறிக்கின்றது. இவ்விரண்டு கல்வெட்டுகளிலும் “குன்றத்தூர்ச் சேக்கிழான்-பாலறாவாயன் ஆன களப்பாள ராயன்” என்பது காணப்படுவதால், இவர் ‘களப்பாளராயன்’ என்ற சிறப்புப் பட்டத்தை பெற்ற பெரிய அலுவலர் என்பதும் அநபாயன், இரண்டாம் இராஜராஜன், அவனுக்குப் பின் வந்த இரண்டாம் இராஜாதிராஜன், மூன்றாம் குலோத்துங்கன் என்பவர் ஆட்சிக் காலங்களில் உயிருடன் இருந்தவர் என்பதும் நன்கு விளங்குகின்றன. சேக்கிழார் சிவஸ்தல யாத்திரை அரசியலிலிருந்து ஓய்வு பெற்ற சேக்கிழார் பெருமான், அநபாயன் உயிருடன் இருந்தவரை (கி.பி. 1150) தில்லையிலேயே சைவ சமயப் பெரியார்களுடன் இருந்து கூத்தப்பெருமானைத் தரிசித்துக் கொண்டு காலம் கழித்து வந்தனர் என்னலாம். அநபாயனுக்குப் பிறகு இரண்டாம் இராஜராஜன் சோழப் பேரரசன் ஆனான். அவன் காலத்தில் சேக்கிழார் பெருமான் சிவஸ்தல யாத்திரை செய்தனர்; முக்கியமான கோவில்களைத் தரிசித்துத் தலயாத்திரை செய்து வந்தவர், திருமழபாடியில் சிலநாள் தங்கினார். அவர் இராஜராஜனது 17-ஆம் ஆட்சியாண்டில் அங்குத் தங்கினார். ‘மழபாடி’ என்பது திருவையாற்றுக்கு அண்மையில் இருக்கும் சிறந்த சிவக்ஷேத்திரம் ஆகும். அஃது அப்பூதியடிகள் தொண்டு செய்துவந்த க்ஷேத்திரமாகும்; சமயாசாரியர் சிறப்பித்துப் பாடிய சிறந்த ஸ்தலமாகும். அங்குள்ள சிவபிரானுக்கு ‘மாணிக்கவண்ணர்’ என்பது பெயர். அக்கோவில் சேக்கிழாரது உள்ளத்தை ஈர்த்தது. அதனால் அவர் அக்கோவிலில் விளக்கு எரிக்க 90 ஆடுகள் உதவினார் என்று திருமழபாடிக் கல்வெட்டுக் கூறுகின்றது. “ஜயங்கொண்ட சோழ மண்டலத்துக் குலோத்துங்க சோழ வளநாட்டுப் புலியூர்க் கோட்டத்துக் குன்றத்தூர் நாட்டுக் குன்றத்தூர்ச் சேக்கிழான்-மாதேவடிகள் ராமதேவனான உத்தமசோழப் பல்லவராயன் இத் திருக்கோவில் உடையார்க்குத் திருவிளக்குக் காகத் தொண்ணுhறு ஆடுகள் தானம் செய்தான்,” என்பது அக்கல்வெட்டுச் செய்தி யாகும். இவ்வாறு சேக்கிழார் பல ஸ்தலங்களைத் தரிசித்துக் கொண்டே தமது பிறப்பிடமாகிய குன்றத்தூரை அடைந்து, அங்குத் தாம் கோவில் கட்டிப் பூசித்து வந்த திருநாகேசுவரப் பெருமானைத் தொழுது வந்தனர் என்னலாம். 11. பெரிய புராண வரலாற்றுச் சிறப்பு நாட்டு வரலாறு சிலப்பதிகாரமும் மணிமேகலையும் கி. பி. இரண்டாம் நூற்றாண்டில் தமிழ் நாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சிகளைக் கூறுபவை. அவற்றுக்குப் பிறகு தமிழகத்தில் பெரிய அரசியல் மாறுதல் ஏற்பட்டது. கி. பி. 4-ஆம் நூற்றாண்டில் தொண்டை நாட்டைப் பல்லவர் என்ற மரபினர் கைப்பற்றி ஆளலாயினர். கி. பி. 5, 6-ஆம் நூற்றாண்டுகளில் சோழ-பாண்டியநாடுகளைக் களப்பிரர் என்ற புதிய மரபினர் கைப்பற்றி ஆண்டனர். ‘இந்த 5, 6-ஆம் நூற்றாண்டுகளில் இருந்து தமிழ்நாட்டு அரசர்கள் யாவர்? அவர்கள் எங்கிருந்து அரசாண்டனர்?’ என்பன போன்ற கேள்விகட்கு விடை கூறக் கூடவில்லை. இந்த இரண்டு நூற்றாண்டுகளிலும் பல்லவர்-களப்பிரர் போர், பல்லவர்-தமிழரசர் போர், களப்பிரர்-தமிழரசர் போர்கள் ஓயாமல் நடைபெற்றுவந்தன. இக்குழப்பமான காலத்திற்றான் கங்க நாடு முதலிய வேற்று நாடுகளிலிருந்து தமிழ் அறியாத திகம்பர சமணர் கூட்டங் கூட்டமாகத் தமிழ் நாட்டிற் பரவித் தங்கள் சமயத்தைப் பரப்பினர். பல்லவர்-களப்பிரர் என்ற புதிய மரபினர் இச்சமயத்திற்கு ஆக்கம் அளித்தனர். ஆயினும் அதே காலத்தில் கோச்செங்கணான்* போன்ற தமிழரசர் தோன்றிச் சைவ-வைணவ சமயங்கட்குப் புத்துயிர் அளித்தனர். சோழ- பாண்டியர் நிலைமை இந்நிலையில் ஏறத்தாழக் கி. பி. 6-ஆம் நூற்றாண்டின் இறுதியில் சிம்மவிஷ்ணு என்ற பல்லவன் தோன்றிக் காவிரி வரையுள்ள சோழ நாட்டைத் தனதாக்கிக் கொண்டான்; அதே சமயத்தில் கடுங்கோன் என்ற பாண்டியன் தோன்றிப் பாண்டிய நாட்டைக் களப்பிரரிடமிருந்து விடுவித்து ஆளத் தொடங்கினான். இந்த மாறுதலால் சோழர்க்கு நன்மையே இல்லை. அவர்கள் பாவம்! கி. பி. 9-ஆம் நூற்றாண்டு வரை பல்லவர்க்கு அடங்கி இருக்க வேண்டியவர் ஆயினர். Òபுதிதாகத்தம் ஆட்சி பெற்ற பாண்டியர்-பல்லவர், கங்கர், சேரர், சாளுக்கியர் என்பவருடன் ஓயாது போரிட வேண்டியவர் ஆயினர். பல்லவர் தமிழர் அல்லர். மேலும் இந்த 7, 8, 9-ஆம் நூற்றாண்டுகள் சமயப் பிரசார காலமாக இருந்ததே தவிர இலக்கியவளர்ச்சிக்குரிய காலமாக இல்லை. இப் பல்வேறுபட்ட காரணங்களால் சிலப்பதிகாரம், மணிமேகலை என்ற பழைய காவியங்கட்குப் பிறகு (3,4,5,6,7,8,9-ஆம் நூற்றாண்டுகளில்) பல்லவர் ஆட்சி முடியும்வரை தமிழ்க்காவியம் ஒன்றும் எழுதப்படவில்லை என்பது அறியத்தக்கது. சிந்தாமணி பல்லவர் அரசு ஒழிந்து ஆதித்த சோழன் மரபினர் ஆட்சி ஏற்பட்ட பிறகுதான் தமிழ்வளர்ச்சி தழைக்கத் தொடங்கியது. ஏறத்தாழக் கி. பி. 10-ஆம் நூற்றாண்டில் ஜீவக சிந்தாமணி என்ற சமண காவியம் வெளிவந்தது. ஆனால் அது வெளி வந்த காலம் சைவ சமயம் விரைவாகப் பரவிவந்த காலமாதலால், அந்நூல் பொதுமக்கள் கவனத்தை இழுக்க முடியவில்லை; கற்றறிந்தார் மட்டுமே படித்து அனுபவித்தனர் என்னலாம். ஆனால் கி. பி. 12-ஆம் நூற்றாண்டின் முற்பாதியில்-சைவ சமய உணர்ச்சி நாட்டில் நல்ல நிலையில் பரவி இருந்த காலத்தில் நமது சேக்கிழார், சைவ சமயப் பெருங்காவியமாகத் திருத்தொண்டர் புராணத்தைப் பாடியருளினார். இந்நூல் சிலபதிகாரம், மணிமேகலை போலத் தமிழ்நாட்டுச் செய்திகளைக் கூறும் காவியம் ஆதலாலும், அதனினும் சிறப்பாகச் சைவ சமயத்தைப் பற்றிய பெரிய நூலாதலாலும் அரசன் முதல் ஆண்டி யீறாக இருந்த அனைவர் உள்ளத்தையும் ஈர்த்தது என்னலாம், சேக்கிழார் பல்லவர் காலத்தில் வாழ்ந்த (கி. பி. 300-900) நாயன்மார் வரலாறுகளைத் தக்க சான்றுகள் கொண்டு கூறிச் சென்றமையால் அவரது காவியம் வரலாற்றுச் சிறப்பு உடையதாயிற்று. இன்றுள்ள நாம்வேறு எவ்வகையாலும் அறிய முடியாத அக்காலச் செய்திகள் பலவற்றைப் பெரிய புராணத்தால் அறிகிறோம் எனின், வரலாற்றுத் துறையில் அதன் முக்யத்வத்தை நன்குணரலாம் அன்றோ? 12. சேக்கிழார் பெரும்புலமை கலங்கரை விளக்கம் கி. பி. 4-ஆம் நூற்றாண்டு முதல் 7-ஆம் நூற்றாண்டின் தொடக்கம்வரை ‘தமிழகத்தின் இருண்ட காலம்’ என்று வரலாற்று ஆசிரியர் கூறுவர். அக்காலத்தில் நாட்டுநிலை எவ்வாறு இருந்தது என்று சொல்லத் தக்க சான்றுகள் இல்லை. அதற்குப் பிற்பட்ட பல்லவர் கால நிலையையும் ஒழுங்காகக் கூறத் தக்க வரலாற்றுக் குறிப்புகள் போதிய அளவில்லை. இக்குறைகளைப் பெரிய புராணம் ஓரளவு நீக்குகிறது என்பதைத் துணிந்து கூறலாம். ‘வரலாற்றில் இருண்ட காலம்’ எனப்படும் கடலில் திசை யறியாது தவிக்கும் மாணவனாகிய மரக்கலத்திற்கு இப்பெரிய புராணம் ஒரு கலங்கரை விளக்கமாகக் காட்சியளிக்கின்றது. உதாரணமாகக் கோச்செங்கணான் வரலாற்றால் இருண்ட காலம் ஓரளவு ஒளி பெறுகின்றது. அப்பரது வரலாற்றால் மஹேந்திரவர்மனது வரலாறு வலுப்பெறுகிறது. சிறுத்தொண்டர் வரலாற்றால் நரசிம்ம வர்மன் வரலாறு வன்மையுறுகிறது. பூசலார் வரலாற்றால் இராஜசிங்கன் வரலாறு சிறப்புறுகிறது. கழற்சிங்கர் வரலாற்றால் மூன்றாம் நந்திவர்மன் வரலாறு பெருஞ் சிறப்புப் பெறுகின்றது. இங்ஙனம் பார்ப்பின், பெரியபுராண-வரலாற்றுச் சிறப்பையும். அவ்வரலாற்றுக் குறிப்புகளைத் தொகுக்கப் பெருமுயற்சி எடுத்துக்கொண்ட சேக்கிழாரது பெரும் புலமையையும் நன்கறிதல் கூடும். ஓப்பற்ற புலவர் இங்ஙனம் வரலாற்றுத் துறையைக் கவனிப்பின், சேக்கிழார் பெருமான் தமிழ்புலவர் குழுவில் இணையற்றவராகக் காண்கின்றார்; சைவம்-பௌத்தம்-சமணம் முதலிய சமயநூற் புலமையிலும், தமிழ் இலக்கண-இலக்கியப் புலமையிலும் பேரறிஞராகக் காணப்படுகின்றார். நூலிற் பேசப்படுகின்ற பாத்திரங்களின் கால நிலைமை, அக்காலப் பழக்க-வழக்கங்கள் இவற்றைக் கவனித்தே நூல் பாடுதல் பெருங்கவிகள் இயல்பு. சேக்கிழார் அவ்வியல்பினின்று சிறிதளவும் மாறவில்லை என்பது கவனிக்கத்தக்கது. இவை அனைத்திற்கும் மேலாக அவர், நாயன்மார் வாழ்ந்த பதிகளைப் பார்வையிட்டமை, சமய குரவர் யாத்திரை வழிகளைப் பிழையின்றிக் கூறுதல், கல்வெட்டுக் குறிப்புகட்கு மாறுபடாத வரலாற்றுக் குறிப்புகளைத் தருதல் முதலியன அவரது ஆராய்ச்சி அறிவின் நுட்பத்தைத் தெளிவுறத் தெரிவிக்கின்றன. இத்தகைய சிறப்பியல்புகளை நோக்கச் சேச்கிழார் சிறந்த ஆராய்ச்சிப் புலவர் என்பதை அழுத்தமாகக் கூறலாம் அன்றோ? இத்தகைய ஆராய்ச்சி வல்லுநரை 800 ஆண்டுகட்கு முன்னரே தோற்றுவித்த தமிழ்நாட்டிற்கு நமது வணக்கம் உரியதாகுக! 4. கம்பர் முன்னுரை நாம் இதுவரை கூறிவந்த இளங்கோவடிகள், சாத்தனார், சேக்கிழார் என்ற புலவர் பெருமக்களுடைய நாடு-ஊர்-மரபு-பெயர்-வரலாறு இவை ஓரளவு தெளிவாகக் கிடைத்துள்ளன. ஆனால் கவிச்சக்ரவர்த்தி என்று புகழ்ப்பெற்ற கம்பர் பெருமானுடைய ஊர்-மரபு-பெயர்-வரலாறு என்பவை இன்னவை எனத் திட்டமாகக் கூற முடியாதபடி இருக்கின்றன. இவரைப் பற்றிய வரலாற்றைத் தொண்டை மண்டல சதகம், பாண்டிய மண்டல சதகம், முதலிய வற்றிற் காணப்படும் சில பாக்களும் செவிவழிச் செய்திகளும் கொண்டே கூறவேண்டுபவராக இருக்கின்றோம். இவை அனைத்தையும் கொண்டும், இப்புலவர் பெருமான் இயற்றிய இராமாயணம், ஏரேழுபது, சடகோபர் அந்தாதி முதலியன கொண்டும் இவரது வரலாற்றை ஒருவாறு இங்குக் காண்போம். 1. இவரது பெயர் கம்பர் இவர் கம்பர் என்றும், கம்ப நாடர் என்றும், கம்பநாட்டு ஆழ்வார் என்றும் வழங்கப்பட்டார். (1) ‘கம்பர்’ என்பது ‘ஏகம்பர்’ என்னும் சிவனார் பெயரின் முதற்குறை என்று சிலர் கூறுவர்; (2) இவர் காளி வரம் பெற்றுக் கவி பாடுமுன் அறிவிலாத சிறுவராய்க் ‘கம்பம்’ போல நின்ற காரணத்தால் ‘கம்பன்’ எனப் பெயர் பெற்றார் என்று சிலர் சொல்லுவார்; (3) இவர் இளமையில் தமக்கு ஆசிரியராக இருந்தவரது ‘கம்பங்’ கொல்லையைக் காத்து வந்த காரணத்தால் ‘கம்பன்’ எனப்பட்டார் என்று சிலர் செப்புவர்; (4) இவர் கம்பங் கொல்லையைக் காத்துவந்தபொழுது அவ்வூர் அரசனது குதிரை அங்குச் சென்று மேய்ந்தது. நமது புலவர் அதனைச் சாவவும் வாழவும் கவி பாடினார். இதனை அறிந்த அரசன் அவரை வரவழைத்தான். அப்பொழுது அவர் தாம் கம்பங் கொல்லையில் பிடித்திருந்த கம்பத்துடன் சென்று அரசன் முன் நின்றார். அவரைக் கண்ட அரசன், ‘இந்தக் கம்பனா அது செய்தவன்?’ என்று கேட்டான். அதனால் புலவர் ‘கம்பன்’ எனப் பெயர் பெற்றார்” என்று ஒரு சாரர் உரைப்பர். கம்ப நாடர் மேற்சொன்ன கருத்துகள் யாவும் ‘கம்பர்’ என்ற ஒரு சொல்லுக்குப் பிற்காலத்தில் ஏற்பட்டனவாகும். ஆயின், ‘கம்ப நாடர்’ என்ற பெயருக்கு இங்ஙனம் எவரும் பல பொருள் கூறவில்லை. இப்புலவர் ‘கம்ப நாடுடைய வள்ளல்’ என்றும், ‘கம்பநாட்டு ஆழ்வார்’ என்றும், இராமாயண நூல் செய்த பிறகு பாராட்டப்பட்டவர். இதனால், இவரது நாடு ‘கம்ப நாடு’ என்பது தெரிகிறதன்றோ? ‘கம்ப நாடு’ என்பது சோழ நாட்டில் மாயூரம் என்னும் நகரைச் சுற்றியுள்ள பகுதியாக இருக்கலாம் என்பது அறிஞர் கருத்து. வேள் நாட்டு (தென் திருவாங்கூர்) சிவனடியார் ஒருவர், ‘வேள் நாட்டு அடிகள்’ என்று பெயர் பெற்றாற் போலக் கம்ப நாட்டு அரச மரபினரும் வைணவ அடியாருமாகிய நமது புலவர் பெருமான் ‘கம்ப நாட்டு ஆழ்வார்’ எனப் பெயர் பெற்றிருக்கலாம். இவர் இயற்பெயர் இன்னது என்பது நிச்சயிக்கக்கூடவில்லை. இவர் பெரும் புலவரான பிறகு இவரது நாடு நோக்கி அறிஞர் இவரைக் ‘கம்ப நாடர்’ என்று வழங்கி இருக்கலாம்; அப்பெயரே நாளடைவில் ‘கம்பர்’ என மருவி இருக்கலாம். இவர் சிறந்த வைணவப்பெரியாராக இருந்து இராமாயணமாகிய பெருங் காவியத்தைப் பாடி அழியாப் புகழ் பெற்ற பொழுது-பெரிய புராணம் பாடிய சேக்கிழார் ‘மாதேவடிகள்’ எனப் பெயர் பெற்றாற்போல, இவர் ‘கம்ப நாட்டு ஆழ்வார்’ என்று வைணவ அறிஞரால் பாராட்டப் பெற்றிருக்கலாம். 2. இவரது ஊர் ‘கம்ப நாட்டில் இவரது ஊர் யாது?’ என்பது அடுத்த கேள்வியாகும். ‘மன்றே புகழும் திருவழுந்தூர் வள்ளல்’ எனச் சடகோபர் அந்தாதியிலும், ‘சீரணிச் சோழநாட்டில் திருவழுந்தூரில் வாழ்வோன்’ என்று இராமாயணத் தனிச் செய்யுள் ஒன்றிலும் கூறப்படுதலைக் காண, நமது புலவர் பிறந்து வாழ்ந்த பதி திருவழுந்தூர் என்று கொள்ளலாம். திருவழுந்தூர் என்பது மாயூரத்திற்குத் தென்மேற்கில் ஏறத்தாழ நான்கு கல் தொலைவில் இருக்கும் திருப்பதியாகும். அது மிக்க பழமை வாய்ந்த பதியாகும். அதனில் இன்றும் கம்பர் மேடு என்று ஒரு மனை வழங்கி வருகின்றது. கம்பர் வீட்டில் தினந்தோறும் புதிய மட்பாத்திரங்களில் சமையல் செய்வது வழக்கம். சமைத்துக் கழித்த கலங்கள் ஒரு கொல்லையில் எறியப்பட்டு வந்தன. அவை நாளடைவில் மேடிட்டன. அம்மேடே ‘கம்பர் மேடு’ என்பது. அஃது இன்றளவும் சிதைக்கப்படாமல் இருந்து வருவது நாட்டு மக்கள் கம்பர்பால் கொண்ட அளவிறந்த பற்றை அளந்து காட்டுவதாகும். மேற்கூறிய செய்யுள் தொடர்களைக் கொண்டும், ‘கம்பர் மேடு’ இருத்தலைக் கொண்டும் நமது புலவர் பெருமான் பிறந்து வாழ்ந்த பழம்பதி திருவழுந்தூரே என்று துணிந்து கூறலாம். 3. இவரது மரபு (1) “இவர் கம்ப நாட்டை ஆண்ட அரசன் புத்திரர் ஆவர். அந்நாடு பகைவரால் கைப்பற்றப்பட்டதால், இவர் கவனிப்பார் இன்றித் திருவழுந்தூர் உவச்சன் வீட்டில் வளர்ந்து வந்தனர். ஆதலின், இவர் அரச மரபினரே ஆவர்,” என்பது ஒரு சாரர் கூற்றாகும். (2) “இவர் திருவழுந்தூரில் உள்ள காளிகோவில் பூசாரியான உவச்சன் பிள்ளையே ஆவர்,” என்று சிலர் செப்புவர். (3) “இவர் தம் மகனான அம்பிகாபதியைச் சோழ அரசன் கொன்ற காரணத்தால், காட்டு யானைக்கு அஞ்சித் தன் வீடு நோக்கிவந்த இளவரசுனைத் தாக்கிக், ‘காட்டானை விட்டாலும் இக்கவியானை விடாது’ என்று கூறி ஈட்டியால் குத்திக் கொன்றனர் என்பதை நோக்க, இவர் வீரம் பொருந்திய அரச மரபினர் எனக் கருதலாம்,” என்பது சிலர் கருத்தாகும். (4) “இவர் ‘ஏரேழுபது’ என்னும் நூலில் வேளாளரைச் சிறப்பித்துப் பாடியுள்ளார்; சடகோபர் அந்தாதியில் ‘குருகூர் எங்கள்குலக்கொழுந்தே’ என்று நம்மாழ்வாரைப் பாடியுள்ளார்; தாம் இயற்றிய இராமாயணத்தில் ‘வெண்ணெயூர்ச்சடையன் தங்கள் மரபுளோர்1 கொடுக்க வாங்கி வசிட்டனே புனைந்தான் மௌலி,’ என்று வேளாளரை மிகவுயர்ந்த நிலையில் வைத்துப் பாடியுள்ளார். இவற்றைநோக்க, இப்புலவர் பெருமான் வேளாளர் என்று கூறலாம்,” என்பது அறிஞர் பலர் கருத்தாகும். இந்நான்காம் கூற்றுப் பொருத்தமாகக் காண்கிறது. ஆதலின், இதனை மாற்றத்தக்க வேறு சான்றுகள் கிடைக்கும்வரை ‘ இவர் வேளாள மரபினர்’ என்று கருதுதல் பொருத்தமாகும். இதுவரை கூறியவற்றால், இப்புலவர் பெருமான் சோழப்பெருநாட்டின் ஒரு பகுதியான ‘கம்ப நாடு’ என்ற நாட்டினர் என்பதும், திருவழுந்தூர் என்னும் பதியினர் என்பதும், வேளாள மரபினர் என்பதும் ஒருவாறு விளங்கும். 4. புலவரது காலம் இவர் கி. பி. 9-ஆம் நூற்றாண்டினர் என்று சிலர் கூறுவர். ஆயின், சேது சம்ஸ்தான மஹாவித்வான் ரா. இராகவையங்கார் அவர்கள் பல சான்றுகளைக் காட்டிக் கம்பரது காலம் கி. பி. 12-ஆம் நூற்றாண்டின் கடைப்பகுதி என்பதை நன்கு விளக்கியுள்ளனர்.* சென்னைப் பல்கலைக் கழக வரலாற்று விரிவுரையாளராக வுள்ள இராமசந்திரதீக்ஷிதர் என்னும் பெரியார், ‘கம்பர் மூன்றாம் குலோத்துங்கன் காலத்தவர்’ என்பதற்குப் பல சான்றுகள் காட்டியுள்ளார். மூன்றாம் குலோத்துங்கன் காலம் கி. பி. 1178-1218 ஆகும். கம்பர் தமது இராமாயணத்துள் தியாக விநோதன் என்ற சோழனைச் சிறப்பித்துள்ளார்: “சென்னிநாட் டெரியல் வீரன் தியாக விநோதன் தெய்வப் பொன்னி நாடு.” மூன்றாம் குலோத்துங்கனுக்கு உள்ள விருதுப் பெயர்களுள் ‘திரிபுவன வீரன்’ என்பதும் ‘தியாக விநோதன்’ என்பதும் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவை யாகும். இவை இவன் முன்னோர்க்கு இல்லாத பெயர்கள் ஆகும். எனவே, கம்பரால் பாராட்டப்பெற்றவன் மூன்றாம் குலோத்துங்கனே என்பது ஐயத்திற்கு இடம் இன்றிக் கூறலாம். இம்முடிபினால் நம் புலவர் பெருமானது காலம் தெளிவாதல் காண்க. காணவே, இவர் சேக்கிழார்க்கு ஏறத்தாழ இருபது ஆண்டுகள் பிற்பட்டவர் என்னலாம். 5. இளமைப் பருவம் இங்ஙனம் கம்ப நாட்டில்-திருவழுந்தூரில்-வேளாள மரபிற் பிறந்த புலவருடைய பெற்றோர் இன்னவர் என்பது விளங்கவில்லை. இவரது தந்தையார் ‘ஆதித்தன்’ என்று குறிக்கப்படுகிறார். இவரது இளமையைப் பற்றியும் உறுதியாக ஒன்றும் கூறுவதற்கில்லை. “இவர் இளமையில் உவச்சன் வீட்டில் வளர்ந்து வந்தார். இவர் காளிஉபாஸகர்; அதனால் அவளது அருளால் கவி பாடும் ஆற்றலைப் பெற்றார்; கம்பங் கொல்லையை மேய்ந்த காலிங்கராயன் குதிரையைச் சாவவும் பிழைக்கவும் பாடினார்; அதனால் அவ்வரசனது அன்பையும் ஆதரவையும் பெற்றார்; பின்னர் ‘வெண்ணெயூர்’ என்ற பதியிற் பெருஞ் செல்வராக வாழ்ந்த சடையப்பர் என்பவரது அன்பிற்கு உரியவரானார்; அவரால் படிப்பிக்கப்பட்டுப் பெரும் புலவர் ஆனார்; சடையப்பரால் சோழ அரசனிடம் புலவராக அமர்ந்து பெருமை பெற்றார்,” என்பது இவரைப் பற்றி வழங்கும் கதைச் சுருக்கமாகும். இக்கதையில் எந்த அளவு உண்மை உண்டு என்பது இன்னும் விளங்கவில்லை. கம்பர் தமது இராமாயணத்தில் பல இடங்களில் ‘வெண்ணெயூர்ச் சடையன்’ என்பவருடைய சிறப்புகளைப் பலபட விளக்கிச் சொல்லுதலைக் காண்கிறோம். அதனால் இவர், அவ்வள்ளலிடம் பெருமதிப்பு உடையவர் என்பதும் அவரால் சிறப்பிக்கப் பெற்றவர் என்பதும் தெரிகின்றன. ஆயின், இவர் அவ்வள்ளலால் வளர்க்கப்பட்டவர் என்பதற்கோ, படிப்பிக்கப் பெற்றவர் என்பதற்கோ சான்று இல்லை. அதனால், ‘நமது புலவர் திருவழுந்தூர் என்னும் திருப்பதியில் வேளாளர் குடியிற்பிறந்து வளர்ந்து வந்தார்; திருவருள் துணையினால் இளமையில் ஒரு நல்லாசிரியரை அடுத்துத் தம் காலத்தில் இருந்த தமிழ் நூல்கள் அனைத்தையும் பழுதறப் படித்துத் தேறினார். இவரது புலமையைக் கண்டு வியந்த சடையப்ப வள்ளல் இவரை ஆதரிக்கத் தொடங்கினார்’ என்று கொள்ளுதல் பொருத்தம் ஆகும். 6. கல்விச் சிறப்பு கம்பர் தமது இளமைப் பருவத்தில் ஒரு நல்லாசிரியரை அடுத்துத் தமிழ்க் கல்வி பயின்றார் என்பது முன் கூறப்பட்டதன்றோ? இப் புலவர் பெருமானது ‘இராமாயணம்’ என்னும் பெருங்காவியத்தைக் காண, இவர் பெரும்புலவர் என்பது நன்கு தெரிகிறது; ‘கவிச் சக்கரவர்த்தி’ என்ற பெயரைக் கொண்டும் இவரது பெரும் புலமையை அறியலாம். ‘இங்ஙனம் சிறப்புப் பெறுதற்கு அடிப் படையாக இப் பெரும்புலவர் கற்ற நூல்கள் எவை?’ என்ற கேள்வி எழும் அன்றோ? கம்பர் பெருமான் தொல்காப்பியம், பெருங்காக்கைப் பாடினியம், சிறு காக்கைப் பாடினியம்,2 யாப்பருங்கலம், யாப்பருங்கலக் காரிகை, வீரசோழியம், நன்னூல், தண்டியலங்காரம் முதலிய இலக்கண நூல்களைப் பழுதறப் படித்தவர் என்னலாம். புறநானூறு, நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப் பத்து, பரி பாடல், கலித்தொகை, அக நானூறு, திருக்குறள், பத்துப்பாட்டு, சிலப்பதிகாரம், மணிமேகலை என்னும் சங்க கால இலக்கியமும்; நாலடியார் போன்ற கீழ்க்கணக்கு நூல்கள், பாரத வெண்பா, நந்திக்கலம்பகம் முதலிய பல்லவர் கால இலக்கியமும்; ஜீவக சிந்தாமணி, கலிங்கத்துப் பரணி, தக்கயாகப் பரணி, மூவர் உலா, பெரிய புராணம், பழைய திருவிளையாடற் புராணம், கந்தபுராணம் முதலிய சோழர்கால இலக்கியமும் செவ்வையாகக் கற்றறிந்தவர் என்னலாம். கம்பர் பெருமான் இவை அனைத்திற்கும் மேலாகச் சைவ சமய நூல்களாகிய திருமுறைகளையும் வைணவ சமய நூல்களாகிய நாலாயிரத் திவ்யப் பிரபந்தம், அதற்குரிய வியாக்யானங்கள் முதலிய பலவற்றையும் அழுத்தமாகப் படித்தவர் என்று கூறுதல் பொருத்தமாகும். இவர் இந்நூல்கள் அனைத்தையும் படித்துச் செம்பாகமான செந்தமிழ்க் கவிகள் பாடும் பேராற்றல் பெற்றிருந்தார். 7. சடையப்ப வள்ளல் இவ் வள்ளல் தஞ்சை ஜில்லாவில் உள்ள ‘வெண்ணெயூர்’3 என்னும் பதியினர்; பெருவளம் படைத்த வேளாளப் பெருந்தகை; தமிழைத் தம் உயிரெனக் கருதிய உத்தமர்; தமிழ்ப் புலவர்களை ஆதரித்தலில் மகிழ்ச்சி உடையவர். இப் பெரியார் திருவழுந்தூரில் இருந்த பெரும் புலவராகிய கம்பரைப் பற்றிக் கேள்வியுற்றார்; அவரைத் தம்மிடம் வரவழைத்து, அவருடன் அளவளாவினார்; கம்பரது பெரும் புலமையையும் புலமைக்கேற்ற சீரிய ஒழுக்கத்தையும் பரந்த சமய நோக்கத்தையும் கண்டு அளவற்ற மகிழ்ச்சி அடைந்தார். அவர் அன்று முதல் கம்பரைத் தம் உயிர் நண்பராகக் கொண்டு, குறைவின்றி ஆதரித்து அவரது வாழ்க்கையைச் சிறப்பித்து வந்தார். ஏரெழுபது கம்பர் சடையப்ப வள்ளலது தாளாண்மையிற் சிறந்த வேளாண்மையைப் பலவாறு பாராட்டி வந்தார்; அவர் அங்ஙனம் வேளாளரைச் சிறப்பித்துப் பல பாக்கள் பாடினார். அவற்றின் தொகுப்பே ஏர் எழுபது என்னும் நூலாகும் எனக் கொள்ளலாம். ‘கம்பர் ஓர் உழவன் தந்த கஞ்சியைப் பருகி அவ்வேளாளனைச் சிறப்பிக்க ஏரெழுபது பாடினார்’ என்னும் பழங்கதை கம்பர் பெருமானுக்கு இழிவைத் தருவதாக இருக்கின்றதே தவிரப் பெருமை தருவதாக இல்லை. 8. மூன்றாம் குலோத்துங்கன் வீரதேவன் கம்பர் இங்ஙனம் வள்ளலிடம் வளம்பெற்று வாழ்ந்து வரும் காலத்தில், கங்கை கொண்ட சோழபுரத்தைத் தலைநகராகக் கொண்டு சோழப் பெருநாட்டை (கி. பி. 1178-1218) ஆண்டு வந்தவன் மூன்றாம் குலோத்துங்கன் என்பவன் ஆவன், இவன் பல முறை பாண்டிய நாட்டின் மீது படையெடுத்துப் பாண்டியனை அடக்கிய பெரு வீரன்; ஈழ நாட்டைக் கைக்கொண்ட தீரன்; கச்சியைக் கைப்பற்றி அங்கிருந்த சிற்றரசரை அடக்கியவன்; கருவூரைக் கைக்கொண்டு சேரர் சிறப்பினை ஒழித்தவன். சுருங்கக் கூறின், இத் திரிபுவன வீரதேவன் கிருஷ்ணையாறுவரை தமது பெருநாட்டைப் பரப்பிப் பேரரசனாக விளங்கியவன் ஆவன். அவைப் புலவர் இவன் வீரத்திற் சிறந்திருந்தாற் போலவே தமிழ்ப் பற்றிலும் சிறந்திருந்தான்; தன் காலத்து விளங்கிய பெரும் புலவர் பலரை இவன் அவைப் புலவராகக் கொண்டிருந்தான். அவருள் ஒருவன் இவன் மீது கோவை ஒன்றைப் பாடியுள்ளார். “தமிழ் வாணர் தெய்வக் கவியாபரணன்,” “கற்றார்க்கு வள்ளல்,” “பாவலர் காவியம் சூடும் குலோத்துங்க சோழன்,” “பாவலரை அன்பால் வளர்க்கும் குலோத்துங்கன்,” “கொழித்துத் தமிழ் கொள்ளும் கிள்ளி,” என வரும் கோவைத்தொடர்கள், இச் சோழர் பெருமானுடைய புலமையையும், இவனுடைய அவைப் புலவர் பலர் என்பதையும் அவர் செய்த நூல்கள் பல என்பதையும் இவன் புலவர் பலரை ஆதரித்தவன் என்பதையும் உணர்த்துகின்றன அல்லவா? இவனது அவைப் புலவருள் மற்றொருவர் வீராந்த பல்லவ ராயர் என்பவர். அப்புலவர் வேண்டுகோளின்படி அரசன் நட்டுவன் ஒருவனுக்குக் கோவில் நட்டுவத் தொழில் செய்ய நிலதானம் அளித்தான் என்பது ஒரு கல்வெட்டுச் செய்தி ஆகும். ‘சங்கர சோழன் உலா’ என்பதன் ஆசிரியர் ஒருவரும் குலோத்துங்கன் பேரவையைச் சிறப்பித்த புலவர் ஆவர். சங்கர சோழன் என்பவன் குலோத்துங்கனுக்குத் தம்பியானவன். சிறந்த சிவ பக்தன் மூன்றாம் குலோத்துங்கனைத் திருவாரூர்ச் சிவபெருமான் “நமது தோழன்” என்று சொன்னதாக ஒரு கல்வெட்டுக் குறிக்கின்றது. இவன் கும்பகோணத்திற்கு மூன்று கல் தொலைவில் ஒரு சிவன் கோவிலைக் கட்டினான். அதன் பெயர் திரிபுவன விரேசுவரம் என்பது. ‘திரிபுவன வீரன் (மூன்றாம் குலோத்துங்கன்) கட்டிய கோவில்’ என்பது இதன் பொருள். அது பிற்காலச் சோழர் காலத்துக் கட்டடக்கலை உணர்ச்சியையும் சிற்பக்கலை உணர்ச்சியையும் சிறந்த முறையில் எடுத்துக் காட்டவல்லது. இப்பேரரசன் எண்ணிறந்த சிவாலயங்கட்குத் தருமங்கள் செய்துள்ளான்; தில்லைக் கூத்தப் பெருமாள் திருக்கோவிலையும் திருவாரூர்-வீதி விடங்கப் பெருமான் திருக்கோவிலையும் பொன் மயமாக்கினான் என்று கல்வெட்டுகள் குறிக்கின்றன. காவலனும் கம்பரும் இங்ஙனம் பெற வீரனாகவும் பெரும் புலவனாகவும் விளக்கமுற்றிருந்த மூன்றாம் குலோத்துங்கனுக்குச் சடையப்ப வள்ளல் உற்ற நண்பராக இருந்தார். அவர் நமது கம்பர் பெருமானைப் பற்றிச் சோழ அரசனிடம் கூறினார். உடனே மன்னவன் கம்பரை வரவழைத்து, அவருடன் அளவளாவி, அவரது ஒப்பற்ற பெரும் புலமையை உள்ளவாறு உணர்ந்தான்; தானும் சிறந்த புலவன் ஆதலின், அவர் தகுதியறிந்து மரியாதை செய்தான்; அன்று முதல் அவரைத் தனது புலவர் அவைக்குத் தலைவராகக் கொண்டான். “கற்றாரைக் கற்றாரே காமுறுவர்” அல்லவா? கம்பரும் சோழ வேந்தனுடைய கல்வி, அன்பு, ஈகை, அடக்கம், சிவபக்தி, சமயப் பொதுநோக்கம் முதலிய நற்பண்புகளில் ஈடுபட்டார்; அவனை அன்புடன் நேசிக்கலானார்; நாளும் அவனுடன் அளவளாவி அவனைத் தம் பேச்சாற்றலாலும் கவியாற்றலாலும் மகிழ்வித்து வந்தார். 9. கம்பர் ‘இராமாயணம்’ பாடியது ‘தமிழகத்தில் இராமாயணம்’ பற்றிய நூல்கள் கம்பர் காலத்திற்கு முன்னர்த் தமிழ் நாட்டில் சங்க காலத்திலேயே இராமாயண வலராறு பரவி இருந்தது என்பது, பழைய சங்கநூற் செய்யுட்களில் காணப்படும் குறிப்புகளைக் கொண்டு கூறலாம். பல்லவர் காலத்தில் (கி. பி. 300-900) செய்யப்பட்ட பாரத வெண்பாவைப் போல ‘இராமாயண வெண்பா’ என்றொரு நூல் இருந்ததாகத் தெரிகின்றது. சங்க காலத்தில் ‘பாரதம் பாடிய பெருந் தேவனார்’ என்றொருவர் இருந்தனர் என்பதால், பாரத வெண்பாவிற்கு முன்னரே ‘பாரதம்’ தமிழில் பாடப்பட்டிருந்தது என்பது புலனாகிறது. ஆயின், அவ்வாறு சங்ககாலத்தில் ‘இராமாயணம்’ பாடப்படவில்லை. எனவே, பெரிய புராணம் போன்ற பெருங்காவிய முறையில் இராமாயண வரலாறு வெளிவரல் வேண்டும் என்று கம்பரே கருதினரோ-சடையப்பர் விரும்பினரோ-சோழ வேந்தனே பாடுமாறு வேண்டினனோ, ‘உண்மை இன்னது’ என்பது தெரியவில்லை. கம்பர் இராமாயணம் பாடத் தொடங்கினார். பிறமொழி இராமாயண நூல்கள் கம்பர் காலத்திற்கு முன்னரே வடமொழியில் இராமாயண நூல்கள் மிகப் பலவாக இருந்தன. அவற்றுள் வைதிக சமயத்தினர் எழுதிவைத்த நூல்கள் பல; சமண சமயத்தவர் பிராக்ருதம்-வடமொழி-கன்னட மொழிகளில் எழுதிவைத்த நூல்கள் பலவாகும்; புத்த ஜாதகக் கதைகளில் வரும் இராமாயணக் கதைகள் பலவாகும். இவற்றுள் ஒரு நூலிற் காணப்படும் செய்திகள் வேறொரு நூலில் மாறுபட்டுக் காணப்படும். எல்லா நூல்களும் இராமாயண வரலாற்றை ஒன்றுபோலக் கூறவில்லை. இக்குறைகளைக் கவனித்தோ, என்னவோ, கம்பர் வால்மீகி இராமாயணம், காளிதாஸன் செய்த இரகுவம்ஸம், பால ராமாயணம் என்னும் மூன்றினையும் சிறந்த மூல நூல்களாகக் கொண்டார்; அம் மூன்றிலும் சிறப்பாக வால்மீகி இராமாயணத்தையே கொண்டார் என்னலாம். கம்ப ராமாயணம் கம்பர் தமிழ் நாட்டினர் அல்லவா? அவர் காலத்திற்கும் இராமாயண நிகழ்ச்சிகள் நடைபெற்ற காலத்திற்கும் இடையில் பல நூற்றாண்டுகள் (ஏறக்குறைய 2000 ஆண்டுகள்) கழிந்துவிட்டன. அங்ஙனமே அவர் ஆதாரமாகக் கொண்ட வால்மீகி ராமாயணத்திற்கும் அவர்க்கும் இடையில் பல நூற்றாண்டுகள் கழிந்தன. ஆதலின் கம்பர், இராமாயண வரலாற்றை, மூலத்திற்குப் பழுது நேராமல் ஆனால் தமிழ் நாகரிக முறைக்கும் மாறுபடாமல், பல புதிய காட்சிகளை உண்டாக்கியும்4 சிலவற்றை மாற்றியும்5 தமிழ் நாட்டிற்கும் தமிழ் மக்களுக்கும் ஏற்ற முறையில் திறம்படப் பாடி முடித்தார் என்பது தமிழ்ப் பெரும் புலவர்கள் புகழ்மொழியாகும். கம்பர், இராமாயணத்தைக் கி. பி. 1178-இல் பாடத் தொடங்கி 1185-இல் முடித்தார் என்று மஹா வித்வான் ரா. இராகவையங்கார் அவர்கள் கூறியுள்ளனர். 10. கம்ப ராமாயணச் சிறப்பு நூலின் பிரிவுகள் கம்பர் பாடியனவாகக் கூறப்படும் செய்யுட்கள் 10,500 ஆகும். கம்ப ராமாயணம்-(1) பால காண்டம், (2) அயோத்தியா காண்டம், (3) ஆரண்யகாண்டம், (4) கிஷ்கிந்தா காண்டம், (5) சுந்தர காண்டம், (6) யுத்தகாண்டம் என ஆறு காண்டங் களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு காண்டமும் பல படலங்களாக வகுக்கப்பட்டிருக்கிறது. செய்யுட் சிறப்பு கம்பர் பெருமான் சிறந்த தமிழ்ப் புலவர்; வைணவ சமயத்தில் அழுத்தமான பற்றுடையவர்; ஆனால், அதே சமயத்தில் எல்லாச் சமயங்களும் சமம் என்னும் பொது நோக்கமும் கொண்டவர்; இன்ப-துன்பங்கள் நிறைந்த இந்த உலகில் அநுபவம் மிக்கவர். அஃது ஒன்று மட்டும் இவரிடத்துச் சிறந்து காண்பது போல வேறு தமிழ்ப் புலவரிடத்தில் காண்பது அருமையாகும். இத்தகைய எல்லாத் தகுதிகளையும் திறம்படப் பெற்ற இப்புலவர் பெருமான், முன்னூல்களில் காணப்படும் உயர்ந்த கருத்துகளையும் கற்பனைகளையும் உவமைகளையும் தொடர்களையும் தமது பெருங் காவியத்தில் அப்படியே ஆண்டும், மாற்றி அமைத்தும் பாடியுள்ள போக்குப் புலவர்களை இன்புறுத்துவதாகும். சமயத்திற்கேற்ற சந்தங்களை அமைத்துப் பாடப் பெற்ற செய்யுட்கள் பலவாகும். இயற்கை நிகழ்ச்சிகளை விளக்கும் இடங்களில் உயர்ந்த கருத்துகளை எளிய முறையில் சுட்டி விளக்கிச் சொல்லுதல் இவரது திறமையை நன்கு வெளிபடுத்துவதாகும். கோதாவரி யாற்றை வருணிக்கின்ற இடத்தில், “புவியினுக் கணியாய் ஆன்ற பொருள்தந்து புலத்திற் றாகி அவிஅகத் துறைகள் தாங்கி ஐந்திணை நெறிஅ ளாவிச் சவியுறத் தெளிந்து தண்ணென் றொழுக்கமும் தழுவிச் சான்றோர் கவிஎனக் கிடந்த கோதா விரியினை வீரர் கண்டார்.” எனக் கவி இலக்கணத்தை ஆற்றின்மேல் ஏற்றிக் கூறியுள்ள நயம் காண்க. இத்தகைய இடங்கள் நூற்றுக்கணக்காக உள்ளன. கம்பரது வைணவப்பற்றையும் வைணவ சிந்தாந்தப் புலமையையும் நன்கு காட்ட வல்லது இரணியன் வதைப் படலம் ஆகும். இங்ஙனம் தமிழ்ப் புலமையிலும் சமயப் புலமையிலும் நிறைந்த உலக அநுபவத்திலும் பண்பட்ட இவரது உள்ளத்தில்இருந்து எழுந்த உயரிய கருத்துகள்-நாம் உணர்ந்து இன்புறவும் வாழ்க்கையிற் பின்பற்றவும் தக்க கருத்துகள் மிகப் பலவாகும் ஆதலின், இப் பெரும்புலவர் செய்த நூல் தமிழ் மக்களால் இன்றளவும் போற்றப்படுகின்றது. ‘கல்வியிற் பெரியவர் கம்பர்’ என்பது இலக்கணப் பாடத்திலும் ஏறிவிட்டதன்றோ? குறிப்புகள் 1, காதை 30, வரி. 170-183. *வேள் மகள் – வேண்மாள் என மருவியது. 2, யக்ஞ் ஸ்ரீ சதகர்ணி (சதம்-நூறு; கர்ணி-கன்னர்; நூற்றுவர் கன்னர்.) இவன் காலம் கி. பி. 166-196. 1, பிறகு கண்ணகி கோவலனைத் தழுவியதும், பாண்டியனிடம் வழக்குரைத்ததும் சென்ற பகுதியில் கூறப்பட்டனவாதலால் இங்கு விடப்பட்டன. 2. இது சென்ற பிரிவிற் கூறப்பட்டது. 1 மஹாவித்வான் மு. இராகவையங்கார், சாஸனத் தமிழ்க் கவி சரிதம், பக்கம் 71-75. * இவன் காலம் கி. பி. 5-ஆம் நூற்றாண்டு என்பதே பொருத்தமானது. இராவ்சாஹிப் ள. வையாபுரிப் பிள்ளை, பி. ஏ., பி. எல் அவர்கள் வரைந்துள்ள ‘திரிகடுகம்’ என்னும் நூலினைக் காண்க. 1 வேளாளர். *செந்தமிழ், எடிட. 3, யீயசவ 6. 2. இவை இரண்டும் செய்யுள் இலக்கணம் கூறும் யாப்பு நூல்கள். 3. பாபநாசம் தாலுகாவில் உள்ள (திரு) வெண்ணியூர் என்பது கம்பர் காலத்து ‘வெண்ணெயூர்’ ஆக இருக்கலாம் என்பது அறிஞர் கருத்து. மாயூரத்திற்கு அண்மையில் உள்ள ‘வெண்ணெயூர்’ ஆக இருக்கலாம் என்பது சிலர் கருத்தாகும். 4 மிதிலைக் காட்சிப்படலம் புதியது, 5 ‘தாரை’ வரலாறு மாற்றப்பட்டுள்ளது.