இராஜேந்திர சோழன் வரலாற்றுப் பேரறிஞர் மா. இராசமாணிக்கனார் நிலவன் பதிப்பகம் நூற் குறிப்பு நூற்பெயர் : இராசேந்திர சோழன் ஆசிரியர் : வரலாற்றுப் பேரறிஞர் மா. இராசமாணிக்கனார் பதிப்பாளர் : முனைவர் க. தமிழமுது பதிப்பு : 2014 தாள் : 16கி வெள்ளைத்தாள் அளவு : 1/8 தெம்மி எழுத்து : 11 புள்ளி பக்கம் : 14+58 = 72 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) விலை : உருபா. 65/- படிகள் : 1000 மேலட்டை : தமிழ்க்குமரன் & வி. சித்ரா நூலாக்கம் : வி. சித்ரா அச்சிட்டோர் : வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர் வடபழனி, சென்னை - 26. வெளியீடு : நிலவன் பதிப்பகம், பி 3, பாண்டியன் அடுக்ககம், சீனிவாசன் தெரு, தியாகராய நகர், சென்னை - 600 017. நூல் கிடைக்குமிடம் : தமிழ்மண் பதிப்பகம் 044 2433 9030. முன்னுரை தென் நாட்டை ஒரு குடைக்கீழ் ஆண்ட சோழப் பேரரசருள் சிறந்தவர் இராஜராஜனும் அவன் செல்வமைந்தன் இராஜேந்திரனுமே ஆவர். இராஜராஜன் அமைத்த சோழப் பெருநாட்டைப் பலப்படுத்திய பெருமை இராஜேந்திரனுக்கு உரியது. அத்துடன் அப்பெருமகன் கங்கை வரை தன் ஆற்றலைக் காட்டியவன்; கப்பற்படையைச் செலுத்திக் கிழக்கு நாடுகளை வென்றவன். தமிழர் போரில் சிறந்தவர்-பேரரசைக் கட்டி யாளத்தக்க திறமை உடையவர் என்பதை உலகறியச் செய்த பெருவீரன் இராஜேந்திரனே ஆவன். அப்பெருமகனது வரலாறு இக்காலத் தமிழ் மாணவர்க்கு மிகவும் தேவையானது. இஃது, அவர்கட்குத் தமிழ் உணர்ச்சியையும் தமிழ் நாட்டின்மீது பற்றையும் தமிழ் வரலாற்றில் ஆர்வத்தையும் தமிழர் முன்னேற்றத்தில் ஊக்கத்தையும் அளிக்க வல்லது. சேக்கிழார் அகம் சென்னை மா. இராசமாணிக்கம் பதிப்புரை மொழியாலும், இனத்தாலும், அறிவாலும் சிறந்தோங்கி விளங்கிய பழந்தமிழ்க்குலம் படிப் படியாய் தாழ்ச்சியுற்று மீள முடியாத அடிமைச் சகதியிலும், அறியாமைப் பள்ளத்திலும் வீழ்ந்து கிடந்த அரசியல் குமுகாய வரலாற்று உண்மை களைத் தேடி எடுத்து வழங்குவதை நோக்கமாகக் கொண்டு எம் தந்தையார் தமிழ்மண் பதிப்பகத்தைத் தொலைநோக்குப் பார்வையோடு தொடங் கினார். என் தந்தையின் பதிப்புச் சுவடுகளைப் பின்பற்றி எம் பதிப்புப் பணியைச் செய்து வருகிறேன். தமிழ்ப் பேரறிஞர் முனைவர் மா. இராசமாணிக்கனார் இலக்கிய ஆய்வுகள், சமயம் சார்ந்த ஆய்வுகள், வரலாற்றாய்வுகள், கோவில் ஆய்வுகள், கல்வெட்டு ஆய்வுகள், மாணவர் நலன் குறித்து அவர் எழுதிய 110 நூல்களும் ஆய்வாளர்களுக்கும் மாணவர் களுக்கும், தமிழ் உணர்வாளர்களுக்கும் பெரிதும் பயன்படத்தக்க நூல்களாகும். இவற்றில் 18 நூல்களை 2012இல் எம் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. தொடர் பணியாக 2014இல் 21 நூல்களை தமிழுலகம் பயன்படும் வகையில் எம் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இதனை அனைவரும் படித்துப் பயன்பெற வேண்டுகிறேன். - க. தமிழமுது நுழையுமுன் மனிதரில் தலையாய மனிதரே! ஆசிரியர், ஆய்வாளர், அறிஞர் என்று தம் உழைப்பாலும் திறமையாலும் விடாமுயற்சியாலும் படிப்படியாக உயர்ந்த இராசமாணிக்கனார் தமிழ்நாடு கண்ட மிகச் சிறந்த சிந்தனையாளர்களுள் ஒருவர். மொழி, இனம், நாடு எனத் தமிழ் கூறும் நல்லுலகம் பற்றி ஆழச் சிந்தித்தவர்களுள் அவர் குறிப்பிடத்தக்கவர். சமயஞ் சார்ந்த மூட நம்பிக்கைகளும், சாதிப் பிணக்குகளும், பிறமொழி ஈடுபாடும், பெண்ணடிமைத் தனமும், சடங்கு நாட்டமும், கல்வியறிவின்மையும் தமிழ்ச் சமுதாயத்தைச் சூறையாடிக் கொண்டிருந்த கால கட்டத்தில்தான் இராசமாணிக்கனார் தம் ஆசிரிய வாழ்க்கையைத் தொடங்கினார். தாமுண்டு, தம் குடும்பமுண்டு, தம் வேலையுண்டு என்று அவரால் இருக்க முடியவில்லை. தமிழ் இலக்கியங்களைப் பழுதறப் படித்திருந்தமையாலும், இந்த நாட்டின் வரலாற்றை அடிப்படைச் சான்றுகளிலிருந்து அவரே அகழ்ந்து உருவாக்கியிருந்தமையாலும் மிக எளிய நிலையிலிருந்து உழைப்பு, முயற்சி, ஊக்கம் இவை கொண்டே உயரத் தொடங்கியிருந்தமையாலும் தம்மால் இயன்றதைத் தாம் வாழும் சமுதாயத்திற்குச் செய்வது தமது கடமையென அவர் கருதியிருந்தார். மொழி நலம், தமிழ்த் திருமணம், சாதி மறுப்பு என்பன அவருடைய தொடக்கக் காலக் களங்களாக அமைந்தன. தாய்மொழித் தமிழ், தமிழரிடையே பெறவேண்டிய மதிப்பையும் பயன்பாட்டையும் பெறாமலிருந்தமை அவரை வருத்தியது. `தமிழ் நமது தாய்மொழி ஈன்ற தாயைப் போற்றுதல் மக்களது கடமை. அது போலவே நமது பிறப்பு முதல் இறப்பு வரையில் நமக்கு உறுதுணையாக இருந்து நம்மை வாழச் செய்யும் மொழியைக் காப்பதும் வாழ்விக்கச் செய்வதும் தமிழராகிய நமது கடமை. `ï‹iwa jÄHuJ thœÉš jÄœ v›thW ïU¡»‹wJ? ஒரு தமிழன் மற்றொரு தமிழனோடு பேசும்போது பெரும்பாலும் பிறமொழிச் சொற்களைக் கலந்தே பேசுவதைக் காண்கிறோம். இப்பிறமொழிச் சொற்கள் நம் மொழியிற் கலந்து தமிழ் நடையைக் கெடுத்துவிடுகின்றன. ஒரு தமிழ்ச் சொல்லுக்குப் பதிலாகப் பிற மொழிச் சொல்லைப் பயன்படுத்தினால், அந்தத் தமிழ்ச்சொல் நாளடைவில் வழக்கு ஒழிந்துவிடும் `பிறமொழிச் சொற்களைக் கலந்து பேசுவதில் தலைசிறந்தவர் தமிழரே ஆவார். மொழிக் கொலை புரிவதில் முதற்பரிசு பெறத்தக்கவர் நம் தமிழரே ஆவர்! `நம் தமிழ்நாட்டுச் செய்தித் தாள்களில் தமிழ்ப் புலமையுடையார் பெரும்பாலும் இல்லையென்றே கூறலாம். அதனாலும், நல்ல தமிழை வளர்க்க வேண்டும் என்ற ஆர்வம் இன்மையாலும், மிகப் பலவாகிய பிறமொழிச் சொற்களைக் கலந்து தமிழ் எழுதி வருகிறார்கள். இவற்றைத் `தமிழ்ச் செய்தித்தாள்கள் என்று கூறுவதற்குப் பதிலாக `கலப்பு மொழிச் செய்தித்தாள்கள் என்று கூறுதலே பொருந்தும். இவ்வாறு செய்தித் தாள்களில் மொழிக் கொலை புரிவோர் வேற்று நாட்டவரல்லர், வேறு மொழி பேசும் அயலாரல்லர். தமிழகத்தில் பிறந்து தமிழிலேயே பேசிவரும் மக்களாவர் என்பதை வெட்கத்துடன் கூற வேண்டுபவராக இருக்கிறோம். நாடு முழுவதும் மொழி நலம் குன்றியிருந்தமையைத் துறை சார்ந்த சான்றுகளோடும் கவலையோடும் சுட்டிக் காட்டியதோடு இராசமாணிக்கனார் நின்றுவிடவில்லை. மொழியை எப்படி வளர்ப்பது, காப்பாற்றுவது, உயர்த்துவது என்பதே அவருடைய தொடர்ந்த சிந்தனையாக இருந்தது. காலங் காலமாக அடிமைப்பட்டுக் கிடந்த சமுதாயம் அவர் கண் முன் நின்றது. வடமொழி ஆதிக்கமும் ஆங்கிலப்பற்றும் தமிழ் மக்களின் கண்களை மூடியிருந்தன. தம் மொழியின், இனத்தின், நாட்டின் பெருமை அறியாது இருந்த அவர்கட்குத் தமிழின் தொன்மையையும் பெருமையையும் சிறப்பையும் எடுத்துச் சொல்வது தம் கடமையென்று கருதினார் இராசமாணிக்கனார். அக்கடமையை நிறைவேற்ற அவர் கையாண்ட வழிகள் போற்றத்தக்கன. தம்முடைய மாணவர்களை அவர் முதற்படியாகக் கொண்டார். நல்ல தமிழில் பேசவும் எழுதவும் அவர்களுக்குப் பயிற்றுவித்தார். சிறுசிறு கட்டுரைகளை உருவாக்கப் பயிற்சியளித்தார். மொழிநடை பற்றி அவர்களுக்குப் புரியுமாறு கலந்துரையாடினார். மொழி நடையைச் செம்மையாக்குவது இலக்கணமும் பல நூல்களைப் படிக்கும் பயிற்சியுமே என்பதை விளங்க வைத்தார். இலக்கணப் பாடங்களைப் பள்ளிப் பிள்ளைகள் விரும்பிப் படிக்குமாறு எளிமைப்படுத்தினார். அதற்கெனவே நூல்களை உருவாக்கினார். அவரிடம் பயின்ற மாணவர்கள் அவர் இலக்கணம் சொல்லிக் கொடுத்த அழகையும், படிப்படியாக இலக்கணத்தை நேசிக்க வைத்த திறனையும் பல இடங்களில் பதிவு செய்துள்ளனர். பயிலும் நேரம் தவிர்த்த பிற நேரங்களிலும் மாணவர்களுடன் உரையாடித் தமிழ் மொழியின் வளமை குறித்து அவர்களைச் சிந்திக்கச் செய்தார். அவரிடம் பயின்றவர்களுள் பலர் பின்னாளில் சிறந்த தமிழறிஞர்களாகவும், நூலாசிரியர்களாகவும் உருவானமைக்கு இத்தகு பயிற்சிகள் உரமிட்டன. பள்ளி ஆசிரியராக இருந்த காலத்திலேயே ஒத்த ஆர்வம் உடையவர்களைச் சேர்த்துக் கொண்டு அப்பகுதியிலிருந்த பொது மக்களுக்குத் தமிழ்க் கல்வியூட்டும் பணியை அவர் செய்துள்ளார். `வண்ணையம்பதியில் தனலட்சுமி தொடக்கப் பள்ளியில் பேராசிரியரின் தமிழ்த்தொண்டு தொடங்கியது. அங்குத் தொடர்ந்து வகுப்புகள் நடத்தினார். பணிகளில் இருந்தவர்களுக்கு வார இறுதி நாட்களில் தமிழ் வகுப்பெடுத்தார். உறவினர்களைக் கூட அவர் விட்டு வைக்க வில்லை. `குடியரசு இதழில் சொற்ப ஊதியத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த தம் மைத்துனர் பு. செல்வராசனை `வித்துவான் படிக்க வைத்து, சென்னை அப்துல் அக்கீம் உயர்நிலைப் பள்ளியில் தலைமைத் தமிழாசிரியராகப் பணிபெறச் செய்தார். தமக்குக் கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் மொழிச் சிந்தனைகளை விதைக்கப் பயன்படுத்திக் கொண்டவர், `தமிழர் நல்வாழ்க்கைக் கழகம், `நக்கீரர் கழகம், `மாணவர் மன்றம் முதலிய பொது நல அமைப்புகளோடு தம்மை இணைத்துக் கொண்டார். 1946 இல் சென்னை நக்கீரர் கழகம் என்ற அமைப்பினைத் தொடங்கிய காலத்துப் பேராசிரியர் அவர்களின் அரவணைப்பும் தொண்டும் கழகத்திற்குக் கிடைத்துக் கழகம் வளர்ந்து சிறந்தது. 1946 ஆம் ஆண்டில் நக்கீரர் கழகம் `திருவள்ளுவர் என்ற திங்கள் ஏட்டினை நடத்தத் தொடங்கியபோது, பேராசிரியர் தம் கட்டுரைகளை வழங்கியதோடு அல்லாது, தாம் நட்புப் பூண்டிருந்த தவத்திரு ஈரா பாதிரியாரின் கட்டுரையையும் பெற்றுத் தந்து இதழுக்குப் பெருமை சேர்ந்தார். அடியவனின் தமிழ் தொண்டிற்கு ஊக்கமும், உள்ளத்திற்கு உரமும், துவண்டபோது தட்டி எழுப்பி ஊட்ட உரைகளும் அளித்துச் சிறப்பித்தவர் பேராசிரியர் என்று இராசமாணிக்கனாரின் தமிழ்த் தொண்டை நினைவு கூர்ந்துள்ளார் நக்கீரர் கழக அமைப்பாளர் சிறுவை நச்சினார்க்கினியன். கல்வி வழி விழிப்புணர்வில் பெருநம்பிக்கை கொண்டிருந் தமையால், `அரசியலாரும் சமூகத் தலைவர்களும் நாடெங்கும் கல்விக் கூடங்களை ஏற்படுத்த வேண்டும். கல்வி கற்கும் வயதுடைய எந்தச் சிறுவனும் சிறுமியும் கற்காமல் இருத்தல் கூடாது என்று முழங்கிய இப்பெருமகனார், தாம் வாழ்ந்த பகுதியில் இருந்த அத்தனை குடும்பங்களின் பிள்ளைகளும் பள்ளிப் படிப்புக் கொள்ளுமாறு செய்துள்ளார். பெண்கள் பின்தங்கிய காலம் அது. `அடுப்பூதும் பெண்ணுகளுக்குப் படிப்பெதற்கு என்று கேட்டவர்கள் மிக்கிருந்த காலம். அந்தக் கால கட்டத்தில்தான் பேராசிரியர் பெண் கல்விக்காகக் குரல் கொடுத்தார். எட்டாம் வகுப்பே படித்திருந்த தம் மனைவிக்குத் தாமே ஆசிரியராக இருந்து பயிற்றுவித்து அவரை, `வித்துவான் பட்டம் பெறச் செய்தார். `என் கணவர் எனக்கு ஆங்கிலப் பாடமும் தமிழ்ப்பாடமும் கற்பித்து வந்தார். பாடம் கற்பிக்கும் நேரத்தில் பள்ளி ஆசிரியராகவே காணப்பட்டார். ஒவ்வொரு பெண்ணும் தன்னைக் காத்துக் கொள்ளும் வகையில் கல்வி கற்றுப் பொருளீட்ட வேண்டும் என்பது என் கணவர் கருத்து. அதனால், என்னைப் பெண்கள் பள்ளியில் தமிழாசிரியராக அமர்த்தினார். மாணவியர்க்கு மொழியுணர்வும் நாட்டுணர்வும் வருமாறு பேசவேண்டும் என்று அவர் அடிக்கடி கூறுவார் என்று `என் கணவர் என்ற கட்டுரையில் திருமதி கண்ணம்மாள் இராசமாணிக்கனார் கூறியுள்ளமை இங்குக் கருதத்தக்கது. மொழி, இனம், நாடு இவற்றைப் பற்றி அறிந்திருந்தால் தான் அவற்றை நேசிக்கவும் அவற்றிற்குத் துணை நிற்கவும் முடியுமென்பதில் அவர் தெளிவாக இருந்தமையால்தான், `கல்வியில் அக்கறை காட்டினார். அவருடைய ஆசிரியப் பணி அதற்குத் துணையானது. தம்மிடம் பயில வந்தவர்க்கு மொழியுணர்வூட்டினார். `தமிழகத்தில் ஆட்சி தமிழிலேயே இயங்க வேண்டும். எல்லாக் கல்வி நிலையங்களிலும் ஆங்கிலம் ஒழிந்த எல்லாப் பாடங்களையும் தமிழில் கற்பித்தல் வேண்டும் என்பது அவர் கொள்கையாக இருந்தது. அறிவியல் மனப்பான்மையை ஊட்டி வளர்க்கும் முறையில் அமைந்த பாடநூல்களையே பிள்ளைகள் படிக்கும்படிச் செய்தல் வேண்டும். உலக நாடுகளோடு தம் நாட்டை ஒப்பிட்டுப் பார்த்துக் குறைகளை நிறைவாக்கும் மனப்பாங்கு வளரும்படியான முறையில் கல்வி அளிக்கப்படல் வேண்டும். கடவுள் பற்றும், நல்லொழுக்கமும், சமுதாய வளர்ச்சியில் நாட்டமும் ஊட்டத் தக்க கல்வியை ஏற்ற திட்டங்கொண்டு நடை முறைக்குக் கொண்டு வருதல் வேண்டும் என்று அவர் எழுதியுள்ளார். `பேச்சுத் தமிழே எழுத்துத் தமிழுக்கு அடிப்படை ஆதலால், நமது பேச்சுத் தமிழ் பெரும்பாலும் தூய தமிழ்ச் சொற்களைக் கொண்டதாக இருத்தல் வேண்டும். அப்பொழுது தான் நாம் எழுதும் தமிழ் நல்ல தமிழ் நடையில் இருக்கமுடியும் என்பது அவர் கருத்தாக இருந்தமையால், தம்மிடம் பயின்ற மாணவர்களை அவர் நல்ல தமிழில் பேசுமாறு வழிப்படுத்தினார். அதற்காகவே தாம் பணியாற்றிய பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் இருந்த மாணவர் மன்றங்களைச் செயலூக்கம் பெற வைத்தார். தமிழ் மன்றங்கள் இல்லாத கல்வி நிலையங்கள் அவற்றைப் பெறுமாறு செய்தார். பேச்சையும் எழுத்தையும் இளைஞர்கள் வளப்படுத்திக் கொள்ள உதவுமாறு `வழியும் வகையும் என்றொரு சிறு நூல் படைத்தளித்தார். எண்ணங்களை எப்படி உருவாக்கிக் கொள்வது, அந்த எண்ணங்களை வெளிப்படுத்த எத்தகு சொற்களைத் தேர்ந்து கொள்வது, அச்சொற்களை இணைத்துத் தொடர்களை எப்படி அமைப்பது, பின் அத்தொடர்களைக் கேட்டார்ப் பிணிக்கும் தகையனவாய் எங்ஙனம் அழகு படுத்துவது என்பன பற்றி நான்கு தலைப்புகளில் அமைந்த இந்நூல் இளைஞர் களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதுடன் இராசமாணிக்கனாரின் மொழி வழிச் சிந்தனைகளுக்கும் சிறந்த சான்றாக அமைந்தது. தமிழ்மொழியின் தொன்மை, பெருமை இவற்றைத் தமிழர்கள் அறிய வேண்டும் என்பதற்காகவே `தமிழ் மொழிச் செல்வம், `தமிழ் இனம், `தமிழர் வாழ்வு, `என்றுமுள தென்றமிழ், `புதிய தமிழகம் என்னும் அவருடைய நூல்கள் தமிழ் மக்களுக்கு அவர்கள் மறந்திருந்த மொழியின் பெருமையை, சிறப்பை அடையாளப்படுத்தின. `ஒரு மொழி பேசும் மக்கள் தம் மொழியின் பழைமைகளையும் பெருமையையும் வளர்ச்சியையும் நன்கு அறிந்தாற்றான், அம்மொழியினிடத்து ஆர்வமும் அதன் வளர்ச்சியில் கருத்தும் அம்மொழி பேசும் தம்மினத்தவர் மீது பற்றும் கொள்வர். இங்ஙனம் மொழியுணர்ச்சி கொள்ளும் மக்களிடையே தான் நாட்டுப்பற்றும் இனவுணர்ச்சியும் சிறந்து தோன்றும். ஆதலின், ஓரினத்தவர் இனவொற்றுமையோடு நல் வாழ்வு வாழ மொழிநூலறிவு உயிர்நாடி போன்ற தாகும். இம்மொழி நூலறிவு தற்காப்புக்காகவும், தம் வளர்ச்சிக்காகவும் வேண்டற்பாலது என்பதைத் தமிழ் மக்கள் அறிதல் நலமாகும் என்ற அவர் சிந்தனைகள் இந்நூல்கள் மக்களிடையே வேர் பிடிக்கச் செய்தன. தமிழ் மக்களுக்கு மொழிப் பற்றையும், மொழியறிவையும் ஊட்டிய அதே காலகட்டத்தில், அவர்களை நாட்டுப்பற்று உடையவர்களாகவும் மாற்றினார். தமிழ் நாட்டின் பெருமையை, வரலாற்றை இந்த நாட்டில் பிறந்த ஒவ்வொரு குடிமகனும் நன்கு அறிந்திருக்க வேண்டும் என்பதற்காகவே, `தமிழக ஆட்சி, `தமிழ்க் கலைகள், `தமிழர் நாகரிகமும் பண்பாடும், `தமிழக வரலாறு என்னும் நூல்களை எழுதி வெளியிட்டார். நாட்டுக்காக உழைத்த அறிஞர்களின் வரலாறுகளைச் சிறுசிறு நூல்களாக்கி இளைஞர்கள் அவற்றைப் படித்துய்ய வழிவகுத்தார். இளைஞர்கள் படித்தல், சிந்தித்தல், தெளிதல் எனும் மூன்று கோட்பாடுகளைக் கைக்கொண்டால் உயரலாம் என்பது அவர் வழிகாட்டலாக இருந்தது. மொழி, இனம், நாடு எனும் மூன்றையும் தமிழர்க்குத் தொடர்ந்து நினைவூட்டல் எழுதுவார், பேசுவார் கடமையென்று அவர் கருதியமையால் தமிழ் எழுத்தாளர்கள் எங்ஙனம் அமைதல் வேண்டுமென்பதற்குச் சில அடையாளங்களை முன்வைத்தார். `தாமாக எண்ணும் ஆற்றல் உள்ளவரும் உண்மையான தமிழ்ப்பற்று உடையவருமே நல்ல எழுத்தாளர். தமிழ் எழுத்தாளர் தமிழ் இலக்கண, இலக்கியங்களைப் படித்தவராக இருப்பது நல்லது. தாழ்ந்துள்ள தமிழ்ச் சமுதாயத்தை உயர்த்தப் பயன்படும் நூல்களை எழுதுவதையே எழுத்தாளர்கள் தங்கள் சிறந்த கடமையாகக் கருத வேண்டும். சமுதாயத்தில் இன்றுள்ள தீண்டாமை, பெண்ணடிமை, மூட நம்பிக்கைகள், கண்மூடித் தனமான பழக்கவழக்கங்கள் முதலிய பிற்போக்குத் தன்மைகளை வன்மையாகக் கண்டிக்கும் நெஞ்சுறுதி எழுத்தாளர்க்கு இருக்கவேண்டும் அத்தகைய எழுத்தாளர்கள், `தமிழர் என்ற அடிப்படையில் ஒன்று கூடுதல் வேண்டும் என்று அவர் விழைந்தார். அதனாலேயே மதுரையில் தியாகராசர் கல்லூரியில் பணியாற்றிய காலத்தில் மதுரை எழுத்தாளர் மன்றத்தை உருவாக்கி அது சிறந்த முறையில் இயங்குமாறு துணையிருந்தார். இம்மன்றத்தின் தலைவராக இருந்து மன்றத்தின் முதல் ஆண்டு விழாவில் அவர் ஆற்றிய உரை தமிழ் எழுத்தாளர் கடமைப் பற்றிய அவருடைய அறை கூவலாக அமைந்தது. `தமிழகத்தில் பல நூற்றாண்டுகளாக ஆட்சி மொழியாக இருந்த நமது தமிழ் பிற்காலத்தில் தனது அரியணையை இழந்தது; இப்பொழுது வளர்ந்து வருகின்றது. எழுத்தாளர்கள் இதனை மனத்தில் பதிய வைத்தல் வேண்டும் அதன் தூய்மையையும் பெருமையையும் தொடர்ந்து பாதுகாப்பதே தங்கள் கடமை என உணர்தல் வேண்டும். `மக்கள் பேசுவது போலவே எழுதவேண்டும் அதுதான் உயிர் உள்ள நடை என்று சொல்லிப் பாமர மக்கள் பேச்சு நடையையே எழுத்தாளர் பலர் எழுதி வருகின்றனர். பாமர மக்களது நடை பொதுமக்களுக்கு நன்கு தெரியும்; அதைத் தெரிந்து கொள்ள எழுத்தாளர் நூல்களை விலை கொடுத்து வாங்க வேண்டிய தேவை இல்லை அல்லவா? கொச்சை மொழி பேசும் மக்களுக்கு வாழ்க்கைக்குத் தேவையான படிப்பினைகளை ஊட்டுவதோடு, இனிய, எளிய, செந்தமிழ் நடையையும் அறிமுகம் செய்து வைப்பதுதான் எழுத்தாளரது கடமையாக இருத்தல் வேண்டும். எழுத்தாளர் தங்கள் எளிய, இனிய செந்தமிழ் நடைக்கு மக்களை அழைத்துச் செல்ல வேண்டுமே தவிர, மக்களுடைய பேச்சு நிலைக்குத் தங்களை இழித்துக் கொண்டு போவது முறையன்று. சிறந்த கருத்துக்களோடு பிழையற்ற எளிய நடையையும் பொதுமக்களுக்கு ஊட்டுவது எழுத்தாளர் கடமை என்பதை அவர்கள் மறந்து விடலாகாது. இதுவே அறநெறிப்பட்ட எழுத்தாளர் கடமை என்பதை நான் வற்புறுத்த விரும்புகிறேன். சாதிகள் ஒழிந்து சடங்குகள் அற்ற சமயம் நெறிப்படத் தமிழர், `தமிழ் வாழ்வு வாழ வேண்டுமென்பதில் அவர் கருத்தாக இருந்தார். அதனால் தான், வாழ்க்கையின் தொடக்க நிலையான திருமணம் தமிழ்த் திருமணமாக அமைய வேண்டுமென அவர் வற்புறுத்தினார். இதற்காகவே அவர் வெளியிட்ட `தமிழர் திருமண நூல், தமிழ்ப் பெரியார்களின் ஒருமித்த வரவேற்பையும் பாராட்டையும் பெற்றது. தமிழ் நாட்டளவில் அதற்கு முன்போ அல்லது பின்போ, ஏன் இதுநாள் வரையிலும் கூட வேறெந்தத் தமிழ் நூலும் இதுபோல் தமிழ்கூறும் நல்லுலகத்தின் ஒருமித்த அரவணைப்பைப் பெற்றதாக வரலாறு இல்லை. `எல்லோரும் வேலை செய்து பிழைக்கவேண்டும். பிச்சை எடுப்பவரே நாட்டில் இருக்கக் கூடாது `வலியவர் மெலியவரை ஆதரித்தால் நாட்டில் அமைதியும் இன்பமும் பெருகும் என்று கூறும் இராசமாணிக்கனார், `கல்வி மட்டுமே ஒருவரைப் பண்படுத்துவதில்லை. ஒழுக்கம் வேண்டும். எல்லோரும் ஒழுக்கத்திற்கு மதிப்பைத் தரவேண்டும். ஒழுக்கம் உயிரினும் சிறந்தது. ஒழுக்கத்தோடு உறையும் கல்விதான் மனிதனை உயர்விக்கும் என்று தெளிவுபடுத்தியுள்ளார். மொழி, இனம், நாடு, கல்வி, சமயம், மக்கள் நலம், கோயில்கள் எனப் பலவும் கருதிப் பார்த்துத் தமிழ் மொழி சிறக்க, தமிழினம் உயர, தமிழ்நாடு வளம்பெறப் பயனுறு சிந்தனை விதைகளைத் தம் வாழ்நாள் அநுபவ அறுவடையின் பயனாய் இந்த மண்ணில் விதைத்த இராசமாணிக்கனார், `உண்மை பேசுதல், உழைத்து வாழுதல், முயற்சியுடைமை, அறிவை வளர்த்தல், நேர்மையாக நடத்தல், பிறர்க்குத் தீங்கு செய்யாமை முதலியன நேரிய வாழ்க்கைக்குரிய கொள்கைகளாம் என்று தாம் கூறியதற்கு ஏற்ப வாழ்ந்த நூற்றாண்டு மனிதர். மறுபிறப்பு நேர்ந்தால், `மீண்டும் தமிழகத்தே பிறக்க வேண்டும் என்று அவாவிக் கட்டுரைத்த தமிழ்மண் பற்றாளர். `mtiu KGikahf¥ gl«ão¤J¡ fh£L« ü‰gh toÉyhd xUtÇ brhšy£Lkh? எனக் கேட்கும் அவரது கெழுதகை நண்பர் வல்லை பாலசுப்பிரமணியம் சொல்கிறார்: `இராசமாணிக்கனார் மதியால் வித்தகர்; மனத்தால் உத்தமர், `மனிதரில் தலையாய மனிதரே எனும் அப்பர் பெருமானின் திருப்பூவணப்பதிகத் தொடர் இப்பெருந்தகையைக் கருத்தில் கொண்டே அமைந்தது போலும்! டாக்டர் இரா. கலைக்கோவன் உள்ளுரை எண் பக்கம் 1. பழைய தமிழ் நாடு 15 2. சங்க காலச் சோழர் 22 3. இடைக்காலச் சோழர் 25 4. இராஜராஜ சோழன் 28 5. இராஜேந்திரன் - இளமைப் பருவம் 33 6. இராஜேந்திரன் - இளவரசன் 38 7. கங்கை கொண்ட சோழன் 48 8. கங்கை கொண்ட சோழபுரம் 54 9. கடாரம் கொண்ட சோழன் 62 10. அரசியல் 65 இராஜேந்திர சோழன் (கி. பி. 1012-1044) 1. பழைய தமிழ் நாடு தமிழ் நாட்டு எல்லைகள் பழைய தமிழ் நாட்டுக்கு வட எல்லை வேங்கட (திருப்பதி) மலை; தெற்கு எல்லை கன்னியாகுமரி; கிழக்கு எல்லை வங்கக்கடல்; மேற்கு எல்லை அரபிக் கடல். இந்த நான்கு எல்லைகட்கு உட்பட்ட நிலத்தில் பேசப்பட்ட மொழி தமிழ். இஃது இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன் இருந்த நிலைமை. தமிழ் நாட்டு இயற்கை அமைப்பு இத் தமிழ் நாட்டில் கிழக்குத் தொடர்ச்சி மலைகளையும் காணலாம்; மேற்குத் தொடர்ச்சி மலைகளையும் காணலாம். இங்குப் பாலாறு, தென் பெண்ணை, காவிரி, கொள்ளிடம், வையை, தாமிர பரணி என்னும் பெரிய ஆறுகள் மேற்கில் இருந்து கிழக்கு நோக்கிப் பாய்கின்றன. இவை வங்கக் கடலில் கலக்கின்றன. கிழக்கில் தோன்றி மேற்கு நோக்கிப் பாய்ந்து அரபிக் கடலில் கலக்கும் ஆறுகள் சில. அவற்றில் பெரியாறு என்பது முக்கியமானது. தென்மேற்குப் பருவக் காற்றும் வடகிழக்குப் பருவக் காற்றும் இந்நாட்டில் மழையை உண்டாக்கும். இந்நாடு மேற்கிலிருந்து கிழக்கே போகப் போகச் சரிவாகச் செல்லும் நிலப்பாங்கினை உடையது. கிழக்குத் தொடர்ச்சி மலைகட்குக் கிழக்கே கடல் வரையிலும் நல்ல சமவெளி அமைந்து இருக்கிறது. இவ்வாறே மேற்குத் தொடர்ச்சி மலைகட்கு மேற்கே அரபிக்கடல் வரை செழிப்பான சமவெளி அமைந்துள்ளது. தமிழ் நாடு வடக்கே அகன்றும் தெற்கே போகப் போகக் குறுகியும் உள்ள நில அமைப்பை உடையது. தமிழ் நாட்டுப் பிரிவுகள் இத் தமிழ் நாடு மிகப் பழைய காலத்திலிருந்து பல நாடுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. அவை தொண்டை நாடு, நடுநாடு, சோழ நாடு, பாண்டிய நாடு, கொங்கு நாடு, சேர நாடு என்பன. இப்பெரிய நாடுகளில் சிற்றரசுகளும் உண்டு. அவ்வரசுகள் பெரிய நாட்டிற்கு அடங்கி இருந்தமையும் உண்டு; அடங்காமல் இருந்தமையும் உண்டு. தொண்டை நாடு இது வடக்கே திருப்பதியை எல்லையாக உடையது. இதன் தெற்கு எல்லை தென் பெண்ணை, மேற்கு எல்லை கொங்கு நாடு; கிழக்கு எல்லை வங்காள விரிகுடா. இங்குப் பாயும் பெரிய ஆறுகள் பாலாறும் தென்பெண்ணையும் ஆகும். இந்த நாட்டில் மலைகளும் காடுகளும் நிறைந்துள்ளன. திருப்பதி, காளத்தி, திருத்தணிகை, செங்கற்பட்டு, போளூர், வேலூர் முதலிய இடங்களில் தனி மலைகளையும் சில இடங்களில் தொடர் மலைகளையும் காணலாம். ஆலங்காடு, வேர்க்காடு முதலிய பெயர்களால், இந்நாடு காடுகள் மிகுந்திருந்த இடம் என்பதை அறியலாம். இந்நாடு ஏரிப் பாய்ச்சலையே மிகுதியாக உடையது; அதனால் சிறந்த வயல்வளம் பெற்றதன்று. இங்கு ஆடுமாடுகளை மேய்த்துக்கொண்டு குறும்பர் என்ற வகுப்பினர் வாழ்ந்திருந்தனர். அவர்கள் தங்கள் நன்மைக்காக இந்நாட்டை இருபத்து நான்கு பிரிவுகளாகப் பிரித்துக்கொண்டார்கள். ஒவ்வொரு பிரிவும் கோட்டம் எனப்பட்டது. நகரங்கள் தொண்டை நாட்டுத் துறைமுக நகரங்களிற் சிறந்தவை மல்லை (மஹாபலிபுரம்), மரக்காணம் என்பன. காஞ்சி சிறந்த உள்நாட்டு நகரம். அங்குக் கி. பி. இரண்டாம் நூற்றாண்டில் பௌத்தர், சமணர், சைவர், வைணவர் முதலிய பல மதத்தினர் வாழ்ந்தனர். வடமொழி, பாலிமொழி, தமிழ் மொழி ஆகிய மூன்றும் அங்குச் சிறந்து இருந்தன. அந் நகரம் கல்வியில் இணையற்று இருந்தது. காஞ்சியில் பல சமயத்தினர் இருந்தனர். ஆதலால் அவர்கட்கு உரிய கோவில்களும் இருந்தன. அரசாட்சி தொண்டை நாட்டில் இருந்த குறும்பரை ஒடுக்கித் `திரையர் என்பவர் தொண்டை நாட்டை ஆண்டனர். அந்நாட்டின் வட பகுதியைத் `திரையன் என்பவனும், தென் பகுதியை `இளந் திரையன் என்பவனும் அரசாண்டனர். ஏறத்தாழக் கி. பி. முதல் நூற்றாண்டில் தொண்டை நாட்டைச் சோழர் கைப்பற்றிக்கொண்டனர். நடு நாடு இது வடக்கே தென் பெண்ணையாற்றை எல்லையாக உடையது. இதன் தென் எல்லை சிதம்பரத்திற்கு வடக்கே ஓடும் வெள்ளாறு; கிழக்கு எல்லை வங்காள விரிகுடா; மேற்கு எல்லை கொங்கு நாடு. இந் நாட்டிலும் மலைகள் உண்டு. இதனில் தென் பெண்ணை, கெடிலம், வெள்ளாறு என்னும் ஆறுகள் பாய்கின்றன. பழைய காலத்தில் ஓரளவு காடுகளும் இருந்தன என்பது தெரிகிறது. நிலம் ஆற்றுப் பாய்ச்சலை உடையது. அங்கங்கே ஏரிகளும் உண்டு. இந்நாடு தொண்டை நாட்டைவிட வளமுடையது. இந்த நாட்டில் முக்கியமான பகுதி மலையமான் நாடு என்பது. அதன் தலை நகரம் திருக்கோவலூர். அது தென் பெண்ணை ஆற்றங்கரை மீது இருப்பது. மலையமான் நாட்டை `மலையமான்கள் எனப்பட்ட அரசர்கள் ஆண்டுவந்தார்கள். அவர்கள் சிறந்த போர் வீரர்கள்; தருமம் செய்வதில் பெயர் பெற்றவர்கள். நடு நாட்டின் சிறந்த துறைமுகம் பொதுசா (புதுச்சேரி) என்பது. சோழ நாடு இந்நாடு சிதம்பரத்திற்கு வடக்கே உள்ள வெள்ளாறு முதல் மதுரைக்கு வடக்கே உள்ள வெள்ளாறு வரை இருக்கும் நிலப்பகுதி. அஃதாவது இன்றைய தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி ஜில்லாக்களையும் தென் ஆர்க்காடு ஜில்லாவில் ஒரு பகுதியும் கொண்டது. இந்த நாட்டில் வெள்ளாறு, கொள்ளிடம், காவிரி, அதன் கிளை ஆறுகள் என்பன பாய்கின்றன. இங்கு ஒன்றிரண்டு குன்றுகள் தவிர நிலம் ஒரே சமவெளியாக இருக்கின்றது. காவிரியின் கிளையாறுகளாகிய வடவாறு, வெண்ணாறு, வெட்டாறு, அரிசிலாறு, முடிகொண்டான் ஆறு, வீரசோழன் ஆறு முதலியன இந்நாட்டில் பாய்கின்றன. இவ்வாறு பல யாறுகள் பாய்வதால் இச் சோழநாடு நீர் வளம் பெற்று, அதனால் நில வளமும் பெற்றிருக்கிறது. இதனால் இந்நாட்டில் சோற்றுக்குப் பஞ்சம் இல்லை. `சோழ வள நாடு சோறுடைத்து என்று புலவர் இதனைப் பாராட்டிப் பாடியுள்ளனர். நகரங்கள் இந்நாட்டிற்குத் தலைநகரம் உறையூர்; காவிரிப்பூம்பட்டினம் தலைநகரமாகவும் துறைமுக நகரமாகவும் இருந்தது. நாகப்பட்டினம் ஒரு துறைமுக நகரம். குடந்தை (கும்பகோணம்) பழைய நகரம். காவிரிப்பூம் பட்டினம் சிறந்த துறைமுக நரகமாகும். அங்கு அயல் நாட்டுக் கப்பல்கள் வெளிநாட்டுப் பொருள்களைக் கொண்டுவந்து இறக்கின; உள்நாட்டுப் பண்டப் பொதிகளை ஏற்றிக்கொண்டு அயல் நாடுகட்கு எடுத்துச் சென்றன. அந்நகரில் அயல் நாட்டு வணிகர் தங்கி வாணிகம் செய்தனர். அரசியல் வளம் மிகுந்த இச் சோழ நாட்டை ஆண்டு வந்தவர் சோழர் எனப்பட்டனர். அவர்கள் குடிகளை அன்பொடு காப்பாற்றி வந்தனர். அவர்கள் ஆறுகளிலிருந்து கால்வாய்களை வெட்டினர்; ஆறுகளில் அணைகளைக் கட்டினர்; வயல்களில் தாராளமாக நீர் பாய வசதி செய்தனர். இவ்வாறு நாட்டை `வளம் செய்ததால், சோழர் `வளவர் எனப்பட்டனர். சோழர் அடையாள மாலை ஆர் (ஆத்திப் பூ மாலை); அரசியல் முத்திரை புலி. பாண்டிய நாடு இது மதுரைக்கு வடக்கேயுள்ள வெள்ளாற்றை வட எல்லையாக உடையது; கன்னியாகுமரியைத் தென் எல்லையாக உடையது. இதன் கிழக்கு எல்லை வங்கக் கடல்; மேற்கு எல்லை திருவாங்கூர்ச் சீமை. இந் நாட்டில் தனிக் குன்றுகளும் தொடர் மலைகளும் பலவாகும். குற்றால நீர் வீழ்ச்சி, பாபநாச நீர் வீழ்ச்சிகளை அளிக்கும் மலைத் தொடர்கள் இங்குத்தான் இருக்கின்றன. இந்நாட்டில் மலை வளம், காட்டுவளம், வயல்வளம், கடற்கரை வளம் எனப்பட்ட நால்வகை நிலவளங்களும் பொருந்தியிருக்கின்றன. வையை, தாமிரபரணி என்பன குறிப்பிடத் தக்க பெரிய ஆறுகள். நகரங்கள் மதுரை என்பது இந்நாட்டின் தலை நகரம். கொற்கை என்பது சிறந்த துறைமுகப் பட்டினம். கொற்கை முத்து எடுக்கும் துறைமுக நகரம். கொற்கையிலிருந்து கப்பல்கள் இலங்கைக்கும் கிழக்கு இந்தியத் தீவுகட்கும் சரக்குகளை ஏற்றிச் சென்றன. கீழ் நாட்டுச் சரக்குகள் கொற்கையில் இறக்குமதி ஆயின. அரசாட்சி இந்த நாட்டை ஆண்டவர் பாண்டியர். அவர்கள் தம்முயிரைப்போல் முன்னுயிரைக் காத்த பெருமக்கள். அவர்கள் நமது தாய் மொழியாகிய தமிழைத் தம் உயிராகக் கருதி வளர்த்தார்கள்; தமிழில் வல்ல புலவர்களை மதுரையில் கூட்டினார்கள்; ஒரு சங்கத்தை ஏற்படுத்தினார்கள். அங்கு இருந்த புலவர்கட்குச் சங்கப் புலவர் என்பது பெயர். பாண்டியர் அப்புலவர்களைக் கொண்டு பல தமிழ் நூல்களைப் பாடுவித்தனர்; வெளிப் புலவர் நூல்களைப் பரிசோதித்தனர்; ஏற்றவற்றை எடுத்துக்கொண்டுஆதரித்தனர். இங்ஙனம் பாண்டியர் தமிழை வளர்த்ததால் அவர் நாடு `தமிழ் நாடு என்று சிறப்புப் பெயர் பெற்றது. கொங்கு நாடு இது நீலகிரி, கோயமுத்தூர், சேலம் என்னும் ஜில்லாக்கள் அடங்கிய நிலப் பகுதி. இது முழுவதும் மலைநாடு. இங்கு மலைத்தேன் மிகுதியாகக் கிடைக்கும்; பொன்னும் மிகுதியாகக் கிடைத்தது. இவற்றால் இந்நாடு கொங்கு நாடு (தேன் நாடு, பொன் நாடு) எனப் பெயர் பெற்றது. இந்நாட்டில் ஜவ்வாது மலைத்தொடர், ஏல மலைத்தொடர், கொல்லி மலைத்தொடர் முதலியன கண்ணுக்கு இனிய காட்சியைக் கொடுப்பன. கொங்கு நாடு, சோழ நாட்டைவிட மேட்டுப் பாங்கான நில அமைப்பை உடையது. சிற்றரசுகள் இந்நாடு பல சிறு நாடுகளாக இருந்தது. கொல்லிமலைப் பகுதியை ஒருவகைச் சிற்றரசர் ஆண்டுவந்தனர். தகடூரைத் தலைநகராகக் கொண்டு, அதனைச் சுற்றி இருந்த நிலப்பகுதியை அதியமான்கள் என்ற சிற்றரசர் அரசாண்டனர். கோயமுத்தூர் ஜில்லாவில் உடுமலைப்பேட்டைத்தாலுகாவில் உள்ள முதிரமலை நாட்டைக் குமணன் வம்சத்தார் அரசாண்டனர். இக் கொங்கு நாடு தொட்டை-சோழ-பாண்டிய-சேர நாடுகட்கு இடையில் அமைந்திருப்பது. இதனால் இது போர்கள் பலவற்றுக்கு இடமாக இருந்தது. இந்நாடு ஒருசமயம் சேரர் ஆட்சிக்கு உட்பட்டு இருக்கும்; மற்றொரு சமயம் பாண்டியர்க்கு உட்பட்டு இருக்கும்; பிறிதொரு சமயம் சோழர்க்கு அடங்கி இருக்கும். சேர நாடு இந்நாடு மலையாள ஜில்லாவையும், கொச்சி-திருவாங்கூர் என்னும் நாடுகளையும் தன் அகத்தே பெற்றது. இதன் வடஎல்லை கன்னட நாடு; கிழக்கு எல்லை சோழ, பாண்டிய நாடுகள்; தெற்கு எல்லை இந்துப் பெருங்கடல்; மேற்கு எல்லை அரபிக் கடல். இது மேற்குத் தொடர்ச்சி மலைகட்கும் அரபிக் கடலுக்கும் இடைப்பட்ட நிலப் பகுதி. இந் நாட்டில் மலைவளம் மிகுதியாகும். இங்குள்ள மலைக் காடுகளில் சந்தனம், அகில், தேக்கு முதலிய உயர்ந்த மரவகைகள் பயிராகின்றன. யானை, புலி முதலிய காட்டு விலங்குகள் மிகுதியாக உண்டு. இந்நாடு தென்மேற்குப் பருவக்காற்றுக்கு இலக்கானது. இங்கு எப்பொழுதும் மழை பெய்யும்; நாடு வளமுடையது. இங்குப் பாய்கின்ற ஆறுகளில் மிகப் பெரியது பெரியாறு என்பது. நகரங்கள் கடலொடு கலக்கும் இடத்தில்தான் சேரநாட்டுத் தலைநகரம் இருந்தது. அதன் பெயர் வஞ்சிமா நகரம் என்பது. அதற்கு அருகில் முசிறி என்ற துறைமுக நகரம் இருந்தது. அதற்கும் வடக்கே தொண்டி என்ற மற்றொரு துறைமுக நகரம் இருந்தது. இந்த இரண்டு துறைமுக நகரங்களும் எகிப்து, கிரீ, இட்டாலி, அரேபியா, பாரசீகம் முதலிய நாடுகளுடன் கடல் வாணிகம் செய்துவந்தன. அம் மேல்நாடுகளில் இருந்து கண்ணாடிப் பொருள்களும் யந்திரப் பொறிகளும் மது வகைகளும் இறக்குமதி ஆயின; சேரநாட்டுப் பொருள்களான மிளகு, சந்தனக் கட்டைகள், வாசனைப் பொருள்கள், தேங்காய், மயில் இறகு, யானைத் தந்தம் முதலியன ஏற்றுமதியாயின. பழைய காலத்தில் இத்துறை முகங்களை மேல்நாட்டு மக்கள் நன்கு அறிந்திருந்தார்கள். அரசாட்சி சேரநாட்டை ஆண்டவர் சேரர் எனப்பட்டனர். அவர்கள் மலைநாட்டினர் ஆதலின், `மேட்டு நிலத்தார், மேல் இடத்தில் இருப்பவர் என்னும் பொருள்பட `வாணவர் எனப்பட்டனர். சுமார் ஆயிரத்து எண்ணூறு ஆண்டுகட்குமுன் இருந்த சேர வேந்தர் சிறந்த போர்வீரராவர்; பல நாடுகளை வென்றவர்; பெரும் படைகளை வைத்திருந்தவர்; தமிழ் மொழியை நன்கு ஆதரித்து வளர்த்தவர். கோவலன் வரலாறு கூறும் சிலப்பதிகாரம் என்னும் தமிழ்க் காவியம் செய்தவர் யார்? சேர இளவரசர் ஆன இளங்கோ அடிகள் என்பவர் அல்லவா? 2. சங்க காலச் சோழர் சங்க காலச் சோழர் சங்கத்தின் கடைசிக்காலம் ஏறத்தாழக் கி. பி. 300என்னலாம். ஆதலால் சங்க நூல்களில் குறிக்கப்படும் சோழர் கி. பி. 300-க்கு முற்பட்டவர் ஆவர். சங்க காலத்தில் சோழர் பலர் சோழநாட்டை ஆண்டுவந்தனர். அவர்களுள் கரிகாலன் என்பவனே மிக்க புகழ் பெற்றவன். `கரிகாலன் வரலாறு கரிகாலன் பட்டத்திற்கு வந்தபொழுது வயதிற் சிறியவனாக இருந்தான். அவன் அரசன் ஆகாதவாறு அவனுடைய பங்காளிகள் இடையூறு செய்தனர்; அவனைப் பிடித்துச் சிறையில் அடைத்தனர்; அச் சிறைக்கூடத்திற்குத் தீயிட்டனர். கரிகாலன் வயதிற் சிறியவன்; ஆயினும் அஞ்சா நெஞ்சம் படைத்தவன். அதனால் அவன் தான் இருந்த சிறைக்கூடம் எரிந்தபொழுது கவலைப்படவில்லை. அவன் அதன் சுவர்மீது ஏறி நெருப்புச் சுவாலையின் நடுவே வெளியிற் குதித்தான்; தன் பங்காளிகள் கண்ணிற்படாமல் ஓடி ஒளிந்தான். அவன் சிறையிலிருந்து தப்பியபொழுது அவனது கால் கரிந்துவிட்டது. அதனால் அவன் `கரிகாலன் எனப் பெயர் பெற்றான். அரசன் ஆனமை குடிகள் கரிகாலனே தங்கள் அரசனாக இருத்தல் வேண்டும் என்று கிளர்ச்சி செய்தனர். அரசனைத் தேர்ந்து எடுக்கப் பட்டத்து யானையை அனுப்புதல். அக்கால வழக்கம். அது தன் துதிக்கையில் மாலை ஒன்றை எடுத்துச் செல்லும்; அரச பட்டத்திற்குத் தக்கவன் கிடைத்ததும் அவன் கழுத்தில் அம் மாலையைப் போடும்; அவனைத் தன் முகுகில் தூக்கி உட்காரவைத்துக்கொண்டு தலைநகரம் மீளும். உடனே பெருமக்கள் யானையால் தேர்ந்தெடுக்கப்பட்டவனை அரசன் ஆக்குவர். இது தமிழ் நாட்டுப் பழைய வழக்கமாகும். குடிகள் கிளர்ச்சி செய்தவுடனே அமைச்சரும் பெருமக்களும் பட்டத்து யானையை ஏவினர். அது பல இடங்களில் சுற்றித் திரிந்தது; முடிவில் கரிகாலனைக் கண்டது; அவன் கழுத்தில் மாலையப் போட்டது; அவனைத் தன்மீது சுமந்து வந்தது. உடனே குடிகள் உள்ளம் குளிர்ந்தது. கரிகாலன் அரசனாக முடிசூட்டப்பட்டான். போர்கள் கரிகாலன் சிறந்த போர்வீரன். அவன் வில், வாள், வேல் முதலிய போர்க்கருவிகளைக் கையாள்வதில் சமர்த்தன். அவன் சோழ அரசன் ஆனதும் தனது நாட்டை விரிவாக்க விரும்பினான்; அதனால் யானைப்படை, குதிரைப்படை, தேர்ப்படை, காலாட்படை என்னும் நால்வகைப் படைகளையும் சிறந்த முறையில் தயாரித்தான்; முதலில் தன் நாட்டில் இருந்த தன் பங்காளிகளை ஒழித்துச் சோழ நாட்டைப் பலப்படுத்தினான்; பிறகு நடு நாட்டைக் கைப்பற்றினான்; அதற்கு அப்பால் இருபத்து நான்கு கோட்டங்களைக் கொண்ட தொண்டை நாட்டைப் பிடித்தான்; அந்நாட்டில் நிறைந்திருந்த காடுகளை அழித்தான்; நாற்பத்து எண்ணாயிரம் வேளாளரைக் குடியேற்றினான்; இங்ஙனம் கரிகாலன் தொண்டை நாட்டை வளப்படுத்தினான்; காஞ்சி-ஏகம்பநாதர் கோவிலைப் புதுப்பித்தான். அதனால் அவனது உருவச் சிலை அக் கோவிலில் வைக்கப்பட்டிருக்கிறது. கரிகால் பெருவளத்தான் கரிகாலன் காவிரியாற்றுக்கு இருந்த கரைகளைப் பலப்படுத்த எண்ணினான்; தான் பல போர்களில் பிடித்த ஆட்களைக் கொண்டு அவ்வேலையைச் செய்வித்தான்; பல வாய்க்கால்களை வெட்டுவித்தான். அவன் காலத்தில் சோழநாடு கடல் வாணிகத்தில் சிறந்து இருந்தது. காவிரிப்பூம்பட்டினம் புகழ் பெற்ற துறைமுக நகரமாக இருந்தது. இவ்வாறு கரிகாலன் பல வழிகளில் தன் நாட்டை வளப்படுத்தினான்; அதனால் `கரிகாற் பெருவளத்தான் என்று குடிகளால் பாராட்டப்பட்டான். சிறந்த நீதிபதி ஒருநாள் கரிகாலனிடம் ஒரு வழக்குக் கொண்டு வரப்பட்டது. அவனது சிறுவயதினை எண்ணி, `இவன் தக்கபடி வழக்கை விசாரித்து நீதி வழங்குவானோ? என்று வழக்காளிகள் ஐயம் கொண்டனர். அதனைக் குறிப்பால் அறிந்த கரிகாலன் கிழவனைப் போல வேடம் பூண்டான்; அவர்கள் வழக்கை விசாரித்து யாவரும் மகிழ நீதி வழங்கினான். கரிகாலன் மரபினர் சங்க கால அரசனாகிய கரிகாலன் புகழ், அவனுக்கு ஆயிரம் ஆண்டுகட்குப் பின்னும் இத் தமிழ் நாட்டில் பரவி இருந்தது. ஆந்திர நாட்டிலும் கன்னட நாட்டிலும் தமிழ் நாட்டிலும் இருந்த அரச மரபினர் பலர் `நாங்கள் கரிகாலன் மரபில் வந்தவர் என்று பெருமை பேசிக்கொண்டனர். அவ்வாறு பெருமை பேசிக்கொண்ட பிற்காலச் சோழ மன்னருள் நமது நூலின் தலைவனான இராஜேந்திர சோழன் ஒருவன் ஆவன். 3. இடைக்காலச் சோழர் அரசியல் குழப்பம் சங்க காலத்திற்குப் பிறகு தமிழ் நாட்டு அரசியலில் மாறுதல் ஏற்பட்டது. தொண்டை நாட்டைப் பல்லவர் என்ற அரசமரபினர் கைப்பற்றிக்கொண்டனர். களப்பிரர் என்ற மரபினர் சோழ நாட்டையும் பாண்டிய நாட்டையும் கைக்கொண்டனர். அதனால் சோழ-பாண்டியர் அரசு இழந்து தவித்தனர். முந்நூறு வருடங்கட்கு (கி. பி. 600-க்கு)ப் பிறகு பாண்டியர் சுய ஆட்சி பெற்றனர். ஆனால் பல்லவர் தொண்டை நாட்டுடன் சோழ நாட்டையும் கைப்பற்றி ஆளத் தொடங்கினர். அதனால் சோழர் கி. பி. 900-வரை சுய ஆட்சி பெற முடியவில்லை. இருண்ட காலம் கி. பி. 300-க்குப் பிறகு கி. பி. 900-வரை அஃதாவது அறுநூறு வருடகாலம் சோழர் பல்லவர்க்கு அடங்கிய சிற்றரசராக இருந்தனர். அவர்கள் உறையூர், கும்பகோணம், திருவாரூர் என்னும் மூன்று ஊர்களில் இருந்து மிகச் சிறிய நாட்டை ஆண்டுவந்தனர். இந்த அறுநூறு வருடகாலம் வாழ்ந்திருந்த சோழர் `இவர், இவர் என்று முறையாகக் கூறத்தக்க சான்று இல்லை. தேவாரப் பாடல்கள், பெரிய புராணம், வைணவ நூல்கள், களவழி நாற்பது முதலிய நூல்களில் சோழ அரசர் பெயர்கள் சில காணப்படுகின்றன. இந்த இடைக்காலச் சோழ அரசர்களில் புகழ் பெற்றவன் கோச்செங்கண் சோழன் என்பவன். கோச் செங்கணான் இவன் சிவந்த கண்களை உடையவன்; அதனால் `செங்கணான் எனப் பெயர் பெற்றான். இவன் சிதம்பரத்தில் நடராஜப் பெருமான் அருளால் பிறந்தவன். இவன் சிறந்த போர் வீரன்; தன்னை எதிர்த்த சேர வேந்தரைப் போரில் வென்றவன்; நால்வகைப் படைகளையும் திரட்டிப் பல்லவரையும் களப்பிரரையும் பல போர்களில் வென்றவன். இவன் சோழநாட்டை வெற்றியுடன் ஆண்டவன். இவன் கையில் பிடித்திருந்த வாள், `தெய்வவாள் என்று திருமங்கை ஆழ்வார் கூறியுள்ளார். இவனுக்குப் பின் சோழநாடு பல்லவர் கைப்பட்டுவிட்டது. சிறந்த பக்தன் கோச் செங்கணான் நடராஜர் அருளால் பிறந்தவன் ஆதலால் சிறந்த சிவ பக்தனாக விளங்கினான். இவன் எழுபதுக்கு மேற்பட்ட சிவன் கோவில்களைத் தன் நாட்டில் கட்டினான். இவ்வரசன் வேதத்தில் வல்ல மறையவரைச் சிதம்பரத்தில் குடியேற்றினான்; அவர்களுக்கு மாளிகைகளைக் கட்டிக்கொடுத்தான்; நிலங்களை மானியமாக விட்டான். இவன் வைணவ சமயத்தை மதித்து நடந்து வந்தான். அதனாற்றான் இவனை வைணவ பக்தராகிய திருமங்கை ஆழ்வார் புகழ்ந்து பாடியிருக்கிறார். இவனைச் சிறந்த சிவபக்தன் என்று திருநாவுக்கரசர், திருஞான சம்பந்தர், சுந்தரர் முதலிய சைவப் பெரியார்கள் பாராட்டி இருக்கிறார்கள். இவனை `எங்கள் சோழர்மரபில் வாழ்ந்த பெரியோன் என்று நமது இராஜேந்திர சோழன் பாராட்டினான் என்றால், இவனது பெருமையை என்னென்பது! பிற்காலச் சோழர் ஏறக்குறையக் கி. பி. 900-ல் பல்லவ அரசனை ஒடுக்கிச் சோழ அரசினை ஓங்கச் செய்தவன் ஆதித்த சோழன் என்பவன். அவன் போரில் புறங்கொடா வீரன்; அஞ்சா நெஞ்சினன்; தன் முன்னோரை அழித்துத் தன் நாட்டைக் கவர்ந்து கொண்ட பல்லவரைப் பழிக்குப் பழி வாங்கினவன். அவன் சோழ நாட்டைப் பல்லவர் கையிலிருந்து மீட்டதோடு தொண்டை நாட்டையும் கைப்பற்றினான். அதனால் அவன் காலத்தில் சோழர் ஆட்சி கரிகாலன் ஆட்சியைப் போலப் பரவி இருந்தது. ஆதித்த சோழன் சிறந்த சிவபக்தன். அவன் காவிரியின் இருகரைகளிலும் இருந்த சிவன் கோவில்களைப் புதுப்பித்தான். இங்ஙனம் அறுநூறு ஆண்டுகட்கு முன் இருந்த சோழப் பெருநாட்டை மீண்டும் ஏற்படுத்திய ஆதித்த சோழனும் அவன் மரபினரும் `பிற்காலச் சோழர் எனப்பட்டனர். இப் பிற்காலச் சோழருள் மிகச் சிறந்தவன் இராஜராஜன்; அவனுக்குப் பிறந்த பெருவீரனே நமது இராஜேந்திர சோழன். 4. இராஜராஜ சோழன் இளமைப் பருவம் இராஜேந்திரனுக்குத் தந்தையான இராஜராஜன் காலம் முதலே சோழர் வரலாறு சிறப்புற்றது. இவன் சிறந்த போர் வீரன்; தமிழ் அறிஞன்; மிகச் சிறந்த அரசியல் நிபுணன்; பக்திமான். இவன் பாட்டனார் கண்டராதித்தர் என்பவர் சிறந்த சிவபக்தர். அவர் மனைவியார் செம்பியன் மாதேவியார் சைவ சமயத்துக்குத் தாய்போன்றவர். அவர் தமது சொத்து முழுவதையும் சிவ தருமத்திலேயே செலவிட்டார். அத்தகைய அம்மையாரால் வளர்க்கப்பட்டவன் இராஜராஜன். அதனால் இவன் இளமைப் பருவம் முதலே சைவ மதத்தில் மிகவும் பற்றுடையவனாக இருந்தான். போர்கள் இராஜராஜன் தனது ஆட்சியைத் தென் இந்தியா முழுவதிலும் பரவச்செய்ய விரும்பினான்; அதனால் ஆயிரக்கணக்கானவர்க்குப் போர்ப் பயிற்சி அளித்தான்; கடற்படையைப் பெருக்கினான், இவனிடம் யானைப்படை, தேர்ப்படை, குதிரைப்படை, காலாட்படைகள் நிரம்ப இருந்தன. இராஜராஜன் அப்படைகளைக் கொண்டு கிருஷ்ணையாறு முதல் கன்னியாகுமரி வரையுள்ள நாட்டை வென்றான்; தனக்கு அடங்கிக் கப்பம் கட்டுமாறு பலரை ஏற்படுத்தினான். தெலுங்கு அரசர்கள், பாண்டியர், சேரர், கன்னடர், கொங்கு நாட்டார் முதலியவர் இவனுக்கு அடங்கிய அரசர் ஆயினர். இப்பேரரசன் கிருஷ்ணைக்கும் கோதாவரிக்கும் இடைப்பட்ட வேங்கை நாட்டை வென்றான்; அந்நாட்டு இளவரசனுக்குத் தன் மகளை மணம்செய்து கொடுத்தான்; இந்தப் புதிய மண வுறவினால் இவனது செல்வாக்குக் கோதாவரி யாறுவரை பரவி விட்டது. இதனைப் பற்றிய விவரம் ஆறாம் பகுதியிற் காண்போம். இவன் தன் பலம் மிகுந்த கடற்படையின் உதவிகொண்டு இலங்கைத் தீவைக் கைப்பற்றினான்; அங்குத் தன் பெயரால் சிவன் கோவில் ஒன்றைக் கட்டினான்; இந்தியாவுக்குத் தென் மேற்கில் இருந்த மாலத்தீவுகளை வென்றான். இவ்வாறு இலங்கைக்கு அப்பாலும் சென்று நாடுகளைக் கடற்படை வலிகொண்டு கைப்பற்றிய முதற்சோழன் இராஜராஜனே ஆவான். இவனைப் பின்பற்றியே இவன் செல்வ மைந்தனான நமது இராஜேந்திரன் கடல் கடந்த நாடுகளை வென்றான். அந்த விவரத்தை அடுத்துவரும் பகுதிகளிற் படிக்கலாம். ஜயங்கொண்ட சோழன் இங்ஙனம் இராஜராஜன் சென்ற இடம் எல்லாம் `ஜயம் பெற்றான்; ஆதலால், `ஜயங்கொண்ட சோழன் என்று பெயர் பெற்றான். இவன் திருச்சிராப்பள்ளி ஜில்லாவில் `ஜயங்கொண்ட சோழபுரம் என்று தன் பெயரால் ஒரு நகரத்தை உண்டாக்கினான்; தான் வென்ற தொண்டை மண்டலத்திற்கு `ஜயங்கொண்ட சோழ மண்டலம் என்று புதுப்பெயர் இட்டான் அரசியல் இராஜராஜன் தான் வென்ற நாடு முழுவதையும் அளப்பித்தான்; இந்த வேலை இவனுக்கு முன் இருந்தவர் எவரும் செய்யாததாகும். இப்பெருமகன் தன் நாட்டைப் பல மாகாணங்களாகப் பிரித்தான்; மாகாணத் தலைவர்களை நியமித்தான்; எல்லா மாகாண அரசியலையும் கவனிக்க நடு அரசாங்கத்தையும் அமைத்தான். கிராமச் சபைகள், நகரச் சபைகள், நாட்டுச் சபைகள் இருந்து கிராமம், நகரம், நாடு இவற்றை ஆட்சி செய்துவந்தன. சமய நோக்கம் இராஜராஜன் தன்னளவில் சைவ சமயத்தவன். ஆயினும் அவன் பிற சமயங்களைக் கொடுமைப்படுத்தவில்லை; வைணவர், வௌத்தர், சமணர் முதலியவர்களை அன்போடு காத்து வந்தான்; பிற மதக் கோவில்களுக்குப் பொருள் உதவி செய்தான்; நிலங்களை மானியமாக விட்டான். தஞ்சைப் பெரிய கோவில் இப்பேரரசனை நாம் மறவாமல் இருக்கும்படி செய்வது எது? அதுதான் தஞ்சாவூர்ப் பெரிய கோவில். அஃது இவனால் கட்டப்பட்டது. பாறைகளே இல்லாத சோழநாட்டில் அக்கோவிலைக் கட்டப் பாறைகள் எங்கிருந்து கொண்டுபோகப்பட்டன? பாறைகளை ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கி அப் பெரிய கோவிலை அக்கால மனிதர் எவ்வாறு கட்டினார்கள்? `இது சுமார் தொள்ளாயிரம் ஆண்டுகட்கு முன் கட்டப்பட்டது; ஆயினும் இன்று கட்டியதுபோலக் காணப்படுகிறதே! என்று பார்ப்பவர் ஆச்சரியப்படும்படியான பெரிய கோவிலை இராஜராஜன் கட்டி அழியாப் புகழ் பெற்றான். இவன் அக்கோவிலுக்கு ஏராளமான கிராமங்களை மானியமாக விட்டான்; பொன் - வெள்ளி நகைகளையும் பாத்திரங்களையும் உதவினான். திருமுறை கண்ட சோழன் திருநாவுக்கரசர், திருஞான சம்பந்தர், சுந்தரர் என்றவர் சைவ சமயப் பெரியார்கள். அவர்கள் பாடிய அருட்பாடல்கள் `திருமுறை எனப்படும். அப்பாடல்கள் எல்லோரும் படிக்கத் தக்கவாறு கிடைக்கவில்லை. சில கோவில்களில் சிலரே சில பாக்களை ஓதி வந்தனர். திருவாரூர், தில்லை, மதுரை முதலிய இடத்துக் கோவில்களில் சில பாக்கள் ஓதப்பட்டு வந்தன. இராஜராஜன் அவற்றைப் பலமுறை கேட்டான்; அப் பாடல்கள் எல்லாவற்றையும் சேர்க்க முயன்றான்; பல இடங்கட்கும் ஆட்களைப் போக்கினான். மூவர் பாடிய திருமுறைகள் சிதம்பரம் கோவிலில் இருப்பது தெரிந்தது. உடனே இராஜராஜன் சிதம்பரம் சென்றான்; கோவிலில் இருந்த குருமார்களை விசாரித்தான். அவர்கள் ஓர் அறையைக் காட்டினர். அந்த அறை திறந்து சோதிக்கப்பட்டது. அறையின் நடுவில் கரையாண் புற்று ஒன்று இருந்தது. அரசன் அதனைச் சோதித்தான். அப்புற்றின் நடுவில் பனை ஓலைப் புத்தகங்கள் சில அகப்பட்டன. பல ஓலைகள் கரையாண்களுக்கு இரையாகிவிட்டன. கிடைத்த ஏடுகள் எடுத்துச் சுத்தம் செய்யப்பட்டன. சிதம்பரத்திற்குப் பக்கத்தில் திருநாரையூர் என்பது ஒரு சிவ தலம். அங்கு ஒரு சிவ பக்தர் இருந்தார். அவர் பெயர் நம்பியாண்டார் நம்பி என்பது. இராஜராஜன் அப் பெரியவரை வரவழைத்தான்; ஏடுகளை முறைப்படுத்தி ஒழுங்காக்குமாறு வேண்டினான். அவர் அவற்றை நன்றாகப் படித்து ஆராய்ந்து முறைப்படுத்தினார்; திருஞானசம்பந்தர் பாடிய பாக்களை மூன்று நூல்களாகச் செய்தார்; திருநாவுக்கரசருடைய பாடல்களை மூன்று நூல்களாக முறைப்படுத்தினார்; சுந்தரருடைய செய்யுட்களை ஒரு நூலாகச் செய்தார். ஒவ்வொரு நூலும் `திருமுறை எனப்படும். ஆகவே நம்பியாண்டார் ஏழு திருமுறைகள் வகுத்தார். அரசன் அப்பெரியாருக்கு வேண்டிய சிறப்புக்களைச் செய்தான். குடிமக்கள் அரசனது சமயப்பற்றைப் பாராட்டினர். இராஜராஜன் திருமுறைகள் ஒதுவார் நாற்பத்தெண்மரைத் தஞ்சைப் பெரிய கோவிலில் அமர்த்தினான். அதுமுதல் பல கோவில்களில் திருமுறைகள் ஓதப்பட்டன. பலரும் திருமுறைகளைப் படி எடுத்தனர். இவ்வாறு சைவத் திருமுறைகளை எடுத்து ஒழுங்காக்கி நாடு அறியச் செய்த காரணத்தால், இராஜராஜன் திருமுறை கண்ட சோழன் என்று பாராட்டப்பட்டான். குடும்பம் இராஜராஜனுக்கு மனைவியர் பலர் இருந்தனர். அவருள் உலக மஹாதேவி என்பவள் பட்டத்து அரசி; வானவன் மஹாதேவி என்பவள் ஒருத்தி. இவள் சேர அரசன் மகள். இவள் பெற்ற செல்வ மைந்தனே நமது இராஜேந்திர சோழன். 5. இராஜேந்திரன் - இளமைப் பருவம் பிறப்பு இராஜேந்திரன் மார்கழி மாதம் திரு ஆதிரை நக்ஷத்திரத்தில் பிறந்தவன். அவன் இராஜராஜன் பட்டம் பெறுவதற்குச் சுமார் 15 ஆண்டுகட்கு முன்பே (சுமார் கி. பி. 970-ல்) பிறந்தவன்; அஃதாவது தந்தை பட்டம் பெற்றபோது ஏறக்குறைய பதினாறு வயதுடையவனாக இருந்தான்; தந்தை முப்பது வருடகாலம் அரசாண்ட பிறகு இவன் பட்டம் பெற்றான். ஆதலால் இராஜேந்திரன் ஏறக்குறையத் தன் நாற்பத்து ஐந்தாம் வயதில் சோழ அரசனாக முடி சூடிக்கொண்டான் என்னலாம். பழையாறை நகரம் இராஜராஜனுக்குப் பல ஊர்களில் அரண்மனை இருந்தது. அவன் தலைநகரம் தஞ்சாவூர்; அங்கு ஓர் அரண்மனை இருந்தது. கும்பகோணத்தை அடுத்த பழையாறை என்னும் இடத்தில் ஓர் அரண்மனை இருந்தது. அந்தப் பழையாறை என்பது சோழர் காலத்தில் மிகப் பெரிய நகரமாக இருந்தது. அங்கு நான்கு பெரிய சிவன் கோவில்கள் இருந்தன. `அரச மாளிகை எனப்பட்ட அரண்மனை இருந்தது. இப்பொழுது அந்த மாளிகை இருந்த இடம் மேடாகக் கிடக்கிறது. அதனை `மாளிகை மேடு என்று மக்கள் வழங்குகிறார்கள். வளர்ப்பு பழையாறை நகரத்தில் இருந்த அரண்மனையில் இராஜராஜன் பாட்டியாரான செம்பியன் மாதேவியார் இருந்தார்; இராஜராஜன் தமக்கையாரான குந்தவையார் இருந்தனர்; இராஜேந்திரன் தாயான வானவன் மஹாதேவியும் பிற தாய்மாரும் இருந்தனர். முதலிற் கூறிய இருவரும் வயதில் முதிர்ந்தவர்கள்; சைவ சமயத்தில் சிறந்த பற்றுடையவர்கள்; தங்கள் செல்வத்தைக் கோவில் திருப்பணிக்கட்கே கொடுத்தவர்கள்; நிறைந்த கல்வியும் சிறந்த ஒழுக்கமும் பெற்றவர்கள்; அப் பெருமாட்டிகளால் நமது இராஜேந்திரன் வளர்க்கப்பட்டான். அதனால் அவனுக்குக் குழந்தைப் பருவத்தில் இருந்தே தெய்வபக்தி வேரூன்றி வளர்ந்தது; கல்வியில் ஆர்வம் பெருகியது. பழக்கங்கள் நல்லவை ஆயின. கல்விச் செல்வம் கல்வி, மனிதராகப் பிறந்தார் ஒவ்வொருவர்க்கும் இருக்கவேண்டும் அரிய சொத்தாகும். கல்வி என்பது எழுதவும் படிக்கவும் அறிவதுமட்டுமன்று. நம் முன்னோர் வரலாறுகளையும் அவர்களுடைய அநுபவ மொழிகளையும் உலக அற்புத நிகழ்ச்சிகளையும் அறியக் கல்வி உதவுகிறது. `நல்லது இது; கெட்டது இது; இதனால் இது விளையும்; இது விளையாது என்பதை அறியவும் கல்வி தேவையாகும். தன் ஒழுங்கு முறைகளை அறிந்த குற்றமற்ற வாழ்வு நடத்தக் கல்வி வேண்டும்; உணவு-உடை-இருப்பிடம் இவற்றை நல்ல நிலையில் வைத்துக் கொள்ளவும் கல்வி தேவைதானே. பலவகைக் கல்வி ஒரு நாட்டு அரசியலில் வேலைபார்க்க அரசியல் சம்பந்தமான கல்வி வேண்டும்; வைத்தியம் செய்ய வைத்தியக் கல்வி தேவை. ஆசிரியராக அமர்வதற்கு இலக்கண இலக்கியக் கல்வி அவசியம். சமையல் வேலை செய்பவரும் அதற்குரிய நூல்களைப் படித்தாற்றான் மேன்மை பெறலாம். யானைப்பாகர் யானையைப் பிடித்தல், பழக்கல், அதற்கு மொழியைக் கற்றுத் தருதல் போன்றவற்றைச் செய்யவும், அதன் உடல் நிலை, அதற்கு உண்டாகும் நோய்கள், அவற்றைப் போக்கும் முறை முதலியன கவனிக்கவும் யானை நூல்களைப் படிக்கத்தான் வேண்டும். இவ்வாறே குதிரையைப் பற்றிய நூல்கள் உண்டு. அவற்றைக் குதிரைப் பாகர் படித்தறிதல் வேண்டும். மிருக வைத்தியத்திற்கு உரிய நூல்கள் பலவாகும். சமயத்துறையில் ஒருவர் கற்கவேண்டும் நூல்கள் பல: வேதங்கள் - ஆகமங்கள் - தோத்திர நூல்கள் - புராணங்கள் முதலியன அத்துறைக்குரிய நூல்கள். அமைச்சராக வருபவர் இலக்கண - இலக்கிய நூல்களையும் அரசியல் நூல்களையும் நன்றாகப் படித்துத் தீரவேண்டும். சேனைத் தலைவராக வருபவர் போர்க்களத்தின் நிலைமை, படைகளை அணிவகுக்கும் முறை, எதிரிகளின் படை நிலைமை, போரிடும் முறை, வெற்றி பெறுதற்கு உரிய உபாயங்கள் முதலியவற்றைக் கூறும் போர்முறை நூல்களைப் படித்துத்தான் ஆகவேண்டும். கல்வி x செல்வம் கல்விப்பொருள் சிறந்ததா? செல்வம் சிறந்ததா? - பணம் முதலிய பொருள்கள் வெந்தழலால் வேகும்: வெள்ளத்தால் அழிந்துவிடும். அரசர் கைப்பற்ற நினைத்தால் எளிதில் கவரலாம்; பிறர்க்குக் கொடுத்தால் குறைந்துவிடும்; கள்வரால் கவரப்படும். செல்வம் கடுமையான காவலை வேண்டி நிற்பது. இத்தகைய துன்பங்கள் கல்விப் பொருளுக்கு ஒருபோதும் உண்டாகாது. கல்வி கற்றவனை விட்டு ஒரு போதும் நீங்காது. ஆனால் செல்வம் தன்னை உடையவனை விட்டு எந்த நேரத்திலும் நீங்கத்தக்கது. செல்வம் உடையவன், தன் செல்வம் போய்விடின் பொருள் சம்பாதிக்க வழியின்றித் துன்பபப்படுவான். ஆனால் கல்வி கற்றவன் ஏழையாக இருப்பினும் என்றும் தொழில் செய்து சிறப்பாகப் பிழைத்துக் கொண்டிருப்பான். கற்றவனும் காவலனும் இப்பல வகைப்பட்ட காரணங்களால் செல்வப் பொருளை விடக் கல்விப் பொருளே சிறந்ததாகும். ஆதலின் இப்பெருஞ் செல்வத்தை அரசன் முதல் ஆண்டிவரையுள்ள அனைவரும் பெற்றுத்தான் தீர வேண்டும். கல்லாத அரசனைவிடக் கற்ற சாதாரண மனிதனே சிறப்புப் பெறுகிறான். எப்படி? அரசன் தன் நாட்டில்தான் சிறப்புப் பெறலாம். ஆனால் கற்றவன் செல்லும் இடமெல்லாம் சிறப்புப் பெறுவான் என்பதனை, மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின் மன்னனிற் கற்றோன் சிறப்புடையன்;-மன்னற்குத் தன்தேசம் அல்லால் சிறப்பில்லை; கற்றோர் சென்ற இடம் எல்லாம் சிறப்பு. என்னும் பழைய பாட்டால் அறியலாம். ஆகவே, அரசன் ஆயினும், அவன் தன் அறிவை வளர்க்கவும் உலகில் சிறப்பை அடையவும் கல்வி கற்றுத் தான் தீரவேண்டும் என்பது தெரிகிறது அன்றோ? கற்க வேண்டுவன கல்வி கரை இல்லாதது. ஆனால், நமது வாழ் நாள் குறைந்த அளவு உடையது. ஆதலால் நாம் எவ்வாறு எல்லாத் துறைகளிலும் உள்ள நூல்களைக் கற்பது? - இது நல்ல கேள்வி அல்லவா? நாம் நமக்கு விருப்பமான நூல்களையே தேர்ந்து எடுத்துப் படித்துப் பயன்பெற வேண்டும். அரசன் தன் அரசாட்சிக்கு வேண்டும் பலதுறை அறிவைப் பெறப் பல நூல்களைப் படிக்கவேண்டும். இராஜேந்திரன் கல்வி கற்றமை இராஜேந்திரன் கல்வியின் சிறப்பைப் பெரியோர் உணர்த்த உணர்ந்தான்; பெருமை வாய்ந்த கல்வியையே தன் செல்வமாக நினைத்தான். அதனால் அவ்விளவரசன் தக்க ஆசிரியரிடம் கல்வி கற்கலானான். பணக்காரப் பிள்ளைகள் பலர் தாங்கள் செல்வர் வீட்டுப் பிள்ளைகள் என்று கர்வம் கொள்ளுதல் இக்கால வழக்கம். ஆனால் இராஜேந்திரன் தன்னை இளவரசன் என்று எண்ணிக் கர்வம் கொள்ளவில்லை. அவன் அடக்கமுள்ள உண்மை மாணவனாக விளங்கினான்; ஆசிரியர்களிடம் பய பக்தியுடன் நடந்துகொண்டான்; ஒரு நாள் கற்ற பாடங்களை மறுநாள் ஒப்புவித்தான். ஆசிரியர் மன மகிழ இனிமையாகப் பேசினான். அவனுடைய கூர்மையான அறிவும் அடக்கம் கொண்ட நடையும் ஆசிரியர் உள்ளத்தைக் கொள்ளை கொண்டன. கற்ற நூல்கள் இளவரசனான இராஜேந்திரன் முதலில் தமிழ் இலக்கண நூல்களையும் செய்யுள் நூல்களையும் நன்றாகப் படித்தான்; அஃதாவது தொல்காப்பியம் முதலிய இலக்கண நூல்களையும் சிலப்பதிகாரம் போன்ற காவியங்களையும் கற்றான்; பிறகு சமய நூல்களான திருமுறைகளைப் படித்தான்; அவற்றின் பிறகு அரசியல் சம்பந்தமான நீதி நூல்கள், போரைப்பற்றிய நூல்கள் முதலியவற்றைக் கற்றான். அவன் தனக்கு முன் இருந்த கரிகாலன் போன்ற சங்ககாலச் சோழர்களைப் பற்றிய நூல்களையும் கோச் செங்கணான் போன்ற இடைக்காலச் சோழர்களைப் பற்றிய நூல்களையும் வாசித்தான்; ஆதித்த சோழன் முதல் தன் தந்தைக்கு முன் வரை இருந்த அரசர்களைப் பற்றிய செய்திகளை அறிந்தான். இவ்வரலாறுகளைக் கற்றதனாலும் கேட்டதனாலும் அவனுக்கு ஓர் எண்ணம் வேரூன்றத் தொடங்கியது. அஃதாவது தான் சிறந்த பேரரசன் என்று வரலாற்றில் பெயர் பெற வேண்டும் என்பது. பண்டித சோழன் இங்ஙனம் இராஜேந்திரன் பல துறை நூல்களைக் கற்று வல்லவன் ஆயினான். எனினும் அவன் பிற துறைகளைவிடத் தமிழ் இலக்கண-இலக்கியங்களில்தான் மிகுந்த கவனம் செலுத்தினான்; தன் காலத்தில் இருந்த பெருந் தமிழ்ப் புலவர்களுடன் இலக்கண விஷயங்களையும் இலக்கிய விஷயங்களையும் பற்றி விவாதித்தான். கற்றறிந்த பெரியோர் கூட்டத்தில் இருப்பதையே அவ்விளவரசன் விரும்பினான். தேவாரப் பாடல்களைக் கேட்பதில் அவனுக்கு விருப்பம் அதிகம். அப் பெருமகன் இங்ஙனம் தமிழ்ப் பண்டிதர்களுடனே இன்பமாகக் காலம் கழித்து வந்தமையாலும், தானும் சிறந்த பண்டிதனாக இருந்தமையாலும் பண்டித சோழன் எனப் பெயர் பெற்றான். இப் பட்டம் பெற்ற சோழப் பேரரசன் இவன் ஒருவனே என்னலாம். 6. இராஜேந்திரன் - இளவரசன் பல போர்கள் இராஜேந்திரன் ஏறக்குறையத் தன் இருபதாம் வயதில் இளவரசனாக முடி சூடினான்; அது முதல் அவன் தந்தைக்கு உதவியாக இருந்து அரசியலைக் கவனிக்கலானான். அவன் இவ்வாறு ஏறத்தாழ இருபத்தைந்து வருஷகாலம் இளவரசனாக இருந்தான்; அக்காலத்தில் தந்தைக்குப் பதிலாகத் தானே பல போர்களை முன்னின்று நடத்தினான்; சென்ற இடம் எல்லாம் சிறப்பு அடைந்தான். பாண்டிய நாட்டுப் போர் இராஜராஜனுக்கு முன்பே பாண்டிய நாடு சோழர் ஆட்சிக்கு உட்பட்டு இருந்தது. பாண்டிய அரசன் சோழர்க்கு அடங்கி அதனை ஆண்டுவந்தான். ஆனால் இராஜராஜன் காலத்தில் இருந்த பாண்டிய மன்னன், தன் பேரரசனான இராஜராஜனை மதியாமல் சுயேச்சையாக நாட்டை அரசாண்டான். அதனால் இராஜராஜன் வெகுண்டான்; தன் படைகளை அப்பாண்டியன்மீது ஏவினான். அப்படைகளுடன் இளவரசனான இராஜேந்திரன் சென்றான்; படைகட்குத் தலைமை தாங்கிப் போரை நடத்தினான்; பாண்டியனை முதுகுகாட்டச் செய்தான்; அவனுக்கு உதவியாக வந்த சேர அரசனையும் இலங்கை அரசனையும் ஓடச் செய்தான். சேரநாட்டுப் போர் இராஜேந்திரன் இப் போருடன் திருப்தி அடைந்து திரும்பவில்லை. தன்னிடம் தோற்று ஓடின மூவரும், தான் சோழநாடு திரும்பிய பிறகு, ஒன்று சேர்ந்து மீண்டும் குழப்பத்தை உண்டாக்கக் கூடும்; ஆதலால் அவர்களைத் தனித்தனியே அவரவர் நாட்டில் தாக்கி, அவர்களுடைய படைப் பலத்தை ஒடுக்கிவிட வேண்டும் என்று தீர்மானித்தான். இது சிறந்த அரசியல் சூழ்ச்சியாகும். இளவரசன் தன் தீர்மானப்படியே பெரும்படையுடன் சேரநாடு நோக்கிச் சென்றான். சேரநாடு மலைநாடு என்று முன் சொன்னோம் அல்லவா? மேற்கு மலைத் தொடர்ச்சியில் உள்ள கணவாய்கள் வழியாகச் சோழர் படைகள் சேர நாட்டினுள் நுழைந்தன; பல இடங்களைக் கைப்பற்றின. சேர அரசன் பல இடங்களில் கடுமையாகப் போரிட்டான். கடல் போன்ற சோழர் படைக்கு முன்னே ஏரி போன்ற சேரன் படை என்ன செய்ய முடியும்? இராஜேந்திரன் போரை விரைவில் முடிக்கக் கருதினான்; புலிக்கூட்டத்துள் சிங்கம் பாய்வதைப் போலப் பாய்ந்தான். அவன் போர் செய்தலைக் கண்ட சோழவீரர் வீராவேசங்கொண்டு போரிட்டனர். முடிவில் சேரவேந்தன் போரில் தோற்றான். அதுவரையில் வேறு எவருக்கும் அடிமைப்படாமல் இருந்த சேரநாடு சோழர்க்கு அடிமைப்பட வேண்டியதாயிற்று. இராஜேந்திரன் சேர நாட்டுத் துறைமுக நகரங்கட்குச் சென்றான்; அங்கு இருந்த சேரர் கடற்படையை அழித்தான். இங்ஙனம் சேர நாடு சோழர் ஆட்சிக்கு அடிமைப்பட்டது. இலங்கைப் போர் இராஜேந்திரன் பாண்டிய நாட்டையும் சேர நாட்டையும் வென்று கொண்டான் அல்லவா? பின்னர் இலங்கை அரசன்மீது கவனம் செலுத்தினான். இலங்கைத் தீவு கடலில் இருப்பதன்றோ? அத்தீவை அடைவதற்குக் கப்பல்கள் வேண்டும். கடல் கடந்து அஞ்சாமல் போர் செய்யத்தக்க வீரர் தேவை. இராஜேந்திரன் தன் சிறந்த கடற்படை வீரரை ஒன்று சேர்த்தான்; கப்பல்கள் பல, பாய்களை விரித்துப் புறப்பட்டன. சோழ வீரர் வெற்றி முழக்கத்துடன் புறப்பட்டனர்; பிரயாணத்திற்கு உரிய பாடல்களை மகிழ்ச்சியோடு பாடிக்கொண்டு சென்றனர். அப்படைகள் இலங்கையை நோக்கிச் சென்றது, முன் இராவணனைத் தாக்கச் சென்ற இராமன் படைகளை ஒத்திருந்தது. இராஜேந்திரன் வட இலங்கைத் துறைமுகம் ஒன்றில் இறங்கினான். சோழர் படைகள் அத் துறைமுகத்தில் இறங்கித் தங்கின. உதவிப் படை இலங்கை இறைவன் தன் படைகளைத் திரட்டி அத் துறைமுகத்தண்டை வந்தான். இருதிறத்தார்க்கும் போர் மூண்டது. இலங்கையில் போர் நடத்தல் இலங்கை வீரர்க்குச் சாதகமானது. அவர்கள் தங்கட்கு உதவியாகப் புதிய படைகளை வேண்டும்போது வருவித்துக் கொள்ளலாம்; உணவும் அப்படியே. ஆனால் சோழ நாட்டிலிருந்து சென்ற வீரர்க்கு அந்த வசதிகள் இல்லை அல்லவா? அவர்கள் வீரரையும் உணவுப் பொருள்களையும் தங்கள் நாட்டிலிருந்தே கொண்டு போக வேண்டியவர் ஆயினர். இராஜராஜன் தன் மைந்தனை இலங்கைக்கு அனுப்பிவிட்டு வாளா இருந்தனனோ? இல்லை, இல்லை. அப்பேரரசன், முதலில் அனுப்பப்பட்ட வீரர்க்குத் துணையாகப் பல வீரரையும் உணவுப் பொருள்களையும் பல கப்பல்களில் அனுப்பினான். போர் முதலிற் சென்ற படை சிலநாட்கள் வரை போர் செய்தது; இலங்கைப் படை சிறிது சிறிதாகப் பின்வாங்கிச் சென்று கொண்டே இருந்தது. அந்த நிலையில் இராஜராஜன் அனுப்பிய உதவிப் படையும் வந்து சேர்ந்தது. உதவி வந்தவுடன் சோழ வீரர் உற்சாகமாகப் போர் செய்தனர். இரண்டொரு நாட்களில் இலங்கைப் படை நிலை தளர்ந்து ஓடத் தொடங்கியது. இலங்கை இறைவன் வட இலங்கையை விட்டுத் தென் இலங்கைக்கு ஓடி விட்டான். வட இலங்கை இராஜேந்திரன் வசப்பட்டது. இலங்கையில் இராஜராஜேசுவரம் இப்போரில் இலங்கையின் தலைநகரமான அநுராதபுரம் அழிக்கப் பட்டது. அதற்குப் பதிலாக வேறொரு நகரம் (பொலந்நருவா) தலைநகரம் ஆக்கப்பட்டது. வட இலங்கையில் மாதோட்டம் என்னும் இடத்தில் சிவன் கோயில் என்று கட்டப்பட்டது. அதற்கு இராஜராஜேசுவரம் என இராஜராஜன் பெயர் இடப்பட்டது. அக்கோவில் இன்றும் அங்கு இருந்து, சோழரது கட்டடத் திறமையை நினைவு ஊட்டிக்கொண்டு இருக்கிறது. இராஜேந்திரன் வட இலங்கையில் சோழர் படை ஒன்றை நிலையாக இருக்கச் செய்தான்; சிறந்த தானைத்தலைவன் ஒருவனைச் சோழப் பிரதிநிதியாக இருந்து வட இலங்கையை அரசாளும்படி ஏற்பாடு செய்தான். பின்னர் அந்த இளவரசன் தஞ்சாவூரை அடைந்தான். மேலைச் சாளுக்கியர்-கீழைச் சாளுக்கியர் `கிருஷ்ணை, தங்கபத்திரை ஆறுகட்கு வடக்கே இருந்த நாட்டை மேலைச் சாளுக்கியர் ஆண்டு வந்தனர். அவர்களுக்கு உறவினரான கீழைச் சாளுக்கியர் கோதாவரிக்கும் கிருஷ்ணைக்கும் இடைப்பட்ட கிழக்குக் கரை நாட்டை ஆண்டு வந்தனர். அந்நாடு `வேங்கை நாடு எனப்பட்டது. மேலைச் சாளுக்கிய நாட்டை இராஜராஜன் காலத்தில் ஆண்டுவந்தவன் சத்யாரயன் என்பவன். வேங்கை நாட்டில் அரச பரம்பரையினர் இரு பிரிவினர் இருந்தனர். அவர்கள் தங்களுக்குள் சிம்மாதனத்தைக் கைப்பற்றச் சண்டையிட்டனர். மூத்த பரம்பரையினர் சோழர் உதவியை வேண்டினர். இளைய பரம்பரையினர் சத்தியாரயன் துணையை நாடினர். இந்த நிலையில், இராஜேந்திரன் பெரும் படையுடன் புறப்பட்டு மேற்குக் கடற்கரையில் இருந்த நாடுகளை வென்று வந்தான். இறுதியில் சோழர் ஆட்சி துங்கபத்திரை-கிருஷ்ணை யாறுகள் வரை பரவிட்டது; அஃதாவது மேலைச் சாளுக்கியரது நாட்டுத் தெற்கு எல்லைவரை பரவிவிட்டது. சத்யாரயன் அச்சமும் தாக்குதலும் சோழர் செல்வாக்கு, தன் நாட்டின் தென் எல்லைவரை பரவி விட்டதைக் கண்டு சத்யாரயன் அஞ்சினான்; அதனால் தன் நாட்டுக்குக் கேடுவரும் என்று கவலைப்பட்டான். அதே சமயத்தில் வேங்கை நாட்டு மூத்த பரம்பரையினர் சோழர் உதவியை வேண்டினது, அவனுக்கு இருந்த கவலையையும் அச்சத்தையும் அதிகப்படுத்திற்று. வேங்கை நாட்டில் சோழர் செல்வாக்குப் பரவினால் தனக்குப் பேராபத்து உண்டாகும் என்பதை அவன் அறிவான்; அதனால் சோழரைத் தன் முழுப் பலமும் கொண்டு தாக்கத் துணிந்தான். வேங்கை நாட்டு மூத்த பரம்பரையினரை ஆதரிக்கச் சோழர் படை சென்றது. அப்படையில் ஒன்பது லக்ஷம் வீரர் இருந்தனர். நமது இராஜேந்திர சோழனே அதற்குத் தலைவன். போரைத் தொடங்கியவன் சத்யாரயனே ஆவன். சோழர்-சாளுக்கியர் போர் சத்தியாரயன் சோழரை எதிர்க்கத் தன் படைகளுடன் தயாராக இருந்தான். அப்பொழுது தான் இராஜேந்திரன் துங்கபத்திரை-கிருஷ்ணையாறுகள் அருகில் இருந்த நாடுகளை வென்று முடித்தான். அப்பொழுது திடீரென்று சத்யாரயன் இராஜேந்திரனைத் தாக்கினான். உடனே சோழர் படைக்கும் சாளுக்கியர் படைக்கும் கடும் போர் நடந்தது. போரின் கொடுமை போரில் முரச வாத்தியங்கள் ஒலித்தன. அவ்வோசை இடி ஓசைபோல இருந்தது. வீரர்கள் உறையிலிருந்து உருவின வாள்கள் மின்னல் போலக் கண்களைப் பறித்தன. யானைகள் கரிய மேகங்களை ஒத்து இருந்தன. அவை அங்கும் இங்கும் போனமை வானத்தில் கார்மேகங்கள் அசைவதைப் போல இருந்தது. குதிரைகள் பல வரிசைகளாக நின்று போரிட்டன. அக்காட்சி, கடல் அலைகளைப் போல இருந்தது. குதிரைகள் வரிசையில் யானைகள் பாய்ந்து குழப்பத்தை உண்டாக்கின. அக்காட்சி, அலைகள் நடுவில் உண்டாகும் சுழலை ஒத்து இருந்தது. கடலில் அலைகளுக்கும் நடுவில் சங்குகள் புறப்படும் அல்லவா? அவைபோல வீரர் தத்தம் சங்குகளை எடுத்து ஊதினர். யானைகள் யானைகளோடு போரிட்டன. குதிரைகள் குதிரைகளுடன் போர் புரிந்தன. வீரர் வீரருடன் போர் செய்தனர். கத்தி, கேடயம், வேல், வாள் என்பன பறந்தன. பகைவர் போரிட்டு மடிந்து வீழ்ந்தனர். அக்காட்சி, காண்டா மிருகத்தால் முறிக்கப்பட்ட செடிகளும் மரங்களும் அலங்கோலமாக வீழ்ந்து கிடக்கும் நிலையை ஒத்து இருந்தது. போர் வீரர் வரிசை வரிசையாக நின்று போரிட்டனர். அக்காட்சி, நாகம், புன்னாகம் முதலிய மரங்கள் வரிசை வரிசையாக இருப்பதைப் போல இருந்தது. வில் வீரர் தம் வில்லை வளைத்து அம்புகளைத் தொடுத்தனர். அந்த அம்புகள் மழைத்துளிகள் போலக் காட்சி அளித்தன. யானைகள் ஒன்றோடு ஒன்று போரிட்டன; ஒன்றன் தந்தங்கள் மற்றொன்றில் குத்திக்கொண்டு எடுபடாது நின்றன. குதிரை வீரர் வாட்போர் செய்தனர். அப்பொழுது சில வீரர் வாட்கள் ஒன்றுடன் ஒன்று பின்னிக்கொண்டு எடுக்கக்கூட வில்லை. சிலர் மயில் பிடித்து இழுத்துப் போரிட்டனர். கதைகள் (ஆயுதங்கள்) ஒன்றோடு ஒன்று மோதின. வீரர்களுடைய, யானைகளுடைய, குதிரைகளுடைய-தலைகளும் கால்களும் உடலங்களும் வெட்டுண்டு சிதறிக் கிடந்தன. இரத்தம் பெருக்கு எடுத்து ஆறாகப் பாய்ந்தது. யானைகளின் மதநீர் இரத்தத்துடன் கலந்து பாய்ந்தது. அக்காட்சி, மஞ்சள் ஆறுபோல இருந்தது. சோழ வீரரும் சாளுக்கிய வீரரும் கடும்போர் புரிந்தனர்; முன்னும் பின்னும் அலைந்து ஓடிச் சண்டையிட்டனர். ஆறாகப் பாய்ந்த இரத்தத்தின் மீது யானைகளின் உடல்கள் பாலமாக அமைந்திருந்தன. வீரர் பலர் அவற்றின்மீது நின்று போர் செய்தனர். இறந்த வீரர் கைகளில் இருந்த வாள்கள் அப்படியே இருந்தன. அவர்கள் கண்கள் சிவந்து இருந்தன. பெரிய வீரர்கள் அணிந்திருந்த விலை உயர்ந்த நகைகள் பொடியாகிச் சிதறிக் கிடந்தன. தலை அற்ற முண்டங்கள் கூத்தாடின. சோழர் வெற்றி இவ்வாறு கடுமையாக நடைபெற்ற போரில் சாளுக்கியப் படை அழிந்தது. சத்தியாரயன் உயிர் பிழைத்தால் போதும் என்று எண்ணி ஓடினான்; உயிர் பிழைத்து இருந்த அவன் படை வீரரும் அவனைப் பின் தொடர்ந்து தங்கள் நாட்டிற்குள் ஓடினர். மஹா வீர புருஷனாகிய இராஜேந்திரன் தன் பெரும் படையுடைன் பகைவர் நாட்டிற்குள் நுழைந்தான்; நாட்டைச் சூறையாடினான்; நகரங்களைக் கொளுத்தினான்; போரில் கிடைத்த குதிரைகள், யானைகள், உயர்ந்த ஆடைகள், ஆபரணங்கள், மற்ற உயர்ந்த வாகனங்கள் முதலியவற்றுடன் சாளுக்கிய நாட்டில் கிடைத்த பெருஞ் செல்வத்தையும் எடுத்துக் கொண்டான்; நான்கு பக்கங்களிலும் வெற்றி முழக்கம் செய்துகொண்டே தஞ்சாவூரை அடைந்தான். தந்தையின் ஆசீர்வாதம் தலைநகரத்தை அடைந்த இராஜேந்திரன், தான் பல யானைகள்மீதும் குதிரைகள்மீதும் கொண்டு வந்த பெருஞ் செல்வத்தைப் பேரரசனான தன் தந்தைமுன் வைத்து அவன் திருவடிகளைப் பணிந்தான். அப்பொழுது இராஜராஜன் மனம் எப்படி இருந்திருக்கும்? தன் மகன் மேற்கில் உள்ள பல நாடுகளை வென்றான்; முடிவில் வடக்கே தன்னை ஒத்த பெரிய அரசனான சத்யாரயனையும் முறியடித்தான்; பலவகைப் பொருள்களையும் கைப்பற்றி வந்தான் என்பவற்றை அறிந்ததும் அவன் மனம் அளவு கடந்த மகிழ்ச்சியை அடைந்தது. அவன் தன்னைப் பணிந்த இளவரசனை எடுத்து மார்புடன் அணைத்துக் கொண்டான்; ஆனந்தக் கண்ணீர் சொரிந்தான்; என் செல்வ மகனே, உன்னால் சோழர் வரலாறு சிறப்படையும். நீ பேரரசை உண்டாக்கி, அதனைக் காத்து, அரசாளத் தகுதியுடையவனே. நீ நீடு வாழ்க என்று ஆசீர்வதித்தான். பட்டங்களும் பரிசுகளும் இளவரசன் தஞ்சை மீண்ட மறுநாள், போரில் திறங்காட்டிப் போர் செய்த வீரர்களும் சேனைத் தலைவர்களும் வரவழைக்கப்பட்டனர். இராஜேந்திரன் ஒவ்வொருவரையும் பற்றித் தந்தையிடம் கூறினான். இராஜராஜன் அவரவர் தகுதிக்கு ஏற்றவாறு காவிதி* முதலிய பட்டங்களை அளித்தான்; போரில் அகப்பட்ட பொன் நகைகளையும் பிற பொருள்களையும் பரிசாக அறித்தான். பின்னர் யாவர்க்கும் பெரிய விருந்து ஒன்று நடைபெற்றது. போரில் இறந்த வீரர் குடும்பங்களுக்குப் பொருள் உதவி தாராளமாகத் தரப்பட்டது. யாவரும் அரசனையும் இளவரசனையும் வாயார வாழ்த்தினர். வேங்கை நாட்டில் புதிய அரசு இவ்வாறு போரில் சோழர் வெற்றிபெற்றதால் வேங்கை நாட்டை மூத்த பரம்பரையினர் அரசாளத் தொடங்கினர். அவர்கள் இரு சகோதரர். மூத்தவன் சக்திவர்மன் என்பவன்; இளையவன் பெயர் விமலாதித்தன் என்பது. புதிய சம்பந்தம் இராஜராஜன் சிறந்த அரசியல் நிபுணன் என்பதை முன்னரே குறித்தோம் அல்லவா? அவன், மேலைச்சாளுக் கியர்க்கும் கீழைச் சாளுக்கியர்க்கும் இருந்த உறவை வெட்டி விடத் தீர்மானித்தான். அதனால் அத் தந்திரசாலி, தன்மகளும் இராஜேந்திரன் தங்கையுமான குந்தவை என்பவளை விமலாதித்தனுக்கு மணம் செய்து கொடுத்தான்; விமலாதித்தனை வேங்கைநாட்டு இளவரசன் ஆக்கினான்; சத்தியாரயன் மீண்டும் வந்து துன்பம் செய்யாமல் இருக்கும்பொருட்டு இளவரசனான இராஜேந்திரனை வேங்கை நாட்டில் சிறிது காலம் தங்கை இருக்குமாறு செய்தான்; சோழப்படை ஒன்றை வேங்கை நாட்டில் நிலையாக இருக்கச் செய்தான். இந்தப் புதிய ஏற்பாடுகளால் சோழரது செல்வாக்குக் கோதாவரி யாறுவரை பரவியது. மஹேந்திரமலையில் வெற்றித் தூண் வேங்கை நாட்டில் புதிய அரசு ஏற்பட்டதனால், அதற்கு அடங்கி இருந்த பழைய சிற்றரசர் சிலர் அடங்க மறுத்தனர். அவர்களில் மஹேந்திரமலைப் பகுதியை (கஞ்சம் ஜில்லா) ஆண்ட அரசனே முக்கியமானவன். ஆதலின், அவனை அடக்க வேண்டியது அவசியம் ஆயிற்று. அதனால் வேங்கை நாட்டில் தங்கி இருந்த இராஜேந்திரன், தன் படையுடன் வடக்கு நோக்கிச் சென்றான்; குழப்பம் செய்த அச்சிற்றரசனைப் போரில் தோற்கடித்தான். அவன் தோற்றதைக் கேட்ட பிற சிற்றரசர் வேங்கை நாட்டுக்குப் பணிந்தனர். இராஜேந்திரன், மஹேந்திரகிரி அரசனை வென்றதற்கு அடையாளமாக மஹேந்திரமலையில் வெற்றித் தூண் ஒன்றை நாட்டினான். அங்கு இச் செய்தியைக் குறிக்க இரண்டு கல்வெட்டுகள் இருக்கின்றன. ஒன்று தமிழில் பொறிக்கப் பட்டுள்ளது. மற்றொன்று வடமொழியில் காணப்படுகிறது. இவ்வாறு இராஜேந்திரன் தன் போர்த் திறமையால் சோழரது செல்வாக்கைக் கலிங்க நாடுவரை பரவச் செய்தான். மாலத் தீவுகள் இராஜராஜன் கடற்படை கோதாவரியாற்று முகத்துவாரத்தில் இருந்து மேற்குக் கரையில் தொண்டி என்ற துறைமுகம் வரை வங்கக்கடலிலும் சிந்துப் பெருங்கடலிலும் அரபிக்கடலிலும் சென்று கொண்டு இருந்தன. அக்கப்பல்களில் சில கிழக்கிந்தியத் தீவுகள் வரை பிரயாணம் செய்தன. இராஜராஜன் காலத்தில் சோழப் பெருநாடு அயல் நாடுகளுடன் சிறந்த முறையில் கடல் வாணிபம் செய்தது. இந்தியாவுக்குத் தென்மேற்கே இந்து மகா சமுத்திரத்தில் மாலத் தீவுகள் என்பன சிதறுண்டு கிடக்கின்றன. அவை இப்பொழுது `மால்திவ் என்று வழங்கப்படுகின்றன. அத் தீவுகட்கு அரசன் தன்னைப் `பன்னீராயிரம் தீவுகட்கு அரசன் என்று கூறுதல் நீண்டகால வழக்காகும். இப்பொழுது அந்த எண்ணிக்கையுள்ள தீவுகள் அங்கு இல்லை. அவற்றுள் பல தீவுகள் நாளடைவில் கடலுக்கு இரையாகிவிட்டன போலும்! சோழர் படையெடுப்பு மாலத் தீவுகட்கு அரசன் சோழர் கடற்படையைத் தாக்கினானோ, அல்லது வேறு எந்த வகையில் சோழர்க்கு வருத்தத்தை உண்டாக்கினானோ, தெரியவில்லை. அல்லது சோழ மன்னனே அத்தீவுகளை வென்று தன் ஆட்சியில் வைத்திருத்தல் நல்லது என்று நினைத்திருக்கலாம். இராஜேந்திரன் தலைமையில் சோழரது கடற்படை புறப்பட்டது. எல்லாக் கப்பல்கள்மீதும் புலிக்கொடி கம்பீரமாகப் பறந்துகொண்டு இருந்தது. கப்பல்கள் பாய் விரித்துக் கடலில் பிரயாணம் செய்தன. அவை இலங்கை வழியாகச் சென்று மேற்கே திரும்பின; மாலத் தீவுகளை அடைந்தன. அரசன் இருந்த தீவில் சோழப் படைவீரர் இறங்கினர். ஆயிரக்கணக்கான படைவீரரைக் கண்டதும் அத்தீவில் இருந்த மக்கள் அச்சம் கொண்டனர். அரசன் தன் படையுடன் வந்து எதிர்த்தான்; சிறிதுபொழுது போர் செய்தான். எனினும் பயன் இல்லை. அவன் போரில் தோற்று எங்கோ மறைந்தான். எண்ணிறந்த சிறுசிறு தீவுகளில் எல்லாம் அவனைத் தேட முடியவில்லை. முடிவில் மாலத்தீவுகள் சோழர் வசமாயின. அங்கு இருந்த அரசனது மாளிகைமீது சோழரது புலிக்கொடி பறக்கவிடப்பட்டது. அங்குச் சோழர் படை ஒன்று வைக்கப் பட்டது. சோழர் படைத் தலைவன் ஒருவன் அங்கு அதிகாரியாக நியமனம் பெற்றான். இவ்வேலைகள் முடிந்தவுடன் இராஜேந்திர சோழன் வெற்றி முழக்கத்துடன் தன் தாய்நாடு மீண்டான். அரசியல் அநுபவம் இளவரசனான இராஜேந்திரன் சிறந்த போர் வீரனாக இருந்தாற்போலவே அரசியல் வேலையிலும் பயிற்சி பெற்றுவந்தான். அவன் தஞ்சாவூரில் தங்கி இருந்தபொழுது தந்தையுடன் இருந்தே அரசியல் காரியங்களைக் கவனித்து வந்தான்; அமைச்சர்களுடன் பழகுதல், அவர்களை அரசியல் சம்பந்தமாக விசாரித்தல், அரசியல் கட்டளைகளைப் பிறப்பித்தல், வழக்குகளை விசாரித்தல், கோவில் ஆட்சியைப்பற்றி அறிதல் முதலிய பலவற்றைக் கற்றறிந்தான். குடும்பம் இராஜேந்திரன் இங்ஙனம் ஏறத்தாழ இருபத்தைந்து ஆண்டுகள் அதாவது தன் நாற்பத்தைந்தாம் வயதுவரை - இளவரசனாக இருந்து வந்தான். அதனால் அவன் இளவரசனாக இருந்தபொழுது அவனுக்கு வயது வந்த மக்கள் இருந்தனர். தந்தையைப் போலவே அவன் மனைவியர் பலரை மணந்து கொண்டான். அவனுக்கு இராஜாதிராஜன், இராஜேந்திர தேவன், வீர ராஜேந்திரன் என்று பிள்ளைகள் மூவர் இருந்தனர்; பிரானார், அம்மங்கா தேவி என்ற பெண் மக்கள் இருவர் இருந்தனர். இப் பிள்ளைகள் எல்லாம் உற்ற வயதடைந்து அரசியலைக் கவனிக்கத் தலைப்பட்டனர். அம்மங்கா தேவி இராஜேந்திரன் தங்கை வேங்கை நாட்டில் அரச பத்தினியாக இருந்தாள் அல்லவா? அவளுக்கு ஓர் ஆண் மகவு பிறந்தது. அதற்கு அவள் `இராஜராஜன் என்று தன் தந்தை பெயரையே வைத்தாள்; அப்பிள்ளை உற்ற வயது அடைந்ததும் அவனுக்குத் தன் அண்ணன் மகளான அம்மங்கா தேவி என்பவளை மணம் செய்துவைத்தாள். முன் உண்டான கீழைச் சாளுக்கியர் உறவு, இந்தத் திருமணத்தால் மேலும் பலப்பட்டது. 7. கங்கை கொண்ட சோழன் இலங்கைப் போர் இராஜேந்திர சோழன் கி. பி. 1012-ல் பேரரசன் ஆனான். அவனிடம் தோற்று ஓடின இலங்கை அரசன், அவன் பேரரசன் ஆனதும், வட இலங்கையை மீட்க விரும்பினான்; பெரும்படை திரட்டினான்; வட இலங்கைமீது படை யெடுத்தான். இதனை அறிந்த இராஜேந்திரன் தன் கடற்படையில் ஒரு பகுதியை அனுப்பினான். அப்படையில் சென்ற வீரர் பலர் முன்பு இலங்கையில் போர் செய்தவர்; சிலர் புதியவர் ஆயினும், நன்றாகப் பயிற்சி பெற்ற போர் வீரர். ஆதலின் அவர்கள் வீராவேசத்துடன் போர் செய்து வெற்றி பெற்றனர். இலங்கை இறைவன் சிறைப்பட்டான். அவன் முடியும் மனைவியர் முடிகளும் நகைகளும் உயர்ந்த மணிகளும் சோழவீரர் கைப்பற்றினர். ஐம்பது ஆண்டுகட்குமுன் சோழரிடம் தோற்ற பாண்டியன் இலங்கை அரசரிடம் ஒளித்து வைத்திருந்த `இந்திரன் ஆரம் என்ற விலை உயர்ந்த மணிமாலையும் அகப்பட்டது. இலங்கை அரசனே அகப்பட்டுக்கொண்டதால், முழு இலங்கையும் இராஜேந்திரன் ஆட்சிக்கு உட்பட்டது. இலங்கை வேந்தன் தஞ்சாவூருக்குக் கொண்டு வரப்பட்டான். அவன் அங்குப் பன்னிரண்டு ஆண்டுகள் இருந்து இறந்தான். அவன் மகன் இரகசியமாக இலங்கையிலேயே வளர்க்கப்பட்டான். பாண்டிய நாட்டுப் போர் இராஜேந்திரன் இலங்கைப் போரில் ஈடுபட்டு இருந்தபொழுது, பாண்டிய அரச மரபினர் பாண்டிய நாட்டில் கலகம் விளைத்தனர். அதனால் இராஜேந்திரன் மிக்க கோபம் கொண்டான்; தானே பெரிய படையுடன் சென்றான்; அப் பாண்டிய அரச மரபினரைப் பல இடங்களில் தோற்கடித்தான். அவர் அஞ்சிப் பொதியமலைக் காடுகளிற் புகுந்துகொண்டனர். இராஜேந்திரன் அப்பகைவருடைய அரண்மனைகளைச் சோதித்தான்; அங்கு இருந்த பொருள்களைக் கைக்கொண்டான். பாண்டி நாட்டு முத்துக்கள் ஏராளமாகக் கிடைத்தன. இராஜேந்திரன் பாண்டி நாட்டிற்கும் சேர நாட்டிற்கும் தன்மைந்தன் இராஜேந்திர தேவனைப் பிரதிநிதியாக இருந்து அரசாண்டு வருமாறு ஏற்பாடு செய்தான். கங்கை கொண்ட சோழன் இராஜேந்திரன் தன் பெயரால் தலைநகரம் ஒன்றை அமைக்க விரும்பினான். அதற்கு உரிய இடத்தை ஆராய்ந்தான்; தன் தந்தை அமைத்த ஐயங்கொண்ட சோழபுரத்துக்கு ஐந்துகல் தூரத்தில் இருந்த காட்டை அழித்தான்; நிலத்தைப் பண்படுத்தினான். அந்த நிலத்தின்மீது கங்கை நீரைத் தெளித்தல் நலம் என்று அறிஞர் கூறினர். வடநாட்டுப் போர் பல போர்களில் அநுபவப்பட்ட படை ஒன்று வடக்கு நோக்கிப் புறப்பட்டது. மிக்க அநுபவம் வாய்ந்த படைத் தலைவன் அதற்குத் தலைவனாகச் சென்றான். இராஜேந்திரன் அப்படைக்கு வீரத்தை ஊட்டி வழி அனுப்பினான். அப்படை வேங்கை நாடு முடிய எதிர்ப்பு இன்றிச் சென்றது. அதற்கு அப்பால் கோதாவரிக்கு வடக்கே சென்றபொழுது அங்கங்கு இருந்த சிற்றரசர் பலர் அப்படையை எதிர்த்தனர். சோழர் படை அவர்களை எளிதில் வென்று ஒரிஸா மாகாணத்தை அடைந்தது. அங்கு இருந்த சிற்றரசர் ஒன்று சேர்ந்து வழிமறித்துப் போரிட்டனர். அஞ்சா நெஞ்சம் படைத்த சோழர் படை அம்மன்னர்களையும் புறங்கண்டது. மகிபாலன் பின்னர் இராஜேந்திரன் விடுத்த படை மேலும் வடக்கே சென்றது. அப்பொழுது மேற்கு வங்காளத்தைப் பால வம்சத்து அரசன் ஒருவன் ஆண்டுவந்தான். அவன் பெயர் மகிபாலன் என்பது. அவனுக்கு அடங்கிய சிற்றரசர் சிலர் இருந்தனர். அவன் அவர்களைத் தன்னுடன் சேர்த்துக்கொண்டு சோழப்படையை எதிர்க்கப் புறப்பட்டான். புறப்பட்ட அவன், சோழப் படையினது நோக்கம் அறியாமல் வெகுண்டான்; என்ன, தமிழரசன் இவ்வளவு மனத் துணிவுகொண்டு கங்கை வரை வருவது ஆச்சரியமாக இருக்கிறது! அப்படையை இதுவரை இங்கு வரவிட்டதே தவறு. வழியில் இருந்த அரசர்கள் உறங்கிக் கொண்டு இருந்தார்களா? நமது வீரத்தைத் தமிழரசன் அறியும் படி செய்ய வேண்டுவது நமது கடமையாகும், என்று முழக்க மிட்டான். அமைச்சன் அறிவுரை அப்பொழுது அவனுடைய முதல் அமைச்சன் எழுந்து அரசனை வணங்கினான். அவன் மகிபாலனை நோக்கி, ஐயனே, இந்தச் சமயத்தில் நான் சொல்வதைக் கவனமாகக் கேட்க வேண்டும்; அலக்ஷியமாக இருக்கலாகாது. இங்கு வருகின்ற படை என்ன நோக்கத்துடன் வருகிறது என்பதை நாம் அறியோம். இப்படை அரசன் இல்லாமல் வருகின்றது. இதிலிருந்தே இதன் திறமையை நாம் ஊகித்து உணரவேண்டும். இப்படை இராஜராஜ சோழன் காலமுதல் பல போர்களில் வெற்றிபெற்ற படையாகும். பாண்டிவீரர் போரிற் சிறந்தவர். அத்தகையவரை ஓடச் செய்து பாண்டிய நாட்டைக் கைப்பற்றியது இப்படையே ஆகும். மலைநாட்டுப் போர் புரிவதில் சேரநாட்டார் சமர்த்தர். அவர்களையும் தோற்கடித்துச் சேர நாட்டை அடிமைப்படுத்தியதும் இப்படையே என்பதை நாம் மறத்தல் ஆகாது. மேல்கரை ஓர நாடுகளை எல்லாம் வென்றதும் இப்படைதான். ஆண்மை மிகுந்த இப்படை வீரரே சாளுக்கிய அரசனான சத்யாரயனைத் துரத்தி அடித்தவர்; வேங்கை நாட்டை வென்றவர்; மஹேந்திர மலையில் வெற்றித் தூணை நாட்டியவர். இந்த மஹா வீரர்களே இலங்கையில் இரண்டு முறை போர் செய்து அத் தீவினைக் கைப்பற்றியவர்கள். இவர்களைத் தயாராக்கி மஹா வீரர்களாகச் செய்த பெருமை இராஜராஜனுக்கும் இராஜேந்திரனுக்குமே உரியது. `தென்னாட்டுத் திலகம் எனப் பெயர் பெற்ற இராஜேந்திர சோழன் பேரரசன்; வணங்காமுடி மன்னவன்; மஹா பாண்டிதன்; ஈசுவர பக்தன். அவனிடம் இப்படையைப் போலப் பல படைகள் உண்டு. ஒவ்வொரு மகாகாணத்திலும் நிலையாக இருக்கின்ற படைகள் வேறு உண்டு. அப்பேரரசனது பேராற்றலை நாம் அறிந்துகொள்ளுதல் நலம். அவனுடன் நண்பராக இருத்தலே சிறப்பு. அவனைப் பகைத்துக்கொள்வதால் நம் பெருமை சிறுமை ஆகுமே தவிர, வேறில்லை. இராஜேந் திரனுக்கு இணையான அரசர்கள் இங்கு இல்லை. ஆதலால் இவை யாவற்றையும் நன்றாக யோசித்துப் பார்க்க வேண்டும்; அவசரப்படலாகாது. இன்று என் சொற்கள் தங்கட்குத் தவறாகக் காணப்படலாம்; போருக்குச் சென்றால் பிறகு உண்மை தெரியும். நான் அறிந்ததை அறைந்தேன். இனித் தாங்கள் தங்கள் விருப்பம் போல நடக்கலாம், என்றான். காவலன் கடுங்கோபம் அமைச்சன் அறைந்த அறிவுமொழிகளைக் கேட்ட அரசன் கடுங்கோபம் கொண்டான்; அவன் கண்கள் சிவந்தன; பற்களைக் கடித்தான்; உதடுகள் துடித்தன. அவன் அமைச்சனை நோக்கி, அறிவற்ற அமைச்சனே, எனது வாள் வலியும் தோள் வலியும் நீ அறியாயா? எனது நாடு வீரர் நிறைந்த நாடு என்பதை மறந்தாயோ? எனது வம்சம் புகழ்பெற்றது அல்லவா? என் முன்னோர் சிறந்த வீரர்கள் அல்லவா? அவர்கள் பரம்பரையில் வந்த நான் தமிழ் அரசன் படைக்கு அஞ்ச வேண்டுமோ? அவனது நட்பைப் பெற்றா நான் வாழவேண்டும்? பேஷ்! உனது யோசனை நன்று! நன்று!! நீ இங்கு இருந்து அரசாட்சியைக் கவனி. நான் அப்படையைப் பாழ்படுத்தி மீள்வேன், என்று உறுமினான். சோழர்-மகிபாலன் போர் உறுமிய மகிபாலன் தன் படையை உற்சாகப் படுத்திப் புறப்பட்டான்; வலிந்து சென்று சோழர் படையுடன் போர் செய்தான்; தன் ஆற்றல் முழுவதையும் காட்டிப் போரிட்டான். என்ன பயன் உண்டானது? பலநாட்டுப் போர்களில் பண்பட்ட சோழர் படைக்கு முன் மகிபாலன் எம்மாத்திரம் ஆவான்! பாவம்! அவன் படை சிதைந்து ஓடியது; வேறு வழி இல்லாமல் உயிர்பிழைத்தல் போதும் என்று அரசன் ஓட்டம் எடுத்தான். ஆனால் சோழ வீரர் அவனைப் பின்பற்றிச் சென்று சிறைப் படுத்தினர். `கங்கை கொண்டான் பின்னர்ச் சோழப்படை கங்கையாற்றை அடைந்தது; பல பொற்குடங்களில் கங்கைநீரை நிரப்பிக்கொண்டது; பேரரசன் ஆணைப்படி அக் குடங்களைத் தோற்ற அரசர்கள் முடிமீது வைத்துத் திரும்பியது. இவ்வாறு சோழனது மஹா தண்ட நாயகன் (பெரும்படைத் தலைவன்) வெற்றியோடு மீண்டான். அதனை அறிந்த இராஜேந்திரன் மகிழ்ச்சி அடைந்தான்; அந்நாயகனை வரவேற்க வேங்கை நாடு சென்றான். அப்பெருமானைக் கண்ட படை வீரர் வெற்றி முழுக்கம் செய்தனர். அரசன் அவர்களைப் பாராட்டி அழைத்து வந்தான். அரசன், வரும் வழியில் பல இடங்களில் தங்கித் தான தருமங்கள் செய்தான்; கோவில்களில் விசேஷ பூசைகள் செய்வித்தான்; கடைசியில் தான் நகரத்தை அமைக்க இருந்த இடத்தில் கங்கை நீரைத் தெளித்து மகிழ்ந்தான்; கங்கை கொண்ட சோழபுரம் என்ற நகரத்தை அமைத்தான்; அதனில் கங்கை கொண்ட சோழேசுவரம் என்ற சிவன் கோவிலைக் கட்டினான்; சோழ கங்கம் என்ற மிகப்பெரிய ஏரியை உண்டாக்கினான். இவற்றைப் பற்றி அடுத்த பகுதியிற் காண்போம். இராஜேந்திரன் கங்கை (நீரைக்) கொண்டுவந்த காரணத்தால், `கங்கை கொண்டான் என்றும், `கங்கை கொண்ட சோழன் என்றும் வழங்கப்பட்டான். 8. கங்கை கொண்ட சோழபுரம் நகர அமைப்பு: அரண்மனை பழைய நகரங்களில் மன்னவன் மாளிகை நகரத்தின் நடுவில் இருப்பது வழக்கம். அம்முறைப்படியே இராஜேந்திர சோழனது அரண்மனை நகரத்தின் நடுநாயகமாக அமைக்கப்பட்டது. அரண்மனை `சோழர் மாளிகை எனப் பெயர் பெற்றது. அரண்மனையில் மகளிர் வசிக்கத்தக்க அந்தப்புரம் அழகாகச் சமைக்கப்பட்டது. நல்ல காற்றும் வெளிச்சமும் வரத்தக்கவாறு அறைகள் அமைப்புண்டன. அரசன் இருக்கத்தக்க இடம் மாட மாளிகைகளைப் பெற்றது. அரசன் அமைச்சரையும் பிற உத்தியோகதர்களையும் கண்டு பேசத் தக்க விசாலமான அறையும், அவனது அந்தரங்கக் காரியதரிசியின் அறையும் அவனைச் சேர்ந்தோர் இருந்து வேலை செய்யத்தக்க அறைகளும் அரண்மனையின் ஒரு பகுதியில் இருந்தன. அரசனுக்கென்று பல அறைகள் இருந்தன. அரண்மனைக்குள் இசை அரங்கம், நடன அரங்கம், நாடக அரங்கம், மகளிர் பந்தாடும் இடம், அழகிய பூஞ்சோலை, செய்குளம் முதலியன அமைக்கப்பட்டன. அரண்மனைக்கு அப்பால் அரண்மனையை அடுத்து அரண்மனைக் காவலர் விடுதிகள் இருந்தன. தேர்ப்பாகர், யானைப்பாகர், குதிரைப் பாகர், படைத் தலைவர், போர் வீரர் என்பவர் வசிக்கும் தெருக்கள் அமைக்கப்பட்டன. அரச மரபினர் வாழும் தெருக்கள் அமைந்தன. அப்பால் அந்தணர் வாழும் தெருக்கள், வணிகர் வாழும் வளமிக்க தெருக்கள் அமைப்புண்டன. அவற்றுக்கு அப்பால் வேளாளர் வாழும் தெருக்கள் காட்சி அளித்தன. இவற்றுக்கு அப்பால் மருத்துவர், சோதிடர், இசைவாணர், நடன மாதர், நாடக மகளிர், ஆடல் ஆசிரியர், இசையாசிரியர், நாடக ஆசிரியர் என்பவர் தனித்தனியே வாழும் தெருக்கள் இருந்தன. மன்றங்களும் சோலைகளும் அங்கங்கே அறச்சாலைகளும் கல்விச்சாலைகளும் விளங்கின. பொது மக்கள் ஒன்று கூடுவதற்கும் அயல்நாட்டார் வந்து தங்குவதற்கும் பல மன்றங்கள் இருந்தன. நகர மக்கள் மாலையில் பொழுதுபோக்க வசதியாக அங்கங்கே அழகிய பூஞ்சோலைகள் அமைக்கப்பட்டு இருந்தன. தொழிலாளர் தெருக்கள் புதிய தலைநகரத்தில் தொழிலாளர் வசிக்கும் தெருக்கள் பல அமைந்திருந்தன. பருத்தி நூல், பட்டு நூல், ஆட்டு மயில் இவற்றால் ஆடை நெய்யும் சாலியர் தெருக்கள் சில; இரும்பு, வெண்கலம், பித்தளை, செம்பு, வெள்ளி இவற்றால் பலவகைப் பொருள்களைச் செய்பவர் தெருக்கள் சில; கட்டடம் கட்டுபவர், ஓவியம் தீட்டுபவர், கல்லுளித் தச்சர், தையற்காரர், பாய் மிடையவர், பந்தல் அலங்காரம் செய்பவர் முதலிய பலவகைத் தொழிலாளர் வாழும் தெருக்கள் இருந்தன. பூவேலை செய்பவர், இலைகளைக் கொண்டு அலங்காரம் செய்பவர், பிட்டு விற்பவர், அப்ப வாணிகர், சந்தனம் முதலிய வாசனைப் பொருள்களை விற்பவர் தனித்தனியே வாழ்ந்த தெருக்கள் சில. முத்து, பவளம், நவமணிகள் இவற்றைக் கோக்கும் தொழிலாளர், பொன் வாணிகர், பலவகைத் தானியம் விற்பவர் வாழ்ந்த தெருக்கள் சில. கடைத்தெரு நகரத்தின் ஒரு பகுதியில் கடைத்தெரு அகன்று நீண்டு அமைந்திருந்தது. அதன் இரண்டு பக்கங்களிலும் பலவகைக் கடைகள் இருந்தன. ஒரு பக்கம் நெல், வரகு, கம்பு, சோளம் முதலிய தானியக் கடைகள் இருந்தன. அவற்றை அடுத்துப் பல சரக்குக் கடைகள் ஒழுங்காக அமைந்திருந்தன. மற்றொரு பக்கம் பாத்திரக் கடைகள், வாசனைப் பொருட் கடைகள், துணிக் கடைகள், புஷ்பக் கடைகள் முதலியன காட்சி அளித்தன. வேறொரு பக்கம் பொன்-வெள்ளிக் கடைகளும், மரகதம், மாணிக்கம், வைரம், வைடூரியம், கோமேதகம், புஷ்பராகம் என்னும் நவரத்தினக் கடைகளும் விளங்கின. இக் கடைகட்கு அப்பால் வில், வேல், வாள், அம்பு, ஈட்டி, கேடயம், தலைக் கவசம், உடல் கவசம் முதலிய போர்க் கருவிகளை விற்கும் கடைகள் விளக்க முற்று இருந்தன. கோவில்கள் அரண்மனையை அடுத்து இராஜேந்திரனாற் கட்டப் பட்டபெரிய சிவன் கோவில் சிறப்புற்று விளங்கியது. நகரத்தின் பல இடங்களில் திருமால், முருகன், துர்க்கை இவர்கட்குக் கோவில்கள் அமைந்திருந்தன.நகரம் பல சதுரமைல்கள் பரப்புடையது. அதன் நாற்புறமும் எல்லை அம்மன் கோவில்கள் அமைந்திருந்தன.* கோபுரம்-மதில்-திருச்சுற்று மாளிகை இஃது அரண்மனைக்குப் பக்கத்தில் கட்டப் பட்ட பெரிய கோவில். இஃது இராஜராஜன் தஞ்சாவூரில் கட்டிய பெரிய கோவிலைப் போன்றது. இதற்கு ஆறு பெரிய கோபுரங்கள் இருந்தன. இதன் மதிற்சுவர் நான்கடி அகலம் உடையது; நீளம் அறுநூறு அடி இருக்கலாம். கோவில் நீள் சதுரமானது; தரை கருங்கற்கள் பதிக்கப்பெற்றது. மதிற்சுவரின் நான்கு மூலைகள், கோட்டைகளில் உள்ள காவலர் அறைகளைப் போன்ற அமைப்பை உடையவை. பிராகாரத்தில் நாற்புறமும் இரண்டு அடுக்கு மாளிகை இருந்தது. அது `திருச்சுற்று மாளிகை எனப் பெயர் பெற்றது. கோவில் நடு இடத்தில் மூலதானம், நடுமண்டபம், முன் மண்டபம் என்பவை அமைந்துள்ளன. மூல அறையில் மிகப் பெரிய லிங்கம் இருக்கின்றது. அதன் உயரம் பதின்மூன்று அடி; சுற்றளவு முப்பத்து மூன்று அடி. அதற்கு எதிரில் நடு மண்டபம் இருக்கிறது. அதற்குள் செல்ல இரண்டு பக்கங்களிலும் வாயில்கள் இருக்கின்றன. நடு மண்டபத்தை அடுத்து முன் மண்டபம் இருக்கிறது. அது நீள் சதுரமானது. அதன்மீது மாளிகை ஒன்று காணப்படுகிறது. முன் மண்டபத்தில் திருநாவுக்கரசர், சம்பந்தர், சுந்தரர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. ஒரு மூலையில் ஒரே வட்டக்கல்லில் நவக்கிரகங்கள் செதுக்கப்பட்டுள்ளன. பிராகாரத்தில் உட்கோவிலுக்கு எதிரில் ஒரு பெரிய நந்தி கட்டப்பட்டு இருக்கிறது. அது சுண்ணாம்பாலும் செங்கற்களாலும் அமைக்கப்பட்டது. அதன் உயரம் சுமார் பதினைந்து அடி இருக்கலாம். அதற்கு வலப் பக்கத்தில் `சிங்க முகக் கிணறு இருக்கின்றது. உட்கார்ந்த நிலையில் உள்ள சிங்கத்தின் வயிறு கிணற்றுக்குச் செல்லும் வழியாகும். அவ் வழியே கீழ்நோக்கி நாற்பது படிக்கட்டுகளைத் தாண்டினால் கிணற்று நீரைக் காணலாம். விமானம் இது நூறு அடிச் சதுரமானது; ஒன்பது அடுக்குகளைக் கொண்டது. முதல் இரண்டு அடுக்குகள் ஒன்றன் மேல் ஒன்றாக நிமிர்ந்து நிற்கின்றன. மற்றவை உயரப் போகப் போகச் சிறுத்துச் சாய்வாகச் செல்கின்றன. விமானத்தின் நான்கு பக்கங்களிலும் வாயில்களும் மாடங்களும் காண்கின்றன. விமானம் முழுவதும் வேலைப்பாடு கொண்டது. பல அழகிய பதுமைகள் அங்குக் காட்சி தருகின்றன. விமான உச்சியில் ஒரே கல்லால் ஆகிய சிகரம் இருக்கிறது. mj‹ÛJ fyr« ïUªjJ.* விமானத்தின் உயரம் நூற்று எழுபது அடி. வாயிற் காவலர் இந்தப் பெரிய கோவில் வாயிற்காவலர் உருவச் சிலைகள் பதினான்கு ஆகும். அவை யாவும் ஏழடிக்கு மேற்பட்ட உயரம் உடையவை. ஒவ்வொன்றும் ஒரே கல்லால் ஆனது; மிக அழகிய வேலைப்பாடு கொண்டது. சிற்பங்கள் இக்கோவில் சிற்பங்கள் கண்ணையும் கருத்தையும் கவரத்தக்கவை. அவை இன்று செய்தாற் போலப் புதியனவாகக் காண்கின்றன. நடு மண்டபச் சுவர்களில் உள்ள அர்ச்சுனன் தவம் செய்தல், சிவபெருமான் வேடனாக அவனிடம் வருதல், இருவரும் போரிடல் போன்ற சிற்பங்கள் அழகானவை. அங்கு உள்ள நடன வகைகளை உணர்த்தும் சிற்பங்கள் பார்க்கத் தக்கவை. `சண்டீசப் பதம் உணர்த்தும் சிற்பம் சண்டீசர் என்பவர் ஒரு பிராமணச் சிறுவர்; மாடுகளை மேய்த்தவர். மாடுகள் மேயும்பொழுது அவர் மணலால் லிங்கத்தைச் செய்து பூசை செய்வார்; மாடுகள் அந்த லிங்கத்தின்மீது பாலைச் சொரியும். ஒரு நாள் அவர் தகப்பனார் இக்காட்சியைக் கண்டார்; கோபம் கொண்டார்; அந்த மணல் லிங்கத்தைக் காலால் உதைத்தார். உடனே சண்டீசர்க்குக் கோபம் அளவு கடந்தது; லிங்கத்தை உதைத்த தந்தையார் காலை வெட்டினார். அவரது பக்தியே இதற்குக் காரணம் அல்லவா? அதனால் சிவபெருமான் மகிழ்ந்து, சண்டீசர்முன் உமாதேவியுடன் காட்சி அளித்தார்; அவரைத் தம் காலடியில் உட்கார வைத்தார்; தாம் சூடி இருந்த கொன்றை மாலையை எடுத்துச் சண்டீசர் முடியில் சூட்டினார்; அவரைத் தாம் இருக்கும் எல்லாக் கோவில்களிலும் அதிகாரியாக அமர்த்தினார். அந்தப் பதவியே `சண்டீசப் பதம் என்பது. இவ்வாறு சிவபிரான் உமாதேவியுடன் இருந்து சண்டீசரை ஆசிர்வதிக்கும் இந்தக் காட்சி கல்லில் செதுக்கப்பட்டு இருக்கிறது. அச்சிற்ப வேலையே அங்குள்ள எல்லா வேலை களிலும் சிறப்புடையது. அஃது இன்று செய்தாற்போலப் பேரழகுடன் விளங்குகிறது. இராஜேந்திர சோழனது உள்ளத்தை உருக்கிய அச்சிற்பம் இன்றும் தன்னைக் காண்பவர் கண்கட்கு விருந்து அளித்துக் கொண்டு இருக்கிறது. பாடல் பெற்ற கோவில் இராஜராஜன்-இராஜேந்திரன் காலத்தில் கருவூர்த்தேவர் என்ற சைவப் பெரியார் ஒருவர் இருந்தனர். அவர் தஞ்சைப் பெரிய கோவில்மீது பத்துப் பாக்கள் பாடியுள்ளார். அப்பெரியார் இராஜேந்திரன் கட்டிய கங்கை கொண்ட சோழேசுவரத்தின் மீதும் பத்துப் பாடல்கள் பாடினார். அப்பாடல்கள் உள்ளத்தை உருக்கத் தக்கவை. சோழ கங்கம் அமைப்பு இராஜேந்திரன் அமைத்த சோழகங்கம் என்னும் ஏரி ஊருக்கு வடக்கே இருக்கின்றது. இதன் நீளம் தெற்கு வடக்கில் பதினான்கு மைல்; அகலம் நான்கு மைல். இதன் கரை மிகவும் உயர்ந்து அகன்றது. ஏரி மிகவும் மேடான இடத்தில் அமைந் திருக்கிறது. இதற்குத் தண்ணீர் வந்து சேர இரண்டு பெரிய கால்வாய்கள் வெட்டப்பட்டன. ஒன்று கொள்ளிடத்தில் இருந்து வெட்டப்பட்டது. அதன் நீளம் அறுபது மைல். வடக்கே வெள்ளாற்றிலிருந்து ஒரு கால்வாய் வெட்டப்பட்டு இருந்தது. இன்றைய நிலைமை இந்தப் பெரிய ஏரி இப்பொழுது மணல் நிறைந்து மேடாக இருக்கிறது. இஃது இப்பொழுது `பொன்னேரி என்று வழங்கப் படுகிறது. இஃது இராஜேந்திரன் காலத்தில் கடல்போலக் காட்சி தந்திருக்க வேண்டும். இந்த ஏறிப் பாய்ச்சலால் சுற்றுப்புற ஊர்கள் நல்ல விளைச்சலைப் பெற்றிருக்கும். காடுகளை அழித்து நாட்டைப் பண்படுத்திய இராஜேந்திரன் இந்த ஏரியை அமைத்துப் புகழ் பெற்றான். இந்தியாவில் முதல்தர ஏரி இந்திய ஏரிகளில் பெரியதும் சிறந்ததும் போஜபுரத்து ஏரி என்று அரசாங்கத்தார் கருதினர். ஆனால் அவர்கள் இந்த ஏரியைப் பார்த்த பிறகு அந்த எண்ணத்தை மாற்றிக் கொண்டார்கள். இந்த ஏரி சமவெளியில் அமைக்கப்பட்டிருப்பது. இயற்கைச் சாதனமான மலைகள் இல்லை; மலைகளுக்கு இடையிலும் இஃது அமையவில்லை. இது பதினாறு மைல் நீளமும் நான்கு மைல் அகலமும் கொண்டதன்றோ? நாற்புறமும் கரைகள் செயற்கைக் கரைகளே. அவை உடைப்பு ஏற்படாதபடி பலமாக அமைக்கப்பட்டு இருப்பதே ஆச்சரியம். இப்பெரிய ஏரியில் நீரைத் தேக்கிக் காடு நாடாக்கிய இராஜேந்திர சோழனை நாம் வாழ்த்தாமல் இருக்க முடியுமா? 9. கடாரம் கொண்ட சோழன் கடல் வாணிகம் `திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்பது தமிழ்ப் பழமொழி. தமிழர் அதன்படி நீண்ட காலமாகக் கடல் கடந்த நாடுகளுக்குச் சென்றனர்; அங்குத் தங்கி வாணிகம் செய்தனர். தமிழ் நாட்டு வணிகர் அரேபியா, எகிப்து, இட்டாலி முதலிய மேற்கு நாடுகளுடனும் மலேயா, சையாம், சுமத்ரா, ஜாவா முதலிய கிழக்கு நாடுகளுடனும் ஆயிரக் கணக்கான ஆண்டுகளாகக் கடல் வாணிகம் செய்து வந்தனர். இவ்வாறு மலேயா, சையாம், இந்து-சீனம், கிழக்கு இந்தியத் தீவுகள் முதலிய நாடுகளில் தமிழர் தங்கி வாணிகம் செய்து வந்தனர். அவர்கட்குத் தமிழ் நாட்டில் இருந்து சரக்குகள் ஏராளமாகச் சென்றன. அவர்கள் அச்சரக்குகளை அங்கு விற்றுப் பொருள் திரட்டினர்; தாம் தாம் தங்கி இருந்த நாடுகளில் கோவில்கள் கட்டினர்; குளம் வெட்டினர்; அன்ன சத்திரங்களை அமைத்தனர்; இவ்வாறு தம் ஊதியத்தின் ஒரு பகுதியை நல்ல வழிகளில் செலவழித்தனர். இராஜராஜன்-இராஜேந்திரன் காலங்களில் இக்கடல் வாணிகம் சிறப்புற நடந்தது. மலேயா முதலிய நிலப்பகுதிகளை ஆண்ட அரசன் சோழப் பேரரசருடன் நட்புக்கொண்டு வாழ்ந்தான். அவன் தன் நாட்டுப் பௌத்த வணிகர்க்காக நாகப்பட்டினத்தில் ஒரு பௌத்தர் கோவிலைக் கட்ட அநுமதி வேண்டினான். இராஜராஜன் அநுமதி தந்தான்; இராஜேந்திரன் ஆனைமங்கலம் என்னும் கிராமத்தைத் தானமாக அளித்தான். இவ்வாறு அயல் நாட்டு மக்கள் தமிழ் நாட்டில் தங்கி வியாபாரம் செய்தனர். இப்படியே தமிழர் மலேயா, சையாம், சுமத்ரா, ஜாவா முதலிய பகுதிகளில் தங்கி வாணிகம் செய்து வந்தனர். சோழன் படையெடுப்பு இராஜேந்திரனுக்கும் மேற்சொன்ன அரசனுக்கும் பகைமை ஏற்பட்டதோ, அல்லது அந்த அரசன் தன் நாட்டில் வாழ்ந்த தமிழ் வணிகரைத் துன்பப்படுத்தினானோ-காரணம் இன்னது என்று தெரியவில்லை. சோழ அரசன் கிழக்கு நாடுகள்மீது படை யெடுத்தான். நாகப்பட்டினம் முதலிய துறைமுகங்களில் இருந்து போர்க் கப்பல்கள் புறப்பட்டன. ஆயிரக் கணக்கான வீரர் போர் உடைகளை அணிந்துகொண்டு புறப்பட்டனர். ஒவ்வொரு கப்பல்மீதும் புலிக்கொடி பறந்துகொண்டு இருந்தது. இராஜேந்திரன் யோசனைப்படி சோழப்படை வீரர் முதலில் மாநக்க பாரம் (நிக்கோபர்) என்னும் சிறு தீவுக் கூட்டத்தைக் கைப்பற்றினார்; பின்னர், மலேயா, சுமத்ரா, ஜாவா முதலிய நாடுகளில் உள்ள துறைமுகங்களில் இறங்கினர்; ஒரே காலத்தில் கடாரத்து அரசனுடைய பல துறைமுக நகரங்களைத் தாக்கினர். கடாரத்து அரசன் செய்வகை அறியாது விழித்தான்; பிறகு ஒருவாறு தேறித் தன் படைகளைத் திரட்டிப் பல இடங்களிலும் போரிட்டான்; எனினும் பயன்படவில்லை. இறுதியில் அவன் சோழப் பேரரசனுடன் சமாதானம் செய்துகொண்டான். சோழன் வென்ற இடங்கள் இவை படத்தில் குறிக்கப்பட்டு இருக்கின்றன. இவற்றுள் முக்கியமானது கடாரம். அது மலேயாவின் மேல்கரையில் உள்ள துறைமுகம். அஃது இப்பொழுது `கெடா என்று வழங்குகிறது. மற்ற எல்லாத் துறைமுகங்களை விட அதுவே தமிழரது கடல் வாணிகத்துக்கு முக்கியமானதாக இருந்தது. அரசனும் அங்குத்தான் இருந்தான். அவன் `கடாரத்து அரசன் என்று வழங்கப்பட்ன். இராஜேந்திரன் கடாரத்தைக் கைப்பற்றி வெற்றி பெற்றதால், `கடாரம் கொண்டான் என்றும், `கடாரம் கொண்ட சோழன் என்றும் பெயர் பெற்றான். மிகப் பெரிய செயல் நீராவிக் கப்பல்கள் இல்லாத அப்பழைய காலத்தில் பல நூறு மைல்களுக்கு அப்பால் உள்ள நாடுகளைப் பாய்மரக் கப்பல்களைக் கொண்டு வெல்லுதல் எளிமையான வேலை அன்று. அவ்வேலையைச் சோழ மரபில் வேறெவருமே செய்ததில்லை. அஃது அரிதினும் அரிது. அத்தகைய அபூர்வ வேலையைச் செய்து தமிழரது பேராற்றலைக் கிழக்கு நாடுகளில் உணரச்செய்த பேரரசனை நாம் வாயார வாழ்த்துவோமாக! 10. அரசியல் சோழப் பெருநாடு வடக்கே கிருஷ்ணையாறு முதல் தெற்கே கன்னியா குமரிவரை பரவி இருந்த சோழப் பெரு நாட்டையும் வட இலங்கையையும் இராஜேந்திரன் ஆளவேண்டியவன் ஆனான். அவன் இப்பெரு நாட்டைப் பல மண்டலங்களாகப் பிரித்தான்; தன் நம்பிக்கைக்கு உரிய பெரிய அதிகாரிகள் பார்வையில் அவற்றை விட்டான்: ஒவ்வொரு மாகாணத்திலும் `நிலைப்படை வைத்தான். எல்லா மாகாணங்களையும் மேற்பார்வையிட வலிமையுள்ள நடு அரசாங்கம் அமைந்திருந்தது. இவ்வாறு நன்முறையில் அமைக்கப்பட்டதால், அரசியல் ஒழுங்காக நடந்து வந்தது. அதனால் அவன் கவலை இல்லாமல் நாட்டைக் கண்காணித்து வந்தான். மண்டலத் தலைவர்கள் இராஜேந்திரன் தன் மூத்த மகனான இராஜாதிராஜனைத் தன் இளவரசனாக முடிசூட்டினான்; அரசியல் காரியங்களை அவனிடம் ஒப்புவித்தான். இராஜேந்திரன் தன் தந்தைக்கு இருபத்தைந்து வருட காலம் உதவியாக இருந்தாற்போலவே, இராஜாதிராஜனும் தன் தந்தையுடன் இருந்து அரச காரியங்களைக் கவனித்து வந்தான்; மற்ற இளவரசரை மண்டலத் தலைவர் களாக இருக்கச் செய்தான். ஓர் அரசகுமரன் சேர-பாண்டிய மண்டலங்களுக்குத் தலைவனாக இருந்தான். மற்றொருவன் குடகு மைசூர்ப் பகுதிகட்குத் தலைவனாக இருந்தான். மற்ற உத்யோகதரைவிட அரசகுமாரர் மிகுந்த பொறுப்புடன் மண்டலங்களை ஆள்வார்கள் அல்லவா? அதனால் இந்த ஏற்பாடு சோழப் பெருநாட்டைப் பலப்படுத்தி வைத்தது. அதிகாரிகள் அரசனுக்கு உதவியாக இருந்தது அமைச்சர் கூட்டம். அவர்கள் அரசியலில் பலவகைப் பிரிவுகளையும் மேற்பார்த்து வந்தனர். அந்த அமைச்சர்கட்கு அடங்கிய தனித்தனி இலாகாக்கள் இருந்தன. அரசியல் அதிகாரிகள் சிறுதரம், பெருந்தரம்* என இருவகைப்பட்டனர். இவ்வாறு ஒவ்வோர் அரசியல் பிரிவிலும் பல உத்யோகதர்கள் இருந்தார்கள். அரசனுடன் இருந்து அவன் கட்டளைகளை நிறைவேற்றுவோன் அந்தரங்கக் காரியதரிசி ஆவான். கிராம ஆட்சி கிராம ஆட்சியைக் கிராம ஜனங்களே கவனித்தார்கள். அவர்கள் தங்களுக்குள்ளே தக்கவர்களைத் தேர்ந்தெடுத்தார்கள். தேர்ந்து எடுக்கப் பட்டவர்கள் ஊர் ஆட்சியைக் கவனித்து வந்தனர்; வழக்குகளை விசாரித்து நியாயம் வழங்கினர். படைகள் அரசனிடம் நால்வகைப் படைகள் இருந்தன. ஒவ்வொரு படையும் ஒரு தலைவன்கீழ் இருந்தது. அவன் `பெரிய சேனைத் தலைவன் ஆவன். அவனுக்கு அடங்கிய சிறு சேனைத் தலைவர் பலர் ஒவ்வொரு பிரிவிலும் இருந்தனர். நால்வகைப் படைகளையும் நடத்திப் போருக்குச் சென்றவன் `மஹா தண்ட நாயகன் எனப்பட்டான். நமது இராஜேந்திரன் இளவரசனாக இருந்த பொழுது இப்பதவியில் இருந்தான். இப்படைகளைத் தவிர அரசனைக் காக்கும் படைகள் பல உண்டு. அவை, அவனுக்கு ஆபத்து நேருமாயின் உடனே தம்முயிரைப் போக்கும் வீரர் படைகள் ஆகும். அப்படைகள் `வேளைக்காரப் படைகள் எனப்படும். நாணயங்கள் சோழ அரசர்கள் பொன், வெள்ளி நாணயங்களை அச்சிட்டுப் பயன்படுத்தினார்கள். கழஞ்சு, காசு என்பன பொன் நாணயங்கள். கருங்காசு, ஈழக்காசு என்பன வெள்ளிக் காசுகள். மருத்துவச் சாலைகள் இராஜேந்திரன் ஆட்சியில் பல இடங்களில் பெரிய மருத்துவச் சாலைகள் இருந்தன. தஞ்சாவூரில் இராஜராஜன் தந்தையின் பெயரால் சுந்தர சோழன் ஆதுல சாலை என்று ஒரு மருத்துவச்சாலை இருந்தது. அதனை இராஜேந்திரனுக்கு அத்தையான குந்தவையார் மேற்பார்த்து வந்தார். திருமுக்கூடல் (செங்கற்பட்டு ஜில்லா) என்னும் ஊரில் ஒரு வைத்தியசாலை இருந்தது. அங்கு மருத்துவர் இருவர் இருந்தனர். ஒருவர் நோய்கட்கு மருந்து கொடுப்பவர்; மற்றொருவர் கட்டி முதலியவற்றை அறுப்பவர். நோயாளிகளைக் கவனிக்கத் தாதிமார் இருவர் இருந்தனர். மருந்து வகைகளைத் தயாரிப்பவர் இருந்தனர். கல்விச் சாலைகள் நாடெங்கும் தமிழ்க் கல்விச் சாலைகள் இருந்தன. சில முக்கியமான ஊர்களில் - காஞ்சி, திருமுக்கூடல், எண்ணாயிரம் போன்ற இடங்களில் - வடமொழிக் கல்லூரிகளும் இருந்தன. தமிழில் புலமை பெற்ற அறிஞர் பலர் இருந்தனர். பேரரசனான இராஜேந்திரனே `பண்டிதன் எனின், அவன் சபையில் புலவர் பலர் இருந்தனர் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ? தேவார நாயகம் இராஜேந்திரன் சைவத்தில் அழுத்தமான பற்றுடையவன்; திருமுறைகளை நன்றாக வாசித்தவன். அவன் காலத்தில் பல கோவில்களில் திருமுறைகள் ஓதப்பட்டு வந்தன. திருமுறை நூல்கள் பாதுகாக்கப்பட்டன. அவை அவ்வப்பொழுது கெட்டுவிடின் புதுப்பிக்கப்பட்டன. இவ்வாறு திருமுறைகளைக் கோவில்களில் வைத்துப் பாதுகாத்து, புதுப்பித்துப் பாடம் சொல்லி வந்தவர் தமிழ் விரகர் எனப்பட்டனர். இவர்கள் பல பெரிய பழைய கோவில்களில் நியமிக்கப்பட்டு இருந்தனர். கோவில்களில் திருமுறை பாடுவார், `ஓதுவார் எனப்பட்டனர். இராஜேந்திரன், இவ்விரு வகையினரையும் மேற்பார்க்க அரசாங்க அதிகாரி ஒருவனை நியமித்தான். அவன் தேவார நாயகம் எனப்பட்டான். அவன் தமிழ்நாடு முழுவதும் சுற்றித் தன் வேலையைச் செய்துவந்தான். தேவார நாயகத்தை நியமித்ததில் இருந்தே இராஜேந்திரன் திருமுறைகளிடம் கொண்டிருந்த மதிப்பை நன்கு உணரலாம் அல்லவா? இச் செயலைக் கொண்டு அப்பெருமகன் தன் தந்தையிடம் கொண்டிருந்த பற்றை நன்கு அறியலாம் அல்லவா? அரச குரு தஞ்சைப் பெரிய கோவிலில் பூசை செய்து வந்தவர் சர்வ சிவ பண்டிதர் என்பவர். அவர் நான்கு வேதங்களையும் ஆகமங்களையும் சைவத் திருமுறைகளையும் நன்றாகப் படித்தவர்; சிறந்த பக்திமான்; நிறைந்த ஒழுக்கம் உடையவர். இராஜேந்திரன் அப்பெரியவரிடம் மிக்க மதிப்புடன் நடந்துவந்தான்; அவரையே தன் சமய குருவாகக் கொண்டான்; அவருக்கும் அவருடைய மாணவர்க்கும் நிலங்களை மானியமாக விட்டான். பரந்த சமய நோக்கம் இராஜேந்திரன் சிறந்த சிவபக்தன். அவன் தந்தையைப் போலவே எல்லா மதங்களையும் சமமாக எண்ணிவந்தான். அவன் ஆட்சியில் பௌத்தர் கோவில்களும் சமணர் கோவில்களும் பல தருமங்களைப் பெற்றன. அவ்வாறே வைணவர் கோவில்களும் சிறப்புப் பெற்றன. இந்தப் பரந்த சமய நோக்கத்தைக் கண்ட குடிமக்கள், தம் பேரரசனை வாயார வாழ்த்தினர். குடும்ப நிலை இராஜராஜன் மனைவியர் பலர் என்பதை முன்னர் அறிந்தோம் அல்லவா? இராஜேந்திரன் அவர்கள் எல்லோரையும் தன் தாய்மாராகவே கருதி நடந்துவந்தான்; தன்னை வளர்த்த குந்தவையார் என்ற அத்தையை மிக்க மரியாதையுடன் நடத்திவந்தான். அப்பெண்மணிகள் எல்லோரும் செய்துவந்த கோவில் திருப்பணிகளையும் பிற அறச் செயல்களையும் தாராளமாகச் செய்துவரும்படி அநுமதித்தான்; அவ்வாறே தன் மனைவியரையும் மக்களையும் அன்புடன் நடத்திவந்தான். சுருங்கக் கூறின், அரச குடும்பம் மிக்க ஒற்றுமையுடன் வாழ்ந்து, நல்ல அறங்களைச் செய்துவந்தது. தந்தையிடம் பற்று இராஜராஜன் பெற்ற வெற்றிகளையும் அரசியலையும் பாராட்டிப் புலவர் ஒருவர் இராஜராஜ விஜயம் என்ற நாடகத்தைச் செய்தார். இராஜேந்திரன் அப்புலவரைப் பாராட்டிப் பரிசளித்தான்; அந் நாடகத்தைக் கோவில்களில் விழாக் காலங்களில் படித்துக் காட்ட ஏற்பாடு செய்தான்; அதனைப் படித்து விளக்குபவர்க்கு நில தானம் செய்தான். ஒப்பற்ற சோழப் பேரரசன் இராஜேந்திரன் கல்வித்துறையில் பெரும் புலவன்; அரசியலில் நிபுணன்; போர் புரிவதில் சமர்த்தன்; சென்ற இடமெல்லாம் வெற்றியே பெற்று மீண்டவன். சோழ அரசர் எவருமே பெறாத வெற்றிகளைப் பெற்ற பெருவீரன்; கங்கை யாறுவரை படையெடுத்து வெற்றி மாலை சூடிய வீரன்; வடக்கே கங்கைவரையும் கிழக்கே சையாம் வரையும் தமிழர் வீரத்தை உலகறியச் செய்த மஹா வீரன். இதனை எண்ணித் தமிழராகிய நம்மைப் பெருமைகொள்ளச் செய்யும் அவதார புருஷன். இவற்றுடன் அவன் தெய்வபக்தியிலும் சிறந்தவனாக இருந்தது போற்றத்தக்கது. இங்ஙனம் எல்லாப் பண்புகளும் நிறையப் பெற்ற வேறு சோழ அரசனை வரலாற்றில் காண்பது அருமை! அருமை! இப்பெருமகன் திருப்பெயர் நீடூழி வாழ்க !  ஆசிரியரின் பிற நூல்கள் (கால வரிசையில்) 1. நாற்பெரும் வள்ளல்கள் 1930 2. ஹர்ஷவர்த்தனன் 1930 3. முடியுடை வேந்தர் 1931 4. நவீன இந்திய மணிகள் 1934 5. தமிழ்நாட்டுப் புலவர்கள் 1934 6. முசோலினி 1934 7. ஏப்ரஹாம் லிங்கன் 1934 8. அறிவுச்சுடர் 1938 9. நாற்பெரும் புலவர்கள் 1938 10. தமிழர் திருமண நூல் 1939 11. தமிழர் திருமண இன்பம் 1939 12. மணிமேகலை 1940 13. மொஹெஞ்சொதாரோ அல்லது சிந்துவெளி நாகரிகம் 1941 14. பாண்டியன் தமிழ்க் கட்டுரை (முதல் தொகுதி) 1941 15. பல்லவர் வரலாறு 1944 16. மறைந்த நகரம் (மாணவர் பதிப்பு) 1944 17. சேக்கிழார் (ஆராய்ச்சி நூல்) 1945 18 இரண்டாம் குலோத்துங்கன் 1945 19. கட்டுரை மாலை 1945 20. செய்யுள் - உரைநடைப் பயிற்சி நூல் 1945 21. முத்தமிழ் வேந்தர் 1946 22. காவியம் செய்த கவியரசர் 1946 23. விசுவநாத நாயக்கர் 1946 24. சிவாஜி 1946 25. சிலப்பதிகாரக் காட்சிகள் 1946 26. இராஜேந்திர சோழன் 1946 27. பல்லவப் பேரரசர் 1946 28. கட்டுரைக் கோவை 1946 29. சோழர் வரலாறு 1947 30. ஆராய்ச்சிக் கட்டுரைகள் 1947 31. பண்டித ஜவாஹர்லால் நெஹ்ரு 1947 32. வீரத் தமிழர் - 1947 33. இருபதாம் நூற்றாண்டுப் ஸபலவர் பெருமக்கள் 1947 34. இந்திய அறிஞர் 1947 35. தமிழ்நாட்டு வடஎல்லை 1948 36. பெரியபுராண ஆராய்ச்சி 1948 37. கதை மலர் மாலை (மலர் ஒன்று0 1948 38. இராஜன் சிறுவர்க்குரிய கதைகள் 1948 39. சிறுகதைக் களஞ்சியம் (பகுதி 1- 3) 1949 40. மேனாட்டுத் தமிழறிஞர் 1950 41. தென்னாட்டுப் பெருமக்கள் 1950 42. இந்தியப் பெரியார் இருவர் 1950 43. தமிழ்ப் புலவர் பெருமக்கள் 1950 44. நாற்பெரும் புலவர் 195 45. மறைமலையடிகள் 1951 46. அயல்நாட்டு அறிஞர் அறுவர் 1951 47. சங்கநூற் காட்சிகள் 1952 48. இளைஞர் இலக்கணம் (முதல் மூன்று பாரங்கட்கு உரியது) 1953 49. விஞ்ஞானக் கலையும் மனித வாழ்க்கையும் 1953 50. பாண்டிய நாட்டுப் பெரும் புலவர் 1953 51. சேக்கிழார் (மாணவர் பதிப்பு) 1954 52. திருவள்ளுவர் காலம் யாது? 1954 53. சைவ சமயம் 1955 54. கம்பர் யார்? 1955 55. வையை 1955 56. தமிழர் திருமணத்தில் தாலி 1955 57. பத்துப்பாட்டுக் காட்சிகள் 1955 58. இலக்கிய அறிமுகம் 1955 59. அருவிகள் 1955 60. தமிழ் மொழிச் செல்வம் 1956 61. பூம்புகார் நகரம் 1956 62. தமிழ் இனம் 1956 63. தமிழர் வாழ்வு 1956 64. வழிபாடு 1957 65. இல்வாழ்க்கை 1957 66. தமிழ் இலக்கணம் (இளங்கலை வகுப்பிற்கு உரியது) 1957 67. வழியும் வகையும் 1957 68. ஆற்றங்கரை நாகரிகம் 1957 69. தமிழ் இலக்கண இலக்கியக் கால ஆராய்ச்சி 1957 70. என்றுமுள தென்றமிழ் 1957 71. சைவ சமய வளர்ச்சி 1958 72. பொருநை 1958 73. அருள்நெறி 1958 74. தமிழரசி 1958 75. இலக்கிய அமுதம் 1958 76. எல்லோரும் வாழவேண்டும் 1958 77. தமிழகக் கலைகள் 1959 78. தமிழக ஆட்சி 1959 79. தமிழக வரலாறு 1959 80. தமிழர் நாகரிகமும பண்பாடும் 1959 81. தென்பெண்ணை 1959 82. புதிய தமிழகம் 1959 83. நாட்டுக்கு நல்லவை 1959 84. தமிழ் அமுதம் 1959 85. பேரறிஞர் இருவர் 1959 86. துருக்கியின் தந்தை 1959 87. தமிழகக் கதைகள் 1959 88. குழந்தைப் பாடல்கள் 1960 89. கட்டுரைச் செல்வம் 1960 90. தமிழகப் புலவர் 1960 91. தமிழ் மொழி இலக்கிய வரலாறு (சங்க காலம்) 1963 92. தமிழக வரலாறும் தமிழர் பண்பாடும் 1964 93. தமிழ் அமுதம் (மாணவர் பதிப்பு) 1965 94. சேக்கிழார் (சொர்ணம்மாள் நினைவுச் சொற்பொழிவுகள்) 1969 95. பத்துப்பாட்டு ஆராய்ச்சி 1970 96. கல்வெட்டுகளில் அரசியல் சமயம் சமுதாயம் 1977 97. இருபதாம் நூற்றாண்டில் தமிழ் உரைநடை வளர்ச்சி 1978 98. இலக்கிய ஓவியங்கள் 1979 பதிப்பு ஆண்டு தெரியாத நூல்கள் 99. சிறுவர் சிற்றிலக்கணம் 100. பைந்தமிழ் இலக்கணமும் கட்டுரையும் 101. பாண்டியன் தமிழ்க் கட்டுரை (தொகுதி -2) ஆங்கில நூல் 102. The Development of Saivism in South India 1964 பார்வைக்குக் கிடைக்காத நூல்கள் 1. பதிற்றுப்பத்துக் காட்சிகள் 2. செந்தமிழ்ச் செல்வம் 3. தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் 4. பள்ளித் தமிழ் இலக்கணம் 5. செந்தமிழ்க் கட்டுரை (முதல், இரண்டாம் புத்தகங்கள்) 6. செந்தமிழ்க் கதை இன்பம் (முதல், இரண்டாம் பகுதிகள்)