ஆற்றங்கரை நாரிகம் வரலாற்றுப் பேரறிஞர் மா. இராசமாணிக்கனார் நிலவன் பதிப்பகம் நூற் குறிப்பு நூற்பெயர் : ஆற்றங்கரை நாகரிகம் ஆசிரியர் : வரலாற்றுப் பேரறிஞர் மா. இராசமாணிக்கனார் பதிப்பாளர் : முனைவர் க. தமிழமுது பதிப்பு : 2014 தாள் : 16கி வெள்ளைத்தாள் அளவு : 1/8 தெம்மி எழுத்து : 11 புள்ளி பக்கம் : 14+90=104 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) விலை : உருபா 95/- படிகள் : 1000 மேலட்டை : தமிழ்க்குமரன் & வி. சித்ரா நூலாக்கம் : வி. சித்ரா அச்சிட்டோர் : வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர் வடபழனி, சென்னை - 26. வெளியீடு : நிலவன் பதிப்பகம், பி 3, பாண்டியன் அடுக்ககம், சீனிவாசன் தெரு, தியாகராய நகர், சென்னை - 600 017. நூல் கிடைக்குமிடம் : தமிழ்மண் பதிப்பகம் 044 2433 9030. பதிப்புரை மொழியாலும், இனத்தாலும், அறிவாலும் சிறந்தோங்கி விளங்கிய பழந்தமிழ்க்குலம் படிப் படியாய் தாழ்ச்சியுற்று மீள முடியாத அடிமைச் சகதியிலும், அறியாமைப் பள்ளத்திலும் வீழ்ந்து கிடந்த அரசியல் குமுகாய வரலாற்று உண்மை களைத் தேடி எடுத்து வழங்குவதை நோக்கமாகக் கொண்டு எம் தந்தையார் தமிழ்மண் பதிப்பகத்தைத் தொலைநோக்குப் பார்வையோடு தொடங் கினார். என் தந்தையின் பதிப்புச் சுவடுகளைப் பின்பற்றி எம் பதிப்புப் பணியைச் செய்து வருகிறேன். தமிழ்ப் பேரறிஞர் முனைவர் மா. இராசமாணிக்கனார் இலக்கிய ஆய்வுகள், சமயம் சார்ந்த ஆய்வுகள், வரலாற்றாய்வுகள், கோவில் ஆய்வுகள், கல்வெட்டு ஆய்வுகள், மாணவர் நலன் குறித்து அவர் எழுதிய 110 நூல்களும் ஆய்வாளர்களுக்கும் மாணவர் களுக்கும், தமிழ் உணர்வாளர்களுக்கும் பெரிதும் பயன்படத்தக்க நூல்களாகும். இவற்றில் 18 நூல்களை 2012இல் எம் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. தொடர் பணியாக 2014இல் 21 நூல்களை தமிழுலகம் பயன்படும் வகையில் எம் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இதனை அனைவரும் படித்துப் பயன்பெற வேண்டுகிறேன். - க. தமிழமுது நுழையுமுன் மனிதரில் தலையாய மனிதரே! ஆசிரியர், ஆய்வாளர், அறிஞர் என்று தம் உழைப்பாலும் திறமையாலும் விடாமுயற்சியாலும் படிப்படியாக உயர்ந்த இராசமாணிக்கனார் தமிழ்நாடு கண்ட மிகச் சிறந்த சிந்தனையாளர்களுள் ஒருவர். மொழி, இனம், நாடு எனத் தமிழ் கூறும் நல்லுலகம் பற்றி ஆழச் சிந்தித்தவர்களுள் அவர் குறிப்பிடத்தக்கவர். சமயஞ் சார்ந்த மூட நம்பிக்கைகளும், சாதிப் பிணக்குகளும், பிறமொழி ஈடுபாடும், பெண்ணடிமைத் தனமும், சடங்கு நாட்டமும், கல்வியறிவின்மையும் தமிழ்ச் சமுதாயத்தைச் சூறையாடிக் கொண்டிருந்த கால கட்டத்தில்தான் இராசமாணிக்கனார் தம் ஆசிரிய வாழ்க்கையைத் தொடங்கினார். தாமுண்டு, தம் குடும்பமுண்டு, தம் வேலையுண்டு என்று அவரால் இருக்க முடியவில்லை. தமிழ் இலக்கியங்களைப் பழுதறப் படித்திருந்தமையாலும், இந்த நாட்டின் வரலாற்றை அடிப்படைச் சான்றுகளிலிருந்து அவரே அகழ்ந்து உருவாக்கியிருந்தமையாலும் மிக எளிய நிலையிலிருந்து உழைப்பு, முயற்சி, ஊக்கம் இவை கொண்டே உயரத் தொடங்கியிருந்தமையாலும் தம்மால் இயன்றதைத் தாம் வாழும் சமுதாயத்திற்குச் செய்வது தமது கடமையென அவர் கருதியிருந்தார். மொழி நலம், தமிழ்த் திருமணம், சாதி மறுப்பு என்பன அவருடைய தொடக்கக் காலக் களங்களாக அமைந்தன. தாய்மொழித் தமிழ், தமிழரிடையே பெறவேண்டிய மதிப்பையும் பயன்பாட்டையும் பெறாமலிருந்தமை அவரை வருத்தியது. `தமிழ் நமது தாய்மொழி ஈன்ற தாயைப் போற்றுதல் மக்களது கடமை. அது போலவே நமது பிறப்பு முதல் இறப்பு வரையில் நமக்கு உறுதுணையாக இருந்து நம்மை வாழச் செய்யும் மொழியைக் காப்பதும் வாழ்விக்கச் செய்வதும் தமிழராகிய நமது கடமை. `ï‹iwa jÄHuJ thœÉš jÄœ v›thW ïU¡»‹wJ? ஒரு தமிழன் மற்றொரு தமிழனோடு பேசும்போது பெரும்பாலும் பிறமொழிச் சொற்களைக் கலந்தே பேசுவதைக் காண்கிறோம். இப்பிறமொழிச் சொற்கள் நம் மொழியிற் கலந்து தமிழ் நடையைக் கெடுத்துவிடுகின்றன. ஒரு தமிழ்ச் சொல்லுக்குப் பதிலாகப் பிற மொழிச் சொல்லைப் பயன்படுத்தினால், அந்தத் தமிழ்ச்சொல் நாளடைவில் வழக்கு ஒழிந்துவிடும் `பிறமொழிச் சொற்களைக் கலந்து பேசுவதில் தலைசிறந்தவர் தமிழரே ஆவார். மொழிக் கொலை புரிவதில் முதற்பரிசு பெறத்தக்கவர் நம் தமிழரே ஆவர்! `நம் தமிழ்நாட்டுச் செய்தித் தாள்களில் தமிழ்ப் புலமையுடையார் பெரும்பாலும் இல்லையென்றே கூறலாம். அதனாலும், நல்ல தமிழை வளர்க்க வேண்டும் என்ற ஆர்வம் இன்மையாலும், மிகப் பலவாகிய பிறமொழிச் சொற்களைக் கலந்து தமிழ் எழுதி வருகிறார்கள். இவற்றைத் `தமிழ்ச் செய்தித்தாள்கள் என்று கூறுவதற்குப் பதிலாக `கலப்பு மொழிச் செய்தித்தாள்கள் என்று கூறுதலே பொருந்தும். இவ்வாறு செய்தித் தாள்களில் மொழிக் கொலை புரிவோர் வேற்று நாட்டவரல்லர், வேறு மொழி பேசும் அயலாரல்லர். தமிழகத்தில் பிறந்து தமிழிலேயே பேசிவரும் மக்களாவர் என்பதை வெட்கத்துடன் கூற வேண்டுபவராக இருக்கிறோம். நாடு முழுவதும் மொழி நலம் குன்றியிருந்தமையைத் துறை சார்ந்த சான்றுகளோடும் கவலையோடும் சுட்டிக் காட்டியதோடு இராசமாணிக்கனார் நின்றுவிடவில்லை. மொழியை எப்படி வளர்ப்பது, காப்பாற்றுவது, உயர்த்துவது என்பதே அவருடைய தொடர்ந்த சிந்தனையாக இருந்தது. காலங் காலமாக அடிமைப்பட்டுக் கிடந்த சமுதாயம் அவர் கண் முன் நின்றது. வடமொழி ஆதிக்கமும் ஆங்கிலப்பற்றும் தமிழ் மக்களின் கண்களை மூடியிருந்தன. தம் மொழியின், இனத்தின், நாட்டின் பெருமை அறியாது இருந்த அவர்கட்குத் தமிழின் தொன்மையையும் பெருமையையும் சிறப்பையும் எடுத்துச் சொல்வது தம் கடமையென்று கருதினார் இராசமாணிக்கனார். அக்கடமையை நிறைவேற்ற அவர் கையாண்ட வழிகள் போற்றத்தக்கன. தம்முடைய மாணவர்களை அவர் முதற்படியாகக் கொண்டார். நல்ல தமிழில் பேசவும் எழுதவும் அவர்களுக்குப் பயிற்றுவித்தார். சிறுசிறு கட்டுரைகளை உருவாக்கப் பயிற்சியளித்தார். மொழிநடை பற்றி அவர்களுக்குப் புரியுமாறு கலந்துரையாடினார். மொழி நடையைச் செம்மையாக்குவது இலக்கணமும் பல நூல்களைப் படிக்கும் பயிற்சியுமே என்பதை விளங்க வைத்தார். இலக்கணப் பாடங்களைப் பள்ளிப் பிள்ளைகள் விரும்பிப் படிக்குமாறு எளிமைப்படுத்தினார். அதற்கெனவே நூல்களை உருவாக்கினார். அவரிடம் பயின்ற மாணவர்கள் அவர் இலக்கணம் சொல்லிக் கொடுத்த அழகையும், படிப்படியாக இலக்கணத்தை நேசிக்க வைத்த திறனையும் பல இடங்களில் பதிவு செய்துள்ளனர். பயிலும் நேரம் தவிர்த்த பிற நேரங்களிலும் மாணவர்களுடன் உரையாடித் தமிழ் மொழியின் வளமை குறித்து அவர்களைச் சிந்திக்கச் செய்தார். அவரிடம் பயின்றவர்களுள் பலர் பின்னாளில் சிறந்த தமிழறிஞர்களாகவும், நூலாசிரியர்களாகவும் உருவானமைக்கு இத்தகு பயிற்சிகள் உரமிட்டன. பள்ளி ஆசிரியராக இருந்த காலத்திலேயே ஒத்த ஆர்வம் உடையவர்களைச் சேர்த்துக் கொண்டு அப்பகுதியிலிருந்த பொது மக்களுக்குத் தமிழ்க் கல்வியூட்டும் பணியை அவர் செய்துள்ளார். `வண்ணையம்பதியில் தனலட்சுமி தொடக்கப் பள்ளியில் பேராசிரியரின் தமிழ்த்தொண்டு தொடங்கியது. அங்குத் தொடர்ந்து வகுப்புகள் நடத்தினார். பணிகளில் இருந்தவர்களுக்கு வார இறுதி நாட்களில் தமிழ் வகுப்பெடுத்தார். உறவினர்களைக் கூட அவர் விட்டு வைக்க வில்லை. `குடியரசு இதழில் சொற்ப ஊதியத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த தம் மைத்துனர் பு. செல்வராசனை `வித்துவான் படிக்க வைத்து, சென்னை அப்துல் அக்கீம் உயர்நிலைப் பள்ளியில் தலைமைத் தமிழாசிரியராகப் பணிபெறச் செய்தார். தமக்குக் கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் மொழிச் சிந்தனைகளை விதைக்கப் பயன்படுத்திக் கொண்டவர், `தமிழர் நல்வாழ்க்கைக் கழகம், `நக்கீரர் கழகம், `மாணவர் மன்றம் முதலிய பொது நல அமைப்புகளோடு தம்மை இணைத்துக் கொண்டார். 1946 இல் சென்னை நக்கீரர் கழகம் என்ற அமைப்பினைத் தொடங்கிய காலத்துப் பேராசிரியர் அவர்களின் அரவணைப்பும் தொண்டும் கழகத்திற்குக் கிடைத்துக் கழகம் வளர்ந்து சிறந்தது. 1946 ஆம் ஆண்டில் நக்கீரர் கழகம் `திருவள்ளுவர் என்ற திங்கள் ஏட்டினை நடத்தத் தொடங்கியபோது, பேராசிரியர் தம் கட்டுரைகளை வழங்கியதோடு அல்லாது, தாம் நட்புப் பூண்டிருந்த தவத்திரு ஈரா பாதிரியாரின் கட்டுரையையும் பெற்றுத் தந்து இதழுக்குப் பெருமை சேர்ந்தார். அடியவனின் தமிழ் தொண்டிற்கு ஊக்கமும், உள்ளத்திற்கு உரமும், துவண்டபோது தட்டி எழுப்பி ஊட்ட உரைகளும் அளித்துச் சிறப்பித்தவர் பேராசிரியர் என்று இராசமாணிக்கனாரின் தமிழ்த் தொண்டை நினைவு கூர்ந்துள்ளார் நக்கீரர் கழக அமைப்பாளர் சிறுவை நச்சினார்க்கினியன். கல்வி வழி விழிப்புணர்வில் பெருநம்பிக்கை கொண்டிருந் தமையால், `அரசியலாரும் சமூகத் தலைவர்களும் நாடெங்கும் கல்விக் கூடங்களை ஏற்படுத்த வேண்டும். கல்வி கற்கும் வயதுடைய எந்தச் சிறுவனும் சிறுமியும் கற்காமல் இருத்தல் கூடாது என்று முழங்கிய இப்பெருமகனார், தாம் வாழ்ந்த பகுதியில் இருந்த அத்தனை குடும்பங்களின் பிள்ளைகளும் பள்ளிப் படிப்புக் கொள்ளுமாறு செய்துள்ளார். பெண்கள் பின்தங்கிய காலம் அது. `அடுப்பூதும் பெண்ணுகளுக்குப் படிப்பெதற்கு என்று கேட்டவர்கள் மிக்கிருந்த காலம். அந்தக் கால கட்டத்தில்தான் பேராசிரியர் பெண் கல்விக்காகக் குரல் கொடுத்தார். எட்டாம் வகுப்பே படித்திருந்த தம் மனைவிக்குத் தாமே ஆசிரியராக இருந்து பயிற்றுவித்து அவரை, `வித்துவான் பட்டம் பெறச் செய்தார். `என் கணவர் எனக்கு ஆங்கிலப் பாடமும் தமிழ்ப்பாடமும் கற்பித்து வந்தார். பாடம் கற்பிக்கும் நேரத்தில் பள்ளி ஆசிரியராகவே காணப்பட்டார். ஒவ்வொரு பெண்ணும் தன்னைக் காத்துக் கொள்ளும் வகையில் கல்வி கற்றுப் பொருளீட்ட வேண்டும் என்பது என் கணவர் கருத்து. அதனால், என்னைப் பெண்கள் பள்ளியில் தமிழாசிரியராக அமர்த்தினார். மாணவியர்க்கு மொழியுணர்வும் நாட்டுணர்வும் வருமாறு பேசவேண்டும் என்று அவர் அடிக்கடி கூறுவார் என்று `என் கணவர் என்ற கட்டுரையில் திருமதி கண்ணம்மாள் இராசமாணிக்கனார் கூறியுள்ளமை இங்குக் கருதத்தக்கது. மொழி, இனம், நாடு இவற்றைப் பற்றி அறிந்திருந்தால் தான் அவற்றை நேசிக்கவும் அவற்றிற்குத் துணை நிற்கவும் முடியுமென்பதில் அவர் தெளிவாக இருந்தமையால்தான், `கல்வியில் அக்கறை காட்டினார். அவருடைய ஆசிரியப் பணி அதற்குத் துணையானது. தம்மிடம் பயில வந்தவர்க்கு மொழியுணர்வூட்டினார். `தமிழகத்தில் ஆட்சி தமிழிலேயே இயங்க வேண்டும். எல்லாக் கல்வி நிலையங்களிலும் ஆங்கிலம் ஒழிந்த எல்லாப் பாடங்களையும் தமிழில் கற்பித்தல் வேண்டும் என்பது அவர் கொள்கையாக இருந்தது. அறிவியல் மனப்பான்மையை ஊட்டி வளர்க்கும் முறையில் அமைந்த பாடநூல்களையே பிள்ளைகள் படிக்கும்படிச் செய்தல் வேண்டும். உலக நாடுகளோடு தம் நாட்டை ஒப்பிட்டுப் பார்த்துக் குறைகளை நிறைவாக்கும் மனப்பாங்கு வளரும்படியான முறையில் கல்வி அளிக்கப்படல் வேண்டும். கடவுள் பற்றும், நல்லொழுக்கமும், சமுதாய வளர்ச்சியில் நாட்டமும் ஊட்டத் தக்க கல்வியை ஏற்ற திட்டங்கொண்டு நடை முறைக்குக் கொண்டு வருதல் வேண்டும் என்று அவர் எழுதியுள்ளார். `பேச்சுத் தமிழே எழுத்துத் தமிழுக்கு அடிப்படை ஆதலால், நமது பேச்சுத் தமிழ் பெரும்பாலும் தூய தமிழ்ச் சொற்களைக் கொண்டதாக இருத்தல் வேண்டும். அப்பொழுது தான் நாம் எழுதும் தமிழ் நல்ல தமிழ் நடையில் இருக்கமுடியும் என்பது அவர் கருத்தாக இருந்தமையால், தம்மிடம் பயின்ற மாணவர்களை அவர் நல்ல தமிழில் பேசுமாறு வழிப்படுத்தினார். அதற்காகவே தாம் பணியாற்றிய பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் இருந்த மாணவர் மன்றங்களைச் செயலூக்கம் பெற வைத்தார். தமிழ் மன்றங்கள் இல்லாத கல்வி நிலையங்கள் அவற்றைப் பெறுமாறு செய்தார். பேச்சையும் எழுத்தையும் இளைஞர்கள் வளப்படுத்திக் கொள்ள உதவுமாறு `வழியும் வகையும் என்றொரு சிறு நூல் படைத்தளித்தார். எண்ணங்களை எப்படி உருவாக்கிக் கொள்வது, அந்த எண்ணங்களை வெளிப்படுத்த எத்தகு சொற்களைத் தேர்ந்து கொள்வது, அச்சொற்களை இணைத்துத் தொடர்களை எப்படி அமைப்பது, பின் அத்தொடர்களைக் கேட்டார்ப் பிணிக்கும் தகையனவாய் எங்ஙனம் அழகு படுத்துவது என்பன பற்றி நான்கு தலைப்புகளில் அமைந்த இந்நூல் இளைஞர் களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதுடன் இராசமாணிக்கனாரின் மொழி வழிச் சிந்தனைகளுக்கும் சிறந்த சான்றாக அமைந்தது. தமிழ்மொழியின் தொன்மை, பெருமை இவற்றைத் தமிழர்கள் அறிய வேண்டும் என்பதற்காகவே `தமிழ் மொழிச் செல்வம், `தமிழ் இனம், `தமிழர் வாழ்வு, `என்றுமுள தென்றமிழ், `புதிய தமிழகம் என்னும் அவருடைய நூல்கள் தமிழ் மக்களுக்கு அவர்கள் மறந்திருந்த மொழியின் பெருமையை, சிறப்பை அடையாளப்படுத்தின. `ஒரு மொழி பேசும் மக்கள் தம் மொழியின் பழைமைகளையும் பெருமையையும் வளர்ச்சியையும் நன்கு அறிந்தாற்றான், அம்மொழியினிடத்து ஆர்வமும் அதன் வளர்ச்சியில் கருத்தும் அம்மொழி பேசும் தம்மினத்தவர் மீது பற்றும் கொள்வர். இங்ஙனம் மொழியுணர்ச்சி கொள்ளும் மக்களிடையே தான் நாட்டுப்பற்றும் இனவுணர்ச்சியும் சிறந்து தோன்றும். ஆதலின், ஓரினத்தவர் இனவொற்றுமையோடு நல் வாழ்வு வாழ மொழிநூலறிவு உயிர்நாடி போன்ற தாகும். இம்மொழி நூலறிவு தற்காப்புக்காகவும், தம் வளர்ச்சிக்காகவும் வேண்டற்பாலது என்பதைத் தமிழ் மக்கள் அறிதல் நலமாகும் என்ற அவர் சிந்தனைகள் இந்நூல்கள் மக்களிடையே வேர் பிடிக்கச் செய்தன. தமிழ் மக்களுக்கு மொழிப் பற்றையும், மொழியறிவையும் ஊட்டிய அதே காலகட்டத்தில், அவர்களை நாட்டுப்பற்று உடையவர்களாகவும் மாற்றினார். தமிழ் நாட்டின் பெருமையை, வரலாற்றை இந்த நாட்டில் பிறந்த ஒவ்வொரு குடிமகனும் நன்கு அறிந்திருக்க வேண்டும் என்பதற்காகவே, `தமிழக ஆட்சி, `தமிழ்க் கலைகள், `தமிழர் நாகரிகமும் பண்பாடும், `தமிழக வரலாறு என்னும் நூல்களை எழுதி வெளியிட்டார். நாட்டுக்காக உழைத்த அறிஞர்களின் வரலாறுகளைச் சிறுசிறு நூல்களாக்கி இளைஞர்கள் அவற்றைப் படித்துய்ய வழிவகுத்தார். இளைஞர்கள் படித்தல், சிந்தித்தல், தெளிதல் எனும் மூன்று கோட்பாடுகளைக் கைக்கொண்டால் உயரலாம் என்பது அவர் வழிகாட்டலாக இருந்தது. மொழி, இனம், நாடு எனும் மூன்றையும் தமிழர்க்குத் தொடர்ந்து நினைவூட்டல் எழுதுவார், பேசுவார் கடமையென்று அவர் கருதியமையால் தமிழ் எழுத்தாளர்கள் எங்ஙனம் அமைதல் வேண்டுமென்பதற்குச் சில அடையாளங்களை முன்வைத்தார். `தாமாக எண்ணும் ஆற்றல் உள்ளவரும் உண்மையான தமிழ்ப்பற்று உடையவருமே நல்ல எழுத்தாளர். தமிழ் எழுத்தாளர் தமிழ் இலக்கண, இலக்கியங்களைப் படித்தவராக இருப்பது நல்லது. தாழ்ந்துள்ள தமிழ்ச் சமுதாயத்தை உயர்த்தப் பயன்படும் நூல்களை எழுதுவதையே எழுத்தாளர்கள் தங்கள் சிறந்த கடமையாகக் கருத வேண்டும். சமுதாயத்தில் இன்றுள்ள தீண்டாமை, பெண்ணடிமை, மூட நம்பிக்கைகள், கண்மூடித் தனமான பழக்கவழக்கங்கள் முதலிய பிற்போக்குத் தன்மைகளை வன்மையாகக் கண்டிக்கும் நெஞ்சுறுதி எழுத்தாளர்க்கு இருக்கவேண்டும் அத்தகைய எழுத்தாளர்கள், `தமிழர் என்ற அடிப்படையில் ஒன்று கூடுதல் வேண்டும் என்று அவர் விழைந்தார். அதனாலேயே மதுரையில் தியாகராசர் கல்லூரியில் பணியாற்றிய காலத்தில் மதுரை எழுத்தாளர் மன்றத்தை உருவாக்கி அது சிறந்த முறையில் இயங்குமாறு துணையிருந்தார். இம்மன்றத்தின் தலைவராக இருந்து மன்றத்தின் முதல் ஆண்டு விழாவில் அவர் ஆற்றிய உரை தமிழ் எழுத்தாளர் கடமைப் பற்றிய அவருடைய அறை கூவலாக அமைந்தது. `தமிழகத்தில் பல நூற்றாண்டுகளாக ஆட்சி மொழியாக இருந்த நமது தமிழ் பிற்காலத்தில் தனது அரியணையை இழந்தது; இப்பொழுது வளர்ந்து வருகின்றது. எழுத்தாளர்கள் இதனை மனத்தில் பதிய வைத்தல் வேண்டும் அதன் தூய்மையையும் பெருமையையும் தொடர்ந்து பாதுகாப்பதே தங்கள் கடமை என உணர்தல் வேண்டும். `மக்கள் பேசுவது போலவே எழுதவேண்டும் அதுதான் உயிர் உள்ள நடை என்று சொல்லிப் பாமர மக்கள் பேச்சு நடையையே எழுத்தாளர் பலர் எழுதி வருகின்றனர். பாமர மக்களது நடை பொதுமக்களுக்கு நன்கு தெரியும்; அதைத் தெரிந்து கொள்ள எழுத்தாளர் நூல்களை விலை கொடுத்து வாங்க வேண்டிய தேவை இல்லை அல்லவா? கொச்சை மொழி பேசும் மக்களுக்கு வாழ்க்கைக்குத் தேவையான படிப்பினைகளை ஊட்டுவதோடு, இனிய, எளிய, செந்தமிழ் நடையையும் அறிமுகம் செய்து வைப்பதுதான் எழுத்தாளரது கடமையாக இருத்தல் வேண்டும். எழுத்தாளர் தங்கள் எளிய, இனிய செந்தமிழ் நடைக்கு மக்களை அழைத்துச் செல்ல வேண்டுமே தவிர, மக்களுடைய பேச்சு நிலைக்குத் தங்களை இழித்துக் கொண்டு போவது முறையன்று. சிறந்த கருத்துக்களோடு பிழையற்ற எளிய நடையையும் பொதுமக்களுக்கு ஊட்டுவது எழுத்தாளர் கடமை என்பதை அவர்கள் மறந்து விடலாகாது. இதுவே அறநெறிப்பட்ட எழுத்தாளர் கடமை என்பதை நான் வற்புறுத்த விரும்புகிறேன். சாதிகள் ஒழிந்து சடங்குகள் அற்ற சமயம் நெறிப்படத் தமிழர், `தமிழ் வாழ்வு வாழ வேண்டுமென்பதில் அவர் கருத்தாக இருந்தார். அதனால் தான், வாழ்க்கையின் தொடக்க நிலையான திருமணம் தமிழ்த் திருமணமாக அமைய வேண்டுமென அவர் வற்புறுத்தினார். இதற்காகவே அவர் வெளியிட்ட `தமிழர் திருமண நூல், தமிழ்ப் பெரியார்களின் ஒருமித்த வரவேற்பையும் பாராட்டையும் பெற்றது. தமிழ் நாட்டளவில் அதற்கு முன்போ அல்லது பின்போ, ஏன் இதுநாள் வரையிலும் கூட வேறெந்தத் தமிழ் நூலும் இதுபோல் தமிழ்கூறும் நல்லுலகத்தின் ஒருமித்த அரவணைப்பைப் பெற்றதாக வரலாறு இல்லை. `எல்லோரும் வேலை செய்து பிழைக்கவேண்டும். பிச்சை எடுப்பவரே நாட்டில் இருக்கக் கூடாது `வலியவர் மெலியவரை ஆதரித்தால் நாட்டில் அமைதியும் இன்பமும் பெருகும் என்று கூறும் இராசமாணிக்கனார், `கல்வி மட்டுமே ஒருவரைப் பண்படுத்துவதில்லை. ஒழுக்கம் வேண்டும். எல்லோரும் ஒழுக்கத்திற்கு மதிப்பைத் தரவேண்டும். ஒழுக்கம் உயிரினும் சிறந்தது. ஒழுக்கத்தோடு உறையும் கல்விதான் மனிதனை உயர்விக்கும் என்று தெளிவுபடுத்தியுள்ளார். மொழி, இனம், நாடு, கல்வி, சமயம், மக்கள் நலம், கோயில்கள் எனப் பலவும் கருதிப் பார்த்துத் தமிழ் மொழி சிறக்க, தமிழினம் உயர, தமிழ்நாடு வளம்பெறப் பயனுறு சிந்தனை விதைகளைத் தம் வாழ்நாள் அநுபவ அறுவடையின் பயனாய் இந்த மண்ணில் விதைத்த இராசமாணிக்கனார், `உண்மை பேசுதல், உழைத்து வாழுதல், முயற்சியுடைமை, அறிவை வளர்த்தல், நேர்மையாக நடத்தல், பிறர்க்குத் தீங்கு செய்யாமை முதலியன நேரிய வாழ்க்கைக்குரிய கொள்கைகளாம் என்று தாம் கூறியதற்கு ஏற்ப வாழ்ந்த நூற்றாண்டு மனிதர். மறுபிறப்பு நேர்ந்தால், `மீண்டும் தமிழகத்தே பிறக்க வேண்டும் என்று அவாவிக் கட்டுரைத்த தமிழ்மண் பற்றாளர். `mtiu KGikahf¥ gl«ão¤J¡ fh£L« ü‰gh toÉyhd xUtÇ brhšy£Lkh? எனக் கேட்கும் அவரது கெழுதகை நண்பர் வல்லை பாலசுப்பிரமணியம் சொல்கிறார்: `இராசமாணிக்கனார் மதியால் வித்தகர்; மனத்தால் உத்தமர், `மனிதரில் தலையாய மனிதரே எனும் அப்பர் பெருமானின் திருப்பூவணப்பதிகத் தொடர் இப்பெருந்தகையைக் கருத்தில் கொண்டே அமைந்தது போலும்! டாக்டர் இரா. கலைக்கோவன் உள்ளுறை எண் பக்கம் I. முன்னுரை 15 II. பாலாற்றங்கரை நாகரிகம் 18 1. நாட்டு வளம் 18 2. அரசர்கள் 20 3. அரசியல் 25 4. இலக்கியச் சிறப்பு 30 5. கலைச் சிறப்பு 35 III. காவிரிக் கரை நாகரிகம் 42 1. காவிரியாறு 42 2. அரசர் 46 3. அரசியல் 49 4. இலக்கியச் சிறப்பு 56 5. கலைச் சிறப்பு 61 IV. வையைக் கரை நாகரிகம் 68 1. வையையாறு 68 2. அரசர் 73 3. அரசியல் 77 4. இலக்கியச் சிறப்பு 83 5. கலைச்சிறப்பு 88 V. ஆற்றங்கரைப் பண்பாடு 93 I. முன்னுரை ஐவகை நிலம் நாம் வாழும் நிலத்தில் மலைகளும் அவற்றைச் சார்ந்த பகுதிகளும் இருக்கின்றன; காடுகளும் அவற்றைச் சார்ந்த பகுதிகளும் உள்ளன; ஆற்றுப் பாய்ச்சல் மிகுந்த வயல்களும் அவற்றைச் சார்ந்த பகுதிகளும் இருக்கின்றன; கடலும் கடல் சார்ந்த பகுதியும் உள்ளன. இவ்வாறு நால்வகை நிலப்பகுதி களைக் கொண்டிருப்பதாற்றான் இந்நிலத்திற்கு நானிலம் என்னும் பெயர் உண்டாயிற்று. எவ்வகை நீர்வளமும் இல்லாமல் வறண்ட பகுதிகளும் சில இடங்களில் உள்ளன. இந்த ஐவகை நிலங்களையும் தமிழ்த் தொல்லாசிரியர் முறையே குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்று அழைத்தனர். குறிஞ்சி நிலம் மலையும் மலைசார்ந்த இடமுமாகிய குறிஞ்சி நிலப்பகுதியில் மக்கள் அரும்பாடுபட்டு உழைக்க வேண்டும்; வயல் வளம் அற்ற அப்பகுதியில் அவர்கள் மிகுதியாகப் பயிர் செய்தல் இயலாது; எனவே, அப்பகுதியில் விளையத்தகும் தினை முதலிய தானியங்களை மிகுந்த பாடுபட்டுப் பயிராக்குதல் வேண்டும்; சில கிழங்கு வகைகளைப் பயிராக்கலாம்; தேன் சேர்க்கலாம்; விலங்குகளையும் பறவைகளையும் வேட்டை யாடலாம். இங்ஙனம் வயிற்றுப் பிழைப்புக்கே அரும்பாடு பட்டால்தான் அங்கிருப்போர் வாழ்தல் இயலும். இந்நிலையில் அவர்களிடம் சிறந்த ஆடை அணிகளையோ, உயர்ந்த உணவு வகைகளையோ, பண்பட்ட கலைகளையோ எதிர்பார்த்தல் இயலாது. முல்லை நிலம் காடும் காடு சார்ந்ததும் ஆகிய முல்லை நிலத்தில் பசும்புல் தரைகளே மிகுதியாக இருக்கும். அவை கால்நடைகளுக்கு ஏற்ற இடங்கள். எனவே, ஆடுமாடுகளை மேய்ப்பவர்களுக்கே முல்லை நிலம் ஏற்றதாகும். முல்லை நில ஆடவர் பகல் முழுவதும் கால் நடைகளை மேய்த்துக் கொண்டிருப்பர்; மாலையில் அவற்றுடன் வீடு திரும்புவர். முல்லைநில மகளிர் பால் கறத்தல், பாலைக் காய்ச்சித் தயிராக்குதல், தயிரைக் கடைந்து மோராக்குதல், வெண்ணெய் எடுத்தல், நெய் காய்ச்சுதல் இவை அனைத்தையும் எடுத்துச் சென்று பிற நிலங்களில் விற்று, வேண்டும் பொருள்களை வாங்கிக்கொண்டு மீளுதல் ஆகிய வேலைகளில் ஈடுபட்டிருப்பர். எனவே, இம் முல்லை நில மக்களிடமும் கல்வி வளர்ச்சியையோ உயர்ந்த கலை வளர்ச்சியையோ எதிர்பார்த்தல் இயலாது. நெய்தல் நிலம் கடலும் கடல் சார்ந்த நிலமும் ஆகிய நெய்தல் நிலத்தில் மீன் பிடிக்கும் பரதவரே வாழ்கின்றனர். அவர்கள் கட்டுமரங்களில் ஏறிக்கொண்டு, பலகல் தொலைவில் கடலிற் சென்று, மீன் பிடித்து வருபவர். அங்ஙனம் பிடிக்கப்பட்ட மீன்களை விற்று, உணவுக்கு வேண்டும் பொருள்களை வாங்கி, உணவைத் தயாரிப்பது நெய்தல் நில மகளிர் வேலையாகும். எனவே, நாள் முழுமையும் வயிற்றுப் பிழைப்புக்கே வாடி வதங்கும் இம்மக்களிடமும் கல்வி வளர்ச்சி யையோ, கலை வளர்ச்சியையோ எதிர்பார்த்தல் பொருத்தமன்று. பாலை நிலம் நீர்வளமற்ற பாலை நிலத்தில் சிறிய குடிசைகளை அமைத்துக் கொண்டு வேட்டுவர் வாழ்வர். இந்நிலத்தில் பயன்தரத்தக்க விளைச்சல் மிகக் குறைவு. ஆதலின் இந்நில மக்கள் வழிச் செல்வோரைக் கொள்ளையடிப்பதும் வளமான இடங்களில் களவு செய்தலும் சிறப்புத் தொழில்களாகக் கொண்டுள்ளனர். இம் மக்களிடமும் நாகரிகத்தை எதிர்பார்த்தல் தகுதியன்று. மருத நிலம் இனி, எஞ்சி நிற்பது வயலும் வயல் சார்ந்த இடமுமாகிய மருத நிலம் ஒன்றே. இந் நிலப்பகுதி ஆற்று வளத்தால் அழகு நிறைந்து காணப்படுகிறது. உழவர் நிலத்தைப் பண்படுத்திப் பயிர் செய்கின்றனர். நெல் முதலிய பலவகைப் பொருள்களைப் பயிராக்கு கின்றனர். சமுதாயத்தில் ஒருசார் மக்கள் இங்ஙனம் உழைத்தாலும், எஞ்சியோர் அப்பலனை நுகர்கின்றனர். உணவுக்குப் பஞ்சமில்லாத மருத நிலத்தில்தான் மனிதனது அறிவு வளரத் தலைப்படுகிறது. இங்குதான் மனிதனுக்கு ஓரளவு ஓய்வு கிடைக்கிறது; பொருளை ஈட்டுதற்குரிய வழிகள் புலப்படுகின்றன; கல்வி வளர்ச்சியும் கலை வளர்ச்சியும் தோன்றி வளர்கின்றன. இவ்வுண்மையை அடுத்துவரும் பகுதிகளிற் காண்போம். II. பாலாற்றங்கரை நாகரிகம் 1. நாட்டு வளம் பாலாறின் தோற்றமும் போக்கும் மைசூர் நாட்டிலுள்ள நந்தி மலையில் பாலாறு தோற்றமெடுக்கிறது. இங்ஙனம் தோற்றம் எடுக்கும் பாலாறு மைசூர் நாட்டிற் பாய்கிறது. அங்கு இதன் நீர் கோலார்த் தங்கச் சுரங்கத்துக்குப் பெரிதும் பயன்படுத்தப்படுகிறது. பின்பு இவ் யாறு வட ஆர்க்காடு மாவட்டத்தில் பாய்ந்து அந்நிலப் பகுதியை வளப்படுத்துகிறது; பின்னர்ச் செங்கற்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த காஞ்சீபுரம் தாலுக்காவில் புகுந்து, செங்கற்பட்டு தாலுக்காவில் உள்ள சதுரங்கப்பட்டணத்திற்கு அருகே கடலில் கலக்கின்றது. இதன் துணை ஆறுகளுள் சிறந்தவை செய்யாறு, வேகவதி என்பன. செய்யாறு வட ஆர்க்காடு மாவட்டத்தில் தோற்றமெடுக்கிறது. வேகவதி ஆறு காஞ்சீபுரம் தாலுக்காவில் தோன்றுகிறது. இவை இரண்டும் வாலாஜாபாத்து என்னும் ஊருக்கருகில் பாலாற்றில் கலக்கின்றன. இங்ஙனம் மூன்று ஆறுகள் ஒன்று சேரும் இடம் திருமுக்கூடல் எனப் பெயர் பெற்றுள்ளது. பாலாற்றின் நீளம் 230கல். இது பல இடங்களில் அகன்று காணப்படுகிறது. செங்கற்பட்டிலிருந்து மதுராந்தகம் செல்லும் ப பாதையில் பாலாற்றின் குறுக்கே மிகப் பெரிய பாலம் கட்டப்பட்டுள்ளது. இவ்வாறே பட்டாளம் என்ற புகை வண்டி நிலையத்திற்கு அருகில் புகை வண்டி செல்லத்தக்க முறையில் பெரிய பாலம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. புராணங்களில் பாலாறு ஒரு காலத்தில் நந்தி மலைமீது வசிட்டர் தவம் செய்தனர். அவரது இல்லத்தில் காமதேனு என்னும் தெய்வப் பசு ஏவல் செய்துகொண்டிருந்தது. அது சிவபெருமானது ஊர்தியாகிய காளையைக் கண்டு விருப்பம் கொண்டது. அதனை அறிந்த வசிட்டர் தருப்பை ஒன்றை எடுத்து எறிந்தார். உடனே அத்தருப்பை ஓர் இளங் கன்றாக மாறியது. அதனைக் கண்ட காமதேனுவுக்குத் தாய் அன்பு பெருகியது; அதன் பயனாக அதன் மடியிலிருந்து பால் வெளிப்பட்டது. அப்பாலே பாலாறாக உருவெடுத்தது. இது கந்த புராணத்தில் காணப்படும் பாலாறு பற்றிய வரலாறு ஆகும். பெரிய புராணம் பாடிய சேக்கிழார் பெருமான் இவ் யாற்றைப் பற்றிக் கீழ்வருமாறு கூறியுள்ளார்: வசிட்ட முனிவர் மிகவுயர்ந்த தவத்தையுடையவர். அவர் நந்தி மலையில் வசித்தார். அவரிடம் காமதேனு என்ற தெய்வப் பசு இருந்தது. அது சொரிந்த பால், பெருகுகின்ற தீர்த்தமாக உருக்கொண்டு நந்தி மலையிலிருந்து இறங்குகிறது; அங்ஙனம் இறங்கும்பொழுது மலையிலுள்ள முத்துக்களையும், அகிற் கட்டைகளையும் பல வகை மணிகளையும் முத்துக்களையும், அகிற் கட்டைகளையும் பல வகை மணிகளையும் வாரிக்கொண்டு வருகின்றது; சம வெளியில் உள்ள தாமரைக் குளங்களில் அவற்றை நிரப்புகின்றது; கோடைக் காலத்தில் இவ் யாற்றில் நீர் வராது. அப்பொழுது, குழந்தை தன் கையினால் தாயின் மார்பைத் தடவ அதிலிருந்து பால் சுரத்தல் போல, உழவர் மணல் மேடுகளைப் பிசைந்து கால் உண்டாக்கி ஒழுங்கு செய்ய, நீர் ஊறிப் பெருகும். இங்ஙனம் பெருகுகின்ற நீர் ஆற்றின் இரு பக்கங்களிலும் கால்வாய்கள் வழியே சென்று வயல்களிற் பாயும். அந்நீரின் பெருக்கினைத் தடுத்து வழிப்படுத்த மடைகள் அமைந்திருக்கும். பாலாற்று நீர் வெள்ளப் பெருக்குடைய காலத்தில் பல குளங்களையும் ஏரிகளையும் நிரப்பும். அவற்றிற் கட்டப்பட்ட பெரும் காவலுடைய மதகுகள் திறந்துவிட, அவ்வாய்க்கால் களின் மூலம் நீர் சென்று கால்வாய்களின் வழியே பாயும். நீர் வரவினைக் கண்ட மள்ளர் மகிழ்ச்சியால் ஆரவாரம் செய்வர்; வயல்களைச் சேறு செய்வர்; ஒருபால் செந்நெல்லினது முளைகளைச் சிதறி விதைத்து நாற்று நடுவர்; மற்றொருபால் நாற்றைப் பறிப்பர்; வேறொருபால் நாற்று நடுவர். உழவின் வெவ்வேறு தொழில்களாகிய இவை பலவும் பற்பல இடங்களில் ஒரே காலத்தில் நிகழ்தலால் வயல்களிலிருந்து பேரோசை கிளம்பும். நீர் வருகின்ற பெரிய கால்வாய்களை வாளை மீன்கள் குறுக்கிட்டுத் தடுக்கும். அதனால் அந்த நீர், தேக்கம் பெற்றுப் பெரிய கரைகள் உடைபடும்படி நீர்க் கால்கள் விலகிப் போகும். நீரையுடைய வயல்களில் சேல் மீன்கள் பல கூடும். அக்கூட்ட மிகுதியால் பள்ளமான வயல் கரைபோல மேடிட்டுப் போகும். வரால்கள் மதகினுள் புகுந்து நீர் வரும் வழியினை அடைக்கும். நீர்வள மிகுதியால் வயல்களில் செந்தாமரை முளைத்து எழுந்து பூக்கும்; சூல்கொண்டு இளைத்த சங்குகள் தாமரை மலரில் ஏறித் தூங்கும். அம்மலர்களைச் சுற்றிலும் நெற்பயிர் பசுமை நிறத்துடன் காணப்படும். அந்நிலையில் அச்சங்குகளின் தோற்றம், பசிய வானத்தில் பரிவேடத்தால் வளைக்கப்பட்ட முழுமதியின் தோற்றம் போன்று இருக்கும். பசிய நெல் வயல்களைச் சுற்றிலும் தென்னை, வாழை, மா, பலா என்ற மர வகைகள் வேலியாக அமைந்திருக்கும். 2. அரசர்கள் சங்க காலத்தில் பாலாறு பாயப் பெற்ற தொண்டை நாடு சங்க காலத்தில் தொண்டைமான்கள் ஆட்சியிலிருந்தது. செங்கற்பட்டு வட ஆர்க்காடு மாவட்டங்களும், திருப்பதிவரையுள்ள சித்தூர் மாவட்டப் பகுதிகளும் நெல்லூர் மாவட்டத் தென்பகுதியும் சேர்ந்தது தொண்டை நாடு. தொண்டைமான் இளந்திரையன் என்பவன் காஞ்சியில் அரசனாக இருந்து இந்நாட்டை ஆண்டு வந்தான். இவன் சிறந்த தமிழ்ப் புலவன். இவன் நற்றிணையில் மூன்றும் புறநானூற்றில் ஒன்றுமாக நான்கு செய்யுட்களைப் பாடியுள்ளான். இவன் சிறந்த வீரன்; பாராட்டத்தக்க கொடை வள்ளல்; இயல், இசை, நாடகப் புலவர்களை நன்கு ஆதரித்தவன்; பாணருக்குப் பொற்றாமரையும், விறலியருக்குப் பொன் மாலையும் வழங்கி வந்தவன். இவன் காலத்தில் பட்டினம் (இக்கால மகாபலிபுரம்) தொண்டை நாட்டுத் துறைமுகப் பட்டினமாக இருந்தது. குதிரைகளும் அயல்நாட்டுப் பொருள்களும் இத்துறைமுகத்தில் இறக்குமதியாயின. ஔவையார் காலத்தில் மற்றொரு தொண்டைமான் காஞ்சியை ஆண்டான். அவன் அதியமான் ஆண்ட தகடூர் நாட்டின்மீது படையெடுக்க விரும்பினான். அதியமானுக்கும் தொண்டைமானுக்கும் போர் நிகழலாகாது என்பதை விரும்பிய ஔவையார், அதியமானது அரசியல் தூதராகத் தொண்டைமானிடம் சென்றார். தொண்டைமான் அம்மையாரை வரவேற்றுப் பெருவிருந்து நடத்தினான்; பின்பு தன் படைக்கலக் கொட்டிலைக் காட்டினான். அதனில் போருக்குரிய வேல்கள் முதலியன புத்தம் புதியனவாகக் காட்சியளித்தன. அவற்றைக் கண்ட ஔவையார் தொண்டைமானை நோக்கி, இவை நெய் தடவப் பெற்று, மாலை அணியப் பெற்று, பீலி சூட்டப் பெற்று வரிசையாகவும் அழகாகவும் வைக்கப்பட்டுள்ளன. என் தலைவனாகிய அதியமானது போர்க்கருவிகள் ஓரமும் நுனியும் தேய்ந்து பழுது பார்க்கப் படுவதற்காகக் கொல்லனது உலைக் கூடத்தில் கிடக்கின்றன, என்று கூறினார். இக் கூற்றின் கருத்து யாது? தொண்டைமான் போர்க் கருவிகளைப் புதுக் கருக்கு அழியாமலே வைத்துள்ளான். அஃதாவது, அவன் போர்ப் பழக்கம் இல்லாதவன். அதியமானது போர்க்கருவிகள் கொல்லனது உலைக் கூடத்திலிருப்பதால், அவைபோரில் நன்கு பயன்படுத்தப்பட்டன என்பது பொருள். அஃதாவது அதியமான் போர் அநுபவம் உடையவன் என்பது கருத்து. போர் அநுபவம் வாய்ந்த அதியமானைப் போர் அநுபவமே இல்லாத தொண்டைமான் எதிர்ப்பின், வெற்றி பெறான் என்பது ஔவையார் கூற்றின் கருத்தாகும். சங்க காலத்து இறுதியில் தொண்டை நாடு சோழ அரசுக்கு உட்பட்டிருந்தது. இளந்திரையன் என்பவன் அப்பொழுது காஞ்சியிலிருந்து அரசாண்டான் என்று மணிமேகலை என்னும் காவியம் கூறுகின்றது. அக்காலத்தில் அப்பகுதியில் கொடிய பஞ்சம் ஏற்பட்டது என்றும், பஞ்சத்தில் வருந்திய மக்களுக்கு மணி மேகலை உணவு வழங்கி உதவினாள் என்றும் அந்நூல் செப்புகின்றது. சங்க காலத்தில் காஞ்சி மாநகரம் சிறந்த பௌத்த இடமாக விளங்கியது. சைவ, வைணவ, சமண, பௌத்த கோவில்களும் மடங்களும் இருந்தன. கரிகாலன் என்று வேறொரு சோழ அரசன் காஞ்சி ஏகாம்பரநாதர் கோவிலைப் புதுப்பித்து, நகரையும் வளப்படுத்தினான் என்று நூல்கள் கூறுகின்றன. பல்லவர் காலம் சங்க காலத்திற்குப் பிறகு ஏறத்தாழக் கி.பி. 300-இல் தொண்டை நாடு பல்லவர் என்ற அயலவர் ஆட்சிக்கு உட்பட்டது. ஆயினும் ஏறத்தாழ 300 வருட காலம் அவர்கள் காஞ்சியில் நிலையாகத் தங்கித் தொண்டை நாட்டை ஆள முடியவில்லை. தொண்டை நாட்டிற்கு மேற்கே இருந்த கதம்பர்களும் தெற்கே இருந்த சோழ பாண்டியர்களும் பல்லவரை எதிர்த்துச் செய்த போர்களே இதற்குக் காரணமாகும். ஏறத்தாழக் கி.பி. 6-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி முதல் கி.பி. 900வரை பல்லவர் காஞ்சியில் நிலையாக இருந்து நாடாண்டனர். அவருட் குறிக்கத்தக்கவர் சிறப்பியல்புகளை மட்டும் இங்குக் காண்போம். முதலாம் மகேந்திர வர்மன் (கி.பி. 600-630) இங்ஙனம் காஞ்சியில் நிலைத்து நாடாண்ட பல்லவருள் குறிப்பிடத்தக்க முதல்வன் மகேந்திர வர்மன் என்பவன். இவன்சாளுக்கியப் பேரரசனான இரண்டாம் புலிகேசியை வென்றவன்; இசை, நடனக் கலைகளில் தேர்ச்சி பெற்றவன். மலைச் சரிவுகளைக் குடைந்து கோவில்களை அமைத்த பெருந்தகை இவனே. இவனது ஆட்சி தெற்கே புதுக்கோட்டைவரை பரவியிருந்தது. இவன் முதலில் சமணனாக இருந்து திருநாவுக்கரசருக்குப் பெருந்தொல்லை விளைத்தவன்; பின்பு மனம் மாறிச் சைவனானவன். சித்தன்ன வாசல் ஓவியங்கள் இவன் காலத்தில் தீட்டப்பட்டவையே என்பது ஆராய்ச்சியாளர் பலரது கருத்தாகும். இவன் வடமொழியில் மிகச் சிறந்த புலமை உடையவன். மத்த விலாசப் பிரகசனம் என்னும் வேடிக்கை நாடக நூல் இவன் எழுதிய வடமொழி நூல்களுள் குறிப்பிடத்தக்கது. முதலாம் நரசிம்ம வர்மன் (கி.பி. 630-668) இவன் வைணவப் பற்று மிக்கவன்; தந்தையினும் சிறந்த போர் வீரன்; இரண்டாம் புலிகேசியை முற்றிலும் முறியடித்தவன்; அவனது தலைநகரான வாதாபியை அழித்தவன்; புலிகேசியை வெற்றி கொண்டதால் மகா மல்லன் என்று தன்னை அழைத்துக்கொண்டவன். சங்க காலப் பட்டினம் இவனால் புதுப்பிக்கப்பட்டு மகாமல்லபுரம் எனப் பெயர் பெற்றது. அப் பெயரே நாளடைவில் மாமல்லபுரம் எனவும், மாமல்லை, மல்லை எனவும் மருவி வழங்கலாயிற்று. இப்பேரரசன் மாமல்லபுரத்தில் சிறுசிறு குன்றுகளையே கோவிலாக மாற்ற முற்பட்டான். இவன் சிறந்த கடற்படையை வைத்திருந்தான்; அப்படை உதவியால் ஈழ நாட்டில் வெற்றி கொண்டான். இவனது படைத் தலைவரே பரஞ்சோதி என்ற சிறுத்தொண்ட நாயனார். திருச்சிராப் பள்ளி மலையிலும் பிற இடங்களிலும் இவன் குடைவித்த கோவில்கள் சிலவற்றைக் காணலாம். முதலாம் பரமேசுவர வர்மன் (கி.பி. 670-680) இவன் இரண்டாம் புலிகேசியின் மகனான முதலாம் விக்கிர மாதித்தனைப் பெருவளநல்லூர் என்னும் இடத்தில் கடும் போர் புரிந்து தோற்கடித்தான். பரமேசுவரன், நரசிம்மன் தொடங்கிய ஒற்றைக் கல் கோவில்களை மாமல்லபுரத்தில் அமைத்து முடித்தான். பஞ்ச பாண்டவர் இரதங்கள் என்று சொல்லப் படுவனவே இவர்கள் அமைத்த ஒற்றைக்கல் கோவில்கள். இப் பரமேசுவரன் சிறந்த சிவபக்தன்; உருத்திராக்கத்தால் சிவலிங்க வடிவில் மணிமுடி செய்து தரித்துக்கொண்டவன்; சிறந்த வடமொழிப் புலவன். இவன் காஞ்சிக்கு ஏழு கல் தொலைவிலுள்ள கூரம் என்னும் ஊரில் சிவன் கோவிலைக் கட்டினான். அக் கோவிலுக்கு முதன் முதல் அடிப்படையாகக் கருங்கற்களைப் பயன்படுத்தினான். இராச சிம்மன் (கி.பி. 680-720) பரமேசுவரன் மகனான இவன் காஞ்சியில் கருங் கற்களைக் கொண்டு கயிலாசநாதர் கோவிலைக் கட்டினான். முழுமையும் கற்களாலாகிய முதற் கோவில் இதுவேயாகும். கயிலாசநாதர் கோவில் சிறந்த கலைக் கூடம் என்னலாம். இது போன்ற சிறிய கோவிலை இப்பேரரசன் மாமல்லபுரத்துக் கடற்கரையிலும் அமைத்தான். இவன் காலத்தில் கொடிய பஞ்சம் தொண்டை நாட்டில் ஏற்பட்டது. இவனது அவையில் தண்டி என்ற வடமொழிப் புலவர் இருந்தார். அவர் அவந்தி சுந்தரி கதா, காவியாதர்ஸம் என்ற வடமொழி நூல்களை எழுதியுள்ளார். அக்காவியாதர்ஸமே தமிழில் தண்டியலங்காரம் எனப்படுகிறது. இரண்டாம் நந்தி வர்மன் (கி.பி. 731-795) இவனுக்குப் பல்லவ மல்லன் என்ற பெயரும் உண்டு. இவன் 65 ஆண்டுகள் அரசாண்டான். இவன் காலத்தில் வடமேற்கே இராட்டிரகூடரும், தெற்கில் சோழ பாண்டியரும் பல்லவ நாட்டைத் தாக்கினர். அரசியல் அறிவு வாய்ந்த இப்பல்லவன் இராட்டிர கூடர் மகளை மணந்து கொண்டான்; சோழ பாண்டியரை முறியடித்தான். இவன் சிறந்த வைணவன். காஞ்சியிலுள்ள பரமேசுவர விண்ணகரம் என்னும் கோவில் இவனால் புதுப்பிக்கப்பட்டது. இவன் திருமங்கை ஆழ்வார் காலத்தவன். அப்பெரியார் இவ்வரசனைப் பல பாக்களில் பாராட்டியுள்ளார். மூன்றாம் நந்தி வர்மன் (கி.பி. 844- 866) பல்லவருள் இவனே கடைசிப் பேரரசன். இவன் சிறந்த சிவபக்தன். சுந்தரரால் பாராட்டப்பெற்ற காடவர்கோன் இவனே என்று ஆராய்ச்சியாளர் அறைகின்றனர். இவன் இராட்டிரகூட அரசனது மகளை மணந்தவன்; சிறந்த தமிழறிஞன். தெள்ளாறு என்னும் இடத்தில் சேர, சோழ, பாண்டியரை முறியடித்தவன்; அதனால் தெள்ளாறு எறிந்த நந்தி வர்மன் என்று பெயர் பெற்றவன். நந்திக் கலம்பகம் என்பது இவன்மீது பாடப்பட்டதேயாகும். அந்நூலைக் கொண்டு இவனுடைய போர்த்திறமை, தமிழ்ப்பற்று, கொடைத்தன்மை முதலியவற்றை நன்கறியலாம். இவனது அவையில் பெருந்தேவனார் என்ற புலவர் இருந்தார். அவர் பாரதக் கதையை வெண்பாவில் பாடினார். அது பாரத வெண்பா எனப் பெயர் பெறும். பல்லவர் வீழ்ச்சி அபராசித வர்மன் பல்லவ அரசனாக இருந்த பொழுது (கி.பி. 880- இல்) திருப்புறம்பியம் என்னும் இடத்தில் இரண்டாம் வரகுண பாண்டியனுக்கும் பல்லவனுக்கும் போர் நடைபெற்றது. அப்போரில் தஞ்சையை ஆண்ட ஆதித்த சோழன் பல்லவர் பக்கம் சேர்ந்து போரிட்டான். பாண்டியன் முறியடிக்கப்பட்டான். சில ஆண்டுகளுள் அபராசிதன் கொல்லப்பட்டான். ஆதித்த சோழன் பல்லவ நாட்டையும் கைப்பற்றிக்கொண்டு சோழப் பெருநாட்டை ஏற்படுத்தினான். சோழராட்சி ஏறத்தாழக் கி.பி. 900 முதல் 1300 வரையில் தொண்டை நாடு சோழப் பேரரசர் ஆட்சியில் இருந்தது. அக்காலத்தில் தொண்டை நாடு சயங்கொண்ட சோழ மண்டலம் எனப் பெயர் பெற்றிருந்தது. காஞ்சி மாநகரம் சோழப் பெருநாட்டின் வட பகுதிக்குத் தலைநகராயிருந்தது. காஞ்சியில் சோழர் அரண்மனை ஒன்று அமைந்திருந்தது. முதற் குலோத்துங்கன் அந்த அரண்மனையில் இருந்தபொழுதுதான், கலிங்க நாட்டின்மீது படையெடுக்கும்படி கருணாகரத் தொண்டை மானுக்கு ஆணையிட்டான் என்று கலிங்கத்துப்பரணி கூறுகின்றது. சோழருக்குப் பின் சோழர்க்குப் பின்னர்த் தொண்டை நாடு விசய நகர வேந்தர் ஆட்சிக்கு உட்பட்டது; பின்பு கருநாடக நவாபின் ஆட்சிக்கும், அதற்குப் பின்னர் ஆங்கிலர் ஆட்சிக்கும் முறையே ஆட்பட்டது. 3. அரசியல் அரசுரிமை பல்லவர் அரசமுறை தந்தையினின்று மூத்த மகனுக்கு உரிமையானதாகவே தெரிகிறது. அரசுக்கு ஏற்ற மகன் இல்லாத காலங்களில் அரசனுடைய தம்பி மகன் பட்டத்தைப் பெறும் வழக்கம் இயல்பாக இருந்தது. அரசன் பிள்ளையில்லாமல் எதிர்பாராத நிலையில் இறந்துவிடின், அமைச்சர் முதலான பொறுப்புடைய மக்கள் ஒன்றுகூடி ஆலோசனை செய்து, அரச குடும்பத்தில் பிறந்த தக்க ஒருவனுக்கு முடிபுனைதலும் மரபாக இருந்தத. இம்முறை பற்றிய விவரங்கள் கல்வெட்டுக்களிலும் செப்புப் பட்டயங்களிலும் உள்ளன. அமைச்சர் முதலியோர் ஒவ்வொரு பல்லவ அரசர் காலத்திலும் அமைச்சர் பலர் இருந்தனர் என்பது கல்வெட்டுக்களால் தெரிகின்றது. பிரம்ம ஸ்ரீராஜன், நம்பன் இறையூர் உடையான், உத்தம சீலன், தமிழ்ப் பேரரையன் என்ற பெயர்களைக் கொண்ட அமைச்சர் பல்லவர் ஆட்சியில் இடம் பெற்றிருந்தனர். அரசர்க்கு ஆலோசனை கூறுதலும் ஆட்சியைக் கவனித்தலும் அமைச்சர் தொழில்களாக இருந்தன. உள்படு கருமத் தலைவர் (Private Secretaries), வாயில் கேட்போர் (Secretaries), கீழ் வாயில் கேட்போர் (Under Secretaries) முதலிய உயர் அலுவலாளரும் இருந்தனர். பல்லவர் படை பல்லவர் யானை, குதிரை, காலாட் படைகளை வைத்திருந்தனர். ஒவ்வொரு படைக்கும் தனித்தனியே தலைவன் ஒருவன் இருந்தான். விஷ்ணு வர்மன், உதய சந்திரன், பூதி விக்கிரமகேசரி என்ற தானைத்தலைவர் பெயர்கள் பட்டயங்களிற் காணப்படுகின்றன. நரசிம்ம வர்மனது சேனைத் தலைவர் சிறுத்தொண்ட நாயனார் என்று பெரிய புராணம் கூறுகின்றது. போர்ப் பயிற்சி நிரம்பப்பெற்ற பல்லவர் படைவலிமையாற்றான் மகேந்திரன் தந்தையான சிம்ம விஷ்ணு சோழ நாட்டையும், நடு நாட்டையும் கைப்பற்றினான்; பல்லவ வேந்தர் சாளுக்கியரையும் கதம்பரையும், இராட்டிர கூடரையும் முறியடித்தனர்; சோழபாண்டியரையும் அடிக்கடி போரிற் புறங்கண்டனர்; கப்பற்படையைக் கொண்டு இலங்கையில் தமக்குச் செல்வாக்கை ஏற்படுத்திக்கொண்டனர். நாட்டுப் பிரிவுகள் துங்கபத்திரை யாற்றுக்கும் திருச்சிராப்பள்ளிக்கும் இடைப்பட்ட நிலப்பகுதியை மகேந்திரவர்மன் முதலிய பல்லவ மன்னர் ஆண்டனர். தமிழகத்திற்கு வடக்கேயிருந்த பல்லவநாடு பல விஷயங்களா கப் பகுக்கப்பட்டிருந்தது. தொண்டைநாடு இருபத்து நான்கு கோட்டங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது. பல்லவர் ஆட்சிக்கு உட்பட்ட சோழநாட்டின் பகுதி, நாடு, கூற்றம் என்று பிரிக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு கோட்டத்திலும் நாடு, ஊர் என்னும் பிரிவுகள் இருந்தன. நாட்டை ஆட்சி நடத்தியவர் நாட்டார் எனப்பட்டனர். ஊரை ஆண்ட அவையினர் ஊரவையார் எனப்பட்டனர். அவர்கள் ஆள்வார், ஆளுங் கணத்தார் என்றும் அழைக்கப்பட்டனர். நாட்டார்க்கோ அல்லது ஊரவையார்க்கோ அரசன் விடுத்த ஓலை திருமுகம் எனப்பட்டது; நாட்டார் அல்லது ஊரவையார் அதனை நிறைவேற்றிப் பொதுமக்களுக்கு அறிவிப்பது அறை ஓலை எனப் பெயர் பெற்றது. ஊரார் என்பவர் ஊர்ப் பெருமக்கள். இவர்களைக் கலந்தே ஆண்ட அவையினர் (ஆள்வார்) ஊர் ஆட்சியைக் கவனித்தனர். ஊர் ஆட்சியினர், ஊரின் பல துறைகளையும் கவனிக்கத் தனித்தனிக் குழுக்களாகப் பிரிந்து வேலை செய்தனர். அவர்கள் ஏரிவாரியப் பெருமக்கள், தோட்ட வாரியப் பெருமக்கள் என்றாற்போலத் தாம் மேற்கொண்ட வேலைக்கு ஏற்பப் பெயர்பெற்றிருந்தனர். கோவில் ஆட்சியைக் கவனித்து வந்தவர் அமிர்த கணத்தார் எனப்பட்டனர். சிற்றூர்களில் மக்கள் வாழ்வதற்குரிய வீடுகள், நன்செய்- புன் செய் நிலங்கள், வீட்டுத்தோட்டங்கள், குளங்கள், ஊர்ப் பொதுநிலங்கள், கடைத்தெரு, இடுகாடு- சுடுகாடு, கோவில்கள், கோவிலுக்குரிய நிலங்கள் முதலியன இருந்தன. அரசாங்க அலுவலரால் நிலங்கள் அளக்கப்பட்டு எல்லைகள் குறிக்கப் பட்டிருந்தன. ஒவ்வோர் ஊரிலும் பயிர்த்தொழில் செய்பவரும், தட்டார், கொல்லர், தச்சர், வேட்கோவர், சலவைத் தொழிலாளர், நாவிதர், மேளக்காரர் முதலிய பலதிறப்பட்ட தொழிலாளரும் வாழ்ந்து வந்தனர். வேதங்களில் வல்ல பிராமணர் பொருட்டுப் புதியனவாக உண்டாக்கப்பட்ட ஊர்கள் பலவாகும். இவை புத்தூர், பிரமதேசம், பிரமபுரி, மங்கலம் எனப் பலவாறு பெயர் பெற்றன. இவ்வூர்கள் எத்தகைய வரியையும் அரசாங்கத்திற்குச் செலுத்த வேண்டாத நிலையில் அமைக்கப்பட்டவை. கோவில்களுக் கென்றே சிற்றூர்கள் பல வரியின்றி விடப்பட்டன. அவை தேவதானச் சிற்றூர்கள் எனப் பெயர் பெற்றிருந்தன. சமணப் பள்ளிகளுக்கு விடப்பட்ட நிலங்களுக்குப் பள்ளிச்சந்தம் எனப் பெயர் வழங்கியது. கோவில்கள் கோவிலில் ஒவ்வொரு வேலையையும் கவனிக்கப் பணிமக்கள் இருந்தனர். விழாக்கள் அவ்வப்போது சிறப்பாக நடைபெற்றன. அரசரும் பிறரும் கோவிலுக்கு நிலத்தையும் பொன்னையும் பிற பொருள்களையும் வழங்கினர். கோவிலை அடுத்து இருந்த மடத்தில் சமயக் கல்வியும் யாத்ரீகருக்கு உணவும் வழங்கப்பட்டன. அறங்கூறவையம் இக்காலத்தில் ஒவ்வொரு நாட்டிலும் உயர் நீதிமன்றம் இருத்தல் போல அக்காலத்தில் இருந்தது என்று கூற இயலவில்லை. ஊர் வழக்குகளை ஊர் அவையினரே தீர்த்து வைத்தனர். மிகப் பெரிய வழக்குகளைத் தலைநகரத்தி லிருந்த அறங்கூறு அவையம் தீர்த்து வைத்தது போலும்! கல்வெட்டுக் களிலும் பல்லவர் கால நூல்களிலும் அதிகரணம், தருமாசனம் என்னும் பெயர்கள் காணப்படுகின்றன. அதிகரணம் என்பது குற்ற வழக்குகளை விசாரிக்கும் மன்றம் எனவும், தருமாசனம் என்பது பிற வழக்குகளை விசாரிக்கும் மன்றம் எனவும் ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். பல்லவர் இலச்சினை சேரர்க்கு வில்லும், சோழர்க்குப் புலியும், பாண்டியர்க்கு மீனும் இலச்சினையாக அமைந்தாற்போலப் பல்லவர்க்கு நந்தி இலச்சினை யாயிற்று. இரண்டு பக்கங்களிலும் உயர்ந்த விளக்குகள் இருக்க அவற்றுக்கு இடையே நந்தி அமர்ந்துள்ளது போலப் பல்லவர் இலச்சினை அமைந்துள்ளது. பல்லவர் கொடியிலும் நந்தி உருவமே தீட்டப்பட்டது. அவர்தம் காசுகளிலும் நந்தி இருத்தலைக் காணலாம். நாணயங்கள் பல்லவர் காசுகள் செம்பு, வெள்ளி, பொன் முதலிய உலோகங்களால் செய்யப்பட்டன. பெரும்பாலான காசுகள் நந்தி இலச்சினையைப் பெற்றவை. இரண்டு பாய்மரக் கப்பல் இலச்சினை கொண்டவை சில. நந்தி இலச்சினை பல்லவரது சமயப் பற்றினைக் குறிக்கும். பாய்மரக்கப்பல் இலச்சினை அவர்களது கடல் வாணிகச் சிறப்பை விளக்குவதாகும். எல்லாக் காசுகளும் மிகச் சிறந்த வேலைப்பாடு கொண்டவை. நந்தி முத்திரைகொண்ட சில காசுகளில் ஸ்ரீபரன், ஸ்ரீநிதி என்பன குறிக்கப் பட்டுள்ளன. நந்தி இலச்சினைக்குமேல் மானபர என்று பொறிக்கப் பட்டுள்ள காசுகள் சிலவாகும். பல்லவர் கல்வெட்டுக்களிலும் செப்பேடுகளிலும் பொன் காசுகள் இருந்தமை குறிக்கப் பட்டுள்ளன. அளவைகள் பல்லவர் காலத்தில் குழி, வேலி, என்பன நில அளவை களாக இருந்தன. இவற்றோடு நாலு சாண் கோல், பன்னிரு சாண் கோல், பதினாறு சாண் கோல், முதலிய நீட்டல் அளவைகளும் இருந்தன. நாழி, உழக்கு, உரி, பிடி, சோடு, மரக்கால், பதக்கு, குறுணி, காடி, கலம் என்பன முகத்தல் அளவைப் பெயர்கள். கருநாழி, பிழையா நாழி என நாழிகள் பல பெயர்களைப் பெற்றிருந்தன. நிருபதுங்கவர்மன் மனைவியின் பெயர் பிருதிவீ மாணிக்கம் என்பது. அவள் பெயரால் பிருதிவீ மாணிக்கஉரி என்று ஒரு முகத்தல் அளவை இருந்தது. பொன் முதலியவற்றை நிறுக்கக் கழஞ்சு, மஞ்சாடி என்னும் நிறைகள் பயன்பட்டன. வரிகள் தென்னை, பனை, பாக்கு முதலிய பயன்தரத்தக்க மரங்களைப் பயிராக்க வரி செலுத்தப்பட்டது. கள் இறக்க வரி, பனஞ்சாறு இறக்க வரி, பாக்குக்கு வரி என ஒவ்வொரு துறையிலும் வரி வாங்கப்பட்டது. நோய்களை நீக்கவல்ல செங்கொடிவேலி, கரிசலாங்கண்ணி முதலிய செடி கொடிகளைப் பயிரிடவும் வரி விதிக்கப்பட்டது. மருக்கொழுந்து முதலிய மணம் தரத்தக்க செடிகளையும், மலர் தரத்தக்க செடிகளையும் பயிராக்க வரி விதிக்கப்பட்டது. கால்நடைகளால் பிழைப்பவர், ஆடை விற்பவர், வேட்கோவர், தச்சர், கொல்லர், கன்னார், பொற்கொல்லர், சலவைத் தொழிலாளி, செக்கார், நெசவாளர், நூல்நூற்பவர், மீன் பிடிப்பவர், நெய் விற்பவர், தரகர் முதலிய பலவகைத் தொழிலாளரும் அரசாங்கத்திற்கு வரி செலுத்தினர். நீர்ப்பாசன வசதிகள் தொண்டை நாட்டு ஆறுகளில் தண்ணீர்ப் பெருக் கெடுத்து வரும்போது, அந்நீரைத் தேக்கி வைத்து, வேண்டும் போது வயல்களுக்குப் பாய்ச்சுவதற்காகப் பெரிய ஏரிகள் பல, பல்லவரால் அமைக்கப்பட்டன. மகேந்திர தடாகம், சித்திரமேக தடாகம், பரமேசுவர தடாகம், வைரமேகன் தடாகம், வாலி ஏரி, மாரிப்பிடுகு ஏரி, கனகவல்லி தடாகம் எனப் பல ஏரிகளின் பெயர்கள் கல்வெட்டுக்களிற் காணப்படுகின்றன. ஆற்று நீர் பல வாய்க்கால்கள் வழியாக நாட்டின் பல பகுதிகளுக்குக் கொண்டு செல்லப்பட்டது. அவற்றுள் வைரமேகன் வாய்க்கால், பெரும்பிடுகு வாய்க்கால் என்னும் இரண்டும் கல்வெட்டுக்களில் இடம் பெற்றுள்ளன. கைத்தொழிலும் வாணிகமும் நெசவுத் தொழில், தச்சுத் தொழில், கட்டடத் தொழில், பொற்கொல்லத் தொழில் முதலிய பலவகைத் தொழில்கள் தொண்டை நாட்டில் நடைபெற்று வந்தன. வேல், ஈட்டி முதலிய போர்க் கருவிகளைச் செய்தவர் பலராக இருந்தனர். தொண்டை நாட்டு விளைபொருள்களும் செய்பொருள்களும் தென் னிந்தியாவின் பல பகுதிகட்கும் அனுப்பப்பெற்றன; அப்பகுதி களின் விளைபொருள்களும் செய்பொருள்களும் தொண்டை நாட்டில் விலையாயின. இங்ஙனம் உள்நாட்டு வாணிகம் சிறப்புற நடைபெற்றது. தொண்டைநாட்டை ஆண்ட பல்லவரிடமும், சோழரிடமும் கடற்படை இருந்தது. அவர்கள் கடல் வாணிகத்தை வளமுற வளர்த்தனர். மாமல்லபுரம் தொண்டைநாட்டின் சிறந்த துறை முகப்பட்டினமாக விளங்கியது. தொண்டைநாட்டு வணிகர் மலேயா முதலிய கடல்கடந்த நாடுகளுக்குச் சென்று வாணிகம் செய்தனர். பல்லவ வேந்தர் சீனரோடு உறவு கொண்டிருந்தனர் என்பதைச் சீன ஏடுகள் குறிக்கின்றன. சமுதாய வாழ்க்கை பல்லவ மன்னர் அறநூல்களின்படியே குடிமக்களை ஆட்சி புரிந்துவந்தனர்; குடிமக்களை மிகுதியாக வருத்தி வரி வாங்க வில்லை. அரசன் முதல் ஆண்ட ஈறாக இருந்த அனைவரும் வழி வழியாகத் தம் முன்னோர் செய்துவந்த தொழில்களைச் செய்து வந்தனர். மன்னன் அறநூல் வழி ஆட்சி நடத்தியதால், சமுதாயத்தில் குழப்பம் இல்லை. போர்க் காலங்களில் மட்டும் நாட்டில் பஞ்சங்கள் ஏற்பட்டன. அரசன் மிக முயன்று குடிகளின் துன்பத்தைப் போக்கிவந்தான். சங்க காலத்திற்குப் பிறகு தமிழகத்தில் கோவில்கள் மிகுதிப் பட்டன; வழிபாட்டு முறைகள் பெருகின. வடமொழி செல்வாக்குப் பெற்றது. இவற்றின் காரணமாக வடமொழியிலும் தென்மொழி யிலும் சமய நூல்கள் தோன்றின. இராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாச நூல்கள் பொதுமக்களுக்குப் படித்து விளக்கப் பட்டன. பொதுமக்கள் இவ்வுலக வாழ்க்கைக் காகத் தொழிலில் ஈடுபட்டனர்; மறு வுலக வாழ்க்கைக்காகச் சமயத்துறையில் ஊக்கம் காட்டினர். 4. இலக்கியச் சிறப்பு வடமொழி நூல்கள் பல்லவர் காலத்தில் வடமொழி நல்ல முறையில் வளர்ச்சி அடைந்திருந்தது. பல்லவர் அவைக்களத்தில் பாரவி, தண்டியாசிரியர் போன்ற சிறந்த வடமொழிப் புலவர்கள் இருந்தார்கள். லோகவிபாகம், கிராதார்ச்சுனீயம், அவந்தி சுந்தரி கதை, மத்த விலாசப் பிரகசனம், காவ்யாதர்ஸம் போன்றவை பல்லவர் கால வடமொழி நூல்களாகும். வடமொழிப் பட்டயங்கள் பல்லவர்களின் பட்டயங்கள் வடமொழியில் எழுதப் பட்டன. முதலாம் பரமேசுவர வர்மன் கூரம்பட்டயம் என்பதனை வெளியிட்டான். அப்பட்டயத்துள் கூறப்படும் பெருவள நல்லூர்ப் போர் வருணனை படித்து மகிழ்தற் குரியதாகும். அப்பட்டயத்தை எழுதியவர் சிறந்த வடமொழிப் புலவராவர். இரண்டாம் நந்திவர்மன் வெளியிட்ட காசக்குடிப் பட்டயம் பல்லவர் வரலாற்றை நன்கு விளக்குவதாகும். மூன்றாம் நந்திவர்மனுடைய வேலூர்ப் பாளையப்பட்டயத்தில் வடமொழி நடை மிகச்சிறந்து அமைந்துள்ளது. பல்லவரும் தமிழும் மகேந்திர வர்மன், இரண்டாம் நந்தி வர்மன், மூன்றாம் நந்தி வர்மன், அபராசிதவர்மன் ஆகிய இவர்களே தமிழறிவு பெற்றிருந்த பல்லவப் பேரரசர்கள். இச்செய்தியினைத் திருமங்கை யாழ்வார் பாடல்கள், நந்திக் கலம்பகப் பாடல்கள், திருத் தணிகைக் கல்வெட்டிலுள்ள வெண்பா, தமிழ் உரைப் பகுதிகளில் காணப்படும் தனிப்பாடல்கள் ஆகியவை வற்புறுத்துகின்றன. வடமொழியிலும் தென்மொழியிலும் புலமை பெற்ற ஐயடிகள் காடவர் கோன் என்ற பல்லவ அரசர் சிவத்தளி வெண்பா என்னும் நூல் பாடினார் என்று பெரிய புராணம் குறிக்கின்றது. சிவத்தளி வெண்பா இஃது, இறக்கும் தறுவாயில் நேரும் துன்பங்களை அடையாமுன், இன்னின்ன ஊர்க்கோவிலில் வாழும் இறைவனை நினை, என்று மனத்திற்கு அறிவுறுத்துவதாக அமைந்த வெண்பாக்களின் தொகுதியாகும். தில்லை, குடந்தை, ஐயாறு, ஆரூர், திருத்துருத்தி, திருக்கோடிகா, பாண்டவாய்த் தென்னிடைவாய், திருநெடுங்களம், குழித்தண்டலை, ஆனைக்கா, மயிலை, சேனை மாகாளம், வளைகுளம், சாய்க்காடு, திருப்பாச்சிலாச்சிராமம், சிராமலை, திருமழபாடி, திரு ஆப்பாடி, காஞ்சீபுரம், திருப்பனந்தாள், திருவொற்றியூர், திருக்கடவூர், முதலிய தளிகள் இந்நூலில் குறிக்கப்பட்டுள்ளன. மத்தவிலாசப் பிரகசனம் இது வடமொழியில் எழுதப்பட்ட வேடிக்கை நாடகம். உடலெல்லாம் நீறு பூசிய காபாலிகச் சைவனொருவன் தன்னைப் போலவே மது அருந்திய காபாலினி ஒருத்தியுடன் காஞ்சிமா நகரத் தெரு ஒன்றில் நடந்துவருகிறான்; ஓரிடத்தில் தங்குகிறான். அவனது காபாலம் ஒரு நாயால் கொண்டு செல்லப்படுகிறது. அவ்வமயம், அவ்வழியே துவராடை உடுத்த பௌத்த பிக்கு ஒருவன் வருகிறான். அவன் தனது பிச்சைப் பாத்திரத்தில் இறைச்சி வைத்திருக்கிறான்; அதனால் அதனைத் தன் கட்கத்தில் இடுக்கி, மேலாடையால் மறைத்துக்கொண்டு நடந்து வருகிறான். அவ்வுண்மையை அறியாத காபாலிகன் தனது காபாலத்தைத்தான் அந்தப் பிக்கு மறைத்து வைத்திருக்கிறான் என்று தவறாக எண்ணி, அவன் கையை இழுக்கிறான். நடுத்தெருவில் பிச்சைப் பாத்திரம் விழுந்துவிடின், அதனுள் வைத்துள்ள இறைச்சி வெளிப்படுமே என்று அஞ்சிய பிக்கு, அப்பாத்திரத்தைக் கையில் அழுத்தமாக இடுக்கிக்கொண்டு பேசுகிறான். இந்நிலையில் குடிவெறியில் இருந்த காபாலினி காபாலிகனை நோக்கி, இந்தப் பிக்கு செல்வம் பொருந்திய பௌத்த மடத்தைச் சேர்ந்தவன். இவன்மீது வழக்குத் தொடுத்தால், இவன் தன் மடத்துப் பொருளைக்கொண்டு அறங்கூறவையத்தார் வாயை அடைத்து விடுவான், என்று கூறுகிறாள். அவ்வமயம் ஒழுக்கம் கெட்ட பாசுபதச் சைவன் ஒருவன் அங்கு வருகின்றான். அவனிடம் காபாலிகனும் பௌத்த பிக்குவும் நடந்ததைக் கூறுகின்றனர். அவ்வமயம் நாயால் கொண்டு செல்லப்பட்ட காபாலம் கிடைத்து விடுகிறது. இவ்வேடிக்கை நாடகத்தில், இதனைச் செய்த மகேந்திர வர்மன் இசைக்கலையைப் பலபடப் பாராட்டியுள்ளான்; காபாலிகர், பௌத்தர் முதலியோரது ஒழுக்கக் கேட்டைப் புலப்படுத்தி யுள்ளான்; தன் ஆட்சிக்குட்பட்ட அறங் கூறவையத் தார் கையூட்டு வாங்கிக்கொண்டு நெறி தவறி வழக்கில் முடிவு கூறலும் உண்டு என்பதையும் குறிப்பாக உணர்த்தியுள்ளான். இந் நாடகம் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அருட்பாடல்கள் திருமயிலாப்பூர், திருவொற்றியூர், திருஇடைச்சுரம், திருஅச்சிறுபாக்கம், திருப்பாலைத்துறை, திருவேற்காடு, திரு ஆலங்காடு, முதலியன தொண்டைநாட்டுச் சிவத்தலங்களாகும். திருப்பதி, திருஎவ்வுளூர் (திருவள்ளூர்), காஞ்சி, முதலியன சிறந்த வைணவப் பதிகளாகும். இவையெல்லாம் முறையே நாயன்மார்களாலும், ஆழ்வார்களாலும் பாடப்பெற்ற சிறப்புடையவை. இவை பற்றிய பாடல்களெல்லாம் தொண்டைநாட்டுச் சமய இலக்கியமாகும். நந்திக் கலம்பகம் இந்நூல் ஏறத்தாழ நூறு பாக்களைக் கொண்டது; மூன்றாம் நந்தி வர்மனைப் பற்றியது; இன்றுள்ள கலம்பக நூல்களுள் காலத்தால் முற்பட்டது. மூன்றாம் நந்திவர்மன் காலத்தில் நடைபெற்ற போர்கள், அவன் பெற்ற வெற்றிகள், அவனது தமிழ்ப்புலமை, கொடைத் தன்மை இன்ன பிறவும் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. அவனது வரலாற்றை அறிய இச்சிறு நூல் பெருந்துணை புரியவல்லது. பாரத வெண்பா இதனைப் பாடிய பெருந்தேவனார் சங்ககாலத்துப் பாரதம் பாடிய பெருந்தேவனாரின் வேறுபட்டவர். இவர் இந்நூலில், மூன்றாம் நந்திவர்மன் செய்த தெள்ளாற்றுப் போரைக் குறித்துள்ளார். இப்புலவர் சிறந்த வைணவர் என்பது, இந்நூலிலுள்ள கடவுள் வாழ்த்துப் பாக்களால் தெரிகிறது. திருவேங்கடம், திருமாலிருஞ் சோலைமலை (அழகர்மலை), திருவரங்கம், திருவத்தியூர் என்னும் வைணவத் தலங்கள் இந்நூலில் குறிக்கப்பட்டுள்ளன. இதனால் இத்தலங்கள் இவர் காலத்தில் மிக்க சிறப்புற்றனவாக இருந்தன என்பது தெரிகிறது. பெரிய புராணம் கி.பி. 12-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தொண்டை நாட்டுப் புலவரான சேக்கிழார் செய்ததே பெரிய புராணம் என்பது. இந் நூலின் சிறப்பை அடுத்த பகுதியிற் காண்க. இந்நூலுள் திருக்குறிப்புத் தொண்டர் புராணத்தில் தொண்டை நாட்டு வருணனை பல பாக்களில் இடம் பெற்றுள்ளன. பாலாற்றின் சிறப்பு நன்கு சுட்டப்பட்டுள்ளது. பின் நூற்றாண்டுகளில் சைவ சமயத்தை வளர்க்கப் பெருந்துணையாக இருந்த இப்பெரிய புராணத்தைச் செய்த பெரியார் தொண்டை நாட்டவர் என்ப தொன்றே, தொண்டை நாட்டின் சிறப்புக்குச் சிறந்த எடுத்துக் காட்டாகும். நளவெண்பா வெண்பாவிற் புகழேந்தி என்று புகழப்பெற்ற புகழேந்திப் புலவர் தொண்டை நாட்டுப் பொன்விளைந்த களத்தூரில் பிறந்தவர். இவர் இயற்றிய நள வெண்பா சொற் சுவையும் பொருட் சுவையும் செறிந்தது; 424 வெண்பாக்களை உடையது; அழகிய உவமைகளைக் கொண்டது; சிறந்த கருத்துக்களைப் பெற்றது; நளனது வரலாற்றை நன்கு எடுத்து இயம்புகிறது; ஞாயிறு திங்கள்களின் தோற்றம், மறைவு, பொழில் விளையாட்டு, மகப்பேற்றின் சிறப்பு, சூதாட்டத்தின் தீமை முதலியவற்றைக் குறிக்கும் பாடல்கள் படித்துச் சுவைக்கத் தக்கவை. புகழேந்தியின் காலம் கி.பி. 13-ஆம் நூற்றாண்டு. கந்தீ புராணம் கச்சியப்ப சிவாசாரியர் என்ற புலவர் பெருமானே இப்பெரு நூலைப் பாடியவர். இந்நூல் முருகப் பெருமானின் வரலாற்றை விரித்துக் கூறுவது. இந்நூல் காஞ்சி ஏகாம்பரநாதர் திருக்கோவிலில் அரங்கேற்றப்பெற்றது. அந்தகக் கவிஞர் திருக்கழுக்குன்றத்துக்கு அணித்தாகவுள்ள உழலூரில் கி.பி. 17-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் வீரராகவ முதலியார் என்ற பைந்தமிழ்ப் பாவலர். இவர் பிறவிக் குருடராக இருந்தமையால் அந்தகக் கவி வீரராகவ முதலியார் என்று அழைக்கப்பட்டார். இவர் பிறவியில் குருடராயினும் அறிவிற் குருடரல்லர். இப் பெரியார் கச்சியப்பர் என்ற பெரும் புலவரிடம் கற்றுப் பெருமை பெற்றார். இவர் திருக்கழுக்குன்றப் புராணம், திருக்கழுக்குன்ற மாலை, திருக்கழுக்குன்ற உலா, கயத்தாற்று அரசன் உலா, திருவாரூர் உலா, கீழ்வேளூர் உலா, சேயூர்க் கலம்பகம், சேயூர் முருகன் பிள்ளைத் தமிழ், சந்திரவாணன் கோவை முதலிய நூல்களை இயற்றியவர். படிக்காசுப் புலவர் தொண்டை நாட்டுக் களத்தூரில் பிறந்த இவர், இலக்கண விளக்கம் முதலிய நூல்களைச் செய்த வைத்தியநாத தேசிகரிடம் தமிழ்ப் புலமை பெற்றார். இவர் சிற்றரசராலும் செல்வராலும் ஆதரிக்கப் பெற்றவர். இப்பெரியார் புதுக்கோட்டைச் சீமையை ஆண்டு வந்த சிவந்தெழுந்த பல்லவரையர்மீது உலாவும் பிள்ளைத் தமிழும் பாடினார்; மாவண்டூரில் வாழ்ந்த வள்ளல் ஒருவரது விருப்பப்படி தொண்டை மண்டல சதகத்தைப் பாடி முடித்தார். இப்புலவர் பெருமான் அக்காலத்தில் வாழ்ந்த சிற்றரசரிடமும் வள்ளல்களிடமும் சென்று தம் கவித்திறனைக் காட்டிப் பரிசில்கள் பெற்றுவந்தார். அவருள் இவரது உள்ளத்தைப் பெரிதும் கவர்ந்தவர் கீழ்க்கரையில் வாழ்ந்த வள்ளல் சீதக்காதி என்பவர். இவர் அவ்வள்ளலுடன் மிக நெருக்கமான தொடர்பு கொண்டார்; அவர்மீது உள்ளத்தை உருக்கும் செய்யுட்கள் பல பாடினார். இப்புலவர் பெருமான் சிவந்தெழுந்த பல்லவன் உலா, சிவந்தெழுந்த பல்லவன் பிள்ளைத் தமிழ், தொண்டை மண்டல சதகம், புள்ளிருக்கு வேளூர்க் கலம்பகம் முதலிய பல நூல்களைப் பாடியுள்ளார். இவையன்றி இவர் பாடியுள்ள தனிப்பாடல்களும் பலவாகும். தணிகைப் புராணம் திருத்தணிகையில் கோயில் கொண்டுள்ள முருகப் பெருமான் மீது பாடப்பெற்ற இந்நூல் உயர்ந்த தமிழ் நடையில் அமைந்துள்ளது. இதனைப் பாடியவர் கச்சியப்ப முனிவர். இவர் காலம் கி.பி. 18-ஆம் நூற்றாண்டாகும். தணிகைப் பதியின் அமைப்பு, தொண்டை நாட்டு வருணனை, தல நிகழ்ச்சிகள், முருகப்பெருமான் பக்தர்களை ஆட்கொள்ளும் திறன் முதலியன இந்நூலில் இடம் பெற்றுள்ளன. இவ்வாறே தொண்டை நாட்டில் உள்ள ஒவ்வொரு தலத்திற்கும் ஒரு புராணம் உண்டு. இப்புராணங்கள் 20-ஆம் நூற்றாண்டுத் தொடக்கம் வரை பாடப்பெற்று வந்தன. இவற்றுள் கூறப்படும் தல வரலாறு, வருணனைப் பகுதி, ஆடை அணிகள் பற்றிய விவரங்களும், மக்கள் பழக்க வழக்கங்களும் உவமை முதலிய அணி விசேடமும் படிப்பவருக்கு இன்பம் ஊட்ட வல்லவை. ஒவ்வொரு புராண ஆசிரியரும் தம் கால நிலையை உளங்கொண்டே நூல் இயற்றுதல் இயற்கை. ஆதலால் அவர் செய்துள்ள நூலில் அவர் காலப் பழக்க வழக்கங்களும் சமயக் கருத்துக்களும் உயர்ந்த உலகியல் கருத்துக்களும் பிறவும் இடம் பெறுதல் இயல்பு. 5. கலைச் சிறப்பு கட்டடக்கலை பல்லவ வேந்தர் பிற மன்னர்களைப் போலவே கட்டடக் கலை, ஓவியக்கலை, சிற்பக்கலை, இசைக்கலை, நடனக்கலை முதலிய வற்றை வளர்த்து வந்தனர். காஞ்சி கயிலாச நாதர் கோவில், வைகுந்தப் பெருமாள் கோவில், மாமல்ல புரத்திலுள்ள ஆதிவராகர் கோவில் முதலியன பல்லவர் காலக் கட்டடக் கலைக்குச் சிறந்த சான்றுகளாகும். காஞ்சி கயிலாச நாதர் கோவிலின் முதல் திருச்சுற்றில் ஏறத்தாழ ஐம்பது சிறு கோவில்கள் திருச்சுற்றுச் சுவரோடு இணைந்துள்ள முறையில் அமைத்திருத்தல் மிகச் சிறந்த வேலைப்படாகும். இவ்வாறு அதே கோவிலில் கருவறையைச் சுற்றிலும் பெரும்புரைகள் அமைத் திருத்தலும், படிப்படியாகக் குறைந்து மேல் நோக்கிச் செல்லும் விமான அமைப்பும் கட்டடக்கலையின் அறிவு நுட்பத்தை நன்கு விளக்குவனவாகும். வைகுந்தப் பெருமாள் கோவிலின் நான்கு உட்சுவர்களின் அரிய வேலைப்பாடும் அக்கோவில் கருவறையின் அமைப்பும், விமான அமைப்பும், சிங்கத் தூண்களின் அரிய வேலைப்பாடும் வியந்து பாராட்டத்தகுவன. கற்களை உடைத்து, ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கிச் சுவர்கள் எழுப்புவதும், செங்கல் சுண்ணாம்பு இவற்றைக்கொண்டு விமானம் அமைப்பதும் பல்லவர் காலத்தில் தான் தொடக்கமாயின. அத்தொடக்க காலத்திலேயே அவர்தம் கட்டட வேலை சிறந்து காணப்பட்டது என்பதை நோக்க, பல்லவர் காலத்துக் கட்டடக்கலை பெற்றிருந்த உயர்நிலையை நாம் ஒருவாறு உணரலாம். பல்லவர் காலத்துப் பாடல் பெற்ற கோவில்கள் எல்லாம் சோழர் காலத்தில் கற்கோவில்களாக மாறின. பல கோவில்கள் பெரிய அளவில் அமைப்புண்டன. இவை அனைத்தும் சோழர் காலக் கட்டடக்கலையை நமக்கு உணர்த்துவனவாகும். குதிரைகளைக் கொண்ட பெரிய தூண்கள், வீரர்களால் ஓட்டப்பெறும் குதிரைகளைக் கொண்ட பெரிய கற்றூண்களைக் கொண்ட மண்டபங்கள், திருச் சுற்றுக்கள், யாழிகளைக் கொண்ட தூண்களைக் கொண்ட மண்டபங்கள் என்பன விசயநகர வேந்தர் காலத்தவை. வானளாவிய பெரும்பாலான கோபுரங்களும் இக்காலத்தன. இவை இக்காலக் கட்டடக்கலைச் சிறப்பை நமக்கு உணர்த்துவனவாகும். ஓவியக்கலை பல்லவருக்கு முற்பட்டிருந்த சங்க காலத்திலேயே, தமிழர் ஓவியங்களை அமைத்து ஆடை நெய்தனர்; கட்டடச் சுவர்கள் மீது மக்கள் ஓவியங்களையும் பிற உயிர்களைக் குறித்த ஓவியங்களையும் தீட்டி வந்தனர். நடன மண்டபங்களிலும் கட்டில்களிலும் ஓவிய வேலைப்பாடு கொண்ட திரை இருந்து வந்தது. வண்ணங்களைக்கொண்ட எழுதாத மேலோட்ட ஓவியமும் வரையப்பட்டது. அது புனையா ஓவியம் எனப் பெயர் பெற்றது. சித்தன்னவாசல் ஓவியங்கள் பல்லவர் தாம் அமைத்த கற்கோவில்களில் எல்லாம் ஓவியங்களைத் தீட்டினர். இவ்வுண்மையை அக்கோவில்களில் இன்றளவும் காணப்படும் பல நிறக் குறிகளைக் கொண்டு தெளியலாம். சித்தன்னவாசல் புதுக்கோட்டைக்கு மேற்கே பத்து மைல் தொலைவில் உள்ளது. அங்கு ஒரு குன்றில் குடைவரைக் கோவில் ஒன்று உள்ளது. அதனைக் குடைவித்தவன் மகேந்திரவர்மன். அதன் முன் மண்டபம் சிறிய தாழ்வாரத்தில் சதுரவடிவில் அமைந்துள்ள உள் அறையைக் கொண்டது. முன் மண்டபத் தூண்கள் இரண்டில் அழகிய நடனமாதர் இருவர் ஓவியங்கள் அமைந்துள்ளன. இம்மாதர்தம் கூந்தல் அமைப்பு, ஆடை அமைப்பு, அணி வகைகள், நடனமாடும் நிலையில் கைகளை வைத்துள்ள முறை முதலியன ஓவியர் திறமையை நன்கு புலப்படுத்துகின்றன. வலப்புறத்தூணின் உட்பகுதியில் அரசன் அரசியர் தலைகள் ஓவியமாகத் தீட்டப்பட்டுள்ளன. அரசனது தலையில் சிறந்த வேலைப்பாடு கொண்டதும் மணிகள் பதிக்கப் பெற்றதுமாகிய மகுடம் ஒன்று காட்சியளிக் கிறது. அவனது கழுத்தில் மணிகள் பதித்த மாலைகள் காணப்படுகின்றன. காதுகளில் குண்டலங்கள் தொங்குகின்றன. அரசியின் தலைமீது ஒருவகை மகுடம் அணி செய்கிறது. அவள் காதுகளை வளையங்கள் அழகு செய்கின்றன. கூரையில் உள்ள ஓவியம் ஒரு தாமரைக் குளத்தைக் குறிக்கின்றது. பசிய தாமரை இலைகளும், தாமரை மலர்களும், மலராத பேரரும்புகளும் குளத்தை அழகு செய்கின்றன. சீவன் முக்தர்களாகிய சமணப் பெரியோர் அங்குக் காட்சியளிக்கின்றனர். கண்ணையும் கருத்தையும் ஒரு வழிப்படுத்தும் இவ்வோவியங்கள் இற்றைக்கு ஏறத்தாழ 1300 ஆண்டுகட்கு முன்பு வரையப் பெற்றன ஆயினும், உயிர் ஓவியங்கள் என்று சொல்லத்தக்கவாறு அமைந்துள்ளன. (இவ்வோவியங்களின் காலம் கி.பி.ஒன்பதாம் நூற்றாண்டாக இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர் சிலர் இப்பொழுது கருதுகின்றனர்) சிற்பக்கலை சங்க காலத்தில் செங்கல், சுதை, மண் இவற்றைக் கொண்டு உருவங்கள் அமைக்கப்பெற்றன. கல்லைப் பல வேலைகட்கும் பயன்படுத்தும் முறை கண்ட பல்லவர் காலத்தில், கல்லைக் கொண்டே பல உருவங்கள் அமைக்கப்பட்டன. மாமல்லபுரத்து ஆதிவராகர் கோவிலில் எதிரெதிர் சுவர்களில் மகேந்திரன் உருவச்சிலையும் அவன் தந்தையான சிம்மவிஷ்ணு உருவச் சிலையும் அமைந்திருக்கின்றன. சிம்மவிஷ்ணு முக்காலிமீது அமர்ந்திருக்கிறான். அவன் தலைமீது ஒருவகை மகுடம் இருக்கின்றது. அவன் அருகில் அவனுடைய தேவியர் இருவர் நிற்கின்றனர். அவர்களின் தலையணிகளும் பிற அணிகளும் அக்காலச் சிற்பிகளின் வேலைத் திறனை நன்கு வெளிப்படுத்துகின்றன. இம்மூன்று உருவங்களுக்கும் எதிர்ப்புறச் சுவரில் மகேந்திரன் நிற்கின்றான். அவனுடைய மனைவியர் இருவர் பக்கத்தில் நிற்கின்றனர். அவனது முகத் தோற்றம் உறுதியான மனத்தினை வெளியிடக் கூடியதாகக் காட்டப்பட்டுள்ளது. இம் மூவருடைய முடிகளும், பல்வேறு அணிகளும், உடைகளும் சிற்பிகளின் சிற்பத் திறமையை நன்கு புலப்படுத்துகின்றன. மாமல்லபுரத்துப் பாறைச் சிற்பங்கள் இதிகாச புராண நிகழ்ச்சிகளைக் குறிப்பவை. ஒரு பெரிய பாறைச் சிற்பத்தில் வேதியனொருவன் தண்ணீர்க் குடத்தைச் சுமந்து செல்லுதல், மான் ஒன்று நீர் அருந்த ஆற்றுக்கு வருதல், ஆற்றுக்கு அப்பால் இரண்டு அன்னங்கள் நீராட விரும்பி நிற்றல், முனிவர் பலர் தவம் புரிதல், அவர்களைப் பார்த்துப் பூனை ஒன்று தன் பின்கால்களில் நின்று யோக நிலையில் நிற்றல், எலிகள் அச்சமற்றுப் பூனையைப் பணிதல் முதலிய காட்சிகள் கவின் பெறக் காட்டப்பட்டுள்ளன. இவ்வாறு காண்பவர் கண்ணையும் கருத்தையும் ஈர்க்கத்தகும் எழில் மிகு சிற்பங்கள் பல மாமல்லபுரத்தில் இருக்கின்றன. சிவபெருமான் ஆடிய பலவகை நடனங்கள் காஞ்சி கயிலாச நாதர் கோவிலிலும், மதங்கீசர் கோவிலிலும் சிற்ப அமைப்பில் காட்டப்பட்டுள்ளன. இச் சிற்ப வேலைப்பாடு நேரில் கண்டு களிக்கத்தக்கது. பல்லவர் வரலாற்றைத் தொடக்கம் முதல் விளக்கிக் காட்டும் சிற்பக் காட்சிகள் காஞ்சி வைகுந்தப் பெருமாள் கோவிற் சுவர்களில் பொறிக்கப்பட்டுள்ளன. இவை மிக வியந்து பாராட்டத் தகுவன. மாமல்லபுரத்து ஒற்றைக் கற்கோவிற் புறச் சுவர்களின்மீதுள்ள உருவச் சிற்பங்கள் பேரெழிலும் பண்பட்ட வேலைப்பாடும் கொண்டவை. தனிக் கல்லில் செய்யப்பட்டுள்ள யானை, சிங்கம் முதலியன சிற்பக் கலைத்திறனை அளந்து காட்டும் கருவிகளாக அமைந்துள்ளன. சோழரால் புதுப்பிக்கப் பெற்ற கோவில்களில் சோழர் காலச் சிற்பங்கள் காணப்படுகின்றன. ஆறடிக்கு மேற்பட்ட உயர முடைய வாயிற்காவலர் உருவச் சிலைகளும், நான்கு கை வாயிற் காவலர் உருவச் சிலைகளும் சோழர் காலத்தவை. சர்க்கரைப் பொட்டணம் போன்ற அமைப்புடைய குல்லாய் அணிந்த உருவச் சிற்பங்கள் விசய நகர காலத்தவை. இப்பலவகைச் சிற்பங்களும் தொண்டை நாட்டுக் கோவில்களில் காணப் படுகின்றன. இசைக்கலை இசை என்னும் சொல்லுக்கு இசைவிப்பது என்பது பொருள். அஃதாவது, இசை எல்லா வகை உயிர்களையும் தன் வயப்படுத்த வல்லது என்பதாகும். பாம்பு மகுடி இசைக்கு மயங்குவதும், ஏற்றக்காளைகள் தெம்மாங்கு இசை கேட்டுத் துன்பமின்றி வேலை செய்வதும் இசைச் சிறப்பைப் புலப்படுத்தும் சான்றுகளாகும். சங்க காலத் தமிழர் இசைப் பயிற்சி மிக்குடையவர்; அதனாற்றான் இசைத் தமிழ் என ஒரு பகுதியை அமைத்துக் கொண்டனர்; பிறப்பு முதல் இறப்பு வரையில் இசைப் பாடல்களையே பெற்றிருந்தனர். பல்லவர்கள் இசையின் சிறப்பை நன்கு உணர்ந்தவர்கள். மகேந்திர வர்மன் இசைக் கலையில் பெரும்புலவன் என்பதை மாமண்டூர்க் கல்வெட்டும், குடுமியான்மலைக் கல்வெட்டும் தெளிவுறுத்துகின்றன. பல்லவர் காலத்தில்தான் தமிழ் யாழொடு வீணையும் வழக்கிற்கு வந்தது. இராச சிம்மன் இசைக் கலையில் வல்லவன். வாத்திய வித்தியாதரன் என்பது அவனது விருதுப் பெயராகும். அவனுக்கே ஆதோத்திய தும்புரு வீணா நாரதன் என்ற விருதுப் பெயர்களும் இருந்தன. அவன் எடுப்பித்த கயிலாசநாதர் கோவிலில் பலவகை இசைக் கருவிகளையும் இசைவாணர் களையும் சிற்ப உருவில் காட்டியுள்ளான். பல்லவர் காலத்தில் பாடப்பெற்ற நாயன்மார் திருப்பதிகங்கள் தமிழ்ப் பண்களைக் கொண்டவை. அக்காலத்துப் பெருங் கோயில்களிலெல்லாம் இசைவாணிகள் இருந்து இசைக் கலையை வளர்த்தனர் என்று தேவாரம் செப்புகிறது. காஞ்சி முத்தீசுவரர் கோவில் போன்ற பல கோவில்களில் ஆடல் பாடல்களில் வல்ல மகளிர் இருந்தனரென்று கல்வெட்டுக்கள் கூறுகின்றன. யாழ், வீணை, குழல், கின்னரி, கொக்கரி, சச்சரி, தக்கை, முழவம், மொந்தை, மத்தளம், தமருகம், துந்துபி, குடமுழா, தத்தலகம், முரசம், உடுக்கை, தாளம் முதலிய இசைக் கருவிகள் அக்கால வழக்கிலிருந்தன என்று தேவாரப் பாடல்கள் எடுத்தோதுகின்றன. விசய நகர வேந்தர் காலத்தில் தொண்டை நாட்டில் கருநாடக இசை பரவத் தொடங்கியது. அதன் பயனாகத் தமிழிசையும் தமிழ்ப் பாடல்களும் வழக்கு வீழத் தொடங்கின. நடனக் கலை சங்க காலத்தில் சிறப்புற்றிருந்த கூத்துக் கலை பல்லவர் காலத்தில் வளர்ச்சியுற்றது என்று சொல்லலாம். பல்லவ மன்னனான முதலாம் மகேந்திரவர்மன் அருங்கலை விநோதன் என்று பாராட்டப்பெற்றான். மகேந்திரன் நாட்டியக் கலையில் பெரிதும் ஈடுபாடுடையவன். இராஜ சிம்மன் என்னும் பல்லவ மன்னன் நடனக் கலையின் மேன்மையை நன்குணர்ந்தவன். அவன் தன் பெரும் பொழுதை அதற்கென்றே செலவழித்தவன். அக் கலையில் தன் உள்ளத்தைப் பதியவைத்த அவன், காஞ்சியில் கயிலாச நாதர் கோவிலைக் கட்டினான்; கயிலாசநாதர் கோவிலில் சிவனார் ஆடிய பதாகை நடனம், ஊர்த்துவ நடனம் முதலிய நடன வகைகளைச் சிற்ப அமைப்பிற் காட்டி அழியாப் புகழ் பெற்றான். பல வகை நடிகையர் உருவங்களும் அக்கோவிலில் செதுக்கப்பட்டுள்ளன. காஞ்சீபுரத்தில் உள்ள வைகுந்தப் பெருமாள் கோவிலில் கூத்தர், கூத்தியர் உருவங்கள் இரு சிற்பங்களில் செதுக்கப்பட்டுள்ளன. ஆடவரும், பெண்டிரும் சேர்ந்து ஆடிய நடனங்களும் அக்காலத்தில் இருந்தன என்பதற்கு அச்சிற்பங்கள் சான்று பகர்வனவாகும். பல்லவர் காலத்தில் தோன்றிய சைவத் திருமுறைகளில் இறைவனாடிய பலவகைக் கூத்துக்கள் இடம் பெற்றுள்ளன. பாடல் பெற்ற சிறந்த கோவில்களிலிருந்து நடன மாதர் நடனக் கலையை வளர்த்து வந்தனர். நாயன்மார் காலமாகிய பல்லவர் காலத்தில் தில்லைப்பெருமான் நடராசன் என்று நாயன்மாரால் பாராட்டப்பட்டான். தில்லைப் பெருமானின் திருக்கூத்தினைப் புகழ்ந்து நாயன்மார்கள் பல பாக்கள் பாடியுள்ளனர். பல்லவர் காலத்தில் கோவிலில் நடன மாதர்கள் இருந்தனர் என்பதற்குக் கல்வெட்டுச் சான்றுகள் பல உள்ளன. அவர்கள் கணிகையர், மாணிக்கத்தார் எனப்பட்டனர். காஞ்சி முத்தீசுவரர் கோவிலில் மட்டும் நாற்பத்திரண்டு பேர் இருந்து இசை, கூத்துக்களை வளர்த்தனர் என்று கல்வெட்டுக் கூறுகின்றது. சோழர் காலத்தில் சைவ வைணவ சமயங்கள் மிகுந்த அளவில் வளர்ச்சிப்பெறத் தொடங்கின. ஆதலால் பெரும்பாலான கோவில்களில் நடன மாதர் இடம் பெற்றனர். நடனக் கலை நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ச்சி பெற்றது. இவ்வளர்ச்சி விசயநகர வேந்தர் ஆட்சிக் காலம் முடிய இருந்து வந்தது. பிற்பட்ட நூற்றாண்டுகளில் இவ்வளர்ச்சி ஒடுங்கி விட்டது. இன்றுள்ள கோவில்களில் நடன மாதர் இருந்து இவ்வருங் கலையை வளர்க்கும் வாய்ப்பு இல்லாது போய்விட்டது. III. காவிரிக் கரை நாகரிகம் 1. காவிரியாறு இலக்கியத்தில் காவிரி மணிமேகலை காவிரியாறு குடகு நாட்டில் தோன்றுகின்றது; மைசூர் நாடு, கொங்கு நாடு, சோழ நாடு ஆகிய நாடுகளில் பாய்ந்து வளம் பெருக்குகின்றது. காவிரியாறு சோழ நாட்டில் பல கிளையாறுகளை உண்டாக்கிக்கொண்டு அந்நாட்டை வளம் மிக்க நாடாகச் செய்துள்ளது. எங்கு நோக்கினும் ஆறுகள், வாய்க்கால்கள், நீர்நிலைகள் என்று கூறும் அளவில் சோழ நாடு இருத்தல் காவிரியாற்றுப் பாய்ச்சலினால்தான் என்பது அறியத் தகும். பல நாடுகளின் வழியாகப் பாய்ந்து வந்தாலும், சோழநாடே அதனால் முழு நன்மையைப் பெறுவதால், காவிரி சோழ நாட்டுக்கே தனி உரிமை உடையது என்று புலவர் காவிரியாற்றினைப் போற்றினர். மணிமேகலை ஆசிரியராகிய சீத்தலைச் சாத்தனார் காவிரி யாற்றினை, பாடல்சால் சிறப்பில் பரதத்து ஓங்கிய கோடாச் செங்கோல் சோழர்தம் குலக்கொடி என்று பாராட்டியுள்ளார். சிலப்பதிகாரம் காலம் அறிந்து அமுதூட்டி மக்களை மகிழ்விக்கும் தாய்போலக் காவிரியாறு, பயிர் விளையும் காலம் அறிந்து தன் வளம் சுரந்து காக்கின்றது என்பதைச் சிலப்பதிகார ஆசிரியர் இளங்கோவடிகள், வாழி அவன்தன் வளநாடு மகவாய் வளர்க்கும் தாயாகி ஊழி உய்க்கும் பேருதவி ஒழியாய் வாழி காவேரி என்று கூறி விளக்கியுள்ளார். காவிரியாறு அளிக்கும் வளங்களைக் காண்போம்: காவிரியில் புதுப்புனல் பெருக்கெடுத்துப் பாய்வதால் உழவர்கள் பெரு மகிழ்வுடன் பல்வேறு தொழில்களில் ஈடுபடு கின்றனர். மதகுகளின் வழியே நீர் ஓசையுடன் பாய்ந்தோடுகிறது. நீர்ப் பெருக்கின் மிகுதியால் கரைகள் உடைகின்றன. அதனால் காவிரி நீர் பேரிரைச்சலுடன் ஒருபுறம் ஓடுகின்றது. நம்பியரும் நங்கையரும் புதுப்புனலாடி ஆரவாரிக்கின்றனர். இவ்வண்ணம் பலவகை ஒலிகள் ஒன்றாகக் கலந்து ஆர்ப்பக் காவிரி அன்னை நடந்து வருகின்றாள். இந்த அழகிய காட்சியினை ஒரு பாடலில் ஓவியமாக்கி அளிக்கின்றார் ஆசிரியர் இளங்கோவடிகள்: உழவர் ஓதை; மதகு ஓதை; உடைநீர் ஓதை; தண்பதங்கொள் விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி. பொருநராற்றுப்படை காவிரியின் வற்றாத வளம் பொருநராற்றுப்படை என்னும் நூலில் பின்வருமாறு பேசப்படுகின்றது: கோடை வெப்பத்தின் மிகுதியால் மரம் செடி கொடிகள் கருகினாலும், மேகம் கடலில் நீரை முகக்க மறப்பினும், மழை வளமில்லாது பெரியதொரு பஞ்சமே ஏற்படினும், காவிரி தன்வளம் சுரத்தலில் தவறாது. காவிரியின் வளத்தால் சோழ நாட்டில் வயல்வளம் சிறந்துள்ளது; உழவர்கள் செம்மையாகத் தங்கள் கடமைகளை முடித்து நெல்லை மலையெனக் குவிக்கின்றார்கள்; அவர்தம் இல்லங்களில் உள்ள நெற்குதிர்கள் நெல் நிரம்பி உள்ளன. இவ்வாறு சோழ நாட்டில் காவிரியின் அருளால் ஒரு வேலி ஆயிரம் கலமாக விளைகின்றது. தனிப்பாடல் காவிரியாற்றினை விளக்கவல்ல தனிப்பாடல் ஒன்றும் நமக்குக் கிடைத்துள்ளது. ஆறு என்ற பெயர் காவிரியையே குறிக்கும் சிறப்புப் பெயராக அமைகின்றது என்றும், காவிரி பாய்வதால் செல்வவளம் மிக்கு விளங்கும் சோழநாடே நாடு எனப்படும் என்றும், அத்துணைச் சிறப்பையுடைய காவிரி நாட்டை ஆள்பவனே வேந்தன் எனப்படுவான் என்றும் அத்தனிப்பாடல் பேசுகின்றது: தண்ணீரும் காவிரியே; தார்வேந்தன் சோழனே; மண்ணாவதும் சோழ மண்டலமே என்பது அத்தனிப்பாடல். காவிரியின் தோற்றமும் போக்கும் புலவர் பலரால் புகழப்பட்டதும் வற்றாத வளம் கொழிப்பதும் ஆகிய காவிரியாறு சையமலை (பிருமகிரி) என்னும் குன்றிலிருந்து தான் தோன்றுகின்றது. சையமலை குடகு நாட்டில் மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள ஒரு குன்று. காவிரியாறு தோன்றியதிலிருந்து இந்நாள் வரையும் சையமலையில் நீரூற்றுத் தடைப்படாமல் சுரந்த வண்ணம் உள்ளது. இந்த இடைவிடாச் சுரப்புத்தான் காவிரியாற்றுக்கு உயிர் ஆறு என்னும் புகழை அளித்துள்ளது. குடகு நாட்டு மக்கள் காவிரி தோன்றும் இடத்தில் முப்பது அடிசதுரமான குளம் ஒன்று அமைத்துள்ளனர். அக்குளத்தில் எப்பொழுதும் இரண்டரை அடி ஆழமே நீர் நிறைந்திருக்கும். இதற்குத் தலைக்காவிரி என்பது பெயர். இஃது இங்கிருந்து புறப் பட்டு 475 கல் சென்று கடலிற் கலக்கின்றது. கிருஷ்ணராஜ சாகரம் தலைக்காவிரியிலிருந்து புறப்படும் காவிரி காடுகளையும், மலைகளையும் கடந்து, மைசூர் நாட்டிற் புகுந்து, பல சிற்றாறு களைச் சேர்த்துக்கொண்டு வளர்ச்சிபெற்றுக் கிருஷ்ணராஜ சாகரம் என்னும் பெயருடன் பெரிய நீர்த்தேக்கமாய் அமைகிறது. இது மைசூர் நாட்டின் வளத்துக்குக் காரணமாய் அமைந் துள்ளது. இதன் மறுமுனையில்தான் கண்ணம்பாடி அணை கட்டப்பட்டுள்ளது. இந்த இடத்தில் பிருந்தாவனம் என்னும் அழகிய பூங்கா அமைந்துள்ளது. கண்ணம்பாடி அணையால் கட்டுப்படுத்தப்பட்ட காவிரி மிக்க விரைவுடன் கிழக்கு நோக்கிப் பாய்கின்றது. இடை யிடையே சிறிய தீவுகளையும் தன் நெறியில் ஏற்படுத்திக் கொண்டுள்ளது. அத்தீவுகளில் பெரியது சீரங்கப் பட்டணம் என்பது. சிவசமுத்திர அருவி தன் வழியில் பல துணையாறுகளைப் பெற்றுச் செல்லும் காவிரி, சிவசமுத்திரம் என்னும் இடத்தில் இரு கிளைகளாகப் பிரிந்து விடுகிறது. மேற்கில் உள்ள அருவி ககனசுகி எனப்படும். கிழக்கில் உள்ளது பார்சுகி எனப்படும். இவ்விரண்டும் மூன்று கல் தொலைவு ஓடுகின்றன; பின்னர் 250 அடி ஆழத்தில் அருவிகளாய் வீழ்ந்து வடகிழக்குப்பகுதியில் ஒன்று கூடுகின்றன. இவ்வருவி களின் நீரைக் கொண்டு மின்சாரம் தயாரிக்கப் படுகிறது. பின்னர்க் காவிரி குறுகிய மலைக்குடைவின் வழியே ஓடுகின்றது. இங்குப் பல துணை ஆறுகள் அதனிற் கலக்கின்றன. பின்பு காவிரியாறு, சேலம், கோயம்புத்தூர் எல்லைகள் மைசூர் எல்லையைத் தொடுமிடத்தில் மைசூர் நாட்டைவிட்டு நீங்குகிறது. மேட்டூர் அணை காவிரி மைசூர் நாட்டைவிட்டு நீங்கியதும் சிறிது தொலைவில் புகழ்பெற்ற ஹொகெனகல் நீர்வீழ்ச்சி உள்ளது. ஹொகெனகல் நீர்வீழ்ச்சியைத் தாண்டிக் காவிரி பல படியாகத் திரும்பி ஓடுகிறது. இங்குச் சின்னாறு, தோப்பூராறு என்பன இதனிற் கலக்கின்றன. பின்பு காவிரி சீதாமலைத் தொடருக்கும், பாலமலைத் தொடருக்கும் இடையில் பாய்ந்து செல்கின்றது. இங்குத்தான் உலகப் புகழ்பெற்ற மேட்டூர் அணை கட்டப்பட்டுள்ளது. இங்கிருந்து காவிரி திருச்சிராப்பள்ளியை அடைவதற்குள் பவானி, நொய்யல், மணிமுத்தாறு, அமராவதி என்னும் துணையாறுகளை வழியிற்பெற்று, வரவர அகற்சி அடைகிறது. அகண்ட காவிரி திருச்சிக்கு மேற்கே ஒன்பது கல் தொலைவிலுள்ள இலமனூர் என்னும் இடத்தில் காவிரியிலிருந்து கொள்ளிடம் என்னும் கிளையாறு பிரிகின்றது. இதுகாறும் பிரிவுபடாத காவிரியின் இப் பகுதிக்கு அகண்ட காவிரி என்னும் பெயர் வழங்குகின்றது. குளித்தலைக்குச் சற்று வடக்கில் காவிரியுடன் கரை போட்டானாறு என்னும் சிற்றாறு கலக்கின்றது. இங்குக் கொள்ளிடத்தின் குறுக்கே மேலணை என்னும் சிறந்த அணை கட்டப்பட்டுள்ளது. கல்லணை காவிரியாறு கிழக்கு நோக்கிப் பதினேழுகல் ஓடினபின்பு கொள்ளிடம் இதன் அருகில் நெருங்கி வருகிறது. உள்ளாறு என்னும் வாய்க்கால் இவ்விரண்டையும் இணைக்கிறது. அவ்விடத்தில் காவிரிக்குக் குறுக்கே கல்லணை என்னும் அணை கட்டப்பட்டுள்ளது. இவ்வணை சோழ மன்னன் ஒருவனால் கட்டப்பட்டது; ஆயின், அண்மையில் சிறந்த முறையில் மாற்றங்கள் பல செய்யப்பட்டு கிராண்டு அணைக்கட்டு என்னும் புதிய பெயரைப் பெற்றுள்ளது. காவிரிப்பூம்பட்டினம் பின்பு காவிரியாறு பல கிளையாறுகளுடன், திருவையாறு, சுவாமிமலை, கும்பகோணம், மாயூரம் முதலிய இடங்களுக்குப் பெருவளத்தை அளித்து, இறுதியில் காவிரிப்பூம்பட்டினம் என்னும் சிற்றூருக்கு அருகில் கடலில் கலக்கிறது. காவிரி இங்ஙனம் கடலொடு கலக்கும் இடத்தில்தான் தமிழ் நாட்டின் உயரிய நாகரிகத்திற்கு- உலகம் வியந்து போற்றும் ஒப்பற்ற சிறப்பிற்கு- உறைவிடமாய் அமைந்து விளங்கிய காவிரிப்பூம்பட்டினம் என்னும் பெரு நகரம் இருந்தது. இன்று இங்கு இப்பெயர் கொண்ட சிற்றூர் ஒன்றே காட்சி அளிக்கின்றது. செவிலித் தாய் சோழ நாட்டில் காவிரியிலிருந்து பிரியும் கிளையாறுகள் பல. அவை வெண்ணாறு, வெட்டாறு, குடமுருட்டி, அரிசில், வீரசோழன், வடவாறு, பாமணி, திருமலைராசன் முதலியன. இவையும் இவற்றிலிருந்து பிரியும் கால்வாய்களும் சோழ நாட்டைச் சோறுடைய நாடாக்குகின்றன. இப்பெருமையுடைய காவிரி இங்ஙனம் தன் நன்னீரால் நாட்டை வளப்படுத்தி மக்களை வாழ்வித்து வருவதால், சோணாட்டு மக்கட்குச் செவிலித் தாயாக இருக்கிறது என்று புலவர் பெருமக்கள் பாராட்டியுள்ளனர். 2. அரசர் சோழ நாடு காவிரி பாயப்பெற்ற சோழ நாடு இன்றைய தஞ்சை திருச்சி மாவட்டங்களைக் கொண்டது. காவிரியாறு தன் கிளை ஆறுகளுடன் பாய்ந்து இந்நாட்டை நன்கு வளப்படுத்திவிட்டது. காவிரியாறும் அதன் கிளையாறுகளும் கொண்டுவரும் கரிசல் மண் நல்ல விளைச்சலை அளித்தது. வளமுடைய அந்த நாட்டை ஆண்ட காரணத்தால் சோழர் வளவர் எனப் பெயர் பெற்றனர். சோழரைக் கிள்ளி என்ற பெயராலும் புலவர்கள் வழங்கியுள்ளனர். நிலத்தைக் கிள்ளி- கிளறி உழுது மருத நிலமாக்கிய சிறப்பினால் அவர்கள் கிள்ளி எனப் பெயர் பெற்றனர் என்று நாம் கொள்ளலாம். வான்பொய்ப்பினும் தான்பொய்யா வளமுடைய காவிரியாற்றுப் பாய்ச்சலினால், யானை மறையத்தக்க அளவில் செஞ்சாலிப் பயிர்கள் தழைத்து வளர்ந்தன. அதனால் குடிமக்கள் உணவுப் பற்றாக் குறை இல்லாது வாழ்ந்தனர். மக்கள் பசிப்பிணியற்று மகிழ்வோடு வாழ்ந்தமையைக் கண்ட புலவர் பெருமக்கள், சோழ வளநாடு சோறுடைத்து எனப் பாராட்டி மகிழ்ந்தனர். சோழ நாடு நெல், கரும்பு, வாழை, பாக்கு முதலியவற்றுக்கும் நெசவு முதலிய கைத்தொழில்கட்கும் பெயர்பெற்றது. சோழ மன்னர் சங்ககாலச் சோழருள் புகழ்பெற்றவன் கரிகாலன் என்பவன். இவன் சேர பாண்டியரை வென்றவன்; வடக்கே நெல்லூர் வரையிலும் தன் செல்வாக்கைப் பரப்பினவன்; தொண்டை நாட்டைக் கைப்பற்றிக் காடு கெடுத்து நாடாக்கியவன்; நீதி வழங்குவதில் திறமை வாய்ந்தவன்; இலங்கையை வென்று, இலங்கை வீரரைக் கொண்டு காவிரிக்குக் கரை இடுவித்தவன். இப்பேரரசன் மீது பொருநராற்றுப்படை, பட்டினப்பாலை என்னும் நீண்ட பாக்கள் சங்கப் புலவரால் பாடப்பட்டன. இடைக்காலச் சோழர் சங்க காலத்திற்குப் பின்பு ஏறத்தாழக் கி.பி. 900 வரை சோழர் பல்லவர்க்கு அடங்கிய சிற்றரசராய் இருந்தனர். அக்காலத்தில் இவர்கள் பாண்டியருடன் மணவுறவுகொண்டு வாழ்ந்தனர்; சேர பாண்டியருடன் சேர்ந்து பல்லவரை எதிர்த்து வந்தனர்; சில வேளைகளில் பல்லவருடன் சேர்ந்து பாண்டியரை எதிர்த்தனர். பிற்காலச் சோழர் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் ஆதித்த சோழன் என்பவன் பல்லவரை ஒழித்துச் சோழப் பேரரசை ஏற்படுத்தினான். இப்பேரரசு ஏறத்தாழக் கி.பி. 1300 வரை நிலைத்திருந்தது. அப்பொழுது சோழப் பேரரசு தென்னிந்தியா முழுவதும் பரவியிருந்தது. சோழப் பேரரசர் இலங்கை, நிக்கோபார் தீவுகள், மாலத் தீவுகள் முதலியவற்றை வென்றனர்; கடற்படை செலுத்திக் கிழக்கிந்தியத் தீவுகளிலும் வெற்றி கண்டனர். சோழப் பேரரசருள் தலை சிறந்தவன் முதலாம் இராசராசன். இவன் காலத்தில் (கி.பி. 985- 1014) தஞ்சாவூர் தலைநகரமாக இருந்தது. இவன் அங்குப் பெரிய சிவன் கோவிலைக் கட்டினான்; தன் மகனான இராசேந்திரனைப் படைத் தலைவனாக்கிப் பல நாடுகளைக் கைப்பற்றச் செய்தான்; தில்லையில் இருந்த சைவத்திருமுறைகளை நம்பியாண்டார் நம்பியைக்கொண்டு முறைப்படுத் தினான்; சமண, பௌத்த, வைணவக் கோவில்களுக்கு நிலங்களையும் பொருள் களையும் வழங்கினான்; தன் பெருநாட்டில் ஆங்காங்கு நிலைப்படைகளை வைத்து அமைதியை உண்டாக்கினான். இவன் பெயரால் ஏற்பட்டதே சயங் கொண்ட சோழபுரம் என்பது. இவன் மகன் முதலாம் இராசேந்திரன் (கி.பி. 1012- 1044) சிறந்த பேரரசன். இவன் கங்கை வரையில் படையெடுத்துச் சென்று, கங்கை நீரைக்கொண்டுவந்து புதிய நகரத்தை அமைத்தவன். அதன் பெயர் கங்கைகொண்ட சோழபுரம் என்பது. அதுவே இவனுக்கும் இவனுக்குப்பின் வந்த சோழர்க்கும் தலைநகரமாயிற்று. இவன் தன் கடற்படையை ஏவி மலேயாவில் உள்ள கடாரம் முதலிய ஊர்களைக் கைப்பற்றினான்; அதனால் கடாரம்கொண்ட சோழன் எனப் பெயர் பெற்றான். இவன் சிறந்த தமிழ்ப் புலவன்; அதனால் பண்டித சோழன் என்று பாராட்டப் பட்டான். இவன் மக்களான இராசாதிராசன், இரண்டாம் இராசேந்திரன், வீரராசேந்திரன் ஆகிய மூவரும் மேலைச் சாளுக்கியரை வெற்றி கண்ட வீரர்கள். வீரராசேந்திரன் காலத்தில் செய்யப்பட்டதே வீரசோழியம் என்னும் இலக்கண நூல். வீரசோழன் ஆறு என்பது இவன் பெயரை நினைவூட்டிக் கொண்டிருக்கிறது. கோதாவிரிக்கும் கிருஷ்ணைக்கும் இடைப்பட்ட நாட்டைக் கீழைச் சாளுக்கியர் ஆண்டு வந்தனர். அவருள் விமலாதித்தன் ஒருவன். முதலாம் இராசராசன் தன் மகளான குந்தவ்வையை விமலாதித்தனுக்கு மணம் முடித்தான். அவ்விருவருக்கும் பிறந்த இராசராச நரேந்திரனுக்கு முதலாம் இராசேந்திரன் தன் மகளான அம்மங்காதேவியை மணம் செய்வித்தான். இவ்விருவருக்கும் பிறந்தவனே சாளுக்கிய சோழனான முதற் குலோத்துங்கன். முதற் குலோத்துங்கனும் பின்னவரும் முதற் குலோத்துங்கன் (கி.பி. 1070- 1118) பல போர்களைச் செய்தவன். சோழப் பேரரசை நிலைநாட்ட இவன் செய்த போர்கள் பல. இவன் காலத்தில் வட கலிங்கப் போர் நடைபெற்றது. இவனது தானைத்தலைவனான கருணாகரத் தொண்டைமான் வடகலிங்க நாட்டை வென்றான். இவனது அவைப் புலவரான சயங்கொண்டார் இவ்வெற்றியைப் பாராட்டிக் கலிங்கத்துப் பரணி என்னும் நூலைப் பாடினார். பின் வந்த சோழருள் மூன்றாம் குலோத்துங்கன் (கி.பி. 1178- 1218) சிறப்புற்றவன். சோழப் பெருநாட்டை நிலைபெறச் செய்ய இவன் செய்த போர்கள் பலவாகும். இவன் கும்பகோணத்தை அடுத்த திரிபுவனம் என்னும் இடத்தில் சிறந்த வேலைப்பாடமைந்த சிவன் கோவில் ஒன்றைக் கட்டுவித்தான். திரிபுவன வீரேசுவரம் என்பது அதன் பெயர். சோழப் பேரரசின் மறைவு கி.பி. 12-ஆம் நூற்றாண்டில் பாண்டியர் பேரரசு ஏற்பட்டதாலும், மைசூரை ஆண்ட ஹொய்சளர் படையெடுப்பாலும், சோழப் பேரரசுக்குட்பட்ட சிற்றரசர் கிளர்ச்சியாலும் சோழப் பேரரசு நிலை தளர்ந்துவிட்டது. பிற்பட்ட சோழர்கள் விசயநகர வேந்தர் உதவியால் சிறிது காலம் ஆண்டனர். சோழர்க்குப் பின்னர்ச் சோழ நாட்டில் நாயக்கராட்சியும் மகாராட்டிரர் ஆட்சியும் ஏற்பட்டன. பின்பு ஆங்கிலேயர் ஆட்சி ஏற்பட்டது. 3. அரசியல் அரசர் அரசியலில் தலைமை தாங்கி எவற்றிற்கும் பொறுப் புடையவனாய் நெறிதவறாது ஆட்சிபுரியும் கடமை வேந்தனுக்கே உரியது. அவன் பட்டத்திற்கு உரிய தன் மகனுக்கு இளவரசுப் பட்டம் கட்டி, அவனை ஆட்சித் துறையில் பழக்கிவருவது வழக்கம். வேந்தன் தனக்கு அடிமைப்பட்ட பல மாகாணங்களை ஆளத் தன் மைந்தரையே பிரதிநிதிகளாக அமர்த்துவதும் உண்டு; தனது நம்பிக்கைக்கு உரிய நெருங்கிய உறவினரையும் இவ்வாறு பொறுப்புள்ள பதவிகளில் அமர்த்துதல் வழக்கம். இத்தகைய அறிவுடைய ஏற்பாட்டால், பேரரசு சிதைந்து போகாமல் பாதுகாக்கப்பட்டது. சிற்றரசர் களுக்குப் பேரரசர் அடிக்கடி பட்டங்களும் பாராட்டுகளும் அளித்து வந்தமையால், சிற்றரசர்கள் அமைதியோடு தத்தம் நாட்டுப் பகுதிகளைச் சிறப்புடன் ஆண்டு வந்தனர். மிகப் பிற்பட்ட காலத்திலேதான் சோழப் பெருநாட்டில் இவ்வமைதி கெட்டது. அமைச்சர் முதலியோர் சோழரது அரசியலைக் கவனித்து ஆவன செய்ய அமைச்சர் இருந்தனர். இரண்டாம் குலோத்துங்கனுக்குச் சேக்கிழார் முதல் அமைச்சராக இருந்தார் என்று சேக்கிழார் புராணம் செப்புகிறது. அடுத்துப் படைத் தலைவர், நாட்டு அதிகாரிகள், நாட்டை அளப்பவர், நாடு கண் காட்சி, வரியிலார், வரிக் கூறுசெய்வார், புரவு வரி, வரிப்புத்தகம், பட்டோலை நாயகம், விடையதிகாரி, திருவாய்க் கேள்வி, திரு மந்திர ஓலை, திரு மந்திர ஓலை நாயகம், கரும மாராயம், அறங்கூறவையத்தார் முதலியோர் அரசியல் உயர் அலுவலராவர். இனி நாம் இவர்தம் கடமைகளை அறிவோம்: படைத் தலைவர் நால்வகைப் படைகட்கும் தலைவர்; போர்க்காலத்தில் அவற்றை வெற்றியுற நடத்துபவர். நாட்டு அதிகாரிகள் ஒவ்வோர் உள் நாட்டுக்கும் தலைவராக இருப்பவர்; தத்தம் நாட்டைச் சுற்றிப் பார்த்துக் குடிகளின் நலங்கள், நியாயம் வழங்கும் முறை, அறநிலையங்கள் முதலியவற்றைக் கவனித்து வருபவர். நாட்டை அளப்பவர் ஒவ்வொரு நாட்டையும் கூறுபட அளவிடுபவர். நாடு கண்காட்சி என்பவர், நாட்டை அளந்ததைக் கவனித்து உண்மை காண்பவர். வரியிலார் என்பவர் பல வரிகளால் வரும் தொகையைக் கணக்கிற் பதிந்து கொள்பவர். வரிக் கூறு செய்வோர் கணக்கிற் பதியப்பட்டுள்ள தொகையை இன்னின்ன துறைகட்குச் செலவிட வேண்டும் என்று பாகுபாடு செய்பவர். அரசிறை நீங்கிய ஊர்களிலிருந்து வருதற்குரிய பிற வரிகட்குக் கணக்கு வைப்போர் புரவுவரி எனப்படுவர். வரிப்புத்தகம் என்போர் அரசர்க்கு ஒவ்வோர் ஊரிலிருந்தும் வருதற்குரிய காணிக் கடனாகிய அரசிறைக்குக் கணக்கு வைப்பவர் ஆவர். பட்டோலை நாயகம் என்பவன் அரசன்பால் நாள் தோறும் நடைபெறும் அரசியற் செய்திகளை எழுதி வைப்பவர் தலைவன். விடை அதிகாரி என்பவர் கிராம சபைகளிலிருந்தும் பிற அதிகாரிகளிடமிருந்தும் தலைமை அரசாங்கத்திற்கு வரும் ஓலைகளைப்படித்துப் பார்த்து, அவற்றிற்குத் தக்கவாறு விடை எழுதி அனுப்புவர். திருவாய்க் கேள்வி என்பவர் அரசன் கூறியவற்றைக் கேட்டுத் திருமந்திர ஓலையிடம் அறிவிப்பர். திருமந்திர ஓலைஎன்பவர் திருவாய்க் கேள்வி கூறியவற்றை ஓயில் எழுதுபவர். இவர்கட்குத் தலைவர் திருமந்திர ஓலை நாயகம் எனப்படுவர். கரும மாராயம் என்பவர் அரச காரியங்களை முட்டு இன்றி நடத்துபவர். தலை நகரிலிருந்து வழக்கு ஆராய்ந்து நீதி வழங்குபவர் அறங் கூறவையத்தார் எனப்பட்டனர். படை சோழ மன்னர் ஏனைய மன்னரைப் போலவே பண்டைக் கால முறைப்படி நால்வகைப் படைகளையும் வைத்திருந்தனர். பிற்காலச் சோழரிடம் யானைப்படை மிகுந்து காணப்பட்டது. வில் வீரரைக் கொண்ட படைகள் பல இருந்தன; வாள் வீரரைக் கொண்ட படைகள் பல; வேல் வீரர் படைகள் பல. பெருநாட்டின் பல பகுதிகளிலிருந்து, ஆங்காங்கு அமைதியை நிலைநாட்டி வந்த படைகள் பல. அவை நிலைப்படைகள் எனப்பட்டன. சோழரது கடற் படை மிக்க வன்மைவாய்ந்தது. சோழர் அப்படையின் உதவி கொண்டே கடல் கடந்த நாடுகளை வென்றனர். அயல் நாடுகளில் வாணிகம் செய்த தமிழர்களுக்கு அக்கப்பற்படை உதவியாக இருந்தது. சோழ மன்னர் பண்பட்ட பெரும் நிலப்படையைப் பெற்றிருந்த காரணத்தால்தான், தென்னிந்தியா முழுமையும் சோழராட்சியில் அடங்கியிருந்தது. இப்படையின் வீரச் செயல்களை யெல்லாம் கலிங்கத்துப் பரணியில் பரக்கக் காணலாம். நாட்டின் உட்பிரிவுகள் சோழப் பெருநாடு பல மண்டலங்களாகப் பிரிக்கப் பட்டிருந்தது. சோழ நாடு சோழ மண்டலம் எனவும், பாண்டிய நாடு இராசராசப் பாண்டி மண்டலம் எனவும், சேர நாடு மலை மண்டலம் எனவும், கொங்கு நாடு அதிராசராச மண்டலம் எனவும், தொண்டை நாடு சயங்கொண்ட சோழ மண்டலம் எனவும், ஈழ நாடு மும்முடி சோழ மண்டலம் எனவும் பெயர் பெற்றிருந்தன. ஒவ்வொரு மண்டலமும் வளநாடு, கூற்றம், ஊர் எனப் பிரிக்கப் பட்டிருந்தது. சில இடங்களில் நாடு என்பது கூற்றம் எனவும் வழங்கி வந்தது. ஒவ்வொரு நாடும் பல ஊர்களைக் கொண்டது. அக்காலத்தில் ஓர் ஊரைக் குறிக்க வேண்டு மானால், மண்டலம்- வளநாடு- நாடு- ஊர் என்ற முறையில் குறித்தல் வேண்டியிருந்தது. ஊராட்சி ஊரில் உள்ள அனைவரும் ஊர் அவையினரைத் தேர்ந்தெடுத்துத் தங்களைத் தாங்களே ஆண்டு கொள்வது ஊராட்சி முறையாகும். ஊரில் உள்ள அனைவரும் ஊர் அவையினரைத் தேர்ந்தெடுக்கும் உரிமை உடையவரேயாவர். ஊரில் உள்ள குடும்பு (Ward) ஒன்றுக்கு ஒருவராகத் தேர்ந்தெடுக்கப் பட்டவரே ஊரவையார் என்பவர். தேர்தல் நடை பெறும் நாளில் அரசியல் தலைவர் ஒருவர், அவை கூடுவதற்கான மாளிகையில் ஊரார் அனைவரையும் கூட்டுவர். கூட்டத்தின் நடுவில் குடம் ஒன்று வைக்கப்படும். ஒவ்வொரு குடும்பினரும் தம் குடும்புக்கு ஏற்ற ஒருவர் பெயரைத் தனித் தனி ஓலையில் எழுதிக் குடத்தில் இடுவர். இவ்வாறு எல்லாக் குடும்பினரும் குடவோலை இடுவர். பின்னர், ஊர்த் தலைவர் சிறுவன் ஒருவனை அழைத்து அவற்றுள் ஒன்றை எடுப்பிப்பார். அதனை அவர் கிராமக் கணக்கனிடம் தருவார். அவன் தன்கையில் ஒன்றும் இல்லை என்பதை அவையோர்க்குக் காட்டி, யாவரும் கேட்க அதில் எழுதப்பட்டுள்ள பெயரை உரக்க வாசிப்பான். பின்னர், அதனை அங்குள்ள அறிஞரெல்லோரும் வாசிப்பர். இறுதியாக அப்பெயர் ஓர் ஓலையில் வரையப்படும். இத்தேர்தல் முறை குடவோலைத் தேர்தல் முறை எனப்பட்டது. அக்காலத்தில் ஒவ்வோர் ஊரிலும் எழுதப்படும் ஆவணங் களைக் காப்பிட ஆவணக் களரி இருந்தது. ஆவணங்கள் பனை ஓலைகளில் எழுதப்பட்டன. என்றும் பயன்படக்கூடிய சமயத் தொடர்பான ஆவணங்கள் கோவிற் சுவர்களில் பொறித்து வைக்கப்பெற்றன. கோவில்களுக்கு வரி இன்றி விடப்பட்ட நிலங்கள் தேவதானம் எனவும், பிராமணர்க்கு விடப்பட்டவை பிரமதேயம், பட்ட விருத்தி எனவும், அறநிலையங்களுக்கு விடப்பெற்றவை சாலாபோகம் எனவும், புலவர்க்கு அளிக்கப் பெற்றவை புலவர் முற்றூட்டு எனவும் பெயர் பெற்றன. பல்லவர் காலத்துக் கோவில்கள் சோழர் காலத்துக் கற்றளிகளாக மாற்றப் பெற்றன. புதிய பெரிய கோவில்கள் கட்டப்பெற்றன. கோவில்களில் மாதந்தோறும் விழா நடைபெற்றது. கோவிலுக்கு நிலங்களும், பொருள்களும் மிகுதியாக வழங்கப்பெற்றன. இவ்வளர்ச்சிகளால் கோவிலாட்சி விரிவடைந்தது. கோவில்களைக் கவனிக்க அரசாங்க உயர் அலுவலர் இருந்தனர். அறங்கூறவையம் நியாய விசாரணை செய்தலும் அறநிலையங்களை மேற்பார்வை இடுதலும் சம்வத்சர வாரியார் கடமை. இவர்களே நீதிமன்ற வேலையைக் கிராமங்களிற் செய்துவந்தனர். வழக்கில் இருதிறத்தார் கூற்றுகளும் ஆட்சி, ஆவணம், அயலார் கட்சி என்பன கொண்டு கவனிக்கப்பட்டன. ஊர்ச்சபையை அடுத்திருந்த ஆவணக்களரியில் மூல ஓலைகள் பத்திரப்படுத்தப் பட்டிருந்தன. அவை வைக்கப்பட்ட இடம் அரண் தரு காற்பு எனப்பட்டது. படி ஓலை, மூல ஓலை என்பவற்றைச் சோதித்து வழக்குகள் முடிவு செய்யப்பட்டன. சோழர் இலச்சினை வரலாறு தெரிந்த நாள் முதல் புலி இலச்சினை சோழர்க்கு உரியது என்பது தெரிகிறது. கரிகாலன் இமயத்தில் புலி (இலச்சினை) பொறித்து மீண்டான் என்றும், காவிரிப்பூம் பட்டினத்திலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட பண்டப் பொதிகள் மீதும் இறக்குமதி செய்யப்பட்ட பண்டப் பொதிகள்மீதும் புலி இலச்சினை இடப்பட்டது எனவும் சிலப்பதிகாரம் செப்பு கின்றது. பிற்காலச் சோழர் பட்டயங்களிலும் புலி இலச்சினை காணப்படுகின்றது. நாணயங்கள் பொன்னாலும் செம்பாலும் செய்யப்பட்ட காசுகள் வழக்கில் இருந்தன. காய்ச்சி உருக்கினும் மாற்றுக் குன்றாதது என்று அதிகாரிகளால் ஆராய்ந்து உறுதி செய்யப்பட்டதற்கு அடையாளமாகத் துளையிடப் பெற்ற துளைப் பொன் னும் வழக்கிலிருந்தது. சோழர் கால நாணயங்கள் பொன் என்றும், மாடை என்றும், காசு என்றும் பெயர் பெற்றிருந்தன. அன்றாடு நற்காசு என்பது குறிப்பிட்ட ஓர் அரசன் காலத்தில் வழக்கிலிருந்தது. அக்காசு தோன்றுவதற்கு முன்பு வழக்கிலிருந்தது பழங்காசு எனப்பட்டது. இக்காசுகளுக்குப் பின்னால் கங்கை கொண்ட சோழன், மலைநாடு கொண்ட சோழன் என்றாற் போன்ற சோழர்தம் விருதுப் பெயர்கள் குறிக்கப் பெற்றிருந்தன. சோழருக்கு அடங்கிய ஈழநாட்டுக் காசு ஈழக்காசு என வழங்கியது. ஈழத்து வழக்கிலிருந்த கருங்காசு என்பதும் சோழப் பெருநாட்டில் வழங்கியது. அளவைகள் ஒவ்வோர் ஊரிலும் இருந்த நிலங்கள் அரசாங்க அலுவலரால் அளந்து வரி விதிக்கப்பட்டன. பதினாறு சாண் நீளமுடைய கோல் கொண்டு நிலம் அளக்கப்பட்டது. அஃது உலகளந்த கோல் எனப்பட்டது. நிலத்தின் மிகச் சிறு பகுதியும் விடாமல் அளக்கப்பட்டது. நிலத்தை அளந்து எல்லை அறிந்து அங்குப் புள்ளடிக்கல் நடுவது வழக்கம். நெல், அரிசி, பால், தயிர் முதலியன செவிடு, ஆழாக்கு, உழக்கு, உரி, நாழி, குறுணி, பதக்கு, தூணி, மரக்கால், கலம் என்னும் முகக்கும் கருவிகளால் அளக்கப்பட்டன. இராசகேசரி மரக்கால், அருமொழி நங்கை மரக்கால் என்பன அரசன் அரசியின் பெயர் பெற்ற அளவைகள், ஆடவல்லான் மரக்கால் என்பது தஞ்சைப் பெரிய கோவிலில் இருந்தது. நடராசப் பெருமானுக்கு ஆடவல்லான் என்பது பெயர். சர்க்கரை, மிளகு முதலியன பலத்தால் நிறுக்கப்பட்டன. தோரை, விரல், சாண், முழம் என்பன நீட்டல் அளவைப் பெயர்கள். மணி, பொன், வெள்ளி முதலிய உயர்ந்த பொருள்கள் கழஞ்சு, மஞ்சாடி, குன்றி என்னும் நிறை கற்களால் மதிக்கப்பட்டன. வரிகள் நிலவரி காணிக்கடன் எனப் பெயர் பெற்றது. இது நெல்லாகவோ நாணயமாகவோ செலுத்தப்பட்டது. கடன், கூலி, இறை, பாட்டம், பூட்சி என்பன வரிகளை உணர்த்தும் சொற்கள். சோழர் காலத்தில் கண்ணாலக் காணம், குசக்காணம், நீர்க்கூலி, தறியிறை, தரகு, தட்டாரப் பாட்டம், இடைப் பாட்டம், ஓடக்கூலி, செக்கிறை, வண்ணாரப் பாறை, நல்லா, நல்லெருது, நாடுகாவல், உல்கு, ஈழம் பூட்சி முதலான பலவகை வரிகள் இருந்தன. இவை முறையே திருமண வரி, குலாலர் வரி, நீர் வரி, தறிவரி, தரகு வரி, தட்டார் வரி, இடையர் வரி, ஓடக்காரர் வரி, செக்கார் வரி, வண்ணார் வரி, பசு வரி, எருது வரி, நாடு காவல் வரி, சுங்க வரி, கள் இறக்க வரி எனப் பொருள்படும். கைத்தொழிலும் வாணிகமும் சோழ நாட்டில் சங்க காலம் முதல் உழவுத் தொடர்பான கைத்தொழில்களும், நெசவு முதலிய தொழில்களும் வளர்ந்து வந்தன. உப்பெடுத்தல் சிறத்த தொழிலாக இருந்தது. பிற்காலச் சேரர் காலத்தில் எண்ணிறந்த கோவில்களில் செப்புத் திருமேனிகளும் பித்தளைத் திருமேனிகளும் படிமங்களும் செய்யப்பட்டன. எனவே, வார்ப்பட வேலை நன்கு வளம் பெற்றது. வீட்டுப் பயனுக்கும் ஒவ்வொரு கோவிலுக்கும் செம்பு, பித்தளை, வெள்ளிப் பாத்திரங்கள் செய்யப்பட்டன. எனவே, உலோகத் தொழில் வளம் பெற்றது. மக்களுக்கும் கடவுளர் திருவுருவங் களுக்கும் பலவகை நகைகள் செய்யப்பட்டன. கற்கள் பதித்த நகைகள் வேறு, இவற்றால் பொற்கொல்லத் தொழில் மேன்மையுற்றது, சோழராட்சியில் புதிய கோவில்கள் கட்டப்பட்டன; பழைய கோவில்கள் புதுப்பிக்கப்பட்டன. இவற்றுக்காகச் செங்கல் அறுக்கும் தொழிலும் கல்தச்சர் தொழிலும் மரத்தச்சர் தொழிலும் பெருகின. கோவில்களில் புராணத் தொடர்பான ஓவியங்கள் தீட்டப்பட்டன. கற்சிலைகள் கணக்கிலவாய்த் தோன்றின. இவற்றால் ஓவியத் தொழிலும் சிற்பத் தொழிலும் சிறப்படைந்தன. கோவில்களில் பலவகைத் தோற் கருவிகளும் துளைக் கருவிகளும் நரம்புக் கருவிகளும் கஞ்சக் கருவிகளும் தேவைப்பட்டன. இவை தொடர்பான தொழில்கள் வளம் பெற்றன. கப்பல் கட்டும் தொழில், பலவகைப் போர்க் கருவிகளைச் செய்யும் தொழில் முதலியன செழுமையுற்றன. சோழப் பெருநாட்டுச் செய்பொருள்களும் விளைபொருள்களும் தேவைக்கு மேற்பட்டவை பிற நாடுகளில் விற்கப்பட்டன. இவ் வாணிகம் இந்தியாவில் இருந்த பிற நாடுகளோடு நன்முறையில் நடைபெற்றது; சீனம் முதலிய கீழை நாடுகளுடனும் அரேபியா முதலிய மேலை நாடுகளுடனும் கடல் வாணிகம் நடைபெற்றது. சோணாட்டு வணிகர் இந்தியாவின் பல பகுதிகளிலும், கடல் கடந்த நாடுகளிலும் தங்கி வாணிகத்தை வளப்படுத்தினர். சோணாட்டுக் கப்பல்கள் பாரசீக வளைகுடா வழியாக மேலைநாடுகளுடன் வாணிகம் செய்யச் சென்று வந்தன; கிழக்கில் மலேயா, கிழக்கிந்தியத் தீவுகள், இந்தோசீனம், சீனம் முதலிய நாடுகட்குச் சென்று மீண்டன. சோழ நாட்டிற்கும் சீனத்திற்கும் அரசாங்க உறவு நெருக்கமாக இருந்தது. சோழப் பெருநாட்டிலிருந்து விலையுயர்ந்த மணிகள், மூங்கில், தந்தம், தேக்க மரம், சந்தன மரம், ஏலம், இலவங்கம், மெல்லிய ஆடைகள் முதலியன அயல்நாடுகளுக்கு ஏற்றுமதியாயின. அரேபியாவி லிருந்து ஆண்டு தோறும் குதிரைகள் வந்திறங்கின. சமுதாய வாழ்க்கை அரசர், அந்தணர், வணிகர், வேளாளரும் பலவகைத் தொழிலாளரும் அக்காலச் சமுதாயத்தில் வாழ்ந்தனர். இவருள் ஒவ்வொருவரும் தத்தம் தொழில்களைச் செவ்வனே ஆற்றி வந்தனர். விழாக் காலங்களிலும் பொதுக்காரியங்களிலும் பல தொழில் மக்களும் கலந்து பழகினர். கோவில்களில் சமயக் கல்வி புகட்டப்பட்டது. மடங்கள் சமயக் கல்வியையும் யாத்திரீகர் களுக்கு உணவையும் அளித்தன. கோவில் விழாக்களில் சோழப் பேரரசர் பங்கு கொண்டனர். சிற்றூர்களில் கோவில் நடுநாயகமாக விளங்கியது. பல கோவில்கள் ஊரவை கூடவும், நீதி மன்றங்களாகவும், அயலார் படையெடுப்பின்போது குடி மக்களைப் பாதுகாக்கும் இடங்களாகவும் பயன்பட்டன. சுருங்கக் கூறின், காவிரி பாயப்பெற்ற மருத வளநாடு தமிழகத்தின் நெற்களஞ்சியமாகவும் அறிவு வளர்ச்சிக்கு ஏற்ற இடமாகவும் இருந்து வந்தது. அங்குச் சமுதாய வாழ்க்கையும் சிறப்புற்று இருந்தது. 4. இலக்கியச் சிறப்பு கல்வியின் சிறப்பு ஒரு நாட்டின் நாகரிக வளர்ச்சிக்குக் கல்வியே அடிப்படை. ஒருவன் பெறத் தகுந்த எல்லாச் செல்வங்களுள்ளும் சிறந்த செல்வம் கல்வியே என்றும், அது பல பிறவிகட்கும் உறுதுணை யாவது என்றும், ஆதலால் ஒவ்வொருவரும் இறக்கும் வரை படித்து அறிவை வளர்க்க வேண்டுமென்றும் வள்ளுவர் கூறியுள்ளார். தந்தை மகற்காற்று நன்றி அவையத்து முந்தி இருப்பச் செயல் என்பது வள்ளுவர் வாக்கு. இங்ஙனம் உயிர்க்குப் பாதுகாவலான கல்வியின் சிறப்பைச் சோழ மன்னர் நன்கு அறிந்திருந்தனர்; நாடெங்கும் மக்கள் கல்வி கற்க வசதி செய்தனர்; இயற்றமிழில் வல்ல புலவர்களையும் இசைத் தமிழில் வல்ல பாணர்களையும், நாடகத் தமிழில் வல்ல கூத்தரையும் நன்கு ஆதரித்தனர். கோவில்களில் சமயக் கல்வி கற்பிக்கப் பட்டது. மடங்களிலும் சமயக் கல்வி அளிக்கப்பட்டது. ஆடற்கலையிலும் பாடற்கலையிலும் பயிற்சிகள் அளிக்கப் பட்டன. சிற்ப ஓவியக் கலைகள் சீருடன் கற்பிக்கப்பட்டன. இவற்றோடு எண்ணாயிரம், திருமுக்கூடல் முதலிய இடங்களில் வடமொழிக் கல்லூரிகளும் இருந்தன. சோழ நாட்டு இலக்கியங்கள் சங்க காலத்தில் சோழர்மீது பாடப்பெற்ற பாடல்கள் பலவாகும். அவை சங்கத் தொகை நூல்களில் இடம் பெற்றுள்ளன. அவற்றைக் கொண்டே அக்காலச் சோழர் வரலாற்றை நாம் அறிகின்றோம். சங்க காலத்திற்குப் பின் சைவ வைணவ சமயங்கள் நாட்டில் வளர்ச்சிபெற்றன. ஆதலால் சைவ, வைணவ இலக்கியங்கள் அக்காலத்தில் பெருகின. சோழ நாட்டைச் சேர்ந்த திருஞான சம்பந்தர் முதலிய பெரியோர்கள் பாடிய சைவத்திருமுறைகளும் திருமங்கையாழ்வார் போன்ற வைணவப் பெருமக்கள் பாடிய அருட்பாடல்களும் சமய இலக்கியம் என்று சொல்லலாம். சோழ நாட்டைச் சேராத சைவ, வைணப் பெரியார்கள் சோழ நாட்டுத் தலங்களைப் பற்றிப் பாடியுள்ள பாக்கள் பலவாகும். இவை எல்லாம் சோழ நாட்டு இலக்கியச் செல்வம் என்றே கொள்ளலாம். பிற்காலச் சோழராட்சியில் எழுந்த இலக்கிய நூல்கள் பல. அவற்றுள் சில அழிந்து பட்டன. எஞ்சியவற்றுள் கலிங்கத்துப் பரணி, மூவருலா, குலோத்துங்கன் கோவை என்பன சோழ நாட்டில் பாடப்பெற்ற பெருங்காவியங்கள். வீரசோழியம், தண்டியலங்காரம் என்பன இலக்கண நூல்கள். கலிங்கத்துப் பரணி இது முன்பே குறிப்பிடப்பட்டுள்ளது அன்றோ? இந்நூலில் சங்க காலச் சோழர் முதல் முதற் குலோத்துங்கன் வரை வாழ்ந்து மறைந்த சோழ மன்னர்களின் அரிய செய்திகள் குறிக்கப்பட்டுள்ளன; சோழர் படைத் தலைவனான கருணாகரத் தொண்டைமானது படையெடுப்பும், கலிங்கநாடு அழிந்த விவரமும், சோழப் படையின் முன்னைய வீரச் செயலும், போர் நடந்த முறையும் தெளிவாகத் தெரிவிக்கப்பட்டுள்ளன. போரில் தோற்ற கலிங்க வீரர் பரதேசிகள் போலவும் பிறவாறு வேடமிட்டுப் பொய் சொல்லித் தப்பிப் பிழைத்த விவரம் நகைப்பை உண்டாக்குகின்றது. இந்நூல் நடை மிடுக்குடையது. போரில் புண்பட்டு மீளும் வீரரை அவர்தம் மனைவிமார் வரவேற்கும் முறை கருத்தைக் கவர்வதாகும். இத்தகைய பல சிறப்புக்கள் அமைய இந்நூலைச் சயங்கொண்டார் பாடி, பரணிக்கோர் சயங்கொண்டான் என்ற அழியாப் புகழைப் பெற்றார். இவரது பரணிக்கு இணையான பரணி நூல் இதுகாறும் தமிழில் தோன்றவில்லை. மூவருலா முதற்குலோத்துங்கன் மகனான விக்கிரம சோழன், அவன் மகன் இரண்டாம் குலோத்துங்கன், அவன் மகன் இரண்டாம் இராசராசன் என்ற மூவர்மீதும் ஒட்டக்கூத்தர் பாடிய உலாப் பிரபந்தமே மூவருலா எனப்படுவது. இதன்கண் சோழ மன்னர்களுடைய வீரம், கொடை முதலியனவும், உலாச் சிறப்பும், பாட்டுடைச் சோழர் செய்த அறச் செயல்களும், வீரச் செயல்களும் அழகிய நடையில் பாடப்பட்டுள்ளன. பெரிய புராணம் பல்லவர் காலத்தில் வாழ்ந்து மறைந்த திருநாவுக்கரசர் முதலிய அறுபத்து மூன்று நாயன்மார்களின் வரலாறுகளைத் தெரிவிக்கும் நூலே பெரிய புராணம் என்பது. இது நாலாயிரத்துக்கு மேற்பட்ட செய்யுட்களை உடையது. இதனைப் பாடிய சேக்கிழார் சென்னையை அடுத்த குன்றத்தூரில் சைவ வேளாளர் மரபில் தோன்றியவர். அவர் சிவப்பற்றும், நிறைந்த தமிழ்ப் புலமையும், சமய நூல் அறிவும் வாய்ந்தவர்; இரண்டாம் குலோத்துங்கனுக்கு (கி.பி. 1135- 1150) முதலமைச்சராக இருந்தவர்; தமிழகம் முழுமையும் சுற்றிப் பார்க்கும் வாய்ப்புப் பெற்றவர்; அவர் பாடல் பெற்ற தலங்களை யெல்லாம் நேரில் சென்று கண்டார்; அவர்கள் வாழ்ந்த ஊர்களில் வழங்கப் பெற்ற அவர்தம் வரலாறுகளைக் கேட்டறிந்தார்; நாயன்மாரைப் பற்றிக் கூறும் அக்கால நூல்களையும் கல்வெட்டுக்களையும் நன்கு ஆய்ந்தார்; பல கோவில்களிலிருந்த நாயன்மார் படிமங்களையும் ஓவியங்களையும் சிற்பங்களையும் பார்வையிட்டார்; சமண பௌத்த நூல்களை நன்கு கற்றார். இவை அனைத்தையும் உளங்கொண்டே, பெரிய புராணத்தைத் திறம்படச் செய்தார். இதன்கண் தமிழகத்து ஊர்கள் பலவற்றின் விவரங்கள், பல திறப்பட்ட மக்களின் பழக்க வழக்கங்கள், கடல், காடு, மலை, ஆறு, சேரி, நுளைப்பாடி முதலியவற்றின் வருணனை, சைவ வழிபாட்டு முறைகள், சமயப் போராட்ட விவரங்கள், தென்னிந்திய வரலாற்றுக்கு உறுதுணையான குறிப்புக்கள் என்பன எளிய தமிழ் நடையில் குறிக்கப்பட்டுள்ளன. கம்ப ராமாயணம் இது மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் செய்யப் பட்டது. இதனைச் செய்தவர் கம்பர். இவர் மாயூரத்தை அடுத்து திருவழுந்தூரில் பிறந்தவர்; சடையப்ப வள்ளல் என்ற செல்வரால் ஆதரிக்கப்பட்டவர். இவர் வடமொழியில் உள்ள வால்மீகி ராமாயணம், பால ராமாயணம், காளிதாசன் செய்த ரகுவம்சம் என்னும் வடமொழி நூல்களின் துணை கொண்டு தமிழில் இராமாயணம் பாடியுள்ளார் என்று அறிஞர் கூறுவர். இவர் வடமொழியில் கூறப்பெற்ற இராம காதையைப் பொதுவாகப் பின்பற்றினார்; ஆனால் பல இடங்களில் தமிழ் நாட்டுக் காட்சிகளையே வடநாட்டுக் காட்சிகளாக அமைத்துப் பாடியுள்ளார். கோசல நாட்டு வருணனை சோழ நாட்டு வருணனையேயாகும்; சரயு ஆற்றின் வருணனை காவிரி ஆற்றின் வருணனை என்றே சொல்லலாம். சனகன் வைத்திருந்த வில்லை வளைப்பதற்கு முன் இராமன் சீதையைக் காணவில்லை என்பது வால்மீகி ராமாயணத்தில் சொல்லப்படுகிறது. ஆனால் கம்பர், இராமன் வில்லை வளைப்பதற்கு முன்பே சீதையைக் கண்டான், சீதையும் இராமனைக் கண்டாள், இருவரும் ஒருவரை யொருவர் விரும்பினர் என்று தமிழ் அகப்பொருள் இலக்கணத்திற்கேற்ப ஒரு காட்சியைப் புகுத்தியுள்ளார்; இவ்வாறே கிஷ்கிந்தா காண்டத்தில், தமிழ் மரபுக்கு ஏற்ப, வாலியின் மனைவியான தாரையைச் சித்திரித்துக் காட்டியுள்ளார். கிஷ்கிந்தா காண்டத்தில் கூறப்பட்டுள்ள கார்கால வருணனை தமிழகத்துக் கார் கால வருணனையே யாகும். கம்பர் தாம் பாடிய இராமாயண நூலில் 10, 500 பாடல்களைப் பாடியுள்ளார். இப்பாடல்கள் சொற்செறிவும் பொருட்செறிவும் கொண்டவை; பலவகை அணிகளைக் கொண்டவை. கம்பருடைய பரந்த உலக அறிவு, தமிழ்நாட்டு அறிவு, வைணவ சமய அறிவு, சமய சமரச மனப்பான்மை என்பனவற்றை நன்கு விளக்க வல்லவை. இத்தகைய சிறப்புக்களால்தான் இப்பெருநூல் எல்லாச் சமயத்தவராலும் படித்துப் பாராட்டப் பெறுகின்றது; கல்வியிற் பெரியவர் கம்பர் என்றும், கவிச்சக்கரவர்த்தி என்றும் அறிஞர் கம்பர் பெருமானைப் பாராட்டு வாராயினர். அறிஞர் பலர் காவிய நயத்திற்காகவே இதனை இன்றும் விரும்பிப் படிக்கின்றனர். தமிழ் இலக்கிய வானவெளியில் கம்பர் இணையற்ற கதிரவனாகக் காட்சி அளிக்கின்றார் என்பதில் ஐயமில்லை. மடங்களின் தமிழ்த் தொண்டு சோழப் பேரரசு வீழ்ச்சியுற்ற பின்பு, தமிழ் வளர்க்கும் கடமையைச் சைவ மடங்கள் மேற்கொண்டன. மாயூரத்தை அடுத்த தருமபுர ஆதீனம், திரு ஆவடுதுறை ஆதீனம் என்பவை குறிக்கத் தக்கவை. தருமபுர ஆதீனம் சிவநெறி நூல்களை வெளியிட்டது. திரு ஆவடுதுறை ஆதீனம் சிவநெறி நூல்களையும் பிற தமிழ் நூல்களையும் வெளியிட்டது. இவ்வாதீனத்தைச் சேர்ந்த சங்கர நமச்சிவாயர் என்பவர் நன்னூல் என்னும் இலக்கண நூலுக்கு உரை எழுதினார். இவருக்குப் பின்வந்த சிவஞான முனிவர் என்பவர் சங்கர நமச்சிவாயர் உரையைத் தழுவி விரிவுரை எழுதியுள்ளார்; காஞ்சிப் புராணம் என்னும் அரிய செய்யுள் நூலைச் செய்துள்ளார்; அமுதாம்பிகை பிள்ளைத் தமிழ் முதலிய பிரபந்த நூல்களையும் பாடியுள்ளார்; சிவஞான போதம் என்னும் சைவ சித்தாந்த நூலுக்கு மிகச் சிறந்த பேருரை வரைந்துள்ளார். சரபோஜி மன்னர் தஞ்சையை ஆண்ட மகாராட்டிர மன்னருள் சரபோஜி மன்னர் குறிப்பிடத் தக்கவர். இவர் சோழ நாட்டில் கிடைத்த- பனைஓலைகளில் எழுதப்பெற்ற - தமிழ் நூல்களையும், வடமொழி நூல்களையும் திரட்டினார்; தமது அரண்மனையுள் சரசுவதி மகால் என்ற மண்டபத்தில் அவற்றை அழகுபெற வைத்தார். இவர் திரட்டிய நூல்களில் இலக்கிய நூல்கள் பல; இலக்கண நூல்கள் சில; மருத்துவ நூல்கள் பல; இசை நூல்கள் பல; நாடக நூல்கள் சில; சோதிட நூல்கள் சிலவாம். இம்மன்னர் காலத்தில் கும்பகோணத்தை அடுத்து கொட்டையூரில் சிவக்கொழுந்து தேசிகர் என்ற சைவப் புலவர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் கோடீச்சுரக் கோவை என்ற ஒரு கோவை நூலைப் பாடியுள்ளார்; சரபோஜி மன்னர்மீது குறவஞ்சி நாடகம் ஒன்றையும் திறம் படப் பாடியுள்ளார். இங்ஙனம் காவிரி அன்னையின் பாலுண்டு வளர்ந்த பைந்தமிழ்ப் பாவலர் பாடிய நூல்கள் பலவாகும். அவற்றுள் சோணாட்டுத் தல புராணங்கள் என்பன குறிக்கத்தக்கவை. ஒவ்வொரு தலத்திற்கும் ஒரு புராணம் பாடப்பெற்றுள்ளது. சென்ற நூற்றாண்டில் வாழ்ந்து மறைந்த மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் பாடிய தல புராணங்கள் பல. அவற்றுள் மாயூரத் தல புராணம், திருநாகைக் காரோணப் புராணம் என்பன குறிப்பிடத்தக்கவை. 5. கலைச் சிறப்பு கலையுணர்ச்சி மக்கள் உள்ளத்திலிருந்து வெளித்தோன்றும் கலை யுணர்ச்சியால்தான் கவின்மிக்க கட்டடங்கள் பல தோன்றின. அசந்தாக் குகைச் சிற்பங்கள், எல்லோராக் குகைச் சிற்பங்கள், காந்தாரச் சிற்பங்கள், அமராவதிச் சிற்பங்கள் ஆகிய அனைத்தும் மனித உள்ளத்து எழுந்த கலையுணர்ச்சியின் படைப்புக்களே யாகும். கட்டடக்கலை மக்களது நாகரிகத்தை அறிவிப்பனவற்றுள் கட்டடக் கலையும் ஒன்றாகும். நாம் பண்டைக்காலக் கட்டடக்கலையைப் பற்றி அறிய வேண்டுமாயின், அழியாமல் இருக்கும் இக்காலக் கோவில்களைக் கொண்டே அறிதல் வேண்டும். அவை கற்கோவில்களாக இருப்பின் நெடுநாள் நிலைத்திருக்கும். நமது தமிழகத்தில் கி.பி. 7ஆம் நூற்றாண்டு முதலே கருங்கற் கோயில்கள் தோன்றின. அதற்கு முன் இருந்த கோயில்களும் மாடமாளிகை களும், அரண்மனைகளும் பிறவும் அழியத்தக்க மண், மரம், சுண்ணாம்பு, செங்கல் இவற்றால் ஆனவை. இராஜராஜேசுவரம் சோழப் பேரரசர்களின் கட்டடக்கலைத்திறனை நமக்கு அறிவித்து நிற்பவை அவர்கள் கட்டுவித்த கோயில்களே ஆகும். அவற்றுள் தஞ்சை இராஜராஜேசுவரம், கங்கைகொண்ட சோழேச்சுரம், தாராசுரத்தில் உள்ள ஐராவதேசுவரர் கோவில் என்பன குறிக்கத்தக்கவை. இராஜராஜ சோழனால் ஆறுஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்டதுதான் தஞ்சைப் பெரிய கோவில். கோயிலைச் சூழ ஆழமான அகழி ஒன்று இருந்தது. கோயில் மதில், கோட்டை மதிலின் அமைப்பைக் கொண்டது. இரண்டு சிறிய கோபுரங்களைக் கடந்து உட்சென்றால், கருங்கல்லும் செங்கல்லும் பரப்பப்பெற்ற, சுமார் 800 அடி நீளமும் 400 அடி அகலமும் உள்ள பரந்த மேடையைக் காணலாம். அம்மேடை மீது கருவறை, நடு மண்டபம், முன் மண்டபம், தியாகேசர் எழுந்தருளப்பெற்ற தாபனமண்டபம், நர்த்தன மண்டபம், வாத்திய மண்டபம் என்பன காணப்படும். கருவறையின்மேல் வானோக்கிச் சதுரவடிவமான பதின்மூன்று கோபுர மாடிகளையுடைய விமானம் உள்ளது. விமானத்தின் ஒவ்வொரு நிலையிலும் உள்ள உருவங்கள், ஒவ்வொரு மாடியின் அமைப்பு, நடுவில் உள்ள கற்கோவில் பகுதியைச் சுற்றியுள்ள திருச்சுற்று மாளிகை முதலியன அக்காலத்துக் கட்டடக் கலைத்திறனை விளக்குகின்றன. கங்கை கொண்ட சோழேச்சுரம் தஞ்சைப் பெரிய கோவிலைப் போன்ற அமைப்பையே இக்கோவிலும் கொண்டுள்ளது. இதன் மதிற்சுவரை வெடி வைத்துத்தகர்த்து ஒரு பகுதியை அரசாங்கத்தார் அணை கட்டப் பயன் படுத்திக்கொண்டனர். இதன் மதிற்சுவர் முற்றிலும் கருங்கற்சுவர்; இஃது ஐந்தடி அகலமுடையது; நான்கு மூலைகளிலும் கோட்டை அமைப்பை உடையது. சுண்ணாம்பும் செங்கல்லும் கொண்டு கட்டப்பட்ட நந்தி மிகுந்த வேலைப்பாடுடையது. தாராசுரம் கோவில் இக்கோவில் கி.பி. 12-ஆம் நூற்றாண்டில் இரண்டாம் இராசராசனால் (கி.பி. 1146- 1173) கட்டப்பட்டது. இக்கோவிலில் உள்ள இராசகம்பீரன் மண்டபம் வியத்தகு வேலைப்பாடு கொண்டது. இம் மண்டபத்தின் தூண்கள், தரை, மேற்கூரை முதலியன அக்காலக் கட்டட அமைப்புத் திறனை நன்கு அறிவிக்கவல்லவை. குதிரைகள் பூட்டிய உருளைகளைக் கொண்ட தேர் போலக் கோவில் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அம்மன் கோயிலின் முன்மண்டபம் நீரில் மிதக்கக் கூடிய தெப்பம் போல அமைந்துள்ளது. ஓவியக்கலை ஓவியக்கலை, சிற்பக்கலை, நடனக்கலை, இசைக்கலை என்பன நாகரிகக் கலைகள் எனப்படும். இவற்றைக் கொண்டே அறிஞர் ஒரு நாட்டின் நாகரிகச் சிறப்பை உறுதி செய்வர். இவற்றுள் ஒன்றாய ஓவியக்கலை சங்க காலத்தில் பெரிதும் போற்றப்பட்டது. சங்க காலத்திற்குப் பின்னர்ப் பல்லவர் காலத்திலும் இக்கலை பெரிதும் போற்றப்பட்டது. சோழர்களின் ஓவியக்கலைச் சிறப்பினை விளக்கத் தகுந்ததாக உள்ளவை தஞ்சைப் பெரிய கோவில் ஓவியங்களாகும். அவை கி.பி. 11- ஆம் நூற்றாண்டில் வரையப்பட்டவை. திருத்தொண்டத்தொகை அருளிச் செய்த சுந்தரர் இறைவனால் தடுத்தாட்கொள்ளப்பட்ட வரலாற்று நிகழ்ச்சியைக் குறிக்கும் ஓவியம் தஞ்சைப் பெரிய கோவிலில் மிகவும் அழகாகத் தீட்டப்பட்டுள்ளது. சிவபெருமான் கிழ வேதியராக வந்து சுந்தரரது திருமணத்தைத் தடைசெய்ததே இவ்வோவியத்தின் கருத்து. மணமண்டபத்தில் மணத்திற்கு வந்த மறையவர்கள், மணமகள்- மணமகன், ஒரு கையில் குடையும் மற்றொரு கையில் அடிமைப் பத்திரமும் கொண்ட கிழவேதியர் ஆகியோர் ஓவியத்தில் குறிக்கப் பட்டுள்ளனர். தாம் அடிமை என்பதைக் கேட்டவுடன் சுந்தரர் வியப்பும் சீற்றமும் கொண்டார் என்பதை அவருடைய முகத்தோற்றம் நன்றாகக் காட்டுகின்றது. இரண்டாம் ஓவியம் கயிலைக் காட்சியைக் காட்டுகிறது. இறைவன் புலித்தோல் மீது அமர்ந்திருக்கின்றார். தேவகணங்களும், முனிவர்களும் சுற்றிலும் காணப்படுகிறார்கள். இவ்வோவியம் மேற்பகுதியில் அமைந்துள்ளது. கீழ்ப்பகுதியில் சுந்தரர் வெள்ளானைமீது இவர்ந்து செல்லுதலும், சேரமான் பெருமாள் நாயனார் குதிரைமீது செல்வதும் சித்திரிக்கப்பட்டுள்ளன. ஓவியங்களில் சுந்தரரும் நாயனாரும் தாடி வைத்துள்ளனர்; மயிர் முடிப்புக் கொண்டுள்ளனர்; பலவகை அணிகளை அணிந்துள்ளனர். இந்த ஓவியங்கள் யாவும் சோழர் கால மக்களுடைய உடலமைப்பு, ஆடைச் சிறப்பு, அணிச்சிறப்பு முதலியவற்றை நாமறியத் துணை புரிவன. நாயக்கர் கால ஓவியங்கள் நாயக்கர் ஆட்சியில் சோழர் கால ஓவியங்களுக்கு மேல் காரை பூசப் பெற்றது; அக்காரைமீது நாயக்கர் கால ஓவியங்கள் தீட்டப்பெற்றன. இவை 1930 ஆம் ஆண்டுவரை கவனிக்கப் படாமலிருந்தன. இவற்றை முதன் முதல் கண்டு பிடித்தவர் அண்ணாமலைப் பல்கலைக்கழக வரலாற்றுப் பேராசிரியர் திரு. எ. கே. கோவிந்தசாமி என்பவர். அவர் இவற்றைப் புகைப்பட மெடுத்தார். இவ்வோவியங்களைக் கொண்ட காரை சில இடங்களில் பெயர்ந்து விழுந்து விட்டதால், உள்ளிருந்த சோழர் கால ஓவியப் பகுதிகள் புலப்பட்டன. பேராசிரியர் கோவிந்தசாமி அவர்கள் இவற்றையும் வெளிப்படுத்தினார். பின்பு அரசாங்கப் புதைபொருள் ஆராய்ச்சியாளர் இவற்றைப் படமெடுத்தனர்; காரையை முற்றும் நீக்கிச் சோழர் கால ஓவியங்களைக் கண்டுபிடித்தனர்; இன்று அவற்றைப் பாதுகாத்து வருகின்றனர். இவை பற்றிய விவரங்களே மேல் தரப்பெற்றவை. மகாராட்டிரர் கால ஓவியங்கள் தஞ்சை அரண்மனையில் மகாராட்டிரர் வரைந்த ஓவியங்கள் காணப்படுகின்றன. மகாராட்டிர மன்னன் அரியணைமீது அமர்ந்துள்ளதைக் குறிக்கும் ஓவியங்களும், சமயத் தொடர்பான ஓவியங்களும், வேட்டையாடுதலைக் குறிக்கும் ஓவியங்களும் குறிக்கத்தக்கவை. இவற்றுள் பல பழுதுபட்டுவிட்டன. தஞ்சைக் கலைக்குழுவினர் எஞ்சியவற்றை இன்று பாதுகாத்து வருகின்றனர். சிற்பக்கலை மனிதன், தான் காட்ட எண்ணிய பொருள்களின் உருவங்களைக் கல், மரம், மண் முதலியவற்றிற் செதுக்கி அமைத்தல் சிற்பம் எனப்படும். தொல்காப்பியத்தில் சிற்பக்கலை பற்றிய குறிப்புக்கள் உள்ளன. இறந்த வீரர்க்குச் சிலை அமைக்கும் வழக்கத்தைத் தொல்காப்பியம் கூறுகின்றது. இதற்கு நடுகல் என்பது பெயர். எனவே, சிற்பக்கலை தொல்காப்பியர்க்கும் முற்பட்டது என்பதை நாம் உணரலாம். தஞ்சைப் பெரிய கோவிலில் சிறந்த சிற்பங்கள் உள்ளன. கோவிற் சுவர்களில் சோழ வீரர் உருவங்களும், பிள்ளையார், திருமால், பிச்சாடனர், சூலதேவர், தட்சிணாமூர்த்தி, மார்க் கண்டேயர், நடராசர், லிங்கோற்பவர், அர்த்தநாரீசுவரர், கங்காதரர், கலியாணசுந்தரர், மகிஷாசுர மர்த்தனி ஆகியோர் சிலைகளும் காணத்தக்கவை. விமானத்தில் உள்ள சிற்பங்களும் எழில் மிக்கவை. கங்கை கொண்ட சோழபுரத்துக் கோவிலில் நாமகள், மலர் மகள் சிற்பங்கள் பேரழகு வாய்ந்தவை. சண்டீசர்க்குச் சிவபெருமான் உமையுடன் தோன்றிக் கொன்றை மாலை சூட்டிச் சண்டீசப்பதம் அருளுதலை உணர்த்தும் வியத்தகு சிற்பம் இன்று செய்ததுபோல் தோன்றுகின்றது. கி.பி. 11ஆம் நூற்றாண்டின் சிற்பக்கலைச் சிறப்பை அறிய இச்சிற்பம் பெரிதும் துணைபுரியும். இரண்டாம் இராசராசன் எடுப்பித்த இராச ராசேச்சுரத்தில் (தாராசுரம் கோவிலில்) உள்ள சிற்பங்கள் மிக்க சிறப்புடையவை. கருவறையின் புறச்சுவர்களில் அறுபத்து மூவர் வாழ்க்கை வரலாற்று நிகழ்ச்சிகள் சிற்பங்களாகச் செதுக்கப் பட்டுள்ளன. சைவ ஆச்சாரியார்களுடைய சிலைகளும் பிற தேவருடைய சிலைகளும் சோழர் காலச் சிற்பத்திறனை விளக்க வல்லனவாயுள்ளன. சலவைக்கற் சிற்பம் தஞ்சை அரண்மனையிலுள்ள சரபோஜி மன்னரது உருவம் சலவைக் கல்லால் செய்யப்பெற்றது. அதன் அற்புத வேலைப்பாட்டைக் கண்டு வியவாத அறிஞரில்லை. அதனை நேரில் காண்பவரே இக்கூற்றை உண்மையென்று உணர்வர். மகாராட்டிரர் காலத்துச் சிற்பக்கலை உயர்வை இச்சலவைக் கற்சிலையைக் கொண்டு நன்கு தெளியலாம். இசைக்கலை இசை என்னும் சொல்லுக்குத் தன்வயப்படுத்துவது என்பது பொருள். ஓரறிவுயிர் முதல் ஆறறிவுயிர் ஈறாக எல்லா உயிர்களையும் இசை தன்வயப்படுத்தவல்லது. புற்றிலிருக்கும் பாம்பினைப் பிடிக்க விரும்பும் பிடாரன் புற்றருகிற் சென்று மகுடி வாசித்துப் பாம்பினை வெளியில் வரச் செய்கின்றான். மகுடியின் இசையில் மயங்கிய பாம்பும் வெளிவரவே, பிடாரன் அதனைப் பிடித்துக் கொள்ளுகிறான். இவ்வாறே ஒவ்வோர் உயிரும் இசைக்கு மயங்குகின்றது. இத்தகு சிறப்பு வாய்ந்த இசையைச் சோழப் பேரரசர் போற்றி வளர்த்தனர்; பாடல் பெற்ற பெருங் கோவில்களில் இசை வாணிகள் அமர்த்தப்பட்டனர். தஞ்சைப் பெரிய கோவிலில் மட்டும் இசை, நடனக் கலைகளை வளர்க்க நானூறு பதியிலார் அமர்த்தப் பட்டனர்; தேவார ஓதுவார் நாற்பத்தெண்மர் இருந்தனர். தமிழ் இசை சோழர் காலத்தில் நன்கு வளர்க்கப்பட்டது. குழல், வீணை, யாழ் முதலிய இசைக் கருவிகள் வழக்கில் இருந்தன. தஞ்சையை ஆண்ட நாயக்கர் காலத்திலும், மகாராட்டிரர் காலத்திலும் கருநாடக இசை சோழ நாட்டில் பரவியது. இதன் பயனாகத் தொன்று தொட்டுவந்த தமிழிசை படிப்படியாக வழக்கிழந்தது. யாழ் முதலிய இசைக்கருவிகள் வழக்கொழிந்தன. தமிழிசையும் நாளடைவில் மறைந்தொழிந்தது. ஏறத்தாழ இற்றைக்குப் பத்தாண்டுகட்குமுன் வரையிலும் கருநாடக இசையே தமிழகத்தில் ஆட்சி புரிந்தது. செட்டி நாட்டரசர் இராசா சர் அண்ணாமலைச் செட்டியார் அவர்களது பெருமுயற்சியால் இன்று தமிழிசை தமிழகத்தில் பரவி வருகின்றது. நடனக்கலை பழந்தமிழ் மக்கள் மேற்கொண்டிருந்த சில கூத்து வகைகளைத் தொல்காப்பியம் குறிக்கின்றது. அவை வெறிக் கூத்து, கருங்கூத்து, வள்ளிக் கூத்து, கழனிலைக் கூத்து முதலியனவாகும். இவையேயன்றி ஆய்ச்சியர் குரவை, வேட்டுவ வரி முதலியனவும் இருந்தன. துணங்கை என்னும் கூத்துப் பண்டைக் காலத்து நிகழ்ந்த ஒன்று. இக்கூத்து, இரண்டு கைகளையும் முழங்கை வரை முடக்கி விலாப்புடைகளில் ஒற்றி அடித்துக்கொண்டு இடம் பெயர்ந்து களித்து ஆடும் ஒரு வகைக் கூத்து ஆகும். விறலியர் வள்ளல்களிடத்தும் மன்னர்களிடத்தும் சென்று தன்னுடைய ஆடற்புலமை தோன்றவும், உள்ளக் குறிப்பைப் புறத்து வெளிப்படுத்தும் மெய்ப்பாட்டோடு ஆடும் நடன மகளே விறலி எனப்பட்டாள். விறலியரைச் சோழமன்னர் தக்கவாறு ஆதரித்து ஊக்கு வித்தனர். சோழன் நலங்கிள்ளி விறலியர்க்கு மாட மதுரையையும், வஞ்சிமா நகரையும் தருவான் என்று கோவூர் கிழார் என்னும் புலவர் கூறியுள்ளார். சோழர்கள் புதுப்பித்த பழைய கோவில்களிலும் கட்டிய புதிய கோவில்களிலும் பிற மண்டபங்களிலும் அமைந்துள்ள நடனச் சிற்பங்கள் வியந்து போற்றும் சிறப்புடையன. நடன மாதர் தனித்திருந்து ஆடும் கூத்தும் பலவகைகளில் சிற்ப உருவில் காணப்படுகின்றது. பிற்காலச் சோழர்கள் நாடாண்டபோது நடன மகளிர் மிகப் பலராகக் கோவில்களில் இடம் பெற்றிருந்தனர். அவர்கள் கணிகையர், மாணிக்கத்தார் எனப் பலவாறு பெயர் பெற்றிருந்தனர். அருட்பாடல் களின் பொருளை அபிநயத்தாற் புலப்படுத்தி நடித்து அம்மாதரிசியர் பொது மக்கள் உள்ளங்களில் சமயப்பற்றை ஊட்டினர். நடன ஆசிரியர் சோழ மன்னரால் மதிக்கப்பெற்றனர்; மானியங்களும் பட்டங்களும் பெற்றுச் சிறக்க வாழ்ந்தனர். பெரிய புராணம், கம்ப ராமாயணம் என்னும் இரண்டு நூல்களிலும் நடனக் கலையைப் பற்றிய குறிப்புக்கள் உள்ளன. கற்பகப்பூந் தளிரடிபோய்க் காமருசா ரிகைசெய்ய உற்பலமென் முகிழ்விரல்வட் டணையோடும் கைபெயரப் பொற்புறுமக் கையின்வழிப் பொருகயற்கண் புடைபெயர அற்புதப்பொற் கொடிநுடங்கி ஆடுவபோல் ஆடினார். -பெரியபுராணம் நெய்திரள் நரம்பிற் றந்த மழலையின் இயன்ற பாடல் தைவரு மகர வீணை தண்ணுமை தழுவித் தூங்கக் கைவழி நயனம் செல்லக் கண்வழி மனமும் செல்ல ஐயநுண் இடையார் ஆடும் நாடக அரங்கு கண்டார். -கம்பராமாயணம் பெருங்கோவில் கோபுர வாயில்களில் உள்ள மிக்க உயரமான கற்சுவர்களில் பலவகை நடனங்கள் செதுக்கப் பட்டுள்ளன. இவை விசய நகர வேந்தர் காலத்தன என்று ஆராய்ச்சியாளர் அறைகின்றனர். அவர்கள் காலத்திலும் நடன மகளிர் கோவில்களில் இருந்து நடனக் கலையை வளர்த்து வந்தனர் என்பது கல்வெட்டுக்களால் அறியப்படுகிறது. தஞ்சையை ஆண்ட மகாராட்டிரர் காலத்திலும் இக்கலை நன்கு வளர்ந்தது. சோழ நாட்டிற்றான் நடன ஆசிரியர் பலராக இன்றும் இருந்து வருகின்றனர் என்பதும், இன்றைய நடன மாதர் பலரும் அவ்வாசிரியரிடமே பயின்றனர் என்பதும் இங்கு அறியத்தகும். IV. வையைக் கரை நாகரிகம் 1. வையையாறு இலக்கியத்தில் வையை வையையாறு வடபாண்டி நாட்டுக்கு உயிர்நாடி. இவ்வாறே தென்பாண்டி நாட்டுக்குப் பொருநையாறு உயிர் நாடியாகும். காவிரியாறு தமிழிலக்கியங்களில் பேசப்பட்டி ருத்தல் போலவே இவ்விரண்டு யாறுகளும் பாராட்டப் பட்டுள்ளன. வையையாறு பற்றிய விவரங்களைப் பரிபாடல், சிலப்பதிகாரம், திருவிளையாடற் புராணம் இவற்றில் விரிவாகக் காணலாம்; வையைக் கரையில் உள்ள திருப்பூவணம் என்னும் சிவத்தலம் பற்றிய நூல்களிலும் காணலாம். ஈண்டு எடுத்துக் காட்டாகப் பரிபாடலில் கூறப்பட்டுள்ள செய்திகளுட் சிலவற்றைக் காண்போம்: மேகங்கள் கடல் நீரை உண்டு வானத்திற் சென்று மழையாகப் பொழிகின்றன. அங்ஙனம் மலைமீது விழும் நீர் மலையின் மாசினைக் கழுவுவதுபோல மலையின் எல்லாப் பக்கங்களிலும் சென்று நிலத்தை அடைகிறது. இங்ஙனம் மலையிலிருந்து விழும் நீர் பல கால்களாக ஓடி வையை என்னும் உருவத்தை அடைகின்றது. வையையாற்று நீர், பகைவர் நாட்டை நோக்கிச் செல்லும் பாண்டியர் படை ஆரவாரத்தோடு போவதுபோலப் பேரிரைச்சலோடு செல்கின்றது. இங்ஙனம் பெருக்கோடு செல்கின்ற ஆறு, தன் போக்கிலுள்ள பலவகை மரங்களை வேரோடு சாய்த்துக் கொண்டு செல்கிறது; கணவன்மீது சிறு கோபம் கொண்ட மனைவி அவனைக் கடந்து நீங்குவது போலத் தன் போக்கிலுள்ள அணைகளை முறித்துக்கொண்டு போகின்றது. உடலில் பூசப்பெறும் பலவகை மணப் பொருள்கள் உடலுக்கு மணம் தருதல் போல ஆற்றில் அடித்துச் செல்லப்பெற்ற பலவகை மணமலர்கள் ஆற்று நீருக்கு நல்ல மணத்தை நல்குகின்றன. வெள்ளம் வருவதற்கு முன் சிறு பெண்கள் மணலில் பாவை செய்தும் சிற்றில் அமைத்தும் விளையாடிக்கொண்டி ருந்தனர். வெள்ளம் வந்துவிட்டதால் பாவையும் சிற்றிலும் அழிந்துபட்டனவே என்று அச்சிறுமிகள் கண்ணீர் விட்டு அழுகின்றனர். ஊரைக் கடல் சுற்றுவது போலச் சிற்றூர்களை வையையின் வெள்ளம் சூழ்ந்து கொள்கிறது; மற்றொருபால் நாற்றங்கால் வண்டலிட்டு மேடாகின்றது; பிறிதோரிடத்தில் வயல்கள் வெள்ளத்தில் மூழ்குகின்றன. கரையை அடுத்துள்ள சிற்றூர் மக்களும் பேரூர் மக்களும் மகிழ்வோடு வையை நீரை வரவேற்கின்றனர். சிலர் மகிழ்ச்சிப் பெருக்கால் தாம் அணிந்த அணிகளோடு நீர் விளையாட்டை விரும்பி நீராடுகின்றனர். விரைந்து செல்லும் வையை நீர் அங்ஙனம் நீராடும் மகளிருடைய கைவளையல்களையும், தலைக் கோலத்தையும், பிற அணிகளையும் கவர்ந்து செல்கின்றது. மகளிர் ஒருவர்மீது ஒருவர் நீர் இறைத்து ஆடுதலால் அவர்கள் கண்கள் சிவக்கின்றன. சில நீர்த் துறைகளில் அரங்க ஏறிய தலைக்கோல் மகளிரும் பாணரும் ஆடலைத் தொடங்குகின்றனர். அப்பொழுது உண்டாகும் இசைக் கருவிகளின் முழக்கமும் கரைமோதி இழியும் ஆற்று நீரின் ஒலியும் ஒன்று சேர்ந்து பேரோசை எழுப்புகின்றன. பீடுமிக்க மாட மதுரையை அணைத்தாற்போல அமைந்துள்ள வையையாற்றுப் பகுதியில் வெள்ளம் பெருகுகின்றது. அரசியல் அலுவலாளர் பறை அறைந்து கரைக்காவலரை அழைக் கின்றனர். வையையின் புதுப்புனலில் நீராட விரும்பி மதுரை மாநகரத்தார் ஆற்றை நோக்கி அணியணியாகச் செல்கின்றனர்; எருது பூட்டப்பெற்ற வண்டியில் சிலர் போகின்றனர்; சிலர் குதிரைகள்மீதும், சிலர் பெண் யானைகள்மீதும் செல்கின்றனர். சிலர் பல்லக்கிற் போகின்றனர். நீராடி மகிழ்ந்த செல்வர் வையையை வாழ்த்தும் அறிகுறியாகப் பொன்னாற் செய்த மீன், நண்டு, இறால் இவற்றை வெள்ளத்தில் போட்டு மகிழ்கின்றனர். ஆடவர் வாழைத் தண்டின் உதவியால் நீர்மேல் தாவிச் செல்கின்றனர்; ஒரு சிலர் ஓடத்தில் ஏறி ஆற்றுப் போக்கில் போகின்றனர். இவ்வாறு ஆடவரும் பெண்டிரும் தத்தம் மனம்போல நீரில் விளையாடு கின்றனர். வறுமையால் வாடுகின்ற புலவரது ஏற்ற கை நிறையப் பொன்னைச் சொரிந்த பாண்டியனைப் போலவே வையை வயலின்கண் பொன்னைப் பரப்புகின்றது. வையைக்கு இவ்வியல்பு என்றும் இருப்பதாகுக! இசைக்கு உரிமையுடைய பாணரும் கூத்தரும் வையையை ஏத்தித் தொழுவாராகுக! v‹W« k¡fis ï‹òW¤J« g©ò«, fh¡F« ïašò« itiaÆl« ÃiybgWtdthFf! என்று நீராடி மகிழ்ந்த மைந்தரும் மகளிரும் வையைக்கு வாழ்த்துக் கூறுகின்றனர். வையையின் தோற்றமும் போக்கும் மதுரை மாவட்டத்தின் மேற்குப் பகுதியில் கொடைக்கானல் தாலுகாவும் அதற்குத் தெற்கில் பெரியகுளம் தாலுகாவும் அமைந்துள்ளன. கொடைக்கானல் தாலுகா மலைகள் நிரம்பியது. அம்மலைகளின் தொகுப்புப் பழனி மலைத்தொடர் எனப்படும். பெரியகுளம் தாலுகாவில் மேற்கு மலைத்தொடர் கிழக்கிலும் மேற்கிலும் பரவியிருக்கின்றது. கிழக்குப் பகுதி மலைத்தொடர்க்கு வருஷ நாடு- ஆண்டிப்பட்டி மலைத்தொடர் என்பது பெயர்; மேற்குப் பகுதி மலைத் தொடர்க்கு மேற்கு மலைத் தொடர் என்ற பழம் பெயரே இருந்துவருகிறது. பழனி மலைத்தொடரில் ஆறுகள் பழனி மலைத்தொடரில் பன்றியாறு (வராக நதி), மஞ்சளாறு, பாம்பாறு, அய்யம்பாளையம் ஆறு என்பன தோன்றித் தெற்குநோக்கிப் பாய்கின்றன. இவற்றுள் பன்றியாறு பெரியகுளம் என்னும் நகரின் வழியாய்ப் பாய்ந்து பாம்பாற்றில் கலக்கிறது. இங்ஙனம் பன்றியாறு கலக்கப்பெற்ற பாம்பாறு தென்கிழக்காகப் பாய்கிறது. மஞ்சளாறு என்பது வத்தலக்குண்டு வழியாகத் தெற்கு நோக்கிப் பாய்ந்து, அய்யம்பாளையம் ஆற்றில் கலந்து விடுகிறது. இங்ஙனம் மஞ்சளாறு கலக்கப்பெற்ற அய்யம்பாளையம் ஆறு தெற்கு நோக்கிப் பாய்கின்றது. வையை ஆறு வருஷ நாடு ஆண்டிப்பட்டி மலைத்தொடர் வானளாவிய மரங்களைக் கொண்ட காடுகள் செறிந்தது; கொடிய விலங்குகளைக் கொண்டது. மக்கள் வாழ்வதற்குத் தகுதியற்றது. இவ்வருஷ நாடு- ஆண்டிப்பட்டி மலைத்தொடரே வையையின் தோற்றுவாய். இதன் பள்ளத்தாக்கிலேயே பல சிற்றாறுகள் வையையில் வந்து கலக்கின்றன. வையை அவற்றை ஏற்றுக் கொண்டு வடக்கு நோக்கிப் பாய்கின்றது. வீரவனாறு- சுருளியாறு மேற்கு மலைத் தொடருக்கும் வருஷநாடு- ஆண்டிப்பட்டி மலைத்தொடருக்கும் இடையில் அமைந்துள்ள நிலப்பகுதி கம்பம் பள்ளத்தாக்கு எனப்படும். இப்பள்ளத்தாக்கின் தென்மேற்குக் கோடியில் மேற்கு மலைத்தொடரும் வருஷநாடு- ஆண்டிப்பட்டி மலைத்தொடரும் ஒன்று சேருகின்றன. மேற்கு மலைத்தொடரின் தென்மேற்குப் பகுதியில் பெய்யும் மழை நீர் கம்பம் பள்ளத்தாக்கில் வீரவனாறு என்னும் பெயருடன் பாய்கிறது. அவ்யாறு, கம்பம் பள்ளத்தாக்கில் உள்ள வருஷநாடு- ஆண்டிப்பட்டி மலைத்தொடரின் தென்கோடிப் பகுதியிலிருந்து தோன்றி வடக்கு நோக்கிப் பாயும் சுருளியாற்றில் கலக்கிறது. பெரியாற்று நீர் வீரவனாறு தோன்றும் இடத்திற்குச் சில கல் தொலைவுக்கப்பால் மேற்கு மலைத்தொடரில் பெரியாறு தோன்றுகிறது. அது மேற்கு நோக்கி மலையாள நாட்டில் வளமிக்க பகுதியில் பாய்ந்துவந்தது. அதுவே சேரநாட்டுத் தலைநகரான வஞ்சி மாநகரத்தை அழகு செய்து அரபிக் கடலில் கலந்துவந்த பேரியாறு என்பது. கம்பம் பள்ளத்தாக்கு நீரில்லாத குறையால் வளமற்றிருந்தது. அதனால் பெரியாற்றின் நீரை மலையினைக் குடைந்து கம்பம் பள்ளத்தாக்கில் பாயுமாறு அரசினர் ஏற்பாடு செய்தனர். அந்த ஏற்பாட்டின்படி பெரியாற்றின் குறுக்கே அணை கட்டப்பட்டது. இங்ஙனம் அணையால் தேக்கப்பட்ட நீர் மலையிலேயே குடையப்பட்ட சுரங்க வழியில் 2500 அடி நீளம் பிரயாணம் செய்கிறது. பின்பு அஃது இயற்கையாக மலையில் அமைந்துள்ள பள்ளங்கள் வழியே பாய்ந்து வந்து வீரவனாற்றில் விழும்படி செய்யப் பட்டுள்ளது. இப்புதிய நீர்ப்பெருக்கால் பழைய வீரவனாறு பொலிவு பெற்று விரைந்து சென்று சுருளியாற்றில் கலக்கிறது. தேனீ- சுருளி- வையை இங்ஙனம் மிக்க நீரைப் பெறுகின்ற சுருளியாறு வடக்கு நோக்கி விரைந்து பாய்கிறது. இது தேனீ என்னும் ஊருக்குத் தெற்கே இரண்டு கல் தொலைவில் செல்லுகின்றது. அப்பொழுது போடிநாயக்கனூர் பள்ளத்தாக்கிலிருந்து கிழக்கு நோக்கி வரும் தேனீயாறு இதனில் கலக்கின்றது. இங்ஙனம் பல ஆறுகள் கலக்கப்பெற்ற சுருளியாறு, கிழக்கு நோக்கி இரண்டு கல் சென்று வையையாற்றில் கலக்கிறது. பேரணை இக்கூட்டுறவால் வையை நீர்வளம் பெற்றதாய் வட கிழக்காகச் சென்று, பின்பு கிழக்கு நோக்கித் திரும்பி, வளைந்து வளைந்து பாய்கிறது. இங்ஙனம் பாயும் பொழுது, முன்னே சொல்லப்பெற்ற பாம்பாறும் அய்யம்பாளையம் ஆறும் இதனில் தனித்தனியே கலக்கின்றன. இவை அனைத்தாலும் நீர்ப் பெருக்கம் மிகுந்த வையை அகன்ற பேரியாறாகக் காட்சி யளிக்கிறது. நிலக்கோட்டை தாலுகாவில் உள்ள அணைப்பட்டி என்னும் இடத்தில் வையையின் குறுக்கே பெரிய அணை கட்டப்பட்டுள்ளது. அங்கு வையை யாற்றின் பெரும்பகுதி, புதிதாகக் கட்டப்பட்ட பெரிய கால்வாய் வழியாக நீர்வளமற்ற மேலூர் தாலுகாவுக்கு அனுப்பப்படுகிறது; எஞ்சிய நீர் வையை ஆற்றில் விடப்படுகிறது. வையையின் மறைவு வையை அணைப்பட்டியிலிருந்து தென்கிழக்காகத் திரும்பிச் சோழவந்தான் வழியாக மதுரையை அடைகிறது; பின்னர் அங்கிருந்து தென்கிழக்காகவே மானாமதுரை, பரமக்குடி வழியாகச் சென்று இராமநாதபுரத்திற்கு அண்மையில் உள்ள பெரிய ஏரியில் கலந்து மறைகிறது. நீர்ப் பெருக்கம் மிகும் காலத்தில் இந்த ஏரி நீர் ஒரு சிற்றாறாகச் சென்று ஆற்றங்கரை என்னும் இடத்தில் கடலிற் கலக்கின்றது. தாய் போன்ற வையை இராமநாதபுரம் மாவட்டம் நீர்வளமற்றது. அதனால் வெள்ளம் வரும்பொழுது வையை நீர் பல கால்வாய்கள் வழியாகக் கொண்டு செல்லப்படுகிறது. இக்கால்வாய்கள் வழியே செல்லும் நீர் பல பெரிய ஏரிகளை நிரப்பி விடுகின்றத; வயல்களை வளப்படுத்துகிறது. ஆயினும், அணைப்பட்டியில் புதிய கால்வாய் வெட்டப்பட்ட பின்பு, இராமநாதபுர மாவட்டத்தில் வையை ஆறு செல்லும் பகுதி நீர் வளத்தில் குறைந்து விட்டதென்றே கூறலாம். இப்பொழுது வையையில் ஒரு வருடத்தில் பல மாதங்கள் நீர் இல்லாத நிலையைக் காண்கிறோம். ஆயினும், ஆற்றை அடுத்துள்ள ஊரார் ஆற்றில் வாய்க்கால்களை வெட்டுவித்தும் ஊற்றுக்களைத் தோற்றுவித்தும் ஆற்று நீரைப் பயன்படுத்து கின்றனர். குழந்தை வேண்டும் பொழுது பாலை வழங்கும் தாய்போல, மக்கள் வேண்டும்பொழுது நன்னீரை வழங்கும் நிலையில் வையையாறு இருப்பது மகிழ்வுக்குரியது. 2. அரசர் பாண்டியர் தமிழகத்தைப் பல நூற்றாண்டுகளாக ஆண்டுவந்த சேர சோழ பாண்டியருள் சங்கம் நிறுவித் தமிழாராய்ந்த பெருமையுடையவர் பாண்டியரே யாவர். பெரும் புலவர் பலர் தாம் எழுதிய நூல்களை மதுரைத் தமிழ்ச் சங்கத்திற்குக் கொண்டு சென்று அரங்கேற்றலே மரபாக இருந்தது. மன்னன் மாண்பு பண்டைத் தமிழ் மக்கள் நெல்லையும் நீரையும் தங்கள் நாட்டுக்கு உயிராகக் கருதவில்லை. அவர்கள் மன்னனையே தங்கள் உயிரெனப் போற்றினர். இந்த அரிய உண்மையை, நெல்லும் உயிரன்றே; நீரும் உயிரன்றே; மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம் என்று புறப்பாடலொன்றின் வரிகள் உணர்த்துகின்றன. வெயிலில் செல்பவன் மரநிழலில் தங்கி இன்புறல் போலவே, மக்கள் பலவகைத் துன்பங்களினின்று நீங்கி, அரசனது ஆட்சியில் தங்கி இன்புற்றனர். இதுபற்றியே நம் முன்னோர் ஆட்சியை நிழல் என்றனர். தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனும் என் நிழல் வாழ்நர் என்றே தன் ஆட்சிக்குட்பட்ட மக்களைப் பற்றிக் கூறியுள்ளான். சங்க காலப் பாண்டியர் குளம் தொட்டு வளம் பெருக்கினர்; நாட்டு மக்களைத் தம் உயிர்போலக் காத்தனர்; தம் நாட்டைப் பகைவர் கைப்படாமற் பாதுகாத்தனர். அப் பாண்டியருள் ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன் ஒருவன். இவன் சிறந்த புலவன்; ஆரிய மன்னரை வென்ற சிறப்புடையவன். மற்றொருவன் சேர சோழரையும் அவர்க்குத் துணையாக வந்த ஐம்பெருவேளிரையும் தலையாலங் கானம் என்ற இடத்தில் முறியடித்த வீரன்; அதனால் தலையாலங்கானத்துச் செரு வென்ற நெடுஞ்செழியன் என்று பாராட்டப் பெற்றான். இவனும் சிறந்த புலமையுடையவன். மன்னர் ஒழுக்கம் பாண்டிய மன்னர்கள் செங்கோல் வேந்தராக விளங்கியது போலவே ஒழுக்கத்திலும் சிறந்து விளங்கினர். இவ்வுண்மையை அவர்கள் செய்த சூளுரைகளிலிருந்து நன்கறியலாம். பூதப்பாண்டியன் என்னும் பாண்டிய மன்னன் என்மீது போருக்கெழுந்த பகைவரை வெல்லேனாயின், நான் என் மனைவியை விட்டு நீங்கினேனாகுக; கொடுங்கோல் செய்தேனாகுக; அன்புமிக்க நண்பர் நட்பினை இழந்தேனாகுக; பல உயிரையும் பாதுகாக்கும் அரசகுலத்தில் சிறந்த பாண்டிய நாடு காக்கும் காவலை விடுத்துப் பிறருடைய வன்புலங்களைக் காக்கும் காவற்கண் இக்குடிப் பிறப்பின்நீங்கிப் பிறப்பேனாகுக, என்று சூளுரைத்தான். இச்சூளுரையால் அவ்வரசன் தன் மனைவிமீது கொண்ட அன்பு, அவனது செங்கோற்பற்று, நண்பர்பால் கொண்ட உண்மைப்பற்று, உயிர்களை ஓம்புதலே அரசனது கடமை என்ற உணர்ச்சி முதலியன நன்கு புலப்படும். தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் என்மீது படையெடுத்து வந்த பகைவரை வெல்லேனாயின், எனது குடை நிழற்கீழ் வாழ்வார் தாங்கள் சென்றடையும் நிழல் அறியாது, எம் வேந்தன் கொடியன் என்று கருதிக் கண்ணீரைப் பரப்பிப் பழி தூற்றும் கொடுங்கோலை உடையேன் ஆகுக, என்று சூளுரைத்தான். இச்சூளுரையால், குடிகள் மனம் வருந்தாத நிலையில் ஆளுபவனே அரசன் என்னும் உண்மையை அவன் நன்குணர்ந்திருந்தான் என்பதை நாமறியலாம். இவனே அச்சூளுரையின் பின்னுரையாக ஓங்கு புகழ்தாங்கிய மாங்குடி மருதனார் முதலிய புலவர் பெருமக்கள் எனது நாட்டைப் பாடாது ஒழிவாராக. வறியவர்க்கு உதவி செய்ய முடியாத வறுமையை நான் அடைவேனாக, என்று கூறுகின்றான். இக் கருத்தமைந்த இவனது செய்யுள் புறநானூற்றில் எழுபத்திரண்டாம் பாடலாக உருப்பெற்றுள்ளது. இவன் புலவரை மதிக்கும் திறனும் புலவர் புகழ் பெறாத புரவலன் பயனற்றவன் என்ற இவனது கருத்தும் இப்பின்னுரையிலிருந்து புலனாதல் காண்க. மானவுணர்ச்சி ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன் தன் மனைவி கோப்பெருந்தேவி கொண்ட ஊடலைப் போக்க எண்ணி அந்தப்புரம் நோக்கி விரைந்து சென்றான். அப்போது பொற்கொல்லன் குறுக்கிட்டு அரசியின் காணாமற்போன காற்சிலம்பைக் களவாடிய கள்வன் தானே வந்து அகப்பட்டதாகக் கூறினான். தேவியின் ஊடல் போக்க வேண்டும் என்ற கருத்துடன் சென்ற மன்னன், பொற்கொல்லன் கூறியதை முற்றும் கேட்டு ஆராயாமல், கொன்று சிலம்பு கொணர்க என்று பணித்தான். பொற்கொல்லன் பேச்சை நம்பிக் குற்றமற்ற கோவலனைக் கொல்வித்தது தவறு என்பதை உணர்ந்தவுடன், ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன் பெரிதும் வருந்தினான். அவன், பொன்செய் கொல்லன் தன்சொல் கேட்ட யானோ அரசன், யானே கள்வன்; மன்பதை காக்கும் தென்புலம் காவல் என்முதல் பிழைத்தது; கெடுகஎன் ஆயுள் என்று வருந்திக் கூறினான்; கூறித் தன் அரியணையிலிருந்து மயங்கி விழுந்தான்; விழுந்தவன் மீண்டும் எழவில்லை. மானவுணர்ச்சி அவன் உயிரையே கொண்டது. மன்னன் இறந்தான் என்பதைக் கண்டதும் அவன் மனைவி கோப்பெருந்தேவியும் இறந்தாள். இடைக்காலப் பாண்டியர் சங்க காலத்து இறுதியில் பாண்டிய நாடு களப்பிரர் என்னும் வேற்றரசர் ஆட்சிக்குட்பட்டது. கி.பி. ஏழாம் நூற்றாண்டு முதல் பத்தாம் நூற்றாண்டுவரை பாண்டியர்கள் பாண்டிய நாட்டை ஆண்டுவந்தனர். அவர்கள் அடிக்கடி பல்லவர்களுடன் போரிட்டு வந்தனர்; சோழர்களோடு மண வுறவு கொண்டிருந்தனர். அவருள் நெடுமாறன் என்பவன் குறிக்கத்தக்கவன். அவன் திருஞான சம்பந்தர் காலத்தவன்; சோழன் மகளான மங்கையர்க்கரசியார் என்பவரை மணந்துகொண்டவன்; சம்பந்தரால் சமணத்திலிருந்து சைவத்திற்கு மாற்றப்பட்டவன். மற்றொரு பாண்டியன் முதல் வரகுணன் என்பவன். இவன் மாணிக்கவாசகர் காலத்தவன்; சிறந்த போர் வீரன்; உயர்ந்த பக்திமான். பிற்காலப் பாண்டியர் கி.பி. 900 முதல் கி.பி. 1200 வரையிலும் இருந்த பாண்டிய மன்னர்கள் சோழப் பேரரசற்கு அடங்கிய சிற்றரசர்களாக இருந்துவந்தனர். பதின்மூன்றாம் நூற்றாண்டில் பாண்டியர் பேரரசராகிச் சோழரைச் சிற்றரசர்களாக்கிவிட்டனர். இக் காலத்தில் வாழ்ந்த முதல் சடையவர்மன் குலசேகர பாண்டியன், முதல் மாறவர்மன் சுந்தர பாண்டியன், இரண்டாம் மாறவர்மன் சுந்தர பாண்டியன், முதல் சடையவர்மன் சுந்தர பாண்டியன், முதல் மாறவர்மன் குலசேகர பாண்டியன் என்பவர் புகழ் மிக்கவர். இப்பாண்டியர்கள் சேர சோழரை வென்று பெருநாட்டை ஆண்டனர். முதல் மாறவர்மன் குலசேகர பாண்டியன் (கி.பி. 1268- 1311) காலத்தில் இத்தாலி நாட்டு வெனிசு நகரத்தானாகிய மார்க்கோ போலோ என்பவன் பாண்டிய நாட்டில் பல நகரங்களைப் பார்வையிட்டான். அவன், நான் பாண்டிய நாட்டிற்குச் சென்ற பொழுது அங்குப் பாண்டியர் ஐவர் ஆண்டு வந்தனர். அவருள் குலசேகர பாண்டியனே மூத்தவன். அவன் தன் தலைநகரில் பெரும் பொருள் சேர்த்து வைத்திருந்தான். அவனைச் சேர்ந்தவர் சிறந்த அணிகலன்களை அணிந்திருந்தனர். அவன் தன் நாட்டை நடுவு நிலைமையுடன் ஆண்டுவந்தான். வாணிகம் செய்வோரிடத்தும் பிற நாட்டு மக்களிடத்தும் அவன் பேரன்புடன் நடந்து வந்தான், என்று தன் நூலில் குறித்துள்ளான். பாண்டியர்க்குப் பின் இவனுக்குப் பின் மாலிக்- காபூர் படையெடுப்பு ஏற்பட்டது. பின்பு பாண்டிய நாட்டில் விசயநகர ஆட்சி ஏற்பட்டது. அதன் பின்பு விசுவநாத நாயக்கரை முதல் அரசராகக் கொண்ட நாயக்கராட்சி தோன்றியது. நாயக்க மன்னர்கள் கோட்டை கொத்தளங்களை அமைத்து நாட்டை நன்முறையில் ஆண்டு வந்தனர். அவர்கள் ஏற்படுத்திய சிற்றூர்கள் பல; எடுப்பித்த கோவில்கள் பல; புதுப்பித்த கோவில்களும் பலவாகும். மதுரை மீனாட்சியம்மன் கோவில் நாயக்க மன்னரால் புதுப்பிக்கப்பட்டது. மதுரைப் புது மண்டபம், திருமலை நாயக்கர் மகால் என்பன நாயக்கர் காலக் கட்டடக் கலையை நாடறியச் செய்யும் சான்றுகளாக இருக்கின்றன. நாயக்க மன்னர்க்குப் பின்பு இந்நாடு கருநாடக நவாபின் ஆட்சிக்குட்பட்டது; பின்னர் ஆங்கில ஆட்சிக்கு ஆட்பட்டது. 3. அரசியல் அரசுரிமை அரசியலில் தலைமை தாங்கி அனைத்திற்கும் பொறுப்புடையவனாய் நீதிவழுவாமல் செங்கோல் செலுத்தும் கடமை வேந்தனைச் சார்ந்தது. பாண்டி மன்னர் தமக்குப் பின்பு பட்டத்துக்கு உரிய தம் மக்களுக்கு இளவரசுப் பட்டம் கட்டி, அவர்களை அரசியல் துறைகளில் பழக்குதல் வழக்கம். சில சமயங்களில் அரசர் தம் இளவல்களும் இங்ஙனம் பயிற்சி பெறுதல் உண்டு. முடியரசன் மதுரையில் இருத்தலும், இளவரசன் கொற்கையில் இருத்தலும் இயல்பு. கொற்கை உலகப் புகழ் பெற்ற துறைமுக நகரம்; முத்தெடுக்கும் தொழிலுக்குப் பெயர் பெற்றது; பாண்டிய நாட்டின் செல்வத்திற்கே உயிர்நாடியான நகரம். ஆதலால் அங்கு இளவரசன் இருந்தான். முற்காலப் பாண்டியர் பாண்டிய நாட்டைப் பல பகுதிகளாகப் பிரித்துக்கொண்டு ஆண்டு வந்தனர். அரசியல் அலுவலர் சங்க காலத் தமிழரசர் தங்கள் ஆட்சி செம்மையாக நடைபெறுதல் வேண்டும் என்பதற்காக இரண்டு பேரவைகளைத் தமக்குத் துணையாகக் கொண்டிருந்தனர். அவை ஐம்பெருங் குழு, எண்பேராயம் என்பன. அமைச்சர், புரோகிதர், தானைத் தலைவர், தூதுவர், சாரணர் என்பவர் ஐம்பெருங்குழு வினராவர். கரணத்தியலவர், கருமவிதிகள், கனகச் சுற்றம், கடைகாப்பாளர், நகரமாந்தர், படைத்தலைவர், பரிவீரர், கரிவீரர் என்பவர் எண்பேராயத்தினர் ஆவர். தூதர் என்பவர் அரசன் ஆணைபெற்று அரச காரியங்களை வேற்றரசரிடம் சென்று தெரிவிப்பர். சாரணர் என்பவர் ஒற்றர். காரணத்தியலவர் என்பவர் அரசாங்கப் பெருங்கணக்கர். கரும விதிகள் என்பவர் அரசாங்கத் தொடர்பான பலதுறைக் காரியங்களை நடத்தும் தலைவர்கள். கனகச்சுற்றம் என்போர் அரசாங்கப் பொருள்காப்பாளர்கள். நாடுகாவல் அதிகாரிகள் கடைகாப்பாளர் எனப்பட்டனர். நகரமாந்தர் என்பவர் நகரப் பெருமக்கள். இவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களாய் இருக்கவேண்டும். இவர்கள் கடமையுணர்ச்சி மிக்கவர்களாகப் பணியாற்றினர். சங்க காலத்திற்குப் பிற்பட்ட காலத்தில் பாண்டிய நாட்டு அரசியல் அதிகாரிகள் பலர் இருந்தனர் என்று கல்வெட்டுக்கள் கூறுகின்றன. சுருங்கக் கூறின், சோழராட்சியில் இருந்த அரசியல் அலுவலாளர் அனைவரும் பாண்டிய நாட்டு அரசியலிலும் இருந்தனர் என்று கூறுதல் பொருந்தும். சோழ வேந்தர் தம் அரசியல் அதிகாரிகளுக்குப் பல பட்டங்கள் வழங்கிப் பாராட்டினாற் போலவே பாண்டி மன்னரும் தம் அதிகாரிகளுக்குப் பல பட்டங்கள் வழங்கிப் பாராட்டினர். அரையன், பேரரையன், தென்னவன் பிரமராயன், தென்னவன் தமிழ்வேள், ஏனாதி, காவிதி, பஞ்சவன் மாராயன், பாண்டியன் மூவேந்த வேளான் என்பன அப்பட்டங்களுள் சிலவாகும். படை பாண்டிய வேந்தரிடம் யானைப்படை, குதிரைப்படை, தேர்ப்படை, காலாட் படை ஆகிய நான்கும் இருந்துவந்தன. அரேபியாவிலிருந்து குதிரைகள் பாண்டிய நாட்டிற்கு வருவிக்கப்பட்டன. கொற்கை, தொண்டி முதலிய கடற்றுறைப் பட்டினங்களில் ஆண்டுதோறும் பதினாயிரம் குதிரைகள் வந்திறங்கின என்று வாசப் என்னும் ஆசிரியர் கூறியுள்ளார். பாண்டி மன்னர் குதிரைகள் வாங்குவதில் பெரும் பொருளைச் செலவிட்டு வந்தனர் என்று மார்க்கோ போலோ எழுதி யுள்ளார். அரசனைக் காப்பதற்கென்றே தனிப்படைகள் இருந்தன. தென்னவன் ஆபத்துதவிகள் என்பது அப்படை களின் பெயர். நாட்டுப் பிரிவுகள் பாண்டிய நாடு பல நாடுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது; நாடு கூற்றம் என்று சில இடங்களில் வழக்குப் பெற்றிருந்தது. பின் நூற்றாண்டுகளில் சில நாடுகளைத் தன்னகத்துக் கொண்டு விளங்கிய பெரு நிலப்பரப்பு வளநாடு என வழங்கப் பெற்றி ருந்தது. கொற்கையைச் சூழ்ந்த பெருநிலப்பகுதி மதுரோதய வளநாடு எனப் பெயர் பெற்றது. ஒவ்வொரு நாடும் பல ஊர்களைக் கொண்டது. ஊரவை முதலியன பாண்டியர் ஆட்சியில் ஊர்தோறும் ஊரவை இருந்தது. சோணாட்டில் நடைபெற்ற ஊராட்சியே பாண்டிய நாட்டிலும் நடைபெற்றது. ஊர்தோறும் ஆவணக்களரி இருந்தது. சோழ நாட்டில் இருந்தாற்போலவே பிரமதேயம் முதலிய மறையவர் ஊர்கள் இருந்தன. தேவதானமாக விடப்பட்ட ஊர்கள் சிலவும் இருந்தன. சிவன் கோவிலுக்கு விடப்பட்ட நிலங்களின் எல்லைகளில் திரிசூலம் பொறிக்கப்பெற்ற கற்கள் நடப்பட்டன; பெருமாள் கோவிலுக்கு விடப்பட்ட நிலங்களின் எல்லைகளில் சக்கரம் பொறிக்கப் பெற்ற கற்கள் நடப்பட்டன. சமணர்க்கும் பௌத்தர்க்கும் இறையிலியாக விடப்பட்ட நிலங்களும் இருந்தன. புலவர்க்கு முற்றூட்டாக விடப்பட்ட நிலங்களும் சிற்றூர்களும் கல்வெட்டுக்களில் காணப்படுகின்றன. ஊரவைகள் ஊர் வழக்குகளைத் தீர்த்து வந்தன. பெரிய வழக்குகளை அரசாங்க உயர் அலுவலர் விசாரித்துத் தீர்ப்பு வழங்கினர். பாண்டியர் இலச்சினை கயல்மீன் பாண்டியர் இலச்சினையாகும். பாண்டியர் கொடியில் மீன் உருவமே தீட்டப்பட்டிருந்தது. கொற்கைத் துறைமுகத்தில் ஏற்றுமதியான பண்டப் பொதிகள்மீதும் இறக்குமதியான பண்டப் பொதிகள்மீதும் மீன் இலச்சினையே இடப்பட்டது. அரசாங்க ஆணைகள்மீதும் மீன்பொறியே பொறிக்கப்பட்டது. பாண்டியனுக்கு மீனவன், மீனக் கொடியோன் என்ற பெயர்கள் வழங்கின. நாணயங்கள் பாண்டியர் காசுகள் பொன்னாலும் செம்பாலும் செய்யப் பட்டவை. அவற்றின்மீது மன்னரின் சிறப்புப் பெயர்களே பொறிக்கப்பட்டிருந்தன. அவனிவ சேகரன் கோளகை, சோணாடு கொண்டான், எல்லாம் தலையானான், வாளால் வழிதிறந்தான் என்பன போன்ற விருதுப் பெயர்களே பல நாணயங்களில் காணப்படுகின்றன. பொன் என்பதும் காசு என்பதும் நாணயங்களின் பெயர்கள். பத்துப் பொன் கொண்டது ஒரு காசு. விசயநகர வேந்தர் நாணயங்களும் நாயக்கர் நாணயங்களும் கொற்கை, காயல் முதலிய இடங்களில் கிடைக்கின்றன; சோழப் பேரரசன் காசுகளும் மிகுதியாகக் கிடைக்கின்றன. எனவே, இவை யாவும் பாண்டிய நாட்டில் அவரவர் ஆட்சிக் காலத்தில் வழங்கி வந்தன என்பது தெளிவு. அளவைகள் சோழ நாட்டு அளவைகள் போன்றவையே பெரும்பாலும் பாண்டிய நாட்டிலும் வழங்கி வந்தன என்பது கல்வெட்டுக் களால் அறியலாம். சுந்தர பாண்டியன் காலத்தில் நிலம் அளக்கப் பயன்பட்ட கோல் சுந்தர பாண்டியன் கோல் எனப்பட்டது. இஃது இருபத்து நான்கு அடி நீளமுடையது. குடிதாங்கிக்கோல் என்ற ஒரு கோலும் வழக்கில் இருந்தது. காணம், கழஞ்சு, குன்றி என்பன பொன் முதலியவற்றை நிறுக்கப் பயன்பட்ட அளவைகள். சர்க்கரை முதலிய பொருள்கள் பலம், துலாம் என்னும் நிறை கற்களால் நிறுக்கப்பட்டன. வரிகள் சோழராட்சியில் இருந்த வரிகள் அனைத்தும் பாண்டிய நாட்டிலும் வழக்கில் இருந்தன என்று கூறலாம். தொழிலும் வாணிகமும் முத்துக் குளித்தல், சங்கறுத்து வளையல் செய்தல், மீன் பிடித்துப் பதப்படுத்தல், உப்பு விளைவித்தல், நூல் நூற்றல், ஆடை நெய்தல், போர்க்கருவிகள் செய்தல் முதலிய பல தொழில்கள் பாண்டிய நாட்டில் நடைபெற்றன. பீடு மிக்க மாட மதுரையில் பருத்தி நூலாலும், பட்டு நூலாலும், ஒரு வகை எலி மயிராலும் கண்கவர் ஆடைகள் நெய்யப்பட்டு வந்தன என்று கிலப்பதிகாரம் செப்புகிறது. முத்துக்களும், பலவகை ஆடைகளும் பிறவும் அயல்நாடுகளுக்கு அனுப்பப்பட்டன. அயல்நாடு களிலிருந்து குதிரைகளும், மது வகைகளும், கண்ணாடிப் பொருள்களும் இறக்குமதி செய்யப்பட்டன. கொற்கை, தொண்டி, காயல் என்பன புகழ் பெற்ற கடற்றுறைப் பட்டினங் களாக விளங்கின. பாண்டிய நாட்டு மெல்லிய ஆடைகளும், பெயர் பெற்ற முத்துக்களும் மௌரியப் பெருநாட்டில் வாணிகப் பொருள்களாக விளங்கின என்பது சாணக்கியர் எழுதிய பொருள் நூலால் தெரிகிறது. பாண்டிய நாட்டு முத்துக்கள் ரோமப் பெருநாட்டில் பெருவாரியாக விற்பனையாயின. ரோமப் பெருநாட்டிற்கும் பாண்டிய நாட்டிற்கும் இடையே நெடுங்காலமாக வாணிகத் தொடர்பு இருந்து வந்தது. ரோம் நாட்டு மக்களுள் ஒரு பகுதியினரான யவனர்கள் மதுரைக் கோட்டை வாயில்களைக் காத்தனர் என்று புறநானூறு போன்ற தமிழிலக்கியங்கள் கூறுகின்றன. பாண்டிய நாடு கிழக்கு நாடுகளுடனும் மேற்கு நாடுகளுடனும் படல் வாணிகம் செய்து வந்தமைக்குரிய சான்றுகள் பலவாகும். உள்நாட்டு வாணிகமும் சிறப்புற நடந்து வந்தது. உள்நாட்டில் வாணிகத்திற்குரிய பெருவழிகள் பல இருந்தன. பண்டங்களை ஏற்றிச் செல்லக் கோவேறு கழுதைகளும், வண்டிகளும், எருதுகளும் பெரிதும் பயன்பட்டன. வழியில் களவு நிகழாதபடி காக்கக் குறிப்பிடத்தக்க இடங்களில் காவற் படைகள் வைக்கப்பட்டிருந்தன. வணிகர் கூட்டமாகச் செல்வது வழக்கம். அக்கூட்டத்திற்கு வாணிகச் சாத்து என்பது பெயர். வணிகருள் சிறந்தோர் எட்டி என்ற பட்டத்தை மன்னர் வழங்கப் பெற்றனர். கல்வி ஒரு தாய் தன் பிள்ளைகளுள் கற்றவனையே பெரிதும் விரும்புவாள். ஒரு குடும்பத்தாருள் கற்றவனது யோசனையையே அரசனும் கேட்பான். கற்றவன் சமுதாய நிலையில் இழிந்தவனாக இருப்பினும், மேல்நிலையில் இருப்பவனும் அவனிடமே அறிவுரை கேட்பான். இங்ஙனம் குடும்பத்திலும், சமுதாயத் திலும், நாட்டிலும் கற்றவனே சிறப்புப் பெறுவான். ஆதலால் எப்பாடுபட்டாயினும் ஒவ்வொருவரும் கல்வி கற்க வேண்டும், என்னும் பொருள் கொண்ட செய்யுள் ஒன்றை ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் பாடியுள்ளான். பாண்டி மன்னர் சங்கம் வைத்துத் தமிழை வளர்த்தனர். மன்னரே கல்வியில் இத்தகைய ஊக்கம் காட்டிய காரணத்தால், ஆடவர் பெண்டிர் அனைவரும் கல்வி கற்றனர்; குறத்தி, வேட்டுவச்சி, வளமனையைக் காத்த காவற் பெண்டு இன்ன பிறரும் பைந்தமிழைப் பாங்குறக் கற்றனர். ஊர்தோறும் பள்ளிகள் இருந்தன. அவற்றிலிருந்த ஆசிரியன் மார் பாலாசிரியர், கணக்காயர் எனப் பெயர் பெற்றனர். அவர்கள் இயற்றிய பாக்கள் புறநானூறு முதலிய சங்க நூல்களில் காணப்படுவதால், அவர்தம் தமிழ்ப் புலமை நன்கு புலப்படும். கடைச்சங்கப் புலவர் தலைவரான நக்கீரர் மதுரைக் கணக்காயனார் மகனார் என்பது இங்கு அறியத்தகும். சங்க காலத்திற்குப்பிறகும் பாண்டிய நாடு சமயப் புலவர்களையும் பிற புலவர்களையும் ஈன்று வந்தது. வைணவப் பெரியார்களாகிய பெரியாழ்வார், ஆண்டாள், நம்மாழ்வார் என்ற ஆழ்வார்களும் கல்வித் துறையிலும் சமயத் துறையிலும் சிறந்து விளங்கினர். பௌத்த சமணப் பெரியார்களும் கல்வி கேள்விகளில் சிறந்து பல தமிழ் நூல்களைச் செய்துள்ளனர். பிற்காலச் சோழர் காலத்தில் சைவ, வைணவப் பெரியார்கள் பல மடங்களின் தலைவர்களாக இருந்து பொதுக் கல்வியையும், சமயக் கல்வியையும் புகட்டி வந்தனர் என்பதைக் கல்வெட்டுக்களால் அறிகின்றோம். சமயநிலை பாண்டியருள் பெரும்பாலர் சைவர். பாண்டியர் குலதெய்வமே மதுரை மீனாட்சியம்மன். ஆயினும் பாண்டிய மன்னர் சங்க காலத்தில் சைவம், வைணவம், சமணம், பௌத்தம் ஆகிய சமயங்களை நன்கு வளர்த்து வந்தனர். பிற்காலத்தில் சமயப் போர் நிகழ்ந்ததின் பயனாகச் சைவமும் வைணவமுமே செல்வாக்குப் பெற்றன. கோவில்களில் திங்கள்தோறும் விழாக்கள் நடைபெற்றன. அரசர்களும் பிறரும் கோவில்களுக்கு வேண்டிய நிலங்களையும் நகைகளையும் வழங்கினர். சிவன் கோவில்களில் தேவாரப் பதிகங்களும், பெருமாள் கோவில்களில் திருவாய் மொழியும் ஓத நிபந்தங்கள் விடப்பட்டிருந்தன. கோவில்களால் கட்டடக்கலை வளர்ச்சி பெற்றது. கற்களில் உருவங்கள் பொறிக்கப் பெற்றமையால் சிற்பத் தொழில் சிறந்து விளங்கியது. கோவிற் சுவர்களில் புராணக் கதைகள் ஓவியங்களாகத் தீட்டப் பெற்றமையால் ஓவியக் கலை ஓங்கி வளர்ந்தது. சமயத் தொடர்பான பாடல்களைப் பாட இசைவாணிகளும் நடனமாட ஆடுமகளிரும் கோவில்களில் இடம் பெற்றிருந்தனர். இவ்வாறு கோவில்களால் பொதுமக்களிடம் பக்தி வளர்ந்ததோடு, கட்டடக்கலையும் சிற்பக் கலையும் ஓவியக்கலையும் இசைக்கலையும் நடனக் கலையும் நன்கு வளர்ச்சி பெற்றன. கோவில்களில் நூல் நிலையங்கள் இருந்தன; தேவாரப் பள்ளிகளிருந்தன. கோவில் சில சமயங்களில் நீதிமன்றமாகவும் பயன்பட்டது; போர்க்காலத்தில் மக்கள் தஞ்சம் புகும் பாதுகாப்பிடமாகவும் பயன்பட்டது. சுருங்கக் கூறின், ஊர் மக்களின் வாழ்க்கையை வளப்படுத்தும் கலைநிலையமாகவும் சமய நிலையமாகவும் பாதுகாப்பிடமாகவும் கோவில் பயன்பட்டது. 4. இலக்கியச் சிறப்பு பாண்டியரும் பைந்தமிழும் பாண்டியர் சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்தனர்; அத்துடன் நில்லாது பைந்தமிழைப் பாங்குறப் பயின்று பாவலராகவும் விளங்கினர். பூத பாண்டியன், ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன், இளம் பெருவழுதி, பாண்டியன் அறிவுடை நம்பி முதலிய பாண்டிய மன்னர்களின் பாடல்கள் சங்கத் தமிழ் இலக்கியங்களில் உள்ளன. பூத பாண்டியன் மனைவி பெருங்கோப் பெண்டு பாடிய பாடலொன்றும் புறநானூற்றில் உள்ளது. இங்ஙனம் பாண்டியரும் பைந்தமிழும் இணைந்து வளர்ந்த காலமே சங்ககாலம் என்று சொல்லலாம். தமிழ்ச் சங்கம் பாண்டியர் தலைநகரமான மதுரையில் 1800 ஆண்டுகட்கு முன் தமிழ்ச் சங்கம் ஒன்று இருந்தது. பாண்டியர் அதனை வழிவழியாக வைத்து நடத்தி வந்தனர். கபிலர், பரணர், நக்கீரர் போன்ற புலவர் பலர் அச்சங்க உறுப்பினராக இருந்தனர். பாண்டியர் புலவர் கூட்டுறவினால் தமிழறிவு சிறக்கப் பெற்றனர்; சிலர் கவிபாடும் ஆற்றலும் பெற்றிருந்தனர். அரச மகளிரும் தமிழ்ப் புலமை எய்தியிருந்தனர். பைந்தமிழ்ப் புலவர்கள் வேண்டும் போது பாண்டிய மன்னர்க்கு அறிவுரை வழங்கும் செல்வாக்கும் பெற்றிருந்தனர். மதுரையில் இருந்த புலவர்கள் மதுரை அளக்கர் ஞாழலார் மகனார் மள்ளனார், மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார், மதுரை இளங்கண்ணிக் கௌசிகனார், மதுரை ஓலைக்கடைக் கண்ணம்புகுந்தாராயத் தினார், மதுரைக் கணக்காயனார், மதுரைக் கள்ளிற் கடையத்தன் வெண்ணாகனார், மதுரைத் தமிழ்க் கூத்தனார், மதுரைப் படைமங்க மன்னியார், மதுரை மருதனிள நாகனார், மதுரை வேளாளன், மாங்குடி கிழார், மதுரைக் கூலவாணிகன் சாத்தனார் முதலிய புலவர் பெருமக்கள் சங்க காலத்தில் மதுரையில் இருந்தனர். பெண்பாற் புலவர் பூத பாண்டியன் மனைவியார், பறம்பு நாட்டை ஆண்ட பாரியின் மகளிர், ஒக்கூரில் பிறந்து வளர்ந்த மாசாத்தியார், கொற்கையை அடுத்த மாறோக்கம் என்ற ஊரைச் சேர்ந்த நப்பசலையார் முதலியோர் சங்க காலப் பாண்டிய நாட்டில் புகழுடன் இருந்த பெண்பாற் புலவராவர். நக்கீரர் இவர் சங்கப் புலவர்தம் தலைவர். சொற்குற்றம் பொருட்குற்றம் முதலிய குறைகள் இல்லாமல் கவிபாடும் ஆற்றல் மிக்க இப்பெரும் புலவர், அஞ்சா நெஞ்சம் மிக்கவர்; நெற்றிக் கண்ணைக் காட்டினும் குற்றம் குற்றமே என்று சிவபெருமானை அஞ்சா நெஞ்சத்துடன் நோக்கிக் கூறியவர். இவர் திருமுருகாற்றுப்படை போன்ற பல நூல்களை எழுதியுள்ளார். இவரைப்பற்றிய விரிவான வரலாறு திருவிளையாடற் புராணத்தில் உள்ளது. சமணர் சங்கம் பாண்டிய நாட்டில் இருந்த சமணர்கள் ஒன்றுகூடிக் கி.பி. 5-ஆம் நூற்றாண்டில் மதுரையில் சங்கம் ஒன்று அமைத்தனர். நாலடியார் போன்ற அறிவுரை நல்கும் நூல்கள் இக்காலத்தில் அரங்கேற்றப்பட்டன என்று அறிஞர் கருதுகின்றனர். நானூறு சமண முனிவர்கள் அறம், பொருள், இன்பம் பற்றி இயற்றிய நானூறு பாடல்களின் தொகுதியே நாலடியார் என்னும் நூல். இந்நூல், தான் என்ற செருக்கில் சிக்கித் தன் வாழ்வை அவலமாக்கிக் கொள்ளும் மனிதனுக்கு நல்லறிவு புகட்டி அவனை நல் நெறியில் உய்விக்கும் சிறப்புடையது. இன்றைய தமிழ்ச் சங்கம் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சேது சம்தானத்தைச் சேர்ந்தவரும் பாலவனத்தம் சமீந்தாரும் ஆகிய பாண்டித்துரைத் தேவர் என்பவரால் மதுரையில் புதியதொரு தமிழ்ச் சங்கம் தோற்றுவிக்கப்பட்டது. இச்சங்கத்தில் பிரவேச பண்டிதம், பால பண்டிதம், பண்டிதம் என்ற மூன்று வகுப்புக்கள் ஏற்படுத்தப்பட்டன; மிகச் சிறந்த நூல்நிலையம் ஒன்று அமைக்கப்பட்டது. சங்கத்தின் சார்பில் செந்தமிழ் என்னும் திங்கள் இதழ் தொடங்கப்பட்டது. இச்சங்கத்தின் பொன்விழா மதுரைப் பெருநகரில் தமிழகத்தில் உள்ள பலதுறை வல்ல அறிஞர்களின் சொற்பொழிவுகளுடனும் இசை, நாடகம் முதலிய கலை விருந்துகளுடனும் 1956-ஆம் ஆண்டு மே மாதம் 30-ஆம் நாள் முதல் சூன் திங்கள் 5-ஆம் நாள் முடிய ஒரு வார காலம் சிறப்பாக நடைபெற்றது. பல மாற்றங்கள் செய்யப்பட்டுச் சங்கத்தின் சார்பில் செந்தமிழ்க் கல்லூரி ஒன்று தொடங்கிப் பலர்க்கும் தமிழறிவு புகட்டத் தமிழ்ச் சங்கச் செயற்குழுவினர் தலைப்பட்டுள்ளனர். சங்க நூல்கள் பாண்டிய அரசர்களுள் சிறப்புடையவனாக விளங்கிய பாண்டியன் நெடுஞ் செழியனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு காவிரிப்பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார், மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார், மாங்குடி மருதனார் என்னும் மூன்று பெரும் புலவர்கள் முறையே முல்லைப் பாட்டு, நெடுநல்வாடை, மதுரைக் காஞ்சி என்றும் மூன்று நூல்களைப் பாடியுள்ளனர். முல்லைப் பாட்டு தலைவன் நெடுஞ்செழியன் போரை முன்னிட்டுத் தன் நாட்டை விட்டுப் புறப்பட்டான். அவன் தன் மனைவியிடம் யான் வருமளவும் ஆற்றியிரு என்று கூறிச் சென்றான். அவன் பகைவரைப் பொருது அடக்கப் போருக்குச் சென்ற பின்னர்த் தலைவி வருந்துதலும், அவன் வினை முடித்து வருதல் உறுதி, நீ வருத்தம் தவிர்க என்று முதுபெண்டிர் கூறுதலும், அது கேட்ட அவள் தலைவன் வந்த பின்பு உண்டாக இருக்கும் நல்வாழ்க்கையை எண்ணிப் பார்த்து அமைதியாயிருத்தலும், தலைவன் போர் முடித்து வருதலும், அதுகண்டு தோழி முதலானோர் தம்முட் கூறுதலும் ஆகிய செய்திகள் இந்நூலுள் உள்ளன. மதுரைக் காஞ்சி பாண்டியர் சிறப்பு, நெடுஞ்செழியனது போர்த்திறன், பாண்டிய நாட்டுப் பெருமை, மதுரை மூதூரின் மாண்பு, வீடுபேறு விரும்பும் வேந்தனது செயல்முறை முதலியன மதுரைக் காஞ்சி என்னும் இந்நூலில் குறிக்கப்பட்டுள்ளன. பாண்டியன் நெடுஞ்செழியனை நோக்கி மாங்குடி மருதனார் கூறியதாக இப்பாடல் அமைந்துள்ளது. நெடுநல்வாடை நெடுஞ்செழியன் பகைவரோடு போர் புரியச் சென்றான். அவனைப் பிரிந்து வருந்தினாள் தலைவி. அவளது வருத்தம் நீங்கும் படி பாண்டியன் பகை முடித்துக் கடிதில் மீள்வானாக என்று கொற்றவையை வேண்டும் ஒருத்தி கூறியதாகப் பாண்டியன் நெடுஞ்செழியன்மீது மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது இது. தலைவனது பிரிவாற்றாமையால் இரங்கும் தலைவிக்கு வாடைக் காலத்தின் ஒரு பொழுது ஓர் ஊழி போலத் தோன்றி நெடிதாகிய வாடையாய் அமைந்தது ஆதலாலும், அரசன் இல்லற வாழ்க்கையில் மனமற்று வேற்றுப் புலத்தில் தங்கி வெற்றி பெறுவதற்குக் காரணமான நல்லதாகிய வாடை அமைந்தமை யாலும் இப்பாடல் நெடுநல்வாடை எனப் பெயர் பெற்றது. பரிபாடல் இதுவும் சங்க காலத்து நூல். மதுரையை அடுத்த திருப்பரங்குன்றத்தில் கோவில் கொண்டுள்ள முருகப் பெருமானைப் பற்றியும், வையையாற்றைப் பற்றியும், திருமாலைப் பற்றியும் பல பாடல்கள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. முருகப் பெருமான் தோற்றம், அவன் வீரச் செயல், அவன் பக்தர்களுக்கு அருள் புரிதல் முதலிய செய்திகள் முருகப் பெருமானைப் பற்றிய பாடல்களில் இடம் பெற்றுள்ளன. வையையாறு பெருக்கெடுத்து வருதல், ஊர்களையும் வயல்களையும் அழித்தல், மதுரை மாநகரத்து மக்கள் மகிழ்வோடு புது நீராடுதல், மார்கழி நோன்பு கொண்டாடுதல், வையைக்கு வாழ்த்துக் கூறல் முதலிய சுவை பயக்கும் செய்திகள் பல வையை பற்றிய பாக்களில் இடம் பெற்றுள்ளன. திருமாலின் பத்து அவதாரங்கள், அப்பெருமானது உருவ வருணனை, அவன் தாங்கியுள்ள சங்கு, ஆழி முதலியவற்றின் சிறப்பு, அவனைப் பக்தர்கள் வழிபடும் முறை, அப்பெருமான் அடியவருக்கு அருளும் திறன் முதலியன திருமால் பற்றிய பாடல்களில் நன்கு குறிக்கப்பட்டுள்ளன. பதிற்றுப் பத்து என்னும் நூல் சேரர்க்கு அமைந்தாற் போலவே, பரிபாடல் என்னும் இந்நூல் பாண்டியர்க்காகவே அமைந்தது என்று கூறலாம். சமய நூல்கள் இடைக் காலத்தில் மதுரை, திருப்பூவணம் முதலிய பாண்டிய நாட்டுச் சிவத்தலங்கள் பதினான்கின்மீதும் பாடப்பெற்ற திருமுறைப் பாடல்கள் சைவ இலக்கியம் என்று சொல்லலாம். திருவாசகத்தின் பெரும் பகுதி பாண்டிய நாட்டில்தான் பாடப்பட்டது. இப்பாக்களால் பல்லவர் காலத்தில் பாண்டிய நாட்டு ஊர்கள், கோவில்கள், சைவ சமயம் பற்றிய செய்திகள் விளக்கமாகின்றன. இவ்வாறே பெரியாழ்வார், ஆண்டாள், நம்மாழ்வார் முதலிய பாண்டிய நாட்டு ஆழ்வார்கள் அருளிச் செய்த பாடல்கள், பாண்டிய நாட்டு வைணவத்தலங்களின் அமைப்பையும் சிறப்பையும் வைணவ சமயத்தின் கொள்கைகளையும் வழிபாட்டு முறைகளையும் நன்கு தெரிவிக்கின்றன. கல்லாடம் கல்லாடர் என்னும் இடைக்காலப் புலவர் இந்நூலைப் பாடியுள்ளார். பாண்டிய நாட்டுத் தலங்களின் சில விவரங்களும் மதுரை மாநகரின் விவரங்கள் பலவும் சிவபெருமான் செய்த திருவிளையாடல்கள் பலவும் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. இடையிடையே சைவ சமயக் கொள்கைகள், மக்கள் பழக்கவழக்கங்கள் முதலியனவும் இதனில் குறிக்கப்பட்டுள்ளன. திருவிளையாடற் புராணம் மதுரையில் சிவபெருமான் செய்த அறுபத்து நான்கு திருவிளையாடல்களை விளக்கிக்கூறும் புராணங்கள் இரண்டு தமிழில் உண்டு. இவற்றுள் காலத்தால் முற்பட்டது நம்பி திருவிளையாடல் என்பது. பெரும்பற்றப் புலியூர் நம்பி என்பவர் இவ்நூலைச் செய்தவர். இஃது ஏறத்தாழ இரண்டாயிரம் செய்யுட்களை உடையது. இது கி.பி. 13-ஆம் நூற்றாண்டில் செய்யப் பெற்றது. கி.பி. 16-ஆம் நூற்றாண்டில் பரஞ்சோதி முனிவர் என்பவர் மிக விரிவான முறையில் திருவிளையாடற் புராணம் ஒன்றைப் பாடியுள்ளார். அந்நூற் பாடல்கள் படிக்கப் படிக்க இன்பம் பயப்பனவாய் அமைந்துள்ளன. அக்கால மதுரை நகர அமைப்பு, மக்கள் பழக்க வழக்கங்கள், உடை, உணவு, அணிகலன் முதலியவற்றைப் பற்றிய பல விவரங்களை இந்நூலிலிருந்து தெளியலாம். தஞ்சை வாணன் கோவை இது மாணிக்கவாசகர் பாடிய திருக்கோவையாரை அடுத்துச் சிறப்புப் பெற்ற கோவை நூல்; மதுரை மாவட்டத்தில் வையை ஆற்றிற்குத் தென்பாலுள்ள தஞ்சாக்கூரைத் தலைநகராகக்கொண்டு மாறை நாட்டை ஆண்டுவந்த தஞ்சை வாணன் என்ற மன்னனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு பாடப்பெற்றது. இதனைப் பாடியவர் பொய்யா மொழிப் புலவர். இவர் காலம் கி.பி. 13-ஆம் நூற்றாண்டு. சொற் செறிவும் பொருட் செறிவும் பாநயமும் மிகுந்து விளங்கும் இந்நூல், புலவர் அனைவராலும் பாராட்டப்படுகின்றது. இஃது ஏறத்தாழ நானூறு செய்யுட்களைக் கொண்டது. குமர குருபரர் நூல்கள் திருமலை நாயக்கர் மதுரையை ஆண்டுவந்த பொழுது (கி.பி. 17ஆம் நூற்றாண்டில்) குமர குருபர சுவாமிகள் பாடிய சிறுநூல்கள் பலவாகும். அவற்றுள் மீனாட்சியம்மை குறம், மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் என்பன குறிப்பிடத்தக்கவை. இவற்றின் பாடல்கள் தேனினும் இனிமை பயப்பவை. தமிழ்ப் புலவர்களும் சிவநெறிச் செல்வர்களும் இவற்றை மனப்பாடம் செய்தல் வழக்கம். இவை திருமலை நாயக்கர் உள்ளத்தைக் கொள்ளை கொண்டவை. பிற புராணங்கள் மாணிக்க வாசகர் பிறந்து வளர்ந்த திருவாதவூர் பற்றிய புராணம், அவர் பெரிதும் விரும்பி வழிபட்ட திருவுத்தர கோசமங்கை பற்றிய புராணம் என்பன உள்ளத்தை உருக்கும் நிகழ்ச்சிகளைக் கொண்ட புராணங்கள். இவை அவ்வத்தலங்களின் அமைப்பு, மக்கள் பழக்க வழக்கங்கள், ஆடை அணிகள், நாகரிகம், பண்பாடு முதலியனவற்றை நன்கு அறிவிப்பனவாகும். 5. கலைச்சிறப்பு கட்டடக்கலை வையை பாயப் பெற்ற பாண்டிய நாட்டில் நாகரிகக் கலைகளான கட்டடக்கலை, ஓவியக்கலை, சிற்பக் கலை, இசைக் கலை, நடனக் கலை, நாடகக் கலை என்பன நன்கு வளர்ந்தன. சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த பாண்டியர் காலத்திலேயே நகர அமைப்பு, அரண் மனை அமைப்பு, கோவில் அமைப்பு, மாளிகை அமைப்பு முதலியவற்றைத் தமிழர் நன்கறிந்திருந்தனர் என்று சங்க நூல்கள் கூறுகின்றன. மதுரையில் உள்ள மீனாட்சியம்மன் கோவில், கோபுரங்கள், அகன்ற மண்டபங்கள், உயர்ந்த விமானங்கள், நீண்டு அகன்ற திருச் சுற்றுக்கள், இவ்வாறே திருமலை நாயக்கர் மகால், மதுரைப் புது மண்டபம், அழகர் கோவில் முதலியனவும் பாண்டியர், நாயக்கர் காலக் கட்டடக் கலைத் திறனை நன்கு விளக்குவனவாகும். இக்கலை வளர்ச்சி தொன்றுதொட்டு வரும் தமிழ் நாட்டுக் கலைவளர்ச்சியே ஆகும். மலைகளிலிருந்தும் குன்றுகளிலிருந்தும் கற்களை வேண்டியவாறு வெட்டி, எவ்வித இயந்திர சாதனமும் இல்லாத அக்காலத்தில் அவற்றைக் கொண்டுவந்து, மிக உயர்ந்த மண்டபங்களாகவும் திருச் சுற்றுக்களாகவும், சுவர்களாகவும் எழுப்பினர் எனின், அவற்றை எழுப்பிய கட்டடக்கலை அறிஞரது திறனை எவ்வாறு பாராட்டுவது! பல நூறு அடி உயரமுள்ள கோபுரங்கள் அமைத்தல் எளிதான செயலா? இவற்றைக் கட்டி முடிக்க நம் முன்னோர் எவ்வளவு முயற்சியை மேற்கொண்டனர் என்பதை அமைதியாக எண்ணிப் பார்த்தால்தான் அவர்தம் கலையார்வத்தை நாம் நன்கறிய முடியும். ஓவியக் கலை ஓவியக்கலை சிற்பக் கலைக்கு முற்பட்டது. ஓவியம் வரைந்து கொண்ட பின்னரே சிற்ப வேலை தொடக்கமாகும். இக்கலை பண்டைக் காலத்திலேயே சிறப்புற்றிருந்தது. மதுரையை அடுத்த திருப்பரங்குன்றம் கோவிலில் இருந்த மண்டபச் சுவர்களில் புராண இதிகாச நிகழ்ச்சிகளைக் குறிக்கும் ஓவியங்களும் கடவுளரைக் குறிக்கும் ஓவியங்களும் தீட்டப் பெற்றிருந்தன என்று பரிபாடல் பகர்கின்றது. பிற்காலப் பாண்டியர் சிற்பங்கள் இன்று காணக்கூடவில்லை. ஆனால் பாண்டியருக்குப் பின் இந்நாட்டை ஆண்ட நாயக்கர் கால ஓவியங்கள் மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் கண்டு களிக்கத்தக்க முறையில் தீட்டப்பட்டுள்ளன. அவை சிவ பெருமானுடைய அறுபத்து நான்கு திருவிளையாடல்களைத் தெளிவாகத் தெரிவிக்கும் முறையில் அமைந்துள்ளன. அவற்றைக் கொண்டு நாயக்கர் கால உடைச் சிறப்பு, அணிச் சிறப்பு, கூந்தல் ஒப்பனை முதலியவற்றை நன்கு அறியலாம். சிற்பக் கலை மண்ணாலும் மரத்தாலும் உலோகங்களாலும் கல்லாலும் உருவங்களை அமைத்தல் சிற்பக் கலை எனப்படும். ஒவ்வொரு கோவில் கோபுரத்திலும் நிறைந்துள்ள உருவங்கள் சுதையாற் செய்யப்பட்டவை. ஒவ்வோர் உருவத்திலும் அதன் அமைப்பு, உடை, அணிகள், இன்ன பிறவும் விளக்கமாகத் தெரியும்படி அமைந்துள்ள வேலைப்பாடு எண்ணி மகிழத்தக்கது. இத்தகைய அமைப்பையே மரத்தில் செய்து காட்டுவது பெரிதும் போற்றத் தகுவதன்றோ? ஒவ்வொரு மரத்தேரிலும் உள்ள இத்தகைய மர வேலைப்பாட்டைக் கண்டுமனம் மகிழலாம். இம்மியவும் பிழை படாது செய்யப்பட்டுள்ள மர வேலையின் மாண்பு எண்ணிக் களிக்கத் தகும். ஒவ்வொரு கோவிலிலும் உள்ள செம்பு, பித்தளை உருவச் சிலைகள் கண்டு களிக்கத்தக்கவை. அவை அக்கலையில் வல்ல பெருமக்களால் செய்யப் பெற்றவை; கண்ணையும் கருத்தையும் ஈர்ப்பவை. கற்களில் உருவங்களை அமைத்தல் மிக அரிய கலையாகும். ஒவ்வொரு கோவில் தூணிலும் தாமரைப் பூ, அழகிய உருவங்கள் முதயனசெதுக்கப்பட்டிருப்பதைக் காணலாம். தூணோடு இணைந்தாற் போலப் பல அடி உயரமுள்ள உருவங்கள் அமைக்கப்பட்டுள்ள சிற்ப வேலைப்பாடு விழிகட்கு விருந்தூட்டுவதாகும். மதுரை ஆயிரக் கால் மண்டபத்திலுள்ள குறவன் குறத்தி சிற்பங்கள் மிக நுண்ணிய வேலைப்பாடு கொண்டவை. குறவனது உடற்கட்டுக் கம்பீரமானது; மார்பு அகன்று காணப்படுகிறது; அவன் அணிந்துள்ள அணிகள் பலவாகும். அவனுடைய உடலமைப்பும் முகத்தோற்றமும் அவனது உடல் உழைப்பை நன்கு உணர்த்துகின்றன. குறத்தியின் சிற்பம் கவனிக்கத் தக்கது. அவள் நான்கு குழந்தைகளைப் பெற்றவள்; ஒரு குழந்தை அவள் கையைப் பிடித்துக்கொண்டுள்ளது. மற்றொன்று அவள் முதுகின்மீது இருக்கின்றது. வேறொன்று கூடையில் இருக்கின்றது. நான்காம் குழந்தை அவளது மார்பில் கட்டப்பட்டுள்ள துணியில் படுத்திருக்கிறது. குழந்தை இருக்கும் கூடை மிக நுண்ணிய வேலைப்பாட்டுடன் காட்சியளிக்கிறது. இத்தகைய தூண் சிற்பங்களேயன்றித் தனி உருவச் சிற்பங்கள் பல பாண்டிய நாட்டுக் கோவில்களில் உள்ளன. மதுரை மீனாட்சியம்மை கோவிலில் உள்ள இரதியின் சிலை, பிச்சாடனர் சிலை முதலியன கண்டு களிக்கத் தக்கவை. ஒவ்வொரு சிற்பத்திலும் ஆடை அணிகள் தெளிவாகக் காட்டப்பட்டுள்ளமை, சிற்ப வேலையின் நுட்பத்தை வெள்ளிடை மலைபோல் விளக்குவதாகும். இவற்றை அமைத்த பெருமக்களின் கலையார்வத்தையும் கலைப் புலமையையும் எவ்வாறு பாராட்டவல்லோம்! இசைக்கலை பாண்டிய நாட்டுக் கோவில்களில் சைவத் திருமுறைகளும் திருவாய் மொழியும் இசைவாணரால் நன்கு பாடப் பெற்றன என்பதைப் பல கல்வெட்டுக்களால் அறிகின்றோம். பாணபத்திரன் பாண்டியன் அவைக் களத்தில் இசையரசனாக விளங்கினான். அவன் மனைவி பாண்டியமாதேவியாருக்கு இசைப் பயிற்சி அளித்து வந்தாள். ஈழத்துப் பாடினி ஒருத்திக்கும் மதுரைப் பாடினியாகிய பாணபத்திரன் மனைவிக்கும் இசைவாது நடைபெற்றது. அவ்வாதில் மதுரைப் பாடினியே வெற்றி பெற்றாள். இவ்விவரங்கள் திருவிளையாடற் புராணத்தில் விளக்கமாகத் தரப்பட்டுள்ளன. கி.பி. 16-ஆம் நூற்றாண்டில் பாண்டிய நாட்டில் இசைக் கலை எந்த அளவு வளர்ச்சி பெற்றிருந்தது என்பதை, அக்காலத்தில் வாழ்ந்த பரஞ்சோதி முனிவர் பாடல்களால் நன்கு அறியலாம். நாயக்கராட்சியில் கருநாடக இசை கால்கொண்டது. நடனக் கலை ஒவ்வொரு சிவன் கோவிலிலும் கூத்தரசரான நடராசர் சிலை இருப்பதைக் கொண்டு நடனக் கலைக்கும் சைவ சமயத்திற்கும் உள்ள தொடர்பை நன்குணரலாம். ஒவ்வொரு பெருங்கோயிலிலும் சிவபெருமான் ஆடிய நடன வகைகளை ஆடிக் காட்டவும் அருட்பாடல்களின் பொருளை நடிப்பால் உணர்த்தவும் வல்ல கூத்திகள் இடம் பெற்றிருந்தனர் என்று பல கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன. ஒவ்வொரு பெரிய கோவிலிலும் இற்றைக்கு இருபது ஆண்டுகட்கு முன் வரையிலும் நடன மகளிர் இருந்து வந்தனர் என்பதை அறிய, இக்கலைவாணிகள் பல நூற்றாண்டுகளாகக் கோவில்களில் இருந்துகொண்டு நடனக் கலையை வளர்த்து வந்தனர் என்பதைத் தெளிவுறத் தெரிந்துகொள்ளலாம். சங்க நூல்கள் முதல் குற்றாலக் குறவஞ்சி ஈறாகவுள்ள எல்லாத் தமிழ் நூல்களிலும் இக்கலை பற்றிய விவரங்களைப் பரக்கக் காணலாம். நாடகக் கலை சமயத் தொடர்பான நாடகங்களே முதலில் நடிக்கப்பட்டன. பிற்காலத்தில் இராமாயணம், அரிச்சந்திரன், அல்லி, பவளக் கொடி, மதுரை வீரன் முதலிய நாடகங்கள் நடிக்கப்பட்டன. பின்பு குற்றாலக் குறவஞ்சி போன்ற குறவஞ்சி நாடகங்களும் நாட்டில் பரவின. இக்காலத்தில் சமுதாய சீர்திருத்த நாடகங்கள் காலத்திற்கு ஏற்பப் பரவி வருகின்றன. மதுரை மாநகரில் வாழையடி வாழையாக நாடக மாந்தர் வாழ்ந்து வந்தனர்; இன்றும் இருக்கின்றனர். இன்று நாடகக் கலை நல்ல முறையில் வளர்ச்சி பெற்று வருகின்றது. மருத்துவக் கலை மேற்கு மலைத் தொடரில் உள்ள பொதிய மலைப்பகுதி, சித்தர்கள் வாழ்ந்து வந்த சிறந்த இடமாகும். சித்தர்கள் மருத்துவக் கலையில் சிறப்புப் பெற்றவர். அவர்கள் இயற்கையாக மலையில் கிடைக்கும் மருந்துச் செடிகளைக் கண்டறிந்து அவற்றின் வேர்களையும் இலைகளையும் ஆராய்ந்து, அவற்றின் மருத்துவ ஆற்றலை உணர்ந்து பல வகை மருந்துகளைச் செய்தனர். அவர்தம் மருத்துவம் சித்த மருத்துவம் எனப் பெயர் பெற்றது. பிற மருத்துவ முறைகளால் குணமாகாத நோய்கள் சித்த மருத்துவத்தால் எளிதில் குணமாகின்றன என்பதை மேனாட்டு மருத்துவரும் ஒப்புகின்றனர். இத்தகைய அரிய மருத்துவக் கலை தமிழகத்திற்கே உரியது. முடிவுரை நமது தமிழகத்தில் பாலாறு, காவிரி, வையை என்னும் மூன்று ஆறுகளும் எவ்வாறு தமிழ் நாகரிகத்திற்குக் காரணமாக அமைந்தன என்பது இதுகாறும் விளக்கப்பெற்றது. இவ்வாறே மிகப் பழைய எகிப்தியர் நாகரிகம் நீல ஆற்றங்கரையில்தான் தோற்றமானது; சுமேரியர் நாகரிகம் யூப்ரடி- டைக்ரி ஆறுகள் பாயப்பெறும் சமவெளியிற்றான் விளக்கமுற்றது; ஆரியர் நாகரிகம் சிந்து- கங்கைச் சமவெளியில்தான் பெருக்கெடுத்தது; இங்ஙனமே ஒவ்வொரு நாட்டு நாகரிகமும் அவ்வந்நாட்டு ஆற்றங்கரையில்தான் தோற்றமெடுத்தது என்பது வரலாறு கண்ட உண்மையாகும். நாகரிகம் உயர உயர, அதன் தலை மணியாகிய பண்பாடும் உயர்ந்து விளங்கும் என்பது உறுதியாகும். அடுத்த பகுதியில் ஆற்றங்கரைப் பண்பாடு பற்றிய விவரங்களைக் காண்க. V. ஆற்றங்கரைப் பண்பாடு மருதத்தின் மாண்பு மலையும் மலை சார்ந்த இடமுமாகிய குறிஞ்சிநிலத்தில் மனிதன் மிகவும் உழைத்து உண்ண வேண்டும்; விலங்குகளையும் பறவைகளையும் வேட்டையாடி உணவு தேட வேண்டும்; பஞ்சு அங்குப் பயிராகாத காரணத்தால் பருத்தி ஆடைகளை எளிதில் பெற முடியாது; அதனால் தழைகளையும் மரப்பட்டைகளையும் பழைய மலைநாட்டு மக்கள் உடுத்துக்கொண்டனர். வயிற்றுக்கு உணவு தேடுவதிலேயே பெரும்பொழுது கழிந்ததனால் பண்டைக் குறிஞ்சி நில மக்களிடம் ஓய்வு கிடைக்க வழியில்லை; உயர்ந்த நாகரிகம் தோன்ற வழியில்லை; எனவே, நாகரிகத்தின் தலை மணியாக விளங்கும் பண்பாடும் சிறந்து விளங்க முடியாத நிலைமை இருந்தது. இன்றும் குறிஞ்சி நில மக்களிடம் இந்நிலைமை இருந்து வருகிறது. (இந்நிலங்கள் பற்றி இந்நூலின் முதற்பகுதியில் ஓரளவு குறிக்கப் பெற்றுள்ளது; பண்பாடு பற்றி இங்கு விரிவாகச் சில விவரங்கள் தரப்பெற்றுள்ளன.) காடும் காடு சூழ்ந்த இடமுமாகிய முல்லை நிலத்தில் பசும்புல் வெளிகள் உண்டு. அங்கு வாழ்ந்த மக்கள் ஆடு மாடுகளை மேய்த்து அவற்றின் பயன்களான பால், தயிர் முதலியவற்றைப் பிற நிலங்களில் விற்றுத் தமக்கு வேண்டிய பொருள்களைப் பெற்று வாழ்க்கை நடத்தினர். ஆடவர் கால்நடைகளை மேய்க்கும் தொழிலிலும் பெண்டிர் மோர் முதலியவற்றை ஆக்குவதிலும் விற்பதிலும் பெரும் பொழுதைச் செலவிட்ட காரணத்தால், அவர்களுக்கும் ஓய்வு இல்லாது இருந்தது. எனவே, அவர்களிடமும் சிறந்த நாகரிகமும் உயர்ந்த கலை வளர்ச்சியும் சீரிய பண்பாடும் தோன்ற வழியில்லை. ஒன்றும் விளையாத பாலை நிலத்தில் வாழ்ந்த மக்கள் வழிப் போக்கரைக் கொள்ளையடித்து வாழ்ந்தனர்; அங்குமிங்கும் அலைந்து விலங்குகளையும் பறவைகளையும் வேட்டையாடி வாழ்ந்தனர். இவர்களுக்கும் அமைதியான வாழ்க்கை இல்லை. ஆதலால் பாலை நிலத்திலும் உயர்ந்த நாகரிகமும் அதன் கனிவாகிய பண்பாடும் சிறந்த முறையில் தோன்ற வழியில்லை. உயிருக்குத் துணிந்து திரைகடலோடி மீன் பிடித்து வாழ்ந்த நெய்தல் நிலமக்கள் வாழ்க்கையிலும் ஓய்வு இல்லை. எனவே, கல்வி வளர்ச்சி அரிதாயிற்று. அதனால் நாகரிக வளர்ச்சியும் பண்பாட்டு வளர்ச்சியும் அங்கு ஏற்படவில்லை. இந்நான்கு நிலங்களிலும் வேறுபட்டது மருத நிலம். அந்நிலம் ஆற்றுப் பாய்ச்சல் உடையது. மருதநில மக்கள் ஆற்றுநீரைப் பல கால்வாய்கள் வழியாகக்கொண்டு சென்று வயல்களுக்குப் பாய்ச்சினர்; தென்னை, மா முதலிய மரங்களைக் கொண்ட சோலைகளை அமைத்துக்கொண்டனர். நெல், கரும்பு முதலியவற்றைப் பயிராக்கினர்; குளங்களையும் ஏரிகளையும் அமைத்து நீரைத் தேக்கிக்கொண்டனர். மருத நிலம் முழுவதும் நீர்ப்பெருக்கால் வளம் பெற்றது. நீர்வளம் உண்டானதால் நிலவளம் உண்டானது. வயலில் வேலை செய்ய ஆட்களும் கிடைத்தனர். மாடுகள் வயிறாரப் புல் மேய்ந்து உழுதொழிலில் ஈடுபட்டன. நீர்வளத்தால் பண்பட்ட நிலம் சிறு முயற்சியாலேயே சிறந்த விளைச்சலை நல்கியது. மருத நில மக்கள் மனக்குறையில்லாமல் உண்டு மகிழ்ந்தனர்; ஆடிப் பாடினர். அவர் தம் ஆட்டத்திலிருந்து ஆடற்கலையும், பாட்டிலிருந்து பாடற்கலையும் தோன்றின; ஓவியம், சிற்பம், நாடகம் முதலிய பல கலைகளும் தோற்றமாயின. மனிதன் வயிறார உண்டு மகிழ்ச்சிகொள்ளும் பொழுதுதான், அவனது உள்ளத்திலிருந்து பெருக்கெடுத்து ஓடும் கலை உணர்வும் வெளிப்படும். கவலையற்ற நிலையில் உணவு இல்லாத பொழுது கலை உணர்ச்சி தோன்றி வளராது. மானம் குலம்கல்வி வண்மை அறிவுடைமை தானம் தவமுயற்சி தாளாண்மை- தேனின் கசிவந்த சொல்லியர் மேல் காமுறுதல் பத்தும் பசிவந் திடப்பறந்து போம். என்பது பெரியோர் அநுபவ வாக்கன்றோ? மருதத்தில் கலைவளர்ச்சி மருத நிலத்தில் நிலங்களை உடைய பெருமக்கள் வாழ்ந்தனர். அவர்கள் நிலத்தை உழவில்லை. நிலம் இல்லாத மக்கள் அப்பெரு மக்களின் நிலங்களை உழுது வாழ்ந்தனர். உழுத பணியாள் ஒரு பங்கும் நிலம் உடையவர் ஒரு பங்கும் எடுத்துக் கொண்டனர். அப்பெருமக்களைப் போலவே உயர்ந்த வணிகரும் ஓய்வு பெற்றிருந்தனர். அவர்தம் கவலையற்ற வாழ்வில் கலையுணர்ச்சி தோன்றியது. ஆடல் பாடல் முதலிய கலைகள் அவர் தம் இன்பப் பொழுதுபோக்குக்காக வளர்க்கப் பட்டன. அரசர்களும் இக்கலைகளை வளர்த்தனர்; அரண்மனைகளில் சிற்பங்கள் அமைக்கப்பெற்றன; ஓவியங்கள் தீட்டப்பெற்றன; இசை அரங்கும் நாடக அரங்கும் கட்டப்பெற்றன. அரசர்க்காடும் கூத்து என்ற முறையில் தனிக் கூத்துமுறை வளர்ச்சி பெற்றது. பொது வியல் என்ற பெயரில் பொது மக்களுக்குரிய கூத்தும் வளர்ச்சி பெற்றது. kUj Ãy¥ bghJ k¡fŸ, ‘ehis czî¡F v‹d brŒnth«! என்ற கவலை இல்லாதவர் ஆதலின், மருத நிலப் பெருமக்களைப் போலவே இசை முதலிய கலைகளில் ஈடுபடலாயினர்; கோவில் விழாக்களின்போது இசை அரங்கு களும் நாடக அரங்குகளும் நடன அரங்குகளும் அமைக்கப் பெற்றன. பொதுமக்கள் இவற்றைப் பேணி வளர்க்க முற்பட்டவுடன், பயிற்சி பெற்ற இசைவாணரும் நடிகரும் நடன மகளிரும் தோன்றலாயினர்; தோன்றிப் பெருகலாயினர். இசை பற்றிய நூல்களும், நடனம் பற்றிய நூல்களும், நாடகம் பற்றிய நூல்களும் தோற்றமெடுத்தன; பலவகை இசைக் கருவிகள் வழக்கிற்கு வந்தன. இசை ஆசிரியர், நாடக ஆசிரியர், நடன ஆசிரியர், குழலாசிரியர் என்று இசைக்கலை பற்றிய ஆசிரியர் பலர் தோன்றினர். இவ்வாறு ஓவியக் கலையும் சிறந்தமுறையில் வளர்ச்சி பெற்றது. அரசன் முதல் ஆண்டி ஈறாக இருந்த எல்லோரையும் இக்கலைகள் கவர்ந்தன. இக்கலை அரங்குகளை அமைப்பதற்காகவே கோவில்கள் மிகப் பெரிய அளவில் கட்டப்பட்டன. கோவில் திருச்சுற்றில் இசை, நடனம், நாடகம் முதலியவற்றிற்குத் தனித்தனி மண்டபங்கள் இருந்தன. நல்ல காற்றோட்டமும் அகற்சியும் கொண்ட திருச்சுற்றில் பொதுமக்கள் இருந்து கலை நிகழ்ச்சிகளைக் கண்டும் கேட்டும் மகிழ்ந்தனர். இசையின் சிறப்பு இசை கற்றவரையும் மற்றவரையும் மகிழ்விக்க வல்லது. கொடிய விட நாகமும் இசைக்குக் கட்டுப்படுகிறது. தினைக்கதிர்களை உண்ண வந்த யானை ஒன்று குறத்தியின் இசையில் மயங்கித் தினைக்கதிர்களை உண்ணாமல் உறங்கியது என்னும் செய்தியைப் பழம் பாடலொன்று குறிக்கின்றது. கபிலை ஏற்றக் காளைகள் உழவன் பாடும் பாட்டைக் கேட்டுக்கொண்டே நீர் இறைக்கின்றன. பண்டங்களை ஏற்றிச் செல்லும் வண்டிகளில் பூட்டப்பெற்ற மாடுகள் வண்டிக்காரரது பாட்டோசையில் ஈடுபட்டுத் தம் துன்பத்தை மறந்து நடத்தலை நாம் காண்கிறோம். குழந்தை தாயின் தாலாட்டுப் பாடலில் ஈடுபட்டு உறக்கம் கொள்கிறது. இவ்வாறு இசை எல்லா உயிர்களையும் உருக்க வல்லது. இசையும் கூத்தும் நம் முன்னோர் குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என்ற ஏழு இசைகளைக் கண்டறிந்தனர்; பின்பு அவற்றைப் பலவாறு பிரித்தனர்; ஒவ்வொரு நிலத்திற்குமுரிய பண்வகைகளையும் இசைக் கருவிகளையும் கண்டறிந்தனர். இவற்றின் விவரமெல்லாம் சங்க நூல்களிலும் பழைய உரைகளிலும் காணலாம். பல்லவர் காலமாகிய தேவார காலத்திலும் பிற்காலச் சோழர் காலத்திலும் தமிழிசையும் இசைக்கருவிகளும் வழக்கிலிருந்தன என்பதை இலக்கியத்தாலும் கல்வெட்டுக் களாலும் அறிகின்றோம். நம் முன்னோர் இசையால் இறைவனை வழிபட்டனர்; இசையில் வல்ல பாணரையும் பாடினியரையும் நன்கு ஆதரித்தனர். பெருங்கோவில்களிலெல்லாம் ஆடல் மகளிர் பலர் அமர்த்தப்பட்டிருந்தனர். அவர்களுக்கு நிலமும் வீடும் வழங்கப்பட்டன. அவர்கள் கவலையற்ற நிலையில் நடனக் கலையை நன்கு வளர்த்தனர்; கோவில் விழாக்களிலும் பிற பொது நிகழ்ச்சிகளிலும் தங்கள் கலைத்திறனைக் காட்டினர். நெய்திரள் நரம்பில் தந்த மழலையின் இயன்ற பாடல் தைவரு மகர வீணை தண்ணுமை தழுவித் தூங்கக் கைவழி நயனம் செல்லக் கண்வழி மனமும் செல்ல ஐயநுண் இடையார் ஆடும் நாடக அரங்கு கண்டார். என்னும் கம்பரது செய்யுள் சோழர் காலத் தமிழ் நடிகையரது நடிப்புத் திறனை நன்கு காட்டுகிறது. கட்டடக்கலை வளர்ச்சி பல்லவர் காலத்தில் செங்கல், சுண்ணாம்பு, மரம், உலோகம் இவற்றால் கோவில்களும் பிற கட்டடங்களும் கட்டப்பெற்றன. சோழர் காலத்தில் கருங்கற்களைக் கொண்டு மிகப்பெரிய கோவில்களும் பிற கட்டடங்களும் அமைக்கப் பெற்றன. நாயன்மாரால் பாடப்பெற்ற செங்கற்கோவில் களெல்லாம் சோழர் காலத்திற் கற்றளிகளாக மாறின. என்றும் நிலைபெற்றுள்ள ஆண்டவனுக்கு உறுதியான கற்களைக் கொண்டு நம் முன்னோர் கோவில் கட்டினர்; இவ்வாறே மன்னன் கோவிலையும் கற்களால் மாண்புற அமைத்தனர். நாயன்மார் காலத்தில் மண்ணாலும் சுதையாலும் செய்யப்பட்டிருந்த திருவுருவங்கள் சோழர் காலத்தில் கற்களால் அமைக்கப்பெற்றன. இவ்வுருவங்கள் விமானங்கள்மீதும் கோபுரங்கள்மீதும் இன்றும் அழகொழுகக் காட்சியளிக்கின்றன. பல்லவர் காலக் கட்டடக்கலை சோழர் காலத்தில் உயர் நிலையை அடைந்தது. இவ்வாறே பல்லவர் காலச் சிற்பக்கலை, சோழர் காலத்தில் நன்கு வளர்ச்சி பெற்றது. ஓவியக்கலையும் படிப்படியாகச் சிறப்புற்றது. முயற்சியும் உயர்ச்சியும் பழந்தமிழ் மக்கள் ஆற்றின் நீரை நன்கு பயன்படுத்தி உழு தொழிலைச் செய்தனர்; தங்களுக்குத் தேவையான எல்லா வகை உணவுப் பொருள்களையும் விளைத்துக்கொண்டனர்; கடல்படு பொருள்களையும் மலைபடு பொருள் களையும் தங்கள் வாழ்க்கைக்குப் பயன்படுத்திக்கொண்டனர். தமிழர் நெசவுத் தொழில், கொல்லத்தொழில், தச்சுத் தொழில் முதலிய எல்லாத் தொழில்களிலும் சிறந்து விளங்கினர். பட்டாலும் பருத்தியாலும் எலி மயிராலும் சங்க காலத்தில் ஆடைகள் நெய்யப்பட்டன. பூவேலைகள் செய்யப்பெற்ற மிக மெல்லிய ஆடைகளும் நெய்யப்பட்டன. கற்கள் பதித்து நகைகள் செய்வதும், பொன்னை உருக்கி நகைகள் செய்வதும் ஆகிய இருவகை வேலைகளும் மிக உயர்ந்த முறையில் செய்யப்பட்டன. இவ்வாறே ஒவ்வொரு கைத்தொழிலும் வளமுற வளர்ந்து வந்தது. இக் கைத்தொழில் களால் உருப்பெற்ற பொருள்களுள் தம் தேவைக்கு மேற்பட்ட வற்றை, அக்காலத் தமிழ் மக்கள் பிற நாடுகளுக்கு அனுப்பிவந்தனர். இக் கைத்தொழில் பொருள்களோடு உணவுப் பொருள்களையும் மலைபடு பொருள்களையும் கடல்படு பொருள்களையும் நம் முன்னோர் வெளிநாடுகளுக்கு அனுப்பினர். எருதுகள்மீதும் கோவேறு கழுதைகள்மீதும் பண்டப் பொதிகளை ஏற்றிக்கொண்டு ஊர் ஊராகச் சென்று தமிழ் வணிகர் உள்நாட்டு வாணிகம் செய்தனர்; யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்னும் உண்மையைத் தம் வாணிக அநுபவத்தால் பெற்றனர். தமிழ் நாட்டுக் கப்பல்கள் இந்நாட்டுப் பொருள்களை ஏற்றிக் கொண்டு கீழை நாடுகளுக்கும் மேலை நாடுகளுக்கும் சென்றன. அயல்நாட்டுக் கப்பல்கள் தத்தம் நாட்டுப் பொருள்களை இங்கு இறக்குமதி செய்து, இந்நாட்டுப் பொருள்களை ஏற்றுமதி செய்து கொண்டு சென்றன. தமிழர் இக்கடல் வாணிகத்தால் பெரும் பொருள் ஈட்டினர். வணிகப் பெருமக்கள் இளங்கோக்கள் என்று அரசரால் பாராட்டப் பெற்றனர். நிலக்கிழார்களும் வணிகப் பெருமக்களும் அரசர்க்கு உறுதுணையாக இருந்தனர். இவ்விருவகைப் பெருமக்களாலும் நாட்டில் கலைவளர்ச்சியும் அறச்செயலும் நலமுற வளர்ந்தன. மன்னன் ஆதரவினாலும் பொதுமக்கள் ஒத்துழைப்பாலும் நாகரிகமும் பண்பாடும் பருந்தும் அதன் நிழலும்போல வளர்ச்சியடைந்தன. அறச்செயல் பிறர் துன்பப்படுதலைக் கண்டு உள்ளம் நெகிழ்ந்து அவர்க்கு உதவிபுரிதல் பண்பாட்டின் தலைமணியாகும். அறவுணர்வும் அறச்செயலும் பண்பாட்டை அளக்கும் கருவிகளாகும். வறுமையால் வாடிய புலவர்களுக்கு வரையாது வழங்கிய பேரருளாளர் பண்பாட்டின் முகடு கண்டவராவர். இவ்வருளாளர்களே வள்ளல்கள் என்று சொல்லப்படுவர். பாரி, பேகன், அதிகன், காரி, ஓரி, குமணன் முதலியோர் சங்க காலத்தில் வாழ்ந்த அருளாளராவர். தாம் கவிபாடிப் பெற்ற பொருளைத் தம் வறிய நிலைமையைப் போக்கத் தாமே வைத்துக்கொள்ளாமல், தம் வறிய சுற்றத்தாருக்கு மனமார வழங்கி மகிழ்ந்த புலவர் பெருமக்கள் பண்பாடு பெற்ற பெரியோராவர். வறுமையால் வாடிவந்த புலவனுக்கு வாரி வழங்க ஒன்றும் இல்லையே என்று கவலை கொண்டு, என் தலையைக் கொண்டு வருவோர்க்குப் பரிசு வழங்குவதாக என் தம்பி அறிவித்துள்ளான். ஆதலால் என் தலையைக் கொண்டு செல்க, என்று கூறிப் புலவரிடம் தன் கைவாளைக் கொடுத்த குமணன் பண்பாட்டின் எல்லை கண்டவன் என்று கூறலாம். மருதநில மக்கள் உணவுப் பஞ்சம் இல்லாதவர். ஆதலால் வந்த விருந்தினரை அன்போடு உபசரிக்கும் இயல்பினராக இருந்தனர். பாலாற்றங்கரை ஊர்களிலும், காவிரிக்கரை ஊர்களிலும், வையைக்கரை ஊர்களிலும் வளமாக வாழ்ந்த பெருங்குடி மக்களும் சிறுகுடி மக்களும் வந்த விருந்தினரை முகமலர்ச்சியுடன் வரவேற்று அமுதூட்டி உபசரித்தனர் என்பதை நூல்களால் அறிகின்றோம். நம்முன்னோர் பசியின் கொடுமையை நன்கு அறிந்தவர். குடிப்பிறப் பழிக்கும் விழுப்பங் கொல்லும் பிடித்த கல்விப் பெரும்புணை விடூஉம் நாணனி களையும் மாணெழில் சிதைக்கும் பூணணி மாதரொட புறங்கடை நிறுத்தும் பசிப்பிணி யென்னும் பாவி என்பது சாத்தனார் வாக்கு. காணார் கேளார் கால்முடப் பட்டோர் பேணா மாக்கள் பிணிநடுக் குற்றோர் முதலியவர்க்கு உணவு வழங்குவதே சிறந்த அறச்செயல் என்று அக்கால மக்கள் கருதினர். திக்கற்றவர் ஏழைகள் முதலியோர்க்கு உணவு கிடைக்க மதுரை முதலிய பெரு நகரங்களில் உணவுச் சாலைகள் இருந்தன. கடவுள் பக்தி உலகத்தைப் படைத்துக் காத்து அழிக்கும் பேராற்றலைக் கடவுள் என்று நம் முன்னோர் கூறினர்; எங்கும் தங்கியிருக்கும் அப்பேராற்றலை இறை என்றும் அழைத்தனர்; அஃது எங்கும் தங்கியிருப்பினும், வழிபடுவதற்கு வசதியாக அதற்கென்று உருவங்களை அமைத்துக்கோவில் கட்டினர்; நாள்தோறும் பூசை நடைபெறச் செய்தனர்; திங்கள்தோறும் விழா நடத்தினர்; ஆண்டுதோறும் பெருவிழா நடத்தினர். கோவில்களை அடுத்து மடங்கள் இருந்தன. அம்மடங்களில் சமயக் கல்வியில் தேர்ந்த முனிவர்கள் இருந்து பொது மக்களுக்குச் சமய அறிவை ஊட்டினர்; மக்கள் இவ்வுலக வாழ்வுக்குப் பிறகு மறு வுலக வாழ்வை அடைவதற்குரிய வழி வகைகள் மடத்துத் தலைவர்களால் தெளிவாக்கப்பட்டன; கோவில்களில் அற நூல்களும் சமய நூல்களும் படித்து விளக்கப்பட்டன. இத்தகைய சமய அறிவுரைகளால் உலகப்பற்றை ஓரளவு ஒழித்துச் சமயநெறி சார்ந்த நன்னெறியில் மக்கள் வாழ்ந்து வந்தனர். இத்தகைய நல்வாழ்க்கையே ஒரு சமுதாய மக்களது பண்பாட்டின் உயர்ச்சியைக் காட்டுவதாகும்.  ஆசிரியரின் பிற நூல்கள் (கால வரிசையில்) 1. நாற்பெரும் வள்ளல்கள் 1930 2. ஹர்ஷவர்த்தனன் 1930 3. முடியுடை வேந்தர் 1931 4. நவீன இந்திய மணிகள் 1934 5. தமிழ்நாட்டுப் புலவர்கள் 1934 6. முசோலினி 1934 7. ஏப்ரஹாம் லிங்கன் 1934 8. அறிவுச்சுடர் 1938 9. நாற்பெரும் புலவர்கள் 1938 10. தமிழர் திருமண நூல் 1939 11. தமிழர் திருமண இன்பம் 1939 12. மணிமேகலை 1940 13. மொஹெஞ்சொதாரோ அல்லது சிந்துவெளி நாகரிகம் 1941 14. பாண்டியன் தமிழ்க் கட்டுரை (முதல் தொகுதி) 1941 15. பல்லவர் வரலாறு 1944 16. மறைந்த நகரம் (மாணவர் பதிப்பு) 1944 17. சேக்கிழார் (ஆராய்ச்சி நூல்) 1945 18 இரண்டாம் குலோத்துங்கன் 1945 19. கட்டுரை மாலை 1945 20. செய்யுள் - உரைநடைப் பயிற்சி நூல் 1945 21. முத்தமிழ் வேந்தர் 1946 22. காவியம் செய்த கவியரசர் 1946 23. விசுவநாத நாயக்கர் 1946 24. சிவாஜி 1946 25. சிலப்பதிகாரக் காட்சிகள் 1946 26. இராஜேந்திர சோழன் 1946 27. பல்லவப் பேரரசர் 1946 28. கட்டுரைக் கோவை 1946 29. சோழர் வரலாறு 1947 30. ஆராய்ச்சிக் கட்டுரைகள் 1947 31. பண்டித ஜவாஹர்லால் நெஹ்ரு 1947 32. வீரத் தமிழர் - 1947 33. இருபதாம் நூற்றாண்டுப் ஸபலவர் பெருமக்கள் 1947 34. இந்திய அறிஞர் 1947 35. தமிழ்நாட்டு வடஎல்லை 1948 36. பெரியபுராண ஆராய்ச்சி 1948 37. கதை மலர் மாலை (மலர் ஒன்று0 1948 38. இராஜன் சிறுவர்க்குரிய கதைகள் 1948 39. சிறுகதைக் களஞ்சியம் (பகுதி 1- 3) 1949 40. மேனாட்டுத் தமிழறிஞர் 1950 41. தென்னாட்டுப் பெருமக்கள் 1950 42. இந்தியப் பெரியார் இருவர் 1950 43. தமிழ்ப் புலவர் பெருமக்கள் 1950 44. நாற்பெரும் புலவர் 195 45. மறைமலையடிகள் 1951 46. அயல்நாட்டு அறிஞர் அறுவர் 1951 47. சங்கநூற் காட்சிகள் 1952 48. இளைஞர் இலக்கணம் (முதல் மூன்று பாரங்கட்கு உரியது) 1953 49. விஞ்ஞானக் கலையும் மனித வாழ்க்கையும் 1953 50. பாண்டிய நாட்டுப் பெரும் புலவர் 1953 51. சேக்கிழார் (மாணவர் பதிப்பு) 1954 52. திருவள்ளுவர் காலம் யாது? 1954 53. சைவ சமயம் 1955 54. கம்பர் யார்? 1955 55. வையை 1955 56. தமிழர் திருமணத்தில் தாலி 1955 57. பத்துப்பாட்டுக் காட்சிகள் 1955 58. இலக்கிய அறிமுகம் 1955 59. அருவிகள் 1955 60. தமிழ் மொழிச் செல்வம் 1956 61. பூம்புகார் நகரம் 1956 62. தமிழ் இனம் 1956 63. தமிழர் வாழ்வு 1956 64. வழிபாடு 1957 65. இல்வாழ்க்கை 1957 66. தமிழ் இலக்கணம் (இளங்கலை வகுப்பிற்கு உரியது) 1957 67. வழியும் வகையும் 1957 68. ஆற்றங்கரை நாகரிகம் 1957 69. தமிழ் இலக்கண இலக்கியக் கால ஆராய்ச்சி 1957 70. என்றுமுள தென்றமிழ் 1957 71. சைவ சமய வளர்ச்சி 1958 72. பொருநை 1958 73. அருள்நெறி 1958 74. தமிழரசி 1958 75. இலக்கிய அமுதம் 1958 76. எல்லோரும் வாழவேண்டும் 1958 77. தமிழகக் கலைகள் 1959 78. தமிழக ஆட்சி 1959 79. தமிழக வரலாறு 1959 80. தமிழர் நாகரிகமும பண்பாடும் 1959 81. தென்பெண்ணை 1959 82. புதிய தமிழகம் 1959 83. நாட்டுக்கு நல்லவை 1959 84. தமிழ் அமுதம் 1959 85. பேரறிஞர் இருவர் 1959 86. துருக்கியின் தந்தை 1959 87. தமிழகக் கதைகள் 1959 88. குழந்தைப் பாடல்கள் 1960 89. கட்டுரைச் செல்வம் 1960 90. தமிழகப் புலவர் 1960 91. தமிழ் மொழி இலக்கிய வரலாறு (சங்க காலம்) 1963 92. தமிழக வரலாறும் தமிழர் பண்பாடும் 1964 93. தமிழ் அமுதம் (மாணவர் பதிப்பு) 1965 94. சேக்கிழார் (சொர்ணம்மாள் நினைவுச் சொற்பொழிவுகள்) 1969 95. பத்துப்பாட்டு ஆராய்ச்சி 1970 96. கல்வெட்டுகளில் அரசியல் சமயம் சமுதாயம் 1977 97. இருபதாம் நூற்றாண்டில் தமிழ் உரைநடை வளர்ச்சி 1978 98. இலக்கிய ஓவியங்கள் 1979 பதிப்பு ஆண்டு தெரியாத நூல்கள் 99. சிறுவர் சிற்றிலக்கணம் 100. பைந்தமிழ் இலக்கணமும் கட்டுரையும் 101. பாண்டியன் தமிழ்க் கட்டுரை (தொகுதி -2) ஆங்கில நூல் 102. The Development of Saivism in South India 1964 பார்வைக்குக் கிடைக்காத நூல்கள் 1. பதிற்றுப்பத்துக் காட்சிகள் 2. செந்தமிழ்ச் செல்வம் 3. தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் 4. பள்ளித் தமிழ் இலக்கணம் 5. செந்தமிழ்க் கட்டுரை (முதல், இரண்டாம் புத்தகங்கள்) 6. செந்தமிழ்க் கதை இன்பம் (முதல், இரண்டாம் பகுதிகள்)