தமிழ்ப் பேரவைச் செம்மல் வெள்ளைவாரணனார் நூல் வரிசை - 5 சைவ சித்தாந்த சாத்திர வரலாறு - பாகம் 1 ஆசிரியர் பேராசிரியர் க.வெள்ளைவாரணனார் நூற்குறிப்பு நூற்பெயர் : வெள்ளைவாரணனார் நூல் வரிசை : 5 சைவ சித்தாந்த சாத்திர வரலாறு - 1 ஆசிரியர் : பேராசிரியர் க.வெள்ளைவாரணனார் பதிப்பாளர் : இ. தமிழமுது மறு பதிப்பு : 2014 தாள் : 16.0 கி. மேப்லித்தோ அளவு : 1/8 தெம்மி பக்கம் : 16 + 368 = 384 படிகள் : 1000 விலை : உரு. 360/- நூலாக்கம் : டெலிபாய்ண்ட் சென்னை -5. அட்டை வடிவமைப்பு : வி. சித்ரா அச்சு : வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர் இராயப்பேட்டை, சென்னை - 14. கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) வெளியீடு : மாணவர் பதிப்பகம் பி-11, குல்மொகர் அடுக்ககம், 35, செவாலியே சிவாசி கணேசன் சாலை, தியாகராயர் நகர், சென்னை -600 017 தொ.பே: 2433 9030 üš »il¡F« ïl« : தமிழ்மண் பதிப்பகம் தொ.பே. : 044 2433 9030 பதிப்புரை 19 ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியும், 20ஆம் நூற்றாண்டின் தொடக்கப்பகுதியும் தமிழ்ப்புலமையும் தமிழாய்வும் மேலோங்கி வளர்ந்த பொற்காலமாகும். இப் பொற்காலப் பகுதியில்தான் தமிழ்ப்பேரவைச் செம்மல் பெருந்தமிழறிஞர் க. வெள்ளைவாரணனார் தோன்றி வளர்ந்து வாழ்ந்து தாய்மொழித் தமிழுக்கு வளமும் வலிமையும் சேர்த்தார். இப்பெரும் பேரறிஞர் எழுதிய நூல்கள் அனைத்தையும் வெளியிட முடிவுசெய்து க.வெள்ளைவாரணனார் நூல் வரிசை எனும் தலைப்பில் 21 தொகுதிகள் முதல் கட்டமாக வெளியிட்டுள்ளோம். கைக்குக் கிடைக்கப் பெறாத நூல்களைத் தேடியெடுத்து இனிவரும் காலங்களில் வெளியிட முயல்வோம். தமிழ் இசை, தமிழ் இலக்கியம், தமிழ் இலக்கணம், சைவ சித்தாந்தம் ஆகிய நால்வகைத் துறைகளை மையமாகக் கொண்டு இவர் எழுதிய நூல்கள் தமிழுக்கும் தமிழருக்கும் பெரும் பயன்தரக் கூடிய அறிவுச் செல்வங்களாகும். ஆழ்ந்த சமயப்பற்றாளர், பதவிக்கும் புகழுக்கும் காசுக்கும் தம்மை ஆட்படுத்திக் கொள்ளாது தமிழ்ப்பணி ஒன்றையே தம் வாழ்வின் மூச்சாகக் கொண்டு வாழ்ந்தவர், நடுவணரசு தமிழகத்தில் கலவைமொழியாம் இந்தியைக் (1938) கட்டாயப் பாடமாகத் தமிழ்நாட்டுக் கல்வி நிறுவனங்களில் புகுத்தியபோது அதனை எதிர்த்துப் போர்ப்பரணி பாடிய தமிழ்ச் சான்றோர்களில் இவரும் ஒருவர். காக்கை விடுதூது எனும் இந்தி எதிர்ப்பு நூலை எழுதி அன்று தமிழ்நாட்டு ஆட்சிக் கட்டிலில் முதல்வராக அமர்ந்திருந்த இராசாசிக்கு அனுப்பித் தம் எதிர்ப்பைப் பதிவு செய்தவர். தம்முடைய தமிழாய்வுப்பணி மூலம் தமிழ் வரலாற்றில் நிலைத்து நிற்பவர், தமிழையும் சைவத்தையும் இரு கண்களெனக் கொண்டவர். தமிழிலக்கணத் தொன்னூலாம் தொல்காப்பியத்தை யும், பின்னூலாம் நன்னூலையும் ஆழ்ந்தகன்று கற்று ஒப்பாய்வு செய்தவர், தம் கருத்துகளும் வாழ்க்கை முறையும் முரண்படாமல் எண்ணியதைச் சொல்லி, சொல்லியபடி நடைமுறையில் வாழ்ந்து காட்டிய பெருந்தமிழறிஞர். தொல்காப்பியன் என்ற பெயர் இயற்பெயரே என்று நிறுவியவர், தொல்காப்பியர் காலத்தில் வடக்கே வேங்கடமலைத்தொடரும், தெற்கே குமரியாறும் தமிழக எல்லைகளாக அமைந்திருந்தனவென்றும், கடல்கோளுக்குப் பிறகு குமரிக்கடல் தென் எல்லை ஆனது என்பதையும், தொல்காப்பியர் இடைச்சங்கக் காலத்தவர், தொல்காப்பியம் இடைச்சங்கக் காலத்தில் இயற்றப்பட்டது என்பதையும், முச்சங்க வரலாற்றை முதன்முதலில் கூறியது இறையனார் களவியல் உரைதான் என்பதையும், தொல்காப்பியம், சங்கச் செய்யுளுக்கும் திருக்குறளுக்கும் நெடுங்காலத்திற்கு முன்னரே இயற்றப்பட்டது என்பதையும், திருமூலர் தம் திருமந்திரமே சித்தாந்த சாத்திரம் பதினான்கிற்கும் முதல் நூலாக திகழ்வது என்பதையும், திருமுறை கண்ட சோழன் முதலாம் இராசராசன் அல்ல முதலாம் ஆதித்தனே திருமுறை கண்ட சோழன் என்பதையும், வள்ளலாரின் திருவருட்பா தமிழின் சொல்வளமும், பொருள் நுட்பமும், ஒப்பற்றப் பேரருளின் இன்பமும் நிறைந்தது என்பதையும், சைவ சமயம் ஆரியர்க்கு முற்பட்டது என்பதையும், பழந்தமிழ் நாகரிகத்தின் ஊற்றுக்கண் தமிழும் சைவமும் என்பதையும் தம் நூல்களின் வழி உறுதி செய்தவர். தம் ஆய்வுப் புலமையால் பல புதிய செய்திகளையும் தமிழ் உலகுக்கு அளித்தவர். இவர் எழுதிய நூல்கள் தமிழ்உலகிற்குப் பெருமை சேர்ப்பன. தமிழ் இலக்கிய வரலாற்றிற்கு கூடுதல் வரவாக அமைவன. இவருடைய அறிவுச் செல்வங்கள னைத்தையும் ஆவணப்படுத்தும் நோக்குடன் தொகுத்து தமிழ் உலகிற்கு வைப்பாகக் கொடுத்துள்ளோம். இதனை வெளிக்கொணர எமக்குத் துணையாயிருந்த எம் பதிப்பகப் பணியாளர்கள், நூல்கள் கொடுத்து உதவியவர்கள், கணினி, மெய்ப்பு, அச்சு, நூல் கட்டமைப்பு செய்து இந்நூல்வரிசை செப்பமுடன் வெளிவரத் துணைநின்ற அனைவருக்கும் நன்றி. எம் தமிழ்க் காப்புப் பணிக்கு துணை நிற்க வேண்டுகிறோம். 2010 பதிப்பகத்தார் தமிழ்ப்பதிப்பு முன்னோடிகளை வணங்குவோம்! தமிழாராய்ச்சியின் வளர்ச்சியில் புதிய போக்குகளை உண்டாக்கிய பெருமைக்குரியவர்கள் பழந்தமிழ் நூல்களைப் பதிப்பித்த அறிஞர் களேயாவர். ஏட்டுச் சுவடிகளில் இருந்த இலக்கிய, இலக்கணப்பெருஞ் செல்வங்களை அனைவரும் அறியுமாறு செய்து புதிய ஆய்விற்குத் தடம் பதித்தவர்கள் இவர்களே ஆவர். மேலை நாட்டார் வருகையினால் தோன்றிய அச்சியந்திர வசதிகளும், கல்வி மறுமலர்ச்சியும் புதிய நூலாக்கங்களுக்கு வழி வகுத்தன. ஆறுமுக நாவலர் (1822-1839) சி.வை. தாமோதரம் பிள்ளை (1832-1931), உ.வே. சாமிநாதையர் (1855-1943) ஆகியோர் தமிழ்ப்பதிப்பு முன்னோடிகளாய் விளங்கித் தமிழுக்கு வளம் சேர்த்தனர் என்று தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர், இ. சுந்தரமூர்த்தி தனது பதிப்பியல் சிந்தனைகள் எனும் நூலில் பதிவு செய்துள்ளார். இந்நூல் தொகுதிகளை வெளியிடுவதன் மூலம் தமிழ்ப்பதிப்பு முன்னோடிகளை வணங்குவோம். முன்னுரை நாவலந் தீவில் தோன்றி வளர்ந்த சமயங்களுள் தொன்மையும் முதன்மையும் பெற்று விளங்குவது சைவசமயமாகும். சிந்தைக்கும் மொழிக்கும் எட்டாத நிலையில் விளங்கும் செம்பொருளாகிய சிவபரம்பொருளைச் சிவம் என வழங்குதல் தமிழ் மரபாகும். சிந்தனைக்கரிய சிவமே போற்றி எனவரும் திருவாசகத் தொடர் இம்மரபினை வலியுறுத்தல் காணலாம். செம்பொருளாய சிவமெனலாமே எனவருந் திருமந்திரத் தொடர் ஒரு நாமம் ஒருருவமின்றி மாற்ற மனங்கழிய நின்ற பரம்பொருளைச் செம்பொருள் எனவும் சிவம் எனவும் போற்றும் தொன்மை மரபினைச் சுட்டுவதாகும். செம்பொருளாகிய சிவபரம்பொருளை நம் முன்னோர் திருவுருவில் எண்ணி அம்மையப்பனாக வழிபடும் நிலையில் அம்முதல்வனுக்கு அமைந்த திருப்பெயர் சிவன் என்பதாகும். செவ்வானன்ன திருமேனியினனாகத் திருவுருவமைத்து வழிபட்ட நிலையில் அமைந்த சிவன் என்னுந் திருப்பெயர் செம்மையென்னுந் தமிழ்ச் சொல்லின் அடியாகப் பிறந்த பெயராகும் என்பதனைச் செம்மேனிப் பேராளன் வானோர்பிரான் எனக் காரைக்காலம்மையாரும், சிவனெனுநாமந் தனக்கேயுடைய செம்மேனியம்மான் எனத் திருநாவுக்கரசரும் அருளிய மெய்ம்மொழிகளால் இனிதுணரலாம். எனவே முழுமுதற் கடவுளுக்கு வழங்கும் சிவம், சிவன் என்னும் இருபெயர்களுள் முன்னையது சிந்தனைக்கு அரிய உருவங்கடந்த நிலையினையும், பின்னையது அடியார்க்கு எளிவந்தருளுந் திருவுருவ நிலையினையும் குறித்து வழங்குதலும் இவ்விரு நிலைப்பெயர்க்கும் அடிப்படையாயமைந்தது செம்மையென்னும் பண்பென்பதும் நன்கு தெளியப்படும். இவ்வுண்மை, செம்பொருட்டுணிவே சிவபெருமானே எனவருந்திருவாசகத் தொடரால் உய்த்துணரப்படும். செம்மேனிப் பேராளனாகிய சிவபெருமானை முழுமுதற்கடவுளாகக் கொண்டு போற்றும் வழிபாட்டு நெறியாதலின் இது சைவம் என்னும் பெயர்த்தாயிற்று. எந்நாட்டவர்க்கும் இறைவனாகிய முதல்வனைத் தென்னாட்டவ ராகிய தமிழ்மக்கள் சிவன் என்ற திருப்பெயராற் போற்றி வழிபட்டனர் என்பது தென்னாடுடைய சிவனே போற்றி, எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி எனவரும் திருவாசகச் செழுமறையால் இனிதுபுலனாம். சிவபெருமானை வழிபட்டு அம் முதல்வனது திருவருட்டுணை கொண்டு உலகுயிர்கள் இயங்குந் திறத்தினைத் தமது வாழ்வியல் நுகர்ச்சியிற் கண்டு தெளிந்த தமிழ் மக்கள் தமது வாழ்வியலின் முடிந்த முடிவாகக் கண்டுணர்ந்த மெய்யுணர்வுக் கொள்கை இடைக்காலத்திற் சைவசித்தாந்தம் என்ற பெயரால் வழங்கப் பெறுவதாயிற்று. குமரிமுதல் இமயம் வரை பரவி வாழ்ந்த தொன்மைக் குடியினராகிய தமிழ்மக்களின் அகவாழ்வாகிய குடும்ப வாழ்க்கையிலும், புறவாழ்வாகிய சமுதாய வாழ்க்கையிலும் முகிழ்த்துத் தோன்றிய சைவசித்தாந்தத் தத்துவக் கொள்கையானது வடநாட்டின் வழிவந்த வேத உபநிடதங்களுடன் தொடர்பு பெற்றுச் சிவாகமங்களின் சார்புடையதாய்ச் செழித்து வளர்ந்த காலம் திருமூலநாயனார் காலம் எனக் கொள்ளுதல் பொருந்தும். சைவசித்தாந்தம் பதி (கடவுள்), பசு (உயிர்), பாசம் (உலகு) என்னும் முப்பொருளுண்மையாகிய இம்முடிபு வடவேங்கடந் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறும் நல்லுலகத்தில் தொல்காப்பியனார் காலத்தும் அவர்க்குப்பின் கடைச்சங்க காலத்தும் தமிழகத்தில் வாழ்ந்த நாட்டு மக்கள் வாழ்க்கையொடு தொடர்புடையதாய் நிலைபெற்று வரும் பண்டைத் தமிழர் தத்துவக் கொள்கையாகும். இவ்வுண்மை இயற்றழிழ் நூலாகிய தொல்காப்பியத்தையும் சங்கச் செய்யுட்களையும் உலகப் பொது மறையாக நிலவும் திருக்குறளையும் சைவசித்தாந்த சாத்திரங்களோடு ஒப்புநோக்கி ஆராய்வார்க்கு இனிது விளங்கும். பழந்தமிழர் மேற்கொண்டொழுகிய தெய்வ வழிபாட்டு நெறியில் உருவாகிய சைவசித்தாந்தம் என்னும் முத்தி நெறி பற்றிய மெய்யுணர்வுக் கொள்கையினைச் சிறப்பாகப் பத்தி நெறியாகிய தெய்வ வழிபாட்டுடன் இயைத்துப் பேணி வளர்த்த அருளாசிரியர்கள் திருமூலநாயனார் முதல் சேக்கிழார் நாயனார் வரையுள்ள திருமுறையாசிரியர்களாவர். தோத்திர வடிவிலமைந்த சைவத் திருமுறைகளாகிய செந்தமிழிலக்கியங்களிலிருந்து சைவசித்தாந்தச் சாத்திரமாகிய இலக்கண நூல்களை உருவாக்கிக் கொடுத்தவர்கள் திருவியலூர் உய்யவந்த தேவநாயனார், திருக்கடவூர் உய்யவந்த தேவநாயனார், மெய்கண்டதேவர், அருணந்தி சிவாசாரியார், திருவதிகை மனவாசகங்கடந்தார், உமாபதி சிவாசாரியார் ஆகிய திருவருட் சான்றோராவர். பன்னிரு திருமுறையாசிரியர்களில் திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், நம்பியாரூரர், திருவாதவூரடிகள் ஆகிய நால்வரையும் . rkயகுரவர்நhல்வர்எdச்சிwந்தெடுத்துப்gற்றுவதுgலவேrவசித்தாந்தநூšகளைஇaற்றியருளியசhன்றோர்களுள்kய்யுணர்வுபதேசபuம்பரையைத்jற்றுவித்துவsர்த்தkய்கண்டjவர்,அUணந்திசிtசாரியார்,மiறஞானச«பந்தர்,உkபதிசிtசாரியார்ஆ»யநhல்வரையும்rவசமயசªதானகுரவர்நhல்வர்எdப்gற்றுவதுrவமரபாகும்.kŒf©l நூல்களாகிய சித்தாந்த சாத்திரம் பதினான்கினையும் அருளிச் செய்த திருவருட் சான்றோர்களின் வரலாறுகளையும் அவர்களால் இயற்றப்பெற்ற திருவுந்தியார் முதல் சங்கற்பநிராகரணம் முடியவுள்ள சைவ சமய மெய்ந்நூல்கள் பதினான்கின் பொருளமைப் பினையும் இவற்றுக்கு நிலைக்களமாகவுள்ள பன்னிரு திருமுறைகளிற் காணப்படும் சைவசித்தாந்தக் கொள்கையினையும் இவை எல்லாவற்றுக்கும் காலத்தால் முற்பட்ட சிலப்பதிகாரம், சங்கவிலக்கியம், திருக்குறள், தொல்காப்பியம் ஆகிய பண்டைத் தமிழ் நூல்களில் ஆங்காங்கே இடம்பெற்றுள்ள தத்துவ நுண் பொருள்களையும் ஒப்புநோக்கி யாராய்ந்து தமிழகத்தில் தொன்றுதொட்டு நிலவிவரும் சைவசித்தாந்த மெய்ந்நெறிக் கொள்கையினை வரலாற்று நெறியில் ஆராய்ந்து விளக்கும் முறையில் மெய்கண்ட நூல்களின் வரலாறாகிய இந்நூல் எழுதப் பெறுகின்றது. சைவசித்தாந்தத் தத்துவக் கொள்கையினைச் சிறப்பாகத் தமிழகத்திலும் பொதுவாகப் பாரத நாட்டிலும் நிலைபெற்று வழங்கும் வைதிகம் வைணவம் முதலிய ஏனைச் சமயதத்துவக் கொள்கைகளோடும் நாட்டு மக்களின் வாழ்வியலோடும் ஒப்புநோக்கியுணரும் ஒப்பீடும் இந்நூலில் உரியவிடங்களில் மேற்கொள்ளப்பெறும். அணிந்துரை மக்களை மக்களாக வாழ்விக்கவே எல்லாச் சமயங்களும் முற்படுகின்றன. வாழ்வின் அருமை சமய நெறியினாலே முழுமையாக உணரப்பெறும் என்பதைப் பலரும் நம்புகின்றனர். எனவே, சமய தத்துவ ஆராய்ச்சி மக்கட்குப் பலவகைகளிலும் வேண்டப்படுவ தொன்றாகிறது. மனிதனை மனிதனாக வாழச்செய்து தெய்வமாக உயர்த்தும் இப்பணியை மேற்கொள்ளுதல் அறிவுடைப் பெருமக்களின் தலையாய கடமையாகிறது. தத்துவ உணர்வு வளர்ச்சியடையுமானால், நாட்டில் மக்களிடையே ஏற்படும் பல்வேறு குழப்பங்களும் தீரும். மனம் தெளிவு அடையும். நலங்கள் பல விளையும். இவ்வகையில் இன்பத்தையும் துன்பத்தையும் சமமாக எண்ணும் மனநிலையை மக்கள் பெற வேண்டும் என்பது திருவள்ளுவரின் கருத்தாகும். இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான் துன்பம் உறுதல் இலன். என்றும், இன்பத்துள் இன்பம் விழையாதான், துன்பத்துள் துன்பம் உறுதல் இலன். என்றும் இதனை விளக்குவர். இன்பத்தை விரும்பாமல் துன்பத்தை இயற்கையானது என்று தெளிந்தவன் துன்பம் அடைய மாட்டான் என்பதும், இன்பம் வந்தபோது அதை மனத்தான் விரும்பாதவன், துன்பம் வந்த காலத்திலும் அதற்காக மனம் வருந்தமாட்டான் என்பதும் குறட்கருத்துக்களாம். இவற்றை அடிப்படையாகக் கொண்டவையே நம் சமய நூல்கள். மெய்யுணர்வு தலைப்பட்டவர்கள் இன்பத்தையும் துன்பத்தையும் ஒன்றாகவே கருதுவர். அத்தகையவர் கடமை உணர்வுகளில் தவறாத வாழ்வினை உடையவராவர்; உரிமை என்ற உணர்வே இல்லாதவராயிருப்பர். அவர்களே என்றும் இன்பம் பெருகும் இயல்பினராய் விளங்குவர். இன்பமே எந்நாளும் துன்பமில்லை எனப் பாடிய அப்பரடிகள் போன்றோர் இந்நிலையில் வாழ்ந்து காட்டிய பெருமக்களாவர். இன்பத்தையும் துன்பத்தையும் சமமாக எண்ணும் இந்நிலை பெறுதல் எளிதல்ல. தத்துவ உணர்வுகளை நெறியாக வளர்ப் பதனாலேயே அதனை மக்களிடையே உண்டாக்க முடியும். இவ்வயில், சிவனை வழிபடும் சிவநெறியான சைவமே மிகப் பழமையானது என்பதை மொகஞ்சதாரோ, ஹரப்பா போன்ற இடங்களில் காணக் கிடைத்த அகழ்வாய்வுப் பொருள்களாலும் அறிகிறோம். சிவநெறியிற் கொள்ளப்படும் அடிப்படை உண்மைகளையும் கொள்கைகளையும் முறைப்படுத்தி உணர்த்தும் நூல்கள் சாத்திரங்கள் எனப்பெறும். சாசனஞ் செய்வது சாத்திரம் என்பர். சாசனம் - ஒழுங்கு, ஆணை, பொருள்களை ஒழுங்குபடக் கூறுதல் பற்றியும், ஆசான் வடிவில் தோன்றி இறைவன் தன் ஆணையை இந்நூல்கள் வடிவில் வைத்தல் பற்றியும் இவை சாத்திரம் எனப்பெறும். இவ்வியல்புள்ள, ஞான மெய்ந்நெறி உணர்த்தும் தமிழ் நூல்களுள் முதன்மையான முழுநூல் திருமூலரின் திருமந்திரமாகும். எட்டாம் நூற்றாண்டு முதலாகவே நம் நாட்டில் சமயக் கொள்கைகளிலே குழப்பங்கள் பல மலிந்திருந்தன. அக்குழப்பங்களை நீக்கி மக்கள் தெளிவுணர்வு பெற்றுய்ய வேண்டுமென்னும் நற்சிந்தை கொண்ட சிவாநுபூதிச் செல்வர்கள் அருளிச்செய்த செந்தமிழ் நூல்கள் பதினான்கு ஆகும். அவை, திருவுந்தியார், திருக்களிற்றுப் படியார், சிவஞானபோதம், சிவஞான சித்தியார், இருபா இருபஃது, உண்மை விளக்கம், சிவப்பிரகாசம், திருவருட்பயன், வினாவெண்பா, போற்றிப்பஃறொடை, உண்மை நெறி விளக்கம், கொடிக்கவி, நெஞ்சுவிடுதூது, சங்கற்ப நிராகரணம் என்பனவாம். மக்கள் பொய்யை நீங்கி மெய்யில் நிற்குமாறு, மெய்யைக்கண்டு காட்டுதலால் மெய்கண்ட நூல்கள் எனவும், மறைமுடிவின் சித்தாந்தம் கூறும் சிவாகம ஞானபோதப்பொருள் உணர்த்ததுதல் பற்றிச் சைவ சித்தாந்த சாத்திரங்கள் எனவும் இந்நூல்கள் வழங்கப் பெறுகின்றன. சைவ சமய மெய்ந்நூல்களாம் இப்பதினான்கின் பொருளமைப் பினை வரலாற்று நோக்கில் ஆராய்ந்து சைவ சித்தாந்த சாத்திர வரலாறு என்னும் தலைப்பிலான இவ்வரிய நூலைப் படைத்துள்ளார், திருமுறைத் தமிழ்மணி, சித்தாந்தச் செம்மல், கலைமாமணி, பேராசிரியர் க. வெள்ளைவாரணனார் அவர்கள். தொல்காப்பியம், சங்க இலக்கியம், திருக்குறள், சிலப்பதிகாரம், மணிமேகலை, திருமந்திரம், திருமுறைகள் ஆகிய பண்டைத் தமிழ் நூல்களில் பொதிந்துள்ள நுண்பொருள்களையெல்லாம் ஒப்பு நோக்கியாராய்ந்து இந்நூலில் வெளிக்கொணர்ந்திருப்பதைக் கொண்டு இந்நூலாசிரியரின் பேருழைப்பையும் பெருஞ் சிந்தனையையும் நன்குணரலாம். சிவவழிபாட்டின் தொன்மையும் உலகளாவிய விரிவும் என்னும் முதற்பகுதியிலேயே பண்டைக்காலத்தில் சமய வேறுபாடில்லாத பொதுமை வாய்ந்த கடவுள் வழிபாடு நம்நாட்டில் இருந்தமையை இந்நூலாசிரியர் எடுத்துக்காட்டியுள்ளமை பாராட்டுக்குரியதாகும். தொல்காப்பியனார் காலம் முதலாக உள்ள வழிபாட்டு நெறிகளையும் தத்துவக் கொள்கைகளையும் வரலாற்றுச் சான்றுகளோடு நிரல்படத் தொகுத்துரைக்கும் ஓர் அரிய நூலாக இது அமைந்திருப்பது தமிழுலகத்திற்கும் சமய உலகிற்கும் மேலும் பெருமை சேர்ப்பதாகும். சைவ சித்தாந்த சாத்திரங்கள் பதினான்கும் பொதுவாக உலகப் பொதுமறையாகிய திருக்குறளின் கருத்துக்களைத் தழுவியுள்ளன என்பதும், சிறப்பாகச் சைவத் திருமுறைகளால் தெளிந்துணரப் பெற்ற தத்துவ உண்மைகளை விரித்துரைக்கும் செந்தமிழ் நூல்களே இப்பதினான்கு நூல்கள் என்பதும் இந்நூலாசிரியரின் முடிந்து முடிபாகும். சைவமும் தமிழும் தம்மிரு கண்ணெனப் போற்றிய திரு க.வெள்ளைவாரணனார் அவர்கள் எழுபது ஆண்டுகளுக்கு மேலாக (14-1-1917 - 13-6-1988) இந்நிலவுலகிலே வாழ்ந்திருந்த சைவப் பெருந்தகையாவார். இலக்கண இலக்கியப் பெரும்புலமையாளரான பேராசிரியர் க.வெள்ளைவாரணனார் படைத்த பன்னிரு திருமுறை வரலாறு பயன்மிக்கதொரு நூலாகும். இவ்வகையில் இவருடைய மற்றொரு படைப்பான சைவ சித்தாந்த சாத்திர வரலாறு என்னும் இப்பெருநூலினைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் இப்பொழுது பெருமையுடன் வெளியிடுகின்றது. பல்லாண்டுகள் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்திலும் பணியாற்றிய இவர் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்திலும் மொழிப்புலத் தலைவராகப் பணியாற்றியவர் ஆவார். அரிய இலக்கண, சமய நூல்களை உருவாக்கியளித்த இந்நூலாசிரியரின் ஆராய்ச்சித் திறனை இப்புதிய நூல் மூலமாக மேலும் பலரும் உணர்வர் என நம்புகிறேன். இந்நூல் நன்முறையில் உருவாவதற்குப் பெருந்துணை புரிந்த பேராசிரியர் முனைவர் சோ.ந. கந்தசாமி அவர்களுக்கும், தமிழ்ப் பல்கலைக்கழகப் பதிப்புத்துறை இயக்குநர் (பொ.) முதுமுனைவர் ம.சா. அறிவுடைநம்பி அவர்களுக்கும் நன்றி. இந்நூலை நன்முறையில் உருவாக்கிய பதிப்புத்துறையினருக்குப் பாராட்டுதல்கள். 20-12-2002 முனைவர் இ. சுந்தரமூர்த்தி துணைவேந்தர் பொருளடக்கம் பதிப்புரை 4 முன்னுரை 7 அணிந்துரை 10 1. சிவவழிபாட்டின் தொன்மையும் உலகளாவிய விரிவும் 1 2. தொல்காப்பியனார் கூறும் வழிபாட்டு நெறிகளும் தத்துவக் கொள்கைகளும் 38 3. சங்கச் செய்யுட்களில் இடம்பெற்றுள்ள தெய்வவழிபாடும் தத்துவக் கொள்கைகளும் 74 4. சங்கவிலக்கியத்திற் சிவன் வழிபாடும் சைவ சமயத் தத்துவ வுண்மைகளும் 291 சைவ சித்தாந்த சாத்திர வரலாறு - பாகம் 1 1. சிவவழிபாட்டின் தொன்மையும் உலகளாவிய விரிவும் உலக மக்கள் அனைவரும் தத்தம் வாழ்க்கையில் மேற்கொண் டொழுகும் பொதுவான ஒழுகலாறுகளுள் தெய்வ வழிபாடும் ஒன்றாகும். மக்கட் கூட்டத்தார் தாம்தாம் பிறந்து வாழும் நாடுகளின் வெப்பதட்ப அமைப்புக்கும் பிற சூழ்நிலைகட்கும் ஏற்ப வடிவாலும் நிறத்தாலும் கலை நாகரிகம் முதலியவற்றாலும் அறிவின்திறத்தாலும் படிப்படியே வளர்ச்சி பெற்று வந்துள்ளனர். உலகமுழுவதும் ஒன்று என எண்ணும் விரிந்தவுள்ளத்தினராய் உலக மக்கள் அனைவரும் ஒரே குலத்தினர் எனக்கருதும் அளவு நாகரிகம் பரவியுள்ள இக்காலத்திலும் அறிவு முதிரா நிலையினராய் நாகரிக வளர்ச்சியின்றித் தனிமையுற்றுப் பல்வேறு குழுவினராய் வாழ்க்கை நிலைகளிற் கீழ்ப்பட்ட மக்கட் பிரிவினரும் ஆங்காங்கே காணப்படுகின்றனர். நாகரிகம் பெற்றார் பெறாதார் ஆகிய எல்லா மக்களிடையேயும் தம்மைப் பாதுகாத்து அருள்புரியும் தெய்வம் ஒன்று உண்டு என்னும் நம்பிக்கை நெடுங்காலமாக நிலைபெற்று வருகின்றது. ஆகவே தெய்வங்கொள்கையென்பது நாடு மொழி இனம் என்னும் வேறுபாடின்றி மக்கட்குலத்தார் அனைவர்க்கும் இயல்பாகத் தோன்றுவதோர் உணர்வு எனக்கொள்ள வேண்டியுளது. காணப்படும் இவ்வுலகில் எண்ணிறந்த அனைத்து உயிர்களும் தத்தமக்கேற்ற உடம்புடன் நிலைபெற்று வாழ்தற்கு இன்றியமையாதது உணவாகும். மன்னுயிர்கள் உடம்பொடு கூடி வாழ்தற்கு இன்றியமையாத உணவினும் சிறந்ததாக மக்கட்குலத்தாராற் கருதத்தகுவது தெய்வங் கொள்கையேயாகும். இந்நுட்பத்தினைத் தமிழ் முன்னோர் பல்லாயிரம் ஆண்டுகட்கு முன்னரே தமது வாழ்க்கை யனுபவத்தால் தெளியவுணர்ந்திருந்தார்கள். தமிழ்ப் பொருளிலக்கணம் கூறும் முதல் கரு உரி என்னும் மூவகைப் பொருள்களில் கருப்பொருளை வகைப்படுத்துணர்த்தக்கருதிய ஆசிரியர் தொல்காப்பியனார், தெய்வம், உணா, மா, மரம், புள், பறை, செய்தி, யாழின் பகுதியொடு தொகைஇ, அவ்வகை பிறவும் கருஎன மொழிப1 எனத் தெய்வத்தினை உயிர்வாழ்வுக்கு இன்றியமையாத உணவினும் முதன்மையுடையதாகத் தமிழ் முன்னோர் எண்ணிய திறத்தினை நன்கு புலப்படுத்தியுள்ளமை காணலாம். ஓரறிவுயிர் முதல் ஆறறிவுயிர் ஈறாக மன்னுயிர்கள் பல்வேறுடம்புகளைப் பெற்றுப் படிப்படியாக வளர்ச்சி நிலை யெய்திய தொன்மைக்காலத்தே வாழ்ந்த மக்கட் கூட்டத்தார் கடல்கோள் புயல் நிலநடுக்கம் முதலாக இயற்கைப் பொருள்களால் நேரும் இடையூறுகளையும் புலி முதலிய கொடிய விலங்கினங்களாலும் பாம்பு முதலிய நச்சுயிர்களாலும் நேரும் இடர்களையும் எண்ணிப் பெரிதும் அஞ்சினர். இவ்விடையூறுகளைப் போக்குதற்குத் தம்பால் அன்புடைய ஆற்றலுடையார் யாரேனும் துணை செய்யமாட்டார்களா எனத் தம்மினும் மேலானதொரு பொருளின் துணையை நாடினர். இவ்வாறு மக்கள் உள்ளத்தே தோன்றிய அச்சத்தினாலும் உயிர்ப் பண்பாகிய அன்பினாலும் எல்லாவுயிர்கட்கும் துணைபுரியும் தெய்வம் என்பது ஒன்றுண்டு என்னும் உணர்வு மனவுணர்வினராகிய மக்களது மனத்தகத்தே அரும்பித் தோன்றியது. மக்களுள்ளத்தே கிளர்ந்தெழுந்த இத்தெய்வவுணர்வு, ஞாயிறும் திங்களும் விண்மீன்களும் சுடர்விட்டு விளங்குதற்கு இடமாகிய வானையும் கடல்சூழ்ந்த இவ்வுலகினையும் நிலமெங்கும் பரவி வாழும் எண்ணிறந்த உயிரினங்களையும் இயைத்து நோக்கும் பல்வேறு நம்பிக்கைகட்கும் நிலைக்களமாய் வளர்ந்தது; மக்கள் பெற்றுள்ள வாழ்வியலில் அழுந்தியறிதலாகிய அனுபவ அறிவின் பயனாகக் கிடைத்த உயர்ந்த தத்துவங்களோடு கூடிய பல்வேறு சமயங்களாக உலகெங்கும் விரிந்து பரவுவதாயிற்று. உலக மக்கள் காலந்தோறும்வளர்ச்சி பெற்று வரும் தம்முடைய வாழ்க்கை வளங்களுக்கேற்பத் தெய்வ வழிபாட்டிலும் அவ்வழிபாட்டினை அடியொற்றியுருவாகிய தத்துவவுணர்விலும் படிப்படியாக வளர்ச்சி பெற்று வந்துள்ளார்கள். இவ்வாறு உலகெங்கும் பரவி வாழ்ந்த மக்கட்குலத்தாரது உணர்வுநிலைகட்கேற்ப அவர்களால் வழிபடப்பெறும் தெய்வங்களின் திருவுருவங்களும் அடையாளங்களும் வழிபாட்டுக்குரிய நிலையங்களாகிய திருக்கோயில்களும் பலவாக விரிவடைந்துள்ளன. இங்ஙனம் பல்லாயிரம் ஆண்டுகளாகத் தமிழ் மக்களது வாழ்க்கையில் நிலவிவரும் தெய்வ வழிபாடுகள் சமய நெறியாகவும் அந்நெறிபற்றிய சிந்தனைகள் தத்துவங்களாகவும் வளர்ச்சி பெற்று வந்துள்ளன. இந்நாட்டிற் குடிபுகுந்த ஆரியர் முதலிய அயலவர் கலப்பினால் தமிழ்ச் சமயநெறிகளில் அயலவர் நடைமுறைகள் சில இடம்பெற்றன எனக்கருத இடமுண்டு. இந்திய நிலப்பரப்பில் வழங்கும் திராவிட மொழிகளின் தொன்மையையும் அமைப்பையும் புலப்படுத்தும் முறையில் தென்னாட்டில் தமிழ்மொழி முதன்மை பெற்று விளங்குகின்றது; அதுபோலவே இந்திய நாட்டில் வாழும் பழங்குடி மக்களாகிய திராவிட இனத்தவரின் தொன்மைச் சமய அமைப்புகளையும் அவற்றின் தத்துவவுண்மைகளையும் புலப்படுத்தும் முறையில் தென்னாட்டில் சைவசமயம் முதன்மை பெற்று விளங்குகின்றது. சிந்துவெளியில் நிகழ்ந்துள்ள அகழ்வாராய்ச்சியினால் அறியப்படும் இந்திய நாகரிகம் என்பது இற்றைக்கு ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தொன்மையுடையதாகும். அஃது இந்நாட்டில் ஆரியர் வருவதற்குமுன் நிலவிய திராவிட நாகரிகமே என்பது நடுநிலையுணர்வுடைய வரலாற்றாசிரியர்களால் உறுதி செய்யப்பெற்றுளது. இந்திய நாட்டின் வடபகுதியில் நிகழ்ந்த அகழ்வாராய்ச்சியாற் புலனாகும். சிந்துவெளி நாகரிகத்திற்கும் தென்னாட்டிற் சங்க இலக்கியங்களால் அறியப்படும் தமிழர் நாகரிகத்திற்கும் இடையேயுள்ள தொடர்பினை இணைக்கும் முறையில் அமைந்தது. இவ்விரு நாகரிகங்களாலும் சிறப்பாகப் புலப்படுத்தப்படும் சைவசமய நெறியேயாகும். இதனால் இற்றைக்கு ஐயாயிரம் ஆண்டுகளுக்குமுன் சிந்துவெளி மக்களிடையே நிலவிய சிவ வழிபாடு தென்னாட்டில் வாழும் தமிழ் மக்களின் தொன்மை வரலாற்றொடு மிக நெருங்கிய தொடர்புடையதென்பது நன்கு துணியப்படும். சிந்துவெளியிற் பலவகையான வழிபாட்டு நெறிகள் காணப்படினும் அவற்றுட் சிறந்து விளங்குவது சிவவழி பாடேயாகும். மொகஞ்சதரோ, அரப்பா ஆகிய இடங்களில் அகழ்ந்தெடுக்கப்பட்ட புதைபொருள்களால் நமக்குப் புலனாகும் செய்திகள் பலவற்றுள் முதன்மை வாய்ந்ததும் நிகரற்றதும் ஆகத் திகழ்வது சைவ சமயத்தின் வரலாறெனின் அது மிகையாகாது. செம்புக் காலத்திற்கும் கற்காலத்திற்கும் முற்பட்ட தொல் பழங்காலத்தில் சைவசமயத்தின் வரலாறு தொடங்குவதும், உலகப் பழம்பெருஞ்சமயங்களுள் மிகப் பழைய சமயமாகக் சைவசமயம் வீறுடன் நின்று நிலவுவதும் குறிப்பிடத் தக்கனவாகும் என்பர் சர் ஜான்மார்ஷல் துரைமகனார். சைவசமய வரலாற்றைக் காலமுறைப்படிக் கருதி நோக்குங்கால் கிறித்து பிறப்பதற்கு மூவாயிரம் ஆண்டுகட்கு முன்னரே சிந்துநதிப் பள்ளத்தாக்கிற் சிறந்து விளங்கிய மொகஞ்சதரோ, அரப்பா ஆகிய நகரங்களில் வாழ்ந்த மக்களின் சமய வழிபாடு இங்குச் சிறப்பாகக் குறிப்பிடத்தகுவதாகும். இக்காலத்தில் தமிழகத்தில் நிலவிவரும் இலிங்க வழிபாடு, சக்தி வழிபாடு, பசுபதி வழிபாடு முதலியன இற்றைக்கு ஐயாயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட தொன்மையுடைய தாகிய சிந்துவெளி நாகரிகத்திற் சிறப்புடைய சமய நெறிகளாகத் திகழ்ந்தன என்பது சர் ஜான்மார்ஷல், ஹீரா பாதிரியார் முதலிய ஆராய்ச்சியாளர்களின் துணிபாகும். சிந்து வெளியிலே அகழ்ந் தெடுக்கப்பட்ட ஓவியங்கள், முத்திரைகள், களிமண் படிவங்கள் ஆகியவற்றைக் குறித்துச் சர் ஜான் மார்ஷல் பின்வருமாறு கூறியுள்ளார். யோகிகட்கல்லாம் தலையாய யோகி சிவன். அதனாலேயே அவருக்கு மகாதவசி, மகாயோகி என்னும் பெயர்கள் அமைந்தன. ....irt¤ij¥ போலவே யோகநெறியும் ஆரியருக்கு முற்பட்ட மக்களிடையே தோன்றியதாகும். சிவன் தலையாய யோகிமட்டும் அல்லர்; விலங்குகட்கெல்லாம் தலைவர் (பசுபதி); சிவனுக்குரிய இவ்வியல்பினையே சிவனைச் சுற்றி யானை புலி காண்டா மிருகம், எருது என்னும் நான்கு விலங்குகள் நிற்கும் தோற்றம் காட்டுகின்றது. சிந்துவெளிக் கடவுளின் தலையில் அமைந்துள்ள கொம்புகள் பிற்காலத்திற் சிவனது சிறப்புத் திருவுருவம் ஒன்றைக் குறிக்கும் நிலையில் மூவிலைச் சூலமாக மாறியது. இவற்றையெல்லாம் நோக்கும்போது பிற்காலத்திலே சிவனுக்கு அமைந்த பல அமைப்புக்களின் தோற்றநிலைகளே சிந்துவெளி முத்திரைகளிற் காணப்படுகின்றன என நாம் கருதலாம். அரப்பாவின் நாகரிகம் கி. மு. நாலாயிரத்திற்கும் மூவாயிரத் திற்கும் இடைப்பட்டது என்பர் தொல்பொருள் ஆராய்ச்சியாளர். கி. மு. 2500-க்கும் கி. மு. 1500-க்கும் இடைப்பட்டது சிந்துவெளி நாகரிகம் எனவும் அஃது ஆரியர்களால் அழிக்கப்பட்டது எனவும் ஆரியர் இந்தியாவிற் Fடியேறியfலம்».K. 1500 எனவும் சர் மார்ட்டிமர் வீலர் கூறுவர். சிந்துவெளி நாகரிகத்தின் மொகஞ் சதரோவின் கூறுகள் அந்நாகரிகத்தின் தொடக்க காலத்ததன்று; மொகஞ்சதாரோ காலத்தைக் காட்டிலும், குறைந்தது ஆயிரம் ஆண்டுகளாவது முற்பட்டிருத்தல் வேண்டும் என்பர் பேராசிரியர் இராதாகுமுதமுகர்ஜி. சிந்துவெளி மக்கள் கடவுள் வழிபாட்டிற் பயன்படுத்திய திருவுருவம் சிவலிங்கங்களே. அரப்பாவில் மட்டும் சிறியனவும் பெரியனவுமாக ஏறக்குறைய ஆயிரம் சிவலிங்கங்கள் கண்டெடுக்கப் பெற்றுள்ளன. சிறிய சிவலிங்கங்களை அக்கால மக்கள் இக்காலத்து வீர சைவர்களைப்போன்று தங்கள் கழுத்திலும் கையிலும் கட்டிக்கொண்டிருத்தல் கூடும். இதனால் சைவ சமயத்திற்கேயுரிய சிவலிங்க வழிபாடு ஐயாயிரம் ஆண்டுகட்குமுன் சிந்து வெளியிற் சிறந்து விளங்கியதெனபது நன்கு துணியப்படுதல் காணலாம். அரப்பாவிற் கிடைத்துள்ள ஆண்சிலையொன்று இடது காலைத்தூக்கி வலது காலையூன்றி நின்று நடம்புரியும் நிலையிற் காணப்படுகின்றது. இதனைச் சிவபெருமானுக் குரிய திருவுருவங்களில் ஒன்றான நடராசர் திருவுருவின் முதலுருவமாகக் கருதுவர் ஆராய்ச்சியாளர். மொகஞ்சதரோவிற் கிடைத்துள்ள பெண் வடிவங்களுள் குழந்தையை அணைத்தவண்ணம் உள்ள வடிவங்களும், அமைதியும் அருளும் பொலியும் நிலையில் அமைந்த அன்னை வடிவங்களும், காண்போர் அஞ்சத்தக்க முகத்தோற்றமடைய பெண் வடிவங்களும் காணப்படுகின்றன. இவை முறையே பெண் தெய்வத்திற்குரிய ஆக்கல், அளித்தல், அழித்தல் என்னும் முத்தொழில்புரியும் சத்தியின் நிலையைக் குறிப்பன எனவும் பிற்காலத்தில் இந்து சமயத்தின் திராவிடக்கூறாக விளங்கும் சத்தி வழிபாட்டின் மூலக் கருவாகச் சிந்து வெளியின் தாய்த் தெய்வ வழிபாடு விளங்கு கின்றதெனவும் மோனியர் வில்லியம் என்ற அறிஞர் கூறுவர். சிந்துவெளியிற் கண்டெடுக்கப்பெற்றுள்ள சில பொருள்களிற் காணப்படும் எழுத்துக்குறிகள் தமிழ் அமைப்புடையனவாகவுள்ளன வெனவும் அவை மழை மூன்(று) கண், நண்டூர், வேலூர், குரங்கர், மீனவர் முதலிய சொற்களைக் குறிக்கின்றன எனவும், பேரான்(ள்) எண்ணாள், மூன்(று) கண் என்பன சிவனைக் குறிக்கின்றன எனவும் கருதுவர் உறீராபாதிரியார். மொகஞ்சதரோவிற் கிடைத்துள்ள சுண்ணாம்புக்கல் முத்திரையொன்றில் யோகியின் உருவத்தின் இருமருங்கிலும் நாகர் இருவர் மண்டியிட்டு வணங்கும் உருவம் பொறிக்கப் பட்டிருத்தலால் மிகப்பழங்காலத்தில் சிவ வழிபாடு நாக வழிபாட்டுடன் தொடர்புடையதாய் உருவாகியதென்பது உய்த்துணரப்படும் என்பர் ஆராய்ச்சியாளர். சிந்து வெளியில் வாழ்ந்த மக்கள் வழிபட்ட தெய்வங்களாக முதற்கண் தாய்த்தெய்வத்தையும் அடுத்தபடியாக மும்முகமுடைய கடவுளையும் மூன்றாவதாகச் சிவலிங்கத்தையும் சர் ஜான் மார்ஷல் என்பார் முறைப்படுத்திக் கூறியுள்ளார். பண்டைய திராவிட மக்களிற் பெரும்பாலோர் தாய்வழி யுரிமையாகிய தாயமுறையினையே கடைப்பிடித்தனர் எனவும் அது காரணமாகவே திராவிட மக்களிடையே தாய்த்தெய்வ வழிபாடு பெருவழக்காயிருந்ததெனவும் கூறுவர் சமூகவியல் அறிஞர். பெற்றோர் வழியே பிள்ளைகள் பெறும் பொருளுரிமை தாயம் என்ற சொல்லாற் சங்கச் செய்யுட்களில் வழங்கக் காண்கின்றோம். தாயம் என்ற இச்சொல் தாய் என்ற சொல்லின் அடியாகப் பிறந்ததென்பது இங்குக் கருதத்தகுவதாகும். சங்ககாலத் தமிழர்நாகரிகத்திற்கும் சிந்துவெளியில் வாழ்ந்த மக்கள் நாகரிகத்திற்கும் இடையே சமய வழிபாடு பற்றிய தொடர்புகள் மிக நெருக்கமாகவுள்ளன. தமிழகத்தில் தொன்று தொட்டு நிலைபெற்றுவரும் சத்திவழிபாடும் இத்தொடர்பினை உறுதிப்படுத்துஞ் சான்றுகளாக அமைந்துள்ளன. சிந்து வெளியில் அகழ்ந்தெடுக்கப்பட்ட பொருள்களில் வரையப் பெற்றுள்ள எழுத்துக்குறிப்புக்கள் தமிழொடு தொடர்புடையனவாக ஆராய்ச்சி யாளர்களாற் கருதப்படுகின்றன. சிந்தனைக்கரிய சிவபரம்பொருளை மன்னுயிர்களின் சிந்தையிற் சுடர்விட்டு விளங்கும் சோதிப் பொருளாக வைத்து வழிபடும் நிலையில் முன்னைத் தவப்பெருஞ் செல்வர்களாற் பல்லாயிர ஆண்டுகட்குமுன் கண்டு வழிபடப்பெற்ற தொன்மை வாய்ந்தது, சிவலிங்கத் திருவுருவமாகும். சிவலிங்கத்தின் அடிப்பீடமாகிய வட்டக்கல் மன்னுயிர்களின் நெஞ்சத் தாமரை யினையும் அதன் நடுவே நாட்டப்பெற்றுத் தூண்வடிவில் நிமிர்ந்து தோன்றும் பாணம் நெஞ்சத் தாமரையின் உள்ளிருந்தெழுஞ் சோதியாய்ச் சுடர்விட்டொளிரும் சிவ பரம்பொருளையும் குறிக்கும் அடையாளங்களாகும். காண்பார்க்குச் சோதியாய்ச் சிந்தையுளே தோன்றுமே2 ஏதுக்களாலும் எடுத்த மொழியாலுமிக்குச் சோதிக்கவேண்டா சுடர்விட்டுளன் எங்கள் சோதி3 மனத்துள்மாயனை மாசறுசோதியை4 இரந்திரந்துருக என்மனத்துள்ளே எழுகின்ற சோதியே5 எனவும் வரும் திருமுறைத் தொடர்கள், உலக முதல்வனாகிய இறைவன் மன்னுயிர்களின் மனத்தகத்தெழுஞ் சோதியாகத் திகழுமாண்பினை நன்கு வலியுறுத்தல் காணலாம். அலகில் சோதியனாகிய முதல்வனை அகத்தே ஒளியுருவிற்கண்டு வழிபடும் அகப்பூசை முறைமையினை, மாதினையோர் கூறுகந்தாய்.................... காதன்மையாற் றொழுமடியார் நெஞ்சினுள்ளே கன்றாப்பூர் நடுதறியைக் காணலாமே6 எனவரும் திருத்தாண்டகத் திருப்பதிகத்தில் திருநாவுக்கரசர் தெளிவாக அருளிச் செய்துள்ளார். உயிர்களின் நெஞ்சக்கமலத்தே கேழில் பரஞ்சோதியாய்க் கிளர்ந்து தோன்றும் சிவபரம்பொருளைத் தம் மனத்தகத்தே கண்டு வழிபட்டு, மகிழ்ந்த தவப்பெருஞ் செல்வர்கள் தாம் கண்ட அத்தெய்வக்காட்சியை உலகமக்கள் எல்லோரும் புறத்தே கண்டு வழிபட்டு உய்திபெறுதல் வேண்டும் என்னும் உயர்ந்த குறிக்கோளுடன் புறத்தே அமைத்துக் கொண்ட திருவுருவமே சிவலிங்கத் திருமேனி யாகும். சிவலிங்கத்தின் அடிப்பீடம் உயிர்களின் நெஞ்சத்தாமரை யின் உருவாகவும் அதன் நடுவே சுடருருவில் நிமிர்ந்து தோன்றும் பாணம், காண்டற்கரிய கடவுள் தீவண்ணனாகச் சுடர்விட்டொளிரும் நிலையைப் புலப்படுத்தும் அருவமாகவும் திகழ்தலால் சிவலிங்கம் இறைவனுக்குரிய அருவுருவத் திருமேனி யாயிற்று. இந்நுட்பம். சோதியாய்த் தோன்றும் உருவமே அருவாம் ஒருவனே7 எனவரும் திருவாசகத் தொடரால் இனிது புலனாம். எத்தகையோரும் காணவொண்ணாத அருவநிலையிலுள்ள இறைவனை அன்புடை யார் எல்லாரும் புறத்தே அடையாளவுருவில் அருட்குறியாகக் கொண்டு வழிபாடு செய்தற்கு ஏற்றவண்ணம் அருவமும் உருவமுமாகிய இருதிறமும் விரவிய நிலையில் அமைந்த அருவுருவத் திருமேனியாக உலகமக்கள் எல்லோராலும் போற்றி வழிபடப் பெறுவதாயிற்று. இன்னவுரு இன்னநிறம் என்று அறிய வொண்ணாத இறைவனை அகத்திலும் புறத்திலும் வழிபட்டு உய்திபெறுதற்குரிய அருவுருவத் திருமேனியாகிய சிவலிங்கம், காணவொண்ணாத அருவினுக்கும் காணப்படும் உருவினுக்கும் காரணமாகத் திகழ்வது; காத்தற் றொழிலினனாகிய திருமாலும் படைத்தற்றொழிலினனாகிய நான்முகனும் தம்முள் மாறுகொண்டு இகலிய நிலையில் மனத்திற்கும் மாற்றத்திற்கும் முதல்வராகிய அவ்விருவரும் முறையே அடியும் முடியுந்தேடிக்காண வொண்ணாத வாறு நீண்ட தழற்பிழம்பாய்த் தோன்றியதும் அவ்விருவரும் தம் முனைப்படங்கி நாணி அன்புடையராய் வழிபட்டபோது அத்தழல் நடுவே இங்குற்றேன் என்று இலிங்க வடிவில் தோன்றியதும் ஆகிய பழஞ்செய்திகள் இலிங்கபுராணத்தே கூறப்பட்டன. செங்கணானும் பிரமனுந்தம்முளே எங்குந் தேடித் திரிந்தவர் காண்கிலார் இங்குற்றேன் என் றிலிங்கத்தே தோன்றினான் பொங்கு செஞ்சடைப் புண்ணிய மூர்த்தியே8 எனவரும் இலிங்கபுராணக் திருக்குறுந்தொகை, அட்ட மூர்த்தியாகிய இறைவனை அழல்நிற வண்ணனாகக் கொண்டு போற்றும் சிவலிங்கத் திருவுருவ அமைப்பினை இனிது புலப்படுத்துவதாகும். இங்ஙனம் அருவுருவத்திரு மேனியாகத் திகழும் சிவலிங்கத்தின் அமைப்பினையும் அதனை அகத்தும் புறத்தும் வழிபடுவார் அடையும் நற்பேற்றினையும் விளக்கும் நிலையில், காணாத அருவினுக்கும் உருவினுக்குங் காரணமாய் நீணாக மணிந்தார்க்கு நிகழ்குறியாஞ் சிவலிங்கம் நாணாது நேடியமால் நான்முகனுங்காண நடுச் சேணாருந் தழற்பிழம்பாய்த் தோன்றியது தெளிந்தாராய்9 எனச் சேக்கிழார் நாயனார் தரும் விளக்கம் இங்கு மனங்கொளத்தகுவதாகும். உலகமுதல்வனாகிய இறைவனைத் தூண் வடிவில் நடுதறியாக நாட்டி வழிபடும் வழிபாடு சங்க காலத்திற்கு முன் தமிழ் மக்களால் மேற்கொள்ளப்பெற்ற தொன்மை வாய்ந்ததாகும். இன்னவுரு இன்னநிறம் என்றறிய வொண்ணாத இறைவனைச் சிற்றூர்களிலும் பேரூர்களிலும் மக்கள் எல்லோரும் ஒருங்கு கூடும் ஊர்ப்பொது விடங்களிலும் பலரும் வழிபடும் நிலையில் தூண் வடிவில் நடுதறியாக நிறுத்தி வழிபடுதல் பண்டைத்தமிழர் மேற்கொண்ட முழுமுதற் கடவுள் வழிபாட்டு முறையாகும். ஒரு நாமம், ஓருருவம் ஒன்றுமில்லாத கடவுளைத் தூண்வடிவில் நிறுத்தி மக்கள் எல்லோரும் வேற்றுமையின்றி ஒன்றியிருந்து வழிபாடு செய்தற்குரிய தெய்வநிலையம் கந்துடைநிலை10 எனவும் பொதியில்11 எனவும் சங்கச் செய்யுட்களிற் குறிக்கப்பெற்றுள்ளது. கந்து - தெய்வம் உறையும் தறி என்பர் நச்சினார்க்கினியர்.12 கந்து கந்தம் எனவும் வழங்கும்.13 எங்கும் நிறைந்த இறைவனைத் துளக்கமில்லாத கந்துருவில் (தூண் வடிவில்) நடுதறியாக நிறுத்தி வழிபட்டு வந்த இவ்வழிபாட்டு முறையே நாளடைவில் சிவலிங்க வழிபாடாக வளர்ச்சி பெற்றதெனத் தெரிகிறது. சிவபெருமானுக்குரியனவாக வழங்கும் சிறப்புப் பெயர்களுள் தாணு (தூண்), கம்பன் என்பன. இறைவனைத் தூண்வடிவில் நடுதறியாக நாட்டி வழிபடும் வழிபாட்டு முறையில் அமைந்த சிவலிங்க வழிபாட்டினை அடியொற்றிய காரணப்பெயர்களாகும். நாணமுடைவேதியனும் நாரணனும் காண்பரிய தாணு14 கன்றாப்பூர் நடுதறி15 பொழிலேழுந் தாங்கி நின்ற கற்றூண்காண்16 மனந்திருத்தும் மழபாடி வயிரத்தூணே17 காலகாலனைக் கம்பன் எம்மானை18 தனதன்நற்றேழா சங்கரா சூலபாணியே தாணுவேசிவனே19 என வரும் திருமுறைத்தொடர்கள் இக்கருத்தினை வலியுறுத்தும் சான்றாக அமைந்துள்ளமை இங்கு ஒப்புநோக்கி யுணர்தற் குரியதாகும். நாடு நலம்பெறப் பகைவரொடு பொருதுவென்று தம் இன்னுயிர் துறந்து தெய்வநிலைபெற்ற தறுகண்மறவருடைய பெயரும் பீடும் பொறித்து நடப்பெற்ற கல்லினைத் தெய்வமாக நட்டுப் போற்றி வழிபடும் நடுகல்வழிபாடு, எல்லாம் வல்ல முழுமுதற்கடவுளைக் கற்றூணாக (நடுதறியாக) நிறுத்திப் போற்றும் சிவலிங்க வழிபாட்டினை அடியொற்றித் தோன்றியதெனக் கருத இடமுண்டு. வீரர்களை நினைவு கூரும் நடுகல் வழிபாட்டில் அவ்வீரர்களுக்கு விருப்பமான தோப்பிக் கள்ளோடு ஆட்டினைப் பலியாகக் கொடுத்து வழிபடுதல் மரபு. கந்துடை நிலையாகிய பொதியிலில் நிகழும் சிவலிங்க வழிபாட்டில் எவ்வுயிர்க்கும் உயிர்க்குயிராய் உள்நின்று அருள் சுரக்கும் பேரருளாளனும் அறவுருவினனும் ஆகிய இறைவனுக்கு ஒவ்வாத ஊனையும் கள்ளையும் விலக்கி எல்லாவுயிர்களிடத்தும் அன்புடையராய் அன்பே வடிவாகிய இறைவனை நினைவு கூர்ந்து போற்றும் நிலையில் அம்முதல்வனை நெல்லும் மலரும் தூவிப் போற்றும் தூய வழிபாட்டினை மேற்கொண்டொழுகுதல் தமிழகத்தில் தொன்று தொட்டு நிலைபெற்று வரும் கடவுள் வழிபாட்டு நெறிமுறையாகும். தெய்வநிலை பெற்ற வீரர்க்கு ஊனும் கள்ளும் படைத்துப் போற்றும் நடுகல் வழிபாடும், உயிர்ப்பலியின்றி நறுமலர் தூவிப் போற்றும் கடவுள் வழிபாடும் ஆகிய இவ்விருதிற வழிபாடுகளும் நாட்டுப்புறங்களிலும் நகர் நடுவிலும் சங்ககாலத்திற் சிறப்பிடம் பெற்றிருந்தன என்பதும், மறக்குடியில் தோன்றிய மக்கள் தமக்குச் சிறப்புரிமையுடைய தெய்வ வழிபாடாக நடுகல் வழிபாட்டினை மேற்கொண்டனர் என்பதும், ஒன்னாத் தெய்வர் முன்னின்று விலங்கி ஒளிறேந்து மருப்பிற்களிறெறிந்து வீழ்ந்தெனக் கல்லே பரவினல்லது நெல்லுகுத்துப் பரவுங் கடவுளும் இலமே20 என மறக்குடியினர் தாம் அணியும் பூவும், உண்ணும் உணவும், தமக்குப் பணி செய்யும் குடியும், வணங்கந் தெய்வமும் பற்றிக் கூறுமுறையிலமைந்த புறநானூற்றுப் பாடலால் இனிது புலனாகும். எனவே சங்க காலத்தில் மறமும் அறமும் பற்றிய மக்களது குடிநிலை வாழ்க்கைக்கு ஏற்ப வழிபடும் சிறு தெய்வ வழிபாடும் நெல்லும் மலரும் தூவி வழிபடும் பெருந்தெய்வ வழிபாடும் தமிழகத்தில் ஒப்ப நிகழ்ந்தன எனக் கொள்ளுதல் ஏற்புடையதாகும். இருளிலும் குளிரிலும் கடுவெயிலிலும் அகப்பட்டு அல்லலுற்ற பண்டைக்கால மக்கள் இருள் நீங்க ஒளிவழங்கும் செஞ்ஞாயிற்றினையும் குளிர்நீக்கி வெம்மைதரும் தீயினையும் உடல்வெம்மை நீங்கத் தண்ணிலவு பொழியும் வெண் திங்களையும் கண்கண்ட தெய்வங்களாகக் கொண்டு போற்றி வழிபடுவாராயினர். ஞாயிறு திங்கள் தீ என்னும் இயற்கைப் பொருள்களைத் தெய்வமாகக் கருதி வழிபடும் ஒளி வழிபாடுகளுள் முதற்கண்ணதாகிய ஞாயிற்று வழிபாடு என்பது உலகிற் பல சமயத்தாராலும் பன்னெடுங்காலமாக மேற்கொள்ளப்பட்டு வரும் பொதுமை வாய்ந்ததாகும். இவ்வுண்மை. உலகம் உவப்ப வலனேர்பு திரிதரும் பலர்புகழ் ஞாயிறு கடற்கண் டாஅங்கு ஓவற விமைக்குஞ் சேண்விளங் கவிரொளி21 எனச் செம்புலச் செல்வராகிய நக்கீரனார் தம்மாற் போற்றப் பெறும் முருகப் பெருமானது திருமேனியின் பேரொளிக்கு உவமையாக எடுத்தாளும் ஞாயிற்றினைப் பலர்புகழ் ஞாயிறு என அடைகொடுத்து ஓதினமையால் இனிது புலனாகும். பலர் புகழ் ஞாயிறு என்னும் இத்தொடர்க்கு எல்லாச் சமயத்தாரும் புகழும் ஞாயிறு என நச்சினார்க்கினியர் பொருள் வரைந்துள்ளார்.22 ஆசிரியர் தொல்காப்பியனாரும் தெய்வஞ்சுட்டிய பெயர்நிலைக் கிளவிகளுள் ஒன்றாக ஞாயிறு என்னும் பெயரைக் குறித்துள்ளார்.23 எனவே ஞாயிற்று வழிபாடு என்பது உலக முழுவதும் பரவி வாழும் எல்லாச் சமயத்தாராலும் மேற்கொள்ளப் பெற்றுவரும் பொதுமை வாய்ந்ததாகப் பண்டைத் தமிழ் மக்களாற் கொள்ளப்பெற்றதென்பது நன்கு புலனாகும். பகல் செய்யும் ஞாயிற்றையும் இரவில் தண்ணொளி பரப்பும் திங்களையும் கடுங்குளிரை நீக்கி உணவினைப் பதஞ்செய்யும் தீயினையும் தெய்வமாகப் கருதிப் போற்றும் இயற்கைப் பொருள் வழிபாடு உலக மக்களிடையே முதன் முதல் தோன்றியிருத்தல் வேண்டும் என்பது உலகிற் பல நாடுகளிலும் நிலவி வரும் தொன்மை வழிபாட்டு முறைகளால் நன்கு துணியப்படும். மன்னுயிர்களுக்கு ஆக்கமும், அழிவும் நல்கும் ஆற்றல் வாய்ந்த ஞாயிறு திங்கள் தீ வளி மழை முதலிய இயற்கைப் பொருள்களையே தெய்வமெனக் கொண்டு வழிபட்ட பண்டைக்கால மக்கள், உலக இயக்கத்தினைக் கூர்ந்துணரும் அறிவும் இயற்கைப் பொருள்களால் அவ்வப் பொழுது நேரும் இடர்களிலிருந்து தப்புதற்குரிய ஆற்றலும் தம்முள்ளத்துத் கிளர்ந்தெழுந்த நிலையில் இப்பொருள்களெல்லா வற்றையும் தன்னகத்தடக்கியுள்ள அண்டத்தொகுதியினையும் உலகப்பரப்பில் வாழும் மன்னுயிர்த் தொகுதியினையும் இயக்கி நிற்பதொரு முழு முதற்பொருளாகிய தெய்வம் ஒன்றுண்டு எண்ணுந் தெளிவினைப் பெறுவாராயினர். இந்நிலையில் முன்னர் வழிபடப்பெற்ற ஞாயிறு திங்கள் தீ முதலிய இயற்கைப் பொருள் களனைத்தும் உலகுயிர்கள் எல்லாவற்றையும் உயிர்க்குயிராய் உள்நின்றியக்கும் பெருந் தெய்வத்தின் பேருருவத்தின் அங்கங்களாகக் கொண்டனர். ஞாயிறு திங்கள் தீ என்னும் முச்சுடர்களும் இறைவனுடைய கண்களாகவும் பல்லுயிர்களும் தங்கி வாழ்தற்கு ஆதாரமாகிய பெருநிலம் சேவடியாகவும் பரந்திடங்கொடுக்கும் விசும்பு மெய்யாகவும் கடலே உடையாகவும் அமைய இவ்வாறு எல்லாம் வல்ல இறைவன் உலகமேயுருவமாகக் கொண்டு திகழ்கின்றான் எனத் தெளிந்து அம்முதல்வனது பேருருவ அமைப்பினை த் தம் உள்ளத்துட்கொண்டு வழிபடுவாராயினர். இத்தகைய பெருந்தெய்வத்தின் பேருருவ வழிபாட்டினை விளக்கும் நிலையில் அமைந்தது, மாநிலஞ் சேவடி யாகத் தூநீர் வளைநரல் பௌவம் உடுக்கை யாக விசும்பு மெய்யாகத் திசைகை யாக இயன்ற வெல்லாம் பயின்றகத் தடக்கிய வேத முதல்வ னென்ப தீதற விளங்கிய திகிரி யோனே24 எனவரும் நற்றிணைக் கடவுள் வாழ்த்துப் பாடலாகும். காண்டற்கு அரிய கடவுளை உயிர்களின் அகத்தும் உலகின் புறத்தும் ஒளியுருவில் வைத்து வணங்கும் வழிபாடு நம் நாட்டில் பன்னூறாண்டுகளாக நிலவி வருகின்றது. உலகின் புறத்தே ஒளிப்பிழம்பாகத் திகழும் ஞாயிற்றை இறைவன் திருமேனிகளுள் ஒன்றாகக் கொண்டு வழிபடும் வழிபாடு மிகவும் தொன்மை வாய்ந்ததாகும். எல்லாம் வல்ல சிவபெருமான் நிலம், நீர், நெருப்பு, வளி, விசும்பு, ஞாயிறு, திங்கள், ஆன்மா என்னும் எண்பொருள்களையும் தனக்குரிய திருமேனியாகக் கொண்டு திகழ்தலின் அம்முதல்வனுக்கு அட்டமூர்த்தி யென்னும் பெயர் வழங்குவதாயிற்று. அட்டமூர்த்தி அழகன்25 நிலம் நீர் நெருப்புயிர் நீள் விசும்பு நிலாப்பகலோன் புலனாய அமைந்தனோ டெண்வகையாய்ப் புணர்ந்து நின்றான்26 எனவரும் திருமுறைத் தொடர்கள் இறைவன் எண் பேருருவினனாகத் திகழுந் திறத்தினை நன்கு விளக்குவனவாகும். சிவபெருமானுக்குரிய எண்பேருருவங்களில் எல்லாருங்காண முதன்மை பெற்று உலகு விளங்கவிரொளியுடையதாய்த் திகழ்வது ஞாயிறொன்றே யாதலின் கதிரவன் வழிபாடு கற்றோர் கல்லாதார் ஆகிய எல்லா மக்களாலும் சிறப்பாக மேற்கொள்ளப் பெறுவதாயிற்று. இது குறித்தே பகலவன் வணக்கத்தின் மேலதான காயத்திரி மந்திரமாகிய இதனையே வேதியர் பலரும் காலை நண்பகல் மாலை என்னும் மூன்று பொழுதுகளிலும் ஓதிச் சிறப்பாக வழிபாடு செய்யக் காண்கிறோம். காயத்திரி மந்திரத்திற் பர்க்கன் என்ற பெயராற் போற்றப் பெறுவோன் எல்லாம்வல்ல முழுமுதற் கடவுளாகிய சிவபெருமானேயென்பது மைத்திராயணீயோப நிடதத்திலும் வடமொழி அமரநிகண்டிலும் தெளிவுறுத்தப் பெற்றுள்ளது. இந்நுட்பம், அருக்கன் பாதம் வணங்குவ ரந்தியில் அருக்க னாவா னரனுரு வல்லனோ இருக்கு நான்மறை யீசனை யேதொழும் கருத்தி னைநினை யார்கன் மனவரே27 எனத் திருநாவுக்கரசர் அருளிய திருப்பாடலால் இனிது புலனாதல் காணலாம். இருக்கு வேதத்திலுள்ள பதிகங்கள் யாவும் ஆரிய மாந்தராலேயே இயற்றப்பெற்றன அல்ல. இந்திரன் வருணன் முதலான தம் படைத் தலைவர்களின் ஆவிகளின் மேல் ஆரியர் பாடிக் கொணர்ந்த பழம் பாடல்களோடு அவர்களை நன்னெறிப் படுத்தல் வேண்டி இங்குள்ள திராவிட முனிவர்கள் பாடிச் சேர்த்த பதிகங்களும் இருக்கு வேதத்தில் உள்ளன என்பதும், காயத்திரி மந்திரத்தை இயற்றி அதனை இருக்கு வேதத்திற் சேர்த்து அவ்வேதத்திற்கு உயிர்த் தன்மையும் உயர்வுங் கொடுத்தவர் விசுவாமித்திரர் என்னும் பரதகுல அரச முனிவரேயென்பதும் பொது நிலைக்கழக ஆசிரியர் மறைமலையடிகளார் முதலிய அறிஞர் பெருமக்கள் ஆராய்ந்து கண்ட உண்மைகளாகும்.28 வாழ்க்கைக்கு நலந்தரும் ஒளியும் வெம்மையும் வழங்கும் தீயினைத் தோற்றுவிக்க எண்ணிய பண்டைக்கால மக்கள், மரக்கட்டைகள் இரண்டினைக் கொண்டு ஒன்றோடொன்று உரசித் தேய்த்து நெருப்பினை உண்டாக்கி அதனாற் பச்சையுணவுப் பண்டங்களைப் பதமாக்கிச் சமைத்துண்ணவும் அதனொளியால் இருள் செறிந்த இராப் பொழுதில் நச்சுயிர்கட்கும் கொலை விலங்குகட்கும் அஞ்சாது விலகியொழுகவும் தெரிந்து கொண்டார்கள். அத்தகைய நெருப்பின் ஒளிப்பிழம்பினையே தமக்கு அண்மையில் வளர்த்து மனக்களிப்புடன் வணங்கத் தலைப்பட்டனர். பெரிய மரத்தின் நிழலின் வட்டமாகக் குழியினைத் தோண்டி அதன்கண் தீயினை வளர்த்து அதற்கு நெற்பொரியும் மலரும் தூவி வழிபட்டனர். நாட் செல்லச் செல்ல அத்தீயினைத் தொடுதற்கும் நீராட்டி வழிபடுதற்கும் ஏற்ப அத்தீச்சுடரையொத்து நீண்டு குவிந்ததோர் சுடருருவினைக் கருங்கல்லில் அமைத்து வேள்விக் குண்டத்தைக் குறிக்கும் முறையில் வட்டவடிவில் அமைக்கப்பட்ட கருங்கற்பீடத்தில் சுடருருவாகிய அக்குழவியினை நிலைபெறச் செய்து நீராட்டி மலர் தூவி உணவு படைத்து வழிபட்டனர் எனவும் அத்திருவுருவே சிவலிங்கம் என்ற பெயரால் வழங்கப் பெறுவதாயிற்று எனவும் கருதுவர் மறைமலையடிகளார்.29 வேள்விக்குண்டத்தில் தீயினை வளர்த்து வேத மந்திரங்கள் கூறித் தீக்கடவுள் மூலமாக இந்திரன் முதலிய தேவர்கட்கு ஆடு முதலிய உயிர்களை வேள்விற் பலியிட்டு வணங்கும் தீ வழிபாடு ஆரிய வினத்தார்க்குரியதொன்றாகும். இவ்வழிபாட்டில் தீயே தெய்வமாகப் போற்றப் பெறுகின்றது. வேதமந்திரங்களால் வேள்வி செய்வோர் வேள்விக் குண்டத்தில் வளர்த்த தீயினையே தெய்வமாகக் கொண்டு போற்றுதல் சிறப்புடைய வழிபாடன்று எனவும், தூய தீயினையே தனது திருமேனிகளுள் ஒன்றாகக் கொண்டு மன்னுயிர் களுக்கு அருள்புரியும் தெய்வமாவான் அட்ட மூர்த்தியாகிய சிவபரம்பொருளே யாதலின் வேள்விக் குண்டத்தில் வளர்க்கப்பெறும் தீ இறைவன் திருமேனிகளுள் ஒன்றெனக் கொண்டு வழிபடுதலே பொருத்தமுடையது எனவும் இவ்வுண்மையுணராது செய்யப்படும் வேதவேள்விச் சடங்குகள் பயனற்றன எனவும் அறிவுறுத்தும் முறையில் அமைந்தது. எரிபெ ருக்குவ ரவ்வெரி யீசன துருவ ருக்கம தாவ துணர்கிலார் அரிய யற்கரி யானை யயர்த்துபோய் நரிவி ருத்தம தாகுவர் நாடரே30 எனவரும் திருநாவுக்கரசர் அருளிய திருக்குறுந்தொகை யாகும். சிவலிங்க வழிபாடு வேதகாலத்திற்கு முற்பட்ட தென்றும் சிந்து மக்களிடையே பரவியிருந்ததென்றும் வைணவ சைவ சமயங்களின் ஆராய்ச்சி நூல் தெரிவிக்கின்றது. கற்காலப் பொருள்களில் சிவலிங்கங்களும் கிடைத்துள்ளன என்பதால் வேத காலத்திற்கு முற்பட்டது சிவலிங்க வழிபாடு என ஆர். ஜி. பந்தர்க்கரும் கருதுகின்றனர். மனித இனம் வாழ்ந்திருக்கக்கூடிய இப் பேரண்டத்தின் பெரும் பகுதியில் சிவலிங்க வழிபாடு சிறப்பாகப் பரவி இருந்திருக்கிறது. அது, எகிப்து, சிரியம், பாரசீகம், சிறிய ஆசியா, கிரேக்கம், இத்தாலி ஆகிய நாடுகளில் நெடுங்காலமாகத் தழைத்தோங்கியிருந்தது. அமெரிக்க நாட்டை முதன்முதலில் பெயின் நாட்டவர் கண்டுபிடித்தபோது, தெய்வவழிபாட்டிற்கு மிகத் தூய்மையானதாகவும் சமய நெறிக்கு மிக உயர்ந்ததாகவும் உள்ள பொருளாகச் சிவலிங்க வழிபாட்டினை அவர்கள் அங்கே கண்டனர். இதன் பண்பாடு மனித இனத்தை உயர்த்தக் கூடுமெனக் கருதத்தக்க கொள்கையுடனும் தத்துவத்துடனும் இணைந்துள்ளது என மேனாட்டுப் பேராசிரியராகிய வெட்ரோப் என்னும் அறிஞர் சிறப்பித்துக் கூறியுள்ளார். பண்டைநாளில் உலக முழுவதும் பரவியிருந்த இச்சிவலிங்க வழிபாடு இப்பொழுது இந்திய நாட்டளவிலும் தமிழர்கள் வாழும் அயல்நாடுகளிலும் ஆங்காங்கே நிலைபெற்றுள்ளது. தென்னாட்டில் குடிமல்லம், குடுமியான்மலை முதலிய இடங்களிலுள்ள சிவலிங்கங்கள் கி. மு. இரண்டாம் நூற்றாண்டினவை என்பர் ஆராய்ச்சியாளர். அசோகர் கி. மு. 249ஆம் ஆண்டில் தம்மகள் சாருமதி என்பவளுடன் நேபாளத்திற்குச் சென்றபோது அங்குப் பசுபதிநாதர் என்னும் சிவபெருமான் பெயரால் பாசுபதச் சைவமடம் ஒன்று இருந்ததாகவும் சாருமதி அம்மடத்திற்சேர்ந்து துறவு நிலையை மேற்கொண்டதாகவும் வரலாறு கூறுகின்றது. நேபாளம் இக்காலத்திலும் சைவ சமயத்தைப் போற்றும் நாடாக விளங்குகின்றது. வடக்கே இமயம் முதல் தெற்கே குமரி வரையுள்ள இந்தியப் பெருநிலப்பரப்பினுள் பன்னிரண்டு சோதிலிங்கங்கள் இக்காலத்தும் இந்நாட்டு மக்களால் சிறப்பாக வழிபடப் பெற்றுவருதல், சிவலிங்க வழிபாடு நாடு முழுவதும் பரவியுள்ள திறத்தினையும் இந்திய நாட்டில் உள்ள தெய்வ வழிபாடுகளுள் தொன்மையும் தலைமையும் வாய்ந்தது சிவலிங்க வழிபாடு என்பதனையும் நன்கு வலியுறுத்துவதாகும். இலிங்க அடையாளம் தீ மேனியனாகிய சிவபெருமானது ஒளிப்பிழம்பாகிய அருவுருவத் திருமேனியைக் குறிப்பது, தமிழகத்தில் தொடக்க காலத்தில் நடுதறியாகத் தூணுருவில் வழிபடப் பெற்றது. அண்டம் பிண்டம் அகண்டம் ஆகிய அனைத்திலும் அறியாமை இருளை நீக்கி ஞானவொளி பரப்பும் சோதிப் பிழம்பாகக் கருதி வழிபடப் பெறுவது. இவ்வுண்மை வடமொழியிலுள்ள இலிங்க புராணத் திருக்குறுந்தொகையாலும் இனிது விளங்கும். சைவ சமயத்திற் பிறந்து சிவபெருமானை வழிபட்டு வந்த தாய் தந்தை ஆகியோர்க்குத் தவப்புதல்வராகத் தோன்றியவர் ததாகதர் என்னும் சிறப்புப் பெயரினராகிய புத்தர் பெருமான். இவர் குழந்தையாயிருந்தபோது தம் தந்தையருடன் சிவபிரான் கோயிலுக்குச் சென்றதாகப் பழைய கல்வெட்டு ஒன்று கூறுகின்றது. கௌதம புத்தராகிய இவர் தமது அரச வாழ்வினைத் துறந்து மன்னுயிர்கள்பால் அருளுடையராய் உலகம் உய்ய அறிவுரைகளை உபதேசித்து வந்தார். ஆரியப் பார்ப்பனர் வேட்டுவந்த உயிர்க்கொலை வேள்விகள் நிகழவொட்டாமல் தடுத்து அருளொழுக்க நெறியினை விரைந்து பரவச் செய்தார் என்பது வரலாறு. புத்தசமயத்தினை இந்திய நாட்டிலும் கடல்கடந்த வெளி நாடுகளிலும் பரப்பிய வேந்தர் பெருமானாகிய அசோகன், சிவபெருமானையே வழிபட்டவன் என்பது வின்சன்மித் என்னும் வரலாற்று ஆசிரியர் கூற்றால் இனிது விளங்கும். ஆரியர் இந்திய நாட்டிற் குடிபுகுதற்கு நெடுங்காலத்திற்கு முன்பே சிவலிங்க வழிபாடு சிறந்து விளங்கிய தென்பதற்குப் பஞ்சாப் மாநிலத்தில் அரப்பா, முகிஞ்தரோ ஆகிய இடங்களில் அகழ்ந்தெடுக்கப் பெற்றுள்ள சிவலிங்கங்களே சான்றாக உள்ளன. இந்நாட்டிற் குடி புகுந்த ஆரியரின் முன்னோர்கள் தீ மின்னல் இடி மழை முதலிய அஞ்சத்தகும் இயற்கைப் பொருள்களையும் தம் குல முன்னோராகிய இந்திரன் முதலியோரையும் தெய்வமாகக் கொண்டு தம் முன்னோர் பாடிய பாடற்றொகுதியாகிய வேத மந்திரங்களாற் பலவகை வேள்விகளைச் செய்து அவ்வேள்விகளிற் பசு ஆடு முதலிய விலங்கனிங்களைக் கொன்று பலியாக இட்டு வழிபட்டனர். வேதநெறிப்படி ஆரியர்கள் நிகழ்த்திய இவ்கேள்விகள் யாவும் உலகிற்கு முழுமுதற் கடவுள் ஒன்றே யென்னும் மெய்யுணர்வின் திறத்தாற் செய்யப்பட்டன அல்ல; பகைவர்காளல் தமக்கு நேரும் அச்சங்காரணமாகவும் தமது பகைவரையழித்து இவ்வுலகிற் பல்வேறு நுகர்ச்சிகளையும் தாமே பெற்று மகிழ்தல் வேண்டும் என்னும் ஆசை காரணமாகவும் செய்யப் பட்டனவே. ஆரியர் இந்நாட்டிற் குடியமர்ந்தநிலையில் மக்கள் தாம்தாம் பெறவேண்டிய பதவிகளை விரும்பிப் பசு ஆடு முதலியவற்றைக் கொன்று ஊனுங்கள்ளும் படைத்துச் செய்யப்படும் வேள்விகளை இந்நாட்டிந் றோன்றிய அருளாளர்களாகிய கௌதம புத்தர், மகாவீரர் முதலிய பெருமக்கள் கடுமையாக எதிர்த்தனர். அப்பெருமக்கள் கொலை வேள்விகளைக் கண்டித்து மக்களுள்ளத்தே மெய்யுணர்வும் எல்லாவுயிர்கட்கும் இன்னல் செய்யாமையாகிய அருளொழுக்கமும் நிலைபெறச் செய்தனர். உயிர்க்கொலை சூழும் வேதவேள்விகளைக் கண்டிக்கும் நிலையில் அப்பெருமக்களால் வடநாட்டில் அறிவுறுத்தப் பெற்ற தத்துவக் கொள்கைகள் முறையே பௌத்தமும் சமணமும் ஆகும். வடநாட்டிற் புத்த சமண மதங்களின் தாக்குதலால் வலிவிழந்த ஆரியர்களிற் சிலர் தென்னாடு போந்து எழுதாக்கிளவியாகத் தாம் ஓதிவரும் வேத மந்திரங்களின் பயிற்சியினால் தமிழ் வேந்தர்களால் நன்கு மதிக்கப்பெற்று இராசசூயம் முதலிய வேள்விகளைத் தமிழகத்திலும் செய்யத் தொடங்கினர். அந்நிலையில் வடநாட்டிற் றோன்றிய புத்த மத்தினைப் பின்பற்றிய சான்றோர்களும் சமண மதங்களைப் பின்பற்றிய சான்றோர்களும் தமிழகத்திற் சிற்றூர்களிலும் பேரூர்களிலும் நிலைகொண்டு அருட்பண்புக்கு மாறாக ஆரியர்கள் நிகழ்த்தும் வேத வேள்விகளைக் கண்டித்துரைப்பாராயினர். இவ்வாறு வடநாட்டிலும் தென்னாட்டிலும் வேத வேள்விகட்குக் கடுமையான எதிர்ப்புத் தோன்றுதலைக் கண்ட ஆரியர்கள் வேதநெறிப்படி வேள்விகளைச் செய்யும் வைதிக நெறியே தமக்குரியது எனக் கொண்ட தமது கோட்பாட்டினைச் சிறிது மாற்றிக் கொண்டு உலகுயிர்களை உள் நின்றியக்கும் முழுமுதற் பொருள் ஒன்று உண்டு என இந்நாட்டு முன்னோர் வலியுறுத்திய தெய்வங் கொள்கையினையும் உடன்பட்டு ஏற்றுக் கொண்டனர் எனத் தெரிகிறது. வேதம் அநாதி எனவும் அதன்கண் விதிக்கப்பட்ட வேள்விச் சடங்குகளே இம்மை மறுமையின்பங்களைத் தரவல்லன எனவும் கூறிவந்த வைதிக சமயத்தார் புத்த சமண மதங்களால் வேத வேள்விச் சடங்குகள் கடுமையாக மறுக்கப்பட்ட நிலையில் வேள்வியிற் பசுக் கொலையைப் பெரிதுந் தவிர்க்க முயன்றனர்; வேதங்கள் சிவபெருமானால் அருளிச் செய்யப்பெற்றனவே எனவும் சிவபெரு மானை முழுமுதற்கடவுளாகக் கொண்டு ஊன்பயிலாத தூய வேள்வி செய்தலே எல்லா நலங்களையும் தரும் எனவும் சிவனை முழுமுதற் பொருளாகக் கொண்டு செய்யப்படும் வேள்வி நெய்யினால் வேட்கப்பெறும் ஊன் பயிலாவேள்வியாய் அமைதல் நன்றெனவும் கொண்டனர். தம் கொள்கைகளை யெதிர்த்த புத்தர் சமணர்களைத் தருக்கநூல் முறையில் வென்று தமிழகத்தில் நிலவிய தெய்வங் கொள்கையாகிய சிவநெறியின் சார்பினைப் பெற்றுத் தமது வைதிக நெறியினையும் தமிழகத்தில் நிலைபெறச் செய்து கொண்டார்கள். இச்செய்தி, நன்றாய்ந்த நீணிமிர்சடை முதுமுதல்வன் வாய் போகாது ஒன்று புரிந்த ஈரிரண்டின் ஆறுணர்ந்து ஒரு முதுநூல் இகல்கண்டோர் மிகல் சாய்மார் மெய்யன்ன பொய்யுணர்ந்து பொய்யோராது மெய்கொளீஇ மூவேழ்துறையு முட்டின்றுபோகிய உரைசால் சிறப்பின் உரவோர் மருக நிலைக்கொத்த நின் துணைத் துணைவியர் நீர் நாண நெய்வழங்கியும் எண்ணாணப் பலவேட்டும் மண்ணாணப் புகழ்பரப்பியும் அருங்கடிப் பெருங்காலை விருந்துற்ற நின் திருந்தேந்துநிலை என்றுங் காண்கதில் யாமே31 எனச் சோணாட்டுப் பூஞ்சாற்றூர்ப் பார்ப்பான் கவுணியன் விண்ணந்தாயனை ஆவூர்மூலங்கிழார் பாடிய புறநானூற்றுப் பாடலால் இனிது புலனாகும். இவ்வாறு வேதநெறியும் மிகுசைவத் துறையும் இணைந்து வளம்பெறவும் வைதிக சைவநெறியினைப் பழித்துரைக்கும் புத்தம் சமணம் முதலிய புறச்சமயங்கள் தலைமடங்கவும் தனது கல்வித் திறத்தாலும் தூய வேள்வியாலும் இறை வழிபாட்டினாலும் கடைச் சங்ககாலத்திற் புகழ் பரப்பி வாழ்ந்த அருமறையந்தணன் கவுணியர் கோத்திரத்திற் பிறந்த விண்ணந்தாயன் என்பதனை மேலே காட்டிய புறப்பாடலில் ஆவூர் மூலங்கிழார் தெளிவாக விளக்கியுள்ளமை காணலாம். இவ்வாறு தமிழகத்திலே பண்டைக் காலத்திலேயே வைதிக சைவ நெறியினை மேற்கொண்டு வாழ்ந்த அந்தணன் விண்ணந்தாயன் பிறந்தகௌணிய கோத்திரத்தில் வேதநெறி தழைத்தோங்க மிகுசைவத் துறைவிளங்கக் கி. பி. ஏழாம் நூற்றாண்டில் காழிப்பதியில் தோன்றிய அருளாசிரியர் திருஞானசம்பந்தப் பிள்ளையார் என்பது இங்கு ஒப்பு நோக்கியுணரத் தகுவதாகும். இந்திய நாட்டில் முதன்முதற் குடியேறிய பழைய ஆரியர்கள் ஆடு முதலிய விலங்கினங்களைக் கொன்று ஊனுங் கள்ளும் படைத்துச் செய்த வேள்விகட்கும் புத்த சமண மதங்கள் தோன்றிக் கொலை வேள்விகளைக் கண்டித்த நிலையில் இடைக்காலத்தில் வாழ்ந்த நான்மறை முனிவர்கள் எல்லாம் வல்ல இறைவனைத் தீயுருவினனாக அமைத்து நெய்யினைச் சொரித்து நெல்லும் மலரும் தூவி வழிபட்ட முத்தீவேள்விகட்கும் இடையேயுள்ள வேறுபாடு பெரிதாகும். முன்னர்க் குறிக்கப்பட்ட பண்டை ஆரியர்களின் வேதவேள்வி கௌதமபுத்தர் மகாவீரர் முதலிய அருளாசிரியர்களால் வெறுத்தொதுக்கப்பட்ட கொலை வேள்வியாகும். பின்னர்க் குறித்த நான்மறை முனிவர் இயற்றிய முத்தீவேள்வி தீவண்ணனாகிய சிவபெருமானை முழுமுதற்கடவுளாகக் கொண்டு இயற்றப்பெறும் தூய வேள்வியாகும். இவை இவற்றிடையேயமைந்த அடிப்படையான வேறுபாடுகளாகும். ஆரியக் குழுவினனாகிய தக்கன் செய்த வேள்வி சிவபரம்பொருளையுடன்படாத நிலையிற் சிதைவுற்ற வைதிக வேள்வியாதலும் சங்க காலத்தில் தமிழ்நாட்டிற் கவுணியன்விண்ணந்தாயன் செய்த வேள்வி சிவபெருமானைப் போற்றும் சைவவேள்வியாதலும் இங்கு நோக்கத்தக்கன. இந்திய நாட்டில் ஆரியர் குடியேறுவதற்குமுன் நிலைபெற்ற கடவுட் கொள்கை முதலிய திராவிடருடைய வாழ்க்கை முறைகளும் ஆரியருடைய வைதிக ஒழுகலாறுகளும் சங்ககாலத்திலும் அதனையொட்டிய காலத்திலும் தம்முள் ஒன்றோடொன்று உறழ்ந்து கலப்புற்ற திறத்தினைத் தென்னகத்தில் தோன்றிய தொல்காப்பியம் சங்கவிலக்கியம் முதலிய தமிழ்த் தொன்னூல்களும் வடநாட்டில் தோன்றிய உபநிடதம் முதலிய வடமொழி மெய்ந்நூல்களும் நன்கு புலப்படுத்துகின்றன. வேதத்திற்குப் புறம்பாக வடநாட்டிற் கிளைத் தெழுந்த புத்தம் சமணம் ஆகிய சமயங்கள் தமிழ்நாட்டிற் புகுந்து மெல்லமெல்லப் பெருவழக்குப் பெற்றதனைத் தொடர்ந்து ஆரியரது வைதிக சமயமும் தமிழ்நாட்டில் தொடர்ந்து நிலைபெறுதற்குரிய வழி வகைகளைக் காண்பதாயிற்று. வேத வழிப்பட்ட வேள்விச் சடங்கு களையே வற்புறுத்தி வந்த வைதிக சமயத்தார் தமது கொள்கை நாட்டில் தனித்து நிலைபெறுதற்குரிய வன்மையில்லாதது என்பதனைத் தெளிவாகவுணர்ந்து கொண்டு நெடுங்காலமாக இந்நாட்டு மக்களுள்ளத்திலே நிலைபெற்று வளர்ந்துள்ள சைவம், வைணவம் முதலிய தெய்வங் கொள்கையின் சார்பினைப் பெற்று நாட்டில் நிலையாக வேரூன்றி நிலைபெறுவாராயினர். வேதநெறிக்கு மாறான பௌத்த சமண மதங்கள் தமிழ்நாட்டில் அரசியலாட்சியில் வேந்தர்களின் சார்பினைப் பெற்று வைதிக நெறியை மட்டுமன்றித் தமிழ் மக்களது தெய்வங்கொள்கையினையும் கீழ்ப்படுத்த முயன்ற பிற்காலத்தில் வேதநெறிக்குப் புறம்பான புத்த சமண மதங்களுக்கும் வைதிகநெறியோடிணைந்த சைவ வைணவ சமயங்கட்கும் நேரடியான போர் மூண்டது. அதன் பயனாகப் புத்தம் சமணம் ஆகிய சமயங்கள் வீழ்ச்சியடைவனவாயின. இடைக்காலத்தில் வாழ்ந்த ஆரியர்கள் திராவிடச் சான்றோரை யடுத்துப்பெற்ற மெய்ப்பொருளுணர்வினால் வேள்வியில் தாம் முன்னர்ச் செய்து போந்த பசுக்கொலையை ஒழித்துத் தமது வேள்விச் சடங்கினைக் கடவுள் வழிபாட்டுடன் தொடர்புபடுத்துவாராயினர். அதன் பயனாக வேள்விக்குண்டத்திற்கும் அதன்கண் வளர்க்கப்பெற்ற தீச் சுடருக்கும் அறிகுறியாகச் சிவலிங்கத் திருமேனியையும் அதன் எதிரே இறைவனைச் சென்றணுகும் தூய உயிருக்கும் முன்னர் வேள்விக் களத்திலே வெட்டப்பட்ட மாட்டிற்கும் அதனைப் பலியிட்ட மேடைக்கும் அடையாளமாக நந்தியின் உருவையும், அதன் பின்னர்ப் பலிபீடத்தையும் கல்லிற் செய்து அமைத்தனர். ஆரியர் வருகைக்கு முன் பண்டைக் குடிமக்களால் மரநீழலிற் சிவலிங்கத் திருவுருவம் மட்டுமே வைத்து வழிபடப் பெற்றது. ஆரியக்குருமாரின் சேர்க்கையால் சிவலிங்கத்தின் முன் வேள்விக் குண்டமும் நந்தியும் பலிபீடமும் பிற்காலத்திற் சேர்த்தமைக்கப்பட்டன எனக் கருத வேண்டியுள்ளது.32 தமிழகத்திற் சிவபெருமான் திருக்கோயிலிலுள்ள பலிபீட அமைப்பு குறிஞ்சித் திணையொழுக லாற்றின் முருகவேள் வழிபாட்டில் இடம் பெற்ற மறியறுத்தலும், புறத்திணை யொழுகலாற்றில் கொற்றவை வழிபாட்டில் இடம்பெற்ற அவிப்பலியும் ஆகியவற்றின் அடையாளமாகவும் அமைந்திருத்தல் கூடும் எனக் கருதுதற்கும் இடமுண்டு. சிவபெருமானைச் சிவலிங்கமாகிய அருவுருவத் திருமேனியிற் பொதுவிடங்களில் வைத்து வழிபட்ட முன்னோர்கள். காலஞ்செல்லச் செல்ல அம்முதல்வனுக்கெனத் தனிக்கோயில் அமைத்த நிலையில் சிவலிங்கத் திருவுருவின் முன்னர் நந்தியும் பலிபீடமும் இடம்பெறுவன வாயின. இவ்வழிபாட்டில் சிவலிங்கத் திருவுருவமானது எல்லாம்வல்ல முழுமுதற்கடவுளைக் குறிப்பது. பலிபீடம் அம்முழுமுதற்கடவுளின் திருவருளைப்பெற விழைந்து செல்லும் ஓர் உயிர் தன்னைத் தோற்றமில் காலமாகப் பிணித்துள்ள பசுத்தன்மையாகிய யான் எனது என்னுஞ் செருக்கையும் வெட்டி வீழ்த்தும் ஓர் உயர்ந்த இடத்திற்கு அறிகுறியாகவும், பலிபீடத்தைக் கடந்து சிவலிங்கத்தின் எதிரிலே வைக்கப்பட்டிருக்கும் நந்தி அறியாமையும் செருக்கும் அற்றுத் தூய்தாகிச் சிவத்தின் திருவருட் பேற்றை நாடி முற்பட்ட தூய உயிருக்கு அடையாளமாகவும் அமைக்கப் பெற்றனவாகும். இந்நுட்பம், ஆய பதிதான் அருட்சிவ லிங்கமாம் ஆய பசுவும் அடலே றேனநிற்கும் ஆய பலிபீடம் ஆகுநற் பாசம் ஆய அரன்நிலை ஆய்ந்து கொள்வார்க்கே33 எனவரும் திருமந்திரத்தால் நன்கு விளக்கப்பெற்றுள்ளது. சைவ சித்தாந்தம் கூறும் பதி பசு பாசம் என்னும் முப்பொருளிலக் கணங்களையே சிவாலய அமைப்பு உணர்த்துகின்றது என்பதும், சிவலிங்கம், நந்தி, பலிபீடம் அமைந்த சிவாலயங்கள் திருமூலநாயனார் காலத்திற்கு முற்பட்ட தொன்மையுடையன என்பதும் இத்திருமந்திரப் பாடலால் நன்கு புலனாதல் காணலாம். திருக்கோயிலில் மூலத்தானமென்னும் கருவறையில் நிறுத்தப்பெற்றுள்ள சிவலிங்கம் முழுமுதற் கடவுளாகிய பதியையும், அதன் எதிரேயுள்ள நந்தி பதியை நாடிச் செல்லும் தூய உயிரான பசுவையும், அதன் பின்னேயுள்ள பலிபீடம் பசுவினால் தொடர்பறுத்துக் கழிக்கப்பட்ட ஆணவமலாமாகிய பாசத்தையும் உயர்த்துவன என்பது மேற்குறித்த திருமந்திரத்தாற் புலனாகும். திருமூலநாயனார் காலத்துக்கு ஆயிரம் யாண்டு பிற்பட்ட காலப்பகுதியிலே சிவாகமங்களை வடமொழியில் எழுதிக் கோயிற் குருக்கள்மார் சிவபிரான் திருக்கோயில்களைச் சிவனடியார்களின் நெஞ்சத்தாமரையின் வடிவாகவும், அவர்களுடைய பருவுடம்பு, நுண்ணுடம்பு மூலவுடம்புகள் ஆகியவற்றின் அமைப்புடையதாகவும் அமைக்கும் முறைகளையும், அவற்றின்கண் வைகும் பரிவாரத் தெய்வங்களையும் அவற்றை வழிபடும் பூசனை முறைகளையும் மேலும் மேலும் பெருக்கி வரையலாயினர். ஆதிசைவக்குருக்கள்மார் பிற்காலத்திற் பெருக்கி வளர்த்த சிவாகம முறைகளின்படி அமைக்கப்பெற்ற சிவபிரான் திருக்கோயில்கள் தென்றமிழ் நாட்டில் மிகுதியாக வுள்ளன. இம்முறையிலன்றி இடைக்கால முறைப்படி சிவலிங்கம் நந்தி பலிபீடம் என்னும் மூன்று மட்டுமே வைத்து அமைக்கப்பட்ட பழைய கோயில்களும் ஆங்காங்கே காணப்படுகின்றன. நந்தியும் பலிபீடமும் இல்லாமல் சிவலிங்கம் ஒன்று மட்டுமேயுள்ள மிகப் பழைய கோயில்கள் சிலவும் அருகிக் காணப்படுகின்றன என மறைமலையடிகளார் கூறும் தமிழகக் கோயிலமைப்பு முறை நுணுகி ஆராயத்தகுவதாகும். சுவேதாரணியத்தில் உருத்திரனால் எரிக்கப்பட்டுயமன் மாய்ந்தாற்போலக் கரன் இராமனுடைய எரியம்பினால் தாக்கப்பட்டு இறந்தான் என்ற செய்தி வான்மீக இராமாயணத்திற் குறிக்கப்பெற்றது. இதற்கு உரைவரைந்த தீர்த்தர் என்பவர், பழைய காவிரிப்பூம் பட்டினத்திற்கு அருகிலுள்ள திருவெண்காடே சுவேதாரணியம் என்பது என்று விளக்கம் தந்துள்ளார். இதனால் காவிரிப்பூம் பட்டினத்தின் அருகிலுள்ள திருவெண்காடு என்ற ஊர், வான்மீகர் காலத்திலேயே சிவபெருமானுக்குரிய திருக்கோயிலைப் பெற்று விளங்கியது என்பத நன்கு புலனாகின்றது. அருச்சுனன் தீர்த்தயாத்திரையாகத் தெற்கே வந்து காவிரியில் நீராடினான், பின்னர்க் கடற்கரை வழியே பல புண்ணியத் தீர்த்தங்களையும் திருக்கோயில்களையும் கண்டு வழிபட்டு மணலூரை யடைந்தான் என்ற செய்தி வியாசபாரதத்திற் குறிக்கப் பெற்றுளது. பாண்டியன் தன் மகளை மணக்க விரும்பிய அருச்சனனை நோக்கி என் முன்னோர் சிவபெருமானை வழிபட்டு அவ்விறைவன் திருவருளால் ஒவ்வொரு பிள்ளையையே பெற்றனர். எனக்கும் ஒரே குழந்தைதான் பிறந்தது. அவளே நீ மணக்க விரும்பும் பெண் எனக் கூறியதாகப் பாரதம் கூறுகின்றது. வடமொழியிலுள்ள ஆதி காவியமாகிய வான்மீக இராமாயணத்திலும் வியாசபாரதத்திலும் காவிரி முதலிய புண்ணிய தீர்த்தங்களும் திருவெண்காடு முதலிய சிவத்தலங்களும் காலகாலர் முதலிய சிவமூர்த்தங்களும் மக்களால் முறையே வழிபடப்பெற்றமையும், தமிழகத்திற் பலவூர்களிற் சிவபெருமானுக்குத் திருக்கோயில்கள் இருந்தமையும் பாண்டியர் முதலிய தமிழ் வேந்தர்களும் தமிழ்நாட்டு மக்களும் சிவபெருமானைப் பூசனைப் புரிந்து பிள்ளைப் பேறு முதலாகத் தம் உள்ளத்து விரும்பிய நற்பேறுகளை யெல்லாம் பெற்று மகிழ்ந்தனர் என்பது நன்கு புலனாதல் காணலாம். சிந்துநதிப் பள்ளத்தாக்கில் அண்மைக் காலத்திற் கண்டு பிடிக்கப்பட்ட பொருள்கள் சிவலிங்க வழிபாடு பன்னெடுங்காலத்திற்கு முன் இவ்விந்தியப் பெருநிலத்தில் நடைமுறையில் இருந்திருக்க வேண்டும் என்பதனைத் தெளிவாகப் புலப்படுத்துகின்றன. இதுபற்றி மேனாட்டுப் பேராசிரியர் வெட்ரோப் என்பவர் பின்வருமாறு கூறுவர் :- மனித இனம் வாழ்ந்திருக்கக்கூடிய இப் பேரண்டத்தின் பெரும்பகுதியில் சிவலிங்க வழிபாடு பரவியிருந்திருக்கக்கூடிய அத்தகைய அளவில் பொதுவாகச் சிவலிங்க வழிபாடு நிலவியிருந்திருக் கிறது. ஏனெனில் அது, எகிப்து, சிரியம், பாரசீகம், சிறிய ஆசியா, கிரேக்கம், இத்தாலி ஆகிய இந்நாடுகளில் பலகாலங்களாகத் தழைத் தோங்கியிருந்தது. அமெரிக்க நாட்டை முதன் முதலில் பெயின் நாட்டவர் கண்டு பிடித்தபோது, அவர்கள் அங்கே தெய்வவழி பாட்டிற்கு மிகத் தூய்மையானதும் சமயத்திற்கு மிக உயர்ந்ததும் ஆகவும் உள்ள பொருளாகச் சிவலிங்க வழிபாட்டைக் கண்டனர். இதன் பண்பாடு மனித இனத்தை உயர்த்தக்கூடுமெனக் கருத்தக்க கொள்கையுடனும் தத்துவத்துடனும இணைந்துள்ளது என்பர் சிவலிங்க வழிபாடு என்னும் நூலுடையார். சிவலிங்க வழிபாடு இந்திய நாட்டில் மட்டுமன்றி முன்னொரு காலத்தில் உலக முழுவதும் பரவியிருந்தமையினை ஆராய்ச்சி யறிஞர்கள் பலரும் தமது ஆய்வு நூல்களில் தெளிவாக எடுத்துக் காட்டியுள்ளார்கள். சிவலிங்க வணக்கம் முற்காலத்தில் ஆசியா, ஐரோப்பா, எகிப்து நாடுகளில் பரவியிருந்தது. உரோமர் சிவலிங்கங் களைப் பிரியாப எனப் பெயரிட்டு வழங்கினர். எகிப்தியரும் உரோமரும் கிரேக்கரும் பிரியாப என்னும் சிவலிங்கங்களை நாட்டிக் கோயில்கள் அமைத்திருந்தனர். பிரியாப என்பது இந்தியாவிற் சிவலிங்கங்கள் போன்றது. இரவேலர் சிவலிங்கங்களை வைத்து வழிபட்டனர். அசா என்பவன் தன்னுடைய தாயைச் சிவலிங்கத்திற்குப் பலி செலுத்தாதபடி தடுத்து அவ்விலிங்கத்தை உடைத்தெறிந்தான் என்று விவிலிய மறை கூறுகின்றது. இலிங்கத்தின் முன்னால் பலிபீடத்தின் மீது சாம்பிராணி புகைக்கப்பட்டது. மாதத்தின் பதினைந்தாம் நாளில் பலி செலுத்தப்பட்டது. மாதத்தின் பதினைந்தாம் நாள் என்பது இந்து சமயத்தாரது அமாவாசை நாளாகும். இரவேலர் வழிபட்ட இடபக்கன்று சைவர்கள் வழிபடும் நந்தியாகும். எகிப்தியரின் ஒசிரி கடவுளின் ஊர்தியாகிய அப்பி என்னும் இடபமும் நந்தியேயாகும். கொலோனல் என்பார் இலிங்க வழிபாட்டினை அரேபியரின் லாட் அல்லது அல்ஹாட் வழிபாட்டோடு ஒன்றுபடுத்திக் கூறியுள்ளார். சிவலிங்க வழிபாடு உரோமருடன் பிரான்சுக்குச் சென்றது. அங்குள்ள கிறித்தவ ஆலயக் கட்டிடங்களில் இலிங்க வடிவங்களை இன்றும் காணலாம். அலக்சாந்திரியாவில் தாலமி நடத்திய திருவிழாவில் 129 முழவுயரமுடைய இலிங்கம் வீதிவலமாகக் கொண்டு செல்லப்பட்டது. இரவேலரது பால் கடவுள் சிவலிங்கமே. விவிலியத்திற் கூறப்படும் சியன் என்னும் தெய்வம் சிந்து நதிமக்கள் வழிபட்ட சிவனேயாவர். இந்திய மக்களது சிவலிங்க வழிபாடு உலகிற் பல நாடுகளிலும் பரவியிருந்தமைக்குரிய சான்றுகள் ஆங்காங்கே கிடைக்கின்றன. சீனா, சப்பான், இந்துக் கடலின் தீவுகள், பசிபிக் கடலின் தீவுகள் முதலிய இடங்களில் சிவலிங்க வழிபாடு இன்னும் முற்றிலும் மறைந்துவிடவில்லை. ஆப்பிரிக்க அமெரிக்க மக்களிடையிலேயும் இவ்வழிபாடு ஒரு காலத்திற் பரவியிருந்தது. அசீரிய, யூதேய, சிரிய, சின்ன ஆசிய பாபிலோனிய மக்களிடையிலும் இலிங்க வழிபாடு பரவியிருந்தமை விவிலியமறையால் அறியப்படுகின்றது. சில நாட்களுக்கு முன் பாபிலோன் நாட்டிற் சிவலிங்கங்கள் பல அகழ்ந்தெடுக்கப்பெற்றன. எகிப்தில் சிவலிங்கங்களுடன் புலிகளும் பாம்புகளும் வணங்கப்பட்டன. எகிப்திய சமாதிச் சுவர்களில் சிவலிங்கங்கள் இணைக்கப் பெற்றிருக்கின்றன. பழைய ஐரோப்பாவில் இலிங்க வணக்கம் எங்கும் பரவியிருந்தது. இவ்வணக்கத்தை ஒழிப்பதில் கிறித்தவக் குருமார் ஊக்கங் கொண்டிருந்தனர். கிரீசிலே விசா என்னுமிடத்தில் சிவலிங்கம் தொடர்பான கிரியைகள் இன்றும் நடைபெறுகின்றன. அயர்லாந்திற் கிறித்தவ ஆலயங்கள் பலவற்றுட் சிவலிங்கங்கள் காணப்படுகின்றன. அவை சீலநாகிக் என வழங்குகின்றன. இப்பெயர் சிவலிங்கம் என்பதன் திரிபாகலாம். தொல்பொருள் ஆராய்ச்சியாளர் இங்கிலாந்திலும் காட்லாந்திலும் சிவலிங்கங்கள் பலவற்றைக் கண்டுபிடித்தனர். இவை காணப்பட்ட இடங்கள் உரோமர் வாழ்ந்த இடங்களாகும். உரோமர் இலிங்க வழிபாட்டை இங்கிலாந்திற் பரப்பியிருத்தல் கூடும். லிதுவேனியமக்கள் 14ஆம் நூற்றாண்டுவரையில் இலிங்க வணக்கத்தை மேற்கொண்டிருந்தனர். பின்பு கிறித்தவ மதத்தைத் தழுவினர். திபேத்து, பூட்டான் என்னும் இடங்களில் சிவலிங்க வணக்கம் காணப்படுகிறது. நேபாளம் அசோகர்க்கு நெடுங்காலந் தொட்டே சிவலிங்க வழிபாட்டுக்குச் சிறப்புரிமையுடைய நாடாகத் திகழ்ந்து வருகின்றது. இந்தோயிசம் என்னும் சப்பானிய மதத்தில் சிவலிங்கம் முதன்மையானதாக இருந்துள்ளது. அமெரிக்காவில் பேரு, கைத் தீவுகளில் சிவலிங்க வழிபடப்பெற்றது. இபானியர் முதன்முதல் அமெரிக்காவுக்குச் சென்றபோது அங்குச் சிவலிங்கங்கள் வைத்து வழிபடப் பெற்றதைக் கண்டனர். ஆப்பிரிக்காவில் தகோமி என்னுமிடத்தில் இலிங்கம் லெங்பா என்ற பெயருடன் வழிபடப்பட்டது. பக்க கெபன் என்னும் கடவுள் கெபி என்னுந் தேவியுடன் வழிபடப்பட்டார். பக்க கடவுளுக்கு இடபமும் புலியும் உரியன. அவர் புலித்தோலையுடுத்துக் கையில் திரிசூலத்தைக் தாங்கியிருந்தார். அவருடன் இடபமும் புலியும் சென்றன. அவருடைய கையில் நீரருந்தும் கமண்டலம் இருந்தது. சின்ன ஆசியாவில் இலிங்கக் கடவுள் கெமோ, மெலோச், மெரதொக், ஆதோனிய, சிபா, சிய என்னும் பெயர்களுடன் வழிபடப் பெற்றார். இதனால் கெபன் சிவன் எனவும் கெபி கௌரி எனவும் கருதலாம். ஆதோனியர் என்பது அர்த்தநாரீசுவரர் என்பர் வெட்ரோப். துர்க்கம்மா எனப் பீடத்தில் எழுதப்பட்ட துர்க்கையின் வடிவம் ஒன்று சில நாட்களுக்கு முன் எகிப்திற் கண்டெடுக்கப்பெற்றது. யூதரது பெத்தெல் என்னும் கல் கடவுளாகக் கருதி வழிபடப் பெற்றது. மெக்கா நகரின் கோயிலிலுள்ள காபா என்னும் கறுப்புக்கல் சிவலிங்க வடிவில் உள்ளது எனவும், அரேபியர் இதன்கண் பத்தியுடையராயிருந்தமையால் மகமது நபி இதனை அழிக்காது விட்டுவிட்டார் எனவும் கருத இடமுண்டு. புத்த ஆலயங்களிலுள்ள தூபிகளும் தகோபாக்களும் சிவலிங்க வடிவிலேயே அமைந்துள்ளன. நாகரிகம் பெற்றோர் பெறாதார் ஆகிய எல்லா மக்களாலும் பண்டை நாளிற் சிவலிங்க வழிபாடு மேற்கொள்ளப் பெற்றுளது. சிவபிரான் திருக்கோயில்களின் கருவறையிற் சிவலிங்கத் திருவுருவம் ஒன்று மட்டுமே முதன்மையாக நிறுத்தப்படினும் அக்கருவறையை உள்ளடக்கிய விமானத்தின் வெளிப்புடைகளில் வலமிருந்து இடமாக ஆலமர்செல்வன் திருமால் நான்முகன் கொற்றவை முதலிய வேறுபல தெய்வப்படிமங்களும் இடம் பெற்றுள்ளன. கருவறையின் நடுவே அமைந்த சிவலிங்க அனற் கொழுந்தின் தோற்றமாகக் கொள்ளும் நிலையில் அமைந்துளது. திருவையாறகலாத செம்பொற் சோதீ எனவும், திகழொளியே சிவனே எனவும் வரும் திருமுறைத் தொடர்கள் இங்குக் கூர்ந்து நோக்கத்தக்கனவாகும். அனற்பிழம்பின் செவ்வொளியைச் சிவனாகவும் அனலில் அடங்கித் தோன்றும் நீலவொளியை இறைவியாகவும் கருதி வழிபட்டனர். இம்முறையில் சிவலிங்கத் திருவுருவத்தின் பின்புறத்தில் அம்மையப்பர் திருவுருவம் இடம் பெறுவதாயிற்று. சிவலிங்கத் திருவுருவம் அமைக்கப் பெற்றதற்கு நெடுங்காலம் பிற்பட்டு அமைக்கப்பெற்றதே அம்மையப்பர் திருவுருவம் என்பதும், இற்றைக்கு ஏழாயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட தொன்மையுடையது சிவலிங்கத் திருவுருவம் என்பதும் அதற்கு ஆயிரம் ஆண்டுகள் பிற்பட்டு அமைக்கப்பெற்றது அம்மையப்பர் திருவுருவம் என்பதும் முகிஞ்சதரோ, அரப்பா முதலிய பண்டை நகரங்களை அகழ்ந்து அவற்றின்கண் இருந்த தெய்வத் திருவுருவங்களை எடுத்து வைத்துக் காட்டும் மேனாட்டாசிரியர் ஆய்வுரையினாலும் பண்டைத் தமிழ் நூலாராய்ச்சியாலும் நன்கு தெளியப்படும். சீர்காழித் திருத்கோயிலின் திருமலைமேல் அமைக்கப்பெற்றுள்ள திருத்தோணிச் சிகரத்தில் எழுந்தருளியுள்ள அம்மையப்பர் திருவுருவமும் பறம்புமலையாகிய திருக்கொடுங்குன்றத்தில் அமைந்துள்ள மங்கைபாகர் திருவுருவமும் எல்லாம்வல்ல இறைவனை அம்மையப்பர் திருவுருவில் அமைத்து வழிபடப்பெற்றுவரும் தொன்மை வாய்ந்தனவாகும். திருச்செங்கோடு என்னும் மலைமேல் வழிபடப்பெறும் அர்த்தநாரீசுவரர் திருவுருவம், உமையொருபாகர் வழிபாட்டின் தொன்மையினைப் புலப்படுத்துவதாகும். தோலுந் துகிலுங் குழையும் சுருள்தோடும் பால்வெள்ளை நீறும் பசுஞ்சாந்தும் பைங்கிளியும் சூலமும் தொக்க வளையு முடைத்தொன்மைக் கோலமே நோக்கிக் குளிர்ந்தூ தாய் கோத்தும்பீ!34 என மாணிக்கவாசகர் அருளிய திருப்பாடல் உமையொரு பாகர் திருக்கோலத்தின் எழில் நலத்தினையும் அதன் தொன்மை யினையும் விரித்துப் போற்றுதல் காணலாம். தமிழகத்தில் மாயோன், சேயோன், கொற்றவை முதலாகப் பல்வேறு திருவுருவங்களில் வைத்து வழிபடப்பெறும், எல்லாத் தெய்வங்களும் முழுமுதற் கடவுளாகிய பரம்பொருள் தன்னை வழிபடும் அன்பர்களின் உள்ளத்திற் கேற்ப மேற்கொண்ட அருள் வெளித் தோற்றமே என்னும் மெய்ம்மையினைத் தெளிந்துணர்ந்தவர்கள் சங்ககாலத் தமிழ் மக்கள். எனவே பல்வேறு வடிவங்களிற் பலவிடங்களிலும் மக்களால் மேற்கொள்ளப்படும் எல்லா வழி பாடுகளும் முழுமுதற் கடவுளாகிய ஒரு பொருளையே சார்ந்து பயன்விளைக்கும் என்பது பண்டைத் தமிழ் மக்களது தெளிவான தெய்வங் கொள்கையாய் அமைந்திருந்தது. இவ்வுண்மையை, வேறபல்லுருவிற் கடவுட்பேணியும்35 எனவும், ஆலமுங் கடம்பும் நல்யாற்று நடுவும் கால்வழக் கறுநிலைக் குன்றமும் பிறவும் அவ்வவை மேய வேறுவேறு பெயரின் எவ்வயினோயும் நீயே36 எனவும் வரும் சங்க இலக்கியங்களால் நன்கு துணியப்படும். இறைவனைத் தாயுந் தந்தையுமாகக் கருதி வழிபடும் நிலையில் தந்தையினும் தாயினை முந்தி வழிபடுதல் வேண்டும் என்னும் ஆர்வமுடையோர் மிகுதியாக அம்மைக்குத் தனிக் கோயில்கள் சிவபெருமான் திருக்கோயிலின் அகத்தும் புறத்தும் அமைக்கப் பெற்றன. காடுறையுலகமாகிய முல்லை நிலத்தின் தெய்வமாக நீலமேனி நெடியோன் வழிபடப்பெற்றது போலவே காடுகிழாளாகிய கொற்றவையும் நீலநிறம் வாய்ந்த திருமேனியுடையவளாகவும் ஆழியும் சங்கும் ஏந்திய கையினளாகவும் திருவுருவமைக்கப் பெற்று மாயோன் தங்கையாக வழிபடப்பெற்றாள். போரில் வெற்றி நல்குங் கொற்றவையாகிய அன்னையை அமைதியளிக்கும் நிலையில் சிவனது இடப்பாகத்தில் அமர்ந்தருளிய உமையம்மையாகவும் இயைத்துப் போற்றும் உறவுமுறை சங்க காலத்திற்கு முன்னிருந்தே வழங்கியிருத்தல் வேண்டும் எனக் கருத வேண்டியுள்ளது. சிவபெருமான் தனது சத்தியாகிய உமையம்மையினை ஒருருவிற்கொண்டு அர்த்தநாரீசுவரத் திருமேனியினராக மாதொருபாகராக அருள்புரிதல் போலவே உமையின் தமையன் எனப் போற்றப் பெறுந் திருமாலைத் தனது ஒரு பாகத்தடக்கிய நிலையில் சங்கரநாராயணன் எனச் சிவபெருமான் போற்றப் பெறுகிறார். சிவனும் திருமாலும் ஓருருவினராகப் (சங்கர நாராணராகப்) போற்றப் பெறும் இவ்வழிபாடு, சைவத் திருமுறைகளிலும் நாலாயிரத்திவ்வியப் பிரபந்தத்திலும் இடம் பெற்றுள்ளது. வெருவரு கடுந்திறல் இருபெருந் தெய்வத்து உருவுட னியைந்த தோற்றம் போல அந்தி வானமொடு கடலணி கொளாஅ வந்த மாலை37 என வருந்தொடர் அந்திவானமும் கருங்கடலும் இயைந்த தோற்றத்திற்கு மாலொருபாகர் (சங்கர நாராயணர்) திருமேனியை மதுரைக் கண்ணத்தனார் உவமை கூறியுள்ளார். எனவே மாதொருபாகர் திருமேனி கடைச்சங்ககாலந் தொட்டுத் தமிழகத்தில் வழிபடப் பெற்று வருகின்றதெனக் கருதவேண்டியுளது. சிவனும் திருமாலும் பொருளால் ஒன்றே என வலியுறுத்தும் முறையில் அமைந்த சங்கநாராயணர் திருவுருவம், அப்பனாகிய சிவனும் அம்மையாகிய சக்தியும் ஞாயிறும் அதன் கதிரும் போலப் பொருளால் ஒன்றேயென வற்புறுத்தும் உமையொருகூறர் (அர்த்தநாரீசுவரர்) திருவுருவ அமைப்பினை அடியொற்றியதாகும். மாயோன் தங்கை மாயோள் எனவும் நாராயணன் தங்கை நாராயணி யெனவும் காத்தற் கடவுளாகிய திருமாலின் அமிசமாகக் கொண்டு போற்றப்பெறும் கொற்றவை சிவனுக்குரிய கொன்றையும் திருமாலுக்குரிய துளவமும் சேரத் தொடுத்த மலர் மாலையைச் சூடியவளாகவும் திருமால்போன்று ஆழியும் வளையும் ஏந்திய கையினளாகவும் சிவபெருமானைப் போன்று நஞ்சுண்டு கறுத்த கண்டமுடையவளாகவும் சிவபெருமான் கூற்றிலும் திருமால் நிலையிலும் ஒருங்கு வைத்துச் சிலப்பதிகார வேட்டுவ வரியிற் போற்றப்பெற்றுள்ளமை காணலாம். சிவனும் உமையும் ஒருவராகத் திகழும் அர்த்தநாரீசுவரர் திருவுருவினைப் போன்றே சிவனுடன் திருமாலையொரு கூற்றினராகக் கொண்டு போற்றும் சங்கரநாராயணர் திருவுருவும் அன்பர்களால் ஓருருவாக இயைத்துப் போற்றப் பெறுவதாயிற்று. சிவ பரம்பொருள் ஒன்றே சத்தியும் சிவமும் என இருமைத்தன்மையில் வைத்து வணங்கப் பெறுதல் போன்று முழுமுதற் பொருள் ஒன்றே சிவனும் திருமாலும் என இருமை நிலையில் வைத்து வணங்கப் பெறுகின்றது என்னும் உண்மை மாதொருகூறர் (அர்த்தநாரீசுவரர்) மாலொருகூறர் (சங்கர நாராயணர்) ஆகிய திருவுருவ அமைப்புக்களால் இனிது புலனாகும். கிழக்கே விடியற்காலையிலே இளஞ்செவ்வியுடையதாய்ச் செஞ்சுடர் விரிந்து திகழக் கடலிடையே தோன்றும் ஞாயிறு, தன் கீழுள்ள கடல்நீர் நீலமும் பசுமையும் கலந்த நிறத்தினதாய்த் துலங்கா நிற்பக் காணப்படும் மிக அழகிய காட்சி, அழகேயுருவாகிய இறைவன் எழில்கிளர் தோகையினையுடைய நீலமயிலின்மேல் அமர்ந்து தோன்றினாற் போலும் தெய்வத் தோற்றத்தினைப் புலப்படுத்தி நிற்றலின், வைகறை விடியலில் மலர் தலையுலகின் மாயிருள் நீங்கத் தோன்றும் பலர்புகழ் செஞ்ஞாயிறே மைவரையுலகின் தெய்வமாகிய சேயோனாகவும் கதிரவனுக்குக் கீழே என்றும் நீலநிறக் கடலே சேயோனது ஊர்தியாகிய மயிலாகவும் கருதிக் காலைக் கதிரவனைச் சேயோனாக எண்ணிப் போற்றுதல் தமிழ் ஞாலத்தவர் மரபாயிற்று. சேயோனாகிய முருகப் பெருமான் வைகறைப் பொழுதிலே மாயிருள் நீங்கத் தோன்றும் இளஞாயிற்றின் தோற்றமுடையவனாகத் திருமுருகாற்றுப்படையிற் போற்றப் பெற்றுள்ளமை அம்முதல்வன் என்றும் இளையோனாக உலக வாழ்க்கையிலீடுபடும் மக்கட் குலத்தார்க்கு மெய்யுணர்வென்னும் வேற்படையினால் அச்சமகற்றி அறிவும் ஆண்மையும் நல்கி அவர்தம் வாழ்வில் முன்னியது முடித்தருளும் பெற்றியனாகப் போற்றப்பெறும் செந்தமிழ்க் கடவுளாகத் திகழ்கின்றான். இனி, கதிர் சாயும் காலமாகிய மாலை வேளையில் மேற்கே காணப்படும் கதிரவனே தன் செவ்வொளி தோய்ந்த முகிற்குழாங்கள் வானமுகட்டின் நாற்புறத்தும் செக்கர்ச் சடையெனச் சிவந்துமிளிர அம்முகிற் குழாங்களின் இடையே தோன்றும் வெண்பிறையானது அவிர் சடைக்கற்றைமேல் நிவந்து தோன்றும் வெண்பிறையென விளங்கா நிற்கச் சிவனெனும் நாமந் தனக்கேயுடைய செம்மேனியம் மானை மனங்கொள்ளச் செய்யும் தெய்வத் தோற்றமுடையனாகத் திகழ்தலின் சிவநெறிச் செல்வர்களால் சிவன் எனவே வைத்து வழிபடப் பெறுவானாயினன். இவ்வுண்மை, அருக்கன்பாதம் வணங்குவர் அந்தியில் அருக்கனாவான் அரனுருவல்லனோ38 எனவரும் அப்பர் அருள்மொழியினால் நன்கு புலனாதல் காணலாம். காலையில் தோன்றும் இளஞாயிறு, இருளிற் றுயிலும் மன்னுயிர்களைத் தன் ஒளிக்கதிர்களால் இருள்நீக்கி யெழுப்பிப் பல்வேறு தொழில்களில் ஈடுபடுத்தி வாழ்க்கையில் அச்சமகற்றி வெற்றி நல்கி வையத்து வாழ்வாங்கு வாழ்தற்கு உதவுமாறு போலவே, என்றும் இளையோனாகிய சேயோனும் மக்கட்குலத்தார் குற்றமற்ற கோட்பாடுகளால் தாம் தாம் மேற்கொண்ட தொழில்கள் வெற்றி பெற முடித்து வையத்து வாழ்வாங்கு வாழும் வண்ணம் அவர்தம் மனத்தகத்தே இளஞாயிறாகத் தோன்றி அவர்தம் அறியாமையிருளை நீக்கி அச்சந்தவிர்த்து அவர்கள் உள்ளத்தே எண்ணியவனைத்தையும் இனிதே முடித்தருள்கின்றான் எனச் செந்தமிழ்ப்பனுவல்கள் போற்றுகின்றன. ஆதலால் காலைக் கதிரவனது தோற்றம் முன்னியது முடித்தருளும் முருகப் பெருமானது தோற்றப் பொலிவுக்கு உவமையாயிற்று. பகலெல்லாம் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு உழைத்து இளைத்த மக்கட்குலத்தார் தம் உடல் இளைப்பும் உள்ளக் கவலையும் நீங்கி ஒய்வுபெறும் நிலையில் மாலைப் பொழுதில் ஞாயிற்றின் தோற்றம் அமைதி வழங்குமாறு போன்று, உலக வாழ்க்கையிற் பலப்பல பிறவிகளையெடுத்து அல்லலுற்ற மாந்தர் எம்பெருமானே எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தோம் எங்களது பிறவிப் பிணிப்பகற்றிப் பிறவாநெறியினை அளித்தருள்வாயாக என ஐம்பொறிகளையடக்கிய செம்புலச் செல்வர்களாய் மனங்குவிந்து போற்றி ஒருமைநிலைபெற்று அமைதிபெறும் நிலையில் அமைந்தது சிவவழிபாடாகும். எனவே, காலை இளஞாயிற்றின் தோற்றம் என்றும் இளையோனாகிய சேயோன் திருமேனியையும், மாலை ஞாயிற்றின் முதிர்ந்த செவ்வித்தாவிய அந்தி வானத் தோற்றம் முது முதல்வனாகிய சிவபெருமானது செம்மேனியையும் குறிப்பனவாக இலக்கியங்களிற் குறிக்கப்பெறுதலின் காலையிளங்கதிரவனை என்றும் இளையோனாகிய முருகன் எனவும் மாலை முதிர் கதிரவனை முருகனுக்குத் தந்தையாகிய சிவபெருமான் எனவும் தமிழ் முன்னோர் கருதிப் போற்றினர் எனத் தெரிகிறது. காலை ஞாயிறும் மாலை ஞாயிறும் கால வேறுபாட்டால் இரு நிலையினதாகக் காணப்படினும் பொருளளவில் இரண்டும் ஒன்றேயாதல் போன்று சேயோனும் சிவனும் இருதெய்வங்களாக வைத்து வணங்கப்பட்டாலும் இருவரும் ஒருவரே யென்பது சேயோன் சிவன் என வழங்கும் பெயரொற்றுமையாலும் இனிது புலனாகின்றது. முருகனுக்குரிய சேயோன் என்னும் பெயர் செம்மை நிறம் வாய்ந்த திருமேனியை யுடையான் என்னும் பொருளது. சிவன் என்னும் பெயரும் சிவந்த நிறத்தினன் என்னும் பொருளையே தருகின்றது. எனவே சொல் லொற்றுமையாலும் பொருளொற்றுமையாலும் சேயோனாகிய முருகனும் சிவனாகிய இறைவனும் ஒரே முழுமுதற் கடவுளாகக் கருதப்பெற்றமை காணலாம். குமரனாகிய முருகனும் அவன் தந்தையாகிய சிவனும் முழுமுதற் கடவுளின் இருவேறு கோலங்களே என்னும் மெய்ம்மையினைப் புலப்படுத்தும் முறையில் அமைந்ததே கந்தபுராண வரலாறாகும். முருகப் பெருமானைக் குறித்து வழங்கும் திருப்பெயர்களுள் கந்தன் என்பதனைத் தமிழ்ச் சொல்லாகக் கொண்டு கந்தன் - தூண்வடிவில் நிறுத்தப்பட்ட கந்தில் உறையும் தெய்வம் எனப் பொருள் கொள்ளுதற்கும் இடமுண்டு. வல்வேற் கந்தன் நல்லிசையுள்ளி எனவரும் தொடரைக் கூர்ந்து நோக்குங்கால் கந்தன் என்பது சங்க காலத்திலேயே தெய்வப் பெயராக மக்களுக்கு இட்டு வழங்கப் பெற்ற தென்பது நன்கு உய்த்துணரப்படும். குறிஞ்சி நிலத் தெய்வமாகிய சேயோனை நிலங்கடந்த நிலையில் முழுமுதற் கடவுளாகப் போற்றப்பெறும் சிவபெருமானுடைய திருமகனாகக் கொண்டு வழிபடும் நிலையேற்பட்டபின் சிவபெருமான் திருக்கோயிலின் அகத்தும் புறத்தும் முருகப் பெருமானது திருவுருவம் இடம்பெறுவதாயிற்று. இவ்வாறே முருகப் பெருமான் திருக்கோயில் களிலும் அம்முதல்வனது தந்தை என்ற முறையில் சிவலிங்கத் திருவுருவமும் தாய் என்ற முறையில் கொற்றவை திருவுருவமும் தாய்மாமன் என்ற முறையில் திருமால் திருவுருவமும் இடம் பெறுவனவாயின. திருப்பரங்குன்றம், திருச்சீரலைவாயாகிய திருச்செந்தில், திருவாவினன்குடி, திருவேரகம், திருச்செங்கோடு முதலிய குன்றுகள் சங்க காலத்தில் முருகப் பெருமானுக்குரிய சிறப்புடைய திருக்கோயில்களாக வழிபடப்பெறும் தொன்மை யுடையனவாகத் திகழ்கின்றன. இற்றைக்கு ஆயிரத்தெண்ணுறு ஆண்டுகட்கு முன் மதம் என்ற சொல் சமயக் கொள்கை என்ற பொருளில் வழங்கப் பெற்றிலது. கி. பி. இரண்டாம் நூற்றாண்டில் தோன்றியதாகக் கருதப்படும் மணிமேகலையில்தான் சமயம் என்ற சொல் முதன்முதல் ஆளப்பெற்றுளது. கடவுளைப் பற்றியோ உலகத்தைப் பற்றியோ உயிர்களைப் பற்றியோ மக்கட் குழவினர் கொண்ட கொள்கையினை யும் தாம் தாம் மெய்யெனத் துணிந்துள்ள கொள்கை பற்றிய ஒழுகலாறுகளையும் குறித்து வழங்கப் பெறுவதே சமயம் என்ற சொல்லாகும். பண்டைத் தமிழியல் நூலாகிய தொல்காப்பியத்திலும் அதன்பின்னர்த் தோன்றிய சங்கத் தொகை நூல்களிலும் மதம் என்ற சொல்லோ சமயம் என்ற சொல்லோ இடம்பெறவில்லை. பலவகைச் சமயங்களும் தோன்றி அவ்வச் சமயங்களின் பெயரால் தமிழ் மக்கள் தம்முள்தாம் பிரிவுபடுதற்கு முன்னரே இயற்றப்பெற்ற தொன்மை யுடையன தொல்காப்பியமும் சங்கத் தொகை நூல்களும் என்பது நன்கு துணியப்படும். தொல்காப்பியனார் காலத்திலே மாயோன், சேயோன், இந்திரன், வருணன் ஆகிய நானிலத் தெய்வங்களின் வழிபாடும் கொற்றவை வழிபாடும் நில வெல்லையினைக் கடந்த பொதுமை நிலையிற் சிவ வழிபாடும் நிலைபெற்று வழங்கின என்பது முன்னர் விளக்கப்பெற்றது. இவ்வழிபாடுகள் யாவும் பலதிறமக்களும் தம் தம் சூழ்நிலைக்கும் தாம்தாம் உள்ளத்திற் கருதிய தெய்வத் தோற்றத்திற்கும் ஏற்ப மேற்கொண்டுள்ள தெய்வவழிபாடுகள் என்ற பொதுமை நெறி என்ற அளவில் நிகழ்ந்தனவேயன்றிப் பிற்காலத்திற் போன்று குறிகளாலும் அடையாளங்களாலும் வேறுபட்ட தனிக் கொள்கையினையுடைய சமயங்களாக அவை வழங்கப்பெறவில்லை. அதனால் மக்களின் ஒற்றுமையைக் குலைக்கும் நிலையில் அவை வேறுபட்டுக் காணப்படவில்லையென்பதும் இங்கு மனங்கொள்ளத் தகுவதாகும். இனி, கடைச் சங்க காலத்தையடுத்துத் தோன்றிய சிலப்பதிகாரம், மணிமேகலை என்னுங் காப்பியங்களில்தான் சிவ வழிபாடு, திருமால் வழிபாடு, கொற்றவை வழிபாடு, செவ்வேள் வழிபாடு என்னும் இவ்வழிபாடுகளும் இவற்றின் வேறாகச் சமணமும் புத்தமும் வேதநெறிபற்றிய கொள்கைகளும் தத்துவ அளவில் தனித் தனிச் சமயங்களாக வேறுபடுத்துப் பேசப்படுகின்றன. சிவ வழிபாடு, திருமால் வழிபாடு, கொற்றவை வழிபாடு, செவ்வேள் வழிபாடு என்னும் நான்கும் தம்முள் உறவுமுறைத் தொடர்புடையனவாகவும் இவற்றுட் சிவவழிபாடொன்றுமே தலைமைச் சிறப்புடையதாகவும் திகழ்ந்தமை இவையன்றி ஞாயிற்று வழிபாடு, திங்கள் வழிபாடு, மழை வழிபாடு, இந்திரவிழா, காமவேள்விழா என்பன அக்காலத் தமிழ் மக்களால் கொண்டாடப் பெற்றன என்பதும் தெய்வச் சிறப்புடைய ஊரைப் போற்றுதலும் தீதுநீர் வையை கங்கை ஆறாட்டும் கடலாட்டும் ஆகிய வழிபாட்டுச் சடங்குகளும் அக்கால மக்களால் மேற்கொள்ளப்பெற்றன என்பதும் சங்கத் தொகை நூல்களாலும் சிலப்பதிகாரம், மணிமேகலை என்னும் இவ்விருகாப்பியங்களாலும் நன்குணரப்படும். வடநாட்டில் வைதிக நெறிக்கு எதிராகத் தோன்றிய சமணபுத்த சமயங்கள், தத்தம் கொள்கைகளைப் பரப்பும் நோக்குடன் தமிழகத்தில் சங்காலத்தில் வேரூன்றின. வேரூன்றிய பின்னர்த் தம் சமயக் கொள்கையைப் பரப்பும் அளவில் அமைந்துவிடாது, இங்குள்ள தெய்வங் கொள்கையினையும் புறம்பழிக்கத் தொடங்கின என்பது சிலப்பதிகாரத்தில் மாங்காட்டு மறையோன் கூற்றைப் புறக்கணித்துப் பேசிய கவுந்தியடிகள் கூற்றால் உய்த்துணரப்படும். சிலப்பதிகாரத்தையடுத்து மணிமேகலைக் காப்பியம் இயற்றப் பெற்ற காலத்தில், தமிழகத்திற் பல்வேறு சமயவாதிகளும் மக்கள் பேரவையிலே தத்தம் சமயவுண்மைகளைக் குறித்து உறழ்ந்து பேசுதற்கேற்ற வாய்ப்பு காவிரிப்பூம் பட்டினம் முதலிய தமிழகப் பேரூர்களில் நிகழும் இந்திவிழா முதலிய திருவிழாக்காலங்களில் நாடாள் வேந்தரால் அளிக்கப்பெற்றதென்பது, ஒட்டிய சமயத்துறுபொருள் வாதிகள் பட்டி மண்டபம் பாங்கறிந்தேறுமின்39 எனவரும் மனிமேகலைத் தொடரால் இனிது புலனாகின்றது. கி. பி. இரண்டாம் நூற்றாண்டிலிருந்து முன்னர் இல்லாத சமயப் பகுப்புக்களும் மத மாறுபாடுகளும் இத்தென்றமிழ் நாட்டிலே தோன்றித் தமிழ் மக்களது ஒற்றுமையுணர்வைச் சிதைத்து அவர்களை ஒருவரோடொருவர் மாறுபடச் செய்து அலைக்கழிக்கலாயின. அசோகவேந்தன் காலந்தொடங்கிக் கி. பி. முதல் நூற்றாண்டு வரையில் ஏறக்குறைய முந்நூறாண்டுகள் தமிழகத்தில் குடியேறி இந்நாட்டு மக்களோடு ஒன்றி அமைதியாய் வாழ்ந்த புத்த சமணத் துறவிகள், பாண்டிய நாட்டிலும் சோழ நாட்டிலும் தமிழ் வேந்தரது அரசுநிலை குலையத் தொடங்கிய நிலையில் தமிழ் நாட்டின்மேற் படையெடுத்துவந்த அயலவராகிய கருநட மன்னர் முதலியோரது துணைகொண்டு தம் சமயக்கொள்கைகளை மிக முயன்று தமிழகத்திற் பரப்பும பணியில் ஈடுபடலாயினர்; தமது கொள்கைக்கு இணங்காத தமிழ் மக்களையெல்லாம் தம்மதங்களில் திருப்புதற்கு அரசியற் சார்பு பெற்றுத் தீய முறைகளையெல்லாம் கையாள்வாராயினர். இதனால் தமிழாசிரியர்க்கும் சமண புத்த சமயத்தார்க்குமிடையே வழக்குகளும் எதிர் வழக்குகளும் அடுத்தடுத்து நிகழ்ந்தன. அதனால் ஒருசார் கொள்கையினையுடையார் பிறிதொரு கொள்கையாளரிட மிருந்து தம்மை வேறுபடுத்துத் தம்மை உயர்த்திக் கோடற்கும் தம் கொள்கையினை யுடன்படாத பிறரைத் தம்மினின்று வேறுபிரித்துக் காட்டுதற்கும் சைவர், வைணவர், புத்தர், சமணர், வைசேடிகர், நியாயவாதிகள், உலகாயதர், மாயாவாதிகள் என்றாங்கு வெவ்வேறு குழுவினர்க்கு வெவ்வேறு சமயப் பெயர் கொடுத்து வழங்கும் நிலை சமயவாதிகளிடையே நிலைபெற வேரூன்றலாயிற்று. சமயம், மதம் என்ற பெயர்களும் அப்பெயர்களாற் பகுத்துரைக்கப்படும் பிரிவினைகளும் இன்றி எல்லோரும் ஒன்றுபட்ட பொதுமை யுணர்வினராய் எல்லாம் வல்ல ஒரு முழுமுதற் கடவுளையே பல்வேறு வடிவிற் பல்வேறு பெயர்களில் வணங்கிக் கொண்டு அமைதி நிலையில் வாழ்ந்த தமிழ் மக்களிடையே வடக்கிருந்து வந்து நிலைபெற்ற சமண புத்த சமயத்தவர்களாலும் அவர்களோடு முரண்பட்டு வந்த வைதிகக் குழுவினராலுமே பல்வேறு மதங்களும் மதப் போர்களும் இந்நாட்டிற் கிளைத்து வளர்ந்தன. இவ்வாறு இந்நாட்டில் முரண்பட்டு வளர்ந்துள்ள பல்வேறு மதங்களும் வடக்கிருந்து தமிழகத்திற் குடியேறின. அயலவர்களாலேயே பல்கின என்பதற்கு, அம்மதங்கள் பலவும் வடமொழிப் பெயர் கொண்டு உலவுதலும், அம்மதங்களைப் பற்றிய நூல்களெல்லாம் வடமொழியில் எழுதப்பெற்றிருத்தலுமே உறுபெறுஞ்சான்றாகும். இதனை நன்குணர்ந்த சுவாமி விவேகானந்தர் மதச் சண்டைகளும் சாதி வேற்றுமைக் கலகங்களும் பல்குதற்கு ஒருபெருங் கருவியாய் அமைந்தது வடமொழியே எனவும், அம்மொழி நூல்கள் தொலைந்துபோகுமானால் இப்போராட்டங்களும் தொலைந்து போகும் எனவும் வருந்திக் கூறியுள்ளார்.40 பழைய தமிழ் நூல்களிற் சமயப் போருக்காவது சாதிச் சண்டைக்காவது இடமில்லை என்பதனைச் சங்க இலக்கியங்களால் நன்குணரலாம். சிவலிங்க வழிபாடு இன்னவுரு இன்னநிறம் என்று அறிய வொண்ணாத இறைவனைத் தூணுருவில் நிறுத்தி வழிபடும் அருவுருவ வணக்கமாதலின், அவ்வணக்கம் பண்டைக்காலத்தில் சமய வேறுபாடில்லாத பொதுமை வாய்ந்த கடவுள் வழிபாடாகவே கருதப் பெற்றுவந்ததெனக் கருதவேண்டியுள்ளது. 2. தொல்காப்பியனார் கூறும் வழிபாட்டு நெறிகளும் தத்துவக் கொள்கைகளும் உலக மக்களால் மதிக்கத்தகும் பொருள்கள் எல்லாவற்றையும் முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் என மூவகைப் பொருள்களாகப் பண்டைத் தமிழாசிரியர்கள் பகுத்து ஆராய்ந்தனர். அவற்றுள் முதற் பொருள் என்றது மன்னுயிர்களின் வாழ்க்கைக்கு நிலைக்களமாகவுள்ள நிலமும் காலமும் ஆகிய இருதிறப் பொருள்களையும், கருப்பொருள் என்றது நிலமும் காலமுமாகிய அம்முதற்பொருள்களையிடமாகக் கொண்டு அவற்றின் சார்பிற் கருக்கொண்டு தோன்றும் புல் முதல் மக்கள் ஈறாகவுள்ள உயிர்ப் பொருள்களையும் உயிரல் பொருள்களையும். உயிர்ப் பொருளும் உயிரல் பொருளும் ஆகிய யாவும் நிலமும் காலமுமாகிய முதற் பொருளை நிலைக்களமாகப் பெற்றுக் கருக்கொண்டு தோன்றுவனவாதலின் கருப்பொருள் எனப்பட்டன. இவ்வுலகில் மெய்வாய் கண் மூக்குச் செவியென்னும் ஐம்பொறியறிவுடன் மனவுணர்வு எனப்படும் ஆறாவதறிவினையும் பெற்றுள்ள உயர்திணை மக்களுக்குரிய அகமும் புறமுமாகிய ஒழுகலாறுகளே உரிப்பொருள் என வழங்கப்படும். மக்கட் குலத்தார் வாழும் நிலத்திற்கும் காலத்திற்கும் ஏற்ப அவர்தம் உள்ளத்துணர்வுகளும் செயல்முறைகளும் ஒரொழுங்குபெற அமைதல் இயல்பு. இந்நுட்பத்தினை ஆசிரியர் தொல்காப்பியனார் காலத்திற்கு முற்பட்ட தமிழ்ச் சான்றோர்கள் நன்குணர்ந்து வெளியிட்டுள்ளார்கள் என்பதினை மேற்கூறிய முதல்கரு உரி என்னும் மூவகைப் பொருட்பாகுபாட்டால் உய்த்துணர்ந்து கொள்ளலாம். மாந்தர் வாழும் நிலத்தியல்புக்கேற்ப அவர்தம் மனத்தியல்பாகிய தெய்வக் கொள்கையும் வழிபாட்டு நெறிகளும் அவற்றின் வழிப்பட்ட தத்துவக் கொள்கைகளுந் தோன்றி நிலைபெறுவனவாதலின் தெய்வக் கொள்கையினை அவ்வந்நிலத்துக்குரிய கருப்பொருள் வகைகளுள் முதன்மையுடையதாகப் பண்டைத் தமிழியல் நூலாசிரியர்கள் பகுத்துரைத்துள்ளார்கள். ஆசிரியர் தொல்காப்பிய னாரும், தெய்வம் உணாவே மாமரம் புள் பறை செய்தி யாழின் பகுதியொடு தொகைஇ அவ்வகை பிறவுங் கருவென மொழிப எனவரும் நூற்பாவில் மக்கள் வாழ்வுக்கு இன்றியமையாத உணவுக்கு முன் உயிர்க்குயிராக வழிபடப்பெறுந் தெய்வத்தை முதலாவதாக வைத்து எண்ணியுள்ளமை இங்குக் கூர்ந்து நோக்கத்தகுவ தாகும். தமிழகத்திற் பண்டைநாளிற் காடும் காடு சார்ந்த பகுதியுமாகிய முல்லை நிலத்தில் மாயோன் எனப்போற்றப்பெறும் திருமால் வழிபாடும், மலையும் மலை சார்ந்த பகுதியுமாகிய குறிஞ்சி நிலத்தில் சேயோன் எனப் போற்றப்பெறும் செவ்வேள்வழிபாடும், வயலும் வயல் சார்ந்த பகுதியுமாகிய மருதநிலத்தில் வேந்தன் (இந்திரன்) வழிபாடும், கடலும் கடல் சார்ந்த பகுதியுமாகிய நெய்தல் நிலத்தில் வருணன் வழிபாடும் தோன்றி வழங்கின. நானிலமக்களும் தாம் தாம் வாழும் நிலத்திற்கேற்ப அமைத்துக் கொண்ட இத்தெய்வ வழிபாடுகளை, மாயோன் மேய காடுறை யுலகமும் சேயோன் மேய மைவரை யுலகமும் வேந்தன் மேய தீம்புன லுலகமும் வருணன் மேய பெருமண லுலகமும் முல்லை குறிஞ்சி மருதம் நெய்தலெனச் சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே1 எனவரும் சூத்திரத்தில் தொல்காப்பியனார் வகுத்துக் கூறியுள்ளார். நானில மக்களும் தாம் தாம் வாழும் நிலத்தியல்புக்கேற்ப வகுத்தமைத்துக் கொண்டன மேற்குறித்த தெய்வ வழிபாடுகள் என்பதும், இங்குக் குறிக்கப்பெற்ற தெய்வங்களுள் உயர்வு தாழ்வு கற்பித்தல் பண்டைத் தமிழ் நூலோர் கருத்தன்று என்பதும் மேல் எடுத்துக் காட்டிய தொல்காப்பியச் சூத்திரத்தால் நன்குபுலனாம். மேற்குறித்த தெய்வப் பெயர்களுள் மாயோன், சேயோன் என நிறப்பண்பு பற்றிய பெயர்களும் வழங்கப் பெறுதலாலும் நிறப்பண்பு வடிவினை நிலைக்களமாகக் கொண்டல்லது புலப்படாதாதலானும் இத்தெய்வங்களுக்குத் திருவுருவமைத்து வழிபடும் வழக்கம் தொல்காப்பியனார் காலத்துக்கு முற்பட்ட தொன்மையுடைய தென்பது நன்கு துணியப்படும் காடுறையுலகமாகிய முல்லை நிலத்துக்கோவலர், தம்மால் மேய்க்கப் பெறும் ஆனிரைகள் நோயின்றி வளர்ந்து பாற்பயன் தருதல் வேண்டிக் காயாம் பூவண்ணனாகிய மாயோனைப் பரவிக் குரவைக் கூத்தாடுதலும், மைவரையுலகமாகிய குறிஞ்சி நிலத்துக் குறவர்கள் மலரின் உள்ளிருந்தெழும் நறுமணம் போன்று உயிர்க்குயிராய் விளங்குந் தெய்வமணமாகிய வெறியினையறியுஞ் சிறப்புடைய வேலனையழைத்து வெறியாடல் நிகழ்த்திச் செங்காந்தள் நிறவண்ணனாகிய செவ்வேளை வழிபடுதலும், மருதநிலத்து வாழும் உழவர்கள் முறை செய்து காப்பாற்றும் இறைவனென மலர்தலையுலகிற்கு உயிரெனச் சிறந்த வேந்தனை வழிபடுதலும், நெய்தல் நிலத்துப் பரதவர் தமது வலைவளஞ் சிறத்தல் வேண்டிக் கடற்றெய்வமாகிய வருணனை வழிபடுதலும் பண்டைநாளில் தமிழகத்து நானில மக்கள் மேற்கொண்டொழுகிய தெய்வ வழிபாடுகளாகும். இவ்வழிபாடுகளோடு அச்சமகற்றி வென்றி நல்கும் கொற்றவையாகிய பழையோள் வழிபாடும் தறுகண்மை மிக்க தமிழ் மறவர்களால் மேற்கொள்ளப்பெற்றது. குறிஞ்சிநிலத் தெய்வமாகக் கொண்டு போற்றப் பெறும் முருகவேள் வழிபாட்டின் சிறப்பினை அம்முதல்வனை வழிபடும் வேலன்மேல் ஏற்றி வெறியறிசிறப்பின் வெவ்வாய் வேலன் வெறியாட்டயர்ந்த காந்தள் என்ற தொடராலும் காயாமலர்வண்ணனாகிய மாயோனது காத்தற் சிறப்பினை மாயோன் மேய மன்பெருஞ்சிறப்பின், தாவாவிழுப்புகழ்ப் பூவை நிலை என்ற தொடராலும், கொற்றவை வழிபாட்டின் பயனாகப் போர்மறவர்க்குளவாகும் தறுகண் உணர்வினைச் சிறந்த கொற்றவை நிலை என்ற தொடராலும் தொல்காப்பியப் புறத்திணையியலில் ஆசிரியர் தொல் காப்பியினார் சிறப்பாக எடுத்துக் கூறியுள்ளார். தெய்வம் அவ்வந்நிலத்துக் கருப்பொருள்களுள் ஒன்றாகக் கூறப்படினும் எல்லாப்பொருள்களினும் சிறந்ததாக மக்களால் முதற்கண் போற்றத்தக்கது என்னும் மெய்ம்மையினைப் பண்டைத் தமிழ்ச் சான்றோர் மறவாது பேணி வந்துள்ளார்கள். அதுபற்றியே ஆசிரியர் தொல்காப்பியனார் முதல் பொருள்வகையாகிய நானிலத்தினையெண்ணும் பொழுது மாயோன் மேய காடுறையுலகம் சேயோன் மேயமைவரையுலகம் என்றாங்கு அவ்வந்நிலத்திற்குரிய தெய்வத்தை முன்னிறுத்தியும், கருப்பொருள்களை எண்ணுமிடத்துத் தெய்வம் உணாவே என்றாங்குத் தெய்வத்தை முதற்கண் வைத்தும் மக்களால் வழிபடுதற்குரிய தெய்வத்தின் சிறப்பினை நன்கு வலியுறுத்தியுள்ளார். கருப்பொருள்பற்றிய நிகழ்ச்சியினைத் தலைவன் தலைவி முதலிய அகத்திணை மாந்தரது ஒழுகலாற்றிற்கு உவமையாகக் கொண்டு உய்த்துணரும்படிச் செய்யுள் செய்யும் புலவராற் கருதியமைக்கப் பெறுவது உள்ளுறை யுவமம் எனப்படும். யான் புலப்படக் கூறுகின்ற கருப்பொருள் நிகழ்ச்சியுடன் புலப்படக் கூறாத பொருளும் ஒத்துப் புலப்படுவதாக எனக் கருதிய புலவன் தன்னுள்ளக் கருத்துப் படிப்போர்க்கு இனிது புலனாகும் வண்ணம் உணர்த்துதற்கு உறுப்பாகிய சொற்கள் அமையத் தான் பாடிய செய்யுளில் உய்த்துணர வைத்தல் உள்ளுறையுவமம் எனப்படும். கருப்பொருள்களை நிலைக்களனாகக் கொண்டு இவ்வுவமை பிறக்குங்கால் அக்கருப்பொருள்பாலமைந்த நன்றுந் தீதுமாகிய செயல்களை உள்ளுறையாற் புலப்படுத்தக் கருதிய அகத்திணை மாந்தர் செயல்களுக்கு ஒப்புமையினைக் கருதியுணரும் நிலையுண்டாகும். கருப்பொருள்களில் ஒன்றாகிய தெய்வத்தின் செயல்களை உவமையாக எடுத்துரைப்பின் மக்களால் நன்கு மதித்துப் போற்றப் பெறும் தெய்வத்தின் மாண்புகள் இவ்வொப்புமை வாயிலாகச் சிதைவுறுதல் கூடும். இந்நுட்பத்தினை நன்குணர்ந்த முன்னைத் தமிழ்ச் சான்றோர் தெய்வமாகிய கருப்பொருளை நிலைக்களனாகக் கொண்டு உள்ளுறை கூறுதல் கூடாதென்றும் தெய்வம் நீங்கலாகவுள்ள ஏனைய கருப்பொருள்களையிடனாகக் கொண்டே உள்ளுறையுவமை கூறுதல் வேண்டுமென்றும் வரையறை செய்தார்கள். இவ்வரையறையினை, உள்ளுறை தெய்வம் ஒழிந்ததை நிலமெனக் கொள்ளு மென்ப குறியறிந் தோரே2 என வரும் சூத்திரத்தில் தொல்காப்பியனார் தெளிவாகக் குறித்துள்ளார். இக்குறிப்பினைக் கூர்ந்து நோக்குங்கால் தொல்காப்பியனார்க்கு முற்பட்ட பண்டைத் தமிழ்மக்கள் தெய்வங் கொள்கையிற் கொண்டிருந்த நன் மதிப்பும் தொல்காப்பியனார் தெய்வங் கொண்டுள்ள உறுதிப்பாடும் நன்கு புலனாதல் காணலாம். தமது நாட்டில் உரிமை வாழ்வினைப் பேணிக்காக்கும் உயர்ந்த குறிக்கோளுடன் போர்க்களத்துப் பகைவரோடு பொருது உயிர் கொடுத்துப் புகழ் கொண்ட தறுகண் வீரரை நாட்டுமக்கள் தெய்வமாக எண்ணி வழிபடுதற் பொருட்டு அவர்தம் பெயரும் பீடும் பொறித்தற்குரிய கல்லினைத் தேர்ந்து காணுதலும் பின்னர் அங்ஙனம் பொறிக்கப் பெற்ற கல்லினை நீர்ப்படுத்தலும், நடுதலும், கோட்டம் செய்தலும், அதனை வாழ்த்துதலும் பண்டைத் தமிழர் கொண்டடொழுகிய வீர வணக்கம் ஆகும். இன்னவுரு இன்னநிறம் என்றறிய வொண்ணாத நிலையில் உலகுயிர்களின் உள்ளும் புறம்பும் கலந்து நின்று இயக்கி நிற்கும் பேரறிவுப் பொருளாகிய இறைவனைக் கடவுள் என்ற பெயரால் தொல்காப்பியனார் குறித்துள்ளார். கடவுதல் - செலுத்துதல். அணுமுதல் அண்டமீறாகிய பொருள்களையும் உயிர்த் தொகுதி களையும் அகத்தும் புறத்தும் ஊடுருவி நின்று ஒர் ஒழுங்குமுறையிற் செலுத்துதல் பற்றி முழுமுதற் பொருளாகிய அது கடவுள் என்னும் பெயருடையதாயிற்று. இறைவன் இயவுள் என்னும் பெயரும் இப்பொருளில் வழங்கப்பெறுவதேயாகும். இவ்வாறே இறைவன் என்பதும் கடவுளைக் குறித்த பெயரேயாகும். யாண்டும் பொருள்கள்தோறும் நீக்கமற நிறைந்து விளங்குதல் கடவுளின் இயல்பேயாதலின் இறை என்பதும் கடவுளைக் குறித்து வழங்கும் பெயரேயாகும். இறை - யாண்டும் நீக்கமறத் தங்கிய பொருள். இறை - இறுத்தல்; தங்குதல், உயிர்ப்பொருள், உயிரல் பொருள் ஆகிய எல்லாப் பொருள்களிலும் நீக்கமறத் தங்கியிருந்து அவற்றை இயக்கி நிற்கும் முழுமுதற்பொருளையே கடவுள், இயவுள், இறை எனப் பல பெயர்களாலும் தமிழ் முன்னோர்கள் போற்றியுள்ளார்கள். கடவுளைக் குறித்து வழங்கும் காரணப் பெயர்களுள் ஒன்றாகிய இறை என்பதன் அடியாகப் பிறந்தது இறைவன் என்பதாகும். இச்சொல் வேண்டுதல் வேண்டாமையிலானாகிய இறைவனைப் போன்று யாவர்மாட்டும் விருப்பு வெறுப்பின்றி நடுநிலையுடையனாகி அறவோரை அளித்தும் அறமிலாதாரையொறுத்தும் ஆளவல்ல வேந்தனைக் குறித்த பெயராகவும் வழங்கப் பெறுவதாயிற்று. செருவகத்திறைவன் வீழ்ந்தென எனவரும் தொல்காப்பியத் தொடரில் இறைவன் என்ற சொல் நாடாளும் வேந்தனைக் குறித்து நிற்றல் காணலாம். இச்சொல் முதன்முதலிற் கடவுளைக் குறித்த பெயராயிருந்து பின்னர்க் கடவுள் நிலையில் மதிக்கத்தக்க வேந்தனைக் குறித்த பெயராகவும் வழங்கப் பெறுவதாயிற்று. இந்நுட்பம், முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட் கிறையென்று வைக்கப் பெறும்3 எனவரும் திருக்குறளால் நன்கு புலனாதல் அறியத் தகுவதாகும். தான் அறநெறியிற் சிறிதும் பிறழாது நின்று தன் குடிமக்களைப் பிறர் நலியாமற் பாதுகாத்தலையும் செய்யும் அரசன், பிறப்பினால் மகனேயாயினும் அவனது செயலின் உயர்வினாலே கண்கண்ட கடவுள் என மக்கட் குலத்தாராற் சிறப்பித்துப் போற்றப்பெறுவான் என்பது இத்திருக்குறளின் பொருளாகும். இதனால் இறையெனப்படும் கடவுள் வேறு மன்னன் வேறு என்பதும் இறையென்பதும் கடவுளைக் குறித்த பெயர் என்பதும் இப்பெயர் மன்னனைக் குறித்து வழங்கப்பெறுதல் உபசார வழக்கேயென்பதும் இவ்வாறு மன்னனைக் கடவுளாக மதித்துப் போற்றும் வழக்கம் தொல்காப்பியனார் காலத்திலேயே நிலைபெற்று வழங்கிய தொன்மையுடையதென்பதும் இவ்வழக்கம் திருவள்ளுவர் காலத்திலும் தொடர்ந்து நிலைபெற்றிருந்த தென்பதும் நன்கு துணியப்படும். மக்களால் செய்யப்படும் உழவுக்கும் பிற தொழில் கட்கும் காவல் செய்யுங் கருத்தினால் நாளடைவில் உருவாகி நிலைபெற்ற குடும்பமே மன்னர் குடும்பமாகும். மன்னன் என்னும் சொல், நிலைபெறுதல் என்னும் பொருளுடைய மன் என்னும் உரிச்சொல்லடி யாகப் பிறந்த காரணப் பெயராகும். இந்நுட்பம் மன்னர்க்குமன்னுதல் செங்கோன்மை எனவரும் திருக்குறளால் இனிது புலனாகும். மக்களது நல்வாழ்வு நிலை பெற அவர்கள் வாழும் நாட்டை நிலைபெறக் காக்குங் கடமை பூண்ட ஆட்சித் தலைவன், மன்னன் என நன்கு மதிக்கப்பெற்றான். அதனால் அவனது குடும்பமும் நாட்டில் வழிவழியாக நிலைபெற்று வருவதாயிற்று. மக்கட் குலத்தாரது உடம்பை வளர்ப்பனவாகிய நெல் முதலிய உணவுப் பொருள்களோ அவை விளைவதற்கு உறுதுணையாகிய நீரோ இவ்வுலகில் உயிர்வாழ்வினை நிலைபெறச் செய்யும் ஆற்றலுடையன அல்ல; மக்களை ஒரு நெறிப்படுத்தித் தம்முள் வேற்றுமையின்றி அன்பினாற் கலந்து வாழ வழி வகுக்கும் ஆட்சித் திறனுடைய மன்னனே மலர்தலை யுலகிற்கு உயிராவான் எனத் தமிழ் முன்னோர் எண்ணினார்கள். அவர்கள் எண்ணிய வண்ணமே அக்காலத் தமிழ் வேந்தர்களும் தம் நாட்டு மக்களின் இன்னுயிர் போன்று நாட்டிற்கு இன்றியமையாதவராய் முறை பிறழாது ஆட்சி புரிந்தார்கள். இங்ஙனம் அரசியல் நாகரிகம் உருப்பெறுதற் கிடனாகிய மருதநிலத்தில் வாழ்ந்த மக்கள் பசியும் பிணியும் பகையும் தோன்றாதவாறு தமது நாட்டினைப் பேணிக் காக்கும் கடமையினை மேற்கொண்ட மன்னனையே தெய்வம் என மதித்தப் போற்றினார்கள். அவர்கள் போற்றுதற்குரிய வகையில் அக்காலத் தமிழ் வேந்தர்களும் தாம் குடிமக்களின் இன்னுயிர் என இன்றியமையாதவராய் முறை பிறழாது ஆட்சிபுரிந்தனர். நாகரிகம் உருப்பெற்று வளர்தற்குரிய மருதநில மக்கள் தம் நாட்டு வேந்தனையே தெய்வமென எண்ணி அவனது ஆணை வழி ஒழுகினமையால் வேந்தன் மேய தீம்புனலுலகம் என்ற தொடரால் மருதநிலத்துக்குத் தெய்வமாவான் அந்நிலத்து வேந்தனே எனத் தொல்காப்பியனார் குறிப்பிடுவாராயினர். வேந்தனைக் காத்தற்கடவுளாகிய திருமாலாகக் கருதிப் போற்றும் மரபு தொல்காப்பியனார் காலத்திலேயே நிலைபெற்று வழங்கியுளது. இவ்வழிபாட்டு முறையினை, மாயோன் மேய மன்பெருஞ் சிறப்பிற் றாவா விழுப்புகழ்ப் பூவை நிலை4 என்ற தொடரால் ஆசிரியர் தொல்காப்பியனார் உய்த்துணர வைத்தமை இங்குக் குறிப்பிடத்தகுவதாகும். ஆநிரையைக் காத்த நீலமேனிநெடியோனாகிய மாயவன் திருமேனியோடு உவமித்துக் காட்டிடத்து அலரும் காயாம்பூவினைப் புகழ்வது பூவைநிலை யென்னுந் துறையாகும். மேற்குறித்த தொல்காப்பியத் தொடர்க்கு, மாயோனைப் பொருந்திய நிலைபெற்ற பெருஞ்சிறப்பினை யுடைய கெடாத புகழைப் பொருந்திய பூவை நிலையைக் கூறுதல் எனப் பொருள் கூறிய இளம்பூரண அடிகள், பூவை (காயம்பூ) மலர்ச்சியைக் கண்டு மாயோன் நிறத்தையொத்ததெனப் புகழ்தல். நாடெல்லை காடாதலின் அக்காட்டிடைச் செல்வோர் அப்பூவையைக் கண்டு கூறுதல், உன்னங்கண்டு கூறினாற் போல இதுவும் ஓர் வழக்கு என விளக்கமும் தருவர். இஃது உரையன்று என்பார் மாயோன் முதலாகிய தேவர்களோடு உவமித்தலே பூவை நிலையென்ப. வேறுகடவுளரை நோக்கி உவமித்து வருபவையெல்லாம் பூவை நிலையாகக் கொள்க, என்னை? ஏற்றூர்தி யானும் இகல்வெம்போர் வானவனும் ஆற்றலும் ஆள்வினையும் ஒத்தொன்றி னொவ்வாரே கூற்றக் கணிச்சியான் கண்மூன் றிரண்டேயாம் ஆற்றல்சால் வானவன் கண் என முத்தொள்ளாயிரத்து வந்தவாறு காண்க என மற்றொரு சாரார் கருத்தினையும் இளம்பூரண அடிகள் எடுத்துக் காட்டியுள்ளமை, திருமாலுடன் மன்னனையுவமித்துக் கூறும் நிலையில் தொல் காப்பியனார் கூறிய பூவை நிலையென்னுந்துறை, திருமாலேயன்றி ஏனைத் தெய்வங்களையும் மன்னரோடு, உவமித்துக் கூறும் முறையிற் பிற்காலத்தில் வளர்ச்சி பெற்ற திறத்தைக் குறிப்பிடுவதாகும். மேற்குறித்த இளம்பூரணருரையினையும் அவர் பிறர் கூறுவதாகக் காட்டிய பிறிதோருரையினையும் மனத்திற் கொண்ட நச்சினார்க் கினியர், இவ்விரண்டுரைகளையும் தொல்காப்பியனார் கருத்தெனவே கொண்டு மாயோன் விழுப்புகழ், மேயபெருஞ்சிறப்பின் தாவா விழுப்புகழ் மன்பூவை நிலை எனக் கொண்டு கூட்டி மாயவனுடைய காத்தற் புகழையும் ஏனோர்க்கும் உரியவாய் மேவிய பெரிய தலைமையிற் கெடாத படைத்தல் அழித்தல் என்னுந் தொழில்களையும் மன்னர் தொழிலுக்கு உவமையாகக் கூறும் பூவைநிலை என உரைவரைந்து ஏற்றுவலனுயரிய (புறம்-56) எனவரும் புறப்பாடலை இலக்கியமாக எடுத்துக் காட்டியுள்ளார். காடுறையுலகமாகிய முல்லைநிலத்து அலருங்காயம்பூ, நீலமேனி நெடியோனாகிய மாயோனது திருமேனியின் நிறத்தினை நினைவுபடுத்துவதாகலின், பூவையென்னும் அப்பூவினைப் புகழ்தல் மாயோனைப் புகழ்தலாய் அத்தெய்வத்தினது காத்தற்றொழிலைத் தனக்குரிய முறைமையாகக் கொண்ட மன்னனது பெருஞ்சிறப்பினை விரித்துரைக்கும் புறத்திணைத் துறையாயிற்று. மாயோனாகிய தெய்வத்தோடு மன்னனை யுவமித்தலே பூவைநிலை யென்னுந் துறையாமென்பது ஆசிரியர் தொல்காப்பியனாரது கருத்தாகும். இக்கருத்தினையடியொற்றியே, கறவை காவலன் நிறனொடு பொரீஇப் புறவலர் பூவைப் பூப்புகழ்ந் தன்று என ஐயனாரிதனார் இத்துறைக்கு விளக்கம் கூறியுள்ளமை இங்கு ஒப்புநோக்கி யுணரத்தகுவதாகும். தொல்காப்பியத்துக்குப் பின் தோன்றிய கடைச் சங்கத் தொகை நூல்களில் முக்கண்ணன், முருகன் முதலிய எல்லாத் தெய்வங்களையும் மன்னனுக்கு உவமையாக எடுத்துரைத்துச் சிறப்பிக்கும் வழக்கம் உளதாதலையுணர்ந்த இளம்பூரணரும், நச்சினார்க்கினியரும் மாயோனை மன்னனுக்கு உவமித்தலேயன்றி ஏனைத் தெய்வங்களை அரசனுக்கு உவமித்தலும் பூவைநிலையேயாகும் என இலக்கியங் கண்டதற்கேற்ப இலக்கணமும் அமைத்துக் கொண்டார்கள். மாயோன் நிறம் போலும் பூவைப்பூநிறம் என்று பொருவுதல் பூவைநிலையேன்று கொண்டால் ஏனையோர் நிறத்தொடு பொருந்தும் பூக்களையும் பொருவுதல் கூறல் வேண்டும். ஆசிரியர் அவை கூறாமையின் அது புலனெறிவழக்க மன்மையுணர்க என நச்சினார்க்கினியர் ஐயனாரிதனார் பூவைநிலையென்னுந் துறைக்குத் தந்த விளக்கம் குறையுடையதாதலை எடுத்துக்காட்டி மறுத்துள்ளமையும் இங்குக் கருதுதற்குரியதாகும். ஆசிரியர் தொல்காப்பியனார் தொல்காப்பியம் சொல்லதிகாரம் கிளவியாக்கத்தில் சொற்களை உயர்திணைச் சொல் அஃறிணைச் சொல் என இருதிணையாகப் பகுத்துக் கூறுகின்றார். அங்ஙனம் பகுத்துரைக்கப்படும் இருதிணை ஐம்பால்களுள் இன்னபால் என விளங்காதன சிலவற்றையெடுத்துக் கூறி அவற்றை உயர்திணையுள் அடக்குவதாக அமைந்தது, காலம் உலகம் உயிரே உடம்பே பால்வரை தெய்வம் வினையே பூதம் ஞாயிறு திங்கள் சொல்லென வரூஉம் ஆயீரைந் தொடு பிறவு மன்ன ஆவயின் வரூஉங் கிளவி யெல்லாம் பால்பிரிந் திசையா புயர்திணை மேன5 எனவரும் சூத்திரமாகும். காலமும் உலகப்பகுதியும் உயிரும் உடம்பு பால்வரை தெய்வமும் வினையும் பூதமும் ஞாயிறும் திங்களும் சொல்லும் என எண்ணப்பெற்ற இப் பத்துடனே இவைபோன்ற பொருள்களிற் பயின்று வருவன பிறவும் ஆகிய சொற்களெல்லாம் ஐம்பாலுள் இன்னபால் எனப் பிரிந்து இசைப்பன அல்ல; பொதுவாக உயர்திணைப் பொருள்மேல் நிகழ்வனவாம் என்பது இந்நூற்பாவின் பொருளாகும். இச்சூத்திரத்துக் கூறியவற்றுள் உலகமும் உயிரும் உடம்பும் ஒழிந்தனவெல்லாம் தெய்வத்தையே உணர்த்தின வாதலின் தெய்வம் என்பதனைத் தெய்வஞ் சுட்டிய பெயர் நிலைக்கிளவியும் (தொல்-கிளவி-4) என்பதனான் உயர் திணையென்பது பெற்றாம். இவையெல்லாந் தெய்வ மென்னும் உயர்திணைப் பொருளை யுணர்த்தினவேனுந் தெய்வம் என்னுஞ் சொல் அஃறிணை வாசகமாதலின் அதற்கேற்ப அஃறிணை முடிபே கொள்ளுமென்றார். இச் சொற்கள் கூறுகின்ற பொழுதே தத்தம் உயர் திணைப்பபாற் பொருளே தோற்றுவித்து நிற்றலின் ஆகுபெயரன்மையுணர்க. காலம் என்றது காலக்கடவுளை. உலகம் என்றது உலகத்தாரை. அறஞ்செய்து துறக்கம் புக்கான், உயிர்நீத்து ஒரு மகன் கிடந்தான் என உயிரும் உடம்பும் அவரின் வேறன்றி அவராக வுணரப்பட்டு உயர்திணைக்கேற்ற முடிபு கோடலின் மக்களேயாயின. இன்ப துன்பத்திற்குக் காரணமாகிய இருவினையும் வகுத்தலின் பால்வரை தெய்வமென்றார். வினை - இருவினைத் தெய்வம். சொல்-நாமகளாகிய தெய்வம் என நச்சினார்க்கினியர் இச் சூத்திரப் பொருளை விளக்கியுள்ளார். வினை என்பது அறத்தெய்வம் என்பர் சேனாவரையர். காலம் என்பது முன்னும் பின்னும் நடுவும் என்றும் உள்ளதோர் பொருள். உலகம் என்பது மேலும் கீழும் நடுவுமாகி எல்லாவுயிருந் தோற்றுதற்கு இடமாகிய பொருள். உயிர் என்பது சீவன். உடம்பு என்பது மனம் புத்தி ஆங்காரமும் பூத தன்மாத்திரையுமாகி வினையினாற் கட்டுப்பட்டு எல்லாப் பிறப்பிற்கும் உள்ளாகி நிற்பதோர் நுண்ணிய உடம்பு. இதனை மூலப்பகுதி எனினும் ஆம். பால்வரை தெய்வம் என்பது ஆணும் பெண்ணும் அலியுமாகிய தன்மையை வரைந்து நிற்கும் பரம்பொருள். வினையென்பது ஊழ். பூதம் என்பது நிலம் நீர் தீ வளி ஆகாயம் ஆகிய ஐம்பெரும் பூதம். ஞாயிறு என்பது தீத்திரளாய் உலகு விளக்குவது. திங்கள் என்பது நீர்த்திரளாய் உலகிற்கு அருள் செய்வது. சொல் என்பது எழுத்தினான் இயன்று பொருள் உணர்வது; அச்சொல்லினான் இயன்ற மந்திரம் விட முதலாயின தீர்த்தலின் தெய்வம் ஆயிற்று என்பது தெய்வச் சிலையார் கூறும் பொருள் விளக்கமாகும். இவ்வுரையினைக் கூர்ந்து நோக்குங்கால் சாங்கியர் கூறும் இருபத்தைந்து தத்துவங்களுக்கு மேலாகச் சைவசித்தாந்தங் கூறும் தத்துவங்களிற் சில காலமுலகம் எனத் தொடங்கும் இத்தொல்காப்பியச் சூத்திரத்தில் இடம்பெற்றுள்ளமை காணலாம். உலகத் தொகுதிக்கு முதற்காரணமாய் என்றும் நிலைபேறுடையதாய் அறிவில்லாத சடப்பொருளாய் வைப்பாற்றலாய் இறைவனது விரிவுக்குள் அடங்கியதாய் உள்பொருளாய் அருவாய் உள்ளது மாயை. மா என்பது ஒடுங்குதல்; யா என்பதுவருதல். இவ்வுலகம் ஒடுங்குதற்கும் மீளத் தோன்றுதற்கும் நிலைக்களமாயுள்ள பொருள் மாயையாதலின் அது மாயா என்னும் வடமொழிப்பெயராற் குறிக்கப்பட்டு ஆவீறு ஐயாதல் என்னும் தமிழிலக்கண மரபின்படி மாயை எனத்திரிந்து வழங்குவதாயிற்று. மாயா என்பதனைத் தமிழ்ச் சொல்லாகக் கொண்டு மாய் ஆ எனப் பிரித்து இவ்வுலகம் மாய்தற்கும் (ஒடுங்குதற்கும்) ஆதற்கும் (மீளத் தோன்றுதற்கும்) நிலக்களமானது எனப் பொருள் விளக்கந்தருதலும் உண்டு. உயிரறிவிற்குப் புலப்படும் பொருளின் புடை பெயர்ச்சிகள் யாவும் காலம் என்னும் அருவப் பொருளின் வரையறைக்கு உட்பட்டு நிகழ்தலின் காலம் என்பது ஒரு தத்துவமாக வழங்கப்பெற்று வருகிறது. காலம் என்பது ஒன்றாய் நித்தமாய் உள்ளது என்பர் நையாயிகர் முதலியோர். அதனை மறுத்துப் பல வாய் ஏகதேசமாய் நிலையற்றதாய் உள்ளது காலம் என்பர் சைவசித்தாந்திகள். காலம் ஒன்றாயிருக்குமானால் நடத்தல் முதலிய தொழில்களும் இறப்பு நிகழ்வு முதலியவற்றால் வேறுபடுதலின்றி ஒன்றேயாதல் வேண்டும். அவ்வாறன்றி இறப்பு நிகழ்வு முதலியனவாய் நிகழுந் தொழிற் பாகுபாட்டிற்குக் காரணம் காலத்தினது பாகுபாடேயாதலின் காலம் பலவாதல் அறிக என விளக்கந்தருவர் சிவஞானமுனிவர். ஞாயிற்றின் செலவு முதலிய செயற்கையாலன்றித் தொழிலின் தொடக்கம் அதன் நிகழ்வு அதன் முடிவு ஆகிய இயற்கையால் இறந்தகாலம் நிகழ்காலம் எதிர்காலம் எனப் பலவகையாகப் பகுக்கப்படுதலின் காலம் ஒன்றெனக் கூறுதல் பொருந்தாது ஆசிரியர் தொல்காப்பியனாரும், இறப்பின் நிகழ்வின் எதிர்வின் என்றச் சிறப்புடை மரபின் அம்முக் காலமும்6 எனக் காலம் மூன்றெனக் குறித்துள்ளமை காணலாம். இவ்வாறு காலம் பலவேறு வகைப்படும் என்பது பெறப்படவே காலம் என்பது தம்முட் பலவுமாய்ச் சடமுமாகலின் அது தோன்றி நின்றழியும் நிலையில் பொருளே யென்பதும் அதுபற்றி விரிவின்றிச் சுருங்கிய ஏகதேசப் பொருள் என்பதும் தாமே பெறப்படும். இத்தகைய காலவரையறையின் அகப்படாது நிற்பதே நிலையுடைய பொருளாகும். காலம் நிலையில்பொருள் எனக் கொள்வது பற்றிக் காலங்கடந்த நிலையுடைய பொருள் உண்டெனக் கோடற்கு எத்தகைய தடையுமில்லை. காலம் உலகம் எனவரும் இத்தொல்காப்பியச் சூத்திரத்தில் காலம் என்றது, உயர்திணைமருங்கிற் பால்பிரிந்திசைக்கும் உணர்வுடைப்பொருளாதலிள் அஃது அழிதல் மாலைத்தாய் இறப்பு நிகழ்வு எதிர்வு என்னுப்பகுப்பினாற் பலவாய் அறிவில் பொருளாயுள்ள காலத்தினைக் குறியாது அதனை உலகுயிர்களின் நிகழ்ச்சிகளில் வைத்துத் தொழிற்படுத்தும் உணர்வினதாகிய தெய்வ ஆற்றலையே குறிப்பதாகும். இந்நுட்பம் காலம் என்றது காலக்கடவுளை என நச்சினார்க்கினியரும், காலம் என்பது முன்னும் பின்னும் நடுவுமாகி என்றும் உள்ளதோர் பொருள் எனத் தெய்வச்சிலையாரும் தரும் உரைவிளக்கங்களால் இனிது புலனாம். இங்கு உலகம் என்றது நிலம் தீ நீர் வளி விசும்போடைந்தும் கலந்த திரட்சியாகிய அறிவில்பொருளைக் குறியாது அத்திரட்சி மேலும் கீழும் நடுவுமாய் விரிந்து எல்லாவுயிருந்தோற்றுக்கு இடந்தரும்வண்ணம் அதனை உள்ளும் புறம்பும் உடனிருந்து இயக்கும் உணர்வுடைய தெய்வ ஆற்றலைக் குறித்ததென்பது தெய்வச்சிலையார் உரைவிளக்கத்தால் நன்கு புலனாம். இங்கு உயிர் என்றது உயிர்களின் அறிவு விளக்கத்தைச் சுட்டி நிற்றலின் உயர்திணையாயிற்று. ஈண்டு உடம்பு என்பது இவ்வுலகில் நிலையிலதாய் அழியுந்தன்மையாதாகிய ஐம்பூதச் சேர்க்கையாலாகிய அறிவில்லாத தூலவுடம்பினைச் குறியாது மனம் புத்தி அகங்காரம் சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்னும் எண்வகைப் பொருள்களால் இயன்று வினையினாற் கட்டுப்பட்டு நுண்ணிதாய் ஒர் உயிர் மேற்கொள்ளுதற்குரிய எல்லாப்பிறப்பிற்கும் உள்ளாகி நிற்கும் நுண்ணுடம்பினைக் குறித்த இச்சொல் ஆகுபெயராய் அவ்வுடம்பினை உள்நின்றியக்கும் உணர்வாற்றலைக் குறித்ததெனக் கொள்ளுதல் பொருத்தமுடையதாகும். காலம் உலகம் எனவரும் தொல்காப்பியச் சூத்திரத்தில் பால்வரை தெய்வம் என்பதும் வினை என்பதும் தனித்தனியே எண்ணப்பெற்றிருந்ததலால் பால்வரை தெய்வம் என்பது வேறு வினை என்பது வேறு என்பது நன்கு துணியப்படும். பால்வரை தெய்வம் என்பது ஆணும் பெண்ணும் அலியுமாகிய நிலைமையை வரைந்து நிற்கும் பரம்பொருள் எனத் தெய்வச்சிலையாரும், எல்லோர்க்கும் இன்பத்துன்பத்திற்குக் காரணமாக இரு வினையையும் வகுப்பது எனச் சேனாவரையரும் நச்சினார்க்கினியரும் பொருள் வரைந்துள்ளார்கள். எனவே இச்சொல், கடவுளாகிய முழுமுதற் பொருளையே குறித்து நின்ற தென்பது தொல்காப்பியவுரையாசிரியர் அனைவர்க்கும் உடன்பாடாதல் தெளிவு. இதனையடுத்து வினை யெனச் சுட்டப்பட்டது ஊழ் என்பது எல்லாவுரையாசிரியர்க்கும் ஒத்த முடிபாதலால், முன்னுள்ள பால்வரை தெய்வம் என்பதற்கு ஊழ்வினை எனப்பொருள் கூறுதல் பொருந்தாதென்பது நன்கு துணியப்படும். ஒன்றே வேறே யென்றிரு பால்வயின் ஒன்றி யுயர்ந்த பால தாணையின் ஒத்த கிழவனுங் கிழத்தியுங் காண்ப மிக்கோ னாயினுங் கடிவரை யின்றே (தொல். பொருள். நூ. 90) என வருஞ் சூத்திரத்தில் ஊழ்முறையாகிய பாலின் இயல் பினையும் அதன் வகையினையும் அதனையிடமாகக் கொண்டு நிகழும் தெய்வத்தின் ஆணையினையும் ஆசிரியர் தொல்காப்பியனார் விரித்துக் கூறியுள்ளார். உயிர்களை அன்புடையாரோடும் இன்ப நுகர்ச்சிகளோடும் ஒன்று விப்பதுவும் வேறுபடுத்துவதும் எனப் பால் (ஊழ்) இருவகைப்படுமென்றும், அவற்றுள் ஒன்றுவித்தலால் மேன்மேல் உயர்த்தும் நல்லூழ் உயர்ந்தபால் எனச் சிறப்பித் துரைக்கப்படும் என்றும் அத்தகைய உயர்ந்த பாலினை இடமாகக் கொண்டு நிகழும் இறைவனது ஆணையினால் உருவுந் திருவு முதலிய நலங்களால் தம்முள் ஒப்புடையாராகிய தலைவனுந் தலைவியும் ஓரிடத்து எதிர்ப்பட்டுக் காண்பர் என்றும் மேற்காட்டிய களவியற் சூத்திரம் அறிவுறுத்துகின்றது. இங்குக் கூறப்பட்ட இருவகைப் பாலினும் ஒன்றுவிக்கும் பாலினை ஆகூழ் எனவும் வேறுபடுத்தும் பாலினைப் போகூழ் எனவும் ஊழ் என்னும் அதிகாரத்துள் திருவள்ளுவர் குறிப்பிட்டு விளக்கியுள்ளார். திருக்குறள் ஊழ் என்னும் அதிகாரத்திலும் இத்தொல்காப்பியச் சூத்திரத்திலும் இடம் பெற்றுள்ள குறிப்புக்களை ஒப்பிட்டு நோக்குங்கால் இச்சூத்திரத்தில் ஒன்றே வேறேயென்று இருபால் என்றது ஆகூழ், போகூழ் என்னும் இருவகையூழினையே யென்பது நன்கு விளங்கும். எனவே பால்வரை தெய்வம் என்ற தொடர்க்கு எல்லார்க்கும் இன்பத் துன்பத்திற்குக் காரணமாகிய இருவினையையும் வகுப்பது எனச் சேனாவரையரும் நச்சினார்க்கினியரும் வரைந்துள்ள பொருள் விளக்கமே தொல்காப்பியனார் கருத்தினைப் பிறழாது புலப்படுத்து வதாகும். இத்தொடரில் பாலது ஆணை என்றது, உயிர்கள் செய்த நன்றுந்தீதுமாகிய வினைப்பயனை வினைசெய்த உயிர்களே தப்பாது நகரும்படி நுகர்விக்கும் இறைவனது ஆணையாகிய நியதியினை. இதனால் உயிர்கள் செய்யும் நலந்தீங்குகளாகிய இருவினைகளும் இன்பம் துன்பம் என்னும் பயனை விளைப்பன என்பதும் அவ்விருவகைப் பயன்களையும் வினை செய்த உயிர்களே தப்பாமல் நுகரும்படி நுகர்விக்கும் முதல்வன் ஒருவன் உளன் என்பதும் அங்ஙனம் முதல்வனால் வகுக்கப்பட்ட நியதியே பாலது ஆணை எனப்படும் என்பதும் நன்கு புலனாதல் காணலாம். பன்னெடுங்காலத்திற்கு முன் ஆசிரியர் தொல்காப்பியனார் அறிவுறுத்திய இத்தத்துவவுண்மைகளை, செய்வினையுஞ் செய்வானும் அதன்பயனுஞ் சேர்ப்பானும் மெய்வகையால் நான்காகும் விதித்த பொருள்7 எனவரும் பாடலிற் சேக்கிழார் நாயனார் வகைப்பட விரித்துரைத் துள்ளமை இங்கு ஒப்பு நோக்கியுணரத்தகுவதாகும். தொல்காப்பியனார் குறித்த பால்வரை தெய்வம் என்ற தொடர், பால் எனப்படும் ஊழ் வேறு, அதனை வினை செய்த உயிர்களே நுகரும்படி செய்யும் தெய்வம் வேறு என்னும் மெய்ம்மை யினை விளக்குவதாகும். இங்குத் தெய்வம் என்றது இறைவனை. தெய்வத்தால் வகுக்கப் பெறும் முறைமையே பால் எனவும் வகை எனவும் ஊழ் எனவும் வழங்கப்படும். இந்நுட்பத்தினை, வகுத்தான் வகுத்த வகையல்லாற் கோடி தொகுத்தார்க்குந் துய்த்த லரிது8 என வருந் திருக்குறளில் தெய்வப்புலவர் தெளிவாக அறிவுறுத்தி யுள்ளமை காணலாம். ஊழ்வினை தானேயுருக் கொண்டுவந்து வினை செய்தாரைத் தொடர்ந்து பற்றி நுகர்விக்கும் உணர்வும் ஆற்றலும் உடையதன்று எனவும், எல்லாப் பொருள்களையும் ஒழுங்கு பெற இயக்கியருளும் இறைவன் வகுத்த முறைமையே ஊழ் எனப்படும் எனவும் தெளிவுபடுத்தக் கருதிய திருவள்ளுவர் வகுத்தான் வகுத்தவகை என்ற தொடரால் ஊழ்வினையாவது இதுவென விளக்கியுள்ளார். இத்தொடரில் வகுத்தான் என்னுஞ்சொல் இறைவனைக் குறிப்பதாகும்; வகுத்த வகை யென்றது அம்முதல்வனால் வகுக்கப்பட்ட நியதியாகிய ஊழைக் குறிப்பதாகும். பகுத்தது பால் என வழங்கினாற் போன்று வகுத்தது வகையென்றாயிற்று. தெய்வத்தின் இயல்பினை விரித்துரைக்கக் கருதிய தொல்காப்பி யனார். பால்வரை தெய்வம் என்ற தொடரால் தெய்வத்தினைக் குறித்தார். அவ்வாசிரியர் குறிப்பின் வண்ணம் ஊழின் இயல்பினை விளக்கக் கருதிய திருவள்ளுவர் வகுத்தான் வகுத்த வகை என அதனை விரித்துரைத்தார். எனவே பால்வரை தெய்வம் எனத் தொல்காப்பியனார் கூறியதும் வகுத்தான் எனத் திருவள்ளுவர் கூறியதும் இறைவனேயே என்பது நன்கு புலனாம். ஓருயிர் செய்த வினையின் பயன் பிறிதோருயிரின்கட் செல்லாமல் வினை செய்தவுயிரையே வினையின் பயன் சென்று சேரும்படி வகுத்து நுகர்வித்தல், வேண்டுதல் வேண்டாமையிலானாகிய இறைவன் செய்யும் முறைமையாதலின் வகுத்தான் என்ற பெயராற் கடவுளைக் குறித்தார். இத்தொடரில் வகை யென்றது கடவுளால் வகுத்து நுகர்விக்கப்படும் வினைப்பயனாகிய ஊழினை. ஊழைப் பற்றிய இக்கொள்கையினை, யாழின் மொழிமங்கை பங்கன்சிற் றம்பலத் தானமைத்த ஊழின் வலியதொன் றென்னை9 என வருந்தொடரால் திருவாதவூரடிகள் விளக்கியதிறம் இங்கு ஒப்பு நோக்கியுணரத்தகுவதாகும். விருப்பம் அறிவு செயல் என்னும் மூவகை ஆற்றலும் ஓரளவு விளங்கப்பெற்று உலக நுகர்ச்சியில் ஈடுபடும் மக்கட்குலத்தாரிற் பெரும்பாலார் இன்ப நுகர்ச்சியில் விருப்பும் துன்ப நுகர்ச்சியில் வெறுப்பும் உடையராய்ப் பிறர் செய்த நல்வினைப்பயனைத் தாம் நுகரவும் தாம் செய்த தீவினைப் பயன்கள் தம்மைத் தொடராதவாறு விலகியொழுகவும் முயலுதலை இவ்வுலகியல் நிகழ்ச்சிகளில் ஆங்காங்கே காண்கின்றோம். இங்ஙனம் ஒருவர் செய்த நல்வினைப் பயனாகிய இன்பத்தை வேறொருவர் கவர்ந்து கொள்ளாதவாறும் தாம் நுகர்தற்குரிய தீவினைப் பயனாகிய துன்பத்தை நெகிழ விட்டுத் தப்பியோடாதவாறும் அவரவர் செய்த இருவினைகளின் பயன்களை அவரவரே நுகரும்படி அரசன் ஆணைபோல் வரையறுத்துச் செலுத்துவது இறைவனது ஆணையாகும். இறைவனது முறைசெய்தற்றன்மையாகிய ஆணை அந்தந்த உயிர்கள் செய்த இருவினைப் பயன்களை முன்னிட்டு அவ்வச் செயல்களைச் செய்வதாகலின், ஊழினைத் துணையாகக் கொண்டு செயல்புரியும் இறைவனது ஆற்றலைப் பாலது ஆணை என்றார் தொல்காப்பியனார். பால் ஊழ் வகை நியதி விதி என்பன ஒருபொருட் கிளவி. ஒருபாற்கோடாது நடுநின்று ஆட்சிபுரியும் அரசனது ஆணை நிகழாதாயின் எளியோர் பொருளை வலியோர் கவர்ந்து கொள்வர். அதுபோல எல்லாப் பொருளையும் வகுத்து இயக்குபவனாகிய முதல்வனது ஆணையாகிய முறை நிகழாக்கால் ஒருவர் செய்த நல்வினைப் பயனை வேறொருவர் கவர்ந்து கொள்ளவும் தாம் செய்த தீவினைப் பயனைப் பிறர் மேற்சுமத்தவும் இடமுண்டாகும். இருவினையும் உணர்வற்றனவாதலின் அவை உயிர்கட்கு நுகர்ச்சியைத் தருதல் மாத்திரமேயன்றி அந்நுகர்ச்சிவினை செய்தானையே சென்றடையும்படிச் செய்விக்கும் ஆற்றலுடையன அல்ல. எனவே உயிர்களுக்கு இருவினைப் பயன் முதல்வனது ஆணையினால் வரும் என்பதே பொருத்தமுடையதாகும். அரசன் தன் ஆணையை ஏனை அதிகாரிகள் பால் வைத்து அவர்களைக் கொண்டு அவ்வத்தொழில் செய்விக்குமாறு போல இறைவனும் தனது ஆணையை இருவினையின் மேல் வைத்து அது கருவியாக இருவினைப் பயன்களை உயிர்கட்கு அருத்துவன். இக்கருத்தினை மனத்துட்கொண்டே பால்வரை தெய்வம் என்ற தொடரால் தொல்காப்பியர் இறைவனைக் குறித்துள்ளார். உழவர் செய்யுந் தொழிலுக்குத் தக்க பயனை அத்தொழில் நிகழ்ச்சிக்கு ஆதாரமாகிய விளைநிலம் விளைவிப்பதன்றி அவ்வுழவுத் தொழில் தானே விளைவிக்கமாட்டாது. அது போலவே உணவும் வித்துமாகத் தொன்று தொட்டு வரும் வினைப் பயன்களை உயிர்கட்குக் கூட்டுவிப்பவன் முதல்வனேயன்றி வினைதானே கூட்டுவிக்கும் ஆற்றலுடையதன்று என்பதே தமிழ் முன்னோர் நுனித்துணர்ந்த தத்துவக் கொள்கையாகும். தெய்வத்தைக் குறித்தும் வினையினைக் குறித்தும் தொல்காப்பியனார் காலத் தமிழ் மக்கள் கொண்ட இத்துணிவினைப் பால்வரை தெய்வம் எனவரும் தொல்காப்பியத் தொடர் நன்கு புலப்படுத்தல் காணலாம். உலகுயிர்களை இயக்கும் முழுமுதற்பொருளாகிய கடவுளை வழிபாட்டுப் போற்றுதல் மக்களது தலையாய கடமையென்பதும் வழிபடு தெய்வத்தின் திருவருளால் குறைவற்றபெருஞ் செல்வத்துடன் தம் குடும்பம் வாழையடி வாழையென இவ்வுலகில் நெடுங்காலம் நிலைபெற்று வளர இனிது வாழலாம் என்பதும் ஆகியவுண்மையினை முன்னைத்தமிழ்ச் சான்றோர் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்கள். நினக்குத் தொழுகுலமாகிய தெய்வம் நின்னைப் புறங்காப்ப இல்லற முதலிய நல்லறங்களாற் பழியின்றிப் புகழுடன் பூத்த செல்வமொடு புதல்வரைப் பெற்றுப் புதல்வரும் இத்தன்மையராகி நீடு வாழ்மின் என்று தம்பால் அன்புடையாரைத் தெய்வத்தின் திருவருளைத் துணைக் கொண்டு வாழ்த்தினார்கள். இவ்வாறு தெய்வத்தைப் பாதுகாவலாகப் புறத்தே நிலை பெறச் செய்து அத்தெய்வத்தின் திருவருளால் நீடுவாழ்மின் என வாழ்த்தும் வாழ்த்தியல் புறநிலைவாழ்த்து என வழங்கப் பெற்றது. எடுத்துக் கொண்ட செயல் இனிது நிறைவேறுதற்குக் காரணமாகிய கடவுள் தோன்றாத்துணையாய் நின்று நின்னைத் துன்பந் தொடராதவாறு நின்னைப் புறங்காப்பப் பழிதீர்ந்த செல்வத்தோடு வழிவழியாகச் சிறந்து பொலிமின் என வாழ்த்துதலால் இது புறநிலை வாழ்த்து என்னும் பெயர்த்தாயிற்று. இவ்வாழ்த்தியல் துள்ளலோசைத்தாகிய கலிப்பாவிலும் தூங்கலோசைத்தாகிய வஞ்சிப்பாவினும் பாடப் பெறாது. இவையொழிந்த பாவினுள் வரும் என்பதனை, வழிபடு தெய்வம் நிற்புறங் காப்பப் பழிதீர் செல்வமொடு வழிவழி சிறந்து பொலிமின் என்னும் புறநிலை வாழ்த்தே கலிநிலை வகையும் வஞ்சியும் பெறா10 என வருஞ்சூத்திரத்தால் ஆசிரியர் தொல்காப்பியனார் வரையறுத்துள்ளார். எனவே இப்புறநிலைவாழ்த்துப் பொருண்மை வெண்பாவினும் ஆசிரியப்பாவினும் இவையிரண்டும் கலந்த மருட்பாவினும் தொல்காப்பியனார் காலத்திற் பாடப்பெற்றதென்பது நன்கு தெளியப்படும். இச்சூத்திரத்தில் வாழ்த்தப் பெறுவோனை நிற்புறங்காப்ப என முன்னிலையொருமையிற்கூறி வாழ்த்தியில் முடிபில் பொலிமின் என முன்னிலைப் பன்மையாற் கூறியதன் நோக்கம், வாழ்த்தப் பெறுவோனது வாழ்வின் சிறப்பியல்பு அவனுடைய சுற்றத்துடன் நெருங்கிய தொடர்புடைய தாதலின் அவனை மட்டும் வாழ்த்துமளவில் நின்று விடாது அவனுடைய மனைவி மக்கள் முதலிய நெருங்கிய சுற்றத்தாரொடுங்கூட்டி நீடுவாழ்மின் எனப் பன்மை நிலையில் வாழ்த்திப் பாடுதல் வேண்டும் என்னும் புலமை நெறியினை அறிவுறுத்தல் கருதியதாகும். இவ்வாறு புறநிலைவாழ்த்தின் இலக்கணங்கூறுமுகமாகக் கடவுள் வழிபாட்டால் மக்கட் குலத்தார்க்கு உளவாகும் நற்பயன்களைத் தொல்காப்பியினார் அறிவுறுத்திய திறம் உளங்கொளற்பாலதாகும். வழிபடுதெய்வத்திற்குத் திருவுருவமைத்து அத்திருவுருவத்தின் முன்னின்று பொருள்சேர் புகழ்த்திறங்களைச் செழும்பாடல்களாற் போற்றிப் பரவுதல் தமிழ் முன்னோர் மேற்கொண்டொழுகிய வழிபாட்டு முறையாகும். அங்ஙனம் முன்னிலைக்கண் நின்று தெய்வத்தைப் பரவிப் போற்றுதற்கு வாய்ப்பாகிய யாப்பமைதியுடைய செய்யுள் கலிப்பாவகை நான்கனுள் ஒத்தாழிசைக் கலியுள் ஒன்றாக அடங்கும் அவ்வாறு தெய்வத்தை முன்னிலைப் படுத்துப்பரவும் ஒத்தாழிசைக்கலி வண்ணகம் எனவும் ஒரு போகு எனவும் இருவகைப்படும். தெய்வத்தைப் பரவிப் போற்றும் இத்தகைய செய்யுளின் அமைப்பினை, அவற்றுள் ஒத்தா ழிசைக்கலி இருவகைத் தாகும்11 ஏனையொன்றே தேவர்ப் பராவுதல் முன்னிலைக் கண்ணே12 அதுவே வண்ணகம் ஒருபோ கெனவிரு வகைத்தே13 எனவரும் சூத்திரங்களால் தொல்காப்பியனார் குறித்துள்ளார். தெய்வத்தைப் பரவுதற்குரிய வண்ணகம் ஒருபோகு ஆகியவற்றுள் வண்ணகத்தில் இடம் பெறும் தரவு, தாழிசை எண், வாரம் (சுரிதம்) என்னும் உறுப்புக்கள் பற்றியும் ஒருபோகின் வகையாகிய கொச்சகவொருபோகு அம்போதரங்கவொருபோகு ஆகியவற்றின் அமைப்புப் பற்றியும் செய்யுளியல் 135 முதல் 146 முடியவுள்ள சூத்திரங்களில் விரித்துக் கூறியுள்ளார். இனி, தெய்வநம்பிக்கை காரணமாக மக்களிடையே நிகழுஞ் செயல் முறைகள் பற்றியும் தொல்காப்பியனார் தமது நூலில் ஆங்காங்கே குறிப்பிட்டுள்ளார். மக்கள் தம் உள்ளக் கருத்தைப் பிறர்க்கு வற்புறுத்தி உறுதிமொழி கூறுமுகமாக வழிபடு தெய்வத்தின் முன்னிலையிற் சூளுறவு செய்து தெளிவுபடுத்தல் நெடுங்காலமாக நிலைபெற்று வரும் உலகியல் நடைமுறையாகும். இம்முறையினை முன்தேற்று (சொல்லதிகாரம் - 383) என்ற சொல்லால் ஆசிரியர் புலப்படுத்தியுள்ளார். இவ்வாறு தெய்வத்தின் முன்னிலையில் நின்று சூளுறுவோர் தாம் சொல்லிய உறுதிமொழியிலிருந்து தவறுவராயின் அவர் செய்த சூளுறவே அவர்க்குத் துன்பம் விளைக்கும் என்பதனை இன்னாத் தொல்சூள் (தொல்-கற்பியல்-6) என்ற தொடரால் ஆசிரியர் குறிப்பிடுகின்றார். நல்லூழின் ஆணையால் ஒத்த அன்பினராகிய ஒருவனும் ஒருத்தியும் எதிர்ப்பட்டுக் கூடிய இயற்கைப் புணர்ச்சியிலே தலைவன், தெய்வத்தின் முன்னிலையில் தலைவியை நோக்கி நின்னைப்பிரியேன் எனச் சொல்லிய உறுதிமொழியில் தவறினானாக, அதனை எண்ணிய தலைவி தன் தலைவனது தவறினால் பெருந்தீங்கு விளையும் என வருந்திய காலத்துத் தோழி தலைவனை அணுகி நீ சூளுறவில் தவறியதால் உளவாம் ஏதத்திற்கு அஞ்சியாம் பெரிதும் வருந்துகின்றோம் எனத் தலைமகளின் துயரத்தை எடுத்துக் கூறி வருந்துதலும் உண்டு. தோழி கூற்று நிகழ்த்தும் இடங்களைத் தொகுத்துரைக்குமிடத்து சூள்வயிற்றிறத்தாள் சோர்வு கண்டழியினும் எனவரும் தொடரால் தொல்காப்பியனார் இச்செய்தியினைக் குறித்துள்ளமை காணலாம். நற்றாய் தன்மகள் தலைமகனோடு உடன்போகிய காலத்துத் தன் மகளது பிரிவினால் வருந்தித் தன்னையும் தன்மகளாகிய தலைவியையும் அவள் காதலனாகிய தலைவனையும் குறித்துத் தனக்கும் அவ்விருவர்க்கும் உளவாகும் நன்மையும் தீமையும் அச்சமும் அவ்விருவரும் தன்னை வந்து சார்தலும் ஆகிய நிகழ்ச்சிகளை நிலைபெற்ற நிமித்தம், நற்சொல், தெய்வம் என்பவற்றோடு பொருத்திப் பார்த்து இதற்கு முன் இன்ன தன்மையராய் இருந்தார், இப்பொழுது இன்னநிலையில் இருக்கிறார்கள், இனிமேல் இன்னநிலையினர் ஆவர் எனத் தலைவியின் ஆருயிர்த் தோழியை நோக்கியும் கண்டோரை நோக்கியும் புலம்புதல் உலகியலிற் காலந்தோறும் காணப்படும் நிகழ்ச்சியாகும். இச்செய்தியினை, தன்னும் அவனும் அவளுஞ் சுட்டி மன்னு நிமித்தம் மொழிப்பொருள் தெய்வம் நன்மை தீமை அச்சஞ் சார்தலென் றன்ன பிறவும் அவற்றொடு தொகைஇ முன்னிய காலம் மூன்றொடு விளக்கித் தோழி தேஎத்தும் கண்டோர் பாங்கினும் போகிய திறத்து நற்றாய் புலம்பலும் ஆகிய கிளவியும் அவ்வழி யுரிய14 எனவரும் நூற்பாவில் ஆசிரியர் விரித்துக் கூறியுள்ளார். குடும்ப வாழ்க்கையில் துன்பம் நேர்ந்தபோது தமது மக்கள் தெய்வத்தை எண்ணிப் புலம்புதல் உண்டு என்பது இச்சூத்திரத்தால் நன்கு புலனாதல் காணலாம். குறிஞ்சி நிலத்தில் வாழும் மக்கள் தம் வாழ்க்கையில் நேரும் துன்பத்தை நீக்கவும் விரும்பிய நன்மைகளைப் பெறவும் வேண்டி, நெல்லினாற் கட்டுப்பார்த்தும் கழங்கு பார்த்தும் முருகப் பெருமானை வழிபாடு செய்யும் பூசகனாகிய வேலனைக் கொண்டு வெறியாட்டு நிகழ்த்தி அவ்விழாவில் வேலன்மேல் தெய்வம் உற்று நிகழ்ந்தனவும் நிகழ்வனவும் உரைத்தருள உற்றன அறியும் முறை மலைவாணர் வழக்கமாகும். வெறியென்பது மணம் என்னும் பொருளுடைய சொல்லாகும். அச்சொல் தெய்வமணமாகிய முருகு என்னும் சிறப்புப் பொருளில் தமிழ்த் தொன்னூல்களில் வழங்கப் பெற்றுளது. மலரின்கண் உள்ளிருந்து தோன்றும் நறுமணம் போன்று வழிபடுவாருள்ளத்திலிருந்து தோன்றும் தெய்வவுணர்வாகிய முருகு வழிபடும் அவர்தம் மெய்யினும் வெளிப்பட்டு விளங்கும் இயல்பினை வெறி என வழங்குதல் பழைய தமிழ் மரபாகும். தம் தொழுகுலமாக வழிபடப்பெறும் முருகப் பெருமான் வேலேந்தியாடும் பூசகனாகிய வேலன்மேல் ஆவேசித்து நின்று தம் குடும்ப வாழ்க்கையிலும் சமுதாய வாழ்க்கையிலும் நிகழ்வனவற்றை அறிவித்தருளல் வேண்டும் என்னும் விருப்பத்துடன் முருகப் பெருமானுக்குச் செய்யப்படும் வழிபாடு வெறியாட்டு என வழங்கப்பெறும். இவ்வழிபாட்டின் பயனாக ஒத்த அன்பினராகிய காதலரிருவரிடையே மறைவில் நிகழ்ந்தனவும் தெய்வத்தால் வெளியாகி விடுதல் உண்டு. இவ்வாறு தெய்வவழிபாட்டின் பயனாக நிகழும் நிகழ்வுகளை, கட்டினுங் கழங்கினும் வெறியென விருவரும் ஒட்டிய திறத்தாற் செய்திக் கண்ணும்15 எனவும், வெறியாட் டிடத்து வெருவின் கண்ணும்16 எனவும் வரும் தொடர்களால் தொல்காப்பியனார் குறிப்பிடுகின்றார். தெய்வங்கொள்கை என்பது, வாழ்க்கையில் நிறைந்த அனுபவமுடைய முதியோருள்ளத்தில் மட்டுமன்றி வாழ்க்கையினைத் தொடங்குதற்குரிய இளம் பருவத்தினராய தலைவி, தோழி முதலியோருள்ளத்திலும் ஒப்பத் தோன்றும் இயல்பினதாகும். இன்னது விளையும் என்று அறியாது அஞ்சுதலையுடைய களவுக் காலத்தே ஒருவனும் ஒருத்தியுமாகிய, அன்புடையார் இருவர் நண்பு செய்தொழுகுங்கால், அவர்கள் வருந்தாவண்ணம் அவ்விருவர்க்குந் தோன்றாத் துணையாய் நின்று அருள் புரிவதோர் முழுமுதற் பொருளாகிய கடவுள் உண்டு எனவுணர்ந்த தோழி அவ்விருவர்க்குந் திருமணம் விரைவில் நிறைவேறுமாறு அருள்புரிதல் வேண்டும் எனக் கடவுளை ஏத்தி வழிபடுதல் இயல்பு. இங்ஙனம் தலைவியின் வாழ்வோடு ஒன்றிய உள்ளத்தினளாகிய தோழியின் அன்புரிமை பற்றிய இவ்வழிபாட்டினை விளக்குவது, நாமக் காலத் துண்டெனத் தோழி ஏமுறு கடவுள் ஏத்திய மருங்கினும் என வரும் தொல்காப்பியத் தொடராகும். மனைமாட்சியிற் சோர்வில்லாத தலைவியைத் தலைவன் மணஞ் செய்து கொள்ளுதல் வேண்டிக் கடவுளைப் பரவிப் போற்றிய தோழி, தான் வேண்டிய வண்ணமே அவ்விருவர்க்கும் திருமணம் நிறைவேறிய நிலையில் தனது வேண்டுகோளினை ஏற்று அருள் புரிந்த தெய்வத்திற்குப் பரவுக்கடன் கொடுத்தல் வேண்டும் என விரும்புதல் இயல்பு. இவ்விருப்பத்தினை, அற்றமில்லாக் கிழவோட் சுட்டிய தெய்வக் கடத்தினும் எனவருந்தொடரில் ஆசிரியர் தொல்காப்பியனார் குறிப்பிடுவர். தலைவனை மணந்து கொண்டு கற்புக்கடம் பூண்ட தலைமகள் தன் கணவற்குத் தொழுகுலமாகிய தெய்வத்தின் பால் அச்சமுடை யளாய் அன்பினாற் பணிந்தொழுகுதல் முறையாகும். இவ்வழிபாட்டு முறையினைத் தெய்வம் அஞ்சல் என்னும் மெய்ப்பாடாக மெய்ப்பாட்டியலில் தொல்காப்பியனார் குறித்துள்ளார். தலைவன் தலைவியைப் பெற்றோரறியாதவாறு உடன் போக்கில் அழைத்துச் சென்றபோது தலைவியின் பிரிவால் வருந்திய செவிலித்தாய், தலைவனுடன் போகிய தலைமகட்கு வழியில் எத்தகைய தீங்கும் நேராதவாறு அருள்புரிதல் வேண்டும் எனத் தான் வழிபடு தெய்வத்தை இறைஞ்சிப் போற்றுதல் இயல்பு. இவ்வாறு செவிலித்தாய் தெய்வத்தை வழிபடுந்திறத்தினைத் தெய்வம் வாழ்த்தல் (களவு - 25) என வருந்தொடரில் ஆசிரியர் குறித்துள்ளார். இங்கு எடுத்துக் காட்டிய குறிப்புக்களால் ஆசிரியர் தொல்காப்பியனார் காலத்துத் தமிழ் மக்களது குடும்ப வாழ்க்கையில் தெய்வ வழிபாட்டுணர்வு சிறப்பிடம் பெற்று விளங்கினமை நன்கு புலனாதல் காணலாம். இனி, ஆசிரியர் தொல்காப்பியனார் காலத்தில் அரசியல் வாழ்வில் தெய்வ வழிபாட்டிற்கமைந்த சிறப்பும் இங்கு நினைக்கத் தகுவதாகும். வேந்தனது வெற்றிக்கு அடையாளமாகிய கொடியானது ஏனை வேந்தர் கொடியினும் மேற்பட்டு விளங்குதலும் அரசன் பகைவரது அரணையழித்தலும் மன்னன் தன்னையடைந்தோர் அனைவர்க்கும் வரையாது வழங்குதலும் எனக் குற்றமற்ற சிறப்பினால் முற்படப் புகழ்தற்குரிய புறத்திணைத் துறைகள் மூன்றையுங் குறித்து நல்லிசைப் புலவர்கள் பாடுதற்குரிய பாடாண் திணை பற்றிய பாடல்கள் எல்லாவுயிர்கட்குந் தோன்றாத் துணையாய் நின்று இன்னருள் சுரக்கும் முழுமுதற்கடவுளை வாழ்த்திய குறிப்புடன் கலந்து வருவனவாகும். முறை செய்து காப்பாற்றும் மன்னனைப் புகழ்ந்து பாடும் இப்பாடல்களில் அரசனது முறைமைக்கு உறுதுணையாகிய இறைவனை வாழ்த்திப் போற்றும் பகுதியும் இடம்பெறும் என்பதனை. கொடிநிலை கந்தழி வள்ளி யென்ற வடுநீங்கு சிறப்பின் முதலன மூன்றும் கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே17 எனவரும் சூத்திரத்தால் தொல்காப்பியனார் குறிப்பிடுவர். ஒரு நாட்டின் அரசியல் வாழ்வில் வேந்தர்கட்கு உளவாகும் வெற்றிகட் கெல்லாம் உயிர்க்குயிராய் விளங்கும் கடவுளின் திருவருளே உறுதுணையாய் நின்று உதவுந்திறத்தைப் புலத்துறைமுற்றிய சான்றோர் வேந்தர் முதலியோர்க்கு நன்கணம் அறிவுறுத்தி அவர்களுடைய உள்ளத்தைத் திருத்துதல் வேண்டும் என்பது தொல்காப்பியனார் கருத்தாகும் என்பதனை இச்சூத்திரத்தால் நன்குணரலாம், இனி, எல்லாம் வல்ல கடவுளைத் தன் ஆருயிர்த் தலைவனாகவும் உயிராகிய தன்னை அவனையடைய விரும்பிய தலைவியாகவும் எண்ணி இன்றியமையாத அன்புரிமையினால் கடவுளைக் காதற்கேண்மையிற் போற்றி வழிபடும் மரபு தொல்காப்பியனார் காலத்திலேயே தமிழகத்தில் நிலை பெற்று வழங்கியதெனத் தெரிகிறது இச்செய்தி, காமப் பகுதி கடவுளும் வரையார் ஏனோர் பாங்கினும் என்மனார் புலவர்18 எனவரும் தொல்காப்பியச் சூத்திரத்தால் உய்த்துணரப்படும் இத்துறைப் பொருளாகக் கடவுள் மாட்டும் தெய்வப் பெண்டிர் நயந்த பக்கமும் மானிடப் பெண்டிர் நயந்த பக்கமும் பாடப்பெறும் என்பது புறப்பொருள் வெண்பா மாலையாலும் தொல்காப்பிய இளம்பூரணருரையாலும் நன்கு தெளியப்படும். உயிர்வாழ்க்கைக்கு நிலைக்களமாகக் காணப்படும் இவ்வுலகம் நிலம் நீர், தீ, வளி, ஆகாயம் என்னும் ஐம்பெரும் பூதங்களின் சேர்க்கையாலாகியது என்பதனை நிலந்தீ நீர்வளி விசும்போ டைந்தும் கலந்தமயக்கம் உலக மாதலின்19 எனவரும் தொடரிற் குறிப்பிடுவர் தொல்காப்பியர். பலவேறு அவயவப் பகுப்புடையதாய் ஐம்பொறி வாயிலாகச் சுட்டியறியப்படும் தன்மை இவ்வுலகின்பாற் காணப்படுதலின் இவ்வுலகம் என்றும் ஓரியல்பினதாய் விளங்கும் நிலை பேறுடையதன்று என்பர் அறிவர். இதன் இயல்பினை காஞ்சி தானே பெருந்திணைப் புறனே பாங்கருஞ் சிறப்பிற் பல்லாற் றானும் நில்லா வுலகம் புல்லிய நெறித்தே20 எனவரும் நூற்பாவில் நில்லாவுலகம் என்ற தொடரால் தொல் காப்பியனார் அறிவுறுத்தியுள்ளார். பருப்பொருளாகக் காணப்படும் இவ்வுலகம் ஞாயிறு திங்கள் விண்மீன் முதலியவற்றைத் தன்னகத்தே யடக்கியுள்ள அண்டங்கள் ஆகிய காரியப் பொருள்கள் அனைத் திற்கும் மூலமாய்க் காரணமாகிய நுண்பொருளை உலகம் எனவும் உலக இயக்கத்திற்கு உறுதுணையாகிய காலம் என்னும் தத்துவத்தைக் காலம் எனவும் காலம் உலகம் என்னும் முதற்குறிப்புடைய சொல்லதிகாரச் சூத்திரத்தில் ஆசிரியர் குறித்துள்ளமை முன்னர் விளக்கப்பெற்றது. நிலமும் காலமும் ஆகிய தத்துவங்கள் இரண்டும் மன்னுயிர்களின் வாழ்க்கைக்கு நிலைக்களமாதலால் இவற்றை முதற்பொருள் என்ற பெயரால் தமிழ் முன்னோர் வழங்குவாராயினர். இப்பெயர் வழக்கின் தொன்மையினை, முதலெனப் படுவது நிலம்பொழுதி திரண்டின் இயல்பென மொழிய இயல்புணர்ந் தோரே21 எனவரும் தொல்காப்பியச் சூத்திரத்தால் நன்குணரலாம். இங்கு எடுத்துக்காட்டப்பெற்ற தொல்காப்பியத் தொடர்களின் பொருளைக் கூர்ந்து நோக்குங்கால், உலகம் என்பது இல்பொருளன்று, காலம் என்னும் பொருளுடன் தொடர்புடையதாய் அடிக்கடி நிலைமாறு மியல்பினதாகிய உள்பொருளே என்பது தொல்காப்பியனார் கொள்கையாதல் நன்கு புலனாகும். இவ்வாறு கடவுள் உலகம் என்னும் இருவேறு பொருளுண் மையைச் சுட்டிய தொல்காப்பியனார் இவற்றின் வேறாக உயிர் என்பதனைத் தனித்தன்மையுடைய பொருளாகக் கொண்டு அவ்வுயிர்கள் பலவெனத் தம் நூலுள் தெளிவாகப் புலப்படுத்தியுள்ளார். உயிர்கள் தோற்றமில் காலமாக நிலைபெற்று வரும் தொன்மை யுடையன என்பதும் எக்காலத்தும் அழிவில்லன என்பதும் அவைதாம் பெற்றுள்ள பொறிகளின் குறைவு மிகுதிகட்கேற்ப, குறைந்தும் மிக்கும் தோன்றும் பல்வேறு அறிவு நிலைகளையுடையன என்பதும் அழிவில்லன என்பதும் பண்டைத்தமிழர் கொள்கையாகும். உயிர்கள் ஒரு காலத்திற் படைக்கப்பெறாது தோற்றமில் காலமாக (அநாதியாக) உள்ள உள்பொருள் என்பதனைத் தொல்லுயிர் (தொல். புறத். 17) எனவரும் தொடரில் தொல்காப்பியனார் தெளிவாகக் குறித்துள்ளார். உயிர்கள் அழிவின்றி என்றும் நிலைபேறுடையன வாதலின் அவற்றை மன்னுயிர் என வழங்குதல் தமிழ் வழக்கு. உயிர்களை ஓரறிவுயிர் முதல் ஆறறிவுயிர் ஈறாக அறிவின் திறத்தால் அறுவகையாகப் பகுத்துரைப்பர் தொல்காப்பியனார். எனவே உயிர் என்பது அறிவு என்னும் வெறும் பண்பன்று; அறிதற்பண்பினையுடைய குணிப்பொருளாம் என்பது தொல்காப்பியனார் கொள்கையாதல் உய்த்துணரப்படும். உயிர் எத்தன்மைத்து? என்று வினாய வழி, உணர்தற்றன்மைத்து என்றல் செவ்வன் இறையாம் என்பர் சேனாவரையர். உணருந்தன்மையுடையது எதுவோ அதுவே உயிர் என வாங்கப்பெறும் என்பது இவ்வுரைவிளக்கத்தால் நன்கு விளங்கும். பொறிகளால் மிக்கும் குறைந்தும் காணப்படும் பல்வேறு உடம்புகளைப் பெற்று வாழும் எல்லாவுயிர்கட்கும் அறியுந்தன்மை யென்பது பொதுவியல்பாகும். உயிர்கள் தாந்தாம் பெற்றுள்ள உடம்பின்கண் அமைந்த கண் செவி முதலிய அறிதற் கருவிகளின் குறைவுமிகுதிகட்கேற்ப அவற்றின் உணர்ச்சி வாயில்கள் வேறுபடும் நீர்மையனவாம். இவ்வுலகிற் புல் முதல் மக்கள் ஈறாகவுள்ள அறிவுடைப் பொருள்கள் யாவும் உயிர்களேயாம். எனினும் அவற்றின் அறிவு அவை பெற்றுள்ள பொறிகளின் குறைவுமிகுதிகட் கேற்பக் குறைந்தும் வளர்ந்தும் அமைந்த இயல்பினைத் தொல்காப்பி யனார்க்குமுன் வாழ்ந்த தமிழ்ச் சான்றோர்கள் நுணுகியாராய்ந்து கண்டார்கள். அவ்வாராய்ச்சியின் பயனாக எல்லாவுயிர்களையும் ஒரறிவுயிர் முதல் ஆறறிவுயிர் ஈறாக அறுவகையாகப் பகுத்துள்ளனர். காணாமரபினவாகிய உயிர்களைக் காணப்படும் நிலையில் அவை பெற்றுள்ள உடம்பினாற் கருதியுணர்ந்து உடம்பின்கண் அமைந்த அறிகருவிகளாகிய ஐம்பொறிகள் பற்றியும் அகக்கருவியாகிய மனம் பற்றியும் அறுவகை யுயிர்களாகத் தமிழ் முன்னோர் பகுத்த முறையினை ஆசிரியர் தொல்காப்பியனார் மரபியலில் ஒன்றறிவதுவே உற்றறிவது என்பது முதலாகவுள்ள ஏழு சூத்திரங்களில் விரித்துக் கூறியுள்ளார். புல் மரம் எனப்படும் தாவரங்கள் தொட்டால் உணரும் ஊற்றுணர்வு ஒன்றேயுடையன. ஆதலின் அவை ஓரறிவுயிர்கள். நத்தை சங்கு இப்பி முதலியன பிறிதொன்று தம்மைத்தாக்கிய போது உடம்பினால் உற்றறியும் ஊற்றுணர்வும் உணவினைச் சுவைத்தறியும் நாவுணர்வும் உடைமையின் அவை ஈரறிவுயிர்களாகும். கரையான் எறும்பு முதலியன முற்குறித்த ஊற்றுணர்வு சுவையுணர்வு என்னும் இரண்டுடன் மோந்தறிதலாகிய மூக்குணர்வும் உடைமையின் மூவறிவுயிர்கள் எனப்படும். நண்டு, தும்பி யென்பன முற்குறித்த மூவறிவுடன் கண்ணுணர்வும் ஒருங்குடையன வாதலின் நாலறிவுயிர்கள் எனப்படும். நாற்கால் விலங்கும் பறவையும் முன்னர்க்கூறிய நாலறிவுடன் ஓசையறிதலாகிய செவியுணர்வும் ஒருங்கு பெற்றமையின் ஐயறிவுயிர்கள் எனப்படும். முற்குறித்த ஐம்பொறியுணர்வுகளோடு நன்றுந் தீதும் பகுத்துணரும் ஆறாவதறிவாகிய மனவுணர்வு மக்களுயிர்க்கே சிறப்புரிமை யுடையதாதலின் மக்கள் ஆறறிவுயிர் எனப்படுவர். இங்கு வகைப்படுத்துணர்த்திய அறுவகை யுயிர்ப்பாகுபாடுகளுள் எடுத்துரைக்கப்பட்டனவேயன்றி அவற்றின் நிலையினவாகவும் ஒத்த பிறப்பினவாகவும் வருவன பிறவும் உள்ளன என்பார் பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே என்றார். இங்ஙனம் உயிர்த்தொகுதி யினை அறுவகையாகப் பகுத்துரைக்கும் பகுப்பு முறை தமக்கு நெடுங்காலத்திற்கு முன்னரே தமிழ் முன்னோர்களால் நெறிப்படுத்தப் பட்ட தொன்மை வாய்ந்தது என அறிவுறுத்துவார் நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே என்றார். இவ்வாறு அறிவின் திறம்பற்றி அறுவகையாகப் பகுத்துரைக் கப்படும் எல்லாவுயிர்கட்கும் இன்பத்தின்பால் வேட்கை நிகழ்தல் இயல்பு என்பதனை, எல்லா வுயிர்க்கும் இன்பம் என்பது தானமர்ந்து வரூஉ மேவற் றாகும்22 எனவரும் சூத்திரத்தாற் குறிப்பிட்டுள்ளார். எனவே அறிவும் விருப்பமும் அவைபற்றிய செயல்வகையும் ஆகிய மூவகையாற்றல் களும் ஒருங்குடையன உயிர்கள் என்பதும் உயிர்கட்கமைந்த ஆற்றல்கள் அவை பெற்றுள்ள கருவிகரணங்களின் எல்லையுட்பட்டு அடங்கும் குறைவுடையன என்பதும் ஒருவாற்றால் ஆசிரியர் உய்த்துணர வைத்தாராயிற்று. அறியும் ஆற்றல் வாய்ந்த உயிரும் அறியும் தன்மையில்லாத உடம்பும் தம்முள் வேறுபட்ட இருவேறு பொருள்களே என்பதனை, காலம் உலகம் உயிரே உடம்பே எனவும் உடம்பும் உயிரும் வாடியக்காலும் எனவும் எனவரும் தொடர்களால் தொல்காப்பியனார் தெளிவுபடுத்தியுள்ளமை உயிரியல்பு பற்றிய ஆய்வுக்கு அரண் செய்வதாகும். எழுத்திலக்கண முணர்த்தக்கருதிய தொல்லாசிரியர்கள் உயிர்போல தானே இயங்குந்தன்மையது உயிரெழுத்து எனவும் மெய்போல் உயிராலன்றி இயக்கமில்லாத தன்மையது மெய்யெழுத்து எனவும் மெய்போல் உயிராலன்றி இயக்கமில்லாத தன்மையது மெய்யெழுத்து எனவும் மெய்போல் உயிராலன்றி இயக்கமில்லாத தன்மையது மெய்யெழுத்து எனவும் எழுத்துக்களுக்குப் பெயர் கூறிய பெற்றியினை உற்று நோக்குங்கால் தொல்காப்பியனார் காலத்துக்கு முற்பட்ட தமிழ் முன்னோரது மெய்யுணர்வின் திட்பமும் நுட்பமும் இனிது புலனாதல் காணலாம். உயிர், தான் நின்றவுடம்பினை விட்டுப் பிரிந்து செல்லும் இயல்பினதென்பதனைச் சென்ற வுயிரின் நின்ற யாக்கை என்னுந் தொடராலும், கால வரையறையுட்பட்ட உடம்பினின்றும் உயிரைப் பிரிப்பதொரு தெய்வ ஆற்றல் உண்டென்பதும் அதனை மாற்றும் ஆற்றல் உயிர்கட்கு இல்லையென்பதும் ஆகியவுண்மையினை மாற்றருங் கூற்றஞ் சாற்றிய பெருமை என்ற தொடராலும் இவ்வுலகிற் பலரும் மாய்ந்தொழியத் தான்மட்டும் மாயாதிருந்து யாக்கை நிலையாமையை விளக்கும் அடையாளமாக எஞ்சி நிற்பது ஈமப் புறங்காடுமட்டுமே யென்பதனை, மலர்தலை யுலகத்து மரபுநன் கறியப் பலர்செலச் சொல்லாக் காடு வாழ்த்து எனவரும் துறைப் பொருளாலும் தொல்காப்பியனார் தெளிவுபடுத்தியுள்ளார். இவ்வாறே மன்னாப் பொருட்பிணி என்பதனால் செல்வ நிலையாமையையும் இளமையதருமை என்பதனால் இளமை நிலையாமையையும் தொல்காப்பியனார் அறிவுறுத்தியுள்ளமை உளங்கொளத் தகுவதாகும். இவ்வுலகம், இளமை நிலையாமை, யாக்கை நிலையாமை, செல்வ நிலையாமை எனப் பல்லாற்றானும் நிலையாதென்பதனை நன்குணர்ந்தவர் இவ்வுலகியல் வாழ்வினை நிலையற்றதெனக் கருதி விலகியொழுகுதல் கூடாதென்பதும், இவ்வாறு ஒருநிலையில் நில்லாத உலகியற் கூறுகளைப் பற்றுக்கோடாகப் பற்றி நின்றே உயிர்க்கு உறுதிபயக்கும் நிலையுடைய நற்பொருள்களைத் தேடிக் கொள்ளுதல் வேண்டுமென்பதும் தொல்காப்பியர் கொள்கையாகும். இங்ஙனம் உலக வாழ்க்கையில் நேரும் பலவகைத் தடைகளை யெதிர்த்துநின்று நிலையுடையனவற்றை யெய்துதலே காஞ்சித் திணையென்னும் ஒழுகலாறாகும். இதனியல்பினை, காஞ்சி தானே பெருந்திணைப் புறனே பாங்கருஞ் சிறப்பிற் பல்லாற் றானும் நில்லா வுலகம் புல்லிய நெறித்தே23 எனவரும் சூத்திரத்தால் ஆசிரியர் விளக்கியுள்ளார். எதிரூன்றல் காஞ்சி என்னும் பன்னிருபடல நூலாசிரியர் கொள்கையும் இவ்வாசிரியரது கருத்திணை அடியொற்றி யமைந்ததேயாகும். மக்கட்குலத்தாரை உயர்திணையாக உயர்த்துவது மனவுணர்வின் பாற்பட்ட நல்லொழுக்கமேயாகும். தெய்வவழிபாட்டிற்கு அடிப்படையாக அமைந்தது வாழ்வியலறங்களிற் பிறழாத நல்லொழுக்கமேயாதலின் கடவுள் வழிபாட்டுநெறியினைப் பொய்தீர் ஒழுக்க நெறி எனக் குறித்தார் தெய்வப்புலவர். உயர்திணைமாந்தர் வாழ்க்கையில் மேன்மேலும் உயர்வினைப் பெறுதற்கு உறுதுணையாவது ஒழுக்கமேயாதலின் அதனைத் தம் உயிரினுஞ் சிறந்ததாகத் தமிழ் முன்னோர் கடைப்பிடித்கொண்டே தமிழ்மக்களின் குடும்ப வாழ்வும் அரசியல் வாழ்வும் உருப்பெற்று வளர்ந்தன. இவ்வுலக வாழ்க்கையினை வரம்பு அமைத்து வளர்ப்பதே ஒழுக்கநெறியாதலின் அது கட்டமையொழுக்கம் எனப் பெற்றது. ஒழுக்க நெறியிற் சிறிதும் வழுவாது வாழுஞ் சான்றோர்களின் சால்பினது வெற்றி உலகமக்கள் எல்லாராலும் பாராட்டிப் போற்றுதற்குரிய நல்லறிவின் தோற்றமாதலின் அது கட்டமை யொழுக்கத்துக் கண்ணுமை எனப்பட்டது. கண்ணுமை என்றது கண்ணின் தன்மையாகிய காட்சியினை; அஃது ஈண்டு நல்லறிவின் தோற்றமாகிய செயற்பாட்டினைக் குறித்து நின்றது. ஒழுக்கத்தால் உயர்ந்த பெருமக்களைச் சார்ந்து அவர்கள் அறிவுறுத்திய நன்னெறியினைக் கடைப்பிடித்தொழுகலும் தெய்வ வழிபாட்டின் சார்புடையதேயாகும். அறவோராகிய அந்தணர்பாலும் சான்றோர் கண்ணும் அழியாச் சிறப்புடைய பெரியோரிடத்தும் இவ்வாறு ஒழுகுதல் வேண்டும் என ஒருவர் ஒருவர்க்கு அறிவுறுத்தும் முறைமையினை அந்தணர் திறத்தும் சான்றோர்திறத்தும் அந்தமில் சிறப்பிற் பிறர்பிறர் திறத்தினும் ஒழுக்கம் காட்டிய குறிப்பு என்பர் தொல்காப்பியனார். ஒழுக்கத்தைப் பேணாது தலைவன் வழுவியது கண்ட தலைவி, தன் கணவனது பழிநிலைக்கு நாணுந் திறத்தினைப் பேணா ஒழுக்கம் நாணிய பொருளினும் என்ற தொடராலும், பெரியோர்க்கு ஒழுக்கமே பெரியது என்பதனைத் தோழி அறிவுறுத்துமியல்பினைப் பெரியோ ரொழுக்கம் பெரிது எனக்கிளந்து என்ற தொடராலும் ஆசிரியர் அறிவுறுத்தியுள்ளார். ஆகவே ஒழுக்கம் உயிரினுஞ் சிறந்ததென்பது தொல்காப்பியனார் துணிபாகும். இத்தகைய நல்லொழுக்க நெறியினைக் குறிக்கொண்டு போற்றாது ஒருவர் பிறர்க்குச் செய்த கொடுஞ்செயல் செய்த அவரையே பற்றி வருத்தும் என்பது உலகவாழ்க்கையிற் பலரும் தெளிந்து கூறும் வினையுணர்வு பற்றிய நம்பிக்கையாகும் ஒருவர் செய்த கொடுஞ் செயல் செய்த அவரையே பற்றி வருத்தும் என்னும் இவ்வுண்மையினைக் கொடியோர் கொடுமை சுடும் எனத் தம் காலத்து வழங்கிய பழமொழியின் வாயிலாகத் தொல்காப்பியனார் தெளிவுபடுத்தி யுள்ளார். நாட்டில் வாழும் நன்மக்களால் அறிவுறுத்தப்பெறும் வாழ்வியல் முறைகளை நிலைக்களமாகக் கொண்டு அந்நாட்டுமக்கள் தம் வாழ்க்கையனுபவத்திற் கண்டுணர்ந்த தத்துவவுண்மைகள் இவையென அறிந்து கொள்ளுதல் எளிதாகும். மக்கள் தம் வாழ்க்கையில் உறதிப்பொருள்களாகக் கொள்ளுதற்குரியன அறம் பொருள் இன்பம் என்னும் மூன்றுமேயாகும். இவ்வுறுதிப்பொருள் களை அறமுதலாகிய மும்முதற்பொருள் எனவும் இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு எனவும் குறிப்பிடுவர் தொல்காப்பியர். அவற்றுள் இன்பம் என்பது எல்லாவுயிர்களாலும் விரும்பப்பெறும் நுகர்தல் வேட்கையாகும். பொருள் என்பது முற்குறித்த இன்பத்திற்குக் காரணமாக அறிவுடைய நன்மக்களால் ஈட்டப்பெறுவதாகும். அறம் என்பது, வாழ்க்கைக்கு இன்றியமையாத பொருள்களை ஈட்டுந்திறத்திற் பிறர்க்குத் தீங்கு நேராதவாறு மாசற்ற மனமொழி மெய்களாற் செய்யப்பெறுஞ் செயல்முறையாகும். நுகர்தல் வேட்கை முறைபற்றி இன்பமும் பொருளும் அறனும் எனவும் செய்கை முறைபற்றி அறம் பொருள் இன்பம் எனவும் எண்ணுதல் மரபு. இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு அன்பொடு புணர்ந்த ஐந்திணை மருங்கிற் காமக் கூட்டம்24 என நுகர்தல் முறை பற்றியும் அந்நிலை மருங்கின் அறமுத லாகிய மும்முதற் பொருட்கும் உரிய என்ப25 எனச் செய்கை முறை பற்றியும் மும்முதற்பொருள்களாகிய உறுதிப்பொருள்களை எண்ணியுள்ளமை இங்கு நினைக்கத்தகுவ தாகும். அறம் பொருள் இன்பம் என்னும் இம்மூன்றைத் தவிர அறிவுடைய மக்களால் விரும்பி மதித்தற்குரிய பிற இன்மையின் இம்மூன்றையும் மும்முதற்பொருள் எனச் சிறப்பித்துரைத்தார். அறத்தினாற் பொருளையீட்டி அப்பொருளால் இன்பம் நுகர்தலே மக்களது நல்வாழ்க்கை முறையாகும். இவ்வாறு மூன்று பகுதியாக நிகழும் இவ்வுலக வாழ்க்கையின் அமைப்பினை மூன்றன் பகுதி எனத் தொகுத்துரைப்பர் தொல்காப்பியர். உலகப் பொதுமறை யாசிரியராகிய தெய்வப்புலமைத் திருவள்ளுவனாரும் ஆசிரியர் தொல்காப்பியனார் வகுத்த முறையே அறம் பொருள் இன்பம் என்னும் முப்பால்களாகத் திருக்குறளை வகுத்தருளிச் செய்தமை இங்கு ஒப்பு நோக்கற்பாலதாகும். இயற்றமிழிலக்கண நூலாகிய தொல்காப்பியம் தமிழ்மக்களது குடும்ப வாழ்க்கையினையும் சமுதாய வாழ்க்கையினையும் புலப்படுத்தும் வாழ்க்கை நூலாகவும் திகழ்கின்றது. தொல்காப்பியனார் காலத்து வாழ்ந்த தமிழ் முன்னோர் தம் வாழ்க்கையிற் கண்டுணர்ந்து கடைப் பிடித்தொழுகிய தத்துவவுண்மைகளும் செயல்முறைகளும் தொல்காப்பியத்தில் இடம்பெற்றுள்ளன. இப்பிறப்பிற் குரியனவாகிய இம்மைச் செல்வமும், வரும் பிறப்புக்களிலும் தொடர்ந்து துணைபுரிவனவாகிய அறச்செயல்களும் பிறப்பறமுயலும் பெருநெறியாகிய துறவு நிலையும் ஆகிய இம்மூன்று நிலைகளும் மக்கள் வாழ்க்கையின் கூறுகள் என முன்னைத் தமிழ்ச் சான்றோர் ஆராய்ந்து வெளியிட்டுள்ளார்கள். அன்பிற் சிறந்த கணவனும் மனைவியுமாக வையத்து வாழ்வாங்கு வாழ்ந்து மக்களொடு மகிழ்ந்து மனையறங்காத்துச் சுற்றத்தாரைப்பேணி விருந்தோம்பி எல்லோர்க்கும் ஆதரவாக வாழ்வதே இம்மை வாழ்வாகும். இவ்வாறு கணவனும் மனைவியுமாக இல்லின்கண் இருந்து மனையறம் நிகழ்த்தினோர் தாம் நுகரவேண்டிய இன்பங்களை யெல்லாம் நுகர்ந்து மனநிறைவுடையராய் முதுமைப் பருவந் தொடங்கிய நிலையிலே மிக்க காமத்து வேட்கை நீங்குதல் இயல்பு. இங்ஙனம் ஐம்புல நுகர்ச்சியிற் பற்றுத்தீர்தலாகிய இத்தூய ஒழுகலாற்றினைக் காமம் நீத்தபால் என வாகைத்திணைக்குரிய துறைகளுள் ஒன்றாக வைத்துரைப்பர் தொல்காப்பியர். காமம் நீத்த பால் என்றது, உரன் என்னும் அங்குசத்தால் ஐம்புலக்களிறுகளை வென்றடக்கிய வீரத்தினைப் புலப்படுத்தும் வெற்றிச் செயலாதலின் வாகைத் திணைக்குரிய துறைகளுள் எண்ணப்பெறுவதாயிற்று. இளமையும் யாக்கையும் செல்வமும் நிலையாதன எனத் தெளிந்து எல்லாவுயிர்களிடத்தும் இரக்கமுடையராய் செம்பொருளாகிய முழுமுதற்பொருளின் அருளையே சார்பாகப் பற்றிக் கொண்டு உலகப்பற்றினைத் துறந்து ஒழுகுதல் துறவுநிலையாகும். இத்துறவினை வாகைத்திணைக்குரிய துறைகளுள் அருளொடு புணர்ந்த அகற்சி என்ற துறையாகக் குறிப்பிடுவர் தொல்காப்பியர். குற்றமும் குணமும் விரவிய நிலையில் நிகழ்வதே உலகியல் வாழ்வு. வாழ்க்கையில் நேரும் குற்றங்களை நீக்கிக் குணங்களால் உயர்ந்து வாழ்க்கையிற் பெறும் மேதகவே வாழ்க்கையின் வெற்றியாகும். செருக்கு, சினம், சிறுமை, இவறல், மாண்பிறந்த மானம், மாணாவுவகை என்பன மக்களிடத்தே காணப்படும் அறுவகைக் குற்றங்களாகும். வெல்லுதற்கு அரிய உட்பகையாயிருந்து வாழ்க்கையில் துன்பம் விளைப்பன இக்குற்றங்களாகும். இவ்வறுவகைக் குற்றங்களையும் சான்றோர் தம் உள்ளத்துறுதியாலும் அறிவின் திண்மையாலும் வென்று மேம்படுந்திறத்தினை அரும்பகை தாங்கும் ஆற்றல் என்னும் துறையாகக் குறிப்பிடுவர் தொல்காப்பியர். உட்பகையாகிய இக் குற்றங்களை அரும்பகை எனத் தொல்காப்பி யனார் கூறியது போலவே குற்றமே அற்றந்தரூஉம் பகை எனத் திருவள்ளுவரும் தெளிவாக அறிவுறுத்தியுள்ளமை காணலாம். மக்களது நல்வாழ்வினைச் சிதைப்பன மனத்தின்கண் தோன்றும் தீயநினைவுகளேயென்பதும் அத்தகைய மனமாசுகளைக் களைய வல்ல நல்லுணர்வுடையவர்களே ஆற்றல் மிக்க நன்மக்கள் என்பதும் ஆசிரியர் தொல்காப்பியனார் கருத்தென்பது, அரும்பகை தாங்கும் ஆற்றலானும் எனவரும் இத்தொல்காப்பியத் தொடரால் நன்கு துணியப்படும். உலக வாழ்க்கையில் ஒருவனும் ஒருத்தியும் மணந்து மனையறம் நிகழ்த்தி அன்பிற்சிறந்து வாழ்ந்ததன் பயனாக அவ்விருவரையும் அடுத்து வரும் பிறவியிலும் கணவனும் மனைவியுமாகப் பொருந்தி வாழும் வண்ணம் ஒன்று சேர்ப்பதும் அன்பின்மை காரணமாக அவ்விருவரையும் பிரித்து வேறாக்குவதும் என ஊழ் இருவகைப்படும். கணவன் மனைவியென்னும் அவ்விருவர் உள்ளமும் அன்பினாற் சிறந்து பிறப்புத்தோறும் நல்வினைக்கண்ணே ஒற்றித்து நிற்றலால் உயர்ந்ததன் மேற்செல்லும் மன நிகழ்ச்சி அவ்விருவர்க்கும் உண்டாகிய மறுபிறப்பினும் அவ்விருவரையும் ஒன்று சேர்க்கும் பாலாய் ஆகூழ் எனப்படும். இப்பிறப்பிற் கணவனும் மனைவியுமாகக் கலந்துவாழ்வோர் தம்முள் அன்பின்றிப் பிணங்கியொழுகுவராயின், அவரிடையே தோன்றிய மனவேறுபாடு, அவ்விருவரையும் மறுபிறப்பிற் கூடாதவாறு பிரிக்கும் பாலாய் வேறுபடுத்துவதாகும். இது போகூழ் எனப்படும். அன்புடையார் இருவருள்ளமும் பிறப்புத்தோறும் ஒன்றிய நல்வினையில் உயர்ச்சியினாலே அவ்விருவரையும் மறுபிறவியிலும் கூட்டுவதாகிய உயர்ந்த நல்லூழின் ஆணையினாலே ஒத்த அன்பினராகிய தலைவனும் தலைவியும் இயற்கைப் புணர்ச்சியில் எதிர்ப்படுவர் என்பது தமிழ் முன்னோர் துணிபாகும். ஒன்றே வேறே யென்றிரு பால்வயின் ஒன்றி யுயர்ந்த பால தாணையின் ஒத்த கிழவனுங் கிழத்தியுங் காண்ப எனவரும் சூத்திரத்தினாலும், பொறியின் யாத்தபுணர்ச்சி என்ற தொடராலும் ஆசிரியர் தெளிவாகக் குறித்துள்ளார். இவ்வாறு தொல்காப்பியனார் ஊழின்திறத்தை விரித்துரைத்தலால் அவ்வூழ் முதிர்ந்து பயனளித்தற்குரிய மறுபிறப்புண்டென்பதும் அவர்தமக் குடன்பாடாதல் நன்கு தெளியப்படும். கணவனும் மனைவியுமாக மனையின்கண் இருந்து இல்லற மென்னும் நல்லறத்தினைச் சிறப்புற நிகழ்த்தும் கடமையினை மேற்கொண்ட காதலர் இருவரும் ஐம்புல வின்பங்களை ஆரத்துய்த்து மனவமைதிபெற்ற நிலைமைக்கண் மனையறத்திற்குப் பாதுகாவலாகிய மக்களால் நிறைவு பெற்ற அறத்தையே விரும்பிய சுற்றத்தாருடன் உயிரினுஞ் சிறந்த முழுமுதற்பொருளாகிய செம்பொருளின் அருளியல்பினை உணர்ந்தோர்பாற் கேட்டுணர்ந்து, ஒருநெறிய மனத்திற்கொண்டு, போற்றி மகிழ்தலே அவ்விருவரும் இதுகாறும் அன்பினால் நிகழ்த்திய மனைவாழ்க்கையின் முடிந்த பயனாகும் என்பது ஆசிரியர் தொல்காப்பியனார் அறிவுறுத்தியருளிய மெய்யுணர்வுக் கொள்கையாகும். தமிழ் முன்னோர் வீடு பேற்று நெறிபற்றிய இக்கொள்கை, காமஞ் சான்ற கடைக்கோட் காலை ஏமஞ் சான்ற மக்களொடு துவன்றி அறம்புரி சுற்றமொடு கிழவனுங் கிழத்தியுஞ் சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே26 எனவரும் தொல்காப்பியனார் வாய்மொழியால் இனிது புலனாதல் காணலாம். எல்லாவுயிர்க்கும் உயிர்க்குயிராய்ச் சிறந்து விளங்குதல் தனக்குவமையில்லாத இறைவனது இயல்பாதலின் உயிர்கட்குத் தோன்றாத்துணையாய் நின்று அருள்புரியும் கடவுளைச் சிறந்தது என்ற பெயரால் தொல்காப்பியனார் குறித்தார். தனக்குத் தோற்றக்கேடுகளின்றி என்றும் உள்ளதாய்த் தன்பால் ஒன்றும் ஊடுருவ இயலாமையால் தூயதாய்த் தனக்கு எத்தகைய விகாரமும் இன்றி என்றும் ஒருபெற்றியதாய் உலகுயிர்கள் தோறும் செறிந்து நிற்றல் முழுமுதற் கடவுளின் இயல்பாதல் கருதி அதனைச் செம்பொருள் என்ற சொல்லால் திருவள்ளுவர் குறிப்பிடுவர். சிறந்தது எனத் தொல்காப்பியனார் குறித்ததனையே திருவள்ளுவரும் செம்பொருள் என்ற சொல்லாற் குறித்துள்ளார் என்பதற்கு, பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னுஞ் செம்பொருள் காண்ப தறிவு27 என்புழிச் சிறப்பென்னுஞ் செம்பொருள் என அடைபுணர்த் தோதியதே சான்றாகும். தொல்காப்பியனார் முதலிய முன்னைச் சான்றோர்களாற் சிறந்தது எனப் போற்றியுரைக்கப்படும் முழுமுதற் பொருள் என்பார் சிறப்பென்னுஞ் செம்பொருள் என்றார் வள்ளுவர். இல்லறவாழ்வில் நுகரவேண்டிய இன்பங்களையெல்லாம் எஞ்சாமல் நுகர்ந்து உள்ளத்தமைதியுற்ற நன்மக்கள் என்றும் அழியாத பேரின்பப் பொருளாய்ச் சிறந்து விளங்கும் செம்பொருளை இடைவிடாது சிந்தித்து மீண்டும் பிறவிச் சூழலிற்றிரும்பி வாராமைக்கு ஏதுவாகிய நன்னெறியினைத் தலைப்படுதலே அன்பின் ஐந்திணையொழுகலாற்றின் முடிந்த பயனாகும் என்பது மேற்குறித்த தொல்காப்பியச் சூத்திரத்தின் கருத்தாகும். ஒத்த அன்பினராய் மனையறம் நிகழ்த்தி வாழ்ந்தவர்கள் பிறவிப்பிணிப்பினை நீங்கி வீடுபெறுங் கருத்துடையராய் இவ்வுலகிற் பற்றினை விட்டொழித்து எல்லாவுயிர்களிடத்தும் இரக்கமுடையராய்த் துறவற நெறியாகிய அருள் வாழ்விணை மேற்கொள்ளுதல் பண்டைத் தமிழர் வாழ்வியலிற் கண்ட சிறப்பியல்பாகும். இதனை அருளொடு புணர்ந்த அகற்சி என்ற தொடரால் ஆசிரியர் தொல்காப்பியனார் குறித்துள்ளமை முன்னர்க் கூறப்பட்டது. இத்தகைய அருள் வாழ்வினை விரும்பி நாடாள் வேந்தர்களும் தங்கள் அரச பதவியினைத் துறத்தலுண்டு. இவ்வாறு முடிமன்னர்கள் வீடுபேற்றினை விரும்பித் தமது அரச பதவியினைத் துறக்கும் நிகழ்ச்சியினைக் கட்டில் நீத்தபால் என வாகைத்திணையுள் ஒரு துறையாகக் கூறுவர் தொல்காப்பியனார். இமயவரம்பன் தம்பி பல்யானைச் செல்கெழு குட்டுவன் என்னும் வேந்தர் பெருமான் தன் அரச பதவியினைத் துறந்து காடு போந்த வரலாறு பதிற்றுப்பத்தின் மூன்றாம்பத்தின் பதிகத்துட் குறிக்கப்பெற்றுள்ளமை இங்கு ஒப்புநோக்கற்பாலதாகும். நீராடல், நிலத்திடைக்கிடத்தல், தோலுடுத்தல், சடை புனைதல், எரியோம்பல், ஊரடையாமை, கடவுள் வழிபாடு, விருந்தோம்பால் எனத் தவஞ்செய்வார்க்குரிய இயல்புகள் எண்வகையாகச் சொல்லப்பட்டன. தவஞ்செய்வார்க்குரிய எண்வகைச் செயல்முறை களை நாலிரு வழக்கிற்றாபதப்பக்கம் என்பர் தொல்காப்பியர். நாலிரு வழக்கிற்றாபதப்பக்கம் என்பது யோகியர்க்குரிய இயமம், நியமம், ஆசனம், வளிநிலை, தொகைநிலை, பொறைநிலை, நினைதல், சமாதி என்னும் எண்வகையோக வுறுப்புக்களைக் குறித்ததாகக் கொள்வதும் உண்டு. 3. சங்கச் செய்யுட்களில் இடம்பெற்றுள்ள தெய்வவழிபாடும் தத்துவக் கொள்கைகளும் தமிழ் வளர்ச்சியிற் பேரார்வமுடைய பாண்டிய மன்னர்கள் தமிழிற் சிறந்த புலவர் பெருமக்கள் ஒருங்கு கூட்டிச் சங்கம் நிறுவிக் கல்விப் பணிபுரிந்த காலம் சங்ககாலம் என வழங்கப்பெறும். கடல்கொண்ட கபாடபுரத்திலும் இப்பொழுதுள்ள கூடல் மாநகரமாகிய மதுரையிலும் அடுத்தடுத்துப் பாண்டியர்களால் நிறுவப்பெற்ற மூன்று சங்கங்களும் முறையே தலைச்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என வழங்கப்பெறும். இவற்றுள் மூன்றாவதாகிய கடைச்சங்கம் இன்றைக்கு ஆயிரத்தெண்ணுறு ஆண்டுகட்கு முன்னே நிலவியதாகும். கடைச்சங்க காலத்தில் வாழ்ந்த செந்தமிழ்ப் புலமைச் சான்றோர்களாற் பாடப்பெற்ற செழும் பாடல்களுள் அடிவரவு பற்றியும் திணைவகை பற்றியும் தேர்ந்து தொகுக்கப்பெற்ற பத்துப்பாட்டு, எட்டுத்தொகை என்னும் பனுவல்களே சங்க இலக்கியங்களாகும். தம்முள் ஒத்த அன்பினாராகிய ஆடவரும் மகளிரும் நல்லூழின் தூண்டுதலால் ஒருவரையொருவர் எதிர்ப்பட்ட முதற்காட்சியிலேயே உள்ளங்கலந்த பெருங்கேண்மையின ராய் உலகத்தாரறியத் திருமணம் புரிந்து வாழும் அகத்திணை யொழுகலாறாகிய குடும்ப வாழ்வு பற்றியும், இவ்வாறு பல்லாயிரங் குடும்பங்கள் தம்முட் பகையின்றி அன்பும் அறமும் வளர ஒத்து வாழ்தற்கு அரணாக அமைந்த அரசியல், குடியியல் அமைப்புக்களாகிய புறத்திணையொழுகலாறு பற்றியும் விரித்து விளக்கும் வாழ்வியல் இலக்கியங்களாக இவை திகழ்கின்றன. மன்னுணர்வுடையராய மக்கட்குலத்தார்க்கே யுரியனவாக முன்னைத் தமிழ்ச் சான்றோரால் வரையறுக்கப்பட்ட அகத்திணை புறத்திணை யொழுகலாறுகளாகிய வாழ்க்கை நெறி முறைகளை வரம்பாகக் கொண்டு பாடப்பெற்ற சங்கப் பனுவல்களிலே பண்டைக் காலத்தில் வாழ்ந்த தமிழ் மக்களது வாழ்வியலிற் காணப்படும். உள்ளத்துணர்வு மொழித்திட்பம் செயற்றிறம் என்பனவும் இவற்றின் பயனாக அவர்களது உள்ளத்திலே தோன்றி நிலைபெற்ற உலகு, உயிர் பற்றிய எண்ணங்களும் நம்பிக்கைகளும் அவற்றின் பயனாக அவர்களது உள்ளத்திற் குடிகொண்ட கடவுட் கொள்கையும் அன்னோர் மேற்கொண்ட தெய்வ வழிபாட்டு நெறி முறைகளும் தத்துவக் கோட்பாடுகளும் ஆகிய இவை அகமும் புறமுமாகிய அவர்தம் வாழ்க்கை நிகழ்ச்சிகளுடன் பிரிவின்றிக் கலந்து காணப்படுகின்றன. சங்க இலக்கியங்களிற் கூறப்படும் பண்டைத் தமிழ் மக்களது குடும்ப வாழ்க்கையிலும் சமுதாய வாழ்க்கையிலும் பொதுவாக இடம்பெற்றுள்ள பல்வேறு தெய்வ வழிபாடுகளையும் அவற்றுட் சிறப்பாகத் திகழும் சிவ வழிபாட்டினை யும் சிவநெறி பற்றிய மெய்யுணர்வுக் கோட்பாடுகளாகிய சைவ சமயத்துத் தத்துவ வுண்மைகளையும் ஒருங்கே தொகுத்து ஆராய்தல் இன்றியமையாததாகும். ஓரறிவுடைய புல் முதலாக ஆறறிவு படைத்த மக்களீறாக இல்வுலகிற் காணப்படும் மன்னுயிர்த் தொகுதிகளில் மெய் வாய் கண் மூக்கு செவி என்னும் ஐம்பொறியுணர்வுடன் ஆறாவதாகிய மனவுணவர்வும் ஒருங்குபெற்றுக் கல்வியறிவொழுக்கங்களால் வாழ்க்கையில் மேன்மேலும் உயர்ச்சி பெறுதற்குரிய விழைவு அறிவு செயல் என்னும் மூவகையாற்றலும் மக்கட்குலத்தார்க்கேயுரிய சிறப்பியல்புகளாக அமைந்துள்ளன. எனவே உணர் வொழுக்கங்களால் உயர்ச்சி பெறுதற்குரிய மனவுணர்வுடைய மக்கட்குலத்தாரை உயர்திணையெனவும் அவ்வுணர்வு வாய்க்கப் பெறாத விலங்கு முதலிய உயிர்த் தொகுதிகளையும் உயிரல் பொருளாகிய உலகப் பொருள்களையும் அஃறிணையெனவும் இருதிறமாகப் பகுத்துரைத்தனர் பண்டைத் தமிழ்ச்சான்றோர். பொருள் வகை பற்றிய இவ்வுணர்வு இவற்றை யுணர்தற்குக் கருவியாகிய சொற்களிலும் இனிது புலப்படும்படி தாம் பேசும் மொழியிலமைந்த பெயர்ச் சொற்களையும் வினைச் சொற்களையும் உயர்திணைச் சொல், அஃறிணைச் சொல், இரு திணைக்கும் உரிய பொதுச்சொல் எனப் பகுத்துரைத்தனர். இவ்வாறு பொருள்களும் அவற்றை யுணர்தற்குக் கருவியாகிய சொற்களும் இயைந்து பொருள் இனிது புலனாகுமாறு தமது தாய்மொழியாகிய தமிழை உருவாக்கிய பெருமை தமிழ் முன்னோர்க் குரிய தனிச்சிறப்பாகும். இவ்வாறே தமிழ் எழுத்துக்களுள் தனித்தியங்கும் இயல்பினவற்றை உயிர் எனவும் அவ்வுயிரெழுத்துக் களுடன் இயைந்தன்றி இயங்காதனவற்றை மெய் எனவும் பெயரிட்டு வழங்கிய பண்டைத் தமிழிலக்கண நூலாரது தத்துவவுணர்வு அறிஞர்களால் வியந்து பாராட்டுதற்குரியதாகும். மாக்கள் எனப்படும் விலங்கினின்றும் மக்களை வேறுபடுத்து உயர்த்துவது கல்வி. கல்விப் பயிற்சிக்கு நிலைக்களமாகத் திகழ்வது மக்களாற் பேசப்படும் மொழியாகும். இத்தகைய மொழிகள் உருப்பெறாத தொன்மைக் காலத்தே வாழ்ந்த மக்கள், உண்ணுதற்கேற்ற சுவையான உணவும் உடுத்தற்கேற்ற உடையும் தங்குதற்குரிய உறையுளும் பெறாது காடுகளிலும் மலைகளிலும் புதர்களிலும் புலி முதலிய கொடிய விலங்கினங்களோடும் பாம்பு முதலிய நச்சுயிர்களோடும் உடனுறைய வேண்டிய இடர் நிலையினராய், இடி மின்னல் மழை புயல் கடல்கோள் நில நடுக்கம் எரிமலை காட்டுத்தீ முதலிய இயற்கையிடையூறுகளாலும் மக்கள் கூட்டத்திற் பகைவர்களாலும் பெரிதும் அல்லலுற்று இடம் பெயர்ந்து அலைந்து திரிந்தனர். பின்னர்த் தமக்குரியதாக ஓரிடத்தினைத் தேர்ந்துகொண்டு அங்கு இயல்பாக வளர்ந்த தாவரங்களிலிருந்து கிடைத்த காய்கனி முதலியவற்றையும் விலங்குகளையும் பறவைகளையும் வேட்டைத் தொழிலாற் கொன்று பெற்ற இறைச்சியையும் தின்று தமது பசியைத் தணித்துக் கொண்டனர். புயல், பெருவெள்ளம், கொள்ளை நோய் முதலிய இயற்கையிடையூறுகளில் அகப்பட்டுத் தம் உயிரையும் உடைமைகளையும் பாதுகாத்துக் கொள்ளும் வழியறியாது திகைப்புற்று வருந்தினர். ஐம்பெரும் பூதங்களால் உளவாகும் இத்தகைய இடையூறுகளுக்கு மக்களினத்துக்கு மேற்பட்ட மறைவாக தெய்வங்களே காரணம் எனவும் தெய்வங்களின் சீற்றத்தாலேயே இத்தகைய துன்பங்கள் உலகிற் பலவிடங்களிலும் நேர்கின்றன எனவும் நம்பினர். இருளடர்ந்த காடுகளிலும் மலைகளிலும் பிறவிடங்களிலும் இருந்து மக்களை வருத்துவனவாகப் பேய், பூதம், சூரரமகளிர், நீரரமகளிர் முதலிய அணங்குகள் உள்ளனவாக நம்பியதனால் அவர்தம் முள்ளத்தே அச்சம் மிகுவதாயிற்று. இங்ஙனம் தொன்மை மக்களுள்ளத்திற் குடிகொண்ட அச்சவுணர்வே பேய்பூதம் பாம்பு முதலிய எல்லாவற்றையும் தெய்வமாகக்கொண்டு அவற்றால் விளையுந் தீங்கினின்றும் தம்மைப் பாதுகாத்துக் கொள்ளும் நோக்குடன் அவற்றுக்குக் கள்ளும் ஊனும் படைத்து வழிபடும் சிறு தெய்வ வழிபாடுகளைத் தோற்றுவிப்பதாயிற்று. இவ்வாறு மிகப் பழங்காலத்தே நாகரிகம்பெறாத மக்கட் குலத்தாரிடையே அச்சவுணர்வு காரணமாக நிகழ்ந்த தெய்வ வழிபாடு சிறு தெய்வ வழிபாடு எனப்படும். தமக்குப் பகையாயினார் தரும் துன்பத்தினின்றும் தம்மினமக்களைப் பாதுகாத்தல் வேண்டிப் பகைவரொடு பொருது வெற்றி தந்து மாய்ந்த தம்மினத்துத் தலைவர்களை அச்சம் நீக்கி ஆற்றல் நல்கும் தம்குல தெய்வமாகக் கொண்டு வணங்கும் வழிபாடு வீரர் வழிபாடெனப்படும். தம்மை யீன்றெடுத்து அன்பினாற் பாலூட்டி வளர்த்த தாயையும் அறிவும் ஆண்மையும் நல்கிச் சான்றோனாக்கிய தந்தையையும் உலக வாழ்க்கையில் நேரும்இடையூறுகள் இன்னவெனவும் அவற்றைக் களைந்து இன்பம் நுகர்தற்குரிய நெறி முறைகள் இவையெனவும் அறிவுறுத்தி நல்லறிவு கொளுத்திய அறிவர்களையும் தன் நாட்டுக்குடி மக்களின் பசியும் பிணியும் பகையும் நீக்கி முறை செய்து காப்பாற்றும் வேந்தனையும் கண் கண்ட தெய்வமெனக் கருதிப் போற்றும் வழிபாடுகள் நாகரிகம் பெற்ற மக்கட் குலத்தாரிடையே அன்பு காரணமாக நிகழ்வனவாதலின் இவை அன்பு வழிபாடு எனக் கூறத்தக்கனவாகும். மக்களை வருத்தும் இயல்புடையனவாகக் கருதப்படும் பேய் பூதம் முதலிய சிறு தெய்வங்களை அணங்கு எனவும், தம்மை அன்பினால் வழிபடுவார்க்கு அருள் சுரந்து துன்பத்தை நீக்கி நலம் புரியும் இறைமைப் பண்புடைய பெருந்தெய்வத்தை இறை, தெய்வம் எனவும் வழங்குதல் மரபு, அறிவியல் நாகரிகம் முதிர்ந்துள்ள இக்காலத்தும் மக்களிற் பெரும்பாலோர் தமக்கும் தம் உறவினர்க்கும் இம்மையிலும் மறுமையிலும் நேரக்கூடிய துன்பங்களுக்கு அஞ்சியே தெய்வத்தை வழிபடக் காண்கின்றோம். இவ்வாறு அச்சங் காரணமாக நிகழும் வழிபாடுகள் அனைத்தும் மக்கள் தமக்கு நேரும் தீமைகளை விலக்குதலைக் குறிக்கோளாகக் கொண்டனவே என்பது உலகிற்பலரும் அறிந்த உண்மையாகும். அச்சமே கீழ்கள தாசாரம் எச்சம் அவாவுண்டேல் உண்டாஞ் சிறிது (குறள். 1075) எனவரும் தெய்வப் புலவர் வாய்மொழி இங்கு நினைக்கத்தக்கதாகும். அச்சத்தினால் வழிபடுதற்குரிய சிறுதெய்வங்கள் அணங்கு எனவும் அச்சத்துடனும் அன்புடனும் வழிபடுதற்குரியவை தெய்வமெனவும் கொள்ளுதல் எற்புடையதாகும். இந்நுட்பம், அணங்கே விலங்கே கள்வர் தம் இறையெனப் பிணங்கல் சாலா அச்சம் நான்கே எனவும், தெய்வம் அஞ்சல் புரையறந்தெளிதல் எனவும் வரும் தொல்காப்பிய நூற்பாக்களால் இனிது புலனாதல் காணலாம். உலகிற் பண்டைக்காலம் முதல் இன்றுவரை நிலவி வரும் தெய்வ வழிபாடுகள் யாவும் மக்களுள்ளத்தே தோன்றிய அச்சங்காரணமாகவும் அன்பு காரணமாகவும் நிகழ்வனவேயாகும். அஞ்சியாகிலும் அன்புப்பட்டாகிலும் நெஞ்சம் வாழிநினை நின்றியூரை நீ எனவரும் அருளிச் செயல் தெய்வ வழிபாட்டிற்குக் காரணமாய் உடன் நிகழ்வன அச்சமும் அன்பும் என்னும் இருவகையுணர்வுகளே என்னும் உண்மையினைத் தெளிவுபடுத்துதல் காணலாம். நாகரிகமின்றி நாடோடிகளாகத் திரிந்து அல்லலுற்ற மக்கட் கூட்டத்தார் ஓரிடத்தே நிலையாகத் தங்கி வாழும் வாய்ப்பினைப் பெற்றபின் தமக்கு ஆதாரமாயமைந்த நிலத்தையும் வானையும் கூர்ந்து நோக்கினர். நிலத்தினைச் சூழ்ந்த விண்வெளியிலே தவழ்ந்து கதிரொளி பரப்பிக் காரிருள் கடிந்து மண்ணுலகில் வாழும் உயிர்களுக்கு ஒளி வழங்கும் ஞாயிறு திங்கள் என்னும் இருசுடர் களையும் குளிராலும் பசியாலும் வருந்தும் மக்கள் குளிர் நீங்கவும் உணவினைப் பதஞ்செய்து கொள்ளவும் உதவும் தீயினையும் தெய்வமாகக் கருதிப் போற்றுவாராயினர். இருளிற் பொருள் புலனாகாது, பல்வகைத் தொல்லைகட்கும் உட்பட்ட பல்லுயிர்களும் இருள் நீங்கிப் பொருளுணரவும் வெயில் வெம்மை நீங்கித் தண்ணொளி பெறவும் குளிர் நீங்கி உணவினைத் தேடிப் பதஞ் செய்து கொள்ளவும் கதிரவனையும் திங்களையும் தீயையும் தெய்வங்களாகக் கொண்டு போற்றும் வழிபாடுகள் உலகிற் பலவிடங்களிலும் பரவி வாழும் எல்லாவினத்து மக்களாலும் மேற்கொள்ளப் பெற்ற இயற்கைத் தெய்வ வழிபாடுகளாகும். உயிர்கள் யாவும் தமக்கு இன்றியமையாத உணவாகிய நல்ல நீரைப் பெற்று உயிர்வாழவும் பயிர்கள் வளர்ந்து நன்கு விளைவு பெறவும் கைம்மாறு கருதாது மழை பொழியும் முகிலையும், விண் முகில் பொழிந்த நன்னீர் பலவிடங்களிலும் நிலையாகப் பாய்ந்து நிலவளம் சுரக்கவுதவும் கங்கை காவிரி முதலிய பேராறுகளையும் உண்ணுதற்கினிய கனிகளையும் தண்ணிழலையும் தரும் தாவரங்களையும் பாற்பயனளிக்கும் ஆனினங்களையும் தெய்வத்தன்மையுடையனவாகக் கருதி வழிபடும் இயற்கைப் பொருள் வழிபாடுகள் மக்கட் குலத்தாரது நுகர்ச்சி வேட்கை காரணமாகவும் அவ்வேட்கை நிறைவேறப்பெற்ற நிலையில் தோன்றும் நன்றியுணர்வு காரணமாகவும் நிகழ்வனவாம். தம்மினத்தார் அச்சமின்றி இனிது வாழ்தல் வேண்டும் என்னும் உயர்ந்த குறிக்கோளுடன் பகைவரைப் பொருது வீழ்த்தி வெற்றிதந்து மாய்ந்த தறுகண் மறவர்களையும் தாம் மேற்கொண்ட மனைவாழ்க்கை மாண்புடையதாகக் கற்பென்னுந் திண்மையுடையராய்த் தம் கொழுநனையே தெய்வமெனக் கொண்டு உடனுயிர் துறந்த பத்தினிப்பெண்டிரையும் தெய்வமாக்கி வழிபடும் வழிபாடுகள் உலகில் அறமும் அன்பும் நிலை பெறத் தம் இன்னுயிர் துறந்த ஆடவரது வீரத்தையும் பெண்டிரது கற்பின் திண்மையையும் மதித்து மக்களைத் தெய்வநிலைக்கு உயர்த்தும் திறத்தினவாகும். மேற்குறித்த வழிபாடுகள் தாமும் தம் கற்றத்தாரும் தீமையின் நீங்கி நலம் பெறுதல் வேண்டும் என்னும் தன்னலவுணர்வில் தோன்றியன. மக்கள் அறிவு முதிர்ந்து நாகரிக நிலையையடைந்த பின்னர் உருவாகியதே மன்னுயிரனைத்தும் வாழ உலக முதல்வனாகிய இறைவனை மனமொழி மெய்களாற் போற்றும் முழுமுதற் கடவுள் வழிபாடாகும். உலகுயிர்களில் நீக்கமறக் கலந்து இயக்கியருளும் முழுமுதற் பொருளாகிய கடவுள் ஒன்றேயெனவும் அது விருப்பு வெறுப்பின்றி எல்லா உயிர்கட்கும் அருள் நல்கும் இயல்பினை தெனவும் உணர்ந்து உயிர்கட்கும் அருள் நல்கும் இயல்பினதெனவும் உணர்ந்து உயிர்க்குயிராய் மன்னுயிர்களின் நெஞ்சத் தாமரையில் எழுந்தருளிய மெய்ப்பொருளைப் புறத்தே பல்வேறு திருவுருவமைத்துத் தீமை நீங்கவும் நன்மை பெருகவும் மலர் தூவி வழிபடுதல் உலக நலங்குறித்த வழிபாடாகும். அச்சங்காரணமாக நிகழும் சிறுதெய்வ வழிபாடுகளில் சிற்றுயிர்களைப் பலியிட்டு ஊனையும் கள்ளையும் உணவாகப் படைத்தல் என்பது மக்கள் நாகரிகம் பெறாத காலத்தில் நிகழ்த்திய வழிபாட்டு முறையாகும். மக்கள் அறிவு முதிர்ந்து நாகரிகம் பெற்ற நிலையில் உலகிற்கு முழுமுதற் கடவுள் ஒன்றே என்னுந் தெளிவுபெற்று, வாழ்த்த வாயும் நினைக்க நெஞ்சும் தாழ்த்தச் சென்னியும் தந்தருளிய அம் முதற் கடவுளை மலர் தூவித் தொழும் தூய வழிபாட்டினை மேற்கொள்வாராயினர். பிறவுயிருந் தம்முயிர் போற் பேணிப் பாதுகாக்குந் தூய வழிபாட்டினை மேற்கொள்வாராயினர். பிறவுயிருந் தம்முயிர்போற் பேணிப் பாதுகாக்குந் தூய நன்னெஞ்சினராய்த் தாவரங்கள் தரும் காய்கனிகளையும் தினை முதலிய விளைபொருளையும் இறைவனுக்குத் திருவமுதாகப் படைத்து நெல்லும் மலருந்தூவி வழிபடும் இவ்வழிபாடு, ஆருயிர் முதல்வனாகிய இறைவனது இனிய அருளின் நீர்மையுணர்ந்து அம்முதல்வன்பால் இடையறாப் பேரன்பின் பயனாக நிகழ்வதாகும். இவ்வழிபாட்டில் ஈடுபட்டோர் யாவர்க்கும் மேலாம் அளவிலாச் சீருடை இறைவனது பெருமையினையும் பாசப்பிணிப்பில் அகப்பட்ட தமது சிறுமையினையும் எண்ணியெண்ணி நெஞ்சம் நெக்குருகிக் கைகளைத் தலைமேற் குவித்துக் கண்ணீர் சொரியும் இயல்பினராவர். தொல்பழங்காலத்தில் அறியாமையிருளிற் சிக்குண்ட மக்கள் அச்சத்தால் மேற்கொண்ட பல்வேறு சிறுதெய்வ வழிபாடுகளும் அறிவு வளர்ச்சி பெற்று நனிநாகரிக முடையராய் வாழ்ந்தகாலத்து அன்பினால் மேற்கொண்ட பெருந்தெய்வ வழிபாடுகளும் சங்க இலக்கியங்களில் ஆங்காங்கே இடம் பெற்றுள்ளன. உலகெங்கும் அச்சத்தால் அரும்பி அன்பினால் மலர்ந்து அறிவினால் விரிந்து பரவிய தெய்வ வழிபாடுகளிற் பெரும்பாலான மக்கள் முதிர்ந்த நாகரிகமுடையராய்த் திகழும் இக்காலத்திலும் பலதிற மக்களால் மேற்கொள்ளப்பெறும் பரப்புடையனவாகக் காணப்படுகின்றன. அச்சத்தினைக் காரணமாகவுடைய சிறு தெய்வ வழிபாடுகளும் அன்பினைக் காரணமாகவுடைய பெருந்தெய்வ வழிபாடுகளும் ஊர்தோறும் ஒருங்கு நிகழக் காண்கின்றோம். இவ்வாறே கடைச் சங்க காலத்திலும் ஊனுங் கள்ளும் படைத்து வணங்கும் சிறு தெய்வ வழிபாடுகளும் நெல்லும் மலருந்தூவி வணங்கும் பெருந்தெய்வ வழிபாடுகளும் ஆகிய இருவகை வழிபாடுகளும் தமிழக மக்களால் மேற்கொள்ளப் பெற்றுள்ளன. எனவே இவ்வழிபாடுகள் அனைத்தும் அவ்வக்காலத்தில் அவ்வவ்வூர்களில் வாழ்ந்த மக்கள் பெற்றுள்ள அறிவு நிலைகட்கும் வாழ்க்கை யனுபவங்கட்கும் ஏற்ப ஆங்காங்கே நிகழ்ந்தன எனக் கொள்வதல்லது, இவ்வழிபாடுகளுள் இன்னின்னவை இன்னின்ன காலத்தில் இன்னின்ன இடத்தில் வாழ்ந்த மக்களால் மேற்கெள்ளப் பெற்றன எனக் காலம் பற்றியும் இடம் பற்றியும் இவ் வழிபாடுகளே வரையறுத்து வகைப்படுத்துரைத்தற்கு இயலவில்லை. மக்கள் வாழும் நிலத்தியல்புக்கு ஏற்ப அவர்தம் மனத்தியல்பாகிய தெய்வங்கொள்கையும் வழிபாட்டு முறைகளும் தோன்றி நிலை பெறுவன என்பதும் தெய்வங் கொள்கையினை அவ்வந்நிலத்துக் கருப்பொருள்களும் முதற்கண் வைத்தெண்ணுதல் தமிழ்ப் பொருளிலக்கண் மரபென்பதும் முன்னர் விளக்கப்பெற்றன. முல்லை நிலத் தெய்வம் மாயோன். மாயோன்மேயகாடுறையுலகம் என்றார் தொல்காப்பியர். முல்லை நிலத்துக் கோவலர், தம்மால் மேய்க்கப் பெறும் ஆனிரைகள் பாற் பயன் தருதல் வேண்டி அந்நிலத்துக் காயாம்பூவண்ணனாகிய திருமாலைப் பரவிக் குரவைக் கூத்தாடுதலும் தம் மகளிரைத் தக்கவனுக்கு மணஞ் செய்து கொடுத்தல் வேண்டிக் கொல்லுந் தன்மையனவாகிய எருதுகளை வளர்த்து அக்காளையினை வளைத்துப்பிடித்த தறுகணாளனுக்கே தம் மகளை மணஞ்செய்து தருதலும் ஆகிய ஒழுகலாறுகளையுடையராய் வாழ்ந்தனர் என்பது முல்லைக் கலிப்பாடல்களால் இனிது விளங்கும். மைவரையுலகமாகிய குறிஞ்சி நிலத்திற்குச் சேயோனாகிய முருகனே தெய்வம் என்பது முன்னர்க் கூறப்பட்டது. குறிஞ்சி நிலத்துக் குறவர்கள் தெய்வ மணமாகிய வெறியினையறியுஞ் சிறப்பினையுடைய வேலன் என்னும் முருக பூசாரியை யழைத்து வெறியாடச் செய்து முருகனை வழிபட்டுப் பசியும் பிணியும் பகையும் நீங்க மழைவளஞ் சுரந்தருள்க என வாழ்த்தி வரம்பல பெற்று மகிழ்ந்தனர் என்பது சங்க இலக்கியங்களிலுள்ள குறிஞ்சித் திணைப் பாடல்களாலும் பத்துப் பாட்டின் முதற்கண் அமைந்த திருமுருகாற்றுப்படையினாலும் பரிபாடலிற் செவ்வேளைப் போற்றிப் பாடல்களாலும் நன்கு புலனாகும். வயலும் வயல் சார்ந்த இடமும் ஆகிய மருத நிலத்திற்குத் தெய்வம் மழைவளந்தரும் இந்திரனாகிய வேந்தன். மருதநிலத்து உழவர்கள் மலர்தலையுலகிற்கு உயிரெனச் சிறந்த மன்னனை வாழ்த்தி வானோர் தலைவனாகிய இந்திரனைப் பன்னிறமலர்களைத் தூவி வழிபட்டு இந்திர விழா நிகழ்த்தினர். இச்செய்தி இந்திரவிழ விற்பூவின் அன்ன (ஐங்குறு. 62) எனவரும் ஐங்குறுநூற்றுத் தொடராலும் சிலப்பதிகாரம் இந்திர விழவூரெடுத்த காதை, மணிமேகலை விழாவறை காதை முதலிய பிற இலக்கியங்களாலும் நன்கு தெளியப் படும். பெருமணலுலகமெனப்படும் நெய்தல் நிலத் தெய்வம் வருணன். அந்நிலத்துப் பரதவர்கள் கடலில் மீன் பிடித்தலைத் தொழிலாகக் கொண்டவர்கள். தமக்கு வலைவளஞ்சுரத்தல் வேண்டித்தமது மனையின்கண் சுறாமீனின் கொம்பினை நட்டுக் கடற்றெய்வமாகிய வருணனை வழிபட்டனர். இச்செய்தி, சினைச்சுறவின் கோடுநட்டு மனைச் சேர்த்திய வல்லணங்கின் எனவரும் பட்னப்பாலையடிகளாலும் நெய்தற்றிணைபற்றிய சங்கப் பாடல்களாலும் நன்கு புலனாம். நானிலத் தெய்வங்களாக இங்குக் குறிக்கப்பெற்ற தெய்வ வழிபாடுகளேயன்றிப் போரின் சிறந்த வெற்றியினை விளைக்கும் தாய்க் கடவுளாகிய கொற்றவை வழிபாடும் தறுகண் மறவர்களால் மேற்கொள்ளப்பெற்றது. சிறந்த கொற்றவை எனத் தொல்காப்பிய னாராற் குறிப்பிடப்பெற்ற இத்தாய்த்தெய்வம் (1114) கானமர் செல்வி (1268). விறல்கெழுசூலி எனவும் (1636) அருந்திறன் மரபிற் கடவுள் (பதிற்று.) எனவும் சங்கவிலக்கியங்களிற் போற்றப் பெறுகின்றது. அயிரைமலையிற் கோயில் கொண்ட இத்தெய்வத்தினை உருகெழு மரபின் அயிரை எனவும், இத்தெய்வம் எழுந்தருளிய காட்டினைக் கடவுட் பெயரிய கானம் எனவும் பெருங்குன்றூர்கிழார் குறித்துள்ளார். ஆசிரியர் தொல்காப்பியனார் கொற்றவை என்னும் தெய்வத்திற்கு நிலம் வகுத்திலர். காடும் மலையும் கூடிய நிலப்பகுதியிலே கொற்றவைவழிபாடு நிகழ்ந்தமை கடைச் சங்கச் செய்யுட்களில் குறிக்கப்பெற்றளது. எனவே முல்லையும் குறிஞ்சியும் வேனில் வெப்பத்தால் வளம் குன்றிய வழியாகிய சுரத்திலே வாழும் மறவர்கள் தம் குல தெய்வமாகக் கொற்றவையை வழிபட்டமையால் நடுவு நிலைத் திணையாகிய பாலைக்குத் தெய்வம் கொற்றவை என்னும் பொருளிலக்கணமரபு கடைச் சங்க காலத்தில் உருவாகிய தெனக் கருத வேண்டியுள்ளது. காடுறையுலகம், மைவரையுலகம், தீம்புனலுலகம், பெரு மணலுலகம் என்னும் நானிலங்களுக்கும் அன்பின் ஐந்திணைகளுள் இருத்தல் புணர்தல் ஊடல் இரங்கல் என்னும் நால்வகை யொழுக்கங் களையும் முறையே உரிமை செய்துணர்த்திய தொல்காப்பியனார், நிலமில்லாத பாலைத்திணைக்கு நடுவுநிலைத்திணையே நண்பகல் வேனிலொடு முடிவுநிலை மருங்கின் முன்னிய நெறித்தே (அகத். 11) எனவரும் நூற்பாவில் இடமும் காலமும் வகுத்துக் கூறியுள்ளர். முல்லை குறிஞ்சி பாலை மருதம் நெய்தல் என எண்ணப்பெறும் ஐந்திணைகளுள் நடுவண் நிற்பதாகிய பாலைத் திணையாகிய பிரிவொழுக்கம் நண்பகலாகிய சிறுபொழுது வேனில் என்னும் பெரும்பொழுதுடன் கூடிய நிலையிற் (காதலர்) கருதிச் செல்லும் வழியினை இடமாகவுடையது என்பது இந்நூற்பாவின் பொருளாகும். இந்நூற்பாவின் பொருளைக் கூர்ந்து நோக்குங்கால் தமிழகத்திற் பாலையென்பதோர் தனிநிலம் எக்காலத்தும் இருந்ததில்லையென்பதும் வேனிற் காலத்திலே கதிரவனது வெம்மையால் வளங்குன்றிய வெவ்விய நெறியாகிய சுரமே பாலைத்திணைக்குரிய இடமென்பதும் தொல்காப்பியனார் கருத்தென்பது பெறப்படும். வானமூர்ந்த வயங்கொளிமண்டிலம் நெருப்பெனச் சிவந்த உருப்பவிரங்காட் டிலையில மலர்ந்த முகையிலிலவம் (அகநா. 11) எனவரும் அகப்பாடல் காடுறையுலகமாகிய முல்லை நிலம் வேனிற்காலத்துக் கதிரவன் கடுவெயிலால் தன்னியல்பு திரிந்து பாலையாயின செய்தியைப் புலப்படுத்துகின்றது. முக்கண்ணான் மூவெயிலும் உடன்றக்கால் முகம்போல ஒண்கதிர் தெறுதலிற் சீறருங்கணிச்சியோன் சினவலின் அவ்வெயில் ஏறுபெற்றுதிர்வனபோல் வரைபிளந்து இயங்குநர் ஆறுகெடவிலங்கிய அழலவிர் ஆரிடை (பாலைக்கலி 1) என்பது மைவரையுலகமாகிய குறிஞ்சி நிலம் வேனிற் பொழுதிற் கதிரவன் வெம்மையால் தன்னியல்புதிரிந்து பாலையாயின செய்தியைப் புலப்படுத்துகின்றது. இவ்வாறு முல்லையுங் குறிஞ்சியும் வேனில் வெம்மையால் தம்மியல்பு திரிந்து பாலையாயினவாறுணர்ந்த இளங்கோவடிகள், வேனலங் கிழவனொடு வெங்கதிர் வேந்தன் தானலந் திருகத் தன்மையிற் குன்றி முல்லையுங் குறிஞ்சியு முறைமையிற் றிரிந்து நல்லியல் பிழந்து நடுங்கு துய ருறுத்துப் பாலை யென்பதோர் படிவங் கொள்ளுங் காலை (சிலப். காடுகாண். 62-7) என வேனிற் பருவத்தே நண்பகற் பொழுதிற் கதிரவன் வெம்மையால் திரிந்து வளங்குன்றி நடத்தற்கு இயலாத அரிய வழியாகிய சுரத்தினைப் பாலையென்ற பெயராற் குறித்துள்ளார். குறிஞ்சியும் முல்லையும் அடுத்த நிலமே காலம் பற்றிப் பாலையாகும் ...... தொல்காப்பியனார் பாலைக்கு நிலம் வேண்டிற்றிலர்.வேண்டாமையின் தெய்வமும் வேண்டிற்றிலர். பிறர் பகவதியையும ஆதித்தனையும் தெய்வம் என்று வேண்டுவர் என்பர் இறையனார் களவியலுரையாசிரியர். அவ்வாசிரியர் குறித்த வண்ணம் பகவதியாகிய கொற்றவையைப் பாலைநிலத் தெய்வமாக இளங்கோவடிகள் சிலப்பதிகார வேட்டுவ வரியிற் போற்றியுள்ளமையும், முல்லைநிலத் தெய்வமாகிய சேயோனுக்குத் தங்கையும் குறிஞ்சிநிலத் தெய்வமாகிய சேயோனுக்குத் தாயும் ஆகிய உறவின்முறைத் தொடர்புடைய கொற்றவை முல்லையுங் குறிஞ்சியும் திரிந்து பாலையாகிய சுரத்திற்குத் தெய்வமாதல் பெரிதும் பொருத்தமுடைமையும் எண்ணிய சேக்கிழாரடிகள் பாலைநிலத் தெய்வம் கொற்றவை என்னும் இளங்கோவடிகள் கருத்தினை அடியொற்றி, கோலமுல்லையுங் குறிஞ்சியுந் திரிந்த சில்லிடங்கள் நீலவாட்படை நீலி கோட்டங்களும் நிரந்து காலவேனிலிற் கடும் பகற் பொழுதினைப் பற்றிப் பாலையுஞ் சொலலாவனவுள பரன்முரம்பு எனவரும் பாடலிற் குறிப்பிட்டு விளக்கியுள்ளார். கதிரவன் வெம்மையினாற் கடும் பகற்பொழுதில் அழகிய முல்லை நிலமும் குறிஞ்சி நிலமும் திரிந்து வளங்குறைந்த சில இடங்கள் நீலமேனி யளாகிய கொற்றவை வீற்றிருக்கும் கோயில்களைத் தன்னகத்தே கொண்டு பாலையென்று பெயர் சொல்லுதற்குரியனவும் தொண்டை நாட்டில் உள்ளன என்பது மேற்குறித்த பெரியபுராணச் செய்யுளில் இடம் பெற்ற செய்தியாகும். உலகிற் காலந்தோறும் ஏற்படும் கடல்கோள், புயல், வெள்ளம், நிலநடுக்கம் முதலிய இயற்கை மாற்றங்களாகிய இடையூறுகளையும் மக்களுக்குத் தீங்குபயக்கும் கொடிய உயிரினங்களால் நேரும் இடர்களையும் எதிர்த்து முன்னேறும் இன்றியமையாமையுடைய மக்கட் குலத்தார் தமது வாழ்க்கை நுகர்ச்சிகளின் பயனாகத் தமக்கு நாள்தோறும் அச்சந் தவிர்த்து தம்முள்ளத்தேயிருந்து ஆண்மையும் அறிவாற்றலும் வழங்கித் தோன்றாத் துணையாய் உடனிருந்து அருள்புரியும் பேரருளும் முற்றுணர்வும் பேராற்றலும் வாய்ந்த முழுமுதற் கடவுளாகிய தெய்வம் ஒன்று உண்டு என்னும் உணர்வினைப் பெறுவாராயினர். யாக்கை, இளமை, செல்வம் முதலியவற்றால் நிலை பேறில்லாத இவ்வுலக வாழ்க்கையிற் பல்லாயிரம் ஆண்டுகளாகத் தொடர்ந்து வாழ்ந்துவரும் பயிற்சியினைப் பெற்ற மக்கள் அறியாமையிருளிலகப்பட்டு அணங்கு பேய் முதலியவற்றால் அஞ்சி வருந்திய அச்சத்தினையகற்றித் தம் உள்ளுணர்வின் தூண்டுதலால் ஆண்மையும் அறிவும் பெற்றுத் திகழ்ந்த காலம் தமக்கு உயிர்க்குயிராய்த் தோன்றாத்துணையாய் உடனிருந்தருளும் தெய்வமென்பது ஒன்று உண்டு எனத் தெளிவுடைய சிந்தையினைப் பெற்ற காலமேயாகும். மக்கள்தெய்வமுண்டு என்னும் இத்தகைய தெளிவு பெறாது இருந்த காலமும் உண்டு என்பதனை, தேசம் உமை யறிவதற்கு முன்னோ பின்னோ திருவாரூர் கோயிலாக் கொண்ட நாளே எனவரும் திருநாவுக்கரசர் வாய்மொழியால் நன்குணரலாம். இயற்றமிழ் நூலாகிய தொல்காப்பியத்தை இலக்கணமாகக் கொண்டு பாடப்பெற்றனவே சங்க விலக்கியங்கள். எனவே இவற்றின் முன்னூலகிய தொல்காப்பியங் கூறும் தெய்வ வழிபாடுகளும் சமயத்தத்துவவுண்மைகளும் சங்க இலக்கியங்களிலும் இடம் பெற்றிருத்தல் இயல்பேயாகும். இனி, அகமும் புறமுமாகிய உலகியலொழுகலாறுகளை விரித்துரைப்பனவே சங்கச் செய்யுட்கள் எனவும், இவ்விலக்கியங்களிற் கடவுட் கொள்கைக்குச் சிறப்பிடமில்லை எனவும் பத்துப்பாட்டுள் முதற் பாட்டாகிய திருமுருகாற்றப்படையும் எட்டுத்தொகை நூல்களின் முன்னர் அமைந்த கடவுள் வாழ்த்துப் பாடல்களும் கடைச்சங்க காலத்தன அன்றிப் பிற்காலத்திற் பாடிச் சேர்க்கப் பெற்றன எனவும் கருதுவாரும் உளர். திருமுருகாற்றுப் படையில் விரித்துக் கூறப்படும் செவ்வேள் வழிபாடும் எட்டுத்தொகைக் கடவுள் வாழ்த்துப்பாடல்களில் இடம் பெற்றுள்ள சிவபெருமான் திருமால் ஆகிய இருபெருந் தெய்வங்களின் வழிபாடுகளும் சங்கத் தொகைகளின் புறத்தேயுள்ள கடவுள் வாழ்த்துப் பாடல்களில் மட்டுமன்றி அத்தொகைகளின் அகத்தேயுள்ள செய்யுட்கள் பலவற்றிலும் சிறப்பிடம் பெற்றுள்ளன. சங்கச் செய்யுட்களில் நக்கீரனாரும் சங்கப்புலவர் பிறரும் பாடியனவாக அமைந்த பாடல்களில் உள்ள தொடர்களும் கருத்துக்களும் திருமுருகாற்றுப் படையிலுள்ள தொடர்களும் கருத்துக்களும் தம்முள் ஒத்துக் காணப்படுகின்றன. பத்துப்பாட்டுள் முதற் பாட்டாக வைத்து எண்ணப்படும் திருமுருகாற்றுப் படையைச் சங்க காலத்தது அன்று என நீக்கிவிடுவோமாயின் பத்துப்பாட்டு என வழங்கும் தொகைப் பெயர் வழக்கிற்கு இடமில்லாது போய்விடும். மாறாக ஒன்பான் பாட்டு என வழங்கவேண்டிய நிலையேற்படும். எனவே திருமுருகாற்றுப் படை கடைச் சங்கப் புலவர் நக்கீரனாராற் பாடப்பெற்ற சங்கப் பாடலே என்பது தேற்றம். இனி, எட்டுத்தொகையுள் ஒன்றாகிய கலித்தொகையுள் நெய்தற்கலியை இயற்றியுள்ள நல்லந்துவனாரே கலித்தொகைக் கடவுள் வாழ்த்தினையும் பாடியுள்ளார். இனி புறனானூற்றின் முதற்கண் அமைந்த கண்ணிகார் நறுங் கொன்றை என்னுங் கடவுள் வாழ்த்துப் பாடலையும் சேர்த்து எண்ணினால்தான் அத்தொகை நூல் இறையனார் களவியலுரையாசிரியர் கூறுமாறு புறநானூறு என்னும் பெயருக்குப் பொருத்தமுடையதாகும். எட்டுத்தொகை நூல்களில் பதிற்றுப்பத்து கலித்தொகை தவிர ஏனைய ஆறு தொகைகட்கும் கடவுள் வாழ்த்துப் பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனாராவர். கடைச் சங்கப் புலவராகிய இப் பெருந்தேவனார் வடமொழியிலுள்ள பாரதக் கதையினை அகவல் நடையிற் பாடினமைபற்றிப் பாரதம் பாடிய பெருந்தேவனார் என்று அழைக்கப் பெற்றார் எனத் தெரிகிறது. வடமொழி இதிகாசங்களாகிய இராமாயணம் மகாபாரதம் என்னும் நூல்களிற் கூறப்படும் செய்திகள் சங்க காலத்தில் தமிழ் நாட்டிற் பரவி வழங்கின என்பது சங்கச் செய்யுட்களில் அவை எடுத்தாளப் பெற்றுள்ளமையால் இனிது விளங்கும். இரண்டாஞ் சங்கமிருந்த கபாடபுரம் கடல் கோளால் அழிவுற்றபின் பாண்டியர்கள் மதுரையில் மீண்டும் சங்கத்தினை நிறுவித் தமிழ் வளர்த்தனர். வடமொழியிலுள்ள மகாபாரதத்தைத் தமிழில் மொழி பெயர்க்கச் செய்தனர். இச்செய்திகள் மாபாரதம் தமிழ்ப்படுத்தும் மதுராபுரிச் சங்கம் வைத்தும் எனச் சின்னமனூர்ச் செப்பேட்டிற் குறிக்கப் பெற்றிருத்தல் காணலாம். இங்ஙனம் சங்கம் நிறுவித் தமிழ் வளர்த்த பாண்டியரது ஆட்சியில் மகாபாரதக் கதையை ஆசிரியப்பா நடையில் மொழி பெயர்த்தவர் பெருந்தேவனார் என்னும் சங்கப் புலவராவர். எனவே பாரதம் பாடிய பெருந்தேவனார் எனக் கருதுதல் பொருத்தமுடையதாகும். தொல்காப்பியப் பொருளதிகாரப் புறத்திணையியலுரையில் நச்சினார்க்கினியர் மேற்கோளாகக் காட்டியுள்ள பாரத நிகழ்ச்சி பற்றிய ஆசிரியப் பாக்கள்சங்கப் புலவர் பெருந்தேவனார் பாடிய பாரதத்தைச் சார்ந்தன எனக் கொள்ளுதல் பொருந்தும். இனி, கி.பி. எட்டாம் நூற்றாண்டினையொட்டி வாழ்ந்த பெருந்தேவனார் என்ற புலவர் வெண்பாவும் உரை நடையும் விரவிய நிலையில் பாரதக் கதையினைத் தமிழில் மொழிபெயர்த் தமைத்துள்ளார். பெயரொப்புமையாலும் பாரதத்தை மொழி பெயர்த்துப் பாடினமையாலும் இவரையும் பாரதம் பாடிய பெருந்தேவனார் என வழங்குதலுண்டு. பெயரொற்றுமை யொன்றே பற்றி இவ்விருவரையும் ஒருவரேயெனக் கொள்வாருமுளர். கடைச் சங்கப் புலவர் பெருந்தேவனார் பாடிய பாரதம் அகவல் நடையால் இயன்றது. பிற்காலத்தவராகிய பெருந்தேவனார் பாடிய பாரதம் வெண்பாவும் உரை நடையும் விரவியமைந்தது. எனவே காலத்தாலும் யாப்பாலும் வேறுபட்ட இருநூற்களின் ஆசிரியர்களையும் ஒருவரெனத் துணிந்து கூறுதற்கு இடமில்லையென்பது இங்கு உளங்கொளத்தகுவதாகும். சோழன் செங்கணான் திருப்போர்ப்புறத்துச் சேரமான் கணைக்காலிரும்பொறையொடு பொருது குடவாயிற் கோட்டத்துச் சிறைப்படுத்தியவன் என்பது, சேரமான் கணைக்காலிரும்பொறை பாடிய குழவியிறப்பினும் என்னும் முதற் குறிப்புடைய புறப்பாடலின் அடிக்குறிப்பினாற் புலனாம். கணைக்காலிரும் பொறையைச் சிறையினின்றும் விடுவித்தற் பொருட்டுப் பொய்கையார் என்னும் புலவர் சோழன் செங்கணானைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு அவனது போர்க் களத்தைச் சிறப்பித்துக் களவழி நாற்பது என்ற பனுவலைப் பாடினார் என்ற செய்தி கலிங்கத்துப்பரணியில் இடம் பெற்றுள்ளது. சோழன் செங்கணானுக்கு நல்லடி என்ற பெயருடைய மைந்தன் இருந்தான் என்ற செய்தி திருவாலங்காட்டுச் செப்பேட்டில் குறிக்கப்பெற்றுள்ளது. நல்லடி என்னும் பெயருடைய வேந்தன், கடும் பகட்டியானைச் சோழர் மருகன் நெடுங்கதில் நெல்லின் வல்லங்கிழவோன் நல்லடியுள்ளானாகவும் (அகநானூறு 367) எனப் பரணாற் பாராட்டப் பெற்றுள்ளான் இங்ஙனம் அகநானூற்றிற் பாராட்டப்பெறும் சோழன் நல்லடி என்பானுக்குத் தந்தையாகச் சோழன் செங்கணான் திருவாலங்காட்டுச் செப்பேட்டிற் குறிக்கப் பெற்றுள்ளான். இவ்வேந்தன் சோழநாட்டின் உட்பகுதிகளாகிய அகநாடுகள் தோறும் சிவபெருமானுக்கு மாடக்கோயில்களைக் கட்டியுள்ளான் எனத் தேவார ஆசிரியர்களும் சிவபெருமானுக்கு எழுபது மாடக் கோயில்களைக் கட்டிய இவ் வேந்தனே திருமாலுக்குத் திருநறையூரில் மணிமாடமாகிய திருக்கோயிலையும் கட்டினான் எனத் திருமங்கை யாழ்வாரும் குறித்துப் போற்றியுள்ளார்கள். இக்குறிப்புக்களால் கடைச் சங்க காலத்திலேயே சிவபெருமான் திருமால் முதலிய தெய்வங்களுக்குப் பெருங்கோயில் கட்டும் திருப்பணிகள் தொடர்ந்து நிகழ்ந்தன என்பது உய்த்துணரப்படும். பணியியரத்தை நின்குடையே, முனிவர் முக்கட் செல்வர் நகர் வலஞ்செயற்கே (புறம். 6) எனப் பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியைக் காரி கிழார் பாடிய பாடல் கடைச்சங்க காலத்திற் பாண்டி நாட்டிற் சிவபெருமானுக்குத் திருக்கோயில் அமைந்திருந்த செய்தியை நன்கு வலியுறுத்தல் காணலாம். தமிழ் மக்களது மெய்யுணர்வுக் கொள்கையினை உள்ளவாறு உணர்தற்கு அவர்களால் வழிபடப் பெற்ற தெய்வ அமைப்புக்களையும் வழிபாட்டு முறைகளையும் உலக வாழ்க்கையில் தமிழ் முன்னோர் கொண்டிருந்த பல்வேறு நம்பிக்கைகளையும் அறிந்து கொள்ளுதல் இன்றியமையாததாகும். மக்களது வாழ்க்கையில் அவ்வப்போது ஏற்படும் இயற்கை மாற்றங்கள் காரணமாகவும் உலக நிகழ்ச்சிகளிற் கட்புலனாகாத வண்ணம் செயற்படும் அரிய சில ஆற்றல்கள் காரணமாகவும் பல்வேறு இடையூறுகளும் இன்னல்களும் உளவாதல் இயல்பு. அந்நிலையில் ஏற்படும் பல்வேறு துன்பங்களினின்றும் தப்பியுய்தற்குரிய பாதுகாப்பினைத் தேடித் கொள்ளுதல் மனவுணர்வு படைத்த மக்களது கடமையாயிற்று. மழை தவழும் மலைப்பக்கங்களிலும் மரங்கள் செறிந்த காடுகளிலும் மக்கள் தனித்தனிக் கூட்டத்தினராகி வாழும் நிலையினராகிய பண்டைக் காலத்தில் தம்முடைய உடைமைகளையும் உயிரையும் பேணிக் கொள்ளும் பொருட்டு ஆற்றல் மிக்க ஊர்க் காவலரும் நாடாளும் தலைவர்களும் மக்கட்குழுவினரால் தேர்ந்துகொள்ளப் பெற்றனர். வெயில், மழை, பனியென்னும் பருவநிலைகளையுணர்ந்து மக்கள் தங்களுக்கு இன்றியமையாத உணவு, உடை, உறையுள் முதலிய வாழ்க்கை வசதிகளை அமைத்துக்கொள்ளும் அறிவு திரு ஆற்றல்களால் காலந்தோறும் வளர்ச்சிபெற்று வருவாராயினர். எனினும் உலக வாழ்க்கையில் எதிர்பாராத நிலையில் ஏற்படும் புயல், கடல்கோள், பெருவெள்ளம், நில நடுக்கம் முதலிய பேரிடையூறுகளாலும், வெப்பு (சுரம்) குரு (அம்மை) முதலாக அவ்வப்பொழுது தொடரும் நோய்களாலும் பெரிதுந் துன்புறுவாராயினர். இவ்வாறு உலக வாழ்க்கையில் நேரும் பலவேறு இடையூறு களால் நலிவுற்று அஞ்சிய பண்டைக்கால மக்கள், அவ்விடையூறுகளை யெதிர்த்து முன்னேறும் முயற்சியில் தோல்வி கண்டவர்களாய்த் தம்முடைய முயற்சிக்கும் ஆற்றலுக்குந் தடை விளைப்பனவாகத் தம்மை அச்சுறுத்தும் அணங்கு பேய் பூதம் முதலாகப் பல்வேறு தெய்வங்கள் இவ்வுலகில் இருக்கின்றன எனவும் அவற்றின் சீற்றத்தினாலேயே உலகில் தமக்குப் பல்வேறு இன்னல்கள் அடிக்கடி ஏற்படுகின்றன எனவும் உறுதியாக நம்பினார்கள். அச்சுறுத்துவனவாகிய அத்தெய்வங்களை எண்ணுந்தோறும் உள்ளந் துணுக்குற்று உடல் நடுக்கமுற்றனர். இவ்விடத்தில் வருத்துந் தெய்வமாகிய அணங்கு உள்ளது என்று ஐயுற்று அஞ்சி நடுங்கியவர்கள் சொல்ல, அதனைக் கேட்டவர் களுக்கும் அவ்வச்சவுணர்வே அணங்கெனத் தோன்றி அவர்களையும் நடுக்கமுறச் செய்யும் என்பது மனவியல் புணர்ந்தோர் கண்ட உண்மையாகும். இவ்வுண்மையினை நெஞ்சுநடுக்குறக் கேட்டுங் கடுத்துந் தான் அஞ்சியது ஆங்கே அணங்காகும் என்னுஞ்சொல் இன்றீங் கிளவியாய் வாய்மன்ற (கலித். 24) எனவரும் பாலைக்கலித் தொடரிற் பெருங்கடுங்கோ என்னும் புலவர் பெருமான் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளமை காணலாம். நெஞ்சம் நடுக்கம் உறும்படி பலகாலும் கேட்டும், கேட்ட அதனை உண்டோ இல்லையோ என்று ஐயுற்றும் தாம் அஞ்சியிருந்த பொருள் மெய்யாய் வருத்துந் தன்மையதாகும் என்ற பழமொழி இனிய மொழியினையுடைய தோழியே நிச்சயமாக உண்மை என்பது இத்தொடரின் பொருளாகும். நெஞ்சுநடுக்குறக் கேட்டது என்றது இவ்வாலமரத்திலே பேய் உள்ளது என்று பிறர் சொல்லக் கேட்டது. அச்சொல்லைக் கேட்டவர்கள் இவ்வாலமரத்திற் பேய் இருக்குமோ? என்று முதலில் ஐயுற்று அஞ்சியவர்கள் எதிர்பாராத நிலையில் இருளில் அவ்வாலமரத்தின் அருகே தனித்துச் சென்றபோது அவர்கள் உள்ளத்திற் கொண்ட அச்சவுணர்வே பேய் வடிவிற்றோன்றி அவர்களை வருத்துதல் உறுதி என்பதனைப் புலப்படுத்துவது நெஞ்சு நடுக்குறக் கேட்டுங் கடுத்துந்தான் அஞ்சிய ஆங்கே அணங்காகும் என்னும் இப் பழமொழியாகும் சங்ககாலத்தில் வழங்கிய இப்பழமொழியினை அடியொற்றியதே அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என இக்காலத்து வழங்கும் பழமொழியாகும். இத்தொடரைக் கூர்ந்து நோக்குங்கால் மக்களை அச்சுறுத்துந் தன்மையதாகிய அணங்கு உண்டு என்பதும் அத்தகைய அணங்கு அவ்விடத்தில் இல்லாதிருந்தாலும் உண்டு என மற்றவர் சொல்லக் கேட்டு அஞ்சிய அச்சவுணர்வே அணங்குருவில் தோன்றி அஞ்சியவர்களை வருத்துதலும் உண்டு என்பதும் அச்சத்தினையகற்றிய உள்ளத்துரனுடையவர்களை அணங்கு வருத்தமாட்டாது என்பதும் சங்ககாலத்து மக்கள் உளங்கொண்ட வாழ்வியலுண்மையாதல் நன்கு புலனாம். மக்களை வருத்தும் இயல்புடையனவாகிய அணங்கு பேய் பூதம் முதலியவற்றுக்கு அவை வேண்டிய உணவாகிய பலிப்பொருள் களைக் கொடுத்து வழிபட்டால் அவற்றால் உண்டாகும் இடையூறுகளிலிருந்து தாம் தப்பி உய்தி பெறலாம் என்ற நம்பிக்கை பண்டைக்கால மக்கள் உள்ளத்தே நிலைபெறுவதாயிற்று. எனவே அவர்கள் அணங்குபேய் முதலியவற்றுக்கு ஆடு கோழி முதலிய சிற்றுயிர்களைப் பலியிட்டு அவற்றால் வரும் இன்னல்களினின்றும் தாம் நீங்கியதாக எண்ணி அவற்றைத் தெய்வமெனக் கொண்டு வழிபடுவாராயினர். இவ்வாறு பண்டைக்கால மக்கள் பேய் பூதம் முதலாக அச்சுறுத்தும் தெய்வங்கள் உள்ளன எனக் கொண்ட நம்பிக்கையின் விளைவாகவும் தம் உள்ளத்தில் இயல்பாகத் தோன்றிய அச்சத்தின் காரணமாகவும் உலகிற் பலவிடங்களிலும் சிறு தெய்வவழிபாடுகள் பன்னெடுங்காலமாகத் தோன்றி நடைபெற்று வருகின்றன. இந்நிலவுலக முதலாகவுள்ள பலவேறு அண்டப் பரப்பினையும் உலகியற் பொருள்களையும் நுனித்துணர்ந்து தமது வாழ்க்கையினை இடர்நேராது இனிய முறையில் அமைத்துக்கொண்டு எல்லா வசதிகளும் உடையராய் நெடுநாள் வாழ்தற்கேற்ற நுண்ணறிவும் எண்ணிய எண்ணியாங்கு இயற்றவல்ல ஆற்றலும் தொழில் நுட்பமும் ஒருங்கே கைவரப்பெற்று மக்கட் சமுதாயம் காலந்தோறும் வளர்ச்சிபெற்று வருவதனை அறிஞருலகம் நன்குணரும். இங்ஙனம் மக்கட்குலத்தார் முதிர்ந்த நாகரிக நிலையினராய் வாழும் இக்காலத்திலும் இவ்வுலகவாழ்க்கையில் எதிர்பாராதவகையில் நேரவிருக்கும் துன்பங்களை யெண்ணித் தாம் தாம் விரும்பிய தெய்வங்களைக் குறித்துத் தாம் உய்தி பெறுதல் வேண்டி அச்சத்தால் வழிபாடு செய்வதே பலவேறு மதங்களின் ஒழுகலாறுகளாகப் பெரும்பான்மையும் நிகழ்ந்து வருவதனைக் காண்கின்றோம். நுண்ணறிவின் பயனாக அச்சம் தீர்ந்த மக்களும் தாம் மட்டும் சிறப்பாக வாழ்ந்தாற்போதும் என்னுந் தன்னலவுணர் வினராய் ஏனையோரைப் பற்றிச் சிறிதும் கவலைப்படாது தன்னலம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு தாம் விரும்பிய தெய்வத்தை வழிபட்டு வருவதனையும் உலகியலிற் காண்கின்றோம். தமக்கு மாறாயினார் அழிந்தொழிதல் வேண்டும் எனத் தெய்வத்தினைக் குறித்து மந்திரச் சடங்குகளைச் செய்யும் தீய எண்ணமுடையவர்களும் சிலருளர். இவ்வாறு தம்மைப் போன்று தம்மால் வழிபடப் பெறுந் தெய்வங்களும் விருப்பு வெறுப்புடையனவாய்ச் சிறுமையுடையனவாக வைத்து வழிபடப் பெறும் தெய்வங்கள் யாவும் சிறு தெய்வங்களாகவே கருதப்படுவனவாயின. நிலத்தின் வளத்தால் இயல்பாகத் தோன்றி வளர்ந்த தாவரங்களின் காய்கனி முதலியவற்றையும் விலங்கு பறவை முதலியவற்றை வேட்டைத் தொழிலாற் கொன்று பெற்ற இறைச்சியையும் உணவாகக் கொண்டு நாகரிகமின்றி வாழ்ந்த பண்டைக்கால மாந்தர்கள், மழை இடி மின்னல் சூறைக்காற்று கடல்கோள் காட்டுத்தீ நிலநடுக்கம் முதலிய ஐம்பூத நிகழ்ச்சிகளுக்கும், புலி சிங்கம் முதலிய கொடிய விலங்குகட்கும் பாம்பு தேள் முதலிய நச்சுயிர்கட்கும் இறந்தோர் ஆவிகட்கும் அச்சுறுத்துமியல்பினவாகத் தாம் நம்பிய பேய் பூதம் முதலியவற்றிற்கும் அஞ்சிய நிலையில் அவ்வச்சத்தின் விளைவாக அவற்றைத் தெய்வமெனக் கொண்டு நிகழ்த்திய வழிபாடுகள் சிறு தெய்வ வணக்கமெனப்படும். கொல்லுந் தன்மையவாகிய எல்லா வற்றையும் தெய்வமெனக் கொண்டு அவை தம்மை வருத்திக் கொல்லாதவாறு அவற்றுக்கு ஆடு கோழி முதலிய சிற்றுயிர்களைப் பலியிட்டு ஊனும் கள்ளும் படைத்து வழிபடும் முறையில் நிகழ்த்தப்பெறும் இவ்வழிபாடுகள் சிறு தெய்வ வழிபாடுகளெனப் படும். எங்கும் நிறைந்துள்ள மெய்ப்பொருளாகிய கடவுள், உலகுயிர்கள்தோறும் நீக்கமற நிறைந்துள்ள நிறைவு நிலையினையும் எல்லாப்பொருள்களையுந் தன்னகத்து அடக்கிக் கொண்டு எல்லாப் பொருட்கும் பரவியுள்ள விரிவு நிலையினையும் எண்ணி எவ்வுயிரும் நீங்கா துறையும் முழுமுதற்பொருள் ஒன்றேயென்னுந் தெளிவுடைய ராய் அதனை அன்பினால் வழிபடுதல் மெய்யுணர்வுடையார் மேற்கொள்ளும் பெருந்தெய்வ வழிபாடெனப்பெறும். தெய்வம் ஒன்றே என்னுந் தெளிவுநிலை மக்கட் சமுதாயத்தில் உருவாவதற்குமுன் அணங்கு, பேய், பூதம் முதலாக அஞ்சுதற்குரியன எல்லாவற்றையும் தெய்வமெனக் கொண்டு வழிபடும் பொதுநிலையே உலகிற் பலவிடங்களிலும் பரவியிருந்தது. இயற்கைப் பொருள்களின் வழியாகவும் ஏனையுயிர்த் தொகுதிகளின் வழியாகவும் உலகத்து நிகழும் பல்வேறு நிகழ்வுகளை மட்டும் கண்டு அந்நிகழ்வுகளுக்குரிய உண்மையான காரணங்கள் இவையென உய்த்துணரும் உணர்வு நிரம்பப் பெறாத நிலையில், கட்புலனாக நிகழும் இயற்கையிடையூறு களை வெவ்வேறு தெய்வங்களின் விளைவுகளாகக் கருதித் தம் உள்ளத்தே தோன்றிய அச்சங் காரணமாகவும் அத்தெய்வங்களின் அருளால் தீமைகளைப் போக்கி விரும்பிய நலங்களைப் பெறுதல் வேண்டும் என்னும் ஆசை காரணமாகவும் தொல் பழங்காலத்தில் வாழ்ந்த மக்கட் குழுவினர் தாம் தாம் வாழ்ந்த இயற்கைச் சூழல்கட் கேற்பவும் ஒளிபெறாத நள்ளிருட் காலத்துத் தாம் கொண்ட மனநிலைக்கேற்பவும் அணங்கு, பேய், பூதம், வரையரமகளிர், வானரமகளிர், நீரரமகளிர், சூர் முதலியனவாகப் பல்வேறு தெங்வங்கள் உண்டென நம்பி அவற்றுக்கு அஞ்சி வாழ வேண்டிய நிலையின ராயினர். மக்கள் மனவறிவு நிரம்பப் பெறாத தொல் பழங்காலத்தில், வேண்டுதல் வேண்டாமைல்லாத செம்பொருள் ஒன்றே யென்னுந் தெளிவு பெறாது நெஞ்சம் நடுங்கும்படி தாம் கண்ட வெளித் தோற்றங்களையும் அவற்றைக் குறித்துப் பிறர் சொல்லக் கேட்ட வற்றையும் தெய்வமென எண்ணி அவற்றால் வரும் துன்பங்களை விலக்குதற் பொருட்டுச் சிற்றுயிர்களைக் கொன்று அவற்றின் ஊனையும் கள்ளையும் அவற்றுக்குப் படைத்து வணங்கும் சிறுமை நிலையிற் செய்யப்படுதலின் இத்தகைய வழிபாடுகள் சிறு தெய்வ வணக்கம் என வழங்கப்பெறுவனவாயின. இனி, சங்கத் தொகை நூல்களில் இடம் பெற்றுள்ள சிறு தெய்வ வழிபாடுகள் இவையெனக் காண்போம். அணங்கு, பேய், பூதம், சூர் அணங்கு என்ற சொல், வருத்தும் தெய்வம் என்ற பொருளிற் சங்கச் செய்யுட்களில் ஆளப் பெற்றுளது. அணங்குதல் - வருத்துதல். அணங்கே விலங்கே கள்வர் தம் இறையெனப் பிணங்கல் சாலா அச்சம் நான்கே (தொல். மெய்ப். நூ. 252) எனவரும் மெய்ப்பாட்டியற் சூத்திரத்தில், அச்சச் சுவைக்குரிய பொருள்களாக அணங்கு, விலங்கு, கள்வர், தம் தலைவன் என்னும் நான்கினைக் குறிப்பிடுவர் தொல்காப்பியனார். இங்கு அணங்கு என்றது, கண்டார்க்கு அச்சத்தினைத் தரும் பேய், பூதம் முதலிய சிறு தெய்வங்களை அறிவு நிரம்பாத மக்களை வருத்தும் இயல்பினவாதல் பற்றி அவற்றிற்கு அணங்கு என்பதும் ஒரு பெயராயிற்று, அணங்கு என்னும் இச் சொல் அச்சுறுத்துவதாகிய பேய் என்ற பொருளிலும் ஆளப்பெற்றுள்ளது. வெண்டிரைப் பரப்பிற் கடுஞ்சூர் கொன்ற பைம்பூட் சேஎய் பயந்த மா மோட்டுத் துணங்கையஞ் செல்விக்கு அணங்கு நொடித்தா அங்கு (பெரும்பாண். 457-459) எனவரும் பெரும்பாணாற்றுப்படைத் தொடர்க்கு, வெள்ளிய திரையினையுடைய கடலிலே சென்று கடிய சூரனைக் கொன்ற பசிய பூணினையுடைய முருகனைப் பெற்ற பெருமையையுடைய வயிற்றினையும் பேய்கள் ஆடுந்துணங்கைக் கூத்தினையும் அழகினையும் உடைய இறைவிக்குப் பேய்மகள் சில நொடி சொன்னாற் போல என நச்சினார்க்கினியர் உரை வரைந்துள்ளார். இத்தொடரில் துணங்கையஞ் செல்வி என்றது, கானகம் உகந்த காளியாகிய தெய்வத்தை. அணங்கு என்றது, அத்தெய்வத்தின் கூளிச் சுற்றமாகிய பேய்மகளை. மேற்குறித்த பெரும்பாணாற்றுப் படைத் தொடரைக் கூர்ந்து நோக்குங்கால் காளிகோயிலில் அவ்விறைவிக்குப் பணிபுரியும் பேய்மகளிர் இருப்பர் என்னும் நம்பிக்கை சங்ககால மக்களுள்ளத்தே நிலை பெற்றிருந்தமை நன்கு புலனாகும். பிற்காலப் பரணி இலக்கியங்களில் வரும் பேய் பாடியது, கோயில் பாடியது, காளிக்குக் கூளி கூறியது முதலிய செய்திகள் பண்டைக் காலத்து நிலவிய நம்பிக்கையின் தொடர்பாக வளர்ந்து வந்த இலக்கிய மரபுகளாயின. பூதங்கள் வாசலிலே காத்து நிற்றலால் புகுதற்கரிய அச்சத்தை விளைப்பது காளிகோயில் என்பதனைப் பூதங்காக்கும் புகலருங்கடி நகர் (பட்டினப். 57) என்ற பட்டினப்பாலைத் தொடர் புலப்படுத்துகின்றது. போர்க்களத்து இறந்துபட்ட வீரர்களின் உடல்களாகிய பிணத்தினைத் தின்று வாழும் இயல்புடைய மகளிர் முற்காலத்து இருந்தனர் என்ற நம்பிக்கை சங்கத்தொகை நூல்களாற் புலனாகின்றது. அவர்கள் அழகில்லாத உருவத்தினராகவும் கண்டோரஞ்சத்தக்க தோற்றத்தின ராகவும் இருந்தமையால் பேய் எனப்பட்டனர். தறுகண் மறவர் போர்க்களத்திற் பகைவரோடு பொருது உயிர் துறந்த நிலையிற் பிணந்தின்னுமியல்பினராகிய பேய் மகளிர் தமக்கு ஊனுணவு கிடைத்ததென்னும் பெருங்களிப்புடையராய்க் கால் பெயர்த்து ஆடுவதனை வழக்கமாகக் கொண்டிருந்தனர். இங்ஙனம் பிணந்தின்னும் பெண்ணினத்தைப் பேய் எனவும் அவ்வினத்தின் ஆணினைக் கூளி எனவும் வழங்குதல் மரபு. பேயும் கூளியும் முறையே பெண்ணும் ஆணும் ஆகிப் பிணந்தின்று வாழ்வன என்பது, கணங்கொள் கூளியொடு கதுப்பிகுத் தசைஇப் பிணந்தின் யாக்கைப் பேய்மகள் துவன்றவும் (பட்டினப். 24,25) எனவரும் பட்டினப்பாலைத் தொடராற் புலனாம். திரட்சி கொண்ட ஆண்பேய்களுடனே மயிரைத் தாழ்த்து இளைத்துப் பிணத்தைத் தின்னும் வடிவையுடைய பேய்மகள் நெருங்கும்படி என இத்தொடர்க்கு நச்சினார்க்கினியர் வரைந்துள்ள உரை பேய்களுள் ஆண் பேய்க்குக் கூளி என்பது பெயராதலை நன்கு புலப்படுத்தல் காணலாம். பிணங் கோட்ட களிறு குழம்பின் நிணம் வாய்ப் பெய்த பேய் மகளிர் (மதுரைக். 24,25) எனவரும் மதுரைக் காஞ்சித் தொடர் பிணந்தின் மகளிரைப் பேய் எனக் குறித்தல் இங்குக் கூர்ந்து நோக்குதற்குரியதாகும். எண்ணெய் தடவப் பெறாது வறண்ட மயிரினையும் வரிசையொவ்வாது பிறழ்ச்சியுற்ற பற்களையும் பெரிய வயிற்றினையும் சினத்தாற் சுழலும் விழியினையுடைய பசிய கண்களையும் கொடுமை செய்யும் பார்வையினையும் பிதுங்கிய கண்ணையுடைய கோட்டான் என்னும் பறவையுடன் கடிய பாம்பு தன்னிடத்தே தொங்குதலால் பெரிய கொங்கையினை வருத்துகின்ற காதினையும் சொர சொரப்புடைய பெரியவுடம்பினையும் காண்போர்க்கு நடுக்கந் தரும் நடையினையும் அச்சந்தரும் தோற்றத்தினையும் உடைய உருவத்தினளாகிய பேய்மகள் உதிரத்தையளைந்த கூரிய நகங்களை யுடைய கொடிய விரலாலே கண்களைத் தோண்டி உண்ணப்பட்ட மிக்க முடைநாற்ற முடைய தலையை ஒள்ளிய தொடியணிந்த பெரியகையிலே ஏந்தியவளாய்த் தோளையசைத்துத் துணங்கைக் கூத்தாட முருகப்பெருமான் அவுணரை வென்றடக்கிய செய்தி திருமுருகாற்றுப்படையிற் கூறப்பட்டது. செவ்வேள் சூர்மாவைத் தடிந்த போர்க்களத்தில் துணங்கைக் கூத்தாடிய பேய்மகள் மக்கள் யாக்கையினும் மிகப் பெரிய வடிவினளாகக் கூறப்படுகின்றாள். மேல்நோக்கிச் சுடர்விட்டெரியும் இயல்புடைய நெருப்புச் சாய்ந்தெரிந்தாலொத்த நாவினையும் வெள்யாட்டுக் குட்டிகளை யணிந்த காதினையும் பிளவுபட்ட பாதங்களையும் உடைய பேய்மகள் நிணத்தைத் தின்று சிரிக்கும் தோற்றம் சிறுபாணாற்றுப் படையில் உவமையாகக் குறிக்கப்பெற்றுள்ளது. வேந்தர்கள் பகைவர்களை வென்று போர்க்களத்தின் கண்ணே வெற்றித் தெய்வமாகிய கொற்றவையை வணங்கிப் பேய் முதலியவற்றுக்குப் பலியிடுதல் வேண்டி மறக்களவேள்வி செய்வர். பேய்களில் சமைத்தற்றொழிலில் வல்லனாய்ப் பரிமாறும் முறைதெரிந்த ஆண்பேயாகிய சமையற்காரன் போரிற் புறங்கொடாது இறந்த மறவர்களின் வீரவளையினையுடையவாகிய தோளையுடைய கைகளையே துடுப்பாகக் கொண்டு துழாவிச் சமைத்த ஊன் சோற்றைப் பகைவராற் கோபித்தற்கரிய கடிய வாயினையும் சீரிய தொழிலினையுமுடையராய் முன்வைத்த அடி பின்னிடாதபடி போர்செய்த படைவீரர்க்கு விருந்தாகப்படைக்கும் முறையில் மறக்கள வேள்வி நடந்தது. இச்செய்தி, தெறலருங் கடுந்துப்பின் விறல்விளங்கிய விழச்சூர்ப்பின் தொடித்தோட்கை துடுப்பாக வாடுற்ற வூன்சோறு நெறியறிந்த கடிவாலுவன் அடியொதுங்கிப் பிற்பெயராப் படையோர்க்கு முருகயர (மதுரைக்காஞ்சி 32 - 38) எனவரும் மதுரைக்காஞ்சித் தொடர்களாற் புலனாம். சங்கவிலக்கியப் புறத்திணைப் பாடல்களுட் பேய் மகளிர் செயல்கள் புனைந்துரைக்கப் பெற்றுள்ளன. இவர்கள் மக்களினத் திற்றோன்றிப் பிணந்தின்னும் பழக்கமுடையராய் மக்களினத்தின் வேறுபட்டு அழகிலாவுருவினராய்க் கண்டோர் வெருவி ஓடும்படி அச்சந் தரும் வடி வினராதலின் பேய் என்னும் பெயர் பெற்றனர் என எண்ணத் தோன்றுகின்றது. அச்சம் என்னும் பொருளுடையபேம் என்னும் உரிச்சொல்லின் அடியாகப் பிறந்தது பேய் என்னும் பெயராகும். மக்கள் வடிவிற்காணப்படும் இவர்களேயன்றி இவர்கட்கு வேறாக மக்களை அச்சுறுத்தும் அணங்காகிய பேய்கள் உள்ளன என்பதும் அவற்றுக்குப் பலி கொடுத்துப் பரவு செய்தால் அவை அப்பலியினைப் பெற்றுத் தம்மைக் குறித்துப் பலியிட்டவர்களுக்கு எத்தகைய தீங்குஞ் செய்யாது திரும்பி விடும் என்பதும் பண்டைக் காலத்து மக்கள் கொண்ட நம்பிக்கையாகும். இக்குறிப்பு, மெய்பனிகூரத அணங்கெனப் பராவலிற் பலிகொண்டு பெயரும் பாசம் போலத் திறைகொண்டு பெயர்தி (பதிற். 71) எனத் தகடூரெறிந்த பெருஞ்சேரலிரும் பொறையை நோக்கி அரிசில் கிழார் பாடிய பாடலில் வரும் உவமையில் எடுத்தாளப் பெற்றுள்ளமை காணலாம். மெய்ந்நடுக்கம் மிக்கு அணங்கெனக் கருதிப் பரவுதலால், பேயானது தன்னைப் பற்றினாருயிரை வௌவாது அவர் அஞ்சித் தரும் பலிப்பொரு ளேற்றுக்கொண்டு அவர்க்குத் தீங்கு செய்யாமல் திரும்புமாறுபோல வேந்தனாகிய நீயும் நின்னையஞ்சித் தொழும் பகைவரது உயிரை வௌவாது அவர்தந்த திறைப் பொருளையேற்றுக்கொண்டு திரும்புகின்றாய் என்பது மேற்குறித்த தொடரின் பொருளாகும். இத்தொடரில் வந்துள்ள பாசம் என்னும் சொல்லுக்குப் பேய் என்பது பொருள். அஞ்சினாரு யிரைப் பிணித்து வருத்துதலின் பாசம் என்பது பேய்க்குப் பெயராயிற்று. ஏனைப் பசாசு அருள், என்னை நலிதரின் இவ்வூர்ப் பலிநீ பெறா அமற் கொள்வேன் (கலித்.65 :17-18) எனக் கலித்தொகையிற் பார்ப்பானொருவன் கூறியதாகக் தோழி படைத்து மொழியும் தொடர், அச்சுறுத்தும் பேய்கள் ஊர் மக்கள் தரும் பலிப் பொருளை இரவில் எதிர்பார்த்து வாழும் இயல்புடையன என்பதனையும் அத்தகைய பேய்களுக்குப் பலியிடுதலை ஊர் மக்கள் வழக்கமாகக் கொண்டிருந்தனர் என்பதனையும் நன்கு புலப்படுத்தல் காணலாம். பகைவரது படையெடுப்பினாற் சிதைந்து பாழ் பட்டமையால் மக்கள் செல்லாத பாழிடங்களிலும் இருள் செறிந்த இரவுப் பொழுதிலும் இறந்தோர் உடம்பினையடக்கஞ் செய்யும் ஈமப்புறங்களிலும் காளி கோட்டங்களிலும் மக்களை வருத்தும் பேய்கள் அலைந்து திரிவன என்பது பண்டைக்கால மக்களிடையே நிலவிய நம்பிக்கையாகும். தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ் செழியனுடைய படை வீரர்களாற் பகைவர் நாடு பாழாயின செய்தியை விரித்துரைப்பதாக அமைந்தது, அவையிருந்த பெரும்பொதியிற் சுவையடிக் கடுநோக்கத்துப் பேய்மகளிர் பெயர்பாட அணங்குவழங்கும் அகலாங்கண் நிலத்தாற்றுங் குழூப்புதவின் அரந்தைப்பெண்டிர் இணைந்தனர் அகவ (மதுரை 161-6) எனவரும் மதுரைக் காஞ்சித் தொடராகும். சான்றோர் இருந்த அம்பலங்களிலே இரட்டையான அடிகளையும் கடிய பார்வை யினையும் உடைய பேயாகிய மகளிர் அடிபெயர்த்து ஆட, இல்லுறை தெய்வங்கள் உலாவும் அகன்ற ஊரிடத்தே நிலத்திலுள்ளாரை யெல்லாம் அனுப்பும் வாயில் காவலரையுடைய மகளிர் வருந்தி அரற்ற என்பது மேற்குறித்த தொடரின் பொருளாகும். வருத்துதல் என்னும் பொருளுடைய அணங்கு என்னுஞ்சொல் வருத்துதலையுடைய தெய்வம் என்ற பொருளிற் சங்கச் செய்யுட்களிற் பலவிடங்களிலும் ஆளப்பெற்றுள்ளது. ஒத்த அன்பினராகிய ஒருவனும் ஒருத்தியும் உலகத்தாரறியாது மறைந்தொழுகும் களவு வாழ்க்கையில் தலைவன் தன்னால் தலையளிக்கப்பெறும் தலைவியை நோக்கி, நின்னைவிட்டு ஒரு காலத்தும் பிரியமாட்டேன் எனத் தான் வழிபடும் தெய்வத்தின் முன்னிலையிற் சூளுரைத்து அவளுள்ளுத்தே தன்னைப் பற்றிய நம்பிக்கை தோன்றும்படி உறுதிமொழி கூறுதல் இயல்பு. இவ்வாறு தெய்வத்தின் முன்னிலையில் உறுதி கூறுதலை முன்தேற்று என்பர் தொல்காப்பியர். இவ்வாறு தெய்வத்தின் முன்னிலையில் உறுதி செய்தார் அவ்வுறுதி மொழியில் தவறுவராயின் அவர் செய்த சூளுறவே அவரை வருத்தும் என்பதும், தன் முன்னிலையிற் செய்த சூளுறவினின்றும் தவறிய கொடியோரைத் தெய்வம் வருத்தும் என்பதும் பண்டைத் தமிழர் வாழ்வியலிற் காணப்படும் நம்பிக்கையுணர்வாகும். எனவே தெய்வத்தின் முன்னிலையிற் சூளுறவு செய்யப்புகுவோர் அதிலிருந்து தவறினால் தமக்கு வரும் துன்பத்தினையும் எண்ணியே சூள்செய்தல் வேண்டும். தெய்வத்தின் முன்னர்ச் செய்த சூளுறவிற் பிழைத்தோர் துன்புறுவர் என்பதனை வற்புறுத்தும் கருத்திலேயே இன்னாத்தொல்சூள் எனவும் அணங்குடையருஞ்சூள் (நற். 386) எனவும் அடைகொடுத் தோதுவர் பண்டைத் தமிழ்ச் சான்றோர். ஒத்த அன்புடைய ஒருவன் ஒருத்தியாகிய காதலர்களது காதலுணர்வினையும் பகைவரால் நாட்டிற்கு நேரும் தீமைகளைப் போக்கும் குறிக்கோளுடையராய்த் தம்முயிரைப் பொருட்படுத்தாது பகைவரோடு பொருது வெல்லும் போர் மறவர்களது வெற்றித் திறத்தையும் விரித்துரைக்கும் முறையிற் பாடப் பெற்ற சங்கச் செய்யுட்கள் காதலும் வீரமும் ஆகிய இவ்விருவகையுணர்வுகளுக்கு அரண் செய்யும் தெய்வ வழிபாட்டினையும் சிறப்பாக வலியுறுத் தியுள்ளமை இங்கு நோக்கத்தகுவதாகும். பல பிறப்புக்களிலும் கணவனும் மனைவியுமாக அன்பினாற் கூடி வாழ்ந்த ஒருவனும் ஒருத்தியுமாகிய இருவர், அடுத்துவரும் பிறவியிலும் நம்பியும் நங்கையுமாய் வளர்ந்த இளம்பருவத்தே நல்லூழின் செயலால் ஒருவரையொருவர் எதிர்ப்பட்டு உலகத்தார் அறியாதவாறு மறைவிற் கூடி மகிழும் கேண்மை தமிழ் மக்களது அகத்திணையொழுகலாற்றில் இயற்கைப் புணர்ச்சியெனப்படும். இவ்வாறு நல்லூழின் திறத்தால் தலைமகளை எதிர்ப்பட்டு அன்பினால் அளவளாவிய நிலையில் தலைமகன் தன்னைப் பிரிந்து சென்று விடுவானோ என்ற அச்சம் தலைமகள் உள்ளத்தே தோன்றுதல் இயல்பு. இங்ஙனம் ஐயுற்றுவருந்திய தலைமகளது அச்சவுணர்வினைப் போக்கி அவளைத் தெளிவித்தல் வேண்டித் தலைமகளை நோக்கி, நின்னை ஒருபொழுதும் பிரியமாட்டேன் எனத் தலைவன் தெய்வத்தின் திருமுன் சூளுறவு (சபதம்) செய்து கொடுத்தல் முறையாகும். இவ்வாறு தெய்வத்தின் திருமுன் சூளுறவு செய்து தலைமகளைத் தேற்றும் முறை முன்தேற்று எனப்படும் என்பது முன்னர் விளக்கப்பெற்றது. தலைமகளைத் தேற்றுதல் வேண்டித் தலைவன் தெய்வத்தின் முன்னிலையிற் செய்யும் இச் சூளுறவு தலைவியையின்றித் தன் வாழ்வு நடவாது என்னும் உண்மையினைத் தலைமகள் மனங்கொள்ளும் தலைமகனைத் தெரிவிப்பதாகலின் முன்தேற்று என வழங்கப் பெறுவதாயிற்று. இயற்கைப் புணர்ச்சியில் தலைமகளைக் கூடிய தலைவன், தலைமகளது உள்ளக்கருத்து தன்னை மணந்து கொண்டு இல்லறம் நிகழ்த்துதலாக இருக்கும் என நினைந்து பலரும் வந்து உண்ணும்படி கதவு திறந்துகிடக்கும் வாசலையுடையதும், மிடாவிற்சமைத்த சோற்றை வருவார்க்கெல்லாம் வரையாமல் இடுதலால் விழாக் கொண்டாடினாற் போன்ற செல்வத்தையுடையதும் ஆகிய வளமனை பொலிவு பெறும்படி பசுத்த நிணம் ஒழுகிய நெய்மிக்க அடிசிலைச் சுற்றத்தார்க்கும் விருந்தினர்க்கும் நீ இடுகையினாலே அவர்கள் உண்டு மிகுந்த எஞ்சிய உணவினை நீ எனக்கு இடுதலினாலேயான் நின்னுடன் இருந்து உண்ணுதலும் எனக்கு உயர்வு விளைப்பதாகும் என்று சொல்லி இவ்வாறு திருமணஞ் செய்து கொண்டு வாழும் மனையறமே தங்களைப் பிறவிக்கடலினின்றும் இன்பக்கரை யேற்றுவதாகத் தெளிவித்து, பெரியமலையில் மிகவுயர்ந்த இடத்தேயுறைகின்ற முருகப் பெருமானையும் வாழ்த்தி வணங்கி அவ்விறைவன் முன்னே தலைமகள் பாதுகாவலுறைதற்குக் காரணமாகிய வஞ்சினத்தை உண்மையாகவே தெளிவித்து அதற்கு அடையாளமாக அம்மலையில் ஒழுகும் அழகிய இனிய தெள்ளிய நீரைக் குடித்துச் சூளுறவு செய்தனன் என்ற இச் செய்தியைக் கபிலர் பாடிய குறிஞ்சிப் பாட்டு விரித்துரைக்கின்றது. குன்றுகெழுநாடன் எம் விழைதகு பெருவிறல் உள்ளத்தன்மை உள்ளினன் கொண்டு சாறயர்ந்தன்ன மிடாச் சொன்றி வருநர்க்கு வரையாவளநகர் பொற்ப மலரத்திறந்த வாயில் பலருணப் பைந்நிண மொழுகிய நெய்ம் மலியடிசில் வசையில் வான்திணைப்புரையோர் கடும்பொரு விருந்துண்டு எஞ்சிய மிச்சில் பெருந்தகை நின்னோடுண்டலும் புரைவதென்றாங்கு அறம்புணையாகத் தேற்றிப் பிறங்குமலை மீமிசைக் கடவுள் வாழ்த்திக் கைதொழுது ஏமுறு வஞ்சினம் வாய்மையிற் றேற்றி அந்தீந் தெண்ணீர் குடித்தலின் (குறிஞ்சிப். 199-210) எனவரும் இப்பகுதியில், தலைவன் தலைவி இருவரும் திருமணம் செய்து கொண்டு சுற்றத்தாரையும் விருந்தினரையும் பேணி மனையறம் நிகழ்த்தும் முறைமையும் இயற்கைப் புணர்ச்சிக்கண் தலைவன் தெய்வத்தை வாழ்த்தி வணங்கித் தெய்வத்தின் திரு முன்னர்த் தலைவிக்குச் சூளுறவு செய்து தண்ணீர் குடித்துத் தெளிவிக்கும் திறமும் நன்கு வற்புறுத்தப்பெற்றுள்ளமை காணலாம். களவு வெளிப்பட்டபிறகு தலைவியை மணஞ் செய்யாது தலைவன் பொருள் தேடப் பிரிந்த காலத்து இவள் ஆற்றாளாயினாள், இவளை யிழந்தேன் எனக் கவலையுற்ற தோழி தலைமகளை நோக்கிக் கூறுவதாக அமைந்தது, பெருந்தோள் நெகிழ அவ்வரி வாடச் சிறுமெல்லாகம் பெரும்பசப்பூர இன்னேமாக எற்கண்டு நாணி நின்னொடு தெளித்தனராயினும் என்னதூ உம் அணங்கலோம்புமதி வாழிய நீயெனக் கணங்கெழு கடவுட் குயர்பலி தூ உய்ப் பரவினம் வருகஞ் சென்மோதோழி .................................... அரும்பெறலாய் கவின்தொலையப் பிரிந்தாண்டுறைதல் வல்லியோரே (நற்றிணை 358) எனவரும் நற்றிணைப் பாடலாகும். பெரியதோள் நெகிழவும் வனப்புடைய கோலம் வாடவும் சிறிய மெல்லிய நின் மார்பகத்தே பசலைபடரவும் யாம் இங்ஙனம் தமது பிரிவால் வருந்தவும் என்னைக் கண்டு நாணமுற்று நின்னைப் பிரியேன் என நின்னொடு சூளுறவு செய்து தெளிவித்தா ராயினும் பொருள்தேடச் சென்ற அவர் நின்னைப் பரிந்து வேற்று நாட்டகத்தே தங்கியிருக்கும் வண்மையுடையராகவுள்ளார். ஆகவே இங்ஙனம் சூளுறவில் தவறியஅத்தலைவரை வருத்துதலைத் தவிர்வாயாக; தெய்வமாகிய நீ அத்தலைவர்க்கு அருள்சுரத்து வாழ்க என்று வேண்டிக் கூளிச் சுற்றத்தொடு பொருந்திய கடவுளுக்கு உயர்ந்த பூப்பலியினைத் தூவிப் பரவி வழிபட்டு வருதற்குச் செல்வோமாக என்பது இப்பாடற் பகுதியின் பொருளாகும். இதன்கண் தலைவன் தான் தெய்வத்தின் முன்னிலையிற் செய்த சபதத்தில் தப்பி ஒழுகுதலால் தெய்வம் அவனை ஒறுத்துவருத்தும் என்று அஞ்சிய தோழி அங்ஙனம் வருத்துதலைத் தவிர்த்தருள்க எனக் கடவுளைப் பரவி வழிபடுதற் பொருட்டுத் தலைமகளை அழைத்தாள் என்ற செய்தி இப்பாடலில் இடம் பெற்றுள்ளமை அறியத்தகுவதாகும். தான் தவறு செய்யவில்லை என்பதனை உறதிசெய்யும் முறையில் தெய்வத்தின் முன்னிலையிற் சூளுறவு செய்யும் பழக்கமும் தமிழகத்தில் நெடுங்காலமாக நிலைபெற்று வருகின்றதென்பதும் தெய்வத்தின் முன்னிலையிற் பொய் கூறுதல் அடாதென்பதனை யறிந்திருந்தும் உலக வாழ்க்கையில் தாம் செய்த தவறுகளை மறைத்தல் வேண்டித் தெய்வத்தின் முன்னிலையிற் பொய்ச் சூள் செய்பவர்கள் இந்நாட்டில் தொடர்ந்து இருந்து வருகின்றார்கள் என்பதனை எடுத்துக்காட்டி நகைக்கும் முறையிற் பாடப் பெற்றது அகநானூறு 166ஆம் பாடலாகும். காவிரியாற்றிற் பரத்தையொடு புனலாடி மகிழ்ந்த தலைவன், அது கேட்டுத்தன் மனைவி புலந்தாளாக, யான் பரத்தையொடு புனலாடினேனல்லேன் என அவட்குப் பொய்ச் சூள் செய்தான். அச்செய்தியைக் கேள்வியுற்ற பரத்தை தன் பக்கத்திலுள்ளார் கேட்ப நகையாடிக் கூறுவதாக அமைந்தது அவ்வகப்பாடலாகும். பழம்பன் னெல்லின் வேளூர் வாயில் நறுவிரை தெளித்தநாறிணர் மாலைப் பொறிவரியினவண் டூதலகழியும் உயர்பலி பெறூஉம் உருகெழுதெய்வம் புனையிருங்கதுப்பின் நீகடுத்தோள்வயின் அனையேனாயின் அணங்குக என் என மனையோட் டேற்றும் மிகழ்ந் நனாயின் யார் சொல் வாழி தோழி நெருநல் தார்பூண் களிற்றின் தலைப்புணைதழீஇ வதுவை யீரணிப் பொலிந்து நம்மொடு புதுவது வந்தகாவிரிக் கோடுதோய் மலிர்நிறை ஆடியோரே (அகம். 166) பழைய பல்வகை நெல்வளத்தையுடைய வேளூர் வாயிலின்கண்ணே நறுமணநீர் தெளிக்கப்பெற்ற மணம் வீசும் பூங்கொத்துக்களால் ஆகிய மாலையினைப் புள்ளிகள் நிறைந்த வரிகளோடு கூடிய வண்டு தெய்வத்திற்குரிய மாலையென்று அஞ்சித் தேனுண்ணாது ஒழிவதற்குக் காரணமான உயர்ந்த பலிகளைப் பெறும் அச்சந்தரும் தெய்வம், அணிசெய்த கரிய கூந்தலையுடையளாய் நின்னால் ஐயுறப் பெற்றாளாகிய பரத்தையுடன் புனலாடிய அத்தன்மையுடை யேனாயின் என்னை வருத்துவதாகுக என்று சூளுரைத்துத் தலைவன் தன் மனைவியைத் தெளியக் கூறுவானாயின் நேற்று இருகரையும் பெருகப் புதிதாக வந்த காவிரியின் நீர்ப்பெருக்கிலே தாரணிந்த களிற்றினைப் போன்று புணையின் தலையிடத்தைத் தழுவியிருந்து வதுவைக்குரிய பெரிய அணியாற் பொலிவுபெற்ற நம்முடன் கூடிப் புனலாடினோர் அத்தலைவரன்றிப் பிறர் யாரோ? என்பது மேற்குறித்த பாடத் பகுதியின் பொருளாகும். இங்ஙனம் அகத்திணையொழுகலாறாகிய களவிலும் கற்பிலும் தெய்வத்தின் திருமுன்னர்ச் சூளுறவு செய்தலாகிய இந்நிகழ்ச்சி, மக்களது குடும்பவாழ்வுக்கு உறுதுணையாகத் தெய்வத்தை முன்னிறுத்தி அதன் திருவருள் வழி அடங்கியொழுகிய மக்களது தெய்வங்கொள்கை யினை நன்கு வலியுறுத்தும் முறையில் அமைந்துள்ளமை இங்கு மனங்கொளற் பாலதாகும். இவ்வாறு தன் முன்னிலையில் அன்புடையார்க்குச் சொன்ன உறுதிமொழியிலிருந்து தவறுதல் முதலிய கொடுமை செய்தவர்களை ஒறுத்து அடக்குதலும் அன்புடைய நல்லோர்களைப் பாதுகாத்தலும் தெய்வத்தின் இயல்பாகும் என்பதும் தவறு செய்தோரைத் தெய்வம் ஒறுத்து அடக்கும் என்பதனை உணர்ந்தவர்கள் தெய்வத்தின் முன்னர்த் தாம் செய்த சூளுறவினின்றும் தவறமாட்டார்கள் என்பதும் ஆகிய எண்ணங்கள் மக்கட் சமுதாயத்தில் வேரூன்றி யிருந்தால் தெய்வத்தின் முன்னிலையில் தலைவன் முதலியோர் சூளுறவு செய்தலும் அச்சூளுறவினைத் தலைவி முதலியோர் நம்பி யொழுகுதலும் ஆகிய உலகியலொழுகலாறுகள் செவ்வனே நிகழ்தல் கூடும். உலகில் பிறவுயிர்கட்குத் துன்பஞ் செய்யுமியல் பினராகிய கொடியோர்களை ஒறுத்து வருத்துதலும் பிறவுயிர்க்கு ஒருசிறிதும் தீங்கு எண்ணாத நல்லியல்புடையவர்களை இடர்நீக்கிக் காத்தலும் தெய்வத்தின் இயல்பு என்னும் மெய்ம்மையினைச் சங்க காலத் தமிழ் மக்கள் நன்குணர்ந்து தமது வாழ்க்கையினை நன்முறையில் அமைத்துக் கொண்டனர். தெய்வ நம்பிக்கையின் விளைவாக அமைந்த இவ்வாழ்வியல் நெறிமுறை, மன்ற மரா அத்த பேஎ முதிர் கடவுள் கொடியோர்த் தெறூஉம் என்ப கொடியரல்லர் எம் குன்று கெழு நாடர் (குறுந்.87) எனத் தலைவியொருத்தி தன் ஆருயிர்த் தலைவனைப் பொறுத் தருளும்படி தெய்வத்தை அன்பினாற் பரவுவதாக அமைந்த குறுந்தொகைப்பாடலால் இனிது புலனாம். அலைகள் கிளர்ந்தெழும் கடற்றுறையிலும் வானுற வோங்கிய மலையடுக்கங்களிலும் மரங்கள் செறிந்த காடுகளிலும் நீர்த்துறை களிலும் முதிர்ந்த பெரிய ஆல் வேம்பு கடம்பு முதலிய மரங்களின் அடிகளிலும் பலவழிகள் ஒன்று கூடும் சந்திகளிலும் தெய்வம் உறையும் என்று பண்டையோர் நம்பினார்கள். அந் நம்பிக்கையின் விளைவாக அவ்விடங்கள் பலவும் மக்கள் அச்சத்துடன் அணுகி வழிபடுதற்குரிய தெய்வ நிலையங்களாயின. இச்செய்தி, அணங்குடைப் பனித்துறை (ஐங். 174), அணங்குடை நெடுங்கோடு (புறம். 52), அணங்குடை முருகன் கோட்டம் (புறம்.299) எனவரும் தொடர்களாற் புலனாம். மக்கள் தமக்கென அமைத்துக் கொண்டுள்ள இல்லங்களிலும் மனைவாயில் நிலைகளிலும் தங்களை இடர் நீக்கிக் காக்கும் தெய்வம் உறைகின்றது என்னும் நம்பிக்கையுடையராய்த் தம் மனைக்கண் தெய்வத்தினை வழிபட்டு வந்தனர். இக்குறிப்பு அணங்குடை நல்லில் (மதுரைக். 578) எனவும், அணங்குடை நெடுநிலை (மதுரைக். 578) எனவும், அணங்குடை நெடுநிலை (மதுரைக். 535) எனவும் வரும் மதுரைக் காஞ்சித் தொடர்களால் இனிது புலனாதல் காணலாம். இவ்வாறு மனைக்கண் உறைந்து மக்களைக் காக்கும் தெய்வத்தினை இல்லுறை தெய்வம் (மதுரைக். நச். உரை) இல்லுறை கடவுள் (அகம். 282) எனப் போற்றுதல் மரபு. வீட்டுத் தெய்வத்திற்குப் படைத்தல் என்னும் இவ்வழக்கம் தமிழகத்தில் இக்காலத்திலும் தொடர்ந்து நிலைபெற்றமை இங்கு நினைத்தற் குரியதாகும். அணங்கு என்னும் சொல் தெய்வத்தின் எல்லையற்ற பேருருவினையும் பேராற்றலையும் குறிக்கும் பொருளினதாக நக்கீரனாரால் ஆளப்பெற்றுள்ளது. குறிஞ்சி நிலத் தெய்வமாகிய முருகன் மக்களது கட்புலனுக்கு அடங்காத தனது பேரொளி வாய்ந்த பேருருவமாகிய உயர்ந்த பெருந் தோற்றம் காண்போர்க்கு அச்சந்தரும் இயல்பினதாதலின் அப்பெருந்தோற்றத்தினைத் தன்னுள் அடக்கிக் கொண்டு பண்டைக்காலத்து வள்ளியை மணத்தற் பொருட்டு எளிவந்தருளிய மணங்கமழ் தோற்றத்து இளையோனாகக் கண்முன் தோன்றி அச்சமகற்றி அருள் புரியும் திறத்தினன் என்பதனை, அணங்குசால் உயர்நிலைதழீ இப் பண்டைத் தன் மணங்கமழ் தெய்வத்து இளநலங்காட்டி (திருமுருகு. 289-290) எனவரும் தொடரில் நக்கீரனார் விளக்கியுள்ளமை இங்கு அறியத்தகு வதாகும். அணங்கு என்னும் சொற்போன்றே சூர் என்ற சொல்லும் வருத்துவது என்ற பொருளிலும் தெய்வம் என்ற பொருளிலும் சங்கச் செய்யுட்களில் ஆளப்பெற்றுள்ளது. சூருறு மஞ்ஞையின் நடுங்க (குறிஞ்சிப். 169) என்ற தொடர்க்குத் தெய்வம் ஏறின மயில்போல நடுங்காநிற்க எனப் பொருள் வரைந்தார் நச்சினார்க்கினியர். தெய்வம் உயிர்கள்மேல் ஆவேசித்தல் உண்டு என்பதும் அவ்வாறு தெய்வம் ஏறப்பெற்ற உயிர்களின் உடம்பு நடுக்கமுற்று ஆடாநிற்கும் என்பதும் சூரமை நுடக்கத்து........ ஆடினை (ஐங். 71) சூர்நசைந்தனையாய் நடுங்கல் கண்டே (குறுந். 52) எனவரும் சங்க இலக்கியத் தொடராலும் நன்குபுலனாம். நிலத்தில் வாழும் மானுட மகளிரின் வேறாக வானிலும் வரையிலும் நீர்ப்பரப்பிலும் வாழும் தெய்வத் தன்மை வாய்ந்த மகளிர் உள்ளார்கள் என்பது பண்டைத் தமிழ் மக்களின் நம்பிக்கை யாகும். சூர் அரமகளிர் (திருமுருக. 41), வான் அரமகளிர் (திருமுருகு. 117), வரையரமகளிர் (குறிஞ்சி. 195, மலைபடு. 190, ஐங். 191, 204, அகம். 342) எனச் சங்கச் செய்யுட்களிற் குறிக்கப் பெற்றுள்ளமை காணலாம். வானுலகில் வாழும் தேவ மகளிர் வானவமகளிர் (மதுரைக். 382) எனப்பட்டனர். சூர் என்னும் தெய்வம் விரும்பிய காந்தள் மலரில் வண்டு மொய்த்தல் இல்லை. அறியாது அதன் மேல் மொய்த்த வண்டினம் தம் பறத்தல் வன்மை கெட்டுவருந்தும் என்பது, மலர்ந்த காந்தள் மாறாதூ திய கடும் பறைத்தும்பி சூர் நசைத்தா அய்ப் பறைபண்ணழியும் (பதிற். 67) எனவரும் தொடராற்புலனாம். மலர்ந்த காந்தளினது மலரை இது தெய்வத்திற்கு உரியது என்று அறிந்தும் அதனை விட்டு நீங்காது ஊதிய விரைந்து பறத்தலையுடைய தும்பியென்னும் சாதிவண்டு தன் பறத்தல் வன்மை சீர் கெட்டழியும். சூர்நசைத்தா அய் என்றதனைச் சூர்நசைத்தாகவெனத்திரித்து, சூரானது நச்சுதலை யுடைத்து ஆகலானேயென வுரைக்க என்பர் பதிற்றுப்பத்தின் பழைய உரையாசிரியர். சூர்- தெய்வம் என்ற பொருளில் இங்கு ஆளப்பெற்றது. காந்தள் மலரை விரும்பும் தெய்வம் என்றது மைவரையுலகிற்குரிய சேயோனாகிய முருகப் பெருமானை. சுரும்புமூசாச் சுடர்ப்பூங்காந்தட் பெருந்தண் கண்ணிமிலைந்த சென்னியன் (திருமுருகு 44-45) வெறியறிசிறப்பின் வெவ்வாய் வேலன் வெறியாட் டயர்ந்த காந்தள் (தொல்.புறத்.நூ. 63) என்பன இங்கு ஒப்பு நோக்கியுணரத்தக்கனவாகும். பண்டைநாளில் வாழ்ந்த மக்கள், காக்கை, பல்லி முதலிய அஃறிணையுயிர்களின் இயக்கங்களையும் குரல்களையும் தமது வாழ்க்கை நிகழ்ச்சிகளில் தொடர்புடையனவாகக் கூர்ந்து உணர்ந்திருந் தனர். காக்கை கரைதல், கரிக்குருவி முதலிய அஃறிணையுயிர்களின் செயல்களைத் தமக்கு எதிர்காலத்தில் நேரவிருக்கும் நற்செயல் தீச்செயல்களின் நிமித்தமாகக் கொண்டனர். தாம் எண்ணிய செயலைத் தொடங்குதற்கும் தவிர்தற்கும் மக்கட் கூட்டத்தாரிடையே இயல்பாகத் தோன்றும் நற்சொல்லையும் தீச் சொல்லையும் நிமித்தமாக எண்ணினார். முருக பூசை பண்ணும் வேலன் முதலியோரைக் கொண்டு நிகழ்த்தும் வெறியாடல், கட்டுவிச்சி யென்னும் கணிமகளைக்கொண்டு கட்டும் கழங்கும் இட்டுரைத்தல் முதலிய தெய்வக் குறிப்புக்களால் சென்ற காலத்தில் நிகழ்ந்தது, நிகழ்காலத்தில் நிகழ்வது, எதிர்காலத்தில் நிகழவிருப்பது ஆகிய முக்கால நிகழ்ச்சிகளை யறிந்துகொள்ளுதலும் வானின்கட் காணப்படும் விண்மீன்கள் கோள்கள் ஆகியவற்றால் இவ்வுலகில் நிகழவிருக்கும் இயற்கைமாற்றங்களை முன்னரே உய்த்துணர்ந்துரைத் தலும் ஆகிய ஆற்றல் படைத்தவர்களாக வாழ்ந்தார்கள். இச்செய்தி, தன்னும் அவனும் அவளுஞ் சுட்டி மன்னும் நிமித்தம் மொழிப்பொருள் தெய்வம் நன்மை தீமை அச்சஞ்சார்தலென்று அன்னபிறவும் அவற்றொடு தொகைஇ முன்னிய காலம் மூன்றொடுவிளக்கி (தொல். அகத்.40) எனவும், பாக்கத்துவிரிச்சி (தொல். புறத்3) எனவும், வெறியறி சிறப்பின் வெவ்வாய் வேலன், (மேற்படி.5) எனவும், குடையும் வாளும் நாள்கோள் (மேற்படி.11) எனவும், மறுவில் செய்தி மூவகைக் காலமும், நெறியின் ஆற்றிய அறிவன் தேயமும் (மேற்படி.36) எனவும், கட்டினுங் கழங்கினும் வெறியென இருவரும் ஒட்டிய திறத்தாற் செய்திக் கண்ணும் (மேற்படி களவி யல் 25) எனவும் வரும் தொல்காப்பியத் தொடர்களாலும், நாளன்று போகிப் புள்ளிடை தட்ப (புறம். 124), புள்ளும் பொழுதும் பழித்தலல்லதை, உள்ளிச் சென்றோர்ப் பழியலர் (மேற் படி.24) புட்பகைக்கு ஏவானாகலிற் சாவோம் யாம் (மேற்படி.68) என வரும் புறநானூற்றுத் தொடர்களாலும் நன்கு புலனாம். மகட்போக்கிய செவிலித்தாய் சொல்லியதாக அமைந்த 195 ஆம் அகப்பாடலில், அறுவைதோயும் ஒரு பெருங்குடுமிச் சிறுபை நாற்றி பல்தலைக் கொடுங்கோல் ஆகுவதறியும் முதுவாய்வேல கூறுகமாதோ நின்கழங்கின்திட்பம் ..... எம்மனைமுந்துறத்தருமோ தன்மனையுய்க்குமோ யாதவன் குறிப்பே எனவரும் பகுதியில் வேலன் கழங்குபார்த்து நிகழ்வனகூறும் வழக்கம் விளக்கப்பெற்றுள்ளமை காணலாம். மனைக்கண் நெடுங்சுவரிடத்தே பொருத்தி வாழும் பல்லியின் சொற்களைப் பலமுறை கேட்டு அதன்பின்னர் நிகழ்ந்த இன்பதுன்ப நிகழ்ச்சிகளுடன் இயைத்து எண்ணிய பண்டைக்காலமக்கள், பல்லிசொல்லும் சொற்களைப் பின்னர் நிகழ்வனவற்றை முன்னர்ப் புலப்படுத்தும் நிமித்தமாகக் கொண்டனர் என்பது சங்கச் செய்யுட் களால் நன்கு புலனாகின்றது. பல்லி இன்ன திசையிற் சொன்னால் நற்சொல் எனவும் இன்னதிசையிற் சொன்னால் தீச்சொல் எனவும் பல்லியின் சொல்லுக்குத் திசைவகையாற் பயன் கற்பித்துக் கொண்டார்கள் என்பது பாங்கர்ப் பல்லி படுதொறும் பரவி (அகம். 9) எனவும், பல்லியும் பாங்கொத்திசைத்தன (கலித். 11) எனவும் வரும் தொடர்களாற் புலனாம். பின்வரக்கடவ இன்பதுன்ப நிகழ்ச்சிகளைப் பல்லி தன் சொற்களாற் புலப்படுத்தும் தன்மையதென்பதும், மக்கள் வாழும் மனையகத்துமட்டுமன்றி அவர்கள் செல்லும் காட்டகத்து வழிகளிலும் சோதிடரைப் போன்று நேரவிருக்கும் இடையூறுகளைத் தம் சொற்களாற் புலப்படுத்தும் திறன் பல்லியின் சொற்களுக்கு உண்டென்பதும் பண்டைக்கால மக்களது வாழ்வியலிற் காணப்படும் நம்பிக்கையாகும். இந்நுட்பம், கள்ளிமுள்ளரைப் பொருந்திச் செல்லுநர்க்கு உறுவது கூறுஞ் சிறுசெந்நாவின் மணியோர்த்தன்ன தெண்குரல் கணிவாய்ப் பல்லிய காடு (அகம். 151) எனவரும் அகநானூற்றுத் தொடரால் நன்கு புலனாதல் காணலாம். ஆறலை கள்வர் வாழும் கொடிய பாலைநில வழியே செல்வோர் யானைப்படையுடைய பெருவேந்தராயினும் போரின்கண்ணே உயிர்துறந்து புகழ்நிறுவிய வீரர்களை வழிபடுதற்கென அங்கு வரிசையாக நடப்பெற்றுள்ள நடுகற்களைப் பொருந்தியிருந்து இரைபெறாது வருந்தும் முதிய பல்லி, பின்வரும் துன்ப நிகழ்ச்சியினைப் புலப்படுத்தும் இன்னாச்சொற்களை இடையிட்டுரைப்பதாயின், அச்சொற்களைக் கேட்ட அளவிலேயே அவ்வழியில் மேலும் செல்லுதலை நிறுத்தித் தாம் வழியே விரைந்து திரும்புவர் என்பதனை, நல்லிசை நிறுத்த நாணுடை மறவர் நிரைநிலை நடுகற் பொருந்தி இமையாது இரைநசை இக் கிடந்த முதுவாய்ப் பல்லி சிறிய தெற்றுவதாயிற் பெரிய ஓடையானை உயர்ந்தோராயினும் நின்றாங்குப் பெயரும் கானம் (அகம். 387) எனவரும் அகப்பாடலில் மருதன் இளநாகனார் புனைந்து கூறிய திறம் பல்லி சொல்லில் அக்காலமக்கள் கொண்டிருந்த நம்பிக்கையினை நன்கு புலப்படுத்தல் காணலாம். வருவதுணர்த்தும் பல்லியின் சொல்லைப் பகுத்துணர்வுடைய உயர்திணை மாந்தர் நிமித்தமாகக் கொண்டது போலவே, அஃறிணை யுயிர்களாகிய பன்றி முதலிய விலங்குகளும் நிமித்தமாகக் கொண்டன என்பது, முதைச் சுவற்கலித்த மூரிச் செந்தினை ஓங்குவரைப் பெருங்குரல் உணீஇய பாங்கர்ப் பகுவாய்ப் பல்லிபாடோர்த்துக் குறுகும் புருவைப்பன்றி (அகம். 88) எனவும், எய்ம்முள் அன்ன பரூஉமயிர் எருத்திற் செய்ம் மேவற் சிறுகட் பன்றி ஓங்குமனை வியன்புனம் படீஇயர் வீங்குபொறி நூழை நுழையும் பொழுதிற் றாழாது பாங்கர்ப் பக்கத்துப் பல்லிபட்டென மெல்ல மெல்ல பிறக்கே பெயர்ந்துதன் கல்லளைப் பள்ளி வதியும் நாடன் (நற். 98) எனவும் வரும் சங்க விலக்கியப் பகுதிகளில் விரித்துரைக்கப் பட்டது. உயர்ந்த மலைப்பகுதியில் ஓங்கி வளர்ந்த முற்றிய செந்தினையின் பெருங்கதிர்களை உண்ணுதற்கு விரும்பிய பன்றியானது தினைப் புனங்காவலராகிய குறவர்களால் தனக்கு இடர் நேராமை கருதிப் பல்லியின் நற்சொல்லினை ஓர்த்துக் கேட்டு அதனையே நன்னிமித்தமாக நம்பித் தினைப்புனத்தை அணுகியது என்ற செய்தி 88ஆம் அகப்பாடலிலும், இரவில் தினைப்புனத்திற் குறுகித் தினைக் கதிர்களைத் தின்றழிக்கும் பன்றியைப் பிடித்தற்கெனக் குறவர்கள் புனத்தின் முகப்பில் இயந்திரப் பொறி வைத்துள்ளமை யறியாது அப்பொறி வாயிலில் நுழையும் பன்றி அப்பொழுது பக்கத்தே பல்லி சொல்லிய சொல்லினைக் கேட்டுத் தனக்கு நேரவிருக்கும் தீங்கினை யுணர்ந்து அப்பொறியினின்னும் தப்பி மெல்ல மெல்லப் பின்வாங்கித் தான் வாழும் கல் முழையில் வந்து தங்கியது என்ற செய்தி நற்றிணை 98ஆம் பாடலிலும் புனைந்துரை வகையால் இடம் பெற்றுள்ளமை பல்லி சொல்லுக்குப் பயன் உண்டு என்னும் பண்டைக்கால மக்களது நம்பிக்கையினை நன்கு வற்புறுத்தல் காணலாம். தலைமகன் பிரிவினால் வருந்தும் தலைமகள் பகுவாய்ப் பல்லி சொல்லுந்தோறும் நல்ல சொற்களே கூறுக என நடுங்கிப் பரவினாள் என்பது, மையல்கொண்ட மதனழியிருக்கையள் பகுவாய்ப் பல்லி படுதொறும் பரவி நல்ல கூறெனநடுங்கி (அகம். 289) எனவும், வருந்து தோட்பூசல்களையு மருந்தென உள்ளுதொறு படூஉம் பல்லி புள்ளுத்தொழு துறைவி (அகம். 351) என வரும் தொடர்களால் புலனாம். வினைமுற்றி மீள்கின்ற தலைவன் தன்னைப் பிரிந்துறையும் தலைமகளது வருத்தத்தை எண்ணித் தன்னெஞ்சினை நோக்கி, நாம் கருதிய வினையினை முடித்துத் திரும்புகின்றோம். ஆதலால் நமது வருகையினை எதிர்பார்த்திருக்கும் தலைமகளது துன்பந்தீர மாலைப் பொழுதில் நம்மனையகத்தே நீண்ட சுவரிடத்தே பொருந்தி வாழும் பல்லி நற்சொற் சொல்லுமா? என வினைவுவதாக அமைந்தது, முன்னியது முடித்தனமாயின் நன்னுதல் வரும் என்னும் பருவரல் தீரப் படுங்கொல் வாழி நெடுஞ்சுவர்ப் பல்லி ........................................................khiy¢ சிறுகுடிப் பாக்கத் தெம்பெரு நகரானே (நற். 169) எனவரும் நற்றிணைப் பாடலாகும். தலைவன் பொருளீட்டி வருதற்குப் பிரிந்தானாக, பிரிவாற்றாது வருந்தும் தலைமகளை நோக்கி ஆறுதல் கூறும் தோழி, மிகவுயர்ந்த புகழ்வாய்ந்த நல்ல மனையின் கண்ணே சுவரிடத்தே பொருந்தியிருக்கும் விரும்பத்தக்க குரலையுடைய பல்லி அவரை நினைக்குந்தொறும் நள்ளிரவிலும் நற்சொல் சொல்லுகின்றது; எனவே, அரிய பொருள் கருதிப் பிரிந்த நின் தலைவர் நினது இழையணிந்த தோளை அணையவிரும்பி இங்குவந்து சேர்வர். எனவே நின் மனக்கவலை நீங்குவதாக எனத் தலைமகளை வற்புறுத்துவதாக அமைந்தது முற்சுட்டிய நற்றிணைப் பாடலாகும். தலைவன் பொருளீட்டி வருதற்குப் பிரிந்தானாக, பிரிவாற்றாது வருந்தும் தலைமகளை நோக்கி ஆறுதல் கூறும் தோழி, மிகவுயர்ந்த புகழ்வாய்ந்த நல்ல மனையின்கண்ணே சுவரிடத்தே பொருந்தியிருக்கும் விரும்பத்தக்க குரலையுடைய பல்லி அவரை நினைக்குந்தொறும் நள்ளிரவிலும் நற்சொற் சொல்கின்றது; திருந்திய எனவே, அரிய பொருள் கருதிப் பிரிந்த நின்தலைவர் நினது இழையணிந்த தோளை அணைய விரும்பி இங்குவந்து சேர்வர். எனவே நின் மனக்கவலை நீங்குவதாக எனத் தலைமகளை வற்பறுத்துவதாக அமைந்தது, அரும்பொருட்கு அகன்ற காதலர் முயக்கெதிர்ந்து திருந்திழைப் பணைத்தோள் பெறுநர்போலும் நீங்குகமாதோ நின் அவலம் ஓங்குமிசை உயர்புகழ் நல்லில் ஒண்சுவர்ப் பொருத்தி நயவரு குரல பல்லி நள்ளென் யாமத்துள்ளு தொறும்படுமே (நற். 333) எனவரும் நற்றிணைப் பாடற் பகுதியாகும். இங்கெடுத்து காட்டிய குறிப்புக்களால் சங்ககாலத் தமிழ் மக்கள் பல்லி சொல்லினை நிமித்தமாகக் கொண்டிருந்தார்கள் என்பது நன்கு புலனாதல் காணலாம். வீட்டில் காக்கை கரைந்தால் அன்புடைய விருந்தினர் வருவர் என்பது, தமிழகத்தில் தொன்றுதொட்டு நிலவிவரும் நம்பிக்கையாகும். தன்னால் வளர்க்கப்பெற்ற தலைமகள் தான் விரும்பிய காதலனுடன் உடன் போக்கிற் சென்றாளாக அவளது பிரிவாற்றாது வருந்திய செவிலி, அவள் தன்னுடைய காதலுடன் மீண்டுவருதல் வேண்டும் எனக் காக்கைக்குப் பலிக்கடன் நேர்வதாக உரைப்பது, மறுவில் தூவிச் சிறுகருங்காக்கை அன்புடை மரபின் நின்கிளையொடு ஆரப் பச்சூன் பெய்த பைந்நிண வல்சி பொலம்புனை கலத்தின் தருகுவென் மாதோ வெஞ்சின விறல்வேற் காளையொடு அஞ்சி லோதியை வரக் கரைந்தீமே (ஐங். 391) எனவரும் பாடலாகும். குற்றமற்ற சிறகினையுடைய சிறிய கரிய fh¡ifna! வெவ்விய சினத்துடன் பொருது வெல்லும் ஆற்றல்மிக்க வேற்படையினையுடைய வீரனோடு உடன் சென்ற என்மகள் இங்கு மீண்டு வருமாறு miH¥ghahf! அவ்வாறு அழைத்தால் பசிய ஊன்பெய்த நிணத்தொடு கலந்த சோற்றினை நின் அன்புடைய சுற்றத்துடன் நீ நிறைய உண்டு மகிழும்படி பொன்னாற் செய்த உண்கலத்திற் பலியாகத் தருவேன் எனச் செவிலி காக்கையை நோக்கிக் கூறுவதாக அமைந்தது, மேற்காட்டிய ஐங்குறுநூற்றுப் பாடலாகும். தலைமகனது பிரிவினால் வருந்திய தலைவியை ஆற்றுவிக்கும் தோழி நம் வீட்டில் காக்கை கரைதலால் தலைவர் வந்துவிடுவார் எனக் கூறித் தலைவியைத் தேற்றினாள். அந்நிலையிற் பிரிந்த தலைவனும் விரைந்து வந்தான். தனது பிரிவினால் வருந்திய தலைமகளை ஆறுதல் கூறித் தேற்றிய தோழியை நோக்கி நீ தலைமகளை நன்கு ஆற்றுவித்தாய் எனக் கூறிப் பாராட்டினான். அதுகேட்ட தோழி, நின்னை இங்கு வரும்படி அழைத்த காக்கையின் உதவியே பெரிதும் பாராட்டுதற்குரியது என மறுமொழி கூறுவதாக அமைந்தது, திண்தேர் நள்ளிகானத்து அண்டர் பல்லா பயந்த நெய்யிற் றொண்டி முழுதுடன் விளைந்த வெண்ணெல் வெண்சோறு எழுகலத் தேந்தினும் சிறிது, என் தோழி பெருந்தோள் நெகிழ்த்த செல்லற்கு விருந்து வரக் கரைந்த காக்கையது பலியே (குறுந். 210) எனவரும் பாடலாகும். என்னுடைய ஆருயிர்த்தோழியாகிய தலைமகளுடைய தோளினை நெகிழ்வித்து வாட்ட முறும்படி செய்த பிரிவுத் துன்பத்தினைப் போக்குதற் பொருட்டு விருந்தாக வந்து சேரும் வண்ணம் தன் குரலால் நின்னை அழைத்த காக்கைக்குப் பலியுணவு தருதல் வேண்டித் திண்ணிய தேரையுடைய நள்ளி யென்னும் வள்ளலுக்குரிய கானத்திலே ஆயர்கள் மேய்க்கும் பலவாகிய பசுக்கள் தந்த பாலின் நெய்யினோடு தொண்டியென்னும் ஊர்ப்பக்க முழுவதும் விளைந்த வெண்ணெல்லால் ஆகிய வெண்சோற்றினை ஏழுகலங்களில் வைத்துப் படைத்தாலும் காக்கை செய்த நன்றியை நோக்க அது சிறிய பலியுணவாகவே கருதப்படும் என்பது இக்குறுந்தொகைப்பாடலின் பொருளாகும். எடுத்துக்காட்டிய இருபாடல்களும், மனைப்பக்கத்தில் உறையும் காக்கை கரைந்தால் அவ்வீட்டிற்கு அன்புடையவர்கள் விருந்தாக வந்த சேர்வார்கள் எனவும் மனையறக் கடமைகளுள் ஒன்றாகிய விருந்தோம்புந்திறத்தில் விருந்தினர் வருவர் என்பதனை முன்னறிந்து அறிவிக்கும் திறம் காக்கைக்கு உண்டெனவும் தனக்குக் கிடைத்த உணவினைத் தான் மட்டும் உண்ணாது, தன் இனத்தையும் அழைத்து உண்ணும் பண்புடைய காக்கைக்குத்தாம் உண்பதன் முன் பலியாக உணவு அளித்தல் வேண்டும் எனவும் தமிழ் முன்னோர் கொண்டிருந்த நம்பிக்கையினை நன்கு புலப்படுத்தல் காணலாம். தெய்வம் உறையும் பொதுவிடங்களில் நிகழும் வழிபாட்டில் தரப்படும் பலியுணவினையேற்று உண்ணுதற்குரியது காக்கை யென்பதும் ஊர் மக்கள் தெய்வத்திற்கெனத்தரும் பலியுணவினை யுண்ணும் விருப்புடன் தெய்வம் உறையும் ஆல் முதலிய மரங்களின் கிளைகளில் தங்கிய காக்கைகள் பகற்காலத்தில் அங்கு இடப்படும் பலியுணவினையுண்டு அந்திக் காலத்தில் தத்தம் இருப்பிடங்களைச் சேர்ந்து தம் இனத்தொடுதங்கும் என்பதும், நெடுவீழிட்ட கடவுளாலத்து உகுபலி யருந்திய தொகுவிரற் காக்கை புன்கண் அந்திக் கிளையிற் செறியப் படையொடுவந்த புன்கண் மாலை (நற். 343) எனவரும் நற்றிணைப் பாடற் றொடரால் அறியப்படும். கொடிய கண்ணினையும் கூரிய வாயினையும் உடைய பெண்காக்கைகள் பறக்கும் ஆற்றல் பெறாது நடுங்குகின்ற சிறகினையுடைய தம் குஞ்சுகளைத் தழுவிக்கொண்டு தன் இனத்தையழைத்துக் கருங்கண்ணாகிய ஊன்கலந்த பொரிக்கறியுடன் கூடிய செந்நெல்லரிசியாற் சமைக்கப்பெற்ற வெண்ணிறச் சோற்றினைத் தெய்வத்திற்கு இடப் பெறும் பலியுணவுடன் விரும்பியுண்ணுதற் பொருட்டுக் கொழுவி உணவுவளமுடைய நல்ல மனையினருகே கூடியிருக்கும் சிறப்புடையது முதுகுடியிற் பிறந்த அருமன் என்பானுக்குரிய பெருபுகழ் வாய்ந்த சிறுகுடி என்னும் ஊர் என்பது, கொடுங்கட் காக்கைக் கூர்வாய்ப்பேடை நடுங்குசிறைப் பிள்ளை தழீ இக்கிளை பயிர்ந்து கருங்கட் கருனைச் செந்நெல் வெண்சோறு சூருடைப் பலியோடு கவரிய குறுங்காற் கூழுடை நன்மனைக் குழுவின இருக்கும் மூதில் அருமன் பேரிசைச் சிறுகுடி (நற். 367) எனவரும் நக்கீரனார் பாடலில் விரித்துரைக்கப் பெற்றது. குற்றமற்ற கடவுளுறையும் மரத்தில் தங்கிப் பலியுண்டு வாழுமியல்புடைய காக்கை பெருங்காற்றால் மோதப்படும் நீண்ட சினையிடத்தே மழைத்துளி பட ஒடுங்கியுறங்கி வெல்லும் போர் வலிமிக்க சோழர்க்குரிய கழார் என்னும் ஊரிடத்தே தெய்வம் கொள்ளுதற்குரிய நல்ல கூறுபாடுடைய மிக்க பலிக் கொடையோடு சொரியப்படும் அளவில்லாத உணவாகிய அழகிய பல பலபுதுமை யுடைய ஊனொடு விரவிய பெருஞ்சோற்றைப் பகற்பொழுதில் உண்ணலாம் என்னும் நினைவுடன் இருந்தன என்பது, மாசில் மரத்த பலியுண்காக்கை வளிபொரு நெஞ்சினை தளியொடு தூங்கி வெல்போர்ச் சோழர் கழார்க் கொள்ளும் நல்வகைமிகு பலிக்கொடையொடு உருக்கும் அடங்காச் சொன்றி யம்பல் யாணர் விடக்குடைப் பெருஞ்சினையுள்ளுவன விருப்ப மழைமைந்துற்ற மாலிருள் நடுநாள் (நற். 281) எனவரும் பாடலிற் குறிக்கப்பெற்றது. பலியுணவாகிய சோற்றினை விழுங்கிய கருங்காக்கை மனையைச் சேர்ந்து வளர்ந்துள்ள நொச்சியின் நிழலிடத்தே கிடந்தயாமைப் பார்ப்பினைத் தான் தின்னுதலை வெறுத்து அதனைப் பின் காலத்துத் தின்னுதற்காகப் பாதுகாத்து வைத்தது என்ற செய்தியினை, செஞ்சோற்ற பலிமாந்திய கருங்காக்கை கவவு முனையின் மனைநொச்சி நிழலாங்கண் ஈற்றியாமைதன்பார்ப்போம்பவும் (பொருந. 184-6) எனவரும் பகுதியில் முடத்தாமக்கண்ணியார் என்னும் புலவர் தாம் பாடிய பொருநராற்றுப்படையிற் குறித்துள்ளார். முரசுடைய முடிவேந்தரும் வேளிராகிய குறுநில மன்னரும் ஒருவர் துணிந்ததே காரியமாக அனைவரும் துணிந்து கடலிலுள்ள னவும் காட்டிலுள்ளனவுமாகிய தம்முடைய அரண்களாற் பாதுகாப்புப் பெறாது நடுங்கும் வண்ணம் மிக்க வலிமிக்கக் கடிய போர் ஆரவாரம் விசும்பு அதிரும்படி சினத்தையெழுப்பி முழுங்கும் மந்திரத்தாலே பொறுத்தற்கரிய பேராற்றலையுடைய அயிரையென்னும் கொற்றவையாகிய கடவுளைப் பேணி வழிபடுதற் பொருட்டு உயர்ச்சியுடையோனாகிய பூசகன்கரிய கண்களையுடைய பேய்மகளும் கைபுடைத்து நடுங்கும்படி தன்கையில் ஏந்திய பெறுதற்கரிய சோற்றுத் திரளையும் எறும்பு மொய்க்காத வியக்கத்தக்க இயல்புடைய குருதியொடு கலந்த நிறைந்த கள்ளொடு பொருந்திய பலியுணவையும் காக்கையும் பருந்தும் இருந்து உண்ணும்படி போர்க்களத்திற் பெருஞ்சோறு உகுத்தற்குப் பல்யானைச் செல்கெழு குட்டுவனது வீரமுரசு போரை விரும்பிய வீரர்களின் இடியோசை போன்ற குரலுடன் பொருந்தி முழங்கப்பெற்றது. இச்செய்தி, பணைகெழு வேந்தரும் வேளிரும் ஒன்றுமொழிந்து கடலவுங் காட்டவும் அரண்வலியார் நடுங்க கடுஞ்சினங் கடாஅய் முழங்கு மந்திரத்து அருந்திறல் மரபிற் கடவுட் பேணியர் உயர்ந்தோன் ஏந்திய அரும்பெறற் பிண்டம் கருங்கட் பேய்மகள் கைபுடையூஉ நடுங்க நெய்த்தோர் தூஉய நிறைமகிழ் இரும்பலி எறும்பு மூசா இறும்பூது மரபிற் கடுங்கட் காக்கையொடு பருந்திருந்து ஆர ஓடாப் பூட்கை யொண்பொறிக் கழற்கால் பெருஞ்சமத் ததைந்த செருப்புகல் மறவர் உருமு நிலனதிர்க்குங் குரலொடு கொளைபுணர்ந்து பெருஞ்சோறு உகுத்தற்க எறியும் கடுஞ்சின வேந்தேநின் தழங்குகுரல் முரசே (பதிற். 30) எனப் பாலைக் கௌதமனார் பாடிய பாடலிற் குறிக்கப் பெற்றது. வெள்ளிவேல்போர்க் கொற்றவையாகிய அருந்திறற் கடவுள் தனது ஆணையால் தன் பலிகளைப் பேய் தன் கைகளால் தொடாது அஞ்சி நடுங்கும்படியும் எறும்பு மொய்க்காதபடியும் செய்து மேல் தன் அருளாலே போரில் வெற்றியுண்டாவது உறுதியென்பதனை அறிவித்தற்கு நிமித்தமாகக் காக்கையும் பருந்தும் உண்ணும்படி செய்தது என்னும் குறிப்பு இப்பாடலில் இடம் பெற்றிருத்தலைக் கூர்ந்து நோக்குங்கால் பின் விளைய விருப்பதனை முன்னரே அறிவிக்கும் நிமித்தங்களுள் காக்கையும் ஒன்றாகத் தமிழ் முன்னோர் கருதினர் என்பது நன்கு தெளியப்படும். ஊர் முனையில் அமைந்த நீர்த்துறையிலே வளர்ந்து வழிப் போவார்க்குத் தடையாகவுள்ள முதிய மரமாகிய கடவுள் மரத்திலே உடன் உறைதலைப் பயின்ற கூகை; இரவுப் பொழுதிலே கூவும் கடுங்குரலோசை கேட்டார்க்கு அச்சந் தருவதாகவும் நள்ளிரவில் உறங்குவோரை நடுங்கியெழும்படி செய்வதாகவும் களவொழுக்கம் ஒழுகும் தலைவனது வருகைக்குத் தடை செய்வதாகவும் அமைந்துள்ள செய்தியினை இரவுக் குறியில் வந்து சிறைப்புறத்தானாகவுள்ள தலைவன் கேட்குமாறு தோழி கூகையை நோக்கிக் கூறும் முறையில் அமைந்தது, எம்மூர் வாயில் உண்டுறைத் தடைஇய கடவுள் முதுமரத் துடனுறை பழகிய தேயா வளைவாய்த் தெண்கட் கூருகிர் வாய்ப்பறை யசாஅம் வலிமுந்து கூகை மையூன் தெரிந்த நெய்வெண் புழுக்கல் எலிவான் சூட்டொடு மலியப் பேணுதும் எஞ்சாக் கொள்கையெங் காதலர் வரல் நசைஇத் துஞ்சாதலமரு பொழுதின் அஞ்சுவரக் கடுங்குரல் பயிற்றா தீமே (நற். 83) எனவரும் நற்றிணைப் பாடலாகும். இதனைக் கூர்ந்து நோக்குங்கால் ஊனொடு நெய்விரவிச் சமைத்த சோற்றினை எலிக்கறியுடன் கடவுள் மரத்தில் உடனுறையும் கூகை முதலியவற்றிற்குப் பலியாக இட்டுப் படைக்கும் வழக்கம் பண்டைக்காலத்திருந்தமையும் கூகையில் குரல் நன்னிமித்தமாகக் கொள்ளப்படாமையும் நன்கு புலனாகும். விரிச்சி வேந்தனொருவன் மற்றொரு வேந்தனொடு இகல் கருதிப் போர் செய்ய எண்ணிய காலத்தில் பகைவனது நாட்டில் வாழும் அந்தணர், பெண்டிர், பிணியுடையோர் முதலிய வலியற்றோரை அந்நாட்டினின்றும் அப்புறப்படுத்தல் வேண்டியும் போரால் நேரும் துன்பங்களிலிருந்து தப்பிப் புறத்தே செல்லும் உணர்வில்லாத பசு நிரைகளைத் தன் நாட்டில் கொணர்ந்து காத்தல் வேண்டியும் தன் படைத் தவைர்களைப் பகைவர் நாடுபுக்கு அந்நாட்டிலுள்ள பசுக் கூட்டங்களை இரவிற் களவிற் கவர்ந்து வருமாறு செய்தல் அறத்தின் வழிப்பட்ட போர்த் தொடக்கமாகக் கருதப்பட்டது. அந்நிலையில் அரசனால் ஏவப்பட்ட படை வீரர்கள் நகரத்தினின்றும் போய் ஒரு சிற்றூரில் தங்கித் தம் வேந்தனுக்கு எதிர்காலத்தில் உளவாகும் ஆக்கத்தை அறிந்துவருதற்பொருட்டு ஊர்ப்புறத்தே இயல்பாகப் பேசப்படும் நற்சொல்லினைக் கேட்டறிவர். இது வரிச்சியோர்த்தல் எனப்படும். இச்செய்தி படையியங்கரவம் பாக்கத்து விரிச்சி (தொல்.புறத். 3) எனவரும் தெல்காப்பியச் சூத்திரத்தில் கூறப்பட்டது. விரிச்சி யோர்த்தல் என்பது பெருமது பெண்டிராகிய மங்கலமகளிர் நெல்லும் மலரும் தூவித் தெய்வத்தை வழிபட்டு நின்றாராக அந்நிலையில் அவ்வூர்ப் புறத்தே வாழும் மக்கள் தம்மியல்பில் உரையாடும் போது தோன்றிய நற்சொற்களைத் தங்களுடைய வினை முடித்தற்குரிய நன்னிமித்தமாகக் கேட்டறிதலாகும். மங்கல மடந்தையராகிய பெருமுது பெண்டிர் மாலைக் காலத்தே நறுமணம் வாய்ந்த முல்லையின் அரும்பவிழ்ந்த பூக்களை நாழி எனப்படும் முகத்தலளவையாகிய படியிற் கொண்ட நெல்லுடனே தூவித் தாம் வழிபடும் தெய்வத்தை வணங்கி நற்சொல்லை எதிர்பார்த்து நின்றனராக, அந்நிலையில் அங்கு வாழும் ஆயர்குலப் பெண் ணொருத்தி, சிறிய தாம்பிற் கட்டப்பட்ட இளங்கன்று, மேயச் சென்ற தன் தாய்ப் பசு வாராமையால் பாலுண்ணாது பசியாற் சுழல்கின்ற வருத்தத்தைக் கண்டு அக்கன்றினை நோக்கி நும்முடைய தாயர் நிரம்பப் புல்லை மேய்ந்து கோல் தாங்கிய கோவலர் பின்னின்று செலுத்த இப்பொழுதே வந்து சேர்வர் எனக் கூறினாள். அச்சொல்லை நற்சொல்லாகக் கேட்டோம். அதனால் நின்னைப் பிரிந்து வினைமேற் சென்ற தலைவர் பகைவரை வென்று வினைமுடித்து விரைவில் வந்து சேர்வார். ஆகவே நின் மனத்தடு மாற்றமாகிய வருத்தத்தைப் போக்குவாயாக எனத் தலைவனது பிரிவால் இல்லின்கண் இருந்து வருந்தும் தலைமகளை ஆயத்தார் ஆற்றுவித்தனர் இச் செய்தி, நாழி கொண்ட நறுவீ முல்லை அரும்பவிழ் அலரி தூஉய்க்கை தொழுது பெருமுது பெண்டிர் விரிச்சி நிற்பச் சிறுதாம்பு தொடுத்த பசலைக் கன்றின் உறுதுயர் அலமரல் நோக்கி ஆய்மகள் நடுங்குசுவ லசைத்த கையள் கைய கொடுங்கோற் கோவலர் பின்னின் றுய்த்தர இன்னே வருகுவர் தாயர் என்போள் நன்னர் நன்மொழி கேட்டனம் அதனால் நல்ல நல்லோர் வாய்ப்புள் தெவ்வர் முனைகவர்ந்து வருதல் வாய்வது நீநின் பருவரல் எவ்வம் களை மாயோய் (முல்லைப். 8-21) எனவரும் முல்லைப் பாட்டடிகளில் விரித்துரைக்கப் பெற்றது. இவ்வாறு விரிச்சி யோர்த்தலாகிய நம்பிக்கை கடைச் சங்க காலத்தில் நிலைபெற்றிருந்தது என்பது. திருந்திழை மகளிர் விரிச்சி நிற்ப (நற். 40) எனவரும் நற்றிணைத் தொடராலும் நன்கு புலனாகும். வானத்தில் உள்ள நாள்மீன் கோள் மீன் ஆகியவற்றின் மாறுதல்களால் நாடாள் வேந்தர்க்கும் குடிமக்களுக்கும் நேரவிருக்கும் இன்ப துன்பங்களை முன்னரே கூர்ந்துணர்ந்து இவை நல்லநாள் இவை தீய நாள் எனக் கண்டு முக்கால நிகழ்ச்சிகளையும் முன்னறிந்தறிவிக்கும் சோதிட நூலிலும் ஆந்தை முதலிய புட்களின் குரல், இயக்கம் என்பவற்றிலும் பலகறை முதலியவற்றைக் கொண்டு வருவது உணர்த்தும் பிற நிமித்தங்களிலும் இங்ஙனம் நனவில் நிகழும் நிகழ்ச்சிகளேயன்றிக் கனவில் நிகழும் நிகழ்ச்சிகளிலும் பண்டைக் காலத் தமிழ் மக்கள் அழுந்திய நம்பிக்கை கொண்டிருந்தனர். அத்தகைய நம்பிக்கைகளின் விளைவாக நாட்டுக்கு நேரவிருக்கும் இடையூறுகளை முன்னுணர்ந்த புலமைச் சான்றோர் தம் பாட்டின் திறத்தாலே விலக்க முயன்றனர். கூடலூர் கிழார் என்னும் புலவர், யானைக்கட் சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை என்ற சேர மன்னன் காலத்தில் வாழ்ந்தவர். இவர் காலத்தில் பங்குனித் திங்களின் முதற் பதினைந்தில் கார்த்திகை நாளில் உத்தரம் என்னும் விண்மீன் உச்சியிலிருந்து சாய மூல மீன் எழ மிருகசீரிடம் மறைய விண்ணில் விண்மீன் ஒன்று வடக்கும் கிடக்கும் போகாமல் இடை நடுவே எரிந்து வீழ்ந்தது. அங்ஙனம் வானத்தில் ஒரு மீன் எரிந்து வீழ்தலைக் கண்ட கூடலூர் கிழார் தம் அரசனாகிய யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறைக்குத் தீங்கு விளையும் என்று தெரிந்து உளந்திடுக் குற்றார். புலவர் அஞ்சியதற்கேற்பவே அற்றைக்கு ஏழாம் நாளில் அவ்வேந்தன் உயிர் நீத்தான். இச் செய்தி கூடலூர் கிழார் பாடிய 226ஆம் புறப்பாடலால் புலனாகின்றது. நாள், புள் முதலியவற்றின் இயக்கம், குரல் முதலிய நிமித்தங் களை அடிப்படையாகக் கொண்டு எதிர்காலத்தில் நிகழவிருக்கும் செய்திகளை முன்னரே அறிந்து அவற்றுக்குத் தக நடந்து கொள்ளும் சோதிட உணர்வும் அது பற்றிய நம்பிக்கையும் தொல்காப்பியனார் காலம் முதல் தமிழகத்தில் நிலைபெற்று வருகின்றதென்பது, அச்சமும் உவகையும் எச்ச மின்றி நாளும் புள்ளும் பிறவற்றி னிமித்தமும் காலங் கண்ணிய வோம்படை யுளப்பட ஞாலத்து வரூஉம் நடக்கையது குறிப்பிற் கால மூன்றொடு கண்ணிய வருமே (தொல்.புறத். 30) எனவரும் புறத்திணையியற் சூத்திரப்பகுதியாலும்; புதுப்புள் வரினும் பழம்புட் போகினும் விதுப்புற லறியா ஏமக்காப்பினை (புறம். 20) எனப் புள்ளைக் குறித்தும், திசையிரு நான்கும் உற்கம் உற்கவும் பெருமரத், திலையில் நெடுங்கோடு வற்றல் பற்றவும் வெங்கதிர்க் கனவி துற்றவும் பிறவும் அஞ்சுவரத் தகுந புள்ளுக்குர லியம்பவும் எயிறு நிலத்து வீழவும் எண்ணெ யாடவும் களிறுமேல் கொள்ளவும் காழகம் நீப்பவும் வெள்ளி நோன்படை கட்டிலொடு கவிழவும் கனவின் அரிய காணா நனவிற் செருச் செய் முன்பநின் வருதிறன் நோக்கி மையல் கொண்ட ஏமமில் இருக்கையர் (புறம். 41) எனக் கனவு முதலிய பிற நிமித்தங்கள் பற்றியும் வரும் புறப்பாடற் பகுதிகளாலும் நன்கு புலனாம். எட்டுத் திசைகளிலும் விண்மீன்கள் எரிந்து வீழ்தலும், பெரிய மரத்தின் கண்ணே இலையில்லாது கிளைகள் பட்டுப் போதலும், கதிரவன் தனக்குரிய திசையியக்கத்திற் பிறழ்ந்து தோன்றுதலும், அஞ்சத் தகுவனவாகிய பறவைகள் குரலெழுப்புதலும் நனவு நிலையிலே தோன்றும் நிமித்தங்கள் எனவும், நிலத்திற் பல் வீழவும் எண்ணெய் தேய்த்துக் கொள்ளவும், பன்றியை வாகனமாகக் கொள்ளவும், உடுத்த ஆடை அவிழவும் படைக்கலம் தானிருந்த கட்டிலுடனே முறிந்து வீழவும் கனாக் காண்டல், கனவில் நிகழும் தீ நிமித்தங்கள் எனவும் மேற்காட்டிய 41ஆம் புறப்பாடலிற் கோவூர் கிழார் குறித்துள்ளமை அவர்கால மக்களது நம்பிக்கைக்கு எடுத்துக் காட்டாக அமைந்துள்ளமை காணலாம். நாம் வாழும் உலகினை நடுவாகக் கொண்டு, இதன்மேலும் கீழும் உள்ள உலகங்களைத் கூட்டி மூவகையுலகம் என வழங்கும் மரபு சங்ககாலத்தில் நிலவியது. நாம் வாழும் நிலையில் நடுநிலைக் கண்ணதாகிய இவ்வுலகின் மேலும் கீழும் எவ்வேழுலகங்கள் உள்ளன எனவும் இவ்வுலகினைச் சேர்த்து ஏழுலகங்கள் நடுவேயுள்ளன எனவும் அக்கால மக்கள் நம்பினர். என்பது, வடாஅது பனிபடு நெடுவரை வடக்கும் தெனாஅ துருகெழு குமரியின் தெற்கும் குணாஅது கரைபொரு தொடுகடற் குணக்கும் கீழது. முப்புண ரடுக்கிய முறைமுதற்கட்டில் நீர்நிலை நிவப்பின் கீழும், மேலது ஆனிலை யுலகத்தானும் (புறம்.6) எனவரும் புறப்பாடலாலும் வடக்கின் கண்ணது பனிதங்கிய நெடிய இமய மலையின் வடக்கும், தெற்கின் கண்ணது உட்குந் திறம் பொருந்திய கன்னியாற்றின் தெற்கும், கீழ்க்கண்ணது கரையைப் பொருகின்ற, சகரரால் தோண்டப்பட்ட சாகரத்தின் கிழக்கும், மேல் கண்ணது பழைதாய் முதிர்ந்த கடலின் மேற்கும் கீழதாகிய நிலமும் ஆகாயமும் சுவர்க்கமும் என மூன்றுங் கூடிய புணர்ச்சியாக அடுக்கப்பட்ட அடைவின்கண் முதற் கட்டாகிய நீர் நிலைக்கண் ஓங்கிய நிலத்தின் கீழும், மேலதாகிய கோலோகத்தின் கண்ணும் எனவரும் அதன் உரையாலும் இனிது புலனாகும். இவ்வாறு நடுவும் கீழும் மேலும் ஒரோவென்று எழுவகைப்பட்ட மூன்றுலகம் உண்மை, மூவே ழுலகம் உலகினுள் மண்பதும் ஆயோய் (மூன்றாம் பரிபாடல் 9. 10அடிகள்) எனவும், இருநிழல் படாமை மூவேழுலகம் ஒருநிழலாககிய ஏமத்தை மாதோ (மேலது. 75. 76) எனவும், நின்மருங்கின்று மூவேழுலகமும் (பரி. 13 : 23) எனவும் வரும் பரிபாடற் பகுதிகளால் இனிது விளங்கும். கூற்றம் சங்கச் செய்யுட்களில் கூற்றுவனைக் குறிக்கும் பாடல்கள் மிகுதியாக உள்ளன. காலன், மடங்கல், ஞமன், மறலி ஆகிய சொற்கள் கூற்றத்தைக் குறித்து வழங்குகின்றன. உடம்பையும் உயிரையும் கூறுபடுத்துப் பிரித்துவைக்கும் தெய்வ ஆற்றல் கூற்றம் என்னும் பெயரால் வழங்கப்படுவதாயிற்று. இவ்வுலகில் உடம்பும் உயிரும் வேறு வேறு தன்மையன எனவும் ஐம்பெரும் பூதங்களாலாகிய இவ்வுலகத்துப் புல் முதல் மக்களீறாகவுள்ள பல்வேறு உயிர்த் தொகுதிகளும் யாக்கை, இளமை, நுகர்ச்சி முதலிய பல திறத்தானும் நிலையாமை உடையனவாக இவ்வுலகம் அமைந்துள்ளது எனவும் தமிழ் முன்னோர் தம் வாழ்வியல் அனுபவத்தில் கண்டுணர்ந்தனர். பல்லாற்றானும் நில்லாவுலகம் என்றார் தொல்காப்பியனார். அறிதற்றன்மையும் நிலைபெறும் ஒருங்கு வாய்க்கப்பெற்ற உயிர்த் தொகுதியும் அவ்வுயிர்களின் நிலைக்களமாய் அறிவின்மையும் நிலையாமையும் உடையனவாகிய பல்வேறு உடம்புகளும் தம்முள் வேறுபட்ட இயல்பினவாகும். எல்லாக் காலத்தும் உயிர்கள்தாம் பெற்றுள்ள ஒரே உடம்புடன் தொடர்ந்து நிலைத்திருத்தல் இல்லை. உயிர்கள் தம் வாழ்க்கை நுகர்ச்சிக்கெனப் பெற்றுள்ள உடம்பு களினின்றும் அவற்றின் நுகர்ச்சிக்காலம் முடிந்த பின்னர் அவ்வுயிர்களைக் கூறுபடுத்துப் பிரிக்கும் தெய்வ ஆற்றலே கூற்றம் எனப்படும். இத்தகைய கூற்றத்தின் ஆற்றலைத் தடுத்து நிறுத்தும் ஆற்றலுடையோர் மன்னுயிர்த் தொகுதியில் ஒருவரும் இலர். இதுபற்றியே மாற்றருங் கூற்றம் என அடை புணர்த்தினார் தொல்காப்பியர். மாற்றருங் கூற்றம் உயிர்கவருந்தனது தொழிலை யாவராலும் மாற்றுதற்கு அரிய ஆற்றலுடையது என்பதாம். உடம்பையும் உயிரையும் கூறு படுத்துதலால் கூற்றம் எனவும் உயிர்களது வினை நுகர்ச்சியின் முடிவாகிய காலம் அறிந்து செயல்படுதலால் காலன் எனவும் உடம்பொடு கூடி வாழ்வியலில் படரும் உயிரை அதன் ஆற்றல் ஒடுங்குமாறு உடம்பினின்றும் பிரித்துத் தொழிலின்றி மடங்கியொடுங்கச் செய்தலால் மடங்கல் எனவும் உயிர்கள்பால் விருப்பு வெறுப்பின்றி நடுநிலையில் நின்று உடம்பினின்றும் உயிரைப் பிரித்தலாகிய தன் தொழிலைச் செய்தலால் ஞமன் எனவும் எத்தகைய ஆற்றல் உடையராயினும் அவர்களொடு முரண்பட்டு அவர் உயிரைப் பிரித்தலின் மறலி எனவும் சங்க இலக்கியங்களில் கூற்றம் குறிக்கப்பெற்றுள்ளது. உயிர் தான் பெற்றுள்ள உடம்பினின்றும் பிரியுங் காலத்தைச் சாதல் எனவும் மற்றோர் புது உடம்பிற் புகும் நிலையைப் பிறத்தல் எனவும் இங்ஙனம் சாதற்கும் பிறத்தற்கும் காரணமாயமைந்தது அவ்வுயிர்கள் உடம்பொடு கூடி நின்ற காலத்துச் செய்த நல்லனவும் தீயனவுமாகிய வினைத் தொகுதி எனவும் தமிழ் முன்னோர் உயிர்களின் வாழ்வியல் நுட்பங்களை நுனித்து உணர்ந்தனர். அவ்வுணர்வின் பயனாக ஓர் உயிர் தான் பெற்றுள்ள உடம்போடு உலகம் உள்ளவரை நிலைத்திருத்தல் இயலாது என்பதும் வினைப்பயனுக்குத்தக அவ்வுயிரை உடம்பினின்றும் வேறுபடுத்தும் கூற்றம் உண்மை பொய்யன்று என்பதும் ஆகிய உண்மையினைத் தம் உள்ளத்துத் தெளிந்தனர். இவ்வுண்மை, வீயாது உடம்பொடு நின்ற உயிரும் இல்லை மடங்கல் உண்மை மாயமோ அன்றே (புறம். 363) எனவரும் ஐயாதிச் சிறுவெண் டேரையார் வாய்மொழியால் நன்குணரப்படும். இவ்வாறு உயிர்கள் செய்த வினையின்மேலிட்டு நடுநிலையில் நின்று அவ்வுயிரை உடம்பினின்றும் பிரிக்கும் கூற்றத்தின் செயலைத் தடுக்கவல்லார் எவரும் இலர் என்பது, மாற்றருஞ் சீற்றத்து மாயிருங் கூற்றம் (பதிற். 51) கூற்றத் தன்ன மாற்றரு முன்பின் (புறம். 362) எனவரும் தொடர்களால் வலியுறுத்தப்பெற்றமை காணலாம். மேற்குறித்த கூற்றத்தின் செயலை மாற்றுதற்குரிய மருந்து வேறில்லை என்பது, மருந்தில் கூற்றத்து அருந்தொழில் (புறம். 3) எனவரும் தொடரால் புலனாம். கணிச்சி என்னும் கூரிய மழுப்படை கொண்டு உயிர்களைக் கவரும் திறத்தில் கண்ணோட்டமோ, நயமோ காட்டுதலின்றி வெம்மை மிக்க சினத்துடன் காலம் பார்த்துத்தன் தொழிலை நிறைவேற்றுதல் கூற்றத்தில் இயல்பு. இவ்வுண்மை, கணிச்சிக் கூர்ம்படைக் கடுந்திறல் ஒருவன் பிணிக்குங் காலை இரங்குவிர் (புறம். 195) காலன் என்னும் கண்ணிலி (புறம். 240) நயனில் கூற்றம் (புறம். 227) வெந்திறற் கூற்றம் (புறம். 238) காலனும் காலம் பார்க்கும் (புறம். 41) எனவரும் தொடர்களால் புலப்படுத்தப் பெற்றுள்ளமை காணலாம். உடம்பினின்றும் உயிரைப் பிரிக்கும் ஆற்றலைக் கூற்றம் என்ற பெயரால் தொல்காப்பியனார் குறித்தார். அவர் குறித்த கூற்றத்தை அவருக்குப் பின் வந்த சான்றோர், காலன், மடங்கல், ஞமன், மறலி எனப் பல்வேறு காரணப் பெயரிட்டு வழங்கினர். இங்ஙனம் கூற்றுக்குப் பல பெயர்கள் வழங்கிய நிலையில் தலைமை யுடையதும் அதன் ஏவல் செய்வதும் எனக் கூற்றத்தின் ஆற்றலை இருவகையாகப் பகுத்துரைக்கும் மரபு இடம் பெறுவதாயிற்று. தாமா இருவரும் தருமனும் மடங்கலும் எனவரும் பரிபாடல் (3) அடியில் குறிக்கப்பெற்ற தருமன் என்பானைத் தலைமையுடைய யமன் எனவும் மடங்கல் என்பதனை அவனது ஏவல் செய்யும் கூற்றம் எனவும் கொள்வர் பரிமேலழகர். மடங்கல் போற் சினைஇ மாயஞ் செய்யவுணரை எனவரும் தொடரில் உள்ள மடங்கல் என்னும் சொல்லுக்குக் கூற்று எனப் பொருள் கொண்டார் நச்சினார்க்கினியர். ஒடுக்கம் என்ற பொருளில் உள்ள மடங்கல் என்னும் இச்சொல் யமனுக்கு ஏவல் செய்யும் கூற்றம் என்ற பொருளினும் கலித்தொகையில் (150 ஆம் பாடல்) ஆளப் பெற்றுள்ளது. தருமனாகிய இயமனுக்கும் அவனது ஏவல் செய்யும் கூற்றத்திற்கும் இடையேயுள்ள இத்தொடர்பினை, சாற்று நாளற்றதென்று தருமராசற்காய் வந்த கூற்றினை (4. 39. 2) எனவரும் திருநாவுக்கரசர் திருநேரிசைத் தொடரால் இனிதுணரலாம். உடம்பினின்றும் உயிரைப் பிரிக்கும் தெய்வ ஆற்றலைக் கூற்று எனவும் காலத்தால் தூண்டப்பட்டுக் கூற்றுவனது ஏவல் செய்யும் துணையாற்றலைக் காலன் எனவும் கொள்ளுதல் தகும். இங்ஙனம் உடம்பினின்றும் உயிரைப் பிரித்தற்குத் துணை செய்வது, காலக் கடவுளாகிய இறைவன் கையின் கண்ணதாய் ஊழி முடிவின்கண் அவன் ஏவலால் உயிர்த்திறமேல் திரியும் கணிச்சியாகும். இந்நுட்பம், மடங்கலும் கணிச்சியும் காலனுங்கூற்றும் தொடர்ந்து செல்லமையத்துத் துவன்றுயிருணீஇய உடங்கு கொட்பனபோல் (கலி. 105) எனவரும் கலித்தொகைத் தொடராலும், சால நிறைகின்ற பல்லுயிர்களை உண்ண வேண்டி ஊழித்தீயும் கணிச்சியும் காலனும் கூற்றுவனும் அவ்வுயிர்களை விடாமற் செல்கின்ற ஊழி முடிவாகிய காலத்தே அவை சேரச் சுழன்று திரியுமாறு போல எனவும் முன் இறைவன்கையதாய் ஊழி முடிவின்கண் அவன் எவலால் உயிர்த்திற் மேற்செல்லும் கணிச்சி காலன், கூற்றுவன் ஏலொளன் எனவும் இத்தொடர்க்கு நச்சினார்க்கினியர் எழுதிய உரை விளக்கத்தாலும் நன்கு புலனாதல் காணலாம். உயிர்கள் வினைப்பயன்களாகிய இன்ப துன்பங்களைப் பொருந்துதல் முறைமையாகிய ஊழின்வழி புறத்தே நின்று உயிரைக் கொண்டு போதல் கூற்றத்தின் செயலாகும். இச்செய்தி, உறுமுறை மரபிற் புறநின்றுய்க்கும் கூற்றத் தனையை (புறம்.98) எனவரும் புறப்பாடற்றொடரால் உய்த்துணரப்படும். இதன்கண் உறுமுறை மரபு என்றது, உயிர்கள் தாம் செய்த நன்றும் தீதுமாகிய இருவினை காரணமாக இன்பமும் துன்பமுமாகிய பயன்களை நுகர்ந்து கழிக்குமாறு செய்யும் முறைமையாகிய ஊழினை. இவ்வூழின் வழி நின்றே கூற்றம் தன் தொழிலை நிகழ்த்தும் என்பது உறுமுறை மரபிற் புறனின் றுய்க்கும் கூற்றம் என அடை கொடுத்தோதிய அதனால் இனிது புலனாதல் காணலாம். உடம்பொடு கூடிவாழும் உயிர் தனக்கு நிலைக்களமாயிருந்த உடம்பைவிட்டு நீங்கமாறு செய்தல் கூற்றத்தின் தொழிலாகும். இவ்வுலகில் உடம்பைவிட்டு உயிர் நீங்குதலாகிய சாதலைக் காட்டிலும் உயிர்க்குத் துன்பந்தரும் நிகழ்ச்சி பிறிதொன்றில்லை யென்பது சாதலின் இன்னாதது இல்லை எனவரும் தெய்வப் புலவர் வாய்மொழியால் நன்கு தெளியப்படும். அத்தகைய பெருந்துன்பத்தை விளைவிப்பது கூற்றுவனின் தொழிலாதலின் உலகின் நல்லறஞ் செய்தோரது உயிரைக் கூற்றங்கவர்ந்த நிலையில் நல்லோர் பிரிவால் அல்லலுற்ற சான்றோர்கள் தம்முள்ளத்தெழுந்த துன்பமிகுதியால் அறனில் கூற்றம் (புறம். 237), நனிபேதையே நயனில் கூற்றம் (புறம். 227) என்றாங்குக் கூற்றத்தின் செயலை இகழ்ந்துரைத்தலும் உண்டு. கூற்றத்தினைக் குறித்து வழங்கும் பெயர்களுள் ஒன்றாகிய மடங்கல் என்னுஞ் சொல் புறத்தே தோன்றிய பொருள் மீண்டும் அகத்தே ஒடுங்குதல் என்ற பொருளில் இறைவன் செய்யும் ஒடுக்கம் என்னும் தொழிலைச் சுட்டிய இயற்பெயராய் அவ்வொடுக்கத்தின் ஒரு பகுதியாய் உடம்பினின்றும் உயிரைப் பிரித்தலாகிய தொழலை நிகழ்த்தும் கூற்றத்திற்கு ஆகுபெயராயிற்று. முதலாம் பரிபாடலில், ஐந்தலை யுயரிய அணங்குடை யருந்திறல் மைந்துடை யொருவனுமடங்கலும் நீ எனவரும் தொடரில் மடங்கல் என்னும் சொல் சிவபெருமான் செய்தருளும் தொழில்களுள் ஒடுக்கமாகிய அழித்தற்றொழிலைக் குறித்து நின்றது. இத்தொடரில் ஐந்தலையுயரிய அணங்குடை யருந்திறல் மைந்துடை ஒருவன் என்பதற்கு ஐந்துதலையைத் தோற்றுவித்த அருந்திறலையுடைய ..............ஈr‹’ எனவும் மடங்கல் என்பதற்கு அவனினாகிய உலகுயிர்களின் ஒடுக்கம் எனவும் பரிமேலழகர் விளக்கம் தந்துள்ளார். இதனைக் கூர்ந்து நோக்குங்கால் மடங்கல் என்னும் சொல், உலகினைத் தோற்றுவித்துப் பல்லுயிர்க்கும் ஏற்ற உடம்பினைப் படைத்தளித்த இறைவன், உலகுயிர்களாகிய அவற்றை மீளவுந் தன்கண் ஒடுங்கச் செய்தலாகிய ஒடுக்கத்தைக் குறித்து நின்றதென்பது நன்கு விளங்கும். எனவே உலகுயிர்களை முற்ற ஒடுக்குதலாகிய மகா சங்காரத் தொழிலை நிகழ்த்து பவன் ஐம்முகக் கடவுளாகிய சிவபெருமானே என்னும் கொள்கை திருமாலடியார்களாலும் ஏற்றுக் கொள்ளப் பெற்றுத் தமிழகத்தில் நிலவிய பொதுமையுடையதென்பது நன்கு புலனாதல் காணலாம். கணிச்சியென்னும் மழுப்படை சிவபெருமானுக்குரியது எனவும் அப்படையினால் நிகழ்த்தப்படும் ஒடுக்கத்தின் உயிர்களது வினைநுகர்ச்சி முடிவு பெறும் காலம் வந்துழி அம்முறையின் வழி நின்று உடம்பினின்றும் உயிரைப் பிரிக்கும் தெய்வ ஆற்றலைக் காலன் எனவும் முழுமுதற் கடவுளாகிய இறைவனுக்குரிய கணிச்சிப்படை காலனது தொழிற்கும் உறுதுணையாய் நிற்கும் எனவும் தமிழ் முன்னோர் கருதினர். உலகுயிர்கள் அனைத்தையும் பேரூழிக் காலத்தில் தன்கண் ஒடுக்கிக் கொள்ளுதலால் மகா சங்காரணன் எனப்படும் சிவபெருமான் பதிற்றுப்பத்துக் கடவுள் வாழ்த்துப் பாடலிற் காலக்கடவுள் எனப் போற்றப் பெற்றுள்ளமையும் இக்கருத்துப் பற்றியே யாகும். வினைக் கொள்கையும் மறுபிறப்பும் உலகில் உடம்புடன் கூடிவாழும் உயிர்கள் கூற்றுவனால் உடம்பினின்றும் நீங்கிய நிலையில், அவ்வுயிர்கள் முன் உடம்பொடு கூடியிருந்த காலத்திற் செய்த நன்றும் தீதுமாகிய வினைகாரணமாகப் பிறிதோருடம்பினைப் பெற்று மீளவும் பிறக்கும் என்பது தென்குமரி வடவிமயமாகிய எல்லையுட் பட்ட பாரத நாட்டில் வாழும் அனைவரும் தொன்றுதொட்டு உடன்பட்டுத் தம் வாழ்வியலிற் கடைப்பிடித்து வரும் பொதுக் கருத்தாகும். உடம்பொடு கூடி வாழும் மக்கட் குலத்தார் தாம் பெற்ற மனவுணர்வின் பயனாக எல்லாவுயிர்க்கும் நல்லனவே செய்தல் வேண்டும் என்பதும் எவ்வுயிர்க்குந் தீங்கு செய்தல் ஆகாது என்பதும் இவ்வுலகில் நல்லன செய்தோர் அதன் பயனாக வானுலகில் இந்திரன் முதலிய இமயவர் பதங்களைப் பெற்று இன்பம் நுகர்வர் என்பதும் அல்லன செய்தோர் அதன் பயனாக மீளுதற்கரிய நரகமாகிய நிரயத்தினையடைந்து துன்பம் நுகர்வர் என்பதும் வினைப்பயனாகிய அந்நுகர்ச்சி முடிந்த பின்னர் எஞ்சிய வினையின் காரணமாக உலகில் மீளப்பிறப்பர் என்பதும் சங்ககாலத் தமிழ் மக்கள் தெளிந்துணர்த்திய வாழ்வியற் கோட்பாடுகளாகும். உயிர்கள் இப்பிறப்பிற் செய்த நல்லதன் நலனும் தீயதன் தீமையும் ஆகிய வினைப் பயன்களை இப்பிறப்பில் நுகராது போனால் இனிவரும் பிறப்புக்களிலாயினும் நுகர்ந்தே கழித்தல் வேண்டும் என்னும் வினைக் கொள்கையினை அடிப்படை யாகக் கொண்டு தோன்றியதே மறுபிறப்புண்மை யென்னும் கோட்பாடாகும். இக்கொள்கை சங்ககாலத்தில் வாழ்ந்த தமிழக மக்கள் எல்லோராலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய பொதுக் கொள்கையாய் நிலவியது. எனினும் இக்கொள்கையினையுடன் படாது முரணிய கோட்பாடுடையார் சிலரும் அக்காலத்திருந்தனர். இங்ஙனம் மறுபிறப்புண்மையினையுடன் படாமையினைச் சங்ககாலச் சான்றோர்கள் ஒரு பெருங் குற்றமாகக் கருதவில்லை. ஆனால் உலக வாழ்க்கையில் ஒருவர்தாம் நல்வினைகாரணமாக இன்பத்தையும் தீவினை காரணமாகத் துன்பத்தையும் உறுதியாக நுகர்ந்தே தீர்வர் என்னும் வாழ்க்கை நியதியாகிய வினைக் கொள்கையினை மறுத்துத் தம் மனம் போனவாறு விரும்பியன செய்து திரிவாராயின் அவரது ஒழுகலாற்றினால் மக்கள் வாழ்க்கையின் கட்டுக்கோப்புக் குலையும். அதனால் அரசியல் நெறிமுறையும் நாட்டு மக்களது நல்வாழ்வும் சிதைந்து கெடும். எனவே வினைக் கொள்கையாகிய வாழ்வியல் முறைமையினை மறுத்துத் தம் மனம்போனவாறு ஒழுகும் தீயோராகிய சிற்றினத்தாரைச் சேர்ந்தொழுகுதல் கூடாது எனவும் தீவினை புரிந்தோரை ஒறுத்தலும் நல்லறம் புரிவோரைப் பாதுகாத்தலும் ஆகிய நெறிமுறைமையிற் சோர்வுபடாது ஆட்சி புரிதல் வேண்டும் எனவும் சங்காலத் தமிழ்ச் சான்றோர் வேந்தர்க்கு அறிவுறுத்தி வந்தனர். இச்செய்தி, கொடியோர்த் தெறுதலும் செவ்வியோர்க் களித்தலும் ஒடியாமுறைமையின் மடிவிலையாகி நல்லதன் நலனுந் தீயதன் தீமையும் இல்லையென் போர்க்கினனாகிலியர் (புறம். 29) எனச் சோழன் நலங்கிள்ளியை நோக்கி உறையூர் முதுகண்ணன் சாத்தனார் பாடிய புறப்பாடற் பகுதியில் இடம் பெற்றுள்ளமை காண்க. உலக வாழ்க்கையினை வெறுத்து உயர்ந்த நற்பொருளையே சிந்தித்து வடக்கிருந்த வேந்தர் பெருமானாகிய கோப்பெருஞ்சோழன் தன் வாழ்க்கையின் பயனாகத் தெளிந்துணர்ந்த நற் பொருள்களை உலக மக்களுக்கு உணர்த்துவதாக அமைந்தது, செய்குவங் கொல்லோ நல்வினை யெனவே ஐய மறாஅர் கசடீண்டு சாட்சி நீங்கா நெஞ்சத் துணிவில் லோரே யானை வேட்டுவன் யானையும் பெறுமே குறும்பூழ் வேட்டுவன் வறுங்கையும் வருமே அதனால், உயர்ந்த வேட்டத் துயர்ந்தி சினோர்க்குச் செய்வினை மருங்கி னெய்த லுண்டெனிற் றொய்யா வுலகத்து நுகர்ச்சியுங் கூடும் தொய்யா வுலகத்து நுகர்ச்சி இல்லெனின் மாறிப் பிறப்பினின்மையும் கூடும் மாறிப் பிறவா ராயினும் இமயத்துக் கோடுயர்ந் தன்ன தம்மிசை நட்டுத் தீதில் யாக்கையொடு மாய்தறவத் தலையே (புறம். 214) எனவரும் புறப்பாடலாகும். உலகியல் வாழ்வில் சிறியனசிந்தியாது உயர்ந்த குறிக்கோளுடை யராய் நல்லறம் செய்தலே மனனுணர்விற் சிறந்த உயர்திணை மாந்தர்க்குரிய வாழ்வியல் நோக்கமாக வேண்டும் என வற்புறுத்தும் நிலையில் இப்புறப்பாடல் அமைந்துள்ளமை அறியத்தகுவதாகும். அழுக்குச் செறிந்த புல்லறிவு நீங்காத உள்ளத்தினையுடைய தெளிவில்லாத மக்கள் அறவினையைச் செய்வோமோ அன்றிச் செய்யாது விடுவோமோ என்று கருதி அறத்தின் பயன் விளைவில் தாம் கொண்ட ஐயப்பாட்டின் நீங்காதவராய்த் குறிக்கோளின்றித் தம் வாழ்நாளை வீணாக்குவர். உயர்ந்த குறிக்கோளுடையனாய் யானை வேட்டைக்குப் போவோன் யானையையும் எளிதாகப் பெறுவான். அங்ஙனம் வேட்டத்தில் உயர்ந்த நோக்கமின்றிக் காடை வேட்டைக்குச் செல்வோன் அதனைப் பெறாது வறுங்கை யினனாயும் திரும்புவான். அதனால் உயர்ந்த விருப்பத்தை உடைய பெரியோர்க்குத் தம்மாற் செய்யப்படும் நல்வினைப் பகுதியில் அதனை அனுபவித்தல் உண்டாயின் அவருக்கு இருவினையும் செய்யப்படாத தேவர் உலகத்தின் கண் இன்பம் நுகர்தலும் கூடும். அவ்வுலகத்தின்கண் நுகர வேண்டிய வினைப்பயன் தீர்ந்து இல்லாது ஒழியுமானால் அதனினும் மேலாக மீண்டும் பிறவாமையாகிய பேரின்பம் பெறுதலும் கூடும். உயிர்கள் இவ்வுலகில் எடுத்துள்ள இவ்வொரு பிறவியேயன்றி மீளப் பிறத்தல் இல்லை என மறுபிறப்பினை உடன்படாதவர் கூறினும் அன்னோர் அறத்தின்பயன் இதுவென்று நேரிற் கண்டுதெளியுமாறு இமயமலையின் சிகரம் போன்ற தமது புகழை இவ்வுலகில் நிலைபெறுத்திப் பழியில்லா உடம்பொடு கூடிநின்று சாதல் மிகவும் சிறப்புடையதாகும். ஆகவே, எந்தவகையால் ஆராய்ந்து பார்ப்பினும் நல்லறங்களைச் செய்தல் ஒருவர்க்குப் பொலிவினைத் தருதல் உறுதி என்பது இப்புறப்பாடலிற் பொதிந்துள்ள உண்மையாகும். இதனால் இவ்வுலகில் உயிர்கள் செய்த நல்வினை அவ்வுயிர் களைத் தொடர்ந்து மறுபிறப்பினும் சென்று பயனளிக்கும் எனவும் மறுபிறவி இல்லையென்பார் உயராயினும் அவர்களும் அறத்தின் பயனை இப்பிறவி ஒன்றில் வைத்து அறத்தின் பயனை உணரும்படி அறவினை தன்னைச் செய்தோர்க்குப் பயன் அளிக்கும் எனவும் வேந்தர் பெருமானாகிய கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்து தன் உயிர் துறக்குங்காலத்து உலக மக்களுக்கு அறிவுறுத்திய மெய்யுணர்வுத் திறம் சான்றோர்களால் வியந்து பாராட்டத்தகுவதாம். மறுபிறப்பு உண்டு என்னும் கொள்கை தமிழ் மக்களது மாறாத நம்பிக்கையாகும் என்பதனை வற்புறுத்தும் சங்கப் பாடல்கள் பலவுள்ளன. இம்மைச் செய்தது மறுமைக்காம் (புறம். 134) எனவும், சாதல் அஞ்சேன், அஞ்சுவல் சாவிற் பிறப்புப் பிறிதாகுவதாயின் மறக்கு வென்கொல் என் காதலன் எனவே (நற். 397) எனவும், இம்மை மாறி மறுமை யாயினும் நீயா கியாரன் கணவனை யானா கியர்நின் நெஞ்சநேர் பவளே (குறு. 49) எனவும் வரும் சங்கப் பனுவற் பகுதிகள் மறுப்பிறப்பு உண்டு என்பதில் பண்டைத் தமிழ் மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை நன்கு புலப்படுத்தல் காணலாம். நடுகல் வழிபாடு தாம் வாழும் நாட்டின் அரசியல் ஆட்சிமுறையினைப் பாதுகாக்கும் உயர்ந்த குறிக்கோளுடன் தமது இனியவுயிரையும் பொருட்படுத்தாமல் பகைவரொடு பொருது உயிர்துறந்த தறுகண் மறவர்களைத் தெய்வமாகப் பேணி அவர்தம் பெயரையும் பெருமையையும் கல்லிற் பொறித்து, அக்கல்லினைத் தெய்வமாக நிறுத்தி வழிபடும் நடுகல் வழிபாடு ஆசிரியர் தொல்காப்பியனார் காலத்திலேயே தமிழகத்திற் சிறந்து விளங்கியதென்பது முன்னர்க் குறிக்கப் பெற்றது. இவ்வழிபாடு சங்கச் செய்யுட்களிற் பலவிடங்களில் விரித்துரைக்கப் பெற்றுள்ளது. நடுகல் வழிபாடு பற்றிய நிகழ்ச்சிகளைக் கூர்ந்து நோக்குங்கால் சங்கத் தொகை நூல்கள் இயற்றப்பெற்ற காலம், தமிழகத்திற் பலவிடங்களிலும் மிகுதியாகப் போர்கள் நிகழ்ந்த காலம் என்பது உய்த்துணரப்படும். தம்முடன் முரண்பட்டாரொடு போர்நிகழ்த்த எண்ணிய மன்னர்கள் அவர் நாட்டின் மேற் படையெடுத்துச் செல்வதற்கு முன், அந்நாட்டில் வாழும் பசுநிரைகளுக்கும் பெண்டிர் பிணியாளர் அந்தணர் முதலிய எளியோர்க்கும் போரினால் தீங்கு நேராத வண்ணம், அவர்களை அந்நாட்டினை விட்டு அப்புறப்படுத்துதற்குரிய முன்னறிவிப்பாகப் பகைவர் நாட்டிலுள்ள பசுக் கூட்டங்களை நள்ளிரவிற் கவர்ந்த வரும்படி, தம் படைவீரர்களை ஏவுதல் அறத்தின் வழிப்பட்ட போர்த் தொடக்கமாகத் தமிழ் மக்களாற் கொள்ளப்பட்டது. இவ்வாறு வேந்தனால் ஏவப்பட்ட படைவீரர்கள் தமது ஒழுகலாற்றுக்கு அடையாளமாக வெட்சிப் பூவினைச் சூடிக்கொண்டு நள்ளிரவிற் பகைவர் நாட்டின் எல்லையுட் புகுந்து அங்குள்ள பசுநிரைகளைக் களவினாற் கவர்ந்துகொண்டு வருதல் போர்த்தொடக்கமாகிய வெட்சித் திணையாகக் கொள்ளப்பட்டது. இங்ஙனம் நாடாளும் வேந்தனது ஆணையின்றிச் சுரத்திடையே வாழும் ஆறலை கள்வர்கள் நள்ளிரவில் ஊருட் புகுந்து பசுநிரைகளைக் கொள்ளையடித்துச் செல்லுதலும் உண்டு. இவ்வாறு ஊர் மக்கள் சோர்வுற்று உறங்கும் நள்ளிரவிலே பகைவருடைய படைவீரர்களாலும் ஆறலை கள்வர்களாலும் தம்மூரிலுள்ள பசுநிரைகள் களவிற் கவரப்பட்டுச் செல்லும்போது அவர்களை வழிமறித்துப் பசுநிரைகளை விரைந்து மீட்டுக் கொணர்தல் அந்நாட்டில் வாழும் தறுகண் வீரரது தலையாய கடமையாயிற்று. தம் ஊரவர் உடமையாகிய பசுக்களைப் பகைவரிடமிருந்து மீட்டுக் கொணர்தற்குச் செல்லும் வீரர்கள் கரந்தைப் பூவினை அடையாளமாகச் சூடிச்செல்வர். அதுபற்றி அவர்கள் கரந்தை மறவர் என அழைக்கப் பட்டனர். தம் நாட்டுப் பசுக்கூட்டத்தினை மீட்டுக் கொணர்தற் பொருட்டுப் பகைவரொடு பொருது உயிர் துறந்த மறவரது பெயரும் பீடும் பொறித்து நடப்பட்ட நடுகல்லின்மேல், அந்நாட்டு வீரர் அனைவரும் மாலையும் மயிற் பீலியும் அணிந்து தோப்பி நெல்லாற் செய்த கள்ளுடன் துரு வென்னும் ஆட்டினையும் பலிகொடுத்துத் தெய்வமாக்கி வழிபடுவர். இச்செய்தி, முன்னுர்ப் பூசலிற் றோன்றித் தன்னுர் நெடுநிரை தழீஇய மீளி யாளர் விடுகணை நீத்தந் துடிபுணையாக வென்றி தந்து கொன்றுகோள் விடுத்து வையகம் புலம்ப வளைஇய பாம்பின் வையெயிற் றுய்ந்த மதியின் மறவர் கையகத் துய்ந்த கன்றுடைப் பல்லான் நிரையொடு வந்த வுரைய னாகி உரிகளை யரவ மானத்தானே அரிதுசெல் லுலகிற் சென்றனன்; உடம்பே கானச் சிற்றியாற் றருங்கரை காலுற்றுக் கம்பமொடு துளங்கிய இலக்கம் போல அம்பொடு துளங்கி யாண்டொழிந் தன்றே; உயரிசை வெறுப்பத் தோன்றிய பெயரே மடஞ்சால் மஞ்ஞை யணிமயிர் சூட்டி இடம்பிறர் கொள்ளாச் சிறுவழிப் படஞ் செய் பந்தர்க்கள் மிசையதுவே (புறம். 260) எனவும், நாகு முலையன்ன நறும்பூங் கரந்தை விரகறியாளர் மரபிற் சூட்ட நிரையிவட் டந்து நடுகல் லாகிய வென்வேல் விடலை (புறம். 261) எனவும் வரும் புறப்பாடல்களால் இனிது புலனாம். மிக்க அணிமையையுடைய ஊர் முன்னாகச் செய்யப்பட்ட போரின் கண்ணே தோன்றித் தன்னுடைய ஊரின்கண் மிக்க பசுநிரையைக் கவர்ந்து கொண்ட வெட்சி மறவர் எய்த அம்பு வெள்ளத்தைத் தன்னுடைய துடியே புணையாகக் கொண்டு கடந்து பகைவரைக் கொன்று அவர்கொண்ட ஆனிரையை மீட்டு, உலகம் ஒளியின்றிப் புலம்பப் பாம்பின் வாய்ப்பாட்டுப் பின்னர் அப்பாம்பின் கரிய எயிற்றினின்றும் பிழைத்துப் போந்த திங்களைப் போல வெட்சி மறவர் கையினின்றும் பிழைத்துப் போந்த கன்றையுடைய பலவாகிய பசுக் கூட்டத்துடனே மீண்ட புகழையுடையனாகிச் சட்டை கழற்றிய பாம்புபோலச் செல்லுதற்கரிய உயர்ந்த தேவருலகத்தின்கண் போயினான்; அவனது உடம்பு காட்டிலே சிறிய ஆற்றங்கரையிற் பெருங்காற்றால் நடுங்கிச் சாய்ந்த இலக்கமாகிய மரக்கம்பத்தினையொப்ப அம்புகளால் துளைக்கப்பட்டு வீழ்ந்தது; உயர்ந்த புகழ வடிவினனாகிய அவ்வீரனது பெயரோ, புடவையாற் செய்யப்பட்ட பந்தர்க் கீழ் மயிற்பீலி சூட்டப்பட்ட நடுகல்லின் மேலது என்பதும், நாகினது முலையன்ன நறிய பூவினையுடைய கரந்தையை அறிவுடையோர் சூட்டும் முறையிலே சூட்டப் பசுநிரையை இவ்வூரில் மீட்டுத் தந்து நடப்பட்ட கல்லாகிய வென்றி வேலையுடைய தலைவன் என்பதும் மேற்குறித்த புறப்பாடற் றொடர்களின் பொருளாகும். இங்ஙனம் நிரை மீட்டற் பொருட்டுப் பகைவரொடு பொருது உயிர்துறந்த வீரர்களது பெயரும் பீடும் பொறித்து நடப்பட்ட கல்லினைத் தெய்வமாகக் கொண்டு வழிபடும் வழிபாடு தமிழக மெங்கும் பரவித் தொன்றுதொட்டு நிலைபெற்று வருவதாகும். வீரர்களுக்கு நடப்படும் இந்நடுகல் பலரும் செல்லும் வழியினை யொட்டி நடப்பெறும் என்பதும், அங்ஙனம் நடப்பட்ட கல்லினைப் பாணர் முதலிய வழிச் செல்வோர் பலரும் வழிபட்டுச் செல்லுதல் கடனென்பதும், அங்ஙனம் நடுகல்லைத் தொழுதுபோகவே நடத்தற்கியலாத கொடுங்கானம் மழைபெய்தலாற் குளிரும் என்பதும், பெருங்களிற் றடியிற் றோன்றும் ஒருகண் இரும்பொறை யிரவல சேறியாயின் தொழாதனை கழித லோம்புமதி வழாது வண்டுமேம்படூஉம் இவ் வறநிலையாறே பல்லாத் திரணிரை பெயர்தரப் பெயர்தந்து கல்லா விளையர் நீங்க நீங்கான் வில்லுமிழ் கடுங்கணை மூழ்கக் கொல்புனற் சிறையின் விலங்கியோன் கல்லே (புறம். 263) எனவரும் புறப்பாடலாற் புலனாம். நடுகல்லைத் தெய்வமாகக் கொண்டு தொழுதல் வேண்டும் என்னும் இப்புறப்பாடலை யடியொற்றியமைந்தது கைவண் குருசில் கற்கை தொழூஉச் செல் பாண, தெய்வமாய் நின்றான் திசைக்கு (பு. வெ. மா. 252) எனவரும் புறப்பொருள் வெண்பாமாலைத் தொடராகும். பருக்கைக் கற்கள் நிரம்பிய வழியிடத்தே வீரருடம்பை யடக்கஞ் செய்து அங்கே அவர்தம் பெயர் பொறித்த கல்லை நட்டு மரல் நாரால் தொடுக்கப்பட்ட சிவந்த பூவையுடைய கண்ணியுடனே அழகிய மயிலினது பீலியையும் சூட்டி வழிபடுவர் (புறம். 264). மறக்குடியிற் பிறந்த மகளிர் தம் குடியிற்றோன்றிப் போரிற் பகைவரைப் புறங்கண்டு இறந்துபட்ட வீரர்களுக்கென நடப்பட்ட நடுகல்லினைத் தெய்வமாகக் கொண்டு வழிபட்டு விருந்தினரை ஓம்பும் நிலையில் தம்மனை வாழ்க்கை பெறவும், தம் கணவன் பகைவரை வென்று சிறக்கவும் அத்தெய்வத்தினை வேண்டிக் கொள்ளுதல் உண்டு. இச் செய்தி, களிறு பொரக்கலங்கு கழன்முள் வேலி அரிதுண் கூவல் அங்குடிச் சீறூர் ஒலிமென் கூந்தல் ஒண்ணுதல் அரிவை நடுகற் கை தொழுதுபரவும் ஒடியாது விருந்தெதிற் பெருகதில் யானே என்னையும் ..................................... வேந்தனோடு நாடுதரு விழுப்பகை யெய்துக வெனவே (புறம். 306) எனவரும் புறப்பாடலில் இடம் பெற்றுள்ளமை காணலாம். போர் மறவர்கள் வாழும் சிற்றூர்களில் ஊர்ப்புறத்தே நடப்பெற்ற நடுகற்களுக்கு நாள்தோறும் நன்னீராட்டி நாட்பலியூட்டி நறும்புகை காட்டிச் செய்யும் வழிபாட்டின்கண் நெய்யுடன் கலந்து புகைத்து நறும்புகை வானிற் பரவி ஊரின் தெருக்களெல்லாம் கமழும்படி சிறப்பாக நிகழ்த்தப் பெற்றது. இச்செய்தி, இல்லடு கள்ளின் சில்குடிச் சீறூர்ப் புடைநடு கல்லின் நாட்பலியூட்டி நன்னீராட்டி நெய்ந் நறைக் கொளீஇய மங்குல் மாப்புகை மறுகுடன் கமழும் அருமுனை யிருக்கை (புறம். 329) எனவரும் புறப்பாட்டடிகளாற் புலனாகின்றது. மறக்குடியிற் பிறந்தார் அனைவரும் இத்தகைய நடுகல் வழிபாடு ஒன்றினையே தமக்குச் சிறந்த தெய்வ வழிபாடாகக் கொண்டு வாழ்ந்தனர் என்பது, ஒன்னாத் தெவ்வர் முன்னின்று விலங்கி ஒளிறேந்து மருப்பிற் களிறெறிந்து வீழ்ந்தெனக் கல்லே பரவினல்லது நெல்லுகுத்துப் பரவும் கடவுளும் இலமே (புறம். 335) எனவரும் புறப்பாட்டடிகளால் நன்கு தெளியப்படும். போரில் உயிர்கொடுத்துப் புகழ்கொண்ட தறுகண் மறவர்களின் பெயரும் பெருமையும் கல்லிற் பொறித்து அக்கல்லினை நட்டுத் தெய்வமாக நிறுத்தி அவ்வீரனுக்குரிய கிடுகினையும், வேலினையும் அக்கல்லின் பக்கத்தே ஊன்றி, நடுகல்லின்மேல் மயிற்பீலியைச் சூட்டி, துடியென்னும் சிறுபறையினை முழக்கித் தோப்பி நெல்லாற் செய்த கள்ளினையும் ஆட்டுக் குட்டியினையும் பலியாகக் கொடுத்து அதிரல் பூக்களைத் தூவி மறவர்கள் வழிபடுவரென்பது. வில்லேர் வாழ்க்கை விழுத்தொடை மறவர் வல்லாண் பதுக்கைக் கடவுட் பேண்மார் நடுகற் பீலி சூட்டித் துடிப்படுத்துத் தோப்பிக் கள்ளோடு துரூஉப்பலி கொடுக்கும் போக்கருங் கவலைய புலவுநா றருஞ்சுரம் (அகம். 35) எனவும், கிடுகுநிரைத் தெஃகூன்றி நடுகல்லின் அரண்போல (பட்டினப். 78.79) எனவும் வரும் தொடர்களாலும் நன்கு விளங்கும். இங்ஙனம் வீரர்களைத் தெய்வமாகக் குறித்த நடுகற்கள் போர்நிகழ்ந்த இடங்களிலும், சிற்றூர்ப் புறத்தேயும், சுரங்களிலும், காடுகளிலும் பலரும் போக்கு வரவு புரியும் சிறுவழிகளிலும், பெருவழிகளிலும் வழிச் செல்வார்க்கு நிழல்தரும் நிலையில் நெடுங்கல்லாக நடப்பெற்றன என்பது. விழுத் தொடை மறவர் வில்லிட வீழ்ந்தோர் அழுத்துடை நடுகல் (ஐங். 352) எனவும், பலர்க்கு நிழலாகி யுலகமீக் கூறூத் தலைப் போகன்மையிற் சிறுவழி மடங்கி நிலைபெறு நடுகல்லாகிய கண்ணும் (புறம். 223) எனவும், எழுத்துடை நடுகல் இன்னிழல் வதியும் அருஞ்சுரக் கவலை (அகம். 53) எனவும், நடுகற் பிறங்கிய உவலிடு பறந்தலை (புறம். 314) எனவும், பெயரும் பீடும் எழுதி யதர் தொறும் பீலி சூட்டிய பிறங்குநிலை நடுகல் வேலூ ன்றுபலகை வேற்றுமுனை கடுக்கும் வெருவரு தகுந கானம் (அகம். 131) எனவும் வரும் சங்கச் செய்யுட் பகுதிகளால் இனிது விளங்கும். வீரர்களின் பெயரும் பெருமையும் பொறித்துத் தெய்வமாக நடப்பட்ட நடுகல்லின் பெருமையுணராத ஆறலைகள்வர் தம்முடைய அம்புகளை அந்நடுகல்லின் மேல் வைத்துத் தீட்டுவதால் அக்கல்லும் தேய்ந்து அதன்கண் பொறிக்கப்பட்ட எழுத்துக்களும் தேய்ந்தொழிதல் உண்டு. அந்நிலையின் வழிச் செல்வோர் நடுகல்லிற் பொறிக்கப் பெற்ற எழுத்துக்களைப் படித்து நடுகல்லாகிய வீரனது பெருமையை அறிய முயல்வர். அங்கு அமைதியாக நின்று படித்துணர விரும்புவோர் தாம் செல்லும் சுரத்தில் ஆறலைகள்வரால் தமக்கு நேரும் துன்பத்தை யெண்ணிக் கல்லெழுத்தினைப் படித்துணரும் தம் முயற்சியைக் கைவிட்டு விரைந்து செல்லுதலும் உண்டு. இச்செய்தி, கடுங்கண் மறவர் பகழி மாய்ந் தென மருங்குல் நுணுகிய பேஎமுதிர் நடுகற் பெயர் பயம் படரத் தோன்று குயிலெழுத்து இயைபுடன் நோக்கல் செல்லா தசைவுடன் ஆறுசெல் வம்பலர் விட்டனர் கழியும் ....................................... வெருவரு கானம் (அகம். 297) எனவரும் அகப்பாடற் பகுதியால் உய்த்துணரப்படும். நடுகல்லாகிய வீரர்களின் மனைவியர் தம் கணவரது பிரிவாற்றாமையால் நெஞ்சங் கலங்கிப் புலம்பி கூந்தல்களைந்து அணிகலன்களைக் கழித்துத் தம் கணவரைத் தெய்வமாகக் கொண்டு கைம்மை நோன்பு நோற்பர் என்பது, நிரையிவட் டந்து நடுகல்லாகிய வெல்வேல் விடலையின்மையிற் புலம்பிக் கொய்ம்மழித் தலையொடு கைம்மையுறக் கலங்கிய கழிகல மகடூஉப் போல (புறம். 261) எனவரும் புறப்பாடற் பகுதியாற் புலனாம். காட்டில் வாழும் யானை வழியிடையே நெடிதாக நடப்பெற்ற நடுகல்லினை ஆளென மயங்கித் தன் கால்களால் உதைத்து நகங்கள் சிதையுற்ற செய்தி, அத்த நடுகல் ஆளென வுதைத்த கான யானை கதுவாய் வள்ளுகிர் இரும்பனை யிதக்கையின் ஒடியும் (அகம். 365) எனவரும் அகப்பாடற் பகுதியிற் குறிக்கப்பட்டது. நடுகல்லில் வீரனைத் தெய்வமாக நிறுத்தி நீராட்டுதலின், அந்நீர், தெய்வத்திருவுருவத்திற்கு ஆட்டிய திருமஞ்சன நீர்போலத் தீர்த்தநீராகக் கருதப்பெற்றது. இச்செய்தி, பல்லா பெயர்த்து நல்வழிப் படர்ந்தோன் கல்சொரிந் தாட்டிய நீரே தொல்லை வான் வழங்கு நீரினுந் தூய்தே யதனாற் கண்ணீ ரருவியுங் கழீஇத் தெண்ணீ ராடுமின் தீர்த்தமா மதுவே (தொல். புறத். சூ. 5) எனவரும் நச்சினார்க்கினியர் உரை மேற்கோளால் நன்கு விரித்துரைக்கப் பெற்றமை காணலாம். இவ்வாறு தம்மூர்ப் பசுநிரையை மீட்டற் பொருட்டும் தம் நாடுகாத்தற் பொருட்டும் பகைவரோடு பொருது உயிர் துறந்த வீரர்களுக்கு நடுகல் அமைக்கப்பட்டமை போன்று, உலகத்து மக்கட்பண்பு நிலைபெற்று வளர்தல் வேண்டும் என்னும் உணர்ந்த குறிக்கோளுடன் உண்ணா நோன்பினை மேற்கொண்டு வடக்கிருந்து உயிர் துறந்த சான்றோர்களுக்கும் நடுகல் நிறுத்தி தெய்வமாகக் கொண்டு வழிபடும் வழக்கமும் சங்ககாலத்தில் நிலை பெற்றிருந்தது. உண்ணா நோன்பினை மேற்கொண்டு வடக்கிருந்து உயிர்துறந்த கோப்பெருஞ் சோழனுக்கு நடுகல் அமைக்கப் பெற்றிருந்தமையும், அவருடைய ஆருயிர் நண்பராகிய பொத்தியார் நடுகல்லாகியும் தமக்கு இடங்கொடுத்த கோப்பெருஞ் சோழனை நெஞ்சம் நெகிழ்ந்து போற்றிய செய்தியும். கெடுவில் நல்லிசை குடி நடுகல்லாயினன் புரவலன் (புறம். 221) எனவும், பலர்க்கு நிழலாகியுலக மீக் கூறித் தலைப் போகன்மையிற் சிறுவழி மடங்கி நிலைபெறு நடுகல்லாகியக் கண்ணும் இடங்கொடுத்தளிப்ப மன்ற வுடம்போ டின்னுயிர் விரும்புங் கிழமைத் தொன்னட்புடையோர் தம்முழைச் செலினே (புறம். 223) எனவும் வரும் பொத்தியார் வாய்மொழிகளால் நன்கு விளங்கும். வையத்து வாழ்வாங்கு வாழ்ந்து தம்புகழ் நிறுவி உயிர் துறந்த சான்றோராகிய ஆடவர்க்குப் போலவே கற்புக் கடம் பூண்டு உயிர்துறந்த பத்தினிப் பெண்டிராகிய மகளிர்க்கும் நடுகல் நிறுத்தி வழிபடும் மரபு பண்டைக் காலத்தில் நிலைபெற்றிருத்தல் வேண்டும் எனக் கருத வேண்டியுளது. சேரமன்னனாகிய செங்குட்டுவன் கற்புடைத் தெய்வமாகிய கண்ணகிக்கு இமயமலையிற் கல்லெடுத்துத் கங்கையாற்றில் நீர்ப்படை செய்து அக்கல்லிற் படிமம் அமைத்து வஞ்சி நகரத்திற் பத்தினிக் கோட்டம் அமைத்துக் கடவுள் மங்கலம் செய்தமை இளங்கோவடிகளால் சிலப்பதிகாரம் வஞ்சிக் காண்டத்தில் விரித்துரைக்கப் பெற்றது. இந்நிகழ்ச்சி வையத்து வாழ்வாங்கு வாழ்ந்தோர் உலக மக்களால் கல்வடிவில் தெய்வமாக நிறுத்தி வழிபடப் பெறும் மெய்ம்மையினை விளக்குவதாகும். தொல்காப்பியனார் காலத்தில் இறந்தோர் பெயரும் பீடும் கல்லிற் பொறித்து அக்கல்லினைத் தெய்வமாகக் கொண்டு வழிபடும் நிலையிலிருந்த நடுகல் வழிபாடு கடைச் சங்க காலத்தில் பெரும் பொருளை நினைந்து வடக்கிருந்து உயிர் துறந்த வேந்தர்க்கும் புலமைச் சான்றோர்க்கும் உரியதாயிற்று. இக்காலத்திலேயே கணவனுடன் உயிர்துறந்த கற்புடை மகளிர்க்கும் கல்நட்டு வழிபடும் முறையும் தோன்றி நிலைபெற்றது. இவ்வாறு தறுகண் வீரர்க் குரியதாய்த் தோன்றிய நடுகல் வழிபாடு முறையே வேந்தர்க்கும் சான்றோர்க்கும் பத்தினிப் பெண்டிர்க்கும் துறவியர்க்கும் உரியதாக வளர்ச்சி பெற்றது. சோழ மன்னர்களில் அரிஞ்சயன் முதலியோர்க்கு அமைக்கப் பட்டுள்ள பள்ளிப்படைக் கோயில்கள் பண்டைக் கால நடுகல் வழிபாட்டினை அடியொற்றியமைந்தனவாகவே கொள்ளத்தக்கன. இக்கோயில்களில் நிறுவப்பெற்ற சிவலிங்கங்கள், வையத்துப் புகழுடன் வாழ்ந்த மனிதன் இவன் என அவனுடைய பெயரும் பெருமையும் கூறும் நடுகல் என்ற அளவில் அமையாது, மனிதனாக வாழ்ந்தவன் சிவபரம்பொருளுடன் இரண்டறக் கலந்து தெய்வமாகத் திகழ்கின்றான் என்ற சமயத்தத்துவ வுண்மையைப் புலப்படுத்தும் முறையில் வளர்ச்சி பெற்றுள்ள திறம் இங்குச் சிறப்பாகக் குறிப்பிடத்தகுவதாகும். தமிழின மக்களிடையே இறந்தோர்க்குச் செய்யும் இறுதிச் சடங்குகளில் நெடுங்காலமாக நிலைபெற்று வருவது கரும முடிவிற் கல்நிறுத்தி நீர்ப்படை செய்யும் இறுதிச் சடங்காகும். இது தமிழ் முன்னோர் மேற்கொண்டு நிகழ்த்திய நடுகல் வழிபாட்டினைப் பின்வரும் வழிமுறையினர்க்கும் நினைவுபடுத்தும் முறையில் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றதென்பதனைத் தமிழகத்தின் தொன்மை வரலாற்றின் தொடர்புணர்ந்தோர் அனைவரும் ஏற்றுக் கொள்வர் என்பது திண்ணம். தறுகண் வீரர்களுக்குக் கல் நிறுத்தி வழிபடும் வீரர் வழிபாடு சிற்றூர்கள் தோறும் நிலைபெற்றிருந்தமை சங்க இலக்கியங்களால் நன்கு புலனாகின்றது. இவ்வீரர் வழிபாட்டினைத் தவிரப் பிற்காலத்தில் ஊர்தோறும் நிலைபெற்றுள்ள கிராம தேவதையெனப்படும் சிறுதெய்வ வழிபாடுகளைப் பற்றிய குறிப்புக்கள் எவையும் சங்கச் செய்யுட்களிற் காணப்படவில்லை. தம் குடியில் இறந்த வீரர்களைத் தெய்வமாகக் கொண்டு கல்நிறுத்தி வழிபடும் முறையிற் பொதுவாகக் குறிக்கப்படும் வீரர் வழிபாடே பிற்காலத்தில் தோன்றி அருங்செயல் புரிந்து ஆங்காங்கே புகழுருவில் நிலவிய மதுரைவீரன் முதலிய வீரர் பலருடைய சிறப்புப் பெயர்களால் பலவாக விரிவு பெற்றது. தமிழ் மறவர்கள் வீரம் வேண்டி வழிபட்ட தாய்த் தெய்வமாகிய கொற்றவை வழிபாடே, தீயோரை ஒறுக்கும் பேயினைச் சுற்றமாகக் கொண்ட காளி, ஊரெல்லையைக்காக்கும் பிடாரி எனப் பல்வேறு பெயர்களாற் குறிக்கப்பெறுவதாயிற்று. அருமழை தரல் வேண்டில் தரவல்ல ஆற்றல் வாய்ந்த பத்தினிப் பெண்டிர் வழிபாடு பிற்காலத்தில் எழுவர் நங்கையர் (சத்தமாதர்) வழிபாடாகவும், மாரியம்மை முதலிய அன்னை வழிபாடாகவும் பல்வேறு வழிபாடுகளாக விரிவுபெற்றது. சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் சிறப்பிடம் பெற்றுள்ள சாத்தன் வழிபாடு சங்கச் செய்யுட்களிற் காணப்படவில்லை. சாத்தன் என்ற சொல் முற்காலத்தில் பிறநாடுகளிற் சென்று வணிகம் புரிவார்க்குஉதவியாக வேந்தர்களால் அனுப்பப்பெற்ற வீரர்திரளின் தலைவனைக் குறித்து வழங்கும் பெயராகும். நாட்டில் வணிகர் கூட்டத்தார் மன்னனால் நன்கு மதிக்கப்பெற்ற காலத்திலே வீரர் வழிபட்டினையடுத்துச் சிறப்பாக வணிகச் சாத்தின் தலைவனாகிய வீரனைப் பிடாரி முதலிய ஊர்க்காவற்றெய்வங்களுள் ஒன்றாகக் கொண்டு கோயிலமைத்து வழிபடும் வழக்கம் நாளடைவில் தோன்றி நிலைபெறுவதாயிற்று. தொடக்க காலத்தில் சமய வேறுபாடின்றிச் சமணர் புத்தர் முதலியோராலும் வேத வழிப்பட்டோராலும் வழிபடப் பெற்ற சாத்தன் என்னுந் தெய்வம் வேத முதலிய மகா சாத்திரங்களை யுணர்ந்தோன் என்ற முறையில் சைவ வைணவ சமயத்திற்குரியதாகிப் பிற்காலத்தில் திருமாலையும் சிவனையும் தாயுந் தந்தையுமாகக் கொண்டு பிறந்தருளியவன் (அரிகரபுத்திரன்) ஐயனார் என்னும் புராணக் கதையினையும் பெற்றுச் சிற்றூர்கள் தோறும் நிலைத்த இடத்தினைப் பெற்றுவிட்டது. சாத்தன் என்ற தெய்வம் சங்க காலத்தில் இந்துமத தெய்வமாக இருந்திருக்கவில்லை. பிடவூரிலிருந்த அறச்சாத்தன் என்ற தெய்வம் சேக்கிழார் காலத்தில் சைவர்களின் தெய்வமாக இந்து மத தெய்வ வரிசையில் இணைக்கப்பட்டது1 என்பாரும் உளர். 395ஆம் புறப்பாடலிற் கூறப்படும் பிடவூர் அறப் பெயர்ச் சாத்தன் என்பவன் வள்ளலாவன். சாத்தன், கொற்றன், சாத்தி, கொற்றி என்பன, தமிழகத்தில் பொதுப் பெயர்களாக வழங்கப் பெறுவன. இவற்றுள் சாத்தன் என்ற பெயர் ஒரு தெய்வத்தைக் குறித்த பெயராகச் சங்க இலக்கியத்தில் இடம்பெறவில்லை. வணிகச் சாத்தின் தலைவனாக வீரச் செயல் புரிந்து நாட்டினைக் காத்தமையால் போரில் உயிர்துறந்த சாத்தன் என்னும் தலைவனைத் தெய்வ நிலையில் வைத்து மக்கள் வழிபடும் நிலையேற்பட்டது. அதனால் சாத்தன் என்னும் தெய்வம் ஊர் காவல் தெய்வங்களுள் ஒன்றாக மதிக்கப்பெற்று எல்லைத் தெய்வமாக ஆயிற்று. சாத்தன் என்னும் இப்பெயர் மக்கட்குரிய இயற்பெயராகவும், தெய்வப் பெயர்களை மக்களுக்கு இட்டு வழங்கும் நிலையில் அமைந்த தெய்வப் பெயராகவும் வழங்கப் பெறுவதாயிற்று. எனவே 395ஆம் புறப்பாடலிற் குறிக்கப்பட்ட பிடவூர் அறப்பெயர்ச் சாத்தனாகிய சங்ககால வள்ளலும், கி.பி. 8ஆம் நூற்றாண்டினராகிய சேரர் காவலர் விண்ணப்பஞ்செய்த திருவுலாப் புறத்தைக் கயிலையிற் கேட்டுப் பாரில் வேதியர் திருப்பிடவூரில் வெளிப்படப் பகர்ந்த மாசாத்தர் ஆகிய தெய்வமும், காலத்தாலும் பிற சூழ்நிலையாலும் தம்முள் வேறுபட்டவர்கள் என்பது தெளிவு. தொன்று தொட்டு ஊர்காவற்றெய்வமாகப் போற்றப் பெறும் ஐயனாருக்குப் பொதுவாக, அமைக்கப்பட்ட கோயிலே புறம்பணை யான் வாழ்கோட்டம் எனச் சிலப்பதிகாரத்திற் குறிக்கப்பட்டது. இனி ஊரையொட்டிய பலவேறு தெய்வக் கோட்டங்கட்கு இடையே புகாரில் அமைக்கப்பெற்ற சிறப்புடைத் தனிக் கோயிலே பாசண்டச் சாத்தன் கோயிலாகும். பாசண்டம் என்பதற்குப் பலசமயத் தருக்கக் கோவை எனப் பொருளுரைப்பர் சிலப்பதிகார உரையாசிரியர். பாசண்டச் சாத்தன் மகாசாத்திரன். மகாசாத்திரனை மகா சாத்தா எனவும் வழங்குவர். பாசண்டம் என்பதற்குப் பாஷாண்டம் எனப் பொருள் கொள்ளுதல் தவறு. சிலப்பதிகாரத்திற் கூறப்படும் பாசண்டச் சாத்தன் மறையவர் குடியிற் பிள்ளையாய் வளர்ந்து தேவந்தி என்னும் மங்கையை மணந்து அவளால் வழிபடப் பெற்ற வைதிக சமயத் தெய்வம் எனக் கொள்ளுதலே பொருத்த முடையதாகும். ஊர் காவற்றெய்வமாகிய சாத்தன் முதலாக சிற்றூர் மக்களால் வழிபடப் பெறும் சிறு தெய்வ வழிபாடுகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து ஒன்றே குலனும் ஒருவனே தேவனும் என்னும் பெருந்தெய்வ வழிபாட்டினை உருவாக்கும் நிலையில், காடு கிழாள் (காடுகாள்) முதலிய தாய்த் தெய்வங்களை இறைவனுக்குச் சத்தியாகவும் சாத்தன் முதலிய காவற்றெய்வங்களை இறைவனுக்கு மக்களாகவும் இணைத்த நிலையில், அவை முழுமுதற் பொருளைச் சார்த்தி வழிபடப்பெறும் சார்புநிலைத் தெய்வங்களாயின எனக் கருதவேண்டியுளது. இன்று கிராமங்களிற் காணப்பெறும் ஐயனார் வழிபாட்டில் பழங்குடி மக்களின் சாதவாகனன் வழிபாடும் பௌத்த சைனரின் சாத்தன் வழிபாடும், சைவரின் சிவபெருமான் மகனின் வழிபாடும் கலந்திருப்பதைக் காண்கின்றோம்2 என்பர். இவ்வாறு கூறுவதை விடத் தமிழ்நாட்டில் முற்காலத்தில் எல்லைத் தெய்வமாக அமைக்கப் பெற்ற சாத்தன் வழிபாடு சமய வேறுபாடின்றிப் புத்தர் சமணர் முதலிய எல்லா மக்களாலும் மேற்கொள்ளப்பெற்றதெனவும், அது கி.பி. 6ஆம் நூற்றாண்டிற்குப் பின் தமிழகத்தின் பெருந்தெய்வ வழிபாடுகளாகிய சிவ வழி பாட்டுடனும், திருமால் வழிபாட்டுடனும் இணைக்கப் பெற்ற தெனவும் கொள்ளுதலே ஏற்புடையதாகும். சிவபெருமானுக்கு மூத்த புதல்வராகிய யானைமுகப் பிள்ளையார் வழிபாடு சங்கச் செய்யுட்களில் இடம் பெறவில்லை. அதனைப் போன்றே எல்லைத் தெய்வமாகிய சாத்தனார் வழிபாடும் இடம்பெறவில்லை. சங்ககாலத்தில் உயிர்ப்பலியிட்டு வணங்கும் முறையில் நிலவிய காளியென்னும் அன்னை வழிபாட்டையும் கற்புடைத் தெய்வமாகிய பத்தினி வழிபாட்டையும் நடுகல் நிலையில் வழிபடப் பெற்ற வீரர் வழிபாடுகளையும் மூலமாகக் கொண்டே தமிழகத்தில் சிற்றூர்கள் தோறும் பிடாரி, மாரி, மாடன், வீரன் முதலிய சிறு தெய்வ வழிபாடுகள் காலந்தோறும் பலவாக விரிந்து தத்துவ வுணர்வு நிரம்பாத பொதுமக்கள் பலராலும் போற்றப்பெறும் பொதுமை நிலையினை எய்தியிருத்தல் வேண்டுமெனத் தெரிகிறது. பத்துப்பாட்டு எட்டுத் தொகையாகிய சங்க இலக்கியங்கள் மக்களது வாழ்வியலில் அகமும் புறமும் ஆகிய ஒழுகலாற்றைக் குறித்துப் பாடப்பெற்றனவாயினும், மக்கள் வாழ்விற்கு இன்றிய மையாத தெய்வ உணர்வையும், வழிபாட்டு நெறிகளையும் ஆங்காங்கே குறித்துச் செல்லக் காண்கின்றோம். பத்துப்பாட்டின் முதற் கண்ணதாகிய திருமுருகாற்றுப்படை குறிஞ்சி நிலக் கடவுளாகிய முருகப் பொருமானிடத்து அன்பர்களை ஆற்றுப்படுத்தும் நிலையில் அமைந்தது. இதனைப் பாடிய மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் இப்பாடலில் கடவுள், உயிர், உலகம் என்னும் முப்பொருள் பற்றிய உண்மைகளைக் குறிப்பிற் புலப்படுத்தியுள்ளமை கூர்ந்து உணரத் தகுவதாகும். பத்துப்பாட்டின் ஏனைய ஒன்பது பாடல்களிலும் தெய்வ வழிபாடு பற்றிய குறிப்புக்கள் ஆங்காங்கே இடம் பெற்றுள்ளன. எட்டுத்தொகையும் நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, அகநானூறு, புறநானூறு ஆகியவற்றின் கடவுள் வாழ்த்தாக அமைந்த பெருந்தேவனார் பாடல்களும், கலித்தொகைக் கடவுள் வாழ்த்தாக நல்லந்துவனார் பாடிய பாடலும், பதிற்றுப்பத்துக் கடவுள் வாழ்த்தாகத் தொல்காப்பிய உரையிற் காணப்படும் பாடலும் சிவன், முருகன், திருமால் ஆகிய தெய்வங்களைப் போற்றிப் பரவுவனவாக அமைந்துள்ளன. மேற்குறித்த கடவுள் வாழ்த்துப் பாடல்களையன்றி அகத்திணை, புறத்திணை ஒழுகலாறுகளை விரித்துரைக்கும் இத்தொகை நூற்செய்யுட்களிலே பண்டைக் காலத் தமிழ் மக்கள் மேற் கொண்டொழுகிய தெய்வ வழிபாடுகள் பற்றிய குறிப்புக்கள் ஆங்காங்கே இடம் பெற்றுள்ளன. முக்கட் செல்வனாகிய இறைவன், சேயோனாகிய முருகன், கண்ணனும் பலதேவனும் என இரு பெருந்தெய்வமாக வைத் தெண்ணப்படும் மாயோன், அவனது உந்தித் தாமரையில் தோன்றிய நான்முகன், மாயோன் மகனாகிய காமன், ஆயிரம் கண்ணோனாகிய இந்திரன் ஆகிய தெய்வங்களின் திருமேனி வண்ணமும், அவர்தம் ஊர்தியும், கொடியும், படையும், தாரும் முதலியன பற்றிய குறிப்புக்கள் புறநானூறு, கலித்தொகை ஆகிய தொகை நூல்களில் உவமை வாயிலாக விரித்துரைக்கப்பெற்றுள்ளன. சிவனுடைய ஆற்றலாகிய உமை, கொற்றவை, திருமாலின் தேவியாகிய திருமகள், முருகன் தேவியராகிய வள்ளி, தெய்வயானை ஆகிய தெய்வங்களைப் பற்றிய குறிப்புக்களும் சங்கச் செய்யுட்களில் இடம் பெற்றுள்ளன. எட்டுத் தொகை நூல்களுள் ஒன்றாகிய பரிபாடல் இன்னியல் மாண்தேர்ச்சி இசைப் பரிபாடல் எனக் குறித்த வண்ணம் இயலிசைப் பாடல்களாகப் பாடப்பெற்று இசை வல்லோரால் பண்ணமைக்கப் பெற்ற இசைத் தமிழ் இலக்கியமாகும். எழுபது பரிபாடல்களால் இயன்ற இத்தொகை நூலில் திருமாலைப் போற்றிப் பாடிய பாடல்கள் எட்டும், செவ்வேளைப் போற்றிப் பாடிய பாடல்கள் முப்பத்தொன்றும், காடுகிழாளாகிய கொற்றவையைப் போற்றிப் பாடிய பாடல் ஒன்றும் தமிழ் வையைப் புனலாடல் விழாவினைப் புனைந்து போற்றும் பாடல்கள் இருபத்தாறும், தமிழ் நிலைபெற்ற மதுரையம் பதியினைப் போற்றும் பாடல்கள் நான்கும் அமைந்திருந்தன. இச்செய்தி, திருமாற் கிருநான்கு செவ்வேட்கு முப்பத் தொருபாட்டுக் காடுகாட் கொன்று - மருவினிய வையையிரு பத்தாறு மாமதுரை நான்கென்ப செய்யபரி பாடற் றிறம் எனவரும் பழைய வெண்பாவாற் புலனாகும். தெய்வத்திறம் போற்றும் தோத்திரப் பனுவலாகக் கடைச் சங்கத்தார் தொகுத்த எழுபது பரிபாடல்களில் இக்காலத்தில் முழுமையாகக் கிடைப்பன இருபத்திரண்டு முழுப் பாடல்களும், உறுப்புக்களாகக் கிடைத்த சில பாடல்களின் பகுதிகளுமேயாகும். திருமாலிருஞ்சோலையிற் கோயில் கொண்டருளிய காத்தற் கடவுளாகிய திருமால், திருப்பரங்குன்றத்திற் கோயில் கொண்டருளிய குறிஞ்சிக் கடவுளாகிய முருகப் பெருமான் ஆகிய தெய்வங்களின் அருள் நலங்களை இசையுடன் பரவிப் போற்றும் பண்சுமந்த பாடல்களின் தொகுதியாக அமைந்தது பரிபாடல் என்னும் இத்தொகை நூலாகும். இயற்கை வனப்பும், இயற்கைப் பொருள்களின் வாயிலாகத் தோன்றும் தெய்வ வனப்பும் ஆகிய இருவகை வனப்புக்களே இசைப் பாடற்குரிய பொருள்வகை என்பர் சான்றோர். இவ்விருவகை வனப்புக்களையும் தன்னகத்தே கொண்டு மூர்த்தி, தலம், தீர்த்தம் என்னும் வகையில் சங்ககாலத் தமிழ் மக்கள் மேற்கொண் டொழுகிய தெய்வ வழிபாட்டு முறைகளை விரித்துரைப்பது பரிபாடல் என்னும் இத்தொகை நூலாகும். கடைச் சங்க காலத்திற்குப் பின் தோன்றிய தேவாரம், திருவாசகம் முதலிய சைவத் திருமுறைகள், ஆழ்வார்களின் அருளிச் செயலாகிய நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் முதலிய பத்திமைப் பனுவல்களுக்கு அடிப்படையாக விளங்குவது இப்பரிபாடல் தொகுதியேயாகும். திருமால், செவ்வேள் ஆகிய தெய்வங்களை இசையுடன் பரவிப் போற்றும் பரிபாடலாகிய இத்தொகை நூல், திருமாலடியார்கள் தெளிந்துணர்த்திய மெய்ந்நெறிக் கொள்கையினையும், சிவனடியார்கள் தெளிந்துணர்த்திய மெய்ந்நெறிக் கொள்கையினையும் சங்க காலத்தில் தமிழகத்தில் பரவி இருந்த வைதிக நெறியையும் புலப்படுத்தும் முறையில் அமைந்துள்ளது. இதன்கண் இடம் பெற்றுள்ள தெய்வ வழிபாடும், தத்துவ விளக்கமும் நுணுகி ஆராயத்தக்கனவாகும். திருமால் வழிபாடு :- திருவாவினன்குடியில் முருகப் பெருமானைக் காணவந்த தெய்வங்களைப் பற்றிக் கூறுமிடத்து, கடுவொ டொடுங்கிய தூம்புடை வாலெயிற்று அழலென உயிர்க்கும் அஞ்சுவரு சுடுந்திறற் பாம்புபடப் புடைக்கும் பல்வரிக் கொடுஞ்சிறைப் புள்ளணி நீள்கொடிச் செல்வனும் (திருமுருகு. 148-151) எனத் திருமால் போற்றப் பெற்றுள்ளார். நஞ்சு பொருந்திய துளைவாய்ந்த எயிற்றினையுடைய அஞ்சத்தக்க பாம்பு இறக்கும் படியாகப் புடைக்கும் சிறகுகளையுடைய கருடனைக் கொடியாகக் கொண்டோன் திருமால் என்பது இத்தொடரிற் புலப்படுத்தப்பட்டது. திருமாலின் உந்தித் தாமரையில் படைத்தற் கடவுளாகிய நான்முகன் தோன்றினான் என்ற செய்தி, ஏமுறு ஞாலந் தன்னிற் றோன்றித் தாமரை பயந்த தாவில் ஊழி நான்முக வொருவற் சுட்டி (திருமுருகு. 163-165) எனத் திருமுருகாற்றுப்படையிலும், நீனிற் உருவின் நெறியோன் கொப்பூழ் நான்முக வொருவற் பயந்த பல்லிதழ்த் தாமரப் பொகுட்டிற் காண்வரத் தோன்றி (பெரும்பாண். 402-404) எனப் பெரும்பாணாற்றுப்படையிலும் குறிக்கப்பெற்றது. திருமகள் தங்கும் மார்பினை உடைய நெடியோனாகிய திருமால் மாவலி என்னும் அவுணன்பால் குறளனாக (வாமனானக)ச் சென்று மூவடி மண் வேண்டி ஈரடியால் மூவுலகும் அளந்த வரலாறு, இருநிலங் கடந்த திருமறு மார்பின் முந்நீர் வண்ணன் (பெரும்பாண். 29-30) எனவும், ஞால மூன் றடித் தாய (கலி. 124) எனவும், நனந்தலை யுலகம் வளைஇ நேமியொடு வலம்புரி பொறித்த மாதாங்கு தடக்கை நீர் செல நிமிர்ந்த மாஅல் (முல்லை. 1-3) எனவும் வரும் தொடர்களிற் குறிக்கப்பெற்றது. சக்கரப் படையினையும் வலம்புரிச் சங்கினையும் தாங்கும் பெரிய கைகளை உடைய மார்பினனாகிய மாயோன் மாவலி வார்த்த நீர் தன்கையிலே சென்ற அளவிலே நெடியோனாக உயர்ந்து மூவுலகினையும் தன் ஈரடிகளால் தாவி அளந்த செய்தி மேற்குறித்த முல்லைப்பாட்டுத் தொடரில் குறிக்கப்பெற்றுள்ளமை காணலாம். அகலத்தை இடத்தே உடைய உலகத்தை வளைத்துச் சக்கரத்தோடே வலம்புரியைத் தாங்கும் பெரிய கைகளை உடைய திருமார்பிடத்தே திருமகளை வைத்தமால், மாவலிவார்த்த நீர் தன்கையில் சென்றதாக உயர்ந்த திருமால் எனப் பொருள் வரைந்த நச்சினார்க்கினியர், இதனானே முல்லைக்குரிய தெய்வம் கூறினார் எனக் கருத்துரைப்பர். மால் நீர் செல நிமிர்ந்தாற் போல மேகமும் நீர் செலநிமிர்ந்தது என்பதாம். முல்லைத்திணை ஒழுகலாற்றைக் குறித்த இப்பாடலில் முல்லை நிலத் தெய்வமாகிய திருமால் ஞாலமளந்த செய்தியை முகிலொடு புணர்த்துக் கூறிய திறம் கூர்ந்து உணர்வதற்குரியதாகும். திருமால் பாம்பணையிற் பள்ளி கொண்டருளிய திறத்தை உவமை வாயிலாகப் புனைந்துரைப்பது, நீடுகுலைக், காந்தளஞ்சிலம்பிற் களிறு படிந்தாங்கு பாம்பணைப்பள்ளி அமர்ந்ததோன் ஆங்கண் (பெருபாண்.371-373) எனவரும் பெரும்பாணாற்றுத் தொடராகும். நீண்ட பூங்கொத்துக்களை உடைய காந்தட் பூக்கள் மலர்ந்த அழகிய பக்கமலையிலே யானை கிடந்தாற்போல, பாம்பணையாகிய படுக்கையிலே அறிதுயில் கொண்டோனாகிய திருமாலின் திருக்கோயில் காஞ்சியிலுள்ள திருவெஃகாவாகிய அவ்விடத்தின்கண் அமைந்திருந்தது என்பது இத் தொடராற் புலனாம். திருமால் அலைமறியும் பாற்கடலில் ஆதி சேடனாகிய பாம்பினை அணையாகக் கொண்டு அறிதுயில் அமர்ந்துள்ள தோற்றத்தினை, பாடிமிழ் பரப்பகத் தரவணை அசைஇய ஆடுகொள் நேமியாற் பரவுதும் (கலி.105) எனச் சோழன் நல்லுருத்திரனார் பரவிப் போற்றயுள்ளமை இங்கு ஒப்புநோக்கத் தகுவதாகும். திருமால் மார்பில் அம்முதல்வனது தேவியாகிய திருமகள் அமர்ந்திருக்கும் திறத்தை, திருமறு மார்பின் முந்நீர் வண்ணன் (பெரும்பாண்.29-30) எனப் பெரும்பாணாற்றுப்படையும், திருவார் மார்பன் (மலைபடு. 355) என மலைபடுகடாமும் குறிப்பிடும். இச்செய்தி, மாயவன் மார்பில் திருப்போல் அவள் சேர (கலி.145) எனவும், பொருமுரண்மேம்பட்ட பொலம்புகழ் நேமித் திருமறு மார்பன் (கலி.104) எனவும் வரும் தொடர்களிலும் குறிக்கப்பெற்றுள்ளமை காணலாம். காத்தற் கடவுளாகிய திருமால், திருவோண நாளில் அவதரித்தமையால் திருவோண நாளைத் திருமாலுக்குரிய நாளாகப் போற்றுதல் மரபு. இம்மரபு, கணங்கொள் அவுணர்க் கடந்த பொலந்தார் மாயோன் மேய ஓண நன்னாள் (மதுரைக் காஞ்சி 590-591) என மதுரைக் காஞ்சியில் இடம் பெற்றுள்ளமை காணலாம். திரட்சியைக் கொண்ட அவுணரை வென்ற பொன்னாற் செய்த மாலையினை உடைய திருமால் பிறந்த ஓணமாகிய நன்னாள் என்பது மேற்காட்டிய தொடரின் பொருளாகும். திருமாலுக்குரிய திருவோணத்திருநாளில் மதுரை மாநகரிற் போரில் பெருவிருப்புடைய வீரர்கள் பலருங் காணத் தம்மில் தாம் மாறாய்ப் பொருது நிற்கும் சேரிப்போர் மறவரது விளையாட்டாக நிகழ்ந்தது என்ற செய்தி, மறங்கொள் சேரி மாறுபொரு செருவின் மாறா துற்ற வடுப்படு நெற்றிச் சுரும்பார் கண்ணிப் பெரும்புகல் மறவர் (மதுரை.594-596) எனவரும் மதுரைக் காஞ்சியாற் புலனாம். திருமாலுக்குரிய திருவோணத் திருநாளில் மதுரையிற் சேரிப் போர் நிகழ்ந்தது போலவே சிவனுக்குரிய திருவாதிரைத் திருநாளில் திருமயிலையில் வீரர்களது சேரிப்போர் நிகழ்ந்த திறத்தை, ஊர்திரை வேலை உலாவும் உயர்மயிலைக் கூர்தரு வேல்வல்லார் கொற்றம்கொள் சேரிதன்னில் கார்தரு சோலைக் கபாலீச் சரம் அமர்ந்தான் ஆதிரை நாள் காணாதே போதியோ பூம்பாவாய் என ஆளுடைய பிள்ளையார் குறித்துள்ளமை இங்கு ஒப்புநோக்குதற் குரியதாகும். நிலந்தரு திருவின் நெடியோன் போல (மதுரைக். 763) எனவரும் தொடர்க்கு எல்லாநிலங்களையும் தன்னிடத்தே காட்டின பெருஞ்செல்லத்தை உடைய மாயோனைப்போல; என்றது கண்ணன் எப்பொருளும் தானாய் இருக்கின்ற படியைக் காட்டி ஸ்ரீ கீதை அருளிச் செய்து எல்லாரையும் போதித்தாற்போல என நச்சினார்க்கினியர் தரும் உரையும் விளக்கமும் இங்கு நினைக்கத் தக்கனவாகும். முறை செய்து காப்பாற்றும் மன்னனைக் காத்தற் கடவுளாகிய திருமாலெனக் கொண்டு போற்றும் மரபு தொல்காப்பியனார் காலம் தொட்டுத் தமிழகத்தே நிலை பெற்று வருவதென்பது, மாயோன் மேய மன்பெருஞ் சிறப்பிற் றாவா விழுப்புகழ்ப் பூவை நிலையும் எனவரும் தொல்காப்பியத் தொடராற் புலனாகும். இம்மரபு இருநிலங் கடந்த திருமறு மார்பின் முந்நீர் வண்ணன் பிறங்கிடை அந்நீர்த் திரைதரு மரபின் உரவோன் உம்பல் எனவரும் பெரும்பாணாற்றுப்படையில் இடம் பெற்றுள்ளமை காணலாம். பெரிய நிலத்தை அளந்த திருவாகிய மறுவை அணிந்த மார்பினை உடைய கடல் போலும் நிறத்தை உடைய திருமாலின் வழியிற்றோன்றிய உரவோன் என்பது இத்தொடரின் பொருளாகும். பெருந்தேவனார் பாடிய கடவுள் வாழ்த்துப் பாடல்களுள் நற்றிணைக்குரிய கடவுள் வாழ்த்துப் பாடலாக அமைந்தது மாநிலஞ் சேவடி யாகத் தூநீர் வளைநரல் பௌவம் உடுக்கை யாக விசும்புமெய் யாகத் திசைகை யாகப் பசுங்கதிர் மதியமொடு சுடர்கண் ணாக இயன்ற வெல்லாம் பயின்றகத் தடக்கிய வேத முதல்வன் என்ப தீதற விளங்கிய திகிரி யோனே என்பதாகும். மிகப் பெரிய நிலப்பரப்பு தன் சிவந்த திருவடிகளாகவும், தூயநீரையுடைய சங்குகள் முரலும் கடல் தான் உடுக்கும் ஆடையாகவும், ஆகாயம் தன் திருமேனியாகவும், திசைகள் கைகளாகவும், குளிர்ந்த கைகளை உடைய திங்களோடு ஞாயிறும் தன் கண்களாகவும், பேருருக்கொண்டு இயலும் எல்லா உயிர் களிடத்திலும் தாம் உயிர்க்குயிராய்ப் பொருத்தி எல்லாப் பொருள்களையும் தனது விரிவிற்குள்ளே அடக்கிய வேதத்தாற் போற்றப்படும் முதற் கடவுள் குற்றமற விளங்கிய சக்கரப் படையை ஏந்திய திருமால் என்று போற்றுவர் சான்றோர் என்பது இதன் பொருளாகும். இப்பாடலில் திகிரியோனாகிய திருமாலது உலகளாவிய பேருருவின் தோற்றமும், அம்முதல்வன் உயிர்க்குயிராய்ப் பொருள்கள் தோறும் ஊடுருவி நிற்கும் நுண்ணியல்பும், உலகுயிர்கள் எல்லாவற்றையும் தன் விரிவிற்குள்ளே அடங்கத் திகழும் விரிவு நிலையும் விரித்துரைக்கப் பெற்றுள்ளமை காணலாம். இயன்றவெல்லாம் பயின்றகத்தடக்கிய வேத முதல்வன் என இப்பாடலில் வந்துள்ள தொடர், திருமாலுக்குரிய நாராயணன் என்னும் திருப்பெயர்ப் பொருளைப் புலப்படுத்தி நிற்றல் நுணுகி நோக்கற் பாலதாகும். மேகம் தவழும் கரிய மலையையும், அம்மலை முகட்டினின்று இழியும் வெள்ளிய அருவி நீரையும் விளக்கப்போந்த கபிலர், கரிய மலைக்குக் கண்ணனையும், வெள்ளிய அருவிக்கு அவன் தமையனாகிய பலதேவனையும் உவமையாக எடுத்துக் காட்டும் நிலையில், மாயோன் அன்ன மால்வரைக் கவாஅன் வாலியோன் அன்ன வயங்கு வெள்ளருவி (நற்.32) எனப் புனைந் துரைத்துள்ளார். இதனால் கரிய மலையையும் அதன் பக்கத்து வீழும் வெள்ளிய அருவியையும் காண்போர் உள்ளத்திலே கண்ணனது கரிய திருமேனியும், பலதேவனது வெளிய திருமேனியும் ஆகிய தெய்வத் தோற்றமும் திகழுமாறு சொல்லோவியம் செய்த கபிலரது புலமைத்திறம் நினைந்து போற்றத் தகுவதாகும். குன்றுகளைத் தன்னிடத்தே கொண்டு கடலாற் சூழப்பட்ட மண்ணுலகிலே வாழும் மக்கள் பலரும் ஒருங்கு கூடி உண்ணா நோன்புடையராய்த் திருவனந்தபுரத்திலுள்ள திருமால் கோயிலுள் திருவமர் மார்பனாகிய அலங்கற் செல்வன் திருவடிகளைப் பரவிப் பாடுகிடத்தலும், அன்னோர் கோயிலின் தெளிந்த மணி ஓசையினைக் கேட்டுத் தீர்த்தம் ஆடித் திருமாலை வழிபட்டு மனம் நிறைந்த மகிழ்ச்சி உடையராய்த் தாம் தாம் வாழும் ஊரை நோக்கி மீண்டு செல்லுதலும் சங்ககாலத்தில் நிகழ்ந்த திருமால் வழிபாட்டு நிகழ்ச்சிகளாகும். இச்செய்தி, குன்றுதலை மணந்து குழூஉக்கட லுடுத்த மன்கெழு ஞாலத்து மாந்த ரொராங்குக் கைசுமந் தலமரும் பூசன் மாதிரத்து நால்வேறு நனந்தலை யொருங்கெழுந் தொலிப்பத் தெள்ளுயர் வடிமணி யெறியுநர் கல்லென உண்ணாப் பைஞ்ஞிலம் பனித்துறை மண்ணி வண்டூது பொலந்தார்த் திருஞெம ரகலத்துக் கன்பொரு திகிரிக் கமழ்குரற் றுழாஅய் அலங்கற் செல்வன் சேவடி பரவி நெஞ்சுமலி உவகையர் துஞ்சுபதிப் பெயர (பதிற். 31) எனவரும் பதிற்றுப்பத்துப் பாடற்பகுதியில் விரித்துரைக்கப் பெற்றது. இப்பகுதியில் அலங்கற்செல்வன் என்றது திருவனந்தபுரத்துத் திருமாலை என்பர் பழைய உரை ஆசிரியர். செல்வக்கடுங்கோ வாழியாதன் ஏத்தல் சான்ற வேள்வியினைச் செய்து அறத்துறையில் சிறந்தவனாய் மாய வண்ணனாகிய திருமாலைத் தன் நெஞ்சிற்கொண்டு அத்தெய்வத்திற்கு வழிபாடு செய்தற்குரிய நெல்லின் விளைவை உடைய ஒகந்தூர் எனும் ஊரைத் திருவிடையாட்டமாகக் கொடுத்துள்ளான். இச்செய்தி, ஏத்தல் சான்ற இடனுடை வேள்வி ஆக்கிய பொழுதின் அறத்துறை போகி மாய வண்ணனை மனனுறப் பெற்று அலற்கு ஓத்திற நெல்லின் ஒகந்தூர் ஈத்துப் ...........................kšyYŸsbkhL மாசறவிளங்கிய செல்வக் கடுங்கோ வாழியாதனை எனவரும் ஏழாம் பத்துப் பதிகத் தொடரால் விளக்கப் பெற்றது. இசைத் தமிழ்ச் தெய்வத் தோத்திரப் பனுவலாகத் தொகுக்கப் பெற்ற எழுபது பரிபாடல்களுள் இக்காலத்தில் முழுமையாகக் கிடைப்பன இருபத்திரண்டு பரிபாடல்களும் பரிபாடலுறுப்புக் களாகக் கிடைத்த சில பகுதிகளுமேயாகும். இத்தொகை நூலில் இடம்பெற்ற தத்துவ விளக்கம் பிற்காலத்தில் இராமாநுசரது விசிட்டாத்துவிதக் கொள்கைக்கு அடிப்படையாக அமைந்துள்ளமை காணலாம். தொல்காப்பியனார் காலத்தில் முல்லைநிலத் தெய்வமாக நிலவகையாற் போற்றப் பெற்ற திருமால் வழிபாடு அவர் காலத்திற்குப் பின் நிலங்கடந்த தெய்வ வழிபாடாக யாண்டும் பரவுவதாயிற்று. மாயோன் மேய மன்பெருஞ்சிறப்பின் தாவா விழுப்புகழ்ப் பூவை நிலையும் எனவரும் தொல்காப்பியத் தொடரால் காயாம் பூவினையொத்த கரிய நிறம் வாய்ந்த திருமேனியையுடைய முல்லை நிலத்தெய்வமாகப் போற்றப்பட்ட திருமால், சங்கத்தொகை நூல்களில் கரிய திருமேனியினை உடைய கண்ணபிரான் எனவும், வெளிய திருமேனியினை உடைய பலதேவன் எனவும் இரு தெய்வமாகவும் தம்முட் பிரிவின்றியியலும் ஒருமை நிலையினராகவும் இயைத்துப் போற்றப் பெற்றுள்ளார். கல்லறை கடலுங் கானலும் போலவும் புல்லிய சொல்லும் பொருளும் போலவும் வேறுவேறுருவின் ஒருதொழி லிருவர்த் தாங்கு நீணிலைய ஓங்கிருங் குன்றம் (பரிபாடல் 15) எனவரும் பரிபாடல் திருமாலிருஞ் சோலையில் எழுந்தருளிய மாயோனைப் பெரும்பெயர் இருவராகப் பரவிப் போற்றுகின்றது. கல்லென ஒலிக்குங் கருங்கடலும் வெண்மணற் பரப்பாகிய கடற்கானலும் போல வேறுவேறாகிய நிறத்தினையும் பிரிவில்லாத சொல்லும் பொருளும் போல வேறுபடாத (காத்தல்) தொழிலினையும் உடைய மாயோனையும், அவனுக்குத் தலையனாகிய பலதேவனையும் தாங்கும் நீண்ட நிலைமையினை உடைய புகழால் உயர்ந்த திருமாலிருஞ்சோலையாகிய பெரிய குன்றம் என்பது மேற்குறித்த பரிபாடற் றொடரின் பொருளாகும். திருமாலாகிய ஒரு தெய்வமே பலதேவனும், கண்ணனும் எனத் தமையனும், தம்பியுமாக இருவேறுருவிற் சங்க காலத்தில் வழிபடப்பட்ட செய்தி மேற்குறித்த பரிபாடற்றொடரால் நன்கு தெளியப்படும். அன்றியும் முல்லை நிலத் தெய்வமாகிய திருமால் சங்க காலத்தில் வாசுதேவன் சங்கருடணன், பிரத்யும்நன், அநிருத்தன் என நால்வகை வியூகமாகவும் போற்றப் பெற்றுள்ளார். செங்கட் காரி கருங்கண் வெள்ளை பொன்கட் பச்சை பைங்கண்மால் (பரிபாடல்3: 81-82) எனவரும் பரிபாடற்றொடரில் நால்வகை வியூகமும் குறிக்கப் பெற்றன. செங்கட் காரி - வாசுதேவன், கருங்கண் வெள்ளை - சங்கருடணன், பொன்கட் பச்சை - பிரத்யும்நன் என்றும் வடமொழித் திரிபு என்பர் பரிமேலழகர். பைங்கண்மால் - பசியவுடம்பினை யுடையய அநிருத்தன் - என இவ்வாறு திருமாலுக்குரிய நால்வகை வியூகமும் பரிபாடலிற் கூறப்பெற்றுள்ளமை அறியத் தகுவதாகும். ஆயிரம் முடியையுடைய ஆதிசேடன், தன் திருமுடி மேல் கவிக்கப்பெற்ற திருமால், திருமகள் தங்கும் மார்பினனாகவும் சங்கைப் போன்ற திருமேனியையும், பனைக்கொடியையும் கலப்பையாகிய படையையும் ஒற்றைக் குழையையும் உடைய பலதேவனாகவும் விளங்குகின்றான் என்பது, ஆயிரம் விரித்த வணங்குடை யருந்தலை தீயுமிழ் திறனொடு முடிமிசை யணவர மாயுடைய மலர்மார்பின் மையில் வால்வளைமேனிச் சேயுயர் பனைமிசை யெழில்வேழ மேந்திய வாய்வாங்கும் வளை நாஞ்சி லொருகுழை யொருவனை (பரி. 1) எனவரும் பரிபாடற்றொடரால் விரித்துரைக்கப்பெற்றது. செந்தாமரை மலர்போலும் கண்ணையும் காயாம் பூவினை யொத்த திருமேனியினையும், திருமகள் விரும்பி வீற்றிருக்கும் மார்பினையும், அம்மார்பில் விளங்கும் கௌத்துவ மணியினையும் பொன்னாடையாகிய யுடையினையும், கருடச்சேவற் கொடியினையும் உடையவராக முதலாம் பரிபாடலில் திருமால் போற்றப்படுகிறார். (பரி. 1). மண்ணுலகமும், பசும் பொன்னுலகமும் பாழ்பட ஒன்றற் கொன்று மாறிவருதலாகிய பழைய இயல்பினையுடைய திங்களும், ஞாயிறும் கெடுதலால் அழகிழந்த இயல்பினதாக விசும்பு அழிந்த ஊழிகள் முறை முறையாகக் கழிய, தன்குணமாகிய ஒலியுடனே தோன்றி உருவு காணப்படாத வளி முதலாய பூதங்களின் பாரமாணுக்கள் வளருதற்கிடாகிய விசும்பு என்னும் முதற் பூதத்தின் ஊழியும், அவ்வானத்தினின்று எல்லாப் பொருள்களையும் திரட்டுகின்ற காற்றுத் தோன்றிய ஊழியும், அக்காற்றினின்றும் தீத்தோன்றிய ஊழியும், அத்தீயினின்றுந் தோன்றிய பனியும் மழையும் பெய்த ஊழிகளும், அவற்றிற்குப் பின்பு புனலினின்றும் தோன்றுதலால் மீண்டும் வெள்ளத்தினுட் கிடந்து முன் தோன்றிய நான்கு பூதங்கட்கும் உள்ளீடாகிய இருநிலத்தின் ஊழியும் என்று இவ்வூழிகளாலே நெய்தல், குவளை, ஆம்பல், சங்கம், கமலம், வெள்ளம் என எண் குறித்திட்ட பெயர்களது அளவினதாகிய காலத்தின் நீட்சி கழிந்த பிறகு மீண்டும் உயிர்கள் உளவாதற்பொருட்டு அந்நிலத்தினை வெள்ளைப் பன்றியின் உருவு கொண்டு எடுத்திட்ட கேழற்கோலத்தால் பெயர் பெற்ற வராககற்பம் எனும் இவ்வூழி, நின் அருட் செயல்களுள் ஒரு செயலின் பெயராதலை உணர்த்துதலின் அச்செயல்கள் பலவற்றையும் செய்கின்ற நின்னுடைய முதுமைக்குள்ள கற்பங்கள் யாவரானும் அறியப்படாதன. அவ்வாறு முதுமையை உடையவனாக விளங்குகின்ற நீ தூவெள்ளை நிறத்தனாய பலதேவனுக்கு இளையன் என்று கூறுவார்க்குப் பிறப்பு முறையால் தம்பியாகத் திகழ்கின்றாய். எல்லாப் பொருள்களையும் மறைக்கும் இருள்போலும் உடையினை யணிந்த பனைக் கொடியோனாகிய அப்பலதேவனுக்கு வாசுதேவ மூர்த்தியாகிய நீ தமையனாகத் திகழ்கின்றாய். வழுவாத விரதங்களையுடைய ஞானிகள் ஆராய்ந்த வேதத்தால் தெரிந்துணரின், உயிர்தோறும் உயிர்தோறும் உயிர்க்குயிராய் (அந்தரியாமியாய்) நிலைபெற்றுள்ளாய். இந்நிலைமைகள் நின்னிடத்தே தோன்றும் தொன்மை நிலைபோல நினக்கேயமைந்த சிறப்புக்களாகும். அழகிய மதிக்கு மறுவென்னும்படி திருமகள் தங்கிய நின் மார்பம், நீரிற் கிடந்த நிலமகளை ஆதிவராக உருவின் மருப்பில் ஏந்திக் கொண்டு நீ மணந்தமையால் புள்ளியளவாகிய நிலனும் வெள்ளத்தால் வருந்திற்றில்லையென்று வேதப் பொருளையுட் கொண்டு கூறுவோர் கூற்றோடு மாறுபடுகின்றது. ஒருத்தியொடுமணம் புணரும் வழி பிறள் ஒருத்தியின் மார்பினைச்சேர்தல் கூடாமையின் உரையொடு பொருந்திற்றில்லை என்றார். நின்னை எதிர்த்த அவுணர் கொடிகள் அற்று இற்று, செவி செவிடுபட்டு, முடிகள் அதிர, உலகுகள் நிலைதளர மிக்கு முழங்கும் நின்கையிற் சங்கம் இடியினை யொப்பதாகும். நீ ஏந்திய ஆழிப்படை, நீண்ட கரிய பனைமரத்தில் பல பதினாயிரம் குலைகள் அதன் தலையினீங்கித் தரைக்கண் விழுவன போல அவுணர் தலைவர் உடல்மிசை நில்லாமல் கொத்தாக வீழ்ந்து சிதறி நிலத்தின்கண் சேர்ந்து புரளும்படி அவுணர்களின் உயிரைச் செகுக்கும். அவ்வாழிப் படையின் உடல் கூற்றுவனை ஒக்கும்; அதன் நிறம் சுடுகின்ற பொன்னோடு எழுந்து விளங்குகின்ற தீயின் நுடக்கத்தையொக்கும். நின் திருமேனியினொளி இருண்ட நீலமணியையொக்கும். நின் கண், தாமரை மலரிரண்டினைப் பிணைத்தாற் போற் றோன்றும். நின் வாய்மை, தட்பாது வருகின்ற நாளை யொக்கும். நினது பொறை, நிலத்தையொக்கும். நின்னருள், மேகத்தையொக்கும் என அருமறைப் பொருள் நின்னியல்பினையுணர்த்தும். மேற்சொல்லிய பொருட்களையும் பிறவற்றையும் பண்புகளாலும், தொழில்களாலும், ஒத்தும் ஒப்பின்றி எப்பொருளினகத்திலும் நீ எழுந்தருளியுள்ளாய். வேதத்துட் சொல்லப்பட்ட வேள்வியாசானது உரையும், ஒன்றற் கொன்று உயர்ந்த பலவகை வேள்விகளுள் வேள்வித் தூணாய் அமைந்து பசுவைப் பற்றிக் கொள்ளுதலும்,மந்திரங்களாலுயர்ந்த தீயினை முறையாற் கடைந்து அத்திகழ் ஒளியையுடைய எரியின் பெருக்கத்தை யுண்டாக்கிக் கொள்ளுதலும் ஆகிய இவை முறையே நின் திருவுருவும், உணவும், நின் வெளிப்பாடும் ஆகும். திருமாலாகிய நீ, அமரர்க்குணவாகிய அமிழ்தத்தைக் கடைந்து கொடுப்பதாக நின்மனத்தின்கண் நினைந்த அளவிலேயே அதன் பயனாகிய மூவாத்தன்மையும் ஒழியா வன்மையும் சாவா மரபும்போல அமரர்க்குரியவாயின. அதனால் நின் பல்புகழ் பரந்தன. அத்தன்மைத்தாகிய இயல்பினையுடையாய் நின் அடியை யாமும் துளக்கமில்லாத நெஞ்சினேமாய்ச் சுற்றத்தோடும் வணங்கிப் பல்காலும் ஏத்தி வாழ்த்தி எம்மறிவு வளைவின்றி மெய்யுணர்வினை உடையதாகுக என வேண்டிக் bfhŸ»nwh«!” எனத் திருமாலைப் போற்றும் நிலையில் கீரந்தையார் பாடிய பாடல் இரண்டாம் பரிபாடலாகும். இதன்கண், வேள்வியில் ஆசான் கூறும் மந்திரச் சொல்லே கடவுட்குருவாம் எனவும், வேள்வித்தூணாக அமைந்து, அங்குப் பிரிக்கப்பெறும் பசுக்களை ஏற்றலே அவனுக்குரிய உண்டி எனவும், அந்தணர்க்கு வேள்வித் தீயினும், யோகியர்க்கு உள்ளத்திலும், ஞானியர்க்கு எவ்விடத்திலும் இறைவன் வெளிப்படுதலால் வேள்வியில் வளர்க்கப் பெறும் ஒண்சுடர்த்தோற்றமே அந்தணர் காணும் வரவு எனவும் குறிக்கப் பெற்றுள்ளமை நோக்கத்தகுவதாகும். khnahna! தீ. வளி, விசும்பு, நீர், நிலம் என்னும் பூதங்கள் ஐந்தும் ஞாயிறும் திங்களும் வேள்வி ஆசானும் ஆக எண்பேருருவினனாக விளங்கு கின்றாய். வேட்கின்ற வடிவாகிய அறமும், கோள்கள் எழுவருள் முற்கூறிய ஞாயிறு திங்கள் அல்லாத ஏனைய ஐவரும், திதிமைந்தராய அசுரரும், விதியின் மக்களாகிய ஆதித்தர் பன்னிருவரும், வசுக்கள் எண்மரும், பதினொரு உருத்திரரும், மருத்துவராகிய இருவரும், தருமனாகிய எமனும், அவனது ஏவல் செய்யும் மடங்கலாகிய கூற்றமும், ஒரோவொன்று எழுவகைப்பட்ட மூவகையுலகுகளும், அங்கு வாழும் உயிர்த் தொகுதியும் ஆகிய இவையெல்லாம் நின்கண் தோன்றிப் பரவியுள்ளனவாக வேதம் சொல்லுதலால் யாமும் அவ்வாறே தொடுத்துக் கூறினோம். தாமரைமலரில் தோன்றிய நான்முகனும் அவனுக்குத் தந்தையும் நீயே என்று அந்தணரருமறை கூறும். தேவர்களிடமிருந்து அமுதத்தினைக் கொணர்ந்து தன் தாயின் இடுக்கணைத்தவிர்த்த கருடனை ஊர்தியாக உடையாய். அக்கருடனையே கொடியாகவுமுடையாய். மாவலிபால் மூவடிமண் வேண்டி அளக்கின்ற காலத்து மேற் சொல்லிய மூவேழுலகினுள் கீழுள்ளனவாகிய ஏழுலகத்தினையும் எஞ்சாமற்பரவிய அடியினை யுடையாய். எல்லாம் கருகி நீறாதற்குக் காரணமாகிய தீயும், காற்றும், எமனும், ஞாயிறு பன்னிரண்டும் ஒருங்கு கூடும் ஊழி முடிவிலே எழுகடல்களும் ஒன்றாகிய ஆழிக்கண்ணே அமிழ்கின்ற நிலமகளை அழகிய வராகமாகிப் பெயர்த்தெடுத்தாய் எனவும், புட்கலம் முதலிய மேகங்கள் பொழிய விசும்பினின்றும் வீழும் நீரை அன்னச் சேவலாகி நின் சிறகினாலே வறளும்படிச் செய்தாய் எனவும் முனிவரும், தேவரும் நின்னை விரும்பிப் புகழ்வர். அம்முறையே யாமும் புகழ்கின்றோம். குதிரையுருவினனாகிய கேசி எனும் அசுரனைக் bfh‹wtnd! நின் கைகள் எண்ணிறந்தமையால் நின் புகழைப் போன்றன. மோகினியாகிய நின் வடிவினைக்கண்டு மகிழ்ந்த மகிழ்ச்சியே அவுணர்க்கு அச்சமாய் முடிய அமரர்க்கு நல்லமிர்தினைப் பகுத்திடுதலால் நடுவு நிலைமையில் தப்பிய நலமில்லாத ஒருகையினையுடையனாயினை. எல்லையறியப்படாத வடிவினையுடைய நின்னை உயர்வு கூறக்கருதின் அது நீயே உணரின் அல்லது பிறரால் உணரப்படு வாயல்லை. அநாதியாய் வருகின்ற வேதத்திற்கு Kjštnd! விரிந்தகன்ற ஆகமங்கள் அனைத்தாலும் அகங்காரத்தாலும், மனத்தாலும், உணர்வினாலும் மற்றும் எல்லாவற்றாலும் நினக்கு வனப்பும் எல்லையும் அறியப்படாத மரபினையுடையவன் நீ. மதியின் கலைக்கதிர்களை உணவாக உடைய அமரர்க்குத் தலைவனாகிய நீ மயங்கி நினக்குப் பிழை செய்து நீ நிலவுலகினையளக்க நின் பெருமைகண்டு அஞ்சிப் போய்க் கடலிற் பாய்ந்த அவுணர்க்கும் பிழை செய்யாது நின்ற ஏனை அவுணர்க்கும் முதல்வனாக வுள்ளாய். இவ்வாறு இருதிறத்தார்க்கும் ஒத்திருத்தலால் நின் இயல்பினை யறிவார்க்கு இவர்பகைவர், இவர் நட்டோர் என்ற வேற்றுமை நின்கண் இல்லை என்பது புலனாம். ஆயிரமாகிய கிளர்ந்த தலையினை உடைய பாம்பினை வாயிற் கௌவிய நின் ஊர்தியாகிய கருடச் சேவலும் நின்னைத் தாங்கலாற்றாது வருந்தி, செங்கண் khny! X! என அலறும் கால முதல்வன் நீ. தீயினுள் வெம்மையும், பூவினுள் மணமும், கல்லினுள் மணியும், சொல்லினுள் வாய்மையும் அறத்தினுள் அன்பும் (மென்மை) மறத்தினுள் மைந்தும் (வன்மை) வேதத்துள் மறையும் (உபநிடதங்களும்) ஐம்பெரும் பூதத்துள் ஆகாயமும், ஞாயிற்றுள் ஒளியும், திங்களுள் தண்மையும் ஆகத் திகழ்கின்றாய். இங்குச் சொல்லப்படாத எல்லாப் பொருளும் நீ, அவற்றிள் உட்பொருளும் நீ. ஆதலால் நீ ஓரிடத்து உறைதலுமில்லை. நினக்கு ஆதாரமாகக் கொண்டு நின்னைத் தாங்கும் இடத்தினை யுடையையல்லை. மேற் சொல்லிய இறைமையுடையையாதலில் மறதியுடையைர் மறதியில் சிறப்புப் பெறுதல் காரணமாக அவை நினக்கு உளவாம் தன்மையும் பொய். உலகில் முதலினும் இடையினும், இறுதியினும் படைத்தல், காத்தல், அழித்தல் எனும் தொழில் வேற்றுமை பற்றி நீ பிறவாத பிறப்பு எதுவுமில்லை. அவ்வாறு பிறந்து வைத்தும் நின்னைப் பிறப்பித்தோரையுடையில்லை, காயாம்பூவின் ÃwKilnahŒ! அருளே குடையாக, அறமே கோலாக மூவேழுலகங்ளையும் இருநிழல்படாது நின் அருள் நிழலாகிய முழுநிழற்கண்ணதாகப் பொதுத் கடிந்து தனியே காக்கும் காத்தற் றொழிலையுடையாய் புருட தத்துவம் ஒன்றும், கன்மேந்திரியங்கள் ஐந்தும், ஆகாயத்தின் பண்பாகிய ஓசையும், காற்றின் பண்பாகிய ஊறும், தீயின் பண்பாகிய உருவும், நீரின் பண்பாகிய சுவையும், நிலத்தின் பண்பாகிய நாற்றமும், செவி, தோல், கண், நாக்கு, மூக்கு எனும் ஐம்பொறிகளும், மனமும் அகங்காரமும், மானும், மூலப்பகுதியும் என இருபத்தைந்து தத்துவங்களாலும் ஆராயப்படும் பெருமையை யுடையாய், வாசுதேவன், சங்கருடணன், காமன், பிரத்யும்நன், அநிருத்தன் என நால்வகை வியூகங்களிலும் மேற் கூறியவாறு கூறப்படும் சிறப்பினை யுடையாய். ஆய்ச்சியரொடு கூடிக் குரவைக் கூத்தாடும்போது அவர்க்கு இடமும், வலமும் ஆகத் திகழ்வோய். கூத்தாடுதற்கெடுத்த அலப்படையினையு முடையாய். அழகிய நீல மணியும், கருங்கடலும், கார்மேகமும் ஆகிய இவற்றையொக்கும் கரிய திருமேனியொடு நிறத்தால் மாறுபடும் பொன்னாடையினைப் புனைத்தாய் பகைவர் உயிரொடு முரண்பட்ட சக்கரப் படையினை யுடையாய். வெகுளியாலன்றி இயல்பாகவே சிவந்த கண்ணினையுடையாய். யாவராலும் அறியப்படாத இயல்பினை உடையாய். எனினும், நின் அன்பரது இடைவிடாத நினைவின்கண் நீக்கமின்றி உள்ளாய். நிறைந்த வெள்ளத்து நடுவு மாநிலம் தோற்றாத முதற்காலத்துப் பிரமனைக் கொண்டு உந்திக்கண் மலர்ந்த பொகுட்டுத் தாமரையினை உடைய நின் ஆழிப் படையே உலகிற்கு நிழல் தருவது என மூன்றாம் பரிபாடலால் கடுவனிள வெயினனார் திருமாலைப் பரவிப் போற்றுகிறார். நின்பால் அன்பு செலுத்திய பிருகலாதன் வருந்தாமல் அவன் நெஞ்சிற் பொருந்தி, இரணியனது மார்பின் பகைவலிகெடத் தூணினின்றும் நீ புறப்பட்டு அவனுடைய மார்பினைப் பிளந்த நகத்தினையுடையாய். பூமியானது வெள்ளத்திலழுந்தியபோது வராகமாகி அதனைக் கழுத்தால் தாங்கி வெள்ளத்தினின்றும் எடுத்த நினது செயல் மேருவின் தொழிலையொக்கும். நினது வெம்மையும் விளக்கமும் ஞாயிற்றின் கண்ணே காணப்படாநின்றன. தண்மையும் மென்மையும் திங்களிடத்தே உள்ளன. கொடுக்கக் கொடுக்கப் பொருள் வளர்தலும் கொடையும் மழையின் கண்ணேயுள்ளன. மன்னுயிர்களைத் தாங்குதலும் அவை செய்த பிழைகளைப் பொறுத்தலுமாகிய நின் தன்மைகள் நிலத்திடத்தே அமைந்தன. நின் மணமும், ஒளியும், காயாம் பூவிடத்தே யமைந்தன. நீ வெளிப்படுதலும் நினது பெருமையும் நீரின்கண்ணே காணப்படுகின்றன. ஞானக் கண்ணாற் காணப்படும் நினதுருவமும், ஒலியும் ஆகாயத்துள்ளன. நீ அவதரித்தலும் மீண்டுசென்றடங்குதலும் காற்றினிடத்தேயுள்ளன. இவ்வாறு நின்னிடத்திலிருந்து பிரிந்து நின்னால் பாதுகாக்கப்பட்டன வெல்லாம் பின்னும் நின்னொடு பொருந்துதல் அமைந்தன. செவி முதலிய பொறிகள் ஐந்தினையும் அவற்றின் செயல்களையும் மயக்கமற நீக்கி மைத்திரி, கருணை, முதிதை, மகிழ்ச்சி எனும் நான்கினாலும் மனமாசு கழுவி, நொசிப்பு என்னும் சமாதி நிலையிலே தம்மை நிறுத்திய நின் அன்பர்கள் நின் புகழ்த்திறங்களை யெல்லாம் விரித்துப் போற்றினர். அப்புகழ்களெல்லாம் நினக்கு இயல்பாவன அல்லது வியக்கப்படுவன அல்ல. அவற்றுட் சிலவற்றை இங்குமங்குமாக நாங்கள் மாறுபடக் கூறும் எமது அறியாமை கண்டு நீ நகைத்தலுமியல்பே. கருடச் சேவற் கொடியினையுடைய நின் உயர்கொடிகளுள் ஒன்று பனை, மற்றொன்று கலப்பை, பிறிதொன்று யானை. இவ்வாறு நினக்குப் பல கொடிகள் உளவேனும் நினது ஒருதலையாக உயர்ந்த கொடியாகிய கருடக் கொடியினை அக்கொடிகள் ஒத்தலில்லை. நஞ்சுடைய பாம்பின் விடத்தையும், உடலையும், உயிரையும் உண்ணும் கருடனாகிய அவனது வயிற்றின்மேல் உதரபந்தனமாகச் சுற்றிக் கொண்டிருப்பது பாம்பு. அப்பாம்பே அவனுக்குக் கைவளை. முடிமேல் அணியும் கண்ணிகளும் பாம்பே. கழுத்திற் பூணும் பூணாகவும், தலைமேலணியும் சூட்டாகவும் அமைந்தன பாம்புகளே. பாம்புகளே அவன் சிறகுகளிடத்தனவுமாகும். கொடி மேலுள்ள அக்கருடன் எறிந் தெடுக்கும் இரையாக அமைந்தனவும் பாம்புகளே. நினக்குப் பகைவரும் நண்பரும் இலராதலால் குற்றமும் மறமும் உடையாரிடத்து வெகுளியும் கோட்டமும் அவையில் லாரிடத்து இல்லையாதலும் உடையையாய், குணமாகிய அறமுடை யாரிடத்து அருளும், செம்மையும் உடையையாய் அவை இல்லாரிடத்து இல்லையாதலுமல்லது நினக்குப் பகையாயினார் உயிரின்கண் அதனை மாற்றுதற்றொழிலும் நினக்கு நண்பராயினார் உயிரின்கண் அதற்கு ஏமஞ் செய்யுந் தொழிலும் உடையையல்லை. உயிர்களதியல்பால் நினக்குப் பகையும் நட்பும் உளபோலத் தோன்றுவதல்லது நின்னியல்பால் அவை நினக்குள்ளவையல்ல. அன்பர் மனத்திற் கொண்ட வடிவன்றி நினக்கென வேறுவடிவு உடையையல்ல. நீலமணி போலும் திருமேனிக்கண் நறுமணம் வீசும் துழாய் மாலையை யணிந்தாய். திருமகளாகிய மறுவை யுடைய kh®gnd! நின்னுந்தியிற் றோன்றிய தாமரை மலர் போலும் கண்களை யுடையாய். அளத்தற்கரியனாகிய நீ அன்பர்க்கு வீடளிக்குங்கால் நின்னினும் சிறந்த நின் திருவடியினையுடையாய், நிறைந்த கடவுட்டன்மையினையுடையாய். அழல்போலும் தளிரினையும் நிழல்தரும் கிளைகளையும் உடைய, ஆலமரமும், கடப்பமரமும், யாற்றிடைக் குறையும், காற்று வழங்காக்குன்றமும் பிறவுமாகிய அவ்விடங்களைப் பொருந்திய பல தெய்வங்களாகப் பகுத்துரைக்கப்படும் பெயர்களை யுடையோய், நின் அன்பர் தொழுத கையினது தாழ்ச்சிக்கண் அகப்பட்டோயும் நீயே. அன்பர் நினைத்தன முடித்தலால் அவரவர் ஏவல் செய்வோனும் நீயே. mtut® brŒj mw«bghU£F¡ fhtyhf És§FnthD« Úna!”- எனக் கடுவனிள வெயினனார் திருமாலைப் பரவிப் போற்றுவதாக அமைந்தது, நான்காம் பரிபாடல் ஆகும். நீல மலையின்கண் பரந்த இளஞாயிற்றின் கதிர் போலும் அழகமைந்த பொன்னாடையினையும், நீல மலையின் மேல் தோன்றும் இளஞாயிற்றினை ஒத்த முடியினையும் அம்மலையினின் றிழியும் அருவியின் நிறத்தோடு மாறுகொள்ளும் பக்கமாலைகளையும் கருடப் புள்ளினை எழுதிய கொடியினையும் விண்ணின்கண் தோன்றும் நிறைமதியினது குளிர்ச்சியினையும் உடையனாய், அளித்தற்றொழிலை மேற்கொண்ட தெய்வம் திருமால் எனவும், கார்ப்பருவ மேகத்தின் இரண்டு பக்கங்களிலும் ஞாயிறும், திங்களுமாகிய இரு சுடர்கள் விளங்கித் தோன்றுமாறு போன்று விளங்கும் ஆழியையும் சங்கினையும் ஏந்திய கைகளையுடையவன் அம்முதல்வன் எனவும், சுவை முதலிய ஐம்புலன்களாகவும் அவற்றை நுகரும் பொறிகளாகவும் அவற்றாலுணரப்படும் தன்மையினையுடைய பூதங்களாகவும் விளங்குவோன் அவ்விறைவன் எனவும் மூலப்பகுதியும் அறனும், அநாதியான் காலமும், ஆகாயமும், காற்றொடு பொருந்திய தீயும் கூடிய இம்மூவேழுலகத்து உயிர்களெல்லாம் அம்முதல் வனிடத்தே உளவாயின எனவும், உயிர்களின் பொருட்டுப் பாற்கடல் நடுவே ஆயிரம் தலைகளையுடைய பாம்பணையின்கண் அறிதுயிலமர்ந்தருளிய துளவஞ்சூடிய திருமால் தானும் மிக்க ஒலியினையுடைய மறமிக்க பகைவரைக் கொல்லும் படையுடனே பகைவருயிரையகற்றும் விறல்மிகு வலியும் ஒளியும் பொருந்தி அவர் மார்பினை உழும் நாஞ்சிற்படையுடையோனாகிய பலதேவனும் பூமியினது நடுக்கமற அதனை எடுத்து நிறுத்தற்குரிய கொம்பினையுடைய ஆதிவராகம் எனும் பன்றியும் என மூன்று திருவுருவங்களாகப் பிரிந்த ஒரு தெய்வம் எனவும் பதின்மூன்றாம் பரிபாடலில் நல்லெழினியார் திருமாலின் இயல்புகளை வகுத்துரைக் கின்றார். அறிவெல்லையால் அறியப்படாத புகழுடனே பொலிந்து நிலவெல்லையைத் தாங்கிய தம் நிலை கெடாத சக்கரவாள மலை முதலாகப் பண்டைப் புலவர் ஆராய்ந்துரைத்த நெடிய குன்றங்கள் பலவற்றுள்ளும் நிலத்தில் வாழும் மக்களின் பசி வெம்மையை நீக்கி நிறைபயன்கள் எல்லாவற்றையும் எப்பொழுதும் மக்கள் பெற்று மகிழப் பயன்தரும் குன்றங்கள் சிலவே. அச்சிலவற்றுள்ளும் தெய்வங்கள் தாமாக விரும்பும் மலர்த்தடங்களும் மழை தவழும் சிகரங்களும் உடையனவாகிய குலமலைகள் சில சிறந்தன. அச்சிலவற்றிலும் கல்லென ஒலிக்கும் கடலும், கடற்கரைப் பரப்பும் போல வேறு வேறாகிய நிறத்தினையும் பிரிவில்லாத சொல்லும் பொருளும் போல வேறுபடாத தொழிலினையும் உடைய மாயோனையும் அவன் தமையனாகிய பலதேவனையும் தாங்கும் உயர்ந்த திருமாலிருங்குன்றம் சிறப்புடையதாகும். மணம் வீசும் கொத்துக்களையுடைய துழாய் மாலையை அணிந்த திருமால் தன்னருளால் வெளிப்பட்டுக் கொடுத்தாலல்லது அரிதிற் பெறு துறக்கத்தை எளிதிற் பெறுதற்குரிய நிலையில் விளங்கும் மாலிருங் குன்றத்தை எல்லோரும் கேட்க ஏத்தக் flnth«! என இளம்பெரு வழுதியார் தாம் பாடிய பதினைந்தாம் பரிபாடலில் திருமாலிருஞ் சோலை மலையின் சிறப்பினை முதற்கண் குறித்துப் போற்றியுள்ளார். அசையும் அருவி மிகவும் ஆரவாரித்து விழுதலால் சிலம்பாறு அழகு செய்யும் திரு என்னும் சொல்லோடும் சோலை எனும் சொல்லோடும் மாலிருங்குன்றமெனும் சொல் தொடர்ந்த மொழி யாகிய திருமாலிருஞ்சோலை மலை என்னும் இத்திருப்பெயரினது பெருந்தன்மை பூமியின்கண் நன்றாகப் பரவுக. நிலைபெற்ற குளிர்ச்சியையுடைய இளவெயில் சூழ அதனடுவே இருள் வளர்தலை யொக்கப் பொன்னாடையையுடைய திருமால் தம்முன்னோனாகிய பலதேவனோடு கூடி அமர்ந்து நிற்கும் நிலையை மாந்தர்களே நினைந்து அவுணரை நேரே பொருது கொன்றானது நிறத்தையுடைய குன்றத்தினை நும் மனைவியரோடும் இருமுதுகுரவரோடும், குழவிகளோடும் சுற்றத்தோடும்கூடத் தெய்வமாக மதித்துத் திசைநோக்கித் தொழுது சென்மின். தன் உந்தித் தாமரையினை யொக்கும் கண்களை யுடையனாய் நீரைக் கொண்ட மழை மேகமும் இருளும் நீலமணியும் போலும் மேனியனாய் எல்லா வுலகிலும் வெளிப்பட்டுள்ள அவ்விடத்து உயிர்த்தொகுதிகளின் பிறவித் துன்பத்தினைக்களை வோன் ஆகிய திருமால் அன்புடையனாய் இருங்குன்றத்தின்கண் எழுந்தருளியுள்ளான். ஆதலால் அம் முதல்வனைக் கூர்மையணிந்த வளைந்த நாஞ்சிற் gilÆidíilatnd! கோபம் மிக்க தண்டினை vªâatnd! வலம்புரிச் சங்குடன் சக்கரப் படையினை cilatnd! வில்லுடன் அம்பினை Vªâatnd! சுழலும் படையாகிய பாராவளையினை (வட்டப்படை) íilatnd! th£gilÆidíilnahnd! என இவ்வாறு அழகிய சீரையும், அஞ்சப்படுதலையும் உடைய வேதம் தனக்கு நன்மையை விரும்பி அவ்விரு பெருந்தெய்வப் பெருமை ஈதென்று சொல்லுதலால் யாமும் மனம் விரும்பி அச்சொற்களுள் அறிந்தவற்றைக் கூட்டி உரைத்தேமாய்ப் பெரும் புகழையுடைய அவ்விருவரையும் தொழுது எமக்கு இவ்விருங்குன்றத்தின் அடியின்கண் உறைதல் எய்துக என்று வேண்டுகின்றோம் என இளம்பெருவழுதியார் பெரும்பெயரிரு வரையும் பரவிப் போற்றுகின்றார். மேகங்கள் மழை பொழிய அந்நீர் மலைகளினின்றும் இழிந்து மதுரையிலுள்ளார் எதிர்கொள்ளும்படி வருகின்ற துறையினிடத்தே யமைந்தது இருந்தையூர் ஆகும். இவ்வூரில் எழுந்தருளியிருக்கும் திருமால் இருந்தவளமுடையார் எனப் போற்றப்படுகின்றார். ஆயிரந்தலைகளையுடைய ஆதிசேடனைப் பூமுடிநாகர் எனப் பரிபாடல் போற்றுகின்றது. மதுரையின் அருகே இருந்தையூரிற் கோயில் கொண்டருளிய திருமாலின் கோயிலையடுத்து ஆதி சேடனுக்குக் கோயில் அமைந்திருந்தது. பூமுடிநாகராகிய ஆதிசேடன் கோயில் பெருங்குளத்துக்குப் புனல்புகும் வாயிலையடுத்து அமைந்திருந்தமையால் அது குளவாயமர்ந்தான் நகர் எனப் பரிபாடலிற் குறிக்கப் பெறுவதாயிற்று. நிறம் வாய்ந்த புள்ளிகளை யுடைய பெரிய படமாகிய எருத்தின்கண்ணே மலையினைத் தாங்கிய செல்வனாகிய ஆதிசேடனுக்கென அமைக்கப்பெற்ற அத்திருக்கோயிலே இளையோர் முதல் முதியோர் வரையுள்ள இருபாலாரும் படைத்தற்குரிய அவியாகிய உணவு, குடை, நறும்புகைப்பொருள், நறுமலர்கள் ஆகியவற்றை ஏந்தியவர்களாய் நெருங்கி இன்னியம் முழங்க இயலிசைப் பாடல்களைப் பாடியும் ஆடல்களை நிகழ்த்தியும் இடைவிடாது வழிபட்டு மகிழ்ந்துறை கின்றனர். அதனால் அத்திருக்கோயில் நல்வினைப் பயன்களை நுகர்ந்து மகிழ்தற்கிடனாகிய துறக்கவுலகம் போன்று விளங்கிது. அமுதத்தினை விரும்பித் தேவரும், அவுணரும் கடலைக் கடைந்த காலத்தில் ஆழிப்படையினையுடைய திருமால் மந்தர மலையாகிய மத்தொடு பிணித்து இருமருங்கும் பற்றியிழுத்தற்குரிய கடைகயிறாக அமைந்தவரும் ஆதிசேடனாகிய இவரே. இங்ஙனம் திருமால் ஒரு தோழங்காலம் கயிறாகக் கொண்டு இருமருங்கும் இழுத்துக் கடைந்த நிலையிலும் அறாத வன்மையுடையவரும் இவரே. மலைகள் நிறைந்த நிலவுலகினைத் தம் தலையின் அணிகலன்போற் சுமந்தாரும் இவரே. ஏற்றூர்தி யானாகிய சிவபெருமான் அவுணர்க்குரிய மூவெயில்களையழித்த காலத்தில் மேருமலையாகிய வில்லுக்குரிய நாணாக இருந்து தொன்று தொட்டு நிலைபெற்று வரும் புகழைத் தந்தவரும் ஆதிசேடனாகிய இவரே. பகைவரை வருத்துதலையுடைய ஆயிரந்தலைகளை விரித் துள்ள தேவகணங்களைச் சுற்றமாகக் கொண்ட அண்ணலாகிய ஆதி சேடனை வணங்கி விளக்கமுடையோமாய் நின்னைப் பிரியா திருத்தல் வேண்டும் என இருந்தையூரமர்ந்த செல்வனாகிய நின் திருவடியை வணங்கிப் பரவுகின்றோம் எனப் போற்றும் முறையில் அமைந்தது, தொல்காப்பியம் செய்யுளியல் 121ஆம் சூத்திரவுரையிற் பேராசிரியர் மேற்கோளாக எடுத்துக்காட்டிய பரிபாடலாகும். இதனால் மதுரையையடுத்துள்ள இருந்தையூரில் அமைந்த திருமால் கோயிலில் பூமுடிநாகராசிய ஆதிசேடனுக்கும் கோயில் அமைந்திருந்ததென்பதும் அங்குத் திருமாலை வழிபட வந்த மக்கள் அம்முதல்வனுக்கு அணையாய் அமைந்த பூமுடிநாகராகிய ஆதிசேடனையும் புகை, பூ, அவி என்பன கொண்டு வழிபட்டார்கள் என்பதும் பூமுடிநாகர் திருமால் கடல் கடைந்தபொழுது மந்தரமலையாகிய மத்தொடு பிணைத்த கடைகயிறாகவும், சிவன் திரிபுரமெரித்தபொழுது மேருமலையாகிய வில்லிற் பூட்டிய நாணாகவும் இருந்து துணைபுரிந்தமையால் பாம்பு வழிபாடு சிவன், திருமால் என்னும் இருபெருந்தெய்வ வழிபாடுகளுடன் நெருங்கிய தொடர்புடையதாகக் கொள்ளப்பெற்ற தென்பதும் நன்கு துணியப்படும். திருமாலின் உந்தித் தாமரையிலிருந்து தோன்றி உலகினைப் படைக்கும் படைப்புக் கடவுளாகிய நான்முகனும், உயிர்களின் உள்ளத்தே ஆணும் பெண்ணுமாய்க் கூடி வாழும் காமவுணர்வினைத் தூண்டும் தெய்வமாய காமனும் ஆகிய இருவரும் திருமாலின் புதல்வர் களாகப் போற்றப் பெறுகின்றனர். இச்செய்தி, இருவர் தாதை இலங்கபூண் மாஅல் (பரி. 1:28) எனவரும் பரிபாடல் தொடரால் இனிது புலனாகும். தொல்காப்பியனார் காலத்து மாயோன் என ஒன்றாகக் குறிக்கப்பெற்ற தெய்வம், கடைச்சங்க காலத்தில் கண்ணன், பலதேவன் என்னும் இரு திருவுருவங்களில் வைத்து ஒரு பெரும் தெய்வமாக வழிபடப்பெற்ற செய்தி முன்னர்க் குறிக்கப்பெற்றது. வேத முதல்வன், தீதற விளங்கிய திகிரியோன் நாவலந்தணரரு மறைப் பொருள், மனத்தாலும், நூல்களாலும் அறியப்பெறாதவன், ஐம்பெரும் பூதங்களும், ஞாயிறு திங்கள் முதலிய கோள்களும் தேவர் அசுரர் முதலியோரும் மூவேழுலகவுயிர்களும் மாயோனாகிய முதல்வனிடத்தே தோன்றி,அவனிடத்தே யொடுங்குகின்றன எனவும் எல்லாப் பொருள்களினுள்ளும் அவன் உயிர்க்குயிராயுள்ளான் எனவும், படைத்தற் கடவுளாகிய நான்முகனைத் தன்னுந்திக் கமலத்துத் தோற்றுவித்தவன் எனவும் காமனும், சாமனும் அவன் புதல்வர்கள் எனவும் பரிபாடல் திருமாலைப் போற்றிப் பரவுகின்றது. ஆயிரந்தலையுடைய ஆதிசேடனை வாயிற் கௌவிக் கொண்டும், பாம்புகளை அணிகலனாக அணிந்து கொண்டும் உள்ள கருடனைத் தனக்கு ஊர்தியாகவும், கொடியாகவும் கொண்ட தெய்வம் திருமால். அவனது இயல்பினையறிதல் மயக்கம் நீங்கிய ஞானியர்க்கும் அரிது. அவ்வாறாகவும் அவன் இன்ன தன்மையன் என்று கூறுதல் ஏனையோர்க்கு எங்ஙனம் எளிதாகும்? இங்ஙனம் இறைவன் அறிதற்கரியனாயினும் அவனையறிதல் வேண்டுமென்ற ஆர்வம் மக்களுள்ளத்தே தோன்றலியல்பு. அந்தணர்களாற் காக்கப்படும் அறமாகவும், அடியார்களிடத்தே தோன்றும் அன்பாகவும், நெறியின் வழீஇயினாரைத் திருத்தியாட்கொள்ளும் மறக்கருணையாகவும் பகைவர்களிடத்தே செலுத்தும் வருத்துந் தொழிலாகவும் திகழுவோன் திருமாலே. வானத்தில் விளங்கும் திங்களாகவும், கதிரவனாகவும் திகழ்வோன் அவன். ஐந்து திருமுகங்களையுடைய இறைவனாகவும் அவனாற் செய்யப்பெறும் உலகவுயிர்களின் ஒடுக்கமாகவும் நற்பொருட்களைத் தன்னகத்தே கொண்ட குற்றமற்ற அறிவினைத் தரும் வேதமாகவும் நான் முகனாகவும் அவனாலாகிய உலகவுயிர்களின் தோற்றமாகவும் திகழ்வோன் திருமாலே. வானத்து வலமாக எழும் மேகமும், வானமும், நிலமும், இமயமலையும் என இங்ஙனம் எல்லாப் பொருள்களாகவும் தோற்றமளிப்பவன் அவனே. அம்முதல்வன் தனக்குவமையில்லாதவன்; அழிவற்ற புகழோன்; பொன்னாடை யணிந்தோன்; கருடக்கொடியுடையோன். சங்கு, பகைவரை யழிக்கும் சக்கரப் படையினை ஆகியவற்றை ஏந்தியவன். நீலமணி போலும் திருமேனியுடையோன். புகழினையும், அழகிய மார்பினையும் உடையவன் எனப் பரிபாடல் திருமாலைப் போற்றுகின்றது. முழுமையாக் கிடைத்துள்ள பரிபாடல்களில் 1,2,3,4,13,15 ஆகிய ஆறு பாடல்கள் திருமாலைப் போற்றுவனவாக அமைந்துள்ளன. அவற்றுள் முதற்பாடலை இயற்றிய ஆசிரியர் பெயரும், இசையமைத் தோர் பெயரும் காணப்படவில்லை. கீரந்தையாரால் பாடப்பெற்ற நன்னாகனாரால் இசை யமைக்கப்பெற்றது இரண்டாம் பரிபாடல். அது பாலையாழ் என்னும் பண்ணமைந்ததாகும். கடுவன் இளவெயினனாராற் பாடப்பெற்றுப் பெட்ட நாகனாரால் இசையமைக்கப் பெற்றவை மூன்றாம் பரிபாடலும், நான்காம் பரிபாடலு மாகும். இவ்விரண்டும் பாலையாழ்ப் பண்ணில் அமைந்தனவே. நல்லெழிநியாராற் பாடப்பெற்றது 13 ஆம் பரிபாடல். அதற்கு இசையமைத்தோர் இன்னார் என்பது தெரியவில்லை. இதற்குப் பண் நோதிறம் எனச் சுவடிகளில் காணப்பெறுகிறது. இளம்பெருவழுதி யாராற் பாடப்பெற்று மருத்துவன் நல்லச்சுதனாரால் இசையமைக்கப்பெற்றது 15ஆம் பரிபாடலாகும். இதற்குரிய பண்ணும் சுவடிகளில் பண் நோதிறம் எனக் குறிக்கப் பெற்றுள்ளது. செய்யோள் சேர்ந்த நின்மாசில் அகலம் (பரி. 2:31) திருவரையகலம் தொழுவோர்க்கு உரிதமர் துறக்கமும் உரிமைநன் குடைத்து (பரி.13:12,13) எனவரும் பரிபாடற் றொடர்கள், திருமாலின் தேவியாகிய திருமகளது அருள் பெற்றே திருமாலை அடைதல் வேண்டும் என்னும் வைணவ நெறிமுறையினைப் புலப்படுத்தும் குறிப்புடையவாதல் நுணுகி நோக்கத்தக்கது. திருமால் பாம்பணையில் பள்ளி கொண்டருளுதல் பற்றிச் சார்த்து வகையால் ஆதிசேடன் வழிபாடும் திருமால் வழிபாட்டோடும் பரிபாடலில் இணைத்துரைக்கப் பெற்றுள்ளது. மதுரையை அடுத்துள்ள குளவாய் அமைந்தான் நகரில் பூமுடிநாகராகிய ஆதிசேடனுக்காகத் தனிக்கோயில் அமைந்துள்ளமை முன்னர்க் கூறப்பட்டது. பாம்பு வழிபாடு பாரத நாட்டின் பலபகுதிகளிலும் நெடுங்காலமாக நிலைபெற்று வருவதாகும். சிவபெருமான் பாம்புகளை அணிகலனாக அணிந்து கொண்டமையும், திருமால் பாம்பணையில் பள்ளிகொண்டருளினமையும் நாகவழிபாட்டின் தொன்மையினையும் அவ்வழிபாடு சிவன் வழிபாட்டோடும், திருமால் வழிபாட்டோடும் சார்புடைய தாய் இணைந்து தொடர்ந்து வருதலையும் புலப்படுத்தல் காணலாம். பால்போலும் மதியை (இராகு என்னும்) பாம்பு மறைத்ததாக, நீனிறவண்ணனாகிய திருமால் அம்மறைப்பினை நீக்கி மதியை விடுவித்த செய்தி, பான்மதி சேர்ந்த அரவினைக் கோள்விடுக்கும் நீனிற வண்ணனும் போன்ம் எனவரும் முல்லைக்கலித் தொடரிற் குறிக்கப்பெற்றது. யாவராலும் பெறுதற்கரிய பெரும் பொருளாகிய முறையையுடைய திருமால், அன்பர் பாடும் இசைப்பாட்டுடன் யாழிசையினையும் கேட்டுப் பள்ளி கொள்ளும் தோற்றம் அரும் பொருள் மரபின் மால் யாழ்கேளாக் கிடந்தான்போல் பெருங்கடல் துயில் கொள்ளும் வண்டிமிர் நறுங்கானல் என ஒலியவிந்தடங்கிய கடலுக்கு உவமையாகக் கூறப்பட்டது. கண்ணனாகிய திருமால், தன்னை அகப்படுத்தற்பொருட்டுப் பகைவரால் அனுப்பப் பெற்ற மல்லர்களின் வீரத்தைக் கெடுத்து, அழித்துத் தன் நண்பர் குழாத்தில் கலந்து மகிழ்ந்த செய்தி, நீள் மருப்பு எழில் யானை மல்லரை மறஞ்சாய்த்த மால்போல் தன்கிளை நாப்பண் கல்லுயர் நனஞ்சாரல் கலந்தியலும்.... (கலி.52) என்ற தொடரிலும், மல்லரை மறஞ்சாய்த்த மலர்த்தண்டார் (கலி.134) என்ற தொடரிலும் குறிக்கப்பட்டுள்ளது. பண்டைக் காலத்தில் இளங்குழந்தைகட்குப் பாதுகாப்பாகத் திருமாலுடைய வாட்படையினையும், சிவபெருமானுடைய மழுப்படையினையும் பொன்னாற் செய்து காப்பாகக் கட்டுதல் மரபு. இச்செய்தி, பொலஞ்செய் மழுவொடு வாளணி கொண்ட நலங்கிளர் ஒண்பூண் (கலி.86) எனவருந் தொடராற் புலனாகும். பொன்னாற் செய்த மழுவோடே வாளும் அணிதலைக் கொண்ட நன்றே விளங்குகின்ற ஒள்ளிய பூண் என்பது இத்தொடரின் பொருள். இவ்வாறு பண்டை நாளில் குழந்தைகளுக்கு நோய் முதலியன வாராது காக்கும் அணிகளாக அறிவிக்கப்பட்டவை, வெட்டாத வாளும் எறியாத மழுவும் இரு புறத்தினும் நெருங்கக் கட்டிப் பவளத்தாற் செய்த இடபத்தினையுடைய தாய் விளங்குகின்ற பூண்களாகும் இச்செய்தி, எறியா வாளும் எற்றா மழுவும் செறியக் கட்டி யீரிடைத் தாழ்ந்த பெய்புல மூதாஅய்ப் புகர்நிறத் துகிரின் மையற விளங்கிய ஆனேற் றவிர்பூண் எனவரும் கலித்தொகை தொடரால் அறியப்படும் பூணப்பட்டவை வெட்டாத வாளும், வெட்டாத மழுவும் நெருங்கக் கட்டி இரண்டு புறத்திலும், தங்கின மழை பெய்த புலத்து ஈயம் மூதாயினது (பட்டுப்பூச்சி, இந்திரகோபப் பூச்சி) புகரையுடைத்தாய நிறத்தை யுடைய அழுக்கறவிளங்கிய இடபத்தையுடைய விளங்குகின்ற பூண் என்பது மேற்குறித்த தொடரின் பொருள். திருமாலும் சிவபெருமானுமாகிய இருபெருந் தெய்வங்கட் குரிய வாளும், மழுவுமாகிய இருபடைகளையும் அவற்றுடன் சிவபெருமானது ஊர்தியாகிய இடபத்தினையும் பொன்னாலும், பவளத்தாலும் செய்து அமைத்த பூணினை வளருங் குழந்தைகட்கு அணிகலனாக அணியும் பழக்கம் சங்ககாலத்தில் நிலவியிருந்தமை மேற்குறித்த கலித்தொகைத் தொடராற் புலனாகும். இவ்வழக்கத்தினை அடியொற்றியமைந்ததே காத்தற் கடவுளாகிய திருமாலுக்குரிய ஐம்படைகளைக் குழந்தைகட்கு ஐம்படைத்தாலியாக அணியும் வழக்கமெனக் கருத வேண்டியுள்ளது. முல்லை நிலமக்களாகிய கோவலர்களால் ஏறு தழுவுதற் பொருட்டுச் செலுத்தப்பட்ட காளைகளின் நிறங்களைக் குறித்து, வானுற வோங்கிய வயங்கொளிர்பனைக் கொடிப் பானிற வண்ணன்போற் பழிதீர்ந்த வெள்ளையும் பொருமுரண் மேம்பட்ட பொலன்புனை புகழ் நேமித் திருமறு மார்பன்போற் றிறல்சான்ற . (கலி. 104) எனவும், வள்ளருள் நேமியான் வாய்வைத்த வளை போலத் தெள்ளிதின் விளங்குஞ் சுரிநெற்றிக் காரியும் ஒருகுழை யவன்மார்பில் ஒண்டார்போல் ஒளிமிகும் பொருவறப் பொருந்திய செம்மறு வெள்ளையும் (கலி. 105) எனவும் வரும் முல்லைக் கலித்தொடர்களில் திருமால், பலதேவன் ஆகிய இருவரது தோற்றமும் உவமையாக எடுத்தாளப்பட்டுள்ளமை காணலாம். ஆயர்களால் ஏறுதழுவுவதற்கென விடப்பட்ட எருதுகளுள் கரிய எருதிற்குத் திருமாலையும் அதன் தெளிந்த நெற்றியில் விளங்கும் சுட்டிக்குத் திருமால் கையிலுள்ள சங்கினையும் செந்நிறப்புகர் நீண்டு பொருந்திய வெள்ளை எருதிற்குச் சிவந்த மாலையினை மார்பிலணிந்த நம்பி மூத்தபிரான் ஆகிய பலதேவனையும் உவமையாக நல்லுருத்திரனார் குறிப்பிடுவர். முல்லைநிலத்துக் கோவலர் தம்மால் மேய்க்கப் பெறும் ஆநிரைகள் பாற்பயன் தருதல் வேண்டித் திருமாலைப் பரதவிப் போற்றதலும், தம்மகளிரைத் தகுதியுடைய தலைவருக்கு மணம் செய்து கொடுத்தல் வேண்டி வலிய காளைகளை வளர்த்துக் கொல்லேறுகளாகிய அவற்றை அடக்கிப் பிடிக்கும் தறுகண்மை மிக்க ஆடவனுக்குத் தம் மகளை மணம் செய்து கொடுத்தலும் ஆகிய ஒழுகலாறு உடையராய் மாயோனைத் தெய்வமாக வழிபட்டு வாழ்ந்தனர். முல்லை நிலத்து மகளிராகிய ஆய்ச்சியர் குரவைக் கூத்தாடி மாயோனை வழிபடு கடவுளாகக் கொண்டு போற்றினர். இச்செய்தி, குரவை தழீஇ யாம் மரபுளிபாடித் தேயா விழுப்புகழ்த் தெய்வம் பரவுதும் மாசில்வான் முந்நீர்ப் பரந்த தொன்னிலம் ஆளுங் கிழமையொடு புணர்ந்த எங்கோ வாழியரிம் மலர்தலையுலகே (கலி. 103) எனவும், ஆங்குத் தொல்கதிர் திகிரியாற் பரவுதும் ஒல்கா உருமுறழ் முரசிற் றென்னவற் கொருமொழி கொள்க விவ்வுலகுட னெனவே (கலி. 104) எனவும், பாடிமிழ் பரப்பகத் தரவணை, யசைஇய ஆடுகொள் நேமியாற் பரவுதும் நாடுகொண் டின்னிசை முரசிற் பொருப்பன் மன்னி அமைவர லருவி யார்க்கும் இமையத் தும்பரும் விளங்குக வெனவே (கலி. 105) எனவும், அருந்தலை ஏற்றொடு காதலர்ப் பேணிச் சுரும்பிமிர் கானம் நாம் பாடினம் பரவுதும் ஏற்றவர் புலங்கெடத் திறை கொண்டு மாற்றாரைக் கடக்க வெம்மறங் கெழு கோவே (கலி. 106) எனவும், தம் வழிபடு தெய்வம் புறங்காப்பதாம் எனவும் நாடாள் வேந்தனாகிய பாண்டியன் வெற்றியும் புகழும் உடையனாய் நீடு வாழ்தல் வேண்டும் எனவும் வாழ்த்துதலால் இனிது விளங்கும். ஆயர்மகளிர் தொழுநையாற்றில் நீராடுங்கால் தம்முடைகளைக் களைந்து கரையில் வைத்துவிட்டு நீராடினர். அந்நிலையில் அங்குவந்த கண்ணபிரான் விளையாட்டாக அவர்தம் உடைகளைக் கவர்ந்து கொண்டு குருந்த மரத்தில் ஏறியமர்ந்தான். அப்பொழுது அங்குப் பலதேவன் வரக் கண்டு அவ்வாயர் மகளிர் தம் நாணினைக் காக்கவியாலது பெரிதும் வருந்தினர். அந்நிலையில் அம்மகளிர் பொருட்டுக் குருந்த மரக்கிளைகளின் தழைகளைத் தாழ்த்திக் கொடுத்து அம்மகளிர் தழையுடையில் தம் அற்றமறைத்துத் தம் உயிரினும் சிறந்த நாணினைப் பாதுகாத்துக் கொள்ளுமாறு செய்தருளினன் என்பது கண்ணன் விளையாடல் பற்றிய செய்தியாகும். இது, வடாஅது வன்புனல் தொழுநை வார்மண லகன்றுறை அண்டர் மகளிர் தண்டழை யுடீஇயர் மரஞ்செல மிதித்த மாஅல் போல (அகம். 59) எனவரும் அகநானூற்றுப் பாடலிற் குறிக்கப்பெற்றது. இச்செய்தி யினை, நீனிற வண்ணனன்று நெடுந்துகில் கவர்ந்து தம்முன் பானிற வண்ணன் நோக்கிற் பழியுடைத் தென்றுகண்டாய் வேனிறத் தானைவேந்தே வரிபுனற் றொழுநை யாற்றுட் கோனிற வளையினார்க்குக் குருந்தவ ணொசித்த தென்றான் (சிந்தாமணி. 209) எனவரும் பாடலில் திருத்தக்க தேவர் விரித்துரைத்துள்ளமை காணலாம். காத்தற் கடவுளாகிய திருமால், ஆழியாகிய சக்கரப் படையினை ஏந்தியமையின் ஆழி முதல்வன், ஆழியான், திகிரிச் செல்வன், திகிரியோன், நேமியான், நேமியோன் எனவும், கரிய திருமேனியுடைமை பற்றிமாயோன், முந்நீர்வண்ணன், அஞ்சன வுருவன், நீல்நிறவண்ணன் எனவும், கருடனைக் கொடியாகக் கொண்டமை பற்றிச் சேவலோங்குயர் கொடியோன், புட்கொடி விறல்வெய்யோன், புள்மிசைக் கொடியோன், புள்ளின் நீள்கொடிச் செல்வன் எனவும், திருமகளை மார்பிற் கொண்டமை பற்றித் திருமறுமார்பின் திரவமர்ச் செல்வன் எனவும், துழாய் மாலையை அணிந்தமை பற்றித் துழாயோன், துழாய்ச் செல்வன், துழாய் மார்பினோன் எனவும், பாம்பணையில் பள்ளி கொண்டமை பற்றி அரவணை அசைஇய நேமியோன், பாம்பணைப் பள்ளியமர்ந்தோன் எனவும், பாற்கடலில் அரவணை மிசை யோகநித்திரை கொள்ளும் நிலைகுறித்து அறிதுயிலோன் எனவும், குறளனாகச் சென்று மூவடி மண்வேண்டி மூவுலகும் ஈரடியால் அளந்தமை பற்றி ஞாலமூன்றடித் தாய முதல்வன் எனவும், பொன்னாடையுடுத்தருளல் பற்றிப் பொன்புனையுடுக்கையோன் எனவும், வியக்கத்தக்க தோற்றமும் செயல்களுமுடைமைபற்றி மாயவன் எனவும், வேதங்களாற் போற்றப்படும் முழுமுதற் பொருளாதல் பற்றி வேதமுதல்வன் வாய்மொழிப் புலவன் எனவும் சங்க இலக்கியங்களில் போற்றப் பெறுகின்றார். திருமாலின் அவதாரமாகிய இராமபிரான் தன் தேவியை வவ்விய தூர்த்தனாகிய இராவணனைக் கொல்லுதற் பொருட்டுக் கோடிக்கரையிலுள்ள ஆலமரத்தினடியில் தன் நண்பர்களுடன் அமர்ந்து போரில் வெற்றி பெறும் திறத்தினைச் சூழ்ந்து உரையாடிக் கொண்டிருந்தார். அந்நிலையில் அம்மரத்தில் உள்ள பறவைகளின் ஆர்ப்பொலிகள் மிக்கன. அதுகண்ட இராமபிரான் தம் கையினை அமர்த்திப் பறவைகளின் ஆரவாரம் உடனே யடங்கும்படி செய்தார். இராமாயணம் பற்றிய இச்செய்தி தமிழக மக்களாற் பேசப்பட்டு வருகிறது. இது வென் வேற் கவுரியர் தொன்முது கோடி முழங்கிடும் பௌவ மிரங்கு முன்றுறை வெல்போ ரிராமன் அருமறைக் கவிந்த பல்வீ ழாலம் போல ஒலியவிந்தன்றிவ் வழுங்க லூரே (அகம். 70) எனவரும் அகநானூற்றுப் பாடற் றொடரில் இடம் பெற்றுள்ளமை காணலாம். திருமால் அமிசமாகிப் பிறந்த பரசுராமன் மன்னர் மரபினரை வேரறக் கொன்று செல்லூர் எனும் ஊரிலே களவேள்வி செய்தான் என்ற செய்தி, கெடாஅத் தீயின் உருகெழு செல்லூர்க் கடாஅ யானைக் குழூஉச்ச மந்ததைய மன் மறுங் கறுத்த மழுவாள் நெடியோன் முன் முயன் றரிதினின் முடித்த வேள்விக் கயிறரை யாத்த காண்டகு வனப்பின் அருங்கடி நெடுந்தூண் போல (அகம். 220) என்ற தொடரால் அறியப்படும். சிவபெருமானும், திருமாலும் சங்கரநாராயணர் என ஒருவராகத் திகழும் தோற்றம், அந்திவானும், கடலும் சேர்ந்த தோற்றத்திற்கு உவமையாக அகநானூறு 360ஆம் பாடலில் எடுத்தாளப் பெற்றுள்ளது. வெருவரு கருந்திறல் இருபெருந் தெய்வத்து உருவுட னியைந்த தோற்றம் போல அந்தி வானமொடு கடலணி கெளாஅ வந்த மாலை (அகம். 360) என்பது அப்பாடற் பகுதியாகும். பிறரை வருத்தும் அச்சத்தினையுடைய அசுரர்கள் உலகத்திற்கு ஒளிவழங்கும் ஞாயிற்றைக் கவர்ந்து கொண்டு போய் மறைத்தார்களாக, வானத்தே ஒளிதரும் அஞ்ஞாயிற்றைக் காணாமையால் இருளானது உலகத்துயிர்களின் கண்களை மறைக்க, உலகம் துயருற்றது. உலகில் ஒளியின்மையால் அவ்வுயிர்கட்கேற்பட்ட துன்பத்தை நீக்கும் பொருட்டு, மை போலும் நிறம் வாய்ந்த திருமேனியையுடைய திருமால், அஞ்ஞாயிற்றை மீட்டுக் கொணர்ந்து இவ்வுலகின்கண் இருள் நீங்கும்படி வானகத்து நிலை நிறுத்தினார் என்பது புராண வரலாறாகும். இதனை, அணங்குடை யவுணர் கணக்கொண் டொளித் தெனச் சேண்விளங்கு சிறப்பின் ஞாயிறு காணாது இருள்கண் கெடுத்த பருதி ஞாலத்து இடும்பைகொள் பருவரல் தீரக் கடுந்திறல் அஞ்சன வுருவன் றந்து நிறுத்தாங்கு.... (புறம். 374) எனவரும் புறப்பாடலில் மாறோக்கத்து நற்பசலையார் எனும் புலவர் உவமையாக எடுத்தாண்டுள்ளமை இங்கு நோக்கத்தகுவ தாகும். திருமால் இராமபிரானாக அவதரித்துக் தாதை ஏவலால் சீதையுடன் காட்டின்கண் தங்கியிருந்தபோது இராவணன் வஞ்சனையால் வேற்றுருக்கொண்டு சீதையைக் கவர்ந்து வான்வழி விமானத்தில் செல்லும்போது சீதா பிராட்டி தான் அயலானாற் கவரப்பட்டுச் செல்லும் வழியைத் தன்னைப் பிரிந்து வருந்தும் இராமபிரான் கண்டு கொள்ளும்படித் தான் அணிந்த அணிகலன் களைக் கழற்றி விமானம் செல்லும் வழியே நிலத்திற்போட்டுச் சென்றாள் எனவும், அவ்வணிகலன்களைக் கண்டெடுத்த கிட்கிந்தையிலுள்ள குரங்குகள் அவ்வணிகலன்களை அணியும் முறைமையறியாது கண்டோர் நகைக்கும்படி மாறி அணிந்து கொண்டன என்ற செய்தி, கடுந்தெறல் இராமன் உடன்புணர் சீதையை வலித்தகை யரக்கன் வவ்விய ஞான்றை நிலஞ்சேர் மதரணிக் கண்ட குரங்கின் செம்முகப் பெருங்கிளை இழைப்பொலித் தாங்கு அராஅ அருநகை இனிது பெற்றிகுமே (புறம். 378) எனவரும் புறப்பாடலில் குறிக்கப்பெற்றுள்மை காண்க. கருவளர் வானத் திசையிற் றோன்றி உருவறி வாரா வொன்ற னுழியும் உந்துவளி கிளர்ந்த வூழூ ழூழியும் செந்தீச் சுடரிய வூழியும் பனியொடு தண்பெய றலைஇய வூழியு மனைவயிற் றுண்முறை வெள்ள ழூழ்கி யார்தருபு மீண்டும் பீடுயர் பீண்டி யவற்றிக்கும் உள்ளீ டாகிய விருநிலத் தூழியும் (பரி. 2 : 5-12) எனவரும் பரிபாடற்றொடர் உலகில் தோற்றவொடுக்கம் உரைப்பதாய் ஐம்பெரும் பூதங்களின் தோற்ற வொடுக்கத்தையும் புலப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. இத்தொடரில் வானத்து உருவறிவாரா ஒன்றனூழி, உந்துவளி கிளர்ந்த ஊழூழூழி, செந்தீச் சுடரியவூழி, தண்பெயல் தலைஇயவூழி, மீண்டும் வெள்ளம் மூழ்கி உள்ளீடாகிய இருநிலத்தூழி, கேழல் திகழ்வரக்கோலமொடு பெயரியவூழி என ஏழூழிகள் குறிக்கப்பெற்றன. ஊழிகள் ஏழு வகையின என்னும் இக்குறிப்பு, ஊழியேழான ஒருவா போற்றி எனவும், ஏழு கொலாமவர் ஊழி படைத்தன எனவும் வரும் திருநாவுக்கரசர் தேவாரத்திலும் இடம் பெற்றுள்ளமை காணலாம். பரம்பொருளினின்றும் ஆகாயம் தோன்றி, அதனின்றும் காற்றுத் தோன்றி, அதனின்றும் தீத் தோன்றி, அதனின்றும் நீர்தோன்றி, அதனின்றும் நிலம் தோன்றிற்று என்று வேதத்துள்ளும் கூறப்பட்டது என இத்தொடருக்கு வேதநெறிபற்றிப் பரிமேலழகர் தரும் விளக்கம் சங்ககாலத்தில் வாழ்ந்த திருமால் நெறியினர் பின்பற்றிய தத்துவக் கொள்கையினை ஒருவாறு புலப்படுத்தல் காணலாம். வைணவ சமயத்தினர் உலகு, உயிர், கடவுள் என்னும் முப்பொருள்களை முறையே சகசீவபரம் எனப் பகுத்துணரும் நிலையில் பல்பொருட் கொள்கையினராகக் காணப்படுகின்றனர் எனினும், அம்மூன்றனுள் உலகு, உயிர்களை முறையே பரம்பொருளுக்கு உடமையாகவும், அடிமையாகவும் அடக்கிய நிலையில் முடிந்த முடிபாகப் பரம்பொருள் ஒன்றே பொருள் என்னும் ஒருபொருட் கொள்கையினை உடன்படும் நிலையிலும் அவர்தம் தோத்திரப் பனுவல்கள் அமைந்துள்ளன. இறைவன் உலகுயிர்கட்கு நிமித்த காரணனாதலேயன்றி முதற்காரண மாகவும் உள்ளான் என்பது வைணவர் தத்துவக் கொள்கையாகும். மன்னுயிர்களும், உலகமும் மாயோனாகிய பரம்பொரு ளிடத்தே தோன்றி அவனிடத்திலேயே ஒடுங்குவன என்னும் இக்கொள்கை, தீவளி விசும்பு நிலனீ ரைந்து ஞாயிறுந் திங்களு மறனு மைவரும் திதியின் சிறாரும் விதியின் மக்களும் மாசி லெண்மரும் பதினொரு கபிலரும் தாமா விருவருந் தருமனு மடங்கலும் மூவே ழுலகமு முலகினுண் மன்பதும் மாயோய் நின்வயிற் பரந்தவை யுரைத்தேம் மாயா வாய்மொழி யுரைதர வலந்து (பரி. 3 : 4-11) எனவரும் பரிபாடற்பகுதியில் இடம் பெற்றுள்ளது. நித்தியமாகிய வேதம் தேவரும், மூவகை உலகுகளும், உயிர்ப் பன்மையும் நின்கட் டோன்றியவாறு அறிந்து கூறும். சிற்றறிவினே மாகிய யாம் அவற்றுட் சிலவற்றை முறை பிறழக் கூறுவதல்லது அவ்வாறு எல்லாம் கூறுதற்கு உரியம் அல்லம் என்பார், வலந்துரைத் தேம் என்றார் என இத்தொடரின் கருத்தினைப் புலப்படுத்துவர் பரிமேலழகர். எனவே சடமும், சித்துமாகிய எல்லாம் வாசுதேவன் பரிணாமமே ஆம் என்னும் பாஞ்சராததிரர் கொள்கைக்கு மூலமாக விளங்குவது மேற்காட்டிய பரிபாடல் பகுதி என்பது நன்கு புலனாம். சாங்கியர் கூறுமாறு தத்துவங்கள் இருபத்தைந்தெனக் கொள்ளுங் கொள்கை சங்க நூல்களில் இடம் பெற்றுள்ளது. பாழெனக் காலெனப் பாகென வொன்றென இரண்டென மூன்றென நான்கென வைந்தென ஆறென வேழென வெட்டெனத் தொண்டென, நால்வகை யூழியெண் ணவிற்றும் சிறப்பினை (பரி. 3) எனவரும் தொடரில் பாழ் என்றது புருடனை. புருடத்துவம் பிறிதொரு தத்தவம் பிறத்தற்கிடனாகாது என்பது சாங்கியர் கொள்கை. அவர் மதம் பற்றிப் புருட தத்துவம் பாழ் எனப் பெயர் பெற்றது. கால் என்றது ஆகாயம் முதற் பூதங்கள் ஐந்தினையும். இவை தாம் பிறவற்றினின்றும் தோன்றுதலானும், தம்மிடத்திலிருந்து பிற தோன்றுதற் கிடனாதலானும் கால் எனப் பெயர் பெற்றன. காலுதல் ஒன்றினின்று வெளிப்படுதல் அன்றி, தன்னிலிருந்து ஒன்றை வெளிப்படுத்துதல் என்ற இவ்விருபொருளில் ஈண்டு வழங்கப்பெற்றது. பாகு என்றது சொல்லல், இயங்கல், கொடுத்தல், விடுத்தல், இன்புறுதல் என்னும் தொழிலால் பாகுபாடுடைய வாக்கு,கால், கை, எருவாய், கருவாய் ஆகிய தொழிற் கருவி (கன்மேந்திரியம்) ஐந்தனையும் குறித்தபெயர். ஒன்று என்றது ஆகாயத்தின் பண்பாகிய ஓசையினை எல்லாப் பண்பிற்கும் முற்றோன்றுதலால் ஒன்றெனப் பட்டது என்பர் பரிமேலழகர். இரண்டு என்றது காற்றின் சிறப்புப் பண்பாகிய ஊறு. மூன்று என்றது தீயின் சிறப்புப் பண்பாகிய ஒளியினை. நான்கு என்றது நிலத்தின் சிறப்புப் பண்பாகிய சுவையினை. ஐந்து என்றது நிலத்தின் சிறப்புப் பண்பாகிய நாற்றத்தினை. ஆறு என்பன செவி, மெய், கண், நா, மூக்கு என்னும் ஞானேந்திரியங்கள் ஐந்தும் மனமும். ஏழு என்றது அகங்காரம். எட்டு என்றது மான். அஃதாவது புத்தி. தொண்டு என்றது மூலப் பகுதி. நால்வகை யுகங்களிலும் இவ்வெண் களால் நவிலப்படும் சிறப்பினை யுடையாய் என இவ்வாசிரியர் திருமாலைப் பரவியதன் கருத்து, பூதங்கள் ஐந்தும் கன்மேந்திரியங்கள் ஐந்தும், ஞானேந்திரியங்கள் ஐந்தும் புலன்கள் ஐந்தும், மனம் முதலிய அந்தக்கரணங்கள் மூன்றும் மூலப்பகுதியும் எனக் கூறப்பட்ட தத்துவங்கள் இருபத்தைந்தினாலும் எக்காலத்தும் ஆராயப்படும் பெருமையையுடையோன் திருமால் என்றவாறு, ஈண்டுத் தொண்டு எனப்பட்ட மூலப்பகுதி என்றும் நிலையுடையதாய், எல்லாவற்றையும் அடக்கும் விரிவுடையதாய், அறிவிலதாய், எல்லாப் பொருட்கும் காரணமாய், சத்துவம் இராசதம் தாமதம் என்னும் முக்குணங்களும் ஒப்ப நின்ற நிலையின தாய் அருவாய் உள்ளதாகும். இஃது இருபத்து நாலாம் தத்துவம். இதன்கண் தோன்றும் காரியம் புத்தி (மான்) முதல் நிலம் ஈறாக இருபத்து மூன்று தத்துவங்களாகும். இங்குக் கூறப்பட்ட தத்துவம் இருபத்து நான்கிற்கும் வேறாய், நிலைபேறும் விரிவும் உடையதாய், அருவாய், பலவாய், அறிவதும் செய்வதுமின்றி வெறும் அறிவு மாத்திரமாய் ஒன்றற்குக் காரணமாதலும் காரியமாதலுமின்றி நிற்கும் ஆன்மாக்கள் இருபத்தைந்தாம் தத்துவம் எனப்படும். இவ்விருபத்தைந்தாம் தத்துவமாகிய புருடன் வீட்டு நிலையிலும் , கட்டு நிலையிலும் ஒரு தன்மையனேயாம். புருடனுக்கு மலினம் என்பது இல்லை. தாமரை இலை நீர் போல் ஒட்டற்று நிற்பன். தோற்றமில் காலமாகப் புத்தியைச் சார்ந்த அவிச்சைவயத்தால் பாசங்களாற் பிணிப்புடையோன் எனப்பட்டு இவன்பால் இன்பதுன்ப உணர்வு தோன்றா நின்றது. புத்தி என்றது மூலப்பகுதியின் பரிணாமம் (திரிபு). அதுவே மான் என்றும் கூறப்படும். புத்தியாகிய அது பொறிவாயிலாக ஞானமாய்ப் பரிணமித்து உலகப் பொருள்களிற் செல்லும். புருடன் ஒன்றைச் செய்வான் என்பதும் புத்தி ஒன்றை அறியும் என்பதும் இவற்றிடையே உள்ள வேற்றுமை உணராமையால் கூறப்படும் கூற்றாகும். அறிவில் பொருளாகிய மூலப்பகுதியையும் அறிவுடைய புருடனையும் பகுத்து உணரவே அவிச்சை நீங்கும். அதுவே முத்தியாகும் என்பர் சாங்கியர். சாங்கியர் கூறும் இருபத்து நாலாம் தத்துவமாகிய குணதத் துவத்தின்மேல் இருபத்தைந்தாம் தத்துவம் வாசுதேவன் என்று ஒருவன் உளன். அவனே பரம்பொருள். அவனிடத்தினின்றும் கண்ணனும், அநிருத்தனும், மகரத்துவசனும் இரௌகிணேயனும் என நால்வர் உலகங்களைப் படைத்தற்கெனத் தோன்றினர். இந்த நால்வகை வியூகங்களால் சடமும் சித்தும் ஆகிய எல்லா உலகமும் படைக்கப் பட்டன. ஆதலால் எல்லாப் பொருள்களும் வாசுதேவனது பரிணாமமே ஆம். ஆதலால் பரம்பொருளாகிய வாசுதேவனை வழிபட்டு வாசுதேவன் உருவில் இலயமாதலே முத்தி என்பதாம் என்பது வைணவ சமயத்தாருள் ஒருபகுதியாகிய பாஞ்சாரத்திரர் கொள்கையாகும். சுவையொளி யூறோசை நாற்றமென் றைந்தின் வகைதெரிவான் கட்டே யுலகு (குறள். 27) எனவரும் திருக்குறளுக்கு, சுவையும் ஒளியும் ஊறும் ஒசையும் நாற்றமும் என்று சொல்லப்பட்ட தன்மாத்திரைகள் ஐந்தனது கூறுபாட்டையும் ஆராய்வான் அறிவின் கண்ணதே உலகம் என உரைவரைந்த பரிமேலழகர், அவற்றின் கூறுபாடாவன பூதங்கட்கு முதலாகிய அவைதாம் ஐந்தும், அவற்றின் கண் தோன்றிய ஆப் பூதங்கள் ஐந்தும், அவற்றின் (பூதங்களின்) கூறாகிய ஞானேந்திரியங்கள் ஐந்தும், கன்மேந்திரியங்கள் ஐந்தும் ஆக இருபதுமாம். வகை தெரிவான்கட்டு என உடம்பொடு புணர்த்ததனால், தெரிகின்ற புருடனும் அவன் தெரிதற்கருவியாகிய மான் அகங்கார மனங்களும் அவற்றிற்கு முதலாகிய மூலப்பகுதியும் பெற்றாம். தத்துவம் இருபத்தைந்தனையும் தெரிதலாவது மூலப்பகுதி ஒன்றிற்றோன்றியது அன்மையின், பகுதியே யாவதல்லது விகுதியாகாதெனவும், அதன்கண் (மூலப்பகுதியின் கண்) தோன்றியமானும், அதன்கண் (மானின்கண்) தோன்றிய அகங்காரமும், அதன்கண் (அகங்காரத்தின்கண்) தோன்றிய தன்மாத்திரைகளும் ஆகிய ஏழும் தத்தமக்கு முதலாயதனை நோக்க விகுதியாதலும், தங்கட்டோன்று வனவற்றை நோக்கப் பகுதியாதலும் உடைய வெனவும், அவற்றின்கண் (தன்மாத்திரையின்கண்) தோன்றிய மனமும் ஞானேந்திரியங்களும் கன்மேந்திரியங்களும் பூதங்களுமாகிய பதினாறும் தங்கட் டோன்றுவன வின்மையின் விகுதியேயாவ தல்லது பகுதியாகாவெனவும், புருடன் தானொன்றிற் றொன்றாமை யானும் தன்கட் டோன்றுவன இன்மையானும் இரண்டும் அல்லன் எனவும் சாங்கிய நூலுள் ஓதியவாற்றான் ஆராய்தல். இவ்விருபத்தைந்து மல்லது உலகெனப் பிறிதொன்றில்லையென உலகினதுண்மை யறிதலின், அவனறிவின் கண்ண தாயிற்று எனச் சாங்கியர் கூறும் இருபத்தைந்து தத்துவங்களை வகைப்படுத்துரைக்கின்றார். அவர் கூற்றுப்படி தத்துவத் தோற்றம் பின்வருமாறு அமையும். மூலப்பகுதி பகுதியே புருடன் - பகுதியும் அன்று விகுதியும் அன்று மான் பகுதியும் விகுதியும் என அகங்காரம் இரண்டுமாவன தன்மாத்திரை மனம் 1 ஞானேந்திரியம் 5 கன்மேந்திரியம் 5 பூதங்கள் 5 இவை பதினாறும் விகுதியேயாவன. விசும்பினின்று வளியும், வளியினின்று தீயும், தீயினின்று நீரும், நீரினின்று நிலமும் தோன்றின என்னும் வேத நூற் கொள்கையை அடியொற்றிய நிலையில் ஐம்பெரும் பூதங்கள் கால் என்ற பெயரால் 3 ஆம் பரிபாடல் 77ஆம் அடியில் குறிக்கப்பெற்றன என்பது பரிமேலழகர் தரும் விளக்கமாகும். சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்னும் தன்மாத்திரையினின்றும் முறையே ஐம்பெரும் பூதங்களும் தோன்றின என்னும் சாங்கியர் கொள்கையொடு இங்கு எடுத்துக் காட்டிய வேதநுற் கொள்கை வேறுபடுதல் காணலாம். பிரமத்தினின்று ஆகாயமும், ஆகாயத்தினின்று வளியும், வளியினின்று தீயும், தீயினின்று நீரும், நீரினின்று நிலமும் தோன்றின என்னும் வேதநூற்கொள்கை சாங்கியர்க்கு உடன்பாடன்று. சாங்கியர் கூறும் இருபத்தைந்து துத்துவப் பாகுபாடு வைதிகர்க்கு உடன் பாடன்று. சங்ககாலத்து வைணவ சமயத்தினர் எல்லாவற்றிற்கும் அடிப்படை யாகத் தத்துவம் இருப்தைந் தென்றும் சாங்கியர் கொள்கையைப் பொதுவாக உடன் பட்டனர் எனினும் ஐம்பெரும் பூதங்களின் தோற்றம் பற்றிக் கூறும் பொழுது விசும்பு முதலாகிய அவை ஐந்தும் ஒன்றினொன்று தோன்றின என்னும் வைதிக நூல் கொள்கையே தழுவினர் என்பது, பாழ்எனக் காலெனப் பாகென எனவரும் பரிபாடற் றொடராலும் கால் என்னும் சொற்குப் பரிமேலழகர் தரும் உரைவிளக்கத்தாலும் உய்த்துணரப்படும். இந்நிலைத் தெரிபொரு டேரி னிந்நிலை நின்னிலைத் தோன்றுநின் றொன்னிலைச் சிறப்பே (பரி. 2; 26-27) எனவரும் பரிபாடற் றொடரில் தெரிபொருள் என்றது உலகப் பொருள்களைத் தெரிந்துணரும் தன்மையினதாகிய உயிர்த் தொகுதியை. தெரிபொருள் என்னும் வினைத் தொகை தெரியும் பொருள் என நிகழ்காலத்தான் விரிக்கப்படும், உயிர்ப்பொருட்கு உணர்தற் பண்பு இயற்கை யாதலின் எனப் பரிமேலழகர் தரும் விளக்கம் பரிபாடலிற் காணப்படும் ஆன்மாவின் இலக்கணத்தை நன்கு புலப்படுத்தல் காணலாம். உயிர் எத்தன்மைத் தெனின் உணர்தல் தன்மைத்து எனவரும் சேனாவரையர் உரைத் தொடரும் இங்கு ஒப்பு நோக்கத் தகவதாகும். நின்னடி தலையுற வணங்கினேம் பன்மாண் யாமும் கலியி னெஞ்சினே மேத்தினேம் வாழ்த்தினேல் கடும்பொடும் கடும்பொடும் பரவுதும் கொடும்பா டறியற்க வெம்மறி வெனவே (பரி. 2 : 72-75) எனக் கீரந்தையார் என்னும் புலவர் திருமாலைப் பரவி வேண்டு கின்றார். இறைவனாகிய நின்னடியைத் துளக்கமில்லாத நெஞ்சினேமாய் வணங்கிப் பலகாலும் எம் சுற்றத்தோடும் சுற்றத்தோடும் ஏத்தி வாழ்த்தி எம் அறிவு தவறான நெறியில் வளைதலை m¿ahbjhÊf! என வேண்டிக் கொள்கின்றோம் என்பது இத்தொடரின் பொருளாகும். கடும்பு : சுற்றம்; கடும்பொடும் கடும்பொடும் என்னும் அடுக்கு பன்மை குறித்து வந்தது. எம் அறிவு தவறான நெறியில் வளையாதொழிக எனப் புலவர் வேண்டுதலால், உயிர்களின் அறிவு பொறிவழியே கோட்டமடையும் சிறுமையுடைத்த எனவும், எம்மறிவு அங்ஙனம் கோடுதலை m¿ahbjhÊf! என் இறைவனை வேண்டவே, அம் முதல்வனதருளால் தமக்கு வீடுபெறுதற்குச் சாதனமாகிய மெய்யுணர்வு கிடைத்தல் வேண்டும் எனவும் வேண்டினார் ஆயிற்று. எனவே, சிற்றறிவுடைய உயிர்களுக்கு மெய்யுணர் வளித்துப் பிறவிப் பிணிப்பினின்றும் நீக்கி வீடுபேற்றின்பம் வழங்கவல்ல தகுதி இறைவன் ஒருவனுக்கே உரியது என்பதும் கூறினாராயிற்று. எம்மறிவு கொடும்பாடறியற்கவென மெய்யுணர் வினையே வேண்டினார். வீடு அதனாலல்லது எய்தப்படாமையின் எனவரும் பரிமேலழகர் உரைவிளக்கம் இங்கு மனம்கொளத்தக்க தாகும். சிவபெருமான் நிலம், நீர், நெருப்பு, வளி, வான், ஞாயிறு, திங்கள், வேள்வி முதல்வனாகிய ஆன்மா என எண்பேருருவினனாக (அட்டமூர்த்தியாக) விளங்குகின்றான் என்பது சைவ சமயக் கோட்பாடாகும். தீவளி விசும்புநிலன்நீர் ஐந்து ஞாயிறுந் திங்களு மறனும் (பரி. 3 வரி. 4,5) எனவரும் பரிபாடலடிகளில் இக்கொள்கை இடம் பெற்றிருத்தல் காணலாம். “khnahna! khnahna!! மறுபிறப்பறுக்கும் மாசில் சேவடி, மணிதிகழ் உருவின் khnahna!” என அம்முதல்வனது சேவடி பெறுதற்குப் பலகாலும் எதிர்முகமாக்கிப் போற்றுகின்ற கடுவன் இளவெயினனார், அவன்கண் தோன்றிய பொருள்களைக் கூறத் தொடங்கி முதற்கண் ஈசற்கு (சிவனுக்கு) வடிவாகிய அட்டமூர்த்தங்கள் கூறுகின்றார். அவை தீ, வளி, விசும்பு, நிலம், நீர் என்னும் பூதங்களைந்தும் ஞாயிறும், திங்களும், வேள்வி முதல்வனும் என இவை வேட்கின்ற வடிவு தருமம் ஆதலில் அஃது அறன் எனப்பட்டது எனப் பரிமேலழகர் தரும் விளக்கம் சைவ சமயக் கோட்பாட்டினை உளம் கொண்டு கூறப்பட்டதாகும். அனாதியாய் வருகின்ற மரபினை உடைய வேதமுதல்வனாகிய திருமால் விரிந்து அகன்ற ஆகமங்கள் எல்லாவற்றாலும், அகங்காரத்தாலும், மனத்தாலும், புத்தியினாலும், மற்றும் எல்லாவற்றாலும் வனப்பும் எல்லையும் அறியப்படாதவன் என்பது, முன்னை மரபின் முதுமொழி முதல்வ நினக்குவிரிந் தகன்ற கேள்வி அனைத்தினும் வலியினு மனத்தினு முணர்வினு மெல்லாம் வனப்புவரம் பறியா மரபி னோயே (பரி. 3 : 47-50) எனவரும் பரிபாடலடிகளால் புலப்படுத்தப்பட்டது. வலியினும், மனத்தினும், உணர்வினும் என எண்ணப்பட்டவை முறையே அகங்காரம், மனம், புத்தி என்னும் அந்தக்கரணங்கள் மூன்றும் ஆகும். இப்பொருளை யான் அறிவேன் எனமேற்பட்டுச் செல்லும் வன்மையுடையது அகங்கார மாதலின் அது வலி எனப்பட்டது வலியுடையதனை வலி என்றார் எனப் பரிமேலழகர் தரும் விளக்கம் இவ்வகக்கருவியின் இயல்பினை நன்கு புலபடுத்தல் காண்க. இங்கு உணர்வு என்றது உணருங் கருவியாகிய புத்தியினை. ஒரு பொருளைப் பற்றும் அகக்கருவி மனம் எனவும், இதனையான் அறிவேன் எனமேற்கொண்டெழும் கருவி அகங்காரம் எனவும், நிச்சயிக்கும் கருவி புத்தி எனவும் கூறுப. அகக்கருவிகளாகிய இவற்றின் இயல்பினை உய்த்துணரும் நிலையில் வலியினும் மனத்தினும் உணர்வினும் எனவரும் இத்தொடர் அமைந்திருத்தல் கூர்ந்து நோக்கற்பாலதாகும். மனம், சித்தம், அகங்காரம், புத்தி என்னும் உட்கருவிகள் நான்கு. இவை அந்தக்கரணம் எனப்படும். இவற்றுள் மனம் என்பது ஐம்பொறிகளால் அறியப்பட்ட பொருள்களில் இது யாதாகற்பாலது என நினைத்தற்கும், இதுவோ, அதுவோ என ஐயுறுதற்கும், கருவியாய் நிற்பது. ஒன்றனைப்பற்றி இஃது எத்தன்மையது என நினைக்கும் நிலையில் மனம் எனவும், இதுவோ அதுவோ என விகற்பித்துணரும் நிலையில் சித்தம் எனவும், பெயர் பெறும் என மனத்தின் விருத்தியாகிய சித்தத்தை மனத்துள் அடக்கி அந்தக்கரணம் மூன்று எனவும் எண்ணுதல் மரபு. இறைவனது இயல்பினை உள்ளவாறு அறிவார்க்கும் இவர் பகைவர் இவர் நட்டோர் என்னும் வேறுபாடு அம்முதல்வனுக்கில்லை என்பது தெளிவாகப் புலனாகும். இந்நுட்பம், பகைவ ரிவரிவர் நட்டோ ரென்னும் வகையு முண்டோநின் மரபறி வோர்க்கே (பரி. 3 : 57,58) எனவரும் பரிபாடற் றொடரால் உணர்த்தப் பெற்றமை காணலாம். இத்தொடர் வேண்டுதல் வேண்டாமையிலான் எனவரும் தெய்வப்புலவர் வாய்மொழியினை அடியொற்றி அமைந்துள்ளமை காணலாம். எல்லாம் வல்ல இறைவன் உயிரறிவினாற் காண்டற் கரியனாயினும் தன்னை அன்போடு தியானிக்கும் அடியார்களுடைய நெஞ்சத்தை விட்டு நீங்காத நிலைமையனாய் அவர்தம் உணர்விற்கு எழுந்தருளியுள்ளான் என்பது, காணாமரப, நீயாநினைவ (பரி. 3. 84) எனவரும் தொடரில் இடம் பெற்றுள்ளமை காண்க. காண்டற் கரிய கடவுள் கண்டாய் கருதுவார்க் காற்ற வெளியன் கண்டாய் எனவும், கருதுவார் இதயத்துக் கமலத்தூறும் தேனவனை எனவும் வரும் அப்பர் அருள் மொழிகள் இங்கு ஒப்பு நோக்கத்தக்கன. செவிமுதலாகிய பொறிகள் ஐந்தின்வழிச் செல்லும் அவா ஐந்தினையும் மயக்கமற நீக்கி மைத்திரி, கருணை, முதிதை, இகழ்ச்சி என்னும் நான்கினாலும் சித்தத்தை மாசறுத்துத் தம்மைச் சமாதியாகிய ஒருநெறிக் கண்ணே செலுத்திய ஆர்வலராகிய யோகிகள் இறைவனை வணங்கி அவனது பொருள்சேர் புகழ்த் தரங்களை விரித்து விளக்கும் இயல்பினர் என்பது, ஐந்து இருளற நீக்கி நான்கினுள் துடைத்துத்தம் ஒன்றாற்றுப் படுத்தநின் ஆர்வலர் தொழுதேத்தி நின்புகழ் விரித்தனர் (பரி. 4. 1-3) எனவரும் தொடரால் புலப்படுத்தப் பெற்றது. உயிர்வாழ்க்கைக்கு இன்றியமையாத உலகப் பொருள்களில் காணப்படும் பண்புநலன்கள் அனைத்திற்கும் ஊற்றாக அமைந்தன உலக முதல்வனாகிய கடவுளின் இறைமைப் பண்புகள் என்பதனையும், உலகப் பொருள்களனைத்தும் திருமாலாகிய முதல்வனிடத்தே தோன்றி அவனிடத்தேயே ஒடுங்குவன என்பதனையும் விரித்து விளக்கும் நிலையிலமைந்தது, நின், வெம்மையும் விளக்கமு ஞாயிற்றுள நின், தண்மையும் சாயலும் திங்களுள நின், சுரத்தலும் வண்மையு மாரியுள நின், புரத்தலு நோன்மையு ஞாலத்துள நின், நாற்றமு மொண்மையும் பூவையுள நின், தோற்றமு மகலமு நீரினுள நின், உருவமு மொலியுமா காயத்துள நின், வருதலு மொடுக்கமு மருத்தினுள அதனால், இவ்வு முவ்வு மவ்வும் பிறவும் ஏம மார்ந்த நிற்பிரிந்து மேவல் சான்றன வெல்லாம் (பரி. 4,25-35) எனவரும் பரிபாடல் பகுதியாகும். உலகுயிர்களின் தோற்றமும் நிலைபேறும் ஒடுக்கமும் திருமாலாகிய முதல்வன் கண்ணே அமைந்தன என்பது மேற்காட்டிய தொடரின் கருத்தாகும். அறவாழி அந்தணனாகிய இறைவனது திருவருளை அம்முதல் வனுடைய திருவடியாக உபசரித்துக் கூறுதல் பழந்தமிழ் மரபு. இம்மரபு, அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால் பிறவாழி நீந்த லரிது (குறள். 8) எனவும், மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ் வார் (குறள். 3) எனவும் வரும் தமிழ் மறையால் புலனாகும். உயிர்களைப் பிறவிக் கடலினின்றும் கரையேற்றும் புணையாகவும், பேரின்பமாகிய வீடு பேற்றிற்கு நிலைக்களமாகவும் விளங்குவது இறைவன் திருவருளாகிய திருவடியே யென்பது திருவள்ளுவர் துணிபு. எனவே இறைவன் திருவடியே வீடுபேறாய் இருக்கும் என்பது தமிழ் மக்களது கோட்பாடாதல் புலனாம். இக்கொள்கை, நின்னிற் சிறந்த நின்தா விணையவை (பரி. 4,62) எனவரும் பரிபாடல் தொடரில் இடம் பெற்றுள்ளது. வீடளிக்குங்கால் நின்னினும் சிறந்த நின் தாளிணையை உடையை என இத்தொடருக்குப் பரிமேலழகர் எழுதிய உரை விளக்கம் இக்கருத்தினைப் புலப்படுத்தல் காணலாம். சேவடி படரும் செம்ம லுள்ளமொடு நலம்புரி கொள்கைப் புலம்பிரிந் துறையும் செலவுநீ நயந்தனை யாயின் எனவரும் திருமுருகாற்றுப்படைத் தொடரும், இதற்கு நச்சினார்க் கினியர் எழுதிய உரை விளக்கமும் இங்கு ஒப்பு நோக்கத்தக்கன். சங்க காலத் தமிழ் மக்கள் மாயோன், சேயோன், சிவன் என வேறுவேறு பெயரும், வேறுவேறு உருவும் உடைய நிலையில் பல்வேறு தெய்வ வழிபாடுகளை மேற் கொண்டிருந்தனராயினும், அங்ஙனம் வழிபடப்பெறும் எல்லாத் திருவுருவங்களும் முழுமுதற் பொருளாகிய ஒரு பொருளுக்குரியனவே என்னும் உண்மையினைத் தெளிந்திருந்தனர். இந்நுட்பம், அழல்புனர குழைகொழு நிழறரும் பலசினை ஆலமுங் கடம்பு நல்யாற்று நடுவும் கால்வழக் கறுநிலைக் குன்றமும் பிறவும் அவ்வவை மேய வேறுவேறு பெயரோய் எவ்வயி னோயு நீயே (பரி. 4, 66-70) எனத் திருமாலை முன்னிலைப்படுத்திக் கடுவன் இளவெயினனார் போற்றிப் பரவிய பரிபாடற் பகுதியால் இனிது புலனாகும். இங்ஙனம் பல்வேறு திருவுருவங்களில் வைத்து வழிபடப் பெறும் வழிபாடுகள், எல்லாம் வல்ல முழுமுதற் கடவுளாகிய ஒரு பொருளையே சென்று சாரும் என்பது, வேறு பல்லுருவில் கடவுள் பேணி எனவரும் குறிஞ்சிப் பாட்டடிகளானும் உய்த்துணரப்படும். சுவை முதலாகிய புலன்களும் அவற்றை நுகரும் கருவியாகிய ஐம்பொறிகளும் நீயே. ஓசை ஒன்றினால் உணரப்படும் விசும்பும், ஓசையும் ஊறுமாகிய இரண்டினால் உணரப்படும் காற்றும், ஓசை ஒளி ஊறு என மூன்றினால் உணரப்படும் தீயும், ஓசை ஒளி ஊறு சுவை என்னும் நான்கினால் உணரப்படும் நீரும், ஓசை ஒளி ஊறு சுவை நாற்றம் என ஐந்தினால் உணரப்படும் நிலமும் ஆகிய ஐம்பெரும் பூதங்களுமாக விளங்குவோன் திருமாலாகிய நீயே. ஆதலால், மூலப்பகுதியும், அறனும், அநாதியான காலமும், ஆகாயமும், காற்றோடு கனலும் கூடிய இம்மூவேழுலகத்து உயிர்களெல்லாம் நின்னிடத்தனவாயின எனத் திருமாலை முன்னிலைப்படுத்திப் போற்றும்நிலையில் அமைந்தது, சுவைமை இசைமை தோற்றம் நாற்றம் ஊறு அவையும் நீயே அடுபோ ரண்ணால் அவையவை கொள்ளுங் கருவியும் நீயே முந்தியாங் கூறிய ஐந்த னுள்ளும் ஒன்றனிற் போற்றிய விசும்பு நீயே இரண்டின் உணரும் நீரும் நீயே ஐந்துடன் முற்றிய நிலனும் நீயே அதனால, நின்மருங் கின்று மூவே ழுலகமும் மூலமும் அறமும் முதன்மையி னிகந்த காலமும் விசும்புங் காற்றொடு கனலும் (பரி. 13 : 14 - 25) எனவரும் பரிபாடற்பகுதியாகும். பாரிடை யைந்தாய்ப் பரந்தாய் போற்றி நீரிடை நான்காய் நிகழ்ந்தாய் போற்றி தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய் போற்றி வளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய் போற்றி வெளியுடை ஒன்றாய் விளைந்தாய் போற்றி (போற்றித் திருவகவல்) எனவரும் திருவாசகப் பகுதி இங்கு ஒப்புநோக்கற் பாலதாகும். மேற்குறித்த பரிபாடற் பகுதியில் மூலம் என்றது மூலப் பகுதியை. மூலப்பகுதியாவது, சாத்துவிகம், இராசதம், தாமதம் என்னும் குணங்கள் மூன்றும் தம்முள் ஒத்த நிலைமையது; ஆதலால், அது (மூலப்பகுதி) கூறவே, அறிவு அறியாமைகள் இன்பதுன்பங்கள் என்னும் உயிர்க் குணங்களும் அடங்கின. அறமாகிய சிறப்புடைக் குணம் கூறவே சிறப்பில் குணமாகிய பாவமும் அடங்கின்று. இதனால் ஈண்டு எண்ணப்பட்டவற்றது கூட்டம் உயிர் என்பது உணர்த்தப்பட்டது என இப்பகுதிக்குப் பரிமேலழகர் தரும் தத்துவ விளக்கம் சிந்தனைக்குரியதாகும். சாங்கியநூலார். முக்குணங்கள் மிக்கும் குறைந்தும் நில்லாது தம்முட் சமமாய் நின்றநிலையே மூலப்பகுதியென்றும், அதுவே காரியங்கள் எல்லாவற்றிற்கும் முதற்காரணமாய் நிற்பதன்றி மூலப்பகுதியாகிய அஃது ஒன்றன் காரியமாதல் இல்லையென்றும் கூறுவர். உணருந்தன்மையதாகிய உயிர் போகநுகர்ச்சிக்கு ஏதுவாகிய அவிச்சை, ஆங்காரம், அவா, ஆசை கோபம் ஆகிய பஞ்சக்கிலேசமென்னும் பும்த்துவ மலமுடையனாய்ப் புருடதத்துவம் எனப் பெயர் பெற்று நிற்றலின், ஈண்டு மூலப்பகுதி முதலாக எண்ணப்பட்டவற்றது கூட்டம் உயிர் என்பது உணர்த்தப்பட்டது என்றார் பரிமேலழகர். இங்கு மூலப்பகுதியொடு முதன்மையின் இகந்தகாலமும் எனத் தத்துவம் இருபத்தைந்தின் மேலாகக் காலம் என்னும் தத்துவம் எண்ணப் பெற்றுள்ளமை காணலாம். இதனால் தத்துவம் இருபத்தைந்து என்னும் சாங்கியர் கொள்கைக்கு வேறாகக் காலதத்துவம் உண்டெனக் கருதும் தத்துவக் கோட்பாடும் தமிழகத்தில் நிலவினமை உய்த்துணரப்படும். காலம் உலகம் உயிரே யுடம்பே (தொல்-சொல்-கிளவி) எனவரும் தொல்காப்பியச் சூத்திரத்திற் காலம் என்பது ஓருண்மைப் பொருட் கூறாகக் குறிக்கப்பெற்றுள்ளமை முன்னர் விளக்கப் பெற்றுள்ளமையும் இங்கு ஒப்பு நோக்கற் பாலதாகும். தொழில் நிகழ்ச்சியினை இறப்பு நிகழ்வு எதிர்வு என வரையறுப்பதாகிய கால தத்துவத்திற்கு அப்பாற்பட்டு எவ்வகை மாற்றமுமின்றி என்றும் ஒரு பெற்றியதாய் விளங்குவது முழுமுதற் பொருளாகிய கடவுள் என்னும் உண்மையினை முடிந்ததும் முடிவதும் முகிழ்ப்பதும் அவை மூன்றும் கடந்தவை யமைந்த கழனிழலவை (பரி. 13 ; 46-47) எனத் திருமாலைக் குறித்து நல்லெழுநியார் போற்றுவதாக அமைந்த தொடர் நன்கு புலப்படுத்துவதாகும். தோன்றியதும் தோன்றுவதும் தோன்றா நின்றதுமாகிய காலக் கூறுபாடுகளைக் கடந்து அவை தாம் பொருந்திய தாள் நிழலையுடையை என இத்தொடர்க்குப் பொருள் வரைந்தார் பரிமேலழகர். கடந்து அவை அமைந்த என்புழி அவை என்றது, எக்காலத்தும் அழியாது நிலைபேறுடைய உயிர்த்தொகுதியினை, இருமை வினையும் இல ஏத்தும் அவை என அடுத்துவரும் அடிக்கு நின்னையேத்தும் அன்பர் இருவினையும் உடையரல்லர் எனப் பரிமேலழகர் எழுதிய உரையால் இந்நுட்பம் இனிது புலனாதல் அறியற்பாலதாகும். மணங்கமழுந்துழாய் மாலையை யணிந்த மாயோனாகிய இறைவன் அருளால் வெளிப்பட்டுக் கொடுப்பினல்லது பிறிதொன்றிற் கில்லாத சிறப்பினையுடைய துறக்கவுலகம் உயர்களது அறிவு முயற்சியாற் சென்றடைதற் குரிய எளிமையுடையதன்று; அங்ஙனம் அரிதிற்பெறு துறக்கத்தை அன்பராயினார் எளிதிற் பெற்று இன்புறும் நிலையில் திருமால் எழுந்தருளிய மாலிருங்குன்றத்தை எல்லாருங் கேட்க ஏத்தக்கடவோம் என்று அறிவுறுத்தும் முறையில் அமைந்தது, நாறிணர்த் துழாயோன் நல்கினல்லதை ஏறுதல் எளிதோ வீறுபெறு துறக்கம் அரிது பெறுதுறக்க மாலிருங் குன்றம் எளிதிற் பெறலுரிமை யெத்துகம் சிலம்ப (பரி. 15 : 15-18) எனவரும் பரிபாடற் பகுதியாகும். அவனருளாலே அவன்தாள் வணங்கி (சிவபுராணம்) எனவரும் மணிவார்த்தை இங்கு ஒப்புநோக்கி யுணரத் தக்கதாகும். அசையும் அருவி மிக ஆரவாரித்து இழிதலாற் சிலம்பாறு அழகு செய்த வியக்கத்தக்க தன்மையது, திருவென்னுஞ் சொல்லோடும் மாலிருங்குன்றம் என்னுஞ் சொல் தொடர்ந்த மொழியாகிய திருமாலிருஞ்சோலை மலையெனவும், அதன் பெயரது பெருந்தன்மை நன்றாகப் பூமியின்கண் பரக்க எனவும், நிலைபெற்ற குளிர்ச்சியை யுடைய இளவெயில்சூழ அதனிடையே இருள் வளர்தலையொக்கப் பொன்னாடையுடுத்தோனாகிய திருமால் தன் தமையனாகிய பலதேவனோடும் அமர்ந்து நிற்கும் நிலையை மக்களே நினைந்து போற்றுமின் எனவும், சுனையிட மெங்கும் நீலமலர் மலர்ந்து தோன்ற அச்சுனை யினைச் சூழ்ந்த அசோகமரங்கள் மலர்தலாலும் காய்கனிகளோடு நிறம் மாறுபட வேங்கை மலர்தலாலும் மாயோனை யொத்த இனிய தெய்வத் தோற்றத்தையுடையது அம்மலை யெனவும், அது காண மயக்கமுதலிய குற்றங்களைறுப் பதாகிய வழிபடு தெய்வம் எனவும் திருமாலைச் சென்று தொழ மாட்டாதீர் அம்மலையினைக் கண்டு பணிமின்; அதனை நும் மனைவியரோடும் இருமுது குரவரோடும் குழந்தைகளோடும் சுற்றத் தாரோடும்கூட அம்மலையைத் தெய்வமாக மதித்துத் திசைநோக்கித் தொழுமின் எனவும் பதினைந்தாம் பரிபாடலில் இளம் பெருவழுதியார் உலக மக்களை நோக்கிக் கூறும் நிலையில் அமைந்த அறிவுரை, சங்ககாலத் தெய்வ வழி பாட்டில் மூர்த்தி தலம் தீர்த்தம் என்னும் மூவகை வழிபாடும் இடம் பெற்றிருந்தமையை இனிது புலப்படுத்தல் காணலாம். அவுணரை நேரே பொருது கொன்றானாகிய திருமால் வீற்றிருக்கும் அம்மலையின்கண் மரக்கிளைகளின் இடத்தவாகிய மயில்கள் அகவவும், குருக்கத்தி இலையுதிர அதன்கண் இருந்து குயிலினம் கூவவும் முழைக்கண் சிலம்புகின்ற இசை சுருதியை யுணர்த்துகின்ற குழலொழியும் மிடற்றுப்பாடலும் முழவோசையும் எதிர்ந்தாற் போன்றன. பகர்குழல் பாண்டில் இயம்ப அகவுநர் நாநவில் பாடல் முழவெதிர்ந்தன்ன, சிலம்பின் (15 : 42-4) என்று உவமை கூறினமையால் தெய்வ வழிபாட்டில் குழலொலியும் தாளமும் மிடற்றுப் பாடலும் முழவோசையும் இடம் பெறுவன என்பது பெறப்படும். தனது உந்தித் தாமரையொக்கும் கண்ணையுடையனாய் நீர் கொண்ட கார்முகிலும் இருளும் நீல மணியும் போலும் திருமேனியனாய் எல்லாவுலகினும் வெளிப்பட்டு அவ்விடத்து வாழும் உயிர்த்தொகுதிகளின் மயக்கத்தைச் செய்யும் பிறவித் துன்பத்தைக் களைவோன் அன்பினால் இருங்குன்றத்தின்கண் எழுந்தருளியுள்ளான் என்பதனை விளக்குவது, புவ்வத் தாமரைபுரையுங் கண்ணன் வௌவற்காரிருள் வயங்குமணி மேனியன் எவ்வயினுலகத்துந் தோன்றியவ்வயின் மன்பது மறுக்கத் துன்பங்களைவோன் அன்பது மேஎய் இருங்குன்றத்தான் (பரி. 15 : 49-53) எனவரும் பரிபாடற் பகுதியாகும். திருமாலின் அர்ச்சாவ தாரத்தை விரித்துரைப்பதாகிய இப்பகுதியில் எவ்வயினுலகத்தும் எனச் சகமாகிய உலகமும் மன்பது எனச் சீவனாகிய உயிர்த் தொகுதியும், மன்பது மறுக்கத் துன்பங்களைவோன் எனப் பரமாகிய இறைவனும் ஆக முப்பொருளுண்மை குறிக்கப் பெற்றுள்ளமை காணலாம். திருமால் முழுமுதற் பொருள் என்னும் தன் இறைமை நிலையில் இருந்து கொண்டே உலகில் முதலினும் இடையினும் இறுதியினும் படைப்பு, அளிப்பு, அழிப்பு என்னும் தொழில் வேற்றுமை பற்றி உயிர்களை உய்வித்தற் பொருட்டுப் பல்வேறு பிறப்புக்களை யுடையனாக இவ்வுலகிற் பிறந்தருளுதலாகிய அவதாரங்களை மேற் கொள்கின்றான் என்பதும் அங்ஙனம் அருள் காரணமாக இவ்வுலகிற் பிறப்பினும் அவ் அவதாரங்கள் அனைத்தும் அவனது இச்சை வயத்தால் கொள்ளப்படுவனவேயன்றி ஏனையுயிர் களைப் போன்று தன்னைப் பிறப்பிப்பார் ஒருவருமில்லாத் தனிமுதல்வன் திருமால் என்பதும் வைணவ சமயக் கோட்பாடாகும். முதன்முறை இடைமுறை கடைமுறை உலகத்துப் பிறவாப் பிறப்பிலை பிறப்பித் தோரிலையே (பரி. 3 : 71,72) எனவரும் பரிபாடலடிகளும், உலகில் முதலினும் இடையினும் இறுதியினும் படைப்பு அளிப்பு அழிப்பு என்னுந் தொழில் வேற்றுமைபற்றிப் பிறவாப் பிறப்புடையையல்லை; அங்ஙனம் பிறந்து வைத்தும் பிறப்பித்தோரை உடையையல்லை எனவரும் பரிமேலழகருரையும் இக்கொள்கையினை விளக்குதல் அறியத்தகுவ தாகும். உயர்வறவுயர்ந்த முழுமுதற் பொருளாற் பெறும் வீடுபேற்றினைப் பெரும்பெயர் எனவழங்குதல் தமிழ் மரபு. அரும்பெறல் மரபிற் பெரும் பெயர் முருக (269) என்பது திருமுருகாற்றுப்படை. பிறர்க்குப் பெறலரிய பெரும் பொருளையுடையமுருக என்பது இவ்வடியின் பொருள். பெயர்-பொருள். பெரும் பெயர் - பெரும்பொருள். பெரும்பொருள் என்றது வீடுபேற்றினை என்பர் நச்சினார்க்கினியர். திருமாலிருஞ்சோலை மலையில் காத்தற் கடவுளாகிய திருமால் கண்ணனும், நம்பி மூத்தபிரான் ஆகிய பலதேவனும் என இருவராக எழுந்தருளி பெறுதற்கு அரிய வீடுபேற்றினைத் தன்னடியார்க்கு வழங்க வல்ல பேரருளாளராகத் திகழ்தலின் பெரும் பெயர் இருவராகிய அவ்விருவரையும் வழிபட்டு இக்குன்றத்து அடியின்கண் உறைதல் எமக்கு எய்துக வென்று தொழுதுவேண்டுதும் என்பார், இருங்குன்றத் தடியுறையியைகெனப், பெரும் பெயரிருவரைப் பரவுதுந் தொழுதே (பரி : 15 : 65-66) எனப் போற்றுவர் இளம் பெருவழுதியார். சங்கச் செய்யுட்களில் திருமாலைக்குறித்தனவாக அஞ்சன உருவன், அரவணை அசைஇய நேமியான், ஆழி முதல்வன், ஆழியான், ஆலமர் கடவுள், சேவலோங்கு உயர் கொடியோன், ஞால மூன்றடித்தாய முதல்வன், திகிரிச் செல்வன், திகிரியோன், திருமறுமார்பன், துழாய்ச் செவ்வன், துழாய் மார்பினன், துழாயோன், துளபஞ்சூடிய அறிதுயிலோன், நிலந்தரு திருவின் நெடியோன், நீனிற் வண்ணன், நெடியோன், நேமியான், பாம்பணைப் பள்ளியமர்ந்தோன், புட்கொடி வெய்யோன், புள்மிசைக் கொடியோன், புள்ளணிநீள் கொடிச் செல்வன், பொன்புனை உடுக்கையோன், மாஅல், மால், மாயவண்ணன், மாயவன், மாயோன், மீயோன், முந்நீர்வண்ணன், வள்ளுருள் நேமியான், வாய்மொழிப்புலவன், வேதமுதல்வன் என்ற தொடர்கள் காணப்படுகின்றன. கருமை நிறமும், நீலமணிபோலும் ஒளியும்வாய்ந்த திருமேனியை உடையவர் திருமால் என்பதும், சக்கரப் படையினையும், சங்கினையும் திருக்கைகளில் ஏந்தியவர் என்பதும், பொன்னாடை உடுத்தவர் என்பதும், துழாய் மாலை அணிந்தவர் என்பதும், திருமகள் அமர்ந்த மார்பினை உடையவர் என்பதும், துளபமாலை அணிந்தவர் என்பதும், பாம்புக்குப் பகையாகிய கருடனை ஊர்தியாகவும் கொடியாகவும் உடையவர் என்பதும், பாற்கடலில் பாம்பணையிற் பள்ளி கொண்டுள்ளார் என்பதும் புலனாகும். படைத்தற் கடவுளாகிய நான்முகனைத் தன் உந்திக்க மலத்திலிருந்து தோற்றுவித்ததும், குறள் வடிவு கொண்டு மாவலிபால் மூவடி மண்வேண்டி நெடியோனாய் மூவுலகும் ஈரடியால் அளந்ததும், அவுணர்களை அழித்ததும், கேசி(கூந்தல்) என்னும் குதிரைவடிவாகிய அவுணனைக் கொன்றதும், பாம்பால் விழுங்கப்பட்ட திங்களை விடுவித்ததும், அவுணர் ஏறிவந்த களிற்றின் நுதலில் ஆழியை அழுத்தி அதனை ஓடச் செய்ததும், அவுணர்களால் மறைக்கப்பட்ட ஞாயிற்றை மீண்டும் விசும்பில் நிலைநிறுத்தி மன்னுயிர்களின் துன்பம் துடைத்ததும் திருமால் பன்றி உருக்கொண்டு தோன்றி நிலமகளைத் தனது கோட்டில் ஏந்திக் காத்ததும், பிரகலாதன் பொருட்டுத் தூணில் நரசிங்க வடிவாய்த் தோன்றியதும் இராமனாக அவதரித்துத் தன் தேவியைக் கவர்ந்த இராவணனைக் கொன்றழித்தற் பொருட்டுத் தனுக்கோடியில் ஓராலமரத்தின் நிழலில் தன் நண்பர்களுடன் அமர்ந்து ஆழ்ந்து சிந்தித்ததும் கண்ணனாக அவதரித்த நிலையில் கண்ணனும் அவனுடைய தமையனாகிய பலதேவனும் என இரு பெருந் தெய்வமாகப் போற்றப்பெற்றமையும் ஆகிய திருமாலின் அவதார நிகழ்ச்சிகள் பரிபாடலில் இடம் பெற்றுள்ளன. கண்ணன் தொழுநை ஆற்றில் நீராடும் ஆய மகளிருடைய ஆடையைக் கவர்ந்து குருந்தில் மேல் ஏறி அமர்ந்தபோது அங்கே பலதேவன் வரக்கண்டு அக்குருந்தின் கிளைகளைத் தாழ்த்தி ஆயமகளிர்தழை உடையால் தம் அற்றம் மறைக்குமாறு செய்ததும், தன் ஊர்தியாகிய கருடன் செங்கண்மாலே எனக் கதறும்படி அவனைத் தன் கால் விரலாலே அழுத்தியதும், திருமாலின் அவதாரமாகக் கருதப்படும் பரசுராமனாகிய மழுவாள் நெடியோன் மன்னர் மரபினரைக் குலமறக் கொன்று வேள்வி செய்ததும் ஆகிய செய்திகள் சங்கச் செய்யுட்களில் இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்க தாகும். உலகம் எல்லாவற்றையும் தோற்றி ஒடுக்கும் முழுமுதற் பொருளாகிய சிவபெருமானும், காத்தற் கடவுளாகிய திருமாலும் ஒருவரே என உணர்த்தும் முறையில் பண்டையோரால் வழிபடப் பெற்ற சங்கர நாராயணர் திருமேனி, செந்நிற அந்திவானமும், கருநிறக் கடலும் ஒருங்குசேர்ந்த இயற்கைத் தோற்றத்திற்கு உவமையாக அகம். 360-ஆம் பாடலில் ஆளப்பெற்றுள்ள குறிப்பினைக் கூர்ந்து நோக்குங்கால் சிவபெருமான் திருமேனியும் திருமால் திருமேனியும் அவற்றிடையே பொருளால் வேறுபாடில்லை என்னும் ஒருமைத் தன்மை இனிது புலனாதல் காணலாம். திருமகள் திருமால் வழிபாட்டில் திருமாலின் தேவியாகிய திருமகளும், திருமாலின் உந்தித் தாமரையில் தோன்றிய நான்முகனும், திருமாலின் மக்களாகக் காமன், சாமன் என்பவர்களும் சார்பு நிலைத் தெய்வங்களாக இடம் பெற்றுள்ளனர். திருமாலின் தேவியாகிய திருமகள் அம்முதல்வனது மார்பில் அமர்ந்துள்ளமை செய்யோள் சேர்ந்த நின் மார்பின் அகலம் (பரி.) எனவும், மாயவன் மார்பில் திருப் போல (கலி.) எனவும் வரும் சங்க இலக்கியத் தொடர்களில் குறிக்கப்பெற்றது. திருமகளாகிய தேவியைத் தன் மார்பகத்துக் கொண்டமை பற்றித் திருவமர் மார்பன் எனவும் திருமறு மார்பன் எனவும் திருமால் போற்றப் பெற்றுள்ளார். திருமகள் தன் இரு மருங்கும் இரண்டு யானைகள் நின்று பூநீர் மேற்சொரியச் செந்தாமரை மலர்மேல் எழுந்தருளியிருக்கும் தோற்றம், கதிர்விரி கனை சுடர்க் கவின்கொண்ட கடுஞ்சாரல் எதிர்எதிர் ஓங்கிய மால்வரை யடுக்கத்து அதிர்இசை யருவிதன் அஞ்சினை மிசைவீழ முதிரிணர் ஊழ்கொண்ட முழவுத்தாள் எரிவேங்கை புரிநெகிழ் தாமரை மலரங்கண் வீறெய்தித் திருநயந் திருந்தன்ன தேங்கமழ் விறல் வெற்ப (கலி.44) எனவரும் குறிஞ்சிக் கலியில் உவமையாக கலித்தாளப் பெற்றுள்ளது. எதிரெதிரே ஓங்கிய பெருமையையுடைய மலையினது அகற்சியை யுடைய சாரலில் இள ஞாயிற்றினது விரிகின்ற கதிர்களையுடைய அழகிய மாணிக்கப் பாறையிலே வளர்ந்து நிற்கப்பட்டு முழங்குகின்ற ஓசையினை உடையவாய் இருபக்கத்து மலைகளினின்றும் வீழ்கின்ற அருவி தன் அழகிய கிளைகளிலே வீழ்தலாலே முதிர்ந்த பூங்கொத்துக்கள் அலர்தல் கொண்ட முழவு போலும் அடியினையும் நெருப்புப் போலும் பூக்களையும் உடைய வேங்கைமரம் புள்ளி பொருந்திய மத்தகத்தினையும் அழகினையும் உடைய இரண்டு யானைகள் இரு மருங்கும் நின்று பூவொடு கூடிய நீரைச் சொரியா நிற்க, எக்காலமும் முறுக் கவிழ்ந்து மலர்ந்துள்ள செந்தாமரை மலரினது அழகிய அகவிதழிலே வீறு பெறத் திருமகள் விரும்பி எழுந்தருளியிருந்தாலொத்த தேனாரும் வெற்றியினையுடைய வெற்பனே என்பது மேற்குறித்த தொடரின் பொருளாகும். மாணிக்கப் பாறைக்குச் செந்தாமரை மலரும், அதன் நடுவே பொன்மலர்பூத்த தோற்றமுடைய வேங்கை மரத்துக்குத் திருமகளும், அம்மரத்தின் இருபுறத்தும் அருவி நீரைச் சொரியும் நிலையில் உயர்ந்து தோன்றும் மலைகள் இரண்டிற்கும், திருமகளின் இருமருங்கு நின்றும் பூநீர் மேற் சொரியும் இரண்டு யானைகளும் உவமையாகக் கூறப்பட்டன. இங்ஙனம் இருமலைகளினிடையே யமைந்த மாணிக்கப் பாறையின் நடுவே பொற்பூக்களுடன் தோன்றும் வேங்கை மரத்திற்கு இரு வேழங்கள் பூநீர் மேற் சொரியச் செந்தாமரை மலரில் எழுந்தருளிய வேழத்திருமகளை (கஜலட்சுமியை) உவமையாகக் கபிலர் எடுத்துக் கூறுதலால் வேழத்திருமகள் திருமேனி சங்க காலத்திற் பலராலும் வழிபடப் பெற்ற தொன்மையுடையதென்பது நன்கு துணியப்படும். செந்தாமரை மலர் தன்கண் திருமகள் வீற்றிருத்தல் பற்றித் தெய்வத்தாமரை எனச் சிறப்பிக்கப்படுவதாயிற்று. திருமகள் செந்தாமரை மலரில் வீற்றிருத்தலால் அத்தெய்வத்திற்கு மலர் மகள் என்பதும் பெயராயிற்று. தாமரையினாள் எனப் போற்றுவர் திருவள்ளுவர். திருமகளுக்குச் செந்நிறத்திருமேனி உடைமை பற்றிச் செய்யோள் எனவும் அழைத்தலுண்டு. செய்யோள் சேர்ந்த நின்மாசிலகலம் என்பது பரிபாடல். பொருளுடமைக்குத் தெய்வமாக விளங்குபவள் திருமகள். எனவே திருமகளது அருள் நோக்கு மக்களுக்குத் திருவுடைமையாகக் கருதப் பெற்றது. நான்முகன் எல்லாம்வல்ல இறைவன் துணையால் உலகைப் படைக்கும் தொழிலுடையவன் நான்முகன் ஆவான். உலகில் உயிர்கள் உடம்பொடு படைக்கப் படுவதற்கு முன்னே திருமாலுடைய உந்தித் தாமரையில் முதற்கண் தோன்றியவன் நான்முகன். இச்செய்தி, நீல்நிற உருவின் நெடியோன் கொப்பூழ் நான்முக ஒருவற் பயந்த பல்லிதழ்த் தாமரைப் பொகுட்டின் (பெரும்பாண். 402-404) எனவரும் தொடரால் புலனாகும். உலகப் படைப்பிற்கு முன் தோன்றியவன் நான்முகன் ஆதலின், அத்தெய்வத்தைத் தொடங்கற்கண் தோன்றிய முதியவன் (பாலைக்கலி-1) எனவும், ஆதியந்தணன் (பரிபாடல் 5) எனவும் சங்கச் செய்யுட்கள் கூறும். இவன் திருமாலின் உந்தித் தாமரையில் தோன்றினமையால், இத்தெய்வத்தைத் திருமாலின் மைந்தனாகப் போற்றுதல் மரபு. நான்முகனின் தந்தை திருமால் என்னும் இம்மரபு, வாய்மொழி ஓடை மலர்ந்த தாமரைப் பூவினுள் பிறந்தோனும் தாதையும் நீ யென மொழியுமால் அந்தணர் அருமறை (பரி. 3 : 12-14) எனவரும் பரிபாடற் பகுதியால் புலனாதல் காணலாம். தாமரைப் பூவினிற் பிறந்தமையால் மலர் மிசை முதல்வன் எனவும், பூவன் எனவும் பரிபாடல் கூறும் புலமும் பூவனும் நாற்றமும் நீ எனவரும் பரிபாடற்றொடரில் பூவினிற்றோன்றிய நான்முகன் பூவன் என்ற பெயரால் குறிக்கப் பெற்றுள்ளமை காண்க. நான்முகன் என்பது நான்கு முகங்கள் உடையனாதல் பற்றிய காரணப்பெயர். அசுரரைத் தடிந்து அமரரைக் காத்த முருகப் பெருமான் படைத்தற் கடவுளாகிய நான்முகனை வெகுண்டு தண்டித்தானாக, அந்நிலையில் அம்முதல்வனது வெகுளியைத் தணித்த நான்முகனை மீண்டும் படைப்புத் தொழிற்கு உரியனாக்குதல் வேண்டிக் கருடக் கொடியோனாகிய திருமாலும், உமையொருபாகனாகிய இறைவனும், தேவர் முப்பத்துமூவரும், பதினெண்கணங்களும் முருகப் பெருமானைக் காண வான் வழியே வந்தனர் என்ற செய்தி திருமுருகாற்றுப்படையில் (திருவாவினன்குடி பற்றிய பகுதியில்) விரித்துரைக்கப்பெற்றது. முருகப்பெருமான் நான்முகனை வெகுண்டமை பற்றிய செய்தி புராணங்களில் வேறு வேறாகக் கூறப் பெற்றுள்ளது. திருக்கயிலாய மலையில் எழுந்தருளிய சிவபெருமானை வணங்கச் செல்லும் நான்முகன் அங்கு எழுந்தருளிய இளங்குழந்தையாகிய முருகப் பெருமானை வணங்காது சென்றானாக, அந்நிலையில் முருகப் பெருமான் நான்முகனை அழைத்துப் பிரணவத்தின் பொருள் யாதென வினவ, நான்முகன் பொருள்கூற அறியாது மயங்கியநிலையில் அவனைச் சிறையிலடைத்து அவனுக்குரிய படைத்தற் றொழிலைத் தானே மேற்கொண்டருளினான் எனக் கந்தபுரணாம் கூறும். முருகப் பெருமான் அஷிணரை அஷீத்துத் தேவரைக் காத்தருஹீய பிலைழீல் ஜீண்ணோர்க்கரசனாகிய ஹிந்ணிரன் தன்மகள் தெய்வயானையாரை முருகனுக்குத் ணிருமணம் செய்து கொடுத்தஜீடத்தே, முருகன் தன் கைழீலுள்ள வேலை நோக்கி நமக்கு எல்லாம் தந்தது ஹிவ்வேல்’ என்று கூறியருள, அருகே ஹிருந்த நான்முகன் ‘ஹிவ்வேஸீற்கு ஹிந்பிலை என்னால் வந்ததன்றோ?’ என்றானாக, அதனைக் கேட்ட முருகன் ‘நம்கைழீல் வேலுக்கு நீ கொடுப்பதொரு சக்ணி உண்டோ?என்று சினந்து இவ்வாறு கூறிய நீ மண்ணிடைச் செல்வாய் எனச் சபித்தனன் எனவும், அயனது சாபத்தை நீக்கியருள வேண்டும் என முருகப் பெருமானை வேண்டிக் கொள்ளுதற் பொருட்டே திருமால் முதலிய தேவர்கள் ஆவினன் குடியை அடைந்தனர் எனவும் நச்சினார்க்கினியர் ஒரு கதையினைக் குறிப்பிடுகின்றார், இக்கதைக்குரிய ஆதாரம் இன்னதென்று அறிந்துகொள்ள இயலவில்லை. அது எவ்வாறாயினும் திருமால் முதலியோர் முருகப் பெருமான் எழுந்தருளிய திரவாவினன் குடிக்கு வந்ததன் நோக்கம் நான்முகனிடத்தே முருகப்பெருமான் கொண்டுள்ள வெகுளியைத் தணித்தற்பொருட்டே என்பது நான்முக ஒருவற் சுட்டி என்ற தொடரால் நன்கு துணியப்படும். சிவபெருமான் முப்புரங்களை அழித்தற்கு வையமாகிய தேரினை ஊர்ந்து புறப்பட்டபோது நான்முகன் தேர்ப்பாகனாக இருந்து அத்தேரைச் செலுத்தினான் என்ற செய்தி, ஆதியந்தணன் அறிந்து பரி கொளுவ வேத மாபூண் வையத் தேர் ஊர்ந்து (பரி. 5) எனவரும் தொடரில் விரித்துரைக்கப்பெற்றது. படைத்தற் கடவுளாகவும் திருமாலின் மைந்தனாகவும் நான்முகன் சங்க இலக்கியங்களில் குறிக்கப்பட்டிருப்பினும், அத் தெய்வத்திற் கெனத் தனி வழிபாடு தமிழகத்தில் நிலவியதாகத் தெரியவில்லை. புறநானூறு 56ஆம் பாடலில் மணிமிடற்றொனாகிய சிவனும், பனைக் கொடியோனாகிய பலதேவனும், கருடக் கொடியோனாகிய திருமாலும், செவ்வேளாகிய முருகப் பெருமானும் ஞாலங் காக்குங் கால முன்பிற் றோலா நல்லிசை நால்வர் எனப் போற்றப் பெற்றுள்ளனர். ஒருகுழை ஒரு தேவனாகிய பலதேவன் பரிதியஞ் செல்வனாகிய ஞாயிறு, மீனேற்றுக் கொடியோனாகிய காமவேள், அவன் தம்பியாகிய சாமன், ஆனேற்றுக் கொடியோனாகிய சிவன் ஆகிய ஐந்து தெய்வங்களுடைய நிறத்தின் தன்மை போலப் பூங்கொத்துக்கள் பொருந்திய வெண்கடம்பும், அரும்புகள் அலர்ந்த செருந்தியும், ஞிமிறுகள் ஆரவாரிக்கும் காஞ்சியும், பூக்கள் நெருங்கிய ஞாழலும், பூக்கும் காலத்து எதிர் கொண்ட அரும்புகளை உடைய இலவமும் அழகுபெற்று விளங்க, இளவேனில் வந்த தோற்றம் பாலைக்கவி 25ஆம் பாடலில் உவமை வாயிலாக விரித்துரைக்கப்பெற்றது. இப்பாடலில் மீனேற்றுக்கொடியோன் நிறத்தை ஒத்துப் பூப்பது காஞ்சி எனவும், அவனுடைய தம்பி சாமன் நிறத்தை ஒத்துப் பூத்தது ஞாழல் எனவும் குறிக்கப் பெற்றமையால் உடன் பிறந்தாராகிய காமன், சாமன் என்ற இருவரும் மேனியின் நிறத்தால் வேறுபடுவர் என்பது புலப்படுத்தப் பெற்றது. காமவேள் தம்பியின் பெயர் சாமன் என்பது, கவர்கணைச் சாமனார் தம்முள் (கலி. 29 : 34) எனக் காமன் குறிக்கப் பெற்றிருத்தலால் புலனாகும். காமன் சாமன் என்னும் இவ்விருவர்க்கும் தந்தையாவான் திருமால் என்பது இருவர் தாதை இலங்கு பூண்மால் எனவரும் பரிபாடலடியினால் அறியப்படும். மாலின் மைந்தராகிய இவ்விருவருள் கருவேளாகிய காமனுக்குச் சங்க காலத்தில் தனிக் கோயில் அமைந்திருந்தது என்பதும், மணமாகாத இளமகளிர் அக்கோயிலை அடைந்து பால் மடைகொடுத்துக் காமனை வழிபடுவர் என்பதும், படையிடுவான் மற்கண்டீர் காமன் மடையடும் பாலொடு கோட்டம்புகின் (முல்லைக்கலி 9) எனவரும் கலித்தொகைத் தொடரால் அறியப்படும். இவள் தெய்வத்திற்குப் பலியாகச் சமைக்கும் பாலோடே காமன் கோயிலிலே செல்லின், அக்காமனும் நெஞ்சழிந்து தன்கையிற் படையை மிகவும் போகடுவன் (கீழே எறிவான்). காமன் மாயோன் மகனாதலின் அவனும் அந்நிலத்திற்குத் தெய்வமாதல் அவ்வகை பிறவும் (தொல். அகம் : 18) என்றவழி வகை என்பதனாற் கொள்ளப்பட்டது என மேற்காட்டிய தொடர்க்கு நச்சினார்க்கினியர் உரையும் விளக்கமும் தருவர். முல்லை நிலத்திற்குத் தெய்வமாக மாயோன் கூறப்பட்டதனை அடுத்து அவன் மகனாகிய காமன் முல்லை நிலத்தின் தெய்வ வகையாகக் கருதி வழிபடப் பெற்றனன் என்பது நச்சினார்க்கினியர் உரை விளக்கத்தால் உய்த்துணரப்படும். இளவேனிற் காலத்திலே காமவேளுக்குத் தமிழகத்தில் விழா எடுக்கப் பெற்றது என்ற செய்தி, காமவேள் விழவாயின் (கலி. 22) எனவும், உயர்ந்தவன் விழவினுள் (கலி. 30) எனவும், வில்லவன் விழவினுள் (கலி. 35) எனவும் வரும் கலித்தொகைத் தொடரால் இனிது புலனாகும். காமவேள் மகர மீன் எழுதிய கொடியை உடையவன் என்பது, மீனேற்றுக் கொடியோன் எனவும், சுறாக் கொடியோன் (கலி. 144) எனவும் வரும் தொடர்சளால் குறிக்கப்பெற்றது. பிரிந்த காதலர் உள்ளத்தே காம உணர்வினைத் தோற்றுவித்து அவர்களை ஒருங்கு கூட்டுதல் காமனது தொழில். ஆதலின் காமன் கரும்பு வில்லிற் றொடுத்து எய்யும் மலரம்பு பிரிந்தாரை வருத்தும் தன்மையதாகும் இந்நுட்பம், தன்னெஞ் சொருவற் கினைவித்தல் யாவர்க்கும் அன்னவோ காம நின்அம்பு (கலி. 147) எனவரும் தொடராலும் காமா நின்னுடைய அம்புகள் தனக்கு உரியதாகிய நெஞ்சினைத் தன்மேல் அன்பிலாதான் ஒருவன் பொருட்டு வருந்துவித்தல் சிலர்க்கேயன்றி எல்லார்க்கும் ஆம் தன்மையை உடையவோ? அல்லவோ? எனவரும் நச்சினார்க்கினியர் உரையாலும் புலப்படுத்தப் பெற்றது. காமனுக்கு வில் கரும்பாகும். இச்செய்தி, நெடுமென்றோள் பெய் கரும்பு ஈர்க்கவும் வல்லன் (கலி. 142-143) எனவரும் தொடராலும் நெடிதாகிய மென்தோளிலே காமன் சிலையாகிய எழுதுகரும்பை எழுதவும் வல்லன் எனவரும் உரையாலும் உய்த்துணரப்படும் இரதி காமவேளின் மனைவியின் பெயர் இரதி என்பதாகும். இரதி காமன் இவள் இவன் எனா (பரி. 19 : 48) எனவரும் பரிபாடலடிகளில் காமனும், அவன் தேவியாகிய இரதியும் குறிக்கப் பெற்றுள்ளமை காணலாம். குறிஞ்சிக் கடவுளாகிய முருகப் பெருமான் மாலின் தங்கையாகிய கொற்றவைக்கு மகனாதலின் திருமாலுக்கு மருகன் என்றும் உறவு முறையில் வைத்துப் போற்றப் பெற்றுள்ளான். மாஅல் மருகன் (பரி. 19: 57) எனவரும் பரிபாடற்றொடர் இவ்வுறவுமுறையினைப் புலப்படுத்தல் காண்க. முருகன் வழிபாடு மைவரை உலகமாகிய குறிஞ்சி நிலத்திற்குரிய தெய்வமாகத் தொல்காப்பியம் கூறும் சேயோன் வழிபாடு முருகமர் மாமலைகள் எல்லாவற்றிலும் குன்றுதோறாடல் என்ற முறையில் பொதுவாக நிகழ்வதாயினும், கடைச் சங்ககாலத்தில் மதுரையை அடுத்துள்ள திருப்பரங்குன்றம், கடற்கரை ஊராகிய திருச்சீரலைவாய், மலையைச் சார்ந்த ஊராகிய திருவாலினன்குடி, திருவேரகம், மலைப்பகுதியாகிய பழமுதிர்சோலை என்னும் திருப்பதிகளே மிகவும் சிறப்பு முறையில் நிகழ்த்து வந்தது. இச் செய்தி, பத்துப்பாட்டுள் முதலாவதாகிய திருமுருகாற்றுப்படையிலும், எட்டுத் தொகையுள் ஒன்றாகிய பரிபாடலிலும் நன்கு விரித்துரைக்கப்பெற்றுள்ளது. தொல்காப்பியனார் காலத்தில் வள்ளிநாச்சியார்க்குரிய கணவனாகப் போற்றப்பெற்ற முருகப் பெருமான் கடல் நடுவே இருபேருருவினனாய் எதிர்த்து நின்ற அவுணர் தலைவனாகிய சூர்மாவைத் தன் திருக்கையில் ஏந்திய வேற்படையால் தடிந்தும், குருகொடு பெயர்பெற்ற குன்றமாகிய கிரௌஞ்ச மலையைப் பிளந்தும், தேவர்களது துயரைத் துடைத்து வானோர் தலைனாகிய இந்திரன் மகள் தெய்வாயானையைத் திருமணம் புரிந்து வள்ளி, தெய்வயானை என்னும் இருவர்க்கும் உரிய கணவனாகவும், ஆலின்கீழ் அமர்ந்து முனிவர்க்கு அறம் உரைத்தருளிய சிவபெரு மானுக்கும், அம்முதல்வனோடு பிரிவின்றி இணைந்த ஆற்றலாய் இழையணி சிறப்பிற் பழையோள் எனவும், வெற்றி வெல்போர்க் கொற்றவை எனவும், மலைமகள் எனவும் போற்றப்பெறும் உமையம்மையார்க்கும் உரிய மைந்தனாகவும் இயைத்துப் போற்றப் பெறுகின்றான். தொல்காப்பியனாரால் நிலங்கடந்த நிலையிற் பொதுவாகக் குறிக்கப்பட்ட கொற்றவை என்னும் தாய்த் தெய்வம் கடவுள் எனப் போற்றப் பெறும் சிவபெருமானுக்குரிய சக்தியாகவும், முல்லை நிலத் தெய்வமாகிய மாயோனுக்குத் தங்கையாகவும், குறிஞ்சி நிலத் தெய்வமாகிய சேயோனுக்குத் தாயாகவும் எண்ணி வழிபடப் பெறும் உறவு நிலையைப் பெற்றுக்காடுகிழாளாகவும், முல்லையும் குறிஞ்சியும் திரிந்த பாலை நிலத் தெய்வமாகவும் வழிபடப்பெறுவதாயிற்று. கொற்றவை மைந்தனாகிய முருகன் அவள் தமையனாகிய திருமாலுக்கு மருகனாகப் போற்றப் பெறும் உறவுமுறை பரிபாடலில் இடம்பெற்றுள்ளமை முன்னர்க் குறிப்பிடப்பெற்றது. குறிஞ்சிக் கடவுளாகிய முருகப்பெருமான் சேயோன், செவ்வேள், நெடுவேள் என்ற பெயர்களால் சங்கச் செய்யுட்களிற் குறிக்கப்பெற்றுள்ளான். செந்நிறம் வாய்ந்த திருமேனியுடைமை பற்றிச் சேயோன் என்பதும், யாவராலும் விரும்பப்படும் அழகிய நெடிய திருமேனியை உடையனாதல் பற்றிச் செவ்வேள்- நெடுவேள் என்பதும் முருகப்பெருமானுக்குரிய திருப்பெயர்களாயின. இப்பெயர்கள் எல்லாவற்றினும் தலைமை வாய்ந்ததாகவும், மக்கள் எல்லோராலும் வழங்கப்பெறும் பொதுமையுடையதாகவும் திகழ்வது முருகன் என்னும் திருப்பெயரேயாகும். முருகு : தெய்வத் தன்மை, தெய்வத்தன்மை நிரம்பப் பெற்றவன் என்ற பொருளில் முருகன் என்ற பெயர் அம்முதல்வனுக்கு உரியதாயிற்று. முருகு என்னும் சொல் அழகு, இளமை, நறுமணம் எனப் பொருள் தரும் ஒரு சொல்லாகும். மாறாத பேரழகும், என்றும் குன்றா இளமையும், மலரின்கண் மணம்போன்று உயிர்க்குயிராய் உள்நின்று தோன்றும் தெய்வமணமும் உடைய முழுமுதற் பொருளாகச் செவ்வேள் விளங்குதலால், குறிஞ்சிக் கிழவனாகிய அம்முதல்வனை முருகன் என்ற பெயரால் பண்டைத் தமிழ்ச் சான்றோர் போற்றி வழிபடு வாராயினர். குறிஞ்சி நிலத் தெய்வமாகிய முருகனுக்குப் பூசனை புரிவோன் அம்முதல்வனது படைக்கலமாகிய வேலினை ஏந்தி ஆடுதலின் வேலன் என்று அழைக்கப்பட்டான். வேலன் ஆடும் ஆடலில் மலரின் உள்ளிருந்து எழும் மணம் போன்று அவனது உயிருணர்வின் வாயிலாகத் தெய்வம் வெளிப்பட்டுத் தோன்றுதலின், தெய்வத்தன்மை வாய்ந்த அவனது ஆடல் வெறி எனப் பெயர் பெறுவதாயிற்று. வெறி:மணம்; ஈண்டுத் தெய்வ மணத்தினைக் குறித்து நின்றது. இவ்வாறு தெய்வம் தன்மேல் ஆவேசிக்கப்பெறும் நிலையில் முருகனை வழிபடும் முறையினை அறிந்து வெறியாடல் நிகழ்த்தும் சிறப்பு முருகபூசை செய்யும் வேலவனுக்கு உரியதாதல் பற்றி, வெறியறி சிறப்பின் வேலன் எனவும், மக்களது நோய் நீங்கத் தெய்வத்திற்குப் பலியிடுதல் வேண்டும் என உயிர்க் கொலை புரிதலின் வெம்மைதரும் வாய்மை யுடைமைபற்றி, வெவ்வாய் வேலன் எனவும் அடைபுணர்த்து ஓதினார் தொல்காப்பியனார். மலைநிலமக்கள் தம் குடியில் மணமாகாத இளமகளிர் மனஞ்சோர்வுற்று உடல் வாட்டமுற்ற நிலையில், அவ்வாட்டத்திற்குக் காரணம் தம் குல தெய்வமான முருகப்பெருமானது மணங்கமழ் தெய்வத் தோற்றத்தால் தாக்கப்பட்டு அஞ்சினமையே எனவும், முருகபூசை செய்யும் வேலனை அழைத்து வெறியாடல் நிகழ்த்தி முருகப்பெருமானை வழிபாட்டல், அம்முதல்வனது திருவருளால் தம் மகளிர் வாட்டம் தீர்ந்து தெளிவு பெறுதல் திண்ணம் எனவும் எண்ணி வேலனைக் கொண்டு கட்டினாலும் கழங்கினாலும் நோயின் காரணமுணர்ந்து வெறியாடல் நிகழ்த்துவர். இந்நிகழ்ச்சி மலைநிலமக்களது அகவியல் வாழ்க்கையில் காணப்படும் மரபாகச் சங்கச் செய்யுட்களில் குறிக்கப்பெற்றுள்ளது. முருகப்பெருமானை வழிபாட்டு நிகழ்த்தும் இவ்வெறியாடலில் மணங்கமழ் தெய்வமாகிய செவ்வேள் தன்னை வழிபடும் வேலன் மேல் விரவித் தோன்றி (ஆவேசித்து) வேலனது வாய்மொழி வழியாக முன்நிகழ்ந்த தனையும், பின்னர் நிகழ இருப்பதனையும் அறிவுறுத்தி அருள்வான் என்பது மலைவாழ்நர் வாழ்வியலிற் காணப்படும். நம்பிக்கையாகும். ஒத்த அன்பினராகிய ஒருவனும் ஒருத்தியும் மேற்கொண் டொழுகும் களவொழுக்கத்துள்ளே தலைமகள் தன் ஆருயிர்த் தலைவனை அடையப் பெறாது தனிமையுற்று வருந்திய நிலையில் அவளது வாட்டத்திற்குரிய காரணம் அறியப்பெறாது வருந்திய செவிலி இவளுக்கு நேர்த்துள்ள வாட்டம் எதனால் ஆயிற்று என ஐயுற்றுத் தலைமகளது வாட்டத்தைத் தணித்தற்பொருட்டு முன் நிகழ்ந்ததனையும், பின் நிகழ்வதனையும் கட்டினாலும் கழங்கினாலும் எண்ணி அறிவாரை அழைத்துச் கேட்ட பொழுது, அவர்கள் தெய்வத்தால் வந்த வருத்தம் என்று கூறினமையால், முருகுபூசனை பண்ணும் வேலனை அழைத்துத் தம்மனைக்கண் வெறியாடல் நிகழ்த்துதலும் அதன்பயனாக முருகப் பெருமான் அருளால் தலைமகள் நோய் தணியப்பெறும் என நம்புதலும் இயல்பு. கட்டினால் எண்ணி அறிபவள் கட்டுவிச்சி. கட்டு என்பது சிறு முறத்தில் பரப்பிய நெல்லைக் கொண்டு முன் நிகழ்ந்ததனையும், இனி நிகழ்வதனையும் எண்ணிப் பார்த்துச் சொல்லும் ஒருவகைக் குறி. இக்குறி பார்ப்பவர் கட்டுவித்தி என அழைக்கப்படுவாள். கட்டுவிச்சி கட்டேறி சீரார் சுளகிற் சிலநெல் பிடித்தெறியா வேரா விதிர்விதிரா மெய்சிலிராக் கைமோவாப் பேரா யிரமுடையான் என்றாள் எனவரும் சிறிய திருமடலும், திருக்கோவையார் 285ஆம் பாடல் உரையும் கட்டுப்பார்த்தலின் இயல்பைப் புலப்படுத்தும். கழங்கு கழற்சிக்காய், கழங்கினை எண்ணிக் குறி சொல்பவன் வேலன். தன் நோய் தணிவித்தல் காரணமாகத் தன் மனைக்கண் வெறியாட்டு நிகழ இருப்பதனை அறிந்த தலைவி தன் மெலிவிற்குக் காரணம் தன் ஆருயிர்த்தலைவனை அணுகப் பெறாமையே என்பதனை உணராது, மருகனால் ஏற்பட்ட வருத்த மென்றெண்ணி இவ்வெறியாட்டினைக் தொடங்குகிறார்களே; இவ்வெறியாட்டில் முருகப்பெருமான் தோன்றி வேலன் வாயிலாக உண்மையை உணர்த்தின் நம் களவு வெளிப்படுமே எனவும், ஒருகால் தெய்வத்தின் திருவருளால் எனது மெலிவு தீரப்பெறுமாயின் என் மெலிவிற்குக் காரணம் தம்முடைய பிரிவன்று எனத் தலைவர் பிறழவுணர்ந்தால் என்னாவது எனவும், அஞ்சுதல் இயல்பு. தலைமகள் உள்ளத்தே தோன்றும் இவ்வச்சம், வெறியாட்டிடத்து வெருவின் கண்ணும் (தொல். களவு. 21) எனவரும் தொல்காப்பியத் தொடரில் குறிக்கப் பெற்றமை காணலாம். தலைவி வேறுபாடு எற்றினான் ஆயிற்று எனச் செவிலி வெறியாட்டுவிக்கவரும் அச்சத்தினானும் தலைவி குறிவழிச் செல்லாளாம் என்பது இத் தொடர்க்கு இளம்பூரணர் தரும் உரையாகும். தலைவி வேறுபாடு எற்றினான் ஆயிற்று என்று வேலனை வினாவி வெறியாட்டு எடுத்தபொழுது தலைவி அஞ்சும் அச்சத்தின் கண்ணும்- என்பது அத் தொடரின் பொருளாம். வெருவுதல் : அஞ்சுதல்; அஃதாவது முன்னமேயே தனது அயன்மையால் கடைப்பிடி இன்றி நெகிழ்ந்து களவொழுக்கத்தின் இன்பமே கருதி ஒழுகும் தலைமகன் இப்பொழுது நமது ஆற்றாமையைத் தணித்தற்கு முருகனை வழிபட்டு வெறியாடுதலாகிய பிறிதொரு மருந்தும் உண்டு என்று அறிவானானால், அவன் நம்மைத் திருமணம் செய்து கொள்ளும் காலம் மேலும் நீளுமே என்று தலைமகள் அஞ்சுவள். இங்ஙனம் தலைமகள் வெறியாட்டிடத்தே கொண்ட அச்சம், பனிவரை நிவந்த பயங்கெழு கவாஅற் றுனியில் கொள்கையொடு அவர்நமக் குவந்த இனிய வுள்ளம் இன்னா வாக முனிதக நிறுத்த நல்க லெவ்வம் சூருறை வெற்பன் மார்புறத் தணிதல் அறிந்தன ளல்லள் அன்னை வார்கோற் செறிந்திலங் கெல்வளை நெகிழ்ந்தமை நோக்கிக் கையறு நெஞ்சினள் வினவலின் முதுவாய்ப் பொய்வல் பெண்டிர் பிரப்புளர்பு இரீஇ முருகன் ஆரணங் கென்றலின் அதுசெத்து ஓவத் தன்ன வினைபுனை நல்லிற் பாவை யன்ன பலராய் மாண்கவின் பண்டையிற் சிறக்கஎன் மகட்கெனப் பரைஇக் கூடுகொள் இன்னியங் கறங்கக் களனிழைத்து ஆடணி யயர்ந்த அகன்பெரும் பந்தர் வெண்போழ் கடம்பொடு சூடி இன்சீர் ஐதமை பாணி யிரீ இக் கைபெயராச் செல்வன் பெரும்பெயர் ஏத்தி வேலன் வெறியயர் வியன்களம் பொற்ப வல்லோன் பொறியமை பாவையின் தூங்கல் வேண்டின் என்னாம் கொல்லோ தோழி மயங்கிய மையற் பெண்டிர்க்கு நொவ்வ லாக ஆடிய பின்னும் வாடிய மேனி பண்டையிற் சிறவா தாயின் இம்மறை அலரா காமையோ அரிதே அஃதான்று அறிவர் உறுவிய அல்லல்கண் டருளி வெறிகமழ் நெடுவேள் நல்குவ னெனினே செறிதொடி யுற்ற செல்லலும் பிறிதெனக் கான்கெழு நாடன் கேட்பின் யானுயிர் வாழ்தல் அதனினு மரிதே (அகம். 98) எனத் தலைமகள் தோழியை நோக்கிக் கூறும் அகப்பாடலில் நன்கு புலப்படுத்தப்பெற்றுள்ளமை காணலாம். குளிர்ந்த மலைப்பக்கத்தே நம் தலைவர் நமக்கு வந்தளித்த அவரது இனியவுள்ளம் இன்னா வாயினமையின், அத்தலைவர் மார்பு உறுவது ஒன்றினாலேயே தணியும் என்றதனை நம் அன்னை அறியாதவளாகிச் செயலற்ற வுள்ளத்தினளாய் வினவுதலாலே முதுமை வாய்ந்த கட்டுவிச்சியராகிய பெண்டிர் பிரப்பரிசியைப் பரப்பிவைத்துக் கட்டுப்பார்த்து இது முருகனது செயலால் வந்த வருத்தம் என்று கூறதலால், அதனை உண்மையாகக் கருதி என் மகள் வாட்டம் தவிர்ந்து முன்போல் பொலிவு bgWthshf! என்று தெய்வத்தைப் பரவி மனையிலே இனிய வாத்தியங்கள் ஒலிக்க வெறியாடுகளத்தே இயற்றி, அதைச் செய்த பந்தலிலே வெள்ளிய பனந்தோட்டினைக் கடப்பமரோடு சூடி இனிய தாளத்தோடு முருகக் கடவுளின் பெரும்புகழினைக் குறித்து வேலன் வெறியாடுதலை விரும்பினால் என்ன MFnkh! அங்ஙனம் வேலன் வெறியாடிய பின்னும் எனது வாடியமேனி வாட்டம் தீர்ந்து முன்புபோற் பொலிவு பெறாதாயின் இக்கள வொழுக்கம் பலரும் தூற்றுமாறு வெளிப்படா திருத்தல் அரிது. அஃதன்றியும் என்பொருட்டு அறிவுடைய பெரியோர்கள் தாம் கொண்ட துன்பத்தைக் கண்டு உளமிறங்கி மனம் கமழ் வெற்பனாகிய முருகன் ஒருகால் எனது வாட்டத்தை நீக்கி முன்னைய அழகினைத் தந்தருள்வான் ஆயின், வளையலை அணிந்த நம் தலைவி உற்ற துன்பமும் என்னான் அன்றிப் பிறிதொன்றான் எய்தியது என நம் தலைவர் கேட்டறியின், யான் உயிர்தாங்கி வாழ்தல் அவ்வலர் வெளிப்பாட்டினும் இன்னாதாகும் என்பது இவ்வகப்பாடலின் கருத்தாகும். இதன்கண் தெய்வத்தை நினைந்து குறிசொல்லும் கட்டுவிச்சியராகிய மகளிர் தமது குறியாற் புலப்படும் உண்மையினை வெளிப்படக் கூறாது சிலசமயம் மறைத்துப் பொய் கூறும் நிலையும் உண்டென்பது, முதுவாய் பொய்வல் பெண்டிர் பிரப்புளர்பு இரீஇ முருகன் ஆரணங் கென்றலின் எனவரும் தொடரால் புலனாகும். தலைவியின் மெலிவிற்குத் தலைமகனை அடையப் பெறாமை காரணமாகவும் அவ்வுண்மையை மறைத்து முருகனது அணங்கே தலைவியின் மெலிவிற்குக் காரணம் என்றலின் பொய்வல் பெண்டிர் எனப்பட்டனர். களவொழுக்கத்தில் கட்டினும் கழங்கினும் வெறியென இருவரும் ஒட்டிய திறத்தால் செய்திக் கண்ணும் ஆடிய சென்றுழி அழிவு தலைவரினும் (தொல். கள. 25) செவிலிக்குக் கூற்றாக நிகழும் என்றார் தொல்காப்பியனார். தலைவியின் மெலிவிற்குரிய காரணங்களைக் கட்டு வைப்பித்தும், கழங்கு பார்த்தும் கண்டறிந்து அவளது மெலிவு தீர வேலனைக் கொண்டு வெறியாடுவித்தல் வேண்டும் என இருவரும் பொருந்திய பக்கத்துச் செய்திக்கண்ணும், அவ்வாறு வெறியாட்டு நிகழ்த்தத் தொடங்கிய காலத்துத் தோழி தடுத்து நிறுத்திய நிலையிலும் செவிலிக்குரிய கூற்று நிகழும் என்பது மேற்காட்டிய தொடரின் பொருளாகும். இக்கூற்றுக்கள் செவிலி தானே கூறும் தன்கூற்றாகவும், தலைவியும் தோழியும் செவிலி கூற்றாகக் கொண்டெடுத்து மொழியப்படுவனவாகவும் சங்கச் செய்யுட்களில் இடம் பெற்றுள்ளன. அணங்குடை நெடுவரை (அகம். 22) என்னும் அகப்பாட்டினுள் கட்டுப்பார்த்து வெறிஎடுத்தமை கூறப்பட்டுள்ளது. பணிவரை நிமிர்ந்த (அகம். 98) என்னும் அகப்பாட்டினுள் பிரப்புளர்பு இரீஇ எனக் கட்டுவிச்சியைக் கேட்டவாறும், என்மகட்கு எனச் செவிலி கூற்று நிகழ்ந்தவாறும் காணலாம். கடவுட் கற்சுனை (நற். 34) எனத் தொடங்கும் நற்றிணைப்பாட்டில், நின்னணங் கன்மை அறிந்தும் அண்ணாந்து கார்நறுங் கடம்பின் கண்ணி சூடி வேலன் வேண்ட வெறிமனை வந்தோர் கடவு ளாயினும் ஆக மடவை மன்ற வாழிய முருகே எனத் தோழி வெறியட்டிடத்து வேலன்மேல் ஆவேசித்துத் தோன்றிய முருகப் பெருமானை நோக்கிக் கூறும் கூற்று குறிஞ்சி நிலத் தெய்வமாகிய அம்முதல்வனது முற்றுணர்வுத் தன்மையையும், எத்திறத் தோராயினும் தன்னை அன்பினால் வேண்டி வழிபடுவார் பொருட்டு எளிவந்தருளும் அவ்விறைவனது பேரருட்டிறத்தையும் ஒருங்கு புலப்படுத்துதல் உணரத்தகுவதாகும். எங்கள் தலைவிக்கு நேர்ந்த மெலிவு நினது அணங்குதலால் வந்தது அன்று என்பதனை அறிந்து வைத்தும் நின்னை அன்பினால் வழிபடும் வேலன் வேண்டிக் கொள்ளுதலால் கார்காலத்து மலரும் நறிய கடப்ப மலர் மாலையாகிய முடிமாலையை அணிந்து தலைநிமிர்ந்து வெறியாடும் மனையிடத்தே எழுந்தருளிய KUf¥bgUkhnd! நீ முற்றறிவினனாகிய கடவுளாயினும் Mf! நிச்சயமாக அறியாமை உடையாய் MÆid! thœthahf!” என வெறியாடு களத்தே வேலன் மேல் ஆவேசித்த முருகப் பெருமானை நோக்கித் தோழி கூறுவதாக அமைந்தது இந்நற்றிணைப்பாடல். இறைவனாகிய முருகன் எல்லாவற்றையும் தானே அறியும் முற்றுணர்வுடையன் என்பதனை அறிவுறுத்துவது, நின்னணங் கண்மை அறிந்தும் என்ற தொடராகும். தன்னை அன்பினால் வழிபடுவோர் பொய்மையாளராயினும் அவர்தம் வேண்டுகோளையும் பொருளென ஏற்று எளிவந்து அருள் புரிதல் அம்முதல்வனது பெருங்கருணைத் திறம் என்பதனைப் புலப்படுத்துவது. வேலன் வேண்ட வெறிமனை வந்தோய் என்ற தொடராகும். பேரறிவுப் பொருளாய்ச் சிந்தைக்கும் மொழிக்கும் எட்டாத கடவுளாயிருந்தும் நினது வாய்மைக்கு மாறாக வெறியாடுகளத்தில் வேலன் மேல் நீ ஆவேசித்துத் தோன்றியது முற்றுணர்வினன் என்னும் நின் இயல்புக்கு மாறான பேதைமைச் செயலாம் என்பாள், கடவுளாயினு மாக மடவை மன்ற என்றாள் தலைவியின் மெலிவுக்கு உண்மையான காரணம் இதுவென உணர வொண்ணாதவாறு நீ இங்கு எழுந்தருளினமை குறித்து எங்களைப் போன்ற பேதையோரால் இகழப்படும் நிலையினை அடைந்தாலும் மன்னுயிர்த் தொகுதிகள் அனைத்தையும் வாழ்விக்கும் முழு முதல் கடவுளாகிய நின்னை வாழ்த்துவதே என்போல்வார்க்கும் வாழ்வளிக்கும் நற்செயலாம் என்பாள். வாழிய முருகே என உளமுவந்து வாழ்த்தினாள். தோழியின் கூற்றாக அமைந்த இவ்வகப்பாடல் முருகக் கடவுளது முற்றுணர்வுடைமையினையும், அன்பர்க்கு எளிவந்தருளும் பேரருளுடைமையினையும் பரவிப் போற்றும் நிலையில் அமைந்துள்ளமை காணலாம். குறிஞ்சிநில மக்கள் தம்குல முதல்வனாகிய முருகப் பெருமான் மணங்கமழ் தோற்றத்து இளநலனுடையனாய்க் கடப்ப மலர்மாலையைச் சூடிக் கையில் வேலினை ஏந்தி வழிபடும் அன்பர்கள் முன்னே காட்சிதருதல் உண்டு என்பதனை உறுதியாக நம்பினார்கள். இவர்தம் வாழ்க்கையில் நிலைபெற்றுள்ள கடவுள் நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டு புனைந்துரை வகையாகக் கொண்டு பாடப்பெற்ற செய்யுட்கள் சங்கத் தொகை நூல்களெனப் படுகின்றன. களவொழுக்கம் ஒழுகும் தலைவன் நறுமலர் மாலையைச் சூடிக் கையில் வேலேந்தி இரவுக் குறியில் தலைமகள் மனையை நாடிச் சொன்றானாக, அந்நிலையில் அவனைக் கண்ட செவிலி, அவனை முருகனெனப் பிறழவுணர்ந்து வரவேற்றுப் பரவுதல் செய்தாள் எனத் தோழி சிறைப்புறத்தானாகிய தலைவன் கேட்கப் படைத்து மொழிவதாக அமைந்தது 272ஆம் அகப் பாடலாகும். மின்னொளிர் எஃகம் சென்னெறி விளக்கத் தனியன் வந்து பனியலை முனியான் நீரிழி மருங்கின் ஆரிடத் தமன்ற குளவியொடு மிடைந்த கூதளங் கண்ணி அசையா நாற்றம் அசைவளி பகரத் துறுகல் நண்ணிய கறியிவர் படப்பைக் குறியிறைக் குரம்பைநம் மனைவயிற் புகுதரும் மெய்ம்மலி உவகையன் அந்நிலை கண்டு முருகென உணர்ந்து முகமன் கூறி உருவச் செந்தினை நீரொடு தூஉய் நெடுவேட் பரவும் அன்னை (அகம். 272) எனவரும் இப்பாடற் பகுதியில் இரவுக் குறியில் வந்தொழுகும் தலைமகனை எதிர்ப்பட்ட செவிலி இளையோனாகிய அவனது எழில் நலத்தைக் கண்டு அவனைத் தன் தெய்வத் தோற்றத்தைப் புலப்படுத்த எழுந்தருளிய முருகப் பெருமான் எனவே பிறழவுணர்ந்து வழிபட்டாள் என்ற செய்தி தோழியாற் படைத்துக் கூறப்பட்டுள்ளமை காணலாம். முருகன் தன்னை வழிபடும் அன்பர்க்கு அவரவர் நினைந்த திருமேனி கொண்டு அவர்முன் காட்சி நல்குதல், குருடைச் சிலம்பிற் சுடர்ப்பூ வேய்ந்து தாம்வேண் டுருவின் அணங்குமார் வருமே (அகம். 158) என்பதனாற் புலனாகும். ஐம்புலன்கள் வழியே செல்லும் உள்ளச் சிதைவின்றி எல்லாம் வல்ல இறைவனை ஒரு நெறியமனம் வைத்து உணர்ந்து போற்றல்ல பேரார்வமுடைய அன்பர்கள் தம்மால் வழிபடப் பெறும் தெய்வத்தைக் கண்ணாரக் கண்டு மகிழும் பெற்றியராதல் தொன்று தொட்டு இத்தமிழகத்தே நிலை பெற்று வரும் அனுபவ உண்மையாகும். அழிவிலர் முயலும் ஆர்வ மாக்கள் வழிபடு தெய்வர் கட்கண் டாங்கு (நற். 9) எனவரும் நற்றிணைத் தொடர் மேற்காட்டிய உண்மையை உவமையாக எடுத்துக் காட்டியுள்ளமை பண்டைத் தமிழ் மக்கள் காண்டற்கரிய கடவுளின் தெய்வத் தோற்றத்தைக் கண்களாற் கண்டு மகிழ்ந்த செய்தியினை நன்கு புலப்படுத்தல் காணலாம். அழகே உருவாகிய தெய்வம் முருகன். தன்னேரில்லாத் தலைமகனது எழில் நலத்தினை உவமை காட்டி விளக்கவந்த கபிலர், இயல் முருகு ஒப்பினை (அகம். 128) என அவனுக்கு முருகப் பெருமானை ஒப்புக் கூறுகின்றார். யாவராலும் எதிர்த்து நிற்கலாற்றாத பெருவன்மையும் தீயோரை அழிக்கும் திறத்தில் பெருஞ்சினமும், அன்பர்கள் முன்னியது முடித்தருளும் பேரருளும் படைத்த பெருந் தெய்வமாக முருகப்பெருமான் திகழ்தலால் அப்பெருமானைப் பேரழகும் பேராற்றலும் செயல் வன்மையும் ஒருங்கு வாய்க்கப்பெற்ற அரசர் முதலியோர்க்கு உவமையாக எடுத்தாளும் மரபு தமிழிலக்கியத்தில் தொன்றுதொட்டு நிலைபெறுவதாயிற்று. முருகற் சீற்றத்து உருகெழு குருசில் (பொருந. 131) கடம்பமர் நெடுவே ளன்ன மீளி (பெரும்பாண். 75) முருகுடன்று கறுத்த கலியழி மூதூர் (பதிற்றுப். 26) முருகொத்தீயே முன்னியது முடித்தலின் (புறம். 56) முருகுறழ் முன்பொடு (நற். 225) (அகம். 181) முருகற் சீற்றத் துருகெழு குருசில் (புறம் 16) ஆலமர் செல்வன் அணிசால் பெருவிறல் போல வரும் என் உயிர் (கலி. 81) முருகுறழப் பகைத் தலைச் சென்று (மதுரைக் காஞ்சி 181) முருகன் நற்போர் நெடுவேளாவி (அகம். 1) எனவரும் தொடர்கள் இம்மரபினை அடியொற்றியமைந்தன. தீயோரை ஒறுத்தலின் தடுத்தற்கரிய சீற்றமுடையோன் முருகன் என்பது, முருகன் அன்ன சீற்றத்துக் கடுந்திறல் எந்தையும் (அகம். 158) எனவரும் பாடலால் அறியப்படும். குறிஞ்சிநிலத் தெய்வமாகிய முருகப் பெருமானது எனவும், அணங்கறி கழங்கிற் கோட்டங் காட்டி வெறியென வுணர்ந்த வுள்ளமொடு மறியறுத்து அன்னை அயரும் முருகுநின் பொன்னேர் கணங்கிற் குதவாமாறே (நற். 47) எனவும் வரும் தொடர்களால் அறியப்படும். முருகன் வழிபாட்டில் உறைத்துநின்று அப்பெருமானருளால் உறுவது கூறும் வேலன் சில சமயங்களில் முருகன் அருளைச் சிந்திக்காமலும், தன் அறியாமையாலும் தலைமகளுக்குத் தலைமகனால் நேர்ந்த மெலிவினை முருகனால் வந்ததெனப் பிறழவுணர்ந்து வெறியாடலில் தலைப்படுதல் உண்டு. கறிவளர் சிலம்பிற் கடவுட் பேணி அறியா வேலன் வெறியெனக் கூறும் (ஐங். 243) எனவும், மறிகொலைப் படுத்தல்வேண்டி வெறிபுரி ஏதில் வேலன் (அகம். 292) எனவும் வரும் தொடர்களால் அறியப்படும். முருகனைப் பூசித்து அவன் அருள்வழி நின்று தான் கூறும் வாய்மொழியால் ஊர்மக்களுக்கு நலம் புரிதலையே தனது வாழ்க்கை நோக்கமாகக் கொண்டு வாழும் வேலன் கூறும் மொழிகள் மெய்ம்மை உடையனவே என ஊர்மக்கள் நம்பினர் என்பது, பொய்யாமரபின் ஊர் முதுவேலன் கழங்கு மெய்ப்படுத்துக் கன்னாந் தூக்கி மருகென மொழியு மாயின் (ஐங். 245) என்பதனால் புலனாகும். இங்ஙனம் மனையகத்தே வேலனைக் கொண்டு நிகழ்த்தும் வெறியாடலில் வேலன் கூறிய மாற்றத்தை மெய்யெனக் கொண்ட தாய்க்கு அதன் பொய்ம்மையைப் புலப்படுத்தும் நிலையில் அகத்திணைச் செய்யுட்கள் காணப்படுகின்றன. கறிவளர் சிலம்பிற் கடவுட் பேணி அறியா வேலன் வெறியெனக் கூறும் அதுமனங் கொள்குவை யன்னையிவள் புதுமலர் மழைக்கண் புலம்பிய நோய்க்கே (ஐங். 243) எனவரும்பாடல் வேலன் கூற்றினை மெய்யென நாம்பிய தாயை நோக்கி அவளது அறியாமை கூறி தோழி வெறி விலக்கும் வகையில் அமைந்ததாகும். வெறியாடல் துணிந்துழி அதனை விலக்க எண்ணிய தோழி செவிலி கேட்குமாறு தலைமகட்குச் சொல்வதாக அமைந்த பாடல்களும் உள்ளன. அம்ம வாழி தோழி பன்மலர் நறுந்தண் சோலை நாடுகெழு நெடுந்தகை குன்றம் பாடா னாயின் என்பயன் செயுமோ வேலர்க்கு வெளியே (ஐங். 244) எனவரும் இப்பாடல் முருகனைப் போற்றி வெறியாடல் நிகிழும் வழி தலைமகளது மெலிவுக்குக் காரணமாகிய தலைவனது மலையையும் வேலன் சிறப்பித்துப் பாடுவானாயின் இவ்வெறி யாடலாற் பயனுண்டு என்னும் கருத்தினைப் புலப்படுத்துவதால் வெறிவிலக்கல் என்னும் துறைக்கு இலக்கியமாயிற்று. பெய்ம்மணல் வரைப்பிற் கழங்குபடுத் தன்னைக்கு முருகென மொழியும் வேலன் மற்றவன் வாழிய விலங்கு மருவிச் சூர்மலை நாடனை யறியாதோனே (ஐங். 249) எனவரும் பாடல், வேலன் கூறிய மாற்றத்தை உண்மை என நம்பிய தாய் கேட்கும்படித் தலைமகளுக்குத்தோழி சொல்லியதாகும். மணல் பரப்பிய மனையின் எல்லைக் கண்ணே கழங்குபார்த்து இந்நோய் முருகனால் வந்ததென்று வேலன் அன்னைக்குக் கூறுகிறான். அவன் நின் மெலிவிற்குக் காரணமாகிய தலைவனை அறியாதவனாயினான். அதனால் நினது களவொழுக்கம் அவனுக்குப் புலனாகாதாயிற்று; அத்தகைய வேலன் நீடு வாழ்வானாக என வேலனை வாழ்த்துவது போன்று வெறிவிலக்கிய குறிப்பினது ஆதல் காணலாம். இவ்வாறு வெறிவிலக்கல் என்னும் துறையிலமைந்த பாடல்கள் தலைவியின் மெலிவிற்குக் காரணம் மருகனது அணங்கன்று என வற்புறுத்தும் நிலையில் அமைந்தனவே அன்றி முருகவேளுக்குச் செய்யும் வழிபாட்டை விலக்கும் குறிப்பினவல்ல வென்பதை மனங்கொளல் வேண்டும். குறிஞ்சி நில மக்கள் தம் குல முதலாகிய முருகன் மலை மேலேழுந்தருளி நின்று தாம் படைக்கும் படைப்புப் பொருளை ஏற்றுக்கொள்வான் என அன்பு நீங்கா அச்சமுடன் அம்முதல்வனை வழிபட்டார்கள் : மணங்கமழ் நாற்றத்த மலைநின்று பலிபெறூஉம் அணங்கென அஞ்சுவர் சிறுகுடி யோரே (கலி. 52) தலைவியின் மெலிவகற்றல் வேண்டி மனை வரைப்பில் நள்ளிரவில் நிகழும் அகத்திணை ஒழுகலாறாகிய இவ்வெறியாடலேயன்றி உலக நலங்குறித்துப் பலரும் காண நிகழும் புறத்திணை பற்றிய வெறியாடல்களும் சங்க இலக்கியங்களில் இடம் பெற்றுள்ளன. வெறியறி சிறப்பின் வெவ்வாய் வேலன் வெறியாட்டயர்ந்த காந்தளும் (தொல். புறம். 5) வெறியாடுதலையறியும் சிறப்பினையுடைய செவ்விய வாயினை உடைய வேலன் எனப் பொருள் வரைந்த இளம்பூரணர், காந்தள் என்பதனை மடலேறுதற்குப் பெயராகக் கூறுவார் உளராகலின், வெறியட்டயர்ந்த காந்தளென்றார். அன்றியும், காந்தளென்பது மடலேறுதலான் அத்துணை ஆற்றலாகிய பெண்பால்மாட்டு நிகழும் வெறி காந்தள் எனவும் பெயராம். இதனானே காம வேட்கையின் ஆற்றாளாய பெண்பாற் பக்கமாகிய வெறியும், அந்நிலத்துள்ளார் வென்றி வேண்டி ஆடும் வெறியும் கொள்ளப்படும். இவ்வெறி இந்நிலத்திற்குச் சிறந்தமை அறிக என விளக்குவர். காந்தள் என்பதனைத் தலைவன் மடலேறுதற்குப் பெயராக வழங்குவார் கருத்தை ஏற்று அங்ஙனம் மடலேறும் அளவிற்கும் ஆற்றாளாய தலைவி மாட்டுத்தோன்றும் வெறியும் காந்தள் எனப் பெயர்பெறும் என்பதும் இதனால் காமவேட்கையில் ஆற்றாளாகிய பெண்பாற் பக்கமாகிய அகத்திணைபற்றிய வெறியாடலும் அக்குறிஞ்சி நிலத்துள்ளார் அரசனது வெற்றியை விரும்பி நிகழ்த்தும் புறத்திணைபற்றிய வெறியாடலும் உடன்கொள்ளப்படும் என்பதும் புறத்திணைபற்றிய வெறியாடல் குறிஞ்சி நிலத்திற்குச் சிறந்ததென்பதும் இளம்பூரணர் கருத்தாதல் மேற்குறித்த அவரது உரைத்தொடராற் புலனாம். செவ்வேள் வேலைத் தான் எந்தி நிற்றலின் வேலன் என்றார். காந்தள் தான் சூடுதலிற் காந்தள் என்றார். வேலனைக் கூறினமையின் கணிகாரிகையும் கொள்க. காந்தளை உடைமையானும் பனந் தோடுடை மையானும் மகளிரை வருத்துதலானும் வேலன் வெறியாட்டயர்ந்த என்றதானானும் வேலன் ஆடுதலே பெரும் பான்மை; ஒழிந்தோராடுதல் சிறுபான்மை என்றுணர்க. இது சிறப்பறியா மகளிர் ஆடுதலிற் புறனாயிற்று. வேலன் ஆடுதல் அகத்திணைக்குச் சிறந்தது என்பர் நச்சினார்க்கினியர். கணிகாரிகை யாவாள் வேலன் ஆடும் வெறிக்கூத்தினையாடுபவள். சிறப்பறியா மகளிர் என்றது, வெறியறி சிறப்பின் வேலனைப் போன்று தெய்வத்திற்குச் செய்யும் கடன்களாகிய பூசை முறையினை அறியாத மகளிரை, மகளிர் ஆடும் வெறியாடல் புறனாம் என்பதும் வேலன் ஆடும் வெறியாடல் அகனாம் என்பதும் நச்சினார்க்கினியர் கருத்து. வேலன் தைஇய வெறியயர் களனும் (திருமுருகு. 10) என்றாற் போலச் சிறப்பறியும் வேலன் தானேயாடுதலும் சிறுபான்மை புறத்திற்கும் உரித்தெனக் கொள்வர் நச்சினார்க் கினியர். குறிஞ்சித் திணையில் தன் களவை மறைத்துத் தனிமையாற்றாது தளரும் தலைவியின் மெலிவு கண்ட தாயார், உண்மையுணர வேண்டிக் குறிசொல்ல விரும்பியழைக்கும் வேலனது வெறியாட்டு அகத்தைச் சார்ந்தது. அதனின்வேறாய் வெட்சியில் வரும் துறையான வேலன் வெறியாட்டு, வேலன் விரும்பிச் சூடும் பூவின் பெயரால் காந்தள் எனக் குறிக்கப்பட்டது. எனவே வேலன் வெறியாட்டு குறிஞ்சிக்கும் வெட்சிக்கும் பொதுவாயினும் வெட்சியில் வரும் வெறியாட்டில் வேலன் காந்தள் சூடி ஆடுவன். குறிஞ்சித் திணையில் வரும் வெறி யாட்டில் வேலன் குறிஞ்சிப்பூச் சூடுதல் மரபு என்பர் நாலவர் பாரதியார். அங்கடி வேலன் முருகொடு வளைஇ அரிக்கூ டின்னியம் கறங்க நேர்நிறுத்துக் கார்மலர்க் குறிஞ்சி சூடிக் கடம்பின் சீர்மிகு நெடுவேட் பேணி தழூப் பிணையூஉ மன்றுதொறு நின்ற குரவை (மதுரைக். 611-615) என மதுரைக் காஞ்சியில் குறிக்கப்பெறும் வெறியாடல் அகத்தைச் சார்ந்தது என்பது அவர் கருத்து. இவ்வாறு அகத்திலும் புறத்திலும் வெறியாட்டு நிகழ்த்துவோன் வேலனாயினும் அகமாகிய குறிஞ்சித்திணை வெறியாட்டில் சூடும்பூ குறிஞ்சிமலர் எனவும் புறமாகிய வெட்சித்திணை வெறியாட்டில் சூடும்பூ காந்தள் எனவும் பகுத்துணர்த்துவர் பாரதியார். அறுவை தோயும் ஒரு பெருங் குடுமி சிறுபை நாற்றிய பஃறலைக் கொடுங்கோல் ஆகுவ தறியும் முதுவாய் வேல, கூறுக மாதோநின் கழங்கின் திட்பம் (அகம். 195) எனவரும் தொடர், கட்டினாலும் கழங்கினாலும் குறி பார்த்துத் தலைமகள் மெலிவிற்குக் காரணம் முருகனது அணங்கே என்பதனைத் தெளிவாகத் தெரிந்து கொண்ட பின்னரே வேலனைக் கொண்டு வெறியாடுதல் மரபு என்பதனை வற்புறுத்தும். முருகனை வழிபடும் நிலையில் ஆடப்பெறும் வெறியாடல் மலைவாணர்குடியில் மனை முதிர் மகளிரால் புறத்தேயாவரும் காண ஆடப்பெறும் பொதுவிழாவாகவும் மனையத்தே வேலனைக் கொண்டு நிகழ்த்தப்பெறும் மனைவிழாவாகவும் நிகழும் இச்செய்தி, .Fwt மனைமுதிர் மகளி ரொடு குற வை தூங்கும் ஆர்கலி விழவுக் களங்கடுப்ப நாளும் விரவுப்பூம் பலியொடு விரைஇ யன்னை முருகென வேலற் றரூஉம் பருவ மாகப் பயந்தன்றால் நமக்கே (அகம். 232) எனவும், செறிதொடி முன்கை கூப்பிச் செவ்வேள் வெறியாடு மகளிரொடு செறியத் தாஅய் (பட்டி. 154-155) எனவும் வரும் பாடற் பகுதிகளால் அறியலாம். இத்தகைய வெறியாடடில் முருகப் பெருமான் தனக்குப் பூசை செய்யும் வேலன்மேல் ஆவேசித்தல்போலக் கணிகாரிகையாகிய குறத்திமேல் ஆவேசித்தலுமுண்டு. இச் செய்தி, ஆடுமகள் வெறியுறு நுடக்கம் போல (பதிற். 51) எனவரும் பகுதியாலறியலாம். அணங்குறு களிர் ஆடுகளங் கடுப்பத் திணிநிலைக் கடம்பின் திரளரை வளைஇய துணையறை மாலையில் (குறிஞ்சிப். 174-177) எனவரும் குறிஞ்சிப்பாட்டின் பகுதி முருகனைநோக்கி நறுமலர் மாலைகளால் புனையப் பெற்றிருக்கும் என்பதனைப் புலப்படுத்தும். சென்றார்க் கச்சந்தரும் தன்மையன முருகனுக்குரிய உயர்ந்த மலைகளாதலின், சூருடை அடுக்கம் (நற். 359) எனவும், சூருடைச் சிலம்பு (நற். 373) எனவும் குறிக்கப்பெற்றுள்ளன. அங்கு மணமாகாத இளைய மகளிர் தனிமையிற் சென்றபோது அவர் மனத்தே ஏற்பட்ட அச்சத்தின் விளைவாக அன்னோர் மெலிந்து வருந்துதலியல்பு. அச்சத்தால் ஏற்பட்ட மெலிவினை அம்மலைத் தெய்வமாகிய முருகனால் ஏற்பட்டதாகக் கொண்டு அம்மெலிவுதீர முருகனுக்கு வெறியாடல் நிகழ்த்துதல் மலைவாணரது ஒழுகலாறு ஆயிற்று, நெடுவேளால் அணங்குறும் இளமகளிரைப் போல அவனது ஊர்தியாகிய மயிலும் அம்முதல்வனால் ஆவேசிக்கப்பெற்று நடுங்குதல் உண்டு. சூருறு மஞ்ஞையின் நடுங்க எனவரும் குறிஞ்சிப்பாட்டடி இங்கு நினைக்கத் தக்கதாகும் சூர் நசைந்தனையையாய் நடுங்கல் கண்டே (52) என்பது குறுந்தொகை. முருகனால் ஆவேசிக்கப்பெற்ற கணிகாரிகை வேலனைப் போன்று வெறியாடல் நிகழ்த்துதல் உண்டென்பது, முருகு மெய்ப்பட்ட புலத்திபோல தாவுபு தெறிக்கும் மான் (புறம். 259) எனவரும் புறப்பாடல் அடிகளாற் புலனாகும். மன்னுயிர்களின் அச்சம் அகற்றி அருள் சுரக்கும் முருகப் பெருமானை வழிபடும் திறத்தில் மலைவாணர் அன்பு நீங்கா அச்சமுடன் தூய்மையுடையராய் ஒழுகினர் என்பது அணங்குடை முருகன் கோட்டத்துக் கலந்தொடா மகளிரின் இகந்து நின்றவ்வே எனவரும் புறப்பாடற் பகுதியால் புலனாகும். ஒளிதங்கிய சிவந்த திருமேனியையுடைய முருகப் பெரு மானுக்குப் பிணிமுகம் என்னும் பெயருடைய யானையும் மயிலும் ஊர்தியாகவும் கொடியாகவும் அமைந்தன வென்பது, மணிமயி லுயரிய மாறா வென்றி பிணிமுக வூர்தி ஒண்செய் யோனும் (புறம். 56 : 7-8) எனவருந் தொடராற் புலனாம். முருகப் பெருமானைப் பிரியாத நிலையில் பேரொளியுடன் திகழும் தேவியாகக் குறமகளாகிய வள்ளி நாச்சியார் போற்றப் பெற்றுள்ளார். மணங்கமழ் தெய்வத்து இளநலமாகிய இத் தெய்வப் பொலிவினைப் புலப்படுத்தும் நிலையில் அமைந்தது, முருகு புணர்ந் தியன்ற வள்ளி போலநின் உருவு கண் ணெறிப்ப நோக்கலாற்றலனே எனவரும் நற்றிணைப் பகுதியாகும். மலைவாணர் தம் நிலத்து விளைவு பெருக மழை பொழியவும், போதிய அளவு பெய்தபின் விளைவு கெடாதவாறு மழை நீங்கவும் முருகப் பெருமானை வேண்டி வழிபடுவர் என்பதும், முருகன் அருளால் விளைந்த தினையினை உவகையுடன் பகுத்துண்டு மகிழ்வர் என்பதும், மலைவான் கொள்கென உயர்பலி தூஉய் மாரியான்று மழை மேக் குயர்கென கடவுட் பேணிய குறவர் மாக்கள் பெயல்கண் மாறிய உவகையர் சாரற் புனத்தினை அயிலும் நாட (புறம். 143) எனவரும் கபிலர் பாடலான் நன்குணரப்படும். குறவர்கள் மகப்பெறு கருதி முருகப் பெருமானை வழிபடுவர். இச்செய்தி, குன்றக் குறவன் கடவுட் பேணி இரந்தனன் பெற்ற எல்வளைக் குறுமகள் (ஐங். 257) எனவரும் பாடலால் இனிது விளங்கும். மணமாகாத இளமகளிர் தம் திருமணம் இனிது நிறைவேறுதல் வேண்டி முருகப் பெருமானை நறுமலர்கள் தூவி வழிபடுதல் உண்டு. இச்செய்தி, குன்றக் குறவன் காதல் மடமகள் மன்ற வேங்கை மலர்சில கொண்டு மலையுறை கடவுள் குலமுதல் வழுத்தி தேம்பலிச் செய்த ஈர்நறுங்கையள் (ஐங். 259) எனவரும் தொடர்களால் இனிது விளங்கும். இங்ஙனம் தலைவியின் திருமணம் இனிது நிறைவேற தோழி முதலியோர் முருகப் பெருமானை வழிபட்டுக் குரவைக் கூத்தாடி அம்முதல்வனது பெரும் புகழைப் பாடிப் பரவுதலுமுண்டு. இச் செய்தி, தெரியிழாய் நீயும் நின்கேளும் புணர இரையுறை தெய்வம் உவப்ப உவந்து குரவை தழீஇயாம் ஆட குரவையுள் கொண்டு நிலைபாடிக்காண் (கலி. 39) எனவரும் தொடர்களால் புலப்படுத்தப் பெற்றுள்ளமை காணலாம். மலைவாழ்நர் வரையுறை தெய்வமாகிய முருகக் கடவுளைப் பேணித் தாம் வித்திய தினை நன்கு விளைதல் வேண்டுமெனப் போற்றி வழிபடுதலுண்டு. இச் செய்தி பலிபெறு கடவுட் பேணிக் கலி சிறந்து நுடங்குநிலைப் பறவை உடங்குபீள் கவரும் தோடிடங் கோடாய்க் கிளர்ந்து நீடினை விளைமோ வாழிய திதையே (நற். 251) எனவரும் தொடர்களால் புலனாகும். பாண்டிய நாட்டில் வாழ்ந்த மலைவாழ்நராகிய குறவர்கள் முருகப் பெருமானைப் போற்றித் தாம் வளர்த்த சந்தன மரத்தைத் தன் நாட்டு மன்னனாகிய பாண்டியனுக்கு அன்பின் கையுறையாகத் தந்தனர். இச் செய்தி தன் கடற்பிறந்த முத்தின் ஆரமும் முனைதிரை கொடுக்கும் துப்பின் தன்மலைத் திறலருமரபின் கடவுட் பேணி குறவர் தந்த சந்தின் ஆரமும் இருபே ராரமும் எழில் பெற வணியும் திருவீழ் மார்பின் தென்னவன் (அகம். 13) எனவரும் அகப்பாடற் பகுதியால் இனிது விளங்கும். ஒத்தவன்புடைய ஒருவனும் ஒருத்தியும் நல்லூழின் தூண்டுதலால் ஒருவரை ஒருவர் எதிர்ப்பட்டுக் கூடும் இயற்கைப் புணர்ச்சியில் தலைவன் மலையுறை தெய்வமாகிய முருகப் பெருமானை வாழ்த்தி வணங்கித் தலை மகளை நோக்கி நின்னிற் பிரியேன் எனத் தண்ணீரைப் பருகிச் சூளுறவு செய்தல் உண்டு. இச்செய்தி றங்குமலை மீமிசைக் கடவுள் வாழ்த்திக் கைதொழுது ஏமுறுவஞ்சினம் வாய்மையிற்றேற்றி அந்தீந் தெண்ணீர் குடித்தலின் நெஞ்சமர்ந்து அருவிடர் அமைந்த களிறுதரு புணர்ச்சி (குறிஞ்சிப்.) எனவரும் குறிஞ்சிப் பாட்டடிகளாற் புலனாகும். குறிஞ்சி நிலத் தெய்வமாகிய முருகப் பெருமான் யானையை ஊர்தியாகக் கொண்டு பகைவரை அழிக்கும் வேற்படையாலே கடல் நடுவே புக்கு இருவேறு உருவினனாகிய சூரபதுமனையும் அவன் வடிவாகிய மாமரத்தையும் பிளந்து அழித்தருளியதும் குருகொடு பெயர் பெற்ற குன்றமாகிய கிரௌஞ்சமலையைப் பிளந்தருளியதும் ஆகிய புராணச் செய்திகள் சங்கச் செய்யுட்களிற் பலவிடங்களிலும் எடுத்தாளப் பெற்றுள்ளன. வரைமருள் புணரி வான்பிசி ருடைய வளிபாய்ந் தட்ட துளங்கிருங் கமஞ்சூல் நளியிரும் பரப்பின் மாக்கடன் முன்னி அணங்குடையவுண ரேமம் புணர்க்கும் சூருடை முழுமுதல் தடிந்த பேரிசைக் கடுஞ்சின விறல்வேள் களிறூர்ந் தாங்கு (பதிற். 11) எனவரும் பதிற்றுப்பத்தில் கடல் அவுணர்களால் சூழப்பெற்ற சூரபதுமனையும் அவனுக்குக் காவலாக இருந்த மா மரத்தையும் முருகப் பெருமான் வேற்படையால் பிளந்தழித்த செய்தி உவமையாக எடுத்தாளப் பெற்றது. சூருடைமுதல் என்றது சூரவன்மா தனக்கு அரணாகவுடைய மாவின்முதல் என்றவாறு. இனிச் சூரவன்மா தான் ஓர்மாவாய் நின்றான் என்று புராணம் உண்டாயின், சூரனாதற்றன் மையையுடைய மாவில்முதல் என்றவாறாம் என்பர் பழைய உரையாசிரியர். இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் பகைவரது காவல் மரத்தினைத் தடிந்து யானைமேல் உலாவந்த தோற்றத்திற்கு முருகப் பெருமான் கடல் நடுவே நின்ற சூர்மாவைத் தடிந்துகளிற்றின் மேல் எழுந்தருளிய தெய்வத் தோற்றத்தினைக் குமட்டூர்க் கண்ணனார் உவமையாக எடுத்தாண்ட திறம் முருகன் சூர்மாவைக் கொன்ற புராண வரலாற்றின் தொன்மையினை நன்கு புலப்படுத்தல் காணலாம். மிகப் பழங்காலத்திலே மக்களினத்தார் தமக்கு இடர் விளைத்த விலங்குகளையும், பகைவர்களையும் அழித்தற் பொருட்டுப் பயன்படுத்திய படைக்கல வகைகளுள் தொன்மையுடையதும் ஆழ்ந்து அகன்று நுண்ணிதாகிய திறத்தால் அறிவல் ஒட்பத்தைப் புலப்படுத்துவதும் வேல் என்னும் படைக்கலமேயாகும். இத்தகைய வேற்படையைத் தாங்கிய இளைய வீரனாகவும், மக்களுக்கு உளதாம் பல்வகை அச்சங்களைப் போக்கி அவர்கள் நினைந்தவற்றை விரைந்து முடித்தருளும் இளைய வீரர் தலைவனாகவும், செஞ் ஞாயிற்றை ஒத்த சிவந்த திருமேனியனாய் நறுமலர் மாலையணிந்து நீல மயிலாகிய பறவைமேல் அமர்ந்து வரும் பேரழகனாகவும் மலைவாழ்நரால் வழிபடப் பெற்ற தெய்வம் சேயோனாகிய முருகப் பெருமான் என்பதனைச் சங்கச் செய்யுட்களால் நன்கு உணரலாம். எல்லாம் வல்ல முழுமுதற் பொருளாகிய இறைவன் காண்டற்கரிய கடவுளாயினும் தன்னை அன்பினாற் கருதி வழிபடுவர் உள்ளத்தே மேற்குறித்தவண்ணம் கவின்பெறு தோற்றத்தினனாகத் தோன்றிப் புறத்தேயும் காட்சி நல்குவான் என்பது அம்முதல்வனதருளால் அவனைப் போற்றிப் பேரின்பம் நுகர்ந்த அருளாளர்களும் அம்முதல்வனை அன்பினால் ஒருங்கு கூடிப் போற்றும் திறத்தார் அவன் அருளுக்கு இலக்காகிய உலகத்து ஏனைய மக்களும் முறையே சிறப்பு நிலையிலும், பொது நிலையிலும் கண்டுணர்ந்த அனுபவ உண்மையாகும். வையத்து வாழ்வாங்கு வாழ்ந்து தெய்வத் திருவருளைப் பெற்றுப் பேரின்பம் உறும் பெருமக்கள், யான்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற நன்னோக்கு உடையராய்ப் பெரும் பெயர் முருகனாகிய முழுமுதற் கடவுளாற் பெறும் பேரின்ப நிலையினைப் பெறுதற்கு உறுதுணையாக முருகனது பொருள் சேர் புகழ்த்திறத்தைப் பலரும் ஒருங்கு கூடிப் போற்றும் முறையில் இயற்றியருளிய தெய்வப் பனுவல்கள் சங்க இலக்கியத்தில் இடம் பெற்றுள்ளன. அவற்றுள் இங்கு சிறப்பாகக் குறிப்பிடத்தகுவது பத்துப்பாட்டுள் முதற் பாட்டாகிய திருமுருகாற்றுப்படையாகும். தன்னிகரற்ற தலைவன் ஒருவன்பால் பரிசில் பெற்று வரும் கூத்தர், பாணர், பொருநர், விறலி முதலிய பரிசில் வாழ்நர் வழியிடையே தம்மை எதிர்ப்பட்ட இரவலர்களது துயரைக் கண்டு இரங்கித் தாம் பெற்ற பெருஞ் செல்வத்தை அவர்களும் பெற்று மகிழும்படி வழிப்படுத்துதல் ஆற்றுப்படை எனப்படும். கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும் ஆற்றிடைக் காட்சி உறழத் தோன்றிப் பெற்ற பெருவளம் பெறாஅர்க் கறிவுறீஇ சென்று பயன்எதிரச் சொன்ன பக்கமும் என்பது தொல்காப்பியனார் கூறிய ஆற்றுப்படை இலக்கண மாகும். ஆடுதல் தொழிலில் வல்ல கூத்தரும், பண் பொருந்தப் பாடுதலில் வல்ல பாணரும், பிறர் மனத்திற் கொண்டதனைக் குறிப்பால் உணர்ந்து இசை பட நடித்துக் காட்ட வல்ல பொருநரும், தன் மனக் குறிப்பு மெய்யின்கண் புலப்பட ஆடவல்ல விறலியரும் ஆகிய நால்வகையோரும் தாம் பெற்றுள்ள செல்வப் பொலிவும் தம்மை வழி இடையே எதிர்ப்பட்ட பரிசிலர்களின் வறுமைத் தோற்றமும் ஒன்றிரண்டு மாறுபட்டுத் தோன்ற, தமக்குப் பெருஞ் செல்வத்தை வழங்கியவர் இன்னார் எனவும் அவரை அடைந்து பரிசில் பெறுதற்குரிய வழிமுறைகள் இவையெனவும் தம்மை எதிர்ப்பட்ட பரிசிலர்க்கு அறிவுறுத்தி, அன்னோர் தாம் கூறியவழியே சென்று பரிசில் பெறுதற்கு ஏற்ற வழி சொல்லி அனுப்புவதாக அமைந்த பனுவல் ஆற்றுப்படை என்னும் துறையாம் என்பது மேற்குறித்த தொல்காப்பியத் தொடரின் பொருளாகும். இத்தொடரிற் சுட்டிய இலக்கணத்தின்படி அமைந்தன கூத்தராற்றுப்படை, பாணாற்றுப்படை, பொருநராற்றுப் படை, விறலியாற்றுப்படை என்பன. இவற்றுக்குரிய இலக்கியங்களாகப் பத்துப் பாட்டுள் மலைபடுகடாம் என்னும் கூத்தராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, பொருநராற்றுப்படை ஆகிய பாடல் களையும், புறநானூற்றில் விறலியாற்றுப்படை என்னும் துறை களிலமைந்த பாடல்களையும் கொள்ளலாம் வாழ்க்கைத்துறையில் வளம் பெற்றோர் தம்போல் வளம் பெறாதாரை நோக்கி வளம் பெற்று வாழ்வதற்கேற்ற வழி முறைகளை அறிவுறுத்துவது ஆற்றுப்படைப் பனுவல்களின் நோக்கமாகும். யான்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று எண்ணி விரிந்த உள்ளத்துடன் ஒருவர்க்கொருவர் தத்தம் அனுபவங்களை எடுத்துரைத்து வையத்து வாழ்வாங்கு வாழ வழிகாட்டி உதவும் இத்தகைய தெய்வ அருட் குறிப்பினை, ஆற்றிடைக் காட்சி உறழத் தோன்றிப் பெற்ற பெருவளம் பெறாஅர்க் கறிவுறீஇ சென்று பயனெதிரச் சொன்னபக்கமும் எனவரும் தொடரால் ஆசிரியர் தொல்காப்பியனார் புலப்படுத்தி யுள்ளார். இத்தொடர்ப்பொருளைக் கூர்ந்து நோக்குங்கால் இங்கு எடுத்து ஓதப்பட்ட கூத்தர், பாணர், பொருநர், விறலியர் என்னும் இவர்களையேயன்றி, இவர்களைப் போன்று ஏனைக் கலைத் துறைகளில் பயிற்சி உடைய கலைஞர் பிறரும் தம் எதிர்ப்பட்ட மக்களைத் தத்தம் துறையில் மேல்மேல் வளம் பெறச் செய்தல் வேண்டும் என்னும் அருள் நோக்குடன் நல்வழியிற் செலுத்துதற்குரியர் என்பதும், இவ்வாறு வெவ்வேறு கலைத் துறைகளில் வல்ல சான்றோர் பலரும் தத்தம் பயிற்சி நிலையையும், வாழ்க்கை அனுபவத்தையும் எடுத்துரைத்துத் தம்மை ஒத்த மக்களை நல்வழியிற் செலுத்துதலாகிய பல்வேறு முயற்சிகளும் ஆற்றுப்படை என்னும் இத்துறையில் அடங்கும் என்பதும் இனிது புலனாகும். எனவே இங்கு எடுத்துக் கூறப்பட்ட கூத்தர், பாணர், விறலியர், பொருநர் என்போர் கூற்றாக அமைந்த ஆற்றுப்படைகளேயன்றிப் புலவர் முதலிய பிறர் கூறுவனவாகவமைந்த ஏனைய ஆற்றுப்படைகளும் மேற் குறித்த தொல்காப்பிய இலக்கணத்தின்படி ஆற்றுப்படைகள் எனவே வழங்குதற்கு உரியன. ஆற்றுப்படை எல்லாவற்றிற்கும் உரியவாக இங்குக் கூறப்பட்ட பொது இலக்கணத்தினைக் கூர்ந்து நோக்குங்கால் பத்துப்பாட்டுள் முதற்பாட்டாகத் திகழும் திருமுருகாற்றுப்படை என்ற பனுவல் தொல்காப்பியனார் கூறிய ஆற்றுப்படை இலக்கணத்தின்படி அமைந்ததே என்னும் உண்மை நன்கு தெளியப்படும். ஆற்றிடைக் காட்சி உறழத் தோன்றி, பெற்ற பெருவளம் பெறார்க்கறிவுறீஇச், சென்று பயனெய்தச் சொன்னபக்கம் எனவரும்தொல்காப்பியத் தொடர் எல்லாவகையான ஆற்றுப்படை களுக்கும் பொது இலக்கணமாக அமைந்தது எனவே கொள்ளுதல் வேண்டும். இத் தொடர்க்கு இல்லறத்தைவிட்டுத் துறவறமாகிய நெறியில் நிற்றல் நன்றென்றும் கண்ட காட்சி தீதென்றும் மாறுபடத் தோன்றுகையினாலே தான் இறைவனிடத்துப் பெற்ற கந்தழியாகிய செல்வத்தை யாண்டும் திரிந்து பெறாதார்க்கு இன்ன இடத்தே சென்றாற் பெறலாம் என்று அறிவுறுத்தி, அவரும் ஆண்டுச் சென்று அக்கந்தழியினைச் சொன்ன கூறுபாடு எனப் பொருள் வரைந்து தெய்வத்தினிடத்து ஆற்றுப்படுத்துவதாகிய ஆற்றுப்படைக்குரிய சிறப்பிலக்கணமாகக் கொண்டார் நச்சினார்க்கினியர். இவ்வாறன்றி இத் தொடரை ஆற்றுப்படையின் பொது விலக்கணமாகவே கொள்ளினும் தெய்வத்தின் பால் உய்ப்பதாகிய இத்திருமுருகாற்றுப் படை அப்பொது விலக்கணத்தின்படி அமைந்த ஆற்றுப்படைகளுள் ஒன்றாய் அடங்குதல் காணலாம். இனி முருகாற்றுப்படை என்பதற்கு முருகன் பால் வீடு பெறுதற்குச் சமைந்தான் ஓர் இரவலனை வீடுபெற்றான் ஒருவன் முருகனிடத்தே ஆற்றுப்படுத்தது என்பது பொருளாகக் கொள்க என்பர் நச்சினார்க்கினியர். இதனைப் புலவராற்றுப்படை என வழங்குதலுமுண்டு. அமரர்கண் முடியும் அறுவகையானும் எனவரும் தொல் காப்பியத் தொடர்க்கு அமரர் கண்முடியும் கொடிநிலை, கந்தழி, வள்ளி, புலவராற்றுப்படை, புகழ்தல், பரவல் என்பன வற்றினும் எனப் பொருள் வரைந்த இளம்பூரணர் வந்தது கொண்டு வாராததுணர்த்தல் (தொல் மரபு. 110). என்பதனால் புலவராற்றுப் படை முதலாகிய மூன்றும் சார்த்தி வரும் எனவும் கொள்க. முருகாற்றுப் படையுள், மாடமலிமறுகில் கூடல் குடவயின் இருஞ்சேற்றகல்வயல் விரிந்து வாயவிழ்ந்த முட்டாட்டாமரைத்துஞ்சி என்றவழி ஒருமுகத்தால் பாண்டியனையும் இதனுட் சார்த்தியவாறு காண்க எனவரும் இளம்பூரணர் உரை திருமுருகாற்றுப்படை புலவராற்றுப்படை என்ற பெயரால் இளம்பூரணர் காலத்தில் வழங்கியது என்பதனை வலியுறுத்தும். கூத்தராற்றுப்படை, பாணாற்றுப்படை பொருநராற்றுப்படை, விறலியாற்றுப்படை என ஏனைய ஆற்றுப்படைகளெல்லம் ஆற்றுப்படுத்துவோராகிய கூத்தர் முதலியோரது தலைமை தோன்ற அவர்களது பெயரால் வழங்குமாறு போல, முருகன்பால் முதுவாய் இரவலனாகிய புலவனை புலமைச் செல்வருள் ஒருவர் ஆற்றுப்படுத்தும் முறையில் நக்கீரர் பாடிய இவ்வாற்றுப்படையும், ஆற்றுப்படுத்துவோராகிய புலவர் பெயரால் புலவராற்றுப் படை என வழங்கப் பெற்றிருத்தல் வேண்டும் என்பது மேற்குறித்த இளம்பூரணர் உரையால் உய்த்துணரப்படும். எனினும், நக்கீரரால் பாடப்பெற்ற இவ்வாற்றுப்படை ஆற்றுப்படுத்தும் புலவர் பெயரால் புலவராற்றுப்படை என வழங்கப்பெறாமல் ஆற்றுப்படுத்தப் பெறும் முருகப் பெருமான் பெயரால் முருகாற்றுப்படை எனவே சிறப்பு முறையில் வழங்கப் பெற்று வருகிறது. புலவராற்றுப்படை என்ற பெயரால் இப்பாடல் நுதலிய சமய நுண்பொருள் விளங்கமாட்டாது போகவே அப்பொருள் எளிதில் விளங்குமாறு பாட்டுடைத் தெய்வத்தின் பெயரொடு சார்த்தி முருகாற்றுப்படை என இப்பனுவல் சிறப்பு முறையில் வழங்கப் பெறுவதாயிற்று. எனவே புலவராற்றுப்படை என்ற பொதுப் பெயர் வழக்கு வீழ்ந்ததாதல் வேண்டும். இதனைப் புலவராற்றுப்படை என உய்த்துணராது பெயர் கூறுவார்க்கு முருகாற்றுப்படை என்னும் பெயரன்றி அப்பெயர் வழங்காமையான் மறுக்க (தொல். புறம். 36) எனவரும் நச்சினார்க்கினியர் கூற்று இவ்வுண்மையைப் புலப்படுத்தல் காணலாம். மெய்யுணர்வினால் உயிர்முனைப்படங்கி இறைவனது திருவடி களை இடையறாது போற்றும் நலம்புரி கொள்கைப் புலவன் ஒருவன் தன்னை ஒத்த புலவர்களை இறைவன்பால் ஆற்றுப்படுத்தற் குரிய தகுதி உடையேன் யான் என்னும் ஆன்ம போதத்துடன் முருகப் பெருமானை அடைதற்குகரிய நெறி முறையைப் புலவர்க்கு அறிவுறுத்தினான் என்றல் சீவன் முத்தனாகிய அவனது உளவியல்பிற்குக் சிறிதும் ஒவ்வாது. எனவே, இவ்வாற்றுப்படை அப்புலவனது தலைமை தோன்ற புலவராற்றுப்படை என்ற பெயரால் வழங்கப் பெறாதாயிற்று. அன்றியும் சிந்தைக்கும் மொழிக்கும் எட்டாத முழுமுதற் பொருளாகிய முருகப் பெருமானை அடையும் நெறியறிந்து சென்று சேர்தல் சில் வாழ் நாள் பல்பிணிச் சிற்றறிவினராகிய மன்னுயிர்கட்கு இயலா தென்பதும் அரும் பெயர் மரபில் பெரும் பெயர் முருகனாகிய அம்முதல்வனே தன் அருள் காரணமாக மன்னுயிர்த் தொகுதியாகிய நம்மை நோக்கி எளிவந்து தோன்றி அருள்புரியும் வண்ணம் அவ்விறைவனை அன்பின் திறத்தால் நம்வழிப்படுத்தும் வழிபாட்டு முறைகளை அறிவுறுத்தும் முறையில் இப்பாடல் அமைந்தமைபற்றி இது முருகாற்றுப்படை என்னும் பெயர்த்தாயிற்று என்பதும் பண்டைச் சான்றோர் முடிபாகும். இந்நுட்பம் முருகியம் நிறுத்து முரணினர் உட்க முருகாற்றுப்படுத்த உருகெழு வியனகர் எனவரும் இத்திருமுருகாற்றுப்படைத் தொடரானும், களநன் கிழைத்துக் கண்ணிசூட்டி வளநகர் சிலம்பப் பாடிப் பலிகொடுத் துருவச் செந்தினை குருதியொடு தூஉய் முருகாற்றுப் படுத்த உருகெழு நடுநாள் (அகம்.) எனவரும் அகப்பாடலாலும் நன்கு புலனாதல் காணலாம். முருகாற்றுப்படுத்த எனவரும் இத் தொடர்க்குப் பிள்ளையார் வரும்படி வழிப்படுத்தின என்று நச்சினார்க்கினியர் கூறிய பொருள் முருகாற்றுப்படை என்னும் பெயர்க் காரணத்தை இனிது புலப்படுத்துவ தாகும். இனி, முருகன் எழுந்தருளிய திருப்பதிகளாகிய திருப்பரங் குன்றம், திருச்சீரலைவாய், திருவாவினன்குடி, திருவேரகம், குன்றுதோறாடல், பழமுதிர்சோலை என்னும் ஆறுபடை வீடுகளையும் பற்றிக் கூறுதலின், இப்பாடல் திருமுருகாற்றுப்படை என்னும் பெயர்த்தாயிற்று எனக் கொண்டு இவ்வொரு பாடலையே ஆறுபகுதிகளாகப் பகுத்து வழங்குவாரும் உளர். இத்திருமுருகாற்றுப் படையில் தனிப்பட எடுத்துரைத்துச் சிறப்பிக்கப்பட்ட திருப்பதிகள் திருப்பரங்குன்றம், திருச்சீரலைவாய், திருவாவினன்குடி, திருவேரகம் என்னும் நான்குமேயாகும். அந்நூல் ஐந்தாவதாகப் கூறும் குன்றுதோறாடல் என்பது ஒருதனித் திருப்பதி அன்று. சேயோனாகிய முருகப் பெருமான் குறிஞ்சி நிலத் தெய்வம் ஆதலால் அவ்விறை வனுக்கு எல்லா மலைகளும் விரும்பி விளையாடுதற்கு உரிய சிறப்புடைய திருத்தலங்களே என்னும் கருத்தினால் குன்று தோறாடலும் நின்றதன் பண்பே என்றார் முருகாற்றுப்படை ஆசிரியர். மலைகள் தோறும் சென்று விளையாடுதலும் முருகப் பெருமானுக்கு நிலை பெற்ற பண்பாம் என்பது இத்தொடரின் பொருளாகும். இவ்வாறு குறிஞ்சிக் கிழவன் என்ற பொருள்படப் பழமுதிர் சோலை மலை கிழவோன் என முருக வேளை இந்நூலாசிரியர் திருமுருகாற்றுப்படையின் இறுதி அடியில் குறிப்பிட்டுப் போற்றியுள்ளார். இங்குக் கூறப்பட்ட பழமுதிர் சோலைமலை என்பதனைச் சங்கத் தொகை நூலாகிய பரிபாடலில் திருமாலிருஞ்சோலைமலை என்ற பெயரால் போற்றப்பெறும் அழகர்மலையென வழங்கும் திருப்பதியாகக் கொள்வது முண்டு. பழமுதிர் சோலைமலை என அதனைத் தனியே எண்ணாமல் அம்மலை முருகனுக்கு உரியது என்றவளவில் பழமுதிர் சோலை மலைகிழவோன் எனத் திருமுருகாற்றுப்படை குறித்தலால் பழமுதிர் சோலைமலை என்ற தொடர் திருமாலிருஞ்சோலை மலையை மட்டும் குறித்தது எனக் கொள்ளாமல், அம்மலையினை ஒத்து இழுமென இழிதரும் அருவியையுடைய வளமார்ந்த எல்லா மலைகளையும் குறித்து நின்றதெனக் கொள்ளுதலே ஏற்புடையதாகும். பழமுதிர் சோலை மலைகிழவோன் என உடம்பொடு புணர்த்துக் கூறினமையால், பழமுதிர் சோலை மலையின்கண்ணே எழுந்தருளி யிருத்தலும் உரியன் எனப் பொருள் கொண்டு இம்மலையினை முருகனுக்குரிய தனித் திருப்பதியாகக் கொண்டாலும் இம்முருகாற்றுப் படையில் சிறப்பிக்கப் பெற்ற திருத்தலங்கள் ஐந்தெனக் கொள்வ தன்றி ஆறுபடை வீடெனக் கொள்வதற்குச் சிறிதும் இடமில்லை. திருமுருகாற்றுப்படை என்னும் இப்பனுவலின் ஆசிரியர் சங்கப்புலவர் நக்கீரனார் ஆவார். இச்செய்தி, குமரவேளை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடிய திருமுருகாற்றுப் படைக்கு மதுரை ஆசிரியர் பாரத்துவாசி நச்சினார்க்கினியர் செய்த வுரை எனவரும் உரைத் தொடரால் நன்கு துணியப்படும். பத்துப்பாட்டுள் முதலாவதாகிய திருமுருகாற்றுப்படையினைப் பாடிய நக்கீரனாரே பத்துப்பாட்டுள் ஏழுவதாகிய நெடுநல்வாடை என்னும் பாடலையும் பாடியுள்ளார். இச்செய்தி, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடிய நெடுநல்வாடை எனவரும் நச்சினார்க்கினியர் உரைத் தொடரால் நன்கு புலனாகும். இனி, திருமுருகாற்றுப்படையிலும் நெடுநல் வாடையிலும் முறையே பேரின்பமாகிய வீடுபோற்றினையும் சிற்றின்பமாகிய உலகியல் வாழ்வினையும் நாடி வாழ்ந்த இரு வேறு மனநிலை புலப்படுதலாலும் இவ்விரு பாடல்களிடையே மொழி நடை முதலியன வேறுபட்டிருத்தலானும் இவை இரண்டும் ஒரு புலவரால் பாடப்பெற்றிருத்தல் இயலாது என்றும், நெடுநல்வாடை இயற்றிய நக்கீரனார், கடைச் சங்க காலத்திலும், திருமுருகாற்றப்படை பாடிய நக்கீரனார் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டிலும் வாழ்ந்தவர் எனக் கொள்ளுதலே ஏற்புடையதாம் என்றும் அறிஞர் ஒருவர் எழுதி யுள்ளார் (திருமுருகாற்றுப்படை உரையாசிரியர் உரையுடன் கூடியது. முன்னுரை மதுரைத் தமிழ்ச் சங்கச் செந்தமிழ்ப் பிரசுரம் 68 பார்க்க). அவர்தம் கருத்து பண்டைச் சான்றோர் உரையொடு முரண்படுதலின் ஏற்புடையதாகத் தோன்றவில்லை. உலகத்து வாழ்வாங்கு வாழும் உயர்ந்த ஒழுகலாறு உடைய பெரும்புலவரது வாழ்க்கையிலே நெறிமுறைபிறழா உலகியற் செயல்களும், வீடுபேற்றிற்குக் காரணமாகிய மெய்ந்நெறிச் செயல்களும் வடிகால் முறையே ஒருங்கு நிகழ்தல் இயல்பு. அம்முறைப்படி வையத்து வாழ்வாங்கு வாழ்ந்த நின்ற நிலையிலேயே எங்கும் நிறைந்த பெரும் பொருளாகிய பெரும் பெயர் முருகனை உணர்ந்து பேரின்பம் எய்தும் வழிபாட்டு முறைகளை விளக்கியுள்ளார். உலகியல் நெறியில் வள்ளல்களை நாடிச் செல்லும் பரிசிலர் வாழ்க்கையைப் பற்றியும், போக நுகர்ச்சியாகிய இல்வாழ்க்கையைப் பற்றியும் இழித்துக் கூறும் குறிப்பெதுவும் திருமுரு காற்றுப்படையில் இடம்பெறவில்லை. பத்துப்பாட்டுள் முதலாவதாகவுள்ள திருமுரு காற்றுப்படையும் ஏழாவதாக உள்ள நெடுநல்வாடையும் ஆகிய இவ்விரண்டும் மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் என வழங்கும் ஒரு புலவராலேயே பாடப்பெற்றனவாக பண்டையோர் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளனர். கடைச்சங்க காலத்தவராகிய நல்லந்துவனாராகிய புலவர் பாடிய பாடல்கள் பரிபாடலிலும் கலித்தொகையிலும் ஏனைத் தொகைகள் சிலவற்றிலும் இடம் பெற்றுள்ளன. ஒருவர் பாடிய பாடல்களாகிய இவை பொருளமைதியிலும் மொழி நடையிலும் சிறிது சிறிது வேறுபடக் காண்கிறோம். செய்ய எடுத்துக்கொண்ட பொருள்வகை காரணமாகயாப்பியலும் மொழி நடையும் வேறுபடுதல் இயல்பேயாகும். இவ்வாறே பாண்டியன் நெடுஞ்செழியனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு பாடப்பெற்ற நெடுநல் வாடையும் முருகன்பால் முதுவாய் இரவலனை ஆற்றுப்படுத்தும் நிலையில் பாடப் பெற்ற திருமுருகாற்றுப்படையும் எடுத்துக் கொண்ட பொருள் வகையால் சிறிது வேறுபட்டனவாதலின் அவற்றிடையே சிறிது சிறிது வேறுபாடு காணப்படுதல் ஏற்புடைய தேயாகும். இடைச் சங்க நூலாகிய தொல் காப்பியத்தில் சுட்டப்படாத மொழி வழக்குகள் சில கடைச்சங்க நூல்களில் புதியன புகுதலாக ஆங்காங்கே உடன்பட்டு இருத்தலைக் காண்கிறோம். புதியன புகுதலாகிய இவ்வழக்கிற்குத் திருமுருகாற்றுப்படையும் விலக்கான தன்று. திருமுருகாற்றுப்படை பாடிய நக்கீரனாரும், நெடுநல்வாடை பாடிய நக்கீரனாரும் மதுரைக் கணக்காயர் மகனார் நக்கீரனார் என ஒருவராகவே குறிக்கப்படுதலானும், இவர்பாடிய இவ்விரு பாடல்களிலும், சங்கச் செய்யுட்கள் பிறவற்றிலும் சொல்வழக்குகள் ஒத்து நிற்றலாலும், பெரும் பேராசிரியர் உ. வே. சாமிநாத ஐயர் அவர்கள் தாம் பதிப்பித்த பத்துப்பாட்டு இரண்டாம் பதிப்பிலே பாடினோர் வரலாறு என்னும் தலைப்பில் நக்கீரனாரைக் குறித்து எழுதுங்கால் இத்தகைய ஒப்புமைப் பகுதிகளைத் தெளிவாக எடுத்துக் காட்டியுள்ளமையாலும் திருமுருகாற்றுப்படை ஆசிரியரும் நெடுநல்வாடை ஆசிரியரும் மதுரைக் கணக்காயர் மகனார் நக்கீரனாரும் ஒருவரே என்பது நன்கு துணியப்படும். சூர்மருங் கறுத்த சுடரிலை நெடுவேல் (அகம். 50) என மதுரை மருதன் இளநாகனாரும் உருவச் நெந்தினை குருதியொடு தூஉய் முருகாற்றுப்படுத்த உருகெழு நடுநாள் (அகம். 22) என வெறிபாடிய காமக் கண்ணியாரும் கூறும் தொடர்கள் திருமுருகாற்றுப்படையில் சூர்முதல் தடிந்த சுடரிலை நெடுவேல் எனவும், உருவப் பல்பூத் தூஉய் வெருவர குருதிச் செந்தினை பரப்பிக் குறமகள் மருகியம் நிறுத்து முரணினர் உட்க முருகாற்றுப்படுத்த உருகெழு வியனகர் எனவும் வரும் தொடர்களோடு ஒத்து நிற்றலைக் கூர்ந்து நோக்குங்கால், இப்புலவர்கள் அனைவரும் கடைச் சங்க காலமாகிய ஒரு காலத்தில் வாழ்ந்தவர்கள் என்பது நன்கு புலனாகும். ஆகவே மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனாரே இத்திருமுருகாற்றுப் படையைப் பாடியவர் என்றும், இவரே பாண்டியன் நெடுஞ்செழி யனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு நெடுநல்வாடையைப் பாடியவர் என்றும் பண்டையோர் கூறும் கூற்று உறுதிப்படுதல் காண்க. திருமுருகாற்றுப்படை பாடிய ஆசிரியர் மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் எனச் சுட்டப்படுதலால் இவர் வாழ்ந்த ஊர் மதுரை என்பதும், இவருடைய தந்தையார் மதுரையில் மாணாக்கர்கட்குக் கல்விபயிற்றும் ஆசிரியராகத் திகழ்ந்தமையால் மதுரைக் கணக்காயனார் என வழங்கப் பெற்றார் என்பதும் நன்குபுலனாம். பெரும்பெயர்க் கடவுளாகிய முருகப் பெருமான் திருவருளால் ஐம்புலநெறியின் நீங்கிச் செம்புலச் செல்வராய் மதுரையில் வாழ்ந்த நக்கீரனார் என்னும் புலவர் பெருமான் முருகப் பெருமானது திருவடிப் பேரின்பமாகிய வீடு பேற்றினை அடைய விரும்பித் தன்னை எதிர்ப்பட்ட முதுவாய் இரவலனை நோக்கித் தாம் பெற்ற பேரின்பத்தை உலகமக்கள் அனைவரும் பெறுதல் வேண்டும் என்னும் அருள் நோக்கம் உடையராய் முருகப் பெருமானது திருவருளால் அடைதற்கரிய பேரின்பத்தை எடுத்துக் கூறி அவ்விறைவன்பால் ஆற்றுப்படுத்தும் நிலையில் திருமுருகாற்றுப்படை என்னும் செந்தமிழ்ப் பனுவலைப் பாடியுள்ளார். முருகப் பெருமான் எழுந்தருளியுள்ள தெய்வத்திருப்பதிகளின் சிறப்பினையும் அங்கு மக்கள் பலரும் அன்பினால் ஒருங்குகூடி முருகப் பெருமானது பொருள் சேர் புகழ்த் திறங்களைப் போற்றி உய்திபெறும் நிலையில் ஆங்காங்கே நிகழும் வழிபாட்டு முறைகளையும் அன்பினால் நிகழ்த்தப்பெறும் அவ்வழிபாடுகளில் காண்டற்கரிய கடவுளாகிய இறைவன் பண்டைத்தன் மூவா இளநல முடையோனாகத் தோன்றிக் காட்சியளிக்கும் பெற்றியினையும், முருகனது அருளை நிரம்பப்பெற்ற சான்றோர்கள் அம்முதல்வனதருளை நாடிவந்த இரவலனுக்கு அருள் செய்யும் பொருட்டு இறைவனைப் பணிந்து வேண்டும் வேண்டுகோளையும், அவர்தம் வேண்டுகோளைச் செவிமடுத்த இறைவன் முதுவாய் இரவலனுக்கு விழுமிய பெறலரும் பரிசிலாகிய வீடுபேற்றினை வழங்கியருளும் திறத்தினையும் விரித்துரைக்கும் முறையில் அமைந்தது திருமுருகாற்றுப்படையென்னும் இத் தெய்வப் பனுவலாகும். உலகத்துப் பல்லுயிர்களும் மகிழ நீலக் கடல்மேல் தோன்றும் காலை யிளங்கதிரவனைப் போன்று, நீலமயிலின் மேல் செம்மேனிப் பேரொளியினனாகத் திகழ்வோன் முருகப்பெருமான். தன்னைச் சேர்ந்தவர்களது ஆணவவல்லிருளைப் போக்கி அவரைத் தாங்கிய ஆற்றல்மிக்க திருவடியினையும் அழித்தற்கரிய கொடியோரை அழித்த கையினையும் உடையவன். அறக்கற்பினையுடைய தெய்வயானையார் கணவன். செங்கடம்பின் மாலையசையும் மார்பினையுடையவன். வண்டுகள் மொய்க்காத தெய்வத் தன்மை வாய்ந்த செங்காந்தட்பூவாலாகிய கண்ணியைச் சூடிய திருமுடியை யுடையவன். கடல்நடுவிற் புகுந்து சூரபன்மாவாகிய தலைவனைக் கொன்ற சுடர்விடும் நெடிய வேலாலே, அவுணரது நல்ல வன்மை யெல்லாம் அழியும்படி கீழ்நோக்கின பூங்கொத்துக்களையுடைய மாமரத்தைப் பிளந்த குற்றமில்லாத வெற்றியுனையும், ஒருவராலும் அளந்தறிய வொண்ணாத பொருள்சேர் புகழினையும் உடையவன். சிவந்த வேற்படையைத் தாங்கிய சேயோனாகிய முருகப் பெருமானுடைய திருவடியிற் செல்லுதற்குக் காரணமான நல்வினை களைப் பல பிறப்புக்களினும் விரும்பிப் புரிந்த தலைமைபெற்ற உள்ளத்துடனே அப் பெருமான்பாற் செல்லுதற்கு நீ விரும்பி விட்டாயாயின் நினது நல்ல நெஞ்சத்தினது இனிய விருப்பம் ஈடேற நீ கருதிய வீடு பேற்றின்பத்தை இப்பொழுதே தப்பாமற் பெறுவாய். வெற்றியாலும் செல்வத்தாலும் விளக்கமுற்ற கடல் நகரத்துக்கு மேற்றிசையிலுள்ளதும். இரவெல்லாம் தாமரை மலரில் உறங்கிய வண்டினங்கள் விடியற்காலத்தே நெய்தற் பூவையூதி ஞாயிறு தோன்றின காலத்தே கண்ணைப் போன்று மலர்ந்த சுனைப் பூக்களிலே சென்று ஆரவாரிக்கும் வளமார்ந்ததுமாகிய திருப்பரங் குன்றத்திலே இறைவனாகிய முருகன் மனம் விரும்பி எழுந்தருளி யிருத்தலு முரியன், அதுவன்றி, ஆறு திருமுகங்களும் பன்னிரண்டு திருக்கரங்களும் தத்தமக்கேற்ற தொழில் செய்ய யானையின்மேல் எழுந்தருளி வான்வழியாகத் திருச்சீரலைவாய் என்ற திருப்பதியை யடைதலும் அவனுக்கு நிலைபெற்ற பண்பாகும். அதுவன்றிப் படைத்தற் கடவுளாகிய நான்முகனுக்கேற்பட்ட சாபத்தை நீக்குதற் பொருட்டுத் திருமால் சிவபெருமான் இந்திரன் ஆகிய தெய்வங்களும், முப்பத்து முக்கோடித் தேவர்களும் பதினெண்கணங்களும் துனியில் காட்சி முனிவர் முற்புகக் கந்தருவர் யாழிசைக்க உடன் வந்து காணத்திருவாவினன்குடியில் தன் தேவியுடன் சிலநாள் அமர்ந்திருத்தலும் உரியன். அதுவன்றி இருபிறப்பாளராகிய அந்தணர்கள் நீராடி ஈர ஆடை உடுத்து ஆறெழுத்து மந்திரமாகிய மறையை ஓதி மலர் தூவி வணங்க அவ்வழிப்பாட்டை விரும்பி ஏற்று ஏரகம் என்னும் திருப்பதியில் எழுந்தருளியிருத்தலும் உரியன், அதுவன்றிக் குறமகளிராடும் குரவைக் கூத்திற்கு முதற்கை கொடுத்து அம்மகளிருடன் மலைகள் தோறும் விரும்பி விளையாடுதலும் அவன்பால் நிலைபெற்ற அருட்குணமாகும். அதுவேயுமன்றி ஊர்கள் தோறும் மக்கள் கொண்டாடும் திருவிழாக்களிலும், அன்புடைய அடியார்கள் உளமுருகிப் போற்ற அமைந்த இடங்களிலும், முருகபூசை புரியும் வேலனென்பால் வேலேந்தி வெறியாடுகளத்திலும், காடுகளிலும் இளமரச் சோலைகளிலும் ஆற்றிடைக் குறையிலும், குளங்களிலும் வேறுபல எழில்மிக்க இடங்களிலும் பல தெருக்கள் ஒன்று கூடும் சந்திகளிலும் புதுப்பூ மலருங் கடம்ப மரங்களிலும் மன்றங்களிலும் பொதுவாகிய அம்பலங்களிலும், தெய்வம் உறையும் தூண்கள் நிலைபெற்ற இடங்களிலும், குறையிரந்து வேண்டும் அன்பர்கள் தாம் விரும்பிய வாறே பெற்று நின்று வழிபட அவ்வவ்விடங்களிலேயே நிலைபெற எழுந்தருளி யிருத்தலும் திருவட்பெரியோர் அறிந்து கூறிய மெய்ந் நெறியாகும். யான் முற்கூறிய அவ்வவ்விடங்களிலேயாயினுமாக, நீ முற்பட அம்முருகப் பெருமானைக் கண்டபொழுது முகம் விரும்பித் துதித்துக் கைகளைத் தலைமேல் குவித்து நின்று வாழ்த்திப் பின்பு அவன் திருவடிகளிலே தலை பொருந்தும் படி வீழ்ந்து வணங்கி, நெடும் பெருஞ் சிமையத்துப் நீலப் பைஞ்சுனை ஐவருள் ஒருவன் அங்கை யேற்ப அறுவர் பயந்த ஆறமர் செல்வ ஆல்கெழு கடவுட் புதல்வ மால்வரை மலைமகள் மகனே மாற்றோர் கூற்றே வெற்றி வெல்போர்க் கொற்றவை சிறுவ இழையணி சிறப்பிற் பழையோள் குழவி என்பன முதலாக யான் அறிந்து நினக்குக் கூறிய அளவாலேயே நீயும் நினக்குத் தெரிந்த பலவற்றையும் கூறிப் புகழ்ந்து, நின்னோடு ஒப்பாரில்லாத மெய்ஞ்ஞானத்தையுடைய பெருமானே! நின் தன்மையெல்லாம் முழுதும் அளந்தறிதல் நிலைபெற்ற எவ்வுயிர்க்கும் அரிதாகையினாலே நின் திருவடியைப் பெறவேண்டுமென்று நினைந்து வந்தேன் என அவ்விறைவனை நோக்கி நினது வேட்கையினைத் தெரிவிப்பாயாக. நீ அங்ஙனம் தெரிவித்தற்கு முன்னரே முருகனைச் சேவித்து நிற்போராகிய மெய்யடியார்கள் அங்கே பொலிவுடன் வந்து தோன்றி அவ்விறைவனை நோக்கிப் பெருமானே, அறிவு முதிர்ந்த வாய்மையுடைய இப்புலவன் நினது பொருள்சேர் புகழுரையினைக் கூற விரும்பிக் கேட்டோர்க்கு இனியனவும் உறுதி பயப்பனவுமாக மிக்க பலவற்றை வாழ்த்தி வந்துள்ளான். இவன் நின்னால் அளிக்கத் தக்கவன் என நின் பொருட்டுக் குறையிரந்து நிற்பர். அந்நிலையில் இழுமென இழிதரும் அருவிநீரையும், பழம் முதிர்ந்த சோலைகளையும் உடைய மலைக்கு உரியவனாகிய முருகப்பெருமான் தெய்வத்தன்மை அமைந்த பேராற்றல் விளங்கும் வடிவினையும், வானளவோங்கிய வளர்ச்சியை யுமுடையனாக அவ்விடத்தே வந்து தோன்றித் தனது பேருருவம் மக்கள் கண்களால் காண்டற்கரியதாதலின் அப்பெரிய வடிவத்தை உள்ளடக்கிக் கொண்டு தனது பழைய வடிவாகிய இளமைக் கோலத்தினை நினக்குக் காட்டி நீ வீடுபெற நினைந்துவந்த வருகையை யான் முன்னரே அறிவேன். அது நினக்கு எய்ததற்கரிய தென்று அஞ்சுதலைத் தவிர்க என்று நின்பால் அன்புடைய நல்ல வார்த்தைகளைப் பலமுறையும் அருளிச் செய்து கடல் சூழ்ந்த இவ்வுலகிலே நீ ஒருவனுமே பிறர்க்கு வீடளித்தற்கு உரிமை யுடையையாய்க் கேடின்றித் தோன்றும்படி பிறராற் பெறுதற்கரிய சிறப்பாகிய வீடுபேற்றின்பத்தை நினக்குத் தந்தருளுவான் என்பது இத் திருமுருகாற்றுப்படையின் திரண்ட பொருளாகும். எல்லாப் பொருளினும் சிறந்ததாகிய வீடுபேற்றினை விழுமிய பெறலரும் பரிசில் என நக்கீரனார் இத்திருமுருகாற்றுபடையிற் சிறப்பித்துள்ளார். விழுமிய பரிசில், பெறலரும் பரிசில் என இயையும். வீடு பேற்றினும் சிறந்தது பிறிதொன்றின்மையின் அதனை விழுமிய பரிசில் என்றும், அவ்வீடு பேறுதானும் இறைவனது திருவருளாற் கிடைக்கப்பெறுவதன்றி உயிர்கள் தாமே தமது முயற்சியாற் பொறுதற்குரிய எளிமைத் தன்மைத்து அன்றாதலின் அதனைப் பெறலரும் பரிசில் என்றும் நக்கீரனார் குறித்த திறம் நினைந்து மகிழத்தக்கதாகும். கந்தழியைப் பெற்றான் ஒருவன் அதனைப் பெறாதான் ஒருவனுக்குப் பெறுமாறு கூறி அவனை வழிப்படுத்துக் கூறுவான் என்பது பற்றி நக்கீரனார் இத்திருமுகாற்றுப்படையைப் பாடியுள்ளார் என்பர் நச்சினார்க்கினியர். கந்தழியாவது ஒரு பற்றுமற்று அருவாய்த் தானே நிற்குந் தத்துவங் கடந்த பொருள்; அது, சார்பினாற் றோன்றாது தானருவா யெப்பொருட்குஞ் சார்பெனநின் றெஞ்ஞான்று மின்பம் தகைத்தரோ வாய்மொழியான் மெய்யான் மனத்தா னறிவிறந்த தூய்மையதா தைதீர் சுடர் என்பதாம்.இதனை, உற்ற வாக்கையி னுறுபொருள் நறுமல ரெழுதருஞ நாற்றம்போல் பற்றலாவதோர் நிலையிலாப் பரம்பொருள் என அதனை உணர்ந்தோர் கூறிய வாற்றானுணர்க என நச்சினார்க் கினியர் கூறிய விளிக்கம், இத்திருமுருகாற்றுப்படையும் திருவாசகம் முதலிய திருமுறைகளும் போற்றும் முழுமுதற் கடவுள் ஒன்றே யென்பதனை இனிது புலப்படுத்துதல் காணலாம். இறைவன் திருவடியே உயிர்களுக்கு வீடாயிருக்கும் என்பதனைத் தென்னன் பெருந்துறையான், காட்டாதன வெல்லாம் காட்டிச் சிவம் காட்டித் தாட்டாமரை காட்டித் தன் கருணைத் தேன் காட்டி எனவரும் திருவாசகத் தொடரால் திருவாதவூரடிகள் தெளிவாக அறிவுறுத்தியுள்ளார் என்பது நச்சினார்க்கினியரின் கருத்தாகும். முருகப்பெருமான் கடல் நடுவேசென்று வேற்படையாலே வெட்டி வீழ்த்திய மாமரம் கீழ் நோக்கின் பூங்கொத்துக்களையுடைய தென்பது கவிழிணர் மாமுதல் தடிந்த என்ற தொடரால் அறியப்படும் என்றது அவுணர் எல்லாரும் தம்முடனே எதிர்ந்தோர் வலியிலே பாதி தங்கள் வலியிலே கூடும்படி மந்திரம் கொண்டிருந்து சாதித்ததொரு மாவை வெட்டினான் என்றவாறு எனவரும் நச்சினார்க்கினியர் உரைத்தொடர் இங்கு நோக்கத்தகுந்தது. இறைவனடி சேர்தலொன்றையே சிறந்த வீடு பேறாகப் பண்டைத் தமிழ் மக்கள் கருதி வந்துள்ளார்களென்பது திருக்குறள் கடவுள் வாழ்த்தில் இறைவனடி சேர்தல், தான் சேர்தல் எனக் குறிக்கப்படும் சொல் வழக்குகளால் நன்கு தெளியப்படும். இங்ஙனம் இறைவனடி சேர்தலே வீடு பேறாகும் எனச் சைவத்திருமுறை ஆசிரியர்கள் தாம் பெற்ற திருவருள் அனுபவத்தால் உணர்ந்துகூறிய அடிசேர் முத்தியினையே சேவடி படருஞ் செம்மலுள்ள மொடு நலம்புரி கொள்கைப் புலம்பிரிந்துறையும் செலவு எனவருந் தொடரில் நக்கீரனார் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். புலம்பிரிந்துறையும் அடி எனவும், சேவடி படரும் செம்மலுள்ளமொடு செலவு நீ நயந் தனையாயின் எனவும் இயைத்துப் பொருள் வரைந்தார் நச்சினார்க்கினியர் புலம்பிரிந்து உறைதலாவது, ஐம்புல உணர்வினை நீங்கி, சிவஞானவுணர்வாகிய செம்புல உணர்வுடையராதல் திருவாதவூர் மகிழ் செழுமறைமுனிவர் ஐம்புலன் கையிகந்து அறிவாய் அறியாச் செம்புலச் செல்வராயினர் எனத் திருச்சிற்றம்பலச் கோவையார் உரை முகத்தே பேராசிரியர் தரும் விளக்கம், சேவடிபடரும் செம்மலுள்ளமொடு நலம்புரி கொள்கைப் புலம்பிரிந்துறையும் செலவு எனவரும் இத்திருமுருகாற்றுப்படையின் வரிகளை அடியொற்றி அமைந்தனவாகும். அமரர் கண் முடியும் அறுவகையானும் என்ற தொகுப்பில் முதற் கண்ணவாகிய கொடிநிலை, கந்தழி, வள்ளி என்ற மூன்றும் பாட்டுடைத் தலைவனைச் சார்த்தி வருங்காலத்துக் கடவுள் வாழ்த்தோடு பொருந்திவரும் என இந்நூற்பாவிற் கூறப்பட்ட இலக்கணத்தை இம்மூன்றுடன் சேர்த்தெண்ணப்பட்ட புலவராற்றுப் படை, புகழ்தல், பரவல் என்னும் ஏனை மூன்றற்கும் சேர்த்துப் புலவராற்றுப்படை முதலாகிய மூன்றும் சார்த்திவருமெனவும் கொள்க என்றார் இளம்பூரணர். அவர் கருத்துப்படிப் பத்துப் பாட்டுள் ஒன்றாகிய திருமுருகாற்றுப்படை என்பது புலவராற்றுப் படையாகும். முருகப்பெருமான்பால் முதுவாயிரவலனாகிய புலவனை ஆற்றுப்படுத்தும் புலவராற்றுப் படையாகிய திருமுருகாற்றுப்படையுள் மாடமலிமறுகின் கூடலாகிய மதுரையின் மேற்கே அகன்ற வயலிடத்தே மலர்ந்த தாமரை மலரின் கண்ணே இரவெல்லாம் இனிது துயில் கொண்ட வண்டினம், வைகறைப் பொழுதிலே விழித்தெழுந்து தேன் மணம் கமழும் நெய்தல் மலரிலே இசை முரன்று ஞாயிறு தோன்றிய காலைப் பொழுதிலே திருப்பரங் குன்றத்தினையடைந்து அங்குள்ள சுனையின் கண்ணே கண்போல் மலர்ந்த விரும்பத்தக்க மலரிடத்தே பரவி ஒலிக்கும் என்னும் இக்கருப்பொருள் நிகழ்ச்சியில், மாடமலி மறுகின் கூடலம்பதியிலே வளமார்ந்த அரண்மனையிடத்தே இரவுப் பொழுதிலே விழித்தெழுந்து தேங்கமழும் நறுமலர்ப் பொய்கையிலே நீராடி, ஞாயிறு தோன்றும் காலைப் பொழுதிலே திருப்பரங்குன்றத்தினையடைந்து முருகப் பெருமானுடைய திருவருள் நோக்கிற்குரியவனாகி அம்முதல்வனைப் பரவிப் போற்றும் வழிபாட்டு நிகழ்ச்சியினை, மாடமலி மறுகிற் கூடற் குடவயின் இருஞ்சேற் றகல்வயல் விரிந்து வாயவிழ்ந்த முட்டாட் மலர்ந்த காமரு சுனைமலர் அம்சிறை வண்டின் அரிக்கணம் ஒலிக்கும் குன்றமர்ந் துறைதலும் உரியன் (திருமுருகு. 71-77) எனவரும் பகுதியில் நக்கீரனார் குறிப்பிற் புலப்பட வைத்துள்ளார். இந்நுட்பத்தினைக் கூர்ந்துணர்ந்த இளம்பூரணவடிகள், முருகாற்றுப் படையுள், மாடமலிமறகின் கூடற்குடவயின், இருஞ்சேற் றகல்வயல் விர்ந்து வாய்விழ்ந்த முட்டாட் டாமரைத் துஞ்சி என்றவழி ஒருமுகத்தாற் பாண்டியனையும் இதனுட்சார்த்தியவாறு காண்கஎன இங்குக் குறிப்பின்விளக்கும் திறம் உய்த்துணர்ந்து போற்றத்தகுவதாகும். முன்னியது முடித்தலின் முருகொத்தீயே (புறம்) என்றவண்ணம் தன்னை அன்பினால் வழிபடும் அடியார்கள் எண்ணியவற்றை எண்ணிய வண்ணமே முடித்தருளும் பேராற்றல் வாய்ந்த தெய்வம் முருகப் பெருமான் என்பது சங்ககாலத் தமிழ் மக்கள் உள்ளத்தே நிலைபெற்ற உறுதியான நம்பிக்கையாகும். எல்லாம் வல்ல இறைவன் நாற்றிசையிலும் மேலும் கீழுமாக இவ்வுலகில் நிகழும் எல்லா நிகழ்ச்சிகளுக்கும் சான்றாய் நோக்கியருளுகின்றான் என்பதனைப் புலப்படுத்தும் முறையில் அமைந்தது முருகப் பெருமானுக்குரிய அறுமுகத்திருமேனி ஆகும். m« KjštDila MWâUKf§fS¡F« cÇa bghJ Éašãidí« mt‰WŸ x›bthU âUKf¤â‰F« cÇa áw¥ãašãidí« tif¥gL¤Jiu¥gJ., தாவில் கொள்கைத் தந்தொழின் முடிமார் மன்னேர் பெழுதரு வாணிறமுகனே மாயிருண் ஞாலம் மறுவின்றி விளங்கப் பல்கதிர் விரிந்தன் றொருமுகம் ஒருமுகம் ஆர்வலரேத்த அமர்ந்தினிதொழுகிக் காதலினுவந்து வரங்கொடுத்தன்றேயொருமுகம் மந்திர விதியின் மரபுளி வழா அ அந்தணர் வேள்வியோர்க்கும்மே ஒருமுகம் எஞ்சிய பொருளை யேமுற நாடித் திங்கள்போலத் திசை விளக்கும்மே ஒருமுகம் குறவர் மடமகள் கொடிபோல் நுசுப்பின் மடவரல் வள்ளியொடு நகையமர்ந்தன்றே எனவரும் பகுதியாகும். குற்றமற்ற கோட்பாட்டாலே தாம் தாம் மேற்கொண்ட தொழிலை முடிப்பவருடைய மனத்திலே எழுந்தருளியிருந்து உள்நின்று அருளும் ஒளியும் நிறமும் வாய்ந்த ஆறு முகங்களிலே ஒருமுகம் பேரிருளால் மூடப்பட்ட உலகம் குற்றமின்றி விளங்கும்படிப் பல கிரணங்களையும் தோற்றுவித்தது. ஒரு முகம் தன்மேல் அன்பு செய்தவர்கள் துதிக்க அதற்குப் பொருந்தி அவருக்கினிதாக நடந்து அவர் மேற் சென்ற காதலாலே மகிழ்ந்து அவர்கள் வேண்டும் பொருள்களை முடித்துக் கொடுத்தது. ஒரு முகம் மந்திரத்தையுடைய வேதத்திற்குரிய முறை தப்பாத அந்தணர்களுடைய வேள்வியிலே தீங்குவாராதபடி நினைந்தருளா நின்றது. ஒருமுகம் இவ்வுலகில் வழங்காத வேதங்களில் ஏனைய நூல்களிலும் உள்ள பொருள்களை ஆராய்ந்து முனிவர்கள் ஏமம் உறும்படி அறிவுறுத்தி திங்கள் போலத் திசைகள் எல்லாம் விளங்கச் செய்கின்றது. ஒருமுகம் எல்லா உயிர்களிடத்தும் செல்கின்ற நடுவு நிலைமையைக் கெடுத்துத் தீயோரைக் கொல்ல வேண்டுமென்று சினங்கொண்ட திருவுள்ளத்தோடே அழித்தற்குரிய அசுரர் முதலியோரைப் பொன்றக் கெடுத்துக் களவேள்வியை வேட்கின்றது. ஒருமுகம் குறவருடைய மடப்பத்தையுடைய மகளாகிய கொடிபோலும் இடையையுடைய வள்ளியுடனே மகிழ்ச்சியைப் பொருந்திற்று என்பது மேற்காட்டிய தொடரின் பொருளாகும். இதன்கண் முருகப் பெருமானுடைய ஆறுதிருமுகங்களுக்கும் உரிய பொது இயல்பினை, தாவில் கொள்கைத் தம்தொழில் முடிமார் மன்னேர் பெழுதரு வாணிறமுகனே என்னும் அடிகளில் நக்கீரர் தொகுத்துக் கூறியுள்ளார். . தாவில் கொள்கைத் தத்தம் கூற்றை பாகுபட மிகுதிப்படுத்தல் என்ப எனவரும் தொல்காப்பிய நூற்பாவை அடியொற்றியது மேற்காட்டிய திருமுருகாற்றுப்படைத் தொடராகும். வாகைத்திணையாவது மக்கள் குற்றமற்ற கொள்கையினால் தத்தமக்குரிய அறிவு ஆண்மை பெருமைபற்றிய தொழிற் கூறுபாடுகளை ஏனையோரினும் மிகுந்து மேம்படுதலாகிய வெற்றித் திறமாகும். இங்ஙனம் மக்கள் பெறுதற்குரிய வெற்றித்திறங்களுக்கெல்லாம் பற்றுக்கோடாய் உயிர்களின் உள்ளத்தில் அறுமுகச் செவ்வேளாக அமர்ந்தருளி ஊக்குவிப்போன் உயிர்க்குயி ராகிய இறைவனே என்பார், தாவில் கொள்கைத் தந்தொழில் முடிமார் மன்னேர் பெழுதருவாணிறமுகனே என அம் முதல்வனுடைய திருமுகங்கள் எல்லாவற்றுக்கும் உரிய பொதுவியல்பினைப் புலப்படுத்தியருளினார் நக்கீரர். குறவர் மடமகள் கொடிபோல் நுசுப்பின் மடவரல் வள்ளியொடு நகையமர்ந்தன்று என்ற தொடரில் மடவரல் என்பதனை நகைக்கு அடைமொழியாக்கி வள்ளியொடு மடவரல் நகையமர்ந்தன்று எனக் கூட்டி, ஒருமுகம் குறவருடைய மடப்பத்தையுடைய மகளாகிய வல்லிபோலும் இடையினையுடைய வள்ளியுடனே தனக்கு ஓர் அறியாமை தோன்றும் தன்மையுடைத்தாகிய மகிழ்ச்சியைப் பொருந்திற்று என உரை வரைந்து நச்சினார்க்கினியர் அவளொடு நகையமர்தலின் அறியாமை கூறினார் காம நுகர்ச்சி இல்லாத இறைவன் இங்ஙனம் நகையமர்ந்தான், உலகில் இல்வாழ்க்கை நடத்தற்கென்று உணர்க. தென்பாலுகந்தாடும் தில்லைச் சிற்றம்பலவன் என்பதனுள், பெண்பாலுகந்திலனேல் பேதாய் இருநிலத்தோர் விண்பாலியோ கெய்தி வீடுவர்காண் சாழலோ என்பதனான் உணர்க என விளக்கமும் தந்துள்ளார். இவ்விளக்கத் தினைக் கூர்ந்து நோக்குங்கால் முழுமுதற் கடவுளாகிய முருகப் பெருமானுடன் பிரிவின்றியியைந்த அருட்சத்தியே வள்ளியம்மை யென்பது அவர் கருத்தாதல் நன்கு புலனாம். மேற்குறித்த ஆறுதிருமுகங்களும் தத்தமக்குரிய தொழில்களிடத்துச் செய்யும் முறைமைகளைப் பயின்று நடத்துதலால் அவ்வாறு திருமுகங்களுக்கும் பொருந்த இரண்டிரண்டாகவமைந்த திருக்கரங்களின் பொதுவியல் பையும் சிறப்பியல்புகளையும் பிரித்துரைக்கும் முறையிலமைந்தது திருமுருகாற்றுப்படையில் 102 ஆம் அடி முதல் 118 ஆம் அடிவரை யமைந்த பகுதியாகும். பொன்னாற் செய்த ஆரந்தாங்கிய அழகிய பெருமை வாய்ந்த மார்பிற் கிடந்த சிவந்த மூன்று வரியினையும் தன்னிடத்தே வந்து பொருந்தும்படி அமைந்து வண்மையினாலேயே பெரும்புகழ் நிறையப் பெற்றுச் சுடரையுடைய படைக் கலங்களை எறிந்து பகைவர் மார்பைப் பிளந்தவை முருகப்பெருமானுடைய திருக்கைகளாகும். அக்கைகளில் ஒருகை விண்ணிடதே செல்லும் முனிவர்களுக்குப் பாதுகாவலாக ஏந்தியகைக்கு இணைந்தகை மருங்கிலே வைத்தது என்பார், விண்செலல் மரபின் ஐயர்க்கு ஏந்தியது ஒருகை, உக்கம் சேர்த்தியது ஒருகை என்றார். கதிரவானது வெம்மை பல்லுயிர்களும் பொறுத்துத் தாங்க வொண்ணாதது எனக் கருதித் தமது பெருங் கருணையால் அக்கதிர வனொடு திரிந்து கதிரவனது வெம்மையைத் தமது சடைக்கற்றையால் பொறுக்கின்ற முனிவர்கள், விண்செலல் மரபின் ஐயர் எனப் பெற்றனர். உலக நலங்கருதிக் கதிரவனொடு சுழன்று திரியும் இம்முனிவர்களைக் காத்தற் பொருட்டு முருகன் ஏந்தியகை உலகத்தைத் தாங்கிக் காத்ததாயிற்று. எனவே இக்கை மாயிருள் ஞாலம் மருவின்றி விளங்கப் பல்கதிர் விரிந்த முகத்திற்கு ஏற்ற தொழிலைச் செய்ததாயிற்று. இங்கு முருகப் பெருமானால் காக்கப்பெற்ற விண்செல்ல மரபின் ஐயர் எனப்படுவார், நிலமிசை வாழ்நர் அலமரல் தீர பெறுகதிக் கனலி வெம்மைதாங்கி காலுணவாகச் சுடரொடு கொட்கும் அவிட்சடை முனிவர் (புறம்.43) எனப் புறநானூற்றிற் குறிக்கப் பெற்றனர். முருகனது மனனும் முகனும் கையும் ஒரு தொழிலைச் செய்தலின் அதனொடு இணைந்த மற்றொருகை தொழிலின்றி மருங்கிலே கிடந்தது என்றார் நச்சினார்க்கினியர். உக்கம் : மருங்கு =இடை. முருகப் பெருமானுக்குரிய ஒருகை அங்குசத்தைச் செலுத்தாநிற்க, அதற்கிணையான மற்றைக்கை செந்நிறம் வாய்ந்த் ஆடையை யணிந்த தொடையின் மேலே கிடந்தது என்றார். நலம் பெறுகலிங்கத்துக் குறங்கின் மிசையசைஇய தொருகை அங்குசங் கடாவ வொருகை என்றார்.இத்தோற்றம் யானையின் மேற் செல்வார்க்கு உரியதாகும். முருகப்பெருமான் தன்னை வழிபடுவாரிடத்து வருங்கால் யானைமேல் வந்து அருள் செய்தல் இயல்பு ஆகலின் இக்கைகள் காதலின் உவந்து வரங் கொடுத்த முகத்திற்கு ஏற்றனவாயின. உடைய கேடகத்துடனே வேலையும் வலமாகச் சுழற்றின் வென்பார். இருகை ஐயிருவட்டமொடு எஃகுவலந்திரிப்ப என்றார். இதனானே அசுரர் வந்து வேள்வியைக் கெடாமல் அவரை ஓட்டுதற்கு இவற்றைச் சுழற்றுதலின் வேள்வி ஓர்க்கும் முகத்திற்கு இக்கைகள் ஏற்றனவாயின. முருகப் பெருமான் முனிவர்க்குத் தத்துவங்களைக் கூறிச் சொல்லிறந்த மெய்ப் பொருளை உணர்த்தும் காலத்து ஒரு கை மார்புடன் விளங்க, மற்றொருகை மார்பின் மாலை தாழ்ந்ததனோடு சேர்ந்து அழகு பெற விளங்கியது என்பார். ஒருகை மார்பொடு விளங்க ஒருகை தாரொடு பொலிய என்றார். என்றது முருகன் மோனமுத்திரைக் கையனாய் தானேயாய் இருந்து மெய்ப்பொருளைச் சுட்டிக் காட்டக் குவிந்தவாயமையாத குடத்தில் நீர் நிறைந்தாற்போல இன்பமயமான பேரொளி மாணாக்கர்க்கு நிறைதலின் அதற்குரிய மோனமுத்திரை இங்கு கூறப்பெற்றது. இக்கைகள் இரண்டும் எஞ்சிய பொருள்களை விளக்கம் முகத்திற்கு ஏற்றனவாயின. முருகப் பெருமானது ஒருகை தொடியொடு மேலே சுழன்று களவேள்விக்கு முத்திரை கொடுப்ப அதனொடு இணையாய்க் கீழே தாழ்ந்த மற்றைக்கை இனிய ஓசையையுடைய மணியை மாறி ஒலிக்கச் செய்கின்றது என்பார் ஒருகை கீழ்வீழ் தொடியொடு மீமிசைக் கொட்ப ஒருகை பாடின் படுமணியிரட்ட என்றார். இக்கைகள் களவேள்வி வேட்கின்ற முகத்திற்கு ஏற்பவமைந்தன. முருகப் பெருமானுடைய ஒருகை நீல நிறத்தையுடைய மேகத்தாலே மிக்க மழையைப் பெய்யுமாறு செய்விக்க அதற்கிணையான மற்றைக்கை தெய்வமகளிர்க்கு மணமாலையைச் சூட்டும் நிலை யிலமைந்த தென்பார். ஒருகை நீல்நிறவிசும்பின் மலிதுளிபொழிய ஒருகை வாறை மகளிர்க்கு வதுவை சூட்ட என்றார். வள்ளியொடு நகையமர்ந்த முகம் உலகிற்கு இல் வாழ்க்கையை நிகழ்த்துவித்தது ஆதலின் அவ்வில் வாழ்க்கை நிகழ்த்துதற்கு மழையைப் பெய்வித்தது ஒருகை. ஒருகை இல்வாழ்க்கை நிகழ்த்துதற்பொருட்டு மணமாலையைச் சூட்டிற்று என்பதாம். திருஆவிநன்குடியில் முருகப் பெருமானை அன்பினால் வழிபடும் பெருந்தவச் செல்வர்களின் உள்ளத்தியல்பினையும் திரு வேடப் பொலிவினையும் விரிந்துரைக்கும் நிலையிலமைந்தது. சீரை தைஇய உடுக்கையர் சீரொடு வலம்புரி புரையும் வானரை முடியினர் மாசற இமைக்கும் உருவினர் மானி னுரிவை தைஇய ஊன்கெடு மார்பி னென்பெழுந் தியங்கு மியாக்கையர் நன்பகற் பலவுடன் கழிந்த உண்டியர் இகலொடு செற்றம் நீக்கிய மனத்தின் ரியாவதும் கற்றோ ரறியா வறிவினர் கற்றோர்க்குத் தாம்வரம் பாகிய தலைமையர் காமமொடு கடுஞ்சினம் கடிந்த காட்சியர் இடும்பை யாவது மறிய வியல்பினர் மேவரத் துணியில் காட்சி முனிவர் எனவரும் திருமுருகாற்றுப்படைத் தொடராகும். திருவாவின்குடித் திருக்கோயிலில் முருகனது பொருள்சேர் புகழ்ப் பாடல்களை இசையுடன் பாடும் மகளிரும் யாழில் இசைப்போரும் ஆகிய இசைவாணர்கள் அழுக்கேறாத தூய உடையும் நோயின்றித் தூய்மை வாய்ந்த உடல் வனப்பும் மாசற்ற தூய நன்னெஞ்சமும் உடையராய் விளங்கிய திறத்தை, புகைமுகந் தன்ன மாசில் தூவுடை முகைவா யவிழ்ந்த தகைசூழ் ஆகத்துச் செவிநேர்பு வைத்த செய்வுறு திவவின் நல்லியாழ் நவின்ற நயனுடை நெஞ்சின் மென்மொழி மேவலர் இன்னரம் புளர நோயின் றியன்ற யாக்கையர் மாவின் அவிர்தளிர் புரையும் மேனியர் அவிர்தொறும் பொன்னுரை கடுக்குந் திதலையர் இன்னகைப் பருமந் தாங்கிய பணிந்தேந் தல்குல் மாசில் மகளிரொடு மறுவின்றி விளங்க எனவரும் தொடரில் நக்கீரர் விரித்துக் கூறியுள்ளமை காணலாம். பலரும் புகழும் அயன் அரி அரன் என்னும் மூவரும் தத்தமக்குரிய தொழில்களை நிகழ்த்தித் தலைவராக வேண்டி அயனைப் பழைய நிலையிலே நிறுத்தல் கருதி கருடக் கொடியையுடைய திருமாலும், திரிபுரம் எரித்த சிவபெருமானும், இந்திரனும் ஆதித்தர் பன்னிருவர்,உருத்திரர் பதினொருவர்,வசுக்கள் எண்மர், மருத்துவர் இருவர் என நான்கு கூறாகப் பகுக்கப்படும் தேவர்கள் முப்பத்து மூவரும் பதினெண்கணங்களும் வான்வழியாகத் திருவாவினன்குடிக்கு வந்து தன்னைக் கண்டு போற்றும் வண்ணம் தாவில் கொள்கை மடந்தையாகிய தெய்வ யானையுடன் முருகன் எழுந்தருளியிருக்கும் செய்தி திருமுருகாற்றுப்படையில் திருவாவினன்குடிப் பகுதியில் விரிவாக எடுத்துரைக்கப்பெற்றது. இப்பகுதி சங்ககாலத்து நிலவிய பல்வேறு தெய்வ வழிபாடுகளையும் ஒருங்கே சுட்டும் முறையில் அமைந்துள்ளது. உலகினைப் படைத்துக் காத்து அழிக்கும் அயன் அரி அரன் என்னும் இம்மூவரும் தத்தம் உருவினாலும், தொழிலினாலும் வேறுபட்டவராயினும் உலகில் மன்னுயிரனைத் தையும் ஒப்பக் காத்தலாகிய ஒரே கோட்பாட்டினை உடையராதலின் அம்மூவரும் ஒருவரே எனப் போற்றத்தகும் பெற்றியர் என்பது, உலகம் காக்கும் ஒன்றுபுரி கொள்கைப் பலர் புகழ் மூவரும் எனவரும் தொடரால் வலியுறுத்தப் பெற்றுள்ளமை காண்க. நகர்தோறும் நாற்றிசைக்கும் உரிய காவல் தெய்வங்களாக இந்திரன், இயமன், வருணன், சோமன் (குபேரன்) என்போர் வழிபடப் பெற்றனர் என்பது நாற்பெருந் தெய்வத்து நன்னகர் என்ற தொடர்க்கு நான்காகிய பெரிய தெய்வத்தை உடைய நன்றாகிய ஊர்கள் எனவும், நாற்பெருந் தெய்வமாவன இந்திரன், யமன், வருணன், சோமன் என்றும் தெய்வங்கள் எனவும் நச்சினார்க்கினியர் தரும் உரைவிளக்கத்தால் புலனாகும். ஒன்பதிற்றிரட்டி உயர்நிலை பெறீஇயர் என்றது பதினெண்வகையாகிய உயர்ந்த நிலையைப் பெற்ற பதினெண் கணங்களை. பதினெண் கணங்களாவார் தேவர், அசுரர், தைத்தியர், கருடர், கின்னரர், கிம்புருடர், இயக்கர், விஞ்சையர், இராக்கதர், கந்தருவர், சித்தர், சாரணர், பூதர், பைசாசகணம், தாராகணம் நாகர், ஆகாயவாசிகள், போகபூமியோர் என இவர்களாவர். முருகன் எழுந்தருளிய திருத்தலங்களுள் ஒன்றாகிய ஏரகம் என்பது மலை நாட்டகத்து ஒரு திருப்பதி என்பர் நச்சினார்க்கினியர். இத்திருப்பதியில் எழுந்தருளிய முருகப் பெருமானை வழிபாடு செய்யும் நான்மறைவல்ல அந்தணர்களின் இயல்பினை விரித்துரைக்கும் நிலையிலமைந்தது, இருமூன் றெய்தின் இயல்பினின் வழாஅ திருவர்ச் சுட்டிய பல்வேறு தொல்குடி அறுநான் கிரட்டி இளமை நல்லியாண் டாறினிற் கழிப்பிய வறனில் கொள்கை மூன்றுவகைக் குறித்த முத்தீச் செல்வத் திருபிறப் பாளர் பொழுதறிந்து நுவல வொன்பது கொண்ட மூன்றுபுரி நுண்ஞாண் புலராக் காழகம் புலர வுடீஇ யுச்சிக் கூப்பிய கையினர் தற்புகழ்ந் தாறெழுத் தடக்கிய வருமறைக் கேள்வி நாவியன் மருங்கி னவிலப் பாடி விரையுறு நறுமல ரேந்திப் பெரிதுவந் தேரகத் துறைதலும் உரிய னதா அன்று என்ற பகுதியாகும். ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல் என்னும் ஆறு தொழில்களின் இலக்கணத்தின் வழுவாமல் தாய் தந்தை என்னும் இருவர் குலத்தையும் உலகத்தார் நன்றென்று மதிக்கும் வண்ணம் உயர்ந்த குடிப்பிறப்பையும், நாற்பத்தெட்டியாண்டு வேதம் கூறிய நெறியிலே பிரமச்சரியம் காத்த அறங்கூறுகின்ற கோட்பாட்டினையும் ஆகவனீயம், தக்கணாக்கினீயம், காருகபத்தியம் என்னும் மூன்று தீயால் உண்டாகிய செல்வத்தினையும் நூலணிதற்கு முன் ஒரு பிறப்பும், பின் ஒரு பிறப்புமாகிய இரு பிறப்பினையுமுடைய அந்தணர்கள் வழிபடும் காலமறிந்து தோத்திரங்களைக் கூற ஒன்பதாகிய நூலைத் தன்னிடத்தே கொண்ட முப்புரியாகிய பூணும் நூலையும் உடையராய், நீராடுங்கால் துவைக்கப்பட்ட ஆடை உடம்பிலே கிடந்து புலரும்படி உடுத்தி தலைமேல் குவித்த கையினை உடையராய்த் துதித்து ஆறெழுத்தினைத் தன்னிடத்தே அடக்கியிருக்கின்ற அருமறையாகிய மந்திரத்தை நா அசையும் அளவிலே பயின்று ஓதி மணமிக்க நறுமலர்களை எடுத்துத்தூவி வழிபடப் பெரிதும் மகிழ்ந்து ஏரகம் என்னும் திருப்பதியிலே எழுந்தருளியிருத்தலும் உரியன் என்பது மேற்காட்டிய தொடரின் பொருளாகும். இரு பிறப்பாளராகிய அந்தணர்கள் திருவேரகத் திருப்பதியில் எழுந்தருளிய முருகப் பெருமானை வழிபட்டுப் போற்றுங்கால் ஆறெழுத்தடக்கிய அருமறைக் கேள்வி எனப்படும் ஆறெழுத்து மந்திரத்தை நாப்புடை பெயரும் அளவில் ஓதினர் என்பது, ஆறெழு தடக்கிய அருமறைக்கேள்வி நாவியல் மருங்கின் நவிலப்பாடி எனவரும் தொடராற் புலனாம். இத்தொடரிற் குறிக்கப்பட்ட ஆறெழுத்து மந்திரம் என்பது நமோகுமாராய என்பதாம் என நச்சினார்க்கினியர் குறிப்பிடுகின்றார். நாதா குமரா நமவென் றரனார் ஓதா யென வோ தியதெப் பொருள்தான் எனவரும் கந்தரநுபூதியில் இம்மந்திரம் குறிப்பாகச் சுட்டப் பட்டுள்ளமை காணலாம். இனி ஆறெழுத்து மந்திரமாவது சரவணபவ என்பது பெரும்பாலோர் கருத்தாகும். ஆறெழுத் தடக்கிய அருமறைக் கேள்வி என நக்கீரர் பொதுவாகக் குறிப்பிடுதலால் மேற்குறித்த இருவகை மந்திரங்களும் முருகப் பெருமானுக்குரிய ஆறெழுத்து மந்திரங்களாம் எனக் கொள்ளுதல் ஏற்புடையதே. எனினும் சரவணபவ என்பதனோடு நம என்னும் வணக்க மந்திரத்தையும் இயைத்துரைப்பின் எட்டெழுத்து மந்திரமாதலின்றி ஆறெழுத்து மந்திரமாதல் இல்லை என்பதும் கருதத்தக்கது. முருகபூசை செய்யும் படிமத்தானாகிய வேலன் பச்சிலைக் கொடியாலே நறுநாற்றத்தையுடைய சாதிக்காயை நடுவே இட்டு அழகினையுடையதாகிய தக்கோலம் என்னும் காயையும் கலந்து காட்டுமல்லிகையுடனே வெண்டாளியையும் கட்டின முடிமாலையையுடையனாய் நறிய சந்தனத்தைப்பூசி நிறம் விளங்கும் மார்பினையுடையனாய் கொடிய தொழிலையுடைய வலிய வில்லாற் கொல்லுதலைச் செய்த குறவர் நீண்ட மூங்கிலிலே இருந்து முற்றின தேனாற்செய்யப்பட்ட கள்ளின் தெளிவை மலையின் கண்ணே சிறிய ஊரிலே இருக்கின்ற கற்றத்தோடே உண்டு மகிழ்ந்து குறிஞ்சி நிலத்திற்குரிய தொண்டகமாகிய சிறுபறையினது தாளத்திற்குத் தக குரலைக் கூத்தினை ஆட சுனையிற் பூத்த பூவாற் செய்த வண்டுகள் மொய்க்கும் கண்ணியினையும், இதழாகப் பறித்துக் கட்டினமாலையினையும், சேர்த்துக் கட்டிய கூந்தலினையும், இலையைத் தலையிலேயுடைய கஞ்சங்குல்லையினையும், நறிய பூங்கொத்துக்களையும், வெண்கடம்பமரத்தின் வெள்ளிய பூங்கொத்துக் களை நடுவேவைத்துத் தொடுத்த அழகினையுடைய தழையை இடையிலே அசையும்படி உடுத்தி சாயலுடைமையால் மயிலைக் கண்டாற்போன்ற மகளிரொடு செந்நிறத்தினனாய், சிவந்த ஆடையினை உடுத்து அசோகின் தளிர் அசையும் காதினனாய் அரையிற் கச்சினைக் கட்டி, காலில் வீரக்கழலினை அணிந்து வெட்சிமாலையைத் தலையிற் சூடி, ஊதலை ஊதி, கொம்பைக் குறித்துச் சிறியவாகிய பலவாத்தியங்களை எழுப்பி, ஆட்டுக் கிடாயைப் பின்னிட்டு, மயில் மீதமர்ந்து குற்றமில்லாத கோழிக் கொடியை உயர்த்திப் பிடித்து நெடியோனாய் நின்று, தோளிலே துணியை அணிந்து யாழ் நரம்பு ஆரவாரித்தாலொத்த இனிய மிடற்றினையுடைய பாடும் மகளிரோடே குறிய புள்ளிகளை யுடையவாய் இடையிலே இறுகக் கட்டிய உதர பந்தத்தின் மேலே இயைக்கப்பட்டு, நிலமளவும் தொங்கும் துகிலினையுடைனாய், மெல்லிய தோளினையுடைய மான்பினை போலும் மகளிர் குரவையாடி அசைய, தன்னுடைய முழுவினை ஒத்த பெருமைவாய்ந்த கையினாலே அம்மகளிர் கையினைத் தழுவி எடுத்துக்கொண்டு அவர்கட்கு முதற்கை கொடுத்து மலைகள் தோறும் சென்று விளையாடுதலும் முருகப் பெருமானாகிய அம் முதல்வனுக்கு நிலைபெற்று குணம் என்பது முருகாற்றுப்படையில் குன்று தோறாடல் பகுதியால் விரித்துரைக்கப் பெற்றது. இப்பகுதியில் முருகபூசை செய்யும் படிமத்தானாகிய வேலன் முன்னின்று நடத்தும் வழிபாட்டில் குறிஞ்சிக் கடவுளாகிய முருகப்பெருமான் சேவற் கொடியை ஏந்தி மயில் மீதமர்ந்து தன் தெய்வத் தோற்றத்தினைப் புலப்படுத்தித் தன்னைச் சேவிக்கும் மகளிர்க்கும் பாடும் மகளிர்க்கும் முதற்கை கொடுத்து எளிவந்து அருளும் திறம் குறிக்கப்பெற்றுள்ளமை கூர்ந்துணரத் தக்கதாகும். இதனால் சிந்தைக்கும் மொழிக்கும் எட்டாத முழுமுதற் பொருளாகிய முருகப் பெருமான் தன்னை ஆரா அன்பினால் வழிபட்டுப் போற்றும் அன்பர்களது காட்சிக்கு எளியனாய் எழுந்தருளும் பேரருளாளன் என்பது புலப்படுத்தப் பெற்றுள்ளமை காணலாம். இங்ஙனம் மக்களால் வழிபடச் பெறும் தெய்வம் அவர்தம் கண்ணிற்குப் புலனாகத் தோன்றி அருளும் என்னும் மெய்ம்மை, வழிபடு தெய்வம் கட்கண்டாங்கு எனவரும் சங்க இலக்கியத் தொடரால் நன்கு துணியப் பெறும். சிந்தனைக்கும் அரியாய் என்கண் முன்வந்து ஏதங்கள் அறுத்து எம்மை யாண்டருள்புரியும் எம்பெருமான் எனவரும் திருவாதவூரடிகள் வாய்மொழி இங்கு ஒப்பு நோக்கத் தகுவதாகும். சிறிய தினையரிசியை மலரொடு கலந்து பிரப்பரிசியாக வைத்து, ஆட்டுக்குட்டியைப் பலியிட்டு முருகனுக்குரிய கோழிக் கொடியை நிறுத்தி ஊர்தோறும் செய்யும் திருவிழாக்களிலும் அன்புடைய அடியார்கள் இறைவனது பொருள் சேர் புகழ்த்திறங்களை ஏத்துதலாலே அம்முதல்வன் மனம் பொருந்தி அவர்கட்கு எளிவந்தருளும் இடத்திலும், முருகபூசை செய்யும் வேலன் அமைத்த வெறியாடுகளத்திலும், காட்டினிடத்தும் பொழிலினும், ஆற்றிடைக் குறையினும், ஆறுகளில் குளங்களிலும், பலவாகிய ஊர்களிலும் நாற்சந்தியிலும், முச்சந்தியிலும் ஐஞ்சந்தியிலும் புதிய பூக்களையுடை கடம்ப மரத்திலும் ஊர் நடுவாய் எல்லாரும் தங்கும் மரத்தடியிலும், அம்பலத்திலும் தெய்வம் உறையும் தூண் நிலைபெற்ற இடத்திலும் தலைமையினையுடைய கோழிக் கொடியோடு நகரை அணி செய்து நெய்யோடே வெண்சிறு கடுகையும் அப்பி வழிபடுதற்குரிய மந்திரத்தைப் புறத்தார்க்குப் புலனாகாமல் மென்மையாக உச்சரித்து வழிபட்டு அழகிய மென்மலர்களைத் தூவி உள்ளொன்றும் புறம் பொன்றுமாக இரண்டு உடைகளை உடுத்துச் சிவந்த நூலைக் கையிலே காப்பாகக் கட்டி வெள்ளிய பொறிகளைத் தூவிக் கொழுவிய ஆட்டுக் கடாயினது உதிரத்தோடே பிசைந்த தூய வெள்ளரிசியைச் சிறு பலியாக இட்டுப் பல பிரப்பும் வைத்துப் பசுமஞ்சளோடே சந்தனம் முதலியவற்றையும் தெளித்துச் செவ்வலரிமாலையையும் ஏனைய நறுமலர் மாலையையும் ஒத்த அளவினவாக அறுத்து அசையும்படி மேலே கட்டி மலைப்பக்கத்து ஊர்களில் வாழ்வார்க்குப் பசியும் பிணியும் பகையும் நீங்குக என வாழ்த்தி நறும்புகை காட்டிக் குறிஞ்சிப் பண்ணைப் பாடி முழங்குகின்ற ஓசையினையுடைய மலையருவியோடு இனிய பலவாத்தியங்களும் ஒலியாநிற்க செந்நிறமுடைய பூக்களைத் தூவிக் குருதிகலந்த தினையினையும் பரப்பிக் குறச்சாதியிற் பிறந்த பெண் முருகப் பெருமான் உவக்கும் வாத்தியங்களை வாசிக்கப்பண்ணி, தெய்வம் இல்லை என்பார் அஞ்சும்படியாக இளைய பிள்ளையார் அவ்விடத்தே எழுந்தருளும்படி அம் முதல்வனை அன்பர்களின் வழிப்படுத்தின பெரிய நகரின் கண்ணே வெறியாடுகின்ற களம் ஆரவாரிப்ப, அதற்கு ஏற்ற புகழ்ப்பாடல்களைப்பாடி ஊது கொம்புகள் பலவற்றையும் சேரவூதி, கொடிய மணியையும் ஒலிப்பித்து முருகப் பெருமானுக்குரிய ஊர்தியாகிய பிணிமுகம் என்னும் பட்டத்து யானையை வாழ்த்தித் தமக்கு ஏற்ற வரங்களை இரந்து வேண்டி நிற்பாரும் முன் வேண்டியவண்ணம் வரங்களைப் பெற்றவர்களும் ஆகிய இருதிறத்தாரும் வழிபட்டுப் போற்ற அவ்வவ்விடங்களிலே உறைதலும் உரியன். முற்கூறிய அவ்விடங்களிலே ஆயினுமாக! பிறவிடங்களிலே ஆயினுமாக! (முருகனை நீ காணப்பெறுவாய்). அழகு விளங்க முருகப் பெருமானை முற்பட நீ கண்டபொழுது முகம் விரும்பத் துதித்து இருகைகளையும் தலைமேல் வைத்து வாழ்த்திப் பின்னர் அம் முதல்வன் திருவடி நின் தலையிலே பொருந்தும்படி நிலத்தில் வீழ்ந்து வணங்கி நெடிய பெரிய இமயமலையின் உச்சியில் தருப்பை வளர்ந்த பசிய கனையிடத்தே ஐம்பெரும் பூதங்களுக்குத் தெய்வமாகிய சதாசிவன், மயேச்சுரன், உருத்திரன், அரி, அயன் என்னும் ஐவருள் உருத்திரனைத் தெய்வமாகவுடைய தீ தான் அகங்கையிலே ஏற்ப, அறுவராலே பெறப்பட்ட ஆறு வடிவு பொருந்திய செல்வனே! கல்லாலின் கீழிருந்த கடவுளின் மகனே! மலைமகளாராகிய உமா தேவிக்கு மகனே! பகைமையுடையார்க்குக் கூற்றுவனே! கொற்றவையின் புதல்வனே! காடுகிழாளாகிய காளியின் மைந்தனே! தேவர்கள் போற்றும் படைத்தலைவனே! இன்பத்திற்குரிய மாலையை யணிந்த மார்பனே! எல்லா நூல்களையும் அறியும் புலவனே! போர்த் தொழிலில் ஒப்பற்றவனாகி நிற்பாய்! பொருகின்ற வெற்றியையுடைய இளையோனே! அந்தணருடைய செல்வமாய் இருப்பவனே! சான்றோர் புகழ்த்து கூறும் சொற்களின் தொகுதியாய் விளங்குபவனே! வள்ளி நாச்சியாரும் தெய்வயானையாரும் ஆகிய மகளிருக்குக் கணவனே! வேல் பொருந்திய பெரிய கையினை உடையவனே! குருகாற் பெயர் பெற்ற (கிரௌஞ்சமலை) மலையைப் பிளந்த குன்றாத வெற்றிச் செல்வனே! வானைத் தீண்டும் நீண்ட சிமயங்களை உடைய குறிஞ்சி நிலத்திற் குரியவனே! பலரும் புகழ்ந்து போற்றும் நன்றாகிய நூல்களை உணர்ந்த ஞானியர்க்கு ஏறுபோல்வாய். உயிர்கள் தம் முயற்சியால் சென்று பெறுதற்கரிய முறைமையினை யுடைய பெரும் பொருளாகிய வீட்டினை வழங்க வல்ல முருகப் பெருமானே! அப்பெரும்பொருளை நச்சி வந்தார்க்கு வீடு பேற்றின்பத்தினை நுகர்விக்கும் பெரிய புகழை ஆளுதல்வல்ல இறைவனே! பிறவித் துன்பங்களால் இடுக்கண்பட்டு வந்தோர்க்கு அருள் செய்யும் சேயோனே! மிக்குச் செல்கின்ற போர்களில் கொடியோர்களை வென்றடுகின்ற நினதழகிய மார்பிடத்தே பொன்னாற் செய்த பேரணிகலங்களை அணிந்தவனே! இரந்து வந்தோரை வேண்டுவன கொடுத்துப் பாதுகாத்தலால் அவர்க்குப் பகையாயினார் அஞ்சத்தக்க நெடிய வேளே! தேவரும் முனிவரும் ஆகிய பெரியோர்கள் ஏத்தும் பெரும்பெயரை உடைய முருகனே! சூரபன்மாவின் குலத்தை இல்லையாக்கின மிகுகின்ற வன்மையுடைய மதவலி என்னும் பெயரையுடையவனே! மிக்க போர்த் தொழிலிலே வல்ல வீரர்க்கு உவமையாக உவமிக்கப்படுபவனே! தலைவனே! என்று யான் அறிந்து நினைத்து எடுத்துரைத்த அளவில் அமையாமல் நீ நினக்குத் தெரிந்த பலவற்றையும் கூறிப் புகழ்ந்து இறைவனாகிய நின் தன்மையெல்லாம் முற்ற அளவிட்டறிதல் எம்மை ஒத்த பல்லுயிருக்கும் அரியதாகையினாலே நின் திருவடியைப் பெறவேண்டு மென்று நினைந்து வந்தேன். நின்னோடு ஒப்பார் இல்லாத மெய்ஞ்ஞானத்தையுடையவனே என்று சொல்லி நீ கருதிய வீடு பேற்றினை அம்முதல்வனுக்கு விண்ணப்பம் செய்வதற்கு முன்னே வேறுவேறாகிய பலவடிவினையுடையராய் அவ்விறைவனை வணங்கிநிற்கும் அடியார்கள் விழாவெடுத்த களத்திலே தாங்கள் பொலிவுபெறத் தோன்றி அம்முதல்வனை நோக்கி பெருமானே! அறிவு முதிர்ந்த வாய்மையினையுடைய புலவனாகிய இவன் நினது வளமார்ந்த புகழினைக் கூறவிரும்பிக் கேட்டோர்க்கு இனியனவும் உறுதி பயப்பனவுமாக உள்ள மிக்க பெரும்புகழ் பலவற்றை எடுத்துக் கூறிப் போற்றி வந்துள்ளான். இவன் நின்னால் அளிக்கத்தக்கான் எனக் கூறிய அளவிலே பழமுதிர்சோலை மலைக்கு உரியோனாகிய அம்முருகன் தெய்வத் தன்மை வாய்ந்த ஆற்றல் விளங்கும் வடிவினையும், வானைத் தீண்டும் வளர்ச்சியையும் உடையனாய் அவ்விடத்தே வந்தணுகிக் கண்டோர்க்கு அச்சத்தை மிகுவிக்கும் தன் தெய்வத் தோற்றத்தை உள்ளடக்கிக் கொண்டு மணம் நாறுகின்ற தெய்வத்தன்மையுடைய தொன்மைவாய்ந்த தனது இளைய திருமேனியைக் காட்டி நின்னைநோக்கி நீ வீடுபெற வந்த வரவை முன்பே அறிவேன். அது நினக்கு எய்தலரிதென்று அஞ்சுதலை நீக்குவாயாக என்று நின்மேல் அன்பினைப் புலப்படுத்துவதாகிய மொழிகளைப் பலமுறையும் அருளிச் செய்து இருண்ட நிறத்தை யுடைய கடல்சூழ்ந்த உலகத்தில் நீ ஒருவனுமே பிறர்க்கு வீடளித்தற்கு உரியையாய்க் கேடின்றித் தோன்றும்படி விழுமியதாய்ப் பிறரால் பெறுதற்கரியதாகிய வீடு பேற்றினை நல்கியருள்வான் என முதுவாய் இரவலனை நோக்கிச் செம்புலச் செல்வராகிய நக்கீரர் முருகப் பெருமான்பால் ஆற்றுப் படுத்துகின்றார். எல்லாம் வல்ல இறைவன் உலகியல் கல்வி அறி வாலும் உயிர் உணர்வாலும் உணர்தற்கரியவன் என்பதும், அம் முதல்வனது திருவருள் ஞானத்தாலேயே மன்னுயிர்கள் அவனை உணர்ந்து உய்தி பெறுதல் கூடும் என்பதும், பாச ஞானத்தாலும் பசுஞானத்தாலும் பார்ப்பரிய பரம்பரனைப் பதிஞானத்தாலே நேசமொடு உள்ளத்தே நாடி எனவரும் சிவஞானசித்தியார் திருவிருத்தத்தாலே அறிவுறுத்தப்பெற்றன. தனக்குவமையில்லாத இறைவனை மன்னுயிர்கள் தம் அறிவினால் அறிதல் இயலாது எனவும் அவனருளாலே தான் அவனை உணர்ந்து வழிபட்டு உய்தி பெறுதல் கூடும் எனவும் இறைவனது இயல்பு குறித்து சைவ சித்தாந்த மெய்ந்நூல்களிற் கூறப்படும் இவ்வுண்மை, நின்னளந்தறிதல் மன்னுயிர்க்கருமையின் நின்னடி உள்ளி வந்தனன் நின்னொடு புரையுநர் இல்லாப் புலமை யோய் எனவரும் திருமுருகாற்றுப்படைத் தொடரில் தெளிவாக இடம் பெற்றுள்ளமை காணலாம். தீயோரைச் சினந்து பொருது அழிக்கும் திறத்தில் தன்னிகரற்ற பேராற்றல் படைத்தவனாக முருகப் பெருமான் விளங்குதலால் பெருவீரரது சீற்றத்திற்கு முருகப் பெருமானது சீற்றத்தை உவமையாகக் கூறுதல் மரபாம் என்பது, .............................btdnty உருவப்பஃறேர் இளையோன் சிறுவன் முருகற் சீற்றத்து உருகெழு குருசில் எனவரும் பொருநராற்றுப்படைத் தொடரால் புலனாம். வென்ற வேலினையும், அழகினையும் உடையனாய்ப் பல தேரினை உடைய இளஞ்சேட் சென்னியின்மைந்தன் முருகனது சீற்றத்தையுடைய உட்குதல் பொருந்திய தலைவன் (கரிகாலன்) என்பது மேற்காட்டிய தொடரின் பொருளாகும். முருகற் சீற்றத்து உருகெழு குருசில் (புறம். 16) என இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி போற்றப்படுதலும் முருகன் நற்போர் நெடுவேளாவி (அகம். 1) எனவும், முருகுறழப்பகைத் தலைச் சென்று (மதுரைக். 181) எனவும் போர்த்திறத்திற்கு முருகனது போர்த்திறம் உவமையாகக் கூறப்படுதலும் இங்கு நோக்கத்தக்கன. ஒய்மா நாட்டு நல்லியக் கோடன் என்னும் வள்ளல் தன் பகை மிகுதிக்கு அஞ்சி முருகனை வழிபட்டானாக, அம் முதல்வன் கேணியில் பூ வொன்றினைத் தன் வேலாகத் தோற்றுவித்து, நல்லியக் கோடன் கனவிற் றோன்றிக் கேணியிற் பூத்துள்ள பூவை வாங்கிப் பகைவரை வென்றடக்குக என அருள் செய்தான் எனவும், அது கொண்டு நல்லியக் கோடன் தன் பகையை வென்று அடக்கினான் எனவும், முருகனது வேல் கேணியிற் பூவாகத் தோன்றினமையால் அவ்வூர் வேலூர் எனப் பெயர் பெற்றதெனவும் ஒரு கதையினைச் சிறுபாணாற்றுப்படை உரையில் நச்சினார்க்கினியர் குறித்துள்ளார். இக்கதைக் குறிப்பினையுடையதாக அமைந்தது, திறல்வேல் நுதியில் பூத்த கேணி விறல்வேல் வென்றி வேலூர் (சிறு. 170-171) எனவரும் சிறுபாணாற்றுப்படைத் தொடரால் முருகன் கையில் வலியினையுடைத்தாகிய வேலின் நுதிபோல கேணி பூக்கப்பட்ட வெற்றியையுடைய வேலாலே வெற்றியையுடைய வேலும் என்பது இத் தொடரின் பொருளாகும் என்றது: நல்லியக் கோடன் தன் பகை மிகுதிக் கஞ்சி முருகனை வழிபட்டவழி, அவன் இக்கேணியிற் பூவை வாங்கிப் பகைவரை எறி என்று கனவிற் கூறி அதிற் பூவைத் தன் வேலாக நிருமித்த தொரு கதை கூறிற்று. இதனானே வேலூர் என்று பெயர் ஆயிற்று என இத்தொடர்ப் பொருளை விளக்குவர் நச்சினார்க்கினியர். எனவே, இத்தொடரில் திறல்வேல் எனவும் விறல்வேல் எனவும் சுட்டப்பட்டது, முருகன் கையில் உள்ள வலியினை உடைத்தாகிய வேற்படையினை என்பது மேற்குறித்த உரைவிளக்கத் தால் உய்த்துணரப்படும். இதனால் வேல் என்பது போருக்குரிய படைக்கலம் என்றமையாது முருகன் கையிலுள்ள தெய்வத் தன்மை வாய்ந்த வேற்படையினைச் சிறப்பாகக் குறித்து வழங்கும் மரபு காணலாம். தமிழகத்துச் சிற்றூர்களில் முருகப் பெருமானுடைய தேவியாகிய வள்ளி நாச்சியாரைப் போற்றி ஆடும் வள்ளிக் கூத்தினை ஆண் பெண் இரு திறத்தாரும் நாடு வளம்பெற ஆடிப் போற்றுதலை மரபாகக் கொண்டனர். இச்செய்தி வாடாவள்ளி (தொல். புறம். சூத். 5) எனவரும் தொல்காப்பியத் தொடராலும், வாடா வள்ளியின் வளம்பல தரூஉம் நாடு (பெரும்பாண். 370-371) எனவரும் பெரும்பாணாற்றுப்படைத் தொடராலும் அறியப்படும். பேய்களாடும் துணங்கைக் கூத்தினையும் அழகினையுமுடைய வெற்றி வெல் போர்க் கொற்றவையாகிய இறைவி வெள்ளிய அலைகளையுடைய கடலிலே சென்று கடிய சூரனைக் கொன்ற முருகப் பெருமானைப் பெற்ற பெரிய வயிற்றினையுடையாள் எனச் சிறப்பித்துப் போற்றப் பெறுகின்றாள். குறிஞ்சிக் கிழவனாகிய முருகப் பெருமானைப் பாலை நிலத் தெய்வமாகிய கொற்றவைக்கு மைந்தனாகக் கொண்டு போற்றும் இவ்வுறவு முறை, வெற்றி வெல்போர்க் கொற்றவை சிறுவ எனவரும் திருமுருகாற்றுப்படைத் தொடரிலும், வெண்டிரைப் பரப்பிற் கடுஞ்சூர் கொன்ற பைம்பூட் சேஎய் பயந்த மாமோட்டுத் துணங்கையஞ்செல்வி (பெரும்பாண். 457-458) எனவரும் பொரும்பாணாற்றுப்படைத் தொடரிலும் இடம் பெற்றுள்ளமை அறியத் தக்கதாகும். தெய்வத் தன்மையைக் குறித்து வழங்கும் முருகு என்னும் சொல் முழுமுதல் கடவுளாகிய முருகனைக் குறிப்பதோடு, முருகற்சீற்றத்து உருகெழு வீரர்களைக் குறித்துச் செய்யப்படும் களவேள்வியைக் குறித்த பெயராகயும் ஆளப் பெறுதல் உண்டென்பது, படையோர்க்கு முருகயா (மதுரை.38) எனவரும் மதுரைக் காஞ்சித் தொடரால் அறியலாகும் முருகப் பெருமான் கோயில் கொண்டருளிய திருத்தலங்களுள் முதன்மை பெற்றுத் திகழ்வது மதுரையின் மேற்கே உள்ள திருப்பரங்குன்றம் ஆகும். இக்குன்றத்திலே இனிய ஓசையினையுடைய ஒலிகளை உடைய மேகம் தங்கி மழையைப் பொழிதலும், அம்மலையிலே ஆடவரும் மகளிரும் பெருந்திரளாகக் கூடி முருகப் பெருமானுக்குத் திருவிழாக் கொண்டாடும் முறையில் ஆடல்பாடல் ஆகியவற்றை நிகழ்த்துதலின் ஆரவாரம் வானளாவ ஓங்கியிசைத்தலும் தளிமழை பொழியும் தண்பரங்குன்றில் கலிகொள் சும்மை ஒலிகொள் ஆயன் ததைந்த கோதை தாரொடு பொலிய புணர்ந்துடன் ஆடும் இசையே அனைத்தும் அகலிரு வானத் திமிழ்ந்தினி திசைப்ப (மதுரைக். 262-267) எனவரும் மதுரைக் காஞ்சியடிகளாற் புலனாம். ஒளி வாய்ந்த பூக்களையுடைய கொன்றையின் பரந்த நிழலிடத்தே நீலமணியை ஒத்த பசிய பயிர்களினிடத்தே முறுக்குண்ட அரும்புகளையுடைய முசுண்டையுடனே வெள்ளியின் நிறம் வாய்ந்த முல்லைப் பூக்கள் உதிர்ந்துபரந்து தெளிந்த நீரையுடைத்தாகிய பள்ளத்திலே நீலமணியென மருளும் நெய்தல் பூக்கள் மலரக் காட்டினால் சூழப்பட்டு விளங்கும் நிலப்பகுதி ஓவியம் வல்லானால் அணிசெய்யப்பட்ட வெறியாடுகளத்தை ஒத்துத் தோன்றியது என்பது மதுரைக் காஞ்சி 277 முதல் 285 முடியவுள்ள வடிகளால் விரித்துரைக்கப்பெற்றுள்ளது. இதனால் முருகனைக் குறித்த வழிபாட்டு நிலையாகிய வெறியாடல் நறுமணங்கமழும் பலவகைப் பூக்களால் அணி செய்யப் பெற்ற இடத்திலேயே நிகழும் என்பது புலனாகும். இளைய பிள்ளையாராகிய முருகப் பெருமானுக்குரிய வேலைத் தாங்கிய வேலனாகிய முருக பூசை பண்ணுபவன் மணமாகாத இளமகளிர்களுக்கு உண்டாகிய மெலிவுக்குரிய காரணத்தைக் கழங்கு வைத்துப் பார்த்து இவ்வருத்தம் முருகனால் வந்ததெனக் கூறித் தான் கூறிய சொல்லாலே கேட்டோர் உள்ளத்தைப் பிணித்துச் சல்லி, கரடி முதலிய வாச்சியங்கள் ஒலியாநிற்கக் கார்ப்பருவத்தில் மலர்ந்த குறிஞ்சி மலரைச் சூடிச் கடப்பமலர் மாலையை யணிந்த அழகியோனாகிய முருகனைத் தன் மெய்க் கண்ணே நிறுத்தி (ஆவேசிக்கும்படிச் செய்து) வழிபாடு செய்வன். அந் நிலையில் மன்றங்கள்தோறும் மகளிர்பலரும் தம்முள் கைகோத்துநின்று முருகனது புகழ் பாடிக் குரவைக் கூத்தாடுவர். இச்செய்தி, அருங்கடி வேலன் முருகொடுவளைஇ அரிக்கூட்டி இன்னியங் கறங்க நேர் நிறுத்து கார் மலர்க் குறிஞ்சி கடம்பின் சீர்மிகு நெடுவேட் பேணித்தமூஉப் பிணையூஉ மன்றுதொறும் நின்ற குரவை (மதுரைக் 610-615) எனவரும் மதுரைக் காஞ்சித் தொடரில் விரித்துரைக்கப் பெற்றமை காணலாம். தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் நாட்காலையில் அரசர்க்குரிய கடன்களைச் செய்து முடித்து தெய்வ வழிபாட்டோடு இருந்த தோற்றப் பொலிவினைப் புலப்படுத்தும் நிலையில் அமைந்தது, வல்லோன் தைஇய வரிப்புனைபாவை முருகியன்றன்ன உருவினையாகி (மதுரைக். 723-724) எனவரும் மதுரைக் காஞ்சித் தொடர். ஓவியத் தொழில் வல்லான் ஒருவன் எழுதிக் கைசெய்த பாவையிடத்தே தெய்வத்தன்மை நிகழ்ந்தாற் போன்ற பொலிவு பெற்ற toÉidíilatnd!” என மாங்குடி மருதனார் நெடுஞ்செழியனது தெய்வ வழிபாட்டுத் தோற்றத்தைப் புனைந்திருக்கின்றார். இத் தொடரில் அமைந்த முருகு என்னும் சொல் தெய்வத் தன்மை என்ற பொருளில் ஆளப் பெற்றது என்பது நச்சினார்க்கினியர் கருத்தாகும். திருமுருகாற்றுப் படை உரையிலும் முருகு என்னும் சொல்லுக்குத் தெய்வத் தன்மை எனவே உரை வரைந்துள்ளார். முருகு என்பதற்கு நறுமணம் என்னும் பொருளும் உண்டு. முருகமர் பூமுரண் கிடக்கை என்பது பட்டினப்பாலையாகும். மலரிடத்தே உள்ளிருந்தெழும் நறுமணம் போன்று உயிர்களின் உள்ளத்தே உள்ளிருந்தெழுவதே தெய்வ வழிபாட்டுணர்வாகும். முழுமுதற் கடவுளாகிய தெய்வம் மன்னுயிர்களின் உடம்பிலும் உயிரினும் ஒழிவின்றி நிறைந்து நிற்றலும் இங்ஙனம் உலகப் பொருள்தோறும் பிரிப்பின்றி விரவியிருப்பினும் அவற்றைத் தனக்குச் சார்பெனக் கொள்ளாது எல்லாப் பொருட்குந் தானே சார்வாய் ஒன்றினும் தோய்வின்றி நிற்றலும் ஆகிய தெய்வத் தன்மையினைப் புலப்படுத்தும் நிலையில் மணங்கமழ் தெய்வமாக வழிபடப் பெறுபவன் முருகனாதலின் முருகு என்பதற்குத் தெய்வத் தன்மை எனப் பொருள் கொண்டார் நச்சினார்க்கினியர். இக்கருத்திற்கு அரண் செய்யும் நிலையில் அமைந்தது, உற்றவாக்கையி னுறுபொருள் நறுமலரெழுதரு பற்றலாவதோர் நிலையிலாப் பரம்பொருள் எனவருந்திருவாசகத் தொடராகும். குறிஞ்சிநிலத் தெய்வமாகிய முருகப் பெருமான் தனக்குப் பூசை பண்ணும் வேலன் முதலியோர்பால் ஆவேசித்தல் போலத் தன் ஊர்தி எனப்படும் மயிலின்மேலும் ஆவேசித்தலுண்டு. இச்செய்தி, குருறு மஞ்ஞையின் நடுங்க (குறிஞ்சிப். 169) எனவரும் குறிஞ்சிப்பாட்டடியான் புலனாகும். தெய்வம் ஏறின மயில் போலே நடுங்காநிற்ப என்பதிதன் பொருளாகும். முருகனால் வருந்தலுற்ற மகளிரது வருத்தந் தீர வெறியாடு களத்தில் முருகனுக்குரிய தெய்வமரமாகிய கடம்ப மரத்தினடியிலே சூழவும் மலர் மாலைகள் அணி செய்யப் பெற்றிருக்கும் என்பது, அணங்குறு மகளி ராடுகளங் கடுப்பத் திணிநிலைக் கடம்பின் றிரளரை வளைஇய துணையறை மாலையின்..................... (குறிஞ்சிப். 174-177) எனவரும் குறிஞ்சிப் பாட்டடிகளான் புலனாகும். காவிரிப்பூம்பட்டினத்தில் கட்டப்பெற்றுள்ள பல்வேறு கொடிகளுள் நெடுநிலை மாடத்துவாழும் இளமகளிர் காந்தட்பூப் போலும் இருகைகளையும் குவித்து வணங்கி முருகவேளைக் குறித்து வெறியாடல் நிகழ்த்தும் மகளிரொடு பொருந்திக் குழலும் யாழும் முதலிய இன்னியம் இயம்பத் திருவிழா நீங்காத அகன்ற வீதியிலே தீமையை யகற்றும் சிறப்பினையுடைய தெய்வத்தை வழிபட்டுத் தூவிய மலர் நிறைந்த கோயில் வாயிலிலே பலருந்தொழக் கட்டிய கொடிகள் நிழல் செய்யும் திறத்தினை, காந்தளந் துடுப்பிற் கமழ்குலை யன்ன செறிதொடி முன்கை கூப்பிச் செவ்வேள் வெறியாடு மகளிரொடு செறியத் தாஅய்க் குழலகவ யாழ்முரல முழவதிர முரசியம்ப விழவறா வியலாவணத்து மையறு சிறப்பிற் றெய்வம் சேர்த்திய மலரணி வாயில் பலர் தொழு கொடியும் எனவரும் பட்டினப்பாலை விரித்துரைக்கின்றது. இதனால் முருகனுக் குரிய திருவிழாவில் நிகழும் கொடியேற்று விழாச் சடங்கில் வெறியாடு மகளிரொடு இளமகளிரும் கலந்து கொண்டு விழாவினைச் சிறப்பித்தல் என்பது உய்த்துணரப்படும். முருகப் பெருமானை மணந்த வள்ளி நாச்சியாரது தெய்வத்தோற்றம் மக்கள் கண்ணால் உற்று நோக்குதற்கியலாத பேரொளி வாய்ந்தது என்பது, முருகு புணர்ந் தியன்ற வள்ளிபோன்று உருவு கண்ணெரிப்ப நோக்கலாற்றலனே (நற். 82) எனவரும் நற்றிணைத் தொடரால் அறியலாம். களவொழுக்கத்துக் தலைவனது பிரிவினால் ஆற்றாளாகிய தலைமகளது மெலிவுகண்டு, இஃது தெய்வத்தானாகியது எனச் செவிலி வெறியாட்டு நிகழ்த்தக் கருதிய நிலையில் தோழி தலைவன் சிறைப்புறத் தானாகத் தலைவியை நோக்கிக் கூறியதாகவமைந்தது நற்றிணை 173ஆம் பாடலாகும். சுனையிடத்தே பூக்களைக் கொய்தும் அவற்றை மாலையாகத் தொடுத்தும் மலையிலே படர்ந்த செங்காந்தட்பூவினை முடிமாலை யாகக் கட்டியும் தன்வழிபாட்டில் ஈடுபட்ட நம்பால் முருகப்பெருமான் அருள்கூர்ந்து தலைவியின் வேறுபாடு வெறியாடுதலால் நீங்கும் எனக் கருதி முயலும் அன்னைக்குத் தன் தெய்வத் தோற்றத்தினைக் கண்ணினால் காணும்படி நனவிலோ அன்றிக் கனவிலோ புலப்படுத்தி நின்மகளாகிய இவள் உற்ற நோய் என்னால் ஏற்பட்டதுமன்றிப் பிற தெய்வங்களாலும் ஏற்பட்டதுமன்றி அழகிய மலைக்குரியனாகிய தலைவன் ஒருவனால் ஏற்பட்டதே என்று தன் அருளால் வெளிப்படக் கூறில் நெடுவேளாகிய அம்முதல்வனுக்கு வருவதொரு குற்ற முண்டோ? எனத் தோழி தலைவியை நோக்கிக் கூறும் முறையில் சிறைப்புறமாக நின்ற தலைவனுக்குக் களவொழுக்கந்தவிர அறிவுறுத்தும் நிலையில் இப்பாடற் பொருள் அமைந்துள்ளமை காணலாம். இதன்கண் மணமாகாத இளம் பருவத்தினராகிய தோழியும் தலைவியும் சுனையிலுள்ள மலர்களைக் கொய்து மாலையாகத் தொடுத்தும் செங்காந்தள் மலர் கொய்து கண்ணியாகச் சேர்த்தியும் முருகப் பெருமானது வழிபாட்டிற்கு உதவிய திறம் நன்கு புலனாகும். தலைமகன் சினப்புறத்தானாகத் தோழி தலைமகட் குரைப் பாளாய் வெறியறிவுறுத்தி வரைவுகடாவும் நிலையிலமைந்தது நற்றிணை 288 ஆம் பாடலாகும். உயர்ந்த மரக்கிளையில் உள்ள மயிர் தன் தோகையை விரித்து இளவெயில் காண வேண்டி நெடியமலைச் சிகரத்தில் பக்கத்திலே தன் பெடையொடு தங்கும் மலைநாடனாகிய தலைவன் பிரிதலினாலே நினது நுதலில் படர்ந்த பசலையை நோக்கி அன்னை செம்முது பெண்டிருடனே தன் மனையிற் புகுந்து கட்டுவிச்சியைக் கொண்டு நெல்லை முறத்தில் பரப்பி, நட்டுவைத்து நின் மெலிவுபற்றிக் குறிகேட்குமானால், அக்கட்டுக்குறியானது புனத்திலே தினையின் கதிர்களைக் கொய்து கொண்டு போகும் கிளிகளை வெருட்டுவோமாகி நாம் சென்றிருந்தும் அந்நிலையில் எதிர்ப்பட்ட தலைவனது பிரிவினால் நினக் கேற்பட்ட மெலிவினை யறியாது இவள் முருகவேள் இருக்கும் இடத்தருகே சென்றதனால், முருகவேள் வருத்தியவருத்தமின்றி மாறாகக் கூறிவிடுவோ? எனத் தோழி தலைமகளை நோக்கி வினவும் நிலையில் சிறைப்புறத்தானாகிய தலைவனுக்குத் தலைவியின் மெலிவு குறித்து வெறியாடல் நிகழும் என்பதனை அச்சத்துடன் புலப்படுத்தும் முறையில் இப்பாடலின் பொருள் அமைந்துள்ளது. இதனால் தலைவியின் வாட்டம் கண்டு வெறியாடல் நிகழ்த்த எண்ணிச் செவிலி கட்டுவிச்சியைக் கொண்டு குறிபார்த்து அக்குறி தெய்வத்தினான் நேர்ந்த தெனப் புலப்படுத்திய பின்னரே வெறி யாடல் நிகழ்த்தற்கு ஏற்பாடு செய்யும் மரபுண்மை புலனாகும். தாமரை புரையும் காமர் சேவடி பவழத் தன்ன மேனித் திகழொளிக் குன்றி யேய்க்கும் உடுக்கைக் குன்றின் நெஞ்சுபக வெறிந்த வஞ்சுடர் நெடுவேற் சேவலங் கொடியோன் காப்ப ஏமவைகல் எய்தின்றால் உலகே எனவரும் பெருந்தேவனார் பாடல் குறுந்தோகைக் கடவுள் வாழ்த்தாக வமைந்துள்ளது. செந்தாமரை மலர் போலும் அழகிய சிவந்த திருவடியினையும், பவழம் போன்ற சிவந்த நிறத்தையுடைய திருமேனியையும், அம்மேனியில் விளங்காநின்ற ஒளியினையும், குன்றுமணியின் நிறம்போலும் செந்நிறம் வாய்ந்த உடையினையும், குருகுபெயர்க் குன்றத்தின் நடுவிடம் பிளக்கும்படி எறிந்த அழகிதாயச் சுடர்விட்டு விளங்கும் நெடிய வேற்படையினையும், கோழிச் சேவற் கொடியினையும் உடைய முருகப் பெருமான் பாதுகாத் தருளுதலால் இவ்வுலகத்து மன்னுயிர்கள் இன்பம் நிறைந்த நாட் களைப் பெற்று வாழ்கின்றன என்பது இப்பாடலின் பொருளாகும். குறிஞ்சிக் கடவுளாகிய முருகப் பெருமானது திருவடியையும், ஒளி திகழும் திருமேனியையும், அம்மேனியில் அணியப் பெற்ற செந்நிறம் வாய்ந்த உடையினையும், அம்முதல்வன் ஏந்திய நெடிய வேற்படையினையும், கோழிக் கொடியினையும் உவமை காட்டிப் புனைந்துரைக்கும் முகமாகக் காண்டற்கரிய அக் கடவுளை வழிபடும் அன்பர்கள் கண்ணினாற் காணச் சொல்லோவியம் செய்து காட்டும் முறையில் அமைந்த இச்செய்யுளிற் கடவுள் உயிர் உலகம் என்னும் முப்பொருள்களும் தோற்றமில் காலமாகவுள்ள உள்பொருள்கள் என்னும் சைவ சித்தாந்தத் தத்துவவுண்மை நன்கு வலியுறுத்தப் பெற்றுள்ளமை கூர்ந்து நோக்கற்பாலதாகும். போர்க்களம் குருதியாற் செந்நிறக்களமாக ஆகும்படி அவுணர்களைக் கொன்று இல்லையாக்கிய நடுவு நிலையில் திறம்பாத செம்மைவாய்ந்த திரண்ட கைப்பிடியினையுடைய அம்பினையும், குருதியாற் சிவந்த கொம்பினையுடைய யானையையும், கழலணிந்த வீரவளையையும் உடைய முருகனுக்குரிய மலை, குருதி போலும் செந்நிறப் பூங்கொத்துக்களையுடைய காந்தளையுடையது என்று கூறித் தோழி தலைவன் தந்த கையுறையை மறுத்தல் என்னும் துறையில் அமைந்தது, செங்களம் படக்கொன் றவுணர்த் தேய்த்த செங்கோ லம்பிற் செங்கோட்டி யானைக் கழறொடிச் சேஎய் குன்றம் குருதிப் பூவின் குலைக்காந் தட்டே (குறுந். 1) என்னும் குறுந்தொகைப் பாடலாகும். குறிஞ்சி நிலத் தெய்வமாகிய முருகப் பெருமானுக்கு உரிய ஊர்திகளுள் பிணிமுகம் என்னும் பெயருடைய யானையும் ஒன்றென்பதும் முருகப் பெருமான் அவுணர்களைப் பொருதழிக்கும் காலத்து யானைமீதமர்ந்து அம்பெய்து பொருதலுமுண்டென்பதும், கடுங்சின விறல்வேள் களிறூர்ந்தாங்கு (பதிற். 11) எனவும், சேயுயர் பிணிமுகம் ஊர்ந்தம குழக்கி (பரி. 5) எனவும் வரும் தொடர்களால் அறியப்படும். தலைவியின் மெலிவு முருகனால் வந்ததெனக் கருதி வெறியாடத் தொடங்கிய நிலையில் அவ்வெறியினை விலக்கித் தோழி அறத்தொடு நிற்பதாக அமைந்தது, முருகயர்ந்து வந்த முதுவாய் வேல சினவ லோம்புமதி வினவுவ துடையேன் பல்வே றுருவிற் சில்லவிழ் மடையொடு சிறுமதி கொன்றிவ ணறுநுத னீவி வணங்கினை கொடுத்தி யாயி னணங்கிய விண்டோய் மாமலைச் சிலம்பன் உண்டா ரகலமு முண்ணுமோ பலியே (குறுந். 362) எனவரும் பாடலாகும். முருகப் பெருமானை வழிபட்டு வெறியாடல் நிகழ்த்தவந்த அறிவு வாய்ந்தவேலனே. யான் நின்னைக் குறித்து வினவுவ தொன்றுடையேன். என்னைச் சினவா தொழிக. பலவாக வேறுபட்ட சிலவாகிய சோற்றையுடைய பலியுணவுடனே சிறிய மறியினைக் கொன்று இத்தலைவியது நெற்றியைத் தடவி முருகப் பெருமானை வணங்கி பலியுணவைப் படைப்பாயாயின், அவ்வுணவினை வானளாவிய பெரிய மலைப் பக்கத்தையுடைய தலைவனது ஒளி தங்கிய மாலையை யணிந்த மார்பும் நின்னாற் கொடுக்கப்பட்ட அப்பலியை உண்ணுமோ? என்பது இப்பாடலின் பொருளாகும். தலைவியின் நோய் தீர முருகனை வழிபட்டு நிகழ்த்தும் இவ்வெறி யாடலில் பலவேறு உருவினவாகிய சோற்றினை உணவாகப் படைத்தலும், மறியைப் பலியிட்டு, நிலத்தில் படிந்த குருதித்துளியைத் தலைவியின் நெற்றியில் தடவுதலும் வெறியாடலில் நிகழ்த்தும் சடங்கென்பது மேற்குறித்த குறுந்தொகைப் பாடலாற் புலனாகும். தினைப்புனத்தில் தினை விளைவித்த குறவன் தன் தோட்டத்திலே முதன்முதல் புதிதாய் விளைந்த பெருங் கதிரைச் சிறப்புணவாகக் குறிஞ்சிக் கடவுளாகிய முருகனுக் குரியதென விட்டிருந்தான். அதனைத் தெய்வத்திற்கு விடப்பட்டதென அறியாது மயில் உண்டது. அந்நிலையில் அம்மயில் முருகபூசை பண்ணும் குறமகளாகிய தேவராட்டி வெறியாடுகின்ற அழகைப் போல அஞ்சி நடுங்கியது. இச் செய்தியினை, புனவன் றுடவைப் பொன்பெற் சிறுதினைக் கடியுண் கடவுட் கிட்ட செழுங்குரல் அறியா துண்ட மஞ்ஞை யாடுமகள் வெறியுறு வனப்பின் வெய்துற்று நடுங்கும் (குறுந். 105) எனவரும் குறுந்தொகைப் பாடலில் நக்கீரர் குறித்துள்ளார். மலைவாழ்நர் தினை முதலியன விளைக்குங்கால், முதலிற்றோன்றிய பெருங்கதிரைத் தெய்வத்திற்காக இட்டு வைத்தல் மரபென்பதும், அதனைத் தெய்வத்திற்குரிய படைப்புப் பொருளாகவே பயன்படுத்துதல் வேண்டுமென்பதும், அதனை யறியாதுண்போர் தெய்வத்தாலா வேசிக்கப்பெற்று நடுக்கமுறுவர் என்பதும் இப்பாடலாற் புலனாம். இயலிசைத் தமிழ்ப் பனுவலாகிய பரிபாடல் என்னும் தொகை நூலில் திருமால், செவ்வேள், காடுகிழாள், வையை மதுரை என்னும் பொருள் பற்றிய பாடல்கள் இடம் பெற்றுள்ளமையும் எழுபது பரிபாடல்களுள் இருத்திரண்டு பாடல்களும், சில தொடர்களுமே கிடைத்துள்ளன என்பதும் முன்னர்க் குறிக்கப் பெற்றன. எழுபது பரிபாடல்களுள் முருகப் பெருமானைப் போற்றிய பாடல்கள் முப்பத்தொன்றாகும். அவற்றுள் 5,8,9,14,17,18, 19,21, என்னும் எட்டுப்பாடல்களே இப்பொழுது கிடைத்துள்ளன. ஐந்தாம் பரிபாடலின்கண் குறிக்கப்பெற்ற முருகப் பெருமானது பிறப்புப்பற்றிய புராணச் செய்தி முன்னர் விளக்கப் பெற்றது. பரந்த கரிய குளிர்ச்சியையுடைய கடலிடத்தே பாறைகள் பிதிர்ந்து துகள் படும்படி மிகவுயர்ந்த பிணிமுக மென்னும் யானையின் மீதிவர்ந்து உட்புகுந்து தீயின் கொழுந்து ஒலிப்ப வேலினைத் திரித்து விட்டெறிந்து அச்சத்தால் நடுங்குகின்ற சூர்மாவினது முதலைத் தடிந்து வென்றியுடைமையால் நல்வினையாளர் என ஒரு கூற்றாற் பெயர் பெற்ற தீவினையினையும் கொல்லப்படும் தகைமையினையும் உடைய வஞ்சனைத் தொழிலில் வல்ல அவுணரைக் கிளையறக் கொன்ற வேற் படையினாலே நாவலந் தீவினுள் வடபகுதியிலுள்ள அன்றில் என்னும் குருகின் பெயரையுடைய கிரவுஞ்ச மலையினைத் துளைத்து அம்மலையினைப் பலரும் செல்லுதற்குரிய வழியாக்கிய ஆறு மென் தலையினை cilnahnd! ஆறு திருமுகங்களுடனும், பன்னிரண்டு திருத்தோள்களுடனும் ஞாயிற்றின் எழுச்சிபோலும் திருமேனி நிற அழுகுடனும், தாமரைப் பூவின்கண் பிறந்த பிறப்பினை cilnahnd! உலகத்தை அழிக்கும் கடவுட்கு kfnd! br›ntns! திருவருட் பண்புகளின் ÃiwÉidíilnahnd! உலகுயிர்கட்குத் jiytnd! என இவ்வாறு கண்டார்க்கு அச்சம் தரும் வெறியாட்டு விழவினுள் நின்னைக் கண்டு வழிபடும் வேலன் இவ்வாறு சொல்லி ஏத்தும் வெறிப்பாடல்களும் பல உள்ளன. இவ்வுலகிற் கெல்லாம் தலைவன் நீயே யாதலால் வெறியாடுகளத்திலே வேலன் நின்னைக் கண்டு ஏத்துகின்ற அப்பாடலில் கூறப்பட்டவை உண்மை நிகழ்ச்சியுமல்ல. ஆயினும் அப்பாடல்களால் நின்னைப் புகழும்போது அன்பர் முன்னே நீ வெளிப்படுதலால் அப்பாடலிற் கூறப்பட்டவை நிகழாதன என ஒதுக்கத் தக்கனவுமல்ல. அப்பாடல்கள் பொய், மெய் என்னும் அவ்விரு கூற்றுள் ஒன்றிற் பட்டவழி அவற்றாற் புகழப்படும் தலைமைச் சிறப்பினையுடைய நீ கற்றார் கல்லாதார் என்னும் இரு திறத்தாராலும் புகழப்படும் தலைமைச் சிறப்பினையுடைய நீ அச்சிறப்பினின்றும் விலகுவாய். முழுமுதற் கடவுளாகிய நின்னை ஒழிந்த ஏனை உயிர்த் தொகுதிகள் நல்லறங் களால் சிறப்பாகிய வீடு பேற்றினைப் பெற்று உயர்தலும், தீவினைகளால் பிறவிப் பெருங்கடலுட்பட்டு இழிவடைதலும் ஆகிய இந்நிலைமை, நின்னுடைய திருவருளாகிய ஆணை வரம்பின் உட்பட்டதாகும் என முருகப் பெருமானது பொருள் சேர் புகழ்த்திறங்களைப் போற்றிப் பரவும் நிலையிலமைந்தது, பாயிரும் பனிக்கடல் பார்துகள் படப்புக்குச் சேயுயர் பிணிமுக மூர்ந்தம ருழக்கித் தீயழ றுவைப்பத் திரியவிட் டெறிந்து நோயுடை நுடங்குசீர் மாமுத றடிந்து வென்றியின் மக்களு ளொருமையொடு பெயரிய கொன்றுண லஞ்சாக் கொடுவினைக் கொஃறகை மாய வவுணர் மருங்கறத் தபுத்தவேல் நாவலந் தண்பொழில் வடபொழி லாயிடைக் குருகொடு பெயர்பெற்ற மால்வரையுடைத்து மலையாற்றுப் படுத்த மூவிரு கயந்தலை மூவிரு கயந்தலை முந்நான்கு முழுவுத்தோள் ஞாயிற்றேர் நிறத்தகை நளினத்துப் பிறவியை காய்அய் கடவுள் சேஎய் செவ்வேள் சால்வ தலைவவெனப் பேஎ விழாவினுள் வேல னேத்தும் வெறியு முளவே அவை வாயுமல்ல பொய்யு மல்ல நீயே வரம்பிற்றிவ் வுலக மாதலிற் சிறப்போய் சிறப்பின்றிப் பெயர்குவை சிறப்பின ளுயர் பாகலும் பிறப்பினு ளிழி பாகலும் ஏனோர் நின்வலத் தினதே (பரி. 5. 1-21) எனவரும் பரிபாடற் பகுதியாகும். இதன்கண் வேலன் ஏத்தும் வெறியு மளவே அவை, வாயுமல்ல பொய்யு மல்ல நீயே வரம்பிற் றிவ்வுலக மாதலின் சிறப்போய் சிறப்பின்றிப் பெயர்குவை எனவரும் நான்கடிகள் முழுமுதற் கடவுளாகிய முருகப் பெருமானது சிறப்பிலக்கணம் ஒன்றினையே சிறந்து எடுத்துக் கூறும் முறையில் அமைந்துள்ளன. உலக முதல்வனாகிய முருகப் பெருமான், சூரபதுமன் முதலிய அவுணர்களை அழித்ததும், குருகொடு பெயர்பெற்ற மால்வரையைப் பிளந்ததும் முதலிய புராணச் செய்திகள் வேண்டுதல் வேண்டாமை இலானாகிய அம்முதல்வன் தன்னருளால் உலகுயிர் களைச் சார்ந்து புரந்தருளும் பல்வேறு நிலைகளைக் குறிப்பனவாதலின் அவை, அவனது பொதுவியல்பெனப் படுவனவன்றி, அவனது சிறப்பிலக்கணமாகக் கொள்ளத்தக்கன அல்ல என்பதும், தனக்குவமை இல்லாத அவன் ஒருவனே உலகெலாம் இயக்கும் முழுமுதற் கடவுளாக அவனை யொழிந்த ஏனை மன்னுயிர்கள் யாவும் தாம் தாம் செய்யும் நல்வினைத் திறத்தால் உயர்வினைப் பெறுதலும், தீவினைகளால் இழிவினையடைதலும் அம்முதல்வனது திருவருளாகிய ஆணையின் வரம்பின் உட்பட்டு நிகழ்வன என்பதும் தன்னிற் பிரிவிலா யென்னுந் திருவருள் வலத்தால் உலகுயிர்கள் பலவகைச் செயல்களில் ஈடுபட்டு இயங்க, அவற்றுள் ஒன்றினும் தோய்வின்றி நிற்றலே அம் முதல்வனது சிறப்பிலக்கணம் என்பதும் இவ்வடிகளிற் புலப்படுத்தப் பெற்றுள்ளமை காணலாம். நீயே வரம்பிற்றிவ் வுலகமாதலின், வேலன் ஏத்தும் வெறியாகிய அவை வாயும் அல்ல; பொய்யும் அல்ல எனவும், அவற்றுள் ஒன்றாய வழி, சிறப்போய் சிறப்பின்றிப் பெயர்குவை எனவும் வரும் இத்தொடர்கள், அம்முதல்வனது பொதுவும், சிறப்புமாகிய இயல்புகளைப் புலப்படுத்துவன. உலகப் பொருள்கள் ஒன்றிலும் தோய்வற நிற்கும் சிறப்பியல்பினனாகிய முருகப் பெருமான் படைத்தல் முதலிய தொழில்கள் எல்லாவற்றையும் தன் தொழிலாகக் கூடி நின்று செய்யும் நிலையிலும் தான் அத்தொழில் பற்றி விருப்பு வெறுப்பின்றி நிற்றல் பற்றி அவன் செய்தனவாக வேலன் ஏத்தும் புராணச் செய்திகள் யாவும் ஒன்றிற் கருத்திருத்திச் செய்யும் முறையில் அவனால் செய்யப்பட்டன அல்ல என்பதும், அவை யனைத்தும் அவன் அருளின் வழி நிகழ அவன் அவற்றிற்றோய்வின்றி விளங்குகின்றான் என்பதும், மேற்காட்டிய தொடரின் கருத்தாகும். ஏனோர் சிறப்பினுள் உயர்வாகலும் பிறப்பினுள் இழிவாகலும் நின் வலத்தினதே எனவரும் தொடர், பால்வரை தெய்வம் எனத் தொல்காப்பினார் குறித்த இறை இயல்பினை அறிவுறுத்தும் நிலையிலமைந்துள்ளது. முழுமுதற் கடவுளாகிய நின்னை யொழிந்த மன்னுயிர்கள் நல்வினையாற் சிறப்பினைப் பெற்று உயர்தலும், தீவினையாற் பிறப்பினை அடைந்து தாழ்தலும் ஆகிய இந்நிகழ்ச்சிகள் நினது அருளாணையின் வரம்பின் உட்பட்டு நிகழ்வனவே என்பது மேற்காட்டிய தொடரின் பொருளாகும். இதனால் இவ்வுலகில் மன்னுயிர்கள் செய்யும் நன்றும் தீதுமாகிய இருவினைகளால் ஆகிய இன்ப துன்பங்களாகிய பயன்களை வினை செய்த உயிர்களே நுகரும் வண்ணம் எய்துவிக்கும் ஆற்றல் முழுமுதற் பொருளாகிய இறைவன் ஒருவனுக்கே உரியதென்பது, தொல்காப்பியனார் முதலிய பண்டைத் தமிழ்ச் சான்றோர் கண்டுணர்த்திய தத்துவ உண்மையாகும். இவ்வுண்மையை மேற்காட்டிய பரிபாடற் றொடரும் வலியுறுத்துவதைத் காணலாம். ஏனோர் நின் வலத்தினதே என்னும் அடியில் ஏனோர் என்னும் சொல் இறைவனை ஒழிந்த ஏனைய உயிர்த் தொகுதியினையும் நின் என்ற சொல் ஒருவன் என்னும் ஒருவனாகிய இறைவனையும், வலம் என்ற சொல் அம் முதல்வனது அருளாகிய ஆணை என்னும் சிற்சத்தியினையும் குறித்து நின்றன.முழுமுதற்கடவுளாகிய முருகனது அருளாணை உயிர்களின் இருவினைகளின் வழிநின்று அவற்றின் பயன்களாகிய சிறப்பினையும் பிறப்பினையும் உயிர்கட்கு எய்துவிக்கின்றது என்னும் இத்தத்துவக் கொள்கையினை அவையே தானேயா யிருவினையிற், போக்குவரவு புரிய ஆணையின், நீக்க மின்றி நிற்குமன்றே எனவரும் சிவஞானபோத இரண்டாஞ் சூத்திரத்தில் ஆசிரியர் மெய்கண்டார் ஏதுவும் எடுத்துக்காட்டும் தந்துவிளக்கி யுள்ளார். மேலைச் சூத்திரத்தில் எடுத்துக்கொண்ட முழுமுதற் கடவுளாகிய இறைவன், கலப்பினால் அவ்வுயிர்களேயாய்ப் பொருட்டன்மையால் அவ்வுயிர்களின்வேறாய் உயிர்க்குயிராதல் தன்மையால் உடனுமாய் நின்று ஆணையெனப்படும் தனது சிற்சத்தியால் வரும் இருவினைகளால் அவ்வுயிர்கள் இறத்தலையும் பிறத்தலையும் மேற்கொள்ளும்படி அவ்வாணையுடன் பிரிப்பின்றி ஒன்றாய் நிற்பன் என்பது இச்சூத்திரப் பொருளாகும். அருண்மொழித் தேவராகிய சேக்கிழாரடிகள், செய்வினையும் செய்வானும் அதன் பயனும் சேர்ப்பானும் மெய்வகையால் நான்காகும் விதித்த பொருள் எனக் கொண்டே இவ்வியல்பு சைவநெறி அல்லவற்றுக் கில்லையென மெய்வகையால் பொருள் சிவனென் றருளாலே உணர்ந்தெழுந்தாய் எனவரும் பாடலில் சைவ சமயத்துக்குரிய தனிச்சிறப்புடையதாக இத்தத்துவக்கொள்கையினை எடுத்துரைத்துள்ளமை காணலாம். அறவாழி அந்தணனாகிய இறைவனது திருவருள் பண்பினை உள்ளத்துட் கொண்டு தன் முனைப்பின்றி மக்கள் செய்யும் நற் செயல்களே அறச் செயல்களாகும் என்பது நின்குணம் எதிர்கொண்டோர் அறம் கொண்டோர் (பரி. 5,71) எனவரும் தொடராற் புலனாகும். என்றும் அழியாது நிலைபெறும் வீடுபேற்றினை அடையும் தன்மையினார், தவப்பெருஞ் செல்வராகிய இறைவனடியார்களையடைந்து வழிபட்டோர் என்பது மன்குணமுடையோர் மாதவர் வணங்கியோர் (பரி. 5,72) எனவரும் தொடராற் புலப்படுத்தப் பெற்றது. ஈண்டு மன்குணம் என்றது பிறப்பிறப்புக்களிற்பட்டு உழலாது இறைவன் திருவடியைச் சார்ந்து என்றும் மாறாத பேரின்ப நிலையில் நிலைபெறுதலாகிய வீடுபேற்றினை. மன்குணம் நிலை பேறாகியதன்மை. மேற்குறித்த வண்ணம் இறைவனது திருவருட் குணத்தினை ஏற்றுக்கொண்டோ ராகிய அற நெஞ்சத்தினாரும், பெருந்தவச் செல்வர்களாகிய அடியார்களை வணங்கி அவர் வழியொழுகும் பேரன்பர்களும் ஆகிய இவர்களே இறைவனது திருவடி நிழலை அடைதற்கு உரியார். அத்தன்மையோரல்லது உயிர்களைச் செறுகின்ற தீய நெஞ்சத்தையுடைய கொடியோரும், அறத்தின்கண் சேராத பழி உடையோரும், கூடா ஒழுக்கத்தால் அழிந்த தவவிரதத்தை உடையோரும் இப்பிறப்பின் நுகர்ச்சியே உண்மையெனச் கொள்ளத்தக்கது; மறுபிறப்பென்ப தொன்றில்லை எனத் தம் மனம் போனவாறொழுகும் மடவோரும் ஆகிய இவர்கள் இறைவன் திருவடி நீழலையடைந்து இன்புறும் வீடுபேற்றிற்கு உரியரல்லர் என்பது பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க நெறியினைப் புலப்படுத்தம். இக்கருத்து நின்குணம் எதிர்கொண்டோர் அறங்கொண்டோர் அல்லதை மன்குணமுடையோர் மாதவர் வணங்கி யோரல்லதை செறுதீ நெஞ்சத்துச் சினம் நீடினோரும் சேரா அறத்துச் சீரிலோரும் அழிதவப்படிவத்து அயரியோரும் மறுபிறப்பில் லெனும் மடவோரும் சேரார் நின்னிழல்; அன்னோரல்லது இன்னோர் சேர்வர் (பரி. 5;70-78) எனவரும் பகுதியில் இடம் பெற்றுள்ளமை காணலாம். மன்னுயிர்களாகிய தம் இயல்பினையும் உயிர்க்குயிராய் உள்நின்றியக்கும் இறை இயல்பினையும் உள்ளவாறு உணரப் பெற்றவர்கள் இறைவன்பால் ஒன்றை வேண்டுங்கால் இவ்வாறு வேண்டுதல் வேண்டும் என அறிவுறுத்தும் நிலையில் அமைந்தது. யாஅம் இரப்பவை பொருளும் பொன்னும் போகமுமல்ல நின்பால் அருளும் அன்பும் அறனும் மூன்றும் உருளிணர்க்கடம்பின் ஒலி தாரோயே (பரி. 5, 78-81) எனவரும் பரிபாடற் பகுதியாகும். தேருருள் போலும் பூங்கொத்துக் களையுடைய கடப்பமலர்களால் தொடுக்கப் பெற்ற தழைத்த மாலையை யணிந்த முருகப் bgUkhnd! நின்னையாம் இரந்து வேண்டுபவை இவ்வுலக வாழ்க்கையில் நுகரப்படும் நுகர் பொருள்களும், அவற்றை உளவாக்கும் பொன்னும், அவ்விரண்டாலும் நுகரத்தகும் இன்ப நுகர்ச்சியும் அல்ல; எமக்கு வீடு பேற்றினை நல்கும் நின் திருவருளும், அவ்வருளைப் பெறுதற்கு இறைவனாகிய நின்பால் யாம் செய்யும் பேரன்பும், அருள் அன்பு என்னும் அவ்விரண்டினாலும் யாம் செய்தற்குரிய அறனும் ஆகிய இவை மூன்றுமேயாகும் எனக் கடுவன் இளவெயினனாராகிய புலவர் பெருமான் திருப்பரங்குன்றத் தெழுந்தருளிய முருகப் பெருமானை நோக்கி வேண்டும் நிலையில் அமைந்த இவ்விண்ணப்பம் இறைவனது திருவருளே உலகுயிர் நிகழ்ச்சிகள் எல்லாவற்றுக்கும் ஆதாரம் என்பதும், இறைவனருளால் அன்பு மீதூரப் பெற்ற மக்கட்குலத்தால் அருளும் அன்புமாகிய இவற்றின் துணை கொண்டு செய்யப்படும் நற்செயல்களே நிலை பெற்ற அறமாம் என்பதும் ஆகிய உண்மைகளை நன்கு புலப்படுத்தல் காணலாம். அருளே உலகெலாம் ஆள்விப்ப தீசன் அருளே பிறப்பறுப்ப தானால் - அருளாலே மெய்ப்பொருளை நோக்கும் விதியுடையேன் எஞ்ஞான்றும் எப்பொருளும் ஆவ தெனக்கு (அற்புதத்.) எனவரும் காரைக்காலம்மையார் வாய்மொழியும் அவனருளே கண்ணாகக் காணினல்லால் எனவரும் அப்பர் மொழியும், அவனருளாலே அவன்தாள் வணங்கி எனவரும் திருவாதவூரடிகள் வாய்மொழியும் மேற்குறித்த பரிபாடற் றொடரின் விளக்கமாக அமைந்துள்ளமை இங்கு ஒப்பு நோக்கி உணரற்பாலதாகும். முப்பத்து மூவரும் மற்றொழிந்த தேவரும் போற்றும் முழுமுதற் கடவுளாகப் பரங்குன்றத் தெழுந்தருளிய செவ்வேளைப் பரவிப் போற்றுவது எட்டாம் பரிபாடலாகும் மலர்ந்த துழாய் மாலையையும் அளவற்ற செல்வத்தினையுமுடைய கருடக் கொடியோனாகிய திருமாலும் ஏறூர்ந்த செல்வனாகிய சிவபெருமானும் தாமரை மலரில் வீற்றிருப்போனாகிய நான்முகனும் அவனிடத்தே தோன்றி உலகத் திருளை நீக்கிய சூரியர் பன்னிருவரும் அசுவினி தேவர் என்னும் மருத்துவர் இருவரும், வசுக்கள் எண்மரும் ஆதிரை முதல்வனாகிய இறைவன் பெயராற் சொல்லப்பட்ட உருத்திரர் பதினொருவரும் ஆகத் தேவர் முப்பத்து மூவரும் நல்ல திசைகளைக் காப்போராகிய இந்திரன் முதலிய எண்மரும் இவர் எல்லோரும் இவரொழிந்த பிறரும் ஆகிய தேவர்களும் அவுணர்களும், அறிதற்கரிய வேதத்தினை அறிந்த தவச் செல்வராகிய தெய்வ முனிவர்களும், முழு முதற் பொருளாகிய முருகனைக் காணுதல் காரணமாக நிலமிசை வந்து தங்கும் இடமாகத் திகழ்வது திருப்பரங்குன்றம். ஆகவே திருப்பரங்குன்று தேவர்கள் தங்கும் பழைய இடமாகிய இமயக் குன்றத்தை ஒக்கும். அவ்விமயக் குன்றின் கண்ணே விளங்கும் சிறப்புடையதாய் முருகனை ஈன்ற தாமரை பூத்த வற்றாப் பொய்கையினை ஒத்தது திருப்பரங்குன்றில் உள்ள அருவி தங்கும் சுனையாகும் என ஆசிரியர் நல்லந்துவனார் முருகப் பெருமான் எழுந்தருளிய திருப்பரங்குன்றத்தினை இமயக் குன்றத்தினொடும் இணைத்துப் போற்றுவதாக வமைந்தது, மண்மிசை யவிழ் துழாய் மலர்தரு செல்வத்துப் புண்மிசைக் கொடி யோனும் புங்கவ மூர்வோனும் மலர்மிசை முதல்வனும் மற்றவனிடைத் தோன்றி உலகிரு ளகற்றிய பதின்மரு மிருவரும் மருந்துரை இருவரும் திருந்துநூ லெண்மரும் ஆதிரை முதல்வனிற் கிளந்த நாதர்பன் னொருவரு நன்றிசை காப்போரும் யாவரும் பிறரும் அமரரும் அவுணரும் மேவரு முதுமொழி லிழுத்தவ முதல்வரும் பற்றா கின்றுநின் காரண மாகப் பரங்குன் றிமயக் குன்ற நிகர்க்கும் இமயக் குன்றினிற் சிறந்து நின்னீன்ற நிரையிதழ்த் தாமரை மின்னீன்ற விளங்கிணரூழா ஒருநிலைப் பொய்கையோ டொக்குநின் குன்றின் அருவிதாழ் மாலைச்சுனை எனவரும் பரிபாடற் பகுதியாகும். திருப்பரங்குன்றத்திற்கும் அதன் கிழக்கேயமைந்த மதுரை நகருக்கும் இடையேயுள்ள வழியின் இயல்பையும், அவ்வழியே திருப்பரங்குன்றத்தையடைந்து முருகப் பெருமானை வழிபட வந்த அன்புடைய காதலர்களின் ஊடலும் கூடலுமாகிய இன்ப நிகழ்ச்சி களையும் தலைமகள் ஊடலைக் தணிக்க எண்ணிய தலைவன் வையையின் மேலும் முருகன் எழுந்தருளிய பரங்குன்றின்மீதும், அங்கு வழிபடவந்த பார்ப்பார் மீதும் சூளுற்றுக் கூற அது கண்ட தோழி அவனுடைய பொய்ச் சூளால் நேரும் துன்பங்களை நீக்க அவன்பால் அன்புடைய தலைவி முருகப் பெருமான் தலைவனது பொய்ச் சூள் கருதிச் சீற்றம் கொள்வதற்கு முன்னரே திருப்பரங் குன்றத்தில் முருகன் கோயிலில் தொங்கும் மணியைக் கையாலடித்துத் தலையால் வணங்கி, தலைவனது பொய்ச்சூளால் வரும் ஏதத்தைத் தவிர்த்தருள்க என வேண்டிக்கோடலும் ஆகிய செய்திகள் இப்பாடலில் 22 முதல் 89 முடியவுள்ள அடிகளால் விரித்துரைக்கப் பெற்றுள்ளன. இதனால் தெய்வம் எழுந்தருளிய திருத்தலத்தின் மேலும், அங்கு எழுந்தருளிய தெய்வத்தின் மீதும் தெய்வத்தைப் போற்றும் அடியார்கள் மீதும், தெய்வத்தன்மை வாய்ந்த தீர்த்தத்தின் மீதும் பொய்ச்சூள் செய்தல் இறைவன்பால் அன்பிலாதார் செய்யும் போலிச் சடங்கென்பதும் இதனால் அன்னோர்க்குத் தெய்வத்தால் தீமை நேரும் என்பதும் அத்தீமை நீங்க இறைவனை வழிபடுதலே அவர்பால் அன்புடையார் செயல் என்பதும் ஆகிய உண்மைகள் புலப்படுத்தப் பெற்றுள்ளமை காணலாம். தன் அடியார் பொருட்டுக் கூற்றினது மிக்க ஆணையையும் இகழும் ஆற்றல் முருகப் பெருமானுக்கு உண்டு என்பது. எருமை இருந்தோட்டி எள்ளீயும் காளை (பரி. 8; 86) என்ற தொடரால் உணர்த்தப்பட்டது. மழையால் வளர்ந்த குளிர்ந்த கிளைகளையுடைய மரங்களடர்ந்த பகுதிகள் பறிக்கத் தொலையாவாக நிறைந்த மலர்களைப் பெற்று மலர, குளிர்ந்த பொய்கைகள் நீரால் நிறைய கூடல் நகரத்திற்கும் பரங்குன்றத்திற்கும் இடையேயமைந்த வழியின் கண்ணே திருவிழாத் தோற்றம் பொலியப் பரங்குன்றத்துப் பெருமானை வழிபட எழுந்து சாந்தமும், நறும்புகைக்குரியனவும், நந்தா விளக்கிற்கு வேண்டுவனவும், நறுமலர்களும், இசைக் கருவியாகிய முழவமும், மணியும் கயிறும், மயிலும், மழுப்படையும், ஊர்தியாகிய பிணிமுகமும் உட்பட முருகப் பெருமான் விரும்புகின்ற வேறுபல பொருள்களையும் ஏந்திக் கொண்டு பரங்குன்றத்தை அடைந்து தொழும் அடியார்களும், அம்மலையின் தாழ்வரையிற் சென்று முருகப் பெருமானின் திருவடிகளைத் தொழுது யாம் எம் காதலரைக் கனவில் தொட்டது பொய்யாகாமல் நனவின்கண்ணும் அடைய வையைப் புதுப்புனலை அணி செய்க என வரம் வேண்டுவோரும், வயிறு கருவுறுக என இறைவனுக்கு வேண்டும் பொருள்களை நேர்வோரும், எம் கணவர் செய்பொருள் வாய்ப்பதாகுக என முருகப் பெருமான் செவியிற்படக் குறை இரப்போரும் எம்முடைய கணவர் வியக்கத்தக்க போரில் பகைவரை அழித்து வெற்றி பெறுவாராக என அருச்சிப்போருமாய் அம்மலையிற் குழுமிய நிலையில் பாடுவாரது பாணியாகிய தாளமும் ஆடுவாரது ஆடரங்கிற்குரிய தாளமும், மலையின்கண் உண்டாகும் எதிரொலியும் கலத்தலால் பெருமுழக்கம் உண்டாகிய தன்மையினையும் முருகனருள்பெற்ற அம்மகளிர் தம் கணவரொடு துன்பம் நீங்கி மகிழ்ந்திருக்கும் திறத்தையும் விரித்துரைக்கும் முறையிலமைந்தது. 90 முதல் 123 வரை அமைந்த இப்பாடல் பகுதியாகும். இங்ஙனம் முருகப் பெருமான் எழுந்தருளிய பரங்குன்றைப் புனைந்துரைக்கும் முகத்தான் அம்முதல்வனை எதிர்முகமாக்கியும், படர்க்கையாக்கியும் அவனையே வாழ்த்தி நிறைவு பெறும் நிலையிலமைந்தது, உடம்புணர் காதலரு மல்லாருங் கூடிக் கடம்பமர் செல்வன் கடிநகர் பேண மறுமிடற் றண்ணற்கு மாசிலோ டந்த நெறிறீ ரருவி யசும்புறு செல்வம் மண்பரிய வானம் வறப்பினும் மன்னுகமா தண்பரங் குன்ற நினக்கு (பரி. 8,125-130) எனவரும் பகுதியாகும். பரங்குன்றமே! தம்முட் பிரியாத காதலர்களாகிய மகளிரும் மைந்தரும், அவர்களல்லாத வரம் வேண்டுவோர் பிறரும் கூடிக் கறை மிடற்றிறைவனுக்குத் தூய்மையே உருவாகிய உமையம்மையார் தந்த புதல்வனாகிய கடப்பமலரை யணிந்த செல்வேள் எழுந்தருளிய திருக்கோயிலை வழிபட்டு மகிழ நிலவுலகம் வெயில் வெப்பத்தால் வருந்த மழை பெய்யாது போயினும் பல இடங்களிலும் அருவிநீர் சொரியும் நீர்வளமாகிய செல்வம் நினக்கு என்றும் குன்றாது நிலை bgWtjhFf!” என ஆசிரியன் நல்லத்துவனார் முருகப் பெருமான் எழுந்தருளிய வளமார்ந்த திருப்பரங்குன்றத்தை வாழ்த்திப் போற்றும் நிலை யிலமைந்தது மேற்காட்டிய பாடற் பகுதியாகும். இங்ஙனம் ஆசிரியன் நல்லந்துவனார் பாடிய பரிபாடலாற் சிறப்பிக்கப் பெற்றது திருப்பரங்குன்றம் என்பது, அந்துவன் பாடிய சந்து கெழு நெடுவரை எனவரும் அகநானூற்றுத் தொடராற்புலனாகும். மறுமிடற்றண்ணற்கு மாசிலோள் தந்த கடம்பமர் செல்வன் எனவரும் பரிபாடல் அடிகளைத் தழுவி அமைந்தது நங்கடம்பனைப் பெற்றவள் பங்கினன் எனவரும் அப்பர் தேவராமாகும். பரங்குன்றத்துச் செவ்வேளைப் பரவிப் போற்றும் நிலை யிலமைந்தது குன்றம் பூதனார் பாடிய ஒன்பதாம் பரிபாடல் ஆகும். இருநிலம் துளங்காமல் வடதிசைக் கண்ணே நிலைபெற்று ஓங்கி இந்திரனாற் காக்கப்படும் இமயமலையின் சிகரத்திலே தெய்வத் தன்மை வாய்ந்த முனிவர் அறுவரும் உடம்படக் கற்பின் திறத்தால் நன்கு மதிக்கப்படும் கார்த்திகைப் பெண்கள் அறுவரிடத்தே பெருவெள்ளமாக வந்த கங்கையைச் சடையிற் கரந்தோனும் நீலமணிபோலும் மிடற்றினையுடையவனுமாகிய இறைவனுக்கு மகனாகத் njh‹¿atnd! இறைவனாகிய நீ களவொழுக்கம் ஒழுகி வள்ளி நாச்சியாரை மணந்தவன்று ஆயிரங்கண்ணோனாகிய இந்திரன் மகள் தெய்வ யானையின் கண்கள் மணிநிற மழையைப் பெய்தாற்போன்று முதுவேனிற்பருவம் கார்காலத்தின் தன்மையைப் பெற்றுப் பெருமழையைப் பெய்தாலோக்கப் பரங்குன்றின் கண்ணே நீராகிய தணிந்த மழையைப் பெய்தது. முருகப் பெருமான் அவுணர்களை அழித்து இந்திரன் மகள் தெய்வயானையை மணந்து கொண்டபின்னரே குறவர் மகளாராகிய வள்ளி நாச்சியாரைக் களவொழுக்கம் ஒழுகி மணந்து கொண்டான் என்பது மேற்காட்டிய தொடரால் நன்கு விளங்கும். குறிஞ்சிக் கிழவனாகிய முருகன் குறவர் மகளாகிய வள்ளியை அன்பின் ஐந்திணைக் களவொழுக்கமாகிய தமிழியல் வழக்கப்படி மணந்து கொண்டான் என்பதும், இந்திரன் வேண்ட, அவன் மகள் தெய்வ யானையை மணந்து கொண்டது வேத நெறி பற்றிய பொதுமை சுட்டிய உலகியல் வழக்கே என்பதும் குன்றம் பூதனால் பாடிய இப்பரிபாடலில் விரித்துரைக்கப்பெற்றன. அன்பின் ஐந்திணை ஒழுகலாற்றில் களவு, கற்பு என்னும் இருவகைக் கைகோளிற்கும் உரியராகிய வள்ளி நாச்சியார். தெய்வயானையார் ஆகிய தேவியர் இருவராலும் காதலிக்கப்படும் ஒரு தனித்தலைவன் முருகப் பெருமான் என்பதனை எடுத்துக் கூறி அம்முதல்வனால் களவொழுக்கம் ஒழுகி மணந்து கொள்ளப் பெற்ற வள்ளியின் சிறப்பும், அம்முதல்வன் எழுந்தருளிய திருப்பங்குன்றம் வள்ளி நாச்சியார்க்கு ஒத்தவாறும் உணர்த்துவது இப்பரிபாடலாகும். குறிஞ்சிக் கடவுளாகிய முருகனைப் பரவிப் போற்றும் நிலையிற் பாடிய இப்பாடலின் ஆசிரியர் குன்றம் பூதனார், நான்மறைப் பொருளை விரித்து அம்மறையது நல்லிசையை விளக்கும் வடமொழிப் புலவர்களை நோக்கித் தமிழியல் வழக்கமாகிய அன்பின் ஐந்திணைக் களவொழுக் கத்தின் சிறப்பினை விரித்துரைப்பதாகவமைந்தது, நான்மறை விரித்து நல்லிசை விளக்கும் வாய்மொழிப் புலவீர் கேண்மின் சிறந்தது காதற் காமங் காமத்துச் சிறந்தது விருப்போ ரொத்து மெய்யுறு புணர்ச்சி புலத்தலிற் சிறந்தது கற்பே யதுதான் இரத்தலு மீதலு மிவையுள் ளீடாப் பரத்தையுள் ளதுவே பண்புறு கழறல் தோள்புதி துண்ட பரத்தையிற் சிவப்புற நாளணிந் துவக்குஞ் சுணங்கறை யதுவே கேளணங் குறமனைக் கிளந்துள சுணங்கறை சுணங்கறைப் பயனு மூடலுள் ளதுவே, அதனால் அகற லறியா வணியிழை நல்லார் இகறலைக் கொண்டு துனிக்குந் தவறிலரித் தள்ளாப் பொருளியல்பிற் றண்டமிழாய் வந்திலார் கொள்ளாரிக் குன்று பயன் (பரி. 9, 12-26) எனவரும் பகுதியாகும். நான்மறைப் பொருளை விரித்து அம்மறையின் நல்லிசையை விளக்கும் புலவர்களே! நான் கூறக்கருதிய நல்ல தொரு பொருளைக் கேண்மின். மக்கள் நுகரும் காம வின்பத்திற் சிறந்தது அன்புடைய காதலர் இருவர் தம்முட் கூடி நுகரும் இன்பமாகும். அஃதாவது, மெய்யுற்றறியாத ஒருவனும் ஒருத்தியுமாகிய இருவர் ஒத்த அன்பினராய் நல்லூழின் திறத்தால் தாமே மெய்யுற்றுப்புணரும் இயற்கைப் புணர்ச்சியாகும். இங்ஙனம் ஒத்த அன்பில்லாத கற்புமணம் புலந்து ஊடுதலால் சிறப்பதாகும். புலத்தலாவது, தலைமகன் தலைவியின் பிணக்கு நீக்குவார் வாயிலாக வேண்டிக் கொள்ளுதலும், தலைவி அவ்வேண்டுகோளை ஏற்றலுமாகிய இவை உட்படத் தலைவனது புறத்தொழுக்கத்தால் வருவது. தலைவனால் நுகரப்பட்ட பரத்தை வீட்டின்கண்ணே நாட்காலையிலே ஆயமகள் ஒருத்திக்குச் செவ்வணியணிந்து தூதாகவிட்டுத் தலைமகளது பூப்பு அறிவிப்ப, பண்புடைய அக்கழற்றுரையால் தலைவன் அங்கிருந்து மீண்டுவந்து உவக்கும் புணர்ச்சி உடையது. அப்புணர்ச்சிகள் தாம் தலைவியின் பக்கத்துள்ளார் கேட்டு வருந்த பரத்தையால் அவள் மனைக்கண் அலர் தூற்றப்படுவன. அப்புணர்ச்சி இன்பம் இயல்பாக அன்றி ஊடலால் உளதாவது. அதனால் இங்ஙனம் கற்புமணம் பெற்ற மகளிர் தலைவன் பிரிய அவனொடு ஊடல் கொண்டு வருந்துமாறு போல கணவரை விட்டு நீங்குதலறியாத களவிற் புணர்ச்சியையுடைய மகளிர், தம் கணவரொடு மாறுகொண்டு ஊடும் குற்றமுடையர் அல்லர். இவ்வாறு காதலர் பிரிந்தறியாத இப்புணர்ச்சியை விரும்புகின்ற பொருளிலக்கணத்தையுடைய தமிழியல் வழக்கமாகிய களவொழுக்கத்தின் அன்பின் திறனை ஆராய்ந்துணராத தலைவர். இத்தகைய குறிஞ்சி நிலத்தின் உரிப்பொருளாகிய புணர்ச்சியின் பயனை உள்ளவாறு உணர்ந்து பயன்கொள்ளும் ஆற்றல் இல்லாத வராவார் என்பது மேற்காட்டிய தொடரின் பொருளாகும், காதலர் இருவர் கருத்துணராது பெற்றோர் முதலியோரால் நடத்தப்படும் கற்பு மணத்திற்கும், நல்லூழின் செயலால் ஒத்த அன்பினராகிய ஒருவனும் ஒருத்தியும் உலகத்தார் அறியாது தம்முள் தாமே கலந்து கேண்மையினராய்க் களவொழுக்கம் ஒழுகிப் பின்னர் வரைந்து கொள்ளும் தமிழியல் வழக்கமாகிய களவு மணத்திற்கும் இடையே அமைந்த வேறுபாட்டினை முறையே தெய்வயானை அம்மையார், வள்ளி நாச்சியார் ஆகிய இருவருடைய செயல்களிலே வைத்துப் புலப்படுத்தும் முறையிலமைந்தன, 9ஆம் பரிபாடலில் 27முதல் 69 முடியவுள்ள அடிகளாகும். கூடிய சூர்மாவினைத் தடிந்த வேற்படையைத் தாங்கிய முருகப் பெருமான் எழுந்தருளிய திருப்பரங்குன்றம் கலைத்திறத்தில் வல்லார் பலரும் தம்முள் உறழ்ந்து தத்தம் துறையில் வெற்றிபெற்றுத் தாம் பெற்ற வெற்றிக் கறிகுறியாகத் தடாகம் போலும் சுனையின் பக்கத்தே வெற்றிக் கொடியை நாட்டப் பொலிவு பெற்று விளங்கிய திறத்தை விரித்துரைப்பது, கடுஞ்சூர் மாமுத றடிந்தறுத்தவேல் அடும்போ ராளநின் குன்றின்மிசை ஆட னவின்றோ ரவர்போர் செறுப்பவும் பாடல் பயின்றோரைப் பாணர் செறுப்பவும் வல்லரை வல்லார் செறுப்பவும் அல்லரை யல்லார் செறுப்பவும் ஓர் சொல்லாய்ச் செம்மைப் புதுப்புனற் றடாக மேற் தண்சுனைப் பாங்கர்ப் படாகை நின்றன்று (பரி. 9, 70-78) எனவரும் பகுதியாகும். கடுந்தொழில் உடைய சூர்மாவைத் தடிந்தறுத்த வேலால் கொடியோரைக் கொன்று குவிக்கும் போர்த் தொழிலை ahŸgtnd! நீ வீற்றிருந்தருளும் பரங்குன்றின்மேலே ஆடல் பயின்றோரை ஆடலில் வல்லோர் வெற்றிகொள்ளவும் இசைபாடுதலில் வல்லாரை அத்துறையில் வல்ல பாணர் வென்றடக்கவும், வல்லுப் போரை வல்லாரை அத்தொழிலில் வல்லாற் வென்றடக்கவும் ஒழிந்த கலைத் திறங்களில் வல்லாரை அவ்வத் துறையில் வல்லார் வென்றடக்கவும் இக்கல்வி வென்றிகளால் ஒப்பில்லாத புகழ் பரப்பத் தடாகம் போலும் சுனையின் பக்கத்துக் கொடி எடுத்து நின்றது என்பது மேற்காட்டிய தொடரின் பொருளாகும். தாவில் கொள்கைத் தந்தொழில் முடிப்பாருடைய மனத்தின் எழுந்தருளியிருந்து, அவர் தத்தம் தொழிலில் மேம்படுதற்கேற்ற உள்ளக்கிளர்ச்சியை நல்குவோன் முருகனாதலின் அம்முதல்வன் எழுந்தருளிய திருப்பரங்குன்றத்தில் இத்தகைய கலை வென்றிச் செயல்கள் நிகழ்வனவாயின என்பது இங்குக் குறிப்பிடத்தகுவதாகும். கற்புப் பொருந்திய நெறியையுடைய தேவியர் இருவரது அன்பின் வழிப்பட்ட ஊடல் உரிமையை விரும்பும் பண்பினையுடைய முருகுப் பெருமானை நோக்கி அன்பினாற் சிறந்து நின் திருவடி உறைதலாகிய இவ்வாழ்வு எமக்கு நாள்தோறும் பொலிந்து பயன்தந்து áw¥gjhFf! எனக் குன்றம்பூதனார் வேண்டிக் கொள்வதாகவமைந்து, கற்பினை நெறியூ டற்பிணைக் கிழமை நயத்தகு மரபின் வியத்தகு குமர வாழ்த்தினேம் பரவுதுந் தாழ்த்துத் தலை நினையா நயத்தலிற் சிறந்தவெம் மடியுறை பயத்தலிற் சிறக்க நாடொறும் பொலிந்தே (பரி. 9,81-85) எனவரும் பகுதியாகும். தலைவன் பிரிந்து சென்ற நிலையில் அவன் வருவதாகக் குறித்த கார்ப்பருவத்தைக் கண்டு வருந்திய தலைமகள் கேட்பத் தோழி முருக வேளைப் பரவுவாளாய்த் தலைமகன் இப்பருவத்தே வந்துசேர்வான் என்பது பட வற்புறுத்தும் முறையிலமைந்தது கேசவனார் பாடிய 14ஆம் பரிபாடலாகும். இப்பாடலின் முதலிலுள்ள 17 அடிகள் கார்ப்பருவத்தின் தோற்றத்தைச் சொல்லோவியஞ் செய்து காட்டுகின்றன. சூரபன்மாவைக் கிளையோடு அழித்த வேற்படையை cilnahnd! கார்காலத்து வெண்மேகம் கிளர்ந்து மேலெழுந்தாற் போன்ற நறிய அகில் முதலியவற்றாற் புகைத்த நறும் புகையை ÄfÉU«ãatnd! ஆறு முகங்களையும் பன்னிரு தோள்களையும் உடையையாய் அழகினாற் பிற மகளிரை வென்ற வெற்றியையுடைய வள்ளி நாச்சியாரது நலத்தை eaªjtnd! தம்மைப் பிரிந்த கணவர் வந்து புணர்ந்து பின் நீங்காமைப் பொருட்டு மகளிர் யாழை இசைத்து நின்னைப்பாடுகின்ற தோத்திரப் பாடலை ÉU«ãatnd! நீ பிறந்தருளியபொழுதே நின்னை நினைந்து உளம் நடுங்கி இந்திரன் முதலிய சிறப்புடைய தேவர்களும் அஞ்சுதற்குக் காரணமாகிய இறைமைத் தன்மையை cilnahnd! முந்நூல் அணிதற்கு முன் ஒரு பிறப்பும், அணிந்தபின் ஒரு பிறப்பும் என இரண்டு பிறப்பினையும் அப்பிறப்பினால் வந்த இரண்டு பெயர்களையும் அன்பென்னும் ஈரம் வாய்ந்த நெஞ்சினையும் ஒப்பில்லாத புகழினையும் உடைய அந்தணர்களது வைதிக அறத்தைப் bghUªâatnd! மேற்கூறிய அத்தன்மையை ஆதலின், நின்னை யாங்கள் விரும்பி அடுத்தடுத்து வழிபடுவதன் பயன் அவ்வழிபாடுகள் தாமே இன்னும் இன்னும் நின்புகழினும் பலவாக எங்கட்கும் bgUFf! என்பதேயாகும் என முருகப் பெருமானை நோக்கித் தோழி பரவிப் போற்றுவதாகவமைந்தது, சூர்மருங் கறுத்த சுடர்ப்படை யோயே கறையில் கார்மழை பொங்கி யன்ன நறையி னறும்புகை நனியமர்ந் தோயே அறுமுகத் தாறிரு தோளால் வென்றி நறுமலர் வள்ளிப் பூநயந் தோயே கெழீஇக் கேளிர் சுற்ற நின்னை எழீஇப் பாடும் பாட்டமர்ந் தோயே பிறந்த ஞான்றே நின்னை யுட்கிச் சிறந்தோ ரஞ்சிய சீருடை யோயே இருபிறப் பிருபெய ரீர நெஞ்சத் தொருபெய ரந்தண ரறனமர்ந் தோயே அன்னை யாகலி னமர்ந்தியா நின்னைத் துன்னித் துன்னி வழிபடுவதன் பயம் இன்னு மின்னுமவை யாகுக தொன்முதிர் மரபினின் புகழினும் பலவே (பரி. 14,18-32) எனவரும் பகுதியாகும். முருகப் பெருமானை அடுத்தடுத்து வழி படுவதன் பயன், அத்தகைய வழிபாடுகள் தமக்குத் தொடர்ந்தென்றும் கிடைத்தற் பொருட்டே எனத் தோழி கூறும் இவ்வேண்டுகோள், கூடும் அன்பினிற் கும்பிடலே யன்றி வீடும் வேண்டா விறலின் விளங்கினார் என அருண்மொழித் தேவர் கூறும் அடியார் திருக் கூட்டத்தின் குறிக்கோளை நன்கு நினைவுபடுத்தல் காணலாம். திருப்பரங்குன்றத்துச் செவ்வேளைப் பரவிப் போற்றும் முறையில் நல்லழிசியார் பாடியது 17ஆம் பரிபாடலாகும். பரங்குன்றத்து முருகப் பெருமானை வழிபடும் அடியார்கள் சுற்றப்படும் சுடர்விளக்கும், இசைக்கருவிகளின் இன்னிசையும், சந்தனம் முதலிய மணப்பொருள்களும், அகிற்புகையும், கொடிகளும் ஒருங்கே வரத் தேன் நிறைந்த நறுமலர்களையும் தளிர்களையும், பூத்தொழில்களையுடைய ஆடைகளையு தெளிந்த ஒசையினையுடைய மணியினையும் இலைத் தொழிலமைந்த வேற்படையினையும் சுமந்து வந்து சந்தனத்தைத் தெளித்து முருகபூசை செய்யும் வேலன் ஆட்டுக் கடாயைக் கட்டின பூசையையுடைய தெய்வமரமாகிய கடம்பமரத்தினைத் தோத்திரவுரைகளால் ஏத்தியவர்களாய் ஆளத்தியால் ஆக்கிய இசையினைப் பாடியவராய் விரிந்த மலர்களிலிருந்து சொரியும் தேனால் நனைந்த திருப்பரங்குன்றத்தின் தாழ்வரையிலே மாலை நேரந்தோறும் முருகப்பெருமானுக்கு நேரும் வழிபாட்டிலே கலந்து கொண்டு அம்மலையில் தங்கி முருகன் திருவருளில் திளைத்து மகிழும் வாய்ப்பினைப் பெற்ற மக்கள் இறைவன் கழலேத்தும் இன்பத்தையன்றி தேவருலகத்தே தங்கிய இன்பத்தைச் சிறிதும் விரும்ப மாட்டார்கள் என்பதனை, தேம்படு மலர்குழை பூந்துகில் வடிமணி எந்திலை சுமந்து சாந்தம் விரைஇ விடையரை யசைத்த வேலன் கடிமரம் பரவின ருரையொடு பண்ணிய விசையினர் விரிமலர் மதுவின் மரநனை குன்றத்துக் கோலெரி கொளைநறை புகைகொடி யொருங்கெழ மாலைமாலை யடியுறை இயைநர் மேலோ ருறையுளும் வேண்டுநர் யாஅர் (பரி. 17, 1-8) எனவரும் தொடர்களில் நல்லழிசியார் குறித்துள்ளார். தங்குபிறப்பே வீட்டினுக்கு மேலாந்தன்மை சாதித்தார் எனவரும் சேக்கிழார் வாய்மொழி இங்கு ஒப்பு நோக்கற் பாலதாகும். திருப்பரங்குன்றத்தின் ஒரு பக்கத்தே இசைப் பாணர்களுடைய யாழோசை எழ, அதற்கெதிராக வண்டின் இன்னிசை எழலும், ஒருபக்கத்தே வேய்ங்குழலின் ஒலி எழ அதன் எதிர் தும்பி முரலுதலும், ஒருபக்கத்தே முழவின் முழக்கம் உண்டாக அதன் எதிர் அருவி ஒலித்தலும், ஒரு பக்கம் ஆடலில் வல்ல மகளிர் ஆட அவர்க்கெதிரே பூங்கொடிகள் வாடைக்காற்றால் அசைதலும், ஒரு புறத்தே பாடினி பாடும் சுரவரிசையை யுடைய மிடற்றுப் பாடலின் கண்ணே நாலு தாக்குடைய கிழமையும், இரண்டு தாக்குடைய நிறையும் ஒரு தாக்குடைய குறையும் தோன்ற அதற்கெதிராக மற்றொருபுறம் சீருக்கிசைய ஆடுகின்ற மயிலினது இடை விட்டெழும் குரல் தோன்றுதலும் இவ்வாறு கலைத்திறங்களால் மாறுமாறாகிய தன்மையை உற்றனபோல ஒன்றின் ஒன்று இகலும் தன்மையை ஏற்றுக் கொள்ளுதலைப் பகைவரை இல்லை யாக்கிய முருகப் பெருமான் எழுந்தருளிய திருப்பரங்குன்றம் உடையதாகும். பாடுதல் அமைந்து பலபுகழும் முற்றுப்பெற்ற கூடல் நகரத்திற்கும் பரங்குன்றத்திற்கும் இடையே நின்ற நிலம் மிக அணிமையதாயினும் மகளிரும் மைந்தரும் நெருங்கி விளையாடுதலால் அவ்வழியில் இயங்குவோர்க்கு மிகச் சேய்மையுடையதாகத் தோன்றாநின்றது. மகிழ்ச்சிமிக்க மகளிர் கூந்தலினின்றும், மைந்தர் குஞ்சியினின்றும் வீழ்ந்து அவிழ்ந்து கிடக்கும் மாலையால் தடுக்கப்பட்டு வழிச் செல்வார்க்கு இயங்கும் நெறி இல்லையாயிற்று. பழி நீங்கிய மெய்ப்பொருள் பனுவல்களாலும், வழிபாடாகிய வேள்வியினாலும் புகழினால் திசையெங்கும் பரந்த பரங்குன்றின்கண் எழுந்தருளியிருந்து உலகத்தார் பல இடங்களிலும் செய்கின்ற பூசையின்கண் முருகன் ஆவியாகக் கொள்ளும் அகிற்புகை அவ்விடந்தோறும் மேலே வானத்துச் செல்லுதலால் கண்ணிமையாத வானோரும் அவ்விடத்து நின்று கண்ணிமைத்துச் செல்வர். தேயாத ஞாயிற்று மண்டிலமும் புகை மிகுதியால் காணும் இயல்பினையுடையதன்று. குளிர்ந்த மாலையையணிந்த வளைக்கை இளமகளிரும் அவர்தம் மென் தோளிற்றங்கி அன்பு ஒத்தாராகிய மாலையணிந்த மார்பையுடைய மைந்தரும் மகிழ்ச்சிமிக்கு ஒரு சேரச்சுனையின்கண் பாய்ந்தாடுதலால் சுனையின் மலரிடத்தே படித்த வண்டுகள் வெருவி அம்மலர்களின் தாதினை ஊதப்பெறாவாயின. திருப்பரங்குன்றத்தின் அணிநலங்கள் அத்தன்மையனவாய் மலையிடத்தே ஒழுகும் வெள்ளிய அருவி நீங்காது பரவி உழவரது வயலின்கண் பரவிநிற்கும். மலைமேல் விளையாடும் மகளிர் இயங்குதலால் அவர்தம் அணிகலங்களிலிருந்து வீழ்ந்த நீலமணி வயலைச் சிதைக்கும். பிரிந்த தலைவர் வினைமுடித்து விரைவின் வந்து தம்மை அடைதற்பொருட்டு வெள்ளிய அருவியையுடைய பரங்குன்றின்கண் தலைவியர் செய்யும் தெய்வ விழாவும், அவ்வாறு அவர்கள் வந்து கூடிய நிலையில் வளங்கெழு வையையாற்றின்கண் அவரோடு புதுப் புனலாடுதலாகிய விருந்தயர்வும், வேற்படையையுடைய பாண்டிய னது கூடல் நகரத்தின்கண் மனைக்கண் தங்கி அம்மகளிர் செய்யும் விருந்தோம்பலும் தம்மிற் காரணகாரியங்களாய் முன்னும் பின்னுமாக மாறி மாறி நிகழ்தல் மனைவாழ்க்கை நெறியாதலின் அவர்க்கு நல்லொழுக்கமாயிற்று எனத் திருப்பரங்குன்றத்தில் மகளிரும் மைந்தரும் நிகழ்த்தும் தெய்வ வழிபாட்டினையும், அவ்வழிபாட்டின் பயனாக வையைப் புதுப்புனலாட்டும், மனைக்கண் விருந்தோம் புதலும் ஆக நிகழும் நற்பயன்களையும் விரித்துரைத்த நல்லழிசியார் முருகப்பெருமானை எதிர்முகமாக்கி வேண்டும் நிலையிலமைந்தது: மணிநிற மஞ்ஞை யோங்கிய புட்கொடிப் பிணிமுக மூர்ந்த வெல்பே ரிறைவ பணியொரீஇ நின்புக ழேத்தி அணிநெடுங் குன்றம் பாடுதும் தொழுதும் அவை, யாமுமெஞ் சுற்றமும் பரவுதும் ஏம வைகல் பெறுகயா மெனவே (பரி. 17, 48-53) எனவரும் பாடற்பகுதியாகும். நீலமணிபோலும் நிறத்திணை யுடைய மயிலையும், உயர்ந்த கோழிக் கொடியையும், பிணிமுகம் என்னும் உயர்ந்த யானையை ஊர்ந்து செய்யப்பட்ட வெல்லும் போரினையுமுடைய jiytnd! சிற்றறிவும் சிறு தொழிலுமுடைய மக்கள் மாட்டுப் பணிந்துகூறும் பொய்ப்புகழை ஒழிந்து நினது பொருள் சேர்ந்த புகழையே வாழ்த்தி நின்னுடைய அழகிய நீண்ட திருப்பரங் குன்றத்தினை யாமும் எம் சுற்றமும் பாடித் தொழுதேமாய் பிறவித்துன்பம் சாராத இன்பமே நிகழும் நாளைப் பெறுக என்று வேண்டிக் கொள்கின்றேம் என்பது மேற்காட்டிய தொடரின் பொருளாகும். பொய்ம்மையாளரைப் புகழாதே. எம் பெருமானாகிய நின் மெய்ப்புகழையே ஏத்திப் பாடித் தொழுகின்றோம் என்பார், பணியொரீஇ நின்புகழேத்தி அணிநெடுங் குன்றம் பாடுதும் தொழுதும் என்றார். நாமார்க்கும் குடியல்லோம் எனவரும் அப்பர் அருள் மொழியும், பொய்ம்மையாளரைப் பாடாதே எந்தை புகலூர் பாடுமின் புலவிர்காள் எனவரும் நம்பி ஆரூரார் அருள் மொழியும் இங்கு நினைக்கத்தக்கன. இங்கு ஏமவைகல் என்றது பிறவித்துன்பம் சாராத இன்பமே நிகழும் நன்னாளை. சேவலங்கொடியோன் காப்ப ஏமவைகல் எய்தின்றாலுலகே எனவரும் குறுந்தொகைக் கடவுள் வாழ்த்துப் பகுதி இங்கு ஒப்பு நோக்கத்தக்கது. செவ்வேளைப் பரவிப் போற்றிய கடவுள் வாழ்த்தாக வமைந்தது, குன்றம் பூதனார் பாடிய 18ஆம் பரிபாடலாகும். நிலத்தால் தாங்கப்படும் கடற்பரப்பினுள் பரந்து சுற்றிய சூர்மாவை அழித்த வேற்படையையுடைய முருகப் பெருமான் எழுந்தருளியுள்ள திருப்பரங்குன்றம், முருகனைப் பயந்த இமயமலையொடு மேல்நின்ற ருளும் பெருமையுடையது. வேற்படையைத் தாங்கிய செவ்வேளே! விரைந்த மயிலின்மேல் அமர்ந்துவரும் ஞாயிறு போல்பவனே! மழை முழங்கிய சிகரமும் அதன் மேல் கொடி போன்று தோன்றும் மின்னலும் நினது முகபடாம் அணிந்த பிணிமுகம் என்னும் யானையை ஒக்கும். நின் குன்றத்தின்கண் பல்வேறு ஓவியங்கள் எழுதப் பெற்ற அம்பலம் காமவேளது படைக் கொட்டிலை ஒக்கும். சூர்நிறைந்த பக்கமலைகளையுடைய சோலைகளும், மேகத்தால் நீர் நிறைந்த துளும்புவனவாகிய சுனைகளும், மலர்ந்த பூக்களின் செறிவால் அழகுத்தும்புபவை காமவேளின் அம்பறாத் தூணியை ஒக்கும். கார்காலம் தோற்றுவிக்கும் காந்தட் குலைகள் போரில் தோற்றுக் கட்டுண்டார் கைகளை ஒப்பன. தும்பியால் கட்டவிழ்ப்பனவாகிய அழகிய காந்தள் முகைகள் கட்டுதலையுடைய யாழ் நரம்பினது முருக்கை நெகிழ்ப்பார் கையை ஒத்தன. அழகிய மேகம் முன்பனிக் காலத்தின்கண் ஆரவாரித்து இந்திரனது வான வில்லை வளைத்தது. நினது மலைமேல் உள்ள மரங்கள் அவ்வில் சொரியும் கணைகளைப் போன்று மெல்லிய மலர்களைச் சொரிந்தன. நின் குன்றின்கண் கோட்டத்திலும் அதனைச் சூழ்ந்துள்ள இடத்திலும் மிகும் அரவம் போலத் திரளாகிய தாளம் ஒலிக்கும் ஒலியோடு சிறந்து வாத்தியங்கள் முழங்க மேகத் தொகுதியும் அவ்வாரவாரத்தோடு ஒத்து நின்றன. மலைக்கண் சிகரங்கள் அருவி ஆரவாரித்துச் சொரிதலால் முத்துக்களை அணிந்தால் ஒத்தன. குருவிகள் ஆரவாரிக்கு மாறு தினைக்கதிர்கள் விளைந்தன. கரையினின்றும் சாய்ந்தாலொத்த கொருக்கச்சியை முட்டுவனவாகிய பலநிற மலர்களால் வளையப்பட்டு அழகு பொருந்திய சுனைகள் இந்திரவில் வளைந்துள்ள வானத்தை ஒப்பனவாகி வண்டுகள் முரலும் வனப்புடைய ஆயின. செருவில் வெல்லும் வேலைத் தாங்கிய சேனையையுடைய brštnd! நின் பூசைக்கண் விரிதலுள்ள யாழ் நரம்பினது ஒலியும் புலவர் பாடிய இயற் பாட்டுக்களும் பொருந்தி வேதவொலியும் அருச்சிக்கும் பூவும், தீபமும் கூடி எரியின்கண் உருகும் அகிலும் சந்தனமும் ஆகிய நறும்புகை கமழாநிற்கும் நின் திருவடியின்கண் தங்குதலை எமக்கு உரித்தாக யாம் உறையும் எம் பதியைச் சேர்ந்தாற்போல எம் சுற்றத்தோடும் கூடி யாம் பிரியாதிருப்போமாக அருள் செய்க என வாழ்த்தி முடிப்பதாக வமைந்தது குன்றம் பூதனார் பாடிய இப்பரிபாடலாகும். இப்பாடல் திருப்பரங்குன்றத்தின் மலை வளத்தையும், இசை முதலிய கலைவளத்தையும், அம்மலைக்கண் முருகனுக்கு நிகழும் வழிபாட்டுச் சிறப்பினையும், அவ்வழிபாட்டில் சுற்றத்தாருடன் பிரியாது கலந்து கொண்டு முருகனது திருவடிக் கீழ் உறைதலே மக்கள் அடைதற்குரிய நிலைத்த பேரின்பமாம் என்ப தனையும் விரித்துரைக்கும் முறையில் அமைந்துள்ளமை மனங்கொளற் பாலதாகும். நப்பண்ணனார் பாடிய 19ஆம் பரிபாடல் செவ்வேளைப் பரவிப் போற்றிய கடவுள் வாழ்த்தாக வமைந்துள்ளது. இன்பமே நுகரும் வானுலகில்கண் உரைதற்கேதுவாகிய விருப்பத்தை மண்ணுலக எல்லையிலும் கொண்டு தந்து உயிர்களின் அறிவெல்லையால் அறியப்படாத புகழுக்குரிய கடம்பமரத்தினைப் பொருந்தியிருந்து பெறுதற்கரிய இறைமைத் தன்மையால் அமர்ந்த பெரியோர்கள் நுகரும் வீடு பேற்றின்பத்தினை மண்ணுலகில் வாழும் மக்களும் எய்துக என மன்னுயிர்கட்கு எளிவந்தருள் புரியும் அருள் நோக்குடன் முருகப் பெருமான் திருப்பரங்குன்றத்தில் எழுந்தருளிய அருமையில் எளிய அழகின் திறத்தினை முன்னிலைப்படுத்துப் போற்றும் முறையில் அமைந்தது, நிலவரையழுவத்தான் வானுறை புகல்தந்து புலவரை யறியாத புகழ்பூத்த கடம்பமர்ந்து அடுமுனி மரபின் ஆன்றவர் நுகர்ச்சிமன் இருநிலந்தோரும் இயைகென, ஈத்தநின் தண்பரங்குன்றத்தியலணி (பரி. 19 : 1-15) எனவரும் பரிபாடற் பகுதியாகும். தேவரும் அறியா முழுமுதற் பொருளாகிய முருகப் பெருமான் இருநிலத்தோர் யாவரும் தன்னை அன்பினால் வணங்கிப் பேரின்பம் நுகர்தற்பொருட்டு மண்ணுல கத்தில் திருப்பரங்குன்றம் முதலிய பதிகளிற் கோயில்கொண்டு எழுந்தருளியுள்ளான் என்னும் இவ்வுண்மையினை வற்புறுத்தும் நிலையில் அமைந்தது, புவனியிற் போய்ப் பிறவாமையின் நாள்நாம் போக்கு கின்றோம் அவமே யிந்தப்பூமி சிவனுய்யக் கொள்கின்ற வாறென்று நோக்கித் திருப்பெருந்துறையுறைவாய் திருமாலாம் அவன் விருப்பெய்தவும் மலரவன் ஆசைப் படவுநின்னலர்ந்த மெய்க்கருணையும் நீயும் அவனியிற் புகுந்தெமை ஆட்கொள்ளவல்லாய் ஆரமுதே பள்ளியெழுந்தருளாயே எனவரும் திருவாதவூரடிகள் வாய்மொழியாகும். திருப்பரங்குன்றத்தில் எழுந்தருளிய முருகப் பெருமானாகிய நீ மானிட மகளாகிய அழகிய வள்ளி நாச்சியாரைத் திருமணம் புரிந்த திறம் நின்னருகேயுள்ள வானுலக மடந்தையாகிய தெய்வ யானையது திருமணத்துடன் மாறு கொள்வதுபோற் காணப்படினும் யாவரும் பெறவுறும் ஈசனாகிய நினது திருவருளின் நீர்மைக்குச் சிறிதும் மாறுபட்டதன்று என்பார், தண்பரங்குன்றத் தியலணி நின் மருங்கு சாறுகொள் துறக்கத் தவளொடு மாறுகொள்வது போலும் மயிற்கொடிவதுவை என முருகப் பெருமானை முன்னிலைப்படுத்துப் போற்றினார் நப்பண்ணனார். நின் மருங்கு சாறுகொள் துறக்கத் தவளொடு மயிற்கொடி வதுவை மாறுகொள்வது போலும் என இயையும். சாறு - விழா, திருமணம். துறக்கத்தவள் - வானோர்தலைவன் இந்திரன் மகளாகிய தெய்வயானை யம்மையார். மயிற்கொடி - மயில்போலும் சாயலையும் கொடிபோல் நுடங்கும் இடையினையும் உடையாளாகிய வள்ளி நாச்சியார். சங்ககாலத்தில் வள்ளி நாச்சியார் தெய்வயானையம்மையார் என்னும் தேவியர் இருவர்க்கும் நாயகனாக வைத்து முருகப் பெருமான் வழிபடப்பெற்றமை குன்றம் பூதனார் பாடிய ஒன்பதாம் பரிபாடலாலும் நப்பண்ணார் பாடிய இப்பத்தொன்பதாம் பரிபாடலாலும் நன்கு விளங்கும். அறிவினாலும் வீரத்தினாலும் பிறரைப் போர் வெல்லும் கூடல் நகரத்தின் கண்ணே மகளிரும் மைந்தரும் புணர்ச்சியொடு வந்த இரவுப் பொழுது நீங்கிய வைகறைப் பொழுதிலே இவ்வுலகத்து அறத்தை நிறையச் செய்து அதன் பயனை நுகர்தல் வேண்டி வானுலகத்துக்குச் செல்வாரைப் போலத் தமக்கேற்ற மாண்பமைந்த அணிகலன்களையும் நல்ல துகில்களையும் அணிந்துகொண்டு விரும்பிய குதிரையின்கண் அமர்ந்தும் நன்கு ஓடுதலமைந்த தேரின்மீது அமர்ந்தும் ஒளி விளக்கம் தெருவின்கண் இருளை நீக்கப்போந்து நினக்குரிய திருப்பரங்குன்றத்திற்கும் கூடல் நகரத்திற்கும் இடையேயுள்ள வழியெல்லாம் நெருங்கி நின்திருவிழாக் காண யாத்திரை செல்கின்ற குளிர்ந்த மணலார்ந்த பெருவழி, அங்ஙனம் செல்வோருடைய மாலையணிந்த தலைகள் இடைவெளி யின்றி நிறைந்து காணப்படுதலால், ஒத்த பூக்களை நிறையவைத்துக் கட்டிப் பெரிய நிலவுலகிற்கு அணிந்த மாலையினைப் போன்று அமைந்துளது என்பதனை இப்பாடலில் எட்டு முதல் 18 முடியவுள்ள அடிகள் புலப்படுத்துகின்றன. அறிவினால் மாட்சிமையுடைய பாண்டியன் இளைய மயில்போலும் சாயலையுடைய மகளிரோடும் அரசியற் கடமையினை நன்குணர்ந்த தன் கண்ணெனத்தகும் அமைச்சர்களோடும் கூடி நாட்டு மக்களும், கூடல்நகர மாந்தரும் பழைய வரிசையாற் கூடித் தோட்புறத்தேயசையும் பரிவட்டத் துடனும், முருகன் புகழ் பாடிய நாவுடனும், பரந்த உவகையோடும் தன்னைச் சூழவந்து திருப்பரங்குன்றத்தின் மேலேறி முருகப் பெருமான் எழுந்தருளிய திருக்கோயிலைப் பெருமையுண்டாக வலம் வந்து போற்றும் பண்பினாற் சூழ்ந்து வருதலை உவமை கூறுங்கால் நிறைமதியுடனே ஒளியுடைய விண்மீன்கள் மேருமலையின் பக்கத்தே சூழ்வருதலையொத்துத் தோன்றும். மத நீரில் மொய்த்தற்கென வண்டுகள் தொடரும் கன்னத்தை யுடைய யானைகளை வழியினின்றும் வாங்கிக் காலிற் சங்கிலியாற் பிணித்து மரங்களிற் கட்டுவோரும் அவற்றிற்கு முறித்த கரும்புத் துண்டங்களை உணவாகக் கொடுப்போரும் குதிரைகளை வழியினின்றும் வாங்கி ஓரத்தில் நிறுத்துவோரும் தேர்களை வழியினின்றும் ஒதுக்கி நிறுத்துவோரும் ஆக யானை குதிரை தேர்கள் பரவியுள்ள திருப்பரங்குன்றத்தின் கீழுள்ள இடைநிலம் பாண்டியனது பாசறையின் தன்மையினையுடையதாகும். பாண்டியனுடன் பரங்குன்றத்தை வலம் வரும் மக்கள் அம்மலையிலுள்ள குரங்குகள் உண்ணக்கூடிய பண்டங்களை அவற்றிற்குக் கொடுப்போரும் கரும்பினை முசுத்திரளுக்குக் கொடுப்போரும் தெய்வத்தன்மையினையுடைய பிரம வீணையை வாசிப்போரும் கைவிரல்களை வேய்ங்குழலின் துளைகளின் வைத்து ஊதி இசையை அளப்போரும் யாழின்கண் இளி முதலிய சுரக்கோவையையும் குரல் முதலிய சுரக் கோவையையும் வலியவும் மெலியவுமாகத் தாக்காது சமனாக வாசித்து அதன்கண் இசையின் இன்பத்தை நுகர்வோரும் அங்கு முருகப் பெருமானுக்கு நிகழும் பூசையின் அழகியல்பினைக் கூறி மகிழ்வோரும் யாழ் நரம்பின் குரல் கொம்பென ஒலித்த அளவிலே அதன் தாளத்திற்குப் பொருந்த முரசின் ஒலியை எழுப்புவோரும் ஆக மகிழ்ந்துறைவர் ஞாயிறு முதலாகவரும் கோட்களின் நிலைமையை அக் கோயிலில் வரையப் பட்டுள்ள சுடர்க்சக்கரத்தால் ஆய்ந்தறிவோரும், தம்மைப் பிரியா மைக் குறிப்பினராகிய மகளிர் அங்கு எழுதப்பட்டுள்ள ஓவியதைக் கண்டு இவர் யார் என வினவ, அவள்தம் கணவர் இவள் இரதி, இவன் காமவேள் எனக் கூறுவோரும் இங்குள்ள பூனை இந்திரன்; அவ்விடத்திலுள்ளவன் இரவில் வெளியே சென்ற கௌதமன், இவனது வெகுளியால் அகலிகையாகிய இவள் கல்லாகிய வரலாறு இது என்று கணவன்பால் தவறு செய்த மகளிரடைந்த தண்டனையைக் கூறுவோரும் இவ்வாறு சென்றவர் கையாற் சுட்டிக் கேட்கவும் உடன் வந்தவர் அவற்றை அறிவிக்கவும் இத்தன்மையவாய பல ஓவியங்கள் நிலைபெற்ற மண்டபங்களைச் செவ்விய மூங்கில்களையும் விரிந்த பாறைகளையுமுடைய அகன்ற இடத்திற் கொண்டிருத்தலால் திருமால் மருகனாகிய செவ்வேள் எழுந்தருளிய திருக்கோயிலின் பக்கம் படிமுறையான் அமைந்த பல நிலைகளையுடையது. பேதைப் பருவப் பெண்ணொருத்தி மலைவளம் காணும் விருப்பினால் உடன் வந்த சுற்றத்தாரினின்றும் பிரிந்து அம்மலையில் வெளிப்பட்டு விளங்கும் கற்பாறைகளின் இடையிடையே புகுந்து செல்பவள் தன் சுற்றத்தாரைக் காணாது சிறந்தவரே எனவும் சிறந்தவரோ எனவும் கூக்குரலிட்டு அவர்களை அழைத்தாளாக அவ்வழைப் பொலியினையேற்று அங்குள்ள குகைகள் அவ்வொலி யினையே எதிரொலிக்க அதுகேட்டுச் சுற்றத்தார் தன்னை யழைப்பதாகக் கருதி அங்குச் செல்பவர் தன் சுற்றத்தாரைக் காணாது மீளுமிடத்தும் மீண்டும் மீண்டும் கூவுதலையுடையளாய் நின்றாள். இவ்வாறு அன்பரது வாழ்த்தினை உவந்து ஏற்றுக்கொள்ளும் முருகப் பெருமானது திருப்பரங்குன்றின் இடவேறுபாடு இளஞ் சிறார்க்கு அறியாமை காரணமாக மயக்கஞ் செய்தலை யுடையதாகும். மிக விரும்பப்படும் சாய்ந்த நுனியினை யுடைய கிளையினைப் போழ்ந்து புறப்பட்ட இளந்தளிர்களை விளையாட்டு விருப்பால் மகளிர் கொய்து இனிய சுனைக் கண்ணே உதிர்ந்தனர். அத்தளிர்களுள் உதிர்க்கப்பட்ட சுனையின்கண்ணே தூக்கிய தலையினை யுடையனவாய் அலரையும் அரும்பினையும் பொருந்திக் கிடந்ததனை இஃது ஐந்தலையை யுடைய பாம்பென்றும், அதனருகே முதிர்ந்த முகையைப் பொருந்திக் கிடந்ததனை அப் பாம்பின் மூத்தமைந்தனென்றும், இளமுகை யைப் பொருந்திக் கிடந்ததனை அப்பாம்பின் இளம்பார்ப்பென்றும் பிறழவுணர்ந்து இள மகளிர் மருண்டு நின்றனர். அதனருகே பச் சிலையது இளங்கொழுந்து பிணியவிழ்ந்த வாயையுடைய அல்லி, கைபோற் பூத்த காந்தட்பூக்குலை கொறுக்கச்சியின் நறுந் தோட்டினையுடைய பூ, சுடர்போலும் துணர் களை யுடைய வேங்கைப்பூ, நிறம் மிகுந்த தோன்றி (செங்காந்தட்) பூ, முதிரிந்த கொத்துக் களையுடைய நறவும்பூ, காலங் குறியாது பூக்கும் கோங்கு அக்கோங்கரும்போடு நிறத் தால் மாறுபட்ட மலரையுடைய இலவம் ஆகிய இம்மலர்களெல்லாம் பின்னிக் கட்டிய மாலைகள் போல மலர் நிறைந்தும் கோத்த மாலைகள் போல நிறம் வேறுபட்டும் தொடுத்த மாலைகள் போல இடையிட்டும் தூக்கிக் கட்டின மாலைகள்போல நெருங்கி யும் பூத்தலால் மலையெங்கும் கலந்து தோன்று வன விடியற் காலத்துப் பலநிறந்து மேகம் சிதைந்த வானம் போலப் பொலிந்து தோன்றும். என இவ்வாறு திருப்பரங்குன்றத்தினை வழிபடவரும் பாண்டியனது தானைச் சிறப்பினையும் அவனுடன் வரும் அமைச்சர் முதலியோர் மன்னனாற் சிறப்புப் பெற்ற நாட்டவர் நகரத்தார் ஆகியோர் காணப் பரங்குன்றத்தில் முருகனுக்கு நிகழ்த்தப் பெறும் திருவிழாச்சிறப் பினையும் பூசை முறையினையும் அவற்றிற்கலந்துகொள்ளும் மக்கட் கூட்டத்தாரின் விளையாட்டு நிகழ்ச்சிகளையும் குன்றத்தின் இயற்கை எழில் நலங்களையும் மால்மருகன் கோயிலின் செயற்கை அணிநலங்களையும் விரித்துக் கூறிய நப்பண்ணனார், பரங்குன்றத்தில் முருகப் பெருமானுக்கு நிகழும் திருவிழாவிற் கலந்துகொள்ளுதலால் இளமகளிர் பெறுதற்குரிய மனைவாழ்க்கையின் சிறப்பினை வகுத்துரைப்பதாக அமைந்தது. நின்யானைச் சென்னி நிறங்குங்குமத்தாற் புனையாப் பூநீருட்டிப் புனைகவரி சார்த்தாப் பொற்பவளப் பூங்காம்பிற் பொற்குடையேற்றி மலிவுடை யுள்ளத்தான் வந்து செய் வேள்வியுட் பன்மணமன்று பின்னிருங் கூந்தலர் கன்னிமை கனிந்த காலத்தார் நின் கொடியேற்ற வாரணங் கொள் கவழமிச்சில் மறுவற்ற மைந்தர் தோளெய்தார் மணந்தார் முறுவற் றலையளி யெய்தார் நின்குன்றங் குறுகிச் சிறப்புணாக்கால் (பரி. 19. 85-94) எனவரும் பரிபாடற் பகுதியாகும். நெடுவேளாகிய இறைவனே, நீ கோயில் கொண்டெழுந் தருளிய திருப்பரங்குன்றினையடைந்து நினது கொடியை யேற்றப்படும் நின் யானையின் மத்தகத்தைக் குங்குமத்தால் அலங்கரித்துப் பூவோடு கூடிய நீரால் அதனை வழிபட்டு அதற்கு உணவினை இனிதாக ஊட்டி அதன் செவியின்கண் வெண்சாமரை சார்த்திப் பொலிவுடைய பவளத்தாற் செய்த நல்லகாம்பினையுடைய பொற்குடையை மேலெடுத்து உள்ளத்துவகையுடன் செய்யப்படும் பூசையின்கண்ணே அவ்யானை கவளங்கொண்டு உண்டு எஞ்சிய மிச்சிலைக் கொண்டு நறுமணங்கமழும் கூந்தலையுடைய இளமகளிர் திருவருட் சிறப்புடைய உணவாகக் கொண்டு உண்ணா தொழியின் தம் காதலர் முறுவலோடு கூடிய தலையளியை எய்தமாட்டார்கள்; கன்னிமை கனிந்த பருவ மகளிர் கல்விதறுகண் புகழ்கொடை என்னும் பெருமிதப் பண்புகளிற் குறைவற்ற மைந்தரைக் கணவராகப் பெற்று அவர்தம் தோளினைக் கூடப் பெறுவாரல்லர் என்பது இத்தொடரின் பொருளாகும். ஆகவே பரங்குன்றத்து நிகழும் முருகப் பெருமானது கொடியேற்று விழாவில் அக்கொடியினைத் தாங்கும் யானையை வழிபட்டு அவ்வியானையுண்டு எஞ்சிய கவளமாகிய உணவினை முருகனது திருவருட் படைப்பாக ஏற்று உட்கொண்ட மகளிருள் மணமுடித்த மகளிர் தம் காதலரது முறுவலுடன் கூடிய தலையளியைப் பெற்று இன்புறுவர் என்பதும் கன்னிமைப் பருவத்தார் பெருமிதப் பண்புகளாற் குறைவற்ற மைந்தரைத் தம் கணவராகப் பெற்று மகிழ்வர் என்பதும் மேற்காட்டிய தொடராற் புலனாகும். இங்ஙனம் காதலனை மணந்து மனையறம் நிகழ்த்தும் மகளிரும் கன்னிமைப் பருவத்திரைய் நல்ல கணவரை யடைய விரும்பும் இளமகளிரும் பரங்குன்றில் நிகழும் முருகப் பெருமானது வழிபாட்டிற் கலந்து கொண்டு இம்மைப் பயன்பெற்று இன்புறும் நிலையில் பரங்குன்றில் முருகவேள் வழிபாடு சிறப்புற நிகழ்ந்த செய்தியினை உள்ளவாறு விளக்கிய நப்பண்ணனார் முருகப் பெருமானை எதிர்முகமாக்கி வாழ்த்திப் போற்றுவதாக அமைந்தது, குறப்பிணாக் கொடியைக் கூடியோய் வாழ்த்துச் சிறப்புணாக் கேட்டி சேவி. உடையும் ஒலியலும் செய்யை மற்றாங்கே படையும் பவழக்கொடி நிறங்கொள்ளும் உருவும் உருவத்தீயொத்தி முகனும் விரிகதிர் முற்றா விரிசுடர் ஒத்தி எவ்வத் தொவ்வா மாமுதல் தடிந்து தெவ்வுக் குன்றத்துத் திருந்து வேலழுத்தி அவ்வரை யுடைத்தோய் நீ, இவ்வரை மருங்கிற் கடம்பமர் அணிநிலை பகர்ந்தேம் உடங்கமர் ஆயமோ டேத்தினம் தொழுதே (பரி. 19 : 95-105) எனவரும் இப்பரிபாடலின் நிறைவுரையாகும் அன்புடைமையாற் குறக்குடியிற் பெண்ணாகிய வள்ளியை kzªnjhŒ! அருளுடைமை யால் எம்முடைய வாழ்த்தினையும் நின் செவிக்குச் சிறப்புடைய உணவாகக் கேட்டல் வேண்டும். நின் உடையும் மாலையும் செம்மை நிறமுடையவாகப் பெற்றன. அவ்வாறே நினது வேற்படையும் (பகைவர் மார்பினைப் பிளத்தலால்) பவழக் கொடியின் நிறமாகிய செந்நிறத்தைக் கொள்வதாயிற்று. திருமேனி நிறத்தாலும் சுடர் விட்டெரிகின்ற தீயினை ஒப்பாய். நின் முகமும் விரிகதிர் வெப்பமடையாத இள ஞாயிற்றை ஒத்துள்ளாய். உலகிற்குத் துன்பஞ் செய்தலால் நீதியில் தவறிய சூரனாகிய மாலின் முதலைத் தடிந்து பகைமை பொருந்திய குருகு பெயர்க்குன்றத்துத் திருந்திய வேற் படையை யழுத்தி அம்மலையினைப் ãsªjtnd! திருப்பரங் குன்றமென்னும் இம்மலையினிடத்தே கடம்ப மரத்தின் நிழலிலே அமர்ந்தருளிய நினது நல்ல அருள் நிலையினை எம்முடன் பொருந்திய சுற்றத்தோடுங் கூடித் தொழுது வாழ்த்தினேம், எம்முடைய வாழ்த்து இது என்பது மேற்காட்டிய தொடரின் பொருளாகும். திருப்பரங்குன்றத்தில் வீற்றிருந்தருளும் செவ்வேளைப் போற்றிப் பரவும் கடவுள் வாழ்த்தாக நல்லச்சுதனார் என்னும் புலவராற் பாடப்பெற்றது இருபத்தொன்றாம் பரிபாடலாகும். வென்றிக் கொடியினையுடைய brštnd! நின்னால் ஊரப்பட்ட ஊர்தி சுடரினை யொத்தொளிரும் முகபடாம் அணிந்த சென்னியையுடைய பிணிமுகம் என்னும் யானையாகும். நின் திருவடியில் தொட்டது செந்தாமரையடிக்கு இயைந்த பீலிப் போழாற் புனைந்த அடையற் செருப்பாகும். நின் கையின் கண்ணது நின்னை மதியாத அவுணர் தமக்குத் துணையாக மதித்த சூரனாகிய மாமரத்தினைத் தடிந்து குருகுபெயர்க் குன்றத்தினைப் பிளந்த வேற்படையாகும். நின்னாற் பூணப்பட்டது, சுருளுதலையுடைய வள்ளிப் பூவினை இடையிட்டுத் தொடுத்த கடப்பம் பூவினையடைய தாய் ஒன்றுபட்டு மலர்ந்த மாலை. நீ அமர்ந்தருளியது, உயர்ந்தோர் நாவினாற் புகழப்பெறும் நலத்தால் நிறைந்து ஏழு நிரையாக அடுக்கிய ஏழிலைப்பாலை மரத்தினை யுடையதாய்ப் பக்க மலையாகிய இலகடத்தினையும் அருவியாகிய முகபடாத்தினையும் உடையதாய்த் தரையின் கணின்று விசும்பளவும் ஓங்கிய பரங்குன்றமாகும். இத்தகைய குன்றத்து அடியின்கண் உறைதலாகிய பேறு மறுபிறப்பினும் எமக்கு இயைவதாகுக என வேண்டி நின்னைத் தொழுகின்றோம் என முருகவேளைப் போற்றித் தொடங்கிய இப்பாடல் காதல் மகளிரும் மைந்தரும் மகிழ்ந்து விளையாடும் பரங்குன்றின் சிறப்பினை விரித்துரைத்து மாற்றாரை அமரின்கண் கொன்ற வேற்படை முதலிய படைக்கலங்களை யேந்திய பன்னிருகைகளையும் ஆறு திருமுகங்களையும் உடைய brštnd! அறத்தையே விரும்பிய சுற்றத்தோடு கூடிநின் அடிக்கண் உறைதல் இன்றுபோல் என்றும் எமக்கு இயைக என்று பரவுகின்றோம் என முருகனை முன்னிலைப் படுத்தி வேண்டும் முறையில் நிறைவுபெறுகின்றது. இயலிசைப் பனுவலாகிய பரிபாடலால் திருமாலும் செவ்வேளும் ஆகிய தெய்வத்தைப் பரவிப் போற்றும் புலவர் பெருமக்கள் அனைவரும் தாம் தாம் வாழ வேண்டும் என்னும் தனி முறையிற் கடவுளை வாழ்த்தித் தத்தமக்குரியவற்றை வேண்டிப் பெறும் தன்னலவுணர் வின்றி அன்புடைய சுற்றத்தார் அனைவரொடும் கூடி நின்று உலகம் வாழ இறைவனை இன்னிசையாற் போற்றிப் பரவும் உயர்ந்த குறிக்கோளுடையராய்த் திகழ்கின்றனர். கடைச் சங்க காலத்தில் கடவுள் வழிபாட்டிற் பாடப்பெற்ற பண் சுமந்த பாடல்களாகிய இப் பரிபாடல்களின் பொருளமைப்பினைக் கூர்ந்து நோக்குங்கால், இயற்கை வனப்பும் தெய்வ வனப்புமாகிய இருவகை வனப்புக்களே இசைப் பாடற்குரிய பொருளாம் என்பதும் கடைச் சங்ககாலத்து மலையும் காடும்காவும் ஆற்றிடைக் குறையும் ஊர் மன்றங்களும் ஆகிய பல்வேறிடங்களிலும் வேறுவேறு பெயருடன் வேறு வேறு உருவங்களில் வைத்து வழிபடப்பெறும் எல்லாத் தெய்வங்களும் முழுமுதற் கடவுளாகிய ஒரு பொருளின் பல்வேறு கோலங்களே யென்பதும் இவ்விடங்களில் நிகழ்த்தப்பெறும் பூசையும் திரு விழாக்களும் ஆகிய நிகழ்ச்சிகள் யாவும் உலகமக்கள் எல்லோருடைய நலங்களையும் உளத்துட் கொண்டு நிகழ்த்தப்பெறும் பொதுநலச் செயல்களே என்பதும் நன்கு புலனாதல் காணலாம். 4. சங்கவிலக்கியத்திற் சிவன் வழிபாடும் சைவ சமயத் தத்துவ வுண்மைகளும் சங்க இலக்கியத்தில் இடம் பெற்றுள்ள தெய்வ வழிபாடுகளில் எல்லாத் தெய்வ வழிபாடுகட்கும் தலைமை யானதாகவும் குறிஞ்சி முல்லை முதலிய நில எல்லையைக் கடந்த விரிவுடையதாகவும் விளங்கும் சிறப்புடையது சிவழிபாடு ஒன்றேயாகும். பண்டை நாளிற் போர் மறவர்களால் வழிபடப் பெற்ற கொற்றவையாகிய வனதுர்க்கையும், தீயோரைச் சினந்தழிக்கும் காடுகிழாளாகிய காளியும், ஆருயிர்கட்கெல்லாம் அப்பனாகிய இறைவனொடு பிரிவின்றி அவனது ஒரு கூறாகியமர்ந்து அருள்சுரக்கும் அம்மையாகிய மலைமகளும் என உலகமக்களால் வழிபடப் பெறும் மூவகைத் திருமேனியும் நுதல்விழிநாட்டத் இறைவனாகிய சிவபெருமானுடன் பிரிவின்றியுள்ள சிவசத்தியே என்பது பண்டைத் தமிழர் துணிபாகும். இவ்வுண்மை, வெள்ளேறு வலவயின் உரிய பலர்புகழ் திணிதோள் உமையமர்ந்து விளங்கும் இமையா முக்கண் மூவெயில் முருக்கிய முரண்மிகு செல்வனும் (திருமுருகு. 151-154) எனத் திரிபுரமெரித்த விரிசடைக் கடவுளை உமையொரு பாகனாகவும், நெடும்பெருஞ் சிமையத்து நீலப் பைஞ்சுனை ஐவருள் ஒருவன் அங்கை யேற்ப அறுவர் பயந்த ஆறமர் செல்வ ஆல்கெழு கடவுட் புதல்வ மால்வரை மலைமகள் மகனே மாற்றோர் கூற்றே வெற்றி வேல்போர்க் கொற்றவை சிறுவ இழையணி சிறப்பிற் பழையோள் குழவி (திருமுருகு. 253-259) என முருகப்பெருமானை ஆலமர் செல்வனாகிய சிவபெருமானுக்கும் அம்முதல்வனுடைய சத்திகளாகிய உமாதேவி கொற்றவை - காடுகிழாள் (காளி) என்போர்க்கும் மகனாகவும் நக்கீரனார் பரவிப் போற்றியுள்ளமையால் நன்கு புலனாகும். ஆகவே பண்டைநாளில் தனித்தனியே வேறுவேறு திருவுருவமைத்து வழிபாடு செய்யப்பெற்ற சிவசத்திகளும் சத்தியின் மைந்தனாகவும் குறிஞ்சி நிலத்தெய்வமாகவும் வழிபடப் பெற்ற முருகவேளும் செம்பொருளாகிய சிவத்துடன் நெருங்கிய தொடர்புடைய தெய்வங்களாக மக்கள் மேற்கொண்ட தெய்வ வழிபாடுகளில் இணைக்கப்பட்டுச் சிவபரம்பொருளே முழுமுதற்கடவுள் எனக் கருதிப்போற்றும் ஒரு தெய்வ வழிபாட்டுமுறை தமிழகத்திற் சங்ககாலத்திற்குப் பன்னூ றாண்டுகட்கு முன்னரே உருவாகி நிலைபெற்று விட்டதென்பது மேற்குறித்த திருமுருகாற்றுப் படைத் தொடர்களாலும் ஏனைய சங்கச் செய்யுட்களிற் சத்தியைப் பற்றியும் முருகப் பெருமானைப் பற்றியும் ஆங்காங்கே காணப்படும் பல்வேறு குறிப்புக்களாலும் நன்கு விளங்கும். மாயோன், சேயோன், வேந்தன், வருணன் ஆகிய நிலத் தெய்வங்கட்கும், முல்லை நிலத் தெய்வமாகிய மாயோனது அருட்பிறப்பாகிய கண்ணன், பலதேவன் ஆகிய தெய்வங்கட்கும் மாயோனுடன் தொடர்புடைய திருமகள், நான்முகன், காமன் முதலிய தெய்வங்கட்கும், ஆதித்தர் பன்னிருவர், உருத்திரர் பதினொருவர், வசுக்கள் எண்மர், மருத்துவர் இருவர் என்னும் நால்வகைப் பிரிவினராகிய முப்பத்து முக்கோடி தேவர்கட்கும் பதினெண்கணங்கட்கும் தலைமையுடைய முழுமுதற்கடவுளாகச் சிவபெருமான் சங்கச்செய்யுட்களிற் குறிக்கப்பெற்றுள்ளார். பத்துப்பாட்டில் ஒன்றாகிய மதுரைக் காஞ்சியைப் பாடிய மாங்குடி மருதனார் என்னும் புலவர் பெருமான் மதுரை மாநகரில் அமைந்த (கடவுட் பள்ளியைத்) தெய்வத் திருக்கோயில்களைக் குறிப்பிடும் நிலையில் அத்திருக்கோயில்களில் எழுந்தருளியுள்ள தெய்வங்கட்கெல்லாந் தலைமையுடைய தெய்வமாகவும் நிலம் தீ நீர் வளி விசும்பு என்னும் ஐம்பெரும் பூதங்களாலியன்ற உலகினை முதன்முதற் படைத்தருளிய முழு முதற்கடவுளாகவும் மழுவாகிய வாட்படையினையுடைய சிவபெருமானைச் சிறப்பித்துப் போற்றியுள்ளார். நீரும் நிலனும் தீயும் வளியும் மாக விசும்போ டைந்துட னியற்றிய மழுவாள் நெடியோன் தலைவன் ஆக மாசற விளங்கிய யாக்கையர் சூழ்சுடர் வாடாப்பூவின் இமையாநாட்டத்து நாற்ற வுணவின் உருகெழு பெரியோர்க்கு மாற்றரு மரபின் உயர்பல் கொடுமார் அந்தி விழவில் தூரியம் கறங்க (மதுரைக். 453-460) எனவரும் மதுரைக் காஞ்சித்தொடர், மதுரை மாநகரில் உள்ள திருக்கோயில்களின் மாலைவழிபாட்டினைக் குறிப்பதாகும். திக்குக்களையுடைய ஆகாயத்துடனே காற்றும் நெருப்பும் நீரும் நிலமும் ஆகிய ஐம்பெரும் பூதங்களையும் சேரப்படைத்த மழுவாகிய வாட்படையினையுடைய பெரியோன் (மகாதேவன்) ஏனையோரின் முதல்வனாகக் கொண்டு தீர்த்தமாடிய வடிவினை யுடையராய்த் தெய்வத்தன்மையாற் சூழ்ந்த ஒளியுடைய வாடாத பூக்களையும் இதழ்குவியாத கண்ணினையும் அவியாகிய உணவினையும் உடைய அச்சம் பொருந்திய மாயோன் முருகன் முதலாகிய தெய்வங்கட்கு விலக்குதற்கு அரிய முறைமையினையுடைய அந்திக் காலத்துக்கு முன்னாக எடுத்த விழாவிலே தூ ரியம் (பலவகை வாத்தியம்) ஒலிக்க என்பது மேற்காட்டிய தொடரின் பொருள். மதுரை மாநகரிலே மழுப்படையினையேந்திய சிவபெரு மானைத் தலைமைக் கடவுளாகக் கொண்டு மாயோன் சேயோன் முதலிய தெய்வங்கள் எழுந்தருளிய திருக்கோயிலிலே பலவகை வாத்தியங்களும் முழங்கத் தொடங்கப் பெற்ற திருவிழாவிலே மாலைக் காலத்தில் மனைவாழ் மங்கல மகளிர் தாம் பெற்ற மழலைச் செல்வங்களாகிய குழந்தைகளோடும் தம் கணவரையும் உடனழைத்துக் கொண்டு வயதின் முதிர்ந்தோராகிய பேரிளம்பெண்டிர் கடவுட் பூசைக்கு இன்றியமையாத பூவும் நறும்புகையும் எந்திக்கொண்டு இறைவனைத் தொழுது போற்றிப் பாதுகாத்து உடன்வரத் திருக்கோயிலில் இறைவனை வழிபடச் சென்ற அன்பின் திறத்தினை விரித்துரைக்கும் முறையில் அமைந்தது, திண்கதிர் மதாணி ஒன்குறு மாக்களை ஓம்பினர்த் தழீஇத் தாம்புணர்ந்து முயங்கித் தாதணி தாமரைப் போது பிடித்தாங்குத் தாமும் அவரும் ஓராங்கு விளங்கக் காமர் கவினிய பேரிளம் பெண்டிர் பூவினர் புகையினர் தொழுவனர் பழிச்சிச் சிறந்து புறங் காக்குங் கடவுட் பள்ளியும் (மதுரைக். 461-468) எனவரும் மதுரைக் காஞ்சித் தொடராகும். மகவீன்ற மகளிர் திண்ணிய ஒளியினையுடைய பதக்கம் அணிந்த ஒண்மைவாய்ந்த இளங்குழந்தைகளைத் தாது சேர்ந்த செவ்வித்தாமரைப் பூவைப் பிடித்தாற்போலத் தழுவியெடுத்துக் கொண்டு தாழும் கணவரும் தம்குழந்தைகளும் சேரச் சீலமுடையராகச் சிறந்து விளங்கப் பெரு விருப்பமும் அழுகுமுடையராய்த் திகழும் செம்முது பெண்டிராகிய பேரிளம் பெண்கள் கடவுட் பூசைக்கு வேண்டும். பூவினையுடையராய் நறும்புகையினையுடையராய் இறைவனை மிகுத்துத் துதித்துப் பாதுகாத்து நடத்தும் தெய்வத் திருக்கோயில்களும் என்பது மேற்குறித்த தொடரின் பொருளாகும். இத்தொடரிற் சுட்டப்பட்ட கடவுட்பள்ளி என்பதற்கு நச்சினார்க்கினியருரையிற் பௌத்தப்பள்ளி எனப் பொருள் வரையப்பெற்றுளது. நீரும் நிலனும் தீயும் வளியும், மாகவிசும்போடு ஐந்து உடன் இயற்றிய மழுவாள் நெடியோன் தலைவனாக................. உருகெழு பெரியோர்க்கு உயர்பலி தருமார் அந்திவிழாவில் தூரியம் கறங்க என்ற தொடரில் உள்ள கறங்க என்னும் செயவென் வாய்பாட்டு வினையெச்சம், சிறந்து புறங்காக்கும் எனப் பின்வரும் தொடரில் அமைந்த புறங்காக்கும் என்னும் பெயரெச்சத்தின் பகுதியாய்ப் புறங்காத்தல் என்னும் பிற வினைமுதல் வினைகொண்டு முடியக் காக்கும் என்னும் அப்பெயரெச்சம் கடவுட்பள்ளி என்னும் பெயர்கொண்டு முடிந்தது, ஆகவே கடவுட் பள்ளி என்ற இத்தொடரிலுள்ள கடவுள் என்றது முதற்குறித்த மழுவாள் நெடியோன் ஆகிய சிவபெருமானைத் தலைவனாகக் கொண்ட தெய்வங்களையே குறித்தல் தெளிவு. இதற்குமாறாகப் புத்தரைக் குறித்ததென்று கொள்ளுதற்குச் சிறிதும் இடமில்லை. அன்றியும் இக்கடவுட் பள்ளியையடுத்துச் சிறந்த வேதம் விளங்கப்பாடும் அந்தணர்பள்ளி கூறப்பட்டிருத்தலும் இங்குச் சிந்தித்தற்குரியதாகும். மாங்குடி மருதனார் காலத்தில் மதுரை மாநகரில் பௌத்தப்பள்ளி தனியே எடுத்துக் கூறும் முறையிற் சிறப்பிடம் பெற்றிருக்குமானால் அமணர்பள்ளியினை விதந்தெடுத்துக் கூறினாற்போன்று பௌத்தப் பள்ளியையும் தனியே விதந்து கூறியிருப்பர். அவ்வாறன்றி, வண்டுபடப் பழுநிய தேனார் தோற்றத்துப் பூவும் புகையுஞ் சாவகர் பழிச்சச் சென்ற காலமும் வரூஉம் அமயமும் இன்றிவட் டோன்றிய வொழுக்கமொடு நன்குணர்ந்து வானமும் நிலனும் தாமுழுதுணருஞ் சான்ற கொள்கை சாயாயாக்கை ஆன்றடங்கறிஞர் செறிந்தனர் நோன்மார் கல்பொளிந்தன இட்டுவாய்க் கரண்டைப் பல்பொறிச் சிமிலி நாற்றி நல்குவரக் கயங்கண்டன்ன வயங்குடை நகரத்துச் செம்பியன்றன்ன செஞ்சுவர் புனைந்து நோக்குவிசை தவிர்ப்ப மேக்குயர்ந்த தோங்க இறும்பூது சான்ற நறும்பூஞ் சேக்கையும் (மதுரைக். 475-488) என அமண்சமயச் சான்றோர்களையும் அவர்களது விரதக் கோலத்தினையும் விரித்துக்கூறிய ஆசிரியர் இறும்பூது சான்ற நறும்பூஞ்சேக்கை என்பதனால் பௌத்தப் பள்ளியையும் குறிப்பாகச் சுட்டியுள்ளார் என்றே கருத வேண்டியுளது. இனி, மதுரைக் காஞ்சியில் கடவுட் பள்ளி என்பதற்கு நச்சினார்க்கினியர் பௌத்தப் பள்ளி என உரை வரைதற்குரிய காரணம் யாது என்பதும் இங்குச் சிந்தித்தற் குரியதாகும். தொல்காப்பியம், சங்கவிலக்கியம், திருக்குறள் முதலிய பழந்தமிழ்த் தொன்னூல்களில் பள்ளி என்ற சொல் இடம் என்ற பொதுப் பொருளிலும் துயிலுமிடம், படுக்கை, சிற்றூர், அறவோர் இருப்பிடம், கல்விபயிலும் இடம் என்ற சிறப்புப் பொருள்களிலும் பயின்று வழங்கக் காண்கின்றோம், அறவோர் பள்ளி (சிலப். இந்திர. 179) எனவரும் சிலப்பதிகாரத் தொடர்க்கு அருகர்பள்ளி, புத்தர்பள்ளி என அடியார்க்கு நல்லார் உரைவரைந்துள்ளார். அறத்துறை விளங்கிய அறவோர் பள்ளி (சிலப். ஊர்காண். 11) எனவரும் சிலப்பதிகாரத்தொடர் அருகர்பள்ளி, புத்தர்பள்ளி என்னும் புறச் சமயத்தார்க்குரிய பள்ளிகள் இரண்டினையும் பொதுப்படச் சுட்டி நிற்றல் காணலாம். புத்தநோன்பிகள் வாழும் இடத்தினை மாதவர்பள்ளி (மணி. 18:8) எனக் குறிப்பிடுவர் சாத்தனார். பள்ளி என்னும் இச்சொல் நாயன்மார் ஆழ்வார் காலங்களில் புத்தர் சமணர் என்னும் புறச்சமயத்தார் தங்குமிடம் என்ற சிறப்புப் பொருளிலும் வழங்கப் பெறுவதாயிற்று. பொங்கு போதியும் பிண்டியும் உடைப்புத்தர் நோன்பியர் பள்ளியுள்ளுறை (திவ்ய. பெரிய. 2.5) எனப் பெரிய திருமொழியிலும், பள்ளிகள் மேலும் மாடு பயில மண் பாழிமேலும் (பெரிய. சம்பந்தர். 682) எனப் பெரிய புராணத்திலும் இவ்வழக்கு இடம்பெற்றுள்ளமை காணலாம். முதலாம் இராசராச சோழன் ஆட்சியில் நாகப் பட்டினத்தில் கட்டப்பட்ட புத்த விகாரம் இராசராசப்பெரும்பள்ளி எனப் பெயரிடப்பட்டுள்ளமை இச்சொல் வழக்கினை மேலும் வலியுறுத்துவதாகும். இவ்வாறு தம்காலத்தில் பள்ளியென்னும் சொல் புத்தநோன்பியர் தங்கி வழிபடும் பௌத்தப் பள்ளிக்குச் சிறப்பு முறையில் வழங்குவதனையறிந்த நச்சினார்க்கினியர், மதுரைக் காஞ்சியில் சிவன் மாயோன் முதலிய தெய்வங்களுக்கு உரியதாகவமைந்த தொடருடன் இணைந்த கடவுட் பள்ளி என்பதனைத் தனியே பிரித்துப் பௌத்தப்பள்ளி எனப் பொருள் வரைந்தார் எனக் கருத வேண்டியுளது. எனினும், பள்ளி என்னும் சொல், தமிழ்ச் தொன்னூல்களில் இடம் என்ற பொதுப்பொருளிலன்றிப் புறச்சமயத்தார்க்குரிய இடம் என்ற சிறப்புப் பொருளில் வழங்கப்படாமையானும், பின்னர் இயற்றப்பட்ட சிலப்பதிகாரம், மணிமேகலை என்ற காப்பியங்களிலும் அறவோர் வாழும் இடம் என்ற பொதுமையின் நீங்காது புத்தர் சமணர் தங்குமிடங்களுக்குச் சிறப்பாக வழங்கப் பெற்றிருத்தலையும் நாயன்மார் ஆழ்வார் காலங்களில் பள்ளி என்னும் இச்சொல் சக்கரப்பள்ளி, மயேந்திரப்பள்ளி, அகத்தியான்பள்ளி எனச் சைவத் திருக்கோயில்களையும், பார்த்தன்பள்ளி என வைணவத் திருக்கோயிலையும் குறித்து வழங்கப்பெற்றிருத்தலையும் கூர்ந்து நோக்குங்கால், மதுரைக்காஞ்சியில் கடவுட்பள்ளி, அந்தணர்பள்ளி எனவரும் தொடர்களிலுள்ள பள்ளி என்னும் சொல் இடம் என்ற பொதுப் பொருளிலேயே வழங்கப்பெற்றதென்பதும், எனவே கடவுட்பள்ளி என்ற தொடர்க்குத் தெய்வம் உறையும் கோயில் எனப் பொருள் கொள்வதன்றிப் பௌத்தப்பள்ளி எனப் பொருளுரைத்தல் சிறிதும் பொருந்தாதென்பதும் நன்கு புலனாகும். மதுரைக் காஞ்சியிற் கடவுள் பள்ளியையொட்டி அந்தணர் பள்ளி குறிக்கப்பெற்றுளது. சங்ககாலத்தில் தெய்வங்கொள்கையாகிய சிவவழிபாட்டு நெறியினைச் சார்பாகக்கொண்டு வேதநெறியாகிய வைதிகம் தமிழகத்தில் வேரூன்றி நிலைபெற்ற திறத்தினைப் புலப்படுத்தும் முறையிற் கடவுட்பள்ளியையடுத்து அந்தணர் பள்ளியமைந்துள்ள இடத்தொடர்பு குறிப்பிற் புலப்படுத்தல் காணலாம். வேதம் என்பது தோற்றமில் காலமாக நிலைபெற்றுள்ள தொன்மை வாய்ந்த நூலென்றும் அஃது ஒருவராலும் இயற்றப்படாதது (அபௌருஷேயம்) என்றும் கூறுவர் வேதவாதிகள். இக்கொள்கை, கற்பங்கை, சந்தங்கால், எண்கண், தெற்றெ னிருத்தஞ்செவி, சிக்கை மூக்கு, உற்றவியாகரணம் முகம் பெற்றுச் சார்பிற் றோன்று ஆரண வேதக்கு ஆதியந்தம் இல்லை அது நெறியெனும் வேதியன் உரையின் விதியுங்கேட்டு (மணி. சமயக். 100-105) என மணிமேகலையாசிரியர் சாத்தனார் கொண்டெடுத்து மொழியும் வேதவாதியின் உரையில் இடம் பெற்றிருத்தல் அறியத் தகுவதாகும். இத்தொடரில் சார்பில்தோன்றா என்றது, நூலாசிரியர் ஒருவர் வாயிலாகத் தோன்றாக தானே தோன்றிய என்னும் பொருளில் வழங்கப் பெற்றது. எனவே ஒருவராலும் செய்யப்படாத நூல் வேதம் என்பது வேதவாதியர் கொள்கையாதல் நன்கு தெளிப்படும். செய்யாமொழிக்கும் திருவள்ளுவர் மொழிக்கும் (42) எனவரும் திருவள்ளுவமாலைப் பாடலும் இதனை வலியுறுத்துவதாகும். வடநாட்டில் தோன்றிய சமண பௌத்த சமய வாதிகளால் வேத வேள்விகள் எதிர்க்கப்பட்டுச் சிதைவுறும் இழிநிலையேற்பட்டபோது, தென்னாட்டில் வாழ்ந்த வேதநெறியாளராகிய அந்தணர்கள் கடவுட் கொள்கையை உறுதியாகப் பற்றிக்கொண்டு, முழுமுதற் கடவுளாகிய முதல்வனால் அருளிச் செய்யப் பெற்றனவே ஆறங்கங்களால் உணர்தற்கரிய அருமறையாகிய வேதங்கள் எனவும் உலகியல் ஒழுக்கமாகிய வேதத்தை அருளிச் செய்த இறைவனை வேதமுதல்வன் எனவும் தெளிவுபட எடுத்துக் கூறிப் புத்தம் சமணம் முதலிய புறச்சமய வாதிகளை உறழ்ந்து வாதில்வென்று, இந்நாட்டின் தொன்மைவாய்ந்த தெய்வங்கொள்கையைச் சார்பாகக் கொண்டு மன்னர்களும் மதித்து ஏற்றுக்கொள்ளும் வண்ணம் வேதவேள்விகளைச் சிறப்புடன் செய்து வைதிக நெறியினை நன்கு வளர்த்து வந்தனர். இச்செய்தி, நன்றாய்ந்த நீணிமிர்சடை முதுமுதல்வன் வாய்போகாது ஒன்றுபுரிந்த ஈரிரண்டின் ஆறுணர்ந்த ஒரு முதுநூல் இகல்கண்டோர் மிகல்சாய்மார் மெய்யன்ன பொய்யுணர்ந்து பொய்யோராது மெய்கொளீஇ மூவேழ்துறையும் முட்டின்றுபோகிய உரைசால் சிறப்பின் உரவோர்மருக (புறம். 166) எனச் சோணாட்டுப் பூஞ்சாற்றூப் பார்ப்பான் கௌணியன் விண்ணந்தாயனை ஆவூர்மூலங்கிழார் பாடிய புறப்பாடற் பகுதியால் இனிது விளங்கும். பெரிதும் ஆராயப்பட்ட மிக்க நீண்ட சடையினையுடைய பழையோனாகிய இறைவனது (சிவபெருமானது) வாக்கை விட்டு நீங்காது அறம் ஒன்றையே மேவிய நான்கு பகுதிகளையுடையதாய் ஆறு அங்கங்களாலும் உணர்தற்குரிய ஒரு பழைய நூலாகிய வேதத்திற்கு மாறுபட்ட நூல்களைச் செய்தாராகிய புத்தர் முதலிய புறச் சமயத்தோரது மிகுதியாகிய செருக்கினை அடக்குதல் வேண்டி அவரது மெய் போன்ற பொய்யினை உளப்பட்டுணர்ந்து அப்பொய்யை மெய்யென்று எண்ணாது உண்மைப்பொருளை அவர்கள் ஏற்றுக் கொள்ளும்படி செய்து, இருபத்தொரு வேள்விகளையும் குறைவின்றிச் செய்து முடித்த புகழமைந்த தலைமையையுடைய அறிவுடையோர் மரபில் உள்ளோனே எனக் கௌணியன் விண்ணந்தாயனையும் அம்மறையோன் புத்தன் முதலிய புறச்சமயத்தாரை வாதில் வென்று அவர்களைத் தன்வழிப்படுத்தி வேதவேள்விகளைத் திறம்பெற நிகழ்த்திய அவனது சீர்த்தியையும் சிறப்பித்துப் பாராட்டும் முறையிற் பார்ப்பனவாகை என்னுந்துறையிற் பாடற்பெற்றது மேற்குறித்த புறநானூற்றுப் பாடலாகும். சங்க காலத்தில் வாழ்ந்த தமிழக அந்தணர்கள் சிவநெறியுடன் தொடர்புடைய வைதிக நெறியினராய் ஒழுகினர் என்பது இப்புறப்பாடலால் இனிது விளங்கும். இங்ஙனம் சிவநெறியும் வேதநெறியும் தம்முட் பிரிவின்றி ஒருநெறியாய் விரவி வளரும் நிலையிற் சங்க காலத்தில் வாழ்ந்த பூஞ்சாற்றூர்ப் பார்ப்பான் விண்ணந்தாயன் தோன்றிய மரபாகிய கௌணிய கோத்திரத்தில் இற்றைக்கு ஆயிரத்து முந்நூறாண்டுகட்குமுன் காழிப்பதியில் சிவபாத விருதயர்க்கும் பகவதியார்க்கும் மகவாகத் தோன்றியவரே சைவ சமய குரவர் நால்வருள் முதலாமவராகப் போற்றப்பெறும் தமிழ் ஞான சம்பந்தர் என்பது இங்கு நினைவுகூரத் தகுவதாகும். முற்காலத்தில் பேரூர்கள் தோறும் இறைவனை வழிபடுதற்கும் மக்கள் பலரும் கூட்டமாகத் தங்கியிருத்தற்கும் ஏற்றவண்ணம் பொதியில் எனப்படும் அம்பலங்கள் ஊரின் நடுவே அமைக்கப் பெற்றிருந்தன. அவ்வம்பலத்தின் கண்ணே மக்கள் பலரும் அன்பினால் ஒருங்குகூடி இன்னவுரு இன்னநிறம் என்று அறியவொண்ணாத இறைவனை மலர்தூவி வழிபடுதற்குரிய முறையில் கந்து எனப் பெயரிய தெய்வம் உறையும் தூணொன்று நடுவே நாட்டப் பட்டிருந்தது. அவ்வம்பலத்தின் அருகே தெய்வத்தை வழிபடுதற்கு வருவோர் நீராடித் தூய்மையுடையராகச் செல்லுதற்கு ஏற்றவாறு தீர்த்தக்குளம் அமைக்கப்பெற்றிருந்தது. போர்க்காலத்திற் பகைவரது நாட்டினின்றும் சிறைபிடித்துக் கொணரப்பட்ட மகளிர் பலரும் அங்குள்ள திருக்குளத்தில் நீராடிப் பொதியிலாகிய அம்பலத்தில் திருவலகிடுதல் மெழுகுதல் முதலிய திருப்பணிகளைச் செய்து மாலைக் காலத்திலே திருவிளக்கு ஏற்றி வழிபட்டனர். ஊர்மக்கள் அங்குக்கூடித் தெய்வம் உறையும் தூணாகிய கந்தினை மலர்தூவி வழிபாடு செய்தனர். ஊர்க்குப் புதியராய் வந்தோர் பலரும் அங்குத் தங்கியிருந்தனர். இச்செய்தி, கொண்டி மகளிர் உண்துறை மூழ்கி அந்தி மாட்டிய நந்தா விளக்கின் மலரணி மெழுக்கம் ஏறிப் பலர்தொழ வம்பலர் சேக்கும் கந்துடைப் பொதியில் (பட்டினப். 246-249) எனவரும் பட்டினப்பாலையடிகளிற் குறிக்கப்பெற்றுள்ளமை கூர்ந்து நோக்கற்பாலதாகும். பகைவர் மனைவியராய்ப் போரிற் சிறைப்பிடித்து வந்த மகளிர் பலரும் நீருண்ணுந் துறையினையுடைய குளத்திலே மூழ்கி அலகிட்டு மெழுகிய மெழுக்கத்தினையும் அந்திக் காலத்திலே கொளுத்தின அவியாத விளக்கினையும் உடையதாய் மக்கள் பலரும் சென்று மலர்தூவித் தொழுவதற்குரிய தெய்வம் உறையும் தூணினைத் தன்னகத்தேயுடையதாய்ப் புதியவர்கள் தங்குதற்கு இடமாகிய அம்பலம் என்பது மேற்காட்டிய பட்டினப்பாலைத்தொடரின் பொருளாகும். கொண்டி மகளிராவார் பகைவர் மனைவியராய்ப் போரிற் சிறைப்பிடித்துக் கொணரப்பட்ட பெண்கள், பிறர்க்குரியராய அம்மகளிரை அவர்தம் கற்பியல் வாழ்வுக்கு இடர் நேராதவாறு மதித்து அவர்கள் தாம் விரும்பிய தெய்வவழிபாட்டில் உரிமையுடன் ஈடுபட்டு அமைதியாக வாழும்படி செய்த தமிழ் முன்னோரது அரசியலுணர்வும் நாகரிகப் பண்பாடும் யாவராலும் புகழ்ந்து போற்றத் தக்கனவாகும். பொதியிலை மெழுகி விளக்கும் இட்டிருக்க வம்பமகளிரை வைத்தார். அதனால் தமக்குப் புகழுளதா மென்று கருதி என நச்சினார்க்கினியர் தரும் உரைவிளக்கம் இக்கருத்தினை நன்கு வலியுறுத்துவதாகும். கந்து - தெய்வம் உறையும் தறி, தூண் இன்னஉரு இன்னநிறம் என ஒருவராலும் உணர்தற்கு அரிய கடவுளை நிலையுடைய கந்தின் (தூணின்) உருவில் நாட்டி வழிபடுதல் தமிழகத்தில் நெடுங்காலமாக நிலைபெற்றுவரும் வழிபாட்டு முறையாகும். இத்தகைய தூணின் வடிவில் அமைந்ததே சிவநெறிச் செல்வர்களால் நெடுங்காலமாக வழிபடப்பெற்று வரும் சிவலிங்கத் திருமேனியாகும். இந்நுட்பம் காஞ்சியிற் கோயில் கொண்டருளிய இறைவனுக்குக் கம்பன் என வழங்கும் காரணப் பெயராலும். கன்றாப்பூர் நடுதறியைக் காணலாமே மழபாடி வயிரத்தூ ணே என்றென்றே நான் அரற்றி நைகின்றேனே எனவரும் அப்பர் அருள்மொழிகளாலும் சிவபெருமானுக்குரிய தாணு என்னும் வடமொழிப் பெயர் வழக்காலும் நன்கு புலனாதல் காணலாம். பத்துப்பாட்டு, எட்டுத்தொகையாகிய சங்கச் செய்யுட்களில் சிவபெருமானைக் குறித்தனவாகப் பின்வரும் தொடர்கள் இடம் பெற்றுள்ளன :- அந்திப் பசுங்கட் கடவுள், அருந்தவமுதல்வன் ஆதிரையான், ஆதிரைமுதல்வன், ஆல்கெழுகடவுள், ஆலமர்கடவுள், ஆலமர் செல்வன், ஆனேற்றுக் கொடியோன், இமைய வில்வாங்கிய ஈர்ஞ்சடை அந்தணன், இறை, ஈசன், எரியுமிழ்கணிச்சியோன், ஏற்றூர்தியான், ஐந்தலையுயரிய அணங்குடை அருந்திறல் மைந்துடையொருவன், கடவுள், காரியுண்டிக் கடவுள், காலக்கடவுள், கொலைவன், கொன்றையலங்கலந்தெரியலான், சலதாரி, சீறருமுன் பினோன், செல்விடைப்பாகன், தாழ்சடைப் பொலிந்த அருந்தவத் தோன், நீர் சடைக்கரந்தோன், நீலமணிமிடற்றொருவன், நீலமேனி வாலிழைபாகத் தொருவன், புங்கவம் ஊர்வோன், புதுத்திங்கட் கண்ணியான், பெரும்பெயர்க் கணிச்சியோன், பைங்கட் பார்ப்பான், மணிமிடற்றண்ணல், மணிமிடற்றந்தணன், மணிமிடற் றெண்கையான், மணிமிடற்றோன், மழுவாள் நெடியோன், மறுமிடற்றண்ணல், முக்கட்செல்வன், முக்கணான், மூவெயில் முருக்கிய முரண்மிகு செல்வன் எனவரும் இத்தொடர்கள், சிவபெருமானது திருமேனி வடிவினையும் வண்ணத்தினையும், அம்முதல்வனுக்குரிய ஊர்தி, கொடி, படை முதலியவற்றையும் மன்னுயிர்களைக் காத்தல் வேண்டி அவ்இறைவன் செய்தருளிய அருட் செயல்களையும் புலப்படுத்தும் முறையில் அமைந்துள்ளமை காணலாம். பத்துப்பாட்டுள் முதற்கண்ணதாகிய திருமுருகாற்றுப் படையுள், வெள்ளேறு வலவயின் உயரிய பலர்புகழ் திணிதோள் உமையமர்ந்து விளங்கும் இமையாமுக்கண் மூவெயில் முருக்கிய முரண்மிகு செல்வன் (151-154) எனச் சிவபெருமானை நக்கீரர் போற்றிப் பரவியுள்ளார். வெள்ளைநிறம் வாய்ந்த எருதினை எழுதிய கொடியினை வெற்றியுடன் உயர்த்தப் பலரும் புகழும் திணிந்த தோள்களையும் ஒருபாகத்தே உமையமர்ந்து விளங்கும் திருவுருவினையும் இதழ் குவியாத மூன்று கண்களையும் உடைய முப்புரங்களை யெரித்த வலிமை மிக்க செல்வனாகிய இறைவன் என்பது இத்தொடரின் பொருளாகும். இடபக்கொடி சிவபெருமானுக்குரிய கொடியென்பதும் அம்முதல்வன் மூன்று கண்களையுடையவனாய் உமாதேவியாரை ஒருபாகத்திற்கொண்டவன் என்பதும் முப்புரங்களை அழித்தவன் என்பதும் மேற்காட்டிய தொடரிற் சுட்டப்பெற்றுள்ளமை காணலாம். நீண்டுயர்ந்த பெரிய இமயமலையின் உச்சியிலே நீலநிறத்தை யுடைய தருப்பை வளர்ந்த சரவணப் பொய்கையிலே விசும்பும் வளியும் தீயும் நீரும் நிலனுமாகிய ஐவருள் தீ தன் அகங்கையிலே ஏற்ப முனிவர் எழுவர் மனைவியருள் அருந்ததி யொழிந்த ஏனைய அறுவராலே பெறப்பட்ட ஆறுவடிவு பொருந்திய செல்வனே, கல்லாலின் கீழிருந்த கடவுளினுடைய புதல்வனே, பெருமையையுடைய மலையாகிய இமயமலையரையன்மகளாகிய உமையின் மகனே என முருகப் பெருமானைப் போற்றும் முறையில் அமைந்தது, நெடும் பெருஞ்சிமையத்து நீலப்பைஞ்சுனை ஐவருள் ஒருவன் அங்கையேற்ப அறுவர் பயந்த ஆறமர் செல்வ ஆல்கெழுகடவுட் புதல்வ மால்வரை மலைமகள் மகனே (திருமுருகு. 253-257) எனவரும் திருமுருகாற்றுப்படைத் தொடராகும். இதன்கண் ஐவருள் ஒருவன் என்றது ஐம்பெரும் பூதங்களுள் ஒன்றாகிய தீக்கடவுளை, அவன் அங்கையேற்ப என்றது, சிவபெருமான் உமாதேவியுடன் கூடியிருந்த நிலையில் சிவபெருமானிடத்தினின்றும் இந்திரன் இரந்து வாங்கிக்கொண்டு தன் வச்சிரப்படையால் சிதைத்த கருவினைத் தவத்திற் சிறந்த முனிவர் எழுவரும் பெற்றுத் தமக்குத் தரிக்கவியலாமையின் இறைவன் கூறாகிய முத்தீக் குண்டத்திலே பெய்ததனைக் கூறிற்று. அறுவர் பயந்த ஆறமர் செல்வ என்றது, அவ்வாறு வேள்விக் குண்டத்திற்பெய்து சக்தி குறைந்த கருப்பத்தை அம்முனிவர் எழுவரும் தம் மனைவர்க்குக் கொடுக்க அவருள் அருந்ததி நீங்கலாகவுள்ள அறுவரும் அக்கருவினை விழுங்கிச் சூல் முதிரிந்து சரவணப்பொய்கையிற் பதுமப்பாயலிலே பெற்ற நிலையில் முருகப் பெருமான் ஆறு குழந்தை வடிவாக வளர்ந்தமை கூறிற்று. முருகப்பெருமானது தோற்றம் பற்றிய இப்புராண வரலாறு பாயிரும் பனிக்கடல் எனத் தொடங்கும் ஐந்தாம் பரிபாடலில் விரித்துரைக்கப் பெற்றமை முன்னர் விளக்கப்பெற்றது. முருகவேட்டுத் தந்தையாகிய சிவபெருமான் கல்லால மரத்தின் கீழமர்ந்து முனிவர்க்கு அருமறைப் பொருளை அறிவுறுத்திய செய்தி, ஆல்கெழு கடவுட் புதல்வ எனவரும் இத்திருமுருகாற்றுப்படைத் தொடராலும், ஆலமர் செல்வன் அணிசால்மகன் (கலி. 83) எனவரும் கலித்தொகைத் தொடராலும் குறிக்கப் பெற்றுள்ளமை காணலாம். கடைச்சங்க காலத்தில் வாழ்ந்த வள்ளல் எழுவருள் ஒருவனும் வெற்றி தரும் விற்படை யின்னும் யார்கண்ணும் ஆர்வ மொழியுடையவனுமாகிய ஆய் என்பான், பாம்பு ஈன்று கொடுத்த ஒளிவிளங்கும் நீல நிறத்தினையுடைய ஆடையினை ஆலின் கீழமர்ந்து அற முரைத்தருளிய நாயனாராகிய தென்முகக் கடவுள் திருமேனிக்கு நெஞ்சுமகிழ்ந்து கொடுத்தனன். இச்செய்தி, நிழல்திகழ் நீலநாகம் நல்கிய கலிங்கம் ஆலமர் செல்வற்கு அமர்ந்தனன் கொடுத்த சாவம் தாங்கிய சாந்துபுலர் திணிதோள் ஆர்வ நன்மொழி ஆயும் (சிறுபாண். 94-99) எனவரும் சிறுபாணாற்றுப் படைத் தொடரால் இனிது விளங்கும். இதனால் சிவபெருமானுக்குரியனவாக வைத்து வழிபடப்பெறும் பல்வேறு திருவுருவங்களில் ஆலின் கீழறமுரைத்த நாயனாராகிய தென்முகக் கடவுள் (தட்சிணாமூர்த்தி) திருவுருவம் மிகவும் தொன்மை வாய்ந்ததென்பது நன்கு புலனாம். தென்னவற் பெயரிய துன்னருந்துப்பிற் றொன்முது கடவுட் பின்னர் மேய வரைத்தா ழுருவிப் பொருப்பிற் பொருந (மதுரைக். 40-42) எனவரும் மதுரைக் காஞ்சித் தொடருக்கு, இராவணனைத் தமிழ்நாட்டை ஆளாதபடி போக்கின கிட்டுதற்கு அரிய வலியினையுடைய பக்க மலையிலே விழுகின்ற அருவியினையுடைய பொதியின் மலையிலிருக்கும் அகத்தியன் பின்னே எண்ணப்பட்டுச் சான்றோனாயிருத்தற்கு மேவின ஒப்பற்றவனே எனப் பொருள் வரைந்த நச்சினார்க்கினியர், இராவணன் தென்றிசையாண்டமை பற்றித் தென்னவன் என்றார், இப்பெயர் பாண்டியற்கும் கூற்றுவதற்கும் ஏற்று நின்றாற்போல அகத்தியனைத் தென்றிசையுயர்ந்த நொய்ம்மை போக இறைவனுக்குச் சீரொப்ப இருந்தான் என்பது பற்றிக் கடவுள் என்றார். இராவணன் ஆளுதல் பாயிரச் சூத்திரத்து உரையாசிரியர் கூறிய உரையானும் உணர்க................. இதனால் அகத்தியனுடன் தலைச்சங்கத்துப் பாண்டியன் இருந்து தமிழாராய்ந்த சிறப்புக் கூறினார் என விளக்கமும் வரைந்துள்ளார். இத்தொடரில் தென்னவன் என்றது இராவணனை என நச்சினார்க்கினியர் விளக்கியுள்ளமை ஏற்புடையதேயாகும். எனினும் இங்குத் தென்னவற் பெயரிய தொன்முதுகடவுள் என்றது, முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம் பொருளாகிய சிவபெருமானை என்பது நச்சினார்க்கினியர்க்கு முற்பட்ட பழைய உரையாசிரியர்கள் கருத்தென்பது, கூற்றுவனை யுதைத்த கடவுள் என்று இறைவனாக்கி அவன் பின்னர் என்றது அகத்தியனையென்று பொருள்கூறின், இறைவனுக்குத் தம்பியென்றல் சாலாமையானும், அப்பொருள் (தம்பியென்றபொருள்) தருங்காலத்து, முன்னவன் பின்னவன், முன்னோன் பின்னோன் என்றல்லது அச்சொல் நில்லாமையானும் அது பொருந்தாது என நச்சினார்க்கினியர் அவ்வுரையை மறுத்தலால் உய்த்துணரப்படும். தென்னவன் என்ற சொல் இராவணன் என்ற பொருளிலும் தென்றிசைக்கோனாகிய கூற்றுவன் என்ற பொருளிலும் ஒப்ப வழங்குதலால் தென்னவன் என்பதனை இராவணன் எனக்கொண்டு இராவணன் கயிலாய மலையைப் பெயர்த்தெடுத்த காலத்து அவனைத் தன் திருவடிப் பெருவிரலொன்றினால் அழுத்தி மலைக்கீழடர்த்தருளிய சிவபெருமான் செயலைக் குறிப்பதே தென்னவற் பெயரிய துன்னருந்துப்பிற் றொன்முது கடவுள் எனவரும் இம்மதுரைக் காஞ்சித்தொடர் எனக் கொள்ளுதல் ஏற்புடையதாகும். தென்னவன் மலையெடுக்கச் சேயிழை நடுங்கக் கண்டு மன்னவன் விரலாலூ ன்ற மணிமுடி நெரிய வாயால் கன்னலின் கீதம்பாடக் கேட்டவர் (4-43-10) எனவரும் திருநாவுக்கரசர் வாய்மொழி இங்கு ஒப்புநோக்கி யுணரத் தகுவதாகும். தொன்முது கடவுளாகிய சிவபெருமான் வடதிசையிற் கயிலாய மலையிற் கோயில் கொண்டிருப்பது போன்று தென்றிசையிலுள்ள பொதியில் மலையிலும் எழுந்தருளியுள்ளார் என்பது, பொதியில்மேய புராணனை (4-15-10) எனவரும் அப்பர் அருள்மொழியால் நன்கு தெளியப்படும். தமிழகத்து முடியுடைவேந்தராகிய சேர சோழ பாண்டியர்களுள் திங்கள் மரபினராகிய பாண்டியர் மரபில் அங்கயற்கண்ணியம்மை தோன்றினமையால் அம்மரபு அம்மையப்பனாகிய சிவபெருமானது தொடர்பு பெற்ற மரபாயிற்று என்பது திருவிளையாடற் புராண நிகழ்ச்சிகளால் உய்த்துணரப்படும். நம்பி திருவிளையாடல், பரஞ்சோதி திருவிளையாடல் முதலிய புராணங்கள் காலத்தாற் பிற்பட்டவையாயினும் அவற்றுட் கூறப்படும் இறைவன் திருவிளை யாடல்கள் அறுபத்து நான்கினுள் கடல் சுவறவேல்விட்டது, இந்திரன் ஆரம்தாங்கியது, மேகத்தைச் சிறைப்படுத்தியது, இந்திரன் முடிமேல் வளையெறிந்தது முதலிய சில திருவிளையாடல்களுக்குரிய மரபுவழிச் செய்திகள் சில சங்க இலக்கியத்திலும் சிலப்பதிகாரத்திலும் இடம் பெற்றுள்ளன என எண்ணுதற்கு இடமுண்டு. அடியிற் றன்னள வரசர்க் குணர்த்தி வடிவேலெறிந்த வான்பகை பொறாது பஃறுளியாற்றுடன் பன்மலையடுக்கத்துக் குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள வடதிசைக் கங்கையும் இமயமுங்கொண்டு தென்றிசையாண்ட தென்னவன் வாழி திங்கட் செல்வன் திருக்குலம் விளங்கச் செங்கணா யிரத்தோன் திறல்விளங்கு ஆரம் பொங்கொளி மார்பிற் பூண்டோன்வாழி முடிவளையுடைத்தோன் முதல்வன் சென்னியென் றிடியுடைப் பெருமழை யெய்தாதேகப் பிழையா விளையுட் பெருவளஞ்சுரப்ப மழை பிணித்தாண்ட மன்னவன் வாழ்கெனத் தீதுதீர் சிறப்பிற் றென்னனை வாழ்த்தி (சிலப். காடுகாண். 17-29) எனவரும் சிலப்பதிகாரத் தொடரில் திருவிளையாடற் புராணச் செய்திகள் சிலவற்றுக்குரிய மூலங்கள் இடம் பெற்றுள்ளமை காணலாம். பாண்டியர் மரபு சிவபெருமானொடு தொடர்புடையதாய்த் தெய்வநலம் பெற்றுத் திகழுந்திறத்தினைச் சேர முனிவராகிய இளங்கோவடிகள், மறைமுது முதல்வன் பின்னர் மேய பொறையுயர் பொதியிற் பொருப்பன் (சிலப். வேட்டுவவரி) எனவரும் தொடரில் தெளிவாகக் குறித்துள்ளார். இத்தொடர்ப் பொருளை விளக்க வந்த அரும்பதவுரையாசிரியர், மறைமுது முதல்வன் - மாதேவன், இவன் பின்னர் அகத்தியராகிய கடவுள், பொருப்பன் - பாண்டியன் எனப் பொருள் வரைந்துள்ளார். இங்குள்ள பின்னர் என்னும் இடப்பெயர் வழிமுறை என்ற பொருளைத் தருவதன்றிப் பின்வந்தவன் என்ற பொருளில் அகத்திய முனிவரைக் குறித்தல் இயலாது. எனவே மறைமுது முதல்வன் பின்னர் மேயபொருப்பன் என்றது, மாதேவனாகிய சிவபெருமான் அருள் மரபில் வந்த பாண்டியன் என்ற பொருளில் வழங்கப் பெற்றதெனவே கொள்ள வேண்டியுளது. மறைமுது முதல்வன் பின்னர் மேய பொறையுயர் பொதியிற் பொருப்பன் எனவரும் இளங்கோவடிகள் வாய்மொழி, தென்னவற் பெயரிய துன்னருந்துப்பிற் றொன்முது கடவுட் பின்னர்மேய வரைதாழருவிப் பெருப்பிற்பொருந (மதுரைக் காஞ்சி. 40-42) எனவரும் மாங்குடி மருதனார் வாய்மொழியினை அடியொற்றி அமைந்திருத்தலால் தொன்முது கடவுள் என மாங்குடி மருதனாராலும் மறைமுது முதல்வன் என இளங்கோவடிகளாலும் குறிக்கப்பெற்றவர் சிவபெருமானே என்பதும் அம்முதல்வனது அருள்வழியமைந்தது பாண்டியர் மரபென்பதும் நன்கு துணியப்படும். நஞ்சுண்டுகண்டங்கறுத்தமை உண்டவர்கட்குச் சாவாமையினையும் மூவாமையினையும் தரும் அமிழ்தத்தைப் பெறுதல் வேண்டித் தேவர்களும் அசுரர்களும் கூடிப் பாற்கடலைக் கடைந்தபொழுது உலகவுயிர்கள் நடுங்கும்படி தோன்றிய ஆலகால நஞ்சினைத் தேவர்கள் வேண்டிக்கொண்ட வண்ணம் சிவபெருமான் உட்கொண்டு புறம் போகாமல் கண்டத்தில் அடக்கிக்கொண்டு மன்னுயிர்களைக் காத்தருளினார். அதனால் காரியுண்டிக் கடவுள் என்பது அவர்க்குரிய திருப்பெயராயிற்று. காரி - கருமை நிறமுடைய நஞ்சு. நஞ்சுண்ட பெருமானாகிய அவரது மிடறு அகத்தே நஞ்சக்கறை பொருந்தியிருத்தலால் கறைமிடறு எனவும் மறுமிடறு எனவும் புறத்தே நீலமணி போலும் நிறத்தினைப் பெற்று ஒளிர்தலால் திருநீல கண்டம் எனவும் மணிமிடறு எனவும் வழங்கப் பெறுவதாயிற்று. நஞ்சுண்ட கண்டனாகிய சிவபெருமானைக் காரியுண்டிக் கடவுள், கறைமிடற்றண்ணல், நீலமணிமிடற்றொருவன், மணிமிடற்றண்ணல், மணிமிடற்றந்தணன், மணிமிடற்று எண்கையான் எனச் சங்க இலக்கியங்கள் பரவிப் போற்றுகின்றன. சங்ககாலத்தில் நன்னன்சேய் நன்னன் என்னும் குறுநில மன்னனது ஆட்சிக்கு உட்பட்ட நிலப்பரப்பில் அமைந்திருந்ததும் இக்காலத்தில் வடவார்க்காடு மாவட்டத்தில் திரிசூலகிரியென்னும் பெயருடன் விளங்குவதும் ஆகிய பெரும்புகழ் வாய்ந்த நவிரமலையின் உச்சியிலே காரியுண்டிக் கடவுளாகிய சிவபெருமானுக்குச் சிறப்புடைத்தாகிய திருக்கோயில் அமைக்கப் பெற்றிருந்ததென்பது, பேரிசை நவிரம் மேஎயுறையும் காரியுண்டிக் கடவுள தியற்கையும் (மலைபடு. 81-82) எனப் பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார் என்னும் புலவர் பெருமான் அத்திருக்கோயிலைச் சிறந்தெடுத்துக் கூறுதலால் இனிது விளங்கும். நவிரமலையிற் கோயில் கொண்டருளிய சிவபெருமான் அவனருளாலன்றி உயிர்களது அறிவால் உணர்ந்து பரவுதற்கு அரிய முறைமையினையுடைய முழுமுதற்கடவுள் என்பதனை அறிவுறுத்தும் நிலையிற் பராவரு மரபிற் கடவுள் (மலைபடு. 280) என்றார். சிந்தைக்கும் மொழிக்கும் எட்டாத நிலையில் மக்களால் உணர்ந்து பரவுதற்கு அரிய முறைமையினையுடைய கடவுள் என்பது மேற்காட்டிய தொடரின் பொருளாகும். யாழின் நரம்போசையுடன் இயைந்து பாடுதற்குரிய இனிய குரலினையுடைய விறலியர்கள் தொன்றுதொட்டு ஒழுகும் முறைமையாகிய தம் இயல்பில் வழுவாமல் (பிறர் யாவராலும்) பொறுத்தற்கு இயலாத பேராற்றல் வாய்ந்த முழுமுதற் கடவுளை முதற்கண் வாழ்த்தின பின்னரே தாம் இசையரங்கிற் பாடுதற்குரிய புதிய இசைப் பாடல்களைப் பாடுதல் மரவு. இம்மரபு, கடவ தறிந்த இன்குரல் விறலியர் தொன்றொழுகு மரபின் தம்மியல் வழாஅது அருந்திறம் கடவுட் பழிச்சிய பின்றை விருந்திற் பாணி கழிப்பி (மலைபடு. 536-538) என மலைபடுகடாத்தில் விரித்துரைக்கப்பெற்றது. எட்டுத் தொகை நூல்களுள் ஐங்குறுநூறு கலித் தொகை, அகநானூறு, புறநானூறு என்னும் தொகை நூல்கள் நான்கினுக்கும் அமைந்த கடவுள் வாழ்த்துப் பாடல் சிவபெருமானைப் போற்றுவனவே. இவற்றுள் கலித்தொகைக்கு அமைந்த கடவுள் வாழ்த்து நெய்தற்கலி பாடிய ஆசிரியர் நல்லந்துவனாராற் பாடப்பெற்றதாகும். ஏனைய மூன்றும் பாரதம் பாடிய பெருந்தேவனாராற் பாடப் பெற்றனவாகும். பதிற்றுப்பத்து என்னும் தொகை நூல் முன்னுள்ள முதலாம் பத்தும் இறுதியிலுள்ள பத்தாம் பத்தும் கிடைக்காமையால் அதன் முன்னுள்ள கடவுள் வாழ்த்தும் கிடைத்திலது. தொல்காப்பியம் புறத்திணையியல் 26ஆம் சூத்திரவுரையில் கடவுள் வாழ்த்துக்கு உதாரணமாக நச்சினார்க்கினியர் காட்டிய பாடல், எரியெள்ளுவன்ன நிறத்தன் விரியிணர்க் கொன்றையம் பைந்தார் அகலத்தன் பொன்றார் எயில் எரியூட்டிய வில்லன் பயிலிருட் காடமர்ந்தாடிய ஆடலன் நீடிப் புறம்புதை தாழ்ந்த சடையன் குறங்கறைந்து வெண்மணியார்க்கும் விழவினன் நுண்ணுற் சிரந்தை யிரட்டும் விரலன் இரண்டுருவாய் ஈரணிபெற்ற எழிற்றகையனேரும் இளம்பிறை சேர்ந்த நுதலன் களங்கனி மாறேற்கும் பண்பின் மணிமிடற்றன் தேறிய சூலம் பிடித்த சுடர்ப்படைக் காலக்கடவுட் குயர்கமா வலனே என்பதாகும். இது பதிற்றுப்பத்து என்னும் தொகை நூலுக்குரிய கடவுள்வாழ்த்துப் பாடலாக இருத்தல் வேண்டும் என்பது அறிஞர் சிலரது கருத்தாகும். இப் பாடலைப் பாடியவர் சங்கத்தொகை நூல்கள் பலவற்றுக்குக் கடவுள் வாழ்த்துப் பாடிய பாரதம் பாடிய பெருந்தேவனாராக இருத்தல் கூடும் எனக்கருதுவர் சிலர். பாடியோர் யாவராயினும் இப்பாடல் சங்ககாலச் செய்யுள் நடையினை அடியொற்றியதென்பதனை அறிஞர் பலரும் உடன்படுவர் என்பதில் ஐயமில்லை. சுடர்விட்டொளிரும் தீயின் நிறத்தினையும் ஒவ்வாதென்று இகழ்ந்தாலொந்த செந்நிற வொளி வாய்ந்த திருமேனியை யுடையான். விரிந்த கொத்துக்களையுடைய அழகிய கொன்றை மலர்மாலையை அணிந்த மார்பினை யுடையான். உலகவுயிர்கட்கு இடர்விளைக்கும் பகைவராகிய அவுணர்கள் வாழ்ந்த முப்புரங் களையும் தீக்கு இரையாக்கிய (மேரு மலை யாகிய) வில்லினை ஏந்தியவன், செறிந்த நள்ளிருளிலே சுடுகாட்டினையே அரங்காக விரும்பி ஆடும் கூத்தினை யுடையான். தொடையளவும் சார்ந்து ஒலித்து வெள்ளிய மணி ஆரவாரிக்கும் விழவினையுடையான். நுண்ணிய கயிற்றாற் பிணிக்கப்பட்ட உடுக்கை யினை இரட்டுறவொலிக்கும் விரலினை யுடையான், (வலப்பக்கம் ஆணுருவும் இடப் பக்கம் பெண்ணுருவும் என) இரண்டுருவும் ஒருங்கியைந்த அம்மையப்பர் உருவுடையனாய் அவ்விரண்டுருவிற்கேற்ற இருவகையணி களையும் பெற்ற அழகினை யுடையான், ஒத்த இளம் பிறை சேர்ந்து விளங்கும் நெற்றி யினையுடையான், களாக்கனியொடு நிறத்தால் உறழும் நீலகண்டத்தையுடையான், (மன்னுயிர் களின் மும்மலப் பிணிப்பினைக் களைவது எனத்) தெளிந்த மூவிலைச் சூலமாகிய சுடர் விட்டொளிரும் படையினை ஏந்திய காலத் தைக் கடந்த கடவுளாகிய இறைவனுக்கு வெற்றி மேன்மேல் உயர்வதாகுக என்பது மேற்குறித்த கடவுள் வாழ்த்துப் பாடலின் பொருளாகும். இப்பாடல் சிவபெருமான் திருமேனியின் எழில் வண்ணத்தினையும் அம்முதல்வன் அருட்செயல்களையும் பரவிப் போற்றும் முறையில் அமைந்துள்ளமை அறியத்தகுவதாகும். இனி, சிவபெருமானைக் குறித்துப் பாரதம் பாடிய பெருந்தேவனார் பாடிய கடவுள் வாழ்த்துப பாடல்கள் மூன்றினையும் தொகுத்து நோக்குவோமாக, அம் மூன்றனுள் ஐங்குறுநூற்றுக் கடவுள் வாழ்த்தாக அமைந்தது, நீலமேனி வாலிழை பாகத் தொருவன் இருதாள் நிழற்கீழ் மூவகையுலகும் முகிழ்த்தன முறையே எனவரும் பாடலாகும். நீலநிறம் வாய்ந்த திருமேனியினையும் தூய அணிகலங்களையும் உடைய உமா தேவியாரை ஒருபாகத்திற் கொண்ட ஒப்பற்ற முதல்வனாகிய சிவபெருமானுடைய திருவடி நீழலின்கண்ணே மேல், கீழ், நடுவென்னும் மூவகையுலகங்களும் முறையே தோன்றின என்பது இதன்பொருளாகும். கார்விரி கொன்றைப் பொன்னேர் புதுமலர்த் தாரன் மாலையன் மலைந்த கண்ணியன் மார்பினஃதே மையினுண்ஞாண் நுதல திமையா நாட்டம் இகலட்டுக் கையது கணிச்சியொடு மழுவே மூவாய் வேலு முண்டத் தோலா தோற்கே ஊர்ந்ததேறே சேர்ந்தோள் உமையே செவ்வா னன்னமேனி யவ்வான் இலங்கு பிறையன்ன விலங்குவால் வையெயிற் றெரியகைந் தன்ன வவிர்ந்து விளங்கு புரிசடை முதிராத் திங்களொடு சுடருஞ்சென்னி மூவா வமரரும் முனிவரும் பிறரும் யாவரு மறியாத் தொன்முறை மரபின் வரிகிளர் வயமா னுரிவை தைஇய யாழ்கெழு மணிமிடற்றந்தணன் தாவில் தாணிழல் தவிர்ந்தன்றால் உலகே என்பது அகநானூற்றுக் கடவுள் வாழ்த்தாகும். கார் காலத்து மலரும் கொன்றையின் பொன்போலும் பூக்களால் இயன்ற (தோளில் அணிந்த) தாரினையும் (மார்பில் அணிந்த) மாலையினையும் (முடியிற்சூடிய) கண்ணியினையும் உடையான் குற்றம் இல்லாத நுண்ணிய புரிநூல் அவன் மார்பின் கண்ணது. இமையாத கண் (மூன்றனுள் ஒன்று) அவன் நெற்றியின் கண்ணது; குந்தாலியொடு மழுப்படை பகையினையழித்து அவன் கையின் கண் உள்ளது, யாவர்க்குந் தோலாதானாகிய அவனுக்கு முத்தலைக் சூலப்படையும் உண்டு. அவன் ஊர்தியாகக் கொண்டு செலுத்துவது ஆனேறு ஆகும். அவனைச் சேர்ந்து பிரிவின்றி விளங்கும் தேவியாவாள் உமையம்மையே, மாலைக் காலத்துச் செவ்வானத்தை யொத்து விளங்கும் அவனது திருமேனியின்கண் அத்தகைய வானிடத்தே விளங்கும் வெள்ளிய பிறையினைப் போன்று குறுக்கிட்டு விளங்கும் கூரிய பன்றிக் கொம்பினையும் தீயானது சுடர்விட்டு எரிந்தாலொத்து விளங்கும் செஞ்சடையினையும் (அத்தகைய சடைமீது அணியப்பெற்ற) மூவாத இளம்பிறையுடன் திகழும் சென்னியினையும், என்றும் முதுமையடையாத தேவர்களும் முனிவர்களும் பிறரும் ஆகிய யாவராலும் அறிய வொண்ணாத தொன்மை வாய்ந்த இறைமைத் தன்மையினையும் உடையனாய் வரிகளோடு தோன்றும் வலிய புலியின் தோலையுடுத்த, யாழிசை போலும் இனிய குரலும் நீலமணி போலும் நிறமும் ஒளியும் வாய்ந்த எவ்வுயிர்க்கும் அழகிய தண்ணளியைப் புரிவோனாகிய சிவபெருமானது வருத்தமில்லாத வலிய திருவடி நிழலின் கண்ணே இவ்வுலகம் தங்கியுள்ளது என்பது இப்பாடலின் பொருளாகும். இசை திரிந் திசைப்பினும் இயையுமன் பொருளே அசை திரிந் திசையா என்மனார் புலவர் (தொல். பொருளியல் 1) எனவரும் தொல்காப்பியச் சூத்திரவுரையில், சொல்லொடு சொல் தொடர்வுபடும் வாய்பாட்டால் தொடராது பிறிதோர் வாய்பாட்டால் தொடுப்பினும் பொருட்டொடர்பு உண்டாயின் பொருள் இயையும். அவ்வழி அசைச்சொற்கள் திரியாது நின்ற நிலையே பொருள்படும் என்பதற்கு இப்பாடலை உதாரணமாகக் காட்டுவர் இளம்பூரணர். இதற்குக் கொன்றையாலமைந்த தாரினனாய் மாலையனாய்க் கண்ணியனாய் நுண்ஞாண் மார்பினனாய் இமையா நாட்டத்து நுதலினனாய்க் கணிச்சியும் மழுவும் மூவாய்வேலும் ஏந்திய கையினனாய் யாவர்க்குந் தோலா தோனுமாய் ஏற்றினையும் ஊர்ந்து உமையாளையுஞ்சேர்ந்து செவ்வான் அன்ன மேனியையும் பிறைபோன்ற எயிற்றினையும் எரி போன்ற சடையினையும் திங்களோடு சுடருஞ்சென்னியையும் உடையனாய் மூவா அமரர் முதலிய யாவரும் அறியாத்தொன்முறை மரபினனாய்ப் புலியதளையும் உடுத்த யாழ்கெழு மணிமிடற்று அந்தணனது சிவானுபூதியிற் பேருலகம் தங்கிற்று எனப் பொருள் உரைத்தார் இளம்பூரணர். யாழ்கெழு மணிமிடற்று அந்தணனாகிய சிவபெருமானது திருவடித் துணையே மன்னுயிர்கட்குப் பிறவியாகிய வெப்பத்தினை நீக்கி வீடுபோறாகிய தண்ணிழலைத் தந்தருளும் என்பது தோன்றத் தாள்நிழல் என்றார். தவிர்ந்தன்று தங்கியது தாள்நிழல் என்பதற்குச் சிவானுபூபதி எனவும் உலகு என்றது உயர்ந்தோராகிய சிவஞானிகளைக் குறிக்கும் என்பது தோன்றப் பேருலகம் எனவும் இளம்பூரணர் உரைவரைந்துள்ளார். இவரது உரை விளக்கம், நலம் புரிகொள்கைப் புலம் பிரிந்துறையும் செலவு (திருமுருகு. 63) எனவரும் திருமுருகாற்றுப்படைத் தொடரையும் இறைவன் திருவடியே மன்னுயிர்கட்கு வீடுபேறாயிருக்கும் என்ற கருத்தமையத் தென்னன் பெருந்துறையான் ...... தாட்டாமரை காட்டித் தன் கருணைத் தேன்காட்டி (திருவாசகம், திருவம்மானை) என வரும் திருவாசகத் தொடரையும் நினைவு கூரும் முறையில் அமைந்துள்ளமை இங்கு மனங்கொளத் தகுவதாகும். கண்ணி கார்நறுங் கொன்றை காமர் வண்ண மார்பில் தாரும் கொன்றை ஊர்திவால் வெள்ளேறே சிறந்த சீர்கெழு கொடியும் அவ்வேறென்ப கறைமிடறணியலும் அணிந்தன்று, அக்கறை மறைநவில் அந்தணர் நுவலவும் படுமே பெண்ணுரு வொருதிறனாகின்று, அவ்வுருத் தன்னுளடக்கிக் கரக்கினும் கரக்கும் பிறை நுதல்வண்ணமாகின்று, அப்பிறை பதினெண் கணனும் எத்தவும்படுமே எல்லாவுயிர்க்கும் ஏமமாகிய நீரற வறியாக் கரகத்துத் தாழ்சடைப் பொலிந்த அருந்தவத் தோற்கே என்பது புறநானூற்றுக் கடவுள் வாழ்த்தாகும். எவ்வகைப் பட்ட உயிர்களுக்கும் காவலாகிய நீர்தொலைவறியாக் குண்டிகையாலும் தாழ்ந்த திருச்சடையாலும் பொலிவு பெற்றுத் தோன்றும் செய்தற்கு அரிய தவத்தையுடையோனாகிய இறைவனுக்கு திருமுடிமேற் சூடப்படுங்கண்ணி கார்காலத்து மலரும் நறிய கொன்றைப்பூ, அழகிய நிறத்தையுடைய திருமார்பின் மாலையும் அக்கொன்றைப்பூ; ஏறப்படுவது தூயவெளிய ஆனேறு, மிக்க பெருமை பொருந்திய கொடியும் அவ் ஆனேறென்று சொல்லுவர், நஞ்சினது கறுப்பு திருமிடற்றை அழகு செய்தலுஞ் செய்தது, அக்கறுப்பு, தான் மறுவாயிருந்தும் தேவர்களை உய்யக் கொண்டமையால் வேதத்தைப் பயிலும் அந்தணர்களாற் புகழவும் படும். பெண் வடிவு ஒருபக்கம் (இடப்பக்கம்) ஆயிற்று, ஆகிய அவ்வடிவுதான் (ஊழிக்காலத்தில்) தன்னுள்ளே ஒடுக்கி மறைக்கினும் மறைக்கப்படும், பிறையானது திருநுதலுக்கு அழகாகியது. அப்பிறைதான் பெரியோன் சூடுதலால் பதினெண் கணங்களாலும் புகழவும்படும் என்பது இதன் பொருள். தன்னுள் அடக்கிக் கரக்கினும் கரக்கும் என்பதற்கு, ஒரு பாலாய அப்பெண் வடிவுதான் உலகம் எல்லாம் ஒடுங்கிய உழிக்காலத்தில் இறைவன் வடிவினுள்ளே ஒடுக்கி மறைக்கினும் மறைக்கப்படும் எனப்பொருள் கொண்ட பழையவுரையாசிரியர் தன்னுள் அடக்கிக் கரக்கினம் கரக்கும் என்பதற்கு இறைவனது ஒரு கூற்றில் தோன்றும் அப்பெண் வடிவுதான் எல்லாப் பொருளையும் தன்னுள்ளேயடக்கி அவ்விறைவன் கூற்றிலே மறையினும் மறையும் என்று உரைப்பினும் அமையும் என்று மீண்டும் கூறிய பொருள் மிகவும் பொருத்தமுடைய தாகும். எல்லா வுயிர்க்கும் ஏமமாகிய அருந்தவத்தோன் எனச் சிவபெருமானைக் கூறுதலால் எல்லாவுயிர்கட்கும் சார்பாயுள்ளவன் செம்பொருளாகிய அவ்விறைவனே என்பது நன்கு புலனாதல் காணலாம். சிவபெருமானைப் போற்றிப் பெருந்தேவனார் பாடிய மேற்குறித்த கடவுள் வாழ்த்துப் பாடல்கள் மூன்றிலும் இறைவனாகிய சிவபெருமான் ஒருவனே ஆணும் பெண்ணும் என இருவடிவினையும் ஒருங்கே பெற்றுப் பிரிவின்றி விளங்கும் திறமும் அவனது திருவடியினை ஆதாரமாகக் கொண்டு உலகம் தோன்றி நிலைபெற்று ஒடுங்கும் முறையும் கொன்றை மலர் மாலை அம்முதல்வனுக்குரிய அடையாள மாலையாதலும் அந்தணனாகிய அவன் மார்பில் நுண்ணுல் திகழ்தலும் நெற்றிக் கண்ணினையுடைய அம்முதல்வன் கணிச்சி, மழு. மூவாய்வேல் ஆகிய படைக்கலங்களை யேந்தியுள்ளமையும் சிவபெருமான் வெள்ளைநிறம் வாய்ந்த ஆனேறாகிய இடபத்தினை ஊர்தியாகவும் கொடியாகவும் கொண்டுள்ளமையும் செம்மேனியும் மானாகிய அவன் தன் சடையில் பிறைத்திங்களையணிந்துள்ளளமையும் நஞ்சக்கறை பொருந்திய திருநீலகண்டத்தையுடையனாதலும் புலித்தோலை உடையாகவுடுத்துள்ளமையும் நீர்குறைதலறியாத குண்டிகையைத் தாங்கிய அரிய தவக்கோலத்தினையுடைய அம்முதல்வன் எல்லாவுயிர்கட்கும் பாதுகாவலாய் விளங்கும் அருளின் திறமும் விரித்துரைக்கப் பெற்றுள்ளமை காணலாம். இங்ஙனம் உலகம் தோன்றி நின்று ஒடுங்குதற்கும் மன்னுயிர்கள் துன்பந்தவிர்ந்து இன்பமே எந்நாளுந் துன்பமில்லை என அமைதியான பேரின்ப வாழ்வைப் பெறுதற்கும் காரணமாகிய இறைவன் திருவடிகள் மனமொழி மெய்களால் வணங்குவார்க்கு அறம்பொருள் இன்பம் வீடு என்னும் நான்கினையும் பயக்கும் என்பது இக்கடவுள் வாழ்த்துப் பாடல்களின் கருத்தாகும். உமையொருபாகன் உலகுயிர்களை இயக்கியருளும் ஒப்பற்ற பேரறிவுப் பொருளாகிய முழுமுதற் பொருள் ஒன்றே என்பது தமிழ் முன்னோர் கொள்கையாகும். ஒருவனே தேவனும் எனவரும் திருமூலர் வாய்மொழியும், ஒருவன் என்னும் ஒருவன் காண்க (திருவாசகம்) எனவரும் திருவாதவூரடிகள் வாய்மொழியும் தமிழரது ஒரு தெய்வக்கோட்பாட்டினை நன்கு வலியுறுத்துதல் இங்கு நினைக்கத் தகுவதாகும். காண்டற்கரிய கடவுளாகிய அவ்வொருபொருளே, உலகுயிர்களில் தோய்வின்றித் தானே திகழொளியாய்த் தனித்து நிற்கும் நிலையிற் சிவம் எனவும், அதுவே உலகெலாமாகிவேறாய் உடனுமாய் இவ்வாறு மன்னுயிர்களின் பொருட்டு அருளாய் விரிந்து உலகுயிர்களுடன் இரண்டறக் கலந்து நின்று உயிர்களை உய்வித்தருளும் நிலையிற் சத்தி எனவும் இருநிலையில் வைத்துப் போற்றப் பெறுகின்றது. உலகப் பொருளை விளக்கும் ஞாயிறு ஒன்றே தன்னிலையில் தனித்து விளங்குந்திறத்திற் கதிரவன் எனவும் உலகப் பொருள்கள் தோறும் இரண்டறக் கலந்து நிற்குந் திறத்திற் கதிர் எனவும் இருதிறமாகப் பிரித்துப் பேசப்படுதல் போன்று முழுமுதற் பொருள் ஒன்றுதானே தனித்து நிற்குத் தன்னிலையிற் சிவம் எனவும், உலகுயிர்களுடன் விரவி நிற்கும் நிலையிற் சத்தி எனவும் இருதிறமாகப் பகுத்துப் பேசப்படுவதாயிற்று. இவ்வாறு தனிமுதற் பொருளாகிய ஒன்றையே சத்தியும் சிவனும் என இரு நிலைமையதாக வைத்து எண்ணிப் போற்றுதல் நம் நாட்டில் தொன்றுதொட்டு நிலவிவரும் கடவுள் வழிபாட்டு மரபாகும். இத்தொன்மை மரபு, நீலமேனி வாலிழைபாகத்து ஒருவன் என ஐங்குறுநூற்றுக் கடவுள் வாழ்த்துப் பாடலிலும், சேர்ந்தோள் உமையே என அகநானூற்றுக் கடவுள் வாழ்த்துப் பாடலிலும் பெண்ணுருவொரு திறனாகின்று அவ்வுருத் தன்னுள் அடக்கிக் கரக்கினும் கரக்கும் எனப் புறநானூற்றுக் கடவுள் வாழ்த்துப் பாடலிலும் இடம் பெற்றுள்ளமை காணலாம். இம்மரபினை யடியொற்றியதே திருக்குறள் கடவுள் வாழ்த்தில் வரும் ஆதிபகவன் என்னும் திருப்பெயராகும். உயிர்ப் பொருள் உயிரல் பொருள் ஆகிய எவ்வகைப் பொருள்களிலும் நீக்கமறக் கலந்தும் அவற்றின் தன்மை தனக்கு எய்தலின்றி அப்பாற்பட்டு விளங்கும் இறைவன் சத்தியுஞ்சிவமுமாய்ப் பிரிவற நின்றே உலகினைப் படைத்துக் காத்து ஒடுக்கியருள் புரிகின்றான் என்பது நீல மேனிவாலிழை பாகத்து ஒருவன் இருதாள் நிழற்கீழ் மூவகையுலகும் முறையே முகிழ்த்தன என உலகத் தோற்றத்தைப் பற்றியும், யாழ்கெழு மணிமிடற்று அந்தணன், தாவில் தாள்நிழல் தவிர்ந்தன்றால் உலகே என உலகின்நிலை பேறுபற்றியும், பெண்ணுரு வொருதிற னாகின்ற அவ்வுருத் தன்னுள் அடக்கிக் கரக்கினும் என உலகின் ஒடுக்கம் பற்றியும் பெருந்தேவனார் குறிப்பிடுதலால் இனிது விளங்கும். தனிமுதலாகிய இறைவன், தனது ஒருமையில் சத்தியும் சிவமும் என இருமைத் தன்மையனாய் அம்மையப்பராகத் தோன்றி உயிர்கட்கு அருள்புரியுந்தொன்மைத் திருக்கோலத்தின் இயல்பினை இறையருளால் உணரப்பெற்ற செம்புலச் செல்வராகிய திருவாதவூரடிகள், அம்மையே அப்பா ஒப்பிலாமணியே என அகங்குழைந்து போற்றியதுடன் தாம் கண்ட தெய்வக்காட்சியை ஏனையோரும் உணர்ந்து போற்றுதல் வேண்டும் என்னும் பெருவேட்கையுடன், தோலுந் துகிலும் குழையுஞ் சுருள்தோடும் பால்வெள்ளை நீறும் பசுஞ்சாந்தும் பைங்கிளியும் சூலுமுந் தொக்க வளையும் உடைத்தொன்மைக் கோலமே நோக்கிக் குளிர்ந்தூ தாய் கோத்தும்பீ (திருக்கோத்தும்பி) எனவரும் திருப்படலிற் புனைந்து போற்றியுள்ளமையும், சீகாழிப்பதியில் பிரம தீர்த்தக்கரையில் நின்றுகொண்டு நீரில் முழுகும் தந்தையாரைக் காணாத நிலையில் திருத்தோணிச் சிகரம் பார்த்து அம்மே அப்பா என அழுதருளிய கவுணியப் பிள்ளையார்க்குத் தோணிண புரத்து இறைவன் தோடுடைய செவியனாகி (அம்மையப்பராகி) விடைமேல் தோன்றிச் சிவஞானப்பால் அருத்தியருளிய திருவருட்செயலும், இவ்வாறே திருத்தொண்டத் தொகையிற் போற்றப்பெறும் அடியார் பலர்க்கும் அம்மையப்பனாக விடைமேல் தோன்றி அருள் புரிந்த நிகழ்ச்சிகளும் திருத்தொண்டர் புராணத்தில் விரித்துரைக்கப் பெற்றுள்ளமையும் இங்கு உளங்கொளத்தக்கனவாகும். திரிபுரம் எரித்தது வானிடத்தே பறந்து திரியும் இயல்பினவாய்ப் பொன், வெள்ளி, இரும்பு என்பவற்றால் இயன்ற மதில்களையுடைய நகரங்கள் மூன்றில் வாழ்ந்த அவுணர்கள், தாம் வாழும் நகருடன் விசும்பிற் பறந்து தேவர் முதலியோர்க்கு இடர்விளைத்தனர். திரியும் முப்புரத்து அவுணர்களால் இடருற்று வருந்திய தேவர்கள் வேண்ட அவர்களுடைய துன்பங்களைப் போக்கத் திருவுளங் கொண்ட சிவபெருமான், பூமியைத் தேராகவும், வேதங்களைத் தேரிற்பூட்டும் குதிரைகளாகவும், நான்முகனைத் தேர்ப்பாகனாகவும், இமயமலையை வில்லாகவும், வாசுகியென்னும் பாம்பினை வில்லின் நாணாகவும், காற்று, தீ, திருமால் ஆகியோரை ஓர் அம்பாகவும் கொண்டு திரியும் முப்புரங்களையும் தம் புன் சிரிப்பினால் எரித்தருளினார் எனப் புராணம் கூறும், இப்புராணச்செய்தி, ஆதியந்தணன் அறிந்து பரிகொளுவ வேதமாபூண் வையத்தேர் ஊர்ந்து நாகம் நாணா மலை வில்லாக மூவகை, ஆரெயில் ஓர் அழல் அம்பின் முளிய மாதிரம் அழல எய்து, அமரர் வேள்விப் பாகம் உண்ட பைங்கட் பார்ப்பான் (பரி. 5. 22-27) என ஐந்தாம் பரிபாடலில் விரித்துரைக்கப்பெற்றது. நான்முகனாகிய பாகன் தேரைச் செலுத்தும் நெறியறிந்து செலுத்த, வேதங்களாகிய குதிரை பூண்ட தேரையேறி, வாசுகியென்னும் பாம்பு நாணாகவும் இமயமலை வில்லாகவும் கொண்டு பொன், வெள்ளி, இரும்பு என்னும் மூவகைப்பட்ட அழித்தற்கரிய மதில்களைத் தீயாகிய ஓர் அம்பினாலே வெந்து நீறாகத் திசைகள் வெதும்ப எய்து அழித்து அமரர்க்குச் செய்யும் வேள்விக் கண்ணே அவிப்பாகத்தையுண் ட பசிய இடப்பாகத்தையுடைய ஈசன் என்பது மேற்குறித்த பரிபாடற் பகுதியின் பொருள். திரிபுரம் எரித்த இச்செய்தி, ஓங்குமலைப் பெருவிற் பாம்புநாண் கொளீஇ ஒருகணை கொண்டு மூவெயில் உடற்றிப் பெருவிறல் அமரர்க்கு வென்றிதந்த கறைமிடற் றண்ணல் (புறநானூறு 55) எனப் புறநானூற்றிற் கூறப்பெற்றது. உயர்ந்த மலையாகிய பெரிய வில்லைப் பாம்பாகிய நாணைக்கொளுவி, ஒப்பில்லாததோர் அம்பை வாங்கி மூன்று மதிலையும் எய்து பெரிய வலியையுடைய தேவர்க்கு வெற்றியைக் கொடுத்த கரிய திருமிடற்றையுடைய இறைவன் என்பது இப்புறப் பாடற்பகுதியின் பொருளாகும். தேறுநீர் சடைக்கரந்து திரிபுரந் தீமடுத்து எனக் கலித்தொகைக் கடவுள் வாழ்த்திலும், அயந்திகழ் நறுங்கொன்றையலங் கலந்தெரியலான் இயங்கு எயில் எ(ய்)யப் பிறந்த எரிபோல எவ்வாயும் கனைகதிர்தெறுதலின் (கலித் 150) என நெய்தற் கலியிலும் இச்செய்தி குறிக்கப் பெற்றுள்ளமை காணலாம். பாலை நிலத்தில் கதிரவன் தெறுதலால் மூங்கில் ஒன்றோடொன்று உராய்தலாற்றோன்றி விசும்பளவும் ஓங்கிப் பரந்தெரியு தீயினுக்கு, இறைவன் திரிபுரத்தை எய்கையினாலே தோன்றி முழங்கும் வெம்மையையுடைய பெருந்தீ இங்கு உவமையாகக் கூறப்பட்டது. கதிரவன் வெப்பத்தால் மலைகள் பிளந்து சிதர்ந்து கிடக்கும் நிலைக்கு, முக்கட் பெருமானாகிய சிவபெருமானது சினத்தால் முப்புரங்களும் நீறாகிச் சிதர்ந்து வீழ்ந்த நிகழ்ச்சியினை உவமையாக எடுத்துக் காட்டும் முறையில் அமைந்தது, தொடங்கற்கண் தோன்றிய முதியவன் முதலாக அடங்காதார் மிடல்சாய அமரர் வந்திரத்தலின் கடந்தடு முன்பொடு முக்கண்ணான் மூவெயிலும் உடன்றக்கால் முகம்போல ஒண்கதிர் தெறுதலின் சீறருங் கணிச்சியோன் சினவலின் அவ்வெயில் ஏறுபெற் றுதிர்வனபோல் வரைபிளந்து, இயங்குநர் ஆறுகெட விலங்கிய அழலவிர் வெஞ்சுரம் (கலித். 1) எனவரும் பாலைக்கலியாகும். இறைவன் உலகுகளைப் படைக்கக் கருதிய இடத்தே அப்படைத்தற்றொழிலைச் செய்தற்கு உரியனாய்த் தோன்றிய முதியவனாகிய பிரமன் முதலாகவுள்ள தேவர்கள் வந்து இரந்து வேண்டிக் கொண்டமையாலே, தமக்குரிய எல்லையளவில் அடங்கி நடவாத அவுணருடைய வலிமையைக் கெடுத்தற்கு கூற்றுவனைப் போன்று சினந்து, வஞ்சனையாளராகிய அவ்வவுணரை வஞ்சியாது எதிர்நின்று கொல்லும் வலியுடனே மூன்று கண்களை யுடைய சிவபெருமான் முப்புரங்களையும் வெகுண்டுநோக்க, அவ்விறைவனுடைய முகம் பகைவரைத் தேறுமாறுபோல ஒளிதங்கிய கதிரவன் சுடுகையினாலே மலைகள் பிளவுபட்டுப் பிறராற் சீறுதற்கரிய மழுப்படையினையுடைய அம்முதல்வன் வெகுளுதலால் முப்புரங்களும் அழித்தலைப் பெற்றுப் பொடியாய் உதிர்வனபோல, வழிபோவார்க்கு வழியில்லாதபடி வீழ்ந்து குறுக்கிட்டுக் கிடந்த வெம்மை விளங்கும் அரிய வழியிடத்தே என்பது மேற்காட்டிய பாலைக்கலியின் பொருளாகும். இதன்கண் கதிரவனது வெப்பத்தால் வானுறவுயர்ந்த மலைகள் பிளந்து கொடியாய்ச் சிதர்ந்து கீழே கிடக்கும் தோற்றத்திற்கு, விசும்பிலே திரியும் இயல்பினவாகிய முப்புரங்களும் முக்கண்ணனாகிய இறைவனது வெகுளியாற் சுடப்பட்டுப் பொடியாகிச் சிதர்ந்து வீழ்ந்து கிடக்கும் தோற்றத்தினைப் பாலை பாடிய பெருங்கடுங்கோ என்னும் புலவர் பெருமான் உவமையாக எடுத்துக்காட்டி விளக்கியுள்ளமை இப்புராணச் செய்தியின் தொன்மையைப் புலப்படுத்துவதாகும். தனக்கு மேலாகத் தொழப்படுந் தெய்வமில்லாத சிறப்பினை யுடைய முழுமுதற் கடவுளாகிய சிவபெருமான் திரிபுரத்தை எரித்த காலத்து இமயமலையாகிய வில்லின் நாணாக அமைந்து புகழப்படும் தொல்புகழைத் தந்தது வாசுகியென்னும் பாம்பே என்பது, பணிவில் சீர் செல்விடைப் பாகன் திரிபுரஞ் செற்றுழிக் கல்லுயர் சென்னி இமயவில் நாணாகித் தொல்புகழ் தந்தாரும் தாம் (பரிபாடல் திரட்டு 1) எனவரும் பரிபாடற் பகுதியால் இனிது விளங்கும். கங்கையைச் சடையிற் கரந்தது பகீரதன் என்பான் தன்குலத்து இறந்த முன்னோர்கள் நற்கதி பெறுதல் வேண்டிக் கடுந்தவம் புரிந்து கொணர்ந்த ஆகாய கங்கையானது, நிலவுலகு தாங்காத பெருவெள்ளமாய்ப் பெருக்கெடுத்து வந்த காலத்துச் சிவபெருமான் அப்பெருவெள்ளத்தைத் தமது செஞ்சடையிற் கரந்தருளினார் எனப் புராணம் கூறும். இச்செய்தி, எரிமலர்த் தாமரையிறை வீழ்த்த பெருவாரி தணிவுறத் தாங்கிய தனிநிலைச் சலதாரி மணிமிடற்றண்ணல் (பரி. 9. 4-7) எனவரும் பரிபாடலிற் குறிக்கப்பெற்றது. அயனால் வீழ்த்தப்பட்ட ஆகாய கங்கையை மலர்ந்து விழும் பூவையொப்ப வேகந்தணியச் சடைப்பாரத்தின்கண் தாங்கிய ஒப்பில்லாத நிலைமையையுடைய சலதாரியாகிய மணிமிடற்றண்ணல் என்பது இத்தொடரின் பொருளாகும். சலதாரி (கங்கை நதியாகிய) சலத்தைத் தரிக்கும் இயல்புடையவன். இமயவில் வாங்கிய ஈர்ஞ்சடையந்தணன் (குறிஞ்சிக் கலி 1) எனக் கபிலரும், பிறங்குநீர் சடைக் கரந்தான் (நெய்தற்கலி 33) என நல்லந்துவனாரும் சிவபெருமான் கங்கையைச் சடையில் தரித்துள்ள அருட்செயலைக் குறிப்பிட்டுப் போற்றியுள்ளமை இங்கு நினைக்கத்தகுவதாகும். கூற்றுவனை உதைத்தது சிவபெருமான் தன்னை அன்புடன் பூசனை புரிந்த அந்தணாளன் ஆகிய மார்க்கண்டேயரது உயிரைக் கவர வந்த கூற்றுவனையுதைத்து மார்க்கண்டேயனாரைச் சாவாது மூவாதிருக்கும்படி உய்வித்தருளினார் என்பது நெடுங்காலமாக நம்நாட்டில் வழங்கி வரும் புராணச் செய்தியாகும். காற்றென விரைந்த கரிய எருதினை அதன்வன்மை கெடத்தழுவி நின்ற ஆயனது அழகிய பெருமிதத் தோற்றத்திற்கு, எருமையேற்றினை ஊர்ந்து வந்த கூற்றுவனது மார்பினைக் காலின் விளிம்பிலே தாக்கி யுதைத்து உயிர்கவர்ந்த சிவபெருமானது தோற்றப் பொலிவினை உவமையாகக் கூறும் முறையில் அமைந்தது, காற்றுப் போல்வந்த காழ்விடைக் காரியை யூற்றுக் களத்தே யடங்கக்கொண் டட்டதன் மேற்றொன்றி நின்ற பொதுவன் தகைகண்டை ஏற்றொருமை நெஞ்சும் வடிம்பின் இடந்திட்டுச் சீற்றமோ டாருயிர் கொண்டஞான்று இன்னன்கொல் கூற்றென வுட்கிற்றென் னெஞ்சு (கலி. 103) எனவரும் முல்லைக்கலியாகும். காற்றின் விசைபோல ஓடிவந்த விரைந்த ஏறாகியகரிய காளையினைப் பலரும் வந்து சேர்தற்குரிய களத்திலே வலியடங்கத்தழுவி வருத்தி அதன்மேலே தோன்றி நின்ற ஆயனாகிய வீரனது அழகைப் பாராய், ஏறாகிய எருமைக்கிடாயை ஊர்ந்த கூற்றுவனுடைய மார்பினைத் தன்காலின் விளிம்பாலே தாக்கிப் பிளந்து வீழ்த்திச் சினத்துடனே அவனது அரிய உயிரை வாங்கின அந்நாளில் இறைவன் இத்தன்மையை உடையவனாக இருப்பானோ? என என் நெஞ்சு நடுக்கமுற்றது எனத் தோழி தலைமகளை நோக்கிக் கூறுவதாக அமைந்தது இப்பாடற் பகுதியாகும். சுடர் விரிந்தாற்போன்ற நெற்றிச்சுட்டியையுடைய கரிய காளையொன்று தன்னைத் தழுவிப் பிடிக்க வந்த ஆயனாகிய வீரனைக் குடர் சரியக்குத்தித் தன் கொம்பிலே கொண்டு வருத்தும் தோற்றம், பல்லுயிரும் வருத்தத்தையணிகின்ற ஊழிமுடிவிலே பசிய நிறத்தைத் தன் இடப்பாகத்தேயுடைய சிவபெருமான், வருத்தத்தைச் செய்த ஏறாகிய எருமையை யூர்தியாகவுடைய கூற்றுவனுடைய மார்பைப்பிளந்து அவன் குடரைக் கூளிகளாகிய பேய்க்கு இட்டு அவற்றின் வயிற்றை நிறைவித்தாற்போலும் எனக் காலகாலனாகிய இறைவன் ஊழி முடிவிலே கூற்றுவனைக் கொன்ற செயலை உவமையாகக் காட்டும் நிலையில் அமைந்தது. சுடர் விரிந்தன்ன சுரிநெற்றிக் காரி விடரியங்கண்ணிப் பொதுவனைச் சாடிக் குடர்சொரியக் குத்திக் குலைப்பதன் தோற்றங்காண் படரணியந்திப் பசுங்கட் கடவுள் இடரிய ஏற்றெருமை நெஞ்சிடந்திட்டுக் குடர் கூளிக் கார்த்துவான் போன்ம் (கலி. 101) எனவரும் கலித்தொகைப் பகுதியாகும். மதிவிரிந்தாற் போன்ற சுட்டியை நெற்றியிலேயுடைய கரிய எருது முழைஞ்சினையுடைய மலையிற் பூவாற்செய்த அழகையுடைய முடி மாலையையணிந்த ஆயனாகிய வீரனைக் காலால் துகைத்துக் குடர்சரியும்படி குத்திக் கொம்பினிடத்தே கொண்டு குலைப்பதன் தோற்றத்தைக் காண்பாயாக, பல்லுயிரும் வருத்தத்தை அணிகின்ற ஊழிமுடிவிலே பசிய நிறத்தைத் தன் (இடப்) பாகத்தேயுடைய சிவபெருமான், வருத்தத்தைச் செய்த காளையாகிய எருமையை யூர்தியாகவுடைய கூற்றுவனது மார்பைப் பிளந்து வீழ்த்தி அவன் உயிரைப் பேய்ச்சுற்றத்திற்கு இட்டு அவற்றின் வயிற்றை நிறைவிக்கின்ற வினைபோலும் என்பது இதன்பொருள். இங்கு எருமையென்றது எருமையை யூர்தியாகவுடைய கூற்றுவனைக் குறித்தது, ஆகுபெயர். பிறையணிந்தது தக்கன் புதல்வியராகிய விண்மீன்கள் இருபத்தெழுவரையும் மணந்துகொண்ட சந்திரன், அவருள் உரோகிணியின்பால் மட்டுமே பேரன்பு செலுத்துபவனாய் ஏனையோரைப் புறக்கணித்து ஒழுகினான். அதனையறிந்த தக்கன் நீ நாளும் ஒவ்வொரு கலையினையிழந்து தேய்ந் தொழிவாயாக எனச் சந்திரனைச் சபித்துரைத்தான். அச்சாபத்தால் கலைகளையிழந்து தேய்ந்து நலிவுற்ற சந்திரன் சிவபெருமானைச் சரணடைந்தான். அவனது இடரைப் போக்கத் திருவுளங்கொண்ட சிவபெருமான் பிறையாகிய அவன் தேயாதவாறு தனது சடையில் தரித்தருளினார் எனப் புராணம் கூறும். முதிராத் திங்களொடு சுடருஞ்சென்னி (அகம். கட. வா.) புதுத்திங்கட் கண்ணியான் (கலித்.) பிறைநுதல் வண்ணமாகின்று, அப்பிறை பதினெண்கணனும் எத்தவும்படுமே (புறம். கட. வா.) கொலைவன் சூடிய குழவித்திங்கள்போல் (கலி. 103) எரிகதிர்க் கணிச்சியோன் சூடிய பிறை (கலி.) எனவரும் தொடர்கள் இறைவன் பிறையினைச் சடைக் கணிந்த தோற்றத்தைப் புலப்படுத்துவன. ஆலின் கீழமர்ந்து அறமுரைத்தது சிவபெருமான், தாழ்சடைப்பொலிந்த அருந்தவக் கோலமுடையனாய் நீர்மலி கரகம் கொண்டு மோன முத்திரைக்கை யினனாய் ஆலின் கீழமர்ந்து சனகர் முதலிய முனிவர் நால்வர்க்கு அறம் முதலிய நாற்பொருள்களை அறிவுறுத்தியருளினான் எனப் புராணம் கூறும். ஆலின் கீழமர்ந்து தென்திசை நோக்கி முனிவர்க்கு அறமுறைத்தருளிய திருக்கோலம் சங்கநூல்களில் ஆலமர்செல்வன் என்ற திருப்பெயராற் போற்றப்பெறுகின்றது. ஆல்கெழு கடவுட் புதல்வ (திருமுருகு.) நீல நாகம் நல்கிய கலிங்கம் ஆலமர் செல்வற் கமர்ந்தனன் கொடுத்த ஆர்வ நன்மொழி ஆயும் (சிறுபாண்.) ஆலமர் செல்வன் அணிசால் பெருவிறல் (கலி. 81) ஆலமர் செல்வன் அணிசால் மகன் (கலி. 83) ஆலமர் கடவுளன்ன நின்செல்வம் (புறம். 198) கடவுளாலத்துத் தடவுச் சினைப்பல்பழம் (புறம். 199) சீர்மிகு சிறப்பினோன் மரமுதற்கைசேர்த்த நீர் மலி கரகம் (கலி.) எனவரும் தொடர்கள் இப்பெயர் வழக்கினை வலியுறுத்துவன. இறைவனுக்கு அருளுருவம் உண்டென்பதும் குருவாக எழுந்தருளி அம்முதல்வன் உயிர்கட்கு மெய்ப்பொருளை அறிவுறுத்தியருள்வன் என்பதும் இறைவன் குருமேனி தரித்து மெய்ப்பொருளை உபதேசித்தலாலே உலகில் குருவின் வழிமுறை தொடர்ந்து நிலைபெற்று வருகின்றதென்பதும் ஆகியசைவ சமயவுண்மையினை வலியுறுத்தும் நிலையில் அமைந்தது, ஆலமர் செல்வன் திருவுருவமாகும். கயிலைக்கடவுள் செம்மேனியம்மானாகிய சிவபெருமான் வட விமயத்து உச்சியாகிய திருக்கயிலாய மலையில் மலையரையன் மகளாகிய உமாதேவியுடன் எழுந்தருளியுள்ளான் என்பது சைவ சமயச் சான்றோர் துணிபாகும். கடவுள் என்ற சொல் தெய்வம் என்னும் பொதுப் பொருளில் வழங்குமாயினும் எல்லாவற்றையும் இயக்குவது என்னும் அப்பெயர்க் காரணத்தை நோக்கும் வழி எல்லாம் வல்ல முழுமுதற் பொருளாகிய இறைவன் ஒருவனையே குறிப்பதாகும். குவியிணர்ப் புல்லிலையெருக்கமாயினும் கடவுள் பேணேம் என்னா (புறம். 106) எனவும், ஆல்கெழு கடவுட் புதல்வ (திருமுருகு.) எனவும் வரும் தொடர்களில் கடவுள் என்னும் சொல் முழுமுதற் பொருளாகிய சிவபெருமானைக் குறித்து வழங்கப் பெற்றுள்ளமை காணலாம். கடவுள் நிலைஇய கல்லோங்கு நெடுவரை வடதிசையெல்லை இமயமாக (பதிற். 43) எனவரும் பதிற்றுப்பத்துப்பாடலில், கடவுள் நிலைஇய கல்லோங்கு நெடுவரை என்றது, சிவபெருமான் எழுந்தருளிய திருக்கயிலாய மலையினையேயெனக் கொள்ளுதல் பெரிதும் பொருத்தமுடைய தாகும். கயிலாயத்துச்சியுள்ளான் என அப்பரடிகளும் மானக் கயிலை மலையாய் போற்றி என வாதவூரடிகளும் அருளிய வாய்மொழிகள் இங்கு ஒப்புநோக்கற் பாலனவாகும். இராவணனை அடர்த்தருளியது இலங்கை வேந்தனாகிய இராவணன், தேரூர்ந்து வடதிசையிற் செல்லுங்கால் அவனது தேர் செல்ல வொண்ணாதபடி இறைவன் எழுந்தருளிய கயிலாய மலை தடையாயிருத்தலைப் பொறாது தன்னுடைய இருபது கைகளாலும் அம்மலையைப் பெயர்த்தெடுக்க முற்பட்ட போது கயிலைப்பெருமானாகிய இறைவன் தன் திருவடிப் பெருவிரலொன்றினால் சிறிதேயழுத்த மலையிற்சிக்குண்டு அலறியழுது பின்னர் இறைவனுக்கு உவப்பாகச் சாம வேதத்தினை இசையுடன் பாடிப்போற்றினானாக அதுகண்டு உளமிரங்கிய இறைவன் அவனுக்கு முக்கோடி வாழ்நாளும் பகைவரைக் கொல்லும் கோலவாளும் கொடுத்தருளினார் என்பது, இராமாயணத்தும் புராணங்களிலும் சைவத் திருமுறைகளிலும் காணப்படும் செய்தியாகும். திருக்கயிலாயம் இறைவன் எழுந்தருளிய திருமலை என்பதனைச் சிறிதும் மதியாத இராவணன், அம்மலையினைத் தன்னுடைய கைகளால் அடியோடு பெயர்த்தெடுக்கத் தொடங்கி அம்மலைக் கீழகப்பட்டு அதனை எடுக்கலாற்றாது உழன்ற இடர் நிலையை மதயானையொன்றின் செயலுக்கு உவமையாக எடுத்துக் காட்டும் முறையில் அமைந்தது. இமயவில் வாங்கிய ஈர்ஞ்சடை யந்தணன் உமையமர்ந்துயர் மலையிருந்தனனாக ஐயிருதலையின் அரக்கர் கோமான் தொடிப்பொலி தடக்கையிற் கீழ்புகுத்தம்மலை எடுக்கல் செல்லா துழப்பவன் போல உறுபுலி யுருவேய்ப்பப் பூத்தவேங்கையைக் கறுவு கொண்டதன் முதற்குத்திய மதயானை நீடிரு விடரகஞ் சிலம்பக் கூய்த்தன் கோடு புய்க்கல்லா துழக்கும் (கலி. 8) எனவரும் குறிஞ்சிக் கலியாகும். இமயமலையை வில்லாக வளைத்து முப்புரங்களையழித்த, கங்கையால் ஈரத்தை யுடையதாகிய சடையினையுடைய இறைவன், உமையம்மையோடு உயர்ந்த கயிலாய மலையிலே அமர்ந்திருந்தானாக, அரக்கர்க்கு அரசனாகிய பத்துத் தலையையுடைய இராவணன் மலையை எடுத்தற்குக் கையைக் கீழே செருகித் தொடி (வீரவளை) பொலிவு பெற்ற அத்தடக்கையினாலே அம்மலையை எடுக்கலாற்றாது வருந்து கின்றவனைப் போல, வன்மை மிகுதியையுடைய புலியினது வடிவையொப்பப் பூத்த வேங்கை மரத்தைப் புலியென மாறுபட எண்ணி அதன் அடியிலே குத்திய மதயானை, நீண்ட மலையின் முழைஞ்சிடமெல்லாம் ஒலிக்கும்படி கூப்பிட்டு பசிய மரத்தில் அழுந்திய தன்கொம்பை மீட்டு இழுக்க முடியாமல் வருந்தும் என்பது இதன் பொருளாகும். ஆதிரைமுதல்வன் சிவன் திருவாதிரை நாளுக்குரிய தலைவனாகச் சிவபெருமானையும் திருவோண நாளுக்குரிய தலைவனாகத் திருமாலையும் போற்றுதல் இந்நாட்டில் தொன்றுதொட்டு வரும் வழிபாட்டு மரபாகும். இருபெருந்தெய்வத் தொடர்புடைமை பற்றியே இருபத்தேழு விண்மீன்களுள் ஆதிரை ஓணம் என்னும் இரண்டும் திரு என்னும் அடைமொழி பெற்று வழங்கப்பெறுகின்றன. ஆதிரை விண்மீன் கூட்டம் ஆடவல்லானாகிய கூத்தப் பெருமானது திருவுருவினைப் போன்று விண்ணில் ஒளிர்தலால் அத்திருமேனியிற் காட்சி நல்கும் சிவபெருமானை ஆதிரை முதல்வன் எனச் சங்கநூல்களும் ஆதிரைநாயகன் எனத் திருமுறைகளும் போற்றிப் பரவுகின்றன. மதிநிறை நாளாகிய உவாநாளுடன் தொடர்புடையதாய் வருவது மார்கழித் திருவாதிரையாகும். எனவே மார்கழித் திருவாதிரை நாளில் சிவபெருமானுக்குச் சிறப்புடைய திருவிழா தொன்று தொட்டு நிகழ்த்தப்பெற்று வருகின்றது. திருநாவுக்கரசர் காலத்தில் திருவாரூரில் திருவாதிரைத் திருவிழாச் சிறப்பாக நிகழ்ந்த திறத்தை நேரிற்கண்டு மகிழ்ந்த திருநாவுக்கரசர் அதன் சிறப்பினைத் திருஞான சம்பந்தப் பிள்ளையார்க்கு எடுத்துரைக்கும் முறையிற் பாடப்பெற்றது முத்துவிதான மணிப் பொற்கவரி எனத் தொடங்கும் திருவாதிரைத் திருப்பதிகமாகும். திருவாதிரைத் திருவிழாவும் அம்பா ஆடலும் மக்களால் ஓராண்டு என வரையறுக்கப்படும் காலம் தேவர்கட்கு ஒருநாளாகும். ஆடி முதல் மார்கழி முடியவுள்ள ஆறு திங்களும் வானோர்க்கு இரவுப்பொழுது, தை முதல் ஆனி முடிய ஆறு திங்களும் அவர்கட்குப் பகற் பொழுது. இவ்வகையில் நோக்கும்போது மார்கழித் திங்கள் வானோர்க்குரிய வைகறைப் பொழுதாகக் கருதப்படும். கூத்தப் பெருமான் திருவுருப்போன்று ஒளிரும் செம்மீனாகிய திருவாதிரையானது, நிறைமதியுடன் கூடி விளங்கும் சிறப்புடைய திருநாளாகத் திகழ்வது மார்கழித் திங்களில் ஆதலின் மார்கழித் திருவாதிரைத் திருநாள் சிவபெருமானுக்குரிய சிறப்புடைய திருவிழா நாளாகக் கொண்டாடப்பெற்று வருகிறது. இத்திருவிழாவின் சிறப்பினைப் பதினோராம் பரிபாடலில் ஆசிரியர் நல்லந்துவனார் பின்வருமாறு விரித்து கூறுகின்றார் :- கனைக்கும் அதிர்குரல் கார்வானம் நீங்கப் பனிப்படு பைதல் விதலைப்பருவத்து ஞாயிறு காயா நளிமாரிப் பிற்குளத்து மாயிருந்திங்கள் மறுநிறை ஆதிரை விரிநூல் அந்தணர் விழவு தொடங்கப் புரிநூல் அந்தணர் பொலங்கலம் ஏற்ப வெம்பாதாக வியனில வரைப்பென அம்பா வாடலின் ஆய்தொடிக் கன்னியா முனித்துறை முதல்வியர் முறைமை காட்டப் பனிப்புலர் பாடிப்பருமண லருவியின் ஊதை யூர்தர வுறைசிறை வேதியர் நெறிநிமிர் நுடங்கழல் பேணிய சிறப்பிற் றையல் மகளிர் ஈரணி புலர்த்தர வையை நினக்கு மடை வாய்த்தன்று (பரி. 11, 74-87) என்பது அப்பரிபாடற் பகுதியாகும். மேகம் பெய்யும் பருவத்து மழைபெய்து முடித்தமையால் தனது கடுங்குரல் நீங்கப் பனிமிகுதலால் குளிரால் நடுங்குதலையுடைய முன்பனிப் பருவத்து, வெயில் கடுமையாகக் காயாத மழையின் கடைப் பகுதியாகிய மார்கழி மாதத்தில் சந்திரன் கலை முழுவதும் நிறைந்து மறுவுடன் விளங்கும் பூரணை நாளாகிய திருவாதிரை நாளின்கண் (பதி பசு பாசம் என்னும் முப்பொருளுண்மையினையும்) விரித்துரைக்கும் நூல்களாகிய ஆகமங்களைக் கற்று வல்ல அந்தணர்கள் ஆதிரை முதல்வனாகிய சிவபெருமானுக்குத் திருவிழாவைத் தொடங்கி நிகழ்த்த, முப்புரி நூலணிந்த வேதியர்கள் மக்கள் தானமாகத் தரும் பொன்னாலாகிய அணிகலங்களை ஏற்றுமகிழ, வளையலை யணிந்தகன்னிப் பெண்கள் இவ்வுலகம் வெயிலாலும் பனியாலும் வெதும்பாது மழையாற் குளிர்வதாகுக என உலகம் ஈன்ற அன்னையாகிய இறைவியை வேண்டி அம்பாவாடலாகிய நோன்பினை மேற்கொண்டு தவமுது மகளிர் அறிவுறுத்த நெறியிலே நின்று, பனிபெய்யும் விடியற் காலத்திலேயே பருமணலையுடைய வையையாற்று நீரிலே முழுகியெழுந்து, குளிர்ந்த வாடைக்காற்று வீசுதலால் வையையாற்றின் கரைக்கண் வேதியர் வளர்த்த வேள்வித் தீயைப் பேணிய சிறப்புடனே தமது ஈரவுடையினையும் புலரும்படி செய்ய, அவ்வந்தணர் தம் வேள்விக் கண்ணே தரும் அவியுணவையே உனக்குரிய திருவமுதாயிற்று என்பது மேற்காட்டிய தொடரின் பொருளாகும். மையோலை பிடித்த இளைய புலமையாளராகிய மாணவர்களது கல்விப் பயிற்சியாகிய விளையாட்டிற்கு மாறாக (எதிராக) விடியற் காலத்திலேயே துயிலெழுந்து காமக் குறிப்பில்லாத விளையாட்டினைச் செய்கின்ற ஆயத்தினராய கன்னி மகளிர் நீரின்கண் புலன்கள் அடக்கிச் செய்யுந் தவத்தினை முன்னைப் பிறப்புக்களில் அடுத்தடுத்துச் செய்ததன் பயன்தானோ தம்தாயின் அருகே நின்று தவமாகிய தைந்நீராடல் நோன்பினை நின்கண் செய்யப்பெற்றனர்? வையையே கூறுவாயாக என வையையாற்றை நோக்கி வினவுவதாக அமைந்தது, மையாட லாடல் மழபுலவர் மாறெழுந்து பொய்யாட லாடும் புணர்ப்பினவரவர் தீயெரிப்பாலுஞ் செறிதவமுன் பற்றியோ தாயருகா நின்று தவத்தைந் நீராடுதல் நீயுரைத்தி வையைநதி (பரி. 11 : 88-92) எனவரும் பரிபாடற் பகுதியாகும். இங்கு எடுத்துக்காட்டிய பதினோராம் பரிபாடற் பகுதி மார்கழி மாதத்துத் திருவாதிரைத் திருவிழாவையொட்டி நிகழும் மகளிர் நோன்பாகிய அம்பாவாடலின் நிகழ்ச்சியை விரித்துரைப்பதாகும். இப்பாடலின் குளம் என்றது, மார்கழி மாதத்தை. திருவாதிரை நிறைமதி நாளாங்கால் ஆதித்தன் (ஞாயிறு) பூந்தடத்தின்கண் (புனர்பூசத்தின்) நிற்குமாதலின் அதனையுடைய மார்கழி மாதம் குளம் எனப்பட்டது என்பர் பரிமேலழகர். மார்கழித் திருவாதிரையில் தொடங்கி நிகழும் மகளிர் நோன்பாகிய அம்பாவாடல் தைத் திங்களில் நிறைவு பெறுதலின் தைந்நீராடல் எனவும் வழங்கப்படும். தாயருகாநின்று இளமகளிர் ஆடுதலின் அம்பா ஆடல் எனப்பட்டது. அம்பா ஆடல் என்று தைந்நீராடற்குப் பெயராயிற்று, தாயோடு ஆடப்படுதலின் என்பர் பரிமேலழகர். அம்பா - தாய், தாயருகாநின்று தவத் தைந்நீராடலின் என்பர் நல்லந்துவனார். இத் தொடரில் தாய் என்றது, உலகம் ஈன்ற தாயாகிய பராசத்தியை எனக் கொள்ளுதல் கன்னி மகளிர் பராசத்தியை வழிபட்டு நோற்கும் நீராடல் நோன்பிற்கு மிகவும் பொருத்த முடையதாகும். சிவபெருமானுக்குரிய திருவிழாவையொட்டி உமையம்மையை வழிபட்டு நோற்கும் நீராடல் நோன்பு நிகழ்வது அம்மையப்பர் வழிபாட்டின் ஒற்றுமைத்திறத்தை நன்கு புலப்படுத்து வதாகும். மார்கழித் திருவாதிரை விழாவில் தொடங்கித் தைத்திங்களில் நிறைவுபெறும் மகளிர் நோன்பானது சங்க காலத்தில் தைந்நீராடல் எனவும் பிற்காலத்தில் மார்கழி நீராடல் எனவும் வழங்கப் பெற்றுள்ளது. இதனைத் திருவாதவூரடிகளாகிய மணிவாசகப் பெருமானும் திருமாலடியாராகிய நாச்சியாரும் மார்கழி நீராடல் என்றே குறிப்பிட்டுள்ளார்கள். இந்நோன்பின் நிறைவு தைத்திங்களில் முற்றுப்பெறுதல் கருதிச் சங்கச் செய்யுட்களில் தைந்நீராடல் எனவும் மார்கழித் திருவாதிரையினை யொட்டித் தொடங்குதல் பற்றி திருவெம்பாவையிலும், திருப்பாவையிலும் மார்கழி நீராடல் எனவும் வழங்கப் பெறினும் இவை இரண்டும் ஒரு நோன்பினையே குறித்த பெயர்கள் என்பது பதினோராம் பரிபாடலுக்குப் பரிமேலழகர் எழுதியவுரையால் நன்கு துணியப்படும். இந்நோன்பின்கண் கன்னிப்பெண்கள் ஈரமணலால் சத்திவடிவாகிய பாவையை அமைத்துச் செய்யும் சடங்கு உண்மைகருதி அம்பாவையாடல் என்பது மருவி அம்பாவாடல் எனப் பெயரெய்தியது எனக் கருதுதற்கும் இடமுண்டு. வையத்து வாழ்வீர்கள் நாமும் நம்பாவைக்குச செய்யும் கிரிசைகள் கேளீரோ (திருப்பாவை) நாங்கள் நம்பாவைக்குச சாற்றி நீராடினால் (திருப்பாவை) பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்கார் (திருப்பாவை) எனவரும் திருப்பாவைத் தொடர்களால் இந்நீராடல் நோன்பில் அழகிய பாவைக்குச் செய்யும் சடங்குண்மை நன்கு புலனாகும். இங்ஙனம் கன்னிப் பெண்கள் நீராடி நோன்பு நோற்றலின் நோக்கம், நாடுமலியமழை பெய்து நோயும் துன்பமும் நீங்கி இவ்வுலகம் இன்புறுதல் வேண்டும் என இறைவனது அருள்வடிவாகிய அம்மையை வழிபட்டு நலம் பெறுதலே என்பதனை, வெம்பாதாக வியனில வரைப்பென அம்பாவாடலின் ஆய்தொடிக் கன்னியர் எனவரும் தொடரில் ஆசிரியர் நல்லந்துவனார் சிறப்பாகக் குறித்துள்ளமை காணலாம். சிவநெறியும் வேதநெறியும் விரிநூலந்தணர் திருவாதிரைக்குத் தெய்வமாகிய இறைவனுக்கு விழாவைத் தொடங்கி நிகழ்த்தினர் எனவும் அவ்விழாவில் மக்கள் தானப்பொருள்களைப் புரி நூலந்தணர் ஏற்றனர் எனவும் ஆசிரியர் நல்லந்துவனார் பதினோராம் பரிபாடலிற் குறிப்பிடுதலால் அவர் வாழ்ந்த காலமாகிய சங்க காலத் தமிழகத்தில் இருவகை யந்தணர்களும் வாழ்ந்தனர் என்பது நன்கு புலனாகும். அவ்விரு திறத்தாருள் விரி நூலந்தணர் எனப்படுவார் ஆகமங்களை யுணர்ந்த பூசகர் என்பர் பரிமேலழகர். எனவே கோயிற் பூசகராகிய சிவாச்சாரியரின் வேறாகக் கூறப்படும் புரிநூலந்தணர் என்போர் வேதங்களை யோதும் வேதியர் என்பதுதானே விளங்கும். ஆகமங்கள் கடவுள் உயிர் உலகு என்னும் முப்பொருள்களின் இயல்பினை விரித்துரைக்கும் நூல்களாதலின் விரிநூல் எனப்பெற்றன. ஆகமவிதிகளை நன்குணர்ந்து திருக்கோயில்களில் சிவபெருமானுக்குப் பூசனையும் திருவிழாவும் நிகழ்த்தும் விரிநூல் அந்தணர்கள் சங்ககாலத்தில் இருந்தனர். எனவே அவர்களால் ஓதியுணரப்பட்டுக் கற்றவண்ணம் ஒழுகும் முறையினை அறிவுறுத்தும் சிவாகமங்களும் அவர் காலத்தில் தமிழகத்தில் வழங்கினமை நன்கு பெறப்படும். விரிநூலந்தணராகிய சிவநெறிச் செல்வர் தொடங்கி நிகழ்த்தும் திருவாதிரை விழாவிற் புரிநூலந்தணராகிய வேதியர்களும் கலந்து கொண்டமை கூறப்படுதலால் சங்க காலத்தில் சைவமும் வைதிகமும் ஆகிய இருவகை நெறிகளும் முறையே சிறப்பும் பொதுவுமாகக் கலந்து தமிழக மக்களாற் பேணப்பட்டு வளர்ந்தமை உய்த்துணரப்படும். பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெரு வழுதி என்னும் வேந்தர் பெருமான் சிவமுனிவர்களால் வழிபடப்பெறும் முக்கட்செல்வராகிய சிவபெருமானை வழிபடும் சிறப்புடைய சிவநெறியினை மேற்கொண்டு, நான் மறைவல்ல வைதிக முனிவர்களை ஆதரித்து அவர்களது நல்வாழ்த்துடன் உலகியலொழுக்கமாகிய வேதநெறியினை வளர்த்தனன். இச்செய்தியினை, பணியிய ரத்தைநின் குடையே முனிவர் முக்கட் செல்வர் நகர் வலஞ்செயற்கே இறைஞ்சுக பெரும நின்சென்னி சிறந்த நான்மறை முனிவர் ஏந்துகையெதிரே (புறம். 6) என அம்மன்னனைக் காரிகிழார் என்னும் புலவர் பெருமான் உளமுவந்து வாழ்த்திய புறநானூற்றுப் பாடற்பகுதியால் நன்குணரலாம். நினது கொற்றக்குடை முனிவராற் பரவப்படும் மூன்று திருநயனத்தை யுடைய செல்வரது கோயிலை வலம் வருதற்குத் தாழ்க. பெரும நினது முடி மிக்க நான்கு வேதத்தினையுடைய அந்தணர் நின்னை நீடுவாழ்க என்று எடுத்த கையின்முன்னே வணங்குக என்பது இவ்வடிகளின் பொருளாகும். முக்கட் பெருமான் திருக்கோயிலின்றிப் பிற இடங்களிற் பணியாத குடையினையுடைய இப்பாண்டியன், நான்மறைவல்ல அந்தணர்களாகிய வேதியர்கள் உளமுவந்து வாழ்த்தும் வண்ணம் வேத நெறிப்படி பலவகை வேள்விகளையும் செய்து நிறை வேற்றியவன் என்பது, பல்சாலை முதுகுடுமியின் நல்வேள்வித்துறை போகிய (மதுரைக். 759,760) எனவரும் மதுரைத் காஞ்சியடிகளாலும், பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி என இவ்வேந்தனுக்கு வழங்கும் சிறப்புப் பெயராலும் நன்கு தெளியப்படும். ஆடவல்லான் சிவபெருமான் மன்னுயிர்கள் உய்ய வேண்டி உலகங்களை யெல்லாம் படைத்தும் காத்தும் ஒடுக்கியும் ஆடவல்லகூத்தப் பெருமானாகத் திகழ்பவன் என்பதும் அவன் ஆடியருளும் கூத்தினை அவனுடன் பிரியாதிருந்து கண்டு உயிர்களுக்கு நலஞ்செய்பவள் அவனின் வேறல்லாத திருவருட் சத்தியாகிய உமையம்மையென்பதும் சைவ நூல்களின் துணிபாகும். உமையம்மை காண ஆடியருளும் இறைவனை முன்னிலையாக்கிப் பரவிப் போற்றுவதாக அமைந்தது, (தரவு) ஆறறியந்தணர்க் கருமறை பலபகர்ந்து தேறுநீர் சடைக்கரந்து திரிபுந் தீ மடுத்துக் கூறாமற் குறித்ததன் மேற்சொல்லுங் கடுங்கூளி மாறாப்போர் மணிமிடற் றெண்கையாய் கேளினி, (தாழிசை) படுபறை பலவியம்பப் பல்லுருவம் பெயர்த்து நீ கொடுகொட்டி யாடுங்காற் கோடுய ரகலல்குல் கொடிபுரை நுசுப்பினாள் கொண்டசீர் தருவாளோ மண்டமர் பலகடந்து மதுகையா னீறணிந்து பண்டரங்க மாடுங்காற் பணையெழிலணை மென்றோள் வண்டரற்றுங் கூந்தலாற் வளர்தூக்குத் தருவாளோ கொலையுழுவைத் தோலசைஇக் கொன்றைத்தார் சுவற்புரளத் தலையங்கை கொண்டு நீ காபால மாடுங்கால் முலையணிந்த முறுவலாள் முற்பாணி தருவாளோ (தனிச்சொல்) எனவாங்கு, (சுரிதகம்) பாணியுந் தூக்குஞ் சீருமென்றிவை மாணிழை யரிவைகாப்ப வாணமில் பொருளெமக் கமர்ந்தனையாடி எனவரும் கலித்தொகைக் கடவுள் வாழ்த்துப் பாடலாகும். “MW m§f§fisí« m¿í« mªjz®fsh»a KÅt®f£F mÇath»a ntj§fŸ gyt‰iw mUË¢ brŒJ, bj˪j Ú®¥bgU¡ifíila f§ifÆš ntf¤ij¤ j‹ rilÆš xU T‰¿nyal¡», K¥òu¤âny Ôia¢brY¤â, th¡fh‰ Tw¥glhkš kd¤jhš F¿¤j m¥bghU£F« v£lhkš ÉF« fojh»a TËÆdJ KF»lhj nghÇidí« ÚykÂnghY« Äl‰¿idí« v£L¡ iffisí« cila ïiwtnd!(ï¥bghGJ என் கட்புலனாகத் தோன்றி நின்று) யான் கூறுகின்றதனைக் கேட்பாயாக. (நின்கையில்) ஒலிக்கின்ற பறை பலவாச்சியங்களையும் ஒலியா நிற்பக் கட்புலனாய்ப் பலவடிவுகளையும் மீண்டு நின்னிடத்தே ஒடுக்கிக் கொண்டு கொடிதாகிய கொட்டி என்னும் கூத்தை நீ ஆடுகின்ற காலத்துப் பக்கம் அகன்ற குறியினையுடைய கொடியினை யொத்த இடையினையுடைய உமையம்மையோ தாளத்தின் முடிந்த காலத்தினைத் தன்னிடத்தே கொண்ட சீர் என்னும் தாளத்தைத் தருபவள்? (அங்கு அவளைத் தவிரப் பிறர் இல்லையே?) மிக்குச் செல்கின்ற போர்களிற் பலவாகிய முப்புரங்களை வென்று அந்த வன்மையாலே அவ்வவுணர்கள் வெந்து வீழ்ந்த சாம்பராகிய நீற்றினை அணிதலாலே பாண்டரங்கம் என்னும் பெயர் பெற்ற கூத்தினை நீ ஆடுகின்ற காலத்து, மூங்கிலினது அழகையுடைத்தாகிய அணை போன்ற மெல்லிய தோள்களையும் வண்டுகள் ஒலிக்குங் கூந்தலையும் உடையாளாகிய பராசத்தியோ தாளத்தின் இடை நிகழுங்காலத் கூறாதிய தூக்கினைத் தருவாள்? (அவ்விடத்து அவளன்றிப் பிறரில்லையே!) கொலைத் தொழிலையுடைய புலியைக்கொன்று அதன்தோலை உடுத்துக் கொன்றைப்பூமாலை தோளிலே கிடந்தசைய அயனுடைய தலையினை அகங்கையிலே ஏந்துதலாலே காபாலம் என்று பெயர் பெற்ற கூத்தை நீ ஆடுங்காலத்து, முல்லையரும்பினையொத்த எயிற்றினையுடைய மலைமகளோ தாளத்தின் முதலலெடுக்குங் காலத்தினையுடைய பாணியைத் தருவாள்? (அவ்விடத்து அவளன்றிப் பிறர் இல்லையே!) என்று சொல்லும்படியாக அழித்தற்றொழிலை நிகழ்த்து கின்ற காலங்களிலே (தாளத்தின் தொடங்கும் காலமாகிய) பாணியும், (இடைநிகழுங் காலமாகிய) தூக்கும், (முடியுங் காலமாகிய) சீரும் என்று கூறப்படும் இவற்றை மாட்சிமைப் பட்ட அணிகலங்களையுடைய உமாதேவி உடனிருந்து காப்ப ஆடல்புரிந்து, காத்தற்றொழிலை நிகழ்த்துகின்ற இக்காலத்தே ஒருவடிவைக் கொண்டு தோன்றி அன்பில்லாத பொருளாகிய எங்களுக்குப் பொருந்திக் காட்சி நல்கினாய். இவ்வாறு யாவராலும் காணுதற்கு அரிய கடவுளாகிய நீ, ஆணம் (அன்பு) இல்லாத உயிர்ப்பொருளாகிய எமக்கு எளியனாய்த் தோன்றியருளுதற்கு எம்மிடத்து எதனையும் எதிர்பாராத நினது பேரருளே காரணமாகும் என்பது இக் கடவுள் வாழ்த்துப் பாடலின் பொருளாகும். வேதங்களை முனிவர்க்கு அருளிச்செய்தது, கங்கையைச் சடையிற்கரந்தருளியது, திரிபுரங்களை யெரித்தது, நஞ்சினையுண்டு நீலமணிமிடற்றன் ஆனது ஆகிய சிவனுடைய அருட் செயல்கள் இக்கலியின் தரவில் தொகுத்துரைக்கப்பெற்றன. கூறாமற் குறித்ததன் மேற்செல்லும் ................ எண்கையாய் என்ற தொடர் இறைவனது சொரூபலக்கணம் எனப்படும் சிறப்பிலக்கணத்தினைப் புலப்படுத்தி நின்றது. வாக்காற் கூறப்படாமல் மனத்தாற் குறித்த அப்பொருட்கும் எட்டாமல் மாற்றம் மனம் கழிய நின்ற இறைவன், அன்பினால் வழிபடுவோரது உள்ளத்தின்கண் எண் தோள்வீசி நின்று ஆடும்பிரானாகத் தோன்றி அருள்புரிகின்றான் என்பது, இக்கலித்தொகைத் தொடரால் உணர்த்தப்படும் இறைவனது சிறப்பிலக்கணமாகும். இங்ஙனம் உயிர்களின் சுட்டறிவினால் ஆராய்ந்து காணுதற்கரிய தன்மையும் அன்புடையாரது நினைவினின்றும் என்றும் நீங்காது நிலைபெறும் அருளின் நீர்மையும் இறைவனுக்குரிய சிறப்பிலக்கண மாதலைக் காணாமரப நீயா நினைவ (பரிபாடல் 3) எனத் திருமாலைப் பரவிப்போற்றும் தொடரில் கடுவன் இளவெயினனார் புலப்படுத்தியுள்ளமை இங்கு நினைவு கூர்தற்குரியது. கடவுளாகிய முழுமுதற் பொருள், மன்னுயிர்களின் வாக்குக்கும் மனத்துக்கும் எட்டாத நிலையினதாய் இப்பொருள் போன்று எவ்வகையாலும் புலப்படாது போயினும் தனது அருளே கண்ணாகக் கொண்டு காணும் மெய்யன்புடைய அடியார்கட்கு உள்ளத்தினுள்ளே அகலாது வெளிப்பட்டுத் தோன்றி இன்னருள் சுரக்கும் உள் பொருளேயாம் என்பதனை வற்புறுத்தும் முறையில் அமைந்தது, மணிமிடற்று எண்கையாய் எனவரும் தொடராகும். இது திருமேனி கொண்டு நின்றாய் ஆயினும் வாக்குக்கும் மனத்துக்கும் எட்டாய் என்றது என இத்தொடர்ப்பொருளை விளக்குவர் நச்சினார்க்கினியர். கூறாமல் குறித்ததன் மேற்செல்லும் .................. எண்கையாய் என்னும் இக்கலித்தொகைத் தொடரையும், காண்டற்கரிய கடவுள் கண்டாய் கருதுவார்க் காற்ற வெளியான் கண்டாய் எனவும், என் புந்திவட்டத் திடைப்புக்கு நின்றானையும் பொய்யென்பனோ எனவும், மாற்றமனங்கழிய நின்ற மறையோனே எனவும் வரும் திருமுறைத் தொடர்களையும் அடியொற்றிய நிலையில் சத்து, அசத்து என்பவற்றை வரையறை செய்து உணர்த்துவது, உணருரு வசத்தெனின் உணராதின்மையின் இருதிற னல்லது சிவசத்தாமென இரண்டு வகையின் இசைக்குமன் னுலகே எனவரும் சிவஞானபோத ஆறாஞ் சூத்திரமாகும். உணர் உருஎனின் அசத்து - (மேலைச்சூத்திரத்திற் கூறப்பட்ட தம்முணர்வின் தமியாகிய முழுமுதற்பொருள்) காட்சி, கருதல், உரை என்னும் அளவைகளால் அறியப்படும் இயல்பினது என்றால், அவ்வாறு நம்மால் அறியப்படும் அப்பொருள் உலகத்துப் பொருள்கள் போல அழியுமியல்பினதாகிய அசத்து எனப்படும், உணராது எனின் - (பதிப் பொருளாகிய அது) எவ்வகையாலும் நம்மால் அறியப்படாத பொருள் என்றால் அது முயற்கோடு போல இல்பொருளாய் (சூனியமாய்) விடும். இருதிறன் அல்லது (ஆதலால்) அசத்து, சூனியம் எனப்படும் இவ்விரு பகுதியுமன்றி, இரண்டு வகையின் சிவசத்தாம் என மன்னுலகு இசைக்கும் - பாசஞான பசுஞானங்களால் உணரப்படாமையும் பதிஞானத்தாலே உணரப்படுதலும் ஆகிய இரண்டுவகையாலும் சிவசத்தாம் என்ற மெய்யுணர்வின் நிலை பெற்றோர் அதன் சிறப்பிலக்கணம் கூறுவர் - என்பது இச்சூத்திரத்தின் பொருளாகும். கலையறிவாகிய பாசஞானத்தாலும் உயிருணர்வாகிய பசு ஞானத்தாலும் உணரப் படாத தூய்மையும் என்றும் ஒரு தன்மையதாய் பதிஞானத்தால் அறியப்படும் உள்பொருளாந் தன்மையும் பற்றிக் கடவுளைச் சிவசத்து என்றார். இங்ஙனம் குறையுணர்வாகிய பசு அறிவாலும் பாச அறிவாலும் அறியப்படாத முதல்வனை அவனது திருவடி ஞானத்தால் தன்னறிவின் கண்ணே ஆராய்ந்து தெளிக என அறிவுறுத்துவது, ஊனக்கண் பாசம் உணராப் பதியை ஞானக் கண்ணினிற் சிந்தை நாடி (சிவஞானபோதம். சூ. 9) எனவரும் சிவஞானபோத ஒன்பதாஞ் சூத்திரமாகும். இனி, ஆறறியந்தணர் என்புழி ஆறு என்னும் எண்ணுப்பெயர் ஆகுபெயராய் ஆறு அங்கங்களையும் உணர்த்தியது. ஆறங்கமாவன : நிருத்தம், வியாகரணம், கற்பம், கணிதம், பிரமம், சந்தம் என்பன. ஆறங்கங்களாலும் அரியமறைப்பொருளை அறிய வல்லார் என்பார் ஆறறியந்தணர் என்றார். அந்தத்தை அணவுவார் அந்தணர், என்றது, வேதாந்தத்தையே மேற்கொண்டு பார்ப்பார் என்றவாறு என்பர் நச்சினார்க்கினியர். அழகிய தண்ணளியையுடைய அறவோர் எனினும் அமையும். இக்கலிப்பாடலின் மூன்று தாழிசைகளிலும் முறையே கொடுகொட், பாண்டரங்கம், காபாலம் எனச் சிவபெருமான் ஆடிய மூன்று திருக்கூத்துக்களும், அவற்றுக்குச் சிறப்புரிமையுடைய சீர், தூக்கு, பாணி என்னும் தாளக் கூறுபாடுகளும் பற்றிய செய்திகள் விரித்துரைக்கப் பெற்றன. அவற்றுள் கொடுகொட்டி என்பது, பதினோராடலுள் ஒன்று, சிவபெருமான் ஆடியது, இறைவன் எல்லாவுலகங்களையும் அழித்து நின்றாடுதலின் கொடுங் கொட்டி என்னும் பெயர்த்தாயிற்று. கொடுங்கொட்டி கொடுகொட்டியென விகாரமாயிற்று. எல்லா வற்றையும் அழித்து நின்றாடுதலின் கொடுங்கொட்டி என்றார். கொட்டியாடற்கேற்றம் ஒட்டிய உமையவள் ஒருபாலாக ஒருபால் இமையா நாட்டத் திறைவனாகி அமையா உட்கும் வியப்பும் விழைவும் பொலிவும் பொருந்த நோக்கிய தொக்க அவுணர் இன்னுயிர் இழப்ப அக்களம் பொலிய ஆடினன் என்ப மற்றதன் விருத்தங் காத்தற் பொருளொடு கூடிப் பொருத்த வரூஉம் பொருந்திய பாடல் திருத்தகு மரபிற்றெய்வத் துதிப்பே இதனான் உணர்க என நச்சினார்க்கினியர் எடுத்துக் காட்டிய விளக்கமும் உரைச் சூத்திரமும் கொடுகொட்டியாடலின் இயல்பினைப் புலப்படுத்தல் காணலாம். தேவர்கள் திரிபுரம் எரிய வேண்டுதலால் வடவைத் தீயைத் தலையிலேயுடைய பெரிய அம்பு ஏவல்கேட்ட அளவிலே (சுட்ட அளவிலே) அப்புரத்தில் அவுணர்வெந்து வீழ்ந்த வெண்பலிக்கு வையாகிய பாரதியரங்கத்திலே (சுடுகாட்டிலே) உமையவள் ஒருபாகத்தினளாய் நின்று பாணி, தூக்கு சீர் என்னும் தாளங்களைச் செலுத்த எல்லாத் தேவரினும் உயர்ந்த மகாதேவனாகிய இறைவன் வெற்றிக்களிப்பாற் கைகொட்டி நின்று ஆடியது கொடுகொட்டி என்னும் ஆடலாகும். இதனியல்பினை, பாரதியாடிய வியன்பாண்டரங்கத்துத் திரிபுரமெரியத் தேவர்வேண்ட எரிமுகப் பேரம்பு ஏவல் கேட்ப உமையவள் ஒருதிறனாக ஓங்கிய இமையவன் ஆடிய கொடுகொட்டி யாடலும் (சிலப். கடலாடு. 39-43) என்ற தொடரால் இளங்கோவடிகள் விரித்துக் கூறியுள்ளமை இங்கு ஒப்புநோக்கத் தகுவதாகும். திரிபுரம் தீமடுத்து எரியக்கண்டு இரங்காது கைகொட்டி நின்று ஆடுதலின் கொடுகொட்டியென்று பெயர் கூறினார் என்பர் அடியார்க்கு நல்லார். பண்டரங்கம் என்றது, பாண்டரங்கம் என்னும் ஆடலை. இதன் இயல்பினை, தேர்முன் நின்ற திசைமுகன்காணப் பாரதியாடிய வியன்பாண்டரங்கமும் (சிலப். கடலாடு. 44-45) என்ற தொடராற் குறித்தார் இளங்கோவடிகள். வானோராகிய தேரில் நான்மறைக் கடும்பரிபூட்டி நெடும்புற மறைத்து வார்துகில் முடித்துக் கூர்முட் பிடித்துத் தேர்முன் நின்ற திசைமுகன் காணும்படி பாரதி வடிவாகிய இறைவன் வெண்ணீற்றையணிந்தாடிய பாண்டரங்கக் கூத்தும் என இத்தொடர்க்கு உரைவரைந்தார் அடியார்க்கு நல்லார். முப்புரங்களைவென்று அந்த வலியாலே முப்புரத்து அவுணர்கள் வெந்து வீழ்ந்த நீற்றை அணிந்து இறைவன் ஆடுதலினாலே இக்கூத்து பாண்டரங்கம் என்னும் பெயர்த்தாயிற்று எனவும் பாண்டரங்கம் என்பதே பண்டரங்கமென விகாரமாயிற்று எனவும் கருதுவர் நச்சினார்க்கினியர். ஏறமர் கடவுள் மூவெயில் எய்வுழிக் கூறுகூறாகக் கொடியொடும் படையொடும் வேறுவேறுருவின் விண்மிசைப் பரந்தனர் அவ்வழி ஒளியொடும் உருவொடுந் தோன்றித் தேர்முன் நின்று திசைதலை பனிப்பச சுவையும் குறிப்பும் ஒழிவில தோன்றி அவையவை யவ்வழி ஆடினன் ஆட மைந்தரு மகளிரும் தந்நிலையழிய மெய்ப்படு சுவையொடு கைப்படை மறப்பக் கூடியகாலக் காற்றென ஏற்றவன் படிநிலை திரியாப் பாண்டரங்கம்மே என நச்சினார்க்கினியர் உரையிற் காட்டிய மேற்கோட் சூத்திரம், இக்கூத்தின் இயல்பினை விரித்துரைப்பதாகும். மண்டமர் பலகடந்து மதுகையான் நீறணிந்து பண்டரங்கம் ஆடுங்கால் எனவரும் கலித்தொகைத் தொடரில் இறைவன் முப்புரத் தவுணர்கள் வெந்து வீழ்ந்து வெண்ணீற்றினையணிந்து ஆடிய செய்தி குறிக்கப்பெற்றுள்ளமை காணலாம். பாரதி (பைரவி) வடிவாகிய இறைவன் அணிந்த வெண்ணீறு பராவணமாகிய திருநீறு எனச் சிவநெறியாளர்களால் அணியப்பெறும் தொன்மையுடைய சைவ சமய அடையாளம் என்பது இத்தொடரால் இனிது விளங்கும். இனி, காபாலம் என்பது, சிவபெருமான் புலித்தோலை யுடுத்துக் கொன்றை மலர்மாலை தோளிலே அசையப் பிரமனது தலையை அகங்கையில் ஏந்தி ஆடிய கூத்தாகும். அயனது தலையோடாகிய பிரமகபாலத்தைக் கையில் ஏந்தியாடுதலின் இது கபாலம் என்னும் பெயருடைய தாயிற்று. கொடுகொட்டி, பாண்டரங்கம் காபாலம் என்னும் இம்மூன்று கூத்துக்களும் சிவபெருமான் அழித்தற்றொழிலை நிகழ்த்துங் காலத்தில் ஆடப்பெறுவன என்பது பல்லுருவம் பெயர்த்து நீ கொடுகொட்டியாடுங்கால் மண்டமர் பலகடந்து மதுனான் நீறணிந்து பண்டரங்கம் ஆடுங்கால் தலை அங்கை கொண்டு நீ காபாலம் ஆடுங்கால் எனவரும் கலித்தொகைத் தொடர்களாலும், அழித்தற் றொழிலை நிகழ்த்துகின்ற காலங்களிலே பாணியுந் தூக்குஞ் சீரும் என்று சொல்லப்பட்ட இவையிற்றை மாட்சிமைப்பட்ட அணியினையுடைய உமாதேவி காப்ப ஆடி எனவரும் நச்சினார்க்கினியர் உரையாலும் நன்கு புலனாம். சிவபெருமான், தன்கையில் ஒலிக்கின்ற துடியென்னும் பறையானது, பலவகை வாத்திய ஒலிகளையும் ஒலியா நிற்க, (தன்னால் தோற்றுவிக்கப்பட்ட) கட்புலனாய பலவடிவுகளையும் மீட்டுத் தன்னிடத்தே ஒடுக்கிக் கொண்டு, உமாதேவியாள் தன் ஒரு பாகத்திலேயடங்க ஊழி முடிவிலே கொடுகொட்டி என்னும் கூத்தினை ஆடியருள்வன் என்பது, படுபறை பலவியம்பப் பல்லுருவம் பெயர்த்து நீ, கொடுகொட்டி ஆடுங்கால் என ஆசிரியர் சிவபெருமானை முன்னிலைப்படுத்துப் போற்றுந் தொடரால் அறிவுறுத்தப் பட்டது. இத்தொடர்ப் பொருளைக் கூர்ந்து சிந்திக்குங் கால், பல்வேறு உலகங்களையும் முதன் முதற் படைத்த முழுமுதற் கடவுளாகிய சிவபெருமானே பேரூழி முடிவில் அவ்வுலகங்களை யெல்லாம் மீட்டுத் தன்கண் ஒடுங்கச் செய்பவன் என்பதும், எனவே மகா சங்கார காரணனாகிய இறைவனே உலகங்களைத் தோற்றுவிக்கும் நிமித்த காரணன் என்பதும் இக்கடவுள் வாழ்த்தினைப் பாடிய ஆசிரியர் நல்லுந்துவனார் கொண்ட தத்துவக்கொள்கை என்பது இனிது விளங்கும். சிவ நெறிபற்றி இவ்வாசிரியர் அறிவுறுத்திய இக்கொள்கை, இவ்வாசிரியர் பாடிய நெய்தற்கலி பன்னிரண்டாம் பாடலிலும் நன்கு விளக்கப்பெற்றுள்ளமை காணலாம். கதிரவன் நாட்காலையிலே தன் கதிர்க்கற்றைகளை உலகிற் பலவிடங்களிலும் பரப்பிப் பகல் முடிவிலே தன்கதிர்களையெல்லாம் மீட்டுத் தன்பால் ஒடுக்கிக் கொள்ளுதலாகிய செயலுக்கு, உலகினைப் படைத்த முதல்வன் ஊழி முடிவில் அவ்வுலகங்களையெல்லாம் மீட்டுத் தன்பால் ஒடுக்கிக் கொள்ளுதலாகிய செயலினை உவமையாக எடுத்துக்காட்டி விளக்கும் முறையில் அமைந்தது, தொல்லூழி தடுமாறித் தொகல் வேண்டும் பருவத்தாற் பல்வயின் உயிரெல்லாம் படைத்தான் கட்பெயர்ப்பான் போல் எல்லுறு தெறுகதிர் மடங்கித் தன் கதிர்மாய (கலித். 129) எனவரும் நெய்தற்கலியாகும். பழையதாகிய ஊழித் தொடக்கத்திலே பலவிடங்களிலும் பரவிவாழ உடம்போடு உயிர்களைத் தடுமாறி மீட்டும் தன்னிடத்தே வந்து ஒடுங்குதலை விரும்பும் ஊழிமுடிவிலே பலவடிவுகளையும் தன்னிடத்தே மீட்டு ஒடுக்கிக் கொள்கின்றவனைப் போலே, கதிரவன் தன்னிடத்தினின்றும் தோன்றிப் புறத்தே பரவிப் பகற்பொழுதில் தெறுகின்ற தன் ஒளிக்கதிர்களைத் தன்னிடத்தே மீட்டுக்கொண்டு மறைய என்பது மேற்குறித்த தொடரின் பொருளாகும். அவனென்றும் அவளென்றும் அதுவென்றும் இவ்வாறு அவயவப் பகுப்புடையதாய்ச் சுட்டியுணரப்படும் உலகத் தொகுதியானது தோன்றுதல் நிலைபெறுதல் அழிதல் என்னும் முத்தொழிற்படுதலால் அஃது ஒருவினை முதலால் தோற்றுவிக்கப்பட்ட உள்பொருளே எனவும், அதுதான் மலம் நீங்காமையால் அது நீங்குதற்பொருட்டுத் தான் ஒடுங்குதற்கு ஏதுவாயிருந்த கடவுளால் மீளவும் உளதாம் எனவும், எனவே ஒடுக்குதலாகிய சங்காரத் தொழிலைச் செய்யும் கடவுளே உலகிற்கு முதற்கடவுள் எனவும் அறிவுறுத்துவது, அவன் அவள் அதுவெனும் அவை மூவினைமையின் தோற்றிய திதியே ஒடுங்கிமலத்துளதாம் அந்தம் ஆதி என்மனார் புலவர் எனவரும் சிவஞான போத முதற்சூத்திரமாகும். இந்நூலின் ஆசிரியராகிய மெய்கண்ட தேவர், இச்சூத்திரம் என்னுதலிற்றோ வெனின், சங்கார காரணனாயுள்ள முதலையே முதலாகவுடைத்து இவ்வுலகம் என்பது உணர்த்துதல் நுதலிற்று என இம்முதற் சூத்திரத்திற்குக் கருத்துரை வரைந்துள்ளார். ஆசிரியர் மெய்கண்டார் சிவஞான போத முதற்சூத்திரத்தில் ஏது எடுத்துக்காட்டுக்களுடன் விரித்து விளக்கும் சைவசித்தாந்தத் தத்துவவுண்மையாகிய இக்கொள்கைக்குப் படுபறை பலவியம்பப் பல்லுருவம் பெயர்த்து நீ, கொடுகொட்டி ஆடுங்கால் எனக் கலித்தொகைக் கடவுள் வாழ்த்திலும் பல்வயின் உயிரெல்லாம் படைத்தான் கட் பெயர்ப்பான்போல் என நெய்தற்கலியிலும் வரும் தொடர்கள் ஆதாரமாக அமைந்துள்ளமை இங்கு ஒப்புநோக்கியுணர்தற் குரியதாகும். இறைவன் படைத்தல் காத்தல் அழித்தல் ஆகிய முத்தொழிற்கும் உரியனாயினும் ஊழிமுடிவில் யாவராலும் செய்ய இயலாத முற்றழிவாகிய மகாசங்காரத் தொழில் அவனொருவனாலேயே செய்தற்குரியதாதலின் அதுபற்றி அம்முதல்வனைக் காஅய் கடவுள் (பரி.) என்றும் கொலைவன் (கலி.) என்றும், கூற்று (கலித்.) என்றும் சங்கச் செய்யுட்கள் குறித்துள்ளன. முக்கண்ணான் ஞாயிறு, திங்கள், தீ என்னும் முச்சுடர்களைக் கண்களாக வுடையவன் இறைவன் ஆதலின் முக்கண்ணான் என்பது அவற்குரிய திருப்பெயராயிற்று. முக்கண்ணான் மூவெயிலும் உடன்றக்கால் முகம்போல ஒண்கதிர் தெறுதலின் (கலித். 1) எனக் கலித்தொகையிலும் பணியியரத்தை நின்குடையே முனிவர், முக்கட்செல்வர் நகர்வலஞ் செயற்கே (புறம். 6) எனப் புறநானூற்றிலும் இப்பெயர் பயின்றுள்ளமை காணலாம். மூன்று கண்களுள் வலக்கண் ஞாயிறு. இடக்கண் திங்கள். நடுவேயுள்ளது தீயினுருவாகிய நெற்றிக் கண்ணாகும். நெற்றிக் கண்ணாகிய இது ஏனைய இரண்டு கண்களைப் போல் நெற்றியின் கீழ் இருபக்கங்களிலும் படுத்த நிலையிலமையாது நிமிர்ந்து நின்ற நிலையில் இருத்தலால் ஏனைத்தேவர் கண்களினின்றும் வேறுபாடுடையதாய் உயர்ந்து விளங்கும் தன்மையினையுடையதாகு ம். இதன் இயல்பினை, கறைமிடற்றண்ணல் காமர் சென்னிப் பிறைநுதல் விளங்கும் ஒருகண்போல வேந்து மேம்பட்ட பூந்தார் மாற (புறம். 55) எனவரும் தொடரில் மதுரை மருதன் இளநாகனார் உவமையாக எடுத்துக்காட்டியுள்ளார். கறை சேர்ந்த திருமிடற்றையுடைய இறைவனது அழகிய திருமுடிப் பக்கத்து அணிந்த பிறை சேர்ந்த திருநெற்றிக் கண்ணே விளங்கும் ஒரு திருநயனம் போல (சேர சோழ பாண்டியர் ஆகிய) மூவேந்தருள்ளும் மேம்பட்டு விளங்கும் பொலிவு பெற்ற மாலையையணிந்த பாண்டியனே எனப் பாண்டியன் இலவந்திகைப் பள்ளித்துஞ்சிய நன்மாறனை முடிவேந்தர் மூவருள்ளும் முதன்மை பெற்றுயர்ந்தவனாகப் புகழ்ந்து போற்றுவதாக அமைந்தது மேற்குறித்த புறநானூற்றுத் தொடராகும். உலகினைப் படைத் தளித்தழிக்கும் கடவுளர் மூவரினும் முதல்வனாகச் சிவபெருமானே உயர்ந்து விளங்கும் இறைமைத் தன்மையினையுடையார் என்பது, மாலும் அயனும் ஆகிய ஏனையிருவர்க்கும் இல்லாத இமையா நாட்டமாகிய நெற்றிக் கண்ணுடைமையால் உய்த்துணரப்படும். இறைவனை முக்கண்ணனாகத் திருவுருவமைத்து வழிபடும் மரபு இந்நாட்டின் நெடுங்காலமாக நிலைபெற்றுள்ளமை அரப்பா, மொகஞ்சதரோ ஆகிய இடங்களில் நிகழ்ந்த அகழ்வாராய்ச்சியால் நன்கு வலியுறுத்தப் பெற்றதாகும். ஏற்றூர்தியான், ஆனேற்றுக்கொடியோன் தூய வெள்ளை நிறம் வாய்ந்த ஆனேறு ஆகிய இடபம் சிவபெருமானுக்குரிய ஊர்தியாகவும் கொடியாகவும் தொன்று தொட்டுப் போற்றப்பெற்று வருகின்றது. இச்செய்தி, ஊர்தி வால்வெள்ளேறே சிறந்த சீர்கெழு கொடியும் அவ்ஏறு என்ப (புறம். கடவுள்) ஊர்ந்தது ஏறே சேர்ந்தோள் உமையே (அகம். கடவுள்) உருவ ஏற்றூர்தியான் (கலித். பரிபாடல் 6) புங்கவம ஊர்வோன் (பரி.) ஏற்றுவலன் உயரிய எரிமருள் அவிர்சடை மாற்றருங்கணிச்சி மணிமிடற்றோனும் (புறம். 56) எனவரும் சுங்க இலக்கியத் தொடர்களால் நன்குபுலனாம். தூயவெள்ளை நிறம் வாய்ந்த எருதினை (இடபத்தினை) கொண்டதன் உட்கருத்து தூய்மெய்யுணர்வின்கண் நிலைபெற்று விளங்குபவன் இறைவன் என்பதாகும், இந்நுட்பம், உணர்வெனும் ஊர்வதுடையாய் போற்றி எனவரும் தேவாரத் தொடரால் இனிது புலனாதல் காணலாம். இறைவனது ஊர்தியாகிய இடபத்தினை அறத்தின் வடிவாகக் கூறுதலும் உண்டு. இறைவனுக்குரிய படைக்கலங்கள் சிவபெருமான் தன் திருக்கைகளில் ஏந்திய படைக் கலங்களாகக் கணிச்சி - மழு, முத்தலைச்சூலம் என்பன குறிக்கப்பெற்றன. இறைவனுக்குப் படையாகக் கூறப்படும் கணிச்சியும் மழுவும் சொல்லால் வேறுபடினும் பொருளால் ஒன்றே என்பது பழையவுரையாசிரியர் உரையாற் புலனாகின்றது. இகலட்டுக், கையது கணிச்சியொடு மழுவே, மூவாய்வேலும் உண்டு அத்தோலாதோற்கே எனவரும் அகநானூற்றுக் கடவுள் வாழ்த்தில் கணிச்சியாகிய மழுவும் மூவாய்வேலாகிய முத்தலைச்சூலமும் சிவபெரு மானுக்குரிய படைக்கலங்களாகக் குறிக்கப்பெற்றன. மழு என்பது சிறிய கோடரி போன்று அமைந்த பரசு என்னும் ஆயுதமாகும். ஆனேற்றவிர்பூண் முழுமுதற் கடவுளாகிய சிவபெருமானுக்குரிய ஊர்தியும் கொடியும் ஆகிய ஆனேற்றினை (இடபத்தினை) நடுவில் வைத்து அதன் ஒருபக்கத்தில் திருமாலுக்குரிய நாந்தகம் என்னும் வாட்படையும் மற்றொரு பக்கத்தில் சிவனுக்குரிய மழுப்படையும் விளங்கப் பொன்னினாலும் பவளத்தினாலும் செய்தமைத்த பொற்பூணினை இளங் குழந்தைகட்குக் காப்பாக அணிவதென்பது சங்ககாலந் தொட்டுத் தமிழ் மக்களிடையே நிலவி வரும் பழக்கமாகும். இச்செய்தி, பூண்டவை, எறியா வாளும் எற்றாமழுவும் செறியக்கட்டி ஈரிடைத் தாழ்ந்த பெய்புல மூதாய்ப் புகர்நிறத் துகிரின் மையற விளங்கிய ஆனேற்று அவிர்பூண் (கலித். 85) எனவும், பொலஞ்செய் மழுவொடு வாளணிகொண்ட நலங்கினர் ஒன்பூண் (கலித். 86) எனவும் வரும் மருதக் கலித்தொடர்களால் இனிது விளங்கும். பூண்டவை, வெட்டாத வாளும் வெட்டாத மழுவும் நெருங்கக்கட்டி, இரண்டு புறத்தினும் தங்கின மழைபெய்த நிலத்துப் பரவிய ஈயல் மூதாயினது (பட்டுப்பூச்சியினது) புகரையுடைத்தாகிய நிறத்தையுடைய பவளத்தாற் செய்த அழுக்கற விளங்கிய இடபத்தையுடைய விளங்குகின்ற பூண் என்பதும், பொன்னாற் செய்த மழுவோடே வாளும் அணிதலைக்கொண்ட நன்றே விளங்குகின்ற ஒள்ளிய பூண் என்பதும் இவ்விரு தொடர்களின் பொருளாகும். சிவனுக்குரிய அடையாளப்பூ கொன்றைமலர் பொன்போலும் நிறத்தினதாய்க் கொத்தாக மலரும் கொன்றை மலர் மாலை இறைவனுக்குரியதாகும். கார்விரி கொன்றைப் பொன்னேர் புதுமலர்த் தாரன் மாலையன் மலைந்த கண்ணியன் (அகம். கடவுள்) கண்ணி கார்நறுங்கொன்றை காமர் வண்ணமார்பில் தாரும் கொன்றை (புறம். கடவுள்) அயந்திகழ் நறுங்கொன்றையலங்கலந் தெரியலான் (கலி. 150) மணிமிடற்று மாண்மலர்க் கொன்றையவன் (கலி. 143) என்றாங்குவரும் சங்க இலக்கியத் தொடர்கள் சிவபெருமானுக்குச் சிறந்தது கொன்றை மலர்மாலை என்பதனை அறிவுறுத்துவன, கொன்றை பொன்னார் மேனியனாகிய சிவபெருமானைப் போன்று பொன்னிறம் வாய்ந்த பூவாகும். ஐந்திதழ்களையுடைய இம்மலர் சிவபெருமானுக்குரிய மந்திரமாகிய திருவைந்தெழுத்தின் அடையாளமாகும். இவ்விதழ்களின் மேலாகத் தமிழ் ஓகாரவெழுத் தமைப்பில் திருவாசிபோல் வளைந்துள்ள முனை ஒங்காரமாகிய பிரணவத்தின் அமைப்புடையது. இவ்வாறு திருவைந்தெழுத்தின் அமைப்பில் உருவும் நிறமும் வாய்ந்த கொன்றைமலர் ஐந்தெழுத்தின் உருவாகி நின்ற இறைவனுக்குரிய அடையாளப்பூவாயிற்று என்பர் பெரியோர். மாலொருபாகர் (சங்கரநாராயணர்) அந்திவானம் போன்ற திருமேனியன் சிவபெருமானும் கடல்நிற வண்ணனாகிய திருமாலும் ஆகிய இருபெருந் தெய்வத்திருமேனியும் ஓருருவாய் உடனியைந்து தோன்றும் திருவுருவம் சங்கரநாராயணர் (மாலொருபாகர்) திருமேனியாகும். கொடியோர் அஞ்சுதற்குக் காரணமான பேராற்றல் வாய்ந்த செம்மேனி யிறைவனாகிய சிவனும்கரிய திருமேனிய னாகிய திருமாலும் ஒருருவினராய்த் திகழும் தோற்றம் போல அந்தி வானமும் கருங்கடலும் ஒருங்கியைந்து அழகுபெற்றுத் தோன்றும்படி மாலைக்காலம் வந்தது என்பார், வெருவரு கடுந்திறல் இருபெருந் தெய்வத்து உருஉடனியைந்த தோற்றம் போல அந்திவானமொடு கடல் அணிகொளாஅ வந்த மாலை (அகம். 360) என்றார் மதுரைக் கண்ணத்தனார் என்னும் புலவர் பெருமான். சங்ககாலத்தில் உமையொருபாகர் திருமேனியைப் போன்று மாலொருபாகர் (சங்கர நாராயணர்) திருமேனியும் சிவபெருமானுக் குரிய திருமேனிகளுள் ஒன்றாகக் கருதி வழிபடப்பெற்றதென்பது இங்கெடுத்துக் காட்டிய அகநானூற்றுப் பாடற்பகுதியால் இனிது விளங்கும். இதனால் சிவன் திருமால் வழிபாடுகளுக்கிடையேயமைந்த ஒருமைப்பாடும் நன்கு புலனாதல் காணலாம். இங்ஙனம் சிவபெருமானும் திருமாலும் ஓருருவாய் உடன் இயைந்து தோன்றும் திருவுருவத் தோற்றத்திற்கு உவமை கூற எண்ணினால் பொன்மாலையும் நீலமலையும் ஒருங்கியைந்து நீண்டுயர்ந்து நிற்கின்ற தோற்றத்தினை உவமையாகக் கூறுதல் பொருந்தும் என்பார், மின்போலுஞ் செஞ்சடையான் மாலோடும் ஈண்டிசைந்தால் என்போலும் காண்பார்கட் கென்றிரேல் - தன்போலும் பொற்குன்றும் நீலமணிக்குன்றுந தாமுடனே நிற்கின்ற போலும் நெடிது (அற்புத் திருவந்தாதி 83) என்று அருளிச் செய்தார் காரைக்காலம்மையார். மின்னலையொத்து மிளிரும் சிவந்த சடையினையுடைய சிவபெருமான் (தனது ஒருபாகத்தில் விளங்கும் காத்தற் கடவுளாகிய) திருமாலோடும் இங்கு இசைந்து எழுந்தருளினால் அத்தெய்வத் தோற்றம் காண்பார்க்கு எங்ஙனம் திகழும் எனக் கேட்பீராயின், தனக்குத் தானேயொப்பென விளங்கும் பொன்மலையும் நீலநிறம் வாய்ந்த மணிமலையும் ஒருங்கியைந்து மிகவுயர்ந்து விளங்கும் தோற்றத்தை ஒப்பதாகும் என்பது இதன்பொருள். பொன்திகழும் மேனிப் புரிசடையம் புண்ணியனும் நின்றுலகம் தாய நெடுமாலும் - என்னும் இருவரங்கத்தால் திரிவரேனும் ஒருவன் ஒருவனங்கத் தென்றும் உளன் (இயற்பா. முதற்றிருவந்தாதி 98) எனப் பொய்கையாழ்வாரும். தாழ்சடையும் நீண்முடியும் ஒன்மழுவுஞ் சக்கரமும் சூழரவும் பொன்னாணுந் தோன்றுமால் - சூழும் திரண்டருவி பாயும் திருமலைமேல் எந்தைக்கு இரண்டுருவும் ஒன்றாய் இசைந்து (இயற்பா. மூன்றாந்திருவந்தாதி 63) எனப் பேயாழ்வாரும் அருளிய அருளிச் செயல்கள் சங்கரநாரயணர் திருவுருவ அமைப்பினை நன்கு புலப்படுத்துவனவாகும். அட்டமூர்த்தி (எண்பேருருவினன்) ஈசனாகிய சிவபெருமான் நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம், ஞாயிறு, திங்கள், வேள்வித் தலைவனாகிய ஆன்மா என எண்பேருருவினனாக உலகுயிர்களோடு பிரிவின்றிக் கலந்து விளங்குகின்றான் என்பது சிவநெறியாளர்கள் தாம் வரிபடும் இறைவனுக்குக் கூறும் சிறப்புடைய இலக்கணமாகும். மாஅயோயே மாஅயோயே, மறுபிறப்பறுக்கும் மாசில்சேவடி மணிதிகழுருவின் மாஅயோயே (பரிபாடல் 3) எனத் திருமாலை எதிர்முகமாக்கிப் போற்றத்தொடங்கிய கடுவன் இளவெயினனார் என்னும் புலவர் பெருமான் திருமாலும் சிவனும் ஒருமுழுமுதற்பொருளே என்னும் ஒருமையுணர்வுடன் சிவபெருமானுக்குரிய அட்ட மூர்த்தவடிவினைத் திருமாலுக்கு ஏற்றிக் கூறுவதாக அமைந்தது, தீவளிவிசும்புநிலன் நீர் ஐந்தும் ஞாயிறும் திங்களும் அறனும் (பரி. 3 : 4,5) எனவரும் பரிபாடற்றொடராகும். அச்சேவடி (மறுபிறப் பறுக்கும் மாசில் சேவடி) கூறுதற்கு முகம் புகுகின்றாராதலிற் பலகாலும் எதிர்முகமாக்கினார்; ஆக்கி வாழ்த்துகின்றவர் அவன்கண் தோன்றிய பொருள்கள் கூறுவான் தொடங்கி, ஈசற்கு (சிவபெருமானுக்கு) தீவளி விசும்புநிலம் நீர் என்னும் பூதங்கள் ஐந்தும் ஞாயிறும் திங்களும் வேள்வி முதல்வனும் என இவை, வேட்கின்ற வடிவு தருமமாதலின் அஃது அறனெனப்பட்டது எனப் பரிமேலழகர் தரும் உரை விளக்கம் அட்டமூர்த்தி வடிவம் சிவனுக்குச் சிறந்து எடுத்துக் கூறப்படுவது என்பதனை நன்கு வலியுறுத்துவதாகும். சிவபெருமானுக்குத் திருமுகங்கள் ஐந்து சிவபெருமானுக்கு ஐந்து திருமுகங்கள் உள்ளன என்பதும் ஐந்து திருமுகங்களையுடைய அம்முதல்வனே உலகுயிர்களைத் தன்கண் ஒடுக்கவல்ல பேராற்றல் படைத்தவன் என்பதும் அவ்விறைவன் திருமாலாகவும் திகழ்கின்றான் என்பதும் ஐந்தலை யுயரிய அணங்குடை யருந்திறல் மைந்துடை யொருவனும் மடங்கலும் நீ (பரி. 1) எனத் திருமாலைப்போற்றும் பரிபாடற் பகுதியாலும், ஐந்துதலையைத் தோற்றுவித்த அணங்குடை அருந்திறலையுடைய ...ஈr‹, மடங்கல் - அவனினாகிய உலகுயிர்களின் ஒடுக்கம் எனவரும் பரிமேலழகர் உரைக் குறிப்பானும் அறியப்படும். வாய்மைப் பொருள் சிவன் சிவபெருமான், தன்னை வணங்கிக்கேட்போர் யாவராயினும் அவர்கேட்ட வரங்களை மாறாது கொடுத்தருளுதலில் தவறாத வாய்மையுடையன் என்பது, அம் முதல்வனைக் குறித்து வழங்கும் புராணங்களால் அறியப்படும். அம்முதல்வன் உமாதேவியைத் திருமணம் புரிந்து கூடியிருக்கும் காலத்திலே இந்திரன் வந்த அப்பெருமானிடம் ஒருவரம் கேட்டு உமையொடு கூடிய புணர்ச்சியால் தோன்றிய கருவை அழிப்பாயாக என வேண்ட மழுப்படையைத் தரித்த இறைவன் வாய்மையில் தவறாதவனாதலின், அவ்விந்திரனுக்குத் தான் கொடுத்த வரத்தைச் செய்தற்கரிதென மாற்றாமல் ஏழுலகத்தவர்களும் வியக்க அதனுருவினைப் பல கண்டமாகச் சேதித்தான் என ஐந்தாம் பரிபாடலிற் கூறிய செய்தி முன்னர் முருகனைப் பற்றிய செய்திகளில் எடுத்துக்காட்டப்பட்டது. ஆலின்கீழ் அறமுரைத்த அருந்தவமுதல்வனாகிய சிவபெருமானே யார்கண்ணும் ஐயந்தீர மெய்பொருளை யறிவுறுத்தி எக்காலத்தும் பொய்கூறா வாய்மையனாகத் திகழ்கின்றனான் என்பது, ஐயந்தீர்ந்தியார்கண்ணும் அருந்தவ முதல்வன்போல் பொய்கூறாய் என நின்னைப் புகழ்வது (கலி. 100) எனவரும் மருதக்கலியாலும் அரிய தவத்தையுடைய அறமுரைத்த நாயனாரைப்போல யாவரிடத்தும் பொய்கூறாய் என ஐயம் அற்று உலகம் நின்னைப் புகழ்கின்ற தன்மை எனவரும் அதன் உரையாலும் அறிவுறுத்தப் பெற்றது. ஈறிலாதவன் இறைவன் எவ்விடத்தும் எக்காலத்தும் மாறாதுள்ள நிலைமை சத்து என்னும் செம்பொருளுக்கு இயல்பாகவுள்ள தன்மையாகும். செம்பொருளாகிய சிவம் எக்காலத்தும் திரிபின்றி அழியாது உள்ளது ஆதலின் அதற்குப் பிறப்பும் இல்லை இறப்புமில்லை என்பதும் அது தோற்றமும் ஈறுமில்லாத முழு முதற்பொருள் என்பதும் சிவநெறியாளர் துணிபாகும். அதியமான் நெடுமானஞ்சி என்னும் வள்ளல் சாதலைத் தடுத்து நீண்டநாள் வாழச் செய்வதும் பெறுதற்கு அரியதும் ஆகத் தான்மலையுச்சியிற் கொண்ட நெல்லிக் கனியின் ஆக்கத்தினை வெளிப்படுத்தாமல் ஔவையார்க்குக் கொடுத்தானாக அதனையுண்டு அதன் விளைவினை அறிந்துகொண்ட ஔவையார் தன்பால் அதியமான் கொண்டுள்ள பேரன்பினையும் பெருமதிப்பினையும் எண்ணி நெஞ்சம் நெகிழ்ந்து அவனை வாழ்த்துவதாக அமைந்தது, வலம்படுவாய்வாள் ஏந்தி ஒன்னார் களம்படக் கடந்த கழல்தொடித்தடக்கை ஆர்கலிநறவின் அதியர் கோமான் போரடுதிருவிற் பொலந்தார் அஞ்சி பால்புரை பிறைநுதற்பொலிந்த சென்னி நீலமணி மிடற்றொருவன் போல மன்னுகபெரும நீயே தொன்னிலைப் பெருமலை விடரகத்தருமிசைக் கொண்ட சிறியிலை நெல்லித்தீங்கனி குறியாது ஆதல்நின்னகத்தடக்கிச் சாதல்நீங்க எமக்கீத் தனையே (புறம். 91) எனவரும் புறநானூற்றுப் பாடலாகும். மாற்றாரைப் போரின்கண் கொல்லும் வீரச் செல்வத்தினையுடைய அதியர்கோமான் நெடுமானஞ்சியே, நீ பெரிய மலையின் உச்சிக்கண் கொள்ளப்பட்ட அரிய இனிய நெல்லிக் கனியைப் பெறுதற்கு அரிதென்று கருதாது அதனாற் பெறும் பேற்றினை எமக்குச் சொல்லாது நின்னுள்ளே அடக்கி எமக்குச் சாதல் நீங்க அளித்தாய்; ஆதலால் பால்போலும் பிறைநுதலிடத்தே பொலிவுபெற்றுத் தோன்றும் திருமுடியையும் நீலமணிபோலும் கரிய திருமிடற்றினையும் உடைய ஒப்பற்ற முதல்வனாகிய சிவபெருமானைப் போல என்றும் நிலைபெற்று வாழ்வாயாக என இப்பாடலால் அதியமானை வாழ்த்துகின்றார் ஔவையார். நீலமணிமிடற்று ஒருவன் போல மன்னுகபெரும என வாழ்த்தியதன் குறிப்பு, சிவபெருமான் எக்காலத்தும் அழிவின்றி நிலைபெறுமாறு போல நீயும் அழிவின்றி நிலைபெறுக என்பதாம். நீலமணிமிடற் றொருவன் போல என்ற கருத்து, சாதற்குக் காரணமான நஞ்சுண்டும் நிலைபெற்றிருந்தாற்போல நீயும் சாவா திருத்தல் வேண்டும் என்பதாம் எனப் புறநானூற்றின் பழைய வுரையாசிரியர் இக்குறிப்பினைப் புலப்படுத்தலால் நீலமணி மிடற்றொருவனாகிய ஈசனே என்றும் அழிவின்றியுள்ள முழு முதற் கடவுள் என்பது அதியமானை வாழ்த்திய ஔவையார் துணிபாதல் நன்கு தெளியப்படும். ஔவையார் பாடிய இப்பாடலை அடியொற்றியமைந்தது. ஈறிலாதவன் ஈசன் ஒருவனே (5-100-3) எனவரும் அப்பரடிகள் வாய்மொழியாகும். ஆறெலாங்கங்கையே யனைய குன்றெலாம், ஈறிலான் கயிலையே ஏய்ந்த (கம்பர். பால.) எனவரும் பாடலிற் கவிச்சக்கரவர்த்தி கம்பர் சிவபெருமானை ஈறிலான் என்ற பெயராற் குறித்துள்ளமையும் இங்கு ஒப்புநோக்கற்பாலதாகும். சிவநெறிக்கொள்கைகள் அம்மையப்பனாகத் திகழும் சிவபெருமான் மன்னுயிர்களின் பொருட்டு உலகங்களைத் தோற்றுவித்துக் குறித்தகாலம் வரை அவற்றை நிலைபெறச் செய்து ஊழிமுடிவில் மீட்டுத் தன்னிடத்து ஒடுங்கச் செய்கின்றான் என்பதும், ஊழிமுடிவில் உலகங்களை ஒடுக்கிய இறைவனே உயிர்களின் பொருட்டு உலகங்களை மீளவும் படைத்தருள்கின்றான் என்பதும் எனவே மகாசங்காரகாரணனாகிய சிவபெருமானே உலகத்திற்கு நிமித்தகாரணன் என்பதும், கலித்தொகைக் கடவுள் வாழ்த்தின் பொருளை விளக்கு மிடத்து முன்னர் விளக்கப் பெற்றன. காணப்படும் உலகமாகிய காரியத்தைக் கொண்டு அதற்கு நிமித்த காரணமாயுள்ள முழுமுதற் பொருள் ஒன்று உண்டுஎனக் கருதலளவையால் கடவுளுண்மை துணிய வேண்டுதலின் கடவுள் வாழ்த்துப் பாடிய பெருந்தேவனார், ஒருவன் இருதாள் தாள்நிழற்கீழ் மூவகையுலகழும் முறையே முகிழ்த்தன என உலகின் மேல் வைத்துக் கூறினார். ஆயினும் மூவகையுலகங்களையும் தன்தாள் நிழற்கீழ்க் கொண்டு அவற்றை முறையே முகிழ்க்கும்படி (தோன்றும்படி) செய்தருளியவன் நீலமேனி வாலிழைபாகத்து ஒருவன் என்பது ஆசிரியர் கருத்தாகக் கொள்ளுதல் வேண்டும். இத்தொடரில் தாள்நிழல் என்றது, இறைவன் திருவடி நீழற்கண் அடங்கிய தூயமாயையாகிய சட ஆற்றலையெனக் கொள்ளுதல் வேண்டும், கிழங்கினின்றும் முளைத்த தாமரையை அதற்கு ஆதாரமாகிய சேற்றினின்றும் முளைத்தது என்னும் பொருளில் பங்கயம் என வழங்கினாற் போல மாயையினின்றும் தோன்றிய உலகங்களை மாயைக்கு ஆதாரமாகிய திருவடி நீழலினின்றும் முகிழ்த்தன என்றார் பெருந்தேவனார். மூவகையுலகம் ஆவன மேல், நடு, கீழ் என முப்புணர் அடுக்கிய உலகத் தொகுதிகள். மூவகையுலகங்களும் எவ்வேழுவகைப்பட்டுள்ளன என்பது, மூவேழுலகமும் உலகினுள்மன்பதும் (பரிபாடல் 9) என்பதனாற் புலனாம். மூவேழுலகம் - ஒரோவொன்று எழுவகைப்பட்ட மூன்றுலகம். மன்பது - ஒழிந்த உயிர்ப்பன்மை என்பர் பரிமேலழகர். இனி, மூவகையுலகு என்பதற்கு, அவன் அவள் அதுவெனும் அவயவப்பகுப்புடையனவாய்ச் சுட்டியுணரப்படும் உலகத்தொகுதி எனப் பொருளுரைத்தலும் பொருந்தும். அவன் அவள் அது வெனும் அவை மூவினைமையின் தோற்றிய திதியே (சிவஞான போதம், சூத்திரம்) என்றார் மெய்கண்டார். ஒருவன் என்றும் ஒருத்தியென்றும் ஒன்றென்றும் கூறப்படும். அவயப்பகுப்புடையதாயும் பல்வேறு வகைத்தாய்ச் சடமாயும் சுட்டியறியப் படுவதாயும் இருத்தலின் இம்மூன்று ஏதுக்களாலும் காணப்படும் உலகம், தோன்றிநின்று அழிதலாகிய முத்தொழிற்படும் உள்பொருளேயாம் என்பது இத்தொடரின் பொருளாகும். சிவபெருமானைப் போற்றிப்பரவும் முறையிற் பெருந்தேவனார் பாடியுள்ள கடவுள் வாழ்த்துப் பாடல்களில், நீலமேனி வாலிழை பாகத்து ஒருவன், யாழ் கெழு மணிமிடற்று அந்தணன், தாழ்சடைப்பொலிந்த அருந்தவத்தோன் எனவரும் தொடர்கள் கடவுளுண்மையினையும், மூவகையுலகும் முகிழ்த்தனமுறையே, தாவில் தாள்நிழல் தவிர்ந்தன்றால் உலகே எனவரும் தொடர்கள் உலகின் உண்மையினையும், மூவா அமரரும் முனிவரும் பிறரும் யாவரும், எல்லாவுயிர்க்கும் எனவரும் தொடர்கள் உயிர்களின் உண்மையினையும் புலப்படுத்தி நிற்றல் காணலாம். எனவே கடவுள், உயிர், உலகம் என்னும் முப்பொருள்களும் தோற்றமில் காலமாக (அநாதியாக) உள்ள பொருள்களே என்னும் சைவ சித்தாந்தத் தத்துவத்துக்குரிய வேர்கள் (மூலங்கள்) சங்கச் செய்யுட்களாகிய இப்பாடல்களில் ஊன்றியிடங்கொண்டு பரவியுள்ளமை நன்கு தெளியப்படும். கோயில்களும் திருவிழாக்களும் தமிழகத்திற் பேரூர்களிலும் சிற்றூர்களிலும் சிவபெருமானுக் குரிய திருக்கோயில்கள் நிலைபெற்றிருந்தன. சங்ககாலத்தில் ஆட்சிபுரிந்த சோழன் செங்கணான் சோணாட்டிலுள்ள அகநாடுகள் தோறும் சிவபெருமானுக்கு மாடக்கோயிலைக் கட்டினான் என்ற செய்தி திருத்தொண்டர் புராணத்தில் விரித்துரைக்கப்பெற்றது. கோச்செங்கணான் கட்டிய மாடக்கோயில்களிற் பல மூவரருளிய தேவாரத்திருப்பதிகங்களில் ஆங்காங்கே போற்றப்பெற்றுள்ளமை காணலாம். கோச்செங்கட் சோழன் சிவபெருமானுக்கு எழுபது மாடக்கோயில்களைக் கட்டியுள்ளான் என்பதும் சிறந்த சிவனடியானாகிய அவ்வேந்தர் பெருமானே திருநறையூர் மணிமாட மாகிய திருமாலுக்குரிய திருக்கோயிலையும் கட்டியுள்ளான் என்பதும், இருக்கிலங்குதிருமொழி வாய் எண்தோளீசற்கு எழில்மாடம் எழுபது செய்துலக மாண்ட திருக்குலத்து வளச்சோழன் சேர்ந்தகோயில் திருநறையூர்மணிமாடம் சேர்மின்களே (பெரியதிருமொழி, 6-3-8) எனவரும் திருமங்கையாழ்வார் அருளிச் செயலால் அறியப்படும். சோழநாட்டின் அகநாடுகளுள் ஒன்றாகிய புகார் நாட்டில் உலகம் முழுதும் பரவிய பொருள்சேர்புகழ்த்திறம் வாய்ந்த நான்மறைகளைத் திருவாய்மொழிந்தருளிய முக்கட் செல்வராகிய சிவபெருமானுக்குரிய திருக்கோயில் ஆலமுற்றம் என்ற இடத்தில் அழகுபெற அமைந்திருந்த தென்பதும் அக்கோயிலையடுத்துப் பொய்கையும் அதனைச் சூழச்சோலையும் அமைந்திருந்தன என்பதும், ஞாலம் நாறு நலங்கெழு நல்லிசை நான்மறை முதுநூல் முக்கட் செல்வர் ஆலமுற்றங் கவின்பெறத்தைஇய பொய்கைசூழ்ந்த பொழில் ..... புகாஅர் நன்னாட்டதுவே (அகம். 181) எனவரும் அகநானூற்றுப்பாடற்பகுதியால் அறியப்படும். பாண்டிநாட்டின் தலைநகராகிய மதுரையில் சிவபெருமானுக்கு ஏழு நாள் திருவிழா நடந்தது என்பதும், ஏழாம் நாளின் அந்திக்காலத்தில் நாட்டு மக்கள் தீவினை நீங்கத் தீர்த்தமாடினர் என்பதும், கழுநீர்கொண்ட எழுநாளந்தி ஆடுதுவன்று விழவின் நாடார்த்தன்றே (மதுரைக். 427-428) எனவரும் மதுரைக் காஞ்சித் தொடராற் புலனாகும். தீவினையைக் கழுவுதற்குக் காரணமான தீர்த்தநீரைத் தன்னிடத்தே கொண்ட எழாம்நாளின் அந்திக்காலத்தே வெற்றிநெருங்கும் திருவிழாவிற்குத் திரண்ட நாட்டிலுள்ளோர் ஆர்த்த ஆரவாரம் என்பது மேற்காட்டிய தொடரின் பொருளாகும். கால்கொள்ளத் தொடங்கிய ஏழாம் நாள் அந்தியிலே தீர்த்தமாடுதல் மரபு என்றார் நச்சினார்க்கினியர். இனி, ஏழுநாள் அந்தி என்பதற்கு ஏழாம்நாளின் அந்திப்பொழுது எனப் பொருள் கொள்ளாமல் ஏழாம்நாளின் அந்தத்தில் (முடிவில்), அஃதாவது எட்டாம் நாளில் தீர்த்தமாடுதல் மரபு எனக் கொள்ளுதல் பொருத்தமுடையதாகும் இம்மரபு, தீர்த்தமாம் அட்டமிமுன்சீருடை ஏழுநாளுங் கூத்தராய் வீதிபோந்தார் குறுக்கை வீரட்டனாரே எனவரும் திருநாவுக்கரசர் தேவாரத்திற் குறிக்கப் பெற்றுள்ளமை இங்கு ஒப்புநோக்கியுணர்தற்குரியதாகும். அவிர்சடை முனிவர் சங்கவிலக்கியத்தற் கூறப்படும் அவிர்சடைமுனிவர் என்போர் செஞ்சடைக் கடவுளாகிய சிவபெருமானை வேள்வித் தீ வடிவிற் போற்றி வழிபடும் விரிசடை விரதிகள் எனக் கருதவேண்டியுள்ளது. அருந்தவ முனிவர்களாகிய இவர்கள் மலைகளிலும் காடுகளிலும் ஊர்ப்புறங்களிலும் தங்கித் தவம்புரியும் இயல்பினர். வேள்விக் குண்டத்தில் தீயினைவளர்த்து நறுநெய் ஆவுதி வழங்கி அழல் வண்ணனாகிய இறைவனை வழிபடுதல் இவர்தம் இயல்பாகும். தவமுனிவராகிய இவர்கட்கு யானை முதலிய விலங்குகளும் பணி செய்தல் உண்டு. இன்சீர்க் கின்னரம் முயலும் அணங்குடைச்சாரல் மஞ்ஞை யாலும் மரம்பயிலிறும்பின் கலையாய்ந்துதிர்ந்த மலரவிழ்புறவின் மந்தி சீக்கும் மாதுஞ்சுமுன்றிற் செந்திப்பேணிய முனிவர் வெண்கோட்டுக் களிறுதரு விறகின் வேட்கும் ஒளிறிலங்கருவிய மலைகிழவோனே (பெரும்பாண். 493-500) எனவும், கானயானை தந்த விறகின் கடுந்தெறற் செந்தீவேட்டுப் புறந்தாழ்புரிசடை புலர்த்துவோனே (புறம். 251) எனவும், தாழ்காவின், அவிர் சடைமுனிவர் அங்கிவேட்கும் ஆவுதி நறும்புகை (பட்டினப். 53,54) எனவும், சிறுதலை நவ்விப் பெருங்கண் மாப்பிணை அந்தியந்தணர் அருங்கடன் இறுக்கும் பொற்கோட்டிமயமும் பொதியமும் போன்றே (புறம். 2) எனவும் வரும் தொடர்கள் இத்தகைய அருந்தவ முனிவர்களைக் குறிப்பன. மிக்கதவத்தைச் செய்த பெருமக்கள் தமது உடம்பினை நிலத்தில் அழிய விடாமலே அவ்வுடம் போடு நெடுங்காலம் வாழ்ந்திருந்து தாம் செய்த தவப்பயனை நுகரும் சித்தர்களாகத் திகழ்ந்தனர். இச்செய்தி, தவஞ்செய்மாக்கள் தம்முடம்பு இடாது அதன்பயம் எய்திய அளவை மான (பொருந. 91,92) எனவரும் பொருநராற்றுப்படைத் தொடராற் புலனாகும். மிக்க தவத்தைச் செய்கின்ற பெருமக்கள் தம்முடைய தவத்திற்கு உறுதுணையாகிய உடம்பினை நிலத்தில் இறக்கவிடாமல் அவ்வுடம்புடன் நெடுங்காலம் உயிர்வாழ்ந்திருந்து அத்தவத்தாற் பெறுதற்குரிய பயனைப் பெற்ற தன்மையை யொப்ப என்பது மேற்குறித்த தொடரின் பொருளாகும். வான்மீகியார் என்னும் புலவர்பெருமான் தவத்தின் சிறப்பினை யுணர்த்துவதாக அமைந்தது, பருதி சூழ்ந்த இப்பயங்கெழு மாநிலம் ஒருபகல் எழுவர் எய்தியற்றே வையமும் தவமும் தூக்கின் தவத்துக்கு ஐயவியனைத்தும் ஆற்றாது ஆகலின் கைவிட்டனரே காதலர் அதனால் விட்டோரை விடாள்திருவே விடாதோர் இவள் விடப்பட்டோரே (புறம். 358) எனவரும் புறநானூற்றுப் பாடலாகும். இது, மனையறம் துறவறம் என்னும் இருவகையறங்களுள் துறவறத்தின் சிறப்பினை விரித்து விளக்குவதாய் வீடுபேறடைதற்கு நிமித்தமாக விளங்குவது இருவகைப் பற்றுக்களையும் நீத்த துறவறமே என வற்புறுத்துகின்றது. சூரியனாற் சூழப்பட்ட பயன்நிரம்பிய இவ்வுலகம் ஒருநாளில் எழுவரைத் தலைவராக எய்தியதனையொத்து நிலைமாறும் தன்மையதாகும். இவ்வுலகத்தையும் மக்கள் மேற்கொள்ளவேண்டிய தவத்தையும் இவற்றுள் எது சிறந்தது எனச் சீர்தூக்கிப் பார்ப்போமானால் இவ்வுலகம் தவத்தொடு வைத்து நோக்க வெண்சிறுகடுகளவும் நிறை நிற்பதன்றாம். ஆதலால் வீட்டின்பம் பெற விரும்பியோர் மனைவாழ்க்கையைத் துறந்து தவத்திற் புகுந்தார். அதனால் உலகப் பற்றினை விட்டோராகிய அவரைச் செல்வத்திற்குத் தெய்வமாகிய திருமகள் கைவிடமாட்டாள். உலகப் பற்றினை விடாத ஏனையோர் இத்திருமகளாற் கைவிடப்பட்டவர்களே என்பது இப்பாடலின் பொருளாகும் இறைவன் திருவருளையே விரும்பி ஏனைப் பொருள்களிற் பற்று விட்டவர்களையே எல்லாச் செல்வங்களும் விரும்பித் தொடரும் என்பது, நின்னையே தான்வேண்டி நீள் செல்வம் வேண்டாதான் தன்னையே தான்வேண்டும் செல்வம் (திவ். பெருமாள் திருமொழி 5 : 9) எனவரும் குலசேகரப் பெருமாள் அருளிச் செயல் உலகப் பற்றினைத் துறந்து பற்றற்றானைப் பற்றுதலால் வரும் பயனைப் புலப்படுத்தல் காணலாம். முக்கோலந்தணர் எவ்வுயிர்க்குஞ் செந்தண்மை பூண்டொழுகும் அறவோராகிய இவர்கள் உறியிலே தங்கின கமண்டலத்தையும் மூன்று கோல்களை ஒன்றாகச் சேர்த்துக் கட்டின முக்கோலையும் முறைமைப்படத் தோளிலே சார்த்திக் கொண்டு வெயில் வெம்மையினைத் தாங்கும் குடையினையேந்திக் கொண்டு வெம்மையுடைய காட்டின்கண்ணே செல்லும் துறவிகளாவர். இவர்கள் கொண்டுள்ள முக்கோல் படைத்தல் காத்தல் அழித்தல் என்னும் முத் தொழிலுக்குரிய அயன் அரி அரன் என்னும் மூவரும் வடிவினாலும் தொழிலினாலும் வேறுபடினும் முழுமுதற் கடவுளாந் தன்மையில் ஒருவரே யென்பதனை யுணர்த்தும் அடையாளமாகும். இந்நுட்பம் உரைசான்ற முக்கோலும் என்ற கலித்தொகைத் தொடர்க்கு அரிஅயன் அரன் அமைந்த முக்கோலையும் என நச்சினார்க்கினியர் எழுதிய உரையால் நன்கு புலனாதல் காணலாம். இவர்தம் இயல்பினை விரித்துரைக்கும் முறையில் அமைந்தது, எறித்தரு கதிர்தாங்கி யேந்தியகுடைநீழல் உறித்தாழ்ந்த கரகமும் உரைசான்றமுக்கோலும் நெறிப்படச் சுவல் அசைஇவேறேரா நெஞ்சத்துக் குறிப்பேவல் செயல் மாலைக்கொளைநடை அந்தணீர் (கலி. 3) எனவரும் பாலைக்கலியாகும். எறித்தலைச் செய்கின்ற ஞாயிற்றின் கதிர்களைத் தாங்குகையினாலே எடுக்கப்பட்ட குடைநீழலிலே உறியிலே தங்கின கமண்டலத்தையும் சொல்லுதல் அமைந்த முக்கோலையும் முறைமைப்படத் தோளிலேவைத்து (முத்தொழில் புரியும் கடவுளர் மூவரையும் ஒருவராக வல்லது) வேறாக நினையாத நெஞ்சத்தாலே (ஐம்பொறியும்) மனக்குறிப்பின்படி ஏவல் செய்யும் கோட்பாட்டையும் ஒழுக்கத்தையும் உடைய அந்தணர்களே என்பது மேற்காட்டிய தொடரின் பொருள். வேறொராநெஞ்சத்து என்பதற்கு அரிஅயன் அரன் என்னும் மூவரையும் ஒருவனாக அல்லது வேறாக நினையாத நெஞ்சத்தாலே எனவும், குறிப்பு ஏவல் செய்மாலைக் கொளைநடை அந்தணீர் என்பதற்கு ஐம்பொறியும் நுமக்கு ஏவல் செய்தலை இயல்பாகவுடைய கோட்பாட்டையும் ஒழுக்கத்தையும் இயல் பாகவுடையீர் எனவும் நச்சினார்க்கினியர் எழுதிய உரைவிளக்கம் மிகவும் பாராட்டுதற்குரியதாகும். முக்கோற்பகவராகிய இவர்கள் காவிக்கல் பொடியில் தோய்த்தெடுத்த கல்லாடையினையுடுக்கும் தவக்கோலம் உடையர் என்பது, கற்றோய்த் துடுத்த படிவப்பார்ப்பான் முக்கோல் அசைநிலை கடுப்ப (முல்லைப். 36-37) எனவரும் முல்லைப்பாட்டடிகளாற் புலனாகும். சிவபெருமானை வழிபடுவோராகத் தேவார ஆசிரியர்களாற் குறிக்கப்படும் அகச்சமயத்தார் அறுவருள் அவிர்சடைமுனிவர் வழியொழுகும் திருவேடமுடையார் விரிசடை விரதிகள் எனவும், முக்கோலந்தணர் வழியொழுகும் தவவேடமுடையார் அந்தணர் எனவும் கொள்ளுதல் ஏற்புடையதாகும். வடக்கிருத்தல் உலகவாழ்க்கையில் தாம் செய்து முடிக்க எண்ணிய அருஞ்செயலை இப்பிறப்பில் நிறைவேற்ற முடியாத நிலையினை அடைந்தவர்களும் ஆருயிர் நண்பரையிழந்தவர்களும் பிறவிப் பிணிப்பினை நீத்து உயர்ந்த வுலகமாகிய வீடுபேற்றினை விரும்பி இவ்வுலக வாழ்க்கையினைத் துறந்து உண்ணாநோன்பினை மேற்கொண்டு புண்ணியத்திசை யெனப்படும் வடதிசையினை நோக்கி ஓரிடத்து அமர்ந்திருந்து ஊனினுள் உயிரைவாட்டித் தம்முள்ளத்துள்ளே மெய்ப்பொருளை இடைவிடாது நினைந்திருந்து தம் உயிரைத்துறப்பர். வடதிசையினை நோக்கி மெய்ப்பொருளை நினைந்து உண்ணா நோன்பினராய்த் தமது உயிரைத் துறந்து வீடுபெறும் இத்தவ நிலை வடக்கிருத்தல் என்ற பெயராற் பறநானூற்றிற் குறிக்கப் பெற்றுள்ளது. உண்ணாநோன்பிருந்து உயிர் துறத்தல் சமண்சமயச் சான்றோர்களால் மேற்கொள்ளப்படுவது. எனினும் வடக்கு நோக்கித் தியானத்தில் இருத்தல் வேண்டும் என்னும் நியதி அவர்கட்கு இல்லை. தமிழத்தின் தென்பகுதி கடலாற்கொள்ளப்பட்டு அத்திசை அழிவிற்கு இடமா னமையின் தென்திசை கூற்றுவன் திசையெனவும் தெற்கே குமரி கடலாற் கொள்ளப்பட்ட காலத்து வடக்கே இமயம் உயர்ந்து தோன்றி இடந்தந்தமையின் வடதிசை புண்ணிய திசையெனவும் மக்களாற் கருதப்படுவன வாயின. அன்றியும் இமயம் சிவபெருமான் வீற்றிருக்கும் கயிலைச் சிகரத்தைத் தன்கண் கொண்டமையாலும் அம்முதல்வன் ஆலின்கீழ் முனிவர்கட்கு அறமுரைத்த ஞான்று தென்திசை நோக்கியிருந்தமையாலும் உலகப் பற்றினைத்துறந்து வீடெய்த விரும்பும் பெருமக்கள் வடதிசை நோக்கியிருந்து மெய்ப்பொருளை இடைவிடாது சிந்தித்திருந்து உயிர் துறத்தலைத் தமக்குரிய தவநோன்பாகக் கொண்டொழுகினர் எனக் கருதவேண்டியுள்ளது. உண்ணா நோன்புடையராம் வடக்கிருத்தலை மேற்கொள்வோர் வெயில் வெப்பந்தாக்காது ஆற்றிடைக்குறையினையும் சோலையினையும் வடக்கிருத்தற்குரிய இடமாகக் கொண்டனர். இதனைக் கூர்ந்து நோக்குங்கால் சுடுபாறையிற் கிடத்தல் முதலாக உடம்பினை வருத்தும் முறைகளைத் கொண்ட சமணரது உண்ணாநோன்பின் வேறுபட்டது வடக்கிருத் தலாகிய இந்நோன்பென்பது நன்கு புலனாகும். சேரமான் பெருஞ்சேரலாதன், சோழன் கரிகாற் பெரு வளத்தானோடு வெண்ணிப்பறந்தலையிற் போர் செய்த நிலையில் கரிகாற்பெருவளத்தான் எய்த அம்புத் தன்மார்பில் தைத்து ஊடுருவிப்புறத்துச் சென்றநிலையில் தன்முதுகில்புறத்து உண்டாகிய புண் புறப்புண்ணாதலை யொக்கும் என நாணி வாளொடு வடக்கிருந்து உயிர் துறந்தனன் என்ற செய்தி புறநானுறு 65, 66ஆம் பாடல்களில் விரித்துரைக்கப் பெற்றுள்ளது. தன்மக்களொடு மாறுபட்டுப் போர்மேற் சென்ற கோப்பெருஞ் சோழன் புல்லாற்றூர் எயிற்றியனார் என்னும் புலவர் பெருமானால் தெருட்டப்பட்டு உள்ளந் தெளிந்து வடக்கிருந்து உயிர்துறந்தான் என்பதும் அவன் நினைத்த வண்ணம் அவனுடைய ஆருயிர் நண்பர் பிசிராந்தையாரும் ஆங்கு விரைந்துவந்து அவனுடன் வடக்கிருந்து உயிர் துறந்தார் என்பதும் மன்னன் பணித்த வண்ணம் இல்லறக் கடமை முடிந்தபின் மன்னன் நடுகல்லின் அருகே வடக்கிருந்து உயிர் துறந்தார் என்பதும் புறநானூறு 213, 215, 216, 217, 218, 219, 223ஆம் பாடல்களாற் புலனாகும். பாரிவேள் இறந்த பின்னர் அவனுடைய ஆருயிர் நண்பராகிய கபிலர் என்னும் புலவர் பெருமான் பாரி மகளிரைப் பார்ப்பாரிடத்தே அடைக்கலமாக ஒப்புவித்துத் திருக்கோவலூரிற் பெண்ணையாற்றின் நடுவே வடக்கிருந்து உயிர் துறந்தார் என்பது 236ஆம் புறப்பாட்டாலும் அதன் அடிக்குறிப்பாலும் திருக்கோவலூர் வீரட்டானேசுவரர் திருக்கோயிலிற் பொறிக்கப்பெற்றுள்ள முதல் இராசராச சோழன் காலத்துக் கல்வெட்டாலும் நன்கு விளங்கும். அறஞ்செய்தலின் இன்றியமையாமை வடக்கிருந்து உயிர் துறக்க முற்பட்ட கோப்பெருஞ்சோழன் பாடிய 214ஆம் புறப்பாடல் இருவினைப்பயனும் மறுபிறப்புண்மையும் பற்றித் தமிழ்முன்னோர் கொண்ட நம்பிக்கையைப் புலப்படுத்துவ தாகும். நல்லறஞ் செய்வோர்க்கு மறுமையில் வானுலகநுகர்ச்சியும் அந் நுகர்ச்சியில் விருப்பில்லையெனில் மீண்டும் பிறவாமையாகிய பேறும், இம்மையில் நீண்ட புகழும் உண்டாகும் எனக் கூறுமுகத்தால் நல்லறஞ் செய்தலின் இன்றியமையாமையினை மறுபிறப்பில் நம்பிக்கையில்லாதவர்களும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் அறிவுறுத்துவது இப்பாடலாகும். பாரி வள்ளலின் பிரிவாற்றாது வடக்கிருந்த கபிலர் பாரியை நினைந்து பாடிய பாடலில், இம்மைபோலக் காட்டி உம்மை இடையில் காட்சிநின்னோடு உடனுறைவாக்குக உயர்ந்த பாலே (புறம். 236) எனத் தமது விருப்பத்தை வெளியிட்டுள்ளார். பெரிய வண்மையை யுடைய பாரியே, இப்பிறப்பின்கண் நீயும் யானும் தோழமையாற் கூடியின்புற்றாற் போலக்காட்டி, மறு பிறப்பினும் தடைபடாது பேரறிவினையுடைய நின்னோடு கூடி வாழ்தலை உயர்ந்த நல்லூழ் கூட்டுவதாகுக என நல்லூழின் விளைவையெண்ணி ஆறுதலடையும் நிலையில் அமைந்தது இப்பாடலாகும். வாழச் செய்த நல்வினை யல்லது ஆழுங்காலைப் புணைபிறிதில்லை (புறம். 367) எனவரும் ஔவையார் வாய்மொழி இங்கு நினைத்தற் குரியதாகும். இவ்வுலக வாழ்க்கையில் இன்பம் துன்பம் என்னும் இருவினைப்பயன்களும் புணர்வும் பிரிவும் என்னும் நலந்தீங்குகளும் நாள்தோறும் வரும் பகலும் இரவும் போன்று வெவ்வேறியல்பினவாய் மாறிமாறி வருவன. இவ்வியல்பு இன்பமும் இடும்பையும் புணர்வும் பிரிவும் நண்பக லமையமும் இரவும்போல வேறுவேறியல வாகிமாறெதிர்ந் துளவென வுணர்ந்தனையாயின (அகம். 327) எனவரும் அகநானூற்றுத் தொடரால் இனிது புலனாகும். இப்பிறப்பில் நல்லறங்களைத் தொடர்ந்து செய்து கொண்டிருக்கும் நிலையில் தீவினைப் பயன் தாக்குதல் இல்லை யென்னும் பொதுவுண்மையினை வற்புறுத்தும் நிலையில் அமைந்தது, இம்மை, நன்றுசெய் மருங்கில் தீதுஇல் என்னும் தொன்றுபடு பழமொழி ஆகும். மக்களாற் செய்யப்பட்ட இருவினைமுதிர்ந்து பயன் கொடுக்கும் திறத்தில் நல்வினைப்பயனாகிய இன்பமும் தீவினைப் பயனாகிய துன்பத்துடன் கலந்துவரும் என்பது, நன்றிவிளைவும் தீதொடுவரும் என்ற தொடராற் புலப்படுத்தப்பட்டது. இப்பிறப்பிற் செய்த அறம் மறுபிறப்பில் நற்பயன் விளைக்கும் என்பது முன்னோர் கொண்ட நம்பிக்கையாகும். இந்த நம்பிக்கையின் விளைவாக மறுமைப்பயன்களை எதிர்பார்த்து அறஞ்செய்வோரும் எந்தப்பயனையும் எதிர்பாராது நல்லவையெல்லாம் செய்தற்குரியவை என்ற கடமையுணர்வுடன் அறஞ்செய்வாரும் என அறஞ் செய்வார் இருதிறப்படுவர். அவருள் மறுமைப்பயனை எதிர்நோக்கி அறஞ்செய்வோர் அறத்தினை விலைக்கு விற்கும் வணிகர் போன்று கருதப்படுவர். பயன்கருதாது சான்றோர் சென்ற நெறியிது வெனக்கொண்டு அறம் புரிதலே மெய்யுணர்ந்தோர் கடமையாகும். இக்கடமையினை யுணர்ந்து நல்லறம் செய்பவன் ஆய் என்னும் வள்ளல் என்பதனை, இம்மைச் செய்தது மறுமைக்கு ஆம் எனும் அறவினைவணிகன் ஆய் அலன்; பிறரும் சான்றோர் சென்ற நெறியென ஆங்குப்பட்டன்று அவன் கைவண்மையே (புறம். 134) எனவரும் பாடலால் உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் பாராட்டிப் போற்றியுள்ளார். இப்பிறப்பிற் செய்ததொன்று மறுபிறப்பிற்கு உதவும் என்று கருதிப் பொருளை விலையாகக் கொடுத்து அதற்கு அறங்கெள்ளும் வணிகன் ஆய் அல்லன்; குணங்களால் நிறைந்தோர் பிறரும் சென்றவழியென்று உலகத்தார் கருத அந்த நற்செய்கையிலே பொருந்தியது அவனது கைவண்மையாகும் என்பது இப்பாடலின் பொருளாகும். நரிவெரூஉத்தலையார் உறுதிப்பொருள்களை உலக மக்களுக்கு அறிவுறுத்துவாக அமைந்தது, பல்சான்றீரே பல்சான்றீரே கயல்முள் ளன்ன நரைமுதிர் திரைகவுட் பயனில் மூப்பிற் பல்சான்றீரே கணிச்சிக் கூர்ம்படைக் கடுந்திற லொருவன் பிணிக்குங்காலை இரங்குவிர்மாதோ நல்லது செய்தல் ஆற்றீ ராயினும் அல்லது செய்தல் ஒம்புமின், அதுதான் எல்லாரும் உவப்பதன்றியும் நல்லாற்றுப் படூஉம் நெறியுமா ரதுவே (புறம். 195) எனவரும் புறநானூற்றுப்பாடலாகும். தம் வாழ்நாளில் இளம் பருவத்தே பயனுடைய நல்லறங்களைச் செய்யாது வாழ்நாளை வீணே கழித்து முதுமைப்பருவம் எய்திய மாந்தரை நோக்கி எத்தகைய அறங்களையும் செய்யாது வாழ்நாளை வீணே கழித்த பயனற்ற முதுமைப் பருவத்தினராகிய நீவிர் தமது உயிரைக் கூற்றுவன் கவர்ந்து கொள்ள வரும் இறுதிக்காலத்துப் பெரிதும் வருந்துவீர்கள். இப்பொழுது நல்லறங்களைச் செய்யும் ஆற்றலற்ற நிலையில் நீவிர் இருந்தாலும் பிறவுயிர்க்குத் தீமை செய்தலையேனும் ஒழிப்பீராக. அங்ஙனம் எவ்வுயிர்க்கும் தீமைசெய்யா திருப்பதே யாவராலும் உவந்து புகழப்படுவது மட்டுமன்றி நும்மை நன்னெறிக்கண் செலுத்தும் அறவழியும் ஆகும் என அறிவுறுத்துவது பொருண்மை மொழிக்காஞ்சி யென்னுந் துறையிலமைந்த இப்பாடலாகும். அறச்செயலாகிய நல்வினையால் இன்பமும் தீவினையால் துன்பமும் ஆகிய நுகர்ச்சி வினைசெய்தார்க்கு உண்டு என்னும் சான்றோர் துணிபினை ஏற்றுக்கொள்ளாது உலகிற் செய்யப்படும் நன்றும் தீதும் ஆகிய வினைகளால் எந்தப் பயனும் விளைதல் இல்லையென்னும் இம்மைக் கொள்கையினராய்த் தம்மனம் போனவாறு செய்தொழுகும் தீவினையாளராகிய சிற்றினத்தாரோடு சேர்தலாகாது என அறிவுறுத்துவது, நல்லதன் நலனும் தீயதன் தீமையும் இல்லையென்போர்க்கு இனன் ஆகிலியர் (புறம். 29) எனவரும் புறநானூற்றுத் தொடராகும். நல்வினையினது நன்மையும் தீவினையினது தீமையும் இல்லையென்று சொல்லுவோர்க்கு இனமாகாது அவரைவிட்டு நீங்கு வாயாக என்பது இத்தொடரின் பொருளாகும். வானத்திலுலவும் மேகம் பெருமழையைப் பெய்தமையால் உண்டாகிய வெள்ளப் பெருக்கு மலை முகட்டில் உள்ள கற்களையலைத்துக் கொண்டு போறராக இழியும் நிலையினை யொத்தது, உலகினை இயக்கும் பேராற்றலினால் முறைப்படுத்தப்படும் ஊழாகிய நியதி என்பதும், அவ்வாற்றினால் ஈர்த்துச் செல்லப்படும் மிதவை (தெப்பம்) போன்றது மன்னுயிர்த் தொகுதி என்பதும், ஊழின்வயப்பட்ட உயிர்கள் உலகிற் பல்வேறு நாடுகளிலும் பல்வேறினங்களிலும் பிறந்தும் இறந்தும் உழன்று இரு வினைப் பயன்களை நுகர்தலின் அவ்வுயிர்கட்கு யாதும் ஊரே, யாவரும் உறவினரே என்பதும், மக்கள் அடையும் நன்றும் தீதும் ஆகியன பிறரால் தரப்படுவன அல்ல, அவரவர் செய்த வினைப்பயனாகத் தாமே வருவன என்பதும், உலகியலிலே மக்கள் பெறும் உயர்வு தாழ்வுகட்கு அன்னோர் இயற்றிய இருவினைப் பயனாகிய ஊழ் என்னும் முறைமையே காரணமாதலால், நல்வினையால் உயர்ந்த பெருமக்களை வியந்து புகழ்தலையோ அன்றித் தீவினையால் தாழ்வுற்ற சிறியவர்களை எண்ணி இகழ்தலையோ மெய்யுணர்ந்தோ ராகிய தத்துவ ஞானிகள் ஒருபோதும் மேற்கொள்ள மாட்டார்கள் என்பதும் ஆகியவுண்மைகளைத் தம் அனுபவத்தில் வைத்து உணர்ந்த நிலையில் உலக மக்களுக்கு அறிவுறுத்துவதாக அமைந்தது, யாதும் ஊரே யாவரும் கேளிர் தீதும் நன்றும் பிறர்தர வாரா நோதலுந் தணிதலும் அவற்றோரன்ன சாதலும் புதுவதன்றே வாழ்தல் இனிதென மகிழ்ந்தன்று மிலமே முனிவின் இன்னாதென்றலும் இலமே, மின்னொடு வானந் தண்டுளி தலைஇ யானாது கல்பொரு திரங்கு மல்லற் பேரியாற்று நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர் முறைவழிப் படூஉ மென்பது திறவோர் காட்சியிற் றெரிந்தன மாதலின் மாட்சியிற் பெரியோரை வியத்தலு மிலமே சிறியோரை யிகழ்தல் அதனினுமிலமே (புறம். 192) எனவரும் கணியன் பூங்குன்றனார் பாட்டாகும். இதன்கண், ஆருயிர் முறைவழிப் படூஉம் என்பது, திறவோர் காட்சியின் தெரிந்தனம் ஆதலின் எனவரும் தொடர் ஏதுமொழியாய் நின்று, யாதும் ஊரே யாவரும் கேளிர், தீதும் நன்றும் பிறர் தரவாரா, நோதலும் தணிதலும் அவற்றோரன்ன, சாதலும் புதுவதன்றே எனவரும் கருத்துக்களை முடித்து நின்றது. இங்கு எடுத்துக்காட்டியவினையுணர்வின் பயனாகத் தம் வாழ்விற் கடைப்பிடித்து வரும் கொள்கைகளாக, வாழ்தல் இனிதென மகிழ்ந்தன்று மிலமே, முனிவின் இன்னாதென்றலும், மாட்சியிற் பெரியோரை வியத்தலுமிலமே, சிறியோரை யிகழ்தல் அதனினும் இலமே என்பவற்றைக் கணியன் பூங்குன்றனார் தம் வாழ்வியல் அனுபவத்தில் வைத்து எடுத்துக்காட்டியுள்ளமை காணலாம். வினையுணர்வு பற்றிய இம்முடிவுகள் கடவுளுண்மையினையுடம் படாது உயிர்கள் உண்டெனக் கொண்ட சமணம் முதலிய பிற சமயங்களுக்கும் ஒத்தனவேயாகும். எனினும் கடவுளுண்மையினை வற்புறுத்தும் சமயங்களுக்கு, வினையுணர்வு பற்றிய இம்முடிவுகள் மிகவும் சிறப்புரிமையுடையனவென்பது பால்வரை தெய்வம் வினையே பூதம் எனவரும் தொல்காப்பியத் தொடர்ப் பொருள் பற்றி முன்னர்க்கூறிய விளக்கத்தாற் புலனாகும். படைப்புக் காலந்தொடங்கி மன்னுயிர்கள் வினைவயத்தாற் பல்வேறிடங்களிலும் பல்வேறுடம்புகளிலும் பிறந்திறந்து அலமரும் நிலையில், அவ்வுயிர்களுக்கு யாதும் ஊராகவும் யாவரும் உறவினராகவும் அமைந்துள்ள திறத்தினை அகில லோகமும் அனந்தயோனியும் நிகிலமும் தோன்ற நீ நினைந்த நாள் தொடங்கி எனைப்பல யோனியும் நினைப்பரும் பேதத்து யாரும் யாவையும் எனக்குத் தனித்தனித் தாயராகியும் தந்தையராகியும் வந்திலாதவர் இல்லை யான் அவர் தந்தை யாராகியும் தாய ராகியும் வந்தி ராததும் இல்லை, முந்து பிறவா நிலனும் இல்லை அவ்வயின் இறவா நிலனும் இல்லை (gâbdhuhªâUKiw திருக்கழுமல மும்மணிக் கோவை, 7) எனத் திருவெண்காட்டடிகள் விரித்துக் கூறியுள்ளார் இங்கு எடுத்துக்காட்டிய திருக்கழுமல மும்மணிக்கோவைப் பாடற்பகுதி யாதும் ஊரே யாவருங் கேளிர் எனவரும் புறநானூற்று அடிக்குரிய உரைவிளக்கமாகத் திகழ்தல் காணலாம். எனவே கணியன்பூங்குன்றனார் பாடலில் யாதும் ஊரே யாவருங் கேளிர் என்று முதற்கண் காணப்படுந் தொடர் உலகவொற்றுமை பற்றி இக்காலத்திற் கூறப்பட்ட வெறும் உபசாரமொழி போல்வதன்று என்பதும், அத்தொடர் தமிழர் கண்ட தத்துவவுணர்வின் பயனாக உருவாகிய உண்மையினைப் புலப்படுத்தும் வாய்மொழியாகும் என்பதும் இங்கு மனங்கொளத்தக்கனவாகும். உலக வாழ்கையில் மக்கள் அடையும் கேடும் ஆக்கமும் பிறரால் தரப்படுவன அல்ல, அவர்கள் செய்த இருவினை காரணமாக ஊழ்வயத்தால் தாமே வருவன என்னும் மெய்ம்மையினை வற்புறுத்துவது, தீதும் நன்றும் பிறர்தர வாரா என்ற தொடராகும். களவொழுக்கம் ஒழுகும் தலைவன் தலைவியை மணந்து கொள்ளுதலில் நாட்டமின்றி அவ்வொழுக்கத்தில் நீட்டித்தொழுகியவழி அவனைத் தெருட்டும் தோழி அவன் சிறைப்புறத்தானாகத் தலைவிக்குக் கூறுவாளாய்ச் சொல்லியது, யாம் செய் தொல்வினைக்கு எவன் பேதுற்றனை (நற். 88) எனவரும் நற்றிணைப் பாடலாகும். நாம் செய்த பழவினைப் பயனாகிய நாம் செய்த வினையால் நாமே தேடிக் கொண்டது எனத் தெளிந்து நாமே நுகர்வதன்றிப் பிறரைக் காரணமாக எண்ணி ஏன் மயங்குகின்றாய் எனத் தலைவியை நோக்கி வினவும் முறையில் அமைந்தது, மேற்குறித்த நற்றிணைத் தொடராகும். தீதும் நன்றும் பிறர்தர வாரா என்னுங் கொள்கையினை வலியுறுத்தும் முறையில் இத்தொடர் அமைந்துள்ளமை இங்கு மனங்கொளத்தகுவதாகும். உடம்பும் உயிரும் காணப்படும் உருவுடையதாகிய உடம்பும் அதனை உடனிருந்து இயக்குவதாய்க் காணாத மரபினதாகிய உயிரும் பொருட்டன்மையால் வேறுபட்ட இருவேறு பொருள்கள் என்பதும் அவ்விரண்டும் ஒற்றுமைத் திறத்தால் ஒன்றெனத் தோன்றினும் அவற்றின் தன்மையால் வேறுபட்டன என்பதும், அவற்றுள் காணப்படும் உருவினதாகிய உடம்பு அறிவில் பொருளாய் அழியுமியல்பினதாம் என்பதும் காணா மரபினதாகிய உயிர் அறிவுடைப் பொருளாய் என்றும் அழிவின்றி நிலைபெற்ற உள்பொருளாம் என்பதும் ஆசிரியர் தொல்காப்பியனார்க்கு முன்தொடங்கித் தமிழகத்தில் நிலவி வரும் மெய்யுணர்வுக் கொள்கையென்பது முன்னர் விளக்கப் பெற்றது. இத்தத்துவநுட்பத்தினைத் தமிழ் நெடுங் கணக்கினைப் பயிலும் இளஞ்சிறார்களும் எளிதில் உணர்ந்து கொள்ளும் முறையில் தானே இயங்கும் ஒலித்தற்றன்மையுடைய அகர முதல் ஔகாரமீறாகிய பன்னிரண்டெழுத்துக்களையும் உயிர் எனவும் உயிர் உள்நின்று செலுத்தினாலன்றியியங்காத உடம்பினைப் போன்று உயிரெழுத் துக்களின் துணையைப் பெற்றாலன்றி இயங்காத ககரமுதல் னகர மீறாகிய பதினெட்டெழுத்துக்களையும் மெய் எனவும் பெயரிட்டு வழங்கிய பண்டைத் தமிழிலக்கண நூலாரது மெய்யுணர்வுக் கொள்கையே தமிழர் சமயத் தத்துவக் கொள்கைகட்கெல்லாம் வேராக அமைந்தநுட்பமும் முன்னர் எடுத்துக்காட்டி விளக்கப்பெற்றது. உடம்பினின்றும் உயிரைக் கவர்ந்து உடம்பையும் உயிரையும் வேறு பிரிக்கும் தெய்வ ஆற்றல் ஒன்று உண்டு என்னும் நம்பிக்கையுடையவர்கள் தமிழ் முன்னோர் என்பது கூற்று என்னும் தலைப்பில் முன்னர்க் கூறப்பட்டது. உயிர்கள் பலவென்பதும் உடம்பினின்றும் உயிரைப் பிரிக்கும் கூற்று என்னும் தெய்வ ஆற்றல் ஒன்றேயென்பதும், மன்னுயிர்ப் பன்மையும் கூற்றத்து ஒருமையும் நின்னொடு தூக்கிய வென்வேற்செழிய (புறம். 19) எனப் பாண்டியன் நெடுஞ்செழியனைக் குடபுலவியனார் பாடிய புறப்பாடலால் அறியலாம். நிலைபெற்ற உயிரது பன்மையும் அவ்வுயிரைக் கொள்ளுங் கூற்றினது ஒருமையையும் நின்னுடனே சீர்தூக்கிக் காட்டிய வென்றிவேலையுடைய செழியனே என்பது மேற்குறித்த புறப்பாடலடிகளின் பொருளாகும். பழையதாய் நின்று தொன்மையுடையது உயிர் எனவும் அவ்வுயிருடன் கூடி நின்று முதிர்ந்தது உடம்பு எனவும் எனவே உயிரும் உடம்பும் வேறு எனவும் அங்ஙனம் அவை பொருளால் வேறுபட்டன வேனும் கலப்பினால் ஒன்றுபட்டன எனவும் உணர்த்துவது, தொன்று மூத்தவுயிரினும் உயிரொடு நின்று மூத்த யாக்கையன்ன (புறம். 24) எனவரும் புறப்பாடற்றொடராகும். உயிர் உடம்பை விட்டுப் பிரியுங்காலத்துத் தன்னை மறவாது அடுத்தவினை காட்டுங் கதிகளிற்புகும் நினைவுடையதாய்ச் செல்லும் என்பது, என்னுயிர் யாக்கையிற் பிரியும் பொழுதும் என்னியான் மறப்பின் மறக்குவென் (புறம். 175) என ஆதனுங்கனைக் கள்ளில் ஆத்திரையனார் பாடிய புறப் பாட்டாலறியலாம். ஆதனுங்கனே என்னுயிர் உடம்பை விட்டுப் போகும்போதும் யான் உன்னை மறப்பேனாயின் நின்னையும் மறப்பேன். அக்காலத்து உடம்பை விட்டுப் பிரியும் இடர் நிலையேனாகிய யான் என்னை மறவாமை போல எனக்குப் பேருதவிபுரிந்த நினையும் மறக்கமாட்டேன் என்னுங் கருத்திற் கூறப்பட்டது இத்தொடராகும். பகைவர் பற்றிச் சென்ற ஆனிரையை மீட்டுச் செருக்களத்தில் இறந்து பட்டவீரனைக் குறித்து இரங்குவதாகிய கையறு நிலைச் செய்யுளில், நிரையொடு வந்த வுரையனாகி உரிகளையரவ மானத்தானே அரிது செல்லுலகிற் சென்றனன், உடம்பே கானச் சிற்றியாற்றருங்கரைக் காலுற்றுக் கம்பமொடு துளங்கிய இலக்கம் போல அம்பொடு துளங்கி யாண்டுப்பட்டன்றே (புறம், 260) எனவரும் பகுதி உயிரும் உடம்பும் வேறென்பதைத் தெளிவுபடுத்து கின்றது. ஆனிரையுடனே வந்த புகழையுடையனாய்த் தோல் உரித்த (சட்டை கழற்றிய) பாம்புபோல அரிது செல்லுலகமாகிய தேவருலகிற் போயினான். அவனது உடம்பு (வீரர்கள் அம்பு எய்து பழக) காட்டிற் சிற்றாற்றங் கரையில் நடப்பட்ட இலக்காகிய கம்பம் காற்றினாற் சாய்ந்து வீழ்ந்தாற்போன்று அம்புகள் பட்டு அவ்விடத்தே வீழ்ந்தது என்பது மேற்குறித்த தொடரின் பொருளாகும். சட்டை கழற்றிய பாம்புக்கும் அதனாற் கழற்றப்பட்ட சட்டைக்கும் சிறிதும் தொடர்பில்லாமை போலத் தேவருலகிற் புக்க வீரனது உயிர்க்கும் அவனது உயிர் பிரிதலால் நிலத்தில் வீழ்ந்து பட்ட உடம்புக்கும் சிறிதும் தொடர்பில்லை யென்பது இத்தொடராற் புலப்படுத்தப் பெற்றுள்ளமை அறியத் தகுவதாகும். உடம்புந்தோன்றா உயிர்கெட்டன்றே (புறம். 282) என்ற தொடரும் இக்கருத்தினதே. உயிருக்கு என்றும் அழிவில்லையென்பதும் அருவாகிய உயிர்நிலைத்தற்குரிய உருவாகிய உடம் அழியுந்தன்மையது என்பதும், என்றும் அழியாது நிலைத்த உடம்பு இல்லையென்பதும் வீயாது, உடம்பொடு நின்ற உயிரும் இல்லை மடங்கல் உண்மை மாயமோ அன்றே (புறம். 363) எனவரும் புறநானூற்றுத் தொடரால் நன்கு துணியப்படும் நீங்காது ஓருடம்பிலேயே எக்காலத்தும் நிலைபெற்றுள்ள உயிரும் இல்லை, உயிரை உடம்பினின்றும் பிரிக்கும் கூற்று உண்டென்பது பொய்யும் அன்று என்பது இத்தொடரின் பொருளாகும். எனவே, மன்னுயிர், ஓருடம்பில் நிலைத்து நில்லாது அவ்வுடம்பினை விட்டிறந்தும் வெவ்வேறு உடம்பினைப் பெற்றுப் பிறந்தும் பிறவிப் பெருங்கடலிற் சிக்குண்டு வருந்தும் இயல்பினது என்பதனை உய்த்துணர வைத்தாராயிற்று. இவ்வாறு உயிரும் உடம்பும் வேறென்பது தொல்காப்பியனார் காலத்திற்கும் முன்னிருந்து வழங்கிவரும் தமிழர் தத்துவக் கொள்கையாதலின் அக்கொள்கையே சங்கச் செய்யுட்களிலும் பிற்காலத் தமிழ் நூல்களிலும் தொடர்ந்து நிலைபெற்று வருவதாயிற்று. உயிர் என்பதொன்று இல்லை எனக்கூறும் சூனியான்மவாதமும், தேகமே உயிர் எனக்கூறும் தேகான்மவாதமும், ஐம்பொறிகளே உயிர் எனக்கூறும் இந்திரியான்மவாதமும் மனமுதலிய உட்கருவிகளே உயிர் எனக்கூறும் அந்தக் கரணான்ம வாதமும், நுண்ணுடலே உயிர் எனக்கூறும் விஞ்ஞானான்மவாதமும், உடம்பு, அந்தக்கரணம் முதலிய அனைத்துங்கூடிய திரட்சியே உயிர் என்னும் சமூகான்ம வாதமும் பண்டைத் தமிழ் நூல்களில் யாண்டும் இடம் பெறவில்லை. இனி அறிவுடையோர் (புறம். 197) எனவும் அறிவுகெட நின்ற நல்கூர்மை (புறம். 266) எனவும் உயிர்கள் அறிவும் அறியாமையும் ஒருங்கு உடையனவாய்ப் பிறர் அறிவிக்கக் கருவிகளால் அறிந்து வருதலின், எக்காலத்தும் திரிபின்றி அறிந்தாங்கு அறிந்து நிற்கும் முழுமுதற்பொருளாம் இறைமைத்தன்மை உயிர்கட்கு இல்லை யென்பது நன்கு விளங்கும். எனவே பிரமப் பொருளே ஆன்மா என வாதிக்கும் பிற்கால விஞ்ஞானான்ம வாதத்திற்குப் பண்டைத் தமிழ் நூல்களிற் சிறிதும் இடமில்லை என்பது நன்கு தெளியப்படும். உடம்பின் வேறாக உயிரென்பது உண்டு எனப் பண்டைத் தமிழர் தெளிவாக வுணர்ந்து மேற்கொண்டொழுகிய தத்துவக் கொள்கையானது பிற்காலத்தில் தமிழகத்தில் வந்து புகுந்த பல்வேறு சமய விகற்பங்களால் கலக்குண்ட நிலையில் அக்கலக்கங்களைக் களைந்து நீக்கி உடலின் வேறாக உயிர் என்பது உண்டு என ஏதுக்காட்டி வற்புறுத்துவது, உளதில தென்றலின் எனதுடல் என்றலின் ஐம்புலனொடுக்கம் அறிதலின், கண்படின் உண்டி வினையின்மையின் உணர்த்தவுணர்தலின் மாயாவியந்திர தனுவினுள் ஆன்மா (சிவஞானபோதம். சூத். 3) எனவரும் சிவஞானபோத மூன்றாஞ் சூத்திரமாகும். பத்துப்பாட்டு எட்டுத்தொகையாகிய சங்க விலக்கியங்களி லிருந்து இதுகாறும் எடுத்துக்காட்டிய குறிப்புக்களால் சங்க காலத் தமிழ்மக்கள் வாழ்வியலிற் காணப்பட்ட திருமால் முருகன் முதலிய தெய்வ வழிபாடுகளும் அவ்வழிபாடுகள் எல்லாவற்றுள்ளும் சிவவழிபாடு தலைமையும் சிறப்பும் வாய்ந்ததாக அக்காலத்து வேந்தர்களாலும் குடிமக்களிற் பெரும்பான்மையாராலும் மேற்கொள்ளப்பெற்று வந்தமையும் தமிழகத்திற்குச் சிறப்புரிமை வாய்ந்த சைவசித்தாந்தத் தத்துவக்கொள்கைக்கு மூலமாகிய உண்மைகள் பல சங்க இலக்கியங்களில் வேரூன்றியுள்ளமையும் ஒருவாறு புலனாதல் காணலாம். 1. தொல்காப்பியம், பொருளதிகாரம், அகத்திணையியல், 13. 2. காரைக்காலம்மையார், அற்புதத் திருவந்தாதி, 17. 3. திருஞானசம்பந்தர் தேவாரம், 3. 54. 3. 4. திருநாவுக்கரசர். தேவாரம், 5. 15. 2. 5. மாணிக்கவாசகர், திருவாசகம், 395. 6. திருநாவுக்கரசர், தேவாரம், 6. 61.1. 7. மாணிக்கவாசகர், திருவாசகம், 396. 8. திருநாவுக்கரசர், தேவாரம், 5. 95. 11. 9. சேக்கிழார், பெரியபுராணம், சாக்கிய நாயனார் புராணம், 8. 10. திருமுருகாற்றுப்படை, 226. 11. அகநானூறு, 167. 12. நச்சினார்க்கினியர். தொல். பொருள். புறத். 33. 13. புறநானூறு, 52. 14. திருஞானசம்பந்தர், தேவாரம், 1. 62. 9. 15. திருநாவுக்கரசர், தேவாரம், 6. 61. 1. 16. மேலது, 6. 8. 1. 17. திருநாவுக்கரசர், தேவாரம், 6. 40. 6. 18. சுந்தரர், தேவாரம், 7. 61.1. 19. திருவிசைப்பா 1. 7. 20. புறநானூறு, 335. 21. திருமுருகாற்றுப்படை, 1-3 22. நச்சினார்க்கினியர் உரை, திருமுருகாற்றுப்படை, 2. 23. தொல்காப்பியர், தொல்காப்பியம், சொல். கிளவியாக்கம். நூ. 57. 24. நற்றிணை, கடவுள் வாழ்த்து. 25. திருநாவுக்கரசர், தேவாரம். 26. மாணிக்கவாசகர், திருவாசகம். 27. திருநாவுக்கரசர், தேவாரம். 5. 100. 8. 28. மறைமலையடிகள், தமிழர் மதம், ப. 141. 29. மறைமலையடிகள், தமிழர் மதம், ப. 142 30. திருநாவுக்கரசர், தேவாரம். 5. 100. 7 31. புறநானூறு 166. 32. மறைமலையடிகள், தமிழர் மதம், ப. 149. 33. திருமூலர், திருமந்திரம், 2411. 34. மாணிக்கவாசகர், திருவாசகம், திருக்கோத்தும்பி, 18. 35. பத்துப்பாட்டு, குறிஞ்சிப்பாட்டு, 6. 36. பரிபாடல், திருமால் 67 - 70. 37. அகநானூறு, 360. 38. திருநாவுக்கரசர், தேவாரம் 39. மணிமேகலை, I 60 - 61. 40. மறைமலையடிகள், தமிழர் மதம், ப. 22. 1. தொல்காப்பியம். பொருளதிகாரம், அகத்திணையியல் 5. 2. தொல்காப்பியம், பொருளதிகாரம், அகத்திணையியல், 50. 3. திருக்குறள், 388. 4. தொல்காப்பியம், பொருளதிகாரம், நூ. 63. 5. தொல்காப்பியம், சொல்லதிகாரம், கிளவியாக்கம், 58. 6. தொல்காப்பியம், சொல்லதிகாரம், வினையியல், 3. 7. சேக்கிழார், பெரியபுராணம், சாக்கியநாயனார் புராணம் 5. 8. திருக்குறள், 377. 9. மாணிக்கவாசகர், திருக்கோவையார், 350. 10. தொல்காப்பியம், பொருளதிகாரம், செய்யுளியல், 106. 11. தொல்காப்பியம், பொருளதிகாரம், செய்யுளியல், 127. 12. மேலது, 133. 13. மேலது, 134. 14. தொல்காப்பியம், பொருளதிகாரம், அகத்திணையியல், 39. 15. தொல்காப்பியம், பொருளதிகாரம், களவியல், 25. 16. மேலது, 2. 17. தொல்காப்பியம், பொருளதிகாரம், புறத்திணையியல், 27. 18. மேலது, 23. 19. தொல்காப்பியம், பொருளதிகாரம், மரபியல், 86. 20. தொல்காப்பியம், பொருளதிகாரம், புறத்திணையியல், 18. 21. தொல்காப்பியம், பொருளதிகாரம், அகத்திணையியல், 4. 22. தொல்காப்பியம், பொருளதிகாரம், பொருளியல், 28. 23. தொல்காப்பியம், பொருளதிகாரம், புறத்திணையியல், 18. 24. தொல்காப்பியம், பொருளதிகாரம், களவியல், 1. 25. தொல்காப்பியம், பொருளதிகாரம், செய்யுளியல், 105. 26. தொல்காப்பியம், பொருளதிகாரம், கற்பியல், 51. 27. திருக்குறள், 358. 1. பி. எல். சாமி, தமிழிலக்கியத்தில் தாய்த் தெய்வ வழிபாடு, ப. 13. 2. பி. எல். சாமி, தமிழிலக்கியத்தில் தாய்த்தெய்வ வழிபாடு, ப. 37.