மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16 தமிழ் இலக்கிய வரலாறு பத்யன்பதாம் நூற்றாண்டு பதிப்பு வீ. அரசு இளங்கணி பதிப்பகம் நூற்பெயர் : மயிலை சீனி. வேங்கட16 ஆசிரியர் : மயிலை சீனி. வேங்கடசாமி பதிப்பாசிரியர் : பேரா. வீ. அரசு பதிப்பாளர் : முனைவர் இ. இனியன் பதிப்பு : 2014 தாள் : 16கி வெள்ளைத்தாள் அளவு : தெம்மி எழுத்து : 11 புள்ளி பக்கம் : 344 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) விலை : உருபா. 325/- படிகள் : 1000 மேலட்டை : கவி பாஸ்கர் நூலாக்கம் : வி. சித்ரா & வி. ஹேமலதா அச்சிட்டோர் : ஸ்ரீ வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர் வடபழனி, சென்னை - 26. வெளியீடு : இளங்கணி பதிப்பகம் பி 11, குல்மொகர் அடுக்ககம், 35/15பி, தெற்கு போக்கு சாலை, தியாகராய நகர், சென்னை - 600 017. நூல் கிடைக்குமிடம் : தமிழ்மண் பதிப்பகம், 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர் நகர், சென்னை - 17. 044 2433 9030. பதிப்புரை 19ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியும், 20ஆம் நூற்றாண்டின் தொடக்கப் பகுதியும் தமிழுக்கும், தமிழினத்திற்கும் புகழ்பூத்த பொற் காலமாகும். தமிழ்மொழியின் மீட்டுருவாக்கத்திற்கும், தமிழின மீட்சிக்கும் வித்தூன்றிய காலம். தமிழ்மறுமலர்ச்சி வரலாற்றில் ஓர் எல்லைக் கல். இக்காலச் சூழலில்தான் தமிழையும், தமிழினத்தையும் உயிராக வும் மூச்சாகவும் கொண்ட அருந்தமிழ் அறிஞர்களும், தலைவர்களும் தோன்றி மொழிக்கும், இனத்திற்கும் பெரும் பங்காற்றினர். இப் பொற்காலத்தில்தான் அறிஞர் மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கள் 6.12.1900இல் தோன்றி 8.5.1980இல் மறைந்தார். வாழ்ந்த காலம் 80 ஆண்டுகள். திருமணம் செய்யாமல் துறவு வாழ்க்கை மேற்கொண்டு தமிழ் முனிவராக வாழ்ந்து அரை நூற்றாண்டுக்கு மேல் அரிய தமிழ்ப் பணி செய்து மறைந்தவர். தமிழ்கூறும் நல்லுலகம் வணங்கத்தக்கவர். இவர் எழுதிய நூல்கள் அனைத்தும் தமிழினம் தன்னை உணர்வதற்கும், தலைநிமிர்வதற்கும், ஆய்வாளர்கள் ஆய்வுப் பணியில் மேலாய்வை மேற்கொள்வதற்கும் வழிகாட்டுவனவாகும். ஆய்வுநோக்கில் விரிந்த பார்வையுடன் தமிழுக்கு அழியாத அறிவுச் செல்வங்களை வைப்பாக வைத்துச் சென்றவர். தமிழ் - தமிழரின் அடையாளங்களை மீட்டெடுத்துத்தந்த தொல்தமிழ் அறிஞர்களின் வரிசையில் குறிப்பிடத்தக்கவர். தமிழ்மண்ணில் 1937-1938இல் நடந்த முதல் இந்தி எதிர்ப்புப் போரை முன்னெடுத்துச்சென்ற தலைவர்கள், அறிஞர்கள் வரிசையில் இவரும் ஒருவர். வரலாறு, இலக்கியம், கலை, சமயம் தொடர்பான ஆய்வு நூல்களையும், பொதுநலன் தொடர்பான நூல்களையும், பன்முகப் பார்வையுடன் எழுதியவர். பேராசிரியர் முனைவர் வீ. அரசு அவர்கள் எழுதிய சாகித்திய அகாதெமி வெளியிட்டுள்ள ‘இந்திய இலக்கியச் சிற்பிகள்’ நூல்வரிசையில் மயிலை சீனி. வேங்கடசாமி பற்றிய வரலாற்று நூலில் ஆவணப்பணி, வரலாறு எழுது பணி, கலை வரலாறு, கருத்து நிலை ஆகிய பொருள்களில் இவர்தம் நுண்மாண் நுழைபுல அறிவினை மிக ஆழமாகப் பதிவுசெய்துள்ளார். ‘முறையான தமிழ் இலக்கிய வரலாற்றை இனி எழுதுவதற்கு எதிர்கால ஆய்வாளர்களுக்கு வழிகாட்டிச் சென்றவர்’ - என்பார் கா. சுப்பிரமணியபிள்ளை அவர்கள். ‘மயிலை சீனி. வேங்கடசாமி ஆண்டில் இளையவராக இருந்தாலும், ஆராய்ச்சித் துறையில் முதியவர், நல்லொழுக்கம் வாய்ந்தவர். நல்லோர் கூட்டுறவைப் பொன்னே போல் போற்றியவர்.’ என்று சுவாமி விபுலானந்த அடிகளார் அவர்களும், “எண்பதாண்டு வாழ்ந்து, தனிப் பெரும் துறவுபூண்டு, பிறர் புகாத ஆய்வுச்சூழலில் புகுந்து தமிழ் வளர்த்த, உலகச் சமயங்களையும், கல்வெட்டு காட்டும் வரலாறுகளையும், சிற்பம் உணர்த்தும் கலைகளையும் தோய்ந்து ஆய்ந்து தோலா நூல்கள் எழுதிய ஆராய்ச்சி அறிஞர் மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கட்குத் தமிழ்ப் பேரவைச் செம்மல் என்ற பட்டத்தினை வழங்கியும், தமிழ்ச் செம்மல்கள் பேரவையின் ஓர் உறுப்பினராக ஏற்றுக்கொண்டும், மதுரைக் காமராசர் பல்கலைக்கழகம் பாராட்டிச் சிறப்பிக்கிறது” என்று இப் பெருந்தமிழ் அறிஞரை அப்பல்கலைக் கழகம் போற்றியுள்ளதை மனத்தில் கொண்டு இவரின் அனைத்துப் படைப்புகளையும் வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம். சென்னைப் பல்கலைக்கழக தமிழ் இலக்கியத்துறைத் தலைவர் வீ. அரசு அவர்கள் - போற்றுதலுக்கும், புகழுக்கும் உரிய இவ்வாராய்ச்சிப் பேரறிஞரின் நூல்கள் அனைத்தையும் பொருள்வழிப் பிரித்து, எங்களுக்குக் கொடுத்து உதவியதுடன், பதிப்பாசிரியராக இருந்தும், வழிகாட்டியும், இவ்வாராய்ச்சித் தொகுதிகளை ஆய்வாளர்களும், தமிழ் உணர்வாளர்களும் சிறந்த பயன்பெறும் நோக்கில் வெளியிடுவதற்கு பல்லாற்றானும் உதவினார். அவருக்கு எம் நன்றி. இவ்வருந்தமிழ்ச் செல்வங்களை அனைவரும் வாங்கிப் பயனடைய வேண்டுகிறோம். இவ்வாராய்ச்சி நூல்கள் எல்லா வகையிலும் சிறப்போடு வெளி வருவதற்கு உதவிய அனைவர்க்கும் நன்றி. - பதிப்பாளர் தமிழ் இலக்கிய வரலாறு பத்தொன்பதாம் நூற்றாண்டு அறிஞர் மு. அருணாசலம் அவர்கள் 1969ஆம் ஆண்டு முதல் தமிழிலக்கிய வரலாறு நூற்றாண்டு வரிசை எனும் தொகுதிகளை வெளியிடத் தொடங்கினார். இதற்கு முன் தண்டபாணி தேசிகர், பதினேழு மற்றும் பதினெட்டாம் நூற்றாண்டு இலக்கிய வரலாற்று நூல்களை வெளியிட்டுள்ளார். இம்மரபில் மயிலை சீனி.வேங்கடசாமி அவர்கள் உருவாக்கியதே பத்தொன்பதாம் நூற்றாண்டு தமிழிலக்கிய வரலாறு என்னும் நூல். இத்தொகுதியில் அந்நூல் இடம்பெற்றுள்ளது. கிறித்துவமும் தமிழும் எனும் நூலை (1936) தமது முதல் நூலாக மயிலை சீனி. வேங்கடசாமி வெளியிட்டுள்ளார். அந்நூலில் தமிழின் அச்சு மரபு உருவான வரலாற்றைப் பதிவு செய்துள்ளார். அச்சுவழி புதிது புதிதாக உருவாக்கப்படும் நூல்கள் குறித்து இவர் கவனம் செலுத்தத் தொடங்கினார். அதன் விளைவாகவே இந்நூல் உருப்பெற்றுள்ளது என்று கூறமுடியும். தமிழர்களின் எழுத்துப்பதிவு மரபு, எழுத்துப் பயிற்சி மரபு ஆகியவை அச்சு மரபு வருவதற்கு முன் வேறுவகையில் செயல்பட்டது. ஆனால் அச்சுமரபு வந்தவுடன் அதன் தன்மை மாறத் தொடங்கியது. இந்நூலில் இவ்விரு கூறுகளையும் மயிலை சீனி.வேங்கடசாமி அவர்கள் விரிவாக ஆய்வு செய்துள்ளார். பத்தொன்பதாம் நூற்றாண்டில் உருப்பெற்ற எழுத்துப் பயிற்சி என்பது எவ்வகையில் அமைந்திருந்தது என்பதையும் கல்விக்கூடங்கள் எவ்வாறு உருவாக்கப்பட்டன என்பதையும் இந்நூலில் பதிவு செய்துள்ளார். தொடர்ச்சியான கால வரன்முறையோ பொருள் வரன் முறையோ இந்நூலில் காணப்படுவதாகக் கூறமுடியாது. இருந்தாலும் பத்தொன்பதாம் நூற்றாண்டு பற்றிய முதல் பதிவாக இந்நூல் அமைகின்றது. இத்தொகுப்புகள் உருவாக்கத்தில் தொடக்க காலத்தில் உதவிய ஆய்வாளர்கள் மா. அபிராமி, ப. சரவணன் ஆகியோருக்கும் இத்தொகுதிகள் அச்சாகும் போது பிழைத் திருத்தம் செய்து உதவிய ஆய்வாளர்கள் வி. தேவேந்திரன், நா. கண்ணதாசன் ஆகியோருக்கும் நன்றி. சென்னை - 96 தங்கள் ஏப்ரல் - 2010 வீ. அரசு தமிழ்ப் பேராசிரியர் தமிழ் இலக்கியத்துறை சென்னைப் பல்கலைக்கழகம் அறிஞர் மயிலை சீனி. வேங்கடசாமி “ஐந்தடிக்கு உட்பட்ட குறள் வடிவம்; பளபளக்கும் வழுக்கைத் தலை; வெண்மை படர்ந்த புருவங்களை எடுத்துக் காட்டும் அகன்ற நெற்றி; கனவு காணும் கண்ணிமைகளைக் கொண்ட வட்ட முகம்; எடுப்பான மூக்கு; படபடவெனப் பேசத் துடிக்கும் மெல்லுதடுகள்; கணுக்கால் தெரியக் கட்டியிருக்கும் நான்கு முழ வெள்ளை வேட்டி; காலர் இல்லாத முழுக்கைச் சட்டை; சட்டைப் பையில் மூக்குக் கண்ணாடி; பவுண்டன் பேனா; கழுத்தைச் சுற்றி மார்பின் இருபுறமும் தொங்கும் மேல் உத்தரீயம்; இடது கரத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் புத்தகப் பை. இப்படியான தோற்றத்துடன் சென்னை மியூசியத்தை அடுத்த கன்னிமாரா லைப்ரெரியை விட்டு வேகமாக நடந்து வெளியே வருகிறாரே! அவர்தான் மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கள்.” எழுத்தாளர் நாரண. துரைக்கண்ணன் அவர்களின் மேற்கண்ட விவரிப்பு, அறிஞர் மயிலை சீனி. வேங்கடசாமி அவர்களைக் கண்முன் காணும் காட்சி அனுபவத்தைத் தருகிறது. திருமணம் செய்து கொள்ளாமல், இல்லறத் துறவியாக வாழ்ந்தவர். எண்பதாண்டு வாழ்க்கைக் காலத்தில், அறுபது ஆண்டுகள் முழுமையாகத் தமிழியல் ஆய்வுப் பணிக்கு ஒதுக்கியவர். இருபதாம் நூற்றாண்டில் பல புதிய தன்மைகள் நடைமுறைக்கு வந்தன. அச்சு எந்திரத்தைப் பரவலாகப் பயன்படுத்தும் வாய்ப்பு உருவானது. சுவடிகளிலிருந்து அச்சுக்குத் தமிழ் நூல்கள் மாற்றப் பட்டன. இதன்மூலம் புத்தக உருவாக்கம், இதழியல் உருவாக்கம், நூல் பதிப்பு ஆகிய பல துறைகள் உருவாயின. இக் காலங்களில்தான் பழந்தமிழ் நூல்கள் பரவலாக அறியப்பட்டன. இலக்கிய, இலக்கணப் பிரதிகள் அறியப்பட்டதைப்போல், தமிழர்களின் தொல்பழங்காலம் குறித்தும் பல புதிய கண்டுபிடிப்புகள் வெளிவந்தன. பிரித்தானியர் களால் உருவாக்கப்பட்ட தொல்பொருள் ஆய்வுத்துறை பல புதிய வரலாற்றுத் தரவுகளை வெளிக்கொண்டு வந்தது. பாரம்பரியச் சின்னங்கள் பல கண்டறியப்பட்டன. தொல்லெழுத்துக்கள் அறியப்பட்டன. பல்வேறு இடங்களில் எழுதப்பட்ட கல்வெட்டுக்கள் படி எடுக்கப்பட்டு வாசிக்கப்பட்டன. தமிழ் மக்களின் எழுத்துமுறை, இலக்கிய, இலக்கண உருவாக்கமுறை ஆகியவை குறித்து, இந்தக் கண்டுபிடிப்புகள் மூலம் புதிதாக அறியப்பட்டது. அகழ்வாய்வுகள் வழிபெறப்பட்ட காசுகள் புதிய செய்திகளை அறிய அடிப்படையாக அமைந்தன. வடக்கு, தெற்கு என இந்தியாவின் பண்பாட்டுப் புரிதல் சிந்துசமவெளி அகழ்வாய்வு மூலம் புதிய விவாதங்களுக்கு வழிகண்டது. தமிழகச் சூழலில், தொல்பொருள் ஆய்வுகள் வழி பல புதிய கூறுகள் உறுதிப்படுத்தப்பட்டன. ஆதிச்சநல்லூர், அரிக்கமேடு அகழ் வாய்வுகள்; தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கண்டுபிடிக்கப்பட்ட வரலாற்றுக்கு முந்தைய காலப் பொருட்கள், ஓவியங்கள் ஆகியவை தமிழக வரலாற்றைப் புதிய தலைமுறையில் எழுதுவதற்கு அடிகோலின. மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கள் மேலே விவரிக்கப்பட்ட சூழலில்தான், தமது ஆய்வுப் பணியைத் தொடங்கினார். வேங்கடசாமி சுயமரியாதை இயக்கச் சார்பாளராக வாழ்வைத் தொடங்கினார். பின்னர் பௌத்தம், சமணம் ஆகிய சமயங்கள் குறித்த அக்கறை உடையவராக இருந்தார். இவ்வகை மனநிலையோடு, தமிழ்ச் சூழலில் உருவான புதிய நிகழ்வுகளைக் குறித்து ஆய்வுசெய்யத் தொடங்கினார். கிறித்தவம், பௌத்தம், சமணம் ஆகிய சமயங்கள், தமிழியலுக்குச் செய்த பணிகளைப் பதிவு செய்தார். இவ்வகைப் பதிவுகள் தமிழில் புதிய துறைகளை அறிமுகப்படுத்தின. புதிய ஆவணங்கள் மூலம், தமிழ்ச் சமூகப் பண்பாட்டு வரலாறுகளை எழுதினார். சங்க இலக்கியப் பிரதிகள், பிராமி கல்வெட்டுகள், பிற கல்வெட்டுகள், செப்பேடுகள் முதலியவற்றை வரலாறு எழுதுவதற்குத் தரவுகளாகக் கொண்டார். கலைகளின்மீது ஈடுபாடு உடைய மன நிலையினராகவே வேங்கடசாமி இளமை முதல் இருந்தார். தமிழ்க் கலை வரலாற்றை எழுதும் பணியிலும் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார். கட்டடம், சிற்பம், ஓவியம் தொடர்பான இவரது ஆய்வுகள், தமிழ்ச் சமூக வரலாற்றுக்குப் புதிய வரவாக அமைந்தன. இருபதாம் நூற்றாண்டின் தொடக்க காலங்களில் இந்தியவியல் என்ற வட்டத்திற்குள் தமிழகத்தின் வரலாறும் பேசப்பட்டது. இந்திய வியலைத் திராவிட இயலாகப் படிப்படியாக அடையாளப் படுத்தும் செயல் உருப்பெற்றது. இப் பணியில் தம்மை முழுமையாக ஈடுபடுத்தி யவர் வேங்கடசாமி அவர்கள். இன்று, திராவிட இயல் தமிழியலாக வளர்ந்துள்ளது. இவ் வளர்ச்சிக்கு வித்திட்ட பல அறிஞர்களுள் வேங்கடசாமி முதன்மையான பங்களிப்பாளர் ஆவார். மயிலை சீனி. வேங்கடசாமி அவர்களின் வரலாற்றுச் சுவடுகள் அடங்கிய - இந்திய இலக்கியச் சிற்பிகள் மயிலை சீனி. வேங்கடசாமி என்ற நூலை சாகித்திய அகாதெமிக்காக எழுதும்போது இத்தொகுதி களை உருவாக்கினேன். அப்போது அவற்றை வெளியிட நண்பர்கள் வே. இளங்கோ, ஆர். இராஜாராமன் ஆகியோர் திட்டமிட்டனர். ஆனால் அது நடைபெறவில்லை. அத்தொகுதிகள் இப்போது வெளிவருகின்றன. இளங்கணி பதிப்பகம் பாவலர் பாவேந்தர் பாரதிதாசனின் அனைத்துப் படைப்புகளையும் ஒரே வீச்சில் ‘பாவேந்தம்’ எனும் தலைப்பில் வெளியிட்டுள்ளதை தமிழுலகம் அறியும். அந்த வரிசையில் மயிலை சீனி. வேங்கடசாமி அவர்களின் உழைப்பால் விளைந்த அறிவுத் தேடல்களை ஒரே வீச்சில் பொருள்வழிப் பிரித்து முழுமைமிக்க படைப்புகளாக 1998இல் உருவாக்கினேன். அதனை வெளியிட இளங்கணிப் பதிப்பகம் இப்போது முன்வந்துள்ளது. இதனைப் பாராட்டி மகிழ்கிறேன். தமிழர்கள் இத்தொகுதிகளை வாங்கிப் பயன்பெறுவர் என்று நம்புகிறேன். - வீ. அரசு மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுகள் - சுயமரியாதை இயக்க இதழ்களில் செய்திக் கட்டுரைகளை எழுதுவதைத் தமது தொடக்க எழுத்துப் பயிற்சியாக இவர் கொண்டிருந்தார். அது இவருடைய கண்ணோட்ட வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க செல்வாக்கைச் செலுத்தியுள்ளது. - கிறித்தவ சபைகளின் வருகையால் தமிழில் உருவான நவீன வளர்ச்சிகளைப் பதிவு செய்யும் வகையில் தமது முதல் நூலை இவர் உருவாக்கினார். தமிழ் உரைநடை, தமிழ் அச்சு நூல் போன்ற துறைகள் தொடர்பான ஆவணம் அதுவாகும். - பௌத்தம் தமிழுக்குச் செய்த பங்களிப்பை மதிப்பீடு செய்யும் நிலையில் இவரது அடுத்தக் கட்ட ஆய்வு வளர்ந்தது. பௌத்தக் கதைகள் மொழியாக்கம் மற்றும் தொகுப்பு, புத்த ஜாதகக் கதைத் தொகுப்பு, கௌதம புத்தர் வாழ்க்கை வரலாறு என்ற பல நிலைகளில் பௌத்தம் தொடர்பான ஆய்வுப் பங்களிப்பை வேங்கடசாமி செய்துள்ளார். - சமண சமயம் மீது ஈடுபாடு உடையவராக வேங்கடசாமி இருந்தார். மணிமேகலை, சீவக சிந்தாமணி, ஆகியவற்றை ஆய்வதின் மூலம் தமிழ்ச் சூழலில் சமண வரலாற்றை ஆய்வு செய்துள்ளார். சமண சமய அடிப்படைகளை விரிவாகப் பதிவு செய்துள்ளார். சமணச் சிற்பங்கள், குறித்த இவரது ஆய்வு தனித் தன்மையானது. - பல்வேறு சாசனங்கள் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டன. ஓலைச் சுவடிகளிலிருந்து இலக்கியங்கள், இலக்கணங்கள் அச்சு வாகனம் ஏறின. இந்தப் பின்புலத்தில் கி.மு. 5 முதல் கி.மு. 9ஆம் நூற்றாண்டு முடிய உள்ள தமிழ்ச் சமூகத்தின் ஆட்சி வரலாற்றை இவர் ஆய்வு செய்தார். பல்லவ மன்னர்கள் மூவர் குறித்த தனித்தனி நூல்களைப் படைத்தார். இதில் தமிழகச் சிற்பம் மற்றும் கோயில் கட்டடக்கலை வரலாற்றையும் ஆய்வு செய்தார். - அண்ணாமலைப் பல்கலைக்கழக அறக்கட்டளைச் சொற்பொழிவை அடிப்படையாகக் கொண்டு, தமிழ் நூல்களின் கால ஆய்விலும் இவர் அக்கறை செலுத்தினார். தொல்காப்பியம், சிலப்பதிகாரம் குறித்த கால ஆய்வில் ச. வையாபுரிப்பிள்ளை போன்றோர் கருத்தை மறுத்து ஆய்வு நிகழ்த்தியுள்ளார். இச் சொற்பொழிவின் இன்னொரு பகுதியாக சங்கக் காலச் சமூகம் தொடர்பான ஆய்வுகளிலும் கவனம் செலுத்தினார். - சென்னைப் பல்கலைக்கழக அறக்கட்டளைச் சொற்பொழிவில் சேரன் செங்குட்டுவனை ஆய்வுப் பொருளாக்கினார். இதன் தொடர்ச்சியாக கி.பி. 3-ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட தமிழகத்தின் வரலாற்றைப் பல நூல்களாக எழுதியுள்ளார். சேர சோழ பாண்டியர், பல குறுநில மன்னர்கள் குறித்த விரிவான ஆய்வை வேங்கடசாமி நிகழ்த்தியுள்ளார். இதன் தொடர்ச்சியாகக் களப்பிரர் தொடர்பான ஆய்வையும் செய்துள்ளார். இவ் வாய்ப்புகளின் ஒரு பகுதியாக அன்றைய தொல்லெழுத்துக்கள் குறித்த கள ஆய்வு சார்ந்து, ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார். - ஒவ்வொரு தேசிய இனத்திற்கும் அதன் பாரம்பரியச் செழுமை குறித்த அறியும் தரவுகள் தேவைப்படுகின்றன. இவற்றை ஆவணப் படுத்துவது மிகவும் அவசியமாகும். மறைந்து போனவற்றைத் தேடும் முயற்சி அதில் முக்கியமானதாகும். இப் பணியையும் வேங்கடசாமி மேற்கொண்டிருந் தார். அரிய தரவுகளை இவர் நமக்கு ஆவணப்படுத்தித் தந்துள்ளார். - தமிழர்களின் கலை வரலாற்றை எழுதுவதில் வேங்கடசாமி அக்கறை செலுத்தினார். பல அரிய தகவல்களை இலக்கியம் மற்றும் சாசனங்கள் வழி தொகுத்துள்ளார். அவற்றைக் குறித்து சார்பு நிலையில் நின்று ஆய்வு செய்துள்ளார். ஆய்வாளருக்குரிய நேர்மை, விவேகம், கோபம் ஆகியவற்றை இவ்வாய்வுகளில் காணலாம். - பதிப்பு, மொழிபெயர்ப்பு ஆகிய பணிகளிலும் வேங்கடசாமி ஈடுபட்டதை அறிய முடிகிறது. - இவரது ஆய்வுப் பாதையின் சுவடுகளைக் காணும்போது, தமிழியல் தொடர்பான ஆவணப்படுத்தம், தமிழருக்கான வரலாற்று வரைவு, தமிழ்த் தேசிய இனத்தின் கலை வரலாறு மற்றும் அவைகள் குறித்த இவரது கருத்து நிலை ஆகிய செயல்பாடுகளை நாம் காணலாம். மயிலை சீனி. வேங்கடசாமி எழுதிய நூல்கள் 1936 : கிறித்தவமும் தமிழும் 1940 : பௌத்தமும் தமிழும் 1943 : காந்தருவதத்தையின் இசைத் திருமணம் (சிறு வெளியீடு) 1944 : இறையனார் அகப்பொருள் ஆராய்ச்சி (சிறு வெளியீடு) 1948 : இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம் 1950 : மத்த விலாசம் - மொழிபெயர்ப்பு மகாபலிபுரத்து ஜைன சிற்பம் 1952 : பௌத்தக் கதைகள் 1954 : சமணமும் தமிழும் 1955 : மகேந்திர வர்மன் : மயிலை நேமிநாதர் பதிகம் 1956 : கௌதம புத்தர் : தமிழர் வளர்த்த அழகுக் கலைகள் 1957 : வாதாபி கொண்ட நரசிம்மவர்மன் 1958 : அஞ்சிறைத் தும்பி : மூன்றாம் நந்தி வர்மன் 1959 : மறைந்துபோன தமிழ் நூல்கள் சாசனச் செய்யுள் மஞ்சரி 1960 : புத்தர் ஜாதகக் கதைகள் 1961 : மனோன்மணீயம் 1962 : பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியம் 1965 : உணவு நூல் 1966 : துளு நாட்டு வரலாறு : சமயங்கள் வளர்த்த தமிழ் 1967 : நுண்கலைகள் 1970 : சங்ககாலத் தமிழக வரலாற்றில் சில செய்திகள் 1974 : பழங்காலத் தமிழர் வாணிகம் : கொங்குநாட்டு வரலாறு 1976 : களப்பிரர் ஆட்சியில் தமிழகம் 1977 : இசைவாணர் கதைகள் 1981 : சங்க காலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துகள் 1983 : தமிழ்நாட்டு வரலாறு: சங்ககாலம் - அரசியல் இயல்கள் 4, 5, 6, 10 - தமிழ்நாட்டரசு வெளியீடு : பாண்டிய வரலாற்றில் ஒரு புதிய செய்தி (சிறு வெளியீடு - ஆண்டுஇல்லை) வாழ்க்கைக் குறிப்புகள் 1900 : சென்னை மயிலாப்பூரில் சீனிவாச நாயகர் - தாயரம்மாள் இணையருக்கு 6.12.1900 அன்று பிறந்தார். 1920 : சென்னைக் கலைக் கல்லூரியில் ஓவியம் பயிலுவதற்காகச் சேர்ந்து தொடரவில்லை. திருமணமின்றி வாழ்ந்தார். 1922 : 1921-இல் தந்தையும், தமையன் கோவிந்தராஜனும் மறை வுற்றனர். இச் சூழலில் குடும்பத்தைக் காப்பாற்ற பணிக்குச் செல்லத் தொடங்கினார். 1922-23இல் நீதிக்கட்சி நடத்திய திராவிடன் நாளிதழில் ஆசிரியர் குழுவில் இடம்பெற்றார். 1923-27 : சென்னையிலிருந்து வெளிவந்த லக்ஷ்மி என்ற இதழில் பல்வேறு செய்திகளைத் தொகுத்து கட்டுரைகள் எழுதிவந்தார். 1930 : மயிலாப்பூர் நகராட்சிப் பள்ளியில் தொடக்கநிலை ஆசிரியராகப் பணியேற்றார். 1931-32 : குடியரசு இதழ்ப் பணிக் காலத்தில் பெரியார் ஈ.வெ.ரா. வுடன் தொடர்பு. சுயமரியாதை தொடர்பான கட்டுரைகள் வரைந்தார். 1931-இல் கல்வி மீதான அக்கறை குறித்து ஆரம்பக் கல்வி குறித்தும், பொதுச் செய்திகள் பற்றியும் ‘ஆரம்பாசிரியன்’ என்னும் இதழில் தொடர்ந்து எழுதியுள்ளார். 1934-38-இல் வெளிவந்த ஊழியன் இதழிலும் கட்டுரைகள் எழுதியுள்ளார். 1936 : அறிஞர் ச.த. சற்குணர், விபுலானந்த அடிகள், தெ.பொ. மீனாட்சி சுந்தரனார் ஆகிய அறிஞர்களுடன் தொடர்பு கொண்டிருந்தார். 1955 : 16.12.1955-இல் அரசுப் பணியிலிருந்து பணி ஓய்வு பெற்றார். 1961 : 17.3.1961-இல் மணிவிழா - மற்றும் மலர் வெளியீடு. 1975-1979: தமிழ்நாட்டு வரலாற்றுக்குழு உறுப்பினர். 1980 : 8. 5. 1980-இல் மறைவுற்றார். 2001 : நூற்றாண்டுவிழா - ஆக்கங்கள் அரசுடைமை. பொருளடக்கம் தமிழ் இலக்கிய வரலாறு பத்தொன்பதாம் நூற்றாண்டு பொது இயல் அணிந்துரை 18 முகவுரை 20 சூழ்நிலை 24 சென்னைக் கல்விச் சங்கம் 30 கையெழுத்துச்சுவடி நூல்நிலையம் 36 சாசன எழுத்து, பழம்பொருள் ஆய்வு 39 எண்களின் வரிவடிவம் 48 பழைய முறையில் தமிழ்க் கல்வி 60 புதுமுறையில் தமிழ்க் கல்வி 65 துண்டுப் பிரசுங்கள் 68 சமயக் காழ்ப்பு 71 அச்சுக்கூடங்கள் 80 ஏட்டுச்சுவடியும் அச்சுப் புத்தகமும் 96 வசன நூல் வளர்ச்சி 108 வார இதழ், திங்கள் இதழ் முதலியன 116 இலக்கண நூல்கள் 126 இஸ்லாமும் தமிழும் 135 சிறப்பியல் புலவரும் நூல்களும் 161 19-20 ஆம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியம் 247 ஆசிரிய - மாணவர் பரம்பரை விளக்கம் 249 ஒழிபியல் கீழ்க்கணக்கு நூலாராய்ச்சி 260 கம்ப இராமாயணம் 276 எகர ஒகர எழுத்துக்களின் வரிவடிவ வரலாறு 279 சாற்றுக் கவிகள் 285 19-ஆம் நூற்றாண்டில் அச்சான இலக்கிய நூல்கள் 308 19-ஆம் நூற்றாண்டில் உரைநடை நூல்கள் 318 19-ஆம் நூற்றாண்டில் நாடக நூல்கள் 327 இணைப்புகள் 339 தமிழ் இலக்கிய வரலாறு பத்தொன்பதாம் நூற்றாண்டு குறிப்பு : மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கள் பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியம் (1962) எனும் தலைப்பில் எழுதிய நூல் இது.. அணிந்துரை திரு. மயிலை சீனி.வேங்கடசாமி அவர்களால் எழுதப்பட்டு வெளியிடப்படும் “பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியம்” என்னும் நூலினைப் படித்துப் பார்த்து மிக்க மகிழ்ச்சி எய்தினேன். திரு. சீனி.வேங்கடசாமி அவர்கள் பல அரிய பனுபவல்கள் முன்னரே தந்து தமிழகத்திற்குப் பெருந்தொண்டாற்றிய அறிஞர். சாசனச் செய்யுள் மஞ்சரி போனற் நல்ல பல நூல்களின் ஆசிரியராகிய திரு.சீனி வேங்கடசாமி அவர்கள் இப்புத்தகத்தைப் பொதுவீயல் சிறப்பில் ஒழிபியல் என மூன்று பிரிவுகளாகப் பிரித்துக் கொண்டு பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியத்தின் நிலையைப் பற்றி நன்கு ஆராய்ந்து காட்டியுள்ளார். இப்புத்தகத்திலிருந்து அறியக்கூடிய உண்மைகள் பல உள. அவற்றுள் சில பின்வருவன :- சிலப்பதிகாரத்தை 1872-இல் சுப்பராய செட்டியார் வெளியிட்டார் என்பதும், டாக்டர் உ.வே. சாமிநாரைதயர் 1892-இல்அதனை வெளியிடுதற்கு முன்னர்ப் புகார்க் காண்டம் மாத்திரம் 1876-ல் திரு. சீனிவாச ராகவாச்சாரி யாரால் வெளியிடப்பட்டது என்பதும் ஒன்று. மணிமேகலை என்னும் காப்பியம் 1894-இல் வித்வான் மயிலை, சண்முகம்பிள்ளை அவர்களால் முதன்முதல் வெளியிடப்பட்டது என்பது ஒன்று. திருத்தணிகை விசாகப் பெருமாள் ஐயரும், கொட்டையூர் சிவக்கொழுந்து தேசிகரும் சேர்ந்து 1857-இல் திருவாசகத்தை முதன் முதல் அச்சிட்டுத் தந்தார்கள் என்பதும் ஒன்று. டாக்டர் திரு.உ.வே. சாமிநாதையர் சங்க இலக்கியங்கள் பற்றியும் சிலப்பதிகாரம் சீவக சிந்தாமணி பற்றியும் சேலம் இராமசாமி முதலியார் அவர்கள் தூண்டுதலால் ஆராய்ச்சி செய்யத் தலைப்பட்டார் என்பதை இந்நூலாசிரியர் சான்றுகளுடன் எடுத்து விளக்கியுள்ளார். திருநெல்வேலிக் கவிராச நெல்லையப்ப பிள்ளை, ஈசுவரமூர்த்தி பிள்ளை ஆகியவர்கள் உதவியினால் ஏட்டுச்சுவடிகள் பல டாக்டர் சாமிநாதையர் அவர்களுக்குக் கிடைத்தன என்பது எடுத்துக்காட்டப் பட்டுள்ளது. தமிழ்ச் சுருக்கெழுத்து திரு. அரிகிருட்டின படையாட்சி அவர்களால் 1898-இல் கும்பகோணத்தில் முதன்முதல் வெளியிடப் பட்டது என்பது எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் இன்னிலை என்ற ஒரு நூல் இல்லை என்பதும், கைந்நிலை என்ற நூல்தான் உண்டு என்பதும் பத்தொன்பதாவது நூற்றாண்டிற் செய்யப்பட்ட பெரிய ஆராய்ச்சிகளால் முடிவு காணப்பட்டது என்பதை நூலாசிரியர் இந்நூலகத்தும் ஒழிபியலிலும் எடுத்து விளக்கியுள்ளார். பத்தொன்பதாவது நூற்றாண்டில் அச்சான புத்தகங்களில் அட்டவணை பக்கங்கள் 266 முதல் 273 வரை உள்ளவற்றில் தரப்பட்டுள்ளது. பத்தொன்பதாவது நூற்றாண்டில் வெளியான உரைநடை நூல்களின் சிறு பட்டியல் ஒன்றும், இந்நூற்றாண்டில் வெளியான தமிழ்நாடக நூல்களின் சிறு பட்டியல் ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளன. இவை தமிழ் இலகயீகய வரலாற்றை அறிய முற்படுவோருக்குப் பெரிதும் பயன்படும். பக்கம் 189 முதல் 215 வரை உள்ளவற்றிற் காணப்படும் புலவர்களுடைய பிறந்த ஆண்டு மறைந்த ஆண்டும் உறுதியாகத் தெரியவில்லை என ஆசிரியர் கூறியுள்ளார். இப்புலவர்கள் தோன்றி மறைந்த காலங்கள் ஆராயத்தக்கன. நூல் பத்தொன்பதாம் நூற்றாண்டைப் பற்யிதானாலும், பத்தொன்பதாம் நூற்றாண்டில் nன்றி இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்திருந்த புலவர் சிலரைப் பற்றிக் கூறியுள்ளது. (பக்கங்கள் 216-217.) ஆசிரியர் சிலரது மாணவர் பரம்பரையினைக் காட்டும் விளக்கப் படங்கள் நூலிற்கு அணி செய்கின்றன. கிறித்தவத் தொண்டர்களும் முஸ்லீம் புலவர்களும் தமிழ் இலக்கியத்திற்குச் செய்த தொண்டுகள் சிறப்பாக எடுத்துக் காட்டப்பட்டுள்ளன. அராபிய எண்ணுமுறை என்பது பண்டைய தமிழ்எண்ணு முறைதான் என்பதைக் காரணத்தோடு நூலாசிரியர் எடுத்துக் காட்டியுள்ளார். பத்தொன்பதாவது நூற்றாண்டில் வாழ்ந்து தமிழிலக்கியத்திற்குத் தொண்டாற்றிய அறிஞர் பலருடைய தொண்டுகள் நூலகத்தே விரித்துரைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு நூற்றாண்டைப் பற்றியும் இத்தகைய ஆராய்ச்சி வெளியீடுகள் வெளிவருதல் விரும்பத்தக்கது. திருமயிலை சீனி. வேங்கடசாமி அவர்களுடைய அறிய உழைப்பின் பயனாகக் கிடைத்துள்ள இத்தமிழ்ப்பெருஞ் செல்வத்தைத் தமிழ்ப்பெரு மக்கள் போற்றுவார்கள் என்று நம்புகறேன் சென்னை - 5. 12-5-62. அ.சிதம்பரநாதன், தலைமையாசிரியர் ஆங்கிலத் தமிழ்ச சொற்களஞ்சியம், சென்னைப் பல்கலைக்கழகம் முகவுரை பழந்தமிழ் நூல்களைப் படிக்கவும் இலக்கிய ஆராய்ச்சி செய்யவும் என்னுடைய இளமைக் காலத்தில் வாய்ப்புகள் கிடைத்தன. என்னுடைய தமயனார் திரு.மயிலை சீனி. வோவிந்தராசனார் அவர்கள் பழைய இலக்கியங்களைப் படிப்பதிலும் தமிழ் நூல்களைப் பிறருக்குப் பாடஞ் சொல்லுவதிலும் புதிதாகச் செய்யுள் புனைவதிலும் காலங்கழித்தார். அந்தச் சூழ்நிலையில் அவருடன் நெருங்கிப் பழகிய எனக்குப் பழைய தமிழ் நூல்களைப்பற்றி அறிவதற்கு ஆர்வமும் ஆசையும் ஏற்பட்டது. எங்கள் வீட்டில் எங்கள் முன்னோர் சேர்த்து வைத்திருந்த அச்சுப் புத்தகங்களும் ஏட்டுச் சுவடிகளும் - அவை அதிகமானவையல்லவாயினும் போதிய அளவு கணிசமானவை என் ஆர்வத்தை அதிகப்படுத்தின. எங்கள் வீட்டுக்கு அருகிலே புலவர் பரம்பரையைச் சேர்ந்த ஒருவர் ஒரு பெரிய தமிழ் நூல்நிலையம் வைத்திருந்தார். அவர் பெயர் திரு.சே. சோமசுந்தரம் பிள்ளை என்பது. அவர் பழைய அச்சுப் புத்தகங்களைச் சேர்த்து வைப்பதில் ஊக்கமும் ஆர்வமும் உடையவர். அவர் வீட்டுக்கு நான் அடிக்கடி சென்று அந்த நூல்களையெல்லாம் பார்ப்பது உண்டு. இச்சூழ்நிலைகள் என்னுடைய இளைய உள்ளத்தில் தமிழ் இலக்கியங்களைப் படிக்க ஆர்வத்தை வளர்த்தன. என்னுடைய இருபதாவது வயதுக்குள்ளேயே தமிழில் உள்ள இலக்கண இலக்கிய நூல்களையெல்லாம் அறிந்து கொண்டேன். அறிந்துகொண்டேன் என்றால், அவற்றை யெல்லாம் படித்தேன் என்பது கருத்தல்ல.. அந்நூல்களையெல்லாம் அறிமுகம் செய்து கொண்டேன் என்பதுதான். காலம் சுழன்றது. மாற்றங்கள் ஏற்பட்டன. அவற்றுள் முக்கியமானவை மூன்று குறிப்பிடத்தக்கவை. என்னுடைய தமிழ் மொழியார்வத்தை வளர்த்து வந்த என்னுடைய தமையனார் என்னுடைய இருபத்து மூன்றாவது வயதில் காலமானது ஒன்று. என்னுடைய வீட்டிலிருந்த நூல்கள் சிறிது சிறிதாக மறைந்து போனது மற்றொன்று. பல அச்சுப்புத்தகங்களை மிக அருமையாகச் சேர்த்து வைத்திருந்த - நான் அடிக்கடி சென்று படித்து வந்த நூல் நிலையத்தின் தலைவர் - திரு. சோமசுந்தரம் பிள்ளையவர்கள் சில ஆண்டுகளுக்குப் பிறகு காலஞ்சென்றதும், உடனேஅவருடைய நூல்நிலையத்திலிருந்த புத்தகங்களை எல்லாம் மறைந்து போனதும் இன்னொன்று. இவை எல்லாம் என்னுடைய இளமை வயதில் ஏற்பட்ட அனுபவங்கள். என்னுடைய அறுபதாவது ஆண்டில், இந்த நூலை எழுத வேண்டும் என்னும் எண்ணம் தோன்றியது. இதற்குக் காரணம் மேலே கூறியஎன்னுடைய இளமைக் காலத்தில் ஏற்பட்டிருந்த பழம் புத்தகங்களின் தொடர்புதான். என்னுடைய சிறு அநுபவத்தைக் கொண்டு ‘பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியம்’ என்னும் இந்நூலை எழுதி வெளியிடுகிறேன். கி.பி. 1800- முதல் 1900 வரையில் உள்ள ஒரு நூற்றாண்டு வரலாறு இதில் கூறப்படுகிறது. இது ஒரு மேற்போக்கான வரலாறு. இந்நூல் எழுதுவதற்குப் பல நூற்றூக்கணக்கான புத்தகங்கள் எனக்குத்துணையாக இருந்தன. புத்தகம் எழுதுவதற்குத் துணையாக இருந்த நூல்களின் பட்டியலைத் தருவது என்னுடைய வழக்கம். ஆனால், இந்நூலுக்கு அவ்வித பட்டியலைத் தரவில்லை. காரணம் அப்பட்டியல் மிகப் பெரிதாகிவிடும் என்பதே. மறதிகாரணமாகவும் அறியாமை காரணமாகவும்சில செய்திகள் இந்நூலில் விடுபட்டிருக்கக் கூடும். அறிஞர்கள் அவற்றைப் பொறுத்தருள வேண்டுகிறேன். தெரிந்துள்ள விஷயங்களும் மறந்து போகலாகாது என்னும் கருத்துதான் இந்நூலை எழுதுவதற்கு முக்கிய காரணமாகும். என்னுடைய வேண்டுகோளுக்கிணங்கி, செந்தமிழ்க் காவலர், சென்னைப் பல்கலைக்கழக ஆங்கிலத் தமிழ்ச் சொற்களஞ்சியத் தலைமை ஆசிரியர், டாக்டர் அ.சிதம்பரநாதன், எம்.ஏ., எம்.எல்.சி. அவர்கள் இந்நூலுக்கு முன்னுரை வழங்கியது பற்றி அவருக்கு என்னுடைய நன்றியுரித்தாகும். இந்நூலினை அச்சிடும்போது அச்சுப் பிழைகளைத் திருத்தி உதவி புரிந்த நண்பர், குழந்தைக் கவிஞர், புலவர் தணிகை உலகநாதன் அவர்களுக்கும் என்னுடைய நன்றி உரியது. இந்நூலை அழகாக அச்சிட்டு வெளிப்படுத்திய சென்னை சாந்தி நூலகத்தாருக்கு நன்றி செலுத்துகிறேன். சென்னை - 4. 23-5-62. சீனி.வேங்கடசாமி. பொது இயல் சூழ்நிலை சூழ்நிலைக்கும் சுற்றுச் சார்புக்கும் தக்கவாறு மனிதரின் பண்பாடும் நாகரிகமும் அமைவதுபோலவே. இலக்கியங்களும் அந்தந்தச் சூழ்நிலை சுற்றுச் சார்புக்குத் தக்கவாறு அமைகின்றன. பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் இலக்கியம் அந்த நூற்றாண்டின் சூழ்நிலைக்கு ஏற்ப வளர்ந்திருக்கிறது. அரசியல் சூழ்நிலை, வாழ்க் கைச் சூழ்நிலை, சமயங்களின் சூழ்நிலை, மேல்நாட்டுத் தொடர்பு முதலியவற்றினாலே பத்தொன்பதாம் நூற்றாண்டிலே தமிழ் இலக்கியம் பெரிதும் வளர்ச்சி யடைந்திருக்கிறது. அந்தச் சூழ்நிலைகளைச் சுருக்கமாகவேனும் அறிந்தால் தான் அந்த நூற்றாண்டின் இலக்கிய வளர்ச்சியைத் தெரிந்துகொள்ள முடியும். ஆகவே, அவற்றைச் சுருக்கமாகக் கூறுவோம். அரசியல் சூழ்நிலை: பத்தொன்பதாம் நூற்றாண்டிலே தமிழ் நாட்டின் அரசியல், அதற்கு முன்பு மூன்று நூற்றாண்டுகளில் இருந்த அரசியல் நிலையைவிட நன்கு அமைந்திருந்தது. கி.பி. 16, 17, 18-ஆம் நூற்றாண்டுகளிலே தமிழ்நாட்டின் அரசியல் - ஏன்? இந்தியநாட்டின் அரசியலுங்கூட, சண்டை சச்சரவும் போரும் குழப்பமுமாக இருந்தன. அதனால் மக்கள் அல்லல் பட்டனர். சேர சோழ பாண்டியர் பல்லவர் முதலிய பழைய அரசர்கள் மறைந்துபோய், சிற்றரசர்களும் குறுநில மன்னர்களும் நாட்டைச் சிறு சிறு பகுதிகளாகப் பிரித்து அரசாண்டனர். இவர்களுக்குப் பாளையக்காரர் என்பது பெயர். இந்த நிலையில் விஜயநகர அரசர்களும், பின்னர் முகம்மதியரும் மராட்டியரும் தமிழ்நாட்டைக் கைப்பற்றி அரசாண்டனர். ஆனால் நாட்டில் அமைதி ஏற்படவில்லை. போரும் சண்டையும் குழப்பமும் கூச்சலும் அதிகப்பட்டன. மேலும், போர்ச்சுகீசியர் (பரங்கியர்), ஒல்லாந்தர் (டச்சுக்காரர்), பிரெஞ்சுக்காரர், ஆங்கிலேயர் ஆகிய மேல்நாட்டு ஐரோப்பியர் “கும்பினி” என்னும் வாணிகக்குழுவை அமைத்துக் கொண்டு நமது நாட்டுக்கு வந்து ஆங்காங்கே கோட்டைகளைக் கட்டிக் கொண்டு வாணிகம் செய்யத் தொடங்கினார்கள். இந்த வாணிகக் குழுவினர் வாணிகப் போட்டியின் காரணமாகத் தமக்குள் பகைமை பாராட்டிச் சண்டையிட்டுக் கொண்டார்கள். மேலும், அவர்கள், நாட்டை ஆண்ட நவாப்புக்கள், பாளையக்காரர்கள் முதலியவர்களுடன் சேர்ந்து அவர்கள் நிகழ்த்திய போர்களிலும் சண்டைகளிலும் தாங்களும் கலந்து கொண்டனர். ‘தடிஎடுத்தவன் தண்டக்காரன்’ என்பதுபோல, வெற்றி பெற்றவன் அரசனானான். நீதி, நியாயம், முறை, ஒழுங்கு என்பது இல்லாமல் குழப்பமும் கொள்ளையும் நாட்டில் தாண்டவமாடின. நாடுகடந்து வாணிகம் செய்ய வந்த இவர்கள், நாட்டின் நிலைமையைக் கண்டு தாங்களே ஆட்சியைக் கைப்பற்றி அரசாள ஆசைகொண்டனர். இதன் காரணமாகவும் இந்த வாணிகக் குழவினருக்குள் சண்டையும் சச்சரவும் ஏற்பட்டன. இவர்களில் போர்ச்சுகீசியரும் ஒல்லாந்தரும் நாளடைவில் மறைந்தனர். பிரெஞ்சுக் காரரும் ஆங்கிலேயரும் தங்களுக்குள் சண்டையிட்டுக்கொண்டு. நவாப்புக் குடும்பச் சண்டையில் தலையிட்டு, ஆட்சியைக் கைப்பற்ற முயன்றார்கள். இந்த முயற்சியில் ஆங்கிலேயர் கடைசியில் வெற்றிபெற்றார்கள். கி.பி. 19-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சண்டைகளும் போர்களும் ஒருவாறு அடங்கி நாட்டின் ஆட்சி ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கும்பினியாரின் கையில் வந்து. இவர்கள் ஆட்சிக்கு உட்படாத சுற்றுப்புறத்திவிருந்த அரசர்களும் இவர்களுக்குக் கீழடங்கினார்கள். சின்னா பின்னமாகச் சிதறுண்டு கிடந்த நாடு ஒரே ஆட்சியின் கீழ் வந்தது. ஆட்சியைக் கைப்பற்றிய ஆங்கிலேயக் கும்பினியார் குழப்பங்களை அடக்கி நாட்டில் அமைதியையும் ஒழுங்கையும் உண்டாக்கினார்கள். 19-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் நாட்டிலே முழு அமைதி ஏற்படாமற் போனாலும், பிற்பகுதியில் முழு அமைதி ஏற்பட்டது. அந்த நூற்றாண்டின் பிற்பகுதயிலே கி.பி. 1858-ஆம் ஆண்டிலே, ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனி, தான் கைப்பற்றியிருந்த ஆட்சியை ஆங்கில மன்னரின் ஆட்சிக்குக் கொடுத்துவிட்டது. அன்னியர் ஆட்சியாக இருந்த போதிலும் நாட்டிலே அமைதியும், ஒழுங்கும், நீதியும், நம்பிக்கையும் பாதுகாப்பும் ஏற்பட்டன. முன்பு மூன்று நூற்றாண்டுகளாக நாட்டில் ஏற்பட்டிருந்த அரசியல் புயல் ஒய்ந்து, இந்த நூற்றாண்டில் அமைதி ஏற்பட்டபடியால் மக்கள் ஆறுதல் அடைந்தனர். நாட்டில் நிரந்தரமான ஆட்சியும் அந்த ஆட்சியில் அமைதியும் ஒழுங்கும் வாழ்க்கையில் நம்பிக்கையும் ஏற்பட்டன. உயிருக்கும் பொருளுக்கும் பாதுகாவல் ஏற்பட்டது. ஆகவே, மக்கள் நூல்களைப் படிக்கவும் கல்விகற்கவும் வாய்ப்புப் பெற்றனர். அன்றியும் ஆங்கில ஆட்சி ஒருவகையில் நாட்டு மொழியைப் போற்றியது. ஆங்கிலேயக் கிழக்கு இந்தியக் கம்பெனியார் ஆங்கிலேயர்களை ஆட்சிசெலுத்தும் அலுவலாளராக அமர்த்தியிருந்தார்கள். அந்த ஆங்கிலேய உத்தியோகஸ்தர்கள், அவர்கள் ஆட்சி செய்யும் வட்டாரத்துத் தாய் மொழியை அறிந்திருக்கவேண்டும் என்று சட்டம் ஏற்படுத்தி யிருந்தார்கள். அக்காலத்தில் ஆங்கில மொழி அரசியல் மொழியாக ஏற்படவில்லை. வட்டாரமொழியைப் பயின்று பரீட்சையில் தேறியவர்களுக்குத்தான் சம்பளம் உயர்த்தப் பட்டது. இக்காரணத்தினாலே, தமிழ்நாட்டில் இருந்த ஆங்கில உத்தியோகஸ்தர்கள் தமிழ்மொழியைப் படிக்க வேண்டிய கட்டாயத்துக் குள்ளாயினர். அவர்கள் தமிழ் படிப்பதற்காகவும், அவர்களைப் பரீட்சிப்பதற்காகவும் சென்னைத் தமிழ்ச் சங்கம் (Fort st. George college) என்னும் சங்கத்தை அமைத்தார்கள். கம்பெனி ஆட்சிக்குப் பின்னர் ஆங்கில மன்னர் ஆட்சி ஏற்பட்ட பிறகு, அவர்கள் கல்லூரிகளையும் கலா சாலைகளையும் ஏற்படுத்தித் தமிழ்க் கல்விக்கு ஆக்கம் அளித்தனர். இவ்வாறு அரசியல் சூழ்நிலையினாலும் பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு வாய்ப்பு ஏற்பட்டது. வாழ்க்கைச் சூழ்நிலை: அமைதியான அரசியல் காரணமாக சமூக வாழ்க்கையிலே மக்களின் உயிருக்கும் பொருளுக்கும் பாதுகாப்பு ஏற்பட்டது. அதனால் அமைதியும் ஒழுங்கும் நம்பிக்கையும் மக்களுக்கு ஏற்பட்டன. மக்களின் நல்வாழ்விற்கும் ஆக்கத்திற்கும் இவை இன்றியமையாதவை யல்லவா? இந்த நல்ல சூழ்நிலையின் காரணமாக, முந்திய நூற்றாண்டுகளைவிடப் பத்தொன்பதாம் நூற்றாண்டில், தமிழ் இலக்கியம் அதிகமாக வளர்ச்சி யடைந்தது. அரசியல் அமைதிமட்டும் அல்லாமல் அதுவரையில் சிடைத்திராத வேறு சில வசதிகளும் கிடைத்தன. அந்தப் புதிய வசதிகள் எவை என்றால், இருப்புப்பாதையும் தபால் தந்தியும் ஆகும். ஆங்கில அரசாங்கத்தார் மேல்நாட்டுமுறையை ஒட்டி இவற்றை அமைத்தார்கள். இந்தப் புதிய வசதிகள் இல்லாத காலத்தில் மக்கள் பல ஊர் மக்களுடன் நெருங்கிப் பழகவும் கடிதம் எழுதிச் செய்தி யறியவும் வாய்ப்பு இல்லாமல் இருந்தனர். இந்த வாய்ப்புக்கள் ஏற்பட்ட 19-ஆம் நூற்றாண்டிலே, ஏனைய மக்களைப் போலவே, புலவர்களும் பண்டிதர்களும் மற்ற ஊராருடன் எளிதில் பழகவும் அளவளாவவும் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளவும் முடிந்தது. பெரும்பொருட் செலவும் அதிககாலச் செலவும் இல்லாமல் குறைந்த செலவில் சுருங்கிய நேரத்தில் வேறு ஊரில் உள்ள புலவர்களுடனும் கவிஞர்களுடனும் நெருங்கிப் பழக நல்ல வாய்ப்பு ஏற்பட்டதால் அதன் காரணமாகக் கல்வியறிவு வளர்வதாயிற்று. இந்நாட்டிலே நெடுங்காலமாக இருந்துவந்த சாதி வேற்றுமை களையும் உயர்வு தாழ்வுகளையும் ஆங்கில அரசாங்கம் ஏற்றுக் கொள்ளாமல் எல்லோருக்கும் சரி சமானமான நிலையையளித்தபடி யினாலே, “உயர்ந்தசாதி” மக்கள் மட்டும் அல்லாமல், “தாழ்ந்த சாதி” மக்களும் கல்விகற்கத் தொடங்கினார்கள். அரசாங்கத்தார் பாடசாலை களையும் கலாசாலைகளையும் ஏற்படுத்திய படியால் அவற்றில் மாணவர் சாதி பாகுபாடு இல்லாமல் கல்வி கற்றனர். தமிழ் வித்து வான்களும் பண்டிதர்களும் அக் கலாசாலைகளிலும் பாடசாலை களிலும் தமிழ் ஆசிரியராக அமர்ந்தனர். பெண்களுக்காகவும் பாட சாலைகள் ஏற்பட்டபடியால், பெண்மணிகளும் கல்வி கற்கத் தொடங்கினார்கள். இவ்வாறு சமூகச் சூழ்நிலையினாலும் பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழ்மொழி இலக்கியம் வளர்ச்சியடைந்தது. சமயச் சூழ்நிலை: பத்தொன்பதாவது நூற்றாண்டுக்கு முந்திய நூற்றண்டுகளிலே அயல் நாட்டிலிருந்து வேறு இரண்டு சமயங்கள் நமது நாட்டில் வந்திருந்தன. அவை, முகம்மதிய மதம் எனப்படும் இஸ்லாம் மதமும், விவிலிய மதம் எனப்படும் கிறிஸ்துவ மதமும் ஆகும். பதினாறாம் நூற்றண்டிலே வாணிகத்தின் பொருட்டு நமது நாட்டுக்கு வந்த போர்ச்சுகீசியரும் அவருக்குப் பின்வந்த வேறு ஐரோப்பிய வணிகக் குழுவினரும் தங்களுடன் கிறிஸ்துவப் பாதிரி மார்களை அழைத்து வந்து நமது நாட்டில் கிறிஸ்துமதப் பிரசாரம் செய்து மக்களில் பலரைக் கிறிஸ்தவராக்கினார்கள். ஆனால், 19-ஆம் நூற்றண்டில் முந்திய நூற்றண்டுகளைவிட அதிகமாகக் கிறிஸ்துவப் பாதிரிமார் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் இருந்து வந்து நமது நாட்டு மக்களைக் கிறிஸ்துவராக மதம் மாற்றினார்கள். அவ்வாறு மதம் மாறிய மக்களுக்கு மதசம்பந்தமான பல தமிழ்நூல்களை முக்கியமாக வசன நூல்களை அவர்கள் எழுதினார்கள். அவர்களைப்போலவே இஸ்லாமியரான முகம்மதியர்களும் அந்த நூற்றண்டிலே தமது மதசம்பந்தமான நூல்களைத் தமிழில் வெளியிட்டார்கள். இவர்கள் செயலைக் கண்ட இந்துக்களாகிய சைவ வைணவர்கள் விழித்துக் கொண்டு தாங்களும் தங்கள் மதசம்பந்தமான நூல்களைத் தமிழில் எழுதி வெளியிட்டார்கள். முக்கியமாக வசன நூல்களே எவளிவந்தன. எனவே, சமயச் சார்பாகச் சென்ற பத்தொன்பதாம் நூற்றண்டிலே பல புதிய இலக்கிய நூல்கள், முக்கியமாக வசன இலக்கியங்கள் தோன்றி வளர்ந்தன. இதற்கு முந்திய நூற்றாண்டுகளில் தமிழில் வசன நூல்கள் பெரும்பாலும் இல்லை என்றே கூறலாம். அச்சியந்திரம்: பத்தொன்பதாம் நூற்றாண்டிலே தமிழ் இலக்கிய வளர்ச்சிக்குப் பேருதவியாக இருந்தவை அச்சியந்திரங்களாகும். கி.பி. பதினாறாம் நூற்றண்டிலேயே அச்சியந்திரங்கள் நமது நாட்டுக்கு வந்துவிட்டன என்பது உண்மையே, ஆனால், அவையெல்லாம் கிறிஸ்துவப் பாதிரிமாரிடத்திலும் ஐரோப்பிய வணிகக் “கும்பினி” யாரிடத்திலும் இருந்தன. அவர்கள் சில சிறிஸ்துவ நூல்களைமட்டும் தமிழில் அச்சிட்டார்களே தவிர, தமிழ் இலக்கிய நூல்களை அச்சிடவில்லை. அக்காலத்தில் சுதேசிகள் அச்சியந்திரம் அமைக்க வாய்ப்பில்லாமல் இருந்தார்கள். கி.பி. 19-ஆம் நூற்றண்டிலேதான் நமது நாட்டவர் அச்சியந்திரம் அமைக்கும் உரிமை பெற்றனர். கி.பி. 1835-க்குப் பிறகுதான் நம்மவர் அச்சியந்திரங்களை அமைந்து “எழுதா எழுத்தினால்” அச்சுப் புத்தகங்களை அச்சிடத் தொடங்கினார்கள். இந் நூற்றாண்டில்தான் நெடுங்காலமாக ஏட்டுச்சுவடியாகக் கிடந்த பழைய தமிழ் நூல்களும் புதிய தமிழ் நூல்களும் அச்சிடப்பட்டு வெளி வரலாயின. அச்சுப் புத்தகம் வெளிப்பட்டு ஏழை எளியவரும் சொற்பச் செலவில் புத்தகம் வாங்கிப் படிக்க வாய்ப்பு ஏற்பட்டபடியால், மக்களிடத்தில் கல்வி பரவுவதற்கு வாய்ப்பு உண்டாயிற்று. இந்த நூற்றண்டுக்கு முன்பு இவ்வித நல்ல வாய்ப்பு பொது மக்களுக்கு ஏற்படவில்லை. அக்காலத்தில் அதிகப் பொருள் செலவு செய்து பல நாட்களாக உழைத்து எழுதி ஓர் எட்டுச் சுவடியைப் பெறவேண்டும். அப்படிப் பெறப் பொருள் வசதியுள்ளவர்களுக்குத் தான் முடியும். அச்சியந்திரம் வந்தபிறகு சொற்ப காலத்தில் சொற்ப விலையில் ஆயிரக்கணக்கான அழகுள்ள அச்சுப் புத்தகங்களை யுண்டாக்க முடிந்தபோது, ஏழை எளியவரும் புத்தகம் வாங்கிப் படிக்கும் நிலை ஏற்பட்டது. இந்நிலை மக்கள் கல்வி கற்பதற்குப் பேருதவியாக இருந்தது. இதனால், தமிழ் இலக்கியம் வளம் பெறுவதாயிற்று. வீரமாமுனிவர் இயற்றிய சதுரகராதி என்னும் நூலை 1835-ஆம் ஆண்டுக்கு முன்பு, ஒலைச்சுவடிப் பிரதியை 10 பவுன் (ஏறக்குறைய 150 ரூபா) கொடுத்து வாங்கியதாகப் பெர்சிவல் ஐயர்1 தம்மிடம் கூறியதாகவும், அதே சதுரகராதி அச்சுப் புத்தகமாக வெளிவந்தபோது பிரதிஒன்று 2½ ஷில்லிங்கு (ஏறக்குயை 2 ரூபா)க்குக் கிடைத்ததாகவும் 1865-ஆம் ஆண்டில் மர்தாக்கு2 என்பவர் எழுதியிருக்கிறார். இதனாலே, ஏட்டுச் சுவடிகள் அதிக விலையுள்ளவை என்பதையும் அச்சுப்புத்தகங்கள் மலிவான விலையுள்ளவை என்பதையும் நன்கு அறியலாம். அச்சுப் புத்தகங்கள் கிடைக்கிற இந்தக் காலத்திலே அச்சுப் புத்தகத்தின் அருமை பெருமையை நாம் நன்கு உணர வில்லை. அதிகப் பொருள் கொடுத்து, பிரிப்பதற்கும் படிப்பதற்கும் துன்பமாக உள்ள ஏட்டுச் சுவடியை வாங்கியவர்களுக்கு அல்லவா அச்சுப்புத்தகத்தின் அருமை பெருமைகள் தெரியும்? நிழலின் அருமை வெயிலிலே சென்றவர்களுக்குத்தானே தெரியுமே?. அச்சியந்திரம் ஏற்பட்ட பத்தொன்பதாம் நூற்றாண்டிலேதான் நமது நாட்டில் செய்தித் தாள்களும், வார இதழ், திங்கள் இதழ் முதலிய வெளியீடுகளும் தோன்றி மக்களிடம் அறிவு வளர்ச்சியைப் பரப்பின. சென்ற நூற்றாண்டிலே அச்சியந்திரம் வராமல், இன்னும் ஒரு நூற்றாண்டுக்குப் பிறகு வந்திருக்குமானால் இப்பொழுது நமக்குக் கிடைத்துள்ள பல பழைய இலக்கிய நூல்கள் நமக்குக் கிடைக்காமலே அழிந்து போயிருக்கும். பத்தொன்பதாம் நூற்றாண்டுக்கு முந்தியே, ஒன்றிரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பு அச்சியந்திரம் நம்மவரிடம் வந்திருக்குமானால், இப்போது, மறைந்து போய்விட்ட பல பழைய இலக்கிய நூல்கள் நமக்குக் கிடைத்திருக்கும்! பத்தொன்பதாம் நூற்றாண்டிலே அச்சியந்திரம் கல்வி வளர்ச்சிக்கும் இலக்கிய வளர்ச்சிக்கும் பேருதவியாக இருந்தது என்பதில் சிறிதும் ஐயமில்லை. 19-ஆம் நூற்றாண்டில் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு மேற்கூறிய சூழ்நிலைகள் எல்லாம் பெருந்துணையாக இருந்தன. இந்தச் சூழ்நிலைகள் அல்லாமல் வேறு சில சூழ் நிலைகளும் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்குத் துணையாக இருந்தன. அவற்றையும் தொடர்ந்து கூறுவோம். சென்னைக் கல்விச் சங்கம் ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனி அரசாண்ட காலத்தில் சென்னைப் பட்டினத்தில் சென்னைக் கல்விச் சங்கம் நிறுவப் பட்டது. ஆங்கில மொழியில் இந்தச் சங்கம் The College of Fort St. George என்று பெயர் பெற்றிருந்தது. 1812-ஆம் ஆண்டில் நிறுவப் பட்ட இந்தச் சங்கம் 1820 முதல் நன்றாக அலுவல் செய்யத் தொடங்கிற்று. முப்பது ஆண்டுகளுக்கு அதிகமாக அலுவல் புரிந்த இந்தச் சங்கம் 1854-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 21-ஆம் தேதி மூடப்பட்டது. அரசாங்க ஊழியம் செய்வதன் பொருட்டு இங்கிலாந்து தேசத்திலிருந்து நமது நாட்டுக்கு வந்த ஆங்கிலேயர் இந்நாட்டு மொழிகளில் பயிற்சி பெறுவதற்காக இந்தச் சங்கம் அமைக்கப்பட்டது. அக்காலத்தில் அமைந்திருந்த சென்னை மாகாணத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம் முதலிய மொழிகள் பேசப்பட்ட நாடுகள் அடங்கியிருந்தன. இம்மொழிகள் வழங்கும் நாடுகளில் அரசாங்க உத்தியோகஸ்தராக இருக்கும் ஆங்கிலேய உயர்தர அதிகாரிகள் ஒரளவு இந்த மொழிகளை அறிந்திருக்க வேண்டும் என்றிருந்த படியால், அவர்கள் இந்த மொழிகளைக் கற்பதற்கு வாய்ப்பாக இச்சங்கம் அரசாங்கத்தாரால் நிறுவப்பட்டது. இச்சங்கத்தின் சார்பில் அச்சியந்திர சாலையும், புத்தகவிற்பனை நிலையமும், நூல் நிலயமும் அமைந்திருந்தன. கர்னல் மக்கன்ஸி அவர்கள் தொகுத்து வைத்திருந்த ஒலைச்சுவடி நூல்கள் இந்தச் சங்கத்தின் பொறுப்பில் சிலகாலம் வைக்கப்பட்டிருந்தன. ஆங்கிலேய உத்தியோகஸ்தர் தமிழ் தெலுங்கு, கன்னடம் முதலிய மொழிகளைக் கற்பதற்காக இந்தச் சங்கம் நிறுவப்பட்டதென்று சொன்னோம். இந்த மொழிகளைக் கற்பிப்பதற்காக ‘முனிஷி’ என்னும் பெயருள்ள ஆசிரியர்கள் இச்சங்கத்தில் இருந்தார்கள். இந்தச் சங்கத்தின் சார்பில் அவ்வப்போது நடந்துவந்த நாட்டுமொழிப் பரீட்சைகளில் தேர்ச்சி பெற்றவர்களின் பெயர் அரசாங்கத்துக் ‘கெஜட்’டில் வெளியிடப்பட்டன. அந்தந்த வட்டார மொழிகளில் தேர்ச்சி பெற்றவர்களுக்குத்தான் சம்பள உயர்வு கிடைத்தது. ஆகவே, ஆங்கிலேய உத்தியோகஸ்தர் இந்த மொழிகளை முயன்று கற்று வந்தார்கள். சென்னையில் கலெக்டராக இருந்தவரும் தமிழ்அறிந்த வருமான எல்லீஸ் துரையும், கர்னல் மக்கன்ஸி துரையும் இச்சங்கத்தை நிறுவிய முதன்மையாளர்கள். சிதம்பர உபாத்தியாயர் என்றும் சிதம்பர பண்டாரம் என்றும் பெயருள்ள வித்துவான் இச்சங்கத்தின் தலைமைத் தமிழாசிரியராக இருந்தார். இவர் 1832-ஆம் ஆண்டுக்கு முன்னரே காலமானார். பிறகு, தாண்டவராய முதலியார் அவர்கள் இதன் தலைமைத் தமிழாசிரியர் ஆனார். சிறந்த தமிழ்ப் புலவர்களான முத்துசாமி பிள்ளை, புதுவை நயனப்ப முதலியார், தஞ்சை சரபோஜி அரசரின் அவைப் புலவராக இருந்த கொட்டையூர் சிவக்கொழுந்து தேசிகர், மதுரைக் கந்தசாமிப் புலவர் முதலியோரும் இச்சங்கத்தின் தமிழாசிரியர்களாக இருந்தார்கள். கொற்றமங்கலம் இராமசுவாமி பிள்ளை இச்சங்கத்தின் நூல்நிலையத் தலைவராக இருந்தார். இவர்களில் முத்துசாமி பிள்ளையவர்கள் கல்விச் சங்கத்தின் மேற்பார்வையாளராக இருந்தார். இச்சங்கத்தின் தலைவராக இருந்த எல்லிஸ் துரை அவர்கள் விரும்பியபடி, பிள்ளையவர்கள் தமிழ் நாடெங்கும் சுற்றுப் பிரயாணம் செய்து வீரமாமுனிவர் இயற்றிய நூல்களை - அக்காலத்தில் அந்நூல்கள் அச்சிடப்படாமல் ஏட்டுச் சுவடியாக இருந்தன - தேடிச் சேர்த்துக்கொண்டு வந்தார். வீரமா முனிவர் இயற்றிய நூல்களைத் தேடிக்கொண்டு வந்ததல்லாமல் அவருடைய வாழ்க்கை வரலாற்றினைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் பிள்ளையவர்கள் எழுதி அச்சிட்டார்கள். இச்சங்கம் இருந்த அதே காலத்தில் இங்கிலாந்து தேசத்தில் ஹலிபரி1 என்னும் ஊரில் இது போன்ற கல்வி நிலையம் ஒன்று நிறுவப்பட்டிருந்தது. அந்த நிலையத்தின் பெயர் ‘கனம் பொருந்திய கிழக்கிந்திய கம்பெனியின் கல்லூரி’2 என்பது. அரசாங்க ஊழியம் செய்வதற்காக நமது நாட்டுக்கு வந்த ஆங்கிலேயர் - அந்தக் கல்லூரியில் நமது தேச மொழிகளில் ஒன்றைக் கற்றுப் பிறகு நமது தேசத்துக்கு வந்தார்கள். அந்தக் கல்லூரியில் கிழக்கு நாட்டு மொழிகளின் உதவிப் பேராசிரியராக இருந்தவர் ராபர்ட் அண்டர்சன்3 என்பவர். இவர் சென்னை மாகாணத்தில் அரசாங்க உத்தியோகஸ் தராக இருந்து, உடல்நலம் குன்றிய காரணத்தால், 1819-ஆம் ஆண்டில் இங்கிலாந்து சென்று அந்தக் கல்லூரியில் ஆசிரியராக அமர்ந்தார். அவர் அந்தக் கல்லூரியில் தமிழ் பயின்ற ஆங்கில மாணவர் களுக்காகத் தமிழ் இலக்கண நூல் ஒன்றை எழுதி 1821-ஆம் ஆண்டு வெளியிட்டார். அந்த இலக்கண நூலுக்கு Rudiments of Tamil Grammar என்பது பெயர். அந்த இலக்கண நூல் வீரமா முனிவர் எழுதிய செந்தமிழ் இலக்கணம், கொடுந்தமிழ் இலக்கணம் என்னும் நூல்களையும் எல்லிஸ் துரையவர்கள் ஆங்கிலத்தில் எழுதிய திருக்குறள் மொழிபெயர்ப்பையும் துணையாகக்கொண்டு எழுதப்பட்டது. அக்காலத்தில் ஆங்கிலேய உத்தியோகஸ்தர் தமிழ், தெலுங்கு, கன்னடம், உருது முதலிய மொழிகளைக் கற்றுப் பரீட்சையில் தேறிச் சம்பள உயர்வு பெற்றனர். சென்னைக் கல்விச் சங்கத்திலே ஆங்கிலேயே உத்தியோகஸ்தர் பலர் தமிழ்மொழி பயின்றார்கள். இந்தக் கல்விச் சங்கம் பரிட்சைகளை நடத்தியதோடு புத்தகங்களை எழுதியும் மொழிபெயர்த்தும் அச்சிட்டது. 1854-ஆம் ஆண்டில் இந்தச் சங்கம் எடுபட்டபோது, இச்சங்கத்தின் முக்கிய பணியாகிய தேச பாஷைப் பரீட்சைகளை நடத்தும் பொறுப்பு Board of Examiners என்னும் குழுவிடம் ஒப்படைக்கப் பட்டது. சென்னைக் கல்விச் சங்கம் சில தமிழ் நூல்களையும் அச்சிட்டு வெளிப்படுத்தியது. இச்சங்கம் அச்சிட்டு வெளியிட்ட தமிழ் நூல்களின் பெயர்களை, நான் அறிந்த வரையில், கீழே தருகிறேன். பஞ்ச தந்திரக் கதை: இதன் முகப்புப் பக்கத்தில் இவ்வாறு அச்சிடப்பட்டிருக்கிறது. ‘இஃது தமிழ்த் தலைமைப் புலமை நடாத்தும் தாண்டவராய முதலியார் மொழி பெயர்த்த பஞ்சதந்திரக் கதை.’ “சாலீவாகன சக வருடம் 17474 -க்கு மேற் செல்லா நின்ற விய வருடத்திற்குச் சரியான கிரீஸ்து 18264-ஆம் வருடத்திற் சென்னைக் கல்விச் சங்கத் தச்சுட் பதித்தது.” இந்நூலின் பாயிரம் கீழ்க்கண்டவாறு எழுதப்பட்டிருக்கிறது:- “தமிழ் கற்கப் புக்கோர் தமிழிலெழுதி வழங்குகின்ற பஞ்சதந்திரக் கதையைக் கற்கப் புகுந்தாற் குளிக்கப்புக்கோர் சேற்றைப் பூசிக்கொண்டாற் போல வழுக்களையே கற்றுத் தடுமாற்ற முறுதலால், சென்னைச் சங்கத்துத் தலைவராகிய ஸ்ரீ. ரிச்சர்டுக் கிளர்க்குத் துரையவர்கள் உத்தரவினால், மஹா ராஷ்டிரத்தி லச்சுப்படுத்தி யிருக்கின்ற பஞ்சதந்திரக் கதையைத் தமிழின் மொழி பெயர்த்துச் சொற்பொருளழகுறப் பலவிடத்துச் சில கூட்டியுங் கற்போருலக நடையுஞ் சில செய்யுணடையுமான தமிழ் நண்குணரவுஞ் சுவையுற விம்மொழி பெயர்ப்புப் பஞ்சந்திரக் கதை, சாலீவாகன சக வருடம் 17464-க்கு மேற் செல்லா நின்ற பார்த்திவ வருடத்துக்குச் சரியான கிரீஸ்து 18254-ஆம் ஆண்டு செய்து முற்றுப் பெற்றது.” கதா மஞ்சரி: 1826-இல் பதிக்கப்பட்டது. இதன் முகப்புப் பக்கம் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது. “கதா மஞ்சரி. சென்னைக் கல்விச் சங்கத்துத் தமிழ்த் தலைமைப் புலமைநடாத்தும் தாண்டவராயமுதலியாரால் தொகுத்து சாலிவாகன சக வருடம் 17484-க்கு மேற் செல்லா நின்ற விய வருடத்திற்குச் சரியான கிரீஸ்து 18264-ஆம் வருடத்தின் மேற் சொன்ன கல்விச் சங்கத் தச்சு பதித்தது.” இந்நூலின் பாயிரம் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது:- “ஸ்ரீ. ரிச்சர்ட்டுக் கிளார்க்குத் துரையவர்கள் சென்னைக் கல்விச் சங்கத்திற் றலைவராயிருந்த காலத்தில், தமிழ்ப் படிப்போர் தொடக்கத்திற் படிக்கத் தக்கதோர் கதைத் திரட்டுவாயென் றேவ மேற்கொண்டு சில கதைகளைச் சந்தி பிரித்தும் புணர்த்தும் பல கதைகளையவ்வா றின்றி யேற்றவாறு சிலவிடத்துச் சந்தி புணராமலும் பலவிடத்துப் புணர்த்துங் கதாமஞ்சரியென்னும் பெயர்தந் திவ்வாறிக் கதை தாண்டவராய முதலியாராற் றொகுக்கப்பட்டது.” மிருதி சந்திரிகை: விவகார சார சங்கிரகம். இதுவும் 1826-இல் அச்சிடப்பட்டது. இதன் முகப்புப் பக்கம் இது: “தரும நூல். மிருதி சந்திரிகை. விவகார சார சங்கிரகம். சென்னைக் கல்விச் சங்கத்திலிருக்கும் மதுரைக் கந்தசாமிப் புலவரால் செய்யப்பட்டது.” “இஃது, சாலிவாகன வருஷம் 1748-வது பார்த்திவ வருஷத்தில் மேற்படி கல்விச் சங்கத்து அச்சிற் பதிக்கப்பட்டது. A.D. 1826. S.S.1748.” தமிழ் ஹரிச்சுவடி: 1827-இல் அச்சிடப்பட்டது. இதன் முகப்புப் பக்கம் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது. “தமிழ் ஹரிச்சுவடி, ஆறாவது, பன்முகாண்டம். இந்த தமிழ் பாஷையில் திருத்தமான இலக்கண ஞானம் சம்பாதிக்கிறதில் தமிழ் மாணாக்கர்களுக்கு உதவ ஏற்படுத்திய கண்டமாலையில் ஒன்று.” “இது சென்னைக் கல்விச் சங்கத்து செக்கிரட்டேரி கேப்டன் ஹென்றி ஹார்க்னெஸ் துரையவர்களாலும் மேற்படி சங்கத்தில் தமிழ்ப்புலவர் திருவேங்கடாசல முதலியாராலும் செய்யப்பட்டது. சென்னபட்டணம் கல்வி சங்கத்து அச்சில் பதிப்பிக்கப்பட்டது. கிரிஸ்து ஆண்டு 18274. சாலிவாஹன சகாப்தம். 1749.”4 கீழ்க்கண்ட நூல்களும் இந்தச் சங்கத்தில் அச்சிடப்பட்டன. எந்த ஆண்டில் அச்சிடப்பட்டன என்பது தெரியவில்லை. ஆனால், 1832-க்கு முன்பு அச்சிடப்பட்டன என்பது தெரிகின்றன. செந்தமிழ் இலக்கணம்: இது, பெஸ்கி என்னும் வீரமா முனிவர் இலத்தீன் மொழியில் எழுதிய தமிழ் இலக்கணத்தைப் பாபிங்டன் துரையவர்களால் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அச்சிடப்பட்டது. வீரமாமுனிவர் இலத்தீன் மொழியில் எழுதிய தமிழ் இலக்கணமும் இலத்தீன் மொழியிலேயே அச்சிடப்பட்டது. வால்மீகி இராமாயணம்: உத்தரக்காண்டம், சென்னை கல்விச் சங்கத்தின் தலைமைத் தமிழாசிரியராக இருந்த சிதம்பர வாத்தியார் அவர்களால் மொழி பெயர்க்கப்பட்டது. நீதிநெறி விளக்கம்: குமரகுருபர சுவாமிகள் இயற்றிய இந்நூல். மதராஸ் சிவில் செர்விஸ் உத்தியோகஸ்தராக இருந்த கனம் ஸ்டோக்ஸ்5 அவர்கள் எழுதிய ஆங்கில மொழி பெயர்ப்புடன் அச்சிடப்பட்டது. திருவள்ளுவர் குறள், நாலடி நானூறு: மூலம் மட்டும் இதில் அச்சிடப்பட்டன. இலக்கண வினாவிடை: கல்விச் சங்கத்தின் தலைமைத் தமிழாசிரியராக இருந்த தாண்டவராய முதலியார் இயற்றியது. பரமார்த்த குருகதை: வீரமாமுனிவர் எழுதிய இக்கதை பாபிங்டன் துரை அச்சிட்டது. எல்லிஸ் குறள்: எல்லிஸ் துரையவர்கள் ஆங்கிலத்தில் விளக்கவுரை எழுதி அச்சிட்ட நூல். ஒரு பத்திரத் திரட்டு: ஆன்றியு ரோபர்ட்சன்6 என்பவரால் 1839-இல் எழுதி அச்சிடப்பட்ட நூல். இதில் கதைகள், மனு எழுத வேண்டிய முறைகள் முதலியன கூறப்பட்டிருக்கின்றன. தமிழில் வழங்கிய அரபுச் சொற்கள், பாரசீக மொழிச் சொற்கள், இந்துஸ்தானி சொற்கள் முதலியவைகளைக் கூறுகிறார். கையெழுத்துச்சுவடி நூல்நிலையம் சென்னை அரசாங்கத்துக் கீழ்நாட்டுக் கை யெழுத்துச்சுவடி நூல் நிலையம்1 சென்னப் பட்டினத்தில் இருப்பது பலரும் அறிந்ததே. இந்த நூல் நிலையம் 19-ஆம் நூற்றாண்டில் நிறுவப்பட்டது. இந் நிலையத்தில் தமிழ்ச் சுவடிகளும் இருக்கிறபடியினாலே, இதன் வரலாற்றை அறிவது நலமாகும். இந்த நிலையத்தின் ஏட்டுச் சுவடிகளை முதன் முதலாகத் தொகுத்தவர் கர்னல் காலின் மெக்கன்ஸி என்னும் ஆங்கிலேயர். காலின் மெக்கன்ஸி 1753-ஆம் ஆண்டில் இஸ்காத்லாந்து தேசத்தில் பிறந்தவர். கணித சாத்திரத்தை ஆழ்ந்து பயின்றவர். 1782-ஆம் ஆண்டில் ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனியில் இஞ்சினியர் என்னும் பொறியியல் துறையில் உத்தியோகம் ஏற்றுச் சென்னைக்கு வந்தார். சென்னையிலும் பிறகு இலங்கை, சாவகத்தீவு என்னும் இடங்களிலும் அலுவல் செய்தார். மீண்டும் சென்னைக்கு வந்தார், 1818-ஆம் ஆண்டு சர்வேயர் ஜெனரல் என்னும் உயர்ந்த உத்தியோகம் பெற்றுக் கல்கத்தாவுக்குச் சென்றார். அங்குத் தமது அறுபத்தெட்டாவது வயதில் 1821-இல் காலமானார். இவர் சென்னையில் அலுவல் செய்தபோது தெற்கே கன்னியாகுமரி முதல் வடக்கே கிருஷ்ணா நதிவரையில் தமது உத்தியோக அலுவலின் பொருட்டு அடிக்கடி சுற்றுப் பிராயணம் செய்தார். இந்தப் பிரயாண வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு, தாம் சொல்லும் இடங்களிலுள்ள ஏட்டுச் சுவடி நூல்களை வாங்கித் தொகுத்தார். இவ்வாறு நமது நாட்டு இலக்கியம், சரித்திரம், பூகோளசாத்திரம், வைத்தியம், புராணம் முதலிய நூல்களின் சுவடிகளைச் சேர்த்துத் தொகுத்தார். ஏட்டுச் சுவடிகளைச் சேகரிப்பதற்கும் சாசனங்களைப் பிரதி எழுதுவதற்கும் சிலரைச் சம்பளங்கொடுத்து அமர்த்தியிருந்தார். இவர் தொகுத்த ஏட்டுச் சுவடிகள் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், மராத்தி, அரபி, பாரசீகம், சமஸ்கிருதம் முதலிய மொழிகளில் இருந்தன. இவர் கல்கத்தாவுக்குச் சென்றபோது, இச் சுவடிகளையும் தம்முடன் கொண்டு போனார். கொண்டுபோய் இந் நூல்களுக்குப் பட்டியல் எழுதத் தொடங்கினார். ஆனால், எழுதி முடிப்பதற்கு முன்னரே காலமானார். மெக்கன்ஸி காலமான பிறகு இவருடைய ஏட்டுச் சுவடிகளை இவருடைய மனைவியரிடமிருந்து அரசாங்கத்தார் விலை கொடுத்து வாங்கினார்கள். அக்காலத்தில் கவர்னர் ஜெனரலாக இருந்த ஹேஸ்டிங்ஸ் பிரபு, கிழக்கிந்தியக் கம்பெனி டைரக்டர்களின் அனுமதிபெற்று இந்தச் சுவடிகளைப் பத்தாயிரம் பவுன் விலை கொடுத்து வாங்கிக் கல்கத்தாவிலிருந்த ஆசிய சங்கத்தாரிடம்2 ஒப்படைத்தார். இந்த ஏட்டுச் சுவடிகளில் தென் இந்திய மொழிகளான தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்னும் மொழிகளில் உள்ள சுவடிகள் 1828-ஆம் ஆண்டு சென்னைக் கல்விச் சங்கத்துக்கு அனுப்பப்பட்டு, அச்சங்கத்தின் புத்தக சாலையில் வைக்கப்பட்டன. இங்கு இந் நூல்களுக்குப் பட்டியல் விவரம் எழுதப்படாமலே இருந்தன. சென்னைக் கல்விச் சங்கத்தில் உபயோகப்படுத்தப்படாமல் கிடந்த இச் சுவடிகளைத் தம்மிடம் சேர்ப்பிக்கும்படி சென்னை இலக்கியச் சங்கத்தார்3 அரசாங்கத்தாரைக் கேட்டுக் கொண்டார்கள். இச்சங்கத்தின் வேண்டுகோளின்படி சென்னைக் கல்விச் சங்கத்தி லிருந்த ஏட்டுச்சுவடிகளை 1830-ஆம் ஆண்டு அரசாங்கத்தார் சென்னை இலக்கியச் சங்கத்திடம் சேர்ப்பித்தனர். இங்கிலாந்திலே ஈஸ்ட் இந்தியா ஹவுஸ்4 என்னும் நிலையத் திலும் ஏட்டுச் சுவடிகள் இருந்தன. அச்சுவடிகளில் தமிழ் தெலுங்கு கன்னடம் முதலிய தென் இந்திய மொழிகளின் சுவடிகள் பயன்படுத்தப்படாமல் வாளா விருந்தன. பயன்படுத்தப் படா மலிருந்த அந்தச் சுவடிகளையும் சென்னையில் உள்ள மெக்கன்ஸி தொகுத்த ஏட்டுச் சுவடிகளுடன் சேர்த்துவிடவேண்டும் என்று சென்னை இலக்கியச் சங்கம் 1843-ஆம் ஆண்டில் அரசாங்கத்தாரைக் கேட்டுக்கொண்டது. இச்சங்கத்தின் வேண்டுகோளின்படி, அரசாங்கத்தார் அங்கிருந்த ஏட்டுச் சுவடிகளை 1845-ஆம் ஆண்டு “டியூக் ஆவ் கார்ன்வால்” என்னும் கப்பலில் ஏற்றிச் சென்னை இலக்கியச் சங்கத்துக்கு அனுப்பினார்கள். 1847-ஆம் ஆண்டில் சென்னை இலக்கியச் சங்கத்தினிடம் இருந்த ஏட்டுச் சுவடி நூல் நிலையத்தில் ஐந்து தொகுப்புகள் இருந்தன. அவை: 1. இந்தியா ஹவ்ஸிலிருந்து அனுப்பப்பட்ட சுவடிகள். இதில் டாக்டர் லைடனுடைய5 தொகுப்பும் அடங்கிருந்தது. 2. பிரௌன்6 என்பவருடைய தொகுப்பு. 3. கல்கத்தாவிலிருந்து வந்த மெக்கன்ஸியின் தொகுப்பு. 4. காலேஜின் (சென்னைக் கல்விச் சங்கம்) புத்தகாலயத் தொகுப்பு. 5. இலக்கியச் சங்கத்தின் தொகுப்பு. இலக்கியச் சங்கத்திலிருந்த ஏட்டுச்சுவடிகள் பிறகு சென்னைக் கல்விச் சங்கத்துக்கு மாற்றப்பட்டன. 1853-இல் இந்த ஏட்டுச் சுவடிகளுக்கு விளக்கமான பட்டியல் எழுதப்பட்டது. பட்டியலை எழுதியவர் உல்லியம் தய்லர்7 என்பவர். பிறகு, சுவடிகள் சென்னை மாகாணக் கல்லூரி நூல் நிலையத்துடன் சேர்க்கப்பட்டு “அரசாங்கத்துக் கிழக்கு நாட்டுக் கையெழுத்து நூல் நிலையம்”8 என்னும் பெயர் பெற்றது. 1867-இல் இந்த நூல் நிலையம் கல்வித்துறைத் தலைவர்9 பொறுப்பில் ஏற்பிக்கப்பட்டது. 1868-ஆம் ஆண்டு சென்னை மாகாணக் கல்லூரியின் சமஸ்கிருத ஆசிரியரிடம் இந்தப் புத்தகசாலையின் சில பொறுப்புகள் ஏற்பிக்கப்பட்டன. அவர் புதிய சமஸ்கிருத ஏட்டுச் சுவடிகளையும் தமிழ், தெலுங்கு, கன்னடம் முதலிய ஏட்டுச் சுவடிகளையும் சேகரிக்கவும், அவற்றிற்கு விளக்கமான பட்டியல் எழுதவும் கடமையளிக்கப்பட்டார். 1869-ஆம் ஆண்டு இப்புத்தக சாலையின் முழு ஆட்சிப் பொறுப்பும் மாகாணக் கல்லூரியின் சமஸ்கிருத ஆசிரியரிடம் ஒப்படைக்கப்பட்டது. 1873-ஆம் ஆண்டு இதன் தலைவர் குயூரேட்டர்10 என்னும் பெயருடன் பொறுப்பேற்றார். சாசன எழுத்து, பழம்பொருள் ஆய்வு (எபிகிறாபியும் ஆர்க்கியாலஜியும்) பழைய சாசன எழுத்துக்களின் ஆராய்ச்சியும் பழம் பொருள் களின் ஆராய்ச்சியும் அண்மைக் காலத்திலே மேல் நாடுகளில் புத்தம்புதிதாக ஏற்பட்ட சாத்திரக் கலைகளாகும். இவை பழைய எழுத்துச் சாசனங்களை ஆராய்வதும் பழைய கலை நாகரிகம் முதலியவைகளை ஆராய்வதும் ஆகும். இவ்வாராய்ச்சிகளினாலே பன்னூற்றாண்டுகளுக்கு முன்னமே மறைந்துபோன பல செய்திகளை அறியலாம். நமது நாட்டை அரசாண்ட ஆங்கிலேயர் இந்த ஆராய்ச்சிக் கலைகளை நமது நாட்டிலே சென்ற 19-ஆம் நூற்றாண் டிலே அமைத்தார்கள். இந்தக் கலைத் துறைகளை ஆராயும் இலாகா ஏற்பட்டபிறகு, நமது இந்திய நாட்டிலே பல நூற்றாண்டுகளாக மறைந்து சிடந்த பல சரித்திர உண்மைகள் புத்தம் புதிதாகக் கண்டு பிடிக்கப்பட்டன. இந்த இலாகாவினால் தமிழ் நாட்டுக்குப் பெரும் பயன் ஏற்பட்டிருக்கிறது. இந்த இலாகாவினால் ஏற்படும் நன்மைகளைப் பொதுஜனங்கள் இன்னும் நன்றாகத் தெரிந்துகொள்ளவில்லை. இவ்வாறு ஓர் இலாகா இருக்கிறது என்பதையே பலர் அறியாம லிருக்கின்றனர். மறைந்துபோன பழைய தமிழரின் கலை, நாகரிகம், சரித்திரம், பண்பாடு முதலியவற்றை அறிந்து கொள்ள இந்த ஆராய்ச்சித்துறை பேருதவியாக இருப்பதுடன் தமிழ் இலக்கியம் சம்பந்தமாகவும் பல செய்திகளைத் தெரிந்துகொள்ளப் பேருதவியாக இருக்கின்றது. சென்ற 19-ஆம் தூற்றாண்டிலே ஏற்படுத்தப்பட்ட இந்த இலாகாக்களின் வரலாற்றினைச் சுருக்கமாகக் கூறுவோம். ஆங்கிலேயக் கிழக்கு இந்தியக் கம்பெனியார் இந்தியா தேசத்துக்கு வந்து வாணிகம் செய்துகொண்டே சிறிது சிறிதாக நாட்டைக் கைப்பற்றி ஆட்சி செய்யத் தலைப்பட்டனர். ஆங்கில அரசாங்க ஊழியர்களாக இங்கிலாந்து தேசத்திலிருந்து பலர் இங்கு வந்தார்கள். அவர்களில் சர் வில்லியம் ஜோன்ஸ் என்பவரும் ஒருவர். இவர் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக நியமனம் பெற்றுக் கி.பி. 1783-ஆம் ஆண்டு கல்கத்தாவுக்கு வந்தார். இவர் வந்து அலுவல் செய்யத் தொடங்கியபின், கிழக்கிந்திய நாடுகளின் கலைகளையும் இலக்கியங் களையும் ஆராய்ந்தறிய ஒரு நிலையத்தை ஏற்படுத்தவேண்டும் என்று கருதினார். அதன்படியே 1784-ஆம் ஆண்டு ஜனவரித் திங்களில் கல்கத்தால நகரத்தில் ஒரு கூட்டம் கூட்டப்பட்டு ஆசிய சங்கம்1 என்னும் பெயருடைய ஒரு சங்கம் ஏற்படுத்தப்பட்டது. இந்தச் சங்கத்தின் ஆதரவில் “ஆசிய நாட்டு ஆராய்ச்சிகள்2 என்னும் திங்கள் இதழ் ஆங்கிலத்தில் வெளியாயிற்று. பழைய கட்டடங்கள், பழைய சிற்பக்கலைகள், பழைய சாசனங்கள், பழைய நாணயங்கள், இந்திய மொழிகளின் இலக்கியங்கள் முதலியவற்றின் ஆராய்ச்சிக் கட்டுரைகள் இந்தத் திங்கள் இதழில் எழுதப்பட்டன. ஏறக்குறைய 2000 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய தேசத்தின் வடமேற்குப் பகுதிகளில் வழங்கிவந்த ‘கரோஷ்டி’ எழுத்து சாசனங்களும், இந்தியாவின் மற்றப்பகுதிகளில் வழங்கிவந்த “பிராஃமி” எழுத்துச் சாசனங்களும் அக்காலத்தில் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டன. ஆனால் அந்தச் சாசன எழுத்துக்களைப் படிக்க யாராலும் முடியவில்லை. மிகப் பழமைவாய்ந்த அந்த எழுத்துக்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன்னே மறைந்துபோக, புதிய புதிய எழுத்துக்கள் தோன்றி வழங்கி வந்தபடியினாலே, அப்பழைய எழுத்துக்கள் மறக்கப்பட்டு மறைந்துபோயின. ஆனால், கற்களில் எழுதிவைக்கப்பட்ட அந்தப் பழைய எழுத்துச் சாசனங்கள் அழியாமல் கிடந்தன. ஆனால், அந்தச் சாசன எழுத்துக்களைப் படிக்கத் தெரிந்தவர்கள் ஒருவரும் இலர். அந்த எழுத்துக்கள் பெரும் புதிராக இருந்தன. சில அறிஞர்கள் அந்தச் சாசன எழுத்துக்களைப் படிப்பதற்குத் திறவுகோலைக் காண முயன்றனர். இப்படி இருந்தபோது, மேற்படி ‘ஆசிய சங்கத்தின்’ செயலாள ராக இந்த ஜேம்ஸ் பிரின்ஸெப்3 அவர்கள், பலநாள் உழைத்து ஆராய்ந்து, பிராஃமி எழுத்துச் சாசனத்தைப் படிப்பதற்கு ஒரு திறவுகோலைக் கண்டு பிடித்தார். இந்தியாவின் வடமேற்குப் பகுதியில் மிகப் பழைய காலத்தில் வழங்கிவந்த நாணயங்களில் ஒருபக்கம் பிராஃமி எழுத்தும், மற்றொரு பக்கம் கிரேக்க எழுத்தும் எழுதப் பட்டிருந்தன. கிரேக்க எழுத்துக்களின் உதவியினால் அந்நாணயங் களில் இருந்த பிராஃமி எழுத்துக்களை இவர் வாசித்தார். இவ்வாறு சில பிராஃமி எழுத்துக்களின் ஒலிகளைத் தெரிந்து கொண்டு, பின்னர் மேலும் ஆராய்ந்து மற்றப் பிராஃமி எழுத்துக்களின் ஒலியையும் கண்டறிந்தார். இவ்வாறு மறைந்து மறக்கப்பட்டுக் கிடந்த பிராஃமி எழுத்துக்களைப் படிப்பதற்குத் திறவுகோல் கண்டுபிடிக்கப்பட்ட படியால், பிராஃமி எழுத்துச் சாசனங்கள் வாசித்துப் பொருள் அறியப் பட்டன. பிறகு இவ்வாறே கரோஷ்டி எழுத்தும் வாசிக்கப்பட்டன. இவ்வாறு அறிஞர்கள் ஊக்கத்தோடும் விடா முயற்சியுடனும் முயன்று திறவு கோலைக் கண்டுபிடிக்காம லிருந்தால், இந்தப் பழைய சாசனஎழுத்துக்கள் படிக்கப்படாமலே இருந்திருக்கும். இந்தச் சாசனங்கள் படிக்கப்பட்ட பிறகு. கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் அரசாண்ட அசோக சக்கரவர்த்தியின் காலத்துச் சரித்திரங்கள் அறியப் படலாயின. நிற்க அலெக்சாண்டர் கன்னிங்காம்4 அவர்கள், இந்திய அரசாங் கத்தில் உத்தியோகஸ்தராக இருந்தவர். இவர் தனிப்பட்ட முறையில், இந்தியப் பழம்பொருள் ஆராய்ச்சியையும் பழைய நாணயங்களைப் பற்றிய ஆராய்ச்சியையும் தமது பொழுது போக்காகக் கொண்டிருந் தார். இவர் 1848-ஆம் ஆண்டில் கல்கத்தா சங்கத்தின்திங்கள் இதழில்5 இந்தியாவில் ஆர்க்கியாலாஜி துறையை ஏற்படுத்துவது பற்றிக் கட்டுரை எழுதினார், அந்தக் கட்டுரையில், இந்தியதேசக் கலை, பண்பாடு, மதம் முதலியவற்றை அறிந்து சாசன ஆராய்ச்சி, பழைய நாணய ஆராய்ச்சி முதலியவற்றில் தேர்ச்சியுள்ள ஒருவரைப் பழைய கட்டடச் சின்னங்களைப் பாதுகாக்கும் உத்தியோகஸ்தராக நியமிக்க வேண்டும் என்று அவர் எழுதியிருந்தார். ஆனால், அக்காலத்திலிருந்த ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனி அரசாங்கம் இவருடைய யோசனையை ஏற்றுக் கொள்ளவில்லை. பிறகு, கம்பெனி ஆட்சியிலிருந்து இந்திய தேசஅரசாட்சி, இங்கிலாந்து தேசத்து மன்னர் ஆட்சிக்கு மாற்றப்பட்டபோது, கானிங்கு பிரபு இந்தியா தேசத்தின் முதலாவது அரசப் பிரதிநிதியாக வந்தார். அவர், சில அறிஞர்களின் வேண்டுகோளுக் கிணங்கி, வட இந்தியாவுக்கு மட்டும் ஆர்க்கியாலஜி இலாகாவை ஏற்படுத்தினார். ஆகவே, அலெக்சாண்டர் கன்னிங்காம் அவர்கள் இந்த இலாகாவின் உத்தியோகஸ்தராக 1862-ஆம் ஆண்டில், ‘ஆர்க்கியாலஜி சர்வேயர்’ ஆக நியமிக்கப்பட்டார். இவர் நான்கு ஆண்டு இந்த உத்தியோகத்தில் இருந்தார். பிறகு 1866-ஆம் ஆண்டு இந்த இலாகா மூடப்பட்டது. மேயோ பிரபு அரசப் பிரதிநிதியாக இருந்த காலத்தில் 1870-ஆம் ஆண்டில் மீண்டும் இந்த இலாகா தொடங்கப்பட்டு, அலெக்சாண்டர் கன்னிங்காம் அவர்களே இதன் தலைமை உத்தியோகஸ்தராக நியமிக்கப்பட்டார். இந்த இலாகா வட இந்தியாவுக்கு மட்டும் ஏற்பட்டிருந்தது. 1874-ஆம் ஆண்டில் இந்தியாவின் தென் பகுதிக்கும் ஆர்கியாலஜி இலாகா ஏற்பட்டது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் பிரிக்கப்பட்டிருந்த பம்பாய் மாகாணம் சென்னை மாகாணம் என்னும் இரண்டு மாகாணங்களுக்கும் இந்த இலாகா ஏற்பட்டிருந்தது. அஃதாவது மேற்கு இந்தியாவுக்கும் தென் இந்தியாவுக்கும் இந்த இலாகா அமைந்திருந்தது. எனவே, தமிழ் நாட்டுக்கு ஆர்க்கியாலஜி இலாகா ஏற்பட்டது. இந்த ஆண்டில் தான். இந்த இலாகாவின் தலைமை அலுவலாளர் ‘அரசாங்க ஆர்க்கியாலஜிகல் சர்வேயரும் அறிக்கையாளரும்’ என்று பெயர் பெற்றிருந்தார்.6 பிறகு 1878-ஆம் ஆண்டில் ‘புதைபொருள் உரிமைச்சட்டம்’7 ஏற்படுத்தப்பட்டது. வட இந்திய ஆர்க்கியாலஜி இலாகாவின் தலைவராக இருந்த அலெக்சாண்டர் கன்னிங்காம் அவர்கள் 1885-ஆம் ஆண்டில் அலுவலி லிருந்து விலகிக்கொண்டு ஒய்வு பெற்றுக்கொண்டார். இந்த ஆண்டிலே, வட இந்திய தென் இந்திய இலாக்காக்கள் இரண்டும் ஒன்றாக இணைக்கப்பட்டு இந்திய தேசம் முழுவதுக்கும் ஒரே ஆர்க்கியாலஜி இலாகா ஏற்படுத்தப்பட்டது. இந்த இலாகாவின் தலைவர், டைரக்டர் ஜெனரல் ஆஃப் ஆர்க்கியாலஜி8 என்று பெயர் பெற்றார். இந்த இலாகாவின் தலைவராக முதன் முதல் அலுவல் செய்தவர் டாக்டர் ஜேம்ஸ் பர்கஸ்9 என்பவர். இவர் காலத்தில், சாசன எழுத்துக்களை ஆராய்ந்து சாசனங்களை அச்சிடுவதற்கு எபிகிராபிஸ்டு என்னும் பெயருள்ள ஒரு சாசன ஆராய்ச்சியாளர் ஏற்படுத்தப்பட்டார். முதன் முதலாக சாசன எழுத்து ஆராய்ச்சியாளராக இருந்தவர் Dr. E. Hultzsch என்பவர். இவர் தென் இந்திய சாசன எழுத்து ஆராய்ச்சியில் தேர்ந்த நிபுணர். அன்றியும் வட மொழி, பாலி மொழி சாசன எழுத்து ஆராய்ச்சியிலும் வல்லவர். சென்ற 19-ஆம் நூற்றாண்டிலே தென் இந்திய சாசனங்கள், இந்திய சாசனங்கள், இந்தியப் பழஞ் செய்திகள்10 என்னும் பெயருள்ள வெளியீடுகள் வெளிவந்தன. இந்த வெளியீடுகளில் ஏனைய இந்திய மொழிகளின் சாசனங்களும் வரலாறுகளும் இடம் பெற்றது போலவே தமிழ்ச் சாசனங்களும் வரலாறுகளும் இடம் பெற்றுத் தமிழகத்தின் வரலாறு, கலை, நாகரிகம் முதலியவை ஆராயப் பெற்றன. தென் இந்திய சாசனங்கள் என்னும் சாசன வெளியீட்டின் முதல் தொகுதி 1890-ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. தமிழ், தெலுங்கு, கன்னடம் என்னும் மூன்று மொழிகளிலுள்ள பழைய சாசனங்கள் இவற்றில் இடம் பெற்றன. இவற்றை ஆராய்ந்து வெளியிட்டவர் மேற்கூறப்பட்ட Dr. E. Hultzsch ஆவர். ‘தென் இந்திய சாசனங்கள்’ என்னும் வெளியீடு இன்றும் தொடர்ந்து அவ்வப்போது வெளியிடப்படுகின்றன. இதுவரையில் பதின்மூன்று தொகுதிகள் வெளிவந்துள்ளன. பழையசாசன எழுத்துக்களைப் படி எடுத்து படித்து ஆராய்ந்து வெளியிடுவது எளிய காரியம் அன்று. ஏட்டுச் சுவடிகளை ஆராய்ந்து படித்து, படி எடுத்து அச்சுப் புத்தகமாக அச்சிடுவதில் என்னென்ன துன்பங்கள் உள்ளனவோ அத்தனைத் துன்பங்களும் சாசனங்களை ஆராய்ந்து அச்சிடுவதிலும் உள்ளன. இந்தத் துன்பங்களையும் இன்னல்களையும் Dr. E. Hultzsch அவர்கள், ‘தென் இந்திய சாசனங்கள்’ முதல் தொகுதியின் முகவுரையில் நன்கு விளக்கி எழுதியுள்ளார். அவர் எழுதியதன் தமிழாக்கத்தைக் கீழே தருகிறேன்:- “................பழைய காலத்துச் சாசனங்களை நன்றாகப் பதிப்பிப்பதற்குத் தேச பாஷைகளையும் வட மொழியையும் மேற்போக்காகக் கற்றுக்கொண்டால் போதுமானது என்ற எண்ணம் பொதுவாக எல்லோரிடத்திலும் இருந்து வருகிறது. ஆனால், இந்த வேலையைச் செய்வதற்கு அந்தந்த மொழிகளைப் பற்றிய தேர்ந்த அறிவும், ஐரோப்பிய முறைப்படி கற்ற மொழிநூல் ஆராய்ச்சியும் இலக்கிய ஞானமும் வேண்டியிருப்பதோடு, ‘சயன்ஸ்’ என்னும் சாத்திரங்களை அறிவதற்கு இன்றியமையாமல் வேண்டியிருக்கிற உண்மையைக் காண வேண்டும் என்னும் ஆசையும், பொறுமையோடு கூடிய அக்கறையும் விருப்பமும் இந்த ஆராய்ச்சிக்கும் வேண்டியதாக இருக்கின்றன. திரு வெங்கை யாவைப்11 போன்ற சுதேச இளைஞர்களான பல்கலைக்கழகப்பட்ட தாரிகள், கவனிக்கப்படாமல் இருக்கிற தென் இந்திய சாசன ஆராய்ச்சியைத் தாங்களும் மேற்கொண்டு ஆராய்வார்கள் என்று நம்பிக்கை கொள்வோமாக. “சாசனங்கள் ஏராளமாக உள்ளன. பல சிக்கல் உள்ளதும் விளங்காமலிருப்பதுமான சரித்திரச் செய்திகள் சிக்கறுக்கப்பட்டுத் தெளிவுபட வேண்டும். இந்தத் துறையில் தகுதி வாய்ந்தவர்கள் பலருக்கு இந்த ஆராய்ச்சியில் இடமிருக்கிறது. “தமிழ்ச் சாசனங்களைப் பதிப்பிக்கும்போது சில விஷயங் களைக் கவனிக்க வேண்டும். மூல சாசனத்திலே சில சொற்களின் எழுத்துக்கள் ஒரே விதமாக எழுதப்படாமலிருப்பதனாலே சாசனப் பதிப்பாளர் சரியான சொல்லையும் பிழையான சொல்லையும் விளக்கிக் காட்ட வேண்டியவராக இருக்கிறார். உதாரணமாக எடுத்துக் காட்டுவோம்: ந், ர் என்னும் எழுத்துக்கள் ன், ற் என்னும் எழுத்துக் களாக மாறுகின்றன. நெட்டெழுத்துக்களான ஏ, ஓ என்னும் எழுத்துக் களை எ, ஒ என்னும குற்றெழுத்துக்களிலிருந்து பிரித்து அறிந்து கொள்ள முடியவில்லை.12 இகர உகர நெட்டெழுத்துக்கள் மிக அருமையாகச் சாசனங்களில் உபயோகப் படுத்தப்பட்டுள்ளன. மெய் எழுத்துக்களின் மேல் இடவேண்டிய புள்ளிகள், இடப்படாமலிருக் கின்றன. மிக அருமையாக மட்டும் புள்ளிகள் இடப்பட்டுள்ளன.13 சில எழுத்துக்கள் உருவ அமைப்பு இன்ன எழுத்து என்று தெரிந்துகொள்ள முடியாதபடி எழுதப்பட்டுள்ளன. முக்கியமானது என்னும் எழுத்து. இந்த எழுத்து ஆகாரத்தைக் குறிக்கும் காலாகவும். ரகரமாகவும் ர் என்னும் மெய்யெழுத்தாகவும் இப்போதைத் தமிழ் எழுத்தில் காண்ப்படுகின்றது. கொ என்னும் எழுத்தைச் சாசனத்தில் கொ என்றும், கோ என்றும், கெர் என்றும், கேர் என்றும், கெர என்றும், கேர என்றும் வாசிக்கலாம். பழைய தமிழ் எழுத்துக்கள் தமிழரைக்கூடச் சில சமயங்களில் மயக்குகின்றன என்பதற்கு ஒர் உதாரணம் காட்டுவோம்: இராசேந்திர சோழ தேவரின் சாசனம் ஒன்றில் கொளா என்று எழுதப்பட்டிந்ததை ஒருவர் கொள்ள என்று எழுதினார்.14 இதன் சரியான வாசகம் கேரளர் என்பது. இராசேந்திர சோழ தேவரின் சிறப்புப் பெயர் கொபரகெசரிபனம் என்று சாசனத்தில் காணப்படுகிறது. கோபரகேசரிபன்ம என்று எழுதவும் படிக்கவும் படவேண்டிய இது கோபாகேசரி வர்ம என்று எழுதவும் படிக்கவும் படுகிறது. “தமிழ்ச் சாசன எழுத்துக்களின் இடையிடையே கிரந்த எழுத்துக்களும் சொற்களும் எழுதப்பட்டிருப்பதும் மற்றொரு விசித்திரமாகும்.” இதனால், சாசன எழுத்துக்களைப் பெயர்த்தெழுதுவோர் அடையும் துன்பங்கள், ஏட்டுச் சுவடிகளிலிருந்து அச்சுப் புத்தகமாக அச்சிடுவோர் அடைகிற துன்பங்களைப் போன்றதே என்பது தெரிகிறது. பழைய சாசனங்களை வெளியிடுவதன் நோக்கத்தை அதன் முதல் பதிப்பாசிரியராகிய Dr. E. Hultzsch அவர்கள் முதல் தொகுதியின் முகவுரையில் தெளிவாகக் கூறுகிறார். அது வருமாறு. “இந்தத் தொகுதியை ஆயத்தப்படுத்தியதன் நோக்கம்; சாசனத்தில் உள்ள சிறு குறிப்புகளையும் உள்ளது உள்ளபடியே தவறில்லாமல் சரியானபடி பெயர்த்தெழுதுவது ஒன்று. ஒவ்வொரு சாசனத்தையும் (ஆங்கிலத்தில்) மொழிபெயர்த்தெழுதுவது மட்டும் அல்லாமல், அவற்றிலிருக்கும் சரித்திரச் செய்திகளையெல்லாம் எடுத்து வேறு சான்றுகளுடன் ஒத்திட்டுப் பார்த்துத் தெளிவுபடுத்தி முடிவு காண்பதும், இவ்வாறு காணப்பட்ட முடிவைக்கொண்டு தென் இந்திய சரித்திரம் எழுத உதவி செய்வதும் இரண்டாவது நோக்கமாகும்.”15 இவர் எழுதியது போலவே, இந்தச் சாசனங்களை ஆராய்ச்சி செய்ததன்பயனாகத் தென்னிந்திய சரித்திரமும் தமிழ்நாட்டுச் சரித்திரமும் இப்போது நமக்குக் கிடைத்துள்ளன. முழுவதும் மறக்கப்பட்டு மறைந்து கிடந்த பல்லவ மன்னர் சரித்திரம் இப்போது பெருவாரியாகக் கிடைத்திருப்பதோடு பழைய காலத்துச் சேர சோழ பாண்டியர் குறுநில மன்னர் முதலியவர்களின் வரலாறுகளும் கிடைத்துள்ளன. இவை எல்லாம் சென்ற 19-ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட எபிகிராபி, ஆர்க்கியாலஜி இலாக்காக்களினால் நமக்குக் கிடைத்துள்ள நன்மைகளாகும். “இந்தியப் பழமை ஆராய்ச்சி”16 என்னும் ஆங்கிலத்திங்கள் இதழ் 1872-ஆம் ஆண்டு ஜனவரித் திங்களில் தொடங்கப்பட்டது. இதன் ஆசிரியரான டாக்டர் ஜேம்ஸ்பர்கஸ் அவர்கள் இதைத் தமது சொந்தப் பொறுப்பில் நடத்தினார். பிறகு உடல் நலம் இல்லாத காரணத்தினால் ஆசிரியர் பொறுப்பை இவர் விட்டபொழுது, 1885-ஆம் ஆண்டு ஜனவரித் திங்கள் முதல் டாக்டர் பிஃளீட்17 அவர்களும் காப்டன் டெம்பிள்18 அவர்களும் இதன் கூட்டாசிரியர்களாக இருந்து இதனை நடத்தினார்கள். 1892-ஆம் ஆண்டில்முன்னையவர் விலகிக்கொண்ட பிறகு பின்னையவர் இதன் ஆசிரியராக இருந்தார். “இந்தியப் பழமை ஆராய்ச்சி” என்னும் இதழ் வெளியிடப் பட்டதன் நோக்கம் என்னவென்றால் இந்தியத் தொல் பொருள் ஆராய்ச்சி, பூகோள ஆராய்ச்சி (பழைமையும் புதுமையும்), சரித்திர ஆராய்ச்சி, பழங்காசு ஆராய்ச்சி, மொழி இலக்கியம் நாட்டுப் பாடல்கள் முதலியவற்றின் ஆராய்ச்சி முதலிய வற்றைப் வெளியிடு வதாகும். இந்திய தேசத்துப் பழைய சாசனங்களை ஆராய்வதும் இதன் முக்கிய நோக்கமாகும். இந்த இதழ் நடந்துவந்த காலத்தில், 1888-ஆம் ஆண்டில் இந்திய அரசாங்கத்தார் இந்திய சாசனம்19 என்னும் இதழை வெளியிட விரும்பினார்கள். ஆகவே அரசாங்கத்தார், “இந்தியப் பழமை ஆராய்ச்சி” இதழாசிரியருடன் கலந்து யோசித்து அந்த இதழின் காலாண்டு இணைப்பு வெளியீடாக “இந்திய சாசன”த்தை வெளியிடு வதென்று முடிவு செய்தனர். அதன்படியே இது 1892-ஆம் ஆண்டுமுதல் வெளிவந்தது. இவ்வாறு “இந்திய சாசனம்” 1920-ஆம் ஆண்டு வரையில் நடந்த பிறகு, இதனை அரசாங்கத்தார் தமது சொந்தப் பொறுப்பில் ஏற்று நடத்தினார்கள். “இந்தியப் பழைமை ஆராய்ச்சி”, “இந்திய சாசனம்”, “தென் இந்திய சாசனங்கள்” என்னும் ஆங்கில வெளியீடுகளுக்கும் தமிழுக்கும் என்ன தொடர்பு உண்டு என்று சிலர் கருதக்கூடும். மேற்போக்காகப் பார்த்தால் இவற்றிற்கும் தமிழுக்கும் யாதொரு தொடர்பும் இல்லாதது போலத் தோன்றும். பழைய இந்திய நாட்டுச் சரித்திரம், கலை, நாகரிகம், பண்பாடு முதலியவற்றை அறிவதற்கு இந்த வெளியீடுகள் பெரிதும் பயன்பட்டது போலவே, தமிழ்நாட்டு வரலாறு, கலை, நாகரிகம், பண்பாடு முதலியவற்றை அறிவதற்கும் இந்த இதழ்கள் உதவியாக இருந்தன். இந்த இதழ்கள் வெளிவராமலிருந்தால் இவைகளையெல்லாம் நாம் அறிந்திருக்க முடியாது. உதாரணமாக, அசோக சக்கரவர்த்தி காலத்துக்கும் மொகலாய சக்கரவர்த்திகள் காலத்துக்கும் இடைப்பட்ட காலத்தில், இந்திய தேசத்து வரலாறு அறிய முடியாமல் அந்தக் காலத்தில் இருளடைந் திருந்தது. இந்த இதழ்கள் தோன்றிச் சாசனங்களையும் பழம் பொருள்களையும் ஆராய்ந்து வெளியிட்ட பிறகு, இருளில் மறைந்து கிடந்த உண்மைகளும் வரலாறுகளும் வெளிப்பட்டு, பழைய வரலாறுகள் எழுதப்பட்டன. அவ்வாறே தமிழ் நாட்டுச் சரித்திரம், கலை, பண்பாடு முதலிய செய்திகள் இருளில் மறைந்து கிடந்தவை, இந்த இதழ்கள் தோன்றி, சாசனங்களும் பழம் பொருள்களும் ஆராய்ந்து வெளியிடப்பட்ட பிறகு அவையெல்லாம் நமக்குத் தெரியவந்தன. மறைந்து சிடந்த அரசர் வரலாறு, சேர சோழ பாண்டியர் வரலாறு முதலியவை இந்த இதழ்கள் வெளிவந்த பிறகுதான் நமக்குத் தெரிய வந்தன. சென்ற 19-ஆம் நூற்றாண்டிலே இவை தமிழிலக்கிய வளர்ச்சிக்குப் பயன்படவில்லை யானாலும், இந்த 20-ஆம் நூற்றாண்டிலே இந்த இதழ்கள் தமிழ் ஆராய்ச்சி, தமிழ் நாட்டு வரலாற்றாராய்ச்சி முதலியவைகளுக்குப் பெரிதும் உதவியாக உள்ளன. மறைந்துபோன சேர, சோழ, பாண்டிய, பல்லவ அரசர்களின் வரலாறுகளை அறிவதற்கும், மறைந்து கிடந்த தமிழ்ச் சாசனங்களைப் படித்தறிவதற்கும் இந்த வெளியீடுகள் காரணமாக இருந்தன; இருக்கின்றன என்பதை நாம் மறக்க முடியாது. இன்னும் மறைந்து கிடக்கிற தமிழ்நாட்டுச் சாசனங்களையும் பழம்பொருள்களையும் கண்டுபிடித்து வெளிப்படுத்துமாறு ஆர்க்கியாலஜி, எபிகிறாபி இலாக்காக்களைத் தமிழர் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். எண்களின் வரிவடிவம் தொன்று தொட்டுத் தமிழில் எண்களுக்குத் தனி வரிவடி வங்கள் இருந்தன. தமிழ் எண்களின் வரி வடிவங்கள் இவை:- க, உ, ங, ச, ரு, சா, எ, அ, கூ, ய, ள, தொன்று தொட்டு வழங்கி வந்த இந்த வரி வடிவங்கள், சென்ற 19-ஆம் நூற்றாண்டிலே ஐரோப்பிய எண்களின் வரிவடிவங் களாக மாற்றப்பட்டன. கிறிஸ்து சமய மிஷனரிமார்கள் 19-ஆம் நூற்றாண்டிலே நமது நாட்டிலே, பாடசாலைகளை அமைத்து ஐரோப்பிய முறைப்படிப் பாடங்களைக் கற்பித்தார்கள். ஐரோப்பிய நாட்டு முறைப்படி அவர்கள் நடத்திய பாடசாலைகளில் இலக்கியப் பாடத்தோடு, பூகோள பாடம், சரித்திர பாடம், இயற்கைப் பொருட் பாடம் முதலிய பாடங்களையும் கற்பித்தார்கள். கணக்குப் பாடம் கற்பித்தபோது, பழைய தமிழ் எண்கள் எளிதாக எழுதுவதற்கு வாய்ப்பாக இல்லாத படியால், எளிதாக இருந்த ஐரோப்பிய எண்களைப் புகுத்தினார்கள். புகுத்தப்பட்ட ஐரோப்பிய எண்கள் எழுதுவதற்கு எளிதாக இருந்தபடியால் அந்த வரிவடிவையே மற்றவர்களும் ஏற்றுக் கொண்டார்கள். மிஷனரிமார் புகுத்திய ஐரோப்பிய எண்களின் வரிவடி வங்கள். 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 100, 1000 முதலியன. இந்த எண்களுக்கு அரபி எண்கள் என்பது பெயர். ஐரோப்பிய எண்கள் ஏன் அரபி எண்கள் என்று பெயர் பெற்றன? இந்தக் கேள்விக்கு விடை கூறவேண்டு மானால் ஒரு சரித்திர நிகழ்ச்சியையும் சொல்லித் தீரவேண்டும். அரபி எண்கள் என்று கூறப்படுகிற ஐரோப்பிய எண்கள் உண்மையில் ஐரோப்பிய எண்களும் அல்ல, அரபிய எண்களும் அல்ல. அவை பாரதநாட்டு எண்களே. பாரத நாட்டு எண்களை அராபியர் இங்கிருந்து கடனாகப் பெற்றுக்கொண்டு போனார்கள். பிறகு அராபியரிடமிருந்து ஐரோப்பியர் கடனாகப் பெற்றுக் கொண்டு போனார்கள். அவர்கள். அராபியர் இந்தியரிடமிருந்து அவ்வெண் களின் உருவத்தைப் பெற்றுக் கொண்டதையறியாமல், தாங்கள் அராபியரிடமிருந்து பெற்றுக்கொண்டபடியால், அவற்றிற்கு அரபி எண்கள் என்று பெயர் சூட்டினார்கள்.1 மிஷனரி பாதிரிமார்கள் அந்த எண்களை மீண்டும் நமது நாட்டில் பாடசாலைகளில் புகுத்தினார்கள். இதனை இன்னுஞ் சற்று விளக்கமாகக் கூறுவோம். ஆதிகாலத்தில், அராபியர் கலை பண்பாடுகளில் வளர்ச்சி யடையாமல் இருந்தனர். இவர்கள் கி.பி. எட்டாம் நூற்றாண்டில் இஸ்லாம் மதத்தைப் பரப்புவதற்காகச் செய்த முயற்சியின் காரணமாகப் பெரியதோர் முஸ்லிம் சாம்ராச்சியத்தை அமைத்தார்கள். குறுகிய காலத்தில் இவர்கள் கிழக்கே மத்திய ஆசியா முதல் மேற்கே ஆபிரிகாக் கண்டத்தில் மொராக்கோ நாடு வரையில் பல நாடுகளையும் தேசங்களையும் கைப்பற்றி இஸ்லாம் மதத்தைப் பரப்பினார்கள். மற்றும் ஐரோப்பாக் கண்டத்தின் தென் பகுதி நாடுகள் சிலவற்றையும் கைப்பற்றி அரசாண்டார்கள். இவ்வாறு பெரிய சாம்ராச்சியத்தை அமைத்த அராபியர், தாங்கள் வென்ற நாடுகளில் இருந்த சிறந்த கலைகளையும் பண்பாடு களையும் ஏற்றுக் கொண்டார்கள். அவர்கள் காகிதம் செய்தல், அச்சு அடித்தல் முதலிய கலைகளைச் சீனரிடமிருந்து கற்றுக்கொண்டது போல, பாரத நாட்டிலிருந்து எண்களின் வரிவடிவங்களைப் பெற்றுக் கொண்டார்கள். ஆதியில் அராபியர் களுக்கு எண்கள் (வரிவடிவ எண்கள்) கிடையா. எண்களையும் எண்களின் தொகைகளையும் எழுத்தினாலே எழுதினார்கள். பாரத நாட்டிலே எண்களுக்குத் தனி வரிவடிவம் வழங்கியதை அராபியர் கண்டு, இந்த எண்களின் வரிவடிவத்தைத் தாங்களும் ஏற்றுக் கொண்டார்கள். இந்த எண்களை அரபிநாட்டிலும் எகிப்து, மொராக்கோ முதலிய நாடுகளிலும் வழங்கினார்கள். அந்தக் காலத்திலே ஐரோப்பிய நாடுகளில் உரோம எண்கள் வழங்கப்பட்டன. உரோமர் எண் என்பது, உரோம் நாட்டார் பழைய காலத்தில் எழுதி வந்த எண்கள். உரோம எண்கள் இவ்வாறு எழுதப்பட்டன: I, II, III, IV, V, VII, VIII, IX, X. இந்த எண்கள் கணிதம் எழுதுவதற்கு ஏற்றவை அல்ல. உதாரணமாகப் பதினெட்டை இருபத்தெட்டால் பெருக்க வேண்டுமானால், இந்த எண்களினால் பெருக்கி விட எழுதுவது சங்கடமானது. XVIII x XXVIII இவ்வாறு எழுதிப் பெருக்க வேண்டும். பெருக்குத் தொகையை எழுதுவதும் சங்கடம். 1958 என்னும் எண்ணை உரோமன் எண்ணினால் எழுதும்போது MDCC CCLVIII என்று எழுதவேண்டும். இதில் M என்பது ஆயிரம். D என்பது ஐந்நூறு. C என்பது நூறு L என்பது ஐம்பது. VIII என்பது எட்டு. இவ்வாறு பண்டைக் காலத்தில் ஐரோப்பிய நாட்டார் எண்களை எழுதுவதில் துன்பப் பட்டனர். இந்தியாவிலிருந்து அராபியர் கற்றுக்கொண்டு போன எண்களை எகிப்து முதலிய நாடுகளில் வழங்கினார்கள் என்று கூறினோம் அல்லவா? இத்தாலி தேசத்துப் பைசா நகரத்தவராகிய லியோனார்டோ பிஃபோனசி2 என்பவர், ஆப்பிரிகாக் கண்டத்தின் வடபகுதியில் வியாபாரத்தின் பொருட்டுத் தங்கியபோது, அந்நாட்டு முஸ்லிம்கள் வழங்கிய இந்திய எண்களைக் கண்டு, அவற்றைக் கற்றுக்கொண்டு போனார். போய், கி.பி. 1202-ஆம் ஆண்டில் அந்த எண்களை அமைத்து ஒரு கணித நூல் எழுதினார். அக்காலத்தில் கிறிஸ்துவராகிய ஐரோப்பியருக்கும் முஸ்லிம்களாகிய அராபிய ருக்கும் மதச் சார்பாகப் பெரும்பகை மூண்டிருந்தபடியினாலே, இந்தக் கணிதத்தைக் கிறிஸ்துவராகிய ஐரோப்பியர் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால், நாளடைவில் பையப் பைய ஏற்றுக்கொள்ள வேண்டிய தாயிற்று. கி.பி. 1259-இல் பிளாரன்ஸ் நகரத்தில் ஒரு சட்டம் இயற்றி, அவ்வூர் பாங்கிகளில் இந்த அரபி எண்களினால் கணக்கு எழுதக் கூடாது என்று தடை செய்தனர். இவ்வாறு தடைகள் இருந்த போதிலும், கடைசியில் இந்த அரபி எண்கள் ஐரோப்பிய நாடுகளில் ஏற்றுக்கொள்ளப்பட்டன. கி.பி. 1500-இல் அரபி எண்களினால் கணக்குப் புத்தகங்கள் அச்சிற் பதிப்பிக்கப்பட்டன. கி.பி. 19-ஆம் நூற்றாண்டின் முதற்பகுதியிலே நமது நாட்டில் வழங்கிய தமிழ் எண்களின் வரிவடிவத்தில் சிறு மாறுதல் ஏற்பட்டது. இந்த மாறுதலைக் கணித தீபிகை என்னும் சிறு நூலில் காணலாம். கணித தீபிகை, பண்டள இராமசாமி நாயக்கர் என்பவரால் 1825-ஆம் ஆண்டில் எழுதப்பட்டது. இந் நூலின் முன் பக்கத்தின் வாசகம் இது: “இஃது பண்டளராமசாமி நாயக்கர் செய்த கணித தீபிகை கிறிஸ்து 1825 'b4- வருசத்துக்குச் சரியான சாலிவாகன 41 வருசம் 1748-இல் பார்த்திவ. வருஷத்தில் பள்ளிக்கூடப் புத்தகசாலையார் செலவினால் வேப்பேரியி லச்சிற் பதிக்கப்பட்டது.” மாணவருக்காக எழுதப்பட்ட இந்நூலில், தமிழ் எண்களின் வரிவடிவத்தில் செய்யப்பட்ட சிறு மாறுதல்களையும் அதன் காரணத்தையும் இந்நூலின் பாயிரத்தில் நூலாசிரியர் கூறுகிறார். இந்தக் கணித தீபிகை இப்போது கிடைப்பது அருமையாகையால், அதன் பாயிரம் முழுவதையும் இங்குத் தருகிறோம்: பாயிரம் “உலக நடைக் குரித்தான மார்க்கம், லௌகீகம் வைதீக மென்றிரு வகைப்படும். அவ்விரண்டு மார்க்கங்களையுங் கண்டும் நடப்பதற்கு, எண்ணென்பதும் எழுத்தென்பது மிரண்டு கண்களாம். ஆனாலிவ் விரண்டனுள் எண்ணானது வேதாங்க மாறனுள் கண் ணெனச் சிறந்த சோதிடத்தோ ரங்கமாதலானும், தமிழினும் எண்ணும் எழுத்துங் கண்ணெனத் தகும் என ஒளவையும், ‘எண்ணென்ப வேனை யெழுத்தென்பவிவ் விரண்டுங், கண்ணென்ப வாழு முயிர்க்கு’ எனத் திருவள்ளுவரும் மற்றும் பிறரு மெண்ணி னையே முற்கூறுகையாலு மிவ்வெண், வலக்கண்ணெனவும் பட்டு, உலகத்திற்குப் பெரும் பயனுடைய தாயிற்று. “இவ்வாறு சிறப்புடைய எண்ணினை, ஆரிய முதலிய பாஷை களில் வழங்குங்கால் ஒன்று முத லொன்பது வரைக்கு மொவ்வொரு அறிகுறி வடிவை யுண்டாக்கி அதைத் தசகுணோத்தரமாக மேல் ஸ்தானங்களுக்குக் கொண்டு போவதற்குப் பிந்து என்னுமோர் குறியை அவைகளோடு கூட்டி, அது மூலமாய் ஏகம் தசமுதலான ஸ்தானங் களை முறையே யேற்படுத்தியிருக்கையால், வேண்டிய எண்களை ஏகதசஸ்தானக் கிரமப்படி யெழுதிக் கூட்டல் கழித்தல் முதலான கணிதக் கிரியை செய்வதற் கெளிதா யிருக்கிறது. “இத் தமிழ்க்கோ வென்றால் மேற்கூறிய புள்ளிவடிவுக் கீடாக தச சத சகசிர மென்று மூன்று ஸ்தானங்களுக்கும்? என்னு மிம் மூன்று குறிகளு மேற்படுத்தி மற்றை ஸ்தானங்களுக்கும் அப்படியே வெவ் வேறு குறிகளேற்பாடு செய்யாம விக்குறிகளைக் கொண்டுஞ் சொற்களைக் கொண்டும் வழங்குகிறதினால், எண்களுக்கு ஏக தச ஸ்தான முதலிய முறையா லியல்பாயுண்டான வலி குறைதலுங் கணிதக் கிரியைகளுக் கொவ்வாமையு நேரிட்டது. “மற்றுமிக்காலத்து வழங்கு மெண்சுவடியுங் கணிதமுமாகிய நூல்களுள் வடநூற் கணிதம் போல முழுவதுஞ் சொல்லாமையுஞ் சில சொல்லியிருப்பனவுங் கற்போர்க் கெளிதுணரக் கூடாமையு மென்னு மிந்நால்வகைப் பெருங் குறைவாகிய மாசொழிப்பாயென்று. “கல்விப் பயிற்சியின்மையின் களை மூடிக்கிடந்த இத்தேசத் தார் அறிவென்னும் பயிரை அக்களை களைந்து வளர்ந்தோங் குவிக்க வேண்டுமென்னும் அருட்கருத்தினால், சென்ன புரியில் பொற்பூவின் மணமிருப்பது போலுஞ் செல்வத்தோடுங் கல்வியிற் சிறந்த வுபகார சிந்தையுள்ள துரைகளேற்பாடு செய்த பள்ளிக்கூடப் புத்தக சங்கத்தாரிற் கணித நூற் கரைகண்டவராகிய மேசர் டி. அவிலாண்டு துரையும், தமிழ் முழுதுணர்ந்த கிளார்க்குத் துரையுமாகிய இவ்விருவரு மனமுவந் தேவ, அப்படியே அந்நால் வகைப்பட்ட குறைவு நீங்கும் பொருட்டு இக் கணித தீபிகை யென்னு நூல் செய்யப்பட்டது. “இதிலேற்படுத்தியிருக்கிற கிரமங்களென்ன வென்றால், இப்போது வழங்குகிற ஒன்று முத லொன்பது வரையு மிருக்கின்ற எண்களையே வைத்துக் கொண்டு, ஸ்தான சங்கேதங்களுக்கு என்னுமிக் குறிகளொவ்வாமையா லிவைகளைப் பழையன கழிதலாக நீக்கி அவைகளுக்கீடாகப் புதியன புகுதலாகப் பிந்து முதலிய பெயர்பெற்ற 0 இக்குறி மேற்கொள்ளப்பட்டது. இப் புள்ளியினால் எண்களுடைய ஏக தச ஸ்தானாதியாகிய ஒன்று பத்து முதலான ஸ்தானங்களை யேற்படுத்திய முறையெப்படி யென்றால். பழையன க்கு புதியன ய ” க0 உய ” உ0 ஙய ” ங0 சய ” ச0 ருய ” ரு0 சாய ” சா0 எய ” எ0 அய ” அ0 கூய ” கூ0 ள ” க00 ” க000 ” க0000 ” க00000 இவ்வாறு ஏக தச ஸ்தானாதிகள் தப்பாமலெழுதி யெளிதாய்க் கணித கிரியை செய்வதற்கொரு நன்னெறி யேற்படுத்தப்பட்டது. “ஆனா லிச்சித்த வொரு தொகை யெழுத வேண்டுமானால், அதற்குரிய எண்களை ஒன்றன்பினொன்றா யெழுதுகையில் ஏக தச ஸ்தானாதிகளே தோற்றும்படி என்கிற குறிகளைக் கூட்டியெழுது முன்னைய வழக்கம்போ லவ்விடத்திடையிலே புள்ளி கூட்டியெழுத வேண்டுமோவெனில் அப்படி வேண்டுவதில்லை, மேலெழுதிய படி யெளிதி லெழுதி வழங்கலாம். எப்படி யென்றால். பழையன புதியன 12 234 3456 45678 567891 இவ்வா றேற்படுத்தினதினாலே யெண்கள் ஏக தச ஸ்தானாதி களை முறையே யடைந்து முன்னிழந்த வலியை அடைந்தன. “ஆனாலிச்சித்த வொரு தொகையை யெழுதும் போது யாதொரு ஸ்தானத்திற் கெண்ணில்லாம லெழுதும்படி நேரிடுகிறதோ அந்த ஸ்தானத்திற்குப் புள்ளி வடிவு கூட்டியெழுதுக. எப்படியென்றால். 1 2 1 0 1 2 0 5 1 0 3 5 “இவைகளில் முதற்றொகையில் ஏகஸ்தானத்திலும், இரண்டா வதில் தசஸ்தானத்திலும், மூன்றாவதில் சதஸ்தானத்திலும் எண்ணில்லா மையினாலே புள்ளி கூட்டி எழுதப்பட்டது. “இதில் கணித பரிகர்மத் திலக்கணத்துக்கு உதாரணங் கூறிய விடத்திற் கணிதக்கிரியைகள் செய்வதற்கெல்லாம் விதிகள் விளக்க முற வேற்படுத்திச் சொல்லியிருப்பதனாலே கற்போருக்கு மிகவு மெளிதாயிருக்கும். “இந்நூலிற் சொல்லியிருப்பன வெல்லா மிங்கே விவரித்துச் சொல்லிற் பாயிரம் பெருகு மென்றஞ்சிச் சுருக்கிக் கூறப்பட்டது. ஆதலால் அவ்வவ் அதிகாரங் கூறுமிடத்து அதனதன் முறை யெல்லாங் கண்டுணர்க.” 16, 17-ஆம் பக்கங்களில் மேலும் அவர் எழுதுவது வருமாறு:- “தமிழ் தேசத்தில் வழங்கப்பட்ட எண்சுவடியில் முக்காலரை முதலானவைகளுக்கு இந்தச் சாஸ்திரத்தி லேற்படுத்தினபடியே பின்னாம்சம் எழுதும் முறை: இவ்வாறு மேலும் அரைக்காணி. முந்திரி, கீழ் முக்கால், கீழரை, கீழ்க்கால், கீழ்நாலுமா, கீழ் மூன்று வீசம், கீழ் மூன்றுமா, கீழரைக்கால், கீழே இரண்டுமா, கீழ் வீசம், கீழ் ஒருமா, கீழ் முக்காணி, கீழரைமா, கீழ்க்காணி, கீழரைக்காணி, முந்திரி, இம்மி, அதிசாரம் ஆகிய கணக்கு களின் குறியீட்டெழுத்துக்களையும் அவற்றின் விளக்கங்களையும் எழுதியுள்ளார். ஐரோப்பா நாடுகளில் வழங்கி வந்த கூட்டல் குறி (+), கழித்தல் குறி (-), பெருக்கல் குறி (x), வகுத்தல் குறி () முதலிய குறிகளையும் இப்புத்த கத்தில் புதிதாகப் புகுத்தியுள்ளார். இவை பற்றி இந்நூலாசிரியர் இவ்வாறு விளக்குகின்றார். (இந்தக் குறிகள் 19-ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் நமது நாட்டில் வழங்கவில்லை.) அடியிலெழுதப்பட்ட குறிகள், கணிதக் கிரியை செய்யும் போது சுருக்கி யெழுதுவதி லுபயோகமான அடையாளங்கள். + பிலுஸ், அல்லது கூட்டற் குறி. இது தனக் கிருபுறத்திலு மிருக்கிற சங்கியைகளைக் கூட்டத்தக்கதென்று காட்டும். வரலாறு: 12+3. இந்த மூன்றைப் பன்னிரெண்டுடனே கூட்ட வேண்டுமென்று காட்டும். - மீனுஸ் அல்லது கழிப்புக் குறி. இது தனக்கு வலப்புறத்தி லிருக்கிற சங்கியையை தன்னிடப்புறத்திலிருக்கிற சங்கியையி லிருந்து எடுத்துப் போட வேண்டுவதென்று காட்டும். வரலாறு: 12-3. இது மூன்றை 12-இல் கழிப்பதென்றாயிற்று.3 'd7 பெருக்கல் குறி. இது தனக்கிருபுறத்திலுமிருக்கிற சங்கியை களை யொன்றை மற்றொன்றாலே பெருக்குகிறதெனக் காட்டும். வரலாறு. 12x3. இங்கே பன்னிரண்டினுடைய குணிதம் மூன்றினாலே என்றாயிற்று. என்றால் பன்னிரண்டை மூன்றாலே பெருக்கென்பதாம். 'f7 ஈவுக் குறி. இது பாச்சியத்துக்கு4 வரும் ஈவு பாச கத்தா லென்று.5 பாசகத்தைப் பாச்சியத்தின் கீழேயெழுதிப் பின்னாம் சத்துக்கு நடுவே யெப்படிக்குக் கீற்றுக் சீறுகிறதோ அதுபோல நடுவிலே கீறப்படும். வரலாறு:12/3 இந்தப் பன்னிரண்டுக்கு வரும் ஈவு மூன்றினாலே யென்று காட்டு கிறது. அது பன்னிரண்டை மூன்றினாலே பங்கிடு, அல்லது 3-பேருக்குக் கொடு என்றாயிற்று. = எக்குவால். அல்லது சமக்குறி. இந்த ரேகை தனக்கொரு புறத்திலிருக்கிற எண்களினாலே செய்யப்பட்ட கிரியை யினுடைய பலம் தனக்கு மற்றொரு புறத்திலிருக்கிற எண்ணுக்குச் சமானமென்று காட்டும். வரலாறு: 12+3=15 12-3=9 12'd73=36 12/3=4 சென்னை மாகாண ஆட்சிக் கைப் புத்தகம்.6 2-ஆம் தொகுதி யில் 245-ஆம் பக்கத்தில் இது பற்றிய குறிப்பு காணப்படுகிறது. அதன் கருத்து இது: “தமிழ் எண்களின் குறியீடுகள் கிரேக்க, ஹீப்ரு மொழிகளின் எண் குறியீடுகளைப் போலக் குறைபாடுள்ளவை. தமிழ் எண்கள், கணக்கை எழுதிச் செய்வதற்கு ஏற்றதாக இல்லாதபடியால், அந்த எண்களுக்குப் பதிலாக அரபு எண்களினால் எழுதுவது நன்றாக இருக்கும். இது பற்றிப் புள்ளி (சுன்னம்) 0 சேர்த்து எழுத முயற்சி செய்யப்படுகிறது.’ ஆனால், இம் முயற்சிக்கு ஆதரவு ஏற்படவில்லை என்று அவ்வறிக்கை கூறுகிறது. கணித தீபிகையிலிருந்து தமிழ் எண்களினால் அமைந்த கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் கணக்குகளை மாதிரிக்காகக் கீழே தருகிறேன். அவை விரைவாக எழுதுவதற்கு எளிதாக இல்லாமல் எவ்வளவு சங்கடமாக இருந்திருக்கும் என்பது இக் கணக்குகளைக் கண்டு அறியலாம். கணித தீபிகை. பக்கம் 28, கூட்டல் கணக்கு. 476, 5723, 87, 54632. இவைகளைக் கூட்டிச் சொல்லு. 476 5723 87 54632 60918 1057, 369, 845932, 56. இவைகளைக் கூட்டத் தொகை யென்ன? 1057 369 845932 56 847414 கணித தீபிகை, பக்கம் 32. கழிததல் கணக்கு. 5327496 - இல் 2136598 கழி. நீக்கு 3190898 1235476 - இல் 1059654 கழி நீக்கு 175822 கணித தீபிகை. பக்கம் 37. பெருக்கல் கணக்கு. 47235 - ஐ 3472 - ஆல் பெருக்கு 94470 330645 188940 141705 163999920 87254763 - ஐ 2753 - ஆல் பெருக்கு. 261764289 436273815 610783341 174509526 240212362539 கணித தீபிகை. பக்கம் 43. (வகுத்தல்). 4796-ஐ 27 பேருக்குக் கொடு : 27) 4796 (177 27 209 189 206 189 17 87654 - ஐ 53 பேருக்குக் கொடு : 53) 87654 (1653 53 346 318 285 265 204 159 45 இதில் தமிழ் எண்கள் விரைவாக எழுதுவதற்கு வாய்ப்பாக இல்லாமல் இருப்பது தெரிகிறது. இந்த எண்களைவிட ஐரோப்பாக் கண்டத்திலிருந்து வந்த அரபி எண்கள் விரைவாக எழுதுவதற்கு எளிதாகவும் வாய்ப்பாகவும் இருக்கிறபடியால், அரபி எண்களையே இப்போது பயன்படுத்துகிறோம். இது சென்ற 19-ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட மாறுதல் ஆகும். இந்த மாறுதலைக் கிறிஸ்துவப் பாதிரி மார்கள் 19-ஆம் நூற்றாண்டின் பிற் பகுதியில் செய்தார்கள். பழைய முறையில் தமிழ்க் கல்வி 19-ஆம் நூற்றாண்டிலே தமிழ்க் கல்வி இரண்டு விதமாகப் பயிற்றுவிக்கப்பட்டது. அவை ண்பழைய முறைக் கல்வி, புதிய முறைக் கல்வி என்பனவாம். பழைய முறைக் கல்வி என்பது ஆசிரிய மாணவர் வழிமுறை. புதியமுறைக் கல்வி என்பது மேல்நாட்டு முறையைப் பின்பற்றியது. இதனைக் கற்பித்தவர் மிஷனரிமாரான கிறித்தவர். பழைய முறைக் கல்வியைக் கற்பித்தவர் கணக்காயர், வித்துவான், மகாவித்துவான், கவிராயர், நாவலர் என்று பேர் பெற்ற புலவர்கள். அக்காலத்தில் கிராமங்கள் தோறும் சிறு பாடசாலைகள் இருந்தன. கிராமப் பாடசாலை, பெரும்பாலும் கிராமப் பெரியமனிதரின் வீட்டுத் திண்ணையில் இருக்கும். கோயில் மண்டபங்களிலும் இருப்பதுண்டு. பெரும்பாலும் திண்ணைகளில் நடைபெற்று வந்தமை யால் திண்ணைப் பள்ளிக்கூடம் என்று பெயர் பெற்றிருந்தது. திண்ணைப் பள்ளிகளில் கல்வி கற்பித்த ஆசிரியர்களுக்குக் கணக்காயர் என்பது பெயர். அக்காலத்தில் கற்பலகைகளும் எழுது குச்சிகளும் கிடையா, காகிதமும் பேனாவும் பென்சிலும் கிடையா. வகுப்புக்குத் தக்கபடி பாடப் புத்தகங்களும் கிடையா. தரையிலே மணலைப் பரப்பிக் கை விரலினாலே எழுத்தின் வரிவடிவத்தைச் சிறுவர் எழுதிப் பழகினார்கள். எழுதும் போது தாம் எழுதும் எழுத்தின் ஒலியை உரத்துச் சொல்லிக்கொண்டே எழுதுவார்கள்1. எழுத்துக்களைப் பயிலும் மாணவரின் இரைச்சலும் செய்யுள்களை நெட்டுருப் பண்ணும் இரைச்சலும் தெரு முழுவதும் ஒலிக்கும். எழுத்துக்களைக் கற்ற சிறுவர் ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி, வாய்பாடு முதலியவற்றை நெட்டுருச் செய்வார்கள். இவற்றை மனப்பாடஞ் செய்த பிறகு நிகண்டு, திவாகரம், நன்னூல், சின்னூல் முதலிய நூல்களை நெட்டுருப்போட்டு மனப்பாடஞ் செய்வார்கள். ஏடுகளில் எழுத்தாணியால் எழுதிப் பழகுவார்கள். திண்ணைப் பள்ளிகளில் கணக்காயர் ஒருவர்தான் ஆசிரியர். அவருக்கு உதவியாகச் “சட்டாம்பிள்ளை” என்னும் தலைமாணவர் இருப்பார். திண்ணைப் பள்ளிகளில் பிள்ளைகள் நூல்களை மனப்பாடஞ் செய்வார்கள் என்று கூறினேன். வெறும் மனப்பாடந்தான். பொருள் கூறப்படமாட்டா. அச்சியந்திரச் சாலைகளும் அச்சுப் புத்தகங்களும் இல்லாத அக்காலத்தில், புத்தகங்கள் கிடைக்காதபடியால், மாணவர்கள் நூல்களை மனப்பாடம் செய்தார்கள். நூல்களை மனப்பாடஞ் செய்வதுதான் அக்காலத்துத் திண்ணைப் பள்ளிக்கூடங்களின் முதல் நோக்கமாக இருந்தது. எழுத்துக்களைக் கற்றுக்கொள்வதும் செய்யுள் களையும் சூத்திரங்களையும் மனப்பாடம் பண்ணுவதுந்தான் திண்ணைப் பள்ளிப் படிப்பின் நோக்கம். அக்காலத்தில் வார விடுமுறை கிடையா. உவா நாட்களில் விடுமுறை உண்டு. அதாவது காருவா என்னும் அமாவாசையிலும், வெள்ளுவா என்னும் பௌர்ணமியிலும் விடுமுறை உண்டு. பள்ளிக் கூட விடுமுறையை “வாவு” என்று கூறினார்கள். “வாவு” என்பது “உவா” என்பதன் திரிபு. கணக்காயரிடம் பொருள் அறியாமல் செய்யுள் நூல்களை மனப்பாடஞ் செய்த மாணவர், பிறகு தகுந்த புலவரிடஞ் சென்று அவர்களிடம் தாம் மனப்பாடஞ் செய்த நூல்களுக்கு உரை கேட்பர். அச்சுப் புத்தகம் இல்லாத காலத்தில், ஏட்டுச் சுவடிகளும் கிடைப்பது அருமையாக இருந்த காலத்தில், இந்த முறை ஏற்றதாக இருந்தது. மாணவர் உருப்போட்டு மனப்பாடஞ் செய்த ஆத்திசூடி, கொன்றை வேந்தன், நல்வழி, நன்னெறி, சதகம், நிகண்டு, நன்னூல் முதலியவற்றிற்குப் பொருள் கேட்டுக் கற்பர். திண்ணைப் பள்ளிப் படிப்போடு நின்றுவிடுகிற மாணவர் களும் இருந்தனர். அவர்கள் கிளிப்பிள்ளை போல மனப்பாடஞ் செய்த செய்யுட்களுக்குப் பொருள் அறியார். அவர்கள் படிப்பு வீண் படிப்பே. அப்படிப் பட்டவர்களில் சிலர், தாங்கள் பொருள் அறியாமல் மனப்பாடஞ் செய்த செய்யுட்களையும் சூத்திரங்களையும் பிறரிடஞ் சொல்லித் தாங்கள் கல்வியுடையவர் என்று பெருமிதங் கொள்வர். இவர்களைப் பற்றி நாலடியார் இவ்வாறு கூறுகிறது: கற்றதூஉம் இன்றிக் கணக்காயர் பாடத்தால் பெற்றதாம் பேதையோர் சூத்திரம் - மற்றதனை நல்லார் இடைப்புக்கு நாணாது சொல்லித்தன் புல்லறிவு காட்டி விடும். பாடமே ஒதிப் பயன்தெரிதல் தேற்றாத மூடர் முனிதக்க சொல்லுங்கால் - கேடருஞ்சீர்ச் சான்றோர் சமழ்த்தனர் நிற்பவே, மற்றவரை ஈன்றாட் கிறப்பப் பரிந்து. நாப்பாடஞ் சொல்லி நயமுணர்வார் போற்செறிக்கும் தீப்புலவர் சேரார் செறிவுடையார் - தீப்புலவன் கோட்டியுட் குன்றக் குடிப்பழிக்கும்; அல்லாக்கால், தோட்புடைக் கொள்ளா எழும். மனப்பாடஞ் செய்த சிறு நூல்களுக்குத் தக்க ஆசிரியரிடம் பாடங்கேட்டுப் பொருள் அறிந்த மாணவர், வேறு பிரபந்த நூல்களைக் கற்பர். காரிகை முதலிய இலக்கண நூல்களையும் பாடங் கேட்பர். பிறகு திருக்குறள், கம்பராமாயணம், கந்தபுராணம், பெரிய புராணம், சீவக சிந்தாமணி, சிலப்பதிகாரம் முதலிய பெரிய நூல்களைப் பாடங் கேட்பார்கள். செய்யுள் இயற்றவும் கவி பாடவும் வல்லவர் ஆவார்கள். அக்காலத்தில், கல்வி பயின்ற மாணவரும் வித்துவான்களும் புலவர்களும் விரைவில் கவி பாடும் ஆற்றல் பெற்றிருந்தனர். நினைத்தவுடன் கவி பாடும் வல்லமை அவர்களுக்கிருந்தது. ஆனால், வசனம் எழுதப் பழகவில்லை. பழகாத காரணத்தினால், வசன நடையில் நூல் எழுதுவது அவர் களுக்குக் கடினமான செயலாக இருந்தது. அக்காலத்திலே மாணவருக்குப் பாடஞ் சொல்லிய நல்லாசிரி யர்களான வித்துவான்களும், மகாவித்துவான்களும் இருந்தார்கள், அவர்களிடம் மாணவர்கள் சென்று கல்வி கற்றனர். இவர்கள் அல்லாமலும் ஆங்காங்கே மடாலயங்களும் இருந்தன. அந்த மடாலயங்களிலும் தக்க புலவர்களைக் கொண்டு இலக்கண இலக்கிய நூல்கள் மாணவர்களுக்குப் பாடஞ் சொல்லப்பட்டன. மடாதிபதிகளில் சிலர் தாங்களே பாடஞ் சொல்லும் ஆற்றல் பெற்றிருந்தனர். திருவாவடுதுறை மடம், தருமபுர மடம், திருப்பனந்தாள் மடம், காஞ்சி ஞானப்பிரகாசர் மடம், மதுரைத் திருஞான சம்பந்தர் மடம், திருநெல்வேலி செங்கோல் மடம், கும்பகோணம், சிதம்பரம், திருவண்ணாமலை, துறையூர், மயிலம் முதலிய ஊர்களில் இருந்த மடங்கள் சென்ற 19-ஆம் நூற்றாண்டிலும் அதற்கு முந்திய நூற்றாண்டுகளிலும் தமிழ்ப் புலவர்களை ஆதரித்து வந்தது மட்டு மல்லாமல், மாணவர்களுக்குக் கல்வி புகட்டி வந்தன. குறுநில மன்னர்களும், பாளையக்காரர்களும், பெருநிலக்கிழார் களும், ஜமின்தார்களும், பிரபுக்களும் அக்காலத்தில் தமிழ்ப் புலவர்களைப் போற்றினார்கள். அவர்கள் தங்கள் மாளிகைகளில் தகுந்த புலவர்களை அமைத்துப் போற்றினார்கள். அப்படிச் செய்வதைத் தமது தகுதிக்குப் பெருமையாகக் கருதினார்கள். அன்றியும் அவர்கள் நூல் நிலையங்களையும் தங்கள் மாளிகைகளில் அமைத்திருந்தனார். புலவர்கள் அவதானம் செய்யும் வழக்கமும் அக்காலத்தில் இருந்தது. அஷ்டாவதானம், கோடசாவதானம், சதாவதானம் முதலிய அவதானங்கள் செய்யப்பட்டன. அவதானம் செய்வது அதிக நினைவாற்றல் உள்ளவர்களால்தான் இயலும். நினைவாற்றலினாலே ஒரே சமயத்தில் பல வேலைகளைச் செய்வது அவதானம் எனப்படும். விறலிவிடு தூது (அஷ்டாவதானி சரித்திரம்) என்னும் நூலில் அஷ்டாவனி எவ்வாறு அவதானம் செய்தார் என்பது கூறப்படுகிறது. “வால சரஸ்வதியென் வாக்கிற் ப்ரசன்னமதாய் நாலு கவித்திறமும் நானறிந்து - வேலும் மயிலுமெனச் சொன்னவுரை மாறாமற் சொல்லக் கயிலாட சிங்கி கழற்ற - அயலொருவன் சொன்ன வினாச் சொல்ல வெதிர்சூதாடப் பின்முதுகு தன்னி லெறிந்த கல்லுதா னெண்ணப் - பன்னுசது ரங்க விளையாட்டுக் கடிபார்க்கச் சொற்புலவோர் தங்கள் கவியை யவதானிக்கச் - சங்கத்தில் எட்டெட் டெழுத்தாணிக் கேற்றகவி சொல்லவும்யான் அட்டவா தானி யென்ப தாயினேன்.” இன்னொரு புலவர் அட்டாவதானம் செய்வதை. “மாறாமல் வாய்வேலு மயிலுமென வேசொல்ல வாசகங் கைகள் எழுத வருகணக் கொருபுறம் தீரமற் றொருபுறம் வரைத்திடும் இலக்க மாற வளைதிரைக் குட்சிறிது கல்லணி வகுக்கின்ற வன்கணக் கினிது பகர மருவுசொக் கட்டானும் விளையாட மறைவாக வைத்துசது ரங்க மாடக் கூறாக வெட்டெழுத் தாணியெழு தும்படிக் குங்கவிதை பகர வதிலோர் கூரெழுத் தாணிசது ரங்கமுது குப்புறம் குதிரையடி வெண்பா வரக் கூறுபுல வோர்சபையில் அட்டாவதான முல கோர்புகழ வேநடத்த.” என்று விளக்குகிறார். சென்ற 19-ஆம் நூற்றாண்டிலே சில அவதானிகள் இருந்தனர். அஷ்டாவதானம் சபாபதி முதலியார், அஷ்டாவதானம் நாகலிங்கம் பிள்ளை, அஷ்டாவதானம் பெருமாட் கவிராயர், அஷ்டாவதானி வைரக்கண் வேலாயுதப் புலவர், அஷ்டாவதானம் இராமசாமிப் பிள்ளை. சோடசாவதானம் சுப்பராய செட்டியார், சோடசாவதானி முத்தழகய்யங்கார், சதாவதானம் இராமசாமிச் செட்டியார், சதாவதானம் சுப்பிரமணிய ஐயர் முதலியவர்கள் சென்ற நூற்றாண்டில் இருந்த அவதானிகள் ஆவர். புதுமுறையில் தமிழ்க் கல்வி கி.பி. 16-ஆம் நூற்றாண்டு முதல் ஐரோப்பியக் கிறிஸ்துவப் பாதிரிமார்கள் நமது நாட்டுக்கு வந்து கிறிஸ்து மதத்தைப் பரப்பு வதற்காகப் பெரிதும் பாடுபட்டார்கள். அவ்வாறு செய்த முயற்சியில் அவர்களால் கிறிஸ்துவர்களாகப்பட்ட மக்களின் கல்வியைப் பற்றியும் அவர்கள் கருத்துச் செலுத்திப் பாடசாலைகளை நிறுவினார்கள். அவர்களின் முயற்சி 19-ஆம் நூற்றாண்டில் மிகச் சிறந்து விளங்கியது. காரணம் என்னவென்றால், அந்த நூற்றாண்டில் ஆங்கிலேய அரசாங்கம் ஏற்பட்டு நாட்டிலே அமைதியும் ஒழுங்கு முறையும் பாதுகாப்பும் நிலவியதுதான். 19-ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் நிலையான ஆட்சி இல்லாமல் அமைதியும் பாதுகாப்பும் இல்லாமல், கொள்ளையும் கூச்சலும் கலகமும் குழப்பமும் சண்டையும் போரும் விளைந்து நாட்டிலே மக்களுக்குத் துன்பங்கள் விளைந்தன. 19-ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர் ஆட்சி ஏற்பட்ட பிறகு நாட்டிலே அமைதியும் பாதுகாப்பும் நிலைபெற்றன. இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு பாதிரிமாரும் மிஷனரிமாரும், கிறிஸ்து மதத்தைப் பரவச் செய்யும் கருத்தோடு, கல்வி வளர்ச்சியையும் செய்துவந்தனர். அதன் காரணமாகத் தமிழ்க் கல்வித்துறையில் சில புதிய மாறுதல்களும் உண்டாயின. கிறிஸ்துவப் பாதிரிமார் சில நூற்றாண்டுகளாகச் செய்து வந்த பிரசாரத்தின் பலனாகப் பத்தொன்பதாம் நூற்றாண்டில் பெருந்தொகையான தமிழர் கிறிஸ்து சமயத்தைச் சார்ந்திருந்தனர். தமிழக் கிறிஸ்துவ சமூகத்தின் கல்விக்காகவும் நல்வாழ்வுக்காகவும் பாதிரிமாரும் மிஷனரிமாரும் செய்த தொண்டுகள் பாராட்டத் தக்கன. கிறிஸ்து மதத்தை அழுத்தமாக ஊன்றச்செய்யவேண்டும் என்பதே அவர்களுடைய அடிப்படையான நோக்கமாக இருந்த போதிலும், அவர்கள் செய்த கல்வித் தொண்டுகளின் மூலமாகத் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு ஆக்கம் ஏற்பட்டதை மறக்கவும் முடியாது, மறைக்கவும் முடியாது. பாடசாலைகளில், மேல்நாட்டுப் புதிய முறைப்படி கல்வியைப் புகட்டியவர் கிறிஸ்துவப் பாதிரிமாரே. கணக்காயர்களான ஆசிரியர் களுக்குப் போதனா முறைகளைக் கற்பித்து அத்துறையில் பழகிப் பயிற்சிபெற்ற ஆசிரியர்களைக்கொண்டு பாடசாலைகளில் பாடங் கற்பித்தார்கள். ஆண் பாடசாலைகள் மட்டும் அல்லாமல் பெண் பாடசாலைகளையும் அமைத்துப் பெண் கல்வியையும் வளர்த்தார்கள். பாடசாலைகளில் வகுப்புகளுக்குத் தக்கபடி பாடப்புத்தகங்களை அமைத்து அப்புத்தகங்களைக் கொண்டு பிள்ளைகளைப் படிப்பித்தார்கள். பிழையின்றி எழுதப் பழகு வதற்குச் சொல்வதெழுதல் என்னும் ‘டிக்டேஷன்’ பயிற்சியையும் புகுத்தினார்கள். பூகோளம், சரித்திரம், இயற்கைப் பாடம் முதலிய பாடங்களைக் கற்பித்து மாணவர்களுக்குப் பொது அறிவைப் புகட்டினார்கள். வானநூல் உடல்நூல் முதலிய விஞ்ஞான (சயன்ஸ்) நூல்களையும் கற்பித்தார்கள். இந்நூல்களை யெல்லாம் தாய் மொழியாகிய தமிழிலே கற்பித்ததோடு, இந்நூற் புத்தகங்களைத் தமிழிலே எழுதி வெளியிட்டார்கள். பழைய திண்ணைப் பள்ளிக்கூடங்களில் இத்தகைய புதிய பாட அமைப்புகள் ஏற்படவில்லை. திண்ணைப் பள்ளிக்கூடங்களுக்கும் இந்தப் பள்ளிக்கூடங்களுக்கும் எவ்வளவோ வேறு பாடுகள் இருந்தன. கிறிஸ்துவ மிஷனரிமார் செய்துவந்த கல்வித் தொண்டு இருக்க, ஆங்கில அரசாங்கத்தாரும் புதிய பாடசலைகளை அமைத்து மேல்நாட்டு முறைப்படி கல்வி கற்பித்தார்கள். பாடசாலைகள் மட்டும் அல்லாமல், கல்லூரிகளையும் பல்கலைக் கழகத்தையும் அமைத்தார் கள். ஆங்கில ஆட்சியினர் கிறிஸ்து சமயத்தவர் ஆகலின் அவர் செய்த கல்வித்தொண்டு கிறிஸ்து மதத் தொண்டென்று ஒரு வகையில் கூறலாம். கல்வித்துறை இலாகா1 1854-ஆம் ஆண்டில் அமைக்கப் பட்டது. இந்த இலாகாவின் சார்பாக ஒர் அச்சியந்திரசாலை2 நிறுவி அதன் மூலமாகப் பாடப் புத்தகங்கள் வெளியிடப்பட்டன. வாரச் செய்தித்தாள் ஒன்றையும் இது அச்சிட்டு வந்தது. சில ஆண்டுகளுக்குப் பின்னர், வேறு அச்சியந்திரச்சாலைகள் தோன்றியபடியால் இந்த அச்சியந்திரசாலை 1868-இல் மூடப்பட்டது. ஆனால் பாடப்புத்தகங் களை வெளியிடும்பொறுப்பை இந்த இலாக்காவே 1889-வரையில் ஏற்று நடத்திக்கொண்டு வந்தது. இந்த ஆண்டுக்குப்பிறகு, பாடசாலைப் புத்தகங்களை வெளியிடுவோர் பலர் ஏற்பட்டபடியால், பாடப்புத்தகம் வெளியிடும் பொறுப்பை இந்த இலாக்கா விட்டுவிட்டு, பாடப்புத்தகக் கமிட்டியை3 ஏற்படுத்திக்கொண்டது. இந்தக் கமிட்டியார் தகுதியுள்ள பாடப் புத்தகங்களைப் பாடசாலைகளுக்குச் சிபாரிசு செய்தனர். துண்டுப் பிரசுரங்கள் 1815-ஆம் ஆண்டு சென்னை நகரத்தில் சிறிஸ்துவ மதக் கொள்கைகளைப் பரப்புவதற்காக ஒரு சங்கம்1 நிறுவப்பட்டது. இச்சங்கம், கிறிஸ்துமத சம்பந்தமான துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டு இலவசமாக வழங்கியது, படிப்பதற்குப் புத்தகங்கள் கிடைக்காத அக்காலத்தில் இந்தப் பிரசுரங்களை மக்கள் ஆவலாகப் படித்தனர். 1818-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 29 ஆம் நாள் “சென்னை சமயத் துண்டுப் பிரசுரச் சங்கம்”2 என்னும் சங்கம் நிறுவப்பட்டு அதன் மூலமாகக் கிறிஸ்துமதச் சார்பான தமிழ்த் துண்டுப் பிரசுரங்கள் அச்சிட்டு வழங்கப்பட்டன. 1820-ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் துண்டுப் பிரசுரங்களை அச்சிடுவதற்காகப் பாதிரிமார் முயற்சி செய்தார்கள். அதற்காக அச்சுத் தொழிலாளர் ஒருவரை அமெரிக்கா தேசத்திலிருந்து வரவழைத் தார்கள். அவர் யாழ்ப்பாணம் வந்து சேர்ந்தவுடன் அவரைத் திரும்பிப் போய்விடும்படி கட்டளையிட்டு யாழ்ப்பாணத்துக் கவர்னர் பதினைந்து நாள் தவணை கொடுத்துக் கட்டளையிட்டார். ஆனால், பாதிரிமார் தமது முயற்சியைக் கைவிடவில்லை. அச்சுப் பிரதிகளுக்குப் பதிலாகக் கையெழுத்துப் பிரதிகளை வழங்கத் தொடங்கினார்கள். எழுத்தாணி யினால் பனையேடுகளில் பிரதிகளை எழுதுவித்து அவ்வோலை பிரதிகளைக் கிராமங்களுக்குக் கொண்டுபோய் மக்களுக்கு இலவசமாகக் கொடுத்தார்கள். கையெழுத்தை நன்றாக எழுதக் கூடியவர்களுக்குச் சொற்பக் காசு கொடுத்துப் பிரதிகளை எழுதுவித்து அவர்கள் இந்த ஏட்டுப் பிரசுரங்களை வழங்கினார்கள். 1823 - ஆம் ஆண்டு பெப்ருவரி மாதம் 19 ஆம் நாள் யாழ்ப்பாணத்தில் துண்டுப் பிரசுரசங்கம்3 நிறுவப்பட்டு, ஏராளமான துண்டுப் பிரசுரங்கள் அச்சிட்டு வழங்கப்பட்டன. 1922-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 31 ஆம் நாள் பாளையங்கோட் டையிலும் நாகர் கோயிலிலும் துண்டுப் பிரசுரசங்கங்கள் அமைக்கப்பட்டன. இவ்விரண்டு சங்கங்களும் இணைந்து வேலை செய்தன. இவற்றிற்கு “நாகர்கோவில் சமயத் துண்டுப் பிரசுர சங்கம்”4 என்பது பெயர். 1830-ஆம் ஆண்டு நெய்யூரில் துண்டுப் பிரசுர சங்கம் நிறுவப்பட்டது. 1844-இல் நாகர் கோயில் சங்கமும் பாளையங் கோட்டை சங்கமும் நட்புமுறையில் பிரிந்து தனித்தனியே துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டன. பின்னர், 1855-ஆம் ஆண்டு செய்யூர் சங்கமும் நாகர்கோவில் சங்கமும் ஒன்றாக இணைந்து, தென் திருவாங்கூர் துண்டுப் பிரசுரசங்கம்5 என்னும் பெயருடன் செயலாற்றத் தொடங்கித் துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டன. மதுரையிலிருந்த அமெரிக்கன் மிஷன், தஞ்சாவூர் துண்டுப் பிரசுரசங்கம்6 தரங்கம்பாடி மிஷன் ஆகிய சங்கங்களும் துண்டுப் பிரசரங்களை அச்சிட்டு வழங்கின. இந்தச் சங்கங்கள் வெளியிட்ட ஏராளமான துண்டுப் பிரசுரங் களின் பட்டியலைக் கூறினால் அது மிக நீண்ட பட்டியலாகும். படிக்கும் பழக்கத்தை உண்டாக்கவும், புத்தகங்களை வாங்கிப்படிக்க இயலாதவர்களுக்கு உதவியாகவும் இருந்தன இந்தப் பிரசுரங்கள். சென்ற 19-ஆம் நூற்றாண்டிலே துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டது மல்லாமல் திங்கள் இதழ்கள். வார இதழ்கள், செய்தித்தாள்கள் முதலியவற்றை, முதன் முதலாக வெளியிட்டவர் களும் கிறிஸ்துவர்களே. கிறிஸ்துவர்களின் வெளியீடுகளைக் கண்ட இந்துக்களும் பிறகு வார இதழ், திங்கள் இதழ்களை வெளியிடத் தொடங்கினார்கள். 19-ஆம் நூற்றாண்டில் வெளிவந்த திங்கள் இதழ் வார இதழ்களின் பட்டியலை வேறு இடத்தில் காண்க. பத்திரிகை வெளியீடுகளைச் சென்ற நூற்றாண்டில் முதல் முதலாகத் தமிழில் வெளியிட்டவர்கள் கிறிஸ்துவர்கள். கிறிஸ்துவர் பைபிள் என்னும் விவிலிய நூலையும் கிறிஸ்துமதச் சார்பான வேறு பல நூல்களையும் வசனமாக எழுதி அச்சிட்டார்கள். தமிழ் வசன நடை வளர்ச்சிக்கு ஊக்கம் ஊட்டியவர் கிறிஸ்துவர்களே. தமிழில் மட்டுமல்ல, ஏனைய இந்திய மொழிகளிலே வசன நடையைப் பெரிதும் வளர்த்தவர்களும் அவர்களே. அச்சியந்திரங்கள் அதிகமாகப் பரவிய காரணத்தினால், 19-ஆம் நூற்றாண்டில் வசன நடை நூல்கள் அதிகமாக வெளிவந்தன. கிறிஸ்து மதத்தைப் பரவச் செய்வது நோக்கமாகக் கிறிஸ்துவர் இவற்றையெல்லாம் செய்தார்கள். இந்தத் தொண்டுகள் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கும் வாய்ப்பாக இருந்தன. ஆகவே இதுவும் அவர்கள் செய்த தமிழ்த் தெண்டாகும். சமயக் காழ்ப்பு தமிழ்க் கல்வியில் உயர்நிலை யடைந்த மாணவர்களும் வித்துவான்களும் புலவர்களும் தொல்காப்பியம், பத்துப்பாட்டு, எட்டுத்தொகை முதலிய சங்கநூல்களையும் சிலப்பதிகாரம், மணிமேகலை பெருங்கதை முதலிய சங்ககாலத்து நூல்களையும், சங்க காலத்துக்குப் பிற்பட்ட நூல்களாகிய பதினெண் கீழ்க்கணக்கு, சீவக சிந்தாமணி, சூளாமணி முதலிய நூல்களையும் பயில்வது தொன்று தொட்டு வந்த வழக்கமாகும். ஆனால் இந்த வழக்கம் 18-ஆம் நூற்றாண்டின் இடைப் பகுதியிலிருந்து தடைப்பட்டது. மேற்சொன்ன நூல்களைப் படிக்கக் கூடாதென்று புதிய கருத்து ஒன்று அக்காலத்தில் தோன்றியது. சங்க நூல்களையும் சங்கம் மருவிய நூல்களையும் படிப்பவர் சமயப் பற்றற்றவர் என்றும் வீணர்கள் என்றும் பழிக்கப்பட்டனர். சைவ சமயத்தவர் இந்த நூல்களைப் படிக்கக் கூடாதென்று தடுக்கப்பட்டனர். சமயப் பற்றுக் காரணமாக உண்டான இந்தப் புதிய கருத்து தமிழரின் கலைகளுக்கும் பண்பாட்டுக்கும் பேராபத்தாக இருந்தது. தமிழ் மொழிக்கே ஆபத்தாக இருந்தது. சங்க நூல்களைப் படிக்கக்கூடாதென்ற இயக்கம் நீடித்திருந்து அச்சுப் புத்தகங்களும் அக்காலத்தில் வெளிவராமலிருந்திருக்கு மானால், முன்னரே மறைந்து போன நூல்கள் போக இப்போது கிடைத்துள்ள பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண் கீழ்க்கணக்கு, சிலப்பதிகாரம், மணிமேகலை, பெருங்கதை முதலிய இலக்கியச் செல்வங்களும் மறைந்துபோய், தமிழன் பழைய கலைகளும் பழைய இலக்கியங்களும் இல்லாத வறியவனாக ஆகியிருப்பான். நற்காலமாக அந்தக் குறுகிய நோக்கமுள்ள தவறான கருத்து சென்ற நூற்றாண்டிலேயே தடுக்கப்பட்டு விட்டது. அதனால் நேர்ந்திருக்கக் கூடிய பேராபத்து நீக்கப்பட்டது. இந்தத் தவறான கருத்தைப் பரப்பியவர் 18-ஆம் நூற்றாண்டி லிருந்த சுவாமிநாத தேசிகரும், சிவஞான சுவாமிகளும் ஆவர். மிக அரிதாகச் சங்க நூல்களைப் பயின்றுவந்த சிறுபான்மைப் புலவரையும் அவற்றைப் படிக்காமல் தடுத்தவர் இலக்கணக் கொத்து நூலாசிரி யராகிய சுவாமிநாத தேசிகர். மிகுந்த சைவப் பற்றுடைய தேசிகர், சங்க நூல்களையும் சமண பௌத்த வைணவ இலக்கியங்களையும் படிக்கக் கூடாதென்றும் சைவ நூல்களை மட்டுந்தான் படிக்கவேண்டும் என்றும் வற்புறுத்தி எழுதினார். அந்நூல்களைப் படிப்போரை இகழ்ந்து உரைத்தார். அவர் இயற்றிய இலக்கணக் கொத்து என்னும் நூலின் பாயிரத்தில். 7-ஆம் சூத்திரத்தின் விளக்கத்தில் அவர் இவ்வாறு எழுதியுள்ளார். “மாணிக்க வாசகர் அறிவாற் சிவனே யென்பது திண்ணம். அன்றியும், அழகிய சிற்றம்பல முடையான் (சிவபெருமான்) அவர் (மாணிக்கவாசகர்) வாக்கிற் கலந்திருந்து அருமைத் திருக்கையா லெழுதினார். அப்பெருமையை நோக்காது சிந்தாமணி, சிலப்பதி காரம், மணிமேகலை, சங்கப்பாட்டு, கொங்கு வேண்மாக்கதை முதலியவற்றோடு சேர்த்துச் செய்யுட்களோ டொன்றாக்குவர்.... அம்மட்டோ! இறையனார் அகப்பொருள் முதலான இலக்கணங் களையும், தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, பெரிய புராணம், சிவஞான போதம், சிவஞான சித்தியார், சிவப்பிரகாசம், பட்டணத்துப் பிள்ளையார்பாடல் முதலிய இலக்கியங்களையும் ஒர் பொருளாக எண்ணாது நன்னூல், அகப்பொருள் காரிகை, அலங்காரம் முதலிய இலக்கணங்களையும் பத்துப் பாட்டு, எட்டுத்தொகை, பதினெண் கீழ்க் கணக்கு. இராமன் கதை, நளன் கதை, அரிச்சந்திரன்கதை முதலிய இலக்கியங்களையும் ஒர் பொருளாக எண்ணி வாணாள் வீணாள் கழிப்பர். அவர் இவைகளிருக்கவே அவைகளை விரும்புத லென்னெனின், பாற்கடலுட் பிறந்து அதனுள்ளே வாழு மீன்கள் அப்பாலை விரும்பாது வேறு பலவற்றை விரும்புதல் போல அவரதியற்கை என்க.” இஃது இவருடைய கருத்தைத் தெளிவாகத் தெரிவிக்கிறது. சைவர் சைவசமய நூல்களைத்தான் படிக்க வேண்டும். சமயச் சார்பற்ற சங்க நூல்களையும், சமணர், பௌத்தர், வைணவர் முதலியவர் இயற்றிய இலக்கிய நூல்களையும் படிப்பது கூடாது. அந்நூல்களைக் கற்பது வாழ்நாளை வீணாளாகக் கழிப்பதாகும் என்பது இவருடைய கருத்து. இதே கருத்தை இவர் காலத்தில் இருந்த சிவஞான சுவாமிகளும் வலியுறுத்தினார். சிவஞான சுவாமிகள் தாம் இயற்றிய சோமேசர் முதுமொழி வெண்பாவில். சேக்கிழார் சிந்தா மணிப்பயிற்சி தீதெனவே தூக்கியுப தேசித்தார் சோமேசா-நோக்கில் ‘பயனில்சொல் பாராட்டு டுவானை மகனெனல் மக்கட் பதடி யெனல்’ என்று கூறினார். இதில், சமண சமய நூலாகிய சிந்தாமணி காவியத்தைமட்டும் படிக்கக் கூடாதென்று சொன்னபோதிலும், ஏனைய நூல்களையும் விலக்கியதாகக் கருதப்பட்டது. “சிந்தாமணி என்றது உபலக்கணமா தலின், அதுபோலும் சிலப்பதிகாரம், மணிமேகலை, சூளாமணிப் பயிற்சியும் சைவ வைணவ நன்மக்களுக்கு ஆகா” என்று விளக்கம் கூறப்பட்டது. சிவஞான சுவாமிகளின் மாணவராகிய திருத்தணிகை கச்சியப்ப முனிவர், தம்முடைய மாணவர்கள் சமண சமயக் காவியமாகிய சிவகசிந்தாமணியின் இலக்கியச் சுவையைப் புகழ்ந்து பாராட்டிப் பேசிய படியால், அது பொறாமல் அதைவிடச் சிறந்த சுவையுள்ள நூலை இயற்ற எண்ணித் தணிகைப் புராணம் என்னும் நூலை இயற்றினார் என்னும் வரலாற்றையும் ஈண்டு நினைவு கூர்க. இவர்கள் பதினெட்டாம் நூற்றாண்டில் இருந்தவர்கள். சுவாமிநாத தேசிகர் 18-ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் இருந்தவர். சிவஞான சுவாமிகள் அந்த நூற்றாண்டில் வாழ்ந்து 1785-ஆம் ஆண்டு காலமானார். இவர் மாணவராகிய கச்சியப்ப முனிவர் 1790-ஆம் ஆண்டில் காலமானார். இவர்கள் செல்வாக்கடைந்திருந்த கல்வி வளர்ச்சிக்குத் தாயகமாயிருந்த சைவ மடங்களைச் சேர்ந்த வர்கள். இவர்கள் பரப்பிவந்த இந்தக் கருத்து. சங்க இலக்கியங் களையும் சமண பௌத்த இலக்கியங்களையும் சைவர்கள் படிக்கக் கூடாதென்னும் கொள்கை - அந்தக் காலத்தில் செல்வாக்கடைந் திருந்தது. இவர்களிடம் கல்வி பயின்ற மாணவர்கள் பலரும் இக்கொள்கையை ஆதரித்துப் பின்பற்றினார்கள். சைவமடங்களும் இவர்கள் கொள்கையை ஆதரித்துச் சங்க நூல்களையும் மணி மேகலை சிலப்பதிகாரம் முதலிய இலக்கிய நூல்களையும் மாணவர்களுக்குப் பாடஞ் சொல்வதை நிறுத்திக் கொண்டன. குறுகிய நோக்கத்துடன் சைவ சமயக் கண்கொண்டு பார்க்கிறவர்களுக்குச் சிறந்தாகத் தோன்றுகின்ற இந்தக் கருத்து, பரந்து விரிந்த நோக்கத்துடன் தமிழ்மொழி, தமிழ் இலக்கியம் என்னும் கண்கொண்டு பார்க்கும் போது எவ்வளவு ஆபத்தானது என்பது நன்குதெரியும். தமிழரின் பண்டை நாகரிகம், கலை, பண்பாடுகளை அடியோடு அழித்து ஒழிப்பதற்கு அடிப்படையாக இருந்தது இந்தக் கொள்கை. இந்தக் கொள்கை 19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி வரையில் நிலைத்திருந்தது 18-ஆம் நூற்றாண்டில் தோன்றிய இந்த இயக்கம் நாலைந்து தலை முறைவரையில் ஏறக்குறைய ஒரு நூற்றாண்டுவரையில் நீடித்திருந்தது. இந்தக் குறுகிய தவறான கொள்கையின் காரணமாகவே சில பழந்தமிழ் நூல்கள் மறைந்து விட்டன. மிக அருமையாகச் சிலரிடத்தில் மட்டும் இருந்த ஏட்டுச் சுவடிகள், இந்த இயக்கம் காரணமாக மறைந்துவிட்டன. சிதலாமான ஏட்டிலிருந்து பெயர்த்தெழுதிவைக்காத காரணத்தினால் அவை முழுவதும் அழிந்துவிட்டன. வளையாபதி, தகடூர் யாத்திரை என்னும் நூல்கள் இந்தக் குறுகிய கொள்கை காரணமாக அழிந்துபோன நூல்களாகும். 19-ஆம் நூற்றாண்டிலே தமிழுலகத்திலே தலைசிறந்த ஆசிரியர் என்று உலகப் புகழ்ப்பெற்ற மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்கள், திருவாவடுதுறை ஆதீனத்தின் வித்துவானாக இருந்தார். இவரிடம் பாடம் கேட்டு வித்துவானானவர்கள் பலர். அவர்களுள் உ. வே (பிறகு, டாக்டர்) சாமிநாதையர் அவர் களும் ஒருவர். மாகவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் தம் மாணவர்களுக்குச் சங்க இலக்கியங்களையும் மனிமேகலை சிலப்பதிகாரம் முதலிய நூல்களையும் பாடம் சொல்லவில்லை. ஏனென்றால், அந்த நூல்களைப் படிக்கக்கூடாது என்ற கொள்கை அக்காலத்துச் சைவ மடங்களிலும் புலவர்களிடத்திலும் பரவியிருந்தது. வேறு சைவ வைணப் புலவர்களும் சங்க நூல்களை அக் காலத்தில் பாடஞ் சொல்லவில்லை. சங்க இலக்கியங்களைப் பிற்காலத்தில் அச்சிற் பதிப்பித்த டாக்டர் உ.வே. சாமிநாதையர் அவர்களுக்கும் அக்காலத்தில் சங்கநூல்களின் பெயர் கூடத் தெரியாதிருந்தது என்றால், இந்த நூல்கள் எவ்வளவு கட்டுப் பாடாகத் திட்டமிடப்பட்டுப் புறக்கணிக்கப்பட் டிருந்தன என்பதை யூகித்தறியலாம். டாக்டர் உ.வே. சாமிநாதையருக்குச் சங்க நூல்களைப் பற்றியும் மணிமேகலை, சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி முதலிய காவியங் களைப் பற்றியும் முதல் முதலாகத் தெரிவித்தவர் சேலம் இராமசுவாமி முதலியார் ஆவார், ஐயர் அவர்கள் இதனைத் தமது சரித்திரமாகிய என் சரித்திரத்தில் “என்ன பிரயோசனம்” என்னும் தலைப்பில் நன்கு விளக்கி எழுதியிருக்கிறார். நல்ல காலம் 1880-ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 21-ஆம் நாள் வியாழக்கிழமை யன்று சேலம் இராமசுவாமி முதலியார் என்னும் பெரியாரைக் காணும் வாய்ப்பு உ.வே. சாமிநாதையருக்கு ஏற்பட்டது. அது தமிழிலக்கிய வரலாற்றில் ஒரு நன்னாள். பொன் எழுத்தில் பொறித்து வைக்கவேண்டிய பெருநாள். இது பற்றி ஐயர் அவர்கள் எழுதியுள்ளதைப் படியுங்கள். “அச்சமயம் அரியலூரிலிருந்து சேலம் இராமசுவாமி முதலியார் ரென்பவர் கும்பகோணத்துக்கு முன்சீபாக மாற்றப்பெற்று வந்தார். அவரிடம் நல்லூழ் என்னைக் கொண்டு போய்விட்டது. அவருடைய நட்பினால் என் வாழ்க்கையில் ஒரு புதுத்துறை தோன்றியது. தமிழிலக்கியத்தின் விரிவை அறிய முடிந்தது. அந்தாதி, கலம்பகம், பிள்ளைத்தமிழ், உலா, கோவை முதுலிய பிரபந்தங்களிலும் புராணங்களிலும் தமிழின்பம் கண்டு மகிழ்வதோடு நில்லாமற் பழமையும் பெருமதிப்பு முடைய தண்டமிழ் நூல்களிற் பொதிந்து கிடக்கும் இன்றமிழியற்கையின்பத்தை மாந்தி நான் மகிழ்வதோடு, பிறரும் அறிந்து இன்புறச் செய்யும் பேறு எனக்கு வாய்த்தது” (பக்கம் 727. “என் சரித்திரம்” டாக்டர் உ.வே. சாமிநாதையர், 1950 பதிப்பு.) ஐயரவர்கள் சென்று முதலியாரவர்களைக் கண்ட போது யாரிடம் பாடங் கேட்டீர்கள்?’ என்று முதலியார் கேட்டாராம். மகா வித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை யவர்களிடம் பாடங்கேட்டதாக ஐயர் கூறினாராம். ‘என்ன பாடம் கேட்டீர்கள்?’ என்றாராம் முதலியார். ஐயர் தாம் பாடம் கேட்ட அந்தாதி, பிள்ளைத் தமிழ் கலம்பகம் கோவை, உலா முதலிய நூல்களின் பட்டியலை அடுக்கடுக்காகக் கூறினாராம். இவற்றைக் கேட்ட முதலியார் “இதெல்லாம் படித்து என்ன பிரயோசனம்?” என்று கூறினாராம். அவர் கூறியதைக் கேட்டுத் திடுக்கிட்ட ஐயர் தாம் பாடம் கேட்ட புராணங்களின் பட்டியலையும் நைடதம், பிரபுலிங்க லீலை, இலக்கணநூல்கள் முதலிய வற்றின் பெயர்களையும் கூறிக் கடைசியில் கம்பராமயணத்தைப் பாடங் கேட்டதாகவும் சொன்னாராம். “சரி, அவ்வளவுதானே? பழை நூல்களில் ஏதாவது பாடங் கேட்ட துண்டா?” என்று வினவினார் முதலியார். “தாங்கள் எந்த நூல்களைச் சொல்லுகிறீர்களென்று தெரிய வில்லையே?” என்றார் ஐயர். “சீவக சிந்தாமணி படித்திருக்கிறீர்களா? மணிமேகலை படித்திருக்கிறீர்களா? சிலப்பதிகாரம் படித்திருக்கிறீர்களா?” என்று கேட்டார் முதலியார். இந்நூல்களை யெல்லாம் மடங்களில் படிக்கக்கூடாது, பாடம் சொல்லக் கூடாது என்றிருந்த காலமல்லவா அது? ஐயர் அவர்களுக்கு இவற்றின் பெயர் கூடத்தெரியாதிருந்ததில் வியப்பில்லை. முதலியார் அவர்கள் சிந்தாமனி காவியத்தின் சிறப்பைக் கூறி அதன் பிரதி ஒன்றையும் ஐயரிடம் கொடுத்தார். சங்க இலக்கியங்களைப் பற்றிச் சேலம் இராமசுவாமி முதலி யாரவர்கள் தெரிவித்த செய்திகளும் கொடுத்த சிந்தாமணி ஏட்டுப் பிரதியும் ஐயரவர்களின் மனக் கண்ணைத் திறக்கச் செய்தன. பத்துப்பாட்டு, எட்டுத் தொகை, சிலப்பதிகாரம், மணிமேகலை முதலிய சங்க இலக்கியங்களைப் பெறுவதற்கும் அவற்றை ஆராய்ந்து அச்சிடுவதற்கும் ஐயரவர்களைத் தூண்டி ஊக்கப்படுத்தியது முதலியார் அளித்த சிந்தாமணி ஏட்டுச்சுவடி. 18-ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியிலே சாமிநாததேசிகர், சிவஞான சுவாமிகள் காலம் முதல் ஒரு நூற்றாண்டு காலம்வரையில் இருந்து வந்த சங்க நூல்களையும் பௌத்த காவியங்களையும் கற்றல் கூடாது என்னும் வழக்கத்தைச் சேலம் இராமசுவாமி முதலியார் அவர்கள் உ.வே. சாமிநாதையரைக் கொண்டு தகர்த்தெறிந்தார். அக்கொள்கையை மாற்றவேண்டும் என்னும் எண்ணத்துடன் அவர் செய்ய வில்லை. தற்செயலாக நிகழ்ந்த நிகழ்ச்சி இது. ஆயினும், தமிழ் மொழியின் பழைய இலக்கிய நூல்கள் வாழ்வதற்கு ஏற்ற நற்செயலாக முடிந்தது இது. தமக்குச் சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை முதலிய சங்க இலக்கிய நூல்களை முதன் முதலாக அறிமுகப் படுத்திய சேலம் இராமசுவாமி முதலியார் அவர்கள் காலஞ்சென்றபோது உ.வே. சாமிநாதையர் அவர்கள் மிகவும் மனம் வருந்தினார். “1892-ஆம் வருஷம் மார்ச்சு மாதம் இரண்டாந் தேதி அவர் உலகவாழ்வை நீத்தார். அந்தத் துக்கச் செய்தியைக் கேட்டு நான் துடித்துப் போனேன். அவருடைய பழக்கம் எனக்கு ஏற்பட்டதையும் அதனால் பழந்தமிழ் நூலாராய்ச்சியிலே நான் புகும்படி நேர்ந்ததையும் எண்ணிப் பார்த்தேன். அவருடைய தூண்டுதல் இல்லாவிட்டால் சிந்தாமணியை நான் அச்சிடுவது எங்கே? சங்க நூல்களின் பெருமையை உணர்ந்து இன்புற்று வெளிப்படுத்தும் முயற்சிக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்?” (பக்கம் 969. ‘என் சரித்திரம்’ டாக்டர் உ.வே. சாமிநாதையர் 1950) நற்காலமாக, ஒரு சேலம் இராமசாமி முதலியார் தோன்றி சங்க இலக்கிய நூல்கள் அழிந்து போகாதபடி காப்பாற்றினார். அவர் தோன்றிக் காப்பாற்றியிராவிட்டால் அந்த நூல்களின் கதி என்னவா யிருக்கும்? அவற்றில் பல அழிந்து போயிருக்கும் அல்லவா? கீழ்க்கணக்கு 18-ஆம் நூற்றாண்டிலே சாமிநாத தேசிகரும் மற்றவர்களும் சைவ நூல்களைத் தவிர மற்ற நூல்களைப் படிக்கக் கூடாது என்னும் கருத்தைப் பரப்பிய காரணத்தினாலே, பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் சிலமறைந்து போகும் நிலை 19-ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஏற்பட்டிருந்தது. கீழ்க்கணக்கு நூல்கள் எத்தனை? அவை எவை என்று ஆராய வேண்டிய அளவுக்கு அந்நூல்கள் சென்ற நூற்றாண்டிலே புறக்கணிக்கப்பட்டிருந்தன. நாலடி நான்மணி நானாற்ப தைந்திணைமுப் பால்கடுகம் கோவை பழமொழி மாமூலம் இன்னிலைசொல் காஞ்சியுடன் ஏலாதி யென்பவே கைந்நிலைய வாங்கீழ்க் கணக்கு. என்பது கீழ்க்கணக்கு நூல்களின் பெயரைக் கூறுகிற பழைய வெண்பா. இதில் கூறப்படுகிற நூல்களில் சில எவை என்பதை அறியாமல் சென்ற 19-ஆம் நூற்றாண்டிலே புலவர்கள் ஆராயத் தொடங்கினார்கள். இந்த வெண்பாவில் வரும் ஐந்திணை என்பதைச் சிலர் “ஐந்தொகை” என்று பாடம் ஓதி அதற்கு நெடுந்தொகை (அகநானூறு) என்று பொருள் கூறினார்கள்! இச்செய்யுளில் வரும் முப்பால் என்பது திருக்குறளைக் குறிக்கிறது என்பது அறியாமல், “மூன்று தரும நூல்கள்” என்று கூறினார்கள் சிலர்! கோவை என்பது ஆசாரக் கோவை என்று அறியாமல், மாணிக்கவாசகர் இயற்றிய “திருக்கோவையார்” என்னும் நூல் என்று கருதினர் சிலர்! மூன்றாவது அடியில் உள்ள இன்னிலை சொல் என்பது “காஞ்சி”க்கு அடைமொழி என்பதறியாமல் “இன்னிலை,” “இன் சொல்” என்னும் இரண்டு நூல்களின் பெயர் என்று கூறினர் ஒருசாரார்! அம்மட்டோ! இன்னிலை என்னும் ஒரு போலி நூலைப் புதிதாக உண்டாக்கி, அது ஒரு பழைய நூல் என்று கூறி அச்சிட்டு வெளிப் படுத்தினார்கள். கைந்நிலை என்னும் நூல் அக்காலத்தில் கிடைக்காத படியினால், அப்படி ஒரு நூல் இல்லை என்று கூறினர் சிலர். இது பற்றின விரிவான ஆராய்ச்சியை இந்நூல் ஒழிபியலில் “கீழ்க்கணக்கு நூலாராய்ச்சி” என்னும் தலைப்பில் காண்க. சங்க நூல்களையும் பிற நூல்களையும் படிக்கக் கூடாது என்று தொடங்கப்பட்ட இயக்கத்தினால், இவ்வாறு தமிழ் நூல்கள் மறக்கப்படுவதற்கும் மறைந்து போவதற்கும் இடமுண்டாயிற்று. ஆனால் நற்காலமாக அந்தக் குறுகிய நோக்கமுடைய கொள்கை மறைந்தொழிந்தது. அக்கொள்கை காரணமாகச் சில நூல்கள் மறைந்து போயின என்பதையும் அறியவேண்டும். பாட பேதம் இவையெல்லாம் சமயக் காழ்ப்பினால் உன்டான குறுகிய மனப்பான்மையைக் காட்டுகின்றன. சமயப் பற்றுக் காரணமாக ஏற்பட்ட இந்தக் குறுகிய மனப்பான்மையினால், பாரதம், கம்பஇராமாயணம் முதலிய நூல்களை 19-ஆம் நூற்றாண்டில் ஏட்டுச் சுவடியிலிருந்து அச்சுப் புத்தகமாக அச்சிட்டவர் சிலர், சிவபெருமானுக்கு ஏற்றந் தந்த செய்யுள்களை மாற்றியும் சிதைத்தும் புதுக்கியும் அச்சிட்டனர். சில நூல்களின் முதலில் அருகக் கடவுளுக்கு வாழ்த்துக் கூறிய செய்யுங்களைச் சிலர் எடுத்துப் போட்டு அந்த இடத்தில் விநாயகர் வணக்கப் பாடல் அமைத்துச் அச்சிட்டனர். நிகண்டுகளில் அருகப் பெருமானுக்குக் கூறப்பட்ட செய்யுள்களை மாற்றிவிட்டனர். இவ்வாறு சமயப் பற்றுக் காரணமாகச் சிலர் அச்சுப் புத்தகங்களை அச்சிட்டபோது மாற்றினார்கள். தம்மிடம் பாடம் கேட்க வரும் மாணவர் வேறு மதத்தவராக இருந்தால் அவர்களின் பெயரை மாற்றிவைத்துப் பாடம் சொல்லி யவர்களும் உண்டு. வெங்கடராமன் என்னும் பெயர் கொண்டிருந் தவரை மாணவராக ஏற்றுக்கொள்வதற்கு முன்பு ‘சாமிநாதன்’ என்று புதுப் பெயரைச் சூட்டினார் மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள். அந்தப் பெயருடன் விளங்கியவர்தான் டாக்டர் உ.வே. சாமிநாதையர். சென்னைக் கோமளீசுவரன் பேட்டையில் வாழ்ந்து வந்த உரையாசிரியர் வித்துவான் இராசகோபாலப்பிள்ளை என்னும் வைணவரிடம் மகாவித்துவான் திருமயிலை சண்முகம் பிள்ளை யவர்கள். இளையராக இருந்த காலத்தில், கம்பராமாயணம் பாடம் கேட்கச் சென்றபோது, நெற்றியில் நீறுபூசிக் சண்முகம் என்னும் பெயர் தாங்கியிருந்ததன் காரணத்தினால், கொடிய வைணவரான இராசகோபாலப்பிள்ளை அவருக்குப் பாடம் சொல்ல மறுத்து விட்டாராம். பிறகு. நெற்றியில் திருமண் அணிந்து சண்முகம் என்னும் பெயரை மாற்றி இராமாநுசன் என்று வைத்துக்கொண்டால் இராமாயணம் பாடம் சொல்ல இயலும் என்று கூறினாராம். அதன் படியே (அப்பாடம் முடிகிறவரையில்) செய்து கொண்டு சண்முகம் பிள்ளையவர்கள் பாடங்கேட்டார் என்னும் செய்தி, அக்காலத்தில் சமயக் காழ்ப்பு எவ்வளவு பலமாக இருந்தது என்பதை விளக்குகின்றது. சமயக் காழ்ப்பு தமிழ் இலக்கியங்கள் சில மறைதற்குக் காரணமாக இருந்தன என்பது மேற்கூறிய வற்றால் விளங்கும். அச்சுக்கூடங்கள் 19-ஆம் நூற்றாண்டிலே தமிழ் நூல்களை அச்சிற்பதிப்பித்த அச்சுக்கூடங்களின் பெயரை நாம் அறிந்த வரையில் கூறுவோம், இதனைக் கூறுவதற்கு முன்பு, அச்சுக்கலை எங்கே தோன்றி உலகத்தில் எவ்வாறு பரவியது என்பதைத் தெரிந்துகொள்வது பொருத்த மாகலின் அதன் வரலாற்றைச் சுருக்கமாகக் கூறுவோம். காகிதம் செய்யவும் அச்சடிக்கவும் முதன் முதல் கண்டறிந்தவர் சீன நாட்டினர். சீன நாட்டவரிடமிருந்து அராபியர் இக்கலைகளைத் தெரிந்து கொண்டார்கள். அராபியராகிய முஸ்லிம்கள், பிறகு இக்கலை களைப் பாரசீகம் எகிப்து முதலிய நாடுகளில் பரப்பினார்கள். முஸ்லிம் நாடுகளில் பரவிய இந்தக் கலைகள் பிறகு ஐரோப்பிய நாடுகளில் பரவின. அச்சுக்கலை கி.பி. 15-ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாக் கண்டம் முழுவதும் பரவியது. ஆதிகாலத்தில் அச்செழுத்துக்களைத் தனித்தனியாக அச்சுக் கோத்து அச்சிற் பதிப்பிக்கிற முறை தெரியாது. புத்தகத்தின் ஒவ்வொரு பக்கத்துக்கும் எழுத்துக்களை ‘பிளாக்’ செய்து புத்தகங்களை அச்சிட்டார்கள். எழுத்துக்களைத் தனித்தனியே அச்சுக் கோத்துப் புத்தகம் அச்சிடும் முறையை முதன்முதல் கண்டு பிடித்தவர் ஜெர்மனி தேசத்தவர். அவருடைய பெயர் ஜோஹன் கூட்டன்பெர்க்1 என்பது. அவர் ஜெர்மணி தேசத்து மென்ஸ் நகரத்திலே பிறந்தவர். கி.பி. 1450 வாக்கில் இஸ்த்ராஸ்பர்கு2 நகரத்தில் அவர் அச்சுத்தொழில் நடத்தினார். தனித்தனி அச்செழுத்துக்களை அச்சுக்கோத்துப் புத்தகம் அச்சிடுவதற்கு அவர் வகுத்த அச்சுக்கோப்பு முறை ஜெர்மனி தேசம் முழுவதும் பரவியது. பின்னர் இத்தாலி, சுவிட்சர்லாந்து, பிரான்சு, ஒல்லாந்து, போலந்து முதலிய தேசங்களில் அவருடைய அச்சுக் கோப்புக்கலை 1475-ஆம் ஆண்டுக்குள் பரவியது. பின்னர் டென்மார்க்கு, நார்வே, சுவீடன், இஸ்பெயின், இங்கிலாந்து முதலிய தேசங்களிலும் பரவிற்று. கி.பி. 15-ஆம் நூற்றாண்டின் இறுதியில் அவருடைய அச்சுக் கோப்புக்கலை ஐரோப்பாக் கண்டம் முழுவதும் பரவியது. அமெரிக்காக் கண்டத்தில் மெச்சிக்கோ நகரத்தில் 1539-ஆம் ஆண்டு, முதன் முதல் அச்சியந்திர சாலை அமைக்கப்பட்டது. இந்தியா தேசத்திலே முதன்முதலாக அச்சியந்திரம் நிறுவிய வர்கள் ஐரோப்பியப் பாதிரிமார்கள். அதிலும் தமிழ்நாட்டிலே அவர்கள் முதன் முதலாக அச்சியந்திரசாலை அமைத்துத் தமிழ் மொழியிலே புத்தகங்களை அச்சிட்டார்கள். பாதிரிமார்கள். முதன் முதல் தமிழில் அச்சிட்ட நூல்கள் கிறிஸ்து சமய நூல்களே. தென் இந்தியாவுக்கு அச்சியந்திரங்களைக் கொண்டுவந்த ஐரோப்பியக் சிறிஸ்துவப் பாதிரிமார் தமிழில் அச்செழுத்துக்களை உண்டாக்கினார்கள். (1577 - ஆம் ஆண்டில் கோண்ஸால்வஸ் என்னும் பாதிரியார்) தமிழில் அச்செழுத்துக்களை உண்டாக்கிக் ‘கிறிஸ்துவ வணக்கம்’ என்னும் நூலை அச்சுப் புத்தகமாக அச்சிட்டார் என்பர். மலையாள தேசத்தில் அம்பலக்காடு என்னும் இடத்தில் கி.பி. 17-ஆம் நூற்றாண்டில் அச்சியந்திரசாலை சிறிஸ்துமதப் பாதிரிமாரால் நிறுவப் பட்டது. அதில் தமிழ் நூல்களை அச்சிடுவதற்காக இன்னாசி ஆச்சாமணி3 என்பவர் 1679-ஆம் ஆண்டில் தமிழ் அச்சு எழுத்துக்களை உண்டாக்கினார் என்ப. இலங்கைத் தீவிலும் தமிழ் நூல்கள் அக்காலத்திலே அச்சிடப் பட்டன. அவ்விடத்திலும் பாதிரிமார்களே தமிழ் நூல்களை அச்சிட்டார் கள். இலங்கையில் பரங்கியரும் (போர்ச்சுசீசியர்) அதன் பிறகு ஒல்லாந்தரும் ஆட்சி செய்த காலத்தில் அச்சுக் கூடங்களை நிறுவி னார்கள். பிலிப்பு தெ மெல்லோ என்னும் தமிழ்ப் பாதிரியார் கிரேக்க மொழியிலிருந்து தமிழில் மொழிபெயர்த்த புதிய ஏற்பாடு என்னும் விவிலியவேதம் 1749-இல் இலங்கையில் அச்சிடப்பட்டது. அதன் பிறகு வேறு தமிழ் நூல்களும் அச்சிடப்பட்டன. தஞ்சைக்கு அடுத்த தரங்கம்பாடியில் டேனிஷ்மிஷன் பாதிரிமார்கள் 18-ஆம் நூற்றாண்டில் அச்சியந்திர சாலையை நிறுவினார்கள். ஜெர்மனி தேசத்தவரான ஸீகன்பால்கு ஐயர்4 தரங்கம்படிக்கு வந்து கிறிஸ்து மதப் பிரசாரம் செய்யத் தொடங்கிய போது, தமிழ் அச்சுப் புத்தகங்கள் இல்லாத குறைபாட்டை யுணர்ந்து, தரங்கம்பாடியில் அச்சியந்திரசாலையை அமைக்க முயன்றார். தமக்கும் மற்றவர்களுக்கும் வேண்டிய தமிழ்ப் புத்தகங்களை ஒலைச் சுவடியில் எழுதுவித்துக் கொள்வது அதிகப் பொருள் செலவும் காலதாமதமும் ஆகிறது என்றும், அதிகப் பொருட்செலவும் காலதாமதமும் ஏற்பட்டுங்கூட மிகச் சில பிரதிகள் தான் கிடைக்கின்றன என்றும், ஆகையால் பணச் செலவைக் குறைத்துச் சொற்பகாலத்தில் அதிக எண்ணிக்கையுள்ள புத்தகங்களை அச்சிடுவதற்கு உதவியாக அச்சியந்திரத்தையும் தமிழ் அச்செழுத்துக்களையும் உடனே அனுப்பிவைக்க வேண்டும்மென்றும் ஸீகன்பால்கு ஐயர் இங்கிலாந் திலும் ஜெர்மனியிலும் இருந்த மிஷன் சங்கங்களுக்குக் கடிதம் எழுதினார். அவருடைய வேண்டுகோளுக்கு இணங்கி சிறிஸ்துவ ஞான வளர்ச்சிச் சங்கத்தார்5 அச்சியந்திரத்தையும் தமிழ் அச்செழுத்துக்களையும் 1712-ஆம் ஆண்டில் தரங்கம்பாடிக்கு அனுப்பினார்கள். அவற்றுடன் அச்சுத்தொழில் தெரிந்தவர்களும் வந்தனர். 1713-ஆம் ஆண்டு முதல் தரங்கம்பாடியில் தமிழ் அச்சுப் புத்தகங்கள் அச்சிடப்பட்டன. 18-ஆம் நூற்றாண்டில் புரோட்டஸ்டண்டுக் கிறிஸ்துவரால் நிறுவப்பட்ட தரங்கம்பாடி அச்சுக்கூடத்தில் அச்சிடப்பட்ட கிறிஸ்வத் தமிழ்ப் புத்தகங்கள் பொது ஜனங்களுக்கும் விற்கப்பட்டன. அதற்கு முன்பு கத்தோலிக்கக் கிறிஸ்துவப் பாதிரிகள் நிறுவிய அச்சுக் கூடங்களில் பதிப்பிக்கப்பட்ட புத்தகங்கள் பொதுஜனங்களுக்கு விற்கப்படாமல் பாதிரிமார்களின் உபயோகத்துக்காக மட்டும் கொடுக்கப்பட்டன. மேலே கூறிய இவை எல்லாம் ஐரோப்பியப் பாதிரிமாரால் நிறுவப்பட்ட அச்சுக்கூடங்கள். இந்த அச்சுக் கூடங்களில் கிறிஸ்து மதச்சார்பான புஸ்தகங்கள் அச்சிடப்பட்டன. பழைய தமிழ் இலக்கிய நூல்கள் அச்சிடப் படாமல் ஏட்டுச் சுவடிகளாகவே இருந்தன. 19-ஆம் நூற்றாண்டிலே 1835-ஆம் ஆண்டிலே நமது நாட்ட வரும் அச்சியந்திரசாலைகள் வைக்கலாம் என்னும் சட்டம் ஏற்பட்ட பிறகுதான் நம்மவர் அச்சியந்திரசாலைகளை நிறுவினார்கள். இதன் பிறகுதான் ஒலைச்சுவடிகளாக இருந்த பழைய தமிழ்நூல்கள் அச்சுப் புத்தகங்களாக வெளிவந்தன. புத்தகம் அச்சிடுவது பற்றி இந்த ஆண்டில் அரசாங்கத்து அறிக்கையொன்று வெளியிடப்பட்டது.” 1835-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 3 ஆம் நாள் ஆனரேபில் கவர்னர் செனரலவர்களாலே ஆலோசனை சபையில் விதிக்கப்பட்ட அச்சுச்சட்டம்.” இதற்கு “1835-ஆம் வருஷத்து ஆக்ட் என்னும் 11-ஆவது சட்டம்” என்பது பெயர். இந்தச் சட்டத்தின்படி 1823-ஆம் ஆண்டு கவர்னர் செனரலால் ஏற்படுத்தப்பட்ட சட்டமும் 1825, 1827-ஆம் ஆண்டுகளில் பொம் பாயில் ஏற்பட்ட சட்டங்களும் தள்ளுபடி செய்யப்பட்டன. தள்ளுபடி செய்யப்பட்ட சட்டங்களுக்குப் பதிலாக இந்தப் புதிய சட்டம் ஏற்படுத்தப்பட்டது. இந்தச் சட்டத்தைக் காலத்தவணைப் பதிப்புச் சட்டம் என்றும், புத்தகப் பதிப்புச் சட்டம் என்றும் இரண்டு விதமாகப் பிரிக்கலாம். காலத்தவணைச் சட்டம்:- “சர்க்கார் சமாசாரங்களின் மேல் பிரசித்த செய்திகளாவது யுக்திகளாவது அடங்கியிருக்கிற அச்சிற் பதிப்பித்த எவ்விதமான காலக்கிரம புத்தகங்களையும் பிரசித்தஞ் செய்யக் கூடாதென்று விதிக்கப்பட்டிருக்கிறது. “காலக்கிரமமான அந்தப் புத்தகங்களை அச்சிற் பதிப்பிக் கிறவனும் பிரசித்தஞ் செய்கிறவனும் பிரசித்தம் பண்ணப்படும் அதிகார இடத்தின் மேஜிஸ்திரேட்டுக்கு முன்வந்து வாக்குமூலத்தை எழுதிக் கையெழுத்துப் பண்ணிக் கொடுக்கவேண்டும். எப்படி யென்றால், ‘இன்னானாகிய நான் இந்த இடத்தில் அச்சுப் பதிப்பித்த அல்லது பிரசித்தம் பண்ணின அல்லது அச்சுப் பதிப்பித்துப் பிரசித்தம் பண்ணின இன்ன பெயரையுடைய காலக்கிரம புத்தகங் களை அச்சிற் பதிப்பித்தவன் அல்லது பிரசித்தம் பண்ணினவன் அல்லது அச்சுப் பதித்துப் பிரசித்தம் பண்ணினவன்’ என்று வெளியிடவேண்டும்.” இந்த நிபற்தனைக்கு மாறுபட்டால் 5000 ரூபாய்க்கு மேற்படாத தொகை அபராதமும் 2 ஆண்டுக்கு மேற்படாத காவல் தண்டனையும் விதிக்கப்படும். புத்தகப் பதிப்புச் சட்டம்:- “கம்பினியாருடைய தேசங் களுக்குள்ளே மேற்சொன்ன 1835-ஆம் வருசம் செப்டம்பர் மாதம் 15ஆம் தேதிக்குப் பிறகு அச்சுப் பதிப்பிக்கப் பட்ட எல்லாப் புஸ்தகமும் காகிதமும் அச்சுப் போடுகிறவனுடைய பெயரையும் பிரசித்தம் பண்ணுகிறவனுடைய பெயரையும் அச்சுப் போட்டுப் பிரசித்தம் பண்ணுகிற இடத்தையும் அதன் மேல் தெரியும்படிக்கு அச்சுப் போட்டிருக்கவேண்டும். இந்த விதிக்கொத்த படிக்கில்லாமல் வேறே விதமாக யாதொரு புஸ்தகத்தை கடிதாசியை எவனாவது அச்சுப் போட்டதாய் அல்லது பிரசித்தம் பண்ணினதாய் ருசுவானால் 500 ரூபாய்க்கு மேற்படாத தொகையை அபராதத்தினாலேயுந் தெண்டிக்கப்படுவானென்று விதிக்கப் பட்டிருக்கிறது.” இந்தச் சட்டத்தின் முழு விவரம் 1835-ஆம் ஆண்டு வெளியான Fort St. George Gazette-இல் தமிழிலும் ஆங்கிலம் முதலிய மொழிகளிலும் வெளியிடப் பட்டிருக்கிறது. இந்தச் சட்டத்தில் கூறியுள்ளபடியே அக்காலத்தில் அச்சிடப்பட்ட புத்தகங்களின் முகப்புப் பக்கங்கள் அச்சிடப்பட்டுள்ளன. அவற்றின் மாதிரி ஒன்றைப் படத்தில் காண்க. எழுதா எழுத்து அச்சுப் புத்தகங்கள் வந்தவுடனே ஏட்டுச் சுவடிகள் மறைந்துவிடவில்லை. 19-ஆம் நூற்றாண்டிலே ஏட்டுச் சுவடிகளும் அச்சுப் புத்தகங்களும் இரண்டும் வழக்கத்தில் இருந்தன. பின்னர் 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மெல்ல மெல்ல ஏட்டுச் சுவடிகள் மறைந்து அச்சுப் புத்தகங்கள் நிலைபெற்றன. அச்சு எழுத்தை எழுதா எழுத்து என்று கூறினர் சென்ற நூற்றாண்டிலிருந்த புலவர்களான அஷ்டாவதானம் சபாபதி முதலியாரும் திருத்தணிகை விசாகப் பெருமாளையரும். 1858-ஆம் ஆண்டு சாமுவேல் என்பவர் தொல்காப்பிய நன்னூல் என்னும் இலக்கணத்தை அச்சிற்பதிப்பித்தபோது, அதற்குச் சிறப்புப் பாயிரம் அளித்த புரசை அஷ்டாவதானம் சபாபதி முதலியார், இந்நூல் இயற்றி எழுதா எழுத்தில் பன்னூல் நெறியிற் பதித்து நல்கினான்’ என்று கூறினார். ப. அரங்கசாமிப்பிள்ளை அவர்கள் 1883-ஆம் ஆண்டில் முதன் முதலாகச் சீவக சிந்தாமணியை அச்சுப் புத்தகமாக வெளியிட்டார். அந்தப் பதிப்புக்குச் சாற்றுகவி அளித்த மேற்படி முதலியார் அவர்கள். “கனக சபைமால் தனதுநல் லுதவியால் எழுதா வெழுத்தில் இயைவித் தனனால்” என்று கூறினார். கவிராஜசேகரர் ஆரோக்கிய நாயகர் என்பவர் “தேம்பாவணிக் கீர்த்தனை” என்னும் நூலை இயற்றி 1857-ஆம் ஆண்டு சென்னையில் அரங்கேற்றினார். அந்நூலை ஞானாதிக்க நாயகர் அச்சிற் பதிப்பித்தார். அந்நூலுக்குச் சாற்றுகவி நல்கிய திருத்தணிகை விசாகப் பெருமாளையர் அவர்கள், அச்செழுத்தை எழுதா எழுத்து என்று கூறினார். “மருவார் தம்மைப் புறங்கண்டோன் மாரவேளின் எழில்கொண்டோன். மாண்பார் ஞானாதிக்கவியப்பேர் மகிபன் எழுதா வெழுத்ததனிற் பெருகார் வத்திற் பொறித்தளித்தான் பிறங்கு நிலத்தில் வாழ்வோர்கள் பேணி மகிழ்ச்சி யுளந்தன்னிற் பிறந்து களிப்பிற் சிறந்துறவே” என்பது அவர் வாக்கு. ஏட்டுச் சுவடிகளாயிருந்த தமிழ் நூல்களைச் சென்ற 19-ஆம் நூற்றாண்டில் முதன் முதலாக அச்சிற் பதிப்பித்த பதிப்பாசிரியர்கள் தாண்டவராய முதலியார், இராமச்சந்திர கவிராயர், முகவை இராமாநுச கவிராயர், கொட்டையூர் சிவக்கொழுந்து தேசிகர், திருத்தணிகை விசாகப் பெருமாளையர், களத்தூர் வேதகிரி முதலியார், ஆறுமுக நாவலர், மகாவித்துவான் திருமயிலை சண்முகம் பிள்ளை, தில்லை யம்பூர் சந்திரசேகரக் கவிராச பண்டிதர், வீராசாமி செட்டியார், ராவ் பகதூர் சி.வை. தாமோதரம்பிள்ளை, டாக்டர் உ.வே. சாமிநாதஐயர் முதலியவர்கள். ஏட்டுச் சுவடியாக இருந்த பழந்தமிழ் நூல்கள் சென்ற நூற்றாண்டில் முதன் முதலாக அச்சிற் பதிப்பிக்கப்பட்டன என்பது உண்மை. ஆனால், எந்தெந்த நூல்கள் யார் யாரால் முதன்முதல் அச்சிடப்பட்டன என்பதற்கு முறையாக எழுதப்பட்ட குறிப்புகளோ வரலாறுகளோ கிடையாது சென்ற நூற்றாண்டில் முதன் முதல் அச்சிடப்பட்ட பிரதிகள் பெரும்பாலும் இப்போது மறைந்து விட்டன. இதனை தெளிந்து கண்டுபிப்பதே ஓர் ஆராய்ச்சியாகும். முதன் முதல் அச்சியந்திரம் வந்த 16-ஆம் நூற்றாண்டிலேயே ஏட்டுச் சுவடிகள் அச்சிடப்பட்டிருக்குமானால், பல நூல்கள் மறைந்து இருக்கமாட்டா. 16-ஆம் நூற்றாண்டுக்கும் 19-ஆம் நூற்றாண்டுக்கும் இடையே பல ஏட்டுச் சுவடிகள் மறைந்து போயின. தகடூர் யாத்திரை, தத்தாத்திரேயப் பாட்டியல், ஊசிமுறி முதலில் நூல்கள் இக்காலத்தில் மறைந்துபோன நூல்களைச் சேர்ந்தவை. புலவர் பரம்பரையில் வந்தவர்கள் எல்லோரும் புலவர் அல்லர். அந்தப் பரம்பரையில் கல்வியருமையறியாத பதர்களும் இருந்தனர். இவர்கள் நூல்களின் பெருமையறியாமலும், பழுதான அருமை நூல்களைப் பிரதி எழுதி வைக்காமலும் இருந்தனர். அன்றியும் பதினெட்டாம் பெருக்கில் தம் வீட்டு ஏடுகளைக் கொண்டு போய் வெள்ளத்தில் போடுகிற வழக்கமும் இவர்களிடம் இருந்தது. சிதைந்துபோன ஏட்டுச் சுவடிகளை, அவற்றின் அருமை தெரியாமல், அடுப்பில் போட்டு நெருப்பில் இட்டுக் கொளுத்தியவர்களும் உண்டு. இவ்வாறு அழிந்து போன நூல்கள் பல. அக்காலத்தில் அச்சியந்திரம் இருந்து பழைய நூல்கள் அச்சிடப்பட்டிருந்தால் பல நூல்கள் அழிந்திராமல் உயிர் பெற்றிருக்கும். அச்சுப் புத்தகம் உள்ள இந்தக் காலத்தில் புத்தகத்தின் அருமை பெருமை தெரிவதில்லை, காசு கொடுத்தால் புத்தகம் கிடைக்கும் என்னும் நம்பிக்கையினால். அச்சுப் புத்தகம் இல்லாத காலத்தில் ஏட்டுச் சுவடிகள் எவ்வளவு மதிப்பு வாய்ந்தவை என்பது நம்மவரில் பலருக்குத் தெரியாது. பெர்ஸிவல் ஐயர் என்னும் மேல் நாட்டவர் நமது நாட்டுக்கு வந்து 1835-ஆம் ஆண்டுக்கு முன்பு வீரமா முனிவர் எழுதிய சதுரகராதியின் ஓலைச் சுவடிப் பிரதியை விலைக்கு வாங்கியபோது பத்துப்பவுன் (ஏறக்குறைய நூற்றைம்பது ரூபாய்) கொடுத்து வாங்கியதாகவும், அதே சதுரகராதி அச்சுப்புத்தகமாக வெளிவந்தபோது அது 2½ ஷில்லிங்குக்கு (ஏறக்குறைய 1 ரூபா 14 அணா) விற்கப்பட்டது என்றும் கூறியுள்ளார். இதிலிருந்து ஏட்டுச் சுவடிக்கும் அச்சுப்புத்தகத்துக்கும் விலையில் உள்ள வேறுபாட்டைத் தெரிந்து கொள்ளலாம். ஏட்டுச் சுவடிகளைப் பெறுவது கடினமானதும் அதிகப் பொருட் செலவுள்ளதுமாக இருந்தபடியினாலே, ஜைனர்கள் (சமண சமயத்தவர்) ‘சாஸ்திரதானம்’ என்னும் ஒரு முறையைத் தமது சமயக் கொள்கையாகக் கொண்டிருந்தார்கள். சாஸ்திரதானம் என்பது, செல்வம் படைத்த ஜைன சமயப் பிரபுக்கள் தமது இல்லங்களில் நிகழ்கிற திருமணம் முதலிய நிகழ்ச்சிகளில், ஜைன சமய நூல்களில் சிலவற்றைப் பல படிகள் எழுதுவித்து, அவற்றைத் தகுந்தவர்களுக்குத் தானமாக வழங்குவது ஆகும். நூல்களை ஏட்டுச் சுவடிகளாகப் படி எழுதுவிப்பது அதிகப் பொருட்செலவுள்ள காரியம். ஏட்டுச் சுவடி எழுதி முடிப்பதற்கு பல நாட்கள் செல்லும். அவர்களுக்குத் தக்க ஊதியந்தரவேண்டும். இதிலிருந்து ஏட்டுச் சுவடிகள் எழுதிவைப்பதன் அருமை உணரலாம். 18,19-ஆம் நூற்றாண்டுகளிலே சிலப்பதிகாரம், மணிமேகலை, சிந்தாமணி, சூளாமணி, பெருங்கதை முதலிய நூல்களைப் படிக்கக் கூடாது என்னும் கொள்கை (சைவ வைணவர்களிடம்) பரவியிருந்தது. காரணம் இவை சமண பௌத்த சமய நூல்கள் என்பது, சமயக் காழ்ப்புக்கு இடமில்லாத எட்டுத் தொகை, பத்துப்பாட்டு முதலிய நூல்களையும் படித்தல் கூடாது என்னும் கொள்கையும் சென்ற நூற்றாண்டில் இந்துக்களிடையே (சைவ வைணவர்களுக்குள்ளே) இருந்து வந்தது. இதனாலே, இந்த நூல்கள் மறைந்துபோகும் நிலைமையும் ஏற்பட்டிருந்தது. நற்காலமாக, சேலம் இராமசாமி முதலியாரின் வற்புறுத்தலினாலும் தூண்டுதலினாலும் உ.வே. சாமிநாதையர் அவர்கள் இந்நூல்களில் சிலவற்றை அச்சிற் பதிப்பித்து வெளியிட்டார். இதுபற்றி முன்னமே இந்நூலில் மற்றோரிடத்தில் விரிவாகக் கூறியுள்ளேன். ஏட்டுச் சுவடிகளில் காற்புள்ளி, அரைப்புள்ளி முற்றுப் புள்ளி, வினாக் குறி முதலிய குறியீடுகள் கிடையா. அச்செழுத்து வந்த காலத்தில் இக் குறிகள் மேல் நாட்டிலிருந்து பெறப்பட்டன. நிட்டானு பூதி என்னும் நூலுக்கு முத்துக் கிருஷ்ண பிரம்மம் என்பவர் உரை எழுதினார். இவ்வுரை 1875-இல் சென்னை பூமகள் விலாச அச்சுக் கூடத்தில் அச்சிடப்பட்டது. அந்நூலில் அச்சுக் குறியீடுகளைப் பற்றி “இந்நூலுரையிலே காட்டப்பட்ட குறிகள்” என்னும் தலைப்பில் இவ்வாறு எழுதப்பட்டிருக்கிறது. இம்முளை கூட்டுச் சொல் முதலியவற்றின் பின்னும், - இச்சிறு கீற்றுச் சொற்களின் பிரிவுக்குப் பின்னும், - இப்பொருங் கீற்றுப் பாதசாரத்துக்குப் பின்னும், ( ) இவ்விருதலைப் பிறை வருவிக்கப்பட்ட சொற்களுக்கும், இக்குத்து முற்றுச் சொல்லுக்குப் பின்னும், இவ்விருதலைப் பகரந் தாத்பரியத்துக்கும், இத்தாரகை அடியிற் காட்டப் பட்டவற்றிற்கும் வைக்கப்பட்டன. சென்ற நூற்றாண்டிலே வெளியான அச்சுப் புத்தகங்களின் முகப்பிலே அச்சுக் கூடத்தின் பொறுப்பாளர், அல்லது உரிமையாளர் பெயர்களும் பெரிய எழுத்தில் அச்சிடப்பட்டன. நூலாசிரியர் பெயரைவிட அச்சுக்கூடத் தலைவர் பெயர் பெரிய எழுத்தில் அச்சிடப்பட்டது. சில அச்சுப் புத்தகங்களில் அச்சுக் கோத்தவரின் பெயரும் அச்சிடப்பட்டன. 19-ஆம் நூற்றாண்டிலே தமிழ்ப் புத்தகங்களை அச்சிட்டு வெளிப்படுத்திய அச்சுக் கூடங்களின் முழுப்பட்டியல் நமக்குக் கிடைக்கவில்லை. இயன்றவரையில் தேடிக் கண்டுபிடித்த பெயர் களைக் கீழே தருகிறேன். அச்சுக்கூடத்தின் பெயர் இடம், முகவரி உரிமையாளர் பெயர் முதலியன அமெரிக்கா மிசியோன் அச்சுக்கூடம் சென்ன பட்டணம். அத்தீனியம் அண்டு டேலி நியூஸ் மலைச்சாலை, சென்ன பிராஞ்சு அச்சுக்கூடம் பட்டணம். அஷ்ட லஷுமி அச்சுக்கூடம் சென்ன பட்டணம். அல்பீனியன் அச்சுக்கூடம் சென்ன பட்டணம். ஆலிகலாநிதி அச்சுக்கூடம் சென்ன பட்டணம். ம. வெங்கடசாமி நாயகர். ஆதிவித்தியா விலாச முத்திராக்ஷரசாலை சென்னை. ஆரியா முத்தமிழ் வாணி பீடம் அச்சுக்கூடம் சென்ன பட்டணம், ஆரியப் பிரகாசினி திருநெல்வேலி அச்சுக்கூடம் இந்து அச்சுக்கூடம் சென்ன பட்டணம், ஆர்மீனியன் வீதி, நெ. 13. இந்து தியாலஜிகல்யந்திர சாலை சென்ன பட்டணம். இந்து நீதி யச்சுக்கூடம் 93, நெ. வீடு, அண்ணாபிள்ளைத் தெருவு, சென்ன பட்டணம். மயிலை, அருணாசல முதலியார். இந்து யூனியன் சென்ன பட்டணம். அச்சுக்கூடம் இராமசாமி முதலியார். இந்து வித்தியா நிலய தாஞ்சாவூர். அச்சுக்கூடம் கன்னைய செட்டியார். இலட்சுமீ விலாச தண்டையார்பேட்டை, சென்ன அச்சுக்கூடம் பட்டணம், பு.சு. கிருஷ்ணசாமி பிள்ளை. இலக்கணக் களஞ்சிய 103-நெ. அவதானம் பாப்பையர் அச்சுக்கூடம் தெரு, சூளை, சென்ன பட்டணம். உவிக்கடர் பிரஸ் 161, பிராட்வே சென்னபட்டணம். ஏஷியாடிக் அச்சுக்கூடம் சென்ன பட்டணம். கம்மர்ஷியல் அச்சுக்கூடம் சென்ன பட்டணம். கல்விக்கடல் அச்சுக்கூடம் சென்ன பட்டணம். திருவண்ணா மலை வீரபத்திரையர். கல்வி விலாச அச்சுக்கூடம் சென்ன பட்டணம். திருத்தணிகை விசாகப்பொரு மாளையர் கல்வி விளக்க அச்சுக்கூடம் சென்ன பட்டணம். திருத்தணிகை கந்தசுவாமி ஐயர். கல்விப் பிரவாக பச்சையப்ப பெருமாள் நாயகர், அச்சுக்கூடம் சென்னை. கலாசார அச்சுக்கூடம் புதுவை, கோந்துரோல், பூ.ரா. பரமகுரு அரங்கநாத முதலியார். கலா ரத்நாகரம் சென்ன பட்டணம். கலாவர்த்தன அச்சுக்கூடம் சபையார், ஊ. புஷ்பரத செட்டியார். கலைமாது விளக்கம் 23. நம்மாழ்வார் தெரு, சென்ன பிரஸ் பட்டணம், கனகராய முதலியார். கலாநிதி அச்சுக்கூடம் சென்ன பட்டணம், பால்குரிசி பா. குமாரையர். கிருபாலட்சுமி விலாச நெ. 17, தாண்டவராய பிள்ளை அச்சுக்கூடம் வீதி, சென்ன பட்ணம், அமரம்பேடு கிருஷ்ணசாமி முதலியார். சண்முக விலாச அச்சுக்கூடம் சென்ன பட்டணம். சரஸ்வதி அச்சுக்கூடம் சென்ன பட்டணம். சரஸ்வதி விலாச சென்ன பட்டணம். சதுரங்கப் அச்சுக்கூடம் பட்டணம் அண்ணாமலை முதலியார். சற்குணாநிதி அச்சுக்கூடம் சென்ன பட்டணம். வரதராஜுலு நாயுடு. சிரோன்மணி விலாச சென்ன பட்டணம். அச்சுக்கூடம் பி. நா. சிதம்பர முதலியார். சிடி பிரஸ் 13. அர்மீனியன் தெரு, சென்ன பட்டணம். சி. பாஸ்டர் அச்சுக்கூடம் சென்ன பட்டணம். சி.கே.எஸ். பிரஸ் வேப்பேரி, சென்ன பட்டணம். சுலக்ஷண சாதர முத்திராக்ஷர சாலை திருநெல்வேலி. சென்ட்ரல் பிரஸ் சென்ன பட்டணம். சென்னை அமெரிக்கன் தங்கசாலை வீதி, பெத்து நாயக்கன் அச்சுக்கூடம் பேட்டை, சென்ன பட்டணம். ஞானோற்பன புதுவை, தமிழுபாத்தியாயர் அச்சுக்கூடம் ஆரோக்கியசாமி பிள்ளை. தத்துவபோதினி சென்தோம், மயிலாப்பூர், அச்சுக்கூடம் சென்ன பட்டணம். தயாநிதி அச்சுக்கூடம் சென்ன பட்டணம். திராவிட ரத்தினாகரம் சூளை, சென்ன பட்டணம். அச்சுக்கூடம் இராசகோபால செட்டியார். திவாகர முத்திராட்சர தஞ்சாவூர், மாதுசாமி சாலை சூரியவம்சி. தேசாபிமானி அச்சியந்திரசாலை கூடலூர். தேவகாருணிய அச்சுக்கூடம் நாகர்கோயில். (Provident Press) நிரஞ்சன விலாச அச்சுக்கூடம் சென்ன பட்டணம். நியூட்ரல் அச்சுயந்திரச் கௌல் பஜார், பல்லாரி. சாலை பண்டித மித்திர யந்திர சென்ன பட்டணம். ஈக்காடு சாலை இரத்தின முதலியார். பரப்பிரம முத்திராட்சர திருவொற்றியூர், சென்னை. சாலை பரசுராம முதலியார். பிரபாகர அச்சுக்கூடம் 53, மோப்பேர் சாமிநாயக்கன் வீதி, சிந்தாதிரிப்பேட்டை, சென்னை, நாராயணசாமி முதலியார். பூமகள் விலாச சென்ன பட்டணம். அமரம்பேடு அச்சுக்கூடம் இரங்கசாமி முதலியார். பூரண சந்திரோதய சிந்தாதிரிப்பேட்டை, சென்னை. அச்சுக்கூடம் இராசரத்தின முதலியார். மதராஸ் ரிப்பன் சென்ன பட்டணம். இரத்தின அச்சியந்திர சாலை செட்டியார். மட்டுவார் குழலாம்பாள் திரிசிரபுரம், புத்தக வியாபாரம் அச்சுக்கூடம் தி. சபாபதி பிள்ளை. மனோன்மணி விலாச மிசியோன் அச்சுக்கூடம் வேப்பேரி, சென்ன பட்டணம். மிமோரியல் அச்சுக்கூடம் தம்பு செட்டித் தெரு, சென்ன பட்டணம். முத்தமிழ் விளக்க (சென்ன பட்டணம், பெத்து அச்சுக்கூடம் நாயக்கன் பேட்டையில் செங்காங்கடைக்கடுத்த முல்லா வீதியில் மேலண்டை வாடையில் 18-ஆவது நெ. வீடு) வளவனூர் முத்துசாமி முதலியார் முத்தமிழாகர ஆச்சுக்கூடம் திருநெல்வேலி. முத்தமிழ் மணிப் சென்ன பட்டணம். வீராசாமி பிரவாள அச்சுக்கூடம் நாயகர். மெய்ஞ்ஞான விளக்க சென்ன பட்டணம். பாரிப் அச்சுக்கூடம் பாக்கம் முனியப்பமுதலியார். ரவணா அச்சுக்கூடம் ----- வச்சிர யந்திர சாலை யாழ்ப்பாணம், மயிலாட்டி மு. நெல்லையா பிள்ளை. வர்த்தமான தரங்கணி குச்சிலிக்கடைத் தெரு, சென்ன அச்சுக்கூடம் பட்டணம். வாணி நிகேதன சென்ன பட்டணம். ஆறுகாடு அச்சுக்கூடம் முத்தியாலு நாயகர். வித்தியானுபாலன தங்கசாலைத் தெரு, சென்ன யந்திரசாலை பட்டணம், நல்லூர் ஆறுமுக நாவலர். வித்தியா வர்த்தனி அச்சுக்கூடம் சென்ன பட்டணம். விவேக ஞானசாகர திரிசிரபுரம், சொக்கலிங்கம் அச்சுக்கூடம் பிள்ளை. வி. என். ஜூபி அச்சுக்கூடம் சென்ன பட்டணம். வேதாந்த வித்தியா விலாச அச்சுக்கூடம் சென்ன பட்டணம். ஸ்காட்டிஷ் பிரஸ் சென்ன பட்டணம். ஸ்டார் ஆப் இந்தியா பிரஸ் சென்ன பட்டணம். ஹோபார்ட் பிரஸ் சென்ன பட்டணம். ஜீவகாருண்ய அச்சுக்கூடம் சென்ன பட்டணம். ஜீவரட்சாமிர்த சென்ன பட்டணம். குளத்தூர் அச்சுக்கூடம் வேலு முதலியார். ஸ்ரீ ரஞ்சினி அச்சுக்கூடம் ----- ஸ்ரீ வாசவாம்பா சரஸ்வதி தீபிகை முத்திராட்சா சாலை சென்ன பட்டணம். ஏட்டுச்சுவடியும் அச்சுப் புத்தகமும் தொன்றுதொட்டு நூல்கள் எல்லாம் பனை ஒலைகளில் எழுதப்பட்ட ஏட்டுச் சுவடிகளாக இருந்தன. ஏட்டுச் சுவடிகளாக இருந்த பழைய தமிழ் நூல்கள் முதல் முதலில் அச்சுப் புத்தகமாகப் பதிப்பிக்கப்பட்டன. சென்ற பத்தொன்பதாவது நூற்றாண்டிலே தான். 19-ஆம் நூற்றாண்டுக்கு முன்பே 16, 17, 18-ஆம் நூற்றாண்டு களிலே அச்சு இயந்திரங்கள் நமது நாட்டில் வந்திருந்தபோதிலும், அந் நூற்றாண்டு களில் பழைய தமிழ் இலக்கிய நூல்கள் அச்சிடப்படாமல், கிறிஸ்துவ சமய நூல்கள் மட்டும் அச்சிற் பதிப்பிக்கப்பட்டன. அந்தக் காலத்தில் அச்சியந்திரங்கள் கிறிஸ்துவப் பாதிரிமாரிடத்திலும் போர்ச்சுகீசு, பிரான்சு, ஆங்கில ஆட்சியாளரிடத்திலும் இருந்தன: நம் நாட்டவர் கையில் அச்சு இயந்திரங்கள் அக் காலத்தில் இல்லை. ஆகவே, அந்த நூற்றாண்டுகளில் பழைய தமிழ் நூல்கள் அச்சிற் பதிப்பிக்கப்பட வில்லை, 19-ஆம் நூற்றாண்டிலே, கி.பி. 1835-ஆம் ஆண்டில் சுதேசிகள் அச்சியந்திரம் வைக்கக் கூடாது என்னும் தடை நீக்கப்பட்டு, இந்நாட்டினரும் அச்சியந்திரம் வைக்கலாம் என்னும் உரிமை கிடைத்த பிறகு, நம்மவரும் அச்சியந்திரம் நிறுவி, ஏட்டுச் சுவடிகளாக இருந்த பழைய நூல்களையும் புதிய நூல்களையும் அச்சிற் பதிப்பிக்கத் தொடங்கினார்கள். அச்சியந்திரங்களை இந்துக்கள் வைத்த உடனே எல்லா ஏட்டுச் சுவடிகளும் திடீரென்று அச்சுப் புத்தகங்களாக வெளிவந்துவிட வில்லை. ஏட்டுச் சுவடிகளும் திடீரென்று மறைந்துவிடவில்லை. 19-ஆம் நூற்றாண்டிலே அச்சுப் புத்தகங்களும் ஒருபுறம் வெளிவந்து கொண்டிருந்தன. அதே சமயத்தில் ஏடும் ஏழுத்தாணியும் இருந்து வந்தன. பிறகு, மெல்ல மெல்ல, இரண்டு மூன்று தலைமுறை களுக்குப் பிறகு, ஏட்டுச் சுவடிகள் எழுதும் பழக்கம் மறைந்துபோய், அச்சுப் புத்தகங்கள் நிலைபெற்றுவிட்டன. இப்போது, ஏடும் எழுத்தாணியும் காட்சி சாலையில் காட்சிப் பொருள்களாக இடம் பெற்று விட்டன. எழுதா எழுத்து அச்சு எழுத்தை எழுதா எழுத்து என்று கூறினார்கள் அக் காலத்துப் புலவர்கள். இது பற்றி இந்நூல் 94, 95-ஆம் பக்கங்களில் கூறியுள்ளேன். சென்ற நூற்றாண்டிலே ஸ்ரீ தயாநிதி அச்சுக்கூடத்தில் அவிநாசிப் புராணத்தை அச்சிட்டபோது அதற்குச் சிறப்புப் பாயிரம் அளித்த கோயம்புத்தூர் காலேஜ் தமிழ்ப் பண்டிதர் கும்பகோணம் சபாபதி பிள்ளையவர்கள் அச்செழுத்தை எழுதா எழுத்து என்று கூறினார். “மானுடப் பிறவி தானடைந் ததற்குப் புனைபய னிதுவென மனமதி னினைவுறீஇ வழுவி லதனை யெழுதா வெழுத்தில் இட்டெவ்வுலகும் எட்ட விரித்தனன்” என்பது அச்சிறப்புப் பாயிரத்தின் பகுதி. எழுதா எழுத்து என்பது ஊராக் குதிரை, துவ்வா நறவு, நூலாக் கலிங்கம், மிதியாச் செருப்பு, வாடா வஞ்சி என்பன போல அமைந்திருப்பது காண்க. பதிப்பாசிரியர்கள் ஏட்டுச் சுவடிகளாக இருந்த பழைய தமிழ் நூல்களை முதல் முதலாக அச்சிற் பதிப்பித்தவர்களின் பெயர்கள் இப்போது மறக்கப் பட்டுள்ளன. மறக்கப்பட்ட அவர்களின் பெயரை, நான் அறிந்த வரையில் குறிப்பிடுகிறேன். சென்னைக் கல்விச் சங்கத்தின் வாரியஸ்த ராக இருந்த முத்துசாமிப் பிள்ளை (? - 1840), புதுவை நயனப்ப முதலியார் (1779-1845), சென்னைக் கல்விச் சங்கத்தின் தலைமைத் தமிழ்ப் புலவராக இருந்த தாண்டவராய முதலியார் (? -1850), இயற்றமிழாசிரியர் முகவை இராமாநுசக் கவிராயர் (?-1852), களத்தூர் வேதகிரி முதலியார், வீர சைவராகிய திருத்தணிகை விசாகப் பெருமாளையர், கோட்டையூர் சிவக் கொழுந்து தேசிகர், தில்லை யம்பூர் சந்திரசேகரக் கவிராசபண்டிதர், மகாவித்துவான் மயிலை சண்முகம் பிள்ளை, இராவ்பகதூர் சி.வை. தாமோதரம் பிள்ளை முதலியோர். உ.வே. (பின்னர் டாக்டர்) சாமிநாதையர் சென்ற நூற்றாண்டின் இறுதியில் ஏட்டுச் சுவடிகளை அச்சிடத் தொடங்கினார். 19-ஆம் நூற்றாண்டிலே பழைய ஏட்டுச் சுவடிகள் அச்சுப் புத்தகமாகப் பதிப்பிக்கப்பட்டமையாலே பல தமிழ் நூல்கள் அழிந்து போகாமல் உயிர் பெற்றுள்ளன. சுதேசிகள் தம் நூல்களை அச்சிடுவதற்கு இன்னும் ஒரு நூற்றாண்டு தாமதப்பட்டிருக்கு மானால், இப்போது கிடைத்துள்ள பழைய நூல்களிலே பல நூல்கள் மறைந்து போயிருக்கும் என்பதில் சற்றும் ஐயம் இல்லை. ஏனென்றால், ஒரு நூலின் ஏட்டுப் பிரதிகள் தமிழ்நாடு முழுவதிலும் மிகச் சில பிரதிகளே இருந்தன. அதிலும் உயர்தர இலக்கிய நூல்களின் பிரதிகள் மிகமிகச் சிலவே இருந்தன. அப்பிரதிகள் பழைமையாகி அழிந்துபோகும் நிலையில் இருக்கும்போது அவற்றை வேறு பிரதி எழுதி வைக்கா விட்டால், அவை முழுவதும் மறைந்து போகும். பிரதி எழுதி வைக்காத காரணத்தினால், மறைந்துபோன நூல்கள் பல. நமது நாட்டிலே 16, 17, 18-ஆம் நூற்றாண்டுகளிலே ஏற்பட்ட அரசியல் குழப்பத்தினாலும் கொந்தளிப்பினாலும் மக்கள் அமைதியில்லாமல் அல்லற்பட்டபோது, ஏட்டுச் சுவடியாக இருந்த பல அருமையான நூல்கள், பிரதி எழுதி வைக்கப்படாத காரணத்தினாலே முழுவதும் மறைந்து போயின. ஏட்டுப் பிரதிகள் 19-ஆம் நூற்றாண்டிலும் ஏட்டுப் பிரதிகளின் நிலைமை இரங்கத் தக்கதாக இருந்தது. 1887-ஆம் ஆண்டில் கலித்தொகையை முதன் முதலாக அச்சிட்ட சி.வை. தாமோரம் பிள்ளையவர்கள் இதுபற்றி எழுதியுள்ளதைப் படித்தால் இச்செய்தி நன்கு விளங்கும். நீருக்கும் நெருப்புக்கும் இரையான பழைய ஏட்டுச் சுவடிகள் போக, எஞ்சி யிருந்த ஏட்டுச் சுவடிகளின் நிலைமையைப் பத்தொன்பதாம் நூற்றாண் டில் இருந்த அவர் நன்கு விளக்கிக் கூறுகிறார். தாம் பதிப்பித்த கலித்தொகை நூலின் பதிப்புரையில் பிள்ளையவர்கள் இவ்வாறு எழுதுகிறார்: “இவர்கள் கைக்குத் தப்பின சின்னூல்களே இந்நாளில் தமக்குப் பெரிய அரிய நூல்களாயின. அவையும் இக்காலத்து இன்னுந் தமக்கு என்ன பேரவதி வருமோவென்று பயந்தாற்போல இங்கும் அங்கும் ஒளிந்து கிடந்து படிப்பாரும் எழுதுவாரும் பரிபாலிப்பாரு மின்றிச் “செய்துளைப் புள்ளியன்றி மெய்ப்புள்ளி விரவாத சென்னா ளேட்டிற் பல்துளைத்து வண்டு மணலுழுத வரியெழுத்து” உடையவாய்ச் செல்லினால் அரிக்கப்பட்டும் பாணங்களாற்1 றுளைக்கப்பெற்றும் மூன்றாவது பூதமான மண்ணின் வாய்ப் படுகின்றன.” “என் சிறு பிராயத்தில் என் தந்தையார் எனக்குக் கற்பித்த சில நூல்கள் இப்போது தமிழ்நாடெங்கும் தேடியும் அகப்படவில்லை. ஒட்டித் தப்பியிருக்கும் புத்தகங்களும் கெட்டுச் சிதைந்து கிடக்கும் நிலைமையைத் தொட்டுப் பார்த்தவர்க்கன்றோ தெரியவரும்! ஏடு எடுக்கும்போது ஓரஞ் சொரிகிறது. கட்டு அவிழ்க்கும் போது இதழ் முரிகிறது, ஏட்டைப் புரட்டும்போது துண்டு துண்டாகப் பறக்கிறது. இனி எழுத்துக்களோ வென்றால் வாலுந் தலையுமின்றி நாலுபுறமும் பாணக்கலப்பை மறுத்து மறுத்து உழுது கிடக்கின்றது.” இவ்வாறிருந்தது பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழ் ஏட்டுச் சுவடிகளின் இரங்கத்தக்க நிலை. சில நூல்களின் ஏட்டுச் சுவடிகள் கிடைப்பதும் அருமையாக இருந்தன. 18-ஆ நூற்றாண்டில் இருந்த வைத்தியநாத தேசிகர் இயற்றிய இலக்கண விளக்கம் என்னும் நூல் 19-ஆம் நூற்றாண்டில் கிடைப்பது அரிதாயிற்று. இந்நூலை 1889-ஆம் ஆண்டு அச்சிற் பதிப்பித்த சி.வை. தாமோதரம் பிள்ளையவர்கள் இந்நூல் பதிப்புரையில் எழுதுவது காண்க:- “(இலக்கண விளக்கம்) அச்சின்வாய்த் தோற்றாமையாற் கற்போர்க்குத் கிடைத்தற்கரிதாகி அதனால் அடையற்பாலதாம் பயனை உலகம் பெறாமற் போகத்தக்கதாய் வந்துவிட்டது. இதனை உணர்ந்தே அடியேன் இப்பொழுது அதனை அச்சிட்டுப் பிரசுரஞ் செய்யத் தலைப்பட்டேன்.” “அச்சின்வாய்த் தோற்றாமலும் பரிபாலனம் அடையாமலும் இருக்கும் நூல்கள் எத்துணைச் சீக்கிரம் இறந்து விடுகின்றன என்ப தற்குச் சொற்ப காலத்துக்கு முன்னர் உதித்த நூலின் கடைசி இயல் களுக்குத் தமிழ் நாட்டிலே பிரதிகள் அகப்படாமையும், எங்கெங்குத் தேடியும் யாது முயற்சி செய்தும் பாட்டியலுக்கு இரண்டு பிரதிமாத்திரம் அகப்பட்டதும் சான்று பகரும். சில சில இடங்களில் அகப்பட்ட பொருளதிகாரப் பிரதிகள் அவிழ்த்துப் பார்ப்பதற்கும் உபயோக மில்லாத தசையடைந்துவிட்டன.” 19-ஆம் நூற்றாண்டில் ஏட்டுச் சுவடிகளின் நிலைமை இவ்வாறு இருந்தது. பாட பேதங்கள் ஏட்டுப் பிரதிகள் கிடைத்தாலும் அப்பிரதிகளில் பாட பேதங்கள் மலிந்திருந்தன. ஏடெழுதுவோரால் நேரிட்ட பிழைகளும் இருந்தன. ஆகவே, ஏட்டுப் பிரதிகளை அச்சிடுவோர் முதலில் பல ஏடுகளை ஆராய்ந்து பார்த்துச் சரியான பாடங்களைக் கண்டறிந்து பிறகு அச்சிட வேண்டியவராயினர். சென்ற நூற்றாண்டில் முதன் முதலாக அச்சிற் பதிப்பிக்கப்பட்ட நூல்களில் இச்செய்திகள் காணப்படுகின்றன. 1832-ஆம் ஆண்டில் பழமலையந்தாதி, திருச்செந்தினி ரோட்டக யமகவந்தாதி என்னும் நூல்கள் ஒரே புத்தகமாகப் பதிப்பிக்கப்பட்டன. அந்நூலின் முகப்பில் இவ்வாறு எழுதப் பட்டுள்ளது. “எழுத்துஞ் சொல்லும் கையெழுத்துப் பிரதிகளிலே மிகுத்துங் குறைத்தும் பிறழ்ந்தும் திரிந்தும் பாடந் தோறும் வேறுபட்டிருத்தலால் அப்பிழைகளை நீக்சிச்சுத்த பாடமாக வழங்குவிக்கும் பொருட்டுப் பழைமையாகிய பல பிரதிகளை அழைப்பித்துப் பரிசோதித்துச் சென்னப் பட்டினத்தில் கனம் பொருந்திய பிரபுக்க ளேற்படுத்தின விவேகக் கல்விச் சாலைத் தமிழ்த் தலைமைப் புலவராகிய திருத்தணிகை சரவணப் பெருமாளையரால் அச்சிற் பதிப்பிக்கப்பட்டன.” 1893-ஆம் ஆண்டில், தஞ்சைவாணன் கோவையை அச்சிற் பதிப்பித்த திருமயிலை தெய்வசிகாமணி முதலியாரும், திருமயிலை வித்துவான் சண்முகம் பிள்ளையும் அந்நூலின் முகவுரையில் இதனைக் குறிப்பிடுகிறார்கள்: “இவ்விலக்கியத்தைப் பதிப்பிக்கத் தொடங்கி எம்பாற் கிடைத்த பிரதி பேதங்களைப் பரிசோரித்து வருங்கால் யாவும் ஒன்றுக்கொன்று ஒரிடத்தினன்றிப் பல விடத்தினும் முறையெழுதுவோரால் பிழைத்ததும் விடுவித்ததுமாகிய செயலாலும் பூச்சுக்களின் வாய்ப்பட்டு பழுதெய்திய மையாலும் ஆங்காங்கு அவையிற்றின் பொருள்க ளின்னவென எளிதிற்றேர்தற்கு இடம் பெறாமற் போயினமையின் இதுகாறும் காலம் நீட்டித்த தென வறிக.” இவ்வாறு சென்ற நூற்றாண்டில் அச்சிடப்பட்ட அச்சுப் பிரதிகளில் ஏட்டுப் பிரதிகள்தோறும் பாடபேதங்கள் இருந்த செய்தி குறிப்பிடப்பட்டுள்ளது காணலாம். ஏட்டுச் சுவடிகள் பிரதிக்குப் பிரதி பாடபேதங்கள் உள்ளவை பாட பேதம் இல்லாத ஏட்டுச்சுவடிகள் மிக அரியன. அச்சுப் புத்தகங்களில் பாடபேதங்களைக் காண முடியாது. ஒரே பதிப்பில் ஆயிரக்கணக்கான பிரதிகள் அச்சிட்டபோதிலும் எவ்வாறு பாட பேதம் இருக்க முடியும்? ஏட்டுச்சுவடிகளாக இருந்த தமிழ் நூல்களைத் தமிழ்ப் புலவர் களும் சைவ மடாலயங்களும் போற்றிப் பாதுகாத்து வந்தனர், அரசர்கள் பிரபுக்கள் முதலியவர்களின் புத்தக சாலைகளிலும் ஏட்டுச் சுவடிகள் சேமித்து வைக்கப்பட்டன. ஆனாலும், ஏட்டுச் சுவடிகளை முக்கிய மாகப் போற்றிக் காப்பாற்றியவர்கள் புலவர் பரம்பரையும், கவிராயர் குடும்பங்களும், சைவ மடாலயங்களுமே, அவற்றைப் புதிய ஏடுகளில் பிரதி எழுதிவைத்துக்கொண்டு பழைய பழுதுபட்ட சுவடிகளை அழித்து விடுவார்கள். பனை ஒலைகளில் இரும்பு எழுத்தாணியால் எழுதுவது கடினமான வேலை. ஒரு நூலைப்பிரதி எழுதுவதற்கு நேரமும் உழைப்பும் அதிகமாகக் கொண்டன. கூலி கொடுத்து எழுதினால் செலவு அதிகம் பிடிக்கும். ஏடெழுதுவோர் கற்றறிந்த அறிஞராக இல்லாவிட்டால், அல்லது எழுதும்போது கருத்தைச் செலுத்தி எழுதாவிட்டால், அப் பிரதியில் பிழைகளும் பாட பேதங் களும் ஏற்படும். ஓலைச் சுவடிகளில் பிரதிக்குப் பிரதி பாடபேதங்கள் இருப்பதற்குக் காரணம் ஏடெழுதுவோரின் கவனயின்மையும் அறியாமையுமே. ஏட்டுச் சுவடி விலை அச்சுப் புத்தகங்களைவிட ஏட்டுச்சுவடிகள் அதிக விலை பெற்றன. பொருள் உள்ளவர் மட்டும் ஏட்டுச்சுவடியை ஏடெழுது வோருக்குப் பொருள்கொடுத்துஎழுதிக் கொள்ள முடியும். பொருள் இல்லாதவர் பிரதி பெற முடியாது. இதனால், பண்டைக் காலத்தில் இருந்த சமணசமயத்தார் (ஜைனர்) சாஸ்திர தானம் என்னும் ஒரு தானத்தை ஏற்படுத்தி யிருந்தார்கள். செல்வர்களான சமணசம யத்தவர் வீடுகளில் திருமணம் முதலிய சிறப்புக்கள் நடைபெறும் போது தமது சமய நுல்களைப் பல பிரதிகள் எழுதுவித்து, அப் பிரதிகளைத் தகுந்தவர்களுக்குத் தானமாக வழங்கினார்கள். இதற்குத்தான் சாஸ்திர தானம் என்பது பெயர். பண்டைக் காலத்தில் செல்வர்கள் தான் பெரும்பொருள் செலவிட்டுப் புத்தகசாலை அமைக்க முடியும். பெர்சிவல் ஐயர். (Rev. P. Percival) 1835 -ஆம் ஆண்டுக்கு முன்னர் சதுரகராதி ஓலைப் பிரதியைப் பத்துப் பவுன் (நூற்றைம்பது ரூபா) விலை கொடுத்து வாங்கியதாகவும் அந்த அகராதி அச்சிற் பதிப்பிக்கப்பட்ட பிறகு ஒரு பிரதியை 2½ ஷில்லிங்கு (1 ரூபா 14 அணா) விலை கொடுத்து வாங்கியதாகவும் மர்டாக் என்பவர் எழுதியுள்ளார். இதிலிருந்து அச்சுப் புத்தகத்துக்கும் ஏட்டுச் சுவடிக்கும் விலையில் உள்ள ஏற்றத் தாழ்வுகளைத் தெரிந்து கொள்ளலாம். அச்சுப் புத்தகம் இல்லாத காலத்தில், ஒரு நூல் வேண்டியிருந்தால் அந்நூல் வைத்திருப்பவரிடம் சென்று அந்நூலைப் பெற்றுப் பிரதி எழுதிக் கொள்ளவேண்டும். முதலில், யாரிடம் அந்த நூல் இருக்கிறது என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும். பிரதி உள்ளவர் அதனை இரவல் கொடுக்கமாட்டார். இரவல் கொடுத்தால் திரும்பி வராது என்னும் அச்சத்தினால், ஆகவே, அவர் வீட்டுக்குச் சென்று பிரதி எழுதிக் கொள்ளவேண்டும். பிரதி எழுதுவதற்குநேரமும் உழைப்பும் அதிகமாகச் செல்லும். இந்தக் கடினமான வேலைக்கு அஞ்சி, புலவர் தம்மிடமுள்ள ஒரு நூலை மற்றவருக்குக் கொடுத்து விட்டு, அதற்குப் பதிலாகத் தமக்கு வேண்டிய வேறு நூலைப் பெற்றுக் கொள்வதும் உண்டு. அச்சுப் புத்தகங்கள் கிடைக்கிற இக்காலத்தில் புத்தகங்களின் அருமை பெருமை நமக்குத் தெரிவது இல்லை. காசு கொடுத்தால் புத்தகம் கிடைக்கும் என்னும் உறுதியினால். ஆனால், அச்சுப் புத்தகம் இல்லாத காலத்தில் ஏட்டுச் சுவடிகள் செல்வம் போலப் போற்றப்பட்டன. ஏட்டுச் சுவடிகள் புலவர் குடும்பங்களில் பெருஞ் செல்வமாக மதிக்கப்பட்டன. மறைந்த நூல்கள் அச்சியந்திரங்கள் வருவதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே, தமிழ்நாட்டில் பௌத்த மதமும் சமண சமயமும் மறைந்து விட்டபடியால், பௌத்த சமண சமய நூல்கள் பாதுகாக்க ஆளில்லாமல் மறைந்துவிட்டன. முக்கியமாகப் பௌத்த மத நூல்கள் அழிந்துவிட்டன. சமண சமயத்தவர் சிறுபான்மையோர் எஞ்சியிருக்கிற படியினால், சமண சமய நூல்கள் சில அழியாமல் பாதுகாக்கப்பட்டுள்ளன. ஆனாலும் பல நூல்கள் சில அழிந்து போயின. சமயக் காழ்ப்புக் காரணமாகச் சைவர்களும் வைணவர்களும் பௌத்த சமண சமய நூல்களைப் போற்றிப் பாதுகாவாமல் அழிய விட்டனர். இக்காரணத்தினாலே பௌத்த, சமணர்கள் இயற்றி வைத்த சிறந்த தமிழ் நூல்கள் பல அழிந்து மறைந்து விட்டன. பௌத்த சமண மதங்களை அழித்து வெற்றி கொண்ட சைவ வைணவர்கள், பிற்காலத்திலே தமக்குள் சமயப் பூசல்களை வளர்த்துக் கொண்டனர். அது காரணமாகச் சைவர்கள் தங்கள் சைவ சமய நூல்களை மட்டும் படிப்பதும் வைணவ சமய நூல்களைப் படியாமலிருப்பதும் வழக்கமாயிற்று. அதுபோன்று, வைணவர்களும் தங்கள் வைணவ சமய நூல்களைப் படிப்பதும் சைவ சமய நூல்களைப் படியாமலிருப்பதும் வழக்கமாயிற்று. எஞ்சியிருந்த சிறு தொகையினரான சமணர்களும் தமது சமய நூல்களைப் படிப்பதல்லாமல் மற்றச் சமய நூல்களைப் படிப்பது இல்லை. இதற்குப் புறனடையாகச் சிலப்பதிகாரம், மணிமேகலை, சிந்தாமணி, சூளாமணி முதலிய சில நூல்கள், பல புலவர்களால் சமய வேறுபாடு இல்லாமல் படிக்கப்பட்டன. இந்நூல்கள் சமண பௌத்த நூல்களாக இருந்தாலும் இலக்கியச் சுவை நிரம்பிய காவிய நூல்களான படியினாலே இவற்றை எல்லா மதத்தாரும் படித்து வந்தனர். அப்படிப் படித்தவர்கள் பெரும் புலமை வாய்ந்த சிலரே. நல்ல காலம் சமயக் காழ்ப்புக்கு இடமில்லாத சங்க நூல்கள். 18-ஆம் நூற்றாண்டு வரையில் புலவர்களாலும், உயர்தரக் கல்வி கற்கும் மாணவர்களாலும் பயிலப்பட்டன. ஆனால், 18-ஆம் நூற்றாண்டில் ஒரு புதிய கருத்துத் தோன்றிச் சங்க நூல்களையும் சிலப்பதிகாரம் மணிமேகலை முதலிய சங்ககாலத்து நூல்களையும் படிக்கக் கூடாது என்று தடுக்கப்பட்டது. சங்க நூல்களையும் சங்கம் மருவிய நூல் களையும் படிப்பவர் சமயப் பற்றற்றவர் என்றும் வீணர்கள் என்றும், பயனில் சொல்ல பாராட்டும் பதடிகள் என்றும் குறை கூறப்பட்டனர். (இதுபற்றி, ‘சமயக் காழ்ப்பு’ என்னும் தலைப்பில் கூறினோம் ஆதலின் இங்கு மீண்டும் கூற முற்படவில்லை.) நல்ல காலமாக, அந்தக் காலத்தில் பொது நோக்கமும் பரந்த மனப்பான்மையும் உள்ள பெரியவர்கள் சிலர் இருந்த காரணத் தினாலே, சங்க நூல்களும் மற்ற நூல்களும் அழிந்து போகாமல் காப்பாற்றப்பட்டன. எட்டுத் தொகை, பதினெண் கீழ்க்ணக்கு, சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை, பெருங்கதை முதலிய சங்க நூல்களும் பிற்கால நூல்களும் மறைந்து போயிருக்குமானால், தமிழனுக்கு இலக்கியச் செல்வமும் கலைச்செல்வமும் சரித்திரச் செல்வமும் வேறு என்ன எஞ்சியிருக்க முடியும்? அழிந்து போகும் நிலையிலிருந்த இந்த நூல்கள் 19-ஆம் நூற்றாண்டிலே இருந்த சேலம் இராமசாமி முதலியார் போன்ற நல்லறிஞர்களின் நன் முயற்சியினால் காப்பாற்றப்பட்டன. அந்தப் பெரியவர்களுக்குத் தமிழுலகம் என்றும் கடமைப்பட்டுள்ளது. மாறுபாடு ஏட்டுப் பிரதியாக இருந்த பழைய நூல்களை அச்சிற்பதிப் பித்தவர்களில் சிலர், தாம் அச்சிட்டு நூல்களில் மாறுபாடுகளையும் செய்திருக்கிறார்கள். இருந்ததை இருந்தபடியே மாறுபாடு செய்யாமல் அச்சிற் பதிக்க வேண்டியது பதிப்பாசிரியர் கடமை. ஆனால், சில பதிப்பாசிரியர்கள் மதப்பற்றுக் காரணமாகத் தாம் அச்சிட்ட நூல்களில் மாறுபாடுகள் செய்தும் அச்சிட்டிருக்கிறார்கள். பழைய ஆசிரியர்கள், சமயக் காழ்ப்பு இல்லாமல், காய்தல் உவத்தல் இன்றி, அந்தந்த இடத்துக்கு ஏற்பச் சிவனுக்கும் திருமாலுக்கும் ஏற்றந் தந்து செய்யுள் இயற்றினார்கள். அந்த நூல்களைப் பிற்காலத்தில் அச்சிட்ட பதிப்பாசிரியர்கள் தம் மதக்கொள்கைக்கு ஏற்ப அந்தச் செய்யுள்களை மாற்றி அமைத்து அச்சிட்டு வெளிப் படுத்தினார்கள். கம்ப ராமாயணத்தை 19-ஆம் நூற்றாண்டில் அச்சிட்ட வைணவர் ஒருவர் பழைய பாடத்தை மாற்றித்தமது கருத்துக்கு ஏற்பப் புதிய பாடத்தைப் புகுத்தி அச்சிட்டார். அவர் செய்த மாறு பாட்டைத் தொழுவூர் வேலாயுத முதலியார் ஓர் இடத்தில் சுட்டிக் காட்டியுள்ளார். அவர் சுட்டிக் காட்டியதை இந்நூல் ஒழிபியலில் ‘கம்ப இராமாயணம்’ என்னும் தலைப்பில் காட்டியுள்ளேன். அவ்வாறே, சென்ற நூற்றாண்டிலே மகாபாரதத்தை அச்சிற் பதிப்பித்த மற்றொரு வைணவர், சிவபெருமானுக்கு ஏற்றங் கூறுகிற செய்யுட்களை மாற்றி அச்சிற்பதிப்பித்தார். அவர் செயலைக் கண்டித்துச் சென்ற நூற்றாண்டில் இருந்த சைவப் புலவரான சூளை சோம சுந்தர நாயகர் அவர்கள் தாம் எழுதிய ஒரு நூலில் எழுதியிருக் கிறார். அதில் அந்த வைணவர் செய்துள்ள மாறுபாடுகளையும் பழைய செய்யுள்களையும் எடுத்துக்காட்டியிருக்கிறார். அதை நான் சில ஆண்டுகளுக்கு முன்னே படித்தேன். இப்போது அந்த நூல் கிடைக்காதபடியால் அவர் காட்டிய மாறுபாடுகளை எடுத்துக் காட்ட இயலவில்லை. ஜைன ஆசிரியர் இயற்றிய சூடாமணி நிகண்டை அச்சிட்ட ஒரு சைவர் அதில் சில செய்யுட்களை மாற்றி அமைத்து விட்டாராம். இது பற்றிக் காஞ்சீபுரம் தி. அநந்நாத நயினார் என்னும் ஜைனர் தாம் எழுதிய ‘திருக்குறள் ஆராய்ச்சியும் ஜைந சமய சித்தாந்த விளக்கமும்’ என்னும் நூலிலே 132-ஆம் பக்கத்தில் இவ்வாறு எழுதுகிறார்: “தவிர மண்டல புருடர், சூடாமணி நிகண்டு தெய்வப் பெயர்த் தொகுதியில் அருகன் ‘எண்குணத்தான்’ எண் குணங்களில் ஒவ்வொன்றன் நாமத்தினையும் தனித்தனியாகவும் கூறியிருக்கின்றார். இவற்றைப் பழைய ஏட்டுப் பிரதிகளிலும், 50,60 வருஷங்களுக்கு முன் பலர் அச்சிட்டிருக்கும் புத்தகங்களிலும் காணலாம். சிவபெருமானுக்கு இது சம்பந்தமான விஷயங்கள், அந்தத் தெய்வப் பெயர்த் தொகுதியிலும், 12-ஆவது தொகுதியிலும் சொல்லப்படவில்லை. இவை அனாகவித்துவாம்சர்கள் நன்கு அறிந்த விஷயங்கள். பிற்காலத்தில், சில மத துவேஷமுடைய வித்வான்கள் சூடாமணி நிகண்டு 12-வது தொகுதியில் சிவபிரானுக்கும் எண்குண முண்டென்பதனைப் புகுத்தி இரண்டு போலிச் செய்யுட்களை இயற்றித் தாங்கள் அச்சிட்ட புத்தகங்களில் சேர்த்திருப்பதுவும் தவிர, ஏட்டுப் பிரதிகளிலும் பழைய அச்சுப் பிரதிகளிலும் உள்ள பழைய செய்யுட்களை நீக்கியும் தாங்களி யற்றிய வேறு சில புதிய செய்யுட்களைச் சேர்த்தும் பல மாறுபாடுகளைச் செய்திருக்கின்றார்கள். திவாகரம் பிங்கலர் நிகண்டு முதலியவற்றிலும் இத்தன்மையாகவே சில மாறுபாடுகளை உண்டு பண்ணி இருக்கிறார்கள்.” எண்சுவடிகளின் தொடக்கத்தில் இருந்த அருகக் கடவுள் வணக்கத்தை நீக்கிவிட்டு அதற்குப் பதிலாக யானைமுகன் வணக்கத் தைப் புதிதாகச் சேர்த்து அச்சிட்டதும் உண்டு. இவ்வாறு அச்சிற்பதிப்பித்த சில நூல்களிலே சில பதிப்பாசிரியர் சில மாறுபாடுகளைச் செய்திருக்கிறார்கள் என்பதை அறியவேண்டும். புத்தகப் பட்டியல் ஏட்டுச் சுவடிகளாக இருந்த பழந்தமிழ் நூல்கள் சென்ற ஆண்டில் 19-ஆம் நூற்றாண்டிலே முதன் முதலாக அச்சுப் புத்தகங்களாகப் பதிப்பிக்கப்பட்டன என்பது உண்மையே. ஆனால், எந்தெந்த நூல்களை யார் யார் முதன் முதலாக அச்சிட்டார்கள்: ஒரு நூலின் முதற்பதிப்பு எந்த ஆண்டில் வெளிவந்தது என்பது பற்றி முறையாக ஏழுதிவைக்கப்பட்ட குறிப்பாவது வரலாறாவது கிடையா. அச்சிடப்பட்ட அந்த நூல்களின் முதற்பதிப்புகள் புத்தக சாலைகளில் சேமித்து வைக்கப்படவில்லை. பழைய அச்சுப் புத்தகங்களைச் சேமித்துப் போற்றி வைக்கும் பழக்கம் நம்மவர்களிடம் இல்லை. அக்காலத்தில் பாடப் புத்தகங்கள் சில 10,000 பிரதிகளும் அச்சிடப் பட்டன. ஆனால், விற்பனை ஆகாத பல நூல்கள் 200 பிரதிகளுக்கு அதிகமாக அச்சிடப்படவில்லை. எனது வீட்டில் என்னுடைய முன்னோர் காலணாவிலையுள்ள சிறிய புத்தகம் முதலாக அதிக விலையுள்ள பெரிய புத்தகம் ஈறாகப் பல அச்சுப் புத்தகங்களை வாங்கிச் சேமித்து வைத்திருந்தார்கள். அத்தொகுதியில் 19-ஆம் நூற்றாண்டில் அச்சிடப்பட்ட பல அச்சுப் புத்தகங்கள் இருந்தன. ஏட்டுச் சுவடிகளும் பலவகை எழுத்தாணி களும் இருந்தன. சின்னஞ்சிறு வயதில், இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், (நான், 1900-ஆண்டில் பிறந்தவன்.) நான் கண்டிருக் கிறேன். அந்த நூல்கள் எல்லாம் என் கைக்கு வந்தபோது, நான் விவரம் அறியாதவனாக இருந்தபடியால், அந்நூல்களைக் கேட்கிற வர்களுக்குக் கடனாகக் கொடுத்துத் திரும்பக் கொடுக்கப்படாமல் அவற்றை இழந்தேன். அதன் பிறகு முப்பது ஆண்டுகளுக்குமுன் 19-ஆம் நூற்றாண்டில் அச்சிடப்பட்ட நூல்களை ஒரு நண்பர் தொகுத்து வைத்திருந்ததைக் கண்டேன். அவரிடத்தில் பல பழைய அச்சுப் பிரதிகள் இருந்தன. அந்தக் காலத்தில், 19-ஆம் நூற்றாண்டின் இலக்கிய வரலாறு எழுதவேண்டும் என்னும் எண்ணம் எனக்கு உண்டாகவில்லை. இவ்வெண்ணம் அப்போது தோன்றியிருக்கு மானால், 19-ஆம் நூற்றாண்டில் இலக்கிய வரலாற்றினை இன்னும் எவ்வளவோ, சிறப்பாக எழுதியிருக்க முடியும். இந்த நூலை எழுதவேண்டும் என்னும் எண்ணம் அண்மைக் காலத்தில்தான் எனக்கு உண்டாயிற்று. பழைய அச்சுப் பிரதிகளைத் தொகுத்து வைத்திருந்த நண்பர் சில ஆண்டுகளுக்கு முன்பு காலமானார். அவர் காலமானவுடனே, அவருடைய ஒரே மகன், அப்புத்தகங்களின் சிறப்பை அறியாதவன், - அவற்றை யெல்லாம் யாருக்கோ சொற்ப விலைக்கு விற்றுவிட்டான் என்பதைப் பிறகு அறிந்தேன். சென்ற 19-ஆம் நூற்றாண்டில், எந்தெந்த நூல்கள் எந்தெந்த ஆண்டில் அச்சிடப்பட்டன என்பதை இப்போது அறிய முடிய வில்லை. சென்ற நூற்றாண்டில் அச்சிடப்பட்ட நூல்கள் இப்போது பெரும்பாலும் மறைந்துவிட்டன. யாரிடத்தில் எந்தெந்த நூல்கள் இருக்கின்றன என்பது தெரியவில்லை. 19-ஆம் நூற்றாண்டில் அச்சிடப்பட்ட புத்தகங்களின் பட்டியலைத் தொகுக்க இயலவில்லை. இஃது ஒர் ஆராய்ச்சியாய் விட்டது. இவ்வாராய்ச்சி பொறுமையோடும் ஊக்கத்தோடும் செய்ய வேண்டிய கடினமான ஆராய்ச்சியாகும். வசன நூல் வளர்ச்சி 19-ஆம் நூற்றாண்டில் தமிழ்மொழி அடைந்த சிறப்புகளில் முதன்மையானது வசன நூல்கள் வளர்ச்சியடைந்ததாகும். இந்த நூற்றாண்டுக்கு முன்பு தமிழில் வசன நூல்கள் மிகக்குறைவாகவே இருந்தன. இல்லை என்றே சொல்லலாம். தமிழ்மொழிமட்டும் அல்ல, இந்திய தேசத்தின் ஏனைய மொழிகள் எல்லாம், ஐரோப்பியரின் தொடர்பு. ஏற்பட்டபின்னரே வசன இலக்கியங்களை வளர்க்கத் தொடங்கின. நமது மொழியில் வசன நூல்கள் முற்காலத்தில் ஏற்படாததற்குக் காரணம் வாய்ப்பான எழுது கருவிகள் இல்லாததாகும். மற்றொரு காரணம் அச்சியந்திரங்கள் இல்லாததாம். பனை ஏடுகளும் இரும்பு எழுத்தாணியும் நூல்களை எழுதுவதற்கு வாய்ப்பான கருவிகள் அல்ல. ஆகவே, சுருக்கமாக எழுத்து வேலையை முடிப்ப தற்குச் செய்யுள் நடையை அக்காலத் தவர் கையாண்டனர். வாய்ப்பும் வசதியும் உள்ளஎழுதுகருவிகள் அமைந்த படியாலும், அச்சியந்திரங் கள் அதிகமாகப் பரவினபடியாலும், செய்தித்தாள்கள், வார இதழ், திங்கள் இதழ் முதலிய வெளியீடுகள் தோன்றிய படியினாலும், பலவகைப் பாடப் புத்தகங்கள் தேவைப்பட்டதனாலும் 19-ஆம் நூற்றாண்டிலே வசன நடைவளர்வதற்கு நல்லதோர் வாய்ப்பு ஏற்பட்டது. இதற்கு முன்பு பாடசாலைகளிலுங்கூட மாணவர்களுக்கு வசன பாடங்கள் கிடையா. தரையின்மேல் மணலைப் பரப்பிப் பிள்ளைகள் எழுத்துக்களை வாயினால் சொல்லிக்கொண்டே விரலினால் எழுதப் பழகினார்கள். அதனால், திண்ணைப் பள்ளிக் கூடங்களில் கூச்சல் காதைத் துளைக்கும். எழுதக் கற்றுக்கொண்ட பிறகு பனைஏடுகளில் எழுத்தாணியால் எழுதப் பழகினார்கள். அக்காலத்தில் கற்பலகை களும் எழுது குச்சிகளும், காகிதம் பேனா மை பென்ஸில் முதலியன வும் கிடையா. வகுப்புக்களுக்கு ஏற்றபடி வசன பாடப்புத்தகங்கள் இல்லாதபடியால், ஆத்திசூடி, கொன்றைவேந்தன், மூதுரை, நல்வழி முதலிய செய்யுள் நூல்களையே சிறுவர்கள் பொருள் விளங்காமல் படித்து மனப்பாடஞ் செய்தார்கள். அதன் பிறகு சதகங்கள் நிகண்டுகள் சிறு பிரபந்த நூல்கள் முதலியவற்றைப் படித்தார்கள். இந்நூல்களும் வசனமாக இல்லாமல் பாட்டாகவே இருந்தன. புது முயற்சி 19-ஆம் நூற்றாண்டிலே ஐரோப்பா முதலிய மேல் நாடு களிலிருந்து பாதிரிமார்களும் மிஷன் சங்கங்களும் வந்து நமது நாட்டிலே கிறிஸ்துமதத்தைப் பரப்ப முயற்சி செய்தார்கள். அவர்கள் பாடசாலைகளை அமைத்து ஐரோப்பிய முறைப்படிப் பாடங்களைக் கற்பித்தபோது, பழைய பாடமுறைகள் மாற்றப்பட்டுப் புதிய முறைகள் புகுத்தப்பட்டன. வசன பாடப் புத்தகங்களும் சரித்திரம் பூகோளம் முதலிய பாடப் புத்தகங்களும் புதிதாக இடம் பெற்றன. வகுப்புகளுக்கு ஏற்ற முறையில் வசன பாடங்கள் அமைக்கப்பட்டன. மேலும், கிறிஸ்துமத நூல்களை மக்கள் எளிதில் படிக்கத்தக்கபடி வசன நூல்களாக எழுதி வெளியிட்டார்கள். பாடசாலையிலும் வெளியிலும் மாணவர்களும் மற்றவரும் வசன நூல்களைப் படிக்கும் சூழ்நிலை ஏற்பட்டது. இந்த நிலை ஏற்படுவதற்கு முன்பு நமது நாட்டில் தமிழ்ப் புத்தகங்கள் எல்லாம் பாட்டாகவும் சூத்திரங்களாகவும் எழுதப்பட்டி ருந்தன. சமய நூல்கள், வைத்தியம், சோதிடம், நிகண்டு, சிற்பக்கலை முதலிய எல்லாம் பாட்டாகவே அமைந்திருந்தன. 19-ஆம் நூற்றாண்டிலே ஐரோப்பிய மிஷனரிமாரும் பாதிரி மாரும் நமது நாட்டில் சுறுசுறுப்பாகச் செய்து வந்த கிறிஸ்து மதப் பிரசாரத்தின் காரணமாக வசன நூல்கள் வளர்ச்சி பெற்றன என்பது குறிப்பிடத்தக்க முக்கிய நிகழ்ச்சியாகும். வசன நூல்கள் மலிந்துள்ள இந்தக் காலத்திலே, வசன நூல்களின் முதன்மையையும் இன்றியமை யாமையையும் நாம் இப்போது நன்றாக உணர்ந்து கொள்வது இல்லை. ஆனால் 19-ஆம் நூற்றாண்டிலே, படிப்பதற்கு வசன நூல்கள் இல்லாத காலத்திலே, அதன் காரணமாக மக்கள் விரைவில் முன்னேற்ற மடையாமல் தேங்கியிருந்த காலத்திலே, வசன நூல்களின் நன்மை யையும் சிறப்பையும் இன்றியமையாமையையும் மக்கள் நன்குணர்ந்தி ருந்தார்கள், வசன நூல்கள் இல்லாத குறை பாட்டினால், அக்காலத்தவர் விரைவில் முன்னேற்றமடைய முடியாமல் இருந்த நிலையை அவர்கள் நன்குணர்ந்திருந்தார்கள். நம் நாட்டினரும் ஐரோப்பியரும் இந்தக் குறைபாட்டினை யுணர்ந்து அக்காலத்திலேயே கூறியுள்ளார்கள். உவின்ஸ்லோ 19-ஆம் நூற்றாண்டிலே இருந்த தமிழ்ப் புலவர்கள் நினைத்த வுடனே கவிபாடும் - பழக்கம் உள்ளவர்கள். அத்தகைய அவர்கள் வசனம் எழுதும் பழக்கம் இல்லாமல் அல்லற்பட்டார்கள். உலின்ஸ்லோ என்னும் ஐரோப்பியர் தாம் எழுதிய - தமிழ் - ஆங்கில அகராதியை 1862-இல் அச்சிட்டபோது அதன் முகவுரையில் தமிழ் வசன நடையைப் பற்றி இவ்வாறு கூறுகிறார்: ‘தமிழனுடைய வசன நடை இன்னும் உருவடையா நிலையில்தான் இருக்கிறது. அதனைச் சரியாக உருப்படுத்துவதற்கு அறிஞர்கள் செய்யும் முயற்சி நல்ல பலன் தரும். சுதேசிகள் பலர் பாக்களை விரைவாகப் பாடக்கூடிய வர்களாக இருந்தும், பிழையின்றி வசனம் எழுதத் தெரியாமல் இருக்கிறார்கள்’ என்று அவர் எழுதியுள்ளார்.1 மர்டாக்கு “தமிழ் அச்சுப் புத்தகங்களின் பட்டியல்” என்னும் நூலை ஆங்கிலத்தில் 1865-ஆம் ஆண்டில் எழுதிய மர்டாக் என்னும் மேல்நாட்டறிஞரும் அந்நூலின் முகவுரையில் இதே கருத்தை எழுதியுள்ளார். ‘பாட்டுகளுக்கு எழுதப்பட்ட உரைகள் தவிர, மருத்துவம் கணக்கு, இலக்கணம், அகராதிகள் உட்பட எல்லாத் தமிழ் இலக்கியங்களும் பாட்டாகவே எழுதப்பட்டுள்ளன. ஐரோப்பியரின் தொடர்பினால், தமிழ் வசன இலக்கியம் வளர்ச்சி பெற்றது என்று கூறலாம்’ என்று அவர் எழுதுகிறார்.2 விசாகப் பெருமாள் 19-ஆம் நூற்றாண்டிலே வாழ்ந்து சிறந்த தமிழ்ப் புலவராய் விளங்கிய திருத்தணிகை விசாகப் பெருமாளையர் என்னும் வீரசைவர் 1852-ஆம் ஆண்டில் தாம் எழுதிய பாலபோத இலக்கணம் என்னும் நூலின் பாயிரத்திலே உரைநடை நூல்களின் முதன்மையைப் பற்றிக் கீழ்வருமாறு எழுதியுள்ளார்:- “இலக்கண இலக்கிய கணித பூகோள ககோளாதி நூல்களை யெல்லாம் இக்காலத்து இத்தேசத்தை யாளுகின்ற இங்கிலீஷ்காரர் களும், அவர்கள் வசிக்கும் கண்டத்திலுள்ள ஏனையோர்களும் செய்யுளில் இயற்றிக் கற்பிப்பதை விட்டு, வசனங்களிலே தெளிவுற இயற்றிச் சிறுவர்க்குக் கற்பித்துக்கொண்டு வருகின்றனர். அதனால் அக்கண்டத்தில் வாழும் சிறுவர்கள் சில நாட்களிலே பல நூல்களைக் கற்றுப் பல விஷயங்களையும் உணர்ந்து பல தொழில்களையும் இயற்றும் திறமுடையராகின்றனர். “இத்தேசத்தார் அந்நூல்களை யெல்லாம் செய்யுளிலே செய்து அவற்றிற்குத் திரி சொற்களால் உரையியற்றிச் சிறுவர்க்குக் கற்பித்து வருகின்றனர். இவ்வாறு செய்யுளில் இயற்றப்பட்ட நூல்கள், நிகண்டு முதலிய கருவி நூல்களைக் கற்றன்றிக் கற்கப்படாவாம். ஆகவே, அவற்றுள் ஒரு நூலைக் கற்பதற்கு நெடுநாள் செல்லுகின்றது. செல்லவே, பல நூல்களைக் கற்றுணர்ந்து எத்தொழில்களையுஞ் செய்யத்தக்கவர்களாவது அரிதாம். “இதனால் இந்நாட்டுச் சிறுவர்கள் தங்கள் வாழ்நாட்கள் வீழ்நாட்படாமற் சில நாட்களில் அப் பல நூல்களையும் கற்றறிந்து எத்தொழில்களையும் செய்யத் தக்கவல்லமை அடைவதற்கு. அந் நூல்களையெல்லாம் உலகவழக்கியற் சொற்களால் உரை வசனமாகத் தெளிவுறச்செய்து கல்விச் சாலைகளிலே உபயோகமுறும்படி செய்தல் நன்று.” வேதநாயகர் மாயூரம் வேதநாயகம் பிள்ளையவர்கள் 1885-இல் தாம் எழுதிய பிரதாப முதலியார் சரித்திரம் என்னும் நவீனத்தில், 42-ஆம் அதிகாரத்தில். சுதேசபாஷாபிவிருத்தி என்னும் பகுதியில் வசன இலக்கியங்களைப் பற்றி இவ்வாறு எழுதுகிறார். “இங்கிலீஷ், பிரான்சு முதலிய பாஷைகளைப் போலத் தமிழில் வசன காவியங்கள் இல்லாமலிருப்பது பெருங்குறை வென்பதை நாம் ஒப்புக் கொள்ளுகிறோம். அந்தக் குறைவைப் பரிகரிப்பதற்காகத்தான் எல்லாரும் இராஜ பாஷைகளுந் தமிழுங் கலந்து படிக்கவேண்டு மென்று விரும்புகிறோம். இராஜபாஷைகளும் சுதேசபாஜைகளும் நன்றாக உணர்ந்தவர்கள் மட்டும் உத்தமமான வசன காவியங்கள் எழுதக் கூடுமேயல்லாது இதரர்கள் எழுதக் கூடுமோ? வசன காவியங் களால் ஜனங்கள் திருந்த வேண்டுமேயல்லாது செய்யுட்களைப் படித்துத்திருந்துவது அசாத்தியம் அல்லவா? ஐரோப்பிய பாஷை களில் வசன காவியங்கள் இல்லாமலிருக்குமானால் அந்தத் தேசங்கள் நாகரீகமும் நற்பாங்கும் அடைந்திருக்கக் கூடுமா? அப்படியே நம்முடைய சுயபாஷைகளில் வசனகாவியங்கள் இல்லாமலிருக்கிற வரையில் இந்தத் தேசம் சரியான சீர்திருத்தம் அடையாதென்பது நிச்சயம்.” இந்தப் பிரதாப முதலியார் சரித்திரத்தின் ஆங்கில முகவுரையில் மாயூரம் வேதநாயகம் பிள்ளையவர்கள் இதே கருத்தை மிகத் தெளிவாக ஆங்கிலத்தில் எழுதியிருக்கிறார்.3 சபாபதி நாவலர் சபாபதி நாவலர் அவர்கள் 1899-இல் தாம் எழுதிய திராவிடப் பிரகாசிகை என்னும் நூலின் மரபியல் என்னும் பகுதியில் தமிழில் வசன நூல்கள் இல்லாதிருந்ததைக் குறிப்பிடுகிறார். “தமிழ் மொழியார் சூத்திரஞ் செய்யுளென்றும் மிரண்டாற்றானே நூலியற்றுப: உரையானி யன்ற தொல்லாசிரியர் தமிழ் நூல் அரிதென்றுணர்க” என்று அவர் எழுதியுள்ளார். சாமுயல் ஐயர் அவர்கள்4 தாம் எழுதிய உள்ளது நாற்பது என்னும் நூலிலே “சொந்தப் பாஷை” என்னும் கட்டுரையில் இவ்வாறு எழுதுகிறார்:- “இந்தக் காலத்தில் தமிழ்ப் பாஷையைச் சுத்தமாய் வாசிக்கவும் பிழையற எழுதவும் அறிந்த தமிழர் வெகுசிலர். சிலர் எழுதும் பத்து வரிக் கடிதத்தில் இருபது பிழைகள் காணலாம்.” கம்பெனி முயற்சி 19-ஆம் நூற்றாண்டில், ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பனியார் என்னும் வர்த்தகச் சங்கத்தார் இந்திய தேசத்தைக் கைப்பற்றி ஆட்சி செய்தனர். அவர்கள் இந்திய தேசத்தைச் சில மாகாணங்களாகப் பிரித்து ஆட்சி செய்தனர். அந்தப் பிரிவுகளில் சென்னை மாகாணமும் ஒன்று. சென்னை மாகாணத்தில் தமிழ் நாடும் சேர்ந்திருந்தது. நாட்டை ஆட்சி செய்வதற்கு இங்கிலாந்திலிருந்து ஆங்கிலேய உயர்தர உத்தியோகஸ்தர்கள் வந்தனர். இந்த உத்தியோகஸ்தர்கள் தாங்கள் எந்தப் பகுதியில் அலுவல் புரிகிறாரோ அந்தப் பகுதியின் பாஷையை அறிந்திருக்கவேண்டும் என்னும் சட்டம் அக் காலத்தில் இருந்தது. அந்தந்தப் பகுதியில் வழங்கும் தேச பாஷையை அறிந்திருந்தால்தான் அவர்களுக்குச் சம்பள உயர்வு அளிக்கப்பட்டது. இந்த முறையில் தமிழ் நாட்டிற்கு வந்த உயர்தர ஆங்கில உத்தியோகஸ்தர்கள் தமிழ் மொழியைக் கற்கத் தொடங்கினார்கள். அவர்கள் படிக்க வசன நூல்கள் இல்லை. அன்றியும் தமிழ் இலக்கண நூல்கள் சூத்திரமாக அமைக்கப்பட்டிருந்தன. வசன நடையில் இலக்கணம் இருந்தால் எளிதில் படித்துத் தெரிந்துகொள்ள முடியும். ஆகவே, வசன நடையில் தமிழ் இலக்கணநூலை எழுதுவோருக்கு ஒரு தொகை பணம் பரிசளிப்பதாக விளம்பரம் செய்தார்கள். இதன் காரணமாக முதன் முதலில் வெளிவந்த தமிழ் வசன இலக்கண நூல் தமிழ் விளக்கம் என்பது, இந்தநூல் சக ஆண்டு 1732-இல் (கி.பி. 1811-இல்) திருவேற்காடு சுப்பராய முதலியார் என்பவரால் எழுதப்பட்டது. ஏறத்தாழ நூற்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு அச்சிடப்பட்ட இந்நூலின் ஒரு பழைய பிரதியை நான் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு பார்த்திருக்கிறேன். இந்நூலின் பிரதி இப்போது எங்கேனும் இருக்கிறதா என்பது தெரியவில்லை. அந்த நூலின் முகப்புப் பக்கம் கீழ்க்கண்டவாறு அச்சிடப்பட்டிருந்தது. A TAMEL EXPOSITOR by Teroovorcaudoo Subroya Mudaliar Printed at Madras A.D. 1811 தமிழுடைய வியலபைக கேழவியு முத்தாமுமா யெழுதப்பட்ட ஒரு சுருக்கமான வயனம் அடங்கிய “தமிழ் விளக்கம்” திருவேற்காடு சுப்பறாய முதலியாரால் உண்டு பண்ணி யிங்கிலீசு பாழையில் மொழிபெயர்க்கப் பட்டது சென்னை பட்டணத்தில் அச்சுபோட்டது. சகாப்தம் தஎளஙயஉளு இதன் பிறகு வசன நடையில் எழுதப்பட்ட இலக்கண நூல், தாண்டவராய முதலியார் அவர்கள் எழுதிய இலக்கண வினா விடையாகும். சென்னைக் கல்விச் சங்கத்தின் தலைவராக இருந்த கிளார்க் துரையவர்களின் விருப்பப்படி அச்சங்கத்தின் தலைமைத் தமிழ்ப் புலவராக இருந்த தாண்டவராய முதலியார் அவர்கள் 1820-இல் இவ்விலக்கண நூலை எழுதினார். இதன் முகப்புப் பக்கம் படத்தில் காட்டியபடி அச்சிடப்பட்டிருந்தது. அக்காலத்தில் ஆங்கிலமொழி அரசாங்க மொழியாக உத்தி யோக தோரணையில் அமையவில்லை. ஆகவே, ஆங்கிலேய உயர்தர உத்தியோகஸ்தர்களும் தாங்கள் பணிபுரியும் பகுதியில் வழங்குகிற நாட்டு மொழியைக் கற்கவேண்டிய கட்டாயம் இருந்தது. சென்னை மாகாணத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்னும் மொழிகள் வழங்குகிறபடியால் இந்த மொழிகளைக் கற்கும் ஆங்கிலேய உத்தியோகஸ்தர்களுக்காகச் சென்னைக் கல்விச்சங்கம் அமைக்கப்பட்டது. இதற்காகத் தமிழ்ப் புலவர்களும் நியமிக்கப் பட்டனர். இந்தச் சங்கத்தின் சார்பாகச் சில தமிழ்ப் புத்தகங்கள் (வசன நூல்கள்) அச்சிற் பதிப்பிக்கப்பட்டன. புத்தகச் சங்கம் சென்னைப் பாடப்புத்தக சங்கம்5 என்னும் சங்கம் 1850-ல் ஏற்பட்டுப் பல வசன நூல்களை வெளியிட்டது. இந்தச் சங்கம் அளித்த பரிசு காரணமாகப் பல வசன நூல்கள் வெளிவந்தன. ‘இராபிசன் குரூசோ’, ‘இந்திய சரித்திரம்’, ‘உலக சரித்திரம்’ முதலிய சிறந்த மொழி பெயர்ப்பு நூல்கள் இச்சங்கத்தார் அளித்த பரிசு காரணமாக வெளிவந்தவை. பாடசாலைகளுக்கு வேண்டிய முறைப்படிப் பாடப்புத்தகங்கள் இச்சங்கத்தால் வெளியிடப்பட்டன. 19-ஆம் நூற்றாண்டிலே வார இதழ்களும் திங்கள் இதழ்களும் வெளிவந்தபடியால், இவற்றின் மூலமாகவும் வசனநடை வளர்ச்சி பெற்றது. அன்றியும், கிறிஸ்து சமயத்தவர்களைப் பின்பற்றி இந்துக்க ளான சைவ வைணவர்களும், முஸ்லிம்களும் தமது மத நூல்களை வசனமாக எழுதி வெளியிட்டார்கள், கதைகளும், நாவல்களும், சாத்திர நூல்களும் வசன நடையில் வெளிவந்தன. இவ்வாறு சென்ற நூற்றாண்டில் தமிழ் உரை நடைநூல்கள் வளர்ச்சியடைந்தன. வார இதழ், திங்கள் இதழ் முதலியன அச்சியந்திரங்கள் ஏற்பட்ட பிறகுதான் எல்லா நாடுகளிலும் பத்திரிகைகள் வெளிவரத் தொடங்கின. நமது நாட்டிலே அச்சியந்திரம் அதிகமாக ஏற்பட்ட பத்தொன்பதாம் நூற்றாண்டிலே வார இதழ், திங்கள் இதழ் முதலிய வெளியீடுகள் தோன்றின. பத்தொன்பதாம் நூற்றாண் டுக்கு முன்னர் பத்திரிகைகள் தமிழில் வெளிவந்ததாகத் தெரிய வில்லை. முதன் முதலாகத் தமிழில் வார இதழ் திங்கள் முதலிய பத்திரி கைகளை வெளியிட்டவர்கள் கிருஸ்துவப் பாதிரிமார்களே சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் அச்சுக் கூடங்களை வைக்கும் உரிமை ஐரோப்பியப் பாதிரிமார்களுக்கும் அரசாங்கத்தாருக்கும் மட்டும் இருந்தது. மற்றச் சுதேசிகளுக்கு அந்த உரிமை இல்லாமலிருந்தது. சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் ஐரோப்பியப் பாதிரிமார்கள் அச்சுக்கூடங்களை வைத்திருந்தபடியினாலும், ஐரோப்பிய நாடுகளில் வார, மாத இதழ்கள் வெளிவருவதைக் கண்டவர்களானபடியினாலும் அவர்கள் தமிழில் முதன் முதலாகத் தமிழ் இதழ்களை வெளியிட் டார்கள். அவர்கள் கிறிஸ்துவரானபடியினால் அவர்களின் வெளியீடு கள் எல்லாம் கிறிஸ்துமதச் சார்புடையனவாய் இருந்தன. சுதேசி களுக்கும் அச்சுக்கூடம் வைக்கும் உரிமை ஏற்பட்டபிறகு. இந்துக் களும் முஸ்லிம்களும் பத்திரிகைகளை வெளியிட்டார்கள். பொதுவாகப் பத்திரிகைகள் நெடுங்காலம் தொடர்ந்து நடை பெறுவது இல்லை. பத்தொன்பதாம் நூற்றாண்டிலே தோன்றிச் சிலகாலம் நடந்து பின்னர் மறைந்துபோன தமிழ்ப் பத்திரிகைகள் பல. சென்ற நூற்றாண்டில் என்னென்ன பத்திரிகைகள் வெளிவந்தன என்பதைத் திட்டமாகக் கூறமுடியாது. என்னால் இயன்றளவு முயன்று தேடிப் பார்த்ததில் எனக்குச் சில தகவல்கள் கிடைத்துள்ளன. அப்பட்டியலைக் கீழே தருகிறேன். ஆண்டு பெயர் முதலியன 1831 “தமிழ்ப் பத்திரிகை”: திங்கள் இதழ். கிறிஸ்து சமயப் பத்திரிகை “மதராஸ் ரிலிஜியஸ் டிராக்ட் ஸொஸைடி” யால் சென்னையில் அச்சிடப்பட்டது. கிறிஸ்துமத சம்மந்தமான கட்டுரைகள் இதில் எழுதப்பட்டன. தமிழில் முதல் முதல் வெளிவந்த பத்திரிகை இதுவே. அடிக்கடி ஆசிரியர்கள் மாறிய படியால் வெளிவருவதில் தவக்கம் ஏற்பட்டது. 1840 பாலதீபிகை: சிறுவர்களுக்கான பத்திரிகை. மூன்று மாதத்துக் கொருமுறை நாகர் கோவிலிலிருந்து வெளிவந்தது. 1852 வரையில் நடந்தது. 1740 Missionay Gleance இந்தக் கிறிஸ்துவத் தமிழ்ப் பத்திரிகை நாகர் கோவிலிலிருந்து வெளிவந்தது. பல ஆண்டுகள் நடைபெற்றது. 1840 Friendly Instructor: இந்தக் கிறிஸ்துவத் தமிழ்ப் பத்திரிகை பாளையங் கோட்டையிலிருந்து வெளிவந்தது. 1840 தற்போதகம்: பாளையங்கோட்டை சர்ச்சு மிஷன் அச்சுக் கூடத்தில் பதிப்பிக்கப்பட்டது. பல ஆண்டுகள் நடைபெற்றது. 1841 ஜனசிநேகன்: சென்னையிலிருந்து வெளிவந்து. மாதம் இருமுறை 1841 சுவிசேஷ பிரபாவ விளக்கம்: நாகர் கோவிலிலிருந்து வெளி வந்தது. 1842 The Aurora: மாதம் இரு முறை வெளிவந்த தமிழ்ப் பத்திரிகை. 1845 உதய தாரகை: இலக்கியம், கல்வி, சமயம் முதலியவற்றைப் பற்றிய கட்டுரைகள் இதில் வெளிவந்தன. தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதப்பட்டன. 1849 சிறுபிள்ளையின் தேசத் தோழன்: மூன்று மாதத்துக் கொருமுறை நாகர் கோவிலிலிருந்து வெளிவந்தது. 1854 Tamil quartely Repository: மதுரையில் இருந்த அமெரிக்கன் மிஷன் வெளியிட்ட தமிழ்ப் பத்திரிகை நான்கு ஆண்டு நடைபெற்றது. 1855 தினவர்த்தமானி: பெயரைக் கண்டு தினசரி பத்திரிகை எனக் கருதவேண்டாம். இது வாரப் பத்திரிகை. வியாழக் கிழமை தோறும் வெளிவந்தது. பெர்சிவல் பாதிரியார் (Rev. P. Percival) இதைத் தொடங்கி இதன் ஆசிரியராக இருந்தார். தினசரி பத்திரிகையின் பெரிய அளவில் அச்சிடப்பட்டது. செய்தி களுடன். இலக்கியம், விஞ்ஞானம் முதலிய கட்டுரைகளும் வெளிவந்தன. அரசாங்கத்தார் மாதம் 200 ரூபாய் இப்பத்திரி கைக்கு நன்கொடையளித்தனர். பெர்சிவல் ஐயர் விலகிக் கொண்ட பிறகு, இந்நன்கொடை நிறுத்தப்பட்டது. அவருக்குப் பிறகு, ஏட்டுச் சுவடியிலிருந்து பல நூல்களைப் பதிப்பித்தவரான சி. வை. தாமோதரம் பிள்ளை அவர்கள் இதன் ஆசிரியராகச் சிலகாலம் இருந்தார். பிறகு விசுவநாத பிள்ளை இதன் ஆசிரியராக இருந்தார். தமிழில் செய்திகளை வெளியிட்ட முதல் பத்திரிகை இதுவே. 1856 District Gazette: மாவட்டங்கள் தோறும், அங்கு வழங்குகிற தாய் மொழியிலும் ஆங்கிலத்திலும் அரசாங்கத்தாரால் அச்சிடப்பட்டது. தமிழ் மாவட்டங்களில் தமிழிலும் ஆங்கிலத்திலும் அச்சிடப்பட்டது. வாரப் பத்திரிகை. சென்னை பட்டினம், தென் ஆர்க்காடு, வட ஆர்க்காடு, கோயமுத்தூர், சேலம், மதுரை, திருநெல்வேலி, திருச்சிராப் பள்ளி. தஞ்சாவூர் ஆகிய தமிழ் மாவட்டங்களில் தமிழில் எழுதப்பட்டது. அந்தந்த மாவட்டம் சம்பந்தப்பட்ட அரசாங்க அறிக்கைகளும், பஞ்சாங்கம், தட்ப வெப்ப நிலை, விலைவாசி முதலியவை இதில் வெளியிடப்பட்டன. 1851 பாலியர் நேசன்: யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த சிறுவர்க்கான வெளியீடு. 1859 தர்மப்பள்ளி போதம்: நாகர்கோவிலிலிருந்து வெளியாயிற்று. 1861 தேசோபகாரி: திங்கள் இதழ். கிறிஸ்துவருக்காகவும் இந்துக்களுக்காகவும் ஒவியங்களுடன் அச்சிடப்பட்டது. 1863-ஆம் ஆண்டிலும் அதன் பிறகும் 16,800 பிரதிகள் அச்சிடப்பட்டனவாம். எடுகேஷன் சொஸைடி என்னும் சங்கத்தாரால் நெய்யூரிலிருந்து வெளியிடப்பட்டது. 1861 The Lamp of Truth: என்னும் தமிழ் வெளியீட்டை, சென்னை பிஃரீ சர்ச்சு மிஷனைச் சேர்ந்த ரெவரண்டு R. M. பாபூ என்பவர் வெளியிட்டார். 1863 தென் திருவாங்கூர் கிறிஸ்துவ தூதன்: இந்த ஆண்டில் வெளிவந்தது. 1863 அருணோதயம்: இது தரங்கம்பாடி மிஷன் அச்சுக்கூடத்தில் அச்சிடப்பட்டு லூதரன் மிஷனால் வெளியிடப்பட்டது. 1863 திருச்சபைப் பத்திரிகை: சென்னை லூதரன் மிஷனைச் சேர்ந்த சாமுவேல் பிள்ளை இதனை நடத்தினார். 1864 கற்பக விருட்சம்: இப்பத்திரிகையையும் சென்னை லூதரன் மிஷனைச் சேர்ந்த சாமுவேல்பிள்ளை நடத்தினார். 1864 தத்துவ போதினி: சென்னை பிரம சமாஜத்தினால் நடத்தப் பட்டது. சுப்பராயலு செட்டியார். இராஜகோபாலாசாரியார். ஸ்ரீதரர் என்பவர்கள் இதைத் தொடங்கினார்கள். சென்னை மயிலாப் பூருக்கடுத்த சென்தோம் என்னும் இடத்தில் தத்துவ போதினி அச்சுக்கூடம் அமைக்கப்பட்டது. இவ்வச்சுக்கூடம் அமைப்பதற்கு ஸ்ரீ பொன்னுச்சாமி தேவர் அவர்கள் 1000 ரூபா நன்கொடையளித்தார். அதில் இந்துமத, சமுதாய விஷயங்கள் மட்டும் எழுதப்பட்டன. இத்துக்களால் நடத்தப்பட்ட முதல் பத்திரிகை இதுவே. 1865 விவேக விளக்கம்: மேற்படி பிரம சமாஜத்தினால் மேற்படி தத்துவ போதினி அச்சுக்கூடத்தில் அச்சிடப்பட்டது. 1865 உதய தாரகை: யாழ்ப்பாணத்திலிருந்து இந்த ஆண்டில் வெளிவந்துள்ளது. எப்போது தொடங்கப்பட்டது என்பது தெரியவில்லை. 1865 அமிர்தவசனி: இந்துமதப் பெண்மணிகளுக்காகச் சென்னை யிலிருந்து வெளிவந்த இதழ். இந்தியக் கிறிஸ்துவப் பெண்மணிகள் இதில் கட்டுரை எழுதினார்கள். 1865 திருச்சபைப் பத்திரிகை: கிறிஸ்து சமயப் பத்திரிகை. எஸ். சாமிவேல் பிள்ளை இதை நடத்தினார். இவராலேயே கற்பக விருட்சம் என்னும் பத்திரிகையும் சென்னையில் நடத்தப் பட்டது. 1867 தேசாபிமானி: கிறிஸ்துவப் பத்திரிகை. சென்னையிலிருந்து வெளியாயிற்று 1877-இலும் இதுவந்தது. 1870 Native Public Opinion: திவான் பகதூர் ரகுநாத முதலியார். அரங்கநாத முதலியார், வேங்கடரமண பந்துலு ஆகிய இவர்களால் நடத்தப்பட்டது. சென்னை பாஸ்டர் அச்சுக் கூடத்தில் அச்சிடப்பட்டது. தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் ஆகிய மூன்று மொழியிலும் எழுதப்பட்டன. பிற்காலத்தில் இது ஆங்கிலத்தில் மட்டும் வெளியாயிற்று. 1871 ஞானாபானு: இதன் விபரம் தெரியவில்லை. 1871 பிரம தீபிகை: சைதாபுரம் காசி விசுவநாத முதலியாரும், பாரிஸ்டர் ராமசாமி ராஜுவும் இதனைச் சென்னையில் நடத்தினார்கள். முதலியார் இறந்த பிறகு இது நிறுத்தப்பட்டது. 1874 ஜனவினோதனி: திங்கள் இதழ். சென்னையில், C. K. S. அச்சியந்திர சாலையில் M. S. B. and V. K. சங்கத்தாரால் அச்சிடப்பட்டது. அரசாங்க ஆதரவு பெற்றது. 1889 வரையில் நடந்ததாகத் தெரிகிறது. 1875 சிநேக போதன்: கிறிஸ்துவப் பத்திரிகை. திங்கள் இதழ். பாளையங்கோட்டையிலிருந்து வெளிவந்தது. 1876 ஞானபானு: திங்கள் இதழ். வர்த்தமான தரங்கினி அச்சு யந்திர சாலையில் அச்சிடப்பட்டது. செங்கல்வராய முதலியார் இதன் ஆசிரியராக இருந்தார். 1877 சித்தாந்த சங்கிரகம்: சட்ட சம்பந்தமான திங்கள் இதழ். சி. இராமராவ் இதன் ஆசிரியர். 1878 இலும் நடந்தது. 1879 தத்துவ விசாரிணி: இதைப்பற்றி ஒரு செய்தியும் தெரிய வில்லை. 1879 நடுத்தர உயர்தர பள்ளி நண்பன்: இதன் ஆசிரியர் அண்ணாதுரை ஐயர். சென்னை வித்தியா வர்த்தனி அச்சுக் கூடத்தில் அச்சிடப்பட்டது. 1880 சுதேசமித்திரன்: இது இன்றும் நடைபெறுகிறது. தினசரிப் பத்திரிகை. 1881 கலாநிதி: பகடால S. P. நரசிம்மலு நாயுடு அவர்களால் சேலத்தில் நடத்தப்பட்டது. இவரே, சுதேசாபிமானி என்னும் பத்திரிகையை இந்த ஆண்டுக்கு முன்பு நடத்தினார். எத்தனை ஆண்டு என்பது தெரியவில்லை. 1882 தத்துவ விவேசினி: சென்னையிலிருந்து வெளிவந்தது. தமிழ்ப் புரொபஸர் பு. முனிசாமி நாயகர் இதன் ஆசிரியர். 1882 சத்திய வேதக்கொடி: திங்கள் இதழ் மாசிலாமணி என்பவ ரால் கிறிஸ்துவர்களுக்காக வெளியிடப்பட்டது. 1883 சுகுணபோதினி: திங்களுக்கு இருமுறை சென்னையில் அச் சிடப்பட்டது. இதன் ஆசிரியர், இ. பாலசுந்தர முதலியார். 1883 இந்துமத சீர்திருத்தி: பாளையங்கோட்டையிலிருந்து வெளி வந்தது. இதன் ஆசிரியர், கே. ஆறுமுகம் பிள்ளை. 1884 தீர்க்கதரிசன வர்த்தமானி: மூன்று திங்களுக்கு ஒரு முறை மாசிலாமணி என்பவரால் கிறிஸ்துவர்களுக்காக வெளியிடப் பட்டது. 1884 சத்திய வேதானுசாரம்: கிறிஸ்துவ மதப் பத்திரிகை. சென்னையிலிருந்து வெளிவந்தது. இதன் ஆசிரியர், எம். சி. யோகப்பிள்ளை. 1886 பிரம வித்தியா: திங்கள் இதழ். தமிழ் வடமொழி இரண்டிலும் எழுதப்பட்டது. K. R. சீனிவாச தீக்ஷிதரால் சிதம்பரத்திலி ருந்து இரகுநாத பாஸ்கர சேதுபதி யவர்களின் பொருளுதவி பெற்று நடந்தது. 1886 கலா தரங்கினி: திங்கள் இதழ். இராஜகோபால செட்டியாரால் சென்னை. சூளை திராவிட ரத்தினாகரம் அச்சுக்கூடத்தில் அச்சிடப்பட்டது. 1889 வரையில் நடந்ததாகத் தெரிகிறது. 1886 லோக ரஞ்சனி: திங்கள் இதழ். T. நாதமுனி நாயுடு இதன் ஆசிரியர். பல்லாரி கௌல் பஜார் நியூட்ரல் அச்சு யந்திர சாலையில் அச்சிடப்பட்டது. 1887 ஜனோபகாரம்: இதன் விபரம் தெரியவில்லை. 1887 மாதர் மித்திரி: சென்னையில் வெளியிடப்பட்டது. 1887 சிங்கை நேசன்: சிங்கப்பூரிலிருந்து வெளிவந்தது. 1890 வரையில் நடைபெற்றது. 1887 விவேக போதினி: திங்கள் இதழ். சென்னை ரிப்பன் யந்திர சாலையில் எ.எல்.இராசு செட்டியாரால் வெளியிடப்பட்டது. 1887 லோக ரஞ்சினி: திங்கள் இதழ். வேலூரிலிருந்து சி. ஜி. அப்பு முதலி என்பவர் இதனை வெளியிட்டார். 1887 திராவிட ரஞ்சினி: திங்கள் இதழ். திருச்சியிலிருந்து வெளி வந்தது. டி. வி. வெங்கடராசு நாயுடு இதன் ஆசிரியர். 1887 விவேக சுந்தரம்: திங்கள் இதழ். சென்னை ரிப்பன் அச்சு யந்திர சாலையில் அச்சிடப்பட்டு எஸ். நமசிவாய செட்டியாரால் வெளியிடப்பட்டது. 1887 ஜனோபகாரம்: திங்கள் இதழ். சென்னை ரிப்பன் அச்சு யந்திர சாலையில் அச்சிடப்பட்டு, சி. சடையாண்டி செட்டியாரால் வெளியிடப்பட்டது. 1887 மகாராணி: திங்கள் இதழ். மகளிருக்காக வெளியிடப் பட்டது. சென்னை வி. என். ஜுபிலி அச்சகத்தில் அச்சிடப்பட்டது. வி. கிருஷ்ண மாச்சாரியார் இதன் ஆசிரியர். 1887 கிராமப் பள்ளி ஆசிரியன்: திங்கள் இதழ். கோபாலையர் இதன் ஆசிரியர். சென்னை அல்பினியன் அச்சகத்தில் அச்சிடப்பட்டது. 1887 உலக நேசன்: பினாங்கிலிருந்து வெளிவந்தது. முகமதியாரால் அச்சிடப்பட்டது. 1888 பினாங்கு விஜயகேதனன்: திங்கள் இதழ். பினாங்கிலிருந்து வெளி வந்தது. 1899 வரையில் நடந்தது. 1888 இந்து நேசன்: திங்களுக்கு இருமுறை. பினாங்கில் அச்சிடப் பட்டது. 1888 சன்மார்க்க போதினி: திங்கள் இதழ், சிதம்பரத்திலிருந்து சி. ஆர். சீனிவாச சாஸ்திரியாரால் வெளியிடப்பட்டது. 1889 தீர்க்கதரிசன சுப்ரதீபிகை: திங்கள் இதழ். கிறிஸ்து வருக்காக வெளியிடப்பட்டது. மாசிலாமணி என்பவர் இதன் ஆசிரியர். 1889 பிரமவித்தியா: திங்கள் இதழ். சி. ஆர். சீனிவாச சாஸ்திரியா ரால் வெளியிடப்பட்டது. 1890 கிறிஸ்துவன்: இதுபற்றி ஒன்றும் தெரியவில்லை. கிறிஸ்துவப் பத்திரிகை. 1890 சிவபக்திசந்திரிகை: அநந்த வைத்தியநாத சிவன் என்பவரால் திருவாடியிலிருந்து வெளியிடப்பட்டது. 1893 வரையில் வெளிவந்ததாகத் தெரிகிறது. 1890 வைதீக சித்தாந்த தீபிகை: திங்கள் இதழ். டி. நாதமுனி நாயுடு என்பவரால் சென்னையிலிருந்து வெளியிடப்பட்டது. 1890 வேத விளக்கம்: கிறிஸ்துவப் பத்திரிகை. திங்கள் இதழ். சென்னை அல்பினியன் அச்சகத்தில் பதிப்பிக்கப்பட்டது. 1891 ஞானமித்திரன்: சென்னை ஸ்டார் ஆப் இந்தியா அச்சுக் கூடத்தில் பிரசுரிக்கப்பட்டது. 1892 விவேக சிந்தாமணி: திங்கள் இதழ் சி.வி. விசுவநாதையர் இதன் ஆசிரியர். சென்னை ரிப்பன் அச்சு யந்திரசாலையில் அச்சிடப்பட்டது. 1892 வித்தியா வினோதினி: சென்னையிலிருந்து வெளியாயிற்று. 1892 ஞானதீபம்: திங்கள் இதழ். M.C. சித்தி லெப்பை என்பவரால் கொளும்பில் அச்சிடப்பட்டது. 1893 வித்தியாபானு: கோயமுத்தூரிலிருந்து வெளியான திங்கள் இதழ். கே. என். ஈசுவரய்யா என்பவர் இதன் ஆசிரியர். 1893 மாதச் சட்டப் பத்திரிகை: திங்கள் இதழ். வி.டி. வேங்கடராம அய்யரால் சென்னையில் வெளியிடப்பட்டது. 1894 சண்முக விஜயம்: இதன் ஆசிரியர் டி.ஏ. கிருஷ்ணசாமி ஐயர். சென்னை ரிப்பன் அச்சுயந்திர சாலையில் அச்சிடப்பட்டது. 1895 சோமரவி: தமிழ்-ஆங்கிலம். மூன்று திங்களுக்கு ஒருமுறை வெளியிடப்பட்டது. சென்னையிலிருந்து சி.ஈ. ஸ்ரீநிவாச ராகவாச்சாரியால் வெளியிடப்பட்டது. 1895 கோமாலி: தமிழ்-ஆங்கிலம். மூன்று திங்களுக்கொருமுறை சென்னையிலிருந்து வெளியாயிற்று. 1896 தேஜோபிமானி: திங்களுக்கு இரு முறை வெளிவந்தது. அம்பலவாணப் பிள்ளை இதன் ஆசிரியர். அரசியல், சமுதாயம், இலக்கியம் முதலிய விஷயங்கள் இதில் வெளியிடப்பட்டன. Perak என்னும் இடத்திலிருந்து வெளியிடப்பட்டது. 1897 ஞானபோதினி: ஏம். எஸ். பூர்ணலிங்கம் பிள்ளை இதன் ஆசிரியர். சமயம், தத்துவம், இலக்கியம், விஞ்ஞானம் முதலியவை இதில் எழுதப்பட்டன. திங்கள் இதழ் சென்னை. 1897 உண்மை விளக்கம்: அல்லது, சித்தாந்த தீபிகை. திங்கள் இதழ். N. வேதாசலம் பிள்ளை அவர்களால் சென்னை யிலிருந்து வெளியிடப்பட்டது. 1897 தமிழ்க் கல்விபத்திரிகை: திங்கள் இதழ். சென்னையிலிருந்து. கே, பார்த்தசாரதி ஐயங்காரால் வெளியிடப்பட்டது. 1898 அருணோதயம்: திங்கள் இதழ்; கிறிஸ்தவப் பத்திரிகை; விபரங்கள் தெரியவில்லை. கீழ்க்கண்ட இதழ்களும் 19-ஆம் நூற்றாண்டில் வெளிவந் தவை. இவை எந்த ஆண்டில் தொடங்கப்பட்டன. யாரால் வெளியிடப்பட்டன என்னும் விபரங்கள் தெரியவில்லை. அபிமான: திருவனந்தபுரம் அமிர்தவசனி: திருச்சிராப்பள்ளி. இலங்கை நேசன், இலங்காபிமானி, இந்துசாதனம்: இவை இலங்கை, யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்தன. உதயபானு: யாழ்ப்பாணம். கோயமுத்தூர் பத்திரிகை: கோயமுத்தூர். சந்திய வர்த்தமானி: பசுமலை. குடந்தை மித்திரன்: கும்பகோணம். சுதரிசனி: கோயமுத்தூர். சுதேசாபிமானி: சேலம். சுதேசநாடியம்: யாழ்ப்பாணம். க. வேலுப்பிள்ளை இதன் ஆசிரியர். சைவ சூக்குமார்த்தபோதினி: யாழ்ப்பாணம் திங்கள் இதழ். வேலணை கந்தப்பிள்ளை இதன் ஆசிரியர். சேலம் பானு: சேலம். சைவாபிமானி: யாழ்ப்பாணம், ஆசிரியர் வல்வை வைத்திய லிங்கம். ஞானப்பிரகாசம்: யாழ்ப்பாணம். ஆசிரியர் ஆ. சண்முகரத்தின சர்மா. ஞானசிந்தி: யாழ்ப்பாணம். ஆசிரியர், வதிரி தமோதரம் பிள்ளை. தமிழ்ச்செல்வன்: திருச்சிராப்பள்ளி. தக்ஷிணதீபம்: சேலம். திவாகரன்: திருச்செங்கோடு. ஸ்ரீ இரணியகர்ப்ப இரகுநாத பாஸ்கர சேதுபதியவர்கள் பொருளுதவியால் நடந்தது. தூதன்: கோயமுத்தூர். தென் இந்திய மித்திரன்: திண்டுக்கல். தேசாபிமானி: கூடலூர். நீலலோசனி: நாகைப்பட்டினம். ஸ்ரீ இரணியகர்ப்ப இரகுநாத பாஸ்கர சேதுபதி யவர்கள் பொருள் உதவிபெற்று நடந்தது. நேசன்: திருச்சிராப்பள்ளி. பிரமஞான போதினி: பெங்களுர். லோக வர்த்தமானி: சேலம். வித்தகம்: யாழ்ப்பாணம், தென்கோவை பண்டிதர் ச. கந்தையா பிள்ளை இதன் ஆசிரியர். விவேக திவாகரன்: யாழ்ப்பாணம். ஜனமித்திரன்: தஞ்சாவூர். ஜனப்பத்திரிகை: நாகைப்பட்டினம். ஸ்தலபூஷணி: ஸ்ரீரங்கம். இலக்கண நூல்கள் பத்தொன்பதாம் நூற்றாண்டுவரையில் தமிழில் வசன நூல்கள் ஏற்படவில்லை என்று கூறினோம். 18-ஆம் நூற்றாண்டிலே கிருத்தவப் பாதிரிமார் சிலர் வசன நடையில் தமிழில் நூல் இயற்றத் தொடங்கியது உண்மைதான். ஆனால். 19-ஆம் நூற்றாண்டிலேதான் வசன நூல்கள் வளர்வதற்கு வாய்ப்பும் அச்சியந்திரம் முதலிய சூழ் நிலைகளும் ஏற்பட்டன. பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியார், நமது நாட்டைக் கைப்பற்றி அரசாளத் தொடங்கினார்கள். அவர்கள் இங்கிலாந்து தேசத்திலிருந்து ஆங்கிலேயரை அழைத்து வந்து இந்நாட்டின் அரசாங்க மேலதிகாரிகளாக அவர்களை நியமித்தார்கள். ஆங்கிலேயர் நமது நாட்டுமொழிகளை அறியாத வர்கள். மேலதிகாரிகளாக அமர்ந்த அவர்கள் நாட்டு மொழிகளை அறிந்திருக்க வேண்டியவராக இருந்தனர். ஆகவே, அவர்கள் அலுவல் நடத்தும் வட்டாரங்களில் வழங்கும் இந்தியமொழிகளை அறிந்திருக்கவேண்டும் என்னும் கட்டாயம் அக்காலத்தில் இருந்தது. அக்காலத்தில் ஆங்கில மொழி அரசாங்க மொழியாக அமைய வில்லை. இந்திய நாட்டு மொழிகளில் ஏதேனும் ஒன்றைப் படித்துப் பரீட்சையில் தேறினர். ஆங்கில உத்தியோகஸ்தர்களுக்குச் சம்பளம் உயர்த்திக் கொடுக்கப்பட்டபடியால், ஆங்கிலேய உத்தியோகஸ் தர்கள் இந்திய மொழிகளில் ஏதேனும் ஒன்றைக் கற்கத் தொடங்கி னார்கள். இந்த முறையில் தமிழ் நாட்டில் வந்து அலுவல் செய்த ஆங்கிலேயர்கள் தமிழ் மொழியைப் படிக்கத் தொடங்கினார்கள். தமிழ் மொழியைப் படிக்கத் தொடங்கிய ஆங்கிலேயர் களுக்குத் தமிழ் இலக்கண நூல்கள் எளிதில் விளங்கவில்லை. ஏனென்றால், நன்னூல் முதலிய இலக்கணங்கள் செய்யுள் நடையில் அமைந்திருந்தன. வசன நடையில் இலக்கண நூல்கள் அந்தக் காலத்தில் இல்லை. சூத்திரங்களைப் படித்து அவற்றிற்குப் பொருள் தெரிந்துகொண்டு பின்னர் இலக்கணத்தை அறிந்துகொள்வது கடினமாக இருந்தது. ஆகவே, அவர்களுக்கு வசன நடையில் அமைந்த இலக்கண நூல் தேவைப்பட்டது. ஆகவே, அக்காலத்து ஆங்கிலக் கிழக்கிந்திய அரசாங்கத்தார் தமிழில் வசன நடையில் இலக்கண நூல் எழுதுகிறவர்களுக்கு ஒரு தொகை ரூபா பரிசு அளிப்பதாக விளம்பரம் செய்தார்கள். இதன் காரணமாக முதன் முதல் தமிழில் வசன இலக்கண நூல் தோன்றியது. அந்தப் பரிசுபெற்று வெளியிடப்பட்ட முதல் வசன இலக்கண நூல் தமிழ் விளக்கம் என்னும் பெயர் பெற்றிருந்தது. அந்நூல் 1811-ஆம் ஆண்டில், திருவேற்காடு சுப்பராய முதலியாரால் எழுதப் பட்டு அச்சிடப்பட்டது. நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்னர் அச்சிடப்பட்ட அந்த இலக்கண நூலின் பிரதியொன்றை, முப்பது ஆண்டுகளுக்கு முன்பு, சிதலமான நிலையில் நான் பார்த்தேன். அந்நூலின் பிரதி இப்போது எங்கேனும் இருக்கிறதா என்பது தெரியவில்லை. அந்த நூலில் முகப்புப்பக்கத்தின் அமைப்பை இந்நூல் 130, 131-ஆம் பக்கத்தில் காட்டியுள்ளேன். இந்நூலின் இரண்டாம் பதிப்பு 1817-ஆம் ஆண்டு அச்சிடப் பட்டது. இதன் பிறகு வசன நடையில் எழுதப்பட்ட தமிழ் இலக்கண நூல், தாண்டவராய முதலியார் எழுதிய இலக்கண வினாவிடையாகும். சென்னைக் கல்விச்சங்கத்தின் தலைமைத் தமிழ்ப் புலவராக இருந்த தாண்டவராய முதலியார். அக் கல்விச் சங்கத்தின் தலைவராக இருந்த ரிச்சார்டு கிளார்க்கு துரையவர்கள் விரும்பியபடி இந்த இலக்கண வினாவிடையை எழுதினார். இது 1820-ஆம் ஆண்டில் எழுதப்பட்டது. இதன் முகப்புப் பக்கத்தைப் படத்தில் காண்க. அரசாங்க அலுவலில் இருந்த ஆங்கிலேயர் அல்லாமல் சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழ் நாட்டில் வந்திருந்த ஐரோப்பிய கிறித்துவப் பாதிரிமாரும் தமிழ்படிக்கத் தொடங்கினார்கள் அன்றியும். தமிழ்க் கிறித்துவப் பிள்ளைகள் படிப்பதற்காகப் பாடசாலைகளை அமைத்தார்கள். அரசாங்கத்தாரும் சென்ற நூற்றாண்டில் உயர்தரப் பாடாசாலைகளையும் கல்லூரிகளையும் அமைத்தார்கள். ஆகவே மாணவர்களுக்காகவும் வசன இலக்கண நூல்கள் தேவைப்பட்டன. சென்ற 19-ஆம் நூற்றாண்டில் வெளிவந்த வசன இலக்கண நூல்களின் பட்டியலையும், ஏட்டுச் சுவடியிலிருந்து அச்சுப் புத்தகமாக அச்சிடப்பட்ட பழைய இலக்கண நூல்களின் பட்டியலையும் நான் அறிந்தவரையில் தருகிறேன். இதனை முழுவிவரப் பட்டியல் என்று சொல்ல முடியாது. விடுபட்ட நூல்களும் இருக்கக்கூடும். பதிப்பித்த நூலின் பெயர் பதிப்பித்தவர் பெயர் ஆண்டு 1811 தமிழ் விளக்கம் திருவேற்காடு சுப்பராய முதலியார், சென்னை. 1817 தமிழ் விளக்கம் திருவேற்காடு சுப்பராய முதலியார், சென்னை இரண்டாம் பதிப்பு. 1820 இலக்கண வினா தாண்டவராய முதலியார். விடை சென்னை. 1828 இலக்கணச்சுருக்க திருத்தணிகை விசாகப் வினாவிடை பொருமாள் அய்யர். 1835 நன்னூல் மூலம். இவை, “இலக்கணப் நம்பி அகப்பொருள் பஞ்சகம்’ என்னும் மூலம். தொகுப்பில் தாண்டவராய புறப்பொருள் முதவியாரால் வெண்பாமலை அச்சிடப்பட்டன., மூலம். சென்னை. 1845 இலத்தீனிலக்கணச் ரோமன் கத்தோலிக்குப் சுருக்கம் பிஷப்பாகிய Climent Bonnand, எழுதியது. புதுவை. 1846 தமிழ் இலக்கண நூற் ஜி.யு. போப்பையர், சுருக்க வினாவிடைசென்னை. இது இரண்டாம் பதிப்பு. 1847 நன்னூல் விருத்தி முகவை இராமாநுச யுரை கவிராயர் எழுதியது. அவரது அச்சகத்தில் பதித்தது. சென்னை. 1847 தொல்காப்பியம் மழவை மகாலிங்கய்யர். எழுத்ததிகாரம், நச்சினார்க்கினியர் உரையுடன். 1847 இலக்கண நூற் இயற் தமிழாசிரியர் சுருக்கம் இராமாநுச கவிராயர், சென்னை. 1848 இலக்கணச் சுருக்கம். இயற்றமிழாசிரியர் எழுத்ததிகாரம், சொல் இராமாநுச கவிராயர் லதிகாரம். வாசக நடை. எழுதியது, சென்னை. 1848 நன்னூல் ஆங்கில ஜோயஸும் சாமுயல் 1851 விளக்கத்துடன். பிள்ளையும் எழுதியது Rev. T. Brotherton திருப்பியது. 1849 இலக்கண நூலா புதுச்சேரி (1855-இல் தாரம் இதன் இரண்டாம் பதிப்பு) 1851 நன்னூல். சங்கர ஆறுமுக நாவலர் பதிப்பு. நமச்சிவாயர் உரை. 1851 யாப்பருங்கலக் காரிகை களத்தூர் வேதகிரி மூலமும், குணசாகரர் முதலியார் பதிப்பித்தது, விருத்தியுரையும். சென்னை. 1852 பாலபோத திருத்தணிகை விசாகப் இலக்கணம். பெருமாளைய்யர். 1853 தமிழ் இலக்கணம். அருணாசலம் பிள்ளை. பாளையங்கோட்டை. 1853 இலக்கண நூற் நாகர்கோயில். சுருக்கம் 1855 இலக்கணச் சுருக்க வேதக்கண் எழுதியது. வினா விடை. 1858 நன்னூல் ஆங்கில ஜி.யு. போப்பையர். 1859 விளக்கம் 1860 இலக்கணச் சுருக்கம். மயிலை, சவேரிமுத்துப் பிள்ளை எழுதியது. புதுவையில் அச்சிடப் பட்டது. 1864 நன்னூல் மூலம், நம்பி நரசிங்கபுரம் வீராசாமி அகப்பொருள் மூலம், முதலியார் பதிப்பித்தன. புறப்பொருள் சென்னை இயற்றமிழ் வெண்பா மாலை விளக்க அச்சுக்கூடம். மூலம், யாப்பருங் ஆனந்த வருசம். புரட்டாசி கலக்காரிகை மூலம். மாதம் தண்டியலங்காரம் மூலம். 1864. நன்னூற் சுருக்கம். ஜி. பி.சவுந்தரநாயகம் பிள்ளை. சென்னை. அணியியல் விளக்கம். திருத்தணிகை சரவணப் பெருமாளையர், சென்னை. 1870 யாப்பிலக்கணச் கொட்டையூர் சி.சாமிநாத சுருக்கம். தேசிகர் எழுதியது. நாகர் கோவில் தேவகாருண்ய அச்சுக்கூடப் பதிப்பு. 1878 நன்னூல், ஆங்கில By a Graduate of the மொழி பெயர்ப்பு Madras University. (J. Lazarus) சென்னை. 1878 அகப்பொருள் வைத்தியலிங்கம் பிள்ளை விளக்கம் உரையுடன். சென்னை. (1879-இல் மற்றொரு பதிப்பு) 1879 இலக்கணச் சுருக்கம். வாசுதேவ முதலியார். 1879 இலக்கணச் சுருக்கம். மழவைமகாலிங்கய்யர், (இதனை 1898-இல் வி.கோ. சூரிய நராயண சாஸ்தியார் மீண்டும் அச்சிட்டார்.) 1880 நன்னூல், இராசகோபாலப் காண்டிகையுரை. பிள்ளை. 1880 நன்னூல், காண்டிகை ஆறுமுக நாவலர் பதிப்பு. உரை. 1880 இலக்கண சிந்தாமணி ஜகராவ் முதலியார். 1880 நூலாதாரத்தின் மேலா முத்துசாமி முதலியார். தாரம். 1880 வினைமர விளக்கம் ----- (Pictorial Tree of verbs) 1881 வீரசோழியம். சி.வை. தாமோதரம் பிள்ளை பதிப்பு. (1895-இல் இரண்டாம் பதிப்பு.) சென்னை. 1881 கட்டளைக் சி.வை. தாமோதரம் கலித்துறை பிள்ளை. 1882 பிரயோக விவேகம் ஆறுமுக நாவலர். மூலமும் உரையும் 1884- இல் மறுபதிப்பு. சுப்பிரமணிய தீட்சிதர் எழுதியது. 1882 யாப்பருங்கலக் பரப்பிரம்ம முத்திராக்ஷர காரிகை. சாலை. 1883 இலக்கண சூடாமணி. கிருஷ்ணபிள்ளை. 1884 இலக்கணச் சுருக்கம். வரதாச்சாரி. 1884 இலக்கணச் சுருக்கம். சீனிவாச முதலியார். 1884 நன்னூல் ஆங்கில Rev. John Lazarus. மொழிபெயர்ப்பு. 1887 வினைச்சொல் வேங்கடாசமி ஐயர். விளக்கம். 1885 தொல்காப்பியம் சி.வை. தாமோதரம் பிள்ளை பதிப்பு. 1885 வினையுருவ விளக்கம். சீனிவாச்சாரி. 1885 விருத்தயாப்பியல். வீரபத்திரமுதலியார். 1886 பஞ்சலக்ஷணம்,நேமி இராம சுவாமிகள். நாதம் வீரசோழியம், மூலம். 1886 இலக்கணச் சுருக்கம். தியாகராஜ ஐயர். 1886 இலக்கணச் சுருக்கம். முத்துசாமி முதலியார். 1887 நன்னூல், சங்கரநமச் ஆறுமுக நாவலர் சிவாயருரை பதிப்பு, யாழ்ப்பாணம். 1888 யாப்பிலக்கண சூசனம் முத்துத்தம்பிப் பிள்ளை. 1889 முத்துவீரியம், டாக்டர் பழனியாண்டி முத்துவீர பதிப்பித்தது. சென்னை. உபாத்தியாயர் இயற்றியது. 1889 பாட்டியல். தியாகராஜ தேசிகர் இயற்றியது. 1889 இலக்கண விளக்கம், சி.வை. தாமோதரம் பிள்ளை உரையுடன். திருவாருர் பதிப்பு, சென்னை. வைத்தியநாத தேசிகர் இயற்றியது. 1891 தமிழ் இலக்கண ஜேம்ஸ். T. அப்பாபிள்ளை தீபிகை. பட்டுக்கோட்டையில் அச்சிட்டது. 1891 அல்-ஹிதாயத்அல்- முகமது காசிம் காஸிமீயத். (அரபு இபின்ஸித்தீக் அவர்கள் மொழி இலக்கணம்) எழுதியது. (அரபுத் தமிழ்எழுத்து.) 1892 தமிழ் இலக்கணச் இராயப்பேட்டை சுருக்கம் சீனிவாச முதலியார், சென்னை. 1883 தமிழ் இலக்கணச் ஞானமணிநாடார் சிந்தாமணி சென்னை. 1894 இளைஞர் பயில் மோசூர் வேங்கடசாமி இலக்கணம். ஐயர். சென்னை. 1895 குவலயாநந்தம் எட்டயபுரம் சங்கர அணியிலக்கணம் நாரயண சாஸ்திரியும் (அப்பைய தீட்சிதர் முகவூர் மீனாட்சி சுந்தரக் வடமொழியில் கவிராயரும் தமிழில்மொழி எழுதியது) பெயர்த்தது. சென்னை. 1897 முதலிலக்கணம். முனிசாமி நாயுடுவும் பார்த்தசாரதி ஐயங்காரும் எழுதியது. சென்னை. 1898 யாப்பிலக்கணச் முத்தி சிதம்பரம் பிள்ளை. சுருக்கம். திருச்சிராப்பள்ளி. 1900 இலக்கண விளக்கம், சி.வை. தாமோ செய்யுளியல், திரு தரம்பிள்ளை வாரூர் வைத்தியநாத பதிப்பு, சென்னை. தேசிகர் இயற்றியது. 1900 வச்சணந்திமாலை குணவீர பண்டிதர் என்னும் வெண்பாப் இயற்றியது. சென்னையில் பாட்டியல், அச்சிடப்பட்டது. வரையறுத்த பாட்டியல். இஸ்லாமும் தமிழும் கி.பி. 12-ஆம் நூற்றாண்டு முதல் முகம்மதிய மதத்தவரான முஸ்லிம்கள் தமிழ் நாட்டில் இருந்து வருகின்றனர். பிற்காலப் பாண்டிய ருடைய அரச சபையிலே அராபியர் ஒருவர் இடம் பெற்றிருந்தார் என்றும், அவர் பாண்டியனுடைய குதிரைப் படைக்குக் குதிரைகளை வெளிநாட்டிலிருந்து வரவழைத்துக் கொடுத்தார் என்றும் அறிகிறோம். 14-ஆம் நூற்றாண்டில் மாலிக்காபர் தென்னாட்டின் மேல் படை யெடுத்து வந்து கோவில்களைக் கொள்ளையடித்த காலத்தில், இந்துக் கள் சிலர் இஸ்லாம் மதத்தைத் தழுவி முஸ்லிம் ஆனார்கள். 17, 18-ஆம் நூற்றாண்டுகளில் தமிழ் நாட்டிலே அரசியல் குழப்பங்கள் ஏற்பட்டு, முஸ்லிம்களாகிய நவாபுகள் நாட்டை ஆட்சிசெய்தனர். அவர்கள் காலத்திலே தமிழ் நாட்டிலே முஸ்லிம்களின் தொகை பெருகியது. மதம் மாறி முகம் மதியரான தமிழரின் தாய்மொழி தமிழ் மொழியே. ஆகவே, தமிழ் முஸ்லிம்கள் தமிழ் மொழியிலே தமது மத சம்பந்தமான நூல் களையும் இயற்றினார்கள். முஸ்லிம்களின் “தெய்வ பாஷை” அரபு மொழியாக இருந்தது. முகம்மதியரின் குர்ஆன் வேதம் அரபுமொழியில் எழுதப்பட்டது. குர் ஆன் வேதத்தை அரபு மொழியிலேயே படிக்க வேண்டும் என்றும் அதை வேறு மொழிகளில் மொழி பெயர்க்கக்கூடாது என்றும் அக்காலத்தில் முஸ்லிம்களுக்குள் ஒரு நம்பிக்கை இருந்தது. தமிழ் முஸ்லிம்களும் தமது மத சம்பந்தமான நூல்களை அரபு எழுத்திலேயே படிக்கவேண்டும் என்றும் அக்காலத்தில் ஒரு நம்பிக்கை இருந்தது. ஆகவே, அரபு மொழியிலிருந்து, அரபி எழுத்தைப்போலவேயுள்ள ஒருவித புதிய எழுத்தைத் தமிழ் நாட்டு முஸ்லிம்கள் அமைத்துக் கொண்டார்கள். அந்த எழுத்துக்கு அரபுத்தமிழ் என்பது பெயர். அரபுத் தமிழுக்கு “ஆர்வீ” என்று வேறு பெயரும் உண்டு. அரபுத் தமிழ் எழுத்து அரபி எழுத்து போலவே இருக்கும். அரபு எழுத்தைப் போலவே வலதுபுறமிருந்து இடது புறமாக எழுதப்பட்டது. தமிழ் முஸ்லிம்களுடைய தமிழ் நூல்கள் பல, அரபுத்தமிழிலே எழுதப் பட்டிருந்தன. அரபுத் தமிழ்ப் புத்தகங்களைப் பார்த்தால் அவை ‘அரபு பாஷைப் புத்தகம் என்று நினைக்கவேண்டியிருக்கும். ஆனால், அதைப் படித்தால் தமிழாக இருக்கும். தமிழ் முஸ்லிம்கள் தமது நூல்களை அரபுத் தமிழ் எழுத்திலும், தமிழ் எழுத்திலும் எழுதினார்கள். 1 அஜாயிபுல் அக்பார் 2 மதராஸ் 1324 - முஹர்ரம் 5-ம் தேதி வியாழம் 3 சென்னை சுதேசிய மகாநாடு 4 சென்ற 23-ம் தேதி வெள்ளிக்கிழமையன்று சென்னை பச்சையப்பன் மண்டபத்திற் 5 கெதிரிலுள்ள மைதானத்தில் சுதேசிய மகாநாடு ஒன்று கூடிற்று. 6 அதில் வெகுஜனங்கள் கூடியிருந்தார்கள். இதற்கு முன் சுதேசிய மகா 7 நாடு கூடியிருந்தபோதிலும் இதுபோல் வெகுஜனங்கள் ஒருபோதும் கூட 8 வில்லை, பொதுக் காரியங்களில் பாடுபடும் ஜனங்களும் சில்லரைத் தொழில். 9 களைக் செய்யும் சாமானியர்களும் வந்து கூடி நடந்ததை கவனமாய்க் 10 கேட்டார்கள், இதுவிஷயத்திற்காக இருபதாயிரம் நோட்டீஸ்கள் 11 தமிழிலும் தெலுங்கிலும் இங்கிலீஷிலும் அச்சிட்டு ஊரெங்கும் கொடுக்கப்பட்டது. 12 அங்குக் கூடினவர்கள் சுமார் 8000க்கு அதிகமிருப்பார்கள். 13 இங்கிலீஷ் அறியாதவர்கள் மிகுதம்பேர்கள் இருந்ததால் அவர்கள். சீறாப் புராணம், இராசநாயகம் முதலிய நூல்களைத் தமிழ் முஸ்லிம்கள் இயற்றியபோதிலும் 19-ஆம் நூற்றாண்டிலேதான் தமிழ் முஸ்லிம்கள் அதிகமாகப் புத்தகங்களை வெளியிட்டார்கள் இதற்குக் காரணம் 19-ம் நூற்றாண்டிலேதான் நமதுநாட்டிலே அச்சுக்கூடங்கள் ஏற்படுத்தப்பட்டன. அதற்கு முன்பு அச்சுக்கூடங்களெல்லாம் பாதிரிமாரிடத்திலும் அரசாங்கத்தாரிடத்திலும் இருந்தன. நம் நாட்டவருக்கு அச்சுயந்திரம் வைக்கும் உரிமை 19-ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட பிறகுதான் இந்துக்களும் முஸ்லிம்களும் நமது மத நூல்களை அச்சுப்புத்தகமாக அச்சிடத் தொடங்கினார்கள். 17, 18-ஆம் நூற்றாண்டுகளிலே தமிழ் நாட்டில் நவாப்புகளின் ஆட்சி ஏற்பட்டிருந்தது என்று கூறினோம். நவாப்புகள் இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவர்கள். நவாப்புகளின் ஆட்சிக் காலத்தில் உருது மொழியும் பாரசீக மொழியும் அரசாங்க மொழியாக இருந்தன. முஸ்லிம் களின். “தெய்வ பாஷை” அரபு மொழியாக இருந்தது. ஆகவே, அவர்கள் குர்ஆன் வேதத்தைப் படிப்பதற்காக அரபு மொழியையும் அரசியலை நடத்துவதற்காக உருது, பாரசீக மொழிகளையும் பயின்றார்கள். ஆகவே தமிழ் மொழியிலும் அரபி உருது பாரசீக மொழிச் சொற்கள் சில கலந்தன. பேச்சு வழக்கிலுள்ள பாஷையில், சமயம் அரசியல் வாணிகம் முதலிய காரணமாக வேறு மொழிச் சொற்கள் கலப்பது இயற்கைதானே. 19-ஆம் நூற்றாண்டிலே, நவாப்பு களின் ஆட்சி மறைந்து ஆங்கிலேயர் ஆட்சி தொடங்கிய பிறகும், அரசியல் சம்பந்தமாக முன்பு வழங்கி வந்த பாரசீக உருது அரபிச் சொற்கள் வழங்கிவந்தன. தமிழில் கலந்த அந்த மொழிச் சொற்கள் பேச்சு வழக்கில் அதிகமாகவும் இலக்கிய வழக்கில் குறைவாகவும் உள்ளன. ஆனால் இஸ்லாம் மதச் சார்பாகத் தமிழில் எழுதப்பட்ட நூல்களில் அரபுச் சொற்கள் சற்று அதிகமாகவுள்ளன. முஸ்லிம் தமிழர் தமிழில் புதிதாக அமைத்துச் செய்த இலக்கியம் நொண்டி நாடகம் என்பது. நொண்டி நாடகம் என்னும் பெயரில் சில நூல்கள் தமிழில் உள்ளன. பாரசீக மொழியிலிருந்து தமிழில்மொழி பெயர்க்கப்பட்ட அரபிக் கதைகள் பேர் போனவை. இஸ்லாம் மதச் சார்பாக அரபுமொழிச் சொற்களும் முஸ்லிம் அரசாட்சிச் சார்பாக உருது பாரசீக மொழிச் சொற்களும் தமிழில் கலந்தன என்று கூறினோம். அவற்றிற் சிலவற்றைக் காட்டுவோம். “குறவர் மகட்குச் சலாமிடற்கு ஏக்கறு குமரனை முத்துக் குமரனைப் போற்றுதும்” என்று சலாம் என்னும் சொல்லைக் குமர குருபரசுவாமிகள் வழங்கினார். “சுராதிபதி மாலயனும் மாலோடுசலாமிடு சுவாமிமலை வாழும் பெருமாளே!” என்று கூறினார் அருணகிரிநாதர். “மகராஜ ராஜுக்குச் சரபோஜி ராஜுக்கு மந்தர ராஜுக்கு சலாமெனவே” என்றும் “வரபோ சலகுல மணியினைக் கண்டு சரபோஜி மகாராஜா சலாமெனப் பணிந்து” என்றும், சரபேந்திர பூபாலக் குறவஞ்சி நாடகத்தில் கொட்டையூர் சிவக்கொழுந்து தேசிகர் கூறினார். “சித்தர் விஞ்சையர் மாகர் சபாசென” என்று அருணகிரிநாதர் சபாசு என்னும் சொல்லை எடுத்தாண்டார். “அந்நலங் கொளோர் துலுக்க வஞ்சிமை ஹாத்தேக்கர் பொலந்1 என்றாள் அன்னை கைக்குறி சொன்னதற் கவள் மன்னிடாரம் அளித் தனள்.” என்று சரபேந்திர பூபாலக் குறவஞ்சி நாடகத்தில் உருது மொழிச் சொற்கள் புகுத்தப்பட்டன. இவ்வாறு சில சொற்களைத் தமிழ் இலக்கியங்களில் காணலாம். தமிழ் முஸ்லிம்கள், தமிழ் இலக்கியத்தில் புதிதாகப் படைத்துக் கொடுத்தது நொண்டி நாடகம் என்னும் இலக்கியமாகும். அவை திருக்கச்சூர் நொண்டி நாடகம் முதலியவை. தமிழில் கலந்து வழங்கின அரபுச்சொற்கள், பாரசீகச் சொற்கள். இந்துஸ்தானிச் சொற்கள் ஆகியவற்றின் பட்டியலைக் கீழே தருகின்றேன். இச்சொற்களில் பல இக்காலத்து வழக்கிழந்து விட்டன. I. அரபுமொழிச் சொற்கள் அகபர், அகபார்=செய்தி. அக்பர்=பெரியவர் (கடவுள்.) அசல்=துவக்கம், ஆதி, முதல். அத்து=எல்லை, வரம்பு, உரிமை. அஞ்சுமன்=சங்கம், கழகம். அமல்=செய்கை, நடவடிக்கை, இச்சொல் பறிமுதல் செய்தல் என்னும் பொருளிலும் வழங்கப்படுகிறது. அமுல் என்று தமிழில் வழங்கப்படுகிறது. அமானி=கி(க)லெக்டரின் அதிகாரத்திற்கு உட்பட்டது, பாதுகாப்பு, ஒப்படை. அனாமத்து=சேமிப்பு, ஒப்படை. அமீனா=அமில்தாருக்குக் கீழ்ப்பட்ட கிராம உத்தியோகஸ்தன். அமில்தார்=வரி வசூலிக்கும் உத்தியோகஸ்தர். அயன்=உண்மை நிலை. அயன்ஜமா=தண்டல் பணத்தின் மொத்தம். அய்வேஜ்=பொருள் அல்லது ஆளை ஈடு கொடுத்தல. அர்ஜி=மனு, விண்ணப்பம். அர்ஜிதாஸ்து=எழுதி விண்ணப்பம் செய்தல். அர்-ரஹ்மான்=இரக்கம் உள்ளவன் (கடவுள்.) அலாயிதா=தனியான, தனிப்பட்ட, (அலாதி என்று வழங்கப் படுகிறது.) அல்-கபார்=மன்னிக்கிறவன். (கடவுள்.) அல்-புர்கான்=குர்ஆன். அல்லா (ஹீ)=கடவுள். அல்லாஹீத்தஆலா=உத்தமமான கடவுள். அல்வா, ஹல்வா=இனிப்புச் சிற்றுண்டி. அனாமத்து=சேமித்துவை, ஒப்படை. ஆசர், ஆஜர்=தோன்றுதல், பலர் முன்னிலையில் காணப்படுதல். இமாம்=குரு. இனாம்=கொடை, பரிசு. இனாம்தார்=பரிசாகப் பெற்ற நிலத்தை வரி செலுத்தாமல் அனுபவிக்கிறவன். ஈது=பண்டிகை. ஈமான்=விசுவாசம், உறுதியான நம்பிக்கை. உக்கும், உக்கூம், ஹூகும் - ஆணை, உத்தரவு, கட்டளை, அதிகாரம். உக்கும் நாமா=எழுத்து மூலமான கட்டளை. உசூர்,அசூர்=நேரில் காணப்படு, தோன்று. உசூர்க்கச்சேரி=கலெக்டர், மாஜிஸ்ரேட் முதலிய உத்தியோகத்தின் ஆபீஸ். உஸ்தாத்=உபாத்தியாயர். ஊக்கூம்=கட்டளை, உத்தரவு. ஐவஜ், ஐவேஜ்=பதிலுக்கு வைத்த பொருள், மற்றொன்றுக்காக வைத்த ஈடு. கசாபு=இறைச்சி விற்கிறவன். கசாலா=வருத்தம், துயரம். கசுபா=ஜில்லா அல்லது தாலுகாவின் தலைமை இடம், அல்லது கிராமம். கச்சேரி=நீதிமன்றம், வரி வசூல், போலிஸ் இலாகாக்களின் அலுவல் நிலையம். கபர்=செய்தி. கரார்=உறுதி. கரார்நாமா=எழுதப்பட்ட உறுதிச்சீட்டு. கலால்=காய்ச்சிய மதுபானம். கலீமா=விசுவாசப் பிரமாணம். (லா இராஹில்லுல்லா முகம்மது ரசூலுல்லா என்னும் வாக்கியம்). கலீபா=முகம்மது நபிக்குப் பின்னால் வந்த முஸ்லிம் மதத் தலைவர்கள். கஜானா=பொக்கிஷ சாலை. கஜான்ஜி=நிதிக் காவலர். காயம்=நிலையான, உறுதியான. காயம் ஜமாபந்தி=நிலையான ஏற்பாடு. காய்தா=சட்டம், ஒழுங்கு, கட்டுப்பாடு, வரையறை, காஜி=நியாயாதிபதி,-நீதிபதி. கிஸ்து=வரி, தவணை, குறிப்பிட்டபடி பணம் செலுத்தல். கிதாபு=புத்தகம், நூல். கிலாபத் = கலீபாவின் உத்தியோகம். குர் ஆன் (குறு ஆன்)= குறான், இஸ்லாமிய வேதப் புத்தகம். குர் ஆன் ஷரீப்=மேன்மையான குறான். குலாம்=வேலைக்காரன், அடிமை. குர்பான் (குர்பானி)=பலி. கைதி=சிறை செய், காவலில் அடைத்தல். கைபியது=செய்தி, விவரம். சராப்பு=ஷராப், காசுக்கடை. சலாம்=சமாதானம். சவால்=கேள்வி. சன்னது=ஆதாரப் பத்திரம், உரிமைப்பத்திரம். சாமான்=பொருள், பிரயாண மூட்டைகள். சுபா=மாகாணம், மாவட்டம். டபேதார்=தலைமை ஊழியன், தலைமை வேலையாள். தகரார்=மறுத்தல், விவாதம், சச்சரவு. தபா=சமயம், காலம், நேரம். தயார்=ஆயத்தமாயுள்ள. தாக்கீது=உத்தரவு, கட்டளை. தர்ஜுமா=மொழி பெயர்ப்பு. தாலூகா=தாலுகா (நாட்டின் ஒரு பிரிவு). தீன்=சன்மார்க்கம். துஆ=ஜெபம், வேண்டிக்கொள்ளுதல். தோபா=பெரிய அரசனுக்குச் சிறிய அரசன் செலுத்தும் கப்பம். நகல்=மாதிரி, பிரதி. நபர்=ஆள், மனிதன். நபி=தீர்க்கதரிசி. நமூனா=மாதிரி. நிகரஹ்=திருமணம், கலியாணம். பதல், பதில்=ஒன்றுக்காக மற்றொன்று. பக்கிரி=முஸ்லிம் துறவி. பராரி=ஒளிந்துகொள், தலைமறைவாயிரு, ஓடிப்போதல். பாக்கி=மிச்சம், எஞ்சியுள்ளது, மீதமுள்ளது. பாபத்து=ஒப்பந்தத்தின் ஒரு பகுதி, புள்ளி விபரங்களில் ஒன்று. பிர்கா=நாட்டின் சிறு பிரிவு. பிஸ்மில்லாஹி=கடவுளுடைய பெயரிலே. பைசல்=ஒழுங்குசெய், தீர்ப்புசெய், முடிவுசெய், ஏற்பாடு செய். மசோதா=தீர்மானம். மதராஸா=பாடசாலை. மராமத்து, மரமத்து=பழுது தீர்த்தல், செப்பனிடுதல். மஹல், மஹால்=அரண்மனை. மாசூல்=பயிர் விளைச்சல். மாமூல்=வழக்கம், வாடிக்கையில் உள்ள. மாரிபத்து=பாதுகாப்பில், பொறுப்பில். மாஜி=காலஞ்சென்ற, முன் பதவியில் இருந்த. முகாம்=பிரயாணத்தின் இடையிலே தங்குதல். முஸாபிர்=பிரயாணி. முஸாபர்கானா=பிரயாணிகள் தங்கும் கட்டடம், சத்திரம். முன்சீபு=கிராமம் அல்லது மகாணத்தின் நீதிபதி. மோசூல்=ஒரு ஆளைப்பார்த்துக் கொள்ளும்படி ஏற்படுத்தப்பட்ட சிப்பாய். மைதானம்=திடல். மௌலானா=பண்டிதர். மௌல்வி=பண்டடிதர். யாதாஸ்து=ஞாபகக் குறிப்பு. ரத்து=விலக்கு, தள்ளு. ரஸூல்=அப்போஸ்தலன் (முகம்மது நபி). ராஜி=உடன்பாடு, இணங்கு, ஒப்பந்தம். ராஜிநாமா=உடன்படிக்கை. வேலை துறப்பதுப்பற்றி எழுதிக் கொடுக்கும் கடிதத்துக்கும் இச் சொல் வழங்கப்படுகிறது. ருஜு=ஆதாரம் காட்டு. லாயிக், லாயக்கு=தகுதி, யோக்கியதை. வகாலத்து=ஒரு காரியத்தைச் செய்வதற்குக் காரணமாயுள்ள கருவி. வகைரா=மற்ற, முதலானவர்கள். வக்கீல் (வைக்கீல்)=காரியத்தை இயற்றுகிறவன். வசூலத்து=திரட்டு (பணம் வாங்கிச் சேர்த்தல்). வஜா=குறைவு செய், கழிவுசெய். வாயிதா=காலங் குறிப்பிடுதல், குறிப்பிடப்பட்ட காலம். வார்ஸ்=உரியவர், சொத்து உரிமையுடையவர். றஹிமான், றஹீம்=இரக்கமுள்ளவன் (கடவுள்.) ஜநாப்=மென்மையுள்ள. ஜப்தி=பறித்தல், பற்றிக்கொள்ளல். ஜமா=வசூல். ஜமாபந்தி=வரியைப்பற்றி ஏற்பாடு செய்தல். ஜவாபு=பதில், விடைசொல். ஜாமீன்=பிணை, பிணைஇரு. ஜாஸ்தி=அதிகம். ஜில்லா=மாவட்டம், கூற்றம், கோட்டம். ஜினுசு, ஜின்சு=வகை, பொருள். ஷரா=ஒன்றைப்பற்றிய கருத்து, காரணம், குறிப்பு. ஷர்பத்து (சர்பத்து)=இனிப்புப் பானகம். ஹபீபுல்லா=கடவுளுடைய நண்பன். ஹராம்=அக்கிரமம், துன்மார்க்கம். ஹிஜ்ரத்=முகம்மது நபி மெக்காவிலிருந்து மதீனாவுக்குப் போனது. அலைஹிஸ்ஸலாம்=அவரோடு சமாதானம். II. பாரசீக மொழிச் சொற்கள் அம்பார், அம்பாரம்=தானியம் முதலிய பொருள்களின் குவியல். ஆகர்=கடைசி, முடிவு. ஆப்காரி=காய்ச்சிய மதுபானங்களுக்கு வரி. கம்மி=குறைவு. கரம்=சூடு, காரம். கார்பாரி=மேற்பார்வையாளர், கண்காணிப்பவர். கில்லேதார்=கோட்டையின் தளகர்த்தன். கிஸ்தி=இறை, வரி. குமாஸ்தா=கணக்குப்பிள்ளை, தொழிலில் பிரதிநிதி. குலாம்=அடிமை. சரகத்து=எல்லை, வரம்பு. சர்க்கார்=அரசாங்கத்தார். சிப்பந்தி=ஊழியர்களை ஸ்தாபித்தல். சிரஸ்தா, சிரஸ்தாதார், சிரஸ்தார்=கலக்டர் கச்சேரி, அல்லது நீதிமன்றத்தில் உள்ள ஒரு உத்தியோகஸ்தர். சுமார்=மதிப்பீடு, கணக்கிடு. சுஸ்தி=சோம்பல், மந்தம். தராசு=துலை. தர்காஸ்து=குத்தகை. தயார்=ஆயத்தம். தஸ்தா=ஒரு கொயர் எண்ணிக்கையுள்ள கடதாசி. தஸ்தாவேசு, தஸ்தாவேஜு=பத்திரம், உறுதிச்சீட்டு. தீவான்ஜி=அமைச்சர். நமூது=நிருபனம், ருசு. நாதார்=ஏழை, ஏழைக் குடியானவன். பந்து=கட்டு, அடை பந்தேகானா=அடைத்து வைக்கும் இடம், ஜெயில். பந்தோபஸ்து=பாதுகாப்பு, ஏற்பாடு செய். படுதா, பர்தா=திரைச் சீலை, மறைப்பு. பாரா=காவல். பிரியாதி=வாதி, வழக்குத் தொடர்வோன். பேஷ்=நல்லது, சரி, மிகவும் நல்ல. பேஷ் கார்=தாசில்தாருக்குக் கீழ்ப்பட்ட ஒரு உத்தியோகஸ்தன். மனு=வேண்டுகோள். ரஸ்தா=சாலை, தெருவு. வாபஸ்=திருப்பிக்கொடு. ஜமீன்=நிலம், பூமி. ஜரூர்=அவசரமாக, விரைவாக, இன்றியமையாத. ஜவாபு=பதில், விடை. ஜாகீர்=அரசாங்கத்தார் கொடுத்த நிலம், ஊழியம், தொண்டு, உதவி செய்ததற்காகப் பெற்ற நிலம். ஜோர்=விசையாக, ஆவேசமாக. III. ஹிந்துஸ்தானிச் சொற்கள் இலாக்கா=உடைமையாகக் கொள், தொடர்புடைய, பொறுப்புடைய. சாப்பா=முத்திரை, பதிப்பு. செக்குபந்தி=வரம்பை வரையறுத்தல், எல்லையைத் தீமானித்தல். டாணா=கீழ்ப்பட்ட போலீஸ் நிலையம். தண்டா=குழப்பம், தடை, இடையூறு. தபால்=அஞ்சல். துக்கடி=பிரிவு, மாவட்டம். பட்வாடா, பட்டுவாடா=பணம் முதலியவற்றைப் பகிர்ந்து கொடு. பர்த்தி=ஒன்றுக்குப் பதிலாக மற்றொன்றை வைத்தல். நிரப்புதல். பத்தொன்பதாம் நூற்றாண்டிலே நம்மவர் அச்சுயந்திரம் நிறுவி அச்சுப் புத்தகங்களை வெளியிடத் தொடங்கினார்கள் என்று கூறினோம் அச்சு யந்திரம் ஏற்பட்டதன் காரணமாகச் சென்ற பத்தொன்பதாம் நூற்றாண்டில் வெளிவந்த முஸ்லிம் தமிழ்ப் புத்தகங்களின் பட்டியலை (நான் அறிந்தவரையில்) கீழே தருகிறேன். இது முழுப் பட்டியலாக இருக்க முடியாது. சில புத்தகங்களின் பெயர்கள் விடுபட்டிருக்கும். கிடைத்த பட்டியலும் மறைந்துவிடக் கூடாது என்பதற்காகவே இப்பட்டியலைத் தருகிறேன். ஆண்டு நூலின் பெயர் ஆசிரியர்,பதிப்பாசிரியர் பெயர்கள் 1862 தொழுகை அகீதத்து விளக்கம் (மவுல்வி அப்தல்லா அவர்கள் ஹிந்துஸ்தானியில் மகுதூ முகம்மது. எழுதிய ஹகீதத் திருநெல்வேலிப் அல்ஸதாத் என்னும் பேட்டை. நூலைத் தழுவி எழுதப் பட்டது) 1862 தொழுகை அசீகத்து ஆமூர் வாலைபாவா விளக்கம். சாகிபு, சென்னை. 1868 கேசாதிபாதமாலை. நாகூர் முகமது புலவர். 1869 ராசூல்கூல் சண்டைகள். குஞ்சுமூசு லப்பை ஹாஜி அலிம் புலவர். 1869 சகரத் நாமா. அப்துல் காதர் சாகிபு. (1874, 1875, 1878) 1870 ஞான மணிமாலை தர்கலி பீர் முகமது சாகியு. (1875) 1870 மஸ்தான் சாகிபு (1873, 1874, 1879-ஆம் திருப்பாடற்றிரட்டு. ஆண்டுகளிலும் அச்சிடப்பட்டது.) 1870 விவேக விளக்கம். அதிவீரபட்டினம் முகம்மது மஸ்தான் இபின் முகம்மது தம்பி மரக்காயர். 1871 இந்திராயன் படைப் ஆலியார் புலவர் (1874) போர். 1871 சக்கூன் படைப்போர். மகமது இபுராகிம்சாகிபு. 1871 தரிக்கத்துல் இஸ்லாம். செயிது முகமது லப்பை, 1871 விக்கிரமார்கள் கதை. மகமது இபுராகிம் சாகிபு. 1871 சலாத்துல் அருக்கான் சாமு நயினான் லப்பை. மாலை. 1871 பிசுமில் குறம். தர்கலை பீர்முகமது சாகிபு. 1872 நாகை அந்தாதி. ஷெய்க் அப்துல் காதர் (உரையுடன்) நயினா லப்பை ஆலிம். 1872 ஜரூருல் முசல்மான். சையது மகமது லப்பை. 1873 ஒருபா ஒருபஃது. ஷகாப் உத்தீன். 1873 பலபாடல் திரட்டு. மகுதூம் மகமது புலவர். 1873 முனா ஜாத்துகள். ---- 1874 அபூஷகா மாலை. சைத்காதி புலவர். 1874 அபூஷகா மாலை. மீரா சாகிபு. 1874 அடைக்கல மாலை. செய்க்கப்துல் காதிர் புலவர். 1874 ஐயனைனான் காதல். அப்துல் கரீம் சாகிபு. 1874 அபாயசீதுல் புஸ் சையது அபூபக்கர் தாமி. புலவர். 1874 அருமை காரண முகமது லப்பை ஆலிம் மாலை. சாகிபு. 1874 அருண்மணி மாலை. ஷெய்க் இபுராகிம் சாகிபு. 1874 ஹக்யாத் நாமா. அப்துல் காதர் சாகிபு. 1874 இன்னிசை வெண்பா. மகமது மஸ்தான். 1874 காசிம் படைப்போர். மகமது புலவர். 1874 கிஃபாயதுல் அனாம். நாகூர் முகமது புலவர். 1874 கியாமத்து நாலுடைய ஷெய்க்கு முகமது புலவர். விலாசம். 1874 முனாஜாத்து. மகமது அப்துல் காதர். 1874 முங்கிரின் மாலை. நயினா முகமது புலவர். 1874 பல வித்துவான்கள் அப்துல் காதர் சாகிபு. பாடிய பதங்கள். 1874 பன்னிரண்டு மாலை மகமது புலவர். 1874 பிள்ளைத் தமிழ். சவாது புலவர். 1874 இரத்தின மகமது மீரா ராவுத்தர். காரண சரித்திரம். 1874 சரியத்து மாலை. சையது அப்துல் காதர். 1874 தரஜாத்து மாலை. சுல்தான் சாகிபு. 1874 தவகீது மாலை. முகமது உசூன் புலவர். 1874 தீனிலை தங்கம் நயினா முகமது புலவர். பாட்டு. 1874 தீதாரு மாலை. சைகு பீர் முகமது. 1874 யூசுபுனபி மாலை. மொகிதீன் சாயபு. 1874 ஞானரத்தினக் பீர் முகமது சாகிபு. குறவஞ்சி. 1875 காரணப் புகழ். அப்துல் காதர் சாகிபு. 1875 கிஃபாயதுல் அனாம். அல்லாபிச்சை புலவர். 1875 பருளு மாலை. அல்லாபிச்சை புலவர். 1875 சலவாத்து பாட்டு. அல்லாபிச்சை புலவர். 1875 தமிமன் சாரி மாலை. ஷெய்க் லப்பை. 1875 பாப்பரட்டியார் சையித் மீரா புலவர். அம்மானை. 1875 தொழுகை அடைவு. சதகத் துல்லா. 1875 விவேக சாகரம். ஹுசெய்ன் கான். 1876 கிஃபாயதுல் அனாம். மகமது இப்ராகிம். 1876 நூறு மசாலா. மகமது சாகிபு. 1876 துத்திநாமா என்னும் ----- கிளிக் கதை. 1876 சரியத்து மாலை. மகமது புலவர். 1876 சொர்க்க நீதி. ----- 1876 கலறத்து மீறான் சாகிபு முகமது இமாம் கஜ்ஜாலி ஆண்டவர்கள் காரண இபின் முகமது ஆலிமரக் சரித்திரம். காயர் எழுதியது. நாகூர் முகம்மது புலவர் பதிப்பித்தது. காரைக்கால். 1876 தொழுகை நாமா ----- 1877 ஹத்திம் தி கிஸ்ஸா ஹக்கீம் மகமது இஸ்மால் என்னும் அறய்ஷ் சாகிபு. மஃபில். 1877 சார் தர்விஷ். பி.வி. முகமது இப்ராஹிம் சாகிபு. 1877 புகழணிகூட்டத்தார் மகமது அப்துல் காதர். பேரில் கவிதைகள். 1877 இரத்ந முகம்மது அப்துல் காதர், சென்னை. காரண சரித்திரம். 1878 அல்லாபிச்சைப் அல்லாபிச்சைப் புலவர். புலவர் பாடல். 1878 இரவசுல்குல் படைப் குஞ்சுமூசு லப்பை. போர். 1878 காரண கும்மி. மகமது இப்ராகிம் சாகிபு. 1878 கதிஸா நாயகி மகமது புலவர். திருமண வாழ்த்து. 1878 பிரபந்தக் கொத்து. அல்லி மரக்காயர். 1878 புத்தூ குஸ்ஸாம். மக்தூ மகமது புலவர். 1878 ரவு சுல்குல் படைப் மீரா சாகிபு. போர். 1878 சரியத்து மாலை. ஷெய்க்கு அப்துல் காதர் லப்பை. 1878 சொர்க்க நீதி. அப்துல் காதர் புலவர். 1879- அல்புஃதூஹாத் அரபுவாசகமும் தமிழ் 1884 அல்ரஹ்மானீயத் உரையும். அரபுத் தமிழ் (திருக்குரான்) எழுத்து. ஹபீப் முகம்மது அல் காஹிரீ. 1879 நசிகத் நாமா. அப்துல் காதர் சாகிபு. 1879 ஸலாதுல் அருக்கான் சாமு நயினா லப்பை மாலை. ஆலிம் 1879 தவத் துது கதீது விலா ஷெய்க் அப்துல் காதர். சம். 1880 மலுக்கு முலுக்கு அப்துல் காதர் சாகிபு. ராஜன் கதை. 1880 திருப்புகழ். காசிம் புலவர். 1880 பஞ்சரத்தின ஒளி ---- வட்டம். 1880 அல்துரர் அல்ஹிஸான் அம்மாப்பட்டணம் முகமது (அரபுத் தமிழ் எழுத்து) யூஸுப் இபின் காதர் அகமது. சென்னை 1881 ஆனந்தக் களிப்பு. அல்லாபிச்சைப் புலவர். 1881 முனாஜாத்து. முகமது அப்துல் காதர். 1882 ஆனந்தக் களிப்பு. அல்லாபிச்சைப் புலவர். 1882 ஞானப் புகழ்ச்சி. ஷெய்க் மன்சூரு லப்பை சாகிபு. 1882 ஹயூப் நாயனுடைய அப்துல் வஹாப் சாகிபு. கிஸ்ஸா. 1882 ஒசிய்யத்து என்னும் நூரூடீன் புலவர். பொன்னரிய மாலை. 1882 சலவாத்து பாட்டு அல்லாபிச்சைப் புலவர். 1882 தஜ்ஜால் நாமா. ---- 1882 ஜைதூன் கிஸ்ஸா. ---- 1882 அல்துரர்ஃபி ஹிகாயத் நூஹ் இபின் அப்துல் அல்குரர் (கிஸஸ் அல் காதிறு அல் காஹிரி (அரபுத் அவுலியா.) தமிழ் எழுத்து) பம்பாய். 1883 குறமாது. கண்ணகுமது, முகுது மகமது புலவர். 1883 மஹமது மார்க்க மகத் டாக்டர் காதிர் துவ சிங்காரம். ஹுசைன் சாகிபு. 1883 ரவுசுல் குல் படைப் மகுத முகமது புலவர். போர். 1883 ஹவரத் ஷெய்கு தாவு அல்லா பிச்சைப் புலவர். தொலி உல்லா பேரில் பாடல்கள். 1883 நாகூர் ஆண்டவர் அல்லா பிச்சைப் புலவர். பேரில் பாடல்கள். 1883 வெள்ளாட்டி மசால மகமது லப்பை அலீம் விளக்கம் ஹாஜி சாகிபு. 1883 துத்திநாமா என்னும் பாரசீக மொழியிலிருந்து கிளிக்கதை முகம்மது காதிரீ அவர்கள் மொழி பெயர்த்து அருணாசல முதலியார் பதிப்பித்தது. சென்னை. 1884 வெள்ளாட்டி மசால மகமது லப்பை அகிம் மறுமொழி விசாலம். ஹாகி சாகிபு. 1885 சீறா மூலம். காயல் பட்டினம் ஷெய்க் அப்துல் காதிறு நயினார் இயற்றியது. அப்துல்காதிர் பதிப்பித்தது. 1886 ஞானோதய தீப ஷெய்க் ஹபிம் முகமது அலங்காரம். ஹாஜி ஆலிம் சாகிபு. 1887 சீறாப் புராணம் கண்ணகுமது மகுது முகமது புலவர். 1887 நேர்வழி விளக்கம். ஷெய்க்கப்துல் காதர் தீன்மணி முழக்கம் அலீம் புலவர் சாகிபு. 1888 ஜமேஸாஃ பேரில் V.S. காதர் சாகிபு. பாடல்கள். 1888 ஹிதாயத் உல் ஷெய்க் முகமது லப்பை முஸல்மின் ஆலிம். 1888 சீறா வண்ணமும் ---- சித்திரக் கவியும். 1888 காசிம் படை வெட்டு ---- 1888 முரிது விளக்கம் அல்லது ---- ரத்தினச் சுருக்கம். 1888 தொழுகை மாலை. ---- 1888 ஷம்சுல் ஈமான். அம்மா பட்டணம் முகம்மது யூசூப் இபின் காதிர் அகமது. 1888 ஷம்சுல் ஈமான் ஷெய்க் முகமது யூசூப் லப்பை ஆலிம். 1888 தவுபா மாலையும் ---- மக்கள் வாசகமும். 1889 எண்ணெய்ச் சிந்து. காதர் நயினா லப்பை. 1889 பத்துகுல் மன்னான். ஹாபிலு முகமது இப்ராகிம் லப்பை. 1889 ஷாம் ஊன் ரலியல்லாகு முகமது இஸ்மால் சாகிப் அங்குடைய கிஸ்ஸா. ஆலிம். 1889 தீதாரு மாலை. காதிர் நைனா லப்பை. 1889 திருப்பாடற்றிரட்டு. குணங்குடி மஸ்தான் சாயபு (அப்துல் காதிர்) சென்னை. 1890 யுஸ்தூஹத் அல் ஸலாம் அப்துல் காதிர் இபின் (அரபுத் தமிழ் எழுத்தில்) மதார், பம்பாய். 1890 பதாநந்த மாலை. முகமது சுல்தான் மரக்காயர், பினாங்கு. 1891 அல் ஹிதயத் அல் அரபுமொழி இலக்கணம். காஸிமீயாத் (அரபுத் தமிழில். முகமது காசிம் தமிழ் எழுத்தில்) இபின் ஸித்திக் லப்பை கண்டி. 1891 துர்பாத் அல் நஹவ் அரபுமொழி இலக்கணச் (அரபுத் தமிழ் சுருக்கம். முகமது காசிம் எழுத்து) இபின் ஸித்திக் லப்பை, கண்டி. 1891 உஸூல் அல் கிரா அத் முகமது காஸிம் இபின் அல் அரபீயத். (அரபுத் சித்திக் லப்பை. கண்டி, தமிழ் முதல் வாசகம்) (அரபுத் தமிழ் எழுத்தில்) தமிழ் விளக்கத்துடன் 2 பாகம். 1891 மிஃப்டாஹ் அல் முகம்மது சாகிபு இபின் ரஹ்மான் (அரபுத் ஹபீப் முகம்மது. தமிழ் எழுத்தில்) சென்னை. 1891 உம் தத் அல் முகமது தமீம் இபின் ஸிபியான். (அரபுத் முகமது. சென்னை. தமிழ் எழுத்தில்) 1891 நபியுல்லா பேரில் முஃயீ அல்தீன் கற்புடையார் பதிகமும் யானைக் இபின் சின்ன இப்ராஹிம், காதலும் யாழ்ப்பாணம். 1892 தீன் நெறி விளக்கம் மஹ்தூம் முகமது இபின் வசன காவியம் மஹ்தும் பிள்ளை, கண் அஹ்மது. சென்னை. 1892 கம்ஸீனா பொருமாள் துறை பரீளாமாலை. வைத்தியம், அ.முகமது கண்ணு. கொளும்பு. 1892 ஞான தீபம் (திங்கள் முகமது காசிம் இபின் இதழ்) சித்திக் லப்பை, கொளும்பு. 1892 துஃபத் அல் தமீன் இபின் சுல்தான் அஹ்பாப் (அரபுத் சென்னை. தமிழ் எழுத்தில்) 1893 நீதி வினோதக் கதை. பாபு ராஜபுரம் முகமது நிஜாம் முஹ்யீ அல்தீன் இபின் முகம்மது எழுதியது. உத்மான் லப்பை அச்சிட்டது. கொளும்பு. 1893 துர்ரத் அல்-மா-பப்கிர் அஹ்மத் இபின் முகம்மது (அரபுத் தமிழ் எழுத்து) ஹசன் கொழும்பு. 1893 யூனானி வைத்தியதாது முகமது அப்துல்லா. விர்த்தி போதினி. சென்னை. 1893 ஆஷூறாக் காரணக் பெருமாள் துறை கும்மிச் சிந்து. வைத்தியம் அ. முகம்மது கண்ணு. கொழும்பு. 1893 துஃபத் அல் கிராம், தாஹ் இபின் அப்துல் (அரபுத் தமிழ் காதில் அல் காஹிரி, எழுத்தில்) பம்பாய். 1894 பத்து குல் மிசிர். முகமது லப்பை ஆலிம் சாகிபு. கண்டி. 1894 பத்து குல் மிசிர்- அரபு மொழியிலிருந்து, பஹனசா. வசன முகம்மது லப்பை ஆலிம் காவியம். சாகிபு மொழிபெயர்த்தது. கண்ணகமது மக்தூம் முகம் மது அச்சிட்டது. சென்னை. 1894 வேதபுராணம். காயற்பட்டினம் பெரிய நூஹ் லப்பை இயற்றியது. கண்ணகம்மது மக்தூம் பதிப்பித்தது. சென்னை. 1895 அப்துறகுமானபிச் பாலக்காடு பவானி சதகம். புலவர், (சையித் புகாரி) பாடியது, சென்னை. 1895 திருநடை வழி முகமது இபின் காதிர் யலங்காரம். (செய்யுள்) முஃயி அல்தீன். கொளும்பு. 1895 சருவபந்தமேக முகமது சுலைமான் பதார்த் தோவம லப்பை. யாழ்ப்பாணம். தருக்க நிராகரணம். 1896 சித்திரகவி முதலிய ஷெய்க் அப்துல் காதிரு பாடற்றிரட்டு. நயினார். சென்னை. 1896 அல் வித்ரீயஹ். அரபுச் செய்யுளும் தமிழ் (அரபுத் தமிழ் உரையும். சதகத் அல்லா எழுத்தில்) அல் காஹிரி. பம்பாய். 1896 கீர்த்தனைத் திரட்டு முகமது அப்துல் காதிறு புலவர். சிங்கப்பூர். 1896 நஸர் அல் ஜவாஹிர் முகம்மது மதினஹ் (அரபுத் தமிழ் கோட்டாரி. சென்னை. எழுத்து) 1896 ஞான ரத்தினாகரம் முகமதி மீரான் மஸ்தான் இபின் லுக்மான் ராவுத்தர். 1897 ரஹ்மத் அல் மன்னான் சுலைமான் இபின் முகமது (திருக்குரான். சூரா 78- அல் சைலானீ. கொழும்பு. 114) தமிழ் உரை. அரபுத் தமிழ் எழுத்தில். 1897 பிரமேக நிவாரண முகமது அப்துல்லா. போதினி (யூனானி சென்னை. வைத்தியம்) 1897 அஸ்றாருல் ஆலம். முகம்மது காசிம் இபின் சித்திக், கொழும்பு. 1897 தொழுகை ரஞ்சித முகம்மது மீர் ஜவாது. அலங்காரம். 1898 ஹாஸ்ய மஞ்சரி. S.P.S.K.காதிர் சாகிபு, பினாங்கு. 1898 பஃத் அல் தையான் அல் காதிரீ முகமது இபின் (அரபுத் தமிழ் அஹமத், பம்பாய். எழுத்தில்) 1898 ஹிதாயத் அல் ஸாலின் முகம்மது இஸ்மாயில் கீன் (அரபுத் தமிழ் இபின் முகம்மது மதீனா, எழுத்தில்) சென்னை. 1898 மெய்ஞ்ஞானத் திருப் கோட்டாறு ஞானியார் பாடற்றிரட்டு. சாகிபு வலி அல்லாஹ் (முஃயீ அல்தீன் மலுக்கு முதலியார்) இயற்றியது. இதனுடன் கறுப்பையா பாவலர் இயற்றிய கோட்டாற்றுக் கலம்பகம் அச்சிடப்பட்டுள்ளது, சென்னை. 1898 மெய்ஞ்ஞான விளக்கம். கோட்டாற்று தம்பி ஞானியார் சாகிபு (முஃயீ அல்தீன் மலுக்கு முதலியார்) இயற்றியது, சென்னை. 1899 இராஜ வைத்திய முகம்மது அப்தல்லா. மகுடம். கீழ்க்கண்ட நூல்கள் எந்த ஆண்டில் அச்சிடப்பட்டன என்பது தெரியவில்லை. ஆனால், 1865-க்கு முன்னர் அச்சிடப்பட்டன என்பது உறுதி. ? ஆயிரம்சலா. வண்ணப்பரிமளப் புலவர். ? இபுலிசு நாமா. செய்யிதபுபக்கர் புலவர். ? சீறா கீர்த்தனம். செய்க் அபுபக்கர் புலவர். (மூன்று பாகம்) ? சுக பூல்லீமான். ஜமாலுட்டீன் புலவர். ? திருப்புகழ். காசிம் புலவர். ? தொழுகை யடைவு (வசனம்) (அரபி மொழியிலிருந்து எழுதப்பட்டது. அரபி வாசகமும் தமிழ் விளக்கமும் உடையது). ? நபியவதார கவிக்களஞ்சியப் புலவர். அம்மானை. ? பரசு விளக்கம் வாலியப்ப சாயபு. வசனம். (இமாம் இஸ்லாம் என்பது பற்றி). புலவர்களும் நூல்களும் 19-ஆம் நூற்றாண்டில் இருந்த புலவர்களைப்பற்றியும் அவர்கள் இயற்றிய நூல்களைப் பற்றியும் கூறுகிறேன். நான் அறிந்தவரையில் எல்லாப் புலவர்களைப் பற்றியும் இதில் கூறியுள்ளேன். விடுபட்ட புலவர்களும் இருக்கக்கூடும். என் ஆராய்ச்சிக்குக் கிடைத்த புலவர்களைப் பற்றி மட்டும் இங்கு எழுதுகிறேன். சுருக்கமான வரலாறுகள் இவை. முத்தப்ப செட்டியார் (1760-1836) கீழைச்சிவல்பட்டியில் பிறந்தவர். வெண்பாப்புலி வீரகவிராயர், மிதிலைப்பட்டி. வேலுகவிராயர் என்னும் புலவர்கள் இவர் காலத்திருந்தனர். இவர் இயற்றிய நூல்கள் : - திருமுகவிலாசம், செயங்கொண்டார் சதகம், செட்டிமார் வரலாறு, செயங்கொண்ட சோழீசர்பிள்ளைத் தமிழ் மேற்படி பதிற்றுப்பத்தந்தாதி, மேற்படி கலித் துறையந்தாதி, நேமக்கலம்பகம், செயங்கொண்ட சோழீசர் ஊசற்றிருநாமம். முத்துசாமி பிள்ளை (?-1840) இவர் ஊர் புதுச்சேரி. கிறிஸ்துவர். தமிழ், ஆங்கிலம், இலத்தீன் தெலுங்கு வடமொழி என்னும் மொழிகளைக் கற்றவர். சென்னைக் கல்விச் சங்கத்தின் ஆட்சிப் பொறுப்பாளராக இருந்தவர். வால்டர் எல்லிஸ் துரையின் விருப்பப்படி அச்சங்கத்துக்காக ஏட்டுச் சுவடி களைச் சேகரித்து வருவதற்காக 1816-ஆம் ஆண்டு தென்னாட்டில் சுற்றுப்பிரயாணம் செய்தார். முக்கியமாக வீரமா முனிவர் இயற்றிய நூல்களைச் சேகரித்தார். வீரமா முனிவரின் சரித்திரத்தைத் தமிழில் எழுதி 1822-ஆம் ஆண்டு வெளியிட்டார். அதையே ஆங்கிலத்தில் எழுதி 1840-ஆம் ஆண்டில் வெளியிட்டார். சென்னைக் கல்விச் சங்கத்தின் முக்கிய அங்கத்தினரான ரிச்சார்டு கிளர்க்கு துரையுடன் சேர்ந்து சில தமிழ்ப் புத்தகங்களை எழுதினார். மயில்வாகனப் புலவர் (1779-1816-?) ஈழநாட்டு மாதகல் என்னும் ஊரில் பிறந்தவர். கூழங்கைத் தம்பிரானிடம் கல்வி பயின்றார். இவர் இயற்றிய நூல்கள்: புலியூர் யமக அந்தாதி. யாழ்ப்பாண வைபவம் (இது வசன நூல்). ஞானாலங் கார ரூப நாடகம், காசியாத்திரை விளக்கம். இவ்விரண்டு நூல்கள் வெளிவரவில்லை. கந்தப்ப ஞான தேசிகர் (?-1829) தொண்டை நாட்டு இராய வேலூரில் பிறந்தவர். கந்தப்பர் என்பது இவர் பெயர். பின்னாளில் திருவண்ணாமலை ஈசானிய திசையில் தங்கியிருந்தபடியால் ஈசானிய தேசிகர் என்று கூறப்பட்டார். இவர் இயற்றிய நூல்கள். அண்ணாமலையார் தோத்திரப் பாமாலை. அண்ணாமலையார் வெண்பா, அண்ணாமலை அந்தாதி, அண்ணாமலைக் கண்ணி, ஞானக் கட்டளை, மௌனகுரு தேசிகர் சிகாமணிப் பதிகம், மெனளகுரு ஞானதேசிகர் பஞ்சரத்தினம். ப. கந்தப் பிள்ளை (1766-1842) இவர் யாழ்ப்பாணத்து நல்லூரில் பிறந்தவர். ஸ்ரீல ஸ்ரீ ஆறுமுக நாவலரின் தந்தையார். கூழங்கைத் தம்பி ரானிடத்தில் தமிழ் பயின்றவர். உல்லாந்து மொழி, போர்ச்சுகீசு மொழி, ஆங்கில மொழிகளையும் கற்றவர். மருத்துவமும் அறிந்தவர். இவர் இருபத் தொன்று நாடக நூல்களை இயற்றினார் என்பர். இவர் இயற்றிய நூல்கள் சில இராம விலாசம். ஏரோது நாடகம், சண்டி நாடகம், சந்திரகாச நாடகம், நல்லைநகர்க் குறவஞ்சி, நீக்கிலார் நாடகம் முதலியன. இவர் தொடங்கி முடிக்காமல் விட்ட இரத்தினவல்லி விலாசத்தை இவர் மகனார் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் அவர்கள் பாடி முடித்தார். வேதநாயக சாஸ்திரியார் (1773-?) புரொடெஸ்டண்டு கிறிஸ்துவர். தஞ்சாவூரில் இருந்தவர். கவி பாடுவதில் வல்லவர். உவின்ஸ்லோ என்பவருடன் சேர்ந்து குருட்டுவழி என்னும் நூலை 1838-இல் எழுதினார். பேரின்பக் காதல் (1853), சாஸ்திரக் கும்மி (1840), இயேசுவின் பேரில் பதங்கள் (1853) முதலிய செய்யுள் நூல்களை இயற்றினார். இன்பகவி (?-1885) திருநெல்வேலியில் மணப்பாறை என்னும் ஊரில் பிறந்தவர். கிறிஸ்துவர். எளிய நடையில் செய்யுள் செய்ய வல்லவர். பல தனிச் செய்யுட்கள் பாடியுள்ளார். யாழ்ப்பாணத்துக் கச்சேரி முதலியாராக இருந்த பிலிப்பு ரோட்ரிகோ முத்துக்கிருஷ்ணர் என்பவர் மீது குறவஞ்சி நூல் ஒன்று இயற்றினார். ராட்லர் ஐயர்1 (1749-1836) பிரான்ஸ் தேசத்தில் பிறந்தவர். கிறிஸ்து சமயத் தொண்டு செய்வதற்காக 1776-இல் தரங்கம்பாடிக்கு வந்தார். பிறகு 1803-இல் சென்னைக்கு வந்து சமயத்தொண்டு செய்தார். தமிழ்-ஆங்கில அகராதியை எழுதிவெளியிட்டார். அநந்தபாரதி ஐயங்கார் (1786-1846) தஞ்சாவூரில் உமையம்மாள்புரம் என்னும் ஊரில் பிறந்தவர். திருவள்ளூரில் சில காலம் உபாத்தியாயர் தொழில் செய்தார். பிறகு, தஞ்சை மாவட்டத்தில் சில கோவில்களில் கர்ணம் தொழிலும் பிறகு, சம்பிரதி உத்தியோகமும் செய்தார். கடைசியில் அவ் வேலைகளை விட்டுத் திருவிடை மருதூரில் நிலைத்து இருந்தார். அந்நாட்களில் அவ்வூர் சுவாமியின் பேரில் ஒரு நாடகம் இயற்றிய தாகவும், ஆலய தர்மகர்த்தராக இருந்த அய்யாத் தம்பிரான் என்பவர் இவருக்குக் ‘கவிராஜ சாமி’ என்னும் சிறப்புப் பெயர் கொடுத்து ஒரு வீட்டையும் தோட்டத்தையும் பரிசாகக் கொடுத்ததாகவும் கூறுவர். இவர் இயற்றிய நூல்கள்: உத்தர ராமாயணக் கீர்த்தணை, பாகவத தசமஸ்கந்த நாடகம், யானைமேலழகர் நொண்டிச் சிந்து, மருதூர் வெண்பா, பாப்பாத்திரட்டு, இடபவாகனக் கீர்த்தனை, கல்லணை வைபவக் கீர்த்தனை, திருவிடை மருதூர் நொண்டி நாடகம், வேதாந்த தேசிகர் கீர்த்தனை. குணங்குடி மஸ்தான் (1788-1835) இவர் இராம நாதபுரத்துக் குணங்குடியில் பிறந்தவர், சுல்தான் அப்துல் காதிறு என்பது இவரது இயற்பெயர். துறவியான பிறகு குணங்குடி மஸ்தான் என்று பெயர் பெற்றார். இவர் சென்னை நகரத்தில் காலமானார். இவர் இயற்றியபாடல்களைத் தொகுத்துச் சீயமங்கலம் அருணாசல முதலியார் அச்சிட்டார். ஐயாசாமி முதலியார் என்பவர் இவர் மீது குணங்குடி நாதர் பதிற்றுப்பத்தந்தாதி என்னும் நூலை இயற்றினார். மகாவித்துவான் திருத்தணிகைச் சரவணப் பெருமா ளையர் இவர்மீது நான்மணிமாலை பாடினார். இரேனியூஸ் ஐயர்2 (1790-1838) ஜர்மனி தேசத்திலே மேற்குப் பிரஷ்யா மாகாணத்தில் கிராவ்டென்ஸ் கோட்டையில் 1790-ஆம் ஆண்டு பிறந்தார். பெர்லின் நகரத்திலும் இங்கிலாந்து தேசத்திலும் மிஷனரிப் பயிற்சி பெற்று 1814-ஆம் ஆண்டு சென்னைக்கு வந்தார். பிறகு, தரங்கம் பாடிக்குச் சென்று தமிழ் கற்றார். மீண்டும் சென்னைக்கு வந்து சர்ச்சு மிஷன் சங்கத்தின் சார்பில் கிறிஸ்து சமய ஊழியம் செய்தார். 1820-ஆம் ஆண்டு திருநெல்வேலிக்குச் சென்று அங்குச் சமயத்தொண்டு செய்தார். அங்குப் பெருவாரியாக இந்துக்களைக் கிறிஸ்துவராக்கினார். 1838-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 9ஆம் நாள் காலமானார். இவர் உடல் திருநெல்வேலியில் முருகன் குறிச்சியில் அடக்கம் செய்யப்பட்டது. இவர் இறந்தபோது இவருடைய நண்பரான திருநெல்வேலி பாற்கடல்நாதன் கவிராயர் இவர்மீது பாடிய இரங்கற்பாக்களில் ஒன்று இது. அனைநிக ரன்பும் இயேசுவின் அருளும் அவனியிற் பொறையும் விண்சுடரோன் தனைநிக ரொளியும் மலைநிகர் வலியும் தழைத்திட வாழ்ந்து நன்மொழியால் கனைகழல் வேந்தர் முதலினோர்க் காட்டிநற் கதியினைச் சேர்ந்தான் தினையள வைய மின்றிநற் கலைகள் தேர்ந்த விரோனியூ சென்போன். இவர், தமிழில் நன்றாக வசனநடை எழுதவும் சொற்பொழிவு செய்யவும் வல்லவர். இயற்றமி ழாசிரியரான இராமாநுச கவியாரிடம் கல்வி பயின்றார். பல தமிழ்ப் புலவர்களின் நண்பராக விளங்கினார். கனம் ஜீ. யு. போப்பையர் அவர்கள், இரேனியூசையரைத் தமிழில் தேர்ந்த அறிஞர் என்று புகழ்ந்திருக்கிறார். இவர் இயற்றிய நூல்கள்: ஞானபோசன விளக்கம். இது வினாவிடையாக எழுதப்பட்டது. (1825), வேதப் பொருள், பூமி சாஸ்திரம் இலக்கண நூற்சுருக்கம். இவை 1832-ஆம் ஆண்டில் அச்சிடப்பட்டன. மோட்ச மார்க்கம். (எபிரேயு, கிரேக்க பாஷையிலே யிருக்கிற சத்திய வேதத்திலிருந்து எடுத்து எழுதியது. சர்ச்சு மிசியோன் அச்சுக்கூடத்தில் 1834-இல் அச்சிடப்பட்டது.) வேதவுதார ணத்திரட்டு (1835). A Grammar of Tamil Language. இது தமிழ் கற்கும் ஐரோப்பியருக்காக ஆங்கிலத்தில் எழுதப்பட்டது. (1836) வேதசாஸ்திரச் சுருக்கம் 1838. பலவகைத் திருட்டாந்தம் என்னும் பொது அறிவுநூலையும் எழுதினார். பெப்ரேஷியஸ் ஐயரால் தமிழில் எழுதப்பட்ட புதிய ஏற்பாடு என்னும் விவிலிய வேதத்தைப் பரிசோதித்து அச்சிட்டார். சமயச் சார்பான பல துண்டுப் பிரசுரங்களையும் எழுதி வெளியிட்டார். விசுவநாத சாத்திரியார் (?-1836) யாழ்ப்பாணத்து அராலி என்னும் ஊரைச் சேர்ந்தவர். இலக்கியம், இலக்கணம், சோதிடம் இவற்றை நன்கு கற்றவர். ‘இராசாவின் கணிதர்’ என்னும் சிறப்புப் பெயரை அரசாங்கத்தாரால் தரப் பெற்றவர். வண்ணக் குறவஞ்சி, நகுமலைக் குறவஞ்சி என்னும் நூல்களை இயற்றினார். முத்துக் குமாரக் கவிராயர் (?-1841) யாழ்ப்பாணத்துச் சுன்னாகம் இவர் ஊர். சுன்னாகம் அ. குமாரசுவாமிப் புலவர் இவருடைய பௌத்திரர். சி.வை. தாமோதரம் பிள்ளையின் ஆசிரியர். இவர் இயற்றிய நூல்கள்: ஞானக் கும்மி, ஏசுமத பரிகாரம், ஐயனாரூஞ்சல், நடராசர் பதிகம். இவர் இயற்றிய தனிப் பாடல்களைத் தொகுத்துச் சுன்னாகம் குமாரசுவாமிப் புலவர் ‘முத்தக பஞ்ச விஞ்சதி’ என்னும் பெயருடன் அச்சிட்டார். புதுவை நயனப்ப முதலியார் (1779-1845) இவருடைய ஊர் புதுச்சேரி. சென்னைக் கல்விச் சங்கத்தில் தமிழ்ப்புலவராக இருந்தார். ஓய்வுநேரங்களில் ஓலைச்சுவடி நூல்களை ஆராய்ந்து அச்சிற் பதிப்பித்து வெளியிட்டார். அவ்வாறு இவர் வெளியிட்ட நூல்களாவன: திருச்சிற்றம்பலக் கோவை, தஞ்சைவாணன் கோவை, ஒருதுறைக் கோவை, நாலடியார், திவாகர நிகண்டு, சூடாமணி நிகண்டு (11-ஆவது நிகண்டு.) அக் காலத்தில், வில்லிபுத்தூரார் பாரதத்தை, அச்சிடுவதற்காக ஒரு கூட்டம் கூட்டிக் கனவான்கள் சிலரைக் குழுவினராக ஏற்படுத்தி அதனைப் பதிப்பிக்கும் பொறுப்பை இவரிடம் ஒப்படைத்தார்கள். அதற்காக இவர் ஏட்டுச் சுவடிகளைச் சேர்த்துக் கொண்டிருக்கும் போது திடீரென்று காலமானார். இராமாநுச கவிராயர் (?-1852). இயற்றமிழாசிரியர் இராமநாநுச கவிராயர் இராமநாதபுரத்து முகவை என்னும் ஊரினர். இவர் சிப்பாய்ப் பட்டாளத்தில் போர்வீரராக இருந்தவர். தமிழ் கற்றது பிற்காலத்தில். மாதவச் சிவஞானசுவாமிகளின் மாணவரும், இராமநாதபுர அரசரின் அவைப் புலவருமான சோமசுந்தரம் பிள்ளையிடம் இவர் தமிழ் கற்றார். “சோமசுந் தரனெனுந் தொன்னூற் குரவன் காமர்செஞ் சேவடி கண்ணிணை யாக்கொண்டு இயல்பல வுணர்ந்தோர் எண்ணிலர் அவருழைத் துயல்வரு கீழ்மையிற் றொடர்கீழ் நிலையினேன்.” என்று இவர் தம்மைப் பற்றிக் கூறுகிறார். பிற்காலத்தில் இவர் சென்னையில் சஞ்சீவிராயன் பேட்டையில் வாழ்ந்தார். இப்பேட்டையின் பெயர் இவரால் உண்டாயிற்று. இவர் குடியிருந்த வீதிவழியே ஒருவன் இரட்டைமாட்டு வண்டியின் பின் பளுவுக்காக ஒரு கருங்கல்லை வைத்துக் கொண்டு போனானாம். அந்தக் கல்லில் அனுமான் உருவம் அமைந்ததால், அதனைக் கண்ட கவிராயர், வைணவ பக்தியுள்ளவராகையால், அவனிடமிருந்து அந்த அனுமான் உருவக் கல்லைப் பெற்று அதனை அத் தெருவிலிருந்த பிள்ளையார் கோவிலில் அமைத்து அந்த உருவத்திற்குச் சஞ்சீவி ராயன் என்று பெயர் கொடுத்தாராம். பிறகு அந்தத் தெருவுக்குச் சஞ்சீவிராயன் தெரு என்றும் அந்தப் பேட்டைக்குச் சஞ்சீவிராயன் பேட்டை என்றும் பெயர் வந்தது. இவர் சென்னையில் சொந்தமாக ஒரு அச்சியந்திரசாலை வைத்து நடத்தினார். இவரிடம் தமிழ்க்கல்வி பயின்றவர் அஷ்டாவதானம் வீராசாமிக் கவிராயர், களத்தூர் வேதகிரி முதலியார், திருத்தணிகை விசாகப் பெருமாளையர், சரவணப் பெருமாளையர் முதலியோர். அன்றியும் தாம்சன் கிளார்க்கு, ராஜஸ், துருஐயர், போப்ஐயர், இரோனியூ சையர் முதலிய ஐரோப்பியர்களும் இவரிடம் தமிழ் பயின்றார்கள். 1847-ஆம் ஆண்டில் கவிராயர் அவர்கள் நன்னூலுக்குக் காண்டிகை உரை எழுதி அச்சிட்டார். அவ்வுரை இவருடைய ஐரோப்பிய மாணவர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்கி எழுதப் பட்டது. இதனை அவ்வுரைச் சிறப்புப்பாயிரத்தில் கூறுகிறார்: “இல்லையாந் தன்னிகர் எனவுல கேதுறூஉம் முல்லையாந் துருவெனும்3 ஒளிகொள் போதகனும் ஏமசன் மார்க்கத் தியனிலை வாழாஅத் தாமசன்3கிளார்க் கெனுந் தகைப்புர வலனுந் துராசையி னீங்கித் தொன்னெறி வழாஅ விராச ஸெனும்3 பெய ரியற்கோ மகனும் இந்நூற் குரையீங் ஙனமியற் றுகவென நன்னூற் குரைசெய நாடினன்” என்று கூறுகிறார். இவருடைய நன்னூல் விருத்தியுரைக்குச் சாத்துக்கவி கொடுத் தவர் தொல்காப்பியம் வரதப்ப முதலியார், அஷ்டாவதானம் வீராசாமிக் கவிராயர், களத்தூர் வேதகிரிப் புலவர், சேமங்கலம் தமிழ்ப்புலமை நாராயண உபாத்தியார், சத்திய வெட்டி தமிழ்ப் புலமை சென்ன கேசவ உபாத்தியார் ஆகியோர். இவருடைய நன்னூல் விருத்தியுரையில், நன்னூல். சூத்திரம் ஒன்றை மாற்றி எழுதி விட்டார். “தொல்லை வடிவின எல்லா எழுத்துமாண்டு எய்தும் எகரம் ஒகரம் மெய் புள்ளி” என்னும் சூத்திரத்தை மாற்றி. “தொல்லை வடிவின எல்லா எழுத்துமாண்டு எய்தும் ஏகாரம் ஒகாரம் மெய் புள்ளி” என்று அமைத்துவிட்டார். இதற்கு விளக்கம் எழுதும்போது, பழைய சூத்திரப்படி எழுத்துக் கள் இக்காலத்தில் எழுதப்படவில்லை என்றும் ஆகையால் சூத்திரம் மாற்றி அமைக்கப்பட்டது என்றும் விளக்கியுள்ளார்.4 ஆத்மபோதம் என்னும் நூலை மொழிபெயர்த்து 1840-இல் அச்சிட்டார். இலக்கணச் சுருக்கம் என்னும் நூலை 1848-இல் எழுதினார். ஆத்திசூடி, கொன்றை வேந்தன், வெற்றி வேற்கை ஆகிய நூல்களுக்கு உரை எழுதினார். திருக்குறள் 63 அதிகாரங்களைப் பரிமேலழகர் உரையுடனும், தமது தெளிபொருள் விளக்கத்துடனும். துரு ஐயர் எழுதிய ஆங்கில மொழி பெயர்ப்புடனும் அச்சிட்டார். உலின்ஸ்லோ ஆங்கிலத்தமிழ் அகராதி எழுத இவர் உதவி செய்திருக்கிறார். முத்துராமலிங்க சேதுபதி (?-1873) இவர் இராமநாதபுரம் அரசர். பாஸ்கர சேதுபதியின் தந்தையார். முருகர் அநுபூதி, பிரபாகரமாலை, வள்ளி மணமாலை, சரசசல்லாப மாலை, சடாக்கர சாரப்பதிகம், நீதிபோதம், பாலபோதம் முதலிய நூல்களை இயற்றினார். குமாரசுவாமி முதலியார் (1791-1874) யாழ்ப்பாணத்து உடுப்பிட்டியைச் சேர்ந்த வல்லுவட்டி இவர் ஊர். தாய் மாமனாகிய முத்துக்குமார முதலியாரிடம் கல்வி பயின்றார். பல தனிக் கவிகளைப் பாடினார். இவை, இன்கவித்திரட்டு என்னும் பெயருடன் ஆறுமுகம் பிள்ளையால் அச்சிடப்பட்டன. அருளம்பலக் கோவை, இந்திரகுமார நாடகம், திருவிற் சுப்பிரமணியர் பதிகம், மூளாய்ச் சித்திவினாயகர் ஊஞ்சல், நல்லைக் கலித்துறை, கந்தவன நாதர் ஊஞ்சல் என்னும் நூல்களையும் இயற்றினார். ஊர்காவற்றுறையில் நீதிபதியாக இருந்தவரும் மதுரைத் தமிழ்ச் சங்கத்தார் அச்சிட்ட தமிழகராதிக்கு ஆசிரியராக இருந்த வருமான கதிரைவேற் பிள்ளை அவர்கள் இவருடைய இரண்டாம் மைந்தர் ஆவர். கிருஷ்ண பாரதி (1791-1869) திருச்சிராப்பள்ளி மாவட்டத்தைச் சேர்ந்த திருநயம் என்னும் ஊரில் பிறந்தவர். சேலம் முதலிய ஊர்களில் வசித்தவர். இறுதியில் துறவு பூண்டார். இசைப்பயிற்சியுள்ளவர். இசைப் பாடல்களும் செய்யுள் நூல்களும் இயற்றினார். மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை, திரிசிரபுரம் தியாகராய செட்டியார். அநந்த பாரதி ஐயங்கார் முதலியவர்களின் நண்பர். இவர் இயற்றிய நூல்கள்: திருவிளையாடற் கீர்த்தனை, திருவரங்க மான்மியம், திருத்தவத்துறை மான்மியம், திருவன்பிலாந்துறை மான்மியம், குமார சம்பவம், பிரபோத சந்திரோதயம். ஐதுறூசு நயினார்ப் புலவர் (?-1876) முஸ்லீம் மதத்தவர். நவமணிமாலை என்னும் நூலை 1852-ஆம் ஆண்டு இயற்றினார். வெவ்வேறு சமயங்களில் இவர் பற்பல செய்யுட்களைப் பாடியுள்ளார். அப்பாடல்கள் தொகுக்கப்பட்டு, ஐதுறூசு நயினார்ப் புலவரவர்கள் பாடற்றிரட்டு என்னும் பெயருடன் அச்சிடப்பட்டுள்ளன. முருகேசக் கவிராயர் (1792-1888) பனையஞ்சேரி என்னும் ஊரில் பிறந்தவர். புதுக்கோட்டை சமஸ்தானத்தில் இராமச்சந்திர தொண்டைமானின் அவைப்புலவராக இருந்தார். பல தனிச்செய்யுட்களைப் பாடியிருக்கிறார். ஆனந்தக் களிப்பு, பஞ்சரத்தினமாலை சிந்து, உலகநாத சாமி சரித்திர அகவல் என்னும் நூல்களை இயற்றியிருக்கிறார். இவருடைய தம்பியார் ப. அரங்கசாமி பிள்ளை அவர்கள், அரங்கசாமி பிள்ளை, சீவக சிந்தாமணியை, (பதுமையார் இலம்பகம் வரையில், 1883-ஆம் ஆண்டில் சென்னை அஷ்டலட்சுமி விலாச அச்சுக்கூடத்தில் அச்சிற் பதிப்பித்தார். வேதகிரி முதலியார் (1795-1852) தொண்டை நாட்டுக் களத்தூர் இவரூர். மகாவித்துவான் இயற்றமிழாசிரியர் இராமானுச கவிராயரிடம் கல்வி பயின்றார், கவிராயரால் நிறுவப்பட்ட தமிழ் இலக்கியச் சங்கத்தின் தலைவராக இருந்தார். பின்னர் மதுரையில் ஒரு கனவான் நிறுவிய மதுரைக் கல்விச் சங்கத்துக்கு அழைக்கப்பட்டு அங்குச் சென்று ஏழு ஆண்டு தலைமைத் தமிழ்ப் புலமை நடத்தினார். பிறகு, உடல் நலமில்லாத காரணத்தினால், புதுச்சேரிக்கு வந்து அங்குக் கத்தோலிக்குக் கல்லூரியில் தமிழ்ப்புலவராக இருந்தார். பின்னர் மீண்டும் சென்னைக்கு வந்து ஒர் அச்சுக் கூடம் வைத்து நடத்தினார். சூடாமணி நிகண்டின் பதினோராவது பகுதிக்கு உரை எழுதி 1843-இல் அச்சிட்டார். திருக்குறளுக்கு உரை எழுதி 1849-இல் அச்சிட்டார். யாப்பருங்கலக் காரிகையை 1851-இல் அச்சிட்டார். பகவத்கீதையை 1852-இலும், நாலடியாரை 1855-இலும் அச்சிட்டார். நைடதத்திற்கு உரை எழுதி 1859-இல் அச்சிட்டார். யாழ்ப்பாணத்து ‘உதயதாரகை’ப் பத்திரிகையில் இலக்கண இலக்கியங்களைப் பற்றி (1841 முதல் 1843 வரையில்) கட்டுரைகள் எழுதினார். பல இலக்கண இலக்கிய நூல்களிலிருந்து தொகுத்து இலக்கியக் களஞ்சியம், இலக்கணக் களஞ்சியம் என்னும் பெயருடன் அச்சிட்டார். மநுநீதி சதகம், மனுவியாக்கியான சதகம், நீதி சிந்தாமணி, (இவை ஒவ்வொன்றும் நூறு செய்யுட்களைக் கொண்டது.) சன்மார்க்க சாரம் (110 செய்யுள்) என்னும் நூல்களை இயற்றி யாழ்ப்பாணத்திலிருந்த ஒரு நண்பருக்கு அனுப்பினார். ஆனால், அவை அச்சிடப்படவில்லை. தெய்லர் ஐயர்5 (1796-1878) ஐரோப்பியர். 1815-ஆம் ஆண்டு சென்னைக்கு மதவூழியராக வந்தார். 1819-இல் இங்கிலாந்து சென்று மதகுருவுக்கான கல்வி பயின்று மீண்டும் சென்னைக்கு வந்தார். இவர் திருமணம் செய்து கொண்ட பிறகு இவருக்குப் போதிய செல்வம் கிடைத்தபடியால், இலக்கிய ஆராய்ச்சி செய்வதில் அதிகமாகக் காலத்தைச் செலவிட்டார். தமிழில் சிறு நூல்களை எழுதி வெளியிட்டார். வேதாத்தாட்சி என்னும் நூலைஎழுதி 1834-இல் சென்னையில் அச்சிட்டார். ஐரோப்பியர் தமிழ் கற்பதற்காகச் சில பாடப்புத்தகங்களை ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதி வெளியிட்டார். வெற்றிவேற்கையை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். கீழ்நாட்டுக் கையெழுத்துப் புத்தகச் சாலையில் இருந்த ஏட்டுச் சுவடிகளுக்கு விரிவான பட்டியலை எழுதி 1857-இல் வெளியிட்டார். தமிழிலிருந்த கீழ்நாட்டுச் சரித்திரக் கையெழுத்துச் சுவடியை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். அப்புக்குட்டி ஐயர் (1797-?) யாழ்ப்பாணத்து நல்லூர் இவரூர். தமிழிலும் வடமொழியிலும் வல்லுநர். சூதுபுராணம், நல்லூர் சுப்பிரமணியர் பிள்ளைத் தமிழ் என்னும் நூல்களை இயற்றினார். சரவணமுத்துப் புலவர் (1802-1845) யாழ்ப்பாணத்து நல்லூர் இவர் ஊர். இருபாலைச் சேனாதிராய முதலியாரிடத்தில் கல்வி பயின்றார். சென்னையில் இருந்த களத்தூர் வேதகிரி முதலியாருடன் இலக்கண இலக்கியம் பற்றி வாதம் செய்து உதய தாரகைப் பத்திரிகையில் அவை சம்பந்தமான கட்டுரைகளை எழுதினார். வேதாந்த சுயஞ்சோதி, ஆத்தும போத பிரகாசிகை, நெல்லை வேலவர் உலா ஆகிய நூல்களை இயற்றினார். இவருடைய மாணவர்கள் ஸ்ரீல ஸ்ரீ ஆறுமுகநாவலர், சம்பந்தப் புலவர், கார்த்திகேய உபாத்தியாயர், சிவசம்புப் புலவர் முதலியோர். தெய்வசிகாமணிப் பிள்ளை (1802-1846) இவர் ஊர் திண்டுக்கல்; கிறிஸ்துவர். இன்பமணி மாலை, தோத்திரக்கும்மி முதலிய நூல்களை இயற்றினார். சேலம் குமாரசுவாமி முதலியார் (1803-?) இவர் ஊர் சென்னைக்கு அருகில் உள்ள குன்றத்தூர். அத்தப்ப உபாத்தியாயரிடம் கல்வி பயின்றார். சுந்தரம் ஐயர், இராமகிருட்டின ஐயர் என்பவர்களிடம் இசைக்கலை பயின்றார். கவிபாடுவதிலும் இசைப்பாட்டு இயற்றுவதிலும் வல்லவர். அரசாங்க அலுவல் செய்தவர். அதன் காரணமாகப் பல ஊர்களுக்குச் சென்றார். இவர் இயற்றிய நூல்கள். சுப்பிரமணியர் பதிகம், பழநி மும்மணி மாலை, தண்டாயுதபாணி கலித்துறைப் பதிகம், தண்டாயுதபாணி ஒருபா ஒருபஃது, பழநியாண்டவர் சதகம். கந்தபுராணக் கீர்த்தனை, சுவாமிமலை சுவாமிநாத சுவாமிபதம், சுப்பிரமணியர் வாலி, தர்ம சம்வர்த்தனி கீர்த்தனை, தண்டாயுதக்கடவுள் பஞ்சரத்தின மாலை, இரட்டை வினாயகர் கீர்த்தனை, மூலவினாயகர் கீர்த்தனை, மீனாட்சி கீர்த்தனை, சோமசுந்தரக் கடவுள் பதம், பெரியநாயகி அம்மன் கும்மி, பழநியாண்டவர் வண்ணம். இவை இவர் இயற்றிய இசைத்தமிழ்ப் பாக்கள். இவர் இயற்றிய சுந்தரபுராணக் கீர்த்தனை, கந்தபுராணம் முழுவ தையும் இசைப்பாட்டாகப் பாடப்பட்டநூல். சென்னையில், காஞ்சிபுரம் மகாவித்துவான் சபாபதி முதலியார், அஷ்டாவதானம் சபாபதி முதலி யார் திருத்தணிகை கந்தப்பையர் முதலிய வித்துவான்கள் கூடிய பேரவையில் அரங்கேற்றப்பட்டது. சேகனா லெப்பை (?-1848) செய்கப்துல் காதர் நயினார் லெப்பை என்பது இவருடைய பெயர். இப்பெயர் குறுகி சேகனா லெப்பை என்றாயிற்று. சேகனாப் புலவர் என்றும் இவரைக் கூறுவார்கள். முகம்மதியர். காயல் பட்டினத்திலும் சென்னையிலும் இருந்தவர். தமிழ், சம்ஸ்கிருதம், அரபி, பார்சி முதலிய மொழிகளைப் பயின்றவர். திருத்தணிகை சரவணப் பெருமாள் ஐயர், அஷ்டாவதானம் சபாபதி முதலியார் முதலிய புலவர்களின் நண்பர். குத்புநாயகம் என்னும் நூலை 1805-ஆம் ஆண்டில் இயற்றினார். புத்ஹுஷ் ஷாம் என்னும் புராணத்தை 1816-ஆம் ஆண்டில் இயற்றினார். இவர் இயற்றிய வேறு நூல்கள்: திருக்காரணப்புராணம், திருமணிமாலை, கோத்திரமாலை, சுவர்க்கநீதி, நாகையந்தாதி, மக்காக் கலம்பகம். தாண்டவராய முதலியார் (?-1850) சென்னைக்கடுத்த வில்லிவாக்கத்தில் பிறந்தவர் உழலூர் வேலப்ப தேசிகர். தொல்காப்பியம் வரதப்ப முதலியார், சீகாழி வடுகநாதத் தம்பிரான் இவர்களிடம் தமிழ் பயின்றார். ஆங்கிலம். தெலுங்கு, கன்னடம். இந்துஸ்தானி, மராட்டி, சம்ஸ்கிருதம் ஆகிய மொழிகளையும் கற்றவர். இவர் காலத்திலிருந்த மகாவித்துவான் இயற்றமிழாசிரியர் இராமாநுச கவிராயருடனும் அவர். மாணவராகிய உரையாசிரியர் சரவணப் பெருமாளையருடனும் இலக்கண இலக்கியங்களைப் பற்றி வாதம் செய்தவர். இவர் சென்னைக் கல்விச் சங்கத்தின் தலைமைத் தமிழ்ப் புலவராக இருந்தார். அந்தச் சங்கம் கலைக்கப் பட்ட பிறகு 1843-இல் செங்கல்பட்டு நீதிமன்றத்தின் நீதிபதியாகப் பணியாற்றினார். இவர் இயற்றிய நூல்கள்: இலக்கண வினா விடை (1820), பஞ்சதந்திரக் கதை. (மராட்டிய மொழியிலிருந்து மொழி பெயர்த்து 1826-இல் அச்சிட்டார்) கதாமஞ்சரி (1826), திருத்தணிகைமாலை, திருப்போரூர்ப் பதிகம். இவர் பதிப்பித்த நூல்கள்: வீரமா முனிவர் இயற்றிய சதுரகராதி. இதன் முதல் மூன்று (பகுதிகளை 1824-இல் அச்சிட்டார். இலக்கணப் பஞ்சகம் (நன்னூல் மூலம், அகப்பொருள் மூலம், புறப்பொருள் வெண்பா மாலை) இதனை 1835-இல் பதிப்பித்தார். சூடாமணி நிகண்டு, முதல் பத்துப் பகுதிகளை அச்சிட்டார். சேந்தன் திவாகரம் முதல் எட்டுப் பகுதிகளை அச்சிட்டார். முத்துராமலிங்க சேதுபதி (?-1873) இவர் இராமநாதபுரத்தில் 1847-இல் அரசப் பதவியை ஏற்றார். இவர் பொன்னுச்சாமித் தேவரின் தம்பியார். தமிழை நன்கு கற்றவர். செய்யுள் இயற்றவல்லவர். துவாத்ரீம் சதாவதானம் சரவணப் பெருமாள் கவிராயர் முதலியோர் இவருடைய அவைப் புலவராக இருந்தனர். மாம்பழக்கவிச்சிங்கம் முதலிய புலவர்களை ஆதரித்தார். இவர் இயற்றிய நூல்கள்: காயகப்பிரியா, சடாக்கர சாரப்பதிகம், சரசசல்லாபமாலை, நீதிபோதம், பாலபோதம், பிரபாகரமாலை, முருக ரனுபூதி, வள்ளிமண மாலை. இவர் இயற்றிய முந்நூறு தனிப்பாடல்கள் தனிச் செய்யுட் சிந்தாமணியில் சேர்க்கப்பட்டுள்ளன. சைமன் காசிச் செட்டியார் (1807-1861) யாழ்ப்பாணம் இவருடைய ஊர். கிறிஸ்தவர். இந்து-கிறிஸ்துவத் தமிழ்ப் புலவர்களின் வரலாற்றைத் தொகுத்து ஒரு சிறு நூலை ஆங்கிலத்தில் எழுதி Tamil Plutarch என்னும் பெயரினால் 1859-இல் வெளியிட்டார். கந்தசாமிக் கவிராயர் (?-1871) இவர் திருவாவடுதுறை ஆதீன வித்துவானாக இருந்தவர். உடையார் பாளைய ஜமீன்தார் கச்சிரங்கப்ப உடையார் (1801-1835) மீது கோவைப் பிரபந்த நூல் பாடினார். அதற்காகப் பத்துக்காணி நிலத்தையும் பரிசுகளையும் பெற்றார். உயின்பிரிட் ஐயர்6 (1810-1879) திருநெல்வேலியைச் சேர்ந்த வாழையடி என்னும் ஊரில் பிறந்த தமிழர். தமிழ் ஆங்கிலம். இலத்தீன். கிரேக்கம், எபிரேயம் என்னும் மொழிகளைக் கற்றவர், கனம் இரேனியூசையர் இவரைப் படிக்க வைத்தார். 1827-முதல் சென்னையிலும், 1830-இல் யாழ்ப்பாணத்து வட்டுக்கோட்டை சாஸ்திரப் பள்ளியிலும் படித்துத் தேர்ந்தார். பின்னர் பாளையங்கோட்டை வித்தியா சாலையில் ஆசிரியராக அமர்ந்தார். 1845-இல் மதுரையில் வேதசாஸ்திரப் பள்ளியில் ஆசிரியராகப் பணி புரிந்தார். 1855-இல் முழு குருப்பட்டம் பெற்றுக் கிறிஸ்துவ குருக்கள் வரிசையில் சேர்க்கப்பட்டார். இரேனியூசையர் 1838-ஆம் ஆண்டு காலஞ்சென்ற போது, அவர்மீது உவின்பிரிட்டையர் பாடிய கையறு நிலைச்செய்யுள் இது: ஆயிரத் தெண்ணூற் றாறாரிரு வருடம் காய மடைந்த குணமைந்தா-காயமதில் ஆறெட் டரைவயதில் அப்பதிக்குப் போனீரோ இரேனியூ சையா நீர். இவர் இயற்றிய நூல்கள்: திருப்போராடல். இது Bunyan’s Holy War என்னும் நூலின் மொழிப் பெயர்ப்பு, 1844-இல் இதனை இயற்றினார். தாவீதரசன் அம்மானை (1865), உதிரமகத்துவம் (இரண்டு பாகங்கள்), இரத்தினாவளி நாடகக் கதை, சான்றோர் குலமரபு காத்தல். இவருடைய வாழ்க்கை வரலாற்றை இவருடைய மகன் என்றி மார்ட்டின் உவின்பிரிட் உபாத்தியாயர், “கனம் பொருந்திய உவின் பிரிட்டையர் ஜீவ விருத்தாந்தம்” என்னும் பெயரால் எழுதி 1880-இல் அச்சிட்டார். இராமலிங்கம் பிள்ளை (?-1885) இவர் ஊர் யாழ்ப்பாணம். நாவலியூர் கா. முத்துக் குமாரப் பிள்ளையிடம் கல்வி பயின்றார். கல்வளையந்தாதி: மாணிக்க வாசகர் விலாசம். நளச்சக்கரவர்த்தி விலாசம் என்னும் நூல்களை இயற்றினார். அழகிய சொக்க நாதபிள்ளை (?-1885) திருநெல்வேலி தச்சநல்லூர் இவரூர். தந்தையாராகிய வன்னியப்ப பிள்ளையிடம் இலக்கண இலக்கியங்களைக் கற்றார். திருநெல்வேலி முனிசீப்பு கோர்ட்டில் எழுத்தாளர் உத்தியோகத்தில் இருந்தார். நகைச்சுவையுடன் பேசுவார். முத்துசாமி பிள்ளை என்னும் பெரும் செல்வரிடம் நண்பராக இருந்தார். அவர்மேல் காதல் பிரபந்தம் ஒன்று இயற்றினார். கவிராச நெல்லையப்பப்பிள்ளை, கல்போத்து புன்னை வனக் கவிராயர், இராமசாமிக் கவிராயர், சென்னிகுளம் அண்ணாமலை ரெட்டியார், முத்துவீருப்புலவர், கந்தசாமிப் புலவர், திருநெல்வேலி முத்துப்புலவர், வேம்பத்தூர் பிச்சுவையர் முதலியோர் இவர் காலத்தவர். இவர் இயற்றிய நூல்கள்: காந்திமதியம்மை பிள்ளைத் தமிழ், காந்திமதியம்மை கலித்துறையந்தாதி, சங்கரநாயனார் கோயில் அந்தாதி, ஸ்ரீ வில்லிபுத்தூர்க் கோதையந்தாதி, அநவரத தானநாதர் பதிகம், காந்தி மதியம்மை பதிகம், நெல்லைநாயக மாலை, சிங்காரப்பதம். பதசாகித்தியங்கள். அஷ்டாவதானம் சபாபதி முதலியார் (?-1836) சென்னையைச் சார்ந்த புரசைப்பாக்கத்தில் இருந்தவர். புரசையில் பள்ளிக்கூடம் நடத்திய புதுவை அச்சுத உபாத்தியா யரிடத்திலும், பிறகு சென்னைக் கல்விச் சங்கத்துத் தலைமைப் புலமை நடத்திய தாண்டவராய முதலியாரிடத்திலும், மழவை மகாலிங்கையரி டத்திலும் தமிழ் கற்றார். மற்றும் இயற்றமிழாசிரியர் விசாகப் பெருமாளையர், கொட்டையூர் சிவக்கொழுந்து தேசிகர், புதுவை நயனப்ப முதலியார் இவர்களிடத்திலும் தமிழ் பயின்றார். வண்ணப்பாக்களை விரைவாகப் பாடவல்லவர் இவர். பல புராணங்களையும், பிரபந்த நூல்களையும், உரை நூல்களையும் இயற்றியுள்ளார். அஷ்டாவதானம் செய்வதில் வல்லவர். சென்னைப் புரசை கங்காதரேசுவரர் கோயில், மயிலாப்பூர் செங்கற்பட்டு புதுச்சேரி திரிசிரபுரம், மதுரை திருஞானசம்பந்தர் ஆதீனம், திருப்போரூர், காஞ்சிபுரம் ஏகாம்பரேசுவர் கோவில் முதலிய இடங்களில் அஷ்டாவதானம் செய்து புகழ்பெற்றவர். இவர் தாம் இயற்றிய திருப்போரூர்ப் புராணத்தைத் திருப் போரூர் முருகன் கோவிலில், காஞ்சிபுரம் மகாவித்துவான் சபாபதி முதலியார் தலைமையில் அரங்கேற்றினார். திருப்புகழ் சுவாமிகள் என்றும் முருகதாச சுவாமிகள் என்றும் பெயர் பெற்ற தண்டபாணி சுவாமிகள், தாம் இயற்றிய நூல்களைச் சென்னையில் அரங்கேற்றிய போது, அந்தச் சபைக்கு அஷ்டாவதானம் சபாபதி முதலியார் தலைமை தாங்கினார். இவர் இயற்றிய நூல்கள்: திருப்போரூர் முருகன் மீது குறவஞ்சி, கலம்பகம், அலங்காரப்பஞ்சகம், யமகவந்தாதி, பதிற்றுப்பத்தந்தாதி, வெண்பாமாலை, நான்மணிமாலை, திரிபந்தாதி, இருசொல்யம கவந்தாதி, சதகம் முதலிய நூல்களை இயற்றினார். பிறவாசல சதகம், பிறவாசல வெண்பாமாலை, புரசைப் பதிற்றுப்பத் தந்தாதி, மேற்படி வெண்பா மாலை, மேற்படி இரட்டைச் சொல்யமக மாலை, சிதம்பர சுவாமிகள் சரித்திரம், சிதம்பர சுவாமிகள் பத்திற்றுப்பத்தந்தாதி, திருத்தணிகை இரட்டை மணிமாலை, திருவொற்றியூர் வடிவுடையம்மன் பதிற்றுப்பத்தந்தாதி, மேற்படி தோத்திரச் சந்தமாலை, பழனி வெண்பாமாலை, அருணை வெண்பாமாலை, மயிலை வெண்பா மாலை, காஞ்சி குமரகோட்டக் கலம்பகம், சென்னைக் மேற்படி கந்தசுவாமி வெண்பாமாலை, மேற்படி கந்தசுவாமி புராணம் ஆகிய நூல்களையும் இயற்றினார். இவர் இயற்றிய உரைகள்: திருப்போரூர் புராண வசனம், திருத்தணிகையாற்றுப்படை உரை சந்தரனுபூதி விருத்தியுரை, மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் உரை. கால்ட்வெல் ஐயர் 7(1814-1891) இவரைக் கால்வேல் ஐயர் என்றும் கூறுவர். அயர்லாந்து தேசத்தில் பிறந்தவர். சமயத்தொண்டு செய்வதற்காக 1838-ஆம் ஆண்டு சென்னைக்கு வந்தார். 1841, இல் குரு பட்டம் பெற்றார். திருநெல்வேலியில் இடையன் குடி என்னும் ஊரில் தங்கி ஐம்பது ஆண்டு கிறிஸ்துசமயத் தொண்டு செய்தார். பெருந்தொகையான இந்துக்களைக் கிறிஸ்துவ சமயத்தில் சேர்த்தார். 1877-இல் திருநெல்வேலி பிஷப்பாகப் பட்டம் சூட்டப்பட்டார். பிறகு தள்ளாமையினால் 1891-ஆம் ஆண்டு சனவரி மாதம் 31 ஆம் நாள் உத்தியோகத்திலிருந்து நீங்கிக் கோடைக்கானலில் வசித்துவந்தார். அங்கு அதே ஆண்டு ஆகஸ்டு மாதம் 28ஆம் நாள் காலமானார். கால்ட்வெல் ஐயர் இராயல் ஏஷியாடிக் சங்கத்திலும் சென்னைப் பல்கலைக்கழகத்திலும் அங்கத்தினராக இருந்தார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் முதலிய மொழிகளையும் கற்றவர். ‘திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’8 என்னும் மொழி ஆராய்ச்சி நூலை ஆங்கிலத்தில் எழுதியிருக்கிறார். இதில் திராவிட மொழிகளான தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளுவம் முதலிய மொழிகள் ஒரினத்தைச் சேர்ந்தவை என்பதையும் அவற்றிற்குள்ள ஒற்றுமை களையும் விளக்கி எழுதியிருக்கிறார். தமிழ் முதலிய திராவிட மொழிகள் ஒரினத்தைச் சேர்ந்தவை என்பதை முதன் முதலில் உலகம் அறியச் சொன்னவர் இவரே. இவருடைய நூலினாலே இவருடைய புகழ் மேல் நாடுகளிலும் கீழ் நாடுகளிலும் பரவியது. திருநெல்வேலி சரித்திரம் என்னும் நூலையும் இவர் ஆங்கிலமொழியில் எழுதியிருக்கிறார். இவர் தமிழில் எழுதிய நூல்கள்: நற்கருணைத் தியானமாலை (1853) தாமரைக் தடாகம் (1871). ஞானஸ்நானம், நற்கருணை என்னும் பொருள்களைப் பற்றித் தமிழில் நீண்ட கட்டுரைகள் எழுதி யிருக்கிறார். இக்கட்டுரைகள், என்ரி பவர் ஐயர் 1841-இல் எழுதி அச்சிட்ட, “வேத அகராதி” என்னும் நூலில் சேர்க்கப்பட்டுள்ளன. கால்ட்வெல் ஐயர் சமயச் சார்பாகச் சில துண்டுப் பிரசுரங்களையும் தமிழில் எழுதி வெளியிட்டிருக்கிறார். மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை (1815-1876) இவர் தம் தந்தையாராகிய சிதம்பரம் பிள்ளையிடத்தில் இளமையில் கல்வி பயின்றார். பின்னர்த் திரிசிரபுரத்தில் இருந்த வேலாயுத முனிவரிடம் கல்வி கற்றார். அப்போது இவருடன் கல்வி பயின்றவர் திரிசிரபுரம் வித்துவான் கோவிந்தப்பிள்ளையவர்கள். மீனாட்சிசுந்தரம் பிள்ளை சென்னையில் இருந்தபோது மகா வித்துவான் காஞ்சிபுரம் சபாபதி முதலியாரிடத்தில் தமிழ் பயின்றார். அப்போது இவருடன் இருந்து தமிழ் பயின்றவர் புரசை அஷ்டா வதானம் சபாபதி முதலியாரும். தாண்டவராயத் தம்பிரானும் ஆவர். சென்னையில் இருந்த திருவம்பலத்தின்னமுதம் பிள்ளை, எழும்பூர் திருவேங்கடாசல முதலியாரிடத்திலும் மீனாட்சி சுந்தரம் பிள்ளை கல்வி பயின்றார். சென்னையில் இருந்தபோது மகா வித்வான்களாகிய இராமாநுசக் கவிராயர், அவர் மாணவர்களாகிய திருத்தணிகை விசாகப்பெருமாளையர், சரவணப்பெருமாளையர் இவர்களின் மாணவராகிய மழவை மகாலிங்கையர் முதலியவர் களிடம் பிள்ளையவர்கள் பழகினார்கள். மகா வித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் திரு வாடுதுறை ஆதீன வித்துவானாக விளங்கினார்கள். இவர்களிடம் தமிழ்பயின்ற மாணவர் பற்பலர். அவர்களில் முக்கியமானவர் சோடசாவதானம் சுப்பராய செட்டியார், பூவாளுர் தியாகராய செட்டியார் திருவீழி மிழலைச் சாமிநாதக் கவிராயர், வல்லூர் தேவராசப்பிள்ளை, புதுச்சேரி சவரிராயலு நாயகர், முனிசீபு வேதநாகயம் பிள்ளை, வெண்பாப்புலி வேலுச்சாமிப் பிள்ளை, உ.வே. சாமிநாதையர் முதலியோர். மகாவித்துவான் அவர்கள் பதினாறு தல புராணங்களையும், பதினாறு அந்தாதிகளையும், பத்துப் பிள்ளைத் தமிழ் நூல்களையும், அநேக பிரபந்த நூல்களையும் இயற்றினார்கள். திருவானைக்கா அகிலாண்டம்மை பிள்ளைத்தமிழ். திருத்தவத்துறை பெருந்தவப் பிராட்டி பிள்ளைத் தமிழ், பெருமணநல்லூர்த் திருநீற்றம்மை பிள்ளைத் தமிழ், திருவுறந்தை காந்திமதியம்மை பிள்ளைத் தமிழ், திருக்குடந்தை மங்களாம்பிகை பிள்ளைத்தமிழ். கன்னபுரம் பாகம்பிரியாளம்மைப் பிள்ளைத்தமிழ், திருவெண் காட்டுப் பெரிய நாயகிம்மை பிள்ளைத் தமிழ், திருவிடைக் கழி முருகர் பிள்ளைத் தமிழ், திருவாவடுதுறை அம்பலவாண தேசிகர் பிள்ளைத்தமிழ், சேக்கிழார் சுவாமிகள் பிள்ளைத் தமிழ் முதலிய பிள்ளைத் தமிழ் நூல்களை இயற்றியுள்ளார். வாட்போக்கிக் கலம்பகம், துறைசைக் கலம்பகம், காழிக் கோவை, திருவிடை மருதூர் உலா, தில்லையமக அந்தாதி, திருத் துறைசை யமக வந்தாதி, திருச்சிராப்பள்ளிய மகவந்தாதி, திருக் குடத்தை திரிபந்தாதி, திருப்பைஞ்ஞீலித் திரிபந்தாதி, திருவிடை மருதூர் திரிபந்தாதி, திருவானைக்காத் திரிபந்தாதி, பட்டீச்சுரப் பதிற்றுப்பத்தந்தாதி, பூவளூர்ப் பத்திற்றுப்பத்தந்தாதி, பாலைவனப் பதிற்றுப்பத்தந்தாதி, திருவூறைப் பத்திற்றுப்பத்தந்தாதி. தண்டபாணி பத்திற்றுப்பத்தந்தாதி எறும்பீச்சரம் வெண்பாவந்தாதி, திருக்கலைசை மாலை, திருவானைக்கா மாலை, திருவாவடுதுறைச் சுப்பிரமணிய தேசிகர் மாலை, மருமைச் சச்சிதானந்த தேசிகர் மாலை, திருஞானசம்பந்தர் ஆனந்தக் களிப்பு முதலிய பிரபந்த நூல்களையும் இயற்றினார். திருவுறந்தைப் புராணம், திருகுடந்தைப் புராணம். மாயூரப் புராணம், திருச்செந்திற் புராணம், திருக்குறுக்கை வீரட்டப் புராணம், திருவாளொளிப்புத்தூர்ப் புராணம், திருநாகைக்காரோணப் புராணம், விளர்த் தொட்டிப் புராணம், ஆற்றூர்ப் புராணம், திருவாரூர்த் தியாகராசர்லீலை, தனியூர்ப்புராணம், மண்ணிக்கடிக்கரை புராணம், கோயிலூர் புராணம், கண்டதேவிப் புராணம், காரைக்குடிப் புராணம், வீரைவனப் புராணம், திருமயிலைப் புராணம், காசி ரகசியம், திருவம்பர்ப்புராணம், திருப்பெருந் துறைப் புராணம் முதலிய புராணங்களை இயற்றினார். பதிகங்களும் தனிப்பாடல்களும் பற்பல இயற்றினார். சச்சிதானந்த சுவாமிகள் (1815-1889) தொண்டைநாட்டு ஈசூரில் பிறந்தார். சென்னைக் குயப்பேட் டையில் வசித்தார். திருத்தணிகை சரவணப் பெருமாளையரிடம் தமிழ் பயின்றார். புரசை அருணாசல சுவாமிகளிடம் ஞானோப தேசம் பெற்றார். இவர் இயற்றிய நூல்கள்: உத்தமவாதம், எதார்த்தவாதம், சர்வமத சிந்தாந்த விளக்க வினாவிடை, சீவகாருணிய விளக்கம், சுவானிபூதி விளக்கம், சுவானுபூதி விநோத நான்மணி மாலை, திருக்குத் திரிசிய விவேகம், பிரத்தியட்சாநுபூதி விளக்கம், வேதாந்த இலக்கணம் என்பன. அன்றியும், கைவல்ய நவநீதம், வேதாந்த சூளாமணி, பிரபுலிங்க லீலை, சொரூபசாரம், உபநிடதம், பகவத்கீதை ஆகிய நூல்களுக்கு விருத்தியுரை எழுதினார். பொன்னம்பலப் பிள்ளை (?-1891) யாழ்ப்பாணத்து மாவிட்டபுரம் இவர் ஊர்: மாவையந்தாதி, சித்திரகவி என்னும் நூல்களை இயற்றியிருக்கிறார். மாவையந்தாதி, யமகமாக அமைந்த நூல். கருத்த முத்துப் பிள்ளை (1816-1895) எட்டயபுரம்: இவருடைய ஊர். எட்டயபுரம் அரசரிடம் அலுவல் செய்தவர். தமிழ் வடமொழி இரண்டையும் கற்றவர். இவர் செய்த நூல்கள் கழுகுமலைப் பள்ளு. வேளாளர் பள்ளு. சிவகிரிக் குமரக் கடவுள் பிள்ளைத் தமிழ், சிவதத்துவ சிதாநிதி: திருச்செந்தூர் முருகர் கலித்துறை யந்தாதி, மேற்படி பதிற்றுப் பத்தந்தாதி, மேற்படி வெண்பா வந்தாதி, திருப்புவனப் புராணம், விருத்த பராசரியம். சுவாமிநாதர் (1819-?) யாழ்ப்பாணத்து மானிப்பாய் இவரது ஊர். இசைத் தமிழ், இயற்றமிழ் இரண்டிலும், வல்லவர். இராம நாடகம், தருமபுத்திர நாடகம் முதலிய நாடக நூல்களை எழுதினார். சதாசிவம் பிள்ளை (1820-1896) அருணாசலம் சதாசிவம் பிள்ளை என்றும் J. R. Arnold என்றும் கூறப்படுவார். யாழ்பாணத்து மானிப்பாய் என்னும் ஊரில் பிறந்தவர். கிறிஸ்து சமயத்தவர். ‘உதயதாரகை’ பத்திரிகையை நடத்தினார். இவர் எழுதிய நூல்கள்: சாதாரண இதிகாசம். இந்து தேச சரித்திரநூல். (1858 வானசாஸ்திரம் 1861). பாவலர் சரித்திர தீபகம் (1886), இல்லற நொண்டி (செய்யுள் நூல் 1887). வெல்லையந்தாதி, கீர்த்தனா சங்கிரகம் (கிறிஸ்து சமயநூல்கள் 1890), மெய்வேதசாரம், திருச்சதகம், நன்னெறிமாலை, நன்னெறிக் கொத்து, சற்போத சரணம். உரிச்சொல் நிகண்டை 1889-இல் அச்சிட்டார். போப்பையர்9 (1820-1903) இவர் பிரின்ஸ் எட்வர்ட் தீவில் பிறந்தார். ஆங்கிலேயர், ஆங்கிலம், எபிரேயம், கிரேக்கம் என்னும் மொழிகளைக் கற்றவர். இவர் வெஸ்லியன் மிஷன் சார்பாகத் தமிழ்நாட்டில் சமயத்தொண்டு செய்தவர். இயற்றமிழாசிரியர் இராமாநுச கவிராயரிடத்திலும், ஆரியங்காவுப் பிள்ளையிடத்திலும் தமிழ் பயின்றார். செய்யுட்களைத் தொகுத்துத் ‘தமிழ்ச்செய்யுட் கலம்பகம்’ என்னும் பெயருடன் 1859-இல் அச்சிட்டார். தமிழ் இலக்கண வினாவிடையை 1895-இல் எழுதினார். திருக்குறளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து 1886-இல் வெளியிட்டார். நாலடியாரை ஆங்கிலத்தில் மொழியெர்த்தார் (1893). மாணிக்கவாசகரின் திருவாசகத்தையும், தாயுமானவர் பாடல்கள் சிலவற்றையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து 1897-இல் அச்சிட்டார். புறப்பொருள் வெண்பாமாலை, புறநானூறு இவற்றிலுள்ள வீரச்சுவை யுள்ள செய்யுட்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார் (1899). ஆங்கிலேயர் தமிழ் கற்பதற்காகச் சில நூல்களை எழுதியிருக்கிறார். ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் (1823-1879) யாழ்ப்பாணத்து நல்லூரில் பிறந்தவர். இருபாலை சேனாதிராய முதலியார், நல்லூர் சரவணமுத்துப் புலவர் இவ்விருவரிடத்திலும் தமிழ் பயின்றார். பீற்றர் வெர்ஸிவல் ஐயர் விருப்பப்படி தமிழ் விவிலிய நூலைப் பிழை தீர்த்து வெளியிட்டார். இவர் சொற்பொழிவு செய்வதில் வல்லவர். திருவாவடுதுறை ஆதீனத்துப் பண்டார சன்னதிகளால் நாவலர் பட்டம் அளிக்கப் பட்டார். யாழ்ப்பாணத்து வண்ணார் பண்ணையிலும் சிதம்பரத்திலும் சைவ சமயத்தையும் தமிழ் மொழியையும் கற்பிக்கும்பொருட்டுப் பாடசாலைகளை ஏற்படுத்தினார். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ‘உதய தாரகை’ ‘இலங்கை நேசன்’ பத்திரிகைகளில் அவ்வப்போது கட்டுரைகள் எழுதினார். யாழ்ப்பாணத்திலும் சென்னையிலும் அச்சியந்திரசாலைகள் அமைத்து அவற்றின் வாயிலாகப் பல நூல்களை அச்சிட்டு வெளிப் படுத்தினார். பெரியபுராண வசனம். திருவிளையாடற் புராண வசனம், கந்தபுராண வசனம். பாலபாடம் (நான்கு பாகங்கள்), சைவ வினா விடை (இரண்டு பாகம்), இலக்கணச் சுருக்கம், இலங்கைப் பூமி சாஸ்திரம், சிதம்பரமான்மிய வசனம் ஆகிய நூல்களை இயற்றினார். கோயிற்புராணம், நன்னூல், சைவ சமயநெறி, வாக்குண்டாம், நல்வழி, நன்னெறி முதலிய நூல்களுக்கு உரை எழுதினார். (இவருடைய வரலாற்றினை, த. கைலாச பிள்ளையவர்கள், ‘ஆறுமுகநாவலர் சரித்திரம்’ என்னும் பெயருடன் எழுதியிருக் கிறார்கள். அருணாசலக் கவிராயர் ‘ஆறுமுகநாவலர் புராணம்’ என்னும் பெயருள்ள நூலை எழுதியிருக்கிறார்.) இராமலிங்க சுவாமிகள் (1823-1874) கருங்குழி இராமலிங்கம்பிள்ளை என்னும் பெயருடன் இவர் சென்னையில் இருந்தபோது, மகாவித்துவான் காஞ்சிபுரம் சபாபதி முதலியாரிடத்தில் கல்வி பயின்றார், இவருடைய தமையன்மாராகிய சிதம்பரம் சபாபதிபிள்ளை பரசுராமப்பிள்ளை என்பவர்களும் மகாவித்துவான் சபாபதி முதலியாரிடம் கல்வி கற்றவர்கள். இராமலிங்கர், இளமைப் பருவத்தில் தமது தமையன்மார் புராணம் பிரசங்கம் செய்யும்போது அவர்களுக்குக் கையேடு வாசித்து வந்தார். துறவு பூண்ட பிறகு திருவருட்பிரகாச வள்ளலார் என்னும் பெயர் பெற்றார். முருகதாசர் என்னும் தண்டபாணி சுவாமிகள் இவருடைய நண்பர். தொழுவூர் வேதாயுத முதலியார் இவருடைய மாணவர். உத்தரஞான சிதம்பரம் என்னும் ஞான சபையை நிறுவினார். இவர் இயற்றிய நூல்கள்: மனுமுறைகண்ட வாசகம், சீவகாருணிய ஒழுக்கம், சிவநேச வெண்பா, நெஞ்சறிவுறுத்தல், மகாதேவ மாலை, இங்கிதமாலை முதலியன, இவருடைய பாடல்கள் இனிமையும், எளிமையும் உள்ளவை. இவருடைய பாடல்கள் தொகுக்கப்பட்டு ‘திருவருட்பா’ என்னும் பெயருடன் அச்சிற் பதிக்கப்பட்டுள்ளன. இப்பாடல்களை முதல் முதல் தொகுத்து வெளியிட்டவர். இவரது சீடரான தொழுவூர் வேலாயுத முதலியார் அவர்கள். திருவருட்பா வெளியானவுடன் அருட்பா, மருட்பா கட்சிகள் தோன்றி வாதப் பிரதிவாதங்கள் நிகழ்ந்தன. அழகிய சொக்கநாதப் பிள்ளை (?-1885) இவர் திருநெல்வேலிக்கு அடுத்த தச்சநல்லூரில் பிறந்தவர். தமது தந்தையாராகிய வன்னியப்பப்பிள்ளையிடம் கல்வி பயின்றார். இவர் இயற்றிய நூல்கள்: அநவரத தான நாதர் பதிகம் காந்திமதி யம்மை பிள்ளைத் தமிழ், காந்திமதி யம்மை பதிகம், சங்கரநயினார் கோயில் அந்தாதி, நெல்லைநாயக மாலை, முத்துசாமி பிள்ளை காதற் பிரபந்தம், ஸ்ரீ வில்லிபுத்தூர் கோவையந்தாதி, பதசா கித்யங்கள். கனகசபைப் புலவர் (1826-1873) யாழ்ப்பாணத்து அளவெட்டி என்னும் ஊரிற் பிறந்தவர், பேர்போன வட்டுக்கோட்டை சாஸ்திரக் கலா சாலையில் கல்வி பயின்றார். உவாட் என்னும் ஐரோப்பியரிடம் மேல்நாட்டு வைத்தியமும், தமது தந்தையர்ராகிய வேலுபிள்ளையிடம் ஆயுர்வேத வைத்தியமும் கற்றார். செய்யுள் இயற்றவும் கற்றவர். ஆகவே புலவன், கனகசபை என்று அழைக்கப்பட்டார். கிறிஸ்து சமயத்தவர். கண்டி அரசன் மகனான அழகர்சாமி என்பவர் பேரில் ‘அழகர் சாமி மடல்’ என்னும் பிரபந்தம் பாடி அவர் இருந்த வேலூருக்குப் போய், அவர் முன்னிலையில் அரங்கேற்றினார். திருவாக்குப் புராணம் என்னும் நூலை இயற்றினார். இது 1751 விருத்தப்பாக்களை யுடையது. நிகண்டு ஒன்றையும் உலாநூல் ஒன்றையும் இயற்றினார் என்பர். இவர் சென்னையில் அகராதி எழுதும் அலுவலில் வீராசாமி செட்டியாருடன் தொண்டு செய்தார். வேதநாயகம் பிள்ளை (1826-1889) திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த குளத்தூர் இவரூர். கிறித்தவர். திருச்சி ஜில்லாக் கோர்ட்டில் அலுவல் செய்தார். பிறகு, சீர்காழி, மாயூரம் முதலிய இடங்களில் முன்சீபு உத்தியோகம் செய்தார். மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையிடத்தில் தமிழ்க் கல்வியும் தியாகப்பிள்ளை என்பவரிடத்தில் ஆங்கிலமும் கற்றார். இவர் வேண்டுகோளின்படி மகாவித்துவான் அவர்கள் சீர்காழிக் கோவையைப் பாடினார். அக் கோவையை வேதநாயகம் பிள்ளை தலைமையில் சீர்காழியில் 1861-ஆம் ஆண்டில் அரங்கேற்றினார். மகாவித்துவான் அவர்கள், வேத நாயகம் பிள்ளைமீது குளத்தூர்க் கோவை என்னும் ஐந்தினைக் கோவைப் பிரபந்தத்தைப் பாடினார். இது 438 செய்யுட்களைக்கொண்ட நூல். வேதநாயகம் பிள்ளை இசைக்கலையிலும் வல்லுநர். இவர் இயற்றிய நூல்கள்: சித்தாந்த சங்கிரகம், 1862. இது நீதிமன்றச் சட்டங்களைத் தொகுத்துக் கூறுவது, பெண்புத்தி மாலை, 1869, திருவருளந்தாதி, 1873. பிரதாப முதலியார் சரித்திரம், 1876 தமிழில் முதல் முதலாக எழுதப்பட்ட நாவல் இது. சர்வ சமய சமரசக் கீர்த்தனை, 1878. சுகுணசுந்தரி சரித்திரம், 1887 சத்திய வேதக் கீர்த்தனை, 1889. திருவருள்மாலை, தேவதோத் திரமாலை, தேவமாதா அந்தாதி. கிருஷ்ண பிள்ளை (1827-1900) திருநெல்வேலியில் பாளையங்கோட்டைக்கு அடுத்த இரட்டி யார்பட்டியில் பிறந்தவர். திருப்பாற்கடல்நாதன் கவிராயரிடம் கல்வி பயின்றவர். வைணவக் குடும்பத்தில் பிறந்து வைணவப் பற்று மிகுந்திருந்த இவர், பிற்காலத்தில் சிறிஸ்து சமயத்தில் சேர்ந்தார். அப்போது இவருக்கு என்ரி ஆல்பிரெட் கிருஷ்ண பிள்ளை என்று பெயர் ஏற்பட்டது. இவர் கம்ப ராமாயணத்தை நன்கு கற்றவர். இவர் இயற்றிய நூல் இரட்சணிய யாத்திரிகம் என்பது. இனிய பாக்களால் இயன்றது. 1894-ஆம் ஆண்டு அச்சிடப்பட்டது. நாகநாத பிள்ளை (1829-1884) யாழ்ப்பாணத்துச் சுன்னாகம் இவர் ஊர். நாகநாத பண்டிதர் என்றும் இவருக்குப் பெயர் உண்டு. வட்டுக் கோட்டைக் கலா சாலையில் கல்வி பயின்றார். தமிழ் ஆங்கிலம், சிங்களம், வடமொழி ஆகிய நான்கு மொழிகளைக் கற்றவர். சுன்னாகம் குமாரசுவாமிப் புலவர் இவரிடம் கல்வி கற்றார். நாகநாதபிள்ளை, ‘இலங்காபிமானி’ பத்திரிகையில் கட்டுரைகள் எழுதினார். வடமொழியிலிருந்து மானவ தருமசாத்திரம், பகவத்கீதை, மேக தூதம் சாந்தோக்கிய உபநிடதம், சாங்கிய தத்துவம் ஆகிய நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்தார். சின்னத்தம்பி (1830-1878) யாழ்ப்பாணத்து உடுப்பிட்டிக் கோயிற்பற்றைச் சார்ந்த தனக்காரக் குறிச்சியில் பிறந்தவர். தியாகராச பண்டிதரிடம் கல்வி பயின்றார். இலக்கணம், இலக்கியம், கணிதம் கற்றவர். உடுப்பிட்டியில் தமிழ் வித்தியா சாலையை நிறுவினார். இவர் இயற்றிய நூல்கள்: இராம விலாசம், சிவதோத்திரக் கீர்த்தனை, சோதிடச் சுருக்கம், நில அளவைச் சூத்திரம், புதுச்சந்நிதி முருகன் பதிகம், மதனவல்லி விலாசம், விக்கினேசுவரர் பதிகம், வீரபத்திரர் பதிகம், வீரபத்திரம் ஊஞ்சல், வீரமாகாளியம்மன் பதிகம். சிவசம்புப் புலவர் (1830-1909) யாழ்ப்பாணத்துப் பருத்தித்துறையைச் சார்ந்த உடுப்பட்டி இவர் ஊர். நல்லூர் சரவண முத்துப் புலவரிடத்தும் அவர் மாணவரான நல்லூர் சம்பந்தப் புலவரிடத்தும் தமிழ் பயின்றார். பல பிரபந்த நூல்களை இயற்றினார். பாஸ்கர சேதுபதி மகாராசர் பேரில் கல்லாடக் கலித்துறை. நான்மணி மாலை. இரட்டைமணி மாலை. முதலிய பிரபந்த நூல்களை இயற்றினார் பாண்டித்துரைத் தேவர் மீது நான்மணி மாலை பாடினார். இவர் ஏறக்குறைய அறுபது பிரபந்த நூல்களை இயற்றினார் என்பர். கற்தவன நாதர் பதிகம். வல்லிபுரநாதர் பதிகம், செந்தில் யமக வந்திhதி (1888-இல் வல்வையில் அச்சாயிற்று.) திருவேரக அந்தாதி, எட்டிக்குடிப் பிரபந்தம், புலோலி நான்மணி மாலை, ஊஞ்சல் (இவை 1889-இல் வலுவெட்டித்துறையில் அச்சாயின.) திருச்செந்திற்றிருவந்தாதி (1888) முதலிய நூல்களை இயற்றினார். மறைசை யந்தாதிக்கு உரை எழுதி 1893இல் வெளியிட்டார். யாப்பருங்கலக் காரிகைக்கும் கந்த புராணத்திற்கும் (வள்ளியம்மை திருமணப்படலம் வரையில்) உரை எழுதினார். கோடக நல்லூர் சுந்தர சுவாமிகள் (1831-1878) திருநெல்வேலிக்கு அருகில் உள்ள கங்கை கொண்டான் என்னும் ஊரிற் பிறந்தார். பிற்காலத்தில் துறவு பூண்டார். மனோன் மணிய நாடக ஆசிரியர் சுந்தரம்பிள்ளையின் ஞானகுரு. சுந்தர சுவாமி களைச் சுந்தரம் பிள்ளையவர்கள் மனோன்மணிய நாடகத்தில் ஜீவக அரசனுடைய குலகுருவாக அமைத்திருக்கிறார். சுந்தரசுவாமிகள் இயற்றிய நூல்களாவன: சம்பிர தாயப்பிர கரணம், சுவானுபூதிரசாயனம், சுவானுபூதி ரச மஞ்சரி, மனோநாச மார்க்கம், மகாவாக்கியச் சுருக்கம். சந்திரசேகர கவிராச பண்டிதர் (?-1883) சோழநாட்டுத் தில்லையம்பூர் இவரது ஊர். சென்னையில் இருந்த திருத்தணிகை விசாகப் பெருமாளையர் சரவணப் பெருமாளையர் என்னும் வீர சைவச் சகோதரர்களிடத்தில் கல்வி பயின்றார். சித்தூர் உயர்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராக இருந்தார். கும்பகோணம் கல்லூரியில் ஆறுமாத காலம் தமிழாசிரியராக இருந்தார். மகா வித்வான் மகாலிங்கையர், இயற்றமிழாசிரியர் இராமநுச கவிராயர், தாண்டவராய முதலியார். திருவாவடுதுறை ஆதீனத்துத் தலைவர் சுப்பிரமணிய தேசிகர், பொன்னுசாமித் தேவர் முதலியவர் களிடம் நண்பராகப் பழகினார். திருவாவடுதுறைச் சுப்பிரமணிய தேசிகர்மீது மும்மணிக் கோவை பாடினார். பொன்னுசாமித் தேவர் விருப்பப்படித் தனிப் பாடல்களைத் திரட்டி அச்சிற் பதிப்பித்தார். தமது ஆசிரியர்கள் இயற்றிய பாலபோத இலக்கணம், நன்னூற் காண்டிகையுரை, ஐந்திலக்கண வினாவிடை முதலிய நூல்களை அச்சிட்டார். அன்றியும் நன்னூல் விருத்தியுரை, யாப்பருங்கலக் காரிகை யுரை, வெண்பாப் பாட்டியல் உரை, செய்யுட்கோவை, பழமொழித்திரட்டு, அரபத்த நாவலர் இயற்றிய பரத நூல் முதலிய பழைய நூல்களை ஏட்டுச் சுவடியிலிருந்து அச்சுப் புத்தகமாக அச்சிற் பதிப்பித்தார். தண்டியலங்கார மூலத்தையும் அதற்குச் சுப்பிரமணிய தேசிகராற் செய்யப்பட்ட உரையையும் பரிசோதித்து 1858 - இல் அச்சிற் பதிப்பித்தார். வருஷாதிநூற் சித்தாந்த விளக்கமும் அறுபது வருஷ பலனும் என்னும் பழைய நூலை ஆராய்ந்து 1875-ஆம் ஆண்டில் அச்சிட்டார். குமார குலசிங்கமுதலியார் (?-1884) யாழ்ப்பாணத்துத் தெல்லிப்பதை இவர் ஊர். கிறிஸ்துவர். நியாய சபைகளில் துவிபாஷியாக இருந்தவர். பல தனிக் கவிகளையும் சில செய்யுள் நூல்களையும் இயற்றினார். அவகையில் இப்போது கிடைத்திருப்பது பதிவிரதை விலாசம் என்னும் நூல். சரவணப்பொருமாள் கவிராயர் (?-1886) துவாத்ரீம் சதாவதானம் சரவணப்பொருமாள் கவிராயர் என்றும், சிறிய சரவணப்பொருமாள் கவிராயா என்றும் கூறப்படுவார். இவருடைய பாட்டனார் அட்டாவதானம். பெரிய சரவணக் கவிராயர். இவருடைய தகப்பனார். அருணாசலக் கவிராயர். பாண்டிநாட்டுப் பரம்பக் குடிக்கு அடுத்த முதுகுளத்தூர் இவருடைய ஊர். இவர், இராமநாதபுரம் சேதுபதிசமஸ்தான வித்வான் சேதுபதி அரசரிடம் பல்லக்கு முதலிய வரிசைகளைப் பெற்றவர். சாதாவதானம் செய்து புகழ் பெற்றவர். இவர் இயற்றிய நூல்களாவன:- மதுரைச் சிலேடை வெண்பா, குன்றைச் சிலேடை வெண்பா, திருச்சுழியில் ஒரெழுத்தந்தாதி, கழுகுமலை ஓரெழுத்தந்தாதி, மகரவந்தாதி, பனசைத் திரிபந்தாதி, கயற்கண்ணிமாலை, மதுரை யமகவந்தாதி, புவனேந்திரன் அம்மானை, கந்த வருக்கச் சந்த வெண்பா முதலியன. கோவிந்தப் பிள்ளை (?-1890) இவர் ஊர் திரிசிரபுரம். வித்துவ ஜனசேகரர் கோவிந்தப்பிள்ளை என்று இவர் கூறப்படுவார். வைணவ சமயத்தவர். சில காலம் சென்னையிலும் வசித்தார். திரிசிரபுரத்தில் மலைக்கோட்டையில் மௌனசுவாமி மடத்தில் இருந்த வேலாயுத முனிவரிடத்தில் தமிழ் பயின்றார். இவருடன் மேற்படி முனிவரிடம் கல்வி பயின்றவர் திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள். கோவிந்தப் பிள்ளையவர்கள் மிகுந்த குருபக்தியுள்ளவர். தாம் எழுதுங் கடிதங்களின் தலைப்பில் “வேலாயுத முனிவர் பாதாரவிந்தமே கதி” என்று எழுதுவது வழக்கமாம். இவர் சிறந்த தமிழறிஞராக விளங்கினார். இராசமன்னார் கோயில் தலபுராணம், மேற்படி கோயில் அலங்காரக் கோவை என்னும் நூல்களைச் செய்யுளாக, இயற்றினார். கம்ப ராமயாண சுந்தர காண்டத்துக்கும் சடகோபரந்தாதி முதலிய நூல்களுக்கும் உரை எழுதினார். கம்ப ராமாயணம் முழுவதையும் அச்சிற் பதிப்பித்தார். இராமலிங்கத் தம்பிரான் (?-1893) திருவாவடுதுறை ஆதீனத் தம்பிரான்களில் ஒருவர். மகா வித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை, சிரிசிரபுரம் தியாகராய செட்டியார் இவர்கள் காலத்தில் இருந்தவர். செய்யுள் இயற்ற வல்லவர். கல்வியில் தேர்ந்தவர். பல தனிப்பாடல்களைப் பாடியிருக்கிறார். நூல் இயற்றவில்லை. மீனாட்சி சுந்தரக் கவிராயர் (?-1895) பாண்டிநாட்டுச் சேற்றூருக்கு அருகியல் உள்ள முகவூரிற் பிறந்தவர். எட்டயபுரத்துச் சமஸ்தானப் புலவராக இருந்தார். முகவூர் கந்தசாமிக் கவிராயரின் (1823-1887) மகனார். இவர் இயற்றிய நூல்கள்: இராசவல்விபுரம் முத்துசாமிப்பிள்ளை மீது வண்டுவிடு தூது, பயோதரப் பத்து, எட்டயபுரம் ஆண்டியப்ப பிள்ளைமீது பிள்ளைத் தமிழ், உதாரசோதனை மஞ்சரி, ஒரு துறைக்கோவை, முருகர் அனுபூதி, கழுகுமலைத் திரிபந்தாதி, திருப்பரங்கிரிப் பதிகங்கள், குதிரைமலைப் பதிகம், வண்டுவிடுதூது, தனிச்செய்யுட்கள். சிதம்பர பாரதியார் (?-1897) பாண்டிநாட்டுத் திருப்பூவணத்திற்குத் தென்கிழக்கிலுள்ள மழவராயனேந்தல் என்னும் ஊரில் பிறந்தவர். முத்தமிழ்ப் புலமை உள்ளவர். புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம் அரசர்களிடம் அடிக்கடி சென்று பரிசில் பெற்றுவந்தார். பிற்காலத்தில் துறவு பூண்டு சிதம்பர சுவாமிகள் என்னும் பெயருடன் விளங்கினார். இவர் இயற்றிய நூல்களாவன: அம்பரீட்ச சரித்திரம், ‘உருக்குமணி கலியாணம்,’ குலசேகர சரித்திரம், ஞானாநந்தப் பேரின்பக் கீர்த்தனை, திருக்கோகர்ணம் பிரகதாம்பாள் பல சந்தக் கும்மி, துருவ சரித்திரம், பெரியபுராணக் கீர்த்தனை, மதுரை மீனாட்சியம்மை பலசந்தக் கும்மி, மயூரகிரிநாதர் வண்ணம். முருகேச பண்டிதர் (?-1899) இவர் ஊர் யாழ்ப்பாணத்துச் சுன்னாகம். சிவசம்புப் புலவரிடத் திலும், சங்கர பண்டிதரிடத்திலும் தமிழ் பயின்றார். யாழ்ப்பாணம், சிதம்பரம், கும்பகோணம், சென்னை, திருப்பாற்றூர் முதலிய ஊர்களில் தமிழாசிரியராக இருந்தார். இலக்கணம் நன்கு பயின்றவராதலால் இவரை “இலக்கணக் கொட்டன்” என்று கூறுவர். மயிலணிச்சிலேடை வெண்பா, ஊஞ்சல், பதிகம், சந்திரசேகர விநாயகர், ஊஞ்சல், குடந்தை வெண்பா நீதிநூறு, பதார்த்த தீபிகை என்னும் நூல்களை இயற்றினார். பல தனிக் கவிகளைப் பாடியுள்ளார். பொன்னம்பல சுவாமிகள் (1832-1904) இவரது தந்தையார் ஊர் இராமநாதபுரத்து அநுமந்த குடி. இவர் விஜயநகரத்தில் பிறந்தவர். பதினாறாவது வயதில் சிதம்பரம் சென்று கோவிலில் திருத்தொண்டு செய்துவந்தார். அக் காலத்தில் பெத்தாச்சி சுவாமிகள் என்னும் துறவியிடம் துறவு பெற்றார். பிறகு. கோவலூருக் குச் சென்று முத்துராமலிங்க சுவாமிகளின் மரணவராகிய சிதம்பர சுவாமிகளிடம் வேதாந்த நூல்களைக் கற்றுத் தேர்ந்தார். தம் ஆசிரியரின் கட்டளைப்படி காசிக்குச் சென்று இந்தி மொழியையும் வடமொழியையும் கற்றுத் தேர்ந்தார். மீண்டும் கோவலூருக்கு வந்து ஆசிரியருடன் தங்கியிருந்தார். ஆசிரியர் காலமான பிறகு சிதம்பரம் சென்று அங்குக் கோவலூர் சிதம்பர மடம் என்னும் மடத்தை நிறுவி அதில் வசித்து வந்தார். இவர், பொன்னம்பல சுவாமிகள் இயற்றிய நூல்களை அச்சிட்டார். சில நூல்களுக்கு உரை எழுதியிருக்கிறார். கிருஷ்ணமி சிரர் இயற்றிய பிரபோத சந்திரோதயம் என்றும் மெய்ஞ்ஞான விளக்கம் என்றும் பெயருள்ள நூலை 1889-இல் அச்சிட்டார். பஞ்சதசி, பாடுதுறை முதலிய நூல்களையும் அச்சிற் பதிப்பித்தார். விசார சாகரம் என்னும் நூலை இந்தி மொழியிலிருந்து தமிழில் வசனமாக மொழி பெயர்த்தார். கைவல்லிய நவநீதம் என்னும் நூலுக்குத் தத்துவார்த்த தீபம் என்னும் உரை எழுதி 1898-இல் அச்சிற் பதிப்பித்தார். வேதாந்த சூடாமணி பகவத்கீதை என்னும் நூல்களுக்கு உரை எழுதினார். நெல்லையப்ப பிள்ளை (1832-1905) இவர் ஊர் திருநெல்வேலி. நெல்லையப்பக் கவிராயர், மு. ரா. அருணாசலக் கவிராயர், மு.ரா. கந்தசாமிக் கவிராயர், கல்போத்து பிச்சுவையர், மேலகரம் சுப்பிரமணியக் கவிராயர், திருச்செந்தூர்க் குஞ்சி ஐய பாரதி, விக்கிரம சிங்கபுரம் அனந்தகிருட்டிண கவிராயர் முதலியவர்களிடம் இவர் கல்வி பயின்றார். இவர் இயற்றிய நூல்கள்: சந்திவிநாயகர் பதிகம், சுப்பிரமணியர் தோத்திரம், சுப்ரிமணியர் பதிகம், பழனியாண்டவர் தோத்திரம், சோமசுந்தரேசர் பதிகம், சுதர்ம சார சங்கிரகம் வசன நூல்), கால்நடை மருத்துவ நூல் (வசனம்). தொழுவூர் வேலாயுத முதலியார் (1832-1889) தொண்டை நாட்டுத் தொழுவூர் இவருடைய ஊர். பிற்காலத்தில் சென்னையில் வசித்தார். சிதம்பரம் இராமலிங்க சுவாமிகளின் மாணவராயமர்ந்து அவரிடம் தமிழ் மொழியை நன்கு கற்றார். இவர் காலத்தில் நிகழ்ந்த அருட்பா மருட்பாக் கட்சிகளில், மருட்பாக் கட்சியார் எழுதி வெளியிட்ட, ‘போலியருட்பா மறுப்பு’ என்னும் நூலுக்கு மறுப்பாக வேலாயுத முதலியார், ‘போலியருட்பா மறுப் பென்னும் குதர்க்காரண்ய நாகமசாபரசு’ என்னும் நூலை எழுதி வெளியிட்டார். இராமலிங்க சுவாமிகள் மறைந்த பிறகு, சென்னை இராச தானிக் கல்லூரியில் வேலாயுத முதலியார் தமிழாசிரியராக அமர்ந்தார். இவர் வடமொழியிலும் வல்லவர். இவர் இயற்றிய வசன நூல்கள்: பராசரஸ் மிருதி (ஆசார காண்டம்), சங்கர விஜய வசனம், மார்க் கண்டேய புராண வசனம், பெரிய புராண வசனம், வேளாண் மரபியல், திருவெண்காட்டடிகள் வரலாறு, யோகவித்தை, விநாயக சதுர்த்தி விரதம், போசராசன் சரிதம், மகாவீர சரித்திரம். செய்யுள் நூல்கள்: திருப்பாதப்புகழ்ச்சிமாலை, திருப்பதத் திருப்புகழ்மாலை, திருக்கழற் பல்லாண்டுமாலை, சித்திர யமகவந்தாதி, திருத்தணிகைச் சித்திரமாலை, திருத்தணிகைப் பதிற்றுப்பத்தந்தாதி, திருத்தணிகை வெண்பாவந்தாதி, திருத்தணிகை நான்மணிமாலை, திருத்தணிகை மும்மணிக்கோவை, திருத்தணிகை இரட்டை மணிமாலை, திருத்தணிகைக் கலம்பகம், திருப்போரூர்க் கலி விண்ணப்பம், திருப்பதி யழகாயிரத்தந்தாதி, அடைக்கல மாலை, அபயமாலை, சந்நிதி முறையீட்டுமாலை, மகிழ்மாக் கலம்பகம், வடிவுடையம்மன் சவுந்தரியாட்டகம், தசகமாலை, சீவஞான பாலைய தேசிகர் மும்மணிக்கோவை, நெஞ்ச ராற்றுப்படை, தாதகுருநாதர் கலிமாலை, திருவருட்பிரகாசர் சந்நிதிமுறை முதலியன. குலாம் காதிறு நாவலர் (1833-1908) இவர் நாகூரில் பிறந்தவர். நாகை நாராயணசாமி பிள்ளை, மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை முதலியவர்களிடத்தில் தமிழ் பயின்றார். பினாங்கு சென்று அங்கு, ‘வித்தியா விசாரிணி’ பத்திரிகையை நடத்தினார். நபிநாயகத்தின் மீது மும்மணிக் கோவையும், நாகூர் ஆண்டகைமீது நாகூர்க் கலம்பகமும் இயற்றினார். ஆரிபு நாயகம், நாகூர்ப்புராணம், பதாயிகுக் கலம்பகம், கன்ஜுல் கறாமாத்து என்னும் நூல்களையும் இயற்றினார். மற்றும், திருமக்காத் திருவந்தாதி, மதினாக் கலம்பகம், பஹனஷா வசனகாவியம், சமுத்திர மாலை, உமறு பாஷாவின் யுத்த சரித்திரம், சீறாப்புராண வசனம், அரபுத்தமிழ் அகராதி, புலவர் ஆற்றுப்படை என்னும் நூல்களையும் இயற்றினார். மாம்பழக் கவிச்சிங்க நாவலர் (1836-1886) பழனியில் பிறந்தவர் இவர். இவருடைய குடிக்குமாம்பழக் குடி என்பது பெயர். அப்பெயரே இவர் பெயராக அமைந்துவிட்டது. இளமையில் இவருடைய தந்தையாராகிய முத்தைய ஆசாரியாரிடத்திலும் பிறகு. மாரிமுத்துக் கவிராயரிடத்திலும் கல்வி பயின்றார். வடமொழியும் அறிந்தவர். இளமையிலேயே பெரியம்மை நோயினால் கண்பார்வை இழந்தார். பாப்பம்பட்டி வேங்கடசாமி நாயக்கர் என்னும் செல்வரின் மேல் வேட்டைப் புகழ்ச்சி, புலப் பவனி, குறவஞ்சி, கீர்த்தனை முதலிய பிரபந்த நூல்களை இயற்றி அவரிடம் பரிசு பெற்றார். இராமநாதபுர அரண்மனைப் புலவராக இருந்தார். இராமநாதபுரம் பொன்னுச் சாமித் தேவராலும், முத்துராமலிங்க சேதுபதியாலும் ஆதரிக்கப்பட்டவர். பொன்னுச்சாமித் தேவரால் ‘கவிச் சிங்கம்’ என்னும் சிறப்புப் பெயர் சூட்டப்பட்டார். இவர் இயற்றிய நூல்கள்: விநாயக மூர்த்தி பதிகம், பழநிப் பதிகம், குமரகுருபர பதிகம், சிவகிரிப் பதிகம், திருச்செந்திற்பதிகம், பழநி நான்மணிமாலை, திருப்பழநி வெண்பா, பழநி வெண்பா அந்தாதி, பழனபுரிமாலை, குமரனந்தாதி, சிவகிரி யமக வந்தாதி, பழநிக் கோயில் விண்ணப்பம், தயாநிதிக் கண்ணி முதலியன. இவர் இயற்றிய நூல்கள் ‘மாம்பழக் கவிச்சிங்க நாவலர் பிரபந்தத் திரட்டு’ என்னும் பெயருடன் அச்சிடப் பட்டுள்ளன. முத்துச்சாமிக் கவிராயர் (1834-1899) திருநெல்வேலி சங்கர நயினார் கோவிலைச் சேர்ந்த நகரம் என்னும் ஊரில் பிறந்தவர். இசைக் கலையில் வல்லவர். இவர் இயற்றிய நூல்கள்: போடி நாயக்கனூர் பெருநிலைக்கிழார்மீது அன்னம் விடுதூது, ஆத்திப்பட்டிச் சங்கிலி வீரப்ப பாண்டிய வன்னியனார்மீது பள்ளு, புரவிபாளையம் பெருநிலக்கீழார்மீது விசயக்கும்மி, கருங்காலக் குடி காதல், குறவஞ்சி, கும்மிப்பதம், இசைப்பாடல்கள் முதலியன. அரங்கநாத முதலியார் (1837-1893) ராய்பகதூர், பூண்டி அரங்கநாத முதலியார் என்பது இவர் பெயர். சென்னை மாகாணக் கல்லூரியில் கணிதப் பேராசிரியராக இருந்தவர். கணிதத்துடன் தமிழிலும் ஆங்கிலத்திலும் வல்லவர். கம்ப இராமா யணத்தையும் திருவிளையாடற் புராணத்தையும் மனப்படாமாக ஒப்பிப்பார். 1880-இல் அரசாங்க மொழிபெயர்ப்பாளராக நியமிக்கப் பட்டார். 1892-இல் சென்னை நகர ஷெரீப்பாக நியமிக்கப் பட்டார். கச்சிக் கலம்பகம் என்னும் செய்யுள் நூலை இயற்றி 1889-இல் சென்னைத் தொண்டை மண்டலம் துளுவ வேளாளர் பாடசாலையில் அரங்கேற்றினார். டாக்டர் உ.வே. சாமிநாதையர் அவர்களுக்கு இவர் பலவகையில் உதவி செய்தார். இவருடைய உருவச்சிலை சென்னை மாகாணக் கல்லூரியில் இருக்கிறது. சபாபதி முதலியார் (1837-1898) மகாவித்துவான் சு. சபாபதி முதலியார் என்பது இவர் பெயர். இவர் ஊர் மதுரை. தமிழ் வடமொழி, ஆங்கிலம் என்னும் மும்மொழி களைக் கற்றவர். கணித நூல் வல்லவர். மதுரைக் கலாசாலையில் தமிழ் ஆசிரியராக இருந்து 1880-ஆம் ஆண்டு ஓய்வுபெற்றார். பரிதிமாற் கலைஞன் என்னும் வி. கோ. சூரிய நாராயண சாஸ்திரியார் இவரிடம் கல்வி பயின்ற மாணவர்களில் ஒருவர். இவர் இயற்றிய நூல்கள்: திருப்பரங்கிரிக் குமரன் அந்தாதி, திருக்குளத்தை வடிவேலன் பிள்ளைத் தமிழ், மதுரைமாலை முதலியன. குளந்தை என்பது மதுரையைச் சேர்ந்த பெரிய குளம். இவ்வூரார் வேண்டு கோளின்படி குளந்தை வடிவேலன் பிள்ளைத் தமிழை 1863-இல் இயற்றினார். இந்நூல் 1896-இல் அச்சிடப்பட்டது. இவர் காலஞ்சென்றபோது இவருடைய மாணாக்கராகிய பரிதிமாற்கலைஞன் அவர்கள் கூறிய இரங்கற்பாக்கள் இவை: சரபம், சரபகவி வித்துவான் என்னும் சிறப்புப் பெயர்களை யுடையவர். இவர் இயற்றிய நூல்கள்: தில்லைத் திருவாயிரம், திருவரங்கத் திருவாயிரம், ஏழாயிரப் பிரபந்தம், நான்கு நூல், திருமகளந்தாதி, ஏகபாதத்திகழகலந்தாதி, தெய்வத்திருவாயிரம், பழநித்திருவாயிரம், அருணகிரி நாதர் புராணம், பதிகச் சதகம், சதகப் பதிகம், திருச் செந்தூர்த் திருப்புகழ், திருச்செந்தூர்க் கோவை திருவாமாத்தூர்த் தலபுராணம். திருஞானசம்பந்த உபாத்தியாயர் (1839-1906) யாழ்ப்பாணத்துச் சுழிபுரம் இவரூர். ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலரின் மாணவர். இவர் இயற்றிய நூல்கள்: மாணிக்கப் பிள்ளைhயர் திருவருட்பா, கதிர்காம வேலர் திருவருட்பா சில தனிச் செய்யுட்கள். கணபதி பிள்ளை (?-1895) யாழ்ப்பாணத்துப் புலோலி இவர் ஊர். அ. சிவசம்புப் புலவரிடம் தமிழ் பயின்றார். வடமொழியும் ஆங்கிலமும் அறிந்தவர். காஞ்சிபுரம் பச்சையப்பன் கலாசாலை, திருவனந்தபுரம் மகாராஜா கல்லூரி ஆகிய இடங்களில் ஆசிரியராக இருந்தார். சென்னைத் திராவிட வர்த்தனி சங்கத்தின் பண்டிதராக இருந்தார். இவர் இயற்றிய நூல்கள்: வேதாரணியேசுவரர் ஊஞ்சற் பதிகம். வில்ஹணீயம் என்னும் நூலை வடமொழியிலிருந்து மொழி பெயர்த்தார். இரகுவமிசசுருக்கம். இந்திரசேனை நாடகம் என்னும் நூல்களை எழுதினார். வடமொழி நூலாகிய மான்மி யத்திலிருந்து வாரபுரேசர் (மாணிக்க வாசகர்) கதையை மொழி பெயர்த்தார். இரகுவமிசம் மொழிபெயர்ப்பு, மார்க்கண்டேய புராணம், தருக்க சாஸ்திர வினாவிடை, பதப்பிரயோக விவரணம் என்னும் நூல்களையும் எழுதினார். இவை அச்சிடப்படவில்லை. வயித்தியலிங்கம் பிள்ளை (1842-1900) யாழ்ப்பாணத்து வல்வெட்டித்துறை என்னும் ஊரில் பிறந்தவர். உடுப்பிட்டி சிவசம்புப் புலவரிடத்தில் தமிழ் பயின்றார். தருக்கம், சோதிடம், வானநூல்களையும் கற்றவர். ‘சைவாபிமானி’ என்னும் பத்திரிகையை நடத்தினார். இவர் இயற்றிய நூல்கள்: சிந்தாமணி நிகண்டு, செல்வச் சந்நிதிமுறை, வல்வை வைத்தியேசர் பதிகம், சாதி நிர்ணய புராணம். கல்வளையந்தாதி. கந்தர் அலங்காரம் ஆகிய இந்நூல்களுக்கு உரை எழுதினார். கந்தபுராணத்தில் தெய்வயானை திருமணப்படலம், வள்ளியம்மை திருமணப்படலம், அண்டகோசப்படலம் ஆகிய மூன்று படலங்களுக்கு உரை எழுதினார். சிவராத்திரி புராணத்தை 1881-ஆம் ஆண்டிலும், சூடாமணி நிகண்டை 1875-ஆம் ஆண்டிலும் அச்சிட்டார். சி.வை. தாமோதரம் பிள்ளையவர்கள் எழுதிய சைவ மகத்துவம்’ என்னும் நூலுக்கு மறுப்பாகக் கிறிஸ்தவராகிய அருளம்பல முதலியார் எழுதிய ‘சைவ மகத்துவ திக்காரம்’ என்னும் நூலுக்கு மறுப்பாக இவர், சைவ மகத்துவதிக்கார நிக்கிரகம்’ என்னும் நூலை எழுதினார். சாமுவேல் பவுல் ஐயர் (1844-1900) கிறிஸ்தவ சமயத்தவர். சில காலம் உபாத்தியாயராகவும் சில காலம் மதபோதகராகவும் இருந்தார். கிறிஸ்து மதச் சார்பாகத் துண்டுப் பிரசுரங்களையும் சிறு நூல்களையும் எழுதி அச்சிட்டார். 1874-ஆம் ஆண்டில் டீக்கன் பட்டம் பெற்றார். 1890-ஆம் ஆண்டு முதல் ‘நற்போதகம்’ என்னும் பத்திரிகையை நடத்தினார். ‘பரதேசியின் மோட்சப் பிரயாணம்’ என்னும் நூலை ஆங்கிலத்திலிருந்து மொழி பெயர்த்து 1882-ஆம் ஆண்டில் அச்சியற்றினார். சபாபதி நாவலர் (1844-1903) யாழ்ப்பாணத்துக் கோப்பாய் இவ்ரூர். வடகோவை ஜகநாதையர் நீர்வேலி சங்கர பண்டிதர், ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர். வித்துவ சிரோமணி பொன்னம்பலப் பிள்ளை முதலியவர்களிடம் கல்வி பயின்றார். ஆங்கிலமும் கற்றவர். சென்னபட்டினத்தில் நீண்ட காலம் வசித்திருந்தார். திருவாவடுதுறை ஆதீனத்தில் நாவலர் பட்டமும், மதுரைத் திருஞான சம்பந்தர் ஆதீனத்தில் மகாவித்துவான் பட்டமும் பெற்றவர். பாஸ்கர சேதுபதி மன்னரால் நன்கு மதிக்கப்பட்டவர். சென்னையில் சித்தாந்த வித்தியானுபாலன யந்திரசாலை என்னும் அச்சியந்திர சாலையை நிறுவி, ‘ஞானாமிர்தம்’ என்னும் பத்திரிகையை நடத்தினார். சிதம்பரம் சைவப்பிரகாச வித்தியாசாலை அதிபரான ச. பொன்னம்பலம் பிள்ளை, சுவாமிநாத பண்டிதர், சிவப்பிரகாசப் பண்டிதர், சங்கர பண்டிதர், ராவ்பகதூர் சி.வை. தாமோதரம் பிள்ளை முதலியவர்களின் நண்பர். இவர் இயற்றிய நூல்கள்: சதுர்வேத தாத்பரிய சங்கிரம் (1876), பாரததாத்பரிய சங்கிரகம், இராமாயண தாத்பரிய சங்கிரகம் (1884), சிவகர்ணாமிர்தம் (1885) இவைகளை வடமொழியிலிருந்து தமிழில் மொழி பெயர்த்தெழுதினார். இயேசுமத சங்கற்ப நிராகரணம் (1879), சிதம்பர சபாநாத புராணம் (1885), இலக்கண விளக்கப் பதிப்புரை மறுப்பு (1894), சித்தாந்த மரபு கண்டன கண்டனம் (1898), திராவிடப்பிரகாசிகை (1899), திருச்சிற்றம் பலயமக அந்தாதி, திருவிடைமருதூர் பதிற்றுப் பத்தந்தாதி, மாவை யந்தாதி, நல்லைச் சிவசுப்பிரமணியக் கடவுள் பதிகம், வைதீக காவிய தூஷண மறுப்பு முதலிய நூல்களையும் இயற்றினார். அமிர்தம் பிள்ளை (1845-1899) முத்து வீரியம் என்னும் இலக்கண நூலை இயற்றிய உறையூர் முத்துவீரிய உபாத்தியாயரின் மாணவர் இவர். தமிழ்க் கவிஞர். ஆங்கிலம், கன்னடம், தெலுங்கு, வடமொழி, இந்துஸ்தானி ஆகிய மொழிகளைக் கற்றுப் பன்மொழிப் புலவராக விளங்கினார். சேலம் அரசினர் கல்லூரியில் நெடுங்காலம் தமிழாசிரியராக இருந்தார். 1886-இல் திருச்சிராப்பள்ளி எஸ். பி. ஜி. கல்லூரியில் தமிழாசிரியராக அமர்ந்தார். “தமிழ்ச் செல்வம்” என்னும் பத்திரிகையை 1888-முதல் 1892 வரையில் நடத்தினார். இவர் இயற்றிய நூல்கள்: யாப்பிலக்கண வினாவிடை, தமிழ்விடுதூது. பெண்மை நெறிவிளக்கம், இது 200 வெண்பாக்களால் ஆனது. ஆதிவயலூர் வெண்பாவந்தாதி முதலிய நூல்களை இயற்றிய சுந்தரநாதம் பிள்ளை இவருடைய மகனார். சோமசுந்தர நாயகர் (1846-?) சென்னையில் சூளை என்னும் இடத்தில் இருந்தார். அச்சுதாநந்த சுவாமியிடம் தமிழ், வடமொழிகளைப் பயின்றார். ஆங்கிலம், தெலுங்கு மொழிகளையும் பயின்றவர். மாயாவாதியாக இருந்த தமது குருவான அச்சுதானந்த சுவாமியைச் சைவ சித்தாந்தி யாக்கினார். முத்து வீரியம் என்னும் இலக்கணநூலை இயற்றிய முத்து வீரிய உபாத்தியாயரிடத்திலும் இலக்கணம் இலக்கியம் கற்றார். “நாகை நீலலோசனி”, “திருச்செங்கோடு விவேகதிவாகரன்” பத்திரிகைகளில் கட்டுரைகள் எழுதினார். சைவ சிந்தாந்த விரிவுரைகள் நிகழ்த்தினார். சேதுபதி மன்னர் இவருக்கு “வைதிக சைவசித்தாந்த சண்ட மாருதம்” என்னும் பெயரைச் சூட்டினார். இவர் இயற்றிய நூல்கள்: அசம் பிரதிய நிரசனம், அஞ்ஞான திமிரபாஸ்கரம், அர்ச்சா தீபம், ஆசாரியப் பிரபாவம், ஆஞ்சநேய ராம வைபவ பங்கம், ஆதி சைவப் பிரபாவம், ஆபாச ஞான நிரோதம், இராம தத்தவ தீபிகையினது ஆபாச விளக்கம், இராமநுஜ மத சபேடிகை, உத்தமவாத தூலவாதூலம், கங்காதரணப் பிரக்யரம், கீதார்த்த தீபிகாபாச நிரசனம், குதர்க்கவாத விபஞ்சினி, கூரேசவிஜய பங்கம், சமரச ஞான தீபம், சன்மார்க்க போத வெண்பா, சித்தாந்த சேகரம், சித்தாந்த பூஷணம், சிவகிரி பதிற்றுப் பத்தாந்தாதி, சிவதத்துவ சிந்தாமணி, சிவநாமாவளி, (இரண்டு பாகங்கள்), சைவ சூளாமணி, ஞான சதுஷ்டய தர்ப்பணம், ஞான சம்பந்தர் பரத்வ நிரூபணம், ஞான பேதத் துணிவு, ஞானபேதத் தெளிவு, ஞானபேத விளக்கம், ஞானபேத விளக்க நியாயாரத ரக்ஷாமணி, பாரத தத்துவப் பிரகாசிகை, பாரதாத்பரிய சங்கிரகம், பிரஹ்மதத்துவ நிரூபணம், பிரமாநுபூதி, மூர்க்கவாத விபஞ்சிநி, மெய்கண்ட சிவ தூஷணநிக்ரகம், வேதபாஹ்ய சமாஜ கண்டனம் முதலியன. சுப்பிரமணிய பிள்ளை (1846-1909) இவரூர் செங்கற்பட்டு. அரசாங்க அலுவலில் இருந்தவர். திருப்புகழ் ஏடுகளைத் தேடி மூன்று பகுதியகளாக அச்சிட்டார். பிரமோத்தர காண்டத்தை வசன நடையில் எழுதி 1879-இல் அச்சிற் பதிப்பித்தார். திருத்தருப்பூண்டி, மானாமதுரை, திருநீடூர் என்னும் ஊர்களின் தல புராணங்களை வசனமாக எழுதி வெளியிட்டார். சிவஸ்தல மஞ்சரி என்னும் நூலை எழுதினார். கணேச பண்டிதர் (1849-1901) யாழ்ப்பாணத்து வண்ணார் பண்ணை இவருடைய ஊர். வடமொழி தென்மொழி இரண்டையும் கற்றவர். திருவண்ணாமலை ஆதீனத்து வித்துவான். பாண்டிநாட்டு இளையான் குடியில் இருந்தபோது அவ்வூர் வணிகர் விரும்பியபடி அவ்வூர்த் தல புராணத்தை ‘இளைசைப் புராணம்” என்னும் பெயருடன் விருத்தயாப்பில் பாடினார். திருஞானசம்பந்தப் பிள்ளை (1849-1911) யாழ்ப்பாணத்து நல்லூர் இவருடைய ஊர், ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர், பொன்னம்பலம் பிள்ளை இவர்களிடத்தில் கல்வி பயின்றார். தர்க்க குடார தாலுதாரி என்னும் சிறப்புப் பெயர் உடையவர். பிற்காலத்தில் கும்பகோணத்திலும் சிதம்பரத்திலும் வசித்தார். இவர் இயற்றிய நூல்கள்: அரிகர தார தம்மியம். வேதாகம வாத தீபிகை நாராயண பரத்துவ நிரசனம், தர்க்காமிர்தம் (மொழி பெயர்ப்பு.) அச்சுதாநந்த சுவாமி (1850-1902) வட ஆர்க்காடு மாவட்டம் போளுரில் பிறந்தவர். இவருடைய பழைய பெயர் அப்பாய் நாயுடு என்பது. கணக்காயராகத் தொழில் செய்தவர். வேலூரிலிருந்த வேங்கடகிருஷ்ண தாசர் என்னும் பெரியவரிடம் தொண்டராக இருந்தார். அவரால் அச்சுத தாசர் என்று பெயர் சூட்டப்பட்டார். பிறகு கடாமூர் நிசாநந்தர் என்னும் பெரியாரிடம் சீடரானார். அவரால் அச்சுதாநந்தர் என்று பெயரிடப்பட்டார். நிசாநந்தர்மீது இவர் “நிசாநந்தர் பதிகம்” பாடினார். இவர் இயற்றிய நூல்கள்: பிரகலாத சரித்திரம், துருவ சரித்திரம், சக்குபாய் சரித்திரம், தோத்திர இசைப்பாடல்கள், சன்மார்க்க தர்ப்பணம், அத்வைத கீர்த்தனாநந்தலகரி. பிச்சுவையர் (1850-1910) சேதுநாட்டு வேம்பத்தூரில் பிறந்தவர். சிலேடைச் செய்யுள் பாடுவதில் வல்லவர். பாற்கர சேதுபதி, சிவகெங்கை முத்து வடுகநாத துரை, ஊற்றுமலை இருதாலய மருதப்பதேவர், முறையூர் பழ. சி. சண்முகம் செட்டியார் முதலியவர்களால் ஆதரிக்கப் பெற்றவர். இவர் இயற்றிய நூல்கள்: முத்து வடுகநாத துரைமீது காதல் பிரபந்தம், திருப்பரங்குன்றம் முருகன் ஆநந்தக் களிப்பு, பனங்குடிப்பெரிய நாயகிஅம்மை பதிகம், சங்கராசாரியார் பதிகம். பொன்மாரிச் சிலேடை வெண்பா, மதுரை நிரோட்டக யமக வந்தாதி, குன்றக்குடி சண்முகநாதர் உலா. மு. ரா. அருணாசலக் கவிராயர் (1852-1939) இவர், இராமலிங்கக் கவிராயரின் மகனார். பாண்டி நாட்டுச் சேற்றூருக்கு அருகில் உள்ள முகவூரில் பிறந்தவர். சுப்பிரமணியக் கவிராயர், கந்தசாமிக் கவிராயர் என்பவர்களின் சகோதரர். திருவாவடுதுறை ஆதீனத்தில் சின்னபட்டத்தில் இருந்த நமசிவாய தேசிகரிடம் கல்வி பயின்றார். திருநெல்வேலி கவிராய நெல்லையப்பபிள்ளை, அழகிய சொக்கநாதபிள்ளை, சென்னிகுளம் அண்ணாமலை ரெட்டியார், குன்னூர்க் குமாரசாமிமுதலியார், சோழவந்தான் அரசன் சண்முகனார். வெள்ளக்கால் ப. சுப்பிரமணிய முதலியார் ஆகிய புலவர்கள் இவரு டைய நண்பர்கள். திருப்பரங்கிரிப் புராண வசனத்தை எழுதி 1899-இல் அச்சிட்டார். திருப்பரங்கிரிப் பிள்ளைத் தமிழையும் அதே ஆண்டில் அச்சிட்டார். திருச்செந்தூர்த் தலபுராண வசனத்தை எழுதி அதே ஆண்டில் அச்சிட்டார். பகழிக் கூத்தர் இயற்றிய திருச்செந்தூர்ப் பிள்ளைத் தமிழையும் அச்சிட்டார். திருக்குற்றாலப் புராணத்தை உரைநடையில் எழுதினார். சிவகாசிப் புராணம், குறுக்குத் துறைச் சிலேடை வெண்பா, ஆறுமுகநாவலர் சரித்திரம் (செய்யுள்), சிவகாசிக் கலிவிருத்த அந்தாதி, சிவகாசி வெண்பா வந்தாதி, (மூலமும் உரையும்) இயற்றினார். புதிய நூல்களை இயற்றியதோடு பழைய நூல்களை அச்சிற் பதிப்பித்தார். இராமசுவாமி ராசு (1852-1897) இவர் ஊர் திண்டிவனம். சென்னையில் கல்வி கற்றார். தமிழ் தெலுங்கு, வடமொழி, ஆங்கிலம் என்னும் நான்கு மொழிகளைக் கற்றவர். சில காலம் ஆங்கில ஆசிரியராகவும், சென்னைத் துறைமுகச் சுங்க அலுவலகத்திலும் வேலை செய்தார். பாரிஸ்டர் படிப்புக்காக 1882-இல் லண்டன்மா நகரஞ் சென்றார். 1885-இல் சென்னையில் பாரிஸ்டர் தொழில் நடத்தினார். 1877-இல் பிரதாப சந்திர விலாசம் என்னும் நாடகநூலை எழுதினார். தீயவர்களின் வஞ்சனைகளுக்கு ஆளாகி நெறி தவறி யொழுகும் இளைஞர்களுக்கு நல்லறிவு புகட்டு வதற்காக இந்நூல் இயற்றப்பட்டது. ஆங்கிலமும் தமிழும் கலந்து பேசுவது போல இந்நூலில் சில செய்யுட்களை அமைத்திருக்கிறார். அவை இவை: மைடியர் பிரதரே எங்கள் மதருக்குக் கூந்தல் நீளம் ஐடிலா யவளுந் தூங்க அறுத்ததை விற்று நானும் ஸைடிலோர் லேடியாகச் சட்காவில் ஏறிக்கொண்டே ஒய்டான ரோட்டின்மீதில் உல்லாச மாகப் போனேன்” (மைடியர் பிரதர் - My dear brother. மதர் - Mother. ஐடில் - Idle. ஸைடில்- Side. லேடி- Lady. ஒய்டான - Wide. ரோட் - Road.) “ஆரடா, எசமான்வீட்டின் அண்டையில் இடைவி டாமல் கார்டுசெய் சிப்பாய் வாடா: கடுகியே சென்று உந்தன் லார்டான பிரதாப சந்திர லட்சுமி புத்திரற்கிக் கார்டையுங் கொடுத்து நீதான் கவனமாய்ப் பதில் சொல்வாயே” (கார்டு- Guard. லார்டு - Lord. கார்டு - Card.) சேலம் இராமசாமி முதலியார் (1852-1892) இவர் ஊர் சேலம். பெருநிலக் கிழாராக இருந்த சேலம் கோபாலசாமி முதலியார் என்பவர் நாமக்கல்லில் தாசில்தாராக இருந்தார். அவருடைய மகன் சேலம் இராமசாமி முதலியார். இராமசுவாமி முதலியார் தமது ஆறாவது வயதில் கல்வி கற்பதற்காகச் சென்னைக்கு அனுப்பப்பட்டார். மகாவித்துவான் காஞ்சிபுரம் சபாபதி முதலியாரின் மகனார் நாகலிங்க முதலியார் இல்லத்தில் தங்கிப் படித்தார். கதிர்வேல் உபாத்தியாயர் என்பவரிடம் இளமையில் கல்வி பயின்றார். கதிர்வேல் உபாத்தியாயர் சிறந்த வித்துவான். அன்றியும் நகைச்சுவையுடன் பேசுவதில் பேர் படைத்தவர். சேலம் இராமசுவாமி, இளமையிலேயே பல பண்டிதர்களுடன் பழகும் வாய்ப்புப் பெற்றதோடு பல தமிழ் இலக்கியங்களைப் பற்றி யறியும் வாய்ப்புப் பெற்றார். இப்போது பிரசிடென்ஸி காலேஜ் என்னும் பெயருடன் உள்ள கல்லூரி அக்காலத்தில் மதராஸ் ஹைஸ்கூல் என்று பெயர் பெற்றிருந் தது. இராமசாமி அந்த உயர்தரப் பாடசாலையில் சேர்ந்து கல்வி பயின்றார். அந்தப் பாடசாலையில் கீழ்வகுப்புகள் எடுபட்ட பிறகு, பச்சையப்பன் உயர்தரப் பாடசாலையில் சேர்ந்து கல்வி பயின்றார். பிறகு, பிரஸிடென்ஸி காலேஜில் சேர்ந்து படித்தார். தமிழ் மொழியிலும் ஆங்கில மொழியிலும் சிறந்து விளங்கினார். இக்கல்லூரியில் படித்தபோது, பவர் ஐயர் என்பவர் அச்சிட்ட சீவகசிந்தாமணி நாமகள் இலம்பகம் பாடமாக வைக்கப்பட்டது. அப்போது சிந்தாமணி காவியத்தின் சிறப்பையும் ஏனைய சங்க நூல்களின் மேன்மையையும் அறிந்தார். பி.ஏ. பரீட்சையில் தேறிய பிறகு, சட்டப் பரீட்சையிலும் தேறினார். 1876-இல் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில், ஜில்லா முன்சீபாக அலுவல் செய்தார். 1882-இல் அவ்வலுவலை விட்டு, சென்னையில் வழக்கறிஞராக இருந்தார். “லா ஜர்னல்” என்னும் பத்திரிகையை நடத்தினார். தமிழ் மொழியில் புலமை பெற்றிருந்த படியால், சென்னைப் பல்கலைக் கழகத்தார் இவரைப் பி.ஏ. தமிழ்ப் பரீட்சை சோதகராக நியமித்தனர். 1885-இல் இங்கிலாந்தில் நடந்த தேர்தலில், ஆங்கில வாக்காளர்களுக்கு இந்திய விஷயங்களைப் பற்றிப் பேசித் தெரிவிக்க இந்தியாவிலிருந்து மூன்றுபேர் இங்கிலாந்துக்கு அனுப்பப்பட்டனர். அவர்களில் ஒருவராகச் சேலம் இராமசாமி முதலியார் சென்று வந்தார். 1888-இல் அலகாபாத்தில் நடந்த காங்கிரஸ் மகாநாட்டுக்குத் தலைமை தாங்கும்படி கேட்டார்கள். இவர் மறுத்து விட்டார். சேலம் இராமசாமி முதலியார் ஜில்லா முன்சீப் அலுவல் செய்தபோது, 1880-ஆம் ஆண்டு கும்கோணத்துக்கு மாற்றப்பட்டார். முதலியார் அவர்களின் தமிழ்ப் புலமையைக் கேள்விப்பட்டிருந்த உ.வே. சாமிநாதையர். இவர் வீட்டுக்குச் சென்று இவரைக் கண்டார். ஐயர் இவரைக் கண்டது நன்மையாக முடிந்தது. அக்காலத்தில் ஐயர் அவர்களுக்குச் சிறு பிரபந்த நூல்களைப்பற்றித் தெரியுமே தவிர சங்க நூல்களைப் பற்றியும் பெருங்காப்பியங்களைப் பற்றியும் தெரியாது. முதலியாரைச் சந்தித்த ஐயர் முதன் முதலாக அவரிடமிருந்து சங்க நூல்களைப் பற்றி அறிந்து சொண்டார். முதலியார் சங்க நூல்களைப் பற்றி ஐயரவர்களுக்குத் தெரிவித்தது அல்லாமல் தம்மிடமிருந்த சிந்தாமணி, மணிமேகலை காவியங்களின் ஏட்டுச் சுவடிகளையும் கொடுத்துப் படிக்கச் செய்தார். அல்லாமலும், சங்கநூல்களை ஆராயும் படியும் தூண்டினார், இவ்வாறு டாக்டர் உ.வே. சாமிநாதையரவர்களைச் சங்கநூல்களை அச்சிடும்படித் தூண்டியவர் இராமசாமி முதலியார் அவர்களே. இதுபற்றி ஐயர் அவர்கள் தாம் இயற்றிய “சங்கத்தமிழும் பிற்காலத் தமிழும்” என்னும் நூலிலே இவ்வாறு எழுதுகிறார். “1880-ஆம் வருஷத்திற் கும்பகோணத்தில் டிஸ்ட்டிரிக்ட் முன்சீபாக இருந்தவரும் கல்வி யறிவொழுக்கங்களாற் சிறந்தவருமான சேலம் ஸ்ரீமான் இராமசாமி முதலியாரவர்கள், கம்பராமாயணம் முதலிய பிற்காலத்து நூல்களைப் படித்து ஆராய்ச்சி செய்து இன்புறுவதைக் காட்டிலும் வழங்காமலே இருக்கும் சீவக சிந்தாமணி முதலிய காப்பியங்களையும் சங்க நூல்களையும் படித்து ஆராய்ச்சி செய்தலும் கூடுமானால் அவற்றை அச்சிற் பதிப்பித்து வெளிப்படுத்தலும் உத்தமமென்று கூறித் தம்பாலிருந்த சீவக சிந்தாமணி முதலியவற்றின் கையெழுத்துப் பிரதிகளைக் கொடுத்து அடிக்கடி ஊக்கமளித்து வந்தார்கள். அவர்களையும், தம்முடைய மரண பரியந்தம் அவர் களைப் போலவே என்னை ஆதரித்து பாராட்டி ஊக்கமளித்து வந்த ஸ்ரீமான் பூண்டி அரங்கநாத முதலியாரவர்களையும் என்னுடைய உள்ளம் ஒரு போதும் மறவாதென்பதை இங்கே தெரிவியாமலிருக்க முடியவில்லை.” மேலும், ஐயர் அவர்கள் “என் சரித்திரம்” என்னும் தமது வரலாற்றில் சேலம் இராமசுவாமி முதலியாரவர்களைப் பற்றி இவ்வாறு எழுதுகிறார். “1892-ஆம் வருஷம் மார்ச்சு மாதம் இரண்டாம் தேதி அவர் (சேலம் இராமசுவாமி முதலியார்) உலக வாழ்வை நீத்தார். அந்தத் துக்கச் செய்தியைக் கேட்டுத் துடித்துப் போனேன். அவருடைய பழக்கம் எனக்கு ஏற்பட்டதையும் அதனால் பழந்தமிழ் நூலாராய்ச்சியிலே நான் புகும்படி நேர்ந்ததையும் எண்ணிப் பார்த்தேன். அவருடைய தூண்டுதல் இல்லாவிட்டால் சிந்தாமணியை நான் அச்சிடுவது எங்கே? சங்க நூல்களின் பெருமையை உணர்ந்து இன்புற்று வெளிப்படுத்தும் முயற்சிக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்?” 1892-ஆம் ஆண்டிலே தமது நாற்பதாவது வயதிலே சேலம் இராமசாமி முதலியாரவர்கள் காலமானார். அவர் மீது டாக்டர் சாமிநாதையர் கூறிய இரங்கற்பா இவை: “என்புடையா ரன்புடைய இராமசா மிக்குரிசில் உன்புடையார் நயசுகுணம் ஒவ்வொன்றை யுன்னி யுன்னி அன்புடையார் பல்லோரும் ஆற்றும்வழி காணாசாய்த் துன்புடையா ராகிமனஞ் சோர்ந்திரடவெங்க கன்றனையே! இன்தேனும் பாலுமெனும் இன்சொலுடை யாய்வைரக் குன்றேனும் ஒவ்வாக் குணனுடையாய் குன்றத்துள் ஒன்றேனும் உனையணுக ஒண்ணாதோ சார்ந்திருப்பின் என்றேனும் நிற்பிரிதல் எம்மை வருத்திடுமோ. ஆர்க்குழைப்பான் போனானென் றுலைவாரும் போனாளில் ஆர்க்குழைப்பா னென்று பதைப்பாருந் தமிழெனுமுந் நீர்க்குழைப்பா னென்று நிற்பாரு மாய்க்கலங்க ஆர்க்குழைப்பான் சென்றாய் அறிவுடைய அண்ணலே. அம்பிகை பாகர் (1854-1904) யாழ்ப்பாணத்து இணுவில் இவருடைய ஊர். இணுவில் நடராசையரிடத்திலும் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலரிடத்திலும் கல்வி பயின்றார். சி.வை. தாமோதரம் பிள்ளை அவர்களின் நெருங்கிய நண்பர். இணுவையந்தாதி என்னும் நூலை இயற்றினார். சூளாமணி வசனம் எழுதினார். தணிகைப் புராணத்திற்கு நகரப் படலம் வரையில் உரை எழுதினார். குமாரசுவாமிப் புலவர் (1854-1922) யாழ்ப்பாணத்துச் சுன்னாகம் இவர் ஊர். சுன்னாகம் முருகேச பண்டிதரிடம் கல்வி பயின்றார். வடமொழியும் பயின்றார். இராவ்பகதூர் சி.வை. தாமோதரம் பிள்ளையவர்கள் யாழ்ப்பாணத்து ஏழாலை என்னும் ஊரில் நிறுவிய சைவப் பிரகாச வித்தியா சாலையில் தமிழ்ப்புலவராக 1876 முதல் 1899 வரையில் இருந்தார். 1902-ஆம் ஆண்டு முதல், வண்ணார் பண்ணை சைவப்பிரகாச வித்தியாசாலை யின் தலைமைத் தமிழ்ப் புலவராக இருந்தார். இவர் இயற்றிய நூல்கள்: சாணக்கிய நீதிவெண்பா, மேக தூதக் காரிகை, இராமோதந்தம், சிசுபால வதம் (வசனம்). இவை வடமொழியி லிருந்து மொழி பெயர்க்கப் பட்டவை. கீழ்க்கண்ட நூல்களுக்கு உரை எழுதினார்: திருக்காசைப் புராணப் பொழிப்புரை, (1890), யாப்பருங்கலக் காரிகைப் புத்துரை (1899), திருவாதவூரார் புராண உரை, அகப்பொருள் விளக்கப் புத்துரை, கம்ப ராமாயண பாலகாண்டம் அரும்பதவுரை, நீதிநெறி விளக்கவுரை தண்டியலங்கார உரை. இவர் இயற்றிய வேறு நூல்கள்: இலக்கியச் சொல் அகராதி, தமிழ்ப் புலவர் சரித்திரம். மிலேச்சமதவிகற்பம் (1888 ஆண்டு, செய்யுள் நூல்,) இலக்கணச் சந்திரிகை (1898), இரகுவமிசக் கருப்பொருள், கண்ணகி கதை வசனம், வினைப்பகுபத விளக்கம், வதுளைக் கதிரேசர் ஊஞ்சல், பதிகம். “செந்தமிழ்”ப் பத்திரிகையில் அவ்வப்போது பல கட்டுரைகளை எழுதியிருக்கிறார். வெண்பாப்புலி வேலுசாமிப் பிள்ளை (1854-1926) சிதம்பரத்துக்கு வடகிழக்கில் உள்ள தில்லைவிடங்கன் இவரது ஊர். சென்னை மில்லர் (கிறிஸ்துவக்) கல்லூரியில் ஆங்கிலம் பயின்றார். மேற்படி கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராக இருந்த வித்துவான் சின்னசாமிப் பிள்ளையிடம் தமிழ் பயின்றார். பின்னர், புரசை அஷ்டாவதானம் சபாபதி முதலியாரிடத்திலும், மகா வித்துவான் மீனாட்சி சந்தரம் பிள்ளையவர்களிடத்திலும் தமிழ் பயின்றார் செய்யுள் இயற்றுவதில் வல்லவர். வெண்பாவை விரைவில் பாடும் வல்லமை யுள்ளவர், ஆனது பற்றி மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை யவர்கள் இவருக்கு ‘வெண்பாப் புலி’ என்னும் சிறப்புப் பெயரை வழங்கினார்கள். திருவாவடுதுறை ஆதீனத்துச் சுப்பிரமணிய தேசிகர் இடத்திலும் இவர் கல்வி பயின்றார். காஞ்சிபுரம் பச்சையப்பன் உயர்தரப்பள்ளியில் தலைமைத் தமிழாசிரியராக இருந்தார். இவர் இயற்றிய நூல்கள்: கந்தபுராண வெண்பா (5665 செய்யுளுடையது.) தேவார சிவதல வெண்பா, திருக்கச்சூர் ஆலக்கோயிற் புராணம், தில்லைவிடங்கன் புராணம், திருவேட்ட குடிப் புராணம், தேவார வைப்புத்தலக் கட்டளைக் கலித்துறை, தில்லைவிடங்கன் நிரோட்டயமகவந்தாதி முதலியன. சுந்தரம் பிள்ளை (1855-1897) இராய்பகதூர் பெ. சுந்தரம் பிள்ளை என்பது இவர் பெயர். திருவிதாங்கூரைச் சேர்ந்த ஆலப்புழை என்னும் ஊரில் பிறந்தவர். திருவனந்தபுரம் அரசர் கல்லூரியில் கல்வி பயின்றார். திருநெல்வேலி ஆங்கிலத் தமிழ்க் கல்விச் சாலையின் தலைமை ஆசிரியராக இருந்தார். கோடக நல்லூர் சுந்தர சுவாமிகளின் தொண்டாராக இருந்தார். அவரிடம் சமய நூல்களைக் கற்றார். 1879-இல் திருவனந்தபுரத்து அரசர் கல்லூரியில் அறிவு நூல் ஆசிரியராக அமர்ந்தார். சைவப்பிரகாச சபை என்னும் சபையைத் திருவனந்தபுரத்தில் நிறுவினார். தமிழ் இலக்கிய வரலாற்று ஆராய்ச்சி, சமயநூல் ஆராய்ச்சி, கல்வெட்டெழுத்து ஆராய்ச்சிகளைச் செய்துவந்தார். இவர் இயற்றிய நூல்கள்: நூற்றொகை விளக்கம், மனோன் மணீயம் என்னும் நாடக நூல், பத்துப்பாட்டுக்காலம், ஞானசம்பந்தர் கால ஆராய்ச்சி முதலிய கட்டுரைகளைச் சென்னைக் கிறிஸ்துவக் கல்லூரித் திங்கள் இதழில் எழுதினார். கனகசபைப் பிள்ளை (1855-1906) யாழ்ப்பாணத்து மல்லாகம் என்னும் ஊரவராகிய விசுவநாத பிள்ளை என்பவர் சென்னை கோமளேசுவரன் பேட்டையில் இருந்தார். அவர், சென்னைக் கல்வி இலாகாவில் பணியாற்றினார். அவர் உவின்ஸ்லோ ஆங்கிலத் தமிழகராதி எழுத உதவி செய்தவர். விசுவநாத பிள்ளையின் மகனார் கனகசபைப்பிள்ளை. கனகசபை பி.ஏ. பரீட்சையில் தேறி, வழக்கறிஞர் கல்லூரியிற் பயின்று, மதுரையில் சில காலம் வழக்கறிஞராக இருந்தார். பின்னர்ச் சென்னையில் அஞ்சல் இலாகாவில் உத்தியோகம் பெற்று அஞ்சல் நிலையங்களின் மேற்பார்வையாளர் ஆனார். ஓய்வு நேரங்களில் தமிழ் இலக்கியங்களை ஆராய்ந்தார். ஏட்டுச் சுவடிகளைத் தேடி டாக்டர் உ.வெ. சாமிநாதையர் அவர்களுக்குக் கொடுத்தார். தமிழ் இலக்கிய வரலாறு. தமிழ்நாட்டு வரலாறுகளை ஆராய்ந்து, அவ்வாராய்ச்சிகளை ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்டார். டாக்டர் உ.வே. சாமிநாதையர் அவர்கள் புறநானூறு என்னும் நூலை அச்சிட்டபோது, அதில் அரசர்களைப் பற்றிக் கூறும் இடத்தில் “துஞ்சிய” என்னும் சொல்லுக்குப் பொருள் விளங்காமல், கனகசபைப் பிள்ளையைக் கேட்க, பிள்ளையவர்கள் துஞ்சிய என்னும் சொல்லுக்கு விளக்கம் எழுதியுதவினார். அவ்விளக்கம் புறநானூறு முதற்பதிப்பின் இறுதியில் அச்சிடப்பட்டது. ‘மதராஸ் ரெவ்யூ’ என்னும் ஆங்கில இதழில், தமிழ் இலக்கிய வரலாறு பற்றித் தொடர்ச்சியாக ஆங்கிலத்தில் கட்டுரைகள் எழுதினார். பின்னர் அக்கட்டுரைகளைத் தொகுத்து ‘TheTamils 1800 years ago’ என்னும் பெயருள்ள நூலாக அச்சிட்டார். இந்நூல் தமிழறியாத ஏனைய நாட்டவரும் ஐரோப்பியர் முதலிய மேல் நாட்டவரும் தமிழ் மொழியின் பழைமையையும் தமிழரின் பண்பாட்டையும் தெரிந்து கொள்ளப் பேருதவியாக இருந்தது. இவர் தமிழ்நூல்களைப்பற்றி ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரைகளாவன: ‘The Indian Antiquary’ என்னும் ஆங்கிலத் திங்கள் இதழில் Tamil Historical Texts என்னும் தலைப்பின்கீழ்க் கீழ்க்கண்ட கட்டுரைகள் எழுதினார்: Kalavali or the Battle field (vol. xviii 1889 pp. 258-265.) The Kalingathu Parani (vol. xix. 1890, pp. 329-345.) The Vikrama Cholan Ula (vol. xxii, 1893, pp. 141-150.) The Conquest of Bengal and Burma by the Tamils; Raja Raja Chola என்னும் சிறு நூல்களையும் ஆங்கிலத்தில் எழுதினார். நாராயண ஐயர் (1857-1914) பாண்டி நாட்டு மானாமதுரை இவருடைய ஊர். மதுரையிலும் சென்னையிலும் கல்வி கற்றார். 1883 முதல் மதுரையில் வழக்கறிஞ ராகத் தொழில் செய்தார். மதுரைத் தமிழ்ச் சங்கத்துடன் தொடர்பு டையவர், பதஞ்சலி யோக சூத்திரத்தை வட மொழியிலிருந்து தமிழில் மொழி பெயர்த்தார். சநாதனதர்மம், இந்துமததூடணையின் பரிகாரம். ஒழுக்கமுறை நூல், சன்மார்க்க தீபம் முதலிய நூல்களை எழுதியிருக்கிறார். “பூர்ண சந்திரோதயம்” என்னும் பத்திரிகையை நடத்தினார். சிற். கைலாசப் பிள்ளை (1857-1916) இவரது ஊர் யாழ்ப்பாணத்து நல்லூர், இளமையில் நல்லூர்ச் சம்பந்தப் புலவரிடம் கல்வி பயின்றார். பின்னர், சென்ட் ஜோன்ஸ் காலேஜில் கல்வி பயின்றார். சி. வை. தாமோதரம் பிள்ளை, சர். பொன் இராமநாதர், சர் பொன் அருணாசலம், தொழுவூர் வேலாயுத முதலியார், அஷ்டாவதானம் சபாபதி நாவலர், டாக்டர் சாமிநாதைய்யர் முதலியவர்களிடம் நட்பு முறையில் பழகினவர். திருவாவடுதுறை ஆதீனத்துச் சுப்பிரமணிய தேசிகரால் வித்துவான் பட்டம் வழங்கப் பெற்றார். இலங்கை உயர்தர நீதி மன்றத்தில் துவிபாஷகராகவும், பின்பு யாழ்ப்பாணக்கச்சேரிப் பிரதம முதலியாராகவும், மட்டக்களப்புக் கச்சேரி முதலியாராகவும் ஈற்றில் தேசாதிபதியின் தமிழ் முதலியா ராகவும் உத்தியோகம் செய்தவர். இவர் சில தனிச் செய்யுட்களை இயற்றினார். வட திருமுல்லை வாயில் மும்மணிக் கோவையைப் பாடினார். பீமகவிப் புலவர் (1858-?) பாண்டிநாட்டுக் குன்றக்குடிக்கு அடுத்த செந்நெற்குடி இவர் ஊர். திருவாவடுதுறை நமச்சிவாய தேசிகரிடத்தில் இலக்கண இலக்கியம் பயின்றார். சிலேடைப்புலி பிச்சுவையருடன் நட்புள்ள வர். முறையூர் சி. சண்முகஞ் செட்டியார் என்னும் பிரபுவினால் ஆதரிக்கப்பட்டவர். பல தனிநிலைச் செய்யுட்களை இயற்றினார். இவர் இயற்றிய நூல்களாவன: காரிகை வெண்பா, கோட்டி மாதவன் பிள்ளைத் தமிழ், சிவபுர மான்மியம், சிவபுரம் மீனாம்பிகை பிள்ளைத் தமிழ், செந்நெற்குடி சண்முகநாதன் பிள்ளைத் தமிழ், வால நைடதம், விசய சிந்தாமணி. மகா வித்துவான் திருமயிலை சண்முகம் பிள்ளை (1858-1905) சென்னையில் வாழ்ந்தவர். புரசை அஷ்டாவதானம் சபாபதி முதலியார், கோமளபுரம் உரையாசிரியர் இராசகோபால பிள்ளை இவர்களிடம் கல்வி பயின்றார் மதுரைத் தமிழ்ச் சங்கத்தாரால் “மகா வித்துவான்” என்னும் பட்டம் பெற்றவர். தொண்டைமண்டலம் துளுவ வேளாளர் பாடசாலையிலும், திருமயிலை சென்தோம் கல்லூரியிலும் தமிழாசிரியராக இருந்தார். “மனோன்மணியம்” சுந்தரம் பிள்ளை முதலிய அக்காலத்துப் புலவர்களால் நன்கு மதிக்கப்பட்டவர். “மணிமேகலை” என்னும் காவியத்தை முதன் முதல் அச்சிட்டவர் இவரே. 1894-ஆம் ஆண்டில், சென்னை ரிப்பன் அச்சியந்திர சாலையில் இந்நூலைப் பதிப்பித்தார். (இவர் பதிப்பித்த நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர் டாக்டர் உ.வே. சாமிநாதையர் அவர்கள் மணிமேகலையைப் பதிப்பித்தார்கள். ஆனால், எக்காரணத்தாலோ ஐயரவர்கள், பிள்ளையவர்கள் மணிமேகலை பதிப்பித்ததைப் பற்றிக் கூறவேயில்லை.) மகா வித்துவான் சண்முகம் பிள்ளையவர்கள், திருமுல்லை வாயிற் புராணம், திருமயிலை உலா, சிற்றிலக்கண வினாவிடை, கந்தபுராண வசனம், கபாலீசர் பஞ்சரத்தினம், கற்பகவல்லி மாலை முதலிய நூல்களை இயற்றினார். இவர் இயற்றிய உரை நூல்கள்: கம்பராமாயண அயோத்தியா காண்ட உரை (1891), பொன்வண்ணத்தந்தாதி, திருக்கயிலாய ஞான உலா, திருவாரூர் மும்மணிக்கோவை, பிச்சாடன நவமணி மாலை என்னும் நூல்களுக்கு உரை எழுதினார். நன்னூல் விருத்தியுரை, தஞ்சைவாணன் கோவையுரை, மச்ச புராணம், கண்ணுடைய வள்ளலார் இயற்றிய மாயாப் பிரலாபம், சிவவாக்கியர் பாடல் முதலிய பழைய நூல்களை அச்சிற்பதிப்பித்தார். “வித்தியா விநோதினி” என்னும் வெளியீட்டை (1889-1892), இராமசாமி நாயுடு, வாசுதேவ முதலியார் இவர்களுடன் சேர்ந்து வெளியிட்டார். (இந் நூலாசிரியரின் தமயனாரான மயிலை சீனி. கோவிந்த ராசனாரும், கா. நமச்சிவாய முதலியாரும் மகாவித்துவான் சண்முகம் பிள்ளையவர்களிடம் கல்வி பயின்ற மாணவர்கள்.) பண்டித நடேச சாஸ்திரி (1859-1906) இவர் கும்பகோணம் கல்லூரியில் கல்வி பயின்றார். இந்திய சாசன ஆராய்ச்சி இலாகாவில் அலுவல்செய்தார். பிறகு வேறு அரசாங்க இலாக்காக்களிலும் அலுவல் செய்தார். ஆங்கிலத்திலும் வட மொழியிலும் சில நூல்களை எழுதினார். தமிழில் சில கதைகளை எழுதினார். அவையாவன: திராவிட பூர்வகாலக் கதைகள் (1836), திராவிட மத்தியகாலக் கதைகள் (1886) மாமி கொலுவிருக்கை (1903), முத்திரா ராக்ஷசம் (விசாக தத்தை என்னும் வடமொழி நூலின் மொழிபெயர்ப்பு 1885) தன்னு யிரைப்போல மன்னுயிரை நினை (ஷேக்ஸ்பியரின் Measure for Measure என்னும் கதை 1893), வயேலா சரித்திரம் (ஷேக்ஸ்பியரின் Twelfth Night or what you will என்னும் கதை, 1892) கோமளம் குமரியானது (1902). திக்கற்ற இரு குழந்தைகள் (1902), மதிகெட்ட மனைவி (1903). இலக்கண முத்தையா (1861-1912) கோவில்பட்டி தாலூகா பொம்மையபுரம் இவரூர் சோழவந்தான். கிண்ணிமடம் சிவப்பிரகாச சுவாமிகளிடம் இலக்கண இலக்கியங் களைக் கற்றார். சுங்குரும்பையந்தாதி, பதிற்றுப்பத்தந்தாதி முதலிய நூல்களை இயற்றினார். நாராயணசாமி ஐயர் (1862-1914) தஞ்சை மாவட்டம் திருத்துறைப்பூண்டி தாலூகா பின்னத்தூரில் பிறந்தவர். மன்னார்குடிப் பாடசாலையில் தமிழ்ப் பண்டிதராக இருந்த நாராயணசாமி பிள்ளையிடம் தமிழ் கற்றார். அவர் மூலமாகத் தமிழ் நூல்களைப் படிப்பதில் பேரவாக் கொண்டார். பின்னர், வேதாரணியத் தில் இருந்த வித்துவ சிரோமணி பொன்னம்பல பிள்ளையிடம் தமிழ் பயின்றார். 1899 முதல் 1914-ஆம் ஆண்டில் தாம் இறக்கும்வரையில் கும்பகோணம் டவுன் உயர்நிலைப் பள்ளியில் தலைமைத் தமிழாசிரியராக இருந்தார். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்து ஆராய்ச்சித் துறைப் பேராசிரியராக இருந்த T. V. சதாசிவ பண்டாரத் தார் அவர்கள் இவருடைய மாணவர்களில் ஒருவர். பின்னத்தூர் நாராயணசாமி ஐயர் அவர்கள் இயற்றிய நூல்கள்:- மாணாக்கர் ஆற்றுப்படை, இயன் மொழி வாழ்த்து, தென் தில்லை (தில்லைவளாகம்) உலா. தென்றில்லைக் கல்ம்பகம், களப்பாழ்ப் புராணம், இராமாயண அகவல். இவை அச்சிடப்பட்டுள்ளன. நற்றிணை நானூறு என்னும் சங்கத்தொகை நூலுக்கு இவர் சிறந்த உரை எழுதியுள்ளார். இந்த உரை 1915-ஆம் ஆண்டில் அச்சிடப் பட்டுள்ளது. பிரகசன நாடகம், இடும்பாவன புராணம், இறையனாராற்றுப் படை, நீலகண்டேச்சுரக் கோவை, சிவபுராணம் (ஞான சங்கீதை), சிவ கீதை, பழையது விடுதூது, மருதப்பாட்டு, தமிழ்நாயக மாலை என்னும் நூல்களையும் இயற்றினார். இவை அச்சிடப்படவில்லை. பிச்சை இபுராகிம் புலவர் (1863-1908) திரிசிர புரத்துக்கு அருகில் உள்ள அரசங்குடியில் பிறந்தவர். உறையூர் வித்துவான் முத்துவீர உபாத்தியாயரிடம் தமிழ் பயின்றார். எஸ். பி. ஸி. கல்லூரியில் தமிழாசிரியராக இருந்தார். இவர் இயற்றிய நூல்கள்: பகுதாதுமாலை, ஆதமலை திருப்புகழ், வெள்ளாங்குளத்தூர் அவுலியாமாலை, திருமதீனத்துக் கலம்பகம், திருமதீனத்துப் பதிற்றுப்பத்தந்தாதி, நாகூர் பிள்ளைத் தமிழ், மகபூப் சுபகானி மாலை, நாயகத் திருப்புகழ், நத்தகறொலி யாண்டவர்கள் பிள்ளைத் தமிழ், சீதக்காதிப்பதிகம், மொகிதீன் ஆண்டவர் மாலை, திருமதீனத்து வெண்பா வந்தாதி, திருமதீனத்து மாலை, திருமதீனத்து யமகவந்தாதி முதலியன. பண்டித மனோன்மணி யம்மையார் (1863-1908) குன்றத்தூரையடுத்த மண்ணிவாக்கம் இவரூர். கவிபாடும் ஆற்றல் உடையவர். மருத்துவமும் அறிந்தவர். இவர் இயற்றிய நூல்கள்: பழநி வெண்பாப் பதிகம் பழநி இரங்கல், பழநிப் பாமாலை, திருவாமாத்தூர் அழகியநாதர் பஞ்சரத்தினம், சென்னை கந்தசுவாமிப் பதிகம், திருவானைக்கா அகிலாண்ட நாயகி அந்தாதி, திருமுல்லை வாயில் கொடியிடை நாயகி அந்தாதி, திருமயிலைக் கற்பகவல்லி அந்தாதி, திருக்கழுக்குன்றம் திரிபுரசுந்தரி மாலை. பழநிச் சந்நிதிமுறை, பழநிச் சிங்காரமாலை, பூவைச் சிங்காரச் சதகம், குன்றத்தூர் பொன்னி யம்மன் பதிகம், புதுவைக் காமாட்சியம்மன் பதிகம் மனோன்மணியம் என்னும் வைத்திய நூல். கருப்பையா பாவலர் (1864-1907) மதுரை மாவட்டம், மேலூர் தாலுகா கொட்டாம்பட்டி இவருடைய ஊர். சென்னைக்குச் சென்றிருந்த போது, அங்குக் க.வ. திருவேங்கட நாயுடு என்பவர் செய்த சொற்பொழிவைக் கேட்டு மகிழ்ந்த இவர் அவரைப் பாராட்டி இவ்வாறு கூறினார். “திருவேங்கட நாயுடவர்கள் செய்துவரும் பிரசங்கத்தை மகிழ்ந்தெவருங் கேட்கில் அன்பும் அருளுங்கொண்டு ஆனந்தமாகப் பகவன் பதத்தைச் சார்ந்து வாழ்வார்.” சாதாரணப் பேச்சுப் போல இருக்கிற இது, வெணபாவாகவும் அமைகிறது. அமைத்துப் பாருங்கள். “திருவேங் கடநா யுடவர்கள் செய்து வரும்பிரசங் கத்தை மகிழ்ந்தெ-வருங்கேட்கில் அன்பும் அருளுங்கொண் டாநந்த மாகப்பக வன்பதத்தைச் சார்ந்து வாழ்வார்”. இவர் இயற்றிய நூல்கள்: அழகர் பதிகம், இலக்குமி யந்தாதி, பாங்கிரி மாலை, நவரத்தினம், திருப்போரூர் ஆண்டவர் திரிபத்தாதி, கட்டளைக் கலிப்பா, திருப்பல்லாண்டு, சிதம்பரசுவாமி கலாமாலை, வண்ணங்கள், திருக்கோட்டியூர் திரிபந்தாதி, திருச்செந்தில் திரிபந்தாதி, ஒரெழுத்தந்தாதி, திருக்குரம்பைத் திரிபந்தாதி, திருமெய்யம் ஓரெழுத்தந்தாதி, மருதூர் நாகநாதர் மாலை, திருஞான சம்பந்தர் மாலை, வடமுல்லை வாயில் மாசிலாமணி சரித்திரம், மயிலைச் செந்தில்வேல் முதலியார் ஐந்திணைக் கோவை, பதிகங்கள் முறையூர் மீனாட்சி சுந்தரேசுவரர் பிரபந்தத் திரட்டு. பால்வண்ண முதலியார் (1866-1908) திருநெல்வேலியைச் சேர்ந்த பேட்டையில் பிறந்தவர். வைகுண்டபதிக் கவிராயரிடத்தில் தமிழ்க் கல்விபயின்றார். சைவ சித்தாந்த நூல்களைக் கற்றவர். சொற்பொழிவு செய்யுந் திறம் உடையவர். இவர் இயற்றிய் நூல்களாவன: சித்தாந்தஞான ரத்தினாவளி, தருக்க சூத்திரம், பண்டார மும்மணிக் கோவை, பசுபதிபாசத் தொகையுரை, பிரசங்க தீபிகை, மெய்ஞ்ஞான சாரம். முத்துத்தாண்டவராய பிள்ளை (1868-?) இவருடைய ஊர் பரங்கிப்பேட்டை 1893-இல் தரங்கம்பாடி லூதரன் மிஷன் கல்லூரியில் தமிழாசிரியராக அமர்ந்தார். பிறகு 1916-இல் சீர்காழி லூதரன் மிஷன் உயர்தரப்பள்ளியில் தமிழாசிரியரானார். இவர், இயற்றிய நூல்கள்: சிந்தாமணி விநாயகர் மாலை, சாதாக்கியத் திருமுறை, ஒருபா ஒருபஃது, பொய்யா வினாயகர் இருபா இருபஃது, தில்லையாடிப் புராணம் வெள்ளை வாரணப் பிள்ளையார் திருவிரட்டை மணிமாலை, முருகன் வருவகைப் பத்து, ஐயனாரிதனார் மாலை, திருமகள் மாலை. பரிதிமாற் கலைஞர் (1870-1903) மதுரைக்கு அடுத்த விளாச்சேரியில் பிறந்தவர். இவருடைய இயற்பெயர் சூரியநாராயண சாஸ்திரி என்பது. இப்பெயரை இவர் பரிதிமாற் கலைஞன் என்று தமிழாக்கிக்கொண்டார். மதுரை சபாபதி முதலியார் என்னும் ஆசிரியரிடம் தமிழ் பயின்றார். இராவ்பகதூர் சி. வை. தாமோதரம் பிள்ளை அவர்களால் திராவிட சாஸ்திரி என்னும் பட்டம் வழங்கப்பட்டார். சென்னைக் கிறிஸ்துவக் கல்லூரியில் தலைமைத் தமிழாசிரியராக இருந்தார். “ஞானபோதினி” இதழின் ஆசிரியராக 1897-98 ஆண்டுகளில் இருந்தார். நாடகவியல் என்னும் நூலை 1897-இல் இயற்றினார். கலாவதி என்னும் நாடக நூலை 1898-இல் இயற்றினார். மாலா பஞ்சகம், ரூபாவதி, மான விஜயம், பாவலர் விருந்து, தனிப்பாசுரத்தொகை, மதிவாணன், தமிழ் வியாசங்கள், தமிழ்ப்புலவர் சரித்திரம், முத்திரா ராட்சம், தமிழ்மொழி வரலாறு முதலிய நூல்களையும் எழுதினார். சயங்கொண்டார் இயற்றிய கலிங்கத்துப்பரணியை 1898-இல் பதிப்பித்தார். மகாலிங்கையர் இயற்றிய இலக்கணச் சுருக்கத்தையும் அதே ஆண்டில் அச்சிற் பதிப்பித்தார். உத்தரகோச மங்கை மங்களேசுவரி பிள்ளைத் தமிழை 1901-ஆம் ஆண்டு பதிப்பித்தார். புகழேந்தியின் நளவெண்பாவை 1899-இல் பதிப்பித்தார். தனிப்பாசுரத் தொகையை 1901-இல் பதிப்பித்தார். கதிரைவேற் பிள்ளை (1871-1907) யாழ்ப்பாணத்து மேலைப்புலோலி இவரது ஊர். யாழ்ப்பாணத்து நல்லூர் மகாவித்துவான் தியாகராசப்பிள்ளை, நல்லூர் சதாசிவப் பிள்ளை முதலியவர்களிடம் தமிழ் பயின்றார். காசிவாசி செந்தினாதை யரால் ‘மாயாவாத தும்சகோளரி” என்னும் பட்டம் பெற்றார். ஆரணி சமஸ்தானத்தில் வித்துவானாக இருந்தார். ஆரணி சமஸ்தானத் தலைவரால், “அத்துவித சித்தாந்த மதோத்தாரணர்” என்னும் பெயர் சூட்டப்பட்டார். 1907-இல் சதாவதானம் செய்தார். புராணப் பிரசங்கம் செய்வதிலும், சொற்பொழிவு செய்வதிலும் வல்லவர். இவர் இயற்றிய நூல்கள்: மருட்பா மறுப்பு, கருவூர் மான்மியம், தமிழ்ப் பேரகராதி, புத்தமத கண்டனம், கதிர்காமக் கலம்பகம். அதிவீரராம பாண்டியன் இயற்றிய கூர்ம புராணத்துக்கும் சிவராத்திரி புராணத்துக்கும் உரை எழுதினார். வித்துவான் சிவானந்தையர் (1873-1916) யாழ்ப்பாணத்துத் தெல்லிப்பழைக்கு அருகில் உள்ள பன்னாலை இவருடைய ஊர். ஏழாலை வித்தியாசாலையில் ஆசிரியராக இருந்த சுன்னாகம் குமாரசுவாமிப் புலவரிடம் கல்வி பயின்றார். சிதம்பரம் பச்சையப்ப முதலியார் பாடசாலையில் தமிழாசிரியராக இருந்தார். இவருக்கு, முன்தலையில் உயரமான புடைப்பு இருந்தபடியால் மிடாத்தலையர் என்று கூறப்பட்டார். வடமொழியில் உள்ள தருக்க சங்கிரகம் என்னும் நூலின் உரைகளாகிய நியாயபோதினி, பதகிருத்தியம், அன்னம்பட்டீயம், நீலகண்டீயம் என்னும் உரைகளைத் தமிழில் மொழி பெயர்த்து அச்சிட்டார். புலியூர்ப்புராணம் புலியூர் அந்தாதி என்னும் நூல்களை இயற்றினார். சலச லோசனச் செட்டியார் (1876-1897) இவர், திருவெவ்வளூர் இராமசாமி செட்டியார் என்னும் புலவரின் மகனார். இராமசாமி செய்டியார் திருவிடை மருதூர்க் கலம்பகம், திருக்கழுக்குன்றக் கலம்பகம் முதலிய நூல்களை இயற்றியவர். இவருடைய மகனாராகிய சலசலோசனச் செட்டியார் இளமையிலேயே கவிபாடும் ஆற்றல் பெற்றிருந்தார். இளமையில் தந்தையாரிடம் கல்வி பயின்றபிறகு. சென்னைக் கிறிஸ்துவக் கல்லூரியில் கல்வி பயின்றார். அக்காலத்தில் அக்கல்லூரித் தலைமைத் தமிழாசிரியராக இருந்த பரிதிமாற் கலைஞர் என்னும் சூரியநாராயண சாஸ்திரியாரிடம் தமிழ் கற்றார். ஆசிரியருக்கும் மாணவருக்கும் நெருங்கிய தொடர்பு இருந்தது. பரிதிமாற் கலைஞர், தம் தமிழாசிரியராகிய மதுரைச் சபாபதி முதலியார் இயற்றிய குளந்தை வடிவேலன் பிள்ளைத்தமிழை அரங்கேற்றுவதற்காக வடகரை ஜமீன்தார் இராமபத்திர நாயுடு அழைப்பிற்கிணங்கி பெரியகுளம் சென்றார். சென்றவர், ஜமீன்தாரின் வற்புறுத்தலினால் அங்கேயே சில நாட்கள் தங்கிவிட்டார். அப்போது, மாணவராகிய சலசலோசனர், விரைவில் வரவேண்டும் என்னும் குறிப்புடன் தமது ஆசிரியருக்கு ஒரு வெண்பா எழுதி அனுப்பினார். அந்த வெண்பா இது: “செல்வமலி குளந்தைச் சேயின் தமிழ்விரிப்பச் செல்வலெனச் சென்றாய் தேசிகவான்-கல்விவயிற் போந்தவன் தாழ்ப்பப் புலம்புகொண் டிற்கணுறை ஏத்திழையை நேர்குவல்யான் எண்”. இவர் இயற்றிய நூல்கள்: திருவெவ்வளுர் வினாயகர் மீது பதிகம், சாவித்திரி சரிதை, சரசாங்கி என்பன. சரசாங்கி என்பது, ஷேக்ஸ்பியர் என்னும் நாடகக் கவிஞர் ஆங்கிலத்தில் எழுதிய சிம்பலின் என்னும் நாடகத்தைத் தழுவித் தமிழ் நடைக்கேற்ப அமைத்து எழுதப்பட்டது. சலசலோசனர் தாம் எழுதிய சரசாங்கி நாடகத்தைப் பம்மல் சம்பந்த முதலியாருடன் சேர்ந்து நடித்தார். இவர் தமது இருபத்தொன்றவது வயதில் காலஞ் சென்றது வருந்தத்தக்கது. இவர் காலஞ்சென்றது பற்றி இவரது ஆசிரியர் பரிதிமாற் கலைஞர் இவர். மீது ஐந்து கையறுநிலைச் செய்யுட்கள் பாடினார். அவற்றில் இரண்டு செய்யுட்கள் இவை: “பொன்மலருங் கொன்றைப் புனிதமுடி யைங்கரன்மேல் சொன்மலருஞ் செந்தமிழிற் றூயபதி கம்புகன்று தென்மலருஞ் சாவித் திரிசரிதை செய்தோனே கன்மவசந் தானோ கடிதிற் பிரிந்தனையே! கஞ்சமலர்க் கண்ணா கடிதிற் பிரிந்தனையே!!” “பேணிமுகில் போல்வார்சொல் பெற்றுவக்கும் சாதகமே யாணர்நூல் நாண்மலரின் இன்தேன் உணுஞ்சுரும்பே மாணெழில்சேர்ந் தோங்கு மதியே இயற்றமிழின் மாணவர்தங் கண்ணே மறந்தெங்ஙன் ஏகினையோ! மாமுளரிக் கண்ணா மறந்தெங்ஙன் ஏகினையோ!!” அப்துல் காதிறு ராவுத்தர் (1877-?) இளையான்குடிக்கு அருகில் உள்ள சோதுகுடி என்னும் ஊரில் பிறந்தவர். குலாம் காதிறு நாவலரிடம் தமிழ் பயின்றார். ஆங்கிலமும் கற்றவர். மதுரைத் தமிழ்ச்சங்கப் புலவராக இருந்தார். செய்யுள் இயற்ற வல்லவர். இவர் இயற்றிய நூல்கள்: மகுமூது பஞ்சரத்தினம், நாமகள் நவமணிமாலை, சோதுகுடிச் சிங்காரவழி நடைச்சிந்து, கட்டோம்பு அத்திவா வழிநடைச்சிந்து நாகூர் நாயகர் கீர்த்தனாரத்தினம். மு. ரா. கந்தசாமிக் கவிராயர் (?-1918) முகவூர் இராமசாமிக் கவிராயரின் மூன்றாவது மைந்தர் இவர். தம் தந்தையாரிடத்திலும் திருவாவடுதுறை ஆதீனத்து நமச்சிவாயத் தம்பிரானிடத்திலும் கல்வி பயின்றார். உடுமலைப்பேட்டையில் போர்டு உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராக இருந்தார். பிறகு, மதுரையில் ‘விவேகபாநு’ அச்சுக்கூடத்தையும் ‘விவேகபாநு’ பத்திரிகையையும் நடத்தினார். மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளையின் நண்பர். இவர் இயற்றிய நூல்கள்: அரிமழத் தலபுராணம், கருமலையாண்டவர் துதி மஞ்சரி, குமண சரித்திரம், திருப்போரூர்த் திரிபந்தாதி, தனிச் செய்யுட் சிந்தாமணி, பலாநிவேத நாயகியம்மை பிள்ளைத்தமிழ், வியாசத்திரட்டு (இரண்டு பாகம்) கம்பராமாயணம் ஆரணியகாண்ட உரை. வேங்கடரமண தாசர் (?-1900) கோயமுத்தூருக்கு வடக்கேயுள்ள சாமக்குளம் இவருடைய ஊர், கோயமுத்தூர் கந்தசாமி முதலியாரின் மாணவர். கந்தசாமி முதலியார் எழுதிய கிள்ளைவிடு தூது என்னும் நூலுக்கு மறுப்பாகக் கிறிஸ்துவர் சிலர் பிள்ளைவிடுதூது என்னும் நூலை வெளியிட்ட போது. அப்பிள்ளைவிடு தூதுக்கு மறுப்பாக வேங்கடரமணதாசர். “பிள்ளைவிடுதூது ஆபாச விளக்கம்’ என்னும் நூலையும் ‘சிசு தௌத்திய திரணசண்டமாருதம்’ என்னும் நூலையும் எழுதினார், கந்தசாமி முதலியார் இயற்றத் தொடங்கிய கொடுமுடிப் புராணம் நிறைவேறாமற் போனதை இவர் பாடி முடித்து நிறைவேற்றினார். கார்த்திகேய முதலியார் (?-1907) காஞ்சிபுரத்துக்கு அடுத்த மாகறல் இவர் ஊர், கிண்டி தியாலஜி கல்லூரியில் தமிழாசிரியராக இருந்தார். கச்சி இதழகல் அந்தாதி, மொழிநூல் என்னும் நூல்களை இயற்றினார். இராமலிங்க சுவாமிகள் (1851?-1906) ஈசானிய மடம் இராமலிங்க சுவாமிகள் என்று கூறப்படுவார். தில்லை ஈசானிய மடத்தில் இருந்தவர். பாடம் சொல்லுவதிலும் உரை எழுதுவதிலும் சொற்பொழிவு செய்வதிலும் வல்லவர். பூண்டி அரங்கநாத முதலியாரின் நண்பர். நால்வர் நான்மணிமாலைக்கும் பழமலையந்தாதிக்கும் உரை எழுதினார். குமரகுருபரர் பிரபந்தத் திரட்டு, சிவப்பிரகாச சுவாமிகள், பிரபந்தத்திரட்டு, திருவிளையாடற்புராணம், சீகாளத்திப் புராணம், முருகேசர் முதுமொழி வெண்பா முதலிய நூல்களை அச்சிற்பதிப் பித்தார். சுப்பராய செட்டியார் (?-1894) இவர், சோடசாவதானம் சுப்பராய செட்டியார் என்று கூறப் படுவார். இவர் பாலக்கரை வீரராகவ செட்டியார் என்னும் வித்து வானுடைய மகனார். திரிசிரபுரத்தில் இருந்தவர். மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் மாணவர். பிள்ளையவர்களின் நண்பராகிய புரசை அஷ்டாவதானம் சபாபதி முதலியார், திரிசிர புரத்தில் தங்கியிருந்தபோது, அவ்வூர்ப் பிரபுக்களும் வித்துவான் களும் முதலியார் அஷ்டாவதானம் செய்வதைப் பார்க்க விரும்பி னார்கள். அவர்கள் விருப்பத்தை மகாவித்துவான் பிள்ளையவர்கள் முதலியாரவர்களுக்குத் தெரிவித்தபோது, அவரும் அதற்கு இசைந்து அஷ்டாவதானம் செய்து காட்டினார். அதைக் கண்ட பிரபு ஒருவர், உங்கள் மாணவரை அவதானம் செய்யப் பழக்கமுடியுமா என்று மகாவித்துவானைக் கேட்க, அவர்கள் தம் மாணவராகிய சுப்பராய செட்டியாரைப் பதினாறு அவதானம் செய்யப் பழக்கிச் சபை கூட்டி அவதானம் செய்வித்துச் சோடசாவதானி என்னும் பட்டத்தையும் வழங்கினார். அதுமுதல் சோடசாவதானம் சுப்பராய செட்டியார் என்று பெயர் பெற்றார். சுப்பராய செட்டியார் தமது ஆசிரியருக்கு எழுதும் கடிதங்கள் ஒவ்வொன்றிலும் குரு வணக்கமாக ஒவ்வொரு செய்யுளை எழுதுவது வழக்கம். சுப்பராய செட்டியார் சென்னை அரசாங்கத்து நார்மல் பாடசாலைத் தமிழ்ப் புலவராக இருந்தார். விரிஞ்சேகர் சதகம் என்னும் நூலை இயற்றினார். இந்நூலுக்கு இவருடைய ஆசிரியரான மகா வித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் அளித்த சிறப்புப் பாயிரம் இது: மாமேவு கற்பகப் பூந்தளிரும் நறுமலரும் வாட்டமற்றொளிர வான்மெல் மாலென வுயர்ந்துதழை சோலைபுடை சூழும்வள வாணியம் பதிதழைப்பப் பூமேவு மொருபாற் பசுங்கொடி தழைப்பவளர் பொற்றரு வினிற்றழைத்த பூரணி யிடப்பரம காரணர் விரிஞ்சேசர் பொன்னங் கழற்கணியெனப் பாமேவு மொருசதகம் இனிது பாடுகவெனப் பரவுதம்பா லேற்றவர் பாலெவ மேற்பவருள் மால்வேங்க டப்பமுகில் பரிவுற்று வந்துகேட்பத் தூமேவு சொற்பொருள் நயம்பெறச் செய்தனன் துதிவீர ராகவப்பேர்த் தூயனருள் மைந்தன்நய மிகுசோட சவதானி சுப்பராயப் புரவலனே சுப்பராய செட்டியார், பரஞ்சோதி முனிவர் இயற்றிய திருவிளை யாடற் புராணத்துக்கு உரை எழுதினார். கம்பராமாயணம் அயோத்தியா காண்டத்திற்கு உரை எழுதினார். சந்தனபுரி என வழங்கும் எயினனூர் ஆதிபுர தலபுராணத்தை இயற்றினார். பதினோராந்திருமுறை முழுவதையும், பல பிரதிகளைக் கொண்டு பரிசோதித்து முதன்முதலாக அச்சிட்டார் (1869). மகாவித்துவான் பிள்ளையவர்கள் இயற்றிய மாயூரப் புராணத்தையும், நாகைக் காரோணப் புராணத்தையும் அச்சிட்டார். காஞ்சிப் புராணத்துக்கும், புவியூர் வெண்பாவுக்கும் உரை எழுதி அச்சிற் பதிப்பித்தார். காங்கேயேன் உரிச்சொல் நிகண்டு, சிதம்பரசுவாமி இயற்றிய திருப்போரூர் சந்நிதிமுறை என்னும் நூல்களையும் அச்சிற் பதிப்பித்தார். இதுவரையில் 19-ஆம் நூற்றாண்டில் இருந்த புலவர்களின் வரலாற்றைச் சுருக்கமாகக் கூறினோம். அவர்கள் பிறந்த ஆண்டு, இறந்த ஆண்டுகள் தெரிந்தமையால் கூடியவரையில் அவர்களை ஆண்டுக் கணக்குப்படி வரையறுத்து முறைப்படுத்தி எழுதினோம். பிறந்த ஆண்டும்மறைந்த ஆண்டும் தெரியாத புலவர்களைப்பற்றி, 19-ஆம் நூற்றாண்டில் இருந்தவர்கள் -, அகர வரிசையில் இங்கு எழுதுகிறோம். அப்பாவுப் பிள்ளை திரிசிரபுரத்தில் இருந்தவர். இவரைப் பற்றி ஒன்றும் தெரிய வில்லை. சித்திராங்கி விலாசம் (1886), நன்னெறி சத்தியாஷை அரிச்சந்திர விலாசம் (1890), நூதன புகழேந்தி சபா (1893) என்னும் நூல்களை எழுதினார். அப்பாவு முதலியார் 19-ஆம் நூற்றாண்டில் இருந்தவர். முடிச்சூர் இவருடைய ஊர். இவர் இயற்றிய நூல்கள்: குமரேசவிசயம், தென்னாசாரியப் பிரபாவத் தீபிகை, சற்சம்பிரதாய தீபிகை, விட்டுணு தத்துவ விளக்கம், இராமாநுச நூற்றந்தாதிக்கு உரை எழுதினார். அண்ணாமலை ரெட்டியார் 19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்தவர். பாண்டி நாட்டுக் கரிவலம்வந்த நல்லூருக்கு அடுத்த சென்னிக்குளம் இவருடைய ஊர்: முகவூர் மீனாட்சி சுந்தரக் கவிராயரின் மாணவர். ஊற்றுமலை சமீன்தாரின் புலவராக இருந்தவர். இவர் இயற்றிய நூல்கள்: சங்கர நாராயணகோயில் திரிபந்தாதி, நவநீத கிருட்டினன் பிள்ளைத் தமிழ், காவடிச்சிந்து. ப. அரங்கசாமி பிள்ளை புதுக்கோட்டை அரசரிடம் வித்துவானாயிருந்த ப. முருகேச கவிராயருடைய தம்பியார் இவர். இவரைப் பற்றிய செய்திகள் ஒன்றும் தெரியவில்லை. திருத்தக்க தேவர் இயற்றிய சீவக சிந்தாமணி காவியத்தின் முதற்பகுதியை (பதுமையார் இலம்பகம் வரையில்) அச்சிட்டார். அதாவது, டாக்டர் உ.வே. சாமிநாதையர் அச்சிடுவதற்குச் சில ஆண்டுகளுக்கு முன்பே அச்சிட்டார். ‘இது சென்னபட்டணம் அஷ்டலஷ்மி விலாச அச்சுக்கூடத்தில் சாலிவாகன சகாப்தம் 1805-ஆம் வருஷத்தில் செல்லா நின்ற சித்திரபானு வருசம் பங்குனி மாதம் கி.பி. 1883-இல் அச்சிடப்பட்டது.’ சென்னை இராஜதானி வித்தியாசாலைத் தமிழ்த் தலைமைப் பண்டிதராயிருந்த சீனிவாச ராகவாச்சாரியார், சென்னைப் புரசை அஷ்டாவதானம் சபாபதி முதலியார், சருவகலாசாலைத் தலைமைப் புலவர் கோமளபுரம் இராஜகோபாலபிள்ளை, திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம்பிள்ளை மாணாக்கர் வேங்கட சுப்புபிள்ளை ஆகியோர் இந்தப் பதிப்புக்குச் சாற்று கவிகள் வழங்கியிருக்கிறார்கள். அரிகிருட்டின படையாட்சி இவர் வரலாறு தெரியவில்லை. “தமிழ் சுருக்கெழுத்து” என்னும் நூலை எழுதி கும்பகோணத்தில் 1898-இல் அச்சிற் பதிப்பித்தார். அனந்த தேவன் உத்தர ராமாயணத்தை எழுதியவர் இவர். இந்த நூலைக் கும்பகோணம் சாரங்கபாணி பெருமாள் கோவில் சிங்கார மண்ட பத்தில் கலி ஆண்டு 4910-இல் (கி.பி. 1810-இல்) அரங்கேற்றினார் என்று கீழ்க்கண்ட செய்யுளினால் தெரிகிறது. கவிதிலகர் வான்மீகி சொலு மிராம காதை யேழாங் காண்டம் நாடகமாய்ச் செய்தே நவி லெழுபதுக் கெழுப தேழு மூன்றா நல்ல கலியாண்டு கன்னி மதிப் பூசத்தில் புவி புகழுங் குடந்தைக் கோமள வல்லிப் பொன்புணரு மெங்கள் சாரங்கபாணி கோயிற் கவிவாதி சிங்கார மண்டபத்தின் முன்னே கவியனந்த தேவ னரங் கேற்றினானே. இந்நூல் சென்னை அரசாங்கத்துக் கீழ்நாட்டுக் கையெழுத்துப் புத்தக சாலையில் இருக்கிறது. ஆறுமுகத் தம்பிரான் சோழநாட்டுக் கருவூரில் பிறந்தவர். தருமபுர ஆதீனத் தம்பிரான்களில் ஒருவர். தருமபுர மாகவித்துவான் என்னும் சிறப்புப் பெயர் உள்ளவர். தென்னாடு, வடநாடு, ஈழநாடு என்னும் நாடுகளில் தலயாத்திரை செய்தவர். இவர் எழுதிய பெரிய புராண உரை 1885-1889-ஆம் ஆண்டுகளில் அச்சிடப்பட்டது. சென்னையில் இவர் தங்கியிருந்தபோது வெஸ்லியன் மிஷன் பாதிரிமாரால் ஞானஸ்னானம் பெற்றுக் கிறிஸ்துவரானார். இது நிகழ்ந்தது கி.பி. 1836-ஆம் ஆண்டில். கிறிஸ்துவர் ஆன பிறகு இவருக்கு வெஸ்லி அப்ரகாம் என்று பெயர் ஏற்பட்டது. கிறிஸ்துவர் ஆனபிறகு இவர் எழுதிய நூல்கள்: அஞ்ஞானக்கும்மி, அஞ்ஞானம், இரட்சகர் அவதாரம், செகவுற்பத்தி, நரகம், மோட்சம், வாழ்த்து. ஆறுமுகம் பிள்ளை பூலாருசுவாமிப் பிள்ளையின் மகனார் இவர், இவரைப் பற்றிய செய்திகள் தெரியவில்லை. அரிச்சந்திர வெண்பா, மதுரை யமக வந்தாதி முதலிய நூல்களை இயற்றியுள்ளார். இவர் இயற்றிய அரிச்சந்திர வெண்பா, பச்சையப்பன் கல்விச்சாலையில் தமிழ்த் தலைமைப் புலமை நடாத்திய திருமயிலை முருகேச முதலியாரால் 1884-ஆம் ஆண்டில் அஷ்டலக்ஷுமி விலாச அச்சுக்கூடத்தில் பதிப்பிக்கப்பட்டது. இராமச்சந்திர கவிராயர் இவரூர் இராசநல்லூர் சென்னைப்பட்டினத்தில் வாழ்ந்தார். சென்னைக் கல்விச் சங்கத்துப் போர்டு மெம்பரும் தமிழ் அறிஞருமான எல்லிஸ் துரையின் நண்பர். எல்லிஸ் துரையவர்கள் இவர்மேல் ஒரு செய்யுள் இயற்றினார். என்பதை முன்னமே கூறியுள்ளோம். மேற்படி கல்விச் சங்கத்தின் தமிழ்ப் புலவராக இருந்தார். அச்சங்கத்தில் மற்றொரு புலவரான தாண்டவராய முதலியாரும் இவரும் சேர்ந்து வீரமாமுனிவர் இயற்றிய சதுரகராதியை 1824-ஆம் ஆண்டில் முதன் முதலாக அச்சிற் பதிப்பித்தார்கள். இதனைப் பின்வரும் வாக்கியங்களினால் அறியலாம். “பின்னர், தோலா விறலுள கோலா னரசுசெய் மேலா னிசை திகழ் நாலாம் ஜார்ஜ் நாளில் நன்றா மனுமுறை குன்றா வகையிவண் மன்றோ வதிபதி நின்றாளுகையில். கிறிஸ்து 1872-ஆம் வருஷத்துக்குச் செல்லாநின்ற சகவருஷம் 1746-இல் நிகழா நின்ற தாரண வருஷத்தில் மேற்சொல்லிய சங்கத்துத் தலைவராகிய ஸ்ரீ ரிச்சார்டு கிளார்க்குத் துரையவர்களனு மதிப்படி தமிழ்ச் சங்கத்தலைமைப் புலமை நடத்துந் தமிழ்ப் பண்டிதர்களாகிய தாண்டவராய முதலியார், இராமச்சந்திர கவிராயர் இவர்களால் சதுரகராதியில் மற்றைப் பெயர் தொகை தொடை என்னுமிம் மூன்றகராதிகளும் பரிசோதிக்கப்பட்டுக் கல்விச் சங்கத்துத் துரைகளால் மேற்சொல்லிய சென்னைச் சங்கத்தி லச்சிற் பதிப்பிக்கப்பட்டன.” (1860-இல் அச்சிடப்பட்ட சதுரகராதி முகவுரை.) இராமச்சந்திர கவிராயர் சகுந்தலை விலாசம், தாருக விலாசம், இரங்கூன் சண்டைநாடகம், இரணிய வாசகப்பா, மகாபாரத விலாசம் என்னும் நூல்களை இயற்றினார். இவர் இயற்றிய சகுந்தலை விலாசத்தை G. Deverze என்பவர் 1886-87-இல் பிரெஞ்சு பாஷையில் மொழிபெயர்த்தார். இராமசாமி ஐயர் இசைப்புலவராக இருந்த மகா வைத்தியநாத ஐயரின் தமயனார் இவர். இயற்றமிழ் இசைத் தமிழ்ப் புலவராக இருந்தவர். இவர் இயற்றிய நூல்கள்: திருச்செந்தில் சந்தவிருத்தம். திருச்செந்தில் யமக வந்தாதி, பெரிய புராணம் கீர்த்தனை, பார்வதி சரித்திரக் கீர்த்தனை பெரிய புராணக் கீர்ததனையைத் திருவாவடுதுறை மடத்தில் அம்பலவாண தேசிகர், சுப்பிரமணிய தேசிகர், மகாவித்து வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை முதலியோர் முன்னிலையில் இவர் அரங்கேற்றினார். இராமசாமி செட்டியார் இவரது ஊர் திருவெவ்வளூர் (திருவள்ளூர்.) சலசலோசனச் செட்டியாரின் தந்தையார் இவர். திருவிடைமருதூர்க் கலம்பகம், திருக்கழுக் குன்றக் கலம்பகம் என்னும் நூல்களை இயற்றியுள்ளார். இராமாநுச நாவலர் புதுச்சேரியில் பிறந்தவர். இவரைப் பற்றிய செய்திகள் தெரியவில்லை. இவர் இயற்றிய நூல்கள்: சுதரிசன கிரிப் புராணம், ஸ்ரீ முஷ்ணப் புராணம், திருச்சித்திரகூட புராணம், புருடார்த்த தீபிகை என்னும் பால வினாவிடை, வைணவ தத்துவம், வைராக்கிய சூரியோதயம், தேசிகன் திருப்பதிகம், மணவாள மாமுனிகள் திருப்பதிகம் எதிராச சதகம், ஆழ்வார் பஞ்சரத்தினம், வரதராசப் பெருமாள் பதிற்றுப்பத்தந்தாதி கூரத்தாழ்வார் பிரபாவம், போற்றித் திருப்பதிகம் முதலியன. இலிங்கப்ப ஐயர் உத்தமதானபுரம் இவர் ஊர். கம்பராமாயணச் சொற்பொழிவு செய்வதிலும் இசைப்பாட்டு பாடுவதிலும் வல்லவர். சுவாமிமலை முருகக்கடவுள்மீது குறவஞ்சி நாடகம் இயற்றியுள்ளார். உவின்ஸ்லோ ஐயர்10 ஐரோப்பியர். பாதிரியாராக இருந்து யாழ்ப்பாணத்திலும் சென்னையிலும் கிறிஸ்து சமயத்தொண்டு செய்தவர். 1823 முதல் 1840 வரையில் தமிழில் பல துண்டுப் பிரசுரங்கள் எழுதி அச்சிட்டார். உவின்ஸ்லோ தமிழ் - ஆங்கில அகராதியை எழுதி 1862-இல் அச்சிற்பதிப்பித்தார். ஏகாம்பரப் புலவர் யாழ்ப்பாணத்து உடுப்பிட்டியைச் சேர்ந்த வல்லிபட்டித் துறை இவரது ஊர். யாழ்ப்பாணத்திலிருந்த சேனாதிராய முதலியாரிடத்திலும் சென்னையில் இருந்த திருத்தணிகை விசாகப் பெருமாளை யரிடத்திலும் கல்விகற்றார். கந்தரந்தாதிக்கு உரை எழுதியிருக்கிறார். இராஜராம் கோவிந்த ராவ் இவர் தஞ்சாவூர் மராட்டிய அரசரின்கீழ் அலுவல் செய்த மராட்டிய குடும்பத்தினர். மராட்டிய பாஷையிலிருந்த வடநாட்டுப் பக்தர்களின் சரிதங்களைத் தமிழில் செய்யுளாக இயற்றி ஸ்ரீபக்தலீ லாமிர்தம் என்னும் பெயருடன் வெளியிட்டார். புண்டலீகர், ஜயதேவர், துளசி தாசர், நாமதேவர், கபீர்தாசர் முதலாக சக்குபாயி, குபாகும்பார், கமலாகரர், துக்காராம் இறுதியாக எண்பத்திரண்டு பக்தர்களின் சரிதங்கள் இதில் கூறப்படுகின்றன. 5397 செய்யுட்களைக் கொண்ட நூல். இந் நூல், 1888-ஆம் ஆண்டு, இந் நூலாசிரியரின் தம்பியாகிய மாதுசாமி சூரியவம்சி அவர்களால் தமது தஞ்சை ‘திவாகர முத்தி ராட்சரசாலையில்’ பதிப்பிக்கப்பட்டது. திரிசிரபுரம் தமிழ்த் தலைமைப் புலவராகிய மாகவித்துவான், வீ. கோவிந்த பிள்ளை அவர்களால் பார்வையிடப்பட்டு, தஞ்சை மாநகர் தமிழ்த் தலைமைப் புலவராகிய மதுரை முத்து உபாத்தியாயர் அவர்களால் ‘ஒருவாறு பார்வை யிடப்பட்டு’ அச்சிடப்பட்டது. (இந் நூலுக்குச் சாற்றுகவி கொடுத்தோர்: இயற்றமிழாசிரி யராகிய திரிசிரபுரம் மகாவித்துவான் வீ. கோவிந்த பிள்ளை அவர்கள், தஞ்சை மாநகரத்துத் தலைமைப் புலவராகிய மகாவித்துவான் மதுரை முத்து உபாத்தியாயர் அவர்கள், தஞ்சை மாநகரம் சதாவதானம் சுப்பிரமணிய ஐயரவர்கள், தஞ்சை மகாராஜா அவர்கள். மந்திரியாகிய பெரியண்ணாவென்னும் வேங்கடதாசர், வல்லம் மகாவித்துவான் சரவண உபாத்தியாயர் அவர்கள். தஞ்சை மாநகரம் மகாவித்துவான் மதுரை முத்துஉபாத்தியாயர் சீடர்களான கோவிந்தசாமிபிள்ளை முன்ஷி கோதண்டராம பிள்ளை, தஞ்சாவூர் எஸ். பி. ஜி பாடசாலைத் தமிழாசிரியர் இராமையா வஸ்தாது, இரோஜிராவ் மகாவித்துவான் கோவிந்தசாமி பிள்ளை அவர்கள் குமாரர் மகாவித்துவான் முன்ஷி நாராயணசாமி பிள்ளை, முத்தாம்பாள்புரம் சத்திரம் மகாவித்துவான் வீராசாமி உபாத்தியாயர், நாத்தூர் சுப்பு மூவரயர் புத்திரர் நல்லமுத்து என்கிற ராமநுஜதாசர் ஆகிய இவர்கள்.) கந்தசாமிப் பிள்ளை (ச.மு.) தென் ஆர்க்காடு மாவட்டம் காரணப்பட்டு கிராமத்தில் பிறந்தவர். வடலூர் இராமலிங்க சுவாமியுடன் நெருங்கிப் பழகியவர். இவர் இயற்றிய : வள்ளலார் வரலாறு, சுந்தர வினாயகர் மாலை, சாமிமலை கோடச வெண்பா, சாமிமலை வெண்பா, குருநேச வெண்பா, கொலை மறுத்தல், அருட்பிரகாசர் அற்புத அந்தாதி, நன்னிமித்தம் பராவல், உத்தரஞான சிதம்பர நாமாவளி, பாதார்ச்சனைக் கீர்த்தனை முதலியன. கனகசபை நாயகர் பொன்னப்ப நாயகரின் புத்திரர். புரசைப்பாக்கம் அஷ்டாவ தானம் சபாபதி முதலியாரின் மாணாக்கர். காஞ்சிபுரத்திலிருந்த சில கனதனவான்கன் விரும்பியபடி சில நூல்களை இயற்றினார். அவை காமாட்சியம்மையார் தோத்திரம், கருக்கமர்ந்தாள் பதிகம். மஞ்சணீர்க் கரை காளிமாதேவியார் பதிகம். சந்தைவல்லியம்மன் பதிகம், நுங்கம் பாக்கம் கருக்கமர்ந்தாள் பதிகம். சத்தித் திருவேகம்பர் சந்தப்பதிகம். இந் நூல்கள் 1876-ஆம் ஆண்டில் சென்னை மெமோரியல் அச்சுக்கூடத்தில் அச்சிடப்பட்டன. கவிராச நெல்லையப்ப பிள்ளை கவிராச ஈசுரமூர்த்தி பிள்ளை 19-ஆம் நூற்றாண்டில் திருநெல்வேலியில் வாழ்ந்திருந்தவர்கள். வித்துவான் பரம்பரையைச் சேர்ந்தவர்கள். இருவரும் சகோதரர்கள். இவர்கள் வீட்டில் ஏட்டுச்சுவடிகள் பரம்பரை பரம்பரையாகச் சேர்த்துப் போற்றிப் பாதுகாக்கப்பட்டிருந்தன. அச் சுவடிகளைக் கண்ட டாக்டர் உ.வே. சாமிநாதையர் வியந்து புகழ்ந்திருக்கிறார். தூசி படியாமல் அழகாகவும் ஒழுங்காகவும் ஏட்டுச்சுவடிகள் வைக்கப்பட்டிருந்த னவாம். இவர்கள் வீட்டுப் புத்தகசாலையிலிருந்து பல ஏட்டுச் சுவடிகளை உ.வே. சாமிநாதையர் பெற்றுக் கொண்டார். இவர்கள் வீட்டிலேதான் முதன் முதலாகக் “கொங்குவேள் மாக்கதை” என்னும் நூலைக் கண்டாராம். கண்டு, “கொங்குவேள் என்பவருடைய கதையாக இருக்கலாம் என்றெண்ணி அச்சுவடியை வைத்துக் கொண்டேன்” என்னு ஐயர் அவர்கள் தமது சரித்திரத்தில் எழுதியிருக்கிறார். இவர்கள் வீட்டிலிருந்துதான் அய்யர் அவர்கள் பத்துப்பாட்டு, எட்டுத்தொகை முதலிய சங்க நூல்களையும் பெற்றுக்கொண்டார். இவர்கள் தங்கள் வீட்டு ஏட்டுச் சுவடிகளைச் சாமிநாதை யருக்குக் கொடுத்ததல்லாமல், திருநெல்வேலியிலிருந்த வேறு பல புலவர்களிடமிருந்தும் ஏட்டுச் சுவடிகளை வாங்கிக் கொடுத்தார்கள். இவர்கள் இவ்வாறு செய்த பேருதவிக்காக ஐயரவர்கள் இவர்கள் மீது நன்றி பாராட்டி ஒரு வெண்பா பாடினார். அவ்வெண்பா இது: “சங்கத் தமிழைத் தளர்வின்றி யான்பெறவே அங்கங் குடன்வந்து அளித்திட்டோன்-பொங்குபுகழ் இன்போடு மீசனடி யெண்ணுநெல்லை யப்பனைப்போல் அன்போ டுதவிசெய்வா ரார்?” காசி விசுவநாத முதலியார். சைதாபுரம் என்பது இவர் ஊர். சைதாபுரம் என்பது சென்னைக்கு அருகில் உள்ள சைதாப்பேட்டை போலும். சென்னையில் இருந்தவர். டம்பாச்சாரி விலாசம். தாசில்தார் நாடகம். வேதப்பொருள் விளக்கம், யாப்பிலக்கண வினாவிடை என்னும் நூல்களை இயற்றினார். எடின்பர்க்கு பிரபு வந்தபோது “கும்மிப்பாட்டு” பாடினார் (1870) “கூலிக்கு மாரடிக்கும் கூத்தாடிச்சிகள் நடிப்பு” என்னும் நூலை 1870-இல் இயற்றினார். டம்பாச்சாரி விலாசம் என்பது சென்னையில் இருந்த டம்பாச்சாரி என்பவரின் உண்மை வரலாறு. பிரம்ஹ சமாஜ நாடகம்’ என்னும் நூலை 1871-இல் இயற்றினார். இந்நூலுக்கு பூண்டி அரங்கநாத முதலியார் புரசை அஷ்டாவதானம் சபாபதிமுதலியார். வித்துவான் காஞ்சிபுரம் இராமசாமி நாயகர், திரிசிரபுரம் கோவிந்த பிள்ளை முதலியோர் சாற்றுக்கவிகள் வழங்கியுள்ளனர். கார்த்திகேயப் புலவர் யாழ்ப்பாணத்துக் காரைத்தீவு இவர் ஊர், தம் தந்தையாராகிய முருகேசையரிடம் வடமொழியையும், சண்முக உபாத்தியாயரிடம் தமிழும் கற்றார். பின்னர், இருபாலைச் சேனாதிராய முதலியாரிடம் தமிழ் பயின்றார். இவருடைய தந்தையாரான முருகேசையர் “தன்னை யமகவந்தாதி” என்னும் நூலை இயற்றி அதனை முடிக்கும் முன்பே 1830-இல் காலமானார். அவர் முடிக்காமல் விட்டிருந்த முப்பது செய்யுட்களைக் கார்த்திகேயப் புலவர் பாடி முடித்தார். இவர், சிதம்பரம் சென்றிருந்தபோது திருத்தில்லைப் பல் சந்தமாலை என்னும் நூலை இயற்றினார். சி. வை. தாமோதரம் பிள்ளை. மகாவித்துவான் திருமயிலை சண்முகம் பிள்ளை இவர்களுடன் பழகியவர். கிருஷ்ணையங்கார் அஷ்டாவதானம் செய்தவர். முத்துராமலிங்க சேதுபதியின் அரண்மனைப் புலவராக இருந்தார். இவர் இயற்றிய நூல்களாவன: நாலு மந்திரி கதை, பஞ்சதந்திரம், வீரகுமார நாடகம், விட நிக்கிரக சிந்தாமணி. கிளார்க்கு ஐயர்11 ஐரோப்பியர் கிறிஸ்துமத போதகர். தமிழில் சில நூல்களை எழுதியிருக்கிறார். தீர்க்க தரிசன வியாக்கியானம், போதகர் ஒழுக்கம் என்னும் நூல்களை எழுதி 1865-ஆம் ஆண்டில் பாளையங் கோட்டையில் அச்சிற்பதிப்பித்தார். இராமாநுச கவிராயரிடத்தில் தமிழ் கற்றார். குமரகுருதாச சுவாமிகள் இவரூர் பாம்பன். இவர் இயற்றிய நூல்கள்: நாலாயிரப் பிரபந்த விசாரம், பரிபூரணானந்த போதம், தகராலயம், திவோத்திய சடாச்சரோபதேசம் என்னும் சிவஞான தேசிகம் (1893), இராமசேது மான்மியம் (1897), சுப்பிரமணியம் என்பதைக் குறித்த விசாரம் (1899), திருப்பா (1899) முதலியன. சரவணப்பொருமாள் கவிராயர் இவருடைய ஊர் முதுகுளத்தூர். அஷ்டாவதானம் செய்தவர். இராமநாதபுரம் சோமசுந்தரம் பிள்ளையிடம் கல்வி பயின்றார். முத்துராமலிங்க சேதுபதியின் அவைப்புலவராக இருந்தார். சேதுபதி யமைச்சர் முத்திருளப்பப்பிள்ளைமீது காதல் பிரபந்தம் பாடினார். பணவிடு தூது, அசுவமேத யாக புராணம், வினாயகர் திருமுக விலாசம் என்னும் நூல்களை இயற்றினார். இவர் பாடிய “ஆரடி வீதியில்” என்னும் பாட்டு இனிமையுடையது என்பர். கோபாலகிருஷ்ண பாரதி நாகைப்பட்டினத்துக்கு அடுத்த நரிமணம் என்னும் ஊரில் பிறந்தவர்: இசைக்கலையில் வல்லவர்: இசைப்பாட்டுக்கள் இயற்று வதிலும் வல்லவர். மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை, மாயூரம் வேதநாயகம் பிள்ளை. திருவையாறு தியாகையர் முதலியவர்களிடம் பழகியவர். இவர் இயற்றிய நூல்கள்: நந்தனார் சரித்திரக் கீர்த்தனை, திருநீலகண்ட நாயனார் கீர்த்தனை, இயற்பகை நாயனார் சரித்திரக் கீர்த்தனை. சரவணப் பெருமாளையர் திருத்தணிகை சரவணப் பெருமாளையர் என்று கூறப்படுவார். விசாகப் பெருமாளையர் இவருடைய தமையனார். இவ்விருவரும் திருத்தணிகை கந்தப்பையரின் பிள்ளைகள். வீரசைவ மரபினர். இவர்களுக்கு விசாகப்பெருமாள் சரவணப்பொருமாள் என்று பெயர் இட்டதற்கு ஒரு காரணம் கூறுவது உண்டு. அஃது என்ன வென்றால் கூறுதும்: திருத்தணிகை கந்தப்பையர் திருத்தணிகையில் வாழ்ந்திருந் தார். இவர் வீரசைவர். இவருக்கு இரண்டு மனைவியர் உண்டு. இவர்களுக்குப் பிள்ளைப் பேறில்லாமையால் திருத்தணி முருகனை வேண்டிக் கொண்டனர். பிள்ளைப்பேறுண்டாகவில்லை. பிறகு இவ்விருமனைவியரும் திருப்பதிப் பெருமாளை வேண்டிக் கொண்டனர். பிறகு இவர்களுக்குப் பிள்ளைப்பேறுண்டாயிற்று. பிள்ளைகளுக்குப் பெயரிடும்போது தணிகைமலை முருகன் பெயரைச் சூட்டக் கந்தப்பையர் விரும்பினார். ஆனால், மனைவிமார் அதற்கு இணங்கவில்லை. திருமால் திருவருளால் பிறந்த பிள்ளைகள் ஆதலால் பெருமாள் பெயரைச் சூட்டவேண்டும் என்று பிடிவாதம் செய்தார்கள். வீரசைவராகிய கந்தப்பையர் என்ன செய்வதென்று சிந்தித்தார். மனைவியரையும் திருப்திப் படுத்தித் தமது சைவக்கொள்கை யையும் நிலைநிறுத்தி அப்பிள்ளைகளுக்குச் சரவணப்பெருமாள், விசாகப் பெருமாள் என்று பெயரிட்டார். சரவணன், விசாகன் என்பன முருகனுடைய பெயர்கள், பெருமாள் என்பது சிறப்பாகத் திருமாலுக் குரியபெயர். ஆனால், அப்பெயர் முருகனுக்கும் வழங்குவது உண்டு. திருப்புகழ்ப் பாக்களில் முருகன், பெருமாள் என்று கூறப்படுவது காண்க, பெருமாள் என்னும் பெயரைச் சூட்டியபடியால் மனைவியர் மகிழ்ச்சியடைந்தார்கள். முருகன் பெயரைச் சூட்டியபடியால் கந்தப் பையர் மகிழ்ச்சியடைந்தார். சரவணப்பெருமாளையர், இயற்றமிழாசிரியர் இராமாநுச கவிராயரிடம் கல்வி பயின்றார். இவர் இயற்றிய நூல்கள்: குளத்தூர்ப் புராணம், கோளதீபிகை, அணியியல் விளக்கம். இயற்றமிழ்ச் சுருக்கம், இலக்கணச் சுருக்க வினாவிடை. திருவாசகத்தை அச்சிற் பதிப்பித்தார். 1857, நைடதத்தை 1842-இல் அச்சிற்பதிப்பித்தார். வாக்குண்டாம், நல்வழி இரண்டுக்கும் உரை எழுதினார் (1841); பழமலையந்தாதிக்கு உரை எழுதினார்: (1832), திருக்குறளுக்கும் உரை எழுதினார் (1875), திருவள்ளுவமாலை நாலடி நானூறு, திருவெங்கைக் கோவை என்னும் நூல்களுக்கும் உரை எழுதினார். நைடதம் (கைக்கிளைப் படலம் வரையில்), பிரபுலிங்கலீலை (மாயை யுற்பத்திப் படலம் வரையில்) இவற்றுக்கும் உரை எழுதினார். (குறிப்பு: இவர் முடிக்காமல் விட்ட உரைகளை இவருடைய மகனாரான கந்தசாமி ஐயர் உரை எழுதி முற்றுவித்தார். நைடதம் (மாலைப்படலம் முதல் இறுதி வரையிலும்), பிரபுலிங்கலீலை (மாயை பூசைகதி முதல் வசவண்ணர் வந்தகதி வரையில்) இவைகளுக்கு உரை எழுதினார். அன்றியும் கந்தசாமி ஐயர் திருவாதவூரர் புராணத்திற்கும் உரை எழுதினார்.) சாமிநாதப் பிள்ளை புதுவை வித்துவான் சாமிநாதப்பிள்ளை புதுச்சேரியில் பிறந்தவர், R. C. எல்லிஸ் துரைக்குத் தமிழாசிரியர். ஞானாதிக்கராயர் காப்பியம் என்னும் நூலைச் செய்யுளாக இயற்றினார். சேசு நாதர் பிள்ளைத் தமிழையும் இயற்றினார். சேசுநாதர் பிள்ளைத்தமிழ், தஞ்சைமாநகரம் வித்துவான் அருளப்ப முதலியாரால் 1864-ஆம் ஆண்டில் சென்னையில் அச்சிடப்பட்டது. சிதம்பா சுவாமிகள் திருப்போரூர் சரவண தேசிகரின் மாணவர் இவர். இவர் இயற்றிய நூல்கள், குமாரதேவர் நெஞ்சுவிடுதூது, குயிற்பத்து, மீனாட்சியம்மை கலிவெண்பா, பஞ்சாதிகார விளக்கம், சரவணதேசிகர் கலித்துறை, சரவணதேசிகர் மாலை, சரவணதேசிகர் இரட்டை மணிமாலை, சரவணஞானியார் ஒருபா ஒரு பஃது, சரவணசற்குரு மாலை, தோத்திரப் பிரபந்தத்திரட்டு. (1897) இ. சாமுவேல் பிள்ளை இவர் வரலாறு ஒன்றும் தெரியவில்லை. இவர், தொல்காப்பிய நன்னூல் என்னும் பெயருள்ள இலக்கண நூலை எழுதி 1858-ஆம் ஆண்டு அச்சிற் பதிப்பித்தார். தொல்காப்பியத்துக்கும் நன்னூலுக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளை விளக்கிக் கூறுவது இந்நூல். புதுவைத் தமிழ்ப் புலவர் பொன்னுசாமி முதலியார். தரங்காபுரம் சுண்முகக் கவிராயர், புரசை அஷ்டாவதானம் சபாபதி முதலியார் முதலியோர் இந்நூலுக்குச் சிறப்புப்பாயிரம் அளித்திருக்கிறார்கள். சாமுவேல் பிள்ளை வேறு நூல்களையும் எழுதியிருக்கிறார். சிவக்கொழுந்து தேசிகர் கும்பகோணத்துக்கு அருகிலுள்ள கொட்டையூர் இவருடைய ஊர். கொட்டையூருக்குக் கோடீச்சுரம் என்னும் பெயரும் உண்டு. இவர் சிறந்த புலவர். தஞ்சாவூரை அரசாண்ட மகாராட்டிர மன்னர் மரபினரான சரபோஜி அரசரின் (கி.பி. 1798-1832) அவைப் புலவராக இருந்தார். அக்காலத்தில் சரபேந்திர வைத்திய முறைகள், சரபேந்திரர் வைத்தியம், சரபேந்திரர் சன்னிரோக சிகிச்சைகள் என்னும் வைத்திய நூல்களை எழுதினார். சன்னிரோக சிகிச்சைகள் என்னும் நூல் 1826-இல் இயற்றப்பட்டது. அக்காலத்தில் அரசாண்ட ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனி யார் சென்னையில் கல்விச் சங்கம் ஒன்றை நிறுவியிருந்தார்கள், அதில் தமிழ்த் தலைமைப் புலவராக இருந்தவர் தாண்டவராய முதலியார். அச் சங்கத்துக்கு மற்றொரு புலவர் வேண்டியிருந்தமையால், அரசாங் கத்தார் சரபோஜி மன்னருக்குக் கடிதம் எழுதிச் சிவக்கொழுந்து தேசிகரை அனுப்பும்படிக் கேட்டனர். அவ்வாறே மன்னர் அனுப்பி வைத்தபோது சிவக்கொழுந்து தேசிகர் சென்னைக்கு வந்து சங்கத்தின் புலவராக இருந்தார். தாண்டவராய முதலியார், காஞ்சிபுரம் சபாபதி முதலியார், திருத்தணிகை சரவணப் பெருமாளையர், விசாகப் பெருமாளையர், இயற்றமிழாசிரியர் இராமாநுசக் கவிராயர் அனந்தபாரதி ஐயங்கார் முதலியோர் இவர் காலத்துப் புலவர். திருத்தணிகை விசாகப் பெருமாளையரும் சிவக்கொழுந்து தேசிகரும் சேர்ந்து 1857-ஆம் ஆண்டில் திருவாசகத்தை ஏட்டுச் சுவடியிலிருந்து அச்சிற் பதிப்பித்தார்கள். இதுவே முதன்முதல் அச்சிடப்பட்ட திருவாசகம் போலும். சிவக்கொழுந்து தேசிகர் இயற்றிய நூல்கள்: திருவிடை மருதூர்ப் புராணம், ஆச்சாபுரத் தல புராணம், கோட்டீசுவரக் கோவை, பெருவுடையாருலா, சரபேந்திர பூபால குறவஞ்சி நாடகம், கோட்டீசுவர உலா, கோட்டீசுவர உலா இப்போது கிடைக்கவில்லை. சிவக்கொழுந்து தேசிகர் 90 ஆண்டு வாழ்ந்திருந்தார். சிவசுப்பிரமணியக் கவிராயர் 19-ஆம் நூற்றாண்டின் முதற்பகுதியில் இருந்தவர், திருநெல் வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் தாலூகா கல்லிடைக்குறிச்சி இவருடைய ஊர். சாமிநாதம் என்னும் இலக்கண நூலையும், பொதிகைநிகண்டு என்னும் நிகண்டு நூலையும் இயற்றிய சாமிநாத கவிராயரின் மகனார் இவர். இவர் பூவைப் புராணம் என்னும் புராணத்தை இயற்றி அதனைக் கொல்லம் ஆண்டு 985-இல் (கி.பி. 1810-இல்) அரங்கேற்றினார். சின்னைய செட்டியார் வீர. லெ. சின்னைய செட்டியார் தேவகோட்டையில் பிறந்தவர். திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை, வன்றொண்டச் செட்டியார் என்னும் நாராயணச் செட்டியார் முதலியவர்களிடத்தில் தமிழ் பயின்றார். இவர் இயற்றிய நூல்கள் திருவொற்றியூர்ப் புராணம், குன்றக்குடிப் பிள்ளைத் தமிழ். நகரத்தார் வரலாறு. பிரபஞ்ச பந்தகம், தேவைத் திரிபந்தாதி. தேவைத் திரிபந்தாதியை இவரிடம் ரா. இராகவையங்கார் பாடங்கேட்டார். சுப்பிரமணிய ஐயர் தஞ்சை சதாவதானம் சுப்பிரமணிய ஐயர் என்பது இவர் பெயர். இவர் இயற்றிய நூல்கள்: காளையார் கோயிற் புராண வசனம், 1897: காளையார் கோயிற் புராணம், 1899: கோட்டூர்ப் புராணம், 1898, பருவகாலங்களின் வருணனையைப் பழைய நூல்களிலிருந்து தொகுத்துப் ‘பருவகால வருணனை’ என்னும் பெயருடன் 1904-ஆம் ஆண்டு அச்சிற் பதிப்பித்தார். சுப்பிரமணிய பண்டிதர் ஆயுர்வேத பாஸ்கரர் சுப்பிரமணிய பண்டிதர் என்பது இவரது பெயர். சிதம்பரம் தளவரிசை முத்தைய ஞானியாரின் மகனார். வைத்தியம் பயின்றவர், தைலவருக்கச் சுருக்கம் என்னும் நூலுக்கு உரை எழுதி 1868-ஆம் ஆண்டில் அச்சிட்டார். ஜீவரக்ஷாமிர்தம் என்னும் நூலை 1864- இல் மொழி பெயர்த்து எழுதி அச்சிட்டார் பதார்த்தகுண சிந்தாமணி என்னும் பழைய நூலை 1867-இல் அச்சிட்டார். இவர் அச்சிட்ட தைலவருக்கச் சுருக்க உரைப்பதிப்புக்கு. உரையாசிரியராகிய காஞ்சிபுரம் வித்துவான் சபாபதி முதலியார் சிறப்புப் பாயிரம் வழங்கியுள்ளார். மேற்படி நூலுக்குச் சாற்றுகவி வழங்கிய வர்கள் - கௌர்ன்மெண்டு யூனிவர்ஸிட்டி பாடசாலைத் தமிழ்த் தலை மைப் புலமை நடாத்திய திருத்தணிகை விசாகப் பெருமாளையர், வித்து வான் காஞ்சிபுரம் சபாபதி முதலியார் மாணாக்கர் அஷ்டாவதனம் சபாபதி முதலியார், பச்சையப்ப முதலியார் தலைமைக் கல்விச்சாலைத் தலைமைப் பண்டிதர் ஆ. சுப்பராய பிள்ளை, சென்னைக் கவர்ன் மெண்டு நார்மல் ஸ்கூல் தமிழ்த் தலைமைப் புலவர் சோமளபுரம் இராசகோபாலப் பிள்ளை, காஞ்சிபுரம் சபாபதி முதலியார் மாணாக்கர் மயிலை மா. சுப்பராய முதலியார், சுப்பிரமணிய பண்டிதர் மாணாக்கர் ஆ.செ. வெங்கடசால முதலியார். எனவே இவர்கள் ஒரே காலத்தில் வாழ்ந்திருந்தவராவார்கள். சுப்பிரமணிய பிள்ளை யாழ்ப்பாணத்து மானிப்பாய் இவர் ஊர். பதார்த்த விஞ்ஞானம் (மெடீரியா மெடிகா அகராதி, யாழ்ப்பாணம் 1887), பாலவைத்தியம் (யாழ்ப்பாணம் 1889), பிரசவ வைத்தியம் (யாழ்ப்பாணம் 1892) என்னும் நூல்களை எழுதியுள்ளார். செய்யப்ப முதலியார் சொர்க்கபுரம் இராமலிங்கத் தம்பிரானிடம் தமிழ் பயின்றார். சென்னை செய்ன்ட்மேரி கல்லூரியில் தமிழாசிரியராக இருந்தார். வெற்றிக்கொடியோன் என்னும் பத்திரிகையின் ஆசிரியராக இருந்தார். தமிழ் வித்தியார்த்தி விளக்கம் என்னும் நூலை 1894-ஆம் ஆண்டில் எழுதி அச்சிட்டார். சொக்கலிங்க சிவப்பிரகாசர் சிதம்பரம் இவரூர். விருத்தாசலம் முத்தையா சுவாமிகளிடம் கல்வி பயின்றார். துறையூர் வீரசைவ ஆதீனத்தின் 20-ஆவது தலைவராக அமர்ந்து, சொக்கலிங்க சிவப்பிரகாச பண்டார சந்நிதிகள் என்னும் பெயர் பூண்டார். பெரியநாயகி அம்மன் பிள்ளைத்தமிழ் என்னும் நூலை 1889-இல் இயற்றினார். குமாரதேவர் அபிடேகமாலை திரிபதார்த்த உண்மை, உபதேச விளக்கம் என்னும் நூல்களையும் இயற்றினார். குமாரதேவர் இயற்றிய சுத்தசாதகம் என்னும் நூலுக்கு உரை எழுதினார். ஞானப்பிரகாசம் பிள்ளை இவர், மாயூரம் வேதநாயகம் பிள்ளையின் தம்பியார், மாயூரம் முன்சீபு கோர்ட்டிலும், தரங்கம்பாடி முன்சீபு கோர்ட்டிலும் எழுத்தாளராக அலுவல் செய்தார். கிறிஸ்து சமயத்தவர். மகா வித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களின் மாணவர். அவரிடத்தில் மிகுந்த அன்புள்ளவர். மகாவித்துவான் பிள்ளைய வர்கள் இவருக்குச் செய்யுளாக ஒரு கடிதம் எழுதி, ஒரு சாய்வு நாற்காலியை அனுப்பும்படிக் கேட்டுக்கொண்டிருந்தார், அந்தக் கடிதம் இது. “உறுவலியின் இடங்கொண்டு வனப்பமைந்த நாற்காலி ஒன்று வேண்டும்; மறுவறுநாற் காலியெனல் யானையன்று குதிரையன்று வல்லேறன்று கறுவகல்பாற் பசுவன்றால் இவையெலாம் இயங்குதல்செய் கடன்மேற்கொள்ளும் பெறுபவர்பால் இயங்காது வைத்தவிடத் தேயிருக்கப் பெற்றதாமே. அத்தகைய தொன்றனுப்பின் அதினமர்ந்து மிக்கசுகம் அடைவேன்யானும் உத்தமநற் குணத்தினுயர் நீயுமிகு சீர்த்தியனாய் ஒளிராநிற்பை வித்தமற் றஃதெவ்வா றிருப்பதற்கும் இடங்கொடுத்தல் வேண்டுமேய சுத்தமிகும் அதனைவரு பவன்பாலே யனுப்பிடுதல் தூயதாமே!” பிள்ளையவர்கள் இக்கடிதத்தில் விரும்பியபடியே ஞானப் பிரகாசம் பிள்ளை ஒரு சாய்வு நாற்காலியை அனுப்பி வைத்தார். வேதநாயகம் பிள்ளையவர்கள் இயற்றிய நீதிநூல் என்னும் செய்யுள் நூலுக்கு ஞானப்பிரகாசம் பிள்ளை 1885-ஆம் ஆண்டில் உரை எழுதினார். வேதநாயகம் பிள்ளை விருப்பப்படியே இவ்வுரை யை எழுதினார். ஆனால், நூலாசிரியர் உயிரோடிருக்கும்போது இவ்வுரை அச்சிடப்படாமற் போயிற்று. இவ்வுரையும் நீதிநூல் மூலமும் 1892-ஆம் ஆண்டில் அச்சிடப்பட்டன. தானியல் பிள்ளை இவர் கிறிஸ்துவர். தரங்கம்பாடியில் ஒல்லாத்து அரசாங்கத்தின் மொழிபெயர்ப்பாளராக இருந்தார். நாள்தோறும் ஒரு மணிக்கூறு கிறிஸ்து சமய சம்பந்தமான நூல்கள் எழுதுவது என்று உறுதி செய்துகொண்டு அதன்படி நாற்பது ஆண்டு எழுதினார். பல நூல்களை எழுதி வெளியிட்டார். இவர் எழுதிய நூல்கள்: பரமன்டலங்களில் தங்கள் பொக்கிஷம் உண்டென்றிருக்கிற பராபரனுடைய பிள்ளைகளின் ஆபரணப்பெட்டி. இது சென்னை வேப்பேரியில் 1800-இல் அச்சிடப்பட்டது. சன்மார்க்க விளக்கம் (1810), ஏசுநாதர் பாடுபட்ட சரித்திரத்தியானம் (இரண்டு பாகம் 1835), ஞான முசிப்பாறு நேரம் (1841), ஞான உபதேச விளக்கம் (1853) இந் நூல்களை ஜர்மனி மொழியிலிருந்து மொழிபெயர்த் தெழுதினார். திருச்சிற்றம்பல தேசிகர் கம்ப ராமாயண வசனம். உத்தரகாண்ட வசனம் இவற்றை 1815-ஆம் ஆண்டில் எழுதினார். இலக்கணநூல் ஒன்றை வசனமாக எழுதினார். திருப்பாற்கடல் நாதன்கவிராயர் இவர் திருநெல்வேலியிலிருந்த மகா வித்துவான் முத்து வீரிய உபாத்தியாயரின் நண்பர். முத்துவீரிய உபாத்தியாயர் இயற்றிய முத்துவீரியம் என்னும் இலக்கண நூலுக்கு இவர் உரை எழுதினார். இரேனியூஸ் ஐயர் என்னும் பாதிரியாரின் நண்பர். பாதிரியார் 1838-இல் காலமானபோது அவர்மீது இரங்கற்பாபாடினார். இவர் வீட்டில் ஏட்டுச் சுவடிகள் இருந்தன. உ.வே. சாமிநாதையர் இவரிடத்திலிருந்தும் பத்துப்பாட்டு, சீவக சிந்தாமணி, கொங்குவேள் மாக்கனத முதலிய ஏட்டுச் சுவடிகளைப் பெற்றுக்கொண்டார். திருவேங்கடம் பிள்ளை பிரமபுரி இவரது ஊர். வேலூர் அமெரிக்கன் மிஷன் பாலிகா பாடசாலையில் தமிழ்ப் புலவராக இருந்தவர். காலப் புத்தகம் எழுதி அச்சிட்டார். நந்த மண்டல சதகத்துக்கு உரை எழுதினார். நந்த மண்டல சதகம், காஞ்சிபுரம் மாத்ருபூத ஐயரால் 220-விருத்தங்களினால் இயற்றப்பட்டது. அந்த நூலுக்குப் பிள்ளையவர்கள் உரை எழுதி, தொண்டை மண்டலம் அச்சியந்திர சாலையில் 1894-95-ஆம் ஆண்டில் அச்சிட்டார். அவ்வுரையைப் பாராட்டி, புரசை அஷ்டாவதானம் சபாபதி முதலியார் மாணாக்கர் மகாவித்துவான் திருமயிலை சண்முகம் பிள்ளையவர்கள் அளித்த சாற்றுகவி இது. “அந்த மண்டலத் தவன்றனக் கிளையவ னுளரி யுறைகின்ற சொந்த மண்டல மீதெனச் செந்தமிழோர் சொலு நெறியோர்ந்து நந்த மண்டல சதகமா மாதுரு பூதநா லவனோத இந்த மண்டலஞ் சொலத்திரு வேங்கடக் கவியுரை யிசைத்தானே.” துருஐயர்12 இவர் ஐரோப்பியப் பாதிரியார். இயற்றமிழாசிரியர் இராமாநுசக் கவிராயரிடம் தமிழ் பயின்றார். கிறிஸ்து சமயச்சார்பான துண்டுப் பிரசுரங்கள் பவலற்றைத் தமிழில் எழுதி வெளியிட்டார். நன்னூலுக்கு காண்டிகை உரை எழுதும்படி கேட்டுக்கொண்டவர்களில் இவரும் ஒருவர். காண்டிகை யுரை எழுதிய இராமநுசக் கவிராயர், அவ் வுரைப்பாயிரத்தில் இவரை. “இல்லையாத் தன்னிக ரெனஉல கோதுறூஉம் முல்லையாத் துருவெனும் ஒளிகொள் போதகன்” என்று கூறியிருக்கிறார். இராமாநுசக் கவிராயர் திருக்குறள் 63 அதிகாரங்களுக்குப் பரிமேலழர் உரையுடன் தமது விளக்க உரையும் எழுதி அச்சிட்ட போது, இவர் அதற்கு ஆங்கிலத்தில் விளக்கம் எழுதினார். இக்குறள் 1840-1852-ஆம் ஆண்டுகளில் பகுதி பகுதியாக அச்சிடப்பட்டது. துரைசாமி மூப்பனார் சோழ நாட்டினர். இவர் இயற்றிய நூல்கள் அயோத்திநகர் மான்மியம் (1881), பிரசன்ன ராகவம் (1883) ஹம்ச சந்தேசம் (1883), மகாபாரதச் சுருக்கம், கம்பராமாயண அருங்கவிப் பொருள் விளக்கம், ஜானகி பரிணயம். தேவராச பிள்ளை மகாவித்துவான் திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர் களின் மாணவர் இவர். சூதசங்கிதை, தணிகாசல மாலை, சேடமலை மாலை, பஞ்சாக்கர தேசிகர் பதிகம், பஞ்சரத்தினம், குசேலோ பாக்கியானம் என்னும் நூல்களை இயற்றினார். நயினார் முகம்மது பாவாப் புலவர் இவருக்குச் சொர்ணகவி என்னும் சிறப்புப் பெயர் உண்டு. கி.பி. 1852-இல் வாழ்ந்திருந்தவர். செய்குதாவூது வலிவுல்லா பேரில் பிள்ளைத்தமிழ் பாடியுள்ளார். கியாமத்மாலை, கொம்பு-ரவ்வு இல்லா வண்ணம், வழி நடைச்சிந்து என்னும் செய்யுள்களையும் இயற்றி யுள்ளார். நாராயணசாமிப் பிள்ளை (தி. கோ.) பெங்களூர் கல்லூரியில் தமிழாசிரியராக இருந்தவர். இராமா யண வெண்பா என்னும் செய்யுள் நூலையும், மாமி மருகியர் வாழ்க்கை என்னும் வசன நூலையும் எழுதினார். பரமசிவத் தம்பிரான் தருமபுர ஆதீனத்துத் தம்பிரான் சுவாமிகளில் ஒருவர். திருவாவடுதுறை ஆதீனத்தில் தங்கியிருந்து மாணவர்களுக்குத் தமிழ்க் கல்வி புகட்டி வந்தார். இலக்கணத்தில் வல்லவர். செய்யுள் இயற்றுவதிலும் சொற்பொழிவு செய்வதிலும் வல்லவர். திருவாவடு துறை யாதீனத்து மகா சந்நிதானமாக எழுந்தருளியிருந்த சுப்பிரமணிய தேசிகர் (1833-1888) மீது மும்மணிக் கோவை என்னும் நூலை இயற்றினார். பள்ளிகொண்டான் பிள்ளை 19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்தவர். இவருக்கு எதிராஜ தாசர் என்னும் பெயரும் உண்டு. சென்னைப் புரசைப் பாக்கத்தி லிருந்த அட்டவதானம் சபாபதி முதலியாரிடம் தமிழ் பயின்றார். செய்யுள் இயற்றும் வல்லமை படைத்தவர். இவர் இயற்றிய பிரபந்த நூல்கள்: மணவாள மாமுனிகள் நான்மணிமாலை, எதிராச மாமுனிகள் நான் மணிமாலை, நம்மாழ்வார் நான்மணிமாலை, முதலாழ்வார் மும்மணிக் கோவை, அத்திகிரி யந்தாதி, சேடகிரி யந்தாதி, கோதைநாயகியார் மாலை, வேதவல்லித் தாயார் மாலை, உருப்பிணித் தாயார் மாலை, அணிமா மலர் மங்கைத் தாயார் மாலை, என்னைப் பெற்ற தாயார் மாலை, கனகவல்லித் தாயார் மாலை, பெருந்தேவித் தாயார் மாலை, அலர்மேல் மங்கைத் தாயார் மாலை, அரங்கநகரன்னை யடைக்கல மாலை, பார்த்தசாரதிப் பரஞ்சுடர் மாலை, பார்த்தசாரதி மாயவன்மாலை, பார்த்தசாரதிப் பெருமான்மாலை, வீரராகவப் பெருமாள் மாலை அரங்க நகரப்பனடிப் புகழ்ச்சி மாலை. இவை ஒவ்வொன்றும் 102 செய்யுட்களை யுடையன. தொண்டைநாட்டு 22 வைணவத் திருப்பதிகளின் மேலும் பஞ்சரத்தினங்கள் இயற்றியிருக்கிறார். இவருடைய நூல்கள்: “பிரபந்த வித்வான் கொ. பள்ளி கொண்டான் பிள்ளையவர்கள் இயற்றிய பிரபந்தத் திரட்டு” என்னும் பெயரால் 1899-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், திருமணம் செல்வ கேசவராய முதலியார் அவர்களால், சென்னப்பட்டினம் செங்கல்வராய நாயகர் ஆர்பனேஜ் அச்சுக் கூடத்தில் பதிப்பிக்கப்பட்டன. இந்தப் பதிப்பில் கீழ்க்கண்டவர்கள் சாற்று கவிபாடியுள்ளனர். பிரபந்த வித்துவான் காஞ்சிபுரம் இராமசாமி நாயுடு, பெங்களூர் சென்ட்ரல் காலேஜ் தமிழ்த் தலைமைப் பண்டிதர் தி. கோ. நாராயண சாமி பிள்ளை, தி. செல்வகேசவராய முதலியார் M.A. புவனகிரி பிரபந்த வித்வான் அழகிய மணவாளதாசர், கோயம் புத்தூரைச் சேர்ந்த பூளைமேடு வித்துவான் வேணு கோபாலசாமி நாயுடு. பள்ளிகொண்டான் பிள்ளையவர்கள் தம் இயற் தமிழாசிரியர் புரசை அஷ்டாவதானம் சபாபதிமுதலியார் மீது பாடிய துதிகவி: புரசைப்பதிவள ரட்டாவதானப் புலவர்கணத் தரசைத் தமிழ்க் கல்வி வேட்டோர் நிளைக்கு மனக் கரினீள் சரசைச் சபாபதிமாலை யெப்போதினுந் தாழ்த்து தொழுந் சிரசைக் கரத்தைப் படைத்தே னிதுவுமென் செய்தவமே பவர் ஐயர்.13 எஸ். பி. ஜி. மிஷனைச் சேர்ந்தவர். திருநெல்வேலியில் வேதியர் புரத்தில் இருந்தவர். சாஸ்திரம் ஐயர் என்னும் சைன வித்துவானிடம் கல்வி பயின்றவர். புலவர்களால் நன்கு மதிக்கப்பட்டவர். கிறிஸ்து மத சம்பந்தமான சில தமிழ் நூல்களை எழுதியிருக்கிறார். மிஷனரி சங்கங்கள் ஒன்று சேர்ந்து தமிழ் விவிலிய நூலைச் சுத்த பதிப்பாக வெளியிட முயன்றபோது. அந்தப் பொறுப்பைப் பவர் ஐயரிடத்தில் ஒப்படைத்தனர். பிறகு, பழைய ஏற்பாட்டையும் திருத்தி வெளியிட்டார். இவர் இயற்றிய நூல்கள்: வேத அகராதி 1841, நியாயப் பிரமாண விளக்கம் 1847, விசுவாசப் பிரமாண விளக்கம், இந்து மதத்துக்கும் பாப்பு மதத்துக்கும் இருக்கிற சம்பந்த விளக்கம் 1851, தர்ம சாஸ்திர சாரம் 1857. சிந்தாமணி, நாமகளிலம்பகத்தை நச்சினார்க் கினியர் உரையுடனும் ஆங்கில விளக்கத்துடனும் அச்சிட்டார். இப்பதிப்புக்கு இவருடன் உதவியாக இருந்தவர் முத்தையாப்பிள்ளை என்பவர். இந்தப் புத்தகம் 1868-ஆம் ஆண்டு சென்னையில் அச்சிடப்பட்டது. சென்னை மாகாணக் கல்லூரியில் பி.ஏ. வகுப்புக்குப் பாடமாக வைக்கப்பட்டது. சாதி வித்தியாச விளக்கம் 1857. கிறிஸ்து மார்க்கம் இந்து தேசத்தில் விருத்தியான சரித்திரம் 1879, பிரசங்க ரத்தினாவளி 1875, பதமஞ்சரி (ஆங்கிலத் தமிழ்ச் சொற்கள்) 1852 என்னும் நூல்களையும் எழுதினார். பவர் ஐயர் நன்னூல் இலக்கணத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். அந்த மொழிபெயர்ப்பை டாக்டர் கிரால் ஐயர்.14 ஜெர்மனி தேசத்தில் லீப்ஸிக் நகரத்தில் 1855-ஆம் ஆண்டு அச்சிற் பதிப்பித்தார். பவர்ஐயர் தாம் இயற்றிய வேதஅகராதியின் கடவுள் வாழ்த்துச் செய்யுள் இது: “சீர்பெருகு பரமண்ட லாதிபதி யாவிலுஞ் சிறந்த காரண ராகிய திரியேக தேவனே யுமதருளினா லடிமை செய்யத் துவக்கி யிந்தப் பேர்பெருகு வேத அகராதியை முடித்ததாற் பேதையேனு மது சமுகம் பெருமையுற வெண்ணியே திருவடி மலர்க்குமுன் பெலவீன காணிக் கையாய் நேர்பெருக வைக்கிறேன் ஏற்றிதளை வாசிக்கு நீணிலத் தோர்கட் கெலாம் நெஞ்சினிற் பதியுமஞ் ஞானவிரு ளோடவும் நிலைபெற்ற பாவ மறவும் ஏர்பெருகு நற் சத்திய வேதமே யெவரிலு மிருந்து நன்மாட்சி பெறவும் ஏகனே கிருபை செய்தாசீர் வதித்தருளும் எந்தையே முந்து பொருளே. பீற்றர் பெர்சிவல் ஐயர்15 வெஸ்ஸியன் மிஷனைச் சேர்ந்தவர் இவர். ஐரோப்பியர். 1833-இல் யாழ்ப்பாணத்துக்கு வந்தார். யாழ்ப்பாணத்துக் கல்லூரியை நிறுவினார். தமது தமிழ்ப் பண்டிதரான ஸ்ரீ ஆறுமுகநாவலர் உதவியைக் கொண்டு விவிலிய நூலை மொழிபெயர்த்தார். யாழ்ப்பாணத்தில் 17 ஆண்டு கிறிஸ்து சமய ஊழியம் செய்தார். கிறிஸ்து சமயத் துண்டுப் பிரசுரங்களை எழுதி அச்சிட்டார். 1842-இல் தமிழ்ப் பழமொழிகளைத் திரட்டி ஆங்கில மொழி பெயர்ப்புடன் அச்சிட்டார். தமிழ்ப் பழமொழிகளின் இரண்டாவது பதிப்பை 1874-இல் அச்சிட்டபோது 6156 பழமொழிகளை ஆங்கில மொழி பெயர்ப்புடன் அச்சிட்டார். தமிழ்-ஆங்கில, ஆங்கில-தமிழ் அகராதிகளை எழுதி அச்சிட்டர். 1855-இல் சென்னையில் தினவர்த்தமானி என்னும் செய்தித்தாளை வார இதழாக அச்சிட்டார். முதன் முதல் வெளியான தமிழ்ச் செய்தித்தாள் இதுவே. மழவை மகாலிங்கையர் மதுரைக்குக் கிழக்கிலுள்ள மழவராயனேந்தல் என்னும் ஊரில் பிறந்தவர். மழவரானேந்தல் என்பது மழவை எனக் குறுகியது. வீரசைவ மரபினர். சென்னையில் பெரும்புலவர்களாக இந்த வீரசைவர்களாகிய திருத்தணிகை விசாகப் பெருமாளையர், சரவணப்பெருமாளையர் என்னும் சகோதரர்களிடம் தமிழ் பயின்றவர் இவர். கல்லூரிகளில் தமிழாசிரியராக இருந்தார். மகாவித்துவான் காஞ்சிபுரம் சபாபதி முதலியாருடன் நட்புள்ளவர். தொல்காப்பியம் எழுத்ததிகாரத்தை நச்சினார்க்கினியர் உரையுடன் 1847-இல் சென்னையில் அச்சிற் பதிப்பித்தார். அருணாசல புராணத்திற்கு உரை எழுதினார். இலக்கணச் சுருக்கம் என்னும் நூலை 1879-ஆம் ஆண்டில் எழுதினார். மீனாட்சி சுந்தரக் கவிராயர் இவருடைய ஊர் முகவூர். சேற்றூர் மன்னரிடம் புலவராக இருந்த கந்தசாமிக் கவிராயரின் மகனார் இவர். தந்தையாரிடத்தில் கல்வி பயின்றார். எட்டையபுரம் அரசரிடத்தில் வித்துவானாக இருந்தார். காவடிச்சிந்து பாடிய அண்ணாமலை ரெட்டியார் இவருடைய மாணவர். விருதை சிவஞான யோகியார், சி. சுப்பிரமணிய பாரதியார், மு. ரா. அருணாசலக் கவிராயர். மு. ரா. கந்தசாமிக் கவிராயர், சே. ரா. சுப்பிரமணியக் கவிராயர் முதலியோர் இவருடைய நண்பர்கள். இராசவல்லிபுரம் முத்துசாமிப்பிள்ளைமீது வண்டுவிடுதூது, பயோதரப்பத்து என்னும் நூல்களைப் பாடினார். எட்டையபுரம் ஆண்டியப்பபிள்ளை மீது பிள்ளைத்தமிழ், உதாரசோதனை மஞ்சரி பாடினார். பல தனிநிலைச் செய்யுட்களைப் பாடினார். கழுகு மலைத் திரிபந்தாதி திருப்பரங்கிரிப் பதிகங்கள், குதிரைமலைப் பதிகம் முதலிய நூல்களையும் இயற்றினார். முகமது காசிம் இபின் ஸித்தீக் லப்பை இலங்கையில் இருந்தவர். இவர் வரலாறு தெரியவில்லை. கீழ்க்கண்ட நூல்களை எழுதி அச்சிட்டிருக்கிறார். அல்ஹிதாயத் அல்காஸீமியத், கண்டி 1891. இது அரபிபாஷை இலக்கணத்தைத் தமிழில் எழுதப்பட்டநூல். கிதாப் அல்ஹிஸாப். கண்டி 1891, இது கணக்கு நூல். தூர்ஃபத் அல்நஃவ். இது அரபு பாஷையின் இலக்கணச் சுருக்கம், கண்டி 1891. உஸுல் அல்கிரா அத் அல் அராபியத். இது சிறுவர்களுக்குரிய அரபி வாசக புத்தகம், தமிழ் விளக்கத்துடன். கண்டி, 1891. ஞானதீபம், கண்டி 1892. தமிழ் முதற்புத்தகம், கொளும்பு 1892, அஸ்றாறுல் ஆலம். சயன்ஸ் சாத்திரம். கொளும்பு 1897. முத்துக்கிருஷ்ண பிரமம் இவர், சுத்த அத்வைத வேதாந்தாசாரியாராகிய முத்துராமப் பிரம தேசிகருடைய மருகர். மேற்படியாரின் திருக்கூட்டத் தலைவரில் இளவரசுப்பட்டம் பெற்றவர். திருக்கோவலூர் ஆறுமுக சுவாமிகள் இயற்றிய நிட்டாது பூதி என்னும் நூலுக்கு இவர் உரை எழுதியிருக் கிறார். அந்த உரை, சென்னைப் பூமகள் விலாச அச்சுக்கூடத்தில் 1875-ஆம் ஆண்டு அச்சிடப்பட்டது. அவ்வுரைக்கு அக் காலத்திலிருந்த வித்துவான்களில் சிலர் ‘சாத்துக் கவிகள்’ அளித்துள்ளனர். அவர் களின் பெயர் வருமாறு: புரசை அஷ்டாவதானம் சபாபதி முதலியார், சிதம்பரம், இராமலிங்கம் பிள்ளை (அருட்பா இராமலிங்க சுவாமிகள்), சேமங்கலம் வித்துவான் நாராயண முதலியார், திருநீர்மலை கோபாலகிருஷ்ண கவிராஜ சேகரர். தில்லையம்பூர்ச் சந்திரசேகர கவிராஜ பண்டிதர், திருப்போரூர்ச் சிதம்பரசுவாமிகள் ஆதீனம் முத்துக் குமாரசுவாமிகள், பிறசை அருணாசல சுவாமிகள் மாணாக்கராகிய கா. ஆறுமுகநாயகர், தஞ்சை குப்புசாமி நாயக்கர், தஞ்சை ஆறுமுகப் பிரமம். தஞ்சை நாராயணப் பிரமம், வித்வாசிகாமணி அஷ்டாவதானம் வீராசாமி செட்டியார் முதலியோர். இவ்வுரை நூலுக்கு, சிதம்பரம் இராமலிங்கம்பிள்ளை (பிற்காலத்தில் அருட்பா இராமலிங்க சுவாமிகள்) அளித்த ‘சாற்றுகவி’ இது: நலங்கொள்சிவ யோகமணம் நாற்றிசையு மணக்கும் ஞானமணங் கந்திக்கும் மோனமண நாறும் விலங்கலில்சித் தாந்தமணம் பரிமளிக்கும் இன்பா வேதாந்த மணங்கமழும் வேதமணம் வீசும் தலங்கொளுமெய் யத்துவிதத் திருமணமும் பரவும் தனிமுத்துக் கிருட்டிணப்பேர் தங்கியநம் பிரமம் வலங்கொளு நன்னிட்டானு பூதியெனு நூற்கே வாய்மலர்ந்த வுரையெனுமோர் மாமலரி னிடத்தே. இவ் வுரைப் பதிப்பில், அச்சுக் குறியீடுகளுக்குக் கீழ்க் கண்ட பெயர்கள் கூறப்படுகின்றன: “இந் நூலுரையிலே காட்டப்பட்ட குறிகள்:-, இம்முளை கூட்டுச் சொல் முதலியவற்றின் பின்னும், இச்சிறு கீற்றுச் சொற்களின் பிரிவுக்குப் பின்னும், - இப்பெருங் கீற்றுப் பதசாரத்துக்குப் பின்னும், ( ) இவ்விரு தலைப்பிறை வருவிக்கப்பட்ட சொற்களுக்கும், இக்குத்துமுற்றுச் சொல்லுக்குப் பின்னும், ( ) இவ்விருதலைப் பகரந்தாத்பரியத்துக்கும். இத்தாரகை அடியிற்காட்டப் பட்டவற்றிற்கும் வைக்கப்பட்டன.” முத்துகுமரப்ப கவி புதுவைத் திரிபுரசுந்தரி பிள்ளைத்தமிழ் என்னும் நூலை - இவர் இயற்றினார். இந்நூல் அச்சிற் பதிப்பிக்கப்பட்டதா என்பது தெரிய வில்லை. இதன் கையெழுத்துப் பிரதிசென்னை அரசாங்கத்துக் கையெழுத்துப் புத்தகசாலையில் இருக்கிறது. இந்நூலுக்குப் பத்துப் பேர் பாயிரம் பாடியுள்ளனர். அவர்கள்: தாண்டவராயக் கவிராயர், இராமச்சந்திர கவிராயர், நயினியப்ப கவிராயர், வீராசாமி முதலியார், வேங்கடாசல முதலியார், சாம்பசிவக் கவி, கூனிபோகு ராமசாமி, அருணாசல உபாத்தியாயர், இராமநுசக் கவிராயர், வாலைதான் என்பவர். இவர்கள் 19-ஆம் நூற்றாண்டில் இருந்தவர்கள். முத்துக்குமாரத் தம்பிரான் சென்னையைச் சேர்ந்த மயிலாப்பூரில் பிறந்தவர் இவர். வீர சைவ மரபினர். இவருடைய இயற்பெயர் வீரபத்திர ஐயர் என்பது. திருப்போரூர்த் திருக்குளத்துக்கு நீராழி மண்டபம் கட்டினார். திருப்போரூர்த் திருக்கோவிலை வளப்படுத்திப் பல திருப்பணிகளைச் செய்தார். திருப்போரூர்ச் சிதம்பர சுவாமிகள் ஆதீனத்தில் ஒன்பதாவது மடாதிபதியாகப் பட்டங்கட்டப் பெற்று முத்துக் குமாரத் தம்பிரான் என்று பெயர் பெற்று விளங்கினார். புரசை அட்டாவதனம் சபாபதி முதலியாரின் நண்பர். இவர் இயற்றிய நூல்கள்: சமரபுரிமாலை, திருப்போரூர் அந்தாதி, திருப்போரூர் வெண்பா திருப்போரூர் கலித்துறையந்தாதி, பிரணவ சைவமாலை, பூசாவிதி அகவல், யுத்தபுரிமாலை. பல இசைப் பாடல்ளையும் இயற்றியுள்ளார். முத்து வீர உபாத்தியாயர் உறையூர் வித்துவான் முத்துவீர உபாத்தியாயர் என்பது இவர் பெயர். திரிசிரபுரத்தில் இருந்தவர். இறுதிக் காலத்தில் சென்னையில் இருந்தார். திருநெல்வேலியில் இருந்த சுப்பிரமணிய தேசிகர் என்னும் இலக்கணப் புலவரின் வேண்டுகோளின்படி இவர் தம் பெயரினால் முத்து வீரியம் என்னும் இலக்கண நூலை இயற்றினார். இது எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்னும் ஐந்து இலக்கணங்களும் பொருந்திய சூத்திர யாப்பினால் ஆன நூல். திருநெல்வேலி மகாவித்துவான் திருப்பாற் கடல்நாதன் கவிராயர் இந்த இலக்கண நூலுக்கு உரை எழுதினார். இந்நூலின் எழுத்து, சொல் என்னும் இரண்டு அதிகாரங்களை மட்டும் டிபுடி கலெக்டராக இருந்த பட்டாபிராமன் பிள்ளையவர்கள் 1889-ஆம் ஆண்டு அச்சிற் பதிப்பித்தார். பழனியாண்டி என்பவர் இந்நூல் முழுவதையும் 1889-ஆம் ஆண்டில் அச்சிற் பதிப்பித்தார். முருகேச முதலியார் திருமயிலை இவரது ஊர். இயற்றமிழாசிரியர். அஷ்டா வதானம் வீராசாமி செட்டியாரின் மாணவர். இவர் சென்னைப் பச்சையப்ப முதலியார் கல்விச் சாலையில் தலைமைத் தமிழ்ப் புலவராக இருந்தவர். 1884-ஆம் ஆண்டில் அச்சிடப்பட்ட அரிச்சந்திர வெண்பாவைப் பரிசோதித்துக் கொடுத்தார். வடதிருமுல்லைவாயில் வரசித்தி விநாயகர் பதிகம், பழநியாண்டவர் மாலை என்னும் நூல்களை இயற்றினார். இவை, சென்னை கலாவர்த்தன சபையாரால் தமது கலாரத்நாகர அச்சுக் கூடத்தில் 1866-ஆம் ஆண்டில் அச்சிடப்பட்டன. வண்ணக்களஞ்சியப் புலவர் ஹமீத் இபுறாகீம் என்பது இவரது இயற்பெயர். வண்ணக் களஞ்சியம் என்பது சிறப்புப் பெயர். முகம் மதியர். நாகூரில் வாழ்ந்தவர். இராசநாயகம் என்னும் காவியத்தைக் கி.பி. 1804-ஆம் ஆண்டில் இயற்றினார். தீன்விளக்கம் என்னும் நூலை 1817-இல் இயற்றினார். குத்பு நாயகம், பாதுஷா நாடகம் என்னும் நூல்களையும் இயற்றினார். வயித்திய லிங்காசாரி முத்துவீரியம் என்னும் இலக்கண நூலை இயற்றிய திரிசிரபுரம் உறையூர் வித்துவான் முத்துவீர உபாத்தியாயரின் மகனார் இவர். சென்னைப் பட்டனத்தில் இருந்தவர். இசைக் கலையிலும், ஒவியக் கலையிலும் வல்லவர். குங்குலியக் கலய நாயனார், எறிபத்த நாயனார், அமர்நீதி நாயனார் சரிதங்களைத் கீர்த்தனையாகப் பாடி இருக்கிறார். அமர்நீதி நாயனார் சரித்திரக் கீர்த்தனை 1879-ஆம் ஆண்டில் சென்னைக் கல்வி விளக்க அச்சுக் கூடத்தில் பதிப்பிக்கப்பட்டது. இதற்குச் சிறப்புப் பாயிரம் அளித்த (புரசை அஷ்டாவதானம் சபாபதி முதலியாரின் மாணவர்) பு. முனிசாமி முதலியார் இந்நூலாசிரியரைப் பற்றி இவ்வாறு கூறுகிறார்: எவ்வெவ் வுருவும் அவ்வவ் வுருவாய்த் தீட்டுந் திறமும் ஈட்டிய பொருளை அறத்தின் வழிக்கே நிறக்கச் செய்யும் கருத்தும் பண்பும் அருத்தியு முடையோன் பெருமையாந் தெய்வத் திருவுரு வங்களை யாவருங் கண்டு சேவை செய்யும் பொருட் டெழுதிக் கொடுக்கும் பழுதிலாச் சிற்ப சாஸ்திர நிபுணன் மாத்திரை யளவும் வீண்பொழு தாக்கான் காண்பவர்க் கெளியன் பெரிய புராணத் தரியநற் றொண்டர் குங்கிலி யக்கலயங்கரத் தேந்திப் பவசாகரம் போய்ச் சிவசா யுச்சியம் பெற்றவர் சரிதமும் குற்றமற் றோங்கும் அறிவித்தகர் சொல் எறிபத்த நாயனார் அன்பின் திறத்தையும் இன்புடன் கீர்த்தனை இயற்றிய தொண்டன் வயித்திய லிங்கன் என்னு நாமந் துன்னிய பகரருஞ் சேடனை நிகர்புல வோனே.” வரதராஜுலு நாயுடு போகல ராமகோபால சேஷாசலம் நாயுடு என்பவர் தெலுங்கு மொழியில் எழுதிய ஜடபரதோபாக்கியானம், ஸ்ரீராமஹிதயம் என்னும் ஷட்சக்கரவர்த்திகளின் இந்திரஜாலக் கதைகள், சுத்த நிராலம்ப மார்க்கம் என்னும் மூன்று நூல்களையும் அதே பெயருடன் தமிழில் மொழி பெயர்த்து எழுதி 1898-ஆம் ஆண்டில் அச்சிற்பதிப்பித்தார். விசாகப் பெருமாள் ஐயர் இவர் வீர சைவ மரபினர். தமிழ்ப்புலவராகிய திருத்தணிகை கந்தப்பையரின் மகனார். சரவணப் பெருமாளையர் இவருடைய இளவல். இயற்றமிழாசிரியராகிய இராமாநுசக் கவிராயரிடம் கல்வி பயின்றார். “கனம் பொருந்திய கம்பேனியாரால் நியமிக்கப்பட்ட யூனிவர்ஸிட்டி என்னும் சகலகலா சாஸ்திரி சாலை”யில் தலைமைத் தமிழ்ப் புலவராக இருந்தார். உவின்ஸ்லோ தமிழகராதி எழுதுவதற்கு உதவி செய்தார். இலக்கணச் சுருக்க வினாவிடை என்னும் நூலை எழுதி 1828-ஆம் ஆண்டில் அச்சிற் பதிப்பித்தார். அந்நூலில் தற்சிறப்புப் பாயிரம் இது. “உலகு மேதகு மிவனெனக் கொருமுத லெனக்கொண் டிலகவா ழருளிடத் தனாமீசனை யிறைஞ்சிக் குலவுநூற் பொருளுணர்த்திய குரவனைப் பழிச்சி யலகில் சீரெழுத் தாதியைந் தறைகுவ னமைந்தே!” பாலபோத இலக்கணம் எழுதி 1852-இல் அச்சிற் பதிப்பித்தார். கல்விப்பயன், யாப்பிலக்கண வினா விடை. அணியிலக்கண வினா விடை ஆகிய நூல்களை எழுதினார். திருக்கோவையாருக்கு உரை எழுதி 1897-இல் அச்சிட்டார். நன்னூலுக்குக் காண்டிகையுரை எழுதி 1875-இல் அச்சிட்டார். இவ்வுரை 1882-லும் பதிப்பிக்கப்பட்டது. வீரராகவ முதலியார் முத்தமிழ்க் கவி வீரராகவ முதலியார் என்பது இவர் பெயர். அந்தகக் கவி வீரராகவ முதலியார் இவரின் வேறானவர். அந்தக் கவி இவருக்கு முற்பட்ட காலத்தவர். இவர் 19-ஆம் நூற்றாண்டில் இருந்தவர். இருவரும் தொண்டை நாட்டுப் பொன் விளைந்த களத் தூரில் பிறந்தவர்கள். முத்தமிழ்க்கவி வீரராகவ முதலியார் வைணவ சமயத்தவர். இவர் இயற்றிய நூல்கள் திருவேங்கடக் கலம்பகம், திருக்கண்ணமங்கை மாலை, திருவேங்கடமுடையான் பஞ்சரத்தினம், வரதராசர் பஞ்சரத்தினம், பெருந்தேவியார் பஞ்சரத்தினம். வீராசாமி செட்டியார் அஷ்டாவதானம் வீராசாமி செட்டியார் என்பது இவர் பெயர். சென்னை சர்வ கலாசாலையில் தலைமைத் தமிழ்ப் புலவராக இருந்தவர். தினவர்த்தமானி என்னும் பத்திரிகையில் தாம் அவ்வப் போது எழுதி வெளியிட்ட கட்டுரைகளைத் தொகுத்து ‘விநோத ரச மஞ்சரி’ என்னும் பெயருடன் வெளியிட்டார் (1891). இவருடைய மாணவர் விஷ்ணுதாசர் என்னும் அப்பாவுப்பிள்ளை. அப்பாவுப் பிள்ளை ஸ்ரீ பெரும்பூதூர் உடையவர் பஞ்சரத்தினம் என்னும் நூலை இயற்றினார். வீராசாமி செட்டியார் அகராதி தொகுப்பு வேலையில் இருந்தார். அப்போது அவருடன் இருந்து அலுவல் செய்தவர், யாழ்ப்பாணத்து அளவெட்டி யூரினராகிய கனகசபைப் புலவர் என்பவர். வீராசாமி செட்டியாருடைய நரைத்த குடுமியைப் பாடும்படி ஒரு நண்பர் கனகசபைப் புலவரைக் கேட்க அவர் ஒரு செய்யுள் பாடினார். அச்செய்யுள் இது: நாவலர் வியக்கப் பாவலர் நாவான் நன்கலை மதிவளர்ந் தோங்கிப் பாவலர் முகஞ்செம் பதுமமாக் குவிக்கும் பான்மையோன் மாயனோ டுளந்து மாவலர் வீரா சாமிவேள் குஞ்சி மலரயன் றேவிவெண் கஞ்சப் பூவலர்ந் திருப்ப வதன்மிசை யிருந்த பொற்பெனப் பொலிந்திலங் குறுமால். இராமநுசக் கவிராயரின் மாணவராகிய அஷ்டாவதானம் வீராசாமிக் கவிராயர் என்பவர் இவரே. வேங்கடசுப்புப் பிள்ளை தொண்டை நாட்டு அரன்வயல் இவருடைய ஊர்-இவர், மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களின் பழைய மாணவர்களில் ஒருவர். முறையாகப் பாடங் கேட்டு நல்ல தமிழறிஞ ராகவும் செய்யுள் பாடும் ஆற்றல் உள்ளவராகவும் இருந்தார். இவருடைய வரலாறு ஒன்றும் தெரியவில்லை. ப. அரங்கசாமி பிள்ளை யவர்கள் சீவக சிந்தாமணி முதற்பாகத்தை 1883-இல் முதன்முதலாக அச்சிற் பதிப்பித்தபோது கீழ்க்கண்ட சாற்றுக்கவிகளை வேங்கடசுப்புப் பிள்ளை பாடியுள்ளார். இலக்கணங்கள் முழுதுநிறைந் திலக்கியத்துக் கோரிலக் காயிலகுஞ் சீர்சால் நலக்கணுயர் காவியமாஞ் சீவகசிந் தாமணியைநாட்டி லுள்ள வலக்கணத்துக் கொல்லாத விரதியரும் புலவர்களும் மகிழ்ந்து வாழ்த்தத் தலக்கணறுங் கவியரங்க சாமிநல் லோன் றானச்சிற் பதிப்பித் தானே. பதிப்பித்தான் பிரதிகளிற் கரலிகித வழுக்களைந்து பாவலோருள் உதிப்பித்தான் பேருவகை யஃதேபோற் கொல்லாத ஒழுக்கத்தோரைக் குதிப்பித்தான் றம்மதனூ லெம்மதத்தும் பரவவரும் கொள்கையாலே மதிப்பித்தான் றனையுலகி லெழிலரங்க சாமிநல்லோன் வல்லோன் மாதோ. வேங்கடசால நாயகர் இவர் ஊர் அத்திப்பாக்கம். செங்கல்பட்டு மாவட்டம் பாயக்காரி ஏஜெண்டாக இருந்தார். இந்து முதாசார ஆபாச தரிசினி என்னும் நூலை விருத்தப்பாவினால் இயற்றினார். இந்நூல் 1882-ஆம் ஆண்டில் அஷ்டலக்ஷ்மி விலாச அச்சுக்கூடத்தில் பதிப்பிக்கப்பட்டது. இதிலிருந்து இரண்டு செய்யுட்களைக் காட்டுவோம். வஞ்சகர் மொழி யினாலே மாநிலத் துழல்வோ ரெல்லாம் பஞ்சமுற் றழிதல் நோக்கிப் பரிதபித் திரங்கி நாளும் நெஞ்சகங் குழைந்துவாழும் நீர்மையால் நெடுநூல் கற்றுப் பஞ்சலட் சணமும் தேர்ந்த பாவலர் பொறுப்பர் மாதோ. ஆகம புராண சாஸ்திர மவைகொண்டு அறைந்தே னல்லேன் மாகங்கொள் வைய கத்தி னனுபவ மேற்கோள்கொண்டும் தகாங்கொண் டனுச ரித்த தகைமையோர் சாட்சி கொண்டும் மோகங்கொண் டுலகத் தார்க்கு மொழிந்திட லானேன் பின்பு. வேலுச்சாமிப் பிள்ளை புலியூர் வெண்பா முதலிய நூல்களை இயற்றிய தில்லை விடங்கன் மாரிமுத்துப் பிள்ளையின் பரம்பரையைச் சேர்ந்தவர் இவர். திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களி டத்திலும், சென்னைக் கிருஸ்துவக் கலாசாலைத் தமிழ்ப் பண்டிதர் சின்னசாமி பிள்ளை அவர்களிடத்திலும் கல்வி பயின்றார். இவர், தாம் எழுதிய புலியூர் வெண்பா உரைப்பாயிரத்தில் தம் ஆசிரியர்களுக்கு வணக்கங் கூறுவதிலிருந்து இதனை அறியலாம்: சின்னைய மால்புரசைச் சின்னசா மிக்குரிசில் என்னைய ராமிவரோ டெத்தலமும்-பொன்னெனமெச் சுந்தரவா சானுந் துணையிலருண் மீனாட்சி சுந்தரவா சானுந் துணை. புலியூர் வெண்பாவுக்கு உரை எழுதிய இவர், வேறு நூல் களும் இயற்றியிருக்கிறரா என்பது தெரியவில்லை. ஸ்ரீ நிவாச ராகவாசாரியார் சென்னை சர்வகலாசாலைத் தலைமைத் தமிழ்ப் பண்டிதராக இருந்தார். உத்தரராமாயண வசனம், விஷ்ணு புராண வசனம், தசகுமார சரிதம் முதலிய மொழி பெயர்ப்பு நூல்களும், கதா சங்கிரகம் என்னும் வசன நூலும் தண்டியலங்கார சாரம் (1873) என்னும் நூலும் இவரால் எழுதப்பட்டன. அண்ணாச்சாமி முதலியார் தொண்டை நாட்டு அமரம்பேடு இவர் ஊர். இவரைப் பற்றிய வரலாறு தெரியவில்லை. இவர், அராபிக் கதையைத் தமிழில் மொழிபெயர்த்து 1876-ஆம் ஆண்டில் சென்னை சிந்தாதிரிப் பேட்டை பிரபாகர அச்சுக் கூடத்தில் பதிப்பித்தார். இந்நூலுக்கு அப்பாவு உபாத்தியாயர் அவர்கள் அளித்த சாற்றுக்கவி: சிறந்திடு மராபிக் கதையினை யெவருஞ் செப்பமா யுணர்ந்தின்ப மேவக் கறந்திடு பாலின் சுவையெனத் தமிழாற் கவினுற மொழிபெயர்த் திட்டான் துறந்திடு பெரியோர் மறையவர் வியந்து சொற்றிடு மாசியும் வளனும் நிறைந்திடு மமரம் பேட்டில்லா ழண்ணாச் சாமியா நிபுண நாவலனே. தரங்காபுரம் சண்முகக் கவிராயர் அளித்த சாற்றுக் கவி: பேர்பெறு மராபிப் பாஷையிற் பிறந்து பெருந்துறை முகமெலாஞ் சிறந்து சீர்பெறும் பாஷாந் திரங்களு டுழன்று திருந்திய கதை முகச் செல்வி கார்பெறு மமரம் பேட்டில்வா ழண்ணாச் சாமிதன் கருத்தினாற் பொருந்தி யேர்பெறுந் தமிழா லலங்கரித் தெழுந்தா ளியாவரு மின்புறற் பொருட்டே. ஞானசித்த சுவாமிகள் திருக்குருகூர் ஞானசித்த சுவாமிகள் என்று கூறப்படுவார் இவர். இவரைப் பற்றி ஒன்றும் தெரியவில்லை. சாத்திரக் கோவை சேத்திரக் கோவை, என்னும் இரண்டு நூல்களை இவர் இயற்றியிருக்கிறார். சாத்திரக் கோவையில் அத்து விதாந்தம், ஞானபாஸ்கர உதயம், கலைஞான தீபம், (ஒவ்வொன்றும் 1000 செய்யுட்கள்) இரத்தினச் சுருக்கம் (500 செய்யுள்), சடாதார விளக்கம் என்னும் திருமந்திரம் (200 செய்யுள்), வழலை முறை, கற்பவிதி, யோகக் கும்மி, சுத்த சலத்தெளி வெட்டு, சித்தர்கள் பாமாலை என்னும் நூல்கள் அடங்கியுள்ளன. சேத்திரக் கோவையில் திருக்குற்றாலப் பதிகம், செப்பறைப் பதிகம், கூடுதுறை, சோமசுந்தரமாலை, ஆற்றூர்ப் பதிகம், திருமயிலைப் பதிகம், கருவூர்ப் பதிகம் முதுலிய 39 நூல்கள் உள்ளன. இவர் இயற்றிய கன்னியாகுமரிப் பகவதி யந்தாதி 100 செய்யுட்களை யுடையது. ஆரோக்கிய நாயகர் கவிராஜ சேகரர் பு. ஆரோக்கிய நாயகர் என்பது இவருடைய பெயர், சென்னையில் இருந்தவர். தேம்பா வணிக் கீர்த்தனை என்னும் நூலை இவர் இயற்றினார். இந்நூல் 1857-ஆம் ஆண்டில் அரங்கேற்றப் பட்டது. இந்நூலுக்குச் சில வித்துவான்கள் ‘சாற்றுக் கவி’ அளித்துள் ளனர். அவர்கள் திருத்தணிகை விசாகப் பெருமானையர், அஷ்டா வதானம் வீராசாமி செட்டியார், சி.வை. தாமோதரம் பிள்ளை, கோமள புரம் இராச கோபால பிள்ளை, புதுவை வித்துவான் செ. சவரிராயலு நாயகர், வித்துவான் தஞ்சை அருளப்ப முதலியார் முதலியோர். இந்நூலின் ஒரு ‘சாற்றுக் கவி’ இது : அகிலமிசை கடவுளவதார ஆண்டோர் ஆயிரத்தென் ணூற்றைம்பத் தேழில் மேவும் புகலரிய தைமாதம் சனிவா ரத்தில்? புதுப்பேட்டை அந்தோனியா ராலயத்தில் அகமகிழ்ந்து வெகுஜனமுன் விஸ்வ கோத்திர அருளானந் தன்பலவாய் முயற்சி செய்யத் தகவுறுதேம் பாவணிக்கீர்த் தனையை நன்றாய்ச் சாற்றியா ரோக்கியனரங் கேற்றி னானே. இராசம் ஐயர் (1872 - 1898) மதுரை மாவட்டத்து வத்தலகுண்டு இவரது ஊர். பிரபுத்தபாரதம் என்னும் ஆங்கில வெளியீட்டை நடத்தினார். இவர் எழுதிய தமிழ் நாவல் கமலாம்பாள் சரித்திரம். 19, 20 - ஆம் நூற்றாண்டுப் புலவர்கள் 19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பிறந்தவர் பலர் பெரும்புலவராக 20-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்திருந்தார்கள். அவர்கள் நூல்களை எழுதியது, பெரும்பாலும் 20-ஆம் நூற்றாண்டு ஆதலால் அவர்களின் வரலாற்றை இங்குச் சேர்க்கவில்லை. 19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பிறந்து 20-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் நூலியற்றிய புலவர்களில் சிலர் பெயரைக் கீழே தருகிறேன். டாக்டர் உ.வே. சாமிநாதையர், தேசியகவி சுப்பிரமணிய பாரதியார் (1882-1921) தேசத் தொண்டர் வ.உ. சிதம்பரம் பிள்ளை (1872 - 1936), கனகசுந்தரம் பிள்ளை (1863-1922), செல்வ கேசவராய முதலியார் (1864 - 1921), திருப்பாதிரிப் புலியூர் சிவசண்முக மெய்ஞ்ஞான சிவாசாரிய சுவாமிகள் (1973-1942), செந்தில் நாயக அடிகள் (1884-1942), துடிசை கிழார் சிதம்பரனார் (?-1954), முத்து சாமிக்கோனார் (1854-1944), வெ.ப. சுப்பிரமணிய முதலியார் (1857-1946), முத்மிழ்ப் பேராசிரியர் விபுலானந்த அடிகள் (1892 - 1947), மறைமலையடிகள் (?-1950) செய்குத் தம்பிப் பாவலர் (?-1950) தி.பொ. பழனியப்பப் பிள்ளை (1893-1951) கா.ர. கோவிந்தராச முதலியார் (1874-1952) திரு.வி.கலியாணசுந்தர முதலியார் (1883-1953), பா.வே. மாணிக்க நாயகர் (1871-1931), பூரணலிங்கம் பிள்ளை. (1866-1947), பண்டித மணி கதிரேசச் செட்டியார் (1881-1953), கவிமணி தேசிகவினாயகம் பிள்ளை (1876-1954), டி.கே. சிதம்பரநாத முதலியார் (1882-1954), பாண்டித் துரைத் தேவர் (1867-1911), கா. நமச்சிவாய முதலியார் (1876-1937), பண்டித சுவரிராய பிள்ளை (1859-1923), ஆ.மாதவையர் (1870-1925), ஸர்.பொன்னம்பலம் இராமநாதன் (1851-1930), அ. சிங்காரவேலு முதலியார் (1855-1931), சாணாங்குப்பம் இராமநாத பிள்ளை (1877-1938), தி.இலக்குமணப்பிள்ளை (1864-1950), மா.அ. கனகசபை முதலியார் (1888-1951), மாகறல் கார்த்திகேய முதலியார் (1857-1916), கரபாத்திர சிவப்பிரகாச சுவாமிகள் (1874 - 1918), அப்துல் சாதிறு ராவுத்தர் (1877-?), முத்து ராமலிங்க சேதுபதி (1889-1928) கே.எஸ். சீனிவாசப்பிள்ளை (?-1929), தஞ்சை உலகநாத பிள்ளை (?-?), மாணிக்கவாசக சரணாலய சுவாமிகள் (1885-1944), து.அ. கோபி நாத ராயர் (1872-1919), வரதநஞ்சைய பிள்ளை (1877-1956), மற்றும் பலர், இவர்கள் பெயர் 20-ஆம் நூற்றாண்டுத் தமிழ் வரலாற்றில் சேர்க்கப்பட வேண்டும். ஆசிரிய - மாணவர் பரம்பரை விளக்கம் பண்டைக் காலத்தில் கல்வி இரண்டு நிலையாக இருந்தது. அவை; கணக்காயரிடத்தில் கற்கும் பாட சாலைக் கல்வி; வித்துவான்களிடத்தில் கற்கும் உயர்தரக் கல்வி என்பன. முதல் முதலாகச் சிறுவர்கள் கணக்காயரிடத்தில் சென்று கிராமப் பாடசாலையாகிய திண்ணைப் பள்ளிக்கூடத்தில் எழுதப்படிக்கக் கற்றுக் கொள்வார்கள். பிறகு நீதி நூல்களையும் இலக்கணச் சூத்திரங்களையும் நிகண்டு, இலக்கணம் முதலிய கருவி நூல்களையும் மனப் பாடம் செய்வார்கள். இவற்றுடன் இவர்கள் பாடசாலைப் படிப்பு முடிந்து விடும். பிறகு, இவர்கள் வித்துவான்களிடம் சென்று இலக்கண இலக்கிய நூல்களைப் பாடங் கேட்டுப் பொருள் உணர்ந்து கொள்வார்கள். காரிகை கற்றுக் கவிபாடவும் பழகிக் கொள்வார்கள். இவ்வாறு ஆசிரிய - மாணவர் பரம்பரை அக்காலத்தில் தொடர்ந்து வந்தது. ஒரே மாணவர் வெவ்வேறு ஆசிரியர் இடத்தில் பாடங் கேட்பதும் உண்டு. ஒவ்வோர் ஆசிரியர் ஒவ்வொரு நூலைப் பாடஞ் சொல்வதில் தேர்ந்தவராயிருப்பர். யார் யார் எந்தெந்த நூல்களில் தேர்ந்தவரோ அவரவரிடம் சென்று அந்தந்த நூல்களைப் பாடங்கேட்பது வழக்கம். இவ்வாறு ஆசிரிய - மாணவர் பரம்பரை இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம் வரையில் இருந்தது. ஆசிரிய - மாணவர் பரம்பரைப் பட்டியலை எனக்குத் தெரிந்த வரையில் கீழே தருகிறேன். இதனை முழு விவரப் பட்டியல் என்று கூற முடியாது. சில பெயர்கள் விடுபட்டிருக்கவும் கூடும். தெரிந்த வரையில் பட்டியல் தரப்படுகிறது. காஞ்சிபுரம் மகாவித்துவான் சபாபதி முதலியார் திரிசிரபுரம், மலைக்கோட்டை மௌனசுவாமி மடம் வேலாயுத முனிவர் சோமசுந்தரம் பிள்ளை (இராமநாதபுர சமஸ்தான வித்துவான்) இயற்றமிழாசிரியர் இராமாநுச கவிராயர் (?- 1852) சிவஞான சுவாமிகள் 1785-இல் காலமானார் இராமநாதபுரம் சோமசுந்தரம் பிள்ளை (சேதுபதி சமஸ்தான வித்துவான்) உறையூர் வித்துவான் முத்துவீர உபாத்தியாயர் (“முத்துவீரியம்” ஆசிரியர்) கூழங்கைத் தம்பிரான் கூழங்கைத் தம்பிரான் நீர்வேலி சங்கர பண்டிதர் (250-258) ஒழிபியல் கீழ்க்கணக்கு நூலாராய்ச்சி (இந் நூல் 85, 89-ஆம் பக்கத்தில் கூறியுள்ள ‘கீழ்க்கணக்கு’ நூல்களைப்பற்றிய தொடர்புரை.) 18,19-ஆம் நூற்றாண்டுகளிலே சங்க நூல்களையும் சங்கம் மருவிய நூல்களையும் படிக்கக் கூடாது என்னும் கொள்கை படித்தவர்களிடையே பரவிற்று. சமயப்பற்றுக் காரணமாகத் தோன்றிய இந்தக் கொள்கையினாலே, தமிழாசிரியர்கள் மாணவர்களுக்கு அந்த நூலைப் பாடஞ்சொல்லாமல் விட்டனர். இதனால் அந்த, நூல்கள் மறக்கப்பட்டுக்கிடந்தன. படிப்பாரற்றுக் கிடந்தமையால் அந்நூல்களின் பெயர்கூட மறக்கப்பட்டிருந்தன. சென்ற 19-ஆம் நூற்றாண்டின் இறுதியில் கீழ்க்கணக்கு நூல்கள் எவை என்பது பற்றிப் படித்த புலவர்களுக்குள்ளே ஐயங்களும் வாதப் பிரதிவாதங்களும் நடந்தன! கீழ்க்கணக்கு நூல்கள் பதினெட்டின் பெயர்களைப் பற்றியதே அந்த ஆராய்ச்சி! அந்த ஆராய்ச்சி ஏறத்தாழ ஐம்பது ஆண்டுகள் நடந்த பின்னர் ஓய்ந்தது. தமிழ் இலக்கிய வரலாற்றிலே இது ஒரு சுவையுள்ள கட்டம். இதுபற்றி இங்குக் கூறுவோம். கீழ்க்கணக்கு நூல்கள் பதினெட்டு என்று பேராசிரியர் என்னும் உரையாசிரியர் முன்னமே கூறியுள்ளார். “நெடுவெண் பாட்டே முந்நால் அடித்தே சிறுவெண் பாட்டின் அளவெழு சீரே” என்னும் தொல். பொருள், செய்யுள் 470-ஆம் சூத்திரத்தின் உரையில் பேராசிரியர் இவ்வாறு எழுதுகிறார்:- “இங்ஙனம் அளவியல் வெண்பாச் சிறப்புடைத்தாதல் நோக்கிப் பதினெண் கீழ்க்கணக்கினுள்ளும் முத்தொள்ளாயிரத்தும் ஆறடியின் ஏறாமல் செய்யுள் செய்தார் பிற்சான்றோருமெனக் கொள்க.” மேலும், “வனப்பியல் தானே வகுக்குங் காலை சின்மென் மொழியாற் றாய பனுவலொடு அம்மை தானே அடிநிமிர் பின்றே” என்னும் தொல். பொருள். செய்யுள்547-ஆம், சூத்திர உரையிலும் பேராசிரியர் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களைக் கூறுகிறார். அவர் கூறுவது: “தாய பனுவலோடென்பது அறம் பொருள் இன்ப மென்னும் மூன்றற்கும் இலக்கணஞ்சொல்லுப; வேறிடையிடை அவையன்றியுந் தாய்ச் செல்வ தென்றவாறு. அஃதாவது பதினெண் கீழ்க்கணக்கென உணர்க. அதனுள் இரண்டடியானும் ஐந்தடியானும் ஒரோ செய்யுள் வந்த வாறும், அவை சிலவாய மெல்லிய சொற்களான் வந்த வாறும், அறம் பொருள் இன்பமென அவற்றுக்கு இலக்கணங் கூறிய பாட்டுப் பயின்று வருமாறுங் கார் நாற்பது, களவழி நாற்பது முதலாயின வந்தவாறுங் கண்டு கொள்க.” இவ்வாறு பேராசிரியர் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களைப் பற்றிக் கூறியுள்ளார். நன்னூலுக்கு உரை எழுதிய மயிலைநாதரும் (387-ஆம் சூத்திர உரையில்) பதினெண் கீழ்க்கணக்கு நூல்களைக் குறிப்பிடுகிறார். கீழ்க்கண்ட பழைய வெண்பா, கீழ்க்கணக்கு நூல்களின் பெயரைக் கூறுகின்றது. நாலடி நான்மணி நானாற்ப தைந்திணைமுப் பால்கடுகம் கோவை பழமொழி மாமூலம் இன்னிலைசொல் காஞ்சியுடன் ஏலாதி யென்பவே கைந்நிலைய வாங்கீழ்க் கணக்கு. இந்தப் பழைய வெண்பாவில் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களின் சில பெயர்கள் தெளிவாகத் தெரிகின்றன. சில பெயர்கள் துணிந்துகூற முடியாதவையாக இருந்தன. நாலடி, நான்மணி (க்கடிகை), முப்பால், (திரி)கடுகம், (ஆசாரக்)கோவை, பழமொழி, சிறுபஞ்சமூலம், (முதுமொழிக்)காஞ்சி, ஏலாதி என்னும் நூற்பெயர்கள் தெளிவாகத் தெரிகின்றன. நானாற்பது ஐந்திணை என்பன பற்றியும் இன்னிலை, கைந்நிலை என்பன பற்றியும் சென்ற நூற்றாண்டிலே பலருக்கும் பலவித ஐயங்களை உண்டாக்கின. ஏன்? முப்பால், கோவை என்னும் பெயரிலுங்கூட ஐயம் நிகழ்ந்து வாதப் பிரதிவாதங்கள் நடந்தன. இதற்குக் காரணம் இடைக் காலத்திலே இந்நூல்கள் சில தலைமுறையாகப் பயிலப்படாமல் போனதுதான் என்பதை முன்னரே கூறினோம். சென்ற நூற்றாண்டிலே நிகழ்ந்த பதினெண் கீழ்க்கணக்கு நூல்களின் பெயரைப்பற்றிய ஆராய்ச்சி இக்காலத்தவராகிய நமக்கு வியப்பாகவும் வேடிக்கையாகவும் தெரிகின்றது. பதினெண் கீழ்க் கணக்கு நூல்களின் பெயரை அறிவதற்கே அக்காலத்தவர் எவ்வளவு முட்டுப்பட்டுத் துன்புற்றனர் என்பது அவர்கள் எழுதியவற்றிலிருந்து நமக்குத் தெரிகிறது. சென்ற 19-ஆம் நூற்றாண்டிலே வாழ்ந்து பல அரிய ஏட்டுச் சுவடிகளை அச்சுப் புத்தகமாகப் பதிப்பித்து வெளிப்படுத்திய பெரியார் சி.வை. தாமோதரம் பிள்ளையவர்கள், தாம் 1887-ஆம் ஆண்டு பதிப்பித்த கலித்தொகை என்னும் நூலின் பதிப்புரையிலே கீழ்க்கணக்கு பற்றி இவ்வாறு எழுதுகிறார்: நாலடி நான்மணி நானாற்ப தைந்தீணைமுப் பால்கடுகம் கோவை பழமொழி மாமூலம் இன்னிலைசொல் காஞ்சியுடன் ஏலாதி யென்பவே கைந்நிலைய வாங்கீழ்க் கணக்கு’ “இவற்றுட் கோவை யென்றது ஆசாரக்கோவையை. முப்பா லென்றது திரிகடுகம் ஆசாரக்கோவை பழமொழி பஞ்சமூலம் ஆகிய போன்று நாலடி வெண்பாவால் இயன்று அக்காலத்திலே வழங்கிய மூன்று சிறு தரும நூல்களை யென்றும், இன்னிலை சொல் என்றது இன்னிலை இன்சொல் என்று பெயரிய இரண்டு நூல்கள் பெயரை என்றும் உத்தேசிக்கின்றேன். அன்றேல் ஐந்திணை அகப் பொருட்டு றைத்தாய் ஐம்பது செய்யுளான் மாறன் பொறையனார் இயற்றியது ஒர் நூலாக, இவர்க்குக் கீழ்கணக்குத் தொகை பதினெட்டாவ தெவ்வாறோ? இவ்விடர் நோக்கிப் போலுஞ் சிலர் ஐந்திணையை ஐந்தொகையென்று பாடம் ஒதுவர். அன்னோர் நெடுந்தொகை யொன்றொழிய வேறு தொகையின்மையிற் சட்டி சுட்டதென்று நெருப்பிற் பாய்ந்த கள்வனார் போலப் பின்னர் எட்டுத்தொகை நூல்காணாது பேரிடர்ப்படுவர். ‘இன்னிலைய காஞ்சியுட னேலாதியென்பவே’ என்னும் பாடமுண்டு. அதனால் இன்னும் இரண்டு மூன்றாவதன்றிக் கணக்குச் சரிபெறாது. இவ்வாறு கொள்ளாது சிலர் கோவை முப்பால்களை. வாதபுரீ சராகிய மாணிக்கவாசக சுவாமிகள் திருவாய்மலர்ந்தருளிய திருச்சிற்றம்பலக் கோவையாருஞ் சங்கத்தாரைப் பங்கப்படுத்தி அழித்துவிட்ட தெய்வப் புலமைத் திருவள்ளுவ நாயனாரது பொய்யாமொழித் திருக்குறளு மென்று மயங்கித்தடுமாறுப. பெயர்படைத்த வித்துவான்களுள்ளுஞ் சிலர் இவ்வாறு மயங்கினது நம்போலியரை மிக மயக்குகின்றது. இவ்விரண்டும் நமது தமிழ் வேத மென்றாவது சிந்தித்தாரில்லை. திருச்சிற்றம்பலமுடையார் கையெழுத்தா கீழ்க்கணக்கின் கீழ்ப்பட்டது!!! இதனை நிராகரிக்க அயற்சாட்சியும் வேண்டுமா? பன்னிரண்டு திருமுறைகளையும் ஒருங்கு சேர்த்துப் பத்தாக்கிவிட்டாரில்லை. மேலும், ‘நாலடி நான்மணி’ என்றற் றொடக்கத்துச் செய்யுள் யாரது? யார் காலத்தது? யாண்டையது? சங்கத்தார் காலத்துச் சங்கத் திருமுன்னர்ச் சங்கப்புலவருளொருவராற் சொல்லப்பட்டதென்பது உண்மையாயின், நாயனார் திருக்குறளின்பின் சங்கம் எங்கே இருந்தது?1 இருப்பினன்றோ குறளுங் கூட்டிக் கூறப்படும்?” 1887-ஆம் ஆண்டில் கலித்தொகைப் பதிப்புரையில் மேற் கண்டவாறு எழுதிய சி.வை. தாமோதரம் பிள்ளையவர்கள், இரண்டு ஆண்டுக்குப் பிறகு 1889-ஆம் ஆண்டில் இலக்கண விளக்கம் என்னும் நூலை அச்சிட்டபோது, அதன் பதிப்புரையில், பதினெண் கீழ்க்கணக்கு நூற்பெயர் ஆராய்ச்சியைப் பற்றி மேலும் தொடர்ந்து எழுதியுள்ளார். அவர் எழுதியதிலிருந்து அக்காலத்தில் கீழ்க்கணக்கு நூல்களைப் பற்றி எவ்வளவு தவறான கருத்துக்கள் இருந்தன என்பதை அறியலாம். இலக்கண விளக்கப் பதிப்புரையில் பிள்ளையவர்கள் எழுதுவது இது: “ஸ்ரீ கொ. ஸ்ரீநிவாச ராகவாசாரியாரவர்கள் தாம் எழுதிய நாலடியார் நூல் வரலாற்றில். ‘நாலடி நான்மணி நானாற்ப தைந்திணைமுப் பால்கடுகங் கோவை பழமொழி’ என்பவற்றுள், ‘ஐந்திணை அகப்பொருட் டுறைத்தாய் ஐம்பது செய்யுளான் மாறன் பொறையனார் இயற்றியது ஒர் நூலாகக், கீழ்க் கணக்குத் தொகை பதினெட்டாய தெவ்வாறோ?’ என2 யான் கொண்ட கொள்கை மாற, ‘ஐந்திணை என்றது ஐந்திணைகளைப் பற்றிச் சொல்லும் ஐந்து நூல்கள்’ எனக் கூறி, ஐந்திணையைம்பது ஐந்திணை எழுபது திணைமொழி யைம்பது திணைமாலை நூற்றைம்பது இன்னான்கும் அவ்வைந்திணையைச் சேர்ந்தன வென்றும் இவை போன்றது இன்னும் ஒன்று இருத்தல் வேண்டும் என்றும். சொற்றனர். “கலித்தொகைப் பதிப்புரை எழுதிய பின்னர் மேற்கண்ட நான்கு நூல்கள் எனக்கும் அகப்பட்டன. ஐந்திணை விஷயத்தில் யான்கூறிய கூற்றுச் சரியன்றென்று ஒத்துக்கொள்வதுமன்றி ஆசாரியரவர்கட்கு என் வந்தனமுங் கூறுகின்றேன். பிறர் சில ரொப்பக் கோவையைத் திருச்சிற்றம் பலக்கோவை என்று கொள்ளாது யான் சொல்லியது போல ஆசாரக்கோவை என்று இவர்கள் உரையிட்டது சாலவும் பொருத்த முடையதேயாம். “முப்பால் தெய்வப் புலமைத் திருவள்ளுவ நாயனாரது பொய்யாமொழித் தமிழ் வேதமாகிய திருக்குறளல்ல வென்பதற்கு யான் கூறிய நியாயங்களை முற்றச் சீர்தூக்கி ஆராயாது ‘ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலுமிரண்டுஞ் சொல்லுக்குறுதி’ என்னும் பிற்றை நாண்மொழியைச் சங்கத்தார் காலத்து முதுமொழிபோற் கொண்டது ஆசாரியார்பால் ஒரு தவறென்றே இன்னும் வற்புறுத்து கின்றேன். கோவை திருக்கோவை யாகாது ஆசாரக் கோவை யானாற்போல முப்பாலும் நாயனார் தமிழ்வேதமாகாது நமது கைக்கு இன்னும் அகப்படாத பின்னொரு சிறு நூலேயாதல் வேண்டுமென்பது என் துணிவு மாத்திரமன்று. இது விஷயத்தில் யான் கண்டு பேசிய பல மடாதிபதிகள் வித்துவான்கட்கும் இஃதொப்பென்றறிக. “இஃதெழுதிய பின்னர், ஸ்ரீ த. கனகசுந்தரம் பிள்ளையவர்கள் தமக்கு அகப்பட்டதோர் மிகப் பழைய கீழ்க்கணக்குச் சுவடியில், ‘நாலடி நான்மணி’ என்னுஞ் செய்யுள் அதிகஞ் சிதைவுபட்டுக் கிடப்பதில், ஐந்திணை என்பதற்கு ஐந்திணையைம்பது, ஐந்திணை எழுபது, திணைமொழி யைம்பது, திணைமாலை நூற்றைம்பது என்னும் நான்குமே உரையிற் குறிக்கப்பட்டிருக்கின்றன வென்றும் முப்பால் என்பதன் உரை நாயனார் திருக்குறளை ஒருவாற்றானுஞ் சுட்டாது முப்பாலென்றே கூறப்பட்டிருக்கிற தென்றும், கைந்நிலை என்பது அப்பெயரான் உரையோடு உள்ளதோர் தனி நூலாகக் கண்டிருக்கிற தென்றும் எழுதியறிவித்தனர். இஃது என் கூற்றை நன்கு வற்புறுத்து கின்றது. இதனால், ‘நானாற்ப தைந்திணை’ என்றதில் நாலென்னும் அடையை நாற்பது ஐந்திணை என்றும் இரண்டனோடும் ஒட்டி நானாற்பது, நாலைந்திணை என்று கோடல் வேண்டுமென்றும், ஐந்திணை யான் கூறியவாறு ஒரு நூலுமன்று, ஆசாரியாரவர்கள் கூறுமாறு ஐந்து நூலுமன்று ஐந்திணைப் பொருள் உணர்த்திய நான்கு நூல்களென்று கொள்ளத் தக்கதென்றுஞ் சொல்ல ஏதுவாகின்றது. அங்ஙனமாயின் முப்பாலென்றது ஒரே நூலாகவும், இன்னிலை சொல்லென்றது இன்னிலை இன்சொல் என இரண்டு நூல்களாகாது காஞ்சிக்கு விசேஷணமாகவும் கைந்நிலையென்றது வேறொரு தனி நூலாகவுங் கொள்ளத்தகும். இவ்வாறு கொள்ளிற் ‘கைந்நிலையோடாங் கீழ்க்கணக்கு என்று ஈற்றடிப் பாடந் திரிதல் வேண்டும். எட்டுத் தொகை பதினெண் கீழ்க்கணக்குகளுள் இன்னும் அச்சிற்றோற்றாதன தேடி வெளிப்படுத்தும் நோக்கமாகச் சில நாட்களுள், மதுரை, திருநெல்வேலி, கோயமுத்தூர் முதலிய தேசங்களுக்கு ஒர் யாத்திரை செய்ய உத்தேசித்திருக்கின்றேன். அவ்வாறு போய்த் திரும்பிய பின் இது விஷயத்தைப் பற்றி மறுபடியும் எழுதுவேன்.” மேலே காட்டிய மேற்கோள் சற்று விரிவாக இருந்த போதிலும் அது 19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் இன்னவை என்பதில் கருத்து வேற்றுமை இருந்ததைத் தெளிவாக விளக்குகின்றது. மேற்காட்டிய மேற்கோளில், “ஐந்திணை என்றது ஐந்திணைகளைப் பற்றிச் சொல்லும் ஐந்து நூல்கள் எனக் கூறி, ஐந்திணையைம்பது ஐந்திணை எழுபது திணைமொழி யைம்பது, திணைமாலை நூற்றைம்பது இந்நான்கும் அவ்வைந்திணையைச் சேர்ந்தனவென்றும் இவை போன்றது இன்னும் ஒன்று இருத்தல் வேண்டுமென்றும் சொற்றனர்” என்று கூறப்பட்டுள்ளதை மறுத்துக் கூறினார் செல்வகேசவராய முதலியாரவர்கள். பதினெண் கீழ்க் கணக்குகளில் ஒன்றாகிய ஆசாரக் கோவையை 1893-ஆம் ஆண்டில் அச்சிற் பதிப்பித்த முதலியாராவார்கள், அதன் பதிப்புரையில் இதுபற்றி இவ்வாறு எழுதியுள்ளார். “ஐந்திணை என்றது திணைகளைப் பற்றிச் சொல்லும் ஐந்து நூல்கள்: ஐந்திணை ஐம்பது முதலிய நான்கையும் போன்றது இன்னும் ஒன்று இருத்தல் வேண்டும் என்பர் ஒருதிறத்தார். இலக்கண விளக்க முடையார், ‘உரிப்பொருடோன்ற வோரைந்திணையும், தெரிப்பதைந் திணைச் செய்யுளாகும்’ என்றைந்திணைச் செய்யுளின் இலக்கணத் தைக் கூறினாரல்லது, அவ்விலக்கணமுடைய நூல்களை இன்ன இத்துணைய என வரை யறுத்தாரில்லை. கீழ்க்கணக்கைப் பதினெட் டாகச் சரிவரக் காட்டுதற் பொருட்டு ஐந்திணைச் செய்யுட்கள் ஐந்தென்று கூறுவார்க்குப் பற்றுக்கோடாகின்ற ஆதாரம் இதுகாறும் ஒன்றுங் கிடைத்திலது.” முப்பால் என்பது திருவள்ளுவ நாயனார் அருளிச் செய்த திருக்குறள்தான் என்பதில் ஐயமில்லை. திருக்குறள் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று என்பதிலும் ஐயமில்லை. ஆனால், சி. வை. தாமோதரம் பிள்ளையவர்கள் முப்பால் என்பது “மூன்று சிறுத் தரும நூல்கள்” என்று 1887-ஆம் ஆண்டிலும், “முப்பால், நாயனார் தமிழ்வேதமாகாது நமது கைக்கு இன்னும் அகப்படாத பின்னொரு சிறு நூலேயாதல் வேண்டும்” என்று 1889-ஆம் ஆண்டிலும் எழுதினார். கீழ்க்கணக்கு நூல்களைக் கூறுகிற “நாலடி நான்மணி” எனத் தொடங்கும் பழைய வெண்பாவின் பின் இரண்டடிகள். “இன்னிலை சொல் காஞ்சியுடன் ஏலாதி என்பவே கைந்நிலைய வாங்கீழ்க் கணக்கு” என்பன. இதில் காஞ்சிக்கு (முது மொழிக் காஞ்சிக்கு) அடை மொழியாகிய “இன்னிலை சொல்” என்றதற்கு இன்னிலை, இன்சொல் என்னும் பெயருள்ள இரண்டு நூல்களின் பெயராக இருக்கக்கூடும் என்று தாமோதரம் பிள்ளையவர்கள் கருதினார்கள். கைந்நிலை என்று ஒரு நூல் இருப்பதாக அவர் கருதவில்லை. பின்னர், கைந்நிலை என்று பெயருள்ள ஒரு நூல் உண்டென்றும் அது கீழ்க்கணக்கைச் சேர்ந்த நூலென்றும் அறிந்த பிறகு “இன்னிலை சொல் என்பதற்கு இன்னிலை இன்சொல் என இரண்டு நூல்களாகாது. காஞ்சிக்கு விசேஷணமாகவும், கைந்நிலை யென்றது வேறொரு தனி நூலாகவும் கொள்ளத்தகும்” என்று எழுதினார்கள். ஆனால், கைந்நிலை என்னும் நூல் அக் காலத்தில் கிடைக்கவில்லை. 18, 19-ஆம் நூற்றாண்டுகளிலே சங்க நூல்களையும் வேறு சில நூல்களையும் பயிலக்கூடாது என்னும் குறுகிய தவறான எண்ணம் இருந்த காரணத்தினாலே அந்நூல்கள் பயிலப்படாமலும் அது காரணமாக அவை இன்னவை என்று அறியப் படாமலும் போயின. அவற்றில் பதினெண் கீழ்க்கணக்கும் ஒன்று. நற்காலமாக வேம்பத்தூர் முத்துவேங்கடசுப்ப பாரதியார் என்னும் புலவர் பதினெண்கீழ்க் கணக்கு நூல்களின் பெயரை ஒரு செய்யுளில் கூறிவைத்தார். சென்ற 19-ஆம் நூற்றாண்டிலே இருந்த அவர், 1849-ஆம் ஆண்டில் பிரபந்த தீபிகை என்னும் ஒரு நூல் இயற்றினார். அந்நூலில், பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் இன்னவை என்பதை ஒரு செய்யுளில் அமைத்துப் பாடினார். அந்நூல் அக்காலத்தில் அச்சிற் பதிப்பிக்கப் படாமையால் அக்காலத்திலிருந்த தாமோதரம் பிள்ளை முதலிய அறிஞர்கள் அந்நூலை அறியவாய்ப்பு ஏற்படவில்லை. ஆகவே, அவர்கள் கீழ்க்கணக்கு நூல்கள் இன்னவை என்பதை உறுதியாக அறியாமல் மயங்கிப் பல கருத்துக்களை வெளியிட்டார்கள். பிரபந்த தீபிகையில், பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் இன்னவை என்று கூறும் செய்யுள் இது: “ஈரொன் பதின்கீழ்க் கணக்கினுட் படும்வகை இயம்பு நாலடி நானூறும் இன்னாமை நாற்பது நான்மணிக் கடிகை சதம் இனிய நாற்பான் காரதே ஆருகள வழிநாற்ப தைந்திணையு மைம்பதும் ஐந்துட னிருபானு மாம் அலகிலா சாரக்கோ வைசதம் திரிகடுகம் ஐயிருப தாகு மென்பர் சீருறும் பழமொழிகள் நானூறு நூறதாஞ் சிறுபஞ்ச மூலம் நூறு சேர்முது மொழிக்காஞ்சி யேலாதி யெண்பதாம் சிறுகைந்நிலை யறுபதாகும் வாரிதிணை மாலைநூற் றைம்பதாம் திணைமொழி வழுத்தைம்ப தாம் வள்ளுவ மாலையீ ரொன்பதாய்ச் சாற்று பிரபந்தம் வழுத்துவர்கள் புலவோர்களே.” இச் செய்யுளினால் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் இன்னவை என்பதை அறியலாம். எனவே. நாலடி நான்மணி நானுற்ப தைந்திணைமுப் பால்கடுகம் கோவை பழமொழி மாமூலம் இன்னிலைசொல் காஞ்சியுடன் ஏலாதி யென்பவே கைந்நிலைய வாங்கீழ்க் கணக்கு என்னும் செய்யுளில் கூறப்பட்ட பதினெட்டு நூல்களின் பெயர்கள் இவை: 1. நாலடியார். 2. நான்மணிக்கடிகை. 3. இன்னாநாற்பது. 4. இனியவை நாற்பது. 5. கார் நாற்பது 6. களவழி நாற்பது (நால் நாற்பது) 7. ஐந்திணை ஐம்பது. 8. ஐந்திணை எழுபது. 9. திணை மாலை நூற்றைம்பது. 10. திணைமொழி ஐம்பது. (நாலைந்திணை) 11. முப்பால் (திருகுறள்). 12. திரிகடுகம். 13. ஆசாரக் கோவை. 14. பழமொழி நானூறு. 15. சிறு பஞ்சமூலம். 16. முதுமொழிக் காஞ்சி. 17. ஏலாதி 18. கைந்நிலை. கைந்நிலை இந்தப் பதினெட்டுக் கீழ்க்கணக்கு நூல்களும் இப்போது நமக்குக் கிடைத்திருக்கின்றன. ஆனால், சென்ற 19-ஆம் நூற்றாண்டில் கைந்நிலை என்னும் நூல் பலருக்குத் தெரியாமலும் அச்சிற் பதிப்பிக்கப்படாமலும் இருந்தது. அக்காலத்தில் சிலர் “இன்னிலை” என்பது பதினெட்டு நூல்களில் ஒன்று என்று கருதினார்கள். 1888-ஆம் ஆண்டில் திரு. த. கனகசுந்தரம் பிள்ளையவர்கள், தமக்குக் கிடைத்த மிகப் பழைய ஏட்டுச்சுவடி யொன்றில் கைந்நிலை என்பது கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று என்று எழுதியிருந்ததைக் கண்டு அதனைத் தாமோதரம் பிள்ளை யவர்களுக்குத் தெரிவித்தார்கள். பிறகு, கைந்நிலை கீழ்க்கணக்கு நூலைச் சேர்ந்தது என்பது அறியப்பட்டது. ஆனால், அந்த நூலின் பிரதி அவர்களுக்குக் கிடைக்கவில்லை. திரு. தி. செல்வகேசவ முதலியாரவர்கள் கைந்நிலை என்னும் நூல் ஒன்று உண்டு என்பதை நம்பவில்லை. அவர் 1893-ஆம் ஆண்டில் அச்சிட்ட ஆசாரக் கோவை என்னும் கீழ்க்கணக்கு நூலின் பதிப்புரையில் இதுபற்றி எழுதியுள்ளார். “இதுவரையில் கிடைக்கப் பெற்றுள்ள இலக்கிய இலக்கண உரைகளிலும் கைந்நிலைச் செய்யுள் மேற்கோள்களாக வழங்கப்பட்டுள்ளதாகவும் எவர்க்கும் கட்புலனாயிற் றில்லை. ஆகவே, கைந்நிலையைக் கையில் நிலைபெறக் காணுந்தனையும் உறுதி கூறுதலாகாது” என்று அவர் எழுதியுள்ளார். கைந்நிலை என்னும் கீழ்க்கணக்கு நூலின் ஏட்டுப் பிரதி 19-ஆம் நூற்றாண்டின் இறுதிவரையிலும் கிடைக்கவில்லை. ஆகவே, அச்சிடப்படவில்லை. பிறகு, இந்த 20-ஆம் நூற்றாண்டிலே 1931-ஆம் ஆண்டிலே கைந்நிலை ஏட்டுப் பிரதி கிடைத்து அச்சிடப்பட்டது. அதன் ஏட்டுப்பிரதியைப் பெற்று அச்சிட்டவர் திரு. அநந்த ராமையரவர்கள். இது வெளிவந்த பிறகு, கீழ்க்கணக்கைச் சேர்ந்த பழையநூல் இது என்பது உறுதியாயிற்று. பின்னர் 1936-ஆம் ஆண்டில் வ.உ. சிதம்பரம்பிள்ளையவர்களும், எஸ். வையாபுரிப் பிள்ளை யவர்களும் சேர்ந்து பதிப்பித்த தொல்காப்பியம் பொருளதிகாரம் இளம்பூரணர் உரையிலே கைந்நிலைச் செய்யுட்கள் நான்கு இடங்களில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளதைக் காணமுடிந்தது. எனவே, கைந்நிலை பதினெண் கீழ்க்கணக்கு நூலைச் சேர்ந்தது என்பதும், அதன் செய்யுட்களை இளம்பூரண அடிகள் என்னும் உரையாசிரியரும் தமது உரையில் மேற்கோள் காட்டியுள்ளார் என்பதும் தெரியலாயின. கைந்நிலை அகப்பொருள் இலக்கிய நூல். இன்னிலை இப்பெயரையுடைய நூல் ஒன்று அண்மைக்காலத்தில் வெளிவந்துள்ளது. இது கீழ்க்கணக்கு நூல்கள் பதினெட்டில் ஒன்று என்று தவறாகக் கருதப்பட்டது. பிறகு, இது கீழ்க்கணக்கைச் சேர்ந்த நூலன்று என்றும் போலி நூலென்றும் அறியப்பட்டது. இன்றும் சிலர் இதனைக் கீழ்க்கணக்கு நூல் என்று உண்மையறியாமல் நம்புகின்றார்கள். ஆகவே. இந்நூலைப் பற்றிய வரலாற்றைக் கூற வேண்டுவது முறையாகும். கீழ்க்கணக்கு நூல்களைக் கூறுகிற ‘நாலடி நான்மணி’ எனத்தொடங்கும் பழைய வெண்பாவின் பின் இரண்டடிகள், “இன்னிலை சொல் காஞ்சியுடன் ஏலாதி என்பவே கைந்நிலைய வாங்கீழ்க் கணக்கு” என்பது. இதில் காஞ்சிக்கு (முதுமொழிக் காஞ்சிக்கு) அடைமொழியாகிய இன்னிலை சொல் என்பதை இன்னிலை, இன்சொல் என்னும் பெயருள்ள இரண்டு நூல்கள் என்று சென்ற நூற்றாண்டிலிருந்த சி.வை. தாமோதரம்பிள்ளையவர்கள் கருதினார்கள். கைந்நிலை என்பது ஒரு நூலின் பெயர் என்பதை அவர் அறிய வில்லை. பின்னர், கைந்நிலை என்பது கீழ்க்கணக்கில் ஒரு நூல் என்பதைக் கனகசுந்தரம் பிள்ளையவர்களால் அறிந்த பிறகு 1889-ஆம் ஆண்டில், “இன்னிலை சொல் என்பதற்கு இன்னிலை, இன்சொல் என இரண்டு நூல்களாகாது காஞ்சிக்கு விசேஷணமாகவும், கைந்நிலை யென்றது வேறொரு தனி நூலாகவும் கொள்ளத்தகும்” என்று இலக்கண விளக்கப் பதிப்புரையிலே எழுதினார்கள். ஆனாலும் இன்னிலை என்பது ஒரு நூலின் பெயர் என்று வேறு சிலர் அக்காலத்தில் நம்பினார்கள். நம்பினது மட்டுமல்லாமல் அந்நூலைப் பெறத் தேடினார்கள். இவ்வாறு பதினெண் கீழ்க் கணக்கு நூல்களில் பதினேழு நூல்கள் இன்னவை என்று ஐயமில்லாமல் உறுதியாகத் தெரிந்த பிறகு ஒரு நூலைப்பற்றி மட்டும் கருத்து வேற்றுமை இருந்தது. அது, பதினெட்டாவது நூல் கைந்நிலை என்று சிலரும் இன்னிலை என்றும் வேறு சிலரும் கருதியதாகும். இவ்வாறு இருசாராரால் கருதப்பட்ட இரண்டு நூல்களும் 19-ஆம் நூற்றாண்டில் கிடைக்க வில்லை. இருபதாம் நூற்றாண்டிலே இரண்டு நூல்களின் ஏட்டுச் சுவடிகளும் கிடைத்தன. இன்னிலை ஏட்டுச்சுவடி 1915-ஆம் ஆண்டிலும் கைந்நிலை ஏட்டுச்சுவடி 1931-ஆம் ஆண்டிலும் அச்சிற் பதிப்பிக்கப்பட்டன. (கைந்நிலையைப் பற்றி மேலே எழுதியுள்ளேன்) இன்னிலை ஏட்டுச்சுவடியைக் கண்டு பிடித்தவர் வித்துவான் த. மு. சொர்ணம்பிள்ளை யவர்கள். இந்தச் சுவடியைத் திரு. வ.உ. சிதம்பரம்பிள்ளை யவர்கள் 1915-ஆம் ஆண்டில் அச்சிற் பதிப்பித்தார்கள். இந்நூல் அறப்பால், பொருட்பால், இன்பப்பால், வீட்டுப்பால் என்று நான்கு பிரிவுடையது. நாற்பத்தைந்து வெண்பாக்களை யுடையது. “பொய்கையார் இன்னிலை” என்று பெயர் சூட்டப் பட்டிருக்கிறது. இதில் பெரிய வியப்பு என்னவென்றால், பாரதம் பாடிய பெருந்தேவனார் இந்நூலுக்குக் கடவுள் வாழ்த்துப் பாடியிருப்பதுதான்! இந்நூல் முகவுரையில், வ.உ. சிதம்பரம்பிள்ளையவர்கள் இந்நூல் ஏட்டுப் பிரதியைப் பற்றி இவ்வாறு எழுதியுள்ளார்கள். “எனக்குக் கிடைத்த இந்நூலின் ஏட்டுப்பிரதி திருநெல்வேலி ஜில்லா ஆழ்வார் திருநகரியில் மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்னர் அவதரித்துத் தமிழ் இலக்கிய இலக்கணங்களை முற்றுறக் கற்று ‘மாறனலங்காரம்’ முதலிய சில அரிய நூல்களை இயற்றியருளிய ஸ்ரீமான் இரத்தினக் கவிராயரவர்களால் எழுதப்பட்டுள்ளது... இவ்வேட்டுப் பிரதியை எனக்கு அளித்தவர்கள் திருநெல்வேலி ஹிந்துக்கல்லூரித் தமிழ்ப் பண்டிதர் ஸ்ரீமான் த. மு. சொர்ணம் பிள்ளையவர்கள். இவர்களுக்கு இவ்வேட்டுப் பிரதியை வேறுபல தொன்னூலேட்டுப்பிரதிகளோடு சேர்த்தளித்தவர்கள் திருமேனிக் கவிராயரவர்கள் சந்ததியார்களுக்குத் தலைவராகவும், எனக்கு உறவினராகவும் நண்பராகவும், திருநெல்வேலி ஜில்லா தாலுக்கா போர்ட்டு மெம்பராகவும் விளங்கும் ஸ்ரீ அ. மீ. மலையையாப் பிள்ளையவர்கள். இதுகாறும் இந்நூலின் பெயரும், இந்நூல் கீழ்க்கணக்குப் பதினெட்டில் ஒன்றென்பதும் தெரியாதிருந்த நம் தமிழ் நாட்டார்க்கு இந்நூலை அளிப்பதற்குக் காரண கர்த்தர்களாயிருந்த இவ்விருவர்களுக்கும் தமிழுலகம் நன்றி பாராட்டக்கடன் பட்டுள்ளது.” இன்னிலை நூலாசிரியரைப் பற்றிக் கூறுகிற இடத்தில் பதிப்பாசிரியரும் உரையாசிரியருமாகிய வ.உ. சிதம்பரம் பிள்ளை யவர்கள் இவ்வாறு எழுதுகிறார். “இந்நூலைத் தொகுத்தவர் மதுரை யாசிரியர் என்று இந்நூலின் ஏட்டுப் பிரதியின் முதல் ஏட்டில் எழுதப் பட்டிருக்கிறதென்று மேலே கூறியுள்ளேன். அஃதாவது, இந்நூலைக் கீழ்க்கணக்குப் பதினெட்டில் ஒன்றாகத் தொகுத்தவர் மதுரை யாசிரியர் என்று கொள்க. ‘மதுரையாசிரியர்’ என்னும் சிறப்புப் பெயரைப் பெற்று விளங்கியவர் மாறனார் என்பவரும் நல்லந்துவனார் என்பவருமே. இவ்விருவரும் கடைச் சங்கப் புலவர்கள். இவர்களில் எவர் இந்நூலைத் தொகுத்தவரென்பது தெரியவில்லை. இந்நூற்குக் கடவுள் வாழ்த்துப் பாடியவர் பாரதம்பாடிய பெருந்தேவர். இவர் எட்டுத் தொகை நூல்களில் சிலவற்றிற்குக் கடவுள் வாழ்த்துப் பாடியதுபோல இந்நூற்கும் பாடியுள்ளார். இவரும் கடைச்சங்கப் புலவர்” இவர் கூறியுள்ளதை வரலாற்றோடு ஒப்பிட்டு ஆராய்ந்து பார்த்தால், இன்னிலை நூல் ஒருபோலி நூல் என்பதும், அது கீழ்க்கணக்கு நூலைச் சேர்ந்தது அன்று என்பதும் பட்டப்பகல் போல் விளங்குகின்றன. கீழ்க்கணக்கு நூலைப் பதினெட்டாகத் தொகுத்தவர்யார் என்பது ஒருவருக்கும் தெரியாது. அதுபற்றிக் கர்ணபரம்பரையாகவோ நூல்மூலமாகவோ யாதொரு செய்தியும் கிடையாது. ஆனால், கடைச்சங்கப் புலவரான மதுரையாசிரியர் கீழ்க்கணக்கு நூல்களைத் தொகுத்ததாக இன்னிலைப் பதிப்பாசிரியர் கூறுகிறார். கீழ்க்கணக்கு நூல்கள் பதினெட்டும் கடைச்சங்க காலத்துக்கு முன்பு இயற்றப் பட்டவை அல்ல. கி.பி. முதல் நூற்றாண்டு தொடங்கி கி.பி. 8-ஆம் நூற்றாண்டு வரையில் வெவ்வேறு காலத்தில் வெவ்வேறு புலவர்களால் இயற்றப்பட்டவை கீழ்க்கணக்கு நூல்கள். நாலடி நானூறு கி.பி. 8-ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்டது. முப்பால் என்னும் திருக்குறள் கி.மு. முதல் நூற்றாண்டில் அல்லது கி.பி. முதல் நூற்றாண்டில் இயற்றப்பட்டது. எனவே, கீழ்க்கணக்கு நூல்கள் கி.பி. 8-ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு தொகுக்கப்பட்டிருத்தல் வேண்டும் கடைச்சங்க காலத்தில் (கி.பி. இரண்டாம் நூற்றாண்டில்) தொகுக்கப்பட்டிருத்தல் முடியாது. ஆனால், இன்னிலை பதிப்பாசிரியர், கடைச்சங்கப் புலவரான மதுரை யாசிரியர் கீழ்க்கணக்கு நூல்களைத் தொகுத்ததாக இன்னிலை ஏட்டுச்சுவடி கூறுகிறதென்று எழுதுகிறார். இதனைப் பகுத்தறிவுள்ளார் எவ்வாறு ஏற்றுக்கொள்ளமுடியும்? “நெடுவெண் பாட்டே முந்நான்கடித்தே குறுவெண் பாட்டிற் களவெழு சீரே.” என்னும் தொல்காப்பியச் சூத்திர (செய்யுளியல் 159.) உரையில் பேராசிரியர் எழுதிய விளக்கம் இங்குக் கருதத்தக்கது: “இங்ஙனம் அளவியல் வெண்பாச் சிறப்புடைத்தாத னோக்கிப் பதினெண் கீழ்க் கணக்கினுள்ளும் முத்தொள்ளாயிரத்தும் ஆறடியி னேறாமற் செய்யுள் செய்தார் பிற்சான்nருமெனக் கொள்க.” என்று பேராசிரியர் எழுதுகிறார். கீழ்க்கணக்கு நூலாசிரியர்களைப் பிற்சான்றோர் என்று அவர் கூறுவது நோக்குக. பிற்சான்றோர் என்றால், கடைச் சங்க காலத்திற்குப்பின் இருந்த சான்றோர் என்பது பொருள். எனவே பிற்காலத்துச் சான்றோர் இயற்றிய நூல்களை முற்காலத்துச் சான்றோர் ஒருவர் தொகுத்தார் என்று கூறுவது எவ்வாறு பொருந்தும்? எனவே, இன்னிலை ஏட்டுச் சுவடியில் எழுதப்பட்டதாகக் கூறப்படுகிற, கீழ்க் கணக்கு நூல்களை மதுரையாசிரியர் என்னும் கடைச் சங்க காலத்துப் புலவர் தொகுத்தார் என்னும் கூற்றுப் போலிக் கூற்றாமென் றறிக. அடுத்தபடியாக, இன்னிலை நூலுக்குப் பாரதம் பாடிய பெருந்தேவனார் கடவுள் வாழ்த்துப் பாடினார் என்பது. இதுவும் போலிக் கூற்றாகும். கீழ்க் கணக்கு நூல்கள் சிலவற்றிற்கு அந்தந்த நூலாசிரியர்களே கடவுள் வாழ்த்துப் பாடியுள்ளனர். சில கீழ்க் கணக்கு நூல்களுக்குக் கடவுள் வாழ்த்து இல்லை. ஆனால், கீழ்க்கணக்கு நூல்கள் எதற்குமே, பாரதம் பாடிய பெருந்தேவனார் கடவுள் வாழ்த்துப் பாடவில்லை. இன்னிலை நூலுக்கு மட்டும் கடவுள் வாழ்த்துப் பாடினார் என்று கூறப்படுகிறது. இன்னிலை, கீழ்க்கணக்கு நூல்கள் பதினெட்டில் ஒன்றாக இருந்தால், இதற்கு மட்டும் பாரம் பாடிய பெருந்தேவனார் ஏன் கடவுள் வாழ்த்துப் பாட வேண்டும்? ஏனைய பதினேழு நூல்களுக்கு ஏன் கடவுள் வாழ்த்து இவர் பாடவில்லை. தொகை நூல்கள் பதினெட்டில் பதினேழு நூல்களுக்குக் கடவுள் வாழ்த்துப் பாடாமல் ஒரு நூலுக்கு மட்டும் ஏன் பாடினார்? இல்லை. கீழ்க்கணக்குத் தொகை நூல்கள் பதினெட்டுக்கும் சேர்த்து இக்கடவுள் வாழ்த்தைப் பாடினார் என்றால், ஏனைய கீழ்க்கணக்கு ஏட்டுச் சுவடிகள் ஒவ்வொன்றிலும் இந்தக் கடவுள் வாழ்த்துச் செய்யுள் இருக்க வேண்டும் அல்லவா? அவைகளில் பாரதம் பாடிய பெருந்தேவனாரின் கடவுள் வாழ்த்துக் காணப்படாமல், இந்த இன்னிலை ஏட்டுச் சுவடியில் மட்டும், (இது கீழ்க் கணக்கு நூலைச் சேர்ந்ததும் அன்று.) கடவுள் வாழ்த்துப் பாடினார் என்றால், இதனைப் பகுத்தறிவுள்ளார் எப்படி ஒப்புக்கொள்ளமுடியும்? எனவே, இன்னிலைப் பதிப்பாசிரியர், அந்நூல் முன்னுரையிலும், ஆசிரியரைப் பற்றிக் கூறிய இடத்திலும், இன்னிலை கீழ்க் கணக்கு நூல்களில் ஒன்றென்று கூறியது ஏற்கத்தக்கதன்று. மேலும் இன்னிலைப் பதிப்பாசிரியர் வ.உ. சிதம்பரம் பிள்ளையவர்கள், இன்னிலை நூல் செய்யுட்களை உரையாசிரியராகிய இளம்பூராண அடிகள் தொல்காப்பிய உரையில் மேற்கோள் காட்டியுள்ளார் என்றும் ஆகவே இன்னிலை பழைய நூல் என்றும் மேற்படி நூலின் முன்னுரையில் எழுதியுள்ளார்கள். இளம்பூரணர் தமது தொல்காப்பியக் களவியல் 23-ஆம் சூத்திர உரையிலும், கற்பியல் 5-ஆம் சூத்திர உரையிலும் 12-ஆம் சூத்திரஉரையிலும், இன்னிலை நூற் செய்யுட்களை மேற்கோள் காட்டியிருப்பதாக எழுதியிருக்கிறார்கள். இவர் கூறுகிறபடி இச்செய்யுட்களை இளம்பூரண அடிகள் மேற்கோள் காட்டுகிறாரா என்பதைப் பலமுறை தேடித் தேடிப் பார்த்தேன். ஒரிடத்திலாவது மேற்கோள் காட்டப்பட்ட வில்லை. திரு. எஸ். வையாபுரிப் பிள்ளையவர்களும் இது பற்றி இதையே கூறுகிறார்: “இந்நூற் (இன்னிலை நூற்) செய்யுட்களை இளம் பூரணம் எடுத்தாண்டதாக ஐந்து இடங்கள் காட்டப்பட்டுள்ளன. இவை யனைத்தும் இளம்பூரணருரை ஏட்டுப்பிரதியிலும். அச்சுப் பிரதியிலும் காணப்படவில்லை, பொருளதிகாரத்தில் செய்யுளியல் தவிர ஏனைய இயல்களுக்குத் தமிழ்நாடு முழுவதிலும் உள்ள ஏட்டுப் பிரதி ஒன்றேயாம். இரண்டாவது ஒரு பிரதியில்லை என்பது இங்கே மனங்கொள்ளத் தக்கது.”3 எனவே, இன்னிலை நூற்செய்யுட்களை இளம்பூரண அடிகள் தமது தொல்காப்பிய உரையில் மேற்கோள் காட்டியுள்ளார் என்று இந்நூற் பதிப்பாசிரியராகிய வ.உ. சிதம்பரம் பிள்ளையவர்கள். முகவுரையில் எழுதியிருப்பது தவறானது: உண்மைக்கு மாறானது. இதில் இன்னொரு வியப்பு என்னவென்றால், திரு வ.உ.சி. பிள்ளையவர்கள். எஸ். வையாபுரிப் பிள்ளையுடன் சேர்ந்து தொல் காப்பியம், பொருளாதிகாரம், இளம்பூரணர் உரை முழுவதையும் அச்சிட்டிருக்கிறார்கள். என்பதுதான்.”4 இன்னிலை நூலை அச்சிட்டு இருபத்தோரு ஆண்டுக்குப் பின்னர் இளம்பூரணர் உரையை அச்சிட்டிருக்கிறார்கள். இதன் பதிப்புரையில், வ.உ. சிதம்பரம் பிள்ளையவர்கள், எழுதியுள்ள கீழ்க்கண்ட பகுதி, இன்னிலைச் செய்யுட்களை இளம்பூரணர் தமது உரையில் மேற்கோள் காட்டியுள்ளார் என்று இன்னுரை முன்னுரையில் இவர் எழுதியது தவறு என்று கூறுவதுபோல (வெளிப்படையாக இல்லாமல்) காணப்படுகிறது. தொல்காப்பியம், பொருளாதிகாரம், இளம்பூரணர் உரைப் பதிப்பில் பிள்ளை யவர்கள் எழுதுவது இது: “தமிழ்நாடு முழுவதிலும் பொருளதிகார இளம் பூரணருரை முற்றுமடங்கிய பிரதி ஒன்றேயுள்ளது. இப்போது அங்கங்கே ஒரு சிலரிடத்துள்ள பிரதிகளனைத்தும் இவ்வேட்டுப் பிரதியைப் பார்த்தெழுதிக் கொண்ட கடிதப் பிரதிகளேயாகும். இக் கடிதப் பிரதிகள் சிலவற்றில் ஒரு சிலவிடங்களில் ஏட்டுப் பிரதியிற் காண்ப்பெறாத விஷயங்கள் ஆதாரமின்றி நுழைத்தெழுதப்பட்டன. அவ்வாறு நுழைத்தெழுதியவற்றை யெல்லாம் களைந்து ஏட்டுப் பிரதியி லுள்ளவாறே இப்பதிப்பு எனது நண்பர் வையாபுரிப் பிள்ளையவர் களாற் சித்தஞ் செய்யப்பட்டுள்ளது.” இவ்வாறு 1936-இல் எழுதிய திரு. வ. உ. சி. அவர்கள், தாம் 1915-இல் பதிப்பித்த இன்னிலை நூல் முன்னுரையில் எழுதியவை. “ஆதாரமின்றி நுழைத்தெழுதப்பட்டன” என்பதை வெளிப்படை யாகக் கூறாமல் மறைமுகமாக ஒப்புக் கொள்கிறார். இனி, இன்னிலை பதிப்புரையில் வ.உ.சி அவர்கள், பேராசிரியரும், உரையாசிரியரும். நச்சினார்க்கினியரும் தமது தொல்காப்பிய உரையிலும், யாப்பருங்கல விருத்தியுரைகாரர் தமது உரையிலும் இன்னிலை நூலிலிருந்து செய்யுட்களை மேற்கொள் காட்டிருப்பதாகக் குறிப்பிட்டு, “இவ்வாறு தொல்லாசிரியர்களும் தொல்லுரை யாசிரியர்களும் இந்நூலினை எடுத்தாண்டிருப்பதே இந்நூலின் மேம்பாட்டைக் காட்டா நிற்கும்” என்று எழுதியுள்ளார். இதுவும், “ஆதாரமின்றி நுழைத்தெழுதப்பட்ட” உண்மைக்கு மாறானதாகும். இதுபற்றியும் திரு. எஸ். வையாபுரிப் பிள்ளை யவர்கள். கூறியிருப்பது கருதத்தக்கது. “பேராசிரியரும். நச்சினார்க்கினியரும் இந்நூலை (இன்னிலை நூலை) எடுத்தாண்டதாக ஸ்ரீ பிள்ளை (வ.உ.சி.) அவர்கள் கூறுகி றார்கள். ஆனால், அவர்கள் காட்டும் இரண்டு இடங்களிலும் பூதத்தார் அவையடக்கு எனக்காணப்படுகிறதேயன்றிப் பொய்கையாரைப் பற்றியேனும், இன்னிலையைப் பற்றியேனும் ஒன்றும் குறிப்பிடப்பட வில்லை. கடைசியாக, யாப்பருங்கல விருத்தியில் ஒரு செய்யுள் இன்னிலையின் கண்ணே உள்ளது எனப் பிள்ளை யவர்கள் காட்டுகிறார்கள். ஆண்டும் அச்செய்யுள் ஒளவையார் பாடியதாகக் கொள்ளக் கிடக்கின்றது.”5 இதனால், இன்னிலை என்னும் நூல் கீழ்க் கணக்கு நூலைச் சேர்ந்தது அன்று என்பதும், அது ஒரு போலி நூல் என்பதும் தெரிகின்றன. சென்னை மாகாணக் கல்லூரியில் தமிழாசிரியராக இருந்த அநந்தராம அய்யரவர்கள். 1931-ஆம் ஆண்டு கைந்நிலையை அச்சிட்ட பிறகு. இன்னிலை போலிநூல் என்பது வெள்ளிடை மலைபோல் விளங்கிவிட்டது. கம்ப இராமாயணம் (இந்நூல் 118-ஆரம்பத்தில் கூறியுள்ள ‘கம்ப இராமாயணம்’ என்பதன் தொடர்புரை.) 1886-ஆம் ஆண்டில் அச்சிடப்பட்ட ஏரெழுபது, திருக்கை வழக்கம் என்னும் புத்தகத்துக்கு முகவுரை எழுதிய தொழுவூர் வேலாயுத முதலியார் அவர்கள், அக்காலத்தில் அச்சிடப்பட்ட கம்ப ராமாயணத்தில் அதனை அச்சிட்டோர் சமயக் காழ்ப்புக் காரணமாக என்னென்ன மாறுபாடுகள் செய்தார்கள் என்பதை அந்த முகவுரையில் எடுத்துக்காட்டியுள்ளார். அந்தப் பகுதியைக் கீழே தருகின்றேன்: “தேவாரத்துள் ‘பத்தூர்புக் கிரந்துண்டு’ என்றாற் போல்வனவும், திருவாசகத்து ‘ஏகாசமிட்ட விருடிகள்’ என்றாற் போல்வனவும், பெரியபுராணத்துள் ‘காதில் வெண்குழையோன் கழறொழ நெடியோன் காலம் பார்த்திருந்தது மறியான்’ என்றாற் போல்வனவும் எங்ஙனம் வெள்ளிப் பாடலாக வழங்கியதோ, அவ்வண்ணமே இராமாயணத் துள்ளும் வெள்ளிப்பாடல் வழங்கிற்றாகலின், சைவபக்கமான செய்யுளு மவையேயென்பாரு முளராலோவெனின், அற்றன்று. “தேவார முதலியவற்றுட் கலந்த அவ்வெள்ளிப் பாடலைச் சைவர்கள் யாரு முடன்பட்டபடி யன்று. யாமு மதுவே. அது நிற்க, மாணிக்கமும் போலிமணியும், வைரமும் பளிங்கு முதலிய வெள்ளைக் கல்லும் விரவச் செய்துழிப் பார்வை வல்லான் பிரித்தெடுக்குந் திறம் போலும், சான்றோர் செய்யுளும் பின்னை யோர் செய்யுளும், அவ்வாறே மொழிகளும் மயங்கியவழிச் செவிவல்லான் பிரித்துணர்ந் துணர்த்துமன்றே........ “அல்லதூஉம், வெள்ளிப் பாட்டெனச் சிலவற்றைக் கூறுவார் தம்மாற் கம்பர் பாட்டென வுடன்பட்ட வேனைய செய்யுளோடி யாவரு மொப்புக் கொண்ட. ‘சுடுதொழி லரக்கராற் றொலைந்த வானுளோர் கடுவமர் களனடி கலந்து கூறலும் படுபொரு ளுணர்ந்தவப் பரமன் யாமினி யடுவதில் லென மறுத்து. என்புழி ‘படுபொரு ளுணர்ந்தவப் பரமன்யாம்’ என்றதனாலே அவர் கொள்கையிது வென்பதினிது விளங்கும், இங்ஙனங் கூறிய செய் யுட்கள் பலவாகவும் அவற்றைப் பிற்காலத்து வைணவர் பலர் தம் மதனூலென்று கருத, மாற்றியும் நீக்கியும் வரம்பழித் - தொழிந்தனர். இதற்குச் சான்று அச்சிட்டு வெளிப்படுத்தியுள்ள அவ் விராமயணப் பிரதிக்கும் ஏட்டுப் பிரதிக்கும் பாடமொவ்வாமை யின்றுங் காணலாம். அன்றியும், அச்சொற்களும் அடிகளும் செய்யுட்களும் ஏறியுங் குறைந்தும் மாறியும் சிதைந்தும் உள்ளவற்றைக் கண்கூடாகக் காணலாம். இவ்விடத்ததனை யெடுத்துக் காட்டப்புகின் விரியுமாதலின் இடம் பெற்றுழிக் காட்டுவாம். இனிச். ‘சுடுதொழி லரக்கராற் றொலைந்த வானுளோர்’ என்ற செய்யுளில். ‘படுபொரு ளுணர்ந்தவப் பரமன் யாமினி அடுவதில் லெனமறுத் தவரை யேவினான்’ என்ற பாடத்தை மாற்றி, ‘மறுத்தவரோ டேகினான்’ எனவும், ‘எழுந்தனர் கட்களிற்றிறையுந் தாமரைச் செழுந் தவிசகந்தத் தேவும்’ என்றதை மாற்றி ‘எழுந்தனர் கறைமிடற்றிறை’ எனவும் சிதைத்து வழங்கினர். இங்ஙனம் அச்சிடு முன்னே ஆனவை பல, பின்னிட்டா லானவற்றிற்கு வரம்பில்லை. படலப் பெயர்களையே முற்றும் வரம்பழிய மாற்றினர். இராமேசுரப்படலத்தை முற்றுமெடுத் தெறிந்தொழித்தனர். இப்படலம் வான்மீக விராமாயணத்தில்லையே யெனின், இரணியவதைப் படலமும் அவ்வாறே அவ்வான்மீக விராமாயணத்தில்லை, யாகவே அதனையுமொழித்தல் வேண்டும். இன்னு மிவ் விரணியன் வதைப் படலத்துள். ‘தாமரைக் கண்ணன் றழற்கண்ணன் பேரவை தவிர நாமந் தன்னதே யுலகங்கள் யாவையு நவில’ என்ற செய்யுளைத் தம்மதம் பற்றித் ‘தாமரைத் தடங்கண்ணி னான் பேரவை தவிர, நாமந் தன்னதே நவில’ என மாற்றினாரு முளர். இஃதொன்றோ? பிரமனாதி யேனைவானோர் வணங்கியபடி கூறுவதன்றிச், சிவன் திருமாலை வணங்கியதாகக் கம்பர் யாண்டுங் கூறிய தில்லை யென்பது நன்குணர்ந்தும், தம்மனஞ் சான்று கூறவும், அங்ஙனம் அம்மதம் பற்றி யச்சிட்ட பிரதிகளிலையமுற்றுச் சோதிப்பான் புக்கவழிப், பழைய வேட்டுப் பிரதிகளோடு மாறுபட்டுக் கேட்டுப் பிரதியாகவே கிடந்திருக்கக் கண்டோம். இச்சிதைவு பாலகாண்டம் அயோத்தியா காண்டம் ஆரணிய காண்டத்தினும்; கிட்கிந்தை காண்டத்தும் சுந்தரகாண்டத்தும் மிகுதி; இவ்விரண்டினு முயுத்த காண்டம் பெருங்கேடுற்றது. என்செய்வாம்; கடவுள் செய்வகை யறியோம். அது நிற்க. “இனி அவ்வுயுத்த காண்ட மொருமதத் திருதிறத்தா ரச்சிட்ட பிரதிகளுள், ஒன்று பரம்பரையேட்டுப் பிரதிகளோடு சிறிது ஒற்றுமை யுள்ளது; மற்றொன்றோ பல மாறுபாட்டோடுங் கூடி யுள்ளது. இங்ஙனம் தேயம், மொழி (பாஷை), நூல், சாதி, சமயம், தருமம், மாதர், திரவியம், குழவிகள் முதலிய பொருள்களெல்லாம், தம்மது என்று அபிமானித்துக் காக்குந் தலைவனில்லாவழி, இயற்கை திரிந்து கெடும் என்பது யாவரு முணர்ந்தபடி யன்றோ?” (பக்கம் 22-25. சென்னைத் துரைத்தன கல்விச் சாலைத் தமிழ்ப் புலமை, சமரச வேத சன்மார்க்க சங்கம் ஸ்ரீ தொழுவூர் வேலாயுத முதலியார் எழுதிய முகவுரை. ஏரெழுபது, திருக்கை வழக்கம் Memorial Press, Madras. 1886.) எகர ஒகர எழுத்துக்களின் வரிவடிவ வரலாறு (இந்நூல் 194-ஆம் பக்கத்தில் கூறிய எகர ஒகர எழுத்து என்பது பற்றிய தொடர்புரை) எழுத்துக்கள் எல்லாம் எக்காலத்திலும் ஒரே விதமாக எழுதப்படவில்லை. வெவ்வேறு காலத்தில் வெவ்வேறு விதமாக எழுதப்பட்டன. இவ்வெழுத்துக்களில் எகர ஒகர எழுத்துக்களின் வரிவடிவங்கள் எவ்வாறெல்லாம் எழுதப்பட்டன என்பதை இங்கு ஆராய்வோம். இந்த எழுத்துக்களின் உருவ அமைப்பைப் பற்றி இலக்கண நூல்களிலே சூத்திரங்கள் கூறப்பட்டுள்ளன. மெய் எழுத்துக்களும் எகர ஒகர உயிரெழுத்துக்களும் புள்ளிபெறும் என்று அச் சூத்திரங்கள் கூறுகின்றன. மெய்யின் இயற்கை புள்ளியொடு நிலையல் எகர ஒகரத் தியற்கையும் அற்றே. என்பன தொல்காப்பிய எழுத்ததிகாரம் 14, 15-ஆம் சூத்திரங்களாம். கி.பி. 11-ஆம் நூற்றாண்டில் புத்தமித்திரனார் இயற்றிய வீரசோழியம் என்னும் இலக்கணம். எகர ஒகர மெய்யிற் புள்ளிமேவும். என்று கூறுகிறது. (எழுத்ததிகாரம் 3-ஆம் செய்யுள்.) கி.பி. 13-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பவணந்தி முனிவர் இயற்றிய நன்னூல் இலக்கணம். தொல்லை வடிவின் எல்லா எழுத்தும் ஆண்டு எய்தும் எகர ஒகர மெய் புள்ளி. என்று கூறுகிறது. (நன்னூல், எழுத்தியல் 43-ஆம் சூத்திரம்.) இவ்விலக்கணச் சூத்திரங்களின்படி குற்றெழுத்துக்களாகிய எகர ஒகரங்கள், மெய்யெழுத்துக்களைப் போலவே புள்ளியிட் டெழுதப்பட வேண்டும். எ ஒ கெ கொ ஙெ ஙோ செ சொ ஞெ ஞொ டெ டொ ணெ ணொ தெ தொ முதலியன. இக் காலத்து இவ்வெழுத்துக்கள் எ ஒ கெ கொ ஙெ ஙோ செ சொ ஞெ ஞொ டெ டொ ணெ ணொ தெ தொ என்று எழுதப்படுகின்றன. பழைய இலக்கண நூல்கள் எல்லாம் ஒரே புள்ளியைக் கூறுகின்றன. 18-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலே இருந்தவராகிய வீரமாமுனிவர் என்னும் இத்தாலி தேசத்தவர், தாம் இயற்றிய தொன்னூல் விளக்கம் என்னும் இலக்கண நூலிலே. “நீட்டல் கழித்தல் குறின்மெய்க் கிருபுள்ளி” என்று சூத்திரம் செய்தார். நீண்ட புள்ளி என்றும் கழித்த புள்ளி என்றும் இரண்டுவித புள்ளியைக் கூறுகிறார். எகர ஒகரக் குற்றெழுத்துக்கு நீண்ட புள்ளியையும் மெய்யெழுத்துக்களுக்குக் சுழித்த புள்ளியையும் அமைக்கவேண்டும் என்று கூறுகிறார் உதாரணம் எரி, ஒதி, மண் கண் ஆனால் இவர் கூறிய முறையை, பெரும்பான்மையோர் எற்றுக்கொண்டதாகத் தெரியவில்லை. 1828-ஆம் ஆண்டு வெளிவந்த தாண்டவராய முதலியார் இயற்றிய இலக்கண வினாவிடை என்னும் நூலிலே இதனை நன்கு விளக்குகிறார்: “இவ்வெழுத்துக்களுள் வேறுபாடில்லாமல் சமான வடிவாக வழங்குகின்ற வெழுத்துகட்கு வேறுபாடறியு மடையாளமெது? எ ஒ என்னு முயிர்க் குற்றெழுத்தும் இவ்விரண்டு மேறின கெ கொ முதலிய உயிர்மெய்க் குற்றெழுத்தும் க் ங் முதலிய மெய்யெழுத்தும் மேலே. இப்படியொரு புள்ளியிட்டெழுதப்படும். வரலாறு. எவன். ஒப்பு, கெண்டை, கொண்டை-இவைகளுக்குள்ளே மெய்யெழுத்துக்கும் புள்ளியிட்டெழுதினமை காண்க.” மெய்யெழுத்துக்களைப் போலவே எகர ஒகர எழுத்துக்கள் பண்டைக் காலத்தில் புள்ளியிட்டெழுதப்பட்டன என்பதற்குக் கீழ்க்கண்ட பழைய செய்யுட்களும் சான்றாகும். “நேரிழையார் கூந்தலின் ஒர் புள்ளிபெற நீள்மரமாம் நீர்நிலை ஒர் புள்ளிபெற நெருப்பாம்” நேரிழையார் (பெண்களின்) கூந்தலுக்கு ஒதி என்பது பெயர். ஓதி என்பது பண்டைக் காலத்தில், இலக்கண முறைப்படியும் வழக்க முறைப்படியும் ஒதி என்று எழுதப்பட்டது. இதில் உள்ள ஒகரம் ஒகாரமாகும். இதன் மேல் ஒரு புள்ளி இட்டு ஒதி என்று இப்படி எழுதினால், ஓகாரத்தின் ஒரு மாத்திரை குறைந்து ஒகரமாகி ஒதி என்று படிக்கப்படும். ஒதி என்பது ஒரு மரத்தின் பெயர் (ஒதி மரம்). நீர் நிலைக்குப் பெயர் ஏரி என்பது. இது பண்டைக் காலத்தில், இலக்கண முறைப்படியும் வழக்க முறைப்படியும் எரி என்று எழுதப்பட்டது. இந்த எகரத்தின்மேல் ஒரு புள்ளியிட்டு எரி என்று இப்படி எழுதினால், ஏகாரமாகிய நெட்டெழுத்து ஒரு மாத்திரை குறைந்து எரி என்று படிக்கப்படும். எரி என்றால் நெருப்பு. இதைத்தான் இச் செய்யுள். ‘நேரிழையார் கூந்தலின் ஒர் புள்ளிபெற நீள்மரமாம், நீர்நிலை ஒர் புள்ளிபெற நெருப்பாம்.” என்று கூறுகிறது. எகர ஒகர உயிர்மெய் யெழுத்துக்களுக்கு வீரமாமுனிவர் புதிய வடிவங்களை அமைத்தார். பண்டைக் காலத்தில் கெ, கெ; ஙெ, ஙெ; செ செ; ஞெ, ஞெ; என்று இவ்வாறு எழுதப்பட்டன. இவை முறையே கெ, கே; ஙெ, ஙே;செ, சே; ஞெ, ஞே என்று படிக்கப்பட்டன. இவ்வாறே கொ, கொ; ஙோ, ஙோ; சொ, சொ; ஞொ, ஞொ; என்று மிவ்வாறு எழுதப்பட்டன. இவை முறையே கொ, கோ; நொ, ஙொ; சொ, சோ; ஞொ ஞோ என்று படிக்கப் பட்டன. இவ்வாறு குற்றெழுத்துக்குக் கொம்பின்மேல் புள்ளி வைத்தும் நெட்டெழுத்துக்குக் கொம்பின்மேல் புள்ளி வைக்காமலும் எழுதப்பட்டதை மாற்றி, வீரமா முனிவர் கொம்பின்மேல் புள்ளி வைக்காமல்விட்டால் குற்றெழுத்தாகவும் கொம்பை மேலே சுழித்தால் நெட்டெழுத்தாகவும் படிக்கவேண்டு மென்று புதிதாக ஒரு முறையமைத்தார். இதைப்பற்றி வீரமா முனிவர் தாம் லத்தின் மொழியில் எழுதிய ‘கொடுந்தமிழ்’ இலக்கணத்தின் முதல் அதிகாரத்தில் இவ்வாறு எழுதுகிறார். அதன் தமிழ் ஆக்கம் வருமாறு: “எகரக் குற்றெழுத்தும் ஏகார நெட்டெழுத்தும், ஒகரக் குற்றெழுத்தும் ஒகார நெட்டெழுத்தும், குறில் நெடில் வேறுபாடுகளைக் காட்டும் அடையாளம் இல்லாமல், ஒரே விதமாக எழுதப் படுவதால், தமிழர் குற்றெழுத்து நெட்டெழுத்து என்னும் வேறுபாட்டினைப் பிரித்தறியும் பொருட்டு, குற்றெழுத்துக்களின்மேல் புள்ளி வைத்தும் நெட்டெழுத்தின்மேல் புள்ளி வைக்காமலும் எழுதும்படி கற்பிக் கிறார்கள். ஆகவே, மெய் என்னும் சொல்லில் உள்ள கொம்பின்மேல் புள்ளி வைக்காதபடியால் மேய் என்று படிக்கப்படுகிறது. மெய் என்னும் சொல்லில் கொம்பின்மேல் புள்ளி வைத்திருக்கிறபடியால் அது மெய் என்று படிக்கப்படுகிறது. அப்படியே பொய் என்னும் சொல்லில் கொம்பு புள்ளி பெறாதபடியால் போய் என்று படிக்கப்படுகிறது. பொய் என்பதில் கொம்பு புள்ளி பெற்றிருப்பதனால் பொய் என்று படிக்கப்படுகிறது. ஆனால், இந்தப் புள்ளிகள் வைத்து எழுதுவதை நான் பெரும்பாலும் பார்த்ததில்லை. இஃது ஏடெழுது வோரின் அசட்டைத்தனமாக இருக்கலாம். இந்த எகர ஒகரக் குற்றெ ழுத்து நெட்டெழுத்துக்களின் வேறுபாட்டை எளிதாகத் தெரிந்து கொள்ளுதற்கு வேறொரு வகையை நான் கண்டறிந்தேன் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். இது பின்வருமாறு. குறிலுக்கும் நெடிலுக்கும் ஒரே மாதிரியாக எழுதப்படுகிற கொம்பு என்று சொல்லப்படுகிற b இந்த எழுத்தைக் குற்றெழுத்துக் காகவும், இந்தக் கொம்பையே மேலே சுழித்து n இவ்விதமாக எழுதுவதை நெட்டெழுத் துக்காகவும் அமைத்தேன். உதாரணமாக மெய், மேய் பொய், போய். இந்த முறை ஒப்புக்கொள்ளப்பட்டு அநேகரால் வழங்கப்பட்டு வருகிறது.” இவ்வாறு எகர ஒகர உயிர்மெய் யெழுத்துக்களுக்குப் புதிய குறியீடுகளை வீரமாமுனிவர் அமைத்தபடியே இப்போது நாம் எழுதிவருகிறோம். 1828-ஆம் ஆண்டில் இலக்கண வினாவிடை எழுதிய தாண்டவராய முதலியார். “வேறு பலர் கோடு (கொம்பு) பெற்ற நெடி லுயிர்மெய்களைக் கோட்டுட்சுழித்து மெழுதுவர். வரலாறு: கொல்-கோல் என வழங்கும்.” என்று வீரமா முனிவர் அமைத்த குறியீட்டைக் காட்டினார். வீரமா முனிவர் அமைத்த இக்குறியீடுகள், சென்ற 19-ஆம் நூற்றாண்டிலே எல்லோராலும் பயிலப்பட்டபடியினாலே “எகர ஒகர மெய்புள்ளி பெறும்” என்னும் பழைய இலக்கணச் சூத்திரம் மாற்றியமைக்கப் படவேண்டியதாயிற்று. ஆகவே. இயற்றமிழாசிரியர் இராமாநுச கவிராயர் தாமியற்றிய நன்னூற் காண்டிகையை 1847-ஆம் ஆண்டு அச்சியற்றியபோது இச்சூத்திரத்தைத் தலைகீழாக மாற்றியமைத்தார். “தொல்லைவடிவின எல்லா எழுத்தும் ஆண்டு எய்தும் ஏகாரம் ஒகாரம் மெய் புள்ளி” என்று சூத்திரத்தை மாற்றினார். மாற்றியதற்கு இவ்வாறு விளக்கங் கூறினார்: தொல்லாசிரியர் முதலாயினோர், “பழையன கழிதலும் புதியண புகுதலும் வழுவல கால வகையினானே” எனவும். “இறந்தது விலக்கல் எதிரது போற்றல்” எனவுங் கூறினமையால், எகர மொகர மெய் புள்ளிபெறும் என்ற இச்சூத்திரத்தை ஏகார மோகார மெய் புள்ளி பெறும் எனத் திருப்ப வேண்டிற்று என்னெனின், இக்காலத்தார் ஏகார ஒகாரங்களுக்கே புள்ளியிட்டெழுதுவது பெருவழக்காயினமையா லென்க.” இராமாநுச கவிராயர், ஏகாரம் ஒகாரம் புள்ளி பெறும் என்று கூறுவது, ஏகார ஒகார உயிர்மெய் எழுத்துக்களின் கொம்புகள் மேலே சுழிக்கப்படுவதையே. ஆனால், பழைய இலக்கண முறைப்படி எகர ஏகார ஒகர ஓகாரங்கள் எ எ ஒ ஓ என்று எழுதப்பட வேண்டியவை. இக் காலத்து எ ஏ ஒ ஓ என்று எகர ஒகரங்களின் புள்ளி எடுபட்டு ஏகார ஓகாரங்கள் கீழே நீண்ட புள்ளியையும் வட்ட புள்ளியையும் பெற்றது எப்போது யாரால் என்பது தெரியவில்லை. “நீட்டல் சுழித்தல் குறின் மெய்க் கிருபுள்ளி” என்று வீரமா முனிவர் தமது “தொன்னூல் விளக்கம்” என்னும் நூலில் சூத்திரம் இயற்றினார். இதற்கு உதாரணம் எரி, ஒதி, மண, கண என்பன. நீண்ட புள்ளியை எகர ஒகரக் குற்றெழுத்துக்கு இடவேண்டும் என்றும் சுழித்த புள்ளியை மெய்யெழுத்துக்கிட வேண்டும் என்றும் அமைத்தார். இதில் நீண்ட புள்ளி, சுழித்த புள்ளி என்பது தவிர மற்றப்படி பழைய இலக்கணத்துக்கு மாறுபட்டதன்று: அவற்றை யொட்டியதே. ஆனால் எகர ஒகரத்திற்கு மேற் புள்ளியை மாற்றி ஏகார ஒகாரத்துக்குக் கீழே நீண்ட கோட்டையும் சுழித்த புள்ளியையும் அமைத்தது யார்? எப்பொழுது? என்பது ஆராயற்பாலது. ஏகாரநெட் டெழுத்துக்குக் கீழ்க்கோடு அமைத்தவர் வீரமா முனிவர் என்று கூறுவர். (Burnell’s South Indian Paleography P. 5.) சாற்றுக் கவிகள் ஓர் ஆசிரியர் புதிதாக நூல் இயற்றினால் அந்நூலுக்குப் பாயிரம் அமைப்பது பண்டைக் காலத்து வழக்கம். இப்போதும் அவ்வழக்கம் உண்டு. பாயிரம் இல்லாத நூல் நூலன்று. நூலுக்குப் பாயிரம் இன்றி யமையாதது. “ஆயிரம் முகத்தான் அகன்ற தாயினும் பாயிரம் இல்லது பனுவல் அன்றே” என்பது சூத்திரம். பாயிரம் வழங்குவோர் நூலாசிரியரின் ஆசிரியரும், அவருடன் பயின்றவரும், அவர் மாணாக்கரும் ஆகிய மூவரில் ஒருவராக இருப்பர். நூலுக்கு உரை எழுதும் உரையாசிரியரும் பாயிரம் கூறுவர். சென்ற 19-ஆம் நூற்றாண்டிலே, ஏட்டுச் சுவடியாக இருந்த பழய நூல்களை அச்சுப் புத்தகமாக அச்சிட்டவரும், புதிதாக நூல்களை இயற்றி அச்சிற் பதிப்பித்தோரும், தம்முடன் பயின்றவர், தம் நண்பர், தம் ஆசிரியர், தமது மாணவர் முதலியவர்களிடமிருந்து சாற்றுக் கவிகளைப் பெற்றுத் தமது நூலில் அச்சிட்டனர். 19-ஆம் நூற்றாண்டில் நூல்களை அச்சிட்ட புலவர்கள் பெரும்பாலோரும் தம் நூல்களில் சாற்றுக் கவிகளை அச்சிட்டனர். சாற்றுக் கவிகள் இல்லாத நூல்கள் அக் காலத்தில் மிகச்சில. சாற்றுக்கவி அச்சிடும் வழக்கம் இந்த இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம் வரையில் இருந்துவந்தது. பிறகு அடியோடு மறைந்து போயிற்று. சாற்றுக் கவியைச் சிறப்புப் பாயிரம் என்றும் கூறுவர். சாற்றுக் கவி என்பது சாத்துக் கவி என்றும் கூறப்படும். சாற்றுக் கவி சாத்துக் கவி என்னும் சொற்கள் சார்த்துக்கவி என்பதன் மரூஉபோலும். சாற்றுக் கவிகள் எல்லாம் செய்யுளாகவே இருந்தன. அக்காலத்தில் புலவர்கள் எல்லோரும் செய்யுள் இயற்ற அறிந்தி ருந்தனர். செய்யுள் இயற்றத் தெரியாதவர் அக்காலத்தில் புலவராகப், பண்டிதராகக் கருதப்பட்டிலர். நினைத்தவுடன் எளிதாகச் செய்யுள் இயற்றுந் திறன் வாய்ந்திருந்த அவர்கள் நன்றாக வசனம் எழுத அறியாதவர்கள். இக்காலத்தில், அதற்கு நேர்மாறாக, வசனம் எழுதத் தெரிந்தவருக்குச் செய்யுள் இயற்ற முடிகிறதில்லை. சாற்றுக் கவிகளைப் படிப்பதன் மூலமாக நூலைப்பற்றியும் ஆசிரியரைப் பற்றியும் உரையாசிரியரைப் பற்றியும் பதிப்பாசிரியரைப் பற்றியும் பல செய்திகள் அறிந்துகொள்ள முடிகிறது. அன்றியும் சாற்றுக் கவி வழங்கியவர்களைப் பற்றியும் தெரிந்துகொள்ள வாய்ப்புக் கிடைக்கிறது. இதற்கு மேலாக, ஒரே காலத்தில் இருந்த புலவர்களைத் தெரிந்துகொள்ள முடிகிறது. இந்த நூலை எழுதுவதற்கு அக் காலத்துச் சாற்றுக் கவிகள் எனக்குப் பெரிதும் உதவியாக இருந்தன. சென்ற 19-ஆம் நூற்றாண்டில் வெளிவந்த நூல்களிலே உள்ள சாற்றுக் கவிகளை யெல்லாம் தொகுத்து அச்சிட்டால் அது பெருநூலாக அமையும். அதனால் புலவர்கள் வரலாறும் இலக்கியங் களின் வரலாறும் ஏனைய செய்திகளும் அறிவதற்கு முடியும் உதாரண மாகச் சில காட்டுவோம். திருக்கோவலூர் ஆறுமுக சுவாமிகள் “திட்டாநுபூதி’ என்னும் நூலை இயற்றினார். அந்நூலுக்குச் சென்ற 19-ஆம் நூற்றாண்டிலிருந்த முத்துக்கிருஷ்ண பிரமம் என்பவர் உரை எழுதி அவ்வுரையுடன் அந்நூலை 1875-ஆம் ஆண்டில் அச்சிற் பதிப்பித்தார். அந்தப் பதிப்புக்கு அக் காலத்தில் அவருடன் பழகிய பல புலவர்கள் சாற்றுக் கவி வழங்கியுள்ளனர். அவர்கள்பெயர் வருமாறு: புரசை அஷ்டாவதானம் சபாபதி முதலியார், சிதம்பரம் இராமலிங்கம் பிள்ளை, (அருட்பா இராமலிங்க சுவாமிகள்), சேமங்கலம் வித்துவான் நாராயண முதலியார், திருநீர்மலை கோபாலகிருஷ்ண கவிராஜ சேகரர், தில்லையம்பூர்ச் சந்திரசேகர கவிராஜ பண்டிதர், நரசிங்கபுரம் தமிழ்ப் புலமை வீராசாமி முதலி யார், தாயுமான சுவாமிகள் மரபில் எழுந்தருளிய எடுத்துக்கூட்டி அருணாசல சுவாமிகள், குளத்தூர்க் கரதல மூர்த்தியாகிய சட்டநாத சுவாமிகள், சேங்காலிபுரம் கோயிற்பத்து குழந்தைவேலு ஒதுவார், புரசை அருணாசல சுவாமிகள் மாணாக்கராகிய கா. ஆறுமுக நாயகர், சென்னை இங்கிலீஷ் உபாத்தியாயர் மயிலை குருசாமி முதலியார், தஞ்சை ஆறுமுகப் பிரமம், தஞ்சை இ. குப்புசாமி நாயகர், கொங்குணப்பட்டி தமிழ்ப் பள்ளிக் கூடத்து உபாத்தியாயர் அ. சேஷப் பிள்ளை, தமிழ்ப் பள்ளிக்கூடம் கோவிந்த உபாத்தியாயர், தானப்ப கவுண்டர், சின்னப்பாவு மூர்த்தியார், நாராயணப் பிரமம் ஆகியோர், இவ்வுரை நூலுக்குச் சிறப்புப் பாயிரம் வழங்கியவர், வித்துவசிகாமணியாகிய அஷ்டாவதானம் வீராசாமி செட்டியார் அவர்கள். இதனால் இவர்கள் ஒரே காலத்தில் இருந்தவர் என்பது தெரிகின்றது. வல்லூர் தேவராசப் பிள்ளையவர்கள் சூதசங்கிதை என்னும் நூலை மொழிபெயர்த்து 1856-ஆம் ஆண்டு அச்சிற் பதிப்பித்தார். இந்த நூலுக்குப் பலர் சிறப்புப் பாயிரம் வழங்கியுள்ளனர். அவர்கள் பெயர் வருமாறு: திரிசிரபுரம் வித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை, கொட்டையூர் சிவக்கொழுந்து தேசிகர் குமாரர் சாமிநாத தேசிகர், நாகவெளிப் பாளையம் வள்ளல் சந்தானம் சண்முக தேசிகர், தஞ்சை அண்ணாமலைப் பிள்ளை, திரிசிரபுரம் வீரராகவ செட்டியார், மகாவித்துவான் திரிசிரபுரம் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் மாணாக்கருளொருவரும் உபாத்தியாயர் திரிசிரபுரம் சிதம்பரம் பிள்ளையவர்கள் குமாரருமாகிய சுந்தரம்பிள்ளை, சோடசாவதானம் சுப்பராய செட்டியார், தியாகராஜ செட்டியார், திரிசிரபுரம் குப்பமுத்தாப்பிள்ளை, திரிசிரபுரம் வித்துவ சிரோமணி மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் மாணாக்கரிலொருவராகிய திருவீழிமிழலை இராமாயணப் பிரசங்கம் சாமிநாதக் கவிராயர், தாரா நல்லூர் வீராச்சாமி நாயகர், திரிசிரபுரம் அப்பாவுப் பிள்ளை என்கிற முத்துசாமிப் பிள்ளை, கெம்புவேலை அழகிரிசாமி நாயகர், கோவிந்தசாமிப் பிள்ளை, திரிசிரபுரம் முருகப் பிள்ளை, திரிசிரபுரம் நீலகண்டப்பிள்ளை, திரிசிரபுரம் சரவண உபாத்தியாயர், உறையூர் சின்னையப் புலவர், மதுரை வீரபத்திரப் பிள்ளை, வித்வசிரோமணி காஞ்சீபுரம் கச்சபாலைய ஐயர், ஆறைமாநகர் முத்தமிழ்க் கவி திருவேங்கடப் பிள்ளை, ஆறைமாநகர் ஐயாசாமி முதலியார், கவித்வ பரிசீலக கஜகண்டீரவம் ஆ. நமச்சிவாய முதலியார், கலியாணபுர மென்னும் பெங்களூர் சதுர்வேத சிந்தாந்த சபையைச் சேர்ந்த தமிழ் வித்தியாசாலை முதலுபாத்தியாயர், காஞ்சீபுரம் இராமாநுஜ பிள்ளை, மெய்யூர் பொன்னம்பல நாயகர், காஞ்சீபுரம் பாரதப் பிரசங்கம் சாமையரென்கிற இரகுநாதய்யர், புன்னைப்பாக்கம் சுப்பராய முதலியார், தண்டலம் சிதம்பர முதலியார், காஞ்சீபுரம் சிங்காரவேலு பிள்ளை. இதனால் இவர் எல்லோரும் சமகாலத்தில் இருந்தவர் என்பது தெரிகின்றது. தாண்டவராய சுவாமிகள் இயற்றிய கைவல்லிய நவநீதம் என்னும் நூலுக்குத் திருத்துருத்தி இந்திரபீடம் கரபாத்திர சுவாமிகள் ஆதீனத்து ஈசூர் சச்சிதானந்த சுவாமிகள் உரை எழுதி 1889-ஆம் ஆண்டு அச்சிற் பதிப்பித்தார். இந்த உரை நூலுக்குச் சாற்றுக்கவி பாடினோர் பெயர் வருமாறு: சென்னைச் சர்வகலாசாலைத் தமிழ்த் தலைமைப் பண்டிதராகிய இயற்றமிழாசிரியர் கோ. இராஜகோபால பிள்ளை, திருமயிலை வித்வான் சண்முகம் பிள்ளை, திரிசிரபுரம் காலேஜ் தமிழ்ப் பண்டிதர் அ. க. அமிர்தலிங்கம் பிள்ளை, திருவல்லிக்கேணி வேங்கடாசலப் புலவர், சேலஞ் சில்லா வைகீல் அத்துவிதானுபவி அப்பாசுவாமி பிள்ளை, திருமூலர் மரபு சதாசிவப் பிரமயோகியின் மாணாக்கர் தே. சுப்பராய முதலியார், சேலம் கோமளேசுவர முதலியார், ஸ்ரீமத் சுவகீயானந்தப் பிரமயோகீந்திரர் மாணாக்கரும் அத்வைத விவேக சமாஜ ஸ்தாபகருமாகிய மணிமங்கலம் திருவேங்கட முதலியார், மேற்படியார் மாணாக்கராகிய வாயலூர் சபாபதி முதலியார். இவர்கள் எல்லோரும் ஒரு காலத்தவர். இவ்வாறு பல நூல்களிலிருந்து சாற்றுக் கவி வழங்கியவர் களைக் காட்டலாம். விரிவஞ்சி நிறுத்துகிறோம். இந்தச் சாற்றுக் கவிகளிலிருந்து அந்தந்த நூல் வெளியிட்ட ஆசிரியர்களின் காலத்திலிருந்த புலவர்கள் பெயரையும் அவர்களின் தொழில் ஊர் முதலியவற்றையும் தெரிந்து கொள்கிறோம். நூல்களுக்குச் சிறப்புப் பாயிரம் அல்லது சாற்றுக் கவிகளை அச்சிடும் வழக்கம் சென்ற 19-ஆம் நூற்றாண்டில் இருந்தது. பின்னர் அவ்வழக்கம் 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் இருந்தது. பிறகு நின்றுவிட்டது. சாற்றுக் கவிகளிற் சிவற்றை இங்குத் தருகின்றேன். 19-ஆம் நூற்றாண்டில் வெளிவந்த நூல்களின் சாற்றுக் கவிகளை யெல்லாம் காட்டினால் அதுவே பெரிய நூலாகிவிடும். ஆகையால் மாதிரிக்காக ஒரு சிலவற்றை மட்டும் தருகிறேன். நீதிநூல் மாயூரம் வேதநாயகம் பிள்ளை அவர்கள் இயற்றிய நீதிநூலுக்குத் திருத்தணிகை விசாகப் பெருமாளையரவர்களியற்றிய சாற்றுக் கவி. இச்சாற்றுக் கவி 1892-ஆம் ஆண்டு ச. ஞானப்பிரகாசம் பிள்ளையவர்களால் அச்சிடப்பட்ட நீதிநூல் மூலமும் உரையும் என்னும் புத்தகத்தில் உள்ளது. நிலமண்டில வாசிரியப்பா முதனடு வீறிலா முனைவன் படைத்த நதிபதி யுடுத்த ஞாலத் துறைவோர் பெறுதற் குரிய பெரும்பய னிவை யென் றறைதரு சுருதி மிருதி யாதிய வெண்மை யன்றுணர்வ தெனமுனி வரரு 5 முண்மைவள் ளுவரு முற்றியுள் ளிரங்கு பறமுன் முப்பா லாகவப் பொருளைத் திறனுறத் தமிழிற் றெள்ளிதின் வகுத்த மாண்பமை நூலொடு சங்க மரீஇய வேண்கொ ணாவலர்க ளியாத்த பன்னூலு 10 நன்கினி தாய்ந்து நயந்தெரிந் தெவர்க்கு மங்கையிற் கனிபோ லையந்திரி பொரீஇப் புலப்படச் சொற்சுவை பொருட்சுவை பொதுள விலக்கணக் கவிஞரி யாவரும் வியந்து முடிதுளக் குறுவான் கடிகமழ் தேறலுங் 15 கன்னலு மமுதுங் கலந்து குழைத்தாங் கின்னிசை தமீஇய பன்னருஞ் சிறப்பி னணிகெழு செய்யுளான் மணிவட மேய்ப்பச் சால்புடை நீதி நூலொன் றியற்றின னளந்தறி வொண்ணா வலங்குழூஉ வுற்ற 20 தாடக வுலகெனு மதுபட் டாங்குகொ னாடுது மென்னா வோடி நிமிர்ந்தென வுயர்வற வுயர்ந்த புயறவழ் குடுமிப் பொன்மா ணெயிலும் பன்மா ளிகையும் விளங்கிச் செறிந்த குளந்ததைக் கிறைவன் 25 பவந்தெறு கங்கா குலபரி பாலன் றவந்தரு பொன்னணை யெனுந்தண் ணதியோன் செந்தேன் பில்கு பைந்தார்க் குவளையன் றிசையிரு நான்கினுஞ் சென்று கவிந்து வசையற வோங்கி மலிபெரும் புகழோன் 30 றன்னுயி ராமெனத் தண்ணளி புரிந்தே மன்னுயிர்த் தொகுதி மல்கப் புரப்போ னாழி பெயர்வுற் றகிலஞ் சிதைப்ப வூழி பெயரினு முரைபிற ழாதோ னகவை மூன்றுள மகவொன் றினுக்குப் 35 பெருமலைப் பாவை திருமலைப் பாறருஞ் சேணுயர் சோலைத் தோணி புரத்தி லொட்டார் நட்டா ருலகி லயலெனப் பட்டா ரெனுமந் தரம்பா ராமே நாடுந் துலைபோ னடுநின் றுய்க்கும் 40 பீடு பெறுநற் பிராட்டு விவாக னாதி நாயக னடிபணிந் தேத்தும் வேத நாயகனா மிகவல் லோனே. ஆசிரியச் சந்த விருத்தம் தாரு லாலிய மொய்ம்பனாடக தார்நேர்தரு செங்கையான் றாழ்வி லாவுருமாரன் விஞ்சு தயாள னண்புதழைந்துளான் நேரு லாவு பதாகையா னுலகேழு நீடிசை தங்குவான் யாவு மாயிணை யொன்றிலா தொளிரேக தேவை யிறைஞ்சுவான். நீரு லாவு தடாக மெங்கு நிலாவு கின்ற குளந்தைவாழ் நிருபனு யிர்நதி மரபு தனில்வரு நிபுணன் வரகுண சிங்கமாஞ் சீரு லாவிய வேத நாயக சீலன் நீதி சிறந்த தோர் தெளியு நூலினை யுதவினான்மதி தெளிஞர் யாரும் வியக்கவே. இலக்கணச் சுருக்க வினாவிடை இலக்கணச் சுருக்க வினா விடையைத் திருத்தணிகை விசாகப்பெருமாளையர் 1828-இல் எழுதினார். இந்நூலின் சிறப்புப் பாயிரம், இந்நூலாசிரியர்க் கிளவலாகிய திருத்தணிகை சரவணப் பெருமா ளையராற் சொல்லப்பட்டது. “நிலம்பெறு நரர்க்கரு ணிலைமுதற் கடவுள் பலம்பெற வருளிய பற்பல மொழிகளுள் வடக்கின்மா வேங்கட வரையுந் தெற்கொடு குடக்கிற் குணக்கி னீள்குதிரை நாலையு மெல்லை யெனத்திக ழிடத்து மொழியாகி 5 யில்லை யிதற்கிணை யெனக்கெழு தகைமையின் வழுத்தற் சிறப்பொடு வளர்தமி ழிலக்கண மெழுத்துச் சொற்பொருள் யாப்பணி யைந்து நூற்பா விலுமவை நனுகு மினத்திலு நூற்பா விலும்பெற நுவன்றுள வலகில 10 வொன்றா யினுமமை வுறவுணர் தற்கெளி தன்றே கூரிய ரல்லார்க் காதலின் யாவரு முணரவவ் வைந்தையுஞ் சுருக்கி மேவரும் வினாவும் விடையு மாகத் தகவி னல்லுரை வாசகத்தி னவில்கெனாச் 15 சுகவள நிறைதரு தொண்டநா டதனிற் கச்சிக் கீரைங் கடிகையின் வடகீழ்ப் பச்சிளஞ் சாலி பரூஉக்கழை யாமெனக் கழைகமு காமெனக் கலிமடற் பாளைத் தழைதரு கமுகு தாழையா மெனமே 20 லெழுந்துயர்ந் தண்மினோர்க் கிறும்பூது விளைக்குங் கொழும்புனன் மருதக் கூவமா நகரோ னோமக் கனலிக லுகப்பொரு சினக்கன லேமக் கனல்செயு மிவர்க்குமற் ரெவர்க்கு முதரக் கனலவித் தோம்புறு வளங்கூர் 25 மதுரத் திலகுணா வகைசெய லானா வறன்கடைக் கழிவுகா ணரும்பெற லுழவுத் திறன்கடைப் பிடித்திடு திருத்தகு குலத்தினன் கழைமொழி மங்கையர் கண்ணெனும் பகையினம் விழையர ணாமிவண் மேவிப் பொருதுமென் 30 றணிநிரை யுற்றிருந் தாங்குபைங் குவளை மணிமல ரொலியலார் வண்புய வரையின னுருவொடு மிருந்திகழ் வுறாதி வன்முன மருவ மெய்தியது நன்றாயதென் றநங்கன் கருதியுளத் தழுக்கறுப்ப நோக்கி னர்க்கெலா 35 மிருவிழிக் கூணெனு மெழினிறை யுருவினன் றக்கவர் நாப்பணோர் தான்சிறந் துறுமவை யொக்குமென விலையுயர் பலமணிகளி னடுவ ணொருபெரு நாயக மணியுடைச் சுடர்விரி மதாணி துயல்வரு மார்பினன் 40 முத்தமிழ்ப் புலமையின் முந்திய நாவலர் புத்தமிழ் தெனச்சுவை பொழிதர வகமலர்ந் துகந்துதற் புகழ்ந்த வொப்பரும் பாட்டொடு திகந்தமோ ரெட்டிலுஞ் சென்றொளிர் சீர்த்திய னிருவிசும் பிறைவனுக் கிறைவனா தலுமொரு 45 பொருளெனா தெண்குணப் புனிதனெம் பசுபதி யடியவர்க் கடியவ னாதலே பொருளென வொடிவற வுளத்தெழுந் தோங்குறு மன்பினன் திருமேனி வள்ளல் செய்பெருந் தவத்தா லொருமேனி கொண்டிவ ணுதித்தசெவ் வேளெனப் 50 பொருந்தோகை மேலுறீஇப் புலவரைப் போற்றித் தருந்திறன் ஞான சக்தியைத் தாங்கி யங்கமல வேதனைச் செருக் கடக்கி மங்கலில் பெரிய வரையடுத் துறைவோ னாவின் கிழத்தி நயந்துறை பவர்வயிற் 55 பூவின் கிழத்தி புகாளென லேனை யருக்கா மிவன்றனக் கன்றென விளங்குந் திருக்காமி மாலுரை செய்தன னாக நயத்தகு தொல்காப் பியநன் னூன்முத லியற்றமிழ் நூல்களி லினியன பலதழீஇ 60 திடமுள வழக்கொடு செய்யுளிற் சிலதழீஇ வடநூல் விதிசில வரத்தகு வனகொளீஇ இலக்கணச் சுருக்க வினாவிடை யெனும்பெயர் நலத்தியை தரநிறீஇ நடையுற வகுத்தனன் சீர்பெறு தென்றிருத் தணிகைவாழ் செல்வன் 65 சார்புறு வீர சைவ சிகாமணி மலகருட் குறையுள் வரகுண மேரு கல்விப் பெருங்கடல் கந்தப்ப தேசிகன் அருந்தவப் பெரும்பே றாமென வுதித்த பெருந்தகை விசாகப் பெருமா ளையனென் 70 றுலகு புகழ்தர வோங்கி இலகு மியற்பெய ரெய்து நாவலனே.” நன்னூற் காண்டிகை யுரை திருத்தணிகை விசாகப்பெருமாளையர் அவர்கள் நன்னூலுக் குக் காண்டிகை உரை எழுதி அச்சிட்டபோது, அதற்குச் சேயூர் முத்தைய முதலியார் அளித்த உரைப்பாயிரம்: பூமலி துணர்ச்சினை பொதுளிய சந்தனக் காமலி பொதியலிற் காட்சிகூர் நலத்திற் பற்பல முனிவரர் பணிசெயூ வருகுறச் சிற்பர னடியுளஞ் சேர்த்திருந் தறநெறி முயலிசை யகத்திய முனிவனிற் றோன்றிய 5 வியலிசை நாடக மெனுமிவை புலப்பட நுதலிய வரும்பெற னோக்கமை யகத்திய முதலிய வாயுள முத்தமிழ் நூல்களு மவன்மா ணாக்கரீ ரறுவரி னோங்கிய தவன்மா ணாக்கரில் சாய்த்ததொல் காப்பியன் 10 வழுவா யறத்தெரீஇ வகுத்ததொல் காப்பிய மெழுவா யாகிய வியற்றமிழ் நூல்களுந் திங்கட் கவிகைசேர் தென்னவ னால்வளர் சங்கப் பலகைவாழ் சான்றோர்க் களவையாய்க் குசைநுனி போன்மதிக் கூர்மையோர் தமக்கே 15 யிசைதலி னிவைபோ லாதியா வருக்குந் தெளியிய னூல்களிற் சிறந்ததோர் நூலுக் கெளிதுண ருரையினி தியற்றித் தருகெனாப் புகழ்தரு பாற்கடற் பொங்கவங் கதனிடைத் திகழ்தரு கலைவளர் திங்கள்வந் துதித்தென 20 நிலமுழு தோங்குநன் னிலைகெழு வைசிய குலமது மகிழுளங் கூரவந் துதித்தோன் சொற்பல மலர்கொடு தொடுத்தபா மாலையு முற்பல மாலையு மொளிர்மணி மொய்ம்பினன் பருவமொன் றிடையொரு பயனுத வெழிலிநாண் 25 மருவவெப் பொழுதினு மருப்பல கொடையின னெப்பொரு ளும்பகுத் திஃதிற் றாமென வப்பொரு ளுண்மைதேர்ந் தறியநுண் ணுணர்வின னடைசசி வாண்முக மலரவாய் நலத்தொடு புடைவளர் விபுதரைப் போற்றிவாழ் புனிதன் 30 சேது பதியெனுஞ் செங்கோன் மன்னவற் கோதுநற் றுணையென வுற்றபூதம் பாவை யண்ணா சாமிவே ளருந்தவ மென்கொலென் றெண்ணாற் றிசையுளோ ரியம்பிடத் தோன்றியோன் சிவனடி யவரையச் சிவனெனப் பரவுந் 35 தவனடி முடிவிலாச் சைவ சிகாமணி சிங்கார முதலிதன் சிந்தைகூர் மகிழ்ச்சியி னிங்கா ரமுதன வின்சொலால் வேண்டலின் முன்னூ லொழியப் பின்னூல் பலவினு ளெந்நூ லாரு நன்னூ லாருக் 40 கிணையோ வெனத்தமி ழினிதுணர் பவர்க்கெலாந் துணையீ தாமெனத் தோன்றுநன் னூற்கு நயன்மிகு சங்கர நமச்சி வாயனாற் பயன்மிகச் செய்திடப் பட்டதன் பின்னர் தவஞா னந்தனிற் சால்புகூர் துறைசைச் 45 சிவஞான முனிவனாற் றிருத்திடப் பட்ட விருத்தி யுரைதனை வெளிப்படச் சுருக்கிக் கருத்துப் பதப்பொருள் காட்டுமற் றுஞ்சில வுறுமுறை காண்டிகை யுரையுளங் கொண்டு சிறுவரு முணர்தருஞ் செவ்வியிற் செய்தனன் 50 றத்துவ முணர்திருத் தணிகை மடாதிபன் சத்தெனும் வீர சைவமா கேசன் கற்றுணர்ந் தோங்கிய கந்தப்ப தேசிகன் பெற்றருள் விசாகப் பெருமா ளையனென் றுலகு புகழ்தர வோங்கி 55 யிலகு மியற்பெய ரெய்து நாவலனே. தொல்காப்பிய நன்னூல் 1858-ஆம் ஆண்டில் சாமுவேல் என்பவர் தொல்காப்பிய நன்னூலை இயற்றி அச்சிட்டார். அதற்கு அவரது இஷ்டராகிய புரசை அஷ்டாவதானம் சபாபதி முதலியாரவர்கள் இயற்றிய சிறப்புப் பாயிரம்: பூமிசை யகலா நான்முகத் தொருவன் படைப்புழி யின்சொலி னியக்கந் தெரிப்பான் இருக்கையாய் வாழிய ரெனாமே னிறுவிய வேங்கடங் குமரி யோங்கிய மேல்கீழ்ப் புணரிசூழ் வரைப்பி லணவிய முத்தமிழ் 5 ஆன்றதொல் கடலுட் டோன்றுறு மைம்பொருள் ஈரைஞ் ஞூஞாற்றுச் சீரமை பணமணிச் சூட்டரு ணெட்டுடற் கோட்டமில் பாப்பர சேந்துபு கிடந்த மாண்பமை நீணிலத் தேவரு முணராத் தாவரும் பயன்கொள 10 உயிர்தொறுஞ் சிவணிய செயிரறு பொதுநட நவிலுந் தனிமுதல் தவலருங் கைவலந் தமிழிசை கதுவிய தமருகத் தெழுமேழ் இரட்டிய வெழுத்தொலி தெருட்டிய வாரிய நெடுமொழிப் பாணிநி மடனிகு முதியோன் 15 போன்மென விருந்தமிழ்ப் பான்மை முழுதுணர் முகட்டுயர் பொதியப் பொகுட்டுழி யிருந்தருள் பரமா சிரியற் பற்பகல் வழிபட் டரும்பெற லியல்பெறீஇப் பொருந்திய பன்னிரு மாணவக் குழாத்து ணீணிலை கொளுவிய 20 ஒல்காப் பெருஞ்சீர்த் தொல்காப்பிய முனி தற்பெயர் தோற்றி யற்புறத் தந்த ஐந்திர நிறைந்த வியந்தகு நுண்பொருட் டொன்மைசால் காப்பியத் துண்மரீஇப் பொதிவன பாட்டுவரை பெறுமேம் பாட்டுடை மையினில் 25 ஆனாக் கங்கன் மேனாள் வேண்டலின் சனகா புரத்து ளினையாச் சால்பமை சன்மதி தந்த வண்மைகூர் சிறப்பிற் பவணந்தி யுரவோன் றுவளற வகுத்த நன்னூ லென்னு மந்நூற் கிடந்தன 30 பொருளொரு சேரத் தெருளுறச் சூழ்ந்து செந்தமிழ் நாடே யன்றியு மாந்திர மலாடு கருநடங் குலாவுமிவ் வாதித் தேத்தும் வழங்குந் திறன் றிறம்பாமை யொருமொழிக் குரியவ ரன்றியும் விரவும் 35 ஐங்கிலி யம்முத லறிஞரு மேற்க ஆரியந் திரவிட மாந்திரங் கருநடம் ஒரு மைங்கிலியத் துரைபொதுச் சிறப்பு நடைநு தலியன வடைவிற் கற்பவர் பல்வகை நலனறி மல்கு முணர்ச்சியின் 40 உள்ளக் கிளர்ச்சியுங் கொள்ளப் பெறுவன நூன்மொழி பெயர்க்கும் வாய்மைக் கருவியுந் தெள்ளியோர் பயனடை செவ்வியுட் கொள்ளுபு நந்தியம் பொருப்பி னந்தியும் பகலும் அருகா வளங்கெழூஉம் வருவாய்த் திரிபிலாப் 45 பார்வ யினின்பு நீள்வழி யுதவுறூஉம் பாற்பெய ராற்றொழுக் கேற்பதெஞ் ஞான்றும் ஏனைநா டவைபோ லாதிரு மைக்கும் பிறவிக் கெல்லை காணுஉ நிறைவுறக் கல்லாப் புணரு நயனுடை நல்லோர் 50 பெட்புறுந் திருவின தொட்பமார் தொண்டை நட்டாட் டிடைநீள் பன்மாண் புகழ்மை மன்னுதெண் டிரைசூழ் சென்னையம் பதிக்க ணிறைகொளும் புலமைத் துறைவந்தவர்தங் குழுவகங் கவரா மகிழ்தலை சிறப்ப 55 ஒருதான் கண்டவை பிறருந் தெரிகெனு நீக்கமி லுள்ளத் தார்வநன் கூக்கத் தண்டரும் பெயரிய பண்டையோர் நூல்வழிப் பன்னுதொல் காப்பிய நன்னூ லெனவும் ஐந்திர பாணி னீய மெனவும் 60 சமரச பாடிய சித்தாந்த மெனவும் வளம்பா டிலாத இளம்பூ ரணமும் மெய்ச்சொலாற் பழிச்சு நச்சினார்க் கினியமும் வானோர் மாண்பமை சேனா வரையமும் சங்கர நமச்சி வாயமு மென்றிவை 65 1ஐந்துரை யுந்தொகுத் தின்புற வுண்மையின் பூரண விருத்தி யெனவும் பெயர்புனைந் திந்நூ லியற்றி யெழுதா வெழுத்திற் பன்னூ னெறியிற் பதித்து நல்கினன்; வளைநீர்க் கருங்கடன் மறிதிரை கொழிக்கும் 70 உளைவுறீஇப் பணில முயிர்த்தத நித்திலம் கருங்கோட் டுப்புன்னை நறுங்கே ழரும்பர் குருகின முயிர்க்கும் பரூஉமணி யொண்கரு இஃதஃதெனா வயிர்ப்புறவயின் றொருந்தொ கூஉம் நறைவார் சோலைப் பிறையா றெனுநகர் 75 வதிதரு சோழ வேளாள மரபிற் பதிதரு தாண்டவ ராயவேள் பயந்த நாட வருசுவி சேடதிச் தாந்தி செங்குவளை யந்தார் தங்குமணி மார்பன் நாம வேலைப் புவி நயக்கும் 80 சாமு வேலெனுந் தகைமை யோனே. குசேலோபாக்கியானம் வல்லூர் தேவராஜ பிள்ளையவர்கள் இயற்றிய குசேலோ பாக்கியானத்திற்குத் திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் இயற்றிய சிறப்புப்பாயிரம். நேரிசை ஆசிரியப்பா பூமலி குளிர்தெண் புனற்பெருந் தடத்துக் கவையடிச் செங்கட் கஞல்பிணர் மருப்புக் கடமருள் செருத்தற் கவரிதளை பரிந்து புழற்கா லாம்பற் பூநனி மிசைவான் றோறொடு நாட்பைஞ் சூட்டின மிரிய 5 மடச்செழு நாரை வயிரெனப் பிளிறக் கயலின மடவார் கண்ணிற் பிறழச் சலஞ்சலப் புஞ்சந் தளைபுக் கொளிப்ப முட்டாட் டாமரை மொய்த்தடை கிடக்கு மஞ்சிறைத் தும்பியகன்குலைப் பரப்பிற் 10 றேங்கமழ் பொங்கர்ச் செறிந்திறை கொள்ள மாங்கனிக் கொள்ளை வரம்பில வுதிரக் குறுங்கழுத் தரம்பைக் கூன்குலை முறிய முட்புறப் பாகன் முதிர்கனி கிழியச் செறிபசுங் கந்திச் செழும்பழஞ் சிதறப் பொலியிலாங் கலிமுப் புடைக்காய் வீழ வெழுபுமீத் தகட்டகட் டிளவரால் பாயக் கருங்கடற் பாயுங் கந்தர நிகர்ப்பக் கதழிவிற் பாய்ந்து கலக்குபுழி தந்து கதிரிளம் பசும்புற் கறிக்கக் கல்லா 20 மழவிளங் கன்றைப் படர்ந்துவார்ந் தொழுகப் பொழிபால் பெருகிப் புணர்திரைத் தீம்பால் ஆழிகொ லோவென் றமரரு மயிர்ப்ப மடையுடைத் தோடும் வரையாப் பெருவள நல்லூ ரென்னும் வல்லூ ரதிபன் 25 பார்கரு ணீப்பப் பயில்குல மென்னுஞ் சீர்கரு ணீகர் செழுங்குல சிகாமணி மின்னப் பேந்திய வேணியற் கன்புறு மன்னப் பேந்திரன் வரத்தினி லுதித்தோன் இமையர் தருவு மிமையாச் சுரபியுங் 30 கமஞ்சூன் முகிலுங் கதிர்கான் மணியும் அருநிதி யிரண்டு மழுக்கா றடையப் பெருங்கொடை யெவர்க்குந் தருங்கர வள்ளல் ஒழுக்கமுஞ் சீலமும் விழுப்பெறு தவமு மானா வன்பு மானமும் பொறையு 35 நாடொறு நாடொறு நலம்பெற வளர்ப்போன் நீனிறஞ் சேரா நெடுமால் போல்வான் நுண்ணறி வுடையோர் நூற்பொருள் விரும்புந் தண்ணளி யிராம சாமிக் குரிசில் தன்னுடை யரும்பெறற் றமய னாகிய 40 தழைபுகழ் வீராச் சாமி மகிபன் உஞற்றிய தவத்தா லுதயஞ் செய்த தேவ ராசச் செவ்வே ளென்பான் நற்குணம் பொறுமை ஞான வொழுக்கங் குறையா தமைந்த நிறைவு பூண்டு 45 தொல்காப் பியமுதற் றோன்றிலக் கணமு முன்னுமைங் காப்பிய முதலிலக் கியமும் பற்பல சமய ரற்புறு நூலும் மற்றுள கலைகளுங் கற்றினி துணர்ந்து மிகுவட நூலுளும் வேண்டிய தெரிந்து 50 சோதிட நூலுந் துரிசற வோர்ந்து பிறங்குறு மறிவிற் பெரியோ னாகி வண்புகழ்க் குசேல மாதவன் சரிதையைத் தமிழிற் பாடத் தானஃ தறிந்து தன்னவைக் களத்து மன்னுற வழைத்துத் 55 தொக்கள வில்லார் சூழ விருப்ப விரித்துரைக் கென்று விருப்பிற் கேட்டுக் கவிதொறுங் கிடக்குங் கற்பனை வியப்புஞ் சொல்லுடை மாண்புந் தொகுபொருள் மாண்பும் மற்றுள சிறப்பும் வகைப்பட வாராய்ந் 60 தற்புத மற்புத மென்றக மகிழ்ந்து விரிகடல் சூழ்புவி விளங்கப் பரிவுட னச்சிற் பதிப்பித் தனனே. ஏராருஞ் சகாத்தமா யிரத்தெழு நூற் றெழுபத்திரண்டி னிகழ்சௌமிய நல்லாண்டு தனுத் திங்கள் வாராருங் மிருபத்து நான்காநாள் பரிதிவார மொன்பான் றிதிசோதி சிங்கவிலக் கினத்திற் பேராருங் குசேலமுனி தனதுசரித் திரத்தைப் பெட்பினினி தருந்தமிழி னியல்செறியப் பாடித் தாராரும் புயத்தேவ ராசவள்ள லான் றோர்தழைத் துவகைபூப்ப அரங்கேற் றினனுண் மகிழ்ந்தே. நைடத உரை திருத்தணிகை சரவணப் பெருமாளையரும் அவர் மகனார் கந்தசுவாமி ஐயரும் நைடதத்துக்கு உரை எழுதினார்கள். அந்த நூல் சுபகிருது வருசம் வைகாசி மாதம் கல்வி விளக்க அச்சுக் கூடத்தில் அச்சிற்பதிப் பிக்கப்பட்டது. அந்நூலுக்கு, “யூனிவர் ஸிட்டி யென்னும் சகல கலா சாஸ்திர சாலைத் தமிழ்த் தலைமைப் புலவராகிய” மழவை மகாலிங்கையர் அளித்த சிறப்புப் பாயிரம் இது: “மதிக்கண மொருங்கு கிடந்தென வயங்குஞ் சில்லிய விறாலின் றிரளினை வான்கழை கோடுகொண் டுழுதிடக் கொட்டிய செந்தேன் அருவிக டுயல்வரு மமைதி பூமாதின் றடமுலைச் செம்மணித் தாழ்வட மேய்க்கு 5 மிமயமால் வரையி னிருந்தவத் தெழுந்த மரகதக் கொம்பரோர் மாவுறை முதலைத் தழீஇயெண் ணான்கறந் தப்பா தியற்றுங் கச்சியின் கீழ்பாற் கடற்கோட் டிருந்த மியிலையூ ரகத்தி னயிலையோர் கரங்கொண் 10 டடற்சூ ருயிர்குடித் தமரரைப் புரந்த கந்தனே ஞானசம் பந்தனாக் காழியி னவதரித் தமண்களை யனைத்தும் வேர்போக்கிச் சைவப் பைங்கூழ் தழைவித் ததன்பின் கடத்துறு மத்தியைக் கண்டு மட்டிட்ட 15 புன்னையங் கான லெனப்புகல் பதிகந் தன்னான் முன்னர்த் தகைசா லுருவம் பெற்றபூம் பாவை யுற்றநற் குலத்தோன் குறிப்பறிந் தீகுவ துத்தமக் கொடையன் றிவனாற் பொருணமக் கெய்து மென்றுள்ளத் 20 துள்ளலு மின்றியோன் விள்ளரு மகிழ்ச்சி பூத்திட வளித்தல் பொற்புறு முதற்கொடை யானெனக் கொண்ட வருமைசேர் வள்ளல் அயலவர் நண்பின ரரிகளா மூவகை மற்றையர்க் குளநண் புற்றவோத் தகையே 25 யிவர்க்குள தெனச்சொ லேதமில் குணத்தோன் வேந்தர்தம் விடங்க மேலுயர்த் தெடுப்பப் போந்த காரணப் பொற்புறு மேழிக் கொடியினன் றன்பாற் குறையிரந் தொருகான் மிடயன்யா னென்று விளம்புவோர் நாவா 30 னளகையான் மிடியனென் றறைந்திட செய்வோன் ஏன்றநற் குணங்களுக் கெடுத்துக் காட்டு மான்ற பல்லோ ராயதெற் றினுக்கிவ் வொருவனே சாலு முதாரண மென்ன வயன்மன முவப்புற் றமைக்க வந்தோ 35 னினங்கொ டோர்பொருள் கவர்ந்திடுதன் மாலைய தெனப் புயத்துறு குவளையிற் பொன்னெனப் பிதிர் சுணங் கவிர்முலைக் கன்னிய ரரிவிழித் திரளினைக் கவர்வுறு சந்தங் கனிந்திடு வில்வேள் எனுஞ்சிங் காரவேந் தின்புறக் களிகூர்ந் 40 துததி சுவற்று முடம்பிடி பரித்த மீனவர் குலத்துதி வீர ராம னியற்றிய நைடத மெனுநற் காப்பிய மேவர் மாட்டு மியைந்து வழங்கலிற் சொற்பொருட் பிழைகள் பற்பல வுற்றது 45 கற்றுவல் லாருமக் கவல்வழூஉக் கடிந்து முடிபோர்ந் ததன்பொருள் மொழியலோ ருரையு மின்றிது காறு மாதலி னேர்பெற வேய்ந்த வோருரை யியற்றுக வென்ன அலமரு கன்ம மகற்றிடுந் தணிகைத் 50 தலம்வளர் வீர சைவமா கேசன் செந்தமிழ்க் கடலொரு சேரநெஞ் சடக்கி யெண்டிசைப் பரப்ப ரெங்கணும் பெய்து மன்பதை யுணர்ச்சியை வளர்க்குங் கொண்ட லிவன்கூ ரியமதி யேகுறு மதரினுட் 55 சேடனார் பருமதி செலற்பாற் றன்றென யாவ ருள்ளத்து மரசுவீற் றிருந்த பேர்பெறுஞ் சரவணப் பொருமா ளையன் வடமொழி தன்னின் மாண்புற் றுயர்ந்த விதன்முத னூற்கு மியைபுற நாடி 60 இயல்பு மோனை யெதுகை பற்றி வீற்றுறு பலவாம் விகற்பமுங் கருதித் தூக்குத் தோறுந் துகளறு மணிவிரித் திதனுக் கொப்போ வெந்நூ லுரையுமென் றிருந்தமிழ்ப் புலவ ரெண்ணிலர் பலகாற் 65 பகர்ந்திடக் கைக்கிளைப் படலமாட் டுஞற்றின னதன்பின் னவன்றவத் தார்ந்தகான் முளையெனுங் கந்த சுவாமியாஞ் செந்தமிழ் நாவலன் புலமைசேர் சிலர்தம் போதரு முதவியின் மற்றைய படலமுந் தெற்றென விளங்கச் 70 செய்தமருங் கீர்த்தி யெய்தினன் மகிழ்ந்தே. இலக்கண வினாவிடை 1828-ஆம் ஆண்டு சென்னைக் கல்விச் சங்கத்தில் அச்சிற் பதிப்பிக்கப்பட்ட தாண்டவராய முதுலியார் செய்த “இலக்கண வினாவிடை” என்னும் நூலின் பாயிரம்: “சென்னைக் கல்விச் சங்கத்ததிபராகிய கனம் பொருந்தியா போர்டுத்துரை யவர்களுத்தரவினால் சாலீவாகன சக ஆண்டு 1746-க்கு மேற்செல்லா நின்ற பார்த்திவ ஆண்டுக்குச் சரியான கிரிஸ்து 1825-ஆம் ஆண்டு இலக்கண வினாவிடை செய்து முற்றுப்பெற்றது. பெருநூலுட் புகலறியாப் பிள்ளைகண் ணெளிதுணரப் பேசு வாயோ ருரைநூல் வினாவிடையாத் தமிழியலென் றருட்குணத்தா னுணர்வின் மிக்கான் அருநூல்கள் விளங்கு சென்னைச் சங்கத்துத் தலைவன் கிளார்க் கதிபன் கூற விரிநூலாய் கருவியெனத் தொகையுறத்தாண் டவராயன் விளம்பி னானால். குற்றமுங் குணமாக் கொளுமறிஞ ரக்கொள்கை மற்றென் பாலினும் வழாரென்ப தறிந்தயான் வழாது கற்றநா வலரிச்சின் னூனும் மவைக்களத்துச் சொற்றிடர்க் கஞ்சி நிற்பவோ மூதக்கீர் சொல்லீர். கடவுள் வணக்கம் இலக்கண மின்னதிஃதென யார்க்கும் அளக்க வொண்ணாதத னடிபரவுதும் இலக்கண வினாவிடை விளக்க முறற்பொருட்டே நன்னூற் காண்டிகையுரை இயற்றமிழாசிரியர் இராமாநுச கவிராயர் 1846-இல் நன்னூலுக்கு விருத்தியுரை எழுதி அச்சிட்டார்கள். அவ்விருத்தி யுரையின் தொடக்கத்தில் கீழ்க்கண்ட செய்யுளை இயற்றியமைத் தார்கள். “மலர்தலையுலகின் மல்கிருள் அகல” என வரும் நன்னூல் சிறப்புப் பாயிரத் தின்கீழ் இச்செய்யுள் வைக்கப்பட்டுள்ளது. தேகிகர் சேவடி மனக்கு மாசறு மணிமுடி யெனக்கு. கடல்புடை சூழ்தரூஉங் காசினி யதனிடை வடதிசைக் கண்மரீஇ வளனெலாஞ் சுரந்து முனிமுன நடந்துறூஉ மூங்கிலிற் படர்ந்து குனிதிரை வைகையின் கொடுந்திற லழிந்தாங் கடைந்ததென் குமரி யகநெகிழ்ந் தன்பி 5 னுடைந்துதன் வசப்படா துடல்சல சலத்து நீரா ழமாமெய் நிலைதடு மாறித் தீரா நீர்மையிற் றிரைக்கடல் படிந்து மதிமுக மலரிடை மலர்க்கணீர் மல்கத் துதி செய வென வாய் தூக்கி யாங்கே 10 யெழுத்திய றழாஅ தெழுமொழி குளறி வழுத்தியு மாரா வவாவலை வளைக்கையாற் பொன்மணி மலர்தூய்ப் புரிந்துநன் கிறைஞ்சுறூஉந் தென்மலை மாமுனி தேத்திய லுணர்ந்தோ ரோர்பன் னிருவர்பா லொண்டமி ழுணர்ந்தோர் 15 சீர்பெற வெண்ணிலர் தேரினாங் கவருழைச் சிவக்கொழுந் தென்னுமோர் தேசிக ரவருழைத் தவக்கொழுந் தென்ன மாதவத்தினார் துதித் துறூஉஞ் சிவஞான தேசிகண் சேவடிக் கன்புபூண் டவனூ லுணர்த்திய வைந்திய லோர்ந்தனன் 20 சோமசுந் தரனெனுந் தொன்னூற் குரவன் காமர்செஞ் சேவடி கண்ணிணை யாக்கொண் டியல்பல வுணர்ந்தோ ரெண்ணில ரவருழைத் துயல்வரு கீழ்மையிற் றொடர்கீழ் நிலையினே னில்லையாந் தன்னிக ரெனவுல கோதுறூஉ 30 முல்லையாந் துருவெனு1 மொளிகொள் போதகனு மேமசன் மார்க்கத் தியனிலை வழாஅத் தாமசன் கிளர்க்கெனுந்2ஙீ தகைப்புர வலனுந் துராசையினீங்கித் தொன்னெறிவழாஅ விராசஸெனும் பெய ரியற்கோமகனு 35 மின்னூற் குரை யீங்ஙன மியற்றுகவென நன்னூற் குரைபெய நாடின னாவலர் முகநகை நாணா முழுமக னாயினூஉந் தகைகெழு சோம சுந்தரகுரு வருளுக் கென்னா லெனுமகத் தினைப்பலி யீந்து 40 பீன்னா வதன்வழி பிழையா நிலைநின் றியன்றவை யியற்று மிந்நூலுள் இத்தலைச் சூத்திரம் யாதுணர்த்திற்றோவெனின், சிறப்புப் பாயிரத் தீலக்கணமாக வகுத்தோதப்பட்ட, நூல் செய்தோன் பெயர் முதலிய பதினொன்றையு முணர்த்திற்றென்க. விவகார சார சங்கிரகம் மதுரைக் கந்தசாமிப் புலவர் சென்னைக் கல்விச் சங்கத்தில் இருந்தவர். விவகார சார சங்கிரகம் என்னும் நூலை வடமொழி யிலிருந்து தமிழில் எழுதினார். இது 1894-ஆம் ஆண்டு அச்சிடப் பட்டது. இதன் சிறப்புப் பாயிரம் இது: திருவருண் மூர்த்தி யோரைஞ் செயலினன் றேவர் தேவா மொருவனல் லிருதா ளன்பி னுளங்கொடு பணிந்து மேன்மை தருவிவ கார சார சங்கிரக மென்னு நாம மருவிய தருமநூலை வகுத்துரை செய்து நன்றே. ------ உலகினுறு நரர் பலரும் விவகார மெளிதுணர வுரைநடையி னாற்ற ருமநூ லொன்றுஞற் றுதியென்று நம்பினர் தமைக்காக்கு முத்தமன் சித்தி யன்சீ ரிலகுசென் னைத்திறற் சங்கத் தமிழ்த்தலைமை யேற்றரிச் சார்ட்டுக் கிளார்க் கேந்தல் சொல விங்கிலீ சீரிரண்டாஞ் சார்ச்சி யிறைநீதி யரசு செயுநா ளலகுகொண் டெண்சாலி வாகன சகாத்தமோ ராயிரத் தெழுநூற் றோடே ழாறீ ரிரண்டினன் றோங்குமன் றோமன்ன னாளுமதி காரத் தினிற் சலமின் மனு வாதிமிரு திகளோர்ந்து விவகார சாரசங் கிரக மெனுநூற் றன்னைப் புரிந்தனன் றென்னன்மது ரைக்கந்த சாமிநா தப்புலவனே. அராபிக் கதையின் சிறப்பு 1876-ஆம் ஆண்டு அராபிக் கதை தமிழில் மொழி பெயர்க் கப்பட்டு அச்சிடப்பட்டது. இதனை அமரம்பேடு அண்ணாசாமி முதலியார் மொழிபெயர்த்தார். இந்நூல் சென்னை சிந்தாதிரிப் பேட்டைப் பிரபாகர அச்சுக் கூடத்தில் அச்சிற் பதிப்பிக்கப்பட்டது. இதற்குத் தரங்காபுரம் சண்முகக் கவிராயர் எழுதிய “கதையின் சிறப்பு” என்னும் முன்னுரையைக் கீழே தருகிறேன். “கடவுளா லேர்ப்படுத்தப்பட்ட கடல்சூழ்ந்த காசினியிற் சிந்துதேச முதலாகிய நமதிந்து தேசத்திலும் முந்த முதற் றொடங்கி அந்தமாக வந்திருக்கின்ற விந்தையான சரித்திரங்க ளெல்லாவற்றிலும் இனிமை பற்றி முதன்மையுற்று மகிமை சொற்ற பெருமை பெற்ற இரசக்கியப் பொருளை வித்வத்திறத்தின் மிகுத்த பிரசித்த சரித்திர விசித்ர கதைத்திற வித்தென யுக்தி விதைத்து விளைத்தருள் புத்தியின் சக்திபொருந்தி யொருத்தி இராவாற் கூறிய அறாபிக் கதையினை முன்னோர் முதலிய முத்திய பெற்றோர்கள் தொன்னூல் நன்னூல் துதிநூல் விதிநூல் என்னூலாகவு மியற்றிய தமிழா லுறுத்தமாகத் திருத்த மாய்ச் செய்து நாவலரும்புகழ்க் காவலரும் மகிழ இச்சை மேலோங்க வச்சிட்டமையால் (இக்கதை யின் பெருமையைக் காட்டுமிடத்து) ஜெகமெலாம் புரக்குஞ் சிந்து நாட்டிறைவன் தினமொரு விவாகஞ்செய் துதயத்திற் கொன்று விடவேண்டுமென்று குறித்து நடத்திய கருத்தைக் குறைத்து கண்கள் நீர்ததும்பப் பெண்களை யிழந்தோர் பெருந்துயர் களைந்து மந்திரி கொண்ட மருட்சியை மாற்றி ஆயிரத்தெட்டிரா வகற்றி யன்பனோடே யிருத்தின்பமுற்றிளைய மாதுடன் ஷயரஸாட் டென்பவள் சத்தியால் மூன்று புத்திரப் பேறு பெற்று வாழ்ந்திருந்தாள். புத்தியால் யுக்தி புகன்ற விக்கதையைப் பத்தியால் வாசிக்கும் பாவலர்கள் முதலிய மற்றெவர்கட்கும் வாசக தாட்டியும் வாக்கின தகலமும் வசனவுசிதமும் வரிசைக் கிரமமும் மரியாதைப் பெருக்கமும் வண்பதப் பொருளும் எழுவாய் பயனிலை இசை சந்தி நிலையும் பிரித்தலும் விரித்தலும் சொற்பயன் புணர்த்தலுந் தொகுத்தலும் வகுத்தலும் அறிவுநிறைவும் அபலக்குறைவும் நெறிநிலை நீதியும் அறம்பொறை ப்ரக்யாதியும் சபைக்குப் யோகமும் தனக்கு வையோகமும் தந்திர யுக்தியும் மந்திரச்சக்தியும் தையலார் சோர்வும் மையலாற் சோர்வும் கடவுளர் பத்தியும் அடையலர் வெற்றியும் கல்வியினூக்கமுஞ் செவ்வியினோக்கமும் நாயகனேசமும் நாயகி பாசமும் தந்தைதாய்ப் பேணலும் தன் பந்து காணலும் தாம்புகழ் பூணலும் தமைக்கண்டோர் நாணலும் நூதன விருந்தும் ஆதனத்திருந்தும் திரைகடலோடியுந் திரவியந் தேடியும் சேர்ப்பன சேர்த்தும் பார்ப்பன பார்த்தும் செவிப்புலன் மகிழ்ந்தும் சிந்தையுட் களித்தும் இன்னமுள்ள நன்மைகள் யாவையும் எளிதிற் பெருந் தெளிவைத்தரு மின் பக்கதை யிஃதன்றியும். பெரிய வயதினையுடைய முதியோர்களும் ஆரோக்கிய ஸ்தானஞ் செய்தவர்களும் வியாதிக்காரர் முதலிய மெலிவுள் ளோரும் தங்கள் தங்கள் சுகங்களுக்காக பக்திஸ்ரத் தையினால் சமய சம்பிரதாய சாஸ்திர நூல்களை ஆராய்ச்சி செய்யவாவது கேட்கவாவது ஏற்படும் போது சிலருக்கு உறக்கமும் சோம்பலும் வெறுப்பும் ஓய்வு முண்டாகிற துண்டு. அப்பேர்ப்பட்ட காலத்தில் சொக்கட்டான். சோழி சதுரங்கம் காயிதம் ஆடத் தொடங்கு வார்கள். அந்தச் சமயத்தி லிப்பேர்ப்பட்ட கதையினைப் படிக்கவுங் கேட்கவும் பட்சம் வைப்பார்களாகில் இந்தச் சுதாரசமானது காதின் வழியே கசப்பில்லாம னுழைந்து தேகபீடையை நீக்கி, திரேகச் சோம்பல் வெறுப்பு ஒறுப்பு உறக்க முதலியதைப் போக்கி ஆக்க முண்டாக்குவது மல்லாமல் இக்கதையைக் கேட்பவர்கள், மேற்கதை யெப்படியோ; அதைக் கேட்கவேணு மென்னும் ஏக்கமேயன்றி தூக்க மிராது. வேறு விஷயங்களில் நோக்கம்வராது. விதரணை யுடைய புத்திமான்களுக்கு யுகதி நுட்பம் மல்லாதன வற்றைத் தராது. இத்திரம் வாய்ந்த திக்சுதைச் சிறப்பே. விந்தைத் தமிழால் விரித்துரை செய்த இந்துஸ்தான் சரித்திர மாகிய அராபிக்கதையை, சிந்தாதிரிப்பேட்டை சி. நாராயண சாமி முதலியாராற் றமது பிரபாகரவச்சுக் கூடத்திற பதிப்பிக்கப்பட்டது. யுவ ஆண்டு மாசி மாதம். (எழுசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்) பேர்பெறு மராபிப் பாஷையிற் பிறந்து பெருந்துறை முகமெலாஞ் சிறந்து சீர்பெறும் பாஷாந் திரங்களூ டுழன்று திருந்திய கதைமுகச் செல்வி கார்பெறு மமரம் பேட்டில் வாழண்ணாச் சாமிதன் கருத்தினாற் பொருந்தி ஏற்பெறுந் தமிழால் அலங்கரித் தெழுந்தாள் யாவரு மினபுறத் பொருட்டே. 19-ஆம் நூற்றாண்டில் அச்சான இலக்கிய நூல்கள் 19-ஆம் நூற்றாண்டிலே அச்சுக்கூடம் வைக்கும் உரிமை நம்மவருக்குக் கிடைத்தபோது பழைய, புதிய நூல்கள் அச்சுப் புத்தகங்களாக வெளிவந்தன. அவை கணக்கிலடங்கா. பழைய இலக்கிய நூல்கள் முதல் முதலாக ஏட்டுச் சுவடியிலிருந்து அச்சுப் புத்தகமாக வெளிவந்தவற்றை இங்குக் காட்டுகிறேன். இதுவும் முழுவிவரப் பட்டியல் அன்று. இதில் பல நூல்கள் விடுபட்டுள்ளன. தெரிந்தவற்றில் சிலவற்றை மட்டும் கீழே தருகிறேன். ஆண்டு நூற்பெயர், பதிப்பித்தவர் ஆசிரியர் பெயர். பெயர். 1812 திருக்குறள், நாலடியார் ---- 1830 நீதி நெறி விளக்கம். ஆங்கில மொழிபெயர்ப் குமரகுருபர சுவா புடன் H. Stokes என்பவர் மிகள் அச்சிட்டார், சென்னை. 1834 தஞ்சைவாணன் கோ புதுவை நயனப்ப முதலியார் வை, குன்றத்தூர் பதிப்பு. சரஸ்வதி அட்டாவதானி அச்சுக்கூடம், 1843-இல் சொக்கப்ப நாவலர் மகாவித்துவான் மயிலை உரையுடன். பதிப்பு சென்னை. 1834 பொன்வண்ணத் கல்வி விளக்க தந்தாதி. அச்சுக்கூடம் சென்னை. 1835 புறப்பொருள் வெண்பா ‘இலக்கணப் பஞ்சகம்’ மாலை (மூலம்) ஐயன் என்னும் தொகுப்பில் ஆரிதனார் தாண்டவராய முதலியார் பதிப்பித்தார், சென்னை. 1835 அகப்பொருள் விளக்கம் மேற்படி (மூலம்) நாற்கவிராச நம்பி. 1835 தாயுமான சுவாமி திருத்தணிகை சரவணப் பாடல், தாயுமான பெருமாளையர் பதிப்பு. சுவாமிகள். 1844, 1851, 1855, 1887-ஆம் ஆண்டுகளிலும் சிலர் பதிப்பித்தனர். 1835 திவாகரம், சேந்தனார். வித்துவான் தாண்டவராய முதலியார் தாம் புதிதாக இயற்றிய சில சூத்திரங் களைச் சேர்த்துப் பதிப்பித்தார், சென்னை, 1839 நளவெண்பா, கல்வி விளக்க புகழேந்திப் புலவர். அச்சுக்கூடம், சென்னை, 1839 திவாகரம். சேந்தனார். இராமசாமிப் பிள்ளை. சென்னைக் கல்விச் சங்க அச்சுக்கூடம், சென்னை. 1840 திருக்குறள்,பரிமேலழகர் இயற்றமிழாசிரியர் உரையுடன் இராமாநுசகவிராயர் பதிப்பு, சென்னை. 1840 உரிச்சொல் நிகண்டு. துத்தென் துரை பதிப்பு புதுவை குவெர்னமா அச்சுக்கூடம். 1841 நீதி நெறி விளக்கம். தமிழ் மூலமும் ஆங்கில குமரகுருபர சுவாமிகள் விளக்கமும். J. Walker அச்சிட்டார். 1864, 1865, 1868-லும் ‘நீதிமொழித் திரட்டு’ என்னும் தொகுப் பில் அச்சிடப்பட்டது. 1841 நாலடியார் - சமண ‘நீதி மொழித் திரட்டு’ முனிவர். தொகுப்பில் அச்சிட்டார். சென்னை. 1841 வாக்குண்டாம், நல்வழி. உரையுடன் சரவணப் ஒளவையார். பெருமாளையர் பதிப் பித்தார். 1859, 1882-லும் அச்சிடப்பட்டன. 1842 நைடதம். அதிவீரராம திருத்தணிகை சரவணப் பாண்டியன். பெருமாளையர் மகனார் கந்தசாமி ஐயர் பதிப்பு. 1842 மேற்படி உரையுடன் காஞ்சீபுரம் குமாரசாமி தேசிகர் பதிப்பு. 1873, 1875, 1881 ஆண்டு களிலும் நைடதம் அச்சிடப்பட்டது. 1842 குடாமணியிற் பதினோ களத்தூர் வேதகிரி ராம் நிகண்டு முதலியர். யாழ்ப்பாணப் பதிப்பு. 1845 திருவாசகம். மாணிக்க இராமசாமி முதலியார் வாசக சுவாமிகள். பதிப்பு. இவருக்கு முன்பு கொட்டையூர் சிவக்கொழுந்து தேசிகர் முதன் முதல் பதிப்பித்தார். அந்த ஆண்டு தெரிய வில்லை, 1845-க்குப் பிறகு 1900- வரையில் 8 பதிப்புகள் வெளிவந்துள்ளன. 1848 ஆத்திசூடி. ஒளவையார். ஆங்கில விளக்கத்துடன் Rev. J. Sugden பதிப்பித்தார். பெங்களூர். 1849 திருக்குறள், களத்தூர் வேதகிரி திருவள்ளுவர். முதலியார் உரையுடனும், திருவள்ளுவ மாலைக்குச் சரவணப் பெருமாளையர் உரையுடனும் அச்சிடப் பட்டது. திருக்குறள், முன்னரே 1812-இல் அச்சிடப்பட்டிருக்கிறது. பிறகு 1861, 1869, 1875, 1878, 1880, 1881, 1885, 1886, 1889 முதலிய ஆண்டுகளிலும் அச்சிடப்பட்டிருக்கிறது. 1855 நாலடியார். சமண களத்தூர் வேதகிரி முனிவர் முதலியார் உரையுடன். இதன் பிறகு 1869, 1874, 1875, 1883, 1885, 1892 முதலிய ஆண்டுகளிலும் அச்சிடப்பட்டது. 1858 உரிச் சொல் நிகண்டு ரா. ரா. அருணாசலம் (12 தொகுதி) சதாசிவம் பிள்ளை. பதிப்பு, யாழ்ப்பாணம். 1860 மூதுரை, ஒளவையார் ஆங்கில மொழி பெயர்ப்புடன் T. M, Scott அச்சிட்டார், சென்னை. 1868-இல் வேறு பதிப்பு. 1864 தேவாரப் பதிகங்கள், வித்துவான் காஞ்சீபுரம் திருஞான சம்பந்த சபாபதி முதலியார் சுவாமிகள் திருமுறை. பதிப்பு. கலாநிதி அச்சுக்கூடம் சென்னை. 1865 தேவாரப் பதிகங்கள் திரிசிரபுரம் வித்துவான் சுந்தரமூர்த்தி சுவாமிகள் கோவிந்தப் பிள்ளை அருளிய திருமுறை. பதிப்பு. சென்னை வாணி நிகேதன அச்சுக்கூடம். 1865 நாலாயிரத் திவ்வியப் அப்பாவு முதலியார் பிரபந்தம், ஆழ்வார்கள் பதிப்பு. 1898-இல் ஸ்ரீநிவாச அருளிச்செய்தது. ராகவாசாரியார் பதிப்பு. 1866 தேவாரத் திருப்பதிகத் வித்துவான் காஞ்சீபுரம் திருமுறை; சுந்தரமூர்த்தி சபாபதி முதலியார் சுவாமிகள் அருளியது. பதிப்பு. கலாநிதி அச்சுக்கூடம் சென்னை. 1867 தேவாரத் திருப்பதிகத் மேற்படி திருமுறைகள். திரு நாவுக்கரசுசுவாமிகள். 1868 பட்டினத்துப் பிள்ளையார் ---- பிரபந்தமும் பாடலும். 1868 சீவக சிந்தாமணி. திருத் நாமகள் இலம்பகம் தக்க தேவர். ஆங்கில விளக்கத்துடன் Rev. H. Bower. பவர் ஐயர் வெளியிட்டார். 1868 திரிகடுகம். நல்லாதனார். ---- 1868 பாரதம். வில்லிபுத் சபாபர்வம் உரையுடன். தூரார். திரிசிரபுரம் மகாவித்துவான் கோவிந்த பிள்ளையவர்கள். 1869 அரிச்சந்திரபுராணம் மூலமும் உரையும். வீர கவிராயர் வெங்கடாசல முதலியார் பதிப்பு சென்னை. 1869 கந்தபுராணம் ஆறுமுக நாவலர் பதிப்பு. 1869 யசோதார காவியம். காஞ்சீபுரம் பாகுபல நயினார். பதிப்பு. 1870 மூதுரை, நல்வழி, உரைபாடம். நன்னெறி. 1870 நளவெண்பா. சோடசாவதானம் சுப்பராய புகழேந்திப் புலவர். செட்டியார். 1870 மேற்படி தி. ஈ. ஸ்ரீநிவாச ராகவாச்சாரி யார் ‘மணி விளக்கு’ என்னும் உரையுடன் சென்னை. 1870 இராமாயணம், கம்பர். சுந்தரகாண்டம். சிதம்பரநாத கிவராயர். திருநெல்வேலி. 1872 சிவப்பிரகாசம். சண்முகசுந்தர முதலியார் பதிப்பு. 1872 சிலப்பதிகாரம், சோடசாவதானம் இளங்கோவடிகள், சுப்பராய செட்டியார் (பகுதி) உரையுடன் சென்னை. 1873 நைடதம் மூலம். ---- அதிவீர ராம பாண்டியன். 1873 பெரிய புராணம் (திருத் ஆறுமுக நாவலர் பதிப்பு. தொண்டர் புராணம்) 1873 தனிப்பாடற்றிரட்டு, ---- பல புலவர்கள். 1878-இல் சந்திரசேகரக் கவிராயர் பதிப்பு. 1888-இல் வேறு ஒரு பதிப்பு. 1874 பாரதம், வில்லிப் நல்லூர் ஆறுமுக நாவலர் புத்தூரார் பதிப்பு. 1884-இல் சதாசிவ பிள்ளையும், 1888-இல் C.M.சாமி நாத ஐயரும் பதிப்பித்தனர். 1874 பழமொழி நானூறு. சோடசாவதானம் முன்றுறையரையர். சுப்பராய செட்டியார் பதிப்பு. தமது உரையுடன். இதில் 10 செய்யுட்கள் விடுபட்டுப் போயின. 1875 அரிச்சந்திர புராணம். அருணாசல முதலியார் வீரகவிராயர். பதிப்பு, சென்னை. 1875 நைடதம். அதிவீரராம உரையுடன் சரவணப் பெரு பாண்டியன். மாளையர் சென்னை. பின்னர் 1876, 1879, 1881, 1882, 1883, 1887 முதலிய ஆண்டு களிலும் அச்சிடப்பட்டது. 1876 சிலப்பதிகாரம். புகார்க் காண்டம் தி. ஈ. இளங்கோவடிகள். ஸ்ரீநிவாச ராகவாசாரியர் தமது உரையுடன் பதிப்பித்தார், சென்னை. 1876 சிவஞானபோதம். ---- உரையுடன். 1876 முதுமொழிக்காஞ்சி. ---- கூடலூர் கிழார். 1876 பாரதம். நல்லாப் சாந்தபர்வம், ஆரணிய பிள்ளை பர்வம், துரோணபர்வம், 1878-இல் அச்சிடப்பட்டது. 1887-இல் தியாகராச ஐயர் அச்சிட்டார். 1876 சிவஞான சித்தியார் ---- (சுபக்கம்) 1877 களவழிநூற்பது பொய் சோடசாவதானம் சுப்பராய கையார். செட்டியார். 1877 பதினோராந் திருமுறை சோடசாவதானம் சுப்பராய செட்டியார். 1879 நான்மணிக்கடிகை. கோ. இராசகோபால விளம்பி நாகனார். பிள்ளை உரையுடன். மேற்படி யார் மாணவர் வாசுதேவ முதலியார் பதிப்பு. 1880 திருவிளையாடற் புராணம் ---- (அரும்பதவுரையுடன்) 1883 இறையனார் சி. வை. தாமோதரம் அகப்பொருள். பிள்ளை பதிப்பு. 1883 திரிகடுகம். ‘நீதிமஞ்சரி தருப்பணம்’ நல்லந்துவனார். வரிசையில் அச்சிடப்பட்டது. 1883 தணிகைப் புராணம். சி. வை. தாமோதரம் பிள்ளை பதிப்பு. 1883 சீவக. சிந்தாமணி. முதற் பகுதி, பதுமையார் திருத்தக்க தேவர். இலம்பகம் வரையில், மூலம் ப. அரங்க சாமிபிள்ளை, சென்னை. 1884 கூர்ம புராணம் (உரை சிதம்பரநாத கவி. யுடன்) முதல் பகுதி. 1884 அரிச்சந்திர வெண்பா. திருமயிலை, முருகேச முதலியார் பதிப்பு. சென்னை. 1885 கூர்ம புராணம் (உரை சிதம்பரநாத கவி. யுடன்) இரண்டாம் பகுதி. 1886 இராமாயணம், கம்பர் இரண்டு பாகம். 1887 கலித்தொகை. சி. வை. தாமோதரம் நச்சினார்க்கினியர் பிள்ளை பதிப்பு. உரையுடன் 1887 இரகுவம்மிசம் அரச நல்லூர் பொன்னம் பலம் கேசரியார். பிள்ளை. யாழ்ப்பாணம். 1887 புலியூர் வெண்பா. ---- மாரிமுத்துப் பிள்ளை. 1887 சீவக சிந்தாமணி, நச்சினார்க்கினியர் திருத்தக்கதேவர். உரையுடன். உ.வே. சாமி நாதையர். 1888 ஒழிவி லொடுக்கம் கோயிலூர் இராமசாமி சுவாமிகள். 1888 திருக்கோவையார். ---- 1889 சூளாமணி, தோலா சி. வை. தாமோதரம் மொழித் தேவர். பிள்ளை. 1889 பத்துப்பாட்டு. திருமுரு நச்சினார்க்கினியர் காற்றுப்படை, பொரு உரையுடன், உ.வே. நராற்றுப்படை, சிறு சாமிநாதையர், சென்னை. பாணாற்றுப் படை, பெரும் பாணாற்றுப் படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப் பாலை, மலைபடு கடாம். 1892 சிலப்பதிகாரம். அடியார்க்கு நல்லார் இளங்கோவடிகள். உரையுடனும், பழைய அரும்பத வுரையுடனும். உ.வே. சாமிநாதையர், சென்னை. 1893 ஆசாரக்கோவை. பெரு தி.செல்வ கேசவராய வாயில் முள்ளியார். முதலியார். சென்னை. 1894 புறநானூறு. பழைய உரையுடன் உ.வே. சாமிநாதையர் சென்னை. 1894 மணிமேகலை, கூல திருமயிலை, மகாவித்து வாணிகன் சாத்தனார். வான் சண்முகம் பிள்ளை பதிப்பு, சென்னை. 1895 புறப்பொருள் வெண்பா பழய உரையுடன், உ. வே. மாலை. ஐயனாரிதனார். சாமிநாதையர் பதிப்பு, சென்னை. 1896 கூர்மபுராணம் அதிவீர கல்லாடநகர் அ.சிதம்பரநாத ராம பாண்டியன். கவிராயர் உரையுடன் மேற்படி கவிராயரால் பதிப்பிக்கப் பட்டது, திருநெல்வேலி. 1896 இராமாயணம், கம்பர். திருமயிலை மகாவித்துவான் சண்முகம் பிள்ளை உரையுடன், சென்னை. 1898 மணிமேகலை கூல உ. வே. சாமிநாதையர். வாணிகன் சாத்தனார். 19-ஆம் நூற்றாண்டில் உரைநடை நூல்கள் 19-ஆம் நூற்றாண்டில், நம்மவரும் அச்சியந்திரம் வைப்பதற்கு வாய்ப்பு ஏற்பட்ட பிறகு தமிழில் உரைநடை நூல்கள் பல வெளி வந்தன. பாடசாலைப் புத்த கங்களாகவும், சமய நூல்களாகவும், கதைகளாகவும், வேறு பொருள் பற்றியும் பல உரை நடை நூல்கள் சென்ற நூற்றாண்டில் அச்சுப் புத்தகங்களாக வெளிவந்தன. அந்நூல்கள் எல்லாவற்றையும் தொகுத்துப் பட்டியலாக அமைப்பது இயலாது. சென்ற நூற்றாண்டில் அச்சுப் புத்தகமாக வெளிவந்த உரை நடை நூல்களில் சிலவற்றை மட்டும் இங்குப் பட்டியலாகத் தருகிறேன். இது முழு விவரப் பட்டியல் அன்று என்பதைக் கருதவேண்டுகிறேன். ஆண்டு நூலின் பெயர் பதிப்பாசிரியர், நூலாசிரியர் பெயர் 1815 இராமாயணத் துத்தர திருச்சிற்றம்பல தேசிகர். காண்டக் கதை (வால்மீகி இராமாயணம் உத்தர காண்டம் வசனம்) 1822 பரமார்த்த குருவின் கதை பெஞ்சமின் பாபிங்கடன். (வீரமா முனிவர் (Benjamin Babington) எழுதியது) லண்டன் மாநகர். 1826 பஞ்சதந்திரக் கதை. மராட்டியிலிருந்து மொழி பெயர்க்கப் பட்டது. தாண்டவராய முதலியார், சென்னை. 1826 கதாமஞ்சரி. தாண்டவராய முதலியார், (1846, 1850, 1860, 1869 ஆண்டுகளிலும் பதிப்பிக்கப் பட்டது. 1828 ஆதிகாலச் சரித்திரச் சங் புதுவை ஞானப்பிரகாச கிரகம். முதலியார், சென்னை. 1830 இந்துஸ்தான் சரித்திரச் புதுவை ஞானப்பிரகாச சங்கிரகம். முதலியார், சென்னை. 1847 பஞ்சதந்திரக் கதை. எழுமூர் முத்துசாமி முதலியார், சென்னை. 1847 இனிமையான கதைகள். சென்னை. 1850 பூர்வீக சரித்திரம், Edmand Surgent. (A manual of Ancient பாளையங்கோட்டை. History) 1852 பஞ்சதந்திரக் கதை. ஸ்ரீ நிவாசபுரம் ஸ்ரீநிவாச ஐயங்கார். 1853 பரதேசி மோட்சப் பிர Z. Spaulding மொழி யாணம் (John Bunyan’s பெயர்த்தது, Pilgrim’s Progress) யாழ்ப்பாணம். 1853 கட்டுக் கதைகள் திருவேங்கட பிள்ளை (Aes-op’s fables) 1855 மதனகாமராஜன் கதை. சேலை பொன்னம்பலக் கவிராயர், சென்னை. 1869, 1874, 1878, 1879, 1880, 1881, 1883, 1884 ஆண்டு களிலும் பதிப்பிக்கப்பட்டது. 1857 பல தேச சரித்திரம். சென்னை. 1859 பரமார்த்த குருவின் புதுவை. கதை. (வீரமா முனிவர் எழுதியது) 1864 கதாமஞ்சரியும் நீதிசார புதுவை. வாக்கியமும். 1865 பஞ்சதந்திரக் கதை புதுவை. 1867 திருச்சபை சரித்திரம் Anders Blomstrand 2- பாகம். தரங்கம்பாடி. 1868 சிந்திரபுத்திர நாயனார் 1876-இலும் பதிப்பிக்கப் கதை. பட்டது. 1868 மயில்ராவணன் கதை (1874, 1875, 1880, 1886, 1888 ஆண்டுகளிலும் பதிப்பிக்கப்பட்டது. 1868 சீதா விஜய வசனம், சுப்பராய முதலியார் யோக வாசிஷ்ட இரா பதிப்பித்தது, சென்னை. மாயணத்திலிருந்து. 1869 முப்பத்திரண்டு பதுமை 1874, 1876, 1878, 1882 கதை. ஆண்டுகளிலும் பதிப்பிக்கப் பட்டது 1869 நாலு மந்திரி கதை. 1874, 1877, 1878, 1881, 1883 ஆண்டிலும் பதிப்பிக்கப் பட்டது. 1869 பகல் சுக்கன் இராச் சீனிவாசாசாரி. சுக்கன் கதை. 1869 தமிழறியும் பெருமாள் 1870, 1876, 1879, 1880 கதை. ஆண்டுகளிலும் பதிப்பிக்கப்பட்டது. 1870 வேதாளக் கதை. கருணானந்தசாமி. 1870 கதாசிந்தாமணி. தாண்டவராய முதலியார், 1873, 1876, 1878, 1879, 1883, 1884 ஆண்டிலும் பதிப்பிக்கப்பட்டது. 1871 விக்கிரமார்க்கன் கதை. முகம்மது இப்ராகிம் சாகிபு. 1871 கிளைவ் சரித்திரம் கதிர்வேலு பிள்ளை (1880- (Lord Clive) இல் வேறுஒரு பதிப்பு.) 1871 கொலம்பசு சரித்திரம். உவின் பிரெட். H. W. 1873 சதகண்ட ராவணன் ---- கதை. 1873 பஞ்ச தந்திரம். தாண்டவராய முதலியார். 1874, 1879, 1880, 1881 ஆண்டுகளிலும் பதிப்பிக்கப் பட்டது. 1874 சகஸ்ரமுக ராவணன் ஆறுமுக முதலியார், கதை சதமுக ராவணன் சென்னை. கதை 1875 வில்ஹணீயம் (மொழி புலோலி கணபதிப் பெயர்ப்பு) பிள்ளை. 1875 சாரங்கதரன் கதை. அருணாசல முதலியார். 1875 மரியாதைராமன் கதை. “கதாசிந்தாமணி.” 1875 விவேக சாகரம். ஹுசேய்ன் கான். 1876 கந்தபுராண வசனம் ---- 1876 அராபிக் கதைகள், அண்ணாசாமி முதலியார். (இரண்டு பாகம்) 1876 துத்திநாமா என்கிற 1881, 1883 ஆண்டிலும் கிளிக் கதை. பதிப்பிக்கப்பட்டது. 1877 அறைஷ்மஃபில் என்னும் ஹக்கிம் முகம்மது ஹத்தின் தி கிஸ்ஸா இஸ்மால் சாகிபு. 1877 சார் தர்விஷ். முகம்மது இப்ராகிம் சாகியு. 1881 பதிப்பு. 1877 வினோத ரச மஞ்சரி. வீராசாமி செட்டியார். (1891.) 1878 பிரமோத்தர காண்ட சுப்பிரமணிய பிள்ளை. வசனம். 1878 தஜ்ஜல் நாமா. மகம்மது இப்ராகிம் சாகிபு. 1879 சித்திரங்காட்டி சத்தியம் தி. கோ. நாராயணசாமி நிறுத்திய கதை. பிள்ளை. 1879 சைவ சமய விளக்க வினா காஞ்சிபுரம் சபாபதி விடை. முதலியார். 1879 சங்கர விஜயம் என்னும் தொ. வேலாயுத முதலியார் சங்கராசாரியார் சரித்திரம். 1879 பிரதாப முதலியார் வேதநாயகம் பிள்ளை சரித்திரம். 1885-இல் 2- ஆம் பதிப்பு. 1880 தக்காணத்துப் பூர்வ நடேச சாஸ்திரி. கதைகள். 1880 இதிகாசமாகிய திராவிட சண்முகக் கவிராயர். விட மகாபாரத வசனம் சென்னை. நான்குபாகங்கள். 1880 மலுக்குமுலுக்கு ராஜன் அப்துர்காதிர் சாகிபு. கதை. 1881 பஞ்சதந்திரக் கதை. திருவெண்காடு ஆறுமுக சாமி. 1882 முப்பத்திரண்டு பதுமை அருணாசல முதலியார், கதை. சென்னை. 1882 பரதேசியின் மோட்சப் சாமுவேல் பவுல் ஐயர். பிரயாயணம். 1883 காஞ்சிப் புராணம் கனகசபை நாயகர். வாசனம். 1885 முத்திரா ராக்ஷசம். நடேச சாஸ்திரி. (கதை) 1886 திராவிட பூர்வக் காலக் நடேச சாஸ்திரி. கதைகள். 1886 திராவிட மத்திய காலக் நடேச சாஸ்திரி சென்னை கதைகள். (1887) 1886 இராமநுஜார்ய திவ்ய திருவேங்கடாசாரியார். சரிதை. சென்னை. 1887 சீறா வசன காவியம். கன்னகுமது மகுது மகமது புலவர். 1887 சுகுண சுந்தரி சரித்திரம். வேநாயகம் பிள்ளை. 1888 கம்பராமாயண வசனம் மயிலை சண்முகம்பிள்ளை. 2 பாகம். 1888 கற்பின் விஜயம் அல்லது ---- சத்தியாம்பாள் கதை. 1888 அராபிக் கதைகள். மாணிக்க முதலியார். 1888 அவிவேக பூரண குரு கதை ---- 1888 விவேக சரித்திரம். தி. கோ. நாராயண சாமி பிள்ளை. 1889 ஷேக்ஸ்பியர் நாடகக் M.S.B. and V.L. Society. கதைகள். 1889 கந்தபுராண வசனம். ஜகனாத பிள்ளை. 1889 பிரபோத சந்திரோதய மானிப்பாய் முத்துத் வசனம் தம்பிப் பிள்ளை. 1889 திராவிட பால போதினி. சிவசங்கரபாண்டியாஜி, வரதய்யா. 1890 கந்த புராண வசனம் திருமயிலை சண்முகம் 2 பாகம். பிள்ளை. 1891 ஊசோன் பலந்தை யாழ்ப்பாணம். கதை (Story of Valantine and orson) 1892 தீன் நெறி விளக்கம் மக்தூம் முகம்மது இபின் வசனகாவியம் மக்தூம் பிள்ளை, சென்னை. 1892 வ யோ லா சரித்திரம். நடேசசாஸ்திரி, (Shakespear’s Twelfth கோயம்புத்தூர். Night or what you will.) 1892 தமிழ்ப் பாஷை, திருக்கோணமலை (கட்டுரை) சரவண முத்துப்பிள்ளை. 1893 நீதி வினோதக் கதை. உத்மான் லெப்பை (பாபுராஜபுரம் முகம்மது பதிப்பித்தது. கொழும்பு, நிஜாம் முஃயி அல்தீன் (1900-இல் 2-ஆம் பதிப்பு) முகம்மது எழுதியது) 1893 சீவக சிந்தாமணி கவித்தலம் துரைசாமி வசனம். மூப்பனார் பூரணசந்தி ரோதய அச்சுக்கூடம். 1893 நடுவேனிற் கனவு நாராயணசாமி ஐயர், (Shakespear’s Midsummer தஞ்சை. Nights dream) 1893 கதா ரத்தினாவலி. வெங்கடசுப்புராவ் (அரபிக் கதைகள்.) சென்னை. 1894 பத்து குல்மிசிர் பஹ கண் அஃமது மத்தூம் னஸா வசன காவியம், முகம்மது பதிப்பித்தது (அரபியிலிருந்து சென்னை. முகம்மது லெப்பை ஆலிம் சாகிபு மொழி பெயர்த்தது) 1895 வசன சம்பிரதாயக் கதை, தமிழ்ச் சக்கரவர்த்தி முத்துக் (குபேரனிடம் குடியானவர் குட்டி ஐயர். திருவாதியில் முறையீடு. சிவராத்திரி அச்சிடப்பட்டது. விழாவின்போது சிவகங்கை ஜமீன்தாரை மகிழ்விப் பதற்காக எழுதப்பட்டது.) 1895 மோகனாங்கி ஒரு கதை. திருக்கோணமாலை சரவண முத்துப் பிள்ளை, சென்னை. 1896 ஆபத்துக்கிடமான அப இராஜம் ஐயர். வாதம், அல்லது கமலாம் பாள் சரித்திரம். 1897 திருவிரிஞ்சைப் புராண சுப்பிரமணிய ஐயர். வசனம். 1897 மரியாதை ராமன் கதை. பூர்ணலிங்கம் பிள்ளை. 1897 காளையார் கோயில் சுப்பிரமணிய ஐயர். மான்மிய வசனம். 1897 ஸ்ரீகிருஷ்ண போதாம்ரு தெலுங்கிலிருந்து மொழி தம் என்னும் பன்னிரண்டு பெயர்த்தது. வீரமுத்து ராஜாக்கள் கதை. முதலியார் மொழிபெயர்ப்பு. 1897 வாதவூரார் புராண வாசுதேவ முதலியார். வசனம். 1897 கருத்த முத்துப் பிள்ளை விருதை சிவஞானயோகி, சரித்திரம். திருநெல்வேலி. 1898 ஆழ்வார்கள் சரித்திரம். சடகோப ராமாநுஜா சாரியார், சென்னை. 1898 பட்டினத்துப் பிள்ளை மாயூரம் நமசிவாயம் யார் சரித்திரச் சுருக்கம். பிள்ளை. 1898 சிவகீதை வசனம். இராமசாமி தேசிகர், சென்னை. 1898 ஜடபர தோபாக்கி தெலுங்கிலிருந்து வரதராஜு யானம் நாயுடு மொழி பெயர்த்தது. 1898 ஸ்ரீராம ஹிருதயம் தெலுங்கிலிருந்து வரத என்னும் ஷட் சக்கர ராஜு நாயுடு மொழி வர்த்திகளின் இந்திர பெயர்த்தது. ஜாலக் கதைகள். 1898 திவிட்ட குமாரன், அல் சி. வை. தாமோதரம் லது வசன சூளாமணி, பிள்ளை. 1898 பத்மாவதி சரித்திரம் 2- அ.மாதவையா. பாகம். 1899 திருப்பரங்கிரிப்புராணம் அருணசலக் கவிராயர், வசனம் சென்னை. 1899 ஸ்ரீபக்த லீலாம்ருத காஞ்சிபுரம் இராமசாமி வசனம். நாயுடு. 1899 திராவிடப் பிரகாசிகை. சபாபதி நாவலர். 1899 சகல கலா பூஷணம், வைத்தியநாத சுவாமி. (சமய சம்பந்தமான கதைகள்) 19-ஆம் நூற்றாண்டில் நாடக நூல்கள் 19-ஆம் நூற்றாண்டில் நாடக நூல்கள் எழுதப்பட்டு அச்சிடப் பட்டன. ஒன்றிரண்டு பழய நாடக நூல்களும் அச்சிடப்பட்டன. இந்த நாடக நூல்களில் இசைப் பாட்டுகள் அதிகமாகவும் வசனங்கள் குறைவாகவும் அமைந்திருந்தன. இவை பழய நாடக இலக்கண நூல்களின் முறைப்படி இல்லாமலும் மேல்நாட்டு முறைப்படி இல்லாமலும் புதுமுறையாக அமைந்திருந்தன. சிலப்பதிகாரம் முதலிய பழய நூல்களில் கூறப்படுகிற நாடக முறைப்படி இல்லாமலும் ஷேக்ஸ்பியர் நாடகங்கள் போன்ற மேல்நாட்டு முறைப்படி இல்லாமலும் இந்த நாடக நூல்கள் புது முறையாக அமைந்திருந்தன. இவை பெரும்பாலும் புராணக் கதைகளை அடிப்படையாகக் கொண்டு இயற்றப்பட்டவை. சென்ற நூற்றாண்டில் இந்த நாடக நூல்களை அடிப்படையாகக் கொண்டு இயற்றப் பட்டவை. சென்ற நூற்றாண்டில் இந்த நாடக நூல்களை அதிகமாகப் போற்றினார்கள். தமிழ்நாட்டில் மட்டும் அல்லாமல், மலையாள நாட்டிலும் இத் தமிழ் நாடக நூல்கள் செல்வாக்குப் பெற்றிருந்தன. சில தமிழ் நாடக நூல்கள் மலையாள எழுத்தில் அச்சிடப்பட்டு விற்கப்பட்டன. சாவித்திரி நாடகம் மலையாள எழுத்தில் பாலக்காட்டில் 1890-ஆம் ஆண்டு அச்சிடப்பட்டது. சென்ற நூற்றாண்டின் இறுதியில் பேர் பெற்று விளங்கிய “சதாரம்” என்னும் நாடக நூலை “ஸதாரம்” என்னும் பெயரில் மலையாள நாட்டில் அச்சிட்டார்கள். தமிழ் நாடக நூல்கள் கேரள நாட்டில் போற்றப்பட்டன. ஹரிச்சந்திரன், கோவலன் சரித்திரம். நல்லதங்காள், கண்ணகி, வள்ளி திருமணம் முதலிய தமிழ் நாடக நூல்கள் சென்ற நூற்றாண்டில் கேரளத்தில் சிறப்புப் பெற்றிருந்தன. இந்த நாடக நூல்களில், பாட்டுகள் அதிகம். “சாகப்போகும் தருவாயிலும் பாட்டு, செத்துக் கிடக்கும் போதும் பாட்டு, அழும்போதும் பாட்டு, எந்த எந்தச் சந்தர்ப்பத்திலும் பாட்டு” என்று இந்த நாடகங் களைப்பற்றி ஒருவர் எழுதுகிறார். ஆம். இந்த நாடகங்கள் தொடக்கம் முதல் முடிவு வரையில் பாட்டாகவே இருந்தன. இடையிடையே சில வசனங்களும் உண்டு. இந்த வசனங்களும் கட்டியக்காரன் கூற்றாக இருந்தனவே யல்லாமல், நாடகப் பாத்திரங்களின் உரையாடல்களாக அல்ல. ஆனால், அக்காலத்திலே இந்த நாடகங்களுக்கு நாட்டிலே அதிக செல்வாக்கிருந்தது. என்னுடைய இளமைக் காலத்திலே, என்னுடைய இல்லத்தில் இருந்த நூல் நிலையத்தில் இந்த நாடக நூல்களில் பலவற்றைப் பார்க்கவும் படிக்கவும் நான் வாய்ப்புப் பெற்றிருந்தேன். சென்ற 19-ஆம் நூற்றாண்டில் அச்சிடப்பட்ட நாடக நூல்களின் பெயரையும், ஆசிரியர் பெயரையும் அச்சிட்டவர் பெயரையும் நான் அறிந்த வரையில் கீழே தருகிறேன். இது முழுப்பட்டியலாக இருக்க முடியாது. ஆண்டு நூலின் பெயர் பதிப்பாசிரியர் ஆசிரியர் பெயர் பெயர். 1864 சோகி நாடகம். சுப்பராய முதலியார். 1867 இராம நாடகம். அருணாசலக் கவிராயர் (18-ஆம் நூற்றாண்டு) இயற்றியது. தொட்டிக்கலை வையாபுரி முதலியார் இந்த ஆண்டில் பதிப்பித்தார். இதற்கு முன்பு வேங்கடாசல முதலியார்,ராமசாமி நாயகர் இருவரும் சேர்ந்து பதிப்பித்தார்கள். ஆண்டு தெரியவில்லை. 1867 அரிச்சந்திர விலாசம். அரங்க பிள்ளை. 1868 அருணாசல மகத்துவம் ------ என்னும் வல்லாள மகாராசன் விலாசம். 1868 சுமதி விலாசம். ஆஸ்வாரப்ப பிள்ளை. 1868 தாசில்தார் நாடகம். சைதாபுரம் காசி விசுவநாத முதலியார். 1868 மார்க்கண்டேயர் நாட நரசிம்ம ஐயர். காலங்காரம். 1868 மார்க்கண்டேயர் வேங்கடராம உபாத்தி விலாசம். யாயர் 1868 வீரகுமார நாடகம். முனிசாமி பிள்ளை. 1869 அரிச்சந்திர உபாக்கி நரசிம்ம ஐயர். யான நாடகாலங்காரம். 1869 துருவாசு சரித்திரம். குருசாமி தாசர். 1869 தேசிங்கு ராஜ நாடகம். வீரபத்திர ஐயர். 1869 தேசிங்கு ராஜ விலாசம். மதுரை முத்து கவி. 1869 மாணிக்கவாசக சுவாமி குப்புசாமி கிராமணி. விலாசம். 1870 அலி பாதுஷா நாடகம். வண்ணக்களஞ்சியப் புலவர். 1870 கூலிக்கு மாரடிக்கும் சைதாபுரம் காசிவிசுவ சுத்தாடிச்சிகள் நடிப்பு. நாத முதலியார். 1870 பாரத விலாசம் சூது, இராசநல்லூர் இராமச்சந்திர துகிலுரிதல். கவிராயர் இயற்றியது. தியாகராச சுவாமி அச்சிட்டது, சென்னை. 1870 மதுரைவீரன் நாடகம். குட்டி உபாத்தியாயர். 1870 வள்ளியம்மை நாடகம். முத்து வீர கவி (பல பதிப்புகள்) 1871 இரணிய நாடகம். இராசநல்லூர் இராமச்சந்திர கவிராயர் இயற்றியது சோமசுந்தர முதலியார் பதிப்பு, சென்னை. 1871 தமயந்தி நாடகம். ---- 1871 பிரம்மசமாஜ நாடகம். சைதாபுரம் காசிவிசுவநாத முதலியார். 1871 மன்மத நாடகம். திருமலை தாசர். 1872 டம்பாச்சாரி விலாசம். சைதாபுரம் காசிவிசுவநாத முதலியார். (பல பதிப்புகள்) 1872 நளவிலாசம். தாமோதர முதலியார். 1872 நாலு மந்திரி விலாசம். ---- 1872 வள்ளி நாடகம். நமசிவாய புலவர். 1873 அரிச்சந்திர விலாசம். பரசுராம கவி. 1873 அப்பாசு நாடகம். மகமது இப்ராஹிம். 1873 குசலவ நாடகம். வேங்கடாசலமுதலியார். 1874 அரிசந்திர விலாசம். வெங்கடராம உபாத்தியாயர். 1874 கஜேந்திர மோட்ச வெங்கடாசல முதலியார். நாடகம். 1874 சித்திராங்கதை விலாசம். பரசுராம கவி. 1874 நொண்டி நாடகம். அப்துல் கரீம் சாயபு. 1874 பாரத விலாசம்: வில் ---- வளைத்துமாலையிடுதல். 1874 ஜோகி நாடகம். சுப்பராய முதலியார். 1875 அரிச்சந்திர விலாசம். அரங்கப்பிள்ளை கவிராயர் அரிச்சந்திர நாடகம் வரதராசலு நாயுடு., 1875 குசலவ நாடகம். வெங்கடாசல முதலியார். 1875 தத்துவக் குறவஞ்சி. முருகேச பண்டிதர். 1875 திருநீலகண்ட நாயனார் வேங்கடாசலம் பிள்ளை விலாசம். இயற்றியது. இராசகோபால பிள்ளை பதிப்பு, சென்னை. 1875 நல்லதங்காள் நாடகம் வையாபுரிப் பிள்ளை இயற் றியது அருணாசல முதலி யார் பதிப்பு, சென்னை. 1875 மார்க்கண்ட நாடக வரதாஜ ஐயர். அலங்காரம். 1875 மார்க்கண்டேயர் சுப்ப ராமய்யர். விலாசம். 1875 வள்ளியம்மை நாடகம். முத்து வீரக்கவிராயர். 1876 குசேல விலாசம். சேஷகிரி ஐயங்கார். 1876 பரத சாஸ்திரம் - சந்திரசேகர பண்டிதர் உரையுடன் பதிப்பு. 1876 சகுந்தல விலாசம். இராசநல்லூர் இராமச் சந்திரகவிராயர் இயற்றியது. 1876 சிவராத்திரி நாடகம். வேலாயுதகவி. 1876 நள நாடகம். கிருஷ்ணசாமிப் பிள்ளை. 1876 பாரத விலாசம்: ---- அர்ச்சுனன் தபசு. 1876 வெனிஸ் வணிகன் வேணுகோபாலசாரியார். (ஷேக்ஸ்பியர் நாடகம்) 1876 பிரகலாத விலாசம். அரங்கநாத கவி. 1876 மார்க்கண்டேயநாடகம். கோபாலகிருஷ்ணஐயர். 1877 பிரதாப சந்திர விலாசம். இராமசாமி ராசு. 1877 தமயந்தி நாடகம். தஞ்சை கிருஷ்ணப்பிள்ளை. 1878 சிந்திராங்கி விலாசம். அப்பாவுப் பிள்ளை. 1878 அப்பாசு நாடகம். முகம்மது இப்ராஹம். 1879 பாரத விலாசம்: நச்சுப் ---- பொய்கை. 1879 மார்க்கண்டேயவிலாசம். சுப்பிரமணிய ஐயர். 1880 பாரத விலாசம்: நச்சுப் வேலாயுத புலவர். பொய்கை. 1880 மன்மத விலாசம். தாண்டவராய முதலியார். 1880 வல்லீபரதம் (கழுகுமலை எட்டயபுர சமஸ்தான சுவாமி கார்த்திகேயர் வித்துவான் கடிகை பேரில் இயற்றப்பட்டது.) நமசிவாயப் புலவர் இயற்றியது. மேற்படி சமஸ்தானம் சங்கீத சாகிய வித்துவான் சுப்பரா மய்யரால் வர்ண மெட்டு அமைக்கப் பட்டது. 1880 ஜலக்கிரீடை ---- 1881 பாரதவிலாசம்: சரவண பண்டிதர். துகிலுரிதல். 1881 சாவித்திரி நாடகம். கோவிந்தசாமி ராவு. 1881 சிறுத்தொண்ட நாயனார் பரசுராம கவி. விலாசம். 1882 அதிபத்த நாயனார் கீர்த் சடாதார அய்யர். தனை நாடகம். 1882 மங்களவல்லி விலாசம் நாராணசாமி பிள்ளை. திரிசிரபுரம். 1882 மன்மத விலாசம் தாண்டவராய முதலியார். 1882 ஸ்ரீமகாபாரத விலாசம். இராமாநுச சுவாமிகள். 1882 ருக்குமாங்கத விலாசம். இராமச்சந்திர கவி. 1883 ஆறாதார விலாசம். வேலாயுத முதலியார். 1883 சத்திய பாஷா அரிச் அப்பாவுபிள்ளை என்னும் சந்திர விலாசம். முத்துசாமி பிள்ளை. 1883 நள நாடகம் என்றும் தஞ்சை கிருஷ்ணசாமி வழங்குகிற தமயந்தி பிள்ளை இயற்றியது. நாடகம். 1884 பத்மினி சபா. அப்பாவுப் பிள்ளை. 1884 மனுசோழ சக்கரவர்த்தி நாராயணசாமி நாயுடு. சரித்திரப்பா. 1884 வீரகுமார நாடகம். வேதகிரி முதலியார். 1885 நந்தி துர்க்கம் (ஒரு ரங்காச்சாரி. நாடகம்) 1886 இந்திர சபா. அப்பாவு பிள்ளை என்னும் முத்துசாமி பிள்ளை. 1886 காஞ்சிபுரம் ஸ்ரீகருக் இராமாநுச முதலியார் கினில் அமர்ந்தவள் திருவருள் விலாசம். 1886 சாவித்திரி நாடகம் கோவிந்தசாமி ராவ். 1886 சித்திராங்கி விலாசம். அப்பாவு பிள்ளை இயற்றியது. தாயுமான முதலியார் பதிப்பித்தது. 1886 அபிநவ நவநீதம். நாராயண அய்யங்கார். 1886 சிறுத்தொண்டர் நாடகம். சாம்பசிவ பிள்ளை. 1886 சோழ விலாசம். அப்பாவுபிள்ளை. 1886 பத்மினி சபா. அப்பாவுபிள்ளை என்னும் முத்துசாமிபிள்ளை. 1886 முக்கூடற் பள்ளு நாடகம். பொன்னுசாமி முதலியார். 1887 சகுந்தலை விலாசம். லக்ஷ்மி அம்மாள். 1887 சாமு தேசத்தரசராகிய வண்ணக் களஞ்சியப் அலிபாதுஷா நாடகம். புலவர் இயற்றியது. சுப்பிரமணிய சுவாமி அச்சிட்டது. 1887 சாரங்கதரன் நாராயணசாமி நாயுடு. சரித்திரப்பா. 1887 சிறுத்தொண்டநாயனார் நாராயணசாமி நாயுடு. சரித்திரப்பா. 1887 நள விலாசம். தாமோதர முதலியார். 1887 மருச்சகடி நாடகம் சூத்தரகர் வடமொழியில் இயற்றியது. பண்டித நடேச சாஸ்திரி மொழிபெயர்த்தது. 1888 அரிசந்திர விலாசம். வேலாயுத முதலியார். 1888 ஆரவல்லி சூரவல்லி மீனாட்சிசுந்தர தாசர். நாடகம். 1888 இரணிய நாடகம். லோகநாத முதலியார். 1888 சித்திராங்கி விலாசம். திரிசிரபுரம் அப்பாவு பிள்ளை இயற்றியது. தாயுமான முதலியார் பதிப்பித்தது. சென்னை. 1888 அபிநய சார சம்பூதம் P.C. நாராயண அய்யங்கார். (தமிழும் தெலுங்கும்) 1888 பாகவதம் தசமஸ் கந்த ----- நாடகம். 1888 பூதத்தம்பி விலாசம். தாவீது கொஸ்தீன் இயற்றியது, மயிலிட்டி நல்லய்யபிள்ளை பரி சோதித்து அச்சிட்டது. யாழ்ப்பாணம். 1889 சீதாகலியாணம். வேம்பம்மாள். 1889 ஞானசவுந்தர அம்மாள் முத்து நாயகர். நாடகம். 1889 ஞான சவுந்தரியம்மாள் பெர்ணாண்டொ கணக்கப் நாடகம். பிள்ளை. இராமநாதபுரம் பதிப்பு. 1889 கலாவதி-ஒரு புதிய வி.கோ. சூரியநாராயண நாடகம். சாஸ்திரி. 1889 சுகுணசேகரர் (ஷேக்ஸ் இராமசுவாமி ஐயங்கார். பியர், ஒரோனா நகரத்து இருகனவான்கள்) 1889 சந்திரவதனை அல்லது விசுவநாத முதலியார். இரண்டு சகோதரர்கள். 1889 பதினெட்டாம் போர் கிருஷ்ணப்பிள்ளை. நாடகம். 1889 நிஜலிங்க சிக்கியார் பொன்னுசாமி நாயகர். திவ்விய சரித்திரம். 1889 மகாவிந்த நாடகம் கல்யாண சுப்பிரமணிய என்னும் தரும நாடகம். ஐயர். 1889 மதுரை மீனாட்சி சுந்தரம் பிள்ளை. யம்மாள் நாடகம். 1889 வாணாசுர நாடகம் கஸ்தூரி அய்யங்கார். என்னும் உஷா பரிணயம். 1890 கிருஷ்ண நாடகம். வேங்கடராம ஐயர். 1890 எஸ்தாக்கியார் நாடகம். அச்சுவேலிதம்பிமுத்துப் பிள்ளை. யாழ்ப்பாணம். 1890 சாவித்திரி நாடகம். மலையாள எழுத்தில் அச்சிடப்பட்டது. பாலக்காடு. 1890 தருமபுத்திர நாடகம். மானிப்பாய் சாமிநாத முதலியார் இயற்றியது. வீரசிங்க உடையார், முருகேச உபாத்தியாயர் பதிப்பித்தது, யாழ்ப்பாணம். 1890 வாணாசுர நாடகம். கரடிகவி கம்மவார் குலோத்துங்க அப்பண நாயக்கர் இயற்றியது. 1890 ஸ்ரீ மீனாட்சி நாடகம். மலையாள எழுத்தில் அச்சிடப்பட்டது நெல்ல பள்ளி சுப்பிரமணிய சாஸ்திரி பதிப்பித்தது. பாலக்காடு. 1891 திரௌபதி துகிலுரிதல் இரத்தின சபாபதி நாடகம். முதலியார். 1891 மனோன்மணீயம். சுந்தரம்பிள்ளை சென்னையில் பதிப்பித்தது. 1893 காராளர் கார்காத்த கிருஷ்ணசாமி செட்டியார் நாடகம். பதிப்பு. 1893 செண்பகவல்லி என்னும் திரிசிரபுரம் தியாக பவளக் கொடி நாடகம். ராசபிள்ளை இயற்றியது. வீராசாமி நாயுடு பதிப்பு சென்னை. 1893 நூதன பவழேந்திர சபா. திரிசிரபுரம் அப்பாவு பிள்ளை இயற்றியது. 1893 வீரகுமார நாடகம். மார்க்கண்ட முனிசாமி பிள்ளை. சென்னை. 1894 வீல நாடகம். ஸொபக்ளஸ் இயற்றிய Philoctetes என்னும் நூலின் மொழி பெயர்ப்பு. அகவற்பா வினால், தி.இலக்குமணப் பிள்ளை பொழிபெயர்த்தது. 1894 வேனிற் காலத்து நாராயணசாமிப்பிள்ளை நல்லிருட் கனவு. 1894 வேத சாக்ஷியாகிய தேவ முத்தையா புலவர், சகாயம்பிள்ளை சென்னை. வாசகப்பா 1894 மங்களவல்லி நாடகம் நாராயணசாமிப்பிள்ளை (சொபக்லீஸ் என்னும் கிரேக்க நூலாசிரியர் எழுதிய நாடகம்) 1894 வீல நாடகம் மேற்படி இலக்குமணப்பிள்ளை. 1895 அரிச்சந்திர நாடகம். பத்ரசாமி செட்டியார். 1895 நகுலமலைக் குறவஞ்சி விசுவநாத சாஸ்திரி. நாடகம். சொக்குவில். 1895 சயிந்தவ நாடகம். கிருஷ்ணப்பிள்ளை. 1895 முத்தையன் விலாசம் அருணாச முதலியார் என்னும் வள்ளியம்மை பதிப்பித்தது. சென்னை. விலாசம். 1895 ரூபாவதி அல்லது வி.கோ. சூரியநாராயண காணாமற்போன சாஸ்திரி, சென்னை. மகள். 1895 லீலாவதி சுலோசனை பம்மல் சம்பந்த அல்லது இரண்டு முதலியார், சென்னை. சகோதரிகள். 1896 இராமநாடகம். சாமிநாத முதலியார் இயற்றியது. மானிப்பாய் முருகேச முதலியார் அச்சிட்டது. யாழ்ப்பணம். 1896 நூதன அர்ச் இஸ்தாக்கி ஞானப்பிரகாசம் பிள்ளை யார் நாடகம். இயற்றியது, மதுரைப் பிள்ளை பதிப்பு, சென்னை. 1896 ரூபாவதி. வி.கோ. சூரியநாராயண சாஸ்திரியார். 1896 ஜன மனோல்லாசினி ஆதிநாராயணையா. 1897 கிருஷ்ணகோபிகா ஸ்ரீநிவாச ஐயங்கார். விலாசம். 1897 கீசக விலாசம் வேலூர்கன்னையா நாயுடு. சென்னை. 1897 சரசாங்கி நாடகம். சரசலோசன செட்டியார், (சிம்பலைன் ஷேக்ஸ் சென்னை. பியர் நாடகம்.) 1897 ஞானத்தச்சன் நாடகம். வேதநாயக சாஸ்திரி, யாழ்ப்பாணம். 1897 புரூரவ சக்கரவர்த்தி இராமச்சந்திரர் இயற்றியது, நாடகம். சென்னை. 1898 கலாவதி. வி.கோ. சூரியநாராயண சாஸ்திரி. 1898 சோழ விசலாம். அப்பாவுப்பிள்ளை. 1898 காஜேந்திர மோட்ச முத்துலிங்க தேசிகர். தோரா. 1899 ஒட்ட நாடகம். கோவிந்த கவிராயர். 1899 சாரங்கதரன் நாராயணசாமி நாயுடு, சரித்திரப்பா. புதுவை. 1899 திருவிளையாடல் கிருஷ்ண பாரதி நாடகம். இயற்றியது. மசூலிப் பட்டணம். 1899 மோகனாங்கி விலசாம். திருச்செந்தூர் ஒளிமுத்து சுப்பிரமணிய பண்டிதர் இயற்றியது. சங்கர சுப்புதாசர், வீராசாமி நாயுடு அச்சிட்டது, சென்னை. 1900 கலியாண நாடகம். ஆத்மாநந்த பாகவதர். மயிலை சீனி வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் தொகுதி வரிசைகள் தொகுதி - 1 : பண்டைத் தமிழக வரலாறு: சேரர் - சோழர் - பாண்டியர் இத்தொகுதியில் சங்க கால தமிழ் மன்னர்கள் குறித்த இலக்கியம் மற்றும் ஆவணங்கள் சார்ந்த வரலாற்று ஆய்வுகள் இடம்பெற்றுள்ளன. இப்பொருளில் தனி நூலாக இப்போதுதான் தொகுக்கப்படுகின்றது. பல்வேறு நூல்களில் இடம்பெற்றவை இங்கு ஒருசேர உள்ளன. தொகுதி - 2 : பண்டைத் தமிழக வரலாறு: கொங்கு நாடு - பாண்டியர் - பல்லவர் - இலங்கை வரலாறு பண்டைத் தமிழகத்தில் கொங்கு பகுதி தனித் தன்மை யோடு விளங்கிய பகுதியாகும். மயிலை சீனி. வேங்கட சாமி அவர்கள் கொங்கு பகுதிகள் குறித்து செய்த ஆய்வுகள் இங்கு தொகுக்கப்படுகின்றன. பல்லவ மன்னர்கள் பற்றித் தனித்தனியான நூல்களை மயிலை சீனி அவர்கள் எழுதினார். இவற்றிலிருந்து மன்னர்கள் குறித்து வரலாறுகள் மட்டும் இத்தொகுதியில் தொகுக்கப் படுகின்றன. பாண்டியர்கள் குறித்த தகவல்களும் இத்தொகுதியில் இடம் பெற்றுள்ளது. இலங்கை தமிழர் வரலாறு குறித்துப் பல இடங்களில் மயிலை சீனி அவர்கள் எழுதியுள்ளவை இத்தொகுதியில் இணைக்கப் படுகின்றன. தொகுதி - 3 : பண்டைத் தமிழக வரலாறு: களப்பிரர் - துளு நாடு இருண்ட காலம் என்று கூறப்பட்ட வரலாற்றில் ஒளி பாய்ச்சிய ஆய்வு களப்பிரர் பற்றிய ஆய்வு ஆகும். இன்றைய கர்நாடகப் பகுதியிலுள்ள துளு நாடு பற்றியும் இவர் எழுதியுள்ளார். இவ்விரண்டு நூல்களும் இத் தொகுதியில் இடம்பெறுகின்றன. தொகுதி - 4 : பண்டைத் தமிழகம்: வணிகம் - நகரங்கள் மற்றும் பண்பாடு மயிலை சீனி பல்வேறு தருணங்களில் எழுதிய பண்டைத் தமிழர்களின் வணிகம், பண்டைத் தமிழக நகரங்கள் மற்றும் பல்வேறு பண்பாட்டுச் செய்திகள் இத்தொகுதியில் தொகுக்கப்பட்டுள்ளன. தொகுதி - 5 : பண்டைத் தமிழகம்: ஆவணம் - பிராமி எழுத்துகள் - நடுகற்கள் தமிழர்களின் தொல்லெழுத்தியல் தொடர்பான ஆய்வுகள் தமிழில் மிகக்குறைவே. களஆய்வு மூலம் மயிலை சீனி அவர்கள் கண்டறிந்த பிராமி எழுத்துக்கள் மற்றும் நடுகற்கள் தொடர்பான ஆய்வுகள் இத்தொகுதியில் சேர்க்கப்பட்டுள்ளன. தொகுதி - 6 : பண்டைத் தமிழ் நூல்கள்: காலஆராய்ச்சி - இலக்கிய ஆராய்ச்சி பண்டைத் தமிழ் நூல்களின் காலம் பற்றிய பல்வேறு முரண்பட்ட ஆய்வுகள் தமிழில் நிகழ்ந்துள்ளன. மயிலை சீனி அவர்கள் தமது கண்ணோட்டத்தில் தமிழ் இலக்கியங்கள் குறித்துச் செய்து கால ஆய்வுகள் இத் தொகுதியில் தொகுக்கப்படுகின்றன. தமிழ்க் காப்பியங் கள் மற்றும் பல இலக்கியங்கள் குறித்து மயிலை சீனி அவர்கள் செய்த ஆய்வுகளும் இத் தொகுதியில் இடம் பெறுகின்றன. தொகுதி - 7 : தமிழகச் சமயங்கள்: சமணம் ‘சமணமும் தமிழும்’ என்ற பொருளில் மயிலை சீனி அவர்கள் எழுதிய நூல் இத்தொகுதியில் இடம்பெறு கின்றது. சமணம் குறித்து இவர் எழுதிய வேறு பல கட்டுரைகள் இத் தொகுதியில் இணைக்கப்பட்டுள்ளன. தொகுதி - 8 : தமிழகச் சமயங்கள்: பௌத்தம் ‘பௌத்தமும் தமிழும்’ என்னும் பொருளில் இவர் எழுதிய ஆய்வுகள் இத்தொகுதியில் இடம்பெறுகின்றன. பௌத்தம் தொடர்பாக பல்வேறு இடங்களில் மயிலை சீனி எழுதிய கட்டுரைகள் அனைத்தும் இத்தொகுதி யில் இணைக்கப்பட்டுள்ளன. தொகுதி - 9 : தமிழில் சமயம்: கௌதமபுத்தரின் வாழ்க்கை புத்தரின் வரலாறு புத்த ஜாதகக் கதைகளை அடிப்படை யாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. இவ்வகையில் மயிலை சீனி அவர்கள் எழுதிய புத்தரின் வாழ்க்கை வரலாறு இத் தொகுதியில் இடம்பெற்றுள்ளது. தொகுதி - 10 : தமிழில் சமயம்: பௌத்தக் கதைகள் - இசைவாணர் கதைகள் 1940 முதல் பௌத்தக் கதைகளை தமிழில் மொழி பெயர்த்தவர் மயிலை சீனி. பௌத்தக் கலைவாணர்களின் வாழ்க்கை வரலாற்றையும் இவர் தொகுத்துள்ளார். இவ் விரண்டு நூல்களும் இத்தொகுதியில் இடம்பெற்றுள்ளன. தொகுதி - 11 : தமிழில் சமயம்: புத்த ஜாதகக் கதைகள் புத்த ஜாதகக் கதைகள் தமிழில் பலரால் மொழிபெயர்க்கப் பட்டுள்ளன. மயிலை சீனி அவர்கள் செய்துள்ள புத்த ஜாதகக் கதைகளின் மொழிபெயர்ப்பு இத்தொகுதியில் இடம்பெறுகிறது. தொகுதி - 12 : தமிழகக் கலை வரலாறு: சிற்பம் - கோயில் மயிலை சீனி தமிழக சிற்பங்கள் மற்றும் கோயில்கள் குறித்து விரிவான ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார். பல்வேறு இடங்களில் இடம்பெற்றுள்ள அவ்வாய்வு களை இத்தொகுதியில் ஒருசேரத் தொகுத்துள்ளோம். தொகுதி - 13 : தமிழக கலை வரலாறு: இசை - ஓவியம் - அணிகலன்கள் தமிழர்களின் பண்மரபு குறித்தும் தமிழ் நாட்டு ஓவியம் குறித்தும் விரிவான ஆய்வை இவர் மேற்கொண்டுள்ளார். இவ்வாய்வுகள் அனைத்தும் இத்தொகுதியில் தொகுக்கப் பட்டுள்ளன. தமிழர்களின் அணிகலன் குறித்து மயிலை சீனி. எழுதியுள்ள ஆய்வுகளும் இத்தொகுதியில் இடம் பெறுகின்றன. தொகுதி - 14 : தமிழக ஆவணங்கள்: சாசனச் செய்யுள் - செப்பேடுகள் - கல்வெட்டுகள் கல்வெட்டுக்களில் செய்யுள்கள் மிகுதியாக எழுதப் பட்டுள்ளன. இவை அனைத்தையும் தொகுத்து சாசனச் செய்யுள் மஞ்சரி என்ற ஒரு நூலை மயிலை சீனி அவர்கள் வெளியிட்டார்கள். தமிழக வரலாறு தொடர்பாக செப்பேடுகளில் காணப்படும் விரிவான தகவல்கள் பற்றி இவர் ஆய்வு செய்துள்ளார். தமிழில் உள்ள கல்வெட்டுக்கள் தொடர்பாகவும் மயிலை சீனி அவர்களுடைய ஆய்வுகள் குறிப்பிடத்தக்கவை. இவை அனைத்தும் இத்தொகுதியில் இணைக்கப் பட்டுள்ளன. தொகுதி - 15 : தமிழக ஆவணங்கள்: மறைந்துபோன தமிழ் நூல்கள் மறைந்துபோன தமிழ்நூல்கள் என்னும் பெயரில் மயிலை சீனி அவர்கள் நூல் ஒன்றை எழுதியுள்ளார். சுமார் 250 மறைந்து போன நூல்கள் பற்றிய விரிவான தகவல்களை இந்நூலில் அவர் தொகுத்துள்ளார். அந்நூல் இத்தொகுதியில் இணைக்கப்பட்டுள்ளது. தொகுதி - 16 : தமிழ் இலக்கிய வரலாறு: பத்தொன்பதாம் நூற்றாண்டு பத்தொன்பதாம் நூற்றாண்டு தமிழ் இலக்கியம் என்னும் பெயரில் மயிலை சீனி அவர்கள் எழுதிய நூல் இத்தொகுதியில் இடம்பெறுகிறது. இப்பொருள் குறித்து தமிழில் உள்ள அரிய நூல் இதுவென்று கூறுமுடியும். தொகுதி - 17 : தமிழ் இலக்கிய வரலாறு: கிறித்துவமும் தமிழும் ஐரோப்பிய இயேசு சபைகள் மூலமாக தமிழகத்திற்கு வருகைப்புரிந்த பாதிரியார்கள் தமிழுக்கு செய்த தொண்டு அளவிடற்பாலது. இப்பணிகள் அனைத்தை யும் இவர் தொகுத்துள்ளார்; மற்றும் தமிழில் அச்சுக் கலைமூலம் உருவான பல்வேறு புதிய விளைவுகள் குறித்தும் மயிலை சீனி எழுதியுள்ளார். இவை அனைத்தும் இத்தொகுதியில் தொகுக்கப்பட்டுள்ளன. தொகுதி - 18 : தமிழியல் ஆய்வு: சொல்லாய்வுகள் - வாழ்க்கை வரலாறு பல்வேறு தருணங்களில் பண்பாட்டுச் செய்திகளுக்குத் தரவாக சொற்கள் அமைவது குறித்து மயிலை சீனி அவர்கள் ஆய்வு செய்துள்ளார். இவ்வாய்வுகள் இத் தொகுதியில் இணைக்கப்பட்டுள்ளன. பல அறிஞர்களில் வாழ்க்கை வரலாறு குறித்தும் இவர் எழுதியுள்ளார் அச் செய்திகளும் இத்தொகுதியில் இணைக்கப்பட்டுள்ளன. தொகுதி - 19 : பதிப்பு, மொழிபெயர்ப்பு, உரை: நேமிநாதம் - நந்திகலம்பகம் - பிற நேமிநாதம், நந்திகலம்பகம் ஆகியவற்றை இவர் பதிப்பித்துள்ளார். ‘மத்தவிலாசம்’ என்னும் சமஸ்கிருத நாடக நூலை மொழிபெயர்த்துள்ளார். இந்நூல்கள் இத் தொகுதியில் இணைக்கப்படுகின்றன. மயிலை நேமி நாதர் பதிகம் என்ற ஒரு நூலையும் இவர் பதிப்பித் துள்ளார். அந்நூல் இத்தொகுதியில் இடம்பெறுகிறது. உணவு முறைகள் குறித்து இவர் எழுதிய உள்ள நூலும் இத்தொகுதியில் இணைக்கப்பட்டுள்ளது. தொகுதி - 20 : பதிப்பு: மனோன்மணியம் நாடகம் மனோன்மணியம் சுந்தரப்பிள்ளை எழுதிய மனோன் மணிய நாடகத்தை மயிலை சீனி பதிப்பித்துள்ளார். இந் நாடகம் குறித்த விரிவான ஆய்வுரையையும் இந்நூலில் செய்துள்ளார். இந்நூல் இத்தொகுதியில் இடம்பெறுகிறது. வீ. அரசு குறிப்புகள் அடிக்குறிப்புகள் 1. பாரத நாட்டில் வழங்கி வந்த எண்வடிவங்களைப் பாரசீகர் எடுத்து வழங்கினார்கள். அவர்கள் இந்த எண்களுக்கு ‘இந்து’ எண்கள் என்று பெயரிட்டனர். பிறகு இந்த எண்களின் வடிவங்களைப் பாரசீகரிட மிருந்து அராபியர் எடுத்துக் கொண்டு வழங்கினார்கள். அராபியர் இந்த எண்களுக்குப் “பாரசீக எண்கள்” என்று பெயரிட்டனர். பிறகு அராபியரிடமிருந்துஇந்த எண்களை ஐரோப்பயிர் எடுத்துக் கொண்டு வழங்கிய போது இதற்கு “அரபி” எண்கள் என்று பெயரிட்டார்கள். 2. Leonardo Fibonacci. 3. இந்தக் கூட்டல் கழித்தல் குறிகள் ஐரோப்பிய வர்த்தகர்களால் முதன் முலாக வழங்கப்பட்டன. வர்த்தகர்கள் தாங்கள் அனுப்பும் சரக்கு மூட்டைகளின் மேல் இந்தக் குறிகளையிட்டார்கள். + இந்தக் குறி, மூட்டையில் சரக்குகள் அதிகமாக இருக்கின்றன என்பதைத் தெரிவிக்கவும், - இந்தக் குறி, மூட்டையில் சரக்குகள் குறைவாக உள்ளன என்பதைத் தெரிவிக்கவும் சரக்கு மூட்டைகளின் மேல் வியாபாரிகளால் குறிக்கப்பட்டன. பிறகு, கணித நூலிலே கூட்டல், கழித்தல் குறியாகக் கொள்ளப்பட்டன. (சீனி. வே.) 4. பாச்சியம் = வகுக்கப்படும் எண். 5. பாசகம் = வகுக்கும் எண் 6. Manual of the Administration of the Madras Presidency. Vol II. 1885. அடிக்குறிப்புகள் 1. Its Prose - Style is yet in a forming state, and will well repay the labour of accurate scholars in moulding properly. Many Natives, who write poetry readily, cannot write a page of correct prose. - Preface. winslow’s Tamil - English Dictionary. 1862. 2. Nearly the whole of Tamil Literature, including works on medicine, Arithmetic, grammar and even Dictionaries, is in poetry but the exception of the commentaries on poetical works. Prose composition may almost be said to owe its origin to European influence. - Preface. Classified catalogue of Tamil Printed Books. by John Murdoch. Madras - 1865. 3. * Grammars, Dictionaries, Biographies, Prefaces, Inscriptions, treatises on Medicine, Astrology, Astronomy, Metaphysical and moral questions were invariably written in metre, so that there was practically no purpose. The only branch of literature where we see the prose style much employed has been that of the learned commentaries on ancient works. Prose holds good in Tamil literature too. Tamil poetry has been in existence from the very beginning of the Christian era; wheras Tamil prose puts in its appearance only from the time of Constantius Beschi at least (1740 A.D.). The absence of paper and printing also accounts for the dearth of Prose writings. To write long prose works on palmyra leaves would be very tedious and it is no wonder that our forefathers did not think it worth while to waste their time in writing stories or tales in prose. The difficulty of the writing materials necessitated them to seek after compression of expression; and this they founal in poetry. This same difficulty accounts for the brevity and terseness of Commentaries on the poetical works. Adiyarkku Nallar, after writing an elaborate annota-tion on the first two lines of the Padhigam of Silappatikaram says, “Lest the Commentary should get too long, I refrain from annotating the whole book in this elaborate fashion.” If our ancient authors had the same Conveniences that we have now, surely, we would now be in possession of elaborate Commentaries and a good number of Prose works. My object in writing this work of fiction is to supply the want of prose works in Tamil a want which is admitted and lamented by all. - S. Vedanayagam Pillai. Preface to the first Edition, 1885. 4. Rev. N. Samuel 5. The Madras School Book Society. அடிக்குறிப்புகள் 1. J.P. Rottler 2. Charles Theophilus Ewald Rhenius. 3. துரு - Rev., W.H. Drew. தாமசன்கிளார்க் - Thomson Clarke. இராசஸ் - Rev. I.B. Rodgers. 4. இந்நூல் ஒழிபிபயல் காண்க. 5. Rev William Taylor. 6. Rev. S. Winfred. 7. Right Rev. Robert Caldwell. 8. A Comparative Grammar of the Dravidian Languages. 9. Rev G.U. Pope 10. Rev. Dr. Winslow. 11. Rev. W. Clark 12. Rev. W.H. Drew 13. Rev. Henry Bower D.D. 14. Re Dr. Grawl 15. Rev. Peter Percival அடிக்குறிப்பு 1. சங்கர நமச்சிவாயருரையில் சிவஞான முனிவருரையுமிருக்கின்றதாகலின். அடிக்குறிப்புகள் 1. Rev. W.H. Drew. 2. Thomson Clark.