மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 1 பண்டைத் தமிழக வரலாறு சேரர், சோழர், பாண்டியர் பதிப்பு வீ. அரசு இளங்கணி பதிப்பகம் நூற்பெயர் : மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 1 ஆசிரியர் : மயிலை சீனி. வேங்கடசாமி பதிப்பாசிரியர் : பேரா. வீ. அரசு பதிப்பாளர் : முனைவர் இ. இனியன் பதிப்பு : 2014 தாள் : 16கி வெள்ளைத்தாள் அளவு : தெம்மி எழுத்து : 11 புள்ளி பக்கம் : 464 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) விலை : உருபா. 435/- படிகள் : 1000 மேலட்டை : கவி பாஸ்கர் நூலாக்கம் : வி. சித்ரா & வி. ஹேமலதா அச்சிட்டோர் : ஸ்ரீ வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர் வடபழனி, சென்னை - 26. வெளியீடு : இளங்கணி பதிப்பகம் பி 11, குல்மொகர் அடுக்ககம், 35/15பி, தெற்கு போக்கு சாலை, தியாகராய நகர், சென்னை - 600 017. நூல் கிடைக்குமிடம் : தமிழ்மண் பதிப்பகம், 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர் நகர், சென்னை - 17. 044 2433 9030. பதிப்புரை 19ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியும், 20ஆம் நூற்றாண்டின் தொடக்கப் பகுதியும் தமிழுக்கும், தமிழினத்திற்கும் புகழ்பூத்த பொற் காலமாகும். தமிழ்மொழியின் மீட்டுருவாக்கத்திற்கும், தமிழின மீட்சிக்கும் வித்தூன்றிய காலம். தமிழ்மறுமலர்ச்சி வரலாற்றில் ஓர் எல்லைக் கல். இக்காலச் சூழலில்தான் தமிழையும், தமிழினத்தையும் உயிராக வும் மூச்சாகவும் கொண்ட அருந்தமிழ் அறிஞர்களும், தலைவர்களும் தோன்றி மொழிக்கும், இனத்திற்கும் பெரும் பங்காற்றினர். இப் பொற்காலத்தில்தான் அறிஞர் மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கள் 6.12.1900இல் தோன்றி 8.5.1980இல் மறைந்தார். வாழ்ந்த காலம் 80 ஆண்டுகள். திருமணம் செய்யாமல் துறவு வாழ்க்கை மேற்கொண்டு தமிழ் முனிவராக வாழ்ந்து அரை நூற்றாண்டுக்கு மேல் அரிய தமிழ்ப் பணி செய்து மறைந்தவர். தமிழ்கூறும் நல்லுலகம் வணங்கத்தக்கவர். இவர் எழுதிய நூல்கள் அனைத்தும் தமிழினம் தன்னை உணர்வதற்கும், தலைநிமிர்வதற்கும், ஆய்வாளர்கள் ஆய்வுப் பணியில் மேலாய்வை மேற்கொள்வதற்கும் வழிகாட்டுவனவாகும். ஆய்வுநோக்கில் விரிந்த பார்வையுடன் தமிழுக்கு அழியாத அறிவுச் செல்வங்களை வைப்பாக வைத்துச் சென்றவர். தமிழ் - தமிழரின் அடையாளங்களை மீட்டெடுத்துத்தந்த தொல்தமிழ் அறிஞர்களின் வரிசையில் குறிப்பிடத் தக்கவர். தமிழ்மண்ணில் 1937-1938இல் நடந்த முதல் இந்தி எதிர்ப்புப் போரை முன்னெடுத்துச்சென்ற தலைவர்கள், அறிஞர்கள் வரிசையில் இவரும் ஒருவர். வரலாறு, இலக்கியம், கலை, சமயம் தொடர்பான ஆய்வு நூல்களையும், பொதுநலன் தொடர்பான நூல்களையும், பன்முகப் பார்வையுடன் எழுதியவர். பேராசிரியர் முனைவர் வீ. அரசு அவர்கள் எழுதிய சாகித்திய அகாதெமி வெளியிட்டுள்ள ‘இந்திய இலக்கியச் சிற்பிகள்’ நூல்வரிசையில் மயிலை சீனி. வேங்கடசாமி பற்றிய வரலாற்று நூலில் ஆவணப்பணி, வரலாறு எழுது பணி, கலை வரலாறு, கருத்து நிலை ஆகிய பொருள்களில் இவர்தம் நுண்மாண் நுழைபுல அறிவினை மிக ஆழமாகப் பதிவுசெய்துள்ளார். ‘முறையான தமிழ் இலக்கிய வரலாற்றை இனி எழுதுவதற்கு எதிர்கால ஆய்வாளர்களுக்கு வழிகாட்டிச் சென்றவர்’ - என்பார் கா. சுப்பிரமணியபிள்ளை அவர்கள். ‘மயிலை சீனி. வேங்கடசாமி ஆண்டில் இளையவராக இருந்தாலும், ஆராய்ச்சித் துறையில் முதியவர், நல்லொழுக்கம் வாய்ந்தவர். நல்லோர் கூட்டுறவைப் பொன்னே போல் போற்றியவர்.’ என்று சுவாமி விபுலானந்த அடிகளார் அவர்களும், “எண்பதாண்டு வாழ்ந்து, தனிப் பெரும் துறவுபூண்டு, பிறர் புகாத ஆய்வுச்சூழலில் புகுந்து தமிழ் வளர்த்த, உலகச் சமயங்களையும், கல்வெட்டு காட்டும் வரலாறுகளையும், சிற்பம் உணர்த்தும் கலைகளையும் தோய்ந்து ஆய்ந்து தோலா நூல்கள் எழுதிய ஆராய்ச்சி அறிஞர் மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கட்குத் தமிழ்ப் பேரவைச் செம்மல் என்ற பட்டத்தினை வழங்கியும், தமிழ்ச் செம்மல்கள் பேரவையின் ஓர் உறுப்பினராக ஏற்றுக்கொண்டும், மதுரைக் காமராசர் பல்கலைக்கழகம் பாராட்டிச் சிறப்பிக்கிறது” என்று இப் பெருந்தமிழ் அறிஞரை அப்பல்கலைக் கழகம் போற்றியுள்ளதை மனத்தில் கொண்டு இவரின் அனைத்துப் படைப்புகளையும் வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம். சென்னைப் பல்கலைக்கழக தமிழ் இலக்கியத்துறைத் தலைவர் வீ. அரசு அவர்கள் - போற்றுதலுக்கும், புகழுக்கும் உரிய இவ்வாராய்ச்சிப் பேரறிஞரின் நூல்கள் அனைத்தையும் பொருள்வழிப் பிரித்து, எங்களுக்குக் கொடுத்து உதவியதுடன், பதிப்பாசிரியராக இருந்தும், வழிகாட்டியும், இவ்வாராய்ச்சித் தொகுதிகளை ஆய்வாளர்களும், தமிழ் உணர்வாளர்களும் சிறந்த பயன்பெறும் நோக்கில் வெளியிடுவதற்கு பல்லாற்றானும் உதவினார். அவருக்கு எம் நன்றி. இவ்வருந்தமிழ்ச் செல்வங்களை அனைவரும் வாங்கிப் பயனடைய வேண்டுகிறோம். இவ்வாராய்ச்சி நூல்கள் எல்லா வகையிலும் சிறப்போடு வெளி வருவதற்கு உதவிய அனைவர்க்கும் நன்றி. - பதிப்பாளர் பண்டைத் தமிழக வரலாறு: சேரர் - சோழர் - பாண்டியர் இத்தொகுதியில் உள்ள கட்டுரைகள், தமிழ் வளர்ச்சித் துறை மூலம் வெளிவந்த `தமிழ்நாட்டு வரலாறு; சங்ககாலம் - அரசியல்’ எனும் நூலில் இடம் பெற்றவை ஆகும். வேறு சில இதழ்களில் வெளிவந்த கட்டுரைகளும் இணைக்கப்பட்டுள்ளன. மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கள் தமது இறுதிக் காலங்களில் எழுதியவை இவை. அவரது மறைவிற்குப் பின்பே அச்சிடப்பட்டவை. அவரது ஐம்பது ஆண்டு கால ஆய்வின் அனுபவங்களைக் கண்டறியும் வகையில் இக் கட்டுரைகள் அமைந்திருப்பதாகக் கருதலாம். சங்க இலக்கியப் பிரதிகளில் காணப்படும் செய்திகளை முதன்மையாகக் கொண்டுள்ள இக்கட்டுரைகள், அக்காலத்திய பிற தகவல்களையும் இணைத்து எழுதப்பட்டிருப்பதைக் காண்கிறோம். முற்காலச் சேரர்கள், சோழர்கள், பாண்டியர்கள் குறித்த முழுமையான செய்திகளை இக்கட்டுரைகள் கொண்டிருப்பதைக் காண்கிறோம். இத்தொகுதியில் காணப்படும் செய்திகளுக்கு மூலத்தரவாக அமைந் திருப்பவை சங்க இலக்கியப் பிரதிகளே ஆகும். சங்க இலக்கிய மேற்கோள்கள் வழி கட்டுரைகளை உருவாக்கியுள்ளார். சேர அரசர்கள் ஆட்சி புரிந்த காலத்தில் இருந்த பிற அரசர்கள், சேர மன்னர்களின் அரசவைப் புலவர்கள், அவர்கள் உருவாக்கிய சங்கங்கள் குறித்த விரிவான பதிவுகளை மயிலை சீனி. வேங்கடசாமி செய்துள்ளார். பாரதப் போருக்கும் சேர மன்னர்களுக்குமாகிய உறவு குறித்து `பெருஞ்சோறு’ அளித்தல் மூலம் பெரிதும் விவாதிக்கப் படுகின்றது. மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கள், பாரதப் போருக்கும் சங்க காலத்திற்கும் உண்மையில் தொடர்புண்டா? என்பதை விவாதிக்கிறார். அதன்மூலம் பெருஞ்சோறு அளித்தல் என்பதன் பல்வேறு கோணங்கள் குறித்து ஆய்வு செய்துள்ளார். இக்கட்டுரை குறித்த விவாதம் தமிழ்ப் பொழில் இதழில் நடைபெற்றிருப்பதை அறிய முடிகிறது. `தமிழ்ப்பொழில்’ இதழிலிருந்து இக்கட்டுரை எடுக்கப்பட்டு இங்கு இணைக்கப்பட்டுள்ளது. சோழ நாட்டின் எல்லைகள், சோழர் குடியின் பழமை, கரிகாற் சோழன் குறித்த தகவல்கள், சென்னி மரபினர், கிள்ளி மரபினர் ஆகிய பிற செய்திகளைச் சோழர்கள் குறித்த கட்டுரையில் பதிவு செய்துள்ளார். தொன்ம மரபில் அறியப்படும் சோழ மன்னர்கள் குறித்த விரிவான தகவல்களை அறிய முடிகிறது. பாண்டிய நாட்டு எல்லை, பாண்டிய நாட்டு துறைமுகங்கள் மற்றும் நகரங்கள், பாண்டியர்களின் குடி வழி மரபு ஆகிய தகவல்களைப் பதிவு செய்துள்ளார். பழங்கதைகள் மூலம் அறியப்படும் பாண்டிய மன்னர்கள் குறித்த விவரங்களையும் தொகுத்தளித்துள்ளார். ஆரியப்படை கடந்து அரசு கட்டிலில் துஞ்சிய பாண்டியன் நெடுஞ் செழியன் மற்றும் பாண்டியர் நிறுவிய தமிழ்ச்சங்கம் ஆகிய கட்டுரைகள் இதழ்களிலிருந்து எடுத்து இணைக்கப்பட்டுள்ளன. சங்ககால மூவேந்தர்கள் தொடர்பான அரிய ஆவணம் இந்நூல். சங்க இலக்கியப் பிரதிகள் வழி கட்டமைக்கப்பட்டுள்ள இவ்வரலாறு தமிழ்ச் சமூகம் குறித்து அறிய உதவுகிறது. இத்தொகுப்புகள் உருவாக்கத்தில் தொடக்க காலத்தில் உதவிய ஆய்வாளர்கள் மா. அபிராமி, ப. சரவணன் ஆகியோருக்கும் இத்தொகுதிகள் அச்சாகும் போது பிழைத்திருத்தம் செய்து உதவிய ஆய்வாளர்கள் வி. தேவேந்திரன், நா. கண்ணதாசன் ஆகியோருக்கும் நன்றி. ஏப்ரல் 2010 சென்னை - 96 வீ. அரசு தமிழ்ப்பேராசிரியர் தமிழ் இலக்கியத்துறை சென்னைப் பல்கலைக்கழகம் அறிஞர் மயிலை சீனி. வேங்கடசாமி “ஐந்தடிக்கு உட்பட்ட குறள் வடிவம்; பளபளக்கும் வழுக்கைத் தலை; வெண்மை படர்ந்த புருவங்களை எடுத்துக் காட்டும் அகன்ற நெற்றி; கனவு காணும் கண்ணிமைகளைக் கொண்ட வட்ட முகம்; எடுப்பான மூக்கு; படபடவெனப் பேசத் துடிக்கும் மெல்லுதடுகள்; கணுக்கால் தெரியக் கட்டியிருக்கும் நான்கு முழ வெள்ளை வேட்டி; காலர் இல்லாத முழுக்கைச் சட்டை; சட்டைப் பையில் மூக்குக் கண்ணாடி; பவுண்டன் பேனா; கழுத்தைச் சுற்றி மார்பின் இருபுறமும் தொங்கும் மேல் உத்தரீயம்; இடது கரத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் புத்தகப் பை. இப்படியான தோற்றத்துடன் சென்னை மியூசியத்தை அடுத்த கன்னிமாரா லைப்ரெரியை விட்டு வேகமாக நடந்து வெளியே வருகிறாரே! அவர்தான் மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கள்.” எழுத்தாளர் நாரண. துரைக்கண்ணன் அவர்களின் மேற்கண்ட விவரிப்பு, அறிஞர் மயிலை சீனி. வேங்கடசாமி அவர்களைக் கண்முன் காணும் காட்சி அனுபவத்தைத் தருகிறது. திருமணம் செய்து கொள்ளாமல், இல்லறத் துறவியாக வாழ்ந்தவர். எண்பதாண்டு வாழ்க்கைக் காலத்தில், அறுபது ஆண்டுகள் முழுமையாகத் தமிழியல் ஆய்வுப் பணிக்கு ஒதுக்கியவர். இருபதாம் நூற்றாண்டில் பல புதிய தன்மைகள் நடைமுறைக்கு வந்தன. அச்சு எந்திரத்தைப் பரவலாகப் பயன்படுத்தும் வாய்ப்பு உருவானது. சுவடிகளிலிருந்து அச்சுக்குத் தமிழ் நூல்கள் மாற்றப் பட்டன. இதன்மூலம் புத்தக உருவாக்கம், இதழியல் உருவாக்கம், நூல் பதிப்பு ஆகிய பல துறைகள் உருவாயின. இக் காலங்களில்தான் பழந்தமிழ் நூல்கள் பரவலாக அறியப்பட்டன. இலக்கிய, இலக்கணப் பிரதிகள் அறியப்பட்டதைப்போல், தமிழர்களின் தொல்பழங்காலம் குறித்தும் பல புதிய கண்டுபிடிப்புகள் வெளிவந்தன. பிரித்தானியர் களால் உருவாக்கப்பட்ட தொல்பொருள் ஆய்வுத்துறை பல புதிய வரலாற்றுத் தரவுகளை வெளிக்கொண்டு வந்தது. பாரம்பரியச் சின்னங்கள் பல கண்டறியப்பட்டன. தொல்லெழுத்துக்கள் அறியப்பட்டன. பல்வேறு இடங்களில் எழுதப்பட்ட கல்வெட்டுக்கள் படி எடுக்கப்பட்டு வாசிக்கப்பட்டன. தமிழ் மக்களின் எழுத்துமுறை, இலக்கிய, இலக்கண உருவாக்கமுறை ஆகியவை குறித்து, இந்தக் கண்டுபிடிப்புகள் மூலம் புதிதாக அறியப்பட்டது. அகழ்வாய்வுகள் வழிபெறப்பட்ட காசுகள் புதிய செய்திகளை அறிய அடிப்படையாக அமைந்தன. வடக்கு, தெற்கு என இந்தியாவின் பண்பாட்டுப் புரிதல் சிந்துசமவெளி அகழ்வாய்வு மூலம் புதிய விவாதங்களுக்கு வழிகண்டது. தமிழகச் சூழலில், தொல்பொருள் ஆய்வுகள் வழி பல புதிய கூறுகள் உறுதிப்படுத்தப்பட்டன. ஆதிச்சநல்லூர், அரிக்கமேடு அகழ் வாய்வுகள்; தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கண்டுபிடிக்கப்பட்ட வரலாற்றுக்கு முந்தைய காலப் பொருட்கள், ஓவியங்கள் ஆகியவை தமிழக வரலாற்றைப் புதிய தலைமுறையில் எழுதுவதற்கு அடிகோலின. மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கள் மேலே விவரிக்கப்பட்ட சூழலில்தான், தமது ஆய்வுப் பணியைத் தொடங்கினார். வேங்கடசாமி சுயமரியாதை இயக்கச் சார்பாளராக வாழ்வைத் தொடங்கினார். பின்னர் பௌத்தம், சமணம் ஆகிய சமயங்கள் குறித்த அக்கறை உடையவராக இருந்தார். இவ்வகை மனநிலையோடு, தமிழ்ச் சூழலில் உருவான புதிய நிகழ்வுகளைக் குறித்து ஆய்வுசெய்யத் தொடங்கினார். கிறித்தவம், பௌத்தம், சமணம் ஆகிய சமயங்கள், தமிழியலுக்குச் செய்த பணிகளைப் பதிவு செய்தார். இவ்வகைப் பதிவுகள் தமிழில் புதிய துறைகளை அறிமுகப்படுத்தின. புதிய ஆவணங்கள் மூலம், தமிழ்ச் சமூகப் பண்பாட்டு வரலாறுகளை எழுதினார். சங்க இலக்கியப் பிரதிகள், பிராமி கல்வெட்டுகள், பிற கல்வெட்டுகள், செப்பேடுகள் முதலியவற்றை வரலாறு எழுதுவதற்குத் தரவுகளாகக் கொண்டார். கலைகளின்மீது ஈடுபாடு உடைய மன நிலையினராகவே வேங்கடசாமி இளமை முதல் இருந்தார். தமிழ்க் கலை வரலாற்றை எழுதும் பணியிலும் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார். கட்டடம், சிற்பம், ஓவியம் தொடர்பான இவரது ஆய்வுகள், தமிழ்ச் சமூக வரலாற்றுக்குப் புதிய வரவாக அமைந்தன. இருபதாம் நூற்றாண்டின் தொடக்க காலங்களில் இந்தியவியல் என்ற வட்டத்திற்குள் தமிழகத்தின் வரலாறும் பேசப்பட்டது. இந்திய வியலைத் திராவிட இயலாகப் படிப்படியாக அடையாளப் படுத்தும் செயல் உருப்பெற்றது. இப் பணியில் தம்மை முழுமையாக ஈடுபடுத்தி யவர் வேங்கடசாமி அவர்கள். இன்று, திராவிட இயல் தமிழியலாக வளர்ந்துள்ளது. இவ் வளர்ச்சிக்கு வித்திட்ட பல அறிஞர்களுள் வேங்கடசாமி முதன்மையான பங்களிப்பாளர் ஆவார். மயிலை சீனி. வேங்கடசாமி அவர்களின் வரலாற்றுச் சுவடுகள் அடங்கிய - இந்திய இலக்கியச் சிற்பிகள் மயிலை சீனி. வேங்கடசாமி என்ற நூலை சாகித்திய அகாதெமிக்காக எழுதும்போது இத்தொகுதி களை உருவாக்கினேன். அப்போது அவற்றை வெளியிட நண்பர்கள் வே. இளங்கோ, ஆர். இராஜாராமன் ஆகியோர் திட்டமிட்டனர். ஆனால் அது நடைபெறவில்லை. அத்தொகுதிகள் இப்போது வெளிவருகின்றன. இளங்கணி பதிப்பகம் பாவலர் பாவேந்தர் பாரதிதாசனின் அனைத்துப் படைப்புகளையும் ஒரே வீச்சில் ‘பாவேந்தம்’ எனும் தலைப்பில் வெளியிட்டுள்ளதை தமிழுலகம் அறியும். அந்த வரிசையில் மயிலை சீனி. வேங்கடசாமி அவர்களின் உழைப்பால் விளைந்த அறிவுத் தேடல்களை ஒரே வீச்சில் பொருள்வழிப் பிரித்து முழுமைமிக்க படைப்புகளாக 1998இல் உருவாக்கினேன். அதனை வெளியிட இளங்கணிப் பதிப்பகம் இப்போது முன்வந்துள்ளது. இதனைப் பாராட்டி மகிழ்கிறேன். தமிழர்கள் இத்தொகுதிகளை வாங்கிப் பயன்பெறுவர் என்று நம்புகிறேன். - வீ. அரசு மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுகள் - சுயமரியாதை இயக்க இதழ்களில் செய்திக் கட்டுரைகளை எழுதுவதைத் தமது தொடக்க எழுத்துப் பயிற்சியாக இவர் கொண்டிருந்தார். அது இவருடைய கண்ணோட்ட வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க செல்வாக்கைச் செலுத்தியுள்ளது. - கிறித்தவ சபைகளின் வருகையால் தமிழில் உருவான நவீன வளர்ச்சிகளைப் பதிவு செய்யும் வகையில் தமது முதல் நூலை இவர் உருவாக்கினார். தமிழ் உரைநடை, தமிழ் அச்சு நூல் போன்ற துறைகள் தொடர்பான ஆவணம் அதுவாகும். - பௌத்தம் தமிழுக்குச் செய்த பங்களிப்பை மதிப்பீடு செய்யும் நிலையில் இவரது அடுத்தக் கட்ட ஆய்வு வளர்ந்தது. பௌத்தக் கதைகள் மொழியாக்கம் மற்றும் தொகுப்பு, புத்த ஜாதகக் கதைத் தொகுப்பு, கௌதம புத்தர் வாழ்க்கை வரலாறு என்ற பல நிலைகளில் பௌத்தம் தொடர்பான ஆய்வுப் பங்களிப்பை வேங்கடசாமி செய்துள்ளார். - சமண சமயம் மீது ஈடுபாடு உடையவராக வேங்கடசாமி இருந்தார். மணிமேகலை, சீவக சிந்தாமணி, ஆகியவற்றை ஆய்வதின் மூலம் தமிழ்ச் சூழலில் சமண வரலாற்றை ஆய்வு செய்துள்ளார். சமண சமய அடிப்படைகளை விரிவாகப் பதிவு செய்துள்ளார். சமணச் சிற்பங்கள், குறித்த இவரது ஆய்வு தனித் தன்மையானது. - பல்வேறு சாசனங்கள் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டன. ஓலைச் சுவடிகளிலிருந்து இலக்கியங்கள், இலக்கணங்கள் அச்சு வாகனம் ஏறின. இந்தப் பின்புலத்தில் கி.மு. 5 முதல் கி.மு. 9ஆம் நூற்றாண்டு முடிய உள்ள தமிழ்ச் சமூகத்தின் ஆட்சி வரலாற்றை இவர் ஆய்வு செய்தார். பல்லவ மன்னர்கள் மூவர் குறித்த தனித்தனி நூல்களைப் படைத்தார். இதில் தமிழகச் சிற்பம் மற்றும் கோயில் கட்டடக்கலை வரலாற்றையும் ஆய்வு செய்தார். - அண்ணாமலைப் பல்கலைக்கழக அறக்கட்டளைச் சொற்பொழிவை அடிப்படையாகக் கொண்டு, தமிழ் நூல்களின் கால ஆய்விலும் இவர் அக்கறை செலுத்தினார். தொல்காப்பியம், சிலப்பதிகாரம் குறித்த கால ஆய்வில் ச. வையாபுரிப்பிள்ளை போன்றோர் கருத்தை மறுத்து ஆய்வு நிகழ்த்தியுள்ளார். இச் சொற்பொழிவின் இன்னொரு பகுதியாக சங்கக் காலச் சமூகம் தொடர்பான ஆய்வுகளிலும் கவனம் செலுத்தினார். - சென்னைப் பல்கலைக்கழக அறக்கட்டளைச் சொற்பொழிவில் சேரன் செங்குட்டுவனை ஆய்வுப் பொருளாக்கினார். இதன் தொடர்ச்சியாக கி.பி. 3-ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட தமிழகத்தின் வரலாற்றைப் பல நூல்களாக எழுதியுள்ளார். சேர சோழ பாண்டியர், பல குறுநில மன்னர்கள் குறித்த விரிவான ஆய்வை வேங்கடசாமி நிகழ்த்தியுள்ளார். இதன் தொடர்ச்சியாகக் களப்பிரர் தொடர்பான ஆய்வையும் செய்துள்ளார். இவ் வாய்ப்புகளின் ஒரு பகுதியாக அன்றைய தொல்லெழுத்துக்கள் குறித்த கள ஆய்வு சார்ந்து, ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார். - ஒவ்வொரு தேசிய இனத்திற்கும் அதன் பாரம்பரியச் செழுமை குறித்த அறியும் தரவுகள் தேவைப்படுகின்றன. இவற்றை ஆவணப் படுத்துவது மிகவும் அவசியமாகும். மறைந்து போனவற்றைத் தேடும் முயற்சி அதில் முக்கியமானதாகும். இப் பணியையும் வேங்கடசாமி மேற்கொண்டிருந் தார். அரிய தரவுகளை இவர் நமக்கு ஆவணப்படுத்தித் தந்துள்ளார். - தமிழர்களின் கலை வரலாற்றை எழுதுவதில் வேங்கடசாமி அக்கறை செலுத்தினார். பல அரிய தகவல்களை இலக்கியம் மற்றும் சாசனங்கள் வழி தொகுத்துள்ளார். அவற்றைக் குறித்து சார்பு நிலையில் நின்று ஆய்வு செய்துள்ளார். ஆய்வாளருக்குரிய நேர்மை, விவேகம், கோபம் ஆகியவற்றை இவ்வாய்வுகளில் காணலாம். - பதிப்பு, மொழிபெயர்ப்பு ஆகிய பணிகளிலும் வேங்கடசாமி ஈடுபட்டதை அறிய முடிகிறது. - இவரது ஆய்வுப் பாதையின் சுவடுகளைக் காணும்போது, தமிழியல் தொடர்பான ஆவணப்படுத்தம், தமிழருக்கான வரலாற்று வரைவு, தமிழ்த் தேசிய இனத்தின் கலை வரலாறு மற்றும் அவைகள் குறித்த இவரது கருத்து நிலை ஆகிய செயல்பாடுகளை நாம் காணலாம். மயிலை சீனி. வேங்கடசாமி எழுதிய நூல்கள் 1936 : கிறித்தவமும் தமிழும் 1940 : பௌத்தமும் தமிழும் 1943 : காந்தருவதத்தையின் இசைத் திருமணம் (சிறு வெளியீடு) 1944 : இறையனார் அகப்பொருள் ஆராய்ச்சி (சிறு வெளியீடு) 1948 : இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம் 1950 : மத்த விலாசம் - மொழிபெயர்ப்பு மகாபலிபுரத்து ஜைன சிற்பம் 1952 : பௌத்தக் கதைகள் 1954 : சமணமும் தமிழும் 1955 : மகேந்திர வர்மன் : மயிலை நேமிநாதர் பதிகம் 1956 : கௌதம புத்தர் : தமிழர் வளர்த்த அழகுக் கலைகள் 1957 : வாதாபி கொண்ட நரசிம்மவர்மன் 1958 : அஞ்சிறைத் தும்பி : மூன்றாம் நந்தி வர்மன் 1959 : மறைந்துபோன தமிழ் நூல்கள் சாசனச் செய்யுள் மஞ்சரி 1960 : புத்தர் ஜாதகக் கதைகள் 1961 : மனோன்மணீயம் 1962 : பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியம் 1965 : உணவு நூல் 1966 : துளு நாட்டு வரலாறு : சமயங்கள் வளர்த்த தமிழ் 1967 : நுண்கலைகள் 1970 : சங்ககாலத் தமிழக வரலாற்றில் சில செய்திகள் 1974 : பழங்காலத் தமிழர் வாணிகம் : கொங்குநாட்டு வரலாறு 1976 : களப்பிரர் ஆட்சியில் தமிழகம் 1977 : இசைவாணர் கதைகள் 1981 : சங்க காலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துகள் 1983 : தமிழ்நாட்டு வரலாறு: சங்ககாலம் - அரசியல் இயல்கள் 4, 5, 6, 10 - தமிழ்நாட்டரசு வெளியீடு : பாண்டிய வரலாற்றில் ஒரு புதிய செய்தி (சிறு வெளியீடு - ஆண்டுஇல்லை) வாழ்க்கைக் குறிப்புகள் 1900 : சென்னை மயிலாப்பூரில் சீனிவாச நாயகர் - தாயரம்மாள் இணையருக்கு 6.12.1900 அன்று பிறந்தார். 1920 : சென்னைக் கலைக் கல்லூரியில் ஓவியம் பயிலுவதற்காகச் சேர்ந்து தொடரவில்லை. திருமணமின்றி வாழ்ந்தார். 1922 : 1921-இல் தந்தையும், தமையன் கோவிந்தராஜனும் மறை வுற்றனர். இச் சூழலில் குடும்பத்தைக் காப்பாற்ற பணிக்குச் செல்லத் தொடங்கினார். 1922-23இல் நீதிக்கட்சி நடத்திய திராவிடன் நாளிதழில் ஆசிரியர் குழுவில் இடம்பெற்றார். 1923-27 : சென்னையிலிருந்து வெளிவந்த லக்ஷ்மி என்ற இதழில் பல்வேறு செய்திகளைத் தொகுத்து கட்டுரைகள் எழுதிவந்தார். 1930 : மயிலாப்பூர் நகராட்சிப் பள்ளியில் தொடக்கநிலை ஆசிரியராகப் பணியேற்றார். 1931-32 : குடியரசு இதழ்ப் பணிக் காலத்தில் பெரியார் ஈ.வெ.ரா. வுடன் தொடர்பு. சுயமரியாதை தொடர்பான கட்டுரைகள் வரைந்தார். 1931-இல் கல்வி மீதான அக்கறை குறித்து ஆரம்பக் கல்வி குறித்தும், பொதுச் செய்திகள் பற்றியும் ‘ஆரம்பாசிரியன்’ என்னும் இதழில் தொடர்ந்து எழுதியுள்ளார். 1934-38-இல் வெளிவந்த ஊழியன் இதழிலும் கட்டுரைகள் எழுதியுள்ளார். 1936 : அறிஞர் ச.த. சற்குணர், விபுலானந்த அடிகள், தெ.பொ. மீனாட்சி சுந்தரனார் ஆகிய அறிஞர்களுடன் தொடர்பு கொண்டிருந்தார். 1955 : 16.12.1955-இல் அரசுப் பணியிலிருந்து பணி ஓய்வு பெற்றார். 1961 : 17.3.1961-இல் மணிவிழா - மற்றும் மலர் வெளியீடு. 1975-1979: தமிழ்நாட்டு வரலாற்றுக்குழு உறுப்பினர். 1980 : 8. 5. 1980-இல் மறைவுற்றார். 2001 : நூற்றாண்டுவிழா - ஆக்கங்கள் அரசுடைமை. பொருளடக்கம் பண்டைத் தமிழக வரலாறு 1. சேரர் வரலாறு 18 2. சோழர் 295 3. பாண்டியர் 395 பிறகட்டுரைகள் 1. பழங்கதைகளால் அறியப்படும் அரசர்கள் 438 2. ஆரியப்படை கடந்த அரசு கட்டிலில் துஞ்சிய பாண்டியன் நெடுஞ்செழியன் 442 3. பாண்டியர் நிறுவிய தமிழ்ச் சங்கம் 450 பாண்டியன் நெடுமாறன் கால ஆராய்ச்சி 458 பண்டைத் தமிழக வரலாறு சேரர் 1. சேரர் வரலாறு* சங்ககால இலக்கியங்களின் வாயிலாக அக்கால மக்களின் அக வாழ்க்கையையும், புறவாழ்க்கையையும் ஒருவாறு அறிய முடிகின்றது. அரசர், அரசியர், புலவர்கள், மக்கள், அரசுமுறை, போர்முறை, கொடைத்தன்மை, பழக்கவழக்கங்கள், நாடு, எல்லைகள் ஆகியவற்றை உய்த்துணர முடிகின்றது. சேரர் - சொல்லும் பொருளும் இராமாயண காலத்தில் சீதையைத் தேடிச் சென்ற வானர வீரர் களுக்குச் சுக்கிரீவன் வழித்துறைகளை வகுத்துரைக்கும் போது சோழ, சேர, பாண்டிய நாடுகளைக் குறிப்பிடுகிறான். உதிட்டிரன் இராயசூய வேள்வி வேட்டபோது சோழ, சேர, பாண்டியர் மூவரும் வந்திருந்ததாக வியாசரும் கூறுகிறார். கிரேக்கத் தூதரான மெகஸ்தனீஸ் என்பார் தமது குறிப்பில் சேரர்களைச் சேரமான்கள் என்றே அழைக்கின்றார். திருஞானசம்பந்தரும் தமது பதிகங்களில் சேரர், சேரலர் என்னும் சொற்களைப் பயன்படுத்துகிறார். இவர் வாழ்ந்தது ஏழாம் நூற்றாண்டாகும். இதனை நோக்கும்போது சேரர், சேரலர் என்னும் சொற்களே வழக்கில் வந்தனவாகும். அசோகனது கல்வெட்டுகளை நாம் நோக்கும்போது சேர புத்திரர் என்பதைக் கேரளபுத்திரர் என்றே வடமொழி அறிஞர்கள் படித்து வந்துள்ளனர். கல்வெட்டில் உள்ள பிராமிய எழுத்துகள் சேரலபுத்திரர் என்று படிக்கும் வண்ணமும் உள்ளது. அதைப் படித்த அறிஞர்கள் கேரளபுத்திரர் என்றே படித்து வந்ததனால், பிற்கால அறிஞர்களும் கேரளபுத்திரர் என்றே கூறிவந்தனர். இதனால் நாம் அறிவதாவது சேரலர் தம்மைக் கேரளரென வழங்கத் தலைப்பட்ட காலமானது. தமிழ்மொழியானது சிதைந்து மலை யாளமாக மாறிய காலமாயிருக்கலாம். கேரளர் என்னும் சொல்லானது கி. பி. ஏழாம் நூற்றாண்டிற்குப் பின்தான் மாறிற்று என்று உரைக்கத்தக்க வகையில், கி.பி. பதினோராம் நூற்றாண்டில் வாழ்ந்த பிற்காலச் சோழன் வீரராசேந்திரன் என்னும் அரசனின் கல்வெட்டுகளில் கேரளாந்தகன்1 என்றே குறிப்பு உள்ளது. இன்றும் தென்னாட்டில் சிலர் தங்களது ஊர்களை வடவரிட்ட பெயராலேயே அழைத்து வருதல் காணலாம். இது வட மொழியின்மீது உள்ள பற்றினால் எழுந்ததே ஆகும். இந்த வகையில் கேரளம் எனும் சொல் வழக்கினையே பெரிதும் விரும்பி வழங்கி வந்தனர். நாடும் எல்லைகளும் சேர மன்னர்களைக் கூறும் முக்கியச் சங்ககால நூல்களை நோக்குவோமானால் நாட்டினது பரப்பும் அதன் எல்லைகளும் குறிக்கப் பெறும். பதிற்றுப்பத்து, அகநானூறு, புறநானூறு. சிலப்பதிகாரம் முதலிய நூல்களில் பார்ப்போமாயின் சேர நாட்டில் அடங்கியுள்ள பகுதிகள் குட்டநாடு, குடநாடு, பூழிநாடு, குன்ற நாடு, மலைநாடு, கொங்கு நாடு, பொறைநாடு, முதலியன ஆகும். இதில் அயிரைமலை, நேரிமலை, செருப்புமலை, அகப்பாக்கோட்டை, உம்பற்காடு, நறவுத் துறைமுகம், முசிறித் துறைமுகம், தொண்டித் துறைமுகம் ஆகிய இடங்களும் அடங்கும். பல அரசர்கள் வஞ்சியையும், சிலர் மாந்தையையும் தலைமைநகராகக் கொண்டு ஆட்சி செய்தனர். சேர மன்னர்களின் இவ் வஞ்சி நகரைப்பற்றி அறிஞர்களிடையே கருத்து வேறுபாடுள்ளது. ‘சேரன் வஞ்சி’ எனும் சிறந்த நூலை எழுதிய சா. கிருட்டினசாமி என்பார் சேர நாட்டில் பெரியாறு என்னும் ஆற்றின் அருகில் உள்ள கரூர்ப்பட்டினமே சேரர்களது வஞ்சிமாநகர் என்று குறிப்பிட்டுள்ளார். இதையே திரு கனகசபைப் பிள்ளையவர்களும், திரு. கே. ஜி. சேஷய்யரும் ஒப்புக்கொண்டுள்ளார்கள். கொங்கு நாட்டில் உள்ள கரூர் ஆனிலை என்ற நகரத்தையும், அதைச் சுற்றியுள்ள இடத்தையும் பிற்காலச் சேரர்களே வென்று தங்கள் நாட்டுடன் சேர்த்துக்கொண்ட பிறகு அதற்குச் ‘சேரர் கொங்கு’ என்ற பெயரும் வழங்கினர். எனவே, சேர நாட்டில் உள்ள கரூர்ப்பட்டினமே சங்கநூல்களில் கூறப்பெரும் வஞ்சிமா நகரம் எனக் கொள்ளவேண்டும். இவர்களது நல்லாட்சி யை ஓரளவு உறவுமுறையுடன் தெரிந்துகொள்ள மேற்கூறிய நூல்கள் துணைபுரிகின்றன. அவற்றை ஒரு முறைப்படுத்தித் தெளிவான முறையில் நோக்கினால் அவர்களது வரலாற்றை அறியமுடியும். பதிற்றுப்பத்து என்னும் நூல் சேரஅரசர்கள் பதின்மரும் அவர் களது உறவுமுறைகளும் தெரிந்துகொள்ள முழுதும் பயன்படுகிறது. இந்தப் பதின்மரின் வரலாற்றை முதலிலும் பின்னர் ஏனைய நூல்களில் காணப்படும் மற்றச் சேர அரசர்களையும், சேரமான் புலவர்களையும் பற்றித் தெரிந்துகொள்ளலாம். இதையே சேர அரசர்கள், பிற சேர அரசர்கள், அரசப் புலவர்கள் என்னும் தலைப்புகளின் கீழும் காணலாம். 1. சேர அரசர்கள் பதிற்றுப்பத்து என்பது சங்ககால நூல்களில் ஒன்று. இது ஒரு தொகுப்பு நூல். இதில் பத்துப்புலவர்கள் பாடிய பாடல்கள் இடம் பெற் றிருந்தன என்பது பதிற்றுப்பத்து என்னும் நூலின் பெயரால் தெரிய வருகிறது. ஒவ்வொரு புலவரும் ஒவ்வோர் அரசனைப் புகழ்ந்து பத்துப் பாடல்கள் பாடியுள்ளனர். அந்தப் பாடல்கள் முதற் பத்து, இரண்டாம் பத்து, மூன்றாம் பத்து என்னும் முறையில் எண் குறியீட்டுப் பெயரால் தொகுக்கப் பட்டுள்ளன. இவற்றுள் முதல் பத்தும் பத்தாம் பத்தும் இதுவரை கிடைக்கவில்லை. இடையிலுள்ள எட்டுப் பத்துகளே கிடைத்துள்ளன. கிடைத்துள்ள இந்த எட்டுப் பத்துகளில் எட்டுப் புலவர்கள் எட்டுச் சேர அரசர்களைப் பாடியுள்ளனர். இந்த எட்டுப் பேர்களில் ஐந்துபேர் ஒரு கால்வழியினராகவும், எஞ்சிய மூன்றுபேர் மற்றொரு கால்வழியினராகவும் இருந்தவர்கள் என்னும் உண்மையைப் பதிற்றுப்பத்து நூலைத் தொகுத்த ஆசிரியரின் பதிகக் குறிப்பு வாயிலாக அறிகிறோம். பத்துப் புலவர்களின் பாடல்களை ஒன்றுதிரட்டிப் பதிற்றுப் பத்து என்னும் பெயருடன் நூலாக்கிய தொகுப்பாசிரியர் இன்னார் என்று தெரியவில்லை. எனினும், அந்தப் புலவரும் சங்க காலத்தவரே ஆவார். இந்தப் பதிற்றுப்பத்து நூலைச் சங்க நூல்களில் இறுதியாகத் தோன்றியவற்றுள் ஒன்று எனச் சிலர் கூறுகின்றனர். எனவே, பதிற்றுப் பத்துச் சேர அரசர்களைப் பற்றி இவர் தரும் பதிகச் செய்திகளை நாம் வரலாற்று உண்மை. பதிற்றுப்பத்து நூலைத் தொகுத்தவர் ஒவ்வொரு பத்துப் பாடல்களைப்பற்றியும் பதிகம் என்னும் பெயரில் சில தெளிவான உண்மைகளைத் தெரிவிக்கின்றார். இந்தத் தொகுப்பாசிரியர் ஒவ்வொரு பாடலுக்கும் ஒவ்வொரு சிறப்புப் பெயர் இட்டுள்ளார்; இன்னின்ன சிறப்புப் பெயர் கொண்ட பாடல்கள் இன்னின்னபத்தில் அடங்கியுள்ளன என்றும் கூறியுள்ளார். இந்தப் பத்துப் பாடல்களையும் பாடிய புலவர் இன்னார் என்பதும், அவரால் பாடப்பட்ட அந்தப் பத்து இன்ன சேர அரசனைச் சிறப்பித்துக் கூறுகிறது என்பதும், அந்தச் சேர அரசன் இன்னார்க்கு இன்னஉறவுமுறையினன் என்பதும் அவரது பதிகங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளன. மற்றும் இந்தப் புலவர் அந்தச் சேர அரசனை இந்தப் பத்துப் பாடியதற்காக இன்ன பரிசுபெற்று இவ்வாறு சிறப்பிக்கப்பட்டார் என்பதையும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த அரசன் இத்தனை ஆண்டுகள் அரசனாய் விளங்கினான் என்னும் செய்தியையும் குறிப்பிட்டுள்ளார். நாம் இந்தச் செய்திகiள யெல்லாம் வரலாற்று உண்மைகள் என்றே கொள்ளவேண்டும். உதியன் கால்வழி பதிற்றுப்பத்தில் இரண்டு கால்வழியைச் சேர்ந்த அரசர்கள் சிறப்பித்துப் பாடப்பட்டுள்ளனர் என்று கூறினோம். அவற்றுள் ஒன்று இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனையும், அவன் தம்பியையும், ஆண் மக்கள் மூவரையும் கொண்ட ஒரு கால்வழியாகும், இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனின் தந்தை உதியஞ்சேரல் என்று கூறப்பட்டுள்ளான். இந்த உதியஞ்சேரலுக்கு முன்னோன் என்று சான்றுடன் இவனது கால் வழியில் கூறத்தக்கவர் யாரும் தெரியவில்லை. ஆதலால், இந்தக் கால் வழியை நாம் உதியன் கால்வழி என்று குறிப்பிடலாம். இந்த வகையில் உதியன், உதியன் மகன் நெடுஞ்சேரலாதன், நெடுஞ்சேரலாதனின் தம்பி பல்யானைச் செல்கெழு குட்டுவன், நெடுஞ்சேரலாதனின் மக்கள் களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல், கடல்பிறக் கோட்டிய செங்குட்டுவன், ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் என்ற முறையில் ஆறு சேர அரசர்களை நாம் அறிய முடிகிறது. அந்துவன் கால்வழி மற்றொரு கால்வழி மூன்று அரசர்களைச் சிறப்பித்துப் பாடுகிறது என்று கூறினோம். இந்த மூவருள் முன்னவன் செல்வக் கடுங்கோ வாழியாதன் ஆவான். இவன் தந்தை அந்துவன் என்று கூறப்படுகிறான். எனவே, இவர்களது கால்வழியை அந்துவன் கால்வழி என்று குறிப் பிடலாம். இந்த வகையில் அந்துவன் கால்வழி அரசர்கள் நான்குபேர் ஆவர். அந்துவன், அந்துவன் மகன் செல்வக்கடுங்கோ, செல்வக்கடுங் கோவின் மகன் பெருஞ்சேரல் இரும்பொறை, மற்றும் குட்டுவன் இரும் பொறை ஆகியோரே அந்த நால்வர். இளஞ்சேரல் இரும்பொறையின் தந்தை குட்டுவன் இரும்பொறையையும் கணக்கில் சேர்த்துக் கொண்டால் இந்த மாந்தரஞ்சேரல் கால்வழி அரசர்கள் ஐவர் எனக் கொள்ளலாம். இந்த ஐந்து அரசர்கள் பெயரிலும் ‘பொறை’ என்னும் அடைமொழி உள்ளது. இதனால் இவர்களைப் `பொறையர்க்குடி அரசர்கள்’ என்று குறிப்பிடுதலும் உண்டு. பொறை அரசர்கள் என்று நோக்கும்போது, யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை. மாந்தரன் பொறையன் கடுங்கோ முதலான அரசர்களையும் ஒன்றுசேர்த்து எண்ணவேண்டும். இனி, நாம் மேலே கண்டவாறு உதியன் குடியைச் சேர்ந்த சேர அரசர்கள் ஆறு பேர், அந்துவன் குடியைச் சேர்ந்த சேர அரசர்கள் நான்கு பேர். ஆக மொத்தம் பத்துச் சேர அரசர்களைச் சேர அரசர்கள் என்னும் தலைப்பின்கீழ்க் காண்கிறோம். இந்தப் பத்துச் சேர அரசர்களின் வரலாற்றைப் பதிற்றுப்பத்து என்னும் நூலை அடிப்படைச் சான்றாகக்கொண்டு நாம் ஆராயும்போது, புறநானூறு, அகநானூறு முதலான பிற சங்கப் பாடல்களிலிருந்தும், சங்ககாலக் கல்வெட்டுகளிலிருந்தும் தெரியவரும் செய்திகளையும் ஆங்காங்கே இணைத்துக் காண்கிறோம். பின்னர், முறையே பிற நூல்களில் காணும் சேர அரசர்களையும், சேரமான் புலவர்களையும் காண்போம். உதியஞ்சேரல் உதியஞ்சேரல்1 செங்குட்டுவனின் பாட்டன்.2 வீரமும் கொடையும் இவனது வரலாற்றில் சிறப்பிடம் பெறுகின்றன. போர்த்திறன் ‘நாடுகண் அகற்றிய உதியஞ்சேரல்’3 என்று இவன் குறிப்பிடப் படுகின்றான். நாட்டின் பரப்பை விரிவாக்கினான் என்பதே இதன் பொருளாகும். இதனால், இவன் தன் முன்னோரிடமிருந்து நாட்டுப் பகுதி ஒன்றைப் பெற்றிருந்தான் என்பது தெளிவாகிறது. இவன் முன்னோர் சேர அரசர்களாய் முடியாட்சி புரிந்து வந்தனர் என்பது விளங்குகிறது. பேய்க்குப் பெருஞ்சோறு உதியஞ்சேரல் நாட்டின் பரப்பை விரிவாக்கும் பணியில் ஈடுபட்டிருந்தான். இதனால், அவன் பகைவர்கள் காழ்ப்புணர்ச்சி கொண்டனர். ‘முதியர்’ என்னும் குடியினர் பாண்டியர்க்குப் பகைவர்; சேரருக்கு நண்பர்.4 முதியர் குதிரைப் படையில் சிறந்து விளங்கினர். இந்தக் குடியினரைப் பகைவர்கள் தாக்கினார்கள். முதியர்களில் பலர் மாண்டனர். செய்தி அறிந்த உதியஞ்சேரல் முதியர்களுக்குத் துணை வந்தான். பகைவர்கள் பலர் மாண்டனர். அவர்களின் உடல் குறுகியதும், நெடியதுமாய் வீழ்ந்து பல பேய்கள் கூட்டத்திற்குப் பெருஞ்சோறாய்5 அமைந்தன. கொடை நலம் இவனைப் பாடிக்கொண்டு புலவர்கள் பலர் சென்றனர். அவர்களெல்லாம் மனம் மகிழும்படி இவன் கொடை வழங்கினான். இவனை மாமூலனார் ‘உதியஞ்சேரற் பாடிச் சென்ற பரிசிலர்’6 எனவும் ‘தொய்யா நல்லிசை முதியர்ப் பேணிய உதியஞ்சேரல்’7 எனவும் அவன் கொடை வழங்கிய காட்சியைச் சிறப்பித்துப் பாடியுள்ளார். குழுமூர்ச் சோற்றுமடம் குழுமூர் என்பது ஓர் ஊர். அவ்வூரில் வாழ்ந்தவர்கள் ஆடு மாடு மேய்த்து வாழும் ஆயர்கள். இவ்வூரைச் சூழ்ந்த பகுதியில் ஆங்காங்கே குன்றுகளும் நிழல் தரும் மரங்களும் உண்டு. ஆயர்கள் ஆங்காங்கே அம் மரநிழல்களில் தங்குவர். அதுவே உதியனின் சோற்றுமடமாகும்.8 ‘உதியன் அட்டில்’ என்றும் இது வழங்கப்பட்டது. இதற்குக் கைம்மாறாக இவன் ஆயர்களிடம் எதையும் எதிர்பார்க்க வில்லை. இந்த மடத்தில் உணவு உண்ணும் ஒலி, அருவியில் ஒலிக்கும் ஒலியின் எதிரொலிபோல் கேட்டது. பண்புநலம் இவன் குற்றமற்ற சொற்களையே பேசுவான்; உண்மையே பேசுவான். ‘வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றுந் தீமை இலாத சொலல்’ என்னும் குறளுக்கு இலக்கணமாகத் திகழ்ந்தான் என்று கூறலாம்; கொடை வழங்குதலைத் தன் கடமை என எண்ணிச் செய்தான்; கோணாத தன் நெஞ்சு விரும்பியவாறு செய்தான். நிலம், விசும்பு, காற்று, தீ, நீர் என்னும் ஐம்பெரும் பூதங்களின் இயற்கைக் குணங்களாகிய பொறை, சூழ்ச்சி, வலி, தெறல், அளி போல் இவன் தனக்குப் பகைவர் பிழை செய்தபோது அப் பிழையைப் பொறுத்தலும், சூழ்ச்சியது அகலமும், அவரை அழித்தற்கேற்ற மனவலியும், அவ்வாற்றலால் அவரை அழித்தலும். அவர் வழிபட்டால் அவருக்குச் செய்யும் அருளும் உடையோனாவான்.9 இசை வேட்கை இவன் இனிய இசையுடன் முரசுகளை முழக்கி மகிழ்வது உண்டு என்பது ‘இன்னிசை முரசின் உதியஞ்சேரல்’ 10 என்று குறிப்பிடுவதால் தெரிகிறது. இவன் போர் புரியும்போது இயவர்கள் (இசைக் கருவிகள் முழங்குவோர்) ஆம்பலங் குழல்களால் ஊதினார்கள்.11 மனைவி மக்கள் இவனது மனைவி நல்லினி ஆவாள். இவள் வெளியன்வேள் என்பவனின் மகள் ஆவாள். இவனுக்கும் நல்லினிக்கும் பிறந்த ஆண் மக்கள் இருவராவர். மூத்தவன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்; இளையவன் பல்யானைச் செல்கெழு குட்டுவன் ஆவான்.12 ஒப்புநோக்கம் சேரமான் பெருஞ்சோற்று உதியன் சேரலாதன் என்னும் அரசன் ஒருவன் இருந்தான். அவன் பாரதப்போரில் இருதரத்துப் படை களுக்கும் சோறு வழங்கினான். அவன் வேறு, இவன் வேறு. அவனைப் பற்றிய செய்தியினைப் பிற சேர அரசர்கள் என்னும் தலைப்பின்கீழ்க் காணலாம். நெடுஞ்சேரலாதன் சங்ககாலத்தில் சேரலாதன் என்னும் பெயர்கொண்ட அரசர் நால்வர் இருந்தனர். நெடுஞ்சேரலாதன் இரண்டு பேர். இவர்கள் இமய வரம்பன் நெடுஞ்சேரலாதன், முடங்கிக் கிடந்த நெடுஞ்சேரலாதன் என்போர் ஆவர். பெருஞ்சேரலாதன், ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் ஆகியோர் மற்ற இருவர். இவர்களுள் இமயவரம்பன் நெடுஞ்சேர லாதனின் வரலாற்றைச் சேர அரசர்கள் எனும் இப் பகுதியின் கீழும், முடங்கிக் கிடந்த நெடுஞ்சேரலாதனின் வரலாற்றைச் சேர அரசப் புலவர்கள் எனும் தலைப்பின் கீழும் காணலாம். நெடுஞ்சேரலாதன் சோழன் வேல்பஃறடக்கைப் பெருவிறற் கிள்ளியோடு போரிட்டு மாண்டான். பெருஞ்சேரலாதன் கரிகாற் பெரு வளத்தானோடு போரிட்டு முதுகில் காயப்பட்ட தற்காகப் போர்க் களத்திலேயே வடக்கிருந்து உயிர்நீத்தான். சேரவேந்தர்களைச் சிறப்பித்துப் பாடும் பதிற்றுப்பத்து என்னும் நூலில் நெடுஞ்சேரலாதன் இரண்டாம் பத்தில் சிறப்பித்துப் பாடப்பட்டுள்ளான். போர்த்திறம் கடம்பறுத்தல்: அரபிக் கடலில் பல சிறு தீவுகள் உள்ளன.1 ‘இரு முந்நீர்த் துருத்தி’2 என இது பதிற்றுப்பத்தில் கூறப்பட்டுள்ளது. அங்குக் கடம்ப (கடப்ப) மரத்தைக் காவல் மரமாக உடைய அரசன் ஒருவன் இருந்தான். அவனைக் கடம்பன் என்றே குறிப்பிடலாம்.3 நெடுஞ்சேர லாதன் தன்னிடமிருந்த பெரும்படையைக் கடற்போரில் ஈடுபடுத் தினான்;4 கடம்பனைத் தாக்கினான். நெடுஞ்சேரலாதன் கடம்பனின் படையைக் கொன்று குவித்தான். குருதி ஆறு ஓடிக் கடற்கழிகளைச் செந்நிறமாக்கியது. காவல் மரம் கடம்பு அடியோடு வெட்டி வீழ்த்தப்பட்டது. அதன் அடித் துணடால் அக்கால வழக்கப்படி நெடுஞ்சேரலாதன் தனக்குப் போர் முரசு செய்துகொண்டான். கடம்பை வெட்டி வீழ்த்தும்படி நெடுஞ்சேரலாதன் ஏவினான் என்று ஒரு பாடல் கூறுகிறது.5 இவனது மகன் செங்குட்டுவன் கடம்பறுத்தவன் என்று சிறப்பித்துப் பாராட்டப்படுகிறான். எனவே, நெடுஞ்சேரலாதன் இந்தப் போரில் தானே நேரில் ஈடுபடாமல் தன் மகனை அனுப்பி வெற்றிகொண்டானோ என எண்ண வேண்டியுள்ளது. அரபிக்கடல் தீவுகள் நெடுஞ்சேரலாதனின் ஆட்சிக்குட் பட்டிருந்தன. நெடுஞ்சேரலாதன் அப் பகுதிகளில் வயவர்களை அமர்த்தி நாடு காவல் புரிந்து வர ஏற்பாடு செய்தான். அத் தீவுகளில் அதற்கு முனனர் ஆட்சி புரிந்து வந்த மன்னர்கள் வயவர்களோடு போரிட்டு அவர்களை வீழ்த்தித் தம் நாடுகளைக் கவர்ந்து கொண்டனர்.6 மேலும், இவர்கள் நெடுஞ்சேரலாதனுக்கு எதிராக நடவடிக்கைகளில் ஈடுபட்டதால் சினமுற்றுச் சேரலாதன் இப் போரில் ஈடுபட்டான்.7 கடற்போரில் ஈடுபட்டுக் கடப்ப மரத்தை வெட்டி வீழ்த்தியவனைச் சிலப்பதிகாரம் பல இடங்களில் குறிப்பிடுகிறது. சில இடங்களில் கடம்பு எறிந்த செயலும். இமய மலையில் வில்லைப் பொறித்த செயலும் இணைத்துப் பேசப்படுகின்றன.8 ஓரிடத்தில் செங்குட்டுவனை ‘வாய் வாட்கோதை’ என்று குறிப்பிட்டு, கடம்பு எறிந்ததும் வில் பொறித்ததும் அவனது செயல்கள் என்று கூறப்படுகின்றன.9 ஓரிடத்தில் மாந்தரஞ் சேரல் இரும்பொறையைக் கண்டு வாழ்த்தும் பராசரன் எனும் பார்ப்பான் கடம்பு எறிந்ததும், இமயத்தில் வில்லைப் பொறித்ததுமாகிய செயல்களை அவனது செயல்கள் என்று கூறுவதைக் காண்கிறோம்.10 இவற்றிற்கு மாறாகக் கடம்பு எறிந்த அரசன் கண்ணகிக்குக் கல்நாட்டு விழா நடைபெற்றபோது உயிருடன் இல்லை என்று குறிப்பிடுவதையும் காண்கிறோம்.11 ஓரிடத்தில் யவனரைப் பிணித்தவன் என்றும். பாரதப் போரில் சோறு வழங்கியவன் என்றும், கடம்பறுத்தவன் என்றும் மூன்று வரிப் பாடல்கள் சேரனை வாழ்த்துதல் என்னும் ஒரு பொருள்மேல் அடுக்கி வந்துள்ளன.12 இச் செய்தியைப் பொதுப்படையாகக் குறிப்பிடும் இடமும் உண்டு.13 இவற்றையெல்லாம் வைத்துக்கொண்டு நாம் பார்க்கும்போது கடம்பு எறிந்தவன் நெடுஞ்சேரலாதன் என்பதையும், அவனது அச் செயல்களுக்கு உறுதுணையாகச் செங்குட்டுவனும், மாந்தரஞ் சேரல் இரும்பொறையும் இருந்தார்கள் என்பதையும் நாம் அறிகிறோம். வன்சொல் யவனர் பிணித்தல் கடம்பு தடிந்த போர்ச்செய்தி, நெடுஞ்சேரலாதனைச் சிறப்பிக்கும் பதிகத்தில் கூறப்படவில்லை. பதிகத்தில் யவனரைப் பிணித்ததாகக் கூறப்படும் செய்தி, பாடல்களில் கூறப்படவில்லை. எனவே, கடம்பு தடிந்தது போரின் விளைவே. ‘வன்சொல் யவனர்’14 என்று குறிப்பிடப் பட்டுள்ளவர் கடம்பு தடிந்த போரில் பிடிபட்ட போர்க் கைதிகள் எனலாம். இந்தப் போர்க் கைதிகளைப் பிணித்துக்கொண்டு வரும் போது அவர்களுடைய கைகளைப் பின்புறத்தில் சேர்த்துக்கட்டியும், தலையில் நெய்யை ஊற்றியும் அழைத்து வந்தனர். போர்க் கைதிகளை இவ்வாறு அழைத்துவருவது கிரேக்கர் மரபு. நெடுஞ்சேரலாதன் சார்பில் அழைத்து வந்த செங்குட்டுவன் பகைவரின் மரபுக்கு மதிப்பளித்து அழைத்து வந்தான்.15 பிணிக்கப்பட்ட யவனர்கள் யார் என்பதில் அறிஞர்கள் இடையே கருத்து வேறுபாடுகள் உண்டு. மேலைநாட்டுக் கடல் வாணிகராகிய யவனர்கள் என்று சிலரும், வடநாட்டில் வாழ்ந்த சாக யவனர் என்று சிலரும் கருதுகின்றனர். சாக யவனரின் கூட்டத்தார் என்று கூறும் அறிஞர் மயிலை சீனி. வேங்கடசாமி, வெளிநாட்டுச் செலாவணியில் நாட்டின் பொருளியலை வளப்படுத்திய மேலைநாட்டு வாணிகக் குழுவினராகிய யவனரைப் பிணித்தான் என்பது பொருந்தாது என்கிறார். வடநாட்டு யவனர் வடுகரைப் போன்றும். ஆரியரைப் போன்றும் நேரே தமிழகத்தில் ஊடுருவாமல் அரபிக்கடல் தீவுகளுக்குச் சென்றிருக்க மாட்டார்கள் என்பது மறுசாரார் கருத்து. இந்தக் கருத்துகள் உய்த்துணரப்பட்டவையாகத் தென்படுகின்றன. யவனர் யாவர் என்பதை, கிடைக்கும் அடிப்படைச் சான்றுகளை வைத்துக்கொண்டு தீர்மானிப்பதே நல்லது. யவனரின் பாவை விளக்கு,16 அன்ன விளக்கு,17 கட்குடம்18 ஆகியவை சிறப்பு மிக்க பொருள்கள் எனப் பேசப்படுகின்றன. யவனரின் மரக்கலங்கள் முசிறித் துறைமுகத்திற்குப் பொன்னைக் கொண்டு வந்து இறக்கிவிட்டு மிளகு மூட்டைகளை ஏற்றிச் சென்றதையும் நாம் காண்கிறோம்.19 இதனால் இவர்கள் பிற நாட்டிலிருந்து கடல் கடந்து வந்த வாணிகர்கள் என்பது தெளிவாகிறது. இவர்கள் புகார் நகரத்திற்கு வாணிகத்தின்பொருட்டு வந்திருந்து தங்கியிருந்ததையும் நாம் காண்கிறோம்.20 மதுரை நகரில் யவனர்கள் வாளைக் கையில் ஏந்திக்கொண்டு கோட்டை வாயிலில் காவல்புரிந்து வந்ததைக் காணும்பொழுது.21 யவனர்கள் சிலர் தமிழ் நாட்டிலேயே தங்கி வாழ்ந்தனர் என்பதை அறிகின்றோம். இவ்வாறு தங்கியவர்களில் புகார் நகரில் தங்கியவர் மாடமாளிகைகளில் வாழ்ந்ததையும், மதுரையில் தங்கியவர் கோட்டையைக் காக்கும் பணியில் ஈடுபட்டிருந்ததையும் நாம் பார்க்கிறோம். சேர அரசன் ஒருவன் யவனர்களின் வளநாட்டை ஆண்டான் என்று சிலப்பதிகாரம் குறிப்பிடுகின்றது.22 இந்த அரசன் இந்த யவனர் நாட்டுடன் தென்குமரி, இமயம் ஆகிய எல்லைக்குட்பட்ட நாட்டையும் ஆண்டான் என்று அங்குக் கூறப்பட்டுள்ளது. யவனர் நாடு தென்குமரி, இமயம் ஆகிய எல்லைகளுக்கு உட்பட்டதென்பது விளங்காத காரணத்தால் அந்தச் சேர அரசன் ஆண்ட யவனர் நாட்டையும் இதனுடன் இணைத்துக் கூற வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது. அந்த யவனர் நாடு எது? மேலே கூறியபடி தென்குமரி, இமயம் இவ்விரு எல்லைக் குட்பட்ட நாட்டை ஆண்ட சேர அரசன் நெடுஞ்சேரலாதன்.23 இவன் கடற்போரில் ஈடுபட்டுக் கடப்ப மரத்தை வீழ்த்தினான். கடப்ப மரம் மேற்குக் கடற்கரையை அடுத்த தீவுகளில் 24 இருந்த காவல் மரம். இந்தக் காவல் மரத்தை உடையவர்கள் அந்தத் தீவு மக்கள். மேலை நாடுகளிலிருந்து அரபிக்கடல் வழியே கலம் செலுத்தி வாணிகம் செய்துவந்த யவனர்கள் இந்த இலக்கத் தீவுகளில் தங்கினார்கள். அங்கிருந்த மக்களைத் தம் வாணிகத்திற்குத் துணையாகக் கொண்டனர். சேர நாட்டில் இவர்கள் செய்துவந்த வாணிகத்தில் ஏதோ ஒரு வகையில் தவறு நேர்ந்திருக்கலாம். அந்தத் தவற்றுக்குக் கடம்புத் தீவுகளிலிருந்த மக்களும் உடந்தையாயிருந்திருக்கலாம். அரசன், தவற்றினைத் திருத்த அவர்களோடு போரிடவேண்டியதாயிற்று. இந்தப் போரின் விளைவுதான் காவல் மரமாகிய கடப்பமரம் வெட்டியதும். அதனால் முரசு செய்துகொண்டதும், யவனரைக் கைது செய்து கொண்டு வந்ததும், பிறகு அவர்களது செல்வத்தைச் சேரநாட்டு மக்களுக்கு வழங்கியதும் ஆகிய நிகழ்ச்சிகளாகும். இமயம் வரை வெற்றி நெடுஞ்சேரலாதன் இமயமலையில் தன் சேரர்குடிச் சின்ன மாகிய வில்லைப் பொறித்துவிட்டு மீண்டான் எனப் பதிகம் கூறுகிறது. பதிகம், பதிற்றுப்பத்தைத் தொகுத்தவரால் பிற்காலத்தில் உருவாக்கப் பட்டது. பாடல் தோன்றிய காலமே அந்தந்த மன்னர்களுக்குரிய காலம். இவன் காலத்தில் பாடப்பட்ட இரண்டாம் பத்துப் பாடல்களில் இமயத்தில் வில் பொறித்த செய்தி கூறப்படாமையை எண்ணவேண்டியுள்ளது. குமட்டூர்க் கண்ணனார் நெடுஞ்சேரலாதன்மீது பத்துப் பாடல்கள் பாடிச் சிறப்பித்த காலத்தில் நெடுஞ்சேரலாதன் இமயத்தில் வில்லைப் பொறித்த நிகழ்ச்சி நடைபெறவில்லை. இந்த நிகழ்ச்சி இவனது வரலாற்றில் மிக முக்கிய நிகழ்ச்சியாகையால், குமட்டூர்க் கண்ணனார் பாடலில் இடம்பெறாவிட்டாலும் சேர்க்கப்படவேண்டும் என்னும் கருத்து உடையவராய்ப் பதிற்றுப்பத்து நூலைத் தொகுத்த ஆசிரியர் தம் பதிகத்தில் சேர்த்துக் குறிப்பிட்டுள்ளார். முன்னர் யவனரைப் பிணித்த நிகழ்ச்சியை இமயத்தில் வில் பொறித்த நிகழ்ச்சிபோல் அல்லாது பாடல் பாடப்பட்ட காலத்திற்குப் பின் நடந்த நிகழ்ச்சி என்றாலும் நெடுஞ்சேரலாதன் காலத்து நிகழ்ந்தது என்று கூறினோம். அதற்கு முதன்மைக் காரணமாவது கடம்பறுத்த முக்கிய நிகழ்ச்சியானது பதிகத்தில் விடுபட்டபோதிலும் பதிகத்தில் காணப்படும் யவனரைப் பிணித்ததாகிய தொடர்நிகழ்ச்சியில் வேறுவகையில் பதிகத்தில் கூறப்பட்டுள்ளது என்று கொண்டதே ஆகும். இமயம் நோக்கிச் சென்றபோதும், அங்கிருந்து தன் நாட்டை நோக்கி மீண்டபோதும் நெடுஞ்சேரலாதன் பல மன்னர்களை வென்றான். இந்த வெற்றிகளில் ஆரியரை அடிபணியும்படி செய்த செயல் பதிகத்தில் சிறப்பித்துக் கூறப்பட்டுள்ளது. இந்த வெற்றிச் செய்திகள் பதிற்றுப்பத்துப் பாடல்களிலும்25 கூறப்பட்டுள்ளன. இவனது வடநாட்டுப் போரில் பல அரசர்களை வென்றான்; ஆயினும் அவர்களது நாடுகளைக் கைப்பற்றிக் கொள்ளவில்லை. இதனைச் சமுத்திரகுப்தனின் தென்னிந்தியப் படையெடுப்பிற்கு ஒப்புமையாகக் காட்டலாம். இமயம் சென்ற வழியில் சிலர் நெடுஞ்சேரலாதனைவிட அவர்களது அரசர்கள் மேம்பட்டவர் எனப் புகழ்ந்து கூறினர்.26 அவர்களது பேராற்றல் அழியும்படி வென்றான். இவ்வாறு புகழ்ந்து கூறியதால் பேராற்றல் அழிக்கப்பட்டவரே ஆரியர். இவனது இமயப் படையெழுச்சி வடநாட்டு அரசர்களின் வரலாற்றில் எங்கும் காணப்படாமைக்கு இதுவே காரணமாகும். இமயத்தில் வில்லைப் பொறித்தான் என்று கூறும் பதிகம் அப் பகுதிகளில் தமிழகத்தின் பெயர் விளங்கும்படி தன் கோலை நிலை நாட்டினான் என்றும் கூறுகிறது.27 கோலை நிலைநாட்டினான் என்றால் ஆட்சியை நிலைநாட்டினான் என்பது பொருள். தமிழ்நாட்டு வரலாற்றில் ஆட்சியை நிலைநாட்டுதல் என்பது அரசாளுதலை மட்டும் குறிக்கும் சொல் அன்று. பிறர் பணிந்து கொடுத்துப் பின்னர் மீண்டாலும் திறை தந்த நாடு. திறைபெற்ற மன்னனின் ஆட்சிக்குக்கீழ் இருந்ததாகவே கருதப்படும்.28 இந்த வகையில் நெடுஞ்சேரலாதன் இமயமலைப் பகுதியில் ஆட்சியை நிலைநாட்டினான் என்று பதிகம் கூறுவதாவது, இமயம் முதல் குமரிவரை வென்றான் 29 என்று பொருளாகும். எல்லை காண முடியாத அளவுக்கு இவன் நாடு விரிந்தது 30 என்ற பாடற் கூற்றுகள் ஏற்றுக்கொள்ளக் கூடிய உண்மைகளேயாகும். நெடுஞ்சேரலாதனின் போர்முறைச் செய்திகள் ‘கூற்று வெகுண்டுவரினும் மாறாதவன்’ 31 என்றும், ‘பகைவர் உள்ளத்தை வருத்தும் போர்ச் செயல்களைச் செய்பவன்’ 32 என்றும் வரும் செய்திகளால் இவனது போராற்றலை நன்கு உணர்கின்றோம். இவனும், இவனது படைவீரர்களும் எழுமரம் போன்ற உறுதியான நெஞ்செலும்பை உடையவர்கள்;33 முறுக்கான உடற்கட்டு உடையவர்கள்;34 இவனது படை வரிசை வரிசையாக வந்தது.35 நெடுஞ் சேரலாதன் தன் மார்பில் பச்சைநிறக் கற்கள் பதித்த அணிகலன்களை அணிந்திருந் தான்.36 நெடுஞ்சேரலாதன் யானை மீதேறிப் போர்க்களம் சென்றான்.37 அப்போது அவன் படைப் பிரிவுகளின் கண்களாக விளங்கினான்.38 படைகளைத் தழுவிச் செல்லும் முறையில் படையின் கவசமாக விளங்கினான்.39 வெற்றிக்கொடி நாட்டும் படையை ஏராகக் கொண்டு இவன் பகைவர்களாகிய நிலத்தை உழுபவன்.40 இவ்வகைச் செய்திகள் எல்லாம் இவனது படைஎழுச்சி நிலையைக் காட்டுகின்றன. படையில் இருந்த இயவர்கள், உலகமெல்லாம் பாதுகாப்புக்காக இவனுடைய குடை நிழலின் கீழ் வரவேண்டும் என்று கூறி வெற்றி முரசினை முழக்கினர்.41 இவன் படையெடுத்துச் சென்றபோது கூளியர்கள் காட்டுப் பாதைகளில் படைசெல்ல வழி அமைத்துக் கொடுத்தனர். இதற்கு மாறாக நெடுஞ்சேரலாதன் வெற்றிபெற்ற நாடுகளில் உணவுப் பொருள்களைக் கொள்ளையடித்துக் கொண்டனர். வயவர்கள் தம் வேல்களில் இருந்த புலித்தோல் உறைகளை நீக்கிவிட்டு ஏந்திச் சென்றனர். முரசு முழக்குவோர் குருதிபாயும் போர்க்களத்தைக் காணும் விருப்பத்தோடு செந்தினையில் குருதியைக் கலந்து தூவிப் போர் முரசை முழக்கினர். இவனது படையினர் போருக்கெழுந்த நாள் முதல் போர் முடியும் நாள் வரை தம் போர் உடைகளைக் களைந்ததே இல்லை.42 இவ்வாறு இவனது படையெடுப்பு நிகழ்ந்தது. நெடுஞ்சேரலாதன் தன் போர்ப் பாசறையில் நீண்டநாள் தங்கினான்,43 ஓர் ஆண்டுக்குமேல் தொடர்ச்சியாகத் தங்கியதும் உண்டு.44 போரில் இவன் பகைவர்களது மதில்களையும் கதவுகளையும் அழித்தான்;45 அவர்களது ஊர்களைத் தீக்கிரையாக்கினான்.46 வளமுடன் விளங்கிய பகைவரது நாடுகளும் இவனை எதிர்த்தமையால் அழிந்து தம் பொலிவை இழந்துபோயின.47 அரிமாக்கள் நடமாடும் இடங்களில் பிற விலங்குகள் தலைகாட்டாமைபோல நெடுஞ்சேரலாதன் தோன்றிய நாடுகளில் மன்னர்கள் ஒடுங்கினர்.48 தும்பைப் பகைவரை வெல்லுதல் வடநாட்டில் இவனை எதிர்த்துத் தாக்கும் மன்னர்கள் இல்லை என்று கூறினோம். தமிழ் நாட்டில் இத்கைய நிலை இல்லை. இவன் போர் தொடுக்காமல் இருந்தபோதே இவனைச் சில அரசர்கள் இவனது நாட்டை அடையக் கருதிப் போர்தொடுத்தனர்.49 அவர்களை எதிர்த்துப் போரிட்டு நெடுஞ்சேரலாதன் அழித்தான்.50 இது தற்காப்புப் போர் ஆகும். இவ்வாறு புகழ் நாட்டும் போர்களிலும், தற்காப்புப் போர்களிலும் ஈடுபட்டு வெற்றி பெற்றான். தமிழ்நாட்டு அரசர்களை வலியச் சென்று தாக்கும் செயலை இவன் செய்யவில்லை. தமிழ்நாட்டு அரசர்கள் யாராக இருந்தபோதிலும் தன்னைச் சேர்ந்தவர்கள் என்றே இவன் கருதினான். தன்னை வலிய வந்து எதிர்த்த வடநாட்டு அரசர்களைத் தாம் இவன் பகைவர்களாகக் கருதினான்; தமிழ்நாட்டு அரசர்கள் வலிய வந்து எதிர்த்தாலும் அவர்களை இவன் பகைவர்களாகக் கருதவில்லை. இவனது உணர்வை அறிந்திருந்த பதிற்றுப்பத்துத் தொகுப்பாசிரியர் வடநாட்டில் இவன் சேரநாட்டுப் புகழ் விளங்கும்படி செய்தான் என்று கூறாமல் தமிழகத்தின் புகழ் விளங்கும் படி செய்தான் எனக் கூறியுள்ளார். இவன் இமயத்தில் வில்லைப் பொறிக்கும்போது புலியையும் கெண்டையையும் சேர்த்துப் பொறித்ததும் உண்டு.51 இவனது இந்த ஒருமைப்பாட்டு உணர்வுகள் போற்றுதலுக்கு உரியவையாகும். போர்ப்புறம் வேற்போர் நெடுஞ்சேரலாதன் சேரநாட்டில் இருந்துகொண்டு ஆட்சி புரிந்து வருகையில் கொங்குநாட்டுக் கருவூரைத் தலைநகராகக் கொண்டு அந்துவஞ்சேரல் இரும்பொறை ஆட்சிசெலுத்தி வந்தான். இவர்கள் காலத்தில் சோழநாட்டை ஆண்டுவந்த வேந்தன் வேல்பஃறடக்கைப் பெருநற்கிள்ளி என்னும் பெரு விறற்கிள்ளி என்றும் அழைக்கப் பட்டான். நெடுஞ்சேரலாதனுக்கும். இந்தச் சோழ அரசனுக்கும் போர் மூண்டது. அந்தப் போரானது ‘போர்’ 52 என்னுமிடத்தில் நடைபெற்றது. சோழன் அவனைப் ‘போர்’ என்ற நகரத்திற்கு வெளியே எதிர்த்துப் போராடினான். போரில் இருதிறத்துப படைகளும் அழிந்தன. இறுதியில் வேந்தர் இருவரும் நேரில் வேற்போரில் ஈடுபட்டனர். கிள்ளியானவன் வேற்போரில் வல்லவன் என்பது அவனது பெயரிலேயே விளங்கும். இருபெருவேந்தரும் போரில் சாய்ந்தனர்.53 நெடுஞ்சேரலாதன் உயிர் நீங்குகின்ற நிலையில் நெடுநேரம் போர்க்களத்திலேயே கிடந்தான். அப்போது கழாத் தலையார் என்னும் புலவர் அவனைக் கண்டு பாடி அவனது கழுத்தில் இருந்த ஆரத்தைப் பரிசிலாகக் கேட்டார். அவனும் வழங்கினான்; பின்னர் மாண்டான். இவனுக்குப்பின் சேரநாட்டின் தலைமைப் பொறுப்பினைச் செங் குட்டுவன் ஏற்றான் என்பதைச் சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் வரலாறு உணர்த்துகிறது. கொடைத்தன்மை இவன் சிறந்த வள்ளல் ஆவான். இவன் நாட்டில் பருவ மழை பொய்த்தல் இல்லை. அப் பருவமழையே தவறிவிட்டாலும் பரிசிலர் விரும்பிவந்த பொருள்களை இவன் அளிப்பதில் தவறியதில்லை.54 இவனது கைகள் பிறருக்குக் கொடுத்துக் கொடுத்து மிகுந்த வளமை பெற்றிருந்தன.55 இவனது கொடைத்தன்மையைப் பகைவர்களும் புகழ்ந்தனர்.56 இவன் கொடையில் கர்ணணனைப் போன்றவன் என்று குமட்டூர்க் கண்ணனார் இவனை ஒப்புமைப்படுத்திப் பாடியுள்ளார்.57 இவன் உயிர் நீங்கும் நிலையில் போர்க்களத்தில் கிடந்திட்டபோது இவனைக் கண்டு பாடிய கழாத்தலையார் இவனது கழுத்தில் இருந்த மணிமாலையைப் பரிசிலாகக் கேட்டுப் பெற்றார். கண்ணனானவன் கர்ணனிடம் அவன் செய்தபுண்ணியங்களை யெல்லாம் தானமாகக் கேட்டு அவன் இறக்கும் தறுவாயில் இருந்தபோது பெற்ற நிகழ்ச்சி இதனோடு பொருத்தமாய் அமைந்துவிட்டது. முன்னர்ப் புலவர் பாடிய ஒப்புமையானது பின்னர் உண்மை நிகழ்ச்சியாய் அமைந்துள்ளது. பாடினி,58 விறலியர்,59 புலவர், வயிரியர், ஓவியர், சிற்பத் தொழில்களில் வல்ல கண்ணுளர்60 முதலான பலருக்கு இவன் கொடை வழங்கினான். பரிசில்பெற வந்தவர் பெறத் தகுதியற்றவராய் விளங்கி னாலும் அவர்களது அத்தன்மையைப் புறத்தார் உணராவண்ணம் மறைத்துவிட்டு நல்கினான்.61 மா, களிறு, தேர் ஆகியவற்றைப் பரிசிலாகக் கொடுத்தான்.62 பகைவர்களிடம் பெற்ற உயர்ந்த அணிகலன்களைப் பரிசிலாகக் கொடுத்hன்.63 உணவு, உடை முதலானவற்றால் மகிழ்ந்திருக்கும் தன் மகிழ்ச்சியான வாழ்வையே பிறருக்கு அளித்தான்.64 மிளை, அகழி, மதில், நிலைவாயில், ஆரெயில் முதலானவற்றால் இவனது அரண்மனை, பகைவரால் உள்ளே நுழைய முடியாத அளவு அமைந்திருந்தது; ஆனால், பரிசிலர்கள் எளிதாக நுழைவதாய் அமைந்திருந்தது. பரிசிலர்கள் உள்ளே நுழைந்து, உண்டு, உடுத்து, நுகர்ந்து, மகிழ்ந்து இருந்தனர். இவ்வாறு பரிசிலர்கள் இருந்ததைப் பார்த்துப் பெருமிதத் தோடு மலரும் மார்பினனாய் அவன் விளங்கினான்.65 இத்தகைய வள்ளன்மையால் இவனைப் பரிசிலர்களின் செல்வம் என்றே அழைத்தனர்.66 இவன் தன்மீது பத்துப் பாடல்கள் பாடிச் சிறப்பித்த குமட்டூர்க் கண்ணனார் என்னும் அந்தணப் புலவருக்கு தான் வெற்றி பெற்ற உம்பற்காட்டுப் பகுதியில் ஐந்நூறு ஊர்களைப் பிரமதேயமாகக் கொடுத்தான். மேலும், அவரது வாழ்க்கைச் செலவுக்காகத் தனது எஞ்சிய ஆட்சிக் காலம் முழுவதும் தான் வென்ற தென்னாட்டிலிருந்து வரும் வருவாயில் சரிபாதியும் கொடுத்தான். பண்புநலம் பகைவர்கள் பெரிய தவற்றைச் செய்திருந்தாலும் அவர்கள் பணிந்து திறை தந்தால், திறையை ஏற்றுக்கொண்டு அவர்களுக்கு அருள்புரியும் பண்பு நலம் உடையவன்;67 நிலத்தைப் போல் பொறுமை யுடையவன்; நீரைப்போல் சினம் ஆறும் தன்மை உடையவன்; காற்றைப்போல் எல்லோர் உள்ளங்களிலும் நிறைந்திருப்பவன்; வெட்டவெளியைப்போல் பரந்த உள்ளம் உடையவன். இந்தப் பண்புகளில் இவன் அந்த நான்கு பூதங்களைப்போல் அளக்க முடியாத தன்மையை உடையவன்.68 நாள், கோள், திங்கள், ஞாயிறு, அழல் ஆகிய ஐவகை ஒளிப்பிழம்புகள் ஒருங்கிணைந்தால் தோன்றும் ஒளிபோல இவனது பொலிவும் புகழும் விளங்கின.69 இவனது புகழ் திருமாலின் புகழ்போலப் பரவியிருந்தது.70 இவனது ஆட்சிக்குக்கீழ் இருந்த நாடுகள் வளமுடனும், இவனைத் எதிர்த்த நாடுகளின் வளமை பாழடைந்தும் காணப்பட்டன.71 இசை வேட்கை இவனது தந்தை உதியஞ்சேரல் இன்னிசை முழக்குடன் மகிழ்வாக வாழ்ந்தவன்.72 இவனும் மகிழ்ச்சியால் முழக்கும் முரசொலியைக் கேட்டுத் தன்னையே பரிசிலாகக் கொடுத்தான் 73 இதனால் தந்தைக்கும் மகனுக்கும் இசையின்மீது இருந்த ஈடுபாடு நன்கு விளங்கும். பெற்றோர் இவனது முன்னோர்கள் நாவலந் தண்பொழில் முழுவதும் ஆட்சிபுரிந்து புகழுடன் விளங்கினர்.74 இவனது தந்தை அந்து வஞ்சேரலாகும்; தாயார் நல்லினி ஆகும். மனைவியின் மாண்புகள் இவனது மனைவி சிறந்த அழகியாவாள்.75 அடக்கமான தோற்றப் பொலிவினை உடையவள்.76 பெரிய சான்றாண்மைப் பண்புகள் அவளிடம் அமையப் பெற்றன; நாணம் மிக்கவள்;77 கணவனிடம் ஊடல் கொள்ளாத ஆறிய கற்பினை உடையவளாக விளங்கினாள். கணவ னொடு ஊடிய காலத்தும் இனிய சொற்களையே கூறுவாள்.78 அவளே வேளாவிக் கோமான் பதுமன் மகளாவாள்.79 இவன் பெற்ற பிள்ளைகள் 4, 6 ஆம் பத்தில் சிறப்பித்துப் பாடப்பட்டுள்ளனர். ‘சோழன் மணக்கிள்ளி’யின் மகள் நற்சோணை என்னும் பெய ருடைய மற்றொரு பெண்ணை இவன் மணந்தான்.80 இவர்களுக்குப் பிறந்த பிள்ளைகள் இருவர். மூத்தவன் பதிற்றுப் பத்தில் ஐந்தாம் பத்தின் தலைவன். இளையவன் சிலப்பதிகாரம் பாடிய இளங்கோவடிகள். காலம் இவன் 58 ஆண்டுகள் ஆட்சிபுரிந்தான். இவனைப் பாடியதற்குப் பரிசாக 38 ஆண்டுகள் தென்னாட்டில் இருந்து வரும் வருவாயில் குமட்டூர்க் கண்ணனார் பங்கு பெற்றார். இதனை அவன் தனது ஆட்சிக் காலம் முடியும் வரையில் தந்திருக்க வேண்டும. எனவே, இரண்டாம் பத்தானது இவனது இருபதாம் ஆட்சியாண்டில் பாடப்பட்டது எனலாம். இதற்குப் பின்னர்தான் இவன் செங்குட்டுவன் தாயை மணந்திருக்க வேண்டும். திருமணமான ஓராண்டில் செங்குட்டுவன் பிறந்து அவனது இருபதாம் வயதில் இளவரசு பட்டம் கட்டப்பட்டான் என்றால், செங்குட்டுவன் அரியணை ஏறியது 81 நெடுஞ்சேரலாதனது 42ஆம் ஆட்சியாண்டில் எனக் கொள்ளலாம். இதனை ஐந்தாண்டுக் குறியீட்டுக்குச் சரிசெய்து 40ஆம் ஆட்சியாண்டு எனக் குறிப்பிடலாம். சிறப்புப் பெயர்கள் மாமூலனார் இவனைச் ‘சேரலாதன்’ என்றே குறிப்பிடுகின்றார். பதிற்றுப்பத்துப் பதிகம் மூன்று இவனை ‘இமய வரம்பன்’ என்று மட்டும் குறிக்கிறது. குடக்கோ,82 குடவர் கோமான் 83 என்னும் அடைமொழிகள் இவனது ஆட்சியானது தொடக்க நிலையில் குடநாட்டில் தொடங் கியதைத் தெளிவுறுத்துகின்றன. இமயவரம்பன் 84 என்றால் இமயமலை யினை வரம்பாக வைத்து ஆண்டவன் என்பது பொருளாகும். இவன் ‘ஆராத் திருவின் சேரலாதன்’85 என்றும் குறிப்பிடப்படு கின்றான். இது இவனது செல்வ வளத்தை வெளிப்படுத்துகின்றது. பல்யானைச் செல்கெழு குட்டுவன் இவன், பாலை பாடிய கௌதமனார் என்னும் பார்ப்பனப் புலவரால் சிறப்பித்து இரண்டாம் பத்தில் பாடப்பெற்றவன், பாலை என்னும் இவனது ஊர் இப்போதுள்ள பாலக்காடு என்று அறிஞர்கள் கருதுகின்றனர். இவன் நெடுஞ்சேரலாதனுக்குத் தம்பி; செங்குட்டுவனுக்குச் சிறிய தந்தையாவான். பூழியர்கோ நெடுஞ்சேரலாதன் சேரநாட்டு முடிவேந்தனாய் ஆண்டபோது இவன் பூழி நாட்டில் இருந்துகொண்டு நாடுகாவல் புரிந்து வந்தான். பின்னர்ப் பூழி நாட்டை ஆண்டு கொண்டிருந்ததால் ‘பூழியர்கோ’1 என்று கூறப்பட்டான். பூழி நாடானது செருப்பு மலையைத் தன்னகத்தே கொண்டது. செருப்பு மலையில் மணிக்கற்கள் கிடைத்தன. கோவலர் தம் ஆடு மாடுகளைப் புல்வெளிகளில் மேய விட்டுவிட்டு இச் செருப்பு மலையில் கிடைத்த மணிக்கற்களைத் திரட்டி விற்று வாணிகம் செய்துவந்தனர். அக்கால மக்கள் அந்த மணிக்கற்கள் பதித்த அணிகலன்களை விரும்பி அணிந்துவந்தனர்.2 இந்தப் பூழி நாட்டுக் கோவலர்களுக்கு முல்லைப்பூ குடிப் பூவாகும். மழவர் மெய்ம்மறை மழவர்கள் கொங்கு நாட்டு மக்கள். அவர்களுள் ஒரு சாரார் குவியற் கண்ணியைத் தம் முடியில் அடையாளச் சின்னமாகக் கொண்டிருந்தனர். அவர்கள் சேரர்களின் துணைவர்களாய் விளங்கினர். மழவரில் மற்றொரு சாரார் பாண்டியனைச் சார்ந்திருந்தனர். பல்யானைக் குட்டுவன் குவியற்கண்ணி மழவரின் பாதுகாவலனாகக் கவசம் போல் விளங்கினான்.3 அயிரைப் பொருநன் ஓர் ஊரில் தங்கியிருந்து ஆண்ட அரசனை அவ்வூரின் பொரு நன் எனக் குறிப்பிடுவது வழக்கம். அயிரை மலையிலிருந்த கொற்றவை சேரர்களின் குடித்தெய்வம். இதனை இவன் வழிபட்டான்.4 இவன் பல நாள்கள் வழிபாட்டில் ஈடுபட்டு அயிரை மலையில் தங்கி யிருந்தான். அதனால், ‘அயிரைப் பொருநன்’5 என்னும் சிறப்பினைப் பெற்றான். உம்பற்காட்டு வெற்றி ‘உம்பல்’ என்னும் சொல்லுக்கு யானை என்னும் பொருள் உண்டு. எனவே, உம்பற்காடு என்பது ஆனைக்காடு என்று பொருள்படும். ஆனைமலைப் பகுதியில் இருந்த காடு இப் பெயர் பெற்றிருந்தது. ஆனைமலைக்கு வடக்கில் இருந்தது பூழி நாடாகும். உம்பற்காடானது அப்போது இவனது ஆட்சியின்கீழ் இருந்திருக்க வேண்டும். பூழி நாட்டில் ஆண்ட இவன் உம்பற் காட்டின்மீது படையெடுத்துச் சென்று, வென்று தன் ஆட்சியின் கீழ்க் கொண்டுவந்தான்.6 அகப்பாக் கோட்டையை அழித்தல் பாகுடி என்பது ஊரின் பெயர்.7 இந்த ஊர், பெருமலைகளுக்கு இடையே இருந்ததால் 8 அகப்பாக்குடி எனப்பட்டு, ‘அகப்பா’ என மருவியும் வழங்கப்பட்டது. உம்பற்காட்டைத் தன் ஆட்சியின்கீழ்க் கொண்டு வந்த பல்யானைக் குட்டுவன் அகப்பாக்கோட்டையைத் தாக்கி வென்று தீக்கிரையாக்கினான்.9 இக் கோட்டையைக் கைப்பற் வேண்டும் என்பதே அவன் நோக்கம்.10 அகப்பாக் கோட்டை மிக வலிமையானது. உயர்ந்த மதிற்சுவர்; அதில் வரிசை வரிசையாகப் பதுங்குமிடங்கள்; மதிற்சுவரை அடுத்து ஆழமான அகழி; அகழியைச் சுற்றிக் காவற்காடு. கோட்டைக்குள்ளே நுழைய உயர்ந்த நிலைவாயில்; வாயிற் கதவைச் சாத்தித் தாழிடுவதற்காக வில்விசை முறைப்படி மாட்டித் தொங்கும்படி அமைக்கப்பட்ட கணையமரம்; வாயிலுக்கு முன அகழியைக் கடக்கும் மரப்பாலம்; பாலத்திற்கு வெளியே போரிடுவதற்காக அமைக்கப்பட்ட வெட்டவெளி; வாயிலிலும் காவற்காட்டிலும் இருந்துகொண்டு கோட்டையைக் காக்கும் நாற்படைகள். இத்தனை பாதுகாவலையும் கொண்டது அகப்பாக் கோட்டை11 ஆகும். அகப்பாக் கோட்டையைச் சூழ்ந்திருந்த மலை தலைமலை ஆகும்.12 இப் பகுதியில் முதியர் என்னும் மக்கள் வாழ்ந்து வந்தனர். இவர்கள் பாண்டியரின் ஆட்சியை எதிர்த்துப் போராடிக் கொண்டிருந்தனர்.13 பல்யானைக் குட்டுவன் முதியரைத் தம் பக்கம் தழுவிக்கொண்டான்.14 அவர்களுக்காகப் போராடி அகப்பாவில் இருந்த பாண்டிய ஆட்சி யாளரை அழித்தான். உம்பற்காட்டு வெற்றியாலும் அகப்பா வெற்றியாலும் தனக்குக் கிடைத்த பரந்த நாட்டைப் பகுத்துக் கொடுத்தான்.15 அப் பகுதியில் உம்பற்காட்டு ஆட்சி, அவனது அண்ணன் மகன் செங்குட்டுவனது நேரடிப் பார்வையில் விடப்பட்டது. அகப்பா, முதியர்க்கு விடப்பட்டது. அகப்பா வெற்றி, பாண்டியரின் வேற்படைக்குப் பேரச்சத்தை உண்டுபண்ணியது. கொங்குநாட்டைத் தன் ஆட்சியில் கொண்டு வந்த படைக்கே இத்தகைய அச் சத்தை உண்டாக்கியது.16 சோழ பாண்டியரின் தோல்வி இவனது போர் வலிமையையும் அதனால் பெற்ற புகழையும் அறியாத சோழரும், பாண்டியரும், சில வேளிர் மன்னர்களும் ஒன்று திரண்டு வந்து இவனைத் தாக்கினார்கள். இவனும் எதிர்த்துத் தாக்கினான். போரில் முதன்முதலில் பகைவரைத் தாக்கும் படை தார்ப் படை எனப்படும்.17 வேந்தர்களின் இந்தத் தார்ப்படை பல்யானைச் செல் கெழுகுட்டுவனின் தாக்குதலால் அழிவுற்றது.18 இந்த நிலையில் எஞ்சிய படையையும் தாக்கும் பொருட்டு இவன் தன் படைவீரர் களுக்குப் பெருஞ்சோறு வழங்கிப் போர் விழா நடத்தினான். அப்போது போர்வீரர்கள் வஞ்சினங் கூறலாகிய மந்திரம் சொல்லிக் கடவுளை (அயிரைமலைக் கொற்றவை) வழிபட்டனர். பகைவரின் தார்ப்படை தாக்கியபோது தாம் பெற்ற விழுப்புண்களில் வழியும் குருதியைத் தூவிப் படையின் வெற்றி முரசை முழக்கினர். இந்த முரசொலியின் எழுச்சிமிக்க ஒலியைக்கேட்டு இவனது எதிரிப் படையினர் காடுகளிலும், கடற்பகுதிகளிலும் ஓடி ஒளிந்துகொண்டனர்;19 எனவே, தொடர்ந்து போரிடாமல் போர்க்களத்தைவிட்டு நீங்கினர். இதன் விளைவால் எதிரியின் நாடுகளில் சில பகுதிகள் அழிவைப் பெற்றன.20 போர் முறை பல்யானைச் செல்கெழு குட்டுவன் போர்க் காலங்களில் படை வீரர்கள் தங்கியிருந்த அறைகளிலேயே உடன் தங்கியிருந்து ஊக்கமூட்டினான்;21 குதிரைகள் பூட்டிய தேரில் சென்று போரிட் டான்.22 வீரர்கள் தம் வேல்களில் இருந்த புலித்தோல் உறைகளை நீக்கிவிட்டு வெற்றிக்கு அறிகுறியாக வலத்தோளால் அவற்றை உயர்த்தியபோதே வெற்றி மாலையை இவன் சூடிக் கொண்டான். அவனே அவர்களின் படைத்தலைவனாக விளங்கினான்.23 ‘பெரும்படைத் தலைவ’, ‘வயவர்’, ‘இருக்கை இயலறைக் குருசில்’ என்னும் தொடர்களைக் கொண்டு இவன் பெரும் படைத்தலைவ னாகவே விளங்கினான் என்று கருத இடமுண்டு; அரசனாக விளங்க வில்லை எனவும் எண்ணலாம். ஆனால், ‘கடுஞ்சினவேந்து’24 என இவன் கூறப்படுவதால் இவன் வேந்தனாகவும் விளங்கினான் என்பது பெறப்படுகிறது. இருகடல் நீரில் ஒருபகல் ஆடல் இரண்டாம் பத்தில், இமயத்தில் வில்பொறித்த நிகழ்ச்சி குறிப்பிடப்படாமல் அதன் பதிகத்தில் குறிப்பிட்டுள்ளதுபோல மூன்றாம் பத்தில் ‘இருகடல் நீரும் ஒருபகல் ஆடிய’ நிகழ்ச்சி25 அதன் பதிகத்தில் மட்டும் கூறப்பட்டுள்ளது. மற்றும் இவன் நெடும் பாரதாயனார் வழிநின்று காடுபோந்த நிகழ்ச்சியும் இவ்வாறே குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, இந்த நிகழ்ச்சிகள் மூன்றாம் பதிகம் பாடப்பட்டபின் நிகழ்ந்தவை எனலாம். இவன் 25 ஆண்டுகள் அரியணையில் வீற்றிருந்தான். இம் மூன்றாம் பத்தானது இவனது இருபதாம் ஆண்டில் பாடப்பட்டதாகவும், அண்ணனுக்குப்பின் தம்பி, 5 ஆண்டுகள் கழித்து அரியணை யேறினான் என்றும் கொண்டால், இரண்டாம் பத்துப் பாடப்பட்ட பின் சுமார் ஐந்து ஆண்டுகள் கழித்து மூன்றாம் பத்துப் பாடியிருக்க வேண்டும் என்பது தெரியவரும். அப்போது அவனைப் பாடிய புலவர் விருப்பப்படி பத்து வேள்விகள் செய்துவிட்டுத் தொடர்ந்து ஆண்டு வரும்போது ‘இருகடல் நீரும் ஒருபகல் ஆடிய’ நிகழ்ச்சி நடைபெற்றிருக்க வேண்டும். தன் யானைப் படையின் ஒரு பகுதியை வங்கக் கடலுக்கும் மற்றொரு பகுதியை அரபிக் கடலுக்கும் அனுப்பிக் கடல் நீரைக் கொண்டுவரச் செய்தான். அந்த இரண்டு கடல் நீரையும் ஒரே நாளில் ஊற்றிக்கொண்டு திருமுழுக்காடியபின் இவன் காடு போந்தான். பகைவர் நாட்டு அழிவு - தன் நாட்டு வளம் இவனது ஆட்சிக்குக் கீழிருந்த நாட்டில் வெள்ள நீர் மோதிக் கேட்கும் பூசல் ஒலி அல்லாது மக்கள் கொடுமைகளுக்குள்ளாகி ஓலமிட்டு அழும் பூசல் ஒலி கேட்டதே இல்லையாம்.26 இவனை எதிர்த்த பகைவர்களது நாடுகள் வளம் நிறைந்தவையாய் இருந்து, இவனால் அழிக்கப்பட்டுப் பொலிவிழந்து காணப்பட்டனவாம்.27 முருகன் என்னும் மன்னனின் சீற்றத்திற்குள்ளாகிய உரும்பில் கூற்றம் அழிந்தது போல அவை அழிந்துபோயினவாம்.28 கொடைத்தன்மை மழை, பருவத்தில் பெய்ய மறந்தாலும் இவன் வந்தவர்களுக்கெல்லாம் உணவளித்தான்.29 மரபுக் கடவுளைப் பேணுவதற்காக இவன் செய்த வேள்வி ‘பெரும் பெயர் ஆவுதி’ எனப்பட்டது. தன்னை நாடி வந்தவர்களுக்கு உணவளிக்க இவன் செய்த வேள்வி ‘அடுநெய் ஆவுதி’ எனப்பட்டது.30 வயிரியர் தம் வறுமைக் காலத்திலும் பிறரிடம் கையேந்தும் வழக்கம் இல்லை; பொதுவிடங்களில் தம் இசைக் கருவிகளை முழக்குவர். மக்கள் தாமே முன்வந்து அவர்களுக்கு வழங்கிப் பேணுவர். இத்தகைய வயிரியர்களுக்குப் பல்யானைச் செல்கெழு குட்டுவன் பொன் அணிகலன்களையும் உணவுப் பொருள்களையும் வழங்கினான்.31 தம் கொடை முரசை முழக்கி அவர்களைத் தானே அழைத்து வழங்கினான்.32 தன்னைப் பத்துப் பாடல்களில் சிறப்பித்துப் பாடிய புலவர்க்கு அவர் விருப்பப்படி இவன் கொடை வழங்கியுள்ளான். அக் கொடை பத்து வேள்வியாக அமைந்தது. இத்தகைய வேள்விகளை இவனும் பிற வேந்தர்களும் சங்ககாலத்தில் செய்ததற்கெல்லாம் கொடை உள்ளமே காரணம்; வேந்தர்கள் விருப்பம் அன்று என்பதை இவனது வேள்வி நிகழ்ச்சி தெளிவுபடுத்துகிறது. பாலைக் கௌதமனார் மூன்றாம் பத்தில் சேர்க்கப்பட்டுள்ள பாடல்களைப் பாடி முடித்தார். புலவர் வேண்டியதைக் கேட்டுப் பெறலாம் என்றான் வேந்தன். பார்ப்பனப் புலவர் தாமும் தன் மனைவியும் வானுலகம் புக வேண்டினர். புலவரின் விருப்பத்தை நிறைவேற்ற அரசன் செய்வது குறித்துப் பார்ப்பாரிற் பெரியாரைக் (நெடும்பாரதாயனாரைக்) கேட்டான். கௌதமனார் பெயரில் பத்து வேள்விகள் செய்ய வேண்டும் என்றார். வேண்டியனவெல்லாம் கொடுத்து நெடும்பாரதாய னாரையே வைத்து அந்த வேள்விகளை முறைப்படி நடத்தினான். தாயனார் ஒன்பது வேள்விகள் செய்தார். பத்தாம் வேள்வியில் புலவரும் அவரது மனைவி பார்ப்பனியும் மறைந்தனர் என்பதனால் அவர்கள் இறந்துவிட்டனர் என்று தெரிகிறது. இது அவர்கள் அடைந்த சுவர்க்கம். இந்தச் செய்தியானது பதிகத்தில் காணப்படுகின்றது. பண்புநலம் தன் வாய்ச்சொல்லாலும் தனக்கிருந்த செல்வாக்காலும், தன் குறிப்புப் பார்வைகளாலும், தான் கேள்விப்பட்ட செய்திகளைக் கொண்டு பிறர்க்கு நெஞ்சாலும் தீமை எண்ணாத கொள்கை உடையவனாய்க் பல்யானைச் செல்கெழு குட்டுவன் விளங்கினான்.33 நீர், நிலம், தீ, வளி, விசும்பு என்னும் ஐம்பூதங்களை அளந்தறிந்தாலும் அவற்றின் தன்மைகள் அமையப் பெற்றிருந்த இவனது பண்புகளின் பெருமையை அளந்தறிய முடியாது.34 காலை நேரத்தில் பிறக்கும் தெளிவைப்போல இவனது வாயிலிருந்து பிறக்கும் சொற்கள் அமைந்திருந்தன.35 தோற்றப் பொலிவு இவனது மார்பில் எப்போதும் சந்தனம் படிந்திருந்தது.36 போர்ச் சின்னமாகிய உழிஞைப் பூவையும் இவன் பொன்னால் செய்து அணிந்து கொண்டான்.37 இவனது மாலையும் பொன்னால் செய்யப்பட்டது.38 துறவிக்குப் பணிவிடை இத்தகைய போர்த்திறனும், கொடை உள்ளமும், நற்பண்புகளும், ஆடம்பர வாழ்வும் கொண்டிருந்த இவன் காட்டுக்குச் சென்றான். இவனைப் பாடிய புலவரின் விருப்பத்தை நிறைவேற்ற நெடும்பாரதாயனார் உதவினார். உதவிய தாயனாரின் விருப்பத்தை நிறைவேற்ற இவன் காட்டுக்குச் சென்றான். அங்குத் தாயனாரின் தவத்திற்கு இடையூறு வாராமல் காத்து நின்றான் எனலாம்.39 சிலகாலம் ஆட்சிப் பொறுப்பில் இருந்துவிட்டுப் பின் துறவு பூண்டான் பல்யானைச் செல்கெழு குட்டுவன். அண்ணன் தொடர்ந்து நாடாண்டு கொண்டிருந்தான் (இளங்கோவடிகள் தன் சிறிய தந்தையான பல்யானைச் செல்கெழு குட்டுவனின் துறவு வழியை இளமையி லேயே பின்பற்றினார்). முன்னோர் சினம், காமம், கழிகண்ணோட்டம், அச்சம், பொய்ச்சொல், அன்பு மிகவுடைமை, தெறல், கடுமை முதலான தீய பண்புகள் அறநெறியில் செல்லும் ஆட்சிக்குத் தடையாய் அமைந்துவிடும் என்னும் உண்மையை உணர்ந்து அந்தத் தீய பண்புகளை விட்டு, நல்லன பல செய்து இவனது முன்னோர் வாழ்ந்து வந்தனர். நாட்டுமக்கள் மாசற்ற தெளிவான அறிவினை உடையவர்கள்; பிறரை நலியாதவர்கள்; வேற்றவர் பொருளைப் பறிக்க விரும்பாதவர்கள்; செந்நெறியில் நடப்பவர்கள்; தம்மை விரும்பி வாழும் துணைவரைப் பிரியாதவர்கள்; பிணியின்றி வாழ்ந்தமையால் மூத்துப் பின்னர்தான் இறந்தனர். இவ்வாறு குடிமக்கள் வாழும்படி பல்யானைச் செல்கெழு குட்டுவனது முன்னோர் அரசாட்சி செலுத்தினார்களாம். இத்தகைய உரம் பெற்ற முன்னோரின் வழிவந்து, அவர்களைக் காட்டிலும் மேம்பட்டு உயர்ந்து விளங்கினானாம் பல்யானைக் குட்டுவன்.40 மனைவியின் மாண்பு இவன் மனைவி சிறந்த உடலழகும் ஒப்பனை அழகும் கொண்டவள். இவனுடன் இவள் அரியணையில் வீற்றிருந்தாள்.41 இவளது கற்பு நெறியால் நாட்டில் பருவமழை தவறாமல் பெய்தது.42 கணவனைப் போலவே இவளும் திருந்திய இயல்மொழியைப் பேசினாள்.43 பலரும் இவளைத் தம் பாடல்களில் போற்றிப் புகழ்ந்தனர். அவற்றை அவள் விரும்பவில்லை; உலக மெல்லாம் தன் கணவன்வழி ஒழுகும்படி தன் வாழ்க்கைப் பாங்கை அமைத்துக் கொண்டாள். எனினும் ஆறு தொழில்களைச் செய்யும் அந்தணர்களின் சொற்களை இவள் வழி மொழிந்து ஒழுகியது நமக்கு வியப்பைத் தருகிறது. ‘கணவன் எவ்வழி மனைவி அவ்வழி’ என்பதே நாம் காணும் அமைதி. சிறப்புப் பெயர்கள் ‘செல்போர்க் குட்டுவன்’,44 ‘பொலந்தார்க் குட்டுவன்’,45 ‘பெரும் பல்யானைக் குட்டுவன்’ 46 என்றெல்லாம் இவன் அடை மொழிகளுடன் சிறபித்துக் கூறப்பட்டுள்ளான். பதிகம் இவனைப் பல்யானைச் செல்கெழு குட்டுவன் என்று குறிப்பிடுகிறது. பல யானைகள் சேர்ந்த கூட்டமானது மேகக்கூட்டம்போல் காட்சி அளிக்கும். அதனைப் ‘பல்யானைச் செல்’ 47 எனக் குறிப்பிடலாம். அந்த யானைகளாகிய மேகக் கூட்டத்திடையே இவன் மிகுதியும் தோற்றமளித்ததால் பல்யானைச் செல்கெழு குட்டுவன் எனப்பட்டான். பாலைக் கௌதமனார் இவர் இவன்மீது பாடியுள்ள பத்துப் பாடல்கள் பதிற்றுப் பத்தில் மூன்றாம் பத்தாக அமைந்துள்ளன. பொதுவாகக் ‘குட்டுவன்’ என்று குறிப்பிட்டுச் செய்திகளைத் தெரிவிக்கும் பாடல்கள் உள்ளன. அந்தக் குழப்பங்கள் பிற சேர அரசர்கள் என்னும் தலைப்பின்கீழ் ஓரளவு தெளிவாக்கப்பட்டுள்ளன. நார்முடிச் சேரல் ‘களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல்’ என்று முழுமையான அடைமொழிகளுடன்கூடிய பெயரால் கூறப்படும் இவன், செங்குட்டு வனது மாற்றாந்தாயின் மகன் ஆவான்; செங்குட்டுவனுக்கு மூத்தவன், தந்தை நெடுஞ்சேரலாதன் ஆவான். தாய் பதுமனின் மகளாவாள். இந்தப் பதுமன் வேளிர் குடியில் ஒரு பிரிவான ஆவியர் குடியைச் சேர்ந்தவன். இந்த ஆவியர்குடி பழனிமலைப் பகுதியில் சிறப்புற்று விளங்கியது. நன்னன் போர் வாகை மரத்தைக் காவல் மரமாகக்கொண்டு நன்னன் எழில் மலைப் பகுதியில் அரசாண்டு வந்தான். அவனுக்கும் நார்முடிச் சேரலுக்கும் போர்மூண்டது. போர் ‘வாகைப் பறந்தலை’ என்னுமிடத்தில் நடை பெற்றது. இந்த இடம் குடமலைக்கு மேற்குப் பக்கம் இருந்தது. போரில் நன்னன் கொல்லப்பட்டான்.1 அவனது காவல் மரம் ‘வாகை’ வெட்டிச் சாய்க்கப்பட்டது. இந்த வெற்றிக்குப்பின் மகிழ்வால் நறவுண்டு மகிழ்ந்தும், இரவலர்களுக்கு வாரி வழங்கியும் இவன் இருந்தான். பின் நேரிமலைப் பகுதிக்குச் சென்று தங்கியிருந்தான். இப்போரில் வென்றதன் வாயிலாக நார்முடிச் சேரல் தான் முன்பு இழந்த நாட்டைத் திரும்பப் பெற்றான் என்று கல்லாடனார் கூறுகிறார். இழந்த நாடு எது என்பதனை அறியப் பதிகம் நமக்கு உதவி செய்கிறது. அது ‘பூழி நாட்டைப் படையெடுத்துத் தழுவிக்கொண்டான்’ என்று கூறுகிறது. பழனிமலைப் பகுதியில் சிறப்புற்று விளங்கிய ஆவியர்குடிப் பதுமனிடம் இவன் பெண் கொண்டதால் அவர்களின் உதவியும் இப் போரில் கிடைத்திருக்கும். பூழி நாடு பழனி மலைகளுக்கு வடக்கில் உள்ள நாடு. நெடுமிடல் சாய்தல் நெடுமிடலை நார்முடிச் சேரல் போரில் சாய்த்தான் எனக் காப்பி யாற்றுக் காப்பியனார் கூறுகிறார். நெடுமிடல் பசும்பூட் பாண்டியனின் பகைவர்களால் சாய்க்கப்பட்டவன் எனப் பரணர் கூறுகிறார். மற்ற இரண்டையும் ஒப்பிட்டு நோக்கும்போது பசும்பூட் பாண்டியனின் பகைவனான நார்முடிச் சேரல் நெடுமிடலைக்2 கொன்றான் என்பது பெறப்படுகிறது. எவ்வி என்பவனின் மிழலை நாட்டை நெடுஞ்செழியன் (தலையாலங்கானத்துச் செருவென்றவன்) கைப்பற்றினான் என்பது வரலாறு. இதனால் எவ்விக்கும் பாண்டியருக்கும் இடையே பகைமை உணர்வு இருந்தமை புலனாகும். இந்தப் பகைமை உணர்வு காரண மாகப் பசும்பூட் பாண்டியனின் படைத் தலைவனாய் விளங்கிய நெடுமிடல், எவ்விக்குப் பல இடையூறுகள் செய்துவந்தான். இதனால் எவ்வி, சேரலின் உதவியை நாடினான். சேரல் படை எவ்விக்கு உதவியது. போரில் நெடுமிடல் கொல்லப்பட்டான். நெடுமிடலைக் கொன்ற நார்முடிச் சேரலின் படையும் எவ்வி யின் படையும் அரிமணவாயில் (அரிமழம்), உறத்தூர் (உரத்தநாடு) ஆகிய இடங்களில் கள்ளும், பெருஞ்சோறும் உண்டு மகிழ்ந்தன. கொடுமிடல் மாய்தல் கொடுமிடல்3 என்பவன் பாண்டியனின் மற்றொரு படைத் தலைவன். நெடுமிடல் போரில் சாயவே இவன் பாண்டியர் படைக்குத் தலைமை தாங்கிப் போரை நடத்தினான். இவனும் நெடுமிடலைப் போலவே கொல்லப்பட்டான். இந்தப் போர் வெற்றியினால் நார்முடிச் சேரலுக்குக் கிடைத்த நாடு, நெல்லும் கரும்பும் விளையும் நாடாகும்.4 போரில் இவன் பெருமலை (பழனிமலை) யானைகளைப் பயன்படுத்தி பெற்றிபெற்றான். பெரும்படை இவனது படை வரம்பில்லாத வெள்ளம்போல் வருவது;5 நால் வகைப் படைகளையும் கொண்டது;6 பகைவர்களுக்குப் பேய் போன்ற நடுக்கத்தைத் தருவது; ஆயினும், நகைவர்க்கு (மகிழ்ச்சி செய்பவர் களுக்கு) அரண்போல் விளங்கியது.7 போர் நிழலில் வாழ்வதையே அப் படை மிகவும் விரும்பியது.8 போராற்றல் பகைவரது காவல் மரங்களில் இவன் தனது யானைகளைப் பிணிப்பான்; அந்த யானைகளைப் பகைவர் நாட்டிலுள்ள நன்னீர்த் துறைகளில் குளிக்கச் செய்து கலக்குவான். வானை மதிலாகவும், வேல்களைக் காவற்காடாகவும், வில், அம்பு, எஃகம் ஆகியவற்றை அகழியாகவும் தம் படைக்குக் காவலாய் அமையும் படி முரசு முழங்கக் காற்றுப்போல் படையை நடத்திச் சென்று இவன் போரிடுவதை நினைத்தவுடனே பகைவர்கள் நடுங்குவர்.9 கூளியரும் பறவைகளும் உண்டு மகிழப் பிணம் குவிப்பான்.10 பகைவர்களுக்கு இவன் எமன் போன்றவன் ஆவான்.11 வளம் பெருக்குதல் இவன் நாட்டில் சில பகுதிகள் வளம் குன்றின. அந்த நிலங் களுக்கு இவன் வளப்பத்தை உண்டாக்கினான்.12 கால்வாய்கள், ஏரிகள் அமைத்து வளமுறச் செய்தான். இவ்வாறு நிலத்தை வளமுறச் செய்ததன் வாயிலாகச் சோர்வு நீக்கிக் குடிமக்களைக் காப்பாற்றினான். இதனால் குடிமக்கள் போர்க் காலங்களில் இவனுக்குப் பெரிதும் உதவினர். உழவர்களின் உதவியால் இவனுக்குப் போர் வெற்றி எளிதாயிற்று.13 தோற்றப் பொலிவு இவன் பெரிய மாலையை அணிந்து இருந்தான். காலிலே பெரிய வீரக்கழல் அணிந்திருந்தான்.14 இவனது மார்பு அகலமும் உறுதியும் கொண்டது.15 கொடிகள் பறக்கும் தேரில் ஏறிக் கொண்டு இவன் பீடுடன் செல்வது வழக்கம்.16 யானைமீது செல்வதும் சில வேளைகளில் வழக்கமாயிருந்தது.17 இவன் தலையில் ‘நார்முடி’ அணிந்திருந்தான். அது பட்டு நூல் போர்வையைக் கொண்டு செய்யப்பட்டு இருந்தது. இதனால் வெள்ளை நிறத்துடன் நாரால் செய்யப்பட்ட முடிபோல் காட்சியளித்தது. அதில் பொன் கம்பிகள் ஊடுருவிய அழகுக் கரைகள் இருநதன. அந்தக் கரைகளுக்கிடையே மணிகளும் முத்துகளும் சேர்த்து அழகு செய்யப்பட்டிருந்தன. மணிகள் கரிய நிறமுடைய களாப்பழம் போலவும், பொன் கம்பிகளில் கோக்கப்பட்ட முத்துகள் களங்காய்கள் போலவும் நிறத்தால் தோற்றம் அளித்தன. மணியும் முத்தும் கோக்கப் பட்ட இந்தக் கோவை, களாப்பழமும் களங்காயும் கோத்துக்கட்டிய கண்ணி போல் காட்சியளித்தது. இந்தக் கோவையால் அழகுபடுத்தப் பட்டிருந்த பட்டுத் துணியால் ஆன முடியை இவன்அணிந்திருந்ததால் இவன் ‘களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரல்’ என்று சிறப்பித்துக் கூறப்பட்டுள்ளான்.18 இந்தப் பெயர் பாடலின் உள்ளேயே பாடிய புலவரால் குறிப்பிடப்பட்டுள்ளமை வலிமை மிக்க சான்றாகத் திகழ்கிறது. கொடைத்தன்மை இனிய பொருள் எதனைப் பெற்றாலும் இவன் அதனைப் பகுத்துண்ணும் பண்பினன் ஆவான்;19 பாணர்க்கும்,20 விறலியர்க்கும்,21 பரிசிலர்க்கும்22 இவன் பரிசில் வழங்கினான். போர்த் தொழிலில் வல்ல யானைகளை இவன் பரிசிலாக வழங்கியதும் உண்டு.23 தனக்கு மகிழ்ச்சியூட்டியவர்களுக்கு இவன் நல்ல கலன்களை வழங்கினான்.24 பண்பு நலம் போரில் வெற்றி பெற்றாலும் சினம் தணியாத அரசர்கள்தாம் சங்ககாலத்தில் மிகுதி. இவனோ சினங்கொள்ளாமலேயே நெடுமிடல், கொடுமிடல் ஆகியவர்களோடு போரிட்டு வென்றனன்;25 போர்க் கைதிகளை நன்முறையில் நடத்தினான். இவன் தனது கொள்கையில் சிறிதும் வளைந்து கொடுக்க மாட்டான். இவன் ஆன்று அவிந்து அடங்கிய செம்மலாக விளங்கினான்.26 சிறப்புப் பெயர் இவனை வானவரம்பன் என்னும் சிறப்புப் பெயராலும் அழைத்து வந்தனர். இவனது ஆட்சியின்கீழ் ஒரு பெரிய நிலப்பரப்பு இருந்தது என்பதை இதனால் உணரலாம். ‘சேரலர் வேந்து’ சேர நாட்டில் ஆங்காங்கே பல அரசர்கள் ஒரே காலத்தில் ஆட்சி செய்துவந்தனர். குட்ட நாட்டை ஆண்டவன் குட்டுவன் என்றும், குட நாட்டை ஆண்டவன் குடவர் கோமான் என்றும், பொறை நாட்டை ஆண்டவன் பொறையன் என்றும் பொதுப்படையாக வழங்கப்பட்டனர். இவன் ஒரு காலத்தில் இத்தகைய சேரர்குடி அரசர்களுக்கெல்லாம் தலைவனாக விளங்கியமையால் இவன் ‘சேரலர் வேந்து’27 எனக் குறிப்பிடப்பட்டான். செல்வமிகுதி இவனும் இவனது சுற்றத்தார்களும் செல்வத்தை வாரி வாரி வழங்கினர். எனினும் இவனது செல்வம் குறைவுபடவில்லை. அந்த அளவு மிகுதியான செல்வம் இருந்தது.28 தூங்கெயில் என்பது ஒருவகைக் கோட்டை. அது வானம் என்னும்நகரில் அமைக்கப்பட்டிருந்தது. அந்தக் கோட்டையை அமைத்தவன் கடவுள் அஞ்சி என்பவன். அந்தக் கோட்டையின் காவலன் வண்டன் என்பவன் ஆவான். இந்தக் காவலை நாடு காவல் என்று கொள்ளலாம். அவன் பெருஞ் செல்வனாகவும் கொடையாளி யாகவும் விளங்கினான். அந்த வண்டன்போல நார்முடிச் சேரலும் சிறந்து விளங்கினான்.29 இவனது தந்தை ‘ஆராத்திருவின் நெடுஞ்சேரலன்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளான். இதனால் இவன் தந்தை வழியே இவனுக்குக் கிடைத்த செல்வம் மிகுதி எனத் தெளிவாகிறது. ஆட்சி ஆளுந்திறமை, கொடை, வீரம் இவை அனைத்தும் ஒருங்கே பெற்றவன். மக்கள் மகிழ்வுடன் கடவுளை வழிபட்டு வாழும்படி இவன் நல்லாட்சி நடத்தினான். மனைவியின் மாண்பு அவள் வானத்துச் செம்மீன் போலக் கற்புக்கடம் பூண்டவள்.30 அவளது கற்பை அறக்கற்பு எனப் புலவர் கூறுகின்றார். அறக்கற் பென்பது ஊடியும் கூடியும் இல்லற நெறியில் வழுவாது கணவனுடன் வாழ்வது, ஏனைய ஆறிய கற்பும், சீறிய கற்பும் இன்றி அவளது கற்பு அறக்கற்பாய் அமைந்தது. தழைத்த கூந்தல், காதிலே குழை, அந்தக் குழைக்கே ஒளி நல்குவது போல் அமைந்து ஒளிரும் நெற்றி, மார்பிலே பொன்னாலான இழைகள், அந்த இழைகளுக்கு ஒளி ஊட்டுவது போல் விளங்கி அழகுத் தெய்வம் பிய்த்துத் தின்னும் உத்தி. இத்தகைய நலங்களுடன் அவள் விளங்கினாள். காப்பியனார் காப்பியாறு என்னும் ஊரில் வாழ்ந்த புலவர் காப்பியனார் என்னும் பெயரைப் பெற்றார். காப்பியன் என்பது காப்பியம் இயற்றி யமையால் வழங்கப்பட்ட பெயர் என்றும் தெரிகிறது. தொல்காப்பி யனார், பல்காப்பியனார் என்னும் பெயர்கள் இதற்கு எடுத்துககாட்டாய்த் திகழ்கின்றன. இந்தக் காப்பியனார் காப்பி ஆற்றின்மீது காப்பியம் பாடியதால் காப்பியாற்றுக் காப்பியனார் என்னும் பெயரைப் பெற்றார் எனக் கொள்வது பொருத்தமாயிருக்கும். காப்பியாறு இப்போது வழங்கும் கபினி என்னும் ஆறாக இருக்கலாம். பதிற்றுப்பத்தில் உள்ள இவர் பாடிய பத்துப் பாடல்களில் ஒரு புதுமையான அமைப்பைக் காண்கிறோம். இந்தப் பாடல்கள் அந்தாதித் தொடையில் அமைந்துள்ளதே அந்தப் புதுமையாகும். ஒரு பாடலின் கடைசிப் பகுதி அடுத்த பாடலின் முதற்பகுதியில் அமையும்படி அமைத்துப் பாடுவது அந்தாதித் தொடை, பதிற்றுப்பத்து 34, 35, 38 ஆம் பாடல்களின் கடைசி அடி அப்படியே அடுத்த பாடலின் முதல் அடியாக அமைந்திருப்பதையும், பிற பாடல்களில் (இறுதிப் பாடல் நீங்கலாக) இறுதியில் உள்ள இரண்டு சீர்கள் அடுத்த பாடலின் தொடக்கத்தில் அமைந்திருப்பதையும் நாம் பார்க்கிறோம். இந்தப் புலவர் திருமால்மீது பற்றுடையவர்போல் காணப்படுகிறார். மாலைக் காலத்தில் துளசி மாலைச் செல்வனை மக்கள் வழிபடுவ தாகவும் நார்முடிச் சேரலின் மார்பு திருமாலிருஞ் சோலை மலை (விண்டு விறல்வரை) போல் இருப்பதாகவும் இவர் கூறுவதால்31 இவரது திருமால் பற்று விளங்குகிறது. இவர் மாலைக் காலத்துக் காட்சிகளில் மகிழ்ந்து திளைத்துள்ளார். மாலைக் காலத்தில் திருமால் கோயிலின் மணி கேட்பதும், மக்கள் குளிர்ந்த நீர்த்துறைகளில் நீராடிவிட்டு வந்து திருமாலின் திருவடிகளைப் பரவுவதும் இவரது உள்ளத்தைக் கவர்ந்துள்ளன.32 போர்க்களத்தில் பேய்களும், முண்டங்களும் ஆடுவதும், குருதி பாய்ந்து செக்கச் செவேலெனத் தோன்றுவதும் அந்திமாலையில் தோன்றும் வானக் காட்சிகளை நினைவுக்குக் கொண்டு வருகின்றன.33 செங்குட்டுவன் பதிற்றுப்பத்தில் குறிப்பிடப்படும் கடல் பிறக்கோட்டிய செங் குட்டுவனும், சிலப்பதிகாரத்தில் காணப்படும் சேரன் செங்குட்டுவனும் ஒருவனே. பெற்றோர் குடவர் கோமான் நெடுஞ்சேரலாதன் இவனின் தந்தையாவான். ‘சோழன் மணக்கிள்ளி’ என்பவள் இவனது தாய் ஆவாள்.1 தாயின் பெயர் சோழ அரசனின் பெயராகவும், ஆண் மகனின் பெயராகவும் அமைந்திருப்பதைப் பிற பெயர்களை ஒப்புநோக்கி அறியலாம். இக்காலத்தில் கணவன் பெயருக்கு முன் ‘திருமதி’ என்னும் அடைமொழியைச் சேர்த்து மனைவியின் பெயராகக் குறிப்பிடும் வழக்கம்போல, அக்காலத்தில் எல்லாரும் அறிந்த தந்தையின் பெயரால் மகளைக் குறிப்பிடும் வழக்கம் இருந்ததை இந்தப் பெயர் காட்டுகிறது. திருமணமாகு முன்னர்ப் பெண்டிரைத் தந்தையார் பெயரோடு தொடர்புபடுத்தியோ, தந்தையின் பெயரால் குறித்தோ வந்தது தெரிகின்றது.2 சிலப்பதிகாரப் பதிகத்துக்கு அடியார்க்கு நல்லார் உரையில் ‘சேரலாதற்குச் சோழன் மகள் நற்சோணை ஈன்ற மக்களிருவருள்’ என்னும் தொடர் உள்ளதால் ‘சோழன் மணக்கிள்ளியீன்ற மகன்’ என்னும் பதிற்றுப்பத்து ஐந்தாம் பதிகத்தின் தொடர் கூறுவது சோழன் மகள் நற்சோணையையே குறிக்கும். ஆட்சியின் தொடக்கநிலை இவனது தந்தை நெடுஞ்சேரலாதன் குடநாட்டு மாந்தை நகரில் இருந்துகொண்டு தனது ஆட்சியைத் தொடங்கினான். சிறிய தந்தை பல் யானைச் செல்கெழு குட்டுவன் குட்டநாட்டு வஞ்சியில் இருந்து கொண்டு ஆட்சியைத் தொடங்கினான். அண்ணன் நார்முடிச் சேரல் குன்ற நாட்டில்3 தனது ஆட்சியைத் தொடங்கினான். இவன் குட்டநாட்டுக் கிழக்குப் பகுதியையும் பூழி நாட்டையும் தன்னகத்தே கொண்ட பகுதியில் இருந்து ஆட்சி செய்தான். இந்த ஆட்சித் தொடக்க நிலைகள் தந்தை அரசாண்ட காலத்திலேயே நாடுகாவல் பணி என்ற முறையில் அமைந்தவை.4 முசிறித் துறைமுகம் இவனது ஆட்சிக்கு உட்பட்டிருந்தது என்று இவனைப் பதிற்றுப்பத்தில் பாடிச் சிறப்பித்த பரணர் குறிப்பிடுகிறார்.5 வஞ்சி மாநகரில் இருந்துகொண்டு இவன் நாடாண்டதைச் சிலப்பதிகாரம் விளக்கமாகக் கூறுகிறது. இவை, இவன் தனது முன்னோருக்குப் பின் முழுமை பெற்றுப் பேரரசனாக, சேரநாட்டுக்கெல்லாம் பெரு வேந்தனாக விளங்கிய காலத்து நாட்டுப் பரப்பு எனக் கொள்வது பொருந்தும். மோகூர்ப் போர் ‘மோகூர் மன்னன் முரசங்கொண்டு’6 என்பதால் இப் போர் நிகழ்ச்சி சிறப்புடையது. இது பாண்டிய நாட்டில் இருந்த ஓர் ஊராகும்.7 பழையன் என்பவன் இவ்வூரை ஆட்சிபுரிந்து வந்தான். இவனைத் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனது படைத் தலைவனாக விளங்கிய பழையன் மாறன் எனக் கொள்வதும் பொருத்தமாகும். அறுகை என்பவன் அக்காலத்தில் இருந்த மற்றுமோர் அரசன். இவன் குன்றத்தூரில் இருந்து ஆட்சி புரிந்து வந்தான்.8 இந்த அறுகை செங்குட்டுவனது நண்பன். செங்குட்டுவனது அண்ணன் நார்முடிச் சேரல் குன்ற நாட்டில் தனது ஆட்சியைத் தொடங்கினான். அவன் இருபத்தைந்தாண்டுகள் அரசாண்டான். அண்ணனுக்குப் பின் சுமார் ஐந்தாண்டுகள் கழித்துத் தன் ஆட்சியைத் தொடங்கி ஐம்பத்தைந் தாண்டுகள் செங்குட்டுவன் அரசாண்டான். எனவே, 35 ஆண்டுகள் (55-20) அண்ணனுக்குப் பிறகு அரசாண்டான். அக்காலத்தில் அண்ணனது குன்ற நாட்டுப் பகுதியைக் குன்றத்தூரில் இருந்து கொண்டு இந்த அறுகை ஆண்டு வந்தானாகையால், சேரர்களுக்கு அவன் நண்பனாக விளங்கினான். வஞ்சிக்கும் குன்றத்தூருக்கும் இடை வெளி சற்று அதிகமாக இருந்ததாலும்9 செங்குட்டுவனுக்கும் இந்த அறுகைக்கும் நட்பு நீடித்திருக்கிறது. மோகூர்ப் பழையன் அறுகையைத் தாக்கி வென்றான் போலும். அறுகையைப் பிடித்து வந்து சிறையில் மறைத்து வைத்துக் கொண்டனர்.10 தன் நண்பனை மறைத்துவைத்த செய்திகேட்டுப் பொறுக்காத செங்குட்டுவன் பழையனை அவனது மோகூரிலேயே தாக்கினான். இந்தப் போரில் பழையனுக்குத் துணையாகப் பாண்டியனும் சோழனும் சேர்ந்து கொண்டனர். அன்றியும் வேளிர் அரசர்கள் பலரும் சேர்ந்து கொண்டனர். இவர்களுக்கும், செங்குட்டுவன் படைக்கும் பெரும்போர் நடந்தது. போர்க்களத்தில் குருதியாறு வெள்ளம்போல் ஓடிற்று. செங்குட்டுவன் பழையனது காவல் மரமாகிய வேப்ப மரத்தை வெட்டிச் சாய்த்தான்; அவனது கோட்டைகள் பலவற்றைக் கடந்தான்; பழையன் கூறிய வஞ்சின மொழிகள் பொய்யாகும்படி வெற்றி பெற்றான். போரில் பழையன் மாண்டான் எனலாம். அவனது வீரர்களும் மாண்டனர். தம் கணவன்மார் போரில் மாண்டது கண்டு மோகூரிலிருந்த அவர்களது மனைவியர் கைம்மைக் கோலம் பூண்டனர். கைம்மைக் கோலத்திற்குத் தலைமுடியை மழித்துக் கொள்வது அக்கால வழக்கம். அவ் வழக்கப்படி அவர்கள் மொட்டை அடித்துக் களைந்தெறிந்த முடியைக்கொண்டு கயிறு திரித்து அக்கயிற்றால் தான் வெட்டி வீழ்த்திய வேப்பமரத் துண்டை யானைகளோடு பிணித்துச் செங் குட்டுவன் தன் நாட்டுக்குக் கொண்டுவந்து சேர்த்தான். அம்மரத்தால் தன் வெற்றிமுரசைச் செய்துகொண்டான். குராலம் பறந்தலைப் போர் மோகூர்ப் போரில் வென்று திரும்புகையில் பழையனது நண்பர்களாக விளங்கிய சில அரசர்கள் செங்குட்டுவனைத் தாக்கினர். அவர்களை இவன் குராலம் பறந்தலை என்னுமிடத்தில் தாக்கி வென்றான்.11 நேரிவாயில் போர் சோழநாட்டு உறையூரின் தென்வாயில் நேரிவாயில் எனப் பெயர் பெற்றிருந்தது. பதிற்றுப்பத்தில் ‘வாயிற்புறம்’ என்று கூறப்படுவதும் இதுவேயாகும். செங்குட்டுவனது மைத்துனர் கிள்ளிவளவன் ஆவான். கிள்ளிவளவன் சோழநாட்டுப் பெரு வேந்தனாவதைச் சோழர் குடியைச் சேர்ந்த ஒன்பது மன்னர்கள் விரும்பவில்லை. எனவே, அவர்கள் கிள்ளிவளவனுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். செங்குட்டுவன் தன் மைத்துனனுக்கு உதவ முன்வந்தான். நேரிவாயிலில் அப்போர் நடைபெற்றது. செங்குட்டுவன் வெற்றிபெற்றான். ஒன்பது குடை மன்னர்களும் ஒரே பகற் பொழுதில் அழிக்கப்பட்டனர்.12 கிள்ளிவளவன் அரசனாக்கப் பட்டான். வியலூர்ப் போர் வியலூர் என்பது சேரநாட்டின் வடபகுதியில் இருந்த ஓர் ஊர். சிறுகுரல் நெய்தல் வியலூர், வயலை வேலி வியலூர். விரிநீர் வியலூர் என்றெல்லாம் இந்த ஊர் சிறப்பித்துக் கூறப்பட்டுள்ளது. இந்த வியலூரில் செங்குட்டுவனுக்கு எதிரான நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அதனால், செங்குட்டுவன் இந்த ஊரைத் தாக்கி அழித்தான்.13 கொடுகூர்ப் போர் வியலூருக்கு வடபால் ஓர் ஆறு ஓடிற்று. அந்த ஆற்றின் வடகரையில் கொடுகூர் என்னும் ஊர் இருந்தது. வியலூரில் செங்குட்டு வனிடம் தோற்ற படையின் சார்பாளர் கொடுகூரில் செங்குட்டுவனைத் தாக்கினர். செங்குட்டுவன் அவர்களுடன் போரிட்டு அவ்வூரையும் அழித்தான்.14 இடும்பில் போர் இது சோழநாட்டு ஊராகும். இவ்வூர் தேவாரத்தில் ‘இடும்பா வனம்’ என்றும் இக்காலத்தில் இரும்பாதவனம் என்றும் வழங்கப்படுகிற தென்பர்.15 செங்குட்டுவன் வெட்சிப் பூச்சூடி ஆனிரைகளைக் கவரும் போரில் ஈடுபட்டான். அவன் தான் கவர்ந்துவந்த ஆனிரைகளை இந்த ஊரின் புறத்தே இளைப்பாற்றிப் பின் தன் நாட்டுக்கு ஓட்டிக்கொண்டு வந்தான். ஆனிரைகளுக்கு உரியவர்கள் இவனை அவ்வூரில் எதிர்த்துத் தாக்கினர். நடந்த போரில் செங்குட்டுவன் வெற்றி பெற்றான். கொங்குநாட்டுப் போர் சோழ அரசனும் பாண்டிய அரசனும் சேர்ந்து கொங்கு நாட்டில் செங்குட்டுவனைத் தாக்கினர். இந்தத் தாக்குதலில் போர்க்களம் குருதியால் செங்களம் ஆகியது. இந்தப் போரில் செங்குட்டுவன் வெற்றி பெற்றான்;16 களவேள்வி செய்து வெற்றியைக் கொண்டாடி மகிழ்ந்தான். தக்கணப் போர் வஞ்சிக் காண்டத்தில் தக்கணப் போர் பற்றிய செய்தி காணப் படுகிறது,17 தமிழ்நாட்டின் வடஎல்லைப் பகுதிகளில் பல்வேறு குடியைச் சேர்ந்தவர்கள் செல்வாக்குப் பெற்று விளங்கினர். கொங்கணர்,18 கலிங்கர்,19 கருநாடர்,20 பங்களர்,21 கங்கர்,22 கட்டியர்,23 வடஆரியர் 24 என்போர் இவர்களில் குறிப்பிடத்தக்கவர். இவர்கள் எல்லோருமே தமிழைத் தாய் மொழியாக உடையவர்கள் அல்லர்.25 இவர்களுக்கும் செங்குட்டுவன் தலைமையேற்ற தமிழர் படைக்கும் போர் நடந்தது. போர் வேங்கடமலைப் பகுதியில் நடைபெற்றது. இந்தப் போரில் செங்குட்டுவன் வெற்றி பெற்றான். கடல் பிறக்கோட்டல் இவன் நிலப் போர்களில் வெற்றி பெற்றது போன்றே கடற் போரிலும் ஈடுபட்டு வெற்றி பெற்றான்.26 இப் போரைப்பற்றிக் குறிப்பிடும் இடங்கள் பலவற்றில் போர்க்களம் கடலாக உருவகம் செய்யப்பட்ட இடங்கள் பல உண்டு. நிலப் பகுதிகளில் நடந்த போரே உருவக நிலையில் இவ்வாறு கூறப்பட்டுள்ளதோ என்று எண்ணத் தோன்றும். உண்மை அஃது அன்று. ‘நீர்புக்குக் கடலொடு உழந்தான்’27 என்னும் தொடரைச் சில இடங்களில் ‘கடற்படை’ என்றே கொள்ள வேண்டும். இவன் பின்னிடச் செய்த கடற்படை எது என்பது தெளிவாகத் தெரியவில்லை. இவன் தந்தை நெடுஞ்சேரலாதன் கடற்போரில் ஈடுபட்டுக் கடப்ப மரத்தைக் காவல் மரமாக உடைய கூட்டத் தாரை வென்றான். அப் போரில் செங்குட்டுவன் துணைநின்று தந்தைக்கு வெற்றி தேடித் தந்திருக்கலாம் அல்லது தந்தையால் அடக்கப்பட்ட கடல் கூட்டத்தார் இவன் காலத்து மீண்டும் குழப்பம் விளைவித்தபோது மீண்டும் போரில் ஈடுபட்டு வெற்றி கண்டிருக்கலாம். செங்குட்டுவனைப் போன்று பழங்காலப் பாண்டிய அரசன் ஒருவனும் கடலில் வேலிட்டதை (கடற் போரில் வென்றதை) இவ்விடத்தில் நினைவுகூரலாம்.28 கடல் பிறக்கோட்டிய இந்தச் செயலைக் கடல் கடந்த செயலாக எண்ணிப் போற்றிய நிலையும் உண்டு.29 தகடூர்ப் போர் செங்குட்டுவன் தகடூரை முற்றுகையிட்டான்.30 அப்போது அங்கு அவனது முற்றுகையை எதிர்த்துப் போரிடுவோர் இல்லை. எனவே, இவன் வறிதே தன்னாடு திரும்பினான். அப்போது அங்கு இவனது பெருஞ் சினத்திற்குத் தீனி கிடைத்தது. கடலை முற்றுகையிட்டான். கடலில் தன்னை எதிர்த்த பகைவர்களைக் கடலுக்கப்பால் ஓட்டிவிட்டான். தகடூர்ப் போரானது கடல் பிறக்கோட்டிய நிகழ்ச்சிக்குமுன் நடைபெற்றதாகும். இமயத்தில் வில் பொறித்தல் செங்குட்டுவன் தன் முன்னோர்களைப்போலவே தானும் இமயமலையில் தன் வில் சின்னத்தைப் பொறித்தான்.31 கடம்பெறிதல் செங்குட்டுவன் தன் தந்தை நெடுஞ்சேரலாதனைப் போலவே கடப்ப மரத்தைக் காவல் மரமாக உடைய கூட்டத்தாரை வென்றான்.32 இந்த வெற்றி தன் தந்தை வெற்றியின் கூறுபாடாயிருக்கலாம். அல்லது இவனது ஆட்சிக் காலத்தில் மீண்டும் போர் மூண்டு அடைந்த வெற்றியாக இருக்கலாம். இரண்டாம் வடநாட்டுப் போர் முதலாம் வடநாட்டுப் போர் மேலே கூறப்பட்டுள்ளது. பின்னர்ச் செங்குட்டுவன் தன் தாயாரைக் கங்கையில் நீராட்டுவதற்காக வடநாடு சென்றான். அப்போது ஆரிய மன்னர் ஆயிரவர் இவனை எதிர்த்துத் தாக்கினர். செங்குட்டுவன் அவர்களைப் போரிட்டு வென்றான். இஃது இவனது இரண்டாம் வடநாட்டுப் போராகும்.33 மூன்றாம் வடநாட்டுப் போர் பாண்டிய நாட்டில் தன் கணவனை இழந்து சேரநாட்டுக்கு வந்து விண்ணுலகடைந்த கண்ணகிக்குக் கோயில் எடுத்து வழிபட விரும்பிய தன் மனைவியின் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டுமென்று செங்குட்டுவன் விரும்பியதால், இம் மூன்றாம் வடநாட்டுப் போர்34 நடைபெற்றது. கண்ணகிக்குக் சிலை செய்வதற்கு வேண்டிய கல்லை இமயமலையிலிருந்து எடுத்து வருவதென முடிவு செய்தான்.35 அவனது படைத் தலைவன் வில்லவன் கோதை வீரமுழக்கம் செய்தான்.36 வடநாடு செல்லும் வழியில் உள்ள மன்னர் எல்லாரும் அவன் வரும் வழியில் தமிழ்நாட்டுச் சின்னங்களாகிய வில், புலி, கயல் கொடிகளைப் பறக்க விடவேண்டுமென்று ஓலை அனுப்பும்படி கூறினான். ‘ஓலை அனுப்ப வேண்டா’ என்றும் வஞ்சிமாநகரில் உள்ள ஒற்றர்களே செய்தியை அறிவிப்பர் என்றும் அவனது மற்றொரு படைத்தலைவன் அழும்பில்வேள் கூறினான்.37 வஞ்சியில் வடநாட்டுப் படையெழுச்சி குறித்துப் பறையறையப் பட்டது. ‘வடநாட்டு மன்னர் தலையில் கண்ணகிக்குக் கல் ஏற்றிக் கொண்டுவராமல் மீள்வேனே யானால் என்னைக் கொடுங்கோலன் என்று இகழ்க’ எனச் செங்குட்டுவன் வஞ்சினம் கூறினான். இவனது ஆசான் இவனைப் புகழ்ந்தான். கணியன் நல்ல நேரம் பார்த்துச் சொன்னான். படைகள் புறப்பட்டன. வஞ்சிப்போர் அவர்களின் நோக்கம். செங்குட்டுவன் சிவனையும் திருமாலையும் வழிபட்டான். வஞ்சியை விட்டு வந்து நீல மலையில் தங்கினான். நீலமலைப்38 பாடி வீட்டில் இருக்கும்போது கலை நிகழ்ச்சி களைக் கண்டு மகிழ்ந்தான். கொண்கான நாட்டவரும், குடகு நாட்ட வரும் இந்தக் கலைநிகழ்ச்சிகளை நிகழ்த்தி மகிழ்வூட்டினர். அப்போது சஞ்சயன் என்னும் தூதன் வந்தான். நூற்றுவர் கன்னராகிய தம் மன்னர், செங்குட்டுவன் சார்பில் சென்று இமயத்தில் கண்ணகிக்குக் கல் லெடுத்து வந்து தர விழைவதாக அவன் கூறினான். கல்லெடுப்பதோடு கனவிசயர்க்குப் பாடம் கற்பிப்பதே தன் நோக்கமாகையால் தானே செல்ல விரும்புவதாகவும், நூற்றுவர்கன்னர் விரும்பினால் செங்குட்டுவன் கங்கையைக் கடக்க உதவி செய்யலாம் என்றும் அத் தூதனிடம் கூறினான். சஞ்சயன் போனபின் சட்டை அணிந்த தென்னவர் ஆயிரவர் செங்குட்டுவனுக்குத் திறை தந்து தம் அரசன் பாண்டியன் அளித்த வாழ்த்து மடலையும் தந்தனர். பின்னர்ச் செங்குட்டுவன் படை நடத்திச் சென்று கங்கை ஆற்றை அடைந்தான். ஆற்றைக் கடக்க நூற்றுவர் கன்னர் உதவினர். செங்குட் டுவன் தன் படையுடன் கங்கையின் வட கரையை அடைந்தான். வடநாட்டு அரசர்கள் கனக விசயர் தலைமையில் திரண்டனர். உத்தரன், விசித்திரன், உருத்திரன், பைரவன், சித்திரன், சிங்கன், தனுத்தரன், சிவேதன் ஆகியோர் அவ்வாறு திரண்டவர்களில் சிலராவர். இவர்கள் செங்குட்டுவனை எதிர்த்துத் தாக்கினர்.39 கடும்போர் நிகழ்ந்தது. செங்குட்டுவன் தும்பை சூடி நூழில் போரில் ஈடுபட்டான். போர் மொத்தத்தில் 18 நாழிகைதான் (சுமார் 7 மணி நேரந்தான்) நடைபெற்றது. செங்குட்டுவன் வெற்றி பெற்றான். கனகவிசயர் கைது செய்யப்பட்டனர். அவர்களுடன் மற்றும் 52 பேர் போர்க்களத்தில் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையை அறிந்த ஏனைய வடநாட்டு அரசர்கள் துறவிக்கோலம் பூண்டு தப்பி ஓடினார்கள். இவன் தன் வஞ்சினத்தை முடித்துக்கொண்டான். இமயமலையில் கண்ணகிக்குக் கல் எடுத்தான்; கனகவிசயர் தலையில் சுமத்திக் கொண்டு வந்து கங்கையில் நீராட்டினான். தோற்ற ஆரிய அரசர்கள் கங்கை ஆற்றின் தென்கரையில் செங்குட்டுவனுக்குப் பாடிவீடு அமைத்துக் கொடுத்தனர். அந்தப் பாடி வீட்டில் இருந்துகொண்டு தன் வெற்றிக்கு உறுதுணையாய் இருந்த தனது வீரர்களுக்கெல்லாம் சிறப்புச் செய்தான். அப்போது தமிழ் நாட்டிலிருந்து வந்த மறையவன் மாடலனுக்குத் தன் எடைக்கு எடை பொன்னைப் பரிசிலாகக் கொடுத்தான்.40 நூற்றுவர்கன்னர்க்கு நன்றி யுடன் விடை கொடுத்து அனுப்பினான்; பின்னர்த் தன் நாட்டுக்குத் திரும்பினான். செங்குட்டுவன் அறவேள்வி ஒன்று செய்தான். அப்போது தன் நாட்டுச் சிறையில் இருந்தவர்களையெல்லாம் விடுதலை செய்தான். மற்றும் தான் கைது செய்து வந்திருந்த கனக விசயரையும் விடுதலை செய்தான். வஞ்சி நகருக்கு வெளியே பூஞ்சோலையில் இருந்த வேளா விக்கோ மாளிகையில் அவர்களை விருந்தினர்களாகத் தங்க வைத்தான். கடவுள் பத்தினிக்குச் சிலைசெய்து கோயில் கட்டி வழிபாடு செய்தான். அந்த வழிபாட்டு விழாவில் தமிழ்நாட்டு அரசர்களுடன் பிற நாட்டு அரசர்களும் கலந்து கொண்டனர். விடுதலை பெற்ற கனக விசயரும், அவர்களுடன் சிறைபிடிக்கப்பட்டு விடுதலை பெற்ற வட நாட்டு அரசர் 52 பேரும், குடக நாட்டுக் கொங்கர், மாளுவ நாட்டு வேந்தர், இலங்கை அரசன் கயவாகு ஆகியோரும் விழாவில் கலந்து கொண்ட சிலர் ஆவர். இவர்கள் தம் நாட்டிலும் கண்ணகிக்குக் கோயில் அமைக்க இருப்பதாகவும், அமைத்து வழிபடும்காலை பத்தினித் தெய்வம் வந்திருந்து அருள்புரிய வேண்டும் என்றும் வேண்டிக் கொண்டனர். இவன் வஞ்சியில் இருந்து புறப்பட்டது முதல் வெற்றி பெற்று மீண்டதுவரை கடந்து சென்ற காலம் 32 மாதங்கள்41 ஆகும். போர்ச் சிறப்பு இவன் கடற்போரிலும் மலைப் போரிலும் ஈடுபட்டான். அப் பகுதிகளில் பல கோட்டைகளைக் கைப்பற்றினான்; பாசறைகளில் பல நாள்கள் தூங்காதிருந்தான். அப்போது இவனுக்குப் பால் உணர்வுகள் தோன்றுவதே இல்லை.42 போரில் தான் கொன்று குவித்த வீரர் பிணங்களிடையே வெற்றிக் களிப்போடு தோள்கொட்டித் துணங்கைக் கூத்து ஆடினான்.43 இவனது போர் வெற்றிகள் பலவற்றைச் சிறப்பித்து விறலியர் இவனது தொன்னகரான வஞ்சியில் இரவில் தெரு விளக்கொளியில் ஆடிப்பாடினர்.44 இவனது போர்வீரர்கள் - இவன் கூறும் வஞ்சின மொழிகள் இவனுக்குக் கைகூடுமாறு செய்த ‘ஒன்றுமொழி மறவர்’45 - வீரக்கழலே அன்றிக் கொடைக்கழலும் அணிந்திருந்தனர்: அம்பு தைத்துப் புண் ஆறிய அழகிய மார்பினை உடையவர்கள். இவர்கள் தும்பைப்பூச் சூடியதில்லை. அதாவது, வலியச் சென்று போர் தொடுத்தது இல்லை; பனம்பூமாலையை அணிந்திருந்தனர்.46 கொடைத்தன்மை போர் வெற்றியால் பகைவர்கள் நாட்டிலிருந்து இவனுக்குக் கிடைத்த பொருள்கள்,47 கடல் வாணிகத்தால் இவனுக்குக் கிடைத்த பொருள்கள்48 ஆகியவற்றை இவன் கொடையாக வழங்கினான். விறலியருக்கு ஆரம், பிடி முதலானவற்றை வழங்கினான்;49 பாணர்க்குப் பொன்னாலான தாமரையை வழங்கினான்;50 வீரர்களுக்குக் கள்ளும் மாவும் வழங்கினான்;51 கொண்டி மன்னர்களுக்குப் போர்க் களிறுகளை வழங்கினான்.52 அகவலர்களுக்குக் (குறி கூறுபவர் களுக்குக்) குதிரைகளும்,53 பரிசில் நாடி வந்தவர்களுக்குக் களிறுகளும் இவன் வழங்கினான்.54 பதிற்றுப்பத்தில் தன்னைப் பாடிச் சிறப்பித்த பரணர் என்னும் புலவர்க்கு உம்பற்காடு என்னும் பகுதியில் அரசுக்குக் கிடைத்த வருவாய் அனைத்தையும் கொடுத்தான். அதனுடன் இவனது அருமை மகன் குட்டுவன் சேரல் என்னும் பெயர் கொண்டவனைப் புலவர்க்குப் பணிவிடை செய்வதற்கென்று அனுப்பிவைத்தான்.55 வடநாட்டு வெற்றிக்குப் பின் கங்கையாற்றின் தென்கரையில் பாடி வீடமைத்துத் தங்கியிருந்தபோது தமிழ்நாட்டிலிருந்து வந்த மாடலன் என்னும் மறையவனுக்குத் தன் எடைக்கு எடை பொன் கொடுத்தான் என்ற செய்தியைச் சிலப்பதிகாரத்தால் அறியலாம். பண்பு நலம் இவன் பெருஞ்சினம் கொண்டவன்.56 போர் முழக்கத்தைக் கேட்பதில் பெரும் விருப்பினன்.57 சினத்தீயைப்போலவே இவன் தண்ணிய சாயலையும் உடையவன். இவனது அருள் காவிரி நீர் போலவும், குமரி முனை நீர் போலவும் பயனும், புனிதத் தன்மையும்58 உடையதாயிருந்தது. தோற்றப் பொலிவு சந்தனம் பூசி அதன்மேல் வண்ணக் குழம்புகளால் வகைபெற எழுதி வண்டுகள் மொய்க்குமாறு பொலிவுடன் இவனது மார்பு விளங்கியது.59 பொன்னாலாகிய மாலையையும் அணிந்திருந்தான்.60 கணையமரம் போன்ற வலிமை மிக்க விலா எலும்புக் கட்டுடன் அகன்றிருந்தது அவன் மார்பாகும்.61 மன்னர்களின் ஏழு முடிகளைக் கோத்து அணிந்திருந்தான் எனக் கூறுவோரும் உளர்.62 இவன் பார்வைக்கு அடக்கம் உடையவனாகக் காணப்பட்டான். எனினும், யாருக்கும் வணங்காத ஆண்மை உடையவனாக விளங்கினான்.63 யானைமீதும் தேர்மீதும் இவன் ஏறிச் சென்றான்.64 சிறப்புச் செயல்கள் இவனது செயல்களில் சிறப்பு மிக்கனவாக இரண்டைக் குறிப்பிடலாம். அஃதாவது கற்பரசி கண்ணகிக்குச் சிலையமைத்துத் தெய்வமாக்கி வழிபட்டதும், காஞ்சியம் பெருந்துறை என்னுமிடத்தில் தன் ஆயத்தார் புடைசூழ நீர்விழாக் கொண்டாடியதும்65 ஆகும். மனைவி இவனது மனைவி வேண்மாள் ஆவாள். இவளைச் சோழர் குடிப்பெண் என்பர். இவள் சிறந்த அழகியாவாள்.66 இவன் பிற மகளிரோடு மகிழ்ந்திருந்ததாகத் தெரிகிறது.67 ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் இவன் தந்தை நெடுஞ்சேரலாதன்; தாய் வேளாவிக் கோமான் பதுமன் மகள்; அண்ணன் களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரல், இவன் செங்குட்டுவனுக்கும் இளையவன் எனலாம்.1 நாடு பயன்படுத்த முடியாமல் அழியும் செல்வவளம் மிக்க நகரம் பந்தர்.2 இது கடற்கரையில் இருந்தது.3 இக் கடற்கரைப் பகுதி ‘கானலம் பெருந்துறை’ என்னும் பெயரைப் பெற்றிருந்தது. இப் பெருந்துறைப் பகுதியையும் அதனை அடுத்திருந்த வயல் வளம் மிக்க நன்னாட்டை யும் ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் தன் தொடக்க காலத்தில் ஆண்டு வந்தான். இக்hலத்தில் பந்தர் இவனது தலைநகரமாகக்கூட அமைந் திருக்கக்கூடும். இது இவனது தந்தை நெடுஞ்சேரலாதன் குடநாட்டி லிருந்து ஆண்டு கொண்டிருந்த காலம். தென்னை வளம்மிக்க துறைமுகம் நறவு. இது குட்டநாட்டின் வடபால் கொண்கான நாட்டில் இருந்தது. அப் பகுதியில் வாழ்ந்த இனத்தவரோடு இவன் மகிழ்ந்து வாழ்ந்துவந்தான்.4 கொண்கான நாடு முல்லைவளம் மிக்க நாடு. அந்நாட்டு மக்கள் புன்புலத்தை உழுது விளையும் கதிர்மணிகளைப் பெற்று வாழ்ந்து வந்தனர். அந்த நாட்டு மக்கள் இவனது தலைமையை விரும்பி ஏற்றனர்.5 நெடுஞ்சேரலாதனுக்குப் பின் செங்குட்டுவன் தலைமையின் கீழ்ச் சேரநாட்டு ஆட்சி அமைந்தது. அப்போது இவன் தான் ஆண்டு கொண்டிருந்த நாட்டுக்குத் தெற்கிலிருந்த குட நாட்டு ஆட்சிப் பொறுப்பையும் ஏற்றான்.6 இவனது ஆட்சிக்காலம் முழுவதும் நாடு காவல் பணியாய் அமைந்திருந்தது எனலாம். இவன் தன்னை அண்டி வாழ்ந்த மழநாட்டுக் குடமக்களுக்குக் கவசம்போல் அமைந்து அவர்களைக் காத்து வந்தான்.7 தன் ஆட்சியை விரும்பாத மழவர்களை இவன் வென்று அவர்களின் தொகை குறையுமாறு செய்தான். மழவர்களுக்குக் கவசம்போல் விளங்கியது போலவே இவன் குதிரைமலைப் பகுதியிலிருந்த வில்லோர் குடிமக்களுக்கும் பாதுகாவலனாய் விளங்கினான்.8 போர் ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் தன் முன்னோர் வென்ற நாடுகளை யெல்லாம் தானும் வென்றான்.9 வேந்தர்தம் தார்ப் படை அழிந்து அலறுகையில் மலைநாட்டைக் கைப்பற்றினான்.10 வேந்தர்கள் போர்க்களத்தில் மெய்மறந்தனர்.11 மனைவியைப் பிரிந்திருந்தவன் வேந்தர்களின் எயிலைப் பிரிந்திருக்வில்லை12 என்பது இவன் உழிஞைப் போரில் ஈடுபட்டிருந்த நிலைமையைக் காட்டும். இவனுக்கு நண்பர் அல்லாத ஏனைய மழவர் இவனது பகைவர்களுடன் சேர்ந்து கொண்டு இவனைத் தாக்கியபோது இவன் அவர்களைக் கொன்று அவர்களின் எண்ணிக்கையைக் குறைத்தான்.13 போர்களில் இவன் பல மன்னர்களைத் தோற்றோடும்படி செய்தான்.14 பகைவர்கள் இவனுக்குத் திறைதந்த போது அதனை ஏற்றுக்கொண்டு அவர்களை அழிக்காமல் விட்டு விட்டு மீண்டான்.15 தண்டாரணியப் போர் இவையேயன்றி ஆறாம் பத்துப் பாடப்பட்ட காலத்திற்குப் பின் இவன் கரந்தைப் போரில் ஈடுபட்டு வெற்றி பெற்றான். தண்டாரணி யத்தில் வாழ்ந்த மக்கள் இவனது குடநாட்டில் புகுந்து வருடை ஆடுகளைக் கவர்ந்து சென்றனர். ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் தண்டாரணி யத்துக்கே படையெடுத்துச் சென்று அவர்கள் கவர்ந்துசென்ற ஆடுகளை மீட்டுக்கொண்டு வந்தான். அவற்றைத் தொண்டி நகருக்குக் கொண்டு வந்து ஆட்டுக் குரியாருக்குக் கொடுக்க ஏற்பாடு செய்தான்.16 படைச் செருக்கு இவனது வெற்றிகளுக்கு உறுதுணையாய் அமைந்தவை போர்த் திறமும் இவனது படையின் ஆற்றலுமாகும். நாகப்பாம்பை இடிகொல்வதுபோலப் பகைவர்களைக் கொல்லும் ஆற்றல் மிக்கவன் இவன்.17 இவனது படை வீரர்கள் வாண்முகம் பொறித்த தழும்பினைப் பெற்றவர்களாய்ப் பயிற்சித் திறம் மிக்கு விளங்கினர்.18 தும்பை சூடித் தேரில் ஏறிவந்து இவனது நாட்டைத் தாக்கிய பகைவரின் தார்ப்படையை இவர்கள் போந்தை சூடி எதிர்த்து வென்று கொன்றனர்.19 இவனது படைகள் பகைவரின் யானைகளைக் கண்டு நிலைகொள்ளாது பாய்ந்தன.20 கொடைத் தன்மை எல்லா வசதிகளையும் பெற்றவர்கள் செல்வர்கள். இவன் அத்தகைய வசதிகளையெல்லாம் பெற்றிருந்ததோடு அவற்றைப் பிறர்க்கு அளித்துச் செல்வர் செல்வனவாக விளங்கினான். சேர்ந்தோரை யெல்லாம் பாதுகாக்கும் கோட்டை அரணாக இவன் விளங்கினான்.21 இரவலர்கள் யாரும் இவனை நாடி வாராத காலத்தில் இவன் தானே சென்று தேடிப் பிடித்துத் தேரில் ஏற்றிக்கொண்டு வந்து அவர்களுக்குப் பரிசில்கள் நல்கினான்.22 அவர்கள் ஆசைப்பட்ட மொழிகளைப் பேசி, பின் பேசியபடியே நடந்து தன் சொல்லை உண்மையாக்கினான்.23 இரவலர்களுக்குப் பரிசில் நல்கியதோடு அமையாது அவர்கள் வாழ்ந்த ஊர்களையே வளம் பெருகச் செய்தான்.24 இவன் இரவலர்கள் சிறு துன்பம் அடைவதைக்கண்டு பெரிதும் அஞ்சி அதனைப் போக்கினான்.25 இத்தகைய பண்புகள் நிறைந்த இவனைப் பலரும் ‘வள்ளல்’ என்று புகழ்ந்துரைத்தனர்.26 இவனேயன்றி இவனது நாட்டு மக்களும், தம்மிடமிருந்த பல வகை வளங்களையும் பகுத்துண்ணும் பண்பினராய் விளங்கினர். அவர்கள் நெறி தவறாது அறம் புரிந்து வாழ்ந்து வந்தனர்.27 இவன் பார்ப்பனர்க்குப் பசுக்களைக் கொடுத்ததோடு தான் ஆண்ட குடநாட்டில் ஓர் ஊரை அவர்களின் நல்வழ்வுக்கென்று ஒதுக்கிக் கொடுத்தான்.28 இவனைக் காக்கைபாடினியார் நச்செள்ளையார் என்னும் புலவர் சிறப்பித்துப் பாடினார். அவர் பெண்பாற் புலவர். அப் புலவரைச் சிறப்பித்து அவன் பரிசில்கள் வழங்கினான்; அவர் நகை செய்து போட்டுக் கொள்ளவேண்டி ஒன்பது கா நிறையுள்ள பொன் கொடுத்தான்; செலவுக்காக நூறாயிரம் காணம் பணம் கொடுத்தான். இவற்றிற்கு மேலாக தன் பக்கத்தில் அமர இருக்கை அளித்துப் பெருமைப்படுத்தினான்.29 பண்பு நலம் இவனது கை இரப்போர்க்குக் கொடுப்பதற்காகக் கவிந்ததேயன்றி, எதை விரும்பியும் மலர்ந்ததில்லை.30 பிறரை விரும்பி அவர்களுக்கு நலம் பயப்பனவற்றைச் செய்யும் நெஞ்சப் பாங்கு உடையவன்.31 ‘இன்று வாண்மறவர் வென்று கொடுத்த உணவை உண்டோம். நாளை கோட்டை கடந்தபின்தான் உணவு’ என்று போர்க் காலத்திலும் பொய் கூறாது உண்மையையே பேசி வந்தான்.32 ‘பகைவர் திறைதரின் அவற்றை ஏற்று அவர்களைப் பணிகொள்வாயாக’ என்று இவன் அறிவுரை கூறப்பட்டுள்ளான்.33 இதனைப் பார்க்கும்போது பகைவர் பணிந்தாலும் அவர்களை ஏற்காத பண்பினனாக ஒரு காலத்தில் விளங்கினான் என்பது பெறப்படும். சிறப்புச் செயல்கள் இவன் ஆடல் கலையில் தேர்ச்சி மிக்கவன்.34 விழாக் காலத்தில் விளக்கொளியில் கோடியர் முழவு முழங்க மைந்தரும் மகளிரும் தழுவிக்கொண்டு ஆடும் துணங்கை ஆட்டத்தில் இவனும் தலைக்கை தந்து (தலைமையிடம் கொண்டு) நெளிந்து ஆடினான்.35 வெற்றிக்குப் பின் போர்க்களத்தில் ஆடும் துணங்கை ஆட்டத்திலும் இவன் பங்கு கொண்டான்.36 இவ்வாறு ஆட்டத்தில் ஈடுபட்டுத் தன் மனைவியையும் மறந்து நீண்ட நாள் வெளியில் தங்கிவிட்டதும் உண்டு.37 அரசாட்சியை மறந்து தங்கிவிட்டதும் உண்டு.38 இவன் தனது நாட்டைக் குழந்தையைக் காக்கும் தாய்போலக் காத்து வந்தான்.39 நன்னடத்தைக்குப் பெருமதிப்பளித்துச் சான்றோர் களைப் பேணி வந்தான்.40 உருவத் தோற்றம் ஒளிவீசும் அணிகலன்களை இவன் அணிந்திருந்தான். போர்ச் சின்னமாக அணியும் உழிஞைப் பூவையும் பொன்னால் செய்து அணிந்துகொள்ளும் அணிவேட்கையன்.41 வேங்கையை வென்ற களிற்றின்மீது ஏறிக்கொண்டு இவன் சென்றது உண்டு.42 சிறப்புப் பெயர்கள் வானவரம்பன்43 ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்44 என்பன இவனது சிறப்புப் பெயர்கள். இவன் ஆடற்கலையில் சிறந்து விளங்கினான் என்று குறிப்பிட்டோம். இதனாலோ, வருடை ஆடுகளை மீட்டுக்கொண்டு வந்தமையாலோ இவன் ‘ஆடு கோட்பாட்டுச் சேரலாதன்’ என்று சிறப்பிக்கப்பட்டான். மனைவி இவன் மனைவி சிறந்த அறிவுநலம் வாய்க்கப்பெற்றவள்.45 இவன் ஆட்டத்தில் ஈடுபட்டுப் பலநாள் வெளியில் தங்கியிருந்த போது அவனைப் பிரிந்து தனிமையில் இவள் வாழ்ந்துவர நேர்ந்தது. அவன் பல நாள்கள் கழிந்து மீண்டும் இவளிடம் வந்த போது இவள் ஊடினாள்.46 பிற சேர வேந்தரின் மனைவியைப் போல ஆறிய கற்புடையவள் அல்லள்; கணவனை ஊடித் திருத்தும் சீறிய கற்பினள். இவளேயன்றி வேறு மனைவியரும் இவனுக்கு இருந்தனர். உதியன் கால்வழி அரசர்கள் (திரண்ட நோக்கு) உதியன் கால்வழி அரசர்கள் என்று தெளிவாகத் தெரியவருபவர் அறுவர் என்று கண்டு அவர்களது வரலாற்றைத் தனித் தனியே விரிவாக அறிந்தோம். இனி அவர்கள் அறுவரது உறவு முறைகள், அரசாண்ட இடங்கள், போர்கள், சிறப்புச் செயல்கள் முதலானவற்றை ஒருங்கிணைத்துத் திரட்டி ஆய்வுக் கண்ணோட்டத்தில் நோக்குவோம். அடியில் காணும் பட்டியல் அவர்களது உறவு முறையினை விளக்கும். உதியன் கால்வழி அரசர்களின் உறவு முறை (பதிற்றுப்பத்துப் பதிகத்தில் உள்ளபடி) உதியஞ் வெளியன் வேள் ஈன்ற இமயவரம்பன் சேரற்கு மான் (மகள்) நல்லினி மகன் நெடுஞ் சேரலாதன் இமயவரம்பன் தம்பி பலயானைச் செல்கெழு குட்டுவன் ஆராத்திருவின் வேளாவிக் கோமான் ஈன்ற களங்காய்க் சேரலாதற்கு பதுமன் தேவி மகன் கண்ணி நார்முடிச் சேரல் குடவர்கோமான் சோழன் ஈன்ற கடல்பிறக் நெடுஞ் மணக்கிள்ளிமகன் கோட்டிய சேரலாதற்குச் செங்குட்டுவன் குடக்கோ வேளாவிக் ஈன்ற ஆடுகோட் நெடுஞ் கோமான் தேவி மகன் பாட்டுச் சேரலாதற்கு சேரலாதன் முன் கண்ட அட்டவணைச் செய்தியைக்கொண்டு கீழ்க் காணும் உருவமைதியால் இந்த அரசர்களது உறவினை விளக்கலாம். உதியஞ் சேரல் (நல்லினி) இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் பல்யானைச் செல் (குடவர்சேரமான் நெடுஞ்சேரலாதன்) கெழு குட்டுவன் (குடக்கோ நெடுஞ்சேரலாதன்) (ஆராத்திருவின் சேரலாதன்) களங்காய்க் கடல்பிறக் ஆடுகோட் (இளங்கோ கண்ணி கோட்டிய பாட்டுச்சேர அடிகள்) நார்முடிச்சேரல் செங்குட்டுவன் லாதன் (தாய் (தாய் (தாய் (தாய் வேளாவிக் சோழன் வேளாவிக் சோழன் கோமான் மணக் கோமான் மணக் பதுமன் தேவி) கிள்ளி) தேவி) கிள்ளி) குட்டுவன் சேரல் இந்த உறவுமுறையைச் செங்குட்டுவனை மையமாகக் கொண்டு காணின் செங்குட்டுவன் தலைமுறை, செங்குட்டுவனின் தந்தை தலை முறை, செங்குட்டுவனின் பாட்டன் தலைமுறை செங்குட்டுவனின் மகன் தலைமுறை என்ற முறையில் நான்கு தலைமுறைகள் அமை கின்றன. இந்த நான்கு தலைமுறையினர் காலம் சுமார் 100 முதல் 150 ஆண்டுகள் என்று கொள்வது....... இலங்கைக் கயவாகு அரசன் செங்குட்டுவன் கண்ணகிக்குச் சிலை யமைத்துவிழா எடுத்தபோது வந்திருந்தான் என்று கூறப்படுவதைக் கொண்டு விழா நடந்த காலம் கி.பி. 175 என்று கொள்ளலாம். செங்குட்டு வன் கண்ணகிக்குக் கோயில் எடுத்தபோது அவன் அரியணையேறி ஐம்பது ஆண்டு நிறைவுற்றிருந்தது. எனவே, செங்குட்டுவன் அரியணை ஏறியது கி.பி. 125 எனத் தெரிகிறது. செங்குட்டுவன் 55 ஆண்டு அரசு வீற்றிருந்தான் என்று பதிகம் கூறுகிறது. எனவே, அவன் அரசாண்ட காலம் கி.பி. 125 - 180 எனக் கருதலாம். இவன் கால இறுதியில் கயவாகு வேந்தன் (கி.பி. 174 - 196) இலங்கையில் அரசாண்டான் எனத் தெரிகிறது. அண்ணன் தம்பியருக்கிடையே அகவை இடைவெளி ஐந்து என்று பொதுவகையாகக் கொள்வோமானால், செங்குட்டுவனின் அண்ணன் நார்முடிச் சேரல் கி.பி. 120-ல் அரியணை ஏறினான் என்றும் செங்குட்டுவனது தம்பி கி.பி. 130-ல் அரியணை ஏறினான் என்றும் கொள்ளலாம். இவ்வாறு கணிக்கும்போது நார்முடிச்சேரல் கி.பி.120 முதல் 145 வரை அரசாண்டான் என்றும், ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் கி.பி. 130 முதல் 168 வரை அரசாண்டான் என்றும் முடிவதைக் காணலாம். தந்தைக்கும் மூத்த மகனுக்கும் இடைவெளி அதாவது, ஒரு தலைமுறை 25 ஆண்டுகள் என்று கொள்வோமானால் நார்முடிச் சேரலுக்கும் அவனது தந்தைக்கும் அரியணையேறிய தொடக்க ஆண்டுகள் முறையே கி.பி.120, கி.பி. 95 என்று அமைவதைக் காணலாம். இந்த முறையில் 50 ஆண்டுகள் அரசாண்ட நெடுஞ்சேர லாதன் கி.பி. 95-145 ஆண்டுகளில் அரசாண்டான் எனலாம். இவனது தம்பி பல்யானைச் செல்குழு குட்டுவன் கி.பி. 100-125 ஆண்டுகளிலும், இவர்களின் தந்தை உதியஞ்சேரல் கி.பி. 70-95 ஆண்டுகளிலும் அரசாண்டனர் என்று முடியும். இந்த அரசாட்சி முறையை அடுத்துள்ள அட்டவணையில் காணலாம். இது பிற சமகால அரசர்களை ஒப்புநோக்கி ஆராயப் பெரிதும் உதவும். இனி இவர்களது நாடு, தலைநகர், போர்களும் அவற்றின் முடிவுகளும் ஆகியவற்றை அடுத்துக்காணும் பட்டியலில் காணலாம். 1. மோகூர்ப் போரில் பழை யனை வென்றான். 2. குராலம் பறந்தலைப் போரில் வென்றான். 3. நேரிவாயில் போரில் வென்று சோழக் குடியினர் ஒன்ப தின்மரை வீழ்த்தித் தன் மைத்துனச் சோழனுக்கு உதவினான். 4. வியலூர்ப் போரில் வென் றான். 5. கொடுகூர்ப் போரில் வென் றான். 6. சோழநாட்டு இடும்பில் போரில் வெற்றி கண்டான். 7. கொங்கு நாட்டை வென்று களவேள்வி செய்தான். 8. தக்கணப் போரில் ஈடுபட்டுக் கொங்கணர், கலிங்கர், கரு நாடர், பங்களர், கங்கர், கட் டியர், வடசூரியர் முதலா னோரை வென்றான். 9. கடல் பிறக்கு ஓட்டினான். 10. தகடூர்ப்போரில் வெற்றி கண்டான். 11. இமயத்தில் வில்லைப் பொறித்தான். 12. கடம்பு எறிந்தான். 13. இரண்டாம் முறையாக வட நாட்டுப் போரில் வென்று தன் தாயாரைக் கங்கையில் நீராட்டி வந்தான். 14. மூன்றாம் முறையாக வட நாட்டில் போரிட்டுக் கனக விசயர் தலையில் கண்ணகிச் சிலைக்குக் கல் சுமத்திக் கொணர்ந்தான். ஆடுகோட் பாட்டுச் சேரலாதன் பொறை நாடு தொண்டி பந்தர், நறவு மலைநாட்டை வென்றான். தண்டாரணியப் போரில் வெற்றிபெற்று வருடை ஆடுகளை மீட்டுவந்தான். அந்துவன் பதிற்றுப்பத்து நூலில் ஏழாம் பத்தின் தலைவனாகச் சிறப்பித்துப் பாடப்பட் டுள்ளவன் செல்வக் கடுங்கோ வாழியாதன். இவனது தந்தை அந்துவன் என்னும் சேர அரசன்.1 அந்துவனின் மனைவி ‘பொறையன் பெருந்தேவி’, இவள் ஒரு தந்தை என்பவனின் மகள். பெருந்தேவி என்னும் வழக்கு பொதுவாக அரசியை உணர்த்தும். எனவே, இவளது பெயர் பொறையனுக்கு மனைவி என்று பொருள் தரும். இதனால் அந்துவன் பொறையர் குடி அரசன் என்பது தெளிவாகப் பெறப்படும். ஆகவே, புறநானூற்றில் குறிப்பிடப்பட்டுள்ள ‘சேரமான் அந்துவஞ்சேரல் இரும்பொறை’2 இந்த அரசனே என்பது பெறப்படும். நாடு இவன் கருவூரைத் தலைநகராகக்கொண்டு நாடாண்டு வந்தான். கொங்கு நாட்டிலுள்ள கருவூரே இவனது கருவூர் என அறிஞர்கள் கருதுகின்றனர். அந்துவனும் மோசியாரும் உறையூர் ஏணிச்சேரி என்னுமிடத்தில் பிறந்து வளர்ந்த மோசியார் என்னும் பெயர்கொண்ட முடவனார். அந்துவனால் மதிக்கப் பட்ட புலவர். ஒரு நாள் அந்தப் புலவருடன் கருவூர் வேண்மாடத்தில் அரசன் அமர்ந்திருந்தபோது சோழ அரசன் முடித்தலைக் கோப் பெரு நற்கிள்ளி யானைமீது அமர்ந்த வண்ணம் கருவூர்த் தெருவில் செல்வதைக் காண நேர்ந்தது. அந்தக் காட்சி சோழ அரசன் சேர நாட்டின்மீது படையெடுத்து வருவதுபோன்று பொதுவகையால் தோற்ற மளித்தது; ஆனால், உணமை அதுவன்று. சோழன் அமர்ந்திருந்த பட்டத்து யானைக்கு மதம் பிடித்துவிட்டது. அது சோழனது கட்டுப் பாட்டிற்குள் நில்லாது விருப்பம்போல் ஓடியது. இந்த நிலையில் தான் அந்த யானை கருவூர்த் தெருவில் ஓடிவந்தது. யானைமீது அரசன் இருந்ததால் அவனைக் காக்கும் பொருட்டுக் காவலர்கள் தொடர்ந்து ஓடிவந்தனர். யானையின் மதங்கொண்ட நிலையையும் சோழனின் அளித்தக்க நிலையையும் வேண்மாடத்தில் சேர அரசனோடு இருந்த புலவர் உணர்ந்து சேர அரசனிடம் எடுத்துக் கூறினார். சேரன் முதலில் சோழன் படையெடுத்து வருவதாக எண்ணினான் போலும். புலவரின் இந்த உரையால் சேரன் தெளிவு பெற்றிருக்கலாம். சோழனை மதங் கொண்ட யானையிடமிருந்து மீட்க உதவியும் இருக்கலாம். சோழன் பிழைத்திருக்கலாம். இருவரும் நண்பர்களாகியிருக்கலாம். முடிவு என்னவாயிருந்தது என்பதற்குச் சான்றில்லை. சோழன் கருவூர் வரவேண்டிய அளவுக்கு என்ன நிலை நேர்ந்தது என்பதை நாம் எண்ணிப் பார்க்கவேண்டும். எமன் போன்ற யானை மீதிருந்த சோழன் கவசம் சிதைந்த அம்புபட்ட அகன்ற மார்பை உடையவனாக விளங்கினான் என்று கூறப்படுகிறது.3 இதனால் இவன் பகைவரை எதிர்த்துப் போராடிய நிலையில் யானைமீது வந்திருந்தான் என்பது பெறப்படுகிறது. இவனது மார்பில் அம்புகள் எய்து காயப் படுத்திய பகைவர்கள் யார்? போர் எங்கு நடைபெற்றது? என்பன வற்றை அறிய இயலவில்லை. எனினும் இவன் சேரனைத் தாக்க வந்த போது பகைவர்களால் காயப்படுத்தப்பட்டான் எனவும், யானை மதங் கொண்டு சோழனுக்கு அடங்காமல் திடீரென ஓடவே பகைவர் மேலும் இவனைத் தாக்கவில்லை எனவும், சோழனது வீரர் மன்னனைக் காக்க வாளேந்திய கோலத்துடன் யானையைப் பின்தொடர்ந்தார்கள் எனவும். போரின் தொடக்கம் சோழனுக்கும் சேரனின் படைத் தலைவனுக்கும் இடையில் நிகழ்ந்திருக்கலாம் எனவும் நாம் உய்த்துணர்வதற்கான குறிப்புகள் உள்ளன. முருகனைச் சிறப்பித்துப் பாடல் அந்துவன் என்பவன் திருப்பரங்குன்றத்திலுள்ள முருகனைச் சிறப்பித்துப் பாடினான் என்று சங்ககாலப் புலவர் ஒருவர் குறிப்பிட் டுள்ளார்.4 இந்தக் கருத்தை உறுதிப்படுத்தும் வகையில் திருப்பரங் குன்றத்திலுள்ள சங்ககாலக் கல்வெட்டு ஒன்று உள்ளது.5 அஃது அந்துவன் என்பவனது பெயரைக் குறிப்பிடுகிறது. இந்த அந்துவன் நம் சேர அரசன் அந்துவனாக இருக்கலாம். நல்லந்துவனார் என்னும் புலவர் திருப்பரங்குன்றத்து முருகனைச் சிறப்பித்துப் பாடியுள்ள பாடல் பரிபாடலில் இடம் பெற்றுள்ளது.6 இவர் நெய்தற்கலிப் பாடல்களையும் மற்றும் சில பாடல்களையும் பாடியவர்.7 நம் சேர அரசன் அந்துவன் இந்த நல்லந்துவனார் என்னும் புலவர் என்று கருதவும் இடம் உண்டு. (அந்துவஞ்சாத்தன்.8 அந்துவன் கீரன்9 ஆகிய பெயர்களுக்கும் இவனுக்கும் உறவுமுறையில் தொடர்பு இருந்திருக்கவும் கூடும். அந்து வஞ்செள்ளை என்னும் பெயரும் இத்தகையதே.)10 பண்பு நலம் அந்துவன் தன் நுண்மையான கேள்வி அறிவால் பகைவர் களையும் தன் நண்பர்களாகப் பிணித்து வைத்திருந்தான்.11 இவன், புலவர் மோசியாரோடு வேண் மாடத்தில் மகிழ்வாக இருந்தான். இவனது பேரன் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும் பொறை, மேலே கூறப்பட்ட மோசியாரின் மகன் என்று பெயர் அமைப்பால் கொள்ளக் கிடக்கும் புலவர் மோசிகீரனார்க்குக் கவரி வீசினான். இந்த நிகழ்ச்சிகள் புலவர்களிடம் இவர்கள் வைத்திருந்த நட்பையும் நன்மதிப்பையும் புலப்படுத்துகின்றன. மகன் இவனது மகன் செல்வக்கடுங்கோ வாழியாதன் ஆவான். செல்வக்கடுங்கோ வாழியாதன் ஒருதந்தை என்பவனின் மகள் பொறையன் பெருந்தேவி. இவளுக்கும் அத்துவஞ்சேரலிரும்பொறைக்கும் பிறந்த மகன் செல்வக்கடுங்கோ வாழியாதன். நாடு இவன் தொடக்க நிலையில் பூழி நாட்டை ஆண்டுவந்தான்.1 பூழி நாடு நேரிமலையைத் தன்னகத்தே கொண்டது.2 செருப்பு மலையும் அயிரையும் கூட இப் பூழிநாட்டிலேதான் இருந்தன.3 பூழி நாட்டிலிருந்த செருப்புமலைப் பகுதியைப் பல்யானைக் குட்டுவன் ஆண்டு கொண்டிருந்த போதுதான், வாழியாதன் அதே நாட்டிலிருந்த நேரி மலைப் பகுதியை ஆண்டுகொண்டிருந்தான். இந்த இருவர் நாட்டுப் பகுதிகளிலும் மணிக் கற்கள் கிடைத்தன.4 நேரிமலைப் பகுதியில் பலாப் பழம் மிகுதி.5 இவனைப் பாடிய புலவர் கபிலர்; இவன் நறவு என்னும் ஊரில் இருந்த போது பாடினார். இனிய சுனைகளையும் செல்வ வளச் செழுமையையும் கொண்ட பக்கமலைகள் பல சூழ்ந்த நாட்டுப் பகுதியில் அந்த ‘நறவு’ என்னும் நகரம் இருந்தது6 என்று கூறப்படுவதால், இவனது தொடக்க கால ஆட்சி பூழி நாட்டுப் பகுதியில் அமைந்திருந்தாலும் இவனது பல வெற்றிகளுக்குப்பின் மேலைக் கடற்கரையில் இருந்த நறவுப்பட்டின மும் இவனது ஆட்சிக்கு உட்பட்டது எனலாம். ‘வில்லோர் மெய்ம்மறை’ என்று இவன் குறிப்பிடப்படுகிறான். ‘வில்லோர்’ குடியினர் குதிரைமலைப் பகுதியில் வாழ்ந்துவந்தனர்.7 அவர் களுக்கு இவன் மார்புக் கவசம்போல் பாதுகாவலாய் விளங்கினான்.8 தன் தந்தைக்குப்பின் இந்த வாழியாதன், அவன் ஆண்டு கொண்டிருந்த கொங்குநாட்டுக் கருவூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டுவரலானான்.9 வெற்றிகள் இவன் எந்த நாட்டோடு, யாரோடு போரிட்டான் என்னும் செய்திகள் பாடல்களில் குறிப்பிடப்படவில்லை. எனினும், பகை வேந்தரின் செம்மாப்பைத் தொலைத்தான்;10 அவர்களின் காவற் காட்டில் தன் முரசு முழங்க யானைப்படையை நடத்திச் சென்றான்;11 உழிஞைப் பூச்சூடி மதிலை முற்றுகையிட்டு ஒரே முற்றுகையில் இருவரைத் தோற்றோடும் படி செய்தான்;12 படையுடன் வளைத்து எயிலை முற்றுகை இட்டான்;13 இவனது வீரர்கள் பகைவேந்தர் ஊர்ந்துவந்த பட்டத்து யானையின் தந்தத்தைக் கொண்டுவந்து தாம் உண்ட கள்ளுக்கு விலையாகக் கொடுத்தனர்14 என்னும் செய்திகள் இவன் பகை வேந்தரின் மதிலை முற்றுகையிட்டு வென்றதைக் குறிப்பிடுகின்றன. பல்யானைக் குட்டுவன் அகப்பாக் கோட்டையை அழித்தான். பாண்டியனையும் அவனைச் சார்ந்தோரையும் வென்றான். இந்தப் போரில் பல்யானைக் குட்டுவனுக்குத் துணையாக வாழியாதன் போரிட்டிருக்க வேண்டும். இந்தப் போர் நிகழ்ச்சிகளே மேற்கண்ட செய்திகளில் குறிப்பிடப்பட்டிருத்தல் வேண்டும். துணையாக நின்று இவன் போரிட்டமையால் வெற்றிகள் இவனுக்குரியன என்று வெளிப்படையாகக் குறிப்பிடப்படவில்லை. இவன் உன்னமரத்தின் பகைவன் என்று குறிப்பிடப்பட்டுள்ளான்.15 இந்த உன்னமரம் அகப்பா மன்னனின் காவல் மரமாகவோ வேறொருவனுடையதாகவோ இருக்கலாம். யாருடையதாக இருப்பினும் இவன் அந்த உன்ன மரத்தை வெட்டிச் சாய்த்தான் என்பது மட்டும் தெளிவாகிறது.16 அகப்பாப் போரில் துணையாய் நின்றதோடு மட்டுமன்றி வேறு சில போர்களிலும் இவன் ஈடுபட்டு வெற்றிகண்டான். செருப்பல கடந்தான்;17 பகைவரை ஓட்டினான்;18 பகைவர் குழுவை நொறுக்கினான்;19 ஞாயிற்றின்முன் விண்மீன் மறைவது போல இவன்முன் நிற்கமாட்டாது பகைவர் மறைந்தனர்20 என்னும் செய்திகள் அவ் வெற்றிகளைத் தெரிவிக்கின்றன. தோற்ற மன்னர்கள் இவனுக்குத் திறை தந்தனர்.21 யானைகள் அத்திறைப் பொருள்களில் அடங்கியிருந்தன.22 தன் பகையைத் தேடிக் கொள்வதால் விளையும் தீங்கை, பகைவர்கள் நாட்டை அழிப்பதன் வாயிலாக வெளிப்படுத்திப் பகைநாட்டுக் குடிமக்களையும் உணரும் படி செய்தான்.23 இதனால், மன்னன் விரும்பாவிட்டாலும் பகைநாட்டு மக்கள் தாமே முன்வந்து இவனுக்கும் இறை (வரி) செலுத்தியதுண்டு.24 இவனது வெற்றிகளுக்கு உறுதுணையாய் அமைந்தது இவனுடைய படை. இவனது நாற்படை போரில் தேர்ச்சி பெற்றிருந்தது.25 இவனது வேல், வாள் வீரர்கள் வெற்றி உறுதி தோன்றத் தம் படைக்கருவிகளில் தம் குடிச் சின்னமாகிய போந்தைக் கண்ணியையும் போர் வெற்றிச் சின்னமாகிய வாகைப் பூவையும் தொடக்கத்திலேயே அணிந்து கொண்டு போருக்குச் சென்றனர்.26 உடம்பெல்லாம் வாள் பட்ட தழும்பு வரிகளும் மார்பில் வேல் பாய்ந்த விழுப்புண் தழும்புகளும் உடையவர்கள் அவர்கள்.27 போர் தொடங்கினால் இடையில் உணவைப் பற்றிக்கூட அவர்கள் கவலைப்படமாட்டார்கள். பகை வேந்தர் பட்டத்து யானையின் தந்தம், தாம் உண்ட கள்ளுக்கு விலை யாகக் கொடுக்கும் அளவுக்கு அவர்களுக்கு எளிய பொருள்.28 கொடைத் தன்மை இவன் சிறந்த வள்ளல்; தன் நாண்மகிழ் இருக்கையில் கொடை விழாக் கொண்டாடிப் பரிசிலர்களுக்கு வேண்டியன வெல்லாம் கொடுத்தான்.29 சேரநாட்டுப் பந்தர்த் துறைமுகத்தில் கிடைத்த முத்து,30 களிறு, மா, ஆநிரை, கதிரடித்துக் குவித்துள்ள களம்31 முதலானவை அவன் வழங்கிய கொடைப் பொருள்கள். அக் கொடைப் பொருள்களை அவன் மழையைக்காட்டிலும் மிகுதியாகக் கொடுத்தான்; பாலைப் பண்ணில் பையுள் இசைத் திறத்தைக் கட்டினால் செவிகளில் பாயும் அருளின்பம் போலப் பரிசிலர் உள்ளம் இன்புறும்படி நல்கினாள்;32 அலர்ந்த நெய்தல்போல் மலர்ந்த முகத்துடன் கொடுத்தான்;33 பெற்றவர்கள் கனவோ என்று மருளும்படி நனவில் கொடுத்தான்;34 ஏற்றவரின் வறுமையெல்லாம் நீங்கும்படி அளித்தான்.35 கொடுக்கும்போது பெறுபவர்களின் சிறுமையை அளவுகோலாக இவன் கொண்டதில்லை. தன் பெருமை யின் தகவையே அளவுகோலாகக் கொண்டான்.36 பரிசில் நாடிவரும் வயிரியர்களைத் தன் அரண்மனைக்கு வெளியில் கண்டபொழுதே குதிரைகளுக்கு அணிகலன்களைப் பூட்டிப் பரிசிலாக அனுப்பி வைத்தான். பாசறையிலும் போர்க் களத்திலும் இருந்தபோதும் கொடுத்தான்.37 நாண்மகிழ் இருக்கையில் நடந்த கொடைப்போரில் பாடினிக்கே வெற்றி.38 இவ்வாறு இவன் கொடை நல்கிய போதெல்லாம் முன்பு கொடுத்தவற்றை நினைத்துப் பார்த்ததில்லை; இவ்வளவு கொடுக்கி றோமே என்று பெருமித உணர்வு தோன்றி மகிழ்வது மில்லை. கொடுக்கும் போதெல்லாம் பெருவள்ளல்.39 மற்றும் இவன் வேள்வி செய்து கொடை வழங்கினான்.40 அவ் வேள்வியில் அந்தணர்களுக்குப் பெறற்கரிய அணிகலன்களைத் தாரை வார்த்துக் கொடுத்தான்;41 கடவுளர்க்கு உணவூட்டினான்; அதனால் ஐயர்கள் இன்புற்றனர்.42 வேள்வி செய்த திருமால் வழிநின்ற புரோகிதனுக்கு ஒகந்தூர் என்னும் நெல் மிகுதியாக விளையும் ஊரையே கொடுத்தான்.43 தன்னைப் பாடிச் சிறப்பித்த புலவர் கபிலர்க்கு நூறாயிரம் காணம் பணமாகக் கொடுத்தான். ‘நன்றா’ என்னும் குன்றின் மீது ஏறி நின்று தன் கண்ணிற்கண்ட இடமெல்லாம் அவருக்குக் காட்டி அவற்றையெல்லாம் அவருக்குப் பரிசாகக் கொடுத்தான்.44 பண்பு நலன் வள்ளன்மைப் பண்புடன் மற்றும் சிலவும் குறிப்பிடத் தக்கனவாய் இவனிடம் அமைந்திருந்தன. இவன் வளமான உள்ளம் படைத்தவன்.45 பார்ப்பார்க்கல்லது பணியாமை, நட்டோர்க்கல்லது கண் அஞ்சாமை, மகளிர்க்கல்லது மார்பு மலராமை, உலகமே பிறழ்ந்தாலும் சொன்ன சொல் தவறாமை ஆகிய பண்புகள் இவனிடம் குடிகொண்டிருந்தன.46 சிறப்புச் செயல்கள் பகைவரை வென்று கிடைத்த கொண்டிப் பொருளை இவன் தமிழ் வளர்க்கும் பணிக்குச் செலவிட்டான்.47 இவன் பல ஊர்களைத் தோற்றுவித்து, நாடோடிகளாகத் திரிந்து வந்த மக்களை நிலைபெற்று வாழும்படி செய்தான்.48 தோற்றப் பொலிவு இவன் சிறந்த அணிகலன்களைத் தன் மார்பில் அணிந்து கொண்டு பொலிவுடன் தோற்றமளித்தான்.49 கழலும் தொடியும் கூட இவன் அணிந்திருந்தான்.50 சிறப்புப் பெயர்கள் செல்வக்கோ,51 செல்வக்கோமான்,52 வாழியாதன்,53 செல்வக் கடுங்கோ வாழியாதன்,54 சேரமான் சிக்கற்பள்ளித் துஞ்சிய செல்வக் கடுங்கோ வாழியாதன்,55 கோ ஆதன் செல்லிரும் பொறை56 முதலான பெயர்களால் இவன் குறிப்பிடப்படுகிறான். ஆதன் என்பது இவன் பெயர். வாழி என்பது இக் காலத்தில் திரு என்று குறிப்பிடுவதுபோன்று சங்ககாலத்தில் மன்னர்களுக்குத் தந்த அடைமொழியாயிருக்கக்கூடும். வெற்றிச் செல்வ மிகுதி, மன்னர்களின் அடைக்கல மிகுதி,57 தம்மைச் சேர்ந்தோர்க்குச் செல்வம்போல் பயன்பட்ட தன்மை58 முதலான தன்மைகளின் அடிப்படையில் ‘செல்வ’ என்னும் அடைமொழி இவனது பெயரில் சேர்ந்திருக்கலாம். மழைமேகங்களைக் காட்டிலும் மிகுதியாகக் கொடை வழங்கிய இவனது தன்மையாலும்59 ‘செல்’ என்னும் அடைமொழி60 தோன்றியிருக்கலாம். காலம் இவனைப் பாடிய கபிலர், பாரி இறந்தபின் இவனிடம் வந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். எனவே, பாரி காலத்திற்குப் பின் இவன் வாழ்ந்தான் என்பது தெளிவாகிறது. பதிற்றுப்பத்து ஏழாம் பத்தில் இவன் கருவூரை ஆண்ட செய்தி குறிப்பிடப்படவில்லை. ஆனால், பாடலிலேயே அச் செய்திக்கான குறிப்பு உள்ளது. எனவே, ஏழாம் பத்து இவன் பூழிநாட்டில் ஆண்டுக் கொண்டிருந்தபோதே, அதாவது அவனது தந்தை கருவூரில் ஆண்டுகொண்டிருந்தபோதே பாடப் பட்டது என்பது தெளிவாகிறது. பல்யானைக் குட்டுவன் அகப்பாக் கோட்டையை அழித்த போரில் இவன் உதவினான் என்பது முன்பே குறிப்பிடப்பட்டது. எனவே, இவன் பல்யானைக் குட்டுவன் அரசாண்ட அதே 25 ஆண்டுக்கால எல்லையில் 25 ஆண்டுகள் அரசாண்டான் எனலாம். இவன் சிக்கற்பள்ளி என்னுமிடத்தில் இறந்து போனான்.61 முன்னோர் இவன் ‘சேரலர் மருகன்’ என்று குறிப்பிடப்படுகிறான்.62 இதனால் இவன் சேரர் குடியில் தோன்றியவன் என்பது தெளிவாகிறது. இவனது முன்னோர் தம் கொள்கையில் உறுதிப்பாடு உடையவர். அவர்கள் தம் குடிமக்கள் தளர்ச்சியடையா வண்ணம் நல்லாட்சி புரிந்தனர்; நிலம் நல்ல பயனைத் தரும் வகையில் வேளாண்மைக்கு உதவினர். வெயிலின் கொடுமை நீங்க ஆங்காங்கே மண்டபங்கள் கட்டி உதவினர். பருவமழை தவறாது பொழியக் காடுகளைப் பாதுகாத்து வந்தனர். நாற்றிசையும் வென்று இவ்வாறு நல்லாட்சி புரிந்தனர். குடிப்பூ சேர மன்னர்களின் குடிப்பூவாகிய போந்தைக்கண்ணி இவனது போர்ப்படைக் கருவிகளுக்குச் சூட்டப்பட்டது என்று கூறப்படுவதால்63 அஃது அவனது குடிப்பூ என்பது தெளிவாகிறது. மனைவி வேள் ஆவிக்கோமான் பதுமன் என்பவனின் பெண்மக்கள் இரு வருள் ஒருத்தியை வாழியாதனும் மற்றொருத்தியை இமய வரம்பனும் மணந்திருந்தனர். வாழியாதன் மணந்தது இளையவளை எனலாம். காமர் கடவுளும் (காமனும்) கண்டு தனக்கும் கிடைக்க வில்லையே என்று எண்ணும் வகையில் பேரழகும் கற்பும் உடைய வளாக இவள் விளங்கினாள்.64 இவள் தன் கணவனிடம் நகைச் சுவையாகப் பேசியபோதும் பொய்மொழி புனைந்த தில்லை.65 வாழி யாதன் பல மகளிரைத் தழுவி மகிழ்வது உண்டு.66 இதுபற்றிப் பிறர் கூறிய புறஞ்சொற்களை இவள் பொருட்படுத்தியதில்லை.67 பெண்மை, மடமை, கற்பு ஆகிய பண்புகளில் இவள் தலைமைபூண்டு விளங் கினாள்.68 செல்வக் கடுங்கோவின் அரண்மனைக்கேற்ற நல்லோளாக இவள் விளங்கினாள்.69 அரண்மனை இவனது அரண்மனையில் ஓவியங்களும் சிற்ப வேலைப் பாடுகளும் நிறைந்திருந்தன.70 மக்கள் இவனுக்கு இரண்டு ஆண்மக்கள் இருந்தனர். இவர்களைக் கொண்டு வாழியாதன் முதியர் குடியினரைப் பேணிவந்தான். முதியர் குடியினர் சேரர் சார்பாளர். அவர்களைப் பேணுதல் சேரர்களின் கடமையாகத் தொன்றுதொட்டு அமைந்துவந்தது (உதியஞ்சேரல் பேணியது காணலாம்). இவன் தன் மக்களின் வழியே தன் தொல்லோர் கடமையை நிறைவேற்றினான்.71 இரண்டு மக்களுள் மூத்தவன் எட்டாம் பத்தின் தலைவன். இளையவன் 8ஆம் பத்துத் தலைவனின் தந்தை. (இவர்களைப் பற்றித் தொடர்புள்ள வரலாற்றுப் பகுதிகளில் காணலாம்.) தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை இவனது தந்தை செல்வக்கடுங்கோ வாழியாதன். தாய் பழனி மலைப் பகுதியை ஆண்ட பதுமன் என்பவனுக்கு மகளாய்ப் பிறந்து செல்வக் கடுங்கோ வாழியாதனை மணந்தவள்1 இவளது உடன்பிறந்தாள். ஒருத்தி நெடுஞ்சேரலாதனை மணந்தாள் என்பதை நினைவு கூரலாம். நாடு பெருஞ்சேரலிரும்பொறை தொடக்கக் காலத்தில் ஆண்டு கொண்டிருந்த நாடு இன்னதெனத் தெரியவில்லை. எனினும், அந்த நாடு பகன்றைப் பூக்களைக் குடிப்பூவாகச் சூடும் உழவர்கள் வாழ்ந்த நெல் வளம்மிக்க நாடு என்று தெரிகிறது.2 வளர்ந்த இடம் இவன் ‘புகார்ச் செல்வன்’ என்று கூறப்படுகிறான்.3 அவ்வாறு இவன் கூறப்படும்போது புகார் நாட்டு உயர்திணை மகளிரும் (செல்வச் சீமாட்டியர்) வயலில் நாரைகளை ஓட்டும் மகளிரும் (உழைக்கும் பெண்டிர்) இரவும் பகலும் பாசிழை களையாது இணைந்து குரவை ஆடும் இடம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இக் குறிப்பு இத்தகைய பெண்டிர்க்கிடையே இவன் வளர்ந்தவன் என்பதைத் தெளிவுபடுத்து கின்றது. இதனால், இவன் புகார் நகரத்தில் இளமையில் வளர்ந்து வந்தான் எனலாம். நாடு காத்தல் ‘பூழியர் மெய்ம்மறை’ என்று இவன் கூறப்படுகிறான். பூழி நாட்டு மக்களுக்குக் கவசம்போன்று விளங்கினான் என்பது இதன் பொருள். இவன் தொடக்கக் காலத்தில் ஆண்டுகொண்டிருந்த நாட்டுக்கு அண்மையில் பூழிநாடு இருந்தது. அந் நாட்டைக் காக்கும் பொறுப்பும் இவனிடம் இருந்தது.4 காமூர்ப் போர் கழுவுள்5 என்பவன் காமூரைத் தலைநகராகக்கொண்டு ஆண்டவன். இந்தக் காமூர் தோட்டிமலையில் இருந்தது. ஆழமான அகழி, குறுகிய ஞாயில் உறுப்புகளைக் கொண்ட மதில் ஆகிய அரண்களை உடையது அந்த ஊர். அவ்வூர் மக்கள் பசு வளர்த்த இடையர்கள். அரசனது போர் வீரர்களாக வாழ்ந்த அவ்வூர் இளையர்கள் பிற நாடுகளுக்குச் சென்று வெட்சிப் போர் செய்து ஆநிரைகளைக் கவர்ந்துவந்த ஆற்றல்மிக்க வீரர்கள். பெருஞ்சேரல் இரும்பொறை கழுவுள் மன்னனது கோட்டையைத் தாக்கினான். வென்று காமூரைத் தீக்கிரையாக்கினான். அதில் எழுந்த தீப் புகை, திசைகளையும் மதில்களையும் மறைக்கும் அளவுக்கு மிகுந்து உயர்ந்தது. இந்தப் போர் காலையில் தொடங்கி மாலையில் முடிவுற்றது. தன் தோல்வியை எண்ணிய கழுவுள். மறுநாள் விடியுமுன்பே காமூரை விட்டு ஓடிவிட்டான். தலைவனை இழந்த காமூர் மக்கள் கலங்கினர்; மேலும் போர் செய்யாமலிருக்கும்படி பெருஞ்சேரலை வேண்டிக் கொண்டனர்; கைம்மாறாகப் போர் யானைகளையும் அணிகலன் களையும் தந்தனர். அவர்கள் தந்த திறைப்பொருளைப் பெற்றுக் கொண்டு பெருஞ்சேரல் மேலும் அவர்களைப் போரிட்டுக் கொல்லாது விட்டு விட்டு மீண்டான். கையூட்டு வாங்கிக் கொண்டு உயிரைக் கொல்லாது விட்டுவிட்டுச் செல்லும் எமன்போல அவன் மீண்டான் என்று கூறப்படுகிறது. இந்தப் போரில் பெருஞ்சேரல் இரும்பொறையோடு 14 வேளிர் தலைவர்கள் சேர்ந்திருந்தனர் எனத் தெரிகிறது.6 இந்த வேளிர் தலைவர்கள் தாய்வழி உறவினரான பழனிமலை வேளிர், மனைவிவழி உறவினரான மையூர் வேளிர், இந்த வேளிர்களுக்கு உறவினரான பிற வேளிர் ஆகியோர் சேர்ந்த குழுவினர்.7 இந்தப் போரில் கழுவுள் மடமை அதாவது, அறியாமை காரணமாகப் பெருஞ்சேரலை எதிர்த்துள்ளான் என்பதை எடுத்துக் கூறிப்8 போருக்குப்பின் இருவரையும் ஒன்றுசேர்க்க அரிசில்கிழார் முயன்றுள்ளார் எனத் தெரிகிறது. இவரது முயற்சி கைகூடியிருக்கலாம். கொல்லிமலைப் போர் கொல்லிமலையில் நீர்கூர் என்பது பண்டைக்காலத்தில் இருந்த ஓர் ஊர். கழுவுளை வெற்றிகண்ட பெருஞ்சேரல் இரும்பொறை கொங்கு நாட்டில் ஊடுருவி அதியமானை இந்த ஊரில் தாக்கினான்.9 பெருஞ் சேரலின் செல்வாக்கைக் குலைக்க விரும்பிய சோழனும் பாண்டியனும் அதியமானுடன் சேர்ந்து கொண்டனர். போர் கடுமை யாக நடைபெற்றது பெருஞ்சேரல் வெற்றி பெற்றான்; பகையரசர்களின் முரசு, குடை, அணிகலன்கள் முதலானவற்றைக் கைப்பற்றிக் கொண்டான். தன் வெற்றிக்கு அறிகுறியாகப் போர்க்களத்திலேயே கள வேள்வி ஒன்று செய்தான். வெற்றிக்கு உதவியவர்களுக்கு வேண்டிய வற்றைப் போர்க்களத்திலேயே நல்கல் களவேள்வி எனப்படும். மகளிர் வருந்தும் வண்ணம் அவர்கள் முன்னிலையிலேயே பகைவர்களை இவன் கொன்றான்.10 இத்தகைய கொடுமையை வீரம் என்று கருதியது வியப்பே. ‘புகார்ச் செல்வன்’ என்று இவன் கூறப்படுவது புகார் நகரில் வளர்ந்தமை நோக்கி என்று முன்னமே கூறியுள்ளோம். புகார் நாட்டை வென்றதால் இவன் இவ்வாறு கூறப்பட்டான் என்று இதற்குப் பொருள் கொள்வாரும் உளர். இப் பொருள் சிறப்பின்று. எனினும் கொல்லி மலைப் போரில் அதியமானுக்குத் துணையாக வந்த இருவேந்தர்களுள் சோழனும் ஒருவன். ஆகையால், அவனை வென்றமை நோக்கி இவ்வாறு கூறப்பட்டான் எனக் கொள்ளுதலும் ஒருவகையில் அமையும். அவ்வா றாயினும் சோழநாட்டைத் தாக்கி வென்றான் என்றோ அதனால் புகார் நாட்டைத் தன் ஆட்சியின்கீழ்க் கொண்டு வந்தான் என்றோ கூறுவது பொருந்தாது. தகடூர் வெற்றி அதியமானின் மகன் எழினி.11 அதியமான் கொல்லிமலைப் போரில் சேரனிடம் தோற்றபின் பசும்பூட் பாண்டியனது படைத் தலைவனாக அமர்ந்துவிட்டான்.12 கொல்லிமலைப் போரில் வெற்றிபெற்ற பெருஞ்சேரல் அதியமானின் தலைநகரான தகடூரைத்13 தாக்கினான். தன் தந்தை அதியமானுக்குத் துணையாகக் குதிரைமலைப் பகுதியில் ஆட்சி செய்து கொண்டிருந்த எழினி, தன் தந்தையின் தலைநகரைக் காக்க விரைந்து வந்து போரிட்டான். தாமரைப் பூக்களையும், நெய்தல் பூக்களையும் வீசி மகளிர் கிளிகளை ஓட்டும் வளம்மிக்க பகுதிகளை உடையதாக அக்காலத் தகடூர் விளங்கியது. அத் தகடூரைச் சுற்றிக் காவற்காடு இருந்தது. இந்தக் காட்டரண் போர்வீரர்களின் பயிற்சிக்களமாக விளங்கியது. தேர்ச்சி பெற்ற வீரர்களின் காவலையும் அது உடையதாக இருந்தது. பெருஞ் சேரல், தகடூரை அரசன் இல்லாத போது தாக்கியதால் எளிதில் கைப்பற்றிக் கொண்டான்; கோட்டையை அழித்துக் கைப்பற்றிக் கொண்டான். கோட்டை அழிந்ததைக் கண்ட மறவர்கள் பாதுகாவல் நாடி ஓடிவிட்டனர். எழினி தன் தந்தையின் தலைநகரை மீட்கப் போராடினான்; ஆனால், போரில் கொல்லப்பட்டான். குட்டுவன் தகடூரைத் தாக்கிக் கொளுத்தினான் என்றும், அப்போது அவனை எதிர்த்துப் பேராடுவதற்கு ஆள் இல்லை என்றும் பரணர் குறிப்பிடுகிறார்.14 பெருஞ்சேரல் தகடூரைத் தாக்கியபோது அவனுக்குத் துணையாக15 வேந்தன் செங்குட்டுவனும் வந்திருந்து தகடூரை வென்ற செய்தியையே பரணர் இவ்வாறு கூறியுள்ளார். செங்குட்டுவன் தகடூரை அழித்துவிட்டு எதிர்ப்போர் இன்றி மீண்டான். பெருஞ்சேரல் கோட்டையில் தங்கியிருந்து ஆட்சிசெய்யத் தொடங்கிய போது எழினி தாக்கிய போர் மூண்டது என்றும், எனினும் சேரரே வெற்றி பெற்றனர் என்றும் கொள்வது பொருத்தமானது. சேரன் செங்குட்டுவன், பெருஞ்சேரல் இரும்பொறை, அதியமான் ஆகியோர் சமகாலச் சேரர் குடியினர். இவர்கள் மூவரும் பனம்பூ மாலை அணிபவர். செங்குட்டுவன் தந்தை நெடுஞ்சேரலாதனும் பெருஞ்சேரல் தந்தை செல்வக்கடுங்கோவும் பழனி மலைப் பகுதியில் ஆண்ட வேள் ஒருவனின் இரண்டு பெண் மக்களைத் திருமணம் செய்து கொண்டதால் இவர்களிடையே உறவு நெருக்கமா யிருந்தது. எனவே, இருவரும் சேர்ந்து தம்மோடு உறவு நெருக்கம் இல்லாதவனும், தம் பகைவேந்தரான சோழ பாண்டியரோடு தொடர்பு கொண்டிருந்தவனு மாகிய அதியமானை சேரரின் கிளைக்குடியைச் சேர்ந்த அதியமானை - ஒழிக்கத் திட்டமிட்டு வெற்றிகண்டனர். செல்வக்கடுங்கோ வாழியாத னுக்கு இரண்டு ஆண்மக்கள் இருந்தனர் என்று குறிப்பிட்டோம். அவர்களுள் மூத்தவன் இங்குக் கூறப்பட்ட பெருஞ்சேரல் இரும் பொறை. இளையவன் ஒன்பதாம் பத்தின் தலைவனான இளஞ்சேரல் இரும் பொறையின் தந்தை. அவன் பெயரை ஒன்பதாம் பதிகம் ‘குட்டுவன் இரும்பொறை’ என்று குறிப் பிடுகிறது. பரணர் தகடூரில் பொருமுரண் பொறாது திரும்பிய குட்டுவன் என்று குறிப்பிடுவது இவனையோ என்று ஐயுறவுக்கும் இட முண்டு. இந்த ஐயுறவு வேண்டியதில்லை. பரணர் குறிப்பிடும் குட்டுவன், குட்டுவன் இரும்பொறை அல்லன். பரணர் குறிப்பிடும் குட்டுவன் தகடூரில் பொருமுரண் பொறாது வென்று கடலை முற்றுகை யிட்டுக் கடல் அலை விலகும்படி நல்ல துறைமுகம் அமைக்கும் பணியில் ஈடுபட்டான் இதனாலோ, கடற்போர் வெற்றி யாலோ கடல் பிறக்கோட்டினான் என்று அவன் குறிப்பிடப்பட்டுள் ளான். எனவே, நாம் மேலே கூறியவாறு சேரன் செங்குட்டுவனே அதாவது, கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவனே பெருஞ்சேரல் இரும்பொறைக்கு உதவியாக இருந்தான் என்று கொள்ள வேண்டும். இவனது போரைக் குறிப்பிடும்போது புலியைக் கொன்று விட்டுப் பின் யானை ஒன்றைக் கொல்லும் அரிமா16 இவனுக்கு உவமையாகக் கூறப்பட்டுள்ளது. இஃது இவன் இரண்டு அரசர்களைக் கொன்ற செய்தியைக் குறிப்பிடுகிறது எனலாம். எழினி இவனால் கொல்லப்பட்ட செய்தி தெளிவு. இவனால் கொல்லப்பட்ட மற்றோர் அரசன் பெயர் தெரியவில்லை. பகைவர் நிலை இவனைத் துன்புறுத்தியவர் தானியச் சேமிப்புக் களஞ்சியத்தை உடைத்த சிறுவர்கள்போலத் துன்புற்றனர் என்றும்17 இவனது பகைவர்கள் இவனது ஆற்றலைப் புலவர்கள் கூறும் போது உணர்வதில்லை. இவனது சான்றோர் (படைவீரர்) செயல்படும் போது உணர்வார்கள் என்றும்,18 வேந்தரும், வேளிரும், பிறரும் ஒன்றுசேர்ந்து வந்தாலும் பணிந்து இவன் வழியில் நடக்காவிட்டால் அவர்களது நாடு இவனால் வெள்வரகு விதைக்கப்பட்டுப் பாழாகும் என்றும்19 புலவர் கூறுவது இவனது பேராற்றலையும் பகைவரின் எளிமையையும் உணர்த்துவனவாக உள்ளன. பகைவரின் முரசை அறுத்தும், பகைவரின் பட்டத்து யானைக் கொம்புகளை வெட்டியும் அரியணை செய்து அமர்ந்து, குருதிக் கலப்பில்லாத உணவுப் படையலை ஏற்காத இவனது அயிரை மலைக் குலதெய்வம் போலக் கேடில்லாப் புகழுடன் வாழவேண்டும் என்றும்,20 போர் முறையில் பகைவரிடம் திறைபெற்று வாழ வேண்டும் என்றும்21 இவன் வாழ்த்தப்படுகிறான். படை இவனது யானைப் படை கொங்கர்களின் பசுக் கூட்டம்போல் பெரியது. அந்த நாட்டு (தகடூர் நாட்டு) ஆட்டு மந்தைபோல் குதிரைப் படை பெரியது. தேர்ப்படைகளும் காலாட் படைகளும் எண்ணில் அடங்காதவை. இவனது படை வீரர்களில் வேற்படையினர் மிகுதி.22 கொடைத்தன்மை படைவீரர், தம்மிடம் வந்து இரந்தவர், இரக்க இருப்பவர், விறலியர் முதலானவர்களுக்கு இவன் கொடை வழங்கினான். கனவிலும் புலவர்கள் பிறரைக் கருதாவண்ணம் மிகுதியாக வழங்கினான். மழைபோல் வரையாது வழங்கினான்.23 பெருஞ்சேரல் இரும்பொறை தன்னைச் சிறப்பித்துப் பாடிய அரிசில்கிழார் என்னும் புலவருக்குத் தன் அரண்மனையை அரசுரிமை யோடு பரிசாகக் கொடுத்தான். தானும் தன்மனைவியும் அரண் மனைக்கு வெளியே வந்து நின்றுகொண்டு அவற்றைப் புலவருக்குக் கொடுத்தான். அவற்றுடன் தன் சொந்தப் பணமாக இருந்த ஒன்பது நூறாயிரம் காணம் பணத்தையும் அவருக்குக் கொடுத்தான். புலவர் அவற்றை ஏற்றுக்கொண்டார். பின்னர்த் தாம் பெற்ற பொருள்களை அவனே ஏற்றுக்கொண்டு ஆளவேண்டுமென்று இரந்து வேண்டினார். பெருஞ் சேரல் புலவரின் வேண்டுகோளை நிறைவேற்றி மீண்டும் ஆட்சிப் பொறுப்பை ஏற்றான். புலவர் அரிசில்கிழார் அதுமுதல் அவனுக்கு அமைச்சராக விளங்கி வந்தார். வேள்வி இவன் நல்லோர் உரைகளைக் கேட்டுப் படிவ நோன்பு தவறாது இருந்து வேள்விகள் செய்தான்.24 இந்த வேள்வியால் உயர்ந்தோர் (உயர்நிலையிலிருந்த பார்ப்பனர்) மகிழ்ந்தனர். இந்த வேள்வி வேட்டலில் இவனது மனைவி வேறுபட்ட கருத்துடைய வளாய் இருந்தாள் (வேள்விக்கு ஒப்பவில்லை). இவர்களுக்கு நாடாளத்தக்க ஓர் ஆண் குழந்தை பிறந்தது. அவனைக்கொண்டு இவ்வுலகில் உள்ள மக்களுக்குச் செய்யவேண்டிய கடமைகளை எல்லாம் இவன் செய்தான். அதாவது, இவன் மகன் அரசனாகவும் மக்கள் தொண்ட னாகவும் விளங்கினான். இந்த நிகழ்ச்சி மனைவி இல்லாமல் கணவன் மட்டுமே வேள்வி செய்து மனைவி குழ்ந்தையைப் பெற்றெடுத்த நிகழ்ச்சி ஆகையால், அரிசில்கிழார் என்னும் தமிழ்நெறியறிந்த புலவர்க்கு வியப்பை உண்டாக்கவில்லை. காரணம், வேள்விக்கும் குழந்தைப் பேற்றிற்கும் தொடர்பில்லை. புலவர்க்கு வியப்பை உண்டாக்கியது வேறொன்று இருந்தது. அது அவனிடமிருந்த நரைமூதாளனை அறிவு, தெளிவு பெறச் செய்ததேயாகும். பெருஞ்சேரல் இரும்பொறை பார்ப்பானைக் கொண்டு வேள்வி செய்தானல்லனோ? அப்போது அந்த வேள்வியால் பயனில்லை என்பதைத் தானே உணர்ந்திருந்தான். எனினும், நரை மூதாளனாய் உலகியல் முழுதும் உணர்ந்தவன்போல் அவனிடம் வாழ்ந்த பார்ப்பானின் மகிழ்ச்சிக்காகவே வேள்வி செய்தான். தன் படிவ நோன்புகளால் சித்துமுறையில் இருந்து குழந்தைப் பேற்றைப் பெற்றான். இந்தப் ‘படிமைச் சித்துத் தவம்’ உடையோர் கொடை, மாண்பு, உடல் உள்ள செல்வ வளம், எச்சமாகிய குழந்தைப் பேறு, தெய்வத்தன்மை ஆகிய யாவும் கைவரப் பெறலாம் என்பதைத் தெளிவுபடுத்தினான். இவனிடம் தோற்ற நரைமூதாளப் பார்ப்பான் சேர நாட்டை விட்டே ஓடிவிட்டான். இந்தச் செயல் புலவரை வியப்புக்கு உள்ளாக்கியது. பண்புநலம் இவனது பண்புகள் குறித்து அரிசில்கிழார் 25 கூறுகிறார். இவன் போரை விரும்பும் உடல்வலிமை மிக்கவன். பிறர்க்கு இவன் துணை யாவானே அன்றிப் பிறர் துணையை வேண்டுவதில்லை என்னும் அளவுக்குத் தன்நிகரில்லாதவன் 26 பகைவர்களுக்கு மடங்கல் தீப் போன்றவன்; சினம் மிக்கவன்;27 போரில் இவன் தன் உயிரைப் போற்றுவ தில்லை; பெரியோரைப் பேணுவான்; சிறியோரை அளி செய்து காப்பாற்றுவான்;28 புகழ்தரும் கல்வி நலம்சான்றவன்;29 செம்மையான நாநலம் படைத்தவன்;30 அளக்க முடியாத நற்பண்புகள் மிக்கவன்.31 இவனது ஆண்மை நலம்32 கண்டு உலகிலுள்ள ஆண்களின் ஆண்மை தேய்வுற்றது. தோளில் பூமாலையணிந்து மகிழ்வுடன் இவன் வாழ்ந்தான்.33 பொன்மாலை அணிவதும் உண்டு.34 புரவி பூட்டின தேரில் போர்க்களம் செல்வதும்,35 கொடி பறக்கும் தேரில் பிற இடங்களுக்குச் செல்வதும்36 இவன் வழக்கம். பல வேற்படைகளைத் தாங்கிச் செல்வதும், யானைமீது செல்வதும் உண்டு.37 மனைவியின் மாண்பு இவனது மனைவி அந்துவஞ்செள்ளை. அவள் மையூர் (மைசூர்) கிழான் என்னும் வேளிர் தலைவனின் மகள். அறல் போன்ற அழகிய நீண்ட கூந்தலை உடையவள் இவள்.38 மனைவியர் இவன் தன் மலர்மாலை குழைய மகளிர் பலரைத் தழுவி மகிழ்ந்தான் என்று கூறப்படுகிறது.39 இதனால் அந்துவஞ்செள்ளை யாகிய பட்டத்தரசியே அன்றிப் பிற மனைவியரும் இவனுக்கு உண்டு எனத் தெரிகிறது. மகன் பெருஞ்சேரல் சில காலம் மகப்பேறின்றி இருந்து தன் சித்துப் படிமைத் தவநெறியால் தன் பட்டத்தரசியின்பால் மகனைப் பெற்றான் அவன் நாடாளும் மன்னனாகவும் மக்கள் தொண்டனாகவும் விளங்கினான்.40 இவன் பெயர் என்னவென்று தெரியவில்லை. நாடாண்ட செய்திபற்றி வேறு குறிப்பும் இல்லை. ஒருவேளை நாடாளத் தொடங்கும் போதே போரில் ஈடுபட்டு மாண்டிருக்க வேண்டும். பாடின புலவர் அரிசில்கிழார் என்னும் புலவர் இவனைப் பாடியுள்ளார். அரிசில் என்பது காவிரியின் கிளை ஆறாய்ச் சோழநாட்டில் பாயும் ஆறு. புகார் நாட்டில் இவன் வளர்ந்தபோது இப் புலவர் இவனுக்கு ஆசிரியராய் விளங்கியிருக்கக்கூடும். ஆட்சி ஆண்டு பெருஞ்சேரல் இரும்பொறை 17 ஆண்டுகள் அரசாண்டான்.41 இளஞ்சேரல் இரும்பொறை பதிற்றுப்பத்து அமைப்பைக் காணும்போது இவன் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறைக்குப் பின் அரசாண்டவன் எனத் தெரிகிறது. பெற்றோர் இவனது தந்தையின் பெயர் குட்டுவன் இரும்பொறை; தாயின் பெயர் அந்துவஞ்செள்ளை.1 செள்ளை என்னும் சொல்லுக்குத் தாய் என்றும் பொருள் உண்டு. எனவே, அத்துவஞ்செள்ளை என்னும் பெயர் அந்துவனது தாய் என்னும் பொருளுடையதாக இருக்குமோ என்று எண்ண வேண்டியுள்ளது. ஆயின், இளஞ்சேரல் இரும்பொறைக்கு அந்துவன் என்னும் பெயர் கொண்ட மகன் ஒருவன் இருந்தான் என்றும், அவன் தன் பெயரில் தாயைக் குறிப்பிட்டு வழங்கும் அளவுக்குப் பெரும் புகழுடன் விளங்கினான் எனவும் கொள்ள வேண்டிவரும். இந்த அந்தவன் பற்றிய செய்தி எதுவுமே கிடைக்கவில்லை. இந்த அந்துவஞ்செள்ளையின் தந்தை மையூர்கிழான். மையூர் கிழான் என்பது மையூர் (மைசூர்) மக்களின் தலைவன் என்று கொள்ளக் கிடப்பது. இவன் இளஞ்சேரல் இரும்பொறைக்கு அதாவது, தன் மருமகனுக்கு அமைச்சனாகவும் விளங்கினான். தன் அமைச்சுப் பணியில் மையூர்கிழான் உண்மையைப் பெரிதும் போற்றிக் கடைப்பிடித்து ஒழுகி வந்தான்.2 இவனை இளஞ்சேரல் இரும்பொறை நல்ல அறிவுரை கூறிக் குறுநிலத் தலைவனாக விளங்கும்படி செய்தான். தனக்குத் துணையாகக் குறுநிலத் தலைவனாக விளங்கும்படி இவனைச் செய்ய நன்கு அறிவுரை கூறப்பட்டது என்ற செய்தி இவன் முன்பு இளஞ்சேரல் இரும்பொறைக்கு எதிராக நடந்து கொண்டிருக்க வேண்டும் என்பதைத் தெரிவிக்கின்றது. எனவே, இளஞ்சேரல் இரும் பொறை இவனுக்குத் தக்க அறிவுரை கூறித் தனக்குத் துணையாகக் குறுநிலத் தலைவனாக ஆக்கிக் கொண்டான். இவனது தந்தை இவனது மகளை மணந்து கொண்டதன் வாயிலாக உறவை வலுப்படுத்திக் கொண்டான். மையூர்கிழானின் அமைச்சு இளஞ்சேரல் அரசாட்சியிலா, மையூர் அரசாட்சியிலா என்பது தெரியவில்லை. யாண்டைய தாயினும் இவன் அமைச்சன் என்பது மட்டும் உறுதி. (எருமையூரன் வரலாற்றை ஈண்டு நினைவுகூர்தல் நலம்.) நாடு இளஞ்சேரல் இரும்பொறையின் மனைவி கொல்லிமலையில் மலர்ந்திருந்த காந்தள் மலரைச் சூடிக்கொண்டாள்.3 நறவுத் துறைமுகப் பகுதியில் இவனது நாண்மகிழ் இருக்கை இருந்தது.4 மகளிர் நீராடும் வானியாற்று நீரைக்காட்டிலும் இவன் இனிய தண்ணளி உடையவன்.5 கொங்கர் கோ,6 தொண்டியோர் பொருநன்,7 மரந்தையோர் பொருநன்,8 குட்டுவர் ஏறு,9 பூழியர் மெய்ம்மறை,10 பூழியர்கோ,11 விரவுமொழிக் கட்டூர் வயவர் வேந்து12 என்றெல்லாம் கூறப்படும் இவனைப்பற்றிச் செய்திகள் கொல்லிமலைப்பகுதி, நறவுத் துறைமுகம், வானியாற்றுப்படுகை, கொங்கு நாட்டுப் பகுதி, தொண்டித் துறைமுகப்பகுதி, மாந்தைத் துறைமுகப்பகுதி, குட்ட நாட்டுப் பகுதி, பூழி நாட்டுப் பகுதி, கட்டூரைச் சூழ்ந்த பகுதி ஆகியவை இவனது நாட்டில் அடங்கியிருந்தது என்பதைப் புலப்படுத்தும். இந்தப் பரப்பளவு சேரநாட்டின் வடபகுதி என்று குறிப்பிடத்தக்கது. விச்சிமலைப் போர் இப்போது பச்சைமலை என வழங்கும் விச்சிமலைப் பகுதியை ஆண்டவன் ‘விச்சிக்கோ’13 எனப்பட்டான். இவன் அம் மலைப் பகுதியில் ஐந்தெயில்’ என வழங்கப்பட்ட கோட்டையில் இருந்து கொண்டு அரசாண்டு வந்தான். இளஞ்சேரல் இரும்பொறை அந்தக் கோட்டையைத் தாக்கினான். விச்சி அரசனுக்கு உதவியாக இரண்டு அரசர்கள் சேர்ந்து கொண்டனர். அவர்கள் யார் எனத் தெரியவில்லை. பொதுவகையால் பாண்டியனும் சோழனும் சேரனுக்கு எதிராகப் போரிட்டனர் என்று கூறுவது வழக்கமாக இருந்துவருகிறது, போரில் ‘ஐந்தெயில்’ கோட்டை அழிந்தது. சேரன் வெற்றி பெற்றான். விச்சி அரசன் போரில் மாண்டான். பெருஞ்சோழன் வீழ்ச்சி பெருஞ்சோழன்14 என்பவன் கோப்பெருஞ்சோழன் என்று கொள்ளலாம். இவன் பொத்தியை15 ஆண்டவன். இவனைச் சேரன் வஞ்சினம் கூறி வென்றான் என்று கூறப்படுகிறது. இவ்வாறு சேரன் இவன்மீது வஞ்சினம் கூறக் காரணம், இச் சோழன் விச்சிக்குத் துணையாக நின்றமையால் விளைத்திருக்கவேண்டும் என்று உய்த் துணரக்கிடக்கின்றது. சோழன் விச்சிக்குத் துணையாக இந்தச் சேரனை எதிர்த்து நின்றதை மேலே கண்டோம். பதிற்றுப்பத்துப் பாடலில்16 இந்தச் சோழன் ‘பெரும்பூண் சென்னியர் பெருமான்’ என்று குறிப்பிடப் படுகிறான். போர் நடந்தபோது இந்தச் சோழனைத் தன்முன் கொண்டு வந்து நிறுத்துமாறு இளஞ்சேரல் இரும்பொறை தன் படைக்கு ஆணை யிட்டான். படைவீரர்கள் முயன்றனர். சோழர் படையினர் அப்போது தம் வேல்களைப் போர்க்களத்திலேயே போட்டுவிட்டுத் தப்பி ஓடிவிட்டனர். இவ்வாறு ஓடியவர்களின் வேல், கபிலர் நன்றா என்னும் குன்றின் மீதேறிக் கண்ணிற் கண்ட ஊர்களையெல்லாம் பரிசாகப் பெற்றாரே அதனைக் காட்டிலும் அதிக எண்ணிக்கை உடையனவாம். பாண்டியன் மாறன் வீழ்ச்சி ‘மாறன் ’ என்று பெயர் முடிவதைக்கொண்டு இளம்பழையன் மாறன், பாண்டியன் என்பது விளங்கும்.17 இந்தப் பாண்டியன் வித்தை என்னும் ஊரை ஆண்டவன். சோழனை வென்றது போலவே இந்த மாறனையும் இளஞ்சேரல் இரும்பொறை வஞ்சினம் கூறிப் பேராடி வென்றான். எனவே, இவனும் விச்சிக்குத் துணை நின்றவன் என்பது உய்த்துணரக் கிடக்கின்றது. முற்கூறியதுபோல விச்சி அரசன் போரில் மாண்டான். கோப்பெருஞ்சோழனும், இளம்பழையன் மாறனும் சிறைப் பிடிக்கப்பட்டனர். இவர்கள் வஞ்சி மூதூருக்குக் கொண்டுவரப் பட்டனர். காவிரிப்பூம்பட்டினத்திலிருந்த சதுக்கப் பூதத்தை இவன் வஞ்சிக்குக் கொண்டுவந்து சாந்தி விழா நடத்தினான். (செங்குட்டுவன் வடநாட்டுக் கனக விசயரைச் சிறைப்படுத்திக் கொண்டுவந்தான். இவனோ தமிழ்நாட்டு வேந்தரைச் சிறைப் பிடித்துக் கொண்டுவந்தான். இருவரும் வஞ்சிக்குத்தான் கொண்டு வந்தனர். செங்குட்டுவன் கண்ணகிக்குச் சிலை அமைக்க இமயத்தி லிருந்து கல் கொண்டுவந்தான். இளஞ்சேரல் இரும்பொறையோ காவிரிப்பூம் பட்டினத்திலிருந்த சதுக்கப் பூதத்தைக் கவர்ந்து சென்றான். இருவரும் விழா நடத்தினர். செங்குட்டுவன் சோழ பாண்டியரை அரவணைத்துக் கொண்டவன். இவனோ பகைத்துக் கொண்டவன்.) இவனது போர்பற்றிப் பொதுவகையில் பல செய்திகள் தரப்படுகின்றன. இவன் வேற்று நாட்டின்மீது படையெடுத்துச் சென்று அங்குத் தங்கியிருந்தான்.18 அப்போது அவன் யானைப் படையுடன் பாசறையில் தங்கினான்.19 கொல்லக் கொல்லக் குறையாத தானையில் யானை, மா, மறவர், தேர், தோல் படைகள் இருந்தன.20 இவன் பல நாடுகளை அழித்து அந்நாட்டுச் செல்வங்களைத் தன் நாட்டுக்கு கொண்டுவந்தான்.21 இவனால் அழிக்கப்பட்ட கோட்டைகள் எண்ணற்றவை.22 யானைக் காலில் மூங்கில் முளைகள் நசுங்கி அழிவதுபோல் இவனுக்குச் சினமூட்டியவர் நசுக்கப்பட்டனர்.23 இவனது படைகள் அணிவகுத்துச் செல்வது கண்ணுக்கினிய காட்சியாயினும் பகைவர்க்கு அது இன்னாதது.24 இவனது படையில் பலமொழி பேசும் மக்களும் வீரர்களாய் விளங்கினர்.25 அவர்கள் பகைவர்களைக் காஞ்சியாக்கும் (நிலையாமையாக்கும்) பண்பினர்.26 இவன் பாசறையில் தங்கியிருந்தபோது வேந்தர்கள் இரவு பகலாய்த் தூங்காமல் நடுங்கிக் கொண்டிருந்தனர்.27 இவ்வாறு போர் வல்லமை உடையவனாக இவன் திகழ்ந்தான். கொடை இவன் இசைவாணர்களைப் பேணிப் பாதுகாத்து வந்தான்.28 இசைபாடும் பெண்களுக்கு அரிய நல்ல அணிகலன்களை அளித்துச் சிறப்பித்தான்.29 வறுமையில் வாடியவர்களுக்கு அவர்களது துன்பம் நீங்கும் அளவுக்குக் கொடுத்தான்.30 போர் வெற்றியில் கிடைத்த செல்வங்களையெல்லாம் வஞ்சி மூதூருக்குக் கொண்டு வந்து பிறர்க்கு உதவும் வகையில் நல்கினான்.31 பெருங்குன்றூர்கிழார் இவன் போர்ப் பாசறையில் இருந்த போது கண்டு பாடினார்.32 அவரது பாடலைப் போற்றி இளஞ்சேரல் இரும்பொறை 32 ஆயிரம் காணம் பணமாகக் கொடுத்தான். பெருங்குன்றூர்கிழாரின் பாடல்திறத்தைக் கண்டு, வியந்து போற்றாதவர்களுக்கு இந்தச் செல்வத்தை அளித்துப் புலவர் பிறரை வியக்கச் செய்ய வேண்டும் என்று கூறி அந்தச் செல்வத்தைக் கொடுத்தான்.33 புலவர் இந்தப் பணத்தைப் பிறருக்குக் கொடுத்தபின் அவரது வாழ்க்கைக்கு உதவும் பொருட்டு ஊர்களும், வளமனைகளும், அவ் வீட்டில் வாழ்வதற்கு வேண்டிய பொருள் வளமும், வேளாண்மை செய்வதற்காக ஏர் வளமும், இன்பமாக வாழ்வதற்கு வேண்டிய பிற வசதிகளும், எண்ணிலடங்கா அணிகலச் செல்வமும் அவருக்குக் கொடுத்ததோடு அச் செல்வங்களையெல்லாம் முறையாக நிர்வகித்து உதவும் வகையில் ஏற்பாடும் செய்து கொடுத்தான்.34 பெருஞ்சேரல் இரும்பொறையே அன்றி அவனது நாட்டில் இருந்த செல்வர்களும் தம்மை நாடி வந்தவர்களுக்கெல்லாம் வாரி வழங்கும் வள்ளல்களாக விளங்கினர்.35 குறிப்பிடத்தக்க செயல்கள் இளஞ்சேரல் இரும்பொறையின் செயல்களில் குறிப்பிடத்தக்கவை சில உள்ளன. அவை வருமாறு: சதுக்கப்பூதரை வஞ்சிக்குக் கொண்டுவரல் பெருஞ்சதுக்கத்து அமர்ந்திருந்த பூதங்களைக் கொண்டுவந்து வஞ்சி நகரில் நிலை நாட்டினான்.36 இவன் கொண்டுவந்தவை பூதச் சிலைகள் எனக் கொள்ள லாம். இவன் எங்கிருந்து இந்தப் பூதச் சிலைகளைக் கொண்டுவந்தான் என்பது தெரியவில்லை. எனினும் சோழனை வென்ற இவன் சோழ நாட்டுப் புகார் நகரிலிருந்த பூதச் சிலைகளைக் கவர்ந்து வந்தான் என்று உய்த்துணரப்படுகிறது. மணக்கிள்ளி என்ற சோழ அரசன் பீலிவளை காரணமாக இந்திரவிழாக் கொண்டாட மறந்ததனால், காவிரிப்பூம் பட்டினம் கடல்கோளுக்கு இரையானதற்கும், இவன் புகார் நகரத்துப் பூதச் சிலைகளைக் கவர்ந்து வந்ததற்கும்கூடத் தொடர்பிருக்க வாய்ப்பு உண்டு. இவ்வாறு இளஞ்சேரல் இரும்பொறை நிலைநாட்டிய சிலைக்குச் சாந்தி வேள்வி செய்தான். சாந்தி வேள்வி என்பது நடுகல் விழாவாகும். மந்திர மரபில் தெய்வம் பேணல் தெய்வ வழிபாடு தமிழ்நாட்டில் தொடர்ந்து நிலவி வந்த வழக்கமே ஆகும். ஆனால், இந்த இளஞ்சேரல் இரும்பொறை மந்திரம் சொல்லிக் கடவுளை வழிபாடு செய்யும் புதிய வழக்கத்தை உண்டாக்கினான்.37 மந்திரம் என்பது வடமொழி மந்திரம். சேர நாட்டில் இவனது காலத்திற்கு முன் அரசாண்ட இவனது முன்னோர்களில் சிலர் பார்ப்பார்க்கு உயர்வு தந்து வேள்வி செய்தார்கள் என்பது நாம் அறிந்த ஒன்றே. எனினும், அவர்கள் பார்ப்பனரைக் கடவுளுக்கு மந்திரம் சொல்லும்படி செய்து தாம் பின்னின்று வழிபாடு செய்யவில்லை. இவன்தான் அந்த நிலையை முதன் முதலில் உண்டாக்கியவன் போலும். மந்திரம் என்பது வடமொழி மந்திரம் அன்று. திருமந்திரம் என்னும் வழக்கினைக் கொண்டு தமிழில் மந்திரம் இருந்தது என்றும். அதுபோன்ற தமிழ் மந்திரங்களைச் சொல்லிக் கடவுள் வழிபாடு செய்ய இவன் ஏற்பாடு செய்தான் என்றும் கொள்ளலாம். எப்படியாயினும் இவனது காலத்திலேதான் கோயிலில் மந்திரம் சொல்லும் வழக்கம் தோன்றியது என்றும், அதற்கு மக்கள் தம் விருப்பம்போல் தாமே கடவுளின் முன்பு நின்று தம் குறைகளைப் போக்க வேண்டிக் கொண்டனர் என்றும் கொள்ள வேண்டி வரும். எது எப்படி ஆயினும் இவன் காலத்தில்தான் வழிபடுவோன் சார்பில் மற்றொருவன் நின்று கடவுளை வேண்டும் இடைத்தரகு நிலை தோன்றியது என்று எண்ணும்படி வரலாற்றுச் சான்று அமைந்துள்ளது. இன்னிசை முரசு செங்குட்டுவனின் பாட்டன் உதியஞ்சேரல் ‘இன்னிசை முரசின் உதியஞ்சேரல்’ என்று சிறப்பித்துக் கூறப்பட்டுள்ளான். அதுபோலவே, இவனும் ‘இன்னிசை முரசின் இளஞ்சேரல் இரும்பொறை’ என்று குறிப்பிடப்பட்டுள்ளான். பொதுவாக மணமுரசு, மறமுரசு, கொடை முரசு என முரசு முழக்கத்தைப் பொருட்பயன் நோக்கிப் பகுத்துக் காட்டுவது வழக்கம். ஆனால், இங்குக் கூறப்பட்ட ‘இன்னிசை முரசு’38 என்னும் தொடர் இசைத்தன்மையை நோக்கி அளிக்கப்பட்டதாகத் தெரிகிறது. முத்தமிழில் ஒன்றாகிய இசையை, முரசு முழக்கி இசைவழிப் போற்றியதால் இவன் இவ்வாறு அழைக்கப்பட்டான். செங்கோலாட்சி இவனது ஆட்சி ‘மன்னுயிர் காத்த மறுவில் செங்கோல்’ என்று சிறப்பித்துக் கூறப்படுகிறது.39 இதனால் இவன் மக்களைப் போலவே பிற உயிரினங்களையும் மாண்புடன் காத்துச் செங்கோலோச்சி வந்தான் என்பது பெறப்படுகிறது. இவனது செங்கோலாட்சியால் நாட்டுவளம் பெருகிற்று என்றும் கூறப்படுகிறது. தோற்றம் இவன் குதிரைமேலும் யானைமேலும் உலாச் சென்ற காட்சி மக்களின் உள்ளத்தைக் கவர்ந்திருக்கிறது. மனைவியின் மாண்பு ஒளிபொருந்திய நெற்றி, நீண்ட கண்கள், சீவிப்படிந்த கறு கறுத்த தலைமுடி, அழகே உருவான முகம், வண்டுகள் மொய்க்கும் கூந்தல், காதிலே குழை, கையிலே ஒளிரும் வளையல் முதலானவற்றுடன் இவனது மனைவி பொலிவுடன் விளங்கினாள். அவள் பெருந் தகைமைப் பண்பு உடையவள். அந்தப் பண்புக் கேற்ப அவளது வாயிலிருந்து வரும் மொழிகள் எப்போதுமே மென்மையானவையாய் விளங்கின. அதாவது, அரசி என்ற ஆணவச் சொற்கள் அவளது வாயிலிருந்து வரவில்லை. கொள்கையில் அடக்கமுள்ளவளாயும் கணவன் தன் அகவாழ்வில் தவறு செய்தாலும் அதைப் பொருட்படுத்தாது தன் கடமையைச் செய்யும் ஆறிய கற்பு உடையவளாயும் அவள் விளங்கினாள்.40 இவளது கற்பு (அருந்ததி) மீனொடு ஒப்பு வைத்து எண்ணக்கூடிய அளவுக்குச் சிறந்தது என்றும் கூறப்பட்டது. தெளிவான இவளது நற்பண்பின் புகழ் ஓங்கியிருந்தது.41 இவளைச் சுற்றி ஆயத்தார் எப்போதும் இருந்தனர். அவர்கள் ஒளிமிக்க அணிகலன்களை மிகுதியாக அணிந்திருந்தனர். இவளும் மார்பில் சந்தனம், நெற்றியில் பொட்டு, பூமாலை, கச்சுப் போன்ற பூண்வகைகள், மணி பதித்த அணிகலன்கள் முதலானவற்றை அணிந்துகொண்டு பொலிவுடன் விளங்கினாள். பாவைபோல் அழகிய ஆயத்துப் பெண்களுக்கு நடுவே, ஓவியம்போல் சிறப்பாகக் கட்டப்பட்ட அந்தப்புர மாளிகையில் இவள் வாழ்ந்துவந்தாள். அந்துவன் கால்வழி அரசர்கள் (திரண்ட நோக்கு) அந்துவன் கால்வழியில் தோன்றி அரசாண்ட அரசர்கள் என்று தெளிவாக நமக்குத் தெரியவருபவர் நான்கு பேர். அவர்களது வரலாற்றைத் தனித்தனியே முன்பு கண்டோம். இனி, அவர்களது உறவு முறைகள், அவர்கள் ஆண்ட நாடு, அவர்கள் செய்த போர்கள். முதலானவற்றை ஒருங்கிணைத்து ஆய்வுக் கண்ணோட்டத்தில் நோக்க வேண்டும். அடுத்துத் தரப்பட்டுள்ள அட்டவணை அவர்களுடைய உறவு முறையைத் தெளிவாக்கும். அந்துவற்கு ஒரு பொறையன் பெருந் ஈன்ற செல்வக் தந்தை தேவி மகன் கடுங்கோ ஈன்ற வாழி மகன் யாதன் செல்வக்கடுங் வேளாவிக் தேவி ஈன்ற பெருஞ் கோவுக்கு கோமான் மகன் சேரல் பதுமன் இரும் பொறை குட்டுவன் மையூர் வேண்மாள் ஈன்ற இளஞ் இரும் கிழான் அந்துவஞ் மகன் சேரல் பொறைக்கு செள்ளை இரும் பொறை இந்தப் பட்டியலில் வேளாவிக் கோமான் பதுமன் தேவியை அதாவது, பதுமனது மகளை செல்வக்கடுங்கோ மணந்தான் என்பதை அறிகிறோம். முன்பு உதியன் கால்வழி அரசர்களது வரலாற்றைத் திரட்டி நோக்கியபோது வேளாவிக்கோமான் பதுமன் தேவியை (அதாவது, பதுமனது மகளை) இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் மணந்தான் என்று அறிந்தோம். எனவே, பதுமனின் பெண்மக்கள் இருவரை முறையே நெடுஞ்சேரலாதனும் செல்வக் கடுங்கோ வாழி யாதனும் திருமணம் செய்துகொண்டார்கள் என்பது தெரியவருகிறது. இதனால் இவர்கள் இருவரும் சமகாலத்தவர் என்பது தெளிவாகும். முன்பு செங்குட்டுவனது காலத்தை அடிப்படையாகக் கொண்டு உதியன் கால்வழியில் தோன்றி அரசாண்ட அரசர்களது காலத்தை அட்டவணை விளக்கத்தில் வரையறுத்துக் கண்டோம். அந்த அட்ட வணையில் இங்கு நாம் கண்ட அந்துவன் கால்வழியில் தோன்றிய அரசர்களது ஆட்சிக் காலமும் காட்டப்பட்டுள்ளது. அங்கு நாம் வரையறுத்துக் கொண்டது போலவே ஒரு தலை முறைக்கும் மற்றொரு தலைமுறைக்கும் இடையிலுள்ள காலம் இருபத் தைந்து ஆண்டுகள் என்றும், அண்ணனுக்கும் தம்பிக்கும் அல்லது அக்காளுக்கும் தங்கைக்கும் இடையிலுள்ள காலம் ஐந்து ஆண்டுகள் என்றும் வைத்துக்கொண்டு இவர்களது காலத்தையும் விளக்கமாகக் காணலாம். உதியன் கால்வழி அரசர்களை மூத்த தலைமுறை என்றும், அந்துவன் கால்வழி அரசர்களை இளைய தலைமுறை என்றும் பொதுவாக அறிஞர்கள் கருதுகின்றனர். எனவே, உதியன் கால்வழியைச் சார்ந்த நெடுஞ்சேரலாதனை மணந்தவள் அக்காள் என்றும், அந்துவன் கால்வழியைச் சார்ந்த செல்வக்கடுங்கோவை மணந்தவள் தங்கை என்றும் நாம் உய்த்துணருதல் பொருத்தமுடையதாகும். அக்காள் தங்கையருக்கிடையே ஐந்து ஆண்டு இடைவெளி என்னும் கோட் பாட்டை நாம் கொண்டிருப்பதால் அக்காளை மணந்த நெடுஞ்சேரலாதன் அரியணை ஏறியபின் தங்கையை மணந்த செல்வக்கடுங்கோ வாழி யாதன் ஐந்து ஆண்டுகள் கழித்து அரியணை ஏறினான் என முடியும். நெடுஞ்சேரலாதன் கி. பி. 95-ல் அரியணை ஏறினான் என்று பார்த்தோம். எனவே, செல்வக்கடுங்கோ வாழியாதன் கி.பி. 100-ல் அரியணை ஏறினான் எனலாம். நம் கோட்பாட்டுப்படி செல்வக் கடுங்கோவின் தம்பி அந்துவன், அவனுக்கு 25 ஆண்டுகட்கு முன்பு (அதாவது, கி.பி. 75 - 100 ஆண்டுகள்) அரசாண்டான் எனத் தெரிய வரும். 25 ஆண்டுகள் அரசாண்டான் என்று பதிற்றுப்பத்துப் பதிகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள செல்வக்கடுங்கோ வாழியாதன் கி. பி. 100 - 125 கால இடைவெளியில் அரசாண்டான் எனவும், 17 ஆண்டுகள் அரசாண்ட பெருஞ்சேரல் கி. பி. 125 - 142 ஆண்டு இடைவெளியில் அரசாண்டான் எனவும் நாம் கொள்ளலாம். பெருஞ்சேரல் ஆண்ட காலத்திற்கும் இளஞ்சேரல் ஆண்ட காலத்திற்கும் இடையிலுள்ள காலத்தில் இளஞ்சேரலின் தந்தையும் வேறு சிலரும் ஆண்டிருக்கக் கூடும். ஆதலால், இளஞ்சேரல் இரும்பொறை கி. பி. 150 - 171 (16 ஆண்டுகள்) இடைவெளியில் அரசாண்டான் என்பது தெரியவரும். இனி அவர்கள் ஆண்ட நாடு, போர் முதலியவற்றைத் திரட்டி நோக்கலாம். முன் கண்ட அட்டவணையில் ஒவ்வோர் அரசரும் ஆண்ட நாட்டுப் பகுதிகளையும் அவர்கள் பிற நாட்டு அரசர்களோடு நடத்திய போர்களையும் ஒப்புநோக்கி எண்ணிப் பார்க்கும்போது அந்துவன் கால்வழி அரசர்களின் செல்வாக்குப் படிப்படியாக உயர்ந்தும் தாழ்ந்தும் வந்திருப்பதை நாம் காண முடியும். அந்துவன் சேரல் இரும்பொறை கருவூரைத் தலைநகராகக் கொண்டு அரசாண்டு வந்தவன் என்பது மட்டும் தெரிகிறது. இந்தக் கருவூர் கொங்கு நாட்டுக் கருவூர். கருவூர் ஏறிய ஒள்வாள் கோப்பெருஞ்சேரல் இரும்பொறை என்னும் பெயர்கொண்ட அரசன் முதன்முதலாகக் கொங்குநாட்டுக் கருவூருக்கு வந்து சேரர் ஆட்சியை நிலைநாட்டினான் என்று அவனது பெயரால் தெரிகிறது (பிற சேர அரசர்கள் என்னும் தலைப்பின்கீழ்க் காணலாம்). இந்தக் கோப்பெருஞ்சேரல் இரும்பொறையை அடுத்தோ சில தலைமுறைகளுக்குப் பின்போ அந்துவன் சேரல் அரியணை ஏறிக் கருவூரைச் சேர்ந்த ஒரு சிறு நாட்டுப் பகுதியை ஆண்டுவந்தான். இவன் மகன் செல்வக்கடுங்கோ வாழியாதன் காலத்தில் நாடு பெரிதும் விரிவு உடையதாகக் காணப்படுகிறது. இவனுக்குப் பின் அரியணை ஏறிய பெருஞ்சேரல் இரும்பொறை காலத்தில் செல்வக்கடுங்கோவின் ஆட்சியின்கீழ் இருந்த நாட்டுப் பகுதிகள் சிலவற்றில் போர் மூண்டிருக்கிறது. எனவே, இவனுடைய நாட்டுப் பரப்புச் சற்றுக் குறைந்து போயிற்று எனத் தெரிகிறது. இவனுக்குப் பிறகு இவனது மகன் இளஞ்சேரல் இரும்பொறை காலத்தில் முன்பு இல்லாத அளவுக்கு நாடு மிகப்பெரிய பரப்புடைய தாக விளங்கி இருந்தது. இவனது பெரியப்பன் பெருஞ்சேரல் இரும் பொறை, அதியமானோடு கூட்டுச் சேர்ந்து தன்னை எதிர்த்த சோழரை யும் பாண்டியரையும் வென்றான். இவனோ தனித்த முறையில் கோப்பெருஞ்சோழன் என்னும் சோழ அரசனோடும் இளம்பழையன் மாறன் என்னும் பாண்டிய அரசனோடும் போரிட்டு வெற்றி பெற்றிருக் கிறான். இந்த வகையில் இவனது நாடு மிகப்பரந்த எல்லையை உடையதாக விளங்குகிறது. இளஞ்சேரல் இரும்பொறைக்குப் பின் நாடாண்ட சேர அரசன் யார் என்பது தெரியவில்லை. ஒருவேளை நமக்குக் கிடைக்காமல் போன 10ஆம் பதிற்றுப்பத்துத் தலைவன் இவனுக்குப் பின் அரியணை ஏறி அரசாண்டிருக்கலாம். இவனை அடுத்துச் சேர நாடு சிதறுண்டு பல குறுநில மன்னர்களின் ஆட்சிக்குக் கீழோ சேர அரசர்கள் பலரது ஆட்சிக்குக்கீழோ வந்திருக்கலாம். 2. பிற சேர அரசர்கள் பல்வேறு புலவர்கள் பல்வேறு காலங்களில் பல்வேறு இடங்களில் பாடிய பாடல்கள் நானூறு கொண்டது புறநானூறு. அவற்றுள் 267, 268 எண்ணுள்ள பாடல்கள் முற்றிலுமாகக் கிடைக்கவில்லை. கிடைத்துள்ள பாடல்கள் சிலவற்றில் சில அடிகள் கிடைக்கவில்லை. சில பாடல் களைப் பாடியவர் இன்னார் என்று தெரியவில்லை. சில பாடல்கள் யார்மீது பாடப்பட்டவை என்னும் குறிப்புச் சிதைந்து போயிற்று. இந்த நானூறு பாடல்களையும் தொகுத்தவர் யார் என்று தெரிய வில்லை. தொகுத்தவர் ஒவ்வொரு பாடலுக்கும் சுருக்கக் குறிப்பு ஒன்று தந்துள்ளார். அக் குறிப்புகளை அறிஞர்கள் ‘கொளு’ என்று குறிப்பிடு கின்றனர். யாரை யார் பாடினார் என்னும் குறிப்பு அதில் சிறப்பிடம் பெறுகிறது. சில பாடல்களுக்குப் பாடப்பட்ட சூழலும் கூறப்பட்டுள்ளது. சில அரசர்கள் பெயருக்கு இந்தக் கொளுக் குறிப்புச் செய்த தொகுப்பாசிரியர் மட்டுமே பொறுப்பாளி. எடுத்துக்காட்டாக ஒன்று குறிப்பிடலாம். சேரமான் மாரிவெண்கோ என்ற அரசன், சோழ அரசன் ஒருவனோடும் பாண்டிய அரசன் ஒருவனோடும் சேர்ந்திருந்த போது ஒளவையார் பாடியதாகக் கொளுக் குறிப்பிடுகிறது. பாடலில் அவர்கள் பெயர் குறிப்பாலும் உணர்த்தப்படவில்லை. இதுபோன்ற குறிப்புத் தவறாகவும் இருக்கமுடியும் என்பதை 389 ஆம் எண்ணுள்ள பாடல் தெரிவிக்கின்றது. இந்தப் பாடலில் புலவர் தாம் பாடிவந்த அரசனிடம் (யார் என்று தெரியவில்லை) ஆதனுங்கன் போலப் பரிசில் தரவேண்டும் என்று வேண்டுவதைக் காண்கிறோம். பாடலில் கொளுக் குறிப்பு ஆதனுங்கனையே பாடியுள்ளதாகக் குறிப்பிட்டுவிட்டது. இது பொருந்தாக் கூற்று. இதுபோன்ற நிலைகள் இருப்பதால் கொளுக் குறிப்பினால் மட்டும் தெரியவரும் செய்திகளை அப்படியே முழுமையான உண்மைகள் என்று நாம் எடுத்துக்கொள்ள முடியாது. பதிற்றுப்பத்துச் சேர அரசர்களைப்பற்றிய வரலாற்றில் அவர்களோடு தொடர் புடைய செய்திகள் பிற நூல்களில் எங்கு இருந்தாலும் உடன் எடுத்துக் கூறப்பட்டதுபோல் புறநானூற்றில் சிறப்பாகக் காணப்படும் அரசர்களின் வரலாற்றைக் காணும்போது பிற நூல்களில் கிடைக்கும் செய்திகளும் ஒருங்கு இணைத்துக் கொள்ளப்படுகின்றன. சேரமான் வஞ்சன் வாய்மொழி வஞ்சன்1 என்னும் திருத்தாமனாரின் தொடரால் இவனைப்பற்றி அறிகிறோம். நாடு அருவிகள் பாயும் மலை பாயல் மலை. அந்த மலைப்பகுதியைக் கொண்ட நாட்டுக்கு இவன் அரசனாக விளங்கினான். வீரம் மக்களை மகிழ்விப்போராகிய கூத்தர், பாணர், புலவர்கள் இவனது ஊரில் நுழையலாமே அன்றி, இவனது பகைவர்களால் அவ்வூரை நெருங்கவும் முடியாது. பகைவர்களுக்கு அந்த ஊர் புலிக்கூட்டங்கள் தூங்கும் குகை போன்றது. கட்டுகளால் மாட்சிமைப்பட்ட கடி அரண் ஒன்றில் வாழ்ந்து வந்தான். இங்ஙனம் கூறப்படுவதால் கோட்டையது வலிமையும், இவனைச் சார்ந்தவர்களின் ஆற்றலும் பெறப்படும். இவனது வீரமும் உய்த்துணரப்படும். கொடைத்தன்மை இவன் தன்னை நாடிவந்த புலவர்களுக்கெல்லாம் பரிசில் வழங்கினான். அதிலே ஒரு தனிச் சிறப்பாக இவன் வழங்கினான். பரிசில் பெற வந்தவர்களிடையே உயர்வு தாழ்வு காணாது முன் வந்தவர்களுக்கு முன்னும், பின் வந்தவர்களுக்குப் பின்னும் வரிசை முறைப்படி வழங்கினான். திருத்தாமனார் என்னும் புலவர் இவனைப் பாடிச் சென்றார். அவரை இவன் சிறப்பித்த பாங்கில் தனிச்சிறப்பு உண்டு. மான் கறி வறுவலும், கொக்கின் நகம்போலும் நெல்லரிசிச் சோறும் கொடுத்து விருந்து படைத்தல் வியப்பன்று. தூசி படிந்த அவரது கிழிந்த உடையை நீக்கிவிட்டுப் புத்தாடை உடுத்தது வியப்பன்று. இவன் தன் உடையின்மேல் பகட்டுக்காக ஓர் உயர்ந்த ஆடை அணிவது வழக்கம். புகை விரிந்தாற்போல் பொங்கித் தோன்றும் பட்டாடை அது. இவனுக்கே உரித்தான ஒரே ஓர் ஒப்புயர்வற்ற ஆடை அது. அந்த ஆடையை இவன் புலவர்க்கு அணிந்து மகிழ்ந்தான். ஒப்புநோக்கம் அதியமான் தனக்கு எதிர்பாராமல் கிடைத்த நாவல்கனியை அவ்வைக்கு ஈந்து மகிழ்ந்தான். வஞ்சனோ தன்னிடம் இருந்ததையே புலவர்க்கு அளித்து மகிழ்ந்தான். பண்பு நலம் இவன் எப்போதும் சொன்ன சொல் தவறியதில்லை. கோசர்கள் ‘வாய்மொழிக் கோசர்’ எனச் சிறப்பிக்கப்படுகின்றனர். அவர்கள் வாய் மொழிக்கும் இவனது வாய்மொழிக்கும் வேறுபாடு உண்டு. கோசர்கள் போரில் வஞ்சினம் கூறுவர். கூறிய மொழி பொய் போகாது சூழ்ச்சி செய்தேனும் செயலை நிறைவேற்றிக் கொள்வர். இந்தவகையில் அவர்களது வாய்மொழி வஞ்சின வாய்மொழியாகும். வஞ்சன் வாய் மொழியோ கொடையில் வாய் மொழி. தருவதாகக் கூறி, கூறிய சொல் தவறாமல் நல்குவான். பிறர் புகழ்ந்து கூறினும் அவர்கள் மொழி பொய்போகாதவாறு வழங்குவான். இதுவே இவன் பண்பாகும்; தெய்வ நம்பிக்கை மிக்கவன்; இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழிலும் வல்லவன்; எவராலும் வெல்ல இயலாத வீரத்தையுடையவன். தோற்றப் பொலிவு இவன் மார்பு மலை போன்றதாகும். அதில் அரவு போன்ற ஆரம் உள்ளது. அதில் வையகம் விளங்கும் மணிக்கல் பதித்துள்ளது. இந்தக் கோலத்தில் அவனது மேனியே ஒரு பூவாகப் பூத்திருந்தது. வஞ்சமன் கூடல் இவன் காலத்தில் கொங்குநாட்டைச் சேர்ந்த கரூர், சேரர்க்குச் சேர்ந்திருந்தது. கரூருக்கு எட்டுக் கி. மீ. தொலைவில் உள்ள தேவாரப் பாடல்பெற்ற வெஞ்சமக் கூடல் என்னும் சிவதலத்தைக் கருங் கற்களால் கட்டினான். அவ்வூர் அவனது பெயரால் வழங்கி வந்தது. வஞ்சமன் கூடல் என்பது பேச்சு வழக்கில் வஞ்சமாங்கூடல் - வெஞ்ச மாங்கூடல் என மருவி வழங்கப்படுகிறது. சுந்தரமூர்த்தி சுவாமிகள் இத் தலத்தைப் பற்றித் தேவாரம் பாடியுள்ளார். அப் பாடலைப் பார்த்தால் சேரமான் வஞ்சன் காலத்தில் அவ்வூர் சிறப்புற்று விளங்கியது என்பது தெரிகின்றது. அவ்வூர் சிற்றாற்றின் கீழக்கரையில் உள்ளது. சேரமான் மாரிவெண்கோ சேரமான் மாரிவெண்கோ,1 சோழன் இராசசூயம் வேட்ட பெருநற் கிள்ளி, பாண்டியன் கானப் பேரெயில் தந்த உக்கிரப் பெருவழுதி ஆகிய சேர, சோழ, பாண்டிய அரசர்கள் ஓரிடத்தில் மகிழ்ந்து நட்புற வோடு கூடியிருந்ததாகக் கொளுக் குறிப்பிடுகிறது. பாடலில் ‘கொடித் தேர் வேந்தர்’ என்று விளித்து அவ்வையார் அறிவுரை கூறியுள்ளார். அவர்கள் ‘முத்தீ’ப்போல் இருந்ததாக அவர் குறிப்பிடுவதால் மூன்று அரசர்கள் என்பதும் உறுதியாகிறது. மூன்று அரசர்கள் இன்னார் என்று கொள்வதற்குப் பாடலில் சான்று இல்லை. பார்ப்பார்க்கும் இரவலர்களுக்கும் கொடை வழங்க வேண்டும் என்றும். மகளிரோடு மதுவருந்தித் திளைத்து வாழ வேண்டுமென்றும் அந்த மூவரையும் அவ்வையார் வாழ்த்துகிறார். மூவேந்தர் கூட்டாட்சி சமயத்திற்கேற்றாற்போல் மூவேந்தர்களில் இருவர் ஒன்று சேர்ந்துகொண்டு மற்றொருவனை எதிர்த்து நிற்றல் சங்ககால வரலாற்றில் பொது நிகழ்ச்சி. ஆனால், மூன்று அரசர்களும் உணர்வால் ஒன்றி உடலால் நெருங்கியிருந்து தமிழ்நாடு முழுவதையும் ஒருமைப் பாட்டு உணர்வுடன் ஆளமுனைந்தது இவன் காலத்தில் தான். இந்த நிகழ்ச்சி தமிழக வரலாற்றில் கிடைக்கும் சான்றுகளில் முதல் அரசியல் ஒருமைப்பாட்டு நிகழ்ச்சியாகத் திகழ்கிறது. சேரமான் பெருஞ்சேரலாதன் சேரமான் பெருஞ்சேரலாதனுக்கும்1 கரிகால் பெருவளத்தானுக்கும் போர்மூண்டது. போர், வெண்ணி என்னும் ஊரில் நடை பெற்றது. இது சோழனுடைய ஊர்.2 எனவே, இந்தச் சேர அரசன் படையெடுத்துத் தாக்கினான் எனத் தெரிகிறது. போரில் கரிகால் வளவன் வெற்றி பெற்றான். எனினும், முடிவு எல்லா மக்களுடைய உள்ளத்தையும் உருக்கும் அவலமாக முடிந்தது. போர்க்களத்தில் இரண்டு அரசர்களும் நேருக்குநேர் நின்று போரிட்டனர். கரிகாலன் வலிமையுடன் வேல் வீசினான். அந்த வேல் சேரலாதனின் மார்பில் பாய்ந்து முதுகில் கழன்றோடி விட்டது. இதனால் தன் முதுகில் காயம்பட்டதை அறிந்த சேரலாதன் போரிடுவதை நிறுத்திவிட்டான். போர்க்களத்திலேயே வடக்குத் திசையை நோக்கி அமர்ந்து உயிர்துறந்தான். தமிழர்கள் மார்பில் படும் காயம் ஒவ்வொன்றையும் தமக்குக் கிடைத்த பேறு என்று கருதுவர்.3 முதுகில் எதிர்பாராது காயம் பட்டாலும் அப் புண் தம்மைப் புறமுதுகு காட்டியவர் என்று சிலரையேனும் எண்ணத்தூண்டும் என்று எண்ணி அப் புண்ணை ஆற்றிக்கொள்ளா மலேயே மாய்வர். நெடுஞ்சேரலாதன் தன் முதுகில் பட்ட புண் தானே ஆறித் தான் பிழைத்துவிட்டால் என்ன செய்வது என்று எண்ணிப் போர்க் களத்திலேயே வடக்கிருந்தான். புறப்புண்ணோடு தன் நாட்டுக்குச் செல்ல விரும்பாமல் போர்க்களத்திலேயே வடக்கிருந்தான். தன் மானத்திற்கு இழிவு நேர்ந்த அப்பொழுதிருந்தே தன் உயிரைக் கொஞ்சம் கொஞ்ச மாக மாய்த்துக் கொண்டான். வடக்கிருத்தல் என்பது வடக்கு நோக்கி அமர்ந்து உண்ணாமல் உயிர் துறப்பது. தன் வாளைத் தனக்கு எதிரே ஊன்றி வைத்துவிட்டு வடக்கிருக்கும் பழக்கத்தால் அது ‘வாள் வடக்கிருத்தல்’ 4 எனப்பட்டது. மக்கள் அவலம் எந்த இசைக்கருவியும் முழங்கவில்லை; வீரர்கள் கள் உண்ண வில்லை; உறவினர்கள் தேறல் அருந்தவில்லை; உழவர்கள் தம் கடமை ஆற்றும்போது சோர்வை மறைக்க எழுப்பும் ஓசையை எழுப்ப வில்லை; ஊர்களிலே மகிழ்ச்சி நடமாட்டம் இல்லை. இவ்வாறு எங்கும் அவலம். சேரனுக்காகச் சோழ நாட்டிலேயே இத்தகைய அவலம். படையெடுத்துத் தாக்கிய பகைவன் சாகிறான் என்பதில்கூட அவலம். இது சோழநாட்டு மக்கள் நிலை.5 சான்றோர் அவலம் சேரலாதன் நிலைமைபற்றிய செய்தி சான்றோரிடையே பரவியது. கேட்ட சான்றோர் ஆங்காங்கே தாமும் வடக்கிருந்தனர்; உயிர் துறந்தனர்.6 புலவர் கருத்து இவன் இறந்துவிட்டபின் ஞாயிறு தோன்றிப் பயன் இல்லை; பகலும் இரவுதான்.7 இவ்வாறு கூறுகிறார் கழாத்தலையார். வெண்ணிக் குயத்தியார், வென்ற கரிகாலனிடம் கூறுகிறார்:8 ‘வென்ற சோழனுக்கு வெற்றிப் புகழ், தோற்ற சேரனுக்கோ வீரப் புகழ். வெற்றிப் புகழைக் காட்டிலும் வீரப் புகழ் நல்லதாம்.’ இவ்வாறெல்லாம் பெருஞ்சேரலாதனின்மீது அதாவது, படை யெடுத்துத் தாக்கியவன்மீது எல்லாருக்கும் இரக்கம் தோன்றக் காரணம் என்ன? கரிகாலன் செய்த கொடுமை. பகைவன் மார்பில் வேலைப் பாய்ச்சியது கொடுமையா? இல்லை. அது அவன் கடமை. பின் என்ன? அவன் வலிமையிலே சோர்வு. மார்பில் பாய்ந்து முதுகில் வெளிவரும்படி எய்த அவனது பெருவலிமையிலா சோர்வு? இல்லை இல்லை. பகைவனுக்குப் போரிட வாய்ப்பு நல்குவது தமிழர் போர்த்துறைகளிலே தலைமையான பண்பு. படைக்கலம் இல்லாதவனோடு படைக்கலம் தந்து போரிடுவான். இறுதித் தாக்குதலில் அன்றி எடுத்த எடுப்பிலேயே திடீரென்று கொன்றுவிடமாட்டான். கரிகாலன் செய்த பிழை அதுதான். எடுத்த எடுப்பிலேயே முதல் வீச்சிலேயே அரசரை வீழ்த்திவிட்டான். இந்த நிகழ்ச்சியைக் கொடிய சூழ்ச்சி. மோசமான சூழ்ச்சி என்று எல்லோரும் கருதினர். கரிகால் வளவன் இளைஞன். அவனிடம் சூழ்ச்சி இல்லை. ஏதோ இளமைத் துடுக்கு நிகழ்ந்துவிட்டது. அரசன் செயலை மக்கள் உள்ளம் ஏற்றுக்கொள்ளவில்லை; குறைகூறவும் இடமில்லை; விளைவு, பகைவன்மீது இரக்க உணர்வு; மரியாதை நிகழ்ச்சி. நாட்டுத் தலைவர்களை இழக்கும்போது இப்போது நாம் துக்கம் கொண்டாடுவதில்லையா? அதுபோல அன்று மக்கள் துக்கம் கொண்டாடினர். பகைவன் இறந்ததற்காகத் துக்கம் கொண்டாடினர். கொல்லிமலைத் தலைவன் ஓரியைக் காரி கொன்றான். அப்போது ஓரிக்காக அவன் நாட்டுமக்கள் துக்கம் கொண்டாடினார்கள். ஒல்லையூர் நாட்டில் பெருஞ்சாத்தன் மாய்ந்தான். அப்போது அவனால் நலமடைந்தோர் துக்கம் கொண்டாடினார்கள். இந்தத் துக்க நிகழ்ச்சிகளையெல்லாம் விஞ்சிய துக்க நிகழ்ச்சி பெருஞ்சேர லாதனுக்காகக் கொண்டாடப்பட்ட துக்க நிகழ்ச்சி. ஞாயிறும் திங்களும் நிறைமதிநாள் மாலை நேரத்தில் ஒரு சுடர் மறைகிறது. ஒரு சுடர் எழுகிறது. சேரலாதன் மறைகிறான்; கரிகால் வளவன் எழுகிறான். ஆற்றல் மிக்க ஞாயிறு சேரலாதன். ஒளிமிக்க திங்கள் கரிகால் வளவன்.9 இந்த உவமையால் பெறப்படுவது என்ன? வெண்ணிக்குயத்தியார் கூறுவதுபோல்10 சேரன் சோழனைக் காட்டிலும் நல்லவன்; வல்லவன். வேறு பெயர் ‘சேரமான் பெருந்தோளாதன்’ என்னும் பெயரும் இவனுக்கு வழங்கிவந்ததாகத் தெரிகிறது.11 சேரமான் பெருஞ்சோற்று உதியஞ் சேரலாதன்1 நாட்டுப் பரப்பு வங்காளக் குடாக்கடலும் அரபிக்கடலும் இவனுடைய கடல்கள் என்று சொல்லும்படி இவனது நாட்டுப் பரப்பு தமிழகத்தின் தென்பகுதி முழுவதும் பரவியிருந்தது. வானவரம்பன் இவனே வானவரம்பன் என்னும் சிறப்புப் பெயரை முதன் முதலில் பெற்றவன் என்று தெரிகிறது. ஞாயிறு இவனது கீழைக்கடலில் தோன்றி இவனது மேலைக்கடலில் மறைந்தது என்று சான்று கூறுகிறது. வடக்கில் இருந்த நாடுகள் இவனைப் புகழ்ந்து கொண்டிருந்தமையால் ஒரு வகையில் இவனுக்கு அடங்கியவை. தென்புறம் கடலாகும். எனவே, இவனது நாட்டுக்கு எந்த வகையில் வரம்பு (எல்லை) கூறுவது. மேலே உள்ள வானத்தைக் கூறுவதைத்தவிர வேறுவழியில்லை. எனவே, ‘வான வரம்பன்’ என்று இவனைப் பலரும் சிறப்பித்துக் கூறி மகிழ்ந்தனர். இந்தப் புகழ்ச்சிகளைப் பொருள் நுட்பத்தோடு கேட்டறிந்த முரஞ்சி யூர் முடிநாகராயர் அவனை நேரில் கண்டபோது அதே சிறப்புகளைப் பெருமிதத்தோடு வியப்பும் மகிழ்வும் தோன்றக் கூறி மகிழ்ந்தார். போரும் சோறும் ஐவருக்கும் நூற்றுவருக்கும் போர் நடந்தது. ஐவர் என்பவர் பஞ்சபாண்டவர். நூற்றுவர் என்பவர் துரியோதனன் முதலானோர். இருவருக்கும் நடந்த போர் பாரதப்போர். இப்போரில் ஈடுபட்டவர் களுக்கெல்லாம் இவன் சோறு வழங்கினான்; பெருஞ்சோற்றுவிழா நடத்திச் சிறப்பாக வழங்கினான்; நண்பர், பகைவர் என்று வரை யறுத்துக் கொள்ளாது (வரையாது) எல்லோருக்கும் வழங்கினான். பாண்டியரில் பஞ்சவர், கௌரியர் என்போர் கிளைக் குடியினர் ஆவர். இந்தக் கிளைக்குடியினர்க்கிடையே போர் நடந்தபோது இவன் இவ்வாறு நடந்துகொண்டான் என்று அறிஞர் மயிலை சீனி. வேங்கடசாமி கருதுகிறார். ‘பொலம்பூண் ஐவர்’ 2 எனச் சங்கப் பாடல் குறிப்பொன்று கூறுகிறது. அது பாண்டியரைக் குறிப்பிடுகிறது. எனவே, பாண்டியரும் ஐவர் எனத் தெரிகின்றது. நூற்றுவர் என்பார், ஈரைம்பதின்மரைக் கொள்ளலாம். எனவே, இது கௌரியர் என்னும் துரியோதனன் முதலானோரைக் குறிக்காமல் பாண்டியரில் ஒரு குடியினராகிய ‘கவுரியரை’ குறிப்பிட்டிருக்கலாம். பாண்டிய நாட்டில் உள்நாட்டுப் போர் நிகழ்ந்தபோது இவன் இரு படைக்கும் உணவு வழங்கியிருக்கலாம் என்று கருதவும் வாய்ப்புண்டு. பண்புநலன் பகைவர் செயல்களைப் பொறுத்துக்கொள்வதில் இவன் நிலம் போன்றவன்; சூழ்ச்சித்திறன் அகலத்தால் வானத்தைப் போன்றவன்; வலிமையில் காற்றைப் போன்றவன்; பகைவரை அழிப்பதில் தீப் போன்றவன்; கொடையில் நீரைப் போன்றவன். சுற்றம் பால் புளித்தாலும், பகல் இருண்டாலும், வேதநெறி திரிந்தாலும் இவனோடு உறவில் திரியாத தன்மை உடையது இவனது சுற்றம். இத்தகைய சுற்றத்துடன் இமயமலையும் பொதியமலையும் போல அசைவின்றி வாழவேண்டும் என்று இவன் வாழ்த்தப்படுகிறான். ஆட்சிப்பரப்பு பொதியத்திலும், புகழ்ப்பரப்பு இமயத்திலும் விளங்கி யமை நோக்கி இவன் இவ்வாறு வாழ்த்தப்படுகிறான். உதியஞ்சேரல், சேரமான் பெருஞ்சோற்று உதியஞ் சேரலாதன் இருவரும் வெவ்வேறு அரசர்கள்-யச உதியஞ்சேரல் சேரமான் பெருஞ்சோற்று உதியஞ் சேரலாதன் 1. செங்குட்டுவனுக்குப் பாட்டன் பாரதப்போர் நடந்த காலத்தவன். கால்வழி தெரியவில்லை. 2. பேய்க்கு பெருஞ்சோறு வீரர்களுக்குப் பெருஞ்சோறு அளித்தான். அளித்தான். 3. பாடிய புலவர் கடைச்சங்க பாடிய புலவர் தலைச் சங்கக் காலத் காலத்தவர் தவர் (களவியல் உரை). 4. பகைவர்களை வென்றான் பகைவர்க்கும் நண்பர்க்கும் நடு நிலையாளனாய் விளங்கினான். இளங்கோ கருத்து3 இவன் சேர அரசன். பாரதப்போரில் சோறு அளித்தான். சேரர் குடியில் சேரன், பொறையன், மலையன் என்னும் பெயருடன் வரும் கிளைக் குடிகள் உண்டு. அந்தக் குடிகளில் இவன் எந்தக் குடியைச் சேர்ந்தவ னானாலும் இவன் சேரர் குடியினன், இவனால் சேரர் குடிக்கே பெருமை. பெயர் ஒப்புமை, வள்ளன்மை ஆகியவற்றின் அடிப்படையில் இந்த இருவரையும் ஒருவர் என்று கூறுகின்றார். இந்த ஒப்புமை மேம் போக்கானது. ஆழ்ந்த நோக்கில் வேற்றுமைகளே மிகுதி. எனவே, இருவேறு அரசர்கள் என்று கொள்வதே சரியானது. பாரதப்போரே கட்டுக்கதை என்பது சிலர் துணிபு. இஃது உண்மை யாயின், இவன் அப்படையினருக்கு உணவு கொடுத்தான் என்று கூறுவது வரம்பிகழ்ந்த புகழ்ச்சி. பாரதப் போர் நிகழ்ந்தது உண்மை யாயின், இவன் அப்படையினர்க்குச் சோறு வழங்கியதும் உண்மை. சேரமான் கருவூர் ஏறிய ஒள்வாள் கோப்பெருஞ்சேரல் இரும்பொறை இந்த அரசனின் பெயரைப் புறநானூற்றுக் கொளுக் குறிப்பிடுகிறது.1 பாடலில் பெயர் இல்லை. நாடு இவன் கானக நாடன் என்றும் பாடலில் குறிப்பிடப்படுகிறான். எருமை போன்ற கருங்கற்களுக்கிடையில் ஆடுமாடுகள் மேய்வது போல யானைகள் மேயும் கானக நாடு அந்த நாடு என்று பாடல் கூறுகிறது. உம்பல் என்னும் சொல்லுக்கு யானை என்பது பொருள். உம்பற் காட்டில் (இக்காலத்து ஆனைமலைப் பகுதி) யானைகள் மிகுதி. பாடல் குறிப்பால் இவன் தொடக்கக் காலத்தில் ஆனைமலைப் பகுதியில் அரசாண்டு கொண்டிருந்தான் என்று கருதலாம். கொங்கு நாட்டில் ஒரு கருவூர் உண்டு. இவ்வூர் சேரநாட்டுக் கருவூர் நினைவாகப் பெயர் சூட்டப்பெற்றது என்பது வரலாற்றாசிரியர்களின் கருத்து. காவிரிக் கரையிலுள்ள முசிறியும் தாராபுரத்திற்கு வழங்கிவந்த வஞ்சி என்னும் பெயரும் இந்த முறையில் சேரர்களால் நினைவுச் சின்னப் பெயர்களாக வழங்கப்பட்டவை. உம்பற்காட்டில் ஆட்சி செய்துகொண்டிருந்த கோப்பெருஞ்சேரல் இரும்பொறை இந்தக் கொங்குநாட்டுக் கருவூருக்கு வந்து அரியணை யேறி அரசு புரியலானான். ஒருவேளை இவனே இக் கருவூர் வந்து ஆளத்தொடங்கிய முதல் சேர அரசனாக இருக்கலாம். ஆனதுபற்றி இவனுக்குக் ‘கருவூர் ஏறிய’ என்னும் சிறப்பு அடைமொழி கொடுக்கப் பட்டிருக்கலாம். இந்தச் சிறப்பு அடைமொழியில் ‘ஒள்வாள்’ என்னும் அடைமொழியும் உள்ளது. இந்த அடைமொழி இவன் வாட்போரில் கொங்குநாட்டில் பெற்ற வெற்றியைக் குறிப்பதாக இருக்கலாம். நரிவெரூஉத்தலையார் என்னும் புலவர் இவனைக் கண்டு பாடினார். அன்பும் அருளும் இல்லாதவர்களோடு சேராமல் நாட்டைக் குழந்தையைப்போல் பேணி வளர்க்கவேண்டும் என்று அவனுக்கு அறிவுரை கூறினார். இஃது அவன் புதிதாகக் கைப்பற்றிய நாட்டில் நடந்துகொள்ளவேண்டிய முறையைக் கூறியதாகக் கொள்வது பொருத்தம். புறநானூற்றுப் பாடலில் கொளுக் குறிப்பு ஒரு கதையை உருவாக்கியுள்ளது. இந்தப் புலவரின் தலை, பிணம் தின்னும் நரிகளே வெருண்டு ஓடும்படி அமைந்திருந்தது. இந்த நிலை அவருக்கு ஒரு சாபக் கேட்டால் அமைந்தது. சாபம் கொடுத்தவர் அவருக்குச் சாப விடுதியும் குறிப்பிட்டிருந்தார். சேரமான் கருவூர் ஏறிய ஒள்வாள் கோப்பெருஞ் சேரல் இரும்பொறையைக் கண்டபோது சாபக்கேடு நீங்கிப் புலவர் தம் உடம்பு மீண்டும் கைவரப் பெறுவார் என்பது அந்தச் சாப விடுதி. புலவர் அவ்வாறே கண்டார். தம் உடம்பு கைவரப் பெற்றார். கண்டவன் இன்னான் என உணர்ந்து பாடினார். இந்தக் கதைக்குக் கொளு இடமளிக்கிறது; பாடலில் இடமில்லை. நிகழக்கூடிய நிகழ்ச்சியும் அன்று. புலவரின் பெயர் நரிவெரூஉத்தலையார் என்று குறிப்பிடப் படுகிறது. இவர் தமது பாடல் ஒன்றில் ‘நரைமுதிர் திரை’ என்று பாடியுள்ளார்.2 ‘அணில் ஆடு முன்றி’லைப் பாடியவர் அணிலாடு முன்றிலார் என்றும், ‘செம்புலப் பெயல் நீர் போல’ என்று பாடியவர் செம்புலப் பெயல் நீரார் என்றும் பெயர் பெற்றிருப்பது போல, ‘நரைமுதிர் திரை’ என்று பாடியுள்ள இவர் நரைமுதிர் திரையார் என்று பெயர் பெற்றிருக்கலாம். இந்தப் பெயர் நாளடைவில் மருவி நரிவெரூ உத்தலையார் என்று அமைந்திருக்கலாம். முதன் முதலில் கருவூருக்கு வந்த சேர அரசனாக இவன் இருப்பதால் பதிற்றுப்பத்தில் குறிப்பிடப்படும் அந்துவஞ்சேரலுக்கும் இவன் காலத்தால் முற்பட்டவன் என்று ஆகிறது. எனவே, புறநானூறு தொகுக்கப்பட்ட காலத்திற்கும் இவன் காலத்திற்கும் இடைவெளியாக ஐந்தாறு தலைமுறைகளேனும் இருக்க வேண்டும். இந்த நிலையில் பெயரின் திரிபு வழக்கு இயல்பே. திரிபு வழக்கால் எழுந்த கற்பனைக் கருத்து மிகுதி. இதில் ஓரளவு உண்மை இருக்குமானால் அஃது இந்த அரசனைக் கண்ட மகிழ்ச்சியால் புலவர்க்குத் தோன்றிய புத்துணர்வை உணர்த்துவதாய் இருக்கும். சேரமான் பாலை பாடிய பெருங்கடுங்கோ1 நாடு தண்பொருநை ஆறு பாயும் விறல் வஞ்சி நகர்க்கு இவன் வேந்தன்.2 இப்போதுள்ள தாராபுரம், வஞ்சி என்னும் பெயர் பெற்றிருந்தது. அந்தப் பகுதியில் இருந்துகொண்டு இவன் அரசாண்டான் எனத் தெரிகிறது. வெற்றிகள் இவன் கோட்டைகள் பலவற்றைக் கடந்தான்.3 அக் கோட்டையி லிருந்த வலிமைமிக்க வீரர்களைப் புறங்கண்டான். எந்தக் கோட்டையை வென்றான் என்பது தெரியவில்லை. கொடை இவன் தன் வெற்றி மகிழ்ச்சியில் பாணர்களுக்குப் பொன்னால் தாமரைப் பூக்கள் செய்து வெள்ளி நாரால் தொடுத்துப் பரிசில்களாக வழங்கினான். இவனது வெற்றிப் புகழை அதாவது, மறப்புகழைப் பாடிய பாடினிக்குக் கழஞ்சு எடை கொண்ட பொன் இழைகள் செய்து வழங்கினான். புலமை நலம் இவன் பாலைத் திணையைச் சிறப்பித்துப் பாடுவதில் வல்லவன். இவனது பாடல்களில் ஒன்று மட்டும் மருதம்.4 பிற யாவும் பாலைத் திணை மேலன. பாடல்களில் உவமை நயங்களும் பிற நயங்களும் மிகுதி. எடுத்துக்காட்டாக ஒன்றைக் காணலாம். வேனில் காலத்தில் மரங்கள் தழைத்திருப்பதை இவன் கூறுகிறான். சோம்பல் இல்லாதவனிடம் செல்வம் தழைப்பதுபோல் மரங்கள் தழைக்கின்றன. அவனது செல்வத்தின் பயனைப் பலரும் துய்ப்பதுபோல் மரக்கொம்புகளில் வண்டுகள் படிந்து உண்கின்றன. சில மரங்கள் மாயவளின் மேனிபோல் கரும் பச்சையான தளிர்களை ஈனுகின்றன. அவள் மேனியிலே சுணங்கு இருப்பதுபோன்று அத் தளிர்களின்மீது பூந்தாதுகள் உதிர்ந்துள்ளன.5 கல்வெட்டுச் சான்று கருவூரை அடுத்த புகழூரில் சங்ககாலத்துக் கல்வெட்டு உள்ளது. தாமிழி எழுத்துகளாலான அக் கல்வெட்டில் ‘கோ ஆதன் செல்லிரும் பொறை மகன் பெருங்கடுங்கோ’ என்னும் குறிப்பு வருகிறது. இந்தக் குறிப்பு நம் பாலை பாடிய பெருங் கடுங்கோவையே குறிக்கும் என்று நம்பப்படுகிறது. ஆயின், இவனது தந்தையின் பெயர் செல்வக் கடுங்கோ வாழியாதன் என்று முடியும். செல்வக்கடுங்கோ வாழியாதனுக்குப் பெருஞ்சேரலிரும் பொறை, குட்டுவன் இரும்பொறை என்னும் பெயரைக் கொண்ட இரண்டு ஆண் மக்கள் இருந்தனர் என்பதை முன்பே கண்டோம். இந்தச் செய்திகள் செல்வக்கடுங்கோ வாழியாதனுக்கு மூன்று பிள்ளைகள் இருந்தனர் என்னும் நிலையை உண்டாக்கும். இவனுக்கு இரண்டு பிள்ளைகள்தாம் இருந்தனர் என்று பாடல் ஒன்று கூறுகிறது.6 எனவே, மூவர் என்று கூறுவது பொருந்தாது. குட்டுவன் இரும்பொறை என்னும் பெயர் நம் பாலை பாடிய பெருங்கடுங்கோவுக்கு வழங்கப்பட்ட பெயராக இருக்கலாம். இவன் தானே புலவனாக விளங்கியதனால் இவன்மீது வேறு ஒரு புலவர் பதிற்றுப்பத்துப் பாடல்கள் பாடிச் சிறப்பிக்கவில்லை போலும். புகழுர்க் கல்வெட்டு பெருங்கடுங்கோ மகன் இளங்கடுங்கோ என்று குறிப்பிடுகிறது. பதிற்றுப்பத்துப் பதிகம் குட்டுவன் என்பவனின் மகன் இளஞ்சேரல் இரும்பொறை என்று குறிப்பிடுகிறது. இந்தச் செய்தி களும் ஒன்றோடொன்று தொடர்பு உள்ளவைபோல் காணப்படுகின்றன. பொறையன், கடுங்கோ ஆகிய பெயர்கள் ஒரே அரசனுக்கு வழங்கிய நிலையும் உண்டு என்பதை ‘மாந்தரம் பொறையன் கடுங்கோ’ என்பவனது வரலாற்றில் காணலாம். இந்தச் செய்திகளையெல்லாம் திரட்டி நோக்கி இந்தப் பாலை பாடிய பெருங்கடுங்கோவை ஒன்பதாம் பதிற்றுப்பத்துத் தலைவனான இளஞ்சேரல் இரும்பொறை யின் தந்தை என்றும் கருதலாம். சேரமான் குடக்கோச் சேரல் இரும்பொறை நாடு குடநாட்டிலிருந்து ஆட்சி செய்துகொண்டிருந்தவன் இவன் என்பது இவனது பெயரிலிருந்து பெறப்படும் உண்மையாகும். போர் இடிபோன்று போர்முரசு முழங்கப் பெரும்படையுடன் படை யெடுத்துச் சென்று, எதிர்த்த அரசர்கள் அழியும்படி வெற்றி கொள்ளும் வல்லமை பெற்றவன் இவன்.1dn7 ஒருமுறை இவன் பகை அரசனை அழித்த போது பகைவர்கள் கையற்று வருந்தினர்.2 இந்தச் செய்திகள் ஏதோ எல்லோரையும் பொதுப்படக் கூறுவது போல் கூறப்பட்ட செய்திகளாக உள்ளன. சிறப்பாக இவனது போரைப்பற்றிக் குறிப்பிட ஒன்றுமில்லை. கொடை பெருங்குன்றூர்கிழார் இவனிடம் பரிசில் பெற வந்தார்; வள்ளல் என்று இவனைப் புகழ்ந்து பாடினார். தாயிடம் பால் இல்லாமையால் பாலுண்ண மறந்த தன் குழந்தையின் நிலையைக் கூறித் தன் வறுமை நிலைமையையும், பக்கத்து வீடுகளுக்குச் சென்றேனும் உண்டு வாழும் எலிகூட உணவின்றிச் செத்து மடிந்துள்ள தன் வீட்டுச் சுவரைக் கூறித் தன்னைச் சூழ்ந்துள்ள வறுமையையும் கூறிப் பரிசில் நல்குமாறு வேண்டினார். அவன் முதல் நாள் பரிசிற் பொருளைக் காட்டி நல்குவதுபோல் பாசாங்கு செய்தான். புலவர் மறுநாளும் பாடினார். தரவில்லை, மூன்றாம் நாளும் பாடினார். முடிவு தெரியவில்லை. கொடுத்திருக்கலாம். மாந்தரன் மாந்தரன் என்னும் பெயர் தனித்தும் பல்வேறு அடை மொழி களுடனும் காணப்படுகிறது. மாந்தரன்1, மாந்தரம் பொறையன்கடுங்கோ,2 சேரமான் மாந்தரஞ் சேரல் இரும்பொறை3, சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரல் இரும் பொறை,4 சேரல் மாந்தரஞ் சேரல் இரும் பொறை,5 கோச்சேரமான் யானைக் கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும் பொறை6 இவ்வாறு ஆறு வேறு தொடர்மொழிகளால் குறிப்பிடப்படும் மாந்தரன் எத்தனை பேர் என்பது தெரியவில்லை. எனவே, தனித் தனியே இவர்களைப் பற்றிய செய்திகளை முதலில் காண்போம். மாந்தரன் ஒன்பதாம் பத்துத் தலைவனான இளஞ்சேரல் இரும்பொறை மாந்தரனின் வழிவந்தவன். நல்லாட்சி இந்த மாந்தரன் அறக்கடவுள் வாழ்த்தும்படி நல்லாட்சி புரிந்தவன். இவனது ஆட்சியில் கோள்நிலை திரியவில்லை வானம் பருவமழை தவறாமல் பொழிந்தது. மக்களுக்கு அச்சம் என்பதே இல்லை. இவனது நாட்டிலிருந்த பொருள்களுக்குப் பாதுகாப்பு மிகுதி. மக்களிடம் அறியாமை என்பது இல்லை. சமூகவாழ்வில் இன்பம் பெருக்கெடுத்திருந்தது. கல்வி பல்வேறு துறைகளில் பல்வேறு அறிஞர்களிடம் துறைபோகிக் கிடந்தது. திறை பெறல் வாள்வேந்தர்கள் பலர் இவனுக்குக் களிறும் கலமும் பரிசிலாகத் தந்து இவன் சொன்னபடி செயலாற்றி வந்தனர். மாந்தரம் பொறையன் கடுங்கோ நாடு இவன் பெயரில் ‘மாந்தரன்’ என்று வாராமல் ‘மாந்தரம்’ என்று வருவதால் இது நாட்டின் பெயர் என்பது பெறப்படுகிறது. பொறையன் என்பது பொறை நாட்டோடு தொடர்பு உடையது. கடுங்கோ என்பது ‘இருங்கோ’, ‘இளங்கோ’ என்பன போல் அரசன் பெயராகும். புகழ் பரிசில் வேண்டிச் சென்றவர்களின் கொள்கலம் நிறையும்படி கொடை வழங்கினான். இவனது வள்ளன்மையைப் புலவர்கள் போற்றிப் பாடினார்கள். அவர்கள் செந்நா மேலும் சிவப்புறும்படி பாடினார்களாம். படை வெல்லுதற்கு அரிய படை இவனிடம் இருந்தது என்று கூறப்படுவது பொதுப் புகழ்ச்சியாகப்படுகிறது. சேரமான் மாந்தரஞ் சேரல் இரும்பொறை1 புறநானூற்றைத் தொகுத்தவர், இவனுக்கும் சோழ அரசன் இராசசூயம்வேட்ட பெருநற்கிள்ளிக்கும் நடந்த போரைக் குறிப்பிடுகிறார். போரில் இவன் தோற்றான். சோழன் வென்றான். சோழனது வெற்றிக்குக் காரணம் சோழனது ஆற்றல் அன்று. சோழனுக்குத் துணையாகத் தேர்வண் மலையன் என்னும் சிற்றரசன் இருந்ததே ஆகும். இந்தச் செய்தி பாடலிலும் கூறப்பட்டுள்ளது. பாடலில் அரசர்களுடைய பெயர் குறிப்பிடப்படவில்லையே அன்றிப் பாடலில் உள்ள செய்தியும் புறநானூற்றைத் தொகுத்தவர் கொளுவில் தரும் செய்தியும் ஒன்றே. எனவே, இவனைப்பற்றிக் கூறப்படும் போர்ச்செய்தி ஐயத்திற்கிடமின்றி உண்மை எனத் தெரிகிறது.1 சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை யானையைப் போல் கூர்மையான பார்வையும் முருகனைப் போன்ற அழகும் உடையவனாக இவன் விளங்கியமையால் இவனது பெயரில் ‘யானைக்கண். ‘’சேய்’ என்னும் அடைமொழிகள் முறையே அமைந்தன. பாடலில் ‘வேழ நோக்கின் விறல் வெஞ்சேய்’ என்று இந்த அடைமொழி குறிப்பிடப்பட்டுள்ளது. நாடு மரந்தை அல்லது மாந்தைத் துறைமுகத்தைத் தலைநகராகக் கொண்ட நாடு மாந்தர நாடு. இந்த நாட்டுக்கு இவன் அரசன் என்பது இவனது பெயரால் விளங்கும் உண்மையாகும். வெற்றிகள் வயலும், மலையும், மணலும், கழியும், கானலும் தன்னகத்தே கொண்ட தொண்டி நகரில் இருந்தவர்களோடு இவன் போரிட்டு அவர்களை அழித்து வென்று சிலகாலம் தங்கி அரசாண்டான்.2 கொல்லி வெற்றி தொண்டி நகரில் போரிட்டு வென்று சிலகாலம் அங்குத் தங்கி அரசாண்டது போலவே கொல்லியிலும் சிலகாலம் தங்கி அரசாண்டான்.3 சிறைபட்டு மீளல் இவன் மேலே கூறியவாறு பல வெற்றிகள் பெற்று ஆளுகையில் பாண்டிய அரசன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனின் பகையைத் தேடிக்கொண்டான். இந்த நெடுஞ்செழியன் இவனைத் தந்திரமாகக் கைதுசெய்து சிறையில் அடைத்தான். யானை பொய்க்குழியில் விழுந்தது இவன் சிறைப்பட்டதற்கு உவமையாகக் கூறப் பட்டுள்ளபடியால் பாண்டியன் இவனைப் போரில் வென்று கைது செய்யவில்லை; தந்திரமாகக் கைது செய்தான் என்பது தெரிகிறது. குழியை அழித்துவிட்டு யானை தப்பிச் சென்று தன் கூட்டத்தோடு சேர்ந்துகொண்டது. இவன் சிறையிலிருந்து தப்பிச் சென்ற செயலுக்கு உவமையாகக் கூறப்பட்டிருப்பதால் இவன் பிறருடைய உதவியின்றித் தானே சிறையைத் தகர்த்தெறிந்து விட்டுத் தப்பிவிட்டான் என்பது தெரிகிறது.4 பகையரசர் பணிவு இவனை அண்டினால் தாம் இழந்த நாட்டையும் செல்வத்தையும் திரும்பப் பெறலாம் என்று சில அரசர்கள் இவனைப் பணிந்தனர்.5 இவன் சினந்தால் தம் கோட்டையை அழித்து விடுவான் என்று சிலர் இவனைப் பணிந்தனர். வேந்தர்கள் பணிந்து திறை கொடுத்தனர். படை இவனது தோல்படை மேகக் கூட்டம் போன்றது. யானைப் படை மலைபோல் உயர்ந்த யானைகளைக் கொண்டது. இவை கடல்போல் பெரியன.6 இவனது வீரர்கள் பனம்போழைச் செருகிக்கொண்டு வெறிக் குரவை ஆடினர். கொடைத்தன்மை இவன் முரசு முழக்கி இரவலரை அழைத்துக் கொடை நல்கினான் என்பது குறிப்பிடத்தக்கது. இவனிடம் பரிசில் பெற்றபின் வேறொருவரிடம் சென்று பெற வேண்டி நிலை இல்லாதவாறு இவன் மிகுதியாகக் கொடுத்தான். தனக்கு வேண்டுமென்று எதையும் வைத்துக்கொள்ளாது கொடுத்தான்.7 ஆட்சி இவனது நாட்டு மக்கள் சோறு ஆக்கும் தீ அன்றி வேறு தீ அறியார்; வெயில் அல்லது வேறு சூடு அறியார்; வானவில் அன்றிக் கொலை வில் அறியார்; உழுபடை அன்றிக் கொல்படை அறியார். இவன் நாட்டு மண்ணைக் கருவுற்ற பெண்கள் விரும்பி உண்ணுதல் அன்றிப் பகைவர் கொள்ளார். இவனது கோட்டையிலே அம்புகள் பயன்படுத்த வாய்ப்பின்றிக் கிடந்தன. நாட்டிலே அறம் தூங்கியது. மக்களுக்கு நல்ல நிமித்தம் கெட்ட நிமித்தம்பற்றிக் கவலையே இல்லை.8 விறுவிறுப்பு இல்லாத அமைதியான இன்பமான வாழ்க்கையாகும். இவன் பாதுகாக்கும் நாடு தேவர் உலகம்போல் இன்பத்தையே துய்த்தது. முன்னோர் ஆட்சி குமரி முதல் இமயம் வரை மேற்கிலும் கிழக்கிலும் இரு கடல்களுக்கிடையில் ஆண்ட அரசர்கள் எல்லாம் ஒன்றுபட்டு இவனது முன்னோருக்கு வழிமொழிந்து வாழ்ந்தனர். இவனது முன்னோர் கொடியவற்றை நீக்கிச் செங்கோலோச்சினர். காடுகளைத் திருத்தி விளைநிலமாக்கினர்.9 பண்பு நலம் கடலின் ஆழம், நானிலத்தின் பரப்பு, திசையின் நீளம், வானத்தின் உயரம் இவற்றையெல்லாம் அளந்துவிட்டாலும் இவனது அறிவு. ஈரம், இரக்க உணர்வு ஆகியவற்றை அளக்க முடியாது என்று கூறுவதால்10 இவன் நல்ல பண்பாளன் என்பதை அறியலாம். ஐங்குறுநூறு தொகுப்பித்தல் அகத்துறையில் அரிய நூல் ஒன்றைத் திறமையாளர்களைக் கொண்டு உருவாக்க வேண்டுமென்று இவன் விரும்பினான். அறிவில் சிறந்து விளங்கிய புலவர் கூடலூர்கிழாரிடம் அப் பணியை ஒப்படைத்தான். அவர் ஐந்து திணைகளையும், ஐந்து புலவர்களிடம் பகிர்ந்தளித்தார். ஒவ்வொருவரும் 100 பாடல்கள் பாடவேண்டும் என்றும் அந்த நூறும் பத்துப் பத்தாகத் தனித் தனித் தலைப்பின்கீழ் அமையவேண்டும் என்றும் அவர் வரையறை கூறியிருந்தார். அவர் கூறியபடி ஓரம்போகியார் மருதத்திணைப் பாடல்களைப் பாடினார். அம்மூவனார் நெய்தல், கபிலர் குறிஞ்சி ஓதல் ஆந்தையார் பாலை, பேயனார் முல்லை என்ற முறையில் பிற திணைக்குரிய பாடல்களும் பாடப்பெற்றன. அவை கூடலூர் கிழாரால் தொகைநூலாக உருவாக்கப் பட்டன. தலைப்புக்குப் பத்துப் பாடல், திணைக்குப் பத்துத் தலைப்பு என்ற நிலையைக் காணும்போது இது திட்டமிட்டுப் பாடிய தொகுப்பு நூல் என்பது புலனாகிறது. சேரல் மாந்தரஞ் சேரல் இரும்பொறை விளங்கில் வெற்றி விளங்கில் என்பது மாடமாளிகைகள் நிறைந்த ஊர். ‘தெற்றி’ என்னும் ஒருவகை விளையாட்டு அங்குள்ள மக்களுக்குச் சிறப்பு விளையாட்டாகும். இவன் அந்த ஊரைத் தாக்கினான். அதன் சிறப்புகளைத் தன் வாட்படை கொண்டு அழித்தான்.1 காலம் இவன் தனது விளங்கில் வெற்றியைப் புலவர் ஒருவர் நன்கு சிறப்பித்துப் பாடவேண்டும் என்று விரும்பினான். கபிலர், செல்வக் கடுங்கோ வாழியாதனைச் சிறப்பித்துப் பத்துப்பாடல்கள் பாடியது அவன் நினைவுக்கு வந்தது. அப்போது கபிலர் இல்லை; இறந்துவிட்டார். அவர் இருந்தால் நலமாயிருக்குமே என்று எண்ணி ஏங்கினான். இந்த ஏக்கத்தை நிறைவுசெய்யப் பொருந்தில் இளங்கீரனார் என்ற புலவர் தாமே முன்வந்தார். கபிலரைப்போல் இவர் இவன்மீது பத்துப் பாடல்கள் பாடி யிருக்கக்கூடும். பதிற்றுப்பத்தைத் தொகுத்தவர் ஏதோ காரணத்தால் இதை விட்டிருக்கக்கூடும். இவன் தன் காலத்தில் கபிலர் இல்லை எனக் கூறுவது இவனது காலத்தை வரையறுக்க உதவி செய்யும். செல்வக் கடுங்கோவை அடுத்து அரியணையேறியவன் பெருஞ்சேரல் இரும்பொறை ஆவான். சேரல் மாந்தரஞ்சேரல் இரும்பொறை இந்தப் பெருஞ்சேரல் இரும்பொறையைப் பாடிய அரிசில்கிழாரைப் பற்றி எண்ணவில்லை. எனவே, இவனது காலம் செல்வக் கடுங்கோ வாழியாதனுக்கும் பெருஞ்சேரல் இரும்பொறைக்கும் இடைப்பட்டது என்பது தெரிகிறது. வானவன் வரலாற்றில் இவனைப்பற்றி மேலும் காணலாம். கோச்சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை1 இவனது வரலாற்றைப் புறநானூற்றுக் கொளுக் குறிப்பு ஒன்று சுட்டுகிறது. மனைவி இவன் ஒருத்தியை மணந்து உவகையுடன் வாழ்ந்தவன் எனத் தெரிகிறது. இறந்தவன் தெய்வப் பெண்களுக்குத் துணையாகச் சென்றான் என்று கூறப்படும்போது தன் துணை (மனைவி), ஆயம் இவற்றை மறந்தான் என்று கூறப்படுவதால் அதை உணரமுடிகிறது. கொடைத்தன்மை அளந்து கொடுத்து அறியாதவன்; அளக்காமல் அள்ளி அள்ளிக் கொடுத்தவன். தோற்றப் பொலிவு ‘மணிவரை அன்ன மாயோன்’ என்று இவன் கூறப்படுவதால் கறுகறுத்த இவன் பொலிவு வெளிப்படுகிறது. யானைக்கண் என்பதனோடும் இந்த நிற ஒருமைப்பாடு தொடர்புகொண்டுள்ளதை நாம் உணர முடிகிறது. கூடலூர்கிழார் வானியலில் வல்லவர். சில கோள்நிலைக் குறிகளால் இந்த அரசன் இன்ன நாளில் இறந்துபடுவான் எனக் கணித்து அறிந்தார். ஆனால், தம் கணிப்புப்படி நடவாதிருக்க வேண்டுமென்று விரும்பி அரசன் நோயற்று இருக்கவேண்டுமென வாழ்த்தினார். வாழ்த்துப் பலிக்கவில்லை; கணிப்புப் பலித்தது. கணித்த நாளில் அவன் இறந்தான். இறந்தது கண்டு புலவர் வருந்திப் பாடினார். இறந்த நாள் மேழ ஓரை, கார்த்திகை நாள் அந்த நாளின் முதல் கால் பகுதியாகும். அது பாதி இரவாகும். முடப்பனையின் (அனுடம்) நிலை அடி வெள்ளி, கடைக்குளத்தின் (புனர்பூசம்) நிலை கடை வெள்ளி. இந்த எல்லையில் பங்குனி மாதத்து முதல் பதினைந்து நாளில் உச்சம் உத்தரமீன், அந்த உத்தரமீன் உச்சியிலிருந்து சாய்ந்தது. அதற்குப்பின் எட்டாம் மீனாகிய மூலம் அதற்கு எதிரே எழுந்தது. அந்த உத்தரத்திற்குமுன் எட்டாம் மீனாகிய மிருகசீரிடம் துறையிடத்தே தாழ்ந்தது. அப்போது ஓர் எரிமீன் கீழ்த்திசையிலோ வடதிசையிலோ செல்லாது நிலத்திற்கு விளக்காக விழுந்தது. இந்த நிகழ்ச்சி நடந்த ஏழாம் நாள் அவன் இறந்தான்.2 மேலே தனித்தனியே கண்ட வரலாற்றில் வரும் செய்திகள் ஒன்றோடொன்று தொடர்புடையவையாக உள்ளன. அன்றியும் குறுங்கோழியூர் கிழாரால் பாடப்பட்ட மூன்று பாடலுக்கு நான்கு வகையான தொடர் அமைப்புகள் உள்ளன. எல்லாமே புறநானூற்றைத் தொகுத்தவரால் குறிப்பிடப்பட்டவை. எனவே, நால் வேறு பெயர்களில் கூறப்பட்டுள்ளவரும் ஒருவனே எனக் கருதலாம். வானவன் வானவன் யார்? ஒருவனா? பலரா? என்பனவற்றைத் தெரிந்து கொள்வதற்கு அவனது செயல்களையும் இருப்பிடங்களையும் தெளிவாகத் தெரிந்துகொள்ள வேண்டும்.1 இமயத்தில் வில் பொறித்தவன் வஞ்சி நகரில் இருந்த வானவன் ஒருவன் இமயத்தில் வில்லைப் பொறித்தான்.2 இவன் ‘மாண்வினை நெடுந்தேர் வானவன்’ என்று கூறப்பட்டுள்ளான். இந்த வானவனுக்கும், சோழ அரசன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனுக்கும் போர் நடந்தது. வஞ்சி நகரில் நடந்த அந்தப் போரில் இந்த வானவன் மாண்டான். வஞ்சி நகரம் வருத்தத்திற்கு உள்ளாகியது. இமயத்தில் வில்லைப் பொறித்தவன் நெடுஞ்சேரலாதன் என்னும் சேர அரசன் ஆவான். இந்தச் செயலில் அவனுக்குத் துணையாக இருந்தவர்கள் இருவராவர். ஒருவன் அவனது மகன் செங்குட்டுவன்; மற்றொருவன் அவன் காலத்தில் கொங்கு நாட்டுப் பகுதியில் சிறப்புற்று விளங்கிய மாந்தரஞ்சேரல் இரும்பொறை என்னும் சேர அரசனாவான்.3 நெடுஞ்சேரலாதன் (வேல்பஃறடக்கை) பெருநற்கிள்ளியோடு போரிட்டு இறந்தான். எனவே, இங்குக் குறிப்பிடப்பட்ட வானவன் செங் குட்டுவனாகவோ, மாந்தரஞ்சேரல் இரும் பொறையாகவோ தான் இருக்க முடியும். செங்குட்டுவன் கண்ணகிக்குச் சிலை அமைத்தபின் துறவு பூண்டான் எனச் சிலப்பதிகாரம் கூறுகிறது. எனவே, கிள்ளிவளவனோடு போரிட்டு இறந்தவன் மாந்தரஞ்சேரல் இரும்பொறையே என்பது தெளிவாகிறது. இந்தக் கருத்தை மேலும் சில சான்றுகள் உறுதி செய்கின்றன. வானவன் கொல்லிமலைப் பகுதியை ஆண்டு வந்தான்4 மாந்தரஞ்சேரல் கொல்லிமலை நாட்டைத் தாக்கிப் போரில் வென்று அங்குத் தங்கி அரசாண்டபோது குறுங்கோழியூர்கிழார் இவனை நேரில் கண்டு பாடியுள்ளார்.5 இவை வானவன் என்று குறிப்பிடப்படுபவனும், மாந்தரஞ்சேரல் இரும்பொறையும் ஒருவரே என்பதை மேலும் உறுதிப்படுத்துகின்றன. இந்த வானவனின் படைத் தலைவன் பிட்டன் ஆவான்.6 மாந்தரஞ்சேரல் இரும்பொறைக்கு ‘மாந்தரம்பொறை கடுங்கோ’ என்னும் பெயரும் உண்டு.புகழூரில் உள்ள சங்ககாலத்துக் கல்வெட்டு கடுங்கோ அரசனையும்.7 பிட்டனையும் குறிப்பிடுகிறது. எனவே, வானவன் என்பவன் மாந்தரஞ்சேரல் இரும்பொறையே என்பது கல்வெட்டுச் சான்றாலும் உறுதி செய்யப்படுகிறது. இவனைச் செல்வக்கடுங்கோ வாழியாதனின் மகன் என்று அந்தச் சங்ககாலக் கல்வெட்டுக் குறிப்பிடுகிறது. செல்வக்கடுங்கோவின் மக்கள் இரண்டு பேர், ஒருவன் பெருஞ்சேரல் இரும்பொறை (தகடூரை வென்றவன்). அவன் எட்டாம் பத்தின் தலைவனாவான்.8 மற்றொருவன் குட்டுவன் இரும்பொறை. இவன், ஒன்பதாம் பத்துத் தலைவனின் தந்தை ஆவான்.9 மாந்தரஞ் சேரல் தொண்டி நகரில் போர் தொடுத்து வென்று அங்கும் சில காலம் தங்கி அரசாண்டான்.10 தொண்டி, குடநாட்டில் இருந்த துறைமுகம். குடநாட்டை அடுத்திருந்த குட்டநாட்டில் இவன் முதன்முதலில் தன் அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினான் எனல் பொருந்தும். இதனால் இவன் குட்டுவன் இரும்பொறை என்றும் கூறப்பட்டான். இவற்றை யெல்லாம் ஒன்றுசேர்த்து எண்ணும்போது குட்டுவன் இரும்பொறை, மாந்தரஞ்சேரல் இரும்பொறை, வானவன் என்ற பெயரால் குறிப்பிடப் படுவோர் அனைவரும் ஒருவரே என்று ஐயம் திரிபு இல்லாமல் தெரிந்து கொள்ளலாம். இவன் பதிற்றுப்பத்து எட்டாம் பத்துத் தலைவனின் தம்பியாவான். சங்ககாலக் கல்வெட்டு இவனைப் ‘பெருங்கடுங்கோ’ என்று குறிப்பிடுகிறது என்பதைக் கண்டோம். இந்தப் பெருங்கடுங்கோ, பாலை பாடிய பெருங்கடுங்கோ வஞ்சி நகரத்தைத் தலைநகராகக் கொண்டு ஆண்டுவந்தவன் என்பதை அவனது வரலாற்றால் அறியலாம்.11 வானவன் வஞ்சி நகரில் இருந்து கொண்டு அரசாண்டதும் இதுவும் ஒன்றாய் அமைந்து இவர்களுடைய வரலாறுகள் எல்லாமே ஒன்றுக்கொன்று எள்ளவும் முரண்பாடு இல்லாமல், குழப்பம் இல்லாமல் தெளிவாய் அமைவதைக் காண்கிறோம். இந்த முடிவுகள் எல்லாம் மேலும் ஆய்வுக்குரியவை. சோழ அரசர் இருவரோடு இவன் போராடினான். முதலில் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளியோடு போரிட்டுத் தோற்றான்.12 பின்பு, கிள்ளிவளவனோடு போரிட்டு மாண்டான்.13 குடகடலில் நாவாய் ஓட்டல் தொண்டி, மாந்தை ஆகிய மேற்குக் கடற்கரைத் துறைமுகங்கள் இவனுக்கு உரித்தாயிருந்தன. இவன் கடல் வாணிகத்தில் கவனம் செலுத்தினான். இவனது கப்பல்கள் அரபிக்கடல் வழியே மேலை நாடுகளுக்குச் சென்று பொன்னைக் கொண்டு வந்தன. கப்பல் வாணிகத்தில் இவனோடு போட்டியிட எவராலும் முடியவில்லை. எனவே, இவனது கப்பல்கள் வாணிகத்தில் ஈடுபட்டதிலிருந்து அரபிக்கடலில் பிறரது கப்பல்கள் செல்லவில்லை.14 கொடைத் தன்மை யாழ் இசையில் வல்ல ‘கோடியர்’ எனும் மக்கள் இவனை நாடிச் சென்றனர். அவர்கள் இவனிடம் பரிசில் பெற்றார்கள் எனலாம்.15 சிறப்புப் பெயர்கள் ‘வெல்போர் வானவன்’16, நற்போர் வானவன்’17 ஆகிய தொடர்கள் இவனது போர் ஆற்றலையும், வெற்றியையும் உணர்த்துகின்றன. ‘சினமிகு தானை வானவன்’18, ‘பொருந்தார் முனையரண் கடந்த வினைவல் தானை வானவன்’19 ஆகிய தொடர்கள் இவனது படையின் ஆற்றலை விளக்குகின்றன. ‘வில்கெழு தடக்கை ... ... வானவன்’20 ‘பெரும்படைக் குதிரை ... ... வானவன்’21ஆகியவை இவனது போர்க்கோலத்தைக் காட்டுகின்றன. ‘தேனிமிர் நறுந்தார் வானவன்’22 ‘நெடுந்தேர் வானவன்’23 ஆகியவை இவனது தோற்றப் பொலிவை நன்கு புலப்படுத்துகின்றன. சோழிய ஏனாதி திருக்குட்டுவன்1 குட்டுவன் என்னும் பெயர் இவன் சேரர் குடியைச் சேர்ந்தவன் என்பதைத் தெளிவுபடுத்துகின்றது. அதனை வலியுறுத்தும் சான்றாக அவனைப் பாடிய புலவர், அவனது தந்தை வஞ்சி நகரத்தவன் என்று குறிப்பிட்டுள்ளார். எனவே, சேரர் குடியினன் என்பது தெளிவு. இவன் நாடு இவன் வெண்குடை என்னும் ஊரில் இருந்துகொண்டு அரசாண்டு வந்தான். அந்த ஊர் வயல்கள் நிறைந்த ஊர். இவன் தந்தை வஞ்சி நகரத்தவன். தோற்றம் மார்பிலே சந்தனம், தோளிலே வில், வலிமைமிக்க கைகளில் கூர்மையான வாள். இந்தக் கோலத்துடன் இவன் காட்சியளித்தான். கொடைத் தன்மை குமரனார் என்னும் புலவர் மதுரையில் வாழ்ந்தவர். அவரது தந்தை கோனாட்டு எறிச்சலூரில் வாழ்ந்த மாடலன். இந்தக் குமரனார் இந்தக் குட்டுவனை வள்ளல் என்று பலரும் புகழ்வதைக் கேட்டிருந்தார். வெண்குடை நகருக்குச் சென்று இந்தக் குட்டுவனின் தந்தை நகரான வஞ்சியைச் சிறப்பித்துப் பாடினார். கேட்ட இந்தக் குட்டுவன் பெரிதும் மகிழ்ந்து கொல்லும் போர் யானை ஒன்றைப் பரிசிலாக வழங்கினான். புலவர் யானையைக் கண்டு அஞ்சி ஒதுங்கினார். புலவர் பரிசில் சிறியது என்று எண்ணி ஒதுங்கினார் என்று எண்ணினான். முன்பு அளித்ததைக் காட்டிலும் மிகப் பெரிய மற்றுமொரு யானையைப் பரிசிலாக அளித்தான். இதனால், புலவர் நடுநடுங்கிப்போய் அவனிடம் பரிசில் கேட்பதையே நிறுத்திவிட்டாராம். இவ்வாறு அவனது கொடைத் தன்மை அமைந்திருந்தது. ஏனாதிப் பட்டம் ‘ஏனாதி’ என்னும் பட்டம் படைத்தலைமை பூண்டு சிறப்புடன் போராடியவர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்புப் பட்டம். வேளாண்மையில் சிறந்தவர்களுக்குக் ‘காவிதி’ப் பட்டமும் வாணிகத்தில் சிறந்தவர்களுக்கு ‘எட்டி’ப் பட்டமும் இவ்வாறு சிறப்புக் கருதித் தமிழ்நாட்டில் வழங்கப் பட்ட பட்டங்களாகும். இந்தக் குட்டுவனுக்கு அளிக்கப்பட்ட இந்தப் பட்டத்தில் ‘சோழிய’என்னும் அடைமொழி உள்ளது. இதனால், இந்தப் பட்டத்தை அளித்தவன் சோழ அரசன் என்பது தெளிவாகத் தெரிகிறது. சோழன், சேரனுக்கு இத்தகைய பட்டம் அளித்துச் சிறப்பிக்கக் காரணம் என்ன? இந்தக் குட்டுவன் சோழரது படைத் தலைமை பூண்டு சிறப்புடன் போராடிச் சோழனுக்கு வெற்றியைத் தேடித் தந்திருக்க வேண்டும். இதனால் இவன் இந்தச் சிறப்புப் பட்டத்தைப் பெற்றிருக்க வேண்டும். இந்தப் படைப்பணியை இவன் தனது இளமைக் காலத்தில் ஆற்றியிருக்கலாம். சோழன் பாராட்டிப் பட்டம் வழங்கியதோடு தன் சார்பாக அல்லது தனக்குத் துணையாக வெண்குடையில் இருந்து கொண்டு ஆளும்படி அமர்த்தியிருக்கலாம். வெண்குடை மக்கள் அவனது நற்பண்புகளை எண்ணி அவனைத் தம் ஊர் ‘கிழவோன்’ என்று ஏற்றுக் கொண்டிருக்கலாம். இவ்வாறு இவன் ‘வெண்குடை கிழவ’னாக விளங்கினான். இந்தப் பட்டத்தை இவனுக்கு வழங்கிய சோழன், சேட் சென்னி (இலவந்திகைப் பள்ளியில் இறந்தவன்) என்பதை ஏனாதி திருக்கிள்ளி வரலாற்றில் காணலாம். 3. சேர அரசப் புலவர்கள் பிற புலவர்களால் பாடப்பெற்றுள்ள சேர அரசர்கள் வரலாற்றை இதுவரை கண்டோம். இவர்களே அன்றித் தாம் பாடிய பாடல்களால் சங்கநூல்களில் இடம் பெற்றுள்ள சேர அரசர்களும் உண்டு. 1. கருவூர்ச் சேரமான் சாத்தன் 2. சேரமான் இளங்குட்டுவன் 3. சேரமான் எந்தை 4. சேரமான் கணைக்கால் இரும்பொறை 5. சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை 6. பாலைபாடிய பெருங்கடுங்கோ 7. மருதம் பாடிய இளங்கடுங்கோ 8. முடங்கிக் கிடந்த நெடுஞ்சேரலாதன் ‘சேரமான்’ என்னும் சொல் சேரர் குடிமகன் என்னும் பொருளைத் தரும். இது சேரர் குடியினர் அனைவர்க்கும் உரியது. சேரர் குடி, சேர நாட்டை அரசாண்ட குடி; சேர நாட்டுக் குடிமக்கள் அன்று. சேரர் குடியைச் சேர்ந்த அரசன் ஒருவனின் மகன் எத்தனை பேர் இருந்தாலும், அத்தனை பேரும் ஆங்காங்கே சிறு பகுதிக்கேனும் அரசர்களாக விளங்கிய நிலைமையை அவர்களது வரலாற்றில் நாம் காண்கின்றோம். எனவே, சேரமான் என்னும் அடைமொழி பெற்றுள்ள அனைவரும் ஒரு சிறு பகுதிக்கேனும் அரசர்களாக விளங்கினார்கள் என்று கொள்வது பொருத்தமானது. இந்த வகையில் பிறரால் பாடப்படாவிட்டாலும் தாம் பாடல்கள் பாடிச் சங்கப் பாடல்களில் இடம் பெற்ற புலவர்கள் - ‘சேரமான்’ என்னும் அடைமொழியுடன் சங்கநூல்களைத் தொகுத்தோரால் குறிப்பிடப்பட்டுள்ள புலவர்கள் - சேர அரசர்கள் என்றே கொள்ளத்தகும். மற்றும் பாலைபாடிய பெருங்கடுங்கோ, மருதம் பாடிய இளங்கடுங்கோ ஆகிய பெயர்களில் ‘கோ’ என்னும் சொல் அவர்கள் அரசர்களே என்பதை உணர்த்துகின்றன. ‘முடங்கிக் கிடந்த நெடுஞ் சேரலாதன்’ என்னும் பெயரில் ‘சேரல்’ என்னும் குடிப் பெயர், இவன் அரசன் என்பதை உணர்த்துகிறது. அந்துவன் என்னும் பெயர், பெயர் ஒப்புமையால் தோன்றக்கூடிய உய்த்துணர்வு. கருவூர்ச் சேரமான் சாத்தனார்1 காதலன் யாமத்தில் வந்திருக்கிறான்; வெளியில் காத்திருக் கிறான். தோழி அவனுக்குக் கேட்கும்படி காதலியிடம் கூறுகிறாள். ‘வா என்றும் சொல்ல முடியவில்லை. போ என்றும் சொல்ல முடியவில்லை. என்ன செய்வோம்?’ என்பது அவளது கூற்று. இந்தக் கருத்தமைந்த பாடலை அவன் பாடியுள்ளான். சேரமான் இளங்குட்டுவன்2 காதலி காதலனுடன் சென்றுவிட்டாள்; தாய் தந்தையருக்குத் தெரியாமல் சென்றுவிட்டாள். செய்தி அறிந்த செவிலித் தாய் அவளை வளர்த்த தாய்க்கு வருந்திக் கூறுகிறாள். தான் ஆயத்தாரோடு பந்தடிக்கும்போதே கன்றும் அவளது காலடிகள், வெயில் காயும் காட்டில் எப்படி நடந்து சென்றனவோ என்பது அவளது ஏக்கம். இந்தக் கருத்தமைந்த பாடலை இவன் பாடியுள்ளான். சேரமான் எந்தை3 காதலன் தன்னை விட்டுவிட்டுச் செல்கிறான் என்று கவலைப் படுகிறாள் காதலி; கண்ணீர் வடிக்கிறாள். தோழி அவளைத் தேற்றுகிறாள். இந்தக் கண்ணீரோடு உன்னை விட்டுவிட்டு யார் செல்வார்; மராமரம் வேனில் காலத்தில் பூத்திருக்கும் தேமூர் போன்ற அழகி நீ. உன்னையும் உடன்கொண்டு செல்வார் என்பது அவளது ஆறுதல் மொழி. இந்தக் கருத்தமைந்த பாடலை இவன் பாடியுள்ளான். நாடு தலைவியின் அழகைத் தேமூர் என்னும் ஊரின் அழகோடு ஒப்பிட்டு இவன் பாடியுள்ளான். எனவே, தேமூரில் தங்கி இவன் ஆட்சி புரிந்து வந்தான் எனலாம். (தேமூர் ஒண்ணுதல், என்பதற்குத் தேமல் ஊர்ந்து ஒளிவீசும் நெற்றி என்றும் பொருள் கொள்ள இடம் உண்டு.) சேரமான் கணைக்கால் இரும்பொறை4 இவன் தான் பாடிய பாடலில் விழுப்புண்பட்டு இறக்க வழி யின்றிக் கட்டிப்போட்ட நாய்போல் கிடக்கும் நிலையை வெளிப்படுத்து கிறான். பிறர் முயற்சியால் கிடைத்த நீரை வயிற்றுத் தீத்தணிய இவ்வுலகில் உண்பர் உண்டோ? இல்லை என்கிறான். புறநானூற்றைத் தொகுத்த ஆசிரியர் தம் கொளுக் குறிப்பில் விளக்கமான வரலாற்றைத் தருகிறார். சோழ அரசன் செங்கணான் என்பவனோடு இவன் போரிட்டான். போர் ‘திருப்போர்ப்புறம்’ என்னுமிடத்தில் நடைபெற்றது. போரில் சேரன் பிடிபட்டான். குடவாயில் (குடவாசல்) என்னும் ஊரில் ஒரு கோட்டம். அந்தக் கோட்டத்தில் ஒரு சிறை. அந்தச் சிறையில் இவன் அடைக்கப் பட்டான். சிறையில் அடைபட்டுக் கிடக்கையில் குடிப்பதற்குத் தண்ணீர் கேட்டான்; கிடைக்கவில்லை. காலம் தாழ்ந்து வேறொருவன் முயற்சியால் தண்ணீர் கிடைக்கப்பெற்றான். அதனைக் கையிலே வாங்கினான் உண்ண மனம் வரவில்லை. மேலே கண்ட கருத்தமைந்த பாடலைப் பாடினான். தண்ணீரைக் குடிக்காமலேயே மாண்டு போனான். களவழி என்னும் நூலுக்கும் இந்தப் போருக்கும் தொடர்பு உள்ளதாகக் கூறப்படுகிறது. சோழன் செங்கணான் வரலாற்றில் இதனைத் தெளிவாகக் காணலாம். தோற்றம் கணைய மரம்போல் வலிமைமிக்க கால் இருந்தமையாலோ, கணுக்காலுக்கும் கீழ் இல்லாத காலை உடையவனாக இருந்தமை யாலோ, கணைகள் தாக்கிய விழுப்புண்களைத் தழும்புகளாகக் கொண்டிருந்தமையாலோ, பிற எதனாலோ இவனது பெயரோடு கணைக்கால் என்னும் அடைமொழி அமைந்துள்ளது. மருதம் பாடிய இளங்கடுங்கோ5 குடும்பத் தலைவன் குடும்பத் தலைவியை விட்டுவிட்டு வேறொருத்தி நலத்தைத் துய்க்கும் கொடுமையை விளக்கும் மருதத்திணைப் பாடலை இவன் பாடியுள்ளான்.6 மகனைப் பெற்ற பின்னும் கணவனைக் காணாது வாழ்கிறாளே அவள் ‘என்ன கடத்தளோ’ (எத்தகைய கடப்பாட்டாளோ) என்று இவன் குறிப்பிடுகிறான்.7 இவன் பருவூர்ப் போர்க்களத்தில் சோழனுக்கும், சேர பாண்டியர்க்கும் நடந்த போரில் சேர பாண்டியரைப் போரில் கொன்று. ‘அஃதை’ என்னும் பெண்மணியின் தந்தை வெற்றி பெற்றதைக் குறிப்பிட்டுள்ளான்.8 முடங்கிக் கிடந்த நெடுஞ்சேரலாதன்9 காதலனுக்குக் காதலியின் தோழி அறிவுரை கூறுகிறாள். துறைவ, ‘ஒரு நாள் வந்து, உன் வண்ணம் எப்படி என்று கேட்டு விட்டுச் சென்றால் உன் பெருமைக்குக் குறைவு வந்து விடுமோ’ என்பது அவள் கூற்று. திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்பதை இவ்வாறு நயமாகக் கூறுவதாகப் பாடியுள்ள இவனது புலமைத் திறம் பாராட்டுதலுக்கு உரியது. இவன் எங்கு முடங்கிக் கிடந்தான்? ஏன் முடங்கிக் கிடந்தான்? முடப் பட்டுக் கிடந்தானா? என்பன போன்ற வினாக்கள் இவன் பெயரிலுள்ள அடைமொழியில் தோன்றும்; விடைக்குச் சான்று இல்லை. சேரன் செங்குட்டுவன் சங்க காலச் சூழ்நிலை சேரன் செங்குட்டுவனுடைய வரலாற்றை ஆராய்கிறபோது அவ்வரசன் வாழ்ந்திருந்த காலநிலை, சூழ்நிலை முதலியவைகளை அறிய வேண்டியது அவசியமாகும். செங்குட்டுவனுடைய வரலாற்றுக் குறிப்புகள் சங்க நூல்களிலேதான் காணப்படுகின்றன. ஆகவே, அவன் சங்க காலத்தில் - கடைச் சங்க காலத்தில் - வாழ்ந்திருந்தான் என்பது தெரிகின்றது. அவன் கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்திருந்தான். அக்காலத்து அரசியல் சூழ்நிலை சங்க நூல்களிலிருந்து தெரிகின்றது. அக்காலத்தில் தமிழகத்தைச் சேர, சோழ, பாண்டியர் ஆகிய மூவேந்தர் ஆட்சி செய்திருந்தார்கள். அக்காலத்தில் சேரநாடு தமிழ் நாடாக இருந்தது. மூவேந்தருக்குக் கீழடங்கி, குறுநில மன்னர்களாகிய சிற்றரசர்கள் பலர் இருந்தனர். அவர்களுக்கு அக் காலத்தில் வேளிர் அல்லது வேளரசர் என்பது பெயர். அக்காலத்தில் தமிழகம் சோழ நாடு, பாண்டிய நாடு, சேர நாடு, துளு நாடு (கொங்கண நாடு), தொண்டை நாடு (அருவா நாடு) கொங்கு நாடு என்று ஆறு பிரிவு களாகப் பிரிந்திருந்தது. சேர, சோழ, பாண்டி நாடுகளை முடியுடைய பேரரசர் மூவர் அரசாண்டனர். கொங்காண நாடாகிய துளு நாட்டை நன்னர் என்னும் பெயருடைய வேளிர் அரசாண்டனர். கொங்கு நாட்டுக்கும் தொண்டை நாட்டுக்கும் பேரரசர் (முடிமன்னர்) அக்காலத் தில் இல்லை. கொங்கு நாட்டையும் தொண்டை நாட்டையும் குறுநில மன்னர்கள் ஆட்சி செய்து கொண்டிருந்தார்கள். கடைச் சங்க காலத்தின் இறுதியில் (கி.பி. 2ஆம் நூற்றாண்டின் மத்தியில்) மாறுதல் ஏற்பட்டது. சோழன் கரிகால் வளவன் தொண்டை நாட்டைக் கைப்பற்றி அதைச் சோழ இராச்சியத்துடன் இணைத்துச் சேர்த்துக் கொண்டான். சேரன் செங்குட்டுவனுடைய தகப்பனான இமயவரம்பன் நெடுஞ் சேரலாதன் காலத்தில் கொங்கு நாட்டின் தெற்குப் பகுதிகள் சில சேர இராச்சியத்துடன் இணைத்துக் கொள்ளப்பட்டன. செங்குட்டுவனின் தமயனான களங்காய்க் கண்ணி நார் முடிச்சேரல் காலத்தில் கொங்கண நாடாகிய துளு நாடு சேரர் ஆட்சியின் கீழடங்கியது. சேர அரசர்கள் கொங்கு நாட்டைச் சிறிதுசிறிதாகக் கைப்பற்றிக் கொண்டிருந்தபோது, சோழபாண்டியர் வாளாவிருக்கவில்லை. சோழரும் பாண்டியரும் கொங்கு நாட்டைத் தாங்களும் பிடித்துக் கொள்ள முயற்சி செய்தார்கள். அதனால் சேர சோழ பாண்டியர்களுக்கு அடிக்கடி போர்கள் நிகழ்ந்தன. சங்க இலக்கியங்களை ஆராய்ந்து பார்க்கிறபோது சோழ அரசர்களைப் பற்றி ஒரு செய்தி தெரிகிறது. சோழ மன்னர் பரம் பரையில் ஒன்பது தாயாதிகள் இருந்தனர். அவர்கள் முடி மன்னனாகிய பெரிய சோழ அரசனுக்குக் கீழடங்கிச் சிற்சில நாடுகளை யரசாண்டனர். ஆனால், அவர்கள் அடிக்கடி தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டிருந் தார்கள். சோழ குலத்து அரசர் தங்களுக்குள்ளே போரிட்டுக் கொண்டதைச் சங்க நூல்களில் காண்கிறோம். தாயாதிகள், சமயம் நேர்ந்த போதெல்லாம் முடியரசனுடன் போர் செய்து கலகம் உண்டாக்கினார்கள். கரிகாற் சோழன் அரசு கட்டில் ஏறினபோது ஒன்பது தாயாதிகள் அவனுக்கு எதிராகக் கலகஞ் செய்து போரிட்டார்கள். அவர்களையெல்லாம் அவன் வென்று அடக்கிய பிறகு முடி சூடினான். கரிகாற் சோழன் இறந்த பிறகு அவன் மகனான கிள்ளிவளவன் சிம்மாசனம் ஏறியபோதும் ஒன்பது தாயாதிகள் கலகஞ் செய்து போரிட்டார்கள். அப்போது, செங்குட்டுவன், சோழரின் உள்நாட்டுப் போரில் தலையிட்டுப் போர்செய்து தன் மைத்துனனான கிள்ளி வளவனைச் சிம்மாசனம் ஏற்றினான். தாயாதிப் போர் ஒருபுறமிருக்க, சோழ, அரசர்களில் அண்ணன் தம்பிகளும் சில வேளைகளில் ஒருவருக் கொருவர் போர் செய்தனர். தகப்பனும் மகனுங் கூடத் தங்களுக்குள் போர் செய்து கொண்டதைச் சங்க இலக்கியங் களில் பார்க்கிறோம். ஆனால், சோழர்களுக்கு நேர்மாறாகச் சேர அரசர் தங்களுக்குள் ஒற்றுமையாக இருந்தனர். சேர அரசர்களில் தாயாதி அரசர்கள்கூட சண்டையிட்டுக் கொள்ளவில்லை. சேர அரசர் தங்களுக்குள் போர் செய்துகொண்டதைச் சங்க நூல்களில் காணக்கிடைக்கவில்லை. சேர அரசர் ஒற்றுமையாக இருந்த காரணத்தினால்தான் கொங்கு நாட்டையும் துளு நாட்டையும் கைப்பற்ற முடிந்தது. சோழர் குடியில் ஒன்பது தாயாதிகள் இருந்ததையும் அவர்கள் சோழ நாட்டின் பகுதிகளை (ஒரே சமயத்தில்) முடிபுனைந்த அரசனுக்கு அடங்கி ஆட்சி செய்ததையும் கூறினோம். அது போலவே, சேர அரசர் பரம்பரையில் மூத்த வழியரசர் இளையவழி அரசர் என்று இரு தாயாதிகள் இருந்தனர். இவர்களும் ஒரே காலத்தில் சேர இராச்சியத் தின் வெவ்வேறு பகுதிகளை யரசாண்டார்கள். பாண்டியர்களில் மதுரைப் பாண்டியனும் கொற்கைப் பாண்டியனும் என்று இரண்டு அரசர்கள் ஒரே காலத்தில் அரசாண்டதைச் சங்க நூல்களில் பார்க்கிறோம். பாண்டிய இளவரசன் கொற்கையில் இருந்தான். ஆனால், அவர்களில் ஐந்து கிளையினர் இருந்தனர் என்றும் அவர்கள் வெவ்வேறு இடங்களை அரசாண்டனர் என்றும் அறிகிறோம். அதனால்தான் பாண்டியருக்குப் பஞ்சவர் என்ற பெயரும் இருந்தது. சங்க காலத்தில் வீரர்களுக்குப் பெருமதிப்பு இருந்தது. வீரச் செயல்கள் புகழ்ந்து போற்றப்பட்டன. வீரர்களின் வீரச் செயல்களைப் புலவர்கள் புகழ்ந்து பாடினார்கள். போரில் இறந்த வீரர்களுக்கு நடுகல் அமைத்துப் போற்றினார்கள். போரும் வீரமும் ஒரு கலையாகவே மதிக்கப்பட்டன. போர்ச் செயலைப் பற்றி இலக்கண நூல்களும் இலக்கிய நூல்களும் தோன்றின. புறப் பொருள் இலக்கியங்கள் பெரிதும் போர்ச் செயலைப் பற்றியே கூறுகின்றன. சங்க காலத்தில் வாழ்க்கையின் குறிக்கோள், காதலும் போருமாக (அகமும் புறமும் ஆக) இருந்தது. சங்க காலத் தமிழகம் வீரர்களைப் போற்றியது; வீரத்துக்கு வந்தனையும் வழிபாடும் செய்தது. வெற்றிக்கும் வீரத்துக்கும் கடவுளாகக் கொற்றவைத் தெய்வம் வழிபடப்பட்டது. சங்க காலத்தில் போர்க்களஞ் செல்லாத அரசர்கள் வீரர்களாக மதிக்கப்படவில்லை. ஆகவே, அரசர்கள் ஏதோ காரணத்தை முன்னிட்டுப் போர் செய்துகொண்டிருந்தார்கள். சங்க இலக்கியத்தில் போர்ச் செயல்கள் அதிகமாகக் காணப்படுவதற்குக் காரணம் இந்தச் சூழ்நிலைதான். போரில் விழுப்புண்பட்டவன் போற்றிப் புகழப்பட்டான். முதுகில் புறப்புண் படுவது இகழ்ச்சிக் குரியதாக இருந்தது. தப்பித் தவறிப் போர்க்களத்திலே முதுகில் புறப்புண்பட்டால், புண்பட்டவர்கள் பட்டினி கிடந்து உயிர் விட்டார்கள். அரசனுடைய படை வீரர்கள் எல்லைப் புறங்களிலே சென்று, அயல்நாட்டு எல்லைப்புற ஊர்களிலிருந்து ஆடு மாடுகளைப் பிடித்துக் கொண்டு போனார்கள். அவர்களைப் பின் தொடர்ந்து வந்து மாற்றரசரின் வீரர்கள் போர் செய்து ஆடு மாடுகளை மீட்டுக் கொண்டு போனார்கள். இவ்விதமாக நிகழ்ந்த போரிலே இறந்த வீரர்களுக்கு நடுகல் நட்டு வீரத்தைப் போற்றினார்கள். தம் வாழ்க்கைக் காலத்தில் போரிடாமல், போர்க்களத்தைப் பார்க்காமல், இறந்துபோன அரசர்களைத் தருப்பைப் புல்லின் மேல் கிடத்தி அவர்களின் மார்பை வாளினால் வெட்டிப் புண் உண்டாக்கிப் பிறகு அடக்கம் செய்தனர். இந்த வழக்கம் சங்க காலத் தமிழகத்தில் இருந்ததைக் கூலவாணிகன் சாத்தனாரும் ஒளவையாரும் கூறுகின்றனர். உதயகுமரன் என்னும் சோழ அரசகுமரன் இறந்தபோது, அவன் தாயாகிய இராசமாதேவி துன்பப்பட்டதை யறிந்து வாசந்தவ்வை என்னும் முதியாள் அரசியிடஞ் சென்று ஆறுதல் கூறினாள். அப்போது அவ்வம்மையார், தருப்பையிற் கிடத்தி வாளிற் போழ்ந்து செருப்புகல் மன்னர் செல்வுழிச் செல்கென மூத்துவிளிதல் இக்குடிப் பிறந்தோர்க்கு நாப்புடை பெயராது நாணுத்தக வுடைத்து என்று கூறியதாக மணிமேகலை சிறைவிடுகாதையில் (13-16) கூலவாணிகன் சாத்தனார் இச்செய்தியைக் கூறுகிறார். அதிகமான் நெடுமான் அஞ்சி, தன்னுடைய தகடூர்க் கோட்டையை எதிர்த்தப் பகையரசருடன் போர் செய்து விழுப்புண்பட்டு நின்றான். அப்போது அவனுடைய வீரத்தைப் புகழ்ந்து பாடின ஒளவையார், புண்படாமல் இறக்கும் அரசர் வாளினால் வெட்டப்பட்டு அடக்கம் செய்யப்பட்டதைக் கூறுகிறார். அறம்புரி கொள்கை நான்மறை முதல்வர் திறம்புரி பசும்புற் பரப்பினர் கிடப்பி மறங்கந் தாக நல்லமர் வீழ்ந்த நீள்கழல் மறவர் செல்வுழிச் செல்கென வாள்போழ்ந் தடக்கலும் உய்ந்தனர் மாதோ (புறம் 93 : 7-11) என்று ஒளவையார் கூறுகிறார். இவ்விதமாக வீரவழிபாடு போற்றப்பட்ட காலத்தில் இருந்த கண்ணகியார், தன் கணவன் கோவலனுக்கு அநீதி செய்த பாண்டியனை அவைக்களத்தில் வழக்காடி வென்று, பாண்டியன் அரண்மனையைத் தீப்பற்றி எரியச் செய்து, பிறகு உண்ணா நோன்பிருந்து உயிர்விட்ட மறக்கற்பைப் போற்றித் தான் அவருக்குப் பத்தினிக் கோட்டம் அமைக்கப் பட்டது. பண்டைக் காலத்தில் காதலும் வீரமும் போற்றப்பட்டதைச் சரித்திரத் தில் காண்கிறோம். அந்த முறையிலே சங்ககாலத் தமிழகத்திலும் காதலும் வீரமும் (அகமும் புறமும்) போற்றப்பட்டன. முக்கியமாக, வீரமும் வெற்றியும் போற்றிப் புகழப்பட்டன, அரசர்களின் வீரத்தைப் புலவர்களும் இசைவாணர்களும் புகழ்ந்து பாடிக்கொண்டிருந்த சூழ்நிலை தமிழகத்திலே இருந்த காலத்திலே சேரன் செங்குட்டுவன் வாழ்ந் திருந்தான். அக்காலத்துச் சூழ்நிலை அவனுடைய வாழ்க்கையை உருவாக்கிற்று. அவன் வரலாற்றை இனி ஆராய்வோம். சங்க காலத்துச் சேர அரசர் கடைச் சங்க காலத்துச் சேர அரசர்களில் பேரும் புகழும் பெற்றவன் சேரன் செங்குட்டுவன். சங்க காலத்துத் தமிழ்நாட்டு வரலாற்றில் செங்குட்டுவனுக்கு முக்கியமான இடம் உண்டு. சிறந்த வீரனாகவும் கொடையாளியாகவும் விளங்கியது மட்டும் அல்லாமல் தமிழ்நாட்டில் பத்தினித் தெய்வ வணக்கத்தை இவன் ஏற்படுத்தினான். மேலும், சங்க காலத்துச் சரித்திர ஆண்டுகளைக் கணக்கிடுவதற்கு இவனுடைய வரலாறு துணையாக நிற்கிறது. செங்குட்டுவனும் அவனுடைய நண்பனான இலங்கையரசன் கஜபாகுவும் சமகாலத்து அரசர் என்பதனாலே இவர்கள் காலத்தை ஆதாரமாகக் கொண்டு சங்க காலத்து வரலாற்றுக் காலங்களைக் கணித்துவிடலாம். சேரன் செங்குட்டுவனும் கஜபாகு அரசனும் கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்தவர்கள் என்பதைப் பின்னர் விளக்குவோம். சேரன் செங்குட்டுவனுடைய வரலாற்றை ஆராய்வதற்கு முன்பு அவனுடைய முன்னோர்களைப் பற்றியும் தெரிந்துகொள்ள வேண்டும். ஏனென்றால், சேரன் செங்குட்டுவன் வீரமும் முயற்சியும் ஆள்வினை யும் உடைய பேரரசனாக இருந்தாலும், அவன் தானாகவே உயர் நிலையைப் பெறவில்லை. அவனுடைய பாட்டன், தந்தை, சிற்றப்பன், அண்ணன் தம்பியர் முதலிய சுற்றத்தார்களும் சேர இராச்சியத்தை வளர்த்து மேன்மைப்படுத்தியுள்ளனர். செங்குட்டுவனும் இளமைக் காலத்திலிருந்தே தந்தை, தமயன், தம்பி முதலியவர்களுடன் உடனிருந்து உழைத்துச் சேர இராச்சியத்தை வளர்த்திருக்கிறான். செங்குட்டுவன் ஆட்சிக்கு வந்த காலத்தில் சேர நாடு சிறப்புப் பெற்றிருந்ததற்கு இவனுடைய முன்னோரும் காரணமாக இருந்தனர். ஆகவே, செங்குட்டுவன் வரலாற்றைக் கூறும்போது அவனுடைய முன் னோர்களின் வரலாறுகளையும் அறிய வேண்டுவது முறையாகும். சங்க காலத்துச் சேரமன்னர்களின் முறையாக எழுதப்பட்ட வரலாறு கிடையாது, சங்க இலக்கியங்களில் அங்கும் இங்குமாகச் சில வரலாறுகள் சிதறிக் கிடக்கின்றன. பதிற்றுப்பத்து என்னும் தொகை நூலில் எட்டுச் சேர அரசர்களின் வரலாறு கிடைக்கிறது. கிடைத்துள்ள சான்றுகளைக் கொண்டு செங்குட்டுவன் வரலாற்றையும் அவனுடைய உறவினர் வரலாற்றையும் ஆராய்ந்து காண்போம். பாட்டன் (உதியன் சேரல்) செங்குட்டுவனுடைய பாட்டன் உதியன்சேரல் என்பவன். உதியன் சேரலின்மேல் பாடப்பட்டது பதிற்றுப்பத்து முதலாம் பத்து என்று தெரிகிறது. முதலாம் பத்து இப்போது கிடைக்க வில்லை. ஆகையால் உதியன் சேரலினுடைய முழு வரலாற்றை அறிந்து கொள்ள முடிய வில்லை. ‘நாடுகண் அகற்றிய உதியஞ் சேரல்’ என்று இவனை மாமூலனார் என்னும் புலவர் கூறுகிறார் (அகம் 65 : 5; நாடு கண் அகற்றிய நாட்டை விசாலப் படுத்திய). இதனால் இவன். சுற்றுப்புற நாடுகளை வென்று சேர இராச்சியத்தின் எல்லையை விரிவு படுத்தினான் என்பது தெரிகிறது. உதியஞ்சேரலின் அரசியின் பெயர் நல்லினி. நல்லினி, வெளி யன் வேண்மான் என்னும் அரசனுடைய மகள். இவர்களுக்கு இரண்டு ஆண் மக்கள் பிறந்தனர். மூத்த மகன் நெடுஞ்சேரலாதன். இவன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் என்றும் கூறப்படுகிறான் (பதிற்றுப்பத்து 2ஆம் பத்து, பதிகம்). இளையமகன் பெயர் குட்டுவன். இவனைப் பல்யானைச் செல்கெழு குட்டுவன் என்று கூறுவர். (பதிற்றுப்பத்து 3ஆம் பத்து, பதிகம்) உதியஞ்சேரலும் பெருஞ்சோற்று உதியன் சேரலாதனும் ஒருவரே என்று சிலர் கருதுகின்றனர். வேறு சிலர், இவர்கள் வெவ்வேறு அரசர்கள் என்று கூறுகின்றனர். இந்த ஆராய்ச்சியில் இப்போது நாம் புக வேண்டுவதில்லை. தாயாதிப் பாட்டன் (அந்துவன்) சேரன் செங்குட்டுவனுக்குத் தாயாதிப் பாட்டன் ஒருவன் இருந்தான். அவனுக்கு அந்துவன் என்று பெயர். சேர அரசர் பரம் பரையில் இளைய கால்வழியில் வந்தவன் அந்துவன். அந்துவனுக்குப் பொறையன் என்றும் பெயர் உண்டு. அவன், ‘ஒருதந்தை’ என்னும் அரசனின் மகளைத் திருமணஞ் செய்திருந்தான். அவளுக்குப் ‘பொறையன் பெருந்தேவி’ என்பது பெயர். மடியா உள்ளத்து மாற்றார்ப் பிணித்த நெடுநுண் கேள்வி யந்துவற் கொருதந்தை ஈன்றமகள், பொறையன் பெருந்தேவி (பதிற்றுப்பத்து 7ஆம் பத்து, பதிகம்) பழைய உரையாசிரியர் ‘ஒருதந்தை’ என்பதற்கு இவ்வாறு விளக்கங் கூறுகிறார்: “இதன் பதிகத்து ‘ஒருதந்தை’ என்றது பொறையன் பெருந்தேவியின் பிதாவுடைய பெயர்.” என்று அவர் எழுதுகிறார். அந்துவன் பொறையனுக்கும் பொறையன் பெருந் தேவிக்கும் பிறந்த மகன் செல்வக் கடுங்கோ வாழியாதன் (பதிற்றுப் பத்து 7ஆம் பத்து, பதிகம்) இந்த அந்துவன்பொறையன், ‘மடியா உள்ளத்து மாற்றார்ப் பிணித்தவன்’ என்று சொல்லப்படுகிறபடியினாலே, பகையரசருடன் போர் செய்து வென்றவன் என்று தெரிகிறான். எனவே, செங்குட்டுவனுடைய பாட்டனான உதியஞ்சேரலும், தாயாதிப் பாட்டனான அந்துவன் பொறையனும் ஒத்துழைத்துச் சேர நாட்டின் எல்லையை விரிவுபடுத்தினார்கள் என்பது தெரிகிறது. தந்தை (நெடுஞ்சேரலாதன்) சேரன் செங்குட்டுவனுடைய பாட்டன் உதியஞ் சேரலுக்கு இரண்டு மக்கள் இருந்தனர் என்றும் அவர்கள் நெடுஞ்சேர லாதன், பல்யானைச் செல்கெழுகுட்டுவன் என்றும் கூறினோம். பாட்டனான உதியஞ்சேரல் எத்தனை ஆண்டு அரசாண்டான் என்பது தெரிய வில்லை. அவன் இறந்த பிறகு மூத்த மகனான நெடுஞ்சேரலாதன் சேர நாட்டை யரசாண்டான். இவனுக்கு இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் என்னும் பெயரும் உண்டு. சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன் என்றும் இவனைக் கூறுவர். குமட்டூர்க் கண்ணனார் என்னும் புலவர் இவ்வரசன்மீது பதிற்றுப்பத்து இரண்டாம் பத்துப் பாடினார். 2ஆம் பத்தி லிருந்து, இவ்வரசனைப் பற்றிய சிறப்புக்களையும் செய்திகளையும் அறிந்து கொள்கிறோம். சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன் (இமய வரம்பன் நெடுஞ் சேரலாதன்) இரண்டு மனைவியரை மணஞ் செய்திருந்தான். ஒவ்வொரு மனைவிக்கும் இரண்டிரண்டு ஆண் மக்கள் பிறந்தனர். வேள் ஆவிக்கோமான் மகள் பதுமன்தேவி என்னும் மனைவி வயிற்றில் பிறந்தவர் களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரலும்(4ஆம் பத்து, பதிகம்) ஆடுகோட்பாட்டுச் சேரலாதனும் (6ஆம் பத்து, பதிகம்) ஆவர். சோழன் மணக்கிள்ளி மகள் (நற்சோணை) வயிற்றில் கடல் பிறக்கோட்டிய செங்குட்டு வனும் (சேரன் செங்குட்டு வனும்) இளங்கோ அடிகளும் பிறந்தனர் (5ஆம் பத்து, பதிகம், சிலம்பு வரந்தருகாதை 170-183). இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனுடைய மனைவியர் இருவரில் ஒருத்தி வேள் ஆவிக்கோமான் பதுமன் தேவி என்று அறிந்தோம். அவளுடைய தங்கையை இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனின் தாயாதித் தம்பியாகிய செல்வக்கடுங்கோ வாழியாதன் மணஞ் செய்திருந்தான். அவளுக்கும் வேளாவிக் கோமான் பதுமன்தேவி என்று பெயர். (8ஆம் பத்து, பதிகம்). எனவே, இமயவரம்பன் நெடுஞ் சேரலாதனும் அவனுடைய தாயாதித் தம்பி செல்வக் கடுங்கோ வாழி யாதனும் முறையே தமக்கை தங்கையரைத் திருமணஞ் செய்திருந் தனர் என்பது விளங்குகிறது. செல்வக் கடுங்கோ வாழியாதன் அந்துவன் பொறையனின் மகன் என்பதை முன்னமே கூறினோம். இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் செய்த போர் நிகழ்ச்சி களில் குறிப்பிடத்தக்கவை மூன்று. அவை: மேற்கடல் தீவில் இருந்து குறும்பு செய்தவர்களை வென்று அடக்கி அவர்களுடைய கடம்ப மரத்தை வெட்டியது. ஆரிய மன்னரை வென்றது. யவன அரசரை வென்று சிறைப்பிடித்தது. மேலும் இவன், சேர மன்னரின் அடையாளமாகிய வில்லின் அடையாளத்தை இமயமலையின் பாறையில் பொறித்து வைத்தான். இவற்றை விளக்கிக் கூறுவோம். 1. சேர நாட்டுக்கு வடமேற்கே மேற்கடலில் (அரபிக் கடலில்) துளு நாட்டுக்கு உரியதான ஒரு கடல் துருத்தி (துருத்தி- தீவு) இருந்தது. அந்தத் தீவில் துளு நாட்டு நன்னனுக்கு அடங்கிய குறும்பர் வாழ்ந்து வந்தனர். அவர்கள் தங்கள் காவல் மரமாகக் கடம்ப மரத்தை வளர்த்து வந்தனர். அந்தக் குறும்பர்கள் சேர மன்னருக்கு மாறாக நெடுங் காலமாகக் குறும்புசெய்துகொண்டிருந்தார்கள். வாணிகத்தின் பொருட்டுச் சேர நாட்டுத் துறைமுகப் பட்டினங்களுக்கு வந்துகொண்டிருந்த யவனக் கப்பல்களை வராதபடி இவர்கள் இடை மறித்துத் தடுத்துக் கொண்டிருந் தார்கள். இவ்வாறு பல காலமாகக் குறும்பு செய்துகொண்டு வந்தார்கள் என்று தெரிகிறது. கி.பி. 80-இல் இருந்த பிளினி (Pliny) என்னும் யவனர் (கிரேக்கர்) தாம் எழுதியுள்ள யவன வாணிகக் குறிப்பி லிருந்து இச்செய்தி தெரிகிறது. சேர நாட்டுக்கு வந்து கொண்டிருந்த யவன வாணிகக் கப்பல்களை இங்கிருந்த கடற் கொள்ளைக்காரர் துன்புறுத்திக் கொள்ளையடித்தனர் என்று அவர் எழுதியுள்ளார். இவ்வாறு குறும்பு செய்துகொண்டு சேர நாட்டுக் கப்பல் வாணிகத்தைத் தடைசெய்து கொண்டிருந்த இக்குறும்பர்களை இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், தன்னுடைய கடற் சேனையைச் செலுத்தி வென்று அவர்களின் காவல் மரமாக இருந்த கடம்ப மரத்தை வெட்டினான். இச்செய்தியை இவனைப் பாடிய குமட்டுர்க் கண்ணனார் 2ஆம் பத்தில் கூறுகிறார்: பவர் மொசிந்து ஒல்கிய திரள்பூங் கடம்பின் கடியுடை முழுமுதல் துமிய ஏஎய் வென்றெறி முழங்குபனை செய்த வெல்போர் நாரரி நறவின் ஆர மார்பின் போரடு தானைச் சேரலாத! (2ஆம் பத்து 1 : 12-16) துளங்கு பிசிருடைய மாக்கடல் நீக்கிக் கடம்பறுத் தியற்றிய வலம்படு வியன்பணை ஆடுநர் பெயர்த்துவந் தரும்பலி தூஉய்க் கடிப்புக் கண்ணுறூஉந் தொடித்தோள் இயவ (2ஆம் பத்து 7 : 4-7) இருமுந்நீர்த் துருத்தியுள் முரணியோர்த் தலைச் சென்று கடம்புமுதல் தடிந்த கடுஞ்சின முன்பின் நெடுஞ்சேர லாதன் (2ஆம் பத்து 10 : 2-5) நெடுஞ்சேரலாதன் கடம்பறுத்த செய்தியை மாமூலனார் என்னும் புலவரும் கூறுகிறார். வலம்படு முரசின் சேரலாதன் முந்நீர் ஓட்டிக் கடம்பறுத்து (அகம் 127 : 3-4) சால்பெருந் தானைச் சேரலாதன் மால்கடல் ஓட்டிக் கடம்பறுத் தியற்றிய பண்ணமை முரசின் கண்ணதிர்ந் தன்ன (அகம் 347 : 3-5) கடல் தீவில் குறும்பு செய்து கொண்டிருந்த கப்பற் கொள்ளைக்காரர்களை வென்றவன் சேரலாதன்தான். ஆனால், அந்தக் கடற்போரை நேரில் சென்று நடத்தியவன் அவன் மகனான செங்குட்டுவனே. இதனைப் பின்னர் விளக்கமாகக் கூறுவோம். செங்குட்டுவன் இளமையிலிருந்தே தன் தந்தை, சிறிய தந்தை, தமயன் முதலியவர்களுடன் சேர்ந்து பகைவருடன் போர் செய்திருக்கிறான். 2. நெடுஞ்சேரலாதன் மற்றும் பல போர்களைச் செய்து வென்றான் என்று குமட்டூர்க் கண்ணனார் 2ஆம் பத்தில் கூறுகிறார். இப்போர்கள் எங்கெங்கு யாருடன் நிகழ்ந்தன என்பதைக் கூறவில்லை. ஆரிய அரசரை வென்றான் என்பதை, ‘பேரிசைமரபின் ஆரியர் வணக்கி’ என்னும் பதிகத்தின் அடியினால் அறிகிறோம். தமிழகத்தின் வடக்கிலிருந்த கன்னடத் தாரையும் தெலுங்கரையும் வடவர் அல்லது வடுகர் என்றும் அவர்களுக்கப்பால் வடக்கே இருந்தவர்களை ஆரியர் என்றும் கூறுவது சங்க காலத்து மரபு. நெடுஞ்சேரலாதன் ‘ஆரியரை வணக்கினான்’ என்று கூறப்படுவதால், தக்காண தேசத்துக்கப்பால் இருந்த ஆரிய அரசருடன் போர் செய்து வென்றான் என்று அறிகிறோம். அவன் காலத்தில் தக்கண தேசத்தைச் சதகர்ணி (நூற்றுவர் கன்னர்) அரச பரம்பரையார் அரசாண்டார்கள். தக்காணத்துச் சதகர்ணியரசர்களுக்கும் சேர நாட்டுச் சேர மன்னர்களுக்கும் நெடுங்காலமாக நட்புறவு இருந்திருக்கிறது. சதகர்ணியரசன் வடநாட்டு ஆரிய அரசருடன் போர் செய்தபோது அப்போரில் அவனுக்குத் துணையாக இச்சேரன் சென்று போரை வென்றிருக்கக் கூடும் என்று தோன்றுகிறது. எனவே, நெடுஞ்சேரலாதன் ஆரிய அரசருடன் செய்த போர் சதகர்ணியரசருக்குச் சார்பாக வடநாட்டில் செய்த போராக இருக்க வேண்டும். அக்காலத்தில் வடநாட்டைச் சிறுசிறு மன்னர்கள்ஆண்டனர்; பேரரசர் இருந்திலர். வடநாட்டு அரசரை வென்றதற்கு அடையாளமாக நெடுஞ் சேரலாதன் இமயமலையில் தன்னுடைய வில் அடையாளத்தைப் பொறித்து வைத்தான். இதனை, ஆரியர் அலறத் தாக்கிப் பேரிசைத் தொன்று முதிர் வடவரை வணங்கவிற் பொறித்து வெஞ்சின வேந்தரைப் பிணித்தோன் (அகம் 396 : 16-19) என்று பரணரும், வலம்படு முரசிற் சேரலாதன் முந்நீ ரோட்டிக் கடம்பறுத் திமயத்து முன்னோர் மருள வணங்குவிற் பொறித்து (அகம் 127 : 3-5) என்று மாமூலனாரும், அமைவரல் அருவி இமயம் விற்பொறித்து. என்று 2 ஆம் பத்துப் பதிகமும் கூறுவது காண்க. இவனைச் சிலப்பதிகாரம், கடற்கடம் பெறிந்த காவலன்வாழி விடர்ச்சிலை பொறித்த வேந்தன்வாழி (சிலம்பு 23 : 81-82) என்றும், மாநீர் வேலிக் கடம்பெறிந் திமயத்து வானவர் மருள மலைவிற் பூட்டிய வானவன் (சிலம்பு 25 : 1-2) என்றும் கூறுகிறது. 3. இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் யவனரை வென்றுச் சிறைப்பிடித்து அவர்கள் தலையில் நெய்யை யூற்றிக் கைகளைப் பின் கட்டாகக் கட்டிக் கொண்டு வந்து அவர்களிடமிருந்து வயிரம் முதலிய பெருஞ்செல்வங்களைப் பெற்றுக்கொண்டான் என்று 2ஆம் பத்துப் பதிகம் கூறுகிறது. நயனில் வன்சொல் யவனர்ப் பிணித்து நெய்த்தலை பெய்து கைபிற் கொளீஇ அருவிலை நன்கலம் வயிரமொடு கொண்டு பெருவிறன் மூதூர்த் தந்துபிறர்க் குதவி என்று கூறுகிறது. இதற்குப் பழைய உரையாசிரியர் இவ்வாறு விளக்கங் கூறு கிறார்: ‘இதன் பதிகத்து யவனர்ப் பிணித்தென்றது யவனரைப் போருள் அகப்படுத்தியென்றவாறு. நெய்த்தலைப் பெய்து கைபிற் கொளீஇ யென்பதற்கு அக்காலத்துத் தோற்றாரை நெய்யைத் தலையிற் பெய்து கையைப் பிறகு பிணித்தென்றுரைக்க. அருவிலை நன்கலம் வயிரமொடு கொண்டென்றது அந்த யவனரைப் பின்தண்ட மாக அருவிலை நன்கலமும் வயிரமுங் கொண் டென்றவாறு.’ நெடுஞ்சேரலாதன் யவனரை வென்ற செய்தி பதிகத்தில் மட்டுங் கூறப்படுகிறபடியால், குமட்டூர்க் கண்ணனார் இவன்மீது 2ஆம் பத்துப் பாடிய பிறகு, அந்த யவனப் போர் நிகழ்ந்திருக்க வேண்டும் என்று கருதலாம். இவன் யவனருடன் போர் செய்தது கிரேக்க நாட்டுக்கோ அல்லது உரோமாபுரிக்கோ சென்று போர் செய்தான் என்று கருதக்கூடாது. தக்காணத்து மேற்குக் கரைப் பக்கமாகச் சில ஊர்களை யரசாண்டிருந்த யவன அரசர்களுடன் போர் செய்து அவர்களைச் சிறைப் பிடித்தான் என்பதே சரித்திர உண்மையாகும். இந்தியாவுக்கு வெளியே இருந்து இந்தியாவுக்குள் வந்த சாகர்கள் பையப்பையத் தெற்கே மேற்குக்கரைப் பக்கமாக வந்து, சதகர்ணி (நூற்றுவர் கன்னர்) அரசர்களுக்குரியதாக இருந்த தக்காண தேசத்தின் மேற்குக்கரைப் பகுதிகளையும் மாளவம் முதலிய இடங்களையும் கைப்பற்றிக்கொண்டு அரசாண்டார்கள். அது காரணமாகச் சதகர்ணிய அரசர்களுக்கும் சாக அரசர் களுக்கும் நெடுங்காலம் போர் நடந்தது. அப்போரில் சில சமயம் சதகர்ணிகளும் சில சமயம் சாக அரசர்களும் வெற்றி பெற்றார்கள். இப்போர் தொடர்ந்து நெடுங்காலம் நடந்தது. இந்தப் போர்களில் சேரமன்னர் சதகர்ணிகளுடன் நட்பாக இருந்து அவர்களுடன் சேர்ந்து சாக அரசர்களுடன் போர் செய்தார்கள். சாக அரசர் யவனர் (கிரேக்கர்) அல்லர். ஆனாலும், அவர்களுக்கு யவனர் என்னும் பெயர் வழங்கிவந்தது. அவர்கள் விந்தியமலைப் பிரதேசத்தில் அரசாண்டனர். நெடுஞ்சேரலாதன் யவனரை வென்று சிறைப் பிடித்தான் என்பது, இந்தச் சாக யவனரைத்தான். சதகர்ணியரசர் (நூற்றுவர் கன்னர்) சார்பாக நெடுஞ்சேரலாதன் சாக யவனருடன் போர் செய்து அவர்களைச் சிறைப் பிடித்ததை இச்செய்தி கூறுகிறது. சாக யவனர் விந்தியமலைப் பிரதேசத்தில் கி.பி. முதலாவது இரண்டாவது நூற்றாண்டுகளில் அரசாண்டார்கள் என்று இந்திய சரித்திரங் கூறுகிறது. அந்தச் சாகர்கள் தக்காண இராச்சியத்தை யரசாண்ட சதகர்ணி (நூற்றுவர் கன்னர்) உடன் அடிக்கடி போர் செய்துகொண்டிருந்தார்கள். சேர மன்னர்கள் சதகர்ணியரசருக்கு நண்பர்களாகையால், இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் நூற்றுவர் கன்னர் சார்பாகச் சாக அரசர்களுடன் விந்தியப் பிரதேசத்தில் போர் செய்து அவர்களைச் சிறைப்பிடித்தான். இதற்குச் சான்று பதிற்றுப்பத்து 9ஆம் பத்தில் காணப்படுகிறது, இளஞ்சேரல் இரும் பொறையின் முன்னோர்களைக் கூறும்போது, நெடுஞ்சேரலாதனைக் கூறுகிற இடத்தில், கடவுட் பெயரிய கானமொடு கல்லுயர்ந்து தெண்கடல் வளைஇய மலர்தலை யுலகத்துத் தம்பெயர் போகிய ஒன்னார் தேயத்து துளங்கிருங் குட்டம் தொலைய வேலிட்டு அணங்குடைக் கடம்பன் முழுமுதல் தடிந்து என்று (9ஆம் பத்து 8: 2-6) கூறுகிறது. இதற்குப் பழைய உரைகாரர் “கடவுட்பெயரிய கானம் என்றது விந்தாடவியை” என்று எழுதுகிறார். விந்தாடவி என்றது விந்திய மலைப் பிரதேசம். இதற்குக் தண்டாரணியம் என்றும் பெயர் உண்டு. அக்காலத்தில் இப்பிரதேசத்தைச் சாகயவன அரசர்கள் ஆண்டனர். இந்த அரசர்களைத்தான் நெடுஞ்சேரலாதன் வென்றுசிறைப்பிடித்தான். இவன் மகனான ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் யவனரின் வருடைப் பசுக்களைக் கவர்ந்துகொண்டு வந்தான் என்று 6ஆம் பத்துப் பதிகம் கூறுகிறது. சில ஆராய்ச்சிக்காரர்கள், நெடுஞ்சேரலாதன் சிறைப்பிடித்த யவனர், கிரேக்க நாட்டிலிருந்து வாணிகத்தின் பொருட்டு வந்து சேரநாட்டுக் கடற்கரைப் பட்டினங்களில் குடியேறியிருந்த யவனராக இருக்கக் கூடும் என்று கருதுகின்றனர்.* இது தவறான கருத்து. தங்கள் நாட்டில் வாணிகம் செய்யவந்த யவனரைச் சிறைப்பிடித்தான் என்பது அசம்பாவிதமானது. அவன் விந்திய மலைப் பிரதேசத்தில் அரசாண்டுகொண்டிருந்த சாக யவனரைச் சிறைப்பிடித்தான் என்பது மேலே கூறப்பட்டது. இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனை 2ஆம் பத்துப் பாடிய குமட்டூர்க் கண்ணனார் பெற்ற பரிசில், `உம்பற்காட்டு ஐஞ்ஞூறூர் பிரமதாயமும் முப்பத்தெட்டி யாண்டு தென்னாட்டுள் வருவதனிற் பாகமும்’ பெற்றார் என்று பதிகக் குறிப்புக் கூறுகிறது. உம்பற் காடு, இவ்வரசனுடைய தம்பியாகிய பல்யானைச் செல் கெழுகுட்டுவனால் புதிதாகக் கைப்பற்றப்பட்டது. இது கொங்கு நாட்டைச் சேர்ந்த ஊர். இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் ஐம்பத்தெட்டு யாண்டு வீற்றிருந்தான் என்று கூறப்படுகிறான். இவன் எப்படி இறந்தான் என்பது கூறப்படவில்லை. ஆனால், இவன் சோழ அரசனுடன் போர் செய்து போர்க்களத்தில் இறந்துபோனான் என்னும் செய்தியை வேறு இடத்தி லிருந்து அறிகிறோம். இவன், சோழன் வேற்பஃறடக்கைப் பெருவிறற் கிள்ளியுடன் போர் செய்தான். அந்த போர், போர் என்னும் இடத்தில் நடந்தது. அப்போரில் இருதரத்து வீரர்களும் யானைகளும் குதிரை களும் மாண்டனர். அன்றியும் இரண்டு அரசர்களும் புண்பட்டுப் போர்க்களத்திலேயே விழுந்து சிலகாலம் உயிர் போகாமல் கிடந்தனர். இந்த நிகழ்ச்சியை நேரில் கண்ட கழாத்தலையார் என்னும் புலவர் மறக் களவழி பாடினார் (புறம் 368). அந்தப் பாட்டின் கீழ்க் குறிப்பு, `சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன், சோழன் வேற்பஃறடக்கைப் பெருநற் கிள்ளியோடு போர்ப்புறத்துப் பொருது, வீழ்ந்தார் அழுங்கத் தன்னதாக உயிர்போகாது கிடந்தானைக் கழாத் தலையார் பாடியது’ என்று கூறுகிறது (இதில், வீழ்ந்தார் அழுங்க என்பதற்கு நண்பரும் உறவினரும் மனம் வருந்த என்பது பொருள். வீழ்ந்தார்-விரும்பினவர், அன்புடையவர்). போர்க்களத்தில் உயிர் போகாமல் கிடந்த சேரன் பிறகு போர்க் களத்திலேயே இறந்துபோனான். அப்போதும் கழாத்தலை யார் அவனைப் பாடினார் (புறம் 62). அப்பாட்டின் கீழ்க் குறிப்பு, `சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதனும் சோழன் வேற் பஃறடக்கைப் பெருவிறற் கிள்ளியும் போர் புறத்துப் பொருது வீழ்ந்தாரைப் பாடியது’ என்று கூறுகிறது. இவ்விரு அரசரும் போர்க்களத்தில் புண்பட்டு விழுந்து கிடந்ததைப் பரணரும் நேரில் பாடினார் (புறம் 63). இதனால் குடக்கோ நெடுஞ்சேரலாதனும் வேற்பஃறடக்கைப் பெருவிறற் கிள்ளியும் சம காலத்தவர் என்பதும் இருவரும் ஒருங்கே போர்க்களத்தில் இறந்தனர் என்பதும் தெரிகின்றன. (குறிப்பு: சிலப்பதிகாரத்தை ஆங்கிலத்தில் எழுதிய திரு. வி.ஆர். இராமச்சந்திர தீஷிதர், இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், பெருஞ் சேரலாதன் என்னும் இரண்டு வெவ்வேறு அரசர்களை ஒருவர் என்று எண்ணிக்கொண்டு தவறான செய்தியைக் கூறியுள்ளார். பெருஞ் சேரலாதன் (இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்) கரிகால் சோழனுடன் வெண்ணி என்னும் இடத்தில் போர்செய்து இறந்தான் என்று எழுதுகிறார். (சிலம்பு. ஆங்கில மொழி பெயர்ப்பு, பக்கம் 13). சேரலாதன் என்னும் பெயர் ஒற்றுமையைக் கொண்டு இருவரையும் ஒருவராகக் கருதிவிட்டார்). சிறிய தந்தை (பல்யானைச் செல்கெழு குட்டுவன்) சேரன் செங்குட்டுவனின் தந்தையாகிய இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனுக்குத் தம்பியொருவன் இருந்தான் என்று முன்னமே கூறினோம். அவன் பெயர் பல்யானைச் செல் கெழு குட்டுவன் என்பது. அவன் செங்குட்டுவனின் சிறிய தந்தை. அவன்மீது பாடப்பட்டது 3ஆம் பத்து. அவன் கொங்கு நாட்டுப் பகுதியை வென்றான். மாகெழு கொங்கர் நாடகப் படுத்த வேல் கெழுதானை வெருவரு தோன்றல் என்பதனால் (3-ஆம் பத்து 2 : 15-16) இதனை யறியலாம். மதில் அரண் உடைய அகப்பா என்னும் நகரத்தை இவன் வென்று அதைத் தீயிட்டுக் கொளுத்தினான். துஞ்சுமரந் துவன்றிய மலரகன் பறந்தலை ஓங்குநிலை வாயிற் றூங்குபு தகைத்த வில்விசை மாட்டிய விழுச்சீர் ஐயவிக் கடிமிளைக் குண்டு கிடங்கின் நெடுமதில் நிறையப் பதணத்து அண்ணலம் பெருங்கோட்டு அகப்பா வெறிந்த பொன்புனை யுழிஞை வெல்போர்க் குட்டுவ (3-ஆம் பத்து 2 : 21-27) இதனையே, ‘அகப்பா எறிந்து பகற்றீ வேட்டு’ என்று பதிகம் கூறுகிறது. இவனிடம் பல யானைப் படைகள் இருந்தன. அதனால் இவன் கோட்டைகளை யெளிதில் வென்றான். அமர்கோள் நேரிகந்து ஆரெயில் கடக்கும் பெரும்பல் யானைக் குட்டுவன் (3-ஆம் பத்து 9 : 13-14) கொங்கு நாட்டைப் பிடிப்பதற்கு முன்பு இவன் உம்பல் காட்டைக் கைப்பற்றினான் (உம்பல் - யானை). உம்பல் காடு என்பது இப்போது யானைமலை என்று வழங்கும் பிரதேசம். இது, சேர நாட்டுக்கும் கொங்கு நாட்டுக்கும் இடையில் உள்ளது. உம்பல் காட்டையும் கொங்கு நாட்டையும் வென்ற இவன் தன் மரபில் உள்ள முதியவர்களைத் தான் வென்ற அந்த நாட்டுப் பகுதிகளின் தலைவராக்கினான். மதியுறழ் மரபின் முதியரைத் தழீஇக் கண்ணகன் வைப்பின் மண்வகுத் தீத்து (3-ஆம் பத்து, பதிகம்) என்று இச்செய்தி கூறப்படுகிறது. பல்யானைச் செல்கெழுகுட்டுவன் என்னும் பெயருக்கு ஏற்ப இவனிடம் பெரிய யானைப் படை இருந்தது என்று கூறினோம். அந்த யானைகளைக் கீழ்க்கடல் முதல் மேற்கடல் வரையில் வரிசையாக ஆங்காங்கே நிறுத்தி அந்த யானைகளின் மூலமாகக் கீழ்க்கடல் நீரையும் மேற்கடல் நீரையும் ஒரே நாளில் கொண்டு வரச் செய்து அந்நீரினால் இவன் திருமுழுக்குச் செய்து கொண்டான். கருங்களிற் றியானைப் புணர்நிரை நீட்டி இருகடல் நீரும் ஒருபகல் ஆடி (3-ஆம் பத்து. பதிகம்) என்று இச்செய்தி கூறப்படுகிறது. கொற்றவை, வீரர் வணங்கும் வெற்றிக்கடவுள். சேர நாட்டை யடுத்துள்ள மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதி அயிரை மலை என்று பெயர் பெற்றிருந்தது. அந்த மலை மேல் கொற்றவையின் கோவில் இருந்தது. அயிரைமலைக் கொற்றவை, சேரர்களின் குல தெய்வமாக இருந்தபடியால் வெற்றிவீரனாகிய இவன் அத் தெய்வத்தை வணங்கி வழிபட்டான். பல்யானைச் செல்கெழுகுட்டுவனைப் பாலைக் கௌதமனார் 3-ஆம் பத்துப் பாடினார். அதற்குப் பரிசாக அப்புலவரும் அவருடைய மனைவியாகிய பார்ப்பனியும் சுவர்க்கம் பெற்றார்கள் என்று மூன்றாம் பத்து அடிக்குறிப்பு கூறுகிறது. `பாடிப் பெற்ற பரிசில்: நீர் வேண்டிய கொண்மின்’ என, `யானும் என் பார்ப்பனியும் சுவர்க்கம் புகல் வேண்டும்’ என, பார்ப்பாரிற் பெரியோரைக் கேட்டு ஒன்பது பெரு வேள்வி வேட்பிக்கப் பத்தாம் பெருவேள்வியில் பார்ப்பானையும் (பாலைக் கௌதமனாரையும்) பார்ப்பனியையும் காணாராயினார்’ என்று மூன்றாம் பத்தின் அடிக்குறிப்பு கூறுகிறது. இவன், பாலைக் கௌதமனாருக்குச் சுவர்க்கங் கொடுத்ததைச் சோழ நாட்டிலிருந்த பராசரன் என்னும் பார்ப்பான் அறிந்து, சேர நாட்டுக்குச் சென்று, இவனுடைய அவைக்களத்தில் பார்ப்பனருடன் வேதம் ஓதி வெற்றிகொண்டு பார்ப்பன வாகை பெற்றான். இவனுக்கு இச்சேரன் செல்வங்களைப் பரிசாகக் கொடுத்தான். இதனைச் சிலப்பதிகாரக் கட்டுரை காதை கூறுகிறது. குலவுவேற் சேரன் கொடைத்திறங் கேட்டு வண்டமிழ் மறையோற்கு வானுறை கொடுத்த திண்டிறல் நெடுவேல் சேரலற் காண்கெனக் காடும் நாடும் ஊரும் போகி நீடுநிலை மலையம் பிற்படச் சென்றாங்கு ஒன்றுபுரி கொள்கை இருபிறப் பாளர் முத்தீச் செல்வத்து நான்மறை முற்றி ஐம்பெரு வேள்வியுஞ் செய்தொழி லோம்பு மறுதொழி லந்தணர் பெறுமுறை வகுக்க நாவலங் கொண்டு நண்ணார் ஓட்டிப் பார்ப்பன வாகை சூடி யேற்புற நன்கலங் கொண்டு தன்பதி பெயர்வோன் (சிலம்பு 23 : 62-73) இவ்வரசன் இருபத்தைந்து ஆண்டு ஆட்சி செய்தான். தெய்வ பக்தியுள்ள இவ்வரசனுடைய புரோகிதர் நெடும்பாரதாயனார் என்பவர். அவர் இல்வாழ்க்கையைத் துறந்து தவஞ்செய்யக் காட்டுக்குப் போனார். அதுகண்டு இவ்வரசன் அரசையும் மனையையும் துறந்து அவருடன் காட்டுக்குச் சென்றான். ஒடுங்கா நல்லிசை யுயர்ந்த கேள்வி நெடும்பார தாயனார் முந்துறக் காடுபோந்த பல்யானைச் செல்கெழு குட்டுவன் என்ற இச்செய்தியைப் பதிகம் கூறுகிறது. இதற்குப் பழைய உரை காரர் கூறும் விளக்கம் இது: “நெடும்பார தாயனார் முந்துறக் காடுபோந்த வென்றது தன் புரோகிதராகிய நெடும்பாரதாயனார் தனக்கு முன்னே துறந்து காடுபோக அது கண்டு தானும் துறவுள்ளம் பிறந்து துறந்து காட்டிலே போன என்றவாறு.” இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனும் அவன் தம்பியாகிய பல்யானைச் செல்கெழுகுட்டுவனும் உம்பற்காட்டையும் கொங்கு நாட்டின் சில பகுதிகளையும் கைப்பற்றிச் சேர இராச்சித்தோடு சேர்த்து இராச்சியத்தை விரிவுபடுத்தினார்கள். வேறு சிறிய தந்தை (செல்வக்கடுங்கோ வாழியாதன்) சேரன் செங்குட்டுவனுக்கு அந்துவன் பொறையன் என்னும் தாயாதிப் பாட்டன் ஒருவன் இருந்ததை முன்னமே கூறினோம். அந்தப் பாட்டனுக்குச் செல்வக்கடுங்கோ வாழியாதன் என்று ஒரு மகன் இருந்தான். எனவே, அவனும் செங்குட்டுவனுக்குச் சிறிய தந்தை முறையினன் ஆவான். மேலும் செல்வக்கடுங்கோ, செங்குட்டுவ னுடைய மாற்றாந்தாயாகிய (தன் தந்தையின் மூத்த மனைவியாகிய) வேளாவிக்கோமான் பதுமன் தேவி என்பவளின் தங்கையை மணஞ்செய்திருந்தான். அவளுக்கும் வேளாவிக் கோமான் பதுமன் தேவி என்பது பெயர். இச்செய்தியை எட்டாம் பத்துப் பதிகத்தினால் அறிகிறோம். செல்வக்கடுங்கோவை 7-ஆம் பத்துப் பாடியவர் கபிலர். பாரி வள்ளலால் ஆதரிக்கப்பட்ட கபிலர், அவன் இறந்த பிறகு இச் சேரனிடம் வந்து இவனைப் பாடினார். செல்வக்கடுங்கோ வாழியாதன் பல போர்க்களங்களைக் கண்டவன். போர்க்களத்தில் பல புண்பட்ட இவனுடைய மார்பு, இறைச்சியைக் கொத்தும் (ஊனம்) மரக்குறடுபோல வடுக்கள் உள்ளதாக இருந்தது. அந்த வடுக்களை இவன் சந்தனம் பூசி மறைத்திருந்தான். எஃகா டூனங் கடுப்ப மெய்சிதைந்து சாந்தெழில் மறைத்த சான்றோர் பெருமகன் (7-ஆம் பத்து 7 : 17-18) (ஊனம் - இறைச்சியைக் கொத்துவதற்கு உள்ள மரக்குறடு; சான்றோர் - (இங்கு) வீரர்.) இவன் பல போர்களைச் செய்து நாடுகளைக் கைப்பற்றினான்; களவேள்வி செய்தான். நாடுபல படுத்து நண்ணார் ஓட்டி வெருவரு தானைகொடு செருப்பல கடந்து ஏத்தல் சான்ற இடனுடைவேள்வி ஆக்கி என்று 7-ஆம் பத்துப் பதிகம் கூறுகிறது. மேலும், இவன் அறநெறியறிந்து தன் புரோகிதனைவிட அறிவிற்சிறந்திருந்தான் என்று கூறப்படுகிறான். புரோசுமயக்கி மல்லல் உள்ளமொடு மாசற விளங்கிய செல்வக் கடுங்கோ வாழியாதன் (7-ஆம் பத்து, பதிகம்) `புரோசு மயக்கி யென்றது தன் புரோகிதனிலும் தான் அறநெறியறிந்தென்றவாறு’ என்று பழைய உரை விளக்கங் கூறுகிறது. இவன் மீது 7-ஆம் பத்துப் பாடிய கபிலருக்கு இவன் பல ஊர்களைப் பரிசாக வழங்கினான். `பாடிப் பெற்ற பரிசில்: சிறுபுறமென நூறாயிரங் காணங் கொடுத்து நன்றா வென்னுங் குன்றேறி நின்று தன் கண்ணிற்கண்ட நாடெல்லாம் காட்டிக் கொடுத்தான் அக்கோ’ என்று 7-ஆம் பத்தின் பதிக அடிக் குறிப்புக் கூறுகிறது. கபிலர் அனேக ஊர்களைப் பரிசு பெற்ற செய்தியை இவ் வரசனின் பேரனாகிய இளஞ்சேரல் இரும்பொறையை 9-ஆம் பத்துப் பாடின பெருங்குன்றூர் கிழாரும் கூறுகிறார். இளஞ்சேரல் இரும் பொறையுடன் போர் செய்து தோற்று ஓடிய சோழனின் வீரர்கள் போர்க் களத்தில் விட்டுச் சென்ற வேல்களின் எண்ணிக்கையானது கபிலன், செல்வக்கடுங்கோ வாழியாதனிடம் பரிசாகப் பெற்ற ஊர்களைவிட அதிகமாக இருந்தது என்று அவர்கூறுகிறார். (9-ஆம் பத்து. 5.) தீஞ்சுனை நிலைஇய திருமா மருங்கிற் கோடுபல விரிந்த நாடுகாண் நெடுவரைக் சூடா நறவின் நாண்மகிழ் இருக்கை யரசவை பணிய வரம்புரிந்து வயங்கிய மறம்புரி கொள்கை வயங்குசெந் நாவின் உவலை கூராக் கவலையில் நெஞ்சில் நனவிற் பாடிய நல்லிசைக் கபிலன் பெற்ற ஊரினும் பலவே (9-ஆம் பத்து 5 : 6-13) (இதில் நன்றா என்னும் குன்று, நாடுகாண் நெடுவரை என்று கூறப்பட்டுள்ளது காண்க.) குண்டுகட் பாலியாதனார் என்னும் புலவர் ‘இது கனவா நனவா’ என்று ஐயுறும்படி இவ்வரசன் அவருக்குப் பெருந் தொகையைப் பரிசிலாக வழங்கினான். அப்போது அப்புலவர் இவ்வரசன்மீது ஒரு செய்யுளைப் பாடி வாழ்த்தினார் (புறம் 387) செல்வக்கடுங்கோ இருபத்தைந்து யாண்டு ஆட்சிசெய்தான். இவன் சிக்கற்பள்ளி என்னும் இடத்தில் இறந்தான். ஆனது பற்றி இவன், சேரமான் சிக்கற்பள்ளித் துஞ்சிய செல்வக்கடுங்கோ வாழியாதன் என்று கூறப்படுகிறான். அண்ணன் (களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல்) இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனுக்கு இரண்டு மனைவியரும் நான்கு மக்களும் இருந்தனர் என்றும் அவர்கள் களங்காய்க் கண்ணி நார்முடிச்சேரல், ஆடு கோட்பாடுச் சேரலாதன், கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன், இளங்கோ அடிகள் என்பவர் என்றும் கூறினோம். நெடுஞ்சேரலாதன் இறந்த பிறகு, அவனுடைய மூத்த மகனும் செங்குட்டுவனுடைய அண்ணனுமாகிய களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரல் அரசனானான். இவனுக்கு வானவரம்பன் என்னும் சிறப்புப் பெயர் உண்டு. இவன், களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் என்று பெயர் பெற்றதற்குக் காரணங் கூறுகிறார் பதிற்றுப்பத்தின் பழைய உரையாசிரியர்: “களங்காய்க்கண்ணி நார்முடி யென்றது களங்காயாற் செய்த கண்ணியும் நாராற் செய்த முடியுமென்றவாறு. தான் முடி சூடுகின்ற காலத்து ஒரு காரணத்தால் முடித்தற்குத் தக்க கண்ணியும் முடியும் உதவாமையிற் களங்காயால் கண்ணியும் நாரால் முடியும் செய்து கொள்ளப்பட்டன வென்றவாறு” என்று அவர் விளக்கங் கூறுகிறார். இதைச் சான்றாகக் கொண்டு திரு. மு. இராகவையங்கார் அவர்கள் தாம் எழுதிய சேரன் செங்குட்டுவன் என்னும் நூலில் இவ்வாறு கற்பித்து எழுதுகிறார்: “முடிசூடுகின்ற சமயத்தில் முடித்தற்குரிய கண்ணியும் கிரீடமும் பகைவர் கவர்ந்ததனால் உதவாமை பற்றி, அவற்றுக்குப் பிரதியாகக் களங்காயற் கண்ணியும் நாரால் முடியுஞ் செய்து புனைந்துகொண்டு பட்டம் பெற்றமையின் ‘களங்காய்க் கண்ணி நார்முடிச்சேரல்’ என்னும் பெயர் பெற்றான்” என்று எழுதியுள்ளார். இவர் கூறும் காரணத்தைத் திரு. கே.என். நீலகண்ட சாஸ்திரி யார் உடன்படாமல் மறுக்கிறார். முடிசூடுஞ் சமயத்தில் பகைவர் வந்து கிரீடத்தைக் கவர்ந்திருக்க முடியாது என்று சாஸ்திரியார் சுட்டிக் காட்டுகிறார் (K.A. Nilakanta Sastri, A Comprehensive History of India, Vol. II, P. 521). ஆனால், சாஸ்திரியாரும் முடியும் கண்ணியும் உதவாமற் போனது ஏன் என்பதற்குக் காரணம் கூறவில்லை. பொன்முடியும் கண்ணியும் முடிசூட உதவாமற் போனதற்குத் தகுந்த காரணம் உண்டு. அக்காரணம் என்ன வென்றால், இவனுடைய தந்தையாகிய இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், சோழன் வேற்பஃற டக்கைப் பெரு விறற்கிள்ளியோடு போர் செய்து போர்க்களத்தில் புண்பட்டு விழுந்து கிடந்து பிறகு உயிர் நீங்கினான் என்பதை முன்பு கூறினோமல்லவா? அவன் போர்க் களத்தில் விழுந்த சமயத்தில் அவன் புனைந்திருந்த முடியும் கண்ணியும் சிதைந்து போயிருக்கக் கூடும். அல்லது கெட்டுப் போயிருக்கக்கூடும். ஆகையினாலே, திடீரென்று முடிசூட்டுவிழா ஏற்பட்ட காரணத்தினால், அவ்வமயம் பொன்முடியும் கண்ணியும் உதவாமற் போகவே, அச்சமயத்துக்கு வாய்ப்பாகக் களங்காயாற்கண்ணியும் நாரினால் முடியும் புனைந்து முடி சூட்டப்பட்டான். இதுவே களங்காய்க் கண்ணியும் நார்முடியும் சூடியதற்குக் காரணமாக இருக்கலாம். ஆனால், இவன் எக் காலமும் நார்முடியையே தரித்திருக்க வில்லை. நவமணிகள்பதித்த முத்து வடங்கள் சூழ்ந்த மணி முடியைத் தரித்துக் கொண்டிருந்தான். இலங்கு மணிமிடைந்த பசும்பொற் படலத்து அவிரிழை தைஇ மின்னுமிழ் பிலங்கச் சீர்மிகு முத்தந் தைஇய நார்முடிச் சேரல்... (4ஆம் பத்து 9 : 14-17) என்று இவன் கூறப்படுகிறான். ஆனாலும், நார்முடிச் சேரல் என்ற பெயரே இவனுக்கு நிலைத்துவிட்டது. சேரமன்னர் கொங்கு நாட்டைச் சிறிது சிறிதாகக் கைப் பற்றிச் சேர இராச்சியத்துடன் சேர்த்துக் கொண்டு வருவதைக் கண்ட கொங்கு நாட்டுத் தகடூர் மன்னனாகிய நெடுமிடல் எழினி என்பவன் பாண்டியனுடைய உதவியுடன் இச்சேரனை எதிர்த்தான். அவனை நார்முடிச்சேரல் தோல்வியுறச் செய்தான். நெடுமிடல் சாயக் கொடுமிடல் துமியப் பெருமலை யானையொடு புலங்கெட இறுத்து (4ஆம் பத்து 2 : 10-11) நார் முடிச்சேரல் பல போர்களைச் செய்ய வேண்டியிருந்தது. அந்தப் போர்களில் கடுமையானது துளு நாட்டு நன்னனுடன் செய்த போர். இந்தப் போர்களில் இவனுடைய தம்பியராகிய சேரன் செங்குட்டுவனும், ஆடுகோட்பாட்டுச் சேரலாதனும், பெருஞ்சேரல் இரும்பொறையும் உதவியாக இருந்தார்கள். சேர நாட்டுக்கு வடக்கேயிருந்த துளு நாட்டு நன்னன், சேர நாட்டின் வட பகுதியிலிருந்த பூழி நாட்டைக் கைப்பற்றிக் கொண்டான். மேலும், நன்னன் கொங்கு நாட்டின் வடக்குப் பகுதிகளைக் கைப்பற்றிக் கொண்டிருந்தான். நன்னனுடைய வளர்ச்சி சேர நாட்டின் வீழ்ச்சியாக இருந்தது. ஆகையால், நார் முடிச்சேரல் நன்னன்மேல் படை யெடுத்தான். வலிமைமிக்க நன்னனும் பின்வாங்கவில்லை. இந்தப் போர் நிலைச்செருவாகச் சில காலம் நடந்தது. கடைசியில் நார்முடிச் சேரல் வெற்றிபெற்றான். தான் இழந்த பூழி நாட்டை மீட்டுக் கொண்டு பிறகு நன்னனுடைய துளுநாட்டிலும் புகுந்து போர்செய்தான். இப்போரில் சேரன் செங்குட்டுவன் நன்னனுடைய நாட்டில் கடற்கரைப் பக்கமாகப் புகுந்து அவனுடைய நாட்டைத்தாக்கிப் போர் செய்து வியலூர், கொடுகூர், நறவு முதலிய ஊர்களைக் கைப்பற்றினான். நார்முடிச் சேரல் மற்றொரு பக்கமாக நன்னனைத் தாக்கினான். இவன் தம்பியாகிய ஆடுகோட்பாட்டுச் சேரலாதனும் மற்றொரு புறத்தில் தாக்கிப் போரிட்டான். இவர்களை எதிர்த்த நன்னன் கடம்பின் பெருவாயில், வாகைப் பெருந்துறை என்னும் இடங்களில் போர் செய்தான். கடைசியில் நன்னன் தோல்வியுற்றுப் போர்க்களத்தில் இறந்து போனான். துளு நாடு (கொங்கண நாடு) சேரருக்குக் கீழ்ப்படிந்தது. இச்செய்தியை, எழுமுடி கெழீஇய திருஞெமர் அகலத்துப் பொன்னங் கண்ணிப் பொலந்தேர் நன்னன் சுடர்வீ வாகைக் கடிமுதல் தடிந்த தார்மிகு மைந்தின் நார்முடிச் சேரல் (4ஆம் பத்து 10 : 13-16) என்றும், ஊழின் ஆகிய உயர்பெருஞ் சிறப்பில் பூழிநாட்டைப் படையெடுத்துத் தழீஇ உருள்பூங் கடம்பின் பெருவாயில் நன்னனை நிலைச் செருவின் ஆற்றலை யறுத்தவன் பொன்படு வாகை முழுமுதல் தடிந்து குருதிச் செம்புனல் குஞ்சரம் ஈர்ப்பச் செருப்பல செய்து செங்களம் வேட்டு (4ஆம் பத்து, பதிகம்) என்றும் பதிற்றுப்பத்து 4ஆம் பத்து கூறுகிறது கல்லாடனார் என்னும் புலவரும் இந்த வெற்றியைத் தம்முடைய செய்யுளில் போற்றுகிறார். குடா அது இரும்பொன் வாகைப் பெருந்துறைச் செருவில் பொலம்பூண் நன்னன் பொருதுகளத் தொழிய வலம்படு கொற்றந் தந்த வாய்வாள் களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல் இழந்த நாடு தந்தன்ன வளம் (அகம் 199 : 18-24) இவ்வாறு, களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரலின் காலத்தில் கொங்கண நாடாகிய துளு நாடு சேர இராச்சியத்துக்கு அடங்கியது. நன்னனுடைய மகன் சேர அரசருக்குக் கீழடங்கித் துளு நாட்டை யரசாண்டான். அவன் ‘நன்னன் உதியன்’ என்று பெயர் பெற்றான். பரணர் என்னும் புலவர், தாம் பாடிய அகநானூற்றுச் செய்யுளில், நன்னன் உதியன் அருங்கடிப் பாழித் தொன்முதிர் வேளிர் ஓம்பினர் வைத்த பொன் (அகம் 258 : 1-3) என்று நன்னன் உதியனைக் கூறுகிறார். நன்னன் என்பது துளு நாட்டு அரசர் குடிப்பெயர், உதியன் என்பது சேர நாட்டு அரசர் குடிப்பெயர். சேரனுக்கு அடங்கியவன் என்பதற்காக இவன் தன் பெயருடன் உதியன் என்னும் பெயரைச் சூடிக் கொண்டான். களங்காய்க் கண்ணி நார்முடிச்சேரல் இருபத்தையாண்டு அரசாண்டான். இவன்மீது நான்காம் பத்துப் பாடிய புலவர் காப்பியாற்றுக் காப்பியனார் என்பவர். “பாடிப்பெற்ற பரிசில்: நாற்பது நூறாயிரம் பொன் ஒருங்கு கொடுத்துத் தான் ஆள்வதில் பாகங்கொடுத்தான் அக்கோ.” பெருஞ்சேரல் இரும்பொறை (தாயாதி அண்ணன்) இவன் செங்குட்டுவனின் தாயாதி அண்ணன், இளைய கால் வழியில் வந்த செல்வக்கடுங்கோ வாழி யாதனின் மகன் இவன். இவனும் நார்முடிச் சேரலின் காலத்தில் இருந்தவன். இடையர் குலத்தில் பிறந்த கழுவுள் என்பவன் குறும்பு செய்து கொண்டிருந்ததை இவன் அடக்கினான். ஆன்பயம் வாழ்நர் கழுவுள் தலைமடங்கப் பதிபாழாக வேறுபுலம் படர்ந்து (8ஆம் பத்து. 1 : 17-18) அந்தக் கழுவுள் எந்த நாட்டில் இருந்தான் என்பது தெரிய வில்லை. இவன் யாகங்களைச் செய்தான் என்று கூறப்படுகிறான் (8ஆம் பத்து. 4.) தன்னுடைய புரோகிதனாகிய நரைமூதாளனைத் துறவு கொள்ளும்படிச் செய்தான். முழுதுணர்ந்த தொழுக்கும் நரைமூ தாளனை வண்மையும் மாண்பும் வளனும் எச்சமும் தெய்வமும் யாவதும் தவமுடையோர்க் கென வேறுபடு நனந்தலைப் பெயரக் கூறினை பெருமநின் படிமை யானே (8ஆம் பத்து. 4 : 24-28) கொங்கு நாட்டில் அதிகமான் அரசர்கள் ஆண்டுவந்த தகடூரை இவன் வென்றான். வெல்போர் ஆடவர் மறம்புரிந்து காக்கும் வில்பயில் இறும்பிற் றகடூர் நூறி (8ஆம் பத்து. 8 : 8-9) இவன் காலத்தில் தகடூரை ஆட்சி செய்தவன் அதிகமான் நெடுமான் அஞ்சி என்பவன். நெடுமான் அஞ்சி, அதிகமான் நெடுமிடல் அஞ்சியின் மகன். நெடுமிடல் அஞ்சி, பெருஞ்சேரல் இரும்பொறை யின் தமயனான நார்முடிச்சேரலினால் வெல்லப் பட்டவன். பிறகு அவன் துளு நாட்டு நன்னனுடன் போர் செய்து மாண்டான். அவன் மகனான நெடுமான் அஞ்சியுடன் பெருஞ் சேரல் இரும்பொறை போர் செய்து தகடூர்க் கோட்டையை முற்றுகையிட்டான். அஞ்சிக்கு உதவியாகச் சோழனும் பாண்டியனும் இருந்தனர். தகடூர்ப் போரில் கடைசியாக வெற்றி பெற்றவன் பெருஞ்சேரல் இரும் பொறை. பல்வேற் றானை யதிக மானோடு இருபெரு வேந்தரையும் உடனிலை வென்று முரசுங் குடையும் கலனுங் கொண்டு உரைசால் சிறப்பின் அடுகளம் வேட்டுத் துகள்தீர் மகளிர் இரங்கத் துப்பறுத்துத் தகடூர் எறிந்து நொச்சிதந் தெய்திய அருந்திறல் ஒள்ளிசைப் பெருஞ்சேரல் இரும்பொறை என்று இவனை எட்டாம் பத்துப் பதிகம் கூறுகிறது. இவனை 8ஆம் பத்துப் பாடியவர் அரிசில்கிழார். இப்பத்தைப் பாடியதற்குப் பரிசிலாக இவர் இவனுக்கு அமைச்சராக அமர்ந்தார் “பாடிப் பெற்ற பரிசில்: தானும் கோயிலாளும் (அரசனும் அரசியும்) புறம்போந்து நின்று கோயிலுள்ள வெல்லாம் கொண்மினென்று காணம் ஒன்பது நூறாயிரத்தோடு அரசுகட்டில் (சிம்மாசனம்) கொடுக்க அவர் யான் இரப்ப இதனை ஆள்க வென்று அமைச்சுப்பூண்டார்.” என்று 8ஆம் பத்தின் அடிக் குறிப்புக் கூறுகிறது. தகடூரை வென்ற பிறகு இவன் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும் பொறை என்று பெயர் பெற்றான். தகடூர்ப் போரைப் பற்றித் `தகடூர் யாத்திரை’ என்னும் ஒரு நூல் இயற்றப்பட்டது. அந்நூல் இப்போது மறைந்துவிட்டது. அந்நூலின் சில செய்யுட் களைத் தொல்காப்பியப் புறத் திணையியலின் உரையில் நச்சினார்க்கினியர் மேற்கோள் காட்டி யுள்ளார். புறத்திரட்டிலும் சில செய்யுட்கள் தொகுக்கப்பட்டுள்ளன. தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை புலவர்களிடத்தில் பெருமதிப்புக்கொண்டு அவர்களைப் போற்றினான். இவனுடைய முரசு வைக்கும் கட்டிலிலிருந்த முரசைக் கழுவுவதற்குக் கொண்டு போயிருந் தார்கள். அவ்வமயம் மோசிகீரனார் என்னும் புலவர், அது முரசு கட்டில் என்பதை அறியாமல் அதன்மேல் படுத்து உறங்கிவிட்டார். முரசுகட்டில் சிம்மாசனம் போன்று மதிப்புக்குரியது. அதில் யாரும் அமர்வதும் படுப்பதும் கூடாது. மோசிகீரனார் அதில் படுத்து உறங்குவதைக் கண்ட பெருஞ்சேரல் இரும்பொறை இவர் செயலுக்காக வருந்தாமலும் சினங் கொள்ளாமலும் இருந்ததோடு தன்கையினால் விசிறிகொண்டு அவருக்கு வீசிக்கொண்டிருந்தான். புலவர் விழித்தெழுந்து நடந்ததை யறிந்து அரசனுடைய தமிழன்பை வியந்து பாடினார் (புறம். 50). தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை பதினேழு யாண்ட அரசாண்டான். சேர அரசர் பரம்பரை (பதிற்றுப்பத்துப் பதிகத்தின்படி) மூத்த வழி உதியன் சேரல் = வெளியன் வேண்மாள் (வானவரம்பன்) நல்லினி வேளாவிக் = குடக்கோ = சோழன் பல்யானைச் கோமான் நெடுஞ்சேரல் மணக்கிள்ளி செல்கெழு பதுமன் தேவி I ஆதன் மகள் குட்டுவன் (இமயவரம்பன்) நற்சோணை (3 ஆம் பத்து) 2 ஆம் பத்து 25 ஆண்டு 58 ஆண்டு களங்காய்க் ஆடுகோட்பாட்டுச் கண்ணி நார்முடிச் சேரலாதன் சேரல் (வானவரம்பன்) (வானம்வரம்பன்) 6 ஆம் பத்து 4 ஆம் பத்து 38 ஆண்டு 25 ஆண்டு இளங்கோ = கடல்பிறக்கோட்டிய இளங்கோ அடிகள் வேண்மாள் செங்குட்டுவன் (சிலப்பதிகாரக் (இமயவரம்பன்) காவிய ஆசிரியர்) 5 ஆம் பத்து 55 ஆண்டு குட்டுவன் சேரல் இளைய வழி அந்துவன் = பொறையன் பொறையன் பெருந்தேவி செல்வக்கடுங்கோ = வேளாவிக் கோமான் வாழியாதன் பதுமன் தேவி (7 ஆம் பத்து) 25 ஆண்டு தகடூர் எறிந்த = மையூர்கிழான் மகள் பெருஞ்சேரல் அந்துவஞ்செள்ளை இரும்பொறை (8 ஆம் பத்து) 17 ஆண்டு இளஞ்சேரல் இரும்பொறை (9 ஆம் பத்து) 16 ஆண்டுகள் சேரன் செங்குட்டுவன் இவன், இமயவரன்பன் நெடுஞ்சேரலாதனின் மகன் என்பதையும் களங்காய்க் கண்ணி நார்முடிச்சேரலின் தம்பி என்பதையும் ஆடு கோட்பாட்டுச் சேரலாதனுக்கும் இளங்கோவடிகளுக்கும் தமயன் என்பதையும் முன்னமே யறிந்தோம். தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை இவனுடைய தாயாதி அண்ணன் என்பதையும் அறிந்தோம், நெடுஞ்சேரலாதனின் இரண்டு மனைவியரில் சோழன் மணக்கிள்ளியின் மகளான நற்சோணை இவனுடைய தாய். இளமை யிலேயே இவன் சிறந்த வீரனாக விளங்கினான். இவன் தன் தந்தை, தமயன்மார்களின் ஆட்சிக் காலத்தில், இளவரசனாக இருந்த போதே, அவர்கள் செய்த போர்களில் இவனும் கலந்து கொண்டு பகைவருடன் போர் செய்திருக்கிறான். இவன் அரசாட்சிக்கு வந்தபோதும் பல போர்களைச் செய்து வெற்றி பெற்றான். செங்குட்டுவனுடைய தந்தையான நெடுஞ்சேரலாதன், தன் நாட்டுக்கு அருகிலே கடலில் இருந்த தீவு ஒன்றில் இருந்து கொண்டு, தனக்கு எதிராகக் குறும்பு செய்து கொண்டிருந்த பகைவரை வென்று அவருடைய காவல் மரமாகிய கடம்ப மரத்தை வெட்டி அதனால், முரசு செய்தான் என்று முன்னமே கூறினோம் (அகம் 127 : 3-5, 347 : 3-6; பதிற்றுப்பத்து 2 ஆம் பத்து 1 : 2-16, 2 : 2-3, 7 : 4-7, 10 : 2-5; சிலம்பு 28 : 135 - 136). இந்தக் கடல்தீவுப் போர், நெடுஞ்சேரலாதன் காலத்தில் நிகழ்ந்தது. ஆனால், இந்தப் போரை முன்நின்று நடத்தி வெற்றி பெற்றவன், அக்காலத்தில் இளைஞனாக இருந்த செங்குட்டுவனே. இதற்குப் பல சான்றுகள் உள்ளன. இதனால், நெடுஞ்சேரலாதனுக்காக அவன் மகன் செங்குட்டுவன் இந்தப் போரை நடத்தி வென்றான் என்பது தெரிகின்றது. பதிற்றுப்பத்து 5 ஆம் பத்து 5 ஆம் செய்யுளில் பரணர் என்னும் புலவர் இக்கடற்போர்ச் செய்தியை இவ்வாறு கூறுகிறார்: தானைமன்னர் இனியா ருளரோ நின் முன்னும் இல்லை மழைகொளக் குறையாது புனல்புக நிறையாது விலங்குவளி கடவும் துளங்கிருங் கமஞ்சூல் வயங்குமணி யிமைப்பின் வேல் இடுபு முழங்கு திரைப் பனிக்கடல் மறுத்திசி னோரே என்று அவர் கூறுகிறார். “கடல் மறுத்திசினோராகிய தானைமன்னர் இனியாருளரோ. நின் முன்னும் இல்லை யெனக் கூட்டி வினைமுடிவு செய்க. கடல் மறுத்தல் என்றது கடலிற் புக்கு ஒருவினை செய்தற்கு அரி தென்பதனை மறுத்தலை” என்று இதற்கு விளக்கங் கூறுகிறது பதிற்றுப்பத்தின் பழைய உரை. செங்குட்டுவன் காலத்திலும் அவனுடைய தந்தை நெடுஞ் சேரலாதன் காலத்திலும் இருந்த பரணரே, செங்குட்டுவன்தான் முதல் முதல் கடற்போர் செய்தான், அவனுக்கு முன்பு கடற்போர் செய்தவர் இலர் என்று கூறுகிற படியினாலே செங்குட்டுவன் இந்தக் கடற் போரைத் தன் தந்தை ஏவியபடி செய்தான் என்பது தெரிகின்றது. நெடுஞ்சேர லாதனை 2 ஆம் பத்துப் பாடிய குமட்டூர்க் கண்ணனாரும் இக் கருத்தையே கூறுகிறார். பவர்மொசிந் தோம்பிய திரள்பூங் கடம்பின் கடியுடை முழுமுதல் துமிய ஏஎய் வென்றெறி முழங்குபனை செய்த வெல்போர் நாரரி நறவின் ஆர மார்பின் போரடு தானைச் சேரலாத (2ஆம் பத்து 1 : 12-16) என்று அவர் கூறுகிறார். இதில் ‘கடம்பின் கடியுடை முழு முதல் துமிய ஏஎய்’ என்று கூறுவது காண்க (ஏய்=ஏவி). தந்தை ஏவிய படி செங்குட்டுவன் இப்போரைச் செய்து வென்றான். இதனால் தான், கடற்போரை முதல்முதலாகச் செய்தவன் செங்குட்டுவன் என்று பரணர் கூறினார். கடற்போரைச் செய்த காலத்தில் செங்குட்டுவனுக்கு வயது 20 அல்லது 25 இருக்கும். அரபு நாட்டிலிருந்தும் எகிப்து, ரோமாபுரி முதலிய நாடு களிலிருந்தும் வாணிகத்தின் பொருட்டுக் கடல் வழியாக வந்த மரக்கலங்களைச் சேர நாட்டின் துறைமுகப்பட்டினங்களுக்கு வராதபடி இடை மறித்துத் தடுத்துக் கொள்ளையடித்துக் கொண்டிருந்த குறும்பர்களை அடக்குவதற்காக இப்போர் நடந்தது என்று கருதலாம். பிளினி என்னும் யவனர் இவ்விடத்தில் கடற்கொள்ளைக்காரர் இருந்தனர் என்று எழுதியுள்ளார். கடற்றீவிலிருந்த இந்தக் குறும்பர்கள் தங்களுக்குக் காவல் மரமாகக் கடம்ப மரத்தை வளர்த்திருந்தார்கள். அந்தக் காவல் மரத்தைத் தான் செங்குட்டுவன் வெட்டினான். அந்தக் குறும்பர்கள், துளு நாட்டு நன்னனுக்கு அடங்கியிருந்த துளுவர் எனத் தோன்றுகின்றனர். தந்தையும் மகனும் சேர்ந்து நடத்திய போர் ஆகையினாலே, கடம்பறுத்த செய்தி இருவர் மேலும் கூறப்படுகிறது. சேரன் செங்குட்டுவன் என்னும் நூலில் திரு.மு. இராகவையங்கார் அவர்கள், நெடுஞ்சேரலாதன் செய்த கடற்போர் வேறு, செங்குட்டுவன் செய்த கடற்போர் வேறு என்று பொருள்பட எழுதியிருப்பது தவறாகும். கடந்தடுதார்ச் சேரன் கடம்பெறிந்த வார்த்தை படர்ந்த நிலம் போர்த்த பாடலே பாடல் (சிலம்பு 29, வள்ளைப்பாட்டு, 3) என்றும், பொங்கிரும் பரப்பிற் கடல்பிறக் கோட்டிக் கங்கைப் பேரியாற் றுக் கரை போகிய செங்குட்டுவன் (சிலம்பு. 30, கட்டுரை: 12-14) என்று செங்குட்டுவன் செய்த கடற்போர்ச் செய்தி சிலப்பதி காரத்தில் கூறப் படுகிறது. செங்குட்டுவனின் கடற் போரைப் பரணர் ஒரு செய்யுளில் உயர்வு நவிற்சியாக நயம்படக் கூறுகிறார். நிலத்திலே போர் செய்வதற்குப் பகையரசர் கிடைக்காத படியாலே செங்குட்டுவன் கடலில் சென்று போர் செய்தான் என்று அவர் கூறுகிறார். படைநிலா விலங்கும் கடல்மருள் தானை மட்டவிழ் தெரியல் மறப்போர்க் குட்டுவன் பொருமுரண் பெறாஅது விலங்குசினஞ் சிறந்து செருச்செய் முன்பொடு முந்நீர் முற்றி ஓங்குதிரைப் பௌவம் நீங்கவோட்டிய நீர் மாண் எஃகம் (அகம். 212 : 15-20) என்று அவர் கூறுகிறார். செங்குட்டுவனுடைய கடற்போர் அவனுக்குப் பெரும்புகழை உண்டாக்கிற்று, கடம் பெறிந்த வாபாடி ஆடாமோ ஊசல் (சிலம்பு. 29, ஊசல்வரி) என்றும், பொங்கிரும் பரப்பிற் கடல்பிறக் கோட்டிக் கங்கைப் பேரியாற்றுக் கரைபோகிய செங்குட்டுவன் (சிலம்பு. 30, கட்டுரை, 12-14) என்றும், நீர்புக்குக் கடலொடு உழந்த பனித்துறைப் பரதவ (5ஆம் பத்து. 8 : 3-4) என்றும் இவன் புகழப்படுகிறான். கடற்போரில் வெற்றி பெற்ற படியால் இவன் கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன் என்றும் சேரமான் கடலோட்டிய வேல்கெழு குட்டுவன் என்றும் சிறப்புப் பெயர் பெற்றான். செங்குட்டுவனின் தமயனான களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரலின் அரசாட்சிக்காலத்தில் கொங்காணத்து (துளு நாட்டு) நன்னனுடன் போர் நடந்தது. அப்போர் நிலைச் செருவாகப் பல காலம் நடந்தது. அந்தப் போரிலும் செங்குட்டுவன் தன் தமயன் சார்பாகப் போர் செய்து வெற்றி பெற்றான். கொங்காணத்து (துளு நாட்டு) நன்னனுடன் இவர்கள் போர் செய்ததற்கு இரண்டு காரணங்கள் உண்டு. முதலாவது காரணம், சேரர்களுக்கு உரியதாயிருந்த பூழி நாட்டை நன்னன் கைப்பற்றிக் கொண்டது. இரண்டாவது காரணம், சேரர், கொங்கு நாட்டின் தென் பகுதிகளைக் கைப்பற்றிக் கொண்டிருக்கும் போது, நன்னன் கொங்கு நாட்டின் வடபகுதிகளைக் கைப்பற்றிக் கொண்டிருந் தான். நன்னனின் ஆக்கமும் உயர்வும் சேரர்களுக்கு ஆபத்தாக இருந்தது. இக்காரணங்களினால் நார்முடிச் சேரல் துளு நாட்டு நன்னனுடன் போர் செய்தான். சேரர், துளு நாட்டை மூன்று பக்கங்களிலிருந்து தாக்கினார்கள். துளு நாட்டின் தெற்குப் பக்கத்திலிருந்து நார்முடிச்சேரல் தாக்கினான். கிழக்குப் பக்கத்திலிருந்து அவன் தம்பி ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் தாக்கினான். மேற்குப் பக்கத்தில் கடற்கரையோரமாகச் செங்குட்டுவன் தாக்கினான். துளு நாட்டு நன்னனும் சேனைப் பலமுள்ளவன். ஆகையால் அவன் இவர்களைக் கடுமையாக எதிர்த்தான். இப்போர் நிலைச்செருவாகப் பலகாலம் நடந்தது என்பதை முன்னமே கூறினோம். மேற்குக் கடற்கரைப் பக்கமாகப் போர் செய்த செங்குட்டுவன் துளு நாட்டுக் கடற்கரைப் பக்கத்திலிருந்த வியலூர், கொடுகூர் என்னும் ஊர்களை வென்று கைப்பற்றினான். உறுபுலி அன்ன வயவர் வீழச் சிறுகுரல் நெய்தல் வியலூர் நூறி அக்கரை நண்ணிக் கொடுகூர் எறிந்து (பதிற்று. 5ஆம் பத்து, பதிகம்) என்று பரணரும், கறிவளர் சிலம்பில் துஞ்சும் யானையின் சிறுகுரல் நெய்தல் வியலூர் எறிந்தபின் (சிலம்பு 28 : 114 - 115) என்று இளங்கோவடிகளும் இச்செய்தியைக் கூறுகிறார்கள். வியலூர் துளு நாட்டில் இருந்தது என்பதை மாமூலனார் என்னும் புலவர், அகவுநர்ப் புரந்த அன்பிற் கழல்தொடி நறவுமகி ழிருக்கை நன்னன் வேண்மான் வயலை வேலி வியலூர் (அகம் 97 : 11-13) என்று கூறினார். சேர அரசர்கள் கொங்கு நாட்டைக் கொஞ்சங் கொஞ்சமாகக் கைப்பற்றினார்கள் என்று முன்னமே கூறினோம். கொங்கு நாட்டில் பேரரசன் இல்லாமல் சிறுசிறு குறுநில மன்னர்கள் இருந்தபடியால் அவர்களைச் சேரர் எளிதாக வென்று அந் நாட்டைக் கைப்பற்றிக் கொண்டிருந்தார்கள். அப்போது சோழ பாண்டிய அரசர் வாளா இருக்கவில்லை. கொங்கு நாட்டுச் சிற்றரசர்களுக்கு உதவியாக இருந்து சோழரும் பாண்டியரும், சேரர் கொங்கு நாட்டைக் கைப்பற்றாதபடி தடுத்து வந்தார்கள். அதனால் சோழ பாண்டியருடன் சேர அரசர் போர் செய்ய வேண்டியதாயிற்று. செங்குட்டுவனுடைய பங்காளித் தமயனான தகடூர் எறிந்த பெருஞ் சேரலிரும்பொறை கொங்கு நாட்டைக் கைப்பற்றிக் கொண்டிருந்த போது, சோழ பாண்டியர் கொங்கருடன் ஒன்று சேர்ந்து அவனை எதிர்த்தார்கள். அப்போது செங்குட்டுவன், அண்ணனான பெருஞ்சேரலிரும் பொறைக்கு உதவியாகச் சென்று சோழ பாண்டியருடன் போர் செய்து வென்றான். இச்செய்தியை இளங்கோவடிகள், நும்போல் வேந்தர் நும்மோ டிகலிக் கொங்கர் செங்களத்துக் கொடுவரிக் கயற்கொடி பகைபுறத்துத் தந்தனர் ஆயினும் ஆங்கவை திசைமுக வேழத்தின் செவியகம் புக்கன (சிலம்பு 25 : 152 - 158) என்றும், கொங்கணர் கலிங்கர் கொடுங்கரு நாடர் பங்களர் கங்கர் பல்வேற் கட்டியர் வடவாரிய ரொடு வண்டமிழ் மயக்கத்துன் கடமலை வேட்டம் கட்புலம் பிரியாது (சிலம்பு 25 : 156-159) என்றும் அமைச்சனாகிய வில்லவன் கோதை கூறியதாகச் சிலப்பதிகாரம் கூறுவது காண்க. இப்போரில் கொங்கணர், கலிங்கர், கருநாடர், பங்களர், கங்கர், கட்டியர், ஆரியர் ஆகிய பல நாட்டு வீரர்கள் போர் செய்தது கூறப்படுகிறது. இதில் கூறப்பட்ட பங்களர், கட்டியர், கங்கர் என்பவர்கள் அக்காலத்துத் தமிழகத்தின் எல்லைப் புறத்தில் இருந்தவராவர். பங்களர் என்பவர் பங்கள நாட்டவர். பங்கள நாடு, வேங்கடமலைக்கு மேற்கே இருந்த தமிழகத்தின் எல்லைப்புற நாடு. பங்கள நாட்டைப் பற்றிய சாசன எழுத்துக்கள் சில தமிழில் கிடைத்துள்ளன. இந்தப் பங்களரைப் பங்களார் (வங்காளர்) என்று தவறாகக் கருதிக் கொண்டு பங்காளர் என்னும் பெயரைக் கூறுகிற சிலப்பதிகாரம் பிற்காலத்தில் எழுதப்பட்ட நூல், சங்ககாலத்து நூல் அன்று என்று பிழையான கருத்தைத் திரு. வையாபுரிப் பிள்ளை, நீலகண்ட சாஸ்திரி போன்ற அறிஞர்கள் தவறாக எழுதியுள்ளார்கள் (இவர்களின் தவறான முடிபை முன்பு ஒரு கட்டுரையில் மறுத்து எழுதியிருக்கிறேன்). செங்குட்டுவன் செய்த போர்களில் மற்றொரு போர், பேர்பெற்ற மோகூர்ப் போர். மோகூர் என்பது பாண்டி நாட்டில் மதுரைக்கு வடகிழக்கே 7 மைல் தூரத்தில் இருக்கிறது. இது பிற்காலத்தில் வைணவத் திருப்பதிகளில் ஒன்றாகத் திருமோகூர் என்று பெயர் பெற்று விளங்குகிறது. மோகூரைப் பழையன் என்னும் குடிப் பெயரையுடைய சிற்றரசர் பரம்பரையாக ஆண்டு கொண்டிருந்தார்கள். அவர்கள் பாண்டிய அரசர்களின் சேனைத் தலைவராக இருந்தவர்கள். அந்தப் பழையர்களில் ஒருவன் அறுகை என்னும் வீரனை வென்று புகழ் பெற்றிருந்தான். தோல்வி யடைந்த அறுகையின் சார்பாகச் செங்குட்டுவன் மோகூரின் மேல் படையெடுத்துச் சென்று, பழையனுடன் போர் செய்து வென்று, அவனுடைய காவல்மரமாக இருந்த வேப்பமரத்தை வெட்டி, அதனால் முரசு செய்தான். செங்குட்டுவனுடைய இந்த மோகூர்ப் போர் வெற்றியை 5ஆம் பத்தில் பரணர் பாடுகிறார்: நுண்கொடி யுழிஞை வெல்போர் அறுகை சேணன் ஆயினும் கேள்என மொழிந்து புலம்பெயர்ந் தொளித்த களையாப் பூசற்கு அரண்கள் தாவுறீஇ யணங்குநிகழ்ந் தன்ன மோகூர் மன்னன் முரசங் கொண்டு நெடுமொழி பணித்தவன் வேம்புமுதல் தடிந்து முரசுசெய முரற்சிக் களிறுபல பூட்டி ஒழுகை யுய்த்த கொழுவில் பைந்துணி (5 ஆம் பத்து. 4 : 10-17) என்றும், வெல்போர் வேந்தரும் வேளிரும் ஒன்று மொழிந்து மொய்வளம் செருக்கி மொசிந்துவரு மோகூர் வலம்படு குழூஉநிலை அதிர மண்டி ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... படுபிணம் பிறக்கப் பாழ்பல செய்து படுகண் முரசம் நடுவட் சிலைப்ப வளனற நிகழ்ந்து வாழுநர் பலர்படக் கருஞ்சினை விறல்வேம் பறுத்த பெருஞ்சினக் குட்டுவன் (5ஆம் பத்து, 9 : 7-17) என்றும், பழையன் காக்கும் கருஞ்சினை வேம்பின் முரரை முழுமுதல் துமியப் பண்ணி வாலிழை கழிந்த நறும்பல் பெண்டிர் பல்லிருங் கூந்தல் முரற்சியால் குஞ்சர ஒழுகை பூட்டி (5ஆம் பத்து, பதிகம். 13-17) என்றும் இப்போர்ச் செய்தி கூறப்படுகிறது. (பழைய உரை: வாலிழை கழிந்த பெண்டிர் என்றது அப்பழையன் பெண்டிரை. கூந்தல் முரற்சி என்றது, அவர் கூந்தலை அரிந்து திரித்த கயிற்றினை, குஞ்சர ஒழுகை பூட்டியது அப்பழையன் வேம்பினை ஏற்றிக் கொண்டு போதற்கு). பழையன் காக்கும் குழைபயில் நெடுங்கோட்டு வேம்பு முதல் தடிந்த ஏந்துவாள் வலத்துப் போந்தைக் கண்ணி பொறைய (சிலம்பு 27 : 124-126) என்று இப்போர்ச் செய்தியை இளங்கோவடிகள் கூறுகிறார். செங்குட்டுவனுடைய மோகூர்ப் போர் இவ்வளவு பெருமை யடைந்ததற்குக் காரணம் என்ன வென்றால், மோகூர் பழையனுக்கு உதவியாகப் பாண்டியனும் சோழனும் வேறு சில வேளிர்களும் வந்து செங்குட்டுவனுடன் போர் செய்தபடியால் தான். ஆகவே, செங்குட்டுவன் பலமான எதிர்ப்பைத் தாங்கி வெல்ல வேண்டிய தாயிருந்தது. குறிப்பு : மோகூரின் மேல் மோரியர் படையெடுத்து வந்து போர் செய்தனர் என்றும் கூறப்படுகிறது. வம்பமோரியர், மோகூரின் மேல் படையெடுத்து வந்ததற்குச் சான்று மாமூல னாரின் அகப்பாட்டு. (அகம் 251). இச்செய்யுளில் மாமூலனார், வெல் கொடித் துனைகா லன்ன புனைதேர்க் கோசர் தொன்மூ தாலத் தரும்பணைப் பொதியில் இன்னிசை முரசங் கடிப்பிகுத் திரங்கத் தெம்முனை சிதைத்த ஞான்றை மோகூர் பணியா மையிற் பகைதலை வந்த மாகெழு தானை வம்ப மோரியர் புனைதேர் நேமி யுருளிய குறைத்த இலங்குவெள் ளருவிய அறைவாய் உம்பர், (அகம் 251 : 6-14) என்று கூறுகிறார். மோரியர் (மௌரியர்) மோகூரின் மேல் படையெடுத்து வந்ததைப் பற்றி (அகம் 281 : 7-12, 69 : 10-12, 62 : 10-11; புறம் 175 : 6-8) வேறு சில செய்யுட்களும் கூறுகின்றன. ஆனால், இச்செய்யுட்கள் மௌரியரைக் கூறுகின்றன; மோகூரைக் கூறவில்லை. மோரியர், மோகூரின் மேல் படை யெடுத்து வந்த செய்தியைக் கூறுவது மாமூலனாரின் ஒரே ஒரு செய்யுள் மட்டுந்தான். அச்செய்யுட் பகுதி மேலே காட்டப் பட்டது. மோரியர் மோகூரின்மேல் படையெடுத்து வந்தது பற்றிப் பல அறிஞர்கள் ஆராய்ந்து பல கட்டுரைகள் எழுதியிருக் கிறார்கள். பி.டி. சீநிவாச அய்யங்கார், டாக்டர் எஸ். கிருஷ்ணசாமி அய்யங்கார், மு. இராகவையங்கார் கே.ஏ. நீலகண்ட சாஸ்திரியார், இலக்கண விளக்கப் பரம்பரை சோமசுந்தர தேசிகர், இராமச்சந்திர தீக்ஷிதர் முதலிய பல அறிஞர்கள் இது பற்றி எழுதியிருக்கிறார்கள். திரு. மு. இராகவை யங்கார் அவர்கள் தாம் எழுதிய சேரன் செங்குட்டுவன் என்னும் நூலில், மோகூர் - மௌரியர் போரைப் பற்றி இவ்வாறு எழுதியுள்ளார்: “மோரிய வரசர் திக்குவிசயஞ் செய்து கொண்டு தென்றிசை நோக்கி வந்தபோது, இப்பழையன் அவர்களுக்குப் பணியாமையால், அவர்க்கும் இவனுக்கும் பெரும்போர் நிகழ்ந்ததென்று தெரிகின்றது” என்று எழுயிருக்கிறார். மற்றும் பல அறிஞர்கள் இது பற்றிப் பல கருத்துக்களை எழுதி வெளியிட்டிருக்கிறார்கள். அவை எல்லாம் தவறானவை. மாமூலனார் செய்யுளில் ஒரே ஒரு எழுத்துப் பிழை ஏடெழுதுவோரால் நிகழ்ந்துவிட்டது என்று நான் கருதுகிறேன். மோகர் என்று எழுதப்பட வேண்டியது மோகூர் என்று எழுதியதுதான் அந்தப் பிழை என்று கருதுகிறேன். தெம்முனை சிதைத்த ஞான்றை மோகர் பணியா மையிற் பகைதலை வந்த மாகெழுதானை வம்ப மோரியர் என்று அது இருக்க வேண்டும். மோகர் பணியாமையின் என்று இருக்க வேண்டிய சொல் மோகூர் பணியாமையின் என்று ஏடெழுது வோரால் பிழையாக எழுதப்பட்டிருக்க வேண்டும். மோகர் என்பவர் கொங்கண நாட்டின் (துளு நாட்டின்) கடற்கரையோரத்தில் வாழ்ந் திருந்த போர்ப் பிரியராகிய ஓர் இனத்தார். அவர்கள் மீன் பிடிக்கும் தொழிலைச் செய்திருந்தனர். அவர்களுடைய சந்ததியார் இன்றும் மோகர் என்னும் அந்தப் பெயருடனே துளு நாட்டில் (தென் கன்னட மாவட்டம்) இருக்கிறார்கள். (See Thurston’s Caste and Tribes of South India) பாண்டி நாட்டிலும் பரதவர் என்னும் இனத்தார் போர் விருப்ப முடையவராகப் பாண்டியனுக்கு அடங்காமல் குறும்பு செய்து கொண்டிருந்தபோது அவர்களை நெடுஞ்செழியன் வென்று அடக்கினான் என்பதை அறிகிறோம். இதை மதுரைக் காஞ்சி `தென்பரதவர் மிடல்சாய’ என்று கூறுகிறது. அது போன்று, துளு நாட்டு மோகர் பணியாமையினால் அவர்களை வெல்வதற்கு மோரியப் படை வந்தது. இச்செய்தியைத்தான் மாமூலனார் தம் செய்யுளில் கூறினார். மோகர் என்னுஞ் சொல் மோகூர் என்று தவறாக எழுதப்பட்டபடியால், அது பல ஆராய்ச்சிக்கு இடங் கொடுத்துப் பலப்பல முடிவுக்கு இடமாயிற்று. இது பற்றி விரிவாக எழுதுவதற்கு இது இடமன்று. சோழ நாட்டிலும் செங்குட்டுவன் ஒரு போரை வென்றான் என்று 5ஆம் பத்துப் பதிகம் கூறுகிறது. வெந்திறல் ஆராச் செருவிற் சோழர்குடிக் குரியோர் ஒன்பதின்மர் வீழ வாயிற்புறத் திறுத்து நிலைச் செருவின் ஆற்றலை யறுத்து (பதிகம் 17-20) (குடிக்குரியோர் என்றது அரசிற்குரியாரை என்று பழையவுரை விளக்கங்கூறுகிறது). சோழன் கரிகாலன் இறந்த பிறகு அவன் மகனான கிள்ளிவளவன் முடி சூடியபோது சோழ அரசர் குடியில் பிறந்த தாயாதிகள் ஒன்பது பேர் முன்வந்து தங்களுக்கு ஆட்சியுரிமை யுண்டென்று குழப்பம் உண்டாக்கினார்கள். அதனால் சோழ நாட்டில் உள்நாட்டுப் போர் நடந்தது. அது நிலைச்செருவாக நீண்டு நடந்தது. அப்போது செங்குட்டுவன், தன் மைத்துனனான கிள்ளிவளவன் சார்பாக ஒன்பது அரசருடனும் போர் செய்து வென்று ஆட்சியைக் கிள்ளி வளவனுக்குக் கொடுத்தான். இதனைச் சிலப்பதிகாரமும் கூறுகிறது. மைத்துன வளவன் கிள்ளியொடு பொருந்தா ஒத்த பண்பினர் ஒன்பது மன்னர் இளவரசு பொறாஅர் ஏவல் கேளார் வளநா டழிக்கும் மாண்பினர் ஆதலின் ஒன்பது குடையும் ஒருபகல் அழித்தவன் பொன்புனை திகிரி ஒருவழிப் படுத்தோய் (சிலம்பு, நீர்ப்படை: 118-123) என்றும், ஆர்புனை தெரியல் ஒன்பது மன்னரை நேரிவாயில் நிலைச்செரு வென்று (சிலம்பு, நடுகல்: 116-117) என்றும் கூறுவது காண்க. (நேரிவாயில் - உறையூர் தெற்கில் வாயிலதோர் ஊர்: அரும்பதவுரை) செங்குட்டுவன் வடநாடு சென்றபோது கங்கைக் கரையிலே போர் செய்திருக்கிறான். கங்கைக் கரையில் இவன் இரண்டு போர்களைச் செய்தான் என்பதைச் சிலப்பதிகாரத்தினால் அறியலாம். ஒன்று செங்குட்டுவன் தன் தாயைக் கங்கை நீராட்டக் கொண்டு போன போது நிகழ்ந்தது. மற்றொரு போர், அவன் கண்ணகிக்கு இமயத்தில் கல்லெடுக்கச் சென்றபோது நிகழ்ந்தது. அவற்றைப் பற்றி யாராய்வோம். கங்கைப் பேர்யாற்றுக் கடும்புனல் நீத்தம் எங்கோ மகளை யாட்டிய அந்நாள் ஆரியமன்னர் ஈரைஞ் ஞூற்றுவர்க் கொருநீ யாகிய செருவெங் கோலம் கண்விழித்துக் கண்டது கடுங்கட் கூற்றம் (சிலம்பு, காட்சி 160-165) என்று சிலப்பதிகாரம் கூறுகிறது. இதனால், தன் தந்தை நெடுஞ்சேரலாதன் போர்க் களத்தில் புண் பட்டுக் கிடந்து இறந்த பிறகு, இவன் தன் தாயைக் கங்கைக் கரைக்கு அழைத்துச் சென்றதும் அவ்வமயம் அங்கிருந்த அரசர் களுடன் போர் செய்ய நேரிட்டுப் போர் செய்து வென்றதும் அறியப்படுகிறது. இந்தச் செய்தியைப் பற்றி திரு.மு. இராகவையங்கார் தாம் எழுதிய `சேரன்செங்குட்டுவன்’ என்னும் நூலில் இவ்வாறு எழுதுகிறார்: `இனிச் செங்குட்டுவன் தந்தை நெடுஞ்சேரலாதன், முற்கூறியபடி பெருவிறற் கிள்ளியுடன் பொருது இறந்தபோது, அவன் மனைவியரும் உடனுயிர் நீத்தனர் என்பது புறநானூற்றின் 62ஆம் பாடலாற் புலப்படுகின்றது. இதனால், செங்குட்டுவன் தாய் நற்சோணையும் தன் கணவன் சேரலாதனுடன் சககமனஞ் செய்தவள் என்பது பெறப் படும்; ஆயின், அத்தாயின் பொருட்டு அமைத்த பத்தினிப் படிமத்தை (உடன் கட்டையேறிய பத்தினியின் உருவம் வரைந்த சிலை) செங்குட்டுவன் கங்கை நீராட்டச் சென்றவனாதல் வேண்டும். கங்கைக்கரையில் செங்குட்டுவன் நிகழ்த்திய இவ்வரிய செயல் அவனது கன்னிப் போராகக் கருதப்படுகின்றது.’ ஐயங்கார் அவர்கள் கூறுவதுபோல உடன்கட்டை ஏறித் தீக் குளித்த செய்தி புறம் 62ஆம் செய்யுளில் கூறப்படவில்லை. குடக்கோ நெடுஞ்சேரலாதனும் வேற்பஃறடக்கைப் பெருநற்கிள்ளி யும் போரில் பொருது இருவரும் புண்பட்டு விழுந்து சிலகாலம் உயிர் போகாமல் கிடந்தனர். அப்போது அம்மன்னரின் மனைவியர் அவர்களைத் தழுவிக்கொண்டு வருந்தினார்கள் என்பதே அச்செய்யுளின் வாசகம். இடங்கெட ஈண்டிய வியன்கட் பாசறைக் களங்கொளற் குரியோர் இன்றித் தெருவர உடன்வீழ்ந் தன்றால் அமரே பெண்டிரும் பாசடகு மிசையார் பனிநீர் மூழ்கார் மார்பகம் பொருந்தி யாங்க மைந்தனரே (புறம் 62 : 11-15) என்று அச்செய்யுள் கூறுகிறது. இதில், அவர் மனைவியர் தீக்குளித்த செய்தி கூறப்படவில்லை. அக்காலத்தில், அரசியர், இறந்த கணவருடன் உடன்கட்டை ஏறவேண்டும் என்னும் கட்டாயமும் இல்லை. விரும்பினால் தீப்பாயலாம் என்பதே அக்காலத்து வழக்கம். ஐயங்கார் அவர்கள் கூறுவது போல, செங்குட்டுவன் தாய் தீப்பாய்ந்து இறக்க, அவருடைய எலும்பை அல்லது உருவச்சிலையைச் செங்குட்டுவன் கங்கையில் கொண்டு போய் நீராட்டினான் என்று கொண்டாலும் இழுக்கில்லை. ஆனால், இதுபற்றித் திரு. நீலகண்ட சாஸ்திரியார் கூறுவதுதான் வியப்பாக இருக்கிறது. மேலே காட்டிய புறம் 62 ஆம் செய்யுள், நெடுஞ்சேரலாதன் இறந்தபோது அவன் மனைவியும் உடன்கட்டை ஏறி இறந்தார் என்று கூறுவதாகச் சாஸ்திரியாரும் கருதுகிறார். கருதுவதோடு அமையாமல், சிலப்பதிகாரம் கூறுகிற செய்தி அதாவது செங்குட்டுவன் தன் தாயைக் கங்கைக்கு நீராட்டச் சென்ற செய்தி பொய்யான கட்டுக்கதை என்று கூறுகிறார். அதற்கு இவர் அரும்பதவுரையாசிரியர் எழுதியதை ஆதாரம் காட்டுகிறார். கங்கைப் பேர்யாற்றுக் கடும்புனல் நீத்தம் எங்கோமகளை யாட்டிய அந்நாள் என்று சிலம்பு (காட்சிக்காதை 160 - 161) அடிகளுக்கு உரை எழுதுகிற அரும்பத உரையாசிரியர், `எங்கோமக ளென்றது, செங்குட்டுவன் மாதாவை; அவளை இவன் கொண்டுபோய்த் தீர்த்தமாட்டினதொரு கதை’ என்று எழுதுகிறார். அரும்பத உரையாசிரியர், தீர்த்தமாட்டின தொருகதை என்று எழுதியிருப்பதை நீலகண்ட சாஸ்திரியார், அது பொய்க் கதையென்று அரும்பத உரை யாசிரியர் கூறியதாகப் பொருள் செய்துகொண்டார்.* சரித்திரங்களையும் கதை என்று கூறுவது அக்காலத்து வழக்கம். தேசிங்குராஜன் கதை, கட்டபொம்மன் கதை, முத்துப்பட்டன் கதை, மதுரைவீரன் கதை என்றுதான் கூறப்படுகிறதே தவிர, தேசிங்குராஜன் சரித்திரம், கட்டபொம்மன் சரித்திரம், முத்துப்பட்டன் சரித்திரம் என்று கூறப்படவில்லை. கதை என்று கூறப்படுவதனாலே தேசிங்குராஜன், கட்டபொம்மன் முதலியவர்களைப் பொய்யாகப் புனைந்துரைக்கப்பட்ட கதாபாத்திரங்கள் என்று சாஸ்திரியார் கருதுகிறாரா? இராமாயணக் கதை, பாரதக் கதை என்றுதான் வழங்கப்படுகின்றன. அவையும் இந்திய சரித்திரத்தில் இடம் பெற்றுள்ளன. அரும் பதவுரையாசிரியர் கதை என்று எழுதியதன் கருத்து ‘ஒரு வரலாறு’ என்னும் பொருளுடையது. சாஸ்திரியார் கருதுவதுபோல பொய்க்கதை என்று பொருள் கொள்வது தவறு. அது உண்மைச் செய்தியே. செங்குட்டுவன் தன் தாயை உயிருடன் கங்கைக் கரைக்கு நீராட்ட அழைத்துச் சென்றிருந்தாலும் அல்லது இறந்துபோன அவள் எலும்புகளைக் கங்கையில் போடச் சென்றிருந்தாலும் அவன் அதன் பொருட்டுக் கங்கைக்குச் சென்றது உண்மையே. செங்குட்டுவனின் தம்பியாகிய இளங்கோ அடிகளே இதனைக் கூறுவதனால் இதை உண்மை என்றே கொள்ளலாம். சாஸ்திரியார், சிலப்பதிகாரத்தைப் புனைகதை என்று கூறுவதற்கு எத்தனையோ தவறான சான்றுகளைக் காட்டுகிற வகையில் இதையும் ஒரு சான்றாகக் கொண்டார். எனவே, செங்குட்டுவன் கங்கையில் நீராட்டினான் என்பது நிகழ்ந்திருக்கக் கூடிய நிகழ்ச்சியே. இது செங்குட்டுவன் இளவரசனாக இருந்த காலத்தில் நிகழ்ந்த நிகழ்ச்சி. செங்குட்டுவன் தன் முதிர்ந்த வயதில் இரண்டாம் முறையாகக் கங்கைக்குச் சென்றது கண்ணகிச் சிலை செய்யக் கல்கொண்டு வருவதற்காக வடநாடு சென்ற போது. இச்செய்தியை இவன்மேல் பாடப்பட்ட 5ஆம் பத்துப் பதிகம் கூறுகிறது. கடவுட் பத்தினிக் கற்கோள் வேண்டிக் கானவில் கானங் கணையிற் போகி ஆரிய வண்ணலை வீட்டிப் பேரிசை இன்பல் அருவிக் கங்கை மண்ணி (5ஆம் பத்து, பதிகம்) என்று பதிகம் கூறுகிறது. இதிலும் திரு. கே.எ. நீலகண்ட சாஸ்திரியார் குறை காண் கிறார். சிலப்பதிகாரம் நிகழ்ச்சிகளை அழகுபடுத்தி அலங்கரித்துக் கூறுகிறது என்று இவர்குறை கூறுகிறார். ஒரு ஆரிய அரசனை வென்றதை ஆயிரம் அரசரை வென்றதாகச் சிலப்பதிகாரம் கூறுகிறது என்று சுட்டிக் காட்டுகிறார். சிலப்பதிகாரம் சரித்திர வரலாற்றைக் கூறுகிற காவிய நூல் என்பதைச் சாஸ்திரியார் மறந்துவிட்டு, அதைச் சரித்திரத்தை மட்டும் கூறுகிற தனி வரலாற்று நூல் என்று கருதிக் கொண்டு இவ்வாறெல்லாம் குறை காண்கிறார். காவிய நூலில் அலங்காரங்களும் கற்பனைகளும் இல்லாமற் போனால் அழகுபடுமோ? சரித்திர ஆராய்ச்சி செய்கிறவர் காவிய நூலிலே கற்பனைகளைத் தள்ளி விட்டு வரலாற்றை மட்டுங் கொள்ள வேண்டும். செங்குட்டுவன் கண்ணகிச் சிலைக்காக வடநாடு சென்றதும் கங்கையில் அச்சிலையை நீராட்டியதும் முதலிய செய்திகள், அவனைப் பரணர் பாடிய 5ஆம் பத்தில் கூறப்படவில்லை. பதிகம் மட்டும் கூறுகிறது. ஏன் பரணர் கூறவில்லையென்றால், அவர் செங்குட்டுவன் மேல் 5ஆம் பத்துப் பாடியபோது இந்நிகழ்ச்சிகள் நிகழவில்லை. அப்புலவர் செங்குட்டுவனுடைய தந்தை, பாட்டன் காலத்திலும் இருந்தவர். அவர் செங்குட்டுவனைப் பாடியபோது மிகுந்த வயதுள்ளவராக இருந்தார். இந்நிகழ்ச்சிகள் செங்குட்டுவனுடைய பிற்கால வாழ்க்கையில் நிகழ்ந்தவை. அப்போது பரணர் இறந்து போனார். சேர அரசர் தக்காண தேசத்தை யாண்ட சதகர்ணி அரசருடன் நட்புக் கொண்டிருந்தார்கள் என்பதை முன்னமே கூறினோம். செங்குட்டு வனும் சதகர்ணி (நூற்றுவர் கன்னர்) அரசருடன் நட்பாக இருந்தான். அவன் பத்தினிச்சிலைக்குக் கல் கொண்டுவர வடநாடு செல்ல விருப்பத்தைக் கேள்விப்பட்ட சதகர்ணியரசர் (நூற்றுவர் கன்னர்) `நீர் இமயம் போக வேண்டாம். உமக்கு வேண்டியதை நாங்கள் செய்து தருகிறோம்’ என்று தங்கள் தூதுவர் மூலம் சொல்லியனுப்பினார்கள். வேற்றுமை இன்றி நின்னொடு கலந்த நூற்றுவர் கன்னரும் கோற்றொழில் வேந்தே வடதிசை மருங்கின் வானவன் பெயர்வது கடவுள் எழுதவோர் கற்கே யாயின் ஓங்கிய விமயத்துக் கற்கால் கொண்டு வீங்கு நீர்க் கங்கை நீர்ப்படை செய்தாங்கு யாந்தரும் ஆற்றலம் என்றனர் என்று வீங்குநீர் ஞாலம் ஆள்வோய் வாழ்கஎன (சிலம்பு - கால்கோள்: 148-155) அதுகேட்ட செங்குட்டுவன் தான் மற்றொரு காரியத்துக்காக வும் வடநாடு போவதாக அவர்களுக்குத் தெரிவித்துக் கங்கையாற்றைக் கடந்து போவதற்கு தோணிப்பாலம் முதலியன செய்து தரும்படித் தூதுவர் மூலம் சதகர்ணியரசருக்குக் கூறினான். நூற்றுவர் கன்னர்க்குச் சாற்றி யாங்குக் கங்கைப் பேர்யாறு கடத்தற் காவன வங்கப் பெருநிரை செய்க தாம் (சிலம்பு - கால்கோள்: 164-165) என்று தூதுவர் மூலம் நூற்றுவர்கன்னர்க்குச் செய்தி சொல்லி யனுப்பியதாகச் சிலம்பு கூறுகிறது. இவன் விரும்பியவாறே நூற்றுவர்கன்னர் கங்கை யாற்றில் தோணிப்பாலம் அமைத்துத் தந்தனர்; இவன் தன் சேனைகளுடன் அப்பாலத்தைக் கடந்து இமயஞ் சென்றான். பாடி யிருக்கை நீங்கிப் பெயர்ந்து கங்கைப் பேரியாற்றுக் கன்னரிற்பெற்ற வங்கப் பரப்பின் வடமருங் கெய்தி (சிலம்பு - கால்கோள்: 175-177) என்று சிலப்பதிகாரம் கூறுகிறது. எனவே, செங்குட்டுவன் இமயமலைக்குச் சென்றபோது பேரரசராகிய சதகர்ணியரசரின் உதவிபெற்றுச் சென்றான் என்பதும், அவ்வரசர்கள் இவனுடன் நட்பினராக இருந்தார்கள் என்பதும் தெரிகின்றன. கடல்பிறக்கோட்டிய செங்குட்டுவன் ஐம்பத்தைந்து ஆண்டு வீற்றிருந்தான். இவன் இளவரசுப் பட்டங் கொண்டது முதல் இவ்வாண்டுகள் கணக்கிடப்பட்டன என்று தோன்றுகின்றது. செங்குட்டுவன் மீது 5ஆம் பத்துப் பாடிய புலவர் பரணர் என்பவர். இதன்பொருட்டு இவர் பெற்ற பரிசில், உம்பற்காட்டு வாரியை யும் செங்குட்டுவனுடைய மகனான குட்டுவன் சேரலையும் பெற்றார். செங்குட்டுவன் தன் மகனான குட்டுவன் சேரலைப் பரணருக்குக் கொடுத்தான் என்றால், அவனை அவருடைய மாணவனாகக் கொடுத்தான் என்பது பொருள். எனவே, பரணரிடம் செங்குட்டுவன் மகன் குட்டுவன் சேரல் கல்வி பயின்றான் என்பது தெரிகின்றது. பரணர் உம்பர்காட்டு வாரியைப் பரிசிலாகப் பெற்றார் என்று கூறப்படுகிறார். செங்குட்டுவனுடைய தந்தையான இமய வரம்பன் நெடுஞ்சேரலாதனை 2ஆம் பத்துப் பாடிய குமட்டூர்க் கண்ணனாரும் உம்பற்காட்டில் ஐஞ்ஞூறூர்ப் பிரமதாயம் பரிசிலாகப் பெற்றார் என்பதை இங்கு நினைவுகூரவேண்டும். இளஞ்சேரல் இரும்பொறை இவனுக்குக் குடக்கோ இளஞ்சேரல் இரும்பொறை என்றும், சேரமான் குடக்கோச்சேரல் இரும்பொறை என்றும் பெயர்கள் உண்டு. இவன் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறையின் தம்பியான குட்டுவன் இரும்பொறையன் மகன். அதாவது, செங்குட்டுவனுடைய தாயாதித் தமயனின் மகன். இவனும் செங்குட்டுவன் காலத்தில் இருந்தவன், பொலத்தோப் பொறையன் என்றும் பல்வேற் பொறையன் என்றும் இவன் கூறப்படுகிறான். இவன், சேரநாட்டின் ஒரு பகுதியை யரசாண்டான். எந்தப் பகுதி என்பது திட்டமாகத் தெரியவில்லை. சேர இராச்சியத்தின் ஒரு பகுதியாக இருந்த கொங்கு நாட்டை யரசாண்டிருக்கக் கூடும். வானியாற்றின் நீர் போன்று மென்மையான உள்ளம் உடையவன் என்று இவன் கூறப்படுகிறான் (பதிற்று. 9ஆம் பத்து. 6 : 12-13) வானியாறு கொங்கு நாட்டில் ஓடுகிறது. இளஞ்சேரல் இரும்பொறையைப் பதிற்றுப்பத்து 9ஆம் பத்தில் பாடினவர் பெருங்குன்றூர் கிழார் என்னும் புலவர். இப்புலவர் இவ்வரசனிடம் பரிசு பெறச் சென்றார். ஆனால், இவன் பரிசு கொடுக்கக் காலந் தாழ்த்தினான். அதனால் அவர் மனம் வருந்திப் பாடினார். இப்பாடல்களில் அவருடைய வறுமைத் துன்பம் நன்கு புலப்படுகிறது. (புறம். 210, 211) பரிசு கொடுக்கக் காலந்தாழ்த்திய இளஞ்சேரல் இரும்பொறை, இப்புலவர் அறியாமல் இவருக்கு வீடும் மனையும் ஊரும் அமைத்துப் பிறகு அவற்றைக் கொடுத்தான். `அவர் அறியாமை ஊரும் மனையும் வளமிகப் படைத்து ஏரும் இன்பமும் இயல்வரப் பரப்பி எண்ணற்கு ஆகா அருங்கல வெறுக்கையொடு பன்னூறாயிரம் பாற்படவகுத்துக்’ கொடுத்தான் என்று பதிற்றுப்பத்து ஒன்பதாம்பத்தின் கீழ்க்குறிப்புக் கூறுகிறது. பிறகு பெருங்குன்றூர்கிழார் இவ்வரசன் மேல் 9ஆம் பத்துப் பாடினார். இதற்குப் பரிசாக `மருளிலார்க்கு மருளக்கொடுக்க வென்று உவகையின் முப்பத்தீராயிரங் காணம்’ (காணம்-பொற் காசு) கொடுத்தான். இளஞ்சேரல் இரும்பொறை சென்னியர் பெருமான் (சோழன்) ஒருவனை வென்றான். நன்மரந் துவன்றிய நாடுபல தரீஇப் பொன்னவிர் புனைசெயல் இலங்கும் பெரும்பூண் ஒன்னாப் பூட்கைச் சென்னியர் பெருமான் இட்ட வெள்வேன் முத்தைத் தம்மென ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... நனவிற் பாடிய நல்லிசைக் கபிலன் பெற்ற ஊரினும் பலவே (9ஆம் பத்து. 5) இதற்கு உரை எழுதிய பழைய உரையாசிரியர் இதனை இவ்வாறு விளக்குகிறார்: `இளஞ்சேர லிரும்பொறை சென்னியர் பெருமானுடைய நாடுகள் பலவற்றையும் எமக்குக் கொண்டு தந்து அச்சென்னியர் பெருமானை எம்முன்னே பிடித்துக் கொண்டு வந்து தம்மினெனத் தம் படைத் தலைவரை ஏவச் சென்னியர் பெருமான் படையாளர் பொருது தோற்றுப் போகட்ட வெள்வேல் செல்வக் கடுங்கோ வாழியாதன் என்பவன் நாடுகாண் நெடுவரையின் நாள் மகிழிருக்கைக் கண்ணே தன்முன் திணைமுதல்வரைப் போல அரசவை பணிய அறம்புரிந்து வயங்கிய மறம்புரி கொள்கையைப் பாடின கபிலன் பெற்ற ஊரினும் பலவென மாறிக்கூட்டி வினைமுடிவு செய்க.’ இதனால், இவனுடைய படைவீரர் சென்னியர் பெருமான் (சோழன்) உடன் போர் செய்தனர் என்பதும் அப்போரில் சோழனுடைய படைவீரர் தங்கள் வேல்களைப் போர்க்களத்தில் போட்டுவிட்டு ஓடினார்கள் என்பதும், அந்த வேல்களின் எண்ணிக்கை, செல்வக்கடுங்கோ வாழியாதனைப் (பதிற்றுப்பத்து ஏழாம் பத்து) பாடின கபிலர் பரிசாகப் பெற்ற ஊர்களின் தொகையைவிட அதிகமாக இருந்தன என்பதும் தெரிகின்றன. இவ்வாறு தோற்றுப்போன சோழன் பெயர் கூறப்படவில்லை. ஆனால், அச்சோழன் பெயர் `பொத்தியாண்ட பெருஞ்சோழன்’ என்று (9ஆம் பத்துப் பதிகம்) கூறுகிறது. இந்தப் போரைப் பற்றிய வேறு செய்திகள் தெரியவில்லை. மேலும், இளஞ்சேரல் இரும்பொறை ஐந்தெயில் என்னும் கோட்டையை முற்றுகையிட்டுச் சோழன், பாண்டியன், விச்சி, இளம்பழையன் மாறன் என்பவர்கiம் வென்று அவர்களிட மிருந்து கொண்டு வந்த பொருள்களை வஞ்சிமூதூரில் வைத்துப் பலருக்கும் வழங்கினான் (9 ஆம் பத்து, பதிகம், அடி 3-9) பூதர் என்னும் தெய்வங்களைக் கொண்டு வந்து வஞ்சி மூதூரில் அமைத்து அவற்றிற்குச் சாந்தியும் சிறப்பும் செய்தான். இதனை, அருந்திறல் மரபிற் பெருஞ்சதுக் கமர்ந்த வெந்திறல் பூதரைத் தந்திவண் நிறீஇ ஆய்ந்த மரபிற் சாந்தி வேட்டு (9ஆம் - பத்து. 13-15) என்பதனாலும் சதுக்கப் பூதரை வஞ்சியுட் டந்து மதுக்கொள் வேள்வி வேட்டோன் (சிலம்பு - நடுகல்: 147-148) என்பதனாலும் அறியலாம். இளஞ்சேரல் இரும்பொறைக்கு அமைச்சனாக இருந்தவர் மையூர்கிழார் என்பவர். மையூர்கிழாரை இவ்வரசன் அறநெறியில் வல்லவனாகச் செய்தான். மெய்யூர் அமைச்சியல் மையூர் கிழானைப் புரையறு கேள்விப் புரோசு மயக்கி. என்று 9ஆம் பத்துப்பதிகம் கூறுகிறது. இதற்குப் பழைய உரை, `அமைச்சியல் மையூர்கிழானைப் புரோசு மயக்கி யென்றது தன், மந்திரியாகிய மையூர்கிழானைப் புரோகிதனிலும் அறநெறி அறிவானாகப் பண்ணி யென்றவாறு’ என்று விளக்கங் கூறுகிறது. குடக்கோ இளஞ்சேரல் இரும்பொறை பதினான்கு ஆண்டு வீற்றிருந்தான் என்று 9ஆம் பத்துப் பதிகக் குறிப்புக் கூறுகிறது. இளஞ்சேரல் இரும்பொறை செங்குட்டுவனுக்கு முன்னமே, செங்குட்டுவன் கண்ணகிக்குப் பத்தினிக் கோட்டம் அமைப்பதற்கு முன்னமே இறந்து போனான் என்று சிலப்பதிகாரம் கூறுகிறது. சதுக்கப் பூதரை வஞ்சியுட் டந்து மதுக்கொள் வேள்வி வேட்டோ னாயினும் மீக்கூற் றாளர் யாவரும் இன்மையின் யாக்கை நில்லா தென்பதை யுணர்ந்தோய் என்று சிலம்பு, நடுகற்காதை (147-150) கூறுகிறது காண்க. (வஞ்சிமா நகரத்தில் சதுக்கப்பூதரை அமைத்தவன் இளஞ் சேரல் இரும்பொறை என்று முன்னமே கூறினோம்). இதனை யறியாமல் திரு. நீலகண்ட சாஸ்திரியார், செங்குட்டுவனுக்குப் பிறகும் இளஞ்சேரல் இரும்பொறை உயிர்வாழ்ந்திருந்தான் என்று கூறுகிறார். செங்குட்டுவன் உத்தேசம் கி.பி. 180-லும், குடக்கோ இளஞ்சேரல் இரும்பொறை உத்தேசம் கி.பி. 190-லும இருந்தனர் என்று இவர் கூறுவதனால் இது தெரிகிறது (pp. 522, 589, A Comprehensive History of India. Vol II, K.A. Nilakanta Sastri, 1957.) செங்குட்டுவன் உயிரோடு இருக்கும் போதே இறந்துபோன இளஞ்சேரல் இரும்பொறை அவனுக்குப் பிறகு எப்படி உயிர் வாழ்ந்திருக்க முடியும்? இளஞ்சேரல் இரும்பொறை இளமை யிலேயே போர்க்களத்தில் இறந்து போனான்போலும். செங்குட்டுவன் ஆட்சி செங்குட்டுவன் காலத்தில் சேர இராச்சியம் பெரியதாக இருந்தது. சேரநாடும் கொண்கான (துளு) நாடும், கொங்கு நாட்டின் பெரும்பகுதியும் இவனுடைய சேர இராச்சியத்தில் அடங்கியிருந்தன. இவனுடைய பாட்டன்மார், தந்தை, சிறிய தந்தை, தமயன் ஆகியோர் சேர இராச்சியதைப் பெரிதாக்கி வளர்த்ததை முன்னமே கூறினோம். மூத்த கால்வழியில் வந்தவன் ஆகையால் சேர இராச்சியத்தின் பேரரசனாகச் செங்குட்டுவன் இருந்தான். இவனுக்குக் கீழடங்கி இவனுடைய தம்பி யாகிய ஆடுகோட்பாட்டுச் சேரலாதனும் இளஞ்சேரல் இரும்பொறை யும் சேர நாட்டுப் பகுதிகளையரசாண்டனர். செங்குட்டுவனுக்கு ஆட்சித்துணையாக ஐம்பெருங் குழு இருந்தது. ஐம்பெருங் குழு என்பது அமைச்சர், புரோகிதர், சேனாதி பதியர், தூதுவர், சாரணர் என்பவர். செங்குட்டு வனுடைய தலைமை அமைச்சன் பெயர் வில்லவன் கோதை என்று சிலப்பதிகாரம் கூறுகிறது. பல்யாண்டு வாழ்கநின் கொற்றம் ஈங்கென வில்லவன் கோதை வேந்தற்கு உரைக்கும் (சிலம்பு - காட்சி: 150-151) (`பல்யாண்டு வாழ்க என்று இனிச் சொல்லுகின்றான், வில்லவன் கோதை யென்னும் மந்திரி’ என்பது அரும்பதவுரை.) இந்த வில்லவன் கோதை, செங்குட்டுவன் பத்தினிக்குக் கல் எடுக்க வட நாடு சென்றபோது அவனுடன் சென்றான். வில்லவன் கோதையொடு வென்றுவினை முடித்த பல்வேற் றானைப் படைப்பல ஏவி (சிலம்பு - கல்கோள்: 251-252) கண்ணகிக்குக் கோட்டம் அமைத்து விழா செய்த பிறகு செங்குட்டுவன், விழாவுக்கு வந்திருந்த அரசர்களுக்கு ஏற்றபடி வகைகளைச் செய்து கொடுக்கும்படி அமைச்சனாகிய வில்லவன் கோதையை ஏவினான் என்று சிலம்பு சொல்லுகிறது. மன்னவர்க் கேற்பன செய்க நீயென வில்லவன் கோதையை விருப்புடன் ஏவி (சிலம்பு - நடுக்கல்: 201-202) சிலப்பதிகாரம் செங்குட்டுவனுடைய புரோகிதனைக் கூறுகிறது. ஆனால், அவன் பெயரைக் கூறவில்லை. அவனை ஆசான் என்று கூறுகிறது. ஆசான் என்பதற்குப் புரோகிதன் என்று அரும்பத உரையாசிரியர் உரை கூறுகிறார். வடநாட்டு வேந்தர் தமிழக வேந்தரை இகழ்ந்து கூறியதற்காகச் செங்குட்டுவன் வஞ்சினஞ் கூறியபோது, அருகிலிருந்த ஆசான் (புரோகிதன்) அவனுடைய கோபம் தணியும்படிச் சில வார்த்தை கூறினான். (சிலம்பு. கால்கோள். 19-24) பத்தினிக் கோட்டத்துக்குச் செங்குட்டுவன் போனபோது ஆசானாகிய புரோகிதனும் உடன் போனான். (சிலம்பு. நடுகல். 222 - 223) செங்குட்டுவனுடைய சேனைத் தலைவன் பெயர் அழும்பில் வேள் என்று தெரிகிறது. பத்தினிக் கடவுளுக்குக் கல் எடுக்கச் செங்குட்டுவன் வடநாடு செல்லக் கருதியபோது, அமைச்சனாகிய வில்லவன் கோதை, இதற்காகத் தாங்கள் செல்ல வேண்டாம், வட நாட்டரசருக்குக் கடிதம் எழுதினால் அவர்கள் கல் எடுத்து அனுப்புவார்கள் என்று கூற, சேனைத் தலைவனாகிய அழும்பில் வேள், வடநாட்டுச் செலவுபற்றி வஞ்சிமாநகரத்தில் பறையறைந்து தெரிவித்தால் இச்செய்தியை ஒற்றர் மூலமாக வடநாட்டரசர் அறிவார்கள் என்று கூறினான். அதைச் செங்குட்டுவன் ஏற்று அவ்விதமே செய்தான் (சிலம்பு. காட்சி 173 - 178) கண்ணகிக்கு விழா தொடங்கியபோது, சிறைப் பட்டிருந்த அரசர்களைச் சிறையிலிருந்து விடும்படி சேனாபதியாகிய அழும்பில்வேளை ஏவினான். சிறையோர் கோட்டம் சீமின் யாங்கணும் கறைகெழு நாடு கறைவீடு செய்ம்மென அழும்பில் வேளோடு ஆயக் கணக்கரை முழங்குநீர் வேலி மூதூர் ஏவி (சிலம்பு - நடுக்கல். 203 - 206) செங்குட்டுவனுக்குத் தூதர் பலர் இருந்தார்கள். அத்தூதர் களின் தலைவன் பெயர் சஞ்சயன். அவர்கள் தலைக்கீடு (தலைப்பாகை?) கட்டிச் சட்டையணிந்திருந்தனர். சஞ்சயன் முதலா தலைக்கீடு பெற்ற கஞ்சுக முதல்வர் ஈரைஞ் ஞூற்றுவர் (சிலம்பு - கால்கோள்: 137-138 143 - 145) கங்கையாற்றில் தோணிப்பாலம் அமைக்கும்படி செங்குட்டு வன் சதகர்ணியர சனுக்குக் கூறும்படி சஞ்சயனைத் தூது அனுப்பினான் (சிலம்பு: கால்கோள். 163 - 166). சாரணர்கள் (ஒற்றர்) பலர் இருந்தனர். அவர்கள் சட்டை யணிந்திருந்தனர். அவர் களின் தலைவன் நீலன், போரில் சிறைப் பிடிக்கப்பட்ட கனக விசயரைச் சோழனிடத்திலும் பாண்டிய னிடத்திலும் சென்று காட்டிவரும் படி செங்குட்டுவன், நீலன் தலைமையில் ஒற்றர்களை யனுப்பினான். (சிலம்பு - நீர்ப்படை: 187 - 191). அவன் அவர்களை அழைத்துப்போய்க் காட்ட, அவர்களைக் கண்ட சோழனும் பாண்டியனும் சொன்ன செய்தியை நீலன் வந்து செங்குட்டுவனுக்குக் கூறினான் (சிலம்பு. நடுகல். 80 - 109) செங்குட்டுவன் அவையில் ‘பெருங்கணி’ என்னும் நிமித்திகன் இருந்தான். செங்குட்டுவனின் வடநாட்டு யாத்திரையிலும் இவன் உடன் சென்றிருந்தான். இவன் முழுத்தம் (முகூர்த்தம்) கணித்து அரசனுக்குரிய நல்ல முழுத்தத்தை அவ்வப்போது கூறிக் கொண்டிருந்தான். இவன், ஆறிரு மதியினும் காருக வடிப்பயின்று ஐந்து கேள்வியும் அமைந்தோன் (சிலம்பு - கால்கோள்: 25 - 26) (ஆறிருமதியினும் - இராசி பன்னிரண்டினும்; ஐந்து கேள்வி - நட்பு ஆட்சி எச்சம் பகை நீசக்கோள்; திதி வாரம் நக்ஷத்திரம் யோகம் கரணமுமாம். அரும்பதவுரை). செங்குட்டுவன் வடநாட்டுக்குப் புறப்படும் நல்ல வேளையைக் கணித்துக் கூறியவன் இவனே. (சிலம்பு- கால்கோள். 27-31) செங்குட்டுவன் வடநாட்டில் வெற்றி பெற்றுக் கண்ணகிக்குக் கல் எடுத்து நீர்ப்படை செய்த பிறகு அவன் பாசறையில் அமர்ந்திருந்த போது இப்பெருங்கணியன், எண்ணான்கு மதியம் வஞ்சிநீங்கியது மண்ணாள் வேந்தே வாழ்க (சிலம்பு - நீர்ப்படை: 149-150) என்று புறப்பட்டு வந்த காலத்தைக் கூறினான். செங்குட்டுவன், கண்ணகிக் கோட்டத்தைக் காணச் சென்றபோது இவனும் உடன் சென்றான் (சிலம்பு - நடுகல்: 222). செங்குட்டுவன் ஆட்சிக்காலத்தில் தமிழகத்தின் பேரரசனாக இவன் இருந்தான். பத்தினிப் படிவம் அமைப்பதற்குக் கல் கொண்டு வர இமயம் போக வேண்டியதில்லை, வடநாட்டரச ருக்குத் திருமுகக் கடிதம் எழுதினால் அவர்கள் கல்லை எடுத்து அனுப்புவார்கள் என்று செங்குட்டுவனுக்குக் கூறிய அவன் அமைச்சனான வில்லவன் கோதை, சேர சோழ பாண்டியன் ஆகிய மூவேந்தரின் முத்திரைகளை இட்டுக் கடிதம் எழுதும்படி கூறினான். வடதிசை மருங்கின் மன்னர்க் கெல்லாம் தென்தமிழ் நன்னாட்டுச் செழுவிற் கயற்புலி மண்தலை யேற்ற வரைக ஈங்கென (சிலம்பு - காட்சி: 170 - 172) (மண்தலை ஏற்ற - இலச்சினை மண் (முத்திரை) ஏற்ற ஓலைகளை.) இவ்வாறு இவன் கூறியது, சோழ பாண்டியருக்கும் மேம்பட்ட சிறப்பைச் செங்குட்டுவன் பெற்றிருந்தான் என்பதைத் தெரிவிக்கிறது. இது வெற்றுப் புகழ்ச்சியன்று, உண்மை நிலையே என்பது சரித்திரத்தை யாராய்ந்து பார்த்தால் தெரிகிறது. துளு நாடாகிய கொங்கண நாடு இவன் ஆட்சிக்கு அடங்கி யிருந்தது. மோகூர்ப் பழையனுடன்செங்குட்டுவன் செய்த போரில் மோகூர்ப் பழையனுக்குத் துணையாகச் சோழ அரசனும் பாண்டிய அரசனும் வந்து செங்குட்டுவனை எதிர்த்துத் தோற்றார்கள். மேலும், சோழன் கிள்ளிவளவன் ஆட்சி ஏற்ற போது, சோழர் குடியிற் பிறந்த ஒன்பது அரசர் அவனை எதிர்த்துப் போராடி உள்நாட்டுக் குழப்பத்தை உண்டாக்கிச் சோழ நாட்டின் அமைதியைக் கெடுத்தார்கள். அப்போதும் செங்குட்டுவன், கிள்ளிவளவன் சார்பாக ஒன்பது அரசருடன் போர் செய்து வென்று கிள்ளிவளவனுக்குச் சோழ ஆட்சியைக் கொடுத்தான் (இவைகளை முன்னமே கூறியுள்ளோம்) இவை யெல்லாம், செங்குட்டுவன் சோழ பாண்டிய அரசரைவிட மேம் பட்டிருந்தான் என்பதைத் தெரிவிக்கின்றன. மேலும் இவன், அக்காலத்துப் பேரரசனாக விளங்கிய நூற்றவர் கன்னர், (சதகர்ணி) என்னும் அரசனின் நண்பனாகவும் இருந்தான். எனவே, இவை யெல்லாம் செங்குட்டுவன் தமிழகத்தின் பேரரசனாக இருந்தான் என்பதைத் தெரிவிக்கின்றன அல்லவா? செங்குட்டுவன் வாழ்க்கை செங்ட்குடுவன், இளங்கோ வெண்மாள் என்னும் அரசியைத் திருமணஞ் செய்திருந்தான். (சிலம்பு - காட்சி. 5) அவளுக்கு வேண்மாள் என்றும் பெயர் உண்டு. `வதுவை வேண்மாள் மங்கல மடந்தை’ (சிலம்பு நடுகல் 51). இவர்களுக்குப் பிறந்த மகன் குட்டுவன் சேரல். குட்டுவன் சேரலைப் பரணருக்குச் செங்குட்டுவன் கொடுத்தான். (5ஆம் பத்துப் பதிகம்). கல்வி கற்பிப்பதற்காகக் கொடுத்தான் போலும். செங்குட்டுவன் வாழ்ந்த அரண்மனை ‘இலவந்தி வெள்ளி மாடம்’ என்று பெயர் பெற்றிருந்தது. விளங்கில வந்தி வெள்ளி மாடத்து இளங்கோ வேண்மாள் உடனிருந் தருளி (சிலம்பு, காட்சி 4-5) வஞ்சிமா நகரத்துக்கு வெளியே கடற்கரைக்கு அருகில் ‘வேளாவிக் கோ மாளிகை’ என்னும் அரண்மனை இருந்தது. பேரிசை வஞ்சி மூதூர்ப் புறத்துக் தாழ்நீர் வேலித் தண்மலர்ப் பூம்பொழில் வேளாவிக்கோ மாளிகை (சிலம்பு. நடுகல்: 196 - 198) என்பதனால் இதையறியலாம். வேனிற்காலத்தில் செங்குட்டுவன் அரண்மனையில் வசிப்பது இல்லை. பேராற்றங்கரை யோரத்தில் இருந்த மரச்சோலைகளில் கூடாரம் அமைத்து அதில் சுற்றத்தோடு தங்கியிருப்பது வழக்கம். இச்செய்தியைப் பரணர் இவனைப் பாடிய 5ஆம் பத்துச் செய்யுளில் கூறுகிறார். நின்மலைப் பிறந்து நின்கடல் மண்டும் மலிபுனல் நிகழ்தரும் தீநீர் விழவிற் பொழில்வதி வேனில் பேரெழில் வாழ்க்கை மேவரு சுற்றமோடு உண்டினிது நுகரும் தீம்புனல் ஆயம. (5ஆம் பத்து. 8 : 13-17) (`பொழில்வதி வேனிற் பேரெழில் வாழ்க்கை யென்றது வேனிற் காலத்து மனையில் வைகாது பொழில்களிலே வதியும் பெரிய செல்வ அழகையுடைய இல்வாழ்க்கை யென்றவாறு... இச்சிறப்பானே, இதற்குப் (இச்செய்யுளுக்கு) ‘பேரெழில் வாழ்க்கை’ என்று பெயராயிற்று’ - பழைய உரை.) இவனுடைய வேனிற்காலப் பொழில் வாழ்க்கையை இளங்கோவடிகளும் கூறுகிறார். வானவர் தோன்றல் வாய்வாட் கோதை விளங் கிலவந்தி வெள்ளி மாடத்து இளங்கோ வேண்மாள் உடனிருந் தருளித் துஞ்சா முழவின் அருவி யொலிக்கும் மஞ்சுசூழ் சோலை மலைகாண்குவ மெனப் பைந்தொடி ஆயமொடு பரந்தொருங் கீண்டி வஞ்சி முற்றம் நீங்கிச் செல்வோன்’ ... .. ... .. ... .. ... .. ... .. ... .. ... .. ... .. நெடியோன் மார்பில் ஆரம் போன்று பெருமலை விலங்கிய பேரியாற் றடைகரை இடுமணல் எக்கர் இயைந்தொருங் கிருப்ப (சிலம்பு - காட்சி: 3-23) வழக்கம்போல ஓராண்டு வேனிற் காலத்தில் இவ்வாறு பொழிலில் தங்கியிருந்தபோது தான் செங்குட்டுவன் கண்ணகியின் செய்தியைக் குன்றம் வாழும் மக்கள் சொல்லக் கேட்டறிந்தான். அப்போதுதான் அவனுக்குக் கண்ணகிக்குப் பத்தினிக் கோட்டம் அமைக்கும் எண்ணம் தோன்றியது. இசைவாணர்களையும் ஆடற் கலைஞர்களையும் இவன் ஆதரித்தான். ஆடுசிறை யறுத்த நரம்புசேர் இன்குரல் பாடு விறலியர் பல்பிடி பெறுக துய்வீ வாகை நுண்கொடி யுழிஞை வென்றி மேவ லுருகெழு சிறப்பிற் கொண்டி மள்ளர் கொல்களிறு பெறுக மன்றம் படர்ந்து மறுகுசிறைப் புக்குக் கண்டி நுண்கோல் கொண்டுகளம் வாழ்த்தும் அகவலன் பெறுக மாவே யென்று மிகல்வினை மேவலை (5ஆம்பத்து, 3 : 21 - 29) இவன், வடநாட்டு யாத்திரையிலிருந்து திரும்பி வந்து வெள்ளி மாடம் என்னும் மாளிகையில் நிலா முற்றத்தில் அரசி வேண்மாளுடன் இருந்தபோது, பறையூர் கூத்தச் சாக்கையன் வந்து கொட்டிச் சேதம் என்னும் கொடுகொட்டிச் சேதக் கூத்தைப் பாடியபோது அதனைக் கண்டு மகிழ்ந்தான் என்பது சிலப்பதிகாரம் படித்தவர் அறிந்ததே. பத்தினித் தெய்வ வழிபாட்டை இவன் உண்டாக்கினான். இவன் உண்டாக்கிய பத்தினித் தெய்வ வழிபாடு தமிழ்நாடு முழுவதும் பரவியது அல்லாமல் இலங்கையிலும் பரவிற்று. போரில் வீரங்காட்டி இறந்தவருக்கு நடுகல் நட்டுப் போற்றுவது அக்காலத்து வழக்கம். பாண்டிய அரசனிடம் வழக்குத் தொடுத்து அவன் செய்த அநீதியை எடுத்துக்காட்டி வெற்றி பெற்ற கண்ணகி, தன் கற்பு ஆற்றலினால் பாண்டியனின் அரண்மனையையும் எரித்துத் தன் உயிரை உண்ணாவிரதமிருந்து மாய்த்துக் கொண்ட வீரச் செயலைப் பாராட்டி அப்பத்தினிக்கு வழிபாடு அமைத்தான் செங்குட்டுவன். ஆண் மகனுடைய வீரம், பெண் மகளுடைய கற்புக்குச் சமானமானது என்று போற்றினான் செங்குட்டுவன். செங்குட்டுவன் காலம் பதிற்றுப்பத்து, சேர அரசர்கள் ஒவ்வொருவரும் எத்தனை ஆண்டு ஆட்சி செய்தார்கள் என்பதைக் கூறுகிறது. ஆனால், சகாப்த ஆண்டினைக் கூறவில்லை. ஆகவே அவர்கள் அரசாண்ட காலத்தைச் சகாப்த ஆண்டுப்படி அறிய வாய்ப்பு இல்லை. ஆனால், நற்காலமாக ஒரு காலக் குறிப்புக் கிடைத்திருக்கிறது. அந்தக் குறிப்பைக் கொண்டு இவ்வரசர்களின் காலத்தை ஒருவாறு கணித்துவிடலாம். செங்குட்டுவன் கண்ணகிக்குப் பத்தினிக்கோட்டம் அமைத்துச் சிறப்புச் செய்தபோது, அவ்விழாவுக்கு வந்திருந்த அயல்நாட்டு அரசர்களில் இலங்கையரசனான கஜபாகுவும் (முதலாவன்) ஒருவன். இவனைக் கடல் சூழ் இலங்கைக் கயவாகு என்று சிலப்பதிகார நூல் கூறுகிறது. இதனால் செங்குட்டுவனும் கஜபாகுவும் (முதலாவன்) சமகாலத்து அரசர்கள் என்பது தெரிகின்றது. முதலாம் கஜபாகு கி.பி. 173 - முதல் 191 - வரையில் அரசாண்டான் என்று மகாவம்ச நூலின் ஆதாரத்தைக் கொண்டு சரித்திர ஆசிரியர்கள் எல்லோரும் முடிவு செய்து ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். கஜபாகு, பத்தினிக் கோட்ட விழாவுக்கு வந்திருந்த ஆண்டு தெரியவில்லை. அவன் ஆட்சிக் காலத்தில் இடைப்பகுதியில், உத்தேசமாகக் கி.பி. 180இல் வந்தான் என்று சொல்லலாம். அதாவது, கி.பி. 180இல் செங்குட்டுவன் பத்தினிக் கோட்டம் அமைத்தான் என்று கொள்ளுவோம். அது செங்குட்டுவனின் 50ஆவது ஆட்சி ஆண்டு. எப்படி எனில், வையங் காவல் பூண்டநின் நல்யாண்டு ஐயைந் திரட்டி சென்றதற் பின்னும் அறக்கள வேள்வி செய்யாது யாங்கணும் மறக்கள வேள்வி செய்வோ யாயினை (சிலம்பு - நடுகற் காதை. 129-132) என்றும், நரைமுதிர் யாக்கை நீயும் கண்டனை (சிலம்பு - நடுகல். 158) என்றும் சிலப்பதிகாரம் கூறுகிறபடியினாலே, செங்குட்டுவன் தனது 70ஆம் வயதில் கண்ணகிக்குப் பத்தினிக் கோட்டம் அமைத்தான் என்று கொள்ளலாம். ஐந்து ஆண்டுக்குப் பிறகு தன்னுடைய 75ஆம் வயதில் இவன் காலமாயிருக்க வேண்டும். இவன் இளவரசுப் பட்டம் பெற்றது ஏறத்தாழ கி.பி. 130இல் ஆகும். இவன் 55 ஆண்டுகள் ஆட்சி செய்தான் என்று 5ஆம் பத்துப் பதிகக் குறிப்புக் கூறுவது, இவனுடைய இளவரசுக் காலத்தையும் சேர்த்தேயாம். எனவே செங்குட்டுவன் ஆண்ட காலம் ஏறத்தாழ கி.பி. 130 முதல் 185 வரையில் என்று உத்தேசமாகக் கொள்ளலாம். செங்குட்டுவனுடைய தமயனான நார்முடிச் சேரல் இவனுக்குப் பத்து ஆண்டு மூத்தவன் என்று கொள்ளலாம். அவன் 25 ஆண்டு ஆட்சி செய்தான் என்று 4 ஆம் பத்துப் பதிகக் குறிப்புக் கூறுகிறது. எனவே, நார்முடிச்சேரல் உத்தேசமாகக் கி.பி. 120 முதல் 145 வரையில் அரசாண்டான் என்று கொள்ளலாம். இவர்களுடைய தம்பியாகிய ஆடுகோட்பாட்டுச் சேரலாதன், செங்குட்டுவனுக்கு ஏறத்தாழ ஐந்து ஆண்டு இளையவன் என்று கொண்டால் அவன் ஆட்சி செய்த 38 ஆண்டுகள் உத்தேசம் கி.பி.140 முதல் 178 வரையில் ஆகும். செங்குட்டுவனுடைய தந்தையாகிய இமயவரம்பன் நெடுஞ் சேரலாதன் 58 ஆண்டு ஆட்சிசெய்தான் என்று 2ஆம் பத்துப் பதிகக் குறிப்புக் கூறுகிறது. எனவே அவன், உத்தேசம் கி.பி. 72 முதல் 130 வரையில் ஆட்சி செய்தான் என்று கொள்ளலாம். செங்குட்டுவனின் சிறிய தந்தையாகிய பல்யானைச் செல்கெழு குட்டுவன் 25 ஆண்டு ஆட்சிசெய்தான் என்று கூறப்படுகிறபடியால், அவன் உத்தேசமாகக் கி.பி. 82 முதல் 107 வரையில் ஆட்சிசெய்தான் என்று கொள்ளலாம். செங்குட்டுவன் கண்ணகிக்குப் பத்தினிக் கோட்டம் அமைத்ததும் அக்கோட்டத்துக்குக் கஜபாகு வந்திருந்ததும் ஆகிய நிகழ்ச்சிகள் உத்தேசம் கி.பி. 180இல் நிகழ்ந்தன என்று கொண்டு கணித்தால் இந்த முடிவுக்கு வரவேண்டியிருக்கிறது. இதில் சேர அரசர்கள் ஆண்ட காலம் என்பது அவர்கள் இளவரசுப் பட்டம் பெற்ற ஆண்டையும் சேர்த்துக் கணிக்கப்பட்டது. இவ்வாறு கணித்தால் ஏறத்தாழ மேலே கூறிய முடிவுக்கு வருகிறோம். இளையவழி பரம்பரையில் வந்த சேர அரசர்கள் மூத்த வழி அரசரின் சம காலத்தில் சேர நாட்டின் வேறு பகுதிகளையர சாண்டார்கள். ஆகவே, அவர்கள் ஆட்சிகாலமும் மேலே கூறிய மூத்த வழி அரசர் ஆட்சிக் காலத்தில்அடங்கியிருக்கின்றன. அவர்களில் செல்வக் கடுங்கோ வாழியாதன், செங்குட்டுவனுடைய தந்தையாகிய நெடுஞ்சேரலாதன் காலத்தில் 25ஆண்டு ஆட்சி செய்தான். நெடுஞ்சேரலாதனும் செல்வக்கடுங்கோ வாழியாதனும் வேளாவிச் சேரமான் பதுமன்தேவி என்னும் பெயருள்ள தமக்கை தங்கையரை மணஞ்செய்திருந்தார்கள் (4 ஆம் பத்து 8ஆம் பத்துப் பதிகங்கள்) செல்வக்கடுங்கோ வாழியாதனுடைய மகனான தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறையும் நெடுஞ்சேரலாதனின் மூத்தமகனான நார்முடிச் சேரலும் சமகாலத்தில் இருந்தவர்கள். தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறையின் மகனான இளஞ் சேரல் இரும்பொறையும் சேரன் செங்குட்டுவனும் சமகாலத்தில் இருந்தவர்கள். ஆனால், செங்குட்டுவன் பத்தினிக் கோட்டம் அமைப்பதற்கு முன்னமே இளஞ்சேரல் இரும்பொறை இறந்து விட்டான். இச்செய்தியைச் சிலப்பதிகாரத்தினால் அறிகிறோம். சதுக்கப் பூதரை வஞ்சியுள்தந்து மதுக்கொள் வேள்வி வேட்டோன் அதாவது இளஞ்சேரல் இரும்பொறை முன்னமே இறந்து போனான் என்று சிலம்பு நடுகற்காதை (147-148) கூறுகிறது. எனவே, சேர வேந்தர் காலத்தைத் திட்டவட்டமாக அறுதி யிட்டுக் கூற முடியாமற் போனாலும் உத்தேசமாக ஏறத்தாழ சரியான ஆண்டுகளைப் பெற முடிகிறது. இதன்படி இமயவரம்பன் நெடுஞ் சேரலாதன் கி.பி. 72 முதல் 130 வரையிலும், அவன் தம்பி பல்யானைச் செல்கெழு குட்டுவன் கி.பி. 82 முதல் 107 வரையிலும், நெடுஞ்சேர லாதனின் மூத்த மகனான நார்முடிச் சேரல் கி.பி. 120 முதல் 145 வரையிலும், மற்றொரு மகனான சேரன் செங்குட்டுவன் (கடல்பிறக் கோட்டிய செங்குட்டுவன்) கி.பி. 130 முதல் 185 வரையிலும், ஆடு கோட் பாட்டுச் சேரலாதன் கி.பி. 140 முதல் 178 வரையிலும் அரசாண்டார்கள். சேர மன்னன் செங்குட்டுவன் ஏறத்தாழக் கி.பி. 130 முதல் 185 வரையில் ஆட்சி செய்தான் என்று கூறினோம். ஆனால், திரு. கே.ஜி. சேஷையர் அவர்கள் தாம் எழுதிய சங்ககாலத்துச் சேரர் என்னும் ஆங்கில நூலில் செங்குட்டுவன் கி.பி. 125 இல் ஆட்சி செய்யத் தொடங்கினான் என்று கூறுகிறார். ஐந்து ஆண்டு வித்தியாசத்தை ஒருவாறு ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் அவர், செங்குட்டுவனை நெடுஞ்சேரலாதனின் பேரன் என்று கூறுவது தான் வியப்பாக இருக்கிறது. பதிற்றுப்பத்து 5ஆம் பத்தின் பதிகம், `குடவர்கோமான் நெடுஞ்சேரலாதற்கு, சோழன் மணக்கிள்ளி ஈன்ற மகன்’ செங்குட்டுவன் என்று தெளிவாகக் கூறுகிறது. சேஷையர் அவர்கள், நெடுஞ் சேரலாதன் என்பதற்குக் களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல் என்று பொருள் கற்பித்துக் கொண்டு, நார்முடிச்சேரலின் மகன் செங்குட்டுவன் என்று மாற்றிக் கூறுகிறார். ஆனால் பதிற்றுப்பத்து, நெடுஞ்சேர லாதனின் மகன் செங்குட்டுவன் என்றும் நார்முடிச் சேரலின் தம்பி என்றும் கூறுகிறது. சேஷையர் அதனை மாற்றி நார்முடிச் சேரலின் மகன் செங்குட்டுவன் என்று கூறுகிறார். இதற்கு இவர் காட்டும் காரணம் வியப்பாக இருக்கிறது. இவர் கணிக்கும் காலக் கணக்குக்குப் பொருத்தமாக செங்குட்டுவன் ஆட்சிக்காலம் அமையாதபடியால் இவ்வாறு மாற்றிக் கொள்ள வேண்டும் என்று கூறுகிறார். இதைத் தம்முடைய நூலில் இவ்வாறு விளக்கிச் சொல்கிறார்.* “செங்குட்டுவன் ஆட்சிக்கு வந்தது கி.பி. 125 என்று கொண்டால், இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் கி.பி. 17 இல் ஆட்சிக்கு வந்திருத்தல் வேண்டும். அவன் தம்பி பல்யானைச் செல்கெழு குட்டுவன் உத்தேசமாக கி.பி. 75இல் ஆட்சி தொடங்கியிருக்க வேண்டும். களங் காய்க்கண்ணி நார்முடிச் சேரல் ஆட்சிக்கு வந்தது கி.பி. 100 ஆக இருக்கவேண்டும். இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் 58 ஆண்டு ஆண்டான் என்றால், அவனுடைய தம்பி எப்போது ஆட்சி செய்திருக்க முடியும்? தம்பியாகிய பல்யானைச் செல்கெழு குட்டுவன் ஆட்சி ஏற்கும்போது அவன் 60 வயது சென்றவனாக இருக்க வேண்டும். அவன் இறந்த போது 85 வயது இருக்க வேண்டும். ஆகவே, செங்குட்டுவன், இமய வரம்பன் நெடுஞ்சேரலாதனின் மகனாக இருந்தால், அவன் ஆட்சி ஏற்றபோது அவனுக்கு குறைந்தபட்சம் 50 வயது இருக்கும். அவன் 55 ஆண்டு ஆட்சி செய்தான் என்பதை ஏற்றுக் கொண்டால் அவன் இறந்தபோது அவனுக்கு நூறு வயதுக்கு மேல் இருக்கும். 5ஆம் பத்துப் பதிகம் அவன் 55 யாண்டு வீற்றிருந்தான் என்று கூறுவதற்கு, 55 யாண்டு உயிர் வாழ்ந்திருந் தான் என்று பொருள் கொள்ள முடியாது. அப்படிப் பொருள் கொண்டால் அவன் 5ஆண்டுதான் ஆட்சி செய்தான் என்று கொள்ள வேண்டியிருக்கும். ஆகவே, 5ஆம் பத்தின் பதிகம் நெடுஞ்சேரலாதன் என்று கூறுவதற்குப் பெரிய சேரலாதன் என்றும் அது நார்முடிச் சேரலைக் குறிப்பிடுகிறது என்றும் நான் பொருள் கொள்கிறேன். ஆகவே, இமய வரம்பன் நெடுஞ்சேரலாதனுடைய பிள்ளைகள் நால்வரில் ஒருவனாகச் செங்குட்டுவன் இருக்க முடியாது. இப்படிக் கொள்வோ மானால், இந்தக் காலக்கணிப்புச் சிக்கல் எளிதாகச் சரிப்பட்டு விடுகிறது.” இவ்வாறு, தாம் கணிக்கும் காலக்கணக்கு சரியாக அமை வதற்குப் பொருத்தமாகப் பழைய வரலாற்றை மாற்றியமைக்க வேண்டும் என்று நீதிபதியாக இருந்த சேஷையர் தீர்ப்புக் கூறுகிறார். இவருடைய தீர்ப்பு சரித்திரத்துக்கு ஏற்கத்தக்கது அன்று. பழைய வரலாற்றுக்குத் தக்கபடி காலத்தைக் கணிக்க வேண்டுமேயல்லாமல், இவருடைய தவறான கணக்குக்குத் தக்கபடி சரித்திர ஆதாரத்தையே மாற்றுவது சரியன்று. இவர், தவறான கணக்குப் போட்டு அதற்குத் தக்கபடி சரித்திரச் சான்றை மாற்றுவதற்குக் காரணம் நன்றாகத் தெரிகிறது. ஒருவருக்குப் பின் ஒருவராகத் தந்தை, சிறிய தந்தை, தமயன், தம்பியர் அரசாண்டார்கள் என்று (பிற்காலத்துச் சரித்திர முறையைப் பின்பற்றி) இவர் காலத்தைக் கணித்த படியால் சிக்கல் ஏற்பட்டு இடர்ப்பட்டு அதைத் தீர்க்க மகனைப் பேரன் என்று முறை மாற்றுகிறார். இளவரசுப் பட்டம் ஏற்றது முதல் இவர்கள் ஆட்சி தொடங்கிற்று என்று கொண்டு இவர்கள் ஆட்சிக் காலத்தைக் கணக்கிட்டால் இப்படிப்பட்ட சிக்கலும் இடர்ப்பாடும் நேர்ந்திராது. மேலே நாம் கணித்து முடிவு செய்த ஆட்சிக் காலங்களில் இவ்விதச் சிக்கல்கள் இல்லாதிருப்பது காண்க. எனவே, செங்குட்டுவன் கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் ஏறத்தாழக் கி.பி. 130 முதல் 185 வரையில் அரசாண்டான் என்று கொள்ளலாம். இனி, `சேரன் செங்குட்டுவன்’ என்னும் நூலை எழுதிய திரு. மு. இராகவையங்கார் அவர்கள் செங்குட்டுவன் கால ஆராய்ச்சி என்னுந் தலைப்பில் சில செய்திகளைக் கூறிச் செங்குட்டுவன் கி.பி. 5ஆம் நூற்றாண்டில் இருந்தவன் என்று கூறுகிறார். சமுத்திர குப்தன் என்னும் அரசன் மாந்தராசன் என்பவனை வென்றான் என்று ஒரு சாசனம் கூறுவதைச் சான்று காட்டி, அதில் கூறப்படுகிற மாந்தராசன் மாந்தரஞ் சேரல் என்றும், ஆகவே சமுத்திரகுப்தனால் வெல்லப்பட்ட மாந்தராசா (மாந்தரஞ் சேரல்) காலத்தில் இருந்த செங்குட்டுவன் காலம் கி.பி. 5ஆம் நூற்றாண்டு என்று இவர் கூறுகிறார். இவர் கூறுவது வருமாறு: வடநாட்டில் மகத நாடாண்ட ஆந்திர சக்ரவர்த்திகளது வீழ்ச்சிக்குப் பின் பிரபலம் ஏற்று விளங்கிய குப்த வமிச சக்கரவர்த்தி களுள்ளே சமுத்திரகுப்தன் என்பான் திக்விஜயஞ் செய்து, இப்பரத கண்ட முழுவதையும் தன் வெற்றிப்புகழைப் பரப்பினான் என்பது சாசன மூலம் அறியப் படுகின்றது. இம் மன்னர் பெருமான் கி.பி. 326 இல் பட்ட மெய்தியவன். இவனது தென்னாட்டுப் படையெழுச்சியில் ஜயிக்கப்பட்ட வேந்தருள்ளே கேரள தேசத்து மாந்த ராஜா ஒருவ னென்று கூறப்படுகின்றது. இம்மாந்தராஜா என்பவன் சங்க நுல்களிற் கூறப்படும் மாந்தரன் என்பவனாகவே தோற்றுகின்றான். ஆனால், இப்பெயர் கொண்டவரிருவர் இருந்தன ரென்பதும், அவருள் ஒருவன் செங்குட்டுவனுக்குச் சிறிது முன்னும், மற்றொருவன் அவனுக்குச் சிறிது பின்னும் இருந்தவனென்பதும் முன்னமே குறிப்பிட்டோம். இவருள் முன்னவனே சமுத்திர குப்தனால் வெல்லப்பட்டவனாகக் கருதினும், அச்சேரன் 4ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்தவ னாதல் வேண்டும். அம்மாந்தரனைப் பாடிய பரணரே செங்குட்டுவனை யும் பாடியிருத்தலால், நம் சேரன் (சேரன் செங்குட்டுவன்) அம்மாந்தர னுக்குச் சிறிது பிற்பட்டவனென்பது பெறப்படும். அஃதாவது, 5ஆம் நூற்றாண்டின் முற்பாகமென்க (சேரன் செங்குட்டுவன், முதல் பதிப்பு 1915, பக். 171-172) இவ்வாறு எழுதிய திரு. மு. இராகவையங்கார் அந்த நூலில் மேலும் சிலவற்றைக் கூறுகிறார். அகம் 181ஆம் செய்யுளில் ‘வம்பமோரியர்’ வந்தனர் என்று கூறப்படுவதையும், அகம் 215ஆம் செய்யுளில் மோகூர் பணியாமையால் வம்பமோரியர் படை யெடுத்து வந்தனர் என்று கூறப்படுவதையும் சுட்டிக் காட்டி, அவ்வாறு வந்த `வம்ப மோரியர்’ என்பவர் குப்தவம்சத்து அரசன் என்று கூறுகிறார். பிறகு, மோகூர் வேந்தனைச் செங்குட்டுவன் வென்றதைச் சுட்டிக் காட்டிக் கடைசியாக இவ்வாறு முடிக்கிறார்: “இச்சமுத்திர குப்தன் கி.பி. 375 வரை ஆட்சிபுரிந்தவன் எனப்படுகிறான். எனவே, இவனால் வெல்லப்பட்ட மாந்தரன், மேற்கூறியபடி செங்குட்டுவனுக்குச் சிறிது முற்பட்ட வனாகவும், பழையன்மாறன் செங்குட்டுவனுக்குச் சமகாலத்தவனாகவும் தெரிதலின், நம் சரித்திர நாயகனான சேரன் (செங்குட்டுவன்) காலமும் 4ஆம் நூற்றாண்டின் முற்பகுதி அல்லது 5ஆம் நூற்றாண்டின் முற்பகுதியாகக் கொள்ளல் பொருத்தமாம். ஆயின், சமுத்திரகுப்தன் மகனான சந்திரகுப்த விக்கிர மாதித்தன் (கி.பி. 375-413) அல்லது அவன் மகனான குமாரகுப்தன் (413-455) காலங்களும், நம் சேரர் பெருமான் காலமும் ஒன்றாகச் சொல்லலாம்” (சேரன் செங்குட்டுவன், முதல் பதிப்பு 1915, பக் 177-178) மு. இராகவையங்கார் அவர்கள் ஆதாரமாகக் காட்டும் சான்று சமுத்திரகுப்தனின் அலகாபாத் சாசனமாகும். அந்தச் சாசனத்தில் ‘கௌராளக - மாந்த ராஜா’ என்னும் ஒரு வாசகம் காணப்படுகிறது. டாக்டர் பிஃளீட் அவர்கள் அந்தச் சாசனத்தை வெளியிட்ட போது, கௌராளக என்பது கைரளக என்றிருக்க வேண்டும் என்று கூறிக் கைராளிக மாந்தராஜா என்பது கேரளமாந்தராஜா என்று எழுதினார். இதை ஆதாரமாக வைத்துக் கொண்டு ஐயங்கார் அவர்கள் மேலே காட்டியபடி மனம் போனபடியெல்லாம் எழுதிவிட்டார். பிறகு, 1898 ஆம் ஆண்டில் டாக்டர் கில்ஹார்ன் என்பவரும் டாக்டர் பிஃளீட் என்பவரும் சேர்ந்து அந்தச் சாசனத்தை மறுபடியும் ஆராய்ந்து பார்த்ததில் அச்சாசனத்தின் சரியான வாசகம் குணலமாந்தராஜா என்றும் (கௌரள மாந்தராஜா அன்று), சமுத்திர குப்தன் வென்ற குணல மாந்தராஜா கொல்லோர (கொல்லேர்) ஏரிக்கருகில் இருந்தவன் என்றும் அறிந்து வெளியிட்டனர். ஆகவே, மு. இராகவையங்கார் (மாந்தராஜா - மாந்தரன்) இட்டுக்கட்டி முடிவு செய்தது (சமுத்திர குப்தன் காலமும் செங்குட்டுவன் காலமும் ஒன்றே என்ற முடிவு) சரிந்துவிழுந்து நொறுங்கிப் போயிற்று. அதனால், ஐயங்கார் அவர்கள் தம்முடைய சேரன் செங்குட்டுவன் என்னும் நூலின் 2ஆம் பதிப்பு முதலிய மற்றப் பதிப்புகளில் சமுத்திர குப்தன் காலம் என்பதை அடியோடு மறைத்து விட்டார். ஆனாலும், தகுந்த காரணம் காட்டாமலே செங்குட்டுவன் காலம் கி.பி. 5ஆம் நூற்றாண்டு என்றே பிற்பதிப்புகளிலும் விடாப் பிடியாக எழுதியுள்ளார். `சேரன் செங்குட்டுவன்’ என்னும் நூலின் 2ஆம் பதிப்பு 1929இல் வெளிவந்தது. சந்திரகுப்த விக்கிரமாதித்தன் காலத்தில் செங்குட்டுவன் இருந்தான் என்று இவர் முதற்பதிப்பில் எழுதியது ஆதாரமற்ற பொய்ச் சான்று என்று இவர் அறிந்த பிறகு, அச்சான்றை 2ஆம் பதிப்பில் வெளியிடாமல் மறைத்து விட்டார். மறைத்துவிட்ட பிறகும், 2ஆம் பதிப்பு முதலிய மற்றப் பதிப்புகளில் எல்லாம், தக்க சான்று காட்டாமலே செங்குட்டுவன் காலம் கி.பி. 5ஆம் நூற்றாண்டு என்று எழுதிக்கொண்டே வந்தார். பிற்பதிப்புக்களில் எல்லாம், “5ஆம் நூற்றாண்டே செங்குட்டுவனும் சங்கத்துச் சான்றோரும் வாழ்ந்த காலமாதல் வேண்டும் என்று தக்க காரணங் காட்டி இந்நூலின் முதற் பதிப்பில் முடிவு கட்டலானேன்”. “இவற்றுள்ளே கண்டு நோக்குமிடத்து யான் கண்டு வெளியிட்ட 5ஆம் நூற்றாண்டுக் கொள்கையே பெரிதும் பொருத்தமுடையது என்று சொல்லத் தடையில்லை. அது பற்றி யான் புதியவாக அறிந்த செய்திகளுடன் வைத்து ஆராய்ந்து கண்ட முடிவினை அறிஞரது ஆராய்ச்சிக்குரியதாகத் தனியே வெளியிட விரும்புவதனால், இப்போது அதனை இந்நூலுட் சேர்க்காது நிறுத்திக் கொள்ளலாயிற்று” என்று எழுதியுள்ளார். (`சேரன் செங்குட்டுவன்’, 6ஆம் பதிப்பு. 1947, பக். 199, 200.) இவர்கண்ட ‘புதிய முடிவு’ 37 ஆண்டுகளாகியும் வெளிவர வில்லை. அவரும் காலமாய்விட்டார். சான்று காட்டாமலும் காரணம் கூறாமலும் `தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் என்னும் பழ மொழிக்கு ஏற்ப இவர் பிடிவாதமாக இருந்து கொண்டு, செங்குட்டுவன் காலம் கி.பி. 5ஆம் நூற்றாண்டு என்று பதிப்பித்துக் கொண்டே தாம் கண்ட ‘புதிய முடிவு’ இன்ன தென்பதைக் கூறாமலே போய்விட்டார். இவர் போக்கை என்னென்பது! ஆனால், முதற் பதிப்பில் கூறாத ஒரு கருத்தைப் பிற்பதிப்பு களில் சேர்த்துவிட்டார். இது 1830 - இல் இலங்கையில் கண்டெடுக்கப் பட்டு இங்கிலாந்துக்குக் கொண்டு போகப்பட்ட கண்ணகியின் வெண்கலச்சிலை யுருவத்தைப் பற்றிய செய்தி. இது பற்றி அவர் எழுதுவது இது: “இச்சரித்திர நாயகனால் (சேரன் செங்குட்டுவனால்) தெய்வமாக வணங்கப்பெற்ற பத்தினி தேவியின் (கண்ணகி) செப்புத்திருமேனி யொன்று (லண்டன் பிரிட்டிஷ் - மியூஸியத்தில்) இருந்ததை டாக்டர் ஆனந்த குமாரசுவாமியவர்கள் பிரதிசாயை யெடுத்துப் பிரசுரித்திருக் கிறார்கள். அப்பிரதிமை இலங்கை யினின்று 1830-ஆம் வருஷம் இங்கிலாந்துக்குக் கொண்டு போகப் பட்டதாம். அப்பத்தினித் தேவி படிவத்துக்கு ஒரு பிரதியெடுத்து இந்நூலுட் சேர்த்திருக்கின்றேன். இளங்கோவடிகள் கூறியபடி செங்குட்டுவன் காலத்தே இலங்கையிற் கயவாகுவால் பிர திஷ்டிக்கப்பட்ட பத்தினியின் சரியான சாயலை இது காட்டுவது போலும்.” இவ்வாறு முகவுரையில் கூறிய ஐயங்கார், `சமகாலத்தசர்’ என்னுந் தலைப்பில் அந்நூலில் இப்பத்தினி உருவம் பற்றிக் கீழ்க் காணுமாறு எழுதுகிறார் (இவ்விஷயம் முதற்பதிப்பில் எழுதப் படவில்லை. பிற்பதிப்புகளில் சேர்க்கப்பட்டுள்ளது) “கயவாகு என்பான் இலங்கா தீவத்தை ஆண்டுவந்த அரசன். இவன் செங்குட்டுவனது பத்தினிப் பிரதிஷ்டைக்கு வந்திருந்து, தன்னாட்டிலும் எழுந்தருளி அருள்புரிய வேண்டுமென்று அத் தேவியைப் பிரார்த்தித்தும், அவட்குத் தன் தலைநகரில் கோட்ட மெடுத்து வழிபட்டும் போந்தவனென்பது சிலப்பதிகாரத்தால் அறியப் பட்டது. இலங்கையின் இன்ன கோயிற்கு உரியதென்று அறியப்படாத படிவம் ஒன்று கிடைத்துள்ளது. அப்படிவத்தின் படம் இந்நூலின் முகப்பில் அமைக்கப்பட்டுள்ளது. இப்படிவம் 5ஆம் நூற்றாண்டுக் குப்த சக்ரவர்த்திகள் காலத்துச் சிற்பவமைதி யுடையதாகும் என்று அத்துறை வல்லோர் கருதுவர் (Medieval and Modern Sculpture by V.A. smith, p. 248). இதனால், இலங்கைப் படிவம் செங்குட்டுவன் காலத்தில் அந்நாட்டார் களால் அமைக்கப்பட்ட வையாக வேண்டும் என்று கருதுதல் பொருத்தமேயாகும்.” இவ்வாறு ஐயங்கார் அவர்கள் கூறுவதன் கருத்து இது: இலங்கையில் கிடைத்த கண்ணகியின் (பத்தினித் தெய்வத்தின்) உருவம் குப்த அரசர் காலத்துச் சிற்ப அமைப்பு உடையது. குப்தர் காலம் கி.பி. 5ஆம் நூற்றாண்டு. ஆகவே, இந்தப் பத்தினித் தெய்வ உருவமும் அதையமைத்த கஜபாகு அரசனும் அவன் காலத்த வனான செங்குட்டுவனும் கி.பி. 5ஆம் நூற்றாண்டில் இருந்தவர் என்பதாம். ஐயங்கார் அவர்கள் கூறுவதுபோல, இலங்கையில் கிடைத்த பத்தினித் தெய்வ உருவப்படிவம் குப்தர் காலத்துச் சிற்ப அமைப்பு உடையதென்றே ஒப்புக் கொண்டாலும், இவர் காட்டுவது தவறான சான்றாக இருக்கிறது. இந்தப் படிவத்தைக் கஜபாகு அரசன் அமைத்தான் என்றாவது, அவன் காலத்தில் அமைக்கப்பட்ட சிற்பம் இது என்றாவது சொல்ல முடியாது. ஏனென்றால் கஜபாகு, கண்ணகிக்கு உருவம் அமைக்கவில்லை. அக்காலத்தில் பெரும்பாலும் கோவில் களில் இருந்தது போலக் கஜபாகு அரசன் பீடிகை மட்டும் (பலிபீடம்) அமைத்தான் என்று சிலப்பதிகாரம் கூறுகிறது. சிலப்பதிகாரத்தை ஊன்றிப் படித்தவர் இதனை நன்கு அறிவர். சிலப்பதிகாரம் கூறுவதைப் பாருங்கள். அது கேட்டுக் கடல் சூழிலங்கைக் கயவாகு வென்பான் நங்கைக்கு நாட்பலிபீடிகைக் கோட்ட முந்துறுத்தாங்கு அரந்தை கெடுத்து வரந்தருமிவளென ஆடித்திங்களகவை யினாங் கோர் பாடி விழாக்கோள் பன்முறையெடுப்ப மழைவீற்றிருந்து வளம்பல பெருகிப் பிழையாவிளையுள் நாடாயிற்று.” (சிலம்பு, உரைபெறு கட்டுரை 3) `நாட்புலி பீடிகைக் கோட்டம் - நித்தலும் பலியிடு மிடத்தை யுடைய கோட்டம்’ என்று அரும்பதவுரையாசிரியர் கூறுகிறார். எனவே, கஜபாகு அரசன் இலங்கையில் கண்ணகிக் கோட்டம் அமைத்து அதில் பலிபீடம் மட்டும் ஏற்படுத்தினான் என்பது தெரிகிறது. கண்ணகியின் உருவம் அமைக்கவில்லை. கண்ணகிக்கு அடையாள மாகச் சிலம்பு வைத்திருக்க வேண்டும். அந்தக் காலத்தில் கோவில் களில் தெய்வங்களின் உருவம் அமைக்கப்பட வில்லை. அந்தந்தத் தெய்வங்களின் அடையாளக் குறிகள் அமைக்கப்பட்டிருந்தன. முருகனுக்கு வேலும், இந்திரனுக்கு வெள்ளை யானை அல்லது வச்சிரமும், புத்தருக்குப் பாதமும் இவை போன்று அடையாளங்கள் மட்டும் வைத்து வழிபடப் பட்டன. அந்த முறையிலேதான் கஜபாகு அரசனும் தான் அமைத்த கண்ணகியின் கோவிலில் பலிபீடம் மட்டும் அமைத்தான் என்று சிலப்பதிகாரம் உரைபெறு கட்டுரை கூறுகின்றது. (குறிப்பு: இலங்கையில் கிடைத்த இந்தச் செப்புத் திருமேனி இதுகாறும் கண்ணகியின் உருவம் என்று கருதப்பட்டு வந்தது. இப்போது, அவ்வுருவம் தாராதேவி என்னும் பௌத்தத் தெய்வத்தின் உருவம் என்று கருதப்படுகிறது.) எனவே, இராகவையங்கார் அவர்கள், பிற்காலத்துக் கண்ணகி உருவம் ஒன்றைச் சான்றாகக் காட்டி அது கஜபாகு காலத்து உருவம் என்று தவறாகக் கருதிக் கொண்டு, அவ்வுருவம் குப்த அரசர்கள் கால முறைப்படி அமைந்தது என்று கூறி, ஆகவே கஜபாகுவும் செங்குட்டுவனும் கி.பி. 5ஆம் நூற்றாண்டினர் என்று முடிவு கூறுவது தவறான பிழையுள்ள கருத்தாகும். ஆகவே, ஐயங்கார் அவர்கள் காட்டும் சான்று ஒப்புக் கொள்ளக் கூடாதது. அவர் கூறும் முடிவாகிய கி.பி. 5ஆம் நூற்றாண்டுக் காலமும் ஏற்றுக் கொள்ளத்தக்கதன்று. எனவே, நாம் மேலே கூறிய கி.பி. 2 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியே சேரன் செங்குட்டுவனும் கஜபாகு அரசனும் வாழ்ந் திருந்த காலம் என்பது பொருத்தமாகத் தெரிகிறது. மகாவம்சம் என்னும் நூல் கூறுகிற இலங்கையரசனான கஜபாகு கி.பி. 2ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்தான் என்று சரித்திரக்காரர்கள் எல்லோரும் ஆராய்ந்து ஒப்புக் கொண் டிருக்கிறார்கள். எனவே, சேரன் செங்குட்டுவன் இருந்த காலம் கி.பி. 2ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி என்பதில் ஐயம் இல்லை. இனிச் சேர நாட்டைச் சூழ்ந்திருந்த ஏனைய இராச்சியங் களின் அக்காலத்து நிலையை யாராய்வோம். கொங்கணத்து நன்னர் துளுநாட்டுக்குக் கொங்கண நாடு என்றும் பெயர் உண்டு. கொங்கணம், கொண்கானம் என்றும் கூறப்படும். சேர நாட்டுக்கு வடக்கே துளு நாடாகிய கொங்கண நாடு இருந்தது. இதன் வடக்கு எல்லை கோகர்ணம், தெற்கு எல்லை சேர நாடு, மேற்கில் மேல்கடல் (அரபிக் கடல்) இருந்தது. கிழக்கில் மேற்குத் தொடர்ச்சி மலைகள் இருந்தன. துளு நாட்டையும் அதற்குக் கிழக்கில் இருந்த கன்னட நாட்டையும் இடையில் இருந்து உயரமான மேற்குத் தொடர்ச்சி மலைகள் பிரித்து வைத்தன. துளு நாட்டின் கடற் கரைப் பகுதிகள் சமநிலமாகவும் கிழக்குப் பகுதிகள் மலைகள் உள்ள மேட்டு நிலமாகவும் இருந்தன. இப்போதைய தென் கன்னட மாவட்டமும் வட கன்னட மாவட்டத்தின் தெற்குப் பகுதியும் சேர்ந்ததுதான் பழைய துளு நாடாகிய கொங்கண நாடு (இது, இப்போது மகாராட்டிர தேசத்தில் உள்ள கொங்காண நாடு அன்று). சங்க காலத்தில் துளு நாடாகிய கொங்கண நாடு, தமிழ் வழங்கிய தமிழ் நாடாக இருந்தது. கி.பி. 14ஆம் நூற்றாண்டு வரையில் தமிழ் பேசப்பட்ட சேர நாட்டில், தமிழ் மொழி சிதைந்து வேறுபட்ட மலையாள மொழியாக மாறிப்போனது போல, தமிழ் மொழி பேசப்பட்ட துளு நாட்டிலும் பிற்காலத்தில் தமிழ் மொழி சிதைந்து துளு மொழியாக மாறிவிட்டது. நமது ஆராய்ச்சிக்குரியதான கி.பி. 2 ஆம் நூற்றாண்டில் துளு நாட்டை நன்னர் என்னும் பெயருள்ள வேள்குல மன்னர் அரசாண்டார்கள். துளு நாட்டுக்குக் கொங்கண நாடு என்னும் பெயரும் உண்டாகையால், நன்னர்களுக்குக் “கொங்காணங் கிழார்” என்னும் பெயரும் வழங்கி வந்தது. கொங்காணங் கிழாராகிய நன்னர்கள் தமிழ்ப் புலவர்களைப் போற்றி ஆதரித்தார்கள். அக்காலத்துத் தமிழ் புலவர்களும் நன்னர்களைப் புகழ்ந்து பாடியுள்ளனர். நன்னன் - 1 நம்முடைய ஆராய்ச்சிக்குரிய கி.பி. 2ஆம் நூற்றாண்டில் துளு நாட்டை அரசாண்ட நன்னனை முதலாம் நன்னன் என்று கூறுவோம். இந்த நன்னர், செங்குட்டுவனுடைய தந்தையாகிய இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் காலத்தில் இருந்தவன் என்று தெரிகிறான். இவன் ‘பெண் கொலைபுரிந்த நன்னன்’ என்று கூறப்படுகிறான். இந்த நன்னனுக்குரியதாக மாமரம் ஒன்று இருந்தது. இந்த மாமரத்தை இவன் தன்னுடைய காவல் மரமாக வளர்த்திருந்தான் போலும். அந்த மாமரத்தின் பக்கமாக ஒரு சிற்றாறு ஓடிக் கொண்டிருந்தது. அந்த மாமரத்திலிருந்த மாங்கனியொன்று சிற்றாற்றில் விழுந்து நீரில் அடித்துக் கொண்டுபோயிற்று. ஆற்றில் நீராடிக் கொண்டிருந்த ஒரு பெண் அந்த மாங்கனியை எடுத்துத் தின்றாள். இச்செய்தியை அறிந்த நன்னன் அவளுக்குக் கொலைத் தண்டனை விதித்தான். அரசருக்குரிய பொருள்களைக் களவு செய்வது அக்காலத்தில் கொலைத் தண்டனைக் குரிய குற்றமாகக் கருதப்பட்டது. அரசனுக்குரிய மாங்கனி என்பதையறியாமல் நீரில் மிதந்து வந்த மாங்கனியை அப்பெண் எடுத்துத் தின்றாள். ஆயினும், அவளுக்குக் கொலைத் தண்டனை விதிக்கப்பட்டது. அறியாமல் செய்த குற்றத்தைப் பொறுத்தருள வேண்டுமென்றும் அக்குற்றத்துக்குத் தண்டமாகத் தொண்ணூற்றொன்பது யானைகளையும் அப்பெண்ணின் எடையுள்ள பொன்னையும் கொடுப்ப தாகவும் அப்பெண்ணின் பெற்றோர் கூறி அவளைக் கொல்லாமல் விடும்படி வேண்டினார்கள். நன்னன் அவ்வேண்டுகோளுக்கு உடன்படாமல் அவளைக் கொன்று விட்டான். இதனால் அவன் மக்களின் வெறுப்புக்கு ஆளாகிப் `பெண் கொலை புரிந்த நன்னன்’ என்று தூற்றப் பட்டான். மண்ணிய சென்ற ஒண்ணுதல் அரிவை புனல்தரு பசுங்காய் தின்றதன் தப்பற்கு ஒன்பதிற் றொன்பது களிற்றொடு அவள்நிறை பொன்செய் பாவை கொடுப்பவுங் கொள்ளான் பெண்கொலை புரிந்த நன்னன் போல வரையா நிரையத்துச் செலீஇயரோ (குறுந்தொகை. 292 : 1-5) என்று பரணர் என்னும் புலவர் இச்செய்தியைக் கூறுகிறார். இவனுடைய கொடுஞ்செயலைக் கண்டு இவன்மீது சினங் கொண்ட கோசர் என்னும் செல்வாக்குள்ள ஒரு இனத்தார் ஏதோ சூழ்ச்சி செய்து இவனுடைய மாமரத்தை அடியோடு வெட்டிவிட்டார் என்னும் செய்தியைப் பரணரே கூறுகின்றார். நன்னன் நறுமா கொன்று ஞாட்பிற் போக்கிய ஒன்றுமொழிக் கோசர் போல வன்கட் சூழ்ச்சியும் வேண்டுமால் சிறிதே (குறுந்தொகை. 73 : 2-5) நன்னனுடைய மாமரத்தைக் கோசர் வெட்டினார்கள் என்பதைச் சரித்திர ஆசிரியர் எஸ். கிருஷ்ணசாமி அய்யங்கார் அவர்கள், நன்னனுடைய பட்டத்து யானையைக் கொன்றார்கள் என்று கூறுகிறார். (S. Krishnaswamy Ayyangar, Beginnings of South Indian History, pp. 84. 85) மா என்பதற்கு மாமரம் என்றும் மிருகம் (யானை) என்றும் பொருள் உண்டு. ஆனால், இங்குக் கோசர் கொன்றது யானையை யன்று, மா மரத்தையே யாகும். இந்த நன்னன் பிண்டன் என்பவனுடன் போர் செய்து வென்றான். (அகம். 152 : 9-12) தன் பகைவரைப் போரில் கொன்று அவர்களுடைய மனைவியரின் கூந்தலைச் சிரைத்து அதனால் கயிறு திரித்தான் (நற். 270 : 8-10) இவனுடைய கொங்கு நாட்டுக்கு அருகிலே கடலிலே சிறு தீவு ஒன்று இருந்தது. அத்தீவு இவனுடைய ஆட்சிக்கு உரியது. அத்தீவில் இருந்தவர்களைக் கொண்டு, யவன வாணிகக் கப்பல்கள் சேர நாட்டுக்குப் போகாதபடி இவன் தடுத்தான். இந்தத் தீவைக் கடந்துதான் யவனக் கப்பல்கள் சேர நாட்டுக்கு வர வேண்டும். வருகிற கப்பல்களை இந்தீவில் இருந்தவர்கள் கொள்ளையடித்துத் தடுத்தனர். அதனால் யவன வாணிகக் கப்பல்கள் சேர நாட்டுத் துறைமுகப்பட்டினங்களுக்கு வருவது தடைப்பட்டது. அந்தக் கடற் கொள்ளைக்காரர்கள் அத்தீவில் கடம்ப மரத்தைத் தங்கள் காவல் மரமாக வளர்த்து வந்தார்கள். செங்குட்டுவனுடைய தந்தையான நெடுஞ்சேரலாதன், செங்குட்டுவன் தலைமையில் ஒரு கடற்படையை அத்தீவுக்கு அனுப்பி, அங்கிருந்த கடற் கொள்ளைக்காரருடன் போர் செய்து அவர்களை வென்றான். அத்தீவில் அவர்கள் வளர்த்து வந்த காவல் மரமாகிய கடம்ப மரத்தை வெட்டி வீழ்த்தி அத்தீவில் உள்ளவர்களின் குறும்பை யடக்கினான் (2 ஆம் பத்து 1 : 12-16, 10 : 2-6). அத்தீவில் இருந்த கடற்கொள்ளைக் கூட்டத்தார் கடம்ப மரத்தைக் காவல் மரமாக வளர்த்து வந்தது உண்மையே. ஆனால், அவர்கள் கடம்பர் அல்லர். அவர்களைக் கடம்பர் என்று சங்க நூல்கள் கூறவில்லை. இக்காலத்துச் சிலர், கடம்ப மரத்தைக் காவல் மரமாக வளர்த்த அவர்களைக் கடம்பர் என்று தவறாகக் கூறுகின்றனர். சங்க காலத்தில் மாமரம், புன்னைமரம், வேப்ப மரம், வாகைமரம் முதலிய மரங்களை அரசர் தங்கள் காவல் மரமாக வளர்த்து வந்தார்கள். இக்காலத்தில் கொடி மரங்களை நாட்டுவதுபோல அக்காலத்தவர் காவல் மரங்களை வளர்த்து வந்தார்கள். கொடிகளைப் பகைவர் கைப்பற்றிக் கொண்டால் கொடிக்குடையவர் தோற்றனர் என்று கருதப்படுவது போல, காவல் மரங்களைப் பகைவர் வெட்டிவிட்டால் வெட்டுண்ட காவல் மரத்துக்குரியவர் தோற்றவராகக் கருதப்பட்டனர். ஆனால், காவல் மரத்தின் பெயரை அம்மரத்துகுரியவர் சூட்டிக் கொள்வதில்லை. புன்னை மரத்தையுடையவர் புன்னையர், வேப்ப மரத்தையுடையவர் வேம்பர் (மோகூர் மன்னன் வேம்பைக் காவல் மரமாக வளர்த்தான்), வாகை மரத்தை வளர்த்தவர் வாகையர் என்று பெயர் பெறவில்லை. அது போன்று துளு நாட்டுத் தீவில் இருந்தவர் கடம்ப மரத்தைக் காவல் மரமாகக் கொண்டிருந்ததனாலே அவர்கள் கடம்பர் என்று பெயர் பெறவில்லை. இதனையறியாமல் இக்காலத்துச் சிலர் அத்தீவிலிருந்தவரைக் கடம்பர் என்று தவறாகக் கூறுவதோடு அமையாமல் அக்கடம்பர், பிற்காலத்தில் சரித்திரத்தில் கூறப்படுகிற கடம்ப அரசர்களின் முன்னோர்கள் என்றும் எழுதியுள்ளனர் (K.N. Sivaraja Pillai, The Chronology of the Early Tamils, 1932, P. 111, Foot Note, 124, 176. Footnote 1; P.T. Srinivasa Iyengar, History of the Tamils, 1929, p.501; K.G. Sesha Aiyar, Cera Kings of the Sangam Period, 1937 p. 19) ஆனால், பிற்காலத்துக் கடம்ப அரசர் பரம்பரையை உண்டாக்கினவன் மயூரசர்மன் என்னும் பிராமணன் என்று சரித்திரம் கூறுகிறது. இந்த மயூரசர்மன் கி.பி. 4ஆம் நூற்றாண்டில் இருந்தவன். காஞ்சீபுரத்துப் பல்லவ அரசர்களுடன் பகைத்து அவர்களுக்கு எதிராக பனவாசி இராச்சியத்தை ஏற்படுத்தினவன். ஏறத்தாழ கி.பி. 360 இல் முடிசூடிக் கொண்டவன். எனவே, கடம்ப அரசர் பரம்பரை ஏற்பட்டதே கி.பி. 4ஆம் நூற்றாண்டில். அப்படியிருக்கக் கி.பி. 2ஆம் நூற்றாண்டில் இருந்த துளு நாட்டுத் தீவிலிருந்தவர்களுக்கு (அவர்கள் கடம்ப மரத்தைக் காவல் மரமாகக் கொண்டிருந்த காரணத்தினாலே) கடம்பர் என்று அவருக்கு இல்லாத பெயரைப் புதிதாகக் கொடுத்து அவரைக் கடம்ப அரசரின் முன்னோர் என்று கூறுவது பொருந்தாது. இது சரித்திர உண்மைக்கு ஒவ்வாத தவறு ஆகும். இவ்வாறு சரித்திரத்துக்கு மாறுபடக் கூறி, துளு நாட்டுத் தீவிலிருந்த கடம்ப மரத்தைப் பிற்காலத்துக் கடம்ப குல அரசருடன் இணைத்து முடிபோட்டு, கி.பி. 2ஆம் நூற்றாண்டி லிருந்த நெடுஞ்சேர லாதனைக் கி.பி. 5ஆம் நூற்றாண்டிலிருந்த கடம்ப அரசர்கள் காலத்தில் அமைத்துக் கூறுகிறார் சீநிவாச அய்யங்கார். (P.T. Srinivasa Iyengar, History of the Tamils, p. 501) ஆனால், கடம்ப அரசர்களின் முன்னோர் இத்தீவில் இருந்தவர் என்று தாம் கூறியதை இவரே தாம் எழுதிய இந்திய தேச சரித்திரத்தில் கூறாமல் மறைத்துவிட்டார். 1929-ல் இவர் எழுதிய `தமிழர் சரித்திரத்தில்’ துளு நாட்டுத் தீவில் இருந்தவர்கள் கடம்ப குலத்து அரசரின் முன்னோர் என்று கூறிய இவர், 1942இல் தாம் எழுதிய `அட்வான்ஸ் ஹிஸ்டரி ஆப் இண்டியா’ (P.T. Srinivasa Iyengar, Advanced History of india (Hindu Period) Revised Edition 1942, p.264) என்னும் நூலில் இச்செய்தியை அறவே மறைத்துவிட்டுக் கடம்ப அரசர்களின் ஆதி புருஷன் மயூரசர்மன் என்று எழுதியிருக்கிறார். இதனால் இவர் முன்பு கூறியது தவறு என்று இவர் பிறகு உணர்ந்து கொண்டார் என்பது தெரிகிறது. நன்னன் - 2 முதலாம் நன்னனுக்குப் பிறகு துளு நாட்டை யரசாண்டவன் அவன் மகனான நன்னன் என்பவன். இவனை இரண்டாம் நன்னன் என்று கூறுவோம். இவன், செங்குட்டுவனின் காலத்தில் இருந்தவன். இந்த நன்னன் தன்னுடைய துளு இராச்சியத்தைப் பெரிதாக்க முயற்சி செய்தான். துளு நாட்டுக்குத் தெற்கே இருந்த சேர நாட்டின் வடபகுதியான பூழி நாட்டைக் கைப்பற்றிக் கொண்டான். மேலும், கொங்கு நாட்டின் வடக்குப் பகுதியைச் சேர்ந்திருந்த பூன்னாட்டையும் கைப்பற்றினான். புன்னாடு அக்காலத்தில் நீலக் கல்லுக்குப் பேர் போனது. அங்கு அக்காலத்தில் நீலக்கல் சுரங்கம் இருந்தது. புன்னாட்டு நீலக்கற்கள் உரோமாபுரி முதலிய அயல் நாடுகளிலும் புகழ் பெற்றிருந்தது. தொன்னாட்டுக்கு அக்காலத்தில் வந்த யவன வாணிகர் அந் நீலக்கற்களையும் வாங்கிக் கொண்டு போனார்கள். அக்காலத்தில் சேர அரசர்கள் தங்கள் நாட்டை யடுத்திருந்த கொங்கு நாட்டின் தென் பகுதிகளைக் கைப்பற்றிச் சேர இராச்சியத் துடன் இணைத்துக் கொண்டனர். மேலும், கொங்கு நாட்டு வேறு பகுதிகளைக் கைப்பற்றவும்முயற்சி செய்து கொண் டிருந்தார்கள் இந்த நிலையில் இந்த நன்னன், சேர நாட்டுக்குரிய பூழி நாட்டையும் வட கொங்கிலிருந்த புன்னாட்டையும் கைப்பற்றிக் கொண்டபடியினாலே சேர அரசர் இந்த நன்னனைப் பகைத்து இவனை ஒடுக்க எண்ணினார்கள். ஆகவே, இந்நன்னன் மேல் களங்காய்க் கண்ணி நார்முடிச்சேரல் போர் தொடுத்தான். நன்னனுடைய மறவன் (சேனைத் தலைவன்) மிஞிலி என்பவன். மிஞிலி துளு நாட்டில் பாரம் என்னும் ஊரில் இருந்தான். அவன் சிறந்த வீரன். வீளை அம்பின் வில்லோர் பெருமகன் பூந்தோள் யாப்பின் மிஞிலி காக்கும், பாரம் என்று நற்றிணைச் செய்யுள் (265 : 3-5) கூறுகிறது. இந்த நன்னன் காலத்திலும் நார்முடிச்சேரல் காலத்திலும் பாண்டி நாட்டை அரசாண்டவன் பசும்பூட் பாண்டியன் என்பவன். பசும்பூட் பாண்டியனுடைய மறவன் (சேனைத் தலைவன்) அதிகமான் நெடு மிடல் என்னும் சிற்றரசன். அதிகமான் நெடுமிடல் கொங்கு நாட்டுத் தகடூரின் அரசன். நெடுமிடல் நன்னனுடைய துளு நாட்டின் மேல் படை யெடுத்துச் சென்றான், இவனை, நன்னனுடைய சேனைத் தலைவனான மிஞிலி வாகைப் பறந்தலை என்னும் இடத்தில் எதிர்த்துப் போரிட்டான். அப்போரில் அதிகமான் நெடுமிடல் இறந்துபோனான். கூகைக் கோழி வாகைப் பறந்தலைப் பசும்பூட் பாண்டியன் வினைவல் அதிகன் களிறொடு பட்ட ஞான்றை. (குறுந்தொகை 393 : 3-.5) அதிகமான் இந்தப் போரில் இறந்ததைப் பரணர் அகம் 142 ஆம் செய்யுளிலும் கூறுகிறார். பாழி என்னும் இடத்தில் அவன் இறந்ததாகக் கூறுகிறார். வாகைப் பறந்தலை, பாழி என்னும் இடங்கள் ஒன்றே. இவை வெவ்வேறு இடங்கள் என்று கூறுவது பிழையாகும். சேர அரசனான களங்காய்க் கண்ணி நார் முடிச்சேரலும் நன்னன் மேல் போர் தொடுத்தான். நார்முடிச்சேரல், தன்னுடைய மறவன் (சேனைத் தலைவன்) ஆன வெளியன் வேண்மான் ஆய் எயினன் என்பவனைப் புன்னாட்டின் சார்பாக நன்னன் மேல் போர் செய்யத் துளு நாட்டுக்கு அனுப்பினான். ஆய் எயினன் துளு நாட்டுக்குப் படையெடுத்துச் சென்றபோது மேலே கூறிய மிஞிலி அவனைப் பாழி என்னும் இடத்தில் எதிரிட்டுப் போர் செய்தான். கடுமையாக நடந்த அந்தப் போரில் சேரனுடைய சேனைத் தலைவனான ஆய்எயினன் இறந்துபோனான். பொலம்பூண் நன்னன் புன்னாடு கடிந்தென யாழிசை மறுகில் பாழி யாங்கண் அஞ்சல் என்ற ஆய் எயினன் இகலடு கற்பின் மிஞிலியொடு தாக்கித் தன்னுயிர் கொடுத் தனன் (அகம். 396 : 2-6) கடும்பரிக் குதிரை ஆஅய் எயினன் நெடுந்தேர் மிஞிலியொடு பொருது களம்பட்டென (அகம். 148 : 7-8) வேறு இரண்டு அகப்பாட்டிலும் இச்செய்தி கூறப்படுகிறது (அகம். 181 : 3-7; 208 : 5-9) நார்முடிச்சேரல் தன்னுடைய சேனாபதி தோல்வியடைந்து இறந்ததற்காகத் தான் தொடுத்த போரை நிறத்தவில்லை. அவன் தொடர்ந்து துளு நாட்டின்மேல் சில காலம் போர் செய்தான். அப்போர் ‘நிலைச்செரு’ வாக நீண்டது. நார்முடிச்சேரல் ஒரு புறமும் அவன் தம்பி யாகிய செங்குட்டுவன் இன்னொரு புறமும் மற்றொரு தம்பியாகிய ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் வேறொரு புறமும் சென்று துளு நாட்டைத் தாக்கிப் போர் செய்தார்கள். செங்குட்டுவன், கடற் கரைப் பக்கமாகப் போய்த் துளு நாட்டைத் தாக்கிப் போர் செய்து வியலூர், கொடுகூர், நறவு முதலிய ஊர்களைக் கைப்பற்றினான். நார் முடிச்சேரல் நடுப்பகுதியில் சென்று போர் செய்து தான் முன்பு இழந்து விட்ட பூழிநாட்டை மீட்டுக்கொண்டதல்லாமல், நன்னனுடைய நாட்டுக்குள் புகுந்து போர் செய்தான். நன்னன், நார்முடிச் சேரலை எதிர்த்துப் போரிட்டான். பெருவாயில், வகைப் பெருந்துறை என்னும் இடங்களில் போர் நடந்தது. கடைசியில் நன்னன் தோற்று இறந்துபோனான். வெற்றி பெற்ற நார்முடிச்சேரலுக்குத் துளு நாடு அடங்கிற்று. குடாஅது இரும்பொன் வாகைப் பெருந்துறைச் செருவில் பொலம்பூண் நன்னன் பொருதுகளத் தொழிய வலம்படு கொற்றந் தந்த வாய்வாள் களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல் இழந்தநாடு தந்தன்ன வளம் (அகம். 199 : 18-24) இவ்வெற்றியைப் பதிற்றுப்பத்து 4ஆம் பத்துங் கூறுகிறது (4ஆம் பத்து. 4 : 14-16. பதிகம்) நன்னன் போரில் இறந்த பிறகு துளு நாடு நார்முடிச் சேரலுக்குக் கீழடங்கிற்று. துளு நாட்டின் பேர்பெற்ற துறைமுகப் பட்டினமாகிய நறவு என்னும் பட்டினத்தில், நார்முடிச்சேலின் தம்பியும் செங்குட்டுவனின் தம்பியுமாகிய ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் தங்கி அரசாண்டான். பொங்குபிசிர்ப் புணரி மங்குலோடு மயங்கி வருங்கடல் ஊதையில் பனிக்கும் துவ்வா நறவின் சாயினத் தாளே (6ஆம் பத்து 10 : 10-12) நன்னன் - 3 களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் துளு நாட்டை வென்ற பிறகு இரண்டாம் நன்னனின் மகனான நன்னன் என்பவன் சேர அரசருக்குக் கீழடங்கித் துளு நாட்டையரசாண்டான். இவனை மூன்றாம் நன்னன் என்று கூறுவோம். இந்த மூன்றாம் நன்னன், நன்னன் உதியன் என்று பெயர் பெற்றான். நன்னன் என்பது இவன் குடிப் பெயர். உதியன் என்பது சேர அரசனின் குடிப் பெயர். சேர ஆட்சிக்குக் கீழடங்கிய படியால் இவன், சேரனின் குடிப்பெயராகிய உதியன் என்னும் பெயரையும் தன் பெயருடன் இணைத்து நன்னன் உதியன் எனப்பட்டான். இவன் இருந்த ஊர் பாழி என்பது. `நன்னன் உதியன் அருங்கடிப் பாழி’ என்று அகப்பாட்டுக் கூறுகிறது (அகம் 358 : 1). பெரும்பூட் சென்னி என்னும் சோழன், சேரருக்கு உரியதான கொங்கு நாட்டுக் கட்டூரின் மேல் தன் சேனைத் தலைவனான பழையன் என்பவனை அனுப்பினான். பழையன் கட்டூரின் மேல் படையெடுத்தும் சென்றான். அவனைச் சேர அரசன் சார்பாக இந்த மூன்றாம் நன்னனும் (நன்னன் உதியன்), ஏற்றை, அத்தி, கங்கன், கட்டி, புன்றுறை என்னும் வேறு சிற்றரசர்களும் எதிர்த்துப் போர் செய்து போர்க்களத்தில் கொன்றுவிட்டார்கள். (அகம். 44 : 7-11) இச்சிற்றரசர்கள் சேரர்களுக்குக் கீழடங்கியவர் எனத் தோன்றுகின்றனர். குறிப்பு: நன்னன் என்னும் பெயருள்ள வேறு சில அரசர் களும் அக்காலத்தில் இருந்தார்கள். பல்குன்றக் கோட்டத்துச் செங்கண்மா என்னும் ஊரை (இப்போதைய தென் ஆர்க்காடு மாவட்டத்தில் உள்ள செங்கம்) நன்னர் என்னும் பெயருள்ள அரச குடும்பத்தார் அரசாண் டனர். அந்த நன்னர்களில் ஒரு நன்னன் மேல் பாடப்பட்டதுதான் மலைபடுகடாம் என்னும் கூத்தராற்றுப்படை. இந்தச் செங்கண்மாத்து நன்னர் வேறு, துளு நாட்டு மன்னர் வேறு. பெயர் ஒற்றுமை காரணமாக இரு வரையும் ஒரே குலத்தவராகக் கருதுவது தவறு. பாண்டிய மன்னர் பசும்பூண் பாண்டியன் செங்குட்டுவன் காலத்தில் பாண்டிய நாட்டை அரசாண்ட மன்னர் யாவர் என்பது பற்றி ஆராய்வோம். செங்குட்டுவனின் தமயனான களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் காலத்தில் பாண்டி நாட்டை அரசாண்ட அரசன் பசும்பூட் பாண்டியன் என்பது தெரிகிறது. பசும்பூட் பாண்டியனைப் பரணர் என்னும் புலவர் தமது செய்யுள்களில் குறிப்பிடுகிறார். (பரணர், நார்முடிச்சேரல், செங்குட்டுவன் ஆகியோர் காலத்தில் இருந்த புலவர். செங்குட்டுவன்மீது 5ஆம் பத்துப் பாடியவர். செங்குட்டுவன் இமயம் சென்றதற்கு முன்பு காலமானவர்.) பரணர், பசும்பூட் பாண்டியனும் கொங்கு நாட்டுத் தகடூர் அதிகமானும் நண்பர் என்றும் பாண்டியன் கொடி அதிகமானுடைய மலையில் பறந்தது என்றும் கூறுகிறார் (அகம். 162 : 17-23) அதிகமான், பசும்பூண் பாண்டியனுடைய சேனைத் தலைவன் என்றும் கூறுகிறார். ‘பசும்பூட் பாண்டியன் வினைவல் அதிகன்’ (குறுந். 393:4) (வினை-போர்) பசும்பூட்பாண்டியன் காலத்திலிருந்த மதுரைக் கணக்காயனார் என்னும் புலவர், இவன் செங்கோலாட்சியும் அறநெறியும் உடையவன் என்று கூறுகிறார். அறங்கடைப் பிடித்த செங்கோ லுடனமர் மறஞ்சாய்த் தெழுந்த வலனுயர் திணிதோள் பலர்புகழ் திருவின் பசும்பூட் பாண்டியன் (அகம் 338 : 3-5) பசும்பூட் பாண்டியன் கொங்கு நாட்டிலிருந்த கொங்கரை ஓட்டி அவர்களுடைய நாட்டைக் கைப்பற்றினான் என்றும் அவ்வெற்றியை மதுரை மக்கள் ஆரவாரத்தோடு கொண்டாடி னார்கள் என்றும் நக்கீரர் கூறுகிறார். வாடாப் பூவிற் கொங்கர் ஓட்டி நாடுபல தந்த பசும்பூட் பாண்டியன் பொன்மலி நெடுநகர்க் கூடல் ஆடிய இன்னிசை ஆர்ப்பு (அகம். 253 : 4-7) (நக்கீரனார் இப்பாண்டியனுடைய காலத்துக்குப் பின் இருந்தவர். இச்செய்தியை இவர் தமது தகப்பனாராகிய மதுரைக் கணக்காயனாரிட மிருந்து தெரிந்து கொண்டார் போலும்.) இதனால், பசும்பூட் பாண்டியன் கொங்கு நாட்டின் சில பகுதி களை வென்று கொண்டான் என்பது தெரிகின்றது. பேரரசன் இல்லாமல் சிற்றரசர்கள் மட்டும் ஆட்சி செய்து கொண்டிருந்த கொங்கு நாட்டைச் சேர அரசர்கள் சிறிதுசிறிதாகக் கைப்பற்றிச் சேர இராச்சியத்தைப் பெருகச் செய்து கொண்டபோது, பாண்டியரும் சோழரும் வாளா இருக்கவில்லை. அவர்களும் கொங்கு நாட்டைக் கைப்பற்ற முயற்சி செய்தனர். அவ்வாறு முயற்சி செய்தவர்களில் பசும்பூட் பாண்டியனும் ஒருவன். இவன், கொங்கு நாட்டின் ஒரு பகுதியை யரசாண்ட தகடூர் மன்னர் பரம்பரையில் வந்த அதிகமான் நெடுமிடல் என்பவனைத் துணையாகக் கொண்டு கொங்கு நாட்டின் சில பகுதிகளைக் கைப்பற்றினான். அதிகமான் நெடுமிடல், சேர மன்னர் கொங்கு நாட்டுப் பகுதிகளைக் கைப்பற்றிக்கொண்டு வருவதையறிந்து, தனக்கு ஆபத்து ஏற்படும் என்பதை யுணர்ந்து, தனக்கு உதவியாகப் பசும்பூட் பாண்டியனுடன் நட்புக் கொண்டான் என்பது தெரிகிறது. பசும்பூட் பாண்டியனுக்குப் பகைவராகிய சில அரசர்கள் இப்பாண்டியனுடைய துணைவனாகிய நெடுமிலுடன் போர் செய்து ஒரு போரில் அவனைத் தோற்கச் செய்தனர். இதனை, யாழிசை மறுகின் நீடூர் கிழவோன் வாய்வாள் எவ்வி ஏவல் மேவார் நெடுமிடல் சாய்த்த பசும்பூட் பொருந்தலர் (அகம். 266 : 10-12) என்றும் பரணர் கூறுகிறார். பசும்பூட் பாண்டியனுடைய சேனாபதியாகிய அதிகமான் நெடுமிடலினை, நார்முடிச்சேரல் (செங்குட்டுவனின் தமயன்) வென்றான் என்று காப்பியாற்றுக் காப்பியனார் கூறுகின்றார். நெடுமிடல் சாயக் கொடுமிடல் துமியப் பெருமலை யானையொடு புலங்கெட இறுத்து (4ஆம் பத்து. 2 : 10-11) இதன் பழைய உரையாசிரியர் நெடுமிடல் என்பதற்கு இவ்வாறு விளக்கங் கூறுகிறார்: `நெடுமிடல் - அஞ்சி. இற் (இயற்) பெயராம்.’ இவனுடைய சேனாபதியாகிய நெடுமிடல் துளு நாட்டில் போர் செய்து அப்போரில் உயிர் துறந்தான் (பரணர். குறுந். 373: 3-6). பசும்பூண் பாண்டியனைப் பற்றி வேறு செய்திகள் தெரியவில்லை. இவன் எத்தனை ஆண்டு அரசாண்டான் என்பதும் தெரிய வில்லை. நெடுஞ்செழியன் - 1 இவனுக்குப் பிறகு பாண்டி நாட்டையரசாண்டவன் நெடுஞ் செழியன் என்பவன். வேறு சில நெடுஞ்செழியர் இருந்தபடியால் அவர்களில் இருந்து பிரித்தறிவதற்காக இந்நெடுஞ்செழியனை ‘ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன்’ என்று கூறுவர். இவன், ஆரியப் படையை வென்ற செய்தி விபரமாகத் தெரியவில்லை. அப்போர் எங்கு நடந்தது என்பதும் தெரியவில்லை. இந்நெடுஞ் செழியன் கவி பாடும் புலமையுடையவன். இவன் இயற்றிய ‘உற்றுழி யுதவியும் உறுபொருள் கொடுத்தும், பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே’ என்று தொடங்கும் செய்யுள் கல்வியின் சிறப்பைக் கூறுகின்றது. இச்செய்யுள் புறநானூற்றில் (புறம். 183) தொகுக்கப் பட்டிருக்கிறது. நெடுஞ்செழியன் மதுரையிலிருந்து அரசாண்ட காலத்தில், இவனுடைய தம்பியாகிய வெற்றிவேற் செழியன், பாண்டி நாட்டுத் துறைமுகப்பட்டினமாகிய கொற்கைப்பட்டினத்தில் இருந்து அரசாண்டான். இந்த நெடுஞ்செழியனை எதிர்த்துச் சோழனும் சேரனும் போர் செய்தனர் என்றும் அப்போர் மதுரைக்கு அருகில் நடந்தது என்றும் அப்போரில் நெடுஞ்செழியன் வெற்றி பெற்றான் என்றும் பரணர் கூறுகிறார். (அகம். 116:13-19) நெடுஞ்செழியன் ஆட்சிக் காலத்தில் கோவலன் மதுரையில் தவறாகக் கொலையுண்டான். பெரும் பொருளைச் செலவு செய்து வறுமையடைந்த கோவலன் பொருள் ஈட்டுவதற்காகக் கண்ணகியுடன் காவிரிப்பூம்பட்டினத்திலிருந்து மதுரைக்குச் சென்றான். சென்று கண்ணகியின் காற்சிலம்பை விற்கப் பொற்கொல்லனிடம் விலை கூறியபோது, அப்பொற்கொல்லன், நாட்டுக்குப் புதியவனாகிய கோவலன்மீது களவுக் குற்றஞ்சாற்றிக் கொல்வித்தான். கண்ணகியார், பாண்டியன் சபைக்கு நேரில் சென்று வழக்குரைத்துக் கோவலன் கள்வன் அல்லன் என்பதை மெய்ப்பித்தார். தான் தவறு செய்து அநியாயமாகக் கோவலனைக் கொன்றதை யுணர்ந்த நெடுஞ்செழியன் இதய அதிர்ச்சியினால் சிம்மாசனத்தில் இருந்தபடியே உயிர்விட்டான். ஆகவே, இவனுக்கு ‘அரசு கட்டிலிற் றுஞ்சிய பாண்டியன் நெடுஞ்செழியன்’ என்றும் பெயர் ஏற்பட்டது. (அரசு கட்டில் - சிம்மாசனம்; துஞ்சிய - இறந்த) வட வாரியர் படை கடந்து தென்றமிழ் நாடொருங்கு காணப் புரைநீர் கற்பிற் றேவி தன்னுடன் அரைசு கட்டிலிற் துஞ்சிய பாண்டியன் நெடுஞ் செழியன் என்று இப்பாண்டியனைச் சிலப்பதிகாரம் (மதுரைக் காண்டம், கட்டுரை) கூறுகின்றது. இவன் எத்தனை ஆண்டு அரசாண்டான் என்பது தெரியவில்லை. இவனும் சேரன் செங்குட்டுவனும் சம காலத்தவர். வெற்றிவேற் செழியன்: ‘ஆரியப்படை கடந்த,’ ‘அரசுகட்டிலில் துஞ்சிய’ பாண்டியன் நெடுஞ்செழியனுக்குப் பிறகு, கொற்கைப் பட்டினத்தில் இளவரசனாக இருந்த வெற்றிவேற் செழியன், பாண்டி நாட்டின் அரசனானான். (சிலம்பு 27 : 127-138). இப்பாண்டியன் ஆட்சிக்கு வந்த உடனே, கோவலன் தவறாகக் கொலை செய்யப்பட்ட காரணத்தை விசாரித்து உண்மையறிந்து, அரச நீதி தவறுவதற்குக் காரணமாக இருந்த பொற்கொல்லனையும் அவனுக்கு உதவியாயிருந்தவர்களையும் தண்டித்தான். (சிலம்பு 27: 127-130, உரைபெறு கட்டுரை 1). இவன் கண்ணகிக்கு மதுரையில் விழாச் செய்தான் என்று சிலப்பதிகாரம் உரைபெறு கட்டுரை கூறுகிறது. கங்கைக் கரையிலே போர் செய்து தோல்வியடைந்த கனக விசயரைச் செங்குட்டுவன் சிறைப்பிடித்து வந்து, அவர்களைச் சோழனுக்கும் பாண்டியனுக்கும் காட்டும்படித் தன் உத்தியோகஸ்த னான நீலனை அனுப்பினான். நீலன் பாண்டிநாடு சென்று வெற்றிவேற் செழியனுக்குக் கனகவிசயர்களைக் காட்டிய போது வெற்றிவேற் செழியன், செங்குட்டுவனின் வெற்றியைப் போற்றவில்லை. ‘போர் செய்யமுடியாமல் துறவி வேடம் பூண்டு போர்க்களத்திலிருந்து ஓடிய இவர்களைச் சிறைப்பிடித்து வந்தது புதுமையாக இருக்கிறது!’ என்று கூறினான் (சிலம்பு. 28: 97-107). செழியன் பாண்டி நாட்டின் அரசனான பிறகு நன்மாறன் என்று பெயர் பெற்றான் என்பர். பாண்டியன் சித்திர மாடத்துத் துஞ்சிய நன்மாறன் என்பவன் இவனே. இப்பாண்டியன் எத்தனை ஆண்டு அரசாண்டான் என்பதும் இவனைப் பற்றிய வேறு செய்திகளும் தெரியவில்லை. இவனும் சேரன் செங்குட்டுவன் காலத்தில் இருந்தவன். ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன் உயிர் நீத்ததும் வெற்றிவேற் செழியன் மதுரையில் வந்து முடி சூடியதும் ஏறக்குறைய கி.பி. 175ஆம் ஆண்டில் ஆகும். நெடுஞ்செழியன் - 2 வெற்றிவேற் செழியனுக்குப் பிறகு பாண்டி நாட்டை அரசாண்டவன் மற்றொரு நெடுஞ்செழியன். இந்த நெடுஞ்செழியன், இவனுக்கு முன்பு இருந்த ஆரியப்படை கடந்த, அரசு கட்டிலிற் துஞ்சிய நெடுஞ்செழியனின் வேறு என்பதைத் தெரிவிக்க இவனைத் ‘தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்’ என்று கூறுவர். இந்த நெடுஞ்செழியன் மீது பாடப்பட்டதுதான் மதுரைக்காஞ்சி. இப்பாண்டியன், சேரன், செங்குட்டுவன் இறந்த பிறகு பாண்டி நாட்டை யரசாண்டான். இவன் செங்குட்டுவன் காலத்துக்குப் பின் இருந்தவ னாகலின் இவனைப் பற்றிய ஆராய்ச்சி இங்கு வேண்டுவதில்லை. ஆனால், ஒரு முக்கியமான செய்தியை இங்கு கூற வேண்டும். அதென்னவெனில், ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் வேறு, தலையாலங் கானத்துச் செரு வென்ற நெடுஞ்செழியன் வேறு. ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் கூடல் (மதுரை) பறந்தலையில் சேர, சோழ அரசர்களை வென்றான். இச்செய்தியைப் பரணர் தம் செய்யுளில் (அகம். 116: 12-18) கூறுகிறார். தலையாலங்கானத்துப் பறந்தலைப் போரில் சேர சோழர்களை வென்ற நெடுஞ்செழியனைக் கல்லாடனார் பாடியுள்ளார் (புறம். 25). இவர்கள் வெவ்வேறு காலத்தில் இருந்த வெவ்வேறு நெடுஞ்செழியர்கள். இதனை அறியாமல், இவ்விரு நெடுஞ்செழியரும் ஒருவரே என்று தவறாகக் கருதிக்கொண்டார். திரு. பி.டி. சீநிவாச ஐயங்கார். இருவரையும் ஒருவர் என்றே தவறாகக் கருதிக்கொண்டு, தாம் ஆங்கிலத்தில் எழுதிய `தமிழர் சரித்திரம்’ என்னும் நூலில் தவறாக எழுதி விட்டார். (P.T. Srinivasa Aiyangar, history of the Tamils, 1924, p. 444) மேலும், ஐயங்கார் மற்றொரு தவற்றையும் செய்துவிட்டார். செங்குட்டுவன் காலத்திலும் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் காலத்திலும் இருந்த பரணரைப் பிற்காலத்தில் இருந்த தலை யாலங்கானத்துப் போர் வென்ற நெடுஞ்செழியன் காலத்துக்கும் பிற்பட்டவர் என்று மற்றொரு தவறான செய்தியை எழுதி விட்டார். (P.T. Srinivasa Aiyangar, history of the Tamils, 1924, p. 444) செங்குட்டுவனைப் பதிற்றுப்பத்திலும் (5ஆம் பத்து), ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியனை அகப்பாட்டிலும் (அகம். 116 : 12-18) குறிப்பிட்டுப் பாடிய பரணர், செங்குட்டுவன் பத்தினிக் கோட்டம் அமைப்பதற்கு முன்பே காலமானார். இதனை அறியாமல், சீநிவாச ஐயங்கார், செங்குட்டுவனுக்குப் பிறகு இருந்த தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனுக்கும் பிற்காலத்தில் பரணர் இருந்தார் என்று எழுதியுள்ளார். இவ்வா றெல்லாம் தவறாகக் கூறுவதன் காரணம் என்னவென்றால் வெவ்வேறு நெடுஞ்செழியரை ஒரே நெடுஞ்செழியன் என்று பிழையாகக் கருதிக்கொண்ட தவறேயாம். மோகூர் மன்னன்: பாண்டியர்களுக்குக் கீழடங்கிப் பாண்டி நாட்டு மோகூரில் சிற்றரசர் பரம்பரை ஒன்று இருந்தது. மோகூர் சிற்றரசருக்குப் பழையர் என்னும் குடிப்பெயர் உண்டு. மோகூர்ப் பழையர்கள் பாண்டியர், படைக்குச் சேனைத் தலைவராக இருந்தவர்கள். மோகூர், இப்போதுள்ள மதுரைக்கு வடகிழக்கே ஏழு மைல் தூரத்திலும், அழகர்மலைக்குத் தெற்கே பத்து மைல் தூரத்திலும் இருக்கிறது (இவ்வூர், பிற்காலத்தில் திருமோகூர் என்று பெயர் பெற்று வைணவர்களின் 108 திருப்பதிகளில் ஒன்றாகத் திகழ்ந்தது. இவ்வூர்க் காளமேகப் பெருமானைப் பிற்காலத்திலிருந்த நம்மாழ்வாரும் திருமங்கையாழ்வாரும் பாடியுள்ளனர்). மோகூர்ப் பழையர்கள் தங்கள் ஊரில் வேப்பமரத்தைக் காவல் மரமாக வளர்த்து வந்தனர். சேரன் செங்குட்டுவன் காலத்தில் (கி.பி. 2ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில்), இருந்த மோகூர்ப் பழையனுக்கும் அறுகை என் பவனுக்கும் பகை ஏற்பட்டுப் பழையன், அறுகையைப் போரில் வென்றான். அதனால் அறுகை, பழையனுக்கு அஞ்சி ஒடுங்கினான். அறுகையின் நண்பனான சேரன் செங்குட்டுவன், மோகூர்ப் பழையன் மேல் படையெடுத்துச் சென்று அவனுடைய காவல் மரத்தை வெட்டி வீழ்த்திப் பழையனையும் போரில் கொன்றான். (பதிற்று. 5ஆம் பத்து. 4: 10-17, 9 : 7-17. பதிகம் 13-17. சிலம்பு. 27: 124-126). இந்தப் பழையன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் (அரசு கட்டிலில் துஞ்சிய நெடுஞ்செழியன்) காலத்தில் இருந்தவன். மோகூர்ப் பழையன் இறந்த பிறகு அவனுடைய மகன் ‘பழையன்’ என்னும் குடிப்பெயருடன் மோகூரையரசாண்டான். இவன் தலையாலங்கனத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் காலத்திலும் இருந்தான். மதுரைக் காஞ்சியில், பழையன் மோகூர் அவையகம் விளங்க நான்மொழிக் கோசர் தோன்றி யன்ன. (மதுரை. அடி. 508 - 509) என்று கூறப்படுகிற மோகூர்ப் பழையன் இவனே. மோகூர்ப் பழையர்களின் முன்னோன் ஒருவன் கி.மு. முதல் நூற்றாண்டின் முற்பகுதியில் இலங்கைக்குச் சென்று, இலங்கை யரசனை வென்று அநுராதபுரத்தில் சில ஆண்டுகள் அரசண்டான் என்னும் செய்தியை மகாவம்சம் என்னும் பாலி மொழி நூலில் அறிகிறோம். அவனை, அந்நூல் பிளயமாரன் என்று கூறுகிறது. * அகம் 251ஆம் செய்யுளில் மாமூலனார் என்னும் புலவர், வம்பமோரியர் மோகூரின் மேல் படையெடுத்து வந்தனர் என்று கூறுகிறார். இது பற்றிப் பல ஆராய்ச்சிக்காரர்கள் பல கட்டுரைகளை எழுதியுள்ளனர். அவர்களில் பெரும்பாலோர், வம்பமோரியர் மோகூரின் மேல் படையெடுத்து வந்ததாக எழுதியுள்ளனர். மோரியர், மோகூரின்மேல் படையெடுத்து வரவில்லை. அவர்கள் துளு நாட்டுக் கடற்கரையோரத்தில் வசித்திருந்த ‘மோகர்’ என்னும் இனத்தார் மீது படையெடுத்துச் சென்றனர். இதுபற்றி இந்நூல் தொடர்புரை காண்க. பாண்டிய அரசர் பசும்பூண் பாண்டியன் நெடுஞ்செழியன் - 1 (ஆரியப்படை கடந்தவன், அரசுகட்டிலிற் றுஞ்சியவன்) வெற்றிவேற் செழியன் (சித்திரமாடத்துத் துஞ்சிய நன்மாறன்) நெடுஞ்செழியன் - 2 (தலையாலங்கானத்துச் செரு வென்றவன்) சோழ அரசர் கி.பி. 2ஆம் நூற்றாண்டில் சோழ அரசர் குடியில் பிறந்த சில அரசர்கள் சோழ நாட்டின் வெவ்வேறு பகுதிகளை யரசாண்டனர். அவர்கள் அடிக்கடி தங்களுக்குள் போர் செய்து கொண்டிருந் தார்கள். கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்த பேர்பெற்ற சோழ அரசன் உருவப் பஃறேரிளஞ் சேட் சென்னி என்பவன். இளஞ்சேட் சென்னியும் இமயவரம்பன் நெடுஞ்சேர லாதனும் (இவன் செங்குட்டு வனின் தந்தை) சமகாலத்தில் இருந்த அரசர்கள். இவ்விருவரும் போர் என்னும் இடத்தில் போர் செய் தார்கள். அந்தப் போர்க்களத்தில் இவ் விருவரும் புண்பட்டு விழுந்து சிலகாலம் உயிர் போகாமல் கிடந்து பிறகு இறந்துபோனார்கள். அப்போது அவர்களைப் போர்க்களத்தில் கழாத்தலையார், பரணர் என்னும் புலவர்கள் பாடினார்கள் (புறம். 62, 63, 368). வேற்பஃறடக்கைப் பெருவிற்கிள்ளிக்குப் பிறகு கரிகாற் பெரு வளத்தான் என்னும் சோழன், முடிசூடி அரசாண்டான். அவன் ஆட்சிக்கு வராதபடி அவனுடன் சோழகுலத்து அரசர் ஒன்பது பேர் போர் செய்தார்கள் (பட்டினப்பாலை 220, 227). அவர் களைக் கரிகாலன் வாகைப் பெருந்தலை என்னும் இடத்தில் வென்றான். அந்த ஒன்பது தாயாதியரசர்களைக் கரிகாலன் வென்று சோழநாட்டை யரசாண்டான். (அகம். 125 : 16-21). கரிகாற் பெருவளத்தான் தொண்டை நாட்டை யரசாண்ட தொண்டை மான் இளந்திரையன் என்பவனையும் வென்று தொண்டை நாட்டைச் சோழ இராச்சியத்தோடு இணைத்துக் கொண்டான். இதைப் பட்டினப்பாலை, பல்லொளியர் பணிபு ஒடுங்கத் தொல் அருவாளர் தொழில் கேட்ப (பட்டினப். 274, 275) என்று கூறுகிறது. (அருவாளர் என்பது தொண்டை நட்டார்). தொண்டை நாட்டை யரசாண்ட தொண்டைமான் இளந்திரையன் மேல் பெரும்பாணாற்றுப்படை பாடின கடியலூர் உருத்திரங் கண்ணனாரே கரிகாற் சோழன்மீது பட்டினப்பாலை பாடினார். இளந்திரையன்மீது பெரும்பணாற்றுப்படை பாடிய பின்னர், கரிகாற் சோழன் தொண்டை நாட்டை வென்றிருக்க வேண்டும். ஏனென்றால், கடியலூர் உருத்திரங்கண்ணனாரே கரிகாலன் அருவா நாட்டை (தொண்டை நாட்டை) வென்றதாகக் கூறுகிறார். எனவே, உருத்திரங்கண்ணனார் காலத்திலேயே தொண்டை நாடு, சோழ இராச்சியத்துக்குக் கீழடங்கிற்று. அக்காலத்தில் தக்ஷிணபதம் என்னும் தக்காண நாட்டைச் சதகர்ணி (சாதவாகனர்) அரசர் ஆட்சி செய்தார்கள். சேர அரசர், சதகர்ணியரசருடன் நண்பராக இருந்ததுபோலவே கரிகாற் சோழனும் அவர்களுடன் நண்பனாக இருந்தான். அக்காலத்தில் தக்காணத்துக்கு அப்பாலிருந்த வட இந்தியாவில் பேரரசர் இல்லை. வட இந்தியாவில் சிறுசிறு நாடுகளைச் சிற்றரசர்கள் பலர் அரசாண்டார்கள். கரிகாற் சோழன் வட இந்தியாவின் மேல் திக்குவிசயஞ்செய்து சில அரசர்களை வென்றான். வென்று அவர்களிடமிருந்து சில பொருள்களைப் பெற்றான் என்று சிலப்பதிகாரம் கூறுகிறது. மாநீர் வேலி வச்சிர நன்னாட்டுக் கோன் இறை கொடுத்த கொற்றப் பந்தரும் மகத நன்னாட்டு வாள்வாய் வேந்தன் பகைப்புறத்துக் கொடுத்த பட்டிமண் டபமும் அவந்தி வேந்தன் உவந்தனன் கொடுத்த நிவந்தோங்கு மரபிற் றோரண வாயிலும். இவன் பெற்றுக்கொண்டான் என்று சிலப்பதிகாரம் கூறுகிறது. (சிலம்பு 5: 99-104) இவர்களில் அவந்தி வேந்தன் கரிகால னுக்கு நண்பன் என்று அரும்பதவுரையாசிரியர் கூறுகிறார். உவந்தனன் கொடுத்த - மித்திரனாய்க் கொடுத்த என்று அவர் உரை கூறுவது காண்க. அவந்தி தேசத்தின் தலைநகரம் உஞ்சை என்னும் உச்சயினி நகரம். அவந்தி தேசம் அக்காலத்தில் சதகர்ணியரசன் ஆட்சியிலிருந்தது. அவன் கரிகாலனுக்குத் தோரண வாயிலை உவந்து (மகிழ்ச்சியோடு) கொடுத்தான் என்று இளங்கோவடிகள் கூறுவது பொருத்தமேயாகும். கரிகால்சோழன்மேல் பட்டினப்பாலையைக் கடியலூர் உருத்திரன் கண்ணனார் பாடினார். இவன் மேல் பொருநர் ஆற்றுப்படையை முடத்தாமக்கண்ணியார் பாடினார். இசை நாடகக் கலையில் பேர்பெற்றிருந்த மாதவி என்பவள் கரிகாற் சோழன் ஆட்சியின் இறுதிக் காலத்தில் அவன் அவையில் அரங்கேறித் தலைக்கோலிப் பட்டத்தைப் பெற்றாள். சோழன் கரிகாலன், நார்முடிச்சேரல் ஆட்சிக் காலத்திலும் செங்குட்டுவன் ஆட்சிக் காலத்திலும் சோழ நாட்டை அரசாண்டான். கரிகாலனுக்குப் பிறகு சோழ நாட்டை யரசாண்டவன் கிள்ளிவளவன் என்பவன். இவன் ஆட்சிக்கு வந்த போது வழக்கம் போல சோழ அரச குலத்துத் தாயாதிகள் ஒன்பது பேர் இவனை எதிர்த்தார்கள். அவர்கள் அரசுரிமைக்காக நாட்டில் குழப்பம் உண்டாக்கி உள்நாட்டுப் போரை நடத்திக்கொண்டிருந்தார்கள். கிள்ளிவளவன் செங்குட்டுவனுக்கு மைத்துனன் ஆகையால், செங்குட்டுவன் சோழரின் உள்நாட்டுப் போரில் தலையிட்டுக் கிள்ளிவளவன் சார்பாகப் போர் செய்து பகைவரை வென்று தன் மைத்துனனுக்கு முடிசூட்டினான். இச்செய்தி சிலப்பதிகாரத்தி லிருந்து கிடைக்கிறது. மைத்துன வளவன் கிள்ளியொடு பொருந்தா ஒத்த பண்பினர் ஒன்பது மன்னர் இளவரசு பொறாஅர் ஏவல் கேளார் வளநா டழிக்கும் மாண்பினர் ஆதலின் ஒன்பது குடையும் ஒருபகல் ஒழித்தவன் பொன்புனை திகிரி ஒருவழிப் படுத்தோய் (சிலம்பு, நீர்ப்படை 118, 123) என்றும் ஆர்புனை தெரியல் ஒன்பது மன்னரை நேரிவாயில் நிலைச்செரு வென்று (சிலம்பு. நடுகல். 116 - 117) என்றும் சிலம்பு கூறுவது காண்க. மேலும், பதிற்றுப்பத்து 5ஆம் பத்துப் பதிகமும், இச்செய்தியை ஆராச் செருவின் சோழர்குடிக் குரியோர் ஒன்பதின்மர் வீழ வாயிற்புறத் திறுத்து நிலைச் செருவின் ஆற்றலை யறுத்து என்று கூறுகிறது. கிள்ளிவளவன் தம்பி இளங்கிள்ளி என்பவன் தொண்டை நாட்டைக் காஞ்சீபுரத்திலிருந்து அரசாண்டான் (மணிமேகலை 18: 172-176) எனவே, செங்குட்டுவன் காலத்தில் சோழ நாட்டை யரசாண்ட சோழர்கள் உருவப்பஃறேரிளஞ்சேட் சென்னியும் சோழன் கரிகாலனும் கிள்ளிவளனும் ஆவர். இவ்வரசர் காலத்திலேயே இவர்களுக்கு அடங்கி வேறு சில சோழர்களும் அரசாண்டார்கள். இலங்கை அரசர்கள் இளநாகன் நமது ஆராய்ச்சிக்குரிய கி.பி. 2ஆம் நூற்றாண்டில், இலங்கையை அரசாண்ட அரசர்களைப் பற்றி ஆராய்வோம். இரண்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இளநாகன் என்னும் அரசன் (கி.பி. 91 முதல் 101 வரையில்) அரசாண்டான். இவன் ஆட்சிக்கு வந்த முதல் ஆண்டில் திஸ்ஸ ஏரிக்குச் சென்றபோது இவனுடன் இருந்த லம்ப கர்ணர் என்பவர் இவனைவிட்டு அநுரைக்கு வந்து விட்டார்கள். லம்ப கர்ணர் அக்காலத்தில் செல்வாக்குள்ள உயர் தரத்தவர். அவர்கள் தன்னை விட்டுப் போய் விட்டதற்காகச் சினங்கொண்ட இளநாகன், அவர்களை மகாதூப சேதியத்துக்குப் பாதை அமைக்கும்படி தண்டித்தான். அவர்கள் தங்கள் கைகளாலே வேலை செய்து பாதையமைக்குமாறும் தாழ்ந்த இனத்தவரான சண்டாளர்களை அவர்களின் மேற் பார்வை யாளராக இருக்கவும் கட்டளையிட்டான். இவ்வாறு தங்களை இழிவு படுத்தியதற்காகச் சினங்கொண்ட லம்பகர்ணர் ஒன்று சேர்ந்து அரசனைப் பிடித்துச் சிறையில் வைத்துவிட்டு அரசாட்சியைத் தாங்களே நடத்தினார்கள். சிறைப்பட்ட இளநாகன் தன்னுடைய கொற்ற யானையின் உதவியினால் சிறையிலிருந்து தப்பித்துத் தன் மகனான சந்தமுகசிவனுடன் மகாதிட்டைத் துறைமுகத்தில் கப்பல் ஏறி எதிர்க் கரையில் இருந்த நாட்டுக்குப் (தமிழ் நாட்டுக்கு) போய்விட்டான். (Mahavamsa xxxv. 16-26) தமிழ்நாட்டில் அடைக்கலம் புகுந்த இளநாகன் எங்குத் தங்கி னான், யார் உதவியைப் பெற்றான் என்பது தெரியவில்லை. மூன்று ஆண்டு தமிழ்நாட்டில் தங்கியிருந்து தமிழ்ச் சேனைகளைச் சேர்த்துக் கொண்டு மீண்டும் இலங்கைக்கு வந்தான். இலங்கையின் தென் பகுதியான உரோகண நாட்டின் துறைமுகமாயிருந்த ‘சக்கரகொப்ப’ என்னும் இடத்தில் கரையிறங்கினான். பிறகு, ஹங்காரப்பிட்டி என்னும் இடத்துக்கு அருகில் கபல்லக்கண்ட என்னும் இடத்தில் லம்ப கர்ணருடன் போர் செய்து வென்று மீண்டும் தன் அரசாட்சியைக் கைப் பற்றினான். போரை வென்ற பிறகு இவன் திஸ்ஸ ஏரிக்குப் போனபோது லம்பகர்ணர்களைத் தன் தேரில் பூட்டி இழுக்கச் செய்தான். இவன், முன்பு கூறியபடி ஆறு ஆண்டு அநுராதபுரத்திலிருந்து ஆட்சி செய்தான். (Mahavamsa xxxv, 27-45) சந்தமுகசிவன்: இளநாகன் இறந்த பிறகு அவன் மகனான சந்தமுகசிவன் (சந்திரமுக சிவன்) ஏழு ஆண்டு எட்டுத் திங்கள் (கி.பி. 101-110) இலங்கையை யரசாண்டான். இவன், தன் தந்தை இளநாகன் அரசு இழந்து தமிழ்நாட்டில் அடைக்கலம் புகுந்திருந்தபோது, அவனுடன் தமிழ்நாட்டில் தங்கியிருந்தான் என்பது தெரிகிறது. எங்கே எவரிடத்தில் தங்கினான் என்பது தெரியவில்லை. இவனுடைய அரசி தமிளாதேவி (தமிழத்தேவி) என்று கூறப்படுகிறாள். எனவே, இவன் தமிழ்நாட்டு அரசகுடும்பத்தில் திருமணஞ் செய்து கொண் டான் என்பது தெரிகிறது. எந்த அரச குடும்பத்தில் மணந்தான் என்பது தெரியவில்லை. மணிகாரகாம என்னும் ஊரில் இந்த அரசன் நிலங்களுக்கு நீர் பாய ஒரு ஏரியை உண்டாக்கி அந்த ஏரியையும் நிலங்களையும் இஸ்ஸரசமண என்னும் இடத்தி லிருந்த பௌத்தப் பிக்குகளுக்குத் தானமாகக் கொடுத்தான் இவனுடைய அரசியான தமிளாதேவி, மணிகார காமத்திலிருந்து தனக்குக் கிடைத்த வரிப் பணத்தைப் பௌத்தப் பிக்குகளுக்குத் தானமாகக் கொடுத்துவிட்டாள் (Mahavamsa xxxv. 46-48). யஸலாலக திஸ்ஸன்: திஸ்ஸ ஏரியில் நிகழ்ந்த நீர் விளையாட்டு விழாவின்போது, சந்தமுகசிவனை அவன் தம்பியான யஸலாலக திஸ்ஸன் கொன்று இலங்கையை யரசாண்டான். அவன் ஏழு ஆண்டு எட்டுத் திங்கள் வரையில் (கி.பி. 110-118) அரசாண்டான் (Mahavamsa xxxv, 49-50). ஆனால், இவனும் தன்னுடைய வாயிற் காவலான சுபன் என்பவனால் கொல்லப் பட்டான். யஸ்லாலக திஸ்ஸனுடைய வாயிற்காவலன் சுபன் என்பவன். அந்தச் சுபன் உருவத்தில் இவ்வரசனைப் போலவே இருந்தான். ஆகவே, அரசன் சுபனுக்குத் தன்னைப்போல ஆடையணிவித்து விளையாட்டாக வேடிக்கை பார்ப்பது வழக்கம். காவற்காரனாகிய சுபன் அரச ஆடைகளுடன் சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும் போது அமைச்சர்கள் சென்று, அவனை அரசன் என்று எண்ணிக் கொண்டு வணங்கும்போது காவல்காரன் வேஷத்தில் வாயிலில் இருக்கும் உண்மையான அரசன் நகைத்து வேடிக்கை பார்ப்பான். அடிக்கடி இப்படி நிகழ்ந்தது. ஒரு நாள் காவற்கார சுபன் சிம்மாசனத்தில் அமர்ந்து இருந்த போது காவற்காரன் வேஷத்தில் வாயிலில் இருந்த அரசன் உரத்துச் சிரித்தான். அதனைக் கண்ட சுபன் சினந்து, ‘இந்தக் காவலன் ஏன் இப்படிச் சிரிக்கிறான். இவனைக் கொண்டுபோய்ச் சிரச்சேதம் செய்யுங்கள்’ என்று கட்டளையிட்டான். அக்கட்டளைப்படியே அவனைக் கொன்றுவிட்டார்கள். பிறகு காவலாளியாயிருந்த சுபன், சுபராசன் என்னும் பெயருடன் இலங்கையை யரசாண்டான் (Mahavamsa, xxxv. 51-56). சுபராசன்: சுபராசன், கி.பி. 118 முதல் 124 வரையில், ஆறு ஆண்டு அநுராத புரத்திலிருந்து இலங்கையை யரசாண்டான். சுபராசன் ஆட்சிக்கு வந்தபோது, அவனை வசபன் என்னும் பெயருள்ள ஒருவன் கொன்று ஆட்சியைக் கைப்பற்றுவான் என்று நிமித்திகர் கூறினர். ஆகவே, சுபராசன் தன் இராச்சியத்தில் உள்ள வசபன் என்னும் பெயருள்ள வர்களையெல்லாம் கொன்றுவிடும்படி கட்டளையிட்டான். இவனுடைய சேனைத் தலைவனுக்கு உறவினன் ஒருவன் வசபன் என்னும் பெயர் படைத்திருந்தான். அந்தச் சேனைத்தலைவன், அரசன் கட்டளைப்படி தன் உறவினான வசபனை அரசனிடம் கொடுக்க எண்ணினான். அவனுடைய எண்ணத்தை அவனுடைய மனைவியாகிய பொத்தா என்பவள் மூலமாக அறிந்த வசபன் தப்பி ஓடி உரோகண நாட்டுக்குச் சென்றான். சென்று தனக்கு ஆக்கந் தேடிக்கொண்டு சேனையைத் திரட்டினான். பிறகு, அரசன்மேல் படையெடுத்து வந்து போர்செய்து வென்று ஆட்சியைக் கைப்பற்றினான். இவனுடைய உறவினனான சேனைத்தலைவன் போரில் இறந்து விட்டான். வசபன்: வசபன் அரசாட்சியைக் கைப்பற்றிய பிறகு தான் தப்பிப் போக உதவியாயிருந்த பொத்தாவை அரசியாக்கினான் (Mahavamsa xxxv, 59-70). இவன் நீண்டகாலம் ஆட்சிசெய்தான். கி.பி. 124 முதல் 168 வரையில் நாற்பது ஆண்டு அரசாண்டான். இவன் தன் மகனான வங்க நாசிக திஸ்ஸன் என்பவனுக்குச் சுபராச னின் மகளான மஹாமத்தா என்பவளைத் திருமணஞ் செய்து வைத்தான் (Mahavamsa xxxv, 69-70). வசபன், செங்குட்டுவனின் தமயனான நார்முடிச்சேரலின் ஆட்சிக்காலத்திலும் செங்குட்டுவன் ஆட்சிக்காலத்திலும் இருந்தவன் என்று தெரிகிறான். வங்கநாசிக திஸ்ஸன்: வசபன் நெடுங்காலம் அரசாண்டபடியால், அவன் மகனான வங்கநாசிக திஸ்ஸன் வயதுசென்ற பிறகு ஆட்சிக்கு வந்தான். கி.பி. 168 முதல் 171 வரையில், மூன்று ஆண்டு இவன் ஆட்சி செலுத்தினான். இவன் மகன் கஜபாகு காமணி என்பவன். இவன் செங்குட்டுவன் காலத்தில் இருந்தவன். கஜபாகு காமணி: வங்கநாசிக திஸ்ஸன் இறந்த பிறகு அவன் மகனான கஜபாகு காமணி என்பவன் இலங்கையின் அரசனானான். இவன் கி.பி. 171 முதல் 193 வரையில், இருபத்திரண்டு ஆண்டு ஆட்சி செய்தான். சிலப்பதி காரம் கூறுகிற ‘கடல்சூழ் இலங்கைக் கயவாகு வேந்தன்’ என்பவன் இவனே. செங்குட்டுவன் வஞ்சிமா நகரத்தில் கண்ணகிக்குப் பத்தினிக் கோட்டம் அமைத்துக் குடமுழுக்குச் செய்தபோது அந்த விழாவுக்கு இவன் வந்திருந்தான். பத்தினி வழிபாட்டை இலங்கையில் உண்டாக்கிய வனும் இவனே. (சிலம்பு. 30 : 160, உரைபெறு கட்டுரை 3). (பிற்காலத்து நூலாகிய பூஜாவலி, சோழ அரசன் ஒருவன் இலங்கைக்குச் சென்று போர் செய்து சிங்களவரைச் சிறைப்பிடித்து வந்து காவிரியாற்றுக் கரை கட்டு வித்தான் என்றும், பிறகு கஜபாகு அரசன் சோழநாட்டுக்குப் போய்ச் சிங்களவரைச் சிறைமீட்டுக் கொண்டுவந்தான் என்றும் கூறுகிறது. இச்செய்தியை மகாவம்சம் கூறவில்லை. பழைய தமிழ் இலக்கியங்களும் கூறவில்லை. எனவே, இச்செய்தி நம்பத்தக்கதன்று.) மகாவம்சம் கூறுகிற கஜபாகுவும், சிலப்பதிகாரம் கூறுகிற ‘கடல் சூழ் இலங்கைக் கயவாகு’வும் ஒருவரே என்பதையும் இந்தக் கஜவாகு, சேரன் செங்குட்டுவனின் காலத்தில் இருந்தவன் என்பதையும் சரித்திரக்காரர் எல்லோரும் ஒப்புக்கொண்டுள்ளனர். ஆனால், ஒருவர் இருவர் கஜபாகுவும் செங்குட்டுவனும் சம காலத்தவர் அல்லர் என்று கூறி மறுக்கின்றார். இவர் மறுப்பை ஆராய்ந்து பார்ப்போம். திரு. எஸ். வையாபுரிப் பிள்ளை அவர்கள் தாம் ஆங்கிலத்தில் எழுதிய `தமிழ்மொழி - இலக்கிய வரலாறு’ (S. Vaiyapuri Pillai, History of Tamil Language and Literature, 1956. p. 144). என்னும் நூலில் 144ஆம் பக்கத்தில் இவ்வாறு பொருள்படும்படி எழுதுகிறார்: “இலங்கையரசன் கஜபாகு என்பவன் செங்குட்டுவனுடைய அவைக்கு வந்திருந்தான் என்பதற்குச் சான்று இல்லாதது சரித்திர நோக்குக்கு முக்கியமானதாகும். உரைபெறு கட்டுரையில் சிலப்பதி காரமே இதை மறுக்கிறது. பதிற்றுப்பத்தின் 5ஆம் பத்து இலங்கையைப் பற்றியாவது கஜபாகுவைப் பற்றியாவது ஒன்றுமே சொல்லவில்லை. உண்மையில் பதிற்றுப்பத்து முழுவதிலும் இலங்கையைப் பற்றியாவது அதன் அரசர்களைப் பற்றியாவது யாதொரு குறிப்பும் இல்லை. செங்குட்டுவனையும் அவன் தன் தலைநகரில் அமைத்த கண்ணகிக் கோவிலையும் கூறுகிற மணி மேகலை காவியமுங்கூட கஜபாகுவைப் பற்றி ஒன்றும் பேச வில்லை. கடைசியாக, சேர அரசன் கண்ணகிக்குக் கோவில் அமைத்து விழா செய்தபோது கஜபாகு அரசன் அங்குச் சென்றிருந்தான் என்பது பற்றியாவது, அவன் தன் நாடாகிய இலங்கையில் கண்ணகி வழிபாட்டை ஏற்படுத்தியதைப் பற்றி யாவது மகாவம்சம் என்னும் நூல் ஒன்றுமே கூறவில்லை.” இவ்வாறு வையாபுரியார் காரணங்களைக் காட்டி மறுப்புக் கூறுகிறார். இவர் கூறும் காரணங்களையும் மறுப்புக்களையும் ஒவ்வொன்றாக ஆராய்வோம். 1. சேர மன்னன் செங்குட்டுவன் தன் தலைநகரில் கண்ணகிக்குப் பத்தினிக் கோட்டம் அமைத்தபோது இலங்கைக் கஜபாகு வேந்தன் அங்கு வந்திருந்தான் என்று சிலப்பதிகாரம் வரந்தருகாதையில் கூறி யிருப்பதை, சிலம்பு உரைபெறு கட்டுரை மறுக்கிறது என்று வையாபுரியார் கூறகிறார். பி.டி. சீநிவாச ஐயங்காரும், இவர் கூறுவது போலவே, கஜபாகு, கண்ணகிக் கோட்டத்துக்கு வந்திருந்தான் என்று சிலப்பதிகாரம் வரந்தரு காதை கூறுவதை சிலம்பு உரைபெறு கட்டுரை மறுக்கிறது என்று தாம் எழுதிய தமிழர் சரித்திரம் (P.T. Srinivasa Iyengar, History of the Tamils, 1929, p. 380). என்னும் நூலில் எழுதுகிறார். இவர்கள் கூறுவதை ஆராய்ந்து பார்ப்போம். உரைபெறு கட்டுரையின் வாசகம் இது: அது கேட்டுக் கடல்சூழிலங்கைக் கயவாகு வென்பான் நங்கைக்கு நாட்பலி பீடிகைக் கோட்டம் முந்துறுத்தாங்கு அரந்தை கெடுத்து வரந்தரு மிவளென ஆடித்திங்கள் அகவையினாங்கோர் பாடிவிழாக் கோள் பன்முறை யெடுப்ப மழைவீற்றிருந்து வளம்பல பெருகிப் பிழையா விளையுள் நாடாயிற்று. `இதில் ‘அது கேட்டு’ என்றிருப்பதை இவர்கள் சுட்டிக் காட்டி, கஜபாகு வேந்தன் யாரோ ஒருவர் கண்ணகி தெய்வத்தைப் பற்றிக் கூறக் கேட்டுப் பத்தினித் தெய்வத்துக்குக் கோயில் அமைத்தான் என்றும், ஆகவே, அவன் வஞ்சிமாநகரத்துக் கண்ணகிக் கோவிலுக்கு வந்திருந்தான் என்று சிலம்பு வரந்தருகாதை கூறுவதை உரைபெறு கட்டுரை மறுக்கிறது என்றும் கூறுகிறார்கள். இவர்கள் கூறுவது உண்மைபோலக் காணப்பட்டாலும் நன்கு ஆராய்ந்து பார்த்தால், இது சிலப்பதிகாரத்தை மறுக்கவில்லை என்பதும் சிலப்பதிகாரத்தை ஆதரிக்கிறது என்பதும் விளங்கும். இவர்கள் சிலப்பதிகாரத்தை நன்கு படிக்காமல் அவசரப்பட்டுத் தவறான முடிவுக்கு வந்திருக்கிறார்கள். ‘அது கேட்டு’ என்று உரைபெறு கட்டுரை கூறுவதன் பொருள் என்னவென்றால். கண்ணகியார் இவர்களுக்கு அசரீரியாகக் கூறிய வாக்கைக் கேட்டு என்பது. இதற்குச் சான்று சிலப்பதிகாரத்திலேயே இருக்கிறது. குடகக் கொங்கரும் மாளுவ வேந்தரும் கடல்சூழ் இலங்கைக் கயவாகு வேந்தனும் என்னாட் டாங்கண் இமய வரம்பனின் நன்னாட் செய்த நாளணி வேள்வியில் வந்தீ கென்றே வணங்கினர் வேண்டத் தந்தேன் வரமென் றெழுந்த தொருகுரல் ஆங்கது கேட்ட அரசனும் அரசரும் ஓங்கிருந் தானையு முறையோ டேத்த என்று சிலம்பு வரந்தரு காதை (159-166) கூறுகிறது. இந்த அகச் சான்றை அறியாமல், சீநிவாச ஐயங்காரும் வையாபுரிப்பிள்ளையும் உரைபெறு கட்டுரை ‘மறுக்கிறது’ என்று எழுதியது உண்மைக்கு மாறான தவறு ஆகும். எனவே, உரை பெறு கட்டுரை ‘மறுக்க’வில்லை; ஆதரிக்கிறது என்பது தெரிகிறது. ஆகையால், உரைபெறு கட்டுரையும் வரந்தரு காதையும் கஜபாகு வேந்தன், செங்குட்டுவன் வஞ்சி நகரத்தில் அமைத்த பத்தினிக் கோட்டத்துக்கு வந்திருந்தான் என்பதை வலியுறுத்து கின்றன. ஆகவே இவர்கள் கூறுவது வெறும் போலியுரை எனத் தள்ளுக. 2. `பதிற்றுப்பத்தின் 5ஆம் பத்து இலங்கையைப் பற்றியாவது கஜபாகுவைப் பற்றியாவது ஒன்றுமே பேசவில்லை. உண்மையில் பதிற்றுப்பத்து முழுவதிலும் இலங்கையைப் பற்றியாவது தன் அரசர்களைப் பற்றியாவது யாதொரு குறிப்பும் இல்லை’ என்று வையாபுரியார் சுட்டிக்காட்டுகிறார். ஆம். இவர் சுட்டிக்காட்டுவது உண்மையே. செங்குட்டு வனின் புகழையும் சிறப்பையும் பேசுகிற பதிற்றுப்பத்து ஐந்தாம் பத்து இலங்கை மன்னன் கஜபாகுவைக் குறிப்பிடவில்லைதான். அது மட்டுமா? செங்குட்டுவன் கங்கைக் கரையில் கனக விசயருடன் போர்செய்து அவர்களைச் சிறைப்பிடித்ததையும் கண்ணகிச் சிலையமைக்க இமயமலையிலிருந்து கல் எடுத்து வந்ததையும் பத்தினிக் கோட்டம் அமைத்ததையும் கூறவே இல்லை (பதிகம் மட்டும், செங்குட்டுவன் கல் எடுத்துக் கங்கையில் நீராட்டியதைக் கூறுகிறது). இவ்வளவு முக்கியச் செய்திகளை 5ஆம் பத்து ஏன் கூறவில்லை? இதை வையாபுரியார் அறியாமற் போனதுதான் வியப்பாக இருக்கிறது! இதன் காரணத்தை விளக்குவோம். செங்குட்டுவன்மீது 5ஆம் பத்துப் பாடியவர் பரணர் என்னும் புலவர். அவர் செங்குட்டுவன்மேல் 5ஆம் பத்துப் பாடியபோது அதிக வயது சென்றவராக இருந்தார். கண்ணகிக் கோட்டம் அமைத்தது முதலிய நிகழ்ச்சிகள் செங்குட்டுவனின் பிற்கால வாழ்க்கையில் நிகழ்ந்தவை. ஆகவே, தாம் 5ஆம் பத்துப் பாடிய காலத்தில் செங்குட்டுவன் செய்திருந்த புகழ்ச் செய்திகளை மட்டும் அவர் பாடினார். ஆகவே, பிற்காலத்தில் நிகழ்ந்த கண்ணகிக் கோட்டம் அமைத்தது. கஜபாகு விழாவுக்கு வந்திருந்தது முதலிய செய்திகள் ஐந்தாம் பத்தில் இடம் பெறவில்லை. எனவே, தாம் 5ஆம் பத்துப் பாடிய காலத்தில் நிகழாத செய்திகளை (கண்ணகிக்குக் கோட்டம் அமைத்து அந்த விழா வுக்குக் கஜபாகு வந்தது முதலான பிற்காலத்தில் நிகழ்ந்தவற்றை) பரணர் எவ்வாறு பாடக்கூடும்? ஆகவேதான், 5ஆம் பத்தில் இச்செய்திகள் இடம் பெறவில்லை. இதனை அறியாமல் வையாபுரியார் கூறுவது போலி மறுப்பு என விடுக. 5ஆம் பத்துப் பதிகத்தில், செங்குட்டுவன் கங்கைக் கரைக்குச் சென்றதும் பத்தினிக் கடவுளுக்குக் கல் கொண்டு வந்ததும் கூறப் படுகின்றன. பதிகச் செய்யுளை பரணர் பாடவில்லை. பதிற்றுப் பத்துப் பதிகச் செய்யுட்களைப் பதிற்றுப்பத்தைப் பாடிய புலவர்கள் பாடவில்லை. அந்தந்த அரசர்கள் இறந்த பிறகு பதிகச் செய்யுட்கள் அரண்மனைப் புலவர்களால் பாடிச் சேர்க்கப் பட்டவை. ஆகவேதான், 5ஆம் பத்தின் பதிகத்தில் மட்டும் கண்ணகிக்குக் கல்கொண்டு வந்த செய்தி கூறப்பட்டுள்ளது. 3. `செங்குட்டுவனையும் அவன் தன்னுடைய தலைநகரில் அமைத்த கண்ணகிக் கோவிலையும் கூறுகிற மணிமேகலைக் காவியம் கஜபாகுவைப் பற்றி ஒன்றும் கூறவில்லை’ என்று வையாபுரியார் கூறுகிறார். செங்குட்டுவன் கண்ணகிக்கு அமைத்த பத்தினிக் கோட்ட வரலாற்றினை மணிமேகலை காவியம் கூறவில்லை. கூற வேண்டிய அவசிய மும் அக்காவியப் போக்குக்கு ஏற்படவில்லை. மணிமேகலை 26ஆம் காதையில் 77 முதல் 90ஆம் அடி வரையில் செங்குட்டு வனின் வீரத்தை மணிமேகலை சிறப்பித்துக் கூறுகிறது. அங்கே யும் கண்ணகிக் கோட்டம் அமைத்த விவரத்தைக் கூறவேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட வில்லை. செங்குட்டுவன் கண்ணகிக்குக் கோவில் அமைத்ததை மணி மேகலைக் காவியம் கூறியிருப்பது போலவும் அதில் கஜபாகுவைப் பற்றிக் கூறாமல் விட்டிருப்பது போலவும் வாசகர்கள் நினைக்கும்படி வையாபுரி யார் இச் செய்தியைப் புனைந்துரைக்கிறார். இது போலி மறுப்பு. செங்குட்டுவன் பத்தினிக்கோட்டம் அமைத்த வரலாற்றை விளக்கமாகக் கூறவேண்டிய சந்தர்ப்பமே மணிமேகலைக்கு ஏற்படாதிருக்கும்போது, அக்காவியம் ஏன் கஜபாகுவைப் பற்றிக் குறிப்பிடவில்லை என்று கேட்பது விதண்டாவாதமாக இருக்கிறது. எனவே, இதுவும் போலி மறுப்பு என விடுக. 4. சேரன் செங்குட்டுவன் வஞ்சிமாநகரத்தில் கண்ணகிக்குக் கோவில் அமைத்துத் திருவிழாச் செய்தபோது கஜபாகு அரசன் அங்கு வந்திருந்தான் என்றாவது, அவன் தன் சொந்த நாடாகிய இலங்கையில் கண்ணகி வழிபாட்டை ஏற்படுத்தினான் என்றாவது இலங்கை நூலாகிய மகாவம்சம் ஒன்றுமே கூறவில்லை என்று கூறுகிறார். மகாவம்சம் இதுபற்றி ஒன்றும் கூறாதது உண்மைதான். மேல் போக்காக மகாவம்சத்தைப் படித்தவர்கள் இது முக்கியமான மறுப்பு என்றும் கருதுவார்கள். ஆனால், மகாவம்சத்தை ஆராய்ந்து படித்தவர் இந்தக் காரணத்தை உண்மை என்று கொள்ள மாட்டார்கள். மகாவம்சம் ஏன் எழுதப்பட்டது? யாரால் எழுதப் பட்டது? எந்த நோக்கத்தோடு எழுதப்பட்டது? என்பதை அறிந்த வர்கள், கஜபாகு பத்தினிக் கடவுள் வழிபாட்டைப் பற்றி மகா வம்சம் சொல்லாத காரணத்தை அறிவார்கள். மகாவம்சம், பௌத்த மத பிக்ஷுவினால் எழுதப்பட்ட நூல். இலங்கையில் பௌத்த மதம் எப்படி வந்தது? அது எப்படி வளர்ந்தது? எந்தெந்த அரசர்கள் எந்தெந்தவிதமாக அந்த மதத்தை வளர்த்தார்கள்? என்பதைக் கூறுவதே மகாவம்சம் எழுதப்பட்டதன் முக்கிய நோக்கமாகும். எந்தெந்த அரசர்கள் எந்தெந்தப் பிரிவேணைகளை (பௌத்தப் பல்கலைக்கழகங்களை) அமைத்தார்கள், எந்தெந்த தாகோபாக்களை (தாதுகர்ப்பங்களைக்) கட்டினார்கள், எந்தெந்த பௌத்த விகாரைகளை ஏற்படுத்தினார்கள், பௌத்தப் பிக்குகளை எந்தெந்த விதத்தில் ஆதரித்தார்கள், எந்தெந்த மானியங்களைப் பௌத்த விகாரை களுக்குத் தானஞ் செய்தார்கள் என்பதை விளக்கமாகக் கூறுவதே மகாவம்சத்தின் முக்கியமான நோக்க மாகும். இச்செய்திகளைத்தான் இந்நூலில் சிறப்பாகக் காண் கிறோம். பௌத்த மதத்துக்குப் புறம்பான வேறு சமயத் தெய்வங்களைப்பற்றி இந்நூல் கூறவில்லை, ஆதரிக்கவும் இல்லை. இத்தகைய நோக்கமுள்ளதும் பௌத்த மதச் சிறப்பை மட்டுங் கூறுகிறதுமான மகாவம்சத்தில் அம்மதத்துக்குப் புறம்பான சமயச் செய்திகளை எதிர்பார்க்க முடியுமா? எனவே, கஜபாகு பௌத்த மதத்துக்குச் செய்தவைகளைப் பற்றி மட்டும் கூறிய மகாவம்சம், அவன் பத்தினிக்கடவுள் வழிபாட்டை இலங்கையில் ஏற்படுத்தியதைக் கூறாமல் விட்டதில் அதிசயம் இல்லை. இந்த உண்மையை யறியாத வையாபுரியார், மகாவம்சம் இலங்கைச் சரித்திரத்தைக் கூறுகிற பொது சரித்திர நூல் என்று கருதிக்கொண்டு இவ்வாறு குறை காண்கிறார். பிற்காலத்து இலங்கை நூலாகிய இராஜாவளி, கஜபாகு பத்தினிக் கோட்டம் அமைத்ததைக் கூறுகிறது. பௌத்த மதத்தை முதன்மையாகக் கொண்ட சிங்கள அரசர் களும் சிங்களப் பொதுமக்களும் இந்து மதத் தெய்வங்களையும் வணங்கி வழிபட்டார்கள். அந்தக் காலம் முதல் இந்தக் காலம் வரையில் இலங்கை அரசர்களும் இலங்கைப் பொது மக்களும் ஸ்கந்தன் (முருகன்), விஷ்ணு (திருமால்), பத்தினித் தெய்யோ (பத்தினித் தெய்வம், கண்ணகி) முதலிய தெய்வ வழிபாடுகளைச் செய்துகொண்டு வந்தார்கள். செய்து வருகிறார்கள் (ஆனால், பௌத்த மதச் சந்நியாசிக ளாகிய பிக்ஷுக்கள் இத்தெய்வங்களை வணங்குவதில்லை). இப்போது இலங்கையின் பிரதம அமைச்ச ராக இருக்கும் ஸ்ரீமதி பண்டாரநாயிகா அம்மையார், பௌத்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தும், தாம் அமைச்சர் பதவியை ஏற்பதற்கு முன்பு கதிர்காமத்துக்குப் போய்க் கதிர்காமத் தெய்வத்தை வழிபட்ட செய்தி யாவரும் அறிந்ததே. இப்பொழுது மட்டும் அல்ல. ஆதிகாலம் முதல் சிங்கள அரசரும் சிங்கள மக்களும் கந்தன், திருமால், பத்தினிக் கடவுள் முதலிய தெய்வ வழிபாடு செய்துவந்ததைச் சான்று காட்டி நிறுவ முடியும். இடம் பெருகும் என்று அஞ்சி இதனோடு நிறுத்துகிறோம். இந்தச் சரித்திர உண்மையை அறியாத சிலர், கஜபாகு அரசன் வஞ்சிமா நகரத்துக்குப் போனதையும் அங்கிருந்து பத்தினித் தெய்வ வணக்கத்தை இலங்கையில் ஏற்படுத்தியதையும் மகாவம்சம் கூறாத படியால், சிலப்பதிகாரம் கூறுகிற செய்தியை (கஜபாகு, வஞ்சி நகரத்துக்கு வந்ததும் பத்தினித் தெய்வ வழிபாட்டை இலங்கையில் ஏற்படுத்தி யதும்) சரித்திர உண்மை என்று ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறுவது சரியான காரணம் ஆகாது. இந்து மதச் செய்திகளைப் பௌத்த மதத்தார் மறைத்து விடுவதும், பௌத்த மதச் செய்திகளை இந்து மதத்தார் மறைத்துவிடுவதும் ஜைன மதச் செய்திகளைப் பௌத்தர் மறைத்துவிடுவதும், பௌத்த மதச் செய்திகளை ஜைனர் மறைத்து விடுவதும் நமது நாட்டில் நடந்த உண்மைதானே. இந்தச் சரித்திர உண்மைகளை யறியாமல் கஜபாகுவின் பத்தினித் தெய்வ வழிபாட்டை மகாவம்சம் கூறவில்லை என்று கூறுவது போலிக் காரணம் என விடுக. தமிழ்நாட்டுச் சரித்திரத்தில் காலங்களை அறிவதற்கு அடிப் படையாகவும் முக்கியமாகவும் இருப்பது கஜபாகு - செங்குட்டுவன் சமகாலச் சான்று. தமிழ்நாட்டுச் சரித்திரத்தில் உண்மையான உயர்வையும் பழமையையும் விரும்பாதவர்களுக்கு இந்தக் கஜபாகு - செங்குட்டுவன் சான்று இடைஞ்சலாக இருக்கிறது. எனவே, தமிழ் நாட்டுச் சரித்திரக் காலத்தைப் பின் தள்ளிப்போட விரும்புகிறவர்கள் கஜ பாகு சான்றைச் சீர்குலைத்துவிடப் பலவாறு முயற்சி செய்துள்ளார்கள். அதற்காக என்னென்னவோ போலிக் காரணங்களைக் கூறி இந்தச் சான்றைப் புறக்கணிக்கப் பார்த்தும், இந்தச் சான்றை அவர்களால் ஒதுக்க முடியவில்லை. அவர்களில் ஒருவரான பி.டி. சீநிவாச ஐயங்கார், சிலப்பதிகாரத்தில் கஜபாகு என்னும் பெயரே கூறப்படவில்லை என்றுங்கூட எழுதிவிட்டார். ஐயங்கார், தாம் ஆங்கிலத்தில் எழுதிய `தமிழர் சரித்திரம்’ என்னும் நூலில் இதைச் சுட்டிக் காட்டுகிறார் (P.T. Srinivasa Iyengar, History of the Tamils, 1927, p. 381). சிலப்பதிகாரம் வரந்தரு காதை 160ஆம் அடியில் உள்ள ‘கடல் சூழிலங்கைக் கயவாகு வேந்தனும்’ என்னும் வாசகத்துக்கு ஒரு பாடபேதத்தை அதன் பதிப்பாசிரியர் காட்டியுள்ளார். அது ‘இலங்கைக் காவல் வேந்தன்’ என்பது. சிலப்பதிகாரப் பதிப்பாசிரி யர் ஆங்காங்குப் பாடபேதங்களைக் குறித்திருப்பதுபோல இதிலும் இந்தப் பாடபேதத்தைக் குறித்திருக்கிறார். இதை ஐயங்கார் சுட்டிக்காட்டி, கஜபாகு என்னும் பெயரைக் கூறவில்லை என்று ஐயப்படுகிறார். ஆனால், பதிப்பாசிரியரே இதன் சரியான வாசகம் ‘கடல்சூழ் இலங்கைக் கயவாகு’, என்பது தான் என்று ஒப்புக்கொண்டு அப்படியே பதிப்பித் திருக்கிறார். ‘காவல் வேந்தன்’, என்றிருப்பது ஏடெழுதுவோரின் கைப் பிழை என்பது தெளிவாகத் தெரிகிறது. `கயவாகு வேந்தன்’ என்பதுதான் சரியான பாடம் என்பதற்குச் சிலப்பதிகாரத்திலேயே அசைக்க முடியாத சான்று இருப்பதை ஐயங்கார் அறியவில்லை. சிலப்பதிகாரம் உரைபெறு கட்டுரை, `அதுகேட்டுக் கடல்சூழிலங்கைக் கயவாகு வென்பான்’, என்று ஐயத்துக்கு இடமில்லாமல் கூறுகிறது. இந்த வாசகத்துக்குப் பாடபேதம் இல்லை. எனவே, சிலம்பு வரந்தரு காதை 160ஆம் அடியில் வருகிற ‘கடல்சூழிலங்கைக் கயவாகு வேந்தனும்’ என்னும் வாசகம் சரியான வாசகம் என்பதும் அதில் சிறிதும் ஐயமில்லை என்பதும் அதில் சிறிதும் ஐயமில்லை என்பதும் உறுதி யாகின்றது. எனவே, ஐயங்கார் கூறும் ஐயம் ஆதாரமற்ற வெற்றுரை என விடுக. `தமிழர் சரித்திரம்’ எழுதின ஐயங்கார் அப்புத்தகத்தில் பல தவறான செய்திகளையும் போலி ஆதாரங்களையும் கூறியிருப்பது போலவே இந்தப் போலி ஐயத்தையும் கூறி வைத்திருக்கிறார். இவரே, சிலம்பு உரைபெறு கட்டுரையில் வரும் ‘அதுகேட்டுக் கடல் சூழிலங்கைக் கயவாகு வென்பான்’ என்னும் அடியில் வருகிற ‘கேட்டு’ என்பதற்கு உண்மைப்பொருள் அறியாமல் எழுதிய தவற்றை முன்னமே காட்டியுள்ளோம். இதுகாறும் எடுத்துக்காட்டிய சான்றுகளினாலே, இலங்கைக் கஜ பாகுவும் சேரன் செங்குட்டுவனும் சமகாலத்தவர் என்பதும், கஜபாகு வேந்தன், செங்குட்டுவன் அமைத்த கண்ணகிக் கோட்டத்துக்கு வந்திருந்தான் என்பதும் அவன் தன் நாட்டில் பத்தினித் தெய்வ வழிபாட்டை ஏற்படுத்தினான் என்பதும் இவை சரித்திர நிகழ்ச்சிகள் என்பதும் அறிகிறோம். தக்கண தேசத்து அரசர்கள் சேரன் செங்குட்டுவன் காலத்தில் இருந்த தக்கண தேசத்து அரசர்களைப் பற்றிக் கூறுவோம். வடஇந்தியாவுக்கும் தென் இந்தியாவுக்கும் இடை நடுவிலே தக்கண தேசம் இருந்தது. தக்கண தேசத்தை அக்காலத்தில் அரசாண்டவர் சதகர்ணி அரசர். சதகர்ணி அரசர்களுக்குச் சாதகர்ணி என்றும் சாதவாகனர் என்றும் பெயர்கள் உண்டு. சதகர்ணி அரசர்களைத் தமிழர் நூற்றுவர் கன்னர் என்று கூறினார்கள். நூற்றுவர் கன்னர் என்று சிலப்பதி காரம் கூறுவது சதகர்ணி அரசர்களையே. சதகர்ணி அரசர்களின் தக்கண இராச்சியம் கிழக்கே வங்காளக் குடாக்கடல் முதல் மேற்கே அரபிக்கடல் வரையிலும், வடக்கே விந்திய மலை முதல் தெற்கே கிருஷ்ணா நதி வரையிலும் பரவியிருந்தது. சில சமயங்களில் சதகர்ணி அரசர்கள் கங்கைக்கரை வரையிலும் அரசாண்டார்கள். அப்பெரிய தக்கண இராச்சியத் துக்குக் கிழக்கிலும் மேற்கிலும் இரண்டு தலைநகரங்கள் இருந்தன. கிழக்கே கிருஷ்ணா நதிக் கரையில் தான்ய கடகம் என்னும் தலைநகரம் இருந்தது. அது இப்போதுள்ள விஜய வாடாவுக்கு அருகில் இருந்தது. மேற்கே கோதாவிரி நதிக்கரையில் பிரஷ்டானம் என்னும் பெயருள்ள தலைநகரம் இருந்தது. அது இப்போது, பைதான் நகரம் என்று கூறப்படுகிறது. தக்கண இராச்சியத்தின் கிழக்குக் கரையிலும் மேற்குக் கரையிலும் துறைமுகப்பட்டினங்கள் இருந்தன. தமிழகத்துக்கு வடக்கே வடுக நாடும் (கன்னட நாடும் தெலுங்கு நாடும். இவை தக்கண இராச்சியத்தில் அடங்கியிருந்தன) அதற்கு வடக்கே ஆரிய நாடும் (வடஇந்தியா) இருந்தன. தக்கணத்துச் சதகர்ணி அரசர்களுடன் தமிழ்நாட்டு அரசர்கள் நட்பு முறையில் இருந்தனர் என்பதற்குச் சான்றுகள் உள்ளன. முக்கியமாகச் சேர அரசர்கள் சதகர்ணி (நூற்றுவர் கன்னர்) அரசர்களுடன் நெருங்கிய நட்புடையவர்களாக இருந்தார்கள். சதகர்ணி அசரர்களுக்கும் தமிழ் அரசர்களின் நட்பு வேண்டியதாக இருந்தது. ஏனென்றால், சதகர்ணி அரசர்களுக்குச் சாகர் என்னும் அரசர்கள் பகைவராகத் தோன்றி அடிக்கடி தக்கணத்தின் மேல் படையெடுத்து வந்து போராடிக் கொண் டிருந்தார்கள். சாகர் என்பவர் இந்தியா தேசத்துக்கு வெளியிலிருந்து வந்தவர். அவர்கள் இந்தியாவில் புகுந்து வடமேற்கில் தங்கி ஆட்சி செய்தார்கள். வடமதுரையும் தக்ஷசீலமும் அவர்களின் தலைநகரங்களாக இருந்தன. அந்தச் சாகர்களில் ஒரு பிரிவினர் தெற்கே வந்து கத்தியவார், விந்திய மலைப் பிரதேசங்களைப் கைப்பற்றி அரசாண்டார்கள். இவர்கள் சிறுசிறு இராச்சியங் களை அமைத்துக்கொண்டு அரசாண்டனர். இருபதுக்கு மேற் பட்ட சிறுசிறு சாக மன்னர்கள் இருந்தார்கள். இவர்கள் `சத்ராப்’ என்று பெயர் பெற்றிருந்தனர். சத்ராப் என்றால் பிரதிநிதி என்பது பொருள். இவர்கள் எந்தச் சக்கரவர்த்திக்குப் பிரதிநிதிகள் என்பது தெரியவில்லை. ஆனால், சத்ராப் என்னும் பெயருடன் அர சாண்டார்கள் என்று இந்திய வரலாறு கூறுகிறது. விந்தியமலைப் பிரதேசங்களில் தங்கி அரசாண்ட சாக சத்ராப் களுக்கு யவனர் என்று பெயரும் உண்டு. ஆனால், இவர்கள் கிரேக் கரும் ரோமரும் ஆகிய யவனர் அல்லர். எக்காரணத்தினாலோ சாக சத்ராப்புகளுக்கு யவனர் என்னும் பெயரும் வழங்கி வந்தது. இந்தச் சத்ராப்புகளுக்கு மேற்குச் சத்ராப்புகள் என்று இந்தியச் சரித்திரத்தில் பெயர் கூறப்படுகிறது. தக்ஷண இராச்சியத்துக்கு வடக்கே விந்தியமலைப் பிரதேசத்தை யரசாண்ட சாகசத்ராப்புகள், சதகர்ணி யரசர்களின் இராச்சியத்தின் மேற்குப் பக்கங்களில் படையெடுத்து வந்து போர் செய்து நாடுகளைப் பிடித்துக் கொண்டார்கள். ஆகவே, அவர்களுடன் சதகர்ணி அரசர்கள் அடிக்கடி போர் செய்ய வேண்டியதாயிற்று. சதகர்ணி அரசர்களின் மேற்குக் கரைத் துறைமுகப்பட்டினங்களுடன் அக்காலத்தில் கிரேக்கர், ரோமர், அராபியர் முதலிய மேற்கு நாட்டினர் கப்பல்களில் வந்து வாணிகம் செய்து கொண்டிருந்தார்கள். ஆகவே, அந்தப் பட்டினங்கள் பொருள்வளம் செழித்தவைகளாக இருந்தன. அதனால், அந்தக் கடற்கரைப்பட்டினங்களைச் சாகசத்ராப்பர்கள் கைப்பற்றிக் கொண்டார்கள். மாளவ நாட்டையும் பிடித்துக் கொண்டார்கள். அப் பட்டினங்களை மீட்டுக்கொள்ளச் சதகர்ணி யரசர்கள் போரிட்டார்கள். இவ்வாறு சாகசத்ராப் - சதகர்ணி போர்கள் அடிக்கடி நிகழ்ந்து கொண் டிருந்தன. மேற்கு சத்ராப் அரசர்களின் முழு வரலாறும் சதகர்ணி யரசர்களின் முழு வரலாறும் தொடர்ச்சியாகக் கிடைக்கவில்லை. நமது ஆராய்ச்சிக்குரிய கி.பி. 2ஆம் நூற்றாண்டில் நாக பாணன் என்னும் சத்ராப் அரசன் இருந்தான். அவன் ஏறத்தாழ கி.பி. 119 முதல் 125 வரையில் அரசாண்டான். அவன் சதகர்ணி யரசரின் மகாராஷ்டிர நாட்டை வென்றான். அக்காலத்தில் இருந்த சதகர்ணியரசன் கௌதமி புத்திர சதகர்ணி என்பவன். அவனுக்கு விலிவாயகூர II என்னும் பெயரும் உண்டு. அவன் ஏறத்தாழ கி.பி. 113 முதல் 131 வரையில் அரசாண்டான். கி.பி. 125இல், கௌதமிபுத்திர சதகர்ணி நாக பாணனுடன் போர் செய்து அவன் கைப்பற்றியிருந்த நாடுகளை மீட்டுக் கொண்டான். அப்போரில் நாகபாணன் இறந்துபோனான். கௌதம புத்திர சதகர்ணி தன் நாடுகளை மீட்டுக்கொண்டது அல்லாமல் குஜராத்து, இராஜபுதனம் முதலிய நாடுகளையும் கைப்பற்றினான். இவனுடைய தாயார் பெயர் கௌதமீ பலஸ்ரீ என்பது. அவர் எழுதி யுள்ள சாசனத்தில், இவன் சாகர், யவனர் முதலியவர்களையும் வென்றான் என்றும் அபராந்தம் (வடகொங்கணம்), சௌராஷ்டிரம் (கத்தியவார்), ஆகர அவந்தி (கிழக்கு மேற்கு மாளவம்) முதலிய நாடுகளை அரசாண்டான் என்றும் கூறப்படுகிறான். (இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் யவனரை வென்று, அவரைப் பின்கட்டாகக் கட்டிக் கொண்டு வந்தான் என்று கூறப்படுகிறது. போலவே கௌதமிபுத்திர சதகர்ணியும் யவனரை வென்றான் என்று கூறப்படுவது இங்கு கருதத்தக்கது). நாகபாணனுக்குப் பிறகு கஷ்டனன் என்னும் சாகசத்ராப் அரசன் அரசனானான். டாலமி என்னும் யவன ஆசிரியர் தாம் கி.பி. 140இல் எழுதிய பூகோள நூலில் கஷ்டனனை தியஸ் தெனஸ் (Tiastenes) என்றும் அவனுடைய தலைநகரம் ஊஸெனி என்றும் கூறுகிறார். ஊஸெனி என்று இவர் கூறுவது உஜ்ஜைனி நகரத்தை. உஜ்ஜைனியைத் தமிழர் உஞ்சை என்பர். கஷ்டனன் தன் காலத்தில் இருந்த சதகர்ணி யரசனுடன் போர் செய்து அவனிடமிருந்து நருமதை யாற்றுக்கு வடக்கே இருந்த நாடுகளை மீட்டுக் கொண்டான். கஷ்டனனுடைய பேரன் சரித்திரப் புகழ்பெற்ற ருத்திரதாமன் என்பவன். இவன் மகாஷத்ரபன் என்னும் சிறப்புப் பெயர் உடையவன். இவன் காலத்திலிருந்த சதகர்ணியரசன் புலிமாயி என்பவன். புலிமாயியைப் புலுமாயி என்றுங் கூறுவர். இவனுடைய முழுப்பெயர் வாசிஷ்ட புத்திர புலிமாயி என்பது. இவன் கி.பி. 138இல் அரசனானான் என்பர். இவன் ருத்திரத்தாமனுடைய மகளை மணஞ்செய்திருந்தான். இவ்வளவு நெருங்கிய உறவு இருந்தும் புலிமாயியும் ருத்திரதாமனும் இரண்டு முறை போர் செய்தார்கள். இரண்டு போரிலும் புலிமாயி தோல்வியடைந்தான். தோல்வியடைந்து தன் இராச்சியத்தின் மேற்குப் பகுதி நாடுகளை இழந்துவிட்டான். ருத்திரதாமனுக்குப் பிறகு அவன் மகனான தாமஜத ஸ்ரீ என்பவன் அரசனானான். இவனும் மகாஷத்ரபன் என்னும் சிறப்புப்பெயர் பெற்றிருந்தான். இவனுக்குப் பிறகு இவன் தம்பிக்கும் இவன் மகனுக்கும் ஆட்சி உரிமை பற்றி உள்நாட்டுக் போர் நடந்தது. அப்போரின் காரணமாக அவர்கள் பலம் குறைந்தது. அப்போது சதகர்ணியரசன் அவர்கள்மேல் படை யெடுத்துச் சென்று அவர்களின் நாடுகள் சிலவற்றைப் பிடித்துக் கொண்டான். இவ்வாறு கி.பி. 2ஆம் நூற்றாண்டில் சாகசத்ரப - சதகர்ணி போர்கள் நடந்துகொண்டிருந்தன. இந்தப் போர்கள் சிலவற்றில் சேர அரசர்கள் சதகர்ணி யரசர்களுடன் சேர்ந்து சாக அரசர் களுடன் போர் செய்தார்கள். சேரன் செங்குட்டுவனுடைய தந்தையான இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், யவனர்களுடன் போர்செய்து, ‘நயனில் வன்சொல் யவனர்ப் பிணித்து, நெய்தலைப் பெய்து கைபிற் கொளீஇ’ கொண்டு வந்தான் என்று 2ஆம் பத்துப் பதிகம் கூறுவது இந்தச் சாகயவனர் களைத்தான். சில சரித்திரக்காரர் நெடுஞ்சேரலாதன் வென்ற யவனர் சேர நாட்டுக் கரையில் குடியேறியிருந்த யவன வணிகரை என்று கூறுவது தவறு. ஏனென்றால், ‘கடவுட் பெயரிய கான’த்தில் இவன் போர் செய்து யவனரை வென்றான் என்று ஒன்பதாம் பத்து (8 : 2) கூறுகிறது. கடவுட் பெயரிய கானம் என்பது விந்தாட வியை என்று பழைய உரையாசிரியர் கூறுகிறார். விந்தாடவி என்பது விந்தியமலைக் காடுகள். அதற்குத் தண்டகாரணியம் என்றும் பெயர் வழங்கிவந்தது. அந்தப் பகுதியை அந்தக் காலத்தில் சாகசத்ராப்பர்கள் ஆட்சி செய்திருந்தார்கள். அவர்களைத்தான் நெடுஞ்சேரலாதன் வென்றிருக்கக்கூடும். இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனின் மக்களில் ஒருவனும் நார்முடிச்சேரலுக்கும் சேரன் செங்குட்டுவனுக்கும் தம்பியும் ஆகிய ஆடுகோட்பாட்டுச் சேரலாதன், தண்டாரணியத்தில் (விந்தியமலைப் பிரதேசத்தில்) போய் ஆடுமாடுகளைக் கவர்ந்து கொண்டு வந்தான். `தண்டாரணியத்துக் கோட்பட்ட வருடையயைத் தொண்டியுட்டந்து கொடுப்பித்து’ என்று 6ஆம் பத்துப் பதிகம் கூறுகிறது. அதன் பழைய உரை, `தண்டாரணிய மென்றது ஆரிய நாட்டிலே உள்ளதோர் நாடு’ என்று கூறுகிறது. தண்டாரணியம் என்பதும் தண்டகாரணியம் என்பதும் ஒன்றே. அதாவது விந்தியமலைப் பிரதேசம். தண்டகாரணியமாகிய விந்தியமலைப் பிரதேசத்தை யரசாண்ட சாகசத்ராப் அரசர்களின் ஆனிரைகளை ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் கவர்ந்து கொண்டு வந்தான் போலும். இவன் சதகர்ணியரசர்களுக்கு உதவியாகச் சாக சத்ராப்புகளுடன் போர் செய்த காலத்தில் இது நிகழ்ந்திருக்கக் கூடும். பகையரசர்களுடைய காடுகளில் புகுந்து பகையரசரின் ஆனிரைகளைக் கவர்ந்துகொள்வது அக்காலத்து வழக்கம். அந்த வழக்கப்படி இச்சேரன் தண்டகாரணியதிலிருந்து ஆனிரைகளைக் கவர்ந்துகொண்டு வந்தான் போலும். `சேரன் செங்குட்டுவன்’ என்னும் நூலை எழுதிய திரு. மு. இராகவையங்கார் அவர்கள் இதுபற்றி இவ்வாறு எழுதியுள்ளார்: “இவனது (ஆடுகோட்பாட்டுச் சேரலாதனது) வீரச் செயல்களிலே தண்டாரணியத்துள்ளவரால் கவரப்பட்ட ஆட்டு நிரைகளை மீட்டுத் தொண்டியிற் கொணர்ந்து சேர்ப்பித்ததே சிறப்புடையது” என்று எழுதியுள்ளார். இது ஏற்கத்தக்கது அன்று. இவர் கூறுவதுபோலே, தண்டார ணியத்து அரசர் சேர நாட்டுக்கு வந்து ஆடுமாடுகளைக் கொண்டுபோக, அவற்றை இவன் சென்று மீட்டுக்கொண்டு வர வில்லை. ஆடுகோட்பாட்டுச் சேரலாதன், தண்டகாரணிய அரசர்களின் ஆடுமாடுகளைத்தான் கொண்டு வந்தான் என்று 6ஆம் பத்துப் பதிகம் கூறுகிறது. எனவே, தக்காணத்துச் சதகர்ணி யரசர்களுக்கும் சேர மன்னர் களுக்கும் நெருங்கிய நட்புறவு இருந்ததென்பதும் சதகர்ணியரசர் சார்பாகச் சேர அரசரும் சாகசத்ராப் அரசராகிய யவன அரசருடன் போர் செய்திருக்கின்றனர் என்பதும் அறிகிறோம். மேலும், சேரன், செங்குட்டுவனும் சதகர்ணி (நூற்றுவர் கன்னர்) அரசரும் நட்பாக இருந்தனர் என்றும், அவன் இமய மலைக்குச் சென்றபோது சதகர்ணி யரசர் கங்கையாற்றில் படகுப் பாலம் அமைத்துக் கொடுத்தனர் என்பதும் சிலப்பதிகாரத்தினால் அறியப்படுகின்றன. கரிகாற்சோழன் வடநாட்டுக்கு யாத்திரை சென்றபோது, அவனுக்குத் தோரண வாயிலைக் கொடுத்த அரசன் அவனுக்கு நண்பனான சதகர்ணி அரசனாக இருக்க வேண்டும். அவந்தி வேந்தன் உவந்தனன் கொடுத்த நிவந்தோங்கு மரபில் தோரண வாயிலும் என்று சிலம்பு இந்திரவிழவூரெடுத்த காதை (103-104) கூறுகிறது. இதற்கு உரை எழுதிய அடியார்க்கு நல்லார், ‘அவந்தி - உஞ்சை’ என்ற உரை எழுதுகிறார். உஞ்சை என்பது உச்சயினி நகரத்தின் தமிழ்ப் பெயர். பெரிபிளஸ் என்னும் யவன ஆசிரியர் தாம் கி.பி. 140இல் எழுதிய நூலில், தியஸ்தெனஸ் என்னும் சத்ராப் அரசனின் தலைநகரம் ஊஸெனி என்று எழுதியிருப்பதை முன்னமே கூறினோம். தியஸ்தெனஸ் என்பது கஷ்டனன் என்னும் சாக அரசன் பெயர் என்பதும் ஊஸெனி என்பது உச்சயினி (உஞ்சை) நகரம் என்பதும் முன்னமே விளக்கப்பட்டன. கரிகாற் சோழனுக்குத் தோரண வாயிலைக் கொடுத்தவன் சதகர்ணி என்னும் அரசன் என்பது தெரிகின்றது. ஏனென்றால், ‘அவந்தி வேந்தன் உவந்தனன் கொடுத்த’ என்பதற்கு அரும்பதவுரை யாசிரியர் ‘உவந்தனன் கொடுத்த - மித்திரனாய்க் கொடுத்த’ என்று உரை எழுதுகிறார். எனவே, கரிகாற் சோழனுடன் நட்புக் கொண்டிருந்த சதகர்ணி அப்போது அவந்தி நாட்டையரசாண் டிருக்க வேண்டும். கி.பி. 2ஆம் நூற்றாண்டில் தக்கண தேசத்துக்கு வடக்கே இருந்த ஆரிய நாட்டில் சிற்றரசர்கள் சிறுசிறு இராச்சியங்களை ஆண்டு வந்தார்கள். பேரரசர்கள் இருக்கவில்லை. இந்திய வரலாற்றில் அக்காலம் இருண்ட காலம் என்று சரித்திரம் கூறுகிறது. இமயவரம்பன் - வானவரம்பன் இவை சேர மன்னர்களின் சிறப்புப் பெயர்கள். சேர நாட்டு அரசர்கள் இமயவரம்பன், வானவரம்பன் என்னுஞ் சிறப்புப் பெயர்களைப் பெற்றிருந்ததைச் சங்க நூல்களிலிருந்து அறி கிறோம். மாமூலனார் என்னும் புலவர் ஒரு வானவரம்பனைக் குறிப்பிடுகிறார் (அகம் 359 : 6) வெள்ளிவீதியார் என்னும் புலவர் ஒரு வானவரம்பனைக் கூறுகிறார் (அகம் 45:17). நக்கீரர் என்னும் புலவர் ஒரு வானவரம்பனைக் கூறுகிறார் (அகம் 389 : 16). வானவன், வானவர் என்பது சேர அரச குலத்தைச் சேர்ந்த எல்லோருக்கும் உரிய பொதுப் பெயர். வானவன் வேறு வானவரம்பன் என்பது வேறு. இமயவரம்பன், வானவரம்பன் என்னும் பெயர்கள் சேர அரசர்களுக்கு மாறிமாறி வழங்கப்பட்டுள்ளன. குடக்கோ நெடுஞ் சேரலாதன், இமயவரம்பன் என்று கூறப்படுகிறான் (பதிற்று. 2ஆம் பத்து, பதிகம்). அவனுடைய மூத்த மகனான களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல் வானவரம்பன் என்று கூறப்படுகிறான் (4ஆம் பத்து 8 : 12) நார்முடிச் சேரலின் தம்பியாகிய சேரன் செங்குட்டுவன், இமயவரம்பன் என்று கூறப்பட்டுள்ளான் (சிலம்பு 26: 23, 30 : 161). இவர்களின் தம்பியாகிய ஆடுகோட்பாட்டுச் சேரலாதன், வானவரம்பன் என்று கூறப்பட்டான். (6ஆம் பத்து 8 : 12). சேர அரசர் பரம்பரையில் மூத்த குடியில் வந்த அரசர் மட்டும் இப்பெயர்களைச் சூட்டிக்கொண்டனர். இளைய குடி மரபில் வந்த அரசர்கள் இப்பெயர்களைச் சூட்டிக் கொள்ளவில்லை என்பது தெரிகின்றது. உதியஞ் சேரல் (வானவரம்பன்) குடக்கோ நெடுஞ்சேரலாதன் (இமயவரம்பன்) களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் (வானவரம்பன்) கடற்பிறக்கோட்டிய சேரன் செங்குட்டுவன் (இமயவரம்பன்) ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் (வானவரம்பன்) இச்சிறப்புப் பெயர்களைச் சேர அரசர் மட்டுமே சூட்டிக் கொண்டார்கள். ஏனைய சோழ, பாண்டிய மன்னர்கள் இப்பெயர்களைச் சூட்டிக்கொள்ளவில்லை. இமயவரம்பன் என்றால் இமயமலையை எல்லையாக வுடையவன் என்றும் வானவரம்பன் என்றால் வானத்தை எல்லையாகவுடையவன் என்றும் பொருள் கூறப்படுகிறது. மேலோட்டமாகப் பார்க்கும் போது இப்பொருள்கள் சரியானவை என்று தோன்றுகின்றன. ஆனால், சிந்தித்து ஆராய்ந்து பார்க்கும்போது இப்பொருள்கள் தவறானவை என்று தெரிகின்றன. இமயவரம்பன், இமயமலையைத் தன்னுடைய இராச்சியத்திற்கு எல்லையாகவுடையவன் என்று பொருள் கொண்டால், மற்ற மூன்று திசைகளின் எல்லை என்ன என்னுஞ் கேள்வி எழுகின்றது. ஒரு நாட்டுக்கு எல்லை கூறும்போது அதன் நான்கு திசை களுக்கும் எல்லை கூறவேண்டுமல்லவா? வடக்கு எல்லையாக இமயமலையை மட்டுங் கூறினால் போதுமா? இமயமலையை வட எல்லையாகவுடையவன் மற்ற மூன்று திசைகளிலும் கடலை எல்லையாகக் கொண்டிருந்தான் என்று கொள்ளவேண்டும். அப்படியானால், வடக்கே இமயத்தையும் மற்றக் கிழக்கு மேற்குத் தெற்குத் திசைகளில் கடல்களையும் எல்லையாக வுடைய அரசன் பாரத நாட்டின் சக்கரவர்த்தியாக அல்லவா இருக்க வேண்டும்! சேர நாட்டுச் சேர மன்னர்களில் ஒருவரேனும் இந்தியா தேசத்தின் சக்கரவர்த்தியாக இருந்து இமயம் முதல் குமரி வரையில் ஆட்சி செய்ததாகச் சரித்திரத்தில் காணப்படவில்லை. ஆகவே, 1500 மைல் நீளமுள்ள இமய மலையை வட எல்லை யாகக் கொண்டிருந்த படியால் சேரன் இமயவரம்பன் என்று பெயர் பெற்றான் என்று கூறுவது பொருந்தாது. அது பொருளற்ற வெற்றுரையாகும். சேர மன்னர் தங்களுடைய அடையாளமாகிய வில்லின் உருவத்தை இமயமலைப் பாறையில் செதுக்கி வைத்தபடியால் அவர்களுக்கு இமயவரம்பர் என்னும் பெயர் ஏற்பட்டதென்று சிலர் சொல்லக்கூடும். இக்கருத்தும் ஏற்கத்தக்கதன்று. ஏனென்றால், இமயமலைப் பாறையில் சேர அரசர்கள் மட்டும் தங்கள் அடை யாளத்தைப் பொறித்து வைக்கவில்லை. ஏனைய சோழ பாண்டியர் களும் தங்கள் அடையாளமாகிய புலி, கயல்களின் உருவங்களைப் பொறித்துவைத்துள்ளனர் என்று சங்க நூல்கள் கூறுகின்றன. செருவெங் காதலில் திருமா வளவன் ........ .............. ................ .............. இமையவர் உறையும் சிமையப் பிடர்த்தலைக் கொடுவரி ஒற்றிக் கொள்கையிற் பெயர்வோற்கு (சிலம்பு 5: 90-98) பொன்னிமயக் கோட்டுப் புலிபொறித்து மண்ணாண்டான் மன்னன் வளவன் மதிற்புகார் வாழ்வேந்தன்! (சிலம்பு: ஆய்ச்சியர் குரவை: உள்வரி வாழ்த்து 2) வடவரைமேல் வாள்வேங்கை ஒற்றினன் யார் அம்மானை .............. ...................... .................. ................. கொற்றவன் பூம்புகார் பாடேலோ ரம்மானை! (சிலம்பு- வாழ்த்துக்காதை- அம்மானை வரி 2) கயலெழுதிய இமய நெற்றியின் அயலெழுதிய புலியும் வில்லும் (சிலம்பு. 17:1-2) எனவே, சேர அரசர் இமயமலையில் தங்கள் அடையாள மாகிய வில்லைப் பொறித்தபடியால் இமயவரம்பர் என்று சிறப்புப் பெயர் பெற்றனர் என்று கூறுவது பொருந்தாது, அக் காரணம் பற்றியே ஏனைய சோழ பாண்டியருக்கும் இமயவரம்பன் என்னும் பெயர் பொருந்து மாகையினால். ஆனால், சோழ பாண்டிய அரசர்கள், இமயவரம்பன் என்னும் சிறப்புப் பெயரைச் சூட்டிக்கொண்டதேயில்லை. சேர நாட்டு அரசர் மட்டுந்தான் இமயவரம்பன் என்னுஞ் சிறப்புப் பெயரைச் சூட்டிக்கொண்டனர். ஆகவே, இமயவரம்பன் என்னும் பெயர் சேர மன்னருக்கேயுரிய தனிச் சிறப்புப் பெயராகத் தெரிகின்றது. ஆனால், அப்பெயரின் காரணம் தெரியவில்லை. இமயவரம்பன் என்பதற்கு, இமயமலையை எல்லையாக உடையவன் என்னும் பொருள் ஏற்கத்தக்கது அன்று; அதற்கு வேறு ஏதோ பொருள் இருக்க வேண்டும். அதுபோலவே, வானவரம்பன் என்றால் வானத்தை எல்லை யாக யுடையவன் என்னும் பொருளும் பொருந்தாது. நிலத்துக்கு எல்லை கூறும்போது நிலத்தில் உள்ள பொருள்களையே எல்லை யாகக் கூற வேண்டும். நிலவுலகத்துக்கு அப்பாற்பட்ட வானத்தை எல்லையாகக் கூறுவது பைத்தியக்காரர் கூற்றாகும். ஆகவே, வானவரம்பன் என்றால், வானத்தை எல்லையாகவுடையவன் என்று பொருள் கூறுவது பொருந்தாது. அது ஏற்கத்தக்கது அன்று. வானவரம்பன் என்பதற்கு வேறு பொருள் இருக்க வேண்டும். (தமிழ் மரபை யறியாத இக்காலத்து மலையாளிகள் சிலர் வானவரம்பன், இமயவரம்பன் என்னும் பெயர்களை வான (பாண) வர்மன், இமயவர்மன் என்று கூற முற்பட்டுள்ளனர். வர்மன் என்னும் பெயரைப் பிற்காலத்தில் அரசர்கள் தங்கள் பெயருடன் அமைத்துக் கொண்டது உண்மையே. உதாரணமாக மகேந்திரவர்மன், நரசிம்ம வர்மன், நந்திவர்மன், மார்த்தாண்ட வர்மன் முதலியன. ஆனால், சங்க காலத்தில், தமிழரசர்கள் வர்மன் என்னும் பெயரைச் சூட்டிக்கொள்ள வில்லை. இந்தச் சரித்திர உண்மையை யறியாத சிலர் இமயவர்மன், வான (வாண) வர்மன் என்று திரித்துக்கூறுவது தவறானது.) இமயவரம்பன், வானவரம்பன் என்னுஞ் சொற்களின் உண்மை யான உருவம் இமையவரன்பன், வானவரன்பன் என்றிருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. (இமையவர் + அன்பன் = இமையவரன்பன், வானவர் + அன்பன் = வானவரன்பன்) இமயவர் என்றால் தேவர். வானவர் என்றாலும் தேவர் என்பது பொருள். இமையவரன்பன், வானவரன்பன் என்னுஞ் சொற்கள் பிற்காலத்தில் ஏடெழுதுவோரின் கைப்பிழையால் இமயவரம்பன் வானவரம்பன் என்று மருவிவிட்டன என்று கருதலாம். வானவர் அல்லது இமையவர் ஆகிய தேவர்களுக்குப் பிரியமானவன் என்னும் பொருளில் இப்பெயர்கள் சேர மன்னருக்கு வழங்கப் பட்டுப் பிற்காலத்தில் பூதேவராகிய பிராமணருக்கு அன்பன் என்னும் பொருளில் வழங்கப்பட்டன. தேவர் என்னும் பொருள் உள்ள இமையவர், வானவர் என்னுஞ் சொற்கள் பிற்காலத்தில் பிராமணர் என்னும் பொருளில் வழங்கப்பட்டன. பிராமணர் தங்களைப் பூதேவர் என்று கூறிக்கொண்டனர். ‘பொய்யக மில்லாப் பூசுரர் வாழும் புறவம்மே’ என்றும் ‘பூவால் நீரால் பூசுரர் போற்றும் புத்தூரே’ என்றும் ‘தரைத்தேவர் பணிசண்பை தமிழ்க்காழி’ என்றும் பிற்காலத்துத் திருஞான சம்பந்தர் தமது தேவாரத்தில் கூறியிருப்பது காண்க. மற்றத் தமிழ் வேந்தர்களை விட சேர நாட்டு மன்னர்கள் பிராமணர்களை அதிகமாகப் போற்றி அவர்களுக்குத் தான தருமங்களை அதிகமாகச் செய்திருப்பதைச் சங்க நூல்களில் நன்கு காணலாம். பிராமணரிடம் அதிக அன்புள்ளவராக இருந்தது பற்றியே சேர மன்னர் இமையவரன்பர், வானவரன்பர் என்று பெயர் பெற்றிருக்கக் கூடும் என்பதற்குச் சான்றும் இருக்கிறது. பதிற்றுப் பத்து ஆறாம் பத்தின் பதிகத்தில் இதற்குச் சான்று காணப் படுகிறது. ஆடுகோட்பாட்டுச் சேரலாதன், வானவரம்பன் என்று சிறப்புப் பெயர் பெற்றிருந்தான் என்றும், அவன் பார்ப்பார்க்குக் கபிலைப் பசுக்களைத் தானங் கொடுத்துக் குடநாட்டிலே ஓரூரையும் பிரமதேயமாகத் தானஞ் செய்தான் என்றும், இவ்வாறு செய்தபடியினாலே அவன் தனக்குள்ள வானவரம்பன் என்னும் பெயரை விளங்கச் செய்தான் என்றும் அது கூறுகின்றது. பார்ப்பார்க்குக் கபிலையொடு குடநாட்டு ஓரூர் ஈத்து வான வரம்பனெப் பெயரினிது விளக்கி என்பது 6ஆம் பத்துப் பதிகம். பிராமணர்களுக்குத் தான தருமஞ் செய்தபடியினாலே அவன், வானவரம்பன் என்னும் தன் பெயரை விளங்கச் செய்தான் என்று இச்செய்யுள் திட்டமாகக் கூறுகிறது. இச்செய்யுளில் ‘வானவரம்பன்’ என்றிருக்க வேண்டிய சொல் ‘வானவரம்பன்’ என்று தவறாக இருப்பது காண்க. பிராமணருக்குக் கபிலைப் பசுக்களையும் ஊரையும் தானஞ் செய்ததால் வான வரன்பன் ((பூ) தேவர்களின் அன்பன்) என்றும் பெயர் பொருந்து மல்லாமல், வானத்தை எல்லையாகவுடையன என்னும் பொருளுள்ள வான வரம்பன் என்பது பொருந்தாதன்றோ? எனவே, இச் செய்யுளின் கருத்தையும் பொருளையும் நோக்கும்போது இதில் உள்ள ‘வான வரம்பன்’ என்பது பொருந்தாது என்பதும் ‘வானவரன்பன்’ என்பதே பொருந்தும் என்பதும் தெரிகின்றது. ஆகவே, ‘வானவரம்பன்’ என்பது பிழையான படம் ஆகும். மேலே காட்டிய சான்றினால் கடைச்சங்க காலத்தின் இறுதியிலே, அதாவது கி.பி. முதல் இரண்டாவது நூற்றாண்டு களிலே பிராமணரின் அன்பன் என்னும் பொருளில் வானவரன்பன், இமயவரன்பன் என்னும் பெயர்கள் சேர அரசர்களுக்கு வழங்கப் பட்டதைக் கண்டோம். ஆனால், இச்சொற்கள் இப்பொருளைப் பெறுவதற்கு முன்பு கி.மு. முதலாவது இரண்டாவது நூற்றாண்டு களிலே வேறு பொருளுள்ளனவாக இருந்தன என்றும் கூறினோம். அந்த வேறு பொருள் யாது என்பதைக் காண்போம். கி.மு. மூன்றாம் நூற்றாண்டிலே தமிழிந்தியாவைத் தவிர ஏனைய இந்தியா தேசம் முழுவதையும் அரசாண்ட அசோகச் சக்கரவர்த்தி `தேவனாம்பிய’ (தேவனாம்பிரிய) என்னும் சிறப்புப் பெயர் பெற்றிருந்தார் என்பது சரித்திரம் அறிந்தவர்கள் நன்கறிவார்கள். தேவனாம்பிய என்னும் பாலி மொழிச் சொல் சமஸ்கிருத மொழியில் `தேவனாம்பிரிய’ என்றாகும். தேவனாம் பிரியன் என்றால் தேவர்களுக்குப் பிரிய மானவன் என்பது பொருள். அசோகச் சக்கரவர்த்தியின் சாசனங் களிலே தேவனாம்பிய என்னும் பெயர் அவருக்கு வழங்கப்பட்டிருப் பதைக் காண் கிறோம். இலங்கையில் வழங்குகின்ற மகாவம்சம் என்னும் நூலிலும் அசோகச் சக்கரவர்த்தி `தேவனாம்பிய’ என்று கூறப் பட்டிருக்கிறார். அசோகச் சக்கரவர்த்தி, பௌத்தப் பிக்குகளைத் தமிழகம், இலங்கை முதலிய தேசங்களிலே அனுப்பிப் பௌத்த மதத்தைப் பரவச்செய்தார் என்பது சரித்திர உண்மை. அசோகச் சக்கர வர்த்தியின் பாறைக்கற் சாசனங்களில் இரண்டாவதும் பதின் மூன்றாவதும் (Inscriptions of Asoka, Rock Edicts II and XIII) இச்செய்தியைத் தெளிவாகச் சந்தேகம் இல்லாமல் கூறுகின்றன. இந்தச் சாசனங்களில் தேவனாம் பிரியராகிய அசோகச் சக்ரவர்த்தி, சேர அரசர்களைக் கேரள புத்த (கேரள புத்திரர்) என்று கூறுகிறார். அசோகச் சக்கரவர்த்தி காலத்தில் இலங்கையை யரசாண்ட அரசன் திஸ்ஸன் என்பவன். இவன் அசோகருடன் நட்பு உடைய வன். இவன் அசோகரைப் போலவே தானும் `தேவனாம்பிய’ (தேவனாம் பிரியன்) என்று பெயர் சூட்டிக்கொண்டான். அவனுக்குப் பிறகு வந்த சில இலங்கையரசர்களும் தங்கள் பெயருடன் தேவனாம்பிய என்னும் சிறப்புப் பெயரைச் சூட்டிக் கொண்டனர். அசோகச் சக்கரவர்த்தி காலத்தில் இந்தச் சேர வேந்தர்களும் அவருடன் நட்புக் கொண்டிருந் தார்கள் என்பது, அசோகச் சாசனங்கள் அவர்களைக் ‘கேரள புத்திரன்’ என்று கூறுவதிலிருந்து அறியலாம். அசோகச் சக்கரவர்த்தியுடன் நட்பு முறையில் இருந்த சேர மன்னர்கள் அவரைப் போலவே, தங்களையும் `தேவனாம்பிரியா’ என்று கூறிக்கொள்ள விரும்பி, அப்பெயரைத் தமிழாக்கி இமயவரன்பன், வானவரன்பன் (= தேவனாம்பிரியன்) என்று வைத்துக் கொண்டார்கள் போலும் (சோழ, பாண்டியர் இப்பெயரைச் சூட்டிக்கொள்ளவில்லை) கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் அசோகச் சக்கரவர்த்தி காலத்தில் சேர அரசர் தங்களுக்குச் சிறப்புப் பெயராகச் சூட்டிக் கொண்ட வானவர் அன்பன், இமயவர் அன்பன் என்னும் பெயர்கள், இரண்டு மூன்று நூற்றாண்டுகளுக்குப் பிறகு (கடைச் சங்க காலத்தின் இறுதியில்) அவற்றின் உண்மையான பொருள் மறக்கப்பட்டு, பிராமணரின் அன்பன் என்னும் பொருளில் வழங்கப்பட்டன என்று தோன்றுகிறது. இதற்குச் சான்று, மேலே காட்டப்பட்டது. அதாவது “பார்ப்பார்க்குக் கபிலையொடு குட நாட்டு ஓரூர் ஈத்து, வானவரம்பன் எனப் பெயரினிது விளக்கி” என்னும் பதிக (6ஆம் பத்து) அடிகளினால் விளங்குகின்றது. பிற்காலத்தில் இச்சொற்கள் ஏடெழுதுவோரின் கைப்பிழை யால் வானவரம்பன், இமயவரம்வன் என்று தவறாக எழுதப்பட்டு, அதற்கு வானத்தை எல்லையாகவுடையவன் இமயமலையை எல்லையாக வுடையவன் என்று பொருள் கூறப்பட்டது. சேர அரசர் ‘இமயவரம்பன்’ என்னும் சிறப்புப் பெயரைச் சூட்டிக் கொண்டதை அறிந்தோம். திரு. P.T. சீனிவாச ஐயங்கார், புலவர்கள் ‘இமயவரம்பன்’ (இமயமலையை எல்லையாகவுடைய வன்) என்று கற்பித்துத் தாங்களாகவே நெடுஞ்சேரலாதனுக்கும் செங்குட்டுவனுக்கும் இப்பெயரைச் சூட்டினார்கள் என்று புலவர்களின் மேல் பழிபோடுகிறார். (P.T. Srinivasa Iyengar, History of the Tamils, 1929, p. 503.) இது சிறிதும் பொருந்தாது. இப் பெயர்கள் புலவர்களால் தங்கள் விருப்பப்படி சூட்டியவையல்ல. சேர அரசர்களே தங்களுக்குப் பரம்பரைப் பெயராகச் சூட்டிக் கொண்ட பெயர்கள் என்பதை மேலே விளக்கினோம். இரு பெருங் காவியங்கள் சேரன் செங்குட்டுவனின் இறுதிக் காலத்தில் (கி.பி. 2ஆம் நூற்றாண்டின் கடைசியில்) சிலப்பதிகாரம், மணிமேகலை என்னும் இரண்டு சிறந்த காவியங்கள் முறையே இளங்கோ அடிகளாலும் மதுரைக் கூலவாணிகன் சாத்தனாராலும் இயற்றப் பட்டன. சிலப்பதி காரம் இயற்றிய இளங்கோ அடிகள், சேரன் செங்குட்டுவனுடைய தம்பியார். சமண சமயத்தை மேற்கொண்டு துறவு பூண்டு குணவாயிற் கோட்டத்தில் துறவிகளுடன் வசித்து வந்தார். மணிமேகலைக் காவியத்தை இயற்றிய கூலவாணிகன் சாத்தனார் மதுரையில் தானிய வாணிகம் செய்தவர். இவர் இளங்கோ அடிகளுக்கும் சேரன் செங்குட்டுவனுக்கும் நண்பர். அக்காலத்தில் தமிழில் அகப்பொருள், புறப்பொருள் பற்றிய தனிச் செய்யுட்களும் பரிபாடல் முதலிய இசைத் தமிழ் நூல்களும் இருந்தன. தமிழ்நாட்டுக்கே உரிய காவிய நூல்கள் அக்காலத்தில் தமிழில் இல்லை. பாரதம், இராமாயணம் போன்ற நூல்கள் அக்காலத்தில் தமிழில் இருந்தன என்பதற்குச் சான்றுகள் உள்ளன. தொடர்நிலைச் செய்யுளாகச் சிலப்பதிகாரத்தையும் மணிமேகலையையும் இவ்விரு பெரும் புலவர்கள் முதன் முதலாக இயற்றினார்கள்; இவர்கள் தங்கள் நூல்களுக்கு இதிகாசப் புராணக் கதைகளையோ புனை கதைகளையோ பொருளாகக் கொள்ளாமல், தங்கள் காலத்தில் நிகழ்ந்த, நாட்டு மக்களின் மனத்தை ஈர்த்த, இரண்டு நிகழ்ச்சிகளை ஆதாரமாகக் கொண்டு இவ்விரண்டு காவியங்களை இயற்றினார்கள் என்பது குறிப்பிடத் தக்கது. காவிரிப்பூம்பட்டினத்தில் பெருஞ்செல்வனாக இருந்த கோவலன் தன் பெருஞ் செல்வத்தைச் செலவு செய்து வறுமை யடைந்து தன் மனைவியாகிய கண்ணகியுடன் மதுரைக்குச் சென்று, வாணிகஞ் செய்து பொருள் ஈட்ட முயன்றான். அவன் தன் மனைவியின் காற் சிலம்பை விற்கச் சென்றபோது களவுக் குற்றஞ் சாற்றிக் கொல்லப் பட்டான். அவன் மனைவி கண்ணகி பாண்டியனிடஞ் சென்று, தன் கணவன் கள்வன் அல்லன் என்பதை நிறுவினாள். பாண்டியன் நீதி தவறி, நல்லவன் ஒருவனை அநியாயமாகக் கொலை செய்ததற்காக, ஆத்திரங் கொண்ட நகர மக்கள் அவனுடைய அரண்மனைக்குத் தீயிட்டுக் கொளுத்தினார்கள். பிறகு, கண்ணகி வாழ்க்கையை வெறுத்துப் பட்டினியுடன் பதினான்கு நாட்கள் வழி நடந்து கடைசியில் ஒரு வேங்கைமர நிழலில் இருந்து உயிர்விட்டாள். பத்தினியாகிய கண்ணகியாருக்குச் சேரன் செங்குட்டுவன் கோட்டம் அமைத்துச் சிறப்புச் செய்தான். இந்நிகழ்ச்சியை ஆதாரமாகக் கொண்டு சிலப்பதிகாரக் காவியம் இயற்றப்பட்டது. மற்றொரு நிகழ்ச்சி மணிமேகலையின் துறவு. கோவலனுக்கும் புகழ்பெற்ற நாடகக் கணிகையாகிய மாதவிக்கும் பிறந்த மகள் மணி மேகலை. அவள் மங்கைப் பருவமடைந்த போது அவளைக் காதற் கிழத்தியாகப் பெறச் சோழ அரசன் மகனான உதயகுமரன் விரும்பினான். இந்தக் காதல் முயற்சியில் அவ்விளவரசன் தற் செயலாகக் கொலை செய்யப்பட்டு இறந்தான். பிறகு மணிமேகலை வாழ்க்கையில் வெறுப்புக் கொண்டு பௌத்த மதத்தை மேற் கொண்டு துறவு பூண்டு, அறச்செயல்களைச் செய்துகொண்டிருந் தாள். பிறகு காஞ்சீபுரத்தில் வீடுபேறடைந்தாள். இந்நிகழ்ச்சியை ஆதாரமாகக் கொண்டு இயற்றப்பட்டது மணிமேகலை என்னும் காவியம். சிலப்பதிகாரம்: மேலே கூறியபடி சிலப்பதிகாரம், கோவலன் கண்ணகியின் வரலாற்றைக் கூறுகிறது. இது அவலச் சுவையுடைய வரலாறு. செல்வச் சீமானாகப் பிறந்த கோவலன், செல்வச் சீமான் மகள் கண்ணகியை மணந்து வாழ்ந்து வந்தான். சில காலத்துக்குப் பிறகு அவன், மாதவி என்னும் நாடகக் கணிகையின் ஆடல் பாடல் களில் ஈடுபட்டுக் கண்ணகியைத் துறந்து மாதவியின் இடத்திலே தங்கித் தன் செல்வங்களையெல்லாம் செலவு செய்து வறுமை யடைந்தான். பிறகு, தான் செய்த தவற்றை உணர்ந்து, கண்ணகி யிடஞ் சென்றான். கண்ணகியிடம் அவளுடைய காற்சிலம்புகள் மட்டும் இருந்தன. அதை விற்று அப்பணத்தை முதலாக வைத்து வாணிகஞ் செய்து இழந்த செல்வத்தைச் சம்பாதிக்க எண்ணி அவனும் கண்ணகியும் உற்றார் உறவினருக்குச் சொல்லாமலே மதுரைக்குப் போனார்கள். கவுந்தியடிகள் என்னும் சமண சமயப் பெண்பால் துறவியார், வழியில் எதிர்ப்பட்டு அவர்களுடன் மதுரைக்குச் சென்றார். இவர்கள் மூவரும் காவிரிப்பூம் பட்டினத்தில் இருந்து கால்நடையாகவே நடந்து மதுரைக்குச் சென்றார்கள். மதுரையை யடைந்ததும் கவுந்தியடிகள், துறவிகள் தங்கி யிருந்த இடத்தில், நகரத்துக்கு வெளியே தங்கினார். அவர்களுடன் சென்ற கோவலன் கண்ணகியர், துறவிகளுடன் தங்கியிருக்கக் கூடாதாகை யால், மதுரை நகரத்தில் தங்க ஒரு இடத்தைக் கண்டு வரும்படி கவுந்தியடிகள் கோவலனுக்குக் கூற, கோவலன் நகரத்துக்குள் சென்று நகரத்தைச் சுற்றிப் பார்த்துத் தங்கியிருக்க இடம் ஏற்படுத்தாமலே திரும்பிவந்துவிட்டான். செல்வச் சீமானாக வாழ்ந்திருந்த தான், இப்போது வறுமையடைந்த நிலையிலும், பிறர் இல்லத்தில் சென்று தங்குவது தன்னுடைய தன்மானத்துக்குத் தாழ்ந்ததாக அவன் கருதினான். தான் இன்னான் என்பதை மதுரை வணிகரிடம் இவன் கூறியிருந்தால் அவர்கள் இவன் குலப்பெருமை காரணமாக இவனைத் தங்கள் விருந்தினனாக விரும்பி ஏற்றுக் கொண்டிருப்பார்கள். கோவலன் அவ்வாறு பிறர் ஆதரவில் தங்கியிருக்க விரும்பவில்லை. தங்க இடந் தேடாமல் திரும்பிவந்த கோவலனையும் தன்னுடன் இருந்த அவன் மனைவி கண்ணகியையும் கவுந்தி யடிகள், மாதரி என்னும் இடைக்குல மூதாட்டியிடம் அடைக் கலமாகக் கொடுத்து அவள் வீட்டுக்கு அனுப்பினார். கோவலனும் கண்ணகியும் மாதரியின் குடிலில் தங்கினார்கள். மாதரியின் மகள் ஐயை என்னுஞ் சிறுமி கண்ணகிக்குத் தோழியாக இருந்தாள். அடுத்த நாள் கோவலன், கண்ணகியின் காற்சிலம்பை விற்கப் போனான். போகும்போது வீதியில் பாண்டியனுடைய பொற் கொல்லன் தற்செயலாக வருவதைக் கண்டு அவனிடம் சிலம்பை விற்பதற்குக் காட்டினான். அயல்நாட்டான் ஒருவன் வறுமையான நிலையில் அதிக விலைமதிப்புள்ள பொற்சிலம்பை விலை கூறுவதைக் கண்டு பொற்கொல்லன், தான் முன்பு பாண்டிமா தேவியின் காற்சிலம்பைச் செப்பனிடுவதற்காகக் கொண்டு வந்தவன் அதனைத் திருப்பிக் கொடுக்காமல் களவாடிக் கொண்டவனா தலின், தன் களவுக் குற்றத்தை இப்புதியவன் மேல் சுமத்த இதுவே தக்க சமயம் என்று கருதினான். ஆகவே, கோவலனைத் தன் இல்லத்தின் அருகில் இருத்தித் தான் சிலம்பை விலைபேசி வருவதாகச் சொல்லிப் போனான். போனவன், அரசியின் பொற்சிலம்பைக் களவாடிய கள்ளன் தன்னிடம் வந்து அதை விலைபேசி விற்க வந்திருக்கிறான் என்று கூறி அரசனை நம்பச் செய்தான். அரசன், அக்காலத்துச் சட்டப்படிக் கள்ளனைக் கொல்ல வேண்டிய முறைப்படி வீரர் சிலரை அனுப்பிக் கள்ளனைக் கொன்று சிலம்பைக் கொண்டு வரும்படி கட்டளை யிட்டான். வீரர்களை அழைத்து வந்த பொற்கொல்லன் கோவலனைக் கள்ளன் என்று காட்ட, அவர்கள் அவனை வெட்டிவிட்டனர். பாண்டிமாதேவியின் காற்சிலம்பைக் களவாடிய குற்றத்துக் காக அயல்நாட்டான் ஒருவன் கொலை செய்யப்பட்ட செய்தி நகரம் முழுவதும் பரவியது. அச்செய்தி கண்ணகியின் செவிக்கும் எட்டியது. களவுக் குற்றஞ் சாற்றிக் கொலை செய்யப்பட்டவன் தன் கணவனே என்று அறிந்ததும் அவள் மனம் துடித்தது. துன்பமும் துயரும் அவள் மனதைச் சூழ்ந்து கொண்டன. பெருந்துக்கத்தில் மூழ்கினாள். பதை பதைத்துப் புலம்பிக் கொண்டு கோவலன் வெட்டுண்டு கிடந்த இடத்துக்குச் சென்று அவனைத் தழுவிக் கொண்டாள். வாய்விட்டு அலறிப் புலம்பினாள். அந்த நிலையில் தன் கணவனுக்குச் செய்ய வேண்டிய முக்கியமான கடமையொன்று தன்மீது இருப்பதை யுணர்ந்தாள். தன் கணவன் கள்வன் அல்லன், அத்தகைய இழி செயல் செய்தவன் அல்லன், அவன் பொய்யாகக் களவுக் குற்றம் சாற்றப்பட்டு அநியாயமாகக் கொல்லப்பட்டான் என்பதை அரசனுக்கும் உலகத்துக் கும் காட்டவேண்டிய பொறுப்பு தன்மேல் இருப்பதை உணர்ந்தாள். தன் கணவனுடைய மானம் மரியாதைகளைக் காப்பாற்றவேண்டிய பொறுப்பு - கடமை - தன் ஒருத்தி மேல் மட்டும் இருப்பதை உணர்ந்தாள். அக்கடமையைச் செய்ய வீறிட்டெழுந்தாள். உண்மையுள்ள இடத்தில் வீரம் பொலியுமன்றோ? நாட்டு மக்களை விளித்து அறை கூவினாள். இந்த நகரத்தில் நற்குடிப் பெண்டிர் இல்லையா? பிள்ளைகளைப் பெற்றெடுத்த சான்றோர் இல்லையா? தெய்வம் இல்லையா? நீதி நியாயம் இல்லையா? என்று முறையிட்டாள். இதைக் கேட்ட நகர மக்கள் நீதிமுறை தவறிவிட்டதை யுணர்ந்தார்கள். அரசன் தவறாக, அநீதியாக நல்லவன் ஒருவனைக் கொன்றுவிட்டான் என்பதை யுணர்ந்தார்கள். நகரத்தில் மக்களிடையே பரபரப்பு ஏற்பட்டது. ஆனால், இதன் உண்மையை அவர்களால் நிச்சயமாக அறிய முடியவில்லை. அவர்களுடைய அனுதாபமும் நல்லெண்ணமும் கண்ணகிபால் சாய்ந்தது. ஆனால், உண்மை யாது? தவறு யாருடையது? என்று அறியாமல் அவர்கள் மனம் ஊசலாடியது. கண்ணகியார் அரண்மனைக்குச் சென்று அரசன் முன்பு தன் வழக்கை எடுத்துரைத்தார். அரசன் தான் தன் கடமையைச் செய்ததாகக் கூறினான். ‘கள்ளனைக் கொல்வது கொடுங்கோல் அன்று, அரசருடைய கடமை. அதன்படியே நான் செய்தேன்’ என்று கூறினான். ‘இல்லை, என் கணவன் களவு செய்யவில்லை’ என்று வாதாடினாள் கண்ணகி. பாண்டியன், தன் அரசியின் சிலம்பில் முத்துக்கள் பரலாக இருந்தன என்றான். கண்ணகி, தன் சிலம்பில் மாணிக்கக் கற்கள் பரலாக இருந்தன என்றாள். சான்று காண்பதற்காகக் கண்ணகியின் சிலம்பு அவைக்குக் கொண்டு வரப்பட்டது. அதை உடைத்தபோது அதனுள்ளிருந்து மாணிக்கப் பரல்கள் வெளியே விழுந்தன. ஆம்! இது கண்ணகியின் காற்சிலம்புதான். பாண்டி மாதேவியின் சிலம்பு அன்று என்பது நிறுவப்பட்டது. அரசன் திடுக்கிட்டான். தான் பெரிய தவறு செய்து விட்டதை உணர்ந்தான். அவன் மனம் என்ன பாடுபட்டது! பாண்டியன், ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன், நீதிமான்; செங்கோல் வேந்தன்; கல்வி கற்ற புலவன்; ‘உற்றுழியுதவியும் உறுபொருள் கொடுத்தும்’ என்று தொடங்கும் புறநானூற்றுப் பாட்டைப் (புறம் 183) பாடியவன் அவன். இத்தகைய அறிஞனான பாண்டியன், தீவினைப் பயனாக, இத்தகைய பெரிய தவறு செய்துவிட்டதையறிந்தபோது அவன் மனம் துடித்தது. அறிவு கலங்கியது. இருதயந் துடித்து அவன் சிம்மாசனத்தில் இருந்த படியே உயிர்விட்டான். அரசன் அநீதி செய்தான், கண்ணகியின் கணவன் கள்ளன் அல்லன் என்னும் செய்தி தெரிந்தவுடன் நகர மக்களின் உணர்ச்சி ஆவேசமாக மாறிவிட்டது. அவர்களில் சிலர் அரண்மனையைத் தீயிட்டுக் கொளுத்திவிட்டனர். அரண்மனை தீயினால் எரிந்தது. இடைக்குல மூதாட்டி தன் வீட்டில் வந்திருந்த கோவலன் கொலை செய்யப்பட்டதையும் கண்ணகியின் துன்பத்தையும் அரசன் மனம் துடித்து இறந்ததையும் அறிந்து தீராத் துயரம் அடைந்தாள். அன்புள்ளம் படைத்த அம்மூதாட்டியினால் இத் துயரங்களைத் தாங்க முடியவில்லை. அவள் ஓடோடியுஞ் சென்று அரண்மனை எரிந்து கொண்டிருக்கிற தீயில் விழுந்து மாய்ந்து போனாள். கண்ணகியார் தன் துயரம் ஆற்றாமல், கொற்றவைக் கோயிலின் முன்னே போய்த் தன் கைவளைகளை யுடைத்துவிட்டு வைகைக் கரைவழியே நடந்தார். (அக்காலத்துப் பெண்கள் கைம்மை யடைந்தால், கைவளைகளை உடைத்து விடுவது வழக்கம்). நடந்த கண்ணகியார் உணவும் நீரும் கொள்ளாமலும் ஓரிடத்தில் தங்காமலும் நெடுக நடந்தார். பதினான்கு நாட்களுக்குப் பிறகு ஒரு குன்றின்மேல் வேங்கை மரத்தின் கீழ் வந்து தங்கினார். அப்போது அவர் உயிர் அவர் உடலைவிட்டுப் பிரிந்தது. கோவலன் கொலை செய்யப்பட்டதும், அரசன் இறந்ததும், அரண்மனை தீயிடப்பட்டதும் மாதரி அத்தீயில் விழுந்து இறந்ததும் ஆகிய துன்பச் செய்திகளைக் கேட்ட கவுந்தியடிகள் ஜைன சமயத்தவராதலின், கல்லேகனை நோன்பு (உண்ணாவிரதம்) இருந்து உயிர்விட்டார். கோவலன் மதுரையில் கொலையுண்டதும் கண்ணகி துன்புற்றதும் ஆகிய செய்திகளைக் கேட்ட கோவலன் தாய் துயரம் பொறுக்காமல் இறந்துபோனாள். அவன் தந்தையான மாசாத்துவான் தன் செல்வங்களைத் தானம் செய்துவிட்டுப் பௌத்த மதத்தை மேற் கொண்டு துறவு பூண்டான். கண்ணகியின் தாய், தன் மகளுக்கும் மருமகனுக்கும் நேரிட்ட தீராத் துயரத்தைக் கேட்டுத் தானும் துன்பம் தாங்க முடியாமல் உயிர்விட்டாள். அவள் தந்தையான மாநாய்கனும் துயரம் தாங்காமல் தன் செல்வங்களையெல்லாம் தான தருமம் செய்து ஆசீவகமத்துத் துறவியானான். மாதவியும் கோவலன் கண்ணகியரின் துன்பத்தைக் கேட்டு நாடகத் தொழிலைவிட்டுப் பௌத்த மதத்தைச் சேர்ந்து தவம் செய்தாள். இவ்வாறு அவலச் சுவைச் செய்தியுள்ளது இந்நிகழ்ச்சி. சேரன் செங்குட்டுவன், கண்ணகியின் செய்தியையறிந்து பத்தினி யாகிய அவருக்குக் கோட்டம் அமைத்துச் சிறப்புச் செய்தான். இந்த நிகழ்ச்சிகளைக் கொண்டு இளங்கோவடிகள் சிலப்பதி காரம் என்னும் இச்சிறந்த காவியத்தை இயற்றினார். இளங்கோ அடிகள் இதை இயற்றுவதற்கு முக்கியக் காரணமும் உண்டு. இக்காவியத் தலைவராகிய கோவலனும் கண்ணகியும் சமண சமயத்தவர். சமண சமயத்தவரான இளங்கோ அடிகள் தம் சமயத்தைச் சேர்ந்த இவர்களின் வரலாற்றை யமைத்து இக் காவியத்தை இயற்றினார். அன்றியும், நல்வினை, தீவினை என்னும் ஊழின்படி உயிர்கள் நன்மை தீமையடைகின்றன என்னும் சமண சமயக் கொள்கையை வற்புறுத்து வதற்கு இந்நிகழ்ச்சிகள் உதவியாக இருக்கின்றன. மற்றொரு காரணம், அரைசியல் பிழைத்தோர்க் கறங்கூற் றாவதும் உரைசால் பத்தினிக் குயர்ந்தோர் ஏத்தலும் ஊழ்வினை யுருத்துவந் தூட்டும் என்பதுஉம். ஆகிய செய்திகளைக் கூறுவதற்கு இக்காவியம் இயற்றப் பட்டது. காவியக் கற்பனை காவிய நூல் சிறப்பாக அமைய வேண்டுமானால் அதில் கற்பனைகளும் உவமைகளும் வர்ணனையும் மெய்ப்பாட்டுச் சுவை களும் பெரிதும் இடம்பெற வேண்டும். இவையெல்லாம் இக்காவியத் தில் இடம்பெற்று அழகுடன் மிளிர்கின்றன. இது வெறுங் காவியம் மட்டும் அன்று, இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழ் இலக்கியமும் ஆகும். சரித்திர நிகழ்ச்சியாக இருந்தாலும் கதையாக இருந்தாலும் அவை காவிய நிலையை யடையும்போது அதில் கற்பனைகள் இடம் பெறாவிட்டால் காவியத் தன்மை யடையாது. அந்த முறைப்படி இளங்கோ அடிகள் இக்காவியத்தில் கற்பனைகளைப் புகுத்தியிருக் கிறார். உதாரணமாகச் சிலவற்றை எடுத்துக் காட்டுவோம். கோவலனை அநியாயமாகக் கொன்ற காரணத்துக்காக மதுரை மக்கள் சீற்றங்கொண்டு அரசனுடைய அரண்மனையைக் கொளுத்தி னார்கள் என்பதே உண்மை நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சியை உள்ளது உள்ள படியே கூறாமல் கற்பனைகளைப் புனைந்து வியப்புச் சுவை புலப்படும் படி எழுதுகிறார் இளங்கோ அடிகள். நகர் என்பதற்கு அரண்மனை என்றும் நகரம் என்றும் இரண்டு பொருள் உண்டாகையால் அவ்விரு பொருள்படும்படி இக் காவியத்தில் கூறுகிறார். அத்துடன் நிற்காமல், அக்கினிக் கடவுளே நேரில் வந்து கண்ணகியிடத்தில் ‘எந்தெந்த இடங்களை எரிக்க வேண்டும்’ என்று கேட்டதாகவும் இந்திந்த இடங்களை எரிக்க வேண்டும் என்று கண்ணகி கூறியதாகவும் கற்பிக்கிறார். உணர்ச்சி மிகுதியினால் ஆவேசங்கொண்ட நகர மக்கள் அரண்மனைக்குத் தீவைத்ததைக் கூறாமல், கண்ணகியார் தம் நகிலைப் பிய்த்து எறிந்து நகரத்தைத் தீயிட்டு எரித்ததாகவும் கற்பிக்கிறார். காவிரிப்பூம்பட்டினத்தில் இந்திர விழா நடக்கும் சிறப்பையும் அவ்விழாக் காலத்தில் மாதவி அரங்கம் ஏறி ஆடல் பாடல் நிகழ்த்திப் பதினோராடல்களை ஆடும் சிறப்பைக் கூற புகுந்தவர், விழாவையும், ஆடல்களையும் பார்ப்பதற்காக இமய மலைக்கு அப்பால் உள்ள வடசேடியிலிருந்து விஞ்சையன் ஒருவன் தன் மனைவியுடன் ஆகாய வழியே பறந்து வந்து இக்காட்சிகளைக் கண்டான் என்றும் புனைந்து கற்பிக்கிறார். இறந்து கிடந்த கோவலனைக் கண்ணகியார் தழுவிப் புலம்பி யழுதபோது கோவலன் உயிர்பெற்று அவர் கண்ணீரைத் துடைத்து ‘இங்கே இரு’ என்று கூறி விண்ணுலகம் போனான் என்றும்புனைந்து கற்பிக்கிறார். இதுபோன்று பல செய்திகளைக் கற்பனையாகக் கூறுகிறார். காவிய நூல் அழகும் சிறப்பும் பெறவேண்டுமானால் இத்தகைய புனைந்துரைகளும் கற்பனைகளும் மெய்ப்பாட்டுச் சுவைகளும் இடம்பெற வேண்டும் என்பது கவிமரபு. இந்த மரபுப் படியே இளங்கோ அடிகள் இடத்துக்கேற்றபடி கற்பனைகளைப் புனைந்து கற்பித்திருக் கிறார். இக்கற்பனைகளுக்கும் உண்மையான நிகழ்ச்சிகளுக்கும் யாதொரு தொடர்பும் இல்லை. இதனை அறியும் அறிவில்லாதவர், காவியப் புலவனின் கற்பனைகளையும் உண்மை நிகழ்ச்சி என்று கருதிவிடுகின்றனர். ஆகவே, இந்நிகழ்ச்சி கட்டுக்கதை என்று கூறுகின்றனர். கோவலன் கொலை, கண்ணகியின் முடிவு, மாதரி தீயில் விழுந்து இறந்தது, கவுந்தியார் பட்டினி கிடந்து இறந்தது, மாசாத்துவான், மாநாய்கன், மாதவி முதலியோரின் துறவு, கண்ணகி கோவலரின் தாய்மார் தீரா மனக் கவலையினால் உயிர்விட்டது முதலிய எல்லாம் சேர்ந்து துன்பியலாக முடிகிற இந்த நிகழ்ச்சியை முழுதும் துன்பிய லாகக் காட்டாமல், கோவலன், பாண்டியன் இவர்கள் இறந்தமை மட்டுங் கூறி மற்ற அவலச் சுவைகளைக் குறிப்பாகக் கூறி, இடையிடையே இசை நிகழ்ச்சி, கூத்து நிகழ்ச்சிகளைப் புகுத்தி இக்காவியத்தை மிகச் சிறப்பாக முடித்திருக்கிறார் இளங்கோ அடிகள். இவர் சமண சமயத்தவ ராக இருந்தும், சமயக் காழ்ப்பு இல்லாமல், ஏனைய மதங்களைக் கூறகிற இடத்தில் அந்த மதங்களைச் சிறப்பாகக் கூறுகிறார். மணிமேகலை: மதுரைக் கூலவாணிகன் சாத்தனார் இயற்றிய மணிமேகலைக் காவியத்தைப் பார்ப்போம். இந்தக் காவியத் தலைவி மணிமேகலை. கோவலனின் காமக் கிழத்தியாகிய இசைக்கலை நாடகக் கலை களினால் புகழ்பெற்ற மாதவியின் மகள் இவள். மாதவி இசைக்கலை, நாட்டியக் கலை, பதினோராடல் முதலிய கலை களையெல்லாங் கற்றுச் சோழ னுடைய அவையில் அரங்கேறித் ‘தலைக்கோலி’ என்னும் சிறப்புப் பட்டம் பெற்றவள். புகார் நகரத்துச் சீமானாகிய கோவலன் அவளுடைய கலைகளில் ஈடுபட்டுத் தன் மனைவியாகிய கண்ணகி யையும்விட்டு இவளிடத் திலேயே தங்கிவிட்டான். இவர்களுக்குப் பிறந்த பெண் குழந்தை தான் மணிமேகலை. கோவலன் மாதவியரின் இன்பகரமான வாழ்க்கை பன்னிரண்டு யாண்டு இனிது கழிந்தது. குமாரி மணிமேகலை வளர்ந்து பன்னிரண்டு வயதடைந்தாள். அவளும் இசைக்கலை, நாட்டியக் கலைகளைப் பயனிறு அரங்கேறும் நிலையில் இருந்தாள். காவிரிப்பூம்பட்டினத்தில் ஆண்டுதோறும் நடந்த இந்திர விழாக் காலத்தில் மாதவி நகர அரங்க மேடையில் ஏறி நடன நாட்டியங்களையும் ஆடல் பாடல்களையும் நிகழ்த்துவது வழக்கம். பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஊழ்வினைப் பயனாகக் கோவலன், மாதவியைப் பிரிந்து மதுரைக்குப் போய்க் கொலை யுண்டிறந்தான், அவன் இறந்ததைக் கேட்டுத் துன்பமடைந்தாள் மாதவி. தான் கணிகையர் குலத்தில் பிறந்தவளாக இருந்தும் கற்புடைய மங்கையாகவே அவள் இருந்தாள். கோவலன் இறந்த பிறகு, தான் பயின்றிருந்த நாடகக் கலையை நிறுத்திவிட்டு, பக்தி வாழ்க்கையில் ஈடுபட்டாள். அதுமட்டும் தன் மகளான மணி மேகலையையும் கணிகையர் வாழ்க்கையிலிருந்து விலக்கிக் குடும்ப வாழ்க்கையில் ஈடுபடுத்த உறுதிகொண்டாள். ஆனால், இதற்கு இடையூறாக இருந்தாள் இவளுடைய தாயாகிய சித்திராபதி. மாதவியின் தாயாகிய சித்திராபதி, கணிகையர் வாழ்க்கையைப் பின்பற்றி நடக்க வேண்டும் என்னும் கருத்துடையவள். வண்டுகளும் வண்ணத்துப்பூச்சிகளும் பூக்களில் சென்று தேனை உறிஞ்சுவது போல, கணிகையராகப் பிறந்தவர் செல்வர்களின் பொருளை உறிஞ்சி வாழ வேண்டும் என்னும் கொள்கையுடை யவள். ஆகவே, சித்திராபதி தன் மகளான மாதவியை மீண்டும் கணிகையர் வாழ்க்கையில் புகுத்த வேண்டும் என்று முயற்சி செய்தாள். மேலும், தன் பேர்த்தியாகிய மணி மேகலையை நாடக அரங்கேற்றித் தலைக்கோலிப் பட்டம் பெறச் செய்து, அவளையும் கணிகையர் வாழ்க்கையில் புகுத்திப் பொருள் திரட்ட வேண்டும் என்னும் விருப்பம் உடையவளாக இருந்தாள். அந்த ஆண்டு (கோவலன் மதுரையில் கொலையுண்டபிறகு அடுத்த ஆண்டு), வழக்கம்போலக் காவிரிப்பூம்பட்டினத்தில் இந்திர விழா நடந்தது. விழாக் காலத்தில் மாதவியின் ஆடல் பாடல்கள் நிகழாமல் இந்திரவிழா சிறப்படைவதில்லை. வழக்கம் போல நகர மக்கள் மாதவியை நாடக மேடையில் எதிர்பார்த்தனர். ஆனால், மாதவியோ ‘இனி மேடை ஏறுவதில்லை’ என்று தீர்மானித்துவிட்டாள். தன் மகளான மணிமேகலையைக் கணிகையர் வாழ்க்கையில் புகுத்தாமல் அவளை நல்லவருக்கு மணஞ் செய்து கொடுத்துக் குடும்ப வாழ்க்கையில் ஈடுபடுத்தவும் உறுதிகொண்டாள். ஆகவே, மாதவி இந்திரவிழாவின்போது அரங்கத்துக்குப் போகாமல் இருந்துவிட்டாள். தாயாகிய சித்திராபதி, அரங்கம் ஏறி ஆடல் பாடல் நிகழ்த்தும்படி தன் மகளை வற்புறுத்தினாள். மாதவி போகவில்லை. சித்திராபதி மேலும் வற்புறுத்தவே, மாதவி தான் சித்திராபதியிடம் இருக்கும் வரையில் தன் எண்ணம் நிறைவேறாது என்று கருதித் தன் மகளான மணிமேகலையுடன் பௌத்தப் பள்ளிக்குப் போய்விட்டாள். பௌத்தப் பள்ளியில் இருந்த பிக்குகளின் தலைவரான பேர்பெற்ற அறவண அடிகள் இடஞ்சென்று தானும் தன் மகளும் நல்வாழ்க்கையில் ஈடுபடப் போவதைத் தெரிவித்துத் தங்களைப் பௌத்த மதத்தில் சேர்த்துக் கொள்ளும்படி வேண்டினாள். அறவண அடிகள் மாதவிக்கும் மணி மேகலைக்கும் திரிசரணம், பஞ்சசீலங்களைக் கொடுத்துப் பௌத்த மதத்தில் சேர்த்துக்கொண்டார். கடைசி முறையாகச் சித்திராபதி, வயந்த மாலை என்பவளை மாதவியிடம் அனுப்பி அரங்கமேடைக்கு வந்து ஆடல் நிகழ்த்துமாறு கேட்டாள். மாதவி கண்டிப்பாக மறுத்துவிட்டாள். மாதவி தன் கருத்துக்கு இணங்காமற்போகவே, சித்திராபதி தன் பேர்த்தியாகிய மணிமேகலையை எப்படியாவது தன் வசப்படுத்தி அவளைக் கணிகையர் வாழ்க்கையில் புகுத்த வேண்டும் என்று முயன்றாள். சோழ அரசன் மகனான உதய குமாரன், மணிமேகலையின் மேல் காதல் கொண்டிருப்பதை யறிந்து அவனிடஞ் சென்று மணி மேகலையைக் கைப்பற்றும்படி தூண்டினாள். ஒரு நாள் மாலை வேளையில் மணிமேகலை, சுதமதி என்பவளுடன் உவவனம் என்னும் பூஞ்சோலைக்குப் போனாள். அவள் அங்குச் சென்றதை அறிந்த உதய குமாரன் தன் தேரை ஓட்டிக்கொண்டு அங்கே போனான். அவன் வந்ததைக் கண்ட மணிமேகலை அவன் தன்னைக் கைப்பற்ற வந்திருக்கிறான் என்பதை அறிந்து அத்தோட்டத்தில் இருந்த புத்தபாத பீடிகையுள்ள பளிங்கறை மண்டபத்தில் போய் ஒளிந்து கொண்டாள். உதயகுமரன், பௌத்தர்களுடைய இத்தோட்டத்தில் தான் ஒன்றுஞ் செய்யக்கூடாது என்று எண்ணி அங்கே நின்றிருந்த சுதமதியிடம் சென்று, ‘மணிமேகலை கணிகைக் குலப் பெண், அவள் பௌத்த மதத்தில் சேர்ந்தாலும் நான் அவளை விடப்போவதில்லை. அவள் பாட்டி சித்திராபதியின் மூலமாக நான் அவளை அடை வேன்’ என்று சொல்லிப் போய்விட்டான். அவன் போன பிறகு வெளியே வந்த மணிமேகலையிடம் சுதமதி அவன் சொல்லியவற்றைக் கூறினாள். இளம் பெண் ணாகிய மணிமேகலை, தன் மனமும் அவனை நாடுகிறது என்று சுதமதிக்குச் சொன்னாள். ஆனால், உதயகுமாரனுடைய எண்ணம் அவளை மணஞ் செய்து கொள்வது அன்று. அவளைக் காமக் கிழத்தியாக, ஒரு விளையாட்டுக் கருவியாகப் பயன்படுத்துவதே அவன் நோக்கம். மாதவியின் எண்ணமோ மணிமேகலையைக் கற்பொழுக்கமுள்ள குடும்ப வாழ்க்கையில் அமைக்க வேண்டும் என்பது. இதை மணிமேகலையும் நன்றாக அறிந்திருந்தாள். மணிமேகலையும் சுதமதியும் உவவனத் தோட்டத்தில் இதுபற்றி உரையாடிக் கொண்டிருந்தபோது அவ்விடம் வாசந்தவை என்னும் மூதாட்டி வந்தார். அவர் நகர மக்களின் நன்மதிப்பைப் பெற்றவர். அவர் மணிமேகலைத் தெய்வத்தின் அருள்பெற்றவர் என்று அவரை எல்லோரும் மதித்து அஞ்சிப் போற்றினர். வந்த அவ்வம்மையார் புத்த பாத பீடிகையை வணங்கிய பிறகு இவர்களை நோக்கி இங்கு ஏன் தனியே நிற்கிறீர்கள் என்று கேட்டார். அவர்கள் நடந்த செய்தியைச் சொல்லி, வெளியே போனால், உதயகுமாரன் காத்திருந்து என்ன செய்வானோ என்று அஞ்சுகிறோம் என்று கூறினார்கள். அப்படியானால், தெருவழியே நீங்கள் போகவேண்டாம். இத்தோட்டத்தின் மேற்கேயுள்ள மதில் சுவர் பக்கமாகச் சென்றால் அங்கு ஒரு சிறு வாயில் உண்டு. அதனுள் நுழைந்து போனால் சக்கரவாளக் கோட்டம் உண்டு. அந்த வழியாகப் போய்ச் சேருங்கள் என்று கூறினாள். இதற்குள் இருள் வந்து விட்டது. ஆனால், நிலா வெளிச்சம் பால்போல் காய்ந்தது,. சுதமதி மூதாட்டியைக் கேட்டாள், ஊரார் சுடுகாட்டுக் கோட்டம் என்று கூறுகிறார்கள். நீங்கள் மட்டும் சக்கரவாளக் கோட்டம் என்று கூறுகிறீர்கள். இதன் காரணம் என்ன என்று. ‘சரி, உட்காருங்கள் சொல்லுகிறேன்’ என்று அம்மையார் மணலில் அமர்ந்தார். மணி மேகலையும் சுதமதியும் அருகில் அமர்ந்து அவர் கூறுவதைக் கேட்டுக் கொண்டிருந்தனர். வாசந்தவை அம்மையார் சக்கரவாளக் கோட்டத்தைப் பற்றி நீண்டதோர் கதை கூறினார். அதைக் கேட்டுக் கொண்டிருந்த இரண்டு பெண்களும் அப்பூஞ் சோலைக் காற்றிலே நிலாவெளிச்சத்திலே உறங்கிவிட்டார்கள். நள்ளிரவில் சுதமதியை வாசந்தவை மூதாட்டி எழுப்பினார். கண்விழித்துப் பார்த்தபோது நள்ளிருளும் நிலாவெளிச்சமுமாக இருந்தது. அருகில் மணிமேகலை காணப்படவில்லை. அப்போது வாசந்தவை அம்மையார் சொன்னார்: ‘மணிமேகலை, மணிமேகலா தெய்வத்தின் கட்டளைப்படி மணிபல்லவஞ் சென்றிருக்கிறாள்; ஏழு நாள் கழித்து அவள் திரும்பி வருவாள்; இச்செய்தியை அவள் தாயான மாதவிக்குச் சொல். மணிமேகலை பழம் பிறப்புக்களை அறிந்து கொண்டு சுகமாகத் திரும்பி வருவாள். நீ இப்போது நான் முன்பு கூறிய வழியே சக்கரவாளக் கோட்டம் போ. அங்கு உலகவறவியில் பெரியோர் பலர் இருக்கிறார்கள்; அங்குத் தங்கி விடிந்த பிறகு மாதவியிடம் போய் இச்செய்திகளைச் சொல்லு! நீ அஞ்சாதே, போ’ என்று கூறினார். நம்பிக்கையுள்ள மூதாட்டி யார் கூறியபடியே சுதமதி தோட்டத்தின் மேற்குச் சுவரிலிருந்த வாயிலில் நுழைந்து சக்கரவாளக் கோட்டத்து உலகறவிக்குப் போனாள். சுதமதியை அனுப்பிய பிறகு வாசந்தவையார் நேரே சோழ னுடைய அரண்மனைக்குச் சென்றார். அவர், அரண்மனையில் அரச குடும்பத்தாருக்கும் அரண்மனைச் சேவகருக்கும் நன்கு பழக்கம் உள்ளவர் ஆகையால், அந்நள்ளிரவில் யாதொரு தடையு மில்லாமல் உள்ளே நுழைந்தார். அரசகுமாரனான உதயகுமாரன் ஆசனத்தில் அமர்ந்து தூக்கமில்லாமல் இருந்தான். விளக்குகள் மங்கலாக எரிந்துகொண்டிருந்தன. வாசந்தவை அம்மையாரைக் கண்டவுடன் அவன் திடுக்கிட்டு எழுந்து வணங்கினான். அம்மையார், அவன் மாதவி மகள் மணிமேகலைமேல் கொண்டுள்ள எண்ணத்தை விட்டுவிடும்படியும் அரசகுமரனாகிய அவனுக்கு அச்செயல் தகாதது என்றும் அவனுடைய அரச குலத்துக்கு ஏற்ற படி உயர்ந்த ஒழுக்கத்தை மேற்கொள்ள வேண்டும் என்றும் இது மணிமேகலா தெய்வத்தின் கட்டளை என்று கூறிப் போய்விட்டார். பொழுது விடிந்த பிறகு உலகவறவியில் இருந்த சுதமதி மாதவியிடஞ் சென்றாள். மணிமேகலையும் சுதமதியும் உவவனத் திலிருந்து திரும்பி வராதபடியால் மனங் கலங்கிக் கவலை யோடிருந்த மாதவியிடத்தில், பூந்தோட்டத்தில் நேர்ந்தவைகளைச் சொல்லி, வாசந்தவையம்மையார், மணிமேகலையைப் பற்றிக் கூறிய செய்திகளையும் தெரிவித்தாள். மணிமேகலையின் பிரிவு அவளுக்கு மிக்க வருத்தத்தைத் தந்தது. ஆயினும் அவள் ஒருவாறு மனந்தேறி னாள். வாசந்தவையார் நகர மக்களுக்கெல்லாம் தாய் போன்ற நல்லவர் ஆகையால் அவர் சம்பந்தப்பட்டுள்ள இச் செயலில் நன்மையைத் தவிர தீமை நேரிடாது என்னும் உறுதி யான நம்பிக்கை மாதவியின் துயரத்தைப் போக்கியது. மணிபல்லவத்திற்குக் கப்பலில் பௌத்தப் பிக்குணிகளால் அழைத்துப் போகப்பட்ட மணிமேகலை அங்கிருந்த புத்த பீடிகையைக் கண்டு வணங்கினாள். பௌத்த மதத்தில் முன்னையதை விடத் திடமான நம்பிக்கையும் உறுதியுங்கொண்டாள். அங்குக் கிடைத்த அமுதசுரபி என்னும் அருமையான பாத்திரத் தைப் பெற்று அதனை எடுத்துக் கொண்டு மீண்டும் காவிரிப் பூம்பட்டினம் வந்து தன் அன்னையைக் கண்டு வணங்கித் தன் செய்திகளையெல்லாம் கூறினாள். பிறகு, மணிமேகலை தன் தாயுடனும் சுதமதியுடனும் அறவண அடிகள் இருந்த பௌத்தப் பள்ளிக்குச் சென்று அவரை வணங்கித் தான் மணிபல்லவஞ் சென்று பாதபீடிகையை வணங்கி யதும் அங்கு அமுதசுரபி பாத்திரங் கிடைத்தும் ஆகிய செய்திகளைக் கூறினாள். அறவண அடிகள் அப்பாத்திரத்தின் பழைய செய்திகளைக் கூறி அப்பாத் திரத்தைக் கொண்டு நகரக் குடிமக்களிடத்தில் பிச்சை ஏற்று, ஏழை எளியவருக்கும் உணவு கொடுக்கும்படி ஆசி கூறினார். அதன்படியே மணிமேகலை பிச்சை ஏற்று வந்து உலகவறவி என்னும் இடத்தில் இருந்த குருடர், முடவர், வறுமையாளர் முதலியவருக்கும் உணவு கொடுத்து வந்தாள். இதனை யறிந்த நகரத்தார் வியப்பும் மகிழ்ச்சியும் அடைந்தனர். காவிரிப்பூம்பட்டினத்தில் காயசண்டிகை என்னும் ஏழைப்பெண் ஒருத்தி நோயினால் வருந்திக் கொண்டு பிச்சை ஏற்றுப் பிழைத்து வந்தாள். அவள் வடநாட்டிலிருந்து வந்த பெண். அவளுடைய கணவன் எப்போ தாவது ஆண்டுக்கொரு முறை காவிரிப்பூம் பட்டினம் வந்து அவளைப் பார்த்துவிட்டுப் போவாள். காய சண்டிகை உருவத்திலும் உடல் அமைப்பிலும் மணிமேகலையைப் போலவே இருந்தாள். ஆனால், சற்றுக் கருநிறம் உடையவள். அக்காயசண்டிகை, மணிமேகலையிடம் நாள்தோறும் உணவு பெற்று அருந்திக் கொண்டிருந்தாள். சித்திராபதி தன் பேர்த்தி மணிமேகலை பௌத்தப் பள்ளி யில் ஏழை மக்களுக்கு உணவு கொடுத்து வருவதை அறிந்து, அவளை எப்படியாவது கணிகையர் தொழிலில் புகுத்த எண்ணி, அரண் மனைக்குச் சென்று உதயகுமரனைக் கண்டு, மணி மேகலையைத் தன்வசப்படுத்திக் கொள்ளும்படி தூண்டினாள். வாசந்தவை யம்மையார் அவனுக்கு அறிவுரை கூறியதிலிருந்து ஒருவாறு மணி மேகலையை மறந்திருந்த உதயகுமரனுக்குச் சித்திராபதி கூறியது ஊக்கம் அளித்தது. வாலிபனாகிய அவன் உள்ளம், மீண்டும் மணி மேகலையைப் பெற அவாவிற்று. அவன் ஒரு நாள் உலகவறவிக்குச் சென்று ஏழை மக்களுக்கு உணவு கொடுத்துக் கொண்டிருந்த மணி மேகலையிடஞ் சென்று அவளிடம் காதல் உரையாடினான். மணி மேகலை அவன் செயலைக் கண்டித்து அவனுக்கு அறவுரை கூறினாள். ஆனால், அவள் கூறிய அறவுரைகள் அவன் மனத்தில் ஏறவில்லை. அவன் அடிக்கடி அவளிடம் வரத்தலைப்பட்டான். மணிமேகலை உலகவறவியில் ஏழை எளியவருக்கு நாள் தோறும் உணவு கொடுத்து வருவதைச் சோழ அரசனான மாவண்கிள்ளி அறிந்தான். அவன் மணிமேகலையை யழைத்து அவள் செயலுக்கு மெச்சிப் புகழ்ந்து ‘உனக்கு நாம் செய்ய வேண்டுவது என்ன?’ என்று கேட்க, மணிமேகலை சிறைக் கோட்டக் கட்டிடத்தை அறக்கோட்ட மாக்க வேண்டும் என்று கூறினாள். அரசன் அவள் சிறைக் கோட்டத்தை அவளுக்குக் கொடுத்தான். அவள் அதைப் பௌத்த மதத்தாரிடம் ஒப்படைத்து அங்கு ஏழைகளுக்கு இலவச மருத்துவச் சாலையை ஏற்படுத்தினாள். அம்மருத்துவச்சாலையில் மருத்துவம் அறிந்த புத்த பிக்ஷுக்கள் நோயாளிகளுக்கு இலவசமாக மருந்து கொடுத்து நோய் தீர்த்துக்கொண்டிருந்தனர். இளவரசனாகிய உதயகுமாரன் அடிக்கடி தன்னிடம் வந்து உரையாடுவது மணிமேகலைக்கு மனத் துன்பத்தை உண்டாக்கியது. அவள் தன்னிடம் வருதைத் தடுக்க எண்ணி, தன் முகத்தைக் கருஞ் சாயம் பூசிக் காயசண்டிகைபோலக் காணப்பட்டாள். ஆனாலும், உதய குமாரன் ஒரு நாள் மாலையில் அவளிடம் வந்து உரையாடினான். அப்போது காயசண்டிகையின் கணவன், தன் மனைவியைக் காண வெளிநாட்டிலிருந்து வந்தவன், உலகவறவி யில் வந்தான். மணி மேகலையிடம் உதயகுமரன் உரையாடிக் கொண்டிருப்பதை அவன் கண்டான். மணிமேகலையைத் தன் மனைவியான காயசண்டிகை என்று அவன் கருதிக்கொண்டான். தான் வந்திருப்பதையும் கவனி யாமல் தன் மனைவியான காயசண்டிகை யாரோ புதிய இளைஞனிடம் பேசிக் கொண்டிருக் கிறாள் என்று அவன் எண்ணினான். காய சண்டிகையும் மணி மேகலையும் ஒரே உருவமாக இருந்தபடியாலும் அவன் அவளைத் தன் மனைவியான காயசண்டிகை என்றே கருதிக் கொண்டான். தன் மனைவியின் செயலைப்பற்றி மனம் கொதித்தான். அவளுடைய காதலனான அந்த வாலிபனை (அவன் அரசகுமாரன் என்பது அயல்நாட்டவனாகிய அவனுக்குத் தெரியாது) எப்படி யாவது கொன்றுவிடுவது என்று வைரங் கொண்டான். கடுஞ்சினத்தோடு அவன் அன்றிரவு உலகவறவியண்டைப் பதுங்கியிருந்தான். மணிமேகலை வழக்கம்போல உலகவறவிக்கு அருகில் இருந்த சம்பாபதி கோவிலில் அன்றிரவு தங்கியிருந்தாள். ஊர் துஞ்சும் நள்ளிரவு. அப்போது ஓர் உருவம் இருட்டில் அங்கு வருவது தெரிந்தது. அவ்வுருவம் சம்பாபதிக் கோவிலில் நுழைந்தது. மங்கலாக எரிந்துகொண்டிருந்த கோவில் விளக்கு வெளிச்சத்தில் வந்த உருவம் உதயகுமாரன் என்பது தெரிந்தது. அவன் அறியாமல் இருட்டில் வேறு ஓர் உருவம் அவனைப் பின் தொடர்ந்து வந்தது. பின் தொடர்ந்து வந்த உருவம் காயசண்டிகையின் கணவன். அவன் தன் கையிலிருந்த வாளை ஓங்கி உதயகுமாரனை வெட்டினான். ஓ என்ற கூச்சலுடன் உதயணகுமாரன் தரையில் விழுந்தான். வெட்டினவன் அவ்விடத்தை விட்டு இருட்டில் மறைந்து போனான். மணிமேகலை, ஓ என்று எழுப்பிய கூச்சலைக் கேட்டுக் கோவிலிருந்து வெளிவந்தாள். அப்போது ஒரு குரல், கண்டிப்பான ஒலியில் ‘நில், போகாதே’ என்று கூறியது. அவள் அச்சத்தினாலும் மனக்குழப்பத்தினாலும் ஒன்றும் செய்ய முடியாமல் பேசவும் வாய்வராமல் நடுங்கினாள். பொழுது விடிந்தது. சம்பாபதியை வணங்குவதற்குக் காலையில் கோவிலுக்கு வந்தவர்கள் உதயகுமாரன் இரத்த வெள்ளத்தில் விழுந்து இறந்துகிடப்பதையும் அருகில் இரத்தக் கறையுடன் வாள் கிடப் பதையும் கண்டார்கள். இச்செய்தி நகரம் முழுவதும் பரவியது. சம்பாபதி கோவில் பௌத்தக் கோவிலாகை யால் பௌத்த பிக்ஷுக்கள் வந்து பார்த்து அரசனிடஞ் சென்று செய்தியைக் கூறினார்கள். உதய குமாரனை வெட்டியவன் யார் என்பது தெரியாமற் போனாலும் அரச குமாரன் செய்தது தகாத செயல் என்பது மட்டும் விளக்கமாகத் தெரிந்தது. அரசன், நடந்த நிகழ்ச்சியை ஆய்ந்தறிந்து, இறந்த மகனை அடக்கஞ் செய்யும் படியும், மணிமேகலைக்கு மக்கள் துன்பஞ் செய்யாதபடி அவளைக் காவலில் வைக்கவும் கட்டளையிட்டான். இராசமாதேவி தன் மகனான உதயகுமாரன் இறந்ததற்குக் காரணமாக இருந்தவள் மணிமேகலையே என்று கருதி அவளைப் பழிவாங்கவேண்டுமென்று எண்ணினாள். சில நாட்களுக்குப் பிறகு அரசி, மணிமேகலையைத் தன்னிடம் ஒப்பிக்கும்படி அரசனைக் கேட்டாள். அரசன் அவளை அரசியினிடம் அனுப்பி னான். அரசி அவளிடம் அன்புள்ளவள் போல நடித்து அவளுக்குத் தீங்குகளைச் செய்தாள். ஆனால், மணிமேகலை, அரசி செய்த பெரிய தீங்கிலிருந்து தப்பினாள். மணிமேகலை, சோழமாதேவியின் பாதுகாப்பிலிருப்பதை யறிந்து பாட்டியாகிய சித்திராபதி அவளைத் தன்னிடம் மீட்டுக் கொள்ள எண்ணி மணிமேகலையைத் தன்னிடஞ் சேர்ப்பிக்கும்படி அரசியைக் கேட்டாள். இதனை யறிந்த மாதவி திடுக்கிட்டு வருந்தினாள். தன் மகள் மணிமேகலை சித்திராபதி யிடஞ் சென்றால் அவளை அவள் கணிகைத் தொழிலுக்குப் பழக்கிடுவாள்; ஆகவே அவளைச் சித்திராபதியிடஞ் செல்லாமல் மீட்டுக் கொள்ள வேண்டும்; அவளை மீட்டுக் கொடுப்பதற்கு அறவண அடிகள் ஒருவரால்தான் முடியும் என்று கருதிய மாதவி, சுதமதியுடன் அறவண அடிகளிடம் சென்று வணங்கிச் செய்தியைத் தெரிவித்தாள். உடனே அடிகள் புறப்பட்டு அரண்மனைக்கு வந்தார். இராசமாதேவியார் அடிகளை வணங்கி ஆசனத்தில் இருத்தினார். அறவண அடிகள், மணிமேகலையை மாதவியிடம் அனுப்பும் படி அரசியிடங் கூறினார். அப்பெரியவரின் வார்த் தையை மறுக்காமல் இராசமாதேவியார் அவ்விதமே அவளை மாதவியுடன் அனுப்பினார். அரசகுமாரனின் கொலைக்குக் காரணமாக இருந்தவள் என்று மணிமேகலைமேல் நாட்டு மக்கள் பழிச்சொல் கூறினார்கள். ஆகவே, அவளை வெளியூருக்குச் சில காலம் அனுப்பிவைப்பதென்று தீர்மானித்து, பௌத்த மதம் பரவியிருந்த சாவகத்தீவுக்குப் போய்ச் சிலகாலம் இருந்து பிறகு திரும்பிவருமாறு ஏற்பாடு செய்து அவளைச் சாவகத்தீவுக்கு அனுப்பினார்கள். அக்காலத்தில் காவிரிப்பூம் பட்டினத்துக்கும் சாவகத்தீவுக்கும் கப்பல் வாணிகம் சிறப்பாக நடந்து கொண்டிருந்தது. தமிழ்நாட்டிலிருந்து வாணிகக் கப்பல்கள் அடிக்கடி சாவகநாடு சென்று வந்தன. அக்கப்பல்கள் ஒன்றில் மணிமேகலை சாவகம் சென்றாள். சில காலத்துக்குப் பிறகு காவிரிப்பூம்பட்டினத்தில் புயல் அடித்து அப்பட்டினம் வெள்ளத்தில் மூழ்கியது. கடல் கொந்தளிப்பும் காற்று மழையும் ஏற்பட்டுக் காவிரியாற்றில் வெள்ளம் புரண்டு வந்து நகரத்தில் புகுந்தது. நகர மக்கள் உயிர் தப்பி ஓடினார்கள். சோழ அரசன் குடும்பத்துடன் உறையூருக்குப் போய்விட்டான். அறவணவடிகளும் மாதவி, சுதமதி முதலியவர் களுடன் காஞ்சிபுரத்துக்குப் போய்விட்டார். நகர மக்கள் வெவ் வேறிடங்களுக்குப் போனார்கள். சாவகத்தீவுக்குப் போன மணிமேகலை அங்கு வீடுகள் தோறும் பிச்சை ஏற்று ஏழை எளியவர்களுக்கு உணவு கொடுத்துப் பௌத்த மதப் பிரச்சாரம் செய்துகொண்டிருந்தாள். சில காலங் கழித்து மணிமேகலை மீண்டும் காவிரிப்பூம்பட்டினத்துக்குத் திரும்பிவந்தாள். வரும் வழியில் கப்பல் மணிபல்லவத்தில் தங்கியது. அங்குக் காவிரிப்பூம்பட்டினம் வெள்ளத்தில் முழுகியதையும் அறவண அடிகளும் மாதவியும் அந்நகரத்தை விட்டுப் போய் விட்டதையும் சேர நாட்டு வஞ்சிமா நகரத்தில் சேர அரசன் கண்ணகிக்குக் கோட்டம் அமைத்ததையும் கேள்விப்பட்டாள். ஆகவே, அவள் அங்கிருந்து வஞ்சிமா நகரஞ் சென்றாள். வஞ்சிமா நகரஞ் சென்று மணிமேகலை, கண்ணகியின் கோட்டத்துக்குச் சென்று வணங்கினாள். பிறகு கோவலன் தந்தையான மாசாத்துவான் பௌத்தப் பிக்குவாய் இருப்பதைத் தற்செயலாகக் கண்டு அவரை வணங்கினாhள். அவர், அறவண அடிகளும் மாதவியும் காஞ்சீபுரத்தில் இருப்பதைக் கூறினார். மணிமேகலை வஞ்சிமா நகரத்தில் இருந்த பல சமயவாதிகளையும் கண்டு அவர்களிடம் அந்தந்தச் சமயங்களின் கொள்கைகளைக் கேட்டறிந்தாள். பிறகு, அங்கிருந்து காஞ்சீபுரம் வந்து அறவண அடிகளையும் மாதவியையும் வணங்கி, அவர்களுடன் தங்கியிருந்து சமய ஊழியமும் மக்களுக்குத் தொண்டும் செய்து கொண் டிருந்தாள். இதுதான் மணிமேகலையின் வரலாற்றுச் செய்தி. மணிமேகலை (நூல்) இந்த நிகழ்ச்சிகளைக் கொண்டு கூலவாணிகன் சாத்தனார் மணிமேகலை என்னும் காவியத்தை இயற்றினார். பௌத்த மதச் சார்பான இந்த நிகழ்ச்சிகள் பௌத்தராகிய இவருக்கு உகந்ததாக இருந்தன. ஆகவே, பௌத்த மதக் கொள்கைகளை இந்த வரலாற்று நிகழ்ச்சிகளுடன் இணைத்துப் பௌத்த மதக் கற்பனைகளையும் பொருத்திப் புகுத்தியிருக்கிறார். அதனோடு, பௌத்த மதப் பிரசாரத்துக் காகவும் இந்நூலைப் பயன்படுத்திக் கொண்டார். பௌத்த மதக் கொள்கைகளை அந்தந்த நாட்டுத் தாய்மொழியில் எல்லோருக்கும் விளங்கும்படி எளிதாகக் கூற வேண்டும் என்பது பகவன் புத்தருடைய கட்டளை. பௌத்த மதத்தார் இக்கட்டளையைப் பொன்னே போலப் போற்றினார்கள். இந்தக் கட்டளையைப் பின்பற்றித்தான் சாத்தனாரும் இக்காவியத்தை எளிய நடையில் எல்லோருக்கும் விளங்கும் படியாகவும் அதே சமயத்தில் மதப் பிரசாரத்தின் பொருட்டும் இயற்றினார். சிலப்பதிகாரத்தை இயற்றிய இளங்கோவடிகள் அக்காவியத்தைக் கலைக்காகவே, கலைஞருக்காகவே இயற்றினார். மணிமேகலையை இயற்றிய சாத்தனார் இக்காவியத்தைப் பௌத்த மதப் பிரசாரத்துக் காகவே இயற்றினார். இவைதான் சிலப்பதிகாரத்துக்கும் மணி மேகலைக்கும் உள்ள வேறுபாடுகள். மேலும், சாத்தனார் தமிழ் மொழியை மட்டுங் கற்றவரல்லர். அக்காலத்து பௌத்த மத வழக்கப்படி பௌத்த மதத்தின் ‘தெய்வ மொழி’யாகிய பாலி மொழியை நன்கு கற்றவர். வட மொழியையும் அறிந்தவர். பௌத்த மதத்தை மேற்கொண்டிருந்தவர். இந்தச் சூழ்நிலைகள் எல்லாம் இவர் இயற்றிய மணிமேகலையில் இடம் பெற்றுள்ளன. பாலி, வடமொழிகளைக் கற்றிருந்த படியால், பிராகிருத மொழிச் சொற்களையும் வடமொழிச் சொற்களையும் பௌத்த மதச் சம்பிரதாயச் சொற்களையும் அவர் இந்நூலில் வழங்கும்படி செய்துவிட்டார். அதே சமயத்தில் பிரச்சார நோக்கத்தோடு பண்டித நடையை மேற்கொள்ளாமல் எளிய நடையைக் கையாண்டார். இளங்கோ அடிகளும் தாம் மேற்கொண்ட சமண சமயத்துக்கு ஏற்ப பிராகிருத பாஷையையும் வட மொழியையும் கற்றவராக இருந்தும், கலையின் பொருட்டே சிலப்பதிகாரக் காவியத்தை இயற்றிய படியால், அவருடைய நூலில் அதிகமாகப் பிராகிருத, வடமொழிச் சொற்கள் காணப்படவில்லை. ஆனால், அக்காலத்து ஏனைய தமிழ் நூல்களைவிட இவர் நூலில் அதிக பிராகிருத, வடமொழிச் சொற்கள் அமைந்து இருக்கின்றன. பௌத்த மதப் பிக்குகளும் சமண சமயத் துறவிகளும் தங்கள் தவ வலிமையினால் சித்தி (ரித்தி) பெற்று, தாங்கள் நினைக்கிற இடங் களுக்கு ஆகாய வழியாகப் பறந்து போனதாக அந்த மத நூல்கள் கூறுகின்றன. இது அந்த மதங்களின் நம்பிக்கைகளில் ஒன்று. பௌத்த மத, சமண மத நூல்களில் இவைகளைக் காணலாம். இந்தக் கருத்தைச் சமண, பௌத்த சமயத்தவராகிய இளங்கோ அடிகளும் சாத்தனாரும் தங்கள் காவியங் களில் புகுத்தியிருக்கிறார்கள். சமண முனிவராகிய சாரணர்களும் பௌத்தத் துறவி களாகிய தேரர்களும் ஆகாய வழியில் பறந்து போனார்கள் என்று இவர்கள் கூறியிருக் கிறார்கள். மேலும், மறுபிறப்பைப் பற்றிப் பௌத்தர்களும் சமணர்களும் அதிக ஆழ்ந்த நம்பிக்கையுள்ளவர்கள். அவர்களின் சமய நூல்களில் மறுபிறப்புக் கதைகளை அதிகமாகக் காணலாம். ஆகவே, சாத்தனாரும் இளங்கோ அடிகளும் தங்கள் நூல்களில் மறுபிறப்பைப் பற்றி அதிகமாகக் கூறியுள்ளனர். மணிமேகலைக் காவியத்தின் தலைவியாகிய மணிமேகலை, மணிமேகலா தெய்வத்தின் வரம் பெற்று ஆகாய வழியே பறந்து சென்றாள் என்றும் விரும்பியபடி எல்லாம் உருவத்தை மாற்றிக் கொண் டாள் என்றும் கற்பித்திருக்கிறார். அமுதசுரபி பாத்திரம், எடுக்க எடுக்கக் குறையாமல் உணவைத் தானாகவே சுரந்து கொண்டிருந்தது என்றும், தூண்களில் இருந்த பாவைகள் பேசின என்றும், மணிமேகலா தெய்வத்தின் சாபத்தினால் காவிரிப்பூம்பட்டினம் வெள்ளத்தினால் அழிந்தது என்றும் பல கற்பனைகள் இக் காவியத்தில் இடம் பெற்றுள்ளன. காவிய நூலுக்குக் கற்பனைகள் அவசியம் தேவை. கற்பனைகளும் உவமைகளும் இல்லாத காவியம் சுவைபடாது. வியப்புச் சுவைக்காகக் கற்பனைகள் காவிய நூல்களுக்குத் தேவை. ஆகவே, காவிய நூல்களை இயற்றின சாத்தனாரும் இளங்கோ அடிகளும் தங்கள் காவியங்களில் கற்பனைகளைப் புகுத்தியுள்ளனர். சரித்திர ஆராய்ச்சிக்காரர் கற்பனையை ஒதுக்கிவிட்டுச் சரித்திர நிகழ்ச்சிகளை மட்டும் கொள்ள வேண்டும். அமாநுஷிகமான நம்பத்தகாதவை என்று அடியோடு ஒதுக்கித் தள்ளுவது கூடாது. அசோகச் சக்கரவர்த்தி காலத்தில், அவருடைய உறவினரான மகேந்திரர் பௌத்த மதத்தை இலங்கையில் பிரசாரஞ் செய்வதற் காக அனுப்பப்பட்டார். அவர் இலங்கைக்குச் சென்று அங்குப் பௌத்த மதத்தை நிறுவினார். வடஇந்தியாவிலிருந்து மகேந்திரர் இலங்கைக்குச் சென்றது கடலில் கப்பல் வழியாகத்தான். ஆனால், இந்தச் செய்தியைக் கூறுகிற மகாவம்சம் என்னும் பௌத்த மத நூல், மகேந்திரர் ஆகாய வழியாகப் பறந்து இலங்கைக்கு வந்தார் என்று கூறுகிறது. ‘இது அமானுஷிகச் செயல்; இதை ஒப்புக் கொள்ள முடியாது. மகேந்திரர் என்று ஒரு ஆள் இருந்தது `பொய்’ என்று சரித்திரக்காரர் யாவரும் இவரை ஒதுக்கிவிட வில்லை. மகேந்திரர் இலங்கைக்குச் சென்று அங்குப் பௌத்த மதத்தைப் பரப்பினார் என்றுதான் சரித்திரம் எழுதி யிருக்கிறார்கள். சரித்திரப் பேராசிரியர் நீலகண்ட சாஸ்திரியும் பி.டி. சீனிவாச ஐயங்காரும் வையாபுரிப் பிள்ளையும் போன்ற சரித்திர ஆசிரியரும் ஆராய்ச்சிக்காரரும் இதைச் சரித்திர உண்மை என்று தான் ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், இவர்களே தமிழ் நூல்களை ஆராயும்போது, கற்பனைகளை நீக்கி வரலாற்றை மட்டுங் கொள்ளாமல் மணிமேகலையும் சிலப்பதிகாரமும் கட்டுக்கதைகள் என்று கூறுகிறார்கள். பாரத, இராமாயணக் கதைகளைக் கட்டுக்கதை என்று ஒதுக்காமல் சரித்திரங்கள் என்று கொள்ளுகிற இந்த அறிஞர்கள், இந்தத் தமிழ் நூல்களை மட்டும் கட்டுக்கதைகள் என்று ஒதுக்கி யிருக்கிறார்கள். ஏன் மற்ற நூல் களுக்கு ஒரு நீதியும் தமிழ் நூல்களுக்கு ஒரு அநீதியும் செய்கிறார்கள் என்பது தெரியவில்லை. சரித்திரக் காரர்களுக்கும் ஆராய்ச்சிக்காரருக்கும் துவேஷபுத்தியும் விருப்பு வெறுப்பு இருக்கக்கூடாது. சிலப்பதிகாரமும் மணிமேகலையும், அவற்றிலுள்ள கற்பனைகளைக் களைந்து விட்டால், அவற்றில் கூறப்படும் நிகழ்ச்சிகள் உண்மையில் நிகழ்ந்த நிகழ்ச்சிகளே என்பது விளங்கும். சங்க காலத்துச் சமுதாய நிலை, அக்காலத்துப் பழக்க வழக்கங்கள், அரசியல் நிலை, கலை பண்பாடு முதலியவைகளை ஆராய்வதற்கு மணிமேகலையும் சிலப்பதி காரமும் பெருந்துணையாக இருக்கின்றன. கற்பனைகளையும் உவமைகளையும் களைந்து சரித்திர நிகழ்ச்சிகளை மற்றச் சான்று களோடு ஒத்திட்டுப் பார்த்து, ஏற்கத்தக்கவைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும், கட்டுக்கதை என்று அடியோடு ஒதுக்குவது கூடாது. மற்றக் காவிய நூல் களிலுள்ள சரித்திரங்களை எவ்வாறு பயன்படுத்திக் கொள்கி றோமோ அவ்வாறே இந்தக் காவியங்களையும் சரித்திர ஆராய்ச்சிக்குப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். சாத்தனார் காலம் மணிமேகலை காவியத்தில் அதிக வடசொற்கள் ஆளப் பட்டிருப்பதைக் கொண்டு அந்நூலை இயற்றிய சாத்தனார் சங்க காலத்தில் இருந்தவர் அல்லர் என்றும் அவர் மிகப் பிற்காலத்தில் இருந்தவர் என்றும் ஆராய்ச்சிக்காரர்கள் கூறுகிறார்கள். திரு. சிவராச பிள்ளை, வையாபுரிப்பிள்ளை, மு. இராகவையங்கார், பி.டி. சீநிவாச ஐயங்கார் போன்றவர்கள் இந்தக் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள். சரியானபடி விஷயத்தை உணர்ந்துகொள்ளாமலே வெறும் சொல்லை மட்டும் ஆதாரமாகக் கொண்டு முற்காலம், பிற்காலம் என்று வரை யறுப்பது சரியான ஆராய்ச்சி ஆகாது. (சொல் ஆராய்ச்சி ஓரளவுதான் பயன்படும்). வேறு சான்றுகள் இருக்கும்போது அவைகளையெல்லாம் பயன்படுத்தாமல், வெறும் சொல்லைக் காட்டிக் காலங்கணிப்பது தவறான முடிவுக்குக் கொண்டு போய்விடும். இதற்குக் சான்றாக ஒன்றைக் காட்டுவோம். அரசர் போர்க்களத்தில் போய்ப் போர் செய்து மார்பில் புண்தழும்பு (விழுப்புண்) படாமல் இறந்து போவார்களானால், அவர்களை அடக்கஞ் செய்வதற்கு முன்பு, தருப்பைப்புல்லில் கிடத்திப் பிராமணர் கத்தியால் மார்பில் வெட்டிப் புண் உண்டாக்கிப் பிறகு அடக்கம் செய்யும் வழக்கம் சங்க காலத்தில் இருந்தது. இந்த வழக்கத்தைச் சங்க காலத்தில் இருந்த ஒளவையாரும் அவர் காலத்திலிருந்த கூலவாணிகன் சாத்தனாரும் கூறியுள்ளனர். அதிகமான் நெடுமான் அஞ்சியின் தகடூரின்மேல் பெருஞ் சேரலாதன் படையெடுத்து வந்து போர் செய்தான். அந்தப் போரில் நெடுமான் அஞ்சி மார்பில் புண்பட்டான். அதனைக் கண்ட ஒளவையார், அவன் விழுப்புண் பட்டதைச் சிறப்பித்துப் பாடினார் (புறம் 93). அந்த பாட்டில், விழுப்புண் பெறாமல் இறந்தவர் தருப்பையில் கிடத்தி மார்பை வெட்டப்படுவர் என்பதைக் குறிப்பிடுகிறார். அறம்புரி கொள்கை நான்மறை முதல்வர் திறம்புரி பசும்புற் பரப்பினர் கிடப்பி மறங்கந் தாக நல்லமர் வீழ்ந்த நீள்கழல் மறவர் செல்வுழிச் செல்கென வாள் போழ்ந் தடக்கலும் உய்ந்தனர் மாதோ. (புறம் 93 : 7-11) என்று அவர் கூறியுள்ளார். இதே செய்தியைக் கூலவாணிகன் சாத்தனாரும் தமது மணிமேகலை நூலில் கூறுகிறார். மணிமேகலை சிறை விடுகாதையில், கொற்றங் கொண்டு குடிபுறங் காத்துச் செற்ற தெவ்வர் தேஎந்தம தாக்கியும் தருப்பையிற் கிடத்தி வாளிற் போழ்ந்து செருப்புகல் மன்னர் செல்வுழிச் செல்கென மூத்து விளிதல்இக் குடிப்பிறந் தோர்க்கு நாப்புடை பெயராது தாணுத்தக வுடைத்தே (மணி. 23 : 11-16) இச்செய்யுள்களில் ஒளவையார் தர்ப்பைப்புல்லைப் பசும்புல் என்றும், சாத்தனார் தருப்பை என்றும் கூறியுள்ளனர். இதைச் சுட்டிக் காட்டி திரு. பி.டி. சீநிவாச அய்யங்கார், புல் என்னுஞ் சொல்லையாளும் ஒளவையார் காலத்தினால் முந்தியவர் என்றும் தருப்பை என்னும் வடமொழிச் சொல்லை யாளுகிற சாத்தனார் காலத்தினால் பிற்பட்டவர் என்றும் தாம் எழுதிய `தமிழர் சரித்திரத்தில்’ கூறியிருக்கிறார். (P.T. Srinivasa Iyengar, History of the Tamils, 1929, pp. 480-481) மேற்போக்காகப் பார்க்கிறவர்களுக்கு இது உண்மை போலத் தோன்றும். ஆனால், இது உண்மைக்கு மாறான தவறுள்ள முடிவு. வெறுஞ் சொல்லை மட்டும் ஆராய்ந்து முடிவு கட்டுவது, வழுக்கு நிலத்தில் சருக்கி விழுவது போன்ற ஆபத்தானதாகும். முறைப்படி நேர்மையாக ஆராய்ந்து பார்த்தால், ஒளவை யாரும் சாத்தனாரும் சம காலத்தில், சங்க காலத்தில் வாழ்ந் திருந்தவர் என்பது தெரிகிறது. ஒளவையார், தகடூர், அரசன் அதிகமான் நெடுமான் அஞ்சியால் ஆதரிக்கப் பெற்றவர். தகடூரின் மேல் பெருஞ்சேரலிரும் பொறை படையெடுத்து வந்தபோது அப்போரில் நெடுமான் அஞ்சி புண்பட்டதை நேரில் கண்டு பாடினவர். தகடூர்ப் போர் செய்த பெருஞ் சேரலிரும்பொறை, சேரன் செங்குட்டுவனுடைய தாயாதியண்ணன், செங்குட்டு வனுக்கும் அவன் தம்பியாகிய இளங்கோவடிகளுக்கும் சாத்தனார் நெருங்கிய நண்பர். எனவே, ஒளவையாரும் சாத்தனாரும் இளங்கோவடிகளும் செங்குட்டுவனும் தகடூர் எறிந்த பெருஞ் சேரலிரும் பொறையும் அதிகமான் நெடுமான் அஞ்சியும் சமகாலத் தில் இருந்தவர் என்பது தெளிவான ஆராய்ச்சி காட்டும் முடிவு. ஆனால், பி.டி.சீநிவாக ஐயங்கார் தருப்பை, புல் என்னும் சொல்லாராய்ச்சியில் புகுந்து சருக்கி விழுந்து இரு புலவரும் (ஒளவையாரும் சாத்தனாரும்) வெவ்வேறு காலத்திலிருந்தவர் என்று முடிவு கட்டுகிறார். சொல்லாராய்ச்சி எவ்வளவு ஆபத் தானது பாருங்கள். நம்முடைய கண்ணெதிரிலே இக்காலத்தில் சிலர் திங்கள் என்னும் சொல்லையும் சிலர் மாதம் என்னும் சொல்லையும் வழங்கி வருவதைப் பார்க்கிறோம். இவ்வாறு வழங்கும் இச் சொற்களை எடுத்துக்கொண்டு காலத்தை ஆராய்ந்து பார்த்தால், சீநிவாச அய்யங்காரின் ஆராய்ச்சிப்படி, திங்கள் என்னும் சொல்லை வழங்கு கின்றவர் முற்காலத்தில் இருந்தவர் என்றும் மாதம் என்னும் சொல்லை வழங்குகிறவர் பிற்காலத்தில் இருந்தவர் என்றும் முடிவு கட்ட வேண்டும். அப்படிக் கூறுவது, அய்யங்கார் வழுக்கி விழுந்தது போன்ற தவறான முடிவாகும். ஏனென்றால், இச்சொற்களையெல்லாம் வழங்குகிறவர்கள் நம் காலத்தில் வாழ்கிறவர்களே. சமீபகாலத்தில் இருந்த மறைமலை அடிகளும் வடுவூர் துரைசாமி அய்யங்காரும் சம காலத்தில் இருந்தவர்கள் என்பதை நாம் அறிவோம். அவர்களுடைய நூல் நடையைக் கொண்டு அவர்கள் காலத்தை, சீநிவாச அய்யங்கார் ஆராய்ச்சியைப் பின்பற்றி ஆராய்ந்து மறைமலையடிகள் சில நூற்றாண்டுகளுக்கு முன் இருந்தவர், துரைசாமி அய்யங்கார் சில நூற்றாண்டு களுக்குப் பின் இருந்தவர் என்று முடிவுகட்டினால் அது உண்மைக்கு மாறுபட்ட தவறான முடிவாகும் அல்லவா? சீநிவாச அய்யங்காரின் இத்தகைய சொல்லாராய்ச்சி ஏற்கத்தக் கதன்று. காலத்தை ஆராய்வதற்கு வேறு நல்ல சான்றுகளைக் கைக்கொண்டு ஆராயாமல், வழுக்கி விழச் செய்கிற சொல்லா ராய்ச்சியைக் கொள்வது இவ்வாறு பிழைபட்ட முடிவுக்குத்தான் கொண்டு போய்விடும். வையாபுரிப்பிள்ளை போன்ற வேறு சில ஆராய்ச்சிக் காரர்களும் நல்ல சான்றுகளை விட்டுவிட்டுச் சொற்களை மட்டும் ஆராய்ந்து இலக்கியக் காலத்தைத் தவறாக முடிவு கட்டியுள்ளனர். ஒளவையாரும் சாத்தனாரும் புல், தருப்பை என்னும் சொற்களைக் கையாண்டதற்கு வேறு தக்க காரணம் உண்டு. அதுவென்னவென்றால், ஒளவையார் தமிழை மட்டும் கற்றுத் தமிழ் மரபு வழுவாமல் நூல் இயற்றியவர். சாத்தனாரோ, பௌத்த மதத்தைத் தழுவிய தமிழர். அவர் தமிழுடன், அக்காலத்துப் பௌத்தரின் வழக்கப்படி பாலி மொழியை யும் அதனுடன் சமஸ்கிருத மொழியையும் கற்றவர். அன்றியும், பழைய முறையைக் கடந்து தமிழ் இலக்கியத்தில் காவியம் இயற்றும் புதிய மரபை யுண்டாக்கியவர் (இவர் காலத்திலேயே இவருடைய நண்பரான இளங்கோவடிகள் சிலப்பதிகாரக் காவியத்தை இயற்றினார்.) தமிழில் காவியம் இல்லாத காலத்தில், முதன் முதலாகச் சாத்தனாரே மணிமேகலைக் காவியத்தை இயற்றினார். வெறுங் காவியத்தை மட்டும் இயற்றுவது சாத்தனாரின் நோக்கம் அன்று. அதில் பௌத்த மதப் பிரசாரத்தையும் கருதி எல்லோருக்கும் விளங்க வேண்டுமென்னும் நோக்கத்தோடு எளிய நடையிலும் மணிமேகலையை இயற்றினார். புல், தருப்பை என்னும் சொற்களை ஒளவையாரும் சாத்தனாரும் கையாண்டதன் உண்மை இதுவாகும். புல் என்பதைவிட தருப்பை என்று கூறினால் எளிதில் கருதப்பட்ட பொருள் இனிது விளங்கும். சீநிவாச அய்யங்கார் கூறுவது போல முற்காலம், பிற்காலம் என்னும் வேறுபாட்டினால் அன்று. எனவே, ஒளவையாரைப் போலவே, மணிமேகலையை இயற்றிய சாத்தனாரும் சங்க காலத்தில் இருந்தவரே. வடமொழிக் கலப்பு சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் வடமொழிச் சொற்கள் கலந்திருப்பதை எடுத்துக்காட்டி இவ்விரு காவியங் களும் சங்க காலத்துக் காவியங்கள் அல்ல, பிற்காலத்தவை என்று வையாபுரி பிள்ளை, நீலகண்ட, சாஸ்திரி போன்ற சிலர் கூறுகின்றனர். இவர்கள் கூறுவது மேற்பார்வைக்கு உண்மை போலத் தோன்றுகிறது. அகநானூறு, நற்றிணை நானூறு, குறுந்தொகை நானூறு, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து முதலிய சங்க இலக்கியங்களுக்கும் மணிமேகலை, சிலப்பதிகார நூல்களுக்கும் மொழிநடையில் அதிக வேற்றுமை காணப் படுகின்றன என்பதும் மணிமேகலை, சிலப்பதிகாரக் காவியங்களில் பிராகிருதச் சொற்களும் வடமொழிச் சொற்களும் அதிகமாகக் காணப்படுகின்றன என்பதும் உண்மை தான். இக்காரணம் பற்றி இவர்கள் கூறுவதுபோல, இந்நூல்கள் பிற்கால நூல்கள் என்று ஒப்புக் கொள்ள முடியுமா? சொற்களை மட்டுங் கொண்டு ஆராய்ந்து காலங் கணிப்பது வழுக்கு நிலத்தில் போய்ச் சருக்கி விழுவதற்குச் சமானமாகும் என்று முன்னமே கூறினோம். சரித்திரத்தைத் துணையாகக் கொண்டு ஆராய்ந்து பார்த்தால், வையாபுரியார்களின் முடிவுகள் பெருந் தவறுடையன என்பது தெரியும். கடைச்சங்க காலத்திலே பௌத்த மதமும் ஜைன (சமண) மதமும் தமிழ்நாட்டுக்கு வந்துவிட்டன. கி.மு. மூன்றாம் நூற் றாண்டில் இருந்த அசோகச் சக்கரவர்த்தியின் சாசனங்களில் இரண்டு சாசனங்கள், அவர் காலத்தில் பௌத்த மதத்துப் பிக்குகள், தமிழ்நாட்டுக்கு வந்ததைத் திட்டமாகக் கூறுகின்றன. அசோகச் சக்கரவர்த்தியுடைய பாட்டனான சந்திரகுப்த மௌரியன் காலத்தில் சமண மதத் (ஜைன மதத்) துறவிகள் தமிழ்நாட்டுக்கு வந்த செய்தியையும் சரித்திரத்தினால் அறிகி றோம். இந்த வரலாற்று உண்மையில் சிறிதும் ஐயமில்லை. கடைச்சங்க காலம் கி.பி. மூன்றாம் நூற்றாண்டோடு முடி வடைகிறது என்று பொதுவாகக் கருதப்படுகிறது. அசோகச் சக்கர வர்த்தி காலமாகிய கி.மு. 3ஆம் நூற்றாண்டு முதல் கடைச் சங்க இறுதிக் காலமாகிய கி.பி. 3ஆம் நூற்றாண்டு வரையில், அதாவது ஏறத்தாழ 500 ஆண்டுக்காலம், சங்ககாலத் தமிழகத்தில் பௌத்த, ஜைன மதங்கள் வாழ்ந்திருக்கின்றன. அந்த 500 ஆண்டு களாக அந்த மதத்தவர் தங்கள் மதக் கொள்கைகளை மக்களுக்குப் போதித்துக் கொண்டுதான் இருந்திருப்பார்கள். அத்தனை நூற்றாண்டுக் காலம் அவர்கள் வாளா இருந்திருக்க மாட்டார்கள். ஏனென்றால், பௌத்தப் பிக்குகளும் சமணத் துறவிகளும் தங்கள் தங்கள் மதக் கொள்கைகளை நாடெங்கும் பரவச் செய்வதிலேயே கண்ணுங்கருத்துமாக இருந்தவர்கள். அதையே தங்கள் வாழ்க்கையின் குறிக்கோளாகக் கொண்டவர்கள். ஆகவே, அவர்கள் தங்கள் மதக் கொள்கைகளைச் சங்க காலத் தமிழகத்தில் பிரசாரஞ் செய்து கொண்டுதான் இருந்தார்கள் என்பதில் ஐயமில்லை. வையாபுரியார் கருதுவதுபோல, அல்லது அவர் நம்மைக் கருதச் செய்வதுபோல, கி.மு. 3ஆம் நூற்றாண்டில் தமிழகத்துக்கு வந்த பௌத்த சமணர்கள் `சங்க காலம் போகட்டும், பிறமொழிக் கலப்புக் காலம் வரட்டும்’ என்று வாளா இருந்திருக்க மாட்டார்கள். அவர்கள் வந்த காலம் முதற்கொண்டே தங்கள் மதப் பிரச்சார வேலையைத் தொடங்கினார்கள் என்பதில் சற்றும் ஐயமில்லை. அவ்வாறு மதப் பிரசாரம் செய்யப்பட்டபோது அவர்களுடைய தெய்வ பாஷையாகிய பாலி மொழியும் அர்த்தமாகதி மொழியும் சங்ககாலத் தமிழிலும் கலக்கத்தானே செய்திருக்கும்? பாலிமொழியிலே பௌத்த மதநூல்களும் அர்த்தமாகதி (சூரசேனி) மொழியிலே ஜைன சமய நூல்களும் எழுதப்பட்டிருந்தபடியினாலே, அந்த மொழி நூல்களை ஆதாரமாகக் கொண்டு மத போதனை செய்தபோது, அம்மொழி, நாட்டு மொழியில் கலக்கத்தானே செய்யும்? அதைத் தடுக்க முடியுமா? தமிழ்மொழி இன்றுள்ளதுபோலவே அன்றும் பேச்சு வழக்கில் இருந்த மொழி. பேச்சு வழக்கில் இருக்கும் மொழிகள், மதங்களின் தொடர்பினாலோ வாணிகத் தொடர்பினாலோ, பிற மொழியினருடன் பழகும்போது பிற மொழிச் சொற்கள், பேச்சு மொழியில் கலந்துவிடுவது இயற்கை. இந்த இயற்கையைத் தடுக்க முடியாது. ஆனால், கட்டுப் பாட்டுக்கு அடங்கி வரம்பு மீறாதபடி பார்த்துக் கொள்வது மொழிப் பற்றுள்ளவரின் கடமை. அதை அக்காலத்துத் தமிழர் செய்திருக் கிறார்கள். ஆனால், அடியோடு பிற மொழிச் சொற்களைக் கலக்காமல் இருக்கச் செய்ய முடியாது. பேச்சு வழக்கற்றுப்போன ஏட்டு மொழிகளிலேயும் பிற மொழிச் சொற்கலப்பு ஏற்படுகிறது என்றால், பேச்சு வழக்கில் உள்ள மொழிகளில் பிற மொழிச் சொற்கள் கலப்பதைத் தடுக்க இயலுமோ? ஆகவே, சங்க காலத் தமிழகத்திலேயும் பிற மொழிக் கலப்பு ஏற்பட்டுக் கொண்டிருந்தது. வையாபுரியார்கள் கூறுவது போலக் ‘கலப்புக் காலம்’ வரட்டும். என்று காத்துக் கொண்டிருந்து சிலநூற்றாண்டுகள் கழிந்த பிறகு பிற மொழிக் கலப்பு நுழையவில்லை. ஆனால், மேலே கூறியபடி, சங்கத் தொகை நூற்செய்யுள் களில் பிற மொழிக் கலப்பு வெகு குறைவாகவும் மணிமேகலை, சிலப்பதிகாரக் காவியங்களில் கலப்பு அதிகமாகவும் இருப்பதைக் காண்கிறோம். தொகை நூல்களில் பிற மொழிச் சொற்கள் மிகக் குறைவாக இருப்பதன் காரணம் என்னவென்றால், அச்செய்யுட்கள் பிறமொழிச் சொற்கள் இல்லாமலே தாய்மொழியிலேயே கருத்துக்களைத் தெரிவிக்கும் விஷயங்களைக் கொண்டவை. மேலும், பிற மொழிகளைக் கற்காமல் தாய்மொழியை மட்டும் கற்றவர்களால் பாடப்பெற்றவை. மணிமேகலை, சிலப்பதிகார நூல்கள் அவ்வாறில்லாமல் பிற மதச் சார்புள்ள கருத்துக் களைக் கூறவேண்டியிருந்தபடியாலும் புதுமைக் கருத்துக்களைக் கூறவேண்டியிருந்தபடியாலும், இந்நூல்களில் பிராகிருத மொழிச் சொற்களும் வடமொழிச் சொற்களும் அதிகமாகக் காணப் படுகின்றன. இதுவே, வரலாற்று முறைப்படி நாம் அறியக் கிடக்கும் உண்மை. எனவே, வையாபுரியார்கள் கூறுவதுபோல, சங்ககாலம் கழிந்து வேறு காலம் வந்தபிறகு இயற்றப்பட்ட நூல்கள் இவை என்று கருதுவது பெரிய தவறாகும். ஆகையால், சிலப்பதிகார, மணிமேகலை நூல்கள் கடைச்சங்க காலத்தின் இறுதியில் (கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் இறுதியில்), செங்குட்டுவன் காலத்தில் இயற்றப்பட்ட நூல்கள் என்பதில் சற்றும் ஐயமில்லை. இலக்கிய நூல்கள் சேரன் செங்குட்டுவன் வாழ்ந்திருந்த காலத்தில் தமிழிலக்கியத் தில் புதுவகையான நூல்கள் தோன்றின. சிறுசிறு குறும்பாடல்கள் பாடப் படுவது இவனுக்கு முன்பிருந்த வழக்கம். இவன் காலத்தில் சிறுசிறு பாடல்களும் அவற்றோடு நெடும் பாடல்களும் பாடப்பட்டன. சேர அரசர்கள்மீது பாடப்பட்ட பதிற்றுப்பத்து அக்காலத்தில் புதுமையானது. பதிற்றுப்பத்து, செங்குட்டுவனுடைய பாட்டன், தந்தை, சிறியதந்தை, தாயாதித் தந்தை, தமயன், தாயாதித்தமயன், தம்பியர் ஆகியவர்கள்மீது பாடப்பட்டது. 5ஆம் பத்து இச்செங்குட்டுவன்மேல் பாடப் பட்டது. இது அக்காலத்தில் புதுவகையான இலக்கியப் படைப்பு. ஒவ்வொரு அரசன் மேலும் பத்துப்பத்துச் செய்யுளைக் கொண்ட புது இலக்கியம் இது. செங்குட்டுவன் காலத்திலே நீண்ட செய்யுள்களும் புதுமை யாக இயற்றப்பட்டன. சோழன் கரிகால் வளவன் மீது பாடப் பட்ட பட்டினப் பாலையும் பொருநர் ஆற்றுப்படையும் தொண்டைமான் இளந்திரையன் மேல் பாடப்பட்ட பெரும் பாணாற்றுப்படையும், ஆரிய வரசன் பிரகதத் தனுக்கு அகப்பொருள் அறிவித்ததற்காகப் பாடப்பட்ட குறிஞ்சிப் பாட்டும் செங்குட்டு வன் காலத்துப் புதுவகையான நெடும்பாடல்கள். (இவனுக்கு அடுத்த தலைமுறையில் பாடப்பட்டவை. சிறுபாணாற்றுப் படை, திருமுருகாற்றுப்படை, நெடுநல்வாடை, மதுரைக்காஞ்சி, மலை படுகடாம் (கூத்தராற்றுப் படை) முல்லைப்பாட்டு என்பவை) இவற்றுக்கெல்லாம் மேலாக செங்குட்டுவன் காலத்தில் இயற்றப் பட்ட புதுமையான இலக்கியங்கள் இரண்டு. அவை, செங்குட்டுவனின் தம்பியரான இளங்கோஅடிகள் இயற்றிய சிலப்பதிகாரமும், இவனுடைய நண்பரான கூலவாணிகன் சாத்தனார் இயற்றிய மணி மேகலையும் ஆகும். இவ்விரண்டு காவியங்களைப் பற்றி வேறு இடத்தில் கூறியுள்ளோம். சிலப்பதிகாரமும் மணிமேகலையும் இரட்டைக் காவியங்கள். அதாவது ஒன்றோடொன்று தொடர்புடைய காவியங்கள் இவ்விரண்டு காவியங்களும் தமிழ்நாட்டுக்கு மட்டும் அல்ல, இந்தியா தேசத்துக்கே சிறப்பான காவியங்கள் ஆகும். ஏனென்றால், இந்தியாவில் உள்ள எல்லா மொழிக் காவியங்களும் பாரத, இராமாயணக் கதைகளை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டவை. ஆனால், இவ்விரண்டு காவியங்களும் வரலாற்று நிகழ்ச்சியை அடிப் படையாகக் கொண்டு எழுதப்பட்ட காவியங்கள், இந்த வகையில் இந்தியாவிலுள்ள எல்லா மொழிக் காவியங்களுக்கும் முதலில் தோன்றிய காவியங்கள் இவை என்பதில் ஐயமில்லை. சங்க காலத்தில் பாரதம், இராமாயணம் ஆகிய நூல்களும் தமிழில் இயற்றப்பட்டிருந் தன என்று கூறப்படுகின்றன. அந்த பாரத, இராமாயண நூல்கள் இப்போது கிடைக்கவில்லை. அவைகளின் சில செய்யுள்கள் மட்டும் உரை யாசிரியர்களால் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன. ஆனால், முழு உருவத்தில் இப்போது கிடைக்கிற பழைய காவிய நூல்கள் சிலப்பதி காரமும் மணிமேகலையுமே. இந்த வகையில், சேரன் செட்டுவனுடைய காலம் தமிழிலக்கியத்தின் பொற்காலம் என்று கூறலாம். வஞ்சிமாநகரம் (கருவூர்) சேர நாட்டின் தலைநகரமாக இருந்தது வஞ்சிமாநகரம். அதற்குக் கருவூர் என்றும் வேறு பெயர் இருந்தது. கருவூர் வஞ்சி மாநகர் எங்கிருந்தது என்பது பற்றி இருவேறு கருத்துக்கள் ஏற்பட்டு அறிஞர்கள் பலரின் வாதப் பிரதிவாதங்களுக்குக் காரணமாயிற்று. சேர நாட்டின் கடற்கரையோரத்தில் ஒரு வஞ்சிக் கருவூரும் கொங்கு நாட்டில் ஒரு வஞ்சிக் கருவூரும் இருந்தன. இந்த இரண்டு கருவூர்களில் எது சேரர்களின் தலைநகரமாயிருந்தது என்பது பற்றித்தான் மேலே கூறப்பட்ட விவாதங்கள் எழுந்தன. இது பற்றிப் பல கட்டுரைகளும் வெளிவந்துள்ளன. நானும் இது பற்றிச் சொந்த முறையில் ஆராய்ந்து பெரியாற்றங்கரையில் சேரநாட்டுக் கடற்கரை யோரத்தில் இருந்த வஞ்சிக்கருவூர்தான் சேரநாட்டின் பழைய தலைநகரம் என்னும் கருத்துள்ளவனாக இருந்தேன். ஆனால், அந்தக் கருத்தை உறுதிப் படுத்தாதபடி, டாலமி எனும் யவன ஆசிரியரின் குறிப்பு தடைசெய்து கொண்டிருந்தது. டாலமி தம்முடைய நூலிலே கரவ்ர (Karoura), அதாவது கருவூர் உள் நாட்டிலிருந்த நகரம் என்று எழுதியிருக்கிறார். இந்தக் காரணத்தினால் என்னுடைய கருத்தை உறுதிப்படுத்த முடியாமல் ஐயங் கொண்டிருந்தேன். கொங்கு நாட்டு வஞ்சிமா நகரந்தான் சேரர்களுடைய தலைநகரம் என்று கூறுகிற, திரு. ரா. இராக வையங்காரின் `வஞ்சிமாநகர்’ என்னும் நூலும், திரு. மு. இராகவை யங்கார் எழுதிய `சேரன் செங்குட்டுவன்’ என்னும் நூலும் வஞ்சி மாநகரத்தைப் பற்றித் தெளிவாகக் கூறாமல் குழப்பம் கொடுப்பதாக இருக்கின்றன. சங்க காலச் சேர மன்னர்களைப் பற்றி ஆராய்ந்த போதுதான் வஞ்சிமா நகரத்தைப் பற்றிய உண்மையான கருத்து எனக்குப் புலனாயிற்று. சங்க காலத்துச் சேரர் தலைநகரம் ஆதிகாலம் முதல் கடற்கரை யோரத்திலிருந்த வஞ்சிக்கருவூர்தான் என்பதில் ஐயமில்லை. ஆனால், சேர அரசர்கள், முக்கியமாக இமயவரம்பன் நெடுஞ்சேர லாதன், பல்யானைச் செல்கெழு குட்டுவன் ஆகிய அண்ணன் தம்பி யரசர்கள் கொங்கு நாட்டின் தென்பகுதிகளைக் கைப்பற்றி அவற்றைச் சேர இராச்சியத்துடன் சேர்த்துக் கொண்டார்கள். சேர்த்துக்கொண்ட கொங்குநாட்டுச் சேரஅரச மரபில் ஒரு சேரன் ஆட்சிசெய்யத் தொடங்கினான். அவன் கொங்குநாட்டில் தான் இருந்த ஊருக்குப் பழைய தலைநகரத்தின் பெயராகிய வஞ்சி (கருவூர்) என்னும் பெயர் சூட்டினான். எனவே, பழைய, வஞ்சிமா நகரமும் புதிய வஞ்சிமா நகரமும் சேரஅரசர்களுக்குத் தலைநகரங்களாகச் சங்க காலத்திலேயே அமைந்தன. சேர மன்னன் செங்குட்டுவனை 5ஆம் பத்துப் பாடிய பரணர் 10ஆவது செய்யுளில், வளங்கெழு சிறப்பின் உலகம் புரைஇச் செங்குணக் கொழுகும் கலுழிமலிர் நிறைக் காவிரி யன்றியும் பூவிரி புனலொரு மூன்றுடன் கூடிய கூடல் அனையை. என்று புகழ்கிறார். இதில் கொங்கு நாட்டிலே பாய்கிற காவிரியாறும் அதனுடன் கலக்கிற ஆன்பொருநை, குடவனாறு ஆகிய மூன்று ஆறுகள் ஒன்று சேருகிற முக்கூடலுக்குச் செங்குட்டுவனை உவமை கூறுகிறார். இந்த மூன்று கூறுகளும் பாய்கிற இடம் சேரனுக்கு உரியதாக இருந்தபடியினாலே இந்த ஆறுகளை அவனுக்கு உவமை கூறினார் என்பது தெளிவு. புறநானூறு 13ஆம் செய்யுளை உறையூர் ஏணிச்சேரி முட மோசியார் பாடியிருக்கிறார். அச்செய்யுளின் அடிக்குறிப்பு, `சோழன் முடித்தலைக் கோப்பெருநற் கிள்ளி கருவூரிடஞ் செல்வானைக் கண்டு, சேரமான் அந்துவஞ் சேரல் இரும்பொறை யோடு வேண்மாடத்து மேலிருந்து பாடியது’ என்று கூறுகிறது. இந்தக் கருவூர் கொங்கு நாட்டுக் கருவூர் என்பது திட்டமாகத் தெரிகின்றது. ஏனென்றால், சோழன் முடித்தலைக் கோப்பெரு நற்கிள்ளி தன் யானை மேல் ஏறித் தன் சோழ நாட்டு எல்லைக் கருகில் வந்தபோது, அவன் ஏறியிருந்த யானை கருவூரில் போனதை இச்செய்யுள் கூறுகிறது. ஆகவே, சோழ நாட்டுக்கு அருகில் இருந்த கருவூர், கொங்கு நாட்டுக் கருவூர் என்பதில் ஐயமில்லை. இக் கருவூரில் வேண்மாடம் என்னும் அரண்மனையில் சேரமான் அந்துவஞ் சேரல் இரும்பொறை இருந்தான் என்பதனால், இக்கொங்கு நாட்டுக் கருவூரில் இருந்துகொண்டு சேர அரசர்களின் ஒரு கிளையினராகிய இரும்பொறையரசர் ஆட்சி செய்தார்கள் என்பது தெரிகின்றது. இந்த அந்துவஞ்சேரல் இரும்பொறை, செங்குட்டுவனுடைய தாயாதிப் பாட்டன் எனத் தெரிகிறான். எனவே, கொங்கு நாட்டின் தலைநகரமும் பழைய வஞ்சி நகரத்தின் பெயரையே பெற்று இருந்தது என்பதும், ஒரே காலத்தில் இரண்டு வஞ்சிக்கருவூர்கள் சேர இராச்சியத்தில் இருந்தன என்பதும் தெரிகின்றன. இந்தக் கொங்கு நாட்டு வஞ்சிக்கருவூரைத்தான் டாலமி உள்நாட்டுப் பட்டினம் என்று கூறினார் எனத் தெரிகிறது. இக்கருவூர் கொங்கு நாட்டைச் சேர்ந்தது. ஆங்கிலேயர் ஆட்சியில் புதிய அமைப்பில் நாட்டை ஜில்லாக்களாகப் பிரித்தபோது, கொங்கு நாட்டைச் சேர்ந்த இவ்வூர் திருச்சிராப்பள்ளி ஜில்லா வுடன் சேர்க்கப்பட்டது. கரூர் நகரைத் தலைமையிடமாகக் கொண்ட கரூர் மாவட்டம் (ஜில்லா), தனியாகத் திருச்சி மாவட்டத்திலிருந்து தற்போது பிரிக்கப்பட்டுள்ளது. - பொதுப் பதிப்பாசிரியர்கள். மோரியர் மோகூருக்கு வந்தனரா? கோசருக்கு மோகூர் பணியாதபடியினாலே அவரைப் பணியச் செய்வதற்குச் கோசர், மோரியருடைய உதவியை நாடினார்கள் என்றும் அவர்களின் வேண்டுகோட்படி மோரியர் மோகூரின் மேல் படையெடுத்துச் சென்றார்கள் என்றும் செல்லும் வழியில் மலைகள் குறுக்கிட்டபடியால், மலைமேல் தேர்ப்படை போவதற்காக வழிகளை உண்டாக்கிக்கொண்டு போனார்கள் என்றும் சங்கச் செய்யுள்கள் கூறுகின்றன. வெல்கொடித் துனைகா லன்ன புனைதேர்க் கோசர் தொன்மூ தாலத் தரும்பணைப் பொதியில் இன்னிசை முரசங் கடிப்பிகுத் திரங்கத் தெம்முனை சிதைத்த ஞான்றை மோகூர் பணியா மையிற் பகைதலை வந்த மாகெழு தானை வம்ப மோரியர் புனைதேர் நேமி யுருளிய குறைத்த இலங்குவெள் ளருவிய அறைவா யும்பர். (அகம். 251 : 6-14) என்றும், கனைகுரல் இசைக்கும் விரைசெலற் கடுங்கணை முரண்மிகு வடுகர் முன்னுற மோரியர் தென்றிசை மாதிர முன்னிய வரவிற்கு விண்ணுற ஓங்கிய பனியிருங் குன்றத்து ஒண்கதிர்த் திகிரி யுருளிய குறைத்த அறையிறந்து அவரோ சென்றனர். (அகம் 281 : 7-12) என்றும் மாமூலனார் இச்செய்தியைக் கூறுகின்றார். வென்வேல் விண்பொரு நெடுங்குடைக் கொடித்தேர் மோரியர் திண்கதிர்த் திகிரி திரிதரக் குறைத்த உலக விடைகழி யறைவாய். (புறம் 175 : 5-8) என்று கள்ளில் ஆத்திரையனார் இதனைக் கூறுகிறார். விண்பொரு நெடுங்குடை இயல்தேர் மோரியர் பொன்புனை திகிரி திரிதரக் குறைத்த அறை இறந்து அகன்றனர் ஆயினும்... (அகம் 69 : 10-12) என்று உமட்டூர்கிழார் மகனார் பரங்கொற்றனார் கூறுகிறார். மோரியர் என்பவர் இந்தியச் சரித்திரத்தில் பேர் பெற்ற மௌரிய அரசராவர். மோரிய அரசர்களில் சந்திரகுப்த அரசனும் அசோகச் சக்ரவர்த்தியும் பேர் பெற்றவர்கள். மோரிய வம்சம் கி.மு. 185இல் சிறப்புக் குன்றிவிட்டது. ஆனால், அவர்கள் வழியில் வந்தவர் சில நூற்றாண்டுகள் வரையில் ஆங்காங்கே சிற்சில இடங்களில் இருந்து சிற்றரசராய் ஆட்சி செய்து கொண்டிருந் தார்கள். அந்த மோரியர்களில் ஒரு கிளை ஆந்திர தேசத்தில் ராய்ச்சூர் மாவட்டத்தில் மாங்கி என்னும் சுவர்ண கிரியில் அரசாண்டனர். இவர்கள் கோசரின் வேண்டுகோளின் படி மோகூரின்மேல் படையெடுத்துவந்தனர் போலும். இச்செய்தியைத் தான் மேலே காட்டிய சங்கச் செய்யுள்கள் கூறுகின்றன. மோகூர் பாண்டி நாட்டில் இருந்த ஊர். அது இப்போதும் திருமோகூர் என்னும் பெயர் பெற்று இருக்கின்றது. மோகூரை யரசாண்ட மன்னர் பழையன்மாறன் என்னும் குடிப்பெயர் பெற்றுப் பாண்டியனுடைய சேனாபதியாக இருந்தார்கள். மோகூர் மன்னனாகிய ஒரு பழையன் மாறனைச் சேரன் செங்குட்டுவன் வென்ற செய்தியை முன்னமே கூறினோம். மோகூரின்மேல் மோரியர் படையெடுத்து வந்தபோது மலைகள் குறுக்கிட்டபடியால் அம்மலை மேல் பாதை அமைத்துக் கொண்டு அவர்கள் தேர்ப்படையைச் செலுத்திக் கொண்டு வந்தார்கள் என்று மேலே காட்டிய செய்யுள்களால் அறிகிறோம். இதுபற்றிப் பல அறிஞர்கள் ஆராய்ந்து பற்பல கருத்துகளை வெளியிட்டிருக்கிறார்கள். அவர்கள் எழுதி வெளியிட்ட கருத்துகளையெல்லாம் இங்கு நாம் ஆராய முற்படவில்லை. ஆனால், அவர்கள் எழுதிய கட்டுரைகளை மட்டும் இங்குக் குறிப்பிடுவது அமைவுடைத்து. அவையாவன: 1. S. Krishnaswamy Aiyangar, ‘Mauryan Invasion of South India,’ Ch, II, The Beginnings of South Indian History, 1918. 2. Somasundara Desikar, ‘The Mauryan Invasion of Tamilakam’, Quartely Journal of the Mythic Society, Vol. xviii, pp. 155-166. 3. K.A. Nilakantan, ‘The Mauryan Invasion of the Tamil Land’, quartely Journal of the Mythic Society, Vol. xvi, p. 304. 4. P.T. Srinivasa Iyengar, History of the Tamils, pp. 520-526. 5. Somasundara Desikar, ‘The Mauryan Invasaion of the Tamilakam’, Indian Historical Quarterly. Vol. iv. pp. 135-145. 6. V.R. Ramachandra Dikshitar, The Mauryan Polity, pp. 58-61. 7. K.G. Sankar, ‘The Moriyas of the Sangam Works’, J.R.A.S., 1924, pp. 664-667. 8. Vincent A. Smith, Early History of India, 4th Edition 1957, p. 157. 9. The Cambridge History of India, Vol. i, p. 596. 10. K.A. Nilakanta Sastri (Edited), ‘Mauryan Invasion of South India’, A Comprehensive History of India, Vol. ii, 1957, pp. 501-503. 11. டாக்டர் கே.கே. பிள்ளை, ‘தமிழகமும் மோரியர் படை யெடுப்பும்’, பேராசிரியர் டாக்டர் ரா.பி. சேதுப்பிள்ளை வெள்ளி விழா மலர், 1961, பக்கம். 359-363. 12. பண்டித, மு, இராகவையங்கார், சேரன் செங்குட்டுவன். மோரியர் மோகூரின்மேல் படையெடுத்து வந்தனர் என்று கூறப் படுகின்றனர். ஆனால், பாண்டி நாட்டு மோகூருக்கு இடையில் எந்த மலையும் வழிமறித்து நிற்கவில்லை. சேரன் செங்குட்டுவன் மோகூர் பழையன் மேல் படையெடுத்து வந்து அவனை வென்றபோது, அவன் மலையில் வழியுண்டாக்கிக் கொண்டு வந்ததாகத் தெரிய வில்லை. அதே மோகூரின்மேல் மோரியர் படையெடுத்து வந்தபோது மலை குறுக்கிட்டுத் தடுத்தது என்று கூறப்படுகிறது. இதில் ஏதோ தவறு இருக்கிறதுபோலத் தோன்றுகிறது. ஏடெழுதுவோரால் மோகர் என்று எழுதப்பட வேண்டிய சொல் மோகூர் என்று எழுதப்பட்டதுதான் அந்தப் பிழை என்று தோன்றுகிறது. மோகர் என்பவர் துளு நாட்டில் (கொங்கண நாட்டில்) கடற்கரை யோரத்தில் வாழ்ந்திருந்த நெய்தல் நில மக்கள். தமிழ்நாட்டு நெய்தல் நில மக்களாகிய பரதவரைப் போலவே, அவர்களும் அடங்காமல் போர் செய்வதில் விருப்பமுள்ளவராக இருந்தனர். அவர்களுடைய சந்ததியார் இன்றும் துளு நாட்டுக் கடற்கரையில் மோகர் என்னும் பெயருடன் இருக்கிறார்கள். அந்த மோகர், கோசருக்குப் பணி யாமையால், அவரை அடக்கக் கோசர், மோரியருடைய உதவியை நாடினார்கள். கோசருக்கு உதவிசெய்ய வந்த மோரியரின் தேர்ப் படைகள் செல்லாதபடி சையகிரி என்னும் மேற்குத் தொடர்ச்சி மலைகள் குறுக்கே இருந்தபடியால், அம்மலையைக் கடந்தாலல்லது வேறு வழி இல்லாதபடியால், அவர்கள் மலைமேல் பாதை அமைத்துக் கொண்டு அப்பாதை வழியாகத் துளு நாட்டுக்குள் சென்று, பிறகு கடற் கரையோரத்தி லிருந்த மோகருடன் போர் செய்து அடக்கினார்கள் என்பது தெரிகின்றது. இந்தச் செய்தியைக் கூறுகிற செய்யுளில் பிற் காலத்தில் ஏடெழுதினோர் மோகர் என்பதை மோகூர் என்று கைப் பிழையாக எழுதினார்கள் போலும். ஏடெழுதுவோர் செய்த சிறுபிழை இக்காலத்து அறிஞர்களின் ஆராய்ச்சிக்கு அதிக வேலை கொடுத்து விட்டது. அந்தச் செய்யுளின் சரியான வாசகம் இவ்வாறு இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது: தெம்முனை சிதைத்த ஞான்றை மோகர் பணியா மையிற் பகைதலை வந்த மாகெழு தானை வம்ப மோரியர் புனைதேர் நேமி யுருளிய குறைத்த இலங்குவெள் அருவிய அறைவாய் உம்பர். எனவே, மோகூர் என்பது தவறான பாடம் என்பதும் மோகர் என்பதே சரியான பாடம் என்பதும் தெரிகின்றது. இதுகாறும் கூறியவற்றால், மோரியர் மோகூரின்மேல் படை யெடுத்து வரவில்லை என்பதும், அவர்கள் துளு நாட்டின் மேல் படை யெடுத்துச் சென்றனர் என்பதும், அவ்வாறு செல்லும் வழியில் குறுக்கே இருக்கிற சையகிரிமலைகள் ஆகிய மேற்குத் தொடர்ச்சி மலைகளைக் கடக்க வேண்டியிருந்தது என்பதும், ஆகவே அவர்கள் அந்த மலை மேலே வழியுண்டாக்கிக் கொண்டு போனார்கள் என்பதும் விளக்கப்பட்டன. சேரலாதன் அளித்த பெருஞ்சோறு - 1* “மண் திணிந்த நிலனும்” என்று தொடங்குகிற புறநானூற்று இரண்டாவது செய்யுள், சேரமான் பெருஞ்சோற்று உதியன் சேரலாதனை முரஞ்சியூர் முடிநாகராயர் பாடியது. உதியன் சேரலாதன் சேனைக்குச் சோறு கொடுத்தது பற்றிப் பெருஞ்சோற்று உதியன் என்ற சிறப்புப் பெயர் பெற்றான். பாண்டவர் கௌரவர் இருவருக்கும் நடந்த பாரதப் போரிலே இருதரத்துச் சேனைகளுக்கும் போர் முடிகிற வரையில் இந்தச் சேரன் சோறு கொடுத்தான் என்று பழைய உரையாசிரியர் இந்தச் செய்யுளுக்கு உரை எழுதியுள்ளார். ஆகவே, உதியன் சேர லாதன் பாரதப் போர் நடந்த காலத்திலே இருந்தவன் என்று பலரும் நம்புகிறார்கள். எனவே, இந்தச் செய்யுள் மிகப் பழமையானது என்று கருதுகிறார்கள். பாரதப் போர் கி. மு. 1500-ல் இற்றைக்கு 3500 ஆண்டு களுக்கு முன்னர் நிகழ்ந்தது என்பது வரலாற்றறிஞர்களின் கருத்து. இதனால், பெருஞ்சோற்று உதியன் சேரலாதனும், அவனைப் பாடிய முரஞ்சியூர் முடிநாக ராயரும் பாரதப்போர் நடந்த காலத்தில் இருந்தவர் என்று கருதப்படுகின்றனர். இதைப் பற்றி இங்கு ஆராய்வோம். இந்தச் சேர அரசனும் புலவர் பெருமானும் பாரதப் போர் நிகழ்ந்த காலத்தில் இருந்தார்களா? பாரதப் போரிலே இருதரத்துச் சேனைகளுக்கும் சேரன் சோறு அளித்தானா? தலைச்சங்க இடைச்சங்க காலத்து நூல்கள் எல்லாம் மறைந்துபோக, பாரதப்போர்க் காலத்திய (?) இந்தச் செய்யுள் மட்டும் எப்படிக் கிடைத்திருக்கிறது? இந்தச் செய்யுளில் கூறப்படுகின்ற செய்தி, இதன் உரையாசிரியர் கூறுவது போல, பாரதப் போரைப் பற்றிய செய்திதானா? இதில் ஏதேனும் தவறு உண்டா? இந்தச் செய்யுளையும் உரையையும் படித்த சிலர், இது பாரதப் போர்க்காலத்தில் நிகழ்ந்ததாகப் புனைந்துரைக்கப்பட்ட போலிப்பாடல் என்றும் கருதுகிறார்கள். ஆகவே, இச்செய்யுளைப் பற்றி ஆராய்ந்து உண்மை காணவேண்டுவது அவசியமாகிறது. “மண்திணிந்த நிலனும்” என்று தொடங்குகிற இந்தச் செய்யுளிலே, இவ்வரலாற்றினைக் கூறுகிற பகுதி இது: “வான வரம்பனை நீயோ பெரும! வலங்குளைப் புரவி யைவரொடு சினைஇ நிலந்தலைக் கொண்ட பொலம்பூந் தும்பை ஈரைம் பதின்மரும் பொருதுகளத் தொழிய பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்!” பழைய உரைகாரர் இதற்கு இவ்வாறு உரை எழுதுகிறார்:- “வானவரம்ப, பெரும, நீ, அசைந்த தலையாட்டமணிந்த குதிரையையுடைய பாண்டவ ரைவருடனே சினந்து நிலத்தைத் தம்மிடத்தே கொண்ட பொற்பூந் தும்பையையுடைய துரியோதனன் முதலாகிய நூற்றுவரும் பொருது போர்க்களத்தின்கட் படுந் துணையும் பெருஞ்சோறாகிய மிக்க உணவை இருபடைக்கும் வரையாது வழங்கினோய்!” இந்தச் செய்யுளில் வரும் ஐவர், ஈரைம்பதின்மர் என்னும் சொற்கள் உரையாசிரியரை மயக்கிவிட்டன. ஆகையினால் ஐவர் என்பதற்குப் பாண்டவர் என்றும், ஈரைம்பதின்மர் என்பதற்குக் கௌரவ ராகிய துரியோதனாதியர் என்றும் பொருள் எழுதிச் சேரலாதனைப் பாரதப் போருடன் பொருத்திவிட்டார். உரையாசிரியரை மயக்கியது போலவே ஏனையோரையும் மயங்கச் செய்வது இச்செய்யுளில் உள்ள ஐவர், ஈரைம்பதின்மர் என்னும் சொற்கள். இச் சொற்களின் உண்மைப் பொருளை உணர்வோமானால், பெருஞ்சோற்று உதியன் சேரலாதன் பாரதப் போர் நடந்த காலத்தில் இருந்தவன் அல்லன் என்பதும், அவன் கடைச்சங்க காலத்தில் கி. பி முதலாவது அல்லது இரண்டாவது நூற்றாண்டில் இருந்தவன் என்பதும் உள்ளங்கை நெல்லிக்கனிபோலத் தெரியும். இதனை விளக்கிக் கூறுவோம். இச் செய்யுளில் ஐவர் என்றது பாண்டவரை அல்ல, பாண்டியரை ஆகும். பாண்டவர் ஐவர் ஆனது போலவே, பாண்டியரும் ஐவர் ஆவர். பாண்டவருக்குப் பஞ்சபாண்டவர் என்னும் பெயர் வழங்குவது போல, பாண்டியருக்குப் பஞ்சபாண்டியர் என்னும் பெயர் வழங்கியது. பாண்டவர் வேறு, பாண்டியர்வேறு, அண்ணன் தம்பியர் ஆகிய பாண்டவர் ஐவர் பாரதப்போர்க் காலத்தில் இருந்தனர். பாண்டிய அரச குலத்தைச் சேர்ந்த பாண்டியர் ஐவர், பரம்பரை பரம்பரையாகப் பாண்டிய நாட்டை நெடுங்காலம் அரசாண்டனர். பாண்டி நாட்டை ஒரே காலத்தில் ஐந்து பாண்டியர்கள் வெவ்வேறு, ஊர்களில் இருந்து அரசாண்டனர். இச்செய்தி பிற்காலத்தில் மறக்கப்பட்டு மறைந்து விட்டது. இவ்வைந்து பாண்டியரில் தலைமைப் பாண்டியன் மதுரையில் அரசாண்டான். பாண்டிய இளவரசன் கொற்கையில் இருந்து அரசாண்டான். மற்ற மூன்று பாண்டியரும் அதே சமயத்தில் வெவ் வேறிடங்களிலிருந்து அரசாண்டார்கள். மதுரைப் பாண்டியனையும், கொற்கைப் பாண்டியனையும் நூல்கள், சிறப்பாகக் கூறியது போல மற்ற மூன்று பாண்டியரைச் சிறப்பாகக் கூறவில்லை. ஆனால், பாண்டியர் ஐவர் ஒரே காலத்தில் பாண்டிய நாட்டின் ஐந்து பகுதிகளிலிருந்து அரசாண்டனர் என்பதற்கு இலக்கியச் சான்றுகளும், சாசனச் சான்று களும் உள்ளன. அந்தச் சான்றுகளை இப்போது இங்குக் காட்ட இயல வில்லை. இதுபோன்று ஒரு கட்டுரை எழுத நேரிடும் என்று எனக்குத் தெரிந்திருந்தால், நான் கண்ட அச்சான்றுகளை அவ்வப்போது குறித்து வைத்திருப்பேன். ஆனாலும், ஆராய்ச்சிக் கண்கொண்டு இலக்கியங் களையும் சாசனங்களையும் நுட்பமாக ஆராய்கிறவர், பாண்டியர் ஐவர் என்னும் உண்மையைக் காண்பார்கள். பாண்டியர் ஐவர் ஆனபடி யினாலே அவருக்குப் பஞ்சவர் என்ற பெயரும் இருந்தது. பாண்டியர் ஐவர் என்னும் சரித்திர உண்மை மறைந்து போன பிற்காலத்திலே பஞ்சவர், பாண்டவர் என்பதற்கு வேறுபாடு தெரியாமல் பாண்டியரையும், பாண்டவரையும் ஒருவராகக் கருதி மயங்கினார்கள். மயங்கியதோடு அல்லாமல், பாண்டியருக்கும் பாண்டவருக்கும் உறவு முறையும் கற்பித்துவிட்டார்கள் சேர சோழ பாண்டியராகிய முடிமன்னர் மூவரும் மறைந்து, தமிழ்நாடு வேற்றார்கள் ஆட்சியிலே சில நூற்றாண்டுகளாக இருந்த காரணத்தினாலே, தமிழ்நாட்டுச் சரித்திரச் செய்திகள் பல மறைந்து விட்டதுபோலவே, ‘பாண்டியர் ஐவர் என்னும் சரித்திர உண்மையும் பிற்காலத்தில் மறைக்கப்பட்டது. (பாரதம் எல்லாக் காலத்திலும் படிக்கப்பட்டு வந்தபடியினாலே, பாண்டவர் ஐவர் என்கிற செய்தி மட்டும் குக்கிராமத்தவருக்கும் தெரிந்திருந்தது) எனவே, புறநானூற்று உரையாசிரியர் இச் செய்யுளில் பயின்றுள்ள ஐவர் என்னும் சொல்லுக்குப் பாண்டவர் என்று உரை எழுதிவிட்டார். “ஐவரோடு சினைஇ” என்பதற்குப் பாண்டியர் ஐவருடனும் சினந்து என்று பொருள் கூறவேண்டும். அதாவது உதியன் சேரலாதன் பாண்டியர் ஐவருடனும் சினங் கொண்டான் என்பது கருத்து. துரியோதனன் பாண்டவர் ஐவருடனும் சினங்கொண்டான் என்பது இச்செய்யுளின் பொருள் அல்ல. பிறகு, இச் செய்யுளில் வருகிற “ஈரைம்பதின்மர்” என்பதற்குத் துரியோதனன் முதலிய நூற்றுவர் என்று உரையாசிரியர் பொருள் எழுதியுள்ளார். ஐவரைப் பாண்டவராக்கிவிட்ட பிறகு ஈரைம்பதின் மரைத் துரியோதனனாகியர் நூற்றுவர் என்றுதானே கூறவேண்டும்? அதற்கேற்ப உரை எழுதிவிட்டார். இங்கு எனக்கு ஒரு ஐயப்பாடு உண்டு. (ஈரைம்பதின்மர் என்று இருப்பது ஈரொன்பதின்மர் (பதினெட்டுப்பேர்) என்று பாடம் இருந்திருக்கக் கூடும் என்பது எனது ஐயம். பதினெண் என்னும் பொருளுடைய ஈரொன்பதின்மர் என்னும் பாடத்தை உரை யாசிரியர் ஈரைம்பதின்மர் என்று திருத்திக் கொண்டாரோ என்று ஐயுறு கிறேன். ஈரைம்பதின்மர் என்றே வைத்துகொண்டாலும் அது துரியோத னாசியர்களைத் தான் சுட்டவேண்டும் என்பது இல்லை. நூறுபேர் அதாவது நூறுசேனைத் தலைவர்கள் என்பது பொருள். ஈரொன் பதின்மர் என்பது பாடமானால் பதினெட்டு சேனைத் தலைவர் என்று பொருள் கொள்ள வேண்டும். இந்தச் சேனைத் தலைவர்கள் பாண்டியர்கள் ஐந்து பேருக்கும் உரியவர்கள்.) எனவே, “அலங்குளைப் புரவி ஐவரொடு சினைஇ நிலந்தலைக் கொண்ட போலம்பூந் தும்பை ஈரைம்பதின்மரும் பொருதுகளத் தொழிய” என்பதற்குப் பொருள் என்னவென்றால், ‘அசைந்த தலையாட்டமணிந்த குதிரையையுடைய ஐந்து பாண்டியர்களுடனே சினங்கொண்டு, நிலத்தைத் தம்மிடத்தே கொண்ட பொற்பூந் தும்பையைச் சூடிய (பாண்டியருடைய) நூறு சேனைத் தலைவரும் (ஈரொன்பதின்மர் என்பது பாடமாயின் பதினெட்டுச் சேனைத் தலைவரும், போர்க்களத்திலே படும்படி’ என்பது பொருளாகும். அடுத்த அடியாகிய “பெருஞ்சோறு மிகுபதம் வரையறு கொடுத்தோய்” என்பதற்குப் பொருள் கூறுவேன். பெருஞ்சோறு என்பதற்குச் சிறப்புப் பொருள் உண்டு. அதனைத் தொல்காப்பியம் புறத்திணையியல் வஞ்சித்தினைப் பகுதியில் காணலாம். வஞ்சித் திணை என்பது ஓர் அரசன்மேல் வேற்றுநாட்டரசன் ஒருவன் படை யெடுத்து வந்தால் அவன் மேல் போருக்குச் செல்வது. இந்த வஞ்சித் திணையின் துறைகள் பதின் மூன்றில் பெருஞ்சோற்றுநிலை என்பதும் ஒன்று. எதிர்த்து வந்த அரசன்மேல் போருக்குச் செல்லும் அரசன், போருக்கு புறப்படுவதற்குமுன் சேனைவீரர்களுக்கு விருந்து செய்வான். அந்த விருந்துக்குப் பெருஞ்சோறு, அல்லது பெருஞ்சோற்று நிலை என்பது பெயர். இந்த விருந்தின்போது அரசனும் உடனிருந்து உண்பான். “பிண்டம்மேய பெருஞ்சோற்றுநிலை” என்பது தொல்காப்பிய சூத்திரம். இதற்கு உரை எழுதுகிற நச்சினார்க்கினியர், “வேந்தன் போர்த்தலைக்கொண்ட பிற்றை ஞான்று தானே போர் குறித்த படையாளருந் தானும் உடன் உண்பான் போல்வதோர் முகமன் செய்தற்குப் பிண்டித்து வைத்த உண்டியைக் கொடுத்தன் மேயின பெருஞ்சோற்று நிலையும்” என்று பொருள் கூறுகிறார். தமிழ் அரசர்கள் போருக்குச் செல்லும்போது தம்முடைய வீரர்களுக்குச் சோறு (பெருஞ்சோறு) அளிப்பது பண்டைக்காலத்து மரபு. புறப்பொருள் வெண்பா மாலையிலும், வஞ்சிப்படலத்தில் பெருஞ்சோற்றுநிலை கூறப்படுகிறது. எனவே (இப்புறநானூற்றுச் செய்யுளில் வருகிற, “பெருஞ்சோறு மிகுபதம் வரையாது கொடுத்தோய்” என்பதற்குப் பொருள் “பெருஞ்சோறாகிய மிக்க உணவை உன் படைவீரர்களுக்கு வரையாது அளித்தோய்” என்பது ஆகும். இவ்வாறு பொருள்கொள்ளாமல் பழைய உரையாசிரியர், தாம் கற்பித்துக்கொண்ட பாண்டவர் கௌரவரின் பாரதப்போருக்கு ஏற்ப, இருபடைக்கும் உதியன் சோறு வழங்கியதாக உரை எழுதினார். இவ்வுரையை ஏற்றுக் கொள்ள முடியாது; என்னை? போருக்குச் செல்லுமுன் தன் போர்வீரர்களுக்குப் பெருஞ்சோறு கொடுப்பது தமிழ்நாட்டு மரபு. அந்த மரபுப்படி உதியன் சேரலாதன், தனது போர்வீரர்களுக்குப் பெருஞ்சோறு கொடுத்தான் என்பது பொருந்துமே தவிர, பிற அரசர் சேனைக்குப் பெருஞ்சோறு கொடுத்தான் என்பது பொருந்தாது. அது தவறான கூற்றாகும். அப்படியானால், இப்புறநானூற்றுச் செய்யுளின் பொருள் என்ன? இந்தச் செய்யுளிலே வேறு சில குறிப்புகளும் உள்ளன. அந்தக் குறிப்புகளைக் கொண்டு ஆராய்ந்து இதற்குப் பொருள் காணலாம். உதியன்சேரலாதன் மேற்குக் கடற்கரையைச் சார்ந்த சேரநாட்டுக்கு அரசன். அவன், கிழக்குக்கடல் ஓரத்தில் இருந்த சோழநாட்டைப் பிடித்துக் கொண்டு, சோழநாடு, சேரநாடு இரண்டையும் அரசாண்டான். இச்செய்தியை இச்செய்யுளில் வருகிற, “நின் கடற் பிறந்த ஞாயிறு பெயர்த்து நின், வெண்டலைப்புணரிக் குடகடற் குளிக்கும், யாணர் வைப்பின் நன்னாட்டுப் பொருந” என்னும் அடிகளினால் அறியலாம். சேரலாதன் சோழநாட்டைப் பிடித்துக் கொண்டு பேரரசனாக இருப்பது பாண்டியருக்கு ஆபத்தாக இருந்தது. சோழ நாட்டைக் கைப்பற்றிக் கொண்டதுபோல, சேரன் பாண்டிய நாட்டையும் கைப்பற்றிக் கொள்வான் அல்லவா? அந்த நிலை ஏற்படாதபடி பாண்டிய அரசர், சேரலாதனை எதிர்த்தார்கள். பாண்டியர் ஐவரும் ஒன்றுசேர்ந்து தமது படைத்தலைவர்களை ஏவி, உதியன் சேரலாதனுடைய நாடுகளைக் கவர்ந்து கொண்டார்கள். பாண்டியரின் ஏவலினால் தனது நாடுகளில் சிலவற்றைப் பிடித்துக் கொண்ட பாண்டியரின் படைத்தலைவர் மீது உதியன் சேரலாதன் படையெடுத்துச் சென்று அவர்களுடன் போர் செய்யவேண்டிய நிலை ஏற்பட்டது. ஆகவே அவன் போருக்குப் புறப்பட்டான். புறப்படுமுன் தன் வீரர்களுக்குப் “பெருஞ்சோறு” அளித்தான். இதுதான் இச்செய்யுளிலிருந்து நாம் தெரிந்து கொள்ளும் சரித்திரச் செய்தி. எனவே, “அலங்குளைப் புரவி ஐவரொடு சினைஇ நிலந்தலைக் கொண்ட பொலம்பூந் தும்பை ஈரைம் பதின்மரும் பொருதுகளத் தொழியப் பெருஞ்சோறு மிகுபதம் வரையாது கொடுத்தோய்” என்பதற்கு நேரான பொருள், “அசைந்த தலையாட்ட மணிந்த குதிரையையுடைய ஐந்து பாண்டியருடன் சினந்து, நிலத்தை தம்மிடத்தே கொண்ட பொற் பூந்தும்பையையுடைய பாண்டியரின் சேனைத் தலைவர் நூற்றுவரும் (அல்லது பதினெண்மரும்) பொருது போர்க்களத்தின்கட் படுமாறு நினது சேனைக்குப் பெருஞ்சோறாகிய மிக்க உணவை வரையாது வழங்கினாய்” என்பதாகும். இவ்வுரையே இச் செய்யுளின் செம்பொருள் எனத்தோன்று கிறது. இது சங்ககாலத் தமிழரின் போர் முறைக்கும் தமிழ் நாட்டின் வரலாற்றுக்கும் பொருந்துவதாகும். இதனை விட்டுப் பாண்டவர் கௌரவரின், பாரதப் போருடன் இணைப்பது பெருந் தவறாகும். பழைய உரையாசிரியர் செய்த இந்தத் தவறு, பெருஞ்சோற்று உதியன் சேரலாதனும், அவனைப்பாடிய முரஞ்சியூர் முடிநாகராயரும் பாரதப்போர் நிகழ்ந்த காலமாகிய 3500 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தவர் என்று கருதும்படி செய்துவிட்டது. உண்மை இதுவன்று. முடிநாகராயரும் உதியன் சேரலாதனும் கடைச்சங்ககாலத்தில், (கி. மு.300-க்கும் கி. பி. 200-க்கும் இடைப்பட்ட காலத்தில்) இருந்தவர் என்பதே பொருந்துவதாகும். நிற்க, பெருஞ்சோற்று உதியன் சேரலாதனைப்பாடிய புலவர் முரஞ்சியூர் முடிநாகராயர் என்று கூறப்படுகிறார். இப்பெயரும் தவறு என்று தோன்றுகின்றது. ராயர் என்னும் பெயர் மிக மிகப் பிற்காலத்து. இப்பெயர் கடைச் சங்ககாலத்தில் வழங்கப் பெறவில்லை. இப்பெயரில் ஏதோ பாடபேதம் இருக்கவேண்டும். இப் பெயரின் சரியான வாசகம் முரஞ்சியூர் முடிநாகரியார் என்றிருக்கக்கூடும். புறநானூற்றின் 360-ஆம் செய்யுளைப் பாடிய புலவர் பெயர் சங்கவருணர் என்னும் நாகரியர் என்று காணப்படுகிறது. எனவே, முரஞ்சியூர் முடிநாகரியர் என்னும் பெயரை ஏடு எழுதுவோர் கைப்பிழையாக முரஞ்சியூர் முடிநாகராயர் என்று எழுதிவிட்டனர்போலும். இறையனார் அகப்பொருள் உரையிலும் இப்பெயர் முடிநாகராயர் என்று காணப்படுகிறது. இதுவும் முடிநாகரியர் என்றிருக்க வேண்டும். இப் புறநானூற்றுச் செய்யுளிலே பெருஞ்சோற்று உதியன் சேரலாதன் வானவரம்பன் என்று கூறப்படுகிறான். சேர அரசர் சிலருக்கு வானவரம்பன் என்னும் சிறப்புப்பெயர் வழங்கப்பட்டுள்ளது. வேறு சில சேர அரசர்களுக்கு இமயவரம்பன் என்னும் சிறப்புப் பெயரும் வழங்கப்பட்டுள்ளது. வானவரம்பன், இமயவரம்பன் என்னும் பெயரைக் கொண்டு, வானத்தை எல்லையாக உடையவன், இமய மலையை எல்லையாக உடை யவன் என்று சிலர் பொருள் கூறுகிறார்கள். இதுவும் பொருந்தாது. நில உலகத்துக்கு வானம் எப்படி எல்லையாக அமையும்? இமயமலையை எல்லையாகக் கொண்டு சேரமன்னர் எந்தக்காலத்திலும் அரசாண்டதாகத் தெரியவில்லை. ஆகவே, வானவரம்பன், இமயவரம்பன், என்பதற்கு இவ்வாறு பொருள் கூறுவது பொருந்தாது. ஆனால், இப்பெயர்கள் சேரமன்னர் பலருக்கும் வழங்கியுள்ளன. இப் பெயர்களுக்கு வேறு ஏதோ பொருள் இருக்க வேண்டும். இவற்றின் உண்மைப்பொருள் தெரிய வில்லை. அறிஞர்கள் ஆராய்ந்து கண்டறிய வேண்டும். எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு. சேரலாதன் அளித்த பெருஞ்சோறு - 2 தமிழ்ப்பொழில் 36ஆம் துணர், 4ஆம் மலரில் “சேரலாதன் அளித்த பெருஞ்சோறு” என்னும் கட்டுரையை எழுதியிருந்தேன். புறநானூற்று 2-ஆம் செய்யுளில் கூறப்படுகின்ற பெருஞ்சோற்று உதியன் சேரலாதன், பாரதப் போரில் இருதரத்துச் சேனைகளுக்கும் சோறு வழங்கினான் என்பது ஏற்கத்தக்கது அல்ல என்றும், அவன் பாரத காலத்தில் இருந்தவன் அல்லன் என்றும் கடைச்சங்க காலத்தில் இருந்தவன் என்றும் அக்கட்டுரையில் நான் எழுதியிருந்தேன். அக்கட்டுரையில் நான் கூறியவற்றை மறுத்து எனது மதிப்புக் குரிய நண்பர் திரு. ஞா . தேவநேயப் பாவாணர் அவர்கள் “சேரலாதன் பெருஞ்சோறு வழங்கியது பாரதப்படைகட்கே என்னும் தலைப்புடைய கட்டுரையைத் தமிழ்ப் பொழிலில் (துணர் 36 - மலர் 7) எழுதி யுள்ளார்கள். தமிழின் முது பழந்தொன்மையைக் காட்டி நிற்கும் சான்றுகளில், சேரலாதன் பாரதப் படைக்குப் பெருஞ்சோறு கொடுத்த செய்தியும் ஒன்று என்றும், அதனைக் கடைச் சங்க காலத்துச் செய்தி என்று எனது கட்டுரையில் கூறியது நான் தமிழன்னைக்குப் பெரியதோர் குற்றம்செய்துவிட்டதாகவும் பாவாணர் அவர்கள் எழுதியுள்ளார்கள். உதியன் சேரலாதன் பாரதப்போர் நிகழ்ந்த காலத்தில் பாண்டவர் - கௌரவர் ஆகிய இருதரத்து படைகளுக்குச் சோறு வழங்கினான் என்பது உண்மையானால் அது தமிழுக்குப் பெருமையளிக்கும் செய்தி என்பதில் ஐயமில்லை. அதற்காக, தேவநேயரைப் போலவே நாமும் மகிழலாம்; பெருமைப்படலாம். ஆனால், அது உண்மைச் செய்திதானா என்பதை முதலில் அறியவேண்டும். ஐயத்துக் கிடமானதும் மயங்கச் செய்கிறதுமான சான்றுகளைக் காட்டித் தமிழன்னையின் புகழைப் பாடுவதைவிட அசைக்க முடியாத உறுதியான உண்மைக் காரணங்களைக் காட்டித் தமிழ்த்தாயின் பெருமையை நிலைநாட்டுவது சிறந்த தொண்டு என்று கருதுகிறவன் நான். காய்தல் உவத்தல் அகற்றி நடுநிலையில் நின்று ஆராயும் பழக்கம் உடைய நான், பிறர் கூறுவதில் உண்மைச் சான்றுகள் இருக்குமானால் அவற்றை ஏற்றுக் கொள்ளத் தயங்கமாட்டேன். தேவநேயர் அவர்கள், தமது கட்டுரையில் கூறியவற்றைப் படித்துப் பார்த்தேன். என்னுடைய கருத்துக்களை மாற்றிக் கொள்ளக்கூடிய செய்திகளோ சான்றுகளோ அவருடைய கட்டுரையில் கூறப்படவில்லை. மாறாகப் புதிய ஐயங்கள் தோன்றுகின்றன. தேவநேயர் அவர்களின் கருத்துக்களுக்கு விடை கூறும்போது, “பொழிலில்” போதிய இடம் இருக்குமா என்கிற ஐயத்தின் காரணமாக, கூடியவரையில் சுருக்கமாகவே எழுதுகிறேன். புறம் 2-ஆம் செய்யுளில் கூறப்படுகிற ஐவர், ஈரைம் பதின்மர் என்னும் சொற்கள் பாண்டவரையும் கௌரவரையுந் தான் சுட்டுகின்றன என்றும், அவ் விருவரும் செய்த பாரதப் போரில் உதியன் சேரலாதன் பெருஞ்சோறு கொடுத்தான் என்றும், இதுவே உண்மைச் செய்தி என்றும் பாவாணர் வற்புறுத்துகிறார். இதுவே இக்கட்டுரையின் முதன்மையான கருத்து. இதற்கு விடை கூறுவதற்குமுன், பாவாணர் அவர்கள் கூறியுள்ள வேறுசில கருத்துக்களை ஆராயவேண்டியிருக்கிறது. அவற்றை ஆராய்ந்த பிறகு, மூலக்கருத்தைப்பற்றி ஆராய்வோம். 1. “தொல்காப்பியத்தில் வஞ்சித்திணைத் துறையாகக் குறிக்கப் பட்டுள்ள ‘பிண்டமேய பெருஞ்சோற்றுநிலை’, வழி வழி வந்த மூவேந் தர்க்கும் பொதுநிலையன்றி அவருள் ஒருவனுக்குமட்டும் சிறப்பாக உரியதன்று. ஓர் அரசனைச் சிறப்பித்துப் பாடும். இயன்மொழி வாழ்த்தில், அவனுக்குச் சிறப்பாக உரிய இயல்களையும் செயல் களையும் குறிப்பிடுவதன்றி, எல்லார்க்கும் பொதுவானவற்றைக் குறிப்பது மரபன்று” என்று தேவநேயப் பாவாணர் எழுதுகிறார். இது தவறான கருத்து என்பதைக் கீழ்வரும் சான்றுகள் தெளிவாக்குகின்றன. பெருஞ்சோறு கொடுப்பது மூவேந்தருக்கும் பொதுவானதென்றாலும்; அதுவும் ஓர் அரசனுக்குரிய சிறப்பாகப் புலவர்களால் குறிப்பிடப்பட்டுள்ளன. இதற்குச் சான்றுகள் இவை. பெருஞ்சுமந் ததைந்த செருப்புகன் மறவர் உருமுநிலன் அதிர்க்குங் குரலொடு கொளைபுணர்ந்து பெருஞ்சோறு உகுத்தற் கெறியுங் கடுஞ்சின வேந்தே நின் கழங்கு குரன் முரசே என்பது பதிற்றுப்பத்து. (3-ஆம் பத்து 30-ஆம் செய்யுள்) பல்யானைச் செல்கெழு குட்டு வனைப் பாலைக் கௌ தமனார் பாடியது. பெருஞ்சோறு பயந்த திருந்து வெற் றடக்கை திருநிலை பெற்ற பெருநா ளிருக்கை ... .. ... .. ... .. ... .. ... .. ... .. ... .. ... .. ... வலவைப் பார்ப்பான் பராசர னென்போன் குலவு வேற் சேரன் கொடைத்திறங் கேட்டு வண்டமிழ் மறையோற்கு வானுறை கொடுத்த திண்டிறல் நெடுவேற் சேரலற் காண்கென என்பது சிலம்பு. (கட்டுரை காதை 55-64). மேலும், சேரன் செங்குட்டுவன் பெருஞ்சோறு கொடுத்த செய்தியையும் சிலப்பதிகாரம் கூறுகிறது. “பின்றாச் சிறப்பிற் பெருஞ்சோற்று வஞ்சியும்” என்றும் (சிலம்பு.25-ஆம் காதை 143-ஆம் அடி) “வரும்படைத் தானை அமரர் வேட்டுக் கலித்த பெரும்படை தலைவர்க்குப் பெருஞ்சோறு வகுத்து” என்றும், (சிலம்பு கால்கோட்காதை 48-49 அடி) வருவன காண்க மேலும், மறப்படைக் குதிரை மாறா மைந்தின் துறக்கம் எய்திய தொய்யா நல்லிசை முதியர்ப் பேணிய உதியஞ் சேரல் பெருஞ்சோறு கொடுத்த ஞான்றை இரும்பல கூளிச் சுற்றம் குழீஇ இருந்தாங்கு என்பது அகநானூறு 233 ஆம் செய்யுள், மாமூலனார் பாடியது. எனவே, பெருஞ்சோற்றுநிலை ஓர் அரசனுக்குச் சிறப்பாகக் கூறப்படுவது அன்று என்று கூறுவது தவறாகிறது. 2. “மேலும், ஒரு வேந்தன் போருக்குச் செல்லும் தன் படைஞர்க்கு அளிக்கும் விருந்து, வணிக முறையில் கைம்மாறு கருதிச் செய்யுங் கடமையே யன்றி, வள்ளன்மை முறையில் வழங்கும் கொடையாகாது. போர்க்களத்தில் தன் வேந்தன் பொருட்டு உயிரைத் துறக்கத் துணியும் மறவனுக்கும், ஓர் உருண்டை சோறு கொடுத்தல் தானா பெரிது!” என்று எழுதுகிறார் தேவநேயர். தன் அரசனுடைய வெற்றிக்காகத் தன் உயிரையுங் கொடுத்துச் செஞ்சோற்றுக் கடனைத் தீர்க்கத் துணிந்த போர் வீரனுடைய தியாகத்தின் பெருமையை உணர்ந்த அரசன் வாழ்க்கையில் மிக உயர்ந்த நிலையில் இருக்கும் தான், வீரனுடைய (சாதாரண வாழ்க்கை) நிலைக்கு இரங்கி வந்து, அவனுடன் சரிசமானமாக ஒருங்கிருந்து தன் கையினால் அவனுக்கு உணவைக் கொடுத்துத் தானும் அமர்ந் துண்ணும் “பெருஞ்சோற்றுநிலை” இருதரப்பிலும் பெருமிதத்துக் குரியது. பெருஞ்சோறு என்றால் வயிறு நிறைய உண்டு பசிபோக்குவது அல்ல. பெருதற்கரிய, பெருமை தருகிற சோறு. அதனால்தான் இது பெருஞ்சோறு என்று பெயர் பெற்றது. ஓர் உருண்டை சோறா அது! பண்டைத் தமிழரசரும் போர்வீரரும் பெருமைக்குரியதாகக் கருதிப் போற்றியபடியினாலேதான் பழந்தமிழர் மரபைக் கூறிய தொல்காப்பியனார் தமது தொல்காப்பியச் சூத்திரத்தில் பெருஞ்சோற்று நிலையை விதந்தோதினார். வயிற்றுப் பசியைத் தீர்க்கும் ஓர் உருண்டை சோறு என்றால், அதனைத் தொல்காப்பியரும் பண்டைத் தமிழரும் போற்றிப் புகழவேண்டியதில்லையே. சாதாரண சோற்று ருண்டையாக இருந்தால், அதனைப் புலவர்கள் சிறப்பித்துப் பாடி யிருக்கமாட்டார்கள். மேலே காட்டப்பட்ட மேற்கோள்களில் அரசர்கள் அளித்த பெருஞ்சோற்றைப் புலவர்கள் புகழ்ந்திருப்பதைக் காண்கிறோம். எனவே பாரதப் போரில் படைஞருக்குக் கொடுத்த சோறுதான் பெருஞ்சோறு என்றும், மற்றப் போர் வீரர்களுக்கு அரசர் கொடுத்த சோறு ஒருருண்டைச் சோறு என்றும் கருதுவது சரியல்ல. நிற்க. 3. ராயர், வானவரம்பன், இமயவரம்பன் என்பனபற்றியும் தேவநேயர் தமது கருத்தைக் கூறியுள்ளார். அவையும் ஏற்கத் தகுந்தன வல்ல. இதுபற்றித் தனியே வேறு கட்டுரை எழுதியிருக்கிறேன். இனி, உதியன் சேரலாதன் பெருஞ்சோறு அளித்தது தன்னுடைய படைஞருக்கா, அல்லது பாரதப் போர் செய்த படைஞருக்கா என்பதை ஆராய்வோம். பாரதப் போரில் சேரன் ஒருவன் சோறு கொடுத்ததைக் கூறுவதாகக் கருதப்படுகிற செய்யுள்கள் இரண்டு உள்ளன. அவை புறநானூற்றிலும் சிலப்பதிகாரத்திலும் வந்துள்ளவை.இச்செய்யுள் கள் பாரதப் போரை வெளிப்படையாகச் சொல்லவில்லை ஐவர், ஈரைம்பதின்மர் செய்த போர் என்று மட்டும் சொல்கின்றன. ஐவர் என்பது பாண்டவரையும், ஈரைம்பதின்மர் என்பது கௌரவர் நூற்றுவரையும் குறிக்கின்றன என்று பொருள்கொண்டு, இது பாரதப்போரைக் குறிக்கின்றது என்று பொதுவாகக் கருதுவர். அச் செய்யுள்கள் இவை. வான வரம்பனை நீயோ பெரும! அலங்குளைப் புரவி ஐவரொடு சினைஇ நிலந்தலைக் கொண்ட போலம் பூந் தும்பை ஈரைம் பதின்மரும் பொருதுகளத் தொழியப் பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்! இது புறநானூறு 2-ஆம் செய்யுள். ஓரைவர் ஈரைம் பதின்ம ருடன் றெழுந்த போரிற் பெருஞ்சோறு போற்றாது தானளித்த சேரன் பொறையன் மலையன் றிறம்பாடிக் கார்செய் குழலாட வாடாமோ வூசல் கடம் பெறிந்த வாபாடி! யாடாமோ வூசல்!! இச்செய்யுள் சிலம்பு. வாழ்த்துக் காதை, ஊசல் வரியில் உள்ளது. பாண்டவருடன் கௌரவர் செய்த பாரதப் போரில் இருதரத்துப் படையினருக்கும் உதியன் சேரலாதன் என்னும் சேரன் பெருஞ்சோறு அளித்தான் என்று இச் செய்யுள்களுக்குப் பொருள் கொள்ளப்படுகிறது. புறநானூற்றுப் பழைய உரையாசிரியர் இவ்வாறு தெளிவாக உரை எழுதியுள்ளார். பொதுவாகப் படித்தவரும் படியாதவரும் பாண்டவர் ஐவர் கௌரவர் நூற்றுவர் என்று அறிந்திருப்பதனாலே, இச் செய்யுளில் கூறப்படுகிற ஐவர், ஈரைம்பதின்மர் என்பன பாண்டவர் கௌரவர் என்றும் அவர்கள் செய்த பாரதப் போரில் உதியன் சேரலாதன் போர்வீரர்களுக்குச் சோறு கொடுத்தான் என்றும் கருதுவது இயல்பே. பாண்டவரைத் தவிர வேறு ஐவர் இலரோ என்றும், கௌரவரைத் தவிர வேறு நூற்றுவர் இலரோஎன்றும் சிந்திக்கமாட்டார். மறை (வேதம்) என்பது சில இருந்தாலும், ஆரிய மறையையே பலரும் கருதுவது போல் வதோர் செய்தியாகும். இது இச்செய்யுளைப்பாடியோர் பாரதப் போர் என்றோ பாண்டவர் கௌரவர் என்றோ ஒருசொல்லைக் கூறி யிருப்பின் ஐயத்திற்கு இடமில்லை. (சாதாரணமாக மக்கள் எல்லோரும் இச்செய்யுள்கள் பாரதப் போரைத்தான் குறிக்கின்றன என்று நம்புவார்கள், நம்புகிறார்கள். ஆனால், ஆராய்ச்சியாளர் இக்கருத்தை ஏற்றுக்கொள்வதற்குச் சில தடைகள் உள்ளன. அகநானூற்றில் 233-ஆம் செய்யுளில் மாமூலனார் என்னும் புலவர் உதியன் சேரல் என்னும் சேரன் பெருஞ்சோறு கொடுத்த செய்தியைக் கூறுகிறார். புறநானூற்று இரண்டாம் செய்யுளில் கூறப் படுகிற உதியன் சேரலும், மாமூலனார் கூறுகிற உதியன் சேரலும் ஒரே பெயருடையவர் என்பதைக் கவனியுங்கள். இருவரும் பெருஞ்சோறு கொடுத்தனர் என்பதையும் கவனியுங்கள். மாமூலனார் கூறுகிற செய்தி இது. மறப்படைக் குதிரை மாறா மைந்தின் துறக்கம் எய்திய தொய்யா நல்லிசை முதியர்ப் பேணிய உதியஞ் சேரல் பெருஞ்சோறு கொடுத்த ஞான்றை இரும்பல கூளிச் சுற்றம் குழீஇஇருந் தாங்கு என்பது. மாமூலனார் தமது வேறு செய்யுள்களில் சரித்திரச் செய்திகள் பலவற்றைத் தெளிவாகக் கூறுகிறார். ஆனால் இச் செய்யுளில் பாரதப் போரைப் பற்றி ஒன்றுமே சொல்லவில்லை. ஐவர், ஈரைம்பதின்மர் என்றுகூடச் சொல்லவில்லை. பெருஞ்சோறு கொடுத்த உதியஞ்சேரல், புகழ்பெற்ற பாரதப் போரில் சோறு கொடுத்தான் என்றால் அந்தச் சிறப்பான செய்தியை வெளிப்படையாகக் கூறி யிருப்பார் அல்லவா? அப்படிக் கூறாமையினாலே இவன் கொடுத்த பெருஞ்சோறு வேறு படையினருக்கு என்பது தெரிகிறதல்லவா? சோழ நாட்டிலிருந்த பராசரன் என்னும் பார்ப்பான் சேர நாடு சென்று, சேரனிடம் பரிசு பெற்றுப் பாண்டி நாட்டுத்...... என்னும் ஊருக்கு வந்தான் என்று சிலப்பதிகாரம் கூறுகிறது. இச் செய்தியைக் கூறுகிற சிலப்பதிகாரம் பெருஞ்சோறு கொடுத்த கோன் ஒருவனைக் கூறுகிறது. பெருஞ்சோறு பயந்த திருந்துவேற் றடக்கை திருநிலை பெற்ற பெருநா ளிருக்கை ... .. ... .. ... .. ... .. ... .. ... .. ... .. வண்டமிழ் மறையோற்கு வானுறை கொடுத்த திண்டிறல் நெடுவேல் சேரலற் காண்கெனக் காடு நாடு மூரும் போகி நீடுநிலை மலையம் பிற்படச் சென்றாங்கு (சிலம்பு. கட்டுரை 55-66) இதில் ஒரு சேர அரசன் பெருஞ்சோறு கொடுத்தது கூறப் படுகிறது. இதற்கு உரை எழுதிய அரும்பதவுரை யாசிரியர், பெருஞ் சோறு பயந்த - பாண்டவர்கள் படைக்கும் துரியோதனன் படைக்கும் சேரன் சோறிட்டதனை” என்று எழுதியுள்ளார். அப்படியானால் இவன் பாரதப் போரில் சோறு கொடுத்த உதியன் சேரல் ஆகவேண்டும். இவனிடம் சென்று பெற்ற பிறகு பராசரனும் பாரத காலத்தில் இருந்தவன் ஆதல் வேண்டும். இவன் பரிசுபெற்ற பிறகு சேரர்களை வாயார வாழ்த்துகிறான். அவ்வாறு வாழ்த்தும்போது கடைச் சங்க காலத்தில் இருந்த சேர அரசர்களை வாழ்த்துகிறான். விளைந்து முதிர் கொற்றத்து விறலோன் வாழி கடற்கடம் பெறிந்த கரிவலன் வாழி. விடர்ச் சீலை பொறித்த வேந்தன் வாழி. பூந்தண் கொருநைப் பொறையன் வாழி. மாந்தரஞ் சேரல் மன்னவன் வாழ்கென (சிலம்பு. கட்டுரை 80-84) அரும்பத உரையாசிரியர் கூறுவது சரியாயிருக்குமானால், பாரதப் போரில் சோறு கொடுத்த சேரனிடம் பரிசு பெற்ற பராசரன், பாரத காலத்துக்குப் பிறகு (1500 ஆண்டுக்குப் பின்னர்) இருந்த சேர அரசர்களை எப்படி வாழ்த்தமுடியும்? பராசரன் கடைச் சங்க காலத்தில் இருந்தான் என்றால், “பாண்டவர் படைக்கும் துரியோதனன் படைக்கும் சேரன் சோறிட்டதைக் குறிக்கிறதென்று அரும்பதவுரையாசிரியர் கூறியது தவறாகிறது. பெருஞ்சோறு என்றால் பாரதப் போரில் சேரன் கொடுத்த சோறுதான் என்று கருதிக் கொண்டு உரை எழுதினார் அரும்பத உரையாசிரியர். ஆனால் வரலாற்றுடன் பொருத்திப் பார்க்கும்போது முன்னுக்குப் பின் முரண்படுகிறது. அன்றியும் வேறு சில வினாக்கள் எழுகின்றன. 1. இரண்டு அரசர் போர் செய்தால், ஒருவர் பக்கத்தில் சேர்ந்து போர் செய்ய வேண்டுவது முறை, அதனை விட்டு இரண்டு தரத்தாருக்கும் சோறு இட்டான் என்பது உலகத்திலே எங்கும் எப்பொழுதும் நிகழாத ஒன்று. 2. ஒருபக்கத்திலும் சேரமுடியாதபடி நெருங்கிய உறவு முறை யுடையவனாக இருந்தபடியால் இருதரத்திலும் சேராமல், இருவருக்கும் சோறு அளித்தான் என்றால், சேரன் பாண்டவர் கௌரவர்களுக்கு எந்த முறையில் உறவினன்? தாயாதி, பங்காளி உறவா? இதற்குச் சான்று ஏதேனும் உண்டா? 3. பாரதப் போரில் சேரன் சோறு அளித்தது உண்மையானால், இந்தச் சிறப்பான செய்தியைப் பாரதம் ஏன் கூறவில்லை. பாண்டிய னுடைய மகள் அல்லி (சித்திராங்கதை)யை அருச்சுனன் மணந்தான் என்னும் கதைகளையெல்லாம் கூறுகிற பாரதம் இருபடைக்கும் பெருஞ்சோறு கொடுத்த செய்தியை ஏன் கூறவில்லை? இது மிக முக்கியமான செய்தியல்லவா? 4. தங்கள் சேனைக்குச் சோறு கொடுக்கக்கூட இயலாத அவ்வளவு வறியவர்களா பாண்டவரும் கௌரவர்களும்? 5. இருதரத்தார் போர் செய்யும்போது இரண்டு படைக்கும் சோறு அளித்த செய்தி உலகத்தில் யாண்டும் கேட்டதும் இல்லை; கண்டதும் இல்லை. 6. வள்ளன்மைக்காக இருதரத்துப் படையினருக்கும் சோறு வழங்கினான் என்றால், சிறியவருக்கு வழங்குவதே வள்ளன்மை யாகும். பாண்டவரும் துரியோதனாதியரும் அரசர்கள். வறியவர்கள் அல்லர். ஆகவே, (வள்ளன்மைப் பொருட்டு இவர்களுக்குச் சோறு வழங்கினான் என்பது பொருந்தாது. 7. கி. மு. 1500-ல் நிகழ்ந்ததாகக் கருதப்படுகிற பாரதப் போரில் சேரன் சோறு கொடுத்தான் என்னும் செய்தியைக் கூறும் ஒரு செய்யுள் கிடைத்திருக்கிற என்றால், அக்காலத்தில் இருந்து கடைச் சங்க காலம் வரையில் உள்ள வேறு செய்திகளைப் பற்றிய செய்யுள்கள் எங்கே? இடைப்பட்ட காலத்தில் எத்தனையோ சரித்திர நிகழ்ச்சிகள் நடந்திருக்கக் கூடும் அல்லவா? அவற்றைப் பற்றிய செய்யுள்களும் இருக்கவேண்டும் அல்லவா? அவையெல்லாம் எங்கே? அவையெல்லாம் கிடைக்காதபோது இந்த ஒரு செய்யுள்மட்டும் 3500 ஆண்டுகளாக அழியாமல் இருக்கிறது என்று எப்படி நம்புவது? இவற்றுக்கெல்லாம் விடை என்ன? இத்தனை முரண்பாடுகள் உள்ள இச்செய்தியை, பெருமைபடத் தக்கது என்னும் காரணம்பற்றி மற்றவர் ஏற்றுக்கொண்டாலும், வரலாற்று ஆராய்ச்சியாளர் எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியும்? எனவே தான், இச்செய்யுள்களில் கூறப்படும் ஐவர், ஈரைப்பதின்மர் என்பதற்கு வேறுபொருள் இருக்கவேண்டும் என்றும், அது பாண்டியர் சேரர் போரைப் பற்றியதாக இருக்கக்கூடும் என்றும் எனது கட்டுரையில் குறிப்பிட்டிருந்தேன். நண்பர் தேவநேயப் பாவாணர் “சேரலாதன் பெருஞ்சோறு வழங்கியது பாரதப் படை கட்கே” என்று இன்னும் நம்புவாரானால், அவருடைய நம்பிக்கையைத் தடுக்க எனக்கு உரிமையில்லை, தடுக்கவும் இல்லை. நான் அவருடைய கருத்தை ஏற்கவேண்டுமானால், மேலே காட்டிய முரண்பாடுகள் எல்லாவற்றிற்கும் சான்றுகளுடன் விடையிறுப் பாரானால், அக்கருத்தை ஏற்றுக்கொள்ள ஆயத்தமாயிருக் கிறேன். சுருக்கிச் சுருக்கி எழுதியும் இக்கட்டுரை விரிவடைந்து விட்டது. ஆதலின், மேலே கூறியதுபோல, பாவாணர் அவர்கள் தமது கட்டுரையில்கூறியுள்ள ஏனையவற்றிற்குத் தனியே வேறு கட்டுரை எழுதியுள்ளேன்; அதில் அவற்றைக் காண்க. சேரலாதன் அளித்த பெருஞ்சோறு - 3 “தமிழ்ப் பொழில்” 36-ஆம் துணர், 4-ஆம் மலரில், “சேரலாதன் அளித்த பெருஞ்சோறு” என்னும் கட்டுரை ஒன்று எழுதியிருந்தேன். அதில், உதியன் சேரலாதன் பெருஞ்சோறு அளித்தது பாரதப்போரில் அல்ல என்றும், பஞ்சவராகிய ஐந்து பாண்டியருடன் போருக்குச் சென்ற அவன், தன் சொந்தப் படையினருக்குப் பெருஞ்சோறு அளித்ததை அச்செய்தி குறிக்கிறது என்றும் எழுதியிருந்தேன். அக்கருத்தை மறுத்துத் திரு. ஞா. தேவநேயர் அவர்கள், “சேரலாதன் பெருஞ்சோறு வழங்கியது பாரதப் படைக்கே” என்னும் தலைப்புடன் ஒரு கட்டுரையைத் தமிழ்ப் பொழிலில் (துணர் 36, மலர் 7-இல்) எழுதியிருந்தார்கள். தேவநேயர் கட்டுரைக்கு விடையாக நான் எழுதிய, “சேரலாதன் அளித்த பெருஞ்சோறு - 2.” என்னும் கட்டுரையை வாசகர்கள் தமிழ்ப் பொழிலில் படித்திருப்பார்கள். அக்கட்டுரையில் கூறப்படாத மற்றச் செய்தியை வேறு கட்டுரையில் எழுதுவதாக அதில் குறிப்பிட்டிருந்தேன். அவற்றை இக்கட்டுரையில் எழுதுகிறேன். “ராயர்” புறநானூற்று 2-ஆம் செய்யுளைப் பாடிய புலவர் பெயர் முரஞ்சியூர் முடிநாகராயர் என்றிருப்பது தவறானதென்றும், அப்பெயர் முடிநாகரியார் என்றிருக்கக்கூடும் என்றும், சங்க காலத்தில் ராயர் என்னும் பட்டப்பெயர் அல்லது சாதிப் பெயர் வழங்கவில்லை என்றும் எனது முதல் கட்டுரையில் எழுதியிருந்தேன். அதனை மறுத்து திரு. ஞா. தேவநேயர் இவ்வாறு எழுதியுள்ளார்:- “ராயர் என்னும் பெயர் கடைச்சங்கத்திற்கும் முந்தி வழங்கிய தென்பதற்குத் தொல்காப்பியமே சான்றாகும். தொல்காப்பியர் காலம் கி. மு. 7-ஆம் நூற்றாண்டிற்குப் பிற்பட்டதாகாது. ஓர் ஆள்வினைத் துறைத் தலைவன் அரசனாற் பெறுஞ்சிறப்பு மாராயம் எனப்பட்டது. ‘மாராயம் பெற்ற நெடுமொழியாலும்’ என்பது தொல்காப்பியம். (பொருள் 63) மாராயமாவது மாராயன் என்று அரசனாற் பட்டம் பெறுகை. ‘பஞ்சவ மாராயன் ... ... கொங்காள்வான்’ எனறு கல் வெட்டில் வருதல் காண்க. அரசனாற் சிறப்பெய்திய வெற்றி மறவரின் பெற்றிமை கூறும் புறத்துறையை மாராய வஞ்சி எனப் புறப் பொருள் வெண்பா மாலை கூறும்.” இவ்வாறு எழுதி ராயன், ராயர் என்னும் சிறப்புப் பெயர் கடைச் சங்ககாலத்திலும் அதற்கு முற்பட்ட தொல்காப்பியர் காலத்திலும் அரசனால் மற்றவருக்கு வழங்கப்பட்டது என்று கூறுகிறார். அதற்குச் சான்றாகப் ‘பஞ்சவ மாராயன் ... ... ... கொங்காள்வான்’ என்னும் பெயரைச் சாசனத்திலிருந்து மேற்கோள் காட்டுகிறார். இந்தச் சான்று கடைச் சங்க காலத்துக்கு மிக மிகப் பிற்பட்ட காலத்துச் சான்று. மிகப்பிற்காலச் சான்றை மிக முற்காலத்துக்குச் சான்று காட்டுவது தவறு. அது ஏற்கத் தக்கதன்று. மேலும், தேவநேயர் கூறுவதுபோல, “மாராயன் என்று அரசனாற் பட்டம் பெறுகை” சங்ககாலத்தில் இருந்த தில்லை. சங்க காலத்தில் தமிழ் அரசர் தமது அலுவலாளருக்கோ மற்றவர்க்கோ ராயன் என்றோ மாராயன் என்றோ பட்டம் வழங்கியது இல்லை. தொல்காப்பியம் கூறுகிற மாராயம் என்னும் சொல் பட்டப்பெயர் அல்ல. அரசன் பிறருக்கு வழங்குகிற ஏனைய பட்டப்பெயர்களுக்கும் பரிசாக அளிக்கிற நாடுகளுக்கும் ஊர்களுக்கும் பொதுப் பெயராக மாராயம் என்னும் சொல் வழங்கப்பட்டது. இதற்கு நச்சினார்க்கினியர் உரையே சான்று பகர்கிறது. மாராயம் என்பதற்கு நச்சினார்க்கினியர் கூறும் உரைவருமாறு:- “மாராயம் பெற்ற நெடு மொழியானும் - வேந்தனாற் சிறப் பெய்திய அதனாற்றானேயாயினும் பிறரேயாயினும் கூறும் மீக்கூற்றுச் சொல்லும். சிறப்பாவன ஏனாதி, காவிதி முதலிய பட்டங்களும் நாடும் ஊரும் முதலியனவும் பெறுதலுமாம்.” இவ்வாறு உரையாசிரியர் கூறுகிறபடியினால், மாராயம் என்பது அரசனால் அளிக்கப்படும் சிறப்புப்பெயரோ பட்டப் பெயரோ அல்ல என்பதும், அரசன் அளிக்கும் வேறு பட்டங்களையும் சிறப்புக் களையும் பரிசுகளையும் குறிக்கிற ஒரு பொதுப்பெயர் என்பதும் நன்கு விளங்குகின்றன, “ஏனாதி காவிதி பட்டங்கள்” என்று உரையாசிரியர் கூறுகிறபடியால், முதலிய என்பதில் மாராயம் என்னும் பட்டமும் அடங்காதோ என்றால், அடங்காது. முதலிய என்பது எட்டி போன்ற பட்டங்களைக் குறிக்குமே யல்லாது, மாராயம் என்பதைக் குறிக்காது. மாராயம் என்பது பட்டப்பெயர் அல்ல. நச்சினார்க்கினியர் கூறுவது போல, அரசனால் அளிக்கப்படும் பட்டப்பெயர்களுக்கும் மானியங்கள் முதலிய சிறப்புகளுக்கும் வழங்குகிற பொதுப்பெயர். சங்க நூல்களிலே ஏனாதி, காவிதி, எட்டி போன்ற சிறப்புப்பெயர்கள் (பட்டப் பெயர்கள்) காணப்படுகின்றன வேயன்றி, மாராயன் என்னும் பட்டப்பெயரை இதுவரையில் நான் கண்டது இல்லை. சங்கநூல்களில் இப்பட்டப்பெயர் வந்திருப்பதைத் திரு. தேவநேயர் காட்டுவாரானால், நன்றியுள்ளவனாக இருப்பேன். மாராயன் என்னும் பெயர்கள், சங்க காலத்துக்கு மிகமிகப் பிற்பட்ட காலத்தில் வழங்கப்பட்டவை என்பது உண்மை. இந்தப் பிற்காலச் சிறப்புப் பெயரைச் சங்க காலத்துச் சிறப்புப்பெயரென்று கருதி மயங்குவது தவறு. ஆகவே, தொல்காப்பியம் கூறுகிற மாராயம் என்னும் சொல், அரசன் பிறருக்கு வழங்குகிற பட்டப் பெயர் அல்ல என்பதும், அது அப்பட்டப் பெயர்களுக்கு வழங்கும் பொதுப் பெயர் என்பதும் தெளிவாகிறது. ஆகவே, தேவநேயர் கூறுகிறபடி ராயர் என்னும் சொல் பட்டப்பெயராகவோ சாதிப் பெயராகவோ கடைச் சங்க காலத்திலும் வழங்கவில்லை. அதற்கு முந்திய தொல்காப்பியர் காலத்திலும் வழங்கவில்லை. அதனால், முடிநாகராயர் என்பதில் ராயர் என்னும் சொல் தவறாக ஏடெழுதுவோரால் எழுதப்பட்டிருக்கக் கூடும் என்றும், முடிநாகரியர் என்றிருக்கக் கூடும் என்பதில் தவறில்லை. இப்பொழுதும் அதனையே வற்புறுத்துகிறேன். நாகரியார் என்பதோ அல்லது வேறு சொல்லோ தவறாக நாகராயர் என்று ஏடெழுதுவோரால் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்று தெரிகிறது. ஆனால், அச்சொல் நிச்சயமாக ராயர் என்று இருக்க முடியாது. வானவரம்பன், இமயவரம்பன் வானவரம்பன் இமயவரம்பன் என்பதற்கு வானத்தை எல்லையாக உடையவன் இமயமலையை எல்லையாக உடையவன் என்று பொருள் கூறப்படுகிறது என்றும் இவ்வாறு பொருள் கொள்வது பொருந்தாது என்றும் என்னுடைய முதல் கட்டுரையில் குறிப்பிட்டிருந்தேன். திரு. தேவநேயர் அவர்கள், இவ்வாறு பொருள் கொள்வதே சரியானது என்று கூறி அதற்குத் தமது கருத்தையும் எழுதியுள்ளார்கள். அவர் எழுதுவது:- “வானவரம்பன் என்பது வானளாவும் மலையரசன் என்றும், இமயவரம்பன் என்பது பனிமலையை (இமயத்தை) எல்லையாகவு டைய நாட்டரசன் என்றும் பொருள் படுவதாகும். இவை சேரர் பெயர்கள். இவற்றுள் முன்னது எல்லார்க்கும் பொது; பின்னது ஒரு சிலர்க்கே சிறப்பு. நூறடி உயரமுள்ள மாடங்களும் இருநூறடி யுயரமுள்ள கோபுரங்களும், வான் றோய்வனவாகவும் வானத்தைத் துளைத்து மீச் சென்றனவாகவும் உயர்வு நவிற்சியாகக் கூறப்படும் போது, பத்தாயிரம் அடி உயர்ந்த குடமலை ஏன் வானவரம் பென்று மீக் கூறப்பட முடியாது?” இவ்வாறு வானவரம்பன் என்றால் வானளாவும் மலைக்கு அரசன் அதாவது குடமலைக்கு அரசன் என்று தேவநேயர் பொருள் கூறுகிறார். அப்படியானால், மலைகளையுடைய எல்லா அரசரும் வானவரம்பன் என்று பெயர்பெற வேண்டும். சோழனும், பாண்டி யனும், வேறு சிற்றரசர்களும், அவர்கள் நாட்டிலும் மலைகள் இருப்பதனாலே, அவர்களும் வான வரம்பன் என்று பெயர் பெற வேண்டும் அல்லவா? ஆனால், எல்லாத் தமிழ் அரசர்களும் வானவ ரம்பன் என்று பெயர் பெறுவது இல்லை. சேர அரசர்களுக்கு மட்டுமே வானவரம்பன் என்னும் பெயர் வழங்கப்பட்டது. இது ஏன்? வானளாவும் மலையுடைய அரசர் யாவரேனும், தேவநேயர் கருத்துப் படி, மலையை எல்லையாக வுடையவராயிருந்தால், வானவரம்பர் என்று பெயர் பெறவேண்டும். அப்படியில்லாமல் சேர அரசர்களுக்கு மட்டுமே வானவரம்பன் என்று பெயர் கூறப்படுவது ஏன்? ஆகவே, தேவநேயர் கூறுகிறபடி உயர்வு நவிற்சியாகக் கூறப்படுவது அன்று வானவரம்பன் என்பது, இதற்குத் தகுந்த வேறு காரணம் இருக்கக்கூடும். அதனைப் பின்னர் ஆராய்வோம். சோழர் 2. சோழர்* முன்னுரை சங்ககாலத்தில் தமிழ்நாட்டில் அரசோச்சிய மூவேந்தராகிய சேர, சோழ, பாண்டியர் களுள், பாண்டிய அரசர்களுடைய வரலாறு மிகுதியாகவும் தெளிவாகவும் கிடைக்காத தாலும், மிகுதியாகவும் தெளி வாகவும் கிடைக்கும் சேர அரசர்களுடைய வரலாற்றுக்கு அடிப் படையாக உள்ள பதிற்றுப்பத்து என்னும் நூல் ஒருவரால் பாடப் பெற்றிருக்குமோ என்று ஐயுறக் கிடக்கும் நிலை சிலரிடையே இருந்து வருவதாலும், ஓரளவு தெளிவான வரலாற்றுடன் கரிகாலன் முதலான பேரரசர்களது வரலாற்றைத் தன்னகத்தே கொண்டுள்ள சோழர் வரலாறு ஒருவகையில் முக்கியத் துவம் பெற்றதாகும். சோழ நாட்டைப் பற்றி அறிவதற்குத் தக்க சான்று களாகச் சோழர் காலத்திய தொல் கதைகளும், சங்ககால இலக்கியங் களும், அயல்நாட்டுக் குறிப்புகளும், கல் வெட்டுகளும் இன்றைய அகழ்வாராய்ச்சிகளும் பெரிதும் நமக்குத் துணைபுரிகின்றன. ‘சோழநாடு’ என்னும் பகுதியில், சோழநாட்டின் நிலவியல் அமைப்பு, எல்லைகள், முக்கிய ஆறுகள், பட்டினங்கள், மக்களினங்கள், அரசர்களின் வழிமுறைகள், போர்கள், ஆட்சிமுறை முதலானவற்றைக் காணலாம். சோழநாடு எல்லைகள் சோழநாடு தமிழ்நாட்டின் கிழக்குக் கடற்கரை ஓரமாக இருந்தது. கிழக்குக் கடல் இக்காலத்தில் வங்காளக் குடாக் கடல் என்று பெயர் பெற்றிருக்கிறது. இந்தக் கடல் சங்க காலத்தில் குணகடல் (குணக்கு - கிழக்கு) என்று பெயர் பெற்றிருந்தது. கடைச்சங்க காலத்தின் இறுதியில் கி.பி. முதலாம் நூற்றாண்டு. இரண்டாம் நூற்றாண்டுகளில் தமிழகத் தோடு வாணிகம் செய்த யவனர் (கிரேக்கரும் உரோமரும்) குடகடலை எரித்திரையக் கடல் (செங்கடல்) என்று கூறினார்கள்.1 கடலைக் கிழக்கு எல்லையாகவும், கோட்டைக்கரையை மேற்கு எல்லையாகவும், வெள்ளாற்றைத் தெற்கு எல்லையாகவும், ஏணாட்டை வடக்கு எல்லையாகவும் கொண்டு 24 காதம் விரிந்து கிடந்தது சோழநாடு என்று பழம் பாடல் ஒன்று தெரிவிக்கிறது.2 இவற்றுள் வெள்ளாறு3 என்பது இப்போது புதுக்கோட்டைப் பகுதியில் பாயும் ஆறு. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கொடும் பாளூர், சோழ நாட்டுக்கும் பாண்டிய நாட்டுக்கும் எல்லையில் அமைந் திருந்தது என்று கூறப்படும் கருத்தும் இதனோடு தொடர்புடையது. கோட்டக்கரை (பேட்டைவாய்த்தலை?). ஏணாடு ஆகியவை பற்றித் தெளிவாகத் தெரியவில்லை. மேலும், இந்த எல்லையைக் கூறும் பாடல் சங்க காலத்திற்குப் பிந்தியது. எனவே, சங்ககாலச் சோழநாட்டின் எல்லை இது என்று அறுதியிட்டுக் கூறுவதற்குப் போதிய சான்று இல்லை. எனினும் இப்போதுள்ள குளித்தலை வட்டம்வரை சங்ககாலச் சோழநாடு மேற்கில் பரவியிருந்தது என்று கொள்ள இடமுண்டு.4 வடக்கில் இதன் எல்லை சங்ககாலத்தில் காவிரி ஆற்றுச் சமவெளியைத் தாண்டிச் செல்லவில்லை என்றே எண்ணவேண்டி யுள்ளது. (தென்) பொண்ணையாறு அருவா நாட்டின் தெற்கு எல்லை என்று கூறப்படும் கருத்தும் இதனோடு தொடர்புடையதாக அமைந்துள்ளது. காவிரியாறு சோழநாட்டின் முக்கிய ஆறு காவிரி ஆகும். காவிரியாற்றின் நீர்வளத்தினால் சோழநாடு செழிப்பும் செல்வமும் பெற்று விளங்கிற்று. நெல்லும், கரும்பும், மற்றும் காய்கறித் தோட்டங்களும், தெங்கஞ் சோலைகளும், கமுகஞ் சோலைகளும் சோழ நாட்டில் செழித்திருந்தன. இதற்கு முதல் காரணமாக இருந்தது காவிரி ஆறேயாகும். ‘சோழ நாடு சோறுடைத்து’ என்னும் பழமொழியை நிலைபெறச் செய்தது காவிரி ஆறே. காவிரி ஆற்றுக்குப் ‘பொன்னி’ என்னும் சிறப்புப் பெயரும் உண்டு. காவிரி ஆறு கடலில் கலக்கிற இடத்தில் உலகப் பகழ் பெற்ற காவிரிப்பூம்பட்டினம் (புகார்) என்னும் துறைமுக நகரம் இருந்தது. உறையூர் (உறந்தை) சோழநாட்டின் தலைநகரம் உறையூர் என்றும், உறந்தை என்றும் வழங்கப்பட்டது. இது உள்நாட்டில் காவிரி ஆற்றின் தென்கரையில் இருந்தது. உறையூர், கோட்டைமதில் சூழ்ந்த நகரம். இந்த மதிலுக்கு வெளியே ஆழமான அகழியும், அகழியைச் சூழ்ந்து மிளைக்காடும் இருந்தன. உறையூருக்குக் ‘கோழி’ என்றும் ஒரு பெயர் உண்டு. உறையூர்க் கோட்டைக்குள்ளே சோழ அரசனுடைய அரண்மனை இருந்தது. உறையூர்த் தெருக்களில் ஒன்றன் பெயர் ஏணிச்சேரி (சேரி - தெரு), முடமோசியார் என்னும் புலவர் அந்தத் தெருவில் வாழ்ந்திருந்தார். உறையூருக்கு எதிர்க்கரையில் (திருவரங்கம்) இருந்தது. உறை யூருக்குக் கிழக்கே திருச்சிராப்பள்ளி மலை இருந்தது.5 தாலமி6 என்னும் யவனர் ஓர்தொவுர7 என்று குறிப்பிடுவது இந்த உறையூர்தான். ஓர் தொவுர சோர் நகரின் (சோழ நகரின்) தலைநகரம் என்று தாலமி கூறுவது சிந்திக்கத்தக்கது. சோழர், நாகர் இனத்தைச் சேர்ந்தவர் என்று அவர் கருதுகின்றார். உறையூரை உரகபுரம் என்று வடமொழியாளர் கூறியுள்ளனர். காவிரிப்பூம்பட்டினம் காவிரியாறு கடலில் புகுமிடத்தில் வடகரையின்மேல் காவிரிப் பூம்பட்டினம் இருந்தது. உலகப் புகழ்பெற்றிருந்த இப் பட்டினம், புகார் என்றும் பெயர் பெற்றிருந்தது. இதனைப் பௌத்த நூல்கள் கவீரப்பட்டினம் என்று கூறுகின்றன. இது பட்டினப்பாக்கம், மருவூர்ப் பாக்கம் என்று இரண்டு பிரிவாக இருந்தது. மருவூர்ப் பாக்கம் கடற்கரையை அடுத்து இருந்தது. மருவூர்ப்பாக்கத்தில் மீன்பிடிக்கும் பரதவரும், கொல்லர், கருமார், கன்னார், தச்சர், பொற்கொல்லர், இசைவாணர் முதலான தொழிலாளரும் நடுத்தர மக்களும் வாழ்ந்தனர். பல பொருள்களை விற்கும் கடைவீதிகள் மருவூர்ப் பாக்கத்திற்கும் பட்டினப்பாக்கத்திற்கும் இடையில் இருந்தன. மருவூர்ப் பாக்கத்துக்கு மேற்கே பட்டினப்பாக்கம் இருந்தது. பட்டினப்பாக்கத்தைச் சூழ்ந்து நாற்புறமும் கோட்டை மதில்கள் இருந்தன. மதில்களுக்கு வெளியே அகழி இருந்தது. கோட்டைக்குள் இருந்த பட்டினப்பாக்கத்தில் செல்வரும் பெருங்குடி மக்களும் வாழ்ந்தனர். சோழ அரசருடைய அரண்மனை ஆற்றங்கரைப் பக்கமாகப் பட்டினப்பாக்கத்தில் இருந்தது. காவிரிபூம்பட்டினத்தின் துறைமுகம் உலகப் புகழ் பெற்றிருந்தது. இந்தத் துறைமுகத்திற்குப் பாரத நாட்டின் பல திசைகளிலிருந்தும் கடல் வாணிகர் வந்தனர். யவன வாணிகரும் இங்கு வந்தனர். ‘பெரிபுளூஸ்’8 என்னும் கடற்பயண நூல் இத்துறை முகத்தைக் ‘கமரா’9 என்று கூறு கிறது. தாலமி என்னும் யவனர் இதனைச் ‘சபரிஸ்’10 என்று கூறுகிறார். காவிரிப்பூம்பட்டினத்தைப் பற்றிச் சங்கப்பாடல்கள் கூறுகின்றன. இங்கு நடந்த ஏற்றுமதி இறக்குமதிப் பொருள்களையும், வாணிகத்தையும் பற்றிப் ‘பட்டினப்பாலை’ கூறுகிறது. மணிமேகலை, சிலப்பதிகாரக் காப்பியங்களிலும் இதன் சிறப்புக் கூறப்படுகிறது. கடல் வாணிகர்களும் (மாநாய்கர்), தரை வாணிகர்களும் (மசாத்துவர்) இந் நகரத்தில் வாணிகம் செய்தார்கள். சங்க காலத்தில் காவிரிப்பூம் பட்டினம் தலையாய துறைமுகமாகவும்11 பெரிய வணிக நகரமாகவும் இருந்தது. குடந்தை சோழ நாட்டில் சங்ககாலத்தில் இருந்த ஊர்களில் குடந்தையும் ஒன்று. குடந்தை இக்காலத்தில் கும்பகோணம் என்று வழங்கப்படுகிறது. சோழரின் பெருநிதி இவ்வூரில் சேமித்து வைக்கப்பட்டிருந்தது.12 குடந்தையைச் சூழ்ந்து கோட்டை மதில் இருந்தது. மதிலைச் சூழ்ந்து அகழி (கிடங்கு) இருந்தது. அகழியில் நீலப்பூக்கள் மலர்ந் திருந்தன.13 குடந்தைக்கு அருகில் இருந்த குடவாயில் என்னும் ஊரில் குடவாயில் கீரத்தனார் என்னும் புலவர் வாழ்ந்தார். குடவாயிலில் சோழர் சிறைச்சாலை அமைத் திருந்தனர் எனத் தெரிகிறது.14 ஆர்க்காடு ஆர்க்காடு என்னும் பெயர் ஆத்தி மரத்தினால் வந்த பெயர். ‘ஆர்’ என்றால் ஆத்தி மரம், அத்திப்பூமாலையைச் சோழர் அணிந்தனர். பழங்காலத்தில் மரங்களின் பெயரையே ஊர்ப் பெயராக வைத்தனர். ஆலங்காடு, வேற்காடு, கடம்பங்காடு என்பனபோல ஆர்க்காடு என்பதும் மரங்களினால் வந்த பெயர். சோழநாட்டில் ஆர்க்காட்டுக் கூற்றம் என்னும் பிரிவு சங்க காலத்திலும் பிற்காலத்திலும் இருந்தது. ஆர்க்காட்டுக் கூற்றத்தின் தலை நகரம் ஆர்க்காடு. ஆர்க்காடு நகரம் சங்ககாலத்தில் பெரிய நகரமாக இருந்தது.15 அழிசி என்னும் சோழன் ஆர்க்காட்டில் இருந்தான்.16 ‘தாலமி’ என்னும் யவனர் சோரையரின் (சோழரின்) தலைநகரம் அர் கொடஸ்17 என்று கூறுவது இந்த ஆர்க்காட்டையே. இந்தச் சோழநாட்டு ஆர்க்காடு18 தொண்டைநாட்டு ஆர்க்காடு அன்று, இது வேறு; அது வேறு, சோழ அரசனை உள்ளிட்ட எழுவரைப் பாண்டியன் நெடுஞ்செழியன் தலையாலங்கானம் என்னுமிடத்தில் வென்றான் என்பது வரலாறு. இந்த ஆலங்கானம் சோழநாட்டு ஊர் என்று நம்பப்படுகிறது. பிடவூர் சோழநாட்டில் இருந்த இவ்வூர் உறையூருக்குக் கிழக்கில் இருந்தது. இங்கு இருந்த வேள் அரசர் பிடவூர்கிழார் என்று பெயர் பெற்றிருந்தனர். பிடவூர்கிழான் மகன் பெருஞ்சாத்தன் என்பவனை நக்கீரர் பாடியுள்ளார்.19 நெய்தலங்கானல் இது சோழநாட்டில் காவிரியாறு கடலில் கலக்கும் இடத்தில் தென்வடலாகக் கடற்கரை ஓரத்தில் இருந்த நீண்ட கடற்கரைப் பகுதி ஆகும். இங்கு இளஞ்செட்சென்னி என்னும் சோழன் இருந்தான். ஆகையால், அவன் ‘சோழன் நெய்தலங்கானல் இளஞ்சேட்சென்னி’ என்று கூறப்பட்டான். நெய்தலங்கானலில் உப்பளங்கள் இருந்தன.20 பரதவர் (மீன் பிடிப்போர்) இருந்த குப்பங்களும் இருந்தன. நெய்தலங் கானல், பிற்காலத்தில் சோழ மண்டலக் கரை என்று பெயர் பெற்றிருந்தது. ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் ‘கும்பினி’ யார் இதைக் ‘கொரமாண்டல் கோஸ்ட்’21 என்று கூறினார்கள். குராப்பள்ளி இவ்வூரில் குராப்பள்ளி என்று பெயர்பெற்ற சோழர் அரண் மனை இருந்ததாகத் தெரிகிறது. கிள்ளிவளவன் என்னும் சோழன் இங்கு இறந்துபோனான். ஆகவே அவன் ‘குராப்பள்ளித் துஞ்சிய கிள்ளி வளவன்’ என்னும் பெயர் பெற்றான்.22 கழார் சோழநாட்டில் காவிரிக்கரையில் இருந்த கழார் என்ற ஊருக்கு23 மத்தி என்பவன் தலைவனாக இருந்தான்.24 ‘மத்தி’, பரதவர் (நெய்தல் நிலத்து மக்கள்) கோமான்.25 காவிரியில் நீர்ப்பெருக்கு வரும்போது கழார்ப் பெருந்துறையில் நீராட்டுவிழா நடந்தது.26 அந்த நீராட்டுவிழா மிகச் சிறப்பாக நடந்ததாகத் தெரிகிறது. சோழன் கரிகாலன் அந்த விழாவுக்குத் தன்னுடைய சுற்றத்தோடு வந்து கண்டு மகிழ்ந்தான்.27 போர் (போரூர், போர்வை) இவ்வூர் போரூர் என்றும், போர்வை என்றும், திருப்போர் என்றும் கூறப்பட்டது. இது சோழநாட்டில் காவிரி ஆற்றங்கரை மேல் இருந்தது. இவ்வூரில் கொங்குச் சேரருக்கும் சோழருக்கும் வெவ்வேறு காலத்தில் பல போர்கள் நடந்தன. இவ்வூரில் பழையன் என்னும் சிற்றரசன் ஆண்டுவந்தான்.28 இவன் சோழ அரசர் சார்பில் நாடு காவல் பணி பூண்டிருந்தவனாவான். பொத்தி இது சோழநாட்டிலிருந்த ஓர் ஊராகும். பெருஞ்சோழன் என்பவன் இவ்வூரை அரசாண்டான். இவ்வூரில் இருந்த புலவர் பொத்தியார் என்று பெயர்பெற்றார். பெருஞ்சோழன் வடக்கிருந்து (உண்ணா நோன்பிருந்து) உயிர்விட்டபோது அவனுடைய நண்பரான இந்தப் பொத்தியாரும் அவனுடன் வடக்கிருந்து உயிர்விட்டார்.29 தலைச்செங்காடு தலைச்செங்காடு என்னும் இவ்வூர் தலைச்செங்கானம் என்றும் கூறப்படும். காவிரிப்பூம்பட்டினத்துக்குத் தென்மேற்கே இது உள்ளது. இவ்வூரில் மாடலன் என்னும் மறையவன் இருந்தான். அவன் உலகியலை நன்கு அறிந்தவன். காவிரிப்பூம்பட்டினத்தில் கோவலன் இருந்த காலத்தில் அவனையும் அவனுடைய குடும்பத்தையும் மாடலன் நன்கு அறிந்திருந்தான். குமரி, காசி (கங்கை) முதலான ஊர்களுக்குச் சென்று இவன் நீராடி மீண்டான். சேரன் செங்குட்டு வனுக்கும் இவன் நண்பனாக இருந்தான். கோவலன், கண்ணகியுடன் மதுரைக்குச் சென்று கவுந்தியடிகளுடன் இருந்தபோது மாடலன் குமரியில் நீராடிச் சோழ நாட்டுக்குத் திரும்பிவரும் வழியில் மதுரையில் தற்செயலாக அவர்களைச் சந்தித்தான். கண்ணகிக்குச் செங்குட்டுவன் பத்தினிக் கோட்டம் அமைத்து விழாச் செய்தபோது அவ் விழாவுக்கும் சென்றிருந்தான். சாய்க்காடு இக்காலத்தில் இது திருச்சாய்க்காடு என்று கூறப்படுகிறது. இதற்குச் சாயாவனம் என்னும் பெயரும் உண்டு. ‘நெடுங்கதிர்க் கழனித் தண்சாய்க் கானம்’ என்றும்30 ‘செந்நெலஞ் செறுவின் அன்னந் துஞ்சும், பூக்கெழு படப்பைச் சாய்க்காடு’ என்றும்31 இது சிறப்பிக்கப் பட்டுள்ளது. வல்லம் இது சோழநாட்டிலிருந்த ஊர். இவ்வூர் கோட்டை மதிலினால் சூழப்பட்டு, மதிலுக்கு வெளிப்புறத்தில் மிளைக்காடுகளால் அரண் செய்யப்பட்டிருந்தது. வல்லத்துக் கோட்டையை ஆரியப் படை தாக்கிப் போர் செய்தது. அப்போது வல்லத்து வீரர்கள் அவர்களைத் தாக்கி னார்கள். தாக்குதலுக்கு எதிர்நிற்க முடியாமல் ஆரியப்படை சிதறி ஓடிப்போயிற்று.32 வல்லத்தின் தலைவனாக இருந்தவன் சோழர் குலத்தைச் சேர்ந்த நல்லடி என்பவன். வெண்ணி இவ்வூர் இக்காலத்தில் கோயில்வெண்ணி என்று கூறப்படுகிறது. இது, தஞ்சாவூருக் குக் கிழக்கே இருபத்து நான்கு கி. மீ. தொலைவில் இருக்கிறது. இந்த ஊரில் சில போர்கள் நடந்துள்ளன. பாண்டியனும் சேரனும் பதினோரு வேள் அரசரோடு வந்து போர் செய்தபோது, கரிகாற்சோழன் அவர்களை வென்றான்.33 கரிகாற் சோழனுடைய இந்த வெற்றியைப் பாடிய வெண்ணிக்குயத்தியார் இந்த ஊரிலிருந்த புலவர். சோழர் குடியின் தொன்மை இலக்கியச் சான்று பன்னெடுங் காலமாகத் தமிழகத்தை மூவேந்தர்கள் ஆட்சி செய்து வந்தனர். ‘வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பின்’ என்று தமிழகத்தைத் தொல்காப்பியர் சுட்டியுள்ளார்.1 மற்றும், சோழர் குடியின் அடையாளச் சின்னமாக ஆத்திப் பூமாலையை2 அவர் குறிப்பிட் டுள்ளார். தமிழ் இலக்கியத்துள் காலத்தால் முந்தியது தொல்காப்பியம். சற்றேறக்குறைய கி. மு. நான்காம் நூற்றாண்டு அளவில் இந் நூல் இயற்றப்பட்டிருக்கலாம் என்று அறிஞர்கள் கருதுகின்றனர்.3 இந்த இலக்கியச் சான்றுகளால் சோழர்குடி மிகவும் தொன்மையானது என்பது புலனாகிறது. நெடுங்காலமாக ஆட்சி செய்துவந்த அரசகுடி எனும் பொருளிலேயே ‘படைப்புக் காலந் தொட்டு’ இந்நாட்டை ஆண்டு வரும் குடி என்று நம் முனனோர்கள் போற்றியுள்ளனர்.4 வடமொழி இதிகாசங்களான இராமாயணம், மகாபாரதம் ஆகிய வற்றுள் சோழ அரச மரபைப்பற்றிச் சில குறிப்புகள் காணப்படுகின்றன. பாணினியின் இலக்கணத்திற்குக் காத்தியாயனர் உரை எழுதியுள்ளார். ஓர் இலக்கண விதிக்கு எடுத்துக் காட்டாகச் ‘சோழர்’ என்னும் பெயரை அவர் எடுத்துக் காட்டியுள்ளார்.5 அவருடைய காலம், மௌரியப் பேரரசர்க்கு முற்பட்ட நவநந்தரின் ஆட்சிக்காலம் என்று ஆராய்ச்சியாளர் கருதுகின்றனர். அக்காலத்திலேயே (கி. மு. ஐந்தாம் நூற்றாண்டின் இறுதி) சோழ அரசமரபு புகழ்பூத்து விளங்கியமை இதனால் புலனாகின்றது. கல்வெட்டுச் சான்று மௌரியப் பேரரசன் அசோகனுடைய (கி. மு. 272 - 232) கல் வெட்டுகளில் தமிழக வேந்தர்களைப்பற்றிய குறிப்புகள் உள்ளன. அவற்றுள் சோழ அரசமரபே முதலாவதாகக் குறிப்பிடப் பட்டுள்ளது.6 மௌரியப் பேரரசனுடைய ஆதிக்கத்திற்குட்படாது. தன்னுரிமைத் தனி யரசுகளாகச் சோழ, பாண்டிய, சேர அரசுகள் விளங்கியமையும் தெரியவருகிறது. இக்குறிப்புகளால் கி.மு.மூன்றாம் நூற்றாண்டு அளவிலேயே சோழப்பெருவேந்தரின் குடி, வடஇந்திய மக்களின் கருத்தைக் கவரத்தக்க நிலையில் பெருவாழ்வு பெற்றிருந்தமை தெளிவாகத் தோன்றுகிறது. அயல்நாட்டார் குறிப்பு கிறித்தவ நூற்றாண்டின் தொடக்கத்தில் இயற்றப்பட்ட கிரேக்கக் கடலோடிகளின் பயணக் குறிப்பேடுகளில் தமிழ் நாட்டின் பல பகுதிகளைப்பற்றிய செய்திகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றுள் சோழரைப்பபற்றியும், அவர்களுடைய நாட்டைப் பற்றியும், அவர்களுடைய பட்டினங்களைப் பற்றியும் புகழ்மிக்க குறிப்புகள் காணப் படுகின்றன. சோழ மன்னரைப் பற்றிய பழங்கதைகள் சங்க காலத்தின் பிற்பகுதியில் (கி. பி. 200 - 300) சோழ மன்னர்களைப் பற்றிய பல பழங்கதைகள் வழக்கிற்கு வந்துள்ளன. அக் கதைகள் எல்லாம் வரலாற்றுக் காலச் சோழர்களுக்கு முற்பட்ட சில மன்னர்களைச் ‘சோழர்குடியின் மூதாதையர்’ என்று அறிவிக் கின்றன. அச் சோழ அரசர்கள் தெய்வீகத் தன்மையுடைய வர்களாகவும், அற்புதச் செயல்கள் பலவற்றைப் புரிந்தவர்களாகவும் போற்றப் படுகின்றனர். இத்தகைய பழங்கதைகள் பெரிதும் சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற காப்பியங்களில் பயின்று வழங்குகின்றன. எட்டுத்தொகை நூல்களுள் இவை அருகிய வழக்குடையனவாகவே உள்ளன. எனவே, இக் கதைகளைச் சோழரைப் பற்றிய பழங்கதைகள் எனக் கொள்ளுவதே பொருத்தமாகும். இக் கதை களால் அறியப்படும் சோழ மன்னர்களின் வரலாற்றைக் காண்போம். காந்தமன் காந்தமன் என்னும் சோழ அரசன் காவிரி ஆற்றைச் சோழ நாட்டில் பாயச் செய்தான் என்னும் புராணக் கதையை மணிமேகலைக் காப்பியம் கூறுகிறது. காந்தமன் குடகுமலையில் இருந்த அகத்திய முனிவரிடம் சென்று, அவரை வேண்ட அவர் தம்மிடமிருந்த கமண்டலத்து நீரைக் கவிழ்த்தாராம். அந்த நீர் காவிரி ஆறாகப் பாய்ந்து சோழநாட்டில் புகுந்து வந்ததாம். இந்தக் கதையை மணிமேகலைக் காப்பியப் பதிகங் கூறுகிறது.7 சோழன் காந்தமனைப்பற்றிய இன்னொரு புராணக் கதையையும் மணிமேகலைக் காப்பியம் கூறுகிறது. காந்தமன் காலத்தில், பரசுராமன் அரசர் குலத்தை எல்லாம் அழித்துக்கொண்டு வந்த போது சோழ நாட்டுக்கும் வந்தான். அப்போது கன்னித் தெய்வம் (கொற்றவை) அரச பதவியை விட்டுச் சில காலம் எங்கேனும் போயிருக்கும்படி காந்தமனுக்கு யோசனை கூறிற்றாம். அந்த யோசனைப்படி காந்தமன் தன்னுடைய கணிகையின் மகனான சுகந்தன் என்பவனிடம் ஆட்சியைக் கொடுத்துவிட்டுத்தான் திரும்பிவருமளவும் ஆட்சி செய்யுமாறு கூறிச் சென்று விட்டானாம். பரசுராமன் வந்தபோது அரச குலத்தவன் அல்லாத ஒருவன் ஆட்சி செய்வதைக் கண்டு சுகந்தனைக் கொல்லாமல் போய்விட்டானாம். பரசுராமன் போன பிறகு காந்தமன்திரும்பி வந்து சோழநாட்டை அரசாண்டானாம்.8 சுகந்தன் இவன் சோழர் குலத்து மன்னன் அல்லன். மேலே கூறப்பட்ட காந்தமன் என்னும் சோழனுடைய காதற் கணிகையின் மகன். மேலே கூறப்பட்ட காரணத்தினாலே இவன் சோழ நாட்டைச் சில காலம் அரசாண்டான். இவன் காவிரிப் பூம்பட்டினத்திலிருந்து அரசாட்சி செய்தபோது இரண்டு நிகழ்ச்சிகள் நிகழ்ந்தன. இவ்வரசனுடைய இளைய மகன், காவிரியாற்றில் நீராடி வீடு திரும்பிச் சென்ற மருதி என்பவளைக் கண்டு அவளைத் தன்னுடன் வரும்படி அழைத்தான். அவள் மனம் நொந்து பூதசதுக்கத்தில் உள்ள காவல் பூதத்தின் கோயிலில் சென்று சுகந்தன் மகனுடைய தகாத செயலைக் கூறி முறையிட்டாள். அதற்கு அந்தப் பூதம், ‘அரசன் இந்தக் குற்றத்துக்குத் தண்டனை கொடுக்கா விட்டால், பிறகு நான் முறை செய்வேன்; நீ உன் இல்லத்துக்குப் போ’ என்று கூறிற்று. பிறகு சுகந்த அரசன் தன்னுடைய மகன் செய்த தகாத செயலையறிந்து விசாரித்துத் தன் மகனை வாளினால் வெட்டி விட்டான். இதனை மணிமேகலைக் காப்பியம் கூறுகிறது.9 இது நடந்த பிறகு சில காலம் கழித்துச் சுகந்தனுடைய மூத்த மகன் தன்னுடைய தம்பியின் மரணத்துக்குக் காரணமாயிருந்த அந்த மருதி வீதிவழியே சென்றபோது, தன்னுடைய குடுமியில் சூடியிருந்த பூமாலையை எடுத்து அவள் கழுத்தில் இடுவதற்குக் கையை அவன் உயர்த்திய போது, அந்தக் கை உயர்த்தியபடியே (தாழாமல் நின்று விட்டது) தன்னுடைய மகன் செய்யக் கருதிய தகாத செயலை அறிந்த சுகந்தன் அந்த மகனையும், மகனென்று கருதாமல் வாளால் வெட்டி விட்டான் என்று மணிமேகலைக் காப்பியம் கூறுகிறது.10 சிபிச் சோழன் (செம்பியன்) சிபிச் சோழன் அரசாண்ட காலத்தில் ஒரு நாள் வல்லூறு என்னும் பறவை ஒன்று தீனிக்காகப் பறந்து அலைந்தது. அப்போது அது ஒரு புறாவைக் கண்டு அதை அடித்துத் தின்று பசியாற எண்ணி, அப் புறாவின்மேல் பாய்ந்தது. உயிர்தப்பிப் பிழைக்க அந்தப் புறா, தனக்குப் புகலிடம் கிடைக்காமல் சிபிச் சோழனிடம் வந்து அடைக்கலம் புகுந்தது. வல்லூறும் அவனிடம் வந்து தன்னிடம் புறாவைக் கொடுக்கும்படி கேட்டது. சிபி அதற்கு இணங்காமல் புறாவின் எடைக்குச் சமமாகத் தன்னுடைய உடம்பிலிருந்து தசையை அறுத்துக் கொடுப்பதாகக் கூறினான். அவன் தராசு கொண்டு வரச்சொல்லி, அதில் ஒரு தட்டில் புறாவை வைத்து, மற்றொரு தட்டில் தன்னுடைய உடம்பிலிருந்து தசையை அறுத்து வைத்து நிறுத்தான்; ஆனால், புறாவின் எடை அதிகமாக இருந்த படியால், தானே தராசில் அமர்ந்தான். அப்போது தராசு சம எடையாக இருந்தது. உடனே தெய்வம் தோன்றி அவனுக்கு வரங்கள் கொடுத்து, அவனுடைய உடம்பை முன்பு இருந்தது போலச் செய்ததாம். இந்தக் கதை புத்த ஜாதகக் கதையில், சிபி ஜாதகத்தில் கூறப்படுகிறது. அதே கதை, இந்தச் சிபிச் சக்கரவர்த்தியைப் பற்றியும் கூறுகிறது. சங்க காலத்துப் புலவர்களும் இந்தக் கதையைக் கூறியுள்ளனர்.11 சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனைப் பாடிய மாறோக்கத்து நப்பசலையார், அவன் சிபிச் சோழனுடைய பரம்பரையில் வந்தவன் என்று கூறுகிறார். இந்தச் சோழனைப் பாடிய கோவூர்கிழாரும் இவ்வாறே கூறுகிறார்.12 இவன் செம்பியன் என்ற பெயராலும் குறிப்பிடப்படுகிறான். சோழன் நலங்கிள்ளி தம்பி மாவளத்தானைப் பாடிய தாமப்பல் கண்ணனார், அந்தச் சோழன் சிபிச் சோழனுடைய பரம்பரையில் வந்தவன் என்று கூறுகிறார்.13 சிலப்பதிகாரமும் சிபிச் சோழன் கதையைக் கூறுகிறது.14 மேலும், சிலப்பதிகாரத்தில் வழக்குரை காதையிலும் (51 - 52), கட்டுரை காதையிலும் (55) வரந்தருகாதை (அம்மானை வரி)யிலும் இந்தக் கதை கூறப்படுகிறது. முசுகுந்தன் தேவலோகத்தில் இந்திரனுக்கும் அவுணர்க்கும் போர் நடந்ததாம். அந்தக் கடும்போரிலே சோழன் முசுகுந்தன் தேவலோகத்துக்குப் போய் இந்திரன் சார்பாக அவுணரோடு போர் செய்து வெற்றி பெற்றானாம். மகிழ்ச்சியடைந்த இந்திரன், ‘உமக்கு வேண்டும் வரத்தைக் கேள்’ என்று கூற, தனக்குப் போரில் உதவி செய்த பூதத்தைத் தன்னுடைய சோழநாட்டுக்கு அனுப்பவேண்டும் என்று முசுகுந்தன் விரும்பிக் கேட்டனாம். இந்திரனும் அந்தப் பூதத்தை அனுப்ப, சோழன் அந்தப் பூதத்தைக் காவிரிப்பூம்பட்டினத்தில் நகர்க் காவலுக்காக இருக்கச் செய்தானாம். அந்தப் பூதம் இருந்த இடம் பூத சதுக்கம் என்று பெயர் பெற்றிருந்தது என்று சிலப்பதிகாரம் கூறுகிறது. இதற்கு உரையையும் விளக்கத்தையும் அடியார்க்கு நல்லார் தருகிறார். மிக்க வேகத்தினையுடைய அசுரர் கூட்டமாக வந்து நெருங்கி இந்திரனது நகரைக் காத்த புலிபோன்ற வலிமையுடைய முசுகுந்தனுக்குத் தோற்றுப் பின்பு தம்மில் ஒத்துக்கூடி அம் முசுகுந்தனது நெஞ்சமும் இருள்கூரும்படி செலுத்திய அத்திரத்தைப் போக்கிய பெரிய பூதத்தை அவ்வண்ணல் பொருட்டு இந்திரனேவலால் போந்து அப் புகாரிலிருந்து அது பலியுண்ணும் நாளங்காடியிடம் தங்கியது.15 ‘என் சொல்லியவாறோ வெனின், அங்ஙனம் விட்ட அம்பு கண்ணையும் மனத்தையும் புதைத்தலாற் போர்த்தொழிலொழிந்து நின்ற முசுகுந்தற்கு அவ்விருளுடைதற்குக் காரணமானதோர் மந்திரத்தை யருள அதனால் வஞ்சங்கடிந்த அவுணரைக் கொன்றுகுவித்து நின்றானைக் கண்ட இந்திரன், அவரை எங்ஙனம் வென்றுகுவித்தா யென்றாற்கு இவன் இப் பூதத்தின் செயலெனக் கேட்ட இந்திரன். அப் பூதத்தை அவன்பொருட்டு மெய்க் காவலாக ஏவுதலின் ஆங்கு நின்றும் போந்து ஈங்குப் புகாரினுள் ளிருந்து பலியுண்ணும் நாளங்காடி யிடம்16 தங்கியது. மணிமேகலைக் காப்பியமும் இந்த முசுகுந்தனைக் கூறுகிறது.17 மனுச் சோழன் மனுச் சோழன் சோழநாட்டுத் திருவாரூரில் நீதி தவறாமல் அரசாண்டான்; ஏழை எளியவரும் நீதி பெறுவதற்காக ஆராய்ச்சி மணியொன்றைக் கட்டிவைத்தான்; அந்த மணியில் நீண்டகயிற்றைக் கட்டி அரண்மனை வாயிலிலிருந்து இழுத்து மணி அடிக்க வாய்ப்பாகக் கட்டி வைத்தான். இவன் நடு நிலைமையோடு நீதியாகச் செங்கோல் செலுத்திய காலத்தில். இவனுடைய ஒரே மகன், தேரை ஒட்டிக்கொண்டு தெருவில் செல்லும்போது, பசுவின் இளங்கன்று ஒன்று துளளியோடித் தேர்ச் சக்கரத்தில் அகப்பட்டு இறந்துவிட்டது. அதைக் கண்ட தாய்ப்பசு கதறி அழுது, அரண்மனை வாயிலுக்கு வந்து ஆராய்ச்சி மணிக் கயிற்றை இழுத்தது. அதனால், மணியோசை கேட்க, அரசன் வந்து பார்த்து பசுவின் இளங்கன்று தன் மகனுடைய தேர்ச் சக்கரத்தில் அகப்பட்டு இறந்ததை அறிந்து தன் அமைச்சரிடம் தன் மகனைத் தேர்ச் சக்கரத்தில் மடியும்படி செய்ய ஆணையிட்டான். அமைச்சர் அதனைச் செய்ய மனமின்றித் தற்கொலை செய்து கொண்டார். அதனை அறிந்த மனுச்சோழன் தானே தேரைச் செலுத்தி அதன் சக்கரத்தில் தன் மகனை அகப்படுத்தின் கொன்றான்.18 இதைக் கண்டு வியந்த தேவர்கள், அவனிடம் வந்து மெச்சிப் புகழ்ந்து, இறந்து போன அமைச்சரையும் அரசகுமாரனையும் உயிர்ப்பித்துக் கொடுத்தனர் என்பது இவனைப்பற்றிய புராணக் கதை. இந்தப் புராணக் கதையைப் பெரியபுராணத்தில் காணலாம்.19 கி. மு. முதல் நூற்றாண்டில் இலங்கையை அநுராதபுரத்திலிருந்து அரசாண்ட சோழநாட்டுத் தமிழனாகிய ஏலேல சிங்கனும் மனுச் சோழனைப் போலவே தன் மகன் பசுவின் கன்றைத் தேர்ச் சக்கரத்தில் அகப்படுத்திக் கொன்ற குற்றத்திற்காகத் தானே தன்னுடைய தேரின் சக்கரத்தில் தன்னுடைய ஒரே மகனை அகப்படுத்திக் கொன்றான் என்று மகாவம்சம் என்னும் நூல் கூறுகிறது. ஆனால், தேவர்கள் வந்து இறந்து போன மகனை உயிர்ப்பித்துக் கொடுத்ததாக அந் நூல் கூறவில்லை.20 மனுச் சோழனின் புராணக் கதையைச் சிலப்பதிகாரம் கூறுகிறது.21 மணிமேகலைக் காப்பியம் ‘மகனை முறைசெய்த மன்னவன்’22 என்று கூறுகிறது. தொடித்தோட் செம்பியன் தூங்கெயில் எறிந்த வானம் என்பது ஓர் ஊர். (இந்த ஊர் வானியாற்றுப் பகுதியில் இருந்தது என்று பெயரமைதி நோக்கிக் கொள்ளலாம்.) அவ் வூரில் கடவுள் அஞ்சி என்பவன் ஒரு கோட்டை கட்டியிருந்தான். அந்தக் கோட்டையின் கதவு மேலிருந்து தொங்கும்படி அமைக்கப் பட்டிருந்தது (இக்காலத்துச் சுருள் கதவு போன்றது). அதனால், அது தூங்கும் எயிற்கதவம் எனப்பட்டது. இதனை வண்டன் என்னும் பெருஞ்செல்வன் காவல் புரிந்து வந்தான்.23 (இந்தக் கோட்டை அரசக் கருவூலப் பாதுகாப்பாக அமைந்திருந்தது எனலாம்.) ‘தூங்கு எயிற் கதவம்’ என்பது ‘தூங்கெயில்’ என்று சுருக்கமாக வழங்கப்பட்டது. தொடித்தோட் செம்பியன் என்று சிறப்பித்துக் கூறப்பட்ட சோழ அரசன் இந்தத் தூங்கெயில் கோட்டையைத் தாக்கி அழித்தான். இதனால், ‘தூங்கெயில் எறிந்த தொடித்தோட் செம்பியன்’ என்று வழங்கப்பட்டான். இவன் இக் கோட்டையை அழித்தது இவனது பேராற்றலை வெளிப்படுத்தும் செயலாகும்.24 சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் இந்தச் செம்பியனின் வழிவந்தவன் என்று குறிப்பிடப்படுகிறான். தூங்கெயில், ‘தூங்கெயில் கதவம்’ என்று விளக்கிக் காட்டப் பட்டுள்ளது. இக் கோட்டைக் கதவை அழித்த இச் சோழன. ‘நற்றோர்ச் செம்பியன்’ என்றும் வழங்கப்பட்டான்.25 இவன் உறையூரைத் தலை நகராகக் கொண்டு ஆண்ட அரசன்.26 செம்பியன் என்னும் அரசன் கழுமலம் என்னும் ஊரைத் தாக்கி வென்றான்.27 அகப்பா என்னும் கோட்டையை அழித்துப் பகற்பொழுதிலேயே தீக்கிரையாக்கிய சோழன் ஒருவன் பெயரும் செம்பியன் ஆகும்.28 பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழி யனிடம் தோற்றுப்போன எழுவருள் ஒருவன் செம்பியன்.29 புறாவுக்காகத் தன்னையே நிறுத்துத் தந்த சோழனது பெயரும் செம்பியன் என்று கூறப்படுகிறது.30 கழுமலப் போரில் சேரனை வென்ற சோழனது பெயரும் செம்பியன் என்று கூறப்படுகிறது.31 தொடித்தோட் செம்பியன் எறிந்த தூங்கெயில் மூன்று என்றும், அவை உயர்விசும்பில் இருந்தன என்றும் கூறப்படுவது32 வியப்பே யாகும். மூன்று என்பது வானம், கழுமலம், அகப்பா என்னும் ஊர்களிலிருந்த மூன்று கோட்டைகளைக் குறிப்பதாகலாம். தூங்கெயில் எறிந்த தொடித்தோட் செம்பியன் புகாரில் இந்திர விழாவினை முதன் முதலாகத் தொடங்கி வைத்தான் என்றும் கூறப்படுகிறது.33 இவனது வேண்டுகோளின்படி விண்ணவர் தலைவனான இந்திரன் புகார் நகரில் இந்திர விழா நடைபெறும் 28 நாளிலும் வந்திருந்து பூசனையை ஏற்றுக்கொண்டானாம். இவற்றையெல்லாம் தொகுத்து நோக்கும்போது, 1. புறாவுக்காகத் துலைபுக்க செம்பியன், 2. தூங்கெயில் எறிந்த தொடித்தோட் செம்பியன், 3. அகப்பா எறிந்த செம்பியன், 4. கழுமலம் எறிந்த செம்பியன், 5. களவழித் தலைவன் செம்பியன் என்னும் 5 நிலைகளைக் காணலாம். இந்த 5 பெயர்கள், எத்தனை அரசர்களைக் குறிப்பன என்பது தெரியவில்லை. செம்பியர் குடியைப் பற்றிய குறிப்பும் உண்டு.34 சோழர் குடிப்பெயர் ‘சோழர்’ எனும் பெயர் உணர்த்தும் பொருள் யாது? எனும் ஐயம் தோன்றலாம். ‘சோழர்’ என்பது பன்மைப் பெயர். ‘சோழன்’ எனும் சொல்லிற்கு விளக்கம் பன்னிருபாட்டியல் எனும் இலக்கண நூலில் தரப்பட்டுள்ளது. ‘சோழன்’ என்பது ஒரு குடிக்கண் பிறந்தாரைச் சுட்டும் குடிப்பெயர்1 என்பது அந் நூலினால் அறியப்படுகிறது. சோழர் - சொல்லும் பொருளும் இந்த அரச மரபிற்குச் ‘சோழர்’ என்னும் பெயர் எவ்வாறு வந்தது என்பதை இன்றைய நிலையில் எளிதில் அறிய இயலவில்லை. இதனை, இயற்பெயராகவே பண்டை அறிஞர்கள் கருதினர். ஆனால், இக்கால அறிஞர்கள் அச் சொல்லின் பொருளைக் காண முயன் றுள்ளனர். கர்னல் ஜெரினி2 என்பார் வடமொழியில் ‘கருமை’ எனப் பொருள்படும் ‘காள’ என்னும் சொல்லோடும், ‘கோல’ என்னும் சொல்லோடும் தொடர்புபடுத்தி இச் சொல்லின் பொருளை விளக்க முயன்றுள்ளார். திராவிடருக்கு முற்பட்ட பழங்குடி மக்கள் கோலர்3 என்பவராவர். அவர்கள் கரிய நிறம் வாய்ந்தவர்கள். அவர்களுடைய ஒரு கிளையினரே ‘சோழ’ராக இருந்திருக்கலாம் என்பது அவருடைய கருத்தாகும். இக் கருத்து மொழியியல் அடிப்படையிலோ, மானிட வியல் அடிப் படையிலோ ஆராய்ச்சிக்குப் பொருந்தி வரவில்லை. மற்றொரு சாரார். ‘சோளம்’ மிகுதியாக விளைந்த நாட்டினை ஆண்ட அரசமரபிற்குச் ‘சோளர்’ எனும் பெயர் அயலவரால் இடப் பட்டிருக்கலாம்; அப் பெயரில் உள்ள ‘ளகரம்’ நாளடைவில் ‘ழகரமாக’த் திரிந்திருக்கலாம் என்பர். அல்லது ‘திருடன்’ எனப் பொருள் தரும் ‘சோரன்’ என்னும் வடமொழிச் சொல்லின் திரிபாகச் சோழர் என்னும் பெயர் தோன்றி இருக்கலாம் என்று டி. ஆர். பந்தர்க்கர் கூறியுள்ளார்.4 முதலாவதாக ‘ளகர’ வொலி, ‘ழகர’வொலியாகத் திரியும் என்னும் ஒலியியல் விதியினை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட கருத்து இது. இந்த ஒலித்திரிபு முறையை நாம் உடன்படலாம். ஆனால், புன்செய்ப் பயிரான ‘சோளம்’ மிகுதியாக விளையும் நாட்டைச் சுட்டுவது என்பது, நீர்வளமிக்க சோழநாட்டை அறியாதவர் கூற்றாகும். ‘சோழநாடு சோறு டைத்து’ என்பது பழமொழி. சோளமுடைத்து என்று இது வரை யாரும் சொன்னதில்லை. மருதநிலமான சோழநாட்டில், பன்னெடுங்காலமாக நெல்லே பயிரிடப்பட்டு வருகிறது. எனவே, ‘உண்மை அறியாதார் கூற்று’ என இதை ஒதுக்குவதைத் தவிர வேறு வழியில்லை. மற்றும் ‘திருடன்’ என்று பொருள் கூறுவது தமிழினத் தவரை இழித்துப் பேச நினைப்போரின் இழிந்த தன்மையாகும். மேலும், வல்லின ‘றகரம்’தான் ‘ழகரம்’ ஆகத் திரியுமே ஒழிய, இடையின ‘ரகரம்’ ‘ழகர’மாகத் திரியாது. இது தமிழ்மொழியின் இயல்பினை அறியாதவரின் விழைவார்ந்த விருப்பமாகத் தோன்றுகிறது. உறையூருக்குக் ‘கோழியூர்’ என்று மற்றொரு பெயருமுண்டு. கோழியூரை ஆண்டவர் ‘கோழியர்’ எனப்பட்டனர். புறநானூற்றுப் பழைய உரையாசிரியர், ‘கோழி’ என்னும் சொல்லிற்கு உறையூர்‘ என்றே உரை எழுதியுள்ளார். ‘கோழியர்’ என்னும் சொல்லில் உள்ள பின் னண்ண ஒலியாகிய ‘ககர’ ஒலி, இடையண்ண ஒலியாகிய ‘சகர’மாகத் திரியும் இயல்பு திராவிட மொழிகளில் காணப்படுகிறது. எனவே கோழியர் என்னும் சொல்லில் இருந்து சோழியர் சோழர் என்னும் சொற்கள் பிறந்திருக்கலாம் என்பது மற்றோர் அறிஞரின் கருத்து.5 இந்த அறிஞர் கூறுவதற்குச் சான்றாக, இவ்வாறு திரிந்து வழங்கும் வேறு சொற்களைக் காட்டி இருந்தால், ஓரளவிற்கு இதனை ஒப்புக் கொள்ள இயலும். மற்றொரு மொழியியல் அறிஞர் தந்துள்ள விளக்கம் நம் சிந்தனையைத் தூண்டுவதாக உள்ளது. திராவிட மொழிகளில் ‘உகரம்’, ஒகர மாகத் (உலக்கை - ஒலக்கை) திரிவது இயற்கை. இவ்வொலித் திரிபினை அடிப்படையாக்க கொண்டு ஆராய்ந்தால்,’சூழ் என்னும் வேர்ச்சொல்லடியாகச் `சோழர்’ என்னும் சொல் தோன்றி இருக்கலாம் என்பார். `சூழ்வோர்’ என்பது காலப்போக்கில் சோழர் எனத் திரிந்திருக்கலாம் என்பது அவருடைய கருத்தாகும்.6 சூழ்வோர் என்பதற்குச் ‘சுற்றியிருப்பவர்’, ‘ஆராய்வோர்’, ‘கருதுவோர்’ என்பன போன்ற பல பொருள்கள் உண்டு. இவற்றுள் எப்பொருளும் பொருத்தம் உடையதாகத் தோன்றவில்லை. எனவே, ‘சேரழர்’ என்னும் குடிப்பெயரை, இடுகுறிப் பெயராகவே இன்று கொள்ளவேண்டியவர்களாக உள்ளோம். பல்வகைப் பெயர்கள் பண்டைக் காலத்திய சோழ வேந்தர்கள், பல்வேறு வகையான குடிப்பெயர்களால் சுட்டப்பட்டனர். செம்பியன், சென்னி, கிள்ளி, வளவன் என்பன அவற்றுள் பெருவழக்குடைய பெயர்களாகும். ‘சிபிச் சக்கரவர்த்தியின் மரபிலேயே வந்தவர்கள் சோழர்’ என்னும் பழங்கதையின் வழி, செம்பியன் என்னும் பெயரானது சோழ மன்னர்களுக்கு வழங்கிய பொதுப் பெயராகவே தோன்றுகிறது. ‘சென்னி’ என்னும் பெயர் ‘சென்னியர்’ எனப்பன்மையிலே வழங்குகிறது.7 சென்னி என்பதற்குத் தலை அல்லது முடி என்பது பொருள். சோழர் குடியில், முடிசூட்டிக் கொண்டு நாடாளும் உரிமை பெற்ற மூத்தமகன் வழிவந்த கிளைக் குடியை இது குறிப்பதாகலாம். ‘கிள்ளி’ என்னும் பெயர், பகைவரை முளையிலேயே கிள்ளி எறிவதில் வல்லவர் எனும் பொருளில் வழங்கப்பட்ட சிறப்புப் பெயராகலாம். நிலத்தைக் கிள்ளிச் (உழுது) செய்யப்படும் பயிர்த்தொழிலைச் சிறப்புறச் செய்தவர்கள் எனவும் இதற்குப் பொருள் கொள்ளலாம். இதுவும் ஒரு கிளைக்குடிக்குரிய பெயராக வழங்கி இருத்தல் கூடும். ‘வளவன்’ என்னும் பட்டப் பெயர், நிலவளம் நீர்வளமும் மிக்க நாட்டின் தலைவர் எனும் காரணத்தால் வழங்கிய பெயராகலாம். தமிழ் நாட்டினை வளமிக்க நாடாகச் செய்தவன் கரிகால் பெருவளத்தான். ‘காடு கெடுத்து நாடாக்கிக் குளந்தொட்டு வளம் பெருக்கிய’ காரணத் தாலேயே, கரிகாலனைப் பெருவளத்தான் என்று புலவர்கள் போற்றினர். கரிகாலனுக்குப் பிறகு அவனுடைய குடியில் வந்த சோழ அரசர்களுக்குரிய சிறப்புப் பெயராக ‘வளவன்’ என்னும் பெயர் வழங்கலாயிற்று. திருமாவளவன், மாவளத்தான், கிள்ளிவளவன் என்னும் பெயருடைய சோழ அரசர்கள் கரிகாலனுக்குப் பிறகு சிறப்புற்று விளங்கியவராவர். 1. கரிகாலனுக்கு முற்பட்ட சோழ வேந்தர்கள் வேளிர்குடி அரசனான தித்தன் உறையூரில் இருந்துகொண்டு அரசாண்டபோது போர்வைக் கோப்பெருநற்கிள்ளி என்னும் அரசன் போரில் ஈடுபட்டு வெற்றி வாகை சூடிக்கொண்டிருந்தான் என்பதும். இந்த வெற்றி நிகழ்ச்சிகளைக் கண்டு தித்தன் பொறாமை கொண்டிருந்தான் என்பதும் தித்தன் வரலாற்றில் குறிப்பிடப்படும். மற்றும் இரண்டாம் வெளியனிடமிருந்து உறையூர் ஆட்சியைக் கைப்பற்றியவன் முடித்தலைக் கோப் பெருநற்கிள்ளியாக இருக்கலாம் என்பது உய்த் துணரத்தக்கதாக உள்ளது. (அ) (பெருநற்) கிள்ளி மரபினர் இந்த உய்த்துணர்வுகள் ‘பெருநற்கிள்ளி’ என்னும் பெயர் கொண்ட அரசர்கள் செல்வாக்குப் பெற்று வளர்ந்ததைக் காட்டுவது ஆகும். பெருநற்கிள்ளி என்னும் பெயர் கொண்ட அரசர்களின் பெயர்கள் நான்கு வெவ்வேறு அடைமொழிகளுடன் காணப்படுகின்றன : (1) போரவைக் கோப்பெருநற்கிள்ளி (பெருநற்கிள்ளி-1) (2) முடித்தலைக் கோப்பெருநற்கிள்ளி (பெருநற்கிள்ளி-2) (3) வேல் பஃறடக்கைப் பெருநற்கிள்ளி (பெருநற்கிள்ளி-3) (4) இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி (பெருநற்கிள்ளி-4) என்பன அந்தப் பெயர்கள். இவர்களது அடைமொழிகள் வெவ்வேறாக அமைந்திருப்பதால், இவர்களை வெவ்வேறு அரசர்கள் என்று கொள்வதே பொருத்தமானது. மேலே கண்ட வரிசை காலக் கண்ணோட்டத்தின் அடிப்படையில் நாம் அமைத்துக் கொண்டதாகும். இந்தக் காலக் கண்ணோட்டத்துக்கு அடிப்படையாய் அமைந்த செய்திகள் அடுத்துள்ள அட்டவணை யிலும் அதனை அடுத்த விளக்கத்திலும் தரப்படுகின்றன. அரசர் பாடிய புலவர் பாடல் போரவைக்கோப் சாத்தந்தையார், புறம். 80, 81, 82, பெருநற்கிள்ளி நக்கண்ணையார் 83, 84, 85 முடித்தலைக் கோப் உறையூர் ஏணிச்சேரி ௸ 13 பெருநற்கிள்ளி முடமோசியார் வேல்பஃறடக்கைப் கழாத்தலையார் ௸ 368 பெருநற்கிள்ளி இராசசூயம் வேட்ட உலோச்சனார், ௸ 377 பெருநற்கிள்ளி ஒளவையார், ௸ 367 பாண்டரங்கண்ணனார், ௸ 16 பேரிசாத்தனார் ௸ 125 மேலே கண்ட அட்டவணையில் ஒருவனைப் பாடிய புலவர் மற்றொருவனைப் பாடிய தொடர்புச் செய்தி காணப்படவில்லை. இந்த நிலையில் இவர்களைக் கால வரிசைப்படுத்த வேறு சான்றைத்தான் தேடவேண்டியுள்ளது. மேலே கண்ட எட்டுப் புலவர்களால் பாடப்பட்டவேறு அரசர்களை நினைவு கூர்வோம். புலவர் அரசர் பாடல் சாத்தந்தையார் தித்தன், புறம். 80, ஆமூர்மல்லன், ௸ 80, 81,82, பொருநன் ௸ 82 நக்கண்ணையார் அழிசி நற். 87 உறையூர் ஏணிச்சேரி அந்துவஞ்சேரல், புறம். 13, முடமோசியார் ஆய் அண்டிரன் ௸ 127, 135, 247, 374,375 கழாத்தலையார் குடக்கோ நெடுஞ் சேரலாதன், ௸ 62, 368 பெருஞ்சேரலாதன், ௸ 65 கரிகாலன் ௸ 65 உலோச்சனார் பெரியன் அகம். 100 நற். 131 பாண்டரங்கண்ணனார் ... ... .. ... பேரிசாத்தனார் மாந்தஞ்சேரல், புறம். 125 மலையன், ௸ 125 நன்மாறன் (இலவந்தி, கைப்பள்ளித் ௸ 198 துஞ்சியவன்) ஒளவையார் மாரி வெண்கோ ௸ 367 பசும்பூட்பொறையன், அகம். 303 உக்கிரப் பெருவழுதி (கானப் பேரெயில் கடந்தவன்), புறம். 367 அதியமான், பல பாடல்கள் தொண்டைமான், புறம். 95 நாஞ்சில் வள்ளுவன், ௸ 140 பாரி, அகம். 303 முடியன், நற். 390 வெள்ளிவீதி அகம். 147 பரணர் புறம். 99 மேலேகண்ட அட்டவணைகள் நமக்கு ஓர் உண்மையைத் தெளிவுபடுத்துகின்றன. பெருநற்கிள்ளி என்னும் பெயர்கொண்ட சோழ அரசர்களைப் பாடிய புலவர்களையோ, அந்தப் புலவர்களால் பாடப்பட்ட பிற அரசர்களையோ அடிப்படையாகக் கொண்டு இந்தச் சோழ அரசர்களை நேர்முறையில் காலநிரல் படுத்த முடியவில்லை. எனவே, மேலும் சில படிகள் செல்ல வேண்டியுள்ளது. சேர அரசர்களான அந்துவஞ்சேரலும், மாந்தரஞ்சேரலும் முறையே காலத்தால் முந்தியவரும் பிந்தியவரும் ஆவர் என்பது அவரது வரலாறுகளினால் தெரிகிறது. எனவே, அவர்களோடு தொடர்புடைய பெருநற்கிள்ளிகளான முடித்தலைக் கோவும், இராசசூயம் வேட்டவனும் முறையே காலத்தால் முற்பட்டவனும் பிற்பட்டவனும் ஆவர். எஞ்சியுள்ள இருவரில் போர்வைக்கோ, தித்தன் காலத்தவன் என்பது தெளிவாகத் தெரியும் சான்று. ஆதலால், முடித்தலைக்கோ மேற்கண்ட தித்தனின் மகனான வெளியனிடமிருந்து நாட்டைக் கைப்பற்றினான் என்பது நாம் முன்பு கூறியதுபோல் உய்த்துணரக் கிடப்பதாலும், போர்வைக் கோவை, முடித்தலைக் கோவிற்கு முந்தியவன் என்று கொள்கிறோம். எஞ்சியுள்ளவன் வேல்பஃறடக்கைப் பெருநற்கிள்ளி. இவன் நெடுஞ்சேரலாதனோடு போரிட்டு மாண்டவன். சேர அரசர்களான அந்துவனும் உதியனும் சம காலத்தவர் ஆதலால், உதியனின் மகனான நெடுஞ்சேரலாதனோடு போரிட்டு மாண்ட வேல்பஃறடக்கைப் பெருநற்கிள்ளியை முடித்தலைக் கோவுக்கு அடுத்த தலைமுறையினனாகக் கொள்ளலாம். இந்த முறையில் நாம் மேலே கண்ட காலநிரல் அமைவதைக் காணலாம். இனி இவர்களது வரலாறுகளைத் தனித்தனியே நோக்குவோம். பெருநற்கிள்ளி - 1 சோழ மன்னருள் காலத்தால் மிகவும் முற்பட்டவனாகத் தோன்று கிறான். உறையூரை ஆண்ட முதல் சோழ அரசனாக இவன் விளங்கினான். போர்கள் ஆமூர், முக்காவல் நாட்டின் தலைநகர். இந்த ஊரில் ஆமூர் அரசன் மல்லனுக்கும், போர்வை அரசன் (கோ) பெருநற்கிள்ளிக்கும் போர் நடந்தது. இந்தப் போரில் சோழன் மல்லனைத் தாக்கினான்; மல்லனது ஊரிலேயே தாக்கினான். சோழன் போரிட்ட காட்சி கண்ணுக்குப் பெரு விருந்தாய் அமைந்திருந்தது. பசியால் பனைமரத்தை முரிக்கும் யானை போல அவன் போரிட்டான். ஒடியும் பனை மரம்போல் மல்லனது படை இரு பகுதியாகச் சிதைந்தது. சிதைந்தபடை பின்புறமும் வளைத்துக் கொண்டு சோழனைத் தாக்கியது. சோழன் மண்டியிட்டுக்கொண்டு முன்னும் பின்னும் திரும்பித் தாக்கிப் போரிட்டான்; பகைவர்களைக் கொன்று குவித்தான். இது ஆமூரில் நடந்த போர்.1 போர்வை அரசன் பெருநற்கிள்ளி மற்றொரு போரில் ஈடுபட்டான். அந்தப் போர் ஊரைக் கைப்பற்ற வந்த பொருநனோடு நடத்திய போர்.2 ஊரைக் கைப்பற்ற வந்த பொருநன் யார்? எந்த ஊரைக் கைப்பற்ற வந்தான்? எங்குப் போர் நடைபெற்றது என்பதைத் தெளிவாக உணர்த்தக்கூடிய சான்று இல்லை. இந்தப் போர் ஆமூரில் நடைபெற வில்லை என்பது மட்டும் உறுதி. ஆமூர் இந்தச் சோழனின் நாடு அன்றாகையால் இந்த உறுதி பெறப்படுகிறது. பெருங்கோழி நாய்கன் மகள் நக்கண்ணையார் இவன் நிகழ்த்திய போர் ஒன்றைக் கண்டு பாடியுள்ளார். தம் இல்லத்தில் இருந்து கொண்டே போரைக் கண்டிருக்கிறார்.3 எனவே, அவர் கண்ட போர் பெருங்கோழியூரில் நடைபெற்றது என்பது தெளிவாகிறது. உறை யூருக்குக் கோழியூர் என்ற பெயரும் உண்டு. பேரரையும் சிற்றரையும் என்பன ஓர் ஊரின் பகுதிகளாய் விளங்கியமை போலப் பெருங் கோழியூர் என்பது கோழியூரின் ஒரு பகுதியாய் விளங்கியிருக்கலாம். இந்த வகையில் இப் போர் உறையூரில் நடந்தது என்று கொள்கிறோம். உறையூரைக் கைப்பற்ற வந்தவன் யார்? ‘பொருநன்’ என்று பாடல் கூறுகிறது.4 தலையாலங்கானத்துப் போரில் நெடுஞ்செழியனை எதிர்த்த எழுவருள் ஒருவன் ‘பொருநன்’ என்னும் பெயர் கொண்டவன்.5 இந்தப் பொருநன் தான் இந்தத் தாக்குதலைச் செய்தவனா என்று எண்ண இயலாது. தலையாலங்கானத்து நெடுஞ்செழியன் காலத்தால் மிகவும் பிற்பட்டவனாவான். உறையூரில் அப்போது ஆட்சி செலுத்தி வந்தவன் தித்தன் என்பவன்.6 பொருநன் உறையூரைத் தாக்கியபோது தித்தனுக்குப் போர்வை அரசன் பெருநற்கிள்ளி உதவ முன்வந்தான். இந்த உதவியைத் தித்தன் விரும்பவில்லை.7 எனினும் சோழ நாட்டைக் காப்பாற்ற வேண்டுமென்பது கிள்ளியின் விருப்பம். பொருநனுக்குச் சோழர் குடியைச் சேர்ந்த வேறொருவன் நண்பன். அவன் பெயர் செம்பியன்.8 இந்தச் செம்பியனுக்கும் இந்தப் போருக்கும் தொடர்பு இல்லை. என்றாலும் அந்தச் செம்பியனுக்குச் சோழ நாட்டுத் தலைமையை அளிக்க அவன் செய்த முயற்சியே, இந்த உறையூர்ப் போராய் இருக்குமோ என்று எண்ண வேண்டியுள்ளது. போரில் பெருநற்கிள்ளியின் கைகள் விரைந்து செயற்பட்டன.9 இவன் போர்க்களம் புகுவான் என்று யாரும் எதிர் பார்க்கவில்லை. எதிர்பாராமல் இவன் போர்க்களத்தில் தோன்றினான். பொருநனின் போர் வீரர்கள் வெருண்டு ஓடினர்.10 பெருநற்கிள்ளிக்கு உறையூர் சொந்த ஊர் அன்று. (அவனது சொந்த ஊர் போர்வை.) எனவே, உறையூரில் இருந்தவர்களில் சிலர் போர்வை அரசன் வெற்றி பெற்றான் என்று கூறினர். சிலர் தன் அரசன் தித்தனே வெற்றி பெற்றான் என்பாராய், போர்வை அரசன் பெற்றது வெற்றி அன்று என்று கூறினர். உண்மையில் வென்றவன் போர்வை அரசனே ஆவான்.11 நாடு ‘போர்வைக்கோ’ என்னும் அடைமொழியுடன் இவன் கூறப் படுவதால் போர்வை என்பது இவன் ஆட்சிபுரிந்த நாடு எனத் தெரிகிறது. போர்வை நாட்டின் தலைநகர் போர் என்பதும் போர் நகரின் புறப்பகுதி போர்ப்புறம் என்னும் பெயர் பெறும் என்பதும். அது திரு என்னும் அடைமொழி பெற்றுத் திருப்போர் புறம் என அமையும் என்பதும் சொல் ஒப்புமையால் பெறப்படும் பொருத்தமான முடிவுகள். போர், சோழனின் படைத்தலைவன் பழையன் இருந்து அரசாண்ட ஊர். போர்ப்புறம், வேல்பஃறடக்கைப் பெருவிறற் கிள்ளியும் குடக்கோ நெடுஞ்சேரலாதனும் போரிட்டு மாண்ட ஊர். திருப்போர்ப் புறம் செங்கணானுக்கும், கணைக்கால் இரும்பொறைக்கும் போர் நடைபெற்ற இடம். இத்தகைய வரலாற்றுச் சிறப்புமிக்க இடம் காவிரி ஆறு பாயும் பகுதியில் இருந்தது என்பதைப் பழையன் வரலாற்றில் காணலாம். இப்போதுள்ள திருப்பூர் மேலே குறிப்பிட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க ஊராக இருக்கலாம் என்பது அறிஞர் கருத்து. தோற்றப் பொலிவு கழல் காலில் விளங்கியது; கறுகறுத்த மீசை முகத்தில் விளங்கியது;12 சோழர் குடிக்குரிய ஆத்தி மாலையை அவன் அணிந் திருந்தான்.13 போர்க் காலங்களில் அவனுக்கு நல்ல உணவுகூடக் கிடைக்கவில்லை; புல்லரிசிச் சோறுதான் கிடைத்தது. எனினும் அவனது போர்த்திறம் குறையவில்லை.14 காதல் கடல் வாணிகர் ‘நாய்கன்’ என்று குறிப்பிடப்பட்டனர். கண்ணகியின் தந்தை பெயர் ‘மாநாய்கன்’ இதற்கு ஒரு சான்று. பெருங்கோழியூரில் (உறையூரில்) வாழ்ந்த கடல்வாணிகன் ஒருவன் ‘பெருங்கோழி நாய்கன்’ என்று அறிமுகமாகியிருந்தான். அவனது மகள் நக்கண்ணையார். கண்ணின் சிரிப்பைக் காட்டும் கண்ணகி என்னும் பெயரைப் போன்றதே கண்ணின் நலத்தைக் காட்டும் நக்கண்ணையார். போர்வை அரசன் பெருநற்கிள்ளி பொருநன் படையை எதிர்த்துப் போரிடுகையில் கண்டு அவன்மீது காதல் கொண்டாள். கிள்ளி போரில் கண்ணும் கருத்துமாய் இருந்தான். இவளுடைய நிலை அவனுக்குத் தெரியாது. உறையூர்ப் போர் முடிந்ததும் ஆமூரின் போர் தொடங்கி விட்டது. உறையூர் போர்வைக்கோவின் ஊர் அன்மையால், அவன் திரும்ப உறை யூருக்கு வரவும் இல்லை. எனவே, நக்கண்ணையார் காதல் என்றும் ஒருதலைக் காதலாய் முடிந்து விட்டது; இருதலையும் (ஆணிடத்திலும் பெண்ணிடத்திலும்) தோன்றி மணக்க வாய்ப்பின்றி முடிந்தது. தித்தன் உறவு தித்தன் உறையூர் அரசன். இவன் போர்வைக்கோவின் உதவியை நாடவும் இல்லை; அவன் உதவுவதை விரும்பவும் இல்லை. எனினும் பொருநனை முறியடிப்பதில் தானே வலிய வந்து போர்வைக்கோ உதவினான். இந்த உதவியை வெற்றிக்குப் பின்னரும் பாராட்டவில்லை. உறையூர்ப் போருக்குப் பின் ஆமூர்ப் போர் மூண்டது. இந்தப் போர் தித்தன் மல்லனைத் தாக்கிய போர். போர்வைக்கோ முன்புபோலவே தித்தன் பக்கம் வலிய வந்து நின்று போராடினான். இவன் போரிட்ட பாங்கு கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. ‘இதனையேனும் தித்தன் காண்பானாக! விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் காண்பானாக!’ என்று புலவர் பாடியுள்ளார். தித்தன் புலவர் கூற்றைப் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை. தித்தனுக்கும் போர்வைக்கோவுக்கும் இத்தகைய முரண்பட்ட உறவையே நாம் காண்கிறோம். சிலர் போர்வைக்கோவைத் தித்தனின் மகன் என்று கூறுகிறார்கள். அவர்கள் கூற்றுக்குப் பொருத்தமான சான்று இருப்பதாகத் தெரியவில்லை. இருப்பின் தந்தை மகனிடையே இருந்த இந்த மனமுறிவு கோப்பெருஞ்சோழனுக்கும் அவனது மக்களுக்கும் இடையே தோன்றிய மன முறிவை ஒப்பிட்டு எண்ண வைக்கும். கோப்பெருஞ்சோழன் வரலாற்றில் மக்கள் (மகன்மார்) தவறு செய்கிறார்கள். தித்தன் வரலாற்றில் தந்தை தவறு செய்கிறான் என முடியும். பெருநற்கிள்ளி - 2 இவன் மதம்கொண்ட யானைமீது நமக்கு அறிமுகமாகிறான். மதங்கொண்ட யானையை அடக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்த போது அந்த யானை கருவூர்த் தெருவழியாக, சோழனது கட்டுக்கு அடங்காமல் ஓடியது. அப்போது கருவூர் வேண்மாடத்தில் இருந்த உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் கண்டு அருகில் இருந்த சேர அரசன் அந்துவனிடம் நிலைமையை விளக்கினார். அவன் யானை மீதிருந்து படையெடுத்து வருவது போலத் தோற்றமளித்தாலும் அவன் உண்மையில் படையெடுத்து வரவில்லை என்பதையும் விளக்கினார்.15 முடிவு என்ன ஆயிற்று என்பது தெரியவில்லை. சேரனும் யானையின் மதத்தை அடக்க உதவி செய்திருக்கலாம். சோழன் பிழைத்துத் திரும்பியிருக்கலாம். இதற்கு மாறாகவும் நிகழ்ந்திருக்கலாம். நாடு முடித்தலை என்னும் நாட்டை ஆண்டமையால் இவன் ‘முடித்தலைக்கோ’ என்று கூறப்பட்டிருக்கலாம். முடித்தலை என்பது இப்போதுள்ள ‘கொடுமுடி’ எனலாம். இந்தக் கொடு முடிக்கும் கருவூருக்கும் இடையில் உள்ள தூரம், கருவூருக்கும் உறையூருக்கும் இடையில் உள்ள தூரத்தை நோக்க மிகக் குறைவு. எனவே, மதங்கொண்ட யானைமீது ஏறிக் கருவூரில் நுழைந்த நிகழ்ச்சி இயல்பாய் முடிகிறது. எனினும் உறையூர் ஏணிச்சேரியில் வாழ்ந்த புலவர் முடமோசியாருக்கு இந்தச் சோழன் நன்கு அறிமுகமாகி யிருத்தலை எண்ணும்போது இவனை உறையூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட அரசன் என்று கொள்வதே பொருத்தம். ஆயினும், இவனது தொடக்க கால ஆட்சி, அதாவது அரியணையேறும் முதல் நிகழ்ச்சி இளவரசன் என்ற நிலையிலேனும் கொடுமுடியில் நிகழ்ந்திருக்கக் கூடும்.16 பெருநற்கிள்ளி - 3 (வேல்பஃறடக்கை) கழாத்தலையார் சேர அரசன் நெடுஞ்சேரலாதனுக்கும் இவனுக்கும் போர் நடைபெற்றது. போர்ப்புறம் என்ற இடத்தில் நடைபெற்ற அந்தப் போரில் இரண்டு அரசர்களும் போர்க்களத்திலேயே மாண்டனர்;17 இவனைப் ‘பெருநற்கிள்ளி’ என்றும், ‘பெருவிறற் கிள்ளி’ என்றும் சுட்டுவது மரபு. போரும் வீழ்ச்சியும் சேர அரசன் குடக்கோ நெடுஞ்சேரலாதனுக்கும் இவனுக்கும் போர் நடந்தது. இந்த நெடுஞ்சேரலாதன் செங்குட்டுவன் தந்தை என்பதை அவனது வரலாற்றில் காணலாம் போர், ‘போர்ப்புறம்’ என்னுமிடத்தில் நடந்தது.18 போர் அவலக் காட்சியில் முடிந்தது. யாருக்கும் வெற்றியில்லை; தோல்வியும் இல்லை. நாற்படையும் களத்தில் அழிந்தன. தம் படை அழிந்தமை கண்டு இரண்டு பெரு வேந்தர்களும் தாமே நேரடிப் போரில் ஈடுபட்டனர். போர்ப்பறை முழங்க இருவருக்கும் கடுமையான போர் நடந்தது. இறுதியில் இருவரும் போர்க்களத்திலேயே மாண்டனர்.19 இவர்களுடைய மனைவிமார் கைம்மைக் கோலத்துடன் பச்சைக் கீரையை மட்டும் தின்றுகொண்டு, தண்ணீரிலேயே குளித்துக் கொண்டு வாழ விரும்பாமல் போர்க்களம் வந்து தம் கணவர்மார்பைத் தழுவியராய் மாய்ந்தனர்.20 எங்கும் அவலம். (ஆ) கோப்பெருஞ்சோழன் சோழர் வரலாற்றில் கோப்பெருஞ்சோழன், தனித்துக் காணப் படுகிறான். அவனுடைய சமகாலத்திய பாண்டிய அரசன் அறிவுடை நம்பி என்பவனாவான். அவனைப் பாடிய புலவர்களும் நம்பியைத் தவிர வேறு யாரையும் பாடவில்லை. உறையூரில் இருந்து இவன் ஆட்சி செய்ததனால், கரிகால் பெரு வளத்தானுக்குக் காலத்தால் முற்பட்டவனாக இருத்தல் கூடும். இவனைப் பாடிய பிசிராந்தையார் எனும் புலவரின் பெயர், மிகப் பழங்காலத்தில் வழங்கிய பெயருமாகும். எனவே, கோப் பெருஞ்சோழனைப் பழைய அரசனாகக் கொள்ளலாம். கோப்பெருஞ்சோழன், சோழ நாட்டை ஆண்டு வந்தான். அவனது தலைநகரம் உறையூர் ஆகும். அவ்வூரில் மாட மாளிகை யோடு கூடிய அவனது அரண்மனை இருந்தது. பதிற்றுப்பத்தைத் தொகுத்த ஆசிரியர் இவனைப் ‘பொத்தி ஆண்ட பெருஞ்சோழன்’1 என்று குறிப்பிடுகிறார். இதில் ‘பொத்தி’ என்னும் சொல் பொத்தியார் என்னும் புலவரை உணர்த்துவதாக அறிஞர்கள் கருதுகின்றனர். பொத்தியாருக்கும் இவனுக்கும் இடையே இருந்தது, நட்புறவே அன்றி ஆண்டான் அடிமை என்ற நிலையில்லை. எனவே, பொத்தியாரை இவன் ஆண்டான் என்பது பொருந்தாது. இவன் பொத்தியாரை மட்டும்தான் ஆண்டானா? ஏனையோரை ஆளவில்லையா? என்று வினவுவதற்கும் இடம் உண்டாகிறது. ஆதலின், இவன் பொத்தி என்னும் இடத்தை ஆண்டான் என்று கொள்வதே பொருத்தமாய் அமைகிறது. இந்த இடம் எது? அந்த இடத்தை இவன் ஆண்டான் எனல் இயல்பாக அமைகிறதா என்பனவற்றை நாம் எண்ணிப் பார்க்கவேண்டும். காவிரியின் வடகரையில் பொத்தனூர் என்னும் ஊர் ஒன்று உள்ளது. அது மிகப் பழமையான ஊர். அந்த ஊரின் பழம் பெயர் அல்லது மருவிய பெயர் ‘பொத்தி’ என்பதாக இருக்கலாம். கோப் பெருஞ்சோழன் தொடக்ககாலத்தில் இவ்வூரில் தன் ஆட்சியைத் தொடங்கி யிருக்கலாம். அப்போது உறையூரை ஆண்ட சோழ அரசனைச் சார்ந்தவனாக இவன் இவ்விடத்தில் ஆட்சியைத் தொடங்கி யிருக்கலாம். பின் செல்வாக்கினைப் பெற்று உறையூர்க் கோட்டையைத் தாய உரிமை முறையிலோ வேறு முறையிலோ கைப்பற்றியிருக்கலாம். இந்தப் பொத்தனூருக்குக் கிழக்கிலுள்ள இடையாற்றுப் பகுதியில் கரிகாலனின் ஆட்சி நடைபெற்றிருக்கக் கூடும் என்பதை அவனது வரலாற்றில் காண்போம். திருப்பூர்ப் பகுதியில் பெருநற்கிள்ளி ஒருவனின் (போர்வைக்கோ) ஆட்சி தொடங்கப் பெற்றிருக்கலாம் என்று அவனது வரலாற்றில் கண்டோம். எனவே, இந்தப் பொத்தனூரில் கோப்பெருஞ்சோழனின் ஆட்சி தொடங்கி யிருக்க முடியும். சேரனோடு போர் சேர அரசன் இளஞ்சேரல் இரும்பொறைக்கும் கோப்பெருஞ் சோழனுக்கும் போர் மூண்டது. போரில் சோழன் தோற்றான்.2 சங்க காலத்தில் காவிரிக்குத் தெற்கேயிருந்த கொங்குநாட்டுப் பகுதியைப் (தென்கொங்கு) பொறையர் குடியைச் சேர்ந்த சேர அரசர்கள் ஆண்டுவந்தனர். அவர்களது தலைநகர் கருவூர்,3 வஞ்சிமுற்றம்4 ஆகியவை. இவர்கள் காவிரிக்கு வடக்கில் இருந்த வடகொங்கு நாட்டிலும் தங்களது செல்வாக்கைப் பரப்ப முயன்றனர். இந்த முயற்சியின் விளைவுதான், சோழர்களோடும் அதியமானோடும் நடத்திய போர்கள். இவற்றை ஆங்காங்கே விரிவாகக் காணலாம். இவற்றையெல்லாம் நாம் இங்கு நினைவுகூர்வதன் நோக்கம் இந்தப் பொத்தனூர் எங்கு அமைந்திருந்தது எனத் தெளிவதற்கும், போரின் காரணங்களை உய்த்துணர்வதற்குமே ஆகும். மகன்மார்மீது போர் தொடுத்தல் கோப்பெருஞ்சோழனுக்கு ஆணமக்கள் இருவர் இருந்தனர். அவர்கள்மீது இவனுக்குக் கசப்பு உணர்வு தோன்றியது. கசப்பு உணர்வுக்குக் காரணம் புலப்படவில்லை. சிற்றினச் சேர்க்கையால் அறிவு பேதுற்று, தந்தைபால் பகைமைகொண்டு போருக்கு எழுந்தனர் போலும்.5 இந்தக் கசப்பு உணர்வு படையெடுப்பில் முடிந்தது. இரண்டு மகன்மாரும் இருவேறு இடங்களில் இருந்து கொண்டு அரசாண்டு அரசியலில் பயிற்சி பெறும்படி அமர்த்தப்பட்டிருக்க வேண்டும் என்பதை இவர்கள்மீது கோப்பெருஞ்சோழன் போர் தொடுத்தான் என்பதிலிருந்து அறியலாம். தந்தை தன் மக்கள் இருவரையும் எதிர்த்துப் போர் தொடுப்பதை, நாட்டின் நல்லாட்சியை விரும்பிய சான்றோர்கள் விரும்பவில்லை. புல்லாற்றூர் எயிற்றியனார் என்னும் புலவர் இத்தகைய எண்ணத்தோடு கோப்பெருஞ்சோழனை நேரில் கண்டு, போரைக் கைவிட்டு விடும்படி அறிவுரை கூறிப் பாடினார். போரில் மக்கள் வெற்றி பெற்றுவிட்டால் தந்தை எண்ணம் நிறை வேறாது. தந்தையின் அரசாட்சி மக்களுக்குக் கிடைக்கும். மக்கள் தோற்றுவிட்டால், தந்தை தான் வென்ற அரசாட்சியைத் தனக்குப் பின் யாருக்குத் தரமுடியும்? தோற்ற அந்த மக்களுக்குத்தாமே தரவேண்டும். இது பிற அரசர்கள் பழிக்க ஏதுவாகும் என்னும் கருத்துகளைப் புலவர் எடுத்துரைத்தார். கோப்பெருஞ்சோழன் புலவரது அறிவுரைகளை ஏற்றுப் போரைக் கைவிட்டான். இதற்குப்பின் தன் மகன்மாருக்கு எதிராகத் தான் தொடர்ந்து ஆட்சி புரிவதையும் அவன் விரும்பவில்லை. அவன் வடக்கிருந்து உயிர்விடத் துணிந்தான். வடக்கிருத்தல் வடக்குத் திசையை நோக்கி அமர்ந்து உண்ணாநோன்பிருந்து உயிர்துறப்பது வடக்கிருத்தல் ஆகும். கோப்பெருஞ்சோழன் இவ்வாறு வடக்கிருந்தான். ஆற்றின் இடையே இருந்த நிலப்பகுதியில், புள்ளி புள்ளியாக இருந்த அருநிழலில் உட்கார்ந்துகொண்டு அவன் வடக்கிருந்தான்.6 இவன் வடக்கிருப்பதற்கு ஓர் இடம் அமைக்கப்பட்டிருந்தது. அதில் வந்து அமர்ந்த அரசன் மற்றும் ஓர் இடம் தன் நண்பர் பிசிராந்தையாருக்கு அமைத்து ஒதுக்கவேண்டும் என்று கூறினான்.7 பிசிராந்தையார் பாண்டிய நாட்டின் தென்கோடியில் வாழ்ந்து வந்தார். எனவே, சான்றோர் சிலர் ‘பிசிராந்தையார்’ வரமாட்டார் என்று கூறினர். கோப்பெருஞ்சோழன் கட்டாயம் வருவார் என்றே நம்பினான். ‘நான் செல்வம் துய்க்கும்போது வரவில்லை என்றாலும், நான் அல்லல் படும்போது வராமல் இருக்கமாட்டார்’ என்று அவன் கூறினான்.8 அவன் கூறியபடியே பிசிராந்தையார் வந்து சேர்ந்தார்.9 இதற்கு முன அவன் பிசிராந்தையாரைப் பார்த்ததில்லை அவரது அகவை முதலியவற்றால் சான்றோர்கள் இவ்வாறு இருப்பார் என்று கற்பனை செய்து வைத்திருந்தனர். அவர்களது கற்பனைப்படி பிசிராந்தையார் நரைதிரை உடையவராகத் தோன்றவில்லை. மாறாகக் கறுகறுத்த முடி இருந்தது. இதனைச் சுட்டிக் காட்டிக் காரணம் கேட்டார்கள். அமைதி நிறைந்த இனிய வாழ்க்கையே இதற்குக் காரணம் என்பதைப் புலவர் விளக்கினார்.10 கோப்பெருஞ்சோழன் வடக்கிருப்பதைக் கண்ட சான்றோர் பலர், தாமும் அவனுடன் உயிர்விடத் துணிந்து வடக்கிருந்தனர்.11 இவ்வாறு வடக்கிருக்க அமர்ந்த சான்றோர்களில் ஒருவர் பொத்தியார் என்பவர். அவரை அப்போது வடக்கிருக்க வேண்டா என்று கோப்பெருஞ்சோழன்தடுத்துவிட்டான். பொத்தியாரின் மனைவி முதன் முறையாக நிறைமாதமாய் இருந்தாள். பொத்தியார் சோழனின் நெருங்கிய நண்பர். அதனால், அவன் அவரது குடும்ப நிலையை உணர்ந்திருந்தான். எனவே, அவரை இல்லத்திற்குத் திரும்பிச் சென்று, அவருக்கு மகன் பிறந்தபின் வரலாம் என்று கூறிவிட்டான். பொத்தியார் வேறு வழியின்றி உறையூர் மீண்டார். உறையூரில் இருந்த மன்றம் (அரசவை) கோப்பெருஞ்சோழன் இல்லாமல் வெறுமனே கிடக்கும் காட்சியைக் கண்டு கலங்கி அவர் பாடினார்.12 சில நாள்களில் கோப்பெருஞ்சோழன் இறந்தான். அவன் இறந்ததும், அவனை அவ்விடத்தில் புதைத்து அடையாளக்கல் நட்டு விட்டனர். பொத்தியாருக்கு மகன் பிறந்துவிட்டான். மகனைக் கண்டு மகிழ்ந்துவிட்டு, நண்பனைக் கண்டு நண்பனோடு அமர்ந்து உயிர்துறக்க எண்ணி ஓடோடி வந்தார் பொத்தியார். கோப்பெருஞ்சோழன் இல்லை. அவனது நடுகல்தான் இருந்தது. கல்லைக் கண்டபோது, கல்லாகி நிற் கோப்பெருஞ்சோழனின் நற்பணிகள் அவர் நினைவிற்கு வந்தன; எண்ணி உருகிப் பாடினார்.13 தனக்கு இடம் தரும்படி அந்தக் கல்லைக் கேட்டார்.14 நடுகல் தனக்கு இடங்கொடுத்துவிட்டதாகக் கருதினார். கல்லாகிய பின்னும் சோழன் தனக்கு இடம் கொடுத்தான் என்று அவர் கருதினார்; வடக்கிருந்தார்;15 உயிர் துறந்தார். தோற்றப் பொலிவு இவன் பெண்களைப்போல் மென்மையான மேனி நலம் (சாயல்) கொண்டவன். எனினும், வலிமையில் ஆண்களுக்கெல்லாம் தலைவன் என்னும்படி மிக்க வலிமை படைத்தவன்.16 கொடைத்தன்மை ‘பாணர் பசிப்பகை’ என்று இவன் கூறப்படுகிறான்.17 இதனால் பாணர்களுக்கு இவன் கொடை வழங்கியமை பெறப்படும். அன்றியுப் பாடுநர், ஆடுநர், புலவர் முதலானோர்க்கும் இவன் கொடை வழங்கியுள்ளான். நண்பனிடமிருந்து வருவதாக அறிந்தால் பறவைகள் ஆயினும் மக்கள்போல் மதித்து அணிகலன்கள் வழங்குவான் என்று பிசிராந்தையார் இவனைப்பற்றிக் குறிப்பிடுகிறார்.18 இதில் கொடை மாண்பைக் காட்டிலும் நட்பின் மாண்பு சிறந்து நின்றமையையே காண்கின்றோம். இவ்வாறே இவன் கல்லாகிய பின்னும் இடங் கொடுத்தாகப் பொத்தியார் கூறுவதும் அமைகிறது. இவன் பாடல்கள் இவ்வரசனே ஒரு புலவனாகவும் விளங்கினான். இவன் பாடல்களில் இவனது நட்பின் பண்பு வெளிப்படுகிறது. முயற்சிக்குத் தக்க பயன் உறுதியாகக் கிடைக்கும் என்று இவன் கூறுவது இவன் உழைப்பில் நம்பிக்கை உடையவன் என்பதைக் காட்டுகிறது. பிறர் கூற்றாக அமைந் தாலும் ‘பேதைச் சோழன’ என்று இவன் தன்னையே குறிப்பிட்டுக் கொள்வது இவனது அடக்க உணர்வை வெளிப் படுத்துகிறது. பெயர்களும் அடைமொழிகளும் ‘கோப்பெருஞ் சோழன்’,19 ‘பெருஞ்சோழன்,’20 ‘பெருங்கோக்கிள்ளி’,21 ‘பொலந்தார்த் தேர்வண் கிள்ளி’,22 ‘அடுமான் தோன்றல்’23 ஆகிய பெயர்களும், பெயர் அடைமொழிகளும், இவனுக்கு வழங்கப்பட்ட பல்வேறு பெயர்களையும் போர்க்கோலத் தோற்றத்தை புலப்படுத்துகின்றன. (இ) சென்னி மரபினர் இளஞ்சேட்சென்னி - 1 (நெய்தலங்கானல்) (பாமுள்ளூர் எறிந்தவன்) ‘சென்னி’ எனும் சோழர் குடியைச் சேர்ந்த இரு அரசர்கள். கரிகால் பெரு வளத்தானுக்கு முன்னர் ஆட்சி செய்துள்ளனர். அவர்கள் பாமுள்ளூர் எறிந்த நெய்தலங்கானல் இளஞ்சேட் சென்னி (இளஞ்சேட் சென்னி-1), செருப்பாழி எறிந்த இளஞ்சேட் சென்னி எனும் உருவப்பஃறேர் (இளஞ்சேட் சென்னி-2). இவர்களுக்கு இடையே இருந்த உறவுமுறை யாதென்பது தெரியவில்லை. பாட்டனும் பேரனுமாக இவர்கள் இருப்பார்களானால், இவர்களுக்கு இடையே வேறோர் அரசன் ஆட்சி செய்திருக்கவேண்டும். அவன் யார் என்பதை அறிய இயலவில்லை. இவர்கள் இருவரும் சமகாலத்தில் அரசாண்டவர் எனக் கொள்ளுவோரும் உண்டு. கிள்ளி மரபினருக்கும் சென்னி மரபினருக்கும் இடைப்பட்ட நிலையில் கோப்பெருஞ்சோழன் விளங்குகிறான். அவனுடைய இயற்பெயர் தெரியாததனால், சிறப்புப் பெயராலேயே அவனைச் சுட்டியுள்ளோம். செருப்பாழி எறிந்த இளஞ்சேட் சென்னி உறையூரிலிருந்து அரசாண்டு கொண்டிருந்த காலத்தில், இவன் புகார்நகரப் பகுதியில் இருந்து கொண்டு சோழநாட்டின் ஒரு பகுதியை அரசாண்டான். நெய்தலங்கானல் இளங்சேட் சென்னியின் பெயர் ‘சேரமான் பாமுள்ளூர் எறிந்த நெய்தலங்கானல் இளஞ்சேட் சென்னி’ என்று புற நானூற்றுக் கொளுவில் காணப் படுகிறது. இதில் சேரமான் என்னும் அடை மொழி வேறு எந்தப் பெயர்த் தொடரிலும் காணப்படாத முறையில், கூறப்படும் அரசனுக்கு அடைமொழியாய் அமையாமல் அடை மொழி யாகிய ‘பாமுள்ளூர்’ என்பதற்கு அடைமொழியாய் அமைந்துள்ளது. இதனால் இந்தப் பெயர்த் தொடரில் ஏதோ தவறு இருக்கிறது என்று எண்ணவேண்டியுள்ளது. அல்லது இவனது வரலாற்றில் மேலும் குழப்பம் இருக்கிறது என்று எண்ண வேண்டியுள்ளது. போர் பாமுள்ளூர் என்ற ஊரை இவன் தாக்கி அழித்தான் என்பது இவனது பெயருக்கு அடைமொழியாகப் புறநானூற்றைத் தொகுத்த ஆசிரியர் ‘பாமுள்ளூர் எறிந்த’ என்பதைக் கொடுத்ததிலிருந்து தெரிகிறது. கொடை இவன் பாணர்களுக்குப் பகைவர் கோட்டைகளைப் பரிசிலாகக் கொடுத்தான். கோட்டை பகைவர்களின் கைவசம் இருக்கும்போதே தான் கைப்பற்றப்போகும் உறுதிநோக்கிப் பரிசிலாகக் கொடுத்தான்.1 இளஞ்சேட் சென்னி - 2 (செருப்பாழி எறிந்தவன்) ‘ஊன்பொதி பசுங்குடையார்’ என்னும் சிறப்புப் பெயரால் அறியப்படும் புலவர் இவனைப்பற்றிப் புறநானூற்றில் பாடியுள்hர்.2 இடையன் சேந்தங்கொற்றனார் என்னும் புலவர் அகநானூற்றில் ‘சோழர் பெருமகன் இளம்பெருஞ்சென்னி’3 என்று சுட்டியுள்ளார். செருப்பாழிப்போர்4 எழிமல்லைப் பகுதியில் பாழி என்பது ஒரு நகரம். நன்னன் இதனைத் தலைநகராகக் கொண்டு ஒரு காலத்தில் ஆண்டு வந்தான். இந்தப் பாழி நகரத்தில் வேளிர் குடியினரும் வாழ்ந்தனர். இந் நகரில் அடிக்கடி போர்மூண்டது. காரணம் இது வடநாட்டிலிருந்து மேற்குக் கடற் கரை வழியே தமிழ்நாட்டில்கிழக்கு நோக்கி நுழைவார்க்கு வாயிலாய் அமைந்திருந்ததே ஆகும். அடிக்கடி போர் நிகழ்ந்த காரணத்தால் இந்த நகரம் ‘செருப்பாழி’ (செரு நடக்கும் பாழி) என்று வழங்கப்பட்டது.5 செருப்பாழிப் பகுதியில் வழிப்பறி மிகுதியாக இருந்தது. சோழ நாட்டு வாணிகர் தரைவழியே மேலைக் கடற்கரைக்குச் சென்ற வழி இது. எனவே, இங்கு நடந்துகொண்டிருந்த வழிப்பறியைத் தடுக்கவேண்டிய பொறுப்புச் சோழனுடையதாயிற்று ( ‘குடிக் கடன்’). இந்தக் கடமையைச் செய்ய முன்வந்தான் இந்த இளஞ்சேட் சென்னி. பாழி நகரில் செம்பை உருக்கி வார்த்த கோட்டை இருந்தது. இவன் அதனைத் தாக்கி அழித்தான். வம்ப வடுகர் அவனை எதிர்த்தனர். வம்ப வடுகர் என்பவர் வடநாட்டு வடுகர்;6 மௌரியர் தமிழ்நாட்டில் நுழைய வழியமைத்துக் கொடுத்தவர். தமிழரோடு ஒன்றுபட்டு வாழ்ந்த எருமை நாட்டு வடுகர் போன்றவர் அல்லர். ‘எருமை’ அரசன் வரலாற்றில் இவர்களைப் பற்றிக் காணலாம். சோழன் வம்ப வடுகரைத் தரையில் சாய்த்து யானைக் காலால் துவட்டினான்;7 வாட்போர் செய்து வென்றான்.8 தோற்ற வடுகர்களில் சிலர் திரும்பி ஓடிவிட்டனர். தென்பரதவரை அடக்கல் தென்னாட்டுப் பரதவர் தம் வலிமையைக் காட்டிக் கலகம் செய்து வந்தனர். எனவே, இவன் தென்திசைப் போரில் ஈடுபட்டு இவர்களது கொட்டத்தை அடக்கினான். இவன் பகைவர் பிணங்களை நெல்லின் தாள் போல் உதறி, யானைகளை எருதுகள் போல் நடத்திப் போரடித்த காட்சி, புலவர் உள்ளத்தில் நிலைபெற்றது.9 கொடை ஊன் பொதி பசுங்குடையார் என்னும் புலவர் தடாரி என்னும் இசைக்கருவியை முழக்கிக்கொண்டு போர்க்களத்திற்குச் சென்று, அவனது வெற்றியைச் சிறப்பித்துப் பாடினார். அவனது பட்டத்து யானையைப் பரிசிலாகக் கேட்டார். சோழன் கொடுத்திருப்பான் என்று நாம் கருதலாம். இப் போர்க்களிற்றைப் பரிசிலாகப் பெற்றுக் கொள்வதன் மூலம் இனிமேல் கொடிய போர்களில் அவன் ஈடுபடக்கூடாது என்பதைப் புலவர் குறிப்பால் உணர்த்தினார் போலும்.10 இளஞ்சேட்சென்னி - 3 (உருவப்பஃறேர்)11 நாடு இவன் நாடு மழைவளம் குன்றினும் நீர்வளம் குறையாது. போர் போர்களில் ஈடுபட்டதால் இவனது வாள் மழுங்கிக் குருதிக்கறை படிந்திருந்தது. இவனது தாளிலிருந்த வீரக்கழல் போர்க் களத்தில் நடந்ததால் குருதிக்கறை படிந்திருந்தது. மார்புக் கவசம் பல துளைகளை உடையதாய் இருந்தது.12 புலிபோன்ற இவனது குதிரைகள் கடிவாளம் பூண்டு சிவந்த வாயை உடையன. எமன்போன்ற இவனது யானைகள் கதவைக் குத்திக் கோடுகளின் நுனி மழுங்கப் பெற்றிருந்தன. இவ்வாறு இவனது படைகள் கூறப்படுவதால் இவன் பல போர்களில் ஈடுபட்டான் எனத் தெரிகிறது. கொடை பெருங்குன்றூர்கிழார் என்னும் புலவர், விருந்தினரைக் கண்டால் ஒளிந்து கொள்ள வேண்டிய நிலையிலிருக்கும் தன் வறுமை நிலையை விளக்கிக் கூறிப் பரிசில் தரும்படி இவனை வேண்டினார். இவன் பரிசில் நல்கினான் என்று கருதலாம்.13 தோற்றம் வெண்கொற்றக் குடையின்கீழ் இவன் காட்சியளித்தான்.14 கடலிடையே தோன்றும் செங்கதிர்போலப் படைகளுக்கிடையே தானும் படைக்கலம் தாங்கிப் பொன்தேரின்மேல் பொலிவுடன் தோன்றினான்.15 இந்தக் காட்சி இவனது பெயரில் அமைந்துள்ள ‘உருவப் பல்தேர்’ என்னும் அடைமொழியை விளக்கும் சான்றாய் விளங்குகிறது. மகன் ‘உருவப்பஃறேர் இளஞ்சேட்சென்னி’ என்று புறநானூற்றுத் தொகுப்பாசிரியர் குறிப்பிடும் பெயர், அவன் மகன் காலத்துப் புலவரான முடத்தாமக்கண்ணியாரால் ‘உருவப்பஃறேர் இளையோன்’ என்று கூறப்படுகிறது.16 பொருநராற்றுப் படையில் சிறப்பித்துப் பாடப்பட்டுள்ள கரிகாற் பெருவளத்தான் இவன் மகன். இளஞ்சேட் சென்னி ஒப்புநோக்க முடிவு இதுவரை புறநானூற்றுத் தொகுப்பாசிரியர் பெயர் சுட்டியுள்ளபடி மூன்று இளஞ்சேட்சென்னியரின் வரலாறுகளைத் தனித்தனியே பார்த்தோம். இனி அவர்கள் மூவர்தாமா? இருவரா? ஒருவரா? என்று எண்ணிப்பார்க்க வேண்டும். செருப்பாழி எறிந்தவனையும், பாமுள்ளூர் எறிந்தவனையும் ஒருவனே என்று கொள்ள முடியவில்லை. அவர்களிடையே மூன்று வேற்றுமைகள் தெளிவாகத் தெரிகின்றன: (1) ஒருவன் செருப்பாழியை வென்றான். மற்றொருவன் பாமுள்ளூரை வென்றான். (2) செருப்பாழியை வென்றவன் உறையூரிலிருந்து கொண்டு அரசாண்டான். பாமுள்ளூரை வென்றவன் நெய்தலங்கானலில் இருந்து கொண்டு (புகாரிலிருந்து கொண்டு) அரசாண்டான். (3) செருப்பாழி எறிந்தவன் இளம்பெருஞ்சென்னி என்ற பெயரில் வேறுபாடு உடையவனாகக் காணப்படுகிறான்.17 இவற்றை ஒப்பிட்டு எண்ணும்போது, இளம்பெருஞ்சென்னி அண்ணன் என்றும், இளம்சேட்சென்னி தம்பி என்றும் கருதுவது மிகப் பொருத்தமான முடிவாய் அமைவதைக் காணலாம். உருவப்பஃறேர் இளஞ்சேட்சென்னி’பொலந்தேர்மிசைப் பொலிவுடன் தோன்றினான்’ என்றும், ‘நெய்தலங்கானல் இளஞ்சேட் சென்னி இயல்தேர்ச் சென்னி’ என்றும் தேரால் சிறப்பித்துக் கூறப் பட்டுள்ளனர். பொலந்தேர் என்பது பொன்னலாகிய அழகிய தேர் ஆதலின் உருவப் (அழகிய) பல்தேர் என வழங்கப்படுதல் இயல் பாகும். இயல்தேரை உருவப் பல்தேர் என்று கொள்வது அத்துணைச் சிறப்பில்லை. எனவே, இயல்தேர்ச் சென்னி என்று குறிப்பிடப்படும் நெய்தலங்கானல் இளஞ்சேட் சென்னி வேறு; உருவப்பஃறேர் இளஞ்சேட்சென்னி வேறு என்று நாம் கொள்கிறோம். இந்தக் கருத்தை வலியுறுத்தும் வகையில் இவர்களுடைய மக்களின் வரலாறும் அமைந்துள்ளமையை அடுத்துக் காணலாம். கரிகால் பெருவளத்தான் கரிகாலன் என்னும் பெயருடைய சோழ அரசன் சங்க காலத்தில் ஒருவன்தான் இருந்தான். அவனுக்குப் பல்வேறு வகையில் வழங்கிவந்த பெயர்களும், அவனது பல்வேறு செயல்களும் பல்வேறு பாடல்களில் பல்வேறு புலவர்களால் குறிப்பிடப் பட்டுள்ளன. அவற்றை யெல்லாம் திரட்டி ஒப்புநோக்கும் போது கரிகாலன் என்னும் அரசன் ஒருவன்தான் இருந்தான் என்பது பெறப்படுகிறது. பத்துப்பாட்டு என்னும் தொகுப்பில் உள்ள பட்டினப்பாலை என்னும் பாட்டைப் பாடியவர் கடியலூர் உருத்திரங்கண்ணனார்; பொருநராற்றுப்படை என்னும் பாட்டைப் பாடியவர் முடத்தாமக் கண்ணியார். இவர்களது இந்தப் பாட்டுகள் கரிகாலன்மீது பாடப் பட்டவை. இவர்களால் பாடப்பட்டுள்ள கரிகாலன் ஒருவனே என்பதை அந்தப் பாடல்களில் குறிப்பிடப்பட்டுள்ள அவனது பெயர்களை நோக்கி அறியலாம். ‘திருமாவளவன்’,1, ‘கரிகாலன்’,2 ‘சோழன் கரிகாற் பெருவளத் தான்’,3 ‘பெருவளக் கரிகால்’,4 கொளுக்குறிப்பு, பத்துப்பாட்டைத் தொகுத்தவரால் தரப்பட்டது. இவர் அந்தப் பாட்டுகள் பாடப்பட்ட காலத்தவர் அல்லது நம் எல்லோரையும் காட்டிலும் பாட்டுகள் தோன்றிய காலத்தோடு நெருங்கிய தொடர்புடையவர். எனவே, இவர் ஒரே பெயரை இரண்டு பாட்டுகளின் தலைவனுக்கும் குறிப்பிடுவதால் இவற்றில் கூறப் பட்டவன் ஒருவனே என்பது தேற்றம். கரிகாலனைப்பற்றிப் பாடப்பட்ட பாடல்கள் புறநானூற்றில் நான்கு உள்ளன. அவற்றைப் பாடிய புலவர்கள் மூன்று பேர். இந்த நான்கு பாடல்களுக்கும் தரப்பட்டுள்ள கொளுக் குறிப்பில் கரிகாலனது பெயர் ‘சோழன் கரிகாற் பெருவளத்தான்’ என்றே உள்ளது. இந்தக் கொளுக் குறிப்பைத் தந்தவர் புறநானூற்றைத் தொகுத்த ஆசிரியர். புறநானூற்றைத் தொகுத்தவரும் பத்துப்பாட்டைத் தொகுத்தவரும் ஒருவரா, இருவேறு அறிஞரா என்பது நமக்குத் தெரியாது. எப்படி யாயினும் குறிப்புகள் எல்லாம் ‘சோழன் கரிகாற் பெருவளத்தான்’ என்னும் ஒரே பெயரையே கையாளுகின்றன. கரிகாலனைப்பற்றிக் கருத்துகள் தரும் அறிஞர்கள் எல்லோரையும்விட இந்தக் கொளுக் குறிப்புத் தந்தவர் கரிகாலன் காலத்தோடு நெருங்கிய தொடர் புடையவர். எனவே, புறநானூற்றிலும் பத்துப் பாட்டிலும் குறிப்பிடப் பட்ட அரசன் ஒருவனே ஆவான். இவை பெயரால் தெரியவரும் உண்மை. ஒரே பெயர்கொண்ட பலர் இருந்திருக்கலாம் அல்லவா என்றும் நாம் எண்ணிப்பார்க்க வேண்டும். கரிகாலன் நடத்திய போர்களில் ஒன்று வெண்ணிப்போர். இந்தப் போர் பொருநராற்றுப்படை, புறநானூறு, அகநானூறு ஆகிய மூன்று நூல்களிலும் குறிப்பிடப்படுகிறது. எனவே, ஒரே போரை நடத்திய கரிகாலனை வேறுவேறு அரசர்கள் என்று கொள்ள முடியவில்லை. ஒரே ஊரில் வெவ்வேறு காலங்களில் போர் நடந்திருக்கலாம் என்பதையும் நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். வெண்ணிப்போரில் கரிகாலனை எதிர்த்துப் போரிட்டவர் பலர். அவர்களுள் சேர அரசன் ஒருவனும், பாண்டிய அரசன் ஒருவனும் இருந்தனர். அவர்கள் இரண்டுபேருமே அந்தப் போர்க்களத்தில் இறந்து போனார்கள் என்று பொருநராற்றுப்படை குறிப்பிடுகிறது. பரணரின் அகநானூற்றுப் பாடலும்5 அதையே குறிப்பிடுகிறது. கழாத் தலையாரின் புறநானூறுற்றுப் பாடலும்,6 மாமூலனாரின் அகநானூற்றுப் பாடலும,7 வெண்ணிக் குயத்தியாரின் புறநானூற்றுப் பாடலும்8 அந்தப் போரில் சேர அரசன் இறந்த செய்தியைக் குறிப்பிடுகின்றன. இவ்வாறு வெண்ணிப் போரில் கரிகாலனை எதிர்த்த பகைவர்களும் ஒரே கூட்டத்தாராக உள்ளனர். அப்படியிருக்க வெண்ணியில் வேறு வேறு காலத்தில் நடைபெற்றவை என்று அந்தப் போரைக் கொள்ள முடியவில்லை. எனவே, சங்கககாலத்து வெண்ணிப் போர் ஒன்றுதான்; நிகழ்ந்த காலமும் ஒன்றுதான்; இந்தப் போரில் ஈடுபட்ட கரிகாலனும் ஒருவன்தான்; இதில் குழப்பத்திற்கு இடமில்லை. கரிகாலன் என்னும் பெயர்கொண்ட அரசர் சங்க காலத்திலேயே பலர் இருந்தனர் என்று சில அறிஞர்கள் கருதுகின்றனர். அவர்களது கருத்துரையின் சாரம் இவனுடைய வரலாற்றின் இறுதியில் தரப்பட்டுள்ளது. நாடு கரிகாலன் காவிரி ஆறு பாய்ந்த பகுதியை அரசாண்டான் என்பது அடிப்படைச் சான்றுகளில் வெளிப்படை. அவன் உறந்தையைத் தலைநகராகக் கொண்டிருந்தான் என்றும், பின்னர்த் தன் அரசச் சுற்றத்தாரோடு புகாருக்கு வந்து அமர்ந்து, தன் தலைநகரை மாற்றிக் கொண்டான் என்றும் பட்டினப்பாலையில் குறிப்பிடப்பட்டுள்ளது.9 இதனால் இவன் கிட்டத்தட்ட சோழ நாடு முழுவதையும் விரிவான பரப்பில் ஆண்டுவந்தான் என்பது தெளிவாகிறது. இவன் கழார்த் துறைக்குத் தன் குடும்பத்தாருடன் வந்திருந்து அத்தியின் நீர் விளையாட்டைக் கண்டு மகிழ்ந்த தாகவும்,10 இடையாறு என்னும் பகுதி இவனது நாட்டில் இருந்த தாகவும்11 குறிப்பிடும் பாடல்களும் உள்ளன. கழார்த் துறையும் இடையாற்றுப் பகுதியும் இப்போதுள்ள தஞ்சை மாவட்டப் பகுதியில் அப்போது இருந்தவை. இப்போது நாமக்கல் வட்டத்தில் உள்ள இடையாறு என்னும் பழமைச் சிறப்பு வாய்ந்த ஊரும் காவிரிக் கரையில் உள்ளது. பாடலில் குறிப்பிடப்பட்டுள்ள இடையாறு என்று கொண்டாலும் எல்லா வகையிலும் பொருந்தும். கரிகாலனின் முன்னோன்12 கரிகாலனின் முன்னோன் ஒருவன் கடலில் தனது கப்பல்களை ஓட்டினான். அவை பாய்மரக் கப்பல்கள், காற்றின் விசையால் அவை முன்னும் பின்னும் வேண்டிய இடங்களுக்கு ஓட்டிச் செல்லப்பட்டன. இவனது காலத்திற்குமுன் கடலில் மரக்கலங்கள் துடுப்புகளின் உதவியைக் கொண்டு தள்ளியே ஓட்டப்பட்டன. இவன்தான் முதன் முதலில் பருவக்காற்றைப் பயன்படுத்தி அதன் விசையால் கப்பல்களைத் தாமே இயங்கும்படி செய்தான். இதனால் இவன் ‘நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி வளிதொழில் ஆண்ட உரவோன்’ என்று குறிப்பிடப்பட்டான். இவ்வாறு இவன் ஓட்டிச் சென்ற கப்பல்கள் வெளிநாட்டு வாணிகத்திற்குப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம். இவன் வழியே கரிகாலனது கப்பல்களும் புலிபொறித்த பண்டங்களுடன் சென்று வாணிகம் செய்திருக்கலாம் அல்லது இந்த உரவோனின் கப்பல் வெளிநாட்டுச் செலவுகட்குப் பயன்பட்டிருக்கலாம். சேர அரசன் வானவன்13 கப்பல் ஓட்டி வாணிகம் செய்ததையும், நெடுஞ்சேரலாதனின் கடற்போர் வெற்றிக்குக் கப்பல்கள் பயன்படுத்தப் பட்டிருக்கவேண்டும் என்பதையும் நாம் இங்கு நினைவுகூரலாம். சேரர் கப்பல்கள் அரபிக்கடலிலும். சோழர் கப்பல்கள் வங்காளக் குடாக் கடலிலும் மிதந்து மேலைநாடுகளோடும் கீழைநாடுகளோடும் வாணிகம் செய்து வந்தன. கரிகாலன் காற்று விசையைத் தன் கப்பலுக்குப் பயன் படுத்திய உரவோனின் வழிவந்தவன் என்று குறிப்பிடப்படுகிறான். தந்தை14 கரிகாலன் ‘உருவப் பஃறேர் இளையோன் சிறுவன்’ என்று குறிப்பிடப்படுகிறான். இதில் சிறுவன் என்பது மகன் என்னும் பொருளைத் தருகிறது. ‘இளையோன்’ என்பது இளஞ்சேட் சென்னி என்பவனைக் குறிக்கிறது என்பதை அப் பெயர்களுக்கு முதலிலுள்ள ‘உருவப் பஃறேர்’ என்னும் அடைமொழியால் உணரலாம். இதனால், கரிகாலனது தந்தை, உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னி என்பது பெறப்படும். அரியணையேறல் கரிகாலன் தாய் வயிற்றில் வளர்ந்து கொண்டிருந்தபோதே அவனது தந்தை இறந்து விட்டான். எனவே, அரசாட்சிப் பொறுப்பு அப்போதே அவனுக்குக் கிடைத்துவிட்டது. இது ‘தாய்வயிற் றிருந்து தாயம் எய்தி’ என்று பொருநராற்றுப் படை15 குறிப் பிடுவதிலிருந்து தெரிகிறது. இந்த நிலையில் இவன் சார்பாக இருந்து ஒருவன் ஆட்சிப் பொறுப்பினை மேற்கொண்டிருந்தான் என்று நம்பலாம். இவ்வாறு அரசு பொறுப்பினை மேற்கொண்டிருந்தவன் அவனது தாய்மாமன் என்று கூறப்படுகிறது. இதனையும் இயல்பென்று நாம் ஏற்கலாம். தாய்மாமன் பெயர் இரும்பிடர்த்தலையார் என்று கூறப்படுகிறது. இரும்பிடர்த் தலையார் என்னும் பெயர் கொண்ட ஒருவர் சங்ககாலத்தில் பாண்டிய அரசன் கருங்கை ஒள்வாட் பெரும்பெயர் வழுதியைக் கண்டு வாழ்த்திப் பாடி அறிவுரை கூறியுள்ளதைப் புறநானூற்றில் நாம் காண்கிறோம். இந்தப் புலவரின் இயற்பெயர் தெரியவில்லை. இவர் தம் பாடலில் ‘இரும்பிடர்த் தலையிருத்து’ என்னும் தொடரைக் கையாண்டுள்ளார். அதுகொண்டு இவரை இரும்பிடர்த்தலையார் என்று வழங்கி வருகின்றனர். இது போன்ற பெயர் அமைப்புகள் பல சங்ககாலப் புலவர்களுக்கு அமைந் துள்ளன. இந்த அமைப்பு நமக்கு ஓர் உண்மையை வெளிப்படுத்து கின்றது. நூலைத் தொகுத்தவருக்குப் பாடலைப் பாடிய ஆசிரியரின் பெயர் தெளிவாகத் தெரியாவிட்டால், அவர் ஏதோ தம் மனம்போல் குறிக்காமல் உண்மைக்கு முதலிடம் தந்து அவரது பாடலிலிருக்கும் சிறப்பான தொடரால் அவரது பெயரைக் குறிப்பிட்டுருக்கிறார் என்பதே அந்த உண்மை. இத்தகைய இரும்பிடர்த் தலையாரைத் தாய்மாமன் என்று ஒருவர் குறிப்பிடுவாரேயானால், அந்தக் குறிப்பு அவரது பெயர்க் குறியீட்டில் அமைந்த கற்பனை போலவே அமைந்தது என்று கொள்வதைவிட வேறு வழியில்லை.16 கரிகாலன் எவ்வாறு அரியணையேறினான் என்பதைப் பட்டினப் பாலை குறிப்பிடுகிறது.17 உவமையாலும் பொருள் விளக்கத்தாலும் அது தெளிவாகக் குறிப்பிடுகிறது. குட்டி வரிப்புலி கூட்டில் வளர்வதுபோல் இவன் பிறருடைய காப்பில் வளர்ந்தான். பருவம் வந்ததும் இவன் வெளிப்பட்டான். பொய்க்குழியில் அகப்பட்டுக் கிடந்த ஆண்யானை அந்தக் குழியின் கரைகளைக் குத்திச் சரித்துவிட்டுத் தானே மேடேறிச் சென்று தன் பெண்யானையோடு சேர்ந்து கொள்வதுபோல, இவன் இவனது காப்புக் கூட்டைச் சிதைத்துவிட்டு அதாவது, தனக்குத்தானே விடுதலையை உண்டாக்கிக் கொண்டு வாளை உருவிக் கையிலேந்திய கோலத்துடன் வந்து தனது மரபுரிமையாகிய அரசபதவியைத் தானே எடுத்துக் கொண்டான். பட்டினப்பாலையில் கூறப்பட்டிருக்கும் இந்தச் சினக் கோலம் ‘முருகற் சீற்றத்து உருகெழு குருசில்’ என்று பொருநராற்றுப் படையிலும் கூறப்பட்டிருப்பதைக் காணலாம். இவனுக்குக் கிடைத்த அரச பதவி அமைதியானது அன்று. அது அச்சந்தரும் அரச பதவி18 யாகும். இவனும் அமைதியாக அரியணை யேறவில்லை. மேனி யெல்லாம் கனல்பொறி பிறந்து சிவந்து தோன்றும் பேரச்சம் தரும் உருவோடு19 இவன் அரியணையேறிய வரலாறு இவ்வாறு தெளிவாக இருக்கும்போதே, பட்டத்து யானை மாலை சூட்டி அழைத்துவந்த கற்பனைக் கதைகள் வழங்கிவருவது வியப்பிற் குரியதாகும். கரிகாலும் கால்நெருப்பும் கரிகாலன் உறையூர்க் கோட்டையில் இரவில் உறங்கிக் கொண் டிருந்தபோது அவனது பகைவர்கள் கோட்டைக்குத் தீ மூட்டிவிட்டார் களாம். கரிகாலன் தீயிலிருந்து தப்பி வெளிவந்த போது அவனது கால் கருகிப் போயிற்றாம். அதுமுதல் ‘கரிகாலன்’ என்னும் பெயருடன் அவன் அழைக்கப்பட்டானாம்.20 இந்தத் தீ நிகழ்ச்சியில் தப்பிப் பிழைத்த கரிகாலன் தன் தாய்மாமன் வீட்டில் வளர்ந்து கொண்டிருந்தானாம். மக்கள் அரசனைக் காணாது வருந்தித் தேடிமுயன்றும் கிடைக்காமையால் பட்டத்து யானையின் துணைகொண்டு தக்கான் ஒருவனைத் தேர்ந்தெடுக்க முயன்றார்களாம். அதன்படி அவர்கள் பட்டத்து யானையின் கையில் மாலையைக் கொடுத்து அனுப்பி அந்த மாலையை அது யாருக்குச் சூட்டிவிடுகிறதோ அவனையே அரியணையேற்றுவதென்று முடிவு செய்து யானையை அனுப்பினார்களாம். யானை தேடிச்சென்று கால் நெருப்புப் பட்டு அடையாளம் மாறியிருந்த கரிகாலனுக்கு மாலை சூட்டியதாம்.21 மாலை சூட்டப்பட்டவன் உண்மையான அரசன் கரிகாலனே என்பதை உணர்ந்து மக்கள் பெரிதும் மகிழ்ந்து ஏற்றார்களாம். வெண்ணிப் போர்22 வெண்ணி23 என்னும் ஊரின் வாயிலை அடுத்திருந்த வெளியில் கரிகாலன் அவனது பகைவர்களை எதிர்த்துத் தாக்கினான். ஊர் வாயிலில் போர் நடைபெற்றதால் வெண்ணி வாயிலில் நடை பெற்றது என்றும், அந்த வாயில்வெளி போர்ககளமாகப் பயன் படுத்தப்பட்டதால் வெண்ணிப் பறந்தலையில்24 போர் நடைபெற்றது என்றும் குறிப்பிட்டுள்ளார். வெண்ணிப் போர் கரிகாலன் இளைஞனாய் இருந்தபோதே நடத்திய போர் என்பதைப் பொருநராற்றுப்படை தெளிவாகக் குறிப்பிடுகின்றது. வெண்ணியில் கரிகாலனை எதிர்த்துத் தாக்கியவர்களுள் பதினொரு குலத்தலைவர்களும் இருபெரு வேந்தர்களும் அடங்கி யிருந்தனர். இந்தப் பதினொரு வேளிர் யார்? அவர்களுடன் சேர்ந்து போரிட்ட பாண்டியன் யார்? என்பன தெளிவாகத் தெரியவில்லை. எதிர்த்துத் தாக்கிய சேர அரசன் பெயர் மட்டும் பெருஞ்சேரலாதன் என்பது தெரிகிறது. போரின் முடிவு கரிகாலனுக்கு வெற்றியாய் முடிந்தது. அவனை எதிர்த்த சேரனும் பாண்டியனும் போரில் மாண்டனர். வேளிருள் பலரும் மாண்டிருக்கலாம். சேர அரசன் பெருஞ்சேரலாதன் முதுகில் புண்பட்டதையும், அதனால் அவன் போர்க்களத்திலேயே வடக்கிருந்து உயிர் துறந்ததையும். அதன் விளைவுகளையும் அவனது வரலாற்றில் கண்டோம். பட்டினப்பாலை, கரிகாலனால் வெல்லப்பட்டவர்கள் என்று ஏழு பேரைக் குறிப்பிடுகிறது. அவர்களுள் சிலரோ, அவர்களுள் அனைவருமோ இந்தப் போரில் ஈடுபட்டிருக் கலாம் என்று எண்ண இடமுண்டு. இவர்கள் இவன் நடத்திய வாகைப் பறந்தலைப் போரில் எதிர்த்துப் போராடியிருக்கவும் கூடும்; அல்லாமல் தனித்துப் போராடியிருக்கவும் கூடும். வாகைப் பறந்தலைப் போர்25 வாகைப் பறந்தலை என்னுமிடத்தில் ஒன்பது மன்னர் கரிகாலனை எதிர்த்துப் போரிட்டனர். அந்தப் போர் கரிகாலன் தன் குதிரைப் படையைக்கொண்டு பகைவர் நாட்டைத் தாக்கிய போர். அந்தப் போரில் கரிகாலன் தானே போர்க்களத்தில் இறங்கிப் போரிட்டான். ஒன்பது மன்னர்களில் யாராலும் அவனை எதிர்த்து நிற்கமுடிவில்லை. அவர்கள் அனைவரும் தம் வெண்கொற்றக் குடைகளைப் போர்க்களத்திலேயே போட்டு விட்டு ஓடிவிட்டனர். கரிகாலன் வெற்றிபெற்றான். பிற போர்கள் பட்டினப்பாலை, கரிகாலனது வெற்றிப் புகழைப் பாடுங்கால் அவனுக்கு அடங்கியவர் என்று கொள்ளும் வகையில் இரண்டு அரசர்களையும் ஐந்து இனக்குழுத் தலைவர்களையும் குறிப்பிடுகிறது. ஒளிநாட்டு மக்கள் ஒளியர் எனப்பட்டனர். அவர்களுள் பலர் இவனது பேராற்றலைக் கேள்விப்பட்டோ, இவனோடு போராடித் தோற்றோ கரிகாலனைப் பணிந்து ஒடுங்கிக் கிடந்தனர்.26 அருவா நாட்டு மக்கள் அருவாளர். இவர்கள் தொன்மையான குடியைச் சேர்ந் தவர்கள். அவர்களும் ஒளியர் போன்ற நிலையின ராய்க் கரிகாலன் இட்ட கட்டளையை நிறைவேற்றும் ஏவலராய் மாறினர்.27 சங்ககாலத்தில் தமிழ்மொழி பேசப்பட்ட எல்லைக்கு வடபால் வாழ்ந்தவர் வடவர். அவர்கள் இவனது தாக்குதலால் வாட்ட மடைந்திருந்தார்கள்.28 குட நாட்டு மக்கள் குடவர் எனப்பட்டனர்; கரிகாலனது வெற்றிகளை எண்ணி எண்ணம் சோர்ந்து கிடந்தனர்.29 பொதுவர் என்னும் இனக்குழுவினர் சங்ககாலத்தில் வாழ்ந்து வந்தனர். அவர்கள் இன்னார் என்பது தெரியவில்லை. எனினும், பொதியமலைப் பகுதியில் வாழ்ந்த மக்கள் பொதுவர் எனப் பட்டனர் எனலாம். அவர்களின் கால்வழியை அழியும்படி கரிகாலன் அவர்களை வென்றான்.30 இருங்கோவேள் கரிகாலனை எதிர்த்துப் போராடி மாண்ட அரசன்.31 பாண்டியநாட்டு அரசன் தென்னவன் என்று சுட்டப்படுகிறான் கரிகாலன் சீற்றம் கொண்டு தென்னவனின் கோட்டைகளைத் தாக்கி அழித்தான்; இதனால் தென்னவன் அரசாளும் ஆற்றலை இழந்தான்.32 கரிகாலனது போர்ச் செயலைப்பற்றிச் சில பாடல்கள் பொது வகையில் குறிப்பிடுகின்றன. கரிகாலன் அரியணையேறியதும், பகைவர் கோட்டைகளைத் தாக்கி அழிக்கும் உழிஞைப் போர் நடத்திப் பகைவர் படைகளை அழித்தான்.33 இவன் பகைவர்களது வளப்பம்மிக்க நாடுகளைப் பாழாகும்படி அழித்தான்;34 பகைவர் ஊர்களைத் தீயிட்டுக் கொளுத்தினான்.35 இலங்கைப் போர் ‘இராசாவளி’ என்பது இலங்கையின் வரலாற்றைக் கூறும் பிற்கால நூலாகும். இந்த நூலில் கரிகாலனது செயலைப்பற்றிய செய்திகள் கூறப்படுகின்றன. கரிகாலன் இலங்கையின்மீது படை யெடுத்துச் சென்று 12 ஆயிரம் இலங்கை மக்களைச் சிறை செய்து தன் நாட்டுக்குக் கொண்டு வந்தானாம். அவர்களைக் கொண்டு தன்னாட்டில் பாயும் காவிரி ஆற்றுக்கு இரண்டு பக்கமும் கரைகள் அமைத்தானாம். இவ்வாறு கூறும் அந்த வரலாறு மேலும் சிலவற்றைக் கூறுகிறது. முதலாம் கயவாகு என்னும் இலங்கை அரசன் சோழநாட்டுக்கு வந்து தன்னாட்டுக் கைதிகளை மீட்டுக் கொண்டு சென்றதோடு தமிழ்நாட்டி லிருந்து மேலும் 12 ஆயிரம் பேர்களைக் கைதுசெய்து தன்னாட்டுக்கு அழைத்துச் சென்றானாம். இவ்வாறு கூறப்படும் வரலாறுகளில் வரும் கைதிகளின் எண்ணிக்கை உயர்வுநவிற்சியாக இருக்கக் கூடும். ஆனால், நிகழ்ச்சியில் ஓரளவேனும் உண்மை இருக்கத்தான் செய்யும். கரிகாலனின் முன்னோன் கடலில் பருவக்காற்றின் துணை கொண்டு கப்பல் ஓட்டிச் சென்றான் என்பதை முன்பே கண்டோம். அவனது வழிவந்த இவனிடம் கடற்படை இருந்தது என்பது பொய்யாகாது. இந்தக் கடற்படையின் துணைகொண்டு இவன் இலங்கை நாட்டைத் தாக்கி வென்று கைதிகளைப் பிடித்து வந்திருக் கலாம். நெடுஞ்சேரலாதன் கடற்போரில் ஈடுபட்டுத் தன் நாட்டை அடுத்திருந்த தீவுகளை வெற்றிபெற்றது போலக் கரிகாலன் தன் நாட்டை அடுத்திருந்த இலங்கையைத் தாக்கி வெற்றி பெற்ற போர் இது என்று எண்ண வேண்டும். கரிகாலனுக்கும் இலங்கைக்கும் வாணிகத் தொடர்பு இருந்ததைப் பட்டினப்பாலை குறிப் பிடுகிறது. எனவே, கரிகாலனது இலங்கை வெற்றியை உண்மை எனக் கொள்ளலாம். கொடை36 கரிகாலன் பாணர்களுக்குக் கொடை வழங்கினான். உணவு, உடை, யானை, தேர் முதலானவை அவன் கொடை வழங்கிய பொருள் களில் சில. பாணர்ககுப் பொன் தாமரை செய்து அணிவித்ததும், நான்கு குதிரைகள் பூட்டிய தேர் நல்கியதும். அத்தேரை நல்கும்போது ஏழடி பின்சென்று மரியாதை செலுத்தி வழங்கியதும், பொருநர் தலையி லிருந்த ஈரையும் பேனையும் வாங்கிவிட்டதும், பொருநர்கள் தாம் செல்ல விரும்பியதைக் குறிப்பிட்டபோது இப்போதே செல்ல வேண்டுமா? இன்னும் சில நாளேனும் என்னுடன் தங்கலாகாதா? என்னும் பொருள்பட ‘அகறிரோ’ என்று அன்புடன் அருள்கனியக் கூறியதும் இவனது கொடைப் பாங்கில் குறிப்பிடத்தக்கவை. ஆட்சி இவனது ஆட்சி செங்கோலாட்சியாக அமைந்திருந்தது. அஃது அறத்தை அடிப்படை யாகக் கொண்டது. இவனது மேலாண்மையில் பல நாடுகள் இருந்தன. அவற்றிற்குத் தனித்தனி அரசுகள் இருந்தன. அவற்றையெல்லாம், தன்னுடைய ஒரு குடைக்கீழ் இவன் ஆண்டான் அரசுகள் எல்லாம் ஒருமைப்பாட்டு உணர்வுடன் இவன் தலைமையின்கீழ் திரண்டிருந்தன. அந்த அரசு களுக்கிடையே அடிமைநிலை இல்லை; ஆதிபத்தியக் கோட்பாடே பின்பற்றப் பட்டது. பெருந் தன்மையுடைய நட்புறவே இருந்தது. இவ்hறு இவன் பெருஞ் சிறப்புடன் அரசாண்டான்.37 சிறப்புச் செயல்கள் நாட்டு மக்களின் நலனுக்காக இவன் செய்த ஆக்கப் பணிகள் பல. மக்கள் நலனுக்காக உணவளித்து உதவும் அறம் செய்யும் அட்டில் சாலை (அன்னசத்திரம்) ஒன்றை இவன் புகார் நகரத்தில் அமைத்திருந்தான்.38 இவனுடைய காலத்திற்கு முன்னர். நாட்டிலிருந்த குடி மக்களில் சிலர் பிழைப்புக்காக வெளியிடங்களுக்குச் செல்லும் நிலைமை இருந்தது. இவன் இந்த நிலைமையை மாற்றி, இந் நாட்டிலேயே விருப்பமுடன் தங்குவதற்குரிய வசதிகளைச் செய்தான்.39 பட்டினப்பாலையில் குறிப்பிடப்பட்ட காட்டைத் திருத்துதல், குளம் வெட்டுதல் போன்ற நாட்டை வளப்படுத்தும் செயல்கள், புதிய குடியேற்றங்களை அமைத்துத் தன் ஆட்சிப் பரப்பின் எல்லையை விரிவுபடுத்தியதைக் காட்டும். வேளாண்மைக்கு உதவி40 இவன் காடுகளை வெட்டி விளைநிலமாக மாற்றினான்; குளங்கள் வெட்டி வெள்ளநீரைத் தேக்கிவைத்துப் பாய்ச்சி, நிலத்தை நீர்வளமுள்ளவையாக மாற்றினான். காவிரிக்குக் கரை அமைத்தல் இலங்கையில் கரிகாலன் வெற்றி பெற்றபோது 12 ஆயிரம் பேர் இலங்கை மக்களைச் சிறைப்பிடித்து வந்து, அவர்களைக் கொண்டு தனது நாட்டிலுள்ள காவிரி ஆற்றுக்கு இரண்டு பக்கமும் கரை அமைத்துக் கொண்டான் என்று இலங்கையின் கால்வழிச் செய்திக் கோவை ஒன்று குறிப்பிடுகிறது. இந்த நிகழ்ச்சியைத் தெலுங்கச் சோழர் கல்வெட்டுகளும் குறிப்பிடுகின்றன. தெலுங்கச் சோழர்கள் தங்களைக் காவிரிக்குக் கரை அமைத்த கரிகாற் சோழன் வழிவந்தவர் என்று கூறிக் கொள்கின்றனர். இவர்கள் கூற்று கரிகாலன் காவிரிக்குக் கரை அமைத்தான் என்பதை உறுதிப்படுத்துகின்றது. கல்லணை இந்தக் கரிகாலனால் கட்டப்பட்டது என்று ஒரு செவி வழிச் செய்தி உண்டு; தெளிவான அகச்சான்று கிடைக்கவில்லை. இராச ராசனுடைய அண்ணனான ஆதித்த கரிகாலனே கல்லணையைக் கட்டியுள்ளான். அந்த அணையின் அடித்தளத் தொடக்கப் பணிக ளேனும் கரிகாலன் காலத்தில் அமைக்கப்பட்டிருக்கக்கூடும் என்று எண்ண இடமுண்டு. களவேள்வி41 தன்னுடைய வெற்றிகளைக் கொண்டாடும் வகையில் இவன் களவேள்விகள் செய்தான். இதனைக் கருங்குழலாதனார் எனும் புலவர் பாராட்டியுள்ளார். இதனால் வைதிக சமயத்தவர் பெற்றிருந்த செல்வாக்குப் புலனாகிறது. வாணிகம்42 புகார் நகரத்தில், கரிகாலன் காலத்தில் கடல் வாணிகமும் தரை வாணிகமும் மிகச் சிறப்பாக நடைபெற்றன. இந்த வாணிகம் அரசின் மேற் பார்வையில் நடந்தது என்பதை வாணிகப் பொருள் மூட்டைகளின்மீது, புலிச்சின்னம் பொறிக்கப்பட்டது என்று கூறப்படுவதிலிருந்து அறியலாம். அன்றியும் ஏற்றுமதி இறக்குமதிப் பொருள்கள் புலிச்சின்னம் பொறிக்கப் பட்ட கதவுகளையுடைய காப்பகத்தில் வைக்கப் பட்டிருந்தன. அந்தக் காப்பகத்தில் இடம் இல்லாமல் வெளியில் குவிக்கப்பட்டிருந்த பொருள்களுக்கும் அரசனின் காப்பு அமைக்கப் பட்டிருந்தது. உயர்ந்த குதிரைகள், அரபிக் கடல் வாணிகத்தின் வழியே வந்திறங்கின. ஈழநாட்டு (இலங்கை) உணவுப் பொருள்களும் காழக நாட்டுச் (பர்மா) செல்வமும் (தேக்கு) வங்காள விரிகுடா வழியே நடத்திய வாணிகத்தால் வந்து இறங்கியவை. மிளகு மூட்டைகள் சேரநாட்டுப் பகுதியிலிருந்து தரைவழியே வந்து இறங்கின. வடமலையில் கிடைத்த மணி, பொன் ஆகியனவும், குடமலையில் கிடைத்த சந்தனம், அகில் ஆகியனவும், கங்கையாற்றுப் பகுதியில் கிடைத்த வளப்பம் நிறைந்த பொருள்களும் தரைவழியாக வும் கடல்வழியாகவும் இங்கு இறக்குமதி செய்யப்பட்டன. தென் கடலில் தோன்றிய முத்துகளும் குணகடலில் தோன்றிய பவளமும் தோன்றிய இடத்திலிருந்து நேரே கொண்டு வரப்பட்டன. வெளிநாடு களுக்குச் செல்லும்போது ஏற்றுமதி செய்வதற்காகக் காவிரி ஆற்றுப் பகுதியில் கிடைத்த சிறப்புமிக்க பொருள்கள் (கரும்பு, வெல்லம், இஞ்சி, மஞ்சள் முதலானவை)அங்குக் கொண்டு வந்து இறக்குமதி செய்யப்பட்டிருந்தன. இவற்றையெல்லாம் நாம் எண்ணும்போது கரிகாலன் வேளாண்மை வளர்ச்சியில் கண்ணும் கருத்துமாய் இருந்தது போலவே. வாணிக மேம்பாட்டிலும் கண்ணும் கருத்துமாய் இருந்தான் என்பதை அறியமுடிகிறது. புதுப்புனல் விழா43 தமிழ்நாட்டில் பல இடங்களில் ஆங்காங்கே சிறப்புமிக்க திருவிழாக்கள் நடந்தன. புகார் நகரத்தில் நடைபெற்ற கடல் நீராடுவிழா, இந்திர விழா என்னும் பெயரைப் பெற்றிருந்தது. உறையூரில் நடைபெற்ற குளநீராடு விழா, ‘பங்குனி முயக்கம்’ எனப் பெயர் பெற்றிருந்தது. கழார் நகரின் காவிரித் துறையில் நடைபெற்ற விழா, புதுப்புனல் விழா.44 இந்த விழாவில் அரசனும் கலந்து கொள்ளுவது வழக்கம். ஆட்டன் அத்தி இந்த விளையாட்டில் சிறப்புற்று விளங்கியதை அவனது வரலாற்றில் காணலாம். இந்த ஆற்றுநீர்த் திருவிழாவுக்குக் கரிகாலன். தன் சுற்றத்தாருடன் வந்திருந்தான் என்று கூறப்படுவதால், அரசன் என்ற நிலையில் மட்டுமன்றிச் சோழநாட்டுக் குடிமகன் என்ற முறையிலும் இவன் கலந்து கொண்டான் போலும். இந்த விழாவில் கரிகாலன் கலந்து கொண்டு சிறப்பித்த செய்தி சிலப்பதிகாரத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது45 அரசிளங்குமரர், அரசனின் உரிமைச் சுற்றம். பரதவ குமரர் (கடல் வாணிகர்). பல்வேறு ஆயத்தார், ஆடும் பெண்கள், பாடும் பெண்கள் முதலானோர் கரிகாலனோடு விழாவில் கலந்து கொண்ட செய்தியை அது கூறுகின்றது. சிறப்புப் பெயர்கள் ‘திருமாவளவன்’,46 ‘பெருவளத்தான்’,47 என்னும் பெயர்கள் இவனது செல்வ வளத்தைக் காட்டுவனவாய் உள்ளன. ‘இயல்தேர் வளவன்’48 என்னும் அடைமொழி இவன் தேரில் சென்ற காட்சியை நினைவூட்டுகிறது. ‘முருகற் சீற்றத்து உருகெழு குருசில்’49 என்பது இவனது சினமிகுதியைக் காட்டுகிறது. தோற்றம்50 இவனது கால்கள் களிறுகளை நடத்திப் பழக்கப்பட்டவை; அவற்றில் அவன் வீரக் கழல்களை அணிந்திருந்தான். கைகள் அம்புகள் எய்து வளம்பெற்றவை; அவை வில்லையும் அம்பையும் கொண்டிருந்தன. வேண்டாதபோது வில் அவனது மார்பிலே கிடந்தது. மலர்ந்த அவனுடைய மார்பைவிட்டு நீங்கத் திருமகள் மறுத்துவிட்டாள். அந்த மார்பில் தோல் என்னும் பெயர் கொண்ட எறுழ் வன்மையுடையதாகப் பொத்திக் கட்டப்பட்டிருந்தது. இது இவன் போர்க்கோலம் பூண்டிருந்தபோது தோன்றிய உருவம். போர்க்கோலம் பூணாத போதும் இவன் அரிமாவைப் (சிங்கத்தைப்) போலக் காட்சியளித்தான். அவனது மார்பிலே ஒளிமிக்க அணிகலன்கள் விளங்கின; சிவந்த சந்தனம் பூசப்பட்டிருந்தது. மகளிர் தழுவவும் மைந்தர் ஏறி விளையாடவும் ஏதுவாய்ப் பரந்து விளங்கியது அது. போர்க்கோலம் பூண்டிருந்தபோது, அவன் மார்பிலே விளங்கிய வலிமைமிக்க தோல் என்னும் கவசம் இல்லை. மாறாக, வேறொரு கவசம் கலைநோக்குடன் செய்யப்பட்டு விளங்கியது. பகையரசர்கள் தலையில் சூடிய முடிமணிகள் அந்த மார்புக் கவசத்தில் பதிக்கப் பட்டிருந்தன. கையறவு51 கரிகாலன் உயிரோடு வாழ்ந்தபோது அவனது வெற்றிச் சிறப்புகளை வியந்து பாடிய கருங்குழலாதனார் அவன் இறந்த பின் அவனது மனைவியர் தம் இழைகளைக் களைந்துவிட்டு நின்ற அவலக் காட்சியைக் கண்டு வருந்திப் பாடியுள்ளார். இடையன் தன் ஆடுகளுக்காகப் பூத்துக் காய்த்து விளங்கிய வேங்கை மரத்தின் கிளைகளை மொட்டை மொட்டையாக வெட்டிச் சாய்த்தபின் மொட்டைக் கிளைகளுடன் நிற்கும் அடி மரம்போல் அவர்கள் அணிகலன்களைக் களைந்துவிட்டு பொலிவிழந்து நின்றார்களாம். மனைவியர்52 இவன் இறந்தபோது இழை களைந்தவர் ‘மெல்லியல் மகளிர்’ என்று குறிப் பிடப்படுகின்றனர். கணவன் இறந்தால் அதற்காகத் தம் அணிகலன்களைக் களைந்து விடுதல் தமிழர் பண்பாடு. இந்த வகையில் இழை களைந்தவர் எல்லாரும் கரிகாலனது மனைவியர் என்பது பெறப்படும். இழை களைந்தவர் ‘மகளிர்’ என்று பன்மையால் குறிப்பிடப்படுவதால் கரிகாலனுக்குப் பல மனைவியர் இருந்தனர் என்பது புலனாகின்றது. மகள் ஆதிமந்தி என்பவள் இந்தக் கரிகாலனின் மகள் என்று கூறப்படுகிறாள். சேர இளவரசன் ஆட்டன் அத்தியை மணந்து இவள் வாழ்ந்தாள். இவர்களுடைய வாழ்க்கை வரலாற்றைச் சேரர் வரலாற்றில் கண்டோம். நலங்கிள்ளி (சேட்சென்னி) சேட்சென்னி நலங்கிள்ளி சோழநாட்டில் தங்கி அரசாண்டவன் அவனது தலைநகர் உறந்தை.1 தந்தை முதலானோர் இவனது பெயர் ‘சேட்சென்னி நலங்கிள்ளி’ என்று பாடல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.2 இஃது இவன் சேட்சென்னியின் மகன் என்பதைக் காட்டுகிறது. மாவளத்தான் என்னும் பெயர்கொண்ட ஒருவன் நலங்கிள்ளியின் தம்பி என்று குறிப்பிடப்படுகிறான். இவர்கள் இருவருடைய தந்தை யின் பெயர் ‘நலங்கிள்ளி சேட்சென்னி’ என்று குறிப்பிடப்படுகிறது. எனவே, மாவளத்தானின் அண்ணன் நலங்கிள்ளி, சேட்சென்னிக்கு மூத்த மகனாய்ப் பிறந்து பாட்டன் பெயர் சூட்டப்பட்டான் எனக் கொள்வது பொருந்தும். உறையூர் முற்றுகை உறையூரில் நெடுங்கிள்ளி என்னும் அரசன் தங்கி அரசாண்டு வந்தான். நலங்கிள்ளி சோழநாடு முழுவதையும் தானே ஆள வேண்டுமென்று கருதினான். எனவே, நெடுங்கிள்ளியோடு போர் தொடுக்க வேண்டி உறையூரை முற்றுகையிட்டான். நெடுங்கிள்ளி, கோட்டைக் கதவுகளை அடைத்துக்கொண்டான்; நலங்கிள்ளியை எதிர்த்துப் போரிடவில்லை. இந்நிலையில் இளந்தத்தன் என்னும் புலவர் கோட்டைக்கு வெளியிலிருந்து உள்ளே சென்றார். அந்தப் புலவரை நெடுங்கிள்ளி தன் பகைவனான நலங்கிள்ளியின் ஒற்றன் என எண்ணிக் கொல்லப் புகுந்தான். உண்மையில் இளந் தத்தன் நலங்கிள்ளியின் ஒற்றன் அல்லன் நலங்கிள்ளி வேறு எந்த ஒற்றனையும் அனுப்பவில்லை. புலவர் கோவூர்கிழார் இந்த உண்மையை நெடுங்கிள்ளியிடம் எடுத்துரைத்துப் புலவரைக் காப்பாற்றினார்.3 புலவர் கோவூர்கிழார் இந்த முற்றுகையின்போது அடைத்திருந்தவனையும் அடைக்கப்பட்டிருந்தவனையும் நேரில் கண்டு அறிவுரைகள் பல கூறினார். போரிடப் போகும் இருவரும் சோழர் குடியினராகையால் யாருக்குத் தோல்வி வந்தாலும் சோழர் குடிக்கே தோல்வி கிடைக்கும் என்றும், இந்தத் தோல்வி ஏனைய சேர, பாண்டிய அரசர்கள் ஏளனம் செய்ய ஏதுவாய் அமையும் என்றும் அவர் குறிப்பிட்டார். உண்மை உணர்ந்த சோழ அரசர்கள் போரைக் கைவிட்டனர். நெடுங்கிள்ளி இறுதியில் மாண்ட இடம் காரியாறு என்று குறிப்பிடப்படுவதால் மேலே குறிப்பிட்ட உறையூர்ப் போர் கைவிடப்பட்டது என்பதைத் தெளிவாக உணரலாம். தம்பி வழியே போர் நலங்கிள்ளியின் தம்பி மாவளத்தான் என்று அறிந்தோம். அவன்வழி இவன் போர் தொடுத்ததாகவும் தெரிகிறது. இந்தப் போர் ஆவூரில் நடைபெற்றது. மாவளத்தான் ஆவூர்க் கோட்டையை முற்றுகையிட்டான். நெடுங்கிள்ளி உள்ளே அடைந்திருந்தான். அங்குக் கோவூர்கிழார் அறிவுரை கூறினார். நெடுங்கிள்ளிக்கு மட்டும் கூறினார். அவன் மாவளத்தானுக்கு ஆவூர்க்கோட்டையை விட்டுக் கொடுத்து விட்டு வெளியேறினான். ஆவூர் முற்றுகை. உறையூர் ஆகியவற்றுள் எது முன்னர் நடை பெற்றது என்பதை அறியத்தக்க தெளிவான சான்று இல்லை. நெடுங் கிள்ளி காரியாற்றில் துஞ்சும்வரை உயிருடன் இருந்தான் என்று தெளிவாகத் தெரிகிறது. அக்காலம்வரை அவன் அரசனாய் விளங் கினான் என்றால் ஆவூர் முற்றுகை முதலில் நடைபெற்றது என்றும், அதில் நெடுங்கிள்ளி விட்டுக் கொடுத்தான் என்றும், உறையூர்முற்றுகை பின்னர் நடைபெற்றது என்றும் கொள்ளவேண்டும். முற்றுகையின் காலத்தை மாற்றிக்கொள்வோமானால் ஆவூரை விட்டுக் கொடுத்து விட்டபின் நெடுங்கிள்ளி தான் காரியாற்றில் இறக்கும்வரை அரச பதவியை இழந்து வாழ்ந்தான் என்று கொள்ளவேண்டும். உறையூர்ப் போரைத் தவிர, இவன் ஈடுபட்ட போர் என்று குறிப்பிட்டுக் கூறத்தக்கது ஒன்றும் இல்லை. பொதுவாக இவனது போர் ஆற்றல்கள் புலவர்களால் புகழ்ந்து கூறப்படுகின்றன. வங்காளக் குடாக்கடலைப் பின்பக்கமாகவும் அரபிக் கடலை முன்பக்கமாகவும் கொண்டு வெற்றி வலம் வரும்போது இவனது குதிரைகள் தம் நாட்டுக்கும் வருமே என்று அஞ்சி வடநாட்டு அரசர்கள் இரவெல்லாம் தூங்காமல் இருப்பார்களாம்.4 தன் சுற்றத்தாரின் சோறு சமைக்கும் பானை நிறைவதற்காக இந்த நலங்கிள்ளி, வஞ்சி நகரையே பரிசாகத் தருவான்; விறலியருக்கு விலையாக மாடமதுரை நகரையே தருவான்; வாருங்கள் பாடுவோம் என்று புலவர் ஒருவர் இவனைச் சிறப்பித்துப் பாடியுள்ளார்.5 தென்னம் பொருப்பன் நன்னாட்டில் (பொதியமலைப் பகுதியில்) ஏழெயில் கதவம்கொண்ட கோட்டை ஒன்று இருந்தது. அதனை வென்று தன் புலிச் சின்னத்தைப் பொறிக்கும் ஆற்றல் உடையவன் இவன்.6 இவனது படை மிகப் பெரியதாகும். பிற அரசர்களின் வாயில் களில் யாராவது காலையில் வலம்புரிச் சங்கை ஊதினாலும் அதனை இவன் போர் தொடுக்கும் ஒலி என்று நினைத்துக் கொள்வானே என்றும், இதனால் போர் மூளுமே என்றும் ஒரு புலவர் வருந்திப் பாடியுள்ளார்.7 உலகமெல்லாம் நலங்கிள்ளிக்கு உரியது என்று மாற்றான் அவையில் தாம் பாடப்போவதாகவும் அதற்குக் கொடை வழங்க வேண்டும் என்றும் புலவர் ஒருவர் இவனைப் பாடுகிறார்.8 இவை எல்லாம், இவன் போர் ஆற்றலில் வல்லவன் என்பதைக் காட்டுகின்றன என்ற அளவில்தான் கொள்ள முடியும். கொடை இவனது கொடையில் சிறப்பித்துக் கூறத்தக்கவை சில உண்டு. பாசறையிலும் பாணர்களுக்கு நல்லுணவு அளித்தமை, இவனிடம் பரிசில் பெற்றவர் பிறரிடம் சென்று பின்னும் பரிசில் பெற வேண்டிய நிலை நேராவண்ணம் இவனே மிகுதியாக வழங்கியமை9 ஆகியவை குறிப்பிடத்தக்கவை. இவன் பொருநர்களுக்குப் பெருந்தலைவனாய் விளங் கினான். இவனது நாட்டு மக்களும் கொடை உள்ளம்10 நிரம்பியவர்களாக இருந்தனர். பண்பு நலம் மகளிரை வணங்குவதில் இவன் அவர்களைக் காட்டிலும் மென்மையானவன். ஆடவர்களைத் தன் கட்டுக்குள் அடக்கிக் கொண்டு வருவதில் இவன் மிக வன்மையுடையவன்.11 பகைவர் பணிவோடு வந்து தன்னிடம் இருந்தால் தன் அரசு முழுவதையும் அவர்களுக்குக் கொடுப்பதோடு தன் உயிரையும் கொடுப்பதற்கு அணியமாய் இருப்பதாக அவனே குறிப்பிடுகிறான். இதனால் இவனது கொடை உள்ளம் நன்கு வெளிப்படுகிறது. ‘பகைவரை வென்று அடக்காவிட்டால் தனது மார்பிலுள்ள மலர் மாலைகள் காதலின்றிக் காசுக்காகக்க கட்டித் தழுவும் பெண்களிடம் குழைந்துபோகட்டும்’ என்று இவன் வஞ்சினம் கூறியுள்ளான்.12 இதனால், தன் மனைவியைத் தவிரப் பிற மகளிரைத் தழுவாத நல்லொழுக்க நெறியினன் இவன் என்பது பெறப்படும். வாணிகம் இவன் காலத்தில் வாணிகக் கப்பல்கள் தமது கூம்புகளை உயர்த்திப் பாய்களை விரித்தபடியே புகார் நகரத்திற்குள் நுழைந்தன. கடல் வழியே சென்றபோது இடையிலிருந்த தீவுகளிலும் அவை பொருள்களை இறக்கி வாணிகம் செய்தன.13 புகார் நகரமே அன்றி நல்லூர் என்னும் ஊரும் அவனது நாட்டிலிருந்த துறைமுகம் ஆகும். இது பாண்டிய நாட்டுக்கும் சோழ நாட்டுக்கும் இடையே இருந்தது (ஒரு காலத்தில் எவ்வி இதன் அரசன்). இந்த நல்லூரில் பாய்ந்த ஆற்றினூடேயும் பெரிய கப்பல்கள் (வங்கம்) நுழைந்துவந்தன. அந்தக் கப்பல்கள் அவ்வூரில் நாட்டப்பட்டிருந்த வேள்வித் தூண்களில் கட்டிவைத்து நிறுத்தப்பட்டன.14 இவ்வாறு இவனது ஆட்சிக் காலத்தில் இரண்டு துறைமுகங்கள் வழியே கடல் வாணிகம் சிறப்புடன் நடைபெற்றது. வேந்தர் வழிப்படல் அறத்தின் வழியே பொருளும் இன்பமும் செல்லும். அது போல இவனது குடைநிழலின் வழியே ஏனைய இரு வேந்தர்களது குடைகள் சென்றனவாம்.15 இந்தச் செய்தி இவனது வெற்றியை உணர்த்துவது அன்று; சேர பாண்டியர்களோடு இவனுக்கு இருந்த நட்புறவை விளக்குவது என்று கொள்ளலாம். ‘அணி இவுளி நலங்கிள்ளி’, ‘கடுமான் தோன்றல்’16 என்பன இவனது போர்க்கோலத்தை நினைவூட்டுவன. புலிச் சின்னம் சோழர்களின் அடையாளச் சின்னம் புலி. இது ‘பேழ்வாய் உழுவை’ என்று கூறப்படுவதால் திறந்த வாயமைப்பு உடைய தாகப் பொறிக்கப்பட்டிருந்தது என்பது தெரியவருகிறது. நலங்கிள்ளியின் சமகாலத்திய சோழமன்னர் மாவளத்தான் (நலங்கிள்ளியின் தம்பி) நலங்கிள்ளியின் உடன்பிறந்த இளவல் மாவளத்தான். உடன் பிறவாப் பங்காளி நெடுங்கிள்ளி. இவர்கள் நலங்கிள்ளியின் காலத்தி லேயே வாழ்ந்தவராவர். புறநானூற்றுக் கொளு, மாவளத்தானைச் சோழ அரசன் நலங்கிள்ளியின் தம்பி என்று குறிப்பிடுகிறது.1 இஃது இவனது உறவுமுறையைத் தெளிவாக அறிய உதவி செய்கிறது. நலங்கிள்ளி, இளஞ்சேட் சென்னியின் மகன் என்பதை அவனது வரலாற்றில் கண்டோம். எனவே, இவனும் இளங்சேட் சென்னியின் மகன் என்பதை அவனது வரலாற்றால் அறிகிறோம். எனவே, இவனும் இளஞ்சேட் சென்னியின் மகன் ஆவான். ஆவூர் முற்றுகை ஆவூர்க் கோட்டையில் இருந்துகொண்டு நெடுங்கிள்ளி அதனைச் சூழ்ந்திருந்த நாட்டை ஆண்டுவந்தான். அப்போது அவனது செல்வாக்கை ஒடுக்கச் சோழர் குடியைச் சேர்ந்த மற்றொரு கிளையினர் கருதினர். நலங்கிள்ளியும் அவன் தம்பி மாவளத்தானும் இந்த முயற்சியில் ஈடுபட்டனர். நலங்கிள்ளியின் தம்பி மாவளத்தான் ஆவூர்க் கோட்டையை முற்றுகையிட்டான். கோட்டைக்குள்ளே இருந்த நெடுங்கிள்ளி மா வளத்தானை எதிர்த்துப் போரிடவில்லை. கோட்டைக் கதவுகளை அடைத்துக் கொண்டு உள்ளேயே இருந்தான். கோட்டைக் கதவுகளைத் தகர்க்க மாவளத்தானால் முடியாது என்று அவன் கருதியிருக்கலாம். அல்லது மாவளத்தானை எதிர்த்துப் போரிட்டால், தான் வெற்றிபெற முடியாது என்று நெடுங்கிள்ளி கருதியிருக்கலாம். முற்றுகையின் காலம் நீடித்தது. கோட்டைக்குள்ளேயே இருந்த மக்களும் விலங்கினங்களும் வெளியே வர முடியவில்லை. வெளியில் இருந்தவர் கோட்டைக்குள் வாழ்ந்தவர்களுக்கு வழக்கம் போல் உதவி செய்ய முடியவில்லை. எனவே, கோட்டைக்குள் இருந்த மகளிர், தலையில் பூ இல்லாமல் வெறுமனே தலையை வாரி முடித்துக் கொண்டனர். தாய்மார்களுக்கு நல்ல உணவு இல்லாமையால் குழந்தைகள் தாய்ப்பால் இல்லாமல் அழுதனர். யானைகள் உணவுக் கவளம் இல்லாமல் கட்டுத் தறிகளைத் தாக்கின; குளங்களில் படிய வாய்ப்பின்றி நிலங்களில் புரண்டன.2 இந்த நிலைக்கெல்லாம் காரணம் நெடுங்கிள்ளி எதிர்த்துப் போரிடாமல் அடைத்துக்கொண்டு கிடக்கும் நிலைதான் என்று கோவூர்கிழார் நெடுங்கிள்ளியிடம் எடுத்துரைத்தார். புலவரின் அறிவுரைகள் நெடுங்கிள்ளியைத் திருத்தின. அவன் கோட்டைக் கதவுகளைத் திறந்துவிட்டுப் போரிடாமலேயே சென்று விட்டான். இதனால், ஆவூர்க் கோட்டை மாவளத்தானுக்குக் கிடைத்தது. வட்டும் மாண்பும் இந்த மாவளத்தானும் பார்ப்பனப் புலவர் தாமப்பல் கண்ணனாரும் வட்டு என்னும் சூது விளையாட்டு விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது புலவர் அரசனை ஏமாற்ற எண்ணி வஞ்சனையாக வட்டுக்காயைத் தம் கையால் மாற்றியமைத்துத் திருட்டுத்தனம் செய்தார். புலவர், அரசனுக்குத் தெரியாமல் இதனைச் செய்ய முயன்றார். என்றாலும் அரசன் பார்த்து விட்டான். அரசனுக்குச் சினம் மேலிட்டது. வட்டுக்காயை எடுத்து அவர்மீது ஓங்கி எறிந்தான். புலவருக்கு நல்ல அடி. தவறு செய்தது அரசனிடம். அரசன் மேலும் வேறு வகை யிலும் அவரைத் தண்டிக்கலாம். தண்டிக்க அவனுக்கு உரிமை உண்டு. அந்தத் தண்டனையிலிருந்தாவது இனித் தப்ப வேண்டுமே என்று புலவர் உணர்ந்தார்.தந்திரமாகத் தம் குடிப்பிறப்பைப் பார்ப்பனர் என்று கூறித் தப்பித்துக் கொண்டார்.3 குடிச்சிறப்பு மாவளத்தான் கொடைவள்ளல் குடியில் வந்தவன்; புறாவுக்காகத் தன் உடைலையே நிறுத்துத் தந்த சிபியின் வழிவந்தவன்; பிறரால் பிற உயிருக்கு உண்டான துன்பத்தையே கண்டு உள்ளம் தாங்காத சிபியின் வழிவந்தவன்.4 இதனைப் புலவர் முதலில் நினைவூட்டினார். இதனால், தானே பிறர் ஒருவருக்குத் துன்பம் செய்யக்கூடாது என்னும் கருத்தைக் குறிப்பால் உணர்த்தினார். மேலும், தம்மீது அவனுக்குக் கருணை தோன்ற அவனது முனனோர்கள் யாரும் பார்ப்பார்க்குத் துன்பம் செய்யவில்லை என்றும் குறிப்பிட்டார். இவன், பார்ப்பனனாகிய தம்மை அடித்துத் துன்புறுத்தினான் என்று குற்றம் சுமத்தினார். குற்றம் செய்தது புலவர்; குற்றம் சுமத்தப்பட்டது அரசன்மேல், எனினும் அரசன் நாணினான். தான் பிறரைத் துன்புறுத்தியது - அதிலும் பார்ப்பாரைத் துன்புறுத்தியது - தன் தவறு என்று எண்ணிக் கொண்டு நாணினான். தோற்றப் பொலிவு ‘கடுமான் கைவண் தோன்றல்’5 என்று இவன் குறிப்பிடப் படுகிறான். இது இவனது போர்க்கோலத்தைக் காட்டுகிறது. நெடுங்கிள்ளி (காரியாற்றுத் துஞ்சியவன்) நலங்கிள்ளியும் மாவளத்தானும் அண்ணன் தம்பியர். இவர்கள் காலத்தில் இருந்த மற்றொரு சோழ அரசன் நெடுங்கிள்ளி. இவன் நலங்கிள்ளியின் பங்காளியாக இருந்திருக்க வேண்டும் என்பது புறநானூற்றுப் பாடல்களால் புலனாகின்றது. ஆவூர் முற்றுகை ஆவூரில் நெடுங்கிள்ளி தங்கியிருந்தான். நலங்கிள்ளியின் தம்பி மாவளத்தான். ஆவூரைத் தாக்கினான். நெடுங்கிள்ளி கோட்டைக் கதவுகளை அடைத்துக்கொண்டு உள்ளேயே தங்கிவிட்டான். மாவளத்தான் விட்டபாடில்லை. ஆவூர்க் கோட்டையே வளைத்து முற்றுகையிட்டான். முற்றுகை நீடித்தது.1 கோவூர்கிழாரின் அறிவுரையினை ஏற்றுக் கோட்டைக் கதவுகளைத் திறந்துவிட்டுவிட்டான். இவன் உறையூர்க் கோட்டைக்குள் அடைந்து கிடப்பதை மீண்டும் நாம் காண்பதால், இவன் ஆவூர்க் கோட்டையை மாவளத்தானிடம் இழந்துவிட்டான் எனத் தோன்றுகிறது. உறையூர் முற்றுகை ஆவூரில் நிகழ்ந்தது போலவே, உறையூரிலும் முற்றுகை நிகழ்ந்தது. நெடுங்கிள்ளி கோட்டைக் கதவுகளை அடைத்துக் கொண்டு உள்ளே இருந்தான். இங்கு முற்றுகையிட்டிருந்தவன் நலங்கிள்ளி. முற்றுகையின்போது புலவர்களுக்கு மட்டும் தடை இல்லை. அவர்கள் உள்ளேயும் வெளியேயும் கட்டுப்பாடு இல்லாமல் சென்று வரலாம். ஆவூர் முற்றுகையின்போது கோவூர்கிழார் அவ்வாறு தடையின்றி உள்ளே சென்றதை அறிவோம். உறையூர் முற்றுகையின் போதும் அவர் வெளியிலிருந்து உள்ளேயும், உள்ளேயிருந்து வெளியேயும் வந்து முறையே அடைக்கப்பட்டிருந்தவனுக்கும், அடைத்தவனுக்கும் அறிவுரை கூறுவதை அடுத்துக் காண்போம். இந்த வகையில் இளந்தத்தன் என்னும் புலவர் உறையூருக்குச் சென்றார். உள்ளே இருந்த அரசன் இந்தப் புலவரை நலங்கிள்ளியின் ஒற்றன் என்று கருதிக் கொல்ல நினைத்தான். புலவர்க்கு நேர்ந்த நிலையைக் கோவூர்கிழார் கண்டார். இளந்தத்தன் புலவர் என்றும், புலவர்கள் பரிசில் பெற்று உண்டும் வழங்கியும் வாழும் வாழ்க்கையினர் என்றும், பிறருக்குத் தீங்கு செய்து அறியாத அவரது பண்புகளால் அரசன்போல் செம்மாந்து செல்லும் இயல்பினர் என்றும் எடுத்துரைத்தார்.2 நெடுங்கிள்ளி, கோவூர்கிழாரின் அறிவுரையை ஏற்றுக் கொண்டு இளந்தத்தனைக் கொல்லாது விட்டுவிட்டான். உறையூர் முற்றுகை நீடித்து. கோவூர்கிழார் அடைத்தவ னையும் அடைக்கப்பட்டிருந்தவனையும் கண்டு பாடினார். இருவரும் சோழர்குடியினர். இருவரும் வெற்றி பெறுவது முடியாத செயல். எனவே, யார் தோற்றாலும் தோற்பது சோழர் குடியே. இந்தத் தோல்வி ஏனைய சேரபாண்டியர், சோழரை ஏளனம் செய்ய ஏதுவாகும். இவ்வாறு இரண்டு சோழ அரசர்களிடமும் எடுத்துப் புலவர் கூறினார். இந்த அறிவுரையின் விளைவு என்ன என்பது தெரியவில்லை. முற்றுகை கைவிடப்பட்டிருக்கலாம். அல்லது நெடுங்கிள்ளி உறையூரை நலங்கிள்ளிக்கு விட்டுக் கொடுத்திருக்கலாம். இறுதி நிலை இவனது பெயரைக் ‘காரியாற்றுத் துஞ்சிய நெடுங்கிள்ளி’3 என்று புறநானூற்றுக் கொளுக் குறிப்பிடுகிறது. இதனால், இவன் காரியாறு என்னுமிடத்தில் இறந்தான் என்பதை அறியலாம். இந்தச் சிறப்பு. போரின் விளைவு ஆயின் மீண்டும் நலங்கிள்ளியோடு இகலி நடத்திய போரோ என்று எண்ணத்தூண்டும். கிள்ளிவளவன் - 1 & 2 கிள்ளி அரசர்களது வரலாற்றைக் காண்கையில் வளத்தான் என்னும் பெயருடன் கிள்ளி அரசர்களின் தம்பியராய் விளங்கியவர் களின் வரலாற்றையும் கண்டோம். இப்போது ‘வளவன்’ என்னும் பெயர்கொண்ட அரசர்களின் வரலாற்றைக் காண்போம். வளவன் என்னும் பெயர்கொண்ட அரசர்களின் வரலாறெல்லாம் புறநானூற்றுப் பாடல்களிலிருந்தே கிடைக்கின்றன. அகத் திணை நூல்களில் அவர்களைப் பற்றிய குறிப்பு இல்லை. காரணம், இவர்கள் காலத்திற்கு முனபே பாண்டியன் உக்கிரப் பெருவழுதி வரலாற்றில் சுட்டியதைப்போல். புறநானூறு தொகுக்கப்பட்டு விட்டதே ஆகும். வளவன் என்று குறிப்பிடப்படும் அரசர்கள் இருவர். இருவரும் கிள்ளிவளவன் என்றே குறிப்பிடப்படுகின்றனர். எனவே இவர்களது தந்தை கிள்ளி என்பது பெறப்படும். இவர்களில் ஒரு கிள்ளிவளவன் குளமுற்றம் என்னுமிடத்தில் இறந்தான். மற்றொருவன் குராப்பள்ளி என்னுமிடத்தில் இறந்தான். எனவே, இருவேறு அரசர்கள் இவர்கள் என்பது பெறப்படும். இரு வேறு அரசர்கள் ஒரே பெயர்கொண்டு விளங்கியுள்ளனர். எனவே, ஒரு தந்தையின் மக்கள் என்று கொள்ள இயலவில்லை. இதனால், இவர்களில் ஒருவனை நலங்கிள்ளியின் மகன் என்றும், மற்றொருவனை நெடுங்கிள்ளியின் மகன் என்றும் நாம் கருதலாம். செல்வாக்கு மிகுதிநோக்கி நலங்கிள்ளியின் மகன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் என்று உய்த்துணரலாம்.1 இனி, இவர்களது வரலாற்றைத் தனித்தனியே நோக்கலாம். கிள்ளி வளவன் - 1 (குளமுற்றத்துத் துஞ்சியவன்) தந்தை கிள்ளிவளவன் என்னும் பெயர் கிள்ளியின் மகன் வளவன் என்னும் பொருளைத் தருகிறது. செல்வாக்குடன் அரசாண்ட கிள்ளி, நலங்கிள்ளி ஆவான். இவனது மகன் என்று இவனைக் கொள்ளலாம். இந்தக் கொள்கை சரியானது என்பதைக் கீழ்க்காணும் சான்றுகள் உறுதிப்படுத்துகின்றன. நலங்கிள்ளியையும் கிள்ளிவளவனையும் இரண்டு புலவர்கள் கண்டு பாடியுள்ளனர். அவர்களில் ஆலத்தூர் கிழார் தம் பாடலில் இவர்களது பெயர்களைத் தந்தை பெயருடன் கூறுவதன் வாயிலாக உறவுமுறையை நமக்குத் தெளிவுபடுத்துகிறார். இவர் நலங்கிள்ளியைச் ‘சேட்சென்னி நலங்கிள்ளி’2 என்று குறிப்பிடுகிறார். வளவனைப் ‘பசும்பூண் கிள்ளிவளவன்’3 என்று குறிப்பிடுகிறார். இந்தக் குறிப்புகள் தெளிவான உறவுமுறை ஒன்றை நமக்குக் காட்டுகின்றன. சேட்சென்னி நலங்கிள்ளி (பசும்பூண்கிள்ளி) வளவன் (குளமுற்றத்தில் துஞ்சியவன்) இந்த உறவுமுறை பொருத்தமானது என்பதைத் தெளிவுபடுத்தும் வகையில் கோவூர்கிழார் பாடல்களும் அமைந்துள்ளன. மேலே கண்டவாறு ஒரே புலவர் இரண்டு அரசர்களையும் கண்டு பாடியதிலிருந்து அந்த அரசர்கள் சமகாலத்தவர் அல்லது அடுத்தடுத்த காலத்தவர் என்னும் உண்மையை மட்டும்தான் நாம் பெறமுடியும். அண்ணன் தம்பி உறவா, தந்தை மகன் உறவா என்பதை அவர்களது பாடல்களிலிருந்து உணரமுடியவில்லை என்றாலும். அவர்களது பெயர்கள் தந்தை மகன் உறவு முறையையும். அண்ணன் தம்பி உறவுமுறையையும் காட்டுவனவாய் உள்ளன. நாடு இவன் உறையூரைத் தலைநகராகக்கொண்டு ஆண்டுவந்தான்.4 (உறையூரில் அவனது அரண்மனை இருந்தது). அது ஒளிரும் நிலைமாடங்களைக் கொண்டது.5 மழையில்லாத காலங்களிலும் காவிரி நீரூட்டும் வளம் நிறைந்த நாடு அவன் நாடு.6 ஒரு பெண்யானை படுக்கக்கூடிய பரப்பளவில் ஏழு ஆண்யானைகளைக் காப்பாற்றும் அளவுக்கு நல்ல விளைவினைத் தரக்கூடிய வளம் நிறைந்த நாடு அது.7 இவனது நாட்டில் ஆறு தொழில்களைப் புரியும் அந்தணர் அறம் செய்தற் பொருட்டுத் தீ வளர்த்தார்கள்.8 இத்தகைய வளமும் நலமும் மிக்க நாட்டை இவன் ஆண்டு வந்தான். கருவூர் முற்றுகை தண் ஆன் பொருநை என்னும் ஆறு பாயும் ஊர் கருவூர். இந்த ஆற்று மணலில் மகளிர் கழங்கு விளையாடுவர். இந்தக் கிள்ளி வளவன் அந்தக் கருவூரை முற்றுகையிட்டான்;9 ஆற்றங்கரையிலிருந்த காவல்மரங்களை வெட்டி வீழ்த்தினான். காவல் மரங்களை வெட்டும் ஒலி கருவூர் நகருக்குள்ளேயும் எதிரொலித்தது. கருவூர் அரசன் சேரன் கருவூரின் கோட்டைக் கதவுகளை அடைத்துக்கொண்டு உள்ளேயே இருந்தான்; வெளியில் வந்து காவல் மரத்தை வெட்டுபவனை எதிர்த்துப் போர் செய்யவில்லை. இது சேரனின் கோழைத்தனம். இத்தகைய கோழையோடு வீரனான கிள்ளிவளவன் போரிட நினைப்பது நாணத் தக்க செயல். இதனை வளவனுக்கு எடுத்துக் கூறினார் ஆலத்தூர்கிழார் என்னும் புலவர்.10 (இது போன்ற செயலை இவனின் தந்தை வரலாற்றிலும் காணலாம்.) புலவர் அறிவுரையைக் கேட்ட வளவன் முற்றுகையைக் கைவிட்டிருக்கலாம். செம்பு உருக்கி வார்த்த ஒரு கோட்டைக்குள்ளே வேந்தன் ஒருவன் இருந்தான். அந்தக் கோட்டை முதலை வாழும் அகழிகளை யும், இலஞ்சிகளையும் கொண்டது. இது மிகவும் அழகான கோட்டை. கிள்ளிவளவன் அந்தக் கோட்டையின் அழகை எண்ணியாவது அழிக்காமல் விட்டிருக்கலாம். ஆனால், அவன் விடவில்லை; கோட்டையைச் சிதைத்தான்.11 இந்தக் கோட்டை எந்த ஊரில் இருந்தது? கோட்டைக் குள்ளே இருந்த வேந்தன் யார்? என்பன தெரியவில்லை. இந்தக் கோட்டை முன் கூறிய கருவூர்க் கோட்டையாயின் முனபு ஆலத்தூர்கிழார் கூறிய அறிவுரையை இந்த வளவன் பொருட்படுத்தாமல் கோட்டையைச் சிதைத்தான் என்று முடியும். இவன் வஞ்சி நகரை வாட்டிய போர் ஒன்றும் உண்டு. இந்தப் போரை இஃது உயர்த்துவதாயும் இருக்கலாம். பாழி நகரம். துவரை நகரம் ஆகியவை செம்புக்கோட்டையைக் கொண்டவை. ஒரு வேளை இவன் அழித்தானா என்பதும் தெரியவில்லை. நாம் பொருத்தமான வகையில் இதனை எண்ணிப் பார்க்க லாம். கருவூர் முற்றுகையை ஆலத்தூர்கிழார் அறிவுரைப்படி இவன் கைவிட்டான். கருவூர்க் கோட்டைக்குள்ளே இருந்த அரசன் அந்தக் கோட்டையை விட்டுவிட்டுச் சென்று பாழி நகரக் கோட்டைக்குள் தங்கினான். நார்முடிச்சேரல் நன்னனைக் கொன்றுவிட்டதனால் அந்த நகரம் சேரர் ஆட்சிக்கு உட்பட்டுக் கிடந்தது. எனவே, அந்தக் கோட்டையில் இந்தச் சேரன் தங்கியிருந்து கொண்டு சோழனைத் தாக்க வலிமைமிக்க படையைத் திரட்டிக் கொண்டிருந்தான். நிலைமை உணர்ந்த இந்த வளவன் பாழி நகரக் கோட்டையைத் தாக்கி அழித்தான். இவ்வாறு கோழைத்தனமாகவும் சூரத்தனம் போலவும் இவனிடம் நடந்து கொண்ட சேரன், யார் என்பது விளங்கவில்லை. வஞ்சி நகரை வாட்டல் சேர அரசன் வானவனுக்கும் இவனுக்கும் போர் மூண்டது. போர் வஞ்சி நகரில் நடைபெற்றது. இப்போது தாராபுரம் என வழங்கும் ஊர்க்கு அக்காலத்தில் சேர நாட்டு வஞ்சி நகரின் நினைவாக வஞ்சிமுற்றம் என்னும் பெயர் சூட்டப்பட்டிருந்தது. இந்த வஞ்சி நகரில் நடந்த போரில் வானவன் கொல்லப்பட்டான்.12 வஞ்சிமுற்ற மக்கள் வாடினர் கிள்ளிவளவனால் இப் போரில் கொல்லப்பட்ட வானவன் இமயத்தில் வில்லைப் பொறித்தான் என்று கூறப்படுகிறது. இவன் மாந்தரஞ்சேரல் இரும்பொறை என்னும் அரசன் என்று எண்ண வேண்டியுள்ளது. பெரு நற்கிள்ளியும் (இராசசூயம் வேட்டவன்) இந்த மாந்தரஞ் சேரலும் போரிட்டபோது சேரன் தோற்றதை நாம் காண்கிறோம். இந்த நிகழ்ச்சியை அடுத்துத் தோன்றிய போரில் கிள்ளிவளவன் இந்த மாந்தரஞ்சேரலோடு (வானவனோடு) போரிட்டதையும், போரில் சோழன் வெற்றிபெற்றதையும், சேரன் மாண்டதையும் நாம் காண்கிறோம். சேரர்க்கும் சோழர்க்கும் நடந்த போர்களில் குறுநில மன்னர்கள் சோழனுக்குத் துணையாக நின்றதைக் காண்கிறோம். ஓரி, அதியமான், மலையன் ஆகியோர் அவ்வாறு சோழர் பக்கம் இருந்தவர்கள். பெருஞ் சேரல் இரும்பொறையும் அவனது தம்பி மாந்தரஞ்சேரல் இரும் பொறையும் சோழர்க்கு எதிர்ப்பாய்க் கொங்கு நாட்டில் தங்களது ஆட்சியை விரிவுபடுத்திக் கொண்டிருந்தார்கள். பணம் கொடுத்த பக்கம் சேர்ந்து கொள்ளும் மலையமான் மரபினர் சோழர் பக்கம் ஒரு சமயம் சேர்ந்து கொண்டு மாந்தரசேரலுக்கு தோல்வியை உண்டாக்கியது போலவே மற்றொரு சமயம் சேரர் பக்கம் சேர்ந்து கொண்டு கொல்லிமலைத் தலைவன் ஓரியைக் கொன்று அவனது நாட்டைச் சேர அரசர்க்குக் கொடுத்தனர். இந்தப் போர்களில் எல்லாம் நாம் குறிப்பிடத்தக்க உண்மை ஒன்று உண்டு. சேரர்கள் குறுநில மன்னர்களை எதிர்த்துத் தாக்கிய போர்களில் வெற்றியையே கண்டனர். கொல்லிப் போரில் சோழ அரசன் அதியமானுக்கு உதவியது போல் முடிவேந்தர் உதவி இருந்த போதும் சேரர்க்கே வெற்றி கிடைத்தது. ஆனால், சோழர்கள் தாமே எதிர்த்துத் தாக்கிய போர்களில் எல்லாம் இந்தச் சேர அரசர்கள் தோல் வியையே கண்டனர். இந்த முடிவுகளே நாம் குறிப்பிடத்தக்கவை. சேர, பாண்டியரை வெல்லக் கருதல் புலவர்கள் எல்லாரும் இவனைப் புகழ்ந்து பாடிப் பரிசில் பெற விரும்பி நாடி வந்தனர். அவர்களுக்கெல்லாம் கொடை வழங்கிய அதேநேரத்தில் இவனது நாட்டமெல்லாம் சேர நாட்டையும் பாண்டிய நாட்டையும் வெல்வதிலேயே இருந்தது.13 பகைவர்களின் கோட்டைகள் பலவற்றைக் கடந்து வெற்றி பெற்றான் என்றும்,14 அவர்களது முடிப்பொன்னைக் கொண்டு வீரக்கழல் செய்து அணிந்து கொண்டான் என்றும்.15 இவன் படையெடுத்து வந்து தம் நாட்டை அழிப்பான் என்று எண்ணிய பகைவர்கள் தீக்கனாக் கண்டு நடுங்கினர் என்றும் 16 கூறப்படும் செய்திகள் இவனது போர் நிகழ்ச்சிகளை நினைவூட்டுகின்றன. ஞாயிற்றிடம் நிலவொளியையும் திங்களிடம் வெயிலையும் விரும்பினால் முயன்று பெறக் கூடியவன் என்று கூறப்படுவது17 இவனது ஆற்றலைப் புலப்படுத்துகின்றது. மலையமான் மக்களைக் கொல்ல முயன்றது புறநானூற்றுக் கொளு, இந்தக் கிள்ளிவளவன் மலையமான் மக்களை யானையின் காலடியில் இட்டுக் கொல்ல முயன்றதாகக் குறிப்பிடுகிறது.18 பாடலில் குழந்தைகள் இன்னார் என்ற குறிப்பு இல்லை. குழந்தைகள் கள்ளமற்ற தன்மையை எடுத்துககாட்டிக் கோவூர்கிழார் என்னும் புலவர் சோழனது செயலைத் தடுத்து நிறுத்தினார். குழந்தைகள் கொல்லப்படாமல் காப்பாற்றப்பட்டனர். காரி, சோழர் பக்கம் சேர்ந்து கொண்டு சேரனை வெல்ல ஒரு சமயம் உதவினான் என்றாலும், பின்பு ஒருமுறை சேரர் பக்கம் சேர்ந்து கொண்டு ஓரியைக் கொன்று கொல்லிமலைப் பகுதியைச் சேர்க்கச் சேரனுக்கு உதவினான் என்பதை அவன் வரலாற்றில் நாம் அறியலாம். இவ்வாறு காரி நிலையின்றிச் சோழர் பக்கமும் சேரர் பக்கமும் மாறியதால், சோழ அரசன் அவன்மீது சினம் கொண்டான். காரியின் குழந்தைகள் அவனுக்குக் கிடைத்த போது, இந்தக் குழந்தைகளும் பெரியவர்கள் ஆனபின் தந்தையைப்போல் சேரர்க்குத் துணையாய் அமைவார்களோ என்று எண்ணியிருப்பான். இந்த எண்ணம் முள்மரத்தை முளைக்கும் போதே கிள்ளி எறிந்துவிடுவது போன்றது என்று அவனது அரச நீதி அவனுக்குக் கூறியிருக்கும்.19 அதனால், கொல்லத் துணிந்திருப்பான். புலவர் குழந்தைகளின் கள்ளமற்ற தன்மையை விளக்கினார். அவனது முன்னோன் புறாவுக்காகத் தன் உடலையே வழங்கிய கொடையை நினைவூட்டினார். சோழன் உள்ளம் மாறியது; குழந்தைகளும் பிழைத்தனர். கையறவு நப்பசைலையார், மாசாத்தனார், முடவனார் என்னும் புலவர்கள் இவன் இறந்தது கண்டு இரங்கிப் பாடியுள்ளனர். கூற்றுவன் கொடியவன் என்றும், இவனது உயிரைக் கொண்டதால் இவனால் போரில் கூற்றுவனுக்குக் கிடைக்கும் இரை கிடைக்காதாகையால் கூற்றுவன் ஓர் அறிவிலி என்றும் அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.20 இதனால், அவனது உடல் தாழியில் இட்டு நிலத்தில் அடக்கம் செய்யப்பட்டது எனலாம். ஆட்சி வெள்ளி தெற்குத் திசையில் தோன்றினாலும் கவலையில்லை. வெள்ளி எந்தத் திசையில் தோன்றினால் என்ன? தோன்றாமல் போனால்தான் என்ன?21 இந்த வளவன் இருக்கிறான் உதவுவதற்கு என்று புலவர்கள் மகிழ்ந்திருந்தனர். இவனது நாட்டு மக்கள் சோறு சமைக்கும் நெருப்பைத் தவிர வேறு சூடு அறியாராம். (இதனால் பகைவன் இவனது நாட்டை வென்று எரியூட்டியது இல்லை என்பது பொருள்.)22 இவனது நாட்டார் போர்ப் பூசலைக் கனவிலும் அறியாதார்; குட்டிகளைக் குகையில் காக்கும் புலிபோல் இவன் நாட்டுமக்களைக் காத்து வந்தானாம்.23 வெள்ளைக்குடி நாகனார் என்னும் புலவர் இவனுக்குக் கூறும் அறிவுரைகள் இவனது ஆட்சி முறையைப்பற்றி நம்மை எண்ணச் செய்கின்றன, ‘காட்சிக்கு எளியனாக இருக்கவேண்டும். வெண் கொற்றக்குடை அரசனுக்கு வெயில்படாமல் மறைப்பதற்கு அன்று: மக்களுக்குத் துன்பம் நேராமல் நிழல் தந்து காப்பாற்றுவதற் காகவே என்று கூறுகிறார். நண்பர் அல்லாதார் பொதுப்படையாகக் கூறும் சொற்களை உண்மை என்று ஏற்றுக்கொள்ளக் கூடாது. உழவர்களைப் பேணிப் பாதுகாக்க வேண்டும்’ என்றெல்லாம் அவர் அறிவுரை கூறியுள்ளார். இவனிடம் ஓரளவேனும் இந்தக் குறைபாடுகள் இருந்ததனால்தான் இவ்வாறு இவர் அறிவுரை கூறவேண்டிய நிலை ஏற்பட்டது என்று கருதலாம். கொடை இவனது கொடைத்தன்மை புலவர்களைப் பொறுத்தவரை ‘ஆனா ஈகை’யாக அமைந்திருந்தது.24 எவ்வளவு கொடுத்தாலும் இன்னும் கொடுத்திருக்கலாமே என்றும், வந்தவருக்கெல்லாம் கொடுத்தாலும் இன்னும் பலர் வந்திருந்தால் கொடுத்திருக்கலாமே என்றும் கொடையாளி கருதுவதுதான் ‘ஆனா ஈகை’. இவன் எல்லாருக்கும் எல்லாப் பொருள்களையும் கொடுத்தான் என்றாலும். சிலருக்குச் சில பொருள்களைக் கொடுத்ததில் தனிச் சிறப்பு இருந்தது. கலையில் வல்ல பாணர்க்கும்,25 எதிலும் வல்லமையின்றி ஏதோ ஆசையில் பரிசில் பெறலாம் என வந்த பரிசிலர்க்கும் இவன் பரிசில் வழங்கினான்.26 சிறந்த உணவு,27 சிறந்த உடை,28 அணிகலன்கள்29 முதலான பொருள்களையும், பாணர்க்குப் பொன்னால் செய்யப் பட்ட தாமரையையும்30 இவன் வழங்கியதில்கூட அத்தனை வியப்பு இல்லை. தன் வாழ்நாளையும் சேர்த்துக்கொண்டு வாழவேண்டும் என்று கொடைவள்ளல் ஒருவனை இவனே வாழ்த்தியதில்தான் இவனது கொடைத்திறனின் உச்சநிலை அமைந்திருக்கிறது. பண்ணன் அவனது நாட்டிலிருந்த குடிமகன். சிறுகுடியில்31 அவன் வாழ்ந்துவந்தான். அவன் வழங்கியதெல்லாம் என்ன? சோறு, அதில் என்ன சிறப்பு? வந்தவர்க்கெல்லாம் சோறு, அத்துடன் வாராதவர் களுக்கும் சோற்று மூட்டை கொடுத்தான். இந்தக் கொடைத் தன்மையைக் கண்டான்; வியந்தான். தன் கொடையைக் காட்டிலும் பயன்நோக்கில் விஞ்சி மேம்பட்டு நிற்பதை உணர்ந்தான். தனது வாழ்நாளும் சேர்ந்து பண்ணனுக்கு அமைந்தால் மக்களுக்குப் பயனுடையதாக இருக்குமே என்று கருதினான்; வாழ்த்தினான்; பாடினான்.32 குடிமகன் அரசனைப் பாராட்டிப் பாடுவது இயல்பு. குடிமகன் மற்றொரு குடிமகனைப் பாராட்டிப் பாடுவதில் வியப்பு ஒன்றும் இல்லை. அரசன் ஒருவன் - பேரும் புகழும் ஒருங்கு பெற்ற அரசன் ஒருவன் - தன் நாட்டிலுள்ள குடிமகனை, எளிய குடிமகனைப் பாராட்டிப் பாடுகிறான் என்றால்,தன் வாழ் நாளையே அவனுக்குக் கொடுக்க விழைகிறான் என்றால், அவனது கொடைத் தன்மையிலும் பெருந்தன்மையிலும் எத்துணைச் சான்றாண்மைப் பண்புகள் உள்ளன என்பதை நாம் உணரலாம். பெயர் அடைமொழிகள் ‘பசும்பூண் கிள்ளிவளவன்’,33 பொன்னியல் பெரும்பூண் வளவன்’,34 ‘பொலந்தார் வளவன்’,35 ‘பலகோள் செய்தார் மார்ப’36 என்பன அணி கலன்களோடு கூடிய அவனது தோற்றப் பொலிவினைக் காட்டுகின்றன. ‘வாய்வாள் வளவன்’,37 ‘திண்தேர் வளவன்’38, ‘நெடுங் கொடி நுடங்கும் யானை செடுமா வளவன்’39 என்பன அவனது போர்க் கோலத்தைக் காட்டுகின்றன. இவனது மரபினர் ‘மறங்கெழு சோழர்’40 என்று குறிப்பிடப் படுகின்றனர். முன்னோர் புறா உயிரைக் காப்பாற்றுவதற்காகத் தன் உடலையே துலாக் கோலில் (தராசில்) நிறுத்தித் தந்த அரசனான சிபியின் வழி வந்தவன் இவன் என்று குறிப்பிடப்படுகிறான்.41 அவன் வழிவந்த இவனுக்கும் கொடை உள்ளம் அமைந்தது. கிள்ளிவளவன் - 2 (குராப்பள்ளித் துஞ்சியவன்) ‘காவிரிக் கிழவன்’ என்றும் ‘உறந்தைப் பொருநன்’ என்றும் இவன் சிறப்பிக்கப்பட்டுள்ளான்.1 இதனால், இவன் உறையூரில் தங்கிச் சோழநாட்டை ஆண்டுவந்தான் என்பதை உணரலாம். கருவூர்ப் போர் கொங்குநாட்டிலிருந்த கருவூரை இவன் தாக்கினான்.2 போரில் பிட்டை (பிட்டன்) என்பவன் படுகாயமடைந்தான். இதனால், கொங்கு நாட்டார் தோற்றனர். வஞ்சிமுற்றப் போர் வஞ்சிமுற்றம் என்னுமிடத்தையும் இவன் தாக்கினான்.3 போரில் எதிரிகளைக் கொன்று குவித்தான். இதில் கொல்லப்பட்டவர்களில் பெரும்பகுதியினர் குடநாட்டுப் படையினர். இந்த இரண்டு ஊர்களும் வெவ்வேறு இடங்கள். கருவூர் இப்போது திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள கருவூர், வஞ்சிமுற்றம் என்பது இப்போது கோவை மாவட்டத்தில் உள்ள தாராபுரம். கருவூரில் தாக்கப்பட்ட அரசன் யார் என்பதற்கு வெளிப்படையான சான்று இல்லை என்றாலும், உறுதிமிக்க சான்று உள்ளது. அது பிட்டன் போரில் காயம்பட்டான் என்று குறிப்பிடப்படுவதே ஆகும். பிட்டன் வானவனின் படைத்தலைவன் என்பதைச் சேரர் வரலாற்றுப் பகுதியில் ‘வானவன்’ என்னும் தலைப்பின்கீழ்க் கண்டோம். எனவே, பிட்டன் போரிட்டபோது கருவூரில் இருந்த அரசன் மாந்தரஞ்சேரல் என்பது பெறப்படுகிறது. இந்த மாந்தரஞ்சேரல் வரலாறு, சோழர் வரலாற்று நிகழ்ச்சிகளை ஒரு நிரல்செய்து காட்டுகிறது. மாந்தரஞ்சேரல், காரியின் துணை தனக்குக் கிடைக்காமையால் சோழரை எதிர்த்துத் தாக்கிய ஒரு போரில் தோற்றான். இந்தப் போரில் இவனைத் தாக்கிய சோழ அரசன் பெருநற்கிள்ளி (இராசசூயம் வேட்டவன்). கிள்ளிவளவன் - 1 (குளமுற்றத்துத் துஞ்சியவன்). கருவூரைத் தாக்கியபோது வானவன் கோட்டைக் கதவை அடைத்துக் கொண்டு உள்ளேயே இருந்தான். அடைத்துக்கொண்டு உள்ளே இருக்கும் அரசனோடு போர்புரிவது அழகன்று என்று புலவரால் அறிவுறுத்தப் பட்ட சோழன் முற்றுகையைக் கைவிட்டான். எனினும், வானவன் கருவூர்க் கோட்டைக்குள் தொடர்ந்து இருக்க விரும்பவில்லை. தன் படைத்தலைவன் பிட்டனிடம் கருவூரை ஒப்படைத்துவிட்டு. பாழி நகருக்குச் சென்று தங்கி பெரும்படை ஒன்றைத் திரட்டும் முயற்சியில் ஈடுபட்டிருந்தான். நிலைமை அறிந்த கிள்ளிவளவன் - 1 அவனைப் பாழி நகரிலே தாக்கினான்; பாழிக் கோட்டையை அழித்தான். மாந்தரஞ் சேரல் தன் மற்றொரு கோட்டையான வஞ்சிமுற்றக் கோட்டைக்குத் தப்பிவிட்டான். கிள்ளிவளவன் - 1 (குளமுற்றத்துத் துஞ்சியவன்) பாழிக் கோட்டையைத் தாக்கிக் கொண்டிருந்தபோது கருவூரில் அப்போரின் எதிரொலியாக மற்றொரு போர் மூண்டது. அந்தப் போர் பிட்டனுக்கும், கிள்ளிவளவன் - 2 (குராப்பள்ளித் துஞ்சியவன்) என்பவனுக்கும் இடையே நடைபெற்றது. கிள்ளிவளவன்-2, பிட்டனைப் படுகாயம் அடையும்படி செய்தான். பாழியிலிருந்து தப்பிவந்த மாந்தரஞ்சேரல் வஞ்சிமுற்றக் கோட்டையில் இருந்தபோது கிள்ளிவளவன்-1, கிள்ளிவளவன்-2 ஆகிய இருவரும் தாக்கினர். மாந்தரஞ்சேரல் கொல்லப்பட்டான். இந்த நிகழ்ச்சிகள் கிள்ளிவளவன் - 1, கிள்ளிவளவன் - 2 ஆகிய இருவரும் சமகாலத்தவர் என்பதைத் தெளிவாக்குகின்றன.4 ஒருவன் குளமுற்றத்தில் துஞ்சினான் என்றும், மற்றொருவன் குராப்பள்ளியில் துஞ்சினான் என்றும் கூறப்படுவதால் இவர்கள் இருவரையும் ஒருவர் எனக் கூறமுடியவில்லை. கிள்ளிவளவன் - 1, கருவூரை முற்றுகையிட்டபோது போரே நடைபெறவில்லை என்பது தெளிவு. கிள்ளிவளவன்-2, கருவூரை முற்றுகையிட்டபோது போரும் நடந்தது. போரில் பிட்டன் என்பவனும் படுகாயம் அடைந்தான். இந்த வேறுபட்ட நிகழ்ச்சிகள் ஒரே அரசன் காலத்தில் நிகழ்ந்தவை என்று கூறுவது பொருந்தா. இதனாலும், கிள்ளிவளவன்-1, கிள்ளிவளவன்-2 ஆகியோர் வேறு வேறு அரசர்களே என்பது பெறப்படும். இவர்கள் உடன்பிறந்த அண்ணன் தம்பியராகவோ பெரியப்பன். சிற்றப்பன் மக்களாகவோ இருக்கலாம். நலங்கிள்ளியின் மகன் கிள்ளிவளவன்-1 என்று அவனது வரலாற்றிலே கண்டோம். ஆட்சி வண்டிச் சக்கரம் கல்லால் தடுக்கப்பட்டாலும், பள்ளத்தில் ஆழ்ந்தாலும் பொருட்படுத்தாமல் பெரிதும் முண்டி இழுத்துச் செல்லும் காளைமாடுபோல இவன் தன் நாட்டை நடத்திச் சென்றான்.5 இவனது ஆட்சிக்குச் சோதனையாகத் தடைகளும் சோர்வும் பிறந்தன. அவற்றை இவன் வலிமையுடன் சமாளித்து அரசாட்சி நடத்தி வந்தான். இதனால், அவன் நாட்டுமக்கள் முன் அவர்களின் துன்பம் நீக்கும் இவனது ஆட்சிக் கோலமே நின்றது. உறையூர் மருத்துவன் தாமோதரனாரும் விறலியும் கடற்கரை ஓரமாகச் சென்றுகொண்டிருந்த போது கடலில் முழுநிலாத் தோன்றுவதைக் கண்டனர். உடனே அவர்களுக்கு இந்தச் சோழனின் வெண்கொற்றக் குடைதான் நினைவுக்கு வந்தது. அந்த நிலாவைச் சோழனது குடையென எண்ணி வணங்கினர்.6 கொடை இவனது ஆட்சிக் காலத்தில் இன்னல்கள் பல நேர்ந்தன என்று கண்டோம். அந்த இன்னற் காலத்தில் இவனைக் கண்டு, குமரனார் என்னும் புலவர் பாடிப் பரிசில் வேண்டினார். இந்தக் குமரனாரின் சொந்த ஊர் கோனாட்டு எறிச்சலூர். கோனாடு என்பது இப்போதுள்ள புதுக்கோட்டை மாவட்டப் பகுதியில் இருந்தது. அங்கிருந்து இவர் உறையூர் வந்து இவனைக் கண்டு பாடினார். பாடலில் அவர் இந்தச் சோழன் நல்லறிவுடையவன் என்றும், அவனது வறுமையை என்றும் தாம் எண்ணிப் பார்க்கும் தன்மை உடையவர் என்றும் கூறுகிறார். புலவரிடம் பண்பறிந்து ஒழுகாதவர், நாற்படையில் வலிமை மிக்க வேந்தராயினும் அவர்களைத் தாம் வியந்து மதிப்பதில்லை என்றும், அவர் குறிப்பிடுகிறார். சோழன் பரிசில் நல்காவிடினும் அவனை இவர் பாடியுள்ளார்.7 தோற்றம் அவையில் வீற்றிருக்கும்போது பனைக்கொடிக் கடவுள் இவனுக்கு உவமையாகக் கூறப்பட்டுள்ளார்.8 இந்தக் கடவுள் வெள்ளை நிறத்தவர். பாண்டியனுக்கு நீலநிறத் திருமால் உவமை கூறப்பட்டுள்ளார். எனவே, பாண்டியனைக்காட்டிலும் இந்தச் சோழன் சற்றேனும் வெளுப்பான மேனி உடையவனாயிருந்தான் என்பது பெறப்படும். கூர்மையான வாளைப் பயன்படுத்தும் வல்லமை மிக்கவனாய் அதனுடன் தோற்றமளித்ததையும், பக்கத்தே வெற்றியின் அறிகுறியாக முரசு முழங்க அவன் உலாவந்த காட்சியையும் தாமோதரனார் குறிப்பிடுகிறார். இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி சங்ககாலச் சோழவேந்தருள் சிறப்புமிக்க மாபெரும் மன்னன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி ஆவான். இவனுக்குப் பிறகு ஓர் அளவிற்குப் புகழ்பெற்றவன் சோழன் செங்கணான் ஆவான். சேர சோழ பாண்டியர் ஒருமைப்பாடு தமிழ்நாட்டு மூவேந்தரான சேர, சோழ, பாண்டியர் தம்முள் பகைமைகொண்டு ஒருவரோடு ஒருவர் போரிட்டுக் கொள்வது வழக்கமாக இருந்துவந்தது. இவர்களுள் இருவர் ஒன்றுசேர்ந்து மூன்றாமவனைத் தாக்குதல் உண்டு. இந்த நிகழ்ச்சிகளுக்கு அப்பாற்பட்ட நிலையில் தமிழக வரலாற்றிலேயே முதல் நிகழ்ச்சியாக நாம் காணும் அளவில், இவன் காலத்தில் மூவேந்தரும் அரசியல் முறையில் ஒன்றுகூடி இணைந்து நண்பர்களாகச் செயலாற்றத் தொடங்கினர். சேர அரசன் மாரிவெண்கோ, பாண்டிய அரசன் கானப் பேரெயில் தந்த உக்கிரப்பெருவழுதி ஆகியோர் இவனுடன் கூடித் தமிழக முன்னேற்றத்திற்காகத் திட்டமிடத் தொடங்கினர். இந்தக் காட்சியைக் கண்ட ஒளவையார் ‘இன்றுபோல் என்றும் ஒருமைப் பாட்டுடன் வாழவேண்டு’ மென்று வாழ்த்தினார்.9 அப்போது அவர் பார்ப்பனர்க்குப் பூவும் (நிலமும்) பொன்னும் தாரைவார்த்துக் கொடுக்க வேண்டும் என்று வேண்டிக்கொள்வதும். மகளிர் மதுவூட்ட மகிழ்ந்து வாழவேண்டும் என்று வாழ்த்துவதும் நம்மை எண்ணத் தூண்டும் செய்திகள் ஆகும். சுடுதீ விளக்கம் குதிரை, யானை, காலாள் படைகளின் துணைகொண்டு தனது பகைவர் நாடுகளைத் தாக்கினான். அங்கிருந்த நன்னீர்த் துறைகளில் தன் யானைகளைப் படியச் செய்து கலக்கினான். விளைந்த வயல்களைக் கவர்ந்தான். வீடுகளில் உள்ள மரங்களை விறகாகக்கொண்டு மாலை வேளையில் தீ வளர்த்தான். இந்தத் தீ, சுடுதீ விளக்கமாக எரிந்தது. கரும்பு வயல்களுக்கும் தீ மூட்டினான். இதனால் வளமான வயல்கள் பாழாயின. இந்தப் போரைக் கொடிய போர் என்பதுபட ‘நாம நல்லமர்’- அஞ்சத்தக்க நல்ல போர் - என்று புலவர் குறிப்பிடுகிறார். இந்தப் போர் தொடங்கும்போது இவனுக்குச் சில அரசர்கள் உதவிசெய்ய முன்வந்ததாகத் தெரிகிறது. இவனோ அவர்களை யெல்லாம் வேண்டா என்று கூறிவிட்டுத் தான் மட்டும் தன் படைத்துணையுடன் போரிட்டு வெற்றிபெற்றதாகத் தெரிகிறது.10 மாந்தரஞ்சேரல் இரும்பொறையோடு போர் சேர அரசன் மாந்தரஞ்சேரல் இரும்பொறைக்கும் இவனுக்கும் போர் மூண்டது. அப்போது இவன், தேர்வண் மலையன் என்பவனின் உதவியைப் பெற்றான். அவனது துணையால் சேரனை வென்றான். மலையன் வரலாற்றில் இப் போரைப் பற்றிய செய்திகளை மேலும் காணலாம்.11 படை பொன் பூண் பூட்டிய தந்தங்களைக் கொண்ட யானைப் படை, கச்சை அணிந்த குதிரைப்படை, மணி ஒலிகொண்ட தேர்ப்படை, வாளால் ஆர்வமுடன் வாழும் மறவர் படை ஆகியவை அடங்கிய இவனது தானை கடல் ஒலிபோல் முழங்கும்.12 அது வரம்பில்லாப் பெரிய படை. கொடை உலோச்சனார் கிணைப்பறையை முழக்கிக்கொண்டு வைகறைக் காலத்திற்கு முன்பே சென்றார். நல்ல பனிக்காலம் (மார்கழி மாதம் எனலாம்); அரண்மனையிலே சோழன் இனிமையாகத் தூங்கிக்கொண்டிருந்த நேரம். அப்போதுதான் இவர் கிணையை முழக்கிக்கொண்டு சென்றார். (இந்தச் செயலை மார்கழி மாதம் விடியற் காலத்தில் தாதன் திருப்பாவை பாடிக்கொண்டு தெருத்தெருவாகச் செல்லும் நிகழ்ச்சியோடு ஒப்பிடலாம்.) ‘அறநெஞ்சத்தோன் வாழ்க’ என்று இடையிடையே அவர் வாழ்த்தினார். அந்த வாழ்த்து தனக்குத் தான் என்று கொண்டு தொலைநாடு செல்லும் உலோச்சனார் என்னும் புலவரைத் தடுத்து அழைத்துச் சென்று அந்தப் புலவர் கனவு காண்பது போல் மருளும்படி முத்தும், நல்ல உடைகளும், காலையில் பருகும் ‘தசும்பு’ என்னும் மதுக்குடங்களையும் அளித்தான். புலவர் பெற்று அவனைப் பாராட்டிப் பாடினார்.13 நாடு என்றால் அவன் நாடுதான் நாடு. வேந்து என்றால் அவன்தான் என்ற முறையில் அவரது பாராட்டு அமைந்திருந்தது. தோற்றப் பொலிவு மார்பிலே சந்தனம், புலவு நாற்றம் வீசும் வாள் ஆகியவற்றுடன் இவன் தோன்றினான். இவனது சீற்றம் முருகனது சீற்றம் போன்றது.14 முருகனது சீற்றம் இதிலிருந்து தெரியவருகிறது. இராசசூயம் வேட்டல் இவனது பெயர் பெருநற்கிள்ளி, புறநானூற்றைத் தொகுத்த ஆசிரியர் இப் பெயருக்கு ‘இராசசூயம் வேட்ட’ என்னும் அடை மொழியைத் தந்துள்ளார்.15 இந்த அடைமொழியால் வைதீக சமயவழிப்பட்ட இராசசூய வேள்வியை இவன் செய்திருக்கவேண்டும் எனத் தோன்றுகிறது. சோழன் செங்கணான் சோழன் கிள்ளிவளவன் (குளமுற்றத்துத் துஞ்சியவன்) காலமான பின் சோழநாட்டை அரசாண்ட சோழ அரசன் செங்கணான் எனலாம். சங்க இலக்கியங்களிலிருந்து அறியப் படுகிற சோழ அரசர்களுள் கடைசி அரசன் இவன். இவன் சைவ அடியார்களுள் ஒருவரான செங்கட்சோழ நாயனார் அல்லன்.1 சங்ககாலத்தின் இறுதியில் சோழநாட்டை ஆண்ட சோழன், செங்கணான் என்று கூறினோம். சோழன் செங்கணான் காலத்தில் கொங்குநாட்டை அரசாண்டவன் கணைக் கால் இரும்பொறை. பொறையர் குடி அரசர்களுள் கடைசி அரசன் இவன். சோழநாட்டை அரசாண்ட (குளமுற்றத்துத் துஞ்சிய) கிள்ளி வளவன் கொங்கு நாட்டை வென்று, சேரநாட்டை அரசாண்ட கோதை அரசனின் படைத் தலைவன் பிட்டனையும் வென்றான் என்று அறிந்தோம். கிள்ளிவளவனுக்குப் பிறகு சோழநாட்டை அரசாண்ட செங்கட்சோழன் கொங்குநாட்டை ஆண்ட கணைக்கால் இரும் பொறையுடன் போர் செய்தான். போர் செய்ய வேண்டிய காரணம் தெரியவில்லை. இவனை எதிர்த்துச் செங்கணான் போர் செய்தான். அந்தப் போர் ‘போர்’ என்னும் ஊரில் நடந்தது. (போர் என்னும் ஊருக்குப் போர்வை என்னும் பெயரும் இருந்தது.) இந்தப் போரில் கணைக்கால் இரும்பொறை தோல்வி அடைந்தது மட்டுமல்லாமல் செங்கணானால் சிறைப் பிடிக்கப்பட்டான். சிறைப்பட்ட கணைக்கால் இரும்பொறையைச் சோழன் செங்கணான் குடந்தைக் (கும்பகோணம்) கோட்டையில் மேற்கு வாயில்புறத்தில் இருந்த குடவாயில் சிறைக்கோட்டத்தில் அடைத்து வைத்தான். சிறையில் இருந்த கணைக்கால் இரும்பொறை நீர்வேட்கை கொண்டு நீர் கேட்டான். சிறைக்கோட்ட ஊழியர் அலட்சியமாக இருந்து நெடுநேரஞ்சென்று நீர் கொண்டுவந்து கொடுத்தனர். அவன் நீரைப் பருகாமலே ஒரு செய்யுளைப் பாடினான். இச் செய்யுளின் அடிக் குறிப்பு இவ்வாறு கூறுகிறது. ‘சேரமான் கணைக்கால் இரும்பொறை சோழன் செங்கணானோடு திருப் போர்ப்புறத்துப் பொருது பற்றுக் கோட்பட்டுக் குடவாயிற் கோட்டத்துச் சிறையிற் கிடந்து தண்ணீர் தாவென்று பெறாது பெயர்த்துப் பெற்றுக் கைக்கொண்டிருந்து உண்ணான் சொல்லித் துஞ்சிய பாட்டு.’ ‘பிறந்த குழந்தை இறந்தாலும், பிறக்கும் முன்பே குழந்தை இறந்து பிறந்தாலும் அக் குழந்தை வீர ஆள் ஆகவில்லை என்று கருதி அதனை வீர ஆளாக மடியச் செய்வாராய் அதன் உடலில் வாளால் காயப்படுத்திப் புதைப்பதோ எரிப்பதோ செய்யும் வழக்கம் தமிழ்நாட்டில் இருக்கிறது. நானோ வீரர்களுக்குத் தலைவனான அரசனாக விளங்கியும் சங்கிலியால் பிணைக்கப்பட்ட வேட்டைநாய் போல் சிறையில் அடைப்பட்டுள்ளேன். பகைவர் கூட்டத்தில் உள்ள நண்பரல்லாத ஒருவர் அளித்த நீரை மான உணர்வின்றி எனது நீர் வேட்கையைத் தணிக்கும் பொருட்டுக் கெஞ்சிக் கேட்டுப் பருகுதலை இவ்வுலகத்திலுளள யாரேனும் விரும்புவரோ? விரும்பார்2 (எனவே நானும் விரும்பேன்).’ இந்தக் கருத்தமைந்த பாடலைப் பாடிவிட்டுத் தண்ணீர் பருகாமல் நாச்சுருண்டு சோர்ந்து கணைக்கால் இரும்பொறை சோழனது சிறையில் மாண்டு போனான். தொண்டித் துறைமுகப் பட்டினத்தில் வாழ்ந்திருந்த பொய்கையார் கோக்கோதை மார்பன். சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன் ஆகியோர் காலத்தில் இருந்தவர். இந்தப் பொய்கையார் அவ்வரசர் காலத்துக்குப் பிறகு கணைக்கால் இரும்பொறை. சோழன் செங்கணான் ஆகியோர் காலத்திலும் வாழ்ந்திருந்தார். அவர் கணைக்கால் இரும்பொறை குடவாயிற் கோட்டத்தில் செங்கணானால் சிறை வைக்கப்பட்டதை அறிந்து செங்கணானிடம் சென்று ‘களவழி நாற்பது’ என்னும் நூலைப் பாடி அதற்குப் பரிசாகக் கணைக்கால் இரும்பொறையைச் சிறையிலிருந்து விடுவிக்குமாறு கேட்டார் என்றும், செங்கணான் கணைக்கால் இரும்பொறையை விடுவித்தான் என்றும், விடுவிப்பதற்கு முனபே சிறைக்கோட்டத்தில் கணைக்கால் இரும் பொறை துஞ்சினான் என்றும் கூறப்படுகிறது. இவ்வாறு புறநானூற்றுச் செங்கணானுக்கும் களவழியில் கூறப் பட்டுளள சோழ அரசனுக்கும் தொடர்பு இருப்பதாகக் கொள்வது பொருந்துமாறில்லை. காரணங்களை எண்ணிப் பார்க்கலாம். இதனுடன் சைவ அடியார்களில் ஒருவனாய் விளங்கிய செங்கணானைப் பற்றியும் எண்ணலாம். போரில் வெற்றிபெற்ற அரசனது பெயர் சோழன் செங்கணான் என்று புறநானூற்றுக் கொளுக் குறிப்பிடுகிறது. செங்கண்மால்,3 செங்கட்சினமால்,4 திண்டேர்ச் செம்பியன்,5 பொன்னார மார்பிற் புனை கழற்காற் செம்பியன்6 என்ற முறையில் ஓரளவு சிறப்பு வகையாலும் புனல்நாடன்7 புனல் நீர் நாடான்,8 நீர் நாடான்,9 காவிரி நாடன்,10 சேய், 11 பைம் பூட்சேய்12 என்ற முறையில் ஓரளவு பொதுவகையாலும் வெற்றிபெற்ற சோழ அரசன், ‘களவழி’ நூலில் குறிக்கப்படுகிறானே அன்றிச் சோழன் செங்கணான் என்று குறிக்கப்படவில்லை. மால் (திருமால்) என்றும், சேய் (முருகன்) என்றும் இவன் குறிப்பிடப்படுவது மனிதன் மீது கடவுள் தன்மை ஏற்றப்பட்ட நிலையாகும், மற்றும், ‘செங்கண் மால்’, ‘செங்கட் சினமால்’ என்னும் பெயர்களை நோக்கும்போது போர்க் காலத்தில் சினம் மிகுதியால் சிவந்திருந்த கண் நோக்கிய தெளிவுரைப் பெயரே அன்றிச் சோழன் செங்கணான் என்று சங்ககால இயற்பெயர் போன்றது அன்று. மற்றும் ‘செங்கணான் கோச்சோழன்’ என்று திருமங்கை ஆழ்வாரால் குறிப்பிடப்படுபவன் சிவபெருமானுக்கு 70 கோயில்கள் கட்டியவன். இவர்கள் மூவரும் வெவ்வேறு அரசர்கள். வரிசைப் படி காலத்தால் வேறுபட்டவர். இந்தச் சோழனை எதிர்த்துப் போரிட்ட அரசனின் பெயரைப் புறநானூற்றுக் கொளு, ‘கணைக்கால் இரும்பொறை’ என்று குறிப்பிடுகிறது. களவழியில் சோழனது பெயர் குறிப்பிடப்படாதது போலவே, சோழனை எதிர்த்துப் போரிட்டவனின் பெயரும் குறிப்பிடப்படவில்லை. ‘வஞ்சிக்கோ’13 என்று பொதுவகையால் ஓரிடத்தில் குறிப்பிடப் படுகிறான். மற்றோரிடத்தில் ‘கொங்கர் படையைக் கொண்டவன்14 என்று குறிப்பிடு கிறார். மற்றும், பகைவர் என்றும் பிறவாறும் பொருள் தரக்கூடிய பல சொற்களால் (அடங்கார், உடற்றியார், ஒன்னார், காய்ந்தார், கூடார், செற்றார், தப்பியார், தெவ்வர், நண்ணார், நேரார், பிழைத்தார், புல்லார், மேவார்) சோழனை எதிர்த்தவர் குறிப் பிடப்படுகின்றனர். மற்றும் சங்க காலத்தில் செங்கணானை எதிர்த்தவன் கணைக்கால் இரும்பொறை என்று மட்டும் தெரிய வருகிறது. களவழியிலோ தெவ்வேந்தர்,15 வேந்தர்16 என்றெல்லாம் பல்வேறு அரசர்கள் சோழனை எதிர்த்த தாகக் குறிப்புள்ளது. திருமங்கை ஆழ்வார் குறிப்பிடும் சோழன் எதிரி ‘கழல் மன்னர்’17 விழல் மன்னர்’,18 ‘படை மன்னர்’19 என்று பன்மையால் காட்டப்படுகின் றனர். மற்றும் சிவனடியான் கோச்செங்கணானால் வெல்லப்பட்டவன் ‘விளந்தைவேள்’20 என்ற தெளிவான குறிப்பும் உள்ளது. இந்த வகையிலும் மேற்கண்ட மூவேறு பகைவர்களும் வேறுபட்டவர் என்பது தெளிவாகிறது. புறநானூற்றுக் கொளுவில் போர் நடந்த இடம் ‘திருப்போர்ப் புறம்’ என்று கூறப்பட்டுள்ளது. களவழியிலோ போர் நடந்த இடம் ‘கழுமலம்’21 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. திருமங்கை ஆழ்வார் போர் நடந்த இடம் ‘அழுந்தை’22 என்று குறிப்பிடுகிறனர். இந்த வகையிலும் மேற்கண்ட மூன்று போர் நிகழ்ச்சிகளும் வெவ்வேறானவையாய் அமைந்து விடுகின்றன. புறநானூற்றுப்படி சோழனை எதிர்த்தவன் சிறையிலடைக்கப் பட்டு மானம் கருதி உயிரைவிடுகிறான். களவழிப்படி சோழனை எதிர்த்தவன் தன் யானையுடன் போர்க்களத்திலேயே உயிர் துறக்கிறான்.23 களவழி உரைகாரரோ சோழனை எதிர்த்தவன் சிறையில் அடைக்கப் பட்டுப் பொய்கையாரின் களவழி நூலால் விடுதலை பெறுகிறான் என்று கற்பனை செய்கிறார். மற்றும் திருமங்கை ஆழ்வாரோ சோழனை எதிர்த்தவர் மாண்டனர் என்கிறார். மற்றும் கலிங்கத்துப் பரணி விலங்கைத் தகர்த்து விடுதலை செய்யப்பட்டதோடு அரசுரிமையும் அளிக்கப்பட்டான் என்று கூறுகிறது.24 இவையெல்லாம் வரலாற்றுச் செய்திகளைச் சொல்வதில் தழுவியும் நழுவியும் செல்வதைப் பார்க்கும்போது வெவ்வேறு நிகழ்ச்சிகள் என்றே கொள்ளத்தகும். இவை ஒருபுறம் இருக்க இவ் வரலாற்றுச் செய்திகளைத் தெரிவிக்கும் புலவர்களையும் எண்ணுவோம். சங்க காலத்து நிகழ்ச்சியைப் பாடிய புலவர் பொய்கையார். இவர் கோக்கோதை மார்பனைப் பாடியுள்ளார்.25 மற்றும் ‘பொறையன்’ என்னும் சேர அரசனையும் குறிப்பிட்டுள்ளார்.26 இந்தப் பொறையன் கணைக்கால் இரும்பொறைதான் என்று அறுதியிட்டுக் கூறமுடியாவிட்டாலும் பெயர் ஒப்புமை கருதி ஓரளவு ஏற்கத்தான் வேண்டும். ஆயின், இந்தக் கோதை மார்பனின் படைத்தலைவன் பிட்டன் என்று வரலாற்றுப் படி முடியும். பிட்டன் காலம் வேறு; கோச் செங்கணான் காலம் வேறு. முன்னது சங்ககாலத்தின் இடைப்பகுதி; பின்னது கடைப்பகுதி. மற்றும் கோக்கோதை மார்பன் பெருஞ்சேரல் இரும்பொறை என்னும் சேரமன்னன் என்று கொள்வது பொருத்தமானது என்று அவர்களது வரலாற்றில் விளக்கப்பட்டுள்ளது. எனவே, இந்தப் பொய்கையாருக்கும் கோச்செங்கணானுக்கும் தொடர்பில்லை எனல் சாலும். மற்றுக் களவழி நூலைப் பாடிய புலவரும் பொய்கையார் என்றாலும், களவழிப் பாடலில் காணப்படும் நடைவேறுபாட்டை எண்ணி அவர்களை வெவ்வேறு பொய்கையார் என்று கொள்ளலே தகும். மற்றும், மூன்றாவது நிகழ்ச்சியோடு தொடர்புடைய பொய்கை யாரோ ஆழ்வார் (திருமால் அடியவர்). புலவர் தொடர்பான இந்த வேறுபாடுகளும் இவர்களை வெவ்வேறு காலத்தவராகவே கொள்ள வைக்கின்றன. இந்த வரலாறு மூவேறு நிகழ்ச்சிகளாகக் கொள்ளத்தக்கது. செங்கணானுக்கு நல்லடி என்று ஒரு மகன் இருந்தான் என்று சிலர் கருதுகின்றனர். சோழர் குலத்தில் நல்லடி என்றும் ஒருவர் இருந்தார்.27 சோழநாட்டைக் களப்பிரர் கைப்பற்றி இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. ஏறத்தாழக் கி.பி. 250 அளவில் களப்பிரர் தமிழகத்தைக் கைப்பற்றினார்கள். அவர்களுக்குச் சோழநாடும் கீழ்ப்பட்டது. சேர பாண்டிய நாடுகளைக் களப்பிரர் கைப்பற்றிக் கொண்டதுபோலவே, சோழ நாட்டையும் கைப்பற்றிக் கொண்டார்கள். சோழன் செங்கணானோடு, சங்க காலத்துச் சோழர் ஆட்சி முடிவுற்றது எனலாம். பிற சோழ அரசர்கள் - 1 அரசுகட்டில் ஏறி நாடாளும் உரிமை பெறாத சில சோழ அரசர் குடியினரைப்பற்றிய குறிப்புகள் சங்கப் பாடல்களில் இடம் பெற்றுள்ளன. அக் குறிப்புகளிலிருந்து, அந்த அரசக் குடியினர் செங்கோல் வேந்தரின் தம்பியராகவோ, சிற்றப்பன் பெரியப்பன் பிள்ளைகளாகவோ இருந்திருக்க வேண்டும் என்பது புலனாகிறது. அவர்களுள் சிலர், சிறப்புமிகு பாவலராகவும் விளங்கினர். ‘எலி போன்றவர் நட்பு வேண்டா, புலிபோன்றவர் நட்பே போற்றிப் பேணத்தக்கது’ எனும் அரிய கருத்தை அறிவுறுத்தும் சோழன் நல்லுருத்திரன்,1 சோழன் நலங்கிள்ளியைப் போன்ற உணர்ச்சித் துடிப்பும் கற்பனை வளமும் வாய்ந்த புலவனாவான். கிள்ளிமரபினைச் சேர்ந்தோர் நெடுமுடிக்கிள்ளி மணிமேகலை என்னும் காப்பியத்தால் அறியப்படும் சோழ அரசன் நெடுமுடிக்கிள்ளி. ‘இவனும் நெடுங்கிள்ளியும் ஒருவரா? வெவ்வேறானவரா?’ என்னும் ஐயம் அறிஞர்களிடையே உண்டு. ஒருகால் இவன் ஒரு கற்பனைப் படைப்பாகவும் இருக்கக்கூடும். கிள்ளி என்பவன் புகார் நகரத்தில் இருந்து கொண்டு அரசாண்டான் என்பது மணிமேகலை வரலாற்றால் அறியப்படுகிறது. இவன் மகன் உதய குமரன். இவன் மணிமேகலையைக் காதலித்தான். அவளை அடைய முயன்ற போதெல்லாம் அடைய முடியாமல் ஏமாந்தான். இறுதியில் ஒரு வாய்ப்புக் கிடைத்தது. அவளைப் பலவந்தமாக அடையக் கருதி அவளது இருப்பிடம் சென்றபோது வேறொருவனால் கொல்லப்பட்டு மாண்டான். மகன் இவ்வாறு ஒருத்தியைக் கற்பழிக்க முயன்ற குற்றத்தைச் செய்து அந்தக் குற்றத்திற்காக வேறொருவனால் கொல்லப்பட்டு இறந்த செய்தியை நெடுமுடிக்கிள்ளி கேள்விப்பட்டான்; வருந்தினான். தன் மகன் இறந்தானே என்பது அவன் வருத்தம் அன்று. பிழை செய்தவனைத் தன் கையால் கொல்ல வாய்ப்பு இல்லாமல் போய்விட்டதே என்பதுதான் அவனது வருத்தம். இவனது முன்னோனான சோழ அரசன் ஒருவன் (மனுநீதிச் சோழன்) தன் மகனைத் தானே கொன்று தண்டனையை நிறைவேற்றி னான். (துள்ளி விளையாடிய கன்றுக்குட்டி தவறிக் தேர்க்காலில் சிக்கி இறந்தது) தேரைச் செலுத்திச் சென்றவன் சோழ அரசன் மனுவின் மகன். தாய்ப்பசு ஆராய்ச்சி மணியை அடித்தபோது வந்து பார்த்து, நிலைமையை அறிந்த அரசன் தன் ஒரே மகனை அதே இடத்தில் கீழே கிடத்தி, அவன்மேல் தன் தேரை ஏற்றிக் கொன்று தாய்ப் பசுவுக்கு நீதி வழங்கினான். இந்த நிகழ்ச்சியை நெடுமுடிக்கிள்ளி நினைத்தான். தன் மகனைத் தன் கையால் கொன்று நீதி வழங்கும் வாய்ப்பு இல்லையே என்று வருந்தினான். இந்த நிகழ்ச்சிபற்றிய செய்தி பிற வேந்தர்களின் காதுகளில் படுவதன் முன்னர்த் தன் மகனது உடலைத் தன் கண்ணில் படாமல் எரித்து விடும்படி ஆணையிட்டான். இவனது இந்தச் செங்கோன்மையை எண்ணும்போது தமிழர் உள்ளம் பெருமிதம் கொள்கிறது. மற்றும் இந்த அரசன் தன் மகன் கொல்லப்படக் காரணமாயிருந்த அந்தப் பெண்ணையும் கைதுசெய்து காவலில் வைக்குமாறு கூறினான். இவன் இவ்வாறு செய்ததிலும் தவறு இல்லை. அவன் அந்தப் பெண்ணைக் ‘கணிகையின் மகள்’ (விலைமாதர் மகள்) என்றே எண்ணியிருந்தான். இவளது வலையில்பட்டு இன்னும் பலர் தன் நாட்டில் அவலநிலை எய்தக்கூடும் என்று கருதினான். நாட்டு மக்களின் நலனுக்காகவே அவளைச் சிறையில் அடைக்கச் செய்தான். மணிமேகலை சிறையில் அடைக்கப்பட்டாள். நெடுமுடிக்கிள்ளியின் மனைவி இராசமாதேவி செய்தியை அறிந்து மகனைப் பிரிந்த துன்பத்தால் மணிமேகலைக்குப் பல துன்பங்கள் செய்தாள். மணிமேகலை அத் துன்பங்களைக் களைந்து நலமுடன் இருந்தது கண்டு அரசி அவளிடம் மன்னிப்பு வேண்டினாள். மேலே கூறப்பட்ட அரசமாதேவியின் பெயர் சீர்த்தி. அவள் திருமாலுக்கு மூன்றடி மண் வழங்கி மாண்ட ‘மாவலி’ அரச பரம்பரையில் தோன்றிய ஒருவனின் மகள்.2 நெடுமுடிக்கிள்ளி ‘புன்னையங்கானல்’ மணல்வெளியிலே உலாவிக் கொண்டிருந்தான். அங்கே தனித்து நின்ற ஓர் அழகியைக் கண்டான். பால் உணர்வுகள் அவர்களைக் கூட்டிவைத்தன. ஒரு மாதம் அவளுக்கும் அவனுக்கும் அவ்விடத்தில் களவு ஒழுக்கம் நடை பெற்றது. ஒரு மாதத்திற்குப் பின் அவளை அவ்விடத்தில் காண முடியாமல் ஏங்கினான். அங்கே வந்த சாரணர் அவள் நாகநாட்டு இளவரசியாய் இருக்கக்கூடும் என்றனர். நாகநாட்டு அரசன் வளை வணன். அவனது மனைவி வாசமயிலை. இவர்கள் இருவருக்கும் பிறந்தவள் பீலிவளை.3 இவள் பிறந்தபோது ‘இவள் வயது வந்தபின் கதிர்க் குலத்தவன் ஒருவனைக் களவில் கூடிக் கருவுற்ற நிலையில் திரும்பி வருவாள்’ என்று கணியர்கள் கணித்துக் கூறினர். இந்தச் செய்தி சாரணர்க்குத் தெரியும். அரசன் கூறிய கூற்றைச் சாரணர் கேட்டனர். சோழ அரசன் சூரிய குலத்தினன் எனவே, பீலிவளையைத்தான் அரசன் அடைந்து மகிழ்ந்திருக்க முடியும் எனக் கூறினர். (கருவுற்றுச் சென்ற பீலிவளை தான் கருவுற்ற நிலையை உணர்ந்தாள். உயிருடன் தன் தந்தை தாயாருக்குச் சுமையாக வாழ விரும்பவில்லை. எனினும், வயிற்றில் உள்ள குழந்தைக்காக வாழ்ந்தாள். குழந்தை பிறந்தது; ஆண் குழந்தை. அங்கு வந்த வாணிகர் கண்களில் படும்படி குழந்தையைக் கிடத்தி விட்டுச் சென்றுவிட்டாள். வாணிகர்கள், யாரும் இல்லாமல் கிடந்த குழந்தையைக் கண்டு எடுத்துவந்து சோழநாட்டில் சேர்ப்பித்தனர். தாய் மாண்டாள்; குழந்தை தன் தந்தை நாட்டுக்கே வந்துவிட்து.)4 வஞ்சி வெற்றி நெடுமுடிக்கிள்ளி நாட்டுப் பரப்பை விரிவுபடுத்தக் கருதினான். இதனால் இவன் வஞ்சி நகரைத் தாக்கினான். வெற்றி பெற்றான். காரியாற்றுப் போர் இவனது தம்பி இவனுக்காகக் காரியாறு என்னுமிடத்தில் போரிட்டான். இவனை எதிர்த்துச் சேரரும் பாண்டியரும் போரிட்டனர். வெற்றி சோழர்களுக்குக் கிடைத்தது.5 பெயர்களும் அடைமொழிகளும் ‘கிளர்மணி நெடுமுடிக்கிள்ளி’,6 ‘அணிகிளர் நெடுமுடி அரசாள்வேந்தன்’,7 ‘மாவண் கிள்ளி’8 இவற்றில் முதல் இரண்டு தொடர்களும் இவன் தலையில் அணிந்திருந்த முடியின் சிறப்பை உணர்த்துகின்றன. ‘மாவண்கிள்ளி’ என்னும் தொடரும் ‘மாவண் சோழர்’9 என்னும் தொடரும் எந்த அளவு ஒற்றுமை உடையவை என்பது விளங்கவில்லை.10 இசைவெங்கிள்ளி இவன் அம்பர் என்னும் ஊரைத் தலைநகராகக் கொண்டு அரிசிலாற்றங் கரையைச் சூழ்ந்த பகுதியை அரசாண்டு வந்தான். இவன் பாண்டிய அரசன் ஒருவனோடு போரிட்டு வெற்றி கண்டான்.11 இவன் புதுமை அழகுடன் திகழும் வெற்றிக் கொடியை நாட்டி மகிழ்ந்தான். இவன் கைகளிலெல்லாம் மலர் மாலைகளை அணிந்து கொண்டான். இவன் களிற்றின்மேல் ஏறிப் போருக்கெழும் கோலம் அன்றைய மக்கள் உள்ளத்தைக் கவர்ந்திருந்தது.12 இசைவெங்கிள்ளி என்பதற்கு இசைத் தமிழில் வேட்கையுடைய கிள்ளி என்றோ, புகழ்மீது வேட்கையுடைய கிள்ளி என்றோ பொருள் கொள்ளலாம். கைவண் கிள்ளி கரிகாலன் பெரும்போரில் ஈடுபட்ட ஊர் வெண்ணி என்பதை அறிவோம். இந்த வெண்ணியினைத் தலைநகராகக் கொண்டு ஒரு சமயம் ‘கைவண் கிள்ளி’13 என்பவன் ஆண்டுவந்தான். சோழன் நலங்கிள்ளியின் தம்பி மாவளத்தான் ‘கைவண் தோன்றல்’14 என்று குறிப்பிடப்படுகிறான். இந்தக் கைவண்மை குதிரை பூட்டிய தேரை ஓட்டுவதில் இவன் பெற்றிருந்த திறமையைக் குறிக்கிறது. இதனோடு மேற்கூறிய கைவண் கிள்ளிக்கு எந்த அளவு தொடர்பு உண்டு என்பது தெரியவில்லை. பொலம்பூண் கிள்ளி15 பொலம்பூண் கிள்ளி என்று குறிப்பிடப்படும் இவன் காவிரிப்பூம் பட்டினத்தில் இருந்துகொண்டு காவிரி ஆற்றுப் பள்ளத்தாக்கிலுள்ள நாட்டை ஆண்டுவந்தான். இவன் கோசர்களின் படையை அழித்தான். அன்றியும், அவர்களது நாட்டையும் கைப்பற்ற முயன்றான். கடுமான் கிள்ளி ‘கதிரிலை நெடுவேல் கடுமான் கிள்ளி’ என்று குறிப்பிடப்படும். இந்த அரசன் தன் யானையைக் கொண்டு பகைவர் மதில்களைத் தாக்கி அழித்தான் என்று தெரிகிறது. வாள்பட்ட புண் ஆறி வடுப்பட்ட மேனியுடன் விளங்கிய ஏனாதிப் பட்டம் பெற்ற திருக்கிள்ளி என்னும் படைத்தலைவன் ‘கடுமான் கிள்ளி’ என்று குறிப்பிடப்படுகிறான்.16 சோழன் நலங்கிள்ளியின் தம்பி மாவளத்தான் என்பவன் ‘கடுமான் தோன்றல்’17 என்று குறிப்பிடப்படுகிறான். மேலே கூறப்பட்ட கடுமான் தோன்றல் அடுத்துக் கண்ட இருவருள் ஒருவனாகவோ, தனியொருவனாகவோ இருக்கலாம். மணக்கிள்ளி ‘சோழன் மணக்கிள்ளி’ என்னும் பெயரைப் பதிற்றுப்பத்து நூலைத் தொகுத்த ஆசிரியர் குறிப்பிடுகிறார். ‘நெடுஞ்சேரலாதற்குச் சோழன் மணக்கிள்ளி ஈன்ற மகன்’18 செங்குட்டுவன் என்று அது குறிப்பிடுமிடத்தில் இப் பெயர் பெண்ணின் பெயராக அமைந்திருப்பதைக் காண்கிறோம். மணக்கிள்ளி என்னும் சோழ அரசனின் மகனது பெயரும் மணக்கிள்ளி என்றே வழங்கப்பட்டிருக்கலாம். ‘செங்குட்டுவனின் தாய்ப்பாட்டான்’ஞாயிற்றுச் சோழன்’ என்றும் குறிப்பிடப்படுகிறான்.19 இங்கும் செங்குட்டுவனது தாயின் பெயர் காணப்படவில்லை. (ஆனால் இந்தப் பகுதிக்கு உரை கூறுகையில் அடியார்க்குநல்லார் ஞாயிற்றுச் சோழனை நெடுந்தேர்ச் சோழன் என்று சிறப்பித்துக் கூறி அவனது மகளுக்கு ‘நற்சோணை’ என்னும் பெயரையும் குறிப்பிட்டுள்ளார்.) பிற சோழ அரசர்கள் - 2 சோழர் குடியினர் ஒன்பது இடங்களில் செல்வாக்குடன் தனித்தனிக் குடியினராய் விளங்கினர். அவர்களுள் புகார், உறையூர், கழார் ஆகிய ஊர்களில் இருந்துகொண்டு அரசாண்ட சோழ அரசர்கள் வரலாற்றை இதுவரைகண்டோம். பிற இடங்களில் (ஆர்க்காடு, வல்லம் ஆகிய இடங்களில்) இருந்து கொண்டு அரசாண்ட சோழ அரசர்களின் பெயர்கள் தெரிய வருகின்றன. ஆர்க்காட்டுச் சோழர்1 நாடு ஆர்க்காடு நீர்வளம் மிக்க ஊர். நெல்வயல் நீரில், நெய்தல் பூவிலுள்ள தேன் கலந்து பாயும்.2 இந்த ஆர்க்காட்டைச் சூழ்ந்திருந்த பகுதியை நாம் ஆர்க்காட்டு நாடு என்று குறிப்பிட்டுக் கொள்வோம். இந்த ஆர்க்காட்டு நாட்டில் வாழ்ந்த குடியினருள் ஒருவர் இளையர். இந்த இளையர் குடியினர் அலையலையாக வரும் வெள்ளம்போல் அணியணியாகச் சென்று வேட்டையாடுவார்கள். அவர்கள் வேட்டை யாடிப் பெற்ற பொருள்களில் குறிப்பிடத்தக்கது யானைக்கோடு.3 இந்த இளையர் குடியினர் வாள் வீரர்களாய் விளங்கினர்.4 இவர்களின் பெருமகனாய் (தலைவனாய்) அழிசி என்பவன் விளங்கினான். ஆர்க்காட்டு நாட்டில் இருந்த காடு இந்த அரசன் அழிசியின் பெயராலேயே’அழிசியம் பெருங்காடு’ என வழங்கப்பட்டது.5 இந்தக் காட்டு நெல்லிக்கனிகள் சிறப்புப் பெற்றவை. நீர்வளம், நெல்லைமரக் காடு, சோழர் குடியினர் ஆட்சி ஆகிய வற்றை எண்ணும்போது இந்த ஆர்க்காடு தஞ்சை மாவட்டத்தில் உள்ளதாக இடைக்காலக் கல்வெட்டுகள் குறிப்பிடும் ஆர்க்காட்டுக் கூற்றமோ என்று எண்ண வேண்டியுள்ளது. இந்த ஆர்க்காட்டைத் தலைநகராகக் கொண்டு அரசாண்ட அரசர்களுள் மூன்று பேரைப் பாட்டன் - தந்தை - மகன் என்னும் உறவு முறையில் நாம் காணமுடிகிறது. அவர்கள் இவர்கள்: ஆதன் அழிசி சேந்தன் ஆதன்6 ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் தன் அரசவையில் நட்புரிமையுடன் விளங்கிய ஐந்து பேரைக் குறிப்பிடுகையில் ஆதன் அழிசி என்னும் ஒருவனைக் குறிப்பிடுகிறான். இந்த அழிசி பிற புலவர்களால் குறிப்பிடப்படும் ஆர்க்காட்டு அரசன் அழிசியே என்று கொள்வதில் தவறில்லை. ஆயின், அந்த அழிசியின் தந்தை பெயர் ஆதன் என்பது பெறப்படுகிறது. இவனைப்பற்றி வேறு செய்திகள் தெரியவில்லை. அழிசி மேலே குறிப்பிட்டபடி இவன் ஒல்லையூர் தந்த பூதப் பாண்டியனுடைய நண்பனாக விளங்கினான். இதனால் இவன் சோழப் பேரரசின் தலைமை இடத்தோடு முரண்பட்டிருந்தானோ என்று எண்ண வேண்டியுள்ளது. பேரரசர்கள் பகையரசனின் சிற்றரசர்களைத் தம்வயப்படுத்திக் கொள்வது உண்டு. அந்த வகையில் இந்த அழிசி பாண்டியனின் நண்பனாய் விளங்கியிருக்கலாம். இவன் காவிரி ஆற்றங்கரையிலுள்ள மருதமரத்தில் கட்டி வைக்கப்பட்டான் என்றும், இந்தச் செய்தி நாடெங்கும் பரவியது என்றும் கூறப்படுகிறது7 இவன் பாண்டியனோடு சேர்ந்து கொண்டதால் சோழர்க்கு எதிராகப் படையெடுத்தான் என்று கருதிச் சோழப் பேரரசன் இவனை இவ்வாறு பலரும் நீராடும் நீர்த்துறையில் கட்டிவைத்து இழிவுபடுத்தியிருக்க கூடும் என்று எண்ண இடமுண்டு. அழிசி, ‘வெல்போர்ச் சோழர்’ குடியில் தோன்றியவன்;8 இளையர் குடியினரிடையே தலைமையாக விளங்கியவன்,9 மலர்மாலை அணிந்து கொண்டு இவன் தேரில் உலாவருதல் கண் கொள்ளாக் காட்சி10 ஆகும். சேந்தன் அழிசி பாண்டியனின் நண்பனாக விளங்கினான் என்று கூறுவதைத் தவிர அவனது சிறப்புமிக்க அரசியல் தொடர்பான செயல்கள் வேறு ஒன்றும் இல்லை. அன்றியும் இவனது பெயரும் புகழும் அக்காலத்திலேயே பிற நாடுகளில் அவ்வளவாகப் பரவவில்லை. (எனினும், அவன் நாட்டுமக்கள் ஆர்க்காட்டையே அழிசியம் பெருங்காடு’ என்று குறிப்பிடும் அளவுக்கு அவனைப் பெரிதும் போற்றி மதித்தனர்.) எனவே, அயல்நாட்டு மக்களுக்கும் புலப்படும்படி இவனை அறிமுகப்படுத்தும் புலவர்கள் இவன் மகன் சேந்தனைக்கொண்டு அறிமுகப்படுத்துவராயினர். அவர்கள் ‘சேந்தன் தந்தை அழிசி’ என்றே தெளிவாகக் குறிப்பிடுகின்றனர்.11 போர் சேந்தன் அரிய கோட்டையைத் தாக்கி வென்றான் என்று கூறப்படுகிறது. அந்தப் போரின்போது அவன் வேலில் படிந்த புள்ளி புள்ளியான குருதிக் கறையைத் துடைக்காமல் வெற்றிச் சின்னமாக அப்படியே வைத்துக் கொண்டு தோற்றமளித்த நிலைமையைப் புலவர் வியந்து குறிப்பிட்டுள்ளார்.12 இவன் ‘ஏந்து கோட்டு யானைச் சேந்தன்’ என்று சிறப்பிக்கப் பட்டுள்ளான். இதனால், இவன் யானைமீது ஏறிக் காட்சி தந்த நிகழ்ச்சிகள் பல எனலாம். இவன் தந்தை தேரில் ஏறிக் காட்சி தந்ததை இவ்விடத்தில் ஒப்புநோக்கலாம். யானை வேட்டையாடுவதில் வல்ல இளையர் குடியினர்க்கு இவன் தந்தை, தலைவனாக விளங்கியதற்கும், இவன் யானைமீது தோன்றியதற்கும் தொடர்பு இருப்பதைக் காணலாம். இந்தச் சேந்தன் சோழப் பேரரசனுக்குத் துணைவனாய் விளங்கினான் என்று கொள்ளலாம். இதனால், இவன் தந்தை இவனைக் கொண்டு அறிமுகப்படுத்தப்படுகிறான் என்றே கொள்ளலாம். படை எடுத்த கொடியவனை நேரடியே அறிமுகப்படுத்த விரும்பாத புலவர், அவனது மகன் நல்லவனைக் கொண்டு அறிமுகப்படுத்துகிறார் என்று எண்ணுவது பொருத்தமே. அழிசி தன்னலத்துக்காகப் பாண்டியனோடு உறவு பூண்டான். அவன் மகன் சேந்தன் தன் நாட்டு மக்கள் நலனுக்காகத் தன் தந்தைக்கு மாறாகச் சோழப் பேரரசனுக்குத் துணையாய் விளங்கினான். இதனால், சேந்தன் போற்றப்பட்டான். இந்த நல்லவன் வழியே தீயவன் அறிமுகப்படுத்தப்படுகிறான். (கதைகளிலும் நாடகங்களிலும் நல்ல வனைத் தலைவனாகவும், அவன் வழிக் கயவனை இழிந்தவனாகவும் காட்டுவது போலக் காட்டப்படுகிறான்.) சோழர் மருகன் நல்லடி நல்லடி என்னும் அரசன் ‘சோழன் மருகன்’ என்று குறிப்பிடப் படுகிறான். ‘சோழர்வழி வந்தவன்’ என்பது இதன் பொருள். இவன் ‘வல்லங்கிழவோன்’ என்று குறிப்பிடப்படுவதால் வல்லம் என்னும் ஊர்மக்களின் நன்மதிப்பினைப் பெற்ற அரசியல் தலைவனாக விளங்கினான் என்பது பெறப்படும். இவனது கோட்டைக் கதவுகளை இவனது பகைவர்கள் தாக்கி னார்கள். பகைவர்கள் தாக்குவார்கள் என்று நல்லடி எதிர்பார்க்காத போதே தாக்கினார்கள். ஆரியப் படை, வல்லம் என்னும் ஊரைத் தாக்கியது என்பதை யும், அவ்வூரை அடுத்திருந்த காவற்காட்டில் அந்தத் தாக்குதல் முறியடிக்கப்ட்டது என்பதையும் பின்னர்க் காணலாம். இந்த ஆரியரே இந்த நல்லடியைத் தாக்கியவர்கள் என்றும், நல்லடி அவர்களை முறியடித்தான் என்றும் நாம் கொள்ளலாம். சோழரின் படைத்தலைவர்கள் சோழ வேந்தர்களின் படைத்தலைவராய் விளங்கியவர்களுள் நான்கு பேர்களின் பெயர்கள் தெரியவருகின்றன. பழையன் (சோழன் மறவன்),13 ஏனாதி திருக்கிள்ளி,14 சோழிய ஏனாதி திருக்குட்டுவன்,15 மலையமான் சோழிய ஏனாதி திருக்கண்ணன்.16 இந்த நால்வருள் பழையன் வரலாறும் மலையமான் வரலாறும் குறுநிலத் தலைவர்கள் வரிசையில் விளக்கப்படுகின்றன. சோழிய ஏனாதி திருக்குட்டுவன் வரலாறு சேரர் வரலாற்றுப் பகுதியில் உள்ளது. எஞ்சியுள்ள ஏனாதி திருக்கிள்ளி வரலாறும் கிள்ளி அரசர் வரிசையில் உள்ளது. தொகுத்துக் காட்டும் முறையில் இவர்களை இங்குக் குறிப்பிட்டோம். சோழ வேந்தரின் கால அடைவு சங்ககாலச் சோழ வேந்தரின் வரலாற்றை வரைவதற்குச் சங்க இலக்கியப் பாடல்களே பேருதவியாக உள்ளன. ஆனால், அவற்றில் ஒரு குறையுண்டு. அரசர்களின் ஆட்சிக் காலத்தைப் பற்றியோ, எந்த ஆண்டில் யார் ஆட்சிக்கு வந்தனர் என்பதைப் பற்றியோ அவை யாதும் கூறுவது இல்லை. காலவரன்முறை, வரலாற்றின் கண்ணாகப் போற்றப்படுகிறது. காலத்தை வரையறுக்க நமக்கு அகச்சான்றுகள் கிடைக்கவில்லை. எனினும், அப் பாடல்களில் காணப்படும் சிற்சில குறிப்புகளையும், அம் மன்னர்களைப் பாடிய புலவர்களைச் சில தலைமுறையினராக வகைப்படுத்துவதற்குரிய செய்திகளையும், புறச்சான்றுகள் சிலவற்றையும் கொண்டு, சங்ககாலச் சோழ வேந்தர்களை ஒருவகையாகக் ‘காலத்தால் முற்பட்டவர் - பிற்பட்டவர் யாவர்’ என்பதைத் துணிந்து, அம்முறையில் அவர்களுடைய வரலாற்றை வரைந்துள்ளோம். இனி, அவர்களுடைய ஆட்சிக் காலத்தைக் கணிக்கும் முயற்சியில் ஈடுபடலாம். அசோகனின் கல்வெட்டுகளால், கி.மு. மூன்றாம் நூற்றாண்டிலேயே சோழ வேந்தர் தமிழகத்தில் ஆட்சி புரிந்தனர் என்பதை நாம் முன்னரே கண்டோம். பண்டைத் தமிழகத்து வேந்தருள் காலத்தால் மிகவும் முற்பட்ட வனாகக் கரிகாலன் காட்சி அளிக்கிறான். அவனைப் பற்றிப் பல வரலாற்றுச் செய்திகளை அறிய முடிகிறது. அவனை வெண்ணிக் குயத்தியார்,1 கருங்குழலாதனார்,2 குடவாயில் கீரத்தனார்,3 கழாஅத் தலையார்,4 பரணர்5 போன்ற புலவர்கள் பாடியுள்ளனர். கரிகாலன் காலத்தில் சேரமான் பெருஞ்சேரலாதன் எனும் சேர அரசன் சிறப்புற்று விளங்கினான்.6 கழாஅத்தலையார் என்னும் புலவர் அவனைச் சுட்டுகிறார்.7 இப் பெருஞ்சேரலாதன் பதிற்றுப்பத்தின் முதற்பத்தில் பாராட்டப் படும் பெருஞ் (சோற்றுதியன்) சேரலாதனாக இருத்தல் கூடும். இதைக் கருதுகோளாகக் கொண்டால், இவனுடைய மகன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் என்பது போதரும். இமயவரம்பன் மகனே (கடல் பிறக்கோட்டிய) செங்குட்டுவனாவான். இதனால், சேரன் செங்குட்டுவன் கரிகால் பெருவளத்தானுக்கு இரு தலை முறைகள் பிற்பட்டவனாவான். கரிகாலன் காலத்தில் காவிரிப்பூம்பட்டினம் சிறப்புற்று விளங்கியது. அதன் சிறப்பினைப் ‘பெரிபுளூஸ்’ எனும் நூல் சுட்டுகிறது. இந்நூல் தொகுக்கப்பட்ட காலம் கி. பி. 81-க்கும் கி.பி. 96-க்கும் இடைப்பட்ட காலமாகும்.8 எனவே, இதற்கு முன்பே கரிகாலனால் பூம்புகார் வலிவும் பொலிவும் பெற்றிருக்கவேண்டும் என்பது புலனாகிறது. இதனால், கரிகாலன் கி. பி. முதல் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்தவனாகத் தோன்றுகிறது. சேரன் செங்குட்டுவன் - கயவாகு (காமனி அபயன்) காலக் கணிப்பினை அறிஞர்கள் கணித்துள்ளனர். பரணவிதானே எனும் இலங்கை வரலாற்றறிஞர் கயவாகுவின் காலத்தைக் கி. பி. 111 - 136 என்று கணக்கிட்டுள்ளார்.9 சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்குக் கோயில் குடமுழுக்கு விழா நடத்தியது, அவனுடைய ஆட்சியின் இறுதிப் பகுதியிலாகும். அப்பொழுது தான் கயவாகு ஆட்சிக்கு வந்து சில ஆண்டுகளே கழிந்திருக்க வேண்டும் எனத் தோன்றுகிறது. கி.பி. 115-ல் வஞ்சிமாநகரில் இத் திருவிழா நடந்ததாகக் கூறலாம். இதற்குப் பிறகு நான் கைந்து ஆண்டுகளே செங்குட்டுவன் ஆட்சி செய்ததாக அறிகிறோம். அவன் மொத்தம் 55 ஆண்டுகள் ஆட்சி செய்ததாகப் பதிற்றுப்பத்துப் பதிகம் தெரிவிக்கிறது. இவ்வடிப்படையில், செங்குட்டுவன் கி. பி. 65 முதல் கி. பி. 120 வரை ஆட்சி செய்தவனாகலாம். அவனுடைய தந்தையான இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் 58 ஆண்டுகள் ஆட்சி புரிந்ததாகப் பதிற்றுப்பத்தின் பதிகத்தால் அறிகிறோம். அவன் கி. பி. 7 முதல் கி. பி. 65 வரை ஆட்சி செய்தவ னாகலாம். இவனுடைய தந்தை பெருஞ்சேரலாதன் கரிகாலனோடு போரிட்டு மாண்டான். அவனுக்குப் பிறகு இவன் அரசுகட்டில் ஏறியுள்ளான். எனவே, பெருஞ்சேரலாதன் இறந்தது கி. பி. 7 ஆம் ஆண்டு எனத் துணியலாம். கரிகாலன் சேரனோடு நடத்திய போர் வெண்ணிப்போர் என்பதாகும்.10 அஃது அவனுடைய கன்னிப் போராகும். எனவே, கி. பி. 7 ஆம் ஆண்டிற்குச் சற்று முன்பே கரிகாலன் ஆட்சிக்கு வந்திருத்தல் கூடும். கரிகாலன் கி. பி. 6 ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்ததாகக் கொள்ளலாம். ஓர் அரசனுடைய ஆட்சிக் காலத்தை 25 ஆண்டுகள் கொண்டதாகக் கொள்ளுவது ஆராய்ச்சியாளர் வழக்கம். இவ்வடிப்படையில் கரிகாலன் கி. பி. ஆறாம் ஆண்டு முதல் கி. பி முப்பதாம் ஆண்டுவரையில் ஆட்சி செய்ததாகக் கொள்ளலாம். இந்தக் காலத்தை மையமாகக் கொண்டால், கரிகாலனுக்கு முற்பட்ட பெருநற்கிள்ளி, சேட்சென்னி அரசர்களும், கோப்பெருஞ் சோழனும் கி. மு. முதல் இருநூற்றாண்டுகளில் ஆட்சி செய்தவர்களாகத் தோன்றுவர். கரிகாலனுக்குப் பிறகு நலங்கிள்ளி ஆட்சிக்கு வந்ததாகத் தெரிகிறது. அவன் கி. பி. 30 - 55 வரை ஆட்சி செய்ததாகக் கொள்ளலாம். அவனுடைய மகன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் கி. பி. 56 முதல் கி. பி. 80 வரை ஆட்சி புரிந்திருக்கக்கூடும். இவனுடைய காலத்தை யொட்டிக் குராப்பள்ளித் துஞ்சிய கிள்ளிவளவன் ஆண்டதாகக் கண்டோம். எனவே, கி. பி. 81 முதல் கி. பி. 105 வரை இவன் ஆண்டதாகத் தெரிகிறது. இதற்குப் பிறகு இரண்டு அல்லது மூன்று தலைமுறைச் சோழ அரசர்கள் யாவர் எனத் துணிய இயலவில்லை. கானப்பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதியின் சமகாலத்தவ னாக இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி காணப்படுகிறான். இவன் தலையாலங்கனாத்துச் செருவென்ற நெடுஞ்செழியனுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்தவனாவான். இவனுடைய சமகாலத்துப் புலவரான நக்கீரர். கிள்ளிவளவனிடத்துப் பழையன் மாறன் தோற்றோடியதைச் சுட்டுகிறார்.11 எனவே, கிள்ளிவளவனுக்குப் பிறகு தலையாலங் கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் ஆட்சி புரிந்ததாகத் தெரிகிறது. இரண்டு தலைமுறை சோழ ராட்சியில் இடைவெளி காணப்படுவதாகக் கொண்டு கணக்கிட்டால். கி. பி. 155 முதல் 180 வரை இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி ஆட்சி செய்ததாகக் கொள்ளலாம். இவனுக்குப் பிறகு யார் ஆட்சி செய்தார்கள் என்பது உறுதியாகத் தெரியவில்லை. சோழ மரபின் சிறப்புமிக்க கடைசி அரசன் சோழன் செங்கணான். அவன் இராசூயம் வேட்ட பெருநற்கிள்ளிக்குக் காலத்தால் இரண்டு மூன்று தலைமுறைகள் பிற்பட்டவனாவான். இவன் கணைக்கால் இரும்பொறையோடு போரிட்டான் என்பதைக் கண்டோம். கணைக் கால் இரும்பொறை என்றும் சேர வேந்தன் மாரிவெண்கோ என்னும் சேர அரசனுக்குக் காலத்தால் மிகவும் பிற்பட்டவன்; எனவே, இரண்டு தலைமுறைகளுக்குப் பின்னால் தோன்றியவன் எனக் கொள்ளலாம். மாரிவெண்கோ இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளியின் சமகாலத்து அரசன் என்பது முன்னர்ச் சுட்டப்பட்டது. எனவே, சோழன் செங்கணான் கி. பி. 230 முதல் கி. பி. 255 வரை ஆட்சி புரிந்ததாகக் கூறலாம். ஏறக்குறைய ஆறு நூற்றாண்டுகள் (கி. மு. 300 முதல் கி. பி. 300வரை) சங்ககாலச் சோழ மன்னர் ஆட்சிபுரிந்தமை இந்தக் காலக்கணிப்பினால் புலனாகிறது. செங்கணானுக்குப் பிறகு களப்பிரர் இடையீட்டால், தமிழக அரசியல் வானிலிருந்து சோழ அரசமரபு பைய மறைந்துவிட்டது. ஆந்திர நாட்டில் ஆந்திரச் சோழ அரசமரபு ஒன்று கி. பி. நான்காம் நூற்றாண்டில் தோன்றியுள்ளதைக் காணுகின்றோம். பாண்டியர் 3. பாண்டியர்* பாண்டிய நாடு தமிழகத்தின் தென்கோடியில் கிழக்கே வங்காளக் குடாக் கடலையும், தெற்கே குமரிக் கடலையும், மேற்கே அரபிக் கடலையும் எல்லைகளாகக் கொண்டிருந்தது. யவனர் இம் மூன்று கடல்களையும் செங்கடல் என்னும் பொருட்பட எரித்திரையக்கடல்1 என்று அழைத்தனர். பாண்டிய நாட்டுக்கும் இலங்கைக்கும் இடையில் கடல் உள்ளது. இராமேசுவரத்திற்கு வடபால் உள்ள கடற்பகுதி ‘பாக்’ கடலிணைப்பு என்றும், தெற்கிலுள்ள சிறு பகுதி ‘மன்னார் வளைகுடா’ என்றும் வழங்கப்படுகின்றன. இக் கடற்பகுதிகளைப் பெரிபுளூஸ் நூல் ‘ஆர்கலஸ்’2 என்றும், தாலமி ‘ஆர்கலிக் கடல்’ என்றும் குறிப்பிடு கின்றனர். இதனால் ‘ஆர்கலி கடல்’ என்னும் பெயர்3 இப் பகுதிக்கு வழங்கியதாகக் கொள்ளலாம்.4 இப்போது இராமேசுவரம் இருக்கும் பாம்பன் தீவு முற்காலத்தில் பாண்டிய நாட்டோடு இணைந்திருந்தது. நானூறு ஆண்டுகளுக்கு முன் போர்ச்சுகீசியர் வந்து வாணிகம் செய்த காலத்தில் பெரும்புயல் ஒன்று அடித்து இந் நிலப்பகுதி கரைந்து தீவாக உருக் கொண்டது. ஆகையால், சங்க காலத்தில் இந்தத் தீவு பாண்டிய நாட்டோடு இணைந் திருந்தது. பல்லாயிரம் ஆண்டுகளுக்குமுன் இப்போதுள்ள இலங்கைத் தீவும் பாண்டிய நாடும் இணைந்து ஒரே நிலப்பரப்பாக இருந்தது. கன்னியாகுமரிக்குத் தெற்கிலும், கிழக்கிலும் அக்காலத்தில் நிலங்கள் இருந்தன. பின்னர் அவ்வப் போது தோன்றிய புயல்களினாலும், கடல் கொந்தளிப்பினாலும் கரைந்தும் சிதைந்தும் அந்நிலப் பகுதிகள் மறைந்துபோயின. இப்பொழுது இலங்கை என்று வழங்கப் பெறும் நிலப்பகுதி சங்க காலத்தில் ‘ஈழம்’ எனப் பெயர் பெற்றிருந்தது. இலங்கை தனியாகப் பிரிந்துபோன பிறகும், எஞ்சியிருந்த நிலப் பகுதிகளில் பல, கொஞ்சம் கொஞ்சமாகக் கடலில் முழுகிப் போயின. முழுகிப்போன பகுதிகளில் பல பாண்டியருடைய ஆட்சியில்இருந்தன. பாண்டிய அரசர்கள் அமைத்திருந்த தலைச்சங்கம். இடைச்சங்கம் என்ற இரண்டு தமிழ்ச் சங்கங்களும், கடலில் மூழ்கிப்போன நாட்டில் இருந்தன என்று பழைய செவிவழிச் செய்தி கூறுகிறது. சிலப்பதிகார மும், கலித்தொகையும், இறையனார் அகப்பொருள் உரைப்பாயிரமும் பாண்டிய நாட்டின் தெற்கே பரவியிருந்த நிலப்பகுதிகள் கடலில் மூழ்கிப் போனதைப்பற்றிக் கூறுகின்றன.5 இலங்கை வரலாற்றைக் கூறும் மகாவம்சமும் இச் செய்தியை வலியுறுத்துகிறது.6 அக் காலத்திலும் குமரித்துறை புண்ணிய தீர்த்தமாகக் கருதப்பட்டது. கி. பி. இரண்டாம் நூற்றாண்டில் குமரித் துறையில் இருந்து இலங்கைப் பக்கமாக கடலில் இடையிடையே பாறைக்கற்கள் காணப்பெற்றதை மணிமேகலை கூறுகிறது.7 இந்திய நாட்டு மக்கள் காசிக்குச் சென்று கங்கையில் நீராடிய பிறகு குமரித் துறையிலும் நீராடினர். பாண்டிய நாட்டிற்குத் தெற்கே இலங்கை வரையில் இருந்து பின்னர் மூழ்கிப்போன நிலம் ‘லெமூரியா’ என்றும். ‘குமரிக்கண்டம்’ என்றும் கூறப்படுகிற பழங்காலப் பெரிய நிலப் பரப்பு அன்று. இப்பொழுது இந்தியப் பெருங்கடல் என்று கூறப் பெறுகிற பெரிய நிலப்பரப்பு மிகப்பழைய காலத்தில் ஆப்பிரிக்காக் கண்டம் முதல் ஆஸ்திரேலியா வரையில் பரந்த பெரிய நிலமாக இருந்தது என்றும், அதற்கு ‘லெமூரியா’ என்னும் பெயர் வழங்கிய தென்றும், பின்னர் அக்கண்டம் மறைந்துபோய் இந்தியப் பெருங்கடல் தோன்றியதென்றும் நிலப் பொதியியல் அறிஞர்கள் கூறுகின்றனர். மிகப் பழங்காலத்தில் இருந்த லெமூரியாக் கண்டம் வேறு; சங்க காலத்தில் கன்னியாகுமரிக்கு அருகிலே இருந்து மறைந்து போன நிலப்பரப்பு வேறு. இவை இரண்டையும் ஒன்றாகக் கூறுவது கூடாது.8 மேற்கு எல்லைப் பகுதி சங்க காலத்துப் பாண்டிய நாடு மேற்குக் கரைப்பக்கத்தில் இப்போதைய தென்திருவாங்கூர் வரையில் பரவி இருந்தது. பொதிகை மலை நாடும், நாஞ்சில் நாடும் தென்திருவாங்கூர் வரையில் பாண்டிய நாட்டுடன் சேர்ந்திருந்தன. ஆய் என்னும் வேள் அரசர் பொதிகை மலை நாட்டை அரசாண்டார். பாண்டிய அரசர்களைச் சேர்ந்திருந்த ஆய்ச் சிற்றரசர்களின் நாடு, மேற்குக் கடற்கரை வரையில் விரிந்து இருந்தது. வடக்கு எல்லைப் பகுதி முதுகோடி (தனுஷ்கோடி) பாண்டிய நாட்டைச் சேர்ந்திருந்தது.9 தென்வெள்ளாறும் அதன் பகுதியாகிய கொடும்பாளூரும் பாண்டிய நாட்டின் வடஎல்லைகளாகும். கொடும் பாளூரையாண்ட குறுநில மன்னர்கள் இருங்கோவேள் என்பவராவர்.10 திண்டுக்கல் பாறையும், கோடைக்கானல் மலைகளும் பாண்டிய நாட்டின் வடக்கே இருந்தன. கோடைக்கானலில் தென்னவன் மறவனான கோடைப் பொருநன் பாண்டியருடைய சேனாதிபதியாக இருந்தனன்.11 பன்றிமலைகள் எனப்படும் வராக மலைகளும் பாண்டிய நாட்டின் வடபகுதியில் இருந்தன. அரபிக் கடலை அடுத்திருந்த வேணாடு சங்ககாலத்தில் பாண்டிய நாட்டைச் சேர்ந்திருந்தது. பாண்டிய நாட்டு மலைகள் இருங்குன்றம் இக் குன்றம் அக்காலத்தில் கீழ்இரணியமுட்ட நாட்டைச் சேர்ந் திருந்தது. ஓங்கிருங்குன்றம். கேழிருங்குன்றம், மாலிருங்குன்றம், திருமால்குன்று. திருமால் இருஞ்சோலை, சோலைமலை முதலான சிறப்புப் பெயர்கள் இதற்கு வழங்கின. இம் மலையில் கண்ணன். பலராமன் ஆகிய இருபெருந் தெய்வங்களுக்கும் கோயில்கள் இருந்தன.12 புண்ணிய சரவணம், பவகாரணி, இட்டசித்தி என்னும் மூன்று பொய்கைகள் இங்கிருந்தன.13 சிலம்பாறு அல்லது நூபுரகங்கை இம் மலையில் தோன்றிப் பாய்ந்தது. சுமார் 16 கி. மீ. நீளமுள்ள இம் மலைகளின் குகைகளில் பல சமண முனிவர்கள் வாழ்ந்தனர். திருப்பரங்குன்றம் சங்ககாலத்துப் புலவர்களால் சிறப்பித்துப் பாடப்பெற்ற தெய்வம், திருப்பரங்குன்றத்து முருகனாகும். இக் குன்றத்தின் உச்சியில் இயற்கையாக அமைந்துள்ள குகைகளில் முனிவர்களின் கற்படுக்கை களும் பிராமி எழுத்துக் கல்வெட்டுகளும் உள்ளன. இங்குள்ள தாமிழி எழுத்துக் கல்வெட்டுகளில் சங்க காலத்திய நல்லந்துவனார் பெயர் காணப்படுகிறது.14 ஆனைமலை சங்கச் செய்யுள்களில் ஆனைமலையைப்பற்றி ஒன்றும் சொல்லப் பெறவில்லை. எனினும் ‘சங்க கால எழுத்துகள் இம்மலையில் உள்ளன. பறம்பு மலை பாண்டிய நாட்டில் இருந்த இம் மலைக்குத் தலைவன், பாரி வள்ளலாகும். பொதிகை மலை பொதியில், பொதியம் என்று வழங்கப்பெறும் இம் மலைக்குத் தென்னவன் பொதியில், ஆய்பொதியில் என்னும் பெயர்கள் வழங்கப் பெறுவதால், இது பாண்டிய நாட்டு மலை என்பது தெளிவாகும். சங்கப் புலவர்களில் ஒருவராகிய அகத்தியர் பொதிகை மலையில் இருந்ததாகக் கூறப்படும் கதை கி. பி. எட்டாம் நூற்றாண்டில் தோன்றியது. சிலப்பதிகாரத்தில் கூறப்பெறும் பொதியில் முனிவர் அகத்தியர் அல்லர். வடமொழியில் உள்ள பாகவத புராணத்தில் பொதிகை மலையில் மலயத்து வச பாண்டியன் தவம் செய்ததாகக் கூறுகிறதே யன்றி, அகத்தியர் தவம் செய்ததாகக் கூறவில்லை. கழுகு மலை மதுரை மாவட்டம் மீனாட்சிபுரத்தையடுத்துள்ள இந்த மலையைப் பற்றிச் சங்கப் பாடல்களில் குறிப்புகள் இல்லை. எனினும் சங்க காலத்துக் கல்வெட்டுகள் இந்தக் மலையில் காணப்பெறும் சமணர் குகைகளில் உள்ளன. பாண்டிய அரசன் நெடுஞ்செழியன்பற்றியம் அவனது பகைவன் கடலன் வழுதிபற்றியும் அக் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.15 ஆறுகள் வையை, சிலம்பாறு, பஃறுளி, குமரி ஆகிய ஆறுகள் பாண்டிய நாட்டில் பாய்ந்தன என்று சங்கப்பாடல்களால் அறிகிறோம். இவற்றுள் குமரியாறும் பஃறுளியாறும் கடலில் மூழ்கிப்போன நிலப்பகுதியில் பாய்ந்தன. வையையாற்றிற்கு வைகை என்னும் பெயரும் வழங்கியது. இவ்வாற்றின் தென்கரையில் மதுரை நகரம் இருந்தது. இந் நகரம் வட்ட வடிவமாக தாமரைப் பூப்போல் அமைக்கப்பட்டிருந்தது. இந்த நகரத்தின் கோட்டைச் சுவருக்கு வெளியே அதைச் சூழ்ந்திருந்த அகழியில் வையை நதியின் நீர் பாய்ந்தது.16 வையையில் திரு மருதந் துறை என்னும் இடத்தில் சங்ககாலத்து மக்கள் புதுப்புனலில் நீராடி மகிழ்ந்தனர். சிலம்பாறு திருமாலிருஞ்சோலை மலையில் தோன்றிப் பாய்ந்தது.17 பஃறுளியாறு இது கன்னியாகுமரிக்குத் தெற்கிலிருந்த ஓர் ஆறு. கி. பி. முதல் நூற்றாண்டிற்கு முன் கடல்கோளினால் மறைந்து போயிற்று. குமரியாறும் மேற்கூறப்பெற்ற கடல்கோளினால் மறைந்தது.18 துறைமுகப் பட்டினங்கள் சங்க காலத்தில் பாண்டிய நாட்டில் நிலைபெற்றிருந்த தொண்டி, மருங்கூர்ப்பட்டினம், கொற்கை, குமரி, விழிஞம் முதலிய துறை முகங் களைப்பற்றிச் சற்று விரிவாகக் காணலாம். இக்காலத்தில் தொண்டி என்ற துறைமுகங்கள் இரண்டில் ஒன்று மேற்குக் கரையில் சேர நாட்டிலும், மற்றொன்று பாண்டியநாட்டுக் கிழக்குக் கரையிலும் இருந்தது. கிழக்குக் கரையிலிருந்த தொண்டி, பாண்டிய நாட்டின் வடக்கு எல்லையில் இருந்தது. இத் துறைமுகத்தில் கிராம்பு, இலவங்கம், தக்கோலம், சாதிக்காய், கற்பூரம் முதலிய நறுமணப் பொருள்கள் இறக்குமதி செய்யப்பெற்றன.19 இத் துறைமுகப்பட்டினம் பிற்காலத்தில் மறைந்து இப்போது இராமநாதபுரம் மாவட்டத்தில் தொண்டி என்னும் சிற்றூராக இருக்கிறது. மருங்கூர்ப்பட்டினம் மருங்கை என்றும் வழங்கியது. இதற்கு மேற்கில் ஊணூர் என்னும் இடமும், அதைச் சூழ்ந்து மதிலும், அம் மதிலைச் சூழ்ந்து நெல் வயல்களும் இருந்தன.20 நெல் வயல்கள் மிக் கிருந்த ஊர் சாலியூர் இதற்கும் நெல்லினூர் என்னும் பெயர் பெற்றிருந்த ஊருக்கும் தொடர்பு இருந்திருக்கலாம். நெல்லினூர்த் துறைமுகத்தில் பெரிய நாவாய்கள் தங்கிச் சென்றன. தாலமி என்ற யவன ஆசிரியர், ‘சாலோர்’ என்று குறிப்பிடும் இடம் சாலியூர் ஆகலாம்.21 கொற்கை, குமரி, விழிஞம் உலகப் புகழ்பெற்ற பாண்டி நாட்டுத் துறைமுகப்பட்டினம் கொற்கை யாகும். இத் துறைமுகம் ஒரு வளைகுடாவில் இருந்ததனால் முத்துக் குளிக்கும் இடமாகவும், சங்கு எடுக்கும் இடமாகவும் விளங்கியது. கொற்கையில் கிடைத்த முத்துகள் உலகப் புகழ் பெற்றவையாகும். சங்கப் புலவர்களும் இங்குக் கிடைத்த முத்துகளின் பெருமையைப் புகழ்ந் துள்ளளனர். கொற்கை, பாண்டிய இளவரசர்களுடைய இருக்கை யாகவும் திகழ்ந்தது. யவனர்கள் ‘கொல்கொய்’ என்று வழங்கிய துறை முகம் கொற்கையேயாகும்.22 கடல் கொண்ட கவாடபுரம் கொற்கையாக இருக்கலாம் எனச் சில அறிஞர்கள் கருதுவர். பாண்டிய நாட்டின் தென் கோடியில், கன்னியாகுமரிக்கருகில் குமரித்துறைமுகம் இருந்தது. இது துறைமுகமாகவும் புனித நீராடும் இடமாகவும் கருதப் பெறுகிறது. தமிழ் நாட்டவரும், மற்றையோரும் இங்குப் புனித நீராடுவதுண்டு. குமரித் துறைமுகத்திற்கருகில் குமரி என்னும் ஊரும், அங்கு ஒரு கப்பல் அமைக்கும் தொழிற்சாலையும் இருந்ததென்று யவனர்களுடைய குறிப்புகளிலிருந்து அறிகிறோம். பாண்டிய நாட்டின் மேற்குக் கடற் கடற்கரையில் ஆய் நாட்டில் விழிஞம் என்னும் துறைமுகப்பட்டினம் இருந்தது. ஆய் நாட்டுக் குறுநிலமன்னர்கள் பாண்டியர்களுக்கு அடங்கிய சிற்றரசர்கள் ஆவர். ஆய் நாட்டில் (எலங்கோன்) என்னும் துறைமுகம் இருந்ததென்று தாலமி என்னும் ஆசிரியர் கூறியுள்ளது விழிஞம் துறைமுகமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.23 முற்காலப் பாண்டிய நாட்டு நகரங்கள் கடல்கொண்ட மதுரை கன்னியாகுமரிக்குத் தெற்கே இருந்த நிலப்பரப்பில் ஆதி மதுரை இருந்து பின்னர்க் கடலில் மூழ்கியது.24 இக்கடல்கோளுக்குப் பிறகு கவாடபுரம் பாண்டியர்களுடைய தலைநகராயிற்று. 25 இக் கவாடபுரத்தில்தான் இடைச்சங்கம் இருந்ததெனச் செவிவழிச் செய்தி கூறுகிறது. இரண்டாவது கடல்கோளில் இக் கவாடபுரம் அழிந்து போயிற்று. கவாடபுரத்தில் முடத்திருமாறன் என்ற பாண்டிய அரசன் இருந்ததாகவும், அவ்வரசன் வையையாற்றங்கரையில் மதுரை நகரத்தை அமைத்து அதைத் தலைநகராகக் கொண்டு ஆட்சிபுரிந்தான் எனவும் செவிவழிச் செய்திகள் கூறுகின்றன.26 கூடல் நகர் கவாடபுரம் கடலில் மூழ்கியபிறகு கூடல் நகரம் பாண்டிய நாட்டின் தலைநகரமாயிற்று. இந் நகரம் தாமரை மலர்போல் வட்ட வடிவமாக அமைக்கப் பெற்றதென்றும், அம் மலரின் நடுவிலுள்ள பொகுட்டுப்போலப் பாண்டியனுடைய அரண்மனை இருந்ததாகவும், அரண்மனையைச் சூழ்ந்திருந்த தெருக்கள் தாமரை மலரின் இதழ்களைப் போலவும், அந் நகரத்தில் வாழ்ந்த மக்கள் மலரில் இருந்த மகரந்தப் பொடிபோல இருந்தனர் எனவும் கூறப்பெறுகிறது.27 மதுரை நகரத்தைச் சூழ்ந்து மூன்று மதில்கள் ஒன்றுக்குள் ஒன்றாக இருந்தன. கோட்டை மதிலுக்கு வெளியே மிளைக்காடு நிறைந்த காவற்காடு இருந்தது. மிளைக் காட்டைச் சூழ்ந்து அகழி இருந்தது. கோட்டை வாயிலின் மேலே பாண்டியருடைய கயற்கொடி பறந்தன. கையில் பந்து ஏந்திய பெண் பாவை உருவங்கள் கோட்டை வாயிலில் தொங்கிக் கொண்டிருந்தன. கூடல் நகரத்திற்கு மேற்கே திருப்பரங்குன்றம் இருந்தது.28 கோட்டை வாயிலில் யவன வீரர்கள் காவல் புரிந்தனர். அவர்களுடைய தோற்றம் அஞ்சத்தக்கதாக இருந்தது.29 தாலமி ‘மதௌர’ என்னும் பெயரால் இந் நகரைச் சுட்டியுள்ளார். மதுரை நகரக் கோட்டையைப் பகைவர்களிட மிருந்து காப்பாற்றுவதற்காக மதிலின்மீது போர்க்கருவிகள் வைக்கப் பட்டிருந்தன.30 மதுரைக்கு அருகில் மோகூர் இருந்தது. பிற்காலத்தில் இது 108 வைணவத் திருப்பதிகளில் ஒன்றாகத் திருமோகூர் எனப் பெயர் பெற்றது. பாண்டிய மன்னர்களின் படைத்தலைவனாகிய பழையன் மாறன் இவ்வூர்ப்பகுதியின் ஆட்சிப் பொறுப்பினை ஏற்றிருந்தான். இவனது காவல்மரமாகிய வேம்பு, இவ்வூரில் ஓங்கி வளர்ந்திருந்தது. சேரன் செங்குட்டுவன் பழையனை வென்று இதனை வெட்டிச் சாய்த்தான். தங்கால் என்னும் ஊர் திருவில்லிபுத்தூருக்கு அருகில் உள்ளது. இது திருத்தங்கால் என்றும் அழைக்கப்பெறுகிறது. தங்கால் பொற் கொல்லன் வெண்ணாகனார், தங்கால் ஆத்திரேயன், செங்கண்ணனார் ஆகிய சங்கப் புலவர்கள் இவ்வூரைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள். அலைவாய் எனப்படும் திருச்செந்தில் பாண்டிய நாட்டின் கீழைக்கரை ஓரத்தில் உள்ளது. சங்ககாலம் முதல் இங்கு முருகன்கோயில் ஒன்று இருந்து வருகிறது. பிசிர் என்பது பாண்டிய நாட்டில் இருந்த மற்றோர் ஊராகும். இவ்வூரில் வாழ்ந்த புலவர் பிசிராந்தையாருக்கும் சோழ நாட் டரசனாகிய கோப்பெருஞ்சோழனுக்கும் நெருங்கிய நட்பு இருந்தது.31 இவை சங்க காலத்துப் பாண்டிய நாட்டின் எல்லைகளையும் அந் நாட்டில் சிறந்து காணப்பெற்ற மலைகள், ஆறுகள், பட்டினங்கள், நகரங்கள் ஆகியவற்றையும்பற்றிச் சங்க இலக்கியச் சான்றுகளால் அறிவனவாகும். இனி, அக்காலத்துப் பாண்டிய மன்னர்களைப் பற்றி ஆராய்வோம். பாண்டிய மன்னர்களின் குலம்32 1. அயலகக் குறிப்புகளால் அறியப்படும் பாண்டிய மன்னர்கள் பாண்டிய மன்னர்களைப்பற்றிய வரலாறு தொடர்ச்சியாகவும் வரன்முறையாகவும் கிடைக்கப்பெறவில்லை. அயல் நாட்ட வருடைய குறிப்புகளைக் கொண்டு சில பாண்டிய மன்னர்களின் வரலாறுகளை அறியமுடிகிறது. இவர்களைப் பற்றிச் சங்க இலக்கியங்களில் குறிப்புகள் இல்லை. கி. மு. நான்காம் நூற்றாண்டுப் பாண்டியன் இலங்கை நாட்டின் முதல் அரசனான விசயனுக்குப் பெண் கொடுத்த பாண்டியன் ஒருவனைப்பற்றித் தீபசம்சம், மகாவம்சம் ஆகிய இலங்கை வரலாற்று நூல்கள் கூறுகின்றன. விசயன், தன்னுடைய 700 தோழர்களோடு வட இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வந்து, அங்கு அரசு செலுத்தி வந்த இயக்கர் என்னும் இனத்தாரை வென்று, தனது அரசை நிறுவினான். விசயனுக்கு முடிசூட்ட விரும்பிய அரசன் அவனது புதல்வியை மணம் பேசித் திருமணம் செய்வித்தனன். ஆனால், விசயனுக்கு மகட்கொடை செய்த பாண்டிய அரசனுடைய பெயர் இவ் வரலாற்று நூல்களில் குறிப்பிடப் பெறவில்லை. மற்றும் விசயனுக்குப் பாண்டியன் மகளைத் திருமணம் செய்வித்த அவனுடைய 700 தோழர்களும் பாண்டிய நாட்டுப் பெருங்குடியிலிருந்து மகளிரை மணந்து கொண்டனர் என்றும் இந் நூல்கள் கூறுகின்றன. மணமகளான பாண்டிய குமாரியையும், மற்றும் பிற மணமகளிரையும் படைச் சிறப்புடன் இலங்கைக்கு அனுப்பி வைத்தான். அவர்களோடு தன் நாட்டிலிருந்து கொல்லர். தச்சர், உழவர், குயவர் முதலான பதினெட்டு வகையான தொழிலாளர்களையும் அவர்களுடைய குடும்பத்தினர் ஆயிரவரையும் இலங்கைக்கு அனுப்பி வைத்தான். இலங்கை மன்னனாகிய விசயன் தன்னுடைய மாமனாராகிய பாண்டியனுக்கு ஆண்டுதோறும் இரண்டு இலட்சம் பொன் பெறுமானம் உள்ள முத்துகளைக் காணிக்கையாக அனுப்பிக் கொண்டிருந்தான். இந் நிகழ்ச்சிகள் கி. மு. நான்காம் நூற்றாண்டில் நடந்ததாக இலங்கை வரலாற்று நூல்கள் கூறுகின்றன. இச் செய்திகளை உறுதி செய்யக்கூடிய சான்றுகள் தமிழ் நாட்டில் கிடைக்கவில்லை. இலங்கை மன்னன் விசயனுக்கு மகட்கொடை அளித்ததைத் தவிர, அப் பாண்டியமன்னனைப் பற்றிய வேறு செய்திகள் தெரியவில்லை. பாண்டிய அரசி சந்திரகுப்த மௌரியருடைய ஆட்சிக் காலத்தில் கி. மு. 304-ல் செலியூகஸ் நிகேட்டாருடைய தூதனாகப் பாடலிபுத்திரத்தில் இருந்த மெகஸ்தனீஸ் தாம் எழுதிய இண்டிகா என்னும் நூலில் பாண்டிய நாட்டில் ஒரு பெண் ஆட்சி செய்தாள் என்று கூறியுள்ளார். அவளது பெயர் தடாதகைப் பிராட்டி என்று தமிழ்ப் புராணங்கள் கூறினாலும் அவளுடைய சரியான பெயர் தெரியவில்லை. கி. மு மூன்றாம் நூற்றாண்டில் அரசாண்ட அசோகன் தனது பாறைக் கல்வெட்டுகளில் சேர, சோழ, பாண்டிய அரசர்களைப்பற்றிக் குறிப்பிடுகிறான்.1 தன்னுடைய தருமத்தை மக்களிடையே பிரசாரம் செய்யவும். மக்களுக்கும் விலங்குகளுக்கும் உதவி செய்வதற்கும் பௌத்த பிக்குகள் தமிழ்நாட்டிற்கு அனுப்பப்பெற்றதாகக் கூறி யுள்ளான். இக் கல்வெட்டுகள் பாண்டியர்கள் என்று குறிக்கின்றன வேயன்றிக் குறிப்பிட்ட அரசனுடைய பெயரைக் கூறவில்லை. கலிங்க நாட்டை அரசாண்ட காரவேலன் ஏறத்தாழக் கி. மு. 185-இல் தன்னாட்டின்மீது படையெடுத்து வந்து தமிழ் நாட்டு மன்னர்களை வென்று அவர்களிடமிருந்து பொன், மணி, முத்துகள் முதலியவற்றைப் பெற்றான் என்று கூறும் அத்திகும்பா கல்வெட்டிலும் பாண்டிய மன்னனுடைய பெயர் குறிப்பிடப்பெறவில்லை. ஆகையால், இயற்பெயர் தெரியாத இந்தப் பாண்டிய அரசனும் அரசியும் அயலகக் குறிப்புகளால் அறியப்படும் அரச அரசியர் ஆவர். 2. செழியன் என்னும் பெயருடைய அரசர்கள் செழியன் இப் பெயர் பொதுவாகத் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனையே சுட்டுவதாகும். தெளிவாக அறியப்பெறும் செய்திகளின் அடிப்படையில் சமணரைப் பேணியவன், ஆரியப் படை கடந்தவன். தலையாலங்கானத்துச் செருவென்றவன் ஆகிய மூவரைக் காலவரிசைப்படக் கூறலாம். எனினும், இவர்களது ஆட்சிக் காலங் களுக்கு இடையில் நிலவிய நிகழ்ச்சிகளைப் பற்றியோ அரசர்களைப் பற்றியோ தெளிவாக அறியமுடியவில்லை. சமணரைப் பேணிய நெடுஞ்செழியன் இவனைப்பற்றிய செய்திகள் மீனாட்சிபுரம் தாமிழிக் கல் வெட்டுகளால் அறியப்பெறுகின்றன. வானநூல் அறிஞரான நந்தி என்னும் சமணப் பெரியாருக்கு, இந்த நெடுஞ்செழியன் மலைக் குகையில் கற்படுக்கைகளைச் சமைத்துக் கொடுத்தான் என்ற செய்தியை இக் கல்வெட்டால் அறியமுடிகிறது. மேலும், இக் கல்வெட்டில் கடலன் வழுதி என்னும் பெருந்தச்சனைப்பற்றியும் குறிப்பிடப் பெற்றுள்ளது. இத் தச்சன் கற்படுக்கைகளின் தரையைச் செம்மைப்படுத்தினான். சடிகன், இளஞ்சடிகன் ஆகிய இருவருடைய பெயர்களும் இக் கல்வெட்டில் காணப் பெறுகின்றன.1 ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் இவன் பாடிய பாடலொன்று புறநானூற்றில் காணப் பெறுகிறது. இப் பாடல் கல்வியின் சிறப்பைச் சித்திரிக்கிறது. இதில் அக்காலத்திய நான்கு வருணங்களாகப் பிரிக்கப்பெற்றிருந்த குறிப்பும் காணப் பெறுகிறது.2 கோவலனைக் கொலைசெய்தவன் என்று சிலப்பதிகாரத்தில் கூறப்படும் பாண்டிய அரசன். ‘வடவாரியர் படைகடந்து தென்றமிழ் நாடு ஒருங்கு காணப் புரைதீர் கற்பின் தேவி தன்னுடன் அரைசு கட்டிலில் துஞ்சிய பாண்டியன் நெடுஞ்செழியன்’3 என்று குறிப்பிடப்படுகிறான். இவ்வாறு குறிப்பிடப்பெறும் ‘ஆரியப் படை கடந்த’ என்னும் தொடரும் புறநானூற்றைத் தொகுத்தவர் குறிப்பிடும் ‘ஆரியப்படை கடந்த’ என்னும் தொடரும் ஒன்றாக அமை வதால் இவ்விருவரும் ஒருவரே என்று அறிஞர்கள் கருதுகின்றனர். சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்படும் இவனோடு தொடர்புடைய நிகழ்ச்சிகள் இவனது வரலாற்று நிகழ்ச்சிகளே என்று கூறலாம். வார்த்திகனைச் சிறையிட்டது சோழநாட்டில் பராசரன் என்னும் பார்ப்பனன் ஒருவன் இருந்தான். அவன் சேரஅரசன் ஒருவன் மறையவன் ஒருவனுக்கு வீடுபேறு கொடுத்த செய்தியைக் கேள்விப்பட்டு (பல்யானைச் செல்கெழு குட்டுவன்) அவனைத் தானும் நேரில் கண்டு பரிசில் பெற்றுத் திரும்பினான்; வழியில் தங்கால் என்னும் இடத்தில் ஓர் ஆலமரத்தடியில் தங்கி இளைப் பாறினான். அப்போது பார்ப்பனச் சிறுவர்கள் அவனைச் சூழ்ந்து கொண்டனர். பராசரன் தன்னோடு வழுவின்றி வேதம் ஓதுபவர்க்கு ஒரு பரிசு நல்குவதாகக் கூறினான். அவ்வூரில் வாழ்ந்த வார்த்திகன் என்னும் அந்தணனின் மகன் வழுவின்றி வேதம் ஓதக் கேட்டுத் தன்னுடைய முத்துப் பூணூலை அச் சிறுவனுக்கு அளித்தான். ஏழை வார்த்திகன் மகனின் மார்பில் விலையுயர்ந்த முத்துப் பூணூலைக் கண்ட அரசு காவலர் அரண்மனையில்திருடிய குற்றம் சாட்டி வார்த்திகனைச் சிறையிலிட்டனர். வார்த்திகனின் மனைவி கார்த்திகை தன் மகனுக்கு இழைக்கப் பெற்ற கொடுமையை ஐயை கோயிலில் முறையிட்டு அழுதாள். ஐயைத் தெய்வம் தன் கோயிற் கதவுகளை அடைத்துக் கொண்டது. தன்னாட்சி யில் கொடுங்கோன்மை நிகழ்ந்துள்தோ என வினவிப் பாண்டியன் ஆராய்ந்தபோது, காவலர் வார்த்திகனுக்கு உண்டாக்கிய துனபத்தைக் கூறினர். மன்னன் வார்த்திகனை வருவித்து அவனிடம் மன்னிப்பு வேண்டினான். ஐயை கோயில்கதவு திறந்து கொண்டது. இங்குக் குறிப்பிடப்படும் மன்னனுடைய பெயரும் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் என்று கருதத்தக்கது. ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் காலத்தில் ஒரு குறிப்பிட்ட நாளில் மதுரைநகர் (அரண்மனை) அழியும் என்ற நிமித்திக வாக்கு மக்களிடையே நிலவி வந்தது.4 அரியணையில் அமர்ந்த படியே இறந்துபோனமையால் இந்தப் பாண்டியன் அரசு கட்டிலில் துஞ்சிய நெடுஞ்செழியன் என்று பெயர் பெற்றான். வார்த்திகன் நிகழ்ச்சியில், அறியாத மக்களின் சொல்லைக் கேட்டு, இவன் கொடுமை செய்தது போலவே கோவலன் நிகழ்ச்சியிலும் அரண்மனைப் பொற்கொல்லன் சொல்லைக் கேட்டு இவன் கோவலனைக் கொன்றுவிடச் செய்கிறான். முனனர்ச் சிறையில் இருந்து விடுதலையால் அப் பிழை பொறுக்கப்பட்டது. இப் பொழுது கொலையுங்ணட உயிருக்கு ஈடாகத் தன் உயிரையே கொடுக்கவேண்டிய நிலை நேர்ந்துவிடுகிறது. தன் தவற்றினை உணர்ந்தபோது, தனக்குத் தானே தண்டனை விதித்துக் கொண்டு அரியணையிலிருந்து கீழே விழுந்து உயிர் துறந்தான். பாண்டி மாதேவியும் கோவலன் கொலைக்கு ஒருவகையில் காரணமாகையால் கணவனுடன் தானும் மாண்டு செங்கோலை நிலை நாட்டுகிறாள். ஆரியப்படையை வென்றது தமிழ்நாட்டுத் தெற்கிலிருந்த நிலப்பகுதியைக் கடல் கொண்டமையால் தமிழர், தம் நாட்டுப் பரப்பை வடக்கில் விரிவாக்கிக் கொண்டிருந்தனர். அப்பொழுது ஆரியரும், தெற்கில் தம் நாட்டை விரிவுபடுத்திக் கொண்டிருந்தனர். இந்தப் போட்டியில் நிகழ்ந்த போர்களில் நெடுஞ்செழியன் ஆரியப் படைகளை வென்றிருத்தல் வேண்டும். ஆகையால், இவனுக்கு ‘ஆரியப் படை கடந்த நெடுஞ் செழியன்’ என்னும் பெயர் வழங்கியிருத்தல் வேண்டும். இங்குச் சுட்டப்படும் ‘ஆரியர்’, தொடக்க காலப்பல்லவராக இருத்தல் கூடும். தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் அப்போரில் ஏழு அரசர்களை வென்றவன் ஆவான்; வென்வேற் செழியன் என்றும் ஒரு பாடலில் குறிப்பிடப்படுகிறான்.5 இப் பாடல் பாண்டியன் நெடுஞ்செழியன்மீது பாடப்பட்டதாகக் குறிப்பிடப் படுகிறது.6 எனவே, ‘வென்வேற் செழியன்’பாண்டியன் நெடுஞ் செழியன்’ ஆகிய பெயர்கள் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனையே சுட்டு கின்றன. இப் போரில் ஏழு பேரை வென்ற அரசனைப் ‘பசும்பூட் செழியன்’ என்று குறிப்பிடப்படும் அரசனும் இவனே எனத் தெரிகிறது.7 வென்வேற் செழியன் என்னும் பெயர் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியனுக்குப் பிறகு மதுரையில் அரியணை ஏறிய வெற்றிவேற் செழியன் என்னும் பெயரை நினைவுபடுத்துகிறது.8 இவன் தொடக்கத்தில் கொற்கை நகரில் இருந்து கொண்டு அரசாண்டமையால் இவன் கொற்கைக் கோமான் என்றும், மதுரையை ஆண்ட அரசன் என்றும் குறிப்பிடப் படுகிறான்.9 கொற்கையில் ஆட்சியைத் தொடங்கிய இவன் ‘கடுந்தேர்ச் செழியன்’ என்றும், ‘தென்புலங் காவலர் மருமான்’ என்றும் குறிப்பிடப் படுகிறான். மற்றொரு பாடல் ‘இயல்தேர்ச் செழியன்’, ‘நெடுந்தேர்த் தென்னவர் கோமான்’ எனவும் குறிப்பிடுகிறது.10 தேர் அடைமொழியும், தென்னர் குடித் தலைமையும் சேர்ந்து மேலே கண்ட கருத்துகளை உறுதிப் படுத்துகின்றன. மற்றும் ‘கொடித்தேர்’ என்னும் அடைமொழியாலும் சிறப்பிக்கப் படுகிறான்.11 அடுபோர், வெம்போர், மறப்போர், நெடுந்தேர், கடுந்தேர், இயல்தேர், கொடித்தேர், திண்டேர் முதலிய சொற்கள் தலையாலங்கனாத்துச் செருவென்ற பாண்டியனைக் குறிக்கின்றன எனக் கூறலாம். வெற்றிவேற் செழியன் என்பதும் இவனையே உணர்த்தியது என்றும் நினைக்கலாம். நாடு தொடக்க நிலையில் இவன் கொற்கையைத் தலைநகராகக் கொண்டு அதனைச் சூழ்ந்திருந்த நிலப்பரப்பை ஆண்டு வந்தான். கொற்கையை அடுத்த கடலில் முத்து எடுக்கப்பட்டது. அந்தக் கடற்பகுதியும் இவனாட்சிக்கு உட்பட்டிருந்தது.12 தென்னர் கோமான் என்றும், தென்புலம் காவலர் மருமான் என்றும் இவன் கூறப்படுவதால் தென் பாண்டிநாடு இவன் ஆட்சிக்கு உட்பட்டிருந்ததெனத் தெரிகிறது. ஆலங்கானப்போர் இவனது இளமைப் போர் எனத் தெரிய வருவதால் அப் போருக்குப் பின்னர், இவன் தன்னாட்டின் பரப்பை மேலும் விரிவுபடுத்தினான் எனத் தெரிகிறது. ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் அரியணையிலிருந்து வீழ்ந்து இறந்தபிறகு பாண்டிய நாட்டில் செல்வாக்குப் பெற்ற அரசன் இல்லை. நாட்டில் நல்லாட்சி இன்மையால், பாண்டிய நாடு மழை வளங்குன்றி நலிவுற்றது.13 இந் நிலை ஏற்படுவதற்குச் சில ஆண்டுகள் பிடித்திருக்கும். அக்காலத்தில் பாண்டிய நாட்டை ஆண்டவர் யார் என்பது தெளிவாகத் தெரியவில்லை.14 பின்னர்த் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் கூடல்நகரைக் கைப்பற்றி அரச னானான்.15 பின் இவன் எவ்வியை வென்று அவனது ஆட்சிக்கு உட்பட்டிருந்த மிழலைக் கூற்றத்தைக் கைப்பற்றினான். வேளிரை வென்று முத்தூற்றுப் பகுதியைக் கைப்பற்றினான். கொங்கர்களை அவர்களது நாட்டைவிட்டுத் துரத்தினான். சேர அரசனுடைய முசிறியையும் கைப்பற்றினான். இவ்வகையில் இவனது நாட்டுப் பரப்பு விரிவடைந்தது. இவற்றால் அள்ளூர், சிறுமலை முதலிய பகுதிகள் இவனது ஆட்சிக்குட்பட்டன.16 போர்கள் ஏழு அரசர்கள் ஒருங்குகூடித் தலையாலங்கானம் என்னு மிடத்தில் இந்த நெடுஞ்செழியனைத் தாக்கினர்.17 சேரன், செம்பியன், திதியன், எழினி, எருமையூரன், இருங்கோ வேண்மான், பொருநன் ஆகிய ஏழு அரசர்கள் இந்தக் கூட்டுக் குழுவிலிருந்த பகையரசர் களாவர்.18 இப் போர் நடந்தபோது நெடுஞ்செழியன் மிகவும் இளைஞனாக இருந்தான் என்று தெரிகிறது.19 இந்தப் போரைப்பற்றிப் பல புலவர்கள் பல பாடல்களில் குறித்துள்ளனர். வேற்படையின் துணைகொண்டு அவன் வெள்ளிபெற்றதுபற்றியும், பிற அரசர் துணையின்றிப் போரிட்டு வென்றது. போருடை அணிந்த வீரர்கள் பேரெண்ணிக்கையில் வந்து தாக்கியது, கிணை முழக்குடன் ஒரு பகலிலேயே ஆரவாரமின்றி அடக்கத்துடன் திறமையாகப் போரிட்டது. தலையாலங்கானப் போரின் தொடர்ச்சியாகப் பகைவர்களைத் துரத்தியடித்து அவர்களுடைய அரண்களைத் தாக்கும் போரில் ஈடுபட்டது. கூலிப்படையின் துணையால் பகைவர் நாடுகளைச் சூறையாடியது. திங்கள் தோன்ற ஞாயிறு மறைந்ததுபோல அவர்களை வென்றது முதலான செய்திகள் கூறப் பெற்றுள்ளன. பகை மறவரின் மூதிற் பெண்கள் அழுதரற்ற வென்று, ஒரு பகலில் வெற்றிபெற்றுப் பகைவரின் முரசு, குடை முதலியவற்றைக் கைப்பற்றிக் களவேள்வி செய்த வீரச் செயல்களையும்பற்றி மேற்கூறப் பெற்ற புலவர்கள் கூறியுள்ளனர். இப் புலவர்களில், இடைக் குன்றூர் கிழார், கல்லாடனார், குடபுலவியனார், நக்கீரர், வெங்கண்ணியார், மாங்குடி மருதனார் முதலியோர் முக்கிய மானவர் ஆவர். ஆலங்கானப் போரில் நெடுஞ்செழியன் உழிஞைப் பூச்சூடிப் போரிட்டான் என்று கூறப்பட்டுள்ளது.20 இவ்வகைப் போர் பகைவரின் கோட்டையைத் தாக்கும் போர்முறை என்பதை நாம் அறிவோம். இதனால், நெடுஞ்செழியன் தலையாலங்கானத்தை முதலில் தாக்கினான் என்பதும், அத் தாக்குதலை முறியடிக்கவே ஏழு அரசர்கள் ஒன்று சேர்ந்தனர் என்பதும் தெரியவருகின்றன. அப் போரில் நெடுஞ் செழியனை எதிர்த் எழுவரில் ஐவர் குறுநில மன்னர்கள், எஞ்சிய இருவர் முடியுடை வேந்தர்கள் ஆவர். நெடுஞ்செழியனை எதிர்த்த சேரஅரசன் இன்னான் என்பது தெளிவாகத் தெரியவில்லை. சேரல் என்று அவனது பெயர் பொதுவகையால் சுட்டப் பெற்றுள்ளது. சேரல் என்னும் பொதுப் பெயருடன் நெடுஞ்சேரலாதன், நார்முடிச்சேரல், அந்துவஞ்சேரல், மாந்தரஞ்சேரல், பெருஞ்சேரல், இளஞ்சேரல் ஆகிய பல அரசர்கள் ஆட்சி செய்துள்ளனர். இவர்களில் ஆதன் என்னும் பின் அடையோ, இளமை, பெருமைப் பண்பை உணர்த்தும் முன் அடையோ இன்றிக் காணப்படும் அரசர்கள் நார்முடிச் சேரல், குட்டுவன்சேரல், மாந்தரஞ்சேரல் என்னும் மூவரேயாவர். இந்த மூவரில் மாந்தரஞ்சேரல் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனின் சிறையி லிருந்து தப்பிச் சென்றான் என்று ஒரு பாடலில் கூறப்படுவதால், மேற் கூறப்பட்ட போரில் இந்தப் பாண்டியனை எதிர்த்துத் தோற்றவன் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும் பொறையே என்று நாம் கருதலாம். இவன் சிறையில் இருந்து தப்பிச் சென்ற செயல், குழியில் அகப்பட்ட யானை, குழியைத் தூர்த்துக் கொண்டு தப்பிச் சென்றது போல் அமைந்திருந்தது என்று கூறப்படுவதால், சிறையில் அடைக்கப் பட்டான் என்பது தெளிவாகிறது. நெடுஞ்செழியனை எதிர்த்த சோழன் இவன் பெயர் செம்பியன் என்று குறிப்பிடப்பெற்றுள்ளது. இவன் தூங்கெயில் எறிந்த தொடித்தோட் செம்பியன் வழியில் வந்தவன் எனலாம். இச் செய்தியின் விளக்கத்தைச் சோழர் வரலாற்றில் நாம் கண்டோம். கடற்போர் தலையாலங்கானத்துப் போர் நெடுஞ்செழியனுடைய இளமைக் காலத்தில் நடந்ததாகும். ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியனுக்குப் பிறகு மதுரையை ஆண்ட அரசன் இன்னான் என்பது தெளிவாக விளங்கவில்லை. பசும்பூண் பாண்டியன் போன்ற அரசர்கள் இடைக் காலத்தில் அரசாண்டு உட்பூசலில் மாண்டுபோய், நாடு அரசனின்றி இருந்தது எனக் கருதலாம். இந்நிலையில் நெடுஞ்செழியன் கூடல் நகரத்தைத் தாக்கிப் பாண்டிய நாட்டின் அரியணையைக் கைப்பற்றி யிருக்க வேண்டும்.21 நெடுஞ்செழியன் பாண்டிய நாட்டினைக் கைப் பற்றுவதைச் சோழனும் சேரனும் எதிர்த்துள்ளனர். இவர்களுடைய முயற்சி வெற்றிபெறாது. தங்களுடைய முரசங்களைப் போர்க்களத்தி லேயே போட்டுவிட்டு ஓடினர். நெடுஞ்செழியன் பெருவெற்றி பெற்றான்.22 எவ்வி, வேளிரோடு போர் நெடுஞ்செழியன் கொற்கையிலிருந்து மதுரைக்குத் தலை நகரை மாற்றிக்கொள்ளவே, பாண்டிய நாட்டிற்கும் சோழ நாட்டிற்கும் இடையில் கிழக்குப் பகுதியில் மிழலைக் கூற்றத்தை ஆண்டுவந்த எவ்வி என்ற குறுநில மன்னன் பாண்டியனுக்குக் கப்பம் கட்டாது ஆளத்தொடங்கினான் போலும். இதனால், நெடுஞ்செழியன் எவ்வியைத் தாக்கி நல்லூரைத் தன்னகத்தே கொண்ட அவனது மிழலைக் கூற்றத்தைக் கைப்பற்றிக் கொண்டான். அக்காலத்தில் முத்தூறு என்னும் பகுதியில் வாழ்ந்த தொன்முது வேளிர் என்னும் குடிமக்கள், தம்முள் ஒன்று கூடி நெடுஞ்செழியனை எதிர்த்தனர். நெடுஞ்செழியன் அவர்களை வென்று, அவர்களது முத்தூற்றுகூற்றத்தைத் தன் நாட்டோடு சேர்த்துக் கொண்டான். பல்குட்டுவரை வென்றது சேர அரசர்களில் இளஞ்சேரல் இரும்பொறை, குட்டுவர் ஏறு என்று கூறப்பெறுகின்றான். இவனது தந்தை குட்டுவன் இரும்பொறை என்று குறிப்பிடப் படுகிறான். எனவே, பொறையர் குடியைச் சேர்ந்த யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறைக்குக் குட்டுவர் குடியைச் சேர்ந்த சிற்றரசர்கள் உறுதுணையாய் விளங்கி வந்தனர். நெடுஞ்செழியன் யானைக் கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறையைத் தாக்கிய பொழுது பல குட்டுவர்களுடன் போரிட நேர்ந்தது. முசிறிப்போர் பல்குட்டுவரை வென்றதன் காரணமாக, கீழைச் சேரர் செல்வாக்கை ஓரளவு இவன் அடக்கிவிட்டான். அப்போது மேலைச் சேரர் இவனை எதிர்த்து நின்றனர். சேரன் செங்குட்டுவனுக்குக் குட்டுவன் சேரல், குட்டுவன்கோதை என இருமக்கள் இருந்தனர். குட்டுவன் சேரல் பரணருக்குப் பணிவிடையாளாகக் கொடுக்கப் பட்டான். குட்டுவன் கோதையே நாட்டையாண்டு வந்தான்; தன் தந்தை செங்குட்டுவனுக்குப் பிறகு தொண்டி, வஞ்சி முதலிய இடங்களில் ஆட்சி புரிந்தான். குட்டுவன் கோதையின் துறைமுகப் பட்டினமாகிய முசிறியை நெடுஞ்செழியன் தாக்கி, அவனுடைய யானைப் படையை அழித்தான். குட்டுவன் கோதையும் தோல்வியுற்றான். இதனால் நெடுஞ் செழியன் பல குட்டுவரை வென்றவன் என்று பாராட்டப் பெற்றான். நெல்லினூர் கொண்டது பெருங் கப்பல்கள் வந்து தங்கி, வாணிகச் சிறப்புடன் விளங்கிய ‘நெல்லினூர்’ என்னும் ஊரையும் நெடுஞ்செழியன் கைப்பற்றினான். நெல் சிந்தம் என்னும் மேற்குக் கடற்கரைத் துறைமுகம் வாணிகத்தில் சிறப்புற்று விளங்கி, பாண்டியர்களுக்குரியதாய் விளங்கியது பற்றியும் கிரேக்க ஆசிரியர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த நெல்லினூரையே அவர்கள் நெல்சிந்தம் என்று குறிப்பிட்டுள்ளார்கள். இந்த நெல்லி னூரையே நெடுஞ்செழியன் கைப்பற்றினான்.23 குட்டுவரையும் முசிறியையும் வென்ற செய்திகளுக்கு இவ்வெற்றி தொடர்புடைய தாகிறது. முதுவெள்ளிலையும், முதுபொழில் மண்டிலமும் முதுவெள்ளிலை மருதநில வளமும் நெய்தல்நில வளமும் ஒருங்கமையப்பெற்ற ஓர் ஊர். இவ்வூரை நெடுஞ்செழியன் கைப்பற்றிக் கொண்ட பிறகு இவனது நல்லாட்சியில் மகிழ்ந்து அவ்வூர் மக்கள் இவனைப் பெரிதும் பாராட்டினர்.24 முதுபொழில் மண்டிலம் என்பது சிறப்பாக ஓர் இடத்தைக் குறிப்பது அன்று. நாவலந் தண் பொழிலாகிய நாடு முழுவதுமே முதுபொழில் மண்டியலமாகும். இவன் பல நாடுகளை வென்று தன் ஆட்சியின்கீழ்க் கொண்டுவந்த செயலே முதுபொழில் மண்டலம் முற்றியதாகக் கூறப்படுகிறது.25 ஆட்சி குளம் வெட்டி நாட்டில் நீர்வளத்தைப் பெருக்க வேண்டும் என்று புலவர் ஒருவர் இவனிடம் அறிவுரை கூறினார்.26 இவரது அறிவுரைப் படி இவன் பெருங்குளம் என்னும் பெயருடைய குளத்தை அமைத்தான்.27 இவன் நான் மறைகள் கூறும் வேள்ளிகளைச் செய்தான்.28 அன்றியும் களச்சோறு வழங்கும் வேள்வியும் செய்தான்.29 இந்த வேள்விகள் பல நாடுகளை வென்றதன் நினைவாகச் செய்த அறக் கொடைகள் ஆகும். இந்த அறக்கொடைகள் வீரர்க்கும், பாணர் முதலானோர்க்கும், நான்மறைவல்ல அந்தணர்களுக்கும் வழங்கியவையாகும். புறநானூற்றுச் செய்யுளில் நம்பி நெடுஞ்செழியனைப்பற்றிக் கையறு நிலையில் பேரெயின் முறுவலார் என்ற புலவர் பாடியுள்ளார். நம்பி நெடுஞ்செழியன் போரில் ஈடுபட்டு உயிரிழந்தான். போர்க் களத்தில் இறந்த அவனுடைய தலைமாத்திரம் கிடைத்த நிலையில் பேரெயின் முறுவலார் பின்வருமாறு இரக்கம் கொண்டு பாடியுள்ளார். ‘நம்பி நெடுஞ்செழியன், சந்தனம் பூசி மலர்மாலையணிந்து உரிமை மகளிரைத் தழுவி மகிழ்ந்தான்; பகைவர்களை அடியோடு ஒழித்தான்; நண்பர்களுக்கு உயர்வளித்தான். தன்னைவிட வலிமை உடையவ ராயின் அவர்களிடம் வணங்குவதோ, தன்னைக் காட்டிலும் வலிமை குறைந்தவர்கள் முன்னிலையில் தன்னைப் புகழ்ந்துபேசிக் கொள்வதோ இவனிடம் காணமுடியாத பண்புகள். பிறரிடம் இரப்பதோ, இரந்தவர் களுக்குக் கொடுக்க மறுப்பதோ இவனிடம் கிடையாது. பல அரசர்கள் கூடியிருந்த சபையில் தலைமை தாங்கினான்; தாக்க வரும் படையை எதிர்க்கத் தான் முதலில் சென்றான்; பல படைகள் தன் முன் நிற்க மாட்டாது புறமிட்டு ஓடியதைக் கண்டு மகிழ்ந்தான்; குதிரைமீதும், தேர்மீதும், களிறுமீதும் ஊர்ந்து சென்று அந்தந்தப் படைகளின் தலைமையை ஏற்றுப் போரிட்டான்; பாணர்களின் பசியைத் தீர்த்தான்; மிகுதியாகக் குடிக்காமல், அளவோடு பருகி, கள் மயக்கம் கொண்டு பேசும் வழக்கம் இவனிடம் இல்லை. இத்தகைய நற்பண்புகள் உடையவனாக இருந்தான்.30 நம்பி நெடுஞ்செழியன் பாண்டியன் அறிவுடை நம்பி என்னும் அரசன் ஒருவன் சங்க காலத்தில் விளங்கினான்.31 நம்பி நெடுஞ்செழியன் என்ற பெயரை நோக்குகையில் இவனை அறிவுடை நம்பியின் மகன் என்று கருதலாம். 3. மாறன் என்னும் பெயருடைய அரசர்கள் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனைப் பாடிய புலவர்களான மருதன் இளநாகனாரும் நக்கீரரும் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறனையும் நேரில் கண்டு பாடியுள்ளனர்.1 இவனைப் பாடியுள்ள பிற புலவர்களை நோக்கும் போது இவன் தலையாலங்கானத்து நெடுஞ்செழியனுக்குப் பிறகு ஆட்சி புரிந்தவன் எனத் தோன்றுகிறது. நெடுஞ்செழியனுக்கும் இவனுக்கும் இருந்த உறவையும் நெடுஞ்செழியனுக்கு அடுத்து அரியணையில் அமர்ந்தான் என்பதையும் திட்டவட்டமாகக் கூற இயலாத நிலை உள்ளது. இவன் நெடுஞ்செழியனுடைய மகனா என்று பற்றியும் கூறமுடியவில்லை. நெடுஞ்செழியன் மதுரையில் பேரரசனாக விளங்கியபோது இவன் கொற்கைப் பகுதியில் இருந்து நாடுகாவல் புரிந்து வந்தான் என்று கருதலாம். இவனை நேரில் கண்டு வாழ்த்திய புலவர் ஒருவர் செந்தில் கடற்கரையில் உள்ள மணலினும் மேலான பல காலம் இவன் வாழவேண்டுமென்று வாழ்த்துகின்றார்.2 எந்த இடத்திலும் இவன் மதுரையில் இருந்து அரசாண்டான் என்று குறிப்பிடப்பெறவில்லை. பாண்டியப் பேரரசர்களின்கீழ் ஆண்ட அரசன் என்ற நிலையிலேயே இவன் காலம் முடிந்துவிட்டதோ என்று எண்ண வேண்டியுள்ளது. பிறர் நாட்டைக் கைப்பற்றும் போது அவர்களது வயல்களிலுள்ள விளைச் சல்களை வீரர்கள் கவர்ந்து கொண்டாலும் கொள்ளட்டும்; அவர்களது பேரூர்கள் எரியூட்டப்பட்டாலும் படட்டும்; பகைவீரர்களைக் கொன்றாலும் கொல்லட்டும. ஆனால், பகையரசர்களுடைய காவல்மரத்தை மட்டும் வெட்டவேண்டா என்று புலவர் ஒருவர் இவ்வரசனுக்கு அறிவுரை கூறியுள்ளார். இந்த அறிவுரை இவன் போருக்கு எழுந்தபோது, போர் வேண்டா என்று தடுத்துரைத்த அறிவுரையாகலாம்.3 இவன் தாராள மாகக் கொடை வழங்கியதாகத் தெரியவில்லை. பரிசில் வழங்கக் காலம் தாழ்த்தியிருக்கக்கூடும். இவனது போக்கைக் கண்டித்துப் புலவர்கள் இவன் நோயின்றி வாழ்ந்தால் சரி என்று வாழ்த்தியுள்ளார்கள்.4 இவனது மனைவி கடவுள் சான்ற கற்பினை உடையாள்; சிறந்த செம்பொன் அணிகலன்களுடன் விளங்கினாள்; பெண்மைக்குரிய மடமைத் தன்மை கொண்டவள்.5 இவனுக்கு ஆண்மக்கள் சிலர் இருந்தனர். அவர்கள் கிண்கிணி அணிந்த காலுடன் விளங்கியதைக் கண்ட புலவர்கள் வாழ்த்தியுள்ளனர். காலைக் கதிரவன் போலவும், வளர்பிறை போலவும் இவன் வாழவேண்டும் என்று வாழ்த்தும் புலவர் ஒருவர் இவன் சினத்தால் எமனையும், வலிமையிற் பலராமனையும் புகழால் திருமாலையும், எண்ணிய செயலை முடித்தலில் முருகனையும் ஒத்தவன் என்று குறிப்பிட்டுள்ளார்.6 ‘பூந்தார் மாற’7 என்று இவன் கூறப்படுவதிலிருந்து இவனது மலர் மாலை அணிந்து விளங்கிய கோலத்தையும், ‘கடுமான் மாற’8 என்று கூறப்படுவதிலிருந்து இவனது குதிரைச் சவாரியையும் ‘திண்டேர் அண்ணல்’9 என்று கூறப்படுவதிலிருந்து இவன் தேரில் உலாவச் சென்ற காட்சியையும் நாம் உணரமுடிகிறது. இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன் என்னும் பெயர் இவன் இலவந்திகைப் பள்ளி என்னுமிடத்தில் மாண்டதைத் தெரிவிக்கிறது. இலவந்திகை என்னும் சொல் தாமரைக் குளத்தை சூழ்ந்த சோலையாகும். சித்திர மாடத்துத் துஞ்சிய நன்மாறன் இவனைப் பாடிய புலவர் வேறு எந்த அரசனையும் தமது பாடல் களில் குறிப்பிடவில்லை. ஆகவே, இவனது காலத்தை திட்டவட்டமாக அறிய முடியவில்லை. மணிமேகலையை இயற்றிய மதுரைக் கூல வாணிகன் சீத்தலைச் சாத்தனார் இவர் அல்லர் என்று அறிஞர்கள் கருதுகின்றனர். இவ்விருவரும் ஒருவராயின் இவரால் பாடப்பெற்ற இந்த நன்மாறன் சேரன் செங்குட்டுவன் காலத்தவன் என்று கூறலாம். இவனது அகன்ற மார்பில் முத்தாரம் அணிந்திருந்தான். இவனது கைகள் முழந்தாள்வரை நீண்டுட இருந்தன. பகைவர்களைக் காய்வதில் இவன் ஞாயிறு போன்றவன்; புலவர்களுக்கு நலம் சொரிவதில் திங்கள் போன்றவன்; பொய் என்பதை முற்றிலும் வெறுத்தவன். இவனது இறுதிக்காலம் சித்திரமாடம் என்னுமிடத்தில் முடிவுற்றது. இஃது ஒரு மாளிகையின் பெயராகவோ, ஊர்ப் பெயராகவோ இருக்கலாம். முடத்திருமாறன் இவன் கபாடபுரத்தில் இருந்த இடைச்சங்கத்தைப் புரந்து வந்தான் என்றும், கபாடபுரம் கடல்கோளுக்கு இரையானபோது தப்பி மதுரைக்கு வந்து கடைச்சங்கத்தை நிறுவினான் என்றும் இவனைப்பற்றிச் செவிவழிச் செய்தி கூறுகிறது.10 சிறந்த புலவனாகவும் விளங்கிய இவனது பாடல்கள் இரண்டு சங்க நூல்களில் இடம் பெற்றுள்ளன. இவன் தனது நண்பனான குட்டுவன் என்னும் சேர அரசனைத் தனது பாடலில் குறிப்பிட்டுள்ளான். இவன் குடவரைப் பகுதிக்கு அரசன். குடவரை என்பதை மேற்குத் தொடர்ச்சிமலையாகக் கொள்ளலாம். நீரும் நிழலும் இல்லாத வழியில் பொருள் தேடச் செல்லும் தலைவன் தன் காதலியை நினைத்துக்கொண்டு கவல்வதாகவும், களவு வழியில் காதலியைப்பெறத் தலைவன் மின்னல் வெளிச்சத்தில் வழியை அறிந்து வரும் அச்சந்தரும் காட்சியையும் தனது இரு பாடல்களில் சிறப்பித்துப் பாடியுள்ளான்.11 மாலைமாறன் மாறன் என்று பாண்டியரை உணர்த்தும் சொல் இவனது பெயரில் உள்ளதால் இவனது வரலாற்றை இங்குக் கூறுகிறோம். மற்றபடி, இவன் ஒரு புலவன் என்ற நிலையிலேயே காணப்படுகிறான். இவனது பாடல் சங்கநூலில் இடம் பெற்றுள்ளது.12 களவு வழியில் கூடிய தலைவனை எண்ணி எண்ணி உருக்குலைந்த தன் நிலையைப்பற்றிக் கூடக் கவலைப்படாது, தலைவன் மீது பழிதூற்றுவார்களே என்று தலைவி ஒருத்தி வருந்துவதாக இவன் பாடியுள்ள பாடல் பெண்களின் பெருந்தகைமையைப் புலப்படுத்துவதாக உள்ளது.13 பழையன் மாறன் பழையன் என்னும் பெயர் கொண்ட இருவர் சங்ககால வரலாற்றில் காணப்படு கின்றனர். ஒருவன் மோகூர் மன்னன் என்ற முறையில் அறிமுகமாகிறான்.14 மற்றொருவன் ‘போர்’ என்னும் ஊரின் தலைவன். மோகூர்ப் பழையன் பாண்டிய அரசர்களுக்கு உறுதுணையாய் விளங்கியவன். போர்ப் பழையன் சோழர் படைத்தலைவன். வித்தை என்னும் இடத்தை ஆண்ட அரசன் ‘இளம் பழையன்’ மாறன் என்னும் பெயர் பெற்றுள்ளான்.15 மோகூர் அரசனைச் சேரன் செங்குட்டுவன் வென்றான். வித்தை அரசன் இளம்பழையன் மாறனை இளஞ்சேரல் இரும் பொறை வென்றான். போர் அரசன் பழையனை நன்னன் முதலான ஏழுபேர் கூட்டாகத் தாக்கிப் போரில் கொன்றனர். மாறன் என்றால் இவனையே குறிக்கும் அளவிற்கு இவனது பெயர் தலையாலங் கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் காலத்தில் பரவியிருந் தமையால் இவன், பெரும்பெயர் மாறன் என்றும் சிறப்பித்துக் கூறப்படுகிறான்.16 பாண்டியன், மோகூரின் ஆட்சிப் பொறுப்பினை இவனிடம் ஒப்படைத்திருந்தான்; கோசர் இவனது அரசவையைச் சிறப்பித்தனர்.17 இவனுக்கும் சோழன் கிள்ளிவளவனுக்கும் கூடல் நகரில் ஒரு போர் நடந்தது.18 கிள்ளிவளவன் என்ற சோழ அரசன் மதுரையில் வெற்றி பெற்ற செய்தி நமக்கு ஒரு வரலாற்றுத் தொடர்நிகழ்ச்சியை உய்த்துணர உதவி செய்கிறது. ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் செங்குட்டுவன் காலத்தவன். கோவலனது கொலையால் இவன் தன் அரியணையி லிருந்து வீழ்ந்து இறந்தான். பிறகு பழையன் மாறன் மதுரையில் செல்வாக்குப் பெற முயன்றான்.19 அந்த முயற்சியில் சோழன் கிள்ளி வளவன் வெற்றி பெறவே, மதுரை சோழர் வசமாகிவிட்டது. பழையன் மாறன், பின் மோகூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு வரலானான். சோழன் கிள்ளிவளவன் பசும்பூண் பாண்டியன் என்பவனைப் பாண்டிய நாட்டிற்கு அரசனாகச் சில காலம் ஆண்டுவரச் செய்தான். பசும்பூண் பாண்டியன் சோழருக்குட்பட்டு அவர்களுக்குத் திறை செலுத்திக்கொண்டு, நாட்டை ஆண்டு வந்திருக்கலாம். இந்நிலை பாண்டியரின் விடுதலையுணர்வைத் தூண்டி தன்னாட்சி பெறும் மனப்பான்மையை வளர்த்தது. இந்த உயர்வே வெற்றிவேற்செழியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் என்ற நிலையில் நமக்கு அறிமுகமாகி மதுரையைக் கைப்பற்றி ஆண்ட நிகழ்ச்சியில் முடிந்தது. தலையாலங் கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனது வெற்றியில் சோழனும் சேரனும் தோல்வி யுற்றத்தை அவனது வரலாற்றில் காணலாம். மதுரை நகரில் அரியணையில் தலையாலங்கானத்துச் செரு வென்ற நெடுஞ்செழியன் அமர்ந்தபின் பழையன் மாறன் அவன் படைத்தலைவனாக விளங்கினான். மோகூர் ஆட்சிப் பொறுப்பும் அவனிடம் இருந்தது. கோசர் படையில் தலைவனாகவும் கோசர் குடிமக்களைத் தன் அரசவையில் கொண்ட மன்னனாகவும் இவன் விளங்கினான். மேற்கூறப்பெற்ற போரில் இவனது காவல்மரமான வேம்பு வெட்டி வீழ்த்தப்பட்டது. அம் மரத்தின் அடித்துண்டை வெற்றி பெற்ற செங்குட்டுவன் முரசு செய்து கொள்ளவதற்காகத் தன் தலைநகருக்கு இழுத்துச் சென்றான். போரில் இறந்த வீரர்களின் மனைவியர் கைம்மை நோன்பிற்காகக் களைந்த தலைமயிரைக் கொண்டு கயிறு திரித்து அந்தக் கயிற்றில் வெட்டிய வேப்பமரத்துண்டைக் கட்டி யானைகளில் பிணைத்து தன் தலைநகர்க்கு இழுத்துச் சென்றான். இந்தப் போரில் பழையன் மாறன் மாண்டிருக்கலாம்.20 சிறப்புகள் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனுக்கு இவன் பலபோர்களில் வெற்றி தேடித் தந்திருக்கிறான். இதனைப் பாராட்டி நெடுஞ்செழியன் இவனுக்கு வேலைப்பாடு அமைந்த மாலை ஒன்றைச் சூட்டிச் சிறப்பித்தான்; மாறன் என்னும் பட்டத்தையும் அளித்தான்.21 பழையன் என்று பொதுப்பட வழங்கப்பட்டுவந்த இவன், இந் நிகழ்ச்சிக்குப் பிறகு ‘பழையன் மாறன்’ என்று வழங்கப்பட லானான் என்பதைப் ‘பெரும்பெயர் மாறன்’ என்னும் தொடர் உணர்த்துகிறது. தோற்றம் - குடி ‘நெடுந்தேர் இழையணி யானைப் பெரும்பெயர் மாறன்’ என இவன் சிறப்பிக்கப்படுதலால், தேரிலும் யானையிலும் இவன் உலாப்போந்த காட்சி நமக்குக் காட்டப்படுகிறது. பழையன் இவனது பெயர். இவன் பழையர் குடியைச் சேர்ந்தவனாக இருக்கலாம் எனத் தோன்றுகிறது. இளம் பழையன் மாறன் இவன் ‘வித்தை’ என்னும் இடத்தையாண்ட அரசன். இவன் இளஞ்சேரல் இரும்பொறையோடு போரிட்டுத் தோல்வியுற்றான்.22 பெயர் அமைதிகொண்டு பழையன் மாறனின் தம்பியாக இவன் இருக்கக்கூடும் என்று எண்ணத்தோன்றுகிறது. இருவரும் மாறன் என்ற பட்டம் பெற்றிருப்பதும், சேர அரசர்களிடம் தோல்வியடைந்ததும் இக் கருத்திற்கு வலுவூட்டுகின்றன. 4. வழுதி என்னும் பெயருடைய அரசர்கள் ‘வழுதி’ என்பது பாண்டியர்க்கு வழங்கப்பட்ட பெயர்களுள் ஒன்று. இச்சொல் ‘வழித்தோன்றல்’ என்னும் பொருளில் தோன்றியதாக எண்ண இடமுண்டு. இப் பெயரைக் கொண்ட அரசர்கள் சங்க காலத்தில் பலர் இருந்தனர். பெருவழுதி என்னும் பெயர்பெற்றுள்ள அரசர்கள் நால்வேறு அடைமொழிகளைக் கொண்ட நிலையில் காணப் படுகின்றனர். சிறப்பு அடைமொழிகளை நோக்கி, இவர்களை வெவ்வேறு அரசர்கள் என்று கொள்வதே பொருத்தமாக அமைகின்றது. பல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதி வழுதி எனப்படும் அரசர்களுள் இவனே காலத்தால் முந்தியவ னாகக் காணப்படுகிறான்.1 இவனை வாழ்த்தும் புலவர் பஃறுளியாற்றின் மணலைக்காட்டிலும் பல்லூழி வாழவேண்டும் என்று வாழ்த்துகிறார்.2 பஃறுளியாறு சங்ககாலத்திலேயே கடலால் கொள்ளப்பட்டது. எனவே, இவன் அந்த ஆறு கடலால் கொள்ளப்படுவதற்குமுன் வாழ்ந்தவன் என்று தெரிகிறது. ஆதலால், இவனைப் பிறரினும் பழமையானவன் என்று நாம் கொள்ளலாம். இவனைப் பாடிய எல்லாப் புலவர்களும் இவனை மட்டுமே பாடியுள்ளனர். இவர்கள் வேறு அரசர்களையும் பாடியிருந்தால் அவ்வாறு பாடப்பெற்ற அரசர்களின் காலத்தைக் கொண்டு இவ்வரசனுடைய காலத்தைக் கணிக்கக் கூடும். இவன் பஃறுளியாறு கடலோடு கலக்குமிடத்தில் நிகழ்ந்த விழாவில் கலந்துகொண்டான்.3 அவ் விழாவில் யாழில் வல்ல வயிரியர்களுக்குச் சொக்கத் தங்கத்தைப் பரிசாக வழங்கினான்.4 அத்துடன், தன் கோமகனையும் அவர்களுக்குப் பரிசாக அனுப்பி வைத்தான். அவன் ‘கடல்விழா நடத்தி மகிழ்ந்த நெடியோன்’ என்னும் பெயரினன்.5 கடல்விழா என்பது வணிகர்விழா. முதுகுடுமிப் பெரு வழுதியின் மகன் நெடியோன் ஆவான். இவன் ‘குடுமி தன்கோ’ என்று குறிப்பிடப்படுகிறான். முதுகுடுமியின் மகனான நெடியோனின் கால்வழித் தோன்றியவன்தான் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்.6 போர்கள் முதுகுடுமிப் பெருவழுதி பல போர்களில் ஈடுபட்டு வெற்றி கண்டான். இமயமலைக்கு வடக்கிலுள்ள நாடுகளிலும், குமரி முனைக்குத் தெற்கிலுள்ள கடல் தீவுகளிலும், கீழைக்கடலிலும், மேலைக்கடலிலும் இருந்த தீவுகளிலும் இவனது புகழ் பரவியது.7 இவனிடம் கடற்படையும் யானைப்படையும் இருந்தனவாகக் கருதலாம். இவற்றைக்கொண்டு இவன் இந்த வெற்றிகளைப் பெற்றிருக்க வேண்டும். தான் வெற்றிபெற்ற இடங்களில் கிடைத்த செல்வங்களைக்கொண்டு தன்னிடம் பரிசில் நாடி வருவோர்க்கெல்லாம் வாரி வழங்கினான். நல்வேள்ளி என்று சிறப்பிக்கப்படும் வேள்வியை இவன் செய்தான்.8 கள்ளும் கறிச் சோறும் அளித்தான், போரில் வெற்றிபெற உதவியவர்களையும் வெற்றி பெற்றபின் பாராட்டியவர்களையும் தானே அழைத்து, வேண்டிய பரிசில்களைக் கொடுத்துக் கொண்டாடும் வேள்வி, நல்வேள்வியாகும்.9 இந்த நல்வேள்வியில் நான்மறை முனிவரை இவன் பாராட்டாதது கண்ட புலவர் ஒருவர்10 மனம் வருந்தி நான்மறை முனிவர்க்குத் தலை வணங்கியும், சிவ பெருமான் நகர்வலம் வரும்போது தன் குடையைச் சாய்த்துப் பிடித்தும் மரியாதை செய்ய வேண்டும் என்று கூறினார். முதுகுடுமி, புலவர் அறிவுரையை ஏற்று அவர் விருப்பப்படி செய்தான். நான்மறை முறைப்படி யூபம் என்னும் வேள்வித் தூண்கள் பல நட்டான், நான்மறை வல்ல அந்தணர்களைக் கொண்டு பல வேள்விகளைச் செய்வித்தான்.11 இவ்விதம் பல வேள்விகளைச் செய்தமையால் இவன் ‘பல்யாகசாலை’ என்னும் அடைமொழியுடன் வழங்கப்பட்டான். புலவர்களுக்குப் பொற்றாமரைப் பூக்களைப் பரிசளித்துச் சிறப் பித்ததும், புலவர்களுக்கு யானைகளையும், தேர்களையும் பரிசில் களாக நல்கியதும் இவனது கொடைகளில் நினைவுகூரத் தக்கவை. பகைவர் நாட்டின் தேர் சென்ற தெருக்கள் எல்லாவற்றிலும் கழுதைகளைப் பிணைத்துத் திரியவிட்டதும். அறுவடை செய்யும் நிலையில் உள்ள விளைச்சல் வயல்களில் தன்னுடைய தேர்ப்படை யுடன் சென்று பாழாக்கியதும் இவன், தனது பகைவர்கள் நாட்டிற்குச் செய்த கொடுமையாகும். இஃது அக்காலப் போர் மரபாகக் கருதப் பட்டதுபோலும். முதுகுடுமி என்னும் இவனது பெயர் முதுமையை உணர்த்தும் நரைத்தலை முடி உடையவனாக இவன் விளங்கியதால் அமைந்திருக்கலாம். போரில் மிகுதியாகப் பழகியதால், இவனது மனைவிமார் ஊடல் கொண்டபோதும் அன்பாகப் பேசாமல் அடக்கு முறையைப் பின் பற்றி வந்தான். இதனால் மகளிர் சினந்தால், எதிராகச் சினங்கொள்ளக்கூடாது என்று புலவர் இவனுக்கு அறிவுரை கூறினார்.12 கானப்பேர் எயில் கடந்த உக்கிரப்பெருவழுதி13 இவனது பெயரை நமக்கு அறிவிப்பவர் புறநானூற்றைத் தொகுத்த ஆசிரியரே ஆவர். அவர் ஓரிடத்தில் கடந்த என்னும் சொல்லாலும் மற்றோரிடத்தில் ‘தந்த’ என்னும் சொல்லாலும் இவனைக் குறிப்பிடுகிறார். கானப்பேர் எயில்பற்றியும், அதனை வேங்கைமார்பன் என்பவன் ஆண்டதுபற்றியும், காவற்காடு. காவல் சிற்றூர்கள், ஆழ்ந்த அகழி, உயர்ந்த மதில், மீன் பூத்தன்ன ஞாயில் ஆகியவற்றைக் கொண் டிருந்த தன் கானப்பேர் எயில் கோட்டையைப் பறிகொடுத்துவிட்டு வேங்கைமார்பன் ஓலமிட்டு வருந்தியது பற்றியும் சங்கப் பாடல்களில் தெளிவான செய்திகள் உள்ளன. இந்த வெற்றி இவனது வரலாற்றில் மிகவும் சிறப்புடையதாய் விளங்கியதுபற்றி, இவன் ‘கானப்பேர் எயில் கடந்த உக்கிரப் பெருவழுதி’ என்று சிறப்பித்துக் கூறப்பட்டான். மூவேந்தர் நட்பு தமிழக வரலாற்றில் மிகச் சிறப்பு வாய்ந்ததாக எண்ணத்தக்க மூவேந்தர் நட்பு இவன் காலத்தில் அமைந்தது. சேரமான் மாரி வெண்கோ, சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி ஆகியோருடன் இவனும் சேர்ந்து முத்தீப் போல அமர்ந்திருந்து செயல்படும் காட்சியைப் புலவர் ஒருவர் கண்டு வாழ்த்தியுள்ளார்.14 பார்ப்பார்க்குப் பூவும் பொன்னும் தாரை வார்த்துத் தரவேண்டும் என்றும், மகளிர் பொற்கலத்தில் ஊட்டும் தேறலை உண்டு மகிழ்ந்து களித்திருக்க வேண்டும் என்றும் கூறி அவர் வாழ்த்தினார். மூவேந்தரின் இத்தகைய கூட்டுறவு பாரியைப் பொறுத்தமட்டில் தீதாய் முடிந்தாலும், தமிழைப் பொறுத்தமட்டில் நன்மையாக முடிந்தது. தமிழ்நாட்டு மூவேந்தர்களிடையே பகைமை நீங்கி அமைதி நிலவியது. பாண்டியன் தமிழில் பாடல்களைத் தொகுக்கும் பணியில் ஈடுபட்டான். உக்கிரப் பெருவழுதி காலத்தில்தான் குறுந்தொகை, நற்றிணை, நெடுந்தொகை என்னும் நூல்கள் தொகுக்கப்பட்டன. நெடுந்தொகை அல்லது அகநானூறு என்னும் நூலைத் தொகுக்கும் பணியைத் தானே மேற்கொண்டான்; உப்பூரிகுடிகிழார் மகன் உருத்திரசன்மன் என்னும் புலவரைத் தலைமைப் புலவராக அமர்த்தி அத் தொகுப்புப் பணியைச் செய்து முடித்தான். திருக்குறள் அரங்கேற்றமும், இறையனார் களவியலுக்கு நக்கீரர் என்பார் எழுதிய உரையும் இவனது அவையில் அரங்க கேற்றப்பெற்றன என்பது செவிவழிச் செய்திகளாகும். நாஞ்சில் வள்ளுவன் இவன் காலத்தில் வாழ்ந்தவன்.15 வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதி16 சோழ அரசன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவனும் இந்தப் பாண்டிய அரசனும் ஒருங்கிருக்கக் கண்ட புலவர் ஒருவர் இவர்களுடைய நட்பு நீடிக்கவேண்டுமென்று வாழ்த்துகிறார். இவர்கள் கூடியிருந்த இடம் சோழ நாட்டுத் தலைநகர் என்பது. புலவர் சோழனை முன்னிலைப்படுத்தியும் பாண்டியனைப் படர்க்கையில் குறிப்பிட்டும் பாடியிருப்பதிலிருந்து தெரிகிறது. இவ்வரசனைப் பாடிய புலவர். பாண்டியன் இலவந்திகைப்பள்ளித் துஞ்சிய நன்மாறனையும்17 பிட்டங்கொற்றனையும் தனித்தனியே நேரில் கண்டு பாடியுள்ளார்.18 பிட்டங்கொற்றன், சேர அரசன் கோதையின் படைத்தலைவன் என்பதும்19 கோதை அல்லது கோதை மார்பன். கிள்ளி வளவனிடம் பழையன் மாறன் மதுரையில் தோற்றபோது மகிழ்ந்தான் என்பதும்20 பல பாடல்களைத் திரட்டி அறியப்படும் சமகால நிகழ்ச்சிகள். இந் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து எண்ணும்போது பழையன் மாறன், பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறனுக்காக மதுரையில் போரிட்டான். அச்சமயத்தில் பாண்டியநாட்டு அரியணையைப் பெறப் பாண்டியன் வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதி. சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவனின் உதவியை வேண்டி னான். அப்போதுதான் சோழன் அவையில் இருவரையும் ஒருங்கு கண்டு புலவர் வாழ்த்தினார். பெருந்திருமா வளவன் குராப்பள்ளியில் துஞ்சியவன் என்பது அவனது பெயரால் தெளிவாகிறது.21 அந்த அடை மொழியைக் கொண்ட கிள்ளிவளவன் என்பது இவனே ஆவான்.22 திருமாவளவன் என்பது இச் சோழனின் இயற்பெயர். கிள்ளிவளவன் என்பது கிள்ளியின் மகன் வளவன் என்று விளங்கும் பெயர். கிள்ளிவளவன் தன்னை நாடிவந்து உதவி வேண்டிய வெள்ளி யம்பலத்துத் துஞ்சிய பெருவழுதிக்கு உதவினான். பாண்டியனின் கூடல் நகரத்தைத் தாக்கி வென்று, பெருவழுதிக்கு அளித்தான். இந்தப் பெருவழுதி மதுரையில் இருந்து அரசாண்டு வரும்போது, வெள்ளி யம்பலம் என்று வழங்கப்பெறும் மதுரைச் சொக்கநாதர் கோயில் மன்றத்தில் உயிர்நீத்தான்.23 இந்தப் பெருந்திருமாவளவனும், பெரு வழுதியும் சேர்ந்து வென்ற நாடுகளில் புலிச் சின்னமும் கயற்சின்னமும் சேர்த்துப் பொறிக்கப்படவேண்டும் என்று புலவர் அறிவுரை கூறினார். இவனது ஆட்சிக் காலத்தில் சோழ, பாண்டிய நாட்டு இலச்சினைகள் இவ்வாறு விளங்கின எனக் கொள்ளலாம். (இந்த கூட்டுச் சின்னத்தை மீண்டும் தனிச் சின்னமாக்கியவன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்.) பாண்டியர் ஐந்து கூறுகளாகப் பிரிந்து நாடாண்டு வந்தனர்.24 இளம்பெருவழுதி இவன் புலவன் என்ற நிலையிலேயே காணப்படுகிறான். வழுதி என்னும் பெயர் அமைதியை எண்ணி, ஏதாவது ஓரிடத்தில் இளவரசனாக வேனும் இருந்திருக்கக்கூடும் என்று கருதலாம். வழுதியர் குடியில் தோன்றியவன் எனக் கொள்ளலாம். கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி என்னும் பெயரால் இவனைப் புறநானூற்றைத் தொகுத்த ஆசிரியர் குறிப்பிடுகிறார். தேவாமிர்தமே கிடைத்தாலும் தனியாக உண்ணாமல் பகுத்துண்ணல், பிறர் அஞ்சுகிறார்களே என்று தானும் பழிக்கு அஞ்சிச் செயலாற்றுதல், புகழ் தரத்தக்க செயலுக்காக உயிரையே கொடுத்தல், பழிக்கத்தக்க செயல்களில் உலகமே பரிசாகக் கிடைப்பதாயினும் அவற்றைச் செய்யாமை, தனது ஊக்கமான செயல் முயற்சிகளைப் பிறர் நலம் கருதிச் செய்தல் ஆகிய சிறந்த பண்புடையவர்கள் உலகில் வாழ் வதால்தான் இந்த உலகம் அழியாமல் இயங்கிக் கொண்டிருக்கிறது என்னும் கருத்தமைந்த பாடலை இவன் பாடியுள்ளான்.25 இவன் கடலுள் மூழ்கி இறந்து போனான். கடற்போரில் ஈடுபட்டிருந்தபொழுது இந்தச் சாவு நிகழ்ந்து இருக்கலாம். முதுகுடுமிப் பெருவழுதி கடற்போரில் ஈடுபட்டதையும், செங்குட்டுவன் கடல் வாணிகத்திற்கு உதவும் பொருட்டுப் போரிட்டதையும் நாம் இங்கு நினைவுகூரலாம். முதுகுடுமிப் பெருவழுதி கடற்போரில் ஈடுபட்டதைக் கண்டோம். இப் பாண்டியன் கடலில் மாண்டவன் என்பது தெரிகிறது. இருவர் பெயர்களும் பெருவழுதி என்றமைந்துள்ளன. ‘முது’, ‘இள’ என்னும் அடைமொழிகள், மூத்தவன், இளையவன் என்னும் பொருளைத் தருவன வாய் இவர்களுக்கு அமைந்தனவோ என்று ஐயுற வேண்டியுள்ளது. பெரும்பெயர் வழுதி இவன் (பாண்டியன் கருங்கை ஒள்வாள் பெரும்பெயர்) ‘வழுதி’ என்று குறிப்பிடப் படுகிறான். பாண்டியருள் ‘கவுரியர்’ என்னும் குடி யினரும் ஒருவராவர். தனுக்கோடியை அடுத்த பகுதியிலும் கவிரம் என்று சங்ககாலத்தில் வழங்கப்பெற்ற செங்கோட்டைப் பகுதியிலும் இவர்கள் வசித்தனர். இவர்களுடைய வழித் தோன்றல்களில் ஒருவன் பெரும்பெயர் வழுதி.26 இவன் போரில் வெற்றி பெற்று யானை மீதேறி உலா வந்தான். இவன் போரில் வெற்றி பெற்று யானை மீதேறி உலா வந்தான். ‘தவிரா ஈகைக் கவுரியர் மருக’ என்று கூறப்படும் பகுதியில்இவனது முன்னோர் கொடைச் சிறப்புடன் இவனது கொடைச் சிறப்பும் குறிப்பாக உணர்த்தப்பட்டுள்ளது. வழிப்பறிமிக்க காட்டு வழிகளில் புலவர்கள் இவனை நாடிப் பரிசில் பெறுவதற்கு வருவார்கள் என்றும். அவர்கள் வந்ததும் அவர்களுடைய குறிப்பறிந்து உதவ வேண்டும் என்றும் அவனுக்கு அறிவுறுத்திப் புலவர் பாடியுள்ளனர். அகன்ற மார்பு, உலர்ந்த சந்தனம், கால்களில் பொன்னால் செய்யப் பெற்ற வீரக்கழல் இவற்றுடன் காணப்பட்டான். நிலமே தலைகீழாக மாறினாலும் வாக்குத் தவறக்கூடாது என இவன் அறிவுறுத்தப் பட்டிருக்கிறான். இவனுடைய மனைவி செம் பொன்னாலாகிய அணிகலன்களை அணிந்த கற்பரசியாக விளங்கினாள். இவன் மதுரையில் இருந்து ஆட்சி செலுத்தியதாகத் தெரிகிறது.27 கூடலைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட வழுதி ஒருவன் ‘வாடா வேம்பின் வழுதி’ என்றும், ‘அரண் பல கடந்த முரண் கொள் தானை’ உடையவன் என்றும் கூறப்படுகிறான்.28 கூடல் நகரத் தலைமை வேறு எந்த வழுதிக்கும் குறிப்பிடப்படாததால் இவனைக் ‘கருங்கை ஒள்வாள் பெரும்பெயர் வழுதி’ என்றே கருதலாம். இவன் பல கோட்டைகளை வென்றபோது இவனுடைய வலிமைமிக்க கைகளில் ஒளிபொருந்திய வாள் ஒன்று சிறப்புற்று விளங்கியது. இதனால் இவன் ‘கருங்கை ஒள்வாள்’ என்ற அடைமொழியைத் தன் பெயருக்குமுன் பெற்றான். குறுவழுதி ‘அண்டர் மகன் குறுவழுதியார்’ என்னும் பெயருடன் குறிக்கப்படும் இவரும் புலவர் என்ற நிலையிலேயே காணப்படுகிறார். அண்டர் என்போர் ஒரு குடியினர் ஆவர்.29 நள்ளி என்ற அரசனுடைய தோட்டிமலைப் பகுதிகளில் அவர்கள் வாழ்ந்து வந்தனர்.30 நார்முடிச் சேரல் இவர்களை வென்று பின்னிடும்படி துரத்தினான்.31 அண்டர் அல்லது ஆயர்குடியில் தோன்றியவர் என்பதும், ஆட்சிப் பொறுப்பேற்று விளங்கியவர்கள் என்பதும் பெறப்படும். பாண்டியரில் ஒரு கிளைக் குடியினர் கண்டீரமலைப் பகுதியில் அண்டர் என்னும் பெயருடன் செல்வாக்குப் பெற்று விளங்கினார்கள் எனலாம். இந்த அண்டர் களுக்குப் பெருந்தலைவனாக விளங்கியவன்தான் குறுவழுதி. இவன் சிறந்த புலவனாக விளங்கியதால் ‘ஆர்’ என்னும் சிறப்பு அடை மொழி சேர்த்துக் ‘குறுவழுதியார்’ என்று வழங்கப்பட்டான். இவனுடைய பாடல்கள் அகநானூறு, குறுந்தொகை, புறநானூறு ஆகிய மூன்றிலும் காணப்பெறுகின்றன. இவன் பாண்டிய மரபில் தோன்றியவ னாகத் தெரியவில்லை. நல்வழுதி நல்வழுதியர் என்னும் புலவராக அறிமுகமாகும் இவரை வழுதி என்ற பெயரைக் கொண்டு, ஒரு சிறு பகுதிக்கு மன்னனாக விளங்கி யிருக்கலாம் எனக் கொள்கிறோம். வையை ஆற்றைச் சிறப்பித்துப் பாடும் இவர் அதனைப் ‘போரடு தானையான் யாறு’32 என்று குறிப்பிடுகிறார். இதனால், வையை அவருக்கு உரிய ஆறு அன்று என்பது பெறப்படுகிறது. இவர் பிற வழுதியரைப் போலவே, பாண்டிய நாட்டின் தென்பகுதியில் ஒருபால் ஆண்டுவந்தார் என்று கருதலாம். பாண்டியன் மாறன் வழுதி பாண்டியன் பன்னாடு தந்தானும் பாண்டியன் மாறன் வழுதியும் ஆகிய இருவரும் புலவர்களாகக் கருதப்பெறுகின்றனர்,33 இந்த இரண்டு பெயர்களும் ஒருவனையே குறிப்பன என்று கொள்ளத்தக்க வகையில் பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி என்ற நிலையில் அமைந்த பெயரும் காணப்படுகிறது. இப் பெயர் கொண்டவன் நற்றிணை என்னும் தொகுப்பு நூலை உருவாக்கியவன்.34 ‘கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதி’ என்பானை பல புலவர்கள் பாடியுள்ளனர். தமிழ்நாடு. மூவேந்தர்க்கும் பொது என்று கூறினால் இவன் பொறுக்கமாட்டானாம். தனக்கே உரியது என்று ஆக்கிக்கொள்ளப் போருக்கு எழுவானாம். இவ்வாறு போருக் கெழுந்த போது. ஏதோ ஒருவகையில் தமிழ்நாடு முழுவதும் இவனுக்குரிய தாயிற்று என்ற நிலை வந்ததுபோலும். அதன்பின்னும் இவனது போர்வேட்கை தணியவில்லை. ‘வடபுல மன்னர் வாட அடல்குறித்து’ எழுந்தான்,35 இதன் பிளைவு என்னவாயிற்று என்பது தெரியவில்லை. தமிழ்நாட்டிற்கு வடக்கில் இருந்த சில சிறறரசர்களையேனும் இவன் வென்றிருக்கலாம். சினப்போர் வழுதி‘, ‘இயல்தேர் வழுதி’ என்னும் அடைமொழிகள் இவனது சினமிகுதியையும், தேரில் உலா வந்த பாங்கையும் நம் நினைவிற்குக் கொண்டு வருகின்றன. பாண்டியன் உக்கிரப் பெருவழுதியும், இந்த மாறன் வழுதியும் ஒரே காலத்தில் அகத்திணைத் தமிழ்ப் பாடல்களைத் தொகுத்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர். இவர்களைப் பாடிய புலவர்களைக் கொண்டு இவர்கள் சமகாலத்தவர் என்பதை உணரலாம்.36 கடலன் வழுதி மதுரை மாவட்டம் மீனாட்சிபுரத்தையடுத்த கழுகுமலையில் உள்ள சமணர் படுக்கைகளுக்குமேல் உள்ள பாறைகளில் சங்க காலத்துத் தாமிழி எழுத்துகள் உள்ளன. அந்த எழுத்துகள் கி. மு. நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. அந்த எழுத்துகளில் கடலன் வழுதி என்ற பெயர் வருகிறது. இந்த வழுதி நெடுஞ்செழியனின் பணி மேற்கொண்டவன்.37 இவன் கவிஞனாகிய நந்தி என்னும் சமணத் துறவிக்கு கழுகுமலைப் பாறையில் படுக்கை வெட்டிக் கொடுத்தான் மருங்கை வழுதி மருங்கூரைத் தலைநகராகக் கொண்டு வழுதி என்ற ஒருவன் ஆண்டுவந்தான். இவன் பசும்பூண் வழுதி என்று குறிப்பிடப்படுகிறான். கொற்கை வழுதி கொற்கைத் துறைமுகத்தைக் தலைநகராகக் கொண்டு வெற்றி வேற்செழியன் ஆண்டுவந்ததுபோல இவன் ‘நற்றேர் வழுதி’ என்று சிறப்பித்துக் கூறப்படுகிறான்.38 பிற வழுதி அரசர்கள் ‘தாடோய் தடக்கை வழுதி’ என்று கூறப்படும் வழுதி ஒருவன் தன் வேலை உயர்த்திப் பகைவர்களைப் புறங்கண்டான்,39 சித்திர மாடத்துத் துஞ்சிய நன்மாறன் இவனைப் போலவே தாடோய் தடக்கை வழுதி என்று கூறப்படுகிறான். இதனால் இருவரும் ஒருவராக இருக்கலாம். இவன் ‘வெல்போர் வழுதி’ என்றும் சிறப்பிக்கப் பட்டுள்ளான். ‘போர்வல் வழுதி’ என்று கூறப்படும் வழுதி ஒருவனுக்குப் பகைவர்கள் பெறற்கரிய உயர்ந்த திறைப்பொருள்களைக் கொடுத்தனர். இப் போர்வல் வழுதி மேற்கூறப்பெற்ற சித்திரமாடத்துத் துஞ்சிய நன்மாறன் என்று கருத இடமுண்டு.40 கடல்போன்ற பெரிய படையைக் கொண்ட ‘கலிமா வழுதி’ என்ற பெயரும் சித்திரமாடத்துத் துஞ்சிய நன்மாறனைக் குறிக்கக்கூடும். புலிமான் வழுதி என்பவன் தன் மனைவி மக்களுடன் சென்று திருப்பரங்குன்றத்து முருகவேளை வழிபட்டதாகத் தெரிகிறது. அகநானூறு தொகுக்கப்படக் காரணமாக இருந்த உக்கிரப்பெரு வழுதிக்கு இப் பெயர் வழங்கியது என்று கருதலாம். 5. பாண்டியன் என்னும் பெயருடைய அரசர்கள் ஒல்லையூர் தந்த பூதப் பாண்டியன் இவனது பாடல்களில் இரண்டு. சங்க நூல்களில் இடம் பெற்றுள்ள வகையில் புலவனாக இவன் நமக்கு அறிமுகமாகிறான். என்றாலும், இவனது வஞ்சினப் பாடலும் இவன் பெயருக்குமுன் உள்ள ‘ஒல்லையூர் தந்த’ என்னும் அடைமொழியும் இவன் சிறந்த அரசனாக நாடாண்டு வந்தவன் என்பதைத் தெரிவிக்கின்றன. தன்னுடைய பகைவர்களைப் புறம் காணாவிட்டால் தனக்குத் தன் மனைவியைப் பிரிந்து வாழும் நிலை நேரட்டும். அறநெறி தவறாத அரசவையில் திறமை இல்லாத ஒருவனை அமர்த்தித் தீமை செய்தவன் என்ற பழி நேரட்டும். மையற் கோமான் மாவன், எயிலாந்தை, அந்துவன் சாத்தன், ஆதன் அழிசி, இயக்கன் ஆகிய ஐவருடனும் பிறருடனும் கூடி மகிழ்ந்திருக்கும் பேறில்லாமல் வறண்ட நிலத்தின் மன்னனாக அடுத்த பிறவி அமையட்டும் என்றெல்லாம் இவன் வஞ்சினம் கூறுமிடத்து இவனது நற்பண்புகள் வெளிப்படுகின்றன,1 ஒல்லையூர் என்பது இப்பொழுது உள்ள புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்த நாடு. இவன் அந்த நாட்டில் நடந்த போரின்போது இவ்விதம் வஞ்சினம் கூறினான். தான் கூறியவாறு ஒல்லையூர் நாட்டை வென்று தன் நாட்டுடன் சேர்த்துக் கொண்டான். ஒல்லையூர் கிழான் மகன் பெருஞ்சாத்தன் என்பவன் இறந்ததற்காகப் பாணர்கள் பெரிதும் வருந்திய செய்தியைக் கூறும் பாடல் ஒன்று உள்ளது.2 இந்தச் சாத்தன் இறந்தது பூதப்பாண்டியன் நடத்திய போரில் நிகழ்ந்திருக்கலாம். தமிழ் இலக்கியங்களில் வடக்குப் பகுதியிலுள்ள மலைகளைக் கடந்து பொருள் தேடச் சென்றவர்களைப் பற்றியே மிகுதியாகப் பேசப் படுகிறது. ஆனால், இவன் தமிழக மக்கள் பொதிய மலையைக் கடந்து பொருள் தேடச் சென்ற மக்களைக் குறிப்பிடுவது நினைவுகூரத்தக்கது.3 பொதிமலைப் பகுதியில் திதியன் என்பவன் ஆண்டு வந்ததை இவன் குறிப்பிடுவதோடு, அவனது செல்வச் செழிப்பையும், அவனது அரண்மனையில் முழங்கிய இன்னிசை முழக்கத்தையும் பாராட்டிக் கூறியுள்ளான். இதனால் திதியன் இவனது சிறந்த நண்பன் என்பது தெரிகிறது. இத் திதியன், பாண்டியன் தலையாலங்கானத்து நெடுஞ் செழியனை எதிர்த்துத் தாக்கியது அவர்களது வரலாறுகளில் காணலாம். தலையாலங் கானத்துப் போர், நெடுஞ்செழியன் கொற்கை யில் ஆண்டு கொண்டிருந்தபொழுது நிகழ்ந்ததாகையால் அக்காலத்திலோ, அதற்குச் சற்று முன்னரோ பூதப்பாண்டியன் மதுரையிலிருந்து அரசாண்டான் என்று கூறலாம். ஆரியப் படை கடந்த நெடுஞ்செழிய னுக்குப் பின்னும் தலையாலங்கானத்து நெடுஞ்செழியனுக்கு முன்னும் உள்ள இடைப் பட்ட காலத்தில் இவன் ஆட்சி செலுத்தினான் என்று கூறலாம். போரில் வஞ்சினம் கூறியபோது, புறங்காணாவிட்டால் ‘பேர் அமர் உண்கண் இவளினும் பிரிக’ என்று வஞ்சினம் கூறும் அளவிற்கு இவனது அன்பு. மனைவியிடம் சிறந்து விளங்கியது. இவனைப் போலவே இவனது மனைவியும் இவன்மீது பேரன்பு கொண்டு விளங் கினாள். பூதப்பாண்டியன் இறந்தபோது அவளும், அவனை எரித்த தீயில் பாய்ந்து உயிர்துறந்தாள். அவள் பெயர் பெருங்கோப்பெண்டு.4 பசும்பூண் பாண்டியன் ‘பசும்பூண்’ என்னும் அடைமொழியைமட்டும் கொண்டு இந்தப் பாண்டியனைத் தனியான ஓர் அரசன் என்று கொள்ள முடியுமா என்பது ஆய்விற்குரியது.5 இப் பெயர் கொண்ட அரசன், மதுரையில் இருந்து மிகச் சிறப்புடன் அரசாண்டதாகத் தெரிகிறது. அப்படி யிருந்தும் எந்தப் புலவரும் இவனை நேரில் கண்டு வாழ்த்திப் பாடியதாகப் புறநானூற்றில் பாடல்கள் இல்லை. எனவே, பசும்பூண் பாண்டியன் என்னும் பெயர் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியனாக இருக்கலாமென்று கருதப்படுகிறது. அரசுகட்டிலைக் கைப்பற்றிய போர் பாண்டிய நாட்டின் அரியணையைக் கைப்பற்றவே இவன் போராடி இருக்கிறான். போரில் வெற்றிகண்டதால் வெண்கொற்றக் குடையை உயர்த்திப் பெரும்புகழுடன் அரசாண்டிருக்கிறான்.6 பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனும் இதே நிலையினன் என்பது குறிப்பிடத்தக்கது. அதிகனை வென்றது அதிகன் என்பவன் கொல்லிமலைப் பகுதியை ஆண்ட அரசன். பசும்பூண் பாண்டியன் ஒரு யானைப் படையுடன் சென்று அதிகனை வென்று தன் வெற்றிக்கொடியை உயர்த்தி. அவனது கொல்லி மலையில் யானைப் படையின் வெற்றி அணிவகுப்பை நடத்தினான். இப் போருக்குப்பின் அதிகன் பாண்டியனுடைய நண்பன் ஆனான். பின்னர்த் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறையிடம் நாட்டைப் பறிகொடுத்து இந்தப் பாண்டியனின் படைத்தலைவனாக மாறிவிட்டான்.7 கொங்கரை ஓட்டியது அதிகன் கீழைக் கொங்கர்களின் தலைவன். பசும்பூண் பாண்டியனும் அதிகனும் நண்பர்களாக மாறியபின் கீழைக் கொங்கரும் பாண்டியனுக்கு நண்பர் ஆயினர். இந்நிலையில் மேலைக் கொங்கர்கள் பொறையர் குடியைச் சேர்ந்த சேர அரசர்களுடன் சேர்ந்துகொண்டு பாண்டியனுக்கு எதிர்ப்பாய் விளங்கினர். பசும்பூண் பாண்டியன் இந்தக் கொங்கர்களோடு போரிட்டு அவர்களை நாட்டைவிட்டே துரத்தி விட்டான்.8 தங்களது வேற்படைகளைப் போர்க்களத்திலேயே எறிந்து விட்டுத் தப்பியோடிய கொங்கர். குடகடல்பக்கம் ஓடிவிட்டனர். இந்தப் போரில் இவனுக்கு ஆய் அரசன் உதவி செய்தான் எனத் தெரிகிறது.9 ஓடிய கொங்கர்களில் சிலர் வழியில் இருந்த நாட்டில் அரசாண்ட நன்னனுடன் சேர்ந்துகொண்டனர். நன்னன் மூவேந்தருக்கும் எதிரியாக இருந்தான். வாகைப் பறந்தலைப் போர் ஆய் எயினனுக்கும் நன்னது படைத்தலைவன் ஞிமிலிக்கும் நன்னனின் தலைநகர் பாழியில் போர் நடந்தது. போரில் ஆய் எயினன் மாண்டான். இந்நிலையில் ஞிமிலி, ஆய் எயினனின் நகர் வாகையைக் கைப்பற்ற முயன்றான். வாகையைப் பாதுகாக்கப் பசும்பூண் பாண்டியன் தன் படைத்தலைவன் அதிகனை அனுப்பியிருந்தான். பாண்டியன் தலைவ னான அதிகனுக்கும், ஞிமிலிக்கும் வாகைப்பறந்தலையில் போர் நடந்தது. போரில் நன்னனுக்கு உதவியாகக் கொங்கர்கள் உதவினர். யானை மீதிருந்து போரிட்ட அதிகன் யானiடன் கொல்லப்பட்டான். இந்த நிகழ்ச்சியில் கொங்கர்கள் ஆரவாரம் செய்து மகிழ்ந்தனர்.10 பொதியமலை வெற்றி அதிகனை வென்று கொல்லிமலையில் யானைகளை வெற்றி உலாவரச் செய்தான் இப் பாண்டியன் என்பதை முன்னரே பார்த்தோம். அதுபோலவே, இவன் பொதியமலையைக் கைப்பற்றினான் போலும்,11 இதன் பயனாகப் பொதியமலை அரசன் ஆய், அதிகனைப் போலப் பாண்டியனின் நண்பன் ஆனான். அதிகன் வாகைப் பறந்தலையில் பாண்டியனுக்காகப் போரிட்டது போலவே, ஆய் அரசன் கொங்கர்களை ஓட்டுவதில் பசும்பூட் பாண்டியனுக்கு உதவினான்.12 நெடுமிடல் படைத்தலைமை பசும்பூண் பாண்டியனுக்குப் படைத்தலைவனாக விளங்கியவன் நெடுமிடல் என்பவனாவான்.13 பசும்பூண் பாண்டியனுடைய பகைவர்கள் இப் படைத்தலைவனைக் கொன்ற பிறகு அரிமணவாயில் உறத்தூரில், கள்ளுடைப் பெருஞ்சோறு உண்டு வெற்றிவிழாக் கொண்டாடினர் என்று அறிகிறோம்.14 இந்த நெடுமிடல் என்பவனுடன் கொடுமிடல் என்பவனும் மற்றொரு படைத்தலைவனாக இருந்தவன் எனத் தெரிகிறது. இவர்களைப் போரில் கொன்றவன் நார்முடிச் சேரல் என்று கூறப்படுகிறது.15 இதைக் கருதுமிடத்துப் பசும்பூண் பாண்டியன் வடக்கில் கொல்லிமலை, தெற்கில் பொதியமலை ஆகியவற்றைத் தன்னகத்தே கொண்ட பெருநிலப்பரப்பை, அதிகன் முதலிய சிறப்பு மிக்க வள்ளல்களின் துணையுடன் அரசு புரிந்தான் எனக் கொள்ளலாம். பாண்டியன் அறிவுடைநம்பி இவனை நேரில் கண்டு பாடிய புலவர் ‘அறிவுடைவேந்தன்’ என்னும் தொடரைப் பொதுப்படையாகக் குறிப்பிடுகிறார்.16 இதனால் இவனை அறிவுடைநம்பி என்று குறித்தார்களோ என்று எண்ண வேண்டியுள்ளது. இவனது பாடல்கள் இன்பப் பயனை விளக்குவன வாக உள்ளன. நம்பி என்னும் பெயர், முறுக்கான உடற்கட்டுக் கொண்டு அழகுடன் பொலிவும் ஆடவர்க்கெல்லாம் வழங்கப்பெற்ற பொதுப் பெயர் ஆகும். இவன் அரியணையில் அமர்வதற்குமுன் அரசியல் அலுவலர்கள் குடிமக்களின் நிலையைப் பார்த்து மிகுதியான வரிகளை வசூலித்த தாகத் தெரிகிறது. புலவர் இவனை நேரில் கண்டு சிறிது சிறிதாகப் பல தவணைகளில் மக்கள் வரிகளைச் செலுத்த அனுமதிக்கப்பட வேண்டும் என்பதைக் குறிப்பாக உணர்த்தினார்.17 அரசன், புலவரின் அறிவுரையை ஏற்று மக்களின் விருப்பம்போல் பல தவணைகளில் வரி செலுத்த அனுமதித்தான் எனலாம். வாழ்க்கையில் பலவகையான செல்வ வளங்களும் ஒருங்கமையப் பெற்றிருந்தாலும் மக்கட்செல்வம் இல்லாவிட்டால் இன்பம் அமையாது என்று இவன் தன்னுடைய பாடல் ஒன்றில் குறிப்பிட்டுள்ளான்.18 சங்கப்பாடல் தொகுதிகளில் இவனுடைய பாடல்களாக அகத் துறைப் பாடல்கள் மூன்று இடம்பெற்றுள்ளன. தினைப் புனம் காக்கச் சென்ற பெண் ஒருத்தி அதனை மறந்து அவளது காதலனோடு கூட மகிழ்ந்தே காலம் போக்குவதை அவளது தோழி பக்குவமாகத் தவறு என்று அறிவுறுத்தும் வகையில் ஒரு பாடல் அமைந்துள்ளது.19 காதலன் ஒருவன் அடிக்கடி காதலியிடம் கள்ளத் தொடர்பு கொள்வதைத் தோழி வன்மையாகக் கண்டிப்பதாய் மற்றொரு பாடல் அமைந்துள்ளது.20 கற்பரசி ஒருத்தியின் கையில் இருந்த குழந்தையைப் பேய் ஒன்று பிடுங்கிக் கொண்டது போலத் தோழியிடமிருந்து தலைவியைத் தலைவன் பிடுங்கிக் கொண்டான் என்றும், பூப்போன்ற அவளைத் தேனீப் போன்று நலம்நுகர்ந்து சென்றான் என்றும் நயம்படப் பாடிய பாடல் ஒன்றும் கிடைத்துள்ளது.21 நம்பி நெடுஞ்செழியன் எனும் பெயர் கொண்ட அரசன் ஒருவன் மிகச் சிறந்த போர்த்திறம் படைத்த அரசனாக விளங்கியதை நெடுஞ்செழியன் வரலாற்றில் காணலாம். இந்தப் பெயர் நம்பியின் மகன் நெடுஞ்செழியன் என்பதாக இருக்கக்கூடும். பாண்டியன் கீரஞ்சாத்தன் கீரன் மகன் சாத்தன் என்னும் பெயர் கீரஞ்சாத்தன் என்று அமைந்திருக்கக்கூடும். பாண்டியன் என்னும் அடைமொழியைக் கொண்டு இவன் பாண்டியர் குடியைச் சேர்ந்தவன் அல்லது பாண்டியர் படைத் தலைவன் என்பது தெரியவருகிறது. கள்ளுண்ட மயக்கத்தால் கடமையை மறந்து சில போர்வீரர்கள் அஞ்சியிருந்தபோது, எஞ்சிய படையினருக்குப் பாதுகாவலனாகத் தழுவிக் கொண்டு போரில் குதித்து முன்னேறிச் சென்றான். போர் வீரர்கள் காயம்பட்டு உணவு கொள்ளாமல் இருந்தபொழுது இவன், நீங்கள் உணவு கொள்ளாவிட்டால் நானும் உண்ணமாட்டேன்’ என்று சூளுரைத்து அவர்களை உண்ணும்படி செய்தான். இதனால் இவன் சிறந்த படைத்தலைவனாகவும், படை வீரர்களைத் தன் உயிரைப்போல் போற்றும் உயர்ந்தோனாகவும் விளங்கினான். பாண்டியன் என்னும் பெயர், பாண்டிய அரசர்கள் இவனைப் பாராட்டி அளித்த சிறப்புப் பட்டமாகவும் இருக்கலாம். பாடிய புலவர் பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறனையும் பாடியுள்ளார். ஆகையால், இவன் நன்மையுடைய படைத்தலைவனாக இருந்தான் என்று கூறலாம்.22 பிறகட்டுரைகள் 1. பழங்கதைகளால் அறியப்படும் அரசர்கள்* தமிழ்நாட்டில் வழங்கும் சில மரபு வழிச் செய்திகள் பாண்டிய மன்னர்களுடைய செயல்களைப்பற்றிக் குறிப்பிடுகின்றன. அவற்றில் சில புராணத் தலைவர்களோடு தொடர்புடையனவாக இருப்பதால் உண்மையான வரலாற்றுச் செய்திகள் என்று கொள்ள முடியவில்லை. வடிம்பலம்ப நின்ற பாண்டியன் நிலப்பகுதியைத் தங்கள் நாட்டுப் பரப்பில் கொண்டிருந்ததோடு நீர்ப்பரப்பாகிய கடலையும் ஓர் எல்லை வரையில் தங்களுக்கு உரியதாகப் பாண்டிய மன்னர்கள் கொண்டிருந்தனர். அந்த எல்லைப் பகுதி எதுவரையில் என்று பாண்டிய அரசன் ஒருவன் தன்னுடைய வேலை வீசிக் காட்டினான்.1 வடிம்பு என்பது வேலின் நுனியாகும். எனவே, இவன் வடிம்பு அலம்ப நின்ற பாண்டியன் எனப்பட்டான். இவன் தன்மீது வேலை வீசியதால் சினங்கொண்ட கடல் பொங்கியெழுந்தது; பாண்டிய நாட்டின் நிலப்பகுதியை விழுங்கியது. இதனால், பாண்டியன் தன் நாட்டுப் பரப்பில் குமரியாறு பாய்ந்த நிலம், குமரிக்கோடு முதலான பல மலைகளைக் கொண்டிருந்த நிலம் ஆகியவற்றை இழந்தான். இந்த நில இழப்பை ஈடுசெய்வதற்காக அவன் வடதிசை நோக்கிப் படையெடுத்துச் சென்று கங்கைச் சமவெளியையும் இமயமலைப் பகுதியையும் கைப்பற்றிக்கொண்டான். இந்த அரசன் தென்னன் என்று குறிப்பிடப்படுகிறான். நெடியோன் என்னும்2 பஃறுளி ஆற்றோடு தொடர்புடையவ னாகவும், ‘நிலந்தருதிருவின்’ நெடியோன் என்று நிலப்பரப்பினைத் தன் நாட்டோடு சேர்த்துக்கொண்டவனாகக் காட்டப்படுவதால் இந்த அரசனை வடிம்பலம்ப நின்ற பாண்டியன் என்று கருதுகின்றனர்.3 பிற்காலத் தமிழ்நூல் ஒன்று இவனை ‘ஆழி வடிவு அலம்ப நின்றான்’ என்று குறிப்பிடுகிறது.4 இந்நூல் இவனை யதுகுல அரசன் என்றும், ஏழிசை நூல் சங்கத் தலைவன் என்றும், தேவர்களுக்காகத் தூது சென்றவன் என்றும், பாரதப் போரில் கலந்துகொண்டவன் என்றும் குறிப்பிடுகிறது. இந்திரன் ஆரம்பூண்ட பாண்டியன்5 தேவர் கோனாகிய இந்திரன் எல்லா அரசர்களையும் விருந்திற்கு அழைத்தான். விருந்திற்குச் சென்ற அரசரெல்லாரும் இந்திரன்முன் தலைதாழ்த்தி வணக்கம் செலுத்தினர். பாண்டியன் மாத்திரம் தலை தாழ்த்தி வணக்கம் செய்யாது, தன் பெருமிதம் தோன்ற நிமிர்ந்து சென்றான். இதைக்கண்ட இந்திரன் தன் முத்தாரத்தை அந்தப் பாண்டியனுக்கு அளித்துப் பெருமைப்படுத்தினான். மழை பிணித்தாண்ட மன்னவன் பாண்டியன் ஒருவன் இந்திரனுடைய தலையிலிருந்த முடி வளையை உடைத்து எறிந்தான். அதனாற் சினங்கொண்ட இந்திரன் தனது ஆணைக்குட்பட்டு நடந்துவந்த மேகங்களை அழைத்துப் பாண்டிய நாட்டில் பெய்யக்கூடாதென்று கூறித் தடுத்துவிட்டான். இதனால் பாண்டிய நாட்டில் மழையில்லாமல் போயிற்று. பாண்டியன் ஒருவன் அந்த மேகங்களைத் தடுத்து மழைபெய்யச் செய்தான். பொற்கைப் பாண்டியன் இவனுடைய ஆட்சிக் காலத்தில் மதுரை நகரில் வாழ்ந்த கீரந்தை என்பான் தன்னுடைய மனைவியைத் தனியே வீட்டில் விட்டு வெளியூருக்குப் போனான். பாண்டியனுடைய ஆட்சி, தனித்திருக்கும் தன் மனைவிக்குப் பாதுகாப்பாக இருக்கும் என்பது அவனுடைய நம்பிக்கை. கீரந்தை வெளியூருக்கும் போயிருப்பதை அறிந்த பாண்டியன் இரவில் நகர்வலம் வரும்போது கீரந்தையின் மனைவிக்கு யாதொரு தீங்கும் நேராதபடி அவள் அறியாமலே காத்துவந்தான். நெடுநாள் சென்றபிறகு, நள்ளிரவில் கீரந்தை வீட்டிற்குள் யாரோ இருவர் பேசுங் குரல் கேட்டது. நள்ளிரவில் நகர்வலம் வந்த பாண்டியன், யாரேனும் கீரந்தையின் மனைவிக்குத் தீங்குசெய்ய வந்தனரோ என்று கருதி அந்த வீட்டுக் கதவைத் தட்டினான். உள்ளிருந்து கணவனாகிய கீரந்தை யின் குரல் ‘யார் அது?’ என்று கேட்டது. கீரந்தை ஊரிலிருந்து திரும்பி வந்துவிட்டான். அவனுடைய பேச்சுக்குரல்தான் உள்ளிருந்து கேட்டது. கதவைத் தட்டினபடியால் அவன் அவள்மீது ஐயப்படுவானே. அவனுடைய ஐயத்தைப் போக்கவேண்டுமே’ என்று கருதிய பாண்டியன் அந்தத் தெருவிலுள்ள எல்லா வீட்டுக் கதவுகளையும் தட்டிக்கொண்டே அரண்மனைக்குப் போய்விட்டான். அடுத்த நாள் அந்த வீதியில் உள்ளோர் எல்லோரும் முன்னிரவு தங்கள் வீட்டுக் கதவுகளை யாரோ தட்டிவிட்டுச் சென்றார்கள் என்று மன்னனிடம் முறையிட்டனர். தன் மனைவியின்மீது ஐயங்கொண்ட கீரந்தை எல்லாம் வீட்டுக் கதவுகளும் தட்டப்பட்டதை அறிந்த தன் மனைவியின்மேல் ஐயம் நீங்கினான். பிறகு பாண்டியன் தானே அந்தக் குற்றம் செய்ததை அரசவையில் ஒப்புக்கொண்டு, கதவுகளைத் தட்டின குற்றத்திற்காகத் தன்னுடைய கையை வெட்டிக் குறைத்துக் கொண்டான் என்று கதை கூறப்படுகிறது.6 மலயத்துவச பாண்டியன் மலயத்துவசன் என்னும் பெயர் மலையைத் தன்னுடைய அடையாளமாகக் கொண்டவன் என்ற பொருளுடையதாகும். சங்க இலக்கியத்துள் இவனைப் பற்றிய குறிப்பு இல்லை. மலையத்துவச பாண்டியன் காஞ்சனை என்ற பெயருள்ள பாண்டிமா தேவியோடு வாழ்ந்தான். இவ்விருவருக்கும் மகப்பேறில்லாமையால் தவம் செய்து ஒரு பெண்மகவைப் பெற்றனர். அக் குழந்தைக்குத் தடாதகை என்று பெயரிடப்பெற்றது. அப்பெண் பாண்டிய நாட்டை அரசாண்டாள் என்று புராணக் கதை கூறுகிறது. மலையத்துவச பாண்டியனைப் பற்றி வடமொழி பாகவத புராணம் மற்றொரு வரலாற்றைக் கூறுகிறது. இப் புராணக் கதைகள் நம்பத் தகுந்தன அல்ல. தடாதகைப் பிராட்டியார் மலையத்துவச பாண்டியனுக்குப் பிறகு அவனுடைய மகளாகிய தடாதகைப் பிராட்டியார் அரசாண்டதாகத் திருவிளையாடற் புராணங்கள் கூறுகின்றன7 அங்கயற்கண்ணியாகிய மீனாட்சி அம்மையே தடாதகைப் பிராட்டியாகப் பிறந்தார் என்று புராணக் கதைகள் கூறுகின்றன. கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் பாடலிபுத்திரத்தில் செலியூகஸ் நிகேடாரின் தூதுவராக இருந்த மெகஸ்தனீஸ் தம்முடைய காலத்தில் பாண்டிய நாட்டை ஒரு பெண்ணரசி அரசாண்டாள் என்று கூறியுள்ளார். ஹெர்க்குலிஸ் என்ற கிரேக்க வீரனுக்குப் பண்டேயா என்ற பெண் இருந்தாள் என்றும், அவளுக்குத் தென்னாட்டில் கடற்கரை வரையில் உள்ள நாட்டை அரசாளக் கொடுத்தான் என்றும் மெகஸ்தனீஸ் கூறியுள்ளார். மலையத்துவச பாண்டியனை இவர் ஹெர்க்குலிஸ் என்று கூறினார் எனத் தோன்றுகிறது. அவளுடைய மகளுக்குப் பண்டேயா என்று பெயரிட்டான் என்பதும், பாண்டிய நாட்டைத் தடாதகையார் அரசாண்டார் என்பதும் ஒரே வரலாற்றைக் குறிக்கின்றன எனலாம். பாண்டிய அரசைப்பற்றி மெகஸ்தனீஸ் இன்னொரு செய்தியையும் கூறியுள்ளார். பாண்டிய அரசிக்கு 365 ஊர்கள் இருந்தன. ஒவ்வோர் ஊராரும் அரண்மனைக்கு நாள்தோறும் கடமை செலுத்தி னார்கள். இந்த அரசிறை. காசாக இல்லாமல் பொருளாகச் செலுத்தப் பட்டிருக் கலாம் எனத் தோன்றுகிறது. சிலப்பதிகாரத்தில் மாதரி என்ற இடைக்குல மடந்தை அரண்மனைக்குச் சேரவேண்டிய இறைவரியை நெய்யாகச் செலுத்தினாள் என்று கூறப்பட்டுள்ளது. 2. ஆரியப்படை கடந்த, அரசு கட்டிலில் துஞ்சிய பாண்டியன் நெடுஞ்செழியன்* கடைச் சங்ககாலத்தில் ஆட்சிசெய்த பாண்டியரில் சிலர் நெடுஞ் செழியன் என்று பெயர் பெற்றிருந்தார்கள். அவர்களின் பெயர் சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றன. அவர்களை, இன்னின்ன நெடுஞ் செழியர் என்று பிரித்தறிவதற்கு அவர்பெயர்களுடன் சில அடை மொழியிட்டு வழங்கினார்கள். நம்பி நெடுஞ்செழியன், ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன் தலையாலங் கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் என்னும் பெயர்களைக் காண்க. இங்கு ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியனுடைய வாழ்க்கை வரலாற்றை ஆராய்வோம். மதுரையிலிருந்து பாண்டி நாட்டை யரசாண்ட இந்த நெடுஞ் செழியன் கல்விகற்ற அறிஞன்; செய்யுள் இயற்ற வல்ல கவிஞன். கவிஞனாக விளங்கிய இவன் இயற்றிய செய்யுட்கள் முழுவதும் நமக்குக் கிடைக்கவில்லை. நற்காலமாக இவன் இயற்றிய ஒரே ஒரு செய்யுள் புறநானூற்றில் 183 ஆம் செய்யுளாகத் தொகுக்கப்பட்டிருக்கிறது. அந்தச் செய்யுள் இது: உற்றுழி யுதவியும் உறுபொருள் கொடுத்தும் பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே; பிறப்போ ரன்ன உடன்வயிற் றுள்ளுஞ் சிறப்பின் பாலால் தாயுமனந் திரியும். ஒருகுடிப் பிறந்த பல்லோ ருள்ளும் மூத்தோன் வருக வென்னாது அவருள் அறிவுடை யோனாறு அரசுஞ் செல்லும். வேற்றுமை தெரிந்த நாற்பா லுள்ளுங் கீழ்ப்பா லொருவன் கற்பின், மேற்பா லொருவனும் அவன்கட் படுமே. (திணை - பொதுவியல்; துறை - பொருள்மொழிக் காஞ்சி. பாண்டியன் ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன் பாடியது.) விழுமிய பொருள் பொதிந்த இந்தச் செய்யுள் புற நானூற்றில் தொகுக்கப்படும் சிறப்புப்பெற்றுள்ளது. இச்செய்யுளை இயற்றிய இந்தப் பாண்டியன் யாரிடங் கல்வி பயின்றான் என்பது தெரியவில்லை. கோவலனும் கண்ணகியும் மதுரைக்குச் சென்றபோது பாண்டி நாட்டை ஆட்சி செய்துகொண்டிருந்தவன் இந்த நெடுஞ்செழியனே. மதுரையில் வாணிகஞ் செய்து பொருளீட்ட எண்ணிய கோவலன், வாணிக முதலீட்டுக்காகக் கண்ணகியின் பொற்சிலம்பை விற்கச் சென்று வஞ்சகன் ஒருவனால் ‘கள்வன்’ என்று குற்றஞ்சாட்டப்பட்ட போது, அக்குற்றத்தைத் தீர விசாரிக்காமல் அவனைக் கொல்வித்த வனும் இந்த நெடுஞ்செழியனே. கோவலன் மேல் சுமத்தப்பட்ட பொய்ப்பழியை நீக்குவதற்காகக் கண்ணகி வழக்குத் தொடுத்து வாதாடியபோது, தான் கோவலனுக்குக் கொலைத் தண்டனை விதித்தது அரசநீதி என்று எடுத்துக்காட்டியவனும் இந்த நெடுஞ்செழியனே. பிறகு கண்ணகி, குற்றஞ்செய்யாதவன்மேல் பொய்க்குற்றஞ் சாட்டிக் கொலை செய்வது அநீதி என்று சான்று காட்டி நிறுவிய போது, தான் செய்தது தவறுதான் என்று கண்டு, தன் தவற்றை யுணர்ந்து அஞ்சி நடுங்கி அரசுகட்டிலில் (சிம்மாசனத்தில்) இருந்தபடியே உயிர் விட்டவனும் இந்த நெடுஞ்செழியனே. இவனுடைய ஆட்சிக்காலத்தில் வடநாட்டிலிருந்து மதுரையின்மேல் படையெடுத்து வந்து போர் செய்த ஆரியப்படையை வென்று ஓட்டித் துரத்தியவனும் இந்த நெடுஞ் செழியனே. இவற்றையெல்லாம் சிலப்பதிகாரம், மதுரைக்காண்டத்தின் இறுதிச் செய்யுளினால் அறிகிறோம். வட வாரியர் படை கடந்து தென்றமிழ் நாடு ஒருங்கு காணப் புரைதீர் கற்பிற் றேவி தன்னுடன் அரைசு கட்டிலிற் றுஞ்சிய பாண்டியன் நெடுஞ்செழியன் என்பது அதன் வாசகம். கல்வி கற்றுப் புலவனாக விளங்கிய இந்தப் பாண்டியன் போர்க்களத்தில் பகைவரை வென்று புகழ் பெற்று விளங்கினான். அந்த வெற்றியின் காரணமாக இவன் “ஆரியப் படை கடந்த நெடுஞ் செழியன்” என்று சிறப்புப்பெயர் பெற்றான். அரசுச் செல்வமும், கல்விச் செல்வமும் கைவரப் பெற்ற இந்தப் பாண்டியன் ஆய்ந்தோய்ந்து பாராமல் அவசரப்பட்டுக் கோவலனைக் கொன்ற தவற்றின் காரணமாகக் கண்ணகி இவன்மீது தொடுத்த வழக்கில் தோற்றுத் தான் செய்தது தவறு என்று கண்டபோது மனம் பதறித் தான் நடத்தியது கொடுங்கோல் என்பதை அறிந்து நெஞ்சம் பதறிச் சிம்மாசனத்திலேயே உயிரை விட்டான். இவன் அரசு கட்டிலில் (சிம்மாசனத்தில்) இருந்து உயிர்விட்டபடியால் “அரசு கட்டிலில் துஞ்சிய நெடுஞ்செழியன்” என்றும் பெயர் பெற்றான். இஃது இவன் இறந்த பிறகு பெற்ற பெயர். நெடுஞ்செழியன் ஆரியப்படையை வென்றான் என்று கூறப்படுகிறான். ஆரியப்படை இவன்மேல் படையெடுத்து வந்ததா? இவன் ஆரியப் படையின்மேல் போருக்குச் சென்றானா? ஆரியப் படை என்றால் என்ன? இவை பற்றி ஆராய வேண்டியது சரித்திரம் அறிவதற்கு முதன்மையானது. சங்க காலத்துத் தமிழர் பாரதநாட்டை மூன்று பெரும் பிரிவுக ளாகப் பிரித்திருந்தார்கள். அவை தமிழகம் (தமிழ் நாடு), வடுக நாடு ஆரிய நாடு என்பவை. தமிழ் நாட்டுக்கு வடக்கே இருந்தது வடுக நாடு. அதுதமிழ்நாட்டின் வட எல்லையிலிருந்துவடக்கே விந்தியமலை வரையில் பரவியிருந்தது. வடுகநாடு மேற்கே அரபிக் கடல் முதல் கிழக்கே வங்காளக் குடாக்கடல் வரையில் நீண்டிருந்தது. வடுக நாட்டின் மேற்குப் பகுதியைக் கன்னடரும் கிழக்குப் பகுதியைக் கலிங்கரும் (ஆந்திரரும்) ஆட்சி செய்தனர். கன்னட நாடும் ஆந்திர நாடும் சேர்ந்ததே வடுக நாடு. கன்னடரும், ஆந்திரரும் வடவர் அல்லது வடுகர் என்று பெயர் பெற்றனர். வடுக நாட்டுக்கு அப்பால் (விந்திய மலைக்கு வடக்கே) இருந்தது ஆரியநாடு. அது வடஇந்தியா முழுவதும் அடங்கியிருந்தது. ஆரிய நாட்டிலே இருந்தவர் ஆரியர். ஆரிய நாட்டிலிருந்த படை ஆரியப்படை. கடைச்சங்க காலத்திலும் அதற்கு முந்திய காலத்திலும் வட மேற்கு இந்தியாவில் சில கூட்டத்தார் வாழ்ந்து வந்தார்கள். அந்தக் கூட்டத்தாரில் யௌத் தேயர், அர்ச்சுனீயர் என்னும் பிரிவினர் முக்கிய மானவர். இவர்களுடைய தொழில் போர் செய்வது. யுத்தம் (போர்) செய்வதை வாழ்க்கையாகக் கொண்டவர் யௌத் தேயர். அர்ச்சுனீயர் என்பவர் அர்ச்சுனன் வழியில் வந்த போர் வீரர். இவர்களுக்கு அரசன் இல்லை. இவர்கள் கூட்டங்கூட்டமாக வசித்து வந்தனர். தங்களுக்குள் ஒரு தலைவனைத் தேர்ந்தெடுத்துக் கொண்டனர். யாரெனும் அரசன் இவர்களைத் துணைக்கு அழைத்தால் அவனைச் சார்ந்து அவனுடைய பகைவனுடன் போர் செய்வது இவர்களுடைய தொழில். சில சமயங்களில் இவர்கள் கூட்டமாக வேறு நாட்டுடன் போர் செய்வதும் உண்டு. யௌத்தேய கணம் (கணம் - கூட்டம்) தமிழ்நாட்டின் மேல் அடிக்கடி போருக்கு வந்தது. யௌத்தேய கணத்தைச் சங்ககாலத் தமிழர் ஆரியப்படை என்று பெயரிட்டழைத்தனர். வடுக நாட்டுக்கு அப்பால் ஆரிய நாட்டிலிருந்து வந்தவர் ஆகையால் அவர்கள் ஆரியப்படை என்று பெயர் பெற்றனர். ஆரியப் படை (யௌத்தேய கணம்) யின் வரலாற்றை நான் எழுதிய கட்டுரையில் காண்க. (ஆரியப்படையும் யௌத்தேய கணமும். பக்கம் 128-134, கல்வெட்டுக் கருத்தரங்கு. 1966.) அகநானூறு 386 ஆம் செய்யுளில் கூறப்படுகிற ஆரியப் பொருநன், ஆரியப் படையைச் சேர்ந்தவன் என்று தோன்றுகிறான். சோழநாட்டு வல்லத்துக் கோட்டை மேல் ஆரியப்படை வந்து முற்றுகை யிட்டபோது அக்கோட்டையிலிருந்த சோழன் அவ்வாரியப் படையை வென்று துரத்தினான். ஆரியப்படை உடைந்து ஓடிற்று. இதனை அகநானூறு 336 ஆம் செய்யுளினால் அறிகிறோம். பாண்டியன் நெடுஞ் செழியன் காலத்தில் ஓர் ஆரியப்படை போர் செய்ய மதுரைக்கு வந்ததையும் அப்படையை அவன் வென்று துரத்தியதையும் சிலப்பதிகார மதுரைக்காண்டம் கட்டுரைச் செய்யுளி னாலும், புறநானூறு 183 ஆம் செய்யுளின் அடிக்குறிப்பினாலும் அறிகிறோம். இவ்வளவு சிறந்த வீரனும் அறிஞனும் புலவனுமாக இருந்த இந்தப் பாண்டியன், மகளிர் மாட்டு வேட்கையுடையனாய்ச் சிற்றின்பப் பிரியனாக இருந்தான் என்பதை இவனுடைய சமகாலத்தில் வாழ்ந்தவ ரான இளங்கோவடிகள் (சேரன் செங்குட்டுவனுடைய தம்பியார்) கூறுகிறார். சிலப்பதிகாரம் கொலைக்களக் காதையில் இதனை இவர் கூறுகிறார்: கூடல் மகளிர் ஆடல் தோற்றமும் பாடற் பகுதியும் பண்ணின் பயங்களும் காவலன் உள்ளம் கவர்ந்த வென்றுதன் ஊடல் உள்ளம் உள்கரந் தொளித்துத் தலைநோய் வருத்தம் தன்மேல் இட்டுக் குலமுதற் றேவி கூடா தேக மந்திரச் சுற்றம் நீங்கி மன்னவன் சிந்தரி நெடுங்கண் சிலதியர் தம்மொடு கோப்பெருந் தேவி கோயில் நோக்கிக் காப்புடை வாயிற் கடைக்கா ணகவயின். (வரி, 131 - 140) இச் செய்தியையே இளங்கோவடிகள் கட்டுரை காதையில் மதுராபதி தெய்வத்தின் வாயிலாக மீண்டும் கூறுகிறார். பாண்டியன் கல்வி கற்றுப் புலமை வாய்ந்தவனாக இருந்தும், மனத்தை அடக்காமல் சிற்றின் பத்தில் நாட்டஞ் செலுத்தினான் என்றும், ஆனாலும் இவ்வொழுக்கம் அரச குடியில் பிறந்த இவனுக்கு இழுக்காகாது என்றும் மதுராபதி கூறியதாக இளங்கோவடிகள் கூறுகிறார்: நன்னுதல் மடந்தையர் மடங்கெழு நோக்கின் மதமுகந் திறப்புண்டு இடங்கழி நெஞ்சத் திளமை யானை கல்விப் பாகன் கையகப் படாஅது ஒல்கா வுள்ளத் தோடும் ஆயினும் ஒழுக்கொடு புணர்ந்த இவ்விழுக்குடிப் பிறந்தோர்க்கு இழுக்கந் தாராது. (கட்டுரைகாதை, 35-41.) இந்த நெடுஞ்செழியனிடத்தில் இன்னொரு குறைபாடும். இருந்தது. அஃது அரசர்மாட்டிருக்கக் கூடாத குறைபாடு. நீதி விசாரணைகளை இவன் பொறுப்பேற்று நடத்தாமல் தன் கீழ்ப்பட்ட அதிகாரிகளிடம் விட்டு விட்டான். அதனால், அவர்கள் தம்முடைய விருப்பம்போல் வழக்குகளை விசாரித்துத் தீர்ப்புக் கூறினார்கள். அவர்கள் செய்த பிழைபட்ட தவறான தீர்ப்பு இவ்வரசனுக்குக் கெட்ட பெயரை யுண்டாக்கிற்று. இச் செய்தியையும் இளங்கோவடிகளே கூறுகிறார். இதனை விளக்கிக் கூறுவோம். பாண்டியன் நெடுஞ்செழியன் காலத்தில் சேர நாட்டில் இருந்தவன்’ பல்யானைச் செல்கெழுகுட்டுவன். இந்தக் குட்டுவனைப் பதிற்றுப்பத்து மூன்றாம்பத்தில் பாடியவர் பாலைக் கௌதமனார். அவருக்குக் குட்டுவன் பெருஞ் செல்வங் கொடுத்ததை யறிந்த சோழ நாட்டுப் பார்ப்பான் பராசரன் என்பவன், அவனிடஞ் சென்று வேத பாராயணஞ் செய்து பொன்னையும் மணியையும் பரிசாகப் பெற்றுக் கொண்டு திரும்பி வரும் வழியில் பாண்டி நாட்டுத் தண்கால் (திருத்தண்கால்) என்னும் ஊரில் வந்து அரச மரத்தடியில் இளைப்பாறி னான். அப்போது அவ்வூர்ப் பார்ப்பனச் சிறுவர் அவனிடஞ் சென்றனர். பராசரன் அவ்விளைஞர்களை அழைத்துத் தன்னுடன் வேதம் ஓதும்படி கூறினான். அவ்விளைஞர்களில் தக்கிணன் என்னும் சிறுவன் பிழையில்லாமல் வேதம் ஓதியபடியால், பராசரன் தக்கிணனுக்கு முத்துப் பூணூலையும் பொன் கடகத்தையும் பரிசாகக் கொடுத்தான். பிறகு அவன் தன் சோழ நாட்டுக்குப் போய் விட்டான். முத்துப் பூணூலையும் பொற் கடகத்தையும் பரிசாகப் பெற்ற தக்கிணன் என்னும் சிறுவன் அவற்றை அணிந்து கொண்டான். அதனைக் கண்டு பொறாமை கொண்ட அவ்வூர்ப் பார்ப்பனர், தக்கிண னுடைய தந்தையான வார்த்திகன் என்னும் பிராமணன் இந்த நகைகளை எங்கிருந்தோ திருடிக் கொண்டு வந்தான் என்று ஊர் அதிகாரிகளிடம் கூறினார்கள். பாண்டியன் நெடுஞ்செழியனுடைய அந்த ஊழியர்கள், தீர விசாரியாமல் நகைகளைப் பிடுங்கிக் கொண்டு வார்த்திகனைச் சிறையில் அடைத்தார்கள். வார்த்திகன் அந்த நகைகளைக் களவாடியிருக்க வேண்டும், அல்லது அவனுக்குப் புதையல் கிடைத்திருக்க வேண்டும். களவு செய்தது குற்றம். புதையல் கிடைத்திருந்தால், அதை அரசாங்கத் தில் சேர்க்காமல் போனது குற்றம் என்று அவர்கள் தீர்ப்புக் கூறினார்கள். வார்த்திகன் மனைவி கார்த்திகை என்பவள் வருந்தி அழுதாள். அப்போது அவ்வூர் ஐயை (கொற்றவை) கோவிலின் கதவு திறவாமல் மூடிக்கொண்டது.இச் செய்தி அரசன் செவிக்கு எட்டியது. பாண்டியன், தண்காலில் இருந்த அரச ஊழியர்களை யழைத்து விசாரித்தான் அப்போது முத்துப் பூலின் வரலாறு தெரிந்தது. அரசன் வார்த்திகனை விடுதலை செய்து தன் ஊழியர் அநீதி செய்ததற்குத்தண்டமாக அவனுக்கு வயலூரில் நிலத்தைத் தானஞ் செய்தான். பிறகு கொற்றவைக் கோயில் கதவு திறந்து கொண்டது. இச் செய்திகளைக் கட்டுரைகாதை (வரி, 61-131) யில் காண்க. இதனால், இவன் நீதி விசாரணையில் கண்டிப்பாக இராமல் தன் கீழ்ப்பட்ட ஊழியரிடத்தில் அதிகாரத்தை விட்டிருந்தான் என்பது தெரிகின்றது. இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு பொது மக்களுக்கு இவன்மீது நம்பிக்கை போய் விட்டது. ஒரு சோதிட வார்த்தையும் உலவ ஆரம்பித்தது. அது, ஆடித் திங்கள் பேரிருள் பக்கத்து அழல்சேர் குட்டத்து அட்டமி ஞான்று வெள்ளி வாரத்து ஒள்ளெரி யுண்ண உரைசால் மதுரையோ டரைசு கேடுறும் (கட்டுரை. 133 - 136) என்பது. வழக்கு விசாரணைகளைச் சரிவரச் செய்யாமல் போனது இவனுடைய உயிருக்கே ஆபத்தாக முடிந்து விட்டது. பாண்டிமாதேவி யின் பொற்சிலம்பைத் திருடின கள்ளன் தன்னிடம் இருக்கிறான் என்று பொற்கொல்லன் பாண்டியனிடம் கூறியபோது, பாண்டியன் அதனை நன்றாக விசாரணை செய்யவில்லை. அல்லது, தக்க பொறுப்புள்ள அதிகாரியிடத்தில் ஒப்படைத்து விசாரிக்கச் செய்யவும் இல்லை. அவன் தன் கடமையைச் செய்யாமல் தவறினான். இஃது அவனுடைய இயற்கை. பொற்கொல்லனுடைய வார்த்தையை அவன் முழுவதும் நம்பினான். விசாரணை செய்யாமலே, ஊர் காப்பாளரை அழைப்பித்து, “தாழ்பூங் கோதைதன்காற் சிலம்பு கன்றிய கள்வன் கைய தாகில் கொன்றச் சிலம்பு கொணர்க ஈங்கு” என்று கட்டளை யிட்டான். இந்தச் சோர்பு இவன் உயிருக்கே ஆபத்தாக முடிந்தது. இவன்மீது கண்ணகி வழக்குத் தொடுத்து வழக்காடிய போது, இவ்வரசன் தான் செய்தது பிழை என்பதை அறிந்தான். அறிந்து அரசு கட்டிலிலேயே உயிர்விட்டான். ஆரியப்படை கடந்த, அரசு கட்டிலில், துஞ்சிய பாண்டியன் நெடுஞ்செழியனின் இந்த வரலாறுகளை யெல்லாம் சிலப்பதிகாரத்தி லிருந்து அறிகிறோம். இவனுடைய சமகாலத்திலிருந்த சேர அரசர்கள், இமயவரம்பன் நெடுஞ் சேரலாதனும் அவன் தம்பியான பல்யானைச் செல் கெழுகுட்டுவனும், சேரன் செங்குட்டுவனும் ஆவர். கொங்கு நாட்டில் சேரரின் இளைய வழியைச் சேர்ந்த மாந்தரஞ்சேரல் (செல்வக் கடுங்கோவாழியாதன்) அரசாண்டிருந்தான். சோழ நாட்டில் இருந்தவன் வடிவேற்கிள்ளி. தொண்டை நாட்டைக் காஞ்சியிலிருந்து அரசாண்டவன் வடிவேற்கிள்ளியின் தம்பியான இளங்கிள்ளி, இவர்கள் எல்லோரும் கி. பி. இரண்டாம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்தவர்கள். இந்தப் பாண்டியன் நெடுஞ்செழியனைப்பற்றித் திரு. ச. வையாபுரிப் பிள்ளை அவர்கள் ஓரிடத்தில் சரியாகவும் வேறொரிடத்தில் தவறாகவும் எழுதியிருக்கிறதைச் சுட்டிக்காட்ட வேண்டி யிருக்கிறது. 1940 ஆம் ஆண்டில் சைவசித்தாந்த சமாசம் வெளியிட்ட சங்க இலக்கியம் (எட்டுத் தொகையும் பத்துப்பாட்டும்) என்னும் நூலின் பதிப்பாசிரியராக இருந்தவர் திரு. வையாபுரிப் பிள்ளை அவர்கள், அந்த நூலில், ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் என்னுந் தலைப்பில், இவன் பாடிய புறம் 183 ஆம் செய்யுளைப் பிள்ளை யவர்கள் பதிப்பித்திருக்கிறார்கள். ஆனால், பிள்ளையவர்கள் ஆங்கிலத்தில் எழுதிய ‘தமிழ்மொழி தமிழ் இலக்கிய வரலாறு’ என்னும் நூலில் 145 ஆம் பக்கத்தில் இந்தப் பாண்டியனைச் சந்தேகிக்கிறார். (இந்த ஆங்கில நூல் 1956 ஆம் ஆண்டில் இவர் காலஞ் சென்ற பிறகு அச்சிடப்பட்டது). இந்த அரசன் உண்மையில் உயிர்வாழ்ந்திருந்தானா என்று இவர் ஐயப்படுகிறார். சங்க இலக்கியத்தை அச்சிட்டபோது இவருக்கு இல்லாத ஐயம் பிற்காலத்தில் இவருக்கு எப்படி ஏற்பட்டது! இந்தப் பாண்டியன் கற்பனைப் புருஷன் என்றால், இவன் பாடிய செய்யுள் எப்படிப் புறநானூற்றில் தொகுக்கப்பட்டிருக்கும்? ஆனால், வையாபுரிப் பிள்ளையின் நண்பரும் தமிழ் நூல்களும் தமிழ் நாட்டுச் சரித்திரங்களும் பிற்காலத்தவை என்று கூறுகிறவருமான திரு. கே. ஏ. நீலகண்ட சாஸ்திரி இந்தப் பாண்டியனைப்பற்றி ஐயப்பட வில்லை. இந்தப் பாண்டியன் உண்மையில் வாழ்ந்திருந்தவன் என்றும் புறநானூற்று 183ஆம் செய்யுளைப் பாடியவன் என்றும் சேரன் செங்குட்டுவனின் சமகாலத்திலிருந்தவன் என்றும் கோவலனைத் தவறாகக் கொன்று அந்தத் தவற்றைப் பிறகு அறிந்து சிம்மாசனத்தி லிருந்தபடியே உயிர் விட்டவன் என்றும் சாஸ்திரியார் எழுதுகிறார். (P. 524, 544. A Comprehensive History of India. Vol. 2. 1957). ஆரியப்படை கடந்த, அரசு கட்டிலில் துஞ்சிய பாண்டியன் நெடுஞ்செழியனுக்குப் பிறகு அவனுடைய தம்பியான வெற்றி வேற் செழியன், கொற்கையில் இளவரசனாக இருந்தவன், மதுரைக்கு வந்து அரசாண்டான். அவனுக்குப் பிறகு பாண்டி நாட்டை யரசாண்டவன் தலையாலங் கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன். 3. பாண்டியர் நிறுவிய தமிழ்ச் சங்கம்* சங்க காலத்திலே, மதுரைமா நகரத்திலே பாண்டிய மன்னர் மூன்று தமிழ்ச் சங்கங்களை நிறுவித் தமிழை ஆராய்ந்தார்கள் என்று இறையனார் அகப் பொருள் உரை முதலிய நூல்கள் கூறுகின்றன. அச் சங்கங்களில் இயல், இசை, நாடகம், என்னும் முத்தமிழ்கள் ஆராயப் பட்டன. பத்துப் பாட்டு, எட்டுத் தொகை முதலிய செய்யுள்கள் கடைச் சங்கப் புலவர்களால் பாடப்பட்டன. கடைச் சங்கம் கி. பி. 300-க்கு முன்பு இருந்தது என்று சரித்திரம் கூறுகிறது. ஆனால், இக்காலத்தில் சிலர், தமிழ் வரலாற்றினையும், நாட்டு வரலாற்றினையும், நேர்மையாகவும், சரியாகவும் ஆராய்ந்து பாராமல், தமிழ்ச் சங்கம் கி. பி.5 ஆம் நூற்றாண்டில் ஏற்பட்டது என்றும், அந்தத் தமிழ்ச் சங்கத்தில் தொல் காப்பியம் தோன்றியது என்றும் கூறுகின்றனர் எழுதுகின்றனர். இவ்வாறு பிழைபட்ட ஆராய்ச்சியைக் கூறுகிற வர்களில் முதன்மை யானவர் அண்மையில் காலஞ்சென்ற திரு. எஸ். வையாபுரிப்பிள்ளை அவர்கள். வையாபுரிப் பிள்ளையவர்கள் சென்னைப் பல்கலைக் கழகத்தில் தமிழாராய்ச்சித் துறைத் தலைவராக இருந்த படியால், அவர் கூறுவன எல்லாம் உண்மை என்று பாமர மக்கள் நினைக்கிறார்கள். பாமர மக்கள் மட்டும் அல்லாமல் படித்தவர்கள்கூட, ஆராய்ந்து பார்த்து உண்மை காணத் தெரியாமல், பிள்ளையவர்களின் தவறான முடிபுகளை உண்மையானவை எனக்கொண்டு மயங்குகிறார்கள். பிள்ளையவர்கள் பதிப்பித்த நூல்கள் போற்றற் குரியவை; பழைய நூல்களைப் பதிப்பிப்பதில் அவர் வெற்றி பெற்றிருக்கிறார். ஆனால், சொந்தமாக அவர் எழுதிய நூல்களில் மெய்போலத் தோன்றுகிற பல தவறான செய்திகள் கூறப்படுகின்றன. பொறுப்பு வாய்ந்த உயர்ந்த பதவியிலிருந்துகொண்டு, அதிலும் சென்னைப் பல்கலைக் கழகம் போன்ற நிலையத்தில் தமிழ்ப் பகுதியின் தலைமைப்பீடத்தில் அமர்ந்துகொண்டு பிள்ளையவர்கள் வெளியிட்ட தவறான ஆராய்ச்சி முடிபுகளை, அசைக்கமுடியாத உண்மைகள் என்று இன்றும் பலர் கருதிக்கொண்டிருப்பதில் வியப்பில்லை. அவருடைய முடிபுகள் தவறானவை என்பதை இதுவரையில் யாரும் விளக்காமல் இருப்பதுதான் வியப்பைத் தருகிறது. வையாபுரிப் பிள்ளை அவர்கள் காலஞ்சென்றவுடனே வெளிவந்த அவருடைய ‘தமிழ் மொழி, தமிழ் இலக்கிய வரலாறு’ என்னும் ஆங்கில நூலிலே (History of Tamil Language and Literature (1956) New Century Book House, Madras 2.) பல பிழைபட்ட தவறான கருத்துக்கள் கூறப்படுகின்றன. இது ஆங்கில நூலாக இருப்பதனாலே, இதனைப் படிக்கிற தமிழ் அறியாத மற்றவர்கள், இவருடைய பிழையான கருத்துக்களை உண்மையானவையென்று நம்புகிறார்கள். இவருடைய தவறான கருத்துக்கள் மேலைநாடுகளிலும் பரவி, தமிழ்மொழியைப் பற்றியும், தமிழ் இலக்கியங்களைப்பற்றியும் பிழைபடக் கருதும்படி செய்கின்றன ஏன்? நமது நாட்டிலும் இவருடைய தவறான முடிபுகளை நம்புகிறவர்களும் பலர் உள்ளனர். இங்கு, பாண்டியர் நிறுவிய தமிழ்ச் சங்கத்தைப் பற்றிப் பிள்ளை யவர்கள் கூறும் கருத்தை ஆராய்வோம். இவர் ஆங்கிலத்தில் எழுதிய ‘தமிழ் மொழி, தமிழ் இலக்கிய வரலாறு’ என்னும் நூலிலே இவ்வாறு எழுதுகிறார்: “வச்சிரநந்தியின் பேர்போன சங்கம் கி. பி. 470-இல் நிறுவப் பட்டது. தொல்காப்பியம் இச்சங்கத்தின் முதல் வெளியீடாக வெளிப் பட்டிருக்கக் கூடும் (பக்கம் 14). கி. பி. 470-இல் தமிழ் மொழியிலும் தமிழ் இலக்கியத்திலும் ஒரு முதன்மையான நிகழ்ச்சி ஏற்பட்டது. அந் நிகழ்ச்சி என்ன வென்றால், மதுரையிலே வச்சிர நந்தியின் மேற் பார்வையில் நிறுவப்பட்ட தமிழ்ச் சங்கமாகும். (பக்கம்-58) பழைய பாண்டியருக்குரிய சாசனங்களில், சின்னமனூர்ச் சிறய செப்பேட்டுச் சாசனம் (கி. பி. 10-ஆம் நூற்றாண்டு)மதுரையில் இருந்த சங்கத்தைக் கூறுகிறது. தலையாலங்கானத்துப் போர் வென்ற நெடுஞ்செழியனுக்குப் பிறகு இருந்த ஒரு பாண்டியனால் மதுரைத் தமிழ்ச் சங்கம் நிறுவப் பட்டதாக இச் சாசனம் கூறுகிறது. இச் சாசனம் கூறுகிற சங்கம் வச்சிர நந்தி ஏற்படுத்திய சங்கம் ஆகும். வச்சிரநந்தி ஏற்படுத்திய சங்கம் 25 ஆண்டுகள் நிலைபெற்றிருக்கக்கூடும். (பக்கம் 59) மதுரையில் இருந்த சங்கம் என்னும் பெயரால் அழைக்கப்பட்ட மூன்று கழகங்களும் சமணர்களால் உண்டாக்கப்பட்டவை. இவை சமண சமயத்தைச் சேர்ந்த ஆசிரியர்களின் முயற்சியால் உண்டாக்கப்பட்டவை என்பதைச் சங்கம் என்னும் பெயர் ஆதரிக்கிறது. (பக்கம் 60) வச்சிர நந்தியின் சங்கத்தைப் பற்றிய தகவல்கள் கிடைக்கவில்லை. ஆனால் அச்சங்கம் ஏற்பட்ட பிறகு குறிப்பிடத்தக்க அளவு இலக்கண நூல்களும் அற நூல்களும் வெளி வந்திருப்பது அதனுடைய பெரிய வெற்றிக்குச் சான்றாக இருக்கிறது. (பக்கம் 161) - பிள்ளையவர்கள் இவ்வாறு தமது ‘தமிழ் மொழி, இலக்கிய வரலாறு’ என்னும் ஆங்கில நூலிலே எழுதியிருக்கிறார். இதன் தெளிவான பொருள் என்னவென்றால் - வச்சிரநந்தி என்னும் சமணர் கி. பி. 470 இல் மதுரையில் தமிழ்ச் சங்கத்தை நிறுவினார், சமணர்கள்தாம் தமிழ்ச் சங்கத்தை ஏற்படுத்தினார்கள், வச்சிரநந்தி ஏற்படுத்திய தமிழ்ச் சங்கத்தில் தான் தொல்காப்பியம் இயற்றப்பட்டது. தொல்காப்பியமும் தமிழ்ச் சங்கமும் கி. பி. 5-ஆம் நூற்றாண்டில் தோன்றியவை என்பனவாம். இவற்றை நாம் ஆராய்வோம். சின்னமனூர்ச் செப்பேட்டை இவர் ஆதாரம் காட்டுகிறார். அச் செப்பேட்டின் செய்தி இது. தடம் பூதம் பணிகொண்டு தடாகங்கள் பலதிருத்தியும் அரும்பசிநோய் நாடகற்றி அம்பொற்சித்ர முயரியும் தலையாலங் கானத்திற் றன்னொக்க லிருவேந்தரைச் கொலைவாளிற் றலைதுமித்துக் குறைத்தலையின் கூத்தொழித்தும் மஹாபாரதத் தமிழ்ப் படுத்தும் மதுராபுரிச் சங்கம் வைத்தும் மஹாராஜரும் ஸார்வ பௌமரும் தம்மகிமண்டலங் காத்திகந்தபின்... (S.II., Vol. III. . 454) வையாபுரிப் பிள்ளையவர்கள் மேற்கோள் காட்டாத இன்னொரு பாண்டியனுடைய செப்பேட்டுச் சாசனமும் பாண்டிய மன்னர் மதுரை யில் தமிழ்ச் சங்கம் நிறுவிய செய்தியைக் கூறுகிறது. பாண்டியர் பராந்தகன் வீரநாராயணன் எழுதிய அச்செப்பேட்டுச் சாசனத்தின் பகுதி இது: “மண்ணதிரா வகைவென்று தென்மதுரா புரஞ்செய்தும் அங்கதனில் லருந்தமிழ்நற் சங்கம்இரீஇத் தமிழ்வளர்த்தும ஆலங்கானத் தமர்வென்று ஞாலங்காவல் நன்கெய்தியும் கடிநாறு கவினலங்கற் களப்பாழர் குலங்கனைந்தும் முடிசூடி முரண்மன்னர் எனைப்பலரு முனிகந்தபின்” (சாசனச் செய்யுள் மஞ்சரி, பக்: 149) இந்த இரண்டு செப்பேட்டுச் சாசனங்களும் பாண்டிய அரசர்களின் காலத்தில் எழுதப்பட்டவை. இச் சாசனங்கள் இரண்டும் பாண்டிய அரசர் மதுரை மாநகரத்தில் தமிழ்ச் சங்கம் வைத்து நடத்தியதைக் கூறுகின்றன. பட்டம் பகல் வெட்ட வெளிச்சம்போல் தெரிகிற இந்தச் செய்தியைப் பிள்ளையவர்கள் உள்ளங்கை நெல்லிக்கனிபோல் அறிந் திருக்கவேண்டும். ஆனால், தெரிந்தோ, தெரியாமலோ மதுரைத் தமிழ்ச் சங்கத்தை நிறுவியவர் சமணர் என்று கூறுகிறார். இந்தச் சாசனங் களிலே, வச்சிர நந்தியோ வேறு சமணர்களோ தமிழ்ச் சங்கம் வைத்த தாகக் கூறவில்லை; பாண்டிய மன்னர் தமிழ்ச்சங்கம் வைத்து நடத்திய தாகத் தான் கூறுகின்றன. பிள்ளையவர்கள், பாண்டியரின் தமிழ்ச் சங்கத்தோடு, வச்சிரநந்தியின் திராவிட சங்கத்தை இணைத்துப் பிணைத்து முடிபோடுகிறார். சாசனங்களிலும் பழைய நூல்களிலும் கூறப் படுகிறபடி பாண்டியர்கள் சங்கம் வைத்துத் தமிழாராய்ந்தார்கள் என்னும் செய்தியை அடியோடு மறைத்துவிடுகிறார். வச்சிர நந்தியின் திராவிட சங்கம் வேறு, பாண்டியரின் தமிழ்ச்சங்கம் வேறு என்பதை அறியாமல் இரண்டும் ஒரே சங்கம் என்று காரணம் கூறாமல், சான்று காட்டாமல் எழுதுகிறார். இது பிள்ளையவர்கள் செய்த முதல் தவறு. இனி, மேலே செல்வோம். வச்சிநந்தி என்பவர் விக்கிரம ஆண்டு 526-இல் (கி. பி. 470) மதுரையில் திரமிள சங்கத்தை ஏற்படுத்தினார் என்று தேவசேனர் என்னும் சமண ஆசிரியர் தமது தர்சனசாரம் என்னும் நூலில் எழுதியிருக்கிறார். இந்தச் சான்றைக் காட்டி வையாபுரிப் பிள்ளையவர்கள் வச்சிரநந்தியின் திரமிள சங்கந்தான் பாண்டியரின் தமிழ்ச் சங்கம் என்று கூறுகிறார். இந்தச் செய்தியில், பாண்டியரின் தமிழ்ச் சங்கமும் வச்சிரநந்தியின் திரமிள சங்கமும் ஒன்று என்று கூறப்படவில்லை. பிள்ளையவர்கள் தாமாகவே இட்டுக்கட்டிக் கூறுகிறார். இனி, வச்சிரநந்தியின் திரமிள சங்கம் என்பது யாது என்பதை ஆராய்வோம். வச்சிரநந்தி சமண சமயத்தைச் சேர்ந்த முனிவர். இவர் மதுரையிலே திரமிள சங்கத்தை ஏற்படுத்தினார். திரமிளம் என்றாலும் திராவிடம் என்றாலும் ஒன்றே. இவற்றின் பொருள் தமிழ் என்பது. திரமிள சங்கம் என்றால் தமிழ்ச் சங்கம் என்பது பொருள். ஆனால், வச்சிர நந்தி ஏற்படுத்திய தமிழ்ச் சங்கம் தமிழ் மொழியை ஆராயும் சங்கம் அன்று; தமிழ்ச் சங்கம் அன்று; தமிழச் சங்கம், சமண சமய சம்பந்தமான சங்கம். அதாவது, சமண சமயத்தைப் பரப்புவதற்காக ஏற்படுத்துப்பட்ட சங்கம். சமணத் துறவிகள் அந்தக் காலத்தில் பெருங் கூட்டமாக இருந்தனர். சமண முனிவர்களின் கூட்டத்திற்குச் சங்கம் என்பது பெயர். பௌத்த பிட்சுக்களின் கூட்டத்திற்கும் சங்கம் என்பது பெயர். சமண முனிவரின் சங்கங்கள் (கூட்டங்கள்) நான்கு பெரும் பிரிவுகளாகவும், பல உட்பிரிவுகளாகவும் அக்காலத்தில் பிரிக்கப்பட்டிருந்தன. நான்கு பெரும் பிரிவுகள் நந்தி கணம், சேன கணம், சிம்ம கணம், தேவ கணம் என்பன. (கணம் - சங்கம்). இந் நான்கு கணங்களில் நந்தி கணம் பேர் போனது. திரமிள சங்கத்தை ஏற்படுத்திய வச்சிரநந்தியும் நந்தி கணத்தைச் சேர்ந்தவரே. நந்தி கணத்தில் சமண முனிவர் கூட்டம் அதிகமாகப் பெருகிவிட்டபடியினாலே, வச்சிரநந்தி ஆசாரியர், அந்தக் கணத்தை இரண்டாகப் பிரித்து ஒரு பிரிவுக்குப் பழைய நந்திச் சங்கம் என்றும், மற்றொரு பிரிவுக்குத் திரமிள சங்கம் என்றும் பெயர் கொடுத்தார் என்பது சமண சமய வரலாறு. தமிழ் முனிவர்கள் அதிகமாக இருந்த படியினாலே திரமிள சங்கம் என்று பெயர் சூட்டினார். நந்தி சங்கத்தின் பிரிவுதான் திரமிள சங்கம் என்பதற்குக் கன்னட தேசத்தில் உள்ள ஒரு சாசனச் செய்யுள் சான்றாக இருக்கிறது. அச் செய்யுள் இது:- “ஸ்ரீமத் திரமிள ஸங்கேஸ்மிம் நந்தி லங்கேஸ்தி அருங்களா! அன்வயோ பாதி நிஸ்ஸேஷ ஸாஸ்த்ர வராஹி பாரஹைஹி”|| இந்தச் சுலோகத்திலே நந்தி சங்கத்தோடு கூடிய திரமிள சங்கத்து அருங்கலான்வயம் என்னும் பிரிவு கூறப்படுதல் காண்க. எனவே, சமண முனிவராகிய வச்சிர நந்தி மதுரையில் திரமிள சங்கத்தை நிறுவினார் என்றால், சமண முனிவரின் திராவிட சங்கத்தை நிறுவினார் என்பது பொருளாகும். அதாவது மத சம்பந்தமாக சமண முனிவரின் தமிழ்ச் சங்கத்தை ஏற்படுத்தினார் என்பது பொருள். வச்சிர நந்தி ஏற்படுத்திய தமிழச் சங்கம் தமிழ் மொழியை ஆராய்வதற்காக ஏற்பட்ட சங்கம் அன்று. சமண சமயத்தைப் பரப்புவதற்காக ஏற்படுத்தப் பட்ட சங்கம் ஆகும். இதை அறியாமல் வையாபுரிப் பிள்ளையவர்கள், வச்சிர நந்தியின் தமிழ்ச் சங்கமும் பாண்டியரின் தமிழ்ச் சங்கமும் ஒன்றே என்று கூறுகிறார். முதற் கோணல் முற்றுங்கோணல் என்பது பழமொழி. வச்சிரநந்தியின் சமண முனிவர் சங்கமும், பாண்டியரின் தமிழ் ஆராய்ச்சிச் சங்கமும் ஒன்றே என்று தவறான முடிவு கொண்ட பிள்ளையவர்கள், கி. பி. 470-இல் தான் தமிழ்ச் சங்கம் ஏற்பட்டது என்றும் இந்தச் சங்கத்தில்தான் தொல்காப்பியம் தோன்றியது என்றும் கூறி மற்றும் பல தவறான முடிவுகளைக் கூறுகிறார். கடுந் துறவிகளாகிய சமண முனிவர்கள் - சிற்றின்பத்தையும், கொலைகளையும் கடுமையாக வெறுக்கிற சமண முனிவர்கள் - தமிழ்ச் சங்கம் வைத்துக்கொண்டு காதற் செய்திகளையும், போர்ச் செய்திகளை யும் கூறுகிற அகநானூறு, நற்றிணை நானூறு, புறநானூறு, முதலிய செய்யுள்களை ஆராய்ந்தனர், இயற்றினர் என்று கூறுவது எவ்வளவு அசம்பாவிதம்! முற்றத் துறந்த சமண முனிவர்கள் இசையையும் நாடகத்தையும் ஆராய்ந்தனர் என்று கூறுவது எவ்வளவு முரண்பட்ட செய்தி! சங்கம் என்னும் சொல்லை வைத்துக்கொண்டு அவற்றின் உண்மைப் பொருளை ஆராயாமல் வெவ்வேறு காலத்தி லிருந்த வெவ்வேறு நோக்கமுடைய சங்கங்களை ஒன்றாக இணைத்து முடிபோடுவது என்ன ஆராய்ச்சியோ! வச்சிரநந்தி மதுரையில் ஏற்படுத்திய திரமிள சங்கம் (சமண முனிவர் சங்கம்) மதுரையைச் சூழ்ந்துள்ள எட்டுக் குன்றங்களில் நிலைத்து, “எண்பெருங் குன்றத்து எண்ணாயிரம் சமணர்க”களாகப் பெருகியது. அந்தச் சமண சங்கம் பாண்டிநாட்டில் சமண சமயத்தைச் செழிக்கச் செய்தது. அதனால் பிற்காலத்திலே சைவ நாயன்மார்களும், வைணவ ஆழ்வார்களும் தோன்றி, சமண சமயத்துடன் சமயப் போர் நிகழ்த்தினர். இச் செய்தியைப் பெரிய புராணம் முதலிய நூல்களில் காண்கிறோம். எனவே, வையாபுரிப் பிள்ளை கூறுகிறபடி, வச்சிரநந்தி உண்டாக்கிய திரமிள சங்கமும் பாண்டியர் நிறுவிய தமிழ்ச் சங்கமும் ஒன்றல்ல, வெவ்வேறு சங்கங்கள் ஆகும். அவை வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு நோக்கத்துடன் வெவ்வேறு ஆட்களால் உண்டாக்கப் பட்டவை. இரண்டையும் ஒன்றாகப் பொருத்திக் கூறுவது தவறாகும். பாண்டியர் ஏற்படுத்திய தமிழ்ச் சங்கம் கி. பி. 300-க்குப் பிறகு இருந்திருக்க முடியாது. கி. பி. 300-க்கு முன்புதான் பாண்டியரின் தமிழ்ச் சங்கங்கள் இருந்திருக்க வேண்டும். இதனைத் தமிழ் நாட்டு அரசியல் வரலாற்றைக்கொண்டு அறியலாம். ஏறக்குறைய கி. பி. 300-இல் களபரர் என்னும் அரசர் தமிழ்நாட்டிற்கு வந்து, சேர, சோழ, பாண்டியர் ஆகிய தமிழ்நாடு முழுவதையும் கைப்பற்றிக் கொண்டார்கள். இந்தக் களபரர் தமிழகத்திற்கு அப்பாலிருந்து வந்தவர்கள். களபரர் தமிழகத்தைக் கைப்பற்றிய பிறகு சேர, சோழ, பாண்டிய மன்னர் களபரருக்குக்கீழ் அடங்கியிருந்தார்கள். களபரரின் ஆட்சி ஏறக்குறைய 300 ஆண்டுகள் தமிழகத்தில் இருந்தது. பிறகு ஏறக்குறையக் கி. பி. 600-இல், கடுங் கோன் என்னும் பாண்டியன் களபரரை வென்று பாண்டிய நாட்டை மீட்டுக் கொண்டான். ஏறக் குறைய அதே காலத்தில், தொண்டை நாட்டி லிருந்த சிம்ம விஷ்ணு என்னும் பல்லவ அரசன் களபரரை வென்று சோழநாட்டைக் கைப் பற்றிக் கொண்டான். அப்போது, களபரருக்குக் கீழ் அடங்கி யிருந்த சோழர், பல்லவர்களுக்குக்கீழ் அடங்க வேண்டிய தாயிற்று. ஏறக் குறைய அதே காலத்தில் சேர நாடும் களபரர் ஆட்சியி லிருந்து சுயேச்சையடைந்தது. களபரர் ஆட்சிக் காலத்தில் தான் வச்சி ரநந்தி கி. பி. 470-இல் திராவிட சங்கத்தை ஏற்படுத்தினார். களபரர்கள் சமண, பௌத்தச் சமயங்களை ஆதரித்தவர்கள். அவர்கள் தமிழ் மொழியை ஆதரித்ததாகத் தெரியவில்லை. கி. பி. 470-இல் அரசாண்ட களபர அரசன் அச்சுத விக்கந்தன் என்பவன். எனவே, பாண்டியரின் தமிழ்ச் சங்கம் கி. பி.300-க்கும் 600-க்கும் இடைப்பட்ட காலத்தில் ஏற்பட்டிருக்க முடியாது. கி. பி. 300-க்கு முற்பட்ட காலத்திலேதான் ஏற்பட்டிருக்கமுடியும். கி. பி. 600-க்குப் பிறகு பாண்டியர் தமிழ்ச் சங்கத்தை ஏற்படுத்தியிருக்க முடியாது. ஏனென்றால் கி. பி. 630-இல் வாழ்ந்திருந்த திருநாவுக்கரசு சுவாமிகள் தமது தேவாரப் பதிகத்திலே தமிழ்ச் சங்கம் நீண்ட காலத்துக்கு முன்பு இருந்ததாகக் கூறுகிறார். எனவே, கி. பி. 470-இல் களபரர் ஆட்சிக் காலத்தில் வச்சிரநந்தி ஏற்படுத்திய சங்கம் தமிழ் ஆராய்ச்சிச் சங்கம் அன்று. அது சமண சமயம் பற்றிய சமண முனிவர்களின் சங்கமாகும். இந்த விதத்திலும் வையாபுரிப் பிள்ளையின் கருத்துத் தவறாகிறது. இதுகாறும் ஆராய்ந்ததிலிருந்து தெரிகிறது என்னவென்றால், வையாபுரிப் பிள்ளையவர்கள், பொருளைத் தவறாகக் கருதிக் கொண்டு பொருந்தாத காரணங்களைப் பொருத்திக் காட்டியிருக்கிறார் என்பதும், அவருடைய முடிபுகள் தவறானவை என்பதும் ஆகும். வச்சிர நந்தியின் திராவிட சங்கம்வேறு, பாண்டியரின் தமிழ்ச் சங்கம் வேறு என்பது இங்கு நன்கு விளக்கப்பட்டது. பாண்டியரின் சங்கம் கி.பி.300-க்கு முன்பு இருந்திருக்க வேண்டும் என்பதும் விளக்கப்பட்டது. டிவவையாபுரிப் பிள்ளை பாண்டியரின் தமிழ்ச் சங்கத்தைப்பற்றிக் கூறுகிற இன்னொரு செய்தியையும் ஆராய்வோம். தலையாலங் கானத்துச் செருவென்றபாண்டியன் நெடுஞ்செழியனுடைய காலத்துக்குப் பிறகுதான் மதுரையில் தமிழ்ச் சங்கம் ஒரு பாண்டியனால் நிறுவப்பட்டது என்று சின்னமனூர்ச் செப்பேட்டுச் சாசனம் கூறுகிறது என்பதைப் பிள்ளை அவர்கள் எடுத்துக்காட்டுகிறார்கள் (பக்.59). உண்மைதான். மேலே நாம் காட்டியுள்ள சின்னமனூர்ச் சாசனப் பகுதி, பிள்ளையவர்கள் சுட்டிக் காட்டியதுபோல, பாண்டியன் நெடுஞ்செழிய னுக்குப் பிறகுதான் தமிழ்ச் சங்கம் நிறுவப்பட்டதாகக் கூறுகிறது. அச் சாசனப் பகுதிக்குக் கீழே நாம் காட்டியுள்ள பாண்டியனுடைய மற்றொரு செப்பேட்டுச் சாசனப் பகுதி அதற்கு மாறாகக் கூறுகிறது. தமிழ்ச் சங்கம் ஏற்பட்ட காலத்திற்குப் பிறகு பாண்டியன் நெடுஞ் செழியன் இருந்ததாக இச் சாசனம் கூறுகிறது. ஆகவே, பிள்ளை யவர்கள் கூறுவதுபோல நெடுஞ்செழியனுக்குப் பிறகுதான் பாண்டியரின் தமிழ்ச் சங்கம் ஏற்பட்ட தென்பது தவறாகிறது. இதுபற்றி விளக்கமாக எழுதினால் இக்கட்டுரை பெருகி விரியும். ஆகையினாலே, இது பற்றித் தனியாக எழுதுவோம். ஒன்றைமட்டும் கூறுவோம். பாண்டியன் நெடுஞ்செழியன், கடைச் சங்க காலத்திலே, தமிழ்ச் சங்கம் நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்திலே இருந்தவன் என்பது உறுதி. நெடுஞ் செழியன் காலத்துக்குப் பிறகுதான் தமிழ்ச் சங்கம் ஏற்பட்டது என்று கூறுவது தவறு என்பதைக் கூறிக் கொண்டு இதனை முடிக்கிறேன். பிள்ளை யவர்களின் ஏனைய ஆராய்ச்சிகளைப் பற்றிப் பின்னர் எழுதுவோம். 4. பாண்டியன் நெடுமாறன் கால ஆராய்ச்சி அரிகேசரி மாறவர்மன் என்னும் பாண்டியன் நெடுமாறன் (கூன் பாண்டியன்) காலத்தை ஆராய்வோம். இந்தப் பாண்டியனைத் திரு ஞானசம்பந்தர் சமண சமயத்திலிருந்து சைவ சமயத்துக்கு மாற்றினார். அன்றியும் ஞானசம்பந்தர் சிறுத்தொண்டர் என்னும் பரஞ்சோதியாரின் நண்பர். ஆகவே, ஞானசம்பந்தர், பாண்டியன் நெடுமாறன், சிறுத் தொண்டர் ஆகிய இவர்கள் சமகாலத்தில் வாழ்ந்தவர்கள். சிறுத் தொண்டராகிய பரஞ்சோதியார், மாமல்லன் நரசிம்மவர்மனுடைய சேனைத் தலைவராக இருந்தவர். இவ்வரசன் பொருட்டுச் சளுக்கிய அரசனான இரண்டாம் புலிகேசியின் தலைநகரமாகிய வாதாவி நகரத்தின் மேல் படையெடுத்துச் சென்று அந் நகரத்தை வென்றார். வாதாபி நகரம் வெல்லப்பட்டது கி. பி. 642 -இல். இந்தத் தேதி எல் லோராலும் ஒப்புக் கொள்ளப்பட்டது; ஐயப்பாட்டிற்கு இடமில்லாதது. ஆகவே கி. பி. 642-இல் சிறுத்தொண்டர், பாண்டியன் நெடுமாறன், ஞான சம்பந்தர் ஆகிய மூவரும் இருந்தார்கள் என்பதில் யாதொரு ஐயமும் இல்லை. இம் மூவரில் ஞானசம்பந்தர் வயதில் இளையவர். சிறுத் தொண்டரும் நெடுமாறனும் வயதினால் சம்பந்தருக்கு மூத்தவர்கள். இது எல்லோரும் அறிந்த உண்மை. ஆனால், சரித்திரப் பேராசிரியர் நீல கண்ட சாஸ்திரி அவர்கள் எழுதிய “பாண்டிய இராச்சியம்” என்னும் ஆங்கில நூலிலே, பாண்டியன் நெடுமாறனான கூன் பாண்டியன் சம்பந்தருக்கு இளையவன் என்று கூறுகிறார்.1 இது விசித்திரமான வியக்கத்தக்க புதிய செய்தி. ஞானசம்பந்தர் தமது பதினாறாவது வயதில் இவ்வுலகத்தி லிருந்து மறைந்தார். அவர் கூன்பாண்டியனைச் சைவனாக்கியபோது அவருக்கு உத்தேசம் வயது பதினான்கு. 14-வயதுள்ள சம்பந்தருக்குப் பாண்டியன் இளையவனாக இருந்தான் என்றால் அப்போது பாண்டிய னுக்கு வயது 12- ஆக இருக்கவேண்டும். பாண்டி மாதேவிக்கு வயது 10-ஆக இருக்கவேண்டும். அப்படியானால் பாண்டியன் நெடுமாறன் 12-வயதுக்கு முன்னரே அரசாட்சி பெற்றிருக்கவேண்டும். இதற்குச் சான்று என்ன? சாஸ்திரியார் இதற்குச் சான்று எங்கே கண்டார்? இலக்கிய நூலிலா அல்லது சாசனங்களிலா? சாஸ்திரியார் சான்று காட்டாமல் மனம்போன படி எழுதிவிட்டார். ஞானசம்பந்தர், திருநாவுக் கரசரைப் போல நீண்ட ஆயுளுடன் இருந்தார் என்று தவறாகக் கருதிக் கொண்டு இப்படி எழுதிவைத்தார் போலும். 12-வயதுடைய பாண்டியன் மதம் மாறியபோது அவன் அரசியான பாண்டிமாதேவிக்கு வயது 10-ஆக இருக்க வேண்டும் என்று கூறினோம். 10-வயதுள்ள பாண்டிமாதேவி 14-வயதுள்ள சம்பந்தரைப் பார்த்து, “நீர் சிறுபிள்ளை, சமணருடன் நீர் எப்படி வாது செய்ய முடியும்?” என்று சொல்லுவாரா? அதற்குப் பதிலாகச் சம்பந்தர், “மானினேர் விழிமாதராய் வழுதிக்குமா பெருந்தேவிகேள் பானல்வா யொரு பாலனீங்கிவ னென்றுநீ பரிவெய்திடேல்.” (சம்பந்தர். திருவாலவாய்ப் பதிகம்) என்று கூறுவாரா? ஆகவே சரித்திரப் பேராசிரியர் நீலகண்ட சாஸ்திரியார் கூறுவது உண்மைக்கும் ஆராய்ச்சிக்கும் பொருத்தமற்றதாகும். மதம் மாறிய பாண்டியன் நெடுமாறன் சம்பந்தரைவிட மூத்தவன் என்பதும் அப்போது அவனுக்கு வயது 25 அல்லது 30-க்குக் குறையாமலிருக்கும் என்பதும் விளங்குகிறது. இது நிற்க; பாண்டியன் நெடுமாறன் கி.பி. 670-இல் அரசாளத் தொடங்கினான் என்று சாஸ்திரியார் கூறுகிறார்.1 இந்தத் தேதியும் பொருத்தமாக இல்லை. ஏறக்குறைய 25ஆண்டுகளைக் கூட்டிக் கூறுகிறார். இது பொருத்த மற்றது என்பதைக் காட்டுவோம். வாதாபி நகரம் அழிக்கப்பட்ட கி. பி. 642-இல் சிறுத் தொண்டர் வாழ்ந்தவர். இதனைச் சாஸ்திரியாரும் ஒப்புக்கொள்கிறார். வாதாபிப் போர் முடிந்தவுடன் சிறுத் தொண்டர், சேனைத்தலைவர் பதவியி லிருந்து விலகிக் கொண்டு கணபதீச்சரத்தில் சைவத்தொண்டு செய்து வந்தார். அக் காலத்தில் அவருக்குச் சீராளன் என்னும் குழந்தை பிறந்தான். அக் குழந்தையின் ஐந்தாவது வயதில் ஞானசம்பந்தர் சிறுத் தொண்டர் இல்லஞ் சென்று சந்தித்தார். அப்போது ஞானசம்பந்தருக்குப் பன்னிரண்டு வயதாக இருக்கலாம். இவற்றைப் பெரிய புராணத்தி லிருந்து தெரிந்து கொள்ளலாம். வாதாபிப் போர் நிகழ்ந்த பத்து ஆண்டுகட்குப் பிறகு சம்பந்தர் சிறுத்தொண்டரைச் சந்தித்ததாகக் கொள்ளலாம். அந்த ஆண்டு கி. பி. (642 + 10 =) 652 - ஆகும். இரண்டு ஆண்டுக்குப் பிறகு, உத்தேசம் கி. பி. 654-இல் சம்பந்தர் பாண்டியனைச் சைவனாக்கினார். உத்தேசம் கி. பி. 670-இல் பாண்டியன் நெடுமாறன் அரசாட்சியை ஏற்றுக் கொண்டான் என்று நீலகண்ட சாஸ்திரியார் கூறுகிறார். சம்பந்தர் பாண்டியனைச் சைவனாக்கியது உத்தேசம் கி. பி. 654-இல் என்று மேலே காட்டினோம். 670-இல் பட்டம் பெற்ற பாண்டியனை, 652-இல் எவ்வாறு சம்பந்தர் சைவனாக்கியிருக்க முடியும்? பாண்டியன் அரச பதவியிலிருந்தபோதுதான் சம்பந்தர் அவனைச் சைவனாக்கினார்; பட்டம் பெறுவதற்கு முன்பு அல்ல சம்பந்தரோ 16-ஆண்டு மட்டும் உயிர்வாழ்ந்திருந்தவர். சம்பந்தர் தமது 12-ஆவது வயதில் கி. பி. 652-இல் சிறுத்தொண்டரைச் சந்தித்தார். 14-ஆவது வயதில் கி. பி.654-இல் பாண்டியனைச் சைவனாக்கினார். பிறகு தொண்டைநாட்டுக்குத் தல யாத்திரை சென்றார். தலயாத்திரை முடிய 11/2 அல்லது 2-ஆண்டு சென்றிருக்கும். பிறகு சீகாழிக்கு வந்தார். அப்போது இவருக்குத் திருமணம் நிகழ்ந்தது. அஃதாவது 16-ஆவது வயதில் உத்தேசம் கி. பி. 656-இல் திருமணத்தின்போதே உலக வாழ்க்கையிலிருந்து மறைந்தார். சாஸ்திரியார் கூறுவதுபோல 670-இல் பாண்டியன் பட்டத்துக்கு வந்தான் என்றால், 656-இல் மறைந்த சம்பந்தர் எப்படிப் பாண்டியனை மதமாற்றியிருக்க முடியும்? ஆகவே, சாஸ்திரியார் பாண்டியன் நெடுமாறனுக்கு அமைத்த ஆட்சி ஆண்டு தவறாகிறது. நெடுமாறன் ஆட்சிக்கு வந்த ஆண்டு உத்தேசம் கி. பி. 652-க்கு முனனதாக இருக்கவேண்டும் என்று விளங்குகிறது. (ஞானசம்பந்தர் கி. பி. 656-இல் மறைந்தார் என்று கூறினோம். இவருக்கு முன்னரே இவருடைய நண்பர்களாகிய சிறுத்தொண்டரும் திருநாவுக்கரசரும் உலகத்திலிருந்து மறைந்தார்கள். எப்படி என்றால், ஞான சம்பந்தர் திருமணத்திற்கு அவருடைய நண்பர்களான நாயன்மார்கள் எல்லோரும் வந்திருந்தார்கள். ஆனால் சிறுத்தொண்ட நாயனாரும் திரு நாவுக்கரசு நாயனாரும் வரவில்லை. வாராத காரணம் இவ்விருவரும், திருமணத்திற்கு முன்னரே சிவபதவியடைந்ததுதான். இவ்விரு நாயன்மாரும் உத்தேசம் கி. பி. 655-இல் மறைந்தவராதல் வேண்டும்.) எனவே, எல்லோரும் ஒப்புக்கொண்டதும் சந்தேகத்துக்கு இட மில்லாததும் ஆன வாதாபி அழிந்த கி. பி. 642-ஐ அடிப்படையாகக் கொண்டு, அப்போரில் சம்பந்தப்பட்ட சிறுத்தொண்டர் அவருக்கு நண்பரான ஞானசம்பந்தர், சம்பந்தரால் சைவனாக்கப்பட்ட நெடுமாறன் இவர்களின் காலத்தை ஆராய்ந்து பார்த்தால், பாண்டியன் நெடுமாறன் அரசாட்சிக்கு வந்தது கி. பி. 652-க்கு முன்னதாக வேண்டும் என்பது திட்டமாகத் தெரிகிறது. ஆகவே சாஸ்திரியார் கி. பி. 670-இல் நெடுமாறன் ஆளத்தொடங்கினான் என்பது தவறாகிறது. சம்பந்தர்-சிறுத்தொண்டர்-நெடுமாறன் இவர்களைப் பற்றிய ஆராய்ச்சியில் இவ்வளவு முரண்பாடான குழப்பங்களைத் தமது நூலில் எழுதிவைத்த சரித்திரப் பேராசிரியர் நீலகண்ட சாஸ்திரியார், இன்னொரு தவறையும் செய்து வைத்தார். தமது “பாண்டிய இராச்சியம்” என்னும் நூலில், இரண்டு வெவ்வேறு அரசர்களை ஒருவராகப் பிணைத்துக் கூறுகிறார். வேள்விக்குடி சாசனத்தில் கூறப்படுகிற அரிகேசரி மாறவர்மனையும் (இவனே கூன் பாண்டியன்), சின்னமனூர் பெரிய சாசனம் கூறுகிற அரிகேசரி பராங்குசனையும் வெவ் வேறு அரசராகக் கொள்ள வேண்டியிருக்க, சாஸ்திரியார் இருவரை யும் ஒரே அரசனாகக் கொண்டார். அரிகேசரி மாறவர்மனும் அரிகேசரி பராங்குசனும் முறையே பாட்டனும் பேரனும் ஆவார்கள். சாஸ்திரியார் இருவரையும் ஒருவனாக இணைக்கிறார். ராவ் பகதூர் H. கிருஷ்ண சாஸ்திரி யும்,1 ழூவோ தூப்ராய் அவர்களும்2 இந்த இரண்டு அரசர்களையும் பாட்டனும் பேரனும் ஆகக்கொண்டு ஆராய்கிறார்கள். இதுவே சரியாகும். கூன்பாண்டியனாகிய அரிகேசரி நெடுமாறன் காலத்தை சாஸ்திரியார் கி. பி. 670 - முதல் 710 - வரையில் என்று கணக்கிடுகிறார். இது தவறு என்பதை மேலே காட்டினோம். பாட்டனையும் பேரனையும் ஒரே ஆளாகக் கருதிக்கொண்டு அதன்படி கணக்குப்போட்டதனால் ஏற்பட்ட தவறே இது. பாட்டனையும் பேரனையும் வெவ்வேறு அரசராகக் கொண்டு காலத்தைக் கணக்கிட்டால் கூன்பாண்டியனுடைய காலம் கி. பி.650-முதல் 675- வரையில் என்பது ஆகும். வாதாபி கொண்ட கி.பி. 642-ஐ ஆதாரமாகக்கொண்டு மேலே நாம் ஆராய்ந்துகண்ட முடிவும் இந்தக் காலத்தை ஒத்திருக்கிறது. பாண்டியன் நெடுமாறன் கி.பி. 650-இல் முடிசூடினான் என்பதைவிட கி. பி. 645-இல் முடிசூடினான் என்று கொள்வதே பொருத்தமானது. பாண்டிய அரசர் பரம்பரையை, வேள்விக்குடி சாசனம் சின்ன மனூர்ச் செப்பேட்டுச் சாசனம் இரண்டையும் ஆதாரமாகக் கொண்டு ராவ்பகதூர் கிருஷ்ண சாஸ்திரியாரும், ழூவோ தூப்ராய் அவர்களும், K.A. நீலகண்ட சாஸ்திரியும் முறைப்படுத்திய பட்டியலைக் மேலே காணலாம். நீலகண்ட சாஸ்திரி. பட்டியலில் இரண்டு ராஜசிம்மர் மட்டும் காணப்படுகின்றனர். மற்றப்பட்டியலில் மூன்று இராஜசிம்மர்கள் காணப்படுகின்றனர். குறிப்புகள் தமிழ்நாட்டு வரலாறு: சங்க காலம் - அரசியல் (1983) எனும் நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரை. 1. Inscriptions of Sri Vira Rajendra (Rajakesari Varman) S.I.I. Vol. III. 1. நற். 113 : 9; அகம். 65 : 5, 168 : 7, 233 : 8 2. பதிற். பதி. 2 : 3 3. அகம். 65 : 5 4. பதிற். பதி. 3 : 4 7 ௸ 233 : 7 - 8 5. அகம். 233 : 6 - 10 8 ௸ 168 : 4 - 7 6 அகம். 65 : 5 - 6 9 புறம். 2 : 1 - 8 10. பதிற். பதி. 2 : 2 11. நற். 113 : 11 12. பதிற். பதி. 2 : 3 1. பதிற். 11 : 12 - 14, 12 : 1 - 3, 17 : 4 - 5, 20 : 2 - 4 2. ௸ 20 : 2 3. ஒப்புநோக்கு, வேம்பு - வேம்பன், முருகனைக் கடம்பன் என்று அழைப்பது வழக்கம். இவன் அந்தக் கடவுள் முருகன் அல்லன். 4. அகம். 347 : 3 - 4 5. பதிற். 11 : 12 6. பதிற். 20 : 3 முரணியோர் 7. காவல் மரத்தின் அடிப்படையில் குடிமக்களுக்குப் பெயர் அமைந்தமைக்கான சான்றுகள் இல்லை. பாண்டியர் காவல் மரம் வேம்பு. அவர்களை வேம்பர் என்று குறிப்பிடும் வழக்கம் இல்லை. இவ்வாறே புன்னை, அத்தி, பனை முதலான மரங்களைக் காவல் மரமாக உடைய நாட்டு மக்களும், அவ்வகை மரப் பெயரால் அழைக்கப்படுவதில்லை. ‘கடம்பர்’ என்னும் சொல் நமக்கு யாண்டும் ஆட்சியில் இல்லை. தக்கணத்தில் இருந்த கதம்பர் வேறு. அரபிக் கடல் தீவுகளில் கடப்ப மரத்தைக் காவல் மரமாகக் கெண்டிருந்த அரசு வேறு. பாடல்களில் கடம்ப வெட்டப்பட்டது என்று மட்டுமே உள்ளது. அறிஞர்கள் கடம்பர்களை ஓட்டினான் என்று குறிப்பிடுகின்றனர். இவர்கள் கடற்கொள்ளைக்காரர்கள் என்றும், மேலைநாட்டு வாணிகக் கப்பல்களை வழிப்பறி செய்து வந்தனர் என்றும், வழிப்பறியைத் தடுக்கும் முயற்சியில் நெடுஞ்சேரலாதன் இப்போரில் ஈடுபட்டு வெற்றிபெற்றான் என்றும் கூறுகின்றனர். இவற்றிற்குச் சான்றுகள் இல்லை. ஆய்வுக்குரியன. 8. சிலப். 23 : 81, 29 : 1, 25: 187, 28 : 135, 29: உரைப்பாட்டு மடை 9. ௸ 25 : 1 - 3 10. ௸ 23 : 81 - 82 11. சிலப். 28 : 135 12. ௸ 29 : ஊசல்வரி: 23:3, 24:2, 25:1 13. ௸ 29 ; வள்ளைப்பாட்டு 14. பதிற் பதி. 2 : 8 15. தமிழர்கள் போர்க் கைதிகளை எவ்வாறு நடத்தினார்கள் என்பதை விரிவாகக் குறிப்பிடத்தக்க சான்றுகள் இல்லை. எனினும் கனகவிசயர் வரலாறும், கரிகாலன் காவிரிக்குக் கரை அமைத்த வரலாறும் போர்க் கைதிகள் வெற்றி பெற்றவரின் ஆக்கப்பணிகளைச் செய்ய அழைத்துவரும் வழியிலும் அழைத்து வந்த பின்னரும் பயன்படுத்தப்பட்ட நிலைமையைக் காட்டுகின்றன. கணையன், கணைக்காலிரும்பொறை, பெருஞ்சேரலிரும்பொறை ஆகியோர் சிறைவைக்கப்பட்ட வரலாறுகளும் உண்டு. 16. நெடுநல். 101 20. சிலப். 5 : 10 17. பெரும்பாண். 316 - 317 21. ௸ 14 : 66 - 67 18. புறம். 56 : 18 22. ௸ 28 : 141 - 142 19. அகம். 149 : 9 - 11 23. பதிற். 11 : 24 24. இக்காலத்தில் இலக்கத்தீவுகள் என வழங்கப்படுகின்றது 25. பதிற். 11 : 23 26. ௸ 11 : 23 - 25 27. ‘தமிழகம் விளங்கத் தன்கோல் நிறீஇ’ (பதிற். பதி. 2 : 5 - 6) 28. `அருவிலை நன்கலம் வயிரமொடு கொண்டு அமையார்த் தேய்த்த அணங்குடை நோன்றாள்’ (பதிற். பதி. 2 : 10 - 12) 29. பதிற். 11 : 23 - 24 30. ௸ 17 : 10 - 15 31. ௸ 14 : 10 32. ‘அணங்குடை நோன்றாள்’, (பதிற். பதி. 2 : 12) 33. ‘எழுமுடி கெழீஇய திருஞெமர் அகலம்’, (பதிற். 14 : 11, 16 : 17) 34. ‘வயவர்’ பதிற். 12: 1, 19 : 7, ‘வயவர் வேந்து’, (பதிற். 15 : 21) 35. ‘போரடு தானை’, (பதிற் 11 : 16), ‘நிரைய வெள்ளம்’, (பதிற். 15 : 4) 36. ‘பசும்பூண்மார்பன்’, (பதிற். 17 : 14) 37. ‘போர்வல் யானைச் சேரலாதன்’, (பதிற். 15 : 23, 11 : 14 - 16) 38. ‘புரையோர் உண்கண்’, (பதிற். 16 : 18) 39. ‘சான்றோர் மெய்ம்மறை’, (பதிற். 14 : 12) 40. ‘படையே குழவ பாடினி வேந்தே’, (பதிற். 14 : 17) 41. பதிற். 17 : 7-14 42. ௸ 19: 1 - 10 43. ௸ 16 : 8 - 9 44. ௸ 15 : 1 - 2 45. ௸ 16 : 4 - 5 46. ௸ 15 : 2 47. ௸ 13 : 10-13, 15 : 7, 19 : 16 - 17 48. ௸ 12 : 5 - 8 49. ‘தும்பைப் பகைவர்’, (பதிற். 14 : 8) 50. `தும்பைப் பகைவரின் போர்ப்பீடு அழித்த’ (பதிற். 14: 8-9) `மன்மருங்கு அறுத்த’ (பதிற். 15: 5) 51. சிலப். 29 ஊசல்வரி 25 : 2 52. அகம், 326 : 10 -11 53. புறம், 62 : 7- 8, 63 : 10 54. பதிற். 18 : 10-13, 20 : 22 - 24 59. ௸ 18 : 6 55. ௸ 15 : 36 - 37 60. ௸ 20 : 15 - 17 56. ௸ 20 : 25 - 28 61. ௸ 20 : 23 - 24 57. ௸ 14 : 5 - 7 58. ௸ 14 : 17, 17 : 14 62. பதிற். 20 : 16 63. ௸ பதி. 2 : 9 - 10 64. ௸12:25 மகிழ்-மகிழ்சிசியான வாழ்வு 65. ௸ 20 : 21 ‘அட்டுமலர் மார்பன்’ 66. ௸ 15 : 21 ‘பரிசிலர் வெறுக்கை’ 67. ௸ 17 : 2-3 68. ௸ 14 : 1-2 69. பதிற். 14 : 3 - 4 70. ௸ 15 : 39 71. ௸ 13 : 19 - 28, 15 : 1 - 8 72. ௸ பதி, 2 : 2 73. ௸ 15 : 21 74. ௸ 14 : 19 - 20 75. ௸ 14 : 13 - 15 76. ௸ 16 : 10 ‘அடங்கிய சாயல்’ 77. ௸ 19 : 14 78. ௸ 16 : 10 79. ௸ பதி. 4 : 2-3, 6 : 1-2 80. ௸ 5 : 3 81. 20 + 1 + 1 + 20 = 42 ஆம் ஆண்டு 82. புறம். 62, 63, 368; பதிற். பதி. 6 :1 83. பதிற். பதி 5 : 2 84. ௸ 2 : 12 85. ௸ 4 : 1 75. ௸ 14 : 13 - 15 76. ௸ 16 : 10 ‘அடங்கிய சாயல்’ 77. ௸ 19 : 14 78. ௸ 16 : 10 79. ௸ பதி. 4 : 2-3, 6 : 1-2 80. ௸ 5 : 3 81. 20 + 1 + 1 + 20 = 42 ஆம் ஆண்டு 82. புறம். 62, 63, 368; பதிற். பதி. 6 :1 83. பதிற். பதி 5 : 2 84. ௸ 2 : 12 85. ௸ 4 : 1 1. பதிற். 21 : 23 2. ௸ 20 : 23 3. ௸ 21 : 24 4. ௸ 30 : 34 ‘அருந்திறல் மரபிற் கடவுட் பேணியர்’ பதி. 3 : 8 ‘அயிரை பரைஇ’ 5. ௸ 21 : 29 6. பதிற். பதி. 3 : 2 7. பதிற். 21 : 26 - இது மயிலை சீனி. வேங்கடசாமியின் கருத்து 8. ௸ 22 : 26 ‘அண்ணலம் பெருங்கோட் டகப்பா வெறிந்த’ 9. ௸ பதி, 3 : 3 10. பதிற். 22 : 27 ‘உழிஞைசூடி’ 11. ௸ 22 : 26 12. பதிற். 22 : 26 ‘அண்ணலம் பெருங்கோடு’ - கோபி வட்டம் 13. ௸ பதி. 3 : 4 ‘மதியுறழ் மரபின் முதியர்’ மதி = திங்கள் குலத்தவராகிய பாண்டியர் உறழ் = முரண்பாடு 14. பதிற். பதி 3 : 4 15. ௸ 3 : 2 - 3 16. பதிற். 22 : 15-16 - ‘கொங்கர் நாடகப் படுத்த வேல்கெழு தானை வெருவரு தோன்றல்’ இதனைக் கொங்கர் நாட்டை அகப்படுத்திய பல்யானைக் குட்டுவன் என்று பிரித்துப் பொருள் கொண்டு கொங்கு நாட்டைத் தன் ஆட்சிக்குக்கீழ்ப் பல்யானைச் செல்கெழு குட்டுவன் கொண்டுவந்தான் என்று சிலர் கூறுகின்றனர். இவ்வாறு பொருள்கொள்வது சமகால அரசர்களின் வரலாற்றை ஒப்புநோக்குகையில் ஒத்துவரவில்லை. இவனது காலத்துப் பாண்டிய வேந்தன் பசும்பூட்பாண்டியன் என்று வழங்கப் பட்டவனான நெடுஞ் செழியன் ஆவான். இவன் கொங்கர்களை வென்ற செய்தியை அவனது வரலாற்றில் காணலாம். அன்றியும் கொங்கு நாட்டுக் குடிமக்களாகிய மழவர்களுக்கு (பதிற். 21 : 24 ‘குவியற்கண்ணி மழவர் மெய்ம்மறை’) இவன் கவசம் போல் விளங்கினான் என்பதோடு மாறுபாடாய் அமையும். மேலும், பாடலில் கூறப்பட்ட இந்த நிகழ்ச்சி பதிகத்தில் கூறப்படவில்லை. இது பல்யானைக் குட்டுவனின் வெற்றியாயின் பதிகத்தில் விடுபடக் காரணமில்லை. 17. பதிற். 22 : 16 18. ‘மைத்துமலி பெரும்புகழ் அறியார் மலைந்த போர் எதிர் வேந்தர் தார்அழிந்து ஒராஅலின்’ (பதிற்.23 : 16 - 17) ‘பணைகெழு வேந்தரும் வேளிரும் ஒன்றுமொழிந்து’ (பதிற். 30 : 30) 19. பதிற். 30 : 31 20.௸ 23 : 20 - 25 21. ௸ 24 : 12 - 14 22. ௸ 25 : 1 23. ௸ 24 : 5 24. ௸ 30 : 44 ஒப்புநோக்குக. ‘பாடினிவேந்து’ (பதிற். 17 : 14) 25. பதிற். பதி. 3 : 7 26. பதிற். 27 : 13 - 15 27. ௸ 22 : 38, 23 : 13, 25 : 9, 27 : 1, 29 : 10 28. ௸ 26: 12 - 14 முருகன் என்னும் நற்பேர் கொண்ட அரசன் பொதினி மலையை ஆண்டுவந்ததும், இவனுக்கு நெடுவேளாவி எனச் சிறப்புப் பெயர் இருந்ததும், இவன் மழவர் இனத்தவரைப் புறங்கண்டோடச் செய்து அவர்களின் நாட்டைவிட்டு விரட்டினான் என்பதும் மாமூலனார் அகம். 1 - லும், இவனது சீற்றத்தைப் பாண்டரங்கண்ணனார் புறம், 16-லும் கூறுவது இவ்விடத்துக் கருதத்தக்கது. 29. பதிற். 24 : 28 - 30 31. ௸ 23 : 6 - 8 30. ௸ 21 : 7 - 13 32. ௸ 23 : 8 - 9 33. பதி 21 : 3 - 4 34. ௸ 24 : 15 - 16 35. ௸ 21 : 4 36. ‘மண்படு மார்ப’, பதிற். 21 : 19 37. பதிற். 22 : 27 38. ௸ 23 : 10 39. ௸ பதி. 3 : 10 - 11 40. பதிற். 22 : 10 - 11 41. ௸ 21 : 37 ‘இவள்’ என்னும் சுட்டுக்குறிப்பை நோக்குக. 42. ௸ 21 : 37 - 38 43. மலையாளம் தோன்றக் காரணமாயிருந்த திரிசொற் கொச்சை மொழி அக்காலத்து அரும்பியதுபோல் உள்ளது. அதனை அவள் பேசாது செந்தமிழ் பேசியது கண்ட புலவர் வியந்து இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 44. பதிற். 22 : 27 46. ௸ 29 : 14 45. ௸ 23 : 10 47. செல் = கார்மேகம் 1. பதிற். 40 : 14; பதிற். பதி. 4 : 7 - 8; அகம். 199 : 20 2. பதிற். 32 : 10; அகம், 266 : 12 3. பதிற். 32 : 10 4. புறம். 24 : 1 - 13 5. பதிற். 33 : 6 6. ௸ 34 : 4 - 12 7. ௸ 31 : 34 8. ௸ 40 : 1 9. ௸ 33 : 10 - 12 14. பதிற். 37 : 8 10. ௸ 35 : 5 - 10 15. ௸ 31 : 14 - 17 11. ௸ 39 : 8 16. ௸ 33 : 1 12. ௸ 38 : 3 - 4 17. ௸ 38 : 6 13. ௸ 31 : 13 - 14, 32 : 3 - 5, 37 : 7 - 10, 38 : 1 -2; பதிற். பதி. 4 : 6 - 9 18. ௸ 38 : 4 23. ௸ 40 : 31 19. ௸ 38 : 15 - 16 24. ௸ 37 : 4 20. ௸ 38 : 9, 40 : 24 25. பதிற். 32 : 10 21. ௸ 40 : 21 26. ௸ 37 : 10 - 14 22. ௸ 38 : 9 27. ௸ 38 : 8 29. ௸ 31 : 23 28. ௸ 32 : 5 - 8 30. பதிற். 31 : 27 - 28 31. பதிற். 31 : 7 - 10 32. ௸ 31 : 6 - 9 33. ௸ 35 : 6 - 9 1. பதிற். பதி. 5 : 2 - 3 2. இந்த நிலையை மையமாகக் கொண்டு டாக்டர் ச. சோ. பாரதி சேரநாட்டில் ‘மருமக்கள் தாயமுறை’ வழக்கத்தில் இருந்தது என்று வேறு வகையில் விளக்கம் கூறுகிறார். இந்த முடிவு வேறு பிற சான்றுகளைக் கொண்டு முடிவுசெய்ய வேண்டியதாகும். 3. குட்ட நாட்டுக்கும் வேணாட்டுக்கும் இடையில் கிழக்குப் பகுதியில் இருந்த நாடாகும். 4. துரைசாமி பிள்ளை, ஒளவை, ‘சேர மன்னர் வரலாறு’, பக். 151 5. புறம். 343 : 10 6. பதிற். 44 : 14, 49 : 8 - 9, பதிற். பதி. 13 - 14 7. இந்த மோகூர் இப்போது மதுரை வட்டத்தில் மோகர் என்னும் பெயருடன் வழங்கும் ஊர் என்றும், நாமக்கல் வட்டத்தில் மோகனூர் என்னும் பெயருடன் வழங்கும் ஊர் என்றும் பலவாறு கருதப்பெறுகிறது. ‘மோகர்’ என்பது பொருத்தமெனத் தோன்றுகிறது. 8. துரைசாமி பிள்ளை, ஒளவை, மு. கு. நூ., பக் 160 9. ‘சேண னாயினுங் கேளென மொழிந்து’ (பதிற் 44 : 11) 10. ‘ஒளித்த களையாப் பூசல்’ (பதிற். 44 : 12) 11. பதிற் 44 : 19; சிலப். 27 : 118 - 123, 28 : 116 - 117 12. பதிற். பதி. 5 : 19 13. ௸ 5 : 11 - 14 14. ௸ 5 : 12 15. கோவிந்தன், புலவர், கா. ‘சேரர்’, 46 16. சிலப். 35 : 152 - 155, 29 : உரைப்பாட்டுமடை 17. சிலப். 25 : 156-159 18. கொண்கான தேயத்தவர். சேர நாட்டுக்கு வடக்கிலும், கருநாடகத்திற்கு மேற்கிலும் இருந்தது கொண்கான நாடு. 19. கலிங்க நாட்டவர் 20. கருநாடகத்தில் செல்வாக்குப் பெற்றவர் 21. வங்க நாட்டிலிருந்து வந்தேறி வாழ்ந்தவர் 22. கங்கக் குடியைச் சேர்ந்தவர் 23. கட்டிக்குடியைச் சேர்ந்தவர் 24. வடநாட்டு ஆரியர், தென்னாட்டு ஆரியராகிய தமிழரிடமிருந்து வேறுபட்டவர் 25. ‘வண்டமிழ் மயக்கம்’ என்னும் சிலப்பதிகாரத் தொடர் இவர்களை எதிர்த்துப் போரிட்டவர்கள் அனைவரும் தமிழ்மொழி பேசுபவர் என்று குறிப்பிடுவதால் இவர்களைத் தமிழ்மொழியைத் தாய்மொழியாக உடையவர் அல்லர் எனக் கொள்வது பொருத்தமாய் அமைகிறது. 26. அகம். 212 : 15 - 16; பதிற். 41:25 - 27, 42:21 - 22, 45 : 20-23, 46:11 - 13, 48: 3-4, 50:12-13, பதிற். பதி. 20-21; சிலப். 28:119, 23: கட்டுரை - 12. 27. பதிற். 48 : 3 - 4 28. சிலப். 11 : 17 - 22 29. சிலப். 17, பூவைநிலை (உள்வரி வாழ்த்து) 3 30. அகம். 212 : 14 - 16 31. சிறுபாண். 48 - 49 32. சிலப். 17, பூவை நிலை (உள்வரி வாழ்த்து) 3, 25 : 1 - 187, 28 : 135, 29 : ஊசல்வரி, 1 : 3 5, 2 : 3 - 5, வள்ளைப்பாட்டு, 3 33. சிலப். 25 : 160 - 164 34. பதிற், பதி. 5 : 4 - 10 35. சிலப். 25 : 168 - 169 36. ௸ 25 : 151 37. ௸ 25 : 149 - 177 38. சிலப். 26 : 85 (Nilgiris) 39. ௸ 182 - 187 40. சிலம். 27 : 175 - 176 41. ௸ 27 : 149 42. பதிற். 50 : 23 - 26 43. பதிற். 45 : 11 - 12 44. ௸ 47 : 7 - 8 45. ௸ 41 : 18 46. ௸ 42 : 1 47. ௸ 44 : 5 48. ௸ 48 : 4-5; புறம். 343 : 5-6 49. ௸ 43 : 20-22, 48 : 2, 49 : 2-4 50. ௸ 48 : 1 51. ௸ 42 : 12 - 15 52. ௸ 43 : 25 53. ௸ 43 : 28 54. ௸ 43 : 21 - 25 55. பதிற். பதி. 5 : 3 56. ௸ 49 : 17 57. ௸ 43 : 9 - 10 58. ௸ 50 : 6 - 7 59. ௸ 48 : 11-12, 50 : 16-18 60. ௸ 43 : 11 61. ‘எழுமுடி மார்பின் எய்திய சேரல்’ பதிற். 45 : 6 62. பதிற். 45 : 6 உரை 63. ௸ 48 : 9 64. ௸ 41 : 7, 15, 42 : 18-20 65. ௸ 48 : 18, சிலப்பதிகாரம் 66. பதிற். 42 : 7 67. ௸ 50 : 18 1. பதிற்றுப்பத்தில் இவனது பத்து, ஆறாம் பத்தாக வைத்திருப்பது ஒன்றுதான் இதற்கு அடிப்படை 2. பதிற். 55 : 4 3. ௸ 53 : 4 4. ௸ 60 : 10 - 12 5. ௸ 58 : 19, ‘நாடுகிழவோன்’ ஒப்புநோக்குக. கொண்கானங்கிழான். 6. பதிற். 55 : 9 ‘குடவர்கோ’ 7. ௸ 55 : 8 ‘மழவர் மெய்ம்மறை’ 8. ௸ 59 : 9, ‘வில்லோர் மெய்ம் மறை’ 9. ௸ 53 : 12 - 13 10. ௸ 55 : 17 - 18 11. ௸ 56 : 7 12. ௸ 52 : 31 13. ௸ பதி. 6 : 7 - 8 14. ௸ 6 : 8 15. பதிற். 53 : 10 - 13 16. பதிற். பதி. 6 : 3 - 4 17. பதிற். 51 : 26 - 28 18. ௸ 57 : 1 - 3 19. ௸ 51 : 31 20. ௸ 54 : 16 - 17 21. .............. 22. ௸ 55 : 10 - 11 23. ௸ 55 : 12 ‘நசைசால் வாய்மொழி’ 24. ‘இரவல் மாக்கள சிறுகுடி பெருக உலகம் தாங்கிய மேம்படு கற்பின்’ (பதிற்....). 25. ..... 26. பதிற். 54 : 1 27. ௸ 59 : 16 28. பதிற். பதி. 6 : 4 - 5 29. ....................’ 30. ............. 31. பதிற். பதி. 6 : 10 ` நாடல் சான்றநயனுடை நெஞ்சின்’ 32. பதிற். 58 : 8 - 9 33. ௸ 59 : 11 - 13 34. ..... 35. பதிற். 52 : 14, 56 : 3 36. ௸ 57 : 4 37. ௸ 51 : 11 - 15 38. ௸ 59 : 19, ‘நாடு புறந்தருதல், நினக் குமார் கடனே’ என்று அறிவுறுத்தப் படுவதால் இது விளங்கும் 39. பதிற். பதி. 6 : 2 - 10 40. பதிற். 55 : 1 41. ௸ 56 : 5 42. ........... 43. ௸ 58 : 12; பதிற். பதி. 6 :6 44. பதிற். பதி. 6 : 11 45. பதிற். 55 : 1, ‘ஆன்றோள் கணவ’ 46. .......... 1. பதிற். பதி. 7 : 2 2. புறம். 13 3. இவனே புலிநிறக் கவசம் பூம்பொறி சிதைய எய்கணை கிழித்த பகட்டெழின் மார்பின் மறலி யன்ன களிற்றுமிசை யோனே’ (புறம். 13 : 1-4) 4. அகம். 59 : 10 - 13 5. இந் நூல், இயல் ஒன்று 6. பரிபா. 8 : 21 - 28 7. கலி. 119 8. புறம் 71 : 13 9. ௸ 359 10. பதிற். பதி. 9 : 2 11. ௸ 7 : 1 - 2 1. புறம். 387 : 28, ‘பூழியர் பெருமகன்’ 2. பதிற்.67 : 22, நன்னனைக் கொன்றுவிட்டு நார்முடிச்சேரல் இங்குத் தங்கி இருந்த இடத்தையும் இவ்விடத்து நினைவுகூரலாம். பதிற். 40 : 14 - 16 3. பதிற். 21 : 23, 29 4. ௸ 21 : 22, 58 : 17 - 18 5. ௸ 61 : 1 6. ௸ 85 : 6 - 8 7. ‘வில்லோர்குடி’ வரலாறு காண்க. 8. குதிரைமலைப் பகுதியை அஞ்சியும், எழினியும் ஆண்டபோது அவனது ஆட்சியை விரும்பாத வில்லோர் சிலர் இவனுக்கு எதிராய் இவனது துணையையும் நன்னனது துணையையும் பெற்றனர். அவ்வாறே புன்னாட்டுக் கொங்கரும் பெற்றனர். இவற்றை அவ்வப் பகுதியில் காணலாம். 9. புறம். 387 : 34 ‘பொருநை’ ஆள்பொருநை - அமராவதி என்றும் வழங்கப்படுகிறது. 10. பதிற். 70 : 10 11. புறம். 387 : 19 - 22 12. பதிற். 63 : 8 - 11 13. ௸ 64 : 2 14. ௸ 68 : 9 - 11 15. பதிற். 61 : 6 16. உன்னமரம் தன் இலையை உதிர்த்து மன்னனுக்கு நேரவிருக்கும் தீங்கை முன்கூட்டி அறிவிக்கும் மரம் என்றும், அம்மரம் காட்டிய தீக்குறியையும் பகைத்து வெற்றி பெற்றான் - ஊழையும் உப்பக்கம் கண்டான் - என இதற்கு விளக்கம் பெறலாம். 17. பதிற். பதி. 7 : 5 18. ௸ 7 : 4 19. பதிற். 66 : 4 - 5 20. ௸ 64 : 12 - 13 21. புறம். 387 : 12 22. பதிற். 66 : 7 23. ௸ 69 : 11 - 14 24. ௸ 62 : 12 25. ௸ 69 : 15 - 18 26. பதிற். 66 : 15 27. ௸ 66 : 13 - 14 28. ௸ 68 : 11 29. பதிற். 65 : 13 30. ௸ 67 : 2, 5 31. புறம். 387 : 22-25 32. பதிற். 65 : 11 - 16 33. ௸ 64 : 16 - 17 34. புறம். 387 : 16 35. ௸ 387 : 12 - 13 36. ௸ 387 : 29 - 32 37. பதிற். 64 : 8 - 10, 67 38. ௸ 61 : 15 - 16, ஒப்புநோக்குக சேரலாதனின் கோட்டையைவயிரியர் அழித்து உண்டனர் (பதிற்.20:17-20) 39. பதிற். 61 : 8 40. பதிற். பதி. 7 : 6 - 7 41. பதிற். 64 : 4 - 5 42. ௸ 70 : 18 - 19 43. பதிற். பதி. 7 : 9 44. ௸ கொளு 45. ௸ 7 : 11 46. பதிற். 63 : 6 - 7 47. ௸ 63 : 9 ‘கொண்டி மிகைப்படத் தண்டமிழ் செறித்து’ 48. பதிற். பதி. 7 : 4 `நாடுபதி படுத்து’ 49. பதிற். 65 : 12 50. ௸ 64 : 15 51. ௸ 63 : 16 52. ௸ 67 : 23 53. ௸ 63 : 21 54. ௸ பதி. 7 : 12 55. புறம். 387 : 30 56. புகழுர்த் தமிழிக் கல்வெட்டு 57. பதிற். 63 : 8 - 12 58. ௸ 65 : 5 ‘சேர்ந்தோர் செல்வ’ ௸ 65 : 11 ‘பரிசிலர் வெறுக்கை’ 59. ௸ 64 : 18 60. புகழுர்க் கல்வெட்டுப் பெயரில் உள்ளது 61. புறம். 387 கொளு 62. பதிற். 63 : 16 63. பதிற். 70 : 6 64. ௸ 65 : 9 65. ௸ 70 : 12 66. ௸ 66 : 18 - 19 67. ௸ 70 : 12 68. ௸ 70 : 14 - 15 69. ௸ 61 : 4 70. ௸ 61 : 3 71. பதிற். 70 : 20 - 23 3. ௸ 73 : 9 4. பதிற். 73 : 9 5. அகம். 135 : 12, 135 : 13; பதிற். 71 : 17, 72 : 7 6. 14 வேளிர் கழுவுளின் காமூரை அழித்த போரைப் பரணர் பாடியுள்ளார். பெருஞ்சேரல் இரும்பொறை கழுவுள் தலைமறைந்து ஓடும்படி போரிட்டதை அரிசில்கிழார் குறிப்பிடுகிறார். இரண்டு பாடல்களிலும் மன்னர் கலங்கிய நிலை தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. எனவே, இரு போரும் ஒன்றென்றே கொள்ளத் தகும். 7. இவ்வாறு 11 வேளிரும், சேர, பாண்டியரும் ஒன்று கூடிக் கரிகால் வளவனோடு வெண்ணியில் போரிட்டுத் தோற்றதை அகநானூறு 246-ல் காணலாம். 8. பதிற். 71 : 17, 72 : 7, 73 :1 9. ௸ பதி: 8 : 3 - 5 10. ௸ பதி. 8 : 8 (மகளிர் இரங்கத் துப்பறுத்து) 11. புறம். 230 : 6 12. அந்தப் பாண்டியனுக்காக நன்னனை எதிர்த்துப் போராடி மாண்டதை அவனது வரலாற்றில் காணலாம். 13. தர்மபுரி 14. அகம். 212 : 16 - 17 15. அல்லது செங்குட்டுவனுக்குத் துணையாகப் பெருஞ்சேரல் 16. பதிற். 75 : 1 - 2 17. ௸ 71 : 7 18. பதிற் 72 19. ௸ 75 : 11 20. ௸ 79 : 18 - 19 21. ௸ 80 : 9 - 10 22. ௸ 76 : 1 - 2 23. ௸ 76 : 9 - 10, 79 : 4 - 5 24. பதிற். 74 : 1 - 2 25. ௸ 72 : 5 - 7, 74 : 25-28, 79 : 1 - 3 26. பதிற். 73 : 1 - 3 27. ௸ 72 : 5 - 16 28. ௸ 79 : 3 29. ௸ 80 : 17 30. ௸ 79 : 5 31. ௸ 79 : 8 32. ௸ 79 : 6 33. ௸ 79 : 7 34. ௸ 75 : 3 35 ௸ 80 : 13 36. ௸ 73 : 15 37. ௸ 75 : 2 - 3 38. ௸ 74 : 3 39 ௸ 79 : 6 - 7 40. பதிற். 74 : 19 - 21 41. ௸ பதி. 8 1. பதிற். பதி. 9 : 1 - 2 2. ‘மெய்யூர் அமைச்சியன் மையூர் கிழானைப் புரையறு கேள்விப் புரோசு மயக்கி’ (பதிற். பதி.9 : 11 - 12) 3. பதிற். 81 : 22 4. ௸ 85 : 8 5. ௸ 86 : 12 - 13 6. ௸ 88 : 19, 90 - 25 7. ௸ 88 : 21 8. பதிற் 90 : 28 9. ௸ 90 : 26 10. ௸ 90 : 27 11. ௸ 84 : 6 12. ௸ 90 : 30 13. பதிற். பதி. 9 : 4 14. ௸ 9 : 6 15. ‘பொத்தனூர் என்னும் ஊரை ஆண்டவன். இவ்வூர் சேலம் மாவட்டம் வேலூரை அடுத்துக் காவிரி ஆற்றங்கரையில் உள்ளது. 16. பதிற். 85 : 2 - 3 17. `பதிற். பதி. 9 : 7 18. ௸ 81 : 18 19. ௸ 84 : 4 - 5 20. ௸ 82 : 13, 83 : 3 - 4 21. ௸ 83 : 6 - 7 22. ௸ 84 : 7 - 8 23. பதிற். 84 : 11 - 12 24. ௸ 83 : 3 - 6 25. ௸ 90 : 30 26. ௸ 84 : 19 27. ௸ 81 : 35 - 37 28. ‘பாடுநர் புரவலன்’ (பதிற். 86 : 8) 29. ‘பாடினி நன்கலம் பெறுகுவை’ (பதிற். 87 : 1) 30. ‘இல்லோர் புன்கண் தீர நல்கும் (பதிற். 86 :6) 31. பதிற். பதி. 9 : 9 32. பதிற். 82 : 2 33. ‘மருளில் லார்க்கு மருளக்கொடு வென்று’ (பதிற். பதி.9) கொளு 34. பதிற். பதி. 9 கொளு 35. பதிற். 81 : 22 - 23 36. ௸. பதி. 9 : 13 - 14 37. ௸. பதி. 9 : 10 38. பதிற். பதி. 9 : 17 39. பதிற். பதி. 9 : 16 40. பதிற். 90 : 48 - 50 41. ௸ 89 : 19 1. புறம். 398 : 8 1. புறம். 367, கொளு 1. புறம். 65: அகம். 55 : 10 .11 2. ‘கோயில்வெண்ணி’ என்பது இவ்வூரின் வழக்கு 3. ‘விழுப்புண் படாதநாள் எல்லாம் வழுக்கினுள் வைக்குந்தன் நாளை எடுத்து’ (குறள். 776) 4. புறம். 65 : 11 5. ௸ 65 : 1 - 5 6. அகம். 55 : 11 - 15 7. புறம். 65 : 12 8. ௸ 66 9. புறம். 65 10. ௸ 66 : 4 - 8 11. ௸ 65 ‘கொளு’ 1. புறம். 2 2. மதுரைக். 775 3. சிலப், 29 ஊசல்வரி 1. புறம். 5 1. செங்குட்டுவனுக்குப் பாட்டன் பாரதப்போர் நடந்த காலத்தவன். கால்வழி தெரியவில்லை. 2. பேய்க்கு பெருஞ்சோறு வீரர்களுக்குப் பெருஞ்சோறு அளித்தான். அளித்தான். 3. பாடிய புலவர் கடைச்சங்க பாடிய புலவர் தலைச் சங்கக் காலத் காலத்தவர் தவர் (களவியல் உரை). 4. பகைவர்களை வென்றான் பகைவர்க்கும் நண்பர்க்கும் நடு நிலையாளனாய் விளங்கினான். 3. சிலப், 29 ஊசல்வரி 1. புறம். 5 2. புறம். 195 1. புகழுர்த் தாமிழிக் கல்வெட்டு 11 2. புறம். 11. 5 - 7 3. புறம். 11 : 8 - 3 4. குறுந். 231 5. ‘மடியிலான் செல்வம்போல் மரன்நந்த அச்செல்வம் படியுண்பார் நுகர்ச்சிபோல் பல்சினை மிஞிறு ஆர்ப்ப, மாயவள் மேனிபோல் தளிர்ஈன அம்மேனித் தாய சுணங்குபோல் தளிர்மிசைத் தாதுஉக’ (கலி. 35 : 1 - 4) 6. ‘இளந்துணைப் புதல்வர்’ (பதிற். 70 : 21) 1. புறம். 210 : 13 - 14 2. ௸ 211 : 5 - 6 1. பதிற். 90 : 13 2. அகம். 142 : 4 - 5 3. புறம். 125 4. ௸ 22 5. ௸ 53 6. ௸ 229; ஐங்குறுநூறு தொகுப்பித்தவனைப் பற்றிய குறிப்பு ‘கடுங்கோ’ என்பதும் ஒரு நாட்டின் பெயர் ‘பொருந’ என்று அரசனைக் குறிப்பிடுகையில் அவன் பொருந்தி அதாவது, தங்கி அரசாண்டதை எல்லா இடங்கிளிலும் உணர்த்தும்வகையில் சங்கப் பாடலில் ஆட்சி உள்ளது. ‘கோ’ என்பது அரச சாதியையும், சேரமான் என்பது குடியையும், யானைக்கண் என்பது வடிவையும், சேய் என்பது இயற்பெயரையும், மாந்தரஞ் சேரல் இரும்பொறை என்பது சிறப்புப் பெயரையும் உணர்த்துகிறது என்பது பரிமேலழகர் கருத்து. (குறள். 355 உரை.) 1. புறம். 125 : 13 - 17 1. புறம் 22 2. ௸ 17 : 27 3. ௸ 22 : 20 - 28 4. புறம். 17 5. ௸ 17 : 30 - 34 6. ௸ 17 : 34 - 36 7. ௸ 229 : 25 - 27 8. புறம், 20 : 7 - 21 9. ௸ 17 : 1 - 8 10. ௸ 20 : 1 - 6 1. புறம். 53 : 3-5 1. இவனும் சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சோலிரும்பொறையும் ஒருவராக இருக்கலாம். 2. புறம். 229 : 17 1. அகம். 33 : 14, 77 : 15, 143 : 10 159 : 15, 213 : 15, 309 : 10, 381 : 12 2. புறம். 39 : 15 - 17, 126 : 14 3. ௸ 39 : 14 - 10 4. அகம். 33 : 14, 213 : 15 5. புறம். 22 6. அகம். 77 : 16, 143 : 12 7. இக் கல்வெட்டில் குறிப்பிடப்படும் கடுங்கோ, பாலை பாடிய பெருங்கடுங்கோ ஆவான். இவன் ஒன்பதாம் பத்தின் தலைவனாகிய இளஞ்சேரல் இரும் பொறையின் தந்தை குட்டுவன் இரும்பொறையே ஆவான்; எட்டாம் பத்தின் தலைவனான பெருஞ்சேரல் இரும்பொறையின் தம்பி ஆவான். இவன் குட்ட நாட்டில் சிறப்புப் பெற்றுப் பொறையர்குடி அரசனாய் விளங்கியது போலச் சேரமான் குடக்கோச் சேரல் இரும்பொறை குடநாட்டில் சிறப்புற்று விளங்கிய பொறையர்குடி அரசன் ஆவான். 8. பதிற். பதி. 8 : 10 9. ௸ 9 : 1 10. புறம். 17 : 13 11. ௸ 11 : 5 - 7 12. ௸ 125 : 16 13. ௸ 39 : 16 - 17 14. ௸ 126 : 14 - 16 15. அகம். 309 : 9 16. ௸ 33 : 14, 143 : 10, 159 : 15, 213 : 15 17. ௸ 309 : 10 18. புறம். 126 : 14 19. அகம் 381 : 13 - 15 20. ௸ 159 : 15 21. ௸ 309 : 10 22. ௸ 381 : 15 23. புறம். 39 : 16 1. ௸ 394 1. குறுந். 268 2. அகம்.153 3. குறுந். 22 4. புறம். 74 5. அகம். 96, 176 6. நற். 59 7. அகம். 176 : 21 8. ௸ 96 : 10 - 15 9. அகம் 30 P. 117. The Chronology of the Early Tamils - K.N. Sivaraja Pillai 1932. P. 18. Cera Kings of the Sangam Period - K.G. Sesha Aiyar 1937. P. 519. A comprehensive History of India - Vol. II - K. A. Nilakanta Sastri, 1957. * P. 524, A Comprehensive History of India, Vol. Two. 1957. * (pp. 123 - 126, Cera Kings of the Sangam Period, K.G. Sesha Aiyar, 1937, ) * (Mahavamsa xxxiii. 58-59) தமிழ்பொழில்: துணர் 36. மலர் 4. (1959, 60, 61) * தமிழ்நாட்டு வரலாறு: சங்க காலம் - அரசியல் (1983) எனும் நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரை. 1. யவனர், அரபுநாட்டுக்கு மேற்கிலுள்ள செங்கடலையும் அதற்கு இப்பால் உள்ள பாரசீகக் கடலையும் அதற்கப்பால் உள்ள அரபிக்கடலையும், குமரிக் கடலையும், குண கடலையும் செங்கடல் (எரித்திரையக் கடல்) என்று கூறினார்கள். 2. ‘கடல் கிழக்குத் தெற்குக் கரைபொரு வெள்ளாறு குடதிசையிற் கோட்டைக் கரையாம் - வடதிசையில் ஏணாட்டுப் பண்ணை இருபத்து நாற்காதம் சோணாட்டுக் கெல்லையெனச் சொல்’ - பழம்பாடல் 3. புதுக்கோட்டை மாவட்டம் குடுமியான் மலைக்கு மேற்கில் தொடங்கி அறந்தாங்கிக்குத் தென்மேற்குப் பகுதியில் ஓடி, மணல்மேல்குடி என்னும் ஊருக்கு வடபால் கடலில் கலக்கிறது. 4. இப்போதுள்ள தான்தோன்றி மலைப்பகுதி சங்ககாலத்தில் ‘தாமான் தோன்றிக்கோன்’ என்னும் அரசனால் ஆளப்பட்டது. அவன் காலத்தில் கிள்ளிவளவன் என்னும் சோழ அரசனும் ஆண்டான். (புறம். 399). இந்த நிலை மேற்கண்ட உய்த்துணர்வுக்கு இடமளிக்கிறது. 5. ‘உறந்தைக் குணாது நெடும்பெருங் குன்றம்’. (அகம். 4 : 14 - 15) 6. Ptolemy 7. Ortheura 8. Periplus 9. Kamara 10. Chaberis 11. வேங்கடசாமி, மயிலை சீனி., ‘சங்ககாலத் தமிழக வரலாற்றில் சில செய்திகள்’ (சங்ககாலத்து நகரங்கள்), பக். 126 - 150 12. அகம். 60 : 13 - 14 13. நற். 379 : 7 - 9 14. அந்தச் சிறைச்சாலைக்குக் குடவாயில் கோட்டம் என்று பெயர். சோழன் செங்கணான். சேரமான் கணைக்கால் இரும்பொறையைப் போரில் சிறைப்பிடித்துக் கொண்டு வந்து குடவாயில் சிறையில் அடைத்துவைத்தான் என்று கூறப்படுவது இந்தச் சிறைச்சாலை போலும். 15. நற். 227 : 5 - 6 18. Arkatos 16. குறுந். 258 : 7; நற். 190 : 4 : 6 19. புறம். 395 17. Sorai 20. மணிமே. 24 : 27 21. Coramandal Coast 22. தஞ்சை மாவட்டம் திருவிடைக்கழி என்னும் ஊரை அடுத்துள்ள திருக்களாச் சேரி என்பது திருக்குராச்சேரி என்பதன் திரிபு வழக்கு என்பது கோயிலில் தலவிருட்சம் குராமரமாக இருப்பதனால் உய்த்துணரக் கிடக்கிறது. (செந் தமிழ்ச் செல்வி 40, பக். 13, 79) ‘துஞ்சிய’ என்பதற்கு ஓய்வு எடுத்துக் கொண்ட என்னும் ஒரு பொருளும் உண்டு. 23. நற். 281 : 3 24. அகம். 6 : 20 25. ௸ 226 : 7 - 8 26. ௸ 222 : 5 27. ௸ 376 : 4 - 10 28. அகம். 186 : 15 29. புறம். 217, 220, 221, 222 (சேலம் மாவட்டம் காவிரியின் வடகரையிலுள்ள பொத்தனூர் இந்த ஊராயிருக்கலாம். 30. அகம். 220 : 18 31. நற். 73 : 8 - 9 32. அகம். 336 : 22 - 23 33. ௸ 55 : 10 - 11 : புறம். 66 : 3-4; பொருநர். 143 - 148 1. தொல். பொருள், செய். 75 : 3 2. ௸ புறத். 5 : 4 3. வரதராசனார், மு. ‘தமிழ் இலக்கிய வரலாறு’, பக். 5 4. குறள், 955, பரிமே. உரை 5. Mukerji, R. K. The Fundamental Unity of India, p. 54 6. Sircar, D. C. (ed.) Inscriptions of Asoka, pp. 47, 58 7. மணிமே. பதி. 9 - 12 8. மணிமே. 4 : 25 - 28 9. ௸ 22 : 40 - 79 10. ௸ 22 : 146 - 158 11. புறம். 37 : 5 - 6, 39 : 1-3, 43 : 5-7 12. ௸ 46 : 1 - 2 13. ௸ 43 : 4 - 8 14. சிலப். 27 : 166 - 169 16. ௸ : 29, அம்மானை வரி 1 15. சிலப். 5 : 65 - 67; 6 : 7 - 13 17. மணிமே. 1 : 4; 19 - 20 18. புறம். 39 : 5 - 6 19. திருத்தொண்டர் புராணம், திருநகரச் சிறப்பு 20. Mendis, G. C. ‘Ceylon’ in A Comprehensive History of India, Vol. 2., The Mauryas and Satavahanas, p. 579 21. சிலப். 20 : 53 - 55, 29 ; அம்மானை வரி 2 22. மணிமே. 22 : 210 23. ‘தூங்கெயில் கதவம்’ (பதிற். 31 : 19) 24. புறம். 39 : 6 25. சிறுபாண். 81 - 82 26. நற். 236 : 8 27. ௸ 234 : 7 28. ௸ 14 : 4 - 5 29. அகம். 36 : 13 : 16 30. புறம். 37 : 5 - 6 31. களவழி. 6 : 5 - 6, 23 : 4 - 5 33 : 4 - 5, 38 : 3 - 4 32. சிலப். 29: அம்மானை வரி 1 33. மணிமே. 1 : 4 34. புறம், 228 : 9; சிலப். 28 : 95 1. பன்னிருபாட்டியல் 76 2. Gerini, Col., Researches, pp. 85 - 90 3. Kols 4. Bhandarkar, D. R., Anclent India, p. 89 5. துரையரங்கனார், மொ. அ., ‘சங்க காலச் சிறப்புப் பெயர்கள்’, பக். 227 6. Ramaswami Aiyar. L. V., Collected Papers, p. 42 7. துரையரங்கனார், மொ. அ. மு. கு. நூ. பக். 228 - 230 1. புறம். 80 2. ௸ 82 3. ௸ 85 : 6 4. ௸ 82 : 5 5. அகம். 36 : 19 - 20 6. புறம். 80 : 6 7. ௸ 80 : 5 - 9 ஆமூர்ப் போர் 8. அகம். 36 : 15 9. புறம். 82 : 3 - 4 10. ௸ 84 : 3 - 5 11. ௸ 85 : 7 - 8 12. புறம். 83 : 1 13. ௸ 82 : 6 14. ௸ 84 : 1 15. புறம் 13 16 இவ்வாறு கொள்ளின் இந்தச் சோழன் சேர அரசனின் கருவூருக்கு மேற்கில் ஆண்டான் என்று முடியும். சோழ அரசன் சார்பில் பழையன் என்பவன் போர் (திருப்பூர்)ப் பகுதியை ஆண்டு கொண்டிருந்ததையும் அந் நாட்டை ஆண்ட சோழ அரசன் ஒருவன் போர்வைக் கோப்பெருநற்கிள்ளி என்று பெயர் பெற்றிருந்ததையும் எண்ணும்போது கொடுமுடியில் இருந்துகொண்டு சோழ அரசன் ஒருவன் அரசாண்டான் என்று கூறுவது இயல்பாகவே முடியும். அன்றியும் அந்துவன் என்னும் சேர அரசனின் தலைநகரான கருவூர் மேற்குக் கடற்கரையை அடுத்த கருவூராகவும் இருக்கலாமன்றோ? அந்துவனுக்குச் சமகாலத்துச் சேர அரசனான உதியஞ்சேரல் மேற்குக் கடற்கரைப் பகுதியில் அரசாண்டான் என்று கொள்வதால், அந்துவனது தலைநகரான கருவூரைக் கொங்குநாட்டுக் கருவூர் என்று கருதுகிறோம். 17 புறம். 368 18 இந்த ஊர் ‘திருப்போர்புறம்’ என்றும் சுட்டப்படும். செங்கணானுக்கும் கணைக்கால் இரும்பொறைக்கும் இவ்விடத்தில்தான் போர் நடந்தது 19 புறம் 62 : 7 - 9 20 ௸ 62 : 14 - 15 * தமிழ்நாட்டு வரலாறு: சங்ககாலம் - அரசியல் (1983) எனும் நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரை. 1. எரித்திரையக் கடலின் ஆதிப்பெயர் ‘Erythraean ‘e’ என்பதாகும். எரிதிரியன் கள் (‘Eruscans’ என்போர்) என்ற செந்நிறமுடைய மக்கள் அக் கடல்களில் வாணிகம் செய்துவந்தனர். 2. Argalus 3. Orgalic S a 4 முதுமொழிக்காஞ்சி ஆர்கலி உலகத்து மக்கட்கெல்லாம் என்று கூறுமிடத்து அச் சொல் கடலின் பொதுப் பெயராக அமைந்திருந்ததைக் காணலாம். 5. ‘பஃறுளி யாற்றுடன் பன்மலையடுக்கத்துக் குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள’ (சிலப். 11 : 19 - 20) ‘மலிதிரை யூர்ந்துதன் மண்கடல் வௌவலின் மெலிவின்றி மேற்சென்று மேலை நாடு இடம்படப் புலியொடு வில்நீக்கிப் புகழ்பொறித்த கிளர்கெண்டை வலியினான் வணக்கிய வாடாச்சீர்த் தென்னவன்’ (கலி. 104 : 1 - 4) ‘அவர் சங்கமிருந்து தமிழாராய்ந்து கடல் கொள்ளப்பட்ட மதுரையும் கபாடபுரமும் என்ப.’ (இறையனார் அகப்பொருள் உரைப்பாயிரம்) 6. மகாவம்சம், 22 : 20 7. மணிமே. 5 : 37 8. லெமூரியாபற்றிய தீர்ந்த முடிவு இதுகாறும் கிடைக்கவில்லை. எனினும், லெமூரியாக் கண்டம் இருந்தது உண்மையே என்றும் 1,50,000 ஆண்டு களுக்கு முற்பட்ட தமிழர்களின் மூதாதையர்கள் அங்கு வாழ்ந்திருக்கக் கூடு மென்றும் இந் நூலின் முதல் தொகுதியில் ‘தொல்பழங்காலம்’ பக்கம் 25-ல் விளக்கப்பட்டுள்ளது. அங்கு வாழ்ந்தவர்கள் தமிழர்களின் மூதாதையர்கள் என்று தீர்மானமாகக் கூறமுடியாவிட்டாலும் தென்னிந்தியாவை ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியாவுடன் இணைத்த ஒரு பெருநிலப்பகுதி இருந் திருக்கலாம். அண்மையில் ஜப்பான் மொழிக்கும் தமிழுக்கும் தொடர்பு இருந் திருப்பதாகச் சில அறிஞர் கூறுகின்றனர். கபாடபுரத்தை வடநாட்டுக் காப்பியங்கள் குறிப் பிடுவதிலிருந்து ஒரு நிலப்பகுதி குமரிக்குத் தெற்கில் இருந்திருக்கலாம் எனக் கருத இடமுண்டு. 9. ‘வென்வேற் கவுரியர் தொன்முது கோடி’ (அகம். 70 : 13) 10. கொடும்பாளூர் இக்காலத்திய புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளது. 11. அகம். 13 : 10 12. பரிபா. 1 : 1 - 5, 2 : 19 - 21, 13 : 27 - 33, 15 : 13 - 14 13. சிலப். 11 : 94 - 97 14. இந் நூலின் அடிப்படைச் சான்றுகள் - 11, கல்வெட்டு வரிசை எண் 44 முதல் 46 வரை 15. இந் நூலின் அடிப்படைச் சான்றுகள் - II, கல்வெட்டு வரிசை எண் 1 - 6 16. பரிபா. 12 : 9 - 10, கலி. 67 : 3 - 4 17. சிலப். 11 : 108; பரிபா. 15 : 21 - 23 18. ‘அக்காலத்து அவர் நாட்டிற்குத் தென்பாலி முகத்திற்கு வடவெல்லையாகிய பஃறுளி என்னும் ஆற்றிற்கும் குமரி என்னும் ஆற்றிற்கும் இடையே ஏழு நூற்றுக் காவதம் - கடல் கொண்டு ஒழிதலால் குமரியாகிய பௌவம் என்றார்.’ - சிலப். 8 : 1 - 2 அடியார், உரை. 19. சிலப். 14 : 108 - 112 20. அகம். 220 : 13 21. பெரிபுளூஸ் ‘நெல்சிந்தா’ என்று குறிப்பிடும் மேற்குக் கடற்கரைத் துறைமுகத்தையும் ‘நெல்லினூர்’ என்று கொள்ள இடமுண்டு. இதுவும் பாண்டியருக்குச் சொந்தமானது என்று பெரிபுளூஸ் நூல் கூறுகிறது. 22. Kol Kci 23. Elankon of Ptolemy 24. ‘சங்கமிருந்து தமிழ் ஆராய்ந்தது கடல் கொள்ளப்பட்ட மதுரை என்ப.’ (களவியலுரை) 25. ‘அவர் சங்கமிருந்து தமிழ் ஆராய்ந்தது கபாடபுரத்தென்ப, அக்காலத்துப் போலும் பாண்டிய நாட்டைக் கடல் கொண்டது’ (களவியலுரை) 26. இறையனார் அகப்பொருள் உரைப்பாயிரம் 27. பரிபா. தி. 7 : 1 - 5 28. முருகு. 67 - 77 29. சிலப். 14 : 67 30. ௸ 15 : 207 - 16 31. புறம். 215 : 6 - 7 32 திருக்குறளின் சிறந்த உரையாசிரியராகிய பரிமேலழகர் ‘குடிமை’ என்னும் அதிகாரத்தில் ஐந்தாவது திருக்குறளுக்குப் பொருள் கூறுமிடத்துப் பழங்குடி என்னும் சொல்லிற்குச் ‘சேர, சோழ, பாண்டியர் என்றாற்போலப் படைப்புக் காலம் தொடங்கி மேம்பட்டு வருதல்’ எனக் கூறியுள்ளார். ஆகையால், பாண்டியர் குலம் இன்ன காலத்தில் தோன்றியதென்று அறுதியிட்டுக் கூற இயலாது. தென்னிந்தியத் தலபுராணங்களில் பாண்டியர்கள் சந்திரகுலத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்பெறுகிறது. இக் கூற்றுகள் பாண்டிய மன்னர்களுடைய நீண்டகாலத் தொடர்பைக் குறிக்கின்றன. பாண்டிய மன்னர்களின் குலத்தைச் சார்ந்தவர்கள் தற்காலத்தில் தமிழ்நாட்டில் உள்ளனரா? என உறுதியாகக் கூறுவதற்கில்லை. சில வரலாற்றாசிரியர்கள் தென் தமிழ்நாட்டு மறவர் குலத்தைப் பாண்டிய மன்னர்களுடைய சந்ததியார் என்று கூறுவர். மற்றும் சிலர் கள்ளர்கள் இனத்தைச் சார்ந்தவர்களே பாண்டியர்களுடைய சந்ததியார் ஆவர் என உரைப்பர். இப்பொழுது தென்மாவட்டங்களில் வாழும் ‘பள்ளர்’ இனத்தைச் சேர்ந்தவர்களே பாண்டிய மன்னர்களின் மூதாதையர்கள் என்றும், ‘மள்ளர்’ என்று சங்க இலக்கியங்களில் காணப்படும் குலப்பெயர் பள்ளர் என்று திரிந்துவிட்டது என்றும் சிலர் கூறுவர். இக் கூற்றில் எவ்வளவு வரலாற்றுண்மை பொதிந்துள்ளது என்பது அறிஞர்களின் ஆய்விற்கு உரியதாகும். சங்க இலக்கியங்களில் பயின்றுள்ள ‘மள்ளர்’ என்னும் சொல் பள்ளர் எனத் திரிந்தது என்பதற்கும், இப் பள்ளர்கள் பாண்டிய மன்னர்களின் குலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதற்கும் தகுந்த ஆதாரங்கள் இல்லை. (ப-ர்) 1. Rock Edicts II and XIII 1. இந் நூல் அடிப்படைச் சான்றுகள் - II , கல்வெட்டு எண்கள் 1 முதல் 6 2. ‘உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும் பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே பிறப்போ ரன்ன உடன்வயிற் றுள்ளும் சிறப்பின் பாலால் தாயும்மனந் திரியும் ஒருகுடிப் பிறந்த பல்லோ ருள்ளும் மூத்தோன் வருக என்னாது அவருள் அறிவுடையோன் ஆறு அரசும் செல்லும் வேற்றுமை திரிந்த நாற்பா லுள்ளும் கீழ்ப்பால் ஒருவன் கற்பின் மேற்பால் ஒருவனும் அவன்கட் படுமே.’ (புறம், 183) 3. சிலப். 23 : கட்டுரை 14 - 18 4. ‘ஆடித் திங்கள் பேரிருள் பக்கத்து அழற்குட் டத்து அட்டமி ஞான்று வெள்ளி வாரத்து ஒள்ளெரி யுண்ண உரைசால் மதுரையோடு அரைசுகே டுறும்எனும் உரையும் உண்டே நிரைதொடி யோயே’ (சிலப். 23 : 133 - 137) 5 ‘தமிழ்தலை மயங்கிய தலையாலங் கானத்து மன்னுயிர்ப் பன்மையும் கூற்றத்து ஒருமையும் நின்னொடு தூக்கிய வென்வேற் செழிய’ (புறம். 19 : 2 - 4) 6 ௸ 19 : 2 4 7. ௸ 76 : 9 8. கொற்கையில் இருந்த வெற்றிவேற்செழியன். (சிலப். உரைபெறு கட்டுரை) 9. ‘கொற்கைக் கோமான் தென்புலங் காவலர் மருமான்’ (சிறுபாண். 62 - 63) 10. அகம். 209 : 3 - 4 11. ‘இழையணி நெடுந்தேர்க் கைவண் செழியன்’ (அகம். 47 : 15) 12. ‘முத்தின் தெண்கடல் பொருநன் திண்டேர்ச் செழியன்’ (௸ 137 : 13 - 14) 13. சிலப். 23 : உரைபெறு கட்டுரை 14. பசும்பூண் பாண்டியன் எனக்கொள்ள இடமுண்டு 15. அகம். 149 : 13-14, 231 : 12-13; நற். 39 : 9 - 10 16. அகம். 46 : 14, 47 : 16 17. இத் தலையாலங்கானம் என்னுமிடம் தஞ்சை மாவட்டத்திலுள்ள தலையாலங்காடு என்று கருதப்பெறுகிறது. 18. அகம். 36 : 15 - 20 19. புறம். 77 : 6 20. ௸ 76 : 5 - 9 21. ‘நண்ணார் ஆண்டலை மதிலர் ஆகவும் முரசுகொண்டு ஓம்பரண் கடந்த அடுபோர்ச் செழியன், பெரும்பெயர்க்கூடல்’ (நற்.39: 7 - 10 22. ‘ஆடுகொள் முரசின் அடுபோர்ச் செழியன் மாட மூதூர் மதிற்பறம் தழீஇ - யாத்தகுடை’ (அகம். 335 : 10-14) 23. சிலர் நெல்சிந்தம் என்பது கிழக்குக் கடற்கரைத் துறைமுகமெனக் கூறுவர். அங்ஙனமாயின் அது பாண்டியருடைய துறைமுகமாகும். அதனைக் கைப்பற்றப் பாண்டியன் முயன்றிருக்க இயலாது. 24. மதுரைக். 119 25. ௸ 190 26. புறம். 18 : 28 - 30 27. நற். 340 : 3 28. புறம். 26 : 13 - 15 29. ௸ 372 : 5 - 13 30. ௸ 239 31. ‘பாண்டியர்’ என்னும் பகுதியில் விளக்கம் 1. புறம்.55,56 2. ௸ 55 : 18 - 21 3. புறம். 57 : 5 - 11 4. ௸ 57 5. ௸ 196 : 13 - 15 6. ௸ 198 : 10, 56 : 9 - 15 7. ௸ 55 : 6 8. ௸ 198 : 2 9. ௸ 198 : 6 10. இறையனார் களவியல் உரை 11. நற். 105 : 5 - 10, 228 12. குறுந். 245 13. குறுந். 2 - 6 14. பதிற். 44 : 14, 49 : 8: பதி. 5 : 13 15. பதிற். பதி, 9 : 7 16. மதுரைக். 772- 74 17 ‘பழையன் மோகூர் அவையகம் விளங்க நான்மொழிக் கோசர் தோன்றி யன்ன’ (மதுரைக். 508-509) 18 அகம். 346 : 19 - 22 19 மதுரையில் நடந்த போரில் பழையன் மாறன் கிள்ளிவளவனிடம் தோற்றுத் தன் கோநகரமாகிய மதுரையையும் யானைகளையும் குதிரைகளையும் இழந்து மோகூர் என்னும் ஊருக்கு ஓடி, அதைக் கோநகரமாகக் கொண்டு ஆளத் தொடங்கினான். இவனது தோல்வியைக் கேட்ட சேரன் கோதைமார்பன் மகிழ்ச்சியடைந்தான். 20. பழையன் மாறன் என்னும் பெயர்கொண்ட ஒருவன் பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனின் படைத்தலைவனாக விளங்கினான். இவனுடைய பெயரிலிருந்து மோகூர் அரசன் பழையனின் மகனாக இருக்க வேண்டுமென்று தோன்றுகிறது. 21. அகம். 346 : 19 22. வித்தை போர்ப்பயிற்சி என்று கொள்வாரும் உளர் 1. அடுத்த வழுதி சங்ககாலக் கல்வெட்டில் காணப்படும் கடலன் வழுதி. 2. புறம். 9 : 10-11 3. காவிரி கடலோடு கலக்குமிடத்தில் புகாரில் நடைபெற்ற இந்திரவிழாவில் சோழ அரசர்கள் கலந்துகொள்வது போன்று 4. ‘வயிர்’ என்னும் ஒரு வித இசைக்கருவியை இயக்குபவர்கள். 5. ‘முந்நீர் விழவின் நெடியோன்’ (புறம். 9 : 10) 6. மதுரைக். 759 - 768 7. புறம். 6 : 1 - 8 8. மதுரைக். 760 9. வேள்வி - யாகம் 10. புறம். 6 : 19 - 20 11. புறம். 15 : 17 - 21 12. ௸ 20 : 13 - 14 13. புறம். 21 14. ௸ 367 : 13 15. புறம். 367 16. ௸ 58 17. ௸ 57 18. ௸ 169, 171 19. ௸ 172 : 8 - 11 20. அகம். 346 : 25 21. புறம். 373 22. ௸ 50, 68, 197 23. ‘துஞ்சினான்’ என்பதற்கு ஓய்வு எடுத்துக்கொண்டான் என்னும் பொருளும் உண்டு எனக் கூறப்பெறுகிறது. 24. மதுரைக். 775, பொலம்பூண் ஐவர் 25. புறம். 182 26. புறம். 3 : 13 -உரை 27. அகம். 315 : 7 - 8 28. ௸ 315 29. குறுந். 117 : 3; அகம். 59 : 5 30. குறுந். 210 : 1 31. பதிற். 88 : 7 - 10 32. பரிபா. 12: 86 33. நற். 97, 301; குறுந். 270. 34. சங்க இலக்கியங்கள், ‘வரலாறு’, வையாபுரிப்பிள்ளை, பக். 1373 35. புறம். 52 : 5 36. மருதன் இளநாகனார், ஒளவையார் 37. அடிப்படைச் சான்றுகள் - II கல்வெட்டு எண் 1 38. அகம். 130 : 11 39. ௸ 312 : 11 - 12 40. கலி. 141 : 24 - 25 1. புறம். 71 : 4 - 19 2. ௸ 242 3. அகம். 25 : 20 4. புறம். 246 : 13 - 15 5. நற். 279 : 2; பெரும்பாண். 458 ; பரிபா. 3 : 53 6. அகம். 231 : 12 7. அகம். 162 : 18 8. ௸ 253 : 4 - 5 9. புறம். 130 : 5 - 6 10. குறுந். 393 : 3 - 6 11. அகம். 338 : 5 - 6 12. புறம். 130 : 5 - 6 13. அகம். 266 : 12 14. ‘அரிமண வாயில்’ என்பது புதுக்கோட்டைக்கருகில் உள்ள அரிமளம் 15. பதிற். 32 : 9 - 11 16. புறம். 184 : 5 17. புறம். 184 18. ௸ 188 19. அகம். 28 : 3 - 14 20. ௸ 28 21. நற். 15 : 7 -10 22. புறம். 196 * தமிழ்நாட்டு வரலாறு: சங்ககாலம் - அரசியல் (1983) எனும் நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரை. 1. சிலப். 11 : 17 - 22 2. புறம். 9:10; மதுரைக். 763 3. ‘சங்க இலக்கியம்’ பக். 1482 4. நளவெண்பா, 137 5. ‘தேவர்கோன் பூணராம் தென்னர்கோன் மார்பினவே’ (சிலப். 17 உள்வரி வாழ்த்து 1:2) 6. சிலப். 23:42-52; பரஞ்சோதி முனிவர் திருவிளையாடற் புராணம் 23:42-52 7. பரஞ்சோதி முனிவர் திருவிளையாடற் புராணம் தடாதகைப் பிராட்டியார் திரு அவதார, திருமணப் படலங்கள். * செந்தமிழ்ச்செல்வி : 46, 1971 - 72* * கலைக்கதிர் : 1959. சனவரி 1 : 11. * வாதாபி கொண்ட நரசிம்மவர்மன் (1953) நூலில் உள்ள கட்டுரை. 1. The Pandian Kingdom by K.A. Nilakanta Sastriï a1929ï P. 54. Note I. 1. The Pandian Kingdom 1. S.I.I. Vol. III, Part IV, P. 446. 2. The Pallavas, P. 67.