பாரதி பிறந்தார் கவிஞர் முருகு சுந்தரம் 1993 8 அக்டோபர், 2020 அன்று விக்கிமூலத்தில் இருந்து பதிவிறக்கப்பட்டது உலகளாவிய பொதுக் கள உரிமம் (CC0 1.0) இது சட்ட ஏற்புடைய உரிமத்தின் சுருக்கம் மட்டுமே. முழு உரையை https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode என்ற முகவரியில் காணலாம். பதிப்புரிமை அற்றது இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர். நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை. *** இது, உலகத் தமிழ் விக்கியூடகச் சமூகமும் ( https://ta.wikisource.org ), தமிழ் இணையக் கல்விக் கழகமும் ( http://tamilvu.org ) இணைந்த கூட்டுமுயற்சியில், பதிவேற்றிய நூல்களில் ஒன்று. இக்கூட்டு முயற்சியைப் பற்றி, https://ta.wikisource.org/s/4kx என்ற முகவரியில் விரிவாகக் காணலாம். Universal (CC0 1.0) Public Domain Dedication This is a human readable summary of the legal code found at https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode No Copyright The person who associated a work with this deed has dedicated the work to the public domain by waiving all of his or her rights to the work worldwide under copyright law including all related and neighboring rights, to the extent allowed by law. You can copy, modify, distribute and perform the work even for commercial purposes, all without asking permission. *** This book is uploaded as part of the collaboration between Global Tamil Wikimedia Community ( https://ta.wikisource.org ) and Tamil Virtual Academy ( http://tamilvu.org ). More details about this collaboration can be found at https://ta.wikisource.org/s/4kx.  பாரதி பிறந்தார் கவிஞர் முருகுசுந்தரம் செல்மா 2,சிவன் கோயில் தெற்குத்தெரு, சிவகங்கை-623560  பாரதி பிறந்தார் © கவிஞர் முருகுசுந்தரம் ஓவியங்கள் : கோபண்ணா முதற்பதிப்பு: ஏப்ரல் 1993 வெளியீடு : செல்மா 2, சிவன்கோயில் தெற்குத்தெரு, சிவகங்கை 623560 அச்சாக்கம் : அகரம், சிவகங்கை விலை ரூ. 12.00  பதிப்புரை மகாகவி பாரதியின் வரலாற்றை முதன்முதலில் அறிஞர் வ.ரா. எழுதினார். அதற்குப் பிறகு உரைநடையிலும் கவிதையிலும் பலரும் எழுதியுள்ளனர். குழந்தைகளுக்கு ஏற்ற விதத்தில், எளிய நடையில் , இனிய கவிதை நடையில் பாரதி வரலாற்றைக் கவிஞர் முருகுசுந்தரம் படைத்தளித்துள்ளார். ஓவியர் கோபண்ணா அற்புதமான படங்களைத் தீட்டியுள்ளார். தமிழ்நாட்டுக் குழந்தைச் செல்வங் கள் மட்டுமல்ல, எழுத்துக் கூட்டிப் படிக்கக் கற்றுக் கொண்டுள்ள ஆர்வமுள்ள அறிவொளிப் பெரியவர்களும் இந்த நூலைப் படித்துப் பயனடைய வேண்டும் என்று விரும்புகிறோம். உள்ளடக்கம் இளமை கல்வி பணி போராட்டம் கவிதைகள் நட்பு மாற்றம் யானை புகழ் பூட்டிய விலங்கைப் பொடிசெய் வதற்குப் பாட்டுக் கவிஞன் பாரதி பிறந்தான் பாரத அன்னை படும் துயர் போக்க வீரன் பிறந்தான் வேங்கைப் புலிபோல்  கொஞ்சிப் பேசும் குழந்தைப் பருவம் அஞ்சி நடக்கும் அழகுப் பருவம் ஈன்ற அன்னை இலக்குமி அம்மாள் மாண்டு மடிந்தாள் மண்ணில் மறைந்தாள் கணக்கும் அறிவுக் கலையும் யந்திர நுணுக்கம் பலவும் கற்றுக் கொடுக்கத் தந்தை நினைத்தார் தனயன் ஏனோ சிந்தையில் அவற்றைச் சேர்க்க மறுத்தான் கணக்கை வெறுத்துவந்தான் - கண்டால் காத வழிசென்றான் பிணக்கெனச் சொல்லிவந்தான் - பாரதி பிடிவாதம் செய்துவந்தான் சோலைக் குயிலைப்போல் - பூவைச் சுற்றும் வண்டைப்போல் காலை மாலைகளில்-அவன் கவிதை பாடிவந்தான்.  எட்டய புரத்தினிலே - வாழ்ந்து இருந்த புலவரெல்லாம் பட்டம் கொடுத்தார்கள் - அவனைப் பாரதி என்றார்கள் கோட்டுக் களிற்றிடையே - சிங்கக் குட்டி இருப்பதுபோல் பாட்டுப் புலவரிடை - இளம் பாரதி வீற்றிருந்தான் தந்தை இறந்துவிட்டார் - துன்பம் தாங்க முடியாமல் சிந்தை துடித்தழுதான் - ஏதும் செய்வ தறியாமல் பிள்ளைப் பருவத்திலே - வறுமை பேய்போல் வந்ததம்மா துள்ளும் இளம்வயதில் - துன்பம் சூழ்ந்து கொண்டதம்மா முல்லை மலரழகி - சிவந்த முருக்கம் பூவழகி செல்லம் மாளைமணம் - விரைவில் செய்து முடித்தார்கள் பன்னிரண் டாமாண்டில் - இளம் பாலகன் சுப்பையா கன்னி ஒருத்திக்குக் - காதற் கணவன் ஆகிவிட்டான் அரசர் சபையினிலே - கவி யழகன் சுப்பையா முரச டிப்பதுபோல் - கவிதை முழக்கம் செய்துவந்தான் எட்டை நாட்டரசர் - நம் இளங்கவி பாரதியை விட்டுப் பிரியாமல் - கவிதை விரும்பிக் கேட்டுவந்தார் காசி நகர் சேர்ந்தான் - இந்தி கற்று வடமொழியும் பேசிப் புலமைபெற்றான் - உள்ளம் பெரிதும் மகிழ்ச்சியுற்றான் கல்லூரி யில்சேர்ந்தான் - ஆங்கிலக் கலையில் தேர்ச்சிபெற்றான் ஷெல்லியின் பாடல்களில் - தனது சிந்தை பறிகொடுத்தான் பச்சைக்கல் மோதிரமும் - இடுப்பில் பட்டுக் கரைஉடையும் கச்சையுடன் அணிந்தான் - இரண்டு காலில் சடா அணிந்தான் மேலை நாட்டார்போல் - அவன் மீசை கிராப்பணிந்தான் காலை மாலைகளில் - கங்கைக் கரையில் திரிந்துவந்தான்  தேர்வில் முதல்வகுப்பில் - நல்ல தேர்ச்சி பெற்றிருந்தும் ஆர்வம் கல்வியிலே - ஏனோ அவனுக் கிருக்கவில்லை எட்டை நகர் வந்தான் மீண்டும் இளசை மன்னவரை விட்டுப் பிரியாமல் - கவிதை வேட்டையில் ஈடுபட்டான் பாட்டுக் கலைபயின்றான் - இசைப் பாடல் கேட்டுவந்தான் ஆட்டக் கச்சேரிகளை - அவன் அரங்கில் கண்டுவந்தான் நூற்கள் பலசெய்தான் - கதை நூறு சொல்லிவந்தான் வேற்கை மன்னருக்குப் - பல வேடிக்கை கூறிவந்தான் மதுரை மாநகரில் - சேதுபதி மன்னர் பள்ளியிலே புதுத்தமிழ் ஆசான் - ஆகிப் போதனை செய்துவந்தான் சங்கத் தமிழ்ப்பாட்டைத் தனது சங்கீதத் குரலால் பொங்கும் அமுதம்போல் - பாடிப் போதனை செய்துவந்தான்  மிக்க அன்புடனே - சுதேச மித்திரன் ஆசிரியர் தக்க பொருள்கொடுத்துப் - பாரதி தன்னைக் கூப்பிட்டார் பாட்டுக் கவியரசன் - சென்னைப் பட்டினம் சேர்ந்துவிட்டான் நாட்டு நடப்புகளை - எழுதி நாளும் வெளியிட்டான் தீவிர வாதியென - மராட்டியத் திலகர் கொதித்தெழுந்தார் ஆவி கொடுத்தேனும் - பாரத அன்னையைக் காப்பனென்றார். அச்சம் விட்டெழுந்தான் - பத்திரி காசிரி யன்வேலை துச்சம் எனநினைத்தான் - பாரதி துள்ளிப் புறப்பட்டான்  இந்தியா என்றொரு பத்திரிகை பொறுப் பேற்று நடத்திவந்தான் - அதில் சொந்தமாய்ப் பற்பல கவிதைகள் கட்டுரை சுடச்சுட எழுதிவந்தான் கண்டனப் பாடலும் கருத்துப் படங்களும் காட்டிப் புரட்சி செய்தான் - அதைக் கண்டனர் வெள்ளையர் மண்டையிடி குளிர் காய்ச்சலும் கொண்டு விட்டார்.  சூரத் எனும் ஊரில் வீரர் பலர் கூடிச் சூழ்ந்தஓர் காங்கிரசில் - அவன் வீரத் திலகரை நேரினில் சந்தித்து வீழ்ந்தவர் தாள்பணிந்தான் தீப்பொறி கக்கும் கருத்துக்களால் நாட்டுச் சிங்க இளைஞர்களைத் - தட்டிக் கூப்பிட் டெழுப்பினான்; வீரர்கள் யாவரும் கொந்தளிப் போடெழுந்தார் பாட்டுப் புலவன் நடத்திய இந்தியாப் பத்திரிகை மேலே - ஆள்வோர் நாட்டம் விழுந்தது அந்நல்லிதழ் தன்னை நசுக்க முடிவுசெய்தார் நாட்டினிலே உயர் நாவல னாகிய நல்லவன் பாரதியைச் - சிறைக் கூட்டுக் குள்ளே தள்ளிப் பூட்டிட வெள்ளையர் கூடிச் சதிபுரிந்தார் ஆங்கிலர் கையில்சிக்கிச் - சிறையில் அடைந்து கிடப்பதினும் மாங்குயில் கூவுகின்ற - புதுவை மாநகர் சென்றடைந்து குமுறும் எரிமலையாய்ப் - பொங்கிக் கொந்தளிக்கும் கடலாய் நமது பாரதியும் - ஏடொன்று நடத்தப் புறப்பட்டான் வங்கப் பெருநாட்டில் - இருந்து வந்த அரவிந்தர் அங்கு வாழ்ந்திருந்தார் - வ.வே.சு அய்யரும் அங்கிருந்தார் வரிப்புலி பாரதியும் - இவ வறிஞருடன் சேர்ந்தான் சிரிப்பில் பேச்சினிலே தன் சிந்தை மறந்திருந்தான்  வீரத் தமிழ்மறவன் - சுப்புரத்ன வேந்தன் தன்னோடு பாரதி பழகிவந்தான் - அவனுக்குப் பாடல் பயிற்றிவந்தான் துப்பாக்கியின் வயிற்றில் - பீரங்கி தோன்றும் கதைபோலச் சிப்பாய் பாரதிக்கு - நல்ல தோர் சீடன் கிடைத்துவிட்டான் இந்தியா பத்திரிகை - மீண்டும் எழுந்து நடமாடி வந்தே மாதரமாம் - கீதத்தை வாரி இறைத்ததடா வங்க அரவிந்தர் - நடத்தி வந்த பத்திரிகை தங்கக்கைப் பாரதியால் - மீண்டும் தளிர்த்து வந்ததடா  துள்ளும் தமிழ்க்கவிதை - பாடத் துடித்த பாரதிக்குக் கிள்ளும் பசிப்பிணியும் - வறுமைக் கேடும் சூழ்ந்ததம்மா செல்வர் முருகேசர் - வெல்லச்சு செட்டியார் போன்றசிலர் பல்விதமாய் உதவிப் பாரதி பசிப்பிணி தீர்த்துவந்தார் பண்ணிசைத் தே அலைகள் - பொங்கிப் பாயும் கடற்கரையில் கண்ணன் பாடல்களைப் - பாடிக் களிப்பு மிகக்கொண்டான் கத்தும் கடல்அலையின் - ஆட்டம் கண்ட பாரதியும் தத்தரி தரிகிடதோம் - என்று தாளமிட்டு ஆடிநின்றான்  முத்தியால் பேட்டையிலே - மரங்கள் மொய்த்த ஓர் சோலையிலே சித்தம் களிகூரக் - குயில்கள் சேர்ந்து பண்ணிசைக்கும் பாரதி அங்கிருந்தே - குயில் பாட்டுக் குயிர்கொடுத்தான் வீரம் வேண்டுமென்றான் - பெண்டிர்க்கு விடுதலை தேவையென்றான்  புதுவையிலே ஒருநாள் - பெரும் புயல் அடித்ததனால் எதிர் இருந்தமரம் - வீடு எல்லாம் வீழ்ந்தனவே பொங்கும் பெரியபுயல் - நெஞ்சில் புறப்பட்ட காரணத்தால் மங்கை பாஞ்சாலி - சபதம் மாக்கவி பாடிவைத்தான்  வீட்டின் முற்றத்திலே - ஒருநாள் வீற்றிருக்கையிலே பாட்டையில் கோணங்கி - ஒருவன் பாடி எதிர்வந்தான் அரையில் அணிந்திருந்த - ஆடையை அவிழ்த்துக் கொடுத்துவிட்டு மரம்போல் பாரதியும் - நின்றான் மனைவி வருந்திநின்றாள் சமைக்கக் காய்கறிகள் - வாங்கச் சந்தைக்குச் சென்றொருநாள் சுமக்கும் அளவுக்குக் - கீரை சுமந்து திரும்பிவந்தான் வீட்டுக்கு ஒருகட்டாய் - அதை வேற்றோர்க்கு அளித்துத்தன் வீட்டுக்கு ஒருகட்டைக் - கொண்டு வீரன் திரும்பிவந்தான் நண்பர்களை ஒருநாள் - வீட்டுக்கு நாவலன் கூப்பிட்டான் எண்ணம் அறிவதற்கே - நண்பர்கள் இல்லம் வந்தடைந்தார் பறையர் குலத்தவனை-மேலாம் பார்ப்பனன் ஆக்குதற்கு மறைகள் ஓதிநின்றான் - பூணூல் மாட்டிச் சடங்குசெய்தான் வெடிக்கும் எரிமலைபோல் - பாடல் வீசும் பாரதியைக் கடத்திச் செல்வதற்குப் - போலீஸ் காவலர் காத்திருந்தார் வஞ்சகப் போலீசார் - விரித்த வலையில் வீழாமல் செஞ்சொற் கவியரசை - அவர் சீடர் காத்து நின்றார் பத்து வருடங்கள் - புதுவையில் பாரதி வாழ்ந்த பின்னர் சித்தம் சலிப்படைந்தே - சென்னை சேர முடிவுசெய்தான் கடலூர் எல்லையிலே - பாரதி காலை வைத்தவுடன் திடுமெனப் போலீசார் - பாய்ந்து சிறையில் தள்ளிவிட்டார் நாவலன் பாரதியை - அவன் நண்பர்கள் சிறைமீட்டார் காவலில் வாடியவன் - மீண்டு கடையம் சென்றுவிட்டான் தாவும் குழந்தைகளைப் - பிரிவால் தவிக்கும் மனையாளைப் பாவலன் சென்றுகண்டான் - அவர்கள் பக்கம் அமர்ந்து கொண்டான் கழுதைக் குட்டியினை - வழியில் கண்ட பெருங்கவிஞன் தொழுது முத்தமிட்டான் - தோளில் தூக்கி நடந்துவந்தான் பாதையில் சென்றவர்கள் - அவனைப் பயித்தியம் என்றார்கள் மேதையின் செயலெல்லாம் - இந்த மேதினி அறிந்திடுமோ? நண்பரின் திருமணத்தில் - ஓர்நாள் நாவலன் விருந்துண்டான் பண்பறியாத சிலர் - இதைப் பார்த்து வெறுப்படைந்தார் சாதியில் தாழ்ந்தவரின் - வீட்டில் சமபந்தி உண்டதனால் சாதியில் தள்ளிவைத்தார் - பாரதி சற்றும் அஞ்சவில்லை காக்கைஎன் சாதியென்றான் - பொங்கும் கடலும்என் சாதியென்றான் பூக்கள் கொடிகள் எல்லாம் - பாடும் புலவரின் தோழன் என்றான் சாதி சமயங்களைப் - பேசிச் சண்டைகள் செய்பவரை மோதி மிதிப்பனென்றான் - அவர்கள் முகத்தில் உமிழ்வனென்றான் மீண்டும் பாரதியைச் - சுதேச மித்திரன் ஆசிரியர் வேண்டிக் கூப்பிட்டார் - கவிதை வீரன் புறப்பட்டான் பாட்டும் கட்டுரையும் - இன்பம் பாய்ச்சும் சிறுகதையும் தீட்டிப் புகழ்பெற்றான் - நாட்டார் தேன்போல் வரவேற்றார்  குமுறும் பேரலைகள் - தாவிக் குதிக்கும் கடற்கரையில் இமயப் பெருமலைபோல் - நின்றான் இடிபோல் முழக்கமிட்டான் சித்திரப் பாவையைப்போல் - மக்கள் சிறிதும் அசையாமல் முத்திரைப் பொன்னழகன் - பேச்சை முன்னின்று கேட்டார்கள் மானும் மயிலினமும் - குரங்கும் மதம்பொழி யானைகளும் காணும் விருப்போடு - மிருகக் காட்சிச் சாலைசென்றான் கூட்டுக் குள்ளிருந்த - சிங்கக் கோளரி ஒன்றைக்கை நீட்டித் தடவிநின்றான் - அது நிமிர்ந்து முழங்கியது  பொக்கை வாய்ச்சிரிப்பால் - இந்தப் பூமியில் உள்ளோரைக் கைக்குள் அடக்கிவிட்ட - காந்தி கடற்கரைச் சென்னைவந்தார் காந்தியைக் காண்பதற்குப் - பாரதிக் கவிஞன் சென்றிருந்தான் மாந்தருள் தெய்வத்தைக் - கவிதை மன்னவன் வாழ்த்திநின்றான் சந்தத் தமிழ்க்கவிஞன் - பார்த்த சாரதி கோவிலுக்குச் சிந்தை மகிழ்ச்சியுடன் - வெள்ளிக் கிழமை செல்வதுண்டு கோயில் யானைக்குத் - தேங்காய் கொடுத்துப் பழகிவந்தான் தாயினும் அன்போடு - பழம் தந்து பழகி வந்தான் கொல்லும் மதம்பிடித்தே - யானை கோபம் கொண்டொருநாள் செல்வோர் வருவோரைக் - கண்டு சீறத் தொடங்கியது பாட்டுக் கவியரசன் - அதன் பக்கம் சென்றுவிட்டான் போட்டுத் துவைத்தவனை - நிலத்தில் புரட்டி விட்டதடா சீற்ற யானையிடம் - அன்று சிக்கிய பாரதியைக் காற்றைப் போலவந்தே - குவளைக் கண்ணன் மீட்டுவிட்டான் பொன்னைப் போன்ற உடல் - எங்கும் புண்ணாய்ப் போனதடா சின்னஞ் சிறியஉடல் - மாறிச் சிதைந்து விட்டதடா செல்லம் மாள் அழுதாள் - இளஞ் சிட்டுக் குழந்தைகளும் மெல்ல அருகில்வந்தே - தந்தை மேனியைப் பார்த்தழுதார் மன்னவன் பாரதியும் - மூன்று மாதம் கழிந்தபின்னர் பொன்னுடல் தன்னைவிட்டான் - அழியாப் புகழுடம்பு எய்திவிட்டான் செந்தமிழுக்கொரு சிங்கக் கவியென வந்தான்! வந்தான்! - பாடல் சந்தத் தமிழினில் சிந்தை குளிரவே தந்தான்! தந்தான்! பாட்டுப்பெருங்கவி பாரதி யின்புகழ் கண்டோம்! கண்டோம்! - அவன் பாத மலர்களை நாம் தலைமீது கொண்டோம்! கொண்டோம்! ⁠மகாகவி பாரதியின் வரலாற்றை முதன்முதலில் அறிஞர் வ.ரா. எழுதினார். அதற்குப் பிறகு உரைநடையிலும் கவிதையிலும் பலரும் எழுதியுள்ளனர். ⁠குழந்தைகளுக்கு ஏற்ற விதத்தில், எளிய நடையில் , இனிய கவிதை நடையில் பாரதி வரலாற்றைக் கவிஞர் முருகுசுந்தரம் படைத்தளித்துள்ளார். இந்த மின்னூலைப் பற்றி உங்களுக்கு இம்மின்னூல், இணைய நூலகமான, விக்கிமூலத்தில் இருந்து கிடைத்துள்ளது[1]. இந்த இணைய நூலகம் தன்னார்வலர்களால் வளருகிறது. விக்கிமூலம் பதிய தன்னார்வலர்களை வரவேற்கிறது. தாங்களும் விக்கிமூலத்தில் இணைந்து மேலும் பல மின்னூல்களை அனைவரும் படிக்குமாறு செய்யலாம். மிகுந்த அக்கறையுடன் மெய்ப்பு செய்தாலும், மின்னூலில் பிழை ஏதேனும் இருந்தால் தயக்கம் இல்லாமல், விக்கிமூலத்தில் இம்மின்னூலின் பேச்சு பக்கத்தில் தெரிவிக்கலாம் அல்லது பிழைகளை நீங்களே கூட சரி செய்யலாம். இப்படைப்பாக்கம், கட்டற்ற உரிமங்களோடு (பொதுகள /குனு -Commons /GNU FDL )[2][3] இலவசமாக அளிக்கப்படுகிறது. எனவே, இந்த உரையை நீங்கள் மற்றவரோடு பகிரலாம்; மாற்றி மேம்படுத்தலாம்; வணிக நோக்கத்தோடும், வணிக நோக்கமின்றியும் பயன்படுத்தலாம் இம்மின்னூல் சாத்தியமாவதற்கு பங்களித்தவர்கள் பின்வருமாறு: Arun kaniyam Info-farmer TVA ARUN Arularasan. G * * * ↑ http://ta.wikisource.org ↑ http://creativecommons.org/licenses/by-sa/3.0/ ↑ http://www.gnu.org/copyleft/fdl.html