பாரதிதாசன் தாலாட்டுகள் புலவர் த. கோவேந்தன் 2000 8 அக்டோபர், 2020 அன்று விக்கிமூலத்தில் இருந்து பதிவிறக்கப்பட்டது உலகளாவிய பொதுக் கள உரிமம் (CC0 1.0) இது சட்ட ஏற்புடைய உரிமத்தின் சுருக்கம் மட்டுமே. முழு உரையை https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode என்ற முகவரியில் காணலாம். பதிப்புரிமை அற்றது இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர். நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை. *** இது, உலகத் தமிழ் விக்கியூடகச் சமூகமும் ( https://ta.wikisource.org ), தமிழ் இணையக் கல்விக் கழகமும் ( http://tamilvu.org ) இணைந்த கூட்டுமுயற்சியில், பதிவேற்றிய நூல்களில் ஒன்று. இக்கூட்டு முயற்சியைப் பற்றி, https://ta.wikisource.org/s/4kx என்ற முகவரியில் விரிவாகக் காணலாம். Universal (CC0 1.0) Public Domain Dedication This is a human readable summary of the legal code found at https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode No Copyright The person who associated a work with this deed has dedicated the work to the public domain by waiving all of his or her rights to the work worldwide under copyright law including all related and neighboring rights, to the extent allowed by law. You can copy, modify, distribute and perform the work even for commercial purposes, all without asking permission. *** This book is uploaded as part of the collaboration between Global Tamil Wikimedia Community ( https://ta.wikisource.org ) and Tamil Virtual Academy ( http://tamilvu.org ). More details about this collaboration can be found at https://ta.wikisource.org/s/4kx.  பாரதிதாசன் தாலாட்டுப் பாடல்கள் தொகுப்பு: த. கோவேந்தன் இல.வல் கவிஞர் கழகம் : 42அ, பெரிய அசன்பூரா தெரு, பெரிய கும்மடம், ஆர்க்காடு - 632 508. நூல் விளக்கம் நூலின் பெயர் : பாரதிதாசன் தாலாட்டுப் பாடல்கள் பதிப்பாசிரியர் :புலவர்.த.கோவேந்தன் இல.வல் மொழி : தமிழ் நூல் வகை : தாலாட்டிலக்கியம் உரிமை : பதிப்பகத்தார்க்கே பதிப்பு : 21-6–2000 பக்கம் : 88 விலை : 20/ எழுத்து : 12 புள்ளி தாள் : 10.7 வெள்ளை கட்டு : வல்லட்டை நூலின் அளவு : 1x 8 கிரவுன் நூல் வெளியீடு : கவிஞர் கழகம் 42அ, பெரிய அசன்பூரா தெரு, பெரிய கும்மடம், ஆர்க்காடு - 632508 ஒளியச்சு : யூனிக் கிராபிக்ஸ், 183, பொரியார் பாதை, சூளைமேடு, சென்னை-94. போன் : 48,15602 அச்சு : மணி ஆப்செட், சென்னை - 5. உள்ளடக்கம் பாவேந்தரின் தனித்தன்மை பாவேந்தரின் தனித்தன்மை தாலாட்டு ஓர் ஆய்வு, தமிழண்ணல் ஆழ்வார் பாடிய தாலாட்டு பிள்ளைத் தமிழில் தாலாட்டு தாலாட்டும் பள்ளும் நீலமயில் வாகனன் முல்லை நறுமலர் அனுபந்தம் பெண்குழந்தை தாலாட்டு திராவிட அன்னை ஆண்குழந்தை தாலாட்டு ஆண் குழந்தை தாலாட்டு தாயின் தாலாட்டு தோழிமார் தாலாட்டு தங்கத்துப் பாட்டி தாலாட்டு மலர்க்குழற் பாட்டி தாலாட்டு தாய் தாலாட்டு பாவேந்தரின் தனித்தன்மை மக்கள் வாய்மொழி இலக்கியத்தின் தமிழ் இலக்கியம் தாலாட்டு. நாட்டுப்புறப் பாடல்கள் பல்வகை இசையிலும் பாங்குறப் பயின்றாலும் உலகில் உள்ள பாடல்களில் எல்லாம் தாலாட்டேமிகவும் பெருமிதமானதாகும். காரணம் ஆண் பெண் அன்புறவில் தாய்மைக் குருதியின் உயிர்ச் சிற்பமன்றோ அது. வருகால உலகத்தை வாழ்விக்க வந்த மக்கட்பேற்றினைப் போன்ற ஒன்றினைச்சீராட்டிப் பாராட்டி செம்மையாக வளர்ப்பது தானே முறை. உயிரினத்திற்கு இயற்கை அளித்துள்ள கொடைகள் ஏராளம். அவற்றுள் மனித இனம் போன்று சிறந்ததொன்றில்லை. அதில் குழந்தை என்பது ஓர் எதிர் காலத்தின் மகிழ்ச்சிப் பெருக்காகும். இன்றைய குழந்தை நாளைய மாந்தன்'. குழந்தைப் பருவமே புத்துணர்வும் புத்தெழுச்சியும் செவி வாயாகக் கொள்ளும் உணர்ச்சிப் பருவமாகும். அந்தச் சின்னஞ்சிறு பருவத்தின் எழிலையும் ஏற்றத்தையும் குடும்பப் பெருமையும் நாட்டுப்புறப் பாடல்கள் இன்னிசையின் வடிவில் பென்னம் பெரியாதாயுள்ளங்களை தந்தன. ஆனால் சமய வாணர்களோ எவ்வளவுதான் கற்பனைத் திறத்தினைக் காட்டினாலும் பிள்ளைத் தமிழிலும், தனித் தாலாட்டுகளிலும் வாழ்வறத்துக்குப் பொருந்த வியப்பு நிலைக்கதைப் புனைவுகளாகவே அமைந்துவிட்டனர். குழந்தைகளின் செவியில் நல்ல இசை என்பது எப்போதும் முன்னேற்றக் கருத்துகள், மனித நேயக் கருத்துகள் கொண்டு மானுடமேன்மைக்குரிய உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் புகுத்தவேண்டும் என்ற எண்ணம் பாவேந்தருக் கெழுந்தது. எனவே அவரின் தாலாட்டுப்பாடல்கள் தனித்தன்மை பெற்றுத் தலைசிறந்து பெற்றோர்கள் வாயிலும் கற்றோர்கள் வாயிலும் முற்றுகை இட்டன. ஒவ்வொரு மாந்தனும் தன்மான உணர்வும் தன்ழுெச்சி கொண்டு விளங்கினால் ‘அனைவரும் உறவினர்’ என்போம் ‘வையம் வாழ வாழ்’வோம். அதற்குரியதனைத்தும் குழந்தையின் செவிநுகர் கனிகள்தாம் ஊட்டம் தரும். தாலாட்டின் தோற்றமும் வளர்ச்சியும், பண்பும் பயனும் காட்டும் அறிஞர் மு. அருணாசலம் அவர்தம் கட்டுரையும் பேரா. தமிழண்ணல் ஆய்வுரையும் இணைத்துள்ளேன். பழமைப்பண்ணையில் புதுமையைவிதைத்த பாவேந்தரை அறிய அவை உதவும். நூலை வெளியிடும் கவிஞர் கழகத்திற்குமிக்க நன்றி. த. கோவேந்தன் தாலாட்டு ஓர் ஆய்வு தாய்மை, உலகிற்கு வழங்கிய முதல் இலக்கியப் பரிசுதான் “தாலாட்டு” என்பது. இது உலகிற்குப் பொதுவான கலை; தமிழகத்திற்குத் தனிச் சிறப்புத் தரும் கலை; இந்த நாட்டில் ஒரு தாய் தான் பெற்ற மகளை வளர்த்து, வாழ்வுக்குகந்த கணவனுடன் மணம் செய்து வைத்து வழியனுப்புங்கால் தரும் சீர்வரிசைகளிலே புற நாகரிகத்தை எடுத்துக்காட்டும் தரும் சீர்வரிசைகளிலே புற நாகரித்தை எடுத்துக்காட்டும் பொருள்கள் பல; பிறப்போடு ஒட்டிய அகப்பண்பாட்டை எடுத்துணர்த்தும் உள்ளத்துச் செல்வங்களும் பல. கலையருவியின் தாயூற்றாக விளங்கும் இத் தாலாட்டு, அவ்வுள்ளத்துச் செல்வங்களிலே உயர்ந்த ஒன்று. நாட்டுப் பாடல் இலக்கியம் 'தாலாட்டு' என்றவுடன் அதை அலட்சியப்படுத்தி ஏதோ எல்லாத் தெரிந்தது போல் அறியாமை இருள் வயப்படுவோரும் உண்டு. குழந்தையை அழாமல் அடக்கி உறங்க வைக்கும் வாழ்க்கைத் தேவைக்காகவே தான் தாலாட்டுகிறாள்; 'கலை கலைக்காவே' என்று கனவு காண்பவர்கள் வாழ்க்கையிலே பிறந்து, வாழ்க்கையிலே வளர்ந்து அதற்கே பயன்படுகின்ற இத்தகைய கலைகளைக் காணார் போலும்! வாழ்க்கை இலக்கியங்களாகக் கருதத்தக்க நாட்டுப் பாடல்கள், பழமொழிகள் முதலியன 'எழுதாக் கிளவி'களாக விளங்கி இலக்கியத்திற்கும் மொழி ஆராய்ச்சித் துறைக்கும் எவ்வளவு பயன்பட்டுவருகின்றன என்பதைத் திறனாய்வாளர் தெரிந்து கொள்ளுதல் வேண்டும், இந்நோக்கத்துடன் தாலாட்டைப் படிக்கும் போது நமக்கு உறக்கமன்று, விழிப்புணர்ச்சி உண்டாகிறது! இருவர் கொள்ளும் காதலைவிட, உடன் பிறந்தவர் கொள்ளும் வாஞ்சையைவிட, நாடு இனம் மொழியிற் படியும் பற்றுதலை விட ஏன்-உலகளக்கும் அருளினையும் விட பிள்ளைப் பாசமே ஆழமானது, வலிமை மிக்கது, உணர்ச்சி மயமானது! இத்தகையை தாயும் சேயும் என்ற உறவுப் பிணைப்பிலே பிறந்த இயற்கைக் கலைதான் தாலாட்டு. நாடகக் கொட்டகைகளிலோ, பொதுக் கூட்டத்திலோ, அடுத்த வீட்லோ குழந்தை அழக்கேட்டு விட்டால் நாம் சகிப்பதில்லை . 'அடடா' என்றும் 'இச்சிச்சு' என்றும், 'தொல்லை பொறுக்க முடியவில்லையே' என்றும் கூறுவதால் நமது பொறுமையின்மை பொங்கி வெளிப்படுகிறது. அதே நேரத்தில் தன் பிள்ளை எழுந்து அழுதுவிட்டால் கேட்ட அளவில் கன்றை நினைந்து கதறியோடும் கறவைப் பசுப்போல் அலறி ஓடுகிறாள் தாய். அழுகைச் சிணுங்கலால் அவல உணர்ச்சிகளின் எல்லை நரம்புகளையே மீட்டி விடுகிறது குழந்தை. குழந்தையின் ஒவ்வொரு பெருமூச்சும், பொருமலும், தேம்பலும் ஒவ்வொரு சோக இசையாக, கவிதையாக, நாடகமாக மாறிவிடுகின்றன தாய்மை உலகில்! இந்த நிலையிலேதான் மலைமீதிருந்து பாயும் வெள்ளருவி போல, மணல்வெளியில் மதிவார்க்கும் நிலவொளி போல, தேன் சொட்டும் இறால்போல, இனிமைதரும் தென்றல்போல, உள்ளங்கரும் இசை தாயுள்ளத்தின் ஊற்றாகிறது; தாலாட்டும் கவிதையாகிறது. கவிதைப் பண்பற்றவர்களும் கவிஞராகிய மலடியைப்போல் மன்றாடி நிற்கும்போது குற்றமற்ற குழந்தையைப் பெற்ற தாய்க்கே “கவிதையும்” சுகப்பேறாகி விடுகிறது. ஆற்றங்கரையில் ஓய்வுகொள்ளும் மக்கள் மலர்க்காவில் தவழ்ந்துவரும் தென்றலிலே சொக்கி ஆற்றின் நீரோட்டம் தங்கள் கவனத்தையும் இழுத்துச் செல்லப் பார்த்துக் கொண்டிருப்பார்கள். அப்போது, அவர்கள் அந்த ஆற்றுக்கு மூலமான அருவியைப்பற்றியோ, ஊற்றுக்கு உயிர் சுரக்கும் கண்களைப் பற்றியோ சிந்திப்பபதில்லை. அதுபோலவே வளர்ந்து வரும் மொழியொன்றின் இலக்கியச் சிறப்புகளின் எழிலிலே ஈடுபட்டிருக்கும் மக்கள், அவற்றின் தோற்றம் வளர்ச்சி பற்றிய உண்மைகளை அறிய விழைவதில்லை. தாலாட்டு, இலக்கியத்தின் தாயூற்றாகும் என்பது இந்த உண்மைகளிலே ஒன்று. இதைச் செல்வியின் குழந்தைப் பருவத்தையும், மொழியறிவின் இளமைப் பொலிவையும், இலக்கியச் சிறப்பின் தாய்மைக் கனிவையும் தாலாட்டில் காண முடிகிறது. இப் புதிய கண்ணோட்டத்துடன் 'தாலாட்டு' அனைய நாட்டுப் பாடல்களைக் கற்றறிந்த புலமையாளர் உற்றுநோக்கினால், இன்றைய இலக்கியங்கள் பலவற்றுக்கு வேர், மூலம், ஒரு நாட்டு மக்களைப் பற்றித் தெரிந்து கொள்ள அவர்களது நாட்டுப் பாடல் இலக்கியங்களே பெரிதும் உதவும். அமெரிக்கப் பல்கலைக்கழகப் பட்டப்படிப்புக்கு நாட்டுப்பாடல் இலக்கியப் பிரிவும் பாடமாக வைக்கப் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. சொல்லாராய்ச்சி தாலாட்டு என்ற சொற்றொடர், தால் +ஆட்டு எனப் பிரியும். 'தால்' என்றால் நாக்கு. குழந்தையின் அழுகை ஒலியை அடக்கத், தாய் இதழ்களைக் குவித்து, நாவினை ஆட்டிக் குரவையிடுகிறாளே அதற்குத்தான் தாலாட்டுதல் என்று பெயர். அதைத் தொடர்ந்து இசைக்கும் பாடலையும் இன்று தாலாட்டென அழைக்கிறோம். குழந்தைக்கு முதலிற் புலனாகும் உணர்வுகளில் கூர்மையானதும் ஆழமானதும் குறிப்பானதும் செவியுணர்வே. தாயையும் பிறரையும் முதலில் குரல் கொண்டே குழந்தை வேறுபாடறிகிறது. சில மாதங்கள் கழித்துத் தாயைப் பார்த்துக் குழந்தை சிரித்தாலும், தனக்குத் தெரிந்த ஆளிடம் குழந்தை தாவினாலும் “ஆள் அடையாளம் தெரிந்து விட்டதே” என்று பெற்றவர்கள் அகமகிழ்ச்சி எய்துவார்கள். தாய் தன் குழந்தைக்கு அப்பாவை அறிமுகம் செய்து வைக்கும் கட்டம் இது! இதனாலேதான் குழந்தையின் கவனத்தைத் திருப்பி ஒருநிலைப் படுத்தி அழுகையை நிறுத்த விரும்புவோர் முதலிற் குரலைப் பயன்படுத்துதலையும் பிறகு, கைகால்களை அசைத்து முகக்குறி காட்டுதலையும் காண்கிறோம். குழந்தையின் அழுகையொலியை அடக்க, அதைவிட ஒரு படி அதிகமான ஒலியை எழுப்புவதே வழக்கமாக இருக்கிறது. இன்றும் தாயைத் தவிர்த்து மற்றவர்கள், அழுங் குழந்தையை அடக்க, அதைவிட ஒரு படி அதிகமான ஒலியை எழுப்புவதே வழக்கமாக விருக்கிறது. இன்றும் தாயைத் தவிர்த்து மற்றவர்கள், அழுங் குழந்தையை அடக்க முயலுங்கால் தம்மையும் மறந்து 'ஆ' 'ஓ' வென இரையக் காண்கிறோம். சில சமயங்களில் இவ் இரைச்சலைக் கேட்குங்கால், குழந்தை அழும் ஒலியையே பொறுத்துக் கொள்ளலாம்போல் தோன்றும் சுற்றி இருப்பவர்க்கு! தாலாட்டு, உலகத்தில் “ராராட்டு” என மருவி வழங்குகிறது. இன்றும் மலையாளத்தார் 'தாராட்டு' என்றே வழங்குகின்றனர். இடைக்காலத் தமிழ் இலக்கியங்கில் 'தாராட்டு' எனும் வழக்கிருத்தல் கவனிக்கத்தக்கது. “தேரை தாராட்டும் பண்ணை” என்கிறார் கம்பர். "போற்றியுனைச் சேராரார் கண்டாசை தீராரார் கொன்னையள்ளித் தாராரார் என்று தாராட்டினாள்” என விறலிவிடு தூதிலும், 'ஊமன் தாராட்ட உறங்கிற்றே' என்று முத்தொள்ளாயிரத்திலும் வருகிறது. 'தன, தான' என்பது போல ‘ஆராரோ, ஆரிரரோ' என்பதும் சந்தமாகும். இதனை ராராரோ, ராரிரரோ என்றும், ஆரிவரோ என்றும் வழங்குவர். பழந்தமிழ்க் குடிகள் 'ரூரீரோ, 'ரூரீரோ' எனவும், நாஞ்சில் தமிழர் 'வாவாஓ' எனவும் இசை யமைத்தலைக் கேட்கிறோம். 'ஆராரோ ஆரிவரோ,' என்ற சந்த அமைப்பு-தாய் தன் குழந்தையைப் பார்த்து முற்பிறப்பில் நீயாரோ, நான் யாரோ, நாமிருவரும் ஆராரோ என்றிருந்தோம்; இப்பிறப்பில் தாயும் சேயும் ஆனோம் என மறைமுகமாக உட்பொருள் வைத்துப் பாடுவதாகச் சிலர் தத்துவ விளக்கம் செய்யுமளவு பெருமை பெற்று விட்டது! மலையாளத்திலும் தெலுங்கிலும் தாய்த் தமிழைப் போலவே முறையே 'ஆராரோ, ஆரிரரோ' என்பனவே இசையமைக்கும் சந்தங்களாக இருக்கின்றன. கன்னடத்தார் மட்டும் 'ஜோ, ஜோ' வென இசையமைப்பர். தாலாட்டு மலையாளத்தில் தாராட்டு ஆனதுபோல, தெலுங்கில் "ஊஞ்சேதி" ஆயிற்று. (ஊஞ்சு-ஊஞ்சல்) கன்னடத்தார் இதனை ‘ஜோகுள' என்பர். ஜோ என்பது சந்தம். பழந்தமிழ்க் குடிகள் தாலாட்டைக் “குலு இசைப்பாடல்” என அழைப்பர். 'உய்யாலு' என்பது தெலுங்கிலும், கன்னடத்திலும் முறையே தூளியையும், ஊஞ்சலையும் குறிக்கிறது. “உய்யாலை உறுமாலை” என வரும் தமிழ்த் தூளி பாட்டு நினைவு கூரத்தக்கது. தொட்டிலை மலையாள மக்கள் தொட்டில் என்றே மாற்றாமல் அழைக்கவும் தெலுங்கு மக்கள் மட்டும் “தொட்ல” என அழைக்கின்றனர். கன்னடத்திலும் இச்சொல் வழக்கு உளது. தாலட்டிற்குரிய பண் ‘நீலாம்பரி' என்பர். சொல்லோட்டத்தோடு அமையும் ஒலிமுறையே தாலாட்டின் உயிராகும். தாய், எங்ஙனம் பாடினாலும், இசையறிவு சிறிதுமின்றிப் பாடினாலும் ஒலியமைதியோடு ஒழுங்காகப் பாடுவதால், அது குழந்தையின் உறக்கத்திற்கு ஏற்ற இசையாகிவிடுகிறது, தாயின் பெண்மை கனிந்த குரலும் இதற்குத் துணையாக வேண்டும். ஒலியமைதி கெட்டாலும், குரலினிமை பிழைத்தாலும் தாலாட்டின் பயன் மாறிவிடும்! மேலும் தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வழங்கும் தாலாட்டுக்கள் தமிழ் நடையையும் பண்பையுமே வெளிப்படுத்துகின்றன. தமிழின் குழந்தைகளில் ஒன்றாகிய மலையாளத்தில், தமிழைப் போலவே தாலாட்டுப் பெரு வழக்காக இருக்கிறது. சந்தம் இசையமைப்போடு சொற்கள் பொருட்செறிவெல்லாம் அப்படி அப்படியே இருக்கின்றன. அகநானூற்றையும் அழகுபடுத்தும் சங்க இலக்கியச் சொற்களையெல்லாம் காணவேண்டுமென்றால் மலையாளத்திற்கும், தெலுங்கு, கன்னடம், குடகு, கொங்கணி எனத் தமிழ்க் குழந்தைகள் வளருமிடத்திற்கும் செல்லவேண்டும் போலும்! கவிதைப் பொலிவு தானாக வந்தமையும் மோனை எதுகையும், நினைக்க இனிக்கின்ற இலக்கிய நயங்களும், வாழ்க்கையில் தோய்ந்த அனுபவ முத்திரைகளும், நிலைத்த உண்மையும், பழகு தமிழே வழங்கும் உவமை முதலிய அழகுகளும், நல்ல சொல்லாட்சியும், தடையில்லா நடைப்பெருமையும் நோக்கி இலக்கியங்களை மதிப்பிட வேண்டும். தாய்மை தரும் தாலாட்டு இவ் வகையில் பெருமை பெற்று விளங்குகிறது. இப் பெருமையை உணர வேண்டமானால் நிலைபெற்ற பிற இலக்கியங்களோடு தாலாட்டை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். “கொத்துவிடா நெத்தும் கோதுபடா மாங்கனியும் பருவப் பலாச்சுளையும் பக்குவத்து மாங்கனியும் அக்கரையில் சர்க்கரையும் அதிமதுரத் தென்னவட்டும் காய்ச்சிய பாலுங் கற்ண்டும் செந்தேனும் ஏலங் கிராம்பும் இளங்கொடிக்கால் வெற்றிலையும் சாதிக் களிப்பாக்கும் சங்குவெள்ளைச் சுண்ணாம்பும்" சீர்வரிசைகளாகக் கொண்டு வந்தார்களாம், குழந்தை பிறந்ததைப் பார்க்கவந்த அம்மான் மார்! இப்பாண்டிய நாட்டுத் தாலாட்டைச் சிலப்பதிகாரத்துடன் ஒப்பிட்டுக்காண்போம். பேரியாற்றங்கரையில் சேரன் செங்குட்டுவன் தங்கியிருக்கையில், குன்றக் குறவர்கள் கொண்டு வந்ததாக இளங்ககோவடிகள் குறிப்பிடும் காணிக்கைப் பொருள்கள் பற்றிய, பா நடையும் பண்பும், மேற்கண்ட தாலாட்டு வரிகளை நமக்கு நினைவு படுத்துகின்றன. “ஏல வல்லியும் இருங்கறி வல்லியும். கூவை நூறுங் கொழுங்கொடிக் கவலையும் தெங்கின் பழனும் தேமாங் கனியும் பைங்கொடிப் படலையும் பலவின் பழங்களும் காயமுங் கரும்பும் பூமலி கொடியும் கொழுந்தாட் கமுகின் செழுங்குலைத் தாறும் பெருங்குலை வாழையின் இருங்கனித் தாறும்” (சிலம்பு-காட்சி-37) மேலும் பாண்டிய நாட்டுத் தாலாட்டில் வாழை இலைபரப்பி வந்தாரைக் கையுமர்த்தி வருந்தி விருந்துவைக்கும் மகராசர் பெயரனோ? தென்னை இலைபரப்பிச் சென்றாரைக் கையமர்தித் தேடி விருந்தழைக்கும் திசைக்கருணர் பெயரனோ? என்ற தாய்மைதரும் தாலாட்டு வரிகள், “செல்விருந்தோம்பி வருவிருந்து பார்த்திருக்கும்” குறட் பண்பாட்டை அப்படியே படம் பிடித்துக் காட்டுகின்றன. 'சோதிச் சுடரொளியே' என்று தன் குழந்தையைப் பாராட்டுகிறாள் தாய். “சோதியே சுடரே சூழ் ஒளி விளக்கே” என்று இறைவனைப் பாராட்டியழைக்கிறார் மாணிக்கவாசகர். நாஞ்சிற் பகுதித் தாலாட்டில் ‘எலும்புருகப் பெற்றெடுத்த இலஞ்சியமே' எனத் தாய் தன் குழந்தையைப் பாராட்டுவது போல “உமையாள் பயந்த இலஞ்சியமே” என்று தமது திருப்புகழில் முருகனைப் பாராட்டுகிறார் அருணகிரி நாதர். "இலையுதிரப் பிஞ்சுவிடும்” 'வண்டாடப் பூமலர்' 'சாலை வழியுறங்க' 'பாதிநிலாத் தான் தூங்க' “சொல்லாற் புகழடைக்கும்' என்றெல்லாம் வருகின்ற தொடர்கள், பல இலக்கிய நயத்தின் எல்லையையே எட்டிப் பிடிக்கின்றன. ஈழநாட்டுத் தாலாட்டில் தம்பி அழுத கண்ணீர் ஆறாகப் பெருகுங் கற்பனையும், பாண்டிய நாட்டுத் தாலாட்டில் குழந்தையை அடித்தவர்கட்குத் தாயாட்சியில் அளிக்கப்படும் தண்டனையும், சோழநாட்டுத் தாலாட்டில் தச்சரின் பொறுமை பற்றிய செய்தியும் போன்ற பல இடங்கள் நகை என்னும் சுவைக்கே எல்லை வகுக்கின்றன. சோழநாட்டுப் பா ஒன்று ஊஞ்சலின் சிறப்பையும், தாய் மாமன் தரும் சீர் வரிசைகளின் பெருமையையும் விளக்குகிறது. “காது குத்து விழா” சோழ நாட்டில் மிகச் சிறப்புடையதோர் சடங்கு என்பதனை அப்பகுதித் தாலாட்டு எடுத்தியம்புகிறது. ஈழநாட்டு மருத்துவச்சி வாழ்த்து. "யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற புறநானூற்று வரிகளை நினைவு படுத்துகிறது. பொதுவாக 'ஏலப்பூ', 'இலஞ்சிப்பூ' என்றெல்லாம் குழந்தையை உவமிப்பது சங்கப் புலவர்களின் இயற்கை அறிவினை நினைவூட்டுகிறது. தொட்டில் வருணனையும், பாலூட்டும் சங்கின் அழகும் கம்பனைக் காட்டுகின்றன. குழந்தையைத் தாய் பாராட்டும்போதெல்லாம் பாரதியாரின் கண்ணன் பாட்டும், தேவார, திருவாசகமும் நினைவிற்கு வருகின்றன. 'சந்தணர், என்ன ரியான்' 'புனக்கிளி, திசைக் கருணர்' அனைய சொல்லாட்சிகள் புதுமையும் பொருட் செறிவும் உடையன. வாழ்வெல்லாம் விழா ஒரு காலத்தில் நம் நாடு செல்வத்திற் செழித்திருந்தது. குடும்பத்தில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்ச்சியும் எவ்வளவு மகிழ்ச்சியோடு பொன்னையும் பொருளையும் அள்ளிவீசி, கண்ணையும் கருத்தையும் கவரும் விதத்தில் தமிழ் மக்கள் கொண்டாடினார்கள் என்பதைச் சிந்தித்தால் இவ் உண்மை விளங்கும். குழந்தை பிறப்பதற்கு முன்பே அதற்கு விழா எடுத்தார்கள் இந்த நாட்டில்! மாந்தர் இறந்த பிறகும் கல்லெடுத்துச் சிறப்புச் செய்வதுபோன்ற நிகழ்ச்சிகள் பல நிகழ்த்திய நாடுதான் இது. தாய் கருவுற்ற உடனேயே விழா துவங்குகிறது. பூச்சூட்டல், வளைகாப்பு, சீமந்தம், மருந்து குடித்தல் முதலியன கன்னிப்பெண் ஒருத்தி தாயகம் அருமையைப் பெருமைப்படுத்தும் விழாக்கள் பெண்கள் இதில் அதிக ஈடுபாடு காட்டுவர். குழந்தை பிறந்ததும் மங்கலச் சடங்கு, தொட்டிலிடுதல், பெயரிடுதல், காதுகுத்துல், ஆண்டு நிறைவு (புதுமை), பள்ளியில் வைத்தல் என்று வாழ்நாள் அனைத்தும் விழாவினை நிரப்பிய நாகரிகம் தமிழகத்திற்கு உரியதாகத் தெரிகிறது. இந்த விழாக்களில் எவை எவை எவ்வப் பகுதியில் சிறப்புடையனவோ அவைகளை அவ்வப்பகுதித் தாலாட்டுக்களிற் பரக்கக் காணலாம். தாலாட்டு முழுதும் தாய்க்குரிய இலக்கிய மாகையால் அதில் மாமன்மார் பெருமையும், அவர் தரும் சீர் வரிசைகளின் சிறப்பும் மிக அழகாகச் செயல்படுகின்றன. வள்ளி தாலாட்டு சங்ககாலக் காதல் முறையையும், சொக்கர் மீனாள் - தாலாட்டு உழவுத் தொழிலின் உயர்வினையும், பாண்டி நாட்டுத் தாலாட்டு தமிழகத்தின் செல்வச் செழிப்பையும் நாகரிகத்தையும் விளக்குகின்றன. இவ்வாறு நடையழகில் செயங்கொண்டானையும், இனிமையில் இளங்கோவையும், கற்பனையில் கம்பனையும், சொல்லாட்சியில் மணி வாசகரையும், நாகரிக விளக்கத்தில் சங்ககாலப் புலவர்களையும் ஒப்புமையாகப் பெற்றுப் பெருமையுடன் விளங்குகிறது தாலாட்டு! தாயும் தாலாட்டும் இத்துணைக் கற்பனைச் செறிவும், இலக்கிய நயங்களும் அமைத்துப் பாடுவதால் குழந்தைக்கு என்ன பயன்? தாலாட்டின் முதற்பயன் குழந்தையின் உறக்கமல்லவா? அந்தக் குழந்தைக்குப் புரியாத நிலையில் நாம் நம் திறமையைக் காட்டுவதால் என்ன பயன்? -இவ்வாறு பாமரனுக்கும் புரியும் நடையிலே எழுவதாக் கூறிக்கொண்டு, கடைசியில் தங்களுக்கும் பாமரனுக்கும் புரியாத முறையில் கலப்படத் தமிழில் எழுதி எழுதிக் கெடுத்து, நல்ல தமிழ் நடையை நையாண்டி செய்து வருவோர் கேட்பர், குழந்தைக்கும் புரியும் நடையிலே அல்லவா தாலாட்டிருக்க வேண்டும் என்று கூக்குரலிடுவர். குழந்தையின் மழலைமொழியிலே பாடினாலும் குழந்தைக்குப் புரியப்போவதில்லை. வளரும் குழந்தையுள்ளமும் அதனை விரும்பாது. 'குழந்தை மொழியிலே' தாலாட்டுவதென்றால் குழந்தை அழும்போதும் நாமும் கூடவே அழுதுவிடுவதுதான் முடியக் கூடிய காரியம்! தமிழ் நூல் வகைகளிலே “தூது" என்பதும் ஒன்று. காதலிரிடையே மனக்கருத்தைப் பரிமாறிக்கொள்ள ‘மான், தென்றல், மேகம், நாரை' முதலிய அஃறிணைப் பொருள்களையும் தூது விடுவதாகப் பாடுவர். இப் பொருள்கள் தூது விடுவதாகப் பாடுவர். இப் பொருள்கள் தூது சென்று திரும்புதலும், தூதினை எடுத்துரைத்தலும் இயலாத காரியம் என்பது எல்லோருக்கம் தெரியாததன்று. இருப்பினும் காதலர் தங்கள் மன ஆறுதலை வேண்டி, அஃறிணைப் பொருள்களிடத்தும் தங்கள் வருத்தத்தை எடுத்தியம்புவதாகக் கவிஞர்கள் கருதினர்; கற்பனை ஓவியம் புனைந்தனர். உள்ளத்துத் துன்பம் தாங்கவியலாத நிலையில் அதனை எடுத்துப் புறத்தே சொல்லுவது ஆறுதல் பெறும் வழியாகும் என்ற மனவியலே இதற்கடிப்படையாகும். அதுபோலத் தன் பிறந்தகப் பெருமை, உடன் பிறந்தோர் தரும் சீர்வரிசைகளின் உயர்வு, குழந்தையின் அருமை பெருமைகள், அது பிறந்த குடிப்பெருமை ஆகிய பலவற்றை வாய்விட்டுச் சொல்லி மனமகிழ்ச்சியை மிகுதிப் படுத்திக் கொள்ளும் ஒரு வாய்ப்பாகவே, தாய் தாலாட்டைப் பயன் படுத்திக்கொள்கிறாள். துன்பம் பிறரிடம் சொன்னால் குறையும்; இன்பம் பிறரிடம் சொன்னால் நிறையும் என்பது இதன் மூலம் விளங்குகிறது. மனவியல் ஆராய்ச்சி மேனாட்டு மனவியல் துறைப் பேராசிரியர் ஒருவர், ஒரு சமயம் கீழ்கண்ட உண்மையை விளக்கினார். மனிதன் காண்பன, கேட்பன அனைத்தும் அவன் கவனித்தாலும் கவனிக்காவிட்டாலும், அவனுடைய மூளையிற் பதிவாகிவிடுகின்றன. சில செய்திகள் ஆழப் பதிவதும், சில அரை குறையாகப் பதிவதும், அவனுடைய இயல்பு, பழக்கம், பண்பாடுகளைப் பொறுத்திருக்கிறதென்றாலும் பதிவாவது மட்டும் தவறுவதில்லை . மனிதன் மூளையில் கல்வி ‘பதிவாவது’ ஒரு தன்மையாக இருந்தாலும், 'வெளிப்படுவது' அவனது சூழலாலும் தன்மையாலும் வேறுபட்டு விடுகிறது. 'பதிவு' மனித உடற் கூற்றின் இயற்கை. 'வெளிப்பாடு' மனிதப்பண்பின் வேறுபாடுகளால் வரும் விளைவு. 'அறிவுஅறியாமையும்' உருவாவது பதிவினால் அன்று, வெளிப்பாட்டினாற்றான்! சிலர் படித்திருந்தும் வெளிப்படுத்தும் ஆற்றலின்மையால் தவிக்கும்போது, குற்றம் படிப்பிலன்று அவர் ஆற்றிலில் என நாம் உணருகிறோம். எடுத்துக் காட்டாகத் தெருவில் செல்லும் பொழுது நாம் காண்பனவும் கேட்பனவும் நம் கவனத்திற் படுவதில்லை . காரணம் நம் சிந்தனை வேறு எங்கோ இருப்பதுதான். இவ்வாறு நம் கண்ணிற் பட்டும் நாம் கவனியாதனவும், நம் காதில் விழுந்தும் நாம் வாங்கிக்கொள்ளாதனவுங்கூட நம் மூளையின் அடித்தளத்திற் பதிவாகின்றனவாம். பிற்பாடு நம் இயல்பிற்க ஏற்ப அவற்றில் பல வெளிப்பட்டுப் பயன் தருகின்றன என்றும், பல வெளிப்படாமலே தேங்கி மறைமுகமாகப் பயன் தருகின்றன என்றும் அறிஞர் கருதுகின்றனர். இது தனி மனிதனோடு முடிவடைவதன்று! பரம்பரையையே தொடர்வது! ‘பரம்பரை'யின் உண்மை இதுதான். தாத்தா இசையறிவும் ஆர்வமும் சுவைத் தன்மையும் மிக்கவராக விளங்கலாம். ஆனால் பாடும் பண்பும் குரலும் வாய்க்காது போகலாம். அவருடைய பெயரன் சிறு வயதிலேயே பெரிய இசைப் புலவனாக உலகப்புகழ் பெறும்போது உலகம் அவனைப் பாராட்டும். அப்பாராட்டுக்குரிய புலமைச் சொத்தினைச் சேமித்து வைத்தவர் அவனுடைய தாத்தா-குடும்பம் - பரம்பரை என்பதை உணர்கின்ற உள நூல் அறிஞர்கள் பரம்பரையைப் போற்றுகின்றனர். இத் தத்துவம் நமக்கு விளங்கினால் நம் முன்னோர் நமக்குச் சேமித்து வைத்த சொத்து சுகம், பொன்னும் பொருளுமே என்று எண்ணமாட்டோம்; புலமையும் பண்பாடமே என எண்ணிப் போற்றுவோம். குழந்தைப் பருவத்தில் இப்பதிவு பசுமரத்தாணி போற் பதியும். அதுவும் பாதி உறக்கத்தில் இருக்கும் போது கேட்கும் கருத்துகள் மனத்தில் இன்னும் ஆழமாகப் பதிகிறதாம். 'தொட்டிற் பழக்கம் சுடுகாடு மட்டும்' என்பதற்கு நாம் கருதுவதைவிட உயர்ந்த பொருள் உண்டு. எனவே, குழந்தைப் பருவத்தில் தாய் பாடும் தாலாட்டில், 'இசை' உறக்கத்திற்குப் பயன்படுவதுபோலவே 'இயல்' உள்ளத்திற்குப் பயன்படுகிறது என்பதை உளநூல் விளக்குகிறது. இதற்கு வேறு உதாரணம் காட்டுவானேன்? உலக இலக்கியங்களில் எளிதில் கொடுமுடி காணவொண்ணாத இமய மலையின் ‘எவரெஸ்டு'களாகத் தமிழ் இலக்கியங்கள் விளங்குகின்றன. இதற்குத் தமிழ்த் தாய் மார் தொட்டிலில் இட்டுத் தாலாட்டுகின்ற காலத்திலேயே 'செவிக்குணவாக' ஊட்டிய தாய்மை இலக்கியம் காரணமாய் இருக்குமெனக் கருதலாம் அல்லவா! இலக்கியத்தில் தாலாட்டு நாட்டுப் பாடல் இலக்கியமாக வழங்கி வந்த, இத் தாலாட்டை முதன் முதலாக இலக்கியத்தில் ஏற்றியவர்கள் ஆழ்வார்கள். கண்ணனைக் குழந்தையாகக் கருதிப் பாடிய காரணத்தால் தாலாட்ட வேண்டி இன்றியமையாமை இவர்களுக்கு ஏற்பட்டது போலும். எனவே தாலாட்டு இலக்கியத்தில் ஏறிய காலம் கி.பி.ஆறாம் நூற்றாண்டாகும். அதன் பிறகு ‘பிள்ளைத் தமிழ்’ என்ற சிறு நூல் வகை, தமிழ் இலக்கியத்தில் பெருகிற்று. பிள்ளைத் தமிழுக்குக் கூறப்படும்பத்துப் பருவங்களில் தாலப்பருவமும் ஒன்று. அதனால் ஒவ்வொரு பிள்ளைத் தமிழிலும் தாலாட்டு இடம் பெறுவதாயிற்று. இக்காலத் தமிழ்க் கவிஞர்கள் பலர், தாய்மை தரும் தாலாட்டின் இசை, நடை, மொழிகளையே அடிப்படையாக வைத்துக் கொண்டு, நாடு, மொழி, இன வளர்ச்சியையும் வரலாற்றையும் கருத்தாகக் கொண்டு தனிக் கவிதைகள் பல புனைந்து வருகின்றனர். இதுவே தாலாட்டின் இலக்கிய வளர்ச்சியாகும். -தமிழண்ணல் ஆழ்வார் பாடிய தாலாட்டு இறைவன் மனித உயிர்களைப் படைத்தபோது அவற்றை ஆண், பெண் என இருபாலாகப் படைத்தான். உடல்வன்மை, மனவுறுதி, உழைப்பு ஆகிய வலிமைக்கான இயல்புகளை ஆடவனிடம் அமைத்தான். இரக்கம், பராமரிப்புத் திறன், இனிமை போன்ற மெல்லியல்புகளைப் பெண்ணிடம் அமைத்தான். இந்த இயற்கை அமைப்பின் பயனாக, மக்கள் வாழ்க்கையிலே குடும்பத்தைப் பாதுகாக்கும் பொறுப்பு ஆடவனுக்கு ஏற்பட்டது. அக் குடும்பத்தைப் பேணுகின்ற தனி உரிமை பெண்ணுக்கே சொந்தமாகிவிட்டது. பேணுகின்ற தனி உரிமை பெற்றுள்ள பெண்ணிடத்திலே, இரக்கமுடைய நெஞ்சம், இன்முகமும், பொறையும் குடிகொண்டிருக்கின்றன. மக்கள் இனத்தைப் பெருக்குவதற்கான மகவு அவளிடத்தே தோன்றி, பெண்மையின் பெரும்பயனாகிய தாய்மை நிலையை அவளுக்கு அளிக்கும் போது, தான் ஈன்ற குழந்தையினிடத்திலே அவளுக்கு அளிக்கும் போது, தான் ஈன்ற குழந்தையினிடத்திலே அவளுக்கு அன்பு ஊற்றெடுத்துப் பெருகுகிறது. அவ் அன்பு காரணமாக, குழந்தைக்கு வேண்டிய பணிவிடைகளைச்செய்யும் போது, அது தரும் இன்னல்களை யெல்லாம் பொறுத்துக் கொள்ளவேண்டி வருகிறது. தனக்கு என்ன வேண்டும் என்பதைச் சொல்லால் தெரிவிக்க அறியாத சிறு மகவு, எதற்கெடுத்தாலும் அழக் கற்றிருக்கிறது. எதற்காக அழுகிறதென்பதை நேரத்தையொட்டித் திட்டமாக அறிந்து அதற்கேற்ற பணிவிடை செய்வது, தாயிடம் அமைந்துள்ள அருங் கலைகளில் ஒன்று என்றே சொல்வேண்டும். அழுத குழந்தையை எடுத்து தாய் பாலூட்டிய பின்னும், அது சிறிது முனகிக்கொண்டேதான் இருக்கிறது. இந்தச் சிறு முனைகலையும் நிறுத்த வேண்டி, அவள் குழந்தையைத் தொட்டிலிற் கிடத்தி ஏதேனும் பாட்டுப் பாடுகிறாள். பாட்டுப் பாடினால் பாட்டைக் கேட்கிற சுகத்திலே ஈடுபட்டு இளங் குழந்தையானது மெய்மறந்து உறங்கிப் போகும். இப்படிப் பாடுகிற பாட்டு, சிறப்பாக ஏதேனும் சொல்லமைந்த பாடலாகத்தான் இருக்கும் என்பதில்லை, பெரும்பாலும் வெறும் ஒலியாகவே இருப்பதுண்டு. நாவை அசைத்து, இனிய ஒலி எழுப்பினாலே போதும்: குழந்தை கேட்டு உறங்கிவிடுகிறது. இவ்வாறு நா அசைத்தலும் பாட்டுப் பாடுதலுமே தாலாட்டு என்று வழங்கிவருகின்றன. (தாலு ஆட்டு, தாலாட்டு; தாலு-நா.). உண்மையான பக்தி பூண்ட அடியவர்கள் இறைவனிடத்திலே எத்தனையோ விதங்களில் நெருங்கி உரிமை பாராட்டிச் சொற்களாலே குலவுகிறார்கள். ஆண்டான், அடிமை என்ற தொடர்பை வைத்துக்கொண்டு தாம் அடிமையாயிருந்து, தமக்கு அவனுடைய அருள் வேண்டுமென்று அடியவர் அந்த ஆண்டவனிடத்திலே நெருங்கிய தோதுமை பூண்டு, அந்த பாவத்திலே, தமக்கு வேண்டுவனவெல்லாம் தரும்படி அவனைக் கேட்பது மற்றொருவகை. எப்பொருட்குந்தலைவனாக இறைவனை நாயகனாகப் பாவித்துத் தம்மை நாயகி நிலையிலே வைத்துக் குலவிப் பாடுவது இன்னும் சிறப்பானது. ஆனால், சீவிலிபுத்தூர்ப் பட்டரான விண்டு சித்தர் என்று வழங்கிய பெரியாழ்வார் இந் ளநிலைகள் அனைத்திலும் மேலானதோர் அனுபவத்தைத் தமிழ்ப் பாடல்கள் மூலமாக நமக்குக் காட்டுகிறார். பக்தியினாலே கனிந்த அவருடைய இதயமானது தாய்மை நிலையை அடைந்திருக்கிறது. திருமாலைப்பற்றி எண்ணுந்தோறும், அவருள்ளத்திலே அவன் ஆயர்பாடியில் அசோதை பெற்றெடுத்த பூவைப் புதுமலர் வண்ணனாகிய குழந்தைக் கண்ணன் கோலத்தோடேயே தோற்றுகிறான். தாயானவள் குழந்தையைத் கண்டுவிட்டால் கொஞ்சுவதற்குக் கேட்கவா வேண்டும்? ஆயர்பாடியில் கண்ணன் அவதரித்த சிறப்பையே பல பாடல்களால் பாடிப் பாடி இன்புறுகிறார் ஆழ்வார். பிறகு அத் தெய்வக் குழந்தையின் உருவ அழகை உள்ளங்கால் தொட்டு உச்சிவரைப் பாதாதி கேசமாகப் பார்த்துப் பார்த்து அனுபவிக்கிறார்; தம் கற்பனையில் ஆயர்பாடிப் பெண்கள். அனைவரையும் அழைத்து அவ் அழகை ஒவ்வொன்றாகக் காட்டுகிறார். இவ்வாறு அவர் காட்டி வருகின்ற நிலையிலே, குழந்தைக் கண்ணன் அழுகின்றான் என்ற ஓர் எண்ணம் தோன்றிவிடுகிறது. ஆயர்பாடியிலே அளவற்ற மாயங்கள் செய்த அம் மாயன் அழுவதாக ஆழ்வார்தம் தாயுள்ளம் எண்ணியதில் வியப்பில்லை. அழுகையை ஓயப்படுத்துவதற்கு எளிதான வழி இல்லாமலா போய்விட்டது? உடனே அருமையான தொட்டில் ஒன்றை அங்கே கொண்டு வருகிறார் ஆழ்வார். தொட்டில் யார் தந்தது? மாயக் கண்ணனுக்கு யாரால்தான் தொட்டிலமைக்க முடியும்? உலகனைத்தையும் படைத்த பிரமனே, படைத்துப் படைத்துத் தேர்ந்த தன் கைகளால், அழகிய சிறு தொட்டிலை ஆணிப்பொன்னாலே செய்து, அதில் மாணிக்கமும் வயிரமும் இழைத்து, கொண்டுவந்து தருகிறான். மாயம் வல்ல கண்ணன் அதில் உறங்குவானா? அவனோ, உலகெல்லாந் தனது ஓரடியால் அளந்த ரிெயவனாயிற்றே? எந்தத் தொட்டிலில் அவனைக் கண்வளரச் செய்யமுடியும் என்றெல்லாம் ஆழ்வார் அஞ்சவேயில்லை. அழகிய குறள் வடிவங்கொண்ட வாமனன் அல்லவா, இக்கண்ணன்? தொட்டிலிலே கண் வளர்வதற்கு என்ன தடை? ஆழ்வார் இப்படி அவனைத் தொட்டிலிலிட்டுத் தாலாட்டுப் பாடுகிறார்; மாணிக்கங் கட்டி வயிரம் இடைகட்டி ஆணிப்பொன் னாற்செய்த வண்ணச் சிறுதொட்டில்- பேணி உனக்குப் பிரமன் விடுத்தந்தான் மாணிக் குறளனே! தாலேலோ. தொட்டிலிற் கிடத்திய குழந்தைக்கு ஆழ்வார் பல அணிகலன்களைப் பூட்ட வேண்டுமென்று ஆசை கொள்கிறார். அவர் நினைத்த மாத்திரத்திலே தேவர்களெல்லாரும் ஓடிவந்து பற்பல அணி வகைகளையும் கொண்டுவந்து குவிக்கிறார்கள். சின்னஞ்சிற காலில் அணிவதற்கேற்ற கிண்கிணி யொன்றை இந்திரன் தருகிறான். சங்கின் வலம்புரியென்ன, சேவடிக்கேற்ற பல கிண்கிணிகளென்ன, அங்கைக்கேற்ற சரிவளை என்ன, அரையிலணிவதற்கு நாண், தொடர்கள் என்ன-இத்தனையும் தேவர்கள் கொண்டுவருகிறார்கள். குபேரனுக்குச் சொல்லவா வேண்டும்? மார்பிலணிவதற்கு என்று மாலையும் ஐம்படைத் தாலியும் தருகிறான். கடல் வளங்களையெல்லாம் - முத்துமாலை, உயர்ந்த சாதிப்பவளம் அருமையான சங்குவளை ஆகியவற்றை-வருணன் கொண்டு வருகிறான். ஈசனும் அழகுமிக்க அணிகலன் ஒன்றை அனுப்புகிறான். அது, மணிகளும் ஒளிமிக்க மாதுளம்பூவும் தெழ்கம் இடைவிரவிக் கோத்த அணி. இத்தனை அணிவகைகளையும் குழந்தைக்கு ஆழ்வார் தம் கற்பனையிலே பூட்டி 'அழேல், அழேல்' என்று தாலாட்டுகிறார். உலக முற்றும் அளந்த அந்தக் குழந்தைக்கு என்ன குறைவு இருக்கப்போகிறது? எல்லாவற்றுக்கும் உடையவனான குழந்தை அவன். எனவே, அழவானேன்? உடையார் கனமணியோ(டு) ஒண்மாதுளம்பூ இடைவிரவிக் கோத்த எழில் தெழ்கி னோடு விடையேறு காபாலி ஈசன் விடுதந்தான் உடையாய்! அழேல் அழேல் தாலேலோ உலகம் அளந்தானே! தாலேலோ. இவ்வுளவு பெற்றும், அம்மாயக் குழவி தன் அழுகையை நிறுத்தவில்லை, மேலும் அழுகிறானாம். அவனுக்கு ஏதோ குறையாயிருக்கிறது. என்னதான் ஆடையயும் அணிகலனம் பிறர் கொண்டுவந்து தந்தபோதிலும், அவன் மனத்திலே திருப்தி பிறக்கவில்லை. அவனுக்கு உரியவளான திருமகள் அனுப்பிய பொருள் ஒன்றும் காணவில்லையே! திருமகளிடத்து அவனுக்குள்ள ஈடுபாட்டை நாம் நன்றாக அறிவோம். மார்பில்லவா அவளைத் திருமால் வைத்திருக்கிறான்! அவ்வளவு அருமை பொருந்திய திருமகளின் அன்புக்கு அடையாளமான பொருள் ஒன்றும் இன்னும் வரவில்லையென்றால், மாயன் பொறுப்பானா? இதனாலேதான் மீண்டும் அவன் அழுகின்றானாம். திருமகளும், தன் காதலன் பிரிவைப் பொறுப்பாளா? உடனே விரைந்து அன்போடு ஒரு கையுறை அனுப்புகிறாள், ஆழ்வார் தொட்டிலிற் கண் வளர்த்திய மாயக் கண்ணனுக்கு. அது என்ன பொருள்? இந்திரனும். குபேரனும் வருணனும் அனுப்பிய அணிகலன்கள் போல ஏதேனும் அணிகலனா? அன்று. இறைவழிபாட்டுக்கு என்ன வேண்டும்? ஆடம்பரமான கோயிலும் விரிவான பூசை முறைகளும் மேளவாத்தியங்களும் இசைப் பாடல்களுமா? பால், நெய், தேன் முதலிய அபிடேகப் பொருள்கள், பழம் பலவகை அடிசில் முதலிய நைவேத்தியங்கள், அழகான மணம்மிக்க மலர்கள், மலர்களாலான அலங்காரங்கள்-இவைகளா? இவைகளைச் செய்வார் செய்க; ஆனால் எல்லோருக்கும் இவை வேண்டுவன அல்ல. உண்மையான அன்பு-பக்தி- இது மட்டும் ஒருவன் - அகத்திலே இருக்குமானால் இவையொன்றும் வேண்டாம். வெறும்புல் இருந்தால் போதும்; பச்சை இலை இருந்தாலும் போதும். அதுகொண்டு இறைவனை வழிபடலாம். 'யாவர்க்குமாம் ஒருபச்சிலை' என்கிறார் அடியவர். அப்பச்சிலைக்கு அவன் வயப்பட்டுவிடுவான். கண்ணன் துலாபாரம் என்ற சரித்திரம் இவ்வுண்மையை உணர்த்துகிறது. சத்தியபாமையின் அளவற்ற பொன்னுக்கும் மாணிக்கம் ஆபரணத்துக்கும் கட்டுப்படாத கிருஷ்ணன், ருக்குமணியின் அன்புக்கு அடையாளமான ஒரு சிறு துளசி இலைக்குக் கட்டுப்பட்டுவிட்டான். எனவே, அவ்வளவு அன்பையும் உட்கொண்டுள்ள அத் துளசி இதழின் அருமைதான் என்ன? ஆழ்வாருடைய குழவிக் கண்ணனுக்கு, இத் துளசி இதழ்களால் ஒரு மாலை கட்டித் திருமகள் அனுப்புகிறாள். இதன் அருமையை யார்தான் சொல்லமுடியும்? (துளசியைத் தமிழிலே திருத்துழாய் என்று அருமை பாராட்டிச்சொல்லுகிறோம்.) காட்டிலே தழைத்த துழாயனபடியால், அருமையான மணமெல்லாம் அதனிடத்திலே பொருந்தியிருக்கிறது. மேலும், அந்த மாலையிலே, திருமகளுடைய கை வேலையின் திறனெல்லாம் அமைந்திருக்கிறது. கானார் நறுந்துழாய் கைசெய்த கண்ணியும் வானார் செழுஞ்சோலைக் கற்பத்தின் வாசிகையும் தேனார் மலர்மேல் திருமங்கை போத்தந்தாள்; கோனே! அழேல் அழேல் தாலேலோ குடந்தைக் கிடந்தானே! தாலேலோ. காத்தற் கடவுளாகிய திருமாலுக்கு உலகத்திலுள்ள எல்லாச் செல்வமும் உரியது; அவனே செல்வத்துக்கு நாயகன். திருமகளுக்கு அவன் நாயகன் என்பது போலவே, உழவுச் செல்வம் அனைத்துக்கும் இடமாயிருக்கிற பூமியும் அவனுக்கே தேவியாகிறாள் என்று நம்மவர்கள் கொண்டிருக்கிறார்கள். திருமகள் கண்ணனுக்குத் தன் கையுறையை அனுப்பியதும், பூதேவி தானும் சில கையுறைகளை அனுப்புகிறாள். கச்சு, சுரிகை, பொன்வளை சுட்டி, தாளில் அணிவதற்காகப் பொற்பூக்கள் என்றெல்லாம் பலபொருள்களை அச்சுதனுக்கென்றே அவள் தருகிறாள்: கச்சொடு பொற்சுரிகை காம்பு கனகவளை உச்சி மணிச்சுட்டி ஒண்தாள் நிரைப்பொற்பூ அச்சுதனுக் கென்று அவனியாள் போத்தந்தாள் நச்சு முலையுண்டாய்! தாலேலோ நாராயணா! அழேல் தாலேலோ. திருமகளையும் புவிமகளையும் இவ்வாறு எண்ணியும் அழைத்தும் தாலாட்டிய ஆழ்வாருடைய கலையுள்ளத்திலே, இந்தச் சக்திகளுக்கெல்லாம் மூலசக்தியாகிய அன்னை பராசக்திக்கு இடமில்லாமற்போகவில்லை. கற்பனையிலே அழுகிற இளங்கண்ணன், அழுகையை நிறுத்திச் சிறிது பொழுது உறங்கவேண்டும். உறங்கி விழித்தெழுந்த வுடனே அவனை நீராட்ட வேண்டுமென்ற கருத்தோடு பராசக்தியானவள் வந்து நிற்கிறாள், குழந்தையின் உடம்பெல்லாம் திமிர்ந்து குளிப்பாட்டுவதற்கேற்ற நானப்பொடியும் மஞ்சளும் வைத்திருக்கிறாள். நீராட்டியபின் கண்ணுக்கு அழகுபெற இடுதவற்கான அஞ்சனமும் நெற்றியில் திலகமிடுவதற்கான சிந்துரமும் கொண்டுவந்திருக்கிறான். இவ்வளவையும் கற்பனை செய்துகொண்டு, 'ஐயா, அழேல்' என்று ஆழ்வார் கண்ணனைத் தாலாட்டுகிறார்: மெய்திமிரும் நானப் பொடியோடு மஞ்சளும் செய்ய தடங்கண்ணுக்கு அஞ்சனமும் சிந்துரமும் வெய்ய கலைப்பாகி கொண்டுவளாய் நின்றாள் ஐயா! அழேல் அழேல தாலேலோ அரங்கத் தணையானே! தாலேலோ ஆழ்வார் தந்த தாலாட்டானது பின்னே தமிழிலக்கியம் விரிந்து வளர்வதற்கு எவ்வளவோ உதவி இருக்கிறது என்பதைக் காண்போம். பின்னாலே வந்த குலசேகராழ்வார், கணபுரத்தி லெழுந்தருளியுள்ள காகுத்தனைக் கண்டு வழிபட்டபோது, அக் காகுத்தனான இராமன் சரிதத்திலே ஈடுபட்டு, அச் சரிதத்தையே பத்துப் பாடல்கொண்ட ஒரு தாலாட்டுப் பதிகமாகப் பாடியருளினார். மன்னு புகழ்க் கௌசலை தன் மணிவயிறு வாய்த்தவளே தென்னிலங்கைச் கோன்முடிகள் சிந்துவித்தாய் செம்பொன்சேர் கன்னி நன்மா மதிள் புடைசூழ் கணபுரத் தென் கருமணியே என்னுடைய இன்னமுதே இராகவனே தாலேலோ. பாராளும் படர் செல்வம் பரதநம்பிக் கே அருளி ஆரர் அன் பிளையவனோடு அருங்கானம் அடைந்தவனே சீராளும் வரைமார்பா திருகண்ண புரத்தரசே தாராளும் நீள்முடி என் தாசரதீ தாலேலோ. இந்தப் பாடல்களில் ஈடுபடாதோர் யார்? பின்வந்த கவிஞர்களுடைய புதிய பிரபந்த வகைகளில் ஒன்றான பிள்ளைத்தமிழ் என்ற பிரபந்தத்தில் 'தாலாட்டுவதையே அப்பருவத்துக்குரிய பொருளாகக் கொண்டார்கள். இதுவுமின்றி, தெய்வங்கள் மீதும் 'தாலாட்டு' என்ற பெயரோடு பாடப்பெற்ற நூற்றுக்கணக்கான தாழிசைகளைக் கொண்ட பிரபந்தங்கள் பின்னர்த் தோன்றியிருக்கின்றன. இவ்வளவையும் ஒருபுடை தழுவி, நாடோடிப் பாடலாகவும் வாய்மொழியாகவும் நம் தாய்மார் நாவில் வழங்கும் தாலாட்டுப் பாடல்களுக்குக் கணக்கில்லை. இவ்விதமாக, தாம் தாயாயிருந்து முழுமுதற் பொருளான இறைவனையே குழந்தையாக ஏந்தியெடுத்துக் தாலாட்டுப் பாடி, அதன் மேல் அடியவர் உள்ளமெல்லாம் அன்புவெள்ளம் கரை கடந்தோடவும், தமிழ் இலக்கியம் பல துறையிலும் விரிந்து வளரவும் செய்து புதுவழி வகுத்த உத்தம பக்தாரன ஆழ்வாரைத் தமிழுலகமானது “பெரியாழ்வார்” என்று ஆராமை மீதூர வியந்து போற்றுவதுல்லது, வேறென்ன செய்யக்கிடக்கிறது? பிள்ளைத் தமிழில் தாலாட்டு பிள்ளைத் தமிழ் என்ற பிரபந்தங்கள் தமிழிலே எத்தனையோ உண்டாகி இருக்கின்றன. கடவுளையே இளம் பிள்ளையாக்கி, அந்தப் பிள்ளையப் பலவாறு போற்றிக் கொண்டாடுவதில் மிகுந்த மன உல்லாசம் இருக்கிறது. பிள்ளைத்தமிழ் பத்துப் பகுதிகளாக இருக்கும். இதில் மூன்றாம் பகுதி, தாலப் பருவம் எனப் பெயர்பெறும்; அதாவது குழந்தையைத் தாலாட்டிக் கூறும் பருவம். குழந்தைக்கு வயது ஏழு மாதம் ஆனபோது இப் பருவம் பாடவேண்டும் என்பது மரபு. தாலப் பருவத்திலே தெய்விகக் குழந்தைகளைத் 'தாலோ தாலேலோ' என்று, தாலாட்டிக் கூறுகின்ற தமிழ் நூல்களுக்குக் கணக்கே இல்லை. பிள்ளைத்தமிழில் ஆறாவது பருவம் வருகைப் பருவம் என்பது; குழந்தையை 'வருக வருக' என்று அழைப்பதைக் கூறுகின்ற பகுதி. பழனியில் எழுந்தருளியுள்ள முருகப்பெருமான்மீது கவிஞரொருவர் ‘பழனிப் பிள்ளைத் தமிழ்' பாடினார். பொதுவாகப் பிள்ளைத்தமிழில் நூறு பாடல்கள் இருக்கும். ஆனால் இவர் பாடிய பிள்ளைத்தமிழில் முப்பது பாட்டுக்களேயுள்ளன. இதன் பத்துப் பருவங்கள்களுள் ஒன்றாகிய வருகைப்பருவத்தில் மூன்றே பாடல்கள் இருக்கும். தாலாட்டுப் பாடல்களை இவர் மிகுதியும் அனுபவித்திருக்கிறார். அது காரணமாக, பழனிக் குமாரக் கடவுளை 'வருக' என்று அழைக்கும் போதுகூட, இவர் தாலாட்டை மறக்க முடியவில்லை. வருகைக்குரிய மூன்று பாடல்களில் ஒன்றைக் தாலாட்டாகவே பாடியிருக்கிறார். சாதாரணமாக ஓர் அதிகாரி என்றாலே, உலகத்தார் எவ்வளவோ வந்தனையும் வழிபாடும் செய்கிறார்கள். அப்படியானால் அரசனுக்கு எவ்வளவு வழிபாடு செய்ய வேண்டும்? இவ்வுலகம் மட்டுமல்லாமல், வானுலகமென்ன, மற்ற அண்டங்களென்ன - யாவற்றுக்கும் முதல்வனாயுள்ள பரம்பொருளுக்கு உலகத்தவர் என்ன வந்தனை வழிபாடுசெய்யவேண்டும்? எங்குமே அவன் சன்னிதி. ஆகவே, அவன் சன்னிதியில் நில்லாமலோ, அவனைக் கண்டு வணங்காமலோ, எவர்தாம் இருக்கமுடியும்? சீரார் நலஞ்சேர் பூவுலகில் தேவாசுரரில் மற்றையரில் தினமும் உனது கொலுக்காணச் செல்லாதார் ஆர்? காணிக்கை செலுத்தாதவர்கள்தாம் யார்? வந்த வணங்குவதற்குச் சமயம் எப்போது வாய்க்கும் என்று காத்திருந்து வாராதவர்கள் யார்? ஒருவருமே இல்லை. திறை வளங்கள் தாராதார் ஆர்? உனது பதம் தனையே வணங்கித் தொழவேண்டித் தழுவாதார் ஆர்? எவ்வேளை சமயம் கிடைக்கும் என நினைந்து வாராதார் ஆர்? பணிவிடைகள் வரிசைப்படியே நடந்தாதார் ஆர்? என்று கவிஞர் பழனிக் குழந்தைக் குமாரக் கடவுளை நோக்கிக் கேட்கிறார்; ஆர் ஆர் என்று கேட்பதானது, ஆரார் என இணைந்து, தாய்மார் தாலாட்டும்போது ஒலிக்கும் ஒலியாகிய ‘ஆராரோ ஆராரோ' என்ற ஒலியைத் தந்து, தாலாட்டு என்ற எண்ணத்தையும் உண்டுபண்ணுகிறது. இங்ஙனம் பாடும்போது, தாலாட்டு என்ற நினைவும் ஒரு பக்கம் கவிஞரைக் கவருகிறது. இந்த நினைவோடு பார்த்தால் பாட்டு முழுவதுமே ஓர் அழகிய தாலாட்டாயிருப்பதை நாமும் கண்டு அனுபவிக்கலாம். சீரார் நலஞ்சேர் பூவுலகில் தேவாசுரரில் மற்றையரில் தினமும் உனது கொலுக்காணச் சொல்லாதாரார்? திறை வளங்கள் தாரா தாரார்? உனழ பதம் தனையே வணங்கித் தொழவேண்டித் தழுவாதாரார்? எவ்வேளை சமயங் கிடைக்கும் என நினைந்து வாரா தாரார்? உனதருளை வாழ்த்திப் புகழந்து துதிக்க மனம் வசியா தாரார்? பணிவிடைகள் வரிசைப் படியே நடத்தாதார் ஆரார் எனத்தாலாட்டு கின்ற அரசே வருக வருகவே அருள்சேர் பழனிச் சிவகிரிவாழ் ஐயா வருக வருகவே! தாலாட்டும் பள்ளும் தாலாட்டுப் பாட்டிலே நம் கவிஞர்களுக்குள்ள ஈடுபாடு காரணமாக, எப்போது எப்போது அவர்களுக்குச் சந்தர்ப்பம் கிடைக்கிறதோ அப்போதெல்லாம், எளிதாக அழகிய சிறு தாலாட்டொன்றைப் பாடிவிடுகிறார்கள். தாலாட்டுப் பாடல் உள்ளத்திலே எழுப்புகின்ற இன்பமான நினைவுகளும், பாடலின் சுகமுமே இப்படிப் பாடுவதற்குக் காரணங்கள். பள்ளுப் பாட்டிலே பொதுவாக நாம் தாலாட்டைப் பார்ப்பதில்லை; தாலாட்டுக்கு அதில் சந்தர்ப்பமும் குறைவு. ஆயினும், நம்முடைய கவிஞரொருவர் சந்தர்ப்பத்தைச் சிருட்டித்துக்கொள்ளுகிறார். பள்ளியர் பலர் மிக்க உல்லாசத்தோடு நடவு நட வருகிறார்கள். இளம் பள்ளியர், முதிய பள்ளியர், அன்றி இடுப்பிலே குழந்தையை இடுக்கிபடியே வந்த பள்ளியர் - என இவர்கள் பலவகை, இளையவளும் முதியவளும் வயற்கரையை அடைந்தவுடன், நேரே சேற்றில் இறங்கிவிட முடியும். ஆனால் குழந்தையோடு வந்தவள் என்ன செய்வாள்? குழந்தையை எங்கு விடுவாள்? நாம் தெருவிலே பார்க்கிறோம் அல்லவா? - சென்னைக் கார்ப்பொரேசன் ஊழியர்களாயுள்ள பெண்கள் சாலைகளில் மராமத்து வேலை செய்யும்போது, சாலையோரமுள்ள மரங்களில் ஏணைகட்டி அதில் குழந்தைகளைக் கிடத்தி ஆட்டி உறங்க வைத்துவிட்டுத் தங்கள் வேலைகளைக் கவனிக்கிறார்கள். குருகூர் ஆழ்வார் பண்ணையில் நடவு நடவந்த பள்ளியரும் இப்படியே செய்கிறார்கள். வயல் வரப்புகளிலும் வாய்க்கால் கரைகளிலும் வேம்பு முதலிய மரக்கிளைகளுக்குப் பஞ்சமா? ஏணைகட்டி அதில் குழந்தையைப் படுக்கவைத்துத்', 'தாய் மார் தாலாட்டுகிறார்கள் என்று கற்பனை செய்கிறார் கவிஞர்; இது உண்மையில் கற்பனையே அன்று; மெய்யாகவே நடக்கிற நிகழ்ச்சிதான். இரண்டு பள்ளியர் தாலாட்டுகிறார்கள். ஒருத்தியின் குழந்தை ஆண் குழந்தை; மற்றவள் குழந்தை பெண் குழந்தை. எப்படித் தாலாட்டுகிறார்கள் என்பதை மாற்றி மாற்றிக் கேட்போம். பள்ளரும் பள்ளியரும், திருக்குருகூர் நம்மாழ்வாரிடத்தில் அளவற்ற பக்தியுடையவர்கள், பரம்பரையாக ஆழ்வார் பண்ணையில் பயிர்த்தொழில் செய்து வருபவர்கள் என்பதை நாம் ஞாம்பத்தில் வைத்துக் கொள்ளவேண்டும். ஒருத்தி பாடுகிறாள் : அண்டர்தொழுதென்குருகூர் ஆழ்வார்க்கு வாய்த்த வயல் எண்திசையும் பண்ணை பயிர் ஏற்ற பிறந்தானோ! அடுத்தவள் - பெண் குழந்தையை யுடையவள் - பாடுகிறாள் : அன்னதருத் தென்குருகூர் ஆழ்வார் வளவயலில் செந்நெல் நடவந்த செல்வ மகளாரோ! ஆழ்வார் பண்ணையிலே தாங்கள் மகிழ்ச்சியோடு தொழில் செய்வதைப் போலவே தொடர்ந்து செய்வதற்கு ஏற்ற பிள்ளையும் பெண்ணும் பெற்றமை குறித்து இத் தாய்மார்களுக்கு என்ன மகிழ்ச்சி, என்ன உல்லாசம்! மேழிச் செல்வமாகிய பெருஞ் செல்வத்தை ஈட்டுபவன் ஆதலால், பள்ளனை எப்படிச் சிறப்பித்தாலும் தகுமல்லவா? பிள்ளையைப் பார்த்துச் சொல்கிறாள் பள்ளி; சேறாடி சூழச் சிறந்த குடை நிழற்ற வீறாய் முரசதிர விளையாடுவான் மகனோ. கோழைபடாத மேழிச் செல்வத்தைத் தேடுகின்ற பள்ளன், குடை நிழற்றவும் முரசதிரவும் விளையாடுவான் என்றால், மிகையன்று. இதை யொத்த பாவத்தில் மற்றவள் பாடுகிறாள் : அரவணை யானைப் பரவும் ஆழ்வார் வளவயலிற் குரவையிட்டுக் களைபறிக்கும் கோமளப் பெண்ணாரமுதோ. கோமளப் பெண் - ஆம் உலகமெல்லாம் உண்ண வேண்டும் என்பதற்காக, நடவுநட்டு, குரவையிட்டுக் களை பறிப்பவள் கோமளப் பெண்ணாரமுதான், சந்தேகமில்லை. இப்படியெல்லாம் குழந்தையைப் பள்ளி எவ்வளவோ கொஞ்சியாயிற்று. சரி, ஆனால் இக் குழந்தையால் பண்ணைத் தலைவரான ஆழ்வாருக்குப் பயனுண்டா? கேட்பானேன்? எவ்வளவோ உண்டு, ஆழ்வார் அமுது செய்வதெல்லாம் இவன் விளைவித்துக் கொடுக்கின்ற உணவு தானே? இந்த பாவத்தில் வருகிறது பாட்டு: வளஞ்சேர் குருகைமகிழ் மாறர் அமுதுசெய்யக் களஞ்சியத்தில் நெல்லளந்து கட்டப் பிறந்தானோ. சரி ஆண் குழந்தைதான் ஆழ்வாருக்கு இப்படித் தொண்டு செய்வான். பெண் குழந்தை? மற்றவள் சொல்கிறாள். நெல் விளைந்தால் போதுமா? அது களத்திலே கண்டு முதல் பண்ணும்போது, சிந்தி மங்கிச் சீரழியாமல் பெருக்கிச் சேர்க்கவேண்டாமா? இது பெண் செய்யவேண்டிய வேலை. வழக்கமாய் ஆண் செய்வதன்று. களத்திலே தன் பெண் ஆழ்வாரின் அமுதுக்குரிய நெல்லைப் பெருக்கிச் சேர்ப்பாள் என்ற எண்ணமே, தனக்குப் பெருவாழ்வையே சேர்த்து தந்ததுபோல இருக்கிறது இப் பள்ளிக்கு. தண்ணிலஞ்சி மாறர் களம் பெருக்கிப் பெருவாழ்வு எனக்கு வரப் பிறந்த மகளாரோ. இங்ஙனமாகப் பள்ளியர் தங்கள் பிள்ளையையும் பெண்ணையும் தாலாட்டும் இச் சிறு தாலாட்டு, ஆழ்வாருக்கும் நமக்குமே பெரிதும் உவப்பான தாலாட்டு என்பதில் சந்தேகமில்லை. நீலமயில் வாகனன் சுமார் ஐம்பது ஆண்டுகளாகத் தமிழ்நாட்டில் பரத நாட்டியக் கலை புத்துயிர் பெற்று வளர்ந்து வந்திருக்கிறது. குமரி முதல் இமயம் வரை, தமிழ் மக்கள் உள்ள இடமெங்கும் குழந்தைகள் இந்தக் கலையைக் கற்றுப் பரத நாட்டியமும் அபிநயமும் செய்கிறார்கள். தமிழ் மொழி அல்லாத பிறமொழிக்குரிய இந்திய மக்கள் மட்டும் அல்லாமல் அயல் நாட்டு மக்களும் கூட, இந்தக் கலையைக் கண்ணால் கண்டு வியந்து போற்றுகிறார்கள்; தாங்களும் கற்று இக்கலையில் வல்லவர்களாக முயல்கிறார்கள். இவ்வளவுக்கும் தோற்றுவாயாக இருந்தது சுமார் ஐம்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன் தமிழ் நாட்டில் கற்றவர்களிடை புதிதாக அறிமுகமும் அங்கீகாரமும் பெற்று வந்த திருமதி பாலசரசுவதியின் பரத நாட்டியம் என்பது அனைவரும் ஒப்புக்கொள்ளக்கூடிய உண்மை, டி.கே.சி. அவர்களுடைய இடைவிடாத பாராட்டுதலினாலும், கல்கி அவர்கள் எழுதி வந்த ஆனந்தவிகடன் பத்திரிகையின் பிரசாரத்தாலும், பரத நாட்டியக் கலை தமிழ் நாட்டில் பிரசாரம் அடைந்தது. குறிப்பிட்ட சில பாடல்களுக்கு திருமதி பாலசரசுவதியின் அபிநயம் மிகவும் பிரசித்தம். இக்காலம் போல் அன்றி, அந்தத் தொடக்கக் பாடல்கள் யாவும், ஒருவகையில், வாழ்க்கையை உயர்த்துவனவாயும் தெய்வ பக்தியை ஊட்டுவனவாயும் இலக்கிய உணர்ச்சியை வளர்ப்பனவாயும் இசையின் நயத்தை எடுத்து விளக்குவன வாயும் அமைந்திருந்தன. யாரும் எதுவும் பாடலாம் என்ற நிலை அப்போது இல்லை; புராதனமான இசை நுட்பமும் இறை உணர்ச்சியும் பொருந்தி பாடல்கள் மட்டுமே பரத நாட்டியத்துக்குப் பயன்பட்டன. அவ்வாறு வழங்கிய சிறந்த பாடல்களுள், முருகப்பெருமான் தாலாட்டாகிய “நீலமயில் வாகனனோ' என்பது முக்கியமான ஒன்று. முருகப் பெருமான் திருவடியில் எல்லையற்ற பக்தி பூண்ட திருப்போரூர் சிதம்பர சுவாமிகள் போரூர் முருகனைத் தாலாட்டுகிறார். முருகனை வழிபடும் அடியவர்கள் “வேலும் மயிலும் துணை” என்பார்கள். உலகத்தில் நிலவும் அஞ்ஞான இருளைப் போக்கி ஞான ஒளியை வீசுவதாகிய சக்தி வேல் அவன் கையில் உள்ளது. வேல் என்றாலே ஞானத்தின் அடையாளம். அதைத்தூலமான ஓர் ஆயுதமாகக் கொள்ளும் போது, அது நீண்ட இலையுடைய வேலாயுதமாய்க் காட்சியளிக்கிறது. நீலநிறத்தோடு எங்கும் கவிந்திருக்கிற வானமும் நிலமும் சேர்ந்து ஒரு பெரிய மயில் வடிவமாகத் தோற்றுகின்றன. விசுவத்துக்கு நாயகனான முருகனுக்கு, அந்த மயில், வாகனம் என்பது நம் மக்களுடைய இயற்கை வழிபாட்டின் ஒரு தோற்றமே யாகும். மயிலைக் கண்டவுடன், முருகனை அடி பணிந்து அவனுடைய கொடியில் அமர்ந்திருக்கம் பேறு பெற்ற கோழியும் நினைவு வருதல் இயல்பு. இந்தக் குறிப்புகள் தூண்ட, தாலாட்டுப் பாடல் வருகிறது. நீலமயில் வாகனனோ நெட்டிலைவேலாயுதனோ கோலம் நிறை கோழிக் கொடிபடைத்த சேவகனோ. சிறு குழந்தைகளுக்குக் கோழியினிடம் உள்ள ஈடுபாடு அதிகம், அதன் கொண்டையின் கவர்ச்சி பெரிது. எனவே கோலம் நிறை கோழியாகவே கவிஞர் அதைக் காண்கிறார். முருகன், வானவர் துன்பத்தைப் போக்கி, சூரபதுமன் போன்ற அசுரரிடமிருந்து காத்தவன் ஆதலால் சேவகனுமாகிறான். முருககன் ஆறுமுகமும் ஆறிரண்டு திண்தோளும் உடையவன், வேதங்கள் அவனுடைய பாதுகைகள் என்பன, அவனுடைய திருமேனியைக் குறித்த ஐதிகங்கள். ஆறிரண்டு தோளானோ ஆறு முகத்தானோ தேறு மறை கொஞ்சம் சிறுசதங்கைத் தாளானோ. குழந்தையைக் கொஞ்சும்போது, குழந்தைக் குமரனை ஏந்திச் சிரம்மோந்து குலவிய பெண்கள் நினைவு வருகிறது. சரவணப் பூம்பொய்கையில் தவழ்ந்த முருகனை கார்த்திகைப் பெண்கள் அறுவரும் எடுத்து அணைத்துக் குலவினார்கள். அவர்கள் மட்டுமா? தாயான பார்வதி தேவியும், கங்காதேவியுமே எடுத்துக் குலவினார்கள். ஆயிமார் அறுவர்களும் அம்பிகையும் கங்கை மின்னும் சேயே என் றேந்திச் சிரமோந்து கொள்குருந்தோ. (ஆயிமார் - ஆய்மார், தாய்மார். குருந்து - குருத்து.) பாடுகின்ற போது, ஓசை நயத்தின் பொருட்டு, ஆய்மார் என்றிருக்கத் தக்க சொல், ஆயிமார் என்று வருகிறது. பாவபூர்வமான இப்பாடல் ஆட்டத்துக்கும் பாட்டுக்குமாக எவ்வளவுதான் நெளிந்து கொடுக்கிறது! முருகனைப் புகழும்போது, இலக்கியத் தொடர்புடைய பழங்கதைகள் எண்ணற்றன நினைவில் எழுகின்றன. நக்சீரர் முருகன் பாதுகாப்பைப் பெறும் பொருட்டுப் பாடியருளிய திருமுருகாற்றைப்படையும் அருணகிரிநாதர் பாடிய திருப்புகழ்ப் பாடல்களும் தோன்றிய வரலாறுகள் முருகனுடைய பெருங்கருணைத் திறத்தைப் புலப்படுத்துகின்றன. அருணகிரி நாதன் அருந்தமிழ் நற் கீரன் கருணை பெற ஓதும் கவிமலைத் தோளானோ. சைவ சமய சம்பிரதாயத்தில் இறைவன் குருவடிவாக வந்து ருணைபுரிகிறான் என்பது மிகவும் சிறப்பான ஒரு கருத்து. பிரமன் பிரணவத்தின் பொருள் அறியாமல் விழித்தபோது குழந்தை முருகன் அவனைக் குட்டிச் சிறையிருத்திப் பின்னர், சிவபிரான் கேட்க, பொருளை உரைத்தான் என்று கதைகள் குறிப்பிடும். இங்ஙனம் அவன் குருவாக வந்த நிலையைக் கூறி, அபிநயப் பாடல் முடிகிறது. பிரமன் அறியாப் பிரணவத்தின் அத்தம் அரனார் மனங் குளிர அன்றுரைத்த சற்குருவோ ? முப்பது கண்ணிகள் கொண்டபோரூர் முருகன் தாலாட்டில், அபிநயத்துக்காகத் தேரந்தெடுக்கப்பட்ட இவ்வைந்து மட்டும் அன்று, இத் தாலாட்டுப் பாட்டின் சாரமாகவே உள்ளன. இப் பாடல்களை மட்டும் தேர்ந்தெடுத்த கலைப் புலமை, முத்தமிழ் இலக்கிய வுணர்ச்சிக்கே சிரமாயுள்ளது. முல்லை நறுமலர் இந்த இருபதாம் நூற்றாண்டில், கவிஞர்தேசிக விநாயகம் பிள்ளையவர்கள் தாலாட்டுபாடுகின்ற ஒரு தாயை நமக்குச் சிருஷ்டித்துத் தந்திருக்கிறார். அத்தாயின் சொற்களிலே கவிதையின் எளிமையையும் கவிதைச் சுவையின் உயர்ந்த சாதனையும் நேர்முகமாய் நாம் கண்டு அனுபவிக்கிறோம். தமிழ் மக்களுக்குப் பூவினிடத்தில் எல்லையற்ற ஈடுபாடு. தாய்மைப் பேறடையப் போகும் பெண்ணுக்குச் செய்யும் சடங்குகளில் முதல் சடங்குப் பெயரே பூச்சூட்டல் என்பது. பூவிலே மக்கள் மனம் எப்போதும் ஈடுபட்டிருக்குமானால் கவிஞர் மனம் இன்னும் எவ்வளவு அதிகமாய் அதில் தோய்ந்திருக்கும்? குழந்தைக்க உறக்கம் வரவேண்டிப் பாடத் தொடங்குகின்ற தாய் பாடுகிறாள்: முல்லை நறுமலரோ முருகவிழ்க்கும் தாமரையோ மல்லிகைப் பூவோ மருக்கொழுந்தோ சண்பகமோ, தாய் சில மலர்களின் பெயர்களை மட்டுமே சொல்கிறாள். நிரல் படச் சொல்லுகிறாள். கற்பனைச் செறிவோ, கருத்துச் சிக்கலோ, சொல்லடுக்கோ காணப்படவில்லை. ஆனால், இவ்வரிகளில் தாய்மையின் பெருமிதம், உணர்ச்சியின் பெருக்கு, இயல்பான தாயன்பின் எளிமை, அழகுச் சுவையின் எல்லை இவை நம்கண்முன் வந்துவிடுகின்றன. வரிசையாக மலர்களின் பெயரைச் சொன்ன மாத்திரத்தில், சொற்களில் தாயின் அன்பு நிறைந்து, நாமும் கவிதையின் உணர்ச்சி வரப்பட்டு நிற்கிறோம், நேர்முகமாய் உணர்ச்சி வசமாகும் போது, சொற்கோவையோ விளக்கமோ தேவையில்லாமற் போகிறது. குழந்தையால் யாருக்குத்தான் இன்பம் இல்லை? முல்லையும் தாமரையும் மல்லிகையும் சண்பகமும் யாருக்குத்தான் இன்பம் தரமாட்டா? கவிஞரே தாயாகப் பாடுகிறார். அவருடைய அனுபவம் பாட்டாகிறது. கவிஞருடைய மனம் சைவத் திருமுறைகளிலும் ஆழ்வார் அருட் பாசுரங்களிலும் நிரம்பிய ஈடுபாடு உள்ள மனம். ஆதலால், அதற்கேற்றவாறே குழந்தையும் காட்சியளிக்கிறான். பூமாலை வாடும் மணம் பொன்மாலைக் கில்லையென்று பாமாலை வைத்தீசன் பாதம் பணிபவனோ! பாலமுதம் உண்டுதமிழ்ப் பாமாலை பாடியிந்தத் தாலம் புகழவரும் சம்பந்தன் நீதானோ! கொன்றையணிந்தம்பலத்தில் கூத்தாடும் ஐயனுக்கு வன்றொண்டனாக வளர்ந்தவனம் நீதானோ! கல்லைப் பிசைந்து கனியாக்குஞ் செந்தமிழின் சொல்லை மணியாகத் தொடுத்தவனும் நீதானோ! தேவாரப் பாகும் திருவாசகத் தேனும் நாவார உண்ணஎம்மான் நன்மகவாய் வந்தானோ! நாலா யிரக்கவியின் நல்லமுதம் உண்டிடமால் பாலாழி நீங்கியொரு பாலகனாய் வந்தானோ! குழந்தை என்பதற்கேற்ப, கவிஞருக்கு இங்கு பாலசுப்பிர மணியனிடத்திலும், பாலகிருட்டிணனிடத்திலும் பக்தி பெருகியிருக்கக் காண்கிறோம். அந்தப் பக்தி தாலாட்டுப் பாட்டிலும் வெளிப்படுகிறது. புள்ளி மயிலோடு புனங்காத்து நிற்குமந்த வள்ளி மணவாளன் மதலையாய் வந்தானோ! ஆயர் பதியில் அற்புதங்கள் செய்துநின்ற மாயவனே இங்கெமக்கு மகவாகி வந்தானோ! பெண்கள் சிறுவீட்டைப் பேணாதழித்தவர்தம் கண்கள் சிவக்க வைக்கும் கண்ணபிரான் நீதானோ! முடிவில் அழுகின்ற குழந்தையை அழவேண்டாம் என்று சொல்லிப் பாட்டு முடிகிறது. குழந்தைக்குச் சலுகை மாமாவிடம். ஆதலால், மாமா வருவார் என்பதே கடைசியான கூற்று. சப்பாணி கொட்டித் தளர்ந்தனையோ அல்லதுன்றன் கைப்பாவைக் காகக் - கலங்கி அழுதனையோ? திந்திக்கும் தேனும் தினைமாவும் கொண்டுன்றன் அத்தை வருவாள் அழவேண்டாம் கண்மணியே. மாங்கனியும் நல்ல வருக்கைப் பலாக்கனியும் வாங்கியுன் அம்மான் வருவார் அழவேண்டாம். கண்ணுறங்கு கண்ணுறங்கு கண்மணியே கண்ணுறங்கு ஆராரோ ஆராரோ ஆரரோ ஆரிவரோ. அனுபந்தம் வாய் மொழிப் பாடல்கள் பலவும் இலக்கியப் பாடல்கள் சிலவும் இதுவரை நாம் பார்த்து வந்தோம். இனி, முதல் தாலாட்டுப் பாடல் பாடிய பெரியாழ்வாருக்குப் பின், புலவர்கள் பாடிய தாலாட்டுப் பாடல்கள் பற்றிய குறிப்புகளைக் காணலாம். இயன்றவரை ஒவ்வொரு நூலுக்கும் சில மாதிரிக் கண்ணிகளும் தரப்பெற்றுள்ளன. இங்க இவை மூன்று பிரிவாகப் பிரித்திருக்கக் காணலாம். அ. பண்டை இலக்கியங்கள். ஆ. பிற்கால இலக்கியங்கள். இ. வாய்மொழி வழக்கு. அ. பண்டை இலக்கியங்கள் 15ஆம் நூற்றாண்டில் எழுந்த சீகாழிச்சிற்றம்பல நாடிகள் தாலாட்டு முதல், நூற்றாண்டுதோறும் எழுந்த சில பிரபந்தங்கள் இவ் வரிசையில் அடங்கும். 1. சீகாழிச் சிற்றம்பல நாடிகள் தாலாட்டு : (காலம் 15ஆம் நூற்றாண்டு. சைவ சித்தாந் சமய முதல் ஆசாரியரான மெய்கண்டாருக்கு முந்திய குருபரம்பரையில் உள்ளவர். பல சிறு சமய நூல்கள் செய்தவர். இந்நூல் 63 கண்ணிகள் கொண்டது. சம்பிரதாயப்படி வாய்மொழியான தாலாட்டுப் பாடலில் காணப்படுகின்ற கருத்துப் போக்கு முழுமையும் கூட இங்குக் காணப்படுகிறது. குழந்தையின் புகழ், அவன் பேச்சு, யார் அவனை அழச் செய்தவர் என்று கேட்டல், கண் வளரச் சொல்லுதல் - ஆகிய பகுதிகளைப்பின்வரும் வரிகளில் காணலாம்.) கானாற் கரியானோ கண்மூன்றுடையானோ தாணுவோ சங்கரனோ சச்சிதானந்தனோ? சாதி மதத்தாலும் சமய மதத்தாலும் கோதிலா வானந்தம் கூடஅரிதென்றாரோ? எல்லா உயிரும் எனதுயிலே என்றுரைத்து நல்லார் இனத்தில் நடித்தானைச் சொன்னாரார்? இன்னவடிவின்னநிறம் இன்னபடி என்றறியாது உன்னம் இடத்தில் உதித்தானைச் சொன்னாரோ? வையம் வளர மறையோர் தொழில்வளர மெய்யும் வளர அருள் மேகமே கண்வளரீர். 2. தத்துவராயர் தாலாட்டு : (15ஆம் நூற்றாண்டு. 51 கண்ணிகள். தம் குருவாகிய சொருபானந்தர் துதியாகத் தத்துவராய சுவாமிகள் பாடியது) நஞ்சேய் பிறவிக்கு நாயேன் நடுங்காமல் அஞ்சேலஞ் சேலன் றருளும் பெருமானோ? ஆவா இருவர் அறியாத சேவடியை வாவாஎன் றென்தலைமேல் வைக்கும் பெருமானோ? கண்ட இருளைநீ காணாதே அவ்விருளைக் கண்ட அறிவைநீ காணென்று சொன்னாரோ! ஆட்டின மாயக்கூத் தென்ன அகத்துள்ளே கூட்டெனை ஞானக்கூத்தாட்டிய வித்தகனோ! செல்லல் அறுத்த சிவப்பிரகாசனோ தொலைலை மறைதேர் சொருபானந் தச்சுடரோ! 3. கீதாசாரத் தாலாட்டு :- (17ஆம் நூற்றாண்டு. 108 கண்ணிகள். மாதைத் திருவேங்கட நாதர் பாடியது. கீதையின் உட்பொருளைச் சாராமாகத் திரட்டிக் கூறுவது) திருத்தேரிற் சாரதியாய்ச் சேர்ந்திருந்துங் கீதையினால் அருச்சுனற்கு மெய்ஞ்ஞானம் அனைத்தும் உரை செய்தவரோ வல்லிரும்பு கனலுடனே மருவியது போல்மனமும் ஒல்லையிலான் மாவுடனே உற்றதுகாண் என்றவரோ இந்திர சாலம் போல இவ்வுலகை நம்மிடத்தில் தந்திரமாத் தோற்றுவித்தோம் சத்யமல என்றவரோ கூறுமுல கியற்கையுடன் கூடினுமெய்ஞ் ஞானம்வரப் பொருந்தியதே சுகவடிவம் புண்ணியரே கண்வளரீர். 3. ஞான சம்பந்தர் தேசிகர் தாலாட்டு:- (40 கண்ணிகள், தருமபுர ஆதீனம் நிறுவிய திருஞான சம்பந்தர் துதி. செய்தவர் வெள்ளியம்பலவாணத்தம்பிரான். 17ஆம் நூற்றாண்டு.) கங்கை இளம்பிறையும் கண்அனலும் மான்மழுவும் மங்கை இடமுமட மறைந்துலகில் வந்தானோ பாலாட்டும் பொன்முடிமேல் பாம்பாட்டல் போல்சிறியேன் தாலாட்டும் தன் செவியில் சாத்தும் தாயாபரனோ ஊனாய் உயிராய் உணர்வாய் என்னுட் கலந்து தேனாய் அமுதமாய்த் தித்தக்குந் தேசிகனோ ஊடுகினும் கூடுகினும் ஒக்கஎதில் ஆடுகினும் கூட விளையாடும் கோமானைச் சொன்னாரார் நாயேன் உமதடிக்கீழ் நாடோறும் கண்வளரத் தாயே எனையாண்ட சற்குருவே கண்வ ளரீர். நம்மாழ்வார் தாலாட்டு (பழந்தமிழ்ப் புலவர்களில் நம்மாழ்வாரிடம் ஈடுபடாதோர் இல்லை. எல்லா வகையாலும் அவர்மீது புலவர்கள் பிரபந்தம் பாடி மகிழ்ந்திருக்கிறார்கள். பிரபந்த வகைகளுள் தாலாட்டும் ஒன்று. 17ஆம் நூற்றாண்டிலிருந்த உபயகவி அப்பா என்ற வைணவப் புலவர் நம்மாழ்வார் மீது இரு தாலாட்டுப் பிரபந்தங்கள் பாடியிருக்கிறார். முதல் பிரபந்தம், தாலாட்டுப் பாடலில் நம்மாழ்வார் திரு அவதாரச் சரிதையைக் கூறுகிறது. வரலாறு முழுமையும் கண்ணிகளாலேயே தொடர்பான செய்யுளாகப் பாடுகிறார் 350 கண்ணிகள் உள்ளன. அதனுள், குழந்தையைத் தொட்டிலிற் கிடத்தி கண்வளரச் சொல்வதைக் கூறும் பகுதிகள் அவையுடையன. வச்சிரத்தாற் செய்த திருத் தொட்டிலில் பூ மழை சிந்துகிறார்கள்.) மருக்கொழுந்து பிச்சியிருவாட்சிமுல்லை மல்லிகைப் பூ தருக்கொழுந்து கோகனகம் சாதிவேற் செண்பகப் பூ பாந்தள் அரசன் பணாமகுடப் பாரகாக்குஞ்சேந்தர் புகழ்விளங்கந் தெய்வத் தனிச்சுடரோ ஆவார்கள் ஒன்பதின்மர் ஆரியர் முக்கோல் தரித்து வாழ்வார்கள் தொண்டர் தொண்டர் வாழப் பிறந்தவனோ தண்டமிழும் வேதாந்த சாரப் பெரும்பொருளும் மண்டலமும் விண்டலமும் வாழப் பிறந்தானோ பத்திக்கு வித்தாய்ப் பணித்தடங்காப் பண்ணவனை முத்திக்கு வித்தாய் முளைத்தவனைச் சொன்னாரார். மற்றொரு பிரபந்தம் நமாழ்வார் பற்றிய நூற்றெட்டுத் திருப்பதித் தாலாட்டு. சிரங்கட்டிரு வெள்ளைறையுந் சிந்தையமு தூற்றிருக்க பரங்கொள்நெடு மாமுகிலைப் பாடும் பராங்குசனோ குயிலார் திருச்சித்ரகூடஞ்சேர் காழி நகர் புயல்போல மேனியரைப் போற்றிய நம் மாழ்வாரோ திருமாலை யாண்டான் திருவாய் மொழித் தமிழைத் திருத்தும் புவியோர்க்குத் திருந்திய நம்மாழ்வாரோ திருமல்லி நாடுந் திருப்பாவை முப்பதுங் கருதுந் தமிழ்தன்னைக் காட்டியநம் மாழ்வாரோ. 5. சிவஞான பாலைய தேசிகர் தாலாட்டு :- (18ஆம் நூற்றாண்டு. 100 கண்ணிகள். பெரும்புலவராகிய துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் தம் ஞானாசிரியர் மீது பாடிய துதி.) என்று நித்த பூரணமாம் இன்பவறி வுண்மையராய் நின்றபடி நிற்கும் நிகழ்பிரம மென்றானோ. கமன மழிந்து கறையற்று நிற்குந் சுமனமதில் நின்றலிகந் தூயசரமென்றானோ. வானேத்த வென்று மருவற் கரியபதம் நானேத்த நல்கசிவஞானகுரு தேசிகனோ. எந்தைசிவ சாதனங்கட் கெல்லாந் திருநீறு முந்தியதென் றுண்மை மொழியும் பெருமானோ. பிரசாதி யோடு பிராண லிங்கியாகி உரைசாரும் போகாங்க மொன்றென்று சொன்னானோ. 6. திருமாமகள் நாக்சியார் தாலாட்டு :- (18ஆம் நூற்றாண்டு. 25 கண்ணிகள். திருக்கோட்டியூர் திருமாமகள் என்னும் பிராட்டியார் மீது அமைந்துள்ள துதிநூல், சிறப்பான அமைப்புடையது. காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், அம்புலி, வருகை, சிறுதேர் ஆகிய பருவங்கள் குறிப்பிட்டு, பருவத்துக்கு இருகண்ணிகளைக் கொண்டது.) நீராட்டிமையெழுதி நெற்றியின்மேல் காப்பணிந்து தாராட்டும் கோட்டி,நகர்ப் பைங்கிளியே தாலேலோ. தெய்யலங் காரர் திருச்செல்வம் ஆளவந்த உய்யவந்த கோட்டிக் கடையவளே தாலேலோ. மஞ்சுசேர் மாட மதிட்கோட்டி நாரணற்குக் கொஞ்சுவாய் முத்தம் கொடுக்கவந்த கோகிலமோ. எம்பிரான் கோட்டிக் கிறைவனார் தேவிதன்மேல் அன்பினால் தம்மை ஆரடித்தார் ஆராரோ. ஆணிக் கனகத் தளகையான் தான்விடுத்த மாணிக்கத் தொட்டிலுள்ளே மாமகளே கண்வளராய். ஆ. பிற்கால இலக்கியங்கள் 19,20ஆம் நூற்றாண்டுகளில் தோன்றிய தாலாட்டுப் பாடல்களை இங்குக் காணலாம். டாக்டர் சாமிநாதையர் பாடிய தாலாட்டுப் பாடலும், ராய. சொக்கலிங்கம் அவர்கள் பாடிய காந்தி தாலாட்டுப் பாடலும் இங்குக் குறிப்பிடத் தக்கவை. 7. சம்பந்தர் தாலாட்டு 1. (19ஆம் நூற்றாண்டு. 30 கண்ணிகள். திருஞதன சம்பந்த சுவாமிகள் வரலாறு கூறுவது.) குவிகைசென்னி கொண்டடியார் கூத்தாடமுத்தின் சிவிகையினில் ஏறித் திசைவிளங்க வந்தாரோ? மருகல் நகர்தன்னில் வணிகற்பணி தீண்டப் பொருகை வில்லானைப் போற்றியுயிர் தந்தாரோ? ஆலங்காட்டப்பர் அயர்த்தனையோ பாடவென்று கோலங்காட்டடப்பதிகம் கூறித் தொழுதாரோ? அங்கமதைப் பூம்பாவை யாமயிலாப் பூரில் அருட் சங்கரர்பே ரன்பாலித் தாரணியிற் கண்டரோ? வாழி திருஞான சம்பந்தர் வாக்கரசர் வாழிநம்பி ஆரூரர் வாதவூ மன்னவனே! 8. சம்பந்தர் தாலாட்டு 2. (19ஆம் நூற்றாண்டின் இறுதி. 42 கண்ணிகள். மகாவித்துவான் காஞ்சீபுரம் சபாபதி முதலியார், திருஞான சம்பந்த சுவாமிகள் வரலாற்றைக் கூறுவது முந்தியதினும் வேறானது.) எம்பந்த மெல்லாம் ஈடறுக்க வந்தருளும் சம்பந்த னென்னும்பேர் தாங்கங் குருபரனோ? மறைக்காட்டிற் சொல்லரசை மறையடைத்த திருக்கதவம் திறக்கும்வகை பாடுமெனச் செப்பும் தவக்கொழுந்தோ. ஆலவாய் கண்டுமங்கை யர்க்கரசி என்னுமிசைக் கோலமிகு பதிகம் கூறிப் பணிகுருவோ? வாழ்க அந்தணரென்னும் வாய்மைத் திருப்பதிகம் வீழ்கங்கை நேர்மையை மேலெதிர விடும்தேவோ? நன்றுதீ தென்றறியா நாயேன் வினையிருளில் துன்றியலை யாதருளத் தோன்றுந் தினகரனோ? 9. ஏகநாயகர் தாலாட்டு. (19ஆம் நூற்றாண்டின் இறுதி. 30 கண்ணிகள். "உதிப்பித்த பன்னூல் ஒளிர அடியேன் பதிப்பிக்கவே கடைக்கண் பார்” என்று மட்டும் வேண்டி டாக்டர் சாமிநாதையரவர்களையும் பாடும்படி செய்துவிட்டது தாலாட்டு இலக்கியத்தின் ஈடுபாடு, திருவிடை மருதூர் பற்றி ஐயரவர்கள் பாடியது.) எல்லாத் தலத்தும் இடைமருதே மேலாமென்று எல்லா மளித்தாட் கியம்பியருள் மாமணியோ! தெய்வமில்லை என்னுஞ் சிதடர்கள் வாய்மூடச் செய்வரத னாகியநம் தெய்வ சிகாமணியோ! துங்கத் தமிழ்மொழியின் தூய்மை எவரும் மறியச் சங்கப் புலவரிடைத் தங்கியருள் நாவலரோ! ஆரா வமுதோ அருட்கடலோ எம்முடைய தீராத துன்பமெலாந் தீர்க்குந் சிவக்கொழுந்தோ! கருதும் அடியார் கவலையெலாம் போக்கி மருத நிழலினிடைவாழ்ந்தருளும் மாமணியோ! 10. சங்கராசாரியர் தாலாட்டு, (19ஆம் நூற்றாண்டின் இறதி, 21 கண்ணிகள். அச்சுதனந்த சுவாமிகள் பாடியது.) புலனாதி கள்வழயிற் போகா தருகிருத்தி நலமார் அருட்பார்வை நாட்டவந்த நாயகனோ, நானிவனென் றுன்னாமல் நடுவா யிலங்கறவே தானமரும் நிலையிதெனச் சாற்றுஞ் சகத்குருவோ. மாயை அவித்தையெலாம் மாண்டவழி காணாமல் ஓயும் படியருளில் ஒன்றவைக்கும் உத்தமனோ. துவிதப் பிழையறுக்கத் துசங்கட்டி யொன்றாக்கி விவிதச்சங் கற்பமெலாம் வேரறச்செய் வித்தகனோ. என்னைஅழித் தெழுந்த இன்பப் பெருக்கோபின் தன்னையெனக் களித்த சமரசசாட் சாத்பரனோ. 11. திருமலை முருகன் தாலாட்டு. (20ஆம் நூற்றாண்டு. 101 கண்ணிகள் ஆசிரியர் தென்காசி வன்னியப்பன்.) கந்தா திருமலையிற் காலமெலாம் வீற்றிருக்குஞ் சிந்தா மணியான செல்வமேநீ கண் வளராய். தொட்டி அசைந்தாடத் தோகைமார் தாலாட்ட சுட்டியசைந்தாடச் சுந்தமே கண்வளராய். ஆதி குறுமுனிக்கு அருள் கொடுக்க வந்தவனே நீதி யுடையவனே நீலமயில் வாகனனே. கார்த்திகைப் பெண்களுமே கனிந்துன்னைத் தாலாட்டப் பூர்தியாய்க் கேட்டுகந்த பூரணனே கண்வளராய். 12. நால்வர் தாலாட்டு. (20ஆம் நூற்றாண்டு. சைவசமயாசாரியர் நால்வர் மீதும் தனித்தனி 12 கண்ணிகள் கொண்டது. பாடல்கள் அவரவர் வரலாற்றைக் கூறுவன.) சம்பந்தர் : மேலாம் சிவபாத இருதயர்நீ ராடுகையில் நாலாரணம் துதிக்கும் நாயகிபால் உண்டவனோ. அருஞானம் ஆருயிர்கட் களிக்கஉல கினில் உதித்துத் திருஞான சம்பந்தர் சீர்பேர்கொள் சின்மயனோ. அப்பர் : (12 கண்ணிகள், முதலெழுத்துக்கள் க - ஔ ஆகிய வரிசையில் அமைந்துள்ளன.) ஐய னெனத்துதிசெய் அப்பூதி சேயை முனம் வையமிசை வரவழைத்த வான்புகழும் நற்றவனோ, ஒண்ணகைசேர் திலகவதி யுடன்தோன்றிச் சூலைகெடப் பண்ணிற் “கூற்றாயினவா” பாடுசிவ பாக்கியனோ. சுந்தரர் : (12 கண்ணிகளின் முதலெழுத்துக்களும் அகரமாகவே செய்யப் பெற்றுள்ளன.) அரனளித்த அரும்பொருள்கள் அனைத்தையும் ஆற்றிட்டு நன்னீரு பரவியதோர் தடத்தெடுத்த பாக்கிய சிகாமணியோ அருமறைசொல் குண்டையூ ரானருளம் அரிகுற்றுப் பெருமைமிக பூதகணம் பெற்ற அருட் பெருந்தகையோ மாணிக்கவாசகர் : (12 கண்ணிகளின் முதலெழுத்தும் க-கௌ வரிசையில் அமைந்துள்ளன.) கிள்ளைகள் பண் செய்மதுரைக் கீர்த்தி மிக்க பாண்டியனார் வெள்ளை மதிச் சடையனடி மேவச்செய் வித்தகனோ கொண்டலென் உயிர்கள்களி கொள்ள உயர் ஞானநெறி மண்டலத்தில் தெறிந்துயச்சீர் வாசகத்தைப் பொழிந்தவனோ. காந்தி தாலாட்டு (காரைக்குடி ராய, சொக்கலிங்கனாரைத் தமிழுலகம் நன்கு அறியும். சீர்திருத்த இயக்கங்கள், சுதந்திரப் போராட்டம், தமிழ் வளர்ச்சி இயக்கங்கள் அனைத்திரும் அவர் முன்னிணியில் நின்றவர். காந்தியத்தில் தோய்ந்த பழந் தொண்டர். அவர் பாடிய இரு தாலாட்டுக்களிலும் புதுயுக மணம் கமழும்.) பெண்பால் : காந்தி அறமதனைக் காசினியெலாம் பரப்பப் போந்த இளங்குடியே பொன்னேநீ கண்வளராய். பெண்ணடிமை யென்றுசொலும் பேதைமட வார்த்தங்கள் கண்திறக்க வந்தெபெரும் கற்பகமே கண்வளராய். சாதியில் உயர்விழிவு சாதிக்கும் வன்கண்ணர் பேதையார் என்றறியப் பெண்ணரசே கண்வளராய். முதுமை எழிலோடு முபதுலகும் போற்றவளர் புதுமை கலந்த உயர் பெண்ணரசி நீதானோ. பீடு பிறங்கஅரும் பெண்மைசிறந் தோங்கிமிக நாடு செழிக்கவந்த நல்லியலாள் நீதானோ. ஆண்பால் : இந்தியத் தாய்விலங்கை ஈர்ந்தெறியப் பிறந்தபெரு மைந்த அருந்தவமே மரமணியே கண்வளராய். தீண்டாமை வேண்டுமெனச் செப்புகின்ற புன்மதியைப் பூண்டோடு கீண்டெறியப் பிறந்தவனே கண்வ ளராய், நாட்டின் விடுதலைக்கு நல்லுயிரேனுஞ்சிறிதும் வாட்டம் தவிர்த்தீய மாமகனே கண்வளராய். சாந்தம் பொறைகருணை தன்மைசீர் புனிதமிவை ஏந்து புகழுடைய எழிற்காந்தி நீதானோ. திருக்குறளும் தாலாட்டும். திருக்குறளில் ஈடுபடாதோர் தமிழ் நாட்டில் கற்றோர் யாருமில்லை . புலவர் அனைவரும் எந்தக் காலத்திலும் அதனிடத்து மிக்க ஈடுபாடுடையராய் அதன் பாடல்களையும் கருத்துகளையும் தங்கள் எழுத்துகளில் அமைத்துள்ளார்கள். இளங்கோவடிகள் தொடங்கி இன்றுவரை இது அனைவரும் ஒப்பும் உண்மை . கச்சியப்ப முனிவர் என்னும் பெரும்புலவர் 18ஆம் நூற்றாண்டினிறுதியில் திருக்குறளின் ஒரு பகுதியை விளக்கிக் கூறும் படலமாகத் தம் புராண மொன்றில் ஒரு படலம் அமைத்திருக்கிறார். குறள் உதாரணக் கதைகளாக அமைந்துள்ள வெண்பா நூல்களும் விருத்தப்பா நூல்களும் எண்ணில் அடங்கா. அங்ஙனமே இந்நூற்றாண்டில் தாலாட்டுப் பாட முற்பட்ட புலவர் இருவர் திருக்குறள் அதிகாரங்களை அப்படியே தாலாட்டாகப் பாடியிருப்பது அறியத்தக்கது. முதலாவது, மு.பொ.ஈசர மூர்த்தியாபிள்ளை பாடிய நீதிநெறித் தாலாட்டு. காலம் 1909. இது பல முறை அச்சாகியுள்ளது. குறளின் 133 அதிகாரங்களுக்கும், அதிகாராத்துக்கு ஒரு கண்ணியாக இவர் 133 கண்ணிகள் பாடியிருக்கிறார். சில உதாரணப் பாடல்களைக் கீழே காணலாம். கண்னேஎன் கண்மணியே கண்மணியின் உள்ஒளியே எண்ணே எழுந்தே எழுத்துணரும் மாமணியே. அகரம் எழுத்தின் முதல் ஆகிநிற்கும் தன்மையைப்போல் சகம் எலாம் தோற்றுவிக்கும் சாமியை நீகைதொழுவாய். நிலையில்லா வாழ்வை நிலையுடைய தாகவெண்ணி அலைவு தருந் தீங்கியற்றல் ஆகாது கண்மணியே. கற்றறிந்திலாய் எனினும் கேட்டறிவாய்; அவ்வறிவும் உற்றதுணையாய் உதவும்; உண்மையிது கண்மணியே. கேட்டார் வயப்படவும் கேளார் விரும்பிடவும் பாட்டார் மதிக்கும் உயர் பால்மொழநீ செப்புகண்ணே . நடத்தையால் நாணுடைமை; ஊன், உடையார் இடத்துமுண்டு; பாவை இடைக்கம் உடைஉண்டு, கண்ணே . தூங்கம் போதெல்லாம் என் தோள்மேலிருந்து, விழித் தாங்குநெஞ்சி னுள் ஒளிப்பர் அன்புடையார், ஆரமுதே. யாழ்ப்பாணம் வ. நா. கணேச பண்டிதர் என்பவர் பாடிய மற்றொரு தாலாட்டு, திருக்குறள் அதிகார சாரமாகிய நன்னெறித் தாலாட்டு எனப் பெயர் பெறும். (அச்சானது 1919.) பல அதிகாரங்களுக்கு ஒவ்வொரு பாடல் வீதமும், சிலவற்றுக்கு இரண்டு அல்லது மூன்றும் இவர் பாடியிருக்கிறார். மொத்தம் கண்ணிகள் 120. உதாரணப் பாடல்களைக் கீழே காணலாம். எல்லாரிடத்தும் அன்பாய் ஏய்தலே இல்லறமாம் பொல்லாரை நீக்கிப் புகழ்பெறுவாய் கண்மணியே. பொறுத்தலே நன்றாம் புகழ்வருமேற் பொல்லாரை ஒறுத்தலும் நன்றாம் அதனை உய்த்துணர்ந்து செய்கிளியே. கொல்லான் புலாலை யுண்ணாக் கோதில்தவத் தானைஉயிர் எல்லாம் தொழுதுநின்று எத்துமே கண்மணியே. செல்வம் அறிவுகல்வி சீராற்றல் ஆண்மைகளால் வல்லபெரி யார்துணையை வாயறிந்து சொல் கிளியே. துன்பத்துக் காரே துணையாவார் நம்முடைய அன்புக் குரியநெஞ்சம் ஆகாக்கால் கண்மணியே. இ. வாய்மொழி வழக்கு சென்ற நூற்றாண்டின் இறுதியில் பலவர் பலர், பெண்கள் உண்மையிலேயே குழந்தையைத் தொட்டிலிற்கிடத்தித் தாலாட்டுவதற்கென்று பலவகைப் பாடல்கள் செய்துள்ளார்கள். லாலி, கும்மி, ஊஞ்சல் முதலியனவாக இவை அனேக வகை. அவற்றுள் தாலாட்டும் ஒன்று. தெரிந்த வரையில் இவ்வகையான சில முக்கியமான தாலாட்டுப்பாடல்களின் மாதிரியைப் பின்னே காணலாம். சுந்தர் தாலாட்டு (19ஆம் நூற்றாண்டு. 32 கண்ணிகள். இனிமையான சொல்லமைப்பு, ஆசிரியர் பெயர் அறியக் கூடவில்லை .) குமரா உனைத்தொழுவேன் குன்றெறிந்த வேல்முருகா அமராபதிகாக்கும் ஆறிரண்டு தோளானோ! கட்டு வடமசையக் காலசைய வேலசைய முத்து வடமசைய முன்வந்து நின்றனோ! குயில்கூவ மயிலாடக் கோவில் திருச் சங்கூத அழகான மயிலேறி உலகாள வந்தானோ! வருண மயிலேறி வள்ளியம்மை தன்னுடனே அருணகிரிக் கோபுரத்தை அஞ்சலாய் நின்றானோ! நினைத்த இடந்தோறும் நீலமயி லேறி வந்து மனத்துக் கவலையெலாம் மாற்றும் பெருமாளோ! ஸ்ரீராமர் தாலாட்டு (31 கண்ணிகள், ராமசரிதத்தை வரலாறாகத் தாலாட்டில் உரைப்பது, 19ஆம் நூற்றாண்டு. இதில் பல பாடங்கள் இருப்பதால், வழக்கில் அதிகம் இருந்ததென்று யூகிக்கலாம்) தெள்ளுதமிழ் கொண்டாடச் சீரான தசரதற்குப் பிள்ளைவிடாய் தீர்த்த பெருமானைச் சொன்னாரோ. வீராதி வீரனோ வேந்தர்சூடாமணியோ சீராமன் என்னும் திருநாமம் பெற்றானோ. அலைகடல்சூழ் வையகத்தே ஆரும் அசைக்கஒண்ணாச் சிலையை வளைத்தொடித்துச் சீதை மணம் செய்தானோ. பத்து மணிமுடியும் பத்திரண்டு திண்கோளும் தத்திவிழ எண்த தடம்பெரிய சேவகனோ சீராம ராமனோ சீதை சிறை மீட்டவனோ பேரால் பெரியவனோ பேருலகை ஆண்டவனோ. சிதம்பரர் தாலாட்டு (19 நூற்றாண்டு 30 கண்ணிகள்) தானந் தழைக்கத் தரணியுள்ளோர் ஈடேற ஆனந்தத் தாண்டவமாய் ஆடும் சிதம்பரனோ வெண்ணலே வெண்மதியே வெண்குடையைத் தில்லைநகர்க் கண்ணலுடன் கூடிவிளை யாடவா அம்புலியே உம்பர் பெருமானே உமையாள்தன் நாயகனே செம்பொன் மணிமன்றில் சிதம்பரரே கண்வளரீர் பாலனென்று மார்க்கண்டன் பத்தி தனையறிந்து காலன் தனையுதைத்துக் கால்கள் சிவந்தானோ தேவி சிவகாமியுடன் சிதம்பரரே கண்வளரீர் கோவில் பரிசனமும் கூடவே கண்வளரீர் (இது முயன்று செய்த தாலாட்டாயிருப்பினும், சில நயங்கள் பொருந்தியிருக்கக் காணலாம்.) குமரவேள் தாலாட்டு (19 ஆம் நூற்றாண்டு 51 கண்ணிகள் எவ்வுளூர் ராமசாமிச்செட்டியார்) காலின் மணிகள் கிண்கிணிகள் கல்லெனநன் கோலமிட வேலும் அரன்தன் எண்டோள் ஏறிவளை யாடுமன்றோ நாலா ரணம்பரவு நாரா யணனளித்த வேலாயுதமெந்தும் வீரப்ர தாபமன்னோ வீரமிகு தாருகனார் வெற்பாகக் கண்டுவைவேல் சோரமற விட்டுத் தொளைத்துவெற்றி கொண்டவனோ அன்பிற் புகழ்செல் அருணகிரி நாதர் தமக்கு இன்பமைநற் பேறளிக்கும் ஏர்ப்பரங்கி ரிக்கரசோ வன்பிணிதாரித்திரம்பேய் மாமலடு கூன்செவிடு துன்பூமை நீங்கியுய்யத் தூய்வரந்தந் தாள்பரனோ சிறுத்தொண்டர் வில் பாட்டு (19 ஆம் நூற்றாண்டு) ஆராரோ ஆராரோ ஆணரசே ஆராரோ சீராரும் எங்கள் குல தீபமேநீ ஆராரோ சீர்மேவு மாமணியே தேடக்கிடையா அன்னமே பார்மேவும் கண்மணியே பாலகனே கண்ணுறங்காய் வர்ணமணித் தொட்டிலிலே வாய்த்த மெத்தை மீதிலேநீ கட்டிக் கரும்பே என்கணுவில்லாச் செங்கரும்பே ஆலைக்கரும்பே என்றன் ஆரமுதே கண்ணுறங்காய் அன்னக்கொடி பறக்கும் அன்பனது மேடையிலே மன்னுதர்மம் செய்துவரும் மன்னவரின் புத்திரனே மார்பிற் பதக்கமின்ன மகர கண்டியார்ந்து மின்ன ஐங்கலப்பூ மெத்தையிலே ஐயனே நீ கண்ணுறங்காய் பிள்ளையில்லை என்று சொல்லித் தில்லைவனம் போய் முழுகி மைந்தரில்லை என்று சொல்லி வானவரைத் தானோக்கி வருந்தித் தவமிருந்து பெற்றெடுத்த கண்மணியே பிள்ளைக்கலி தீர்க்கவந்த சீராளா கண்ணுறங்காய் ஆண்பிள்ளைத் தாலாட்டு (19 ஆம் நூற்றாண்டு 52 கண்ணிகள் எவ்வுளூர் ராமசாமிச் செட்டியார்) கின்னரி வாசிக்கக் கிளிகளுடன் பூவை கொஞ்ச வன்ன மணித் தொட்டிலிலே வாழ்வேநீ கண்வளராய் பிள்ளைக் கலிதீர்க்கப் பெருக்கமுடன் வந்துதிக்க வள்ளலே திவ்ய மரகதமே கண்வளராய் அக்காள் அடித்தாளோ அம்மான்மார் வைதாரோ மிக்காகத் தேம்புவதேன் வித்தகனே கண்வளராய் வாச மலரெடுத்து வாசிகையாகத் தொடுத்து நேசமுடன் மாமிதந்தாள் நித்தலமே கண்வளராய் ஓசைக் குயில் கூவ உவந்து மயில் கூத்தாட நேசக் கிளிகள் கொஞ்ச நிலைவிளக்கே கண்வளராய் பெண்பிள்ளைத் தாலாட்டு (19 ஆம் நூற்றாண்டு. 30 கண்ணிகள். ஆசிரியர் எவ்வுளூர் ராமசாமிச் செட்டியார்) மண் பிசைந்தே உண்டநெடு மால்மயங்க வந்தமின்னே கண்பிசைந்தே உள்ளம் கலங்குவதேன் கண்வளராய் அத்தான்வந் தேசினரோ ஆகடியம் பேசினரோ எத்தால் மனவருத்தம் எந்திழையே கண்வளராய் ஓடாத மானே உவட்டாத செந்தேனே நீடாழி சூழ் புவியோர் நித்தியமே கண்வளராய் பொற்றா மரைமேவும் பொன் அனமே மின்இனமே நற்றாமம் சூடும் நவமணியே கண்வளராய் செம்பவள வாயார் தினமும் புகழ்ந்துரைக்கும் விம்பவள மேவும் விதுகமுகத்தாய் கண்வளராய் நூதன பிள்ளைத் தாலாட்டு (20 ஆம் நூற்றாண்டு தொடக்கம், 39 கண்ணிகள். சிறுமணவூர் முனிசாமி முதலியார். இவர் இந்நூற்றாண்டின் தொடக்கத்தில் பாமர் மக்களுக்குவப்பான சிறு பாடல்கள் பல புனைந்தவர்) கொட்டி வைத்த முத்தே குவித்தநவ ரத்தினமே கட்டிப் பசும்பொன்னே கண்மணியே கண்வளராய் நித்திரைசெய் நித்திரைசெய் நெடிய புவி மன்னவனே சித்திரப்பூந் தொட்டிலிலே சிகாமணியே நித்திரைசெய் அத்தை அடித்தாளோ அமுதூட்டும் கையாலே சற்றே மனம் பொறுத்துச் சந்திரனே கணவளராய் கோட்டை அதிகாரி கொடிக்காரர் உங்களம்மான் கேட்டதெல்லாந் தருவார் கிஞ்சுகமே கண்வளராய் பொன்னால் எழுத்தாணி பொற்பமைந்த ரட்டோலை சின்ன அண்ணாகொண்டுவந்தார் சிறுபொழுது கண்வளராய். ★ ★ ★ பெண்குழந்தை தாலாட்டு ஆராரோ ஆரரிரோ ஆராரோ ஆராரோ ஆரரிரோ ஆராரோ ஆராரோ ஆரரிரோ ஆராரோ ஆராரோ ஆரரிரோ ஆராரோ சோலை மலரே! சுவர்ணத்தின் வார்ப்படமோ காலை இளஞ் சூரியனைக் காட்டும் பளிங்குருவே! வண்மை உயர்வு மனிதர் நலம் எல்லாம் பெண்மையினால் உண்டென்று பேசவந்த பெண்ணழகே! நாய்என்று பெண்ணை நவில்வார்க்கும் இப்புவிக்கும் தாய் என்று காட்டத் தமிழர்க்கு வாய்த்தவளே! வெண் முத்தில் நீலம் விளையாடிக் கொண்டிருக்கும் கண்கள் உறங்கு, கனியே உறங்குவாய். அன்னத்தின் தூவி அனிச்ச மலர் எடுத்துச் சின்ன உடலாகச் சித்திரித்த மெல்லியலே! மின்னல் ஒளியே விலைமதியா ரத்தினமே! கன்னல் பிழிந்து கலந்த கனிச்சாறே! மூடத் தனத்தின் முடைநாற்றம் வீசுகின்ற காடு மணக்கவரும் கற்பூரப் பெட்டகமே! வேண்டாத சாதி இருட்டு வெளுப்பதற்குத் தூண்டா விளக்காய்த் துலங்கும் பெருமாட்டி! புண்ணில் சரம்விடுக்கும் பொய்மதத்தின் கூட்டத்தைக் கண்ணில் கனல்சிந்திக் கட்டழிக்க வந்தவளே! தெய்விகத்தை நம்பும் திருந்தாத பெண் குலத்தை உய்விக்க வந்த உவப்பே பகுத்தறிவே! எல்லாம் கடவுள் செயல் என்று துடை நடுங்கும் பொல்லாங்கு தீர்த்துப் புதுமைசெய வந்தவளே! வாயில் இட்டுத் தொப்பை வளர்க்கும் சதிக்கிடங்கைக் கோயில் என்று காசுதரும் கொள்கை தவிர்ப்பவளே! சாணிக்குப் பொட்டிட்டுச்சாமி என்பார் செய்கைக்கு நாணி உறங்கு; நகைத்து நீ கண்ணுறங்கு -1938 திராவிட அன்னை ஆண்குழந்தை தாலாட்டு ஆராரோ ஆரரிரோ ஆராரோ ஆராரோ ஆரரிரோ ஆராரோ ஆராரோ ஆரரிரோ ஆராரோ ஆராரோ ஆரரிரோ ஆராரோ சீராகும் இன்பத் திராவிடனே எங்கரும்பே ஆரா அமுதே அன்பேநீ கண்வளராய். ஆரியர்கள் இங்கே அடிவைக்கும் முன்னே வேரிட்டு வாழ்ந்த வெற்றித் திராவிடரின் பேரர்க்குப் பேரன் பிள்ளாய்நீ கண்ணுறங்கு! சேரஅரிதான செல்வமே கண்ணுறங்கு. வெண்தா மரையில் விளையாடும் வண்டுபோல் கண்தான் பெயரநீ என்ன கருதுகின்றாய்? பண்டைத் திராவிடத்தின் பண்பு குலைக்க இனி அண்டைப் பகைவர் நினைப்பர் எனும் ஐயமோ ? தொண்டு விரும்போம் துடைநடுங்கோம், எந்நாளும் சண்டை இட்டுத் தோற்றதில்லை தக்க திராவிடர்கள் எண்திசையும் நன்றறியும் அன்றோ இனிக்கும் கற் கண்டே கனியே எங் கண்மணியே கண்வ ளராய். தங்கம் உருக்கித் தகடிட்டுப் பன்மணிகள் எங்கும் அழுத்தி இயற்றியதோர் தொட்டிலிலே திங்கள் திகழ்ந்ததெனும் வெண்பட்டு மெத்தையின் மேல் மங்கா உடல் மலரும் வாய்மலரும் கண்மலரும்; அங்கங்கு அழகுசெயும் ஆண்அழகே கண்வளராய் எங்கள் மரபின் எழில் விளக்கே கண் வளராய்! குயில் 1947 ஆண் குழந்தை தாலாட்டு ஆராரோ ஆரரிரோ ஆராரோ ஆராரோ ஆரரிரோ ஆராரோ ஆராரோ ஆரரிரோ ஆராரோ ஆராரோ ஆரரிரோ ஆராரோ காராரும் வானத்தில் காணும் முழுநிலவே! நீராரும் தண்கடலில் கண்டெடுத்த நித்திலமே! ஆசை தவிர்க்கவந்த ஆணழகே சித்திரமே! ஓசை ஒளித்துமலர் உண்ணுகின்ற தேன்வண்டே! உள்ளம் எதிர்பார்த்த ஓவியமே என்மடியில் பிள்ளையாய் வந்து பிறந்த பெரும் பேறே! சின்ன மலர்வாய் சிரித்தபடி பால்குடித்தாய் கன்னலின் சாறே, கனிரசமே கண்ணுறங்கு. நீதி தெரியும் என்பார் நீள்கரத்தில் வாளேந்திச் சாதி என்று போராடும் தக்கைகளின் நெஞ்சில் கனல் ஏற்ற வந்த களிறே எனது மனது ஏறுகின்ற மகிழ்ச்சிப் பெருங்கடலே! தேக்கு மரம்கடைந்து செய்ததொரு தொட்டிலிலே ஈக்கள் நுழையாமல் இட்ட திரைநடுவில் பொன்முகத்திலே இழைத்த புத்தம் புதுநீலச் சின்னமணிக் கண்ணை இமைக்கதவால் மூடிவைப்பாய்! அள்ளும் வறுமை அகற்றாமல் அம்புவிக்குக் கொள்ளைநோய் போல் மதத்தைக் கூட்டி அழும் வைதிகத்தைப் போராடிப் போராடிப் பூக்காமல் காய்க்காமல் வேரோடு பேர்க்கவந்த வீரா இளவீரா! வாடப் பலபுரிந்து வாழ்வை விழலாக்கும் மூடப் பழக்கத்தைத் தீதென்றால் முட்டவரும் மாடுகளைச் சீர்திருத்தி வண்டியிலே பூட்டவந்த ஈடற்ற தோளா, இளத்தோளா கண்ணுறங்கு! எல்லாம் அவன் செயலே என்று பிறர் பொருளை வெல்லம் போல் அள்ளி விழுங்கும் மனிதருக்கும் காப்பார் கடவுள் உமைக் கட்டையில் நீர் போகுமட்டும் வேர்ப்பிர் உழைப்பீர் என உரைக்கும் வீணருக்கும் மானிடரின் தோளின் மகத்துவத்தைக் காட்ட வந்த தேனின் பெருக்கேஎன் செந்தமிழே கண்ணுறங்கு! 1938 தாயின் தாலாட்டு பொன்னே மணியே புதுமலரே செந்தேனே மின்னே கருவானில் வெண்ணிலவே கண்ணுறங்கு. தன்னே ரிலாத தமிழே தமிழ்ப்பாட்டே அன்னைநான்! உன்விழியில் ஐயம் ததும்புவதேன்? என்பெற்ற அன்னையார் உன்பாட்டி இன்னவர்கள் உன்தந்தை அன்னை உயர்பாட்டி இன்னவர்கள். என்னருமைத் தோழிமார் உன்தாய்மார் அல்லரோ? கன்னற் பிழிவே கனிச்சாறே கண்ணுறங்கு. சின்னமலர்க் காலசையச் செங்கை மலர் அசைய உன்கண் உரைப்பதென்ன என்கண்ணே கண்ணுறங்கு. குடும்பவிளக்கு - 4 தோழிமார் தாலாட்டு தொகைமுத்துத் தொங்கலிட்ட தொட்டிலிலே அன்பே நகைமுகத்தின் பெண்ணான நன்முத்தே மானே. தகையாளர் வையத்தில் தந்த திருவே தொகைபோட்டு வாங்கொண்ணாத் தூய் அமிழ்தே! கண் வளராய். கன்னங் கரிய களாப்பழத்தின் கண்ணிரண்டும் சின்னஞ் சிறிய ஒளிநெற்றித் தட்டிலிட்டே. இன்னும் எமக்கே இனிப்பூட்டிக் கொண்டிருந்தால் பொன் “உறக்க நாடு” புலம்பாதோ கண்மணியே! தங்கத் திருமுகத்தின் தட்டினிலே உன்சிரிப்பைப் பொங்கவைத்தே எம்உளத்தைப் பொங்கவைத்துக் கொண்டிருந்தால் திங்கள் முகத்துன் சிரிப்போடு தாம்கொஞ்ச அங்“குறக்க நாட்டார்” அவா மறுத்தது ஆகாதோ? செங்காந்தளின் அரும்போ சின்னவிரல்? அவ் விரலை அங்காந்த வாயால் அமிழ்தாக உண்கின்றாய். கொங்கை அமிழ்து புளித்ததோ கூறென்றால் தெங்கின்பாளைச்சிரிப்புத் தேனை எமக்களித்தாய். பஞ்சுமெத்தைப் பட்டுப் பரந்தொரு மேல்விரிப்பில் மிஞ்சும் மணமலரின் மேனி அசையாமல் பிஞ்சுமா வின்விழியைப் பெண்ணே இமைக்கதவால் அஞ்சாது பூட்டி அமைவாகக் கண்ணுறங்காய் . குடும்பவிளக்கு - 4 தங்கத்துப் பாட்டி தாலாட்டு ஆட்டனத்தி யான அருமை மணாளனையே ஓட்டப் புனற்கன்னி உள்மறைத்துக் கொண்டுசெல்லப் போதுவிழி நீர்பாயப் போய்மீட்டுக் கொண்டுவந்த ஆதிமந்தி கற்புக் கரசியவள் நீதானோ? செல்வத் தமிழ்வேந்தர் போற்றும் செழுந்தமிழாம் கல்விக் கரசி கலைச்செல்வி ஔவை இனியும் தமிழ்காத்தே இந்நாட்டைக் காக்க நினைந்துவந்தாள் என்னிலவள் நீதானோ என்கிளியே? இனியு நற்காக்கை தமிழ்காத்தே இந்நாட்டைக் காக்க நினைந்துவந்தாள் என்னிலவள் நீதானோ என்கிளியே? நாட்டு மறவர்குடி நங்கையரைச் செந்தமிழின் பாட்டால் அமிழ்தொக்கப் பாடிடுவாள் நற்காக்கை பாடினியாம் நச்செள்ளை, பார்புகழும் மூதாட்டி தேடிவந்தாள் என்றுரைத்தால் செல்வமே நீதானோ? அண்டும் தமிழ்வறுமை அண்டாது காக்கவந்த எண்டிசையும் போற்றும் இளவெயினி நீதானோ? தக்கபுகழ்ச் சோழன் தறுகண்மை பாடியவள் நக்கண்ணை என்பளும் நீதானோ நல்லவளே? கற்றோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளோடு முற்றோன்றி மூத்த குடியின் திருவிளக்கே. சற்றே உன் ஆடல் தமிழ்ப்பாடல் நீநிறுத்திப் பொற்கொடியே என்னருமைப் பொன்னே நீ கண்ணுறங்காய். குடும்பவிளக்கு - 4 மலர்க்குழற் பாட்டி தாலாட்டு உச்சி விளாம்பழத்தின் உட்சுளையும் கற்கண்டும் பச்சைஏலப்பொடியும் பாங்காய்க் கலந்தள்ளி இச்செச் செனஉண்ணும் இன்பந்தான் நீகொடுக்கும் பிச்சைமுத்துக் கீடாமோ என்னருமைப் பெண்ணரசே! தஞ்சைத் தமிழன் தரும் ஓவியம் கண்டேன் மிஞ்சு பலிவரத்தின் மின்னும்கல் தச் சறிவேன், அஞ்சுமுறை கண்டாலும் ஆவலறா உன்படிவம் வஞ்சியே இப்பெரிய வையப் படிவம்! முகிழாத முன்மணக்கும் முல்லை மணமும் துகள் தீர்ந்த சந்தனத்துச் சோலை மணமும் முகநிலவு மேலேநான் உன்உச்சி மோந்தால் மகிழ மகிழ வருமணத்துக் கீடாமோ! எமையாள் இனத்தாரின் யாழின் இசையும் குமிக்கும் ஒருவேய்ங் குழலின் இசையும் தமிழின் இசையும் சரியாமோ என்றன் அமிழ்தே மலர்வாய்நீ அங்காப்பின் ஓசைக்கே? இன்பத்து முக்கனியே என்னன்பே கண்ணுறங்கு! தென்பாண்டியர்மரபின் செல்வமே கண்ணுறங்கே . குடும்பவிளக்கு - 4 தாய் தாலாட்டு ஆராரோ ஆரரிரோ ஆராரோ ஆராரோ ஆரரிரோ ஆராரோ சீரோடு பூத்திருந்து செந்தா மரைமீது நேரோடி மொய்த்துலவு நீலமணி வண்டுதனைச் செவ்விதழால் தான்மூடும் சேதிபோல உன்விழியை அவ் இமையால் மூடியே அன்புடையாய் நீயுறங்கு கன்னங் கறேலென்று காடுபட்ட மேகத்தில் மின்னி வெளிப்பட்ட விண்மீன்போல் உன்றன்விழி சின்ன இமையைத் திறந்ததேன் நீயுறங்கு; கன்னலின் சாறே! கனிச்சாறே நீயுறங்கு! குத்துண்ட கண்ணாடி கொண்டபல விரல்கள் போல் துத்திக்காய் போலச் சுடர்முகத்தை நீ சுருக்கி ஏனழுதாய் என்றன் இசைப்பாட்டே கண்ணுறங்கு! வான்நழுவி வந்த வளர்பிறையே கண்ணுறங்கு! கன்னம்பூரித்துக் கனியுதடு மின்உதிர்த்துச் சின்னவிழி பூத்துச் சிரித்ததென்ன செல்வமே? அன்னைமுகம் வெண்ணிலவே ஆனாலும் உன்விழியைச் சின்னதொரு செவ்வல்லி ஆக்காமல் நீயுறங்கு! நெற்றிக்கு மேலேயுன் நீலவிழியைச் செலுத்திக் கற்றார்போல் என்ன கருதுகின்றாய்? நீ கேட்டால் ஆனை அடிபோல் அதிரசத்தைச் சுட்டடுக்கித் தேனில் துவைத்தெடுத்து தின்என்று தாரேனா? கொட்டித்தும்பைப்பூக் குவித்ததுபோல் உன்னெதிரில் பிட்டுநறு நெய்யில் பிசைந்துவைக்க மாட்டேனா? குப்பை மணக்கக் குடித்தெருவெல் லாம் மணக்க அப்பம் நிலாப்போல் அடுக்கிவைக்க மாட்டேனா? மீன்வலைசேந் தும்கயிற்றை வேய்ந்த வளையம்போல் தேன் குழல்தான் நான் பிழிந்து தின்னத் தாரேனா? விழுந்துபடும் செங்கதிரை வேல் துளைத் ததைப் போல் உழுந்துவடை நெய்யொழுக உண்ணென்று தாரேனா? தாழையின் முள்போன்ற தகுசீ ரகச்சம்பா ஆழ உரலில் இடித்த அவலைக் கொதிக்கும் நெய் தன்னில்தான் கொட்டிப் பொரித்துப் பதக்குக் கொருபதக்காய்ப் பாகும் பருப்புமிட்டே, ஏலத்தைத் தூவி எதிர்வைக்க மாட்டேனா? ஞாலத்து ஒளியே நவிலுவதை இன்னுங்கேள்: செம்பொன்னை மேற்பூசித் தேனைச் சுளையாக்கிக் கொம்பில் பழுத்தநறுங் கொய்யாப் பழமும், செதில் அறுத்தால் கொப்பரையில் தேன் நிறைந்ததைப் போல் எதிர்தோன்றும் மாம்பழமும், இன்பப் பலாப்பழமும், வேண்டுமென்றால் உன்னெதிரில் மேன்மேற் குவிந்து விடும்! பாண்டியனார் நன்மரபின் பச்சைத் தமிழே! நெருங்க உறவுக்கு நீட்டாண்மைக் காரர் அறஞ்சிறந்த பல்போடி ஆன தமிழருண்டே! எட்டும் உறவோர்கள் எண்ணறு திராவிடர்கள் ‘வெட்டிவா' வென்றுரைத்தால் கட்டிவரும் வீரர் அவர்! என்ன குறைச்சல் எதனால் மனத்தாங்கல்? முன்னைத் தமிழர் முடிபுனைந்து ஞாலத்தை ஓர்குடைக் கீழ்ஆண்ட உவகை உனக்குண்டு! சேரனார் சோழனார் சேர்த்தபுகழ் உன்புகழே! ஓவியக் கரைகண்டார் உண்மைநெறி தாம்வகுத்தார் காவிய சிற்பத்தில் கவிதையினில் கைகாரர் உன்னினத்தார் என்றால் உனக்கின்னும் வேண்டுவதென்? பொன்னில் துலங்குகின்ற புத்தொளியே கண்ணுறங்கு! கற்சுவரை மோதுகின்ற கட்டித் தயிரா, நற் பொற்குடத்தில் வெண்ணெய் தரும் புத்துருக்கு நெய்யா, நல் ஆனைப் பசுக்கள் அழகான வெண்ணிலவைப் போல்நிறைத்த பாலைப் புளியங்கொட்டை தான் மிதக்கும் இன்பநறும் பாலா, என்ன இல்லை ? கண்ணுறங்காய். அன்பில் விளைந்த என் ஆருயிரே கண்ணுறங்கு! காவிரியின் பாதாளக் காலின் சிலம்பொலியும், பூவிரியப் பாடும் புதிய திருப்பாட்டும், கேட்ட உழவர் கிடுகிடென நல்விழாக் கூட்டி மகிழ்ச்சி குதிகொள்ளத் தோளில் அலுப்பை அகற்றி அழகுவான் வில்போல் கலப்பை எடுத்து கன எருதை முன்னடத்திப் பஞ்சம் தலைகாட்டப் பாமரப் படைமன்னர், நெஞ்சம் அயராமல் நிலத்தை உழுதிடுவார், கோத்துநெல் முற்றித் தலைசாய்ந்த கோலத்தை மாற்றியடித்து மறுகோலம் செய்த நெல்லைத் தூற்றிக் குவித்துத் துறைதோறும் பொன்மலைகள் கோலம் புரியும் குளிர்நாடும் உன்னதுவே! ஞாலம்புகழும் நகைமுகத்தோய் கண்ணுறங்கு! செம்புழுக்கல் பாலோடு பொங்கச் செழுந்தமிழர் கொம்புத்தேன் செய்து குளிர்முகக் கனிச்சுளையோடு அள்ளூற அள்ளி முழங்கையார் நெய்யொழுக உள்ளநாள் உண்ணும் உயர்நாடும் உன்னதுவே! கோட்டுப்பூ நல்ல கொடிப்பூ நிலநீர்ப்பூ நாட்டத்து வண்டெல்லாம் நல்லஇசை பாய்ச்சக் கொத்தும் மரங்கொத்தி தாளங் குறித்துவரத் தத்துபுனல் தாவிக் கரையில் முழாமுழக்க மின்னும் பசுமை விரிதழைப்பூம் பந்தலிலே பன்னும் படம்விரித்துப் பச்சைமயி லாடுவதும், பிள்ளைக் கருங்குயில் ஓர் பின்பாட்டுப் பாடுவதும் கொள்ளை மகிழ்ச்சித் தமிழ்நாடு கொண்டாய் நீ! குப்பையெலாம் மாணிக்கக் கோவை, கொடுந்தூம்பில் கப்பும் கழுவடையில் கண்மணியும் பொன்னியும்! ஆடும் குளிர்புனலோ அத்தனையும் பன்னீராம்! சூடா மணிவரிசை தூண்டாச் சரவிளக்காம்! எப்போதும் தட்டார் இழைக்கும் மணியிழையில் கொப்படம் ஒன்றே கோடிபெறும் கொண்டைப்பூ என்பெறுமோ? ஐந்தாறு வெண்ணிலவும் ஆறேழு செங்கதிரும் வந்தாலும் நாணும் வயிரத் திருகாணி, ஒன்றுக்கே வையத்தை ஒப்படைக்க வேண்டுமெனில், உன்மார்பின் தொங்கலுக்கு மூன்றுலகு போதுமா? மின்காய்த்த வண்ணம் மிகுமணிக ளோடுபசும் பொன்காய்த்த பூங்கொடியா ரோடுதம் காதலர்கள். எண்ண மொன்றாகியே இல்லறத் தேர்தன்னைக் கண்ணுங் கருத்தும் கவருமோர் அன்புநகர். ஆரும்நிகர் யார்க்கும் அனைத்தும் சரியங்கென்று ஓரும்நகர், நோக்கி ஓடுந்தமிழ் நாடு நின்நாடு! செல்வம் நிறைநாடு கண்ணுறங்கு பொன்னான தொட்டிலில் இப்போது! இசையமுது-1 இந்த மின்னூலைப் பற்றி உங்களுக்கு இம்மின்னூல், இணைய நூலகமான, விக்கிமூலத்தில் இருந்து கிடைத்துள்ளது[1]. இந்த இணைய நூலகம் தன்னார்வலர்களால் வளருகிறது. விக்கிமூலம் பதிய தன்னார்வலர்களை வரவேற்கிறது. தாங்களும் விக்கிமூலத்தில் இணைந்து மேலும் பல மின்னூல்களை அனைவரும் படிக்குமாறு செய்யலாம். மிகுந்த அக்கறையுடன் மெய்ப்பு செய்தாலும், மின்னூலில் பிழை ஏதேனும் இருந்தால் தயக்கம் இல்லாமல், விக்கிமூலத்தில் இம்மின்னூலின் பேச்சு பக்கத்தில் தெரிவிக்கலாம் அல்லது பிழைகளை நீங்களே கூட சரி செய்யலாம். இப்படைப்பாக்கம், கட்டற்ற உரிமங்களோடு (பொதுகள /குனு -Commons /GNU FDL )[2][3] இலவசமாக அளிக்கப்படுகிறது. எனவே, இந்த உரையை நீங்கள் மற்றவரோடு பகிரலாம்; மாற்றி மேம்படுத்தலாம்; வணிக நோக்கத்தோடும், வணிக நோக்கமின்றியும் பயன்படுத்தலாம் இம்மின்னூல் சாத்தியமாவதற்கு பங்களித்தவர்கள் பின்வருமாறு: Arularasan. G Arun kaniyam Deepa arul kaniyam Info-farmer * * * ↑ http://ta.wikisource.org ↑ http://creativecommons.org/licenses/by-sa/3.0/ ↑ http://www.gnu.org/copyleft/fdl.html