பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் உரைநடை வளர்ச்சி அ. மு. பரமசிவானந்தம் 1978 8 அக்டோபர், 2020 அன்று விக்கிமூலத்தில் இருந்து பதிவிறக்கப்பட்டது உலகளாவிய பொதுக் கள உரிமம் (CC0 1.0) இது சட்ட ஏற்புடைய உரிமத்தின் சுருக்கம் மட்டுமே. முழு உரையை https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode என்ற முகவரியில் காணலாம். பதிப்புரிமை அற்றது இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர். நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை. *** இது, உலகத் தமிழ் விக்கியூடகச் சமூகமும் ( https://ta.wikisource.org ), தமிழ் இணையக் கல்விக் கழகமும் ( http://tamilvu.org ) இணைந்த கூட்டுமுயற்சியில், பதிவேற்றிய நூல்களில் ஒன்று. இக்கூட்டு முயற்சியைப் பற்றி, https://ta.wikisource.org/s/4kx என்ற முகவரியில் விரிவாகக் காணலாம். Universal (CC0 1.0) Public Domain Dedication This is a human readable summary of the legal code found at https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode No Copyright The person who associated a work with this deed has dedicated the work to the public domain by waiving all of his or her rights to the work worldwide under copyright law including all related and neighboring rights, to the extent allowed by law. You can copy, modify, distribute and perform the work even for commercial purposes, all without asking permission. *** This book is uploaded as part of the collaboration between Global Tamil Wikimedia Community ( https://ta.wikisource.org ) and Tamil Virtual Academy ( http://tamilvu.org ). More details about this collaboration can be found at https://ta.wikisource.org/s/4kx. பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் உரைநடை வளர்ச்சி சென்னைப் பல்கலைக் கழகக் ‘கல்கி’ நினைவுச் சொற்பொழிகள் (1964—65) பேராசிரியர் அ. மு. பரமசிவானந்தம், எம். ஏ. எம் .லிட். தமிழ்க் கலைப் பதிப்பகம் தமிழ்க்கலை இல்லம் சென்னை-30 முதல் பதிப்பு—பிப்ரவரி 1966 இரண்டாம் பதிப்பு—மே 1976 மூன்றாம் பதிப்பு—நவம்பர் 1978 உரிமைப் பதிப்பு விலை ரூ. 7-00 விற்பனை உரிமை பாரி நிலையம் சென்னை-600 001 அச்சிட்டோர் : மெட்ரோ பிரிண்டர்ஸ் & பேகேஜிங் இண்டஸ்டிரி, சென்னை — 600029, தொலைபேசி: 4 2 0 3 4 5. உள்ளடக்கம் முன்னாள் தமிழக முதல்வரின் முன்னுரை முன்னுரை இரண்டாம் பதிப்பின் முன்னுரை சொற்பொழிவு—க— (15-2-1965) சொற்பொழிவு ௨- (16-2-1965) சொற்பொழி—௩— (16-2-1965) பிற்சேர்க்கை முன்னாள் தமிழக முதல்வரின் முன்னுரை அமிழ்தினும் இனிய தமிழ்மொழி இலக்கிய வளம் மிகுந்தது. நம் முன்னேர்களாகிய புலவர் பெருமக்கள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே சங்கம் வைத்து மொழியை வளர்த்தார்கள். காப்பியங்கள் இயற்றி மொழியின் இலக்கிய வளத்தைப் பெருக்கினர்கள். நவரசங்கள் ததும்பும் இக் காப்பியங்கள் மட்டுமன்றி, மக்களை நல்வழிப்படுத்துவதற்கென்றே நீதி நூல்கலையும், பக்தி மார்க்கத்துக்கு அடிப்படையான தோத்திரப் பாடல்களையும் பாடித் தந்தார்கள். இலக்கண நூல்களையும் உருவாக்கினர்கள். அவர்கள் மொழியின் வளர்ச்சிக்காகத் திட்டமிட்டு, ஆக்க பூர்வமான செயல்களில் ஈடுபட்டதால் தான் இன்று தமிழ்மொழி இவ்வளவு இலக்கிய, இலக்கண வளங்களோடு திகழ்கிறது. ஒருமொழியின் வளர்ச்சி என்பது பல அம்சங்களோடு கூடிய பெரிய காரியம். ‘வாழ்க’ ‘வளர்க’ என்ற வெறும் வாழ்த்துக்களால் மட்டும் ஒரு மொழி ஒருபோதும் வளர்ச்சியடையாது. பழைய நூல்களைப் பாதுகாப்பது, வளர்ந்துவரும் மக்களினத்தின் சிந்தனைகளுக்கேற்பப் புதுமையான நூல்களை உருவாக்குவது, இலக்கண வரம்புகள் நசித்து விடாமல் கட்டிக் காப்பது, அந்த மொழியின் இலக்கிய, இலக்கண நயங்களைப்பற்றி ஆராய்ச்சி நூல்கள் எழுதுவது ஆகிய பல்வேறு வகைப்பட்ட பணிகளால்தான் மொழியை வளர்க்க முடியும். தழிழ் மொழியில், மொழி ஆராய்ச்சி நூல்களும், இலக்கிய வரலாற்று நூல்களும் போதுமான அளவு இல்லை என்பது அனைவர்க்கும் வெகுகாலமாக இருந்துவரும் ஒரு மனக்குறையாகும். ஆங்கிலமொழியில் இத்தகைய நூல்கள் அளவில்லாமல் இருக்கின்றன. ஒவ்வொரு நூற்றாண்டிலும் ஒவ்வோர் இராஜ வம்சத்தினரின் ஆதிக்கத்திலும் ஆங்கிலம் எத்தகைய மாறுதல் அடைந்தது, எவ்வாறு வளர்ச்சி பெற்றது என்பதையெல்லாம் ஆரய்ந்து பல நூல்கள் அம் மொழியில் எழுதப்பெற்றுள்ளன. ஆங்கில மொழி அறிஞர்கள் இந்தத்துறையில் எடுத்துக் கொண்ட முயற்சியே இதற்குக் காரணம் ஆகும். அதேபோல் தமிழ்மொழியிலும் இத்தகைய நூல்கள் எழுதப் பெறவேண்டும் என்ற எண்ணம் சிறிது காலத்துக்கு முன்புதான் நம் நாட்டில் தோன்றியது. கால அளவு சிறிதாயினும், அந்தத்துறையில் இப்போது கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டிருப்பது பெருமைப் படத்தக்க ஒன்று. பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழ்மொழியில் ஏற்பட்ட உரைநடையின் வளர்ச்சி பற்றிய இலக்கிய வரலாற்றை இந்த நூல் விவரிக்கிறது. தமிழ்ப் பேராசிரியர் ஸ்ரீ அ. மு. பரமசிவானந்தம் தெளிந்த ஆராய்ச்சியோடும் தீர்க்கமான சிந்தனையோடும் பல நுட்பமான விஷயங்களை இதில் தந்திருக்கிறர். ஒரு வடிவம் பெற்ற உரைநடை யென்பது வெகு காலத்துக்குப் பிறகுதான் தமிழ் மொழியில் தோன்றத் தொடங்கியது. இருப்பினும் இன்று அது மகத்தான வளர்ச்சி பெற்றுள்ளது. இந்த வளர்ச்சியின் ஆரம்பம் பத்தொன்பதாம்நூற்றாண்டிலேயே மலரத் தொடங்கியது. இதை, பல கட்டுரைகள், பெரியோர் எழுதிய கடிதங்கள் ஆகியவற்றைக் கொண்டு அழகாகச் சித்திரிக்கிறார் ஆசிரியர். இலக்கிய வரலாறுகளை எழுதும் புதிய முயற்சியில் இந் நூல் ஒரு குறிப்பிட்டுச் சொல்லத்தக்க சாதனை. இதற்காக ஸ்ரீ அ. மு. பரமசிவானந்தம் அவர்களைப் பாராட்டுகிறேன் இதேபோல் இவர் இன்னும் பல ஆராய்ச்சி நூல்களைத் தமிழ் மொழியின் வளர்ச்சிக்காகத் தரவேண்டும். மொழி ஆர்வம் மிகுந்து வரும் இந்நாளில் மக்கள் இத்தகைய நூல்களுக்கு நல்ல வரவேற்புத் தரவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். பக்தவத்ஸலம் 24—2—66  முன்னுரை சென்னைப் பல்கலைக் கழகத்தார் 1964-65 ஆண்டிற்குரிய ‘கல்கி நினைவுச் சொற்பொழி’ வை ஆற்றுமாறு என்னைப் பணித்தனர். மறைந்த கல்கி அவர்களின் நினைவாக அமையப்பெற்ற நிலைத்த தொடர்ச் சொற்பொழிவு வரிசை இதுவாகும். இவ்வரிசையில் மூன்ற்றாவது ஆண்டு இது என எண்ணுகிறேன்.இந்த வரிசைக்கு ஆய்வுச் சொற் பொழிவுகள் அமைதலே சாலப் பொருத்தமாகும். இந்த அடிப்படையில் ‘பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் உரை நடை வளர்ச்சி’ என்ற தலைப்பில் 1965 பிப்ரவரி 15, 16, 17-ம் நாட்களில் ஆற்றிய சொற்பொழிவுகளே இன்று நூல் வடிவில் வெளி வருகின்றன. இத்தலைப்பின் அடிப்படையில் நான் ஆராய்ந்து கண்ட இடங்கள் பல—ஏடுகள் பல—பழம் பெரு நூல்கள் பல-காணாதன. இன்னும் பலவாக இருக்கலாம். சென்ற நூற்றாண்டில் தமிழ் இலக்கியம்—சிறப்பாக உரை நடை இலக்கியம் வளர்ந்ததைக் காணப் பல ஆண்டுகள் தேவை. எனவே இந்நூலில் நான் அனைத்தையும் காட்டிவிட்டேன் எனக் கூற முடியாது. என்றாலும் அவற்றின் வகைகளையெல்லாம் ஒருமுகப்படுத்தி உரியவகையில் பிரித்து மூன்று சொற்பொழிவுகளால் முடித்துக் காட்டியுள்ளேன். முதற் செற்பொழிவில் தமிழ் உரைநடையின் தோற்ற வளர்ச்சியினையும் பத்தொன்பதாம் நூற்றண்டின் தலைவாயிலில் அதன் நிலையினையும் காட்டினேன். இரண்டாம் நாள் சொற் பொழிவில் வாழ்வின் பல்வேறு சமுதாயத் துறைகளில்- அரசியல், வாழ்வியல், கல்வி, பண்பாடு, ஆட்சிமுறை ஆகிய வழிகளில் உரைநடை வளர்ந்த வகையினைக் காட்டினேன். மூன்றாம் நாளில் மொழி, இலக்கியம், சமயம் ஆகிய நெறிகளில் உரைநடை வளர்ந்த வகையினைக் காட்டினேன். இவ்வாறு இயன்றவகையில் சென்ற நூற்றண்டின் உரை நடை வளர்ச்சியினை ஓரளவு காட்டியுள்ளேன். இவற்றை ஆராயும்போது அரசாங்கமும் தமிழ் நாட்டுப் பல்கலைக் கழகங்களும் இத்துறையில் ஆய்வு காணத் தனித்த அமைப்புக்களை நிறுவின், நாட்டுக்கும் மொழிக்கும் நல்ல அரணும் ஆக்கமும் உண்டாக்கும் என நினைத்தேன். ஆனால் அந்த நினைவைச் செயலாற்றுவது என்னல் முடியாத ஒன்றல்லவா! வல்லார் வழி காண்பாராக! இப்பணியில் ஊக்கிய சென்னைப் பல்கலைக்கழகத்தாருக்கும் இந்நூலுக்கு முன்னுரை தந்து சிறப்பித்த நம் தமிழக முதலமைச்சர் உயர்திரு மீ. பக்தவத்சலம் அவர்களுக்கும் என் நன்றியையும் வணக்கத்தையும் .தெரிவித்துக் கொள்ளுகிறேன். தமிழ்க்கலை இல்லம்: ⁠சென்னை-30 ⁠25—2—66 பணிவுள்ள,⁠ அ. மு. பரமசிவானந்தம் இரண்டாம் பதிப்பின் முன்னுரை இந்நூலின் முதல் பதிப்பினைச் சென்னைத் தமிழ் எழுத்தாளர் கூட்டுறவுச் சங்கத்தார் இன்றைக்குப் பத்து ஆண்டுகளுக்கு முன் வெளியிட்டனர். இடைப்பட்ட காலத்தில் தமிழகத்திலும் பரந்த இந்திய நாட்டிலும் எத்தனையோ மாற்றங்கள் உண்டாகியுள்ளன. எனினும் தமிழ் மொழியில் போதுமான ஆய்வு நூல்கள் இன்னும் வெளிவராதிருப்பது எண்ணத்தக்கதாக உள்ளது. தமிழ் நாட்டுப் பல்கலைக் கழகங்களும் பிறபொதுநிலையங்களும் நல்ல ஆய்வுநிலைக்களன்களாக அமைந்து, பல ஆய்வு நூல்களை வெளியிட வேண்டும் என அறிஞர் பலர் அடிக்கடி கூறி வருகின்றமையை ஈண்டு எண்ணுகிறேன். இந்நூலினைத் தமிழ் நாட்டுப் பல்கலைக்கழகங்களும் பிற மாநிலங்களில் உள்ள பல்கலைக்கழகங்களுள் சிலவும் தமிழ் முதுகலை, புலவர் முதலிய வகுப்புகளுக்குப் பாடநூலாகவும் வழி காட்டும் துணை நூலாகவும் கொண்டுள்ளனர். அவர்களுக்கு என் வணக்கமும் நன்றியும்.உரியன. தமிழ் உரைநடை வளர்ச்சியில் தொடர்ந்து ஆய்வு தேவை. வல்லார் அத்துறையில் வழி காட்டவேண்டுமெனக் கேட்டுக் கொள்ளுகின்றேன். முதல் பதிப்பு விற்பனையாவதற்குப் பத்து ஆண்டுகள் கழிந்தனவாயினும் இதன்படிகள் அனைத்தும் தக்கார் கைப்பட்டுச் சிறந்துள்ளமை அறிந்து மகிழ்கின்றேன். தொடர்ந்து இப்பதிப்பினையும் தமிழுலகம் ஏற்று ஆதரிக்கும் எனும் துணிபுடையேன். இந்நூல் வெளிவருவதற்கு உதவிய அனைவருக்கும் நன்றியுடையேன். தமிழ்க்கலை இல்லம்: ⁠சென்னை-30 ⁠25—2—66 பணிவுள்ள,⁠ அ. மு. பரமசிவானந்தம் மூன்றாம் பதிப்பு இந்நூலின் மூன்றாம் பதிப்பு இன்று வெளிவருகிறது; பிற அண்ணாமலை, மதுரை பல்கலைக் கழகச் சொற்பொழிவுகளுடன் இணைக்கப் பெற்றுள்ளது. தமிழுலகம் ஏற்றுப் புரப்பதாக. 30-11-78 ஆசிரியன்  சொற்பொழிவு—க— (15-2-1965) * * * முன்னுரை பேராசிரியர் அவர்களே! பெரியோர்களே! மறைந்த திருவாளர் ‘கல்கி’ அவர்களுடைய நினைவுச் சொற்பொழிவினை எனக்கு இப்பல்கலைக் கழகத்தார் அளித்து, இவ்வாண்டு என்னைப் பேசுமாறு பணித்துள்ளார்கள். முதலாவதாக அவர்கட்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகின்றேன். இச் சொற்பொழிவுத் தொடருக்கு அமைந்த பொருள், ‘பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் உரை நடை வளர்ச்சி’ (Development of Tamil Prose in the 19th Century) என்பதாம் நூற்றாண்டில் உரைநடை வளர்த்த பெருமைக்குரிய ‘கல்கி’ அவர்களின் நினைவுச் சொற்பொழிவு அல்லவா! அவர் வாழ்ந்த நூற்றாண்டிற்கு முன் இருந்த உரைநடை வளர்ச்சியைப் பற்றி ஆராய்வதாக அமைதல் பொருந்து வதுதானே? ஒரு நூற்றண்டில் நம் மொழியில் உண்டான நூல்கள்-இலக்கிய நூல்கள்-எண்ணில. அவற்றுள் உரை நடை நூல்களாகவும் இதழ்களாகவும் ஏடுகளாகவும் வேறு பலவகைகளாகவும் அமைந்தன உள்ளன. அவை அனைத்தும் உரைநடை வளர்ச்சியில் பங்கு கொண்டுள்ளனவேயாம். இங்கு அவற்றை ஆராய்ந்து பார்ப்பதன் முன். ‘தமிழ் இலக்கிய வளர்ச்சி’ காலங்கடந்த வரலாற்று எல்லையை உடையதாகையால், அக்கால அளவில் இவ்வுரைநடை தோன்றி வளர்ந்த வரலாற்றை அறிய வேண்டுவதும் இன்றியமையாததாகும். பத்தொன்பதாம் நூற்றாண்டின் தலைவாயிலில் கால்வைப்பதன்முன், அதற்கு முன் பல நூற்றண்டுகளில் இவ்வுரை நடை எவ்வாறு தோன்றி வளர்த்து வளம்பெற்று வந்ததென்பதைக் காணல் ஏற்புடைத்தாகும். தமிழ் மொழி தமிழ் மொழி தொல்காப்பியர் காலத்துக்கு முன்பே வளம் பெற்ற மொழியென்பதும், அவர் காலத்துக்கு முன்பே இம்மொழியில் உரைநடையும் பாட்டும் பல்கி இருந்தன என்பதும் அவர்தம் நூல் வழியாகவே நம்மால் அறிய முடிகின்றது. தமிழில் உரைநடை என்று தோன்றிற்று என வரையறுக்க முடியாது. அதன் வரலாற்றை ஆயு முன் உரைநடை என்பது என்ன என்பதையும் அது வாழ்வின் தேவையை எவ்வெவ்வாறு நிறைவு செய்கிறது என்பதையும் ஆராயவேண்டுவதும் தேவையான ஒன்றல்லவா? எது உரை நடை? எது உரை நடை? ஏன் உரை நடை? இவை பதில் இறுக்கப்பெற வேண்டிய வினாக்கள், தமிழில் மட்டுமின்றி ஆங்கிலம் முதலிய பிற மொழிகளிலும் இத்தகைய கேள்விகளுக்கு விடை காணல் தேவையே. மேலைநாட்டு ஆய்வாளர்களுள் சிலர் இவற்றிற்குரிய விடைகளையும் ஆய்ந்து கண்டு அறுதியிட்டு எழுதியுள்ளார்கள். மனிதன் பிற உயிரினத்தினும் வேறுபட்டவன்; தன் உள்ளக் கருத்தை உடன் வாழும் மற்றவருக்கு உணர்த்தக் கடமைப்பட்டவன். வாய் திறந்து பேசும் வாய்ப்பு இவனுக்கு உண்டு அந்த வாய்ப்பே ‘மொழி' என்ற ஒன்றை உலகுக்கு அளித்தது. இருபதாம் நூற்றாண்டின் இடைபட்ட நாகரிக உலகில், மொழி அடிப்படையில் பல்வேறு சண்டைகளை நாம் காண்கின்றாேமாயினும், இந்த மொழியே மனிதனை மனிதனாக வாழ வழி காட்டி வழி வகுத்து, வாழ வைத்த ஒன்று என்பதை நம்மால் மறக்க முடியாது. இந்த மொழிகளின் அமைப்பு நாடுதோறும் வேறுபடுவது என்றாலும், மொழி சமுதாயத்தை இணைக்கும் ஒரே சாதனம் அல்லது கருவி என்பதை யாராலும் மறுக்க இயலாது. இம்மொழிகள் தத்தம் தோற்ற வளர்ச்சி அடிப்படையில் சிறந்தும் சிதைந்தும், வளர்ந்தும் வாடியும், உயர்ந்தும் தாழ்ந்தும் இன்று உலகில் உலவுகின்றன. நல்ல திருந்திய மொழிகளுள் பல்வேறு இலக்கியங்கள் வாழ்கின்றன். கடந்த கால வரலாற்று வாழ்வையும் இயற்கை வளத்தையும் காட்டி, அன்று வாழ்ந்த மக்கட் சமுதாயத்தையும் இன்று வாழும் நம்மையும் வருங்காலச் சமுதாயத்தையும் வாழ வைப்பனவே இலக்கியங்கள். இந்த அடிப்படையில் தோன்றிய இலக்கியங்களே காலத்தை வென்று வாழ்வன. மற்றவை ...? நாம் சொல்ல வேண்டா. இவ்விலக்கிய அடிப்படைகளாக அமைந்தனவும் பேச்சு வழக்கில் உள்ளனவுமாகிய உரையும் பாட்டும் நாம் எண்ணத்தக்கன. உரை என்றால் என்ன? இந்த 'உரை' என்ற சொல் நெடுங்காலமாகவே தமிழில் வழக்கத்தில் இருந்து வருகின்றது. 'உரைக்கப்படுவது உரை' என்று சுருக்கமாகப் பதில் சொல்லிவிடலாம். 'உரை' என்ற சொல்லுக்குத் தமிழில் பல பொருள்கள் உள்ளமை அறிஞர் அறிந்ததே. முதல் முதல் வெறும் ஒலிக்கே இந்த உரை என்ற சொல் பயன்படுத்தப்பட்டதென்பதை உணர்கின்றாேம் 'குன்றம் குமுறிய உரை' (பரிபாடல்,8-35) என்றே பரிபாடல் காட்டுகின்றது. விண்ணின்றிரங்கித் தண்மழை பொழியும் எழிலி தன் வரவுகாட்ட எழுந்த ஒலி அது. அது உரைக்க மழை வரும் என்பதை உலகம் உணர்கின்றது. இந்த வகையில் மக்களுக்கு உணர்த்தட உணர்வினை அளிக்கப் பயன்பட்டது-பயன்படுவது உரையாகும். உரை என்பது பொருளின் தன்மையை உள்ளவாறு உரைப்பதாகும். இதை விளக்க ஒரு சான்று பயன்படும். தட்டான் பொன்னுக்கு உரை காணும் வழக்கம், பலகட்டுப்பாடுகளுக்கிடையில், நம் நாட்டில் இன்றும் உள்ளத்தை அறிவோம். பொன் சிறந்ததா இல்லையா என்பதை-அதன் உண்மை நிலை, பண்பு, தரம் முதலியன இன்ன வகையன என்பதை-உரைத்துக் காண்பது நாடறிந்த ஒன்று. அதன் தன்மையை உணர்த்தும் கல்லுக்கு 'உரை கல்' என்றே பெயர் உண்டு அல்லவா? எனவே பொருள்களின் இயல்பை உள்ளது உள்ளவாறே உலகுக்கு உணர்த்துவது உரையாகும். இதைத்தான் ‘அடிப்படை மொழி’ என்பர் ஆய்வாளர். கற்பனை கலவாததாய்-உணர்ச்சியோ, பிற உள்ள நெகிழ்ச்சிகளோ, காய்தல் உவத்தல் என்ற வேறுபாடுகளோ கலவாததாய்-ஒரு பொருளின் தன்மையை உரையிட்டு உணரத்தக்க வகையில் காட்டுவதே உரை. (தட்டான் பொன்னை உரையிட்டுக் காட்டுவது போன்று) ஆனால் பாட்டோ இதற்கு நேர்மாறக உணர்ச்சி. கற்பனை முதலியவற்றின் இடையிலே தோய்ந்து அணிநலம் முதலியன பெற்றுப் பாடுவோன் உள்ளத்தளவு உயர்வோ அன்றித் தாழ்வோ பொருந்தப் பொருளை விளக்குவதாகும். இந்த உண்மையை மேலை நாட்டு அறிஞர்கள் நன்கு விளக்கியுள்ளார்கள். மொழி, இலக்கியம் இரண்டையும் வரையறுத்த ஆய்வாளர் எண்ணத்தை உணர்த்துவது மொழியென்றும் உணர்வை உணர்த்துவது இலக்கியம் என்று கூறுவர் I convey my thought to you—this is language I have emotion —that is literature If the primary object be to convey the thought and the emotion where with it is touched by a secondary consideration, serving only to make the thought apprehended more pleasantly and more completely, the writing is some form of Prose Literature, as history or criticism. If on the other hand, the emotion be of first importance, and the thought seems to take place in the mind through the avenues of feeling, then the writing is some form of better letters—probably in the poetry or fiction. (Winchester, P. 182) இவ்வாறு எழுத்துக்கு வரிவடிவம் கொடுக்கும் நிலையிலேயே ‘உரை’ உண்டாகியிருக்க வேண்டும் என்பது உண்மையன்றே உள்ளத்துத் தோன்றிய எண்ணத்தை மற்றவருக்கு உணர்த்த நினைத்த மனிதன் எண்ணி எண்ணி எழுத்தெழுத்தாக உச்சரித்து, சொல்லின் பின் சொல்லாக மெல்ல உரைத்திருப்பானன்றாே? எனவே முதலில் தோன்றியது உரை எனக்கொள்ளல் பொருத்தமானதாகும். ஆயினும் சில மேலை நாட்டு ஆய்வாளர்கள் பாட்டு முதலில் தோன்றிற்று என எழுதுகின்றனர். அது எவ்வாறு பொருத்தும் எனத் தெரியவில்லை. குழந்தை முதலில் பிறந்ததும் அழுகிறது; பிறகு பேசுகின்றது. அழும் இசை முன்னாதலின் அது பாட்டாக முன் தோன்றியிருக்கும் என்பது அவர் வாதம். குழந்தை அழுவது இசையாக இருக்கலாம் - ஆனால் அது மொழியிடைப்பட்ட பாட்டோ செய்யுளோ எப்படியாகும்? அந்த அழுகையில்-இசையில்மொழியே இல்லையே. குழந்தை வளர வளர மெல்ல மெல்ல, பெற்றேர் உணர்த்த ஒவ்வொரு சொல்லாகப் பேசிப் பேசியன்றோ உரை நடையைக் கற்றுக் கொள்கிறது. பின் வேண்டுமாயின் இசையும் பாட்டும் இயையப் ‘பெறலாம். எனவே இக்கூற்று ஏற்றுக்கொள்ளக் கூடியது தான? அறிஞர்களே ஆய்ந்து முடிவு காணட்டும். “செய்யுள்“ என்பது முற்கால வழக்கில் இலக்கியச் செறிவுள்ள உரையையும் தழுவி யிருந்தது. 'உரைச் செய்யுள்’ என்ற வழக்கு இதற்குச் சான்று. இலக்கணம் இலக்கியம் உரையெனப் பெயர்பட் டிருக்குமென் றெண்ணுக செய்யுளின் இயல்பே என்பது இலக்கணக்கொத்து. உலக வழக்காகப் பேசப்படுவதும் எழுதப்படுவதும் உரைநடை, உரை வாசகம் என வழங்கும். உரை வாசகம் என்பது இரு பெயரொட்டு. தமிழில் வசனம் என்ற வடமொழியே, சில காலமாய் உரை நடையைக் குறிப்பதாய்ப் பெருவழக்கினதாயிற்று. உறுதிச் சொல், ஏற்ற சொல், பொருளுற்ற சொல் எனப் பொருள்படும் கட்டுரை என்னும் வார்த்தையும், உரைநடையைக் குறிக்கிறது. இது ‘கட்டுரை வன்மை’ என் பதனால் போதரும். 'கட்டுரை வகையான் எண்ணோடு புணர்ந்து’ எனத் தொல்காப்பியத்திலும் வருகிறது. “பழைய சங்க நூல்களெல்லாம் பாக்களால் ஆனவை. முற்றும் உரை நடையான வசன நூல் யாதொன்றுமில்லை. அடிவரை யின்றி வரும் செய்யுளின் வகை நூலும், உரையும், பிசியும், முதுமொழியும், மந்திரமும், கூற்றிடை வைத்த குறிப்பும் என ஆறென்றும், அவற்றுள் உரைப் பகுதி, வழக்கு, பாட்டிடை வைத்த குறிப்பும், பாவின்றெழுந்த கிளவியும், பொருளொடு புணராப் பொய்ம்மொழியும், பொருளொடு புணர்ந்த நகைமொழியும் என நான்கென்றும், வகைப்படுத்துரைத்தார் தொல்காப்பியர் அவற்றுள் பாட்டிடை வைத்து குறிப்பென்பது,'ஒரு பாட்டு இடையிடை கொண்டு நிற்கும் கருத்தினால் வருவது என்று திரு. செல்வக்கேசவராய முதலியார், தம் ‘தமிழ் வியாசங்கள்'என்ற நூலில் இவ்வுரை நடையின் தொன்மை பற்றி விளக்கங் காட்டிச் செல்லுகின்றார். தொல்காப்பியர், உரைக்கு இலக்கணம் கூறவந்தவர். 'தொன்மை தானே உரையொடு புணர்ந்த பழமை மேற்றே' (செய். 229) என விளக்கம் தருகின்றார். இதன் கருத்தென்ன? இதற்கு உரை எழுதிய இளம்பூரணர், 'நிறுத்த முறையானே தொன்மைச் செய்யுள் உணர்த்துதல் நுதலிற்று’ என்று கூறித் 'தொன்மையாவது உரையொடு பொருந்திப் போந்த பழைமைத்தாகிய பொருள் மேல் வருவது’ என்கிறார். பேராசிரியரும், 'தொன்மை யென்பது உரை விராய்ப் பழைமையவாகிய கதைப் பொருளாகச் சொல்லப்படுவது’ என்கின்றார். எனவே, இவற்றால் உரைநடை பாட்டிலும் பழையது என்பது நன்கு விளக்கப் பெறும். நாம் மேலே கண்ட 'வெற்றாெலியும் உரை' யெனக் காட்டிய பரிபாடல் இவ்விளக்கத்துக்குச் சான்றாகலாம். உரையும் பாட்டும் தமிழ் இலக்கியத்தில் இவ்வுரைநடை முன் தோன்ற, நெடுகாலத்துக்குப் பின் இவ்வுரைநடை போன்று அமைந்த சூத்திரங்கள்-நூற்பாக்கள்-தோன்றின. பின்னரே பாட்டுத் தொன்றிற்று எனல் பொருந்தும். பொதுவாகச் சூத்திரங்கள் உண்டான காலம் கிறித்துப் பிறப்பதற்கு ஐந்தாறு நூற்றாண்டுகளுக்கு முற்பட்டது என்பர் ஆய்வாளர்.[1] வடமொழிச் சூத்திரங்களும் ஏறக்குறைய அந்த நூற்றாண்டுகளில்தான் தோன்றியிருக்கவேண்டும்.[2] எனவே உரைநடையை அடுத்து இச்சூத்திரங்கள் தோன்றியிருக்க வேண்டும். தொல்காப்பியமும் ஏறக்குறைய இக்காலத்திற்குச் சற்று முன்பு தோன்றிய ஒன்று என்பது அறிஞர் பலரும் ஒருசேர ஏற்றுக் கொள்ளுகின்ற உண்மையாகும் இனி, இத்தொல்காப்பியத்தின் செய்யுளியலில் உரையும் பாட்டும் உள்ள நிலைமை நம்மால் காணமுடிகின்றது. மற்றும் இத்தொல்காப்பியத்தின் வழியே இதற்கு முன்னும் பல இலக்கிய நூல்கள் தோன்றி வாழ்ந்து வந்தன என்பதையும் உணர முடிகின்றது தமிழ் மொழியின் தொன்மை பல பேரறிஞர்களால் ஏற்றுக் கொள்ளப்பெற்ற ஒன்றானமையால், இந் நாட்டுப் பிறமொழிகளைக் காட்டிலும் தமிழில் பழங்காலத்திலேயே உரையும், சூத்திரமும், பாட்டும் ஒன்றன்பின் ஒன்றாகத் தோன்றி வளர்ந்து வாழ, அவற்றைத் தொல்காப்பியர் தொகுத்துக் கூறி இலக்கண வரம்பினை உறுதி செய்தார் எனக் கொள்வது பொருத்தமானதாகும். எனவே உரைநடை பாட்டிலும் முந்தியது என்பது தேற்றம். இனி, இது பற்றி நாம் இங்கே அதிகம் ஆராயத் தேவையில்லை; அது வேண்டாததும்கூட. இத்தகைய உரைநடையிலக்கியம் தமிழில் தோன்றி வளர்ந்த வகையைக் காணவேண்டுவது நமது இன்றைய கடமையாகும். ‘தமிழில்’ ‘செய்யுள்’ என்ற ஒரு சொல் உள்ளது என மேலே கண்டோம். செய்யப்படுவன அனைத்தும் செய்யுளே. எனவே உரைநடையும் செய்யப்படுவது தானே. ‘ஆம்’ எனவே உரைச் செய்யுள் எனக் கொள்ளலாமா? கொள்ளலாம். பல்கலைக்கழக தமிழ்ப் பேரகராதி இதை நமக்கு எடுத்துக் காட்டுடன் விளக்குகின்றது. செய்யுள் என்பதற்கு உரை என்றே பொருள் உள்ளது என்பதை அது காட்டுகிறது.[3] தமிழில் மட்டுமின்றி ஆங்கிலத்திலும் இந்த விளக்கம் நன்கு காட்டப் பெறுகின்றது. ஆங்கிலத் ‘Prose’ என்ற சொல்லுக்கு ‘Straight forward arrangement of words”[4] என்றும் ‘Plain matter of fact quality’& “ordinary nonmetrical form of written or spoken language”[5] என்றும் பொருள் உண்டு. நாம் மேலே பொன்னுரையோடு பொருத்திக் காட்டிய உண்மை விளக்கம் தரும் உரைநடைக் கருத்தினை இவை வலியுறுத்துகின்றன. மேலும், செய்யுள் என்ற சொல்லை உரை, பாட்டு இரண்டுக்கும் பயன்படுத்தினர்கள் எனவும் காணமுடிகிறது. உரைச் செய்யுள், பாச் செய்யுள் எனவே அவை வழங்கப் பெற்றன-பெறுகின்றன. இரண்டும் விரவியவற்றையே இளங்கோவடிகள், உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்’ எனக் காட்டிச் செல்கின்றார். ‘Poem’ என்ற ஆங்கிலச் சொல் தமிழில் உள்ள ‘செய்யுள்’ என்ற சொல்லுக்கு நேர் பொருத்தமான ஒன்று என்று கொள்வது தகும். ‘Poem’ என்ற சொல்லுக்கு ‘elevated composition in prose or verse’[6] என்றும் ‘a composition of high beuaty of thought or language, although not in verse” [7] என்றும் விளக்கம் தரப்பெறுவதை காண்கிருேம். மேலும் ‘Poetry’ என்ற சொல்லுக்கு work of the poet’s elevated expression or elevated thought or feelings”[8] என்றும், “The art of expressing in melodious words, the thoughts which are the creation of feeling and imagination”[9] என்றும் உரைகள் எழுதப் பெற்றுள்ளன. எனவே 'உரை' யெனப்படுவது சாதாரண வழக்கத்தில் உள்ளதாகவும் செய்யுள் என்பது பாட்டினையும் இறையனர் களவியல் உரை போன்ற உயர் நடை உரைகளையும் குறித்ததாகவும் கொள்ளல் சாலும் என அமைகின்றேன். இனி, உரை நடையை (Prose) இவ்வாறு அகராதிகள் காட்டுவதோடு 'Encyclopaedia Britanicca' என்ற பெரு விளக்க நூல் எவ்வாறு விளக்குகின்றது என்பதையும் ஈண்டுக் காணல் நலம் பயப்பதாகும். அதன் விளக்கம் வருமாறு:- ‘பாட்டுக்கு அமைந்த இலக்கண வரம்பின்றி, மக்களால் எளிமையாக ஒளிவு மறைவு இன்றி எழுதவும் பேசவும் பயன்படும் ஒன்றே உரையாகும். பாட்டிலிருந்து (Poetry) உரைநடையைப் பிரித்துக் காட்டுவது எளிதாயினும் இன்னும் திட்டமாக இரண்டையும் வரையறுக்க இயலாது. ஏனெனில், உயர்ந்த நடையில் பாட்டின் இலக்கணத் தோடு கலவாமல் நல்ல ஓசை நயத்துடன் எழுதும் உரைநடையை 'உரைச் செய்யுள்’ என்று கொள்வதும் உண்டு. எனவே, பாட்டிலிருந்து உரைநடையைப் பிரித்துக் காண்பதைவிட்டு, உரைநடை என்பதை உள்ளவாறு விளக்க முயலலாம். உரைநடை என்பது, இலக்கிய மரபு கெடாத நல்ல நடையில், ஆழ்ந்த கருத்தோடு, பாட்டுக்குள்ள சந்தச் சேர்க்கை இன்றியே நல்ல ஓசை நயம் உடையதாகி, ஒளிவு மறைவு இன்றி உள்ளதை உள்ளபடி உரையிட்டுக் காட்டும் வகையில் நேரிய முறையில், கருத்துக்கும் காரணத்துக்கும் பொருத்தமானதாக — ஒன்றினைப் பற்றியோ ஒருவரைப் பற்றியோ— விளக்கி உரைப்பதாகும். ‘எனினும், உரை நடை என்பது கட்டுக்கடங்காது பேசும் அல்லது எழுதும் சாதாரண எல்லா வசனங்களையும் கொள்வதாகாது. உரைநடைத் தொடர்கள் இன்மொழியால் நல்ல ஒழுகிசை நடையால், தொடர் நலமுடன், ஓசை யுணர்த்தும் நெறியான் நன்கு வளர்ச்சியுற்ற தெள்ளிய நடையில் தெளிந்து செல்லுவனவாக அமைய வேண்டும். மொழிக்கு இன்றியமையாத பெயர் வினைகளுடன் சேரும் உரிச்சொற்களின் தகுதி அளவறிந்து அவற்றைச் சேர்த்து வழங்கும் முறையும் உரைநடையில் வரையறை செய்யப் பெறல் வேண்டும். தேவையற்ற சிலவற்றை விட்டொழித்தலும் உரைநடைக்கு இன்றியமையாதது. எனவே, உரைநடை யென்பது பாட்டின் விதிகளுக்கு விலக்காய் நின்று, இலக்கிய நலம் கெடாவகையில் மக்கள் உள்ளத்தில் தோன்றும் உணர்வுகளை உலகுக்கு எடுத்துக் காட்டப் பயன்படுவது என்று கொள்ளல் பொருந்தும்’[10]. இக்கூற்றும் நாம் மேலே காட்டிய கருத்தினை நன்கு வலியுறுத்துவதாகும். தமிழ்மொழியில் இத்தகைய உயர்ந்த செம்மொழியின் பாலதாகிய உரைநடையும் சாதாரண மக்கள் பேச்சு வழக்கில் உள்ள உரைநடையும் மிகப் பழங் காலந்தொட்டே வளர்ந்து வாழ்கின்றன என்பது தேற்றம். இப்பேச்சு வரிசையில் நாம் இரண்டு வகை ‘உரை’ நடைகளையும் காணலே பொருத்தமானதாகும். இனி, இத்தகைய நலம் வாய்ந்த உரைநடை இருக்க, பாட்டு ஏன் எழுந்தது? இவ்வுரை நடைக்கு இலக்கணம் ஏன் இல்லை? இவற்றிற்கு விடை கண்டு மேலே செல்லலாம். சாதாரண எளிய மக்கள் தத்தம் கருத்தைப் பரிமாறிக் கொள்ளப் பயன்பெற்ற உரைநடை இருக்கப் பாட்டு ஏன் எழுந்தது? அறிவு வளர வளர, உள்ள உணர்வும் கற்பனைத் திறனும் மிக்கு ஓங்கப் பாட்டு உருவாயிற்று. தாம் உள்ளத்துக் கொண்ட கருத்தோடு கற்பனைத் திறன் கலக்க, அவை உருப்பெற, சொல்லடுக்குகளும் அணி நலன்களும் கலந்து பொருந்தப் பாட்டு உருவாயிற்று. மேலும், தாம் விளக்க வந்த கருத்தினைப் பாட்டாக வடித்து வைப்பின் அப்படியே மனத்தில் பன்னெடுங் காலம் நினைத்து நிலை நிறுத்தவும் அப்பாட்டே பயன்பட்டது. உரைநடையை அப்படியே மனத்தில் உருவிட்டு நிலைநிறுத்துவதனினும் பாட்டினை மனத்திடைப் பதித்தல் எளிதல்லவா? எனவே, இவைபோன்ற பல காரணங்களால் பாட்டு உருப் பெற்றிருக்கலாம். மற்றும் உணர்வும் தெய்வநெறியும் பிற பண்பாடுகளும் வளர வளர, உளங் குளிர்ந்த போதெலாம் உணர்ந்துணர்ந்து பாடும் நெறியும் வளர்ந்திருக்கலாம். எனவே, உரைநடைக்குப் பின் பாட்டு வளரக் காரணங்கள் பல. விரிப்பிற் பெருகும். பாட்டிற்கு இருப்பது போன்று ஏன் உரைநடைக்கு இலக்கணம் இல்லை என்ற வினாவிற்கு விடை காணலும் தேவையே. உலகில் அன்றாடம் சாதாரணமாக நிகழும் செயல்களைப் பற்றி யாரும் எழுதி வைக்க விரும்புவதில்லையல்லவா? நாட்குறிப்பினைத் தவறாது விடாது எழுதுபவர்களும்கூட, அன்றாடம் முறையாகத் தாம்செய்யும் நித்தியக் கடன்களையும் எழுதுவது அரிதல்லவா? அந்த முறையிலே தான் இந்த உரைநடைப் பற்றியும் யாரும் எழுதி வைக்க விரும்பவில்லை. மக்கள் நாள்தோறும் ஒருவரை ஒருவர் காணும்போதும் கலக்கும்போதும் சாதாரண உரைநடையில் போசுவது மரபு. இப்பேச்சு வழக்கு இடந்தோறும்மாறுவது முண்டே! எனவே அவைபற்றி இலக்கண மரபினை ஏட்டில் எழுதாது எங்கோ யாரோ சில வேளைகளில் சிறப்பாக எழுதும் பாட்டினுக்கு மட்டும் இலக்கணம் எழுதி வைத்தார்கள். எனினும் உரையைப் பற்றிய பல்வேறு குறிப்புக்கள் பழங்காலத்திலேயே உள்ளமையை நாம் அறிகிறோம். தமிழில் மட்டுமின்றி, தமிழ் நாட்டோடு பழங்காலத்திலேயே தொடர்பு கொண்டிருந்த யவன நாடுகளிலும் இந்த வகையில் உரைநடைக்குத் தனி இலக்கணம் இல்லையாயினும், அது பற்றிய குறிப்புக்களைப் பரவலாகக் காண முடிகின்றது. கி.மு. ஐந்தாம் நூற்றண்டிலேயே கிரேக்க இலத்தீன் மொழிகளில் உரைநடை இலக்கியங்கள் இருந்தன எனவும் அவ்வுரைநடை கண்டவருள் சிறந்தவர் சிசரோ[11] எனவும் நம்மால் அறிய முடிகின்றது.[12] இரு நாடுகளிலும் தோன்றி வளர்ந்து வாழ்ந்த இருவேறு வகைப் பட்ட (தமிழ், கிரேக்க) இலக்கியங்களில் உரையும் பாட்டும் இருந்தன என்பதை ஆய்வாளர் நன்கு அறிவர். ‘உரையும் பாட்டும் உடையோர் சிலரே' (புறம். 27) எனப் புறநானூறு இரண்டையும் இணைத்தே பேசுகின்றது. 'பாட்டும் உரையும் பயிலாதன இரண்டு, ஒட்டைச் செவி யும் உள’ என்ற பிற்காலப் பாட்டும் இதை வலியுறுத்துகின்றது. மேலும் தொல்காப்பியமும் வெளிப்படையாக உரைக்குப் பேரிலக்கணம் வகுக்கவில்லை என்றாலும் உரையின் தொன்மையைச் சுட்டிக் காட்டத் தவறவில்லை என்பதை முன்னரே கண்டோம். இவ்வாறு தொல்காப்பியர் காலந்தொடங்கி-ஏன்?-அதற்கு முன்பிருந்துகூட-இன்று வரை தமிழில் உரைநடை வளர்ந்துகொண்டே வருகிறது. இனியும் தொடர்ந்து வளரும் என்பதில் ஐயமில்லை. வரலாறு எங்கே? தமிழ் உரைநடை வளர்ந்தாலும் அதன் வரலாற்றைத் தொடர்ச்சியாக அறியமுடியவில்லையேஎன்பதை எண்ணும் போது சற்றே வருத்தம் உண்டாகத்தான் செய்கிறது. எழுதப்பெற்ற, வரையறுத்த திட்டமான வரலாறு இல்லையாயினும் தமிழில் உரைநடை மிகப் பழங்காலந்தொட்டே தொடர்ந்து வாழ்ந்து வருகின்ற ஒன்று என்பதைக் காட்ட ஆதாரங்கள் உள்ளன. தொல்காப்பியர் காலத்திலும் அதற்கு முன்பும் இருந்த உரைநடையை நம்மால் காண முடியாவிட்டாலும், அந் நூற்பாவாலும் அதன் உரைகளாலும், அவ்வுரையின் விளக்கங்களுக்கு எடுத்துக்காட்டுகளாகக் கூறும், இன்றில்லாது, அழிந்த சில நூற்பெயர்களாலும் (இராம சரிதமும், பாண்டவ சரிதமும், பெருந்தேவனார் பாரதமும், தகடூர் யாத்திரையும் முதலியன என்று தொல்காப்பிய உரையாசிரியர்களால் காட்டப் பெறுவன) உரை தொன்மை வாய்ந்ததே என உணர முடிகின்றது. மேலும் சங்க இலக்கியங்களுள் சில உரை நடையைப் போன்றே தனிச்சொல் பெற்றும் பெறாமலும் அமைந்து செல்வதையும் காண முடிகின்றது. கடைச் சங்க காலத்து இறுதி எல்லையில் தோன்றிய சிலப்பதிகாரத்திலேயே நம்மால் உரைநடையைத் தெளிவாகக் காண முடிகிறது. இதனாலேயே தொல்காப்பியச் சூத்திரத்துக்கு (செய். 238) உரை காண வந்த நச்சினர்கினியர் அதற்குச் சிலப்பதிகாரத்தையே மேற்கோளாகக் காட்டியுள்ளார். சிலம்பில் தொல்காப்பியர் காலங்கடந்து, சிலப்பதிகாரக் காலத்தில் நம்மால் தெளிந்த உரைநடையைக் காணமுடிகின்றது அல்லவா? அச்சிலப்பதிகாரக் காலத்தைக் கி. பி. இரண்டாவது நூற்றாண்டு எனக் கணக்கிட்டுள்ளனர் அறிஞர். எனவே அந்த நூற்றாண்டு தொடங்கிச் சென்ற நூற்றாண்டின் தலைவாயில் வரையில் வந்தோமானல் தமிழ் உரை நடை வளர்ச்சியை ஒருவாறு உணர்ந்தோமாவோம். சிலப்பதிகாரத்திற்கே 'உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்’ என்ற பெயர் உள்ளதை மேலே கண்டோம். சிலப்பதிகாரத்தே தொடர்ந்து உரைநடையைக் காண இயலாது என்பதை இக்குறிப்பே உணர்த்தும். எனினும், அதில் தெளிந்த உரைநடை இருப்பதை இடையிடையே காண்கிறோமே. 'உரை பெறு கட்டுரை.' 'உரைப் பாட்டு மடை' என்ற வகையில் சிலம்புக்கு இடையிடையே உரை தன் ஒலியை எழுப்பி நம்மையும் எழச் செய்கிறது அல்லவா? இந்தச் சிலம்பின் உரைநடையைக் காணும் போதுதான் அதன் ஏற்றமும் நமக்கு நன்கு விளங்குகின்றது. இன்று சிலர் சாதாரணப் பேச்சு வழக்கில் நம் வழக்கத்தில் உள்ளவாறே எழுதுவது தான் உரைநடை என்று வாதித்து நின்றதைக் கண்டோம். அந்தப் பேச்சு நடை 'உரைநடை'யேயாயினும் அது இலக்கிய உரைநடையாகவோ, காலத்தை வென்று கவிதையென வாழும் உரைநடையாகவோ இருக்க வழியில்லை. அத்தகைய உரைநடை, நம்முன் நிற்கும் கடந்த ஒரு நூற்றண்டில் பலவகையில் வளர்ந்துள்ளது. (அவற்றையே அடுத்த நாட்களில் விளக்கமாகக் காண இருக்கின்றாேம்.) எனினும், சிலம்பினை நோக்கும்போது அதன் உரையைப் பற்றி ஆராயும் நமக்கு அவையும் தேவையானமையின் அவைபற்றி ஆங்காங்கே காணலாம். சிலப்பதிகாரத்தின் தொடக்கத்திலே அதன் உரை மணம் கமழ்கின்றது. அந்த உரைநடை, பாட்டினும் கடினமானது போன்று காட்சியளிக்கின்றது. சிலம்பின் அகவலை அறிந்து உணர்வதிலும் உரைநடையை உணர்வது கடினமே எனவும் நினைக்க வேண்டியுள்ளது. எனினும், அவ்வுரையின் ஏற்றத்தையும் ஏறுபோற் பீடுநடையிட்டுப் பெருமை பெற்றுச் சிறப்பதையும் என்றென்றும் நம்மால் மறக்க இயலாதே. இளங்கோவடிகள் வாக்கில் ஒன்று காணல் பொருந்துவதாகும். அதுவும் விழாவோடு பொருந்தியதாக நாட்டை வளங்கொழிக்க வழிகாட்டுவதாக அமையட்டும். ‘உரை பெறு கட்டுரை’ என்ற தலைப்பிலே கண்ணகிக்கு விழா ஆற்ற, முடியுடை வேந்தர் மட்டு மன்றிப் பிறநாட்டவரும் பத்தினித் தெய்வத்தைப் பரவிப் பயன் பெற்ற வகையைக் கூறுவது அது. இதோ அவர் வாக்கை நீங்களே கேளுங்கள். "அன்றுதொட்டுப் பாண்டிய நாடு, மழை வளம் கரந்து, வறுமை எய்தி, வெப்பு நோயும் குருவும் தொடரக் கொற்கையில் இருந்த வெற்றி வேற்செழியன் நங்கைக்குப் பொற்கொல்லர் ஆயிரவரைக் கொன்று களவேள்வியால் விழவொடு சாந்தி செய்ய, நாடு மலிய மழைபெய்து நோயும் துன்பமும் நீங்கிற்று. அதுகேட்டு, கொங்கிளங் கோசர், தங்கள் நாட்டகத்து நங்கைக்கு விழவொடு சாந்தி செய்ய மழை தொழில் என்றும் மாறாதாயிற்று. அதுகேட்டு, கடல்சூழ் இலங்கைக் கயவாகு என்பான் நங்கைக்கு நாட்பலி பீடிகைக் கோட்ட முந்துறுத்து, ஆங்கு 'அரந்தை கெடுத்து வரம் தரும் இவள்' என, ஆடித் திங்கள் அகவையின் ஆங்கோர் பாடி விழாக்கோள் பன்முறை எடுப்ப, மழை வீற்றிருந்து, வளம்பல பெருக்கி, பிழையா விளையுள் நாடாயிற்று. அதுகேட்டு, சோழன் பெருங்கிள்ளி, கோழியகத்து, 'எத்திறத்தானும் வரந்தரும் இவள் ஓர் பத்தினிக் கடவுளாகும்' என நங்கைக்குப் பத்தினிக் கோட்டமும் சமைத்து நித்தம் விழாவணி நிகழ்வித்தோனே." இவ்வுரைநடையைப் படிக்கும் யாரும் உள்ளத்து உயர்வு பெறுவரன்றே? இந்த அளவுக்குச் சிலம்பில் உரைநடை உயர்ந்திருக்கவேண்டுமாயின் அதற்கு முன் எத்தனை எத்தனை நூற்றாண்டுகள் அவ்வுரைநடை தவழ்ந்து, வளர்ந்து, தழைத்து, ஓங்கி, உயர்ந்து, உற்ற பெருநிலையில் வாழ்ந்திருக்க வேண்டும் என்பதை உணர முடிகின்றதன்றாே? களவிய லுரை காப்பிய காலத்துக்குப் பிறகு தமிழ் நாட்டின் இருண்ட காலம் வரலாற்றில் இடம் பெற்றுள்ளதை யாவரும் அறிவர். எனவே இலக்கியமும் அத்துணை ஏற்றம் பெறவில்லை என்பதைக் காணமுடிகின்றது. ஆகையால் உரை நடையின் நிலையையும் நம்மால் உணர்ந்துகொள்ள இயலவில்லை. எனினும், தமிழர் தம் வாழ்வும், வளமும், பண்பாடும், நாகரிகமும் பிறநாட்டார் படையெடுப்பாலும் பிற சூழல்களாலும் நீறுபூத்த நெருப்பென மங்கியிருந்து காலம் மாறிய நாளில் மறுபடியும் வீறுபெற்றமை போன்றே உரைநடையும் மங்கித் தவழ்ந்து எட்டாம் நூற்றண்டளவில் தன்னை விளக்க, ஒரு சிறந்த உரை நூலாக உருப் பெற்றது. இரண்டாம் நூற்றண்டை ஒட்டிய காலத்தில் தோன்றிய அவ்வுரைநடை, செவிவழியாக ஒருவர் வாய் ஒருவர் கேட்டுக் கேட்டு—ஆறு நூற்றாண்டு எல்லையை மெல்லக் கடந்து—எட்டாம் நூற்றண்டில் ‘இறையனர் களவியல் உரை’ என்ற பெயரொடு உலகில் உருப்பெற்றது. தமிழ் உரைநடையை விளக்கவே அந்நூல் எழுந்ததோ என்னும் அளவில்தானே அது அமைகின்றது! இரண்டடி நூற்பாவிற்குப் பல பக்கங்கள் உரை விளக்கங் காணப்பெறுகிறோம். அது பற்றிய ஆய்வு இங்கே நமக்கும் தேவையில்லை. அந்த உரைநடையின் அமைப்பையும், போக்கையும், அழகையும் கண்டு மேலே செல்லலாம். தலைமகள்—பல நூறு தோழியரோடு கூடி வாழ்ந்த தலைமகள் —எப்படித் தமியளாய் நிற்கின்றாள் என்பதை விளக்கும் நக்கீரர் நாநலம் காண நலம் பயப்பதாகும். யாங்ஙனம் நிற்குமோவெனின், சந்தனமும் சண்பகமும் தேமாவும் தீம்பலாவும் ஆசினியும் அசோகும் கோங்கும் வேங்கையும் குரவமும் விரிந்து, நாகமும் திலகமும் நறவும் நந்தியும் மாதவியும் மல்லிகையும் மெளவலொடு மணங் கமழ்ந்து, பாதிரியும் பாவை ஞாழலும் பைங் கொன்றையும் பிணி யவிழ்ந்து, பொரிப்புன் கும்புன்னாகமும் முருக்கொடு முகை சிறந்து, வண்டறைந்து தேனோர்ந்து வரிக்குயில்கள் இசைபாட, தண்தென்றல் இடைவிராய்த் தனியவரை முனிவு செய்யும் ஒரு பொழிலது நடுவண்; ஒரு மாணிக்கச் செய்குன்றின் மேல், விசும்பு துடைத்துப் பசுப்பொன் பூத்து, வண்டு துவைப்பத் தண்தேன் துளிர்ப்பதோர் வெறியுறு நறிமலர் வேங்கை கண்டாள்; கண்டு பெரியதோர் காதல் களிகூர்ந்து, தன் செம்மலர்ச் சீறடி மேல் சிலம்பு கிடந்து சிலம்பு புடைப்ப, அம்மலர் அணிக்கொம்பர் நடை கற்பதென நடந்து சென்று, நறைவிரி வேங்கை நாண்மலர் கொய்தாள்; கொய்தவிடத்து மரகதமணி விளிம்படுத்த மாணிக்கச் சுனை மருங்கினதோர் மாதவி வல்லி மண்டபத்துப் போது வேய்ந்த பூநாறு கொழுநிழற் கீழ்க் கடிக்குருக் கத்திக் கொடி பிடித்துத் தகடுபடு பசும் பொற் சிகரங்களின் முகடு தொடுத்து வந்து இழிதரும் அருவி ஆடகப் பாறை மேல், அதிர்குரல் முரசின் கண்ணிரட்ட, வண்டும் தேனும் யாழ் முரல, வரிக் குயில்கள் இசை பாடத் தண்தாது தவிசுபடப் போர்த்ததோர் பளிக்குப் பாறை மணித்தலத்து மீமிசை, நீல ஆலவட்டம் விரித்தாற்போலத் தன் கோலக் கலாவம் கொள விரித்து, முளை இளஞாயிறு இளவெயி லெறிப்ப, ஓர் இளமயிலாடுவது நோக்கி நின்றாள்.” என்பது நக்கீரர் வாக்கு. ஆம்! அவள் நிற்கும் அழகினைக் காட்டிலும் அவளை ஈர்த்து ஆடும் மயிலினைக் காட்டிலும் அவற்றை விளக்கிய உரைநடையின் அழகன்றோ அனைவர் உள்ளத்தையும் கவர்ந்து உருக்குகின்றது. உரையாசிரியர்கள் இறையனார் களவியலுரைக்குப் பின் நாட்டில் பல் வேறு நூல்களுக்கு உரைகள் எழுதப்பெற்றன. உரை நடை இலக்கியம் வேறு வகையிலும் வளர்ச்சியுற்றது. அவ்வளர்ச்சிக் கிடையில் எத்தனையோ மாற்றங்களும் ஏற்றத் தாழ்வுகளும் இடம் பெற்றன. வேற்றுமொழிக் கலப்பினால் தமிழ் உரைநடை உருமாறிற்று—பிறழ்ந்தது—பின் சிறந்தது. எத்தனையோ வகைகளில் உரைநடை வளரலாயிற்று. ஒன்றன்பின் ஒன்றாகத் தொட்டுக் கண்டு விரைந்து நாம் பத்தொன்பதாம் நூற்றாண்டின் தலைவாயிலுக்கு வரலாம். சங்ககாலத்திலும் அச் சங்கம் மருவிய காலங்களிலும் பின் இருண்ட காலத்திலும் பல இலக்கியங்கள் எழுந்தன. அவற்றிற்கும் தொல்காப்பியம் என்னும் இலக்கணத்திற்கும் நாட்டில் உரை கண்ட நல்லவர்கள் பல்லோர். அவர்களுள் தலைசிறந்தவராகப் போற்றப் பெறுபவர் பேராசிரியர், நச்சினர்க்கினியர், இளம்பூரணர், அடியார்க்கு நல்லார், பரிமேலழகர், சேனவரையர், தெய்வச்சிலையார், கல்லாடர் என்பவர்களே. இவர்தம் உரைகள் இன்றளவும் தமிழை உரையிட்டு ஏற்றங்கண்டு போற்றும் வகையில் அமைந்துள்ளதை யாவரே அறியாதார்? உச்சிமேற் புலவர் கொள் நச்சினார்க்கினியர் உரை, இலக்கணம் இலக்கியம் என்ற இரண்டற்கும் உள்ளது. இவர் தொல்காப்பியம் முழுதுக்குமே உரை எழுதினர் என்பர் (அதில் கடைசி நான்கு இயலுக்கு உரை காணக்கிடைக்கவில்லை போலும்). இளம் பூரணர், சேவைரையர், பேராசிரியர், தெய்வச்சிலையார், கல்லாடர் என்ற பெருமக்கள் தொல்காப்பியத்துள் சிற்சில பகுதிகளுக்கு உரை எழுதினவர்கள் என்பதை இன்றும் அவர்தம் உரைவழியே காண்கிறோம். சீவகசிந்தாமணி, பத்துப் பாட்டு, கலித்தொகை என்ற காப்பிய, சங்க இலக்கியங்களுக்கும் நச்சினார்க்கினியர் உரை எழுதியுள்ளார். குறுந்தொகைக்கும் இவர் உரை எழுதினார் என்று ஐயர் அவர்கள் அந்நூலின் முன்னுரையில் குறித்துள்ளார்கள். இவர்களையன்றி இளங்கோவடிகளின் சிலப்பதிகாரத்துக்கு அடியார்க்கு நல்லாரும், திருக்குறளுக்குப் பரிமேலழகரும் எழுதிய உரைகள் உலகம் உள்ளளவும் வாழும் திறன் பெற்றுவிட்டன. குறளுக்குப் பதின்மர் உரைகண்டனர் எனவும் அவற்றுள் சிலவே கிடைக்கப்பெற்றன எனவும் அறிகிறோம் சிலம்பின் அரும்பத உரையாசிரியரும் நம்மால் போற்றத் தக்கவரன்றாே? திருக்கோவையார் முதலிய சமய இலக்கியங்களுக்கும் உரை கண்ட பெருமை அக்காலத்தியதே. இவ்வாறு,தமிழக வரலாற்றின் இடைக்காலத்தில் பண்டைத் தமிழ் நூல்களை உலகுக்கு உணர்த்தவும் அவற்றை எல்லையற்ற காலம் நிறைவுற்று வாழ வைக்கவும் கருதிப் பல நல்லவர்கள் உரை எழுதினர்கள். அவர்கள் தமிழ் உரைநடையை வளர்த்ததோடு அப்பழம் பெரும் இலக்கியங்களையும் வாழவைத்த பெருமைக்கும் இலக்காகி விளங்குகின்றார்களன்றாே? இவர்தம் உரைநடைகளுள் ஒரு சிலவற்றைக் கண்டு மேலே செல்லல் பொருத்தமானதாகும். இவர்தம் காலம் ஏறக்குறையக் கி. பி. பதினேராம் நூற்றாண்டிற்கும் பதினான்காம் நூற்றாண்டிற்கும் இடைபட்ட காலமே என்பர் ஆய்வாளர். ஓரிருவர் காலத்தான் முன்னே செல்ல வாய்ப்பும் உண்டு. இக்காலத்தில் தமிழில் வேற்று மொழிகள், சிறப்பாக வடமொழி, விரவிக் கலந்துள்ளமையை நம்மால் காணமுடிகின்றது; என்றாலும் சில உரையாசிரியர்கள் பழையதிலும் பழையதான வகையில் தம் உரைப்போக்கை அமைத்துள்ளமையை அறிகின்றாேம். இவர் தம் உரைகள் மூலங்களுக்கு உரைகளே என்னும் நினைவை மறப்பித்து, தாமே பேரிலக்கியங்களோ என்னும் நினைவையும் சிற்சில இடங்களில் உண்டாக்குகின்றன என்பதைப் பயின்றாேர் நன்கு உணர்வர். ஒரு சில இடங்களை நோக்கின் 'நூலாசிரியர் இத்தகைய நுண்ணுணர்வுடன் பாடினரா? அன்றி உரையாசிரியர் உளவண்ணமும் உரை வண்ணமும் இத்தகைய ஏற்றத்தைத் தருகின்றனவா?’ என்று வியக்கத் தோன்றும். எனவே, உரையாசிரியர்கள் ஆய்ந்தமைந்த கல்வி அறிவும் முடிவிலா ஆற்றலுடைமையும் பெற்றமையே அவர்தம் சிறந்த உரைகளை உலகில் அன்று மட்டுமன்றி இன்றும் என்றும் வாழவைக்க உதவின—உதவுகின்றன—உதவும் என்பது பொருந்தும். ஒரு சில காணலாம். இளம்பூரணர் இலக்கணத்துக்கு உரை வகுக்கின்றார். களவியல் முதற் சூத்திரத்தில் தொல்காப்பியர் தம் நூலில் முப்பொருளை வைத்த முறைமையை இவர், ‘அறனும் பொருளும் இன்பமும்' என்னாது ‘இன்பமும் பொருளும் அறனும்' என்றது என்னை யெனின், பலவகை உயிர்கட்கு வரும் இன்பம் இருவகைப்படும். அவையாவன போகம் நுகர்தலும் வீடு பெறுதலும் என. அவற்றுள் வீடுபேறு துறவறத்தில் நின்றர்க் கல்லாது எய்தல் அரிதாயிற்று. போக நுகர்தல் மனையறத்தார்க் கெய்துவது. அவரெய்தும் இன்பமும் அவ்வின்பத்திற்குக் காரணமாய பொருளும் அப்பொருளுக்குக் காரணமாய அறனும் எனக்காரிய காரணம் நோக்க வைத்தார் என்க, என விளக்குவது சிறந்தன்றாே? 'கிளவியாக்கம்' என்ற தொடருக்குப் பொருள் கூற வந்த சேனாவரையர். 'வழுக்களைந்து சொற்களையாக்கிக் கொண்டமையான் இவ்வோத்து 'கிளவியாக்கம்' ஆயிற்று. ஆக்கம் - அமைத்துக் கோடல். நொய்யும் நூறுங்கும் களைந்து அரிசி அமைத்தாரை அரிசியாக்கினர் என்பவாகலின். சொற்கள் பொருள் மேல் ஆமாறு உணர்த்தினமையால் கிளவியாக்கம் ஆயிற்று எனினும் அமையும். பொதுவகையாற் கிளவி என்றமையால், தனி மொழியும் தொடர் மொழியும் கொள்ளப்படும். கிளவி, சொல், மொழி என்னும் தொடக்கத்தன வெல்லாம் ஒரு பொருட் கிளவி என விளக்குவார். பேராசிரியரோ, தொல்காப்பியர் காட்ட நினைத்த பொருள் நிலைகளை நன்கு உணர்ந்தவர். அவர் புல்லையும் மரத்தையும் தொல்காப்பியர் காட்டிய வழியே சென்று காட்டுகிறார். 'புறக்காழன எனவே, அவ்வழி வெளிறென்ப தறியப்படும். அவை பனையுந் தெங்கும் கமுகும் முதலாயின புல்லெனப்படும்: இருப்பையும் புளியும் ஆச்சாவும் மரமெனப்படும். இங்ஙனம் வரையறை கூறிப் பயந்ததென்னே? புறத்தும் அகத்தும் கொடி முதலாயின காழ்ப்பின்றியும் அகின் மரம் போல் வன இடையிடைப் பொய்பட்டும் புல்லும் மரனும் வருவன உளவாலெனின்-இரண்டிடத்தும் ஏகாரம் பிரித்துக் கூறினமையாலும் 'என மொழிப’ என்று இருவழியும் சிறப்பித்து விதந்தமையானும் சிறு பான்மை அவையும் புல்லும் மரனுமென அடங்கு மென்பது’ என்பது அவர் விளக்கம். நாச்சினர்க்கினியர் முல்லைப்பாட்டிற்கு விளக்கங்கூற வந்தகாலை, ‘இப்பாட்டிற்கு முல்லையென்று பெயர் கூறினார், முல்லை சார்ந்த கற்புப் பொருந்தியதனால், இல்லறம் நிகழ்த்துதற்குப் பிரிந்து வருந்துணையும் ஆற்றியிருவென்று கணவன் கூறிய சொல்லைப் பிழையாமல் ஆற்றியிருந்து இல்லறம் நிகழ்த்திய இயற்கை முல்லையாமென்று கருதி இருத்த லென்னும் பொருடர முல்லையென்று இச்செய்யுட்கு நப்பூதனார் பெயர் கூறினமையின், கணவன் வருந்துணையும் ஆற்றியிருந்தாளாகப் பொருள் கூறலே அவர் கருத்தாயிற்று. ‘தானே சேறல்’ (தொல். அக. 27) என்னும் வழியால், அரசன் தானே சென்றது இப்பாட்டு’ என விளக்கங் காட்டுகின்றார். இவ்வாறே, அடியார்க்கு நல்லார், பரிமேலழகர் முதலிய உரையாசிரியர்கள் கூறிய உரை விளக்கங்கள் பல. வேறுபல உரையாசிரியர்களும் அக்காலத்தில் பல்வேறு நூல்களுக்கு உரைகள் எழுதித் தமிழ் உரைநடையை வளர்த்தனர் எனல் பொருந்தும். இத்துறையில் இன்னும் விரிப்பிற் பெருகுமாதலால் மேலே செல்லலாம். கல்வெட்டின் உரைநடை இருபதாம் நூற்றண்டின் பல ஆராய்ச்சிகளுள் ஒன்று பழமையைத் துருவி ஆராய்தல். தமிழ்நாட்டுப் பழைய வரலாற்றை அவ்வாறு துருவி ஆராயப் பயன்படுவதற்கு மிக்க உதவியாக இருப்பன இடைக்காலத்தில் உண்டான கல்வெட்டுக்களே யாகும். கல்மேல் வெட்டப்பட்டு இன்றளவும் வாழ்கின்ற அவ்விலக்கியங்களை ஆராய்ந்து இன்று வெளியிடுகின்றனர். அவை பாட்டும் உரையும் விரவியனவாகவே அமைந்துள்ளன. தமிழ் நாட்டுப் பல்வேறு பகுதிகளிலும் கல்வெட்டுகள் உள்ளன. அவற்றுள் முற்பகுதி அவ்வக் காலத்து அரசர்தம் புகழ் பரப்பும் மெய்க்கீர்த்திகளா யமையப் பிற்பகுதிகள் பெரும்பாலும் அறமாற்றும் நிலையை விளக்குவன. முற்பகுதி பெரும்பாலும் அகவற் பாக்களால் அமைய, பிற்பகுதிகள் உரைநடையாகவே உள்ளன. தமிழ் நாட்டில் படி எடுத்த கல்வெட்டுக்கள் சில; எடுக்க வேண்டுவன பல. எனவே, தமிழ் உரைநடை, செவிவழியாக வந்து, ஓலை ஏட்டிலேயும் உதட்டிலேயும் தன் வாழ்வை அமைத்துக்கொண்ட தோடமையாது, என்றும் நிலைபெறும் கல்லிலும் தன் வாழ்வை அமைத்து, அக்கற்களையே தன் புகழ் பாடும் கவிக் கூடங்களாக மாற்றிக் கொண்டது. மிகப் பழங்காலந் தொட்டு வந்த இந்த வழக்கம் பிற்காலச் சோழர் பாண்டியர் காலத்தில் மிகுந்த உச்ச நிலையில் இருந்தது. நாம் காண இருக்கும் கால எல்லையிலும்—ஏன்? இன்றும் கூடக் கல்லில் உரைநடையையும் பாட்டையும் செதுக்கிப் பரப்பும் நிலையைக் காணுகின்றோம். சோழ பாண்டியர் காலக் கல்வெட்டுக்களில், அவற்றின் உரைநடை நலத்தைக் கண்டு மேலே செல்லலாம். இது சற்றே புதியதாகவும் மாறுபட்டதாகவும்கூடத் தோன்றும். ‘ஸ்ரீ திருபுவநச் சர்கிர விற்த்திகள் ஸ்ரீ ராச ராச தேவருக்கு யாண்டு பதினாறாவதற்கெதிராம் ஆண்டு நாள் இருநூற்றெழுபத்திரண்டு காங்கய ராயனும் திருமஞ்சனம் அழகியனும் தென்னவன் பிரமராயனும் ஆளுடையயையனாயனாற்ற் கோவிலுக்கு ஸ்ரீ காரியம் செய்வார்களும் சமுதாயம் செய்வாற்களும் கோவில் நாயகம் செய்வாற்களும் சமுதாயம் செய்வாற்களும் செய்யத் திருவாய் மொழிந்தருளினபடி, உய்யக்கொண்டார் வள நாட்டு அம்பர் நாட்டு அம்பாருவந்தை அரயன் சிவேத வன பெருமானை தொண்டமான் பெரும் பெற்றப் புலியூற் முடித்தலைக் கொண்ட பெருமாள் திருவீதி மேலைத் திருவீதி கீழைச் சிரகில் யெடுப்பித்த அறப் பெருஞ் செல்வி சாலையில் உண்ணும் ஆதுலற்கு அரிசியும் கறி விறகு உள்ளிட்ட விஞ்சனத்துக்கும் அடுவார்த் தண்ணீர் வார்ப்பாற்க்குஞ் சாலை அழுவு கொரவும் உன்னிட்டு வேண்டுவன வையரத்துக்கு இரை மிகுதி கொண்டு செய்ய இவன் காணியான நிலத்துக்குத் தந்த ராசாதிராச வளனாட்டு பாண்டுரான குலோத்துங்க சோழன் வல்லத்து நிலமாய் ராச ராசன் அம்பர் யென்னும் பெறவேணு மிடுக்கச் சொன்ன நிலம் நாற்பத்திநாலேகாலும் பதினராவதினெதிராமாண்டு பிசான முதல் யிச்சாலைக்குக் காணிக்கைக் கொள்ளவும், இந்த நிலத்துக்கு இவன் தந்த சாதனம் திருக்கை ஒட்டியிலே ஒடுக்கி வைத்துக்கொண்டு இப்படிக் குலோத்துங்க சோழன் திருமாளிகையிலே கல்வெட்டவும் கடவதாகப் பெறவேணும் யென்று இவன் நமக்குச் சொன்னமையில் யிப்படி செய்யக் கடவதாகச் சொன்னோம். இப்படி செய்யப்பண்ணுவது, யெழுதினன் திருமந்திர ஓலை நெறியுடைய சோழ வேந்த வேளாயென்றும் திருவாய் மொழிந்தருளிநார் இவை செதிராயன் எழுத்தென்றும் இவை விழுப்பாதிராயன் யெழுத்தென்றும் இவை காலிங்கராயன் யெழுத்தென்றும் இவை செகுதிராயன் யெழுத்தென்றும் இவை காங்கெயராயன் யெழுத்தென்றும் பிரதாசம் செயிதருளி வந்த செய்யும்படி கல்வெட்டியது.’[13] மணிப் பிரவாளம் இக்கல்வெட்டுச் சிதம்பரம் கோயிலில் உள்ளது என அறிகிறோம். இதன் நடையில் பெரு மாறுதல் நம்மாள் உணர முடிகிறது. எழுத்துப் பிழைகளும் நிரம்ப உள்ளதையும் காண்கின்றாேம். இதுவரை நாம் கண்டு வந்த உரைகளுக்கும் இதற்கும் உள்ள வேற்றுமையினையும் நம்மால் உணர முடிகின்றது. இவை கல்வெட்டுகளானமையின் கல்லில் செதுக்க முடியாதநிலையிலோ அன்றிச் செதுக்கினவன் நல்ல எழுத்தறிவற்றவன் என்ற காரணத்தாலோ இக்குறை நேர்ந்திருக்கலாம் என எண்ணவும் முடியாது. தமிழ் நாட்டு வரலாற்றின் இடைக்காலத்திலே இத்தகைய மாற்றங்கள் மொழியில் மட்டுமன்றி வாழ்வு, பண்பாடு, நாகரிகம், சமுதாய நிலை இன்ன பிறவற்றிலும் உண்டாகியிருப்பதைக் காணமுடிகின்றமையின் இம்மாற்றமும் அவற்றை ஒட்டி வந்தது எனக் கொள்வதே பொருந்தமாகும். பிற மொழிச் சொற்களும் இதில் அதிகம் இடம் பெற்றிருப்பதைக் காண முடிகின்றது. ஏறக்குறைய இக்காலத்தில் எழுந்த உரைநடை நூல்களிலும் இத்தகைய வாடை வீசக் காணலாம். நாலாயிரப் பிரபந்தத்துக்குப் பேருரைகள் எமுந்த காலத்திலே வடமொழி அதில் அதிக இடம் பெற்றிருப்பதை நம்மால் காணமுடிகின்றது. அதை ‘ஈடு’ என்று நாம் போற்றிப் பாராட்டுகின்றோம். அந்த நடையையே மணியும் பவளமும் கலந்த நடை என்று பொருள்படும்படியான ‘மணிப்பிரவாள’ நடை என அழைக்கின்றாேம். அக்காலத்தில் அத்தகைய நடை எழுதுவதுதான் சிறந்தது என மக்களும் மன்னரும் கருதியிருக்கக்கூடும். தமிழ் உரைநடை வரலாற்றில் இது ஒரு திருப்பமேயாகும். எனினும், இந்த நடை அதிகமாக வழக்கத்தில் இல்லை. வைணவப் பெரு நூல்களுக்கு அமைந்த உரைகளிலும், கல்வெட்டுகளிலும் வேறுசில சமய வேதாந்த நூல்களிலும் இந்நடையைக் காணமுடிகின்றது. இந்த அமைப்பும் பத்தொன்பதாம் நூற்றண்டிலும் உள்ளதைப் பின்னர்க் காணலாம். அதற்குமுன் ‘மணிப்பிரவாள’ உரைநடைக்குச் சான்றாகவும்-ஈட்டுரையிலிருந்து இரண்டொரு பகுதிகள் இங்கே காணல் பொருத்தமானதாகும். தெய்வத் திருப்பாசுரமாகிய திருவாய் மொழிக்கு 'ஈடு’ உயர்ந்த உரையாக அமைகின்றது. என்றாலும் விளங்கிக் கொள்ள முடியாத-பிற உரைகளுக்குமாறுபட்ட-வகையில் மணிப்பிரவாள நடையில் அது அமைந்தகாரணத்தாலேயே நாட்டில் அவ்வளவு விளக்கம் பெறவில்லையோ என எண்ண வேண்டியுள்ளது. எனினும் நம் உரைநடை வளர்ச்சி எல்லையில் அதுவும் ஒரு மைல் கல்லாக அமைகின்ற காரணத்தால் அந்த நடையிலேயும் நாம் ஒன்று காணல் தேவையே. நம் பல்கலைக் கழக முயற்சியினால் அது படித்து உணரத்தக்க வகையில் வெளிவந்துள்ளமை மகிழ்ச்சிக்குரியதே. ‘அஞ்சிறைய மடநாராய்’ என்ற பாட்டின் ‘நல்கித்தான் காத்தளிக்கும்’ என்ற தொடருக்கு உரிய உரையைக் காண்போம். ‘(நல்கி) விபூதி ரக்ஷணம் பண்ணும்போது கர்த்தவ்ய புத்தியாவன்றிக்கே பேறு தன்னத்தாகக் கிடீர் ரக்ஷிப்பது. எனக்குத் தன் பக்கல் உண்டான வியா மோகம் தனக்கு விபூதியிலே உண்டாயிற்று. ரக்ஷிப்பது (தான்) அபேக்ஷிப்பாரின் றிக்கே யிருக்கத் தானே ரக்ஷிக்கும் அவன். (பொழிலேழும்) கீழும் மேலும் ஒன்றாக நினைத்துச் சொல்லுகின்றதால், ஸ்வ சரீர ரக்ஷணம் பண்ணுவது ஸ்நேக புரஸ்ஸரமாகையிறே. ‘நல்கி தான்’ இத்யாகி) நாமரூப விபாகா நர்ஹமாய் கிடந்தவன்று யாரிடமிருந்து அபேக்ஷிக்க இத்தை உண்டாக்கிற்று. சக்திய வஸ்த பிரபை (நீறுபூத்த நெருப்பு) போல, தான் என்கின்ற சொல்லுக்கு உள்ளேயாய்த் தன்னையிட்டு விவரிக்கவேண்டின அன்று தன்மேலே ஏறிட்டுக் கொண்டு நோக்கினானாயிற்று (காத்தளிக்கும்) காத்துக் கொடுக்கு மென்னுதல் (‘வினையேற்கே நல்கத்தா னாகாதோ’) இல்லாதவன்று உண்டாக்கினாய், உண்டாக்கினதற்குப் பலம் கர்மத்தை ஏறிட்டுக் கைவிடுகையோ? ஸ்வ ஜனரக்ஷணம் பண்ணவாகாதோ? நாட்டுக் கிட்ட நினைப்பு அந்தப்புரத்துக்கு அரிதாக வேணுமோ? (‘வினையேற்கே’) கடலிலே ஏற்ற மிட்டுத் தண்ணீர் அரிதாம்படியான பாவத்தைப் பண்ணுவேனே. (‘நாரணனைக் கண்டக்கால்’) ஜீவ சமூகத்தினுடைய ஸ்வரூப ஸ்திதியாதிகள் ஸ்வாதனமாய் இவை ப்ரகாரமாக, தான் பிரகாரியாய், இவற்றிலே ஒன்று குறையிலும் தம் இழவாம்படி இருக்கையாலே நாராயணன் என்று விருதுழதித் திரிகிறவரைத் கண்டக்கால், இப்பேர் யோக ரூடியோ என்றிருந்தோம் மஹா விருட்சத்தோபாதியோ என்று கேளுங்கள் (கள்ளி, மல்குநீர் இத்யாதி) உன்செயல் பரார்த்தமாய் இருந்ததீ: பெருகா நின்றுள்ள நீரை உடைத்தான நீர் நிலம் உண்டு—கொடித் தோட்டம் அதிலே (இரை தேர்) பெடையின் வாய்க்கு அடங்குவது தேடா நின்றது. புள்ளுப் பிள்ளைக்கு இரைதேடும் எனக் கடவதிறே? கயலுகளா நிற்கச் செய்தேயிறே, பிள்ளை வாய்க்கடங்குவது தேடுகிறது.’ இதில் கடவதிறே, செய்தேயிறே என்ற சொல்லமைப்பு முறைகளையும் வடமொழிச் சொற்கள் மட்டுமின்றி எழுத்துக்களும் அப்படி அப்படியே எடுத்தாளப் பெறுவதையும் காண முடிகின்றது. திருப்பம் ஏறக்குறைய பதினாறாம் நூற்றாண்டிற்குப் பின் தமிழ் உரைநடை மறுபடியும் வீறுநடையிட்டு வளரத் தொடங்கியது எனலாம். எனினும், அந்த நூற்றாண்டில் சிறந்த உரைநூல்களைக் காண முடியவில்லை. ஆயினும், அடுத்த நூற்றாண்டில் காணும் உரைநடையை நோக்கும்போது அதற்குமுன் நூற்றாண்டிலும் அதன் செழுமை புலப்படாமல் போகாது. பிற்காலத்திய உரையாசிரியர் நிலையில் சிறு மாறுதல்கள் காண்கின்றாேம். நூலெழுதியவர்களே உரை எழுதல் நலம் பயக்காது என்ற காரணத்தினலோ ஏனோ பழங்காலத்தில் உரையாசிரியர்கள் நூலாசிரியரினும் வேறு பட்டவராக இருந்து அவ்வந் நூல் பற்றிய ஆய்வுகளைத் தெள்ளத் தெளிய வெளியிட்டனர். ஆயினும், பதினேழாம் நூற்றாண்டை ஒட்டி வாழ்ந்த இலக்கண நூல்கள் இயற்றிய வைத்தியநாத தேசிகர், சாமிநாத தேசிகர் முதலியோர் தாமே தம் நூல்களுக்கு உரையும் எழுதினர் என்பர். அதன் காரணத்தாலேதான் அவை இத்துணை விரைவில் வழக்கொழியத் தொடங்கிவிட்டனவோ என நினைக்க வேண்டியுள்ளது. அக்காலத்தில் கல்லாடத்துக்கு உரை எழுதிய மயிலேறும் பெருமாள் என்பவரும் வாழ்ந்திருந்தனர். அவர்கள் உரைகளையெல்லாம் ஈண்டு விளக்கத் தேவையில்லை. அக்காலத்தை ஒட்டி வாழ்ந்த சங்கர நமச்சிவாயர் நன்னூலுக்குச் சிறந்த உரை கண்டுள்ளனர். இவை அனைத்தும் தமிழ் உரைநடைக்கு ஊற்றமாக இருந்தன எனக் கொள்வதில் தவறு இல்லை. மேலை நாட்டார் அடுத்து வரும் நூற்றாண்டுகளில் தமிழ்நாட்டில் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. மேலை நாட்டு மக்கள் நம் நாட்டில் வாணிபத்தின் பொருட்டும் அடுத்து ஆட்சி செய்தற் பொருட்டும் காலூன்றி வளர ஆரம்பித்த காலம் அது. அவற்றுடன் அம்மேலை நாட்டிலிருந்து கிறத்தவ சமயத்தைப் பரப்ப வந்த பாதிரியர் சிலர், தம்நாட்டு நிலையையையும் வாழ்வையும் விட்டு, தமிழ் நாட்டு அற வாழ்வின் அடிப்படையில் மக்களொடு மக்களாய் வாழ்ந்து, ஏழைகளொடு ஏழைகளாக நின்று அவர்களிடையில் தம் சமயத்தைப் பரப்பினர். அவர்கள் தமிழையும் நன்கு கற்று, தமிழிலே மக்களோடு கலந்து உறவாடி, தமிழில்-உரைநடையிலும் பாட்டிலும்-இலக்கியங்களையும் தம் சமய உண்மைகளையும் எழுதி வைத்துள்ளனர். அத்தகைய மேலைநாட்டு அறிஞருள் அக்காலத்தவர்களாகச் சிறந்த வகையில் போற்றத்தக்கவர் ராபர்ட்-டி-நோபிலி என்ற இயற் பெயருடைய தத்துவ போதகரும், பெஸ்கி என்ற வீரமாமுனிவரும் ஆவர். அவர்கள் தமிழ் உரைநடையை வளர்த்த பெருமைக்கு உரியவர்கள் என்றும் சொல்லலாம். அவர்தம் உரைநடையில் வடமொழி அதிகமாக விரவிக் காண்கின்ற காரணத்தால், அவர்கள் இந்நாட்டில் கோயில்களில் வாழ்ந்த அர்ச்சகர் போன்று தாமும் வாழ நினைத்தார்கள் எனக் கொள்ள இடமுண்டு அப்படியே போதகர், முனிவர் என்ற பெயர்களையும் பூண்டு உயர்ந்தார் என்ற நிலையில் பிறர் நினைக்க வாழ்ந்தனர். எனினும் அவர்கள் ஏழைகளோடு கலந்து உறவாடி நின்ற காரணத்தாலேயே அவர்தம் சமயத்தைத் தாழந்த மக்களிடம் பரப்ப முடிந்தது. அவருள் தத்துவ போதகர் பதினேழாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் (20-5-1605) இந்நாட்டுக்கு வந்தார். அவர் செய்த தொண்டுகள் பல அவை பற்றிய ஆய்வு நமக்குத் தேவையில்லை. அவர் எழுதிய உரைநடை நூலுள் ஒருசிலவற்றை எண்ணலே சாலும். அவர், ஞான உபதேச காண்டம், ஆத்தும நிர்ணயம், புனர்சென்ம ஆக்ஷேபம், தூஷணத்திக்காரம், நித்திய சீவன சல்லாபம், ஞானதீபிகை, போதக பரீட்சை, ஞான சங்க்ஷேபம், விசுவாச சல்லாபம், உபதேச சல்லாபம், பத்துச் சல்லாபம், சிலுவையின் விசேஷ சல்லாபம் முதலிய பல நூல்களை இயற்றியுள்ளார். இவற்றின் பெயர்களைக் கொண்டே இவர்தம் உரைநடை எந்தவகையில் அமைந்திருக்கும் என்பதை ஓரளவு உணரமுடியும். எனினும் ஓரிரு மேற்கோள்களைக் கண்டு செல்லலாம். இவர் தம் நூல்களுள் சில பத்தொன்பதாம் நூற்றண்டிலும் (ஆத்தும நிர்ணயம் 1889; அக்கிலான நிவாரணம் 1891) சில இந்த நூற்றாண்டிலும் அச்சாகியுள்ளன. இப்பெரு நூல்களைத் தவிர்த்து அவ்வப்போது அமைந்த சிறுசிறு துண்டுப் பிரசுரங்கள் போன்ற பல சிறு உரைநடைத் தாள்களும் எழுதியுள்ளார் என அறிகின்றாேம் இவர் நூல்களிலும் இக்காலத்தில் வேறு சில நூல்களிலும் மாற்றுச் சமய மாறுபட்ட கருத்துக்கள் மலிந்துள்ளமை காண்கின்றாேம். இந்த அடிப்படையில் 17ஆம் நூற்றண்டில் பல உரைநடை நூல்கள் வளர்ந்துள்ளன. அவர் உரைநடைக்கு ஓரிரு சான்று காணலாம். பிற மதத்தினர் தூஷணங்களை மறுக்கும் வகையில் அமைந்த நூலே ‘தூஷணத் திக்காரம்’ என்பர். இந்நூலில் பல சொற்களின் வழக்குகள் நமக்கு விளங்காதனவாகக் கூட உள்ளன. அவற்றின் ஆய்வு நமக்குத் தேவையில்லை அதிலிருந்து அவரது உரைநடைக்கு ஒரு சிறு மேற்கோள் மாட்டும் காணலம். அவர் நடையில் வடமொழிக் கலப் பு இருப்பது மட்டுமன்றி, அந்த நடை கொச்சைமொழி நடையாகவும் அமைந்துள்ளமை அறியலாம். ‘கடவுளுக்கு எதிராகச் செய்யும் பாவத்தைக் கடவுளே மன்னிக்க வேண்டும். ஆதலாலே கர்த்தருக்கு மனுஷனைவன் துரோகியுமாய் அவருடைய இஷ்டப் பிரசாரத்தைப் போக்கடித்தவனுமாய் இருக்கையிலே, இப்படிப்பட்ட கர்த்தரானவருக்குப் பாவியினலே பண்ணப்பட்ட குற்றமாகிய பாவத்தை அவர் மாத்திரம் போக்கடிக்கிறதுக்கும் தன் இஷ்டப் பிரசாதத்தை மனுஷனுக்குக் கொடுக்கிறதுக்கும் வல்லவராய் இருக்கிருரொழிய, வேறெ பொருளிலே தேவ இஷ்டப் பிரசாதமானது மனுஷனுக்குப் பிரதான காரணமான மேரையாகக் கொடுக்கப்படலாம் என்றும் அல்லது பாவத்தைப் போக்கடிக்கலாம் என்றும் முழுமதி கெட்டவன் சொன்னால் சொல்லுவா னொழியப் புத்திமானாய் இருக்கிறவன், அப்படிப்பட்ட வார்த்தையைப் பரிகாசத்துக்கு இடமாய் இருக்கிற முதிர்ந்த பயித்தியம் என்று எண்ணிக் கொண்டு வருவான் என்கிறதுக்குத் தப்பாது.’ மக்களோடு மக்களாய்க் கலந்து பழகிய இவரும் பிறரும் பல பேச்சு வழக்குச் சொற்களை அப்படியே ஆண்டுள்ளனர். (பக். 401). இவர் காலத்தில் சாதாரண வழக்கத்திலிருந்த சில சொற்களையும் அவற்றின் பொருள்களையும் அறியின் அவை பத்தொன்பதாம் நூற்றண்டில் வழக்கத்தில் இருந்தமை காணும்போது, எளிதில் உணர்ந்து கொள்ள வாய்ப்பாகும். (அகோசரம்—எட்டாதது; அங்கிஷம்—அன்னப்பறவை. அசனம்-உணவு; அடைசி-செறிந்து; அநுமானம்-உடன் கட்டையேறல்: அம் மருவாதியே—அப்படியே; அப்பிரதானம்—அற்பம்; அர்ச்சயம்-கட்டின்மை; இங்கிரேசி-ஆங்கிலேயர்; இதமித்தல்-இன்புறுத்தல்; உத்தாம்-பிறகு; எக்கச்சக்கம்-தாறுமாறு: கஷ்டம்-மலம்;கட்டு வர்க்கம்-ஆடை அணிகலன்; சஞ்சிதம்-புதையல்; சபலம்-பயனொடு; சரப்பளி-தங்கச் சங்கிலி; சூசனை-போதனை, சைக்கம்-மென்மை; தப்பளை-தவளை; தரும சரித்திரம்-நற்செயல்; தாவடம்-கழுத்தணி, துரிதம்-துன்பம்; பத்துப்பத்தாய்-கவனமாய், பறங்கி-போர்த்துக்கீசியர்; பள்ளுவிலி-ஒரு சாதி (யாழ்ப்பாணம்) பிரமாணிக்கம்-ஒழுங்கு பூர-புக: பூத-புக; பூதிலம்-பூமி; போரும்-போதும்; மச்சியம்-மீன்; மொக்கிஷம்-மோட்சம்; வங்காரம்-பொன்; வர்ச்சித்து-விலக்கி; வருந்து-முயற்சி செய்; வித்துவாங்கிஷர்-கவிஞர்; விரத்தர்-பிரமச்சாரி, வைதுஷ்யம்-கல்வி; லாவகம்-எளிமை; லேக்கின்-எழுது வோன்; லேகினி-எழுதுகோல்; க்ஷூதிக-கெட்ட). இனி, அத் தத்துவ போதகர் தம் பிரசங்கம் ஒன்றனை இங்கே காட்டி அமையலாம் என எண்ணுகிறேன். ‘இற்றைவரைக்கும் சொல்லப்பட்ட பிரசாரங்களிலே சர்வேசுவரன் உண்டென்றும், ஒருத்தராய் இருக்கிறாரென்றும், தானாய் அனாதியாய் சரீரமில்லாமல் இருக்கிறாரென்றும், அளவில்லாத சகல நன்மையாய் இருக்கிறார் என்றும், ஞானத்தினலேயும், பெலத்தினலேயும், காரணமாய் எங்கும் நிறைந்திருக்கிருரென்றும் வெளிப்படுத்தினோம். இந்த பிரகாரமாய் இந்தப் பிரசங்கத்திலே சர்வேசுரன் எல்லாத்திற்கும் ஆதிகாரணமாயிருக்கிறார் என்று வெளிப்படுத்துவோம். ‘அதெப்படியென்றல், பரமன் பலத்தையும், பூலோகத்தையும் அதுகளில் உண்டாயிருக்கிற சகல வஸ்துக்களையும் சகலத்துக்கும் வல்லவராயிருக்கிற சர்வேசுவரன் உண்டாக்கினாரென்கிறது அவர் எல்லாத்திற்கும் ஆதி காரணமாயிருக்கிறார் என்கிறதுக்கு... இதிலே சர்வேசுரனைவர் இந்த உலோகத்தை உண்டாக்கினர் என்றும் அதை உண்டாக்கிறபோது எதாலே எப்படி எதுக்காக உண்டாக்கினர் என்றும் சொல்லிக் காட்டுவோம். (ஐந்தாம் பிரசங்கம்)’ இவர் ‘சல்லாபம்’ என்று குறிக்கும் நூல்களெல்லாம் வினவிடையாக அமைகின்றன. இவற்றின் நடை இன்னும் கொச்சையாகவும் மிகச் சாதாரணமாகவும் அமைந்துள்ளது. குரு: இரண்டாஞ் சல்லாபத்திலே நம்மாலே உபதேசிக்கப்பட்டதெல்லாம் நன்றாய்த் தெளிஞ் சாயானால், இப்பாலும் அறிய வேண்டியதை சங்கோசப்படாமல்க் கேட்பாயாக;- சீஷன்: பராபர வஸ்துவினிடத்திலே படைப்புண்ட புத்திக்குள்ளே அடங்காத சத்தியங்கள் உண்டென்றும் அப்படிப்பட்ட அடங்காத சத்தியங்களை அறிய வேண்டினதாயிருக்கு மென்றும் அருளிச் செய்தீர். பிரத்தியக்ஷ தெரிசனத்திலே யானாலும் (அனுமான தெரிசனத்திலே என்கிலும்?) அதுகளைப் புத்தியானது சென்று புடிக்கக் கூடாமலிருக்கச் செய்தே, அதுகளை யெந்தக் காரணத்தினலே அறியலாம்? இவ்வாறாக அவர் நடை செல்லுகின்றது. அவர் நடையைக் கண்ட அதே நிலையிலே விரமாமுனிவருடைய உரைநடையிலேயும் இரண்டொன்று கண்டு தெளியலாம், அவர் தம் நூலுள்ளும் பல சென்ற நூற்றாண்டில் அச்சேறினவேயாம். ‘அறன்’ எனும் பொருள் பற்றி அவர் காட்டிய விளக்கம் சிறந்ததாக உள்ளமையின் அதைக் காணலாம். ‘வேதநூல் முதலெவ்வகை நூலுக் கல்லா துணரவுஞ் சொல்லாலுணர்த்தவும் வல்லவராகி, மெய்ஞ் ஞானத் திருக்கடலாகிய வொருமெய்க் கடவுடன் றிருவடிமலரே தலைக் கணியெனக் கொண்டேத்தி, இருளிராவிடத்து விளங்கியவொரு மீன் போலவும், பாலைச்சுரத் தரிதலர்ந்த பதுமம் போலவும் மெய்யாஞ் சுருதி விளக்காதிருளே மொய்த்த நாட்டின் கண்ணுங் கடவுளேற்றிய ஞானத் திருவிளக் கெரிப்பத் தெளிந்து, உணர்ந் தெங்கும் ஒரு விளக்கென நின்றுயர்ந்த திருவள்ளுவருரைத்த பலவற்றென்றை நான் தெரிந்துரைப்பத் துணிந்தேன். அந்நாயனர் தந்த ‘பயன்’ எனும் பெருங்கடலாழத்தின் மூழ்கியாங்குடை யருமணி யொருங் கெடுத்தொரு சிறு செப்பினடைத்தாற் போலத் திருவள்ளுவரது பயனெல்லாம் விரித்துப் பகரும்படி நான் வல்லனல்லே னாகயின், அக்கடற்றுறை நேர்ந்தொரு மணியெடுத்துக் காட்டலுணர்ந்தேன். அவர் சொன்ன குறளினொன்றே யிங்ஙன நான் விவரித்து ரைப்பத் துணிந்தேன். அஃதாவது, மனத்துக் கண் மாசில னாத லனைத்தறன் ஆக நீர பிற என்பது. இல்லறத் துறவற மென்ற இவ்விரண்டனுள்ளும் அடங்கி நிற்குமெல்லாவறங்களும் மனத்தின் தூய்மையாற் பெறும் பெருமையே தரும மெனவும், மனத்தினுள் மாசு கொண்டவன் செய்யுந் தவமும் தானமும் மற்றை யாவு மறத் தினரவமாவதன்றி யறத்தின் பயனுளவல்லவெனவு மக்குறளிரு பயனிவையென விரித்துக் காட்டுதும். விரிப்பவே, மெய்யும் பொய்யும் விளக்கியுட் பயன்றரு மெய்யறத்தின் நன்மையே வெளி யாவிஃதொன்றுணர்ந்து நாமதற்கொப்ப நடந்தாலிது வீடெய்தும் வழியெனக் காணப்படும். பெரும் பொருணேர்ந்து பொய்ம்மணி கொள்வது கேடாயினும் பொருளை நேர்ந்தும் உடலினை வாட்டியும் உயிரை வருத்தியு மேற்கதி வீட்டிற் செல்லாச் சில பொய்யறங்களை யீட்டுவத்திலுங் கேடாமன்றாே? இதனை விலக்கித் தனது உயிராக்கங் காப்பது வேண்டியிக் குறட்பயனராய் வது நன்றே. இவ்வாறு மேலைநாட்டுக் கிறித்தவர்கள் பதினேழாம் நூற்றண்டிலும் அதற்குப் பிறகும் தத்தம் சமய உண்மைகளைப் பரப்பப் பல்வேறு வகையில் முயன்று உரைநடை நூல்களை எழுதிய ஞான்று இந்நாட்டில் தோன்றிய அறிஞருள் சிலரும் சிறந்த உரை விளக்கங் கண்டுள்ளமையினையும் நம்மால் அறிய முடிகிறது. அவருள் சிறந்தவர் ‘சிவஞான முனிவர்' ஆவர். இலக்கண இலக்கியத்திலும் சைவ சித்தாந்தச் சமய நெறியிலும் இவர் சிறந்த புலமை பெற்றவர். இவர்தம் சிவஞான போத உரை ‘சிவஞான பாடியம்’ எனப் போற்றப் பெறுகின்றது. ஒவ்வொரு துறையிலும் இவர் ஆக்கியுள்ள உரைகள் பத்தொன்பதாம் நூற்றாண்டின் தலைவாயிலில் நிற்கும் நமக்கு நல்ல விளக்கங்ககளாக அமைகின்றன. சமய இலக்கண சாத்திர நூல்கள் சங்கரநமச்சிவாயர் நன்னூலுக்கு நல்ல உரை கண்டமை மேலே குறித்தோம். அந்த உரையோடு தம் கருத்தையும் நிரப்பி இவர் அந்த விருத்தியை முழுமை பெறச் செய்தார். அதில் ஒன்று காணலாம்: மக்களாகப் பிறந்து புண்ணிய பாவ மியற்றிப் புண்ணிய மிகுதியால் தேவராயும் பாவ மிகுதியால் நரகராயும் பிறத்தலின், மக்கள் தேவர் நரகரெனக் சாதன சாத்திர முறையே வைத்தாரென்க. அன்றியும், ஆசிரியர் தொல்காப்பியர், “உயர் திணை என் மனார் மக்கட் சுட்டே” என முன்னர்க் கூறிப் பின்னர் 'இவ்வென வறியு மந்தந் தமக்கில’ வாகிய 'தெய்வஞ் சுட்டிய பெயர்' முதலியனவும் “உயர்திணை மருங்கிற் பால் பிரிந்திசைக்கும்' எனக் கூறலின், உயர்திணைப் பாற் படுத்து, “மக்கள் தேவர் நரகர் உயர்திணை” என முறை தெரிந்து ஓதினரெனக் கோடலுமாமென்க. 3  இவர் தொல்காப்பியப் பாயிரத்துக்கும் முதற் சூத்திரக்திற்கும் விருத்தி உரை செய்துள்ளார். அஃது ஒரு பெரு நூலாகவே அமைந்துள்ளது. அதில் ஒரு காட்டு: இங்ஙனம் வழக்கும் செய்யுளும் பயின்றார்க்கு அவற்றின் கண் ஒரு நிகரானவாய சொற்களும் ஒன்றாேடொன்று ஒவ்வாததுமாகியசெய்கைவேறு பாடுகளும் சொன் முடிபு பொருண் முடிபு வேறு பாடுகளும் நோக்கும் வழி, ‘இவையெல்லாம் வழா நிலையோ? சில வழுவமைதியோ? வழுவோ? கட்டளை யில்லையோ?’ எனவும் ஆசங்கை நிகழு மன்றே? அவ்வாசங்கை நீங்க எழுத்து முதல் மூன்றும் ஆராய்ந்து செந்தமிழியற்கை சிவனுதற்கு, இந்நூல் ஒரு தலையான் வேண்டப்படும் என்பதூஉம், அவை பயிலாதார்க்கு ஆசங்கையே நிகழாமையின் இந்நூல் பயன்படாது என்பதூஉம் விளக்கிய, ‘ஆயிரு முதலின் நாடிச் சிவணிய கண்டு எண்ணித் தொகுத்தான்’ என்றார். எனவே, வழக்கும் செய்யுளும் ஆராய்ந்து பின்னர் இந்நூல் கேட்டற்பாற்று என்பது புலப்பட்டது.[14] நாடிச் சிவணிய, என்பது ‘ஓதி உணர்ந்தான்’ என்பது போலக் காரண காரியப் பொருட்டாய் நின்றது. ‘சிவணிய’ என்பது ‘செய்யிய’ என்னும் வாய்ப்பாட்டு வினையெச்சம். இஃது உணரமாட்டாதார், 'நாடிக்கண்டு எண்ணித் தொகுத்தான்'எனக் கூட்டி, ஒரு வினைமுதல் வினையாக்கி நாடிய ஆராய்ச்சியிற் குறைபாடு உடையவற்றிற்கு, முந்து துால் கண்டு என்றும், ‘ஆயிரு முதலிற் செந்தமிழ் இயற்கை சிவணிய’ எனக் கொண்டு கூட்டியும் இடர்ப் படுப.[15] அற்றேல் ‘அகத்தியம் நிறைந்த தொல்காப்பியன்’ என்னாது, ‘ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன்’ என்ற தென்னை எனின், அகத்தியம் நிறைந்தமை எல்லாராலும் தெளியப்பட்டமையின், வடமொழியிலும் வல்லவனாயினான் என்பது விளக்கிய அங்ஙனம் கூறினர் என்பது. இவ்வாறு அன்றி ஐந்திரத்தின் வழித் தோன்றிய நூல் என்பது விளக்கிய ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன் எனவே, ஐந்திரம் முதல் நூல் என்று அமைந் திருப்ப முந்து நூல் கண்டு எனக் கூறியது எற்றுக்கு எனவும் கூறி மறுக்க.[16] இவர் தம் திராவிட மாபாடியத்துக்கு ஒரு சான்று வேண்டாமா? இதோ கேளுங்கள்: மறைப்பாவது, அநாதியாய மூலமலத்தின் காரியமாகலின், அது முதல்வனாற் செய்யப்படுங் காரியமென்பது என்னையெனின், கூறுதும்-; முதல்வனாவான் முற்றுணர்வுடைமையின், உலகத் துயிர்கள் படுந்துன்ப முழுவதும் உணர்ந்தோனாகியும், பேராற்றலுடைமையான், உயிர்களையெல்லாம் ஒருங்கே வீடு பேறடைவிக்க வல்லவனாகியும், சிவன், சங்கரன் முதலிய பெயர்களாலும் அறியப்படுவதாய், விருப்பு வெறுப்பின்றி, எல்லா உயிர்கண் மாட்டும் ஒப்ப நிகழ்வதாய், தொடர்பு பற்றாது. பிறர் துன்பங்கண்டுழி அதனை அக்கணமே நீக்குதற்கு விளையும் மனவெழுச்சியாகிய பெருங் கருணையுடைமையான், அவற்றை ஒருங்கே வீடு பேறடைவித்தற்கண் ஒருப்பாடு மிக்குடையனாகியும் இத்தன்மைகளெல்லாமுடைய இறைவன் உயிர்களால் அனாதிமுதல் ஈட்டப்பட்டுப் பல்வேறு வகைப்பட்ட துன்பங்களையெல்லாம் விளைவிக்கும் வினை வலியினையும், எல்லாப் பெருங்கொடுமைக்கும் மூலமாகிய சகச மல சக்திகளையும் அவற்றன் பெறுந்துன்பங்களையும் கெடுத்து, எல்லா உயிர்களையும் ஒருங்கே வீடுபேறு அடைவியாமைக்குக் காரணம் குடங்கையினேந்திய தீயின் சூட்டினை நிகழ வொட்டாது தனக்கு மாறாகிய மந்திர முச்சரிக்குங்காறுந் தடுத்து நிற்குங் குளிகை போல, அம்முதல்வனைச் சிறப்பியல்பான் உணரும் மெய்யுணர்வு தோன்றுங்காறும் அவனது பெருங்கருணை உயிர் கண் மாட்டு ஒருங்கே நிகழாத வண்ணம் தடுத்து நிற்கும் உயிர்க் குற்றமாகிய அவ்வம் மல சக்தியின் வழி நின்று அவற்றை நடத்துவதாகிய அவனது சங்கற்பமே யன்றிப் பிறிதில்லையென்பது பெறப்படுதலின், அங்ஙனம் நடத்துவதாகிய முதல்வனது சங்கற்பமே ஈண்டு மறைப்பெனப்படும் (பாடியம், இரண்டாம் சூத்திர உரை, பக். 126) நாட்குறிப்பு நடை இவ்வாறு தொல்காப்பியர் காலந்தொட்டுப் பதினெட்டாம் நூற்றாண்டு வரையில் தமிழ் உரை வளர்ந்து வந்தது. இனிப் பத்தொன்பதாம் நூற்றண்டில் உரைநடை வளர்ந்த வரலாற்றைக் காணல் நன்றே. இந்தப் பத்தொன்பதாம் நூற்றாண்டில் இதுவரை வளராத அளவுக்குத் தமிழ் உரை நடை வளர்ந்துள்ளது. அது எவ்வெவ்வகையில் எவ்வெத்துறையில் எவ்வெவ்வாறு வளர்ந்துள்ளதென்பதைத் தொடர்ந்து இரு நாட்களிலும் காண இருக்கின்றோம். இங்கு அவ்வாறு உரைநடைமிக்கு வளரக் காரணமாயிருந்த நாட்டுச் சூழ்நிலை, அரசியல், சமயநிலை, பொருள் நிலை, பிறநிலைகளின் வேறுபாடு முதலியவற்றைச் சற்றே எண்ணிப் பார்க்கலாம். அவையே நாட்டு இலக்கிய வளர்ச்சிக்கும் பிற உணர்வுகளுக்கும் காரணங்களாக அமைகின்றமையின் அவற்றை எண்ணல் இன்றியமையாததாகும். அதற்குமுன் பதினெட்டாம் நூற்றாண்டில் மேலை நாட்டார் இங்கு நிலைபெற்ற காலத்து நாட்டில் சிலர் மேற்கொண்ட ‘நாட்குறிப்பு’ எழுதும் பழக்கத்தையும் எண்ணல் சாலும்; அவர்களும் உரைநடை வளர்த்தவர்களாதலின். அவ்வாறு குறிப்பு எழுதியவர்களுள் சிறந்தவர் ஆனந்தரங்கம் பிள்ளை அவர்கள். அவர் நாட்குறிப்பிலிருந்து ஓரிரு பக்கங்கள் இவை: காலமே துவக்கி சாயங்கால பரியந்திரம் ஆற்காடு வேலூர் வந்தவாசியிலே யிருந்தும் பின்னையும் சுத்துப் பட்டிலே யிருந்தும் பிராம்மணரும், கோமுட்டிகளும், தத்துவாதிகளுமாய் வந்த பேர் ஆயிரம் சனத்துக்கு அதிகமே உண்டு. அதிய செட்டியார் ஆனந்த செட்டி மனுஷன் வெள்ளைச் செட்டியும் நம்முடைய சகலாத்து மத்ததுகளை எடுத்துக்கொண்டு வந்து சேர்ந்தார். அவர் சொன்ன சேதி என்ன வென்றால், நிசாம் பின்னை இருபதியிைரங் குதிரையுடன் பிரகாலே வருகிறதாகவும் இன்னே நாற்பதியிைரம் ஐம்பதியிைரம் குதிரையை அனுப்பி வைத்தாரென்றும் அந்தக் குதிரைகள் கணவாய்க்கிட்ட வந்திருக்கிறதென்றும் கணவாயிலே அப்துல் நபியினுடைய பிள்ளைகளுடனே சண்டை செய்து அப்துல் பிள்ளைகளை யெல்லாம் முறிஞ்சுபோய் அதன் பேரிலே அப்துல் நபிகான் சமாதானம் பேசி லக்ஷத்தைம்பதினாயிரம் ரூபாய் தீர்த்துக் கொண்டு திரமத்துகளெல்லாம் கொடுத்து பேட்டி பண்ணிக்கொண்டதாகவும், மராட்டியர் இப்புறம் வருகிறது ஊர்ச்சிதமாய்த் தானே சொன்னார்களென்று சொன்னால் நவாபு அசனல்லி-மக்கோ சாயபு இவர்களெல்லாம் இரண்டாயிரங் குதிரையுடனே போய் கணவாய் மகா பத்திரமாய் கட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்றும் இப்படிப்பட்ட சேதிகளாய்ச் சொன்னார். இருக்கிறதனால் காரியமோ பாதியாயிருக்கிற தென்று சொன்னர். ★★★⁠ காலமே எட்டு மணிக்கு சின்ன துரையவர்களுக்குப் பெரிய துரையவர்கள் பெரிய துரைத்தனம் கொடுத்து 21 பீரங்கிப் போட்டு சகலமான வெள்ளைக்காரர் குமிசெலியேர் மற்றப் பேர் அனைவரும் வந்து பேட்டி பண்ணிக் கொண்டார்கள். சாவியும் ஒப்பிக்கப்போட்டு தம்மிட அதிகாரமும் அவர் வசம் பண்ணினார்கள். காலமே சீர்மையாகிய பிரான்சுக்கு ஒரு கப்பல் பாயெடுத்து ஓடிப்போனான் அந்தக் கப்பல் பேர் பினிச்சு. கப்பல் கப்பித்தான் பேர் முசேபு ரோசேல். இந்தக் கப்பலிலே ஏற்றிய தட்டு 1001.  செம்மரம் பாரம் 2000, மிளகு பாரம் 600. பின்னையும் சில்லறை தினுசுகளும் ஏற்றி காலமே கப்பல் பாயெடுத்துச் சீர்மைக்குப் பயணம் போனான். கோட்டைக்குப் பதினொரு பீரங்கியும் போட்டுப் பாயெடுத்தார்கள். இலங்கையில் தமிழ் நாட்டில் மட்டுமின்றி அண்டை நாடாகிய இலங்கையிலும் 18 ஆம் நூற்றாண்டில் தமிழ் உரைநடை இருந்த நிலையைக் காணல் நல்லதன்றாே! ஓரிரு மேற்கோள் கண்டு செல்லலாம்; இராசசியததின நனமைப பகுதிககாக வெணடி அபபடிக கொததவிதமாகச செயகிறது நலல தெனறு எங்களுககுத தொறறபபடுகுது ஆகாபடியால இததைச சகலரும அறிநது கொணடிருககும படிககும இததைக கொண்டு யாதொருததரும அறியமாடடோமெனறு சொலலக கூடாத விதததுககும சகலமான பெரும தங்கள தங்களுடைய நடடததுக்குப பரவசமாயிருககும படிககும உலாநதா பாஷையில உடபடப பாவிககபபடட இந்த ஊரட பாஷைகளாலும இந்த எங்களுடைய பணக காததை இங்கெயுடபட இதறகடுதத கொடடை ஸரதங்களிலும் பிற சிததம பணணவும் ஆணியறைநது வைககவும படுகிறதுண்டு. இபபடிககு இலங்கைத தீவிலே ௯௭௱௰௫ ஆணடு அறபசி மாதம ௨௪ திகதி கொழுமபுக கோடடையிலே கொடுககபபடடது. இந்த நடை பெரும்பாலும் அந்த நூற்றாண்டில் வழங்கியதேயாம்; எழுத்துக்களும் பெரும்பாலும் இத் தன்மையாகவே இருந்தன. நாம் முன்னர் மேலே கண்ட தத்துவப் போதகர், வீரமாமுனிவர் முதலியவர்தம் எழுத்துக்களும் இந்த வகையிலேயே அமைந்திருந்தன. இன்று அவற்றைத் திருத்தி அமைப்பவர்கள் புள்ளியிட்டும் கொம்பினைச் கழித்தும் எழுதுகிறார்கள். ஓலையில் புள்ளி இடல் அருமையானமையின் பெரும்பாலும் புள்ளி ஒதுக்கப்பட்டிருக்கலாம். ‘ஏ’ ‘ஓ’ என்று இரண்டும் முன்பு சுழி யும் கோடுமின்றி ‘ஏ’ ‘ஒ’ என்று புள்ளி பெறாது நெடிலோசை பெற்றமையும் ‘எ’ ‘ஒ’ என்று புள்ளி பெற்றுக் குறிலோசை பெற்றமையும் அறிவோம். ‘எய்தும் எகரம் ஒகரம் மெய் புள்ளி’ என்பது இலக்கணமல்லவா? எனவே உயிர்மெய் ஏகார ஓகாரங்கள் கொம்பின் சுழி இன்றி நெட்டொலியைப் பெற்று வரும் வகையிலே அவற்றை எழுதினர். சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் அச்சிடப் பெற்ற சில நூல்களிலும் இந்த எகர ஒகர அமைப்பைக் காண இயலும். உலாந்தக்காரர்கள் (Dutch) பதினெட்டாம் நூற்றண்டின் இடையில் இலங்கையில் இதுபோன்று பல ஆணைகளை அவர் மொழியிலும் சிங்கள மொழியிலும் எழுதியது மட்டுமின்றித் தமிழிலும் எழுதிக் கோட்டை முதலிய பொது இடங்களில் நிலை பெறுமாறு செய்துள்ளார்கள். நம் நாட்டுக் கல்வெட்டு, செப்பேடுகள் போன்று அவை இன்றளவும் வாழ்கின்றன. 1727 ஆம் ஆண்டு மே 17 ஆம் நாளிட்ட அவர்தம் மற்றாெரு செப்பேட்டின் (Palakkaat) வாசகத்தில் ஒன்றிரண்டு கானலாம். (திருந்திய அமைப்பிலேயே அவற்றைத் தருகிறேன்; இதில் ஒன்றிலும் புள்ளியும் நெடிற்குறியும் கிடையா). 3. இதைக் காண்கிற அல்லது வாசிக்கிறதை கேட்கிற சகலமான பேர்களுக்கும் ஆரோக்கியமாக அறியப் பண்ணுகிறதாவது. 4. இந்த இலங்கையிலே கோப்பி யுண்டு பண்ணு தவிப் பேர் கொஞ்சக் காலத்திலே நின்று பலபல சம்ப (வீ)ப்புக்களினாலேயும் பாரபரிப்பில்லாததினாலேயு மெத்தவுந் தேவையாயிருக்கிற கோப்பி யுண்டாக்குதல். [17] இவ்வாறு அது தொடர்ந்து செல்லுகின்றது. இதன் அமைப்பினையும் சொல் வழக்கினையும் பிற ஒலியியல்புகளையும் அந்நாட்டு அறிஞர்கள் ஆய்ந்து வருகின்றனர். தமிழ்நாடு, இலங்கை என்ற மேற்கண்ட இரு நாடுகள் மட்டுமின்றித் தமிழ் வழங்கிய-தமிழ் மக்கள் வாழ்ந்த மலேயா, தென்னாப்பிரிக்கா, பர்மா முதலிய பல்வேறு இடங்களிலும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலே தமிழ் உரைநடை இந்த வகையில் வளர்ச்சி அடைந்தது என்பதை நன்கு காணலாம். அவற்றையெல்லாம் ஈண்டு நாம் தொகுத்து விளக்கப்பெறின், அவை எல்லையற்றுப் பெருகிக்கொண்டே செல்லுமாதலின், தொல்காப்பியர் காலந் தொடங்கிப் பத்தொன்பதாம் நூற்றண்டின் தலைவாசலில் கால்வைக்கும் வரையில் தமிழ் உரைநடை வளர்ந்த வரலாற்று ஆய்வினை இந்த அளவோடு நிறுத்தி அமைவோம். இனித் தமிழ் உரைநடை மிக அதிகமாக வளர்ந்த காலம் பத்தொன்பதாம் நூற்றாண்டு என அறிவோம். அதற்குரிய காரணங்களையும் சூழல்களையும் ஆராய்வோம். நாட்டு நிலை பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் அதற்குமுன் ஒரு சில நூற்றாண்டுகளிலும் தமிழ் நாட்டு வரலாற்றிலும் இந்திய வரலாற்றிலும் பெரும் மாற்றங்கள் உண்டாகியிருப்பதைக் காண்கிறோம். முசுலீம் ஆட்சியில் நாட்டுத் தலைமை 'தில்லி'யில் அமைய, அதன் அடிப்படையில், பலர், நாட்டின் பல்வேறு பாகங்களையும் அங்கங்கே இருந்துகொண்டு ஆண்டார்கள். மேலை நாட்டிலேயிருந்து போர்ச்சுக்கேசியரும் அவருக்குப்பின் டச்சுக்காரரும் பிரெஞ்சுக்காரரும், அங்கிலேயரும் ஒருவர்பின் ஒருவராக வாணிபத்தின் பொருட்டு இந்நாட்டில் கால்வைத்து, பின் தம் வளம்பெருத்கி, பிறகு ஆட்சியையே இங்கு நிலை நிறுத்தப் போட்டியிட்டனர். மேலும் கிறித்தவ சமயம் பரப்ப வந்த பாதிரிமாருள் பலர் தமிழ் நாட்டில் வந்து பல்வேறு இடங்களில் தங்கி, அவர்தம் சமயம் வளரத் தக்க வகையில் பாடுபட்டனர் என்பதையும் முன்னரே கண்டோம். அவர்களுடன் புதுவகையான சாதனங்களும் வளரலாயின. ஓலையில் எழுதிய நிலைமாறிக் காகிதத்தில் எழுதவும், காகிதத்தில் அச்சடிக்கவும் தக்க பல்வேறு வசதிகள் உண்டாயின. நாட்டுப் பொருளாதார, சமுதாய, அரசியல் வாழ்வு முறைகளிலும் பல்வேறு வேறுபாடுகள் உண்டாயின. நில அளவை, மக்கட் பிரிவு முதலியவற்றிலும் சில வேறுபாடுகள் உண்டாயின. தமிழ் நாட்டில் இன்னும் உண்டான மாற்றங்கள் எத்தனை எத்தனையோ! இவற்றுக்கிடையில் அரசாங்கத்தாரும் சமயத் தலைவர்களும் சமுதாய அமைப்பாளர்களும் பிறரும் தத்தம் கொள்கை, சமயநெறி, வாழ்வியல், அரசியல் முதலியவற்றை மக்களிடையே பரப்ப முயன்றனர். அந்த முயற்சிக்கு இந்நாட்டு மொழியே அடிப்படைத் தேவையாக அமைந்தது. பிற நாட்டு அரசாங்கம் கால்கொள்ளத் தொடங்கிய அந்நூற்றாண்டின் தொடக்கத்திலே மக்கள் தம் தாய் மொழியாகிய தமிழிலேயே அவருடன் தொடர்பு கொள்ள முடிந்தது. அதற்குப் பாட்டு நன்கு பயன்படவில்லை; உரை நடையே உற்றுழி உதவிற்று. எனவேதான் சென்ற நூற்றாண்டில் உரைநடை தமிழ்நாட்டில் அதிகமாக வளரத் தொடங்கிற்று. மேலும் கல்வி முறையும், கதை எழுதுதல், நாளிதழ், கிழமை, திங்கள் வெளியீடுகள் முதலியன அச்சிட்டு மக்களிடை அறிவைப் பரப்பும் நல்லியக்கமும் பத்தொன்பதாம் நூற்றண்டில் நன்கு வளர்ச்சியடைத்தமையைக் காண்கிறோம். இவற்றின் அடிப்படையிலேயும் பல உரைநடை நூல்கள் எழுந்தன. பண்டைத் தமிழ் இலக்கியங்களை உலகுக்கு உணர்த்தப் பல நூல்களுக்குசிறப்பாக அறநூல்களுக்கு உரைகள் எழுதத் தொடங்கினர் காவியங்களாக இருந்த பல இலக்கியங்களை எல்லா மக்களும் உணர்ந்து கொள்ளுமாறு ‘வசன’ நடையில் எழுதிய அறிஞரும் பலர் பண்டமாற்று, விற்பனை முதலியன பற்றி ஏற்பாடு செய்துகொள்ளவும், விண்ணப்பம் அறிக்கை முதலியன அமையவும் உரைநடையே இடந்தந்தது. அறிவியல் வளர்ச்சி பற்றிய பல்வேறு கருத்துக்களை மக்களிடம் பரப்பத் துணைசெய்ததும் இவ்வுரைநடையேயாகும். இவ்வாறு சென்ற நூற்றாண்டில் பல்வேறு சூழல்களால் உரைநடை வளர்ந்ததோடு, தன் வளர்ச்சியுடன் தமிழ் நாட்டில் பல்வேறு அமைப்புக்களையும் கலைகளையும் சமயநெறி முறைகளையும் அறிவியல் உண்மைகளையும் பிறவற்றையும் வளர்த்து உதவியது. பல மாற்றங்கள் தமிழ் நாட்டின் இதயமாகிய தஞ்சை, 1799-இல்-பத்தொன்பதாம் நூற்றாண்டின் தலைவாயிலில்-மராட்டிய மன்னரிடமிருந்து ஆங்கிலேயர் கையில் வீழ்ந்தது. அதற்கு முன்பும் பின்பும் தமிழ்நாடு முழுவதும் அண்டை நாடுகளாகிய மைசூர், ஆந்திரம் முதலிய பகுதிகளும் அவர் வசமாயின. தஞ்சையில் வாழ்ந்த சரபோசி மன்னன் (1798-1833) தன் வாழ்நாளில் மொழிக்கும் அறிவு வளர்ச்சிக்கும் பல ஆக்கப் பணிகள் செய்துள்ளான். இன்றும் தஞ்சையிலுள்ள பெருநூல் நிலையம்-சரஸ்வதி மஹால் நூல் நிலையம் - அவன் உருவாக்கியதேயாகும். எனவே நம் ஆய்வில் அமையும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உண்டான அந்த நூல்நிலையம் இன்றும் நிலைத்து-இனியும் ஓங்கி வளரத்தக்க வகையில்-பல்வேறு துறைகளில் நாட்டு மக்கள் அறிவு ஆக்கம் பெறப் பணி புரிவதறிய மகிழ்ச்சி உண்டாகின்றதன்றாே? அக்காலத்திலேயே அதில் தமிழ், வடமொழி முதலியவற்றில் 22000 நூல்கள் இருந்தனவாம். நாணயப் பொருட்காட்சியும் அவன் அமைத்திருந்தான். பல நாடகங்கள் எழுதவும் அவன் உதவினன்; அந்தணர்களுக்குத் தானங்கள் செய்தான். கிராமங்களில் ‘நாட்டுக் கணக்கு’ அமைக்க அவன் உண்டாக்கிய கிராம முனுசீப், கணக்கப்பிள்ளை அமைப்பே இன்றளவும் வாழ்ந்து வருகின்றது. நாட்டில் பல பாகங்களிலும் நில அமைப்பு, நிலப்பிரிவு, நிலதானம் அளித்து வரையறுத்தல் ஆகிய பல சீர்திருத்தங்கள் அந்த நூற்றண்டின் தொடக்கத்தில் ஆங்கிலக் கம்பெனி ஆட்சியாளரால் ஏற்றுச் செயலாக்கப்பெற்றன. அக்காலத்தை ஒட்டியும் அதற்குமுன் ஆண்ட விசயநகர, நாயக்க மன்னர் ஆட்சியை ஒட்டியும் அதுவரை நாட்டில் காணப்பெறாத நானாவித சாதிகள் நாட்டில் உண்டாயின. அவை பற்றிய வரலாறு முதலியனவும் தமிழ் உரைநடையில் எழுதப் பெற்றுள்ளன. வந்தவர் கற்றனர் வந்தவருள் பிற நாட்டவராகிய ஆங்கிலேயர் இந்நாட்டை ஆளத் தொடங்கும்போது ஓர் உண்மையை உணர்ந்தனர். முதலில் ‘நாட்டு மக்கள் தாய் மொழியிலேயே தம் வழியை அமைத்துக் கொள்ளலே நல்ல வழி’ என அவர்கள் உணர்ந்தனர், சமய வரலாற்று உண்மைகளை ஆராய்ந்து உணர்வார் கண்ட முடிவும் அதுதானே.[18] இந்த அடிப்படையில் ஆளவந்த ஆங்கிலேயர் மட்டுமின்றி, சமயம் பரப்ப வந்த சமய போதகர்களும் தம் செயல்களையும் எழுத்துக்களையும் தமிழரோடும் தமிழோடும் இணைத்துக் கொண்டனர். இவ்வுண்மையைப் பதினேழாம் நூற்றாண்டில் சமயப் போதகராக வந்த தத்துவ போதகர் (Robert de Nobili) வாழ்வைக் குறிக்கும்போது, மறைத் திரு ச. இராசமாணிக்கம் அவர்கள் குறித்துள்ளார்கள். தமிழ் மக்களோடு பழக இன்றியமையாது துணை புரியும் தமிழ் மொழியை இராப்பகலாகப் பயின்றார். ஆறு மாதத்திற்குப் பிறகு எவர் உதவியுமின்றி எந்தத் தலைப்புப் பற்றியும் பல மணிக் கணக்காக உரையாட அவரால் முடிந்தது. அந்த அளவுக்கு மொழிப் பயிற்சி பெற்றர். .. தமிழ் மொழி முனிவரது மனத்தைக் கவர்ந்தது. ‘அழகு மிகுந்து வளப்பம் பொருந்தி மிகவும் பண்பட்டு விளங்குவது’ என்று மேலை நாட்டவருக்குத் தமிழை அறிமுகப்படுத்துகிறார். விரைவில் தாய் மொழியான இத்தாலிய மொழியும், படித்த போர்த்துக்கீசிய மொழியும் மறந்து போயின. அவற்றிற்குப் பதிலாகத் தமிழ்மொழி ஒன்றே அவர் கருத்துக்களை வெளியிடும் கருவி மொழியாக அமையலாயிற்று. இம்மொழியில் பேசுவதோடு அமையாது 1607ஆம் ஆண்டு தொடங்கி 1656ஆம் ஆண்டு சனவரி 16ஆம் நாள்–உயிர் துறக்கும் வரை அரிய பெரிய நூல்களைத் தமிழிலும் சமஸ்கிருதத்திலும் தெலுங்கு மொழியிலும் இயற்றினர்.[19] இந்த நிலை தத்துவ போதகர் மாட்டு மட்டுமின்றி, அந்த நூற்றாண்டிலும் அடுத்த ஓரிரு நூற்றாண்டுகளிலும் இந்தியாவுக்கு வந்த மேலை நாட்டு அறிஞர் மாட்டு உண்மையாக விளங்கிற்று. இந்த அடிப்படையில், நாம் மேலை நாட்டிலிருந்து, பல்வேறு வகையில் இத்தமிழ் நாட்டுக்கு வந்த மெக்கன்சி (Mackenzie), வில்சன் (H. M. Wilson) ஜான் முர்டாக் (John Murdock) முதலிய அறிஞர்தம் அரிய தொண்டினைக் காண முடிகின்றது. பத்தொன்பதாம் நூற்றண்டின் தொடக்கத்தில் தமிழ் நாட்டில் நிலவிய பல்வேறு இலக்கிய இலக்கண நூல்களையும், உரைநடை வளர்ச்சியினையும், பிறநாட்டு எழுத்துக்களையும் இவர்கள் வழியே நம்மால் அறிந்துகொள்ள முடிகின்றது.அப்படியே இவர் போன்றாேர்—சிறப்பாக கால்டுவெல், போப், வீரமா முனிவர், சீகன்பால்கு முதலியோரால் தமிழின் சிறப்பு, தொன்மை, வளன். வற்றாநிலை பற்றியும் அறிந்துகொள்ள முடிகின்றது. இவர்களைப் பற்றியெல்லாம் தொடர்ந்து காண இருக்கின்றாேமாதலின் இன்று இந்த அளவில் இவர்களைப்பற்றி நின்று மேலே செல்லலாம். மேலை நாட்டு ஆட்சியாளர்கள் தமிழ் நாட்டில் மட்டுமன்றித் தமிழர் பெரும்பான்மையினராக வாழ்ந்த இலங்கை, மலேயா முதலிய பகுதிகளிலும் தமிழில் அறிக்கை முதலியவற்றை வெளியிட்டனர். இலங்கை அறிக்கை ஒன்றை முன்னரே கண்டோம். மற்றும் இரயில்வே, தபால், தந்தி முதலிய வசதிகள் உண்டான காரணமும் கடந்த நூற்றாண்டில் உண்டான பல்வேறு நாட்டு, சமுதாய மாறுதல்களும் தமிழ் உரைநடை வளர உதவின. மேலை நாட்டினர் வாணிபம், தொழில், வங்கி (பணவகம்) முதலியன வளர்த்த காரணத்தாலும் எடை (நிறுத்தல், முகத்தல்), அளவு, நாள் காட்டி, பஞ்சாங்கம், நாணயம் முதலியன நாட்டு நிலைக்கேற்ப அமைந்த புழக்கத்தில் வந்து விட்டதாலும் அவ்வத்துறை பற்றிய தமிழ் அறிக்கைகள் வெளி வரக் காரணமாயின; அவையும் பெரும்பாலும் உரைநடையிலேயே அமைந்தன. இவையெல்லாம் திப்புசுல்தான் காலத்திலும் அதற்கு முன்பும் இருந்தன வென்றாலும், 1799-இல் சரபோசி-வெல்லஸ்லியின் தஞ்சை ஒப்பந்தத்துக்குப் பிறகே—தமிழ் நாட்டின் பெரும்பகுதி ஆங்கிலக் கம்பெனி ஆட்சிக்கு வந்த பிறகே —செப்பம் செய்யப் பெற்றன; இவற்றுடன் அறங்கூறு அவையங்களாகிய நீதி மன்றங்களும், நாட்டாட்சி, ஊராட்சி, நகராட்சி மன்றங்களும் தோன்றி வளர்ந்து நிலைபெற்ற காரணத்தால் அவ்வத்துறை பற்றிய அறிக்கைகள், விண்ணப்பங்கள், விளக்கங்கள் முதலியன தமிழ் உரை நடையில் தோன்ற, உரைநடை வளர்ச்சி பெற்றது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நாட்டு மக்களோடு பழகிய மேலை நாட்டார்–சிறப்பாக ஆங்கிலேயர் தாம்—இவ்வாறு இந்நாட்டு மக்களைப் பற்றியும் அவர்தம் சமுதாயச் சீர்கேடுகளைப் பற்றியும் குறித்துள்ளனர். “நல்ல இயற்கை வளமுடைய நாட்டு மக்கள் பல சூழல்களால்—வாழ்க்கை அமைப்பு முறைகளால் சமுதாய வேறுபாடுகளால் நிலைகெடுகின்றனர்”[20] என்றும், “அரச அரண்மனையைக் காணாது ஏழை மக்கள் குடிசையைக் காணல் வேண்டும்; அவர்களுக்கு உரிமை வழங்கும் ஆட்சி அமைய வேண்டும்”[21] என்றும், “மக்கள் அடிமை வாழ்வு நாட்டு வாணிபத்தை வளர்க்கவில்லை; அம்மக்களிடையில் படிக்கும் நிலையிலும் கல்வி அமைப்பிலும் ஏற்றத் தாழ்வு கூடாது“[22] என்றும் பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஆளுவோர் கொள்ள வேண்டிய வரன்முறை, நாட்டுநிலை முதலியவற்றை விளக்கியுள்ளனர். இந்தச் சூழலிலேதான் நாமும் நுழைந்து அந்த நூற்றண்டின் தமிழ் உரைநடை வளர்ச்சியைக் காண நிற்கின்றாேம். 1797 ஆம் ஆண்டில் ஆங்கிலேயர் இந்நாட்டுப் பல்வேறு வகை நிலைகளை ஆராய ஒரு குழுவினை ஏற்படுத்திப் பல உண்மைகளைக் கண்டனர். சிவில், கிரீமினல் அமைப்பு முறை செம்மை செய்யப்பெற்ற காலமும் அதுவே. கல்வி, தொழில் முதலியலற்றிலும் அக்காலம், நாடு தலைதூக்கி வளர ஆரம்பித்த காலமாகும். கிறித்துவ சமயத்தவர் அக்காலத்தில் நாட்டின் பல பாகங்களிலும் கால் கொண்டு வளரத் தொடங்க, 'செல்விருந்தோம்பி வருவிருந்து நோக்கும்' தமிழ் மக்களும் மன்னரும் அவர்கள் இருக்கவும் வளரவும் தம் சமயத்தை வளர்க்கவும் உதவினர். மேலே கண்டபடி நம் நாட்டிற்கு வந்த பல்வேறு மேலை நாட்டு மக்கள் இந்நாட்டுக் கலை, வாழ்வு, செயல் முறைகளை ஆராய்ந்து வெளியிட்டுத் தாமும் பயன் பெறலாயினர். நாட்டு ஆட்சி முறையிலேயும் பல மாற்றங்கள் நேர்ந்தன. 1784 இல் கவர்னர்–ஜெனரலுக்கு முழு உரிமை தந்தனர் ‘கம்பெனியார்’. 1858 இல் விக்டோரியா மகா ராணியார் நேரடியாக நாட்டாட்சியை ஏற்றவரையில், கம்பெனியின் கீழ், கவர்னர்–ஜெனரல் ஆட்சியே தொடர்ந்து வந்தென அறிகிறோம். பத்தொன்பதாம் நூற்றண்டில் நாட்டு நீதி பற்றிய பல திருத்தங்கள் உண்டாயின. பலப்பல சட்டங்களும் நீதி மன்றங்களும் உண்டாக்கப் பெற்றன. அவை பற்றிய குறிப்புக்கள் பல தமிழில் — உரைநடையில் — பொது மக்கள் உணர்ந்து கொள்ள அவ்வப்போது வெளிவந்துள்ளன. 1802-06 இல் நாட்டு நீதி பற்றிய பொது அமைப்புச் சட்டமே உருவாயிற்று. 1700இல் சிவில் கிரிமினல் சட்டம் வந்தபோதிலும் அது செம்மையாக்கப் பெற்றது சென்ற நூற்றாண்டின் தொடக்கத்திலேயாம், சென்னை மாநிலம் 1,40,000 சதுரமைல் உடையதாய் 1808 இல் (பல மொழி மாநிலமாய்) அமைக்கப் பெற்றது, அரசாங்கக் கவர்னர், இருவர் அல்லது மூவர் கொண்ட குழுவோடு தம் ஆட்சியை நடத்தினர். ‘சூரி’ (Jury) முறை 1827 இல் நாட்டில் கொண்டுவரப் பெற்றது. 1816 இல் நடுவர், குற்ற விசாரணையாளர் (Judge & Magistrate) வேறுபடுத்தப் பெற்றனர். 1845 இல் மாவட்ட நீதி மன்றங்கள் உருவாயின. நில உரிமையும் செம்மைப் பகுப்புச் சட்டமும் (Land Settlement) 1820-27 இல் உருவாயின. 1833 இல் நாட்டு மக்கள் யாரும் எப்பதவியும் பெறலாம் எனச் சட்டத்தால் உரிமை வழங்கினர். ஆங்கிலேயப் பாராளுமன்ற நேரடி ஆட்சி 1858 இல் தொடங்கிற்று கிராம ஆட்சி அமைப்பு 1877 இல் உருவாயிற்று. இரெயில் வேக்கள் 1853 இல் தோன்றலாயின. இந்திய பீனல்கோடு சட்டம் 1861 இல் அமைக்கப் பெற்றது. இவ்வாறு நாட்டாட்சியிலும் ஆணை அறப் பிரிவுகளிலும் உண்டான பல்வேறு மாறுதல்களைத் தமிழ் உரைநடையிலே அவ்வப் போது வந்த அரசாங்க இதழ்களிலும், தனி அறிக்கைகளிலும் வெளியிட்டனர். அவற்றுள் ஒருசில பின்பு காணலாம். அச்சுப்பொறி மொழியின் அடிப்படைக்கு ஆதாரமான மற்றென்றை ஈண்டு எண்ணலாம். இந்த ஆய்வுக்குரிய நூற்றண்டில் மொழி வளர்ச்சியை அளவில் அதிகமாக வளர்த்த பெருமை அச்சுப் பொறிக்கும் உண்டு. மேலை நாட்டிலிருந்து கிறித்துவ சமயம் வளர்க்க வந்தவர்கள் தம் சமயம் வளர்க்க வேண்டி நூல்கள் அச்சிட, சில அச்சுச்சாலைகளை முன்னரே அமைத்தனர் என்றாலும் இந்த நூற்றாண்டில் அது பெருகிற்று. இந்தியாவிலேயே முதல் முதல் அச்சான நூல் தமிழ் நூலே (6–9–1556 இல் முதல் முதல் கோவாவில் அச்சகம் அமைக்கப்பெற்றது). 1578 ஆம் ஆண்டிலே இந்தியாவிலேயே கொல்லத்தில் செய்யப்பட்ட எழுத்துக்களைக்கொண்டு (Indian Type of Malabar letters) ஓரு நூலை மேலைக் கடற்கரையில் (அம்பலக்காடு) அச்சிட்டனர் (அக்காலத்தில் மேலை நாட்டினர் தமிழ் நாட்டை ‘மலபார்’ என்றும் தமிழை ‘மலபார் மொழி’ என்றும் அழைத்தனர்). அந்த முதல் நூல் கத்தோலிக்கர் நூலாகிய ‘தம்பிரான் வணக்கம்’[23] என்பதாகும். அதன் பிரதி ஒன்று அமெரிக்க ஐக்கிய நாட்டில் ஹார்வர்டு[24] பல்கலைக் கழகத்தில் உள்ளதாம். பின் 1586 இல் வேறுசில நூல்கள் அச்சாயின. நகரங்களிலும் சென்னையில்தான் 1711 இல் முதல் முதல் அச்சகம் உண்டாயிற்று. (கல்கத்தாவில் 1779 இல் உண்டாயிற்று.) 16ஆம் நூற்றாண்டில் பதின் மூன்று உரைநடை நூல்களும் 17 ஆம் நூற்றாண்டில் 21 உரைநடை நூல்களும் ஆகியவை, தமிழ்க் கத்தோலிக்க நூல்களாக வெளியாயின எனக் கணக்கிட்டுள்ளனர். தரங்கம்பாடி[25], யாழ்ப்பாணம் முதலிய இடங்களிலும் சென்னையிலும் கிறித்துவ சமய நூல்கள் சென்ற நூற்றாண்டில் பல அச்சாயின. தரங்கம் பாடியில் சீகன் பால்கு ஜயர் (1683-1719) நல்ல நூல்களை அச்சிட்டனர். 3–1–1714 இல் புதிய ஏற்பாடு அச்சிடப்பெற்றது. 1761 இல் புதுவையில் அச்சகம் தோன்றிற்று. சென்னையில் புதிதாக 1786 இல் வேப்பேரியில் அச்சகம் உண்டாக அதில் சென்ற நூற்றாண்டில் பல உரைநடை நூல்கள் அச்சாயின. அக்காலத்திய அச்செழுத்துக்கள் 1870 வரை வழக்கத்தில் இருந்தன. இதன் வளர்ச்சி அடிப்படையை ஆராயின் சென்னை மாநிலத்தில் சென்ற நூற்றாண்டில் சுமார் இருநூறு (198) அச்சகங்கள் இருந்தன எனக் காண ழுடிகின்றது. தனியார் மட்டுமின்றி அரசாங்கச் சார்பான குறிப்புகள் முதலியவற்றை அச்சிட, அவர்களும் அச்சகங்கள் அமைத்தமை அறிகிறோம். அவ்வச்சகங்களையும் அவற்றின் வழி வெளி வந்த இதழ் தூல்களையும் பற்றி ஆராய 1878 முதல் 1900 வரை இரகசியத் தனிக் குழுக்கள் (C. I. D.) இருந்தனவாம். இவைபற்றி யெல்லாம் சிறு நூல்களும் ஆய்வுகளும் தற்போது வெளிவருகின்றன.[26] இதழ்கள் இந்த அச்சக அடிப்படையில் பல்வேறு இதழ்களும் செய்தித்தாள்களும் சென்ற நூற்றண்டில் வெளி வந்தன. தமிழில் இருபதுக்கு மேலான இதழ்கள் இருந்தன. அரசாங்க இதழ்கள் ஆங்கிலத்தில் மட்டுமின்றி, தமிழ் முதலிய இந்நாட்டு மொழிகளிலும் விளக்கம் தந்தன. அவ்வப்போது உண்டான சட்டங்கள், விதிகள், விளக்கங்களைத் தமிழ் மொழியில் வெளியிட்டுள்ளார்கள்.முதலில் இதழ்கள் வெறும் செய்திகள் மட்டும் தாங்கி வெளிவந்தன. 1775 இல் முதல் முயற்சி நடைபெற்றது. பிறகு முதல் இதழ் சர் ஆர்சிபால்டு காம்பல் (Sir Archibald Compball) கவர்னராக இருந்த காலத்தில் (1786—1789) பெரும்பாலும் ஆங்கிலமும் ஓரளவு தமிழும் கொண்டு வெளிவந்தது[27] (இந்தியாவில் முதல் ஆங்கில இதழ் 1780 இல் கல்கத்தாவில் வெளிவந்தது). 1830 வரை தமிழில் தனி இதழ்கள் தொடங்கப் பெறவில்லை. அதற்குப் பிறகு, சில இதழ்கள் வெளிவந்தன. (வங்காள மொழில் தான் முதல் நாட்டு மொழி இதழ் 1816 இல் வெளிவந்தது). சென்ற நூற்றாண்டின் தலைவாயிலில், 1799இல் (13—5—1799), கவர்னர்-செனரல்,பத்திரிகை உரிமையாளர், ஆசிரியர் முதலியோர் பற்றிய குறிப்புககள் (கடைசி பக்கம் அச்சிடுவது) வெளிட வேண்டிய உத்தரவைப் பிறப்பித்தனர்.அரசாங்க வெளியீடு (Fort St. George Gazette) 4—1—1832 இல் வெளிவந்தது. அக்கால ஆட்சியாளர் லூஷிங்டன் (S. R. Lushington) ஆவார். இத்தகைய இதழ்கள் பற்றி அரசாங்கம் சென்ற நூற்றாண்டில் பல்வேறு கட்டுபாடுகளை உண்டாக்கியும், தளர்த்தியும், வளர்த்தும் வந்துள்ளது. அவற்றால் சிற்சில வேளைகளில் நலிவும் தாழ்வும் உண்டான போதிலும் அக்கால உணர்வுடை மக்களின் விடாமுயற்சியே இன்று தமிழ் நாட்டில் எண்ணற்ற தமிழ் இதழ்களையும் அவற்றின்வழித் தமிழ் உரைநடை வளர்ச்சியையும் காணமுடிகின்றது. அவற்றுக்குப் பலவகை அஞ்சல் சலுகை முதலியனவும் தரப்பெற்றமை காண்கின்றோம். இலவச அஞ்சல் முறையும் சில காலம் இருந்திருக்கிறது. சென்னை மாநிலத்தில் தமிழிலும் தெலுங்கிலும் ஆங்கிலத்திலும் சில பத்திரிகைகள் வெளிவரலாயின, வித்தியார்த்தி (1838 அல்லது 40), இந்து (1878), சுதேசமித்திரன் (1882), மெயில் (15–12–1867), ராஜவர்த்தி போதினி (1855), தினவர்த்தமானி (2–12–1814), கிறிஸ்தவ மறுப்பு (1814) முதலியன அவை. காங்கிரஸ் 1885 இல் தோன்றிய பிறகு உரிமை உணர்ச்சிமிக்குத் தமிழில் பல கட்டுரைகள் வந்தன. சென்ற நூற்றாண்டு முழுதும் பத்திரிகைக் கட்டுப்பாடு அதிகமாக இருந்தது எனலாம். 'கம்பெனி' ஆட்சியில் (1785-1857) பல கட்டுப்பாடுகள் இருந்தன. 1816 வரை அதிகக் கட்டுப்பாடுகள் இருந்தன; 1818-23 இல் சில தளர்த்தப்பெற்றன. 1823–28 வரை மிகக் கடுமையாக இருந்தது. 1835–57 இல் பல சீர்திருத்தங்கள் செய்யப்பெற்றன. ஆங்கிலப் பாராளுமன்ற நேரடி ஆட்சிக்கு வந்த பிறகும் (1857) இத்துறையில் பல மாறாட்டங்கள் வந்தன.[28] இவைகளுக்கிடையில் பல இதழ்கள் தமிழையும் தமிழ் உரைநடையையும் வளர்த்தன. தமிழ் நாட்டில் மட்டுமன்றி இலங்கை, மலேயா முதலிய நாடுகளிலும் இதழ்கள் பல தோன்றி வாழ்ந்தன. சமயத் துறை சமயத் துறையும் சென்ற நூற்றாண்டில் தமிழ் வளர்ச்சிக்கு–சிறப்பாக உரைநடை வளர்ச்சிக்கு–உதவியது. கிறத்தவர் அச்சக வழியும் விவிலிய நூல்மொழி பெயர்ப்பு வழியும் செய்த தொண்டினைக் கண்டோம். தஞ்சைச் சரபோசி அச்சமயத்தாருக்கு நன்கு உதவினன். கிறித்தவ சமய அச்சகம் (Society for the Propagation of Christian knowledge) 1711 இல் அச்சகம் அமைத்தது. தம் சமய நூல்களை எழுதி வெளியிட்டது. அந்நூல்கள் யாவும் உரை நடை நூல்களே. செத்வார்ட் (Setwartz 1728–1798) பல வகையில் இத்துறையில் உழைத்தமை காண்கிறோம். நாகையில் டேனிஷ் மிஷன், தரங்கம்பாடி அச்சகம், புதுவையில் அச்சுக்கூடம் இவ்வாறு பலவிடங்களில் கிறித்தவர் சென்ற நூற்றாண்டின் முன்னும் தொடக்கத்தும் பல உரைநடை நூல்களை வெளியிட்டனர். மேலும் அதற்கு முன் வாழ்ந்த வீரமாமுனிவர் முதலியவர் எழுதிய நூல்களை வெளியிட்டனர். பிற்பகுதியில் பல மொழி பெயர்ப்பு நூல்களும், பாட நூல்களும், அறிவியல் நூல்களும் இவர்களால் வெளியிடப் பெற்றன. புராட்டஸ்டண்டு கிறித்தவர்களும் தம் நூல் வெளியீடுகளால் சிறந்த தொண்டினை இந்நூற்றண்டின் பிற்பகுதியில் செய்துள்ளனர். புதிதாக வந்த இந்தச் சமயத்தார் இவ்வாறு வெளியீடுகளைக் கொண்டு வந்தபோது, இங்கேயே தோன்றி வளர்ந்த சைவ சமயத்த வரும் பிற வேதாந்த வைதீக சமயத்தாரும் வாளாயிருப்பார்களோ? கிறித்தவ சமயத்துக்கு மாறாகப் பல்வேறு உரை நடை நூல்களை உண்டாக்கியதோடு, தம் சமய உண்மைகளின் அடிப்படையில் சில நல்ல எளிய உரைநடை நூல்களை மக்கள் முன் வைத்தனர். ஆறுமுக நாவலர் முதலியவர்கள் விவிலிய நூலைத் தமிழில் மொழிபெயர்த்து உதவிய தோடு, சைவசமயம் பற்றி எளிய வகையில் பல நூல்களை வெளியிட்டுள்ளனர். தமக்கெனச் சொந்த அச்சகம் அமைத்துக் கொண்டு அவர் வெளியிட்ட நூல்களுள் பல இன்றும் வாழ்கின்றன. அவை பற்றிப் பின்பு காணலாம். வைணர்களும் வேதாந்த வைதீகரும் அவ்வாறே பல நூல்களை உரைநடையில் எழுதினர். இவையனைத்தும் வடமொழிச் சொற்களை அதிகம் பெற்றுள்ளன. வரவர அதன் அளவு குறைந்துள்ளமையினையும் அறிகிறோம். இவ்வாறு சமயத்துறையும் சென்ற நூற்றண்டின் தமிழ் உரைநடையை வளர்த்தது. இலக்கியம் இலக்கியமும் அதன் வளர்ச்சியும் உரைநடைக்குத் தொண்டாற்றிய தறிவோம். பல பாட நூல்கள் உரை நடை அல்லது வசனத்தில் எமுதப் பெற்றன. பலவற்றிற்கு உரைகளும் இந்த நூற்றண்டில் எழுதினவர் பல்லோர். சொற்களுக்கும், தொடர்களுக்கும் நூற்பாவிற்கும் பேருரைகள் எழுதிக் குவித்த காலம் இந்தப் பத்தொன்பதாம் நூற்றாண்டேயாம். இவற்றை யன்றி, மேலை நாட்டினர் சார்பால் அறிவியல் வளர வளர அவற்றின் வழி வெளிவந்த ஆங்கிலம் முதலிய மொழிகளில் வரும் நூல்களை மொழி பெயர்த்தோ, விளக்கியோ, சுருக்கியோ பலப்பல உரைநடை நூல்கள் வெளிவந்தன. பல மேலை நாட்டு இலக்கியங்களையும் இலக்கிய வளம் செறிந்த நாடகம் முதலியவற்றையும் தழுவியும் தொட்டும், ஏற்றும் குறைத்தும் பல்வேறு உரை நடை நூல்களும் வெளிவந்தன. தமிழ் நாட்டு மருத்துவம், சோதிடம் முதலிய பல்வேறு கலைகள் பற்றியும் பல நூல்கள் மக்கள் முன் வைக்கப்பெற்றன. பொதுவாகச் சமயம், இலக்கியம், கலை, வாழ்வியல், மொழி, அரசியல் முதலிய எல்லாத்  துறைகளிலும் அறிவும் விளக்கமும் பெற்ற அறிஞர் ‘தாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்ற உணர்வில் தத்தம் கருத்தை ஏட்டில் வடித்து அச்சுப் பொறியின் துணையால் நாட்டில் உலவ விட்டனர். (அந்நூல்களின் சொற்களை விளக்கும் அகராதிகளும் அக்காலத்தில் வெளி வந்தன.) அவை மக்கள் மனத்தை-பெரும்பாலும் பொதுமக்கள் மனத்தை-கவரும் வகையில் அமைய வேண்டுமென முயன்றமையால் அவ்வாசிரியர்கள் பெரும்பாலானவற்றை உரைநடையிலேயே எழுதி வெளியிட்டுள்ளனர். கிராமங்களில் வழங்கும் சிறுகதைகள், கற்பனைக் கதைகள், கதைப் பாட்டுகள், வேடிக்கை விடுகதைகள், நல்லதங்காள் கதை முதலியன பாட்டா உரையா எனப் பகுக்க முடியாதவை என எத்தனையோ வகையில் தமிழ்நாட்டு மூலைமுடுக்குகளிலெல்லாம், தமிழில் எழுதி வெளியிட்ட நூல்கள் சென்று, சென்ற நூற்றாண்டில் உலாக் கொண்டன. அவற்றுள் சிலவே நாம் இன்று பெற்றிருக்கின்றாேம். இன்றும் பெறாத எத்தனையோ கேட்டறியாக் கிராமங்களின் பரண்களில் படுத்து உறங்கிக் கிடக்கின்றன. பல செல்லுக்கும் செல்லும் வெள்ளத்திற்கும் இலக்காயின. இவற்றின் அருமை பெருமைகளை உணராத பல்லோர், கிராமங்களில் வெள்ளக் காலங்களில் இந்த ஏடுகளை ஆற்று நீரில் ஆழ்த்தி, விடுதலை தந்து அனுப்பி விடுவார். இத்துறையில் பல வகையில் ஆராய அரசாங்கம் ஆவன செய்ய வேண்டும் என்பது எனது வேண்டுகோள். ↑ The general period of Sutras (g;#37th) extends from the Sixth or Seventh Century B.C. to about the Second Century B.C. (Cambridge History of India, Vol. I, . 227). ↑ 2. The Principle ‘Dharmasutra” can hardly be dated from later than about 500 B.C. (History of Ancient India - By Prof. R.S. Tripathi in ‘A History of Sanskrit Literature’ p. 260). ↑ Tamil Lexicon, Vol. III, p. 1602. ↑ Chambers Twentieh Dictionary, p. 738. ↑ Oxford Dictionary, p. 925. ↑ Oxford Dictionary, p. 881. ↑ Chambers Dictionary, p. 707. ↑ Oxford Dictionary, p. 882. ↑ Chambers Dictionary, p. 707. ↑ Encyclopaedia Britanicca, vol. 18, pp. 591-592. ↑ Cicero ↑ Encyclopaedia Britanicca, vol. 18, p. 593. ↑ தென்னிந்தியக் கோயிற் சாசனங்கள், தொகுதி, பக் 32, 33, சிதம்பரம் கோயிற் கல்வெட்டு, எண்: 266-1913. ↑ தொல், பாயிர விருத்தி, பக். 5. ↑ தொல், பாயிர விருத்தி, பக். 6 ↑ தொல், பாயிர விருத்தி, பக். 8. ↑ Tami1 Culture, vol. XI, No. 2, PP. 173, 174. ↑ (a) The Conquerors continue, for generations, to speak their language, but find it more and more necessary to use also to that of conquered (Language, Bloomfield, P. 463) (b) The application of western methods of study to oriental literature had an intensely stimulating effect (India-By H. C. Rowlingdon, P. 406). ↑ ஞானோபதேசம்-முன்னுரை III & IV. ↑ Charles Grant, 1797. ↑ William Tester, 1813. ↑ James Mill, 1820. ↑ டெளட்ரினா சிஸ்டா (Dowtrian Christa கிறிஸ்தியானி வணக்கம்) ↑ Harvard. 3. வணக்கம்—புதிய பதிப்பு—1963, முன்னுரை ↑ By Danish Mission in 25-6-1683. ↑ The Printing Press in lndia By Anant Kakba Biolker (Bombay). ↑ Madras Courier in I785. ↑ The Press in India, J. C. Nirmal, M.A. சொற்பொழிவு ௨- (16-2-1965) முன்னுரை சென்ற நூற்றாண்டில் தமிழ்நாடு இருந்த நிலையினையும் அதன் சூழ்நிலையும் ஒருவாறு முதற் சொற்பொழிவில் கண்டோம். அந்தச் சூழல்களுக்கு இடையில் நாட்டு மொழியாகிய தமிழ் பல்வேறு வகைகளில் வளர்ச்சியடையத்தக்க வாய்ப்பினைப் பெற்ற நிலையினையும் ஓரளவு தெளிந்தோம். இன்று அதே நூற்றாண்டில் தமிழ் உரைநடை வளர்ந்த வகைகளை ஆராய்தல் பொருத்தமுடைத்து என எண்ணுகிறேன். பொது மக்கள் இலக்கியம் இலக்கிய அமைப்பில் வளர்வன மட்டுமின்றி, பொது மக்கள் வாழ்வை விளக்குவனவும் வாழ்வில் இடம் பெறுவனவும் உரைநடையின் பால் சார்த்தி எண்ணத்தக்கனவே என்று ஓரளவு கண்டோம். எனவே இறையனார் களவியலுரை போன்றும், சிவஞான பாடியும் போன்றும், பெருங்காப்பியங்களின் உரைநடை போன்றும் உள்ளன. ஒருபுறம் இலக்கிய உரை நடையென தோன்றி வீறுநடையிட்டு வளர்ந்து தமிழ்நாட்டில் வாழ்ந்துவந்த அதே வேளையில், கல்லா மக்களிடத்தும் நன்கு எழுத படிக்கத் தெரியாத பாமர மக்களிடத்தும் தத்தம் கருத்து பரிமாற்றத்துக்காகவும் பொதுமக்கள் நலனுக்காகவும், அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் உள்ள தொடர்பை வளர்ப்பதற்காகவும், பல்வேறு நாட்டு நலன்களுக்காகவும் வாழ்ந்து வளர்ந்து வந்த உரைநடையையும் நாம் எண்ணிப் பார்க்க கடமைப்பட்டுள்ளோம். இவை பேரிலக்கியங்களெனக் காலத்தை வென்று வாழத் தக்கன எனக் காண முடியாவிட்டாலும், இவைதாம் அவ்வக்காலங்களில் வாழ்ந்த மக்களின் உண்மையான வாழ்க்கை முறை, பண்பாடு, நாகரிகம் இன்னபிறவற்றை உலகுக்கு உணர்த்துகின்றன. எனவே, இவற்றைப் ‘பொதுமக்கள் உரைநடை’ அல்லது 'பொதுமக்கள் இலக்கியம்’ என பகுத்துக் காணல் சாலப்பொருத்தமானதாகும். மக்கள் வாழ்க்கை முறையில் எத்தனை எத்தனை பிரிவுகளுண்டோ-அவர்தம் சூழல் எத்தனைக் கெத்தனை மாறுபடுகின்றதோ-அத்தனைக்கத்தனை வகையில் அவர்தம் பேச்சும் வழக்கும்-சாதாரண எழுத்து வழக்கும் மாற்றம் பெறுகின்றன. அவற்றை ஆங்கில முறைப்படி ‘கொச்சை மொழி’ என்றாலும் அம்மொழியே நாட்டுப் பெறும்பான்மையான மக்களின் வாழ்வைப் படம்பிடித்துக் காட்டுகின்றமையின் அது பற்றிய ஆய்வு இன்றியமையாததாகின்றது. இன்று மொழித்துறையை ஆராய்கின்ற உலக அறிஞர்கள் பலரும் இத்தகைய மக்கள் மொழியாகிய கொச்சைமொழியை ஆராய்ந்து உணர்த்தும் நெறியிலேயே பாடுபடுகின்றனர் என்பதும் கண்கூடு.எனவே இன்று நாம் பொதுமக்களிடையே கருத்துப் பரிமாற்றத்துக்காகவும்: விளக்கம், விளம்பரம் முதலியவற்றிற்காகவும், வேடிக்கை பொழுதுபோக்கு முதலியவற்றிற்காகவும் வழங்கப் பெற்ற உரைநடை வகைகளையும் கதை, நாவல். நாடகம் முதலியவற்றையும் ஆராயலாம் எனக் கருதுகிறேன். மெக்கன்சி துறையின் பணி பொது மக்களோடு தொடர்பு கொண்டு அவர் தம் மொழி நலத்தையும் பிற வாழ்வியல்புகளையும் ஆராய்ந்த அறிஞர் பலர் சென்ற நூற்றாண்டில் வாழ்ந்திருந்தனர். பத்தொன்பதாம் நூற்றாண்டிலும் அதற்கு முன்னும் வாழ்ந்த மக்கள் வாழ்க்கையை ஆராய்ந்த அதே வேளையில் அவர் தம் இலக்கிய வளனையும் வழக்கு மொழியையும் ஆராய்ந்த மேலை நாட்டவர் நாட்டில் பலர் இருந்தனர். அவருள் பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியிலும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் வாழ்ந்து, சிறந்த பணியாற்றி திகழ்ந்த-தம் ஊதியப் பணியையும் தமிழ் உணர்வுப் பணியையும் திறம்படச் செய்த-லெப்டினண்ட் கர்னல் காலின் மெக்கன்சி (Lient. Col.Colin Mackenzie) அவர்கள் சிறந்தவர் என்பது மறக்க முடியாத உண்மை. அரசியல் துறைப் பணியாளராக ஆங்கில நாட்டிலிருந்து தமிழ் நாட்டிற்கு 1782-இல் வந்த அவர், தம் பணியோடு பணியாகச் செல்லுமிடங்களிலெல்லாம் வாழ்ந்த கல்லா மக்களோடு கலந்து உறவாடி, அவர் தம் கொச்சை மொழியையும் வளமுற்ற இலக்கிய வளனையும் ஆராய்ந்து எழுதி வைத்துள்ளார். முப்பத்தெட்டு ஆண்டுகள் (1783—1821) பல்வேறு மாவட்டங்களிலும் சுற்றிப் பணியாற்றிய நாட்களில் அவர் தொகுத்துத் தந்தன பல. அவர் தம் அலுவல் நிலை உயர உயர-அவர் தம் ஆட்சிப் பொறுப்பின் எல்லை விரிய விரிய. அவர்தம் மொழியாய்வும் விரிந்துகொண்டே வந்தது. தமிழ் நாட்டில் மட்டுமின்றி இலங்கை, ஜாவா முதலிய இடங்களிலும் பணியாற்றிய அவர் இறுதியில் இந்தியப் பெரு நிலப்பரப்பிற்கே, ஒரு துறைக்கு-அளவை ஆய்வுத்துறைக்கு- (Surveyor General of India) தலைவரானார். எனவே அவர் செயலகம் கல்கத்தாவிற்கு மாற்றப்பட்டது. எனினும், அவர்தம் தமிழ்மொழி ஆய்வு முற்றுப்பெறாது, அவரது 68 வது வயது வரை, அவர் இறுதி நாள் வரை (1821) வளர்ந்து கொண்டே தான் இருந்தது. அவர்தம் ஆய்வுக்கு உதவியவருள் ‘கர்னல் வில்க்ஸ்’ (Col.Wilks) என்ற அறிஞரும் ஒருவராவர். அவர்தம் ஆய்வுகள் பல ஆங்கில நாட்டிற்கு அனுப்பப் பெற்றன. அவற்றை வெளியிட அக்காலக் ‘கவர்னர் ஜெனரலான’ வாரன் ஹேஸ்ட்டிங் அவர்களால் உத்தரவும் தரப்பெற்றது. அவர்தம் அத்தகைய தமிழ், தெலுங்கு முதலிய ஏட்டுப் பிரதிகளைச் சேர்க்கப் பதினையாயிரம் பவுண்டு (E15,000/–) செலவாயிற்றெனவும் கணக்கிடப்பெற்றது. அவர்தம் மறைவுக்குப் பிறகு 1828-இல் போராசிரியர் வில்சன் (Prof. Wilson) அவர்கள் தாமே வலிய வந்து அத்தொகுப்பை வெளியிட்டார் அந்த வெளியீட்டில் பெரும்பான்மை தமிழிலேயே உள்ளன. ஒரு சில தெலுங்கும் கன்னடமும் இடம் பெற அமைகின்றன. இவற்றுள் சில ஆங்கில நாட்டு ‘இராயல் ஏசியாட்டிக் சொசைட்டி’ (Royal Asiatic Society) யினரால் பெயர்க்கப் பெற்று வெளியிடவும் பெற்றுள்ளன. இத்தொகுப்பைப் பற்றி ‘மார்க் வில்க்ஸ்’ என்பார். The collection gives all that is necessary to illustrate the antiquities, the civil, military and religious institutions and ancient History of South India. (Col. Mark Wilks-History of Mysore) என்று பாராட்டியுள்ளார். ரெவரெண்டு வில்லியம் டெய்லர் (Rev. William Taylor) முதலிய பலர் அவற்றை ஆராய்ந்து அடிக்கடி ஆய்வுக் கட்டுரைகளும் ஆய்வு நூல்களும் வெளியிட்டனர். அவற்றுள் 1837-38 இல் சில தொகுக்கப் பெற்றன. பிறகு 1858இல் ‘கிழக்கிந்திய மனை’யும் (EastIndia House) பிரவுசு மனுஸ்கிரிப்ட்சுடன் (BrownesManuscripts) தொடர்பு கொள்ள இந்த 'மெக்கன்சி சேர்க்கை' (Collection) வெளிவந்தது. சென்னை அரசாங்க உடைமையாக (1847) ஆன பிறகு, 1882-ல் இத்தொகுதி கீழ்த்திசைக் கையேட்டுப் பிரதித் தொகுப்பில் இடம் பெற்றது. அக்காலத்தில் அதில் 8,000 வகைகள் இருந்தனவாம். மெக்கன்சி அவர்களே இத்தொகுப்பைக் கொண்டு வரத்தாம்பட்ட பாட்டைக் கூறுவதைக் காணலாம். “From 1792 to 1799 it were tedious to relate the difficulties, the accidents and the discouragements that impeded the progress of this design. The slender means allottted from the necessity of a rigid, no doubt just, economy, the doubts and hindrance ever attendant on new attempts; difficulties arising from the nature of the climate of the country, of the Government, from conflecting interest and passions and prejudices, difficult to contend with, and unpleasant to recollect.” “In the whole of this period, in which I have marched or wandered, ower the most of the provinces south of the ‘Krishna’, I look back with regret to objects now known to exist, that could have been then examined, and to trace of customs and of institutions that could have been explained, had time or means admitted of the enquiry. “It was only after my expedition to Ceylon in 1796, that accident rather than design, though ever searching for light that were denied to my situation, threw in any way, those means that I have since unceasingly pursued (not without some Success, I hope) of penetrating beyond the common surface of the Antiquities, the History and the Institutions of the South of India.” “How for the idea suggested was fulfilled it is not for me to say; for adverse cireumstance one part was nearly defeated;and the ‘Natural History’ was never analyzed in the manner I proposed and expected in concert with the survey; the suspense I was placed in from the reduction of the slender stipend allotted to myself, both for salary and to provide for increasing contingencies, was not only sufficiently modifying, but was aggravated by the overthrow of the establishment first arranged for the work, while other branches were favoured, in the application of the Director’s order. The efforts of these measures on the public mind and even on my assistants contributed to paralise every effort for its completion, but not withstanding these difficulties the success attending the first researches, and a convicition of its utility, induced me to persevere till 1808.”  இவ்வாறு அவரே இத்துறையில் தாம் மேற்கொண்ட முயற்சியையும் அதற்கு உண்டான பல்வேறு இடையூறுகளையும் விளக்கிக் காட்டுகின்றர். அவர்தம் வெளியீட்டுத் தொகுப்பில் தமிழில் 192[1] கையேட்டுப்படிகள் அப்போது தொகுக்கப் பெற்றன. புராணம், கட்டுக்கதை, உள்நாட்டு வரலாறு, வாழ்க்கை வரலாறு, கதை, நாடகம், தத்துவம், வான நூல், மருத்துவம், கலை முதலிய பல்வேறு பிரிவுகளும் இதில் இடம் பெற்றுள்ளன. இவையன்றி ஒவ்வோர் ஊரிலும் வழங்கும் சிறுகதைகள் பழக்க வழக்கங்கள் பற்றியும் (local tracts) தமிழில் 255 தொகுக்கப் பெற்றுள்ளன. இவ்வாறு அவர் தம் காலத்தில் தமிழ் நாட்டு மூலை முடுக்குகளில் வழங்கப்பெற்றுள்ள பல்வேறு வகை வாழ்வு முறைகள் பற்றிய குறிப்புகள் அனைத்தையும் தாமே நேரில் சென்று கண்டு, கேட்டு, எழுதித் தரச்செய்து வெளியிட்டுள்ளார். அவற்றுள் ஒரு சில நாம் காண இருக்கிறோம். அவை அனைத்தும் (மிகச் சில தவிர்த்து) உரைநடையில் உள்ளமையின் நமது ஆய்விடையில் இடம் பெறுகின்றன. அவற்றால் நாம் வெறும் உரைடையைப் பற்றி மட்டும் அறியவில்லை. அத்துடன் அக்காலப் பழக்கவழக்கங்களையும் மொழி அமைப்பு, பிறமொழிக் கலப்பு, கொச்சை வழக்கின் அளவு முதலிய பலவற்றையும் அறிந்து கொள்ள முடிகின்றது. ஜான் மொர்டாக் பணி இத்துறையில் சென்ற நூற்றாண்டு பாடுபட்ட அறிஞர்கள் பலர் என்றாேம். அவர்கள் அனைவரைப்பற்றியும் எண்ணவும் எழுதவும் நமக்கு நேரமும் இடமும் இல்லை. எனவே அவருள் சிறந்தவராகிய மெக்கன்சி பற்றியே குறிப்பிட்டேன். அவர்தம் தொகுப்பனைத்தும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நாட்டில்வாழ்ந்தன பற்றியனவேயாம். இதே துறையில் சென்ற நூற்றாண்டின் இடைகாலத்தில் அயராது உழைத்த மற்றெருவரை இங்கே எண்ணிப் பார்த்தல் சாலும் எனக் கருதுகிறேன். அவரே ஜான் மொர் டாக் (John Mordoch) என்பவர். இற்றைக்குச்சரியாக ஒரு நூற்றாண்டுக்கு முன், 1865-இல், நாட்டில் தமிழ்மொழியில் அச்சேறி வெளிவந்த நூல்களையெல்லாம் தொகுத்து, அத்தொகுதிக்குத் தெளிந்த தேவையான ஒரு முன்னுரையையும் எழுதி அவர் வெளியிட்டுள்ளார். எனவே, சென்ற நூற்றாண்டின் இடைக்காலத்தில் எழுதப்பெற்ற தமிழ் நூல் பற்றிய விளக்கம் தரும் ஒரு நல்ல விளக்காக இவர் தம் தொகுப்பு அமைகின்றது. 'கிறித்தவக் கீழ்த்திசைக் கல்விக் குழு’ என்ற அமைப்பின் முயற்சியால் சென்னையில் இவர்தம் நூல் 1865-இல் வெளியாயிற்று. இதில் பல துறைகளும் நன்கு பகுக்கப் பெற்று ஒவ்வொன்றிலும் வெளியான நூல்களைப் பற்றிய குறிப்புக்கள் உள்ளன. முதலில் ‘சமயம்’ என்ற தலைப்பிலும், பின் பிற தலைப்புகளிலும், அவை உள்ளன. 1755 நூல்கள் இத்தொகுப்பில் உள்ளன. ‘அ’ சமயம். எண்ணிக்கை, 100க்கு மொத்தம். 100க்கு 1. புராட்டஸ்டன்ட் கிறித்தவம் 587 33.4 2. கத்தோலிக்க கிறித்தவம் 87 4.9 3. இந்து சமயம் 508 28.9 4. இசுலாம் 36 2.0 1218 69.2 ஆ. சட்டம் 19 1.1 19 1.1 இ. தத்துவம் (அளவையில்) 2 .1 (மெய்யுணர்வு) 46 2.7 50 2.9 ஈ. அறிவியல் (இயற்கை அறிவியல்) 14 .8 (மருத்துவம்) 44 2.5 (கணிதம்) 4 .2 62 3.5 உ. கலைகள் 6 .3 6 .3 இலக்கியம் 152 8.6 152 8.6 எ. மொழியியல் 176 10.0 166 19.0 ஏ. நிலநூலும் வரலாறும் 12 .6 12 .6 ஐ. இதழ்கள் (17+9) 26 1.5 26 1.5 ஓ. ஆங்கிலேயர் பயிற்சி நூல்கள் 34 1.0 34 1.9 * * * * * * 1755 1755 இந்நூல்கள் பற்றி ஜான் மொர்டாக் அவர்கள் தொகுத்துக் காண விரும்பிய வகையினை அவர் வாக்கிலேயே தருகிறேன். The following might each form the subject of a volume. 1. The rise of the Saiva system in South India, notices of the Principal Saiva temples, a full list of Saiva books, with summaries of their content and some illustrative extracts. 2. A corresponding work on the Vaishnava system. 3. An account of the works on Philosophical Hinduism which analyses of their contents and copious extracts. 4. A complete account of the work on Astrology, Divination and Magic. 5. An account of Tamil Medicine. 6. A work on Tamil poetry specimens of versification should be given (Translation like Kambar). - A book on the above subjects, will got up, would meet with remunerative sales in India, Europe and America and gain some name for the author. இவ்வாறு 1865 இல் இவர்தம் முன்னுரையில் தமது ஆசையை வெளியிட்டுள்ளார். எனினும் - சரியாக ஒரு நூற்றண்டு கழிந்தும் - உரிமை பெற்று மொழி வளர்க்கின்றாேம் என்று கூறிக்கொள்ளும் இன்று வரையும்-இவர் காட்டிய வகையில் செயலாற்றுவோரை நாட்டில் இன்னும் காண இயலவில்லை. இவர்தம் முயற்சியால் காணக் கூடிய வகையில் உள்ள நூல்களுள் பெரும்பாலான உரைநடை நூல்களே. எனவே சென்ற நூற்றாண்டின் உரைநடையைக் காண இவர் தம் தொகுப்பும் நன்கு பயன்படத் தக்கதாகும். அரசாங்க நூற்பதிவுச் சட்டம் 1867க்குப் பிறகு அன்றைய அரசாங்கத்தார் அச்சுச் சட்ட அடிப்படையில், நாட்டில் அச்சாகும் நூல்களில் ஒவ்வொன்றின் படியும் அரசாங்கத்திற்கு (Registrar of Books) அனுப்பிவைக்க வேண்டுமென ஆணையிட்டனர். எனவே சென்ற நூற்றாண்டின் பிற்பகுதியில் வெளியான நூல்கள் அனைத்தும் அரசாங்க முத்திரையைப் பெற்று, வரிசைப்படுத்தப் பெற்று வகையாக எண்ணிடப் பெற்றுச் சேர்த்துவைக்கப் பெற்றன. அண்மையில் தமிழ் நாட்டு அரசாங்கத்தார் அவற்றைத் (1867–1900) தொகுத்து மூன்று பகுதிகளாக வெளியிட்டுள்ளனர். அத்தொகுப்பிலும் பல உரைநடை நூல்கள் உள்ளன. எனவே சென்ற நூற்றாண்டில் வளர்ந்த தமிழ் உரைநடை வளர்ச்சியை இடையீடின்றி ஆராய இவையும் இவை போன்ற வேறு சிலவும் நமக்கு ஆதாரமாக உள்ளன.[2] அவற்றின் துணை கொண்டு இன்று "பொது மக்கள் இலக்கிய" உரைநடை பற்றி ஆராய்ந்து எடுத்துக் காட்டுகளுடன் விளக்கலாம் என எண்ணுகிறேன். வெற்றியும் கொடையும் வெளியான நூல்களும் ஏட்டுப் பிரதியில் உள்ளன போக நாட்டில் அங்கங்கே வழக்கத்தில் உள்ள பல்வேறு எழுத்துக்களையும் எண்ணுதல் பொருந்தும். அரசாங்கத்தாரும் பிறரும் வடித்த கல்வெட்டுக்களும் கடந்த நூற்றாண்டில் சில உள்ளன. வெற்றி குறித்தும், வேறு பாலம் முதலியன அமைத்தும் உண்டாக்கிய சாசனங்கள் நாட்டில் உள்ளன. அவற்றில் ஓரிரண்டினைக் ஈண்டுக் காட்டல் நலம் பயப்பதாகும். சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் நெப்போலியன் வீழ்ச்சியுற்றதும் ஆங்கிலேயர் வெற்றி பெற்றதும் நாடறிந்த வரலாறு. அவ்வெற்றியைக் கொண்டாடு முகத்தான் ஆங்கிலேயர் தம் ஆணை சென்ற இடங்களிலெல்லாம் வெற்றித்தூண் நாட்டி, அவ்வெற்றியைக் கல்லிலும் பொறித்தனர். அவற்றுள் ஒன்று தஞ்சைச் சரபோசி மன்னன் ஆட்சி எல்லைக்கு உட்பட்ட சாளுவன்குப்பத்தில் உள்ளதை இன்றும் காணலாம். ஆங்கிலத்திலும் தமிழிலும் அக்குறிப்புக்கள் அமைந்துள்ளன. தமிழ்க்குறிப்பு உரை நடையாகவே உள்ளது. இரண்டையும் அப்படியே தருகிறேன். His Highness Maharaja Serfojee, Rajah of Tanjore, the friend and Ally of British Government, erected this column to commemorate the Triumphs of the British Army and Downfall of Bonaparte—1814. தமிழில் இங்கிலீசு சாதியார் தங்கள் ஆயுதங்களினாலடைந்த செய சந்தோஷங்களையும் 'போனபாற்தெயின்' தாழ்த்தப்படுதலையும் நினைவு கூர்தற்காக இங்கிலீசு துரைத்தனத்தின் சிநேகிதரும் படைத் துணைவருமாகிய தஞ்சாவூர் சீர்மை மகாராசா சத்திரபதி சரபோசி மகாராசா அவர்கள் இந்த உப்பரிகையை கட்டி வைத்தார்கள். -சகம் ௬௭௱௩௪சுஎாங்ச 1814) (தமிழ்ப் பொழில், குரோதி-ஆடி 1964) இவ்வாறு எழுதப்பெற்ற தமிழ் உரைநடை, இலக்கிய வளம் பெற்றது அன்று என்றாலும், மக்கள் தம் கருத்தை ஓலையிலும் கல்லிலும் வடித்துக் காட்டவும் விளக்கிச் சொல்லவும் நன்கு பயன்பட்டது என்பதைக்காண முடிகின்றது. நான் முதலிலே சொல்லியபடி இன்று இத்தகைய பொது மக்கள் இலக்கியமாகிய உரைநடையே நம் ஆய்வுக்குக் கொள்ளப் பெறுகின்றது. இவர்கள் உரைநடை இலக்கியத்தில் பல சொற்கள் புரியா நிலையிலும் உள்ளன. சில ஆங்கிலச் சொற்கள் அவ்வவ்வாறே தமிழில் எழுதப் பெற்றுள்ளன. சில பெயர்களும் வினை முடிபுகளும் மிகக் கொச்சையாகவே வழங்கப் பெறுகின்றன. சில மெய் எழுத்துக்கள் புள்ளி பெறவும் இல்லை. எனினும் இவற்றால் மக்கள் தங்கள் கருத்தைத் தாராளமாகப் பரிமாறிக்கொண்டார்கள் என்பது தெளிவு. 1844-இல் பாளையங்கோட்டை நெல்லை நெடுஞ்சாலையில் தாமிர வருணி ஆற்றுக்குக் கட்டப்பட்ட பாலத்தைப் பற்றிய குறிப்புத் தமிழிலும் ஆங்கிலத்திலும் உள்ளது. தமிழ்க்குறிப்பு இதுவாகும். இஃது ஒரு கருங்கல் தம்பத்தில் பொறிக்கப் பெற்றுள்ளது. இஃது தேசவுபகாரியாகிய திருநெல்வேலிச் சில்லா நாயிபு சிரேஸ் ஸ்ரீ சுலோசன முதலியாரவர்கள் முகுந்த உதாரமாய்ச் சொந்தச் சிலவு செய்து இதற்கடுத்த பாலத்தையும் அதைச் சேருகிற வழிகளையும் உண்டு பண்ணின தருமத்தை ஞாபகம் படுத்துவதற்கு இஸ்திந்தியா கும்பினியை நடத்துகிற மகிமை பொருந்திய கோட் டவ் டிரேகட்ட[3] ரென்னுஞ் சபையார் அருளிச் செய்த உத்தர விேைல நிறுத்தியிருக்கிறதென்று அறியுங்கள். ௲௮௱௪௰-௵. திருச்சினாப்பள்ளி ஜே. எப். மார்ட்டினால் இவ்வாறு நாட்டில் பல பகுதிகளில் பல நிகழ்ச்சிகளையும் செயல்களையும் உதவிகளையும் பிறவற்றையும் பொது மக்கள் என்றென்றும் அறிந்து கொள்வதற்காகப் பல தம்பங்களும் நினைவுச் சின்னங்களும் எழுப்பப்பெற்று, தமிழ் உரைநடையில் எழுதப்பெற்ற விளக்கங்களை அவற்றில் பொறிக்கப் பெற்றுள்ளமையைக் காண்கிறோம். ஆங்கிலேயர் கல்வி 1858-க்குமுன் கும்பினி ஆட்சி நடைபெற்றது. அதற்குப் பிறகு ஆங்கிலேயர் நாட்டு நேரடி ஆட்சியாகிய விக்டோரியா இராணியின் ஆட்சி தொடர்ந்தது. அக்காலங்களிலெல்லாம் ஆங்கிலேயர் பலர் வாணிபம் பொருட்டும் ஆளுதற் பொருட்டும் இந்நாட்டுக்கு வந்தனர். வந்தவர் இந்நாட்டு மொழியைக் கற்றனர். அவர்கள் கற்ற நூல்களும் பல; கற்பித்தோரும் பலர். அவர்களைப் பற்றிய அன்றைய குறிப்பொன்றைக் காணலாம். தமிழ் இலக்கணத் தெளிவு ⁠⁠1893 அங்கிலேயர் வியாபார மாளிகைகளைச் சென்னை, கடலூர் முதலிய இடங்களில் கட்டி வியாபாரத்தைப் பெருக்கி, அரசும் கைபற்றுகின்ற சமயத்தில், அங்கில உத்தியோகஸ்தர்கள் தமிழைக் கற்பது யுக்தமென அதிகாரிகள் தீர்மானித்து, சென்னையில் ‘காலேஜ்’ என்ற ஓர் வித்தியாசாலையை ஸ்தாபித்தார்கள். இதுதான் ‘Old College’ எனப்பட்ட இடம். இதில் இப்போது வித்தியாசாலைத் தலைவராகிய ‘Director’ தமது கச்சேரியை வைத்து நடத்தி வருகிறார். இதில் முதல் அங்கிலேயருக்குத் தமிழ் உபாத்தியாயராக நியமிக்கப்பட்டவர் செங்கற்பட்டுத் தாண்டவராய முதலியார். இவர் அக்காலத்தில் பட்டணத்தில் விஜயம் செய்து, நன்னூலுக்குக் காண்டிகை உரை யியற்றின இராமானுஜக் கவிராயரின் சீஷனும், கற்றுச் சொல்லியுமாயிருந்து, மேற்படி கவிராயரிடம் நன்னூற்பாடம் கேட்டவர். இவர் மூலமாய்த்தான் அங்கிலேயர் நன்னூல் சிறந்த தமிழ் இலக்கணம் எனத் தெரிந்து கொண்டது மன்றி, சர்வகலாசாலைப் பரிஷைகட்கும் (University Examinations) இந் நன்னூலே நல்ல இலக்கணம் என விதிக்கவும் தலைப்பட்டது. இத் தாண்டவராய முதலியாரே வாசக புஸ்தகம் (Prose) அங்கிலேய மாணாக்கருக்கு வேண்டியதாயிருந்த பொழுது, ஹிதோபதேசத்தைச் சமஸ்கிருதத்தினின்று மொழிப் பெயர்த்துப் பஞ்ச தந்திரம் என்ற புஸ்தகம் உண்டு பண்ணிக் கொடுத்தவர். நன்னூலிலுள்ள புணர்ச்சி விதிகள் புலப்படத்தக்கதாய் அப்புஸ்தகத்தைக் கொடும் புணர்ப்பா யெழுதிவிட்டார். இவர் செங்கற்பட்டில் சதுரமீனாக உத்தியோகஞ் செய்து அங்கிலேயரால் நன்கொடை பலவும் பெற்று, தேக வியோகமானார். இவருடைய குமாரன் கிறிஸ்தவராகப் பட்டணத்திலிருக்கிறார். ஐரோப்பிய குருமாரும் இந் நன்னூலையே விசேஷமெனப் போற்றியதால் இதற்கு இங்கிலீஷ் உரை சங். பிரதர்ட்டன் ஐயர் அவர்களாலும் (Rev. Brotherton M.A., Cambridge), உவால்ற்றர் ஜாயிஸ் துரையாலும் (Mr. Walter Joyes). கனம் பவர் ஐயராலும் (Rev. H. Bower. D.D), டவுடன் காலேஜ் (Doveton College) மினிஷியாகிய சாமுவேல் பிள்ளையாலும் எழுதப்பட்டது. இந்நன்னுால் சாஸ்திர யுக்கத்தைப் புகழ்ந்து கனம். பவர் ஐயரவர்கள் ஒரு புஸ்தகம் எழுதியிருக்கிறார்கள். இவர்களை மேற் கோளாகக் கொண்டுதான் கனம் ஜான் லாசரு ஐயரவர்கள் (Rev. John Lazrrus B.A.) நன்னூல் இலக்கணம் முதலியன எழுதி அச்சியற்றியது. ஆகவே நன்னூல் விசேஷமென்று, அதை விரித்து விளக்கியும் சுருக்கித் தீட்டியும் பலரும் சால்பு நூல்கள் பலவும் செய்ய ஆரம்பித்தனர். கனம் போப்பையரவர்கள் (Dr. G. U. Pope) மாத்திரம் நன்னூலிலும் விசேஷ நூல் தமிழிலக் கணத்துக் குண்டெனத் தெரிந்து, பல இலக்கணங்களையும் ஆராய்ந்து, தமது போங்காய் மூன்றாம் இலக்கணம் (Pope's Third Grammar) ஒன்றியற்றி, அதில் யாப்பருங்கலம், குவலயானந்தம், இலக்கணக் கொத்து முதலிய பல நூல்களினின்றும் சிறிது சிறிதெடுத்துக் கூறியிருக்கிறார். பட்டணத்தில் தட்டார் குல திலகராய்ப் பிறந்து, அநேக வருஷங்களாய்த் திருச்சிராப்பள்ளியில் தமிழ் கற்பித்து வந்த முத்துவீரக் கவிராயர், முதல் யாப்பிலக்கணம் சூத்திரப்பாவில் இயற்றி அச்சிட்டார். பின் பஞ்ச விலக்கணங்களையும் சவிஸ்தாரமாய்ச் சூத்திரப்பாவில், சுயமாய் எழுதி அச்சியற்றும் சமையத்துத் தேகவியோகமானர். இவர் தொல்காப்பியம், அகத்தியம், இலக்கண விளக்கம் என்ற நூல்களின் சூத்திரங்களைக் கோத்து, உரையில் காண்பவற்றைச் சுயமான சூத்திரங்களைக் கொண்டு காண்பித்து, அரும்பிரயாசையாய் முன்னோர் மொழிகளைப் பொன் போற் போற்றி நல்ல நூலொன்று முடித்தார். தமிழ் வழுவறக்கற்று, அநேக இலக்கியங்கள் பார்வையிட்டு, சமஸ்கிருதமும் தெரிந்துகொண்டு, ‘இலக்கணத்திரட்டு’ எனச் சிறந்த வாசக இலக்கணம் இயற்றியவர் கனம். மார்டின் உவில்பிரெட் (Mr. Martyn Wilfred) என்றவர். இவர் வெகுநாள் உபாத்தியாயராகச் சர்க்கார் பள்ளிக்கூடங்களில் நல்ல வேலை செய்து, பள்ளிக்கூட விசாரணைசெய் (Deputy Inspector) வேலையிலிருக்கிறபோதே தேக வியோகமானர். தற்காலத்தில் தமிழ் அபிவிருத்திக்காக அதிகமாய் உழைத்து வருபவர்கள் (Mr.W.Thamotharam Pillai, B.A., B. L., Mr. P. Ranganatha Mudaliar, M. A., Mr. J. M. Vellu Pillay) யாழ்ப்பாணிகளான கனம். தாமோதரம் பிள்ளை, கனம். ஜே. வேலுப்பிள்ளை, பெரியபட்டம் பெற்ற கனம் இரங்கநாத முதலியார் முதலியவர்களே. இவருள் கனம். தமோதரம்பிள்ளை ஏட்டுப்பிரதிகள் மங்கிமறைந்து கிடந்த தமிழ் இலக்கண இலக்கியங்களில் அநேகத்தைக் கண்ணும் திருஷ்டி குறையத்தக்கதாக வெகு கஷ்டத்துடன் வாசித்துத் திருத்திப் பேர்த் தெழுதி, மிகுந்த பொருட் செலவும் செய்து, அச்சியற்றித் தமிழ் பாஷையின் சிறப்புப் பிறருக்கு விளங்க மிக்க கருத்தோடு உழைத்து வருகிறார். இது 1893 ஆம் ஆண்டு தாவிது யோசேபு உபாத்தியாயரால் எழுதப்பெற்ற ‘தமிழ் இலக்கணத் தெளிவு’ என்ற நூலிலிருந்து எடுக்கப்பெற்றது. அக்காலத்திய உரைநடைக்கும் இதுவே சான்றாகின்றது. இதில் அக்காலத்தில் தமிழ் நாட்டில் வாழ்ந்து மொழியையும் உரைநடையையும் வளம்படுத்திய பலரை அவர் குறிப்பிட்டுள்ளார். சிலர் ஆங்கிலேயரைச் சார்ந்தும் சிலர் அவர்களைச் சாராதும் சிறக்க வாழ்ந்துள்ளனர். ஆங்கிலேயரைச் சாராது வாழ்தலே பெருமையுடையதென அக்காலத்தில் கருதப்பட்டதென்பதை அறிகிறோம். ஆங்கிலேயரைச் சாராது உரிமையோடு தமிழ்த் தொண்டு செய்து வாழ்ந்த பெரியவர்களைச் ‘சிங்க’ங்களெனவே அவர் அழைக்கிறார். ஆங்கில அரசு தமிழ் நாட்டில் பிரபல்யமாயிருக்கும் போது, ஆங்கிலேயரால் நன்கு மதிக்கப்பட்டுவந்த தமிழ்ப்பண்டிதர்கள் இராமாநுஜக்கவிராயர், விசாகப் பெருமாளையர், தாண்டவராய முதலியார், அ. சபாபதி முதலியார், அ. வீராசாமி செட்டியார், வேலாயுத முதலியார், சரவணப் பெருமாளையர். ஆங்கிலேயரை அடுத்துறவாடாதிருந்த தமிழ் சிங்கங்கள் நல்லூர் ஆறுமுக நாவலர், மாயவரம் மீட்னாசி சுந்தரம் பிள்ளை, வடலூர் இராமலிங்கப் பரதேசியார், திரிசிரபுரம் முத்துவீரக் கவிராயர். இவர்கள் கொஞ்ச காலத்துக்கு முன்தான்[4] காலவி யோகமானர்கள். இச்சிங்கங்களிடம் கற்றுச் சொல்லிகளாயிருந்தவர்கள் இப்போது கலாசாலைகளில் தமிழ் முன்ஷிகளாக விருக்கிறார்கள். இவ்வாறு அக்காலப் புலவர்கள் பாராட்டப் பெறுகிறர்கள். இவர்களுள் பெரும்பாலோர் தமிழ் உரைநடையை வளம்படுத்தியவர்களே. எனவே இவர் தம் உரைநடைச் சிறப்புகளை இன்றும் நாளையும் காணலாம். ஆங்கிலேயருக்காக அமைக்கப்பட்ட சங்கமே சென்னைக் கல்விச் சங்கமாகும். ஊர் வரலாறுகள் மெக்கன்சி துரை அவர்கள் பலவிடங்களுக்கு நேரில் சென்று கண்டவைப்பற்றி மேலேயறிந்தோம். அவற்றுள் பெரும்பாலானவை அவ்வப் பகுதி பற்றிய கதைகளும் வரலாறும் முதலியனவுமேயாம். சிலவற்றை மக்களே எழுதிக் கொடுத்தார்கள். சிலவற்றை நேரில் சொல்ல அதிகாரிகள் குறித்துக் கொண்டார்கள். ஒன்று காண்போம். கேவை மாவட்டத்து அந்தியூர் தாலுக்காவைச் சேர்ந்த வரதநல்லூர் கிராம மக்கள் அவ்வூரின் பழையவரலாற்றினை “மெக்கன்ஸி' துரைக்கு நேரில் சொன்னது ஒன்று. இது அவர் தொகுப்பில் சிதையாது உள்ளது. தொடக்கமும் முடிவும் மட்டும் ஈண்டுக் குறிக்கின்றேன். ௲௮௱௭௵ (1807) ஏப்ரல்௴ ௰௯௨ மேஜர் கர்னல் மெக்கன்ஸி சாகிபு அவர்கள் சர்க்காருக்குக் கோயமுத்தூர் ஜில்லா அந்தியூர் தாலுக்காவிற் சேர்ந்த அக்ரகாரம் ஒபனி 'பாவாணிகூடல்’ மிட்டர் பயிசிமவுசே ‘வரதநல்லூர்’ அக்கிரகாரம் மகா ஜனங்கள் எழுதிக்கொடுத்த ‘கைபீயத்து’ என்னவென்றால்:— பூருவத்தில் சாலிவாகன சகாப்தம் ௲ ௱ (1100). வருஷத்துக்குமேல் ஊராட்சிக்கோட்டை கிராமத்துக்குச் சேர்ந்தது ‘அல்லப்பச் செட்டி’ பாளையம் என்று ஒரு பேட்டையிருந்தது. ௸ பேட்டைப் பாளையக்கார ராஜிகத்தில் காலியாய்ப் போயிற்று. அப்புறம் சகாப்தம் ௲௩௱ காளயுத்தி வருஷ்ம் தேவராய மகராய மேற்படி அல்லப்பச் செட்டி பாளையத்தில் அல்லாளப்பட்டர். சங்கம பட்டர் வகையரா பிராமணர்களுக்கு அக்கிரகாரமும் கட்டு வித்துக் கொடுத்து ‘சோமக்கிரஹன’ புண்ணிய காலத்தில் மேற்படி பிராமணர்களுக்கு முப்பத்து நாலு பங்கும் தானம் பண்ணிச் சிவப்பிரதிஷ்டையும் பண்ணுவித்துக் கொடுத்தார்.அது முதல் வெகுதானிய வருஷம் வரையில் நிருபாதிக சருவ மானியமாய் நடந்து வந்தது. இவ்வாறு தொடங்கிய வரலாறு, பின் பல்வேறு விளக்கங்கள் காட்டி அடியிற் கண்டபடி முடிகின்றது. நின்ற சர்க்கார் இரண்டு பங்குக்குச் சர்க்கார் மானியம் போட்டுக் கொண்டார்கள். அதுமுதல் எதத்கக்ஷணம் வரையில் ௸ பூமி அனுபவித்து வருகிறோம். இது நடந்த கைபீயத்து. இக் கைபீது எழுதினது ௸யூர் ஜனம் பேர். குப்பன் எழுத்து. இராமையன் கையெழுத்து. இரங்கையின் ருசுவு, திருமலைராயன் ருசுவு. நாராயணய்யன் ருசுவு (Mec. collections, D. 2877) இவ்வாறு இவ்வரலாற்றுக் குறிப்பு முடிகின்றது. இதில் காணும் ஆண்டுக் கணக்குச் சரியாக இல்லை. இதைக் கைபியத்து அல்லது கைபீது என்று குறித்துள்ளனர். இச்சொற்களுக்கு விவரக் குறிப்பு என்றும் statement, report, detailed account, particulars, என்றும் பொருள் உள்ளன. கைபீயத்து நாமா என்றால் பிராமணப் பாத்திரம் அல்லது ‘Affidavit’ என்று பொருள்.[5] 1839 இல் வெளியான நூலில் 'news, particulars' என்ற பொருள்கள் உள்ளன[6]. எனவே இச்சொல் இன்று நாட்டில் அதிகமாக வழக்கத்தில் இல்லை என்றாலும் சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் கிராம மக்களிடத்தில் மிகச் சாதாரணமாக வழங்கிய ஒன்று எனத் தெரிகின்றது. இதில் எழுதினவர், சாட்சி தந்தவர் ஆகியோர் பெயர்களும் இறுதியில் இடம்பெற்றுள்ளன. ‘ருசுவு’ என்பது சாட்சியாகும். ‘மிட்டாபயிசி மவுசே’ என்பது அக்கிராமம் தானமாகக் கொடுத்த வகையை விளக்கும் தொடர்போலும், இத்தகைய ‘கைபீது’கள் சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழ் நாட்டில் அதிகமாக வழங்கி வந்தமையின் இச் சாசன முறையால் தமிழ் உரைநடை ஓரளவு வளர்ச்சி பெற்றுள்ளதை மறுக்க முடியுமோ? இவ்வாறான கைபீதுகள் எண்ணற்றவை எனக் கண்டோம். மேலே நாம் கண்டது நேரில் சொல்லியது; ஊர் வரலாறு பற்றியது. இனி இந்த அடிப்படையில் மெக்கன்சி துரை அவர்கள் ‘ரயிட்டர் பாபு ராயர்’ அவருடன் சென்று அவ்வந் நிலத்து மக்களைக் கேள்வி கேட்டுப் பதில் பெறும் வழக்கமும் உண்டு எனக் காண்கிறோம். துரை அவர்கள் எழுத்தருடன் (writer) சென்று மக்களுடன் கலந்து பழகி, அவர்களை கேள்விகள் கேட்டுப் பெற்ற பதில்கள் பல. அவற்றுள் சீரங்க வினாவிடையைக் காண்போம். விவிைடை-பிரதியுத்தரம் ௧. வது கேள்வி: தர்மவர்மா எனப்பட்டவர் யார்? அவர்தானா தர்மராசர்? அவராலேதானா ஆதியில் ஸ்ரீரங்கம் கோயில் ஏற்பட்டது? ‘வர்மா’ என்பதற்கு அர்த்தம் என்ன? உத்தரம்:—தர்மவர்மா வென்கிறவர் சோள தேசத்து ராஜா. அவர் தர்மராஜா அன்று. இந்தக் கலியுகத்துக்கு முன் துவாபரார்த்தத்தில் தர்ம ராஜாவினுடைய காலம். தர்ம வர்மாவினுடைய காலம் ௩௰௬ சதுர்யுகத்துக்கு முன் திரேதாயுகத்து ராஜா, விபீஷணருக்குக் கொடுத்த ஸ்ரீரங்க திவ்ய விமானத்துக்குத் தர்மவர்மா சப்தப்காரம், மண்டபம், கோபுராதிகள் கட்டினவர். ‘வர்மா’ என்ற சப்தத்துக்குக் கவசம் என்று அர்த்தம். ஆகச்(சே) செய்த தர்மத்தைக் கவசமாக உடையவர், (வர்ம சப்தம் க்ஷத்திரியரைக் குறிக்கும் ஒரு குறிப்புப் பேராம். அது சர்மா என்பது பிராமணரைக் குறிப்பது போலா மென்க.) தர்ம வர்மாவினுடைய வாசஸ்தானம் உறையூர். அதற்கு நிகளாபுரி என்றும் பெயர். அவர் துரைத்தனம் முதல்தான் அந்தப் பட்டணத்துக்குப் பிரசித்தி. (Mec. Collections D. 3186) இவ்வாறு திருவரங்க அந்தணர்கள் ‘மெக்கன்ஸி’க்கு முன் விளக்கும் பொழுது சோழர் காலத்தை 36 யுகத்துக்கு முன்பு (சுமார் 60 லட்சம்x36) ஈர்த்துச் செல்லுகின்றனர். இதுபோன்ற விளக்கங்கள் பல அவர் குறிப்பில் உள்ளன. சில சாதிகள் பற்றிய கைபீதுகளும் உள்ளன. ஒன்று குறும்பர் பற்றியது. அவர் ஊர்கள் அனைத்தும் இன்றும் சென்னைக்குப் பக்கத்திலேயே உள்ளன. குறும்பர்களுடைய ௨௪ கோட்டைகள் உண்டாயிருந்தன. அவைகளில் உப கோட்டைகள் அதிக விசேஷ கீர்த்திகளைப் பெற்றது. இந்த இருபத்தினாலுக்கும் புழல் கோட்டை ராஜதானி எனப்பட்டிருக்குது. இந்தக் குறும்பர்கள் பஞ்ச பாண்டவர்களின் யுத்தத்தில் அளனாகாளர் ஆக்கப்பட்டு படுகளத்தில் தீகமாய் தொண்டுபட்டதனால் யுத்தத்துக்கு அதிக பண்பட்டவர்களானார்கள் ஆனாலிவாளந்த யுத்தத்தில் முறியடிக்கப்பட்டு எங்கும் பரவி சிதறடிக்கப்பட்டார்கள். இவர்கள் கொல்லப்பட்டவிடம் நெடும்பூரில். அந்த இடம் இன்றும் குறும்பரைக் கொன்றவிடம் என்று சொல்லப்படுது. குறும்பருக்குண்டான கோட்டைகளின் விவரம் பொழில்–சாலப் பாக்கம்–நெடும்பூர் – அணைக்கட்டு – பட்டிபுலம் – ஆமூர் – புலியூர் – மறயிசீகுளம் – களத்தூர் – செம்பூர்–தமுணுார்–யீகார்டு. (Mec. Collection D. 867) வரலாற்றுக் கதைகள் இவர் தொகுப்பில் மாணிக்க வாசகர் பற்றிய ஒரு வரலாற்றுக் குறிப்பும் காணப்பெறுகின்றது. அதன் முகவுரையையும் முதலாவது பத்தியையும் மட்டும் ஈண்டுக் காணலாம். முகவுரை: கனம் பொருந்திய மேசர் காலன் மெகன்ஸி துரையவர்கள் வேதநாயக வேதாகம சிரோமணியாருக்குக் குடுத்த திட்டம் அல்லது மெமோரண்டத்தின்படி மாணிக்கவாசகர் சரித்திரம் ஏதென்பதைத் திட்டமாய் விசாரித்தெழுத வேண்டியதாமே. இதைத் தொட்டு அறிய வேண்டியது. (க. வது) மாணிக்கவாசகர்தெட்சண ராச்சியத்தில் மதுரைப்பட்டணத்தில் பிராமண வங்கி சத்திலே பிறந்து தென்னவன் பிரமராயன் என்கிற பாண்டியனுக்கு மந்திரியாயிருந்து அவருடைய திரவியத்தைக் கொண்டு ஆவிடையார் கோவிலென்று சொல்லப்படுகிற திருப்பெருந்துறையிலிருக்கப்பட்ட திருப்பணிகளைக் கட்டினரென்றும் கடைசியிலே சிதம்பரத்துக்கு வந்து அவ்விடத்திலே யீழத்து ராசாவினிடத்திலிருந்து வந்த புத்தர் சமயத்தாரை வாது பண்ணி அல்லது தர்க்கம் பண்ணியழித்துப் போட்டாரென்றுஞ் சைவ மதத்தாரெல்லாம் வாய் விசேஷமாகச் சொல்லு கிறார்கள். ஆலைவர் எந்த வருஷம் எந்த ஆண்டிலே யிருந்தாரென்று வாய் விசேஷமாகச் சொல்லுகிற வர்களையுங் காணோம், புராணத்திலும் காணோம். இவ்வாறு மாணிக்கவாசகர் வரலாறு கூறப்படுகிறது. இதில் மொழித் தவறு மட்டுமல்லாது இடம், வரலாறு, பெயர் முதலியனவும் பிழைபட்டிருப்பதையும் காண்கின்றோம். எனினும் இவைபற்றி யெல்லாம் விளங்க அறியாதவராகிய ஆங்கிலேயராகிய மெக்கன்சி அவர்கள் அவரவர் எழுதியதையும் கூறியதையும் அப்படியே வகுத்துத் தொகுத்து வைத்தார். இவ்வாறு சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் செவி வழியாகவும் எழுத்து வழியாகவும் நாட்டில் வாழ்ந்து வளர்ந்து வந்த உரைநடையை நம்மால் காண முடிகின்றது. இந்த உரைநடையில் பல பிழைகள் உள்ளனவேனும் இதுவும் தமிழ் உரைநடை வரலாற்றில் இடம் பெற்றுப் பின் நன்கு வளர இருக்கும் உரைநடைக்கு வழிகாட்டியாக அமையவில்லையா! மக்கள் பிணக்கு இனிச் சில மக்களின் வரலாறு பற்றிய குறிப்புக்களையும் கிராமங்கள் தோறும் மக்கள் சாதிவெறிகொண்டு மாறுபட்ட வரலாறுகளையும் இக்குறிப்புக்களில் காண்கின்றாேம். இத்துறையில் பல இவர் தொகுப்பில் உள்ளன. ஒன்றை மட்டும் காணலாம். இன்றும் சதுரங்கப்பட்டினத்தை அடுத்த நிலப்பகுதிக்குக் குறும்பரை நாடு என்றும் குறும்பர் நாடு என்றும் பெயர் இருப்பதை அறிவோம். ஆயினும் குறும்பர் என்ற மரபினர் வாழ்வைக் காணல் அரிது. இதற்கான காரணத்தை இன்றும் நம்மால் அறிய முடியவில்லை. பின்வரும் வரலாற்றுக் குறிப்பு- அதன் உரைநடையில் பல்வேறு தவறுகள் பெற்றிருந்தபோதிலும்-குறும்பர் வாழ்வு வீழ்ந்த வரலாற்றை அப்படியே படம் பிடித்துக் காட்டுவது போன்று அமைந்துள்ளது. குறும்பர் என்ற இடவமிஸத்தாருடைய சரித்திரம்: றாயர் சமஸ்தானத்திலே குறும்பர் என்ற யிடச் சாதிகள் வெகுஇடங்களிலே றாட்சியபாரம்பண்ணினார்கள். அவாள் நெடுமரம், அணைக்கட்டு, சால பாக்கம், நெரும்பூர், என்ற யிடங்களிலேயும் யின்னம் மத்த இடங்களிலேயும் கோட்டைகள் கட்டிக்கொண்டு பிரபலியமாய் வாழ்ந்தார்கள்=அன்னாள்களிலே குறும்பர் குடிமக்கள் முதலிக்குடிகளையும் வெள்ளாளகுடிகளையும் தங்களை வணங்கும்படியான பிறையத்தினம் பண்ணினார்கள் ஆனல் முதலிகளும் வெள்ளாளரும் அதுக்குச் சம்மதி கொடுக்கவில்லை அப்போ குறும்பர்கள் அவாளுக்கு வெகுயிடுக்கங்கள் பண்ணினார்கள் ஆனாலவாளதற்குச் சம்மதிகுடுக்கவில்லை-அதின் பேரில்லவர்கள் தெருவிலும் முச்சந்திகளிலும் வெத்திலை தோட்டங்களிலும் யின்னம் வெகு யிடங்களிலும் திட்டி வாசல் போலே கட்டி அதுக்கெதிறிக் குறும்பர் உளுக்கார்ந்து கொண்டு சறுவத்திறாளும் அதில் தலை குனிந்து நுழையும்படியாகவும் அதினாலே தங்களுக்கு வணக்கம் நடக்கவும் எத்தினம் பண்ணினர்கள்-அப்போ முதலிமாரும் வெள்ளாளமாரும் தலைகுனிந்து நுழைகிறதுக்கு வதிளாக முதல் காலை விட்டு நுழைந்து யிதனலே யவாளை அவசங்கை பண்ணினர்கள்-என்ற போதைக்கும் அவாளதிகாரஸ்தர்களானபடியினலே பலவிதத்திலும் வெள்ளாளரையும் முதலிகளையும் துன்பப்படுத்தினர்கள். அப்போ துன்பம் அதிகரித்தபடியினலே யிவாளெல்லாரும் யோசினை பண்ணி ஒன்றிலேயும் முடியாமல் கடைசியிலே யொரு அம்பட்டனிடத்திலே போய அவனுக்கு மான்னிய சான்னியம் பண்ணி விக்கிருேம் குறும்பரை யதம்பண்ண யோசினை கேட்டார்கள் அப்போ அவன் சமாளிப்புச் சொல்லி தானதுக்கு உபாயம் பண்ணுகிறேன் என்று திடாரிக்கஞ் சொல்லி யிவாளை வீட்டுக்கு அனுப்பி விட்டான் அதின் பிறகு அவன் தன்னினத்தாராகிய அம்மட்டர் வீடுகளுக்கெல்லாம் போய் அவாளெல்லாரும் தனக்கு உதவி செய்ய வேணுமென்று கேட்டுக் கொண்டான் அந்தப்படியே அவாளெல்லாரும் உதவி செய்கிறோமென்று வாக்குக் குடுத்தார்கள் குறும்ப சாதியாருக்குள்ளே ஒருவன் சென்றுபோனல் இழவுக்கு வருகிற வாளக் கூட்டத்தாரனைவோரும் தலையேகச் சவரம் பண்ணுகிறது வழக்கமாயிருந்தது— அப்படி ஒருநாள் தறுவாயிலே குறும்பர்களுக்குள்ளே மூப்பாயிருக்கிற ஒருவன் விழுந்து போனன் அப்போ குறும்பர்கள் எல்லோரும் ஏகோபித்துக் கூடியிருந்து அவனிழவு சடங்கு நடப்பிக்கிறதிலே எல்லாரும் மாமூலப் படிக்கு சவரம் பண்ணிக்கொள்ள ஒரு மிக்க உளுக்கார்ந்தார்கள் அப்போ யிந்த அம்மட்டனனவன் தான் பந்து கட்டு பண்ணியிருந்த அம்மட்டர்கள் எல்லோருக்கும் தாக்கிதை பண்ணி அவாளவாள் சிறைக்கிற மனுஷரை அவாளவாள் கொன்று போடக் கற்பித்திருந்தான் அந்தப்படியே யவாளவாள் சிறைத்த மனுஷனை அவனவன் தலையை சிரைத்து கழுத்தண்டையில் வருகிறபோது குரவளைகளை அறுத்துக் கொன்று போட்டார்கள் அப்போயிங்கே மாண்டுபோன குறும்பறுடைய ஸ்ரீகளெல்லாரும் பெலத்த அக்கினி வளத்து அதில் குதித்து பிருணசேதம் பண்ணிக்கொண் டார்கள்-அப்போ ஸ்ரீகள் நெரும்பூரிலே முப்போகம் விளைந்தாலும் உப்புக்கு நெற் கிடையால் போகவென்று சாபமிட்டார்களாம்-குறும்பராலே கட்டப்பட்ட கோட்டைகளின்னம் மேலாகச் சொல்லப்பட்ட யிடங்களிலே முழுதும் யிடிந்து தவிழ்ந்து மண்மேடாய்க் கிடக்குது அதை போய்ப் பார்த்தவர்களிருக்கிறார்கள் அவாளால் கட்டப்பட்ட கேணிகள் அந்தந்த யிடங்களிலே பாழாய்ப் போய்க் கிடக்குது அது யிந்த சதுரங்கப் பட்டணத்திலேயும் யிருக்குது அந்தக் கல்கள் பூறுவங்கண்ட வெகு நாளையின் கல்லுகளாயிருக்குது— (Mec, Collection, D. 3838) பஞ்ச தந்திரம் இந்த அளவோடு இத்தகைய குறிப்புக்களை நிறுத்தி வேறு வகையில் உரைநடை வளர்ந்த வரலாற்றைக் காண்போம். பஞ்சதந்திரக் கதையானது தாண்டவராய முதலியார் என்பவரால் ஆங்கிலேயர் பொருட்டுச் செய்யப் பெற்ற ஒரு நூல் என்பதைக் கண்டோம். இந்நூலை 1825–இல் அவர் எழுதி முடித்தார். எனினும் 1850-இல் அவர் மறைந்தார் என்றும் காண்கிறோம். அவரே கீதா மஞ்சரி என்ற மற்றாெரு வசன நூலும் இலக்கண வினா விடை என்றாெரு நூலும் எழுதினார் என்பர். அந்தப் பஞ்சதந்திரம் என்ற கதை ஆங்கிலேயருக்காகப் படிப்படியாக இலக்கணப் புணர்ச்சிகள் பொருந்த அமையப் பெற்றுள்ளமையும் மேலே கண்டோம். முதலில் வரும் கதைகள் எளிய இயல்புப் புணர்வுடைய வாக்கியங்களாக அமைய, பின் வரவரப் பல்வேறு இலக்கணப் புணர்வுகளையுடைய வாக்கியங்கள் இடம் பெற்றன. இந்தக் கதையே சென்ற நூற்றாண்டிலும் இந் நூற்றாண்டின் தொடக்கத்திலும் பல்வேறு பாடநூல்களில் தவறாது இடம் பெற்றமையை அறிகிறோம். அதன் நடை முன் கண்டமை போலன்றிச் செம்மை நலம் சார்ந்திருக்கின்றது. சென்ற நூற்றாண்டின் உரைநடைக்கு அதில் ஒரு சிறு பகுதியையேனும் காணல் தேவையாகின்றது. இதோ அந்த நடைக்குப் புணர்ச்சி இலக்கணம் நிரம்பிய ஓர் எடுத்துக் காட்டு:— ஐந்தாவது. அசம்பிரேஷிய காரியத்துவம்–கதை 1. உச்சயினி புரத்தில் வதிந்த தேவநாம வேதியனொருவன் மனைவியோடு இல்லறம் நடாத்தும் நாளிற் குழவியில்லாக் குறையால் இருவரும் ஒரு கீரிப்பிள்ளையை மைந்தனைப்போற் கருதி வளர்ப்புழி ஒரு மகவுண்டாயிற்று. மனைவி அம்மதலையை ஓர் நாள் தூங்குவித்துக் கணவனைப் பார்த்து, “யான் உதகத்தின் பொருட்டுச் செல்லா நின்றேன். நீர் நங் கான் முளையைப் பார்த்திரும், ஒரு வேளை கீரி கடிக்கும்” என்றிங்ஙனம் வகுத்துத் தண்ணீர்க்குச் செல்ல, பின்னர் அக்குழந்தை தொட்டிலிற் கண் வளர்ந்தது அவ்வந்தணனும் ஒரு தடாகக் கரும வயத்தனய்ப் புறஞ் செல்ல, அத்தருணத்தில் ஒரு கிருஷ்ண சருப்பம் பிலத்தினின்றும் புறம்போந்து தொட்டிலின் மேற் செல்லா நிற்கக் கண்ணுற்ற நகுலம் அதை அக்கணமே விரைந்து பற்றி உதறிக் கொன்று பல கண்டலாங்கண்டு குருதியாற் பூசுற்ற முகத்துடனே தனது ஆற்றலைக் காட்ட விரும்பி விரைந்து துவார முகமாக வருகையில், வந்த பார்ப்பினி செந்நீரால் நிறைந்த அதன் வதனத்தைப் பார்த்த வளவில் அது தன் பிள்ளையைக் கடித்து மடித்ததென்று உள்ளித் துள்ளித் துணுக்குற்று நீர்க்குடஞ் சிதைவுறும்படி அதன் தலைமேற் போட்டுக் கொன்று உடனே உட்புகா நிற்கையில், மகன் உறங்குதலையும் அருகே கரும்பாம்பின் துணிக்கைக் குவையையுங் கண்டு அந்தோ! கெட்டேன், யான் என் அருங்குழவியை நன்காராய்தலின்றிக் கொலை செய்தேனெனச் சோனமுற்றுப் புலம்பா நிற்புழி அவள் தலைவன் ஆண்டு எய்தி, ‘குழந்தை இதோ இருக்கையில் நீ வெறுமையென மகவிழந்தே னென்றேன் கதறிக் கலுழ்கின்றன? என்னடி பேதாய்!” என மனைவி, “நீர் யாதோ பேரவாவால் என் மொழி தள்ளிப் போனமையால் அதன் பயன் இந்தோ வாய்த்தது, இது மிக்க அவாவினன் மூடி மேற் சக்கிரம் சுழன்றதை யொத்தது” என, அவன் ‘அஃதெவ்வண்ணம்? உரைத்தி’ என உரைப்பான். –பக். 131, 132. கதைகள் இப்படியே வேறு சில கதைகளும் வழக்கத்தில் உள்ளன. அவற்றில் ஒன்று மரியாதைராமன் கதை. 1847–இல் சைதாப்பேட்டை தேசப்ப செட்டியார் குமாரர் வீரபத்திர செட்டியாரால் ஜீவரக்ஷாமிர்த அச்சகத்தில் பதிப்பிக்கப் பெற்ற கதா சிந்தாமணி என்ற நூலில் ஒரு பகுதி இது. இந் நூல் பல சிறு கதைகளைத் தன்னகத்தே கொண்டது. இதில் நடை அவ்வளவு சிறந்ததாக இல்லை யெனினும் இத்தகைய கதைகளைப் பொது மக்கள் விரும்பிப் படித்தார்கள் எனக்காண முடிகின்றது. எனவே அதையும் இங்கே தருகின்றேன். மரியாதை ராமன் கதை: ௰௮ வது. ஒருவன் காதுக் கடுக்கனை மற்றாெவன் திருடியது. ஒரு சத்திரத்தல் இரண்டுபேர் வழிப்போக்கர் ஒருவனுக்கொருவன் எதிர்முகமாகத் தலைவைத்துப் படுத்துக் கொண்டார்கள் நித்திரை வேளையிலே வலது காது கீழாப் படுத்திருந்தவனுடைய இடது காது கடுக்கனை இடது காது கீழாகப் படுத் திருந்தவன் கழற்றித் தன் வலது காதிலேபோட்டுக் கொண்டான். விழித்துக்கொண்ட பிற்பாடு கடுத்கனை யிழந்தவன் என் கடுக்கனை ஏன் கழற்றிக் கொண்டா யென்று கேட்க அவனும் என் காதுக் கடுக்கனை நீதான் கழற்றிக் கொண்டாயென்றான், இப்படிக் கலகப்பட்டுக் கடுக்கனை யிழந்தவன் மரியாதை ராமனிடத்திலே சொல்லிக் கொண்டான். நியாயாதிபதியாகிய அவன் திருடனை அழைத்துக் கேட்டவிடத்தில் அவனும் அப்படியே சொன்னபடியினலே நீங்கள் இருவரும் எப்படிப் படுத்துக் கொண்டீர்களோ அப்படி பகுத்துக் கொண்டு காண்பியுங்களென்றான். அப்படியே காண்பித்தபோது திருடனைப் பார்த்து உன் இடதுகாது கீழே இருந்த படியால் அதிலிருந்து எப்படி கழற்றலாம். அவன் இடது மேலே இருந்தபடியால்எளிதாகக் கழற்றிக் கொண்டாய். நீதான் திருடனென்று சொல்லி உடமைக்காரனுக்குக் கடுக்கனை வாங்கிக் கொடுத்துத் திருடனே இருபத்துநாலு அடி அடிப்பித்து ஆறு மாதம் காவலிருக்கச் செய்தான். அத்திருடன் பொய் சொன்னலும் பொருந்தச் சொல்லவேனும் என்றபடி காத்துக் கொள்ளவும் தெரியாமற் போயிற்றேயென்று துன்பமடைந்தான்.  இவைகளேயன்றி நடேச சாஸ்திரிகள் எழுதிய திராவிட நாட்டுப் பூர்வகாலக் கதைகள், மத்தியகாலக் கதைகள் முதலியனவும் படித்து மகிழத்தக்கன. நல்ல உரைநடையில் அமைந்துள்ளன். இவ்வாறு சென்ற நூற்றாண்டில் எத்தனையோ வகையான கதைகள் எழுதப்பெற்றும் அச்சிடப்பெற்றும் நாட்டில் உலவிவந்தன. எழுதப்பெறாது செவி வழியாகச் சென்ற நூற்றாண்டுவரை வந்த பல்வேறு கதைகளும் அச்சுச் சாதனம் உண்டான கராணத்தாலே நாட்டில் நூல்களாக உருப்பெற்று உலவின. அவை அனைத்தையும் வரிசைப் படுத்திக் கூறுவதென்பது இயலாத ஒன்று. மரியாதைராமன் கதை (1812). விக்கிரமாதித்தன் கதை, முப்பத்திரண்டு பதுமை கதை (1804), சதமுக ராவணன் கதை (1818), தாடி வெண்ணெய்க்காரன் கதை (1843) விறலிமாறன் கதை (1828), தமிழறியும் மடந்தை கதை (1812) முதலியவை சில. இவற்றுள் சில ஏட்டுப் படிகளாகவும் இருந்து இந்த நூற்றாண்டில் அச்சிடப்பெற்றுள்ளன. இவையுங் இவை போன்ற எண்ணற்ற பிற கதைகளும் நாவல்களும், வளர்ந்து வருகின்ற தமிழ் உரைநடை வரலாற்றில் இடம் பெறத்தக்கவையே என்பது மட்டும் உறுதி. நாவல் பத்தொன்பதாம் நூற்றண்டிலே, இத்தகைய கதைகள் மட்டுன்றி இன்று நாட்டில் வழங்கும் ‘நாவல்’ என்னும் புதுவகை நூலும் இடம் பெறலாயிற்று. தமிழில் ‘பிரதாப முதலியார் சரித்திரம்’ என்னும் நாவலை எழுதி (1835 இல்) வெளியிட்ட மாயூரம் வேதநாயகம் பிள்ளை அவர்கள் இத்தகைய நாவல்கள் பற்றியும் தமிழில் உரைநடை வளர வேண்டிய தேவை பற்றியும் தம் முகவுரையில் குறித்துள்ளார். அதுவரையில் தமிழ் உரைநடை வளராமைக்கு உரிய பல காரணங்களை விளக்கி, ஏட்டில் எழுத்தாணி கொண்டு எழுதும் முறையில் நீண்ட விளக்க உரை எழுத இயலாத் தன்மையைத் தொட்டுக்காட்டி, தாம் உரை நடையில் இந்நாவலை எழுதியதற்குரிய காரணந்தை அவர் விளக்குகிறார். My object in writing this work of fiction is to supply the want of prose works in Tamil, a want which is admitted and lamented by all. (முன்னுரை) உரைநடையின் தேவையை அவர் தமது நூலின் மற்றொரு பகுதியிலும் எழுதிக்காட்டியுள்ளார். ‘வசனம்’ என்பதையே அவர் ஆண்டுள்ளார். சென்ற நூற்றாண்டில் உரைநடைக்கு இவர் எழுத்தும் ஓர் எடுத்துக்காட்டு. வசன காவியங்களால் ஜனங்கள் திருத்த வேண்டுமே யல்லாது செய்யுட்களைப் படித்துத் திருந்துவது அசாத்திய மல்லவா? ஐரோப்பிய பாஷைகளில் வசன காவியங்கள் இல்லாமலிருக்குமானால் அந்தத் தேசங்கள் நாகரிகமும் நற்பாங்கும் அடைந்திருக்கக் கூடுமா? அப்படியே நம்முடைய சுய பாஷைகளில் வசன காவியங்கள் இல்லாமலிருக்கிற வரையில் இந்தத் தேசம் சரியான சீர்திருத்தம் அடையாதென்பது நிச்சயம். (42 ஆம் அதிகாரம்.) இதில் ஆசிரியர் கூறிய அடிப்படையிலேயே பல உரைநடை நூல்கள் சென்ற நூற்றண்டில் தோன்றி வளர்ச்சியுற்றன. இவ்வுரைநடைபற்றியும் நாவல் பற்றியும் சென்ற நூற்றாண்டின் இறுதியிலும் இந்த நூற்றாண்டின் தொடக்கத்திலும் எழுந்த சில விளக்கங்கள் சென்ற நூற்றாண்டில் இருந்த அதன் நிலையை நன்கு விளக்குவனவாகும். ‘சாவித்திரி சரித்திரம்’ ‘பத்மாவதி சரித்திரம்’ முதலிய நாவல்கள் எழுதிய மாதவையா அவர்கள் 1903 இல் ‘பத்மாவதி சரித்திரம்’ இரண்டாம் மதிப்பின் முன்னுரையில் நாவல்பற்றியும் அதன் நடைபற்றியும் குறிக்கின்றார். மற்றெல்லா உயர்தர கிரந்தங்களையும் போலவே நாவலென்னும் கிரந்தமும் படிப்பவர் மனதைக் கவர்ந்து மகிழ்வூட்டலை முற்கருத்தாகவும் அத்துடன் நல்லறிவூட்டலை உட்கருத் தாகவும் கொண்டது. கிரந்தத்தில்இடையிடையே கீழ்த்தரப்பட்டபாத்திரங்கள் பேசநேரும்பொழுது இலக்கணவழுச் செறிந்த அவர்தம் வாய்மொழிகளை அவ்வண்ணமே எழுதுவது வழக்கமாயினும், கிரந்த கர்த்தா நேரிற் கூறும் வரலாறுகள் வழுவின்றிருத்தல் வேண்டும். கல்வி தேர்ச்சியில்லாதாரும் பயன் பெறும்படி எழுதப்படும் கிரந்தம் ஆதலின், எவ்வளவு இலேசான நடையில் எழுதப்படினும் நலமே ஆயின் எளிதில் பொருள் தெளிதல் கருதி இலக்கண வழுக்களோடு எழுதப்படின் படிப்பவருள் இலக்கணம் பயின்றார் வெறுப்பையும், அப்பயிற்சியில்லார்—அவர்களுள் முக்கியமாய் இவ்விதக் கதைகளைப் பெரும்பாலும் வாசிப்போராகிய இலக்கண மறியாத பெண்பாலர்—வழுக்களை அறியமாட்டாராய் மயக்கத்தையும் அடைவாராதலின் நன்னடையில் எழுதுவதே தகுதியாகும். (பத்மாவதி சரித்திரம். முன்னுரை) இவ்வாறு உரைநடை எழுதும் போது மக்கள் கையாளவேண்டிய வகையினையும் அவற்றின் வழியே சென்ற நூற்றாண்டின் பிற்பகுதியில் தோன்றி உரைநடையை வளர்த்தவர் திறத்தையும் காட்டிய, இந்த நூற்றண்டின் தொடக்கத்தில் வாழ்ந்த மற்றெரு புலவர் கருத்தையும் இங்கே காணலாம். அவர் யாரென்று நமக்குத் தெரியாது. அவர் கருத்தும் யாவருக்கும் ஏற்கத்தக்கதா என்பதும் ஆராய்ச்சியில்லை. ஆயினும் சென்ற நூற்றண்டின் பிற்பகுதியில் உரைநடை வளர்த்தவர் பற்றி இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்த இந்தக் கருத்தை மட்டும் காணலாம். வசனமெழுதுவோர் பிரம்மஸ்ரீ சூரியநாராயண சாஸ்திரியாரின்வழிச்சென்றுவசனமெழுதாமலிருந் தால்தான் பயனடையலாம். சாஸ்திரிகள் எழுதிய வசனம் மிகவும் கடின நடையுடையது. அம்மாதிரியான கடின வசனம் பெரும்பாலார்க்குப் பயன் படாது. “விளங்க வைத்தல்” என்பதைக் கொண்டு வசனம் எழுத வேண்டும். கவியானது கடினமாயிருந்தாலும் குற்றமில்லை. வசனம் கடினமாயிருந்தால் பெரும் பயன் அளியாது. ஆதலின் எளிய நடையில் எழுதுவதுதான் உசிதம். ஸ்ரீமான் வேதநாயகம் பிள்ளை, ஸ்ரீமான் செல்வக் கேசவராய முதலியார் ஆகிய வித்துவான்கள் எழுதிய வசனந்தான் நமக்கு வழிகாட்டக் கூடியது. அவர்களுடைய வசன நடை மிகவும் பாராட்டற்பாலது. ஏனெனில், எளிய நடையில் எழுதுவது கடின நடையில் எழுதுவதைப் பார்க்கிலும் வருத்தமான காரியம். (ராமதாஸ் என்னும் புதிய கட்டுக் கதை—முன்னுரை, 1908) இவ்வாறு இன்னும் பலரும் சென்ற நூற்றாண்டின் நாவல் பற்றியும் உரைநடை பற்றியும் பல கருத்துக்களைக் கூறியுள்ளார்கள். ருபின்சன் குருசோ (1869), தசகுமார சரித்திரம், பிரேம கலாவதியம் முதலிய மொழிபெயர்ப்பு நாவல்களும் வெளிவந்துள்ளன. ‘தீனதயாளு’ முதலிய நாவல்களும் சென்ற நூற்றாண்டின் இறுதியில் வந்தன. கிருபை சத்தியநாதன் என்ற கிறுத்துவ அம்மையாரும் இரு நாவல்கள் எழுதியுள்ளார். ஒன்று கிறித்தவ சமயச் சார்பானது; மற்றது இந்து சமயச் சார்பானது. ‘விநோத சரித்திரம்’ என்று உயர்ந்த இலக்கிய நடையில் நாராயணசாமிப் பிள்ளை என்பார் நாவல் எழுதியுள்ளார் எனவும் அறிகிறோம். இராஜம் ஐயர் அவர்கள் எழுதிய ‘கமலாம்பாள் சரித்திரம்’ நாடறிந்த ஒன்று. 1875 முதல் 25 ஆண்டுகளில் சுமார் 50 நாவல்கள் வந்துள்ளன. சில இதழ்களும் பல்வேறு தொடர்கதைகளைச் சிறுகச் சிறுக வெளியிட்டு வந்தன. இவ்வாறு சிறுகதையும் நாவலும் தாமும் வளர்ந்து தமிழ் உரைநடை வளரவும் உதவின. மக்களும் ஓரளவு அறிவு விளக்கம் பெற்றனர். திரட்டு நூல்கள் இவ்வாறு தனித்தனியான கதைகளின் அமைப்பு மட்டுமன்றி, பல சிறு கதைகளைத் தொகுத்து வெளியிட்ட நூல்களும் சில இருந்தன. நல்ல புலவர் எழுதிய கதைகள் சிதறுண்டுபோகா வகையில் பல அறிஞர் அவற்றைத் தொகுத்து வைத்துள்ளனர். அவற்றுள் சில அச்சிடப் பெற்றுள்ளன. அவற்றுள் ஒன்று அறிஞர் எம். எஸ். பூரணலிங்கம் பிள்ளை அவர்கள் தொகுத்தது. 1896இல் அவர் ‘வாசகத் திரட்டு’ என்ற பெயரில் பல கதை கட்டுரைகளைத் தொகுத்து வெளியிட்டார். அவற்றுள் சில பேரிலக்கியங்களிலிருந்து சுருக்கமாக எழுதப் பெற்றன; சில மொழிபெயர்ப்புகளும் உள்ளன. அவை வருமாறு: 1. மனோன்மணி கதை ஜே. பி. வாசுதேவ பந்துலு (சுந்தரம்பிள்ளையின் மனோன்மணியம்) 2. சாதுமதி சரிதை கே. குப்புசாமி முதலியார் (King Lear) 3. மனோகரவல்லி கதை எம். எஸ். பூரணலிங்கம் பிள்ளை (Teynnyson’s Princess) 4. தற்காப்பு நியமம் வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியார் (Herbert Spen-cer’s Principle of Ethics) 5. வளநாடு வித்வான் ஜெகராவ் முதலியார் (தேம்பாவணி) 6. மாணிக்கம் விற்றப் படலச் சுருக்கம் ஞானப்பிரகாச வள்ளளார் (திருவிலையாடல் புராணம்) 7. அரசனும் புலவனும் வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியார் (ரூபாவதி நாடகம்) 8. பிரகலாத சரித்திரம் சீனிவாசராகவாசாரியார் (விஷ்ணு புராணம்) 9. சாவித்திரி கதை டி. எஸ். கலசலோசன செட்டியார் (பாரதம்) 10. ஸ்ரீ ராமரும் வாலியும் அருணாசலக் கவிராயர் (இராமாயணம்) 11. பாண்டவர் வெளிப்படுதல் சண்முகக் கவிராயர் (பாரதம்) 12. தந்திரம் எஸ். சுப்பிரமணியப் பிள்ளை (by Sri John Lubbork) 13. சீவகாருண்ய விளக்கம் சிதம்பரம் இராமலிங்கம் பிள்ளை (அருட்பா) இக்கட்டுரைகளை உதவிய அனைவரும் சென்ற நூற்றாண்டில் தமிழ் உரைநடை வளர உதவி செய்தவர்களே. இவருள் சிலர் பல பெருநூல்களையும் யாத்துள்ளமை அறிவோம். இவர்களுள் ஒரு சிலரைப் பற்றி நாளை தெளிவாகக் காணலாம். இவற்றில் ஒரிரு சான்று காட்டி இன்று அமையலாம். மொழிபெயர்ப்பால் உரைநடை வளர்த்தமைக்கும் இது ஒரு சான்றாகும். கதைகள் வழங்கிய வகைக்கும் அவை சான்று பகரும். சாதுமதி கதை இப்பூதலப் பூவைக்குத் திலகம் போல விளங்கா நின்ற விருதை மாநாடு என்னும் திவ்விய தேசத்தை மனுநீதி தவறாமலும், செங்கோல் வழுவாமலும் மன்னுயிரைத் தன்னுயிர் போல் பாதுகாத்து அரசு புரிந்து வந்த வேந்தனொருவன் இருந்தான். சூசை வர்மன் என்னும் பெயர் பூண்ட இவ்வரசன் தன் மனைவியுடன் இல்லறம் வழுவாது நடத்தி, பூர்வ சன்மாந்தரத்திற் செய்த கன்ம வசத்தாற் புத்திர பாக்கியம் பெறாது மனவருத்தமுறுங் காலத்துக் கண்மணிகள் போன்ற புத்திரிகள் மூவர் தோன்றினர். (முதல் பகுதி) மனோகரவல்லி கதை தென் தேசமாண்டு வந்த குண வீரனென்னும் வேந்தனுக்கு மனேகரவல்லி என்ற அருமைப் புதல்வி உதித்தனள். அவள் தாலாட்டுப் பருவத்திலேயே தன் அன்னையை இழக்கப் பெற்ற நிமித்தம, அவள் பிதா அவளை நாளொரு மேனியாய் வளர்த்துத் தாயிழந்த தனி நிலை மனத்திற் சிறிதும் புகாவண்ணம் அவள் அவாக் கொண்டு கேட்கும் அனைத்தையும் அட்டியின்றி அவட்குச் சேகரித்துக் கொடுத்து அவள் மனோஷ்டப் படியே நடந்து வந்தான், இத்தகைய தொகை நூல்களால்-சிறப்பாகக் கதை நூல்களால்-சென்ற நூற்றாண்டில் தமிழ் உரைநடை நன்கு வளர்ந்தது என்பது உறுதி. நாடகம் சிறுகதைகள், நாவல்கள் மட்டுமின்றி நாடகங்கள் பல சென்ற நூற்றாண்டில் வெளிவந்தன. அவை பெரும்பாலும் உரைநடை நூல்களே. ஒரு சில பாடல்கள் இடையிடையே விரவப் பெற்றன. சில நாடகங்கள் முழுவதும் பாடலால் ஆனபோதிலும் தொடக்க உரை, அறிமுக உரைகள் அனைத்தும் உரைநடையிலேயே அமைந்துள்ளன. அத்தகைய நாடகங்கள் பலவாக நாட்டில் நடிக்கப்பெற்றன. என்றாலும் ஒரு சிலவே அச்சிடப்பெற்று நூல் வடிவில் வந்துள்ளன. அவற்றுள் ஒன்று ‘தாசில்தார்’ என்னும் நாடகம். இதன் ஆசிரியர் மாவட்ட நடுவராக (District Munsift) இருந்தவர். அரசாங்க ஊழியர்களில் சிலர் நடந்து கொண்ட வகையை நேரில் கண்டு கண்ணீர் வடித்தவர் எனத் தெரிகிறது. இதன் முதல் பதிப்பு 1857லும் இரண்டாம் பதிப்பு 1868லும் வெளி வந்துள்ளன. இந்நூல் அவர் மகனாரால் வெளியிடப் பெற்றுள்ளது. அவரும் ஓய்வுபெற்றிருந்தார் எனக் காண்கின்றாேம். நூலின் முகப்புப் பக்கத்தில் பின்வரும் குறிப்பு உள்ளது. தாசில்தார் நாடகம் சைதாபுரம் காசி விஸ்வநாத முதலியார் இயற்றியது இஃது கோயம்புத்துார் ஜில்லா உடுமலைப் பேட்டை முனிசீபாயிருந்து இப்போது கெவர்ன்மெண்டு உபகாரச் சம்பளம் பெற்றுக் கொண்டிருக்கிற சைதாபுரம் காசிவிஸ்வநாத முதலியார் அவர்களாலியற்றப்பட்டு அவர் புத்திரனாகிய சோமசுந்தர முதலியாரது 'ஸ்டார் ஆப் இந்தியா பிரஸில்' இரண்டாவது முறை அச்சிற் பதிப்பிக்கப்பட்டது. ௲௮௱௰௮ ௵ ஜனவரி மாதம். 103, Armenian Street, Copy right. இந்த முதற் பக்க விளக்கம் அக்கால உரைநடைக்கும் சான்றாக அமைகின்றது. இதன் முன்னுரையில் ஆசிரியர் இந்நாடகம் எழுத நேர்ந்த வரலாற்றைக் கூறுவதும் அறிய வேண்டுவதாகும். முகவுரை: சிலர் ஒரு எருமையானது தண்ணீர் குடிக்கப் போன குட்டையைக் கலக்கிச் சேராக்கித் தன்னுடலெலாஞ் சேற்றைப் பூசிக்கொண்டு நடக்கிற வழியெலாஞ் சேறாக்கி, வழியிற் போகிறவர்கள் வருகிறவர்கள் பேரிலுஞ் சேற்றைப் பூசித்தன்னைக் கட்டுகிற கொட்டத்தில் – கட்டுத்தறி – புல் – இதுகளையெல்லாஞ் சேறாக்கி – கட்டிப் புல் போட வந்த தன் எஜமானனுக்குஞ் சேறு பூசி வைப்பது போலக் கிடைத்த உத்தியோகத்தில் பண ஆசையினால் லஞ்சம் வாங்க ஆரம்பித்துத் தங்களுடைய பேர்களையும் துரைத்தனத்தார்களுடைய பேர்களையும் கெடுப்பதுமல்லாமல் அநேக அக்கிரமங்களுக்கு உட்பட்டு அநேக ஜனங்கள் அநியாயமும் துன்பமும் நஷ்டமும் அடையும்படி செய்து வருகையால் அவைகளைப் பல விவகாரங்களிலும், அவரவர் நடத்தைகளிலுமறிந்தும் அனுபவமுடைய அநேகராலும் நொந்தவர்களாலும் சொல்லக் கேட்டும் உணர்ந்தவனா யிருக்கிறேன். இந்த நாடகத்தில் பாடல்களுக்கிடையில் உள்ள உரைநடைப் பகுதிகள் சிலவற்றால் உரைநடை பற்றியும் நாட்டு நிலை பற்றியும் அறிகின்றாேம். (1) ௬வது பக்கம், ௫ வது வரியில் சேர வேண்டிய நோட்டு, குடிகளுடைய சவுக்கியத்துக்காகக் குடிகிணறுகளை மராமத்துச் செய்யச் சர்க்காரில் ௫௰–௬௰ ரூபாய் கொடுத்த போதிலும் வீட்டுக்கொரு ஒட்டன் வெட்டிக்கு வந்து வேலை செய்து போகிறதுண்டு. ௲௮௱௪௰௪ ஆகஸ்டு ௴ ௮௨ ரிவின்யூ போர்ட்டு சர்க்கியுலர் உத்தரவினால் கூலிக்காரரைப் பலவந்தமாகப் பிடித்து வேலைவாங்கிவரும் வாடிக்கையை நிறுத்தக் கட்டளை. ௲௮௱௪௰௨ ௵ மே ௴ ௯௨ உத்தரவினல் தண்டு சரபராவுக்கு வண்டிக்காரரைத் தொந்தரவுபடுத்தக் கூடாது. வாடகை சரியாயும் தாமசமில்லாமலும் பட்டவாட செய்யக் கட்டளை. (2) ௮-வது பக்கம், ௰௪-வது வரியில் சேரவேண்டிய நோட்டு, ௲௮௱௫௰௬ ௵ மே ௴ ௪௨ ரிவினியு போர்ட்டு சர்க்கியுலர் உத்தரவினால் கல்வியும் நன்னடத்தையுமுள்ளோரைப் பார்த்துத் தாசீல் உத்தியோகத்துக்கு நியமித்து அலுவல்களை நிதானமா யோசித்து நடத்தும்படிச் செய்யக் கட்டளை. (3) ௰–வது பக்கம், ௨௭–வது வரியில் சேர வேண்டிய நோட்டு. ரிவின்யு டிபார்ட்டுமெண்டில் பெரும்பாலும் தேசஸ்த பிராமணாள் இருக்கிறார்களென்பதைக் காட்டத் கூறியது. ௲௮௱௫௰௫ ௵ மார்ச்சி ௴ ௫௨ ரிவினியு போர்ட்டு உத்தரவினால் கலக்ட்டர் கச்சேரியில் இரண்டு சிரஸ்தாதாரர்களும் தேசஸ்த பிராமணாளாக இருக்கக் கூடாது. பிராமணாளைப் போலவே மற்ற ஜாதி ஜனங்களும் தாசீல்தாரர்களாக நியமிக்க வேணுமென்று கட்டளை. (4) ௰௨–வது பக்கம், ௪–வது வரியில் சேர வேண்டிய நோட்டு. ௲௮௱௫௰ ௵ நவம்பர் ௴ ௰௪௨ உத்தரவினால் முன் எச்சரிக்கை கொடாமல தாலுகா கஜானாவை அப்போதைக் கப்போது கலட்டர்கள் ஜட்தி பார்த்து வரவேண்டுமெனக் கட்டளை. (இதில் வரும் எண்கள் அனைத்தும் தமிழ் எண்களாகவே உள்ளன.) (5) குறிப்பு: தாசில்தார் மிகுந்த கோபத்தோடு ஏமக்காளை உதைக்கச் சொல்லிச்சொன்ன மாத்திரத்தில் யமகிங்கிரர்கள்போல அவரிடத்திலிருக்கும் சேவகரில் – ரங்கன் – ஏமக்காளைக் கன்னத்திலடிக்க, கவனப்பன் – அடிவயிற்றில் காலாலுதைக்க, ஏமக்காள்–பேச்சற்று மூச்சித்துத் தரையில் விழுந்தபோது சேவகர் சொல்லுகிற விதங் காண்க. — அடுத்தது பாட்டு (தாளராகத்துடன்) இதுபோன்ற நாடகங்கள் சென்ற நூற்றாண்டில் வெளி வந்துள்ளன. அண்மையில் மறைந்த பம்மல் சம்பந்த முதலியாரது நாடகங்களும் சென்ற நூற்றாண்டிலேயே நாட்டில் உலவத் தொடங்கிய நிலையையும் அறிகிறாம். அவர்தம் லீலாவதி சுலோசனா நாடகம் 1895இல் அச்சிடப் பெற்றதாகும். அதில் ஆசிரியர் தம் முன்னுரையில், தென்னாட்டிற்குரிய தமிழ் இலக்கியமானது இயல் இசை நாடகமென நமது முன்னேரால் மூவகையாகப் பிரிக்கப்பட்டிருந்த போதிலும் தற்காலத்தில் யாது காரணம் பற்றியோ நாடகத் தமிழ் அதிக வழக்கத்தில் இல்லாமை கண்டு சிறியேன் எனது சிற்றறிவைக் கொண்டு ‘லீலாவதி-சுலோசனா அல்லது இரண்டு சகோதரிகள்’ என்னும் ஓர் நவீன நாடகத்தை இயற்றினேன். தற்காலத்திய நிலைமைக்குத் தக்கதாயிருக்கும் வண்ணம் ஆங்கிலேய பாஷையிலுள்ள நாடகங்களின் தன்மை வாய்ந்ததாயும் நம்மவர் எல்லோரும் வாசித்தறியும்படி எளிய நடையாக வசனத்திலும் இந்நாடகம் எழுதப்பட்டிருக்கிறது. என்று கூறுகின்றார். இவர் நடை மிக எளிதாக எல்லோரும் அறிந்து கொள்ளக்கூடியது. இதுபற்றி ஒன்றும் காட்டத் தேவையில்லை. தமிழில் பாடநூல் எழுதப் பரிசு பம்மல் சம்பந்த முதலியாரின் தந்தையாராகிய விஜயரங்க முதலியாரும் தமிழ் உரை வளர்ச்சிக்கு உதவினார் என்பதையும் இங்கே குறிப்பிடல் பொருத்தமானதாகும். ‘அமெரிக்கா கண்டத்தைக் கண்டுபிடித்த வரலாறு’ பற்றிய நூல் ஒன்று விஜயரங்க முதலியாரால் 1852இல் எழுதி வெளியிடப் பெற்றுள்ளது. அவர்தம் முன்னுரையில் தம் ஆசிரியர் திருத்தணிகை விசாகப் பெருமாளையர் எனக் குறிப்பிடுகிறார். இந்நூலும் அவரால் பரிசோதிக்கப்பட்டது எனக் குறிக்கின்றார். அவர் தமது முகவுரையில், இந்நூல் இராபர்ட்சன் என்பவரால் இங்கிலீஷில் எழுதப்பட்ட அமெரிக்கக் கண்டத்தின் சரிதத்திலிருந்து எடுத்தெழுதப்பட்டது. இஃது சென்னப் பட்டணம் யூனிவர்சிடி என்னும் சாஸ்திரக் கல்விச் சாலையில் இங்கிலீஷ் முதலிய பாஷையைக் கற்கும் மாணாக்கரில், இங்கிலீஷ் பாஷையிலிருந்து யாதொருபயோகமான நூலைத் தமிழ் முதலிய பாஷைகளில் நன்றாக எழுதுவோருக்கும் அளிக்கப்படும்படி கா. பச்சையப்ப முதலியார் அவர்கள் தருமத்தை விசாரணை செய்யுஞ் சபையாரால் மேற்படி சாஸ்திரக் கல்விச்சாலை அக்கிரா சனாதிபதி அத்தியக்ஷர் களிடத்தில் வைக்கப்பட்டிருக்கும் பொருள் தொகையில் விலைபெற்ற புஸ்தகங்களைப் பெறும்படி இந்த வருஷாரம்பத்தில் என்னால் எழுதப்பட்டது: (1852) என்று விளக்கந்தருக்கின்றார். எனவே அக்காலத்திலேயே பாடநூல்களைத் தமிழாக்குவோருக்குப் பரிசளிக்கப் பச்சையப்பர் அறநிலையத்தார் இப்பல்கலைக் கழகத்தாரிடம் ஒரு தொகையைத் தந்துள்ளார்கள் எனக் காண்கிறோம். அது பற்றி ஆய்ந்து அறிதல் தேவையான ஒன்று. சம்பந்த முதலியார் நாடகங்களுடன் வைத்து எண்ணத் தக்க வகையில் பல நாடகங்கள் சென்ற நூற்றாண்டின் இறுதியில் தோன்றின. அவற்றுள் பிரதாப சந்திர விலாசம் என்பது சமூக சம்பந்தமான ஒன்று. ப. வ. இராமசாமி ராஜூ, பி. ஏ., பாரிஸ்டர்-அட்-லா என்பவர் எழுதிய நாடகம் இது. இது எழுதப்பெற்ற காலம் திட்டமாக அறிய முடியாவிட்டாலும் அவர் மறைவு 17—8—1897 என அறிவதால் அதற்கு முன்பே இது எழுதப்பட்டது என்பது துணிபு. இத்தகைய நாடகங்களன்றி வள்ளியம்மை நாடகம், இடம்பாச்சாரி விலாசம், மதனசுந்தர பிரதாப சந்தான விலாசம் முதலிய சுமார் 35 நாடகங்கள் நாட்டில் வழக்கத்தில் இருந்தன. இவை அனைத்தும் சென்ற நூற்றாண்டில் தமிழ் உரைநடை வளர்ச்சிக்கு உதவின என்பது கண் கூடு. இத்தகைய நாடகங்கள், நாவல், சிறுகதைகள் தவிர்த்துச் ‘சரித்திரங்கள்’ எனப்பட்டனவும் சில அச்சிலும் ஏட்டிலும் சென்ற நூற்றாண்டில் உலவி வந்துள்ளன. தேரூர்ந்த சோழன் சரித்திரம், சிவாஜி சரித்திரம், நாசிகேது சரித்திரம் (1880), மதுரைச் சங்கத்தார் சரித்திரம், நாலு மந்திரி சரித்திரம் (1839), டில்லி ராஜாக்கள் சரித்திரம் முதலிய வரலாறு கலந்த கதைகள் உரைநடையில் இடம்பெற்று நாட்டில் வாழ்ந்து வந்தன. அவை இன்றைய சரித்திர நாவல்கள் போன்றனபோலும். இவ்வாறு, பொதுமக்கள் எளிதில் உணர்ந்து அறிந்து கொள்ளும் வகையில் பல சிறுகதைகளும் நாவல்களும் நாடகங்களும் சென்ற நூற்றாண்டில் தோன்றி மக்கள் அறிவை வளர்த்ததோடு தமிழ் உரை நடை தழைக்கவும் சாதனமாக இருந்தன. பொதுமக்களின் கடிதப்போக்கு வரவு வளர்ந்த காரணத்தால் அத்துறையின் வழியும் உரைநடை வளர்ந்தது என்பதை நாளை காணலாம். இத்துறைகளில் கடந்த பல நூற்றண்டுகளைக்காட்டிலும் சென்ற நூற்றாண்டில் தமிழ் உரைநடை அதிக வளர்ச்சி அடைந்தது எனலாம். அரசாங்க வெளியீடுகள் இனி, அரசாங்கத்தார் தமிழ் உரைநடை வளர்த்த வகையினைக் காண்போம். அரசாங்க விளம்பரங்கள், உத்தரவுகள், பத்திரங்கள், சட்டங்கள், கிராமக் கணக்குகள், வெளியீடுகள் முதலிய பல சென்ற நூற்றாண்டில்–தமிழில்–உரைநடையில் வெளிவந்துள்ளன. அவற்றுள் பல வடசொற்கள் மட்டுமன்றி அரபிய, உருது, பர்சியச் சொற்களும் இடம் பெற்றுள்ளன. முகலாய ஆட்சியை ஒட்டி அமைந்த காலமாதலால் அந்த வாடையினை அங்கே காணமுடிகின்றது. அத்தகைய சொற்களுள் சிலவற்றைப் பின் தந்துள்ளேன். அரசாங்க வெளியீடுகளை ஒன்றன்பின் ஒன்றாகக் காணலாம். அவை பொதுவாகவும் சிறப்பான ஒன்றைப் பற்றியனவுமாக வுள்ளன; விளம்பரம், ‘டெண்டர்’, நலத்துறை, சட்டம், மீன்பண்ணை, காவல்துறை வணிகத்துறை, சாலைத்துறை, ஊராட்சி, நாட்டாட்சி . நகராட்சி முதலிய பல துறைகளைப் பற்றியனவாக உள்ளன. பொதுவாகச் சென்ற நூற்றாண்டில் எல்லாத்துறைகளிலும் அரசாங்கத்தார் ஆங்கிலத்தில் மட்டுமன்றித் தமிழிலேயும் எல்லா நடவடிக்கைகளையும் மேற்கொண்டனர் என்பது தெளிவு. (1) சட்டநூல் முன்னுரை: 1882 ஆம் ௵த்திய 8வது ஆக்டினால் திருத்துபாடான இந்திய பீனல் கோடானது 1883ம் ௵ ஐனவரி ௴ 12௳ முதல் அமுலுக்குக் கொண்டு வரப்பட்டது. அப்போதைக்கப்போது ௸ ஆக்டை திருத்துவதற்குண்டான 1870ம் ௵த்தில் 27வது ஆக்ட் 1872ம் ௵த்தில் 19வது ஆக்ட் 1882ம் ௵த்திய 8வது ஆக்ட்டுகளும் இந்தப் பதிப்பில்...... (2) 1835 ௵த்து பதினேழாவது ஆக்டு என்னும் சட்டம் (தமிழில்) ⁠1835 ௵ ஆகஷ்டு ௴ 17ம் ௳ ஆலோசனை சபையால்-ஈந்தியாவின் ஆனரபில் கவர்னர் ஜெனரலவர்களாலே விதிக்கப்பட்டது. ⁠௲௮௱௨௰௫ம்௵ செப்டம்பர் ௴ ௧௨ முதற் கொண்டு கம்பெனியாருடைய தேசங்களுக்குள்ளேயிருக்கப்பட்ட தங்கச்சாலைகளில் அடியிற் சொல்லியிருக்கிற வெள்ளி நாணயங்கள் அச்சடிக்கப்படுமென்று விதிக்கப்பட்டது—ருபாயானது – கம்பெனியாருடை ரூபாயென்று சொல்லப்படும் அரை ரூபாய்–கால் ரூபாய்–இரட்டை ரூபாய்–சொன்ன ரூபாய் ௱௮௰ கிரெயின்ஸ் திராய் நிறையுள்ளதுமாய் அடியிற் சொல்லியிருக்கிறபடி மாற்றுள்ளதுமாயிருக்க வேண்டியது. ௱௯௰௫ கிரெயின்ஸ்கள் — சொக்கவெள்ளி ௰௫ கிரெயின்ஸ்கள் — செம்பு முதலான கலப்படம் மற்ற நாணயங்கள் அததற்குத் தகுந்த நிறையும் அத்தினுடைய மாற்றையுங் கொண்டிருக்க வேண்டியது. J. C. Mooris (3) கமிசேரியாட்டு விளம்பரம் மதிறாசு ௲௮௱௫௨ ௵ அக்டோபர் ௴ ௨௰௮ ௳. இதுனாலே பிரசித்தப் படுத்துகிற தென்னமென்றால் செனவரி மாதம் முதல் தேதி முதல் வருகிற வருஷத்துக்கு தேவையான முதல் தறம் நாட்டரிசியும்-இறண்டாந்தரம் தெற்கித்தரிசியும்-வெள்ளைச் சர்க்கரையும்-உப்பும்-சற்பறா பண்ணுவதற்காக குத்தகை ௲௮௱௫௰௨ ௵ நவம்பர் மாதம் ௰௫௨ திங்கள் கிழமை பகல் பன்னிரண்டு மணிக்கு யிந்த ஆபீசில் பிறசித்தமான யேலம் போட்டு யேலத்தில் இத்தகைய குறைந்த விலையாக கேழ்க்குறவருக்கு கமிசேரி செனறல் துரையவர்கள் ஒத்துக்கொண்டதின் பேரில் குத்தகை கொடுக்கப்படும். பிரதிதினம் தேவையானது யிவ்வள வென்று குத்தகைகாரருக்கு தெரிவெத்ததின் பேரில்-பிரசை டென்சியிலும் - பறங்கிமலையிலும் - பல்லாவரத்திலும்-பூந்தமல்லியிலுமிருக்கிற யீறோபியான் றா ணுக்களுக்கும்-ஆசுபத்திறியன் முதலிய யிடங்களுக்கும் குத்தகைகாரன் மேல் கண்ட தினுசுகள் சற்பறா பண்ணவேண்டியது. மாதாந்தரம்-தேவையான சறாசறி மொத்தம் யிதினடியில் வவறித்திக்குறபடி.  முதல் தறம் னாட்டசி மரக்கால் இரண்டாம் தரம் தெற்கத்தரிசி மரக்கால் வெள்ளை சர்கரை றாத்தல் உப்பு றாத்தல் போற்ட்டு செயிண்டு சாற்ச்சில் ... ௨௱௮௰௫ 0 ௨௲௪௱ ௫௪௰௨-க்கு பறங்கிமலையில் ... ௨௱௭ 0 ௨௲௮௰௯ ௱௩-க்கு பூந்தமல்லியில் ... ௫௱௫௰௭ 0 ௫௱௯௰ ௭௰௮-க்கு பல்லாவரத்தில் ... ௩௱௧ 0 ௱௮௰௧ ௰௫-க்கு கிண்டி செயிலில் ... 0 ௩௱௩௰ 0 0 அர் மெஜ்ஷ்டிசு செயிலில் ... 0௱ 0 0 0 சஷ்சைசு (Justice) செயிலில் ... ௱ 0 0 0 அவுசாப் கறக்‌ஷனில் ... ௨௱௭௫ 0 0 0 அம்மைகுத்துகிற ஆஸ்பத்திறியில் ... ௱ 0 0 0 அவுசாப் பாண்டஸ்டிரியில் ... ௯௰ 0 0 0 கண்ணோவு ஆஸ்பத்திரியில் ... ௭௰ 0 0 0 சனல் ஆஸ்பத்திரியில் ... ௰௨ 0 0 0 லிபற் (Leper) ஆஸ்பத்திறியில் ... ௮௰௨ 0 0 0 திருவிளக்கண்ணி ஆசுபத்திரியில் ... 0 ௫௰௭ 0 0 பயித்திக்காற ஆசுபத்திறியில் ௪௰௭ 0 0 0 0 கமிசேரி சென்றல் ஆபீசு ஆசுபட்டால் யிஷ்டொரியில் ... 0 0 ௲௨௱௫௰ 0 கப்பலின் பேரில் போகிற றாணாக்களுக்காகறோவிலிருக்கும் கனம் பொருந்திய கும்பினியாருடைய கிறெனேறியில் அந்தந்த சாமான் தேவையான மொத்தம் தன்னுடைய குத்தகையை செம்மையாக நிறைவேத்துவதற்காக குத்தகைதாரன் ஆயிறம் றூபாயி கும்பனி பத்திறமாயாவது பாங்கு ஷேரறா யாவது அல்லது மெத்த யோக்கியமான சாமீனா வது இந்த ஆபீசில் டேவணி வைக்கவேண்டியது. குத்தகையை யேலத்தில் கேழ்க்குறதுக்கு முன்னுதாக யிறனூறு றூபாயி டேவிணி வைக்க வேண்டியது. யேலத்தில் குத்தகையை யெடுக்குறவர் குத்தகையை யெடுத்துக்கொள்ள தவிர்ந்து போனால் தன்னுடைய யிறனூறு றூபாயி டேவிணியையும் போக்கடித்துக் கொள்ளுவர்-மைத்தவர்களுடைய டேவிணிகள் யேலம் முகிந்த பின்பு திருப்பி விடப்படும். கமிசேரி செனரல்துரையுடைய உத்தரவுபடிக்கு C. J. Elphinstone A. C. General (4)கல்வி பற்றி இதினாலே சகலமான ஜனங்களுக்கும் தெரியப்படுத்துகிற தென்னவென்றால் வருகிற ஜனவரி மாதம் முதல் தேதி முதல் ஹைஸ்கூலில் படிக்கும் வித்தியார்த்திகளின் சம்பளம் மாதம் ஒன்றுக்கு இரண்டு ரூபாயாகக் குறைக்கப்படும்- மேலும் ஒரே குடும்பத்தில் ஒருவனுக்கு அதிகமாகப் படிக்கும் பக்ஷத்தில் அப்படிக்கு அதிகமாக வரும் வித்தியார்த்திகளிடத்தில் ௴ ௧-க்கு ஒரு ரூபாய் சம்பளம் வாங்கிக் கொள்ளப்படும். வருகிற வருஷம் பிறந்த மேல் கூடியது வரையில் ஆரம்ப சிக்ஷையின் பொருட்டு ஹையிஸ்கூலைச் சார்ந்ததாய் பிரைமேரீஸ்கூல் என்னும் ஒரு கல்விச்சாலை யேற்படுத்தப்படும். அது சிலகால பரியந்தம் ஹைஸ்கூ லிப்போதிருக்கும் இடத்திலேயே வைக்கப்படும். மேற்கண்ட பிரைமேரி ஸ்கூல் என்னும் கல்விச்சாலையில் கற்குஞ் சிறுவனிடத்தில் மாதம் ஒன்றுக்கு ஒரு ரூபாய் வீதம் சம்பளம் வாங்கிக் கொள்ளப்படும் . பாலர்கள் படிக்கும் புத்தகங்களை வருகிற ஜனவரி மாதம் முதல் அவாளே சொந்தமாய் வாங்கிக்கொள்ள வேண்டியது. யூனிவர்ஸிடி போர்டார் விசாரணையின் கீழிருக்கிற கல்விச் சாலைகளின் ஆறு மாசத்திற்கொருதரங் கொடுக்கும் விடுமுறை திநங்களுக்கடுத்த ஒரு ஒரு பக்ஷத்திற்குள்ளாக மாத்திரமே வித்தியார்த்திகளை அங்கீகரிக்கும்படியாய் அந்த சபையாருக்கு எண்ணமுண்டாயிருக்கிறது. அதைக் குறித்தினிமேல் தெரியபடுத்துப்வார்கள்-ஆனாலிப்போது தெரிவிக்கிற தென்னவெனில் வருகிற ஆறு மாதத்தில் ஹையிஸ்கூலுக்காவது பிரைமேரி ஸ்கூலுக்காவது புத்திரர்களேயாவது பந்துக்களையாவது அனுப்ப விரும்புகிறவர்களெல்லாம் ஹைஸ்கூல் எட்மேஸ்டருக்கு வருகிற மீ ௰௮௨ யிலாவது அதற்கு முன்னாவது தெரியப்படுத்த வேண்டியது. சென்னப் பட்டன யூனிவர்சிட்டி கவர்னர்கள் உத்திரவுபடிக்கு சென்னப்பட்டணம் யூனிவர்சிட்டி ௲௮௫௨ ௵ நவம்பர் ௴ ௰௫௨ எ. ஜே. ஆர்பத்துநட்டு செக்கீரிடேரி (5) விளம்பரப் பத்திரிகை செனங்களில் யேழைகளாயிருக்கப்பட்டவர்கள் யேதாவது வியாதிகளால் துன்பப்படும்போது அவர்களை செனல் ஆசுபத்திரியில் அங்கீகரிக்கிற விஷயத்தில் நானாவித அதிகார ஸ்தானங்களிலே யிருந்து யெந்த வகையாயாவது ஒரு சீட்டுப் பெற்றுக் கொண்டே போக வேணுமென்று பொதுப்பட ஒரு பெசகான யெண்ணங் கொண் டிருப்பதாக காணப்படுகிற படியினாலே யிதினால் அறிவிக்கிறதென்னவென்றால் இரோப்பு தேசத்தாராகிலும் பறங்கிக்காராகிலும் அல்லது இந்த தேசத்தாராகிலும் யாராவது ஆதிரவத்து வயித்தியங் கோரப்பட்டவர்கள் ஆசுபத்திரியை சார்ந்த யெந்த டாக்டர் துரையவர்களிடத்துக்காவது தாங்களே போய் ஆஜராகுவதே போதும் மைத்த யாதொரு சீட்டு முதலானதும் தேவையில்லை அப்படி (வியாதியிலிருந்து யேழை செனங்கள் யெந்த வியாதிக்காவது வயித்தியங் கோறினாலும் றண வயித்தியங் கோறினாலும் யெந்த நேரத்திலும் அவாளவாள் சொல்லிக் கொண்ட உடனே ஒப்புக்கொண்டு உதவி செய்யப்படும். உத்தரவின் படி மிடைகால் போற்டு ஆபீஸ்[7] (ஒப்பம்) அலக்ஜாண்டர் லாசுமெர் மிடிகல் போற்டு செகிரிடேரி A true translation:—N. Somasoondram, Translator (6)‘டெண்டர் விளம்பரம்’ 8—1—1852 இதனால் அறிவிக்கிற தென்னவென்றால், பிளாக் டவுனில் மீதியாய் நிற்கும் தண்ணீர் பழய நாற்றமான கால்வாய் வழியாய்ப் போகாமல் சென்னப் பட்டணங் கோட்டைக்கு மேல்பாரிசத்திலுள்ள பல்சட்டி (Esplanade) வழியாய் கூவம் ஆற்றுக்குப் போகும்படி ௸ செங்பூவிலிருந்து தற்காஸ்துகள் (Tenders)௲௮௱௫௨௵ ஜனவரி ௴ ௨௰௩ ௳ வெள்ளிக்கிழமை வரைக்கும் இந்த ஆபீசில் வாங்கப்படும். எ. எச். வோப் ஆக்டிங் செக்ரெடேரி, மிலிடேரி போர்டாபீசு W. H. Bayley, Tamil Translation of Govt. Gazette, 6–1–1852 {7) பிரசித்தமான ஏலம் இதனால் சகலமானவருக்கும் அறிவிப்பது என்னவெனில் நாளது நவம்பர் ௴ ௨௯௨ சனிக்கிழமை சாயந்திரம் ௪ மணிக்கு கோட்டை கடைகளுக் கெதிரில் போற்டு செயின்ட் ஜார்ஜி காரீசன் சபைகளின் ஒவ்வொரு கடையை ௲௮௱௬௩ ௵ டிசம்பர் ௴ முதற்கொண்டு ௲௮௱௬௩ ௵ பிப்ரவரி ௴ ௨௮௨ வரையிலாகிற மூன்று மாதத்துக்கு அனுபவிக்கும்படியான சுவதத்திரத்தை பிரசித்தியாக ஏலம் போடப்படும். G. Baldock மேஜர், 17. Nov. 1862 போற்டு எஜிட்டர். (8) சென்னப்பட்டணம் ௲௮௱௩௰௫ம் ௵ சூலை ௴ ௨௰௧௨ செனரல் போஸ்டாபீசு ௲௮௱௩௰௪ம் ௵ அக்டோபர் ௴ ௰ ௳ பங்சிச் சிப்பங்களை குறித்துஇந்த ஆபீசிலிருந்து பிரசித்தப் படுத்திய அடியிற்கண்டபிரசித்தப் பத்திரிகையையும்-போஸ்டாபீசு சட்டங்களிலேயிருந்து எடுத் தெழுதினதையும்-எல்லோரும் அறியும்படி மறுபடி பிரசித்தம் பண்ணுகிறதிலே லா பேப்பர்கள் முலதானதுகளை அனுப்புகிறவர்களுக்குத் தக்கபடி பண்ணியிருக்கிற ஏற்பாட்டை மீறி அபராதத்தைச் சுலுவாக்கிக் கொள்ளுகிற நிமித்தம் நடந்து வருகின்ற விதிகள் தங்களுக்குத் தெரியாதென்று சொல்லுகிற எவ்வித போக்கையும்–அங்கீகரிக்கிறதில்லை யென்கிறது கவர்மெண்டாருடைய தீர்மானமாயிருக்கிற தென்று இதனாலே தெரிவித்திருக்கிறது. நதானிலே வெப் போஸ்டு மேஸ்டர் செனரல். (9) முத்துக்குளியல் பற்றி திருநெல்வேலிச் சீமையின் கலைக்கிட்டuqகிய மேஸ்தர் ருபர்ட்டு யீடன் துரையவர்கள் இதுனாலே சகலமான பேர்களுக்குத் தெரியும்படி பிரசித்தம் பண்ணுகிறதென்னவென்றால் திருநெல்வேலி சீமையைச் சேர்ந்த கடல் துரைமுகத்தில் வருகிற அக்டோபர் ௴ ௰௫௨ முதல் இங்கு குளிக்கிறதற்காக ஒரு வருஷம் ரெண்டு வருஷம் அல்லது மூன்று வருஷம் குத்தகைக்கு நாளது ௲௮௱௩௫ ௵ அக்டோபர் ௴ ௫௳ வரைக்கு நம்முடைய அசூர் கச்சேரியில் தற்காஸ்து குடுத்தால் வாங்கித் கொள்ளப்படும். (17–8–1885). R. Eden. Collector இவ்வாறாக அரசாங்க ஆணை முதலியனவன்றி, தனிட்பட்டவர்கள் நிலம், வீடு முதலியன வாங்கவும் விற்கவும் பதிவு செய்ய ஆவணக்களரியில் எழுதிய பத்திரங்களுள் பல தமிழ் உரைநடையிலேயே இருக்கின்றன. (10) அளம் கணக்கு:—(பல எழுத்துக்களுக்குப் புள்ளியில்லை) சென்னப்பட்டணம் கலெக்டராகிய ம-௱-௱ ஏ ரோபர்ட்சன் துரையவர்கள் சமுகத்துக்கு எண்ணூர் அளம் கணக்கு முத்தப்பிள்ளை எழுதிக் கொடுத்த அத்தாட்சி. என்னவென்றால் எண்ணூர் அளங்குடியாகிய தோணி சின்னவெங்கட்டராமன், இருங்குன்றம் கிருஷ்ணப்ப நா. கையில் மதத்துவாங்கிக் கொண்டதாய், தன் பேரிலிருக்கிற அளம்-கதெ-உம் அவன் பேராலும் சர்க்கார் கணக்கில் தாக்கல் செய்து கொடுக்க வேணுமென்று ஆசூரில் அர்ஜி கொடுக்க அந்த அரிஜிப் படிக்குச் செய்து கொடுக்கக் கூடா தென்று, முன்னே அக்ஷேபித்திருந்தவர்களாகிய, மேற்படி சின்ன வெங்கட்ட ராமனுடைய தகப்பன் தோணிமல்லா ரெட்டியும் மேற்படி வெங்கட்டராமன் பெண் சாதியாகிய காமாக்ஷியம்மாளும், இப்போது சம்மதிப்பட்டு, மேற்படி கிருஷ்ணப்ப நா. பேரையும் சர்க்கார் கணக்கில் தாக்கல் செய்துகொள்ளலாமென்று மறுபடியும் உஜூரில் அர்ஜ் கொடுத்துக் கேட்டுக் கொள்ளுகிறபடியாலும் ௸ அளத்துக்காக வேறே ஆஷேபணை ஒன்றுமில்லாத படியாலும் ௸ கிருஷ்ணப்ப நா. பேரையும் சர்க்கார் கணக்கில் தாக்கல் செய்துகொள்ளுகிற தினாலே யாதொரு வித்தியாசமு மில்லை. இந்தப்படி நான் சம்மதித்து அத்தாட்சி அளத்துக் கணக்கு எண்ணூர் ௲௮௩௭ ௵ டிசம்பர் ௴ ௰௭ ௳ (17—12—1837) முத்த பி. இதற்குத் தந்த அரசாங்க உத்தரவினையும் உடன் காணல் நன்று:- இஜதாசார் முத்துசாமி பிள்ளை அளத்து அதிகாரி கொட்டார் எண்ணூர். தரிவில்லா எண்ணூர் அளங்குடி தோணி சின்ன வெங்கட்டராமன் பேராலிருக்கிற-க தெ-உம், இருங்குன்றம் கிருஷ்ணப்ப நா. பேராலும், கூட்டாய் சர்க்கார் கணக்கில் தாக்கல் செய்வதற்கு, யாதொரு ஆக்ஷேபணையுமில்லை யென்று நீர் ௸ ௴ ௰௮௨ உம்முடைய அாஜ் ரிப்போர்டு செய்திருக்கிற படிக்கு ௸ சின்ன வெங்கட்டராமன் பேரால் சர்க்கார் கணக்கில் தாக்கலாயிருக்கிற-கதெ-அது இருங் குன்றம் கிருஷ்ணப்ப நா. பேரும் ௸ தேதியில் அர்ஜ் ரிஜிஷ்டர் புஸ்தகத்தில் தக்கல் செய்திருக்கிறோம் ஆகையார் கொட்டார் மஜ்கூர் அளம் ஆசாமி வாரி புஸ்தகத்திலும், கணக்குப்பிள்ளை கணக்கிலும், அந்தப்படிக்கு தாக்கல் செய்வித்து, அவர்களைக் கொண்டு வாரக்கம் சாகுபடி முதலான காரியமும் ஜாக்கிரதையாய் நடப்பித்துக் கொண்டு வரவும். ௲௮௱௩௭ ௵ டிசம்பர் ௴ ௰௯௳ முகாம், சென்னப்பட்டனம் முகாபிலா களாத்தி பி. ஹெட் ஜவாப் நவீஸ் ஏ. ரோபர்ட் சன். கலெக்டர் சில வழக்குச் சொற்கள் அக்காலத்தில்-சென்ற நூற்றண்டில்-வழங்கிய சில சொற்களுக்குரிய பொருள்களை அறிதலும் நலமாகும். அவற்றுள் ஒரு சிலவற்றைக் கீழே தருகிறேன். இக்காலத்திலும் பெரும்பாலும் வழக்கத்தில் உள்ள சொற்களை ஈண்டு நான் காட்டவில்லை. இவை பிறமொழிகளிலிருந்து தமிழில்-சிறப்பாக அரசாங்கத்துறையில்-வழங்கிய சொற்களாகும். ‘அறமனை வார்த்தைகள்’ எனவே அவை குறிக்கப் பெற்றுள்ளன. A அபர்-new A அக்கல்-understanding A அக்கீது-statement of a CaSC P அப்தா-a week P அப் ஜூத்-excess, in CICASC A அனாமத்து-a deposit A அர்ஜ்-petition A அசூர்-presence A அலாயிதா-separate A அவால்-custody A அவவல்-first, principal S ஆனாஸ்-grain produce P ஆமத்-income S ஆமிஷம்-estimate T ஆயம்-customs A இசுமுகள்-names M இசாப்-accounts A இத்திலா information A இன்சாப்-justice A இஸ்தியார்-notice A இஸ்தியார்-நாமா-a pro clamation A உக்கும் அல்லது உக்கூம்—permission, an order M ஏகூன்-whole P ஐந்தாசால்-ensuing year A ஜவேஜ்-substitute A கசுபா-a principal village A கபர்-news A கபூல்-concent, approval A கபூலேத்து-a written agreement p கமாமிக-affairs, business A கவுள்-agreement A கஜான்ஜி-a treasurer p கஜ்ஜியா-quarrel A காமுகா-positively A காமுகாரி-work H காம்வார்-village settlement A காய்தா-rule, custom p காவிந்து-master A கிபாய்த்து-profit A குல்-crime A குனா-crime H கோத்து-a field H சம்ஜாயஷ்-Satisfaction p சர்பரா-provision, supply p சன்வாது-yearly A சாதர்-issue A சாயர்-custom, taX G சால்பயிக்கு–in a year A சுபா-a district or province P சுஸ்தி-laziness H டவுல்-estimate A தபா-time A தமசூக்-a note on land A தப்சீல்-detail P தரியாப்த்-investigation, enquiry P தரோபஸ்து-all P தஸ்கக்-signature P தஸ்தக்-summons or orders A தாகத்து-ability power A தாபோ-a dependent A தாலாப்-a tank H துக்கடி-a district G தேரீஜ்—an account showing particulars and the result H தைலி–purse P.S. நவாடா—a boat A பயாம்வார்-a detail of items H. M. பர்காவாணி– examination of money P பர்வானா—an order H பஸ்தி-a village G பைகஸ்த்து-an overseer A மகத்து-aid A மசிலி, மசீல்-a day"s journey A மவுஜெ—a village A மஷாத்து-survey of land A மால்தார்-a proprietor A முகாபிலா-examination, confession A முபாதலா-money in advance P ஜவாப்நவீஸ்—a secretary, a clerk A ஷாமீல்-included A முசகதி—accountant P ரோஜ்கார்-service P ஜிந்தகி-property * * * A-Arabic G-Common usage (கிராமியம்) H-Hindustani M-Mahratta P-Persian S-Sanskrit ழல்-முதலியார் நா-நாயகர் பி-பிள்ளை ௸-மேற்படி ௵-ஆண்டு ௴-திங்கள் ௳-நாள் (தேதி) சமுதாய நூல்கள் இவைமட்டுமன்றி மக்கள் சமுதாய வாழ்வு பற்றிய பல நூல்கள் உரைநடையில் வந்துள்ளன. 1898இல் ‘இந்தியன் கிரிமினல் லாச் சுருக்கம்’ என்ற நூல் தமிழில் வெளியாயிற்று. இந்நூல் கும்பகோணம் என். வைத்தியநாத ஐயரால், போலீசு ஆபீசர்கள், கிராம முனிசிபுகள், பிரை வேட் வக்கீல்கள் முதலிய கிரிமினல் வியவகார ஞானமடைய விரும்புவோர் யாவருக்கும் முக்கிய உபயோகப்படும்படி இயற்றப்பட்டது’ இவ்வாறு 1897இல் எஸ். குமாரசாமி முதலியார் எனபவரால் 'ஜமீந்தாரி என்று வழங்குகின்ற ஸ்திதியைச் சார்ந்த சங்கிரக கிரந்தம்’ என்ற நூல் ஜமீந்தார் முறை பற்றி எழுதப் பெற்றுப் பதிவு செய்யப் பெற்றது. இவை மட்டுமின்றி, 'விதவா விவாகம்’ போன்ற சீர்திருத்தங்கள் பற்றிய நூல்களும் எழுந்தன. அந்நூல்களுக்கு அடிப்படை அக்காலத்து அத்தகைய திருமணங்கள் நடைபெற்றமையே என்பது அந்நூல்களைப் பயில்வார் நன்கு உணர்வார்கள். நாகர்கோயிலைச் சேர்ந்த சேஷையங்கார் தம் மகனுக்கு இத்தகைய மணம் செய்தார் என்றும் அதை ஆதரித்து 1874இல் 'விதவோத்வாக விவேகம்’ என்ற நூல் எழுதப்பட்டதென்றும் அறிகிறோம். அந்நூலை மறுத்து அடுத்த ஆண்டே (1875இல்) ரங்காச் ரங்காச்சாரி என்பார் ‘விதவோத்வாக கண்டனம்’ என்ற நூலை எழுதி அச்செயலைக் கண்டித்திருக்கிறர். கணவனை இழந்த கைம்பெண்ணைச் சுற்றி அழுவதைப் பற்றிய குறிப்பு ஒன்று அமரம்பேடு முத்துசாமி முதலியார் எழுதிய சமூக இயல் பற்றிய ‘அபிமானம் என்பது என்ன?’ என்ற 1886இல் வெளியான நூலில் உள்ளது. இதுபோன்றே வாழ்வியலைப் பற்றிய பல குறிப்புகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. அழுகை:- பெண்கள் மயிரிழவு, மாரிழவு, காலடவு, கட்டியழல் என்னும் ஆசாரங்களை நடத்துகையில், கட்டியழும் போது வாசல் பெரிதாயிருக்குமாயின், திட்டுதிட்டாகப் பத்துப் பதினைந்து பேர் வட்டமாக நின்று, கைகோத்து அசைந்தாடி ஒருவித ராகத்தோடு பாடிக் கொண்டு, கொஞ்ச காலங் கழிந்த பிறகு, வேறு நடைச் சந்தத்தோடு பாடிக்கொண்டு, காலடவு போட்டு மார்பிலடித்துக் கொண்டு சுற்றி வருகையில் புதிதாய்க் கற்றுக் கொள்ளுகிறவளாவது விதரணை இல்லாதவளாகவாவது இருந்து, அடவு சரியாய்ப் போடாதவளைக் கையைப்பிடித்திழுத்து வெளியில் விட்டு விடுகிறர்கள். இழவுக்கு அழப்போகையில் தலைமயிரை சிக்கலில்லாமல் உடைத்துக் கோதிக்கொண்டு போய், எதிரெதிர் முகமாக நின்று, எதுகை மோனை தவறாமல் அதற்கிசைந்த வேறு ராகத்துடனே பாட்டுக்கள் பாடிக்கொண்டு தலைமயிரை இரண்டு கைகளாலும் விரல்களைக் கொண்டு சீவுகிறார்கள். கணவனைப் பறிகொடுத்துத் தவிக்கின்றவளைக் கீழே தள்ளி மற்றவர்கள் அவளைச் சூழ்ந்து ‘லபலப'வென்று வாயிலடித்துக் கொள்ளுகிறர்கள். மார்மேலிருக்கும் துணியை எடுத்து இடுப்பில் வரைந்து கட்டிக் கொண்டும் மார்பிலடித்துக் கொள்ளுகிறார்கள். இவ்வாறே பெண்கள் மலடாக உள்ளனரா, ஆண்கள் மலடாக உள்ளனரா என்பதை அறியச் ‘சிற்றின்பச் சிரோன்மணி’ என்ற வசன நூலில் வழிவகுத்துள்ளனர். இந்நூல் ‘வ. உ. சி.’ அவர்களால் அவர்தம் தொடக்க காலத்தில் எழுதப்பட்டதாம். இந்த முறை இன்றுள்ள பல டாக்டர்கள் அறியாத ஒன்றாகும். சிற்றின்பச் சிரோன்மணி நூல்:-ஆண் பெண்ணிருவரில் மலடர் இன்னார் என அறியும் தந்திரம் மொச்சை விரையை இரண்டு பாத்திரங்களிற் போட்டு, புருஷனுடைய சிறுநீரை ஒரு பாத்திரத்திலும் ஸ்திரீயினுடைய சிறுநீரை ஒரு பத்திரத்திலும் தனித்தனி விட்டு வந்து 5 தினத்திற்குப் பிறகு யாருடைய நீர்விட்ட கொட்டை முளைக்கவில்லையோ அவர்களை மலடென்று கண்டு தகுந்த சிகிச்சை செய்ய வேண்டியது. இவ்வாறே சுரைக்கொடிப் பயிரிலும் திருஷ்டாந்தங் காணலாம். ஆனால் ஒரு நீர் விட்டு ஒரு மாதம் கழிந்த பின்னர்தான் மறு நீர் விட்டுப் பார்க்க வேண்டும். வெவ்வேறு கொடிகளானால் ஒரே காலத்தில் பக்ஷீக்கலாம். இதுபோன்ற பலப்பல வகையான கருத்துக்கள் சென்ற நூற்றாண்டில் வெளியான தமிழ் உரைநடை நூல்களின் வழி நமக்கு விளங்குகின்றன. இவை மட்டுமன்றிச் சாட்சிகள் பற்றிய ‘ருஜு சாஸ்திர சங்கிரகம்’, குடும்பத்தில் மக்கள் வாழ வேண்டிய வகை பற்றிய 'இல்லத் தோழன்’ (1845), போலீஸ் நடந்து கொள்ள வேண்டிய முறை பற்றிய 'போலீஸ் நிபுணன்’ (1894) முதலிய பல நூல்கள் ஒவ்வொரு துறைக்கும் எடுத்துக் காட்டாகவும் விளக்கங்களாகவும் அனைவரும் எளிதில் உணர்ந்து கொள்ளும் வகையிலும் எழுதப் பெற்றுள்ளன. ஆசிரியத் தொழிலியற்றுவோருக்கு உதவி செய்யும் வகையில் பல நூல்களும் எழுதப்பெற்றுள்ளன. இவை அனைத்தும் மக்கள் எளிதில் உணர்ந்து கொள்ளும் பொருட்டு உரைநடை நூல்களாகவே அமைந்துள்ளன. பழமொழி, வேடிக்கை, விடுகதைகள் முதலியவற்றைச் சார்ந்த உரைநடை நூல்களும் நாட்டில் சென்ற நூற்றாண்டில் உலவின. காங்கிரஸ் சென்ற நூற்றாண்டிலேயே நாட்டில் தோன்றினமையின் அது பற்றிக் ‘காங்கிரஸ் வினா-விடை’யும் (1890), ஆசியாவின் ஐக்கியமும் (1888) வெளிவந்தன. பாட நூல்கள் இவையன்றி, கல்லூரியிலும் பள்ளியிலும் கற்கும் மாணவர்களுக்கென எண்ணற்ற நூல்கள் சென்ற நூற்றாண்டில் சிறப்பாகப்-பிற்பகுதியில்-வெளிவந்துள்னன. அவை பல நூற்றுக் கணக்கில் இருப்பதால் அவைபற்றி விளக்கம் தேவையில்லை. அவற்றை வெளியிட அரசாங்கத்தார் பல சட்டதிட்டங்களும், வறையறைகளும் செய்திருந்தார்கள் என நம்மால் அவற்றின் முன்னுரைகளிலிருந்து அறியமுடிகின்றது. ‘பால பாடம்’ முதலிய நூல்களை ஆறுமுக நாவலர் முதலிய நல்லறிஞர்கள் எழுதி-அரசாங்கப் பாடத் திட்டத்தில் இல்லையாயினும்-இளம்பிள்ளைகள் உள்ளத்தில் ஒழுக்கம், பண்பாடு, சமய உணர்வு முதலிய நல்லியல்புகள் அரும்புமாறு ஆக்கப்பணி செய்துள்ளனர். அவைபற்றியெல்லாம் விரிப்பிற் பெருகும். (ஒரு சில நாளை காணலாம்) பொது மக்கள் படித்தறியத் தக்கதாக அறிவியல், தாவரம், நிலம், மருந்து, வரலாறு பற்றிய நூல்களும் பல சென்ற நூற்றாண்டில் வெளியாயின. அவற்றுள் பெரும்பாலான ஆங்கில நூல்களின் மொழிபெயர்ப்புகளாகவே அமைகின்றன. அவற்றுள் சில கலப்பு மொழியில் அமைந்துள்ளன எனினும் ஒரு சில நல்ல தமிழில் எழுதப் பெற்றுள்ளதையும் காணமுடிகின்றது. சில பள்ளிகூட நூல்களில் பல விளக்கங்கள் முதலில் ஆங்கிலத்திலும், பிறகு தமிழிலும் எழுதப்பெற்றுள்ளன. சில நூல்களில் பொருளடக்கம் முதலியனவும் ஆங்கிலத்திலேயே . அமைந்துள்ளன. சென்னைப் பல்கலைக் கழகத்தார் சென்ற நூற்றாண்டின் இறுதியில் பள்ளி இறுதித் தேர்வுக்கெனப் (Metriculation Examination) பல நூலகள் வெளியிட்டுள்ளளனர். ஆண்டுதோறும் தமிழ்ப்பாட நூல் ஒன்று பாட்டும்உரையும் கலந்து வெளிவந்தது. உரைநடை எழுதியவர்கள் பெயர் காட்டப்பெறவில்லை. கிடைத்த குறிப்புக்களிலிருந்து, அவை அனைத்தும் ஆங்கிலத்திலிருந்து-பல்வேறு ஆங்கில நூற்பகுதிகளிலிருந்து பொறுக்கி எடுக்கப் பெற்றனவாகி-ஒருவராலேயே மொழிபெயர்க்கப் பெற்று நூலாக்கப் பெற்ற நிலையை அறிய முடிகின்றது. இவ்வாறே பல மொழிபெயர்ப்பு நூல்களும், கட்டுரைகளும் தமிழில் உரைநடை வளர்க்க உதவியுள்ளன. பாடநூல்களைப் பற்றி எண்ணும்போது அத்துறையிலுள்ள பல்வேறு நூல்களும் நம் நினைவுக்கு வருகின்றன. தமிழ்ப்பாட நூல்கள் மட்டுமன்றி, எல்லாப் பாடங்களையுமே தமிழில் சொல்லிக் கொடுத்தார்கள் என்பது அக்காலத்தில் உண்டாயிருந்த பாடத் திட்டங்களின் அமைப்பிலிருந்து உணர்கிறோம். நில நூல், வரலாறு முதலிய பாடங்கள் பற்றிய நூல்கள் ஆங்கில நூல்களின் மொழிபெயர்ப்புகளாகவே அமைந்தன. எனவே மொழி பெயர்ப்பு வகையில் கதைகளும் பாடநூல்களும் அமைந்து உரைநடையை வளர்த்தன. வினவிடை வகையிலும் மக்களுக்கு எளிய வகையில் உயர்ந்த பொருள்களை விளக்கும் சில உரைநடை நூல்கள் சென்ற நூற்றாண்டில் உண்டாயின. அவற்றுள் ஒன்று ‘சாரீர வினவிடை’ என்பது 1866இல் வெளிவந்தது. இந் நூல் சென்னப்பட்டணத்து வைத்திய உத்தியோக வகுப்பைச் சேர்ந்த ம. ஜகந்நாத நாயுடு அவர்களால் இயற்றப்பட்டது. பல உயர்ந்த பொருள்களைப் பற்றி எளிய வகையில் வினாவிடுத்து விடை பெறும் வகையில் இந்நூலும் இதுபோன்ற பிற வி-ைவிடை நூல்களும் பயன் அளித்தமையைக் காண்கின்றாேம். இத்தகைய நூல்களுள் பெரும்பாலானவற்றைத் தமிழாசிரியர்கள் அல்லாத பிற துறைகளில் பணியாற்றியோரே எழுதியிருக்கின்றனர். ஆங்கிலேயர் கல்வி பெறுவதற்காக அமைக்கப்பெற்ற. கல்லூரி ஒன்றினைப்பற்றி முதலில் (The College of Fort St. George) கண்டோம். அதைத் தமிழில் ‘சென்னைக் கல்விச் சங்கம்’ என்ற பெயரிட்டு அழைத்தனர். அது 1812இல் தொடங்கப்பெற்று, 1854 வரை பணிபுரிந்தது. அதன் வழியாகவும் பல நல்ல தமிழ் உரைநடை நூல்கள் நாட்டு மக்களுக்காகவும்-சிறப்பாக ஆங்கில நாட்டிலிருந்து இங்கு வந்து பணி புரிந்தவர்களுக்காகவும் அச்சிடப் பெற்றன எனக் காண முடிகின்றது. பஞ்ச தந்திரக் கதை (1826), கதா மஞ்சரி (1826), மிருதி சந்திரிகை (1826), தமிழ் அரிச்சுவடி (1827) ஆகியவை அவற்றுள் சில. 'சென்னை செந்தமிழ் உரை சங்கம்’ எனவும் ஒரு சங்கம் இருந்து உரைநடையை வளர்த்தமை காண்கிறோம். தன் முயற்சி என்ற நூல் ‘ஸாமியுயல் ஸ்மைல்ஸ்’ என்பார் ஆங்கிலத்தில் எழுதியதன் மொழிபெயர்ப்பு நூலாகத் தமிழில் (1882) வந்துள்ளது. நாடு உண்மையில் நாடாக வேண்டுமானல், தனி மனிதனும் சமுதாயமும் மேற்கொள்ளவேண்டிய பல உண்மைகளும், விளக்கங்களும் இதில் காட்டப்பெறுகின்றன. அப்படியே சி. விருத்துப் பிள்ளை அவர்கள் எழுதிய ‘ஏராண்மை நூல்’ (1885) என்பது நாட்டின் அச்சாணியாகிய உழவு பற்றிக் கூறுவது. இதுவும் ஆங்கில மொழிபெயர்ப்பு நூலேயாகும். இந் நூலின் முன்னுரையில் கிரந்தச் சொற்களைத் தழுவாமல் ஆங்கிலச் சொற்களை அதிகமாக வழங்கியுள்ளமைக்கு, மொழிப்பெயர்ப்பாளர் காரணம் காட்டுகிறர். இப்படியே வானமண்டலத்தை விளக்கச் சோதி சாஸ்திரம் (1848) ஒன்று யாழ்ப்பாணத்தில் வெளியாயிற்று. வைத்திய முறை பற்றியும் (1863), வரலாறு, நில நூல் பற்றியும் (1858) உரை நடை நூல்கள் வெளிவந்தன. இவ்வாறு மனித வாழ்வின் அடிப்படைத் தேவைகள் அனைத்தும் பற்றிய தமிழ் உரை நடை நூல்கள் வெளிவந்த காலம் சென்ற பத்தொன்பதாம் நூற்றாண்டே எனலாம். இன்று அதிகமாக வளர்ந்துவிட்டதாக எண்ணும் நம் காலத்தைக் காட்டிலும் சென்ற நூற்றாண்டில் எல்லாத் துறைகளும் வளம் பெற்றிருந்தன எனக் கூறுவேன். இதழ்கள் இனி, இன்று நாட்டின் முதுகெலும்பாகக் கருதும் பத்திரிகை வளர்ச்சியைப் பற்றிக் கண்டு அமையலாம் என எண்ணுகின்றேன். கடந்த நூற்றண்டில் நூற்றுக்கு மேற்பட்ட இதழ்கள் தோன்றியுள்ளன. அவற்றிற்குப் பல சமயங்களில் அரசாங்கம் அஞ்சல் குறைப்பு முதலிய வசதிகளைச் செய்து தந்துள்ளது. இருந்தும் அவற்றுள் பல சில ஆண்டுகளே இருந்து மறைந்துவிட்டமையைக் காண்கின்றாேம். சில இதழ்கள் மக்களுக்கு நல்ல தொண்டாற்றி வந்தன. பல்வேறு பகுதிகளைத் தன்னகத்துக் கொண்ட பத்திரிகைகள் சில. சமய சம்பந்தமான விளக்கங்களும் மறுப்புகளும் சில பத்திரிகைகள் வழங்கியுள்ளன. யாழ்ப்பாணத்திலிருந்து தோன்றிய உதய தாரகை பற்றிய குறிப்பினைக் கண்டு அமையலாம். உதயதாரகை 1841: Morning Star (gp36b L;#6b 2–6i 6m (5.6LLI) (Published in the 1st and 3rd Thursday of every month at one shilling a Quarter, payable in advance). சஞ்சிகை ௩.௲௮௱௪௧ ௵ மாசி ௴ ௪ திகதி வியாழக்கிழமை. கடைசிப் பக்கத்தில் உள்ள குறிப்பு: Printed and Published at the American Mission Press, Jaffna, by Eastman Strong Minor— Edited by Henry Marly and Seth Payson. பக்க எண்கள் தமிழிலும், ஆங்கிலத்திலும் தொடர் எண்களாக உள்ளன. இவ்விதழில் இந்து தேசசரித்திரம், பிரபஞ்ச நூல் (நில நூல்),காரிகை, விலங்கியல், பஞ்சதந்திரக் கதை, கல்விப் பொருள், புதினச் செய்திகள் முதலியன இடம் பெற்றுள்ளன. பஞ்சதந்திரக் கதையும், புதினச் செய்திகளும் ஆங்கிலத்திலும் எழுதப்பெற்றுள்ளன. சில தனித்த ஆங்கிலக் கட்டுரைகளும் உள்ளன. பத்திரிகை பற்றி அதன் குறிப்பு: உதய தாரகை பத்திரத்தில் கற்கை, சரித்திரம், பொதுவான கல்வி, பயிர்ச்செய்கை, அரசாட்சி மார்க்கம் முதலானவை பற்றியும் பிரதான புதினச் செய்திகளைப் பற்றியும் அச்சடிக்கப்படும். அது தமிழ்ப் பாஷையிலும் இடைக்கிடையே தமிழும், இங்கிலிசும் கூடினதாயும் எட்டுப்புற முள்ளதாக நான்காய் மடித்த தாள் அளவில் ஒவ்வொரு மாதம் முதலாம் மூன்றாம் வியாழக்கிழமைகளில் பிரசித்தம் பண்ணப்படும். இதன் விலை பத்திரம் ஒன்றுக்கு 2 பென்சு அல்லது ௰௬ வெள்ளைச் சல்லி அல்லது மூன்று மாதத்திற்கும் மூன்றைக் கொடுத்திருந்தால் அப்பத்திரங்களின் விலை ஒரு சிலிங்கு. இவ்வாறு அதன் விளக்கம் விரிந்து கொண்டே போகிறது. இது இதழ் உரைநடைக்கு ஒரு சான்றாகும். தமிழ் நாட்டு இதழ்களும் இந்த அமைப்பிலேயே சென்றன. சில சமய வளர்ச்சிக்கும், சில பெண்கள், இளைஞர் பகுதிக்கும், சில தத்துவம் போன்றவைகளுக்கும் சிறப்பாகப் பயன்பட்டன. அவற்றுள் ஒரு சிலவற்றை உடன் தொகுத்துள்ளேன். இன்னும் பல நாட்டில் உலவின என்பது தேற்றம். சென்ற நூற்றாண்டில் வெளிவந்த இதழ்களில் சில: 1. உபாத்தியாயர் (1887) ஆசிரியருக்கு வேண்டிய பல செய்திகள் 2. கிராம வியவஹாரினி (1899) முதற் பகுதியில் இலக்கியச் செய்திகளும் வேடிக்கை விநோதங்களும் இடம்பெற்றுள்ளன. இரண்டாம் பகுதி கிராம நிர்வாகம் பற்றிக் கூறுகிறது. 3. ⁠"⁠" முத்திங்களுக்கொரு முறை (1900) பொதுச் செய்திகளும் கிராம விவகாரம் பற்றிய தனிச் செய்திகளும். 4. கிராமாதிகாரி (திங்கள்) (1900) ‘சென்னை இராஜதானியின் கிராம பரிபாலனம் சீர்படும் பொருட்டுப் பிரசுரிக்கப் படுவது’. 5. கோயமுத்துர் கலாநிதி (திங்கள்) (1890) 6. சித்தாந்த ரத்நாகரம் ஆதிசைவப் பிர பாவம்) (1880) ஆதிசைவ மரபினர் பற்றறிய செய்திகளை வகைப்படுத்தி உரைப்பது. 7. சித்தாந்த ரத்நாகரம் (சித்தாந்த பூஷணம்) (1881) சித்தாந்த பூஷணம் பற்றிப் பல நூல் மேற்கோள்காட்டி விளக்கும் ஆராய்ச்சி. 8. சித்தாந்த ரத்நாகரம் பற்பல மத (உத்தம வாததூப வாதூலம்) (1881) பற்பல மத உண்மைகளும் இணைந்தவை என ஆசிரியர் ஆய்ந்து அளவிட்டுரைக்கிறார். 9. சித்தாந்த ரத்நாகரம் (சமரச ஞான தீபம்) (1881) ‘சைவ சமயமே சமயம்’ எனத் தொடங்கும் தாயுமானவர் பாடல் கருத்தை விளக்கி அமைந்த பிரசங்கக் கட்டுரை. 10. சித்தாந்த ரத்நாகரம் (ஆபாச ஞான நிரோதம்) (1883) 11. சித்தாந்த ரத்நாகரம் (ஆசார்யப் பிரபாவம்) (1884) ஆசாரியனின் பெருமை பற்றிப் பேசுவது. 12. சிவரத்ந மகுடம் (1891) ஞான சதுஷ்டய தர்ப்பணமும், ‘திருக்கண்ணப்பர் பிரபாவமும்’ அமைந்துள்ளன. 13. ⁠"⁠ (1892) 'பிரஹபாதுபதி, ‘பரமதபங்க வினாவிடை’ என்னும் இரண்டும் அடங்கியுள்ளன. 14. சுகாதார போதினி (1891) 15. திராவிட ரஞ்ஜனி (திங்கள்) (1887) “நீதி, பூர்வ சரித்திரம், விநோதக் கதைகள் முதலிய விஷயங்களைக் கொண்டிருக்கிற பத்திரிகை." 16. பகவத்கீதா பாஷ்யார்த்த போதினி (1895) வடமொழி மூலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது. 17. ஞானபோதினி (1897-1905) இலக்கிய, அறிவியல், தத்துவ, சமய இதழ். 18. பரதத்வ ப்ரகாசிகை (1881) வைணவ சித்தாந்தம் குறித்த கட்டுரைகள் உள 19. போலீசு தூதன் (திங்கள் இருமுறை) தமிழ் தெரிந்த போலீசார், கிராம முனிசீப்புகள், பிரைவேட்டு வக்கீல்கள் முதலிய கிரிமினல் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட யாவருக்கும் மிகவும் உபயோகமுள்ளது. 20. மனோரஞ்சித விநோதம் (1886) 21. மாதர் மித்திரி (1889) பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய பல செய்திகள் அமைந்துள்ளன. 22. ஞானப் பிரியன் (1900) இலக்கியம், அறிவியல். 23. மாதாந்த சட்டப் பத்திரிகை பத்திரிகை. திங்கள் (1893) தமிழில் வெளிவந்த சட்டப் பத்திரிகை 24. ஜனவிநோதினி (1870) கதைகளும், பொதுக் கட்டுரைகளும் உள்ளன. 25. ஸ்ரஸ்வதி பீடாதிபதி வசந கிரந்தத்திற்கு மொழிபெயர்ப்பு (1897) சாரதா பீடம் பற்றிய குறிப்புகள் 26. ஷண்முக விஜயம்(1894) 27. சைவ உதய பாது (கிழமை) (1882) 28. மகாவிகட தூதன்⁠" 29. திரிபுரத் தமிழ்ச் செல்வன் (கிழமை) (1880) 30. ஞான நீலலோசனி (கிழமை) (1890) 31. திருச்செங்கோட்டு விவேகாதிலகன் (கிழமை) (1894) 32. லோகேயபகாரி (கிழமை) (1896) 33. பிரபஞ்சமித்திரன் (கிழமை) (1898) 34. கலாதரங்கிணி (கிழமை) (1886-89) 35. நடுத்தர, உயர்தரப்பள்ளி நண்பன் (1879) 36. சுகுணபோதினி (1883) 37. சன்மார்க்க போதினி (1885) 38. சுக சீவனி (1887) பெங்களுர். 39. பிரம வித்யா (1887) 40. ஞானாமிர்தம் (1883) 41. விசயத் துவசம் (1893) 42. தேசாபிமானி (1877) கிறிஸ்தவ இதழ். 43. தேசோபகாரி (திங்கள்) (1860) நாகர்கோயில் 44. தத்துவபோதினி (திங்கள்) (1864) 45. சுகத்திய வர்த்தமானி (திங்கள்) (1870) பசுமலை 46. நற்போதகம் (திங்கள்) (1849) பாளையங்கோட்டை. 47. சத்தியதூதன் (திங்கள்) (1887) 48. ஸ்ரீலோகரஞ்சனி (திங்கள்) (1887) 49. பெண்மதி போதினி (திங்கள்) (1891) 50. விவேகசிந்தாமணி (திங்கள்) (1892) 51. ஞான பானு (திங்கள்) (1894) 52. மாணவர் போதகம் (திங்கள்) (1895) 53. சித்தாந்த தீபிகை (திங்கள்) (1897) 54. தர்மபள்ளி போதம் (திங்கள்) (1850–61) நாகர்கோயில் 55. மாதர் மனேரஞ்சனி (திங்கள்) (1899) 56. விநோத விசித்திர பத்திரிகை (1900) 57. சோம ரவி (முத்திங்களிதழ்) (1895) 58. சிவபக்தி சந்திரிகை (1890–92) திருவையாறு 59. தமிழ்ப் பத்திரிகை (திங்கள்) (1831) கிறித்தவ சமய இதழ். 60. பால தீபிகை (முத்திங்கள்) (1840-52) . சிறுவர் இதழ் 61. சிறுபிள்ளையின் தேசத் தோழன் (1849) சிறுவர் இதழ் 62. பாலியர் நேசம் (1851) யாழ்ப்பாணம் 63. அமிழ்தவசனி (1865) பெண்மணிகளுக்கு. 64. திராவிடரஞ்சனி (திங்கள்) (1887) திருச்சி. 65. லோக ரஞ்சனி (திங்கள்) (1817) வேலூர். 66. கலாவர்த்தினி (திங்கள்) (1866) தமிழ் நாட்டுக் கப்பால் : 1. உதயதாரகை (திங்கள் இருமுறை) (1845-55) யாழ்ப்பாணம். 2. ஞாதீபம் (திங்கள்) (1892) கண்டி:அச்சகம் கொழும்பு 3. இந்துநேசள் (1888) பினாங்கு 4. பினங்கு வர்த்தமானி (1897) பினாங்கு 5. பினங்கு விஜயகேதனன் (1888-89) பினாங்கு 6. உலக நேசன் (1897) பினாங்கு 7. தேஜோபீமானி (1896-97) பேராக் (மலேயா) 8. சிங்கை நேசன் (1887-1890) சிங்கப்பூர் 9. The Indian Antiquity (1872) பம்பாய்-தமிழ்நாடு,மொழி, சமயம், வரலாறு, இலக்கியம் பற்றிய தமிழ் ஆங்கிலக் கட்டுரைகன். 10. Deutsche Morgenlaen-dische ceseleschaft செர்மனி. 11. Oriental Translation fund of Great Britain & Ireland. இலண்டன் 12. Bibiiotheque Nationale-Manuscripts-Tamouls (National Library). பாரிசு 13. Ecole speciale des Langnes.Orientales Viwantes. (1736-1746. 1883 1886, 1889, 1894.) பாரிசு 14. இலங்கை நேசன் (திங்க ளிருமுறை) (1848) கொழும்பு நாளிதழ்: 1. சுதேசமித்திரன் (1880) இன்னும் சில பத்திரிகைகள் பற்றிய குறிப்புகளும் உள்ளன, இவற்றுள் பெரும்பாலன காலமெனும் கடுங் காற்றின் எதிர் நிற்கமாட்டாமல் தலைசர்ய்ந்து விட்டன. ஒரு சில, சில ஆண்டுகள் வெற்றிமுரசு கொட்டி வாழ்ந்தன. இவற்றுள் ஒன்றையும் இன்று காண்பது அரிதாகி விட்டது அல்லவா? இவற்றில் சில ஆண்டு மலர்களும் வெளியிட்டன. 'சுதேசமித்திரன்’ தோன்றிய நாள்தொட்டு (1880) இன்று வரை நம்மிடையே வாழ்ந்து வருகின்றது. தற்போது (1978) நிறுத்தப்பெற்றுள்ளது. இவ்வாறு மக்களொடு தொடர்பு கொண்டுள்ள பல்வேறு துறைகளிலும் அவர் தம் வாழ்வொடு வாழ்வாய் வழக்கொடு வழக்காய்க் கேள்வியொடு கேள்வியாய்ச் சொல்லொடு சொல்லாய் எல்லா நிலைகளிலும், செயல் களிலும், முறைகளிலும் தமிழ் உரை கலந்து அவர்களை வாழவைத்து, தமிழ் வாழ்வை வளமுறச் செய்து, தானும் வளர்ந்து வாழ்ந்து இந்த நூற்றாண்டின் எதிர்காலத்தை நோக்கி 1901 இல் கால் வைத்தது. இதன் வேறு சில பிரிவுதளை நாளை காணலாம். ↑ தமிழில் 192 கையேட்டுப் படிகள் * * * புராண, கட்டுக்கதைகள் 44 உள்நாட்டு (அ) ஊர் வரலாறு 39 கதை, பாட்டு, நாடகம் (சமய அற வாழ்வுபற்றி) 72 தத்துவம் 10 வான சாத்திரம், சோதிடம் 14 மருந்து 10 கலை 3 * * * 192 * * * தமிழில் மட்டுமன்றிப் பிற மொழிகளிலும் அவர் தொகுத்துள்ளார். அவை: தெலுங்கு 156 பழைய கன்னடம் 39 புதுக் கன்னடம் 3 மலையாளம் 6 மராட்டி 12 ஒரியா 23 இந்தி 12 ↑ 1. A catalogue of the Tamil Books in the library of the British Museum. 2. Classified catalogue of the Public Reference Library Published by Registrar of Books, 1894. 3. Tamil Manuscripts in the Tanjore Maharaja Serfoji’s’ Saraswathi Mahal Library-comiled by Loganatha Piai. 4. A Descriptive catalogue of the Tamil Manuscripts of the Government Manuscripts Library by M. Rangacharya, 1912. An Alphabetical Index of Tamil Manuscripts by S. Kuppuswamy Sastry, 1932. ↑ Court of Directors. ↑ 1893 க்கு முள். ↑ Tamil lexicon-vol. II, P. IIII. ↑ A compilation of papers in the Tamil language by Andrew Colerson, 1837, P. 202. ↑ Medical Board Coffice. சொற்பொழி—௩— (16-2-1965) முன்னுரை தமிழ் மொழியில் உரைநடையின் தோற்ற வளர்ச்சி பற்றியும் சென்ற நூற்றாண்டில் அதுவளர இருந்த நாட்டுச் சூழ்நிலை, பிற அமைப்புகள், சாதனங்கள் பற்றியும் முதலில் கண்டோம், அடுத்துப் பொது மக்களிடம் பெரு வழக்காக உள்ளகதை, நாவல், அரசாங்க வெளியீடுகள் முதலியவற்றுள் தமிழ் உரைநடை சென்ற நூற்றாண்டில் வளர்ச்சி பெற்றுள்ளமை அறிந்தோம். இனிச் சமயம், இலக்கியம், இலக்கிய உரைகள், உரை விளக்கங்கள் தத்துவம், இலக்கணம், கடிதம் முதலியவற்றைப் பற்றி ஆய்ந்து அவற்றின் வழியே சென்ற நூற்றாண்டின் உரை நடை வளர்ந்ததைக் காணல் ஏற்புடைத்து எனக் கருதுகின்றேன். அவற்றுள் முதலாவதாகச் சமய இலக்கிய வளர்ச்சியில் உரைநடையின் பங்கினைக் காணலாம். சமயங்கள் தமிழ் நாட்டில் மிகப் பழங்காலந்தொட்டே பல்வேறு சமயங்கள் வாழ்ந்து வருகின்றன. சங்க இலக்கிய அடிப்படையில் ஆராய்ந்தால் தமிழ்நாட்டுப் பழம் பெருஞ் சமயங்களாகச் சைவம், வைணவம் என்ற இரண்டு மட்டுமே காட்டப்பெறுகின்றன. அவற்றுள் மழுவாள் நெடியோனாகிய சிவனைத் தலைவனாகக் கொண்டே பிற தெய்வங்கள் பேசப் பெறுகின்றன. பின் இவற்றின் கிளைகளாகச் சில சமயங்கள் தோன்றின என்றாலும் அவை அனைத்தும் இவற்றினுள்ளே அடங்கிவிட்டன. தொல்காப்பியர் காலத்தை ஒட்டி-அவருக்குச் சற்று முன்போ பின்போ என ஐயுறும்படி–வடநாட்டில் தோன்றிவளர்ந்த ‘வைதிகம்’ என்னும் வேத அடிப்படையில் தோன்றிய சமயம் நாட்டில் இடம் பெறலாயிற்று. பின் அதுவே சைவம், வைணவம் ஆகிய இரண்டனையும் உள்ளடக்கிக் கொண்டதோ என்னுமாறு நாட்டில் ஆதிக்கம் செலுத்திற்று. அதை அடுத்துப் பெளத்தமும் சமணமும் தமிழ் நாட்டுக்குவடக்கிலிருந்து வரலாயின. அவை தாமும் இந் நாட்டுத்தனிப்பெருஞ்சமயங்கள் என்னுமாறு ஒன்றன்பின் ஒன்றாகக் கி. பி. மூன்றாம், நூற்றாண்டு தொடங்கி ஏழாம் நூற்றாண்டு வரை ஆதிக்கம் செலுத்தின. ஏழாம் நூற்றாண்டிற்குப் பிறகு சைவமும், வைணமும், வைதிக சமயமும் தலைதூக்க, அவை இரண்டும் நிலைகுலைந்தன. பெளத்தம் ஓரளவு நாட்டிலே அடியோடு இல்லை என்னுமாறு அழிந்தது; எனினும் சமணம் இலைமறைகாயென நாட்டில் ஆங்காங்கு உயிர் வாழ்ந்து வந்துள்ளது; இன்றும் வாழ்கின்றது அதன் வழித் தோன்றிய இலக்கிய இலக்கணங்களும் வாழ்கின்றன. பின் இசுலாமிய மதமும் கிறித்தவமும் கடல்வழியே தமிழ் நாட்டில் புகுந்தன. மிகப் பழங்காலத்திலேயே மத்தியதரைக் கடல் நாடுகளிலிருந்து தமிழ் நாட்டுக்கு வாணிபத்தின் பொருட்டு வந்தவர் வழி இவ்விரு சமயங்கள் நாட்டு மக்களுக்கு அறிமுகமானவை எனினும், அவை நாட்டு மக்களொடு-அவர் தம் வாழ்வொடு-பொருந்திக் கலக்கவில்லை. பின் ஆணை வழி முகலாயரும் மேலை நாட்டினரும் தமிழ் நாட்டில் ஓங்கிய நாட்களில் தாம் அவை மக்கள் சமயங்களாக இடம் பெற்றன. இவையே யன்றி இந்து சமயக் கிளைகளாகிய வேதாந்த மதம் முதலிய சிற்சிலவும் நாட்டில் தோன்றி வளர்ந்தன, எனவே, தமிழ் நாட்டிலே சென்ற நூற்றாண்டில் சைவம். வைணவம், வைதிகம், வேதாந்தம், கிறித்தவம், இசுலாம், சமணம் ஆகிய மதங்கள் வாழ்ந்து வந்தன. (இவற்றுள் சமணம் அவ்வளவு அதிகமாக இல்லை.) எனவே இச்சமயங்களைப்பற்றிய இலக்கியங்கள் நாட்டில் அதிகமாக வளர்ந்து வந்தன என்பதும் சொல்லாமலே அமையும். சென்ற நூற்றாண்டு வரையில் தத்தம் கருத்தைச் செவி வழியாகப் பரப்பி வந்தவருக்கு, ‘அச்சுயந்திர சாதனம்’ கிடைத்தமையின் அதன் வழியாக, தத்தம் சமய உண்மைகளைத் தாங்கியனவாக நூலாகவும் இதழாகவும் பலப்பல வெளியிட வாய்ப்பு உண்டாயிற்று, அவர் தம் சமயம் பரப்பும் ஆர்வத்தில் ஒருவரை ஒருவர் பழிக்கவும் தூற்றவும் தத்தம் கொள்கைகளை உயர்த்திப் பேசவும்.பிறர் கொள்கைகளைத் தாழ்த்தித் தூற்றவும் பின்வாங்கவில்லை. இந்தக் கொடும் அடிப்படையில் உண்டான நூல்களும் பல. ‘தென்னாடுடைய சிவன் எந்நாட்டவர்க்கும் இறை’ என்ற சமய உணர்வைப் பரப்பிய தமிழ் நாட்டில் இத்தகைய மாறுபாட்டுக் கொள்கை எப்படித்தான் புகுந்ததோ என நினைத்துப் பார்க்கவும் கூடவில்லை. வேதாந்த சித்தாந்த வேற்றுமை, சைவ வைணவ வேறுபாடு, கிறித்தவ இசுலாமிய வேறுபாடு எனப் பலவகையில் சமய வேறுபாட்டுக் கொள்கைகளை விளக்கவும் கண்டிக்கவும் தக்கதான வகையில் சென்ற நூற்றாண்டில் பல நூல்கள் எழுந்தன. இவர்களுக்கிடையில் இராமலிங்கர் முதலியவர் தோன்றிச் சமரச சமய நெறி’ யைப் பரப்பவும் பாடுபட்டனர். அக்கொள்கைகள் பற்றிய நூல்களில் பெரும்பாலன தமிழ் உரைநடையிலேயே உள்ளன. புதிதாக வந்த கிறித்தவ சமயத்தார் தம் சமய உண்மைகளை விளக்கப் பலப்பல வகையில் புதுப்புது நூல்களை வெளியிட்டனர். அச்சமயத்து இருவேறு கொள்கை யாளர்களும்–புரோட்டஸ்டண்டு, கத்தோலிக்கக் கொள்கையாளர் இருவரும்-அவரவர் கொள்கைப்படி பல்வேறு நூல்களை எழுதியதோடு மட்டுமன்றி, விவிலிய நூலைப் பலவகைகளில் மொழிபெயர்த்தும் இயேசு வரலாற்றைப் பலவகைகளில் எழுதியும் தத்தம் கொள்கைகளைப் பரப்ப முயன்றனர். அவர்தம் கொள்கை வேறுபாடுகளைப்பற்றி எழுந்த நூல்களும் சில இருந்தன எனக் காண்கிறோம். மேலை நாட்டிலிருந்து இங்கு வந்த கிறித்தவப் பாதிரிமார்களும் அவர்களுக்கு உடன் துணையாக வந்த பலரும், ஆட்சிப்பீடத்தில் அமர்ந்து ஆணை செலுத்திய பல கிறித்தவ அறிஞரும் ஒருங்கு சேர்ந்து அச்சமயத்தில் பல்வேறு நூல்களை வெளியிட்டுள்ளனர்.அவருள் சிலர் தமிழ்மொழி பற்றியும் தமிழ் நாட்டுப் பழஞ்சமயங்கள் பற்றியும்கூட ஆராய்ந்து சிற்சில நூல்களை வெளியிட்டுள்ளனர். சைவம் சைவ சமயம் நாட்டின் தொன்மை வாய்ந்த சமயம் எனக் கண்டோம். அச்சமயத்தே மிகப் பழங்காலந் தொட்டே பல்வேறு சமய இலக்கியங்கள் வெளிவந்துள்ளன. தோத்திரங்களாகவும், சாத்திரங்களாகவும், தர்க்க நூல்களாகவும் பல எழுதப் பெற்றுள்ளன. அவற்றுள் மிகச் சிலவே பதினெட்டாம் நூற்றாண்டு முடிவுவரை அச்சிடப் பெற்றன. பெரும்பாலான சென்ற நூற்றாண்டில் அச்சிடப் பெற்றனவே. மேலும் அதுவரை இருந்த சமய நூல்களுள் பெரும்பாலான பாட்டில் அமைய, சென்ற நூற்றண்டில் அத்தகைய பாடல்களுக்கு உரைநடைகளும் உரை விளக்கங்களும் எழுதப் பெற்றதோடு, அவற்றின் அடிப்படையில் புதுப்புது உரைநடை நூல்களும் வெளிவந்துள்ளன. ஆறுமுக நாவலர், சோமசுந்தர நாயகர், சபாபதி முதலியார் முதலிய பெரும் புலவர்கள் சென்ற நூற்றாண்டில் சைவ சமய வளர்ச்சி பற்றியும் இதை எதிர்ப்பாரைச் சாடியும் பல நூல்கள் எழுதியுள்ளனர். வடலூர் வள்ளலார் என்னும் இராமலிங்க அடிகளார் பல்லாயிரக் கணக்கான பாடல்களோடு நல்ல உரைநடை நூல்களும் எழுதியுள்ளார். அன்பர் பலருக்கு அவர் எழுதிய கடிதங்களும் உரைநடைக்குச் சான்று தருகின்றன. சென்ற நூற்றாண்டின் இறுதியிலும் இந்த நூற்றண்டின் தொடக்கத்திலும் நூல்கள் இயற்றிய பாம்பன் குமரகுரு தாச சுவாமிகளின் சைவசமயம் பற்றிய விளக்க நூல்கள் எழுதியதோடு, வைணவ சமய நெறி பற்றிய மறுப்பு நூல்களும் எழுதியுள்ளார்கள், (அவை இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் வெளி வந்துள்ளன.) இவையேயன்றி, மகா வித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை முதலிய பெரும் புலவர்கள் தமிழ் நாட்டில் 'தலபுராணம்’ எனப்பெறும் புது வகையான இலக்கியங்களை எழுதிக் குவித்தனர். அவை பெரும்பாலும் பாடல்களால் ஆனமையின், பொதுமக்கள் அவற்றை எளிதில் உணர்ந்து கொள்ளும் பொருட்டுச் சிலர் அத்தல புராணங்களுக்கு வசனங்களும் எழுதினர். பெரிய புராணம், திருவிளையாடற்புராணம் முதலிய சென்ற நூற்றாண்டிற்குமுன் தோன்றிய பல பாடல் இலக்கியங்களுக்கு, சென்ற நூற்றாண்டில் அவற்றைப் பொதுமக்கள் எளிதில் உணர்ந்து கொள்ளுமாறு, ஆறுமுக நாவலர் முதலிய அறிஞர்களால் நல்ல தெளிந்த இலக்கிய உரைநடை நூல்களும் விளக்கங்களும் எழுதப்பெற்றன. இவ்வாறு பல வகையில் சென்ற நூற்றாண்டில் சைவசமயம் பற்றிய உரைநடை நூல்கள் எண்ணற்று வளர்ச்சியுற்றன. நாம் நேற்றுக் கண்ட 'மெக்கன்சி' சேர்க்கையிலும் இத்தல புராணம் பற்றிய சிறு கதைகள் இடம் பெற்றுள்ளன. அவற்றுள் சிலவற்றை ஒன்றன்பின் ஒன்றாகக் காணலாம். இத்தல புராணங்களை முதலில் பாட்டிலே பாடினர்கள் என்றாலும், கல்லா மாக்களும் அறிந்து கொள்ளும் பொருட்டு எளிய உரைநடையில் பிறகு எழுதினர்கள். அவற்றுள் கர்னல் ‘மெக்கன்சி’க்கு நேரில் சொல்லிய நடை, நாம் நேற்றுக் கண்ட உரைநடையைப் போன்று கொச்சை நடையாகவே உள்ளது. திருப்புலிவன மகாத்தியம் 1816 ௵ ஆகஸ்டு ௴ 9 ௳யில் செங்கற்பட்டு ஜில்லாவில் சேர்ந்த புலிவன்னாடு காலூர் கோட்டம் திருப்புலி வனம் தேவஸ்தானம் மடவளாகம் ஸ்ரீஅகிலாண்டகோடி பிரமாண்ட நாயகியாகிய வியாக்கிர புலியூர் பரகோவில் முதலான பூர்வீகர் பேர்பெற்ற நாமா அனாதியா யிருக்கிற வியாக்கிர புலியிஸ்வரர் கிறுவிது யுகத்தில் ஆதியில் வில்வவனம் விஸ்தாரமாயிருந்த படியினாலே வில்வதை ஈஸ்பரர் என்று புருண சித்தமாய் பேர் உண்டாச்சுது. திரையோதா யுகத்திலே அகஸ்தியர் பூசைபண்ணபடியாலே அகஸ்தியிஸ்பரர் சிவக்கொழுந்தர், துவாபலியுகத்தில் சந்திரன் பூசை பண்ணினபடியினாலே சோமனாதயிஸ்பரர் என்னும் பேர் உண்டாச்சுது.கலியுகத்தில் வியாக்கிரம் பூசை பண்ணினபடியினாலே திருப்புலியிஸ்பரர் என்று பேர் உண்டாச்சுது. அந்த வியாக்கிரம் பூசைபண்ணது என்னமென்றால் யிந்த ஸ்தளம் அனாதியாய் வெகுயுகங்கள் கண்ட ஸ்தல மானபடியினாலே சுவாமியார் யிருந்ததாகவும் அநேக ஆரணியமாயிருந்ததாகவும் அனேக வியாக்கிரமம் முதலான மிருகங்கள் நிறஞ்சிருக்கையில் அதிலே ஒரு வியாக்கிரம் பூர்வ சென்ம புண்ணிய பலத்துனாலேயும் இந்த சுவாமி யாருடைய சன்னதி விசேஷத்தினாலேயும் அந்த புலிக்கி ஞானம் வந்து பூருவ சென்மத்திலே னாம் வெகு பாவம் பண்ணி யித்த சென்மம் வந்தது இனிமேயாகிலும் நல்ல சென்மம் வரவேணுமென்று சுவாமியாரே தியானம் பண்ணயிடத்திலே அப்பேர் அனாதியாயிருக்கிற... இவ்வாறே வைணவ சமயத்தும் சில புராணங்கள் கொச்சை நடையில் எழுதப் பெற்றுள்ளன. பாகவதம், விஷ்ணு புராணம், பத்ம புராணம், பார்க்கவ புராணம், பாரதம் முதலிய பல எளிய கொச்சை நடையில் எழுதப் பெற்றுள்ளன. இவை அனைத்தும் சென்ற நூற்றாண்டின் முற்பகுதியில் எழுதப்பெற்றனவேயாம். இவற்றின் தன்மைகளையும் கண்டு செல்லலாம். (1) பாகவத வசனம்: துன்முகி-மார்கழி, 17 (1836) முடிவு: பிராம்மணர்கள் படிச்சால் பிரம ஞானியாவார்கள் க்ஷத்திரியரிகள் படிச்சால் சாம்பிராச்சிய பதமடைவார்கள் வைசியர்கள் படிச்சால் சகல ஐசுவரியவான்களாவார்கள் சூத்திரர்கள் படிச்சால் சுபத்தை அடைவார்கள். இது வேதாந்த சாரம். இது வேதத்துக்குச் சமானம்-ஐந்தாவது வேதம் இது. இது விஷ்ணு சுப (வ) ரூபம். இந்தப் பாகவதம் பதினெட்டுப் புராணங்களுக்குள்ளேயும் மெத்தப் பெரியது. (2) பாரதவசனம்: ப்ரபவ-சித்திரை, 27 (1807) முடிவு: இப்படிக்கொத்த மகிமையையுடைய சிவனைச் சேவிச்ச பேருக்கு நினைத்த காரியம் ஈடேருமலிருக்குமோவென்று ஸ்ரீ கிருஷ்ண பகவான் சொல்லக் கேட்டு, தர்மராஜா மனசிலேதானே அந்தத் தேவருக்கு நமஸ்காரம் பண்ணினார். (3) விஷ்ணு புராண வசனம்; ஸ்வஸ்திஸ்ரீ விசையாற்புதைய சாலிவாகன சகாப்தம் 1726 கலியுக காத்த 4904 பிரபவாதி சகாப்தம் 57. இதில் சொல்லாநின்ற அத்தாட்சி ஸ்ரீ கார்த்தின ௴ ௮ ௳ பஞ்சமி புனர்பூசம் புதவாரம் இப்படிக்கொத்த சுபதினத்தில் ஸ்ரீவிஷ்ணு புராண வசனம் எழுதி முடிந்தது முற்றும். முடிவு: ஸ்ரீமந் நாராயணனுடைய ரூபமும் இந்தப்படி வெகு விதங்களாகப் பிரகிருதபுருஷன் ஆத்மகமாக இருக்கும். இது, ஸ்ரீவிஷ்ணு புராணத்தில் ஆருமங்கிசத்தில் எட்டா மத்தியாயம் புராண மகிமை முற்றும். (4) பாத்ம புராணம், யுவ-தை 1 (1815) (புதுச்சேரி நாராயணதாசன் குமாரன் வரதப்பதாசன் பாத்மோத்தர புராணம் எழுதி நிறைந்தது) முடிவு: சவுனகாதி மகரிஷிகளே: இந்தப்பிரகாரம் வசிஷ்ட மகரிஷியினாலே சொல்லப்பட்ட வனாய் ராஜச்ரேஷ்டனாக தீலீப மாகராசனானவன் அந்த ஆசாரியனாகிய வசிஷ்ட மகரிஷியைச் சாஷ்டாங்கமாகச் சேவித்து யதா சாஸ்திரமாகப் பூசித்து அவராலே உபதேசிக்கப்பட்ட திருமந்திரத்தை உடையவனாய்......... ஸ்ரீவைகுண்டத்தை யடைஞ்சு சமஸ்தகல்யாண குணங்களை யுடைத்தான பரமமான ஆனந்தத்தை யடைந்தான். —ஸ்ரீபாத்மோத்தரம் சம்பூர்ணம். (5) பார்க்கவ புராணம் பிலவ-தை, 20 (1841) சோமவாரம் பஞ்சமி அத்த நட்சத்திரத்தில் எழுதி நிறைவேறியது, முடிவு: இந்த விநாயகருடைய சரித்திரங்களைத் திரிமூர்த்திகளாலும் அளவிடக்கூடாது. சந்திரனைத் தரித்தவராயும் தும்பிக்கை யொடும் கூடிய சுந்தர விநாயகருடைய பாதார விந்தங்களுக்குச் சரணம் சரணம் அவருடைய இரண்டு பக்கங்களிலும் எழுந்தருளியிருக்கிற சித்திபுத்திகளுடைய பாதாம் புயங்களுக்குச் சரணம் சரணம்...சகல லோகங்களும் இகபர பாக்கியங்களும் வாழி வாழி. இத்தகைய புராணங்கள் எத்தனையோ சென்ற நூற்றாண்டில் உரைநடையில் எழுதப்பெற்றன. அவை அனைத்தும் அச்சில் வந்தன என்று சொல்வதற்கில்லை. மேலும் இத்தகைய கொச்சை மொழியில் அமைந்தன எங்கோ நாட்டுப்புறங்களில் செவிவழியாகவும் ஓலைச்சுவடி வழியாகவும் வாழ்ந்து வந்தமை தவிர்த்து, சிறந்த புலவர்கள் பல புராணங்களுக்கு-செய்யுள் வடிவில் எழுதப்பெற்ற புராணங்களுக்கு - உரைஎழுதினர். திருவிளையாடற் புராணம், பெரிய புராணம் முதலிய இன்றும் வழக்கத்தில் உள்ள சைவசமய நூல்களுக்குத் தெளிந்த உரைநடை நூல்களும் எழுதப் பெற்றன. இவற்றுள் ஆறுமுக நாவலர் அவர்கள் பெரிய புராணத்திற்கு எழுதியுள்ள 'சூசனம். எனும் விளக்கம் சிறந்த நடையில் அமைந்துள்ளது ‘உபோற்காதம்’ என்ற தலைப்பில் அவர் தொடங்கிய தொடக்கத்தின் முதற்பகுதியை இங்கே காணலாம். அநாதி மலமுத்த பதியாகிய பரசிவன் தனக்கு ஒர் பிரயோசனமுங் குறியாது அநாதிமன் பெத்தராகிய ஆன்மாக்களுக்கு மல நீக்கமும் சிவத்துவ விளக்கமும் சித்திக்கும் பொருட்டு, பெருங்கருணையினாலே படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்னும் பஞ்சகிருத்தியம் பண்ணுவர். அவற்றுள் படைத்தலாவது, சென்மமுடைய பிராணிகளின் சமூகமாயும், போகோப யோகிகளாகிய பரிகாரங்களோடு இயைந்ததாயும், இருக்கின்ற சகத்தை அந்தந்த நானாவித யோனிகளில் உற்பவிப்பித்தல். காத்தலாவது, தனதிச்சையாற் றடுக்கப்பட்ட சர்வலோகத்தையும், தத்தம் விடயத்தில் நியோகித்து நிறுத்துதல். அழித்தாலாவது, சகத்தைச் சகத்தியோனியில் ஒடுக்கல். மறைத்தலாவது. தத்தம் வாஞ்சனைக்குத்தக்க, போகத்தின் வழுவாதிருக்கச் செய்தல். அருளலாவது, தீக்ஷா கிருத்தியமாகிய அனுக்கிரகம். இதில் வடமொழிக்கலப்பு மிக்கு இருக்கிறது. எனினும் மேலே கண்ட கொச்சை நடைக்கும்.இதன் பீடு நடைக்கும் உள்ள வேறுபாடு நன்கு தெரிகின்றதல்லவா? காமம் பற்றி: திருநீலகண்டர் ஆறுமுக நாவலர்:-காமம் —பெரியபுராணம் பிறவிப் பிணி தீர்ந்து உய்தற்குத் தடையாய் உள்ள காமமானது, எத்துணைப் பெரியோர்களாலும், நீக்குதற்கரிது. அது நினைப்பினும், காணினும் கேட்பினும், தள்ளினும், விஷமானது தலைக் கொண்டாற்போல அத்தகைய நுண்ணறிவாளருடைய அறிவையும் கெடுக்கும் இயல்புடையது. அது கல்வி யறிவு ஒழுக்கங்களால் ஆன்ற பெரியோர்களுடைய உள்ளத்தில் தலைப்படினும். அவ்வுள்ளமானது தான் செல்லத்தகும் இடம் இது எனவும் செல்லத்தகாத இடம் இது எனவும், ஆராயவிடாது. அது மேலிடும்பொழுது குணமும் குலமும் ஒழுக்கமும் குன்றுதலையும், பழியும் பாவமும் விளைதலையும் சிறிதும் சிந்திக்க விடாது. அக்காமே கொலை, களவு, கள்ளுண்டல் முதலிய பாபங்களுக்கெல்லாம் காரணமாய் உள்ளது. ஆதலால் அக்காமமே ஆன்மாக்களை நரகங்களிலே எண்ணிறந்த காலம் வீழ்த்தி வருத்தும் பெருங் கொடுமையுடையது. (பிரமாணம் பல)...ஆதலால் காமம் மனசிலே சிறிதாயினும் எழவொட்டாமல் அடக்கவேண்டும். ஆறுமுக நாவலால் சமயம் பற்றியும் மொழிபற்றியும் பலநூல்கள் எழுதியுள்ளார். அவை பயில்வோர் தகுதிக்கு ஏற்ற நடையில் செல்லுகின்றன. அவர் பிள்ளைகளுக்கு என எழுதிய பால பாடத்திலிருந்து ஒரு பகுதியைக் கண்டு மேலே செல்லலாம். களவு: களாவது பிறருடைமையாயிருக்கும் பொருளை அவரை வஞ்சித்துக் கொள்ளுதல். களவினால் வரும் பொருள் வளர்வது போலத் தோன்றி, தாம் போம்போது பாவத்தையும் பழியையும் நிறுத்திவிட்டு, முன்னுள்ள பொருளையும் தருமத்தையும் உடன் கொண்டு போய்விடும். களவு செய்பவர், அப்பொழுது ‘யாவராயினும் காண்பரோ அடிப்பரோ கைகால்களைக் குறைப்பரோ’ என்றும், பின்பும், 'இராசா அறிந்து தண்டிப்பானோ’ என்றும் பயந்து பயந்து மனந்திடுக்குறுதலின், எந்நாளும் மனத்துயரமே உடையவராவர். அறியாமையினலே களவு அப்போது இனிது போலத் தோன்றினும், பின்பு தொலையாத துயரத்தையே கொடுக்கும். இவ்வாறு ஆறுமுக நாவலர் பல்வேறு துறைகளிலும் உரைநடையை வளர்த்துள்ளார். அவர்தம் இலக்கண்ம், தர்க்கம் முதலியன பற்றிய உரைநடையைப் பின்பு காணலாம். சென்ற நூற்றண்டில் வாழ்ந்த சமயத் தலைவருள் சிறந்தவராகப் போற்றப் படுகின்றவர் சிதம்பரம் இராமலிங்க அடிகளார் ஆவர். அவர் உரைதடை சிறந்ததென்பதைச் சென்ற நூற்றாண்டிலே வாழ்ந்தவர்களே கூறியுள்ளனர். ஒருவர் (கிறித்தவர்) கூறியதை முந்திய பேச்சில் கண்டோம். அவர் சாதி, சமய வேறுபாடுகளை நீக்க வேண்டும் என்ற அடிப்படை நெறியில் சமரசசன்மார்க்கங் கண்டவர். அவர் எழுதியவை பெரும்பாலும் பாடல்களே அவை ஆறு திருமுறைகளாக வகுக்கப்பெற்றன. அவையன்றிப் பல கட்டுரைகள் உரைநடையிலும் எழுதியுள்ளார். அவர் பல அன்பர்களுக்கு எழுதிய கடிதங்கள் இலக்கியங்களேயாகத் தொகுக்கப்பெற்றுள்ளன. அவர்தம் உரைநடைப் பகுதியில் ஒழிவிலொடுக்கப் பகுதி சிறந்தாகும். அதில் ஒரு பகுதியைக் காணலாம். வள்ளல்–என்னும் பெயர்: ஆசிரியர்க்குத் தாம் முன்னிருந்த கிரியாகாரிய நிலைக்கண் அவ்வாசாரிய மரபின் வழித்தாய் வந்த காரண வபீடேகச் சிறப்புப் பெயரென் க. அல்லதூஉம். பின்னர் ஞானாசிரிய நிலைக்கண் தமதருண் ஞான நோக்கானியைந்த கண்ணுடைய வென்னாங் காரண விசேடண மேற்கொண்டு நின்ற இவ்வள்ள லென்னும்-பெயர் ஈண்டவ் விசேடணமிசை யெச்சநிலையி னிற்ப நின்றதெனிலும் அமையுமென்க, இஃது, வினை, பண்பு முதலியவடுத்த தொகை நிலைச் சொற்றாெடராகாது, தொகா நிலையாய்த் தனைத்தொடர்பயனிலையண்மைப்பொருளுணர்ச்சி யிடையிட்டு நிற்கத் தான் செயயுண் முதற்கண் தனித்திருந்தமையின் ஆற்றலின்றாலோவெனின், அற்றன்று-கொடைமடங்குறித்த குணங்காரணமாக வந்த இவ்வள்ளலென்னும் பெயர் தன்னுறுப்புகளுட் கொடை, குணம், புகழழகு, வளமென்னு நால்வகை குறித்த பல்பொருட் பகுதியாய வண்மையென்னு முதலுறுப்பான் ஆசிரியர்க் குளவாய அக்கொடை முதலிய அருட்குணங்களைக் குறிப்பிற் புலப்பட விரித்தலிற் பொருளாற்றல் உண்டென்க. அல்லது உம், இப்பெயர் உயர் பொருட்கிடனாய், உடனிலைக் கூட்டாய் ஒரு நெறியசைந்தாய், ஓரினந் தழுவிப் பல்வகைக் குறிப்பிற் படர்ந்து முற்றியைபு வண்ணப் பெருஞ் சொல்லாக நிற்றலிற் சொல்லாற்றலும் உண்டென்க. ஆயின் இவ்வாசிரியர் பெயர் இச்செய்யுளின் இடைகடைகளின் ஒன்றினிறுத்தாது முதலடி முதற்சீரெதுகைத் தொடைக் கணிறுத்ததிற் குறித்த தியாதோவெனின் :-ஒன்றிரண்டெனக் கொண்டுறு மறையாகம நன்றிரு முடிபினடுநிலை நாடா அய்ம்புலம் பெறு தத்துவ நியதியிற் போந்து, உண்மலந்தெழுமறிஞர் வாழ்த்திப் பரவும் ஆசிரியர் சன்மார்க்க முதலிய மார்க்க நான்கனுட் டலைமையிற்லைமையாய வுத்தம சன்மார்க்கத்தின ரென்பது குறித்த தென்க. இங்ஙனம் உத்தம சன்மார்க்கத்தினரென்பதை யாசிரியர் கூறிய “இதுவென்ற தெல்லாம் பொய் யென்றன்” என்னுந் திருவெண்பாவாற் காண்க. இஃதின்னும் விரிக்கிற் பெருகும். (திருவருட்பா, முதல் ஐந்து திருமுறைகள்-சன்மார்க்க சங்க வெளியீடு-பக். 125, 126.) வள்ளலார்:— சத்தியச் சிறு விண்ணப்பம் எனது விருப்ப முயற்சி இங்ஙனமாக, அவத்தைக ளெல்லாவற்றையும் நீக்கி, இத்தேகத்தை நித்திய தேகமாக்கி, எக்காலத்தும் அழியாத பேரின்ப சித்திப் பெருவாழ்வைப்பெற்று வாழ்தல் எதனாற் பெறுதல் கூடிமென்று அறியத் தொடங்கிய தருணத்து, வேறு எந்த வழியாலும் பெறுதல் கூடாது, எல்லாமுடைய கடவுளது திருவருட் சுதந்திரம் ஒன்றாலே பெறுதல் கூடுமென்று தேவரீர் திருவருளால் அறிவிக்க உள்ளபடி அறிந்தேன். பின்னர், திருவருள் சுதந்திரம் நமக்கு எந்த வழியாற் கிடைக்குமென்று அறியத் தொடங்கிய தருணத்து, 'எனது’, ‘யான்’ என்னும் தேக சுதந்திரம், போக சுதந்திரம், ஜீவ சுதந்திரம் என்ற மூவகைச் சுதந்திரங்களும் நீக்கியவிடத்தே கிடைக்குமென்று தேவரீர் திருவருளால் அறிவிக்க உள்ளபடி யறிந்தேன். ஆகலில், எனது சுதந்திரமாகக் கொண்டிருந்த தேக சுதந்திரத்தையும், போக சுதந்திரத்தையும், ஜீவ சுதந்திரத்தையும் தேவரீர் திருவருட்கே சர்வசுதந்திரமாகக் கொடுத்துவிட்டேன். அடிகளார் பலருக்குக் கடிதங்கள் எழுதினமை அறிந்தோம். அப்படியே அடிகளாருக்குப் பலரும் கடிதம் எழுதியுள்ளனர். அவர்தம் நடைகளுள்ளும் ஓரிரண்டு காணல் ஏற்புடைத்து ஆதலால் அடிகளார் தொடர்புடைய இரு கடிதங்களின் படிகளைக் கீழே தருகிறேன். திருமுகம் சுவாமிகளுக்கு வந்தனம் பக்—91 தங்கட்குத் தற்காலம் நேரிட்டிருக்கிற ஆபத்தைக் குறித்து அஞ்சவேண்டாம், அஞ்சவேண்டாம். இந்த ஆபத்தால் தேக ஆணி நேரிடாது. கால பேதத்தால் நேரிடினும் நான் தங்களை எவ்விதத்தாலாயினும் திருவருள் வல்லபத்தைக் கொண்டு திரும்பவும் பார்ப்பேன்: பேசிக்களிப்பேன். இது சத்தியம். இந்த வார்த்தை யென் வார்த்தையன்று. திருச்சிற்றம்பல முடையார் செல்வப் பிள்ளை வார்த்தை. தேகத்திற்கு ஆனி வருவதாகக் கண்டாலும் அஞ்ச வேண்டாம். வந்தால் வரட்டும். திரும்பவும் உடனே மிகுந்த விரைவில் என்னைப் பார்த்து பேசிக் களிப்பீர்கள். திருவருளாணை யிது. சற்றுங் கலங்க வேண்டாம். திருச்சிற்றம்பலம். ”இது புதுச்சேரி சுவாமிகள் சமாதி திருக்கோயில் புகுமுன்னர் சந்நிதானத்திற்கு விண்ணப்பித்துக் கொண்டற்குப் பதில் திருமுகக் குறிப்பு”. (அடிகளாருடையது.) ⁠⁠பக்—120 ஐயாவிற்கு அன்பர் கடிதம், கடிதம்-6. அன்புந் தயையு முடைய அய்யா அவர்கட் கனத்தானந்த வந்தன முற்றெழுதிக் கொண்ட தியாதெனின், அவிடத்திய சுபயோக க்ஷேமாதி சுபத்தை அடிக்கடி கேழ்க்க ஆவலுள்ளவகை யிருக்கிறேன். நீங்களனுப்பிய கடிதமும் ரூபாயும் வந்து சேர்ந்து அதிலுள்ள மிச்ச ரூ. ௫௯-யும் அனுப்பித்திருக்கிறேன். யென்னாலாக வேண்டியவைகளுக்குக் குத்தரவாக பலவாறு பிரார்த்திக்கின்றனன். ஸ்ரீ. வேலு முதலியாருக்கும் ௱-ஸ்ரீ. நாயின ரெட்டியாருக்குந் தங்கள் கடிதத்தைக் காண்பித்தேன். ௱-ஸ்ரீ வேலு முதலியார் நாளைய தினம் காலமே பிராயாணப்பட்டுப் போரார்கள். நானும் ரெட்டியாரும் திண்டிவனம் வரையில் போய் வழி விட்டுவிட்டு வருகிருேம். யெனக்கு வேண்டிய புத்திமதிகள் அடிக்கடி தெரிவித்தனுக்கிரகிக்கும்படி தங்களுபய சரணார விந்தங்களை அஷ்டாங்க பஞ்சாங்க யோகாங்கமாய் பிரார்த்திக்கின்றனன். இப்படிக்கு, பிரபவ ௵ தொண்டன், ஆடி ௩ ௳ கி. துரைசாமி. (புதுவை ஸ்ரீ துரைசாமி அவர்கள் எழுதியது) இவை கூடலூரில் மகாகனம் பொருந்திய அய்யா அவர்கள் சமுகத்துக்குக் கொடுப்பது (திருவருட்பா-பாலகிருஷ்ணப்பிள்ளையவர்கள் பதிப்பு.) சென்ற நூற்றாண்டின் ஆறுமுக நாவலரிடமும் வேறு சிலரிடமும் தமிழ் கற்ற யாழ்ப்பாணம் சபாபதி நாவலர் என்பார் சென்ற நூற்றாண்டின் இறுதியிலே (1899) ‘திராவிடப் பிரகாசிகை’ என்ற இதழை வெளியிட்டுள்ளனர். அவர் முன்னர் வாழ்ந்து, தமிழ் உரைநடையை வளம்படுத்திய சிவஞான முனிவருடைய நூல்களைத் தொகுத்துள்ளார். அத்தொகுப்பின் முன் 'வரலாறு’ என்ற தலைப்பில் அவர் தம் விளக்கம் உள்ளது. அவர் உரைநடைக்கும் அது சான்றாகலாமன்றாே? இனி, இவ்வகச் சமய முதலிய வனைத்திற்கும் மேலாய் விளக்கமுற்று, அவையெல்லாந் தன்கண் ஏகதேசமாய் அடங்கக்கொண்டு நிற்பது சித்தாந்த சைவம். அது வேதாகம மிரண்டாலுந் தலையான சன்மார்க்கமென்றெடுத்துப் புகழப்படுஞ் சுத்தாத் துவித சித்தாந்த சமயம். இனித் தமிழின் கண் அப்பொருள் போதிக்கும் உண்மை நூல்கள், தமிழ் வேதமாகிய திருமுறைகளும், திருக்குறளும், சிவஞான போதம், சிவஞான சித்தி, சிவப் பிரகாச முதலிய சித்தாந்த சாத்திரங்களுமாகும். இனி, ஞானப்பிரகாச முனிவர், தமக்கபிமதமான சிவசமய வாதந் தமிழின்கட் கூறல் வேண்டினாராயின் வடமொழிக்கட் பிரமாண தீபிகை, சித்தாந்த சிகாமணி முதலிய கிரந்தங்களால், அது கூறிவைத்தாற் போலத், தமிழின்கண் புது நூல்களால் கூறிவைத்துப் போதலே, அவர் தமக்கு முறையாம்; இனி அவ்வாறு செய்யாது, நால்வகைச் சமயங்களுக்கும் மேன்முறையாய்ப் பிரசித்தியுற்று விளங்கும் சித்தாந்த சைவ நூலாகிய சிவஞான சித்தியை, அலைத்திடர்ப்படுத்து அங்ஙனந் தம் மதப் பிரசாரஞ் செய்தது அவர்க்குச் சால்பாகாமையறிக, —திராவிடப் பிரகாசிகை இதழ். இச் சபாபதி நாவலர் சித்தாந்த மரபு கண்டன கண்டனம், வைரக்குப்பாயம், சிவசமய வாத உரை மறுப்பு முதலிய சமயக் கண்டன நூல்களைச் சிதம்பரத்திலிருந்து வெளியிட்டுள்ளார். தர்க்கம் சென்ற நூற்றாண்டில் சைவத் தூண்களாக நின்ற அறிஞர் பலர். அவருள் பலராலும் சிறந்தவராகப் போற்றப்பெற்றவர் 'வைதீக சைவ சித்தாந்த சண்டமாருதம்’ என்று சிறப்புப் பெயர் பெற்ற சூளை சோமசுந்தர நாயகர் அவர்கள். அவரும் அவர் மாணவர் எனத் தம்மைப் பெருமையோடு கூறிக்கொள்பவருள் சிலரும் தமிழ் உரை நடையில் சைவ சமயம் பற்றி நல்ல நூல்கள் எழுதியுள்ளனர். சைவ சமயத்தை மறுப்பாருக்குப் பதிலாக தர்க்க முறையிலும் பல உரைகள் அவர்களால் எழுதப் பெற்றன. பிற மதங்களைக் குறை கூறும் வகையிலும் மற்றும் பல நூல்களும் வெளிவந்துள்ளன. சென்ற நூற்றாண்டில் சமயக் கண்டனங்களும் மறுப்பு நூல்கள் பலவும் வெளிவந்துள்ளன. அவற்றுள் ஒருவரை ஒருவர் வன்மையாகவும் தாக்குகின்றனர். வைரக்குப்பாயம், குதர்க்கவிபஞ்சனி, கண்டனம், கண்டன கண்டனம் என்ற வகையில் பல உள்ளன. முதலாவதாகத் தர்க்கம் அல்லது அளவையைப் பற்றிய குறிப்பினைக் காண்போம். சித்தியார் அளவை தருக்கம் (Logic) அளவை என்பது அளந்தறியப்படுவது: அஃது எவ்வாறாம்? எனின், உலகத்து பதார்த்தங்களை எண்ணல், எடுத்தல், முகத்தல், நீட்டல் என்னும் நால்வகை அளவினால் அளந்தறியுமாறு போல, பதி முதலிய பொருள்களைப் பக்குவான் மாக்கட்கு அளந்து அறிவிக்கையின் பொருட்டு அளவைப் பிரமாணங்களை முதற்கண் கூறியது என அறிக. ஒரு விளக்கம் இதனால் சொல்லியது தோற்பாவையையும், மரப் பாவையையும், தேரினையையும் இவையிற்றை இயக்குகின்றவன் வேருய் நின்று இயக்குகின்ற முறைமை போலவும், பல கோலங்களைச் சமைத்து அந்தந்தக் கோலம் தானாய் நின்று ஆடுகிற கூத்தாடி முறைமை போலவும், பந்திக்கப்பட்ட காயத்தை ஆன்மா நின்று ஆட்டுகிற தனமையும் என்னும் முறைமையும் அறிவித்தது. சிவஞான் சித்தி-இலக்-சூத்-4 அதி-2, பக்-685. சோமசுந்தர நாயகருடைய மாணவர் பலர். அவருள் ஒருவராகச் சிறந்தவர் மறைமலை அடிகளார். அவர் அக்காலத்தில் ‘நாகப்பட்டினம் வேதாசலம்பிள்ளை’ என வழங்கப்பெற்றர். அவர் “துகளறு போதம்“ என்னும் சித்தாந்த நூலுக்கு உரை செய்துள்ளனர். அதன் முகவுரையையும் (1898) அவரைப் போன்றே மற்றாெரு மாணவராகிய பச்சையப்ப நாயகர் அவர்களது ‘பரதத்துவப் பிரகாசிகை’ யின் முன்னுரையையும் காணலாம். சித்தாந்த ஞான போதம்: துகளறு போதம்- மூலமும்-உரையும் மூலம் அருளிச் செய்தவர் சீகாழிச் சிற்றம்பல நாடிகள். இதற்கு வைதிக சைவ சித்தாந்த சண்டமாருதம் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர நாயகரவர்களது மாணவரும், சென்னைக் கிறிஸ்டியன் காலீஜ் தமிழ்ப் பண்டிதரும் ஆகிய நாகப்பட்டினம் வேதாசலம் பிள்ளையவர்களால் புத்துரை செய்யப்பட்டு, மதராஸ் ரிப்பன் பிரஸில் வெளியீடப் பட்டது. 1898. முகவுரை துகளறுபோத மெனப் பெயரிய இவ்வரிய சித்தாந்த நூலை ஆக்கியோர் சீகாழிச் சிற்றம்பல நாடிகள் என்று பெரியோர் கூறுகின்றனர். மெய்கண்ட நூல்களின் கருத்தையே யிந்நூல் விரிக்க வந்ததென்பது பாயிரத்தா லறியக் கிடக்கின்றது. சிவஞானபோத முதலிய வுண்மை நூல்களில் அரிதினுணர்தற் பாலனவாய்க் கிடந்த அருங் கருத்துக்கள் இந்நூலில் வெள்ளிடைமலை போலத் தெளிவுற விளக்கப்பட்டிருக்கின்றன. அஃதன்றியும், சைவ சித்தாந்த நூல்களை யுளங்கொளப் பயிலுவதற்குத் தொடங்குமுன் இந்நூலிற் பயிற்சி சிறிதிருக்குமேல் அது மிகவும் பயன்படும். சைவ சித்தாந்தத்தில் இன்றியமையாதனவா யறிந்து கோடற்குரிய பொருள்களெல்லா மிதிற் செறிந் திருக்கின்றன. தத்துவங்களி னியல்பெல்லாந் தெளிவாகவும் விரிவாகவும் உரைக்கப்பட்டிருத்த லல்லாமலும், முத்திக்கணிகழும் பல்வேறு நிலைகளையு மவற்றையெல்லாங் கழித்து முடிவினெய்தும் நிலையையும் ஏனை நூல்களிற் போற்சுருங்க வுரைக்காது விரிவுறத் தெளிவிக்கும் பெற்றிய தெனின், இந்நூற் பெருமை யளவிட்டுரைக்கும் வரம்பினதாமோ? பரதத்வப் பிரகாசிகை இஃது வைதிக சைவசித்தாந்த சண்ட மாருதம் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர நாயகரவர்களது அடியவர்களது அடியவர் திருக்கூட்டத்தவருள் ஒருவராகிய சி. பச்சையப்ப நாயகரவர்களால் வெளியிடப்பட்டது. முகவுரை: நிகழும் ஜய ௵ ஆனி ம௴ 15௳யில் நாமக்கார ரெட்டியாரொருவர் சிறிய பிரகடநமொன்று வெளியிட்டனர். அதில் கிளியனூரில் ஏகாங்கி யென்பவரைக் கொண்டு ௸ ௴ 26௳யில் ஒரு பிரசங்கஞ் செய்விப்பதாகவும், அந்தப் பிரசங்கத்தில் ‘நாராயணனே ஜகத்காரண வஸ்து வென்றும், சிவனுக்கு எவ்வழியாலும் பரத்துவமில்லை யென்றும், அச்சிவன் சீவகோடியிலொருவ ரென்றும், தபசிகளிற் சிறந்தவரென்றும்' அவ்வே காங்கியைக் கொண்டு தாபிக்கம் போவதாகவுந் தெரிவித்தனர். அவ்வளவேயன்றி ௸ தேதியில் அவ்வாறு செய்விக்க அவருக்குத் தெய்வந் துணை செய்யாமற் போயிற்று. ஏனெனின், அவர் கிளியனூரில் சிவநிந்தை செய்விக்தத் துணிந்த பயன் அவ்வூரில் தீப்பிடித்ததென்க, அவரெண்ணிய வெண்ணத்துக்கே தீங்கு விளைந்ததாயின், அத்தீய வெண்ணம் முற்றுப்பெற்றிருந்தால் பின்னர் நடக்கும் ஸம்பவத்திற்குக் கேட்கவேண்டுமா? ஊரார் செய்த புண்ணிய பலத்தால் ஏகாங்கினது அஸ்ப்யமொன்றும் அங்கு நடவாமற் போயிற்று நிற்க. இந்த ரெட்டியார் தேடிக் கொண்ட ஏகாங்கி யென்பார் வீண் புரளி செய்து பதுங்குவதே நிலைமையாகவுடையவர். சைவர்களை ஏகாங்கி வென்றாெரென்று ரெட்டியாரும், அவ்வேகாங்கி சைவர் முன்னிற்கவுந் திறமற்றவரென்று யாமும் பேசுவதிற் பயனில்லை, எதிரியினது சித்தாந்தத்தைப் பத்திரிகை வாயிலாக நிறுத்துவதே அழகாம் ..... சூளை சோமசுந்தரநாயகர் அவர்கள் எழுதிய சமயதர்க்க நூல்கள் பல. அவற்றுள் ஒருசிலவற்றை ஈண்டே குறித்தல் நலமாகும். 1. சுக்லாம் பரதர சுலோக விசாரம். 2. சிவ தத்வ சிந்தாமணி, 3. சிவபாரம்யப் பிரதரிசிநி, 4. சமரச ஞானதீபம், 5. ஆபாச ஞான நிரோதம், 6. ஸ்ரீசேக்கிழார் திருவாக்குண்மை 7. ஆர்சார்யப் பிரபாவம், 8. சித்தாந்த சேகரம், 9. சிவாதித்ய ரத்னாவளி, 10. பிரஹ்மதத்வ நிரூபணம், 11. சித்தாந்த ரத்நாகரம்—பிரம்ம வித்யா விகற்ப நிரசநம் முதலிய பல நூல்களை அவர் இயற்றியுள்ளார். அவருடைய சித்தாந்த ரத்நாகரம் என்ற நூலிலிருந்து ஒரு பகுதியைக் காண்போம் (1881). சித்தாந்தம் முடிவு எனும் பொருள்படும். எனவே தனக்குமேல் ஒரு கொள்கையற்றது. இம் முடிபு பெறப்பட்ட முடிபேமுடிபெனவும்,அதுவே சித்தாந்தம் எனவும் பெறப்பட்டது. ஆகவே இது ஆகம முடிபு எனப்படும்.வேதம்.சிவபெருமானால் சொல்லப்பட்டது.வேதமே சிவாகமம். சிவம் சகல கேவலங்களிற் றோயாத நின்மலப் பொருள். அச்சிவத்துக்கு வேறாகியஆன்மா அதனை அநுபவித்தற்குரியது. சிவனைப்போல் ஆன்மாவும் பிரகாசனமாய் விளங்குவதால் சிவன் அருளைத் தர ஆன்மா அதனைப் பெறவும் இடம் பெறாது. ஆன்மா மலத்தாற் பந்திக்கப்பட்டு அதுவாயொழிதலால் சிவத்தினருளைப் பெற்று இயங்கும் தன்மை வாய்ந்தது. ஆன்மாவைச் சித்தசித்து எனச் சிவாகமம் கூறும்; சதசத்து என்றும் கூறும். இவ்வாறே காஞ்சிபுரம் சபாபதி முதலியார் முதலிய பலர் சைவ சமய நெறி பற்றி விளச்கமான நூல்களை உரை நடையில் எழுதியுள்ளனர். அவை அனைத்தையும் ஈண்டுக் குறித்தால் அளவிலாது பெருகுமாதலின் இந்த அளவோடு இதை நிறுத்தி, இவர்களே பிறசமயத்தாரோடு மாறுபட்டும் பிற நெறியாளர் சைவத்தைப் பழித்த முறைகளை மறுத்தும், தர்க்க நெறியிலும் எழுதிய நூல்களுள் சில கண்டு அமையலாம். சோமசுந்தர நாயகர் பற்றியும் அவர்தம் புலமை பற்றியும் அவருடைய மாணவரும் நமக்கெல்லாம் அறிமுகமானவருமான மறைமலையடிகள் 1900 இல் எழுதிய சோம சுந்தரக் காஞ்சியாக்கத்தின் முன்னுரையால் நாட்டில் இருந்த சமயமாறுபட்டு நிலையும் தர்க்க முறையும் நன்கு புலனாகும். சோமசுந்தரக் காஞ்சியாக்கம்; முதற்பதிப்பின் முகவுரை; எமக்குச் சுத்தாத்துவித வைதிக சைவ சித்தாந்த நூற் பொருள் செவியறிவுறுத்தி இத்தென்னாடு முழுவதூஉம் அச்சித்தாந்த சைவப் பொருண்மரபெல்லாம் வகுத்தெடுத்துக்கொண்டு உபந்நியாசங்களாலும் நூற்களாலும் பலகாற் பலரு முய்யுமாறு விளங்கக் காட்டி ஓர் அரியேறு போல் யாண்டும் நிகரற்றுலாவிய எங்குரவர் ”சைவசித்தாந்த சண்டமாருதம்” ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர நாயக வள்ளல் சிவசாயுச்சியமுற்ற ஞான்று அப்பெருந்தகையார் பிரிவாற்றாது எம்மிடை நிகழ்ந்த கையறவு தெரித்து யாமியற்றிய 'சோமசுந்தரக் காஞ்சி'யின்மேல்ஒருசில போலிப்புலவன்மார் வழுவளைந்த போலி மறுப்பொன்று வெளியிட்டனராக, மற்றதனைக் கண்ட எம்மாளுக்கர் ஒருவர் அப்புலவர்க்குப் பொய்யறிவு களைந்து பொருளியன்மெய்யறிவுகொளுத்தன் வேண்டியும் அப்பொருளறிவின் மாட்சி தெரித்தல் வேண்டியும் தர்க்க நூலியைபும் பிரமாண நுட்பங்களு மிடை யிடையே கொளுவியொரு கோவைப் படுத்துத் தமதுமேற்கோளினிதுவிளங்கவெழுதிய அரியதோ ரெதிர் மறுப்பினை 'நாகை நீலலோசனி பிரபஞ்ச’ மித்திரன்’, ‘தமிழ்ப் பிரதிநிதி, முதலிய பிரபல சஞ்சிகைகளிற் பிரசுரித்தனர். அவ்வெதிர் மறுப்பு நியாய நெறிதழிஇ யுரங் கொண்டுலாவுதலினதனைக் கண்ட அப்புலவர்மார் அவ்வெதிர் மறுப்பான் மேல்மறுப் பொன்றெழுதினரெனவும் அம்மறுப்புப் பிரமாணப் பொருள் காட்டி நிறுவலாற்றாது பிறிது மொழிதல்’ என்னுந் தோல் வித்தானத் தோடியைந்து இகழுரை நிரம்ப நிகழ்த்தி மறுபட்ட தெனவும் எம் நண்பர் பலரோ டியாமொருங்கிருந்த வழி நம்மெதிரில் “தமிழ்ப் பிரதிநிதிப் பத்திராதிபர் கூறினராயினும் அப்போலி மறுப்புரை தானும் இதுகாறும் புறம் போந்திலாமையின், அவர் வெருட்டுரையை ஒரு பொருட்படுத்துவா மல்லே மென்றாெழிக. இத்தகைய வாதங்களும் தர்க்க நெறிகளும் பதினெட்டாம் நூற்றாண்டிலேயே உண்டாகி வளர்ந்துள்ளமைகாண்கின்றாேம். 'சித்தாந்த மரபு கண்டன கண்டனம்’ என்ற நூலில் சிவஞான முனிவர், சித்தாந்த மரபினைப் பழிப்பாரைக் கண்டித்துள்ளார். ‘வினையாவது அனாதியிலே ஆணவமலத்திலே ஆன்மாவுக்குக் கன்மத்திலுளதாம் விருப்பமென்றார் என்றீர். அவ்வாறிண்டு யாருமில்லை. ஒவரோ குழறுபடையாக எழுதிவைத்த தொன்றனைக் கைப்பற்றிக் குற்றங்கூறப் புகுந்தீர். ‘பொய்யர்குப் பொய்யாய பொய்யினன்’ என்றதுபோல நும் அறிவின் குழறுபடைக்கேற்பவே அதுவும் குழறுபடையாய் நுமக்கு வந்து வாய்த்தது. அன்றேல் நீர் கூறுவது மவ்வாறே பொருள்படுமா லெனின், மய்க்கவறிவுடையார்க்கு அவ்வாறு பொருள்படும். யாம் வேறெனக் கொண்டவதனை, ‘மூன்று குற்ற மூன்று குண மூன்று மல மூன்றவத்தை-யேன்று நின்று செய்யும் இருவினை” ஆகலின், அவ்வினையினியல் பறிதற்கு நீர் யார்? 'இருவினை பாசமும் மலக்க லார்த்தபின்’ என்றற்றொடக்கத்துச் சுருதிகளைக் கேட்க மறந்தீர் போலும் (பக். 40) என்று அவர் நாகரிகமாக எதிர்ப்பாரை மறுத்துள்ளமை காண்கின்றாேம். சோமசுந்தர நாயகர் மாணவருள் பலர் மாற்றாரை வேகமாகச் சாடுவதும் அதற்குப் பதிலாக மாற்றார் கீழான நிலையில் மாறுபாட்டுரை வழங்குவதும் சென்ற நூற்றாண்டில் நடைபெற்ற நிகழ்ச்சிகளாகும். இத்தகைய தர்க்கங்கள் பல உள்ளன. ஒன்று மட்டும் காண்போம். மெய்கண்ட சிவதூஷண நிக்ரஹம் (1900) சைவ நிந்தையே தவமெனக்கொண்டுவாழும் ஒரு மாயா வாதியார் சிலரைக் கும்பு கூட்டிக் கொண்டு, சைவ சமயிகள் பிரசங்கஞ் செய்யு மிடங்கடோறும் அவர்கனை யனுப்பிச் சிலகாலமாய்க் கல்லல் விளைத்து வருகின்றனர், அக்கூட்டத்தார் சைவப்பிரசங்கிகளோடு சாஸ்திரவாதம் புரிய வல்லுநரல்லர். பிரசங்கியார் ஒன்றை யெடுத்துச் சொல்லுவதன் முன்னரே மூலைக்கு மூலை கிளம்பி நின்று, பெருங்கூச்சலிட்டு பிரசங்கவொலி கேட்கவொட்டாமல், ஆரவாரிப்பதே அவர் தொழில். இதனால், மாயாவாதம் சைவத்தை செயித்துவிட்டதென்பது அவர் துணிபு. இம்மட்டிலொழியாமல் அவர் வரும்போது தஸ்திழமூட்டை கொண்டு வருவர். அவை சிவநிந்தை பொதிந்த காயிதக் குப்பையாம். குதர்க்க வாத விபஞ்சனி (1876): ஏ சூளை நாயகன் அடிமையே! நின்னாசிரியர் சீவகருணையே தமது கொள்கையெனற் கியைந்து உத்தம வாதமென்னுஞ் சுவடியை யெழுதின ரென்று நீ கூறி யழுதனை. ஐயோ கொடுமையே! நின்னாசிரியர் புலாலை விரும்பி யுண்ணு மசைவ ரென்பது அவருடைய ஸ்வபந்துஜநப் பிரசித்தியாயின் அதனை நீயேனோ மாற்றத் தலைப்பட்டனை? இது நின்னிடத்து மஹாபாரதமேயாம். 'பொருளாட்சி போற்றாதார்க் கில்லை யருளாட்சி, யாங்கில்லை யூன்தின் பவர்க்கு' என்றருளின பொரியோனருமைத் திருவாக்கை யுத்துணரப் பெறாத மருட்போத சீலரைச் சிவகருணையுடையவரென்று நீ வியந்து கூறுமாற்றால் தீயவற்றை நல்லனவாகக் கொண்டொழுகும் புல்லறிவாளரிற் றலைமகனாக நிச்சயிக்கப்பட்டவ னாயினை, அகங்காரத் திமிர்ப் புடையணாகிய உனதாற்றலும், உன்னைத் தூண்டி வெளியே விடுத்து மறைந்து கிடப்பராகிய உன தாசிரியராற்றலும் வெட்டவெளியாகுங் காலம் சமீபித்தது போலும். இதே முறையில் இராமலிங்க அடிகளாருடைய ‘அருட்பா'வினுக்கு யாழ்ப்பாணம் கதிரைவேற்பிள்ளையினுடைய 'மருட்பா’ வாதம் பற்றிய உரைநடை வெளியீடுகளும் கட்டுரைகளும் சில இருந்தன எனத் தெரிகிறது. இவ்வாறு ஒரே சமயத்தும், இந்து சமயமெனும் கூட்டுச் சமயத்தில் உள்ள பல கொள்கைகள் பற்றிய வாதப்பிரதி வாதங்களும் நிகழ்வது ஒருபுறமிருக்க, நாட்டில் புதிதாக வந்த கிறித்துவச் சமய மறுப்பான வாதங்களும் சில எழுந்தன. அவற்றுள் ஒன்றை மட்டும் கண்டு அமைவோம். கிறிஸ்துமத கண்டனம்—ஸ்ரீசிவசங்கர பண்டிதர்—1882 கடவுள் முதற் காரணர். அவர் படைத்த ஆதி மனுஷரை விவேகமில்லாதவராக ஏன் படைத்தார்? விவேகம் உடையவராயின் விலக்கியது செய்தலே தீமை-செய்யாமையே நன்மை என்று பகுத்தறியாமல் விலக்கிய கனியைப் புசித்தது என்னை? அக்கனியைப் புசித்தபின் உண்டாகிய நன்மை தீமைகளின் ஞானம் முன் இல்லாதது என்ன? தந்தை சொல் மீறும் அவன் குழந்தையின் பாபம் தந்தையைச் சாருமாப் போலவே ஆதிமனுஷரின் பாபம் ஆண்டவரைச் சாருமே! கனியை உண்டால் நன்மை தீமைகளின் ஞானம் உண்டாதல் கூடுவதாக, அதை விலக்கியது வஞ்சகமாமே! கிருத்துநாதர் பல அற்புதங்கள் செய்ததால் தேவன் எனக் கருதினால், மோசே, யோசுவா, எலிசா, எலியா முதலானவர்களும் தேவனாகக் கருதப்பட வேண்டும். பொய்க் கிருத்துவர்களும், பொய்த் தீர்க்கதரிசிகளும் எழும்பித் தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் தாமும் மயங்கத்தக்க மகா பெரிய அற்புதத்தையும் செய்வார் என்று சொல்லப்பட்டதால் அற்புதஞ் செய்தலினல் தேவன் என்று சாதித்தல் கூடாது. கணவனாற் சேரப்படாத மரியாள் என்ற கன்னிக்குப் பிறந்ததால் தேவன் எனினும், அந்தப் பெண் யோசேப்புவுக்கு மனைவியாக நியமிக்கப்பட்ட பின்பே கர்ப்பந் தரித்தாளாதலின் அவனாலாயினும், பிறராலாயினும் சேரபட்டே கருப்பந் தரித்தாள் என்று சொல்ல வேண்டும். எனவே இயேசு தேவன் அல்ல. தேவத்தன்மை பொருந்தியவனுமல்ல. இவ்வாறு சைவ சமயத்தின் சிறப்புப் பற்றியும் பிற சமயங்கள் பற்றியும் இவர்களேயன்றிக் காஞ்சி சபாபதி முதலியார், காசி விஸ்வநாத முதலியார், முதலியவரும் பெயர் தர விரும்பாத சிலரும், சில துறவிகளும் பல்வேறு உரைநடை நூல்கள் இயற்றியுள்ளனர். அவை அனைத்தும் பெரும்பாலும் தெளிந்த நடையுடையனவாகவே அமைகின்றன. இந்த அளவோடு சைவ சமய உரைநடை நூல்களையும் தர்க்க வாதங்களையும் நிறுத்தி மேலே செல்லலாம். வைணவம் வைணவ சமயத்திலும் சென்ற நூற்றாண்டில் பல உரைநடை நூல்கள் எழுதப் பெற்றன. பெருங் காவியங்களுக்கும் 'வசனங்கள்' எழுதப் பெற்றமையை முன்னரே கண்டோம். பல காவியங்களுக்கு உரைகளும் எழுதப் பெற்றன. சில வைணவ விரதங்களுக்கு விளக்கங்களும் தரப்பெற்றன. ஆசிரியர்கள், வைணவ நூல்களில் அதிக வடமொழிச் சொற்களைப் பயன்படுத்துவதைக் காண முடிகின்றது. ஆசார்ய ஹிருதயம்: (ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார்-1870) ஊராரென்றும், நாட்டாரென்றும், உலகத்தாரென்றும் சொல்லப்படுகின்றவர்கள் கேவலரும் இகபரலோ கைஸ்வர்ய காமருமான ஸ்வதந்த்ரரும் ஸங்கோச ரூபமான கைவல்ய மோக்ஷத்திற் கும்ப்ரக்ருதி ஸ்ம்பந்த நிவர்த்தியானால் தங்கு மூர்ஸ் மானமே. கீதையில் ஸித்த தர்மத்தினுடைய விதி இப்பிரபந்தத்தில் விதியும் அநுஷ்டாநமும், பாட்டுக்களுக்கும் கிரியைகளும் தஸ்கத்துக்குத் தாத்பர்யமும் போல நூறு பாட்டுக்களுக்கும் பரோப தேஸ் பரமான திருவாய்மொழி ப்ரதாநம். வார்த்தாமாலை: (நாத முனிகள் 1882) ஒருவனுக்கு அறியவேண்டுவது, ஸ்வரூப புருஷார்த்தோபாயங்கள். சித்துக்கு மூன்று ஸ்வபாவம் ஈஸ்வரனுக்கு மூன்று ஸ்வபாவம். அசித்துக்கு மூன்று ஸ்வபாவம். உற்பத்தியையும், உடைமையையும், உடைமைக்கு உண்டான ஊற்றத்தையும் உடைமைக்கு உற்பத்தியான உடையவனுடைய உயர் நிலையையும், உடைமைக்கும் உடையவனுக்கும் உண்டான உறவையும் சொல்கிறது திருமந்திரம். கர்மத்தையும் கர்மத்தில் களையறுப்பையும், கண்ணனையும் கண்ணன் கருத்தையும், கதியையும் பற்றும் படியையும், பரனையும் பற்றும வனையும், பாபத்தையும் பாபத்தில் பற்றுகையையுஞ் சொல்லுகிறது. சரமபரலோகம். கர்மம் கைங்கர்யமாயிருக்கும். ஜ்ஞாநம் ஸ்வரூபமாயிருக்கும். பக்தி போகமாயிருக்கும். ப்ராப்யம் தாரகமாயிருக்கும். உக்தி காலக்ஷேபமா யிருக்கும். நாராயணனுக்கு நைரந்தர்ய வேஷம். நம் பக்கம் பேற்றுக்கு (நம:) என்னாதவர்களையும் வானவர் நாட்டையும் நீ கண்டு கொள் என்ப தொரு ஒளதார்ய விஷேமுண்டு. நாரங்களுக்கு நைரந்தர்யும் வேஷம். (நாராயணனே நமக்கே பறை தருவான்) அனுஷ்டான விதியும் திருவாரதனக் கிரமமும்; (அரங்கசாமி முதலியார் 1888) காலக்ஷேபம் செய்தல்:-ஸ்ரீபகவத் விஷயாதி அஷ்டாத சரஹச்ய முதலிய வியாக்யான கிரந்த காலக்ஷேபங்களைக் காலோசிதமாய்ச் செய்து தண்டஞ் சமர்ப்பித்து, தீர்த்த வடியைச் சேர்ந்த தீர்த்தம் ஸ்வீகரித்துக்கொண்டு, திருமண் பெட்டியைச் சேர்த்து எழுந்தருளச் செய்யவேண்டியது. விஷ்ணு ஆலய தரிசன விதி: (மதுரை ரங்கையரவர்கள் 1890): முன்னுரை :-இவ்வுலகத்திலும் மற்றெவ்வுலகத்திலு முள்ள சகலான்மகோடிகளு மெளிதில் இகபர சாதன சித்தி பெற வெண்ணி உபயவேத, இதிஹாச, புராண, பஞ்சராத்திராதி ஆகம சாஸ்திரங்களாலும் பூர்வாசாரியர்கள் செய்தருளிய கிரந்தங்களிலும், பல பரக்கச் சொல்லிய திவ்யதேச சேவக் கிரமங்களையெல்லாம் ஒன்றாய்ச் சேர்த்து என்னால் இந்நூலில் அச்சிட்டுப் பிரசித்தி செய்யலாயிற்று. இந்நூலில் சொல்லியபடி கூடிய வரை சிரத்தையொடு நடப்பவர்கள் ஒரு குறையுமின்றி நிரதிசயானந்தத்தைப் பெறுகிறர்கள். இவ்வாறு பல வகைகளில் வைணவ சம்பந்தமான உரைநடை நூல்கள் வெளிவந்துள்ளன. இவ்வாறே பாரதம், இராமாயணம் முதலிய வடமொழி இலக்கியங்களை உரைநடையில் பலர் எழுதி வெளியிட்டுள்ளார்கள். பெரிய எழுத்தில் தடித்த அளவில் சாதாரணக் கிராம மக்கள் படித்தறியும் வகையில் அவை அமைந்துள்ளன. கிராமங்களில் ஓய்வு நாட்களில் திண்ணைகளில்-இராப்பொழுதில் ஒருவர் இத்தகைய உரைநடையை வாசிக்கப் பலர் கேட்கிற வழக்கம் நமக்குப் புதியதன்றே. இந்த வாசிப்பிற்கு வேண்டிய நூல்களில் பல சென்ற நூற்றாண்டில் எழுதப் பெற்றவையே. இதற்கு ஒரு சான்று காணலாம். ஸ்ரீ திராவிட மஹாபாரத வசனம்: இரண்டாவது வாலம் (2) (Vols.) இஃது வாக்கிய ரூபமாக அச்சிட்டுத் தரும்படி நிலைபெற்ற-சைவ - வைஷ்ணவ - ஸ்மார்த்த சமயப் பிரபுக்கள் கேட்டுக்கொண்டபடி ஸ்ரீ வேத வியாசர் செய்த கீர்வாண பாரதத்தை-தமிழில் நல்லாப் பிள்ளை செய்த பாடலை உரையிட்டபடி த. சண்முகக் கவிராஜரால் முன் பதிப்பித்த பிரதிக்கிணங்க, திருவொற்றியூர் பரசுராம முதலியார் குமாரர் கன்னியப்ப முதலியார் அண்டு பிரதர்ஸ் அவர்களால் தமது பரப்பிரம முத்திராக்ஷரசாலையில் பதிப்பிக்கபட்டது. (II Editian–1886) நூலுள் ஓர் எடுத்துக்காட்டு: இத் தன்மையாகப் பக்தர்களைக் காக்கும் ஸ்ரீ கிருஷ்ணமூர்த்தியையும் ஸ்ரீவேத வியாசரையும் பணிந்து, பொன்னிறைச் சடைமுடி புனைந்த வைசம்பாயனர் இது வரையிலுஞ் சொல்லி வந்த பஞ்சம வேதமென்னும் பரிசுத்த அமுதத்தைக் கற்புடைமையின் மனைமாட்சியினுயர்ந்த பொற்புடை யவயுஷ்டா தேவிக்குப் புருடசிலாக்கியனை ஜெனமே ஜெய மகாராஜன், காதெனும் வாய்மொழியா யருந்தி-அற்புதமடைந்து—மற்புயம் வளர்ந்து மகிழ்ந்து, விற்பனவிவேக மேலோனான வைசம்பாயனரை நோக்கி, சுவாமி, அப்பால் பாண்டவருக்கு நேரிட்ட பான்மையைப் பகர வேண்டுமென்று இறைஞ்சிக் கேட்க, வேதபாராயணராகிய வைசம் பாயனர் விளம்பத் தொடங்கினார். இவ்வாறே இராமாயணத்துக்கும் சில உரைநடைத் தொகுதிகள் வந்துள்ளன. இவ்வாறு வைணவ சமயமும் சென்ற நூற்றண்டில் உரைநடையை வளர்த்தது எனலாம். சமணம் சென்ற நூற்றாண்டில் சமண சமயம் பற்றி உரைநடை இலக்கியம் அதிகமாக இல்லை. பெளத்த சமயம் பற்றியும் சில நூல்களே வெளிவந்துள்ளன. முன்னரே உள்ள பாடல்களுக்கு விளக்கமேயென அமைந்துள்ளனவன்றி வேறு பெரும் உரைநடை நூல்கள் எழுதப்பெறவில்லை. அவ்வாறு வந்துள்ள இரண்டொன்றும் மணிப்பிரவாள நடையோ என்னுமாறு அமைந்த நிலையையே காண முடிகின்றது. ஜீவலம்போதனை என்ற நூலுக்குச் சென்ற நூற்றாண்டில் (1899) அச்சான ஒர் உரையை இங்கே காணலாம். பாட்டு எளிய தமிழ் நடையில் உள்ளது. ⁠பாட்டு; ஒர்ந்துயிரே கேளுங்க ணிற்ப நிலையாத வார்ந்தறிவு காண்பனவே யார்ந்தநிலை-சேர்ந்த வினையிஞ லாமுடலு மேவுமனை மக்கள் கினையுங்கா னில்லாவா னேர்ந்து (336). இதன் உரை:—கேளாய் ஜீவனே? நித்தியமும் அநித்தியமும் என்பன யாவையோவெனில் அனந்தக்கியானகி அஷ்ட குணங்கள் நின் கண்ணே பெறலாய் நின்றன. போய் நாட வேண்டாமவையே நித்யமாகுமன்றி நீ கொண்டு நின்ற சரீராதி புத்திரமித்திர களத்திர தனத்ரன்னிய முதலாய வஸ்துக்களெல்லா மனித்திய மாக மஃதெவ்வகையெனில். எனக்கூறி மேலுள்ள பாட்டைக் காட்டுவர். இவ்வாறு பாட்டிலும் உரை அதிக விளக்கம் தேவையான வகையில் உள்ளது. இசுலாம் சென்ற நூற்றாண்டில் இசுலாம் பற்றிய நூல்கள் பலவும் தமிழில் வெளிவந்துள்ளன. இச்சமயம் பற்றி அரசாங்கப் பதிப்பு வரையறைக்குட்பட்ட வகையில் முப்பத்தேழு ஆண்டுகளில் சுமார் 150 நூல்கள் அச்சிடப்பெற்றுள்ளன. அவைகளுள் பெரும்பாலான செய்யுளாகவே உள்ளன. சென்ற நூற்றாண்டில் அச்சுச் சாதனத்தைப் பயன்படுத்திய வகையில் அச்சமயத்தினரும் பல நூல்களை வெளியிட்டுள்ளனர். வேற்று மொழிகளிலிருந்து பலவற்றைத் தமிழில் மொழிபெயர்த்து இங்குள்ளார் தம் சமயத்தை அறிந்துகொள்ளும் வகையில் வெளியிட்டனர். தோத்திரப் பாடல்களாகவும் பல நூல்கள் வெளிவந்தன. பிற சமயங்களைக் குறைகூறும் வகையில் அமைந்த நூல்களும் சில. தமிழிலே எழுதப்பெற்றனவாயினும் பல அராபிய பர்சியச் சொற்கள் அவ்வாறே எடுத்தாளப் பெறுகின்றமையின், அச் சமய உண்மைகளை ஓதி உணர்ந்தாற் கல்லது மற்றவர்களுக்கு எளிதில் புலனாகாவாறு பல நூல்கள் அமைந்துள்ளன. ஒருசிலவற்றின் முன்னுரைகளையும் அச்சிட்ட வரலாறுகளையும் காணலாம். 1. திரியேகத்துவ நிவாரணம்: (இந்நூல் முகையத்தீன் ஷரீப்பு சாயபு அவர்களாலும் ஷா-முஹம்மது ஜியாவுத்தீன் சாயபு காதரியவர்களாலும் செய்யப்பட்டது.) 1876 சூன் 28 ரிஜிஸ்டர் செய்யப்பட்டது. ⁠Bangalore—Printed at the Union Press, ⁠⁠Cavaley Road, No. 220, 15—6—1875. ஷா-முஹம்மது ஜியாவுத்தீன் சாயபு காதரி அவர்களுடைய உத்தரவு அன்னியில் ஒருவரும் அச்சடிக்கக் கூடாது. அச்சடித்தால் சட்டப் பிரகாரம் நடத்தப்படுவார்கள். (The Copyright is preserved) இப்புஸ்தகம் தேவைபுள்ளவர்கள் திருநெல்வேலி ஜில்லா கசுப்பா சாலியா தெரு ௧௦௩ நிம்பர் வீட்டிலிருக்கும் மகா-௱-௱-ஸ்ரீ முஹம்மது மதார் சாயபு அவர்கள் குமாரர் ஷா-முஹம்மது ஜியாவுத்தீன் சாயபு காதரி அவர்களிடமிருந்து வர வழைத்துக் கொள்ளலாம். இந்நூல் மஹமது சமய உயர்வையும் இயேசு அனாதி அல்ல என்பதையும் இயேசு அல்லாவின் குமாரன் என்பார் கூற்றுத் தவறு என்றும் விளக்குவது. காரணம்: அல்லாஹுத்தாலா ஏகமாயும், முகம்மத் ரசுலுல்லாவவர்கள் அல்லாஹாத்தாலாவின் தீர்க்கதரிசி யென்கிற நபியாயுமிருப்பதைப் பற்றி அரபி—பார்சி-ஹிந்துஸ்தானி பாஷைகளில் அநேக கிதாபுகள் செய்யப்பட்டிருக்கின்றன. அந்தப் பாஷைகளை யறியாதவர்கள் அச்சங்கதிகளைத் தெரிந்து கொள்ளக் கூடாதவர்களாயிருக் கிறபடியால் அதை அவர்கள் அறிந்துகொள்ள வேண்டியதற்காகவும், உல்லியம் றாபட்டுசன் எக் மான் துரையுடைய கலாசத்துல் குதுப்புக்கு ஜவா பாகவும் இத்தேசங்களில் வழங்கப்பட்ட தமிழ்ப் பாஷையில் எழுதும்படி முகமதியர்கள் கேட்டுக் கொண்டபடியால் (சுருக்கமாய் எழுதி) 1874-இல் (நாங்கள் இருவரும்) 7 அதிகாரங்களில் எழுதி ஹிந்துஸ்தானியில் ரத்தேதஸ்லீஸ் என்றும் தமிழில் திரியேகத்துவ நிவாரணம் என்றும்பெயரிட்டோம். பொறாமையும் ஆங்கார முதலான துர்குணங்களையும் நிவர்த்தி செய்து நீதியுள்ள பார்வையினால் படித்துப் பார்க்கிறவர்களுக்கு அவைகள் ஞாயமானவைகளென்று வெளியாகும். இயேசு எங்கும் வியாபகரல்ல-இயேசு குமாரன் என்பது பொய்-விக்கிரக ஆராதனை பாவம்-உபதேசிகளை இயேசு நிந்தித்தது—முதலியனவற்றை விளக்கி, பெரும் பகுதியில்'நபியவர்கள்' தன்மையைக் காட்டுவது. (மொத்தம் 236 பக்கம்) 2. முகியீத்தினாண்டவர்கள் மெளலிதில் ஓர் பைத்தும் றசூல் நாயகம் பேரில் கசீதாவும் அடங்கியிருக்கின்றன. (பாட்டு) முன்னுரை: அச்சிட்ட வரலாறு. எல்லா வுலகங்களையு முயிர்களையும் படைத் திரட்சித் தரசாட்சி செய்யும் வல்ல காரணனை அல்லாகுத் ஆலாவுடைய திருத்தூதர்களான இலட்சத் தருபத்து நான்காயிர நபிகளென்றுந் தீர்க்கதரிசியருட் சிறந்த தலைமையரான முந்நூற் பதின்மூன்று முறுசல்க ளென்றும் தீர்க்கதரிசியர் கட்கு நாயக சமேதராகவும்-சகல படைப்பினங் கட்கு முற்பட்டவராவும்-மோட்ச காருண்யராகவும்-தீட்சானுகூல சுவந்தரீகராகவும்-மாட்சிமை தங்கிய ஆட்சிகொண்டு, காட்சிதரவந்த காரண கடவுள், ஹபீ புறப்பில் ஆலமீன், செய்துல்க கெளனைன், செய்யிதுல், முனுசலீன், தாஜுல்ல பியா, முகம்மது, முஸ்தபா, றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களின்-இயற்கையுஞ் செயற்கையுமாகிய காரண சரிதங்க ளனேகங் கணக்கிடக்கூடாதவைகள் அறபுப் பாஷையிலுண்டா யிருக்கின்றன. —அவற்றின் மொழிபெயர்ப்பு இது. 3. மகமதிய லா சுருக்கம் இஃது சதர் கோர்ட்டு பிளிடராகிய வ. சடகோபாசாரியரால் இங்கிலீஷில் செய்யப்பட்டு மேற்படி கோர்ட்டு பிளிடராகிய பி. எல். வ. இராசகோபாலாசாரியரால் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. நான்காம் பதிப்பு 1869 புஷ்பரதச் செட்டியாரவர்களது கலாரத்நாகரம் என்னும் அச்சுக்கூடத்திற் பதிப்பிக்கப்பட்டது... இதை தேச பாஷையிலும் செய்தல் வெகு பிரயோஜனமாயிருக்குமென்று யோசித்து நான் அந்த கிரந்தத்தைத் தமிழில் செய்தேன். இதில் தாயா விஷயம் வெகு கடினமானதாகையால், அதை இதில் சொல்லியதைக் காட்டிலும் தெளிவாய்ச் சொல்லுவது அசாத்தியமென்பது இதைப் படித்துத் தேர்ந்தவருக்கு நன்றாய்த் தெரியும்... தாயம்—தான விஷயம். விக்கிரயாதி வியவ காரங்கள் - லெளாகீக சம்பந்தங்கள். 4. நசீஹத்துல் இசுலாம் ஹனபிய்யா (தொழுகை முதலியன பற்றி) காயற்பட்டணம். கண்ணகுவது மருதுாமுகம் மதுப் புலவர் கிசுறத்த (ஹிஜிரா திவாசலிங்) கி. பி. 1880) முகவுரை: எல்லா வுவகங்களையு முயிர்களையும் படைத் திரணங்கொடுத் தரசாட்சி செய்யுஞ் சருவ வல்லமையுள்ள கடவுளான அல்லாவுக்கும் அல்லாவுடைய றதுலுக்கும், வேதத்திற்கும் முடிபு நாளைக்கும், ஈமான் கொண்டிசுலாத்தினெறிமுறை நடாத்து மூமீன் முசீலிமான, அஷறாபுள்ள எமதன்புற்ற வுடன்பிறப்பாளர்கள் யாவருக்குந் தெரிவிப்ப தியாதெனில்... 5. முகமது மார்க்க மகுத்துவ சிங்காரம்: ஓ! சிநேகிதர்களே லாபத்துடன் முதலைப் பெற்றுக்கொள்ளுங்கள். மேலும் இந்த சாறா அம்மாளுக்கு அடைபட்டிருந்த கற்பந் துறக்கப்பட்டு ஈசாக்கு நபி பிறந்தார். அதேதெனில் ஹாஜிறா அம்மாளுடைய பாத விசேஷத்தினால் பிறந்ததாய் விளங்குகிறது. கிபாயத்துல் இசுலாம். ஹிஜறத்து திவாசலிங் ௲௳௱௪௰௩ (கி. பி. 1880) ஈமாநுண்மை—இசுலா நன்மை என்னும் ஹக் சீகத்துல் இஸ்லாம். 6. சதுஞானிகள் சரித்திரம்: 1877 பிப்ரவரி-அப் துர் காதர் சாயபு இயற்றியது. கதையின் துவக்க வரலாறு: அல்லாசுபகானுத்த ஆலாவினுடைய கிருபையிலுைம் முகமதுநபி சல்லல்லாகு அலைகிலே வசல்ல மவர்களின் பருக்கத்தினாலையும் இந்த சாதுர்விஷ் என்னும் இஸ்லாவைச் சொல்ல ஆரம்பிக்கிறேன். இதை அறிவுந் தெளிவுமுள்ள ஆசை யுடையோர்கள் இன்புற்று விருப்பத்தோடு காதுக் குளிரவுங் கல்பு மகிழவுங் கேட்டிடுங்கள். 7. சையித்துன் கிஸ்ஸா 1882 (பாடல் நூல்) அல்கமதுலில்லாஹிறப்பில் ஆலமீன் வானம் பூமி அரசகுரு சுவர்க்கம் நரக மலைகடல் மா முதலிய பறவைகளும் நாற்காலிகளும் மலக்குகள் மனிதர்கள் ஜீன்கள் படையுண்ட படைப்புக்கள் யாவற்றும் புகழும் புகழ்ச்சிகளெல்லாம் அல்லா குத்த ஆலாஒருவனுக்கே லாயக்காயிருக்கின்றன. 8. ஜவாஹிருல் அதிஸ்—அப்துல் காதிர் சாயபு 1875 ஜனவரி 2-ஆம் பதிப்பு. முதலாவது பாபு தொழுகையைத் தொழ சோம்பேறியாயிருப்பதும் தொழுகையைத் தொழாமல் விட்டுவிடுவதின் அசாபின் பயானும் இன்னம் ஒலுவுச் செய்வதும் தொழுகையை விடாமல் தொழுவதின் சபா பின் பசீலத்தின் பேரில் - அல்லா குத்த ஆலா குற்றானில் திருவுளமாயிருக்கின்றன்.}} இவைகளேயன்றிக் காதிரசன மரைக்காயர் எழுதிய *கிருத்து மததீபிகை', முகமதுலெப்பை மரைக்காயர் எழுதிய ‘தத்துவ பரகண்டனம்’, ‘சிதடர் பரமறுப்பு’, செய்யிது அப்துல் வகாப் எழுதிய ‘தர்க்குல் ஜன்னா' முதலிய உரை நடை நூல்களும் உரைகளும் வந்துள்ளன. எனவே இசலாமும் சென்ற நூற்றாண்டில் தமிழ் உரையால் தான் வளர்ந்து, தமிழ் உரைநடையையும் வளர்த்தது என்பது கண் கூடு. கிறித்துவம் சமயத்துறையில் கிறித்துவ சமயம் பற்றிய ஆய்வுடன் இப்பகுதியை முடித்துக் கொள்ளலாம். கிறித்துவ சமய நூல்களே சென்ற நூற்றாண்டில் அதிகமாக வெளிாயயின தம் சமயம் பரப்புதற்கெனப் பல்வேறு வகைப் பட்ட நூல்களைப் பல அறிஞர்கள் எழுதி வெளியிட்டனர். யாழ்ப்பாணம், நாகைப்பட்டினம், புதுவை, தரங்கம்பாடி, வேப்பேரி முதலிய பல இடங்களில் தம் சமய நெறிச்கெனவே பல அச்சகங்களை நிறுவி, அவற்றின் வழி எண்ணற்ற நூல்களை வெளியிட்டனர் கிறித்தவ சமயத்தவர். தமிழ் நாட்டில் பெரும்பான்மையாகப் பரவியுள்ள கத்தோலிகர், புரோட்டஸ்டண்டு சமயத்தினர் ஆகிய இருவருமே இத்துறையில் பெரிதும் கருத்திருத்தித் தத்தம் கொள்கைகள் வளரப் பாடுபட்டனர். ஜான் மர்டாக் வெளியீட்டின்படி புரோட்டஸ்டாண்டு பிரிவினரே அதிக நூல்கள் வெளியிட்டுள்ளனர். சில நூல்களில் ஒருவர் கருத்தை மற்றவர் தூற்றியும் உள்ளனர். கொள்கை யடிப்படையில் சமயநெறி பற்றிய ஆய்வு எத்தகையது ஆயினும், அவர் தம் முயற்சியால் தமிழ் உரைநடையில் பல வகையான நூல்கள் வெளிவந்தன எனக் காண்பதே நமது நோக்கமாகும். புதிதாகத் தம் சமய நெறியைப் பரப்ப விரும்பிய கிறித்தவ மக்கள் ஒல்லும் வகையான் செல்லும் வாயெல்லாம் தம் சமய உண்மைகளை விளக்கம் பெறச் செய்தனர். திருக்கோயில்களில் ‘ஐயர்’ ‘குரு’ என்பார் ஆற்ற வேண்டிய நியதி தொடங்கிச் சாதாரண மனிதன் பின்பற்ற வேண்டிய அன்றாட வழிபாட்டு முறை வரையில் உள்ள பல்வேறு நிலைகளுக்கெனப் பலப்பல நூல்கள் இயற்றினர். இந்தியக் கிறித்தவரும் மேலை நாட்டிலிருந்து வந்தவருமாகப் பலர் தமிழ் உரைநடையில் நூற்றுக்கணக்கான நூல்களை எழுதி வெளியிட்டனர். எளிய கல்லா மக்களையும் தம் பக்கம் ஈர்க்க நினைத்தமையால் அவருள் பலர் மிக எளிய நடையில் - சிலர் கொச்சை நடையில்கூட-தம் நூல்களை எழுதினர், ஒரு சில நூல்கள் வேற்று மொழிகளிலிருந்தும் நம் தமிழில் மொழிபெயர்க்கப் பெற்றுள்ளன. அவற்றுள் மிகச் சிலவே இன்று நம்மிடையுள்ளன. எனினும் கிறித்துச் சபையின் நூல் நிலையங்கள் பல இவற்றைப் போற்றிக் காக்கின்றன. ஞானப் பொக்கிஷம் என்னும் ஒரு நூல் 1878 இல் வெளியாயிற்று, துறவிகளுக்குரிய சிறந்க நெறியை அது கற்பிக்கிறது. அதில் காலையில் எழுந்திருக்கும்போது அவர் தம் உள்ளம் அமைய வேண்டிய வகை விளக்கப்பெற்றுள்ளது. விடியற்காலையில் கோயிலின் மணி ஒலி எழுமல்லவா? அதைத் தொடர்ந்து அவர்தம் செயலும் தொடங்குகிறது, மணிச் சத்தம் கேட்டவுடனே நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துநாதர் உங்களைக் கூப்பிடுகிறார் என்று நினைத்து, தாமதியாமற் படுக்கையின்மேல் உட்கார்ந்து சிலுவை அடையாளத்தை வரைந்து அவனவன் தனது வஸ்திரத்தைப் பரிசுத்த கன்னியா ஸ்திரியின் கையிலே நின்று பெற் றுக்கொள்கிறது போல் உடுத்திக் கொள்ளுகிறது. இதற்குள்ளாகத் தியானிக்க வேண்டியதுகளின் பேரிற்குரிய சில நினைவுகனே நினைத்துக் கொள்ளுகிறது. இதன் பின் தியான விடத்தில் முழங்காலிலிருந்து சிலுவை அடையாளத்தை வரைந்து நெற்றி தரைமட்டும் வணக்கத்துடன் குனிந்து, பரிசுத்த திருத்துவத்துக்கு ஆராதனையாகச் சொல்லுகிற தாவது–பிறகு செபம். இவ்வாறு அவர்தம் உரைநடை செல்லுகிறது. நேற்றைய பேச்சில் கண்ட எளிய (கொச்சை) வகையில் இந்த நடை அமைகின்றது. இந்த நடையிலேயே பல நூல்கள் உள்ளன. எனினும் இவை சமய அடிப்படையில் அமைகின்ற காரணத்தால் ஈண்டு எடுத்துக்காட்ட நினைத்தேன். அவர்கள் செபம் செய்யும் வகைக்கு ஒரு மேற்கோள் காணல் ஏற்புடைத்தாகும். பரமண்டலங்களிலே யிருக்கிற எங்கள் பிதாவே உம்முடைய நாமம் அர்ச்சிக்கப் படுவதாக, உம்முடைய ராச்சியம் வருக. உம்முடைய சித்தம் பரமண்டலத்தில் செய்யப்படுகிறது போலப் பூமியிலேயுஞ் செய்யபபடுவதாக அன்றன்றுள்ள எங்களப்பம் எங்களுக்கு இன்று தாரும். எங்கள் கடன்காரர்களுக்கு நாங்கள் பொறுக்குமாறு போல எங்கள் கடன்களை யெங்களுக்குப் பொறும். எங்களைச் சோதனையிலே பிரவேசிப்பியாதேயும். திண்னையிலே நின்று எங்களை யிரட்சித்துக் கொள்ளும்—அமேன் சேசு. இது ஞானோபதேசச் சுருக்கம் என்னும் நூலிலிருந்து எடுக்கப் பெற்றது. இந்நூல் பற்றிய குறிப்பு வருமாறு:— "இஃது பூர்வ முதல் வேதவிற்பன்னர்களால் தமிழில் மொழி பெயர்த்த வண்ணம் வழங்குகின்ற அநேகம் பிரதிகளுக்கிணங்கச் சரவை பார்த்துச் சுத்தப் பிரதியாக வேப்பேரியின் (தூய)அர்ச்சிய சிஷ்டபேலேந்திரர் பேரால் பிரதிட்டையா யிருக்கிற தேவாலயத்தில் எழுந்தருளியிருந்த அர்ச் ஜந்துசாயப் பிராஞ்சிஸ்டு சபைக் குருவாக ‘மிக்கயேல்' (மைக்கேல்) என்னும் மாதவ முனிவரால் செய்து இரக்ஷணிய௲௮௱௭௰௨ (1872) புதுவை சென்ம விராக்கினி மாதா கோயிலைச் சேர்ந்த அச்சுக்கூடத்தில் ௩வது பதிப்பிக்கப்பட்டது'—இந்தக் குறிப்பினால் பலர் விவிலிய நூலை 1872க்கு முன் தமிழில் மொழி பெயர்த்தார்களெனக் காண்கின்றாேம். இந்த ஆண்டில் இந்நூலும் மூன்றாவது பதிப்பாக வந்துள்ளமையின், இதற்குமுன் இரண்டு பதிப்புக்கள் வெளிவந்து செலவாகிவிட்டன எனவும் காணப் பெறுகின்றது. இது 'சுத்தப் பிரதியா’ வெளியிடப் பெற்றது எனக் காணுகின்றமையின் இதற்கு முன்னிருந்தவை இன்னும் பலவகையில் பிழைபட்டும் குறைபட்டும் இருந்தன எனவும் எண்ண வேண்டியுள்ளது. சென்ற நூற்றாண்டில் ஒரு பக்கம் நல்ல உரைநடையைக் காணுகின்ற நமக்கு இவர்தம் நூல்கள் ஏன் உயர்ந்த உரைநடையில் இலலை என எண்ணத் தோன்றுகின்றது. மேலை நாட்டிலிருந்து வந்த அறிஞர்கள் தாமே வருந்தி இந்நாட்டு மொழியாகிய தமிழைக் கற்று, தாம் புலமை எய்தியவராக எண்ணினமையின் இவற்றைத் தாமே மொழிபெயர்க்க நினைத்து இடர்பட்டிருக்கலாம். அன்றித் தமிழில் சிறந்த அறிவும் எழுத்தாற்றலும் பெற்ற அறிஞர்கள் சைவம் வைணவம் முதலிய இந்நாட்டுத் தொன்மைச் சமயங்களைச் சார்ந்திருந்தமையின் அவர்கள் உதவி கேட்டாற் கிடைக்குமோ கிடைக்காதோ என்ற ஐயத்தால் அவர்களைச் சாராதிருந்திருக்கலாம். எனினும் சிறந்த சைவத் தூணாகிய ஆறுமுக நாவலர் முதலியோர் விவிலிய நூலினை மொழி பெயர்த்தார் எனக் காண்கிறோமே. எனவே, கல்லா மக்களோடு பழக நினைத்த மேலை நாட்டு அறிஞர்களும், தமிழ் நாட்டில் அச்சமயம் தழுவிய முன்னோடிகளும், அக்கல்லா மக்களுக்கு எளிதில் உணர்த்தவே இந்த வகை உரைநடையினைக் கையாண்டார்களோ என நினைக்க வேண்டியுள்ளது. எப்படியாயினும் ஒரு சில நூல்களைத் தவிர்த்து, பெரும்பாலாகச் சென்ற நூற்றாண்டில் வந்த இச் சமய நூல்களின் உரைநடை மிக எளிமையாகவும் கொச்சையாகவுமே உள்ளது. சில மேலை நாட்டு அறிஞர்கள் நல்ல நடையில் எழுதி யிருப்பினும் தேம்பாவணி முதலிய இலக்கியங்களும் 'போப் ஐயர் இலக்கணம் முதலிய இலக்கணங்களும் எழுதப்பெற்றிருந்த போதிலும் பல உரைநடை நூல்கள் எளிமையாக உள்ளமை கண்கூடு. இந்த நூற்றாண்டில் இந்த நிலை மாறிக்கொண்டி வருவதையும் காண்கின்றாேம், நன் மரண ஆயத்தம் என்ற நூலைப் பற்றி ‘இப்புத்தகத்தை அவஸ்தைப்பட்ட சேசு கிறிஸ்து நாதருடைய திரு இதயத்துக்கும் வியாகுல வாளாலூடுருவப்பட்ட தேவ மாதாவினுடைய மாசிலாத் திரு இதயத்துக்கும் பாத காணிககையாக ஒப்புக் கொடுக்கிற செபம்’ என்று விளக்கம் தரப் பெற்றுள்ளது. இதன் ஆசிரியர் பெயர் தெரியவில்லை, இந்நூல் 1860இல் எழுதப்பெற்றுள்ளது. இதில் ஒரு தொடர் காண்போம். இதனைச் சுவீகசரிக்கு மன்புள்ள சகோதரரே! உங்க ளாத்துமங் கரையேற்றுவதற்காக இச்சிறு புத்தகத்தை வருந்திச் செய்த நமக்கு நல்மரணங் கட்டளையிட்டுத் தமது திவ்ய தரிசனை யளிக்கும் பொருட்டுச் சர்வ கிருபையுடைத்தான சர்வேசுரனை யனுதினம் பிரார்த்தித்துக் கொள்வீராக. என்பது ஒரு குறிப்பு. இத்தகைய நூல்களில்,வடமொழி ஆதிக்கம் இட்ம்பெறவும் ஒரு காரணம் இருக்கலாம். இந்நாட்டில் உள்ள சமய நூல்களில், பிற இலக்கியங்களில் இல்லா வகையில் அதிகமாக வடமொழிச் சொற்களும் தொடர்களும் எடுத்தாண்டிருப்பதைக் கண்ட இச்சமயத்தவரும் தம் சமய இலக்கியங்களும் இந்த வகையில் அமைந்தால்தான் சிறப்புறும் என எண்ணி இருக்கலாமன்றோ! தம் புறத்தோற்றத்தைமாற்றித் தமிழ் நாட்டுக் கோயில்களில் பணியாற்றும் 'ஐயர்’ போன்றே தோற்றமளித்து, ‘ஐயர்’ என்ற பெயரையும் துட்டிக்கொண்டார்கள் எனக் காணும்போது, அந்த அடிப்படையிலேயே அதிக வடமொழிச் சொற்களை எடுத்தாண்டார்கள் என்றுசொல்வதில் தவறில்லைஎன எண்ணுகிறேன். எளியவர்கள் புரிந்துகொள்வதற்கென இலக்கண வழுவும் தெரிந்தே மேற்கொண்டுள்ளார்கள் என்பதை ஒரு நூலின் பாயிரத்திலேயே அதைப் ‘பிரசுரப் படுத்தியவர்' குறிக்கின்றார். இப் புத்தகத்தை யாவரு மெளிதில் வாசித்துணர வேண்டி, இலக்கண விதிப்படி எழுத்துக்களும் சொற்களு மிகுந்த புணர்ச்சி விகாரங்களின்றிச் செந்தமிழுடன் கொடுந்தமிழ் மொழிகளுஞ் சில வாக்கியங்களிலொருமையிற் பன்மையும் பன்மையிலொருமையும் பிரயோகிக்கப்பட்டிருக்கின்றன. எனத் தம் நூலாகிய சிலுவைப் பாதையின் ஞான முயற்சி பற்றித் தம் நடைக்குத் தாமே விளக்கம் தருகிறார் ஞானப் பிரகாச சுவாமிகளென்னு மாசிரியர். இந் நூல் பதினேழாம் நூற்றாண்டின் இறுதியில் செய்யப்பட்டு 1849தில் அச்சிடப் பெற்றுள்ளது. இதிலுள்ள “செபம்“ வடமொழிச் சேர்க்கைக்கு ஓர் எடுத்துக்காட்டு. சர்வ வல்லவரு நித்தியருமாகிய சர்வேஸ்வரா! என் பாவங்களா லெனக் குண்டான வசுத்தத் தனமும் வருகிறதாயிருக்கிற நித்திய ஆக்கினையும் பச்சாதாபத்தால் நிவாரணமாயிற் றென்று நம்புகிறேன் சுவாமி. (பக்.363) இது நூலின் நடை. மேலே பாயிரத்தில் கண்ட குறிப்பு நூல் வெளியிடுங் காலத்தில் எழுதிய ஒன்றாகும். எனவே சென்ற நூற்றாண்டிலும் அதற்கு முன்பும் தமிழில் கிறிஸ்தவ சமயம் பற்றி எழுந்த நூல்கள் பல வடமொழிச் சொற்களை அதிகம் எடுத்தாண்டமைக்கும் இலக்கண எல்லையை இகந்த மைக்கும் மிகக் கொச்சை மொழியிலே எழுதியமைக்கும் உரிய காரணத்தை இப்பாயிரத்தால் ஓரளவு உணர்ந்து கொள்ளலாம். - கிறிஸ்தவ சமயம் பற்றி இவ்வாறு எழுதப்பெற்ற நூல்கள் எண்ணற்றவை. இலண்டன் நகரக் காட்சிச் சாலை நூல்நிலையப் பட்டியலிலும், சென்னை அரசாங்கப் புத்தக விவர வெளியீட்டிலும் இத்துறையில் பல நூல்கள் வெளி வந்துள்ளமையைக் காணமுடிகின்றது. அவற்றையெல்லாம் ஈண்டு விளக்கிக்கொண்டிருத்தல் தேவையில்லை. கிறித்து நெறியின் வேறுபாட்டுக் கொள்கைகள் பற்றி முன்னரே கண்டோம். அக் கொள்கையுடையார் ஒருவர் மற்றவறைப் பழிக்கும் வகையில் சில நூல்கள் சென்ற நூற்றாண்டில் வெளிவந்துள்ளன, அவற்றுள் ஒன்று இராஜரிஷி ஞானப்பிரகாசர் என்பவரால் இயற்றப்பெற்ற, வேதப் புரட்டலை நீக்கும் சஞ்சீவியாகிய மெய்ஞ்ஞான திருச்சபையின் விளக்கம் என்பதாகும். இந்நூல் 1841 இல் வெளியானது. அதுபற்றி அவரே, உரோமன் கத்தோலிக்குத் திருச்சபை யென்பது பரம கர்த்தராகிய இயேசுகிருஸ்துநாதர் ஸ்தாபித்த சத்தியத்தின் துணாகவும் ஸ்திவாரமாகவுமிருக்கின்ற தென்றும் புரோடெஸ்டாண்டு மதங்கள் மனிதர்களால் உண்டாக்கப்பட்ட அபத்த மார்க்கங்களாயிருக்கின்றன வென்றுங் காண்பிக்கப்படுகின்ற திஷடாந்தங்தள், எனக் குறிக்கின்றர். மேலும் அவர். புரொடெஸ்டாண்டு மார்க்கங்களை மறுககிறதற்கு இந்தப் பிரபந்தம் செய்யப்பட்டமையால் இதிலுள்ள பொருள்களு மத்தாட்சிகளும் அந்த மதஸ்தர்களுக்கு முதலாய் மெத்ததெளிவாய் இருக்கத்தக்கதாக அவர்களுக்குள்ளே வழங்குகின்ற வேதாகமங்களின் பெயர்களும் அப்போஸ்தலருடைய நாமங்களும் இதிலே பிரயோகிக்கப் பட்டன. ஆகிலும் தெளிவுக்காக மாத்திரம் நானப்படிச் செய்ததேயொழிய புரொடஸ்டாண்டார் செய்த மொழி பெயர்ப்புகளை அங்கீகரிக்கிற துக்கல்ல. என விளக்கம் தருகின்றார். இவ்வாறு நூல் முழுதும் பல்வேறு விளக்கங்கள் உள்ளன. இந் நூல் அளவில் பெரியதாய் 466 பக்கங்கள் கொண்டுள்ளது. இதில் மாற்றாரை மறுக்கும் நிலையிலும் குறை கூறும் வகையிலும் உள்ள நிலை உயர்ந்த தன்று. இவ்வாறு ஒரே இயேசு சமயத்தே மாறுபாட்டுக் கொள்கையுடையார் தம்மைப் பழித்துக் கொள்ளும் நிலை எப்படி உண்டாயிற்றென்பது விளங்கவில்லை. மேற்கு ஆசியா நாடுகளின் தொன்மை வரலாறு விடை தரலாம். இக்காலத்தில் 'விஞ்ஞானம் மெய்ஞ்ஞானம்' என்ற இரு சொற்களும் அதிகமாக நாட்டில்பேதப்பெறுகின்றன. விஞ்ஞான்ம் இருந்தால் மெஞ்ஞானமாகிய தெய்வநெறிவேன்டா மென்பாரும், விஞ்ஞானமே மெஞ்ஞானத்தின் அடிப்படை என்பாரும் உளர். பரந்த அண்டகோள ஆய்வினைச் செய்து அந்த எல்லையில் நம் வாழ்வின் சிறுமையையும் எளிமையினையும் விளக்கி, அதன்வழி எல்லையற்ற இறையுணர்வை ஊட்டுவன சமய நெறிகள். இந்த அடிப்படையில் கிறித்தவ சமயத்தில் எழுதப்பெற்ற ஒருநூலே 'அண்டபிண்ட வியாக்கியானம்' என்பது. இது, 1874இல் சென்னை இந்தியன் அச்சுக்கூடத்தில் பதிப்பிக்கப் பெற்றுள்ளது. இந் நூல் பத்தொன்பதாம் நூற்றண்டுக்கு முன்பே உரோம நாட்டிலிருந்து இலங்கைக்குக் கொண்டுவரப்பெற்றுத் தமிழில் மொழிபெயர்க்கப் பெற்ற தெனினும், இதன் முன்னுரை வெளியான காலத்தில் எழுதப்பெற்றதே (1874). எனவே அந்த முன்னுரையில் ஒரு பகுதியைக் காணலாம். இந்நூலில் பஞ்ச பூத அமைப்புத் தொடங்கி, நிலம், கடல், பிற உயிரினங்கள் அனைத்தையம் விளக்கிக்காட்டி-அவற்றின் மாற்ற அமைப்புக்கள் அவற்றால் உண்டாகும் மாறுபாடுகள் அனைத்தை யும் காட்டிக்கடைசியில் இத்துணைப் பெரு அண்ட அமைப்பு:ஐம்பூத அமைப்பு, உயிரமைப்பு இவற். றின் மாற்றங்கள் ஆகியவற்றின் மூலமாய்க் கட வுள் உணர்வைக்காட்டி விளக்குதலே. மேலும், அண்டமென் கிற பெரிய லோகமும் பிண்டமென்கிற சின்ன லோகமும் பரஞ்சோதியாகிய பராபர வஸ்துவினுடைய வொப்பல்லாத ஞானத்தையும் கரைகாணாத கிருபாகடாஷத்தையும் மனோ வாக்குக்கெட்டாத மேலான வல்லமையையும் அளவறுக்கப்படாத விமரிசையையும் கணக்கற்ற உபகார நன்மைகளையும் திவ்ய கீர்த்திப் பிரதாப சோபனங்களையும் சாங்கோபாங்கமான பிரகாரமாகப் பிரத்தியக்ஷமாய்க் காண்பிக்கிறதனாலே யாவரும் பராபர வஸ்துவை அறியும்படிக்கிச் சம்பூர்ண தாற்பரியமாயிருக்கிற நாம் கடவுளுக்குத் தோத்திரமாக அண்ட பிண்ட வியாக்கியானம் பண்ணத்தக்கதாக வபேக்ஷையா யிருக்கிருேம். என்பது நூலாசிரியர் குறிப்பாக அமைகின்றது. இவ்வாறு பலவகைகளில் சமய உண்மைகளை விளக்குவதோடு விவிைடை வகையிலும் தம் சமய உண்மைகளைப் பலர் விளக்கியுள்ளனர். எளிய நடையில் தம் சமயம் பற்றிய கேள்விகளை எழுப்பி, அவைகளுக்குத் தாமே விடை யிறுக்கு முகத்தான் தம் சமய நெறியைப் பாமரமக்களுக்குப் பரப்பிய சமயத் தலைவர்கள் பலர். அவர்தம் நூல்களும் பல. அவற்றுள் இரண்டனை மட்டும் இங்கே காணலாம். ஒன்று தமிழுக்கே ‘ஒப்பிலக்கணத்தால்’ அரணமைத்த கால்டுவெல் ஐயர் எழுதியது (1887). மற்றென்று ஞானப்பிரகாசர் எழுதியது (1884). சுருக்கமான வினா விடைகள் -கால்டுவெல் (பாளையம் கோட்டை) 1887. வினா:பரிசுத்த ஆவியானவர் என்னசெய்கிறார்? விடை: தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களுடைய இருதயத்தைப் பரிசுத்தம் செய்கிறார். வினா; ஏன் அவர் அதைப் பரிசுத்தம் செய்ய வேண்டும்? விடை: அது அசுத்தமாயிருப்பதானாலே அதைப் பரிசுத்தம் செய்ய வேண்டும். வினா: எவைகளில் அவை அசுத்தமாயிருக்கிறது? விடை: பாவ இச்சைகள், பாவ யோசனைகள், பாவ குண நடவடிக்கை இவைகளினால் அசுத்தமாயிருக்கிறது. நற்கருணை மாலைசிறு வினாவிடை (பாளையங்கோட்டை) ஒய். ஞானப்ரகாசர் 1884 40வது வினா-இராப் போசனம் பந்தியில் சேர்வதால் பிரயோசனம் என்ன? விடை: இந்தப் பந்தியிற் சேர்ந்து இதன் மூலமாய்க்கிறிஸ்துவின் மரணத்தை நினைவுகூர்ந்து அதை தியானிப்பதினால் நமக்குள்ளிருக்கும் பாவத்தின் பெலன் குறைகிறது. உலகத்தைப் பற்றிய வெறுப்புண்டாகிறது. துர் ஆசைகள் இன்பங்கள் அழிகிறது. பரலோக வாஞ்சை மேலிடுகிறது. உரைநடை நூல்களே யன்றிச் சிறந்த செய்யுள் நூல்களும் சென்ற நூற்றாண்டில் வெளி வந்தன. கிருஷ்ணப் பிள்ளை அவர்கள் எழுதிய இரட்சணிய யாத்திரிகம் என்ற நூல் அவற்றுள் சிறந்ததாகப் போற்றப்படுவதாகும். வீரமா முனிவரால் எழுதப்பெற்றுச் சென்ற நூற்றாண்டில் (1849இல்) வெளியான தேம்பாவணியும் சிறந்த இலக்கியமாகும். இரண்டும் பாடல்களேயாயினும் அவற்றின் விளக்கங்கள், முன்னுரை ஆகியன உரைநடையில் தாமே உள்ளன. தேம்பாவணிக்கு வெளியீட்டாளர்களே (பிரசித்தப்படுத்தியவர்) முன்னுரை எழுதியுள்ளனர். எனவே இந்நூல்களின் முன்னுரைகளும் ஈண்டு எண்ணத் தக்கனவே. இரட்சணிய யாத்ரிகம்: முன்னுரை: எய்ச். ஏ. திருஷ்ணப்பிள்ளை, முதற் பதிப்பு: 1—5—1894, திருவருட் பலத்தால் என் உத்தியோக விஷயத்திற் செலவிட்ட நேரம்போக மீந்த நேரங்களிலும் விசேஷமாய் வியாதிக்கப்பட்டிருந்த இராக் காலங்களிலும் உழைத்து இந்த நூலைச் செய்து முடிக்க அருகனானேன். ஆரம்பந்தொடங்கி உத்தேசம் ஆயிரஞ் செய்யுள் முடியுமட்டாக (பின்னே யெனக்கு ஜீவன் கிடைத்த போதிலும்) இந்த நூலைப் பூரணமாய்ப் பாடி முடிப்பேனென்ற நம்பிக்கை கிஞ்சித்து மில்லாதிருந்தது. ஆனபோதிலும், அப்போதப்போது பாடி முடிந்தவற்றில் பாளையங்கோட்டையில் மாஸந்தோறும் பிரசுமாகிற 'நற்போதகம்' என்னும் பத்திரிகையில், கொஞ்சம் கொஞ்சம் அச்சிடு வித்து வந்ததினால், அம்மட்டில் வித்வான்களான சில சிநேகிதர் வாசித்துப் பார்த்துத் தமிழ் நாட்டில் இது பிரயோஜனப்படக்கூடியது. 'இளக்கரியாது பாடி முடிக்க வேண்டும்’ என்று பலவாறாய் வற்புறுத்திச் சொல்லிவந்ததினுலும் எனக்குள் ஆதி தொடுத்துள்ள பிரிதி வரவரக்கதித்து வந்ததினாலும் காலம் குறுகாது நீடித்ததனாலும், சும்மா வீண் காலம் போக்குவதில் இஷ்டமில்லாதிருந்ததிலுைம் இது வைதீக காலக்ஷேபமாக வாய்த்ததினாலும், மனசில் ஊக்கமுண்டாகித் தொடர்ச்சியாய்விடாப்பிடியாய் முழுபலத்தோடு முயற்சித்து வந்தேனெனினும் ஆண்டாண்டு நேர்ந்த பல விக்கினங்கள் இடையூறுகளால் தடுக்க லுற்று இடைக்கிடை சிறிது காலம் ஒரு செய்யுளாவது எழுதவும் வாய்க்காமல் கழிந்து போனதுமுண்டு. ஆயினும், தேவானுக்கிரகம் முற்றுப்பெறச் செய்தது. கடவுளுக்கே ஸ்தோத்திரம், தேம்பாவணி; இக்காப்பியத்தைப் பிரசித்தப் படுத்தியவரால் எழுதப் பெற்ற முகவுரை: முதல் வெளியீடு 1849. (மூன்றாம் பதிப்பு 21—11—1928.) தேனினுமினிய வித் தேம்பாவணியைக் குறித்து நெடுங்காலங் கற்றாேர் முதன் மற்றநேகரிடத்துப் பற்றிய வாசை யிப்போது தேவனருள நுக்கிரகத்தா னிறைவேற வதினிமித்த மத்தியந்த களிகூறுகின்றாேம். அதேதெனி லிம்மூன்றாம் காண்டத்தோ டஃது முற்று மச்சிற் பதிப்பித்தி யாவர்க்கு மின்ப நன்மையாம்படிவெளிப்படுகின்றது. ஆதலான் முகிலிடத்து மறைந்த செழுஞ்சுட ருல கிருட்போக்கி விளக்கினு மதினின் றுதித்துத் தன்னொளி முகங் காட்டுளி யெத்திக்கினுந் தெண்கதிர் வீசி மிகப் பிரகாசிப்பது போல நூற்றிருபது வருடமளவுங் கையெழுத்துப் பிரதிகளை யித்தேசத் தெத்திசையினும் பரப்பி யவற்றின் மறை முகிலின் மறைந்த விவ்வுத்தம காப்பியமெங்கணு மிகுகீர்த்திப் பேர்பெற்றுச் சுகிர்தவொளி பரப்பி விளங்கியிருப்ப வீரமா முனிவரது கையெழுத்துப் பிரதிக் கொப்ப வச்சடித்த பிரதியாய் வெளியிட்ட பின் பதிக, தெளிந்த பிரகாசக் கதிர் வீசி மேன்மேலும் பிரபலியமாமென்று நம்பிக் கொள்ளுகிறோம். இவ்வாறு பல வகைகளில் கிறித்தவ சமயத்தார் தமிழ் உரைநடையில் பல்வேறுவகை நூல்களை எழுதித் தம் சமயத்தை வளர்த்துக்கொண்டதோடு, தமிழ் உரைநடை வளரவும் பெரிதும் பாடுபட்டனர். இலக்கண இலக்கிய உரைகள் சமயச் சார்பான உரைநடை நூல்களைத் தவிர்த்துப் பொதுவான வகையில் நல்ல உரைநடை நூல்களும் வெளி வந்தன. சில பழம்பெரும் இலக்கியங்களுக்கு உரைகள் பல சென்ற நூற்றாண்டில் வெளிவந்தன. மேலும், இலக்கணம், மொழிபற்றிய நூல்களும் தமிழில், உரை நடையில், எழுதப் பெற்றன. எனவே இவையும் தமிழ் உரைநடை வளர்ச்சிக்குப் பெரிதும் உதவி செய்தனவாக அமைகின்றன. சிறந்த நாடகமாகிய மனோமணியத்தைப் பாவால் இயற்றிய ஆசிரியர் சுந்தரம் பிள்ளை அவர்கள் சாத்திர சங்கிரகம் என்னும் நூற்றாெகை விளக்கத்தை எழுதி வெளியிட்டுள்ளனர் (1888). இந்நூலின் வழி ஆசிரியர் நூல்களை அவர் காலநிலைக் கேற்பப் பிரிக்கும் வகைகளை விளக்குகிறார். அவர் வாக்கின் வழியே காண்போம். முகவுரை: தற்கால நிலைமைக் கேற்ப சாஸ்திரங்களை எத்தனை வகுப்பாய் வகுக்கலாமென்பதும் அவற்றின் முக்கிய முறைமையும் விஷயமும் என்ன வென்பதும் ஆம் வகை எடுத்து விளக்குவதே கீழ்வரும் நூற்றாெகை விளக்கப் பொதுவியலின் தலைமையான உத்தேசம். இது திருவிதாங்கோட்டுக் கவர்மென்றாருடைய நூதன பிரசங்க ஏற்பாட்டின் படி ஓர் உபந்நியாசமாக எழுதப்பட்டு, திருவனந்தபுரம் சர்வகலாசாலையில் வாசிக்கப்பட்டது. வேறு பல வேலைகளிடையில் அவசரமாய் எழுதப்பட்டமையால், சொற்குற்றம், முறை வழு, இவை இப்பொது வியலில் இல்லாதனவாகா! ஆயினும் ஆன்றாேர் அவற்றை ஒழித்து இச்சிறு நூலைப் பொதுவாக அங்கீகரிப்பாராயின், இதில் குறிக்கப்படும் சில தலைமையான சாஸ்திரங்களின் முக்கிய முடிபுகளை இவ்வாறே விளக்கி இந்நூற்றாெகை விளக்கத்தின் ஒவ்வோரியலாக இயற்ற வேண்டுமென்னுங் கருத்துடன் இது வெளியிடப்படுகிறது. திருவனந்தபுரம், பி. சுந்தரம்பிள்ளை. ௧௦௬௩௵ மேடரவி (May 1888) தொன்னூல் விளக்கம் முகவுரை-இரண்டாம் பதிப்பு 1891 ஆகஸ்டு செந்தமிழ்க்குரிய ஐத்திலக்கணத்தை சுருக்க மாகவும், தெளிவாகவும் தெரிவிக்கும் சிறந்த நூல் வேறின்மையின் இதனை மானாக்கருக்குப் பிரயோஜனமாக இரண்டாந்தரம் அச்சிற் பதிப்பிக்க வேண்டுமென்று நான் விரும்பி இராயப்பேட்டை உவெஸ்லியன் மிசியோன் காலேஜூ தமிழ்ப் பண்டிதரும் என் நண்பருமாகிய ம-௱-௱-ஸ்ரீநீநிவாச ராகவாச்சாரியார் அவர்களை இதைப் பார்வையிடும்படி, கேட்டுக்கொள்ள அவர் இதைப் பழைய பிரதியுடன் ஒப்பிட்டுப் பரிசோதித்துத் தர, அதை நான் முதற்பதிப்பைப் போலன்றிச் சூத்திரமும் உரையும் நன்கு விளங்குமாறு குத்திரத்தைச் செய்யுள் போலப் பெரிய எழுத்திலும் வசன ரூபமாயிருக்கும் உரையைச் சிறிய எழுத்திலும் பதிப்பித்து, அதிகாரம், இயல். ஒத்து முதலியவற்றிற்குத் தக்கவாறு இங்கிலீஷ் பெயரும் எடுத்துக் காட்டியிருக்கிறேன். மேற்கூறிய எனது நண்பர் எனக்குச் செய்த இப்பேருதவிக்கு நான் மிக நன்றியுடையவன யிருக்கிறேன். இங்ஙனம் ஜி. மெக்கன் ஜி. காபன். இதன் முதல் பதிப்பு 1838இல் புதுவையில் (களத்தூர் வேதகிரி முதலியாரால் பார்வையிடப் பெற்று) வெளியிடப்பெற்றது. தமிழ்த்தொண்டு செய்தவருள் யாழ்ப்பாணம் திரு. சி. வை. தாமோதரம்பிள்ளை அவர்களும் சிறந்தவராக வைத்துப் போற்றக்கூடியவராவர். சென்ற நூற்றாண்டில் அவர் பல நூல்களைப் பதிப்பித்துள்ளார். அவர் சிறந்த சைவர். அவரின் சமயப்பற்றும் மொழிப்பற்றும் அவரது உரை நடையும் "இலக்கண விளக்கம்’ பதிப்பு முன்னுரையால் (1855) நன்கு தெளிவாகும், பரசமய நூலை வாசித்தபோது அதிலோதிய பொருளை மெய்யென மயங்கி மகிழ்ந்த அநபாய சோழனை இடித்துரைத்துக் கண்டித்த அருண் மொழித் தேவனைப் போலாகாது சுவாமிகள் ஈண்டுச் சொற்சுவை பொருட்சுவைகளின் மேற் தம்மாணாக்கர் மனஞ் செலுத்தாவிடத்தன்றாே பரிதாபமடைந்தனர்? பின்னர் அபிஷேகத்தார் மரபிலுதித்துச் சுத்த சித்தாந்த சைவ சமயியாய்ச் சைவ சமயாசாரியராய் எழுந்தருளிய இந்நூலாசிரியர் இயற்றிய நூலும் உரையும் சிறப்புடையனவாகவும் பஞ்சலட்சணமும் பொருந்திக் கற்போர்க்கு மிக்க பயன்தருவனவாகவும் இருக்க; அதனை விரோதித்துப் பாற்கடலிலுள்ள மீன்கள் அப்பாலை விரும்பாது வேறு பலவற்றை இச்சித்தல்போல, இரண்டிலக்கணமாத்திரமுடைத்தாய்ச் சமணாசிரியராற் செய்யப்பட்டுள்ள நன்னூலைச் சிறப்பிக்க முயன்றது திருவாவடுதுறையாதீனத்தார்க்குத் தகுந்த செய்கையன்றென்பது சைவ சமயாபிமான முடையோர் அனைவராலும் ஒப்புக் கொள்ளற் பாலதேயாம், இந்தப் பகுதியால் அவருடைய சைவப்பற்று மிக்குத் தெளிவானதோடு, வேற்றுச் சமயத்தாரிடம் கொண்ட காழ்ப்பும் நன்கு தெரிகிறது. இலக்கணவிளக்கம், நன்னூல் இரண்டையும் உணர்ந்தவர் இவர் கூறுவனவற்றைச் சரியென்று கொள்வார்களோ? காலமே அவர் கூற்றை மறுத்து நன்னூலை வாழவைத்து மற்றதைப் பின்தள் விட்டதே. எனினும் சிறந்த ஆசியராகிய இவர் சமயப் பற்றே பற்றாகக்கொண்டு பிறவற்றைக் காண மறுக்கின்றார். இவர் வேறு பல நூல்களையும் பதிப்பித்தார் எனக் காண்கின்றாேம். இவர் போன்றே சென்ற நூற்றாண்டில் திருத்தணிகை வீரசைவர் விசாகப்பெருமாளையர், மகா வித்வான் மயிலை சண்முகம்பிள்ளை, களத்தூர் வேதகிரி முதலியார் முதலிய அறிஞர்கள் சில நூல்களை வெளியிட்டுள்ளனர். டாக்டர் உ. வே. சாமிநாத ஐயர் அவர்கள் பல நூல்களை வெளியிட்டமை நாடறியும். அவர் சிந்தாமணிக் களித்த முன்னுரையில் ஒரு பகுதியைக் காணலாம். சீவக சிந்தாமணி: முதற்பதிப்பின் முகவுரை. இச் சீவக ப்ந்தாமணியை உச்சிமேற் புலவர் கொள் நச்சினார்க்கினியா ருரையுடன் பல பிரதி ரூபங்களைக்கொண்டு நன்றாகப் பரிசோதித்து எழுதுவோரால் நேர்ந்த வழுக்களை மாற்றி, பலருக்கும் பயன்படும் வண்ணம் அச்சிடுவிக்க முயலும்படி சில வருடத்திற்குமுன், சேலம், ம-௱-௱-ஸ்ரீ இராமசாமி முதலியாரவர்கள் பலமுறை வற்புறுத்திக் கூறி எனக்குத் தம்பாலிருந்த கையெழுத்துப் பிரதியையுங் கொடுத்தார்கள். யான் அவ்வாறு செய்தற்கு அநருகனாயினும், உலோகோபகாரிகளாகிய அவர்கள் சொல்லை மறுத்தற் கஞ்சியும். கல்விமான்களுக்குக் கருவூலம் போலும் இந்நூல் உரையுடனே நின்று நிலவுதல் குறித்தும் ஒருவாறு அவ்வண்ணஞ் செய்யலாமென்று துணிந்து முயன்று வருகையில் இத்தமிழ் நாட்டிலுள்ள கல்வியறி வொழுக்கங்களான் ஆன்ற விவேகிகள் பலர் இம்முயற்சி இனிது பயன்படும் வண்ணம் தம்பாலுள்ள பழைய கையெழுத்துப் பிரதிகளை அன்போடு கொடுத்தார்கள். அவையனைத்தையும் வைக்கொண்டு ஒப்பு நோக்கி வந்தேன். ஒன்றுக்கும் பற்றாத சிறியேனை இம்முயற்சியிற்புகுத்தி நடாத்தி நிறைவேற்றி யருளிய எம்பெருமானது திருவருளையும் குருவருளையும் எக்காலத்துஞ் சிந்தித்து வந்திருக்கிறேன், கும்பகோணம் இங்ஙனம், அக்டோபர் 1887 வே. சாமிநாதையன். புறப்பொருள் வெண்பாமாலை உ.வே.சா. 1895 முன்னுரை பறநானூறு ⁠" 1894 ⁠" பத்துபாட்டு ⁠" 1899 ⁠" சிலப்பதிகாரம் ⁠" 1892 ⁠" மணிமேகலை ⁠" 1898 ⁠" சூளாமணி சி.வை.தா. 1889 ⁠" வசண சூளாமணி (மாணாக்கருக்கு) ⁠" 1898 ⁠" சிலப்பதிகாரம்- (புகார்க் காண்டம்-வேணிற்காதை முடிய) 1772 ⁠" தி. ஈ. சீனுவாசாச்சாரியார். முதலியனவும் எண்ணத்தக்கன. உ. வே. சா. (ஐங்குறுநூறு முன்னுரை) கையெழுத்துப் பிரதிகளைத் தேடுதல், எழுதுவித்தல், ஒப்புநோக்குதல் முதலியவைகள் முடிவில் இன்பத்தை விளைப்பவையாயினும் எதுவும் தக்க பொருளுதவியின்றி நடைபெருத இக்காலத்தில், அவைகளே அப்பொழுது அப்பொழுது பல வகையான துன்பத்தை விளைவிக்கின்றன. ‘அருளி . இல்லாகி யாங்கு' என்பது பொய்யா மொழியன்றாே! ஒரு பழைய நூலைப் பதிப்பித்தற்குரிய உழைப்பிலும் பொருட் செலவிலும் காலச் செலவிலும் அதனை ஆராய்தற் குரிய உழைப்பும் பொருட் செலவும் காலச் செலவும் மிக அதிகம் என்பதைப் பழகியவர்கள் நன்கு அறிவார்கள். திரிசிரபுரம் மகாவித்துவான் ஸ்ரீமீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களுடைய கண்மணி போன்ற முதல் மாணாக்கரும் பாடஞ் சொல்லுதல், செய்யுள் செய்தல், நூலாராய்தல் முதலியவற்றில் அவர்களைப் போன்றவரும் முன்பு கும்பகோணம் கவர்ன்மென்ட் காலேஜ் தமிழ்ப் பண்டிதராயி இருந்தவரும் வேறு கவலையின்றி நூலாராய்ச்சியையே செய்து கொண்டு காலங்கழிக்கும்படி வற்புறுத்திக் கூறி அவ்வாறே யான் நடத்தற்குக் கரும்பு தின்னக் கூலி கொடுத்தாற் போலத் தம்முடைய அரிய வேலையை அன்புடன் எளிதில் எனக்குக் கிடைக்கச் செய்தவரும், ‘இரந்து புன் மாக்கள் தமை என்றும் துதியா வரந்தரு என் முன்னின்ற வள்ள'லுமாகிய திரிசிரபுாம் வித்துவான் ஸ்ரீ தியாகராச செட்டியார் அவர்களுடைய அன்புடைமை எழுமையும் மறக்கற் பாலதன்று. அவர்கள் செய்த மேற்கூறிய அரிய உதவி இல்லையேல் எனக்கும் பழைய தமிழ் நூலாரய்ச்சிக்கும் இக் காலத்தில் யாதோரியையு மின்றென்பது திண்ணம். ஆதலால், இனியதும் அரியதுமான இந் நூற் பதிப்பை அவர்களிடத்திலுள்ள நன்றி யறிவிற்கு அறிகுறியாக அவர்கள் பெயருக்கு உரியதாக்குகின்றேன். ஐங்குறுநூறு-பழைய உரை (1903) இதுபோன்று சென்ற நூற்றாண்டின் இறுதியில் மகா மகோபாத்தியாய-டாக்டர் - உ. வே. சாமிநாத ஐயர் அவர்கள் சிந்தாமணி முதலிய சில நல்ல இலக்கிய நூல்களை வெளியிட்டுள்ளார். இவரனைவரும் தத்தம் வெளியீட்டு நூல்களுக்கு முன்னுரை, குறிப்புரை, விளக்கம் முதலிய எழுதிய காரணத்தால் சென்ற நூற்றாண்டின் உரைநடைக்கு ஆக்கம் தந்தவராகின்றனர். ஆறுமுக நாவலர் சைவ இலக்கிய நூல்களும் உரைகளும் பாட நூல்களும் மட்டுமன்றி மாணவருக்கு எளிதில் விளங்கத்தக்க இலக்கண நூல்களும் உரைநடையில் எழுதி உதவினர். எழுத்தியல் இலக்கண நூலாவது உயர்ந்தோர் வழக்கத்தையும் செய்யுள் வழக்கத்தையும் அறிந்து விதிப்படி எழுதுதற்கும் பேசுதற்கும் கருவியாகும் நூலாம். அந்நூல், எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், தொடர் மொழி யதிகாரம் என மூன்றதிகாரங்களால் வகுக்கப்படும். என்று காட்டி, உடனுக்குடன் 'பரிக்ஷை வினாக்கள்’ என்ற பகுதியையும் அமைத்து அதில் அவ்வப் பகுதிகுரிய வினாக்களையும் தந்து கொண்டே செல்கின்றர். ௧. இலக்கண நூலாவது யாது? ௨. அந்நூல் எத்தனை அதிகாரங்களாக வகுக்கப்படும்? என்பன நாம் மேலே கண்ட பகுதிக்குரிய வினாக்கள். இவ்வாறு இலக்கண இலக்கியங்கள் பற்றி எளிய முறையில் அமைத்து எழுதியுள்ள அறிஞர் இன்னும் சிலர். விசாகப் பெருமாள் ஐயர்தம் நன்னூல் உரையும் இவ்வாறே சிறந்த எளிய நடையில் பொருள்விளக்கம் உடையது; இத்துறையில் இன்னும் பல உள்ளன, 1883இல் இலண்டன் நகரில் அச்சாகிய நூல் ஒன்றில் {A hand book of ordinary dialect of the Tamil Language in three parts) தமிழ்ப்பாடல் பற்றிய விளக்கங்களும் சொல் வளங்களும், பல பழமொழி விளக்கங்களும் இடம் பெற்றுள்ளன. இந்நூலுள் உள்ள ஒரு பாடல் விளக்கம் காண்போம். ஒளவையின் பாடலின் விளக்கம் அது. ‘நன்றி ஒருவருக்கு': நல்ல குணத்தை உடையவராகிய ஒருவருக்கு(ச்) செய்த உபகாரமானது கருங்கல்லின் மேல் எழுத(ப்)பட்ட எழுத்து(ப்) போல நெடுங்காலம் விளங்கும்; ஒழிந்த அன்பில்லாத ஒருவருக்கு(ச்) செய்த உபகாரம், நீர்மேல் எழுத(ப்)பட்ட எழுத்து(ப்) போலச் செய்த அப் பொழுதுதானே அழியும். ஆதலால் எந்த(க்) காலத்திலும் நல்லோருக்கே உபகாரம் செய்தல் வேண்டும். பல பாடல்களுக்கு விளக்கங்களை இவ்வாறு மேனட்டவரும் நம்மவரும் செய்துள்ளனர். ‘கம்பராமாயண அருங்கவி விளக்கம்’ என்ற பாட்டின் உரைவிளக்க நூல் ஒன்று கவித்தலம் துரைசாமி மூப்பனரால் 1888 இல் எழுதி வெளியிடப் பெற்றுள்ளது. தாமோதரம் பிள்ளை உள்ளிட்ட பலர் இதற்கு முகவுரை தந்துள்ளனர். இந்நூலில் பல பாடல் விளக்கங்களும், தெளிந்த உரை நலமும் காணப் பெறுகின்றன. ‘திராவிட சப்த தத்துவம்’ என்ற மொழியியல் பற்றிய இலக்கண நூல் ஒன்றும் சென்ற நூற்றாண்டில் வெளிவந்துள்ளது (1899). இந்நூல் சென்னப்பட்டணம் சர்வகலா சாலை சமஸ்கிருத புரொபஸர்-மிட்டாதார்-எம்.ஏ.சேஷகிரி சாஸ்திரியாரால் இயற்றப்பெற்றது. முன்னுரை ஆங்கிலத்தில் உள்ளது. ஓரிரு பகுதிகள் காணலாம். வினையின் உறுப்புக்கள் பகுதி, விகுதி, இடைநிலை, சாரியை, எதிர்மறையுருபு என ஐந்து. பகுதி, விகுதி, இடைநிலை, சாரியை இவை உடன்பாட்டு வினையில் வரும். எதிர்மறை வினையில் எதிர்மறையுருபும் வரும். தமிழில் சொரூபத்தில் செயப்பாட்டுவினை கிடையாது. பொருளால் அடியுண்டான், அடிக்கப் பட்டான் என்பனவற்றைப் போல்வன வரும். அவை பகுபத வுறுப்பாய் இரு சொல் அடங்கிய தொடர்வினைகளே யன்றித் தனிவினைக ளல்ல. இவற்றில் உள்ள அடிப்படை மாறுபாடுகளும் சில விளங்குகின்றன. இவ்வாறே வேறு பல துறைகளிலும் உரைநடையில் நூல்கள் வந்துள்ளன. மேலை நாட்டவர் தொண்டு கடைசி எல்லைக்குச் செல்லுமுன் சென்ற நூற்றாண்டில் நம்மொடு இருந்து தமிழ் உரைநடையை வளம்படுத்திய மேலை நாட்டு அறிஞரைப் பற்றி எண்ணக் கடமைப் பட்டுள்ளோம். இவருள் மிக முக்கியமாக எண்ணத்தக்கதர்கள் டாக்டர் போப் அவர்களும் கால்டுவெல் அவர்களுமாவர். டாக்டர் போப் அவர்கள் குறள், நாலடியார் முதலிய சிறந்த தமிழ் நூல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்ததோடன்றி, திருவாசகம் முதலிய தெய்வநெறி நூல்களை மொழி பெயர்த்துத் தந்ததுமன்றி, பல இலக்கண நூல்களை எழுதி ஆங்கில நாட்டவரும்-ஏன்?-நம் நாட்டு இளைஞரும் நன்கு உணரத்தக்க வகையில் வெளியிட்டுள்ளார். அவர் மொழிபெயர்ப்புக்குப் பயன்படுத்திய திருக்குறள் நூலில் திருவள்ளுவர் சரித்திரம் உரைநடையில் எழுதப் பெற்றுள்ளது. அதன் ஒரு பகுதி இதுவாகும். அச்சங்கத்தார் உக்கிரப்பெருவழுதியென்னும் பாண்டியன் முதலானவர்களும் அத்யந்தம் ஆனந்தமடைந்து வெகு பூஜிதம் பண்ணி இந் நூலை அகஸ்தியரும் ஒப்புக்கொள்ளில் நல்லதென்ன விடை பெற்றுப் பொதியமலைக்குப் போய் அகஸ்தியர் முதலானவர்களைக் கண்டு தாஞ்செய்த நூலைக் காண்பிக்க அவர்கள் அடைந்த சந்தோஷத்தையும் புகழ்ந்த பாடலையும் அனந்தனாலுஞ் சொல்ல முடியாது, அவ்விடத்தில் கொங்கண சித்தர் வழிபட அவருக்கனுக்கிரகஞ் செய்து நாயனர் அவர்களிடத்தில் உத்தரவுபெற்றுத் தாம் முன்பு போம் போது வழியினேர்படாத ஸ்தலங்களையெல்லாஞ் தரிசனம் பண்ணிக்கொண்டு திருமயிலைக்குச் சமீபமாக வருவதை அப்பதியாரும் ஏலேலசிங்கரும் கேளவிப்பட்டு எதிர்கொண்டுபோய் அழைத்து வந்தார்கள். அவரும் வந்து தமதில்லறத்தில் வாசுகிமாதினொடு மிருந்தார். இக் கதைகளெல்லாம் படித்துக் குறளை உணர்ந்தே பின் சிந்தித்து, அவர்தம் அழகிய மொழிபெயர்ப்பினைச் செய்தார். அவரது இலக்கண நூல் நடைக்கு ஓர் எடுத் துக்காட்டு (1857). எழுத்துப்புணரியல்: விகாரம் என்பதென்ன? மொழியோடு மொழி, வேற்றுமை வழியிலாவது, அவ்வழியிலாவது, பொருந்தும்பொழுது நிலை மொழியின் ஈற்றெழுத்தாகிலும் வருமொழியின் முதலெழுத்தாகிலும் அவ்விரண்டெழுத்துக்களுமாகிலுந் திரிவதும் கெடுவதும் வேறே எழுத்துத் தோன்றுவதுமே விகாரம் எனப்படும். விகாரம் ஒன்றும் பலவும் வரப்புணர்வது விகாரப் புணர்ச்சியாம். விகாரம் இன்றிப் புணர்வது இயல்புப் புணர்ச்சியாம். சென்ற தலைமுறையில் வாழ்ந்தவர்களுக்குத் தங்கள் தமிழ்க் கல்வியைத் தொடங்கும்பொழுது இலக்கணத்தை அறிமுகம் செய்து வைத்தது போப் ஐயர் தமிழ் இலக்கணமேயாம், இவ்வாறு இலக்கணத்தைத் தெளிவுடன் எழுதிய போப் ஐயர் அவர்கள் நாட்டு வரலாறு எழுதுவதிலும் வல்லவர் என்பதற்கும் ஒரு சான்று காணலாம். (இங்கிலாந்து தேச சரித்திரம், 1858) ஆதிகாலத்தில் பிரித்தன் என்னுந்தீவு இருந்த நிலைமையை விசாரிக்கும்பொழுது, அத்தீவு இப்பொழுது இருக்கிற நிலைமைக்கும், அப்பொழுது இருந்த நிலைமைக்கும் அதிக வித்தியாசம் உண்டென்று தெரியவருகிறது, எப்படியெனில், அக் காலத்தில் அத் தேசமானது பலவிதமான கிராதர் அலைந்து திரிந்த காடே அல்லாமல் வேறல்ல. அந்தச் சாதியார் யாரெனில் பிரித்தனுக்கு அயல் சீமையாகிய காள் (GAUL) என்னும் பிரஞ்சு தேசத்திலிருந்த காளியர் அல்லது கெல்தியருக்கும் (CELTS) பூர்விக பிரித்தானியருக்கும் பாஷையும் ஆசாரங்களும் ஒன்றாயிருந்தமையால்’ இவர்கள் அவர்களோடு சம்பந்தப்பட்டவர்கள் என்று நினைப்பதற்கு இடமுண்டு. இவ்வாறு, குறளை உலகறியச் செய்த போப் என்னும் ஆங்கிலநாட்டு அறிஞர் தமிழ் உரைநடையிலும் சிறந்த நூல்களை நமக்குத் தந்துள்ளார். இவர் போன்றே தமிழ் மொழியின் ஏற்றத்தை உலகுக்கு உணர்த்திய மற்றெரு புலவர் ‘கால்டுவெல்' ஆவர். அவர்தம் 'பரத கண்ட புராதனம்’ என்று தொகுப்பிலிருந்து (1893) உரைநடைக்கு ஒரு சான்று காணலாம். பாரதத்திலுள்ள சகல கதைகளையும் யூரோப் சாஸ்திரிகள் பரிசோதித்து ஒத்துப்பார்த்து ஒன்றாேடொன்று இசைவாயிருக்கிறவைகளைக் காட்டி யிருக்கிறார்கள். இதனடியில் சொல்லியிருக்கிற பாண்டவர் கதையடக்கத்திற்கு யூரோப் சாஸ்திரிகள் செய்த ஆராய்ச்சியே ஆதாரம். இந்துக்கள் எழுதியிருக்கிற நூல்களைப் பார்த்தால் பஞ்சபாண்டவர் சரித்திரம் இவ்வளவு துலக்கமாய் விளங்காது. பூர்வீகமானவைகளையும் நூதனமானவைகளையும் பிரித்தெடுத்து சுருகலானவைகளைத் தெளிவிக்கிறதற்கு இத்தேச வித்வான்களுக்கு நன்றாய்த் தெரியாது. (பக். 48) இவ்வாறு பலவகையில் கால்டுவெல் தம் உரைநடையைத் தீட்டிக் காட்டுவதோடு, இந்நாட்டுப் புலவர்களுக்கு உரைநடையில் பொருளைத் தெளிவாக விளக்கும் திறன் இல்லை என்ற குற்றச்சாட்டையும் சூட்டுகிறார். இஃது ஆராய்தற்குரியது. இதன் கருத்து நல்ல உரைநடை நம்மவருக்கு எழுத முடியவில்லை என்பதாகலாம் என்பர். அதுவும் பொருந்தாது. நிற்க, இரேனியஸ் என்பார் 1853இல் எழுதிய உரைநடைக்கு ஒரு சான்று காண்போம். மெழுகானது முத்திரையைப் பெறுதலன்றி, அதைப்பற்றிக்கொள்ளுந் தன்மையுமுள்ளதா யிராவிட்டால், முத்திரைக்குத் தகுதியாயிருக்க மாட்டாது. அதுபோல ஆத்மா அறிவும் யோசனை யுமுடையதாயிருக்கவேண்டும். அறிவானது ஒன்றைத் பெறுதற்கான கருவி. யோசனையானது அதைப் பற்றிக் கொள்ளுதற்கான கருவி. யோசனையாகிய கருவியின்றி அறிவாகிய கருவி மாத்திர முடையதானல் ஆத்மா மெழுகைப் போலல்ல, சலத்தைப் போலிருக்கும். எப்படியெனில் சலத்தில் எதையாகிலுஞ் சீக்கிரமாய்ப் பதிக்கலாம். பதித்தவுடனே அது தோன்றாமற்போகும். பவர் பாதிரியாரும் தமிழ் உரைநடை வளர்ச்சிக்கு உதவியவர் என்பதை நாடறியும்; எனவே அவர் வாக்கிலும் ஒன்று காணலாம். உலகம்: இந்த உலகம் அநாதியாய் நிலை பெற்றிருக்கிறதென்றும் ஒரு காலத்தில் அழியாத நிலைமையை உடையதென்றும், கடவுள் முதலிய யாவராலும் உண்டாக்கப்பட்டதல்லவென்றும், நிச்சமாய்ச் சொல்லுகிறர்கள். இதுவுமல்லாமல் இந்த உலகம் கீழுலக மென்றும் நடுவுலக மென்றும் மேலுலகமென்றும், மூன்றாயிருக்கிறதென்றுஞ் சொல்லுகிறார்கள். மேலும் இந்த உலகத்தினுள் அடியில் அதோகதியென்று பேருடைய ஒரு உலகமுண்டென்றும் அதற்குமேல் ஏழு நரக லோகமுண்டென்றும் அதற்குமேல் பவண லோக முண்டென்றும் அதற்குமேல் சோதி லோகமுண் டென்றும் வியந்திரலோகமும் வித்தியாதரலோக முமாகிய இந்த இரண்டு உலகங்களும் இந்த மண்ணுலகத்திலேயே உண்டென்றும், மேலே பதினாலு வகைப்பட்ட தேவலோகமுண்டென்றும் அதன் மேல் அகமிந்திரலோக முண்டென்றும், அதன்மேல் இந்த உலகங்கங்களுக்கெல்லாம் கர்த்தாவாகிய அதிை சித்த பரமேஷ்டி எனப்பட்ட பராபர வஸ்து இருக்கப்பட்ட மோக்ஷ உலகமுண்டென்றும் சொல்லுகிறார்கள். என்று சிந்தாமணி நாமகள் இலம்பக உரைவிளக்தில் (பக் XII &XIII) (1868) குறிக்கின்றார். இவரே அன்றிப் பெர்சிவல் பாதிரியார் முதலிய வேறு சிலரும் பழமொழிகள் பற்றியும் தமிழ் மொழி முதலியனபற்றியும் தமிழ் ஆங்கிலம் எனும் இருமொழிகளிலும் எழுதியுள்ளார்கள். இவர்களை விடுத்துச் சுகாத்தியர் (Scott) என்னும் மற்றாெருவரைப் பற்றி எண்ணும்போது அவர் செய்த தமிழ் எழுத்து மாற்றம் நமக்கு வியப்பை அளிக்கும் என்பது உறுதி. ஐ, ஒள என்ற ஈரெழுத்துக்களைப்பற்றி அவர் கூறியவற்றை மட்டும் உங்கள் முன் வைக்கிறேன் (1889), வடமொழி எழுத்தாகிய ஐ, ஒள எனப்படுமெழுத்துக்கள் தமிழ்ற் காரணமின்றிச் சேர்ந்துள வாதலாலும் அவற்றுள் ஒள இந்நூலுளெவ்விடத்தும் வரப் பெறாமையாலும் ஐ க்கு வடமொழிக்குரிய வரிவடிவயொழித்துத் தமிழ் முறப்மய்க் கிணங்க அகரயகர வரிவடிவாகவும் ககர வோசயய்த் தழுவி முப்புள்ளி வடிவினதாய் வழங்கி ஆய்த எழுத்துத் தமிழோசய்க்கு வேண்டு வதின்மயா லதற்குரித்தான ககர வடிவாகவும் வரய்தலாயின. என்று கூறித் திருக்குறள் முழுவதையும் தம் மனம் போல் மாற்றி விளக்க உரையும் தந்துள்ளார். நல்லவேளை இது நாட்டில் உலவாது நின்றது. கடிதங்கள் இவ்வாறு மேலைநாட்டு அறிஞர்பலர் தமிழ்நாட்டிற்குப் பலவகையில் பணிபுரிய வந்து அவர் தம்பணிகளோடு அன்னைத் தமிழுக்கு ஆக்கப்பணி ஆற்றியவகையில் பல உரைநடை நூல்கள் எழுதி, இன்றும் நம்மொடு கலந்து உறவாடும் வகையில் வாழ்ந்துள்ளனர். அவர்களுக்கெல்லாம் வணக்கம் செலுத்தி, இறுதியாக அஞ்சல் துறை வளர்ந்த-சென்ற நூற்றாண்டில் கடிதத்தின் வழி வளர்ந்த தமிழ் உரை நடைபற்றிக் கண்டு அமையலாம் எனக் கருதுகிறேன். சென்ற நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு சில அறிஞர் தம் கடிதங்களை அப்படியே ஈண்டுக் கண்டு அமையலாம். இராமலிங்க அடிகளார் கடிதங்கள் முன்னரே கண்டுள்ளோம். கடிதங்களும் இலக்கியமாகப் போற்றக் கூடியனவே; மேலை நாடுகளில் கடித இலக்கியங்கள் சிறந்தனவாக உள்ளன. நம் நாட்டில் அந்த நிலை இல்லை. எனினும் சென்ற நூற்றண்டில் சில அறிஞர்கள் எழுதிய கடிதங்கள் தமிழ் உரை நடை வளர்ச்சிக்குச் சான்று பகர்கின்றமையின் அவைகளுள் ஒரு சிலவற்றை ஈண்டுக்காட்டல் அமைவுடைத்து என எண்ணுகின்றேன். பல நூல்களைப் பாரறியச்செய்த பெருமை டாக்டர் உ. வே. சாமிநாத ஐயருடையது. அவர்தம் ஆசிரியர் மகா வித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்கள். அவர் தம் நண்பர்களுக்குப்பல கடிதங்கள் எழுதியுள்ளார்; அவருக்கு நண்பர்களும் எழுதியுள்ளனர். அவற்றுள் சில காண்போம். மகாவித்துவான் அவர்களால், 'திருச்சிராப்பள்ளி வரகனேரியிலிருக்கும் கிராம முன்சீப் மகாா-௱௱-ஸ்ரீ பிள்ளையவர்கள் சவரிமுத்துப்பிள்ளையவர்களுக்குக் கொடுக்கப்படுவதாக' எழுதப்பெற்ற கடிதம். இவ்விடம் க்ஷேமம்;அவ்விட க்ஷேமம் வரைந்தனுப்பவேண்டும். தாங்கள் குறிப்பிட்ட திருவிளையாடற் செய்யுள் 'அன்பினில் வியப்போ வீசன் அருளினில் வியப்போவன்பர்க் கின்புருவானவீச னன்பருக் கெளிதே தைய' என்றது சரியே, எளிதேது ஐய என்பதில் ஏது வென்பது வினா “ஈசன்பர்க்கு அருளைப்பெறுதல் எளிது, அஃது அரியதன்று’, ‘அன்பு செய்தல் அரிது; அஃது எளியதன்று என்பது பொருள். இஃது உடனே தோன்றியது. இப்போதிதைத் தெரிவித்தேன். சதாசிவத்திற்குச் சவுக்கியமானதை எனக்குத் தெரிவிக்கவில்லை. அதுபற்றிகவலையில்லானென்று என்னை நினைத்தான்போலும். ம-௱-௱-ஸ்ரீ குமாரசாமிப் பிள்ளை, முருகப்ள்ளை, சதாசிவப்பிள்ளை இவர்களைக் குரு பூஜைக்கு அவசியம் வரவேண்டுமென்று ஒரு மனுஷ்யனைக் கொண்டு தெரிவிக்கவும். ம-௱-௱-ஸ்ரீ பிள்ளையவர்களிடத்தில் கந்தசாமியைத் தாங்களழைத்துக்கொண்டு சென்றதும் அவனோடு வந்த வொரு செய்யுளைத் தாங்கள் பிரசங்கித்த விபரமும் தெரிய விரும்புகிறேன், இவ்விடம் மகாசந்நிதானந் தங்களைப் பார்க்கும் அவா நிரம்ப வுடையது. குருபூசை முன்னிலையில் எல்லாரும் வரும்போதாவது தாங்கள் ஒரு தினம் இவ்விடம் வந்து போனற் சிறப்பாக இருக்கு மென்று நினைக்கிறேன். அப்பால் தங்களிட்டம். ⁠பவ, கார்த்திகை இங்ஙனம், ⁠(1875) தி. மீனாட்சி சுந்தரம். இவ்வாறே பிள்ளை அவர்களுக்கு அவர் நண்பராகிய சேஷையங்கார், சாமிநாத தேசிகர் ஆகியோர் எழுதிய கடிதங்களும் உடன் தரப்பெறுகின்றன. சிவமயம்-அன்புள்ள அம்மானவருக்கு விண்ணப்பம். இவ்விடத்தில் யாவரும் க்ஷேமம். அவ்விடத்திய க்ஷேமம் அறிவிக்கச்சொல்லவேண்டும். மணியார்டர் செய்தனுப்பிய கடிதத்திற்கும் பதில் வரவில்லையென்று மனவருத்தத்தோடுபின் எழுதிய கடிதத்திற்கும் பதில் வரவில்லை, இந்தக் கடிதம் கண்டவுடன் மணியார்டர் வந்துசேர்ந்த செய்திக்குப் பதிலெழுதச்சொல்லவேண்டும், மணியார்டர் கெடு தப்பிப்போகுமுன் பணம் வாங்கிவிட வேண்டும், கடிதம் வந்து சேருமென்ற நம்பிக்கையினால் இதை நட்டுப்பயிடாக[1] அனுப்பினேன். ⁠சுக்கில, ஆடி-27 இங்ஙனம். 1870-திருவனந்தபுரம் சி. சாமிநாத தேசிகர். ஸ்ரீமத் சகல குண சம்பன்ன சுகண்டித லக்ஷ்மி அலங்கிருதஆசீருதஜனரக்ஷக மஹாமேருசமமான தீரர்களாகிய கனம் பொருந்திய மகா ராஜமான்ய ராஜஸ்ரீ பிள்ளையவர்கள் திவ்ய சமுகத்திற்கு ஆசி ருதன் திருமங்கலக்குடி சேவைடியங்கார் அநேக ஆசீர்வாதம். இவ்விடம் தஞ்சையில் தங்கள் பெருங்கருணையால் க்ஷேமமாயிருக்கிறேன். தங்கள் க்ஷேமசுபாதி சயங்கட்கெழுதி யனுப்பும்படி உத்தரவு செய்யப் பிரார்த்திக்கிறேன். தாங்களன்புடன் வரைந்தனுப்பிய நாளது மாதம் 22 உள்ள கடிதம் கிடைத்தது. கோயிலுக்கு இதற்குமாயலைந்து கொண்டிருந்ததால் பங்கி யனுப்பத் தவக்கப்பட்டது. அதை மன்னிக்கவேண்டும். இவ்விடம் வேந்திருக்கைக் கலைமகள்விளக்க இவ்விடத்திலிருந்து எழுதுவித்த ஸ்ரீ அம்பர் க்ஷேத்திர புராணக் கிரந்த புத்தகம் க-க்கு ஏடு ௪0 ௸ புத்தகத்தை இத்துடன் பங்கி மார்க்கமாய்த் தங்களிடத்திற்கு அனுப்பியிருக்கிறேன். வந்து சேர்ந்ததற்குப் பதில் கடிதமனுப்பப் பிரார்த்திக்கிறேன். இங்ஙனம் தங்களாருசிதம் சுக்கில மார்கழி -௭. தஞ்சை. தி. சேவுையங்கார். டாக்டர் உ.வே. சாமிநாத ஐயர் அவர்கள் தியாகராசச் செட்டியார் அவர்களைப் புகைப் படம் எடுக்க விரும்பினார். ஆயினும் செட்டியார் அவர்கள் மெலிந்து உடல் நலிவுற்றிழிந்தமையால் தமக்கு விருப்பமில்லை என்பதைப் பின்வரும் கடிதத்தில் விளக்கியுள்ளார். ...என்னுருவத்தை போட்டகிராப் எடுக்கும்படி தாங்கள் உத்தரவு செய்தீர்களாம். யான் குரூபம் அடைந்த காலத்தில் எடுக்க எனக்குச் சம்மதம் இல்லை. அன்றியும் நல்ல உடை உடுத்துக்கொண்டு ஒருநாழிகை அசையாதிருக்கச் சற்றும் பலமில்லை. படுத்துக்கொண்டே யிருக்கிறேன். நேத்திரம் இரண்டு நிமிடம் சேர்ந்தாற்போலவிழித் திருக்கக்கூடவில்லை. இந்த ஸ்திதியில் உருவம் எடுப்பது சற்றும் தகுதியன்று. தாங்கள் இவ்விடமிருந்துபோன நாள் முதல் நாளது பரியந்தம் போகும் வயிற்றுப் போக்குச் சற்றும் நிற்கவில்லை. அன்னம் செல்லவில்லை. காரமும் சேரவில்லை. தேகம் விளர்ப்புடன் மிக மெலிந்து விட்டது. ஆதலால் நான் செவ்வையாயிருக்கும்போது காலேஜ் ஸ்தம்பத்தில் உருவம் ஒன்று செய்யப் பட்டிருக்கிறது. தெற்குத் தாழ்வாரத்தில் கீழ் புறத்தில் இருக்கிறது. கோபாலராயரவர்களுடைய உருவம் குதிரையில் இருந்ததுபோல ஒரு பக்கத்தில் செய்யப்பட்டிருக்கிறது. நல்ல மொச்சியன் அகப்பட்டால் அந்த உருவத்தைக் காண்பித்துக் கூடிய வரையில் ஒரு படம் எழுதி எடுத்துக் கொண்டால் அதை வைத்துக்கொண்டு போட்ட கிராப் வேண்டியபடி எடுத்துக்கொள்ளலாம் ...... படம் எழுதும் மொச்சியன் என்னைப்பார்த்திருப்பவனாகியிருந்தால் உத்தமந்தான்-1887 சீவக சிந்தாமணி வெளியீடு. இவ்வாறே கிறித்தவ சமயம் பற்றிய கடிதங்களும் உள்ளன. அவற்றுள் ஒன்றினை இங்கே தருகிறேன். புதுவை அப்போதஸ்தொலிக்கு விக்காரியாராகிய சவேரியார் அருளப்பர் மரியநாத லவுனேன் என்னும் நாமதேயங் கொண்டிருக்கும் பிலாவியோபொலி மேற்றிராணியாரவர்கள் தமது ஞானதிகாரத்துக்குட்பட்ட சகல கிறிஸ்துவர களுக்கும் எழுதியருளிய நிரூபம் (புதுவை ௲௮௱௰௫௵). (நீண்ட கடிதம்) கடித முடிவு நீங்கள் இந்தப் பிரகாசத்தில் நடந்து சத்திய வேத நெறியிற் சென்று புண்ணியத்திற் சிறந்தவர்களாய்ச் சீவித்து சிவாந்தத்தில் நித்திய பிரகாச பாக்கிய பேரின்பத்தை அடையும்படி விரும்பி உங்களுக்குப் பக்ஷம் நிறைந்த மனதுடன் ஆசீர்வாதங் கொடுக்கிறோம். இப்படிக்குப் புதுவையில் ௲௮௱௭௰௫௵ ஸ்ரீ தேவ மாதாவின் திருமணத் திருநாளாகிய சனவரி௴ ௨௩௨ நம்முடைய கையெழுத்தும் முத்திரையையும் போட்டு நம்முடைய செக்கிறேத்தராகிய சம்பிரதியும் இதனடியிற் கையெழுத்து வைத்துத் தந்தது. மகா சங்கைக்குரிய கனம் பொருந்திய ஆண்டவர் உத்தாரத்தின்படியே சென்னைக் கல்விச் சங்கத்துப் புத்தகப் பரிபாலராகிய கொற்றமங்கலம் இராமசாமிப்பிள்ளை அவர்கள் ‘நீதிசார வாக்கியம்’ என்ற நூலினைத் தொகுத்தார். அதைக் கண்டு முன்னுரை தருமாறு தொல்காப்பியம் வரத முதலியாரைக் கேட்டுள்ளார். அதற்கு அவர் எழுதிய கடிதம் ஈண்டுத் தரப்படுகிறது. இஃது அந்த நூலிலேயே இடம் பெற்றுள்ளது. நூல் 1844 இல் தொகுக்கப் பெற்றது. 'வித்துவான்களின் அபிமதம்’ என்ற தலைப்பில் அந்நூலைப் பாராட்டிய பலர் தம் முன்னுரைகள் இடம்பெற்றுள்ளன. அவற்றுள் இக்கடிதமும் ஒன்று. மஹாராஜஸ்ரீ தொல்காப்பியம் வரத முதலியாரெழுதிய கடிதம்:—காலேஜ் புத்தக பரிபாலகராகிய ம-ா-ஸ்ரீ பிள்ளையவர்கள் கொற்றமங்கலம் இராமசாமிப் பிள்ளையவர்கட்கு. விஞ்ஞாபனம்-இந்த நீதிசாரமென்னுஞ் சிறந்த வசன புத்தகம் எனது அபிமதம் பெறவேண்டுமென்கின்ற கோரிக்கையா லென்னித்திட கனுப்பப்பட்டபடி அதை முழுதும் வாசித்துப் பார்க்கும்மிடத்திற் சொன்னயம் பொருணய மிகவும் நன்றாமைந்திருப்பதுவுமின்றித் தர்மங்களை யெல்லாஞ் சேகரித்து விளங்கவெழுதி யிருக்கின்றபடியால் இஃது சிறுவர்கட்கு மாத்திரமேயல்ல, பெரும்பான்மையானவர்க்கும் பிரயோஜனமாக விருக்கு மென்பதற்குச் சந்தேகமில்லை யென்று தோன்றுகிறது. மேலும் இதிலடங்கிய வசனங்களெல்லாம் கம்பீரமாயிருக்கின்றமையால் வாசிப்பதற்கு மிகுந்த களிப்பைத் தருகின்றது. இப்புத்தகத்தில் தர்ம நீதிகளெல்லாம் வசன வடிவு கொண்டு வெளிப்பட்டமையால், அவைகள் பாவினங்களைப் பார்க்கிலும் சிறந்து விளங்குகின்றன. ஏனெனில், பாக்களிலிருக்கும் தர்மா சாரத்தையுணர்வது சாதாரணர்க்குக் கடினமாக விருக்கின்றமையினலேதான். ஆதலால் நம்முடைய தேசத்தி னெடுங்காலமாய்க் குடிகொண்டிருக்கும் அழுக்காறு முதலிய துற்குணங்களைப் புத்தகத்தால் இனி தூரவிலகிப் போகுமென்று சொல்வதற் கனுமானப்பட வேண்டியதில்லை. இவ்வித நன்மைகளைத் தருவதற்காதாரமாக விப்புதகத்தைத் தாங்கள் வருந்திச் செய்த நன் முயற்சியைக் குறித்து யாவர்தானன்றி கூறாதவர்களா யிருப்பார்கள். இவர்களில் நான் முதற் புருடனாக விருக்கிறேன்.}} ⁠சென்னப்பட்டனம் இங்ஙனம் ⁠சோபகிருது, மார்கழி வேலூர் வரத முதலியார் முடிவு இவ்வாறு கடிதங்களும் தமிழ்உரைநடையை வளர்க்க உதவி செய்தன. இவ்வகையில் தமிழ் உரைநடை சென்ற நூற்றாண்டில் யாண்டும் நீக்கமற நிறைந்து நின்றது. எனவே இந்த மூன்று சொற்பொழிவுகளிலும் உரைநடையின் இயல்பினையும், தமிழ் உரைநடை தோன்றி வளர்ந்த வகையினையும், சென்ற நூற்றாண்டின் தமிழ் நாட்டின் சூழ் நிலையையும் அதன் வழி நாட்டில் உண்டான மாறுதல்களையும் அவற்றின் வழி, கலை, இலக்கியம் வளர்ச்சி பெற்ற வகையினையும், அவற்றுள் தமிழ் உரைநடை எவ்வெவ்வாறு வளர்ச்சி பெற்றதென்பதையும் பாமர இலக்கியமாய், பண்டிதர் இலக்கியமாய், நாநவில் இலக்கியமாய், நாடறிந்த இலக்கியமாய், சமய, தத்துவ, அறிவியல் துறைகளில் இடம் பெற்ற இலக்கியமாய், சென்ற நூற்றாண்டில் அவ்வுரை நடை வளர்ச்சிபெற்ற பலவகைகளையும் ஓரளவு கண்டோம். அவ்வாறாய உரைநடை இலக்கியங்களுள் ஒருசில போகப் பலவற்றை இன்றளவும் காணும்பேறு பெற்றுள்ளோம். இனி அவை மங்காது காக்கப்பெறும் என்பதற்கும், இத்துறையில் புத்தம் புதிய நெறியில் உரைநடை இலக்கியங்கள் வளரும் என்பதற்கும் எதிர் நிற்கும் பல நல்வாய்ப்புக்களை எண்ணும்போது உளமகிழ்ச்சியுறுகின்றது. இந்தத் தலைப்பை நான் முதலில் எடுத்துக்கொண்ட போது, இத்துணை விரிந்த அளவில் இதன் எல்லை பெருகும் என எண்ணவில்லை. ஆயினும் ஆராய ஆராய எல்லை விரிந்தது-பரந்தது-மிகப்பெருகிற்று. ‘அறிதோறறியாமை கண்ட' வகையில், இப்போது நான் ஆய்ந்து கூறிய அனைத்தும் ஒரு சிறு துளியே என உணர்கின்றேன். அறிய வேண்டியது கடல்-எல்லையற்றது. நான் கூறியன சில; விட்டன பல. சென்ற நூற்றாண்டின் இலக்கிய ஆய்வு-அதிலும் உரைநடை ஆய்வு மிகப்பெரிது என உணர்கின்றேன். அதன் எல்லையில் ஒரு மூலையில் நின்று, ஆழ்கடற்கரையில் நின்று அதன் எல்லை கண்டு விட்டவனைப்போன்ற உணர்வினைத் தான் நான் பெற முடிகின்றது. இத்துறையில் விரிந்து ஆய்வு தேவை. பல்கலைக்கழகத்தே ஆாாய்ச்சிப் பட்டம் பெறும் மாணவர் இத்துறையில் ஒவ்வொரு பகுதியை எடுத்து ஆராயத் தொடங்கின் ஆயிரக்கணக்கானவருக்கு இஃது இடம் தரும் என்பது என் கருத்து. இது நாட்டுக்குப் பயன்படக் கூடியதுமாகும். ஆழ்கடல் பகுதியில் ஒரு துளி காட்டினேன். இதற்குத் துணை நின்று உதவிய அறிஞர் பலர்-நூலகங்கள் பல-சுவடிகள் பல. சொல்வழி உதவியவர் பலர். அவர்கள் அனைவருக்கும் நன்றி கூறுகின்றேன். இச்சொற்பொழிவு வரிசையினை அமைத்துத் தமிழை வளர்க்க முயற்சி செய்த “கல்கி' நிறுவனத்தார் தொண்டு சிறந்தது. அவர்களுக்கும் என் நன்றி. இவ்வாண்டு இப்பொழிவினை எனக்களித்த பல்கலைக்கழக் ஆட்சியாளர், துணைவேந்தர், பேராசிரியர் ஆகியோருக்கும் மூன்று நாளும் வந்து கேட்டுச் சிறப்புச் செய்த உங்கள் அனைவருக்கும் என் நன்றியைத் தெரிவித்து அமைகின்றேன். வணக்கம் ↑ Not Paid ஆக (தபால் தலை ஒட்டாமல்) பிற்சேர்க்கை மூன்று சொற்பொழிவுகளிலும் எடுத்துக்காட்டின போக, இங்கே தனியாக அவற்றேடு பொருந்திய ஒருசில எடுத்துக்காட்டுகளை இணைத்துள்ளேன். இவை போன்று இன்னும் எத்தனை எத்தனையோ வகைகளில் தமிழ் உரை நடையில் பலநூல்கள் சென்றநூற்றாண்டில் வெளி வந்துள்ளன. அவற்றுள் மிகச்சிலவே நாம் இங்கே கண்டவை. ஒவ்வொரு துறையிலும் ஆயிரக்கணக்கான மேற்கோள் காட்டலாம். எனினும் எல்லை கருதிச் சொற்பொழிவில் வந்தனபோக ஒரு சிலவற்றை ஈண்டு இணைத்துள்ளேன். மேலும் வேண்டுபவர் அவ்வத்துறை நூல்களை ஆராய் வாய்ப்பு உண்டு. 1. தமிழறியு மடந்தை கதை; 2. விக்ரமாதித்த கதை; 3. தேரூர்ந்த சோழன் கதை, 4. மாட்டு வைத்தியம்; 5. வைத்திய அட்டவணை; 6. கயிலை வாசகம்; 7. மதுரைச் சங்கத்தார் சரித்திரம்;8. சிவகங்கை மறவர் சாதி விளக்கம்; 9. தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு; 10. பிரசித்த பத்திரிகை; 11. திராவிடப்பிரகாசிகை; 12. பெரிய புராண வசனம்; 13. மெய்ஞ்ஞான பானு: 14. பஞ்சபத மகா வாக்கியம்; 15. துறவற உத்தியானம்; 16. அத்வைத தூஷண பரிகாரம்; 17. திருவருட்பா—உபதேசப் பகுதி; 18. நித்திய ஒழுக்கம் என்னும் உலகியல்; 19. குறள் மூலமும் சுகாத்தியர் பொழிப்புரையும்;20 இஸ்தியார் நாமா. 1. தமிழறியு மடந்தை கதை-வசனம்: - ஏடுகள் 35 அச்சிடப் பெற்றுள்ளன. ஆண்டு (ஆங்கிரசு) 1812 ஆம் ஆண்டு ஆடி ௴ 32 ௳ தமிழறிவான் கதை எழுதி முகிழ்ந்தது முற்றும்:-சிவகாமி அம்மை துணை-இராம செயம். நூல் முடிவில்:—விறகு தலையனென்கிற பேருமாற்றி அவனுக்கு உறையூர்க் குமாரனென்கிற பட்டமும் கட்டிவித்து அவளுக்கு தமிழறியும் பெருமானென்கிற பேருமாத்தித் தில்லைப் பெருமானென்கிற பட்டமும் கட்டுவித்து அவளுக்கு வரிசை மானியமும் உம்பிளிக்கையும் கட்டளையிடுவித்து நக்கீரதேவரை ஆனை மத்தகத்திலே வைத்துப் பட்டணம் பிரவேசமாக வரச் சொல்லி வந்தபிறகு சோழனாலு நக்கீரதேவர்க்கும் பல்லக்குமிட்டு வெகுமானத்துடனே மதுரைக்கனுப் பினர். நக்கீர தேவரும் மதுரையில் சென்று பாண்டியுனுக்கு சங்கத்தார்க்கும் தமிழறி மடந்தையின் வர்த்தமான மெல்லாஞ்சொல்லி இருந்தாரென்ற வரலாறு. 2. விக்கிரமாதித்தன் கதை—வசனம் (ஏடுகள் முடியவில்லை) முடிவு:—மற்றப் பெண்களோடே வந்த சீதனங்களோடே தோழிப்பெண்கள் ஆனை குதிரையுள்படக் கூட்டிக்கொண்டு தன்னுடையசேனதிபதிகளும் மந்திரிமாரும் சதுரங்கசேனைகளும் தரும துரைமார்களும் புரோகிதரும் வேவுகாரரும் வரிசை ஊதியக்காரருமாகப் பட்டி சொற்படி உக்கிரமாகாளிப் பட்டணத்திலே வந்து திருவிராச்சியம் பண்ணிக்கொண்டிருந்தான். அந்த விக்கிரமாதித்தன் சிங்காசனம் நீயோ ஏறுகிறவனென்று போசராசாவோடே அந்தப் பதுமைகள் சொல்லிச் சிங்காசனமேறாதபடி விலக்கின கதை. ⁠இராம செயம். ஆறுமுகம் துணை. 3. தேரூர்ந்த சோழன் கதை: முடிபு:—அன்பு சோதிக்க வந்தோர் ராசாவே நீரும் தேவியும் குமாரனும் மந்திரியும் கயிலாயமே வாருங்கோளென்று இந்திர விமானத்தி லேற்றிக்கொண்டு பரமேச்சுவரனும் பார்வதியாரும் கயிலாயமே எழுந்தருளினர்கள். ஆகையினலே இந்தத் திருவிளையாடலை(ப் பார்த்த) பேர் கேட்டப்பேர் இந்த ராசாவும் தேவியும் குமாரனும் ம்ந்திரியும் பெத்த பேறு பெறுவார்களென்றவாறு. 4. மாட்டு வைத்தியம்: முடிவு:— உழக்குவேப் பெண்ணை கொண்டு வந்து மூணுவிரல் அகலம் சீலை கிழித்து அந்த எண்ணையில் நனைத்து அந்த மாட்டுக் கொம்பிலே சுத்திக் கொளுத்தி விடவும். ஒருவே கண்ட கொம்பினqலே வெந்த உடனே அவிக்கப் போடவும். கொம்பில்லாத மாட்டுக்கு வேப்பெண்ணை உச்சியிலே காய்ச்சி விடவும். 5. வைத்திய அட்டவணை சகம்.1722 இரவுத்திரி ஸ்ரீ மார்கழி 21 சுச்கிலவாரம். 78 ------------ 1800 (கி. பி) ---------- முடிவு: ராசமாணில ராசபுஸ்ரீ சரபோசி மகாராசா சாயபு அவர்கள் அக்ஞாபிச்ச பிரகாரம் கலாகிக் கணக்கு வெங்கடேசம் பிள்ளை குமாரன் சுப்பராயன் வைத்திய சாஸ்திரம் அட்டவணை எழுதி முகிந்தது முற்றும் குருவே துணை— சக்தி குன்மம் 18-க்கும்: ஒரு தேங்காய் கொண்டு வந்து கண் திறந்து தண்ணீர் ஊத்திப்போட்டு உழக்கு எருக்கம்பால் கறந்து தேங்காயிலடைத்துக் கண்ணுமடைத்து ஒரு அடுக்கில் ஒடு கருகச்சுட்டு அரைச்சு ஒரு பாக்களவு தின்னப் பதினெட்டுகுன்மமும் பொருமலும்நிற்கும். —கை கண்டது 6. கயிலை வாசகம் (காளயுக்தி தை-1) 1818:—என்னுடைய சரீரத்து மாங்கிஷத்தைப் புசித்தும் பசியாறுமையா என்று வேண்டிக் கொள்ள, இப்படிப் பசுவும் புலியும் வாதாடிக்கொண்டிருக்கிற சமயத்திலே ரிசப வாகனத்திலே கைலாச வாசனாயிருக்கப்பட்ட ஆதி பரமேசுவரன்........ பிரம விஷ்ணு முதலான பேருடன் வந்து காட்சி கொடுத்தார். 7. மதுரைச் சங்கத்தார் சரித்திரம் முடிவு:நான் வள்ளுவன், பரதேசி, மயிலாப்பூரில் தினம் இரண்டு பணத்துக்குக் கூலி பு(பிடை)டவை நெய்து சீவனம் பண்ணிக்கொண்டிருக்கிறவன். எனக்கு நான் கஷ்டப்பட்டு சம்பாதிக்கிர இரண்டு பணம் போதுமே யல்லாது இந்த இராசத் திரவிய மெல்லாம் வேண்டியதில்லை யென்று சொல்லுமிடத்தில் பாண்டியன் நிரம்பவும் வேண்டிக் கொண்டான். அப்போது அதில் கொஞ்சம் எடுத்துக்கொண்டு வெளியே வந்து, பரதேசிகள் பிராமணர்க (ணா)ளுக்குக் கொடுத்துப் போட்டு, பாண்டியனிடத்தில் சொல்லிக்கொண்டு மயிலாப்பூருக்கு வந்துவிட்டார். —இது சங்கத்தார் சரித்திரம். 8. சிவகங்கை மறவர் ஜாதி விளக்கம். (ஏழுவகை) இந்த மறவர் தாயார் கிளையிலே கலியாணம் பண்ணக் கூடாது. தகப்பன் கிளையிலே சித்தப்பன் பெரியப்பன் முதலான தாயாதக்காரருடைய பிள்ளை பெண்களைக் கலியாணம் பண்ணிக்கொள்ளுகிறது.தகப்பன் கோத்திரத்திலே கலியாணம் பண்ணக் கூடாது. இந்தச் செம்பி நாட்டு மறவரில் சேதுபதி உடையாத் தேவர் கலியாணம் பண்ணியிருக்கிற பெண் பிள்ளைகள் மட்டும் புருஷன் மிருதன் ஆனால் புருஷனோட கூட அக்கினிப் பிரவேசம். 9. தஞ்சை மராட்டிய (மகாராஷ்டிர) மன்னர் வரலாறு. தஞ்சை மராட்டி மன்னர் வரலாறு:— ஸ்ரீமத் போசல வமிசத்தின் ஆதிமூல புருஷர் ஶ்ரீமத் நாராயணன்............ முடிவு: காராசாவுடைய இராச்சிய பாரத்தில் ”பாஜ” என்கிற குருவி இந்தத் தேசத்துக்கும் என்றைக்கும் வராத அபறுப(அபூர்வ)மான குருவி வந்து இருந்தது. இப்போது ‘சரபோசி மகராஜா’ சகல சனத்தையும் சகல மதஸ்தரையும் வைம்மியம் அன்றியில் சந்தோஷமாய் அந்தந்த மதத்து வேதத்தின்படியே நடப்புவித்துச் சகல சனத்துக்கும் விசனம் வாராமல் படிக்கு யுக்தமார்க்கமாய்ப் பரிபாலனம் பண்ணிக் கொண்டு எப்போதும் சிவபூஜை பண்ணிக்கொண்டு சிவபுராணங்கள் முதலான உத்தம சரித்திரங்களைக் கேட்டுக் கொண்டு யாத்திரிகளையும் பண்ணிக் கொண்டு சன்மார்க்கத்திலே இருக்கிறார். நூற் குறிப்பு: ஸ்ரீமத் போசல வமிசத்தின் பூர்ண சந்திரன் இந்துபதி கிரேஷ்டராய் இருக்கப்பட்டவர். ஸ்ரீ சாம்பசிவ பிரசாத பிரபாவத்தினாலே அடையப்பட்ட பிரதாபத்ததினாலே டில்லி, சாத்தூர்ப் பாகத்துக்குச் சுவாதந்திரியர் டில்லியுடைய ராஜாவுக்கு விபஷ்சத்து யோக்கியம் சராவ பெளம ராஜாக்களுக்கெல்லாம் சோபாயமானர். மகாராஷ்டிர தேசம், சோள தேசம், அதிபதியாயிருக்கப்பட்ட புண்ணிய சுலோக ராஜாக்களுடைய சரித்திரம்:— சகல மனோபிஷ்டத்தையும் கொடுக்கப்பட்டதை மகாராஷ்டிர பிராமண சாதி (யார்) இப்போது சோழ தேசாதிபதி ஸ்ரீமத் க்ஷத்திரியபதி மகாராஜா, ராஜஸ்ரீ “சரபோஜி ராஜா சாயபு’ அவர்களுடைய கிஜசேவகன் “கிட்டின” சாலிவாகன சகம் ௲௭௱௨௰௫௵ உருதிரோத்காரி ௵ சித்திரை ௴ A, D. 1803 ௵ மார்ச்சு ௴ ௨௰௫௳ 10. பிரசித்த பத்திரிகை புதுவையிலச்சிற் பதிப்பித்து வெளிப்படுத்தின புஸ்தகங்களாவன. புதுவையில் —மற்றவிடங்கள் ரூ.⁠அ ரூ,⁠அ ஞானாமிர்த தடாகம் க⁠அ க⁠௰ வேத விளக்கம் க⁠௨ க⁠௪ சுவிசேஷம் க⁠௪ க⁠௬ இலத்தீன் பிரஞ்சு தமிழ் அகராதி ௪⁠— ௪⁠௬ ஆதும சோதனை க⁠— க⁠க வால்ர் பொக்கிஷம் (தோற் கட்டடிடம்) ௫⁠— க⁠க வாலர் கணிதம் (⁠"⁠) ய⁠௨ ய⁠௩ இப்படி 86 நூற்கள் தோற் கட்டிடம் | அரைக்கட்டிடம் | என விளக்கங்கள் விவரம்;-இப்புஸ்தகங்களைப் புதுவையினின்று மற்ற ஊர்களுக்குக் கொண்டு போகிற செலவைப் பற்றிப் புதுவைக்கும் மற்றவிடங்களுக்கும் வெவ்வேறு விலை குறிக்கப்பட்டது. குருபாதம் ”தருமபுரி ஆதீன நூல் நிலைய நூல்களின் சாரம்” 11. திராவிடப் பிரகாசிகை - சபாபதி நாவலர் செவிப்புலன் ஓசை, எழுத்தோசை, இசையோசை என இருபாற்படும். இகழ், இமிழ். உமிழ், கவிழ், குமிழ், சிமிழ் என ழகரப் பேறு பெற்ற பதங்கள் போலத் தமிழ் என்னும் சொல் தனிமைப் பொருள் குறித்த தமியென்னும் வினையடியாற் பிறந்து வினை முதற் பொருளுணர்த்திய விகுதி குன்றி முகரம் விரிந்து தனக்கிணையிலாப் பாடை யென்னும் பொருள் பயக்கும். இலக்கண மரபியலில் அகத்தியத்துள் இயற்றமிழ் இசைத்தமிழ் நாடகத்தமிழ் என்னும் முத்தமிழ் இலக்கணங்கள் விரவிக் கூறப்பட்டன. இயல், இசை, நாடகத் தமிழ் முறையே சத்த நூல், கீத நூல், கூத்து நூல்களை ஒக்கும். தொல்காப்பியம் எழுத்து, சொல், பொருள் அதிகாரங்களை உடையது. ஒவ்வொரு அதிகாரமும் பல உட்பிரிவுகள் கொண்டது. இலக்கிய மரபியலில் திருமுறை யிலக்கியங்கள் சங்க ஞான்று அவதரித்தல் பற்றியும், அவை யெல்லாந் திருவருள் ஒத்துக்களாதற் பற்றியும் அவற்றின் சிறப்பு, வரலாறு முதற்கண் தந்து சொல்லுதும். தேவாரந் திருவாசகம் திருக்கோவை திருவிசைப்பாத் திருப்பல்லாண்டு திருமந்திரந் திருமுகப் பாசுரம் முதலிய நாற்பான் பிரபந்தங்களென்னும் இவை தம்மை அபயகுலசேகர சோழவரசர் பெருமான் வேண்டித் திருநாரையூர் நம்பியாண்டார் நம்பி பதினொரு திருமுறைகளாக வகுத்தார். ஆரிய நான்மறை உபநிடதங்களும் தமிழ் வேதம் முதலிய திருமுறைகளும் மொழியான் வேறுபடினும், பொருளான் ஒற்றுமையுடைய சுருதிகளாம். அது. "தேவர் குறளும் திருநான்மறை முடிவு மூவர் தமிழு முனிமொழியுங் கோவை திருவா சகமுந் திருமூலர் சொல்லு மொரு வாசக மென்றுணர்“ என்னும் ஒளவை வாக்கால் உணரலாம். தமிழ் வேதம் முதலிய திருமுறைகள் ‘திருச்சிற்றம்பலம்’ எழுவாயாகவும் இறுவாயாகவும் ஓதற்பாலன. ஏன்? திருச்சிற்றம்பலம் பிரணவ உறையுள். யாங்ஙனம்? இச்சரீரம் பிரமபுரம், பிரமம்-பரமான்மா. ஆன்மாவின் இச்சை, அறிவு, தொழில்களுக்கு பரமான்மா அவசியம். அம்பரம்-சித்து, இது சிதம்பரம், இதுவே தில்லைத் திருச்சிற்றம்பலம். இது பர மாதாரப் பொதுவாதலின் திருச்சிற்றப்பலம் பிரணவ உறையுளாகும். 12. பெரிய புராண வசனம், ஆறுமுக நாவலர்: ஸ்ரீமுக. பெரிய புராணத்தில் சொல்லப்பட்ட 63 நாயன்மார்கள் திருவவதாரத்திற்கு முன்பே அவர்கள் வரலாறு பரமேதி காசமாகிய சிவ ரகசியத்திலே ஒன்பதாம் அமுசத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. அவ்வாறு சொல்லியவர் சிவபெருமானே! அதனைக் கேட்டவர் அருட்சத்தியாகிய பார்வதிதேவியாரே! சாதியினும் சமயமே அதிகம். அதை மறுத்தல் சுருதி, யுத்தி, அநுபவம் மூன்றுக்கும் முழுமையும் விரோதம். உலக வழக்கில் உள்ள சாதி போலச் சைவசமயத்திலும் ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து என ஐவகைச் சாதிகள் உள்ளன. சிவஞானிகள் முதற்சாதி, சிவயோகிகள் இரண்டாம் சாதி, சிவக்கிரியாவான்கள் மூன்றாம் சாதி, சிவாசரியவான்கள் நான்காம் சாதி, இந்நெறியில் வாராது, இவர்களை நிந்தித்து இந்நெறி பிறழ்ந்து நடப்போர் ஐந்தாம் சாதி, சைவசித்தாந்த நூல்களாகிய சிவஞான நூல்களை ஓதிப் பதி பசு பாசம் என்னும் திரிபதார்த்தங்களின் இலக்கணத்தையறிந்த ஒரு சைவருக்கு யாரும் சமமாகார். அறுபத்து மூன்று நாயன்மார்கள் குருவருளால் பன்னிருவரும், சிவலிங்கத்தால் முப்பதின்மரும், சிவனடியாரை வழிபட்டு பத்தொன் பதின்மரும் முத்தி பெற்றுள்ளனர். 13. மெஞ்ஞான பானு: சபாபதி முதலியார் 1891 மெய்ப்பொருள் கூறுதலானும், இதுவோ அதுவோ பொருள் என்னும் மயக்கரு விருளை ஒழித்தலானும், இரு சிறந்த புலவர்களால் எழுதப்பட்ட ஞானபோத விளக்கம் ஞான சூடாமணியென்னும் உரைகளாகிய விளக்கினொளியும், மணியினொளியுந் தன் பேரொளியினடங்குமாறு கோடலானு மிவ்வுரை மெஞ்ஞானபானு என்னும் பெயர்வுடைத்தாயிற்று. ஞானத்தைப் பகுத்தல், பயனே இம்மை, மறுமை, எனவிரண்டையும். இம்மை, உம்மை, அம்மை என மூன்றாயும். அறம், பொருள், இன்பம், வீடு என நான்காயும், முத்தியைப் பரமுத்தி, பதமித்திஎன இரண்டாயும், சாலோக சாமீப சாரூப சாயுச்சியம் என நான்காயும் வகுப்பது போல்வது. 14. பஞ்சபத மகாவாக்கியம் தெளட சுவாமிகள் (1862) பிரமரனந்த சுகத்தை வித்துவான்களைப் போல் துதிக்கின்றதே முத்தி. வேதாகம சாத்திரங்களனைத்தும் ஆராய்ந்து அவற்றில் சொல்லுகிற நிலைகளையெல்லாம் ஏகமாய் அவிரோதமாய் சித்தாந்தப்படுவதே முத்தி. சுருதி வாக்கியங்களில் விளங்கும் பொருளே முத்தி. வாக்கியத்தைக் கொண்டு பொருள் நிச்சயம் செய்தலே முத்தி 15. துறவற உத்தியானம்; முதற்காண்டம், மொழிபெயர்ப்பு: (1896) புதுவை. இல்லறந் துறவறம் என்னும் இரண்டுவகை யறமுண்டென்று யாவர்க்குந் தெரியுமே. இல்லறமென்பது இல்லிடத்தி லனுசரிக்கத்தகுஞ் சுகிர்தலொழுக்கமாம். உலக சஞ்சாரத்திலும் விசேஷமாய்ச் சமுசார அந்தஸ்திலு முற்பட்டிருக்கிறவர்கள் அநுசரிக்கத்தகுங் கடமைகளும் புண்ணியங்களு மதிலே யடங்கியிருக்கும். துறவறமோவெனில் உலகத்தைத் துறந்து விட்டவர்கள் அநுசரிக்க வேண்டிய சுகிர்த வொழுக்காமே. குருக்களுஞ் சந்நியாசிகளுங் கன்னியாஸ்திரிகளும் நிறைவேற்ற வேண்டிய கடமைகளும் புண்ணியங்களும் அதிலே யடங்கியிருக்கும். ஏனெனில் குருக்களுக்குஞ் சந்நியாசிகளுக்கும் பல காரியங்களிலே வித்தியாசமுண்டானாலும் குருக்களும் உலோகத்தைத் துறந்து விட்டு விரத்தராயிருக்க வேண்டியதினாலும் அநுசரிக்க வேண்டிய மற்ற பற்பல புண்ணியங்களிலுைம் இவைமுதலிய பல சம்பந்தத்தினாலும் இவர்களுந் துறவறத்துக்குட்பட்டவர்கள் தானே. ஆதலா லிப்பிரபந்தத்திற் சொல்லும் பிரதான விஷயங்களெல்லாம் விசேஷமாய்ச் சந்நியாசிகளையுங் கன்னியா ஸ்திரீகளையுங் குறித்துச் சொல்லியிருந்தாலும் பெரும்பான்மையாய்க் குருத்துவத்துக் குள்ளாரையுஞ் சாரும். அவர்களைச் சேராத சில காரியங்களைக் குறிப்போம். 16. அத்வைத தூஷண பரிகாரம்; ஓர் இந்து (1894) உலகு சத்து மல்ல. அசத்து மல்ல. சதசத்து மல்ல. அநிர்வசனியம் பிரமம் எல்லாமாய் விரிந்ததென்னின் பொருளாய் விரிந்ததென்பது அத்வைதிகளுடைய சித்தாந்தமன்று. கயிறு அரவாயிற்று, கானனீராயிற்று என்பதில் கயிறு முதலியன அரவு முதலியனவாதல் தோற்றமேயன்றிப் பொருளல்ல. இதுதான் அத்வைதிகளுடைய சித்தாந்தம். கானல்நீர் விஷயத்திலும் இவ்வாறே, அம்மனத்தில் ஓர் சக்தியுள்ளது- அது அவாந்தர சக்தி; அன்றிப் பின்னா சக்தி. அந்தச் சக்தி மனத்திற்கு வேறுமல்ல. மனமுமல்ல. அச்சக்தி சத்துமல்ல. அசத்து மல்ல. சதசத்துமல்ல. அனிர்வசனியமாம். கடவுள் இந்திரியத்திலுைம், மனத்திலுனும், ஜீவான்மாவிலுைம் காணப்படாதவர். இதனால் கடவுள் அபரி பூரணர். 17. திரு அருட்பா உபதேசப் பகுதி: ஆர். பாலகிருஷ்ணபிள்ளை பதிப்பு (1932) வள்ளலார். இந்த உபதேசப் பகுதியில் அடங்கியுள்ளவற்றில் பெரும்பாலான, சுவாமிகள் தம்மை அடுத்த அன்பர்களுக்கு வாய்மொழியாக வடலூர் தருமச்சாலையிலும் மேட்டுக்குப்பம் சித்திவளாகத்திலும் உபதேசம் செய்தவற்றை, அவ்வன்பர்களில் ஒருசிலர் எழுதிவைத்த குறிப்புகளாகும். ஒர்ஓர் இடத்தில் அங்ஙனம் உபதேசித்த அல்லது எழுதிய தேதியும் இடமும் காணப்படுகின்றன. ஆனால் ஓரிடத்திலாவது இவற்றில் ஒன்றையோ பலவற்றையோ எழுதிய பேரன்பர்களின் பெயர்கள்முதலியன குறித்திருக்கக் காணப்படவில்லை. 18. நித்திய ஒழுக்கம் என்னும் உலகில் 1. சாதாரண கித்திய கரும விதி. அருட்பெருஞ்சோதி. சூரியோதயத்திற்கு முன் நித்திரை நீங்கி எழுந்து விபூதி தரித்துச் சிறிதுநேரம் உட்கார்ந்து, கடவுளைத் தியானம் செய்தல் வேண்டும். பின்பு களிப்பாக்கு மிகுதியாகவும் வெற்றிலை சுண்ணாம்பு குறைவாகவும் போட்டுக்கொண்டு, முன் ஊறுகிற ஜலத்தை உமிழ்ந்து, பின்வரும் ஜலத்தை யெல்லாம் உட்கொள்ளல் வேண்டும், பின்பு எழுந்து உள்ளே சற்றே உலாவுதல் வேண்டும், பின் மலஜல வுபாதிகளைக் கழித்தல் வேண்டும். 19. குறள் மூலமும் சுகாத்தியர் (Scott) இயற்றிய கறாத்துர யட்டவணயும் பொழிம்புரயும் இதிலச்சிடலாயிற்று. printed at the Lawrence Asylum Press, Mount Road, Madras. By G. W. Taylor, 1899 உரயாசிரியர் கோட்பாடு வடமொழி எழுத்தாகிய ஐ, ஒள எனப்படு மெழுத்துக்கள் தமிழில் காரணமின்றிச் சேர்த்துளவாதலாலும் அவற்றுள் (ஒள) இந்நூலுளெவ்விடத்தும் வரப் பெறாமயாலும் (ஐ)க்கு வடமொழிக் குரிய வரிவடிவமொழித் துத் தமிழ் முறய மயக்கிணங்க அகர யகர வடிவடிவாகவும் ககரவோசயய்த் தழுவி முப்புள்ளி வடிவினதாய் வழங்கிய ஆய்தவெழுத்துத் தமிழோசய்க்கு வேண்டு வதின்மயா லதற்குரித்தான ககர வடிவாகவும் வரய்த லாயின. திருவள்ளுவநாயனாரிந் நூலிலருளிய பயனய்உலகி லுள்ளாரெல்லாம் அடைந்துய்யுமாறு பதிகங்களய் முறப்ப் படுத்தி அவற்றின் கருத்து விளங்கும்படி யிட்ட பெயர்ப் பொருளதிகார வுரயிற்றுலக்கி எதுகய் மோனய்வழுக்களைக் களப்ந்து ஒவ்வொரு திருக்குறளின் சிறந்த பொருளுயுந் தோன்றத் தந்து செந்தமிழ் ஆதிமுறைப்படி வரய்ந் தச்சிற்பதிப்பித்தனம். மதுரய் இங்ஙனம், கி. ஆ. 1889௵ சுகாத்தியர். 20. இஸ்தியார் நாமா: 14–8–37. இ⁠ சகலமான ஜனங்களுக்கும் தெரியப்படுத்துவதுவ தென்னவென்றால், மஞ்சவாடி கணவாயின் பேரில்-போகுற பாட்டை யிப்போ முடிவாயிருக்குது மேலும் சேலத்திலிருந்து திருப்பத்தூருக்குப் போகு மார்க்கம் முழுதிலும் பாட்டை நன்றாய் செய்யப்பட்டிருக்கிறது. * * * இதனால் அறிவிக்கிறதென்னவென்றால்,பட்டணத்தில் எடுக்கப்பட்ட குப்பைகளை-ஒரு வருஷ கால வரைக்கும்-விற்பனை செய்துக் கொள்ளும்படியான தற்காஸ்து காகிதங்களை-வருகிற செப்டம்பர்௴ மாதம் ௱௨௨ வரைக்கும் (Jastice in session) கெஷ்ட்டயிசு செஷன் துரையவர்கள் வாங்கிக் கொள்வதற்குச் சித்தமாயிருக்கிறார்கள். 1837 ஆகஸ்டு ௨௰௨ உத்திரவின் பிறகாரம். இந்த மின்னூலைப் பற்றி உங்களுக்கு இம்மின்னூல், இணைய நூலகமான, விக்கிமூலத்தில் இருந்து கிடைத்துள்ளது[1]. இந்த இணைய நூலகம் தன்னார்வலர்களால் வளருகிறது. விக்கிமூலம் பதிய தன்னார்வலர்களை வரவேற்கிறது. தாங்களும் விக்கிமூலத்தில் இணைந்து மேலும் பல மின்னூல்களை அனைவரும் படிக்குமாறு செய்யலாம். மிகுந்த அக்கறையுடன் மெய்ப்பு செய்தாலும், மின்னூலில் பிழை ஏதேனும் இருந்தால் தயக்கம் இல்லாமல், விக்கிமூலத்தில் இம்மின்னூலின் பேச்சு பக்கத்தில் தெரிவிக்கலாம் அல்லது பிழைகளை நீங்களே கூட சரி செய்யலாம். இப்படைப்பாக்கம், கட்டற்ற உரிமங்களோடு (பொதுகள /குனு -Commons /GNU FDL )[2][3] இலவசமாக அளிக்கப்படுகிறது. எனவே, இந்த உரையை நீங்கள் மற்றவரோடு பகிரலாம்; மாற்றி மேம்படுத்தலாம்; வணிக நோக்கத்தோடும், வணிக நோக்கமின்றியும் பயன்படுத்தலாம் இம்மின்னூல் சாத்தியமாவதற்கு பங்களித்தவர்கள் பின்வருமாறு: Balajijagadesh Arularasan. G Sridhar G Info-farmer Balu1967 Maathavan * * * ↑ http://ta.wikisource.org ↑ http://creativecommons.org/licenses/by-sa/3.0/ ↑ http://www.gnu.org/copyleft/fdl.html