நித்திலவல்லி நா. பார்த்தசாரதி 1971 8 அக்டோபர், 2020 அன்று விக்கிமூலத்தில் இருந்து பதிவிறக்கப்பட்டது உலகளாவிய பொதுக் கள உரிமம் (CC0 1.0) இது சட்ட ஏற்புடைய உரிமத்தின் சுருக்கம் மட்டுமே. முழு உரையை https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode என்ற முகவரியில் காணலாம். பதிப்புரிமை அற்றது இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர். நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை. *** இது, உலகத் தமிழ் விக்கியூடகச் சமூகமும் ( https://ta.wikisource.org ), தமிழ் இணையக் கல்விக் கழகமும் ( http://tamilvu.org ) இணைந்த கூட்டுமுயற்சியில், பதிவேற்றிய நூல்களில் ஒன்று. இக்கூட்டு முயற்சியைப் பற்றி, https://ta.wikisource.org/s/4kx என்ற முகவரியில் விரிவாகக் காணலாம். Universal (CC0 1.0) Public Domain Dedication This is a human readable summary of the legal code found at https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode No Copyright The person who associated a work with this deed has dedicated the work to the public domain by waiving all of his or her rights to the work worldwide under copyright law including all related and neighboring rights, to the extent allowed by law. You can copy, modify, distribute and perform the work even for commercial purposes, all without asking permission. *** This book is uploaded as part of the collaboration between Global Tamil Wikimedia Community ( https://ta.wikisource.org ) and Tamil Virtual Academy ( http://tamilvu.org ). More details about this collaboration can be found at https://ta.wikisource.org/s/4kx. நித்திலவல்லி -சரித்திர நாவல்- நா. பார்த்தசாரதி தமிழ்ப் புத்தகாலயம் G 3/8, மாசிலாமணி தெரு பாண்டிபஜார், தி.நகர் (பாண்டி பஜார் மார்க்கெட் பின்புறம்) சென்னை - 600 017. Ph:4345904 மின்னஞ்சல் : tamiputhakalayam@yahoo.com tamilputhakalayam@vsnl.com வலை: http:expage.com/tamilputhakalayam http:/akilan.50mpegs.com பொருளடக்கம் முன்னுரை முதல் பாகம் - அடையாளம் 1. நல்லடையாளச் சொல் 2. மதுராபதி வித்தகர் 3. காராளர் வீட்டு விருந்து 4. செல்வப் பூங்கோதை 5. பூத பயங்கரப் படை 6. யானைப்பாகன் அந்துவன் 7. வெள்ளியம்பலம் 8. திருமருத முன் துறைக்கு ஒரு வழி 9. நம்பிக்கையின் மறுபுறங்கள் 10. கருங்கல்லும் மலர்மாலையும் 11. மூன்று குழியும் ஒரு வினாவும் 12. வையைக்கரை உபவனம் 13. நதியும் நாகரிகமும் 14. கண்களே பேசும் 15. கரந்தெழுத்து 16. முத்துப்பல்லக்குப் புறப்பட்டது 17. என்னென்னவோ உணர்வுகள் 18. இன்னும் ஒரு விருந்தினர் 19. சேறும் செந்தாமரையும் 20. கோட்டை மூடப்பட்டது 21. எண்ணெய் நீராட்டு 22. புலியும் மான்களும் 23. தென்னவன் மாறன் 24. மறுமொழி வந்தது 25. பாதங்களில் வந்த பதில் 26. அபாயச் சூழ்நிலை 27. ஊமை நாட்கள் 28. கபால மோட்சம் 29. தேனூர் மாந்திரீகன் 30. சாகஸப் பேச்சு 31. கனவும் நினைவும் 32. வித்தகர் எங்கே? 33. அடிமையும் கொத்தடிமையும் 34. மணக்கும் கைகள் 35. இன்னும் ஓர் ஓலை 36. பெரியவர் பேசுகிறார் 37. கொல்லனின் சாதுரியம் 38. மனமும் நறுமணங்களும் 39. மூன்று எதிரிகள் 40. மங்கலப் பொருள் இரண்டாம் பாகம் - சிறைக்கோட்டம் 1. களப்பிரர் சூழ்ச்சிக் கூடம் 2. மாவலி முத்தரையர் 3. மூல விருட்சம் 4. காம மஞ்சரி 5. ஒரு சாகஸம் 6. புலவர்களும் பொய்யும் 7. விரக்தியில் விளைந்த நன்மை 8. குறளியும் மாற்றுக் குறளியும் 9. இரத்தினமாலையின் ஊடல் 10. திருமால் குன்றம் 11. இரும்பும் இங்கிதமும் 12. அடையாளக் குழப்பம் 13. பெருஞ்சித்திரன் 14. நவ நித்திலங்கள் 15. சிறை மாற்றம் 16. யார் இந்த ஐவர்? 17. பொன் கூண்டிலிருந்து? 18. உட்புறம் ஒரு படிக்கட்டு 19. மரபு என்னும் மூலிகை 20. பெருஞ்சித்திரன் பேசினான் 21. ஒரு போதையின் உணர்வுமே 22. களப்பிரர் கபடம் 23. இருளில் ஒரு பெண் குரல் 24. வழியும் வகையும் 25. இருளும் வடிவும் 26. எதிர்பாராத அபாயம் மூன்றாம் பாகம் - வெற்றி மங்கலம் 1. சூழ்நிலைக் கனிவு 2. பிடி தளர்ந்தது 3. அழகன் பெருமாளின் வேதனை 4. புன்னகையும் வார்த்தைகளும் 5. அணிவகுப்பு 6. கடுங்கோன் ஆகுக! 7. இரு வாக்குறுதிகள் 8. புதிய நிபந்தனை 9. புது மழை 10. அளப்பரிய தியாகம் 11. இரத்தினமாலையின் முத்துமாலை 12. எதிர்பாராத அழைப்பு 13. மகாமேருவும் மாதவிக்கொடியும் 14. கொற்றவை சாட்சியாக... 15. போர் மூண்டது 16. கோட்டையும் குல நிதியும் 17. கடமையும் காதலும் 18. முடிவற்று நீளும் பயணம் முதற் பதிப்பின் முன்னுரை ⁠தமிழக வரலாற்றில் பாண்டிய நாட்டைக் களப்பிரர்கள் கைப்பற்றி ஆட்சி புரிந்த காலம் இருண்ட காலம் என்று வரலாற்று ஆசிரியர்களால் கருதப்படுகிறது. இருள் என்பது வெறும் ஒளியின்மை மட்டுமில்லை. புறத்தே நிலவும் ஒளியின்மையை மட்டும் இங்கு அப்பதம் குறிக்கவில்லை. கலை, மொழி, நாகரிகம், பண்பாடு எல்லாவற்றிலும் இருள் சூழ்ந்திருந்ததனையே ‘இருண்ட காலம்’ என்ற தொடர் குறிப்பதாகக் கொள்ள வேண்டும். களப்பிரர் காலத்தைப் பின்னணியாக வைத்துக் கொண்டு, ஒரு நாவல் புனைவதிலுள்ள சிரமங்களை நண்பர்கள் சிலர் சுட்டிக் காட்டியும் அந்தக் காலப் பின்னணியில் கதை எழுத வேண்டும் என்றே நான் விரும்பினேன். ⁠சிறப்பான ஒரு வரலாற்று நாவல் புனைவதற்கு மகோந்நதமான பொற்காலம் மட்டும்தான் பயன்படும் என்ற நம்பிக்கை இங்கு ஒரு சம்பிரதாயமாகியிருக்கிறது. பார்க்கப் போனால், பாண்டியர்களின் இருண்ட காலம், களப்பிரர்களுக்குப் பொற்காலமாகியிருக்கும். நாட்டை மீட்டதன் பின், களப்பிரர்களின் இருண்ட காலம், பாண்டியர்களின் பொற்காலமாக மாறியிருக்கும். ஆகவே இப்படிப் பார்ப்பதுகூடப் பார்க்கும் கோணத்திற்குத் தகுந்தாற்போல் மாறி விடுகிறது. நீண்ட நாட்களுக்கு முன்பு, களப்பிரர் காலத்தைப் பற்றி எழுத எண்ணித் திட்டமிட்டு, அதன்பின் வரலாற்று நாவல்கள் எழுதுவதை நான் நிறுத்தியிருந்த சமயத்தில், ஆனந்த விகடன் காரியாலயத்தார் 1970 ஆகஸ்ட் மாதம் சுதந்திர தினமலரிலிருந்து விகடனில் வெளியிட ஒரு சரித்திர நாவல் எழுதுமாறு வேண்டினார்கள். என் பழைய எண்ணமும், இந்த அவசியமும் இணைந்த வேளையில்தான், நான் 'நித்திலவல்லி' நாவலை மேற்கொண்டு எழுத நேர்ந்தது. ஒரு மங்கலான காலப் பகுதியைப் பற்றி அதிக ஆராய்ச்சிகளையும், சான்றுகளை யும் தேடித் தேடி இதை எழுத வேண்டியிருந்தது. இந்த ஆராய்ச்சிக்குப் பல பழைய, புதிய நூல்களை ஆழ்ந்து கருத்தூன்றிக் குறிப்புகளைச் சேகரிக்க நேர்ந்தது. ⁠கி.பி.மூன்றாம் நூற்றாண்டின் தொடக்கம் முதல் ஆறாம் நூற்றாண்டின் பிற்பகுதி வரை பாண்டிய நாடு களப்பிரர் ஆட்சியில் சிக்கியிருந்ததாகத் தெரிகிறது.[1] இது தொடர்பான வேள்விக் குடிச் செப்பேட்டுப் பகுதி வருமாறு:- "களபரனெனும் கலியரசன் கைக்கொண்டதனை இறக்கியபின் படுகடல் முளைத்த பருதிபோற் பாண்டியாதிராசன் வெளிப்பட்டு விடுகதிர் அவிரொளி விலகவீற்றிருந்து வேலை சூழ்ந்த வியலிடத்துக் கோவும் குறும்பும் பாவுடன் முருக்கிச் செங்கோல் ஒச்சிவெண்குடைநிழற் றங்கொளி நிறைந்த தரணி மங்கையைப் பிறர்பால் உரிமை திறவிதின் நீக்கித் தன்பால் உரிமை நன்கனம் அமைத்த மானம் போர்த்த தானை வேந்தன் ஒடுங்கா மன்னர் ஒளிநகர் அழித்த கடுங்கோன் என்னும் கதிர்வேல் தென்னவன்" ⁠இனி இலக்கிய ஆதாரங்கள் வருமாறு:- கானக் கடிசூழ்வடுகக்கரு நாடர் காவல் மானப்படைமன்னன் வலிந்து நிலங்கொள்வானாய் யானைக் குதிரைக் கருவிப்படை வீராதிண் டேர் சேனைக் கடலுங் கொடுதென் திசைநோக்கி வந்தான். வந்துற்ற பெரும்படை மண்புதையப் பரப்பிச் சந்தப் பொதியில் தமிழ்நாடுடை மன்னன்வீரம் சிந்திச் செருவென்று தன்ஆணை செலுத்தும் ஆற்றல் கந்தப் பொழில்சூல் மதுராபுரி காவல்கொண்டான். (திருத்தொண்டர் புராணம் மூர்த்தி... 1,12) படைநான் குடன்று பஞ்சவன் துரந்து மதுரை வவ்விய கருநடர் வேந்தன் அருகர்ச் சார்ந்துநின்றரன்பணி யடைப்ப ⁠(கல்லாடம் 56) இந்த இலக்கிய ஆதாரங்களைத் தவிர, பல்லவர் வரலாறு—டாக்டர் இராசமாணிக்கனார் பாண்டிய வரலாறு—டி.வி. சதாசிவ பண்டாரத்தார் South Indian inscriptions (Volumes) Mahavamsam (Volumes) History of India - V.A. Smith Pandyan Kingdom - K.A.Neelakanda Sastry சாஸ்னத் தமிழ்க்கவி சரிதம்—மு. ராகவையங்கார் ஆராய்ச்சிக் கட்டுரைகள்—மு. ராகவையங்கார் பரிபாடல் புறநானூறு கலித்தொகை பெருந்தொகை தமிழ் இலக்கிய வரலாறு I, II கே.எஸ்.எஸ். பிள்ளை ஆகியவற்றிலிருந்து இதற்கான ஆதாரங்கள் கிடைத்தன. இந்த ஆதாரங்களே முழுமையான கதையாகிவிடமுடியாது என்றாலும், முழுமையான கதைக்கு இந்த ஆதாரங்களும் இருக்க வேண்டியதாகிய அவசியம் உண்டு. கதை நிகழ்ந்த காலத்து மதுரை அடிமைப்பட்டுக் கிடந்த மதுரை. ஆகவே கதையின் பெரும் பகுதியில் மதுரையின் கோலாகலங்களை அதிகமாகச் சித்தரிக்க முடியாமல் போயிற்று. பாண்டியன் கடுங்கோனின் பெயர்க் காரணம் பற்றி இக்கதையில் வரும் நயமான கற்பனை இணைப்பைப் பல தமிழாசிரிய நண்பர்கள் பாராட்டினார்கள். இந்தக் கதையில் வரும் மதுராபதி வித்தகர் பாத்திரப் படைப்பை வாசகர்கள் பலர் அவ்வப்போது வியந்து எழுதினார்கள். வேறு சில வாசகர்கள் செல்வப் பூங்கோதை தான் மறக்க முடியாத கதாபாத்திரம் என்றார்கள். இன்னும் சிலர் இரத்தினமாலைதான் நினைத்து நினைத்து மகிழ ஏற்ற பாத்திரம் என்றார்கள். இளைய நம்பிதான் கதாபாத்திரங்களில் முதன்மையானவன் என்கிறார்கள் மற்றும் பலர். அழகன் பெருமாள், மல்லன், கொல்லன், யானைப்பாகன் அந்துவன், காராளர் போன்ற துணைக் கதாபாத்திரங்களே சிறந்தவர்கள் என்பதும் சிலருடைய கருத்தாகும். ஆனால் எழுதியவனுடைய நோக்கத்தில் எல்லார் மேலும் சமமான அக்கறையுமே காட்டப்பட்டுள்ளன என்பதை மட்டும் இங்கு அடக்கமாகத் தெரிவித்துக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன். இந்த வரலாற்று நாவலைப் படிப்பவர்களுக்கு ஒரு வார்த்தை: சமீப காலத்து நூற்றாண்டுகளில் நாட்டைப் பிறரிடமிருந்து மீட்கும் பல சுதந்திரப் போராட்ட வரலாறுகளைப் பல நாடுகளில் பார்த்திருக்கிறீர்கள். அதுபோல் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் பாண்டிய நாட்டில் நிகழ்ந்த ஒரு சுதந்திரப் போராட்ட வரலாற்று நாவல் என்ற எண்ணத்தோடு இதை அணுக வேண்டுகிறேன். இதற்கு மேல் இந்த முன்னுரையில் நான் சொல்வதற்குச் சிறப்பாக எதுவும் இல்லை. இந்த நாவலைத் தொடர் கதையாக வேண்டி வெளியிட்ட விகடன் காரியாலயத்தாருக்கும், இப்போது சீரிய முறையில் நூல் வடிவில் வெளியிடும் தமிழ்ப் புத்தகாலயத்தாருக்கும், அதன் உரிமையாளர் திரு. கண.முத்தையா அவர்களுக்கும், அட்டைச் சித்திரத்தை வரைந்தளித்த ஓவியர் வினுவுக்கும், புத்தகத்தைப் படிக்க ஆவலோடு காத்திருக்கும் வாசகர்களாகிய உங்களுக்கும் என் மனங்கனிந்த அன்பையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். ‘தீபம்’ சென்னை-2 21.9. 71. அன்புடன் நா. பார்த்தசாரதி ↑ டி.வி. சதாசிவ பண்டாரத்தாரின் பாண்டிய வரலாறு-பக்கங்கள் - 33,34,35,36,37. நித்திலவல்லி முதல் பாகம் * * * அடையாளம் 1. நல்லடையாளச் சொல் திருக்கானப்பேர்க் காட்டிலிருந்து மதுரை மாநகருக்குப் போகிற வழியில், மோகூரில் மதுராபதி வித்தகரைச் சந்தித்து விட்டுப் போக வேண்டும் என்று புறப்படும் போது பாட்டனார் கூறியிருந்ததை நினைத்துக் கொண்டான் இளையநம்பி. அவன் வாதவூர் எல்லையைக் கடக்கும் போதே கதிரவன் மலைவாயில் விழுந்தாயிற்று. மருத நிலத்தின் அழகுகள் கண் கொள்ளாக் காட்சியாயிருந்தன. சாலையின் இருபுறமும் பசுமையான நெல் வயல்களும், தாமரைப் பொய்கைகளும், சோலைகளும், நந்தவனங்களும், மூங்கில்கள் சிலிர்த்தெழுந்து வளர்ந்த மேடுகளுமாக நிறைந்திருந்தன. கூட்டையும், பறவைகளின் பல்வேறு விதமான ஒலிகளும், மூங்கில் மரங்கள் ஒன்றோடொன்று காற்றில் உராயும் ஓசையும், செம்மண் இட்டு மெழுகினாற் போன்ற மேற்கு வானமும் அந்த இளம் வழிப்போக்கனுக்கு உள்ளக் கிளர்ச்சி அளித்தன. தோட்கோப்பாக வலது தோளில் தொங்க விட்டுக் கொண்டிருந்த கட்டுச் சோற்று மூட்டையைக் கரையில் கழற்றி வைத்து விட்டு, ஒரு தாமரைப் பொய்கையில் இறங்கி முழங்காலளவு நீரில் நின்று முகத்தையும், கைகளையும் கழுவிக் கொண்டு அமுதம் போன்ற அந்தப் பொய்கை நீரைத் தாகம் தீரக் குடித்தான் இளையநம்பி. குளிர்ந்த நீர் பட்டதும், வழி நடையால் களைத்திருந்த உடலுக்கு இதமாக இருந்தது. சூடேறியிருந்த கண்களில், சில்லென்று தண்ணீர் நனைந்ததும் பரம சுகமாயிருந்தது. இருட்டுவதற்குள் மோகூரை அடைந்து விட வேண்டும் என்பது அவன் திட்டம். மோகூரில் மதுராபதி வித்தகர் இருக்கும் இடத்தைக் கேட்டறிய வேண்டும். களப்பிரர்களின் கொடுமைக்கு அஞ்சி இப்போதெல்லாம் அவர் ஒரே இடத்தில் இருப்பதில்லையாம். பல ஆண்டுகளாக ஆட்சியுரிமையைப் பெற்றிருந்தும் கொள்ளையடித்தவர்கள் தாங்கள் கொள்ளை கொண்ட பொருளுக்கு உண்மையிலேயே உரியவன் எப்போதாவது அவற்றைத் தேடி வந்து மீட்பானோ என்ற பயத்துடனேயே இருப்பதுபோல்தான் களப்பிரர்களும் பாண்டிய நாட்டை ஆண்டுகொண்டிருக்கிறார்கள் என்று தோன்றியது. மறுபடி பாண்டியர்குலம் தலையெடுக்க யார் யார் உதவுகிறார்கள் என்று சந்தேகப்பட்டாலும் அப்படிச் சந்தேகத்துக்கு உரியவர்களை ஈவிரக்கமின்றி துன்பப்படுத்தியும், கொலை செய்தும், சிறை பிடித்தும், சித்திரவதைகள் செய்தும் கொடுமை இழைக்கக் களப்பிரர்கள் தயங்கியதில்லை. பாண்டிய மன்னர்களுக்கு அரச தந்திரங்களையும், உபாயங்களையும் சொல்லும் மதி மந்திரிகளின் பரம்பரையில் தமிழ்ப் புலவர் மரபில் வந்தவர் மதுராபதி வித்தகர். அந்தப் பரம்பரையின் கடைசிக் கொழுந்தையும்கூடக் கிள்ளிவிடக் களப்பிரர்களுக்கும் ஆசைதான். ஆனால், அது அவர்களால் முடியாத காரியமாயிருந்தது. மூத்துத் தளர்ந்து போயிருந்தாலும் மதி நுட்பத்திலும், தந்திர உபாயங்களாலும் சிறிதளவு கூடத் தளராமல் மங்கலப் பாண்டிவள நாட்டின் பல்வேறு ஊர்களிலும் மறுபடி பாண்டியராட்சி மலர்வதற்கு ஒர் இரகசிய இயக்கத்தையே கட்டி வளர்த்து உருவாக்கிக் கொண்டிருந்தார் மதுராபதி வித்தகர். மதுராபதி வித்தகரைப் பற்றிப் பாட்டனார் சொல்லியிருந்ததெல்லாம் இளைய நம்பிக்கு ஒவ்வொன்றாக நினைவு வந்தன. கொள்ளைக் காரர்களைப்போல் வந்து பாண்டிய நாட்டைப் பிடித்து ஆண்டுகொண்டிருக்கும் களப்பிரர்களிடமிருந்து அதை மீட்க முயன்று கொண்டிருக்கும் ஓர் இணையற்ற இராஜதந்திரியைச் சந்திப்பதற்குப் போய்க் கொண்டிருக்கிறோம் என்று நினைத்த போது அவனுக்குப் பெருமிதமாக இருந்தது. அவரை எப்படி வணங்குவது, எந்த முதல் வாக்கியத்தினால் அவரோடு பேசத் தொடங்குவது, தான் இன்னான் என்று எப்படி அவரிடம்  உறவு சொல்லிக் கொள்வது என்றெல்லாம் சிந்தித்துக் கொண்டே மோகூரில் நுழைந்தான் இளையநம்பி. கணீரென்ற மறை ஒலிகள் ஏறியும் இறங்கியும் சுருதி பிறழாமல் ஒலித்துக் கொண்டிருந்த அந்தணர் வீதியில் நுழைந்து எதிர்ப்பட்ட முதியவர் ஒருவரிடம்- “ஐயா, பெரியவரே! நான் மதுராபதி வித்தகரைக் காணவேண்டும். அருள்கூர்ந்து இப்போது அவர் எங்கே தங்கி இருக்கிறார் என்பதைக் கூறினால் பேருதவியாக இருக்கும்” என்று தணிந்த குரலில் வினவினான் அவன். தான் இவ்வாறு வினவியதும் அந்த முதியவர் நடந்து கொண்ட விதம் அவனுக்குப் புதிராக இருந்தது. அவனை ஏற இறங்கப் பார்த்துவிட்டு ஒருகணம் தயங்கியபின் சிரித்துக்கொண்டே போய்விட்டார் அவர். இளையநம்பிக்குக் கடுஞ் சினம் மூண்டது. அடுத்து எதிர்ப்பட்ட மற்றொருவரை வினாவிய போதும் அவரும் அவனை ஏறிட்டுப் பார்த்து ஒருகணம் தயங்கியபின் வேகமாக நடந்து விட்டார். எதிர்ப்படுகிறவர்கள் கண்டு பேசத் தயங்கும்படி தன் முகத்தில் அப்படி என்ன மாறுதல் நேர்ந்திருக்க முடியும் என்பது அவனுக்குப் புரியவில்லை. கதைகளில் வருகிற அசுரர்கள் முகம் போல் திடீரென்று தன் கடைவாய்ப் புறங்களில் சிங்கப் பற்களோ, அல்லது முன் தலையில் எம கிங்கரர்களின் கொம்புகள் போல் கோரத் தோற்றமோ உண்டாகிவிட்டதோ என்று கூடச் சந்தேகமாயிருந்தது. பாட்டனாரோ -- “மோகூரில் போய்த்தான் வித்தகர் இருக்குமிடத்தை நீ அறிந்துகொள்ள முடியும்! பெரியவர் மோகூர் வட்டத்தில் இருக்கிறார் என்பது மட்டுமே எனக்குத் தெரியும். நீ வரப் போகிறாய் என்பதையும், உன்னை எப்படி எப்படிப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதையும் அவருக்கு நம்பிக்கையானவர்கள் மூலம் சொல்லியனுப்பியிருக்கிறேன். கவனமாக நடந்துகொள்! எங்கு பார்த்தாலும் களப்பிரர்களின் ‘பூதபயங்கரப்படை’ நம் போன்றவர்களைப் பிடித்துக் கொண்டுபோகக் கண்களில் விளக்கெண்ணெய் ஊற்றிக் கொண்டு திரிகிறது. நீயோமுரட்டுப்பிள்ளை, எங்கும் எதற்கும் உணர்ச்சிவசப்பட்டு உன்னை வெளிப்படுத்திக் கொண்டு விடாதே. பாண்டவர்கள்கூட வனவாசமும் அஞ்சாத வாசமும் செய்திருக்கிறார்கள். நாமும் இப்போது ஏறக்குறைய பாண்டவர்களின் நிலையில்தான் இருக்கிறோம்” என்று அறிவுரை கூறியிருந்தார். அப்படி அவர் அறிவுரை கூறுகையில், “பாண்டவர்கள் கெளரவர்களோடு சூதாடினார்கள். நாட்டை இழந்தார்கள். நாம் யாரோடும் சூதாடவில்லையே தாத்தா?” --என்று பதிலுக்குத் தான் கேட்டதும், “சூதாடாமலே களப்பிரர்களுக்கு நாட்டைத் தோற்று விட்டோம் நாம்! இப்படி அதிகப் பிரசங்கித்தனமான கேள்விகளை என்னிடம் கேட்பது போல் மதுராபதி வித்தகரிடம் தவறிப்போய்க் கூடக் கேட்காதே. அவர் வார்த்தைகளைப் பொன்னுக்கு மாற்று உறைத்துப் பார்ப்பது போல் பார்க்கிறவர். சொற்களை எண்ணிச் செலவழிக்கிறவர். எதிராளியின் சொற்களை எண்ணி நிறுத்துப் பார்க்கிறவர்"-- என்பதாகப் பாட்டனார் அப்போது தனக்கு மறுமொழி கூறியிருந்ததும் இளையநம்பிக்கு ஞாபகம் வந்தன. நினைக்கும் போது அவனுக்குச் சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை. மதுராபதி வித்தகர்தான் வார்த்தைகளை எண்ணிச் செலவழிப்பவர் என்று பாட்டனார் சொன்னார். அந்தப் பெரியவரைப் பார்க்க முடிவதற்கு முன்பே வார்த்தைகளைச் செலவழிக்கவே விரும்பாதவர்கள் ஒவ்வொருவராக எதிர்ப்படுவது போலிருந்தது. கேட்கிறவர்கள் எல்லாம் தனக்கு ஏன் மறுமொழி சொல்லாமல் போகிறார்கள் என்பது அவனுக்கு விளங்காத மர்மமாக இருந்தது. உலகைச் சூழும் மாலை இருள் அவன் மனத்தையும் சூழ்ந்தது. அடுத்து அவன் நுழைந்த வேளாண் மக்கள் தெருவில் கலப்பைக்குக் கொழு அடிக்க இரும்பைக் காய்ச்சிக் கொண்டிருந்த ஒரு கொல்லனின் உலைக்களம் எதிர்ப்பட்டது. செங்கீற்றாக மின்னிப் பளபளக்கும் காய்ச்சிய இரும்பைச் சம்மட்டியால் ஓங்கி அடித்துக் கொண்டிருந்த அந்தக் கொல்லனின் கண்கள் சிவந்து கழன்று விழுந்து விடுவது போல் உலை ஒளிபட்டு மின்னின. வைரம் பாய்ந்த கருந்தேக்கு மரத்தில் செதுக்கி எடுத்து எண்ணெய் பூசினாற் போல் மின்னும் அவனுடைய அகன்ற மார்பையும் திரண்ட தோள்களையும் கண்டபோது-- “பாண்டி மண்டலத்தின் சிற்றூர்களிலும் பேரூர்களிலும் நிறைந்திருக்கும் இப்படிப்பட்ட வலிமை வாய்ந்த உழைப்பாளிகளின் பயனை எல்லாம் எங்கிருந்தோ வந்த அந்நியரான களப்பிரர்கள் அல்லவா அநுபவிக்கிறார்கள்” என்று கழிவிரக்கத்தோடு நினைந்து நெட்டுயிர்த்தான் இளையநம்பி. “கரும்பொற் கொல்லரே! மதுராபதிப் பெரியவரைப் பார்க்க வேண்டும்... அவர் இருக்கும் இடத்தைப் பற்றி வினாவைத் தொடங்கினாலே இந்த ஊரில் எல்லாரும் ஊமைகளாகி விடுகிறார்கள்.” “கேட்க வேண்டியதைச் சொல்ல வேண்டிய வார்த்தையால் கேட்டால் பதில் சொல்வார்கள்"-- “நான் என்ன பாலிமொழியிலா கேட்கிறேன்? தமிழில் தானே கேட்கிறேன்?” . ‘பாலியில் கேட்டால் பதில் கிடைக்காது...இதுதான் கிடைக்கும்” -என்று சம்மட்டியால் பழுக்கக் காய்ந்த கொழுமுனையை மறுபடி ஓங்கி ஓங்கி அறையத் தொடங்கினான் கொல்லன். . “ஐயா! நான் பேசியதைத் தவறாகக் கொள்ளக்கூடாது. களப்பிரர்கள் பாண்டி நாட்டில் தமிழ் வழக்கை அழித்துப் பாலிமொழியைப் புகுத்துவதை என்னைப் போலவே நீங்களும் வெறுக்கிறீர்கள் என்று தெரிகிறது. நீங்கள் என்னை நம்ப வேண்டும்"-- “சொல்ல வேண்டிய வார்த்தையைச் சொன்னால் நம்பலாம்." இப்படி மீண்டும் அந்தக் கொல்லன் புதிராகிவிடவே இளையநம்பிக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. தனக்கு மறுமொழி கிடைக்கவில்லையே என்று ஆத்திரமாக இருந்தாலும் களப்பிரர்களையும், பாலிமொழியைப் பாண்டிய நாட்டில் வலிந்து புகுத்த முயலும் அவர்கள் கொடுமையையும் தன்னைப் போலவே அவனும் எதிர்ப்பது இளையநம்பிக்கு ஆறுதலளிக்கக் கூடியதாயிருந்தது. களப்பிரரை வெறுக்கும் தோள் வலிமை வாய்ந்த வினை வல்லான் ஒருவனை முதல் முதலாகச் சந்தித்துவிட்ட மகிழ்ச்சியோடு நடந்தான் அவன். இன்னும் அவன் போய்ச் சேரவேண்டிய இடத்துக்கான வழியை அறிந்துகொள்ள முடியவில்லை. மதுராபதி வித்தகரின் இருப்பிடத்தை அறிவதில் இவ்வளவு இடர்ப்பாடுகள் வரும் என்பது அவன் முற்றிலும் எதிர்பாராதது. நடந்துகொண்டே இருந்தவன் வீதியில் தனக்கு முன்னால் இரண்டு பாக தூரத்தில் ஒரு பெண் கையில் திருவிளக்கு ஏந்திச் செல்வதைக் கண்டான். அவள் காலணிகளின் பரல்கள் எழுப்பிய ஒலி அந்த வீதியின் தனியான சங்கீதமாயிருந்தது. மேகலையிட்டுக் கட்டியிருந்ததாலோ என்னவோ அவளது இடை இல்லையோ உண்டோ என்று நினைக்கும்படி சிறிதாகத் தோன்றியது. பூச்சூடிய கருங்குழலும், விளக்கேந்திய கையுமாக அவள் நடந்து சென்ற பின்னலங்காரத்தில் ஒரு கணம் மயங்கி அடுத்தகணமே தன்னுணர்வு பெற்று அவளைக் கை தட்டிக் கூப்பிடலாமா, அல்லது அருகே சென்று கேட்கலாமா என்று சிந்தித்தான். இருள் மயங்கும் வேளையில் தெருவில் தனியே செல்லும் இளம் பெண்ணைத் தன்னைப்போல் ஊருக்குப் புதிய இளைஞன் கைதட்டிக் கூப்பிடுவது நயத்தக்க நாகரிகமாக இராதென்றும் தோன்றியது. படமெடுத்த நிலையில் அரச நாகம் ஒன்று நடந்து செல்வதுபோல் மேகலைக்குக்கீழே அவள் நடையின் பின்னலங்காரத்தைக் கண்டபடியே எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் தொடர்ந்து போகலா மென்று கூடத் தோன்றியது. நன்றாக இருட்டுவதற்குள் பெரியவரைச் சந்தித்துவிட வேண்டு மென்ற முனைப்பினால் அவன் கால்கள் விரைந்தன. மிக அருகே யாரோ ஆண்பிள்ளை விரைவாக நடந்து வரவே அவள் திரும்பினாள். தான் நினைத்துக் கற்பனை செய்திருந்ததைவிட அவள் பேரழகியாக இருந்ததைக் கண்டு அந்த வியப்பில் பேசவேண்டிய உரையாடலுக்கு வார்த்தைகள் பிறவாமல் அவள் முகத்தைப் பார்த்தபடியே நின்றுவிட்டான் இளையநம்பி. ‘ஒரு தங்க நாணயம் எல்லாப் பக்கங்களிலும் பிரகாசமாகத்தான் இருக்க முடியும்’-- என்று தனக்குள் வியப்போடு சொல்லிக்கொண்டான் அவன். பின்பு அவளை அணுகி வினவினான்:-- “பெண்ணே! எனக்கு ஒர் உதவி செய்யவேண்டும்! மதுராபதி வித்தகரின் இருப்பிடம் தெரிய வேண்டுமென்று அலைந்து கொண்டிருக்கிறேன். இவ்வூரில் ஒருவராவது அதைச் சொல்லமாட்டேன் என்கிறார்கள்...” அவனுக்கு மறுமொழி கூறாமல் புன்முறுவல் பூத்தாள் அந்தப் பெண். விளக்கொளியில் அந்தப் புன்னகையின் அதே வசீகரம் அவள் கண்களிலும், கன்னங்களிலும் பரவினாற் போல் அத்தனை அழகாயிருந்ததை இளையநம்பி கண்டான். சிரிப்பு என்ற வசீகர வனப்பைக் கண்களிலும், கன்னங் களிலும்கூட நிறைத்துக் கொண்டு நிற்பதுபோல் எதிரே நின்றாள் அவள். சிரிக்கும்போது தானே புன்னகையாக மலர்வதுபோன்ற அவள் தோற்றமும் வனப்பும் இளைய நம்பிக்கும் பிடித்திருந்தாலும் தன்னுடைய வினாவுக்கு அவள் இன்னும் மறுமொழி கூறவில்லை என்பது வருத்தத்தை அளித்தது. சற்றே சினமும் மூண்டது. “அழகிய பெண்களும் ஊமைகளாக இருப்பது மோகூரில் வழக்கம் போலிருக்கிறது.” “முன்பின் தெரியாத அந்நிய ஆடவர்களுக்கு வழி காட்டுவதற்காகத்தான் மோகூரில் அழகிய பெண்கள் பிறந்திருக்கிறார்கள் என்று உங்களுக்கு யாராவது சொல்லியிருந்தார்களா, என்ன?” “அப்படியில்லை! கையில் விளக்குள்ளவர்கள் வழி காட்டாவிட்டால் வேறு யார்தான் வழிகாட்டப் போகிறார்கள்?” ‘'சாதுரியமான பேச்சு!” ‘'சாதுரியம் யாருடைய பேச்சில் அதிகமென்றுதான் புரியவில்லை. இந்த விநாடி என்னுடைய வினாவுக்கு நீ பதில் சொல்லாததுதான் மிகப் பெரிய சாதுரியம் பெண்ணே!” “.......?” மறுபடி அவள் சிரித்தாள். மெளனமானாள். அவன் சினத்தோடு தொடங்கினான்: “உரையாடல் என்பது எதிரே நிற்பவரும் கலந்து கொள்ள வேண்டியது. சொல்லுக்கு ஒரு நாகரிகம் உண்டு. நாகரிகமுள்ள எல்லார்க்கும் அது தெரிந்திருக்க வேண்டும்.” “ஐயா! நீர் பெரிய வம்புக்காரராக இருக்கிறீர். பேசினால் கேட்கக்கூடாததைக் கேட்டு மெளனமாக்குகிறீர். மெளனமாயிருந்தால் பேசச் சொல்லி வற்புறுத்துகிறீர். இனிமேல் நாகரிகத்துக்கு உம்மைக் கொண்டுதான் புது இலக்கணமே எழுதுவிக்க வேண்டும் போலிருக்கிறது.”-- சற்றே கோபத்துடன் அவள் இதைச் சொல்லியது போல் இளையநம்பிக்குத் தோன்றவே, ‘இவளோடு நயமாக இன்னும் பேச்சு வளர்த்து உண்மையை அறிவது’ என்று கருதி மேலும் அவளோடு உரையாடத் தொடங்கினான். அவன் வினாவியவர்களில் ஒருவர்கூட, ‘மதுராபதி வித்தகர் இருக்கு மிடம் எனக்குத் தெரியாதே'--என்று மறுமொழி கூறவில்லை. தெரிந்து கொண்டிருந்தும் தன்னிடம் அவர்கள் ஏன் மறைக்கிறார்கள் என்பதுதான் அவனுக்கு விளங்கவில்லை. ‘கேட்கக் கூடாததைக் கேட்டு மெளனமாக்குகிறீர்'-- என்று இவள் கூறுவதிலிருந்து இவளுக்கும் அந்த இடம் தெரியும் என்பதை அவன் அநுமானம் செய்ய முடிந்தது. சிறிது பேச்சுக் கொடுத்தால் இவளிடமிருந்து தெரிந்து கொள்ள முடியுமென்று அவனுள் நம்பிக்கை பிறந்தது. சிறிய நேரப் பேச்சிலேயே அவள் ஊர்க் கோடியில் உள்ள கொற்றவை கோவிலுக்கு நெய் விளக்கு ஏற்றச் செல்கிறாள் என்று அறிய முடிந்தது. அவனுக்கு எது வேண்டுமோ அதைத் தவிர மற்றவற்றை எல்லாம் பேசினாள் அந்தப் பெண். “ஒரு மண்டலத்துக்குக் கொற்றவை கோவிலில் நெய் விளக்கு ஏற்றுவதாக வேண்டுதல்” என்று அவள் கூறிய போது அவன் சிரித்துக்கொண்டே அவளைக் கேட்டான்; “பெண்ணே! நான்கூட உங்கள் ஊர்க் கொற்றவையிடம் ஒரு வேண்டுதல் செய்து கொள்ளலாம் என்று பார்க்கிறேன்! வேண்டிக்கொள்ளட்டுமா?” “என்ன வேண்டுதலோ அது?” “வழிதெரியாமல் மயங்குகிறவர்களுக்கு வழி சொல்லும் நல்லறிவை இந்த ஊர்க்காரர்களுக்குக் கொடு என்று வேண்டிக் கொள்ளப் போகிறேன்.” ‘'நல்லறிவு இந்த ஊராருக்கு வேண்டிய மட்டும் இருக்கிறது. சொல்லப் போனால் உங்களுக்குத்தான் இப்போது அது இருப்பதாகத் தெரியவில்லை.” இந்த மறுமொழிக்குப் பின் அவன் அவளோடு உரையாடலை நிறுத்தி விட்டான். அவன் முகத்தில் மலர்ச்சி மறைந்து விட்டதை அவளும் கண்டு கொண்டாள். இதன்பின் கொற்றவை கோவில்வரை அவர்கள் பேசிக் கொள்ள வில்லை. அவள் நெய் விளக்கு ஏற்றினாள். அவன் கொற்றவையை வணங்கினான். அந்த வணக்கத்துக்கு உடனே பயன் கிடைத்தது. அவன் மேல் அவளுக்கு இரக்கம் வந்திருக்க வேண்டும். அவள் அவனைக் கேட்டாள்: “இப்போது இந்த இடத்தில் கொற்றவை சாட்சியாக எனக்கு ஒரு வாக்குக் கொடுத்தால் உங்களுடைய வினாவுக்கு நான் மறுமொழி கூறலாம்.” “என்ன வாக்கு அது?” “மதுராபதி வித்தகருடைய இருப்பிடத்தை அறிய விரும்பும் நீங்கள் ஐயப்பாட்டுக்கு இடமில்லாத நல்லெண்ணத்தோடு தான் அதைக் கேட்கிறீர்கள் என்று உங்கள் குலதெய்வத்தின் மீது ஆணையிட்டுச் சத்தியம் செய்ய வேண்டும்! செய்வீர்களா?” “துரோகிகள் செய்ய வேண்டிய சத்தியத்தைப் பாண்டிய குலம் ஒளி பெற பாடுபடும் நல்லவன் ஒருவனையே செய்யச் சொல்கிறாய் நீ. ஆனாலும் நான் அதைச் செய்கிறேன்! எனக்குக் காரியம் ஆக வேண்டும்.” அவன் அவள் கூறியபடி சத்தியம் செய்ததும் அவள் கூறினாள்: . “நீங்களும், நானும், இவ்வூராரும் எல்லாருமே பாண்டிய குலம் ஒளி பெறத்தான் பாடுபடுகிறோம். இப்படிப் பாடுபடுகிறவர்களை அவர்கள் எங்கிருந்தாலும் தேடித் தேடிக் கொல்வதற்காகவே களப்பிரர்கள் பூத பயங்கரப் படையை ஏவியிருக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா? மீண்டும் பாண்டியராட்சி மலரப் பாடுபடுகிறவர்களின் இருப்பிடத்தை ஒற்றறிவது, பாண்டியருடைய குலத்தின் மேல் விசுவாசம் உள்ளவர்கள் அகப்பட்டால் எந்த நீதி விசாரணையும் இன்றி அவர்களை உடனே கொன்று விடுவது ஆகிய காரியங்களைச் செய்வதற்காகவே பூத பயங்கரப் படை உண்டாக்கப்பட்டிருக்கிறது. அந்தப் படையிலும் உங்களைப்போல் வலிமையும் வனப்பும் வாய்ந்த இளைஞர்கள் இருக்கிறார்கள். அவர்களும் மதுராபதி வித்தகரின் இருப்பிடத்தைத் தேடி அலைகிறார்கள். நீங்கள் அவர்களில் ஒருவரா, நம்மவர்களில் ஒருவரா என்று தெரியாத பட்சத்தில் இந்த ஊரில் யாரும் உங்களுக்குப் பதில் சொல்லியிருக்க மாட்டார்கள். நான் துணிந்து பதில் சொல்லிப் பெரியவர் இருக்கும் இடத்துக்கு வழியும் சொல்ல முன் வந்திருப்பதற்குக் காரணம் உண்டு...” “என்ன காரணமோ?” “நீங்கள் பூத பயங்கரப் படையைச் சேர்ந்தவராக இருந்தால் உங்களால் இவ்வளவு செம்மையாகத் தமிழில் உரையாட முடியாது. அப்படியே உரையாடக் கற்றிருந்தாலும் சாதுரியமும் நயங்களும் அந்த உரையாடலில் இருக்க இயலாது. ஒரு மொழியை அவசியத்துக்காக யார் வேண்டுமானாலும் கற்கலாம். ஆனால் நயங்களையும், சமத்காரங்களையும் உண்டாக்கி அணி நலம்பட எழுதவோ பேசவோ அதைத் தாய் மொழியாகக் கொண்டவனால்தான் முடியும்.” “ஆகா என்ன சாதனை? இவ்வளவு நேரம் சிரமப்பட்டு நான் களப்பிரன் அல்லன், தமிழன்தான் என்பதைக் கண்டு பிடித்து விட்டாய்...” “ஏளனம் வேண்டாம். உங்களிடம் இன்னும் என்னென்ன கண்டுபிடித்திருக்கிறேன் என்பதைச் சமயம் வரும்போது பேசலாம். நன்றாக இருட்டுவதற்குள் நீங்கள் பெரியவரைக் காணச் செல்ல வேண்டும். இவ்வளவு குழப்பத்துக்கும் காரணம், நம்மவர்கள் தங்களை இனம் கண்டு கொள்வதற்காகச் சந்தித்தவுடன் சொல்லிக் கொள்ளும் நல்லடையாளச் சொல்லை இன்னும் நீங்கள் கூறவில்லை.” “அதென்ன நல்லடையாளச் சொல்?” “அதைச் சொல்வதற்காகவே உங்களைச் சத்தியம் செய்யச் சொன்னேன். மதுராபதி வித்தகரின் ஆதரவாளர்கள் சந்தித்துக் கொள்ளும்போது ‘கயல்’ என்று சொல்லிக் கொள்ள வேண்டும். நீங்கள் அந்நியர் என்று சந்தேகப் பட்டால் உங்களிடமிருந்து முதலில் அந்த வார்த்தை வருகிறதா என்பதைத்தான் மற்றவர்கள் எதிர்பார்ப்பார்கள். உங்களிடமிருந்து அந்த நல்லடையாளச் சொல் கிடைக்கா விட்டால் அவர்கள் பின்பு வாய்திறப்பது அரிது. ‘கயல்’ என்ற சொல்லால் தான் இங்கே வழிகளையும் கதவுகளையும் பிறர் வாய்களையும் திறக்கச் செய்யமுடியும். இது நன்றாக நினைவிருக்கட்டும்.” அவள் இவ்வாறு கூறியதும் சற்று முன் அந்தக் கரும் பொற்கொல்லன், ‘சொல்ல வேண்டிய வார்த்தையால் கேட்டால் பதில் சொல்வார்கள்'-என்று பேசியிருந்த பேச்சின் புதிர் இளைய நம்பிக்கு இப்போது விளங்கிற்று. “பெண்ணே! உனக்கு எவ்வாறு நன்றி சொல்வதென்று தெரியவில்லை. ஆனால், ஒன்றை மட்டும் இப்போது சொல்ல முடியும். அந்த உதவியைச் செய்ததற்காகக் காலம் உள்ள அளவும் நீ பெருமைப்பட முடியும்...” இளைய நம்பியின் இந்த நன்றியைக் கேட்டு அவள் புன் முறுவல் பூத்தாள். இந்தப் புன்முறுவலின் அழகு பாதாதி கேசபரியந்தம் விரைந்து பரவி நிறைவதைப்போல் தெரியும் இனிய பிரமையிலிருந்து அவன் விடுபடச் சில கணங்கள் ஆயிற்று. பதிலுக்குப் புன் முறுவல் பூத்தபடி, ‘கயல்’ என்று தொடங்கி ஒரு கணம் நிறுத்தித் தன் குரலைத் தணித்து, “உன் கண்களைச் சொல்லவில்லை? எனக்கு வழி பிறக்கும் நல்லடையாளச் சொல்லைத்தான் கூறுகிறேன்” என்றான். இதைக் கேட்டு அவள் முகத்தில் நாணம் நிறைந்தது. “நேர் எதிரே தெரியும் ஒற்றையடிப் பாதையில் கால் நாழிகைத் தொலைவு சென்றால் ஒரு பெரிய ஆலமரம் வரும். அங்கே அவரைக் காணலாம். ஆனால் அந்த இடத்தை அடை கிறவரை நல்லடையாளச் சொல் பலமுறை உங்களுக்குத் தேவைப்படும்” என்று கூறி விட்டு அவனிடம் விடைபெற்றுச் சென்றாள் அந்தப் பெண். 2. மதுராபதி வித்தகர் அந்தப் பெண் தன்னை எச்சரித்துவிட்டுச் சென்றது எவ்வளவிற்குப் பயன் நிறைந்தது என்பதை அந்தப் பாதையில் சிறிது தொலைவு நடந்ததுமே இளைய நம்பி புரிந்துகொள்ள நேர்ந்தது. கயல் என்னும், அந்த நல்லடையாளச் சொல்லின் மந்திர சக்தியை யும் அவன் விளங்கிக் கொள்ள முடிந்தது. இருபுறம் மரங்கள் அடர்ந்து செழித்திருந்த பாதையின் மருங்குகளில் அங்கங்கே உருவிய வாளுடன் நின்ற வீரர்கள் அவன் ‘கயல்’ என்று கூறியவுடனே வாளை உறையிலிட்டு வணங்கி வழி விட்டனர். அவர்கள் தோற்றத்திலிருந்து களப்பிரர் ஆட்சி வந்த பின் பாண்டிய நாட்டில் மறைந்து வாழ்ந்த தென்னவன் ஆபத்துதவிகளின் வழிமுறையினராகவும், எதையும் எதிர்கொள்ள வல்ல முனையெதிர் மோகர்களின் வழிமுறையினராகவும் இருக்க வேண்டுமென்று தோன்றியது. நல்லடையாளம் கிடைத்ததும் அந்த வீரர்களில் ஒருவன் முன் வந்து அவனை அழைத்துச் சென்றான். எதிரே நிலப்பரப்பின் பெரும்பகுதியைத் தன் விழுதுகளால் ஊன்றியிருந்த மாபெரும் குடையை ஒத்த ஆலமரம் ஒன்று தெரிந்தது. இவ்வளவு பெரிய ஆலமரத்தை மிகப் பெரிய திருக்கானப்பேர்க் காட்டில்கூட அவன் கண்டதில்லை. மறைகின்ற கதிரவனின் மஞ்சள் கலந்த செவ்வொளி இடையிடையே தெரியப் பெரும்பெரும் விழுதுகளை ஊன்றியிருந்த அந்த ஆலமரத்தின் அடிப்பாகம் எங்கிருக்கிறதென்று காணவே முடியவில்லை. ஆகாயத்துக்கும் பூமிக்குமாகத் தூண்கள் இறக்கியது போன்ற விழுதுகளைக் கடந்து ஒற்றையடிப் பாதையில் அவர்கள் நடந்தார்கள். நெடுந் தொலைவு சென்றதும் ஒரு பெரிய கல்மண்டபம் போன்ற அதன் அடிமரம் தெரிந்தது. அந்த அடி மரத்தின் கீழ்ப்பகுதியில் மரப் பொந்துபோல் இயல்பாகவே ஒரு வாயிலும் தென்பட்டது. திருக்கானப்பேர்க்காட்டில் பல பழைய மருத மரங்களும், புளிய மரங்களும் இப்படிப் பெரிய பெரிய அடிப்பொந்துகளை உடையதாக இருப்பதை அவன் கண்டிருக்கிறான். ஆனால் இந்த மரப் பொந்திலோ உள்ளே மிகப் பெரிய இடம் இருக்கும் என்று தோன்றியது. அடி மரத்தின் பிலம் போன்ற வாயைச் சுட்டிக்காட்டி உள்ளே போகலாம் என்பதுபோல் இளைய நம்பிக்குச் சைகை செய்து விட்டு வெளிப்புறமே ஒதுங்கி நின்றுகொண்டான் உடன் வந்த வீரன். விரைந்து துடிக்கும் நெஞ்சத்தோடு உள்ளே நுழைந்த இளைய நம்பி தன் கண்களின் எதிரே மெய்சிலிர்க்கும் காட்சியைக் கண்டான். வியப்பினால் அவன் கண்கள் இமையாமல் நேர் எதிரே பார்த்தன. ஒரு காலைச் சாய்த்து மடக்கி மறு காலைக் கீழே தொங்கவிட்டபடி திடீரென்று உள்ளே நுழைகிறவர்களின் கண்களில் தென்திசைக் கடவுள் ஆலமரத்தடியில் யோகியாக அமர்ந்து தென்படுவதுபோல் தென்பட்டார் மதுராபதி வித்தகர். அந்தத் தட்சிணாமூர்த்தியின் அருள் கூட இனிமேல் பாண்டியர் பரம்பரையினருக்கு இந்தத் தட்சிணாமூர்த்தியின் உதவியால்தான் கிடைக்க வேண்டும் போலும் என்று அவனுக்குத் தோன்றியது. வெண்மையின் ஒளியும், கருமையின் கூர்மையும் தனித்தனியே தெளிவாகத் தெரியும் இரண்டு அற்புதமான கண்கள் அந்தப் பரந்த முக மண்டலத்திலிருந்து வெண்ணெயில் கரு நாவற்பழம் பதித்ததுபோல் அவனை நோக்கி விழித்தன. வெண்சாமரம் போன்று நன்றாக நரைத்து வெளுத்துவிட்ட சடைமுடிக்கற்றைகள் அவிழ்ந்து தோள்களிலும் பிடரியிலும் சரிந்திருந்தன. ஒரு கிழச் சிங்கம் அமர்ந்திருப்பதுபோல் அந்தப் பிடரிமயிரும் நேரே பார்க்கும் பார்வையும் அவன் கண்களுக்கு அவரைக் காட்டின. அந்த அரிமா நோக்கின் கூர்மை அவரிடம் பேசுவதற்கு என்று அவன் நினைத்த வார்த்தைகளை எல்லாம் ஒவ்வொன்றாகக் குத்திக் கீழ் விழச்செய்தது. அங்கிருந்த அகல் விளக்கின் ஒளியில் அவர்கள் கையிலிருந்த வெள்ளெருக்கம் பிரம்பும் மிகப்பெரிய படைக் கருவிபோல் தோன்றி அவன் பார்வையை மருட்டியது. சாஷ்டாங்கமாகக் கீழே விழுந்து அந்த மாபெரும் இராஜ தந்திரியை வணங்கினான் இளைய நம்பி. அவன் அறிமுக உறவு சொல்லிக்கொள்ளு முன் அவரே அவனைப் பெயர் சொல்லி அழைத்தார். அவருடைய கணீரென்ற குரல் அவனை வாழ்த்தியது. எழுந்து நின்றவன் என்னென்ன வார்த்தைகளையோ அவரிடம் பேச நினைத்து முடிவில் தொடர்பில்லாமல் ஏதோ மூன்று வார்த்தைகளைச் சொன்னான். “நன்றாக இருட்டி விட்டது.” “ஆமாம்! பாண்டிய நாட்டில் இருட்டிப்போய் நெடுங் காலமாகிறது தம்பீ!” இந்த வாக்கியத்தின் பொருளாழம் அவனுக்குப் புரிந்தது. “மன்னிக்க வேண்டும் ஐயா! பொழுது சாய்வதற்குள் தங்களைக் காண்பேன் என்று பாட்டனாரிடம் சொல்லி விட்டுவந்தேன்; இந்த இடத்துக்கு நான் வருவதற்குள்...” “மிகவும் துன்பப்பட்டிருப்பாய் என்பது எனக்குத் தெரியும். எப்படி வரவேண்டும், என்னென்ன நல்லடையாளச் சொற்கள் பயன்படும் என்றெல்லாம் உன் பாட்டனாருக்கு நான் விவரமாகச் சொல்லியனுப்பியிருக்க முடியும். இவ்வளவு சிரமங்களையும் கடந்து நீ இங்கு வந்து சேர்கிற திறன் உடையவனா, இல்லையா என்று அறிவதற்காகவே நான் எதையும் சொல்லவில்லை.” “பெரிய சோதனை இது!” “சோதனைகள் அதிகம் எதிர்ப்படாத வாழ்வு வீரனுடைய வாழ்வாக இருக்க முடியாது.” “தங்களைப் போன்ற பெரியவர்களின் ஆசியினால் தான் சோதனைகளைத் தாங்கும் வலிமை அடியேனுக்குக் கிடைக்க வேண்டும்.” கூறிக்கொண்டே பிறர் புரிந்துகொள்ள எந்த உணர்ச்சிகளும் தெரியாததும், பிறரைப் புரிந்துகொள்ள எல்லாச் சாதுரியங்களும் கருவிகளும், ஊடுருவுகிற பார்வைகளும், எதுவும் தப்பிவிடாமல் பிடித்திழுக்கும் கண்களும் அமைந்த அந்த விசாலமான முகத்தை நன்றாகப்பார்த்தான் இளையநம்பி. அளக்க முடியாத அளவும் பொருளும், கலக்க முடியாத நிலையும் தோற்றமும் உடைய ஒரு பெரிய மலையோ, கரை காணாத மகா சமுத்திரமோ எதிரே அமைந்திருப்பது போல் பிரமை தட்டியது. “என்ன பார்க்கிறாய்? பெரும்படையும், ஆயுதங்களும், கோட்டை கொத்தளங்களும் உடைய களப்பிரரை வெறும் வெள்ளெருக்கம் பிரம்போடு ஆலமரத்தடியில் அகல் விளக்கு வெளிச்சத்தில் அமர்ந்திருக்கிற இந்தக் கிழவனா வென்று விடப் போகிறான் என்றுதானே நினைக்கிறாய்?” ‘'நான் அப்படி நினைக்கமாட்டேன் ஐயா! மனிதர்களை எதிர்க்கத்தான் ஆயுதங்கள் வேண்டும். பேய்களை விரட்ட வெள்ளெருக்கம் பிரம்பே போதும். களப்பிரர்கள் பேய்கள் போல்தான் இந்த மண்ணைப் பிடித்திருக்கிறார்கள்.” “வாழ்க! உன் நெஞ்சின் ஆழத்திலிருக்கும் தேசபக்தி என்ற நெருப்பு இன்னும் அவியவில்லைை. உன் வார்த்தைகள் அதைக் காட்டுகின்றன.” “இப்படிப்பட்ட உள்நெருப்பு அவியாதவர்கள் இந்த மாபெரும் பாண்டி மண்டலத்தில் எல்லா ஊர்களிலும் இன்னும் நிச்சயமாக இருப்பார்கள் ஐயா.” “அவர்களைத் தேடி ஒன்று சேர்ப்பதுதான் என் வேலையாக இருக்கிறது தம்பீ! இந்தத் திருமோகூரிலும் கூடல்மாநகரிலும் மறையவர் திருவீதிகளில் யாக சாலைகள் இருக்கும். அந்த யாக சாலைகளில் எவனோ ஒரு முதல் முனிவன், என்றோ பல்லூழி காலத்திற்கு முன் ஏற்றிய புனித நெருப்பு ஆயிரம் பல்லாயிரம் ஆண்டுகளாக இன்னும் அவியாமல் காக்கப்படுகிறது. மிக மூத்த அரச குலங்களில் ஒன்றாகிய பாண்டியர் குலத்தின் தேசபக்தியும் அப்படிக் காக்கப்பட வேண்டும். அந்த நெருப்புச் சிறிதா பெரிதா என்பது கேள்வியில்லை. நெருப்புக்கும் விதை நெல்லுக்கும் சிறிய அளவிலிருந்து பெரிய அளவைப் படைக்கும் ஆற்றல் உண்டு.” “நம்முடைய வேள்விச் சாலையில் நீறு பூத்திருக்கும் தேச பக்தி என்ற நெருப்பை வளர்க்கும் ஒரே முனிவராக இன்று நீங்கள் இருக்கிறீர்கள் ஐயா!” “தம்பி! உன்னுடைய புகழ் வார்த்தைகள் எனக்கு மகிழ்ச்சியை அளிக்கமாட்டா. வார்த்தைகளில் நான் என்றுமே மகிழ்வதில்லை. புலவர்கள் சொற்களில் மகிழலாம். இராஜ தந்திரிகள் சாதனைகளில்தான் மகிழ முடியும். நீ சொல்லிச் செலவழித்துவிடும் வார்த்தைகள் உன்னிடமிருந்து வெளியேறிப் போய் காற்று என்னும் சப்தங்களை உள்ளடக்கும் மகாசப்த சாகரத்தில் மூழ்கிக் கரைந்து விடுகின்றன. நீ இது வரை சொல்லாத வார்த்தைகள்தான் இனி உனக்குச் சொந்தம். நம் பாண்டிய மன்னர்களையும், அவர்களது கோநகரான மாமதுரையையும், பூம்புனல் ஆறாகிய வையையும் எத்தனை எத்தனை வார்த்தை அலங்காரங்களால் புகழ்ந்து புலவர்கள் வருணித்தார்கள்? அந்தப் புகழ் இன்று எங்கே போயிற்று? அந்தச் சங்கப் புலவர்கள் இன்று எங்கே போனார்கள்? அவர்கள் கொலுவீற்றிருந்த தமிழ்ச் சங்கம்தான் இன்று எங்கே போயிற்று? அவர்கள் வளர்த்த தமிழ் எங்கே போயிற்று? அந்த நாகரிகம், அந்தக் கலைகள், அந்த வாழ்வு எல்லா வற்றையும் இன்று களப்பிரர்கள் இருளடையச் செய்து விட்டார்களே!” “ஒவ்வோர் இருட்டுக்குப் பின்னும் ஒரு வைகறை உண்டு ஐயா!” “வெறும் வார்த்தைகளை அலங்கரித்துப் பந்தல் போடும் அந்தக் கவிகளின் குணம் உனக்கும் சற்று இருக்கும் போலிருக்கிறது தம்பீ! புகழை நம்பாதே. உன்னைப் புகழ்கிறவர்கள் உன்னுடைய கடந்த காலத்துக்கு அந்த வார்த்தைகள் மூலம் உன்னை ஏணி வைத்து ஏற்றிச் செல்கிறார்கள். இருளுக்குப்பின் வைகறை வரும் என்று சோம்பியிராதே. வைகறையை எதிர்கொள்ளப் பாடுபடு! விழித்திரு! நீ உறங்கிக் கொண்டிருப்பாயானால் உன்னால் வைகறையைக் கூடக்காண முடியாது.” “பாட்டனார் என்னிடம் நிறையச் சொல்லியிருக்கிறார் ஐயா! நான் மதுரை மாநகரில் என்னென்ன செய்ய வேண்டும் என்று தாங்கள் கட்டளையிடுகிறீர்களோ அவற்றை எல்லாம் குறைவுபடாமற் செய்துவரச் சித்தமாயிருக்கிறேன்.” “களப்பிரர்கள் இப்போது செய்திருக்கும் கோட்டைப் பாதுகாப்பு ஏற்பாடுகள் கடுமையானவை. அகநகரிலும் புறநகரிலும் பூதபயங்கரப் படையினர் மாறுவேடத்தில் திரிகிறார்கள். எந்த வழியாகவும் நீ அகநகரில்கோட்டைக்குள் நுழைவது என்பது பெரு முயற்சியாகத்தான் இருக்கும்.” “ஐயா! நாளைக்கு வைகறை வேளையில் நான் கோட்டைக்குள் போவது ஓரளவு சுலபமாயிருக்கும் என்று எண்ணுகிறேன். விடிந்தால் மதுரையில் அவிட்ட நாள் பெரு விழா. தலைநகரம் கோலாகலமாகவும், மக்கள் கூட்டம் நிரம்பியும் இருக்கும். பாதுகாப்பு விதிகள் அவ்வளவு கடுமையாக இருப்பது திருவிழாக் காலங்களில் சாத்திய மில்லை. இருந்த வளமுடையாரையும், அந்தர வானத்து எம் பெருமானையும் தொழுவதற்காகப் பாண்டி நாட்டின் பல்வேறு திசையிலிருந்தும் மக்கள் கூடும் நாளில் அடியேனும் அந்நகருக்குள் போவது சுலபமாயிருக்கும் என்றே தோன்றுகிறது.” “இளையநம்பி! நீ நினைப்பது தவறான அநுமானம். நம்முடைய திருவிழாக்களை அவ்வளவு சிறப்பாகக் கொண்டாட விடுவதற்குக் களப்பிரர்கள் மனம் ஒப்ப மாட்டார்கள். இந்தப் பேய்கள் விரட்டப்படுகிறவரை பாண்டியர் தலைநகரில் உன்னுடைய முன்னோர்களின் புகழ்பெற்ற திருவிழாக்கள் கிடையாது.” வாளின் நுனிபோல் கூரியதாயிருந்த அவரது நாசியையும், அழுத்தமான பெரிய உதடுகளையும், அதனிடையே வெளேரென்று ஒளிவீசும் பற்களையும், சிவந்த முக மண்டலத்தையும் ஏறிட்டுப் பார்த்து அவர் கூறியதை மறுக்கத் துணிவின்றி நின்றான் இளையநம்பி. அதன் பின் நீண்ட நேரம் களப்பிரர் ஆட்சி சில தலைமுறைகளில் செய்துவிட்ட கொடுமைகளை ஒவ்வொன்றாக அவனுக்கு விளக்கிச்சொல்லிக் கொண்டிருந்தார் அவர். அவற்றைக் கேட்கக் கேட்க அந்த இளம் வீரனின் தோள்கள் தினவு எடுத்து விம்மின. இரத்தம் கொதித்தது. “தம்பி! இரவு நெடுநேரமாகி விட்டது! உன்னுடைய தோட் கோப்பிலிருந்து திருக்கானப்பேர்க் கட்டுச்சோறு மணக்கிறது. திருக்கானப்பேரில் தயிர் அமிர்தமாக இருக்கும். நெடுங்காலத்திற்கு முன் உன் பாட்டனார் விழுப்பரையரோடு விருந்துண்டு மகிழ்ந்திருக்கிறேன். இப்போது நீ உண்டு முடித்த பின் அங்கேயே உறங்கலாம். நீ மதுரைமாநகருக்குப் போவது பற்றி நாளை விவரம் சொல்லுகிறேன்.” “ஐயா! திருக்கானப்பேர்த் தயிரை இவ்வளவு புகழும் நீங்களும் இந்தக் கட்டுச் சோற்றை என்னோடு பகுத்துண்ணலாம் அல்லவா?’’ ‘'நானா? இரவில் உண்பதை நான் நிறுத்திப் பல ஆண்டுகள் ஆயிற்றுத் தம்பி! பகலில்கூட நான் உண்ணும் உணவுகள் பிறருக்குக் கசப்பானவை.” “தாங்கள் கூறுவது விளங்கவில்லையே?” “போகப் போகத்தானே விளங்கிக்கொள்வாய்? இப்போது நீ உண்ணலாம். அந்த மூலையில் மண் கலத்தில் பருக நீர் இருக்கிறது. உண்டு முடித்ததும் இதோ இந்தப் பட்டைக் கல்லில் படுத்து உறங்கு. வழிப்பயணக் களைப் போடு உறக்கத்தையும் கெடுத்துக் கொள்ளாதே. எனக்கு இரவில் சிறிது தொலைவு காலார நடக்கும் வழக்கம் உண்டு. நான் திரும்பி வர இரண்டு நாழிகை ஆகலாம். அதுவரை எனக்காக நீ விழித்திருக்க வேண்டும் என்பதில்லை” என்று கூறிவிட்டு வெளியேறுவதற்காக எழுந்து நின்றார் மதுராபதி வித்தகர். அந்தத் தோற்றத்தின் உயரம் திடீரென்று தன்னைச் சிறியவனாக்கி விட்டது போல் உணர்ந்தான் இளையநம்பி. சாமுத்ரிகா லட்சணங்கள் எல்லாம் அமைந்த ஒரு யவன வீரனைத் தமிழ்நாட்டுக் கோலத்தில் மூப்போடு பார்த்தது போலிருந்தது அவர் நின்ற காட்சி. சிங்கம் பார்ப்பதுபோல் நேர் எதிரே நிலைக்கும் அந்தப் பெரிய கண்கள், அவர் அங்கிருந்து வெளியேறிய பின்பும் தன்னை இடைவிடாமல் பார்த்துக் கொண்டே இருப்பதுபோல் அவனுக்குத் தோன்றியது. எதிராளியின் நினைவில் ஓர் எச்சரிக்கைபோல் பதியும் அந்தக் கண்களைப் பற்றியே நினைத்து வியந்து கொண்டிருந்தான் இளையநம்பி. உண்டு முடித்ததும் பலகை போலிருந்த அந்தக் கல்லில் படுத்தபோதுதான் சற்றுமுன் அவர் அமர்ந்திருந்த கல்லை ஒட்டி ஒரு பெரிய புற்று இருப்பதை அவன் காண நேர்ந்தது. எப்போதென்று தெரியாத ஏதோ ஒரு நேரத்தில் அவன் தன்னையறியாமலே அயர்ந்து உறங்கிவிட்டான். அவனுடைய சொப்பனத்தில் கொற்றவை கோயிலுக்கு நெய் விளக்குப் போடும் அந்தப் பேரழகியான திருமோகூர்ப் பெண் வந்தாள். கலப்பைக்குக் கொழு அடிக்கும் அசுர ஆகிருதியோடு கூடிய அந்தக் கரும்பொற்கொல்லன் வந்தான். இன்னும் யார் யாரோ வந்தார்கள். குளிர்ந்த காற்றும் வைகறையை வரவேற்கும் பறவைகளின் பல்வேறு ஒலிகளும் அவனை எழுப்பின. எழுந்து உட்கார்ந்து எதிரே பார்த்தவன் குருதி உறைந்து போகும் படியானதொரு காட்சியைக் கண்டான். அவனுக்குப் பேச நா எழவில்லை. உடல் புல்லரித்தது. அந்தப் பெரிய விழிகள் எப்போதும் போல் அவனை இமையாமல் நோக்கிக் கொண்டிருந்தன. 3. காராளர் விட்டு விருந்து “ஐயா!. இது என்ன கோரம்?” என்று கேட்க நினைத்து நா எழாமல் அவன் மருண்டிருப்பதைப் பார்த்துத் தம்முடைய வெண்பற்கள் தெரியச் சிரித்தார் அவர். அந்த அகன்ற நெற்றியில் உணர்ச்சிகளைப் படிக்கமுடியாமல் திகைத்தான் அவன். “நீ பயப்படுவாய் என்று எனக்குத் தெரியும்! தங்கத்தைப் புடம் போடுவதுபோல் இந்த உடலைப் புடம் போட்டு எடுத்திருக்கிறேன். எனக்கு எதுவும் கெடுதல் வரமுடியாது." அவருடைய கழுத்திலும் தோள்களிலும் முழங்கால்களிலும் கன்னங்கரிய நாகசர்ப்பங்கள் நெளிந்து கொண்டிருந்தன. அருகிலிருந்த புற்றின் துவாரங்களிலே மேலும் சில சர்ப்பங்கள் இருள் வழிவது போன்ற நிறத்தில் நெளிந்து கொண்டிருந்தன. கொடிய நஞ்சு அடங்கியது என்று கருதப்படும் காஞ்சிரங்காய் ஒன்றைக் கடித்துத் தின்று கொண்டிருந்தார் அவர். எரிகின்ற தழல் போன்ற திறத்தைக் கொண்டிருந்த மேனியில் கரிய சர்ப்பங்களையும் சேர்த்துப் பார்த்தபோது ஓர் அசைப்பில் முதல் நாள் தோன்றியது போலவே ஆலமர் கடவுளின் கோலம் இளைய நம்பியின் கண்களுக்குத் தெரிந்தது. காலங்கள் செய்யும் மூப்புக்களை வென்று காலங்களையே மூப்படையச் செய்யும் வைரம் பாய்ந்த அந்த மேனியின் இரகசியம் அவனுக்கு இப்போது ஒரளவு புரிந்தது. பாட்டனார் சொல்லியிருந்த பெரியவரின் வயதிலிருந்து அவர் மூத்துத் தளர்ந்து போயிருக்கக்கூடும் என்று திரு மோகூரில் நுழைந்த வேளையில் தனக்குத் தானே செய்து கொண்ட அநுமானம் எவ்வளவு பிழையானது என்பதை இப்போது இளைய நம்பி உணர்ந்தான். அந்த உடலில் மூப்பின் சாயல் தெரிந்தது; ஆனால் தளர்ச்சியின் சாயல் கூடத் தெரியவில்லை. “ஐயா! ‘சுடச் சுடரும் பொன்போல் ஒளிரும் துன்பம் சுடச்சுட நோற்கிற் பவர்க்கு’ -என்று நம்முடைய செந்நாப்போதர் கூறியருளியிருக்கும் குறளுக்கு இப்போது அடியேனுக்கு நன்றாகப் பொருள் புரிகிறது. இத்தனை மூப்பிலும் தங்கள் திருமேனி பொன் தழலாக மின்னுவது பெரிய சித்தி ஐயா!” “என்னுடைய மூப்பைப் பற்றி நினைக்க எனக்கு நேரமில்லை தம்பி! புகழ்கிறவர்கள்தான் எனக்கு அதை நினைவூட்டவே செய்கிறார்கள். நான் ஏன் இப்படி விநோதமான வழக்கங்களை உடையவனாக இருக்கிறேன் என்பது உன் ஐயப்பாடாக இருக்கலாம். கபாடங்களில் முத்துக்கள் ஒளிரும் மதுரைக் கோட்டையில் மறுபடி பாண்டியர்களின் புகழ் பெற்ற மீனக் கொடி பறக்கிறவரை நான் சாகக் கூடாது என்று எனக்குள் நானே உறுதி செய்து கொண்டிருக்கிறேன். காடுகளிலும், மலைகளிலும், ஊர்ப்புறமான தோட்டங்களிலும் மறைந்து வாழும் எனக்கு நச்சுப் பிராணிகளாலும், கொடிய விலங்குகளாலும் எதுவும் நேர முடியாதபடி என் சரீரத்தைப் பழைய முனிவர்களின் மருந்து முறைப்படி புடம் போட்டு வைத்திருக்கிறேன். இதோ என் கையிலிருக்கிறதே காஞ்சிரங்காய்; இதில் அணுப்பிரமாணம் நீ தின்றாலும் உன் சரீரம் அடுத்த சில விநாடிகளில் நீலம் பாய்ந்து மூச்சுத் திணறி நீ இறந்து விடுவாய். ஆனால் எனக்கோ இது மாங்காய் தின்பது போல் விருப்பமான காரியம். பாண்டியர்களின் அடையாளப் பூவைத் தருவது என்பதாலோ என்னவோ எனக்கு வேப்பங் கொழுந்து என்றால் கொள்ளை ஆசை. வேப்பங்கொழுந்தை மையாய் அரைத்து வெண்ணெய் போல் மிருதுவாகும்படி செய்து இரண்டு மாங்காய் அளவு உண்பேன். இந்திரியங்களை வற்றச் செய்து இப்படிப் புடம்போட்டு இந்த உடலை நான் காப்பதெல்லாம் எதற்குத் தெரியுமா?” “தெரியும் ஐயா! அதற்காகப் பாண்டிய மரபின் கடைசித்துளி இரத்தமும் உங்களுக்கு நன்றியுடையதாக இருக்கும்! ‘நான் உண்ணும் உணவுகள் பிறருக்குக் கசப்பானவை’ என்று நேற்றிரவு தாங்கள் கூறியதன் பொருள் இப்போது புரிந்தது.” “அதனால் உலகோர் உண்ணும் பிற உணவுகளை நான் வெறுக்கிறேன் என்று பொருளில்லை. அவற்றையும் நான் உண்பது உண்டு. ஆனால் எதை எதை நான் உண்ணலாம் என்பதற்கும், எதை எதை நான் உண்ணக்கூடாது என்பதற்கும் கடுமையான நியமங்கள் வைத்துக் கொண்டிருக்கிறேன்.” அவனிடம் பேசிக் கொண்டே சர்ப்பங்களை ஒவ்வொன்றாகப் புற்று வாயில் எடுத்து விட்டார் அவர். கருமை ஒழுகுவது போல் படமும் உடலும் மின்னும் ஒவ்வொரு சர்ப்பமும் கொடியாய் வழிந்து அவர் கையிலிருந்து புற்றில் இறங்கும் காட்சி மீண்டும் அவனைப் புல்லரிக்கச் செய்தது. ‘'நீ போய்த் தாமரைப் பொய்கையில் நீராடி வரலாம் இளையநம்பீ! இங்குள்ள மிகப்பெரிய தாமரைப் பொய்கை நேர் மேற்கே மூங்கில் தோப்புக்களின் நடுவே இருக்கிறது. உன்னுடைய உணவு வசதிகளைப் பற்றிக் கவலைப்படாதே. திருமோகூர்ப் பெரியகாராளர் மனையில் நெய்யும் மிளகும் கமகமவென்று மணக்க உனக்கு விருந்து கிடைக்கப் போகிறது. இன்னும் சிறிது நேரத்தில் பெரிய காராளர் உன்னை அழைத்துப் போக இங்கு வருவார். உங்கள் திருக்கானப்பேர் நகரம் முல்லை நிலம் சூழ்ந்திருப்பதாலும் பசுக்கள் மிகுந்திருப்பதாலும் நன்றாக உறையிட்ட தயிருக்கு அது புகழ் பெற்றிருக்கிறது. இந்த ஊர்ப் பெரியகாராளர் வீட்டு வெண் பொங்கலும், மோர்க் குழம்பும், நெய் அதிரசங்களும் இணையிலாச் சுவையுடையனவாக இருக்கும். நீ கொடுத்து வைத்தவன்.” “ஐயா! தலைநகருக்கு அடியேன் எப்போது புறப்பட வேண்டியிருக்கும்?” “போய் நீராடிவிட்டு வா... உன்னுடைய பயணமும் பெரியகாராளர் இங்கு வந்த பின்புதான் முடிவாகும்!” அவன் மரப் பொந்திலிருந்து வெளியேறி இரண்டுபாக தூரம்கூட நடந்திருக்க மாட்டான், பின்புறமிருந்து அவருடைய குரல்; “தம்பீ! இதையும் கேட்டு விட்டுப் போ” -என்று மீண்டும் கூப்பிடவே அவன் விரைந்து திரும்பி அவரை நோக்கி நடந்தான். “உன்னிடம் ஒர் எச்சரிக்கை; உன்னுடைய வலது தோளின் மேற்புறம் சங்குபோல் ஒரு தழும்பு இருக்கிறதில்லையா, அந்தச் சங்குத் தழும்பை இன்றோ, இனி எதிர்காலத்திலோ நீ நீராடும் போதோ மேலங்கியைக் களைந்து ஒய்வு கொள்ளும்போதோ அந்நியர் எவரேனும் வெறித்துப் பார்த்தால் எச்சரிக்கையாயிரு! அது உன் வாழ்வுக்கு அபாயத்தைத் தேடி வரலாம்." “ஐயா! அது தங்களுக்கு எப்படித் தெரியும்? “இந்தப் பிள்ளையின் எதிர்க்கால நன்மைக்காக” என்று சிறுவயதில் யாரோ ஒரு பெரியவர் அந்த அடையாளத்தை நெருப்பில் காய்ச்சி இட்டதாக என் பாட்டனார் சொல்லியிருக்கிறார். நீங்களோ இப்போது அதனால்தான் எனக்கு அபாயங்களே வரும் என்கிறீர்கள்?” “உனக்கும், இன்னும் வேறு நான்கு குழந்தைகளுக்கும் தாமிரத்தில் சிறிய அழகிய வலம்புரிச் சங்குபோல வார்த்து அதை நெருப்பில் காய்ச்சி அந்த முத்திரையை இட்டதே நான்தான். ஐந்து குழந்தைகளுக்கு நான் அந்த முத்திரையை இட்டேன். அவர்கள் ஐவருமே இன்று உயிரோடிருந்தால் உன்னைப்போல் சுந்தர வாலிபர்களாயிருப்பார்கள். இரண்டு பேரைக் களப்பிரர்கள் சந்தேகப்பட்டுக் கொன்று விட்டார்கள். இன்னும் மூன்று பேர் மீதியிருக்கிறீர்கள். நான் இட்ட மங்கல முத்திரையின் நற்பயனை இவர்கள் மூவருமாவது அடைய வேண்டும் என்பது என் விருப்பம்.” “மற்ற இருவரும் எங்கிருக்கிறார்கள் ஐயா?” “இப்போது நீ அதைத் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியம் இல்லை தம்பீ! நீங்கள் மூவரும் சந்தித்துக் கொள்ள ஒரு சமயம் வரும். அப்போது பார்க்கலாம்.” இந்த விஷயம் அவனுக்குப் பெரும் புதிராக இருந்தும் இதைப் பற்றி அவரிடம் மேலும் மேலும் வினாவிக் கொண்டிருப்பது நன்றாயிராதென்று எண்ணி, அவருடைய எச்சரிக்கையை மட்டும் அப்படியே ஏற்றுக்கொண்டு நீராடிவர நடந்தான் இளையநம்பி. வயல் வெளிகளில் இளங்காற்றில் ஆடும் பசும் பயிர்ப்பரப்பிலும், குளங்களில் மலர்ந்த தாமரைப் பூக்களிலும், பனித்துளி முத்துக் கோத்த புல் நுனிகளிலும் சிவந்து கொண்டிருந்த கீழ் வானத்திலும் வைகறையின் அழகுகள் சிதறியிருந்தன. தண்ணீர் நிரம்பியிருக்கும் இடமெல்லாம் தாமரை பூத்திருந்த அந்த ஊரின் வளமும் செழிப்பும் அவனுக்கு உள்ளக் கிளர்ச்சியை அளித்தன. அந்த ஊரை அவன் மிகவும் விரும்பினான். பொய்கைக் கரையில் நீராடுவதற்காக மேலங்கியைக் கழற்றியபோது வலது தோளின் செழிப்பான சிவந்த மேற் புறத்தில் மைக்கோடுகளாய் விளங்கிய சங்கு முத்திரையை அவன் தானே ஒரு புதுமையைப் பார்ப்பதுபோல் இன்று பார்த்துக் கொண்டான். அவன் மறந்திருந்த ஒன்றை அதிகம் ஞாபகத்துக்குரியதாகச் செய்துவிட்டார் மதுராபதி வித்தகர். சிறிய வயதில் யாரோ ஒரு பெரியவர் செய்த மங்கல நல்லாசி என்று அவன் மறந்திருந்த ஒன்றை இன்று நிகழ்கால அபாயத்துக்குரியதாகவும் எதிர்கால நன்மைக்குரியதாகவும் பாதுகாக்க வேண்டியதாய்ப் புரிந்துகொள்ள நேர்ந்து விட்டது. ‘இந்த முத்திரையை உடைய ஐவரில் இருவரை ஏன் களப்பிரர்கள் சந்தேகப்பட்டுக் கொன்றார்கள்? மீதமிருக்கும் தன்னையுள்ளிட்ட மூவருக்கும் இதனால் அபாயங்கள் நேரிடலாம் என்று பெரியவர் கூறுவதற்குக் காரணம் என்ன?’ என்பதை எல்லாம் அவனால் உடனே விளங்கிக் கொள்ள முடியாமலிருந்தது. அவர் கூறியவை யாவும் தனக்கும், அரசிழந்து ஒடுக்கப்பட்டு நலிந்து கிடக்கும் பாண்டியர் பெருமரபிற்கும் நன்மை செய்யக் கூடியனவாகவே இருக்கும் என்பதை நம்பி அவைகளைப் பற்றி மேலும் மேலும் நினைத்து மனத்தைத் குழப்பிக் கொள்வதைத் தவிர்த்தான் இளைய நம்பி. ஆடைகளை உலர்த்தி அணிந்து கொண்டு அவன் ஆலமரத்திற்குத் திரும்பியபோது மதுராபதி வித்தகரிடம் அவருடைய உயரத்திற்கு சரிபாதி உயரம்கூட இல்லாத சற்றே பருத்த ஒரு நடுத்தர வயது மனிதர் உரையாடிக் கொண்டிருந்தார். அவர்தான் திருமோகூர்ப் பெரிய காராளராயிருக்க வேண்டும் என்று அவன் புரிந்து கொண்டான். அவன் உள்ளே நுழைந்ததும் அந்தப் புதிய மனிதர் அவனை நோக்கி முகம் மலர்ந்து கைகூப்பி வணங்கினார். உயர்ந்த குடிப் பிறப்பின் கம்பீரம் அந்த முகத்தில் தெரிந்தது. கண்களில் கருணை மயமான சாயலைக் காண முடிந்தது. இளையநம்பி அவரைப் பதிலுக்கு வணங்கினான். “தம்பி! இவரை நீ தெரிந்துகொள்ள வேண்டும். என்னை நிழல்போல் நீங்காமல் பாதுகாத்துவரும் முனையெதிர்மோகர் படை இளைஞர்களுக்கும், தென்னவன் ஆபத்துதவிகளுக்கும் வயிறு வாடாமல் சோறளித்துக் காக்கும் திருமோகூர்ப் பெரியகாராளர் இவர்தான். இவருடைய செந்நெற் கழனிகளில் விளையும் நெல்லெல்லாம் இந்தப் பகுதியிலும், சுற்றுப் புறங்களிலும் மறைந்திருக்கும் நம்மவர்களுக்குப் பயன்படுகின்றன. மறுபடி பாண்டியராட்சி மலர வேண்டும் என்று அக்கறை காட்டும் நல்லவர்களில் இவர் முதன்மையானவர். அரசியல் காரணங்களுக்காகவும், தான் செய்துவரும் உதவிகள் களப்பிரர்களால் தடுக்கப்பட்டு விடக்கூடாதே என்பதற்காகவும் அந்தரங்கமாகவும் தந்திரமாகவும் இவர் அதைச்செய்து வருகிறார். இன்று நண்பகலில் இவர் நீ தலைநகரை அடைவதற்கு ஏற்பாடுகள் செய்திருக்கிறார். ஒரு மண்டலம் நீ அகநகரிலும் சுற்றுப் புறங்களிலும் அலைந்து நிலைமைகள் எவ்வாறு இருக்கின்றன என்று அறிந்து வர வேண்டும். நீ போகிற இடங்களில் எல்லாம் நம்மவர்கள் நிறைய இருக்கிறார்கள். நம்மைத் தொலைத்துப் பூண்டோடு கருவறுத்து அழித்துவிட நினைப்பவர்களும் நிறைய இருக்கிறார்கள். இரு தரப்பாரையும் நீ இனங்கண்டு கொள்ள வேண்டும். ‘வாயிலிருக்கிறது வழி’ என்ற பழமொழி ஞாபகம் இருக்கட்டும். உன்னுடைய நல்லடையாளச் சொல்லுக்கு எந்த இடத்தில் மறுமொழி கிடைக்க வில்லையோ அங்கே சந்தேகம் எழ இடமின்றி உடனே பாலியில் பேசிவிடு. நம்முடைய காரியங்களுக்குப் பயன்பட வேண்டும் என்பதற்காக உனக்கு ஓரளவு பாலிமொழியும் கற்பித்திருப்பதாக உன் பாட்டனார் திருக்கானப்பேர் விழுப்பரையர் ஏற்கெனவே முன்னொரு சமயம் எனக்குச் சொல்லியனுப்பியிருந்தார். தங்களை எதிர்ப்பதற்கு எந்தக் கலகத்தை யார் செய்தாலும் அவர்கள் சக்தி வாய்ந்தவர்களாகவும் சாதனங்களை உடையவர்களாகவும் இருக்கக் கூடாது என்பதற்காகக் களப்பிரர், குதிரைகள், யானைகள், தேர்கள், படைக்கலங்கள் போன்றவற்றைப் பொதுமக்கள் பயன்படுத்த முடியாதபடி செய்து விட்டார்கள். அதை நாம் பொருட்படுத்தாவிட்டாலும் நம்மிடையே நாம் பயன்படுத்துவதற்குக் குதிரைகளும், யானைகளும், தேர்களும், படைக்கலங்களும் இன்று அதிகம் இல்லை.” “நாம் நினைத்தால் அவற்றைப் படைத்துக் கொள்ள முடியும் ஐயா! அதற்கு வேண்டிய ஆட்களை நாம் மிக எளிமையாகத் தேடிவிட முடியும் என்று எனக்குத் தோன்றுகிறது. அந்தத் திருமோகூர் வேளாளர் தெருவில் ஒரு வலிமை வாய்ந்த கொல்லனை நேற்று நான் சந்தித்தேன். மீண்டும் பாண்டியராட்சி மலர்வதற்காக அவன் எந்த ஒத்துழைப்பையும் அளிக்க ஆயத்தமாயிருப்பான்.” “தம்பீ! நீ நேற்று மட்டும்தான் அவனைச் சந்தித்தாய். நானும் காராளரும் நாள் தவறாமல் அவனைச் சந்தித்துக் கொண்டிருக்கிறோம். அவன் நம்மவர்களில் ஒருவன்தான். ஆனாலும் அவன் தன்னுடைய உலைக்களத்தில் வாளும், வேலும், ஈட்டியும் செய்யக்கூடாதென்பது உனக்குத் தெரியுமா? கலப்பைக்குக் கொழு அடிப்பதை மட்டும்தான் களப்பிரர்கள் விட்டு வைத்திருக்கிறார்கள்.” “இவ்வளவு பயங்கரமான அடிமைத்தனத்தில் இந்த மங்கலப் பாண்டிவள நாடு முன்பு எந்தக் காலத்திலும் வாழ்ந்திருக்க முடியாது ஐயா!” “கவலைப்படாதே தம்பீ! மக்களின் நியாயமான நல்லுணர்ச்சிகளை ஒடுக்கும் எந்தக் கொடுங்கோல் ஆட்சியும் நிலைக்க முடியாது. அழ அழக் கொள்ளையடித்த செல்வங்கள் எல்லாம் அழ வைத்துவிட்டே நீங்கும். அடிமைப்படுத்துகிற ஒவ்வொருவரும் தன் பிடி இறுக இறுக அதே வேகத்தில் சுதந்திர உணர்ச்சி வளர முடியும் என்பதை மறந்து விடுவது வழக்கம். களப்பிரர்களுக்கும் இன்று அந்த மறதி வந்து விட்டது. இந்த ஆண்டிற் குளித்த கொற்கைத் துறை முத்துக்கள் எல்லாவற்றையும் சோனர்களுக்கு ஏற்றுமதி செய்துவிட்டு அதற்கு விலையாக குதிரைகள் பெற ஏற்பாடு செய்திருக்கிறார்களாம். சோனகா நாட்டிலிருந்து வரும் இந்தக்குதிரைக் கப்பல் கொற்கைத் துறையை வந்தடையும் நாளையும், துறைமுகத்திலிருந்து அவற்றைத் தலைநகருக்குக் கொண்டுவர எப்படி ஏற்பாடு செய்திருக்கிறார்கள், எவ்வளவு களப்பிரப் பாதுகாப்பு வீரர்கள் குதிரைகளோடு உடன் வருவார்கள் என்பதை எல்லாம் நீ தெரிந்து சொல்லியனுப்ப வேண்டும். இவற்றை உன்னிடமிருந்து தெரிந்து எனக்கு வந்து சொல்லவும், என்னிடமிருந்து தெரிவனவற்றை உனக்கு வந்து சொல்லவும் உரியவர்கள் மதுரை மாநகரில் அவ்வப்போது உன்னைச் சந்தித்துக் கொண்டே இருப்பார்கள். இப்போது நீ புறப்படலாம். காராளர் உனக்காகக் காத்துக்கொண்டிருக்கிறார். மற்ற விவரங்களைப் போகும் போதே அவர் உன்னிடம் சொல்வார்.” பெரியவரை வணங்கி ஆசி பெற்றுப் புறப்பட்டான் இளையநம்பி. 4. செல்வப் பூங்கோதை “ஐயா! முனையெதிர் மோகர் படைக்கும் தென்னவன் ஆபத்துதவிகளுக்கும் இவ்வளவு உதவிகளைச் செய்யும் உங்களுக்குக் களப்பிரர்களால் எந்தக் கெடுதலும் வராமல் இருக்க வேண்டுமே என்பதுதான் என் கவலை-” என்று உடன் நடந்துகொண்டே பெரிய காராளரிடம் கேட்டான் இளைய நம்பி. அதற்கு அவர் மறுமொழி கூறினார்: “எனக்கு அப்படிக் கெடுதல் எதுவும் வர முடியாது. களப்பிரர்களின் அரண்மனைக் களஞ்சியங்களுக்கு வேண்டிய போதெல்லாம் நான்தான் நெல் அனுப்புகிறேன். அதனால் என்னைக் களப்பிரர்கள் தங்களுக்கு மிகவும் வேண்டியவன் என்று நம்பியிருக்கிறார்கள். தேசாந்திரிகளுக்கும், வழிப்போக்கர்களுக்கும், நாடோடி யாத்திரிகர்களுக்கும் உணவிடுவதற்குச் சத்திரங்களும், அறக்கோட்டங்களும், நடத்துவது போல் ஏற்பாடு செய்து அந்தச் சத்திரங்களிலும், அறக்கோட்டங்களிலும் நம்மவர்களுக்கு உணவளித்து வருகிறேன்.” “அதாவது தேசாந்திரிகளாகவும், நாடோடிகளாகவும் வந்த களப்பிரர்களுக்கு வெளிப்படையாக உதவுகிறீர்! இந்த மண்ணின் சொந்தக்காரர்களுக்கு உதவுவதைப் போலவும், நாடோடிகளுக்கு உதவுவதைப் போலவும் உதவுகிறீர்.” “என்ன செய்யலாம்? இப்போதுள்ள சூழ்நிலையில் அப்படி மிகவும் தந்திரமாகத்தான் நடந்து கொள்ள வேண்டியிருக்கிறது.” “நான் உம்மைக் குறை சொல்லவில்லை காராளரே! விதியின் கொடுமையை எண்ணித்தான் கோபப்படுகிறேன். தேசாந்திரிகளாக வந்தவர்கள் இந்த மண்ணுக்குச் சொந்தம் கொண்டாடவும், இந்த மண்ணின் சொந்தக்காரர்கள் தேசாந்திரிகள் போல் சோற்றுக்கும் சுதந்திரத்திற்கும் அலையவும் நேர்ந்திருப்பதை எண்ணித்தான் நெஞ்சம் குமுறுகிறேன்.” “உங்களைப் போன்றவர்களின் குமுறல் வீண் போகாது! ‘நாட்டு மக்களைக் கண்ணீர் சிந்த வைக்கும் ஆட்சியை அந்தக் கண்ணீரே படைகளாகி அழித்துவிடும்’ என்று நம்முடைய முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள்.” ‘யாருடைய கண்ணீரையும் பற்றிக் கவலைப்படாமல் இவ்வளவு காலம் களப்பிரர்கள் ஆண்டு விட்டார்களே?” பேசிக்கொண்டே வேளாளர் திருவீதிக்கு வந்திருந்தார்கள் அவர்கள். வாழை மரங்கள், மாவிலைத் தோரணம், பச்சை நெற்கதிர்த் தோரணம் எல்லாம் கட்டி அலங்காரம் செய்திருந்த ஒரு பெரிய மாளிகையின் வாயிலில் அவனை அழைத்துச் சென்று நிற்கச் செய்திருந்தார் காராளர். “ஐயா! இதென்ன மங்கல அலங்காரங்கள்? நீங்கள் நாள் தவறாமல் உணவளித்துக் காப்பாற்றி வரும் எண்ணற்ற நாடோடிகளோடு ஒரு புது நாடோடியாக நானும் இப்போது வந்து சேர்ந்திருக்கிறேன். நாடு களப்பிரர்களிடமிருந்து விடுபடுகிறவரை இப்படி அலங்காரம் செய்யும் மகிழ்ச்சியைக் கூட என்னால் ஏற்க முடியவில்லை.” “அப்படியல்ல! தங்களை எப்படிச் சிறப்பாக வரவேற்க வேண்டும் என்று நல்ல வேளையாக நாங்கள் அறிந்திருக்கிறோம். நான் நடத்தும் அறக்கோட்டங்களில் வைத்து உங்களுக்கு நான் விருந்திடப் போவதில்லை. உங்களை என் இல்லத்திற்கு அழைத்து வந்திருக்கிறேன். சற்றே இந்தச் செம்மண் கோலத்தில் நில்லுங்கள்! என் மனைவியும் மகளும் உங்களுக்கு மங்கல ஆரத்தி சுற்றிக் கொட்ட விரும்புகிறார்கள்...” முதலில் காராளரின் மனைவியென அவனால் உய்த்துணர முடிந்த முதிய அம்மையாரை அடுத்துக் கையில் ஆரத்திப் பாத்திரத்துடன் வந்தவளைக் கண்டதும் அவன் கண்கள் வியப்பால் மலர்ந்தன. முதல் நாள் அந்தி மாலையில் கையில் விளக்கோடு கொற்றவை கோவில் வாயிலிலிருந்து அவனுக்கு வழிகாட்டிய பேரழகியே அவள். பெண்கள் இருவரும் தனக்கு ஆரத்தி சுற்றிக் கொண்டிருந்தபோதே அவன் காராளரை நோக்கி, “ஐயா! உங்கள் மகளுக்கு நான் நிறைய நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறேன். உங்கள் மகளுடைய உதவி கிடைத்திராவிட்டால், நான் நேற்று மாலை நம் பெரியவருடைய இருப்பிடத்தைக் கண்டு சென்றிருக்கவே முடியாது” என்று நன்றி பெருகச் சொன்னான். உடனே அவர் தன் மகளை நோக்கிச் சிரித்தபடி கேட்கலானார்; “செல்வப் பூங்கோதை! இவர் சொல்வது மெய்யா? நீ என்னிடம் சொல்லவே இல்லையே? நேற்றே இங்கு நம் இல்லத்திற்கு இவரை அழைத்து வந்திருக்கலாமே? எனக்கு இவையெல்லாம் ஒன்றுமே தெரியாமற் போய்விட்டது. அப்படியானால் நம் சிறப்புக்குரிய இந்த இளம் விருந்தாளி ஏற்கெனவே உனக்குத் தெரிந்தவராகி விட்டார் என்று சொல்...” ஆரத்தி சுற்றிவிட்டுத் தலை நிமிர்ந்த அவள் இதற்கு ஒன்றும் மறுமொழி கூறாமல் அவரையும் அவனையும் பார்த்துப் புன்னகை செய்தாள். கையில் மஞ்சள் நீர் நிறைந்த அலங்காரத் தட்டுடன் நிமிர்ந்து பார்த்து நகைத்த அந்த வசீகரமான முகம் முதலில் இளைய நம்பியின் கண்களிலும், பின்பு மனத்திலும் அப்படியே சித்திரமாகப் பதியக்கூடியதாயிருந்தது. ‘செல்வப்பூங்கோதை’ என்று அவளுடைய இனிய பெயரை அவள் தந்தை அதே பாசக்குழைவுடன் இன்னொரு முறை கூப்பிட்டுக் கேட்க வேண்டும் போல் ஆசையாயிருந்தது அவனுக்கு. ஒளிபாயும் அந்த வெண்முத்துப் பற்களால் அவள் இன்னொரு முறை செவ்விதழ்கள் திறந்து சிரிப்பதைப் பார்க்க வேண்டும் போலவும் விருப்பமாயிருந்தது. இவளைச் சந்திக்கும் முன்பு வேறு எந்த இளம் பெண்ணைக் கண்டும் இவ்வளவு பெரிய தாபத்தையோ, தாகத்தையோ அவன் அடைந்ததில்லை. “யாருடைய புன்சிரிப்பில் உன் மனத்தின் நெடுங்காலத்துக் கட்டுப்பாடுகள் எல்லாம் மெல்ல மெல்லத் தகர்கின்றனவோ அவள் இதற்கு முன்பும் பல பிறவிகளில் உன்னைப் பார்த்து எப்போதோ இப்படி நகைத்திருக்க வேண்டும். விட்டகுறை தொட்டகுறையாகத்தான் இப்படிப் புன்முறுவல் பிறக்கும். அப்படி முன்பிறவியில் என் முன் முதல்முதலாக மோகப் புன்முறுவல் பூத்த முதற் சிங்காரியை வீதிகளின் முகக் கூட்டங்களில் நான் தேடி அலைந்து கொண்டிருக்கிறேன்! இது புரியாமல் பித்தன் என்றும் காமநோயாளன் என்றும் ஊரார் என்னை ஏளனம் செய்கிறார்களே’ என்பதாக இளம் வயதில் திருக்கானப்பேரில் தன்னோடு ஒரு சாலை மாணக்கனாகக் கற்று நல் வாலிபப் பருவத்தில் அவன் காதலித்த பெண்ணை அடைய முடியாமல் ஏமாறிப் பைத்தியம் பிடித்த ஓர் இளைஞன் இரவெல்லாம் தெருவில் அரற்றிக் கொண்டு திரிந்ததை இப்போது நினைவு கூர்ந்தான் இளைய நம்பி. இந்தத் திருமோகூர்ப் பெரிய காராளர் மகள் செல்வப் பூங்கோதையும் தன்னை அப்படித் தெருவெல்லாம் அலைய விட்டுவிடுவாளோ என்றுகூட விளையாட்டாக நினைத்துப் பார்த்தான் அவன். அருமைத் தாயின் அணைப்பில் மகிழ்ந்த பருவமும், புதிய புதிய பொருள்களில் மகிழ்ந்த பருவமும், இலக்கண இலக்கியங்களையும், போர் நுணுக்கங்களையும் அறிவதில் மகிழ்ந்த பருவமும், எல்லாம் இன்று ஒரு கன்னியின் புன்முறுவலில் தோற்றுப் போய்விட்டாற் போலிருந்தது. அறிந்தவற்றை அறியாமற் செய்யும் சாமர்த்தியங்களை ஒரு பெண்ணின் அழகிற் சேர்த்து வைத்துவிட்ட படைப்புக் கடவுள் மேல் கோபம் கோபமாக வந்தது அவனுக்கு. ‘தோளும் வாளும் நல்முதியோர் பன்னாள் துணையா யிருந்தளித்த கல்வியுடன் ஆளும் பெருமிதமும் என் ஆசாரங்களும் அத்தனையும் விழியிரண்டாற் குறிவைத்தே நாளும் கிழமையும் பருவமும் பார்த்தந்த நங்கை தொலைத்திட்டாள் தன் இள நகையால் வாளும் வேலும் படையும் வென்றறியா என் வன்மையெலாம் சூறையிட்டாள் விந்தையிதே’ என்பதாக அந்தத் திருக்கானப்பேர்ப் பைத்தியம் அடிக்கடி பாடிக்கொண்டு திரியும் ஒரு பாடலும் இளைய நம்பிக்கு இன்று நினைவு வந்தது. இப்படி ஒர் அழகிய நளின கவிதை எழுத முடிந்த வாலிபனைப் பித்தனாக்கி விட்டுப் போனவள் யாரோ அவள் மேல் உலகிலுள்ள எல்லா வாலிப ஆண்களின் சார்பிலும் கடுஞ்சினம் கொள்ள வேண்டும் போலவும் இருந்தது. இளைஞர்களின் கண்களில் வசந்த காலங்களாக அலங்கரித்துக் கொண்டு வந்து நின்று அவர்களின் ஆண்மையையும், வீரத்தையும் சூறையாடும் அத்தகைய மோகினிகளில் ஒருத்தியாகத்தான் இந்தச் செல்வப் பூங்கோதையும் இளைய நம்பியின் பார்வையில் இன்று தோன்றினாள். முதல் நாள் அந்தி மாலைப் போதாக இருந்தாலும், பெரியவரின் இருப்பிடத்தைக் கண்டு பிடித்து அவரைச் சந்திக்கப் போக வேண்டிய காரிய அவசரம் இருந்தாலும் தனக்கு வழிகாட்டிய இவளுடைய அழகை அவன் ஓரளவுதான் காண முடிந்திருந்தது. இப்போதோ மேகங்களே இல்லாத நீல நெடுங்குளம் போன்ற கோல வானத்திடையில் குதிபோட்டுவரும் முழுமதியை ஒத்துத் துள்ளித் திரிந்து ஒடியாடி விருந்துக்கான காரியங்களைக் கவனித்துக்கொண்டிருந்த இவள் அழகை அவன் முழுமையாய்க் காணவும் சிந்திக்கவும் முடிந்தது. வேறெதையும் சிந்திக்கவும் முடியாமலிருந்தது. இளையநம்பிக்குச் சித்திரத்தவிசு இட்டு அமரச் செய்து நீர் தெளித்து இடம் செய்து குமரி வாழை இலை விரித்து அலர்ந்த மல்லிகை பூப்போல் ஆவி பறக்கும் சாலியரிசிச் சோறு படைக்கப்பட்டது. இள மாதுளம் பிஞ்சுகளை நெய்யில் வதக்கி மிளகும், உப்பும் தூவிச் சுவை சேர்த்திருந்த கறியும், நெய் அதிரசங்களும், பிற பணியாரங்களும், காலையில் மதுராபதி வித்தகர் இந்த வீட்டு உணவைப் பற்றித் தன்னிடம் வருணித்திருந்தது ஒரு சிறிதும் மிகையில்லை என்பதை அவனை உணர வைத்தன. இலையிலமர்ந்து உண்ணும் போதும் அதன் பின் கூடத்தில் அமர்ந்து காராள ரோடு உரையாடிக் கொண்டிருந்தபோதும் காலணிகளின் பரல்கள்கலின் கலின் என்று இனிய ஒலியாய்க் கொஞ்ச அந்த வீட்டில் எங்கெங்கோ மாறி மாறிக் கேட்டுக்கொண்டிருந்த நடையைத் தொடர்ந்து போய்க்கொண்டிருந்தது அவன் மனம். “வண்டிகள் மூன்றும் ஆயத்தமாயிருக்கின்றன. தாமரைப் பூக்கள்தான் இன்னும் பறித்து முடியவில்லை. சிறிது நேரத்தில் புறப்பட்டுவிடலாம். உண்ட களைப்பாறச் சற்றே ஓய்வு கொள்ளலாம் அல்லவா?” என்று காராளர் இருந்தாற் போலிருந்து அவனைக் கேட்டபோது அவனுக்கு முதலில் அவர் என்ன சொல்லிக் கொண்டிருக்கிறார் என்பதே புரியவில்லை. அவன் அவரை வினவினான்: “என்னசொல்கிறீர்கள் ஐயா? நான் மதுரை மாநகருக்குப் புறப்படுவதற்கும் தாமரைப் பூக்கள் பறிப்பதற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது?” “சம்பந்தம் இல்லாமலா சொல்கிறேன்? சம்பந்தம் இருப்பதால்தான் தாமதமாகிறது. ஆவணித் திரு அவிட்ட நாளில் இருந்தவளமுடையாருக்கும், அந்தரவானத் தெம் பெருமானுக்கும் ஆயிரத்தெட்டுத் தாமரை மலர்களை அர்ச்சிப்பதாக என் மகள் வேண்டிக்கொண்டிருக்கிறாள். இரண்டு வண்டிகள் நிறையத் தாமரை மலர்கள் பறித்து நிரப்பியாக வேண்டும். மற்றொரு வண்டியில் ஆட்கள் ஏறிக்கொள்ளலாம்.” “ஏதேது? நானறிந்த வரையில் கணக்கிட்டுப் பார்த்தால் கூட இந்த வட்டாரத்தில் உங்கள் மகள் வேண்டிக் கொள்ளாத தெய்வங்களே மீதமிருக்க முடியாது போலிருக்கிறதே?” என்று அவரிடம் அவன் கேட்ட ஒலி அடங்கு முன்பாகவே, “இந்த வேண்டுதல்கூடப் போதாமல் இப்போது இன்னொரு புதிய வேண்டுதலையும் எல்லாத் தெய்வங்களிடமும் செய்து கொள்ள வேண்டிய அவசியம் வந்திருக்கிறதென்று அவரிடம் சொல்லுங்கள் அப்பா!” என்று அவனுக்குப் பதில் சொல்வதுபோல் தன்தந்தையிடம் கூறியபடி அப்போது அவளுடைய அந்த முழு மதியே அங்கு உதயமாயிற்று. உடனே காராளர் சிரித்துக் கொண்டே சொன்னார்:- “பார்த்தீர்களா? பார்த்தீர்களா? திருக்கானப்பேர்க் காரர்களுக்கு நாங்கள் சாதுரியப் பேச்சில் ஒரு சிறிதும் இளைத்தவர்கள் இல்லை என்று என் பெண் நிரூபிக்கிறாள்.” “இந்த நாட்டில் இன்று நிரூபிக்கப்பட வேண்டிய சாதுரியங்கள் வெறும் பேச்சில் இல்லை. அது விளங்காமல் தான் நாம் இன்னும் பேசிக்கொண்டே இருக்கிறோம். களப் பிரர்களிடம் நிரூபிக்கப்பட வேண்டிய சாதுரியங்கள் வாள் முனைகளில்தான் இருக்கிறது. வெறும் வார்த்தைகளில் இல்லை.” “இருக்கலாம்! ஆனால் இந்தத் திருக்கானப்பேர் வீரருடைய பேச்சு சாதுரியத்தால்தான் நேற்று இவர் போக வேண்டிய இடத்துக்கு என்னிடம் இவருடைய வழியையே தெரிந்து கொள்ள முடிந்தது என்பதை இவருக்கு நினைவூட்டுங்கள் அப்பா!” இதைக் கேட்டு அவன் சிரித்தே விட்டான். அவனது கடுமையைத் தன் சொற்களால் உடைத்தெறிந்திருந்தாள் அவள். வேறு விதமாக அவளை வம்புக்கு இழுக்க வேண்டும் என்று தோன்றியது அவனுக்கு. “திருமோகூர்க் கொற்றவை கோவிலுக்கு ஒரு மண்டலம் நெய்விளக்கு, நான் மாடக் கூடலில் இருக்கும் இருந்த வளமுடைய பெருமாளுக்கும், அந்தரவானத்து எம்பெருமானுக்கும் அவிட்டத் திருநாளில் ஆயிரத்தெட்டுத் தாமரைப் பூக்கள், வேண்டுதல்கள் இவ்வளவுதானா? இன்னும் ஏதாவது மீதம் இருக்கிறதா என்பதைத் தயை கூர்ந்து உங்கள் திருக்குமாரியிடம் சற்றே கேட்டுச் சொல்ல முடியுமா காராளரே?” “திருக்கானப்பேர்ப் பாண்டிய குல விழுப்பரையரின் தவப் பெயரர் பத்திரமாக நான்மாடக் கூடல் நகரை அடைந்து காரியங்களை வெற்றி பெற முடித்துக் கொண்டு சுகமாகத் திரும்ப வேண்டும் என்ற புதுப் பிரார்த்தனையையும் இப்போது சேர்த்துக்கொள்ளச் சொல்லுங்கள் அப்பா...” இந்த வார்த்தைகளைக் கேட்டதும் நேருக்கு நேராகவே அந்த முழுமதி முகத்தை ஏறிட்டுப் பார்த்து நன்றியோடு முகம் மலர்ந்தான் இளையநம்பி. அந்தப் பார்வையைத் தாங்க முடியாத நாணத்தோடு காலணிகளின் ஒலியை மட்டும் அவன் செவிகளுக்கு இசையாய் வழங்கி விட்டு அவள் உள்ளே ஓடிவிட்டாள். முதல் நாள் தன்னோடு கொற்றவை கோவிலுக்குச் செல்லும் வழியில் எல்லாம் சுபாவமாய்ப் பேசி வந்த அவள் இப்போது புதிதாய் நாணப்படுவது அவனுக்கு வியப்பை அளித்தது. பழகப் பழக நாணப்படுவதும், புரியப் புரிய வெட்கப்படுவதும், நெருங்க நெருங்க விலக முயல்வதும் தான் அழகிய பெண்ணின் சுபாவங்களோ என்று சிந்தித்தான் அவன். பெண்களின் நாற்குணங்களில் ஒன்றாகிய பயிர்ப்பு என்பது இதுவாகத் தான் இருக்க வேண்டும் என்றும் தோன்றியது அவனுக்கு. ஆடவன் அறிய முயலும் போதெல்லாம் பெண் அறியாமையாகி விடுகிறாளோ என எண்ணினான் அவன். அந்த வேளையில் பெரிய காராளர் அவனுடைய நளின நினைவுகள் கலைந்துபோகும்படி வேறு புதிய செய்திகளைச் சொல்லத் தொடங்கினார். 5. பூத பயங்கரப் படை பெரிய காராளர், இளைய நம்பியிடம் கூறத் தொடங்கினார்: ‘நீங்கள் எங்களுடைய சித்திர வண்டிகளில் மதுரைக்குப் போய்க் கோட்டைக்குள் நுழைவது உங்களுக்கு மிகவும் எளிதாயிருக்கும். இதே வண்டிகளில்தான் நான் அரண்மனைக் களஞ்சியங்களுக்கு நெல் அனுப்பி வைப்பது வழக்கம். அதனால் என்னுடைய இந்த வண்டிகளையும், ஆட்களையும் கோட்டைப் பாதுகாவலர்களுக்கு நல்ல பரிச்சயம் உண்டு. என் மனைவியும், மகளும் தவிர மூன்றாவதாக நீங்கள் போகிறீர்கள். உங்களை அவர்கள் ஐயப்படாமல் இருக்க வேண்டும். கோட்டை வாயில் வரை போய்ச் சேருவதற்குள் வழியில் அங்கங்கே சந்தேகக் கண்களோடு திரியும் பூத பயங்கர்ப் படையினர்பார்வையிலும் நீங்கள் படாமல் தப்ப வேண்டும்.” “எங்களோடு தாங்கள் மதுரை மாநகருக்கு வர வில்லையா, காராளரே?” “நான் வர முடியாது! சில காரணங்களுக்காகப் பெரியவரோடு இங்கே இன்றியமையாதபடி இருக்கும் கடமை பெற்றுள்ளேன்! தவிரவும் வழக்கமாக நான் அதிகம் கோட்டைக்குள் அகநகரில் போவதில்லை. அப்படிப் போனால் என்மேல் கூடக் களப்பிரர்கள் சந்தேகப்படலாம். விலகி இருந்து அவர்களுக்கு உதவுவது போல் நடிப்பதால் தான் நான் அவர்களிடம் அடைந்திருக்கும் நம்பிக்கை நம் காரியங்களுக்குப் பயன்படுகிறது. அதையும் கெடுத்துக் கொண்டு விட்டால் ஒரேயடியாக அகநகர் விஷயங்கள் நமக்கு எதுவுமே தெரியாதபடி இருண்டு விடும். என் குடும்பத்துப் பெண்கள் இறையனார் திருக்கோவிலுக்கும், இருந்த வளமுடைய விண்ணகரத்துக்கும் புறநகரில் திருமருதமுன் துறையில் புண்ணிய நீராடவும் அடிக்கடி போய் வருவார்கள். அதனால் அவர்கள் மேல் யாருக்கும் சந்தேகம் வர முடியாது... ’’ “நியாயம்தான். தாங்கள் கூறுவதை நான் அப்படியே ஏற்றுக்கொள்கிறேன். போகும்போது நான் எப்படி எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்று நீங்கள் கூறுகிறீர்களோ அதன்படி நடந்துகொள்வேன். அபாயங்களைத் தவிர்க்க முயலவேண்டும். நீங்கள் கவலைப்படுவதை என்னால் மறுக்க முடியவில்லை, காராளரே.” “என் மகள் ஒர் அற்புதமான வழியைச் சொன்னாள்! அதன்படி ஒர் அபாயமும் இல்லாமல் பத்திரமாக நீங்கள் கோட்டைக்குள் போய்விட முடியும். ஆனால்...?’ “ஆனால் என்ன?... ஏன் தயங்குகிறீர்கள்?” “திருக்கானப்பேர்ப் பாண்டிய குல விழுப்பரையரின் செல்வப் பேரரும் மதுராபதி வித்தகரின் பேரபிமானத்துக் குரியவருமாகிய தங்களிடம் அதை எப்படிச் சொல்வது என்பது தான் என் தயக்கம். பெருவீரராகிய நீங்கள் அப்படி அகநகருக்குள் போக விரும்புவீர்களா, இல்லையா என்பது தெரியாமலே எப்படி அதை நான் உங்களிடம் வெளியிடுவதென்று தான் கலங்குகிறேன்...” “தங்களுக்குத் தயக்கமாய் இருந்தால் தங்கள் மகளிடமே அதை நான் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டியதைத் தவிர வேறு வழி இல்லை..." “அவளே உங்களிடம் இதைச் சொல்ல அஞ்சியும் வெட்கப்பட்டும்தான் என்னைக் கூறுமாறு வேண்டிக் கொண்டாள். இருந்தாலும் அச்சம் என்னையும் விட்ட பாடில்லை. ‘தோள்களில் வாகைமாலை சூடி மங்கல நிறை குடங்களோடு மறையவர் எதிர்கொள்ளத் தலை நிமிர்ந்த வீரத்திருக் கோலத்துடனே தாங்கள் நுழைய வேண்டிய கோட்டையில் இப்படியா நுழைவது?’ என்று என் மனமும் சொல்லத் தயங்குகிறது.” “காராளரே! இப்படியே தயங்கிக் கொண்டிருந்தால் விடிய விடியத் தயங்கிக்கொண்டிருக்கலாம்! அதற்கு இது நேரமில்லை” - என்று அவன் சற்றே கோபத்தோடு இரைந்த பின்பே அவர் அவனிடம் வழிக்கு வந்தார். எவ்வளவுதான் அடிமைப்பட்டிருந்தாலும் அவிட்ட நாள் விழாவைக் கொண்டாடும் கோலாகலத்திலிருந்து களப்பிரர்கள், மக்களைத் தடுக்க இயலவில்லை. கோ நகருக்குள் வரும் நான்கு திசைப் புறநகர் வீதிகளிலும் ஆறு பெருக்கெடுத்து வருவதுபோல் மக்கள் கூட்டம் வந்து கொண்டிருந்தது. அரிவாள் நுனிபோன்ற மீசையையும் தீ எரிவது போன்ற கண்களையும் உடைய களப்பிர வீரர்களும், பூத பயங்கரப் படையினரும் அங்கங்கே பாதுகாப்பாக நின்று கொண்டிருந்தனர். குதிரைகளில் உருவிய வாளுடன் ஆரோகணித்தபடி சிலர், தேர்களில் வேல்களும், ஈட்டிகளும் ஏந்தியபடி சிலர், எதுவும் அடையாளம் தெரியாத படி கூட்டத்தோடு கூட்டமாக மாறு வேடத்திற் சிலர், கோட்டைமதில்களில் மறைந்து நின்று கண்காணித்தபடி சிலர், என்று எங்கும் வீரர்களை நிறைத்து வைத்திருந்தது களப்பிரர் ஆட்சி. அடிமைப்படுகிறவர்கள் அடிமைப்படுத்துகிறவர்கள் ஆகிய இரு சாராரில் எப்போதும் பயந்து சாகவேண்டியவர்கள் அடிமைப்படுகிறவர்களில்லை. அடிமைப்படுத்துகிறவர்கள் தான். ஏனெனில் அடிமைப்பட்டு விட்டவர்களிடம் அந்த அடிமைத் தளைகளைத் தவிர இழப்பதற்கு வேறு எதுவு மில்லை. அடிமைப்படுத்துகிறவர்களோ தங்கள் பிடி தளர்ந்துவிட்டால் எதை எதை இழக்க நேரிடும் என்ற பயத்திலேயே செத்துக் கொண்டிருப்பவர்கள். பிறருடைய கால்களிலோ கைகளிலோ ஒரு தளையை இடுகின்ற பாவி தன் இதயத்தில் ஒர் ஆயிரம் தளைகளைச் சுமக்க நேரிடும். பாண்டிய நாட்டைப் பிடித்துப் பல ஆண்டுகள் ஆகியும் களப்பிரர்கள் நிலையும் அங்கு இப்படித்தான் இருந்தது. காலூன்ற முடியாத நிலையே தொடர்ந்து நீடித்தது. ஒரு பெரிய தாமரைப் பூவின் இதழ்களைப்போல் அடுக்கடுக்காக அமைந்த தெருக்களையும், பூவின் நடுமையம் போன்ற அரண்மனையையும், நெருங்கிச் சூழ்ந்த பூந்தாதுகள் போன்ற மக்கள் கூட்டத்தையும், அந்தப் பூந்தாதுகளில் தேனுண்ண வரும் வண்டுகளைப்போல் பரிசில் நாடிவரும் புலவர்களையும் உடைய அழகிய மதுரை மாநகரம் அந்நியராட்சியில் தன் கலைகள் தன்னுடைய தனிப்பெரும் தமிழ்ச் சங்கம், தன்னுடைய கம்பீரம் எல்லாவற்றையும் இழந்திருந்தாலும், அவற்றை எல்லாம் இழந்திருக்கிறோம் என்ற உணர்ச்சிக் குமுறல் மக்களிடையே நீறுபூத்த நெருப்பாக மறைந்திருந்தது. களப்பிரர்கள் சிறைப்பிடிக்க முடியாமற் போன ஒன்று இந்த உணர்ச்சிக் குமுறல்தான். மதுராபதி வித்தகர் போன்ற பாண்டிய குலத் தலைவர்கள் மறைந்திருந்தாலும் எங்கிருந்தோ காற்றாய் உலவி இந்த நெருப்பைக் கணிய வைத்துக் கொண்டிருந்தார்கள். இந்த மூலநெருப்பு எங்கிருந்து கணிகிறது என்று அறியக் களப்பிரர்களால் முடியாமலிருந்தது. முடிந்தால் இந்த மூல நெருப்பைத் தடம் கண்டு சிறுபொறியும் எஞ்சிவிடாமல் அழிக்கவும் ஆயத்தமாயிருந்தார்கள் அவர்கள். இத்தகைய சூழ்நிலையில் தமிழ்க் கலைகளும், தமிழ் நாகரிகமும், தமிழர் பெரு விழாக்களும் சோதனைகளுக்கு ஆளாயின, என்றாலும் மக்களில் பெரும்பான்மையினருடைய ஆர்வத்துக்குக் களப்பிரர்களால் அணையிட்டுவிட முடிய வில்லை. ஆனால், கட்டுக் காவல்களும், பூத பயங்கரப் படையினரின் கெடுபிடிகளும் குறைவின்றி இருந்தன. அவிட்ட திருவிழா நாளில் நண்பகலுக்கு மேல் திருமோகூர்ப் பெரிய காராளர் வீட்டிலிருந்து புறப்பட்ட சித்திர வண்டிகள் மூன்றும், சில நாழிகைப் பயணத்துக்குப் பின் வையை நதியின் வட கரையை அடைந்திருந்தன. நதிக் கரையை நெருங்கும் வரை ஓரளவு விரைவாகச் செல்ல முடிந்த அந்த வாகனங்கள், கோநகர்ச் சுற்றுப்புறங்களில் பெருகியிருந்த திருவிழாக் கூட்டம் காரணமாக அருகில் வந்ததும் நின்று போக வேண்டியிருந்தது. முன்னால் சென்ற வண்டியில் அதை ஒட்டிச் சென்றவனைத் தவிரப் பெரிய காராளர் மகள் செல்வப் பூங்கோதையும், அவள் அன்னையும் இருந்தனர். அடுத்த இரண்டு வண்டிகளிலும் பின்புறம் ஓலை வைத்துத் தடுத்துப் பூக்கள் கீழே விழுந்து விடாதபடி தாமரை மலர்கள் நிரப்பப்பட்டிருந்தன. ஆற்றுப்பாலத்தைக் கடந்து வண்டிகள் கரை ஏறியதும், அங்கே குதிரைகளில் அமர்ந்தபடி நகருக்குள் வரும் கூட்டத்தைக் கண்காணித்துக் கொண்டிருந்த பூத பயங்கரப் படையைச் சேர்ந்த வீரர்கள் இருவர் வண்டிகளின் அருகே வந்தனர். முதல் வண்டியில் பெண்கள் இருவர் மட்டுமே அமர்ந்திருப்பதைக் கண்டு விட்டுச் சந்தேகம் தவிர்ந்த அந்த வீரர்கள் தாமரைப் பூக்கள் மட்டுமே குவிந்திருந்த மற்ற இரு வண்டிகளையும் சுற்றிச் சுற்றி வந்தனர். குதிரைகளில் அமர்ந்த படியே சுற்றி வந்ததால் வண்டிகளுக்குள் இருந்த தாமரைப் பூக்களைத் தங்கள் உயரத்திலிருந்து அவர்கள் மிக நன்றாகக் காண முடிந்தது. வண்டியை ஒட்டி வந்த இருவருமே, ‘இவை திருமோகூர்ப் பெரியகாராளர் வீட்டு வண்டிகள்’ ... என்பதை அந்த வீரர்களிடம் தெரிவித்தனர். வண்டிகளைச் செலுத்தி வந்தவர்கள் தக்க சமயத்தில் இவ்வாறு தெரிவித்தது பயனளித்தது என்றாலும் அந்த இரண்டு பூத பயங்கரப் படைவீரர்களில் ஒருவன் சிறிது கடுமையானவன் ஆகவும் சந்தேகக் கண்களோடு பார்க்கிறவன் ஆகவும் இருந்தான். மூன்று சித்திர வண்டிகளில் நடுவாக நின்ற வண்டியில் குவித்திருந்த தாமரை மலர்களைக் குதிரை மேலிருந்தபடியே கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தான் அவன். அவனுடன் இருந்த மற்றொரு காவல் வீரன்,- “போகவிடு அப்பனே, இரண்டு வண்டி நிறையத் தாமரைப் பூக்களைக் கோட்டைக்குள் கொண்டு போவதனால் களப்பிரர் பேரரசு ஒன்றும் கவிழ்ந்து போய்விடாது” என்று அலட்சியமாகக் கூறியும் முதல் வீரனின் சந்தேகம் இன்னும் தளர்ந்து விடவில்லை. “அப்படிச் செய்வதற்கில்லை நண்பனே! கவிழ வேண்டிய காலம் வந்து விட்டால் படைகளால் கவிழ்க்க முடியாததை மலர்களால் கூடக் கவிழ்த்து விடலாம்...” “இந்த வண்டிகளைப் பற்றி மட்டும் உனக்கு அந்த ஐயப்பாடு வேண்டியதில்லை. இவை நம் அரண்மனைக்கு மிகவும் வேண்டியவருடைய வாகனங்கள். அவ்வப்போது கோட்டைக் களஞ்சியங்களுக்கு நெல் கொண்டு வரும் வண்டிகள் இவை” என்று வாதாடினான் மற்றவன். இதற்குள் பின்வரும் வண்டிகள் நிற்பதைக் கண்டு என்னவோ, ஏதோ என்று மனக்கலக்கத்தோடு முன் வண்டியிலிருந்து செல்வப்பூங்கோதையே இறங்கி வந்து விட்டாள். நடையிலே ஒரு நாட்டுப்புறத்துப் பெண்ணின் துணிவும், தோற்றத்திலே எதிர்ப்படுகிறவர்களின் கண் பார்வைகளை வென்றுவிடும் ஒர் இளவரசி போன்ற எடுப்புமாக அவள் வந்து நின்ற கோலத்தில் பரபரப்படைந்த வீரர்கள் இருவருமே தன்னுணர்வு பெறச் சில கணங்கள் ஆயிற்று. “இறைவனை வழிபடக் கொண்டு போகும் மலர்களுக்குக் கூடச் சோதனையா?” என்று அவள் கோபத்தோடு அவர்களை வினவினாள். இந்த வினாவைக் கேட்டு, உடனே- “வெறும் மலர்களுக்குச் சோதனை கிடையாது. ஆனால், அந்த மலர்களுக்கே கைகள் முளைத்தால் சோதனை உண்டு! நான் சொல்வது புரியவில்லையானால் இதோ பாருங்கள்...” என்று கூறியபடியே தன் கையிலிருந்த நீண்ட வாள் நுனியால் பூங்குவியலில் அந்த வீரன் சுட்டிக்காட்டிய இடத்தைப் பார்த்தபோது வண்டியை ஒட்டி வந்தவனும் செல்வப் பூங்கோதையும் ஒருங்கே திடுக்கிட்டனர். வண்டி வழி நெடுக ஆடி அசைந்து வந்ததினால் பூங்குவியல் சரிந்துபோய் அது நேர்ந்திருந்தது. வேகமாகத் துடிக்கும் நெஞ்சுடன் பயத்தோடு பயமாக அவள் சாகஸமே புரிந்து அவர்களை ஏமாற்ற வேண்டியிருந்தது. உடனே அவள் விரைந்து, “உங்கள் கண்களில் தான் தவறு இருக்கிறது வீரர்களே! நீங்கள் வீண் பிரமையில் எதை எதையோ பார்ப்பதாக நினைக்கிறீர்கள். நீங்கள் நினைப்பதெல்லாம் உங்கள் கண்களில் தெரிகிறது. இதோ நான் உங்கள் பிரமை வீணானது என்று நிரூபிக்கிறேன் பாருங்கள்!” என்று கூறியபடியே வண்டியில் ஏறி, அந்த வீரன் வாள் நுனியில் சுட்டிக்காட்டிய இடத்தில் மேலும் சில பூக்களைச் சரியச் செய்து மூடியபின் அதே இடத்தில் தன் கையை வைத்துக் காட்டிவிட்டு, இப்போது நான் என் கையை இந்த இடத்திலிருந்து எடுத்து விடுகிறேன். அப்படி எடுத்த பின்பும் நீங்கள் என்கை இங்கே இருந்த நினைவோடு இந்த இடத்தைப் பார்த்தால் மறுபடியும் இங்கு என் கை இருப்பது போலவே உங்கள் கண்களுக்குத் தோன்றும். இந்தப் பிரமை ஒரு கண்கட்டு வித்தையைப் போன்றது” என்றாள். அவளுடைய இந்த சாகஸம் முழுவெற்றியை அளிக்கா விட்டாலும் ஒரளவு பயன்பட்டது. பூத பயங்கரப்படை வீரர்களில் இளகிய சுபாவம் உடையவன் அந்த சாகஸத்தில் மயங்கி அதை ஒப்புக் கொண்டு விட்டான் என்றாலும் மற் றொருவன் இன்னும் கடுமையாகவே இருப்பது தெரிந்தது. வேறுவிதமாக அவனை இளகச் செய்ய முயன்றாள் அவள். ‘ஐயா, பூத பயங்கரப் படைவீரரே! உங்களுக்கு நல்ல கவியுள்ளம் இருக்கிறது. இல்லாவிட்டால் தாமரைப்பூவைக் கண்டதும் அது சர்வ லட்சணமும் நிறைந்த ஒரு கையாக உங்கள் கண்களில் படமுடியாது. கவிகள்தான் உவமானப் பொருள்களில் உவமேயங்களையும் மாறி மாறிக் காண முடியும். பாவம்! எழுத்தாணியும் ஓலைச் சுவடியும் ஏந்த வேண்டிய கைகளில் நீங்கள் வாளேந்தும்படி நேர்ந்து விட்டது." இதைக் கேட்டு அவன் சிரித்தான். ஆனால், இந்தச் சிரிப்பில் அவள் கூறியதை அவன் நம்பாமல் ஏளனம் செய்யும் தொனிதான் நிறைந்திருந்தது. “உண்மையா, பிரமையா என்பதை நான் எப்படிச் சோதனை செய்ய வேண்டுமோ அப்படிச் சோதனை செய்து கொள்ள எனக்குத் தெரியும்” என்று கூறிக்கொண்டே தன் கையிலிருந்த வாளை ஓங்கி அந்தப்பூங்குவியலில் அழுத்திச் சொருக முயன்றான் அவன். அதைக் கண்டு செல்வப் பூங்கோதையும், வண்டியை ஒட்டுகிறவனும் பதறிப் போனார்கள். செல்வப் பூங்கோதை குறுக்கே பாய்ந்து அவன் பூக்குவியலில் வாளைச் செருக முடியாதபடி தடுக்கவும் செய்தாள். உடனே தாங்க முடியாத சினத்தோடு “எல்லாம் பிரமை என்றால் நீங்கள் ஏன் பதற வேண்டும்? வாளைச் சொருகித் துழாவிப் பார்ப்பதை ஏன் தடுக்க வேண்டும்? என்று இரைந்தான் அவன். “தெய்வ காரியத்துக்காகக் கொண்டு போகும் பூக்களைப் பல போர்களில் எதிரிகளின் குருதியும் நிணமும் பட்டுக் கொலைக் கறைபட்ட உங்கள் வெற்றி வாளால் தீண்டுகிறீர்களே என்றுதான் நாங்கள் பதற்றமும் பயமும் அடைகிறோம். முதலில் நீங்கள் வாளால் சுட்டிக் காட்டியபோதும் இப்போதும் நாங்கள் பயப்படுவது எல்லாம் தெய்வக் குற்றம் நேர்ந்து விடக் கூடாதே என்பதற்காகத் தானே ஒழிய வேறு எதற்காகவும் இல்லை” என்று அவள் சமயோசிதமாகக் கூறிய சொற்கள் அவனை வழிக்குக் கொண்டு வந்தன. ‘பல போர்களில் எதிரிகளின் குருதியும் நிணமும் பட்டுக் கொலைக் கறைபட்ட உங்கள் வெற்றிவாள்’ என்று அந்த அழகிய இளம் பெண்ணின் இதழ்களிற் பிறந்த இனிய சொற்களால் தன் தோள் வலிமையும், வாள் வலிமையும் புகழப்பட்டிருந்ததால் அவன் சற்றே கிறங்கியிருந்தான். புகழில் மயங்கி இளகியிருந்தான் அவன். ஒரு பெண்ணிடம் இல்லாத வீரமும் வலிமையும் ஓர் ஆண்மகனிடம் இருந்தாலும் அந்த வீரத்தையும் ஆண்மையையும் ஒரு பெண் வந்து தன் கிள்ளை மொழிகளால் புகழ வேண்டும் என்று தவிக்காத ஆணே உலகத்தில் கிடையாது போலும் என்று தோன்றியது அவளுக்கு. ‘பெண் பிள்ளை புகழ்வதனால் சில வீரர்கள் கோழை ஆகிறார்கள்; சில கோழைகள் வீரர்களாகவும் செய்கிறார்கள்’ என்று தாயிடம் வம்பு பேசும்போது சில வேளைகளில் தன் தந்தை ஒரு வசனம் சொல்லக் கேட்டிருக்கிறாள் அவள். அந்த வசனத்தின் முதற்பகுதி இப்போது இங்கே விளைந்திருப்பதாகத் தோன்றியது அவளுக்கு. “நியாயம்தான்! கோவிலுக்குக் கொண்டு போகும் பூக்களை வாளால் பரிசோதிப்பது நமக்கே பாவம்” என்று மற்றொரு பூதபயங்கரப் படை வீரனும் செல்வப் பூங்கோதையோடு ஒத்துப் பாடினான். ஏற்கனவே தன் வாளை அவள் புகழ்ந்து கூறிய சொற்களால் கடுமை குன்றி மயங்கியிருந்தவன் தன் நண்பனின் வார்த்தைகளால் மேலும் நம்பிக்கை வரப்பெற்றவனாக அந்த வண்டிகளைப் போகவிட்டு விட்டான். வடக்குக் கோட்டை வாயிலில் காவல் இருந்தாலும் சோதனைகளோ தடைகளோ எதுவும் இல்லை. தனித்தனியே சோதனைகள் எதுவும் செய்ய முடியாதபடி கூட்டமும் அதிகமாக இருந்தது. வண்டிகள் மூன்றையும் இருந்த வளமுடையார் கோவில் நந்தவனத்தில் கொண்டு போய் மரங்களடர்ந்த பகுதி ஒன்றில் நிறுத்தினார்கள் ஒட்டி வந்தவர்கள். அப்போது மாலை மயங்கத் தொடங்கியிருந்தது. 6. யானைப்பாகன் அந்துவன் கோவிலுக்குள் அவிட்டநாள் பெருவிழாக் கூட்டம் வெள்ளமாகப் பொங்கி வழிந்தாலும் அந்த நந்தவனப் பகுதி, ஆட்கள் பழகாத காடுபோல் தனிமையாகவும் அமைதியாகவும் இருந்தது. வண்டிகள் அங்கே நிறுத்தப்பட்டன. செல்வப்பூங்கோதையும், அவள் தாயும் தங்கள் வண்டியிலிருந்து விரைவாகக் கீழிறங்கி வந்து நடு வண்டியை நெருங்கினர். செல்வப் பூங்கோதை வண்டியை அணுகி, உள்ளே அம்பாரமாய்க் குவிந்திருந்த செந்தாமரைப் பூக்களை விலக்கியதும், அந்தப் பூக்களின் நடுவேயிருந்து ஒர் அழகிய ஆடவனின் முகம் மலர்ந்தது. பல சிறிய தாமரைப் பூக்களின் நடுவே ஒரு பெரிய செந்தாமரைப் பூ மலர்ந்து மேலெழுவது போல், இளைய நம்பி அந்தப் பூங்குவியலின் உள்ளேயிருந்து எழுந்திருந்தான். செல்வப் பூங்கோதை மிகவும் அநுதாபத்தோடு அவனைக் கேட்டாள்:- ‘மூச்சுவிடச் சிர்மமாயிருந்ததா? பூக்களின் ஈரமும், குளிர்ச்சியும் அதிகத் துன்பத்தைத் தந்தனவா?” ⁠‘ஒரு சிரமமுமில்லை! இப்படிப் பயணம் செய்ய முன் பிறவியில் நான் புண்ணியம் செய்திருக்கவேண்டும். நிலவின் கதிர்களையும், பனி புலராத பூக்களின் மென்மையையும் இணைத்துச் செய்த பஞ்சணையில் உறங்குவது போன்ற சுகத்தை ஆயிரத்தெட்டுத் தாமரைப் பூக்களும் எனக்கு அளித்தன. இத்தனை சுகமான அநுபவம் இன்று இந்த நாட்டை ஆளும் களப்பிரமன்னனுக்குக் கூடக் கிடைத்திருக்க முடியாது பெண்ணே?” ⁠‘அந்தப் பூத பயங்கரப் படையைச் சேர்ந்த முரடன் ‘பூக்குவியலை வாளால் குத்தி சோதனை செய்வேன்’ என்றபோது எனக்கு மூச்சே நின்று விடும் போலாகிவிட்டது. நீங்கள் ஏறி வந்த வண்டிப் பூக்களை நாங்கள் வழிபாட்டுக்குப் பயன்படுத்தப் போவதில்லை என்றாலும், அவனிடம் நான் பொய் கூற வேண்டியிருந்தது.” ⁠“நீ அவ்வளவு தூரம் பதறியிருக்க வேண்டிய அவசியம் இல்லை, பெண்ணே! அப்படியே அவன் வாளால் குத்தியிருந்தாலும், எனக்கு எதுவும் ஆகியிருக்க முடியாது. நான் காதில் கேட்ட பேச்சிலிருந்து எனது கை தென்பட்ட இடத்தில்தான் அவன் வாளைச் செருகிப் பார்ப்பதாக இருந்தான் என்று தெரிந்தது. அதனால் வாள் நுனியில் இரண்டொரு தாமரைப் பூக்கள் குத்திச் சொருகிக் கொண்டு போயிருக்கலாமே தவிர, வேறு எதுவும் நேர்ந்திருக்க இயலாது! கோட்டைக்குள் வந்து சேர இப்படி ஒர் அருமையான வழியைக் கூறுவதற்கு முதலில் உன் தந்தை ஏனோ தயங்கினார்?” ⁠“பூப்போல் பத்திரமாக வந்து சேர்வது என்பார்கள். அப்படி அக நகருக்குள் வந்து சேர்ந்து விட்டீர்கள்! இனி உங்களை, நீங்களேதான் பொறுப்போடும், கவலையோடும், அக்கறையாகவும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்...” ⁠“தலைவிதியா? காலக்கேடா? எப்படிச் சொல்வது என்று தெரியவில்லை. சொந்த நாட்டின் சொந்தத் தலைநகரத்திலேயே ஏதோ அந்நியன் கவலைப்படுவது போல் நாம் கவலைப்பட வேண்டியிருக்கிறது” என்று நெட்டுயிர்த்த வண்ணம் அவளிடம் அவன் கூறிக்கொண்டிருந்த போது, கருடனைப் போல வளைந்த கிளிமூக்கும், காது வரை கிழிவது போல் சிரித்த வாயுமாக, ஒரு பருத்த மனிதன் அருகிலுள்ள செடிகளின் மறைவிலிருந்து வெளிப்பட்டு, இளைய நம்பியின் அருகே வந்தான். கிளி மூக்கும், கோணலாக நீண்ட இளித்த வாயும், பிறவியிலேயே அவனுக்கு அமைந்து விட்டவை என்று தெரிந்தது. அருகில் வந்து சுற்றும் முற்றும் ஒருமுறை நன்றாகப் பார்த்த பின், இளையநம்பியை நோக்கிக் ‘கயல்’ என்று அவன் கூறிய ஒலி அடங்கு முன் இளையநம்பியும் அதே நல்லடையாளச் சொல்லைத் திருப்பிச் சொன்னான். ⁠“இவன் யானைப்பாகன் அந்துவன். இன்று இந்த நாட்டை ஆளும் களப்பிரர்களின் ஆட்சியைக் கண்டு வாய் கிழிய ஏளனமாகச் சிரிக்கத் தொடங்கிய முதல் சிரிப்பை இன்னும் மாற்றிக் கொள்ள இவனுக்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை!” என்று செல்வப் பூங்கோதை, இளைய நம்பிக்கு அந்தப் புதிய மனிதனைப் பற்றிச் சொல்லிய போது, ⁠“இது உன் கற்பனையா அல்லது அனுமானமா?” என்று சிரித்துக் கொண்டே அவளைக் கேட்டான் இளைய நம்பி. ⁠“கற்பனை என்னுடையது இல்லை! அந்துவனையே கேளுங்களேன். அவன்தான் அடிக்கடி எல்லாரிடமும் இப்படிச் சொல்வான்." ⁠இப்படிச் செல்வப்பூங்கோதை மறுமொழி கூறி முடிப்பதற்குள், அந்துவனே முந்திக்கொண்டு- ⁠“ஆமாம், ஐயா! என்னைப் படைத்த கடவுளே அழ வைக்கவேண்டும் என்று நினைத்தாலும், அவரால்கூட அதைச் செய்யவே முடியாது. என்னைப் படைத்த மறு விநாடியிலிருந்தே நான் அவரைப் பார்த்து இப்படித்தான் சிரித்துக் கொண்டிருக்கிறேன்" என்றான். இந்த முதற் பேச்சிலேயே இளையநம்பிக்கு அவனை மிகவும் பிடித்திருந்தது. பிறவியில் நேர்ந்துவிட்ட ஓர் அவலட்சணத்துக்காக மனம் மறுகி மாய்ந்து கொண்டிராமல், தன்னம்பிக்கையோடும், உற்சாகத்தோடும் வாழ்கிற அவனை மிகவும் விரும்பி வரவேற்றான் இளையநம்பி. எப்படிப்பட்டவனாலும் அந்த யானைப் பாகனைத் துயரப்படச் செய்யமுடியாது என்று தோன்றியது. செல்வப் பூங்கோதையும் அவள் அன்னையும் இளைய நம்பிடம் விடை பெற்றனர். ⁠“இனி உங்களையும், உங்கள் காரியங்களையும் அந்துவனின் பொறுப்பில் விட்டு விட்டு நாங்கள் விடை பெற வேண்டிய நேரம் வந்துவிட்டது. ஆலயத்தில் வழிபாட்டை முடித்துக் கொண்டு இரவோடிரவாகவே நாங்கள் வண்டிகளோடு திருமோகூர் திரும்ப வேண்டியிருக்கும்.” ⁠“பெரிய காராளருக்கும், அவருடைய புதல்வியாகிய உனக்கும் நான் எவ்வளவோ நன்றிக்கடன்...” என்று உபசாரமாக அவன் தொடங்கிய பேச்சை இடைமறித்து- ⁠“அப்படி எல்லாம் நன்றி சொல்லி, இன்றோடு கணக்குத் தீர்த்து விடாதீர்கள். நமக்குள் இன்னும் எவ்வளவோ பல உதவிகளைத் தரவும் பெறவும் வேண்டும்! நெருங்கிப் பழக வேண்டியவர்கள், நட்பும் பகையும் அற்ற நொது மலர்களைப் போல் நன்றி சொல்லிக்கொண்டு போய் விடக் கூடாது” என்றாள் பெரிய காராளரின் மனைவி. அவனும் அதை ஒப்புக் கொள்வதுபோல், மலர்ந்த முகத்தோடு அவர்களுக்கு விடை கொடுத்தான். நந்தவனத்தில் இருந்து அவர்கள் ஆலயத்திற்குள் சென்ற பின், யானைப் பாகன் அந்துவன் இளைய நம்பியை யானைக் கொட்டாரத்துக்கு அழைத்துச் சென்றான். போகும் போதும் அதே உற்சாகமான பேச்சுத்தான். “ஐயா! நீங்கள் கொடுத்து வைத்தவர். இந்நகரத்தில் முதல்முதலாக என் முகத்தில் விழிப்பவர்கள் யாராயிருந்தாலும் அவர்களுடைய காரியத்துக்கு நிச்சயமாக வெற்றி உண்டு. இன்று இந்த நகரத்தில் நுழைந்தவுடன் நீங்கள் முதலில் என் முகத்தில்தான் விழித்திருக்கிறீர்கள். இனி நீங்கள் எதற்குமே கவலைப்பட வேண்டியதில்லை. என்னுடைய முகத்துக்கு அப்படி ஒர் இராசி உண்டு என்பது பிரசித்தமானது...” “நீ சொல்வதை நான் எப்படி நம்புவது அப்பனே? உன்னுடைய முகராசியின் வெற்றிக்கு நிரூபணமோ எடுத்துக் காட்டோ இருந்தால்தானே நம்பலாம்?” “நிரூபணம் வேண்டுமானால் மிகவும் பெரிய இடத்திலிருந்தே அதை எடுத்துக் காட்டலாம் ஐயா. அதிக தூரம் போவானேன்? நம் இருந்த வளமுடைய பெருமாளையே எடுத்துக் கொள்ளுங்களேன். நாள் தவறாமல் விசுவரூப மங்கல தரிசனத்தின் போது வையையிலிருந்து குடம் நிறைய என் யானைமேல் தான் திருமஞ்சன நீர் வருகிறது. அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகராகிய அவரே எண்ணற்ற மக்களுக்கு அருள்புரிவதற்கும் காட்சியளிப்பதற்கும் முன் இந்த ஏழை யானைப் பாகன் அந்துவனின் இராசியான முகத்தில்தான் நாள் தவறாமல் முதலில் விழிக்க வேண்டியிருக்கிறது.” இதைக் கேட்டுச் சிரிப்பை அடக்கமுடியாமல் இளைய நம்பி நன்றாக வாய்விட்டுச் சிரித்து விட்டான். “இரைந்து சிரிக்காதீர்கள்! நம்மைச் சுற்றிலும் அபாயங்கள் இருக்கின்றன. இந்தப் பாண்டிய நாட்டில் அதிக மகிழ்ச்சியோடு இருப்பவர்கள் யார் யாரோ அவர்களெல்லாரும் கூடக் களப்பிரர்களின் சந்தேகத்துக்குரியவர்களே” என்று கூறிய்படியே எதிரே கையைச் சுட்டிக் காட்டினான் அந்துவன். ⁠“முரடர்களின் மிகப் பெரிய சந்தேகங்களைக் கூடச் சுலபமாக நீக்கி விடலாம். ஆனால் பலவீனமானவர்களின் சிறிய சந்தேகங்களைக் கடுமையாக முயன்றாலும் கூடப் போக்க முடியாது! நல்லவேளையாகக் களப்பிரர்களில் பெரும்பாலோர் முரடர்கள்.” ⁠“முரடர்கள் என்றாலும், நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. இந்த நகரத்தில் நுழைந்தவுடன் நீங்கள் என் முகத்தில் அல்லவா விழித்திருக்கிறீர்கள்? இருந்த வளமுடைய பெருமாளே இந்தக் கடுமையான களப்பிரர் ஆட்சியில் ஆபத்தில்லாமல் இருக்கக் காரணமாக நாள் தவறாமல் எந்த முகத்தில் விழித்துக் கொண்டிருக்கிறாரோ, அந்த முகத்தில் நீங்களும் விழித்திருக்கிறீர்கள்!” ⁠“அதாவது நாள் தவறாமல் உன் முகத்தில் முதலில் விழிப்பதனால் தான் எல்லாம் வல்ல பெருமாளுக்கே இவ்வளவு புகழ் என்கிறாய் இல்லையா?” ⁠“அதில் சந்தேகம் என்ன?” ⁠“பெரிய வம்புக்காரனாக இருப்பாய் போலிருக்கிறதே!... சிரித்துச் சிரித்து வாய் புண்ணாகி விடச் செய்கிறாய் நீ!” ⁠“இந்த நற்சான்று அடியேன் முற்றிலும் எதிர்பாராத இடத்திலிருந்து கூடக் கிடைத்திருக்கிறது ஐயா! நம்முடைய பெரியவர் மதுராபதி வித்தகர் வெற்றுச் சிரிப்பையும், நகைச்சுவையையும் அதிகம் விரும்பாதவர் என்பதைத் தாங்களும் நன்கு அறிவீர்கள். காரியங்களைச் சாதிக்காத வார்த்தைகளும், எதிராளியை வெற்றி கொள்ள முடியாத புன்முறுவலும் ஓர் அரச தந்திரியின் வாயிதழ்களிலிருந்து வெளியேறி நஷ்டப்படக் கூடாது என்று அடிக்கடி கூறுகிறவர் அவர். அவரையே சமயா சமயங்களில் என்னுடைய பேச்சுகளால் சிரிக்க வைத்திருக்கிறேன் நான்.” “'அந்துவா! கடவுள் இன்னும் ஒன்பது பேர் முகத்தில் வைத்திருக்க வேண்டிய சிரிப்பையும் சேர்த்துக் கைத்தவறுதலாகவோ, மறதியாகவோ உன் ஒருவன் முகத்திலேயே வைத்துவிட்டார். இதேபோல் அவர் பத்துப் பேருடைய அழுகையையும் ஒரே முகத்தில் வைத்துப் படைத்த குரூரமான முகமும் உலகில் எங்காவது இருக்கும். உன்னால் படைப்புக் கடவுளுக்குக் கை நஷ்டமாகிப் போன அந்த ஒன்பது பேருடைய சிரிப்பையும், நிரந்து கொள்வதற்காக உன் முகத்துக்கு நேர்மாறான குரூர முகம் ஒன்றையும் அவர் படைத்துத்தான் இருக்கவேண்டும்’ என்று பெரியவர் ஒரு சமயம் என்னிடம் கூறியபோது, உடனே சிறிதும் தயங்காமல் நான் என்ன மறுமொழி கூறினேன் தெரியுமா?” ⁠“அவரிடம் என்ன கூறியிருந்தாய் நீ அப்போது?” ⁠“நான் அவரிடம், ‘தாங்கள் கூறுவது மெய்தான் ஐயா! இப்போது நம்முடைய பாண்டிய நாட்டை அடிமைப்படுத்தி ஆண்டுவரும் களப்பிரக் கலியரசன் முகத்தில், பத்து முகங்களுக்குப் பகிர்ந்து அளிக்கத் தேவையான அவ்வளவு குரூரத்தையும், அழுகையையும் கைதவறிப் படைப்புக் கடவுள் வைத்திருப்பதாகத் தெரிகிறது’ என்று உடனே கூறிய மறுமொழியைக் கேட்டு நீண்டநேரம் சிரித்துக் கொண்டிருந்தார் பெரியவர்” என்றான் யானைப்பாகனாகிய அந்துவன். ⁠சிறிதும் பெரிதுமாகச் சங்கிலிகளால் பிணைக்கப் பட்டிருந்த யானைகளைக் கடந்து, இளையநம்பியைக் கொட்டாரத்தின் உட்பகுதிக்கு அழைத்துச் சென்றான் அந்துவன். அவனோடு ஓர் அரை நாழிகை நேரம் பேசிச் சில விவரங்களைத் தெரிந்து கொள்ள முடிந்தது. ⁠“இரவில் இங்கே தங்குவதை விட, நீங்கள் வெள்ளியம்பல மண்டபத்துக்குப் போய்விடுவது நல்லது. இந்தக் கொட்டாரத்தில் சில களப்பிர யானைப் பாகர்களும் இருக்கிறார்கள். அவர்கள் அவ்வளவாக விரும்பத் தக்கவர்கள் இல்லை; மேலும் இன்றிரவு வெள்ளியம்பல மண்டபத்தின் பின்புறம் உள்ள தோட்டத்தில் உங்களை இன்னொரு நண்பன் சந்திப்பான். அவனிடம் இருந்து நீங்கள் மிக அரிய செய்திகள் சிலவற்றையும், செயல் திட்டங்களையும் தெரிந்து கொள்ளலாம். நன்றாக நினைவு வைத்துக் கொள்ளுங்கள்; அந்தத் தோட்டத்தில் உள்ள கடம்ப மரங்களில் மிகப் பெரிய அடிமரத்தை உடையது எதுவோ, அதன் அருகே நீங்கள் காத்திருக்க வேண்டும். அவன் உங்களைச் சந்திக்க நடுச்சாமம் வரை கூட நேரம் ஆகலாம்” என்றான் அந்துவன். ⁠இருந்த வளமுடையாரை வழிபட்ட பின் இருளில் கூட்டத்தோடு கூட்டமாக மதுரை நகரின் வீதிகளில் அலைந்து வெள்ளியம்பல மண்டபத்திற்கு இளையநம்பி போய்ச் சேரும் போது அதிக நேரம் ஆகியிருந்தாலும், இன்னும் மண்டபத்தில் கலகலப்புக் குறையவில்லை. ⁠பல மொழி பேசும் பல நாட்டு யாத்திரிகர்களும், வணிகர்களும், புலவர்களும், திருவிழாப் பார்க்க வந்தவர்களுமாக எண்ணற்றோர் தங்கியிருந்த கடல் போற் பரந்த அந்த அம்பலத்தை, எல்லாப் பகுதியும் சுற்றிப் பார்த்துவிட்டு, அவன் தோட்டத்துக்குள் நுழையும்போதே நள்ளிரவாகி விட்டது. கடம்ப மரங்களில் மிகப் பெரிய மரத்தைத் தேடி, அவன் அதனருகிற் போய் நிற்கவும் அங்கு இருளில் நன்றாக முகம் தெரியாத மற்றொருவன் வந்து சேர்ந்தான். ஒரு கணம் தயங்கியபின் புதியவனை நோக்கி இளைய நம்பி ‘கயல்’ என்று கூறினான். ஆனால் வந்த புதியவனிடம் இருந்து பதிலுக்கு அந்த நல்லடையாளச் சொல் ஒலிக்கவில்லை. உடனே இளையநம்பியின் நெஞ்சம் விரைந்து துடித்தது. ⁠அருகில் வந்தவனோ தள்ளாடினான். அவன் சுயபுத்தியோடு பேசும் நிலையில் இல்லை என்பதை மிகச் சிறு கணங்களிலேயே இளையநம்பி தெரிந்து கொண்டான். நாட்பட்டுப் புளித்த தேறலை அருந்திவிட்டுத் தள்ளாடி அரற்றி அலையும் அந்தக் களப்பிரன், தான் சந்திக்க வேண்டிய மனிதனாக இருக்க முடியாது என்பதையும் அவன் உடனே புரிந்துகொண்டான். தன்னை அங்கே அந்தக் குறிப்பிட்ட இடத்தில் சந்திக்க வரப் போகிற நண்பனுக்கு இடையூறாகக் குடித்து விட்டு அலையும் இந்தக் களிமகன் நடுவே நிற்கக் கூடாதே என்ற கவலையில் பாலியில் ஏதோ பேசி, அவனை அனுப்ப முயன்றான் இளையநம்பி. பாலியில் இளைய நம்பி பேசத் தொடங்கியதும், அவன் மேலும் நின்று உடும்புப் பிடியாக அரற்றத் தொடங்கினான். போரிட்டோ, முரண்பட்டோ அவனை அங்கிருந்து விலக்கி அனுப்புவது, தனியே வந்து காத்திருக்கும் தனக்கு நல்லதில்லை என்று தயங்கியே, அந்தக் குடிகாரனின் பேச்சோடு ஒத்துப் பாடி அவனை அனுப்ப முயன்றான் இளையநம்பி. அப்போது அவனிருந்த தளர்ச்சியான நிலையில், தான் அவனைச் செம்மையாகப் புடைத்து வீழ்த்தக் கூட முடியும் என்றாலும், அவனைத் தேடி மற்றவர் வரவோ, அவனே எழுந்து போய் தன்னைச் சேர்ந்த மற்றவர்களைத் தேடி அங்கே அழைத்து வரவோ செய்தால், தன் நிலை கவலைக்குரியதாகிவிடும் என்ற முன்னெச்சரிக்கையோடு முள்ளில் விழுந்த ஆடையை விலக்குவது போல் மெல்ல அவனை அங்கிருந்து விலக்க முயன்றான் இளையநம்பி. ⁠அவனோ, தான் பாலியில் இயற்றியிருக்கும் சிருங்காரச் சுவைக் கவிதை ஒன்றை இவன் கேட்டே தீர வேண்டும் என்று வற்புறுத்தினான். ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்வதிலேயே குறியாயிருந்த களப்பிரர்கள் தங்கள் நாட்டிலிருந்து படை வீரர்களாகவும், பல்வேறு பணியாளர்களாகவும், பல்லாயிரம் களப்பிர இளைஞர்களைக் கூடல் மாநகரில் கொண்டு வந்து வைத்து, அடிமைகளைப் போல் வேலை வாங்குவதால் மணமாகாத அந்த இளைஞர்கள் தவிப்பதையும், வேதனைப் படுவதையும், வேட்கையுற்றுத் திரிவதையும் பற்றித் தான் கேள்விப்பட்டிருந்தவற்றை நினைத்தான் இளையநம்பி. தான் கேள்விப்பட்டிருந்தவற்றில் எள்ளளவும் பொய்யில்லை என்பதை இப்பொழுது அவன் உணரமுடிந்தது. ⁠வேறு வழியின்றி அந்தக் களிமகனின் பாலி மொழிக் கவிதையைக் கேட்டுத் தொலைப்பதற்காகக் கடம்பமரம் கண்ணில் படுகிற வகையில், அருகே இருந்த மண்டபப் பகுதி ஒன்றில் போய் அவனோடு அமர்ந்தான் இளையநம்பி. அவன் வாயிலிருந்து அடித்த தேறல் நாற்றம் பொறுக்க முடியாத தாயிருந்தது. அந்தக் களப்பிர இளைஞன் நல்ல உடற் கட்டுடையவனாக இருந்தான். எந்த அபாயத்தையோ எதிர் பார்த்து அவனிடம் பாலியில் பேசப் புகுந்ததன் விளைவு கள் வெறியில் அவன் அரற்றும் சிருங்காரக் கவிதையைக் கேட்க வேண்டிய தண்டனைக்குத் தன்னை ஆளாக்கி விட்டதே என்ற வெறுப்புடன் அமர்ந்திருந்தான் இளையநம்பி. அந்தக் களப்பிர இளைஞன் திரும்பத்திரும்ப அரற்றியதைத் தமிழில் நினைத்துக் கூட்டிப் பார்த்தால், இப்படி வரும் போலிருந்தது:- "கட்டித் தழுவிட ஓர்இளம் கன்னிகை வேண்டும் இங்குநான் மட்டும் படமுடியாக் காமத்தால் மனமும் உடலும் எரிகையிலே முட்டும் இளநகில்கள் மோதிடவே என் மேனி முழுமையும் வெது வெதுப்பாய்ப் பட்டுப் பெண்ணுடல் பட்டுக் கலந்தவள் பருகிச் செவ்விதழ் தரவேண்டும்...” உயர்ந்த கல்வியும், நல்ல குடிப்பிறப்பும் உடைய அவனுக்கு இதை இரண்டாவது முறை நினைத்துப் பார்க்கக்கூடக் கூச்சமாயிருந்தது. காதல் வெறியில் அந்தத் திருக்கானப்பேர்ப் பித்தன் உளறும் கவிதையில் இருந்த நயம்கூட இந்தக் கள்வெறிக் களப்பிரனின் பாடலில் இல்லாததை இரண்டையும் ஒப்பிட்டுப் பார்த்து அவன் உணர முடிந்தது. காதலிற் பிறக்கும் சொற்களையும், காமத்திற் பிறக்கும் சொற்களையும் தரம் பிரிக்க இந்த இருவர் நிலைகளும் அவனுக்குப் பயன்பட்டன. இப்படித் திரும்பத் திரும்ப இந்தப் பாடலை அரற்றிய படியே மெல்ல மெல்லக் குரல் ஒய்ந்து தூங்கிவிட்டான் அந்த இளைஞன். அவனுடைய குறட்டை ஒலி செவித் துளைகளை அறுப்பது போல் ஒலிப்பதைப் பொறுக்க முடியாமல் எழுந்து  கடம்ப மரத்தடியில் மீண்டும் போய் அமர்ந்தான் இளைய நம்பி. நேரம் ஆகிக் கொண்டே இருந்தது. கலகலப்பு நிறைந்திருந்த வெள்ளியம்பல மண்டபமும் உறக்கத்தில் அடங்கி விட்டது. மண்டபத்தின் வடக்குக் கோடியில் நீண்ட நேரமாய் உரத்த குரலில் ‘மாயை ஏன் அநிர்வசனீயமாக இருக்கிறது?’ -என்று விவாதித்துக் கொண்டிருந்த ஒரு சமணத்துறவியும் வட மொழிவாணரும் கூட நடுச் சாமத்திற்கு மேல் உறக்கத்தைக் கெடுத்துக் கொள்ளும் அளவுக்கு மாயையைப் பற்றிக் கவலைப்பட விரும்பாமல் நன்றாக உறங்கத் தொடங்கியிருந்தனர். வெள்ளியம்பல மன்றின் தோட்டத்தில் ஒர் ஆந்தை இரவின் தனிமைக்கு உருவகம் தருவது போல விட்டு விட்டு அலறிக் கொண்டிருந்தது. அந்த மரத்தடியில் தனியே விழித்திருப்பது பொறுமையைச் சோதிக்கும் காரியமாயிருந்தது. இலைகள் அசையும் ஓசை கூடப் பெரிதாகக் கேட்கும் அந்த நிசப்தமும், அதை இடை இடையே கிழிக்கும் ஆந்தையின் அலறலும், பின்னிரவின் வரவிற்குக் கட்டியம் கூறுவது போன்ற குளிர்ந்த காற்றுமே அந்த வேளையில் அங்கே அவனுக்குத் துணையிருந்தன. தன்னைச் சந்திக்க வேண்டியவன் வழி தவறிவிட்டானோ அல்லது வரவில்லையோ என்ற கவலையில் இளையநம்பி நம்பிக்கை இழக்கத் தொடங்கிய வேளையில் மண்டபத்திற்குள் வரிசை வரிசையான தூண்களின் அணி வகுப்புக்கு நடுவே இருபுறமும் படுத்து உறங்கிக் கொண்டிருக்கும் மனிதர்களை மிதித்துவிடாமல் கவனமாக நடந்து வரும் ஒரு மனிதன் எதிர்ப்பட்டான். அந்த அமைதியில் நெடுந்துாரம் தெரியும் தூண்களின் வரிசைக்கு ஊடே இருபுறமும் படுத்து உறங்குகிறவர்களின் கால்களுக்கு நடுவில் தானாக நேர்ந்திருந்த ஒற்றையடிப் பாதையில் அடிபெயர்ந்து நடக்கும் ஒசைகூடக் கேட்டுவிடாமல் அவன் நிதானமாகவும், கவனமாகவும் நடந்துவருவது மெளனமே உருப்பெற்று எழுந்து வருவது போலிருந்தது. 8. திருமருத முன் துறைக்கு ஒரு வழி வருகிறவன் தன்னை நோக்கித்தான் வருகிறானா அல்லது வேறு காரியமாக வருகிறானா என்று இளையநம்பி சிந்தித்துத் தயங்கிக் கொண்டிருந்த போதே அவன் சொல்லி வைத்தது போல் இவன் எதிரே வந்துநின்று நல்லடையாளச் சொல்லைக் கூறிப் பதிலுக்கு இவனிடமிருந்து நல்லடையாளம் கிடைத்ததும் வணங்கினான். இருவரும் நல்லடையாளச் சொல்லைப் பரிமாறிக் கொண்டு தங்களுக்குள் ஒருவரையொருவர் புரிந்து கொண்டவுடன் இளையநம்பி ஏதோ பேசத் தொடங்கியபோது வந்தவன் தன் வலதுகை ஆள்காட்டி விரலை வாயிதழ்களின் மேல் வைத்துப் பேசவேண்டாம் என்பது போல் குறிப்புக் காட்டித் தன்னைப் பின்தொடருமாறு சைகை செய்துவிட்டு நடந்தான். வெள்ளியம்பல மண்டபத்தின் பின்புறத்திலிருந்த தோட்டத்தின் மற்றொரு கோடி வரை அவனை அழைத்துச் சென்றான் வந்தவன். அங்கிருந்த மதிற் சுவரை ஒட்டி ஒரு பாழ் மண்டபத்திற்கு வந்திருந்தார்கள் அவர்கள். அந்த இடத்திற்கு வந்ததும் அவனே தன் மெளனத்தைக் கலைத்து விட்டுப் பேசினான். “சற்று முன்னே நான் வெள்ளியம்பலத்துக்குள் நுழைந்தபோது நகரப் பரிசோதனைக்காகத் தெருவில் அலைந்து கொண்டிருந்த களப்பிர வீரர்கள் சிலர் என்னைப் பின் தொடரக்கூடும் என்ற சந்தேகம் இருந்தது. அதனால் தான் அங்கே நின்று நாம் பேசிக்கொண்டிருக்க வேண்டாம் என்று பார்த்தேன்! திருமோகூரில் பெரியவர், காராளர் எல்லோரும் நலமாயிருக்கிறார்களா? முதல் முதலாகக் கோநகருக்கு வந்திருக்கிறீர்கள்! கோநகரைக் களப்பிரர்கள் அசோக வனத்திலே சிறைப்பட்ட சீதையை வைத்திருப்பது போல் வைத்திருப்பதைக் கண்டிருப்பீர்கள்." தொடக்கத்தில் அளவு கடந்த மெளனமாக இருந்து விட்டதற்காகவும் சேர்த்து இப்போது பேசுவது போல பேசினான் அந்தப் புதியவன். இளையநம்பி அவனுக்கு மிகச் சுருக்கமாகச் சில வார்த்தைகளில் மறுமொழி கூறினான். அந்த பாழ் மண்டபத்தை ஒட்டியிருந்த பகுதிகளில் மரங்களின் அடர்த்தி குறைவாக இருந்ததனால் அதிக இருள் இல்லை. அதனால் அந்தப் புதியவனை இளைய நம்பி ஓரளவு காணமுடிந்தது. முடி, உடை உடுத்தியிருந்த முறை, மீசை எல்லாவற்றாலும் ஒரு களப்பிரனைப்போல் தோன்றினான் அவன். அதைக் கண்டு இளைய நம்பி அவனைக் கேட்டான்; “களப்பிரர்கள் ஆட்சியில் கள்ளும் காமமும் கொள்ளையாய் மலிந்திருப்பதை இந்த வெள்ளியம்பலத்தில் நுழைந்ததுமே கண்டேன். வருந்தினேன். இப்போது என் எதிரே தெரிகிற தோற்றத்திலிருந்தே, கள்ளும் காமமும் மலிந்திருக்கும் அதே வேளையில், தமிழ் நடை உடை நாகரிகங்கள் எல்லாம் நலிந்திருப்பதையும் காண முடிகிறது.” “கொலை வெறியர்களாகிய களப்பிரர்களின் நடுவே ஊடாடி நம் காரியங்களைச்சாதித்துக் கொள்ள இப்படி நமக்கே விருப்பமில்லாத பொய்க்கோலங்களை நாம் ஏற்கவும் வேண்டியிருக்கிறது ஐயா...” “விந்தைதான்! பொய்க்கு வேண்டிய கோலம் மெய்க்கும் வேண்டியதாக இருக்கிறது என்று நீ கூறுகிறாய் போலிருக்கிறது.” “ஆம், ஐயா! பொய்யை யாரும் அலங்கரிக்கத் தொடங்காதவரை- மெய்க்கு அது மெய்யாயிருப்பதையே கோலமாகக் கொண்டு நாம் மன நிறைவு அடையலாம். ஆனால் பொய்யை அலங்கரிக்கத் தொடங்கிவிட்ட உலகில் மெய்யையும் நாம் அலங்கரிக்காமல் விட முடிவதில்லை.” “நீ கூறுவது பிழை! எங்கு சத்தியத்தின் வலிமை குறைகிறதோ அங்கு சொற்களின் வலிமையால் அதை அலங் கரிக்கிறார்கள். ஆனால், சத்தியம் நெருப்பைப் போன்றது. தன் வலிமையல்லாத, எதனால் தன்னை அலங்கரித்தாலும், அதை மெல்ல மெல்லச் சுட்டெரிக்கக் கூடியது. பூக்களாலும், பொன்னாலும் நீ எதை வேண்டுமானாலும் அலங்கரிக்கலாம். ஆனால் நெருப்பை மட்டும் பூவாலோ, பொன்னாலோ புனைய முடியாது. பூவைக் கருக்கி விட்டுப் பொன்னை உருக்கிவிட்டுத் தன் பிரகாசமே பிரகாசமாய் மேலும் வென்று எரிவது தழல். சத்தியமும் அப்படித்தான். அப்படி ஒரு சத்திய பலம் நம்மிடம் இருக்கிற வரை, பாண்டிய குலம் வெல்லும் என்பதைப் பற்றி உனக்குக் கவலை இருக்கக் கூடாது.” ⁠இந்த மனோ திடத்தையும் நம்பிக்கையையும் கேட்ட வியப்பில் ஒன்றும் மறுமொழி சொல்லத் தோன்றாமல் இருந்தான் அந்தப் புதியவன். சத்தியத்தின் மேலிருந்த அந்த அசைக்க முடியாத நம்பிக்கையாளனைக் கண்டதும், ‘நம் எதிரே, மனம் மொழி மெய்களால் வணங்கத்தக்க இணையற்ற வீரனும் தீரனுமான ஒருவன் நிற்கிறான்'- என்ற எண்ணத்தில் அந்தப் புதியவனுக்கு மெய் சிலிர்த்தது. இளையநம்பி அந்தப் புதியவனை வலத் தோளில் தட்டிக் கொடுத்தபடி மேலும் கூறலானான்: ⁠“தைரியமாயிரு! இப்படி யார் நாகரிகத்தையோ காட்டும் பொய்க்கோல வாழ்வு போய் மங்கலப்பாண்டிவள நாட்டு மறத்தமிழனாக, இதே மதுரை மாநகர வீதிகளில் மீண்டும் நிமிர்ந்து நடக்கும் காலம் வரும். நுட்பத்திலும், சிந்தனை வலிமையிலும் இணையற்ற ஒர் இராஜரிஷி நமக்காக அல்லும் பகலும் திட்டமிட்டு வருகிறார் என்பதை நினைவிற் கொள்...” ⁠“தங்கள் நல்வாழ்த்து விரைவில் மெய்யாக வேண்டும் என்றே நானும் ஆசைப்படுகிறேன். இப்போது நாம் போகலாம். எதுவும் தெரியாத காரிருளில், நெடுந்துரம் தங்களை நடத்தி அழைத்துச் செல்ல நேர்வதற்காகத் தாங்கள் என்னைப் பொறுத்தருள வேண்டும்.” ⁠“இருளைப் பற்றி நான் பொருட்படுத்தவில்லை அப்பனே! இன்று பாண்டி நாட்டில் இரவில் மட்டுமல்ல, பகலிலும் இருள்தான் நிரம்பியிருக்கிறது. சில ஆட்சிகள், இருளையும் ஒளி பெறச் செய்யும். வேறு சில ஆட்சிகளோ, பகலையும் கூட இருளடையச் செய்துவிடும். அப்படி ஒரு கொடுங்கோலாட்சியில்தான் இன்று நீயும் நானும் இருக்கிறோம். ஆனால் எங்கே போகிறோம், எதைத் தெரிந்துகொள்ளப் போகிறோம் என்பதை முதலில் எனக்குச் சொல். நான் அறிய வேண்டிய செய்திகள் சிலவற்றையும், செயல் திட்டங்களையும் உன்னிடமிருந்து அறிந்து கொள்ள முடியும் என்பதாக இருந்த வளமுடையார் கோவில் யானைப்பாகன் அந்துவன் என்னிடம் கூறி அனுப்பினான். அவற்றைப் பற்றி என்ன சொல்கிறாய் நீ?” ⁠“அந்துவன் கூறி அனுப்பியவற்றில் பிழை ஒன்றும் இல்லை ஐயா! அவன் அடியேனைப் பற்றித் தங்களிடம் யாவும் கூறியிருக்கிறானோ, இல்லையோ தெரியாது. அடியேன் வையை நதிக்கரையில் திருமருத முன் துறையில் உள்ள உப வனக் காப்பாளன், அழகன் பெருமாள் மாறன். பெரியவர் மதுராபதி வித்தகரை அடியேனுடைய குல தெய்வத்தினும் மேலாக மதித்துத் தொழுகிறவன். நம்முடைய எல்லாக் காரியங்களும், கோநகரில் நடைபெற இரண்டே இரண்டு வழிகள் தான் இன்னும் அடைபடாமல் எஞ்சியுள்ளன. அதில் ஒன்று, என்னுடைய உப வனத்தில் இருக்கிறது. மற்றொன்று இங்கே இந்த வெள்ளியம்பல மண்டபத்தில் இருக்கிறது.” ⁠“எந்த வழிகளைச் சொல்கிறாய் நீ?” ⁠“இதோ, இந்த வழியைத்தான் சொல்கிறேன்” என்று கூறியவாறே கீழே குனிந்து, அந்த மண்டபத்தின் கல் தளத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஒரு கல்லைத் தூக்கிப் புரட்டினான் அழகன் பெருமாள். இளைய நம்பியின் கண்கள், அவன் புரட்டிய கல் விட்ட வழியில் ஆள் இறங்கும் இடைவெளிக்குக் கீழே மங்கலாகப் படிகள் தென்படுவதைக் கவனித்தன. ⁠“ஒரு காலத்தில் மங்கல நன்னாட்களில் அரண்மனைப் பெண்கள் இந்தச் சுரங்க வழியாகத் திருமருத முன்துறைக்கு நீராடப் போவார்களாம். கடைசியிற் களப்பிரர்கள் கோட்டையையும் அரண்மனையையும் கைப்பற்றியபின், அந்தப்புர மகளிரும், பாண்டியர் உரிமை மகளிரும் இந்த வழியாகத்தான் தப்ப முடிந்தது என்று கூடச் சொல்வார்கள்...” ⁠“இந்த வழி இருப்பதை நம்மவர்கள் தவிர வேறு யாராவது அறிவார்களா? இது நேரே திருமருத முன் துறைக்குத்தான் போகிறதா அல்லது வேறு எங்கேனும் இதிலிருந்து வழிகள் பிரிகின்றனவா?” ⁠“நம்மவர்கள் மட்டுமே பயன்படுத்தும் இரகசிய வழியாக இதை வைத்திருக்கிறோம். இங்கிருந்து திருமருத முன் துறைக்கு நெடுந்தூரம் இருப்பதாலும், நடுவே ஏதேனும் அபாயம் வந்தாலும், உடனே தப்ப வழி வேண்டும் என்பதாலும், இடையில் நகரில் புகழ்பெற்ற கணிகையர் வீதி குறுக்கிடும் இடத்தில் அங்குள்ள ஓர் நம்பிக்கையான கணிகையின் மாளிகையோடு ஒரு வாயில் இணைத்திருக்கிறோம்...” ⁠“இப்போது நாம் எங்கே புறப்பட்டுப் போகிறோம் அழகன் பெருமாள்?” ⁠“உப வனத்துக்குத்தான்! அங்கே எல்லாச் செய்திகளையும் உங்களுக்குக் கூற முடிந்தவர்களாக நம்மவர்களில் நாலைந்து பேர் இருக்கிறார்கள். அவர்கள் மூலமாகத்தான் பெரியவர் இங்கே சாதிக்க வேண்டிய மிகப் பெரிய அரச தந்திரக் காரியங்கள் எல்லாமே சாதிக்கப்படுகின்றன.” ⁠அதற்கு மேலும் அவனிடம் பேசி நேரத்தை வீணாக்கிக் கொண்டிராமல், மேற்கல்லின் பக்கங்கள் உடலில் உராயாமல் கவனமாய் படிகளில் குதிப்பது போல், இறங்கி உள்ளே நுழைந்தான் இளையநம்பி. அவனைத் தொடர்ந்து அழகன் பெருமாளும் கீழே குதித்து இறங்கிக் கைகளை மேலே உயர்த்திப் புரட்டிய கல்லை உள்ளிருந்தபடியே மேற்பக்கம் தாங்கி மெல்ல மெல்ல நகர்த்தி வழியைப் பழையபடியே மூடினான். உட்புறம் இருள் சூழ்ந்தது. அழகன் பெருமாள் இளையநம்பியின் வலது கையைத் தன் கையோடு கோர்த்துக் கொண்டு கீழே தடுமாறாமல் படி இறங்கி நிலவறையில் விரைந்தான். “இந்த இருள் உங்களுக்குப் பழக்கமாயிராது. கவனமாக நடந்து வர வேண்டும் நீங்கள்?” என்று தன்னை எச்சரித்த அழகன் பெருமாளிடம் இளையநம்பி “என்னைப் பற்றிக் கவலைப்படாதே! ஒளியைத் தேடிக் கண்டுபிடிக்கிற வரை ஒவ்வொரு வீரனும் இருளில் தான் கால் சலிக்க நடக்க வேண்டியிருக்கும். இருளுக்குத் தயங்கினால் எதுவும் நடக்காது” என்று சிரித்துக் கொண்டே மறுமொழி கூறினான். 9. நம்பிக்கையின் மறுபுறங்கள் செல்வப் பூங்கோதையும், அவள் அன்னையும் தங்களிடம் இளைய நம்பியும், யானைப்பாகன் அந்துவனும் விடை பெற்றுச் சென்ற பின்பும் நெடுநேரம் அவர்களைப் பற்றிய நினைவுகளையும் கவலைகளையும் தவிர்க்க முடியாமல் இருந்தனர். ‘இந்த விநாடியில் யானைப் பாகன் அந்துவனோடு அவர் எங்கே போயிருப்பார்? எவ்வளவு தூரம் போயிருப்பார்? யார் யாரை அவர் எதிர்கொண்டு சந்திக்க நேரிடும்’ என்று நினைவை இளைய நம்பியின் பின்னே அலையவிட்டபடி உடலால் மட்டும் தன் தாயின் பின்னே இயங்கிக் கொண்டிருந்தாள் செல்வப் பூங்கோதை. தாய் எதையோ கேட்டால் அதற்குத் தொடர்பில்லாமல், வேறு எதையோ அவளிடம் மறுமொழியாகச் சொன்னாள் இவள். ‘பயப்படாதே! உனக்கு அபயம்’ என்பதுபோல் வண்டியில் நிறைந்திருந்த தாமரைப் பூக்களுக்கு நடுவே தென்பட்ட அந்தப் பொன்நிற உள்ளங்கையைச் செல்வப் பூங்கோதையால் மறக்கவே முடியவில்லை. அந்தக் கையை ‘அது கை இல்லை, தாமரைப்பூ’ என்று அவள் புனைந்து கூறியபோது, ‘இல்லை! அது கையேதான்’ என்று மறுக்கத் தயங்கி, அந்தப் பூதபயங்கரப் படை வீரனே, அது தாமரைப் பூதான் என்று நம்பி விடும் அளவுக்குப் பூவோடு அது ஒப்பிடப் பொருத்தமாயிருந்தது. அந்தக் கை மலர் அவள் நினைவில் பசுமையாய் வந்து தங்கியிருந்தது இப்போது. ⁠“ஒரு வீரனின் கை பூப் போல் மென்மையாக இருக்கக் கூடாதுதான்! வாளும், வேலும் பற்றிச் சுழற்றிக் காய்த்துப் போயிருக்க வேண்டிய கை இது. தாமரைப் பூப் போல் மிருதுவாகவும், குளிர்ச்சியாகவும், சிவப்பாகவும் ஒரு கவிஞனின் கையைப் போல் இருக்கும்படி, இந்தக் கை வாளும் வேலும் ஏந்த முடியாமல் செய்துவிட்ட களப்பிரர்கள் மேல் திரும்பியது அவள் ஆத்திரம் எல்லாம். இளையநம்பியின் பூம்பட்டுக் கையை எண்ணியபோது பழைய இலக்கிய நிகழ்ச்சி ஒன்று அவளுக்கு நினைவுக்கு வந்தது. பல போர்களில் வெற்றி வாகை சூடிய பேரரசன் ஒருவன், ஒரு கவிஞரின் வலது கரத்தைப் பற்றித் தழுவி அவரைப் பாராட்ட வேண்டிய நிலை ஏற்படுகிறது. கல்லைப் போல் காய்ந்துத் தழும்பேறிய தன் கையும், பூப்போல் மென்மையாகவும் குளிர்ச்சியாகவும் இருக்கக்கூடிய புலவர் கையும் இணைந்தபோது- ⁠“ஐயா, புலவரே! உங்கள் கைமட்டும் எப்படி இவ்வளவு மென்மையாக இருக்கிறது!” என்று ஓர் அதிசயத்தைக் கண்டவன் போல் வியந்து வினவினான் அந்த அரசன். ⁠“இதில் வியப்பென்ன அரசே! நீ அன்போடு அளிக்கும் உணவை உண்டு வருந்தும் தொழிலைத் தவிர வேறு உழைப்பின் துயரங்கள் படியாத கைகள் இவை. இவை மென்மையாக இராமல் வேறு எப்படி இருக்கமுடியும்? உன் கைகள் வன்மையாக இருப்பதற்கும், இவை மென்மையாக இருப்பதற்கும் காரணம் ஒன்றுதான். துயரங்களை எல்லாம் உன் கைகளே தாங்கிக் கொள்கின்றன என்பதுதான் அந்தக் காரணம்” -என்று அந்த அரசனுக்கு அந்தப் புலவர் மறுமொழி கூறினாராம். ⁠தன் சிந்தனையில் அந்த அரசனோடு பெரியவர் மதுராபதி வித்தகரையும், அந்தப் புலவரோடு இளைய நம்பியையும் ஒப்பிட்டு இப்போது நினைத்தாள் செல்வப் பூங்கோதை. இளையநம்பியின் கைகளும் முகமும், தோள்களும், மேனியும் பூப் போல் மிருதுவாக இருப்பதையும், மதுராபதி வித்தகரின் கைகளும், முகமும், தோள்களும், மேனியும் செம்பொன்னில் வார்த்து இறுக்கியது போல் வைரம் பாய்ந்திருப்பதையும் இணைத்து நினைத்தாள் அவள். கோயிலில் வளமுடையாரை வழிபடும் போதும், ஆயிரத்தெட்டுத் தாமரை மலர்களை அர்ச்சித்த போதும், படிகளில் ஏறி, மேல் விதானத்து மாடத்தில் பரவாசுதேவராகக் கிடந்த கோலத்தில் இருக்கும் அந்தரவானத்து எம்பெருமானின் மாடக்கோவில் மணி மண்டப முகப்பிலிருந்து பெரிய பெரிய கருடக்கொடிகள் பறக்கும் இருந்த வனத்து மதில்களையும், மேற்புறமும், தென்புறமும் மதில்களை ஒட்டினாற்போல் மாலையெனச் சூழும் வையை நதியின் தென்புறக் கிளையையும், நகரின் பிறபகுதிகளான திருவாலவாய், திருநடுவூர், வெள்ளியம்பலம், திருநள்ளாறு முதலியவற்றையும், அந்திமாலை அழகுகளோடும் விளக்கொளி அலங்காரங்களோடும் கண்டபோதும், செல்வப் பூங்கோதையின் நினைவில் இளையநம்பிதான் நிறைந்திருந்தான். அவ்வளவு பெரிய கூட்டத்தினிடையேயும் தான் தனிமையாக விடப்பட்டதைப் போன்ற உணர்வை அடைந்திருந்தாள் அவள். இன்று அப்படி ஒரு தனிமையை உணரும்படி அவளைத் தாபத்தினால் தவிக்கச் செய்திருந்தது அவனுடைய ஞாபகம். ⁠வழிபாட்டை முடித்துக் கொண்டு அவளும், அவளுடைய அன்னையும் யானைக் கொட்டாரத்தின் வழியாக வண்டிகள் நிறுத்தப்பட்டிருந்த நந்தவனத்திற்குத் திரும்பியபோது, வேறு நாலைந்து யானைப்பாகர்களோடு அங்கே நின்று கொண்டிருந்த அந்துவன், ‘இளையநம்பி இங்கிருந்து பத்திரமாக வெள்ளியம்பலத்திற்குப் புறப்பட்டுப் போயாயிற்று’ -என்று சைகை மூலம் அவர்களுக்குத் தெரிவித்தான். சுற்றி மற்றவர்கள் இருந்ததால், அந்துவன் தன்னைச் சூழ இருந்தவர்களுக்குச் சந்தேகம் எழாதபடி பெரியகாராளர் மகளோடும் மனைவியோடும் நெருங்கிச் சென்று விரிவாக உரையாடுவதை அப்போது தவிர்க்க வேண்டியதாயிற்று. ⁠வண்டிகள் பூட்டப்பெற்றுப் புறப்பட்டபோது, “அம்மா அந்துவன் செய்த குறிப்பைக் கவனித்தாயா?... அவர் இங்கிருந்து யாதொரு கெடுதலும் இன்றி அடுத்த இடத்துக்குப் போய்விட்டாராம்” -என்று ஆர்வம் பொங்கத் தாயிடம் கூறினாள், செல்வப்பூங்கோதை. ⁠“ஆம்! கவனித்தேன். இனி அந்தத் திருக்கானப் பேர் பிள்ளையாண்டானைப் பற்றிப் பயப்பட ஒன்றுமில்லை. அந்துவனும் இங்குள்ள மற்றவர்களும் உயிரைக் கொடுத்தாவது அந்தப் பிள்ளையைப் பாதுகாப்பார்கள். இப்போது நாம் நேரே ஊர் திரும்புகிறோமா அல்லது ஆலவாய்க்குள் போய் இறைவனையும் வழிபட்டு விட்டுப் போகலாமா?” ⁠என்று அன்னையிடமிருந்து வினாவாக மறுமொழி கிடைத்தபோது ஆலவாய்ப்பகுதிக்குப் போகலாம் என்றே செல்வப் பூங்கோதையும் இணங்கினாள். ⁠வண்டிகள் ஆலவாய்ப் பகுதிக்குப் போகுமுன், வெள்ளியம்பலப் பகுதியையும், திருநடுவூரையும் கடந்து சென்றபோது, செல்வப் பூங்கோதையின் கண்கள் கூட்டம் நிறைந்த கூடற் கோநகர வீதிகளில் மனிதர்களோடு மனிதர்களாகத் தனக்கு விருப்பமான அந்த முகம் எங்காவது தென்படாதா என்பதையே தேடிக்கொண்டிருந்தன. யாத்திரீகர்களும், பிற தேசத்தவரும் அதிகமாகத் தங்கக் கூடிய வெள்ளியம்பலப் பகுதியில் அங்கங்கே திரிந்து கொண்டிருந்த பூதபயங்கரப்படை வீரர்களைக் கண்ட வேளைகளில் எல்லாம், “ஐயோ! இந்தக் கொலை பாதகர்களிடம் சிக்கிவிடாமல் அவர் தப்ப வேண்டுமே"-என்று அவள் மனம் இளையநம்பிக்காகத் தெய்வங்களை எல்லாம் வேண்டித் தவித்தது. அதற்கேற்றார் போல் வெள்ளியம்பலப் பகுதியின் முடிவில், ஓரிடத்தில் பத்துப் பன்னிரண்டு பூதபயங்கரப் படைவீரர்கள் யாரையோ சிறைப் பிடித்துச் செல்லும் காட்சி ஒன்று அவள் கண்களில் பட்டு விட்டது. உடனே அவள் மனத்தில் என்னென்னவோ பயங்கரமான கற்பனைகள் எல்லாம் எழுந்து வாட்டின. அந்த இடத்திலிருந்து மேலே போகவே அவளுக்கு மனம் இல்லை. வண்டியை நிறுத்திக் களப்பிரர்கள் அப்போது சிறைப் பிடித்துச் செல்வது யாரை என்று அறிந்து கொண்ட பின்பே மேலே செல்ல விரும்பினாள் அவள். தானே இறங்கி, ஓடிப் போய்ப் பார்த்து ஐயம் தெளிய வேண்டும் என்று துடித்தாள் அவள். அவளுடைய வேதனையை உணர்ந்து அதற்குச் செவி சாய்த்து, வண்டியை ஒட்டுகிறவன் இறங்கிப் போய்ப் பார்த்து விட்டு வந்து- ⁠“ஒற்றன் என்று சந்தேகப்பட்டு யாரோ ஒருவனைச் சங்கிலியிட்டுப் பிணைத்து இழுத்துப் போகிறார்கள்"- என்று தெரிவித்தான். அவள் மனம் விரைந்து துடித்தது. பயந்து கதறும் குரலில், “அவர்கள் யாரை இழுத்துப் போகிறார்களோ, அந்த மனிதரை நீ நன்றாகப் பார்த்தாயா?” -என்று அவனை மீண்டும் வினாவினாள் அவள். “பார்க்க முடியவில்லை” என்று மறுமொழி கூறியபோது அவள் நெட்டுயிர்த்தாள். செல்வப் பூங்கோதையின் அன்னை, அவள் தவிப்பைக் கண்டு நகைத்தாள். ⁠“பெண்ணே! நமக்கு வேண்டியவர்களைக் கோழைகளாவும், பலவீனமானவர்களாகவும் கற்பனை செய்கிற அளவிற்கு நாம் தைரியமற்றவர்கள் ஆகிவிடக் கூடாது. உன் தவிப்பு வீணானது. பெரியவர் மதுராபதி வித்தகரின் சோதனைகளில் உறுதி செய்யப்பட்டுத் தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள் யாராயினும் அவர்களை இவ்வளவு எளிதாக எதிரிகள் பிடித்துவிட முடியாது என்ற நம்பிக்கையாவது உனக்கு இருக்க வேண்டும்." “இருக்கலாம், அம்மா! ஆனால், ஒரு பலமான நம்பிக்கையின் மறுபுறத்தில்தான் பலவீனமான அவநம்பிக்கைகளும் அச்சங்களும் தோன்றுகின்றன.” “நீ சொல்வது தவறு செல்வப் பூங்கோதை! ஒரு பலமான நம்பிக்கைக்கு மறுபுறமே கிடையாது. பலவீனமான நம்பிக்கைக்குத்தான் மறுபுறங்கள் உண்டு. திடமான முடிவுக்கு முதல் எண்ணம்தான் உண்டு. இரண்டாவது எண்ணமே இல்லை என்பதை நீ ஒப்புக்கொண்டுதான் ஆக வேண்டும்.” தாயின் உறுதிமொழியால் ஓரளவு மனநிறைவு அடைந்தாள் அவள். தன்னுடைய அன்பின் மிகுதியால் இணையற்ற வீர இளைஞர் ஒருவரைக் குறைத்து மதிப்பிட நேர்ந்ததை மற்றொரு கோணத்திலிருந்து தாய் சுட்டிக் காட்டியபோது தன் சிந்தனையை எண்ணித் தானே வெட்கப்பட்டாள் அவள். திருவாலவாய்க்கோவிலிலும் வழிபாட்டை நிறைவேற்றிக் கொண்டு மோகூர் திரும்புவதற்காகக் கோட்டைக்கு வெளியே புறநகரை அடைந்து வண்டிகள் வையையைக் கடந்து கரையேறியபோது இரவு நெடுநேரமாகி விட்டது. எப்படியும் இரவோடிரவாக அவர்கள் மோகூர் திரும்பியாக வேண்டியிருந்தது. வழிபாட்டுக்கு மட்டுமே அவர்கள் மதுரை வந்திருந்தால் இவர்கள் திரும்பி வந்து சேருவதுபற்றிக் காராளர் கவலையின்றி நம்பிக்கையோடிருப்பார். இளைய நம்பியைத் தந்திரமாகக் கோநகருக்குள் கொண்டுவந்து விடவேண்டிய பொறுப்பும் சேர்ந்திருந்ததால் தாங்கள் திரும்புவதைத் தந்தை ஆவலோடும், கவலையோடும் எவ்வளவிற்கு எதிர்பார்த்திருப்பார் என்பதைச் செல்வ பூங்கோதை உணர்ந்திருந்தாள். அவளுடைய மனநிலையையும் அவள் தாயின் மனநிலையையும் உணர்ந்தவர்கள் போல் புறநகரிலிருந்து மோகூருக்குச் செல்லும் சாலையில் வண்டிகளை விரைந்து செலுத்தினார்கள் ஓட்டுபவர்கள்.  10. கருங்கல்லும் மலர்மாலையும் மோகூர் ஊரெல்லையை அவர்கள் அடையும் போது நள்ளிரவுக்கு மேலாகி விட்டது. ஊர் அடங்கியிருந்ததால் வண்டிகளை இழுத்துச் சென்ற காளைகளின் கழுத்துமணி ஓசை கூட இரவின் அமைதியைக் கலைத்துக் கொண்டு கணீர் கணீரென்று தனியாக ஒலித்தது. மூன்று வண்டிகளுக்கான ஆறு காளைகளின் கழுத்து மணிகளும் ஒலிக்க விரைந்து ஊர் எல்லையை நெருங்கிக் கொண்டிருந்த அந்த வண்டிகள் ஊர் எல்லையில் சாலையருகே யாரோ இருவர் ஒதுங்கி நிற்பதைக்கண்டு, அடையாளம் புரிந்து உடனே நிறுத்தப்பட்டன. நிற்பவரைக் கண்டு மணி ஒலிகள் அடங்கி வண்டிகள் அடுத்தடுத்து நின்ற விதமே தனியானதொரு பணிவையும் அடக்கத்தையும் காட்டின. யார் முன்னிலையில் உலகியலான சிறிய ஓசைகள் அடங்கிவிடுமோ அப்படி ஒரு கர்மயோகி வானையும் மண்ணையும் அளப்பது போன்ற உயரத்துடன் தன் அருகே பவ்வியமாகப் பணிந்து நிற்கும் காராளரோடு அங்கே நின்றிருந்தார். இருளையும் நிசப்தத்தையும் வென்று ஒலிக்கும் மணிகளின் கிண்கிணி நாதத்தோடு விரைந்து வந்த அவ்வண்டிகள் உடனே அடங்கி நின்ற விதம் எதிரே தோன்றியவரின் தோற்றத்துக்குக் கட்டுப்பட்டு அடங்கி விட்டாற் போலவே இருந்தது. இரவில் காராளரோடு உலாவ வந்த மதுராபதிவித்தகர் அங்கே நின்று கொண்டிருந்தார். ஒரு பனைத் தொலைவு பின்னால் எந்நேரமும் அவரை நிழல்போல் உடனிருந்துகாக்கும் ஆபத்துதவிகள் இருவரும் கூடத் தென்பட்டனர். முதல் வண்டியிலிருந்த செல்வப் பூங்கோதையும், அவள் அன்னையும் கீழே இறங்கிப் பெரியவரை வணங்கினர். காராளரின் மனைவிக்கு மதுராபதி வித்தகரிடம் அளவற்ற பயம். அவரை எதிரே பார்த்து விட்டால், அவளுக்குப் பேச வராது. ஏதாவது தவறாகப் பேசி விடுவோமோ என்ற பயத்திலேயே அவள், அவர் முன்னிலையில் பேசமாட்டாள். செல்வப் பூங்கோதைக்கும் ஓரளவு அந்த அச்சம் உண்டு என்றாலும், தந்தை அனுப்பியும், தானாகவும் அவள் அவரைக் காண ஆல மரத்தடிக்கு அடிக்கடி செல்ல நேரிடுவது வழக்கம் என்பதால் அவருடன் ஓரளவு உரையாட முடியும். அப்படி உரையாடும் வேளைகளில் எல்லாம், செங்குத்தான மலை ஒன்றில் ஏற முயன்று இயலாமல், அச்சத்தோடு பாதியிலேயே கீழே இறங்கி விடும் ஒரு குழந்தையின் நிலையில், தன்னுடைய சொற்களுக்குப் பிடி கிடைக்காமல் தடுமாறும் ஓர் அனுபவத்தையே அவள் அடைந்திருக்கிறாள். மலர்களைப் போல் நளினமாகவும், பயபக்தியோடும் அவர் முன்னிலையில் அவள் தூவிய சொற்களை உணர்ச்சியோ, கிளர்ச்சியோ அடையாமல் கல்லைப் போல் தாங்கியிருந்திருக்கிறார் அவர். தன்னிடம் பேசுகிற எதிராளி வெற்றுச் சொற்களை நிறைய அடுக்கலாகாது என்று அவரே வாய் திறந்து கட்டளை இடுவதில்லை, ஆனால் பேசுகிறவன் தான் பேசும் போது, எதிரே தெரியும் அவருடைய கண்களையும், முகத்தையும் பார்த்தாலே பேசுவதற்கென்று திரட்டிய பல சொற்கள் கழன்று விழுந்து விடும். இது தவிர்க்க முடியாதது என்பதை அவள் பலமுறை உணர்ந்திருக்கிறாள். இப்போது அவள் தந்தை அவளைக் கேட்டார். ⁠“நடந்தவற்றைச் சொல்லம்மா!... ஏன் தயங்குகிறாய்?” ⁠பெரியவரும் வலது கரத்தை மேல் நோக்கி அசைத்துச் ‘சொல்லேன்’ என்பது போல் குறித்து உணர்த்தினர். ‘சொல்’ என வார்த்தையால் கேட்காமல், அவர் அப்படிக் குறிப்புக் காட்டியதே அவளை ஓரளவு தாழ்வு உணர்ச்சியடையச் செய்தது. மொழியால் பேச நீயும் நானும் ஓர் எல்லையில் இல்லை என்பதுபோல் அவளை மருட்டியது அந்தக் குறிப்பு. அவள் மிகவும் நிதானமாக எல்லாவற்றையும் சொல்லத் தொடங்கினாள். தாமரைப் பூக்குவியலோடு இருந்த வண்டியைப் பூத பயங்கரப் படை வீரர் சந்தேகப்பட்டது, அவனுடைய சந்தேகத்தை நீங்கித் தாங்கள் மேலே சென்றது, யானைப் பாகன் அந்துவனைக் கண்டது முதலிய நிகழ்ச்சிகளை ஒவ்வொன்றாகச் சொன்னாள் அவள். கூர்ந்து கேட்டுக் கொண்டிருந்த மதுராபதி வித்தகர், இளையநம்பி என்னும் சுந்தர வாலிபனின் மேல் செல்வப் பூங்கோதை என்னும் அழகிய இளம் பெண்ணுக்கு ஏற்பட்டுள்ள பிரியத்தையும், மயக்கத்தையும் கொண்ட சொற்களைத் தனியே பிரித்தெடுத்து விலக்கி, அவள் தெரிவித்தவற்றை அறிவதற்குப் போதுமான சொற்களை மட்டுமே புரிந்து ஏற்றுக் கொண்டார். இளையநம்பியைப் பற்றிக் கூற நேரிடுகையில், சில இடங்களில் நாணமும், சில இடங்களில் தன்னை மீறி அவன் அழகை வர்ணிப்பது போல் தன் வாக்கில் வந்து சேரும் பதங்களையும் தவிர்க்க முடியாமல், அவள் தான் கூற முற்பட்டவற்றைக் கூறிக் கொண்டிருந்த போது அந்த இணையற்ற அரச தந்திர மாமேதை உள்ளூற நகைத்தபடியே அதைச் செவிமடுத்துக் கொண்டிருந்தார். மோகூருக்கு அருகே யானைக் குன்றின் சாரலில் சில இடங்களில் அருமையான முல்லைக் கொடிகள் சில தரை மண்ணாயுள்ள இடத்தில் தோன்றி அருகே மலைக் கருங்கல்லாய் இறுகிய பகுதியில் படர்ந்து, அந்தக் கருங்கற் பரப்பின் மேல் பூக்களைப் பூத்துக் கொட்டுவது உண்டு. அந்தக் காட்சியைக் காணும் போதெல்லாம், செல்வப் பூங்கோதை இந்த மலர்களின் மேன்மையையும், குளிர்ச்சியையும் நறுமணத்தையும் அந்தக் கருங்கல் என்றாவது உணர முடியுமா? ஒரு தெய்வத்திற்கு அர்ச்சனை செய்வது போல், எவ்வளவு காலமாக இந்தப் பூக்கள் உதிர்ந்து அந்தக் கல்லை வழிபடுகின்றன! இந்தக் கொடியை ஒரு விதமான உணர்வுமின்றித் தாங்கும் ஆதார நிலமாக இருப்பதைத் தவிர, இதன் இதயத்து மென்மையையும் நறுமணங்களையும் சீதத் தன்மையையும் ஏற்றதற்கு அடையாளமாக அந்தக் கல் எந்த அருளைப் புரிந்திருக்கப் போகிறது இதற்கு?’ -என்று விளையாட்டாகச் சிந்திப்பதுண்டு. தன்னுடைய வியப்புகள், அதிசயங்கள், சுகதுக்கங்கள் ஆகியவற்றைப் பெரியவர் மதுராபதி வித்தகரிடம் அவள் முயன்று காண்பித்துக் கொள்ள விரும்புவதில்லை. எப்போதாவது அவரிடம் பேசும் போது அப்படி வியப்புகளோ, அதிசயங்களோ, சுக துக்கங்களோ தழுவிப் பிறக்கும் தன்னுடைய வார்த்தைகள், கருங்கல்லில் உதிரும் முல்லை மலர்களைப் போன்றே, அவரிடம் சென்று சேருவதாக அவளுக்குத் தோன்றும். அந்தக் கருங்கல்லில் எல்லையற்ற ஆற்றலும், தெய்வீகமும் இருப்பதாக அவளுள் பழகியிருந்த ஒரு பயபக்தியின் காரணமாக அதை அவள் ஒரு குறையாக எண்ணுவதில்லை. என்றாலும் அவரிடம் பேசும் ஒவ்வொரு முறையும், அந்த யானை மலைக் கருங்கல்லில் உதிரும் முல்லைப் பூக்களின் காட்சி அவளுக்கு நினைவு வராமற் போவதில்லை. இதயத்தின் ஒரு கோடியில் அந்தப் பெரியவருக்குப் பேர்த்தி வயதுகூட நிரம்பியிராத தன் மேல் அவருள்ளே ஒரு பாசமும், குழைவும், ஆசியும் இருக்கும் என்று அவள் நம்பினாலும், அந்தப் பாசத்தையும், ஆசியையும் சொற்களால் வெளிப்படுத்தி அங்கீகரிக்காத அவருடைய உணர்ச்சிகளின் இறுகிய தன்மையை அவள் பலமுறை நேருக்கு நேர் கண்டு மருண்டதுண்டு. ⁠இன்று இந்த நள்ளிரவிலும் அப்படியே நேர்ந்தது. தன்னருகே அன்னையையும், எதிரே நிற்கும் பெரியவரின் அருகே தந்தையையும் வைத்துக் கொண்டு, தான் கூற வேண்டியவற்றுக்கான இங்கிதமான சொற்களை ஒவ்வொன்றாகத் தேர்ந்தெடுத்துப் புதிதாக மாலை தொடுத்துப் பழகுவது போல் சொற்களை ஒவ்வொன்றாகத் தொடுத்துப் பேசினாள் அவள். இளையநம்பியின் கையும் வண்டியில் குவித்திருந்த தாமரைப் பூக்களும் வேறுபாடு தெரியாமல் ஒன்றாயிருந்த இடத்தைப் பற்றிக் கூறும் போது, அவளையும் மீறிச் சொற்கள் மிக மிக நளினமாய்க் கோர்த்துக் கொண்டு வந்தன. தானும் தன்னுடைய அன்னையும், வெள்ளியம்பலப் பகுதியைக் கடந்து நடுவூர் பழியே திருவாலவாய்க்குச் செல்லும் போது பூத பயங்கரப் படையினர் யாரோ ஒரு மனிதரை ஒற்றர் என்று ஐயப்பட்டு சங்கிலியால் பிணித்து இழுத்துச் சென்றதைச் சொல்லும் போது, அதைக் கூறும் தன் வார்த்தைகளில் பதற்றத்தையும் அவளால் தவிர்க்க முடியவில்லை. அப்போது மட்டும் மதுராபதி வித்தகரின் குரல் தன் தந்தையை நோக்கி “இப்படி நம்மால் அன்பு செய்யப்படுகிறவர்களின் சுகதுக்கங்களைப் பல வேளைகளில் நாமே கற்பித்துக் கொள்கிறோம்! ஆனால், நாம் கற்பிக்கின்ற துக்கங்களின் படி துக்கங்களும் வருவதில்லை. நாம் கற்பிக்கின்ற சுகங்களின் படி சுகங்களும் வருவதில்லை --காராளரே?” என்று கூறியதைக் கேட்டாள் அவள், ‘நாம் கற்பித்தபடி துக்கங்கள் வருவதில்லை’ என்று அவர் கூறியது அவளுக்குப் பிடித்திருந்தது. ‘நாம் கற்பித்தபடி சுகங்களும் வருவதில்லை’ என்பதை அவர் ஏன் கூறினார் என்று அந்த வார்த்தைகளை மட்டும் ஏற்க முடியாமல் அவள் மனம் வேதனைப்பட்டுக் கொண்டிருந்தபோது, ⁠“ஆனால் நாம் விரும்புகிறபடியே நம் சுகங்கள் அமையவேண்டும் என்றும், நாம் விரும்புகிறபடியே நம் துக்கங்கள் விலகிப் போய்விட வேண்டும் என்றும் இளம் பருவத்தில் ஓர் ஆசை எல்லோருக்கும் இருப்பது இயல்பு", என்று பெரியவரே மேலும் பேசிய போது, தன் மனத்தைப் படித்து விட்டு அவர் மறுமொழி கூறினாற் போல் துணுக்குற்றாள் அவள். கூறுகின்ற சொற்களைக் கேட்டு விட்டு ‘மறுமொழி சொல்கிறவர்கள் நிறைந்துள்ள உலகில் நினைக்கின்ற சொற்களுக்கும் தீர்மானம் செய்தாற் போல் மறுமொழி கூறுகின்ற அந்தச் சதுரப்பாட்டை வியந்து நின்றாள் அவள். முதல் வாக்கியத்தை அவர் பேசிய சுகதுக்கங்களைப் பற்றி எதற்காக இப்போது இப்படி ஒரு தத்துவம் சொல்லுகிறார் என்று அவள் சிந்தித்தாள். அவளுக்குள்ளே இப்படி ஒரு சிந்தனையை உண்டாக்குவதற்காகவே முன் வாக்கியத்தைச் சொல்லியிருந்தவர் போல், அந்தச் சிந்தனையுடனேயே தனது இரண்டாவது வாக்கியத்தின் மூலம் அவளைக் கையும் களவுமாகப் பிடித்துவிட்டார் அவர். மீண்டும் அந்த யானை மலைக் கருங்கல்லின் மேல் படர்ந்து உதிர்ந்த முல்லைப் பூக்கள்தான் நினைவு வந்தன அவளுக்கு. ⁠அதற்குமேல் அவளிடமும் அவள் அன்னையிடமும் கேட்டறிய வேறெதுவுமில்லை என்பது போல், வலது கையை மேலே போக வேண்டிய சாலையை நோக்கி அசைத்து, விடை கொடுப்பது போல் குறிப்பு உணர்த்தினார் அவர். அன்னையோடு வண்டியில் போய் ஏறியபோது, ⁠“பெண்கள் உணர்ச்சி மயமானவர்கள். அவர்களுக்கு வாழ்வின் சுகதுக்கங்களை விடச் சுகதுக்கங்களைப் பற்றிய கற்பனைகளே அதிகம். அவர்கள் கூறுகிறவற்றில் இந்தக் கற்பனைகளையும், உணர்ச்சிகளையும், கழித்துவிட்டுப் பதங்களுக்குப் பொருள் தேட வேண்டும்” என்று தொலைவில் பெரியவர் தன் தந்தையிடம் கூறிக் கொண்டு செல்வதை அவளும் கேட்க முடிந்தது. நீண்ட நேரம் இந்தச் சொற்களையே சிந்தித்துக் கொண்டிருந்தாள். இந்த வாக்கியத்தில் பதங்கள் சந்திக்கும் இடங்களில் எல்லாம் பலவீனமான சிந்தனையால் உடைத்துப் பொருள் கண்டுபிடிக்க முடியாத இராஜ தந்திரப் பூட்டுகள் நிறைந்திருப்பது போல் தோன்றி அவளைப் பயமுறுத்தின... நீண்ட நேரம் இந்த வாக்கியத்தைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தாள் அவள். ⁠இரவு நெடு நேரங் கழித்து பெரியவரை ஆலமரத்திற் கொண்டு போய் விட்டுவிட்டுத் திரும்பிய தன் தந்தையிடம் “இந்த வாக்கியத்துக்குப் பொருள் என்ன? ஏன் பெரியவர் அவரிடம் இப்படிச் சொல்லிக் கொண்டிருந்தார்?” என்று வினாவியதோடு தன் மனத்தில் தோன்றிய யானை மலை முல்லைக் கொடி கருங்கல்லில் உதிர்க்கும் பூக்களின் உவமையையும் அவள் மெல்லச் சிரித்தபடி கூறினாள். அப்போது அவர் அவளை மறுத்தார். ⁠“மகளே! அவரைப் பற்றி அப்படி நினைக்காதே. வருங்காலப் பாண்டிய நாட்டின் பல நூறு தலைமுறைகளை இன்றைய சிந்தனையில் திட்டமிட்டுக் கொண்டிருக்கும் செயல் வேள்வியில் அவர் ஈடுபட்டிருக்கிறார். அவருடைய சொற்களுக்கு நிறைமொழி மாந்தார் ஆணையிற் கூறும் மறைமொழியின் பொருளாழமும் ஆற்றலும் உண்டு! பின்னால் ஒரு சமயம் நீயே இதை உணர்ந்து கொள்வாய்.” 11. மூன்று குழியும் ஒரு வினாவும் “இருளில் கால் சலிக்க நடக்கும் துணிவுள்ளவன் தான் காரியங்களைச் சாதித்து முடிக்கும் வீரனாக இயலும்” என்று அழகன் பெருமாள் மாறனுக்கு மறுமொழி கூறியிருந்தும் அந்தக் கரந்து படை வழியில் முன்னேறிச் செல்வது மிக அரிய செயலாயிருப்பதைச் சிறிது தொலைவு செல்வதற்குள்ளேயே இளைய நம்பி உணர்ந்தான். வெளி உலகில் பூமியின் தோற்றம் மேற்புறம் இரவென்றும் பகல் என்றும் கால வேறுபாடுகள் இருந்தது போல் அல்லாமல் இந்தச் சுரங்க வழியில் இரவு பகல்களே கிடையாது என்று தோன்றியது. நெடுந்தூரத்துக்கு நெடுந்தூரம் ஒரே இருள் மயமாய் நீண்டு செல்லும் அந்த நிலவறைப் பாதையில் இரவுக்கும் பகலுக்கும் வேறுபாடு இல்லாதது போல் கண்கள் பெற்றதன் பயனும், கண்கள் பெறாததன் பயனின்மையும் கூட வேறுபாடற்றதுதான். சூரியன் உதித்தாலும் மறைந்தாலும் அந்த நிலவறைப் பாதையில் தெரியாது. அத்தகைய பயங்கரமான மாயக் குகை போன்ற காரக்கிருகப் பாதையில் அழகன் பெருமாள்தன்னைத் தடுமாறாமல் வழிநடத்திச் செல்ல வேண்டுமானால், அவன் இந்த வழியிலேயே பல்லாயிரம் முறை சென்று பழகியிருந்தால்தான் முடியும் என்று தோன்றியது. அழகன் பெருமாளின் கையைப் பற்றி நடந்து கொண்டே இளையநம்பி அவனை வினாவினான். “அழகன் பெருமாள்! இந்தப் பாதை வழியாக அரண்மனை அந்தப்புர உரிமை மகளிரும் அரச குடும்பத்தினரும் திருமருத முன்துறைக்குப் புண்ணிய நீராடச் சென்றதாகச் சொல்கிறாயே? அரச குடும்பத்துப் பெண்கள் மிக மிக தைரியசாலிகளாக இருந்திருக்க வேண்டும் என்றல்லவா தோன்றுகிறது? இத்தனை பெரிய இருட் குகையில் நடக்க எப்படிப் பழகினார்கள் அவர்கள்!” ⁠“அப்படியில்லை ஐயா! பல நூறு ஆண்டுகளுக்கு முன் அப்படி இருந்ததாக நான் கேள்விப்பட்டிருந்ததைச் சொன்னேன். களப்பிரர் ஆட்சி வந்த பின்பு, இந்த வழி மூடப்பட்டுப் பாழைடைந்து விட்டது. இந்த வழியைக் கண்டு பிடித்து நாம் மட்டுமே பயன் படுத்தி வருகிறோம் என்பதைத் தவிர, இப்படி ஒரு வழி இருப்பது இன்று இந்த நாட்டை ஆளும் களப்பிரர்களுக்குக் கூடத் தெரியாது. தவிர இந்த வழியின் மறுபுறமாகிய உப வனத்திலிருந்தோ, கணிகையர் வீதியிலிருந்தோ புறப்பட்டால் தீப்பந்தங்களை எடுத்து வருவோம். அந்த இரண்டு வாயில்களும் நம் ஆதிக்கத்தில் இருப்பவை. அதனால் பயமில்லை. பெரும்பாலும் வெள்ளியம்பலம் பகுதியின் வாயில் அகநகரில் இருப்பதனால் அதைப் பயன்படுத்துங்கால் மிகவும் விழிப்பாகவும் களப்பிரர்களுக்குச் சந்தேகம் ஏற்பட்டு விடாமல் பயன்படுத்த வேண்டும் என்பதும் பெரியவர் கட்டளை. அதனால் வெள்ளியம்பல முனையிலிருந்து புறப்பட நேர்ந்தால் நாங்கள் விளக்கோ தீப்பந்தங்களோ பயன் படுத்துவதில்லை. எதிர்ப் பக்கங்களிலிருந்து வெள்ளியம்பல முனை வழியே நகருக்குள் ஊடுருவும் போது நம்மவர்கள் விளக்கோ தீப்பந்தங்களோ கொண்டு வந்தாலும் வெளியேறு முன்பே அவற்றை அனணத்து விடுவது வழக்கம். பெரும்பாலும் பழகியவர்கள் மட்டுமே அந்தரங்கமாக இங்கு வந்து போவதால் கால் தடத்திலேயே இந்த வழி புரியும். உங்களுக்கு இது சிரமமாயிருக்கும் என்று எனக்கு முன்பே தெரிவிக்கப் பட்டிருந்தால், மறுமுனையிலிருந்து தீப்பந்தங்களோடு சிலரை நடு வழியில் வந்து எதிர்கொண்டு காத்திருக்கச் செய்திருக்கலாம்." ⁠“இதில் எனக்குச் சிரமம் எதுவும் இல்லை. மனத்தில் தோன்றிய ஐயத்தைத் தெளிவு செய்து கொள்ளவே உன்னைக் கேட்டேன்.” ⁠“மழைக் காலங்களிலும், வையையில் வெள்ளப் பெருக்குக் காலங்களிலும் இந்த நிலவறையில் பெரும் பகுதி முழங்கால் அளவு தண்ணீர் கூட நிரம்பி விடுவது உண்டு, ஐயா...” பேசிக் கொண்டே இளையநம்பியை அழைத்துச் சென்ற அழகன்பெருமாள் ஓரிடம் வந்ததும் நின்று கூறினான். ⁠“ஐயா! இப்போது நீங்கள் நிற்கிற இடத்திற்கு வலதுபுறம் உங்கள் வலது தோளின் திசையில் வலப் பக்கமாக நடந்து நூறு பாக தூரம் சென்றால் நான் முன்பே கூறினேனே அந்தக் கணிகையர் வீதி வாயில் வரும்...” ⁠“எதுவுமே தெரியாத இந்தக் கொடுமையான இருளில், அந்த வழியை இவ்வளவு குறிப்பாக இலக்குத் தப்பாமல், நீ எப்படிக் கூற முடிகிறது என்பதுதான் எனக்கு வியப்பாயிருக்கிறது!” ⁠‘அது மிகவும் எளிது ஐயா! இந்த இடத்தில் கீழே கல்தளம் பரவியிருக்கிறது. அந்தத் தளத்தில் நடுவில் சிறிதாக மூன்று குழிகள் இருக்கின்றன. நடந்து வருகிற யாரும் அந்தக் குழிகளின் மேல் கால்கள் பாவாமல் நடக்க முடியாது. அதை வைத்து வழியை அநுமானம் செய்ய முடியும். இப்போது நீங்களே இன்னும் ஓர் அடிபெயர்த்து வைத்து முன் நடந்தால் அதை உணர்வீர்கள்.” ⁠உடனே ஓர் அடி முன்னால் நடந்த இளையநம்பி, அழகன்பெருமாள் கூறியது போலவே பாதங்களில் கற்குழிகள் தென்படுவதைத் தெளிவாக உணர முடிந்தது. தனக்குத் தோன்றிய இன்னொரு சந்தேகத்தையும் அவன் அழகன் பெருமாளிடம் அப்போதே கேட்டான். ⁠“உப வனத்து முனையிலிருந்தும் வெள்ளியம்பல முனையிலிருந்தும் ஏற்படாத அபாயமோ, இடையூறோ இந்தக் கணிகையர் வீதி முனையிலிருந்து நமக்கு ஏற்படாது என்பது என்ன உறுதி?” ⁠“உறுதிதான்! உங்களிடமிருந்தும், என்னிடமிருந்தும் எப்படி இந்த வழியைப் பற்றிய இரகசியம் களப்பிரர்களுக்குத் தெரிய முடியாதோ அப்படியே அந்த கணிகை மாளிகையிலிருந்தும் தெரிய முடியாது. பாண்டிய குலத்துக்காகச் சர்வபரித்தியாகம் செய்யும் நெஞ்சுறுதி படைத்தவர்கள் அந்த மாளிகையில் இருக்கிறார்கள் என்பது பெரிவருக்கு மிக நன்றாகத் தெரியும். அவருடைய நம்பிக்கை பெரும்பாலும் தவறுவதில்லை.” ⁠“கணிகையர்களில் நெஞ்சுறுதி படைத்தவர்களும் இருப்பார்கள் என்று நான் இன்றுதான் முதல்முதலாக உன்னிடத்திலிருந்து கேள்விப்படுகிறேன் அழகன் பெருமாள்!” ⁠“அது ஒன்றை மட்டுமில்லை ஐயா! பல புதிய விஷயங்களையே நீங்கள் இன்றுதான் முதன் முதலாக என்னிடம் கேள்வீப்படுகிறீர்கள்...” ⁠“இப்போது என்ன சொல்கிறாய் நீ?” ⁠“தவறாகவோ, மதிப்புக் குறைவாகவோ எதுவும் சொல்லி விடவில்லை. கோநகருக்கு நீங்கள் புதியவர், பலவற்றை உங்களுக்கு நான் சொல்ல வேண்டியிருக்கிறது என்றுதான் கூறினேன்.” ⁠கணிகையர்களின் இயல்பைப் பற்றித் தான் பொதுவாகக் கூறிய ஒரு கருத்து, அழகன் பெருமாளுக்கு ஏன் இவ்வளவு ஆத்திரத்தை உண்டாக்கியிருக்கிறது என்பதை இளைய நம்பியினால் தெளிவாக விளங்கிக் கொள்ள முடியவில்லை. அதற்கு மிக வலிமையான காரணம் ஒன்று இருக்க வேண்டும் என்றுதான் தோன்றியது. என்றாவது ஒரு நாள் நிலவறைப் பாதையின் மூன்றாவது முனையாகிய அந்தக் கணிகையர் மாளிகையைப் பற்றித் தானே அறிந்தாலொழிய, அதைத் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியாது என்றும் தோன்றியது அவனுக்கு. ⁠உப வனத்து முனையை அடைவதற்கு இன்னும் நெடுந்துாரம் செல்ல வேண்டியிருப்பதாக அழகன் பெருமாள் தெரிவித்தான். வழியை கால்களால் தடம் பார்த்து, அறிந்து மெல்ல மெல்லச் செல்ல வேண்டியிருந்ததால் நேரம் ஆயிற்று. இன்னும் எவ்வளவு தொலைவு செல்ல வேண்டியிருக்கும் என்று இளையநம்பி அவனைக் கேட்காமலே அவன் இதைக் கூறியிருந்தான். ⁠“நான் மட்டும் தனியே செல்வதாயிருந்தால், இன்னும் வேகமாகச் செல்ல முடியும். இந்த வழிக்குப் புதியவராகிய உங்களைத் துன்பப்படாமல் அழைத்துச் செல்ல வேண்டியிருப்பதால் நாம் விரைந்து போய்ச் சேர இயலவில்லை.” அழகன் பெருமாள் கூறியதற்கு இளையநம்பி மறுமொழி எதுவும் கூறவில்லை. ஆனால் அந்த மையிருட்டில் சுற்றி எதுவுமே கண் பார்வைக்குத் தெரியாமல் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்வது என்னவோ போலிருந்தது. வேண்டும் என்றே கண்ணைக் கட்டிக் கொண்டு நடப்பது போலிருந்த அந்தச் சூழலில் ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டு போவதன் மூலம் கிடைக்க முடிந்த மனநிறைவை இழப்பானேன் என்று கருதி இளையநம்பி தானே முயன்று அழகன் பெருமாளிடம் பேசத் தொடங்கினான். ஆவலோடும் உற்சாகத்தோடும் பேசிக் கொண்டு வந்த அழகன் பெருமாள் அந்த மூன்று குழிப் பகுதியில் கணிகையர் மாளிகை பற்றித் தான் எழுப்பிய ஒரு வினாவுக்குப் பின் அவனே பேசுவதைக் குறைத்துக் கொண்டு, இளையநம்பி கேட்பதற்கு மட்டும் மறுமொழி சொல்வதென்று கருத்தை மாற்றிக் கொண்டு விட்டாற்போல் தோன்றிய, அந்தக் கருத்துப் பிணக்கை மாற்றி அழகன் பெருமாளை மீண்டும் தன்னுடன் இயல்பாகவும், கலகலப்பாகவும் பழகச் செய்ய இளையநம்பி முயல வேண்டியிருந்தது. இருளாயிருந்ததால் ஒருவருக்கொருவர் முகத்தையும் பார்த்துக் கொள்ள முடியவில்லை. இளைய நம்பி கேட்டான்; ⁠“இந்த மாபெரும் மதுரை நகரின் எந்தப் பகுதியில் களப்பிரர்களின் பூத பயங்கரப் படை இப்போது அதிகமாகக் கவனம் செலுத்திக் கொண்டு திரிகிறது? அவர்களுடைய கவனம் அதிகம் குவியாத இடம் எது? இத்தனை நூறு ஆண்டுகளுக்குப் பின்பும் களப்பிரர் ஆட்சி அபாயத்தை எதிர்பார்க்க முடியும் என்று அவர்களே உணர்ந்திருக்கிறார்களா?” ⁠“திருவாலவாய்ப் பகுதியையும் இருந்தவளப் பகுதியையும் பற்றிக் களப்பிரர்கள் அதிகம் கவலைப்படவில்லை. நடுவூர் ஏற்கெனவே அவர்களுடைய கடுமையான பாதுகாப்பில்தான் இருக்கிறது. புறநகரில் வையை ஆற்றை ஒட்டிய பகுதிகளையும், அகநகரில் அயலவர்களும், யாத்திரீகர்களும், தேசாந்திரிகளும் பழகக் கூடிய வெள்ளியம்பலப் பகுதியையும்தான் மிகவும் சந்தேகக் கண்களோடு பார்த்து வருகிறார்கள் அவர்கள்.” ⁠“அப்படியானால் சிறிதும் இலக்குப் பிழையாமல்தான், அவர்களுடைய சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. நாம் அகநகருக்குள் ஊடுருவுவதற்குரிய ஒரே வழி வெள்ளியம்பலத் தோட்டத்தின் பின்புறம் மதிலோரமாக உள்ள பாழ் மண்டபத்தில் இருக்கிறது. வெளியேறுவதற்குரிய ஒரே வழி ஆற்றங்கரையில் உப வனத்தில் இருக்கிறது. இந்த இரண்டு பகுதிகளைத்தான் களப்பிரர்கள் சந்தேகப்படுகிறார்கள் என்றால், நாம் முதல் வேலையாக அவர்கள் சந்தேகத்தைத் திசை திருப்புவதற்கு ஏதாவது செய்தாக வேண்டும் அழகன் பெருமாள்!” ⁠“கணிகையர் வீதியின் வழியே மூன்றாவதாக ஒரு வாயில் இருப்பது எவ்வளவிற்கு இன்றியமையாதது என்பதை இப்போதாவது நீங்கள் உணர முடிகிறதா ஐயா? வெள்ளியம்பலத்து முனைக்கும் உப வனத்து முனைக்கும் அபாயங்கள் வந்தாலும் நாம் பயன்படுத்த ஒரு மூன்றாவது முனை இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்வீர்கள் என நினைக்கின்றேன்.” ⁠அழகன் பெருமாள் மீண்டும் அந்தக் கணிகையர் வீதி நிலவறை வழி பற்றி இப்படிக் கூறிய போது இளையநம்பி ஓரிரு கணங்கள் என்ன பேசுவதென்று தோன்றாமல் வாளா இருந்தான். வெள்ளியம்பலத் தோட்டத்தில் தன்னைச் சந்தித்த போது, ‘எங்கு சத்தியத்தின் வலிமை குறைகிறதோ அங்கு சொற்களின் வலிமையால் அதை அலங்கரிக்கிறார்கள்’ என்ற வாக்கியத்தைத்தான் அவனிடம் கூறி அவனுக்கு நம்பிக்கை ஊட்டியபோதும் தன்னிடம் ஓர் அடிமையின் விசுவாசத்தோடு பணிந்து நின்ற இதே அழகன் பெருமாள் கணிகையர் வீதி மாளிகையிலுள்ளவர்களின் மனஉறுதி பற்றித் தான் எழுப்பிய ஒரு வினாவுக்குப்பின் முற்றிலும் ஒருவிதமான மாறுதலோடு பழகுவதாகவே இளையநம்பிக்குப் பட்டது! அழகன் பெருமாள் பற்றிய இந்தப் புதிரை உடனே புரிந்துகொள்ள முடியாவிட்டாலும் என்றாகிலும் ஒருநாள் புரிந்து கொள்ளலாம் என்று அவன் நம்பினான். 12. வையைக்கரை உபவனம் நிலவறைப் பாதை முற்றிலும் நடந்து வையைக்கரை உபவனத்தின் புதரடர்ந்த பகுதி ஒன்றிலிருந்து வெளிப்படும் வாயில் வழியே இளையநம்பியும் அழகன் பெருமாளும் வெளியேறிய போது கிழக்கே சூரியோதயம் கண்கொள்ளாக் காட்சியாயிருந்தது. அந்த மாபெரும் உபவனத்தின் சூழ்நிலை திடீரென்று திருக்கானப்பேர்க் காட்டிற்கே மறுபடி திரும்பி வந்து விட்டது. போன்ற பிரமையை இளைய நம்பிக்கு உண்டாக்கியது. வனத்தை ஒட்டி வையை என்னும் பொய்யாக் குலக்கொடி புண்ணிய நறும்புனல் பெருக்கிக் கொண்டிருந்தாள். கதிரவன் உதிக்கும் கீழ்வானத்து ஒளிக்கதிர்கள் பட்டு மின்னும் வையை நீரின் பிரவாகத்தை மரம் செடி கொடிகளும் பன்னிற மலர்கள் பூத்துக் குலுங்கும் பூவகைகளும் நிறைந்த அந்த உபவனத்தில் இருந்து காண்பது பேரின்பம் தருவதாயிருந்தது. சிறுசிறு ஓடங்களில் அக்கரையில் செல்லூருக்கும், பிற பகுதிகளுக்கும் செல்வோர் சென்று கொண்டிருந்தனர். ⁠கரையோரங்களில் இருந்த புன்னை, பாதிரி, நாகலிங்க மரங்களின் பூக்கள் உதிர்ந்து உதிர்ந்து, வையையின் கரையை ஒட்டிய நீர்ப்பரப்புச் சிறிது தொலைவுக்குப் பூக்களாலேயே மூடப்பட்டுப் பூம்பரப்பாகத் தோன்றியது. நெடுநேரம் வெளவால் நாற்றமும் நிலவறையின் புழுக்கமும் படர இருளில் நடந்து வந்திருந்த இளையநம்பிக்கு, உப வனத்தின் பசுமை மணமும், பல்வேறு மலர்களின் கதம்பமான வாசனைகளும், சில்லென்று மேனியையும், கண்களையும் வந்து தழுவும் குளிர்ச்சியும், சொல்லால் சொல்லி விளக்க முடியாத சுகத்தை அளித்தன. ⁠உப வனத்தின் புல்வெளியில் இளம் புள்ளி மான்கள் மேய்ந்து கொண்டிருந்தன. பூமியில் வந்து நெருக்கமாகச் சிதறிய நட்சத்திரங்களைப் போல் வெகு தொலைவு பசும் பரப்பாகப் பரந்திருந்த மல்லிகைச் செடிகளில் பூக்கள் அடர்த்தியாகப் பூத்திருந்தன. மனோரஞ்சிதப் புதர்களில் எங்கெங்கோ இடம் தெரியாமல் பூத்திருந்த பூ மடல்களின் நறுமணம், தேவலோகத்தின் படிகளில் நடந்து போவது போல், அவனுடைய நடையையே கம்பீரமாகவும், உல்லாசமாகவும் மேலே ஊக்கியது. பூக்களின் மிக, மிக நுண்ணிய நறுமணத்திற்கும், இசையின் பேரினிமைக்கும், மனிதனின் நரம்புகளில் முறுக்கேற்றி, அவன் எங்கோ பெயர் புரியாத மண்டலங்களின் வீதிகளில் மிதப்பது போன்ற களிப்பை அளிக்கும் ஆற்றல் இருப்பதை, இளையநம்பி பலமுறை உணர்ந்திருக்கிறான். இன்று, இப்போதும் அதே உணர்வை இங்கே அடைந்தான் அவன். ⁠எதிரே தரையை ஒட்டித் தாழ்வாகச் சாய்ந்திருந்த ஒரு சுரபுன்னை மரத்தின் கிளைகளில், நாலைந்து மயில்கள் அமர்ந்திருந்தன. அவற்றில் ஒரு மயில் குதூகலமாகத் தோகை விரித்தாடிக் கொண்டிருந்தது. மாமரங்களில் குரங்குகள் கிளைக்குக் கிளை தாவிக் கொண்டிருந்தன. கிளிகளும், குயில்களும் கூவிக் கொண்டிருந்தன. தோட்டப் பரப்பில் இடையிடையே இருந்த சிறு சிறு வாவிகளிலும், பொய்கைகளிலும் வட்ட வட்ட இலைகளின் நடுவே வெண்மையும், சிவப்புமாகப் பனி புலராத பூக்கள் சிலிர்த்துக் கொண்டும், சிரித்துக் கொண்டும் இருந்தன. அந்த உல்லாச மனநிலையில், உடன் வந்து கொண்டிருந்த அழகன் பெருமாள் மாறனை மீண்டும் வம்புக்கு இழுத்து, அவன் வாயைக் கிளறிப் பார்க்க வேண்டும் போலிருந்தது இளையநம்பிக்கு. அவனுக்கும் தனக்கும் பிணக்கு ஏற்படக் காரணமாக இருந்த உரையாடலையே மீண்டும் இரு பொருள்பட, இரட்டுற மொழிதலாகக் கேட்டான். ⁠“மான்களையும், மயில்களையும், கிளிகளையும், குயில்களையும் இந்தச் சோலையில் நிறையக் காண முடிகிறது.” ⁠“அவற்றைப் பேணி வளர்ப்பதில் எனக்கு மிகவும் பிரியம் உண்டு ஐயா! அவை யாருக்கும் துயரம் புரியாதவை. யாரையும் புண்படுத்தாதவை. எல்லாரையும் மகிழ்விப்பவை” ⁠“நான் இங்குள்ள மான்களையும், மயில்களையும் பற்றி மட்டும்தான் குறிப்பிடுகிறேன். நிலவறை வழியின் மூன்று குழிப் பாதையாகச் சென்றால், சந்திக்க முடிந்த மான்களையும், மயில்களையும் அல்ல.” ⁠“உரை நடையில் கூடத் திருக்கானப்பேரில் ஆகுபெயராகவும், அன்மொழித் தொகையாகவும் கடுநடையிற் பேசுவார்கள் போலிருக்கிறது. திருக்கானப்பேர்த் தமிழ் நடை மட்டுமின்றி மனிதர்களும் கூடச் சிறிது கடுமையாகத்தான் இருக்கிறார்கள்...” ⁠“இந்த அனுமானம் எதிலிருந்து உனக்குக் கிடைத்தது அழகன் பெருமாள்?” ⁠“எல்லா அனுமானங்களுக்குமே பிரமாணங்களைக் கேட்பதிலிருந்தே திருக்கானப்பேர் மனிதர்களின் மன இறுக்கம் தெரியவில்லையா?" ⁠“நிதானமாக நினைத்துப் பார்த்தால், காரண காரியங்களின் நீங்கிய பிரமாணங்கள் இருக்க முடியாது என்பதை நீயும் புரிந்துகொள்ள வேண்டும்.” ⁠“போதும் ஐயா! நமக்குள் வீண் வாக்குவாதம் வேண்டியதில்லை. நிலவறை வழியில் நடந்து வரும் போது, எந்த விஷயமாக உங்களுக்கும் எனக்கும் பிணக்கு நேர்ந்ததோ, அதில் என் நிலையில் எவ்வளவு நியாயமும், தெளிவும் உறுதியும் இருக்கிறது என்பதை நீங்களே ஒரு நாள் தெரிந்து கொள்ளத்தான் போகிறீர்கள்.” ⁠இதைக் கேட்டு இளையநம்பி புன்முறுவல் பூத்தான். அழகன் பெருமாள் மாறன் தன் நிலையில் உறுதியோடும், பிடிவாதமாகவும் இருப்பது அவனுக்குப் புரிந்தது. அதோடு இன்னோர் உண்மையையும் அழகன் பெருமாளைப் பற்றி இளையநம்பி புதிதாக இப்போது அறிய முடிந்திருந்தது. அவன் உப வனக் காப்பாளனாக இருப்பது மதுராபதி வித்தகரின் வாக்குக்குக் கட்டுப்பட்டே அன்றி உண்மையில் அவன் ஓரளவு விஷய ஞானமுள்ளவனாகத் தோன்றினான். மான்கள், மயில்கள் என்ற வார்த்தைகளைப் பொருள் வேறுபட்ட அர்த்தத்தில் தான் பயன்படுத்திப் பேசிய மறுகணமே, ‘திருக்கானப்பேரில் பேச்சு வழக்கில் கூட ஆகுபெயரையும், அன்மொழித் தொகையையும் பயன்படுத்துவார்கள் போலிருக்கிறது’ என்று தயங்காமல் அவன் மறுமொழி கூறியது இளையநம்பிக்கு வியப்பூட்டியது. ⁠மாற்றான் தொடுக்கும் அம்புகளுக்குப் பதிலாக அதை விட வேகமான அம்புகளை ஆயத்தமாக வைத்திருந்து, உடனே காலப் பிரமாணம் தவறாமல். தொடுக்கும் போர் வல்லாளர்களைப் போல் உரையாடலில் விடை தருபவர்களிடம் உடனே பதில் தரும் விஷய ஞானம் இருக்கத்தான் செய்யும். அழகன் பெருமாளிடம் அந்த விஷய ஞானத் தெளிவு இருந்தது. மதுராபதி வித்தகர் பயிற்சி அளித்து உருவாக்கிய ஒவ்வோர் ஆளும் ஒரு சீரான வினைத் திறமை உடையவர்களாக இருப்பதையும் அவன் கண்டான். திருமோகூர்ப் பெரிய காராளர், யானைப்பாகன் அந்துவன், இப்போது இந்த வையைக் கரை உப வனத்து அழகன் பெருமாள் எல்லாருமே அப்படி இருப்பதைப் பெரியவரின் கை வண்ணச் சிறப்பாகக் கருதி மதித்தான் அவன். ⁠உப வனத்தின் உள்ளே நடந்து சென்ற அவர்கள், வனத்தின் அடர்ந்த பகுதி ஒன்றில், பின்புறம் வையையில் இறங்குவதற்குப் படிக்கட்டு இருக்குமளவிற்கு நதியை ஒட்டி வாயிற்புறம் தெற்கு திசையைப் பார்த்தும், புறங்கடை வடக்கே வையை நதியை நோக்கியும் அமைந்திருந்த ஒரு மண்டபத்திற்கு முன்பாக வந்திருந்தனர். களப்பிரார்கள் போன்றே நடையுடை பாவனைகளும் தலை முடியும் வைத்திருந்த ஐவர் முரட்டு மல்லர்களைப் போன்ற தோற்றத்தோடு அங்கே இருந்தனர். ⁠அழகன் பெருமாள் இளையநம்பியை அந்த மண்டபத்தின் முன்புறத் தாழ்வாரத்தில் கொண்டு போய் நிறுத்திய போது, அங்கிருந்த ஐவருமே ஐந்து விதமான வேலைகளைச் செய்து கொண்டிருந்தனர். அவர்கள் ஒவ்வொருவரும் செய்து கொண்டிருந்த காரியம், தத்தம் குணச்சித்திரத்தின் ஓர் அடையாளமாய் இருக்குமோ என்றுகூட இளையநம்பி எண்ணினான். பொதுவாக, எல்லாருமே ஒரு விநாடி புதிய மனிதர் ஒருவரோடு அழகன் பெருமாள் உள்ளே நுழைந்த போது, தாம் தாம் செய்து கொண்டிருந்த வேலையிலிருந்து கவனம் கலைந்து, வந்தவர்கள் பக்கமாகத் திரும்பினர். நிமிர்ந்து பார்த்தனர் ஐவரும். ⁠அரும்பு மீசையும் மலர்ந்த கண்களும் சிவந்த இதழ்களுமாக ஓரளவு எடுப்பான முகத்துடனிருந்த ஒருவன் யாழைக் கையில் வைத்து, அறுந்திருந்த நரம்புகளைச் செம்மை செய்வதற்காகப் புதிய நரம்பு பின்னிக் கொண்டிருந்தான். ⁠சிவந்து உருண்ட கண்களும், முகத்திலும், தோள்களிலும் நன்றாகத் தெரியும் பல வெட்டுக்காயத் தழும்புகளும் உடைய ஒருவன், மின்னலாக ஒளிரும் புதிய வாளின் நுனியை அடித்துக் கூர்மைப் படுத்திக் கொண்டிருந்தான். கட்டை குட்டையான ஒருவன் செம்பஞ்சுக் குழம்பு குழைத்துக் கொண்டிருந்தான். ⁠வாழ்க்கையின் தளர்ச்சி தெரியும் சற்றே சோர்ந்த கண் பார்வையும், மூப்பும் உடைய ஒருவன் எதிரே நிறையப் பூக்களைக் குவித்து மாலை தொடுத்துக் கொண்டிருந்தான். ⁠திரண்டு கொழுத்த தோள்களையும், பாயும் வேங்கை போல் ஒளி உமிழும் கூர்மையான விழிகளையும், நீண்ட நாசியையும் உடைய ஒருவன் இழுத்து நிறுத்தி வில்லில் நாண் இணைத்துக் கட்டிக் கொண்டிருந்தான். ⁠கிளிகளும் பிற பறவைகளும் எழுப்பும் ஒலிகளோடு மண்டபத்தின் பின்புறம் வையை பாயும் ஒலியும், தொலைவிலே திருமருத முன் துறையின் ஆரவாரங்களும் அப்போது அங்கே கேட்டுக் கொண்டிருந்தன. ⁠சந்தித்த சில கணங்கள் இரு தரப்பிலும் மெளனமே நீடித்தது. முதலில் அழகன் பெருமாள்தான் அந்த மெளனத்தைக் கலைத்து இளையநம்பியை அவர்களுக்கு இன்னாரென்று சொல்லி விளக்கினான். ⁠“பெரியவர் மதுராபதி வித்தகரின் ஆசி பெற்று இங்கே புறப்பட்டு வந்திருக்கிறார் இவர்! திருக்கானப்பேர்ப் பாண்டிய குல விழுப்பரையரின் செல்வப் பேரர் இளைய நம்பியை இப்போது நாம் நம்மிடையே காண்கிறோம்” என்று அழகன் பெருமாள் மாறன் கூறி விளக்கியதும் அங்கிருந்த ஐவரும் மெல்ல ஒவ்வொருவராக எழுந்து நின்று வணங்கினர். , ⁠அந்த ஐவரும் அழகன் பெருமாளின் வாயிலிருந்து ‘பெரியவர் மதுராபதி வித்தகர்’ என்ற சொற்கள் தொடங்கியதுமே, அமர்ந்திருந்த இடத்திலிருந்து மெல்ல எழத் தொடங்கி விட்டதை, இளைய நம்பி கவனித்திருந்தான். சிறிது நேரத்திலேயே இளையநம்பி அவர்களோடு நெருக்கமாக உறவாடத் தொடங்கி விட்டான். யாழுக்கு நரம்பு கட்டிக் கொண்டிருந்தவனுக்கும் உதவி செய்து அதை விரைவாகச் செம்மைப்படுத்தித் தானே இசைத்தும் காண்பித்தான். வில்லுக்கு நாண் கட்டிக் கொண்டிருந்தவனுடைய கையிலிருந்து அதை வாங்கி வலது காலின் ஒரு நுனியைக் கொடுத்து மேற்புறம் பலங்கொண்ட மட்டும் அழுத்தி வளைத்துக் கொண்டு, “கழற்சிங்கா! இப்போது கட்டு உன் நாணை” என்று அப்போதுதான் தெரிந்துகொண்டிருந்த அவன் பெயரை அன்போடு கூவியழைத்து அவனை நாண் ஏற்றி இருக்குமாறு செய்தான் இளையநம்பி. கழற்சிங்கன் கட்டி முடித்த பின்பும் நாண் தொய்வாகவே இருப்பதை இழுத்துப் பார்த்துவிட்டு, “நாண் இவ்வளவு தொய்வாக இருந்தால் உன் வில்லிலிருந்து அம்பே புறப்படாது” என்றான் இளையநம்பி. “மெய்தான்! நண்பர்களுக்கு முன் என் வில்லிலிருந்து அம்புகள் புறப்படாது. அதன் நாண் ஏற்றப்படாமல் தளர்ந்தே இருக்கும். அதை நான் இறுக்கிக் கட்டி அம்பு மழை பொழிய இன்னும் வாய்ப்பே வரவில்லை. நீங்கள் வந்த பின்பு, இனியாவது உங்கள் தலைமையின் கீழ் எனக்கும் நண்பர்களுக்கும் அந்த வாய்ப்புக் கிட்ட வேண்டும்” என்று கழற்சிங்கன் மறுமொழி கூறியபோது நிமிர்ந்து அவனை ஏறிட்டுப் பார்த்தான் இளையநம்பி. 13.நதியும் நாகரிகமும் இளையநம்பி கழற்சிங்கனை ஏறிட்டு நோக்கி மறுமொழி கூறினான்: “கழற்சிங்கா! உன் ஒருவனுடைய வில் மட்டுமில்லை, இன்னும் பல்லாயிரம் வில்கள் நாணேற்றப்பட்ட பின்னே நீ நினைக்கிற போர்க்களம் உருவாகும். அது வரை நிதானமும் அடக்கமுமே நமக்கு வேண்டும்; போர்க்களத்தை உருவாக்கி விடுவது சுலபம். ஆனால் தன்னைப் போதுமான அளவு ஆயத்தப்படுத்திக் கொள்ளாத பகுதியிலிருந்து, போர்க்களத்தை உருவாக்கச் சொல்லி, வேண்டும் குரல் முதலில் எழக்கூடாது. நாம் இன்னும் அஞ்சாத வாசத்தில்தான் இருக்கிறோம் என்பதையும் நீ மறந்துவிடாதே." ⁠“மறந்து விடவில்லை! என்றாலும் அஞ்ஞாத வாசமே நம்முடைய முடிவான குறிக்கோளும், பயனுமில்லை. எதிரிகள் நம் கண் காண வளர்ந்து வருகிறார்கள்; உயர்ந்து வருகிறார்கள்.” ⁠“நம்முடைய எதிரிகள் வளர்வதும் உயர்வதும் கூட நல்லதுதான். ஏனென்றால், அவர்கள் தோல்வியடைந்து கீழே விழும் போது, குறைந்த உயரத்திலிருந்து விழக் கூடாது. இறுதியில் தோற்றுக் கீழே விழும் போது, நிர்மூலமாகி விடுகிற அளவு பெரிய உயரத்திலிருந்து விழுவதற்கு ஏற்ற அத்துணை உயரத்திற்கு அவர்களை விட்டு விடுவதும் அரச தந்திரங்களில் ஒன்றுதான். அடிப்படை இல்லாத வளர்ச்சிகளையும், உயரங்களையும், அவை தாமாகவே விழுகிறவரை காத்திருந்து, பார்ப்பதற்கு நமக்குத்தான் ஓரளவு பொறுமை வேண்டும். ‘இந்த உயரத்திற்கு அடிப்படை இல்லை போலிருக்கிறதே'- என்று நம் எதிரிகளே புரிந்து கொண்டு அடிப்படையை பலப்படுத்தித் திருத்திக் கொள்ள முடிகிறாற் போல், அது குறைவான உயரத்தில் இருக்கும் போது நாம் குறுக்கிட்டு அவர்களை எதிர்த்து விடக் கூடாது.” ⁠“மிகவும் பல்லாண்டுக் காலமாக அடிமைப்பட்டு விட்டோம் நாம். பொறுமைக்கும் ஒர் எல்லை உண்டு...” ⁠“நியாயம்தான். அதை நம்மை விட நம்முடைய வழி காட்டியான பெரியவர் மதுராபதி வித்தகர் நன்றாக உணர்ந்திருக்கிறார். அவரே அடக்கமாகவும், பொறுமையாகவும் இருப்பதிலிருந்துதான் இப்படியும் ஒரு தந்திரம் இருக்கிறது என்பதையே நான் உணர முடிந்தது. காலம் கணிகிறவரை நமது விருப்புக்களை விட வெறுப்புக்களைத்தான் அதிகம் மறைத்து வைத்துக் கொள்ள வேண்டும் போலிருக்கிறது.” ⁠இப்படி இளையநம்பி கூறிய விளக்கம் அவர்களுக்குத் தெளிவாகப் புரிந்ததன் காரணமாக அவர்களும் மன அமைதி அடைந்தனர். அதன் பின் மூன்று நான்கு நாழிகை வரை, தான் அறியவேண்டிய பல செய்திகளை அவர்களிடமிருந்து விளக்கமாகவும் முழுமையாகவும் அறிந்து கொண்டான் அவன். அந்த வேளையில், அழகன் பெருமாள் அவர்களோடு இல்லை. பின்புறம் வையைப் படித்துறையில் நீராடுவதற்குப் போய் விட்டான். அவன் திரும்பி வந்த பின்பு அவனிடமும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு, அப்புறம் தான் நீராடச் செல்ல வேண்டும் என்று காத்திருந்தான் இளைய நம்பி. அவ்வாறு காத்திருந்த சமயத்தில் அங்கிருந்த ஒவ்வொருவரையும் பற்றி அவனால் நன்றாக அறிய முடிந்தது. ⁠யாழுக்கு நரம்பு பின்னிக் கொண்டிருந்தவன் பெயர் காரி என்றும், அவன் யாழ் வல்லுநனாக நகரில் கலந்து பழகி ஒற்றறிகின்றான் என்றும் தெரிந்தது. ⁠வாளைத் தீட்டிக் கூர்மைப்படுத்திக் கொண்டிருந்தவன் தேனூர் மாந்திரீகன் செங்கணான் என்றும், அவன் மாந்திரீகனாக நகரில் கலந்து பழகி ஒற்றறிகிறான் என்றும் பூத்தொடுத்துக் கொண்டிருந்தவன் பெயர் சாத்தன் என்றும், அவன் மாலை தொடுப்பவனாக அகநகரில் கலந்து ஊடுருவியிருக்கிறான் என்றும் அறிய முடிந்தது. செம்பஞ்சுக் குழம்பு குழைத்துக் கொண்டிருந்தவனை, அவனுடைய உருவத்தின் காரணமாகவோ என்னவோ குறளன் என்று அழைத்தார்கள் அங்கிருந்தவர்கள். அவன் சந்தனம் அரைப்பவனாக நகரில் கலந்திருந்தான். நகரில் இருக்கும் பாண்டியநாட்டு மக்களின் கருத்தைக் களப்பிரர்களுக்கு எதிராகத் திரும்புவதில் கழற்சிங்கன் உட்பட இவர்கள் ஐவரும் நாளுக்கு நாள் வெற்றியடைந்து வருவதாகத் தெரிந்தது. ⁠மதுரை மாநகர மக்களுக்குக் களப்பிரர் ஆட்சியில் வெறுப்பு வளர வளர, இவர்கள் செயல்களும் வளர்ந்து கொண்டிருந்தன. களப்பிரர்களிடமிருந்து விடுதலை அடைய வேண்டும் என்ற உணர்வு நெருப்பாய்க் கனிந்து கொண்டிருந்தது என்பதை இந்த நண்பர்களிடமிருந்து புரிந்து கொள்ள முடிந்தது. உப வனத்திலிருந்து, அகநகரில் வெள்ளியம்பலத்திற்கு இரகசியமான நிலவறை வழி ஒன்று இருப்பதை இவர்கள் வேண்டும்போதெல்லாம் பயன்படுத்தி வந்தார்கள் என்பதையும், நகருக்கு உள்ளேயும் புறநகரிலும் சுற்றுப் புறத்துச் சிற்றூர்களிலும் தங்கள் காரியங்களுக்குப் பயன்படும் நண்பர்களைப் பெருக்கியிருந்தார்கள் என்பதையும் கூட இளையநம்பி அறிந்து கொண்டான். கோநகருக்கும் பெரியவர் மதுராபதி வித்தகரின் ஆணையும் ஆசியும் பெற்ற சிலர் இப்படி முயற்சிகளில் ஈடுபட்டிருப்பதைக் கழற்சிங்கன் சொன்னான். ⁠அழகன் பெருமாள் நீராடி விட்டு வந்ததும், பொதுவாக இளையநம்பிக்கு அவன் ஓர் எச்சரிக்கை செய்தான்:- ⁠“ஐயா! வழக்கமாக இந்த உப வனப் பகுதிக்குக் களப்பிரர்களின் பூதபயங்கரப் படையினரோ, பிறரோ சோதனைக்கு வருவதில்லை. எதற்கும் புதியவராகிய நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். தோற்றத்திலும், நடை உடை பாவனைகளிலும் பாண்டிய நாட்டின் தொலை தூரத்து ஊரிலிருந்து வரும் ஒருவருடைய சாயல் உங்களிடம் தென்படுகிறது. யாராவது ஐயப்பாட்டோடு வினவினால், ‘நான் அழகன் பெருமாள் மாறனின் உறவினன். அவிட்ட நாள் விழாப் பார்க்க வந்தேன்’ என்று சொல்லிக் கொள்ளுவது உங்களுக்கு நல்லது.” ⁠“அப்படியே சொல்லிக் கொள்வேன் இந்தச் சூழ்நிலை பழகுகிற வரை சில நாட்களுக்கு அப்படிக் கூறிக் கொள்ள வேண்டியது அவசியம்தான் அழகன் பெருமாள்” என்று இளையநம்பியும் அவன் கூறியதில் இருந்த நல்லெண்ணத்தை ஒப்புக் கொண்டு இணங்கினான். நீராடச் செல்லுவதற்கு முன் இளையநம்பி அழகன் பெருமாளிடம் கேட்டான்:- ⁠“கொற்கைத் துறைமுகத்துக்கு வரவேண்டிய சோனகர் நாட்டுக் குதிரைக் கப்பல், என்று கரையடையப் போகிறது? கப்பலில் இருந்து குதிரைகளைத் தலைநகருக்குக் கொண்டு வர எப்படி ஏற்பாடு செய்திருக்கிறார்கள்? எவ்வளவு களப்பிரப் பாதுகாப்பு வீரர்கள் குதிரைகளோடு உடன் வருவார்கள்?” ⁠அழகன்பெருமாள் இதற்கு உடனே மறுமொழி கூறவில்லை. சிறிது சிந்தனைக்கும் தயக்கத்துக்கும் பின், “நீங்களும் நீராடிப் பசியாறிய பின் அவற்றைத் தெரிந்து கொள்ள ஏற்பாடுகள் செய்யலாம். இரவெல்லாம் வெள்ளியம்பலத்தில் காத்துக் கிடந்தும், நிலவறையில் நடந்தும் களைத்திருக்கிறீர்கள். முதலில் நீராடிப் பசியாறுங்கள்” - என்றான் அவன். இளையநம்பி அந்த மண்டபத்தின் பின் பகுதிக்குச் சென்று வையைப் படித்துறையில் இறங்கியபோது மண்டபப் புறங்கடையில் இருந்த தாழம்புதரை ஒட்டிச் சிறிய படகு ஒன்று கட்டப்பட்டிருந்ததைக் கண்டான். அந்த அதிகாலை வேளையில் வையை மிக அழகாகத் தோன்றினாள். நீர் பாயும் ஓசை நல்லகுடிப் பிறப்புள்ள பெண்ஒருத்தி அடக்கம் மீறாமல் நாணி நகைப்பதுபோல் ஒலித்துக் கொண்டிருந்தது. நெடுந்துாரத்திற்கு நெடுந்தூரம் மறு கரைவரை தெரிந்த அந்த நீர்ப்பரப்பைக் காண்பதில் அளவற்ற ஆனந்தத்தை உணர முடிந்தது. மதுரை மாநகரில் புகழ்பெற்ற திருமருத முன்துறை அருகில் இருந்ததாலோ என்னவோ அந்தப் பகுதியின் வையைக் கரை சொல்ல முடியாத வசீகரமும் வனப்பும் நிறைந்து காட்சியளித்தது. ‘பாண்டிய மரபின் கீர்த்திமிக்க பல அரசர்களின் காலத்தை எல்லாம் இதன் கரைகள் கண்டிருக்கின்றன. வரலாற்றில் நிலைத்து நின்று மணக்கும் தமிழ்ப் புலவர்களின் சங்கங்களை இதன் கரைகள் பெற்றிருந்தன. ஓர் இணையற்ற நாகரிகம் செழித்து வளர்ந்ததற்கு இந்த நதியும் ஒரு சாட்சி’- என்று நெஞ்சுருக நினைத்த போது அந்த நாகரிகத்தை இன்று அந்நியர்களாகிய களப்பிரர்கள் அடிமைப்படுத்தியிருக்கிறார்கள் என்னும் நிகழ்கால உண்மையும் சேர்ந்தே இளைய நம்பிக்கு நினைவு வந்தது. அந்த விநாடிகளில் மயிர்க் கால்கள் குத்திட்டு நிற்கப் பாதாதி கேச பரியந்தம் ஒரு புனிதமான சிலிர்ப்பை உணர்ந்தான் அவன். நெஞ்சில் மூலநெருப்பாக ஏதோ ஒரு கனல் சூடேறினாற் போலிருந்தது. தனி மண் மட்டுமே ஒரு நாகரிகத்தையோ வரலாற்றையோ படைத்துவிட முடியாது. அந்த மண்ணில் ஒடும் நதியும் விளையும் பொருள்களும் அந்த மண்ணையும் நீரையும் கலந்து வளரும் பயிர்களும், அவற்றால் உயிர் வாழும் மக்களும் சேர்ந்தே ஒரு நாகரிகத்தைப் படைக்கிறார்கள். ⁠நீரில்லாத மண்ணுக்கு மணமில்லை. நாகரிகமில்லை. அந்த வகையில் பல்லாயிரங்காலமாகப் பாண்டிய நாட்டு நாகரிகத்தை செவிலித் தாயாக இருந்து, புரந்து வரும் இந்த நதியை மார்பளவு நீரில் நின்று கைகூப்பித் தொழ வேண்டும் போல் ஒரு பக்தி உணர்வு அவனுள் சுரந்தது. அவன் தொழுதான், போற்றினான். ⁠‘சேரர் நாகரிகத்தைப் பேரியாறும்[1], சோழர் நாகரிகத்தைக் காவிரியும் உருவாக்கியது போல் எங்கள் தமிழகப் பாண்டி நாகரிகத்தின் தாயாகிய வையையே! உன் அலைக்கரங்களால் நீ என்னைத் தழுவும் போது தாயின் மடியில் குழந்தை போல் நான் தனியானதோர் இன்பத்தை அடைகிறேன்’ - என்று நினைத்தான் அவன். ⁠நீராடி வந்த இளைய நம்பிக்கு மாற்றுடையாக மதுரையின் கைவினைத் திறம் வாய்ந்த காருக வினைஞர்[2] நெய்த ஆடைகளை அளித்தான் அழகன் பெருமாள். பாண்டி நாட்டின் புகழ் பெற்ற உணவாகிய ஆவியில் வெந்த தீஞ்சுவைப் பிட்டும், உறைந்த நெய் போல் சுவையுடையதாகிய, திருநெய்க்கதலி என்னும் வாழை விசேடத்தைச் சேர்ந்த கதலிக் கனிகளையும் உண்ணக் கொடுத்து அழகன் பெருமாளும், நண்பர்களும் இளையநம்பியை உபசரித்தனர். அவன் பசியாறிய பின், அவர்களும் பசியாறினர். சிறிது நேரத்தில் அழகன் பெருமாளையும், செம்பஞ்சுக் குழம்பு குழைக்கும் குறளனையும் தவிர, மற்றவர்கள் ஒவ்வொருவராக விடை பெற்றுக் கொண்டு நகருக்குள் புறப்பட்டுப் போய் விட்டனர். ⁠அழகன் பெருமாளிடம் மீண்டும் குதிரைக் கப்பல் துறையடைவது பற்றிய விவரங்களைக் கேட்டான் இளைய நம்பி. ⁠“போகலாம்! அதைத் தெரிந்து கொள்ளவே, இப்போது நாம் புறப்படுகிறோம்” என்று கூறித் தோளில் பூக்குடலையோடும், கையில் செம்பஞ்சுக் குழம்பு நிரம்பிய ஒரு பேழையோடும் ஆயத்தமாக இருந்த குறளனையும் உடன் அழைத்துக் கொண்டு எழுந்தான் அழகன் பெருமாள். “இப்போது நாம் எங்கே போகிறோம் அழகன் பெருமாள்?” “கணிகை மாளிகைக்கு...” அவர்களோடு இளையநம்பியும் உடனெழுந்து புறப்பட்டான் என்றாலும் ‘ஓர் அரசியல் அந்தரங்கம் பற்றிய செய்திகளை அழகின் மயக்க உலகமாகிய கணிகையர் மாளிகையில் இருந்து எப்படி அறியப் போகிறான் இவன்?'- என்ற வினாவே இளையநம்பியின் உள்ளத்தில் நிறைந்திருந்தது அப்போது. ↑ இன்று பெரியாறு ↑ நெசவாளிகள் 14. கண்களே பேசும் மீண்டும் நிலவறை இருளில் புகுந்து அவர்கள் மூவரும் புறப்பட்டனர். மூன்று குழிகள் உள்ள இடம் வந்ததும், வழியில் திரும்பிக் கணிகையர் மாளிகை வாயில் உள்ள பக்கமாக அழைத்துச் சென்றான் அழகன் பெருமாள். கணிகை மாளிகை வழி அருகில் வந்ததும் பத்துப் பன்னிரண்டு படிகள் செங்குத்தாக மேல் ஏறிப்போக வேண்டியிருந்தது! முதலில் அழகன்பெருமாள் தான் படியேறினான். தொடர்ந்து குறளனும் பின் இளையநம்பியும் சென்றனர். அழகன் பெருமாளிடம் பலவற்றைப் பற்றிய சந்தேகங்களைக் கேட்க நினைத்தும் அந்தக் கணிகை மாளிகை பற்றித் தான் எது கேட்டாலும் அழகன் பெருமாள் அதை ஏளனமாக எடுத்துக் கொண்டு வருந்தவும், உள்ளூரச் சினமடையவும் நேருவதை உணர்ந்து மெளனமாகப் பின் தொடர்ந்து கொண்டிருந்தான் இளையநம்பி. படியேறியதும் அந்த இடத்தில் எங்கிருந்தோ கம்மென்று பொதியமலைச் சந்தனம் மணந்தது. அழகன் பெருமாள் மாளிகைக்குள் செல்லும் வழியைத் திறந்த பின்பே சந்தன நறுமணத்தின் காரணம் புரிந்தது. ஏறிப் பார்த்த போது, மிகப் பெரிய வட்டமான சந்தனக் கல்லை இட்டு அந்த வழியை அடைத்திருந்தார்கள். மாளிகையின் சந்தனம் அரைக்கும் இடத்திற்கு அவர்கள் வந்திருந்தார்கள். வழி மறையும் படி கல்லை மறுபடி பொருத்திய பின், மேலே நின்று பார்த்த போது அந்த வட்ட வடிவச் சந்தனக் கல்லுக்குக் கீழே ஒர் இரகசிய வழி இருக்க முடியும் என்று நம்பவே முடியாமலிருந்தது. கல்லின் மேல் அரைத்த சந்தனமும் சிறிது இருந்தது. பக்கத்தில் ஒரு கலத்தில் நீரும், சந்தனக் கட்டைகளும் கிடந்தன. அங்கு சந்தனம் அரைப்பவர் அமர்ந்து அரைத்துக் கொண்டிருக்கும் போது, புதியவர்கள் வந்து பார்த்தால், அதற்குக் கீழே ஒரு வழி இருக்குமோ என்ற நினைவே எழ முடியாதபடி அதைச் செய்திருந்தார்கள். சுற்றிலும் குடலைகளில் பூக்களும் இருந்தன. ⁠சந்தனம் அரைக்கும் பகுதியிலிருந்து, அவர்கள் மாளிகையின் அலங்காரப் பகுதிகளைக் கடந்து, நடுக்கூடத்திற்கு வந்த போது அங்கே நாலைந்து அழகிய பெண்களுக்கு நடுவே இளமையும் அழகும் ஒன்றை ஒன்று வெல்லும் பேரழகியாக வீற்றிருந்த ஒருத்தி, கை வளைகளும் காற்சிலம்புகளும் ஒலிக்க அவர்களை நோக்கி எழுந்து வந்தாள். அந்தப் பெண்களுக்கு நடுவே அவள் அமர்ந்திருந்த காட்சி, விண்மீன்களுக்கு நடுவே முழுமதி கொலு இருந்தது போல் கம்பீரமாயிருந்தது. செழுமையான உடற்கட்டும், பெண்களுக்கு அழகான அளவான உயரமும் முனிவர்களைக் கூட வசப்படுத்தி மயக்கி விட முடிந்த கண் பார்வையும், சிரிப்புமாக, ஒவ்வோர் அடி பெயர்த்து வைத்து நடக்கும் போதும் ‘இந்த மண்ணில் கால் ஊன்றி நிற்கும் இணையற்ற வசீகரம் நானே’ என்று நிரூபிப்பது போன்ற நடையுடன் அவர்களை எதிர்கொண்டாள் அவள். அந்த அழகு விரிக்கும் மோகவலையில் சாய்ந்து விடாமல் அவன் தன் மனத்தை அரிதின் முயன்று அடக்கினான். “இரத்தினமாலை! இவர் திருக்கானப்பேரிலிருந்து வருகிற வழியில் மோகூரில் நம் பெரியவரைச் சந்தித்து விட்டு அவர் ஆசியோடு இங்கு வந்திருக்கிறார்"- என்று அழகன் பெருமாள் கூறியதும், “வரவேண்டும்! வரவேண்டும்"- என அவள் வரவேற்ற அந்தக் குரலை அது தேனிற் செய்து படைக்கப் பட்டதோ என ஐயுற்று வியந்தான் இளையநம்பி. அழகிய விழிகள் பார்க்கும் என்று தான் இதுவரை அவன் அறிந்திருந்தான். ஆனால் இந்த விழிகளோ நயமாகப் பேசவும் செய்தன. ஆண் பிள்ளைகளைத் தாபத்தால் கொல்ல இந்த வனப்பு வாய்ந்த விழிகளே போதுமானவை என்று தோன்றியது அவனுக்கு. அழகன் பெருமாள் இங்கே எதற்காகத் தன்னை அழைத்துவந்தான் என்று இளைய நம்பிக்கு அவன் மேல் ஆத்திரமே மூண்டது. சில கணங்கள் எதிரே வந்து நிற்கும் அவளிடம் பேச வார்த்தைகள் இன்றி வியந்து நின்றான் அவன். அதே வேளையில் அவளுடைய கண்களின் பார்வை அவனுடைய திரண்டு செழித்த தோள்களிலும் பரந்த மார்பிலும் இலயித்திருந்தது. மீண்டும் அவளே பேசினாள். “தாங்கள் இந்த மாளிகையை அந்நியமாக நினைக்கக் கூடாது. பெரியவருடைய குற்றேவலுக்கு என்றும் கட்டுப் பட்டவர்கள் நாங்கள்." அவளுக்கு என்ன மறுமொழி கூறுவது என்று இப்போதும் அவனுக்குப் புரியவில்லை. ஆனால் அழகன் பெருமாள் முந்திக் கொண்டு அவளுக்கு மறுமொழி கூறினான். “அப்படி ஒரு குற்றேவ்லோடுதான் இப்போதும் வந்திருக்கிறேன் இரத்தினமாலை! இதோ நம் குறளன் செம்பஞ்சுக் குழம்புகொண்டு வந்திருக்கிறான், இனி நீ தான் ஆயத்தமாக வேண்டும்." 15. கரந்தெழுத்து ⁠இரத்தினமாலை தன் கைகளுக்குச் செம்பஞ்சுக் குழம்பு தீட்டிக் கொள்வதற்கும் தான் வந்திருக்கும் காரியத்திற்கும் என்ன தொடர்பு என்று இளையநம்பிக்குப் புரியவில்லை. ஆனால் இரத்தின மாலையோ உடனே அழகன் பெருமாளின் வேண்டுகோளுக்கு இணங்கிக் குறளனிடம் தன் கைகளை நீட்டி அலங்கரித்துக் கொள்ள முன் வந்தாள். ⁠“ஆகா! நான் காத்திருக்கிறேன்” என்று கூறியபடி குறளனுக்கு அருகே சென்று ஓர் அழகிய மயில் தோகை விரிப்பது போல், மண்டியிட்டு அமர்ந்து வெண் தந்த நிறத்து உள்ளங்கைகளை அவன் முன் மலர்த்தினாள் அவள். எழுத்தாணி போல் யானைத் தந்தத்தில் செய்த ஒரு கருவியால், குறளன் முதலில் அவள் வலது கையில் செம்பஞ்சுக் குழம்பு[1] தீட்டத் தொடங்கினான். ஓவியம் தீட்டுவது போல குறளன் கை விரைந்து இயங்கியது. ⁠அதைக் கண்டு ஆண்மைச் செருக்கும் மான உணர்வும் நிறைந்த இளையநம்பியின் கண்கள் சினத்தினாற் சிவந்தன. ⁠'இருக்கட்டும்! இந்த அழகன்பெருமாள் என்னை என்னவென்று நினைத்துக் கொண்டிருக்கிறான்? மயக்கும் சக்திவாய்ந்த அழகிய பெண்களைத் தேடிச் சுகம் அடையவா நான் இங்கே கோநகருக்கு வந்தேன்? என்னை அழைத்து வந்து இங்கே இவளருகில் நிறுத்திக் கொண்டு ‘பெண்ணே! உன் கைகளுக்குச் செம்பஞ்சுக்குழம்பு தீட்டி அலங்கரித்துக் கொள்--என்று ஓர் இளம் கணிகையை வேண்டும் இவன், என்னைப் பற்றி எவ்வளவு கீழாக எண்ணியிருக்க வேண்டும்!’ என்று குமுறியது இளைய நம்பியின் உள்ளம். ⁠ஓர் ஆண்மகனின் முன்னே இன்னோர் ஆண்மகனையும் அருகில் வைத்துக் கொண்டு, மூன்றாவதாக மற்றோர் ஆண்மகனிடம் செம்பஞ்சுக் குழம்பு தீட்டக் கைகளை நீட்டும் நாணமற்ற அவளை வெறுக்க வேண்டும் போலிருந்தது அவனுக்கு. ‘அவளாவது கணிகை! இந்த அழகன் பெருமாளுக்கு அறிவு எங்கே போயிற்று? என்னைப் போல் நற்குடிப் பிறப்பு உள்ள ஓர் இளைஞனுக்கு முன், இப்படி நடந்து கொள்ளும் அளவுக்கு இவன் அறிவிலியாயிருப்பான் என்று நான் நம்ப முடியவில்லையே?’ என்று இளையநம்பி எண்ணி எண்ணி வேதனையும், கோபமும் கொண்டான். அந்தச் சினத்தை அடுத்த விநாடியே அவன் அழகன் பெருமாளை விளித்த குரலில் கேட்க முடிந்தது; ⁠“அழகன் பெருமாள்! இப்படி வா! உன்னோடு தனியாக சிறிது நேரம் பேச வேண்டும்"-- என்று அவனைக் கூப்பிட்டுக் கொண்டே சந்தனம் அரைக்கும் பகுதியை நோக்கி நடந்தான் இளையநம்பி. அவனுடைய குரலில் இருந்த கோபத்துக்குக் காரணம் புரியாதவனாக அழகன் பெருமாளும் பின் தொடர்ந்தான். இளையநம்பியின் முகத்திலும் குரலிலும் எள்ளும் கொள்ளும் வெடிப்பது எதற்காக என்பது அவனுக்கு விளங்கவில்லை. இருவரும் சந்தனம் அரைக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்ததும், சுற்றும்முற்றும் பார்த்து அந்த இடத்தின் தனிமையை உறுதிப்படுத்திக் கொண்ட பின், இளையநம்பி அழகன் பெருமாளை நோக்கிக் கடுமையான குரலில் கேட்டான்:- ⁠“இங்கே நான் கோநகருக்கு எதற்காக வந்திருக்கிறேன் என்பது உனக்குத் தெரியும் அல்லவா?” ⁠“நன்றாகத் தெரியும்.” ⁠“கொற்கைத் துறையில் குதிரைக் கப்பலை என்றைக்கு எதிர்பார்க்கலாம் என்று தெரிந்து சொல்லச் சொன்னால், என்னையும் இங்கு அழைத்து வந்து என் முன்பே ஒரு கணிகையை அலங்கரித்து, அவள் கைகளுக்கு செம்பஞ்சுக் குழம்பு தீட்டச் சொல்கிறாய் நீ... ?” ⁠“ஆமாம்! மறுக்கவில்லை.” ⁠“என்ன நோக்கத்தில் இவற்றை எல்லாம் நீ செய்கிறாய் என்று எனக்குத் தெரிய வேண்டும். அழகுள்ள பெண்களையே நான் இன்றுதான் வாழ்வில் முதன்முதலாகப் பார்க்கிறேன் என்று எண்ணிக் கொள்ளாதே நீ...” ⁠“நான் அப்படி எண்ணியதாக உங்களுக்கு யார் சொன்னார்கள்?” ⁠“பின் யாருக்காக அலங்கரிக்கிறாய் இவளை?” ⁠“உங்களுக்குத்தான்......” ⁠அழகன்பெருமாள் தன் வார்த்தைகளை முடிப்பதற்குள் இளையநம்பியின் உறுதியான கைகள் அவன் கழுத்திற் பாய்ந்து பிடியை இறுக்கின. அந்தப் பிடி தாங்க முடியாமல் அழகன் பெருமாளுக்கு மூச்சுத் திணறியது. கண் விழிகள் பிதுங்கின. ⁠“இது என்ன? நீங்கள் இவ்வளவிற்கு உணர்ச்சி வசப்படுகிறவராக இருப்பீர்கள் என்று நான் நினைக்கவில்லையே? எதற்காக இந்த வீண் ஆத்திரம்? நான் சொல்லியவற்றை எல்லாமே நீங்கள் தவறான பொருளில் எடுத்துக் கொள்கிறீர்கள்.” ⁠“திருக்கானப்பேர்ப் பாண்டியகுல விழுப்பரையர் மரபில் தவறான பொருள்களை விளையாட்டுக்காகவும் நாடுவதில்லை.” ⁠“ஆனால் விளையாட்டு எது, வினை எது என்று மட்டும் புரியாது போலிருக்கிறது.” ⁠“பரத்தைகளை நாடி அலையும் பலவீனமான ஆடவர்கள் அந்த மரபில் இன்றுவரை இல்லை. அது அவர்களுக்குப் புரியவும் புரியாது.” ⁠“நீங்கள் பலவீனமானவர் என்று யார் சொன்னார்கள்? உங்கள் காரியத்துக்காகத்தான் அவள் அலங்கரிக்கப்படுகிறாள் என்றுதானே சொன்னேன்."-- ⁠“இதன் அர்த்தம்?--" ⁠“மீண்டும் அங்கே கூடத்துக்கு என்னோடு வந்தால் தெளிவாக விளக்குகிறேன்.” ⁠இளைய நம்பி தயங்கித் தயங்கி நடந்து அழகன் பெருமாளைப் பின் தொடர்ந்தான். கூடத்துக்கு வந்ததும், தன் வெண்ணிற உள்ளங்கையின் பளிங்கு நிறத்தை எடுத்துக் காட்டுவது போன்ற சிவப்புக் கோடுகளில் அழகிய சிறிய ஓவிய அலங்காரங்கள் அந்தக் கைகளில் தீட்டப்பட்பட்டிருந்ததை, அழகன்பெருமாளிடம் காண்பித்தாள் இரத்தினமாலை. அப்போது அழகன்பெருமாள்-- ⁠“இந்தக் கைகளை இப்போது நீங்களும் பார்க்க வேண்டும்" என்று இளையநம்பியிடம் கூறினான். இதைக் கேட்டு இளையநம்பி சினத்தோடு அழகன் பெருமாளை ஏறிட்டுப் பார்த்த போது, இங்கே மறுபுறம் அவள் கண்கள் அவனை அன்போடு இறைஞ்சின. ⁠இறைஞ்சும் கண் பார்வையோடு, தன் கைகளை அவன் முன்பு காண்பித்து அவனைக் கேட்டாள் இரத்தினமாலை:- ⁠“இந்தக் கைகளை உங்களால் புரிந்து கொள்ள முடிகிறதா?” ⁠“அது என் வேலையல்ல.” ⁠“கூடலுக்கு வந்தவர்கள் இவ்வளவு புரியாதவர்களாக இருக்கலாகாது.” ⁠“என்ன? அந்த வாக்கியத்தை இன்னொரு முறை சொல்லேன், பார்க்கலாம்.” ⁠“கூடலுக்கு...” ⁠“போதும் நிறுத்து! இவ்வளவு வெளிப்படையாக...? மதுரை மாநகரத்துக் கன்னிகைகள் இவ்வளவு நாணமற்றவர்களாக இருப்பார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை.” ⁠“இந்த நகரத்துக்குக் ‘கூடல்’ என்ற பெயர் வெளிப்படையானது! அதில் இரகசியம் எதுவும் இருப்பதாக இதுவரை எனக்குத் தெரியாது. நல்ல அர்த்தத்தில் கூறுகிற சொற்களைக் கூட இந்த இடத்தின் பாவத்தால் தவறாக அர்த்தப்படுத்திக் கொண்டு நீங்கள் கோபப்பட்டால் அதற்கு நான் என்ன செய்ய முடியும்? புலவர்கள், அறிவாளிகள் ஒன்று கூடும் இடம் ஆகையால் இந்த நகருக்குக் ‘கூடல்’ என்பதாகப் பெயர் சூட்டினார்கள். ‘கூடல்’ என்று சொல்வதில் நாணப்பட என்ன இருக்கிறது?' என்று அவள் மறுமொழி கூறிய போது, ஆத்திரத்திலும், பதற்றத்திலும் அவளது ஒரு சொல்லைத் தான் தவறாகப் புரிந்து கொண்டதற்காக வெட்கி நின்றான் இளையநம்பி. அழகன்பெருமாள் மாறனை ஒரு சிறிய உப வனக் காப்பாளன்தானே என்று தான் நினைத்திருந்த மதிப்பீட்டை மீறி அவன் இலக்கிய, இலக்கணங்களையும் தர்க்க நியாயங்களையும் பேசக் கேட்ட போது எவ்வளவு வியப்பை இளையநம்பி அடைந்தானோ, அவ்வளவு வியப்பை இப்போது இந்த விநாடியில் மதுரைமா நகரத்தின் இந்தக் கணிகை இரத்தினமாலையின் முன்பும் அடைந்தான் அவன். ஒரு கணிகையிடம் பேசும் அலட்சிய மனப்பான்மையோடு தன்னிடம் பேசிய அவனிடம், ஒரு பெரிய புலவரிடம் பேசும் மதிப்புடனும், மொழி நுணுக்கத்துடனும் அவள் பேசியிருப்பது புரிந்ததும், தன்னுடைய பதற்றத்துக்காக அவன் நாணினான். ஆயினும் செம்பஞ்சுக் குழம்பு தீட்டி அலங்கரித்த கைகளைத் தன் முன் ஏன் அவள் காண்பிக்கிறாள் என்பது இன்னும் இளைய நம்பிக்கு விளங்கவில்லை. ⁠அந்த நிலையில் அழகன்பெருமாளோ விலகி நின்று சிரித்துக் கொண்டிருந்தான். நளினத் தாமரைப் பூக்களைப் போன்ற அவளுடைய அழகிய உள்ளங்கைகளில் கோடுகளாகவும், ஒவியங்களாகவும் மிக அழகிய முறையில் தீட்டியிருந்தான் குறளன். ⁠அந்தக் கைகளின் அழகுக்கு மேலும் அழகு சேர்ப்பவையாயிருந்தன அவை. அவள் ஏன் தன் முன்பு கைகளை விரித்துக் காட்டுகிறாள் என்று புரியாத நிலையில் எதிரே குறும்பு தோன்றச் சிரித்துக் கொண்டு நின்ற அழகன் பெருமாள் மாறனின் மேல் மீண்டும் திரும்பியது இளையநம்பியின் சினம். சந்தனம் அரைக்கும் பகுதிக்குத் தனியே அழைத்துச் சென்று கேட்டபோது, ‘மீண்டும் அங்கே கூடத்துக்கு வந்தால் தெளிவாக விளக்குகிறேன்', என்று மறுமொழி கூறித் தன்னைக் கூடத்துக்குக் கூப்பிட்டுக் கொண்டு வந்து ஒன்றுமே சொல்லாமல், அழகன்பெருமாள் சிரித்துக் கொண்டு நின்றதைக் கண்டுதான் அவனுள் கோபம் மூண்டிருந்தது. இந்த மதுரை மாநகரின் புகழ் பெற்ற கணிகை இரத்தினமாலை, உப வனக்காப்பாளன் அழகன்பெருமாள் எல்லாருமே பெரியவர் மதுராபதி வித்தகரின் ஆணைக்குக் கட்டுப் பட்டவர்கள் என்பதனால், இவர்கள் மேல் அளவற்று ஆத்திரப்படவோ, சினம் கொள்ளவோ முடியாமலும் இருந்தது. சிறிது நேரத்திற்கு முன் சந்தனம் அரைக்கும் பகுதியில் சற்றே நிதானம் தவறி, அழகன்பெருமாளின் கழுத்தில் கைகளைப் பதித்து, அவனைத் துன்புறுத்தியது போல் மறு முறையும் சினத்திற்கு ஆளாகி விடலாகாது என்பதில் அவன் கவனமாக இருந்தான் இப்போது. ‘செம்பஞ்சுக் குழம்பு தீட்டிச் சிங்காரித்து ‘இவளை யாருக்காக அலங்கரிக்கிறாய் இப்போது?', என்று தான் அழகன்பெருமாளைக் கேட்ட கேள்விக்கு இன்னும் தெளிவான விடை கிடைக்கவில்லை என்பதை உணர்ந்த போது இளையநம்பி பொறுமையின்றித் தவித்தான். ⁠எதிரே கை விரித்து நிற்பவளின் அபிநயம் போன்ற கோலமும், அவளது நறுமணங்களும், அந்த மாளிகையின் சிங்காரமயமான அலங்காரச் சூழ்நிலையும், வேறு பகுதிகளிலிருந்து மங்கலாக ஒலித்துக்கொண்டு இருந்த நாத கீத வாத்தியங்களின் இனிமையும் அவனைப் பொறுமை இழக்க விடாமல் தடுக்கவும் செய்தன. அந்த நிலையில் மீண்டும் அழகன் பெருமாளே முன் வந்து அவனை வினாவினான். ⁠“நன்றாகப் பார்த்துவிட்டுச் சொல்லுங்கள் ஐயா! இந்தக் கைகளில் இருப்பதை இன்னும் கூட நீங்கள் புரிந்து கொள்ள முடியவில்லையா?” ⁠“நான்தான் ‘அது என் வேலையல்ல’ என்று அப்பொழுதே சொன்னேனே? பெண்களின் கைகளை அழகு பார்த்துச் சொல்லும் காரியத்துக்காக நான் இங்கே வரவில்லை...” ⁠“சிறிது பொறுமையோடு கூர்ந்து பார்த்தால் இந்தக் கைகளில் அதைவிடப் பெரிய காரியம் இருப்பதும் புலப்படும்.” ⁠மீண்டும் மீண்டும் அழகன்பெருமாள் இப்படிக் கூறவே, இளையநம்பிக்கு அவன் என்ன சொல்கிறான் என்பது அந்தக் கணம் வரை புதிராகவே இருந்தது. அழகன் பெருமாளே மேலும் தொடர்ந்தான்: "நீங்கள் எந்தக் காரியத்திற்காக வந்திருக்கிறீர்களோ, அந்தக் காரியமே உங்களுக்குப் புரியவில்லை என்பது விந்தைதான்.” ⁠“இப்போது நீ என்ன சொல்கிறாய் என்பதே எனக்கு விளங்கவில்லை அழகன் பெருமாள்?” ⁠அழகன் பெருமாள் இளையநம்பியின் காதருகே வந்து ஏதோ மெல்லிய குரலிற் சொல்லிவிட்டு, “இப்போதாவது புரிகிறதா பாருங்கள்?", என்றான். உடனே இளையநம்பி செம்பஞ்சுக் குழம்பு தீட்டப்பட்ட அந்தக் கைகளை உற்றுப் பார்த்து, அவற்றில் சித்திர வேலைப்பாடுகள் போன்ற மேற்போக்கான கோடுகளைத் தவிர்த்து நுணுக்கமாக நோக்கி ஆராய்ந்த போது அவன் விழிகள் வியப்பினால் மலர்ந்தன. அங்கே மிக அந்தரங்கமான கரந்தெழுத்துகளில்[2] அவன் தெரிந்து கொள்ள வேண்டியவற்றை வினாவும் வினாக்கள் இருந்தன. தன் கையில் பிறர் எவரும் புரிந்து கொள்ள முடியாத அந்த இரகசிய எழுத்துக்களான வினாக்களோடு, அதற்கு மறுமொழி தெரிந்து வர அவள் அரண்மனைக்குப் புறப்பட்டுப் போகிறாள் என்பதும் புரிந்தது. அப்படி புரிந்த சுவட்டோடு இளைய நம்பியின் மனத்தில் இன்னும் ஒரு பெரிய சந்தேகமும் எழுந்தது. ↑ மருதாணி இடுவதுபோல் ஓர் அலங்காரம் ↑ ஒரு குழுவினர் தங்களுக்குள் மட்டும் பயன்படுத்தும் இரகசிய எழுத்துகள். ஆதாரம்--சீவக சிந்தாமணி 1767 16. முத்துப்பல்லக்குப் புறப்பட்டது. இளையநம்பி தன் மனத்தில் எழுந்த ஐயப்பாட்டை அழகன் பெருமாளிடமோ, இரத்தினமாலையிடமோ கேட்பதற்கு முன் அங்கே அந்தக் கூடத்தில் சித்திர வேலைப் பாடுகள் அமைந்த அழகிய சிறிய முத்துப் பல்லக்கு ஒன்றைப் பணியாட்கள் தூக்கிக் கொண்டு வந்து வைத்தார்கள். ஒளிவீசும் கொற்கை வெண்முத்துக்கள் பதிக்கப்பட்ட அந்தப் பல்லக்கு அங்கே வந்ததும் சந்திரோதயமே ஆகியிருப்பது போன்றதோர் அழகு வந்து பொருந்தியது. குறளனிடமிருந்து செம்பஞ்சுக் குழம்பு பேழையையும், அதைத் தீட்டும் தந்த எழுதுகோலையும் பெற்றுக்கொண்டு ஒரு தோழிப் பெண் முதலில் பல்லக்கில் ஏறிக்கொண்டபின் இளைய நம்பியையும், அழகன் பெருமாளையும் நோக்கிப் புன்முறுவல் பூத்தபடி கணிகை இரத்தினமாலையும் அதில் ஏறிக்கொண்டாள். பல்லக்குப் புறப்படு முன் மீண்டும் வெளியே தலையை நீட்டி இளைய நம்பியைப் பார்த்து ஆளைக்கிறங்கச் செய்யும் ஓர் அரிய மோகனச் சிரிப்போடு, “ஐயா திருக்கானப் பேர்க்காரரே! இந்தக் கைகள் மேற்கொண்ட எந்தக் காரியங்களிலும் இதுவரை தோற்றதில்லை"--என்று தன் அழகிய கைகளைக் காண்பித்துச் சொன்னாள் இரத்தினமாலை. அதுகாறும் அவளைப் பொறுத்தவரை கல்லாயிருந்த அவன் மனமும் இப்போது மெல்ல இளகியிருக்க வேண்டும். அந்த நெகிழ்ச்சியின் அடையாளமாக முத்துப் பல்லக்கிலிருந்து தெரியும் அவளுடைய சுந்தர மதிமுகத்தை ஏறிட்டுப் பார்த்து, “புரிகிறது! உனக்கு என்னுடைய வாழ்த்துக்கள். வெற்றி யோடு திரும்பி வா” என்றான் இளையநம்பி. ⁠முதல்முதலாக அந்த அழகிய வாலிபன், தன்னை மதித்துப் புரிந்து கொண்டு சுமுக பாவத்தில் முகமலர்ச்சியோடு பேசிய இச்சொற்கள் அந்தப் பேதைக் கணிகைக்கு உள்ளக் கிளர்ச்சியை அளித்திருக்கவேண்டும் என்பதை அவள் வதனம் சிவந்து நாணி மலர்ந்ததிலிருந்து அறிய முடிந்தது. ⁠தன்னுடைய பதற்றத்தில் அவளைத் தவறாக மதிப்பிட்டு விட்டதற்காக இளைய நம்பியின் மனம் கூசி நாணத் தொடங்கியிருந்தது இப்போது. அழகன் பெருமாளிடமும் குறளனிடமும் கூடக் கண்களாலேயே குறிப்புக் காட்டி விடை பெற்றாள் இரத்தினமாலை. ⁠முத்துப் பல்லக்கு வீதியில் படியிறங்குகிற வரை அவள் பார்வை இளைய நம்பியின் மேல்தான் இருந்தது. பல்லக்கு வீதியில் இறங்கி மறைந்ததும், இப்பால் தன்னுடைய பதற்றங்களையும், சினத்தையும் மறந்து பொறுத்துக்கொண்டதற்காக அழகன்பெருமாளைப் பாராட்டிச் சில சொற்கள் கூறினான் இளையநம்பி. ⁠"ஐயா! நீங்கள் இந்த உபசார வார்த்தைகளைக் கூறாவிட்டாலும், நானோ, இரத்தினமாலையோ, எங்களைச் சேர்ந்தவர்களோ, கடமைகளில் ஒரு சிறிதும் தளர்ச்சி அடைந்து விட மாட்டோம். பெரியவர் மதுராபதி வித்தகரிடம் கையடித்துச் சத்தியம் செய்து கொடுத்து விட்டுக் களப்பிரர் ஆட்சியை மாற்றுவதற்குச் சூளுரைத்திருக்கிறோம். அந்தச் சபதத்தை நாங்கள் ஒருகாலும் மறக்கவே முடியாது” என்றான் அழகன்பெருமாள். ⁠மேலும் சில சொற்களால் அவனுடைய கடமை உணர்வைப் பாராட்டிய இளையநம்பி, தன்னுடைய ஐயப்பாட்டை மீண்டும் அவனிடம் வினவினான்:- ⁠“அழகன்பெருமாள் இப்போது இரத்தினமாலை தன் கைகளில் சங்கேத எழுத்துக்களின் வடிவில் சுமந்து செல்லும் இந்த வினாக்களுக்கு யார், எப்படி, எங்கிருந்து விடை தருவாா்கள்?" ⁠“கவலைப்படாதீர்கள் ஐயா! கைகளில் சுமந்து செல்லும் வினாக்களுக்கான விடைகளையும், விளக்கங்களையும் இரத்தினமாலை மீண்டும் தன் அழகிய கைகளிலேயே கொண்டு வருவாள். அவள் திரும்பி வந்ததும் நாம் யாவற்றையும் தெரிந்து கொள்ளலாம். அதுவரை நாம் இங்கேயே காத்திருப்போம்” என்றான் அழகன்பெருமாள் மாறன். ⁠இரத்தினமாலையின் திறமையைப் பற்றி அழகன் பெருமாள் எவ்வளவோ உறுதி கூறியும், இளையநம்பி அப்போதிருந்த மனநிலையில், அவனால் அதை முழுமையாக நம்ப இயலவில்லை. ⁠அரண்மனையில் போய் அவள் அந்தக் காரியத்தை முடித்துக் கொண்டு வர மேற்கொண்டிருக்கும் தந்திரோபாயத்தை அவன் வியந்தாலும், அவளது வெற்றி தோல்வியைப் பற்றி இப்போதே எதுவும் அநுமானம் செய்ய முடியாமலிருந்தது. ⁠“களப்பிரர்கள் பொல்லாதவர்கள்! கபடம் நிறைந்தவர்கள். சூழ்ச்சியில் பழுத்தவர்கள். கரந்தெழுத்து முறை அவர்களுக்குத் தெரிந்துவிட்டால், இரத்தினமாலையின் தலையே பறி போய் விடும்"-- என்று தன் ஐயப்பாட்டைத் தெரிவித்தான் இளையநம்பி. ⁠ஆனால் ஒரே வாக்கியத்தில் திடமாக அதை மறுத்தான் அழகன்பொருமாள்:-- ⁠“நீங்கள் இரத்தினமாலையின் திறமையைக் குறைத்துக் கணக்கிடுகிறீர்கள்...” ⁠“பெண்களின் திறமையை எப்போதுமே நான் பெரிதாகக் கணக்கிட விரும்பவில்லை...” ⁠“அப்படியானால், நீங்கள் பிறர் திறமையையே கணக்கிட விரும்பவில்லை என்றுதான் இதற்கு அர்த்தம் கொள்ளமுடியும்.” ⁠“முத்துப் பல்லக்கில் ஆடல்பாடல்களின் பெயரால் அலங்காரமாக அரண்மனைக்குப் புறப்பட்டுப் போகும் பெண்ணை அப்படிப் புறப்பட்டுப் போவதற்காகவே திறமைசாலி என்று ஒப்புக்கொள்ளச் சொல்லி என்னை வற்புறுத்துகிறாயா அழகன் பெருமாள்?” “நான் எதையும் வற்புறுத்தவில்லை ஐயா! நீங்களாகவே பின்னால் புரிந்து கொள்ளப்போவதை இப்போதே நான் எதற்காக வற்புறுத்த வேண்டும்?” இளையநம்பி இதற்கு மறுமொழி சொல்லாமல் சிரித்தான். அழகன்பெருமாளோ விடாமல் மேலும் தொடர்ந்தான்: “முத்துப் பல்லக்கும், ஆடல்பாடலும் உங்களுக்கு ஏனோ கோபமூட்டுகின்றன?” “மிகச் சிறியவற்றிற்காக நான் எப்போதுமே கோபப் படமாட்டேன் அழகன்பெருமாள்--” “கோபப்பட மாட்டேன் என்று நீங்கள் சொல்கிற தொனியிலேயே கோபம் தெரிகிறதே ஐயா!” “அது உன் கற்பனை."-- “கற்பனைக்கும் எனக்கும் வெகுதூரம்"-- என்று அவனைப் போலவே தானும் பதில் சொன்னான் அழகன் பெருமாள். இவ்வளவில் அவர்கள் உரையாடல் மேலே தொடராமல் அப்படியே நின்று போயிற்று. 17. என்னென்னவோ உணர்வுகள் மதுரை நகரில் இருந்து மோகூர் திரும்பிய இரவில் செல்வப் பூங்கோதையின் கண்கள் உறங்கவே இல்லை. தந்தை வந்து ஆறுதல் கூறிய பின்பும் அவள் மனம் அமைதி அடையவில்லை. மதுராபதிவித்தகர் தன் தந்தையிடம் கூறியிருந்த அந்த வாக்கியங்களை எண்ணியே அவள் மனம் கலங்கிக்கொண்டிருந்தது. ⁠‘பெண்கள் உணர்ச்சிமயமானவர்கள். அவர்களுக்கு வாழ்வின் சுகதுக்கங்களைப்பற்றிய கற்பனைகளே அதிகம். அவர்கள் கூறுகிறவற்றில் இந்தக் கற்பனைகளையும், உணர்ச்சிகளையும் கழித்துவிட்டே பதங்களுக்குப் பொருள் தேட வேண்டும்'-- ⁠‘ஏன் அவர் இப்படிச் சொன்னார்’? என்று சிந்தித்து மாய்ந்து கொண்டிருந்தாள் அவள். அறிவும், நல்லது கெட்டது பிரித்து உணரும் மனப்பக்குவமும், வளராமல் அறியாப் பருவத்துப் பேதையாகவே தான் இருந்திருக்கலாகாதா என்று தோன்றியது அவளுக்கு. ஒரு விதத்தில் நினைத்துப் பார்த்தால், அறிவினால் சந்தேகங்களும், கவலைகளும், பயங்களுமே வளர்கின்றன. குழந்தைப் பருவத்தின் அறியாமைகளும் வியப்புக்களும் அப்படி அப்படியே தங்கிவிடும் ஒரு வளராத மனம் வேண்டும் போல் இப்போது உடனே உணர்ந்தாள் அவள். மோகூருக்கும், மதுரை மாநகருக்கும் நடுவே பல காததுாரம் நீண்டு பெருகி விட்டது போல், தாப உணர்வால் தவித்தது அவள் உள்ளம். தானும் தன் மனமுமே உலகில் தனியாக விடப்பட்டது போல் உணர்ந்தாள் அவள். ⁠‘பெண்கள் உணர்ச்சி மயமானவர்களாமே, உணர்ச்சி மயமானவர்கள்! உணர்ச்சிகள் இல்லாமல் வாழ்க்கையில் பின் என்னதான் இருக்கிறது? சுகம் - துக்கம், கண்ணீர் - சிரிப்பு, எல்லாமே உணர்ச்சிகளின் அடையாளங்கள்தாமே? உணர்ச்சிகள் இல்லாமல் இவை, எல்லாம் ஏது? இவை எல்லாம் இல்லாமல் வாழ்க்கைதான் ஏது? அவருடைய உயரத்திலிருந்து பார்க்கும்போது வேண்டுமானால் உணர்ச்சிகள் சிறுமையுடையனவாக அவருக்குத் தோன்றலாம். அதற்காக எல்லாருக்குமே உணர்ச்சிகளும், கற்பனைகளும் இல்லாமலே போய் விட முடியுமா?' என்று எண்ணினாள் திருமோகூர்ப் பெரியகாராளர் மகள் செல்வப் பூங்கோதை. அவிட்ட நாள் விழாவுக்காக, மதுரைக்குப் போய் விட்டுத் திரும்பிய இரவை உறக்கமின்றியே கழித்ததால், இரவும் வைகறையும் அவளைப் பொறுத்தவரை வேறுபாடின்றியே இருந்தன. உறங்காத காரணத்தால், கழிந்து போன ஓர் இரவே ஒராயிரம் இரவுகளின் நீளத்தோடு மெல்ல மெல்ல நகர்ந்து போனாற் போலிருந்தது. ⁠மனத்தில் தாப மிகுதியினாலும், எல்லாரிலுமிருந்து பிரிந்து திடீரென்று தான் மட்டும் தனியாகி விட்டாற் போன்ற ஒரு பிரமையினாலும் விடிந்து வைகறை மலர்ந்த பின்னும் கூடச் சுற்றிலும் இருளே இருப்பது போல் உணர்ந்தாள் அவள். இதைக் கண்டு அவள் தாய் பதறிப் போனாள்:- ⁠“பெண்ணே! இதென்ன துயரக் கோலம்? நீ இரவெல்லாம் உறங்கவில்லை போலிருக்கிறதே? உன் கண்கள் ஏன் இப்படிக் கோவைப் பழங்களாகச் சிவந்திருக்கின்றன? கனவில் ஏதேனும் காணத் தகாதவற்றைக் கண்டு பயந்து கொண்டாயா? உன் கண்களையும் முகத்தையும் பார்த்தால் உறங்கினதாகவே தெரியாத போது, நீ கனவு எப்படிக் காண முடியும்? ஏன் இப்படி இருக்கிறாய்! உனக்கு என்ன நேர்ந்துவிட்டது?” ⁠--தாய்க்கு என்ன மறுமொழி கூறுவது என்று புரியாமல் தவித்தாள் செல்வப் பூங்கோதை. ஆனால், அடுத்த விநாடியே தாயிடம் அவள் கேட்ட கேள்வியிலிருந்து தனக்கு என்ன நேர்ந்திருக்கிறது என்று தன் தாயே அனுமானித்துக் கொள்ள இடங் கொடுத்து விட்டாள்:- ⁠“அம்மா! நேற்றிரவு வெள்ளியம்பலப் பகுதியில், ஒற்றன் என்று சந்தேகப்பட்டுக் களப்பிரர்களின் பூதபயங்கரப் படை வீரர்கள் யாரையோ சங்கிலியாற் பிணித்து இழுத்துக் கொண்டு போவதைப் பார்த்தோமே; அது அந்தத் திருக்கானப்பேர்க்காரராக இருக்க முடியாதுதானே? என் மனம் அதை நினைத்தே கலங்கிக் கொண்டிருக்கிறது.” ⁠திருடப் பயன்படும் கன்னக்கோலைப் பிறர் திருடி விடாமல் ஒளிக்க முயலுகையில் பிடிபட்ட கள்வனைப் போல், எதை மறைக்க முயன்று கொண்டிருந்தாளோ, அதன் மூலமே தாயிடம் பிடிபட்டு விட்டாள் செல்வப்பூங்கோதை.  ⁠அவள் கூறியவற்றை எல்லாம் கேட்டு விட்டுச் சிரித்தபடியே அவள் முகத்தையும், கண்களில் தென்படும் உணர்வுகளையும் கூர்ந்து நோக்கினாள் தாய். பெண்ணின் கண்களில் தெரியும் நளினமும், மென்மையும் நிறைந்த நுண்ணுணர்வுகளை மிகவும் எளிமையாகப் புரிந்து கொண்டாள் அவள். இங்கிதமாகவும், நளினமாகவும் வினாவ வேண்டிய ஓர் உணர்வின் பிடியில் மகள் கட்டுண்டிருப்பது தாய்க்குப் புரிந்தது. ⁠“நன்றாயிருக்கிறது மகளே! இதற்காகவா விடிய விடிய உறக்கமின்றிக் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறாய் நீ! ஆண்மக்கள் மனவலிமை மட்டுமின்றி உடல் வலிமையும் உடையவர்கள். தங்களுக்கு ஏற்படும் அபாயங்களிலிருந்து மீளவும், தப்பவும் அவர்களுக்குத் தெரியும். வீரர்களைப் பற்றிப் பேதைகள் கவலைப்பட்டு ஆகப் போவதென்ன?” ⁠“பேதைகளின் கவலைகளையும், கண்ணீரையும் பின் தங்க விடாத வீரர்கள் இவ்வுலகில் எங்கேதான் இருக்கிறார்கள் அம்மா?” ⁠“ஒவ்வொன்றாய் நீ கேட்கிற கேள்விகளைப் பார்த்தால், உனக்கு மறுமொழி கூற என்னால் ஆகாது பெண்ணே? நேரமாகிறது. பொய்கைக் கரைக்கு நீராடப் போக வேண்டாமா? திருமோகூர்ப் பெரிய காராளர் வீட்டுப் பெண்கள் சூரியோதயத்துக்கு முன் நீராடி வீடு திரும்பி விடுவார்கள் என்று நற்பெயர் பெற்றிருப்பதைக் கெடுத்து விடாதே மகளே!” என்ற அவளையும் அழைத்துக் கொண்டு பொய்கைக் கரைக்கு நீராடப் புறப்பட்டாள் தாய். ⁠பனியும், மெல்லிருளும் புலராத மருத நிலத்து வைகறையில், பசும் பயிர்ப் பரப்பிடையே குடங்களை ஏந்தியபடி நீராடச் சென்றார்கள் அவர்கள். நீராடச் செல்லும்போது, பெரியகாராளர் மகள் ஏந்திச் சென்ற குடம் வெறுமையாயிருந்தது என்றாலும், மனம் நினைவுகளால் நிறைந்திருந்தது. பார்த்துப் பழகிய மறுநாளிலிருந்து தாயும், தந்தையும், சுற்றமும், உற்றாரும், வீடு வாயிலும் எல்லாம் மறந்து போகும்படி தன்னையே நினைக்கச் செய்துவிட்ட ஒரு சுந்தர இளைஞனைப் பற்றிய நினைவுகளே அவள் மனத்தில் நிறைந்திருந்தன. ⁠கோழி கூவும் ஒலியும், காற்றின் குளிர்ச்சியும், நடந்து சென்ற வழியின் காலை நேரத்து அழகுகளும் பதியாத அவள் மனத்தில், ‘அழகிய பெண்களும் ஊமைகளாக இருப்பது மோகூரில் வழக்கம் போலிருக்கிறது'--என்று இதே வழியில் நடக்கும் போது, இளையநம்பி கூறிய அந்தப் பழைய சொற்கள் மட்டும் அழியாமற் பதிந்திருந்து நினைவும் வந்தன. அது தொடர்பாக அவன் பேசியிருந்த சாதுரியமான பேச்சுகளும் நினைவு வந்தன. பொய்கைக்கரையை அடைந்ததும் முதலில் தாய்தான் நீராடினாள். தாய் நீராடிக் கொண்டிருந்த அந்த வேளையில், ஆவல் மிகுதியால் செல்வப் பூங்கோதை ஒரு காரியம் செய்தாள். பொய்கைக்கரை அலை ஓரமாக ஈர மணலில் கூடல் இழைத்துப்[1] பார்க்க வேண்டும் என்று தோன்றியது அவளுக்கு. தன் நினைவில் இருக்கும் இனிய எண்ணங்கள் கை கூடுமா, கூடாதா என்று அறியும் ஆசையோடு, தியானம் செய்யும் போது மூடிக் கொள்வது போல் இரண்டு கண்களையும் மூடிக் கொண்டு, வலது கை ஆள்காட்டி விரலால் மணலில் அழுத்திக் கோடு இழுத்தாள். தொடங்கிய இடத்திற்குப் பொருந்தும்படி, தான் இழுத்த கோடு வட்ட வடிவமாக வந்து முடிய வேண்டுமே என்று மனம் வேகமாக அடித்துக் கொண்டது. அந்தக் கோட்டை இழுத்து முடிப்பதற்குள் அவள் அடைந்த பதற்றமும், பரபரப்பும் சொல்லி முடியாது. தொடங்கிய கோடு வட்டமாக முடிய வேண்டுமானால், சிறிதும் விலகாமல் தொடங்கிய இடத்திலேயே வந்து முடிய வேண்டும். அப்படி முடிந்த வட்டம் நிறைவேறினால்தான், எண்ணம் கைகூடும். எனவே, வட்டம் கூடியிருக்கிறதா என்பதைக் கோடு வரைந்து முடித்த பின்பே கண்களைத் திறந்து பார்க்க வேண்டும். ⁠விரலால் கோட்டை வரைந்து முடித்து விட்டு அவள் கண்களைத் திறந்து பார்க்கவும், அதே நேரத்தில் அவளுடைய தாய் நீர்ப்பரப்பில் அழுந்த முழுகியதனால் உண்டான பெரிய அலை ஒன்று வந்து கரை ஓரத்து மணற்பரப்பை மூடிக்கோடுகளை அழிக்கவும் இணையாக இருந்தது. அலை செய்த அழிவு வேலையால் வட்டம் பொருத்தமாக இணைந்திருந்ததா, இல்லையா என்பதையே அவள் கண்டறிய முடியாமல் போயிற்று. அழுகை அழுகையாக வந்தது அவளுக்கு. கண்களை மூடிக் கொண்டு மீண்டும் விரைந்து கோட்டைத் தொடங்கிச் சுழித்து வட்டம் வரைந்தாள். மீண்டும் முன் நேர்ந்தபடியே நேர்ந்தது. அவள் கண்களில் நீர் முட்டிக் கொண்டு வந்தது. வாய்விட்டு அழவும் முடியவில்லை. அந்தப் பொய்கை, அதிலே மூழ்கி நீராடிக் கொண்டிருந்த தாய், அதன் கரைகள், அதில் பூத்திருந்த நீர்ப்பூக்கள், கீழ்வானத்தின் சிவப்பு - எல்லார் மேலும் எல்லாவற்றின் மேலும் காரணம் புரியாது எதற்காகவோ சினம் கொண்டாள் அவள். அந்தச் சினத்தை அவளால் தடுக்க முடியவில்லை. தான் கண்ணீர் சிந்தி அழுவதைத் தாய் பார்த்துவிடக் கூடாதே என்பதற்காக நீரில் மூழ்கி எழுந்தாள் அவள். நினைத்தது கை கூடுமா கூடாதா என்று கூடலிழைத்து அறிய முயன்ற தன் அற்ப ஆவலும் நிறைவேறாது போய் விட்டதே என்று தவித்து வருந்தியது அவள் மனம். நீராடி வீடு திரும்பும்போதும் தன்னுடைய அந்த ஏமாற்றத்தைத் தாய்க்கு மறைத்து விடவே முயன்றாள் அவள். தாய்க்கும் தெரியாமல் மறைக்க ஓர் அந்தரங்கம் வாழ்வில் தனக்குக்கிடைக்க முடியும் என்பதைச் சில நாட்களுக்கு முன் அவளே நம்பியிருக்க மாட்டாள். இப்போது அந்த அதிசயம் அவள் வாழ்விலேயே நடந்து விட்டது. தாயிடமும் பங்கிட்டுக் கொள்ள முடியாத அந்தரங்கம் ஒரு பருவத்தில் ஒரு நட்பைப் பொறுத்து ஒவ்வோர் இளம் பெண்ணுக்கும் உண்டு என்பதே முதல் முதலாக இன்றுதான் செல்வப் பூங்கோதைக்குப் புரிந்தது. ↑ மகளிர் அறியும் ஓர் ஆருடம். 18. இன்னும் ஒரு விருந்தினர் தாயும் மகளும் நீராடி வீடு திரும்பியபோது மாளிகை வாயிலில் வேற்றூரைச் சேர்ந்தவன்போல் தோன்றிய ஒருவனோடு பெரிய காராளர் உரையாடிக் கொண்டிருந்தார். வந்து உரையாடிக் கொண்டிருந்தவனுக்கு அவ்வளவு முதுமை என்று சொல்லிவிட முடியாது. இளமை என்று கருதவும் வாய்ப்பில்லை. இளமையைக் கடந்து முதுமையின் எல்லையை இன்னும் தொடாத வயது. நீண்ட நாட்களாகவே காட்டில் வாழ்ந்தவன் ஒருவனின் சாயல், வந்து பேசிக் கொண்டிருந்தவனிடம் தென்பட்டது. புலித்தோலால் தைத்த முரட்டு அங்கி ஒன்றை அணிந்திருந்தான் அவன். வந்திருந்த புதியவனாகிய அவனுக்கும் தன் தந்தைக்கும் எதைப்பற்றியோ கடுமையான வாக்குவாதம் நிகழ்ந்து கொண்டிருந்தது என்பதைச் செல்வப் பூங்கோதை அறியமுடிந்தது. வந்திருந்தவனால் எதையும் மெல்லிய குரலில் பேச முடியவில்லை. காற்றைக் கிழிப்பது போல் கணீரென்ற குரல் வாய்த்திருந்தது வந்திருந்தவனுக்கு. கண்களிலும், முகத்திலும் இரண்டாவது முறை ஏறிட்டுப் பார்க்கவும் அஞ்சுகிற ஒரு குரூரம் இருந்தது. நீராடி வந்த கோலத்தில் அங்கே அதிக நேரம் நிற்க முடியாததால் செல்வப் பூங்கோதை உடனே தாயுடன் உள்ளே சென்று விட்டாள். எனினும் தன் தந்தைக்கும் அந்தப் புதிய மனிதனுக்கும் நிகழ்ந்த வாக்கு வாதத்தை அவள் உட்புறம் இருந்தே கேட்க முடிந்தது. தந்தையின் மெல்லிய குரலே முதலில் ஒலித்தது. “உங்களை நான் இதற்கு முன்பு எப்போதும் இங்கு பார்த்ததில்லை. நீங்களோ நெடுநாள் பழகி அறிந்தவர் போல் உறவு கொண்டாடித் தேடி வந்திருக்கிறீர்கள். உங்களுக்கு நான் என்ன மறுமொழி சொல்வதென்றே எனக்குத் தெரியவில்லை." ⁠“நீங்களே மறுமொழி சொல்லவில்லை என்றால் நான் வேறு எங்கு போக முடியும்? யாரைக் கேட்க முடியும்? தயை கூர்ந்து எனக்கு வழி காட்டி உதவ வேண்டும்...” ⁠“விருந்தோம்புவதும், பிறருக்கு உபகாரம் செய்வதும் என்னைப் போல் ஒவ்வொரு வேளாளனுக்கும் கடமை. நீங்கள் சொன்னாலும், சொல்லாவிட்டாலும் உங்களை நான் உபசரிக்கக் கடமைப்பட்டிருக்கிறேன். ஆனால் நீங்கள் முதலில் வினாவியது போல், பாண்டிய நாட்டு அரசியல் நிலைமை பற்றி என்னை எதுவும் வினவக்கூடாது. அதைப் பற்றி என் போன்றவர்களுக்கு எதுவும் தெரியாது. முந்நூறு ஏர்கள் பூட்டி உழக் கூடிய நிலக் கிழமை இந்த மருத நிலத்து ஊரில் எனக்கு இருக்கிறது. நான் அரசியலுக்கு அப்பாற்பட்டவன்.” ⁠“ஐயா! நீங்கள் அப்படிச் சொல்லித் தப்பித்துக் கொள்ளக் கூடாது. பெரியவர் மதுராபதி வித்தகர் இருக்குமிடத்தை அறிந்து, நான் அவரைச் சந்தித்தே ஆக வேண்டும். இந்த ஆண்டு ஆவணித் திங்கள் முழு நிலா நாளில் அவிட்ட நட்சத்திரத்தன்று தொடங்கும் திருவோண விழா நாள் முதலான விழா நாள் ஏழில், இரண்டாம் நாளன்று நான் அவரைச் சந்தித்தாக வேண்டும் என்று எனக்குத் தெரிவிக்கப் பட்டிருக்கிறது. பாண்டிய வேளாளர் மரபில் வந்த தாங்களே இந்த நல்லுதவியைச் செய்யாவிடில், வேறு யார் செய்யப் போகிறார்கள்?” ⁠“நான் பாண்டிய வேளாளர் மரபில் வந்தவன் என்று அறிந்து பாராட்டும் உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி கூறக் கடமைப்பட்டிருக்கிறேன். நீங்கள் அந்தத் தகுதியைச் சொல்லிப் பாராட்டுவதால், உங்களுக்கு முன்னால் மட்டும்தான் அதற்காக நான் பெருமைப்படலாம். ஆனால், இதே பெருமையை இன்று இந்த நாட்டை ஆளும் களப்பிரர்களுக்கு முன்னால் நான் கொண்டாடுவேனாயின், என் தலையைச் சீவிக் கழுமரத்தில் தொங்க விட்டு விடுவார்கள்.” ⁠“கடவுள் புண்ணியத்தில் உங்களுக்கு அப்படி எல்லாம் நேராது ஐயா! நீங்கள் அறக்கோட்டங்கள் மூலமாகவும் அன்ன சத்திரங்கள் மூலமாகவும் செய்து வரும் தான தருமங்களும் உங்களைக் காப்பாற்றும்.” ⁠“தங்களுக்கு என்னைப் பற்றி இவ்வளவு தெரிந்திருப்பது எனக்கே வியப்பைத் தருகிறது. தான தருமங்கள் செய்வது பன்னெடுங்காலமாக எங்கள் குடும்பத்தின் வழக்கம். அதற்காகப் பிறர் புகழைக் கூட நாங்கள் எதிர் பார்ப்பதில்லை.” ⁠பெரிய காராளர் நிலை இருதலைக் கொள்ளி எறும்பு போல் ஆகியிருந்தது. வந்திருக்கும் புதியவனின் பேச்சு அவன் மதுராபதி வித்தகருக்கும், பாண்டிய மரபினருக்கும் மிக மிக வேண்டியவன்தான் என்பது போல் காட்டினாலும் நல்லடையாளச் சொல்லைத் தெரிவிக்காத வரை அவனை எப்படி நம்புவது என்று தயக்கமாக இருந்தது. பெரியவரைச் சந்திப்பதற்கும் நாளும் நாழிகையும் குறித்து நினைவு வைத்திருக்கும் இந்தப் புதிய மனிதன் களப்பிரர்களின் ஒற்றனாக இருக்க முடியாது என்று தோன்றினாலும், ஒற்றன் இல்லை என்று முடிவு செய்யவும் இயலாமல் இருந்தது. அதனால்தான் எதிலும் சார்பு காண்பிக்காமல், நடுநிலையாகப் பேசியிருந்தார் பெரிய காராளர். வந்திருக்கும் இந்த அதிசய விருந்தினரிடம் களப்பிரர்களை எதிர்த்துப் பேசுவதும் கூடாது. முற்றாகப் பாராட்டிப் பேசுவதும் கூடாது. நடுநிலையாக இருந்து உண்மையைக் கண்டு பிடித்த பின்பே, தன் விருப்பு வெறுப்புகளை அவனிடம் காண்பிக்க வேண்டும் என்ற கருத்துடன், “ஐயா! நாங்கள் வேளாளர்! நாட்டின் அரசியல் விருப்பு வெறுப்புக்களைப் பற்றி எங்களைக் கேட்டுப் பயனில்லை. நிலத்தை உழுது பயன் கொள்ளுவதுதான் எங்கள் தொழில்”. என்பது போலவே பேசிக் கொண்டிருந்தார். ஆனாலும் உள்ளுர ஒரு நம்பிக்கையும் இருந்தது. வந்திருப்பவனைத் தன்னுடைய அறக்கோட்டத்திற்கு அழைத்துச் சென்று உண்ணவும் தங்கவும் ஏற்பாடு செய்துவிட்டுத் தானே ஆலமரத்தடிக்குச் சென்று பெரியவரைக் கண்டு, 'இப்படி யாரையாவது உங்களை வந்து காணச் சொல்லியிருந்தீர்களா?' என்று கேட்டு விடலாம் என்பதாக நினைத்திருந்தார் பெரிய காராளர். ⁠ஆனால், வந்திருக்கும் புதிய மனிதனிடம் அதை எப்படிக் கூறுவது என்றும் அவருக்கு அச்சமாக இருந்தது. பதற்றமும், முன் கோபமும் உள்ளவன் போல் தெரியும் அந்த மனிதன், புலித்தோல் அங்கியோடு எதிரே தெரியும் போது ஓர் அசைப்பில் புலியே நிற்பது போலிருந்தது. நெடுநேரம் பேசி, அந்தப் புதிய மனிதனைத் தன் விருந்தினனாக இணங்க வைத்து, அடுத்த வீதியிலிருந்த அறக்கோட்டத்திற்கு அழைத்துச் சென்றார் பெரியகாராளர். போகும்போது “ஐயா! சிறிது மெல்லப் பேசலாமே? ஏன் இவ்வளவு உரத்த குரலில் பேசுகிறீர்கள்?” என்று அவர் அந்தப் புதிய மனிதனை வேண்டிக் கொண்டபோது- ⁠“ஏன் இப்படி வேண்டுகிறீர்கள்? உரத்த குரலில் பேசுவதற்கு கூடக் களப்பிரர் ஆட்சியில் தண்டனை உண்டா?” என்பதாக முன்னைவிட உரத்த குரலில் அவரை வினாவினான் அவன். இப்படி எல்லாம் வினாவுவதைப் பார்த்தால், அந்த மனிதனை நம்பலாம் போலவும் இருந்தது. கடந்த காலத்தில் இதே போல ஆசை காட்டி நெருங்கி வஞ்சகம் செய்த சில ஒற்றர்களைப் பற்றி ஞாபகம் வந்தபோது பயமாகவும் இருந்தது; எதையும் உறுதி செய்ய முடியாமல் இருந்தது. ⁠வந்திருந்த புதிய மனிதனை அறக்கோட்டத்தில் தங்க வைத்து விட்டுப் பெரியவரைச் சந்திக்க விரைந்து சென்றார் காராளர். அவர் சென்ற போது, பெரியவர் ஆலமரத்தின் விழுதுகளிடையே இரு கைகளையும் பின்புறம் கோத்தபடி உலாவிக் கொண்டிருந்தார். காராளரை எதிரே கண்டதுடன், அவரே முன் வந்து தெரிவித்த செய்தி வியப்பை அதிகப் படுத்துவதாக இருந்தது: “காராளரே! இப்போது நீங்கள் எதற்காக என்னைத் தேடி வருகிறீர்கள் என்பதை நான் அறிவேன். என்னைக் காண வந்திருக்கும் புதியவனைப் பற்றி அறியத்தானே வந்திருக்கிறீர்கள்? திருவோண முதலாக ஏழு நாள் நிகழும் அவிட்ட நாள் விழாவின் முன் தினம் அந்தத் திருக்கானப்பேர்ப் பிள்ளையாண்டான் என்னைச் சந்திக்க வந்தது போலவே இன்று என்னைச் சந்திக்குமாறு மற்றொருவனுக்கும் ஆணை இடப்பட்டிருக்கிறது. ஆனால் அப்படிச் சந்திக்க வேண்டியவன் இப்போது உம்மைத் தேடி வந்திருப்பவன்தானா என்று அறிய ஓர் உபாயம் இருக்கிறது. இப்படி அருகே வந்து அதைக் கேட்டுக் கொண்டு போகலாம்"--என்று கூறிக் காராளரை அருகில் அழைத்தார். காராளர் அருகில் வந்ததும் அவர் காதருகே மெல்லிய குரலில் ஏதோ கூறிய பின், “இந்தப் பரிசோதனையின் பின் அவன் என்னைத்தேடி வந்திருப்பவன் என்று உறுதியானால் அப்புறம் நம்முடைய ஆபத்துதவிகளில் ஒருவனின் துணையோடு அந்தப் புதியவனை இங்கே அனுப்புங்கள்” - என்றார் மதுராபதிவித்தகர். அந்தப் பரிசோதனையைச் செய்யப் பெரியவரிடம் வணங்கி ஒப்புக்கொண்டு திரும்பினாலும் - அதை எப்படி அந்தப் புதிய மனிதனிடம் தெரிவிப்பது என்று முதலில் கலங்கியது காராளர் மனம். 19. சேறும் செந்தாமரையும் அழகன் பெருமாள் மாறன் எவ்வளவோ உறுதி கூறியும் இளைய நம்பிக்கு அந்த விஷயத்தில் இன்னும் அவநம்பிக்கை இருந்தது. அதைப் பற்றி இரத்தினமாலை முத்துப் பல்லக்கில் அரண்மனைக்குப் புறப் பட்டுச் சென்ற பின்பு மீண்டும் மீண்டும் அழகன் பெருமாளுக்கும் இளையநம்பிக்கும் ஒரு தர்க்கமே நிகழ்ந்தது. இளையநம்பி கேட்டான்:- “அந்தரங்கமான செய்திகளையும், சங்கேதக் குறிப்பு களையும் இப்படி மறைவான சித்திர எழுத்துக்கள் மூலம் முகத்திலும் கைகளிலும் எழுதி அனுப்புவதாகப் பழைய காவியங்களில் நிகழ்ச்சிகள் வருகின்றன. அந்தக் காவிய நிகழ்ச்சிகள் பாலி மொழியிலும் இருக்கின்றன. களப்பிரர்களுக்கும் அவற்றைப் பற்றி நன்கு தெரிந்திருக்க நியாயமிருக்கிறது. அவ்வாறு இருக்கும் போது இரத்தின மாலையின் கைகளிலே நாம் தீட்டி அனுப்பியிருக்கும் வினாக்களை யாருமே சந்தேகக் கண்களோடு பார்க்காமல் விட்டு விடுவார்கள் என்பது என்ன நிச்சயம்?” ⁠“இன்றோ, நேற்றோ புதிதாக நாங்கள் இந்தக் காரியத்தைச் செய்யவில்லை ஐயா! பெரியவர் மதுராபதி வித்தகரின் ஆணையை ஏற்று இதில் ஈடுபட்ட நாளிலிருந்து, நீங்கள் கூறுவது போல் எதுவும் நடைபெறவில்லை. மேலும் காவிய நிகழ்ச்சிகளில் கூறப்பட்டுள்ள முக எழுத்துக்களாகிய சித்திர எழுத்துக்கள் வேறு; நாம் பயன்படுத்தும் கரந்தெழுத்துக்கள் வேறு.” ⁠“வேறாயிருந்தால் கவலையில்லை! இந்தக் கை எழுத்துக்களே, நம் தலை எழுத்தை நிர்ணயம் செய்யும் முடிவை உண்டாக்கிவிடக் கூடாதே என்பதுதான் நான் படுகிற கவலை.” ⁠“நம் தலை எழுத்து அவ்வளவிற்கு வலிமைக் குறைவாக இல்லை ஐயா!” ⁠“உன்னுடைய எல்லா மறுமொழிகளுமே நம்பிக்கை ஊட்டுவனவாகத் தான் எப்போதும் வெளிப்படுகின்றன அழகன்பெருமாள்.” ⁠“நான் எதைப் பற்றியும் இருள் மயமாகச் சிந்திப்பதே இல்லை ஐயா!” ⁠“நீ அப்படி இருப்பதனால் தான், எதைப் பற்றியும் ஒளி மயமாகவே சிந்திக்க முடியாமல் இருக்கிறது. ‘சாத்தியமாகும்’ என்று மட்டுமே உடன்பாடாகச் சிந்திக்கிறவனுக்கு அருகில் அது எவ்விதத்தில் ‘அசாத்தியமாகும்’ என்று எதிர் மறையாகச் சிந்திக்கிறவன் ஒருவனும் இன்றியமையாதவனாக இருக்க வேண்டும். அவன்தான் அபாயங்களைத் தவிர்க்க முடியும்.” ⁠-இங்கே அவர்கள் இவ்வாறு பேசிக் கொண்டிருந்த போது குறளன் வந்து குறுக்கிட்டான். உடனே அழகன் பெருமாளிடமிருந்து குறளனுக்குக் கட்டளை பிறந்தது: ⁠“குறளா! இனி நீ இங்கிருக்க வேண்டிய காரியம் எதுவும் இல்லை. யாருமே காவலின்றி உப வனம் தனியே இருக்கலாகாது. நீ அங்கே போய் இரு. மாலை நேரத்திற்குப் பின் காரி, கழற்சிங்கன், செங்கணான், சாத்தன் எல்லாரும் திருப்பி வந்து விடுவார்கள். ஆனால் நீ மட்டும் தனியாகப் போகிற காரணத்தால் நிலவறை வழியாகப் போக வேண்டாம். அக நகருக்குள் போய்க் கோட்டை வாயில் வழியே வெளியேறிப் புறநகரில் உப வனத்துக்குப் போ. தொடர்ந்து அகநகர் வீதிகளில் தென்படாமல் நிலவறை வழியாகவே வந்து போய்க் கொண்டிருந்தோமானால், ஊருக்குள்ளே நாமும் சந்தேகத்துக்கு உரியவர்கள் ஆகி விடுவோம். அகநகரிலும் கோட்டையின் உட்பகுதிகளிலும் நடமாட நமக்கு இருக்கும் உரிமையை அவ்வப்போது நிலைநாட்டுவது போல் பழக வேண்டும் நாம்” - என்று கூறிக் குறளனைக் கணிகை மாளிகையின் புற வாயில் வழியே உப வனத்துக்கு அனுப்பி வைத்தான் அழகன் பெருமாள். ⁠குறளன் புறப்பட்டுச் சென்றதும் அழகன் பெருமாளிடம் வேறு சில சந்தேகங்களை வினாவினான் இளையநம்பி. ⁠“இரத்தினமாலைக்கு உதவுவதற்கு, அவள் கைகளில் நாம் தீட்டியனுப்பியிருக்கும் வினாக்களுக்கு, உடனே மறுமொழி எழுதி அனுப்பக்கூடிய விதத்தில் அங்கே அரண்மனையில் நம்மவர்கள் யாரேனும் இருக்கிறார்களா அழகன் பெருமாள்?” ⁠“ஊமைகள் போலவும், செவிடர்கள் போலவும் நடிக்கும் நம்மவர்கள் சிலர் அரண்மனையில் ஊழியம் புரிகிறார்கள். அரண்மனை அந்தப்புர மகளிருக்குப் பூத் தொடுக்கவும் பூணவும், புனையவும், அலங்கரித்துக் கொள்ளவும் உதவுகிற பெண்களில் பலர் இரத்தின மாலையால் அப்பணிக்கு அங்கே அனுப்பப் பெற்றவர்கள். அவர்களில் ஒருத்திக்கு இதே வகையைச் சேர்ந்த கரந்தெழுத்துக்களில் பயிற்சி உண்டு. அவள்தான் இரத்தினமாலை திரும்பும்போது மறு மொழிகளை எழுதி அனுப்புவாள். களப்பிரர்களின் அந்தப்புரப் பெண்களிடமும் உரிமை மகளிரிடமும் நம் இரத்தின மாலைக்குச் செல்வாக்கு உண்டு. நல்ல வாசனையுள்ள பொதிய மலைச் சந்தனம், பூக்கள், பிறவகை நறுமணப் பொருள்கள் இவற்றை வழங்கி வழங்கி அரண்மனைப் பெண்களிடம் தோழமையை வளர்த்திருக்கிறாள் அவள். அந்தத் தோழமையினால்தான் பல காரியங்களை நாம் சாதிக்க முடிகிறது ஐயா!” என்று அழகன் பெருமாள் விளக்கமாகச் சொன்ன பின்புதான், முதல் நாளிரவு நிலவறை வழியாக உப வனத்துக்குச் செல்லும்போது கணிகையர்களைப் பற்றி ஓரளவு குறைவாக மதிப்பிட்ட தன் சொற்கள் ஏன் அவனுக்கு அவ்வளவு சினமூட்டின என்று இளைய நம்பிக்குப் புரிந்தது. அழகன்பெருமாள் இப்போதாவது ஆறுதல் அடையட்டும் என்று இளையநம்பி ஒரு வாக்கியம் சொன்னான்:- ⁠“சேற்றிலும் தாமரைகள் பூக்கின்றன.” ⁠“தவறு! அந்த உவமையை நீக்கிவிட்டே புகழலாம் நீங்கள். சேற்றில்தான் தாமரைகள் பூக்கின்றன! வேர்தான் சேற்றில் இருக்கிறது. பூக்களில் சேறு படுவதில்லை. பூக்களுக்கும் சேற்றுக்கும் தொடர்பு உண்டு. ஆனால் பூவில் சேறுபடுவது கிடையாததோடு, தெய்வங்களின் கால்களும், பெண்களின் கைகளும் படுகின்றன.” ⁠“உப வனத்தைக் காப்பதைவிடத் தர்க்க நியாயங்களையும் இலக்கண விதிகளையும் காக்கப் போகலாம் நீ...” ⁠“நான் காவல் செய்யாவிட்டாலும், நியாயங்களும் இலக்கணங்களும் பத்திரமாக இருக்கும். உண்மையில் ஒரு பெரிய புலவர் மரபில் வந்தவன்தான் நான். பெரியவருடைய ஆணைக்குக் கட்டுப்பட்டு இந்த உப வனத்தைக் காத்துக் கொண்டு வருகிறேன். அவ்வளவுதான்.” ⁠“நான் கூறியவற்றில் எவையேனும் உன் மனத்தைப் புண்படுத்தியிருந்தால் பொறுத்துக் கொள்.” ⁠“அப்படி எதுவுமில்லை ஐயா? நாமிருவரும் ஒரே கடமைக்காக ஒரே தலைமையின் கீழ் இயங்குகிறோம். நமக்குள் பொறுத்துக் கொள்வதும் விட்டுக் கொடுப்பதும் இயல்புதான்.” பலவகையிலும் சோதனை செய்து பார்த்ததில் அழகன் பெருமாளின் உறுதியும், பொன்னான இதயமும் இளைய நம்பிக்குத் தெளிவாகத் தெரிந்தன. கோ நகருக்குள் நுழைந்ததும் சந்தித்த முதல் நண்பனாகிய யானைப் பாகன் அந்துவன், எதையும் சிரிப்பு நீங்காத முகத்தோடு பார்க்கிறவன். இரண்டாவதாகச் சந்தித்த இந்த அழகன் பெருமாளோ, எதையும் சிந்தனையோடும், காரிய நோக்கத்தோடும் பார்க்கிறவனாகத் தெரிந்தான். இருவருமே பெரியவரின் ஊழியத்திலும், பாண்டிய நாட்டைக் களப்பிரர் ஆட்சியிலிருந்து விடுவிக்கும் பணியிலும் கடமை உணர்வு குன்றாதவர்களாக இருப்பதை இளையநம்பியால் புரிந்து கொள்ள முடிந்தது. குணங்களால் வேறுபட்ட பலரை உணர்வினால் ஒன்றுபடச் செய்து பணியாற்ற வைத்திருந்த பெரியவரின் கட்டுப்பாட்டையும் ஏற்பாட்டையும் வியந்தான் அவன். மாலை நேரம் வரை அந்தக் கணிகை மாளிகைகளிலேயே கழிந்தது. அகிற்புகை மணமும், பூக்கள், சந்தனம், பச்சைக் கற்பூரம் எல்லாம் கலந்த வாசனைகளும் நிறைந்த அந்த மாளிகையில் பெண்கள் அந்தி விளக்குகளை ஏற்றினார்கள். மங்கல வாத்தியங்கள் இசைத்தன. வீடு இந்திரலோகத்து நடன மண்டபம்போல் அழகு மயமாயிற்று. இளையநம்பியும் அழகன் பெருமாளும் இரவில் அங்கேயே உண்ண வேண்டும் என்று அந்த மாளிகையைச் சேர்ந்த பெண்கள் வந்து வேண்டிக் கொண்டார்கள். அவர்களுடைய விநயமும் பணிவான இனிய சொற்களும் உபசாரமும் இளையநம்பியைத் திகைப்படையச் செய்தன. இந்த மாளிகையில் இவ்வளவு அன்பையும் பண்பையும் அவன் எதிர்பார்க்கவில்லை. ஆனால், அவர்கள் உபசாரமோ அவனை வியப்பிலேயே ஆழ்த்தியது. 20. கோட்டை மூடப்பட்டது காத்திருக்கிறோம் என்ற கவலையும் களைப்பும் தெரியாமலிருக்க அங்கிருந்த இளம் பெண்கள் சிலர், குரவைக்கூத்து ஆடி இளையநம்பியை மகிழச் செய்தனர். ஆயர்பாடியில் மாயனாகிய திருமாலிடம் இளம் நங்கையர் ஊடினாற் போன்ற பிணக்கு நிலைகளையும், காதல் நிலைகளையும் சித்திரிக்கும் அபிநயங்களை அவர்கள் அழகுற ஆடிக் காட்டினர். மாலை முடிந்தது; இரவு நேரம் வளர்ந்து கொண்டிருந்தது. அந்தப் பெண்கள் அன்பும் இனிமையும் நிறைந்த வார்த்தைகளில் உபசாரம் செய்து படைத்த உணவையும் உண்டாயிற்று. இன்னும் இரத்தினமாலை திரும்பி வரவில்லை. இளையநம்பி அழகன் பெருமாளைக் கேட்டான்: “ஏன் நேரமாகிறது? மாலையிலேயே அவள் திரும்பிவிடுவாள் என்றல்லவா நீ கூறியிருந்தாய்?” “சில சமயங்களில் மறுநாள் வைகறையில் திரும்புவதும் உண்டு. போன காரியம் முடியாமல் அவள் திரும்பமாட்டாள். நம்முடைய வினாக்களுக்கு மறுமொழி தெரிந்து அதைச்சமயம் பார்த்துக் கைகளில் எழுதச் செய்து கொண்டு தானே அவள் திரும்ப முடியும்?” “அகால வேளையில் இரவு நெடுநேரமான பின்பு இங்கே திரும்ப முடியுமா?” “எதிர்பார்ப்பதில் தவறில்லை. ஏனென்றால் இந்த வீதியில் இரவுக்கு அமைதி கிடையாது. இரவிலும் இங்கே ஆரவாரங்கள் உண்டு. இரத்தினமாலை ஒரு வேளை அகாலத்தில் திரும்பி வந்தாலும் தெரிய வேண்டிய செய்திகள் நமக்குத் தெரியும்.” ⁠-இவ்வாறு அவர்கள் பேசிக் கொண்டிருந்தபோதே மாளிகையின் வாயிற் கதவு பலமாகத் தட்டப்பட்டது. இரத்தினமாலைதான் திரும்பி வந்திருக்க வேண்டும் என்று பணிப் பெண்கள் ஓடிப் போய்க் கதவுகளைத் திறந்தார்கள். ஆனால், கதவைத் திறந்ததுமே வந்திருப்பது இரத்தினமாலையில்லை என்பதைத் தெரிந்து கொள்ள முடிந்தது. ⁠குறளன்தான் திரும்பி வந்திருந்தான். அவன் முகத்தில் இயல்பை மீறிய பரபரப்புத் தென்பட்டது. நிறைய ஓடியாடிக் களைத்திருந்த சோர்வும் தெரிந்தது. அவனை அமைதியடையச் செய்து, பேச வைக்கவே சில கணங்களாயிற்று. பின் அவன் அழகன்பெருமாளை நோக்கிச் சொல்லலானான்: ⁠“ஐயா! அவிட்ட நாள் விழாவை ஒட்டி நகருக்கு வந்த கூட்டத்தில் யாரோ ஓர் ஒற்றன் நேற்று, பிடிபட்டு விட்டானாம். யாத்திரீகர்கள் தங்கும் இடமாகிய வெள்ளியம்பலத்துக்கு அருகே அவனைப் பிடித்தார்களாம். இன்று காலை அதே இடத்திற்கு அருகே இன்னும் ஓர் ஒற்றன் அகப் பட்டானாம். அதனால் திடீரென்று வெள்ளியம்பலத்தில் தங்கியிருந்த யாத்திரீகர்களை எல்லாம் விரட்டி விட்டுக் கோட்டையின் நான்கு புறத்து வாயில்களையும் உடனே மூடச் சொல்லி உத்தரவிட்டு விட்டார்கள். அகநகர் முழுவதும் ஒரே பரபரப்பு யாரும் அகநகரிலிருந்து வெளியேறவும் முடியாது. வெளியேயிருந்து அகநகருக்குள் புதிதாக வரவும் முடியாது. ஒவ்வொரு கோட்டை வாயிலாக அலைந்து போய்ப் பார்த்து விட்டுத்தான் ஏமாற்றத்தோடு இங்கே திரும்பி வந்தேன். ⁠“எப்போது முதன்முதலாகக் கோட்டைக் கதவுகளை அடைத்தார்கள்?” ⁠“நடுப்பகலிலிருந்தே அடைக்கத் தொடங்கி விட்டார்கள் போலிருக்கிறது. இது தெரிந்திருந்தால் நான் போயே இருக்க வேண்டாம்.” ⁠“ஐயோ! அப்படியானால் நம்மவர்கள் காரி, கழற்சிங்கன், சாத்தன், செங்கணான் நால்வரும் எப்படி உபவனத்துக்குத் திரும்புவார்கள்? நீ கூறுவதிலிருந்து வெள்ளியம்பலத்துப் பக்கம் போய் அந்த நிலவறை வழியையும் வெளியேறுவதற்குப் பயன்படுத்த முடியாது என்று தெரிகிறது.” “முடியவே முடியாது! வெள்ளியம்பலத்தைச் சுற்றிலும் உருவிய வாளுடன் பூத பயங்கரப்படை காவலுக்கு நிற்கிறது.” “பூத பயங்கரப்படை காவலிருப்பது தெரியாமல் அவர்கள் வெள்ளியம்பலத்துக்குப் போய்விட்டு அங்கே அகப்பட்டுக் கொள்ளப் போகிறார்களே, பாவம்?” என்று இளையநம்பி வருந்திக் கூறியபோது- “ஒருபோதும் அவர்கள் எதிரிகளிடம் அகப்பட மாட்டார்கள். தந்திரமாகத் தப்பி நான்கு பேரும் சேர்ந்தோ, தனித்தனியாகவோ, இங்கே வந்து சேர்வார்கள்” என்று உறுதி கூறினான் அழகன் பெருமாள் மாறன். “அதெப்படிச் சொல்லி வைத்தாற்போல் இங்கே வந்து சேருவார்கள் என்று உன்னால் உய்த்துணர முடிகிறது?” “நான்கு கோட்டை வாயில்களும் மூடப்பட்டு வெள்ளியம்பலத்து நிலவறையிலும் நுழைய முடியாமல் தவிக்கும் ஒரு நிலைமை ஏற்பட்டால் புற நகரிலுள்ள உபவனத்திற்கு வெளியேறிச் செல்ல மீதமிருக்கும் ஒரே வழி இந்த மாளிகையில்தான் இருக்கிறது என்பதை அவர்கள் நால்வரும் நன்கு அறிவார்கள் ஐயா! இந்த மாளிகைக்கு வரும் போது சூழ்நிலைக்கேற்பப் பிறர் ஐயம் அடையாதவாறு வந்து சேர அவர்களுக்குத் தெரியும். இத்துறையில் அவர்கள் மிகவும் செம்மையான முறையில் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள்” -என்று இளையநம்பிக்கு மறுமொழி கூறிவிட்டுக் கணிகை மாளிகையின் பணிப் பெண்களைக் கூப்பிட்டுப் பெருங்கதவு களை அடைத்துத் தாழிட்டு விட்டு, அவற்றின் நடுவே உள்ள சிறிய திருஷ்டி வாசற் கதவை மட்டும் தாழிடாமல் திறந்து வைக்குமாறு வேண்டினான் அழகன்பெருமாள். அந்த மாளிகைப் பெண்களும் அன்றிரவு உறங்காமல் விழித்திருந்தனர். பயத்தினாலும் அகநகரைப் பற்றிக் கேள்விப்பட்ட பரபரப்பான செய்திகளாலும் யாருக்குமே உறக்கம் வரவில்லை. இரவு நடுச்சாமத்திற்கு மேலும் ஆகிவிட்டது. திருஷ்டி வாசல் கதவு கண்ணில் தெரியும்படியான ஓரிடத்தில் இளையநம்பியும், அழகன் பெருமாளும், குறளனும் அமர்ந்து அந்த வாயிற்புறத்திலேயே பார்வையைப் பதித்துக் கண்காணித்துக் கொண்டிருந்தனர். நேரம் ஆகஆக அவர்கள் மனத்தில் சந்தேக நிழல் படரத் தொடங்கியது. இரத்தின் மாலையும் திரும்பவில்லை. காரி முதலிய நால்வரும் கூட எதிர்பார்த்தபடி அங்குவந்து சேரவில்லை. அதுவரை எல்லா விஷயங்களிலும் அளவற்ற நம்பிக் கையோடு இருந்த அழகன் பெருமாள்கூட- “நண்பர்கள் ஏன் இன்னும் வரவில்லை? இறைவன் அருளால் அவர்களுக்கு எதுவும் நேர்ந்திருக்கக் கூடாது நேர்ந்திருக்க முடியாது.” என்று தானாகவே முன்வந்து இளையநம்பியிடம் கூறினான். அப்படிக் கூறியபோது அந்தக் குரலில் தளர்ச்சி தொனிப்பதையும் இளையநம்பி உணரத்தவறி விடவில்லை. 21. எண்ணெய் நீராட்டு அந்தப் புதிய விருந்தினனை அறக் கோட்டத்தில் தங்க வைத்து விட்டு வந்திருந்த காராளர் இப்போது பெரியவர் மதுராபதி வித்தகர் கூறிய பரிசோதனையை அவனிடம் எவ்வாறு செய்து முடிப்பது என்று சிந்திக்கத் தொடங்கினார் வந்திருப்பவனின் மனம் புண்படாமல், தனக்கு ஆகவேண்டிய காரியமும் பழுது படாமல் எப்படி முடித்துக்கொள்வது என்று தெரியவில்லை. சோதனைக்குப் பின் அவன் வேண்டியவன் என்று தெரிந்து விட்டால், சோதனை செய்ததற்காகக் கூச வேண்டிய நிலை ஏற்படும். வேண்டாதவன் என்று தெரிந்து விட்டாலோ அவனுக்குக் கோபம் வரும். அவனோ உடனே ஆத்திரப்படுகிறவனாகவும், முன் கோபக்காரனாகவும், உரத்த குரலில் சப்தம் போட்டுப் பேசுகிறவனாகவும் இருந்தான். இதையெல்லாம் விடப் பெரிய அபாயம், தன்னுடைய நீண்ட புலித்தோல் அங்கிக்குள் சற்றே மறைத்தாற் போல் உறையிட்ட வாள் ஒன்றையும் வைத்திருந்தான் அவன். ⁠பாண்டிய நாட்டில் தங்கள் ஆட்சிக்கு எதிராகக் கலகம் எதுவும் எழலாகாது என்ற கருத்தில் களப்பிரர்கள் ஆட்சியில், பொது மக்கள் வாளும், வேலும் கொண்டு பயில்வது தடுக்கப்பட்டிருந்தும், ‘இவன் எப்படி வாளைக் கைக் கொண்டு வெளிப்பட்டுப் பழகுகிறான்?’ என்பதுதான் காராளரின் மிகப் பெரிய ஐயமாயிருந்தது. ⁠'ஒன்று இவன் நம்மை ஆழம் பார்க்க வந்த களப்பிரப்பூத பயங்கரப்படை ஒற்றனாக இருக்க வேண்டும்; அல்லது வருவது வரட்டும் என்று எதற்கும் துணிந்து வாள் வைத்திருப்பனாக இருக்க வேண்டும்’ என்று தோன்றியது காராளருக்கு. இந்த இரண்டைத் தவிர வேறு எதையுமே உய்த்துணர இயலவில்லை. அவனுடைய வயதைப் பற்றிய தன்னுடைய முதல் அனுமானம் கூடத் தவறானதோ என்று இப்போது நெருங்கி நின்று கண்ட பின் நினைத்தார் அவர். வளர்ச்சியினாலும் முகத்தில் நெகிழ்ச்சியோ முறுவலோ ஒரு சிறிதும் தெரியாத குரூரத்தினாலும் வயது கூடுதலாகத் தோற்றுகிறதோ என்று இப்போது எண்ணினார் அவர். மதுராபதி வித்தகரைச் சந்தித்துவிட்டு அறக் கோட்டத்திற்குத் திரும்பிய பெரிய காராளர் அங்கே அந்த அறக் கோட்டத்தின் கூடத்தில், பசி எடுத்து இரை தேடும் புலி உலவுவது போல உலவிக் கொண்டிருந்த அவனை மீண்டும் மிக அருகே நெருங்கிக் கண்டபோது இவ்வாறுதான் எண்ணத் தோன்றியது. ⁠அவன் அவரைக் கண்டதும் அடக்க முடியாத ஆவலோடு “இப்போதாவது என்னைப் பெரியவர் இருக்கும் இடத்துக்கு அழைத்துச் செல்லும் முடிவோடு வந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்"- என்று கேட்டான். ⁠“அடடா! பார்த்தீர்களா? பார்த்தீர்களா? மீண்டும் அரசியலுக்கு வருகிறீர்களே? நான் அதற்காக இப்போது இங்கே வரவில்லை. என்னுடைய அறக்கோட்டத்துக்கு யார் வந்தாலும் எண்ணெய் நீராடச் செய்து உணவளித்து அனுப்புவது வழக்கம். நீங்களோ நெடுந்தூரம் அலைந்து களைத்துத் தென்படுகிறீர்கள். இங்குள்ள மல்லன் ஒருவன் எண்ணெய் தேய்த்து உடம்பு பிடித்து விடுவதில் பெருந்திறமை உடையவன். அவனிடம் எண்ணெய் தேய்த்துக் கொண்டு நீராடிவிட்டு இந்த அறக்கோட்டத்தின் உணவையும் உண்டு முடித்தீர்களானால், எழுந்திருக்கவே மனம் வராமல் சுகமான உறக்கம் வரும்.” ⁠“ஐயா! சுகமான உறக்கத்துக்கு உங்களிடம் நான் வழி கேட்கவில்லை. என்னுடைய இந்த உடல், தொடர்ச்சியாக ஐந்து நாள் உறக்கம் விழித்தாலும் தாங்கும். உறக்கத்தைப் பற்றியோ, உணவைப் பற்றியோ நான் அதிகம் கவலைப் படவில்லை.” ⁠“நீங்கள் கவலைப்படவில்லை என்றாலும் உங்களுக்காக நான் கவலைப்படுகிறேன் என்று வைத்துக் கொள்ளுங்களேன்.” ⁠“ஒருவரைப் பற்றி மற்றொருவர் கவலைப்படுவதற்கு, நாம் இன்னும் அவ்வளவு ஆழமாக நெருங்கிப் பழகிவிட வில்லையே?” ⁠“ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்?” ⁠“காரணத்தோடுதான் சொல்கிறேன். நீங்கள் என்னை முழுமையாக நம்பவில்லை என்பது எனக்குப் புரிகிறது. உங்கள் கண் காண எதிரே இரண்டு களப்பிரர்களை என் வாளால் குத்திக் கொன்று காட்டினால்தான் நம்புவீர்கள் போலிருக்கிறது” -என்று தனக்கே உரிய உரத்த குரலில் அவன் இரையவும், காராளருக்கு அவனிடம் ஏன்தான் பேச்சுக் கொடுத்தோம் என்று கவலையாகி விட்டது. அவனைப் போன்று வஞ்சகமில்லாத வெள்ளை முரடனை ஓரளவு இதமாகப் பேசித்தான் வழிக்குக் கொண்டுவர முடியும் போலிருந்தது. சாம, தான, பேத, தண்டம் என்ற உபாயங்களில் முதல் உபாயத்தைத் தவிர வேறெதனாலும் அவனை வழிக்குக் கொண்டு வர முடியாது போலிருந்தது. அவனை வழிக்குக் கொண்டு வர முடியாதவரை தன் பரிசோதனையும் நிறைவேறாதென்று கருதினார் அவர். அடுத்த கணமே அவனிடம், அவருடைய உரையாடலின் தொனியும் போக்கும் மாறின. ⁠“நம்பிக்கை என்பது ஒரே அளவில் அன்பைப் பரிமாறிக் கொள்வதுதான் என்றால், என்னுடைய அறக்கோட்டத்தில் நான் செய்யும் உபசாரங்களை நீங்கள் முதலில் நம்பி, ஏற்க வேண்டும். இருபுறமும் நிறைய வேண்டிய ஒரு நம்பிக்கையை, ஏதாவது ஒருபுறம்தான் முதலில் தொடங்க வேண்டியிருக்கும்...” ⁠இதைக் கேட்டு முதலில் ஒன்றும் புரிந்து கொள்ளாதது போல காராளரை ஏறிட்டு நோக்கி விழித்த அவன், சில விநாடிகளுக்குப் பின், ⁠“இப்போது நான் என்ன செய்ய வேண்டும் என்கிறீர்கள்?” என்று சூடாகத் தெரியும் ஒலி தொனிக்கக் கேட்டான். காராளர் சிரித்துக் கொண்டே இதற்கு மறு மொழி கூறினார்:-’ ⁠“இந்த அறக் கோட்டத்தின் உபசாரங்கள் எதையும் நீங்கள் மறுக்காமல் ஏற்க வேண்டும்.” ⁠பதிலுக்கு அவன் முகத்தில் சிரிப்போ, மலர்ச்சியோ இல்லை. இளையநம்பியின் முகத்தில் எவ்வளவுக்கு எவ்வளவு சுமுக பாவமும் கவர்ச்சியும் உண்டோ, அவ்வளவிற்கு இவன் முகத்தில் கடுமை இருந்தது. சுமுகத்தன்மை வறண்டிருந்தது. ⁠அவனுடைய மெளனத்தை இசைவாகப் புரிந்து கொண்டு, அறக்கோட்டத்து மல்லனை எண்ணெய்ப் பேழையுடன் வரச் செய்தார் அவர். புதியவனை நீராட்ட அழைத்துச் செல்லுமுன் மல்லனைத் தனியே அழைத்து இரண்டு விநாடிகள் இரகசியமாக அவனோடு ஏதோ பேசினார். அவர் கூறியதற்கு இணங்கித் தலையசைத்தான் அந்த மல்லன். காராளர் கூடத்திலேயே நின்று கொண்டார். மல்லனையும், புதியவனையும் தனியே விடக் கருதியே அவர் இதைச் செய்தார். ⁠ஆனால் அங்கே புதியவனோடு தனியே சென்ற மல்லனுக்கோ பயமாயிருந்தது. கையிலிருந்த வாளைக் கீழே வைக்காமலேயே எண்ணெய் பூசி நீவிவிடச் சொல்லும் முதல் மனிதனை அவன் இப்போதுதான் சந்தித்தான். அந்தச் சிறு பிள்ளைத்தனமான பாதுகாப்பு உணர்ச்சியை எண்ணி உள்ளூற நகைத்தாலும், தனக்கு என்ன நேருமோ என்ற பயம் எண்ணெய் பூசுகிறவனுக்கு இருந்தது. புலியோடு பழகுகிற மனநிலையில் இருந்தான் அவன். அரையாடையைத் தார்ப்பாய்ச்சிக் கட்டிக் கொண்டு பாறையாகப் பரந்த மார்பும் திரண்ட தோள்களுமாக எண்ணெய் பளபளக்க நின்று அந்த உடலின் வலிமையை எண்ணித் தான் ஒரு மல்லனாயிருந்தும் அந்த ஊழியனால் அஞ்சாமலிருக்க முடியவில்லை. தயங்கித் தயங்கி அவன் வேண்டினான். “அந்த வாளைக் கீழே வைத்தீர்களேயானால் எண்ணெய் பூசிவிட வாகாயிருக்கும்.” ⁠“யாருக்கு வாளுக்கா? எனக்கா?” என்று வந்தவன் சீறியதும், மல்லன் அடங்க வேண்டியதாயிற்று. ஆனாலும் மல்லனுக்கு ஒரு மனநிறைவு இருந்தது. வந்திருப்பவனுடைய உடலில் காராளர் கண்டறியச் சொன்ன அடையாளத்தை அவன் கண்டு விட்டான். உடனே எண்ணெய் பூசுவதை நிறுத்தி விட்டு, உள்ளே ஓடிப் போய்க் காராளரிடம் அதைச் சொல்லிவிட அவன் பரபரப்பு அடைந்தாலும், வந்திருப்பவனுக்கு அது சந்தேகத்தை உண்டாக்கும் என்ற எண்ணத்தில் பொறுமையோடு முழுமையாக எண்ணெய் தேய்த்து முடித்தான். ⁠எல்லாம் முடிந்த பின் அவன் திரும்பி வந்து காராளரிடம்- ⁠“ஐயா! நீங்கள் கூறிய அடையாளம் அவருடைய வலது தோளில் பழுதின்றி இருக்கக் கண்டேன்” என்று கூறினான். அதைக் கேட்ட பின்பு வந்திருப்பவனை ஒரு தேசாந்திரி போல் கருதி, அறக் கோட்டத்தில் வைத்துச் சோறிடுவதா அல்லது தன்னுடைய மாளிகைக்கு அழைத்துச் சென்று சிறப்பாக விருந்தளிப்பதா என்ற மனப்போராட்டம் எழுந்தது காராளருக்குள்ளே. உடனே காண்பிக்கப்படும் சிரத்தையை வந்திருப்பவன் சந்தேகப்படக் கூடாது என்பதற்காக எந்த மாறுதலும் செய்யாமல் விட்டார் அவர். உண்டு முடித்ததும் அந்தப் புதியவனைப் பெரியவர் மதுராபதி வித்தகரிடம் அழைத்துச் செல்லும் பொறுப்பையும் மல்லனிடமே ஒப்படைத்தார் காராளர். அவருடைய அறக்கோட்டங்களில் பணிபுரியும் அனைவரும் பொது மக்கள்போல் பழகினாலும் அந்தரங்கத்தில் அவர்கள் அனைவரும் பாண்டிய குலத்தின் முனை எதிர் மோகர் படையினரையோ, தென்னவன் ஆபத்துதவி களையோ சேர்ந்தவர்கள் தாம், அதனால் அவர்களை எதற்கும் நம்பலாம் என்பதைக் காராளர் நன்கு அறிந்திருந்தார். 22. புலியும் மான்களும் எண்ணெய் நீராடிய களைப்பில் உண்டதும் அயர்ந்து உறங்கி விட்டான் அந்தப் புதிய மனிதன். அறங்கோட்டத்து மல்லனும் காராளரின் குறிப்புப்படி உறங்கி எழுந்திருந்த பின்பே அந்தப் புதியவனைத் தன்னோடு வருமாறு அழைத்தான். “எங்கே அழைக்கிறாய் என்னை? பயனில்லாத காரியங்களுக்காக அலைய எனக்கு இப்போது நேரமில்லை” என்று மல்லனிடம் சீறினான் அவன். ‘ஐந்து தினங்களானாலும் நான் உறக்கத்தைத் தாங்குவேன்?’ என்று சொன்னவன் உண்ட களைப்புத் தாங்காமல் உடனே உறங்கி விட்டதைக் கண்டபோது தொடர்ந்து பல நாட்கள் அவன் உறங்க முடியாமற் கழிந்திருக்க வேண்டும் என்று தெரிந்தது. வீரம் பேசிச் சூளுரைப்பதும் உடலின் இயலாமையால் உடனே அதற்கு முரண்டு படுவதுமாக இருந்த அவன் மனம் ஆத்திரம் அடையாதபடி, ⁠“பயனில்லாது எங்கேயும் உங்களை அழைக்கவில்லை. எங்கே போக வழி கேட்டு வந்தீர்களோ, அங்கே உங்களை அழைத்து வரச் சொல்லிக் கட்டளை கிடைத்திருக்கிறது!”- என்றான் மல்லன். மறு பேச்சுப் பேசாமல் உடனே மல்லனைப் பின் தொடர்ந்தான் புதியவன். மல்லனோடு நடந்து செல்லும் போது, “உங்களது அறக்கோட்டத்தைப் புரந்து வரும் அந்த வேளாளர் எங்கே?” என்று கேட்டான் அவன். ⁠“அவர்தான் இந்தக் கட்டளையை என்னிடம் சொல்லி விட்டுச் சென்றார்” - என்றான் மல்லன். ⁠“நல்லது! இவ்வளவு நேரத்துக்குப் பின்பாவது அவருக்கு என்மேல் கருணை வந்ததே? முதலிலேயே இந்தக் கருணையைக் காட்டியிருந்தாரானால் எவ்வளவோ பெரிய உதவியாயிருக்கும்."- ⁠இப்படிக் கூறிய புதியவனுக்கு மல்லன் மறுமொழி எதுவும் கூறவில்லை. சிறிது தொலைவு வரை இருவரும் எதுவும் பேசிக் கொள்ளாமலே நடந்தனர். நல்லடையாளச் சொல்லைப் பற்றி அந்தப் புதியவனுக்குக் குறிப்பிட்டு விளக்க வேண்டிய சமயம் வந்து விட்டது என்பதை உணர்ந்து, அதைப் பற்றிச் சிறிது நேர மெளன நடைக்குப் பின் சொல்லத் தொடங்கினான், புதியவனும் அதை அமைதியாவும் கவனமாகவும் கேட்டுத் தெரிந்து கொண்டான். நல்லடையாளச் சொல்லைப் பற்றி விளக்கிய சில கணங்களுக்குப் பின் இருந்தாற் போலிருந்து, சற்றே தயங்கித் தயங்கி, அந்தப் புதியவனை ஒரு கேள்வி கேட்டான் மல்லன்: ⁠“இந்த ஆட்சியில் களப்பிரர் அல்லாத பொதுமக்கள் வெளிப்படையாக வாளோ, வேலோ, ஆயுதங்களோ ஏந்திப் பயன்படுத்துவது தடுக்கப்பட்டிருப்பது உங்களுக்குத் தெரியாதா ஐயா?” ⁠“தெரியும். தெரிந்தால் என்ன? அந்தத் தடைக்கு நான் கீழ்ப்படிந்துதான் ஆக வேண்டும் என்று எந்த வேதத்தில் எழுதியிருக்கிறது?” ⁠“வேதத்தில் எதுவும் எழுதவில்லை என்றாலும், இந்த வாளை வைத்திருப்பது உங்களுக்கு அபாயத்தைத் தேடிக் கொண்டு வரும்...” ⁠“என்னைத் தேடி வரும் அபாயங்களை நான் சுகமாகத் திரும்பிச் செல்ல விட்டுவிட மாட்டேன். அந்த அபாயங்களையே நான் இந்த வாள் முனையில்தான் சந்திப்பேன். வருகின்ற அபாயங்கள் இந்த வாளின் கூர்மையான நுனியில் மோதிச் சாகத்தான் முடியும்." இந்த வாக்கியங்களைக் கூறும் போது அந்தப் புதியவனின் கண்கள் நெருப்புக் கோளங்களாகச் சிவந்து மின்னின. ஒரு கணம் பாயப் போகிற புலி போலவே மல்லனின் கண்களுக்குத் தோன்றினான் அவன். ⁠“அதிருக்கட்டும்! உங்கள் அறக்கோட்டத்தை நடத்தும் பெரிய காராள வேளாளர் தனக்கு அரசியலைப் பற்றி எதுவுமே தெரியாதென்று முதலில் என்னைச் சந்தித்தபோது ஒரேயடியாகச் சாதித்தாரே? இப்போது எப்படி என்னை நம்பினார்?” ⁠“நீங்கள் சந்தேகத்துக்கு உரியவர் அல்லர் என்று அவருக்கு நம்பிக்கை ஏற்பட்டிருக்கலாம்"- என்றான் மல்லன். அவர்கள் பெரியவர் மதுராபதி வித்தகர் தங்கியிருந்த ஆலமரத்தடிக்குச் செல்லுகிற வழியில், அங்கங்கே மறைந்திருந்து வழியைக் கண்காணித்துக் கொண்டிருந்த ஆபத்துதவிகள், அந்தப் புதிய மனிதனோடு தங்களில் ஒருவனான மல்லன் துணை வருவதைக் கண்டு ஐயப்பாடு தவிர்த்தனர். ⁠அவர்கள் இருவரும் போய்ச் சேர்ந்த போது பெரியவர் ஆலமரத்தின் வடபகுதியில் குன்றின் கீழிருந்த புல்வெளியில் இருந்தார். அந்தப் புல்வெளியின் பசுமையில் அப்போது கண்கொள்ளாக் காட்சியாய்ச் சிறுசிறு புள்ளிமான்கள் மேய்ந்து கொண்டிருந்தன. மிகவும் சிறியதும் மருண்டு மருண்டு நோக்கும் அழகிய விழிகளை உடையதும் ஆகிய ஒரு புள்ளி மானைத் தடவிக் கொடுத்தபடியே புல்வெளியில் அமர்ந்திருந்த பெரியவர் திடீரென்று தன் கைப் பிடியிலிருந்த மானைத்தவிர மற்றெல்லா மான்களும் தலை தெறிக்க ஓட்டம் எடுப்பதைக் கண்டு நிமிர்ந்து பார்த்த போது புலித்தோல் அங்கியோடு கூடிய அந்த மனிதனுடன், மல்லன் அங்கே வந்து கொண்டிருந்தான். வந்து கொண்டிருப்பவனுடைய புலித்தோல் அங்கி மேய்ந்து கொண்டிருந்த மான்களை மருட்டி விரட்டுவதை எண்ணி உள்ளூறச் சிரித்துக் கொண்டே, ⁠“வா! வா! ‘ஏதடா தென்னவன் மாறன் இன்று வர வேண்டுமே! இன்னும் காணவில்லையே’ என்று நானும் இவ்வளவு நேரமாக உன்னைத்தான் எண்ணி எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். உன்னுடைய புலித்தோல் உடையே இங்கு மேய்ந்து கொண்டிருந்த மான்களை விரட்டியதுபோல், களப்பிரர்களையும் இங்கிருந்து விரட்டிவிடப் போதுமானது என்று நினைக்கிறாய் போலிருக்கிறது” என்றார் பெரியவர். மறுமொழி கூறாமல் அவர் முன்னிலையில் ஒரு புலி கிடந்து வணங்குவது போல் தரை மண் தோய வணங்கினான் ‘தென்னவன் மாறன்' என்று குறிக்கப்பட்ட அந்த மனிதன். அப்போது மிக அருகே தென்பட்ட அவனுடைய புலித்தோல் அங்கியைக் கண்டு பெரியவர் கைகளின் தழுவலில் இருந்த அந்தப் புள்ளி மானும் மருண்டு ஓடத் திமிறியது. அவர் அதை விடுவித்தார். வலது கையை உயர்த்தி அவனை வாழ்த்தினார். ⁠தன்னிடம் ‘அவர்கள் இருவரும் பேசும்போது நீ அருகே இருக்க வேண்டாம்’... என்று காராளர் கூறியனுப்பியிருந்ததற்கு ஏற்ப மல்லன் விலகி நின்று கொண்டான். ஆனாலும் பெரியவரையும் அவரைக் காண வந்திருந்த புதியவனையும் தெளிவாகக் கண்காணிக்க முடிந்த தொலைவில்தான் நின்று கொண்டிருந்தான். காராளரும் மல்லனுக்கு அப்படித்தான் சொல்லியனுப்பி இருந்தார். உரத்த குரலை உடையவனாக இருந்ததால், தென்னவன் மாறன் என்னும் அந்தப் புதிய மனிதன் கூறிய மறுமொழிகள் மல்லன் நின்று கொண்டிருந்த இடம் வரையிலும் கேட்டன. ஆனால் மதுராபதி வித்தகர் அவனை வினாவிய வினாக்கள் மட்டும் அவ்வளவு தெளிவாகக் கேட்கவில்லை. “ஐயா! தென்னவன் சிறு மலையிலும் அதன் சுற்றுப் புறங்களிலும் மட்டும் ஈராயிரம் இளைஞர்களுக்குப் போர்ப் பயிற்சி அளித்திருக்கிறேன். விற்போர் வல்லமை, வேலெறியும் திறன், மற்போர் ஆண்மை ஆகிய எல்லாத் துறையிலும் தேர்ந்த அந்த ஈராயிரவர் இந்தக் கணமே நீங்கள் கட்டளையிட்டாலும் புறப்பட்டு வந்து சேரத் தயங்கமாட்டார்கள்." இவ்வளவு உரத்த குரலில் இந்த விஷயத்தை அவன் சொல்லியிருக்கக் கூடாது என்று பெரியவர் அவனைக் கடிந்து கொண்டிருக்க வேண்டும் என்று விலகி நின்ற மல்லனாலேயே அநுமானித்துக் கொள்ள முடிந்தது. ஏனென்றால் அடுத்த கணத்திலிருந்து தென்னவன் மாறனின் குரலும் அவனுக்குக் கேட்கவில்லை. பெரியவரிடம் அவன் ஏதோ பேசி வாதித்துக் கொண்டிருப்பதை மட்டும் மல்லன் பார்க்க முடிந்தது. பேசிக் கொண்டிருக்கும்போதே அங்கியைக் கழற்றி வலது தோளின் மேற்புறத்தைப் பெரியவரிடம் காட்டி ஏதோ சொன்னான் தென்னவன் மாறன். பேச்சு வளர்ந்தது. பேச்சின் நடுவே இருந்தாற் போலிருந்து தென்னவன்மாறன் வாளை உருவவே கண்காணித்துக் கொண்டிருந்த மல்லன் பதறிப்போய் நெருங்கிச் சென்றான். ஆனால் அடுத்த கணமே தென்னவன் மாறன் செய்த காரியத்தைக் கண்டு மல்லனுக்குப் புல்லரித்தது, மெய்சிலிர்த்தது. கூசும் மருண்ட கண்களை மூடி மூடித் திறந்தான் மல்லன். 23. தென்னவன் மாறன் தன் உள்ளங்கையை வாளால் கீறி நேர்கோடாகப் பொங்கி மேலெழும் இரத்தத்தைக் காண்பித்து, “ஐயா! இந்த உடலில் ஓடுவது பாண்டிய மரபின் குருதிதான் என்பதைப் போர்க் களத்தில் நிரூபிக்க வேண்டிய நாள் தொலைவில் இல்லை” என்று குருதி பொங்கும் கையை முன்னால் நீட்டி அவரிடம் சூளுரைத்துக் கொண்டிருந்தான் தென்னவன் மாறன். ⁠திடீரென்று அவன் இருந்தாற் போலிருந்து வாளை உருவியதால் என்னவோ ஏதோ என்ற அருகில் ஓடி வந்திருந்த மல்லன், இப்போது அவர்கள் உரையாடலை நன்றாகவே கேட்க முடிந்தது. ⁠“பகைவனைக் கருவறுத்து நிர்மூலமாக்கும் கனலை உள்ளேயே வளர்த்து வருகிற எந்தச் சாதுரியமுள்ளவனும், அந்தக் கனலின் வேர்வையைக் கூடத் தன் புற உடலில் தெரிய விடக் கூடாது. காலம் கணிகிறவரை நாம் எதற்காக வேர்க்கிறோம் என்பதைக் கூட நம் எதிரிகள் அறியலாகாது. நீயோ இரத்தத்தையே கீறிக் காண்பிக்கிறாய்.” ⁠“உங்களிடம் தான் அதைக் காண்பிக்கிறேன். எதிரியிடமில்லை...” ⁠“ஓர் எதிரியைச் சந்திக்கும்போதும் இதே உணர்ச்சி வேகம் உனக்கு வர முடியாதென்பது என்ன உறுதி? நீ மான்கள் அஞ்சி ஓடும் புலித்தோல் அங்கியைத் தரித்திருக்கிறாய்! மனிதர்கள் ஐயுறவு கொள்ளும்படி வாளை உருவிக் காட்டுகிறாய். இதுவே உன்னைக் களப்பிரர்களுக்குக் காட்டிக் கொடுத்து விடும். தென்னவன் சிறுமலையில் ஒருவன் புலித்தோல் அங்கியணிவது இயல்பு. இங்கே இந்த மருத நிலத்து ஊரிலும், நாகரிகமான கோநகரிலும் இதை மருண்டு போய்த் தான் பார்ப்பார்கள். நீ பெரிய வீரன் என்பதிலோ, உடல் வலிமையுள்ள பலவான் என்பதிலோ நான் கருத்து வேறுபடவில்லை. ஆனால், உன்னுடைய உரத்த குரலும், வஞ்சகமில்லாமல் உடனே விருப்பு வெறுப்புகளையும், கோப தாபங்களையும் காட்டிவிடும் வெள்ளைத் தன்மையுமே உன்னைக் காட்டிக் கொடுத்து விடுமோ என்றுதான் கலங்குகிறேன்.” ⁠தென்னவன் மாறன் இதற்கு மறுமொழி எதுவும் கூற முடியவில்லை. குனிந்த தலை நிமிராமல் பெரியவரின் எதிரே நின்றான் அவன். எதிரே அவன் நிற்பதையே கூர்ந்து நோக்கிக் கொண்டிருந்தார் பெரியவர். ⁠அவ்வாறு நெடுநேரம் நோக்கிக் கொண்டிருந்த பின்பு கூறலானாா்; ⁠“நீ சில நாட்களுக்கு இங்கேயே, நம்முடைய திருமோகூர்ப் பெரிய காராளரோடு தங்கியிரு! நான் மீண்டும் உன்னைக் கூப்பிட்டுச் சொல்லுகிற வரை தென்னவன் சிறுமலைக்கு நீ திரும்ப வேண்டாம்! கோநகருக்குள் போகவே கூடாது.” ⁠“உங்கள் கட்டளைக்குப் பணிகிறேன்” என்று கூறித் தென்னவன் மாறன் தலை வணங்கி விடை பெற இருந்த போது, தொலைவில் பெரிய காராளர் பரபரப்பாக வருவது தெரிந்தது. ⁠அங்கிருந்த மூவருமே அவருடைய எதிர்பாராத வருகையால் கவரப்பட்டார்கள். காராளர் அப்போது தன்னைத் தேடிவருகிற காரியம் புதிதாக வந்திருக்கும் தென்னவன் மாறன் முன்னிலையில் வெளிப்பட வேண்டாம் என்று கருதிய மதுராபதி வித்தகர், “மல்லா! இவனை அழைத்துக் கொண்டு நீ காராளர் திரு மாளிகைக்குப் போ! காராளர் என்னிடம் பேசிவிட்டுச் சிறிது நேரத்தில் அங்கு வந்து உங்களோடு சேர்ந்து கொள்வார்” என்று சொல்லி அவர்களிருவரையும் அப்போது அங்கிருந்து மெல்லத் தவிர்த்து அனுப்பினார். ⁠அப்போது மாலை மயங்கத் தொடங்கியிருந்த வேளை. மேற்கு வானம் பொன் மேகங்களாற் பொலியத் தொடங்கியிருந்தது. பெரியவரைத் தேடி வந்திருந்த காராளர் வழியில், தன் எதிரே திரும்பிக் கொண்டிருந்த மல்லனையும், தென்னவன் மாறனையும், “நீங்கள் இருவரும் சிறிது தொலைவு போவதற்குள் நான் பின்னாலேயே வந்து விடுவேன்” என்ற சொற்களுடன் சந்தித்து விடை கொடுத்து அனுப்பினார். அவர்களும் மேலே நடந்தார்கள். காராளர் அருகே வந்ததும் பெரியவருக்கு எதிரே தயங்கி நின்றார். ⁠“என்ன நடந்தது?” ⁠“நேற்றிரவும், இன்று காலையிலும் இரண்டு ஒற்றர்கள் பிடிபட்டதன் காரணமாக, வெள்ளியம்பலப் பகுதியிலும் பிற பகுதியிலும் அவிட்ட நாள் விழாவுக்காக வந்திருந்த யாத்திரிகர்களை வெளியேற்றிவிட்டு, மிகவும் பதற்றமான நிலையில் நண்பகலிலேயே களப்பிரர்கள் கோட்டைக் கதவுகளை மூடி விட்டார்களாம்.” ⁠“இரவு உங்கள் செல்வப் பூங்கோதை யாரோ ஒற்றன் வெள்ளியம்பலத்தருகே பிடிபட்டதாகச் சொன்ன போதே நான் இதை எதிர்பார்த்தேன். உப வனத்திலுள்ள நம்மவர்கள் பாதுகாப்பாயிருக்கிறார்களா?” ⁠“யானைப் பாகன் அந்துவன் காலைவரை அவர்கள் பாதுகாப்பைப் பற்றி உறுதி கூறியனுப்பியிருக்கிறான். பகலுக்கு மேல்தான் கோட்டை வாயில்கள் அடைக்கப் பட்டிருக்கின்றன.” ⁠“பிடிபட்டிருக்கும் அந்த இருவர் மூலம், நம்மவர்கள் பல்லாயிரக் கணக்கில் யாத்திரிகர்கள் என்ற பெயரில் ஓர் உட்பூசலை எழுப்பும் நோக்குடன் கோ நகருக்குள் வந்திருந்தார்கள் என்ற இரகசியம் வெளிப்படலாம் என்னும் கவலை உங்களுக்கு இருக்கிறதா?” ⁠“அறவே இல்லை. சித்திரவதையே செய்தாலும் நம்மவர்கள் துரோகம் செய்ய மாட்டார்கள். ஒருவரை ஒருவர் காட்டிக் கொடுக்கத் துணியவும் மாட்டார்கள்.” ⁠“இப்படி இந்த அவிட்ட நாள் விழாவன்று நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் ஓர் உட்பூசலுக்கு முயலும் நோக்குடன் நம்மவர்கள் ஆயிரக் கணக்கில் அகநகரில் ஊடுருவியிருக்கிறார்கள் என்பதை நாம் இளையநம்பியிடம் கூடச் சொல்லியனுப்பாதது நல்லதுதான்!” “அழகன் பெருமாளுக்கும் மற்றவர்களுக்கும் அது தெரிந்திருக்கும்.” “என் கட்டளைகளை ஒரு மாத்திரை ஒலி கூட மிகை யாகவோ, குறைவாகவோ புரிந்து கொள்ளாமல் சரியாகப்புரிந்து கொள்கிறவன் அவன்! அவனிடமிருந்து பிறர் யாரும் அறிந்திருக்க முடியாது.” “பொறுத்திருந்து பார்ப்போம் ஐயா! இது மாலையில் தெரிந்த செய்தி. இரவில் மேலும் தெளிவாகத் தெரியும். அவற்றையும் தெரிந்து கொண்டு நீங்கள் உலாவப் புறப்படு முன் மீண்டும் வருகிறேன்.” “வரும்போது நீங்கள் மட்டும் தனியாகவே வாருங்கள் காராளரே! என் குறிப்புப் புரியாமல் அந்தத் தென்னவன் சிறுமலைப் பிள்ளையாண்டானையும், உங்களோடு கூப்பிட்டுக் கொண்டு வந்து விடாதீர்கள்.” “உங்கள் குறிப்பு எனக்குத் தெரியும்! நான் தனியாகவே வருவேன் என்பதை நீங்கள் நம்பலாம்” என்று காராளர் பெரியவருக்கு உறுதி கூறிவிட்டுப் புறப்பட்டார். மீண்டும் அவர் தன் மாளிகைக்குத் திரும்பியபோது செல்வப் பூங்கோதை, தென்னவன் மாறனுக்கும் மல்லனுக்கும் நெய் மணம் கமழும் தேன்குழல்களைக் கொடுத்து உண்ணச் சொல்லி உபசரித்துக் கொண்டிருந்தாள். “இவர் தேன் குழலைக் கடித்துத் தின்னும் ஒலி மதுரை வரை கேட்கும் போலிருக்கிறதே அம்மா!” என்று தென்னவன் மாறனைச் சுட்டிக் காட்டிக் கூறிக்கொண்டே உள்ளே நுழைந்தார் காராளர். “என்ன செய்வது? களப்பிரர்களை நினைத்துக் கொண்டு தேன்குழல் தின்றால்கூடப் பல்லை நற நற வென்று தான் கடிக்க வேண்டியிருக்கிறது...” என்றான் தென்னவன் மாறன். மல்லனும், செல்வப் பூங்கோதையும், காராளரும் அதைக் கேட்டுச் சிரித்தார்கள்.  24. மறுமொழி வந்தது உறங்காமல் கண் விழித்திருந்து அந்த அலங்கார மயமான கணிகை மாளிகையில் இளையநம்பி முதலியவர்கள் காத்திருந்த இரவு அவர்கள் பொறுமையைச் சோதிப் பதாயிருந்தது. நேரம் ஆக ஆகப் புதுப் புதுச் சந்தேகங்கள் தோன்றின. இரவு முடியத் தொடங்கிக் காற்றும் சூழ்நிலையும் குளிர்ச்சி அடைகிற அளவு வைகறையும் நெருங்கிக் கொண்டிருந்தது. அரண்மனைக்கு முத்துப் பல்லக்கிலே சென்ற கணிகை இரத்தினமாலையும் திரும்பவில்லை. கோட்டைவாயில்கள் அடைக்கப்பட்டிருப்பதனால் கணிகை மாளிகைக்கு வந்து சேரக்கூடும் என்று அழகன் பெருமாள் அதுமானம் செய்து உரைத்த உபவனத்து நண்பர்களும் அங்கு வந்து சேரவில்லை. இளம்பிள்ளை பயமறியாது என்பதுபோல் ‘அவர்களைத்தேடி நகருக்குள் புறப்படலாம்’- என்றுகூட இளையநம்பி முன் வந்தான். ஆனால் அழகன் பெருமாள்தான் அதற்கு இணங்கவில்லை. “தெளிவாக முடிகிற நன்மைகளை நீங்களாகக் குழப்பி விடாதீர்கள்” என்று மறுத்தான் அவன். “விடிவதற்குள்ளேயே நமக்கு ஒளி பிறக்கும்” என்று மேலும் உறுதியாகவும் பிடிவாதமாகவும் சொன்னான் அவன். இளையநம்பிக்கு அவனுடைய உறுதி வியப்பளிப்பதாக இருந்தது. ஆயினும் அவன் பொறுமையாயிருந்தான். அழகன் பெருமாள் நம்பியபடியே நடந்தது. சிறிது, நேரத்தில் சந்தனம் அறைக்கும் அறையில் நிலவறையின் மறுபுறம் இருந்து கல் புரட்டப்படும் ஒலி வரவே குறளன், இளையநம்பி, அழகன் பெருமாள் மூவரும் அங்கே விரைந்தனர். சந்தனக்கல் விலகியதும் பிறவியிலேயே சிரிப்பு மாறாதயானைப்பாகன் அந்துவனின் முகம் தெரிந்தது அங்கே. அவன் ஒரே அவசரத்திலும் பரபரப்பிலும் இருந்தான். மேலே படியேறி வராமல் தலையை மட்டும் நீட்டியே அங்கிருந்து விஷயத்தைக் கூறத் தொடங்கினான் அவன். “உங்களுக்குச் சில செய்திகளைக் கூறி எச்சரிக்க வேண்டும் என்பதற்காகவே நான் வழக்கமாகத் திருமஞ்சனக் குடத்தோடு வைகைத் துறைக்குப் புறப்படும் நேரத்திற்குச் சில நாழிகைகள் முன்பாகவே இன்று காலையில் புறப்பட்டேன். இன்னும் சில நாட்களுக்கு நீங்கள் யாருமே உபவனத்துக்குத் திரும்ப வேண்டாம். உபவனமும் பூத பயங்கரப் படையின் கண்காணிப்பில் இருக்கிறது. திருமருத முன்துறையில் யானையை நிறுத்தி விட்டு உடன் வந்த பாகனிடம் நீராடி வருவதாய்ப் பொய் சொல்லிவிட்டு நீந்தியே உபவனக்கரையில் ஏறிப் பதுங்கிப் பதுங்கி மறைந்து நிலவறையில் நுழைந்து இங்கே ஓடி வருகிறேன். விரைந்து நான் திரும்ப வேண்டும். இல்லாவிட்டால் மற்றவன் என்னைச் சந்தேகப்படுவான்.” அவர்களும் அவன் கூறியவற்றைக் கேட்டுக் கொண்டு உடனே அவனைத் திரும்பிப் போக விட்டு விட்டார்கள். அவனுடைய கடமை உணர்வை எல்லாருமே பாராட்டித் தங்களுக்குள் மகிழ்ந்து கொண்டனர். அவனை அங்கே தாமதப் படுத்தும் ஒவ்வொரு கணமும் அவனுயிருக்கு அபாயம் தேடு வதாகும் என்று அவர்களுக்கு மிக நன்றாகப் புரிந்திருந்தது. யானைப்பாகன் அந்துவன் ஒரு மின்னலைப் போல் வந்து தோன்றித் திரும்பிய பின், “இந்த மாறுபட்ட நிலைமைகளால் இரத்தினமாலை திரும்பவருவது பாதிக்கப் படுமா?” என்று அழகன் பெருமாளைக் கேட்டான் இளையநம்பி. “நாம் இப்போது கவலைப்பட வேண்டியது உபவனத்திலிருந்து காலையில் நகருக்குள் வந்திருக்கும் நம்முடைய நண்பர்களைப் பற்றியதாக இருக்க வேண்டுமே அன்றி இரத்தினமாலையைப் பற்றியதாக இருக்க வேண்டிய தில்லை!” ⁠“ஏன்?” ⁠“அவள் உறுதியாகவும், பயன்படுகிற வகையிலும் திரும்பி வருவாள் என்பது சர்வ நிச்சயம்” என்று அழகன் பெருமாள் நம்பிக்கையாகத் தெரிவித்தான். ‘சூழ்நிலைகளால் எங்கும் வெளியேறிச் செல்ல முடியாதபடி சில நாட்கள் தானும் பிறரும் அந்தக் கணிகை மாளிகையிலேயே தங்க நேர்ந்திருப்பதால், இரத்தினமாலை உடனே திரும்பினாலும் தான் விரைந்து செய்யப் போவது என்ன?' என்று எண்ணித் தனக்குத் தானே பொறுமையடைந்தான் இளையநம்பி. அந்த மாளிகைப் பெண்கள் உபசரிப்பதிலும், விருந்தினரைப் பேணுவதிலும் ஒரு கலையின் மெருகும், நளினமும் பெற்றுத் தேர்ந்தவர்களாக இருந்ததால், அங்கே ஒரு குறையும் தெரியாமல் இருக்க முடிந்தது. ⁠அங்கேயே வைகறை நீராடி முடிந்த இளையநம்பிக்கும், அழகன் பெருமாளுக்கும் பூசிக் கொள்வதற்கு நிறையச் சந்தனம் அரைத்துக் கொடுத்தான் குறளன். ⁠“சந்தனம் பூசிக் கொள்ளும் மகிழ்ச்சியிலா இப்போது நாம் இருக்கிறோம்?” என்று அதை மறுத்த இளைய நம்பியிடம் ⁠“அப்படிச் சொல்லாதீர்கள் ஐயா! நம் குறளனால் ஒரு பணியும் செய்யாமல் வாளா இருக்க முடியாது. அவனுடைய சந்தனம் அரைக்கும் பணியை நமக்காக அவன் செய்திருக்கிறான். சந்தனத்தை வாங்கிப் பூசிக் கொள்ளுங்கள். நடக்க இருக்கும் காரியங்களைக் கூட மங்கல நிறைவுடையதாக்கி விடும் சக்தி பொதிகை மலைச் சந்தனத்துக்கு உண்டு ஐயா!” என்று பரிவோடு கூறினான் அழகன் பெருமாள், மனத்தை அதிற் செலுத்தும் சூழ்நிலை அப்போது இல்லை என்றாலும், அந்தச் சந்தன மணம் மாளிகையையே நிறைத்துக் கொண்டிருந்தது. இளையநம்பி தயங்குவது போலத் தயங்காமல், மார்பிலும், தோள்களிலும் அழகன் பெருமாள் சந்தனத்தை வாரி வாரிப் பூசிக் கொண்டான். அரைத்துக் கொண்டு வந்து அன்புடன் தருகிறவன் மனத்தை ஏமாற்ற விரும்பாமல் இளையநம்பியும் சிறிதளவு சந்தனத்தை ஏற்றுப் பூசிக் கொண்டான். குறளனோ, தானே முன்வந்து அவனுடைய பொன்நிற முன் கைகளில் சந்தனத்தைப் பூசி விடவே தொடங்கி விட்டான். ⁠“இந்தச் சந்தனத்தைப் பூசு முன்பே, உங்கள் கைகள் இயல்பாகவே மணக்கின்றன ஐயா! இந்தச் சந்தனத்தின் நிறத்திற்கும், உங்கள் மேனி நிறத்திற்கும், நான் வேறுபாடு காண்பது முடியாத காரியமாயிருக்கிறது” -என்றெல்லாம் குறளன் புகழ்ந்த புகழ் வார்த்தைகள, இளையநம்பியை நாணப்படச் செய்தன. அழகன் பெருமாளும், இளைய நம்பியும், சந்தனக்கல் இருந்த அறையிலிருந்து மாளிகையின் கூடத்திற்கு வரவும், வெளிப்புற வாயிலில் முத்துப் பல்லக்கு வந்து சேரவும் ஒன்றாயிருந்தது. அழகன் பெருமாள் களிப்போடு கூறினான்:- ⁠“பார்த்தீர்களா! நம்முடைய புகழ் பெற்ற பொதிகை மலைச் சந்தனத்தைப் பூசிக் கொண்டால், நாம் எதிர் பார்க்கிற மங்கல நிகழ்ச்சிகள் உடனே நடைபெறும் என்று நான் கூறியது எவ்வளவு பொருத்தமாய் நிகழ்கிறது.” ⁠அப்போதுதான் துயிலெழுந்து வந்த மயில் போல் அழகாய்ப் பல்லக்கிலிருந்து இறங்கி வந்தாள் இரத்தின மாலை. அவர்கள் தன்னை எதிர்கொள்ளக் கண்டு, புன் முறுவல் பூத்து முக மலர்ந்தாள் அவள். ⁠அழகு மின்னும் இளமூங்கிலாய்த் திரண்ட அவள் தோள்களையும், கைகளையுமே பார்க்கத் தொடங்கியிருந்த இளையநம்பி அந்த உள்ளங்கைகள் பளிங்கு போல் வெண்மையாயிருந்ததைக் கண்டு ஏமாற்றம் அடைந்தான். அழகன் பெருமாளுக்கும் ஏமாற்றமாயிருந்தது, சிலம்பொலி குலுங்கத் தென்றல் அசைந்து வருவது போல பணிப்பெண் பின் வர வந்து கொண்டிருந்த அவளை நோக்கி, ⁠“என்ன இது? நீ மறு மொழியோடு வருவாய் என்றல்லவா எதிர்பார்த்தேன், இரத்தினமாலை?” என்று வினாவினான் அழகன் பெருமாள். முதலில் இந்தக் கேள்விக்கு மறுமொழி கூறத் தயங்கிய அவள் முகம் எதற்கோ நாணிச் சிவந்தது. சிறிது நேரத்திற்குப் பின்... “நான் மறுமொழியோடு வரவில்லை என்பதை நீங்களாகவே எப்படி முடிவு செய்தீர்கள் அதற்குள்?” என்று அவள் அவர்கள் இருவரையும் திருப்பிக் கேட்டதும், புரியாமல் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டு விழித்தார்கள் அவர்கள். 25. பாதங்களில் வந்த பதில் கணிகை இரத்தினமாலை மறுமொழியோடு திரும்பியிருப்பதாகக் கூறினாலும் அவளுடைய உள்ளங்கைகள் செம்பஞ்சுக் குழம்பு தீட்டப்பெறாமல் பளிங்குபோல் வெறுமையாய் வெண்மையாயிருப்பதைக் கண்டு இளைய நம்பியும் அழகன் பெருமாளும் மருண்டனர். அவர்கள் இருவரையும் சிறிது நேரம் அப்படித் திகைக்க வைப்பதையே விரும்பியவள்போல் முத்துப் பல்லக்கிலிருந்து இறங்கி வந்து எதிரே நின்று இரத்தினமாலை சிரித்துக் கொண்டிருந்தாள். பின்தொடர்ந்து வந்த பணிப் பெண்ணும் அவளருகே நின்று கொண்டிருந்தாள். அழகன்பெருமாள் அவளைக் கேட்டான்: “இரத்தினமாலை! நேற்று நீ இங்கிருந்து புறப்பட்ட போது இருந்ததைவிட இப்போது நம்மைச் சுற்றிலும் சோதனைகள் அதிகமாகி இருக்கின்றன. நீ திரும்பி வந்து தெரிவிக்கும் மறுமொழிகளாவது அந்தச் சோதனைகளை அகற்றும் என்று எதிர்பார்த்திருந்தோம். நீயும் இப்படி எங்களைச் சோதனை செய்தால் என்ன செய்வது?" ⁠“அங்கே கோட்டைக்குள்ளும் அரண்மனையிலும் கூடச் சோதனைகள் அதிகமாக இருக்கின்றன. நான் நேற்று இரவிலேயே திரும்ப முடியாமற் போனதற்குக் காரணமே அரண்மனைச் சூழ்நிலைதான். நேற்றுப் பகலில் நான் அரண்மனைக்குப் புறப்பட்ட போதே நகரில் பரபரப்பான நிலைமை உருவாகி விட்டது. என்ன நேருமோ என்ற பயத்தின் காரணமாகக் களப்பிரர்கள் கோட்டைக் கதவுகளை உடனே அடைக்கச் சொல்லி உத்தரவிட்டார்கள். அரண்மனைக்குள் போகிறவர்கள், வருகிறவர்கள் கடுமையான கண்காணிப்பிற்கு ஆளாகிக் கொண்டிருந்த போதுதான் அங்கே நானும் போய்ச் சேர்ந்திருந்தேன்.” ⁠“அப்புறம்...? என்ன நடந்தது?” ⁠“என்ன நடக்கும்? இந்த இரத்தினமாலை சென்ற பின்பும், திறக்காத அரண்மனைக் கதவுகள் ஏது? இந்த விழிகளைச் சுழற்றியும், இந்தப் புன்சிரிப்பைக் காண்பித்தும் நான் எங்கும் எதற்கும் தோற்க நேர்ந்ததே இல்லை என்பதுதான் உங்களுக்குத் தெரியுமே?” ⁠“ஆனால், இப்போது தோற்றுவிட்டு வந்திருக்கிறாய் என்றல்லவா தோன்றுகிறது?” ⁠“அவசரப்பட்டு முடிவு செய்து விடாதீர்கள்! நான் இப்போது முழு வெற்றியில் காலூன்றி நிற்கிறேன்” என்று கூறியபடியே அழகியதொரு கூத்துக்கு அபிநயம் செய்வது போல், அவள் தனது வலது பாதத்தை மேலே தூக்கினாள், என்ன ஆச்சரியம்? கைகளில் இல்லாததை அவள் உள்ளங் காலில் காண முடிந்தது அப்போது! செந்தாமரைப் பூவின் அகஇதழ் போல் வெண் சிவப்பு நிறத்தில் விளங்கிய அந்த உள்ளங்காலில் அவர்களுக்கு வேண்டிய விடை இருந்தது. சித்திரம் போல் கரந்தெழுத்துக்கள் அங்கே இருந்தன. “மூன்று ஆண் மக்களுக்கு முன் வெட்கமில்லாமல் இப்படிக் காலைத் தூக்குகிறாளே இவள்"- என்று சிறிதே சினம் அடையத் தொடங்கியிருந்த இளையநம்பியின் கண்களும் கூட இப்போது வியப்பினாலும் மகிழ்ச்சியினாலும் மலர்ந்தன. முதலில் தூக்கிய வலது பாதத்தை ஊன்றிக் கொண்டு, இடது பாதத்தைத் தூக்கி அதிலிருந்த செம்பஞ்சுக் குழம்பு எழுத்துக்களையும் அவர்களுக்குக் காண்பித்தாள் அவள். ‘நான் இப்போது முழு வெற்றியில் கால் ஊன்றி நிற்கிறேன்’ என்று இரத்தினமாலை புன்னகையோடு கூறிய சொற்களின் முழுப்பொருளும் இப்போது அவர்களுக்குத் தெளிவாக விளங்கியது. ⁠இளையநம்பி நன்றி தொனிக்கும் குரலில் அவளை நோக்கிக் கூறினான்: “கைகளில் சுமந்து சென்ற கேள்விகளுக்குக் கால்களில் விடைகள் கிடைத்திருக்கின்றன.” ⁠“ஆம்! இந்த மாறுதலுக்குக் காரணம் இருக்கிறது. நேற்றிரவு நான் அரண்மனையில் தங்கி, என்னுடைய கைகளில் இங்கிருந்து சுமந்து சென்ற எழுத்துக்களைக் காட்ட வேண்டியவர்களிடம் காட்டி அவர்கள் அறிந்து கொண்டதும், மறுமொழியை எழுதுவதற்காகக் கைகளைக் கழுவிவிட்டு மீண்டும் நீட்டினேன். அப்போது அங்கே எதிர்பாராத விதமாக அந்தப்புரத்தைச் சேர்ந்த களப்பிர நங்கை ஒருத்தி வந்து சேர்ந்து விட்டாள். வந்ததோடு மட்டுமல்லாமல் அவள் என்னருகே நெருங்கி- ⁠“நள்ளிரவுக்கு மேல் ஏற்கெனவே அலங்கரித்துக் கொண்டிருந்த அலங்காரங்களை அழித்து விட்டுப் புதிதாகச் செம்பஞ்சுக் குழம்பு தீட்டிக் கொள்ள என்ன அவசரம் இரத்தினமாலை?" என்று வினாவி விட்டாள். வினாவிய பின்பு, அந்தக் களப்பிரப் பெண் உடனே எங்களை விட்டு அகலவில்லை. ஏதோ எங்களைச் சந்தேகப்படுகிறவள் போல், நெடுநேரம் எங்களோடு தொடர்பாகவும், தொடர்பின்றியும் எதை எதையோ உரையாடிக் கொண்டிருந்தாள். அந்த உரையாடலின் நடுவே, ‘அடி இரத்தினமாலை! இந்த அரண்மனையில் உன்னால் கொண்டு வந்து சேர்க்கப்பட்ட தமிழ்ப் பணிப் பெண்கள் அனைவரும் உன் மேல் நிறைய விசுவாசம் வைத்திருக்கிறார்கள். உனக்கு அலங்கரிக்கும் போதும் உன் கைகளுக்குச் செம்பஞ்சுக் குழம்பு பூசும் போதும் இவர்கள் அளவற்ற சிரத்தையோடு தோன்றுகிறார்கள். உன் கைகளுக்குச் செம்பஞ்சுக் குழம்பு எழுதும் போது மட்டும் உன் மேல் தங்களுக்குள்ள பக்தி விசுவாசத்தையே இவர்கள் எழுத்தாக எழுதுகிறார்களோ என்றுகூட நான் நினைப்பதுண்டு’ என்பதாகக் கண்களைச் சுழற்றி என்னைப் பார்த்தபடியே சொன்னாள் அந்தக் களப்பிரப் பெண். நேற்றிரவு மட்டும் அவள் என்னிடம் பழகிய விதம், பேசிய சொற்கள் எல்லாமே சந்தேகப்படத் தக்கதாய் இருப்பது போல் தோன்றியது; அவள் என்னை ஆழம் பார்க்கிறாளோ என்று தயக்கத்தோடு நினைத்துச் சிந்தித்தேன் நான்.” ⁠“அப்படியும் சிந்திக்க வேண்டியதுதான் இரத்தினமாலை! எதிரிகளைப் பற்றி ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு கணத்திலும் நாம் விழிப்பாக இருக்க வேண்டும்” என்றான் அழகன்பெருமாள். இரத்தினமாலை, மேலும் தொடர்ந்து கூறலானாள்:- ⁠“அந்தக் களப்பிரப் பெண்ணைப் பற்றிச் சந்தேகம் வந்த பின், அவள் கவனத்தை மாற்றுவதற்காக நான் என்ன செய்தேன் தெரியுமா? அவள் கண்காணவே என் கைகளில் எழுதியிருந்த அலங்காரங்களை அழித்தேன். சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு அந்தக் களப்பிரப் பெண் போய்ச் சேர்ந்தாள். அவள் போய்ச் சேர்ந்த பின் நான் அரண்மனையில் தங்கியிருந்த பகுதியின் கதவுகளை நன்றாக உட்புறம் தாழிட்டுக் கொண்டு, ஊரடங்கிப் போன அந்த இரவு வேளையில் என் முழு நம்பிக்கைக்குரியவர்களும் என்னாலேயே அந்த அரண்மனையில் தொண்டூழியும் புரிவதற்குச் சேர்க்கப்பட்டவர்களும் ஆகிய பணிப் பெண்களைக் கொண்டு என் உள்ளங்கால்களில் எழுதச் செய்தேன். உள்ளங் கால்கள் ஈரம் புலர்கிறவரை காற்றாட நீட்டிக் கொண்டு உட்கார்ந்திருந்தேன். அப்படி உட்கார்ந்து ஆடாமல் அசையாமல் இந்த எழுத்துக்களைக் காப்பாற்றிக் கொண்டு வந்திருக்கிறேன். உறக்கத்தை இழந்ததனாலும் நீண்ட நேரம் கால்களை ஒரே பக்கமாக நீட்டி அமர்ந்திருந்ததனாலும் கண்கள் எரிகின்றன. முழங்கால் எலும்புப் பூட்டுகளில் வலி தாங்க முடியவில்லை.” ⁠“எங்களுக்கு உதவுவதற்காக உன் நளினப் பொன்னுடல் மிகவும் நலிவடைய நேர்ந்திருக்கிறது பெண்ணே! இந்த உதவிக்காக நானும், அழகன் பெருமாளும், இன்னும் அழியாமல் எஞ்சியிருக்கும் பாண்டியர் மரபும் உனக்கு எவ்வளவோ நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறோம் இரத்தினமாலை!” இளையநம்பி குறுக்கிட்டுப் பேசியபோது, இந்தப் பேச்சில் ஒன்றிற்காக மகிழ்ச்சியும், வேறொன்றிற்காகச் சினமும் கொள்ள வேண்டும் போலிருந்தது இரத்தின மாலைக்கு. ‘நளினப் பொன்னுடல்’ என்று அந்தக் கம்பீரமான கட்டிளங்காளையின் வார்த்தைகளால் தன் அழகு புகழப்பட்டிருப்பதை அவள் எண்ணிப் பூரித்தாள். அதே சமயத்தில் பாண்டியர் மரபுக்கு ஆதரவான இந்த இயக்கத்தில், நினைவு தெரிந்த நாளிலிருந்து பெரியவர் மதுராபதி வித்தகரின் ஆசியோடு ஈடுபட்டிருக்கும் தன்னை அந்நியராக வந்த யாரோ ஒரு புதியவருக்கு நன்றி சொல்லி ஒதுக்குவது போல் அவன் ஒதுக்கியது அவளுக்குச் சினம் ஊட்டியது. அந்த நன்றியின் மூலம் இளையநம்பி தன்னை அவமானப் படுத்திவிட்டது போல் உணர்ந்தாள் அவள். அழகிய பொன் நிறக் கைகளும், பரந்த மார்பும் கட்டிளமையும், ஆண்மையின் காம்பீர்யம் நிறைந்த முகமுமாக எதிரே நின்று கொண்டிருந்த இளையநம்பியைக் கோபித்துக் கொள்ள அவள் பெண்மை தயங்கினாலும் தன்மானம் வென்றது. இவள் அவனை நோக்கிக் கேட்டாள்: ⁠“நன்றியை எதிர்பாராமல் செயல்படும் கடமைகளை நன்றி கூறி விடுவதன் மூலமாகவும் கூட அவமானப்படுத்த முடியும் என்று நீங்கள் அடிக்கடி நிரூபிக்கிறீர்கள் ஐயா!” ⁠“நீ இப்படிச் சொல்லக் கூடாது பெண்ணே! ‘நன்றி மறப்பது நன்றன்று’ என்று நம் தமிழ்மறையே கூறுகிறது.” ⁠“இளையர் இவர் எமக்கு இன்னம் யாம் என்று புனையினும் புல்லென்னும் நட்பு என்று அதே தமிழ்மறை வேறோர் இடத்தில் கூறியிருப்பது தங்களுக்கு நினைவு இருக்கும் என்று நினைக்கிறேன். ஒரே காரியத்தில் ஈடுபட்டுப் பழகுகிறவர்கள் தங்களுக்குள் ஒருவரை ஒருவர் புனைவதும் புகழ்வதும் சிறுமையாகிவிடும் அல்லவா?” இரத்தினமாலை இப்படி வினவியதும் இளையநம்பி அதிர்ச்சி அடைந்தான். இதுவரை அவளுடைய மயக்க மூட்டும் உடலழகை மட்டும் கண்டு கொண்டிருந்தவனுக்கு அதையெல்லாம்விட அழகாகவும் நாகரிகமாகவும் அவளுக்கு ஓர் இதயம் இருப்பது இப்போது புரிந்தது. பழகுகிற இருவருக்கு நடுவே கடைப்பிடிக்க வேண்டிய மிக உயர்ந்த நாகரிக நிலையைச் சுட்டிக் காட்டும் ஒரு குறளைக் கூறியதன் மூலம் தன் உள்ளத்தின் பேரழகையும் இப்போது அவனுக்குக்காண்பித்து விட்டாள் இரத்தினமாலை. அவன் இந்த மறுமொழியில் அயர்ந்து போனான். குறளனும், அழகன் பெருமாளும் அவள் பாதங்கள் மூலமாக வந்திருந்த பதிலை எழுத்துக் கூட்டிக் கண்டு பிடித்துத் தன்னிடம் சொல்வதற்கு முன்வந்த பின்பு தான் இளையநம்பி அவளைப் பற்றிய வியப்புக்களில் இருந்து விட்டுபட்டுத் தன் நினைவடைந்து இந்த உலகிற்கு மீண்டுவர முடிந்தது. 26. அபாயச் சூழ்நிலை கணிகை இரத்தினமாலை தன் கால்களின் வழியே கொண்டு வந்த மறுமொழியும், விடிவதற்கு முன் நிலவறை வழியே அவசர அவசரமாக வந்து யானைப்பாகன் அந்துவன் தெரிவித்து விட்டுச்சென்ற செய்திகளும் சூழ்ந்திருக்கும் அபாயங்களை நன்றாக எடுத்துக் காட்டின. இரத்தின மாலையின் கைகளில் தாங்கள் எழுதியனுப்பி இருந்த வினாக்களுக்குக் கால்களில் கிடைத்திருந்த மறுமொழிகள் ஓரளவு அவர்களுக்கு ஏமாற்றம் அளிப்பவையாகத்தான் இருந்தன. விடைகளுக்குப் பதில் எச்சரிக்கைகள் பெரும்பாலும் கிடைத்திருந்தன என்றாலும் அவை பயனுள்ள எச்சரிக்கைகளாகவே இருந்தன. ⁠‘சோனகர் நாட்டிலிருந்து பாண்டிய நாட்டிற்கு இறக்குமதியாகும் குதிரைகள் நிறைந்த கப்பல் கொற்கைத் துறைமுகத்திற்கு எப்போது வந்து சேரும்? அப்படி வந்து இறங்கும் குதிரைகளை எப்படி எப்போது கோநகருக்குக் கொண்டு வரப் போகிறார்கள்? கோநகருக்குக் குதிரைகளைக் கொண்டு வரும் போது, களப்பிரர்கள் அதற்காகச் செய்திருக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகள் என்ன?’ -ஆகிய வினாக்களைத் தான் இவர்கள் கேட்டிருந்தார்கள். ⁠‘குதிரைகளைப் பற்றி இப்போது கவலைப்பட வேண்டாம். கொற்கைத் துறையில் கரை இறங்கிய பின்பும் ஒரு மண்டலக் காலத்துக்கும் அதிகமாக அவற்றை அங்கே கொற்கையின் அருகிலுள்ள மணல் வெளிகளிலே பழக்கி வசப்படுத்தப் போகிறார்கள். அப்படிப் பழக்கி வசப்படுத்திய பின்புதான் அவற்றை கோநகருக்குக் கொண்டு வருவதைப் பற்றியே சிந்திப்பார்கள். இப்போது நீங்கள் செய்ய வேண்டிதெல்லாம் சிறிது காலம் மிக எச்சரிக்கையாகவும், தலைமறைவாகவும் இருக்க வேண்டியதுதான். ஒற்றர்கள் இருவர் பிடிபட்டதிலிருந்து களப்பிரர்கள் மிகக் கடுமையாகி யிருக்கிறார்கள். எங்கும் எதையும் சந்தேகக் கண்களோடு பார்க்கிறார்கள்’ என்பதுதான் மறுமொழியாகக் கிடைத்திருந்தது. ஏறக்குறைய இதையேதான் வேறு வார்த்தைகளில் காலையில் வந்த யானைப் பாகன் அந்துவனும் சொல்லி விட்டுப் போயிருந்தான். தாங்கள் செய்வதற்கிருந்த காரியங்களையும், இந்த மறுமொழியையும் வைத்துச் சீர் தூக்கிச் சிந்தித்தார்கள் அவர்கள். அழகன் பெருமாள் இந்த எச்சரிக்கையையும் இதற்கு முன்பே கிடைத்திருந்த அந்துவனின் எச்சரிக்கையையும் மிகவும் பொருட்படுத்தினான். இளைய நம்பியோ இந்த எச்சரிக்கைகளைப் பற்றி ஓரளவு அலட்சியம் காண்பித்தான். ⁠“இந்த ஆண்மையற்ற எச்சரிக்கைகளைப் பொருட்படுத்தத் தொடங்கினால், நாம் நெடுங்காலம் இன்னிசையைச் செவிமடுத்துக் கொண்டும், ஆடல் அபிநயங்களை இரசித்துக் கொண்டும், இந்தக் கணிகை மாளிகையிலேயே முடங்கிக் கிடந்து, நாட்களைக் கழிக்க வேண்டியதுதான். ‘இன்னும் திரும்பி வந்து சேராத உப வனத்து நண்பர்கள் சிறைப்பட்டு விட்டார்களா, இல்லையா, அவர்கள் நிலை என்ன?’ என்பதையெல்லாம் கூட அறியவே முடியாது. வீரர்கள் அபாயங்களின் இடையேயும் வெளிப்பட்டு அவற்றை எதிர்கொள்வதுதான் முறை. அலை ஓய்ந்த பின் கடலாட முடியாது. அலை ஓயப் போவதும் இல்லை” என்று கோபம் வெளிப்படையாகத் தெரிகிற குரலிலேயே பேசினான் இளையநம்பி. அழகன் பெருமாளும், இரத்தினமாலையும் இதை அப்படியே ஏற்றுக் கொள்ளவில்லை. இளையநம்பி சூழ்நிலையின் அபாயங்களை நன்றாக உணரவில்லை என்றே அவர்கள் கருதினார்கள். ⁠அழகன் பெருமாள் சாந்தமான குரலிலேயே இளைய நம்பிக்கு மறுமொழி கூறினான்:- ⁠“ஐயா! உலகியல் அனுபவம் அதிகமுள்ளவன் என்ற முறையில் நான் கூறுவதை நீங்கள் சிறிது பொறுமையாகக் கேட்க வேண்டும். அபாயங்களை வெல்ல வேண்டும் என்ற ஆசையில் அபாயங்களிலேயே போய்ச் சிக்கிக் கொண்டு விடக் கூடாது. அலை ஓய்ந்து நீராட முடியாதுதான், என்றாலும் நீராடுவதற்காக அலைகளிலே போய்ச் சிக்கிக் கொண்டு அழிந்து விடக் கூடாது. அந்துவன் மூலமோ, அரண்மனையில் இருக்கும் நம்மைச் சேர்ந்த ஒற்றர்கள் மூலமோ, மீண்டும் நற்குறிப்பு அறிவிக்கப்படுகிற வரை நாம் இந்த மாளிகையில்தான் மறைந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால், பல நாளாக முயன்று செய்த எல்லாச் செயல்களும் பாழாகிவிடும். நம்முடைய அந்தரங்கமான பல செய்திகள் களப்பிரர்களுக்குத் தெரிந்து விடும். நிலவறை வழிகள் கண்டு பிடிக்கப்பட்டு விடும். எல்லா நேரங்களிலும் குமுறிக் கொண்டிருப்பது மட்டும் வீரனின் அடையாளமில்லை. சில நேரங்களில் மிகவும் பொறுமையாக இருப்பதும் வீரனின் இலட்சணம்தான்.” ⁠“அழகன் பெருமாள்! இலட்சியங்களைக் காட்டிலும் இலட்சணங்களைப் பற்றியே எப்போதும் அதிகம் கவலைப் படுகிறாய் நீ.” ⁠“உண்மைதான் ஐயா! ஒரு முதல் தரமான இலட்சியத்தை, மூன்றாந்தரமான இலட்சணங்களால் அவசரப்பட்டுத் தொட என்னால் முடியாது. நான் சிலவற்றில் மிகவும் நிதானமானவன். ஆனால், பல ஆண்டுகளாக, இங்கேயே கோநகரில் இருந்து களப்பிரர்களின் போக்கை நன்கு அறிந்திருப்பவன். களப்பிரர்களின் மனப்பான்மையைப் பற்றி அந்தரங்கமாகவும் நம்பிக்கையாகவும் எதை அறிய விரும்பினாலும் பெரியவர் மதுராபதி வித்தகர் கூட அதை அடியேன் மூலம்தான் கேட்டறிவது வழக்கம். அந்த நம்பிக்கை இன்று என்மேலே உங்களுக்கும் வேண்டும்...” ⁠“நீயும் உன் நிதானமும் இங்கு தவிர்க்கப்பட முடியாமல் இருப்பது எனக்குப் புரிகிறது” என்று வேண்டா வெறுப்பாக மறுமொழி கூறினான் இளையநம்பி. அப்போது இரத்தினமாலையும் அழகன் பெருமாளோடு சேர்ந்து கொண்டாள்; ⁠“அரண்மனைப் பெண்களிடமும், அந்தப்புரத்திலும் மிகவும் வேண்டியவள் என்று பெயரெடுத்திருக்கும் என்னிடமே நேற்றிரவு சந்தேகப்பட்டுப் பார்க்கத் தொடங்கி விட்டார்கள் அவர்கள். தந்திரமாகவும், நுண்ணறிவுடனும் கைகளை விடுத்து யாராலும் பார்க்க முடியாதபடி உள்ளங் கால்களில் எழுதி வந்ததால்தான் நான் பிழைத்தேன். இல்லா விட்டால் என் கதியே அதோகதி ஆகியிருக்குமோ என்று பயந்திருந்தேன் நான்." “பெண்கள் பயப்படுகிற விஷயங்களுக்கு எல்லாம் ஆண்களும் பயப்பட வேண்டியிருப்பதுதான் இங்கே பரிதாபத்துக்குரிய காரியம்” என்று இளையநம்பி உடனே வெட்டியது போற் கூறியதைக் கேட்டு அழகன்பெருமாள் வெறுப்போடு முகத்தைத் திருப்பிக் கொண்டான். ஒரு கோபத்தில் வெடுக்கென்று இப்படிச் சொல்லி விட்டாலும் அடுத்த கணமே இப்படி ஏன் சொன்னோமென்று இளைய நம்பியே தனக்குள் தன் நாவின் துடுக்கைக் கடிந்து கொண்டான். ஆனால், இளையநம்பி கூறியதைக் கேட்டு அழகன் பெருமாள் கோபித்துக் கொண்டதைப் போல் இரத்தினமாலை கோபப்படவில்லை. அவனை ஏறிட்டுப் பார்த்து வாய் நிறையச் சிரித்தாள். கன்னங்கள் சிவந்து கண்களில் நீர் ததும்பும் வரை சிரித்தாள். நடனம் ஆடிவரும் மயில் போல் ஒவ்வோரடியாகப் பாதம் பெயர்த்து நடந்து வந்து அவனெதிரே அவனருகே மூச்சுக் காற்றோடு மூச்சுக் காற்று உராயும் இடைவெளியின் நெருக்கத்தில் நின்று கொண்டாள் அவள். தன்னுடைய மேனியின் மோகன நறுமணங்களை அவன் சுவாசிக்க முடிந்த அண்மையில் நின்று கொண்டு. “ஐயா, திருக்கானப்பேர் வீரரே! நீங்கள் ஒரு விஷயத்தை முற்றிலும் மாற்றிச் சொல்கிறீர்கள். உங்கள் வாக்கியம், ‘ஆண்கள் செய்ய முடியாத பல காரியங்களையே ஆண்களுக்காக இங்கே பெண்கள்தான் சாதித்து கொடுக்க வேண்டியிருக்கிறது’ என்றிருக்க வேண்டும். ஏதோ கோபத்தில் வார்த்தைகளை மாற்றிச் சொல்லி விட்டீர்கள்” என்று அவனை நயமாகச் சாடினாள் இரத்தினமாலை. அந்தக் கணிகையின் இந்தச் சொற்கள் மனத்தில் நன்றாக உறைந்து விட்டதன் காரணமாக இளையநம்பி கடுங்கோபமுற்று அந்த மாளிகையிலிருந்து வெளியேறிவிட முற்பட்டபோது, அதுவும் முடியவில்லை. மிகவும் விநயமாக அந்த முயற்சி தடுக்கப்பட்டது.  27. ஊமை நாட்கள் ஆறாக்கனல்போல் சீறி மேலெழும் அடக்க முடியாத சினத் தோடு வெளியேறுவதற்கு இருந்த இளையநம்பியைக் கைகூப்பி வழி மறித்தாள் இரத்தினமாலை. சற்று முன் அவனுக்குக் கடுமையாக மறுமொழி கூறிச் சாடி அவனைக் குத்திக் காட்டிப் பேசிய போது எவ்வளவுக்கு அவள் பெண் புலியாகக் காட்சியளித்தாளோ அவ்வளவுக்கு அவ்வளவு இப்போது ஒரு பேதையாகி இறைஞ்சி அவனை மன்றாடினாள் அவள். “கருணை கூர்ந்து நான் பேசியதில் ஏதாவது பிழையிருந்தால் தாங்கள் பொறுத்தருள வேண்டும். இந்த வீட்டிலோ இந்த வீதியிலோ நீங்கள் கோபப்பட்டுப் பயனில்லை. ஆண்களின் கோபமோ, பிடிவாதமோ வெற்றி பெற முடியாத வீதி இது. பெண்கள் புன்னகைகளாலும் பார்வைகளாலும், நிரந்தரமாக வென்று கொண்டிருக்கும் போர்க்களம் இது ஒருவகைப் பிரியத்தாலும், உரிமையாலும் நான் உங்களிடம் கூறிவிட்ட சில சொற்களைப் பெரிதாக நினைத்து நீங்கள் வைரம் பாராட்டக் கூடாது. உங்கள் அடிமை அழகாகப் பேசி நன்றாக விவாதித்தால் அதில் உங்களுக்குப் பெருமை இல்லையா?” “தலைவனாக இருப்பவன்தான் யார் யார் தன் அடிமைகள் என்பதை முடிவு செய்ய வேண்டும். இங்கோ அடிமைகளே தங்கள்தலைவன் யார் என்பதையும் கூட முடிவு செய்கிற அளவு சுதந்திரமாக இருக்கிறார்கள்...” “தலைவன் பெருந்தன்மை உடையவனாக இருந்தால் அடிமைகளும்கூடச் சுதந்திரமாய் இருக்கமுடியுமே!” இந்தச் சொற்களைக் கேட்டு அவளைச் சுட்டெறித்து விடுவதுபோல் ஏறெடுத்துப் பார்த்தான் இளையநம்பி. அவளை அவனால் வெறுக்கவும் முடியவில்லை. தவிர்க்கவும் முடியவில்லை. அவன் வழியின் குறுக்கே அவள் நின்றாள். துணிவாகவும், வாதத் திறமையுடனும், நேருக்கு நேர் நின்று பேசிவிட்டாள் என்பதற்காக ஒருத்தியை வெறுப்பது நியாயமில்லை என்று அவன் மனத்திற்கே புரிந்தாலும், சுளீரென்று அறைந்தாற் போல் அவள் கூறிய வார்த்தைகளின் சூடு இன்னும் ஆறாமல் அவன் செவிகளில் இருக்கத்தான் செய்தது. அதை அவனால் மறக்கவே முடியவில்லை. ⁠அவள் பேசியிருந்த வார்த்தைகள் அவனுடைய நெஞ்சின் மென்மையிலே இன்னும் உறுத்திக் கொண்டிருந்தன. அவள் கண்களின் பார்வையும், சிரிப்பின் நளினமும் அவனைச் சினம் அடைய விடாமல் தடுத்துக் கொண்டிருந்தன. அவள் அவன் முன் மண்டியிட்டு மன்றாடத் தொடங்கியிருந்தாள். ⁠கடைந்தெடுத்துத் திரட்டிய வெண்ணெயாற் செய்தது போன்ற மென்மையும், குளிர்ச்சியும் வாய்ந்த இரத்தினமாலையின் கைவிரல்களைத் தன் பாதங்களின் மேல் உணர்ந்தான் அவன். வாதிடுவதில் இருந்த உறுதி வணங்குவதிலும் இருந்ததைக் கண்டு, ஒரு கணம் அவன் அவளைப் புரிந்து கொள்ள முடியாமல் தயங்கினான். தன்னுடைய வார்த்தைகளுக்குப் பதில் வார்த்தைகள் சொல்லி, உடனே குத்திக் காட்ட வேண்டும் என்ற ஆத்திரத்தில் அவள் இப்படிப் பேசியிருந்தாலும், இப்படிப் பேசுவதற்கு முன் அவள் தனக்காகச் சாதித்துக் கொண்டு வந்திருந்த சாதனைகளை அவனும் மதித்தே ஆக வேண்டியிருந்தது. சாதனைகள் மறுக்க முடியாமல் இருந்தன. ⁠இறுதியில் வெற்றி பெற்றது அவள்தான். கால்களைப் பற்றிக் கொண்டு, அவனிடம் மன்றாடி அவன் அங்கிருந்து வெளியேற முடியாதபடி தடுத்து விட்டாள் அவள். ஒரு கணிகையிடம் இருந்தே தீர வேண்டிய திறமைகள் அவளிடம் குறைவின்றி இருப்பதை இப்போது அவனால் நன்றாக விளங்கிக் கொள்ள முடிந்தது. ⁠பிறரை மயக்குவதும், மனத்தை மாற்றுவதும், வசப்படுத்திக் கொள்வதும், ஆண் பிள்ளையின் பிடிவாதங்களை வெல்வதுமே ஒரு கணிகையின் திறமைகளானால், அவை அவளிடமும் இருந்தன. ⁠தன்னை அறியாமலே, தான் அவளிடம் மயங்கியிருப்பதும், மாறியிருப்பதும், வசப்பட்டிருப்பதும், பிடிவாதத்தைத் தோற்றிருப்பதும் மெல்ல மெல்ல அவனுக்கே புரியத் தொடங்கியது. ஒரு கணிகையின் மாளிகையில் ஒருநாள் தங்கியதிலேயே இப்படியாகுமானால், இன்னும் நாட் கணக்கில் இங்கே மறைந்து வசிக்க நேரிடுகையில் என்னென்ன ஆகுமோ என்று தயக்கமாக இருந்தது அவனுக்கு. அன்று பிற்பகல் வரை இளையநம்பி அழகன் பெருமாளுடனோ, குறளனுடனோ கூடப் பேசவில்லை. அவர்களும் அவனிடம் எதையும் கேட்க வரவில்லை. இரத்தினமாலை மட்டும் அவனை அளவுக்கும் அதிகமாகவே விநயமும் விருப்பமும் தெரிய ஓடியாடி உபசரித்துக் கொண்டிருந்தாள். அவனுடைய முகமலர்ச்சியையோ, பாராட்டையோ பெறாத ஒருதலைப் பட்சத்துக்குக் கைக்கிளைப் பிரியமாயிருந்தன அந்த உபசாரங்கள். அந்த கைக்கிளைப் பிரியத்தையே இரு பக்கத்து அன்பும் கலக்கும் பிரியமாக மாற்றலாம் என்ற நம்பிக்கை இரத்தினமாலைக்கு இருப்பதாகத் தோன்றியது. அவள் அயராமல் உபசரித்தாள். ⁠இதே நிலைமையில் சில தினங்கள் கழிந்தன. எவ்வளவு தான் உபசாரங்கள் இருந்தாலும் சிறை வைக்கப்பட்டு விட்டது போல், ஒரு மாளிகையின் உள்ளே இருக்க நேர்ந்தது குறையாகவே தோன்றியது அவனுக்கு. ⁠‘இப்படி முடங்கிக் கிடப்பதற்காகவா திருக்கானப் பேரிலிருந்து புறப்பட்டு வந்தேன்? களப்பிரர்களிடம் அடிமைப்பட்டுக் கிடக்கும் பாண்டிய நாட்டை மீட்டுக் கொள்வதற்குச் செயலாற்ற முடியாமல், யாழிசையையும் அபிநயங்களையும், சந்தன நறுமணத்தையும் அனுபவித்துக் கொண்டு, கூடல் மாநகரின் கணிகையர் வீதியில் ஓர் இல்லத்தில் இப்படி அகப்பட்டுப் போகவா என் தலையில் எழுதியிருக்கிறது? எதற்காக, யாருக்காக பயந்து நான் இங்கே அடைந்து கிடக்கவேண்டும்? ஆறிலும் சாவு, நூறிலும் சாவு. இந்த நாட்டுப் பண்பாடு, சாவை வாழ்வின் முடிவாக ஒப்புக் கொள்வதில்லை. ஒரு வாழ்வின் முடிவுதான் மரணம் என்றால், இன்னொரு வாழ்வின் தொடக்கம்தான் சாவு. உடலும் ஆன்மாவும் சேர்ந்து உலகை அனுபவிப்பது ஒருவிதமான வாழ்க்கை என்றால், உடலை இழந்து ஆன்மாவினால் மட்டும் உலகை அனுபவிப்பதும்கூட மற்றொரு வகையாகத் தான் இருக்கவேண்டும்! அப்படிப் பட்ட வாழ்வைக் களப்பிரர் கூட்டத்துக்குத் தரவேண்டும். முடியாவிட்டால் நானே அடையவேண்டும்’ என்று எண்ணினான் அவன். நாட்கள் கழியக் கழிய அந்த மாளிகையின் இசை ஒலி சலிப்பூட்டியது. பகலும் இரவும் அர்த்தமில்லாமல் வந்து போய்க் கொண்டிருந்தன. அழகன் பெருமாளும் அவனும் பேசுவதற்குப் பொதுவாக எந்த விஷயமும் இல்லை. அவனோடு எதைப் பேசினாலும் அது ஒரு விவாதத்துக்குத் தோற்றுவாயாகவே முடிவது வழக்கமாகி இருந்தது. குறளன் நேரம் கிடைக்கும் போதெல்லாம் சந்தனத்தை அரைத்துக் குவித்து அந்த மாளிகையையே மணக்கச் செய்து கொண்டிருந்தான். நாட்கள் பேச்சற்ற ஊமைகளாய் இயக்கமற்று, முடம் பட்ட பொழுதுகளை உடையவையாய்க் கழிந்து கொண்டிருந்தன. ஒருநாள் அந்த மாளிகையின் மற்றொரு பகுதியில் அடுக்கியிருந்த தமிழ் ஏட்டுச் சுவடிகளை அவனுக்குக் காண்பித்தாள் இரத்தின மாலை. பழந்தமிழ் இலக்கியங்கள் அடங்கிய அந்தச் சுவடி களைப் பார்த்ததும் அவனுக்கு நான்மாடக்கூடல் நகரத்தின் புகழ்பெற்ற தமிழ்ச் சங்கம் நினைவு வந்தது. களப்பிரர் ஆட்சியில் தமிழ் மொழியும், தமிழ்ப் புலவர்களும், தமிழ் நாகரிகமும், தமிழ்ச் சங்கமும் பொலிவுடனோ, புகழுடனோ இராதென்று தானே கணித்துக்கொள்ள முடிந்தாலும் கோநகரிலேயே வாழும் கணிகை இரத்தினமாலையிடம் அதைப்பற்றித் தெரிந்து கொள்ளக் கருதி அவளை வினவினான் இளையநம்பி: ⁠“களப்பிரர் ஆட்சியில் தமிழ்ச் சங்கத்தாரும், சங்கமும், புலவர்களும் என்ன ஆனார்கள்? நான் கோநகருக்கு வந்த பின்பு உன்னிடமோ, அழகன் பெருமாளிடமோ சங்கத்தைப் பற்றியும் அதன் புகழ்பெற்ற புலவர்களைப் பற்றியும் இதுவரை இங்கே எதுவுமே கேள்விப்படவில்லை!” ⁠“ஏதாவது இருந்தால் அல்லவா கேள்விப்படுவதற்கு? கபாடபுரத்திலும், தென் மதுரையிலும் இருந்த புகழ் பெற்ற தமிழ்ச் சங்கங்களை எல்லாம் கடல்கோள் அழித்தது என்றால், இதைக் களப்பிரர் ஆட்சியே அழித்துவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். முன்பு புலவர்கள் அமர்ந்திருந்த மண்டபங்களில், களப்பிரர்கள் இப்போது தங்கள் குதிரைகளைக் கட்டி இருக்கிறார்கள். ஏடுகளும், சுவடிகளும் குவித்திருந்த இடங்களில் எல்லாம் வாள்களையும் வேல்களையும் குவித்து விட்டார்கள். ஓலைகளில் எழுத்தாணிகள் கீறிய ஒலிகள் கேட்ட இடமெல்லாம் பாலிமொழி இன்று ஒலிக்கத் தொடங்கி விட்டது.” ⁠"ஆயிரங்காலத்து மொழி அழியும்போது, அதை ஒட்டி வளர்ந்த எல்லா நாகரிகமும் நலியத்தான் வேண்டும் போலிருக்கிறது.” ⁠“நலிந்தாலும், வளர்ந்தாலும் அது எதிர்காலத்திற்கு வரலாறு ஆகிறது. தமிழ் நாகரிக வரலாற்றில், தங்கள் காலத்தின் அடிமை முத்திரையாகக் களப்பிரர்கள் இருளைப் பூசியிருக்கிறார்கள்.” ⁠“இரத்தினமாலை! இருளை எப்போதும் நான் முடிந்த முடிவாக ஒப்புக் கொண்டு ஏற்பதில்லை. ஒவ்வோர் இருட்டுக்குப் பின்பும் ஒரு வைகறை உண்டு என்று திடமாக நம்புகிறவன் நான்." “நீங்கள் மட்டு மின்றி எல்லாருமே அப்படித்தான் நம்புகிறோம். ஆனால், கடந்த சில நாட்களாக வெளியே இரவும் பகலும் என்னென்ன நடைபெறுகின்றன என்பதைக்கூட அறிய முடியாமல் நாம் இங்கே முடங்க நேரிட்டதே ? யாரிடமிருந்தும் எந்தச் செய்தியும் தெரியவில்லை. காரி, கழற்சிங்கன், சாத்தன், தேனூர் மாந்திரீகன் செங்கணான் ஆகிய நம் நண்பர்கள் என்ன ஆனார்கள் என்பதும் தெரிய வில்லையே?” என்று கேட்டுக்கொண்டே சற்று முன்பு அங்கு வந்திருந்த அழகன் பெருமாள் காரியக் கவலையோடு பேசினான். அந்த மாளிகையில் கழிந்த ஊமை நாட்களில் முதன் முதலாக அழகன் பெருமாள் தன்னிடம் மெளனத்தைக் கலைத்துக்கொண்டு பேசவந்திருப்பது இளையநம்பிக்குப் புரிந்தது. சில நாட்களாக அவனுக்குத் தன் மீது ஏற்பட்டிருந்த மனத்தாங்கல் மாறித் தன்னோடு மேலே என்ன செய்வது என்பது பற்றிப் பேச முன்வரும் நிலைமை இயல்பாக ஏற்பட்டிருப்பதை இளையநம்பி வரவேற்றான் என்றாலும் அழகன் பெருமாளின் வினா அவனுள் கோபமூட்டியது: “காரி, கழற்சிங்கன் முதலிய நண்பர்களைத் தேடவும், உயிருக்கு ஆபத்தின்றிப் பாதுகாக்கவும் நாம் விரைந்து ஆவன செய்யவேண்டும் என்று கோட்டைக் கதவுகள் அடைக்கப் பட்டபோதிலிருந்து நான் விடாமல் உன்னிடம் வற்புறுத்தி வருகிறேன் அழகன் பெருமாள்! அப்போதிருந்து நீதான் அவர்களைப் பற்றிக் கவலைக்கு இடமின்றி மறுமொழி கூறியிருக்கிறாய். ‘அவர்கள் எவ்விதத்திலும் பத்திரமாக இந்த மாளிகைக்குத் திரும்பிவந்து விடுவார்கள்'- என்று உறுதியளித்திருக்கிறாய். உன்னுடைய அளவுக்கு மீறிய தன்னம்பிக்கை எனக்கே வியப்பை அளித்திருக்கிறது. இப்போதோ நீயே என்னிடம் வந்து வேறுவிதமாகக் கேட்கிறாய். நான் என்ன மறுமொழி கூறுவது உனக்கு?” -என்று சிறிது சினத்துடனேயே அழகன் பெருமாளைக்கேட்டான் இளையநம்பி. 28. கபால மோட்சம் அழகன் பெருமாள் மீண்டும் அதையேதான் சொன்னான். ஆனால், கோபப்படாமல் நிதானமாகவும் பொறுமையாகவும் சொன்னான்: “காரி, கழற்சிங்கன் முதலிய நால் வரும் பத்திரமாக இந்த மாளிகைக்குத் திரும்பிவந்து சேரக் கூடியவர்கள் என்பதைப் பொறுத்து இப்போதும் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. நகரத்தின் பரபரப்பான சூழ்நிலைக் கேற்ப அவர்கள் முயற்சியையும் மீறி ஏதாவது நடந்திருக்குமோ என்றுதான் இப்போது சந்தேகப்படுகிறேன்.” இளையநம்பி இதற்கு மறுமொழி கூறவில்லை. புன்முறுவல் பூத்தான். சிறிது நேரம் பொறுத்து அழகன் பெருமாளை நோக்கி, “உன்னிடம் நம்பிக்கையும் இருக்கிறது! சந்தேகமும் இருக்கிறது! இந்த இரண்டில் எது எப்போது இருக்கிறது என்பதைத்தான் உன்னோடு பழகுகிறவர்கள் தெரிந்து கொள்ள முடியவில்லை-” என்றான் அவன். “சொல்லப் போனால் வாழ்க்கையே இந்த இரண்டிற்கும் நடுவில் எங்கோதான் இருக்கிறது"- என்று அவர்களுடைய உரையாடலில் குறுக்கிட்டாள் இரத்தினமாலை. அவளுடைய இந்த வாக்கியம் தன்னையும் அழகன் பெருமாளையும் ஒன்று சேர்த்து வைக்கும் தொனி உடையதாக இருப்பது இளையநம்பிக்குப் புரிந்தது. அவன் உள்ளூற நகைத்துக் கொண்டான். மதுராபதி வித்தகரின் பயிற்சிக்குப் பின் ஓர் இளம் கணிகையும்கூடத் தேர்ந்த அரச தந்திரியாயிருப்பதை அவ்வப்போது நிரூபித்துக் கொண்டிருப்பது அவனுக்குப் புரிந்தது. அதேசமயத்தில் முழுவேகத்துடனே குத்திக் காட்டுவது போலவோ சாடுவது போலவோ ஏதாவது பேசினால்தான் அங்கிருந்து கோபித்துக் கொண்டு போய் விடக் கூடும் என்ற எச்சரிக்கையும், அவளுடைய பேச்சுக்களில் இப்போது கலந்திருப்பதை அவன் உணர முடிந்தது. ‘இவ்வளவு பெரிய சாகஸத்துக்குரியவளை உணர்வின் வசப்பட்டுத் தவறாகப் புரிந்து கொள்ள இருந்தோமே'- என்று இப்போது, அவனுக்கே வருத்தமாகவும் வெட்கமாகவும் கூட இருந்தது. கோட்டைக் கதவுகள் அடைக்கப்பட்ட தினத்தன்று அரண்மனைக்குப் போய் விட்டு வந்தபின், இரத்தினமாலை மறுபடி அரண்மனைக்குப் போகாததால் அரண்மனை ஒற்றர்கள் மூலமும் புதிதாக எதுவும் தெரியவில்லை. உப வனத்து முனையிலும், வெள்ளியம்பல முனையிலும் யாரும் புகுந்து புறப்பட்டு வர முடியாததாலோ என்னவோ நிலவறை மூலமாகவும் செய்திகள் தெரியவில்லை. அந்த மாளிகையில் அவர்களுக்குக் கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டது போல் இருந்தது.இப்படியே பல நாட்கள் கழிந்தன. ⁠உணவு முடிந்த பின் அன்றிரவு முதல் முறையாக அழகன் பெருமாளும், இளையநம்பியும், இரத்தினமாலையும் மாளிகையின் நடுக்கூடத்தில் அமர்ந்து வட்டு ஆடிக் கொண்டிருந்தனர். குறளன் சந்தனம் அரைக்கும் பகுதிக்கு உறங்கப் போயிருந்தான். விளையாடத் தொடங்கியவர்கள், இரவு நெடு நேரமாகியும் நிறுத்தாமல், ஆடிக் கொண்டிருந்தார்கள். நள்ளிரவுக்கு மேலும் ஆகிவிட்டது. விளையாட்டில் தொடர்ந்து இரத்தின மாலையின் காய்களே வென்று கொண்டிருந்தன. ⁠“ஆட்டத்தின் காய்கள் கூட அழகிய பெண்களிடம் மயங்கி விடுகின்றன” என்றான் இளையநம்பி. ⁠“ஆனால் ஆடுபவர்கள் ஒருபோதும் மயங்குவதில்லை” என்று உடனே மறுமொழி கூறி விட்டு, அவனை ஓரக் கண்களால் பார்த்தாள் இரத்தினமாலை. அழகன் பெருமாள் இதைக் கேட்டுச் சிரித்தான். அப்போது யாரோ ஓடி வரும் ஓசை கேட்டு விளையாட்டில் கவனமாயிருந்த மூவருமே திடுக்கிட்டுத் தலை நிமிர்ந்தனர். ⁠கைகால் பதறி நடுங்கக் குறளன் தூக்கம் கலைந்து, சிவந்த கண்களோடு அவர்கள் எதிரே வந்து நின்றான். ⁠உடனே பேசுவதற்குச் சொற்கள் வராமல், சந்தனம் அரைக்கும் பகுதியைச் சுட்டிக் காட்டிப் பயத்தோடு வார்த்தைகளை அரற்றினான் அவன். உடனே விளையாட்டை நிறுத்தி விட்டு மூவருமே எழுந்து விட்டனர். அவனோடு சந்தனம் அரைக்கும் பகுதிக்குச் சென்றதும், அங்கே நடுவாக இருந்த சந்தனக் கல்லருகே காதை வைத்து உற்றுக் கேட்டு விட்டு, அழகன் பெருமாளையும் கீழே படுத்தாற் போல் சாய்ந்து அதைக் கேட்கச் சொல்லிச் சைகை செய்தான் குறளன். நால்வரிடையேயும் எதையோ எதிர் பார்க்கும் பேச்சற்ற மெளனம் வந்து சூழ்ந்தது. அழகன் பெருமாள் சந்தனக் கல்லை ஒட்டிச் செவியைச் சாய்த்துக் கேட்ட பின் இளையநம்பியையும் அப்படியே கேட்குமாறு குறிப்புக் காட்டினான். அவனும் அவ்வாறே செய்தான். பின்பு இரத்தினமாலையும் கீழ்ப்பக்கமாகக் குனிந்து உற்றுக் கேட்டாள். ⁠கீழே நிலவறைப் படிகளில் யாரோ நடக்கும் ஒலி கேட்டது. அப்படி நடப்பவர் வேண்டியவராகவோ, வழி தெரிந்தவராகவோ இருந்தால் அடையாளமாகக் கல்லைத் தூக்கிக் கொண்டு மேலே வந்து விட முடியும். அப்படி வராமல் கீழேயே நடப்பதிலிருந்து, அந்நியன் யாரேனும் வந்து விட்டானோ என்ற பயம் அவர்களைச் சூழ்ந்தது. ஒருவனுடைய காலடி ஓசைதான் கேட்கிறது என்றாலும், பின்னால் வரிசையாகப் பல பூத பயங்கரப் படை வீரர்கள் நிற்கலாமோ என்று அழகன் பெருமாளின் கற்பனையில் ஒரு சந்தேகம் மருட்டியது. பல நாட்களாக அந்த வழியின் மூலம் அங்கே யாரும் வராததாலும், வந்திருப்பவரும் உடனே அடையாளமாக மேல் வாயிலின் மூடு கல்லைத் தூக்காமல் கீழே படிகளிலேயே தடம் தெரியாமல் நடமாடுவதாலும் அவர்கள் சந்தேகப்படுவதற்கும், தயங்குவதற்கும், பயப்படுவதற்கும் நிறைய நியாயமிருந்தது. ஒரு தாக்குதலை எதிர் கொள்ள ஆயத்தமாக வேண்டிய நிலையில் அப்போது அவர்கள் இருந்தார்கள். வருகிறவன் அந்நியனாயிருந்து, அவன் இந்த வழியாக வெளியேறி, இப்படி ஒரு வழி இருப்பதைக் கண்டு உயிர் பிழைத்து விடுவானாயின், அப்புறம் தாங்கள் உயிர் பிழைக்க முடியாது என்பதை அவர்கள் உணர்ந்திருந்தார்கள். மின்வெட்டும் நேரத்தில் இளையநம்பி ஒரு திட்டமிட்டான். அந்த அறையின் ஒரு மூலையில், கருமரத்தில் செய்த இரும்புப் பூண் பிடித்த உலக்கைகள் இரண்டு இருந்தன. அதில் ஒன்றை எடுத்துக் கொள்ளும்படி அழகன் பெருமாளுக்குக் குறிப்புக் காட்டிவிட்டு, இன்னொன்றைத் தான் கையில் எடுத்துக் கொண்டு சந்தனக்கல்லை மேற்புறம் இருந்தபடியே மெல்லத் தூக்கி நகர்த்தும்படி குறுளனுக்கும் இரத்தின மாலைக்கும் சைகை செய்தான் இளையநம்பி. அவன் திட்டப்படி வந்திருப்பவனோ, வந்திருப்பவர்களோ எவ்விதமாகவும் உயிர் தப்பமுடியாது. இந்த வழி கண்டுபிடிக்கப்பட்டுக் களப்பிரர்களிடம் அகப்பட்டு விட்டால், தங்களுடைய எல்லா வழிகளும் அடைபட்டு விடும் என்ற இறுதிப் பாதுகாப்பு உணர்வின் எல்லையில், அவர்கள் அப்போது மிக எச்சரிக்கையோடு இருந்தார்கள். கீழே இருப்பவன் ஏதோ வலியில் அரற்றுவது போன்ற தீன ஒலிகளுடன் மூச்சு இரைக்க, இரைக்க நடந்து கொண்டிருப்பதைக் கூட அவர்கள் வெளிப்புறம் கேட்க முடிந்தது. வந்திருப்பவன் நிலவறை வழிக்கு முற்றிலும் புதியவனாக இருந்தாலொழிய, இப்படி மூச்சு இரைக்க நேருவது சாத்தியமில்லை என்றும் அநுமானம் செய்தார்கள் மேலே இருந்தவர்கள். ⁠எதிரெதிர்ப் பக்கங்களில் உலக்கைகளோடு அழகன் பெருமாளும், இளையநம்பியும் நின்று கொண்டபின், மேற்புறம் மூடியிருந்த சந்தனக்கல்லை மெல்ல நகர்த்தி எடுத்தார்கள் குறளனும் இரத்தினமாலையும். ஓரிரு கணங்கள் மயான அமைதி நிலவியது அங்கே. கீழே நிலவறைத் துவாரத்தின் இருளிலிருந்து யாரும் மேலே வரவில்லை. ஆனால் உட்புறம் மூச்சு விடுகிற ஒலி கோரமாகக் கேட்டது. மேற்பக்கம் கைகளில் உலக்கைகளோடு நின்ற இருவரும் இந்த வழியாக வெளியே நீட்டப்படும் தலைக்குக் ‘கபால மோட்சம்’ அளிப்பதென்ற உறுதியுடன் நின்று கொண்டிருந்தனர். அவர்கள் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தபோதே கீழ்ப்புறமிருந்து வெண்மையாக ஏதோ மேல் நோக்கி எழுவது தெரிந்தது. வந்திருக்கும் மனிதனின் தலைப்பாகை என்று அதை அவர்கள் நினைத்தனர். ஆனால்... என்ன கோரம்! பச்சை மூங்கில் பிரம்பில் ஒரு பயங்கரமான கபாலமே மெல்ல மெல்ல மேலே வந்தது. எதிர்பாராதவிதமாக மேலே கழியில் கோத்த மண்டை ஓடு வரவே முந்திக்கொண்டு அதை அடிப்பதற்கு ஓங்கியிருந்த உலக்கைகள் திடுக்கிட்டுப் பின் வாங்கின. இருட்பிலத் திலிருந்து மேல் நோக்கி வந்து ஆடும் அந்தக் கபாலம் அவர்களை நோக்கிக் கோரமாக நகைப்பது போலிருந்தது. கீழே அந்த மூங்கில் பிரம்பைப் பிடித்திருந்தவனின் கை நடுங்கியதாலோ என்னவோ மேலே அந்தக் கபாலமும் நடுங்கி ஆடியது. பயத்தினால் இரத்தினமாலை இரண்டு கைகளாலும் முகத்தை மூடிக்கொண்டாள். எல்லாருக்கும் மேனி புல்லரித்திருந்தது. தொடர்ந்து வேறெதுவும் நிகழாமல் அந்தக் கபாலமே கழியில் ஆடிக்கொண்டிருக்கவே அழகன் பெருமாள், “ஒரு தீப்பந்தம் ஏற்றிக் கொண்டு வா” என்று மெல்லிய குரலில் குறளனிடம் கூறினான். குறளன் உள்ளே விரைந்தான். சில கணங்களில் தீப்பந்தத்தோடு அவன் திரும்பி வந்தான். 29. தேனூர் மாந்திரிகன் தன் கையிலிருந்த இரும்பு உலக்கையை குறளனிடம் கொடுத்து விட்டுத் தீப்பந்தத்தை வாங்கிக்கொண்டு நிலவறைக்குள்ளே சிறிது தொலைவு ஒளி தெரியுமாறு அதை கீழே தணித்துப் பிடித்தான் இளைய நம்பி. அதே சமயத்தில் “இந்தக் கபாலத்தையும் கழியையும் பற்றி இழுத்து மேலே எறி” என்று இரத்தினமாலையிடம் கூறினான் அழகன்பெருமாள். அந்தக் கபாலத்தைக் கைகளாலே தொடுவதற்குக் கூசி அருவருப்புக் கொண்டிருந்தாலும், அவள் நடுங்கும் கைகளால் அதைக் கழியோடு பற்றி இழுத்தாள். கீழே அதைப் பிடித்துக் கொண்டிருந்தவன் அழுத்திப் பிடித்துக் கொள்ளாததாலோ, அல்லது அவன் கைகள் தளர்ந்திருந்ததாலோ இரத்தினமாலை பற்றி இழுத்தவுடன் அந்தக் கழியும் கபாலமும் மேலே வந்து விழுந்து விட்டன. ஆனால், அதேசமயம் கீழே நிலவறையில் அதைப் பிடித்திருந்தவன் ஈனக்குரலில் வலி எடுத்து முனகுவது போல் கேட்கவே அவர்கள் நால்வருமே ஏக காலத்தில் வியப்படைந்து விட்டனர். ⁠உடனே அழகன் பெருமாளுக்கு முற்றிலும் புதியதொரு சந்தேகம் எழுந்தது. அவன் தன் கையிலிருந்த உலக்கையை மூலையில் வைத்து விட்டுத் துணிந்து கீழே நிலவறைக்குள் இறங்கினான். கீழே இறங்கிக் கொண்டு மேற்புறம் இளையநம்பியிடம் இருந்த தீப்பந்தத்தைக் கை நீட்டி வாங்கிப் படி மேல் தளர்ந்து கிடந்தவனைப் பார்த்ததும், “ஐயோ! இதென்ன கோரம்?- உனக்கு இது எப்படி நேர்ந்தது செங்கணான்?” என்று கதறாத குறையாக, உருகிய குரலில் வினாவினான் அழகன்பெருமாள். செங்கணானை மேலே தூக்கும் முயற்சிகள் உடன் மேற்கொள்ளப்பட்டன. ⁠நிலவறை வழியின் ஏதோ ஒரு முனையிலிருந்து, அதைக் கண்டுபிடித்து அந்த மாளிகையைக் கைப்பற்றுவதற்காகக் களப்பிரர்கள் பூத பயங்கரப் படை வீரர்கள் சிலரை அனுப்பியிருக்கக் கூடுமோ என்ற பயத்துடனேயே அந்த விநாடி வரை கவலைப்பட்டுக் காரியங்களைச் செய்த அவர்களுக்கு, இப்போது படவேண்டிய கவலையும் வருத்தமும் வேறாக இருந்தது. தோளிலும் முன் கைகளிலும் இரணகளமாய் இரத்தம் பீறிட்டுப் பாயக் காயமுற்று வந்து சேர்ந்திருந்த தேனூர் மாந்திரீகன் செங்கணானைத் தன் கைகளால் மேலே தூக்கினான் அழகன்பெருமாள். இளையநம்பி மேற்புறமிருந்து கைத்தாங்கலாகச் செங்கணானின் உடலை வாங்கினான். ⁠“தேனூர் மாந்திரீகனுக்கு என்ன நேர்ந்தது? அவன் ஏன் இப்படிப் படுகாயமுற்று நிலவறை வழியே வந்து இங்கே விழுந்தான்?”- என்பதை எல்லாம் அவனிடமே கேட்டுத் தெரிந்து கொள்ளக் கூடிய நிலையில் அவன் அப்போது இல்லை. பேசக் கூடச் சக்தியற்றுச் சோர்ந்து போயிருந்தான் அவன். மேலே அவனைத் தூக்கியதும் நிலவறை மூடப்பட்டது. ⁠‘இவ்வளவு ஆபத்தான நிலையிலும் தேனூர் மாந்திரீகன் மூங்கில் கழியில் கபாலத்தைக் கோத்து மேல் நீட்டியது ஏன்?' என்றும் அவர்களுக்குப் புரியவில்லை. ⁠உடனே காயங்களுக்கு மருந்திட்டு அவனைத் தேற்றும் முயற்சிகளை அவர்கள் விரைந்து மேற்கொள்ள வேண்டியிருந்தது. மருந்தரைப்பதற்கும், தைலம் காய்ச்சிக் கொண்டு வரவும் பறந்தாள் இரத்தினமாலை. அவளுடைய சுறுசுறுப்பு இளையநம்பிக்கு வியப்பை அளித்தது. பெண் ஓர் அழகு என்றால், அவளுக்குக் குறிப்பறியும் தன்மையும், விரைவும், சுறுசுறுப்பும் இன்னோர் அழகு. அழகுக்கு அழகு செய்வது போல், இவை இரண்டுமே இரத்தினமாலையிடம் அமைந்திருந்தன. ⁠தவிட்டைத் துணியில் கட்டிக் கொதிக்கும் வெந்நீரில் நனைத்துச் செங்கணானின் உடலில் ஒத்தடம் கொடுத்தார்கள் அழகன் பெருமாளும் இளையநம்பியும். செங்கணான் ஏதோ நலிந்த குரலில் சொல்ல முயன்றான். அப்போதிருந்த நிலையில் அவன் பேசுவது நல்லதில்லை என்று கருதிய இளையநம்பி, ‘அமைதியாயிருக்குமாறு’ அவனுக்குச் சைகை செய்தான். ⁠“இப்போது நீயிருக்கும் தளர்ந்த நிலையில் எதுவும் பேசவேண்டாம். பின்னால் நாங்களே எல்லாம் கேட்டுத் தெரிந்து கொள்கிறோம்" என்று அவனிடம் கூறி, அவனை அமைதியடையச் செய்தார்கள் அவர்கள். செங்கணான் முற்றிலும் எதிர்பாராதவிதமான இந்த நிலையில் வந்து சேர்ந்ததால், அன்றிரவு அவர்கள் உறக்கத்தை இழந்து அவனுக்குப் பணிவிடை செய்ய நேர்ந்தது. அந்தப் பணிவிடைகளால் அவர்களில் யாரும் சோர்வடையவில்லை. ⁠‘இந்தப் பணி இழிந்தது. இந்தப் பணி உயர்ந்தது’ என்று பாராமல் கணிகை இரத்தினமாலை, தன் பொன்னுடலும், பூங்கைகளும் வருந்த அன்றிரவு உழைத்ததைப் பார்த்த போது, இளையநம்பியின் மனம் அவளிடம் கருணை மயமாய் நெகிழ்ந்தது. இளகி இணைந்தது. ⁠கோநகரில் கணிகையரின் சிரிப்புக்கும், அன்புக்கும் கூட விலை உண்டு என்று அவன் கேள்விப்பட்டிருந்தான். அவன் கண் காணவே என்ன கேள்விப்பட்டிருந்தானோ, அதைப் பொய்யாக்கிக் கொண்டிருந்தாள் இரத்தினமாலை. அந்த மாளிகையில் தான் தங்கியிருந்த நாட்களில் காரணமின்றி, அந்த இளம் கணிகையைச் சந்திக்கும் முன்பே, அவள் மேல் தன் மனம் கொண்டிருந்த வெறுப்பு மாறி, நம்பிக்கை வரப் பெற்றிருந்தாலும் செங்கணானுக்கு உதவிய இரவில், இளையநம்பிக்கு அவள் மேல் இனம் புரியாத பாசமே உண்டாகியிருந்தது. இவளைச் சந்திக்கும் முன், ஒரு குறும்புக்காக இவளைக் குறைத்துப் பேசிய தன்னுடைய சொற்களைக் கேட்ட போதெல்லாம் அழகன் பெருமாள் ஏன் உடனே சினந்து சீறினான் என்பது இப்போது இளையநம்பிக்கு நன்றாகப் புரிந்தது. ⁠‘ஆண்கள் செய்யவேண்டிய காரியங்களையே இங்கே பெண்கள்தான் செய்தாக வேண்டியிருக்கிறது' என்று இரத்தினமாலை தன்னைக் குத்திக் காட்டிப் பேசிய போது கூட அவளைத் தான் புரிந்து கொள்ளாத காரணத்தால், ‘அளவுமீறி அவளிடம் சினம்கொண்டு விட்டோமோ' என்று இப்போது எண்ணிக் கொண்டான் அவன். புண்பட்டு வந்திருக்கும் ஒருவனிடம் அவள் காட்டிய பரிவு, அவளிடம் அவன் பரிவு கொள்ளச் செய்வதாயிருந்தது; மிகவும் கனிவு கொள்ள வைப்பதாயிருந்தது. ⁠மறுநாள் விடிந்ததும் தேனூர் மாந்திரீகன் ஓரளவு தெளிவடைந்திருந்தான். அவனிடமிருந்து என்னென்ன செய்திகள் தெரியப் போகின்றன என்று அறியும் ஆவலில் அவர்கள் காத்திருந்தனர். ஓரளவு அவன் பேச முடியும் என்ற அளவிற்கு நிலைமை தேறியிருந்ததை அறிந்து அழகன் பெருமாள் அவனைக் கேட்டான். ⁠“செங்கணான்! உனக்கு இந்த நிலைமை எப்படி ஏற்பட்டது? எவரால் ஏற்பட்டது? உன்னோடிருந்த காரி, கழற்சிங்கன், சாத்தான் ஆகியோர் என்ன ஆனார்கள்?” ⁠“எனக்கு இந்த நிலைமை எப்படி ஏற்பட்டது என்பதை அப்புறம் சொல்கிறேன்...! காரி, கழற்சிங்கன், சாத்தான் ஆகிய மூவரும் இங்கே வரவில்லையா? அவர்கள் மூவரும் இங்கே வந்து, உங்களோடு பத்திரமாக இருக்கிறார்கள் என்றல்லவா நினைத்துக் கொண்டிருக்கிறேன்? நாங்கள் நால்வருமாக உப வனத்திலிருந்து கோட்டைக்குள் புறப்பட்டுச் சென்ற தினத்தன்று ஆலவாய்ப் பகுதியில், நான் தனியாகப் பிரிந்து சென்றேன். அவர்கள் மூவரும் என்னிடம் விடைபெற்று வெள்ளியம்பலப் பகுதிக்குப் போனார்கள். நண்பகலுக்குச் சிறிது நேரம் இருக்கும்போது இன்னும் சிறிது நாழிகைகளில் கோட்டைக் கதவுகள் மூடப்படலாம் என்பது போன்ற பரபரப்பு ஆலவாய்ப் பகுதியிலேயே தெரிந்தது. யாத்ரீகர்கள் மூட்டை முடிச்சுகளோடு ஓடினர். பூத பயங்கரப் படை அங்கங்கே புகுந்து நெருக்கத் தலைபட்டது. உடனே ஏதோ நடக்கக்கூடாதது நடக்கப் போகிறது என்று புரிந்து கொண்டு நான் ஆலவாய்ப் பகுதியிலிருந்தே, கிழக்குக் கோட்டை வாயிலுக்கு விரைந்து, அகநகரிலிருந்து வெளியேறிவிட்டேன். கோட்டைக்கு வெளியேயும் கடுமையான பாதுகாப்பு இருந்தது. என்னைச் சில பூத பயங்கரப்படை வீரர்கள் பின்தொடர்ந்து கண்காணிக்கிறார்களோ என்ற ஐயப்பாடு இருந்ததனால், உப வனத்துக்குத் திரும்பாமல் நான் நேரே தேனூருக்குச் சென்றேன். ⁠தேனூரிலும் என்னை அபாயம் சூழ்ந்திருந்தது. சுற்றுப்புறச் சிற்றூர்களிலும் கோநகரின் உள்ளேயும் ஆயிரக் கணக்கானவர்கள் களப்பிரர் ஆட்சியை எதிர்த்துத் திடீரென்று கலகம் புரியக்கூடும் என்ற அநுமானத்தின் காரணமாகக் களப்பிரர்கள் கடுமையான பாதுகாப்புகளைச் செய்துவிட்டார் கள். நான் தேனூரில் இருந்து பல நாட்கள் வெளியேறவே முடியாமல் போயிற்று. கடைசியில், நேற்று முன் தினம் மாலை ‘தேனூர் மயானத்தின் வன்னி மரத்தருகே, தன் மனைவிக்குப் பேய் ஓட்டுவதற்காக’ ஒரு மறவன் வந்து கூப்பிட்டான். அதுதான் நல்ல சமயமென்று அந்த மறவனுடைய வண்டியில் மறைந்து தப்பி, மயானத்துக்குப் போனேன். அன்றிரவு, மயானத்திலிருந்து நான் திரும்பவே இல்லை. ஊருக்குள்ளும் சுற்றுப்புறங்களிலும் களப்பிரர்கள் என் தலையைச் சீவி எறியக் காத்திருப்பது எனக்குப் புரிந்தது. மயானத்தில் இருந்த வன்னி மண்டபத்துப் புதரிலேயே பதுங்கியிருந்தேன். சுடுகாட்டு நரிகள் என் மேல் படை எடுத்தன. பசிச் சோர்வில் நான் சக்தியற்றிருந்தேன். நரிகளை நான் வெல்ல முடியவில்லை. அவற்றின் பசிக்கு நான் இரையாகி முடிந்து விடாமல் தப்ப முயன்றும், நான் முழு வெற்றி அடையவில்லை. ⁠தேனூரிலிருந்து முன்னிரவில் புறப்பட்டு, வையையின் மறுகரையில் வந்து நீந்தியே இக்கரைக்கு வந்தால், இங்கே உப வனத்திலும் பூத பயங்கரப் படை இருந்தது. பேய் ஓட்டுவதற்குக் கொண்டு வந்திருந்த என் சாதனங்களைப் பயன்படுத்தி, மிகத் தந்திரமாக நடு இரவுக்கு மேல்தான் நிலவறை வழியில் நான் இறங்க முடிந்தது. நரி கடித்த காயங்களின் வலியும், கடும் பசியும் என்னை வாட்டின. ஏறக்குறைய முக்காலும் செத்து விட்டது போன்ற நிலையில்தான் நிலவறையில் நான் நடக்க முடிந்தது. இங்கே வந்த பின்பும், எனக்கிருந்த பயத்தில் இந்த மாளிகையும் களப்பிரர் வசப்பட்டிருக்குமோ என்று அஞ்சியே முதலில் மூங்கிற்கழியில் என் கை வசமிருந்த கபாலத்தைக் கோத்து நீட்டினேன். குரல் கொடுத்து நிலைமை அறியவும் அஞ்சினேன். நல்ல வேளையாக நீங்கள் என்னைக் காப்பாற்றினீர்கள். சுடுகாட்டு நரிகள் என்னைக் கிழித்துப் பாதி கொன்று விட்டன.” ⁠“அட பாவமே! நிலைமைகள் இவ்வளவு கெட்டுப் போயிருப்பதால்தான், எங்கிருந்தும் எதுவுமே நமக்குத் தெரியவில்லை. மோகூரில் பெரியவர் எப்படி இருக்கிறாரென்று தேனூரில் ஏதாவது கேள்விப்பட்டாயா நீ?” என்று இளையநம்பி கேட்டபோது ‘இல்லை’ என்பதற்கு அடையாளமாகத் தலையசைத்தான் செங்கணான். அவர்கள் யாவரும் கவலையில் ஆழ்ந்தனர். அந்த நிலையில் இரத்தின மாலையே மீண்டும் உதவுவதற்கு முன்வந்தாள். இளைய நம்பியின் கண்கள் கனிவுடன் அவளை நோக்கின. அந்தக்கனிவை அங்கீகரித்துக் கொள்வதுபோல் அவளும் அவனைப்பார்த்தாள். இருவர் கண்களும் குறிப்பினாற் பேசின. 30. சாகஸப் பேச்சு “நீங்கள் ஒப்புக் கொண்டால் இப்போதும்கூட நான் ஓர் உதவி செய்யமுடியும்!... இன்று மாலையிலேயே இருந்த வளமுடையார் கோயிலுக்குச் சென்று வழிபாட்டைச் செய்தபின் உங்களுக்காக யானைப் பாகன் அந்துவனைக் கண்டுவர முடியும்.” “இப்போதுள்ள நிலையில் அது அபாயகரமானது"-- என்றான் அழகன் பெருமாள். “நீண்ட நாட்களாக இங்கே வராததிலிருந்து அந்துவனைப் பற்றியே எனக்குச் சந்தேகமாயிருக்கிறது. அவனுக்கும் ஏதாவது நேர்ந்திருக்குமோ என்னவோ?” என்று ஐயத்தோடு கூறினான் இளையநம்பி. அதைக் கேட்டுக் கலீரென்று சிரித்தாள் இரத்தினமாலை. இளையநம்பி உடனே கடுமையாக அவளை நோக்கிக் கேட்டான்: “ஏன் சிரிக்கிறாய்?” ஒருகணம் தயங்கியபின் பருகிவிடுவது போலவும், ஆவல் நிறைந்து ததும்பும் தன் விழிகளின் ஓரங்களால் அவனுடைய முகத்தைப் பார்க்க முயன்றபடியே-- “அந்துவனைப் பற்றி நாம் இங்கிருந்து கவலைப் படுவது போல் நம்மைப் பற்றி அவனும் அங்கிருந்து கவலைப்படலாம் என்று நினைத்தேன். சிரிப்பு வந்தது"-- என்றாள். ⁠“அப்படியானால், அவனுக்கு எதுவும் நேர்ந்திருக்கக் கூடும் என்று நினைக்கவும் அவசியமில்லை என்கிறாயா நீ?” ⁠“சந்தேகமென்ன? நான் இப்போது சென்றாலும் யானைக் கொட்டாரத்தில் அவனைக் காண முடியும்!” ⁠“தெய்வ வழிபாட்டுக்குப் போகிற நீ என்ன காரணத்தோடு யானைக் கொட்டாரத்தில் போய் அவனிடம் பேசிக் கொண்டு நிற்க முடியும்?” ⁠“அது நான் படவேண்டிய கவலை. என்னால் முடியும் என்பதால்தான் நான் கவலைப்படாமல் போய்த் திரும்ப, முன் வருகிறேன்.” ⁠“இப்படி வெடுக்கென்று மறுமொழி கூறும்போதெல்லாம்தான் உன்னைக் கடுமையாகக் கோபித்துக் கொள்ள வேண்டும் என்று எனக்குத் தோன்றுகிறது இரத்தினமாலை!” ⁠“ஆகா! நிறையக் கோபித்துக் கொள்ளுங்கள். எனக்கும் அது பிடிக்கிறது. திருக்கானப்பேர்க்காரர்கள் முகங்களில் புன்சிரிப்பை விடக் கோபம்தான் அழகாக இருக்கும் போல் தோன்றுகிறது.” ⁠“அப்படியானால் என் கோபத்திற்கு நீ பயப்பட மாட்டாய்! அல்லவா?” ⁠“ஆண்களின் கோபத்தை எப்படி வெற்றி கொள்வதென்கிற இரகசியம் எனக்குத் தெரியும்?” ⁠இதைச் சொல்லும்போது அவள் குரலில் தொனித்த இங்கிதமும், முகத்தில் ஒளிர்ந்த நாணமும், கண்களிலும் இதழ்களிலும் தோன்றி மறைந்த முறுவலும் இளைய நம்பிக்குப் புரிந்தன. அவள் ஒரு தேர்ந்த மந்திரவாதியின் சாகஸ்த்தோடு அவனை மயக்கினாள் அப்போது. ⁠காரணம் புரியாத வெறுப்போடு தொடங்கிய ஒரு நட்பு இப்போது இப்படிக் காரணம் புரியாத மயக்கத்தில் ஆழ்த்தத் தொடங்கியிருந்தது. அவன் மாறியிருந்தான். அவள் மாற்றியிருந்தாள். அவன், அவளுடைய இதயத்தின் யாழ் ஒலியை இன்னும் நெருங்கிக் கேட்க முடியாதபடி அழகன் பெருமாளும், குறளனும், மாந்திரீகன் செங்கணானும் அருகில் இருந்தார்கள். ⁠ஆயிரம் பேர் அருகிலிருந்தாலும், புரிகிறவனுக்கு மட்டும் புரிய வைக்கும் நயமான வார்த்தைகளில் பேசும் சாகஸம் அந்த இளம் கணிகையிடம் இருந்தது. சொற்களைக் கவியின் நயத்தோடு தொடுத்துத் தொடுத்து அனுப்புகிற வித்தையை அவள் கற்றிருப்பது போல் தோன்றியது. மனத்தினால் தங்களுக்கு இடையே ஏதோ புரிவது போலவும், நெருங்குவது போலவும் உணர்ந்தான் இளையநம்பி. ஒரு வெறுப்பின் முடிவு இவ்வளவு பெரிய பிரியமா என்று நினைத்த வேளையில், தான் சுலபமாகத் தோற்றது எப்போது என்று அவனுக்கே புரியவில்லை. தோற்றிருக்கிறோம் என்பது மட்டும் புரிந்தது. வென்றவள் மேல் சீறவோ, சினம் கொள்ளவோ முடியாமல் இருந்ததுதான் ஏனென்று அவனுக்கே தெரியவில்லை. ⁠அன்று மாலை அவள் இருந்த வளமுடையார் கோவிலுக்குச் சென்று வர அவர்கள் எல்லோரும் இணங்கினார்கள். அந்துவனைக் காணவும் அவனிடமிருந்து ஏதாவது தெரிந்தால் அதை அறிந்து வரவும் அவள் சென்று வருவதில் தவறில்லை என்றே இளையநம்பிக்கும் தோன்றியது இப்போது. ⁠இரத்தினமாலை தன் வலது கையில் பூக் குடலையோடு பணிப் பெண் பின் தொடரப் புறப்பட்ட போது-- ⁠“இருந்த வளமுடைய பெருமாளிடம் இன்று என்ன வரம் வேண்டுவதாக உத்தேசமோ?" என்று அவளைக்கேட்டான் இளையநம்பி. அவள் அவனை ஏறிட்டுப் பார்த்து முக மலர்ந்தாள். பின்பு நிதானமாக மறுமொழி கூறினாள்:- ⁠“நேற்று வரை ‘நாட்டைக் களப்பிரர்களிடமிருந்து காப்பாற்று’ என்று வேண்டுவதைத் தவிர வேறு சொந்த வரம் எதற்கும் என்னிடம் விருப்பமின்றி இருந்தது. இன்று அதற்கும் அதிகமாகச் சொந்த முறையிலும் கூட ஒருவரம் வேண்டலாம் என்று தோன்றுகிறது.” இதன் அர்த்தத்தை உள்ளூற உணர்ந்து அவன் புன்னகை பூத்தான். பல்லக்கில் ஏறுவதற்கு முன் அவனை அவள் கேட்டாள்: “இன்றும் நான் திரும்பி வந்த பின்பு நீங்கள் என்னைக் கோபித்துக் கொள்வீர்கள். என் மாளிகையிலிருந்து உடனே வெளியேறி விடுவதாகப் பயமுறுத்துவீர்கள்.” “உனக்கு ஏன் மீண்டும் அப்படி ஒரு கற்பனை?” “கற்பனையில்லை-மெய்யாகவே நீங்கள் அப்படிக் கோபித்துக் கொண்டால்தான் நான் பாக்கியம் செய்தவளாவேன்...” “அது எப்படி?” “நீங்கள் கோபித்துக் கொண்டால்தான் இன்றும் உங்கள் பாதங்களை தீண்டிப் பொறுத்தருளும்படி வேண்டிக் கொள்ள நான் வாய்ப்புப் பெறுவேன். இல்லையானால் உங்களை நான் வேறெப்படி அருகில் நெருங்கவும் வணங்கவும் தீண்டவும் முடியும்?” அவளுடைய இந்தச் சொற்கள் அவனை மிகவும் நெகிழச் செய்தன. ஒரு புதிய உணர்வின் சிலிர்ப்பில் இந்தச் சமர்ப்பணத்தை எப்படி எந்தச் சொற்களைக் கூறி உபசரித்துத் தனக்குள் ஏற்பதென்ற சிந்தனையில் ஓரிரு கணங்கள் அவனுக்குப் பொருத்தமான பதில்களே கிடைக்கவில்லை. பல்லக்கில் ஏறுமுன் சாகஸமான சொற்களின் உரிமைக் காரியாகிய அவள் கூடச் சொற்களின் எல்லைக்கு அப்பால் போய் விழிகளில் நீர் மல்க இருப்பதை அவனும் கண்டான். அவளுடைய அந்தக் கண்ணீரைச் சொற்களால் உபசரிப்பதா, உணர்வினால் ஏற்பதா என முடிவு செய்யவே இயலாமல் சில கணங்கள் திகைத்தான் அவன்.  31. கனவும் நினைவும் இரத்தினமாலையின் அந்த அன்பையும், விநயத்தையும் உடனே விரைந்து எதிர் கொண்டு உபசரிக்கும் பொருத்தமான பதங்களும், உரையாடலும் கிடைக்காத காரணத்தால் உள்ளம் மலர்வதன் உவகையை முகத்திற் காட்டும் மிகச் சிறந்த மொழியாகிய முறுவலை அவளுக்குப் பதிலாக அளித்து விடை கொடுத்தான் இளையநம்பி. மனத்தின் களிப்பை வெளியிடும் ஆயிரம் பதங்கள் மொழியில் இருக்கலாம். ஆனால் அவை ஓர் அழகிய முகத்தின் முறுவலை இன்னோர் அழகிய முகத்தின் முறுவலால் சந்திக்கும் சுகத்துக்கு ஈடாவதில்லை என்று தோன்றியது. மனம் நெகிழ்ந்து கனிந்து பிறக்கும் ஒரு சிரிப்பை அதே நெகிழ்ச்சியும், கனிவும் உள்ள இன்னொரு சிரிப்பால் தான் உபசரிக்க முடியும் என்பதை அப்போது இளையநம்பி மிக நன்றாக உணர்ந்திருந்தான். தேர்ந்த கவியின் சொற்கள் ஒவ்வொருமுறை நினைக்கும் போதும் ஆராயும் போதும் ஒரு புது நயத்தையும், பொருளையும் தருவது போல் இரத்தின மாலையின் புன்னகை அவன் சிந்தனையில் புதுப்புது அணி நயங்களை அளித்துக்கொண்டிருந்தது. அவளை இருந்த வளமுடையார் கோவிலுக்கு[1] வழியனுப்பி விட்டு இளையநம்பியும், அழகன் பெருமாளும், குறளனும் பணிப் பெண்களும் மாளிகைக்குள்ளே திரும்பினர். பாதுகாப்பைக் கருத்திற் கொண்டு உடனே அந்த மாளிகையின் கதவுகள் உட்புறமாகத் தாழிட்டு அடைக்கப்பட்டன. உள்ளே திரும்பியதும் உடனே இளையநம்பியும் அழகன் பெருமாளும் தேனூர் மாந்திரீகன் படுத்த படுக்கையாகக் கிடந்த கட்டிலருகே சென்று அமர்ந்தனர். குறளன் நிலவறை முனையைக் காவல் புரிவதற்காகச் சந்தனம் அறைக்கும் பகுதிக்குச் சென்றான். முதல் நாளிரவு உறக்கம் இல்லாமற் கழித்திருந்த காரணத்தால் இளைய நம்பிக்கு மிகவும் களைப்பாக இருந்தது. மாந்திரீகன் செங்கணானோடு ஆறுதலாகச் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்த பின் அங்கேயே அருகிலிருந்த மஞ்சம் ஒன்றில் போய்ச் சாய்ந்தான் இளையநம்பி. அவன் உடல் மிகவும் அயர்ந்து போயிருந்தது. படுத்த சில கணங்களிலேயே அவன் விழிகளும் நினைவும் சோர்ந்து உறங்கி விட்டான். அழகன் பெருமாளும், தேனூர் மாந்திரீகனும் ஏதோ உரையாடிக் கொண்டிருந்தனர். மெல்ல மெல்ல அவர்கள் உரையாடிக் கொண்டிருந்த சொற்கள் அவன் செவிகளில் மயங்கி ஒலித்தன. தன்னை மறந்து உறக்கத்தில் இளைய நம்பி ஒரு கனவு கண்டான். ஃ⁠ஃ⁠ஃ ஒளிவீசும் முத்துக்களாலும், மணிகளாலும் அலங்கரிக்கப் பட்டதும், மகாமேரு மலையைப் போல பொன்மயமாக உயர்ந்ததுமான ஒரு பெரிய மாளிகையின் படிகளில் ஏறி உள்ளே நுழைவதற்காக வாயிலருகே நின்றுகொண்டிருந்தான் இளையநம்பி. ஏதோ ஞாபகத்தில் வாயிற் கதவுகளைக் கடந்து அந்த மாளிகைக்குள் நுழையுமுன் அவன் திரும்பிக் கீழ் முகமாகத் தான் ஏறிவந்த படிகளைப் பார்க்கிறான். பார்த்ததும் அவன் கண்களும் கால்களும் தயங்கின. கீழே கடைசிப் படியில் கணிகை இரத்தினமாலை தலைவிரி கோலமாக நிற்கிறாள். காடாய் அவிழ்ந்து தொங்கும் கருங்கூந்தலின் நடுவே அவளுடைய எழில்முகம் மேகங்களின் நடுவே நிலவு பூத்தாற்போல் வனப்பு மிகுந்து காட்சியளித்தது. அவன் பார்த்தபின்பும் அவள் அந்த முதற்படியிலேயே தயங்கி நின்று கொண்டிருந்தாள். மைதீட்டிய அவள் விழிகளில் ஏக்கம் உலவிக் கொண்டிருப்பதை அவன் காண முடிந்தது. அவளுடைய சிறிய அழகிய இதழ்கள் அவனிடம் ஏதோ பேசுவதற்குத் துடித்துக் கொண்டிருந்தன. கோவைக் கனிகளைப் போன்ற அந்தச் செவ்விதழ்கள் அவள் முகத்தில் துடிப்பது, மிக மிகத் தனியானதொரு கவர்ச்சியை உடையதாயிருந்தது. அப்படியே கீழே இறங்கி ஓடிப் போய் அந்த முகத்தைத் தன் முகத்தோடு அணைத்துக் கொண்டு அதன் மென்மையையும், வெம்மையையும் அளந்தறிய வேண்டும் போல அவ்வளவு ஆவலிருந்தும், தான் ஏறி வந்து விட்ட படிகளின் உயரத்திலிருந்து மீண்டும் திரும்பிக் கீழே இறங்கிப் போக முடியாமல், ஏதோ தன்னைத் தடுப்பதையும் அவன் உணர்ந்தான். அப்படித் தன்னைத் தடுப்பது எது என்பதையும் அவனால் உடனே புரிந்து கொள்ள முடியவில்லை. அந்த வேளையில் கீழேயிருந்து சோகம் கன்றிய குரலில் கதறுவது போல் உரத்த குரலில் அவள் அவனைக் கேட்கிறாள்: ⁠“ஐயா! நான் இன்னும் கீழே தரையில்தான் இருக்கிறேன், நீங்களோ முத்துகளும் நவரத்தினங்களும் நிறைந்திருக்கிற எட்ட முடியாத உயரத்துக்குச் சென்று விட்டீர்கள்...” ⁠“இல்லை! இல்லை! என்னுடைய விலை மதிப்பற்ற முத்து இன்னும் தரையில்தான் இருக்கிறது. நான் ஒளி நிறைந்ததாகக் கருதும் இரத்தினம் இன்னும் பூமியில்தான் இருக்கிறது பெண்ணே"-- என்று உரத்த குரலில் தன் உயரத்திலிருந்து அவளுக்குக் கேட்கும்படிக் கதறினான் அவன். அந்தக் குரல் அவளுக்குக் கேட்டதோ இல்லையோ? ⁠இவ்வளவில் யாரோ அவன் தோளைத் தீண்டி எழுப்பவே அவன் திடுக்கிட்டுக் கண் விழித்தான். உடல் முழுவதும் குப்பென்று வேர்த்திருந்தது. ⁠“வாய் அரற்றுகிற அளவு ஆழ்ந்த உறக்கம் போலிருக்கிறதே!” என்று வினாவியபடியே அழகன் பெருமாள், அவனது மஞ்சத்தின் அருகில் நின்று கொண்டிருந்தான். எதிர்ப்புறம் கட்டிலில் படுத்தபடியே முகத்தைத் திருப்பி இளையநம்பியை நோக்கிப் புன்னகை பூத்தான், தேனூர் மாந்திரீகன். ‘அவர்கள் இருவரும் கேட்க நேரும்படி கனவில் அரற்றி விட்டோமே’ என்பதை எண்ணி நாணினான். அவன் மீண்டும் விழித்த நிலையில் நினைவு கூட்ட முயன்ற போது, அந்தக் கனவும் காட்சிகளும், வார்த்தைகளும் தொடர்பின்றி இருந்தன. ⁠இளையநம்பி உறக்கத்தில் வாய் அரற்றியதும், அழகன் பெருமாள் அவனை எழுப்பி விட்டாலும், மஞ்சத்திலிருந்து உடனே எழவில்லை அவன். கண்களை மூடியபடியே உடற் சோர்வு நீங்கி மஞ்சத்திற் சாய்ந்திருந்தான் அவன். இதைக் கண்டு அவன் மீண்டும் உறங்கிவிட்டதாக எண்ணிக் கொண்ட அழகன் பெருமாள், ⁠“செங்கணான்! யார் எழுப்பினாலும் எழுந்திருக்க முடியாதபடி திருக்கானப்பேர் நம்பிக்கு ஆழ்ந்த உறக்கம் போலிருக்கிறது”, என்று கூறியபடியே தேனூர் மாந்திரீகனிடம் மீண்டும் உரையாடப் போய் அமர்ந்தான். இதைக் கேட்டு மஞ்சத்தில் விழிகளை மூடியவாறு படுத்திருந்த இளைய நம்பி உள்ளூற நகைத்துக் கொண்டான். தான் உறங்கி விட்டதாக நினைத்துக் கொண்டு அவர்கள் இருவரும் என்ன பேசிக் கொள்வார்கள் என்பதைக் கேட்க ஆவலாக இருந்தது இளையநம்பிக்கு. உறங்குகிற பாவனையிலேயே தொடர்ந்து கண்களை மூடியபடி மஞ்சத்தில் கிடந்தான் அவன். ⁠அங்கே அழகன்பெருமாளுக்கும், செங்கணானுக்கும் உரையாடல் தொடங்கியது. முதலில் அழகன்பெருமாள்தான் செங்கணானிடம் வினாவினான்:- ⁠“செங்கணான்! காரியம் காயா, பழமா?” ⁠“பழமாகும் என்றுதான் நினைத்தோம். ஆனால் காலம் மாறிப் போய்ச் சூழ்நிலையும் ஒத்து வராததால் அது கனியவில்லை! வெறும் காய்தான்.” ⁠“அப்படியானால் யாத்திரீகர்கள் என்ன ஆனார்கள்?” ⁠“சூழ்நிலையை உணர்ந்து, பெரும்பாலோர் கோட்டைக் கதவுகள் மூடப்படுவதற்கு முன்பாகவே, அகநகரிலிருந்து வெளியேறி விட்டார்கள்...” ⁠“நீ ஏன் தேனூருக்குத் திரும்பினாய்? உனக்குத் தேனூரில் என்ன வேலை இப்போது?” ⁠“கோட்டையை விட்டு வெளியேறிய நம்மவர்களைப் பிரித்துத் தனித் தனியே செல்ல விடும் பொறுப்பு எனக்கு இருந்தது. திட்டமிட்டபடி அகநகரில் எதுவும் செய்ய முடியவில்லை என்றாகிய பின்பும், வெளியேறிவிட்ட யாத்திரீகர்களுக்குக் குறிப்பாக மேலே என்ன என்ன செய்யவேண்டுமென்று நெறி கூறவும், செயல் காட்டவும் வேண்டாமா?” ⁠“திட்டமிட்டபடி எதுவும் நடக்கவில்லை என்பது மோகூருக்குத் தெரியுமா செங்கணான்?” ⁠“ஒற்றர்கள் இருவர் அகப்பட்டுக் கொண்டதனால், கோட்டைக் கதவுகள் அடைக்கப்பட்டதையும், யாத்திரீகர்கள் வெளியேற்றப்பட்டதையும் அந்துவன் மோகூருக்கு கூறியனுப்பியிருக்க வேண்டும். ‘நினைத்தபடி எதுவும் நடக்க முடியாது’ என்பதைப் பெரியவரும், காராளரும் இதிலிருந்தே அறிந்து கொள்ள முடியும்தானே?” ⁠இந்தச் சமயத்தில் மஞ்சத்தில் படுத்திருந்த இளைய நம்பிக்கு அடக்கிக்கொள்ள இயலாத பெருந்தும்மல் ஒன்று வந்தது. அவன் தும்மினான். உடனே அவர்களுடைய உரையாடல் நின்றது. தொடர்ந்து சில கணங்கள் அவர்களுடைய மெளனம் நீடிக்கவே, இனி மேல் அவர்கள் இருவரும் பேசிக் கொள்ள மாட்டார்கள் என்ற முடிவுக்கு வந்தவனாக இளையநம்பி மஞ்சத்தில் எழுந்து அமர்ந்தான். ⁠அவன் மனம் அப்போது மிகவும் குழப்பத்தில் ஆழ்ந்து போயிருந்தது. நினைவிழந்து உறங்கிய உறக்கத்தின் போது கண்ட ஒரு கனவையும் அவனால் புரிந்துகொள்ள முடியவில்லை. உறக்கம் கலைந்தபின் தன் நினைவோடு செவி மடுத்த ஓர் உரையாடலையும் அவனால் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியவில்லை. ‘யாத்திரீகர்கள் பத்திரமாக வெளியேறித் தங்கள் தங்கள் ஊர்களுக்குப் பிரிந்து சென்றார்களா இல்லையா என்பதில் தேனூர் மாந்திரீகனுக்கும் இந்த அழகன் பெருமாளுக்கும் ஏன் இவ்வளவு கவலை? இவர்கள் இந்த அவிட்ட நாள் திருவிழாவின் போது நகருக்குள் என்ன காரியத்தைச் சாதிக்கத் திட்டமிட்டிருந்தார்கள்? அதற்கு யாத்திரீகர்கள் எப்படி உதவி செய்ய இருந்தார்கள்?’ என்றெல்லாம் அவன் மனத்தில் நினைவுகள் ஐயமாக எழுந்தன. “நல்ல உறக்கம் போலிருக்கிறது! களைப்பு மிகுதியினால் முன்னிரவிலேயே உறங்கி எழுந்து விட்டீர்கள். உறக்கத்தில் ஏதோ முத்து, இரத்தினம் என்றெல்லாம் அரற்றினீர்கள்? வந்து எழுப்பினேன். மீண்டும் உறங்கி விட்டீர்கள். இரத்தினமாலை இருந்த வளத்திலிருந்து திரும்பும் நேரம்கூட ஆயிற்று” என்றான் அழகன் பெருமாள். இந்தச் சொற்களுக்கு மறுமொழி கூறாமல் மெளனமாக அவனைப் பார்த்துச் சிரித்தான் இளையநம்பி. தன்னுடைய வார்த்தைகளுக்கு வார்த்தைகளால் எந்த மறுமொழியும் கூறாமல் ஒரு மெளனமான புன்னகையை மட்டும் புரிந்த இளையநம்பியைக் கண்டு தங்கள் உணர்ச்சிகளுக்கு நடுவே ஏதோ ஒரு மெல்லிய பிணக்கு இடறுவதை அழகன் பெருமாளும் புரிந்து கொண்டான். ↑ இப்போதுள்ள கூடலழகர் கோவில் இந்தக்கதை நிகழும் காலத்து மதுரையில் இருந்த வளமுடையார் கோவில் என அழைக்கப்பட்டு வந்தது. ஆதாரம் :- சிலம்பு அரும்பதவுரை. 32. வித்தகர் எங்கே? இரத்தினமாலை இருந்த வளத்திலிருந்து திரும்புகிற வரை அங்கிருந்த அவர்கள் மூவரும் தங்களுக்குள் அதிகம் பேசிக் கொள்ளவே இல்லை. “நீண்ட நாட்களாகக் கண்களைக் கட்டிக் காட்டில் விட்டது போல் ஆகிவிட்டது. அந்துவனைச் சந்தித்து விட்டு இரத்தினமாலை திரும்பி வந்ததும் ஏதாவது விவரம் தெரியும் என்று நம்புகிறேன்” என்று இடையே அழகன் பெருமாள் பேசியபோது கூட, ⁠“இப்படி நமக்குள் பொதுவாக நம்பவும், செயலாற்றவும் காரியங்கள் இருப்பதால்தான் நாம் ஒரு குழுவாகச் சேர்ந்திருக்கிறோம் அழகன் பெருமாள்!” என்று மறுமொழி கூறிவிட்டு, மீண்டும் சிரித்தபடியே அவன் கண்களில் மின்னும் உணர்ச்சிகளை ஆழம் பார்த்தான் இளையநம்பி. அழகன் பெருமாளும் விட்டுக் கொடுக்காமல் பதிலுக்கு முக மலர்ந்து சிரித்தானே ஒழிய, இளையநம்பியின் சொற்களில் இருந்த குத்தலைப் புரிந்து கொண்டதாகவே காண்பித்துக் கொள்ளவில்லை. ⁠இருந்த வளமுடைய விண்ணகரத்தில் அர்த்த சாம வழிபாடும் முடிந்த பின்பே இரத்தினமாலை திரும்பினாள். பல்லக்கிலிருந்து இறங்கி வந்ததும் வராததுமாக, “உன் முகம் மலர்ச்சியாயிருப்பதைப் பார்த்தால் இருந்த வளமுடைய பெருமாள் பரிபூரணமாகத் திருவருள் புரிந்திருப்பார் என்றல்லவா தோன்றுகிறது?” என்று கூறி அவளை வரவேற்றான் இளையநம்பி. அவள் முகமும் அவனை நோக்கி மலர்ந்தது. அவள் அவனிடம் கூறினாள்: ⁠“திருவருளுக்கு எதுவும் குறைவில்லை! ஆனால் என்ன தெரிந்து கொண்டு வந்திருக்கிறேன் என்பது எனக்கே புரியாமல், எதையோ தெரிந்து கொண்டு வந்திருக்கிறேன்.” ⁠“அப்படியானால் போன காரியம் ஆகவில்லையா?” என்று கேட்டான் அழகன் பெருமாள். ⁠“இனிமேல்தான் தெரிய வேண்டும்!” என்று கையோடு திரும்பக் கொண்டு வந்திருந்த பூக்குடலையைக் காண்பித்தாள் அவள். குடலை நிறைய அடர்த்தியாகத் தொடுத்த திருத்துழாய் மாலை ஒன்று பொங்கி வழிந்தது. திருத்துழாய் நறுமணம் எங்கும் கமழ்ந்தது. ⁠அவள் கூறியதை அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை; அவளே மேலும் தொடர்ந்து கூறலானாள்:- ⁠“அகநகரின் நிலை மிகமிகக் கடுமையாகி இருக்கிறது! என்னுடைய பணிகளைப் பாராட்டி அரண்மனை அந்தப்புர மகளிர் மூலம் நான் பெற்றிருக்கும் முத்திரை மோதிரத்தைக் கையில் அணிந்து சென்றதனால் தான், நானே பாதுகாப்பாக இருந்த வளத்துக்குச் சென்று திரும்ப முடிந்தது. எங்கும் ஒரே பரபரப்பும் பதற்றமும் நிறைந்து அகநகர வீதிகளும், சதுக்கங்களும் அமைதி இழந்திருக்கின்றன. சந்தேகப்படுகிறவர்களை எல்லாம் இழுத்துப் போய்க் களப்பிரர்கள் கழுவேற்றுகிறார்கள். எல்லாரையும் பயம் பிடித்து ஆட்டுகிறது. நான் இருந்த வளமுடையார் கோவிலுக்குப் போய் யானைக் கொட்டாரத்தை அடைந்த போது அந்து வனைக் கொட்டாரத்தின் வாயிலிலேயே பார்த்தேன். அவன் வேறு சில யானைப் பாகர்களோடு சேர்ந்து நின்று கொண்டிருந்தான். ஆனால் என்னைப் பார்த்த பின்பும் அவன் என்னோடு பேசவோ தெரிந்தவன் போல் முகம் மலரவோ இல்லை. மற்ற யானைப் பாகர்களோடு பாலி மொழியில் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தான் அவன். நிலைமையை நான் விளங்கிக் கொண்டேன். எதையும் தெரிந்து கொள்ள முடியும் என்று தோன்றவில்லை. ஏமாற்றத்தோடு, ஆலயத்திற்குள்ளே சென்று நான் கொண்டு போயிருந்த மாலைகளைச் சாற்றச் செய்து, இருந்த வளமுடையாரையும், அந்தரவானத்து எம் பெருமானையும் வழிபட்டு வணங்கித் திரும்பும் போது, மீண்டும் அந்துவனைக் காண முயன்று வெகு நேரம் காத்திருந்தேன். அர்த்த சாம வேளை கூட நெருங்கி விட்டது. என்ன முயன்றும், அந்துவனைக் காண முடியவில்லை. வந்த காரியத்தை இறைவனிடம் விட்டு விட வேண்டியதுதான் என்ற முடிவுக்கு வந்த மனத்துடன் குடலையும் கையுமாகப் பணிப் பெண்ணோடு நான் திரும்புவதற்கு இருந்தேன். அப்போது விண்ணகரத் திருக்கோயிலைச் சேர்ந்த நந்தவனத்து மாலை கட்டி ஒருவன், சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டே கைகளில் ஒரு பெரிய திருத்துழாய் மாலையோடு என்னை நோக்கி வந்தான். ⁠"இருந்த வளமுடைய பெருமாளின் திருவருள் இந்த மாலையில் நிரம்பியிருக்கிறது! தாங்கள் நினைப்பதை அருளும் தெய்வீகப் பயனை இந்தத் திருத்துழாய் மாலை தங்களுக்குத் தரும்’ என்று அந்துவனார் கூறினார். அவருடைய வேண்டுகோளின்படி இந்தத் திருத்துழாய் மாலையைத் தங்களிடம் சேர்க்க வந்தேன்’ என்று கூறி மாலையை உடனே என் கையிலிருந்த குடலையில் திணித்துவிட்டு அந்த மாலை கட்டி விரைந்து நந்தவனப் பகுதியில் புகுந்து மறைந்து விட்டான். அவனை ஏதாவது கேட்கலாம் என்று நான் நினைத்துக் கொண்டிருக்கும் போதே அவன் மின்னலாக மறைந்து விடவே எனக்குத் திகைப்பாயிருந்தது. என்ன செய்வதென்று புரியவில்லை. கோயிலிலிருந்து வெளியே வந்ததும், பல்லக்கில் அமர்ந்து மாலையைக் கை விரல்களால் நன்கு ஆராய்ந்தும், எதுவும் புலப்படவில்லை. இந்த மாலையைக் கொடுத்து அனுப்பியதன் மூலம் அந்துவன் நமக்கு என்ன தெரிவிக்கிறான் என்பதே எனக்குப் புரியவில்லை. மாலை இதோ இருக்கிறது” என்று அந்த மாலையை அவள் எடுத்து நீட்டுவதற்கு முன்பே விரைந்து அதைத் தன் கைகளில் ஏற்றான் அழகன்பெருமாள். மாலையை மேலிருந்து கீழாகத் தொங்கவிட்டபோது ஒரு பெரிய தேங்காயளவு அதன் நுனியில் தொங்கிய திருத்துழாய்க் குஞ்சம் அவன் கவனத்தைக் கவர்ந்தது. ⁠அழகன்பெருமாள் நிதானமாகக் கீழே தரையில் அமர்ந்து, மாலையை மடியில் வைத்துக் கொண்டு அதன் குஞ்சத்தை மெல்லப் பிரித்தான். எல்லார் விழிகளும் வியப்பால் விரிந்தன. ⁠என்ன விந்தை? அந்தக் குஞ்சத்தின் நடுப்பகுதியில் இருந்து ஒடியாமல் சுருட்டப்பட்டு நாரால் கட்டியிருந்த ஒலைச்சுருள் ஒன்று வெளிப்பட்டது. எல்லார் கண்களிலும் மலர்ச்சி தெரிந்தது. ⁠“பெருமாளின் திருவருள் இதோ கிடைத்து விட்டது! அந்துவன் பொய் சொல்ல மாட்டான்” என்று கூறியபடியே அந்த ஓலைச்சுருளை எடுத்துப் பிரித்தான் அழகன் பெருமாள். ஒடியாமல் இருக்க வேண்டும் என்பதற்காக நன்கு முற்றிக் காய்ந்த ஒலையைப் பயன்படுத்தாமல் ஓரளவு ஈரமுள்ள பதத்து ஒலையைப் பயன்படுத்தி அதில் எழுதியிருந்ததால் எழுத்துக்கள் ஓலையில் நன்கு பதியவில்லை. கீறினாற்போல் ஏதோ மங்கலாகத் தெரிந்தது. அதை எழுத்துக் கூட்டிப் படிக்க முடியாமல் அழகன் பெருமாள் சிரமப்பட்டான். கைத்தீபத்தின் அருகே நெருக்கமாகப் பிடித்துப் படிக்க முயன்றும் முடியவில்லை. “என்னிடம் கொடு அழகன்பெருமாள்!” என்று அதை வாங்கிக்கொண்ட இளையநம்பி இரத்தினமாலையின் பக்கம் திரும்பி, “நீ கண்ணுக்குத் தீட்டிக் கொள்ள மை சேர்த்து வைத்திருப்பாயே அந்த மைக் கூண்டைக் கொண்டு வா!” என்றான். உடனே அவள் பணிப்பெண்ணுக்குச் சைகை செய்தாள். பணிப்பெண் உள்ளே ஓடினாள். சிறிது நேரத்தில் மைக்கூண்டுடன் திரும்பி வந்து அதை இளையநம்பியிடம் கொடுத்தாள். ஓலையைப் பளிங்குத் தரையில் வைத்து அதன் ஒரு முனையை அழகன் பெருமாளும், மறுமுனையை இரத்தினமாலையும் கட்டை விரல்களால் அழுத்திக் கொள்ளச் செய்தபின் அது சுருண்டு விடாமல் இருந்த நிலையில் அதன்மேல் மென்மையாக மையைத் தடவினான் இளைய நம்பி. எழுத்துக்களாகக் கீறப்பட்டிருந்த இடங்கள் ஓலைப்பரப்பில் பள்ளமாகி இருந்ததால் அந்தப் பள்ளங்களில் மை ஆழப் பதிந்திருந்தது. அப்படிப் படிந்ததன் காரணமாக ஓலையில் எழுதியிருந்த வாக்கியங்கள் இப்போது தெளிவாகத் தெரியலாயின. ‘பெரியவர் மதுராபதி வித்தகர் இப்போது திருமோகூரில் இல்லை. அவரைத் தேடும் முயற்சியைச் செய்யவேண்டும்’-- என்ற அந்த முதல் பகுதி எழுத்துக்களை இளையநம்பியே வாய்விட்டுப் படித்ததும், மற்றவற்றையும் தெரிந்து கொள்ளும் ஆவலில் எல்லா விழிகளும் விளக்கொளியின் துணை யுடன் ஒலைக்கருகே தணிந்து பார்க்க விரைந்தன. பலருடைய மூச்சுக்காற்று ஒரே திசையில் பாயவே எதிர்பாராத விதமாக அந்த விளக்கே அணைந்து போய்விட்டது. 33. அடிமையும் கொத்தடிமையும் தாகத்தோடு பருகுவதற்குக் கையில் எடுத்த நீரைப் பருக முடியாமல் மறித்துப் பறித்தது போல் அரிய செய்திகள் அடங்கிய ஓலையைப் படிப்பதற்குள் விளக்கு அவிந்ததன் காரணமாக அவர்களது ஆவலும் பரபரப்பும் அதிகரித்திருந்தன. பணிப்பெண் அவிந்த கைவிளக்கை உள்ளே எடுத்துச் சென்று ஏற்றி வந்தாள். விளக்கு மீண்டும் அவிந்து விடலாகாதே என்ற கவலையில் அனைவரையும் விலகி நிற்குமாறு வேண்டிய பின் ஓலையில் எழுதப்பட்டிருந்த இரண்டாவது வாக்கியத்தைப் படிக்கலானான் இளையநம்பி:- ‘தென்னவன் மாறனையும் திருமோகூர் அறக்கோட்டத்து மல்லனையும் சிறை மீட்க எல்லா வகையிலும் முயலுக!’ இந்த இரண்டாவது வாக்கியத்தின் பொருளை இதிலுள்ள சொற்களைக் கொண்டு புரிந்துகொள்ள முயன்றாலும் இதில் சொல்லப்பட்டிருக்கும் நிகழ்ச்சி எப்போது, எவ்வாறு நிகழ்ந்தது என்னும் சூழ்நிலை புரியவில்லை. மூன்றாவது வாக்கியத்தோடு அந்த ஓலையில் எழுதப் பட்டிருந்த எழுத்துக்கள் முடிந்து விட்டன. மூன்றாவது வாக்கியம்: ‘திருக்கானப்பேர்ப் பாண்டியகுல விழுப்பரையரின் பேரன் இளையநம்பி மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும்’ என்று தன்னைப் பற்றியே இருந்ததனால் அதை அவன் வாய்விட்டுப் படிக்கவில்லை. அப்படியே ஓலையை அழகன் பெருமாளிடம் கொடுத்து விட்டான். அவன் வாக்கியங்கள் மூன்றும் முடிந்த பின் செய்திகளை நம்புவதற்கு ஒரு நல்லடையாளமாகக் கயல் என்றும் அதில் கீழே எழுதியிருந்ததை அவன் காணத் தவறவில்லை. ⁠அந்த ஓலையை அழகன் பெருமாள் படித்த பின்பு இரத்தினமாலையிடம் கொடுத்தான். இரத்தினமாலையும் படித்த பின்பு மீண்டும் அது இளைய நம்பியின் கைகளுக்கே வந்து சேர்ந்தது. திருத்துழாய் நறுமணம் கமழும் அந்த ஓலையை இரண்டாவது முறையாகவும் படித்தான் அவன். கோட்டைக் கதவுகள் அடைக்கப்பட்ட பின் பல நாட்களாக அந்தக் கணிகை மாளிகையிலேயே இருந்து விட்டதினால், ஓலையில் குறிப்பிட்டிருக்கும் சூழ்நிலைகளை உணரவும் அநுமானம் செய்யவும் முடியாமல் இருந்தது. ⁠‘பெரியவர் மதுராபதி வித்தகர் ஏன் இப்போது மோகூரில் இல்லை? அவர் எங்கே இருக்கிறார் என்று தேடும் முயற்சியில் நாங்கள் ஏன் ஈடுபடலாகாது?’ ⁠‘தென்னவன் மாறனையும் திருமோகூர் அறக்கோட்டத்து மல்லனையும் யார் எப்போது எதற்காகச் சிறைப் பிடித்தார்கள்?’ ⁠ஒன்றும் விளங்காமல் மனம் குழம்பினான் இளைய நம்பி. அப்போது இரத்தினமாலை சிரித்த முகத்தோடு அவனைக் கேட்டாள்:- ⁠“பார்த்தீர்களா? திருக்கானப்பேர்ப் பாண்டியகுல விழுப்பரையரின் பேரரைப் பாதுகாக்கும் பொறுப்பை இந்த ஓலையும் எங்களுக்கு நினைவூட்டுகிறது. அன்றொரு நாள் கோபித்துக் கொண்டு புறப்பட்டது போல் இனி நீங்கள் இங்கிருந்து எங்கள் பாதுகாப்பை மீறி எங்கும் புறப்பட முடியாது!” ⁠“என்னைப் பாதுகாப்பதில் உங்களுக்குள்ள அக்கறை பற்றி மகிழ்ச்சி. ஒருவரைப் பாதுகாப்பதற்கும், சிறை வைப்பதற்கும் உள்ள வேறுபாடு மட்டும் உங்களுக்கு நினைவிருந்தால் போதும். சில சமயங்களில், நீயும் அழகன் பெருமாளும் செய்கிற காரியங்கள் மூலம் நான் பாதுகாக்கப் படுகிறேனா, சிறை வைக்கப்பட்டிருக்கிறேனா என்பதே சந்தேகத்துக்கு உரியதாகி விடுகிறது.” ⁠“பாதுகாப்பதும் கூட ஒரு வகைச் சிறைதான்! பாதுகாக்கிறவர், பாதுகாக்கப்படுகிறவர், இருவரில் யாருடைய அன்பு அதிகம், யாருடைய உரிமை அதிகம், என்பதைப் பொறுத்தே சிறையா இல்லையா என்பது நிர்ணயம் செய்யப்பட வேண்டும். இங்கே நாங்கள் உங்கள் மேல் உயிரையே வைத்து அன்பு செலுத்துகிறோம். நீங்கள் பதிலுக்கு எந்த அளவு அன்பு செலுத்துகிறீர்கள் என்பதை எதிர்பாராமலும் கணக்கிடாமலுமே உங்கள் விருப்பம் போல் பழக உரிமைகள் அளித்திருக்கிறோம். இப்போது சொல்லுங்கள் இது சிறையா அன்புப் பாதுகாப்பா?” “அன்பு என்பது நிறுவைக்கும், அளவைக்கும் அப்பாற்பட்டது இரத்தினமாலை! இப்போது அதை நிறுக்கவும் அளக்கவும் நீ விரும்புவதாகத் தெரிகிறது...” “அல்லவே அல்ல, செய்வதையும் செய்து விட்டுக் குற்றத்தை என் தலையில் சுமத்தாதீர்கள்! நான் பாதுகாக்கப் படுகிறேனோ, சிறை வைக்கப்பட்டிருக்கிறேனோ, என்று முதலில் வினாவியதே நீங்கள்தான். நீங்கள் வினாவியதற்கு நான் மறுமொழி கூறினால் என்னையே குறை சொல்கிறீர்களே?” இரத்தினமாலையின் இந்தப் பேச்சுக்கு இளையநம்பி மறு மொழி எதுவும் கூறவில்லை என்றாலும் குறும்பாகவும் அங்கதமாகவும்[1] தான் கூறிய ஒரு பேச்சு அவள் மனத்தின் உணர்வுகளை இவ்வளவு பாதித்திருக்கும் என்றும் அவன் எதிர்பார்க்கவோ, நினைக்கவோ இல்லை. சிறிது நேர மெளனத்துக்குப் பின்னர் அவர்கள் உரையாடல், ஓலையில் கண்டிருந்த பிற செய்திகளைப் பற்றித் திரும்பியது. இளையநம்பி அழகன் பெருமாளை நோக்கி வினவினான்:- “இந்த ஓலையின் இரண்டாவது வாக்கியத்தில் குறிப்பிட்டிருக்கும் தென்னவன் மாறனையும், திருமோ கூர்மல்லனையும் பற்றி எனக்கு எதுவுமே தெரியாது, அழகன் பெருமாள் அவர்கள் எப்படிச் சிறைப்பட்டிருப்பார்கள், எவ்வகையில் மீட்க வேண்டும் என்றெல்லாம் நீ தான் முடிவு செய்ய வேண்டும்...செய்வாய் அல்லவா?” “நம்மைப் போல் அவர்களும் களப்பிரர் ஆட்சியை எதிர்ப்பவர்கள். பெரியவர் மதுராபதி வித்தகரின் கட்டளைக் குத்தலை வணங்குகிறவர்கள். தென்னவன் மாறன் சிறு மலைக்காட்டில் இருப்பவன். மல்லன் திரு மோகூர்ப் பெரிய காராளரின் அறக்கோட்டத்தில் இருப்பவன். எல்லோரும் நம்மவர்கள். பாண்டிய மரபு சிறப்படையப் பாடுபடுகிறவர்கள். அவர்களைச் சிறை மீட்பது பற்றிய காரியங்களை நானே செய்கிறேன். உங்கள் ஒத்துழைப்பும், உறுதுணையும் எனக்கு இருந்தால் போதும் ஐயா!” என்றான் அழகன் பெருமாள். அவ்வளவில் இரத்தினமாலை அவர்களை உண்பதற்கு அழைத்தாள். இரவு நெடுநேரமாகி யிருந்ததனால் உண்ணும் வேளை தவறியிருந்தது. நிலவறைக் காவலுக்காகச் சந்தனம் அறைக்கும் பகுதியிலிருந்த குறளனுக்கும் இரத்தக் காயங்களுடன் கட்டிலில் கிடந்த தேனூர் மாந்திரீகனுக்கும் பணிப் பெண்கள் அங்கேயே உண்கலங்களில் உணவு எடுத்துச் சென்று படைத்தனர். இளையநம்பியையும், அழகன் பெருமாளையும் அமரச்செய்து இரத்தினமாலையே பரிமாறினாள். இளையநம்பி போதும் போதும் என்று கைகளை மறித்த பின்னும் நெய் அதிரசங்களை அவன் இலையில் படைத்தாள் இரத்தின மாலை. “இரத்தினமாலை! இதென்ன காரியம் செய்கிறாய்? அதிரசங்களை நான் உண்ண வேண்டுமா? அல்லது அதிரசங்கள் என்னை உண்ண வேண்டுமா? வீரர்கள் உண்பவர்கள் மட்டும்தான்; உண்ணப்படுபவர்கள் இல்லை! வீரர்கள் வாழ்வதற்காக உண்ணுகிறார்கள். மற்றவர்களோ உண்பதற்காகவா வாழ்கிறார்கள். இந்த உலகில் உணவை உண்ணுகிறவர்களும் உண்டு; உணவால் உண்ணப்படுகிறவர்களும் உண்டு. இப்படிக் கலத்தில் மிகையாகப் படைப்பதன் மூலம் நீ என்னைப் பாராட்டுகிறாயா, வஞ்சப் புகழ்ச்சி செய்கிறாயா என்பது புரியவில்லை.” ⁠“வீரர்கள், முனிவர்களைப் போல் உண்ணக் கூடாது. முனிவர்களைப் போல் பழகக் கூடாது.” அவள் இந்தச் சொற்களின் மூலம் குறிப்பாகத் தனக்கு எதையோ புலப்படுத்த முயல்வது போல் இளையநம்பிக்குத் தோன்றியது. இந்தச் சொற்களைச் சொல்லி முடிந்த உடனே அவள் முகத்தையும் கண்களையும் பார்க்க முயன்றான் அவன். அவளோ சொற்களால் கூறியதை முகத்தினாலும், கண்களாலும் அவனிடமிருந்து மறைக்க முயலுகிறவள் போல் வேறு புறம் பார்த்துக் கொண்டு நின்றாள். அழகன் பெருமாள் இந்த நாடகத்தைக் கண்டும் காணதவன் போல் உண்பதில் கவனமாயிருந்தான். உள்ளுற அவனுக்கு ஒரு வகை மகிழ்ச்சி ஏற்பட்டுக் கொண்டிருந்தது. ‘பெண்களின் கைகளை அழகு பார்த்துச் சொல்லும் காரியத்துக்காக நான் இங்கே வரவில்லை’ என்று இந்த மாளிகையில் நுழைந்த முதல் நாளில், முதல் சந்திப்பின்போது எந்த இளைஞன் சினங் கொண்டு பேசியிருந்தானோ, அதே இளைஞன் இந்த வளைக்கரங்கள் ‘கிணின் கிணின்’ என்று ஒலிக்கத் தன் இலையில் பரிமாறும் அழகை இரசிப்பதை, இன்று இந்தக் கணத்தில் அழகன் பெருமாள் தன் கண்களாலேயே காண முடிந்தது. இந்த மாறுதல் தனக்கும் இரத்தினமாலைக்கும் மிகப் பெரிய வெற்றி என்பது அழகன் பெருமாளுக்குப் புரிந்திருந்தாலும் அந்த வெற்றிப் பெருமிதத்தை வெளிப்படையாக்கிவிட விரும்பவில்லை அவன். ⁠உலகில் வென்றவன் விழிப்பாயிருக்க வேண்டிய வெற்றிகளும் உண்டு. தோற்றவன் விழிப்பாயிருக்க வேண்டிய வெற்றிகளும் உண்டு. இது வென்றவர்கள் விழிப்பாயிருக்க வேண்டிய வெற்றி வகையைச் சேர்ந்தது. தான் தோற்றுப் போயிருக்கிறோம் என்று தோற்றவனைப் புரிந்து கொள்ள விடாமல் வென்றவர்கள் கொண்டாடும் வெற்றியில் தோற்றிருப்பவனும் கூடக் கலந்து கொள்ள முடியும், அப்படியின்றி நீ தோற்றதால் ஏற்பட்ட வெற்றிதான். இது!” என்று தோற்றவனுக்கும் அவன் தோல்வியைப் புரிய விடுவதால் அவன் மற்றொரு போருக்குக் கிளர்ந்தெழும் நிலைமை உருவாகி விடும் அபாயமும் ஏற்படலாம். அழகன் பெருமாளைவிட இரத்தினமாலை இந்த அபாயத்தை மிக நன்றாக உணர்ந்திருந்தாள். பெண் தன்னை வென்றவனுக்கு அடிமையாகிறாள் என்றால், அறிந்தோ அறியாமலோதனக்குத் தோற்றவனுக்குக் கொத்தடிமையாகவே ஆகிறாள். ஆனால் தோற்றிருப்பவனுக்கு அவன் தோற்றிருக்கிறான் என்பது தோன்றவே விடாமல் பார்த்துக்கொள்ள அவள் எவ்வளவிற்குத் தேர்ந்திருக்கிறாள் என்பதைப் பொறுத்தே இந்த வெற்றியின் முடிவான பயன்களை அவள் அடைய முடியும். அவன் அந்த மாளிகைக்குள் வந்த முதல் நாளன்று அவனுடைய திரண்ட தோள்களையும், பரந்த மார்பையும் கண்டு மனம் தோற்ற கணத்தில், அவள் அவனுக்கு அடிமை யாவதற்கு மட்டுமே ஆசைப்பட்டாள். இன்றோ அவனுக்குக் கொத்தடிமையாவதற்கே ஆசைப்பட்டாள். மெல்லியபட்டு நூலிழை போன்ற இந்த வெற்றிப் பிணைப்பு அறுந்துவிடக் கூடாது என்பதில் அழகன் பெருமாளைவிட விழிப்பாயிருந்தாள் இரத்தினமாலை. ஒருமுறை ஏற்கெனவே இந்த விழிப்பு உணர்ச்சி இல்லாத காரணத்தால் தவறு செய்திருந்தாள் அவள். எனவே மறுமுறையும் அப்படித் தவறு நேர்ந்துவிடக்கூடாது என்பதில் அவள் மிகமிகக் கவனமாயிருந்தாள். அரண்மனை அந்தப்புரத்துக்குத் தான் சென்று திரும்பியிருந்த தினத்தன்று அழகன் பெருமாளுக்கும், இளைய நம்பிக்கும், தனக்கும் நிகழ்ந்த ஓர் உரையாடலின் போது, ‘பெண்கள் பயப்படுகிற விஷயங்களுக்கு எல்லாம் இங்கே ஆண்களும் பயப்பட வேண்டியிருப்பதுதான் பரிதாபம்’ என்று இளையநம்பி சினங் கொண்டு கூறியவுடன், ‘ஆண்கள் செய்யமுடியாத பல காரியங்களையே ஆண்களுக்காக இங்கே பெண்கள்தான் செய்ய வேண்டியிருக்கிறது'- என்று தான் சுடச்சுட மறுமொழி கூறியதன் மூலம் அவன் கோபித்துக் கொண்டு வெளியேறி விட இருந்ததை நினைவு கூர்ந்து இப்போதும் அப்படி நேர்ந்து விடாமல் கவனமாக இருந்தாள் இரத்தினமாலை. உண்டு முடித்தபின் தேனூர் மாந்திரீகன் படுத்திருந்த கட்டிலருகே அமர்ந்து திருத்துழாய் மாலையில் வந்த ஓலையை வைத்துக்கொண்டு மேலே என்னென்ன செய்யலாம் என்று சிந்தித்தார்கள் அவர்கள். நீண்ட நேரம் சிந்தித்தும் எதையும் திட்டமிட முடியவில்லை. அழகன் பெருமாள் செங்கணானின் கட்டிலருகே இருந்த மஞ்சத்தில் உறக்கச்சென்றான். அன்று செங்கணான் புதிதாக வந்திருந்ததனால் இளைய நம்பிக்குத் தான் எந்தக் கட்டிலில் படுத்து உறங்குவது என்ற தயக்கம் வந்தது. செங்கணானுக்கு அருகிலிருந்த கட்டிலில் அவனுக்குத் துணையாயிருக்கும் எண்ணத்தோடு அழகன் பெருமாள் படுத்துவிட்டதால் அவனை அங்கிருந்து எழுப்பு வதற்கு இளைய நம்பி விரும்பவில்லை. அவனது தயக்கத்தைக் குறிப்பறிந்த இரத்தினமாலை, “இந்த மாளிகையின் மேல் மாடத்தில் ஒரு சயனக்கிருகம் இருக்கிறது, நிலாவின் தண்மையையும், தென்றல் காற்றின் சுகத்தையும் அனுபவித்த படி உறங்கலாம் அங்கே...” என்றாள். அவன் மறுக்க வில்லை... அவள் அவனை மேலே அழைத்துச் சென்றாள். ↑ குத்தலாகவும் 34. மணக்கும் கைகள் மாளிகையில் எல்லாரும் உறங்கிவிட்ட நிலையில் தனியாக இரத்தினமாலையோடு மேல் மாடத்திற்குச் சென்றான் அவன். தன்னை மேல் மாடத்திற் கொண்டு போய் விட்டுவிட்டு, அவள் உடனே திரும்பி விடுவாள் என்று நினைத்தான் இளையநம்பி. அவளோ மேல் மாடத்தில் இருந்த பள்ளியறையை ஒட்டி அமைந்த நிலா முற்றத்தில் நின்று அவனை விட்டுப் பிரிய மனமில்லாதவள் போல் உரையாடிக் கொண்டிருந்தாள். ⁠“தென்றல் பொதிகை மலையில் பிறக்கிறது. ஆனால் மதுரைக்கு வரும் போது அது இன்னும் அதிகச் சிறப்படைகிறது. அதிகப் புகழ் பெற்று விடுகிறது.” ⁠“அதாவது மதுரைத் தென்றல், தமிழ்த் தென்றலாக வீசுகிறது என்றுதானே சொல்கிறாய்? ஆம். ஒரு தென்றல் இன்னொரு தென்றலுடன் இங்கே கூடுகிறது. மொழிகளிலே தென்றலாகிய தமிழ் காற்றின் இளவரசியாகிய மந்தமாருதத்தைச் சந்திக்கும் இடம் இந்த நான்மாடக்கூடல் நகரம்தான்.” ⁠“நீ கூறுவதை ஒப்புக் கொள்கிறேன் இரத்தினமாலை! ஆனால் ஒரு சிறு பாடபேதம். இந்த இடத்தில் இப்போது இரண்டு தென்றல்கள் இருப்பதாக நீ சொல்கிறாய். ஆனால் மூன்று தென்றல்கள் இங்கு சூழ்ந்து கொண்டு குளிர்விப்பதை இப்போது நான் காண்கிறேன்.” ⁠“அது எப்படி?” ⁠“பொதியமலைத் தென்றலாகிய மந்தமாருதம்! மதுரைத் தென்றலாகிய தமிழ் அழகுத் தென்றலாகிய நீ!” ⁠இதைக் கேட்டு அவள் தலை குனிந்தாள். அவளது வலது கால் கட்டை விரல் தரையில் மனத்தின் உணர்வுகளைக் கோலமிட்டுப் பார்க்க முயன்றது. ‘நீ வென்று கொண்டிருக்கிறாய், வென்று கொண்டிருக்கிறாய்’ என்று அவளுடைய மனம் அவளை நோக்கி உள்ளேயே குதூகலக் குரல் கொடுத்துக் கொண்டிருந்தது. ‘உன் வெற்றியை உன் முன் தோற்றுப் போய்க் கொண்டிருப்பவனுக்கே புரிய விடாமல் அவனே வென்றிருப்பது போல் உணரச் செய்!'- என்றும் அவள் உள் மனம் அவளை எச்சரித்துக் கொண்டிருந்தது. அதே சமயத்தில் அவள் உணர்ச்சிகளால் மிகவும் நெகிழ்ந்து, மலர்ந்து, தளர்ந்து பலவீனமான அனிச்சம் பூப் போல் ஆகியிருந்தாள். தன்னால் அழகுத் தென்றல் என்று புகழப்பட்ட அந்த மந்த மாருதம் தன்னுடைய தோள்களையும் மார்பையும் தழுவி வீசிக் குளிர்விப்பதை இளையநம்பி உணர்ந்தான். ⁠இனிமையாக யாழ் வாசிப்பதற்கென்றே படைக்கப் பட்டாற் போன்ற அவளுடைய மெல்லிய நீண்ட பொன் விரல்களைத் தன் விரல்களோடு இணைத்துக் கொண்டான் அவன். இணைப்பிற்கும் அணைப்பிற்கும் ஆளான கைகளை விட்டுவிடாமல், ⁠“இந்தக் கைகளில் சந்தனம் மணக்கிறது பெண்ணே!'-- என்று மெல்லிய குரலில் அவள் செவியருகே கூறினான் அவன். பொன்னாற் செய்த பேரியாழ் போன்ற அவள் உடல் இப்போது இளையநம்பியின் அரவணைப்பில் இருந்தது. அவள் இனிய குரலில் அவன் கேட்க உழற்றினாள்:- ⁠“இந்தப் பரந்த மார்பிலும், தோள்களிலும் என் கைகளினால் அள்ளி அள்ளிச் சந்தனம் பூச வேண்டும் போல் ஆசையாயிருக்கிறது அன்பரே!” ⁠“சந்தனத்திற்கு வேறெங்கும் போக வேண்டாம் இரத்தின மாலை! உன் கைகளே சந்தனத்தால் ஆகியவைதான். உன் கைகள் மணக்கின்றன. மணக்க வேண்டிய கைகள், இப்படித்தான் மணக்கும் போலிருக்கிறது.” ⁠“எங்கே, அந்த வார்த்தைகளை என் செவி குளிர இன்னொரு முறை சொல்லுங்களேன்.” ⁠“மணக்க வேண்டிய கைகள், இப்படித்தான் மணக்கும் போலிருக்கிறது!...” ஓரக் கண்களால் அவளை நிமிர்ந்து பார்த்துச் சிரித்தான் அவன். ‘உனக்குத் தோற்றுவிட்டேன்'- என்பது போலிருந்தது அந்தச் சிரிப்பு. அவன் அவளைக் கேட்கலானான்:- ⁠“இந்த மாளிகையில் நுழைந்த முதற் கணத்திலிருந்து நீ என்னை அதிகமாகச் சோதனை செய்திருக்கிறாய் பெண்ணே! நான் உன் மேல் காரணமே புரியாத வெறுப்போடு இங்கே வந்தேன். காரணம் புரியா வெறுப்பு, எல்லையற்ற அன்பாக முடிவதும், காரணம் புரியாத அன்பு, எல்லையற்ற வெறுப்பாக முடிவதும், ஏனென்றே விளங்காத உலகம் இது! உன்னைப் போல் பெண்களின் விழிகளைக் கவிகள் வேல் நுனிக்கு உவமை சொல்லுவார்கள். இத்தனை ஆண்டுகளாக நான் கட்டிக் காத்த உறுதியையும், ஆணவத்தையும், ஆசாரங்களையும் உன் கண்களாகிய வேல்கள் இன்று கொலை செய்துவிட்டன.” “நீங்கள் மட்டும் நிரம்ப நல்லவர்போல் பேசி முடித்து விடவேண்டாம்! இங்கு வந்ததிலிருந்து என்னைக் கொல்வது போன்று நீங்கள் எத்துணை வார்த்தைகளைக் குத்திக் காட்டிப் பேசியிருக்கிறீர்கள்.-” “உன் பங்குக்கு நீயும் என்னிடம் அப்படிப் பேசியிருக்கும் சமயங்களை மறந்துவிடாதே பெண்ணே!” “இருவருமே மறக்க வேண்டியவற்றை மறந்துவிட்டவற்றை நீங்கள்தான் இப்போது மீண்டும் எடுத்துக்காட்டி நினைவூட்டுகிறீர்கள்.” “போகட்டும்! எல்லாவற்றையும் மறந்துவிடலாம். இப்போது, இந்த நிலையில் அழகன் பெருமாளோ, தேனூர் மாந்திரீகனோ, குறளனோ நம்மைப் பார்த்தால் என்ன நினைப்பார்கள் இரத்தினமாலை?” “எதுவும் வேறுபாடாக நினைக்கமாட்டார்கள். மனமார வாழ்த்துவார்கள். வந்த நாளிலிருந்து குறளன் அறைத்துக் குவிக்கும் சந்தனத்துக்கு இன்று பயன் கிடைக்கிறதே என்று அவன் மகிழ்ச்சி அடையக்கூடும். வந்த நாளிலிருந்து நீங்கள் காரணமின்றி என்னை வெறுப்பதை மன வருத்தத்தோடு கண்ட அழகன்பெருமாள் உங்கள் மன மாற்றத்தை விழாக் கண்டதுபோல வரவேற்கலாம்!” “பொய்! அவ்வளவும் பொய்.. வேண்டும் என்றே அழகன்பெருமாளைத் தேனூர் மாந்திரீகனுக்கருகே உறங்கச் செய்து நான் மேல் மாடத்தைத் தேடி உன்னோடு வரச் சதி செய்திருக்கிறாய் நீ! உண்மையா, இல்லையா?” “காதல் சம்பந்தமான சதிகள் செய்யப்படுவதில்லை. அவை பெரும்பாலும் நேர்கின்றன.” “செய்து திட்டமிடும் சதிக்கும், நேரும் சதிக்கும் வேறுபாடு என்ன இரத்தினமாலை?” “திட்டமிட்டசதி இங்கு வந்ததிலிருந்து நீங்கள் என்னை வெறுக்க முயன்றது. நேரும் சதி முடிவில் நான் உங்கள் அன்பை அடைந்தது.” “என் கட்டுப்பாட்டை நீ சதி என்று வருணிக்கிறாய்! அது தவறு.” “தேரை வடத்தால் கட்டவேண்டும்! பூக்களை நாரால் கட்டவேண்டும் அதுதான் முறையான கட்டுப்பாடு. நீங்களோ தேர்களை நாராலும், பூக்களை வடத்தாலும் கட்டுகிற வராயிருக்கிறீர்கள்! ‘நார் என்ற பதத்திற்குத் தமிழில் நுண்ணிய அன்பு’ என்று ஓர் அர்த்தமிருப்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.” “நார் எதற்கு? இந்தப் பூவைக் கைகளாலேயே கட்டலாமே!"- என்று கூறியபடியே மீண்டும் இரத்தின மாலையின் பொன்னுடலைத் தழுவினான் அவன். “இந்தக் கட்டுப்பாட்டில் நான் மலராகிறேன். மணக்கிறேன். மாலையாகிறேன்.” “போதும்! உன் உடல் அழகிலேயே நான் மயங்கித் தவிக்கிறேன். சொற்களின் அழகையும் தொடுத்து என்னைக் கொல்லாதே இரத்தினமாலை! உன் பார்வையே பேசுகிறது. இதழ்களும் பேசினால் இரண்டில் நான் எதைக் கேட்பது?” என்றான் அவன். அவள் அவன் நெஞ்சில் மாலையாய் குழைந்து சரிந்தாள். “இப்போது இது சிறையா, பாதுகாப்பா என்று நீங்கள்தான் சொல்லவேண்டும்...” என்று அவனை வம்புக்கிழுத்தாள். புது நிலவும் பொதிகைத் தென்றலும் மதுரைத் தென்றலும் அழகுத் தென்றலும் வீணாகாத அந்த மேன்மாடத்து நல்லிரவுக்குப் பின்விடிந்த வைகறையில் ஒரு புதிய செய்தியோடு புதிதாக அங்கு வந்து சேர்ந்திருந்தவனோடும் இளையநம்பியை எதிர்க்கொண்டான் அழகன்பெருமான். 35. இன்னும் ஓர் ஓலை தோளிலும் மார்பிலும் சந்தனம் மணக்க, பூக்களின் வாசனை கமழ, முந்திய இரவின் நளின நினைவுகள் நெஞ்சில் இனிமை பரப்ப இளையநம்பி விழித்து எழுந்திருந்து மேன்மாடத்திலிருந்து கீழே இறங்கி வந்தபோது அழகன் பெருமாள் திருமோகூர் வேளாளர் தெருக்கரும்பொற் கொல்லனோடு காத்திருந்தான். அவனும், கொல்லனும் இளையநம்பியின் வருகைக்காகவே காத்திருப்பது போலிருந்தது. நீண்ட நாட்களுக்குப் பின்பும் தோற்றத்தின் தனித்தன்மை காரணமாக அந்தக் கரும்பொற்கொல்லனை இளையநம்பிக்கு நன்றாக நினைவிருந்தது. திருமோகூர்ப் பெரியவர் மதுராபதி வித்தகரைச் சந்திப்பதற்காக வந்தபோது தான் காணநேர்ந்தது முதல் தன் மனிதன் இவனே என்ற ஞாபகத்தையும் தவிர்க்க முடியவில்லை. மலரும் முகத்தில் புன்னகையைப் புன்னகையால் எதிர்கொண்டு அந்தக் கரும்பொற்கொல்லனை வரவேற்றான் இளையநம்பி. இளையநம்பி எதிர்பார்க்க வில்லை என்றாலும் ‘கயல்-’ என்று நல்லடையாளச் சொல்லைக் கூறிவிட்டே அவனை வணங்கினான் கரும் பொற்கொல்லன். சிரித்தபடியே இளையநம்பி அவனிடம் கூறினான்: “நண்பனே! பயப்படவேண்டிய அவசியமில்லை! நீ அழகன் பெருமாளோடு வந்து என் எதிரே நிற்கிறாய்... நல்லடையாளச் சொல்லைக் கூறாவிட்டாலும் உன்னை நான் நம்புவேன். நீ நம்மைச் சேர்ந்தவன்.” இப்படிக் கூறிய சுவட்டோடு இந்த வார்த்தைகளால் தான் முன்பு திருமோகூரில் நுழைந்த நாளன்று அவன் தன்னை நம்பாமல் நல்லடையாளச் சொல்லை எதிர்பார்த்துச் சோதனை செய்ததை இப்போது அவனிடம் குத்திக் காட்டத் தான் முயல்வதாக அவன் புரிந்து விடக் கூடாதே என்று தயங்கவும் செய்தான் இளையநம்பி. ⁠“நீ அன்று திருமோகூரில் நான் முதல் முதலாக நுழைந்த தினத்தன்று என்னிடமிருந்து நல்லடையாளச் சொல் கிடைக்காத வரை எனக்கு வழி கூறாமலிருந்த பிடிவாதத்தை நான் பாராட்டுகிறேன். கட்டுப்பாடும், உறுதியும்தான் இன்று நமக்கு வேண்டும். இனிய வார்த்தைகளைக் கேட்டு மனம் நெகிழ்கிறவனை நண்பனும் நெகிழச் செய்யமுடியும். பகைவனும் நெகிழச் செய்து விட முடியும். நீ அப்படி நெகிழாதவனாக இருந்ததை நான் வரவேற்கிறேன்"-- என்று அந்தக் கொல்லன் தன்னுடைய முன்வார்த்தைகளைத் தவறாகப் புரிந்து கொள்ளாமலிருப்பதற்காக இளையநம்பி மேலும் தொடர்ந்து அவனோடு பேசினான். ஆனால் அவனோ மிகமிக விநயம் தெரிந்தவனாக இருந்தான். அவன் பணிவாகப் பேசினான்:- ⁠“ஐயா! எப்படி இருந்தாலும் அன்று தங்களுக்கு மறுமொழி கூறாததற்காகத் தாங்கள் எளியேனைப் பொறுத்தருள வேண்டும். இரும்போடு பழகிப் பழகிப் பல வேளைகளில் என் மனமும் இரும்பாகி விடுகிறது.” ⁠“அப்படி இருப்பதை நான் வரவேற்கிறேன். ஒவ்வொருவர் மனமும் இரும்பாக இல்லையே என்பதுதான் இப்போது என் வருத்தம். இரும்பைப் போல் உறுதியான மனம் நம்மவர்கள் எல்லோருக்கும் இருந்தால் என்றோ களப்பிரர்களை இந்த நாட்டிலிருந்து நாம் துரத்தியிருக்கலாம்...” ⁠-என்று இளையநம்பி கூறிய மறுமொழி கொல்லனின் முகத்தை மலரச் செய்தது. சிறிது நேர்த்தில் அந்தக் கரும்பொற்கொல்லன் எப்போது வந்தான், என்ன காரியமாக வந்தான் என்பதையெல்லாம் இளையநம்பி அழகன் பெருமாளிடம் வினாவினான். ⁠“நேற்று முன்தினம் இரவில் தேனூர் மாந்திரீகன் வந்தது போல்தான், இவனும் நிலவறை வழியாகப் பின்னிரவில் நேற்று இங்கே வந்தான். நாம் கலந்து பேசவும் திட்டமிடவும் நிறையச் செய்திகள் இருக்கின்றன. நீங்கள் உறங்கி எழுந்த சோர்வோடு இருப்பதாகத் தெரிகிறது. நீராடி வாருங்கள்! பேசலாம்!"- என்றான் அழகன்பெருமாள். தன்னைத் தவிரப் பிறர் அனைவரும் நீராடிக் காலைக் கடன்களை எல்லாம் முடித்து ஆயத்தமாயிருப்பதைக் கண்டு இளையநம்பி நீராடுவதற்கு விரைந்தான். காலந்தாழ்ந்து எழுந்ததற்காக அன்று அவன் வெட்கப்பட்டான். ⁠கூடத்தில் மயில் தோகை விரித்திருப்பது போல் அமர்ந்து, இரத்தினமாலை ஈரக் கூந்தலுக்கு அகிற்புகை ஊட்டிக் கொண்டிருந்தாள். அவன் வரக் கண்டதும் அவள் நாணத்தோடு எழுந்து நிற்க முயன்றாள். ⁠“நீ எழுந்து நிற்க வேண்டாம்! உன் செயலைக் கவனி” என்பது போல் கையினாற் குறிப்புக் காட்டி விட்டுப் புன்முறுவல் பூத்தபடி மேலே நடந்தான் அவன். அவள் கூந்தலின் நறுமணமும், அகிற்புகை வாசனையும் வந்து அவன் நாசியை நிறைத்துக் கிறங்கச் செய்தன. இந்த நறுமணங்கள் எல்லாம் அவள் பொன்மேனியின் நறுமணங்களை அவனுக்கு நினைவூட்டின. நீராடுவதற்குச் செல்ல இருந்தவன் தேனூர் மாந்திரீகனின் நினைவு வரப்பெற்றவனாகத் திரும்பச் சென்று அவனைக் கண்டான். இளையநம்பி காணச் சென்றபோது, அவன் கட்டிலில் எழுந்து உட்கார்ந்திருந்தான். புண்கள் ஓரளவு ஆறியிருந்தன. இளையநம்பியைக் கண்டதும், அவன் முகம் மலர்ந்தான். அவனை அன்போடு விசாரித்த பின், சிறிது நேரம் ஆறுதலாக உரையாடிக் கொண்டிருந்து விட்டுப் பின்பு நீராடச் சென்றான் இளையநம்பி. அவன் உடல் நீராடியது என்றாலும் மனம், வந்திருக்கும் திருமோகூர்க் கரும்பொற் கொல்லன் சொல்லப் போகும் செய்திகள் என்னவாக இருக்கும் என்று அறிவதிலேயே இருந்தது. ⁠நீராடி முடிந்ததும், நகரின் திருவாலவாய்ப் பகுதி இருந்த திசை நோக்கி இறையனார் திருக்கோயிலை நினைத்து வணங்கினான் அவன். தமிழ்ச் சங்கத்தின் முதற்புதல்வராக அமர்ந்து பெருமைப்பட்ட கண்ணுதற் பெருங்கடவுளைக் கோயிலுக்கே சென்று வழிபடவும் வணங்கவும் முடியாதபடி இருப்பதை எண்ணி அவன் உள்ளம் வருந்தியது. ஈர உடையோடு கண்களை மூடி, தியானித்து இறையனார் நினைவுடனே வழிபட்டு விழிகளைத் திறந்து கண்டால், எதிரே அவன் அணியவேண்டிய மாற்றுடைகளோடு இரத்தினமாலை நின்றாள். ⁠“ஒரு பெண்ணின் காதலால் எவ்வளவு கெடுதல் பார்த்தாயா இரத்தினமாலை? விழித்துக் கொள்ளவேண்டிய நேரத்தில் உறங்கிப் போய் விடுகிறோம்...” ⁠“உறங்க வேண்டிய நேரத்தில் உறங்காவிட்டால், விழித்துக் கொள்ள வேண்டிய நேரத்தில் விழித்துக் கொள்ள முடியாதுதான்.” ⁠“அப்படியா? தயை செய்து அதற்கு யார் காரணமென்று இப்படி என் முகத்தைச் சற்றே நிமிர்ந்து பார்த்து மறுமொழி சொல்லேன் பார்க்கலாம்! உறங்க வேண்டிய நேரத்தையும், விழிக்க வேண்டிய நேரத்தையும் மாற்றிய குற்றத்துக்குக் காரணம் யாரோ?” ⁠இதைக் கேட்டு நாணிச் சிவக்கும் முகத்தை வேறு புறம் திருப்பிக் கொண்டு ஓடி விட்டாள் அவள். இந்தப் புதிய வெட்கம், இந்தப் புதிய வேற்றுமை எல்லாம் அவனுக்கு வியப்பைத் தந்தது. உடை மாற்றிக் கொண்டு அவன் கூடத்துக்கு வந்தபோது அங்கே அழகன் பெருமாள், திருமோகூர்க் கொல்லன், கட்டிலில் அமர்ந்தபடியே தேனூர் மாந்திரீகன், இரத்தினமாலை எல்லாரும் கூடிப் பேசிக் கொண்டிருந்தார்கள். இளையநம்பி வந்ததும் அவர்கள் பேச்சுத் தணிந்து ஓய்ந்தது. திருமோகூர்க் கொல்லனைப் பார்த்து இளையநம்பி கேட்டான். ⁠“நீ உப வனத்து முனை வழியேதான் நிலவறையில் நுழைந்து வந்திருப்பாய் என்று எண்ணுகிறேன். உப வனத்து நிலைமை எப்படி இருக்கிறது? களப்பிரர்கள் அதைக் கடுமையாகக் கண்காணிக்கிறார்களா?” ⁠“அடியேன் முன் வாயில் வழியே நேராக உப வனத்தில் நுழைந்து வரவில்லை. இருளோடு இருளாக வையையில் குறுக்கே நீந்தி, நீரைக் கடந்து, மறைந்து வந்து உப வனத்து நிலவறை முனையில் இறங்கி இவ்விடத்தை அடைந்தேன். உப வனத்துக்குள் ஒரு குறிப்பிட்ட இடத்திலிருந்து இப்படி ஒரு நிலவறைப் பாதை தொடங்குமென்று பூதபயங்கரப் படையினருக்குச் சந்தேகம் இருக்குமானால், வனம் முழுவதும் படை வீரர்களை நிரப்பிக் காவல் செய்திருப்பார்கள்.” ⁠“அப்படியானால் இப்போது உப வனத்தில் கடுமையான காவல் இல்லையா?” ⁠“நான் அப்படிச் சொல்லவில்லையே! அந்தக் கடுமையான காவலை நான் ஏமாறச் செய்து விட்டு வந்திருக்கிறேன் என்பதனால் காவலே இல்லை என்று ஆகிவிடாது...” என்று கொல்லன் கூறிக்கொண்டிருக்கும்போதே- ⁠“காவல் மிகவும் கடுமையாக இருக்கிறது என்பதற்கு நான் சாட்சி"--என்பதாகத் தேனூர் மாந்திரீகன் குறுக்கிட்டுச் சொன்னான். “பாதுகாப்பும், கட்டுக்காவலும் அகநகரில் வெள்ளியம்பலத்து முனையில் கடுமையாக இருக்கும். நம் தேனூர் மாந்திரீகன் செங்கணான் கூறுவதிலிருந்து, பாண்டிய வேளாளர்கள் வசிக்கும் சுற்றுப்புறத்துச் சிற்றூர்களையும் களப்பிரர்கள் கண்காணித்துக் கொண்டிருப்பார்கள்! பெரியவர் மதுராபதி வித்தகர் திருமோகூரில் இல்லாமற் போனதற்குக் காரணம் அதுவாகத்தான் இருக்கவேண்டும்"- என்று அழகன்பெருமாள் கூற முற்பட்டான். புதியவன் வாயிலாக நிலைமைகளை அறிய முற்படும் தன்னிடம், செங்கணானும் அழகன்பெருமாளுமே நிலைமைகளைக் கூற முற்படவே, இளையநம்பிக்கு அவர்கள் மேல் கோபமே வந்தது. அழகன்பெருமாளையும், செங்கணானையும் உறுத்துப் பார்த்தான் அவன். அந்தப் பார்வை அவர்கள் பேச்சைத் தடுத்தது. அவர்கள் பேச்சு நின்றதும், “இத்தகைய சூழ்நிலையில் உயிரைப் பொருட்படுத்தாமல் ‘நீ இங்கே எங்களைத் தேடி வந்திருக்கிறாய் என்றால் அதற்குரிய காரியம் ஏதேனும் உன்னிடம் ஒப்படைக்கப்பட்டிருக்க வேண்டும்” -- என்று அவன் திருமோகூர்க் கொல்லனை நோக்கிக் கேட்டவுடன் அந்தக் கொல்லன், தன் கையோடு கொண்டு வந்திருந்த தாழை ஓலையால் நெய்து மூடியும் இட்ட ஓலைக் குடலையை எடுத்துத் திறந்தான். அடுத்த சில கணங்களில், சிறிய ஓலைச் சுவடி ஒன்றைப் பத்திரமாக எடுத்து இளைய நம்பியிடம் கொடுத்தான் அவன். இளையநம்பி அதை வாங்கினான். ⁠அப்படிக் கொடுப்பதற்காகக் குடலையிலிருந்து சுவடியை எடுத்த போது, கையோடு வந்த மற்றோர் ஓலையை மறுபடியும் குடலையிலேயே இட்டு மூடிவிட்ட அவன் செயலை இளையநம்பி கண்டான். ⁠“அது என்ன ஓலை நண்பனே? என்னைத் தவிர வேறெவர்க்கும் கூட நீ ஓலை கொண்டு வந்திருக்கிறாயா?” ⁠“.............. ?” ⁠அந்தக் கொல்லன் மறுமொழி சொல்லத் தயங்கினான். விடாமல் மீண்டும் இளையநம்பி அவனை துளைத்தெடுப்பது போல் கேட்கவே, அவன் பதிலளிக்க வேண்டியதாயிற்று. ⁠“ஐயா! இதுவும் தங்களிடம் சேர்க்கப்பட வேண்டியதுதான். ஆனால்.... அவ்வளவிற்கு முதன்மையானதல்ல... தாங்கள் அந்த ஓலையை முதலில் படிக்கவேண்டும் என்பது அவ்விடத்து விருப்பம்...” ⁠சற்றே தாமதமாகத் தன்னிடம் சேர்க்கப்படுவதற்கு இன்னோர் ஓலையும் இருக்கிறது என்று தெரிந்ததும், அதைப் பற்றிய ஆவலுடன் விரைந்து இதைப் பிரித்தான் இளையநம்பி. சுவடியின் ஒவ்வோர் ஓலையிலும் நல்லடையாளச் சொல் பொறிக்கப்பட்டிருந்தது. ⁠பெரியவர் மதுராபதி வித்தகர் திருமோகூரில் இல்லை என்ற அந்துவனின் ஓலைச் செய்தி நினைவு வரவே, தன் கையிலிருந்த ஓலையைப் படிக்கு முன், ⁠“இப்போது நீ எங்கிருந்து வருகிறாய்?"--என்று கொல்லனைக் கேட்டான் இளையநம்பி. “நான் எங்கிருந்து வருகிறேனோ அங்கிருந்து ஓலையும் வரவேண்டும் என்பதாக அனுமானித்துக் கொள்ள முடியாது” -என்றான் அவன். இளையநம்பிக்கு முதலில் அது புரிய வில்லை. ஆனால் அந்த ஓலையைப் படிக்கத் தொடங்கியதும் அவன் கூறிய மறுமொழியின் பொருள் புரியலாயிற்று. 36. பெரியவர் பேசுகிறார் ‘திருக்கானப்பேர் பாண்டிய குல விழுப்பரையர் தவப்பேரன் இளையநம்பி காணவிடுக்கும் ஓலை. இந்த ஓலையை நான் எங்கிருந்து எழுதுகிறேன் என்பதைவிட எதற்காக எழுதுகிறேன் என்பதையே இதைப் படிக்கத் தொடங்கும்போது நீ சிந்திக்க வேண்டும். இவ்வோலை உன்னை நலனோடும் திடனோடும் கூடிய நிலையில் காண வாழ்த்துகிறேன். பல நாட்களுக்கு முன்பாக யான் அந்துவன் மூலம் உனக்கு அறிவிக்கச் சொல்லியிருந்த மூன்று குறிப்புகள் இதற்குள் உனக்கு அறிவிக்கப்பட்டனவா இல்லையா என்பது எனக்குத் தெரியவில்லை. களப்பிரர்களின் கொடுமை அதிகரிப்பதால் அகநகருக்கும் நமக்கும் தொடர்புகள் பெரும்பாலும் அற்றுவிட்டன. எதுவும் தெரியவில்லை. எதையும் தெரிவிக்கவும் முடியவில்லை. சிற்றூர்கள் தோறும் தங்கள் எதிரிகளைத் தேடிக் கருவறுக்கக் களப்பிரர்கள் பூதபயங்கரப் படையை ஏவியிருக்கிறார்கள். முறையோ, நியாயமோ, நீதியோ இன்றிச் சந்தேகப்பட்டவர்களை எல்லாம் கொல்லவும், சிறைப் பிடிக்கவும் செய்கிறார்கள். இந்தச் சூழ்நிலையில் நம்மைச் சேர்ந்தவர்களில் மிகவும் சாதுரியமுள்ளவனும், உடல் வலிமை மிக்கவனும் ஆகிய திருமோகூர்க் கரும்பொற்கொல்லன் மூலமாக இந்த ஓலையை உனக்குக் கொடுத்துவிட எண்ணியுள்ளேன். ⁠‘நானும், காராளரும், மற்றவர்களும் நினைத்துத் திட்டமிட்டதும், எதிர்பார்த்ததும் வேறு; நடந்திருப்பது வேறு. கைக்கெட்டியது வாய்க்கு எட்டாமற் போய்விட்டது. உனக்கும் மற்றவர்களுக்கும் ஒரு முன் எச்சரிக்கையாக இருக்கட்டும் என்று யானைப் பாகன் அந்துவன் மூலம் ஏற்கெனவே தெரிவித்தவற்றை இந்த ஓலை மூலம் மேலும் விளக்குவதுதான் என் நோக்கம். பொதுவாக நான் எழுத்தாணி பிடித்து ஓலைகள் எழுதுவதில்லை. எழுதினாலும் நீண்ட வார்த்தைகளால் பெரிதாக எழுதுவது வழக்கமில்லை. அதிக வார்த்தைகளில் நம்பிக்கை இல்லாதவன் நான். திருமோகூர்ப் பெரியகாராளர்கள் என் அருகே இல்லாததால், நானே எழுத வேண்டிய நிலைமை ஏற்பட்டுவிட்டது. அதிகம் எழுத வேண்டியதையும் தவிர்க்க முடியவில்லை. ⁠‘அன்று பெரியகாராளர் மகள் செல்வப் பூங்கோதையின் சித்திரவண்டிகளின் பூங்குவியலில் மறைந்து நீ கோநகருக்குள் நுழைந்த போது எல்லாம் சோதனை இன்றி முடிந்து விட்டதாகவே நீயும் பிறரும் நினைக்கிறீர்கள். அப்போது உங்கள் வண்டிகளைச் சோதித்த இரு பூதபயங்கரப்படை வீரர்களின் ஒருவனின் ஐயப்பாட்டாலும், வெள்ளியம்பலத்தருகே அடுத்தடுத்துப் பிடிபட்ட இருவராலும் எல்லாத் திட்டமும் பாழாகி விட்டது. பல்லாயிரக்கணக்கான யாத்திரீகர்கள் வெளியேற்றப்பட்ட போதே கோநகரின் கோட்டை மதில்களுக்குள்ளிருந்து நமது வலிமையும் அகற்றப் பட்டுவிட்டது. பிடிபட்ட ஒற்றர்களிடம் ஆயுதங்கள் இருந்திருக்கும். களப்பிரர்கள் அவர்களை யாத்திரீகர்கள் என்று நம்புவதற்கும், ஒப்புக்கொள்வதற்கும் அந்த ஆயுதங்களே தடையாகியிருக்கும். புறத்தே வெளிப்பட்டுத் தெரியாததும், அங்கியிலும் இடுப்புக் கச்சையிலும் மறைந்துவிடக் கூடியதுமான, சிறுசிறு வாள்கள் ஒவ்வொரு யாத்திரீகனிடமும் இருக்கலாம். நல்ல வேளை சூழ்நிலை பொருந்தி வரவில்லை என்றால் யாத்திரீகர்களாகவே உள்ளே நுழைந்தது போல் யாத்திரீகர்களாகவே கோட்டைக்குள்ளிருந்து வெளியேறிவிட வேண்டும் என்பது அவர்களுக்கு முன்பே தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தச் செய்திகள் எல்லாம் ஒரு நிலைமை வரை உனக்கே தெரிய வேண்டாம் என்று நானும், காராளரும், பிறகும் நினைத்தோம். அழகன்பெருமாள்கூடச் சொல்லியிருக்க மாட்டான். ஆண்டாண்டுகளாகத் திட்டமிட்ட பூசலில் வெற்றி அடைந்த பின், அந்த வெற்றியை உனக்கு அறிவித்து உன்னை மகிழச் செய்யலாம் என்றிருந்தோம். அப்படிச் செய்ய இயலாமல் போய்விட்டது. இதற்காக அழகன் பெருமாளைக் கோபித்துக் கொள்ளாதே. அவனைப் போல் நம்பிக்கையும், பாண்டிய மரபின்மேல் அரச விசுவாசமும் உள்ள ஓர் ஊழியனை ஈரேழு பதினான்கு புவனங்களிலும் தேடினால் கூட நீகாணமுடியாது.’ ⁠இந்த இடத்தில் ஓரிரு கணங்கள் ஓலையைப் படிப்பதிலிருந்து சிந்தனை விலகி, முந்திய தினம் முன்னிரவில் தான் உறங்கிவிட்டதாக எண்ணிக் கொண்டு அழகன் பெருமாளும், தேனூர் மாந்திரீகன் செங்கணானும் தங்களுக்குள் உரையாடிய வார்த்தைகளை இப்போது மீண்டும் நினைவு கூர்ந்தான் இளையநம்பி. அந்த உரையாடலின் பொருள் இப்போது அவனுக்குத் தெளிவாக விளங்கத் தொடங்கியது. மேலே ஓலையைப் படிக்கத் தொடங்கினான் அவன். ⁠‘வெள்ளியம்பலத்தருகே நம்மவர்கள் பிடிபட்ட செய்தி யானைப் பாகன் அந்துவனால் என்க்குக் கூறியனுப்பப்பட்ட நாளன்றுதான் தென்னவன் சிறுமலை மாறன் என்னும் பாண்டியகுல வேளாளன் என்னைச் சந்திக்க மோகூர் வந்திருந்தான். இந்தத் தென்னவன் மாறன் யார் என்பதை நீ தெரிந்து கொண்டிருக்க நியாயமில்லை. பின்பொரு சமயம் நீ இவனைத் தெரிந்து கொள்ளலாம். இப்போது அதற்காகக் கவலைப்படாதே! இந்தப் பிள்ளையாண்டான் என்னைச் சந்திக்க வந்த தினத்தன்று நள்ளிரவில்தான் சோதனைகள் மோகூரிலும் வந்து சேர்ந்தன. திடீரென்று தீவட்டிக் கொள்ளைக்காரர்கள் போல் பல நூறு பூதபயங்கரப் படை வீரர்கள் இருளோடு இருளாகப் பெரியகாராளரின் மாளிகையையும், அறக்கோட்டத்தையும் வந்து வளைத்துக் கொண் டார்கள். பெரியகாராளரின் விருந்தினனாகத் தங்கியிருந்த தென்னவன் சிறுமலைப் பிள்ளையாண்டானும், அறக்கோட்டத்து மல்லனும் தந்திரமாக நடந்து கொள்ளத் தோன்றாமல் களப்பிரப் பூதபயங்கரப் படையினரை எதிர்த்து, உணர்ச்சி வசப்பட்டுப் போரிட முயன்றதால், எதிரிகளிடம் அகப்பட்டுக் கொண்டார்கள். காராளரும் அவர் குடும்பத்தினரும் மாளிகையோடு சிறை வைக்கப்பட்டது போல், முடக்கப்பட்டு விட்டார்கள். உடனே இரவோடு இரவாக நானும் ஆபத்துதவிகளும் முனையெதிர் மோகர் படையினரும் மோகூரிலிருந்து வேறு திசையில் புறப்பட்டுக் குடி பெயர்ந்து விட்டோம். காராளரின் நிலைமைதான் இரங்கத்தக்கதாகி இருக்கிறது; பாண்டியகுலம் தலையெடுக்க உதவிய அந்த உபகாரிக்குச் சோதனை நேர்ந்திருக்கிறது. அவருடைய களஞ்சியங்களிலிருந்து அரண்மனைக்கு நெல் எடுத்துச் செல்லும் வண்டிகளைக் கூட இப்போது களப்பிரர்களே கோட்டைக்குள் ஒட்டிச் செல்கிறார்களாம். அரண்மனைக் களஞ்சியங்களுக்கு நெல்லனுப்புகிறவர் என்பதனால் அவர் மேல் களப்பிரர்களுக்கு இருந்த அன்பும், பிரியமும் கூட மாறி விட்டதாம். ஆனாலும் இவ்வளவு நாள் தங்களுக்கு வேண்டிய போதெல்லாம் வரையாமல் வாரி வழங்கிய ஒரு வள்ளலைத் திடீரென்று கடுமையாகத் தண்டிக்கவும் மனம் வராமல் மாளிகையை விட்டு வெளியேற முடியாமல் கண்காணிக்கிறார்களாம். இந்த நிலையில் எனக்கும், அவருக்கும் நடுவே அறியவும் அறிவிக்கவும் பயன்படும் ஒரே பொது மனிதன்தான் திருமோகூரில் எஞ்சியிருக்கிறான். உழவர்களின் கலப்பைக்குக் கொழு அடிக்கும் அந்தக் கொல்லன் தன் மேல் களப்பிரர்களின் கண்கள் சந்தேகமுற்று விடாதபடி மிக மிகச் சாதுரியமாக இருக்கிறான். இப்போது நான் இருக்கும் புதிய இடத்திற்கு அவனை வரவழைத்து, அவனிடம் இந்த ஓலைகளைக் கொடுத்து, முதலில் காராளரை இதைப் படிக்கச் செய்துவிட்டுப் பின்பு அவரிடமிருந்து மீண்டும் வாங்கி, உன்னிடம் இதைக் கொண்டு வந்து சேர்க்கச் செய்ய வேண்டும். ஒவ்வொருவருக்கும் தனித் தனியே எழுத என்னால் முடியவில்லை. உன்னை விளித்து எழுதப் பட்டிருக்கும் இந்த ஓலையை நீ உரிய காலத்தில் அடைவாயானால் உனக்கு முன்பே இதைப் பெரிய காராளரும், இந்த ஓலையைக் கொண்டுவரும் கொல்லனும் படித்திருப்பார்கள் என்பதை நீ தெரிந்து கொள்ளவேண்டும். நீ இதனைப் படித்தபின் அழகன்பெருமாளும், இரத்தின மாலையும் இதைப் படிக்குமாறு செய்யவேண்டியதும் உன் கடமை. ‘உங்கள் அனைவருக்கும் என்னுடைய புதிய இருப்பிடத்தை அறிவிக்காமல் இதை எழுதுவதற்குக் காரணம் உண்டு. ஒருவேளை இந்த ஓலை உங்களுக்கு வந்து சேராமல் அசம்பாவிதங்கள் நேருமானால் அபாயம் எங்கள் இருப்பிடத்தையும் தேடி வராமல் தடுப்பதுதான் என் நோக்கம். என் இருப்பிடம் தெரிந்தால் ஆர்வத்தை அடக்க முடியாமல் உங்களில் யாராவது காண வந்து என்னையோ, உங்களையோ அபாயத்துக்கு ஆளாக்கிக் கொள்வதையும் இப்போதுள்ள சூழ்நிலையில் நான் விரும்பவில்லை. ஆலவாய் அண்ணல் திருவருள் இன்னும் முழுமையாக நமக்குக் கிடைக்கவில்லை என்றே தோன்றுகிறது. அது கிடைக்கும் வரை நாம் விழிப்பாகவே இருக்க வேண்டும். குறிப்பாய் நீ மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும், இளையநம்பி! விதை நெல்லை அழித்து விட்டால் அப்புறம் பயிரிட முடியாமற் போய்விடும். எனவே, இப்போது உங்களை என் சார்பில் தேடி வந்திருக்கும் திருமோகூர்க் கரும்பொற்கொல்லனை அவன் அறிந்திருக்கக் கூடும் என்ற காரணத்தினால் நான் தங்கியிருக்கும் இடத்தைக் கூறுமாறு உங்களில் எவரும் நிர்ப்பந்தம் செய்யக் கூடாது. இது என் கடுமையான கட்டளை. இதை நீங்கள் மீறினால் நம்மைச்சுற்றி தப்ப முடியாத பயங்கர விளைவுகள் ஏற்பட்டு விடும். என்னுடைய மூன்று கட்டளைகளில்-அதாவது அந்துவன் மூலம் நான் தெரிவித்தவற்றில்-முதற் கட்டளை எல்லாருக்குமே பொருந்தும். என்னை நீங்கள் எல்லாருமோ, உங்களில் ஒருவரோ வந்து காணவேண்டிய காலத்தையும் இடத்தையும் நானே அறிவிப்பேன். அதுவரை நீங்கள் தேடவோ, ஆர்வம் காட்டவோ கூடாது. இரண்டாவது கட்டளையை அழகன் பெருமாளும் அவனைச் சேர்ந்தவர்களுமே நிறைவேற்ற வேண்டும். தென்னவர் மாறனையும், மல்லனையும் சிறை மீட்கும் முயற்சியில் இளையநம்பி ஈடுபடக்கூடாது. மூன்றாவது கட்டளைக்கு எல்லாருமே பொறுப்பாவார்கள். கணிகை இரத்தினமாலை, அழகன் பெருமாள், பிறர், அனைவருமே திருக்கானப்பேர் நம்பியைப் பாதுகாக்க வேண்டும். இவற்றை என் ஆணையாக அனைவரும் மதிக்க வேண்டுகிறேன்.’ ஓலையின் ஒவ்வொரு சொல்லும் பெரியவரே எதிர் நின்று பேசுவன போலிருந்தன. இவ்வளவில் ஓலைகள் முடிந்து அடையாள இலச்சினை பொறித்திருந்தது. அந்த ஓலைகளை அடுத்துப் படிக்க வேண்டிய முறைப்படி அழகன்பெருமாளிடம் உடனே கொடுத்து விட்டு மிகவும் ஞாபகமாக, “எங்கே? அந்த மற்றோர் ஒலை?” - என்று கொல்லனை நோக்கிக் கை நீட்டினான் இளையநம்பி. கொல்லன் மீண்டும் தயங்கினான். அந்த ஓலையை அவர்கள் அனைவருக்கும் நடுவில் அவன் இளையநம்பியின் கையில் எடுத்துத் தரத் தயங்குவதாகத் தெரிந்தது. 37. கொல்லனின் சாதுரியம் திருமோகூர்க் கொல்லன் அந்த இரண்டாவது ஓலையைத் தன்னிடம் கொடுப்பதற்கு அவ்வளவு தூரம் ஏன் தயங்குகிறான் என்பது இளைய நம்பிக்குப் புதிராயிருந்தது. ஆனாலும் அந்தத் தயக்கமே ஆவலை வளர்ப்ப தாகவும் இருந்தது. தன்னைச் சுற்றி இருந்தவர்களை ஒருமுறை பார்வையால் அளந்த பின் தன்னைத் தொடர்ந்து வருமாறு அவனுக்குக் குறிப்புக் காட்டிவிட்டுச் சந்தனம்  அரைக்கும் பகுதிக்குச் சென்றான் இளையநம்பி. கொல்லன் பின் தொடர்ந்து வந்தான். ⁠ஆனால் சந்தனம் அரைக்கும் பகுதியிலும் அவர்களுக்குத் தனிமை வாய்க்கவில்லை. அங்கே நிலவறை வழிக்குக் குறளன் காவலாக இருந்தான். குறளனைச் சில கணங்கள் புறத்தே விலகி இருக்குமாறு வேண்டிக் கொண்ட பின், திருமோகூர்க் கொல்லனை உள்ளே அழைத்தான் இளைய நம்பி; உள்ளே வந்ததுமே இளையநம்பி எதிர் பார்த்தது போல் உடனே ஓலையை எடுத்து நீட்டி விடவில்லை அவன். ⁠“ஐயா! இந்த ஓலையைக் கொடுப்பதற்கு முன் நான் ஏன் இவ்வளவு எச்சரிக்கையும், பாதுகாப்பும் தேடுகிறேன் என்று நீங்கள் வியப்பு அடையலாம். இதை யார் என்னிடம் சேர்த்தார்களோ அவர்களுடைய விருப்பம் அப்படி! அந்த விருப்பத்தைக் காப்பாற்ற நான் கடமைப் பட்டிருக்கிறேன்.” ⁠“புரியும்படியாக விளக்கிச் சொல்! ‘நீ என்ன கடமைப் பட்டிருக்கிறாய்? யாருக்குக் கடமைப்பட்டிருக்கிறாய்?’ என்பதை எல்லாம் என்னால் இன்னும் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியவில்லை.” ⁠“அரசியற் கடமைகளைவிட அன்புக் கடமை சில வேளைகளில் நம்மை அதிகமாகக் கட்டுப்படுத்தி விடுகிறது ஐயா!” ⁠“பாயிரமே[1] பெரிதாகயிருக்கிறதே அப்பனே! சொல்ல வேண்டியதைச் சொன்னால் அல்லவா, இவ்வளவு பெரிய பாயிரம் எதற்கென்று புரியும்?” ⁠“கோபித்துக் கொள்ளாதீர்கள் ஐயா! பெரியவரைக் காண்பதற்கு அவர் இருப்பிடம் செல்லுமுன் மாளிகையோடு மாளிகையாகச் சிறை வைக்கப்பட்டிருக்கும் திருமோகூர்ப் பெரிய காராள வேளாளரைச் சந்திக்க முயன்றேன். பூத பயங்கரப் படையினர் முதலில் கடுமையாக மறுத்தார்கள். அந்தப் படையினரை என்னை நம்ப வைப்பதற்காக, என் உலைக் களத்தில் அவர்கள் வாள், வேல்களைச் செப்பனிடும் பணிகளை மறுக்காமற் செய்திருந்தேன். மேலும் ‘காராளருடைய உழுபடைகளுக்கு எல்லாம் கலப்பைக்குக் கொழு அடிப்பவன் என்ற முறையில் அவரைப் பார்க்க வேண்டுமே தவிரச் சொந்த முறையில் அவரிடம் எனக்கு எந்த அரசியல் வேலையும் இல்லை! சந்தேகம் கொள்ளாமல் என்னை அவரைக் காண விட வேண்டும்’ என்று அவர்களிடம் மன்றாடினேன். நான் அவ்வளவு மன்றாடியபின் ‘கால் நாழிகைப் போது அவரைக் காணலாம்’ என்று அவர்கள் இணங்கினார்கள். நான் அவ்வாறு பெரிய காராளரைச் சந்தித்தபோது, அவருடைய திருக்குமாரி செல்வப் பூங்கோதையும் உடனிருந்தாள். நான் அந்த மாளிகையிலிருந்து வெளியேறும்போது, பெரியகாராளர் மகள் என்னருகே வந்து ‘இந்த விஷயம் என் தந்தைக்கோ, பெரியவருக்கோ தெரியக்கூடாது! தயைகூர்ந்து நான் தரும் ஓலையைத் திருக்கானப்பேர்ப் பாண்டியகுல விழுப்பரையரின் பேரரிடம் சேர்த்துவிட முடியும் அல்லவா?’ என்று பரம ரகசியமாக என்னிடம் உதவி கோரினாள். அதற்கு, ‘அம்மா! இப்போது நான் கூடல் மாநகருக்குச் செல்லப் போவதில்லை. இரவோடு இரவாகப் பயணம் செய்து, பெரியவர் மதுராபதி வித்தகர் புதிதாக அஞ்ஞாத வாசம் செய்யும் இடத்திற்கு வரச் சொல்லிக் கட்டளை வந்திருக்கிறது. மீண்டும் எப்போதாவது நான் கூடல் மாநகருக்குச் செல்ல வேண்டியதாக நேர்ந்தால் அப்போது உனக்கு இந்த உதவியைச் செய்வேன்’ என்று கூறிவிட்டுப் புறப்பட்டேன். பெரியவரைச் சந்தித்த பின், அவரே தம்முடைய ஓலையை முதலில் பெரியகாராளரைப் படிக்கச் செய்த பின்புதான், மதுரை மாநகருக்கு எடுத்துச் சென்று தங்களிடம் ஓலையைக் காண்பிக்க வேண்டும் என்று ஆணையிட்டார். அதனால் நான் மீண்டும் திருமோகூரை அடைந்து, அரிய முயற்சி செய்து கட்டுக் காவலில் இருந்த பெரியகாளாரைச் சந்திக்க வேண்டியிருந்தது. அந்தச் சமயத்தில் தந்தைக்கும் தெரியாமல் இந்த ஓலையை என்னிடம் கொடுத்து உங்களிடம் சேர்த்துவிடச் சொல்லி அந்தப் பெண் கண்களில் நீர் நெகிழ வேண்டினாள். அந்தப் பெண்ணின் கைகளால் காராளர் வீட்டில் எவ்வளவோ நாட்கள் நான் வயிறார உண்டிருக்கிறேன் ஐயா! அவள் கண்களில் நீரைப் பார்த்ததும் என் மனம் இளகிவிட்டது. அவளுடைய வேண்டுகோளை நான் மறுத்துச் சொல்ல முடியவில்லை. அவள் கொடுத்த ஓலையையும், நான் வாங்கிக் கொண்டேன். பெரியவர் கொடுத்த ஓலை, நீங்கள், நான், காராளர், அழகன்பெருமாள் எல்லாரும் அறிந்தது. எல்லாருக்கும் பொதுவானது. ஆனால் இந்த ஓலை இதை எழுதியவரைத் தவிர நீங்கள் மட்டுமே அறியப்போவது. உங்களுக்கு மட்டுமே உரியது.” ⁠சிரித்துக் கொண்டே பட்டுக் கயிறு இட்டுக் கட்டிய அந்த இரண்டாவது ஓலையை எடுத்து இளைய நம்பியிடம் நீட்டினான் அவன். ⁠“இவ்வளவு அரிய முயற்சிகளும், செய்திகளும் அடங்கிய ஓலையையா, ‘அவ்வளவிற்கு முதன்மையானதல்ல’ என்று தொடக்கத்தில் என்னிடம் கூறினாய் நீ?” என்று வினாவியபடி, கொல்லன் கொடுத்த ஓலையை வாங்கினான் இளையநம்பி. திருமோகூர்க் கொல்லனும் தயங்காமல் உடனே அதற்கு மறுமொழி கூறினான்:- ⁠“தவறாக நினைத்துக் கொள்ளாதீர்கள் ஐயா! ஒரு காரணத்துக்காகத் தங்கள் நன்மையையும், பெரிய காராளரின் மகளுடைய நன்மையையும் நினைத்தே நான் முதலில் எல்லார் முன்னிலையிலும் அப்படிச் சொல்லியிருந்தேன். சுற்றி நின்று கொண்டிருந்த மற்றவர்கள் கவனம், ‘இந்த இரண்டாவது ஓலை என்னவாக இருக்கும்?’ என்று இதன் பக்கம் திரும்பக் கூடாது என்பதற்காகவே, ‘அவ்வளவிற்கு இது முதன்மையானது அல்ல’ என்று எல்லாரும் கேட்கக் கூறியிருந்தேன். மற்றவர்கள் கவனம் எல்லாம் உங்களிடம் நான் முதலில் படிக்கக் கொடுத்த பெரியவரின் கட்டளை ஓலையைப் பற்றியதாக மட்டுமே இருக்கட்டும் என்பதற்காக நான் இந்தத் தந்திரத்தைச் செய்தேன். இதற்காக நீங்கள் என்னைப் பாராட்ட வேண்டும். பாராட்டுவதற்குப் பதிலாக நீங்களே குறை சொல்கிறீர்களே ஐயா?” ⁠“இன்னும் சிறிது நேரம் உன்னைப் பேச விட்டால், எது எதற்காக நான் உன்னைப் பாராட்ட வேண்டியிருக்குமோ அதற்கெல்லாம் எனக்கு வாய்ப்பே இல்லாமல் நீயாகவே உன்னைப் பாராட்டிக் கொண்டு விடுவாய் போலிருக்கிறதே? பாராட்டை எதிர்பார்க்கலாம். ஆனால் வற்புறுத்தவோ, கோரிக்கை செய்யவோ கூடாது அப்பனே!” ⁠“இப்படிக் காரியங்களுக்காக என்னை அர்ப்பணித்துக் கொள்வது என்று முடிவு செய்த முதல் நாளிலிருந்தே, அதை நான் நன்றாக உணர்ந்திருக்கிறேன் ஐயா! ஒரு விளையாட்டுக்காக அப்படி வேண்டியதை நீங்கள் என் விருப்பமென்று எடுத்துக் கொண்டு விடக் கூடாது.” ⁠“விளையாட்டு இருக்கட்டும்! இந்த ஓலையைப் படிக்குமுன் எனக்குச் சில நிலைமைகள் தெரியவேண்டும், சொல்வாயா?” ⁠“தாங்கள் கேட்பவற்றிற்குப் பணிவோடும் உண்மையோடும் மறுமொழி சொல்ல, நான் கடமைப் பட்டிருக்கிறேன் ஐயா!” ⁠“பெரியவர் இப்போது மாறிப் போய்த் தங்கியிருக்கும் ஊரையோ, இடத்தையோ எனக்கு மட்டும் சொல்லேன். உனக்குக் கோடிப் புண்ணியம் உண்டு...” ⁠“தங்களைவிட நான் பெரியவருக்கு இன்னும் அதிகமாகக் கடமைப்பட்டிருக்கிறேன் என்பதை இப்போது தங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன். நீங்கள் இப்போது என்னைக் கேட்பது போல்தான் பெரிய காராளரும், பெரியவருடைய ஓலையைப் படித்து முடித்ததும் என்னைக் கேட்டார். அவரிடமும் இதே மறுமொழியைத்தான் நான் கூறினேன். பெரியவரே யாரும் தெரிந்து கொள்ளக் கூடாது என்று கூறியிருக்கும் ஒன்றைத் தெரிந்து கொள்ள முயல்வது உங்களுக்கு அழகில்லை...” ⁠“அது போகட்டும்! நீ கருங்கல்லைப் போன்றவன். உன்னைப் போன்ற கருங்கல்லிலிருந்து நார் உரிக்க முடியாது. பெரிய காராளர் மாளிகையைக் காவலிருக்கும் பூதபயங்கரப் படை வீரர்களால் அவருக்கு ஏதேனும் கெடுதல்கள் உண்டா? இல்லை வெறும் காவல் மட்டும் தானா?” ⁠“கெடுதல்கள் எதுவும் கிடையாது! சொல்லப் போனால், காராளரை அவர்கள் இன்னும் மதிக்கவே செய்கிறார்கள் என்று தெரிகிறது. காராளர் வீட்டைச் சுற்றி அவர்கள் விரித்திருக்கும் வலை காராளருக்காக அல்ல.” ⁠“பின் யாருக்காக என்று நினைக்கிறாய்?” ⁠“உங்களுக்காக, எனக்காக, இன்னும் அவரைத் தேடி வந்து போகிறவர்களில் யார் யார் களப்பிரர்களுக்கு எதிரிகளோ, அவர்கள் எல்லாருக்காகவும் தான்!” ⁠“அப்படியானால், உன்னை ஏன் இன்னும் அவர்கள் ஆபத்தானவனாகக் கருதவில்லை?” ⁠“அது என் சாதுரியத்தையும், அவர்களுடைய சாதுரியக் குறைவையும் காட்டுகிறது.” ⁠“இனி என்னை நம்பிப் பயனில்லை என்று இப்போது உன்னை நீயே புகழ்ந்து கொள்ளத் தொடங்கி விட்டதாகத் தெரிகிறது அப்பனே!” ⁠“வஞ்சப் புகழ்ச்சி எனக்கு வேண்டியதில்லை ஐயா! இன்று வரை களப்பிரர்கள் நம்பும்படியாக நான் நடந்து கொள்கிறேன். அவர்கள் சந்தேகமும் சோதனையும் தீவிரமானால், அவர்களிடமிருந்து நானும் தப்ப முடியாது. ⁠காராளர் மகள் இன்னும் கொற்றவை கோயிலுக்கு நெய் விளக்குப் போட மாலை வேளைகளில் போய் வருகிறாளே! அவளை யாரும் தடுப்பதில்லை.” ⁠“அப்படியானால் இந்த ஓலையைப் படித்தபின் தேவைப்படும் என்று நான் விரும்புகிற பட்சத்தில், ஒரு மறுமொழி ஓலை கொடுத்தால், நீ அதனை அவளிடம் கொண்டு போய்ச் சேர்ப்பதில் சிரமம் எதுவும் இராதல்லவா?” ⁠“சிரமம் இருக்க முடியாது; இருக்கக் கூடாது. ஒரு வேளை சிரமங்கள் இருந்தாலும், அதைச் செய்ய நான் பின் வாங்கவோ தயங்கவோ மாட்டேன்." “உன் துணிவைப் பாராட்டுகிறேன்” என்று அவனுக்கு மறுமொழி கூறிவிட்டு அந்த ஓலையைப் படிப்பதற்காகப் பிரிக்கலானான் இளையநம்பி. அவன் அதைப் படிப்பதற்கான தனிமையை அவனுக்கு அளிக்க வேண்டும் என்கிற நாகரிகத்தைத் தனக்குத்தானே குறிப்புணர்ந்து புரிந்து கொண்டவனாகத் திருமோகூர்க் கொல்லன் அந்தப் பகுதியிலிருந்து விலகி வந்து வெளியே நின்ற குறளனோடு சேர்த்து நின்று கொண்டான். அவன் இவ்வாறு செய்ததை இளையநம்பி உள்ளூறப் பாராட்டினான். ↑ முன்னுரை 38. மனமும் நறுமணங்களும் அப்பகுதியில் சந்தனக் கல்லின் மேல் குறளன் அறைத்துக் குவித்திருந்த சந்தனத்தின் வாசனையையும், திருமோகூர்ப் பெரிய காராளர் மகள் செல்வப்பூங்கோதை தன் ஓலையை பிறர் அறியாமல் பாதுகாக்க, அவள் தன் மஞ்சத்தில் தலையணையில் வைத்துப் பாதுகாத்ததாலோ என்னவோ அவள் கூந்தலின் நறுமண வசீகரங்களின் வாசனையுமாக நுகர்ந்து கொண்டே அந்த ஓலையைப் படிக்கலானான் இளையநம்பி. பள்ளி எழுந்து நீராடி வந்த உற்சாகமும், காலை நேரத்தின் உல்லாசமும், அறையின் நறுமணமும், கைக்கு வந்திருந்த ஓலையின் சுகந்தமும் அவனை மயக்கிக் கொண்டிருந்தன. அந்தக் கணங்களில் எல்லாக் கவலைகளையும் மறந்து மிகமிக மகிழ்ச்சியாயிருந்தான் அவன். அவனைச் சூழ்ந்திருந்த நறுமணங்கள் அவன் மனத்தையும் குதூகலம் கொள்ள வைத்திருந்தன. அவள் தன் ஓலையை இணைத்துக் கட்டியிருந்த பட்டுக் கயிறும் மணந்தது. அந்தப் பட்டுக்கயிற்றை எடுத்துப் பார்த்த போது அது பெண்கள் தங்கள் கூந்தலை முடிந்து கட்டும் வகைளைச் சேர்ந்த பட்டுக் கயிறாக இருப்பதைக் கண்டு அவன் மனத்துக்குள் நகைத்துக் கொண்டான். ⁠அன்று காலையில் கூந்தலுக்கு அகிற்புகை ஊட்டிக் கொண்டிருந்த இரத்தினமாலையின் அருகேயும் அப்படி ஒரு பட்டுக் கயிறு கிடந்ததும் நினைவு வந்தது அவனுக்கு. ⁠ஓலையின் வாசகங்களைப் படிக்குமுன் அந்தக் கூந்தல் பட்டுக் கயிற்றின், மனத்தைக் கிறங்கச் செய்யும் நறுமணங்களை நாசியருகே உணர்ந்தான் அவன். ⁠முன்பு எப்போதோ தன்னோடு கற்ற ஒரு சாலை மாணவனாகிய திருக்கானப்பேர்ப் பித்தன் பாடிய ஒரு பாடல் இப்போது இளையநம்பிக்கு நினைவு வந்தது. பூக்களைப் பார்த்து ஓர் இளம் பருவத்துக் கவி கேட்பது போல் அமைந்திருந்தது, அந்தப் பாடலின் கருத்து. மிக அழகிய அந்தக் கற்பனையை நினைத்தான் அவன். ⁠“காலையில் மலர்ந்து மாலையில் வாடும் இவ்வுலகின் பூக்களே! உங்களில் யாருக்கு வாசனையும், தோற்றப் பொலிவும் அதிகம் என்று நீங்கள் ஒருவரோடு ஒருவர் போரிட்டுப் பயனில்லை! உங்களில் ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒருவிதமான வாசனையும், ஒருவிதமான தோற்றப் பொலிவும்தான் உண்டு. ஆனால் உங்களில் அனைவரின் வாசனைகளும், அனைவரின் தோற்றப் பொலிவும் ஒரே வடிவத்திற் சேர்ந்தே அமைந்திருக்குமானால், அந்த வடிவத்திற்கு நீங்கள் அனைவரும் தோற்றுப் போக வேண்டியதைத் தவிர வேறு வழியில்லை. அப்படி ஒரு வடிவத்தைப் பற்றி இன்று எனக்குத் தெரியும். ⁠உங்களில் மல்லிகைப் பூவுக்கு மல்லிகையின் வாசனை மட்டும் தான் உண்டு. தாழம்பூவுக்குத் தாழம்பூவின் வாசனை தான் உண்டு. சண்பகப் பூவுக்குச் சண்பகப் பூவின் வாசனை தான் உண்டு. பித்திகைப் பூவுக்கு அந்த வாசனை மட்டும்தான் உண்டு. நான் காதலிக்கும் பெண்ணின் கூந்தலிலோ, அத்தனை பூக்களின் வாசனையையும் ஒரு சேர நுகர முடிகிறது. அவளுடைய தோற்றத்திலோ அத்தனை பூக்களின் பொலிவையும் ஒருசேரக் காண முடிகிறது. அவளோ முகத்தைத் தாமரைப் பூவாகவும், கண்களைக் குவளைப் பூக்களாகவும், இதழைச் செம்முருக்கம் பூவாகவும், நாசியை எட்பூவாகவும், கைவிரல்களைக் காந்தள்பூக்களாவும் காட்டி, ஆயிரம் பூக்களின் அழகும் ஒன்று சேர்ந்த ஒரு பெரும் பூவாக வந்து என்னைக் கவருகிறாள். இப்படி ஒரு கன்னிப் பெண்ணின் வடிவிலும், வாசனைகளிலும் தோற்றுப் போய் மானம் இழந்த வேதனை தாங்காமல் அல்லவா, நீங்கள் ஒவ்வொரு பெண்ணின் கூந்தலிலும் வாழை நாரினால் தூக்குப் போட்டுக் கொண்டு தொங்கி வாடுகிறீர்கள்? ⁠உங்களில் சில மலர்கள் பெண்களில் கை பட்டாலே மலர்ந்து விடும் என்று இலக்கியங்கள் சொல்கின்றன. உங்களை விட அழகும் மணமும் உள்ளவர்கள் உங்களைத் தொடப் போகிறார்களே என்று கூசி நாணி நீங்கள் தோற்பதைத்தானே அது காட்டுகிறது?’ என்று இளமையில் திருக்கானப்பேர்ப் பித்தன் காதல் மயக்கத்தில் அழகாகக் கற்பனை செய்திருக்கும் ஒரு கவிதையின் கருத்தை இளையநம்பி இப்போது நினைவு கூர்ந்தான். ⁠அவள் அனுப்பியிருந்த அந்தக் கற்றையில், மூன்று ஓலைகள் சுவடி போல் இணைக்கப்பட்டிருந்தன. எழுத்துக்கள் ஓலையில் முத்து முத்தாகப் பதிந்திருந்த காரணத்தால், ஏட்டில் எழுதும் வழக்கமும், பயிற்சியும் அவளுக்கு நிறைய இருக்க வேண்டும் என்று அவனால் உய்த்துணர்ந்து கொள்ள முடிந்தது. அவனுக்கு அவள் தீட்டிய மடல் பணிவாகத் தொடங்கியது. ⁠‘திருக்கானப்பேர் நம்பியின் திருவடிகளில் தெண்டனிட்டு வணங்கி, அடியாள் செல்வப் பூங்கோதை வரையும் இந்த மடல் தங்களை நலத்தோடும் உறவோடும் காணட்டும். ⁠ஒருவேளை இந்தப் பேதையைத் தாங்கள் தங்களுடைய பல்வேறு அரச கருமங்களுக்கு நடுவே மறந்து போயிருந்தாலும் இருக்கலாம். நினைப்பதும், மறப்பதும் ஆண்களுக்குச் சுலபமான காரியங்கள். என்னைப் போல பேதைப் பெண் களுக்கு ஒன்றை நம்பிக்கையோடு நினைத்து விட்டால், அப்புறம் மறக்க முடிவதில்லை. எங்களை அறவே மறந்து போய் விடுகிறவர்களைக் கூட நாங்கள் மறக்க முடிவதில்லை. இதனால் எல்லாம்தான் பெண்களாகிய எங்களைப் பேதைகள் என்று சொல்லியிருக்கிறார்களோ என்னவோ? ⁠மதுரை மாநகரில் தங்களைக் கொண்டு வந்து விட்டு விட்டுத் திரும்பிய நாளிலிருந்து இந்தப் பேதைக்கு ஒவ்வொரு கணமும் உங்கள் நினைவுதான். என்னிடம் நேர்ந்து வரும் சுபாவ மாறுதல்களை இப்போது என் தாய் கூடக் கவனித்து என்னை வினவுகிற அளவு, உங்கள் ஞாபகம் என்னைப் பித்துப் பிடித்தவள் போல் ஆக்கி விட்டது. ‘பூப்போல் பொதிந்து கொண்டு செல்வது’ என்று வசனம் சொல்லுவார்கள். நாங்களோ உங்களைப் பூக்களிலேயே பொதிந்து கொண்டு போய்க் கோநகருக்குள் சேர்த்தோம். ⁠உங்களை இருந்த வளமுடையார் கோயில் நந்தவனத்தில் விட்டுவிட்டு ஆலய வழிபாட்டை முடித்துக் கொண்டு நானும் என் தாயும் திரும்புகிற வழியில் பூத பயங்கரப் படையினர் யாரையோ ஒற்றன் என்று சிறைப்பிடித்துச் செல்வதை வழியிலேயே கண்டோம். அந்த வினாடி முதல் உங்கள் நலனுக்காக நான் வேண்டிக் கொள்ளாத தெய்வங்கள் இல்லை. இங்கு எங்கள் வீட்டிற்கு நீங்கள் விருந்துண்ண வந்தபோது, என் தந்தையிடம் ‘இந்த வட்டாரத்தில் உங்கள் மகள் வேண்டிக் கொள்ளாத தெய்வங்களே மீதமிருக்க முடியாது போலிருக்கிறதே’ என்று குறும்பாகச் சிரித்தபடியே வினாவியிருந்தீர்கள். ⁠அப்படி நான் தெய்வங்களை எல்லாம் வேண்டியது அன்று எப்படியோ? இன்று மெய்யாகவும் கண் கூடாகவும் ஆகியிருக்கிறது. கோநகருக்குள் களப்பிரர்களிடம் மாட்டிக் கொள்ளாமல் உங்களைக் காக்க வேண்டும் என்று இப்போது நான் எல்லாத் தெய்வங்களையும் எப்போதும் வேண்டிய வண்ணமிருக்கிறேன். ஏற்கெனவே நான் கொற்றவை கோவிலுக்கு நெய் விளக்குப் போடத் தொடங்கியதை ஒரு மண்டலம் முடிந்த பின்பும் நிறுத்தவில்லை. உங்களுக்காக வேண்டிக் கொண்டு தொடர்ந்து விளக்கேற்றிக் கொண்டு வருகிறேன். ⁠மாலை மயங்கிய வேளையில் திருமோகூர் வீதியில் நான் கொற்றவை கோயிலுக்கு விளக்கேற்றச் சென்று கொண்டிருந்த போதுதான் நீங்கள் என்னைச் சந்தித்து வழி கேட்டீர்கள்! ‘உங்களிடமிருந்து நல்லடையாளச் சொல் கிடைக்கவில்லையே, உங்களுக்கு என்ன மறுமொழி சொல்லுவது!’ என்று நான் மறுமொழி கூறத் தயங்கிச் சிந்தித்துக் கொண்டிருந்தபோதே, ⁠‘அழகிய பெண்களும் ஊமைகளாக இருப்பது மோகூரில் வழக்கம் போலிருக்கிறது’ என்று என் வாயைப் பேசத் தூண்டினீர்கள். அன்று நான் ஊமையாயில்லை. உடனே துடிப்புடன் உங்களுக்கு விரைந்து கடுமையான சொற்களால் மறுமொழி கூறினேன். ஆனால் என் அந்தரங்கத்தைப் பேசுவதற்கும், பகிர்ந்து கொள்வதற்கும் யாருமில்லாத காரணத்தால் இன்று, இப்போதுதான் ஏறக்குறைய நான் ஊமையைப் போலாகி விட்டேன். என்னை இப்படி ஆக்கியது யார் தெரியுமா? நீங்கள்தான்! ⁠இந்த மடலை உங்களுக்காக வரையும்போது என் ஏக்கத்தின் அளவைச் சொற்களால் உணர்த்த முடியாது. இந்த ஊரில் என் பருவத்துக்குச் சமவயதுள்ள தோழிகளிடம் பேசிப் பழகிக் கொண்டிருந்த நான், இப்பொழுதெல்லாம் அவர்களோடு பேசுவதற்கு எதுவுமே இல்லாதது போல் ஆகிவிட்டது. யாரிடமும் பேசப் பிடிக்கவில்லை. எனக்கு நானே சிந்தித்து மாய்ந்து கொண்டிருக்கிறேன். சில சமயங்களில் கண்களில் நீர் நெகிழப் பிரமை பிடித்தாற் போல் அப்படியே அமர்ந்து விடுகிறேன். என் கைகள் மெலிந்து வளைகள் கழன்று போய்ச் சோர்கின்றன. தோள்களும் மெலிந்து விட்டன. நான் இப்படி எல்லாம் வேதனைப் படுகிறேன் என்பது உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் என்னை நினைக்கிறீர்களா? என் வேதனைகளைப் புரிந்து கொள்கிறீர்களா? என் தாபங்களையும் தவிப்புக்களையும் கற்பனையிலாவது உங்களால் உணர்ந்து கொள்ள முடியுமா? ⁠இன்னொரு செய்தி! யாருக்குத் தெரிந்திருந்தாலும் தெரியாவிட்டாலும் தங்கள் மேல் அடியாள் கொண்டிருக்கும் இந்தப் பிரேமையைப் பற்றியும், இந்த மடலைப் பற்றியும் பெரியவர் மதுராபதி வித்தகருக்கு மட்டும் தெரியவே வேண்டாம். நெகிழ்ந்த உணர்வுகளையும், மனிதர்களுக்கு இடையேயுள்ள ஆசாபாசங்களையும் அவர் அதிகம் பொருட்படுத்துவதில்லை. உணர்ச்சிகளை மதிக்க மாட்டார் அவர். இதனால் எனக்கு அவரிடமுள்ள பக்தியோ, மதிப்போ குறைந்து விட்டது என்று பொருளில்லை. கல்லின் மேல் விழும் பூக்களைப் போல் பிறருடைய மென்மையான உணர்வுகளைத் தன் சார்பால் கடுமையாகவே ஏற்று, வாடச் செய்யும் அவரது மன இறுக்கம்தான் எனக்குப் பிடிக்கவில்லை. என்னுடைய இந்த அநுபவம் அவரைப் பொறுத்து உங்களுக்கு ஏற்பட்டிருக்கலாம். அல்லது ஏற்படாமலும் போயிருக்கலாம். ஆனால் இது நம்மோடு இருக்கட்டும் என்பதற்காகவே இதனை இங்கே எழுதினேன். மறுபடி உங்களை எப்போது காணப் போகிறேனோ? என் கண்கள் அதற்காகத் தவித்துக் கொண்டிருக்கின்றன. தவம் செய்து கொண்டிருக்கிறேன். ⁠இந்த ஓலையை உங்களிடம் எப்படி அனுப்பப் போகிறேனோ தெரியவில்லை. இது உங்களிடம் வந்து சேருமுன் திருமோகூரிலும், கோநகரிலும் என்னென்ன மாறுதல்கள் நேருமோ? அதுவும் தெரியவில்லை. உங்கள் அன்பையும் அநுக்கிரகத்தையும் எதிர்பார்த்து இங்கு ஒரு பேதை ஒவ்வொரு கணமும் தவித்துக் கொண்டிருக்கிறாள் என்பது மட்டும் உங்களுக்கு நினைவிருந்தால் போதும்...'- ⁠இப்பகுதியை அவன் படித்துக் கொண்டிருந்த போது மாளிகைப் பணிப் பெண் வந்து அவசரமாகக் கூப்பிடுவதாய்க் குறளன் உள்ளே வந்து தெரிவித்தான். ⁠இளையநம்பி கையிலிருந்த ஓலைக் கற்றையைப் பார்த்தான். படிப்பதற்கு இன்னும் ஓர் ஓலை மீதமிருந்தது. அதை அப்புறம் வந்து படிக்கலாம் என்ற எண்ணத்தில் எல்லா ஓலைகளையும் அப்படியே இடைக்கச்சையில் மறைத்துக் கொண்டு பணிப் பெண்ணோடு அவள் அழைத்துச் சென்றபடியே மாளிகையின் முன் வாயிற்பகுதிக்கு விரைந்தான் அவன். 39. மூன்று எதிரிகள் இளையநம்பி தன்னை அழைத்துச் சென்ற பணிப் பெண்ணுடன் கணிகை மாளிகையின் முன் வாயிற் பக்கம் சென்றபோது ஏற்கெனவே அங்கே அழகன் பெருமாள் பதற்றத்தோடு, கைகளைப் பிசைந்த வாறு நின்று கொண்டிருந்தான். வெளிப்புறம் யாராலோ கதவுகள் பலமாகத் தட்டப்பட்டுக் கொண்டிருந்தன. இரத்தினமாலையும் செய்வதறியாது திகைத்து நின்று கொண்டிருந்தாள். “வெளிப்புறம் வந்து நின்று கதவைத் தட்டுவது யார்? நீ ஏன் இவ்வளவு பதற்றம் அடைந்திருக்கிறாய்?"-என்று அழகன்பெருமாளை வினவினான் இளையநம்பி. உடனே அழகன் பெருமாள் பிரம்மாண்டமான அந்த நிலைக் கதவில் இருந்த சிறிய துவாரம் ஒன்றைச் சுட்டிக் காண்பித்து. “நீங்களே பாருங்கள்; வந்திருப்பது யார் என்பது புரியும்” என்றான். கதவைத் திறப்பதற்கு முன் வெளியே வந்திருப்பவர்களைக் காண்பதற்காக ஓர் மானின் கண் அளவிற்கு அங்கே கதவில் துளை இருந்தது. இளையநம்பி இரத்தினமாலையின் முகத்தைப் பார்த்தான். “நான் பார்த்தாயிற்று! நீங்கள் பார்த்தால்தான் உங்களால் நிலைமையின் அபாயத்தைப் புரிந்துகொள்ள முடியும்” -- என்றாள் அவள். ⁠கதவை நெருங்கித் தன் வலது கண்ணைத் துளையருகே அணுகச் செய்து பதித்தாற்போல ஆவலையும் பரபரப்பையும் தவிர்க்க முடியாமல் வெளியே பார்த்தான் இளையநம்பி. ⁠பூதபயங்கரப் படைவீரர் மூவர் உருவிய வாளும் கையுமாக வாயிற்படிகளில் நின்று கொண்டிருந்தனர். வெளிப்படையாக நன்கு தெரியும் பூத பயங்கரப் படையின் தோற்றத்திலேயே அவர்கள் வந்து அந்த மாளிகை வாயிற்படியில் நின்று கதவைத் தட்டுவதிலிருந்து ஏதோ தீர்மானமுற்றுச் சந்தேகத்துடனேயே அவர்கள் அங்கே வந்திருக்கிறார்கள் என்று தெரிந்தது. ⁠‘பார்த்தாயிற்று! இனி நாம் செய்யவேண்டியது என்ன?’ என்று இரத்தினமாலையும் அழகன்பெருமாளையும் வினவுகின்ற முகபாவனையோடு திரும்பிப் பார்த்தான் இளையநம்பி. ⁠“கதவைத் திறப்பது தாமதமாகத் தாமதமாக, வெளியே அவர்களுடைய சந்தேகமும், சினமும் அதிகமாகும். விரைந்து முடிவு செய்து, செயற்பட வேண்டிய நிலையில் இருக்கிறோம் நாம்"-என்றாள் இரத்தினமாலை. அழகன்பெருமாள் இதையே வேறுவிதமாகக் கூறினான்:- ⁠“இரண்டே இரண்டு வழிகள்தான் நாம் நம்புவதற்கு மீதமிருக்கின்றன. கதவைத் திறப்பதற்குக் கால தாமதம் செய்யுமாறு இரத்தினமாலையிடம் சொல்லிவிட்டு, அவள் அப்படிக் காலதாமதம் செய்யும் அதே நேரத்தைப் பயன்படுத்திக் கொண்டு, நலிந்த நிலையில் படுத்திருக்கும் தேனூர் மாந்திரீகன் உட்பட நாமனைவரும் நிலவறை வழியே இங்கிருந்து தப்பி வெளியேறிவிட வேண்டும். அல்லது கதவை உடனே திறந்து, அவர்களை உள்ளே விட்டபின் தந்திரமாக நாமனைவரும் சேர்ந்து உட்புறமாகத் தாழிட்டுக் கொண்டு, வந்திருக்கும் மூவரையும் எதிர்த்து அழிக்க வேண்டும்.” ⁠“அப்படியே அவர்களை அழித்துவிட்டாலும், நாம் உடனே இங்கிருந்து வெறியேறித் தப்ப வேண்டுமே தவிர தொடர்ந்து இங்கே தங்கியிருக்க முடியாது. வந்திருக்கும் மூவரைக் கொன்றுவிடுவதால், தொடர்ந்து நூற்றுக்கணக்கான பூதபயங்கரப்படை வீரர்கள் வந்து இந்த மாளிகையை முற்றுகையிட்டு வளைக்கமாட்டார்கள் என்பது என்ன உறுதி? அப்படியே கதவைத் திறப்பதற்குக் காலதாமதம் செய்து விட்டுத் தப்புவதானால், இரத்தினமாலை, அவள் பணிப் பெண்கள் நீங்கலாக நாமனைவரும் தப்பலாம். பூத பயங்கரப் படை வீரர்கள் மூவரையும் தந்திரமாக உள்ளே விட்டுக் கதவைத் தாழிட்டுக் கொண்டு அவர்களை அழித்த பின் தப்புவதானால், இரத்தினமாலையும், அவளைச் சேர்ந்தவர்களும் கூட நம்மோடு தப்பி வெளியேறத்தான் வேண்டியிருக்கும். பூதபயங்கரப் படைவீரர்கள் இந்த மாளிகை எல்லைக்குள் வைத்துக் கொல்லப்பட்ட பின்னர், இங்கே இரத்தினமாலை தங்கினாலும் அவளுக்கு அபாயம்தான். களப்பிரர்கள் இரத்தினமாலையை ஐயுறுவதற்கும், தொடர்ந்து சித்திரவதை செய்வதற்கும் அதுவே காரணமாகிவிடும். ஆகவே நாம் மட்டும் தப்புவதானால், எதிரிகள் மூவரும் உள்ளே வருவதற்கு முன்பே தப்பிவிடலாம். ஆனால் எதிரிகளை உள்ளே வரவழைத்து அழித்த பின் தப்புவதானால், வெறும் மாளிகையை மட்டுமே விடுவித்து எல்லாரும் தப்பிவிட வேண்டியதுதான் அழகன்பெருமாள்!” -என்றான் இளையநம்பி. ⁠அழகன் பெருமாள் இதைக் கேட்டு எதற்கோ தயங்கிச் சிந்தித்தான். ⁠“இவர் சொல்லுவதுதான் முற்றிலும் பொருத்தமான முடிவு! வந்திருப்பவர்கள் இங்கே வைத்துக் கொல்லப்பட்டு விட்டபின், அதற்கு மேலும் களப்பிரர்களின் நம்பிக்கைக்கு உரியவளாக, இந்த நகரிலோ, இந்த மாளிகையிலோ, நானும் என்னைச் சேர்ந்தவர்களும் வாழ்ந்து ஒற்றறிவது என்பது சாத்தியமில்லை"-என்றாள் இரத்தினமாலை. ⁠வெளிப்புறம் கதவைத் தட்டுவது இடையறாது தொடர்ந்தது. நல்ல வைரம் பாய்ந்த கருமரத்தினால் செதுக்கி இழைத்து உருவாக்கப்பட்ட அந்தப் பூதாகாரமான கதவுகளை அவ்வளவு எளிமையாக வெளியே இருப்பவர்கள் உடைத்து விட முடியாது என்பதில் அவர்களுக்கு நம்பிக்கை இருந்தது. சிந்தனையில் நேரம் கடந்து கொண்டே இருந்ததனால் விரைந்து முடிவு செய்ய இயலவில்லை. அந்த நிலையில் இளையநம்பியின் முடிவுக்குக் கட்டுப்படுவதாக அழகன் பெருமாளும், இரத்தினமாலையும் உடன்பட்டனர். இளையநம்பி தன் மனத்தில் அப்போது தோன்றிய முடிவைச் சொன்னான்: “எப்போது இந்த மாளிகையையும் இதில் தங்கியிருப்ப வர்களையும் சந்தேகப்பட்டுச் சோதனையிடுவதற்குப் பூத பயங்கரப் படைவீரர்கள் முன் வந்து விட்டார்களோ அதற்கப்புறம் இனிமேல் இரத்தினமாலை இதில் தங்கினாலும் ஆபத்து வராமலிருக்க முடியாது. ஆகவே நீ, நான், குறளன், திருமோகூரிலிருந்து வந்திருக்கும் கொல்லன் ஆகிய நால்வரும் கதவருகே அணிவகுத்து நின்று வெளியேயிருந்து உள்ளே வருகிறவர்களை எதிர்க்க வேண்டும் அழகன் பெருமாள்! உள்ளே வருகிறவர்களை நமனுலகுக்கு அனுப்பி விட்டுப் பின்னர் எல்லோருமே இங்கிருந்து தப்பி விடலாம் என்பது என் கருத்து. கொல்லனையும், குறளனையும் உடனே கூப்பிடுவதுடன் நம் நால்வருக்கும் நான்கு வாள்களும் வேண்டும் அழகன் பெருமாள்!” “இந்த மாளிகையில் படைக்கலங்களை இரகசியமாக மறைத்து வைத்திருக்கும் இடம் எனக்கு மட்டுமே தெரியும். வாள்களை நான் கொண்டு வருகிறேன்"-என்று இரத்தின மாலை விரைந்தாள். குறளனையும் திருமோகூர்க் கொல்லனையும் அழைத்து வர அழகன் பெருமாள் ஓடினான். இயல்பை மீறிய பரபரப்பும் வேகமும் அப்போது அங்கே வந்து சூழ்ந்தன. ஒவ்வொரு விநாடியும் விரைவாகவும் அர்த்தத்தோடும் நகர்வது போலிருந்தது. ஒளி மின்னும் கூரிய வாள்கள் வந்தன. கொல்லனும், குறளனும் வந்தார்கள். அழகன் பெருமாள், இளைய நம்பி, கொல்லன், குறளன் ஆகிய நால்வரும் உருவிய வாள்களுடன் நின்று கொண்டனர். கதவை இரத்தினமாலை திறக்க வேண்டும் என்று கட்டளை இட்டிருந்தான் இளையநம்பி. ⁠அவள் கதவைத் திறக்கு முன் கொல்லன் மூலம் வந்து சேர்ந்திருந்த பெரியவரின் ஓலையை, ‘அழகன்பெருமாள் வாசித்து முடித்த பின் அவள் வாசித்தாளா' என்பதைக் கேட்டு ‘வாசித்தேன்’... என்பதற்கு அடையாளமாக அவள் தலையசைத்த பின் ஒரு வியூகமாக அவர்கள் நால்வரும் நின்று கொண்டார்கள். அவள் திறக்கப் போகிற கதவுகளின் உட்புற மறைவில் நின்று வெளியே இருக்கும் பூதபயங்கரப்படை வீரர்கள் உள்ளே காலடி வைத்ததும், நால்வருமாகப் பாய்ந்து ஒரே சமயத்தில் தாக்குவது என்று அவர்கள் நினைத்திருந்தனர். கதவைத் திறக்கிறவள் பெண்ணாயிருப்பதைக் கண்டு, வெளியே இருந்து உள்ளே புகுகின்றவர்கள் அலட்சியமாகவும், எச்சரிக்கை உணர்வு அற்றவர்களாகவும் இருக்கும்போது, திடுமெனத் தாக்க வேண்டுமென்பதை அவர்கள் நால்வரும் ஒருவருக்கொருவர் பேசி வைத்துக் கொண்டிருந்தார்கள். ⁠இரத்தினமாலை மாளிகையின் உள்ளே ஏதோ காரியமாக இருந்தவள்-அப்போதுதான் கதவைத் தட்டும் ஓசை கேட்கத் திறப்பது போல் மெல்ல வாயிற் கதவைத் திறந்தாள். பக்கத்துக்கு இருவராகப் பிரிந்து உருவிய வாளுடன் நின்ற இளையநம்பி முதலியவர்கள் திறக்கப்படும் கதவின் பின்புறமாக மறைவிடம் தேடினர். ⁠அப்போதிருந்த மனநிலையில் திறக்கப்படுகிற கதவு கிறீச்சிடும் மர்மச் சப்தம் கூட உள்ளே நுழைகிற மூவரின் மரண ஓலத்துக்கு முன்னடையாளம் போல் இரத்தினமாலைக்குக் கேட்டது. முகத்தில் மலர்ச்சியுடனும், முறுவலுடனும் ஒரு வேறுபாடும் காட்டாமல், சுபாவமாக வரவேற்கிறவள் போல் அந்த முன்று பூதபயங்கரப் படைவீரர்களையும் அவள் எதிர் கொண்டாள். ⁠வந்தவர்கள் மூவரும் கடுமையான கேள்விகள் எதையும் தன்னிடம் கேட்காமல் சுற்றும் முற்றும் பார்த்தபடி உள்ளே நுழைந்த விதம் அவளுக்கு வியப்பை அளித்தது. ‘உருவிய வாளுக்கும், பூதபயங்கரப் படையின் உடைக்கும் தகுந்த மிடுக்கோ, சினமோ, இன்றி உள்ளே வரும் அவர்கள், ஒருவேளை இந்தக் கணிகை மாளிகையில் ஆடல் காணலாம், பாடல் கேட்கலாம் என வருகிறார்களோ’ என்று சந்தேகப் பட்டாள் அவள். அவர்கள் மூவரும் நிலைப்படியைக் கடந்து இரண்டுபாக தூரம்கூட உள்ளே வந்திருக்க மாட்டார்கள். திறக்கப்பட்ட கதவுகளின் பின் மறைவிலிருந்து இளையநம்பி முதலிய நால்வரும் உருவிய வாளோடு அவர்கள் மேல் பாயவும், இரத்தினமாலைதான் திறந்த கதவுகளையே மீண்டும் அவசர அவசரமாக அடைக்க முற்பட்டாள். அப்போதுதான் அந்த ஆச்சரியம் நிகழ்ந்தது. உள்ளே வந்த மூவரும் ‘கயல்’-என்று நல்லடையாளச் சொல்லைச் சற்றே உரத்த குரலில் கூறவும், உருவிய வாளுடன் பாய்ந்த நால்வரும் ஒன்றும் புரியாமல் தயங்கிப் பின்வாங்கினர். அடுத்த கணம் விரைந்து பூதபயங்கரப் படை வேடத்தைக் கலைத்துவிட்டுக் காரி, கழற்சிங்கன், சாத்தன் ஆகிய உபவனத்து நண்பர்கள் மூவரும் எதிரே நிற்பதைக் கண்டதும், அழகன்பெருமாள் முதலியவர்கள் வாளைக் கீழே எறிந்துவிட்டு ஓடிவந்து அவர்களைத் தழுவிக் கொண்டனர். “எங்களையே ஏமாற்றி வீட்டீர்களே? மெய்யாகவே பூதபயங்கரப் படையினர் மூவர் இங்கு சோதனைக்காகத் தேடி வந்திருக்கிறீர்களோ என்று அஞ்சி நாங்களே ஏமாறும் அளவு நடித்து விட்டீர்கள் நண்பர்களே!”-என்றான் இளையநம்பி. “இவ்வளவு செம்மையாகவும் திறமையாகவும் நடிக்கா விட்டால் வெளியே நாங்கள் உயிர் பிழைத்துத் தப்பி வந்திருக்கவே முடியாது ஐயா!” என்றான் கழற்சிங்கன். எதிர்பாராத இந்தப் புதிய திருப்பத்தைக் கண்டதும், ‘காப்பாற்றப்பட வேண்டியவர்கள் தாங்கள் மட்டுமில்லை வந்திருப்பவர்களும் கூடத்தான்’-என்று புரிந்து கொண்டு, அடைத்த கதவையே நன்றாக அழுத்தித் தாழிட்டாள் இரத்தினமாலை. 40. மங்கலப் பொருள் “நல்லடையாளச் சொல்லைக் கூற நாங்கள் ஒரு விநாடி காலந் தாழ்த்தியிருந்தால் எங்களைக் கொன்று நமனுலகுக்கு அனுப்பியிருப்பீர்கள் அல்லவா?” -என்று உள்ளே வந்ததும் கழற்சிங்கன் இளையநம்பியைக் கேட்டான். “இந்தப் பயம் உங்களுக்கு முன்பே இருந்திருந்தால் நீங்கள் பூதப்யங்கரப் படை வீரர்களைப் போன்ற மாறுவேடத்தில் இங்கு வந்திருக்கக்கூடாது”-என்று அதற்கு இளையநம்பியை முந்திக் கொண்டு இரத்தினமாலை மறுமொழி கூறினாள். அவர்களில், சாத்தன் அதற்கு விடை கூறினான்:- “இந்த வேடத்தைத் தவிர, வேறு எந்த மாறு வேடத்தாலும் நாங்கள் உயிர் பிழைத்து இங்கே வந்து சேர்ந்திருக்க முடியாது.” கோநகரிலேயே வேண்டிய நண்பர்கள் பலர் வீடுகளில் மறைந்து வாழ்ந்தது முதல், கடைசியாக இன்று கணிகை மாளிகை வந்து சேர்ந்தது வரை தாங்கள் பட்ட வேதனைகளை எல்லாம் காரி சொன்னான். “எப்படியோ ஆலவாய்ப்பெருமாள் அருளால் இங்கே வந்து சேர்ந்து விட்டீர்கள்! களப்பிரர்களிடம் சிறைப்பட்டு விட்ட நம்மவர்களான தென்னவன் மாறனையும், திருமோகூர் அறக்கோட்டத்து மல்லனையும் விடுவிக்கும் பொறுப்பைப் பெரியவர் நம்மிடம் விட்டிருக்கிறார். இனி நாம் அதற்கான முயற்சிகளில் ஈடுபடவேண்டும்” -என்றான் அழகன் பெருமாள். அப்போது அந்த மூவரும் தேனூர் மாந்திரீகனைப் பற்றி விசாரிக்கவே, அவன் காயமுற்று வந்து அங்கு படுத்திருக்கும் நிலைமையை அவர்களுக்குச் சொல்லி, அவர்கள் மூவரையும் அவன் இருந்த கட்டிலருகே அழைத்துச் சென்றான் அழகன்பெருமாள். இரத்தினமாலை படைக்கலங்களை மறுபடி மறைத்து வைக்கச் சென்றாள். ⁠இந்நிலையில் ஏற்கெனவே தான் அரைகுறையாகப் படித்துவிட்டு வைத்திருந்த செல்வப் பூங்கோதையின் ஓலையில் படிப்பதற்கு இன்னும் ஓர் ஓலை மீதியிருப்பதை நினைவு கூர்ந்தவனாகச் சந்தனம் அரைக்கும் <--- அரைக்கும் என்பதே சரி ---> பகுதிக்குத் திரும்பினான் இளையநம்பி. திருமோகூர்க் கொல்லனும் குறிப்பறிந்து அவனைப் பின்தொடர்ந்தான். தான் படிக்காமல் எஞ்சியிருந்த அவளது மூன்றாவது ஓலையில் என்னென்ன அடங்கியிருக்குமோ என்ற ஆவல் ததும்பும் மனத்துடன் இடைக் கச்சையிலிருந்து அந்த ஓலையை எடுத்து மீண்டும் படிக்கத் தொடங்கினான் இளையநம்பி. ⁠“ஏற்கனவே நான் எழுதி வைத்து விட்ட இந்த அன்புமடலை உங்களிடம் கொண்டு போய்ச் சேர்க்கும்படி இவ்வூர்க் கொல்லன் இங்கு வந்தபோது மன்றாடி வேண்டிக் கொண்டேன். ‘திருமோகூரிலிருந்து வேறு எங்கோ மாறிச் சென்று விட்ட பெரியவர் மதுராபதி வித்தகரைக் காணச் செல்வதாகவும் மீண்டும் எப்போதாவது கோநகருக்குச் செல்ல நேர்ந்தால் என் ஓலையை உங்களிடம் சேர்ப்பதாகவும்’ - கொல்லனிடமிருந்து எனக்கு மறுமொழி கிடைத்தது. அப்போது நாங்கள் எந்த நிலையிலிருக்கிறோம்? ஊர் எந்த நிலையிலிருக்கிறது? களப்பிரர்களின் கொடுமைகள் எப்படி உள்ளன? என்பன பற்றி எல்லாம் இந்த ஓலையை உங்களிடம் சேர்க்கும்போதே கொல்லன் விரிவாகச் சொல்லக்கூடும். அவற்றை எல்லாம் நான் விவரித்து எழுத இயலவில்லை. ⁠ஓர் அன்பு வேண்டுகோளுடன் அடியாள் இதை முடிக்க விரும்புகிறேன். இதை நான் கொடுத்தனுப்பி, இது உங்கள் கைக்குக் கிடைத்தால்-அப்படிக் கிடைத்து விட்டது என்ற மகிழ்ச்சியை நானடைவதற்காக நீங்கள் எனக்கு மாற்றம் தந்து எழுதத்தான் வேண்டும் என்பதில்லை. எழுதினால் இப்பேதை எல்லையில்லாப் பெருமகிழ்ச்சியை அடைவேன் என்றாலும், நான் உங்களிடம் இப்போது வேண்டப் போவது வேறு. உங்களுக்கு இது கிடைத்து நீங்கள் இதைப் பார்த்து விட்டதன் மாற்றாக, ஏதாவதொரு மங்கலப் பொருளை எனக்குக் கொடுத்தனுப்புங்கள். அது போதும். நீங்கள் கொடுத்தனுப்புவது எதுவாயிருந்தாலும், அந்தப் பொருள் அடியாளுக்கு மங்கலமும் சுபசகுனமும் உடையதாயிருக்கும் என்பது உறுதி. உங்கள் நினைவுகள் என்னுள்ளே மணக்கும்படி எனக்கு எதையாவது கொடுத்தனுப்புவீர்களா? உங்களுடைய பேதையின் இந்த வேண்டுகோளை நீங்கள் மறக்க வேண்டாம்"-என்று முடிந்திருந்தது அவளுடைய அந்த ஓலை. எந்த மங்கலப் பண்டத்தை அவளுக்காகக் கொடுத்தனுப்புவது என்று ஒரு விநாடி தயங்கினான் இளையநம்பி. அடுத்த கணமே அவன் ஒரு தீர்மானத்துக்கு வந்தவனாக, அந்தப் பகுதியிலிருந்த பூக்குடலையிருந்து ஒரு பெரிய செந்தாழம்பூவை எடுத்தான். வாசனை நிறைந்த அதன் மடல்களிலே இரண்டை உருவி, அவற்றைப் பட்டையாகத் தைத்து, அதனுள் இரண்டு கழற்சிக்காய் அளவு பொதிய மலைச் சந்தனத்தை உருட்டி வைத்துக் கட்டினான். ஒரு பெண்ணுக்கு ஆண் அளிக்க முடிந்த பொருள்களில் பூவையும் சந்தனத்தையும் விட மங்கலமான பொருள்கள் வேறு எவையும் இருக்க முடியாதென்று அவனுக்குத் தோன்றியது. ஆணுக்கும், பெண்ணுக்கும் நடுவேயுள்ள ஞாபகங்களுக்குப் பூவும் சந்தனமுமே இனிமையான சாட்சிகள். ஒன்று பெண்ணின் கூந்தலை மணக்கச் செய்வது. மற்றொன்று அவள் உடலை மணக்கச் செய்வது. அந்த இரு மங்கலப் பொருள்களையும் ஒன்றாகப் பொதிந்து-ஒன்றில் ஒன்றை இட்டு நிறைத்து அனுப்புவதன் மூலம் அவைகளை அடைகிறவளின் மனம் எவ்வளவு மகிழ்ச்சிப் பெருக்கினால் துள்ளும் என்பதை இப்போதே கற்பனை செய்ய முயன்றான் இளையநம்பி. ⁠தாழையையும், பூவையும், சந்தனத்தையும் ஒரு பெண்ணுக்கு அனுப்புவதில் எத்தனை குறிப்புகளை அவள் புரிந்து கொள்ள முடியுமென்று சிந்தித்தபோது அவனுக்கு மகிழ்ச்சி பெருகியது. ஆணுக்கும், பெண்ணுக்கும் நடுவே மணமுள்ள பூவே ஒரு மெளனமான உரையாடல் என்றால், சந்தனம் இன்னொரு <--- இன்னும் + ஒரு -> இன்னொரு ---> சீதப் பனிச் சொற்கோவை. அது அவளுக்கும் புரியும் என்று நம்பியவனாக, “நான் கொடுத்தேன் என்று இதைப் பெரிய காராளர் மகளிடம் சேர்த்தாலே போதுமானது” - என்று அதைத் திருமோகூர்க் கொல்லனிடம் அவனைக் கூப்பிட்டுக் கொடுத்தான் இளையநம்பி. கொல்லனும் அதைப் பத்திரமாக வாங்கி வைத்துக் கொண்டான். பெரியவருக்கு ஏதேனும் மறுமொழி ஓலை தரலாம் என்றால் அவர் எந்த மறுமொழி ஓலையையும் எதிர்பார்க்கவில்லை. நிலைமையை அறிந்து வருமாறு மட்டுமே தன்னைப் பணித்தார் என்பதாகக் கொல்லன் கூறிவிட்டான். மறுபடி நிலவறை வழியே அவன் புறப்பட்டுச் செல்ல அன்று நள்ளிரவு வரை அங்கேயே காத்திருக்க வேண்டியதாயிற்று. நள்ளிரவில் கொல்லன் புறப்பட்டுப் போனான். அவனை வழியனுப்பிவிட்டு அழகன்பெருமாள், இளையநம்பி முதலியவர்கள் உறங்கப் போகும்போது இரவு நடுயாமத்திற்கு மேல் ஆகிவிட்டது. மறுநாள் அதிகாலையில் இளைய நம்பியைத் துயிலெழுப்ப அவன் கால்களினருகே மஞ்சத்தில் அமர்ந்து இரத்தினமாலை யாழ் வாசித்துக்கொண்டிருந்தாள். அந்த இனிய யாழொலி கேட்டு எழுந்த இளையநம்பி சிரித்துக் கொண்டே அவளை வினவினான்: “இதென்ன புது வாத்திய உபசாரம்?” “இப்படியெல்லாம் தங்களை நோகாமல் உறங்கச் செய்து நோகாமல் துயில் எழுப்பிப் பாதுகாக்கச் சொல்லிப் பெரியவரின் ஆணை”-என்றாள் அவள், அதற்கு மறுமொழி கூறாமல் ஏதோ நினைத்துக் கொண்டவனாக மேன் மாடத்திலிருந்து படிகளில் இறங்கி விரைந்து கீழே அழகன்பெருமாளைக் காணச் சென்றான் இளையநம்பி. அங்கே அழகன் பெருமாள் படுத்திருந்த இடம், தேனூர் மாந்திரீகனின் கட்டில் எல்லாமே வெறுமையாயிருந்தன. வியப்போடும் சினத்தோடும் திரும்பினான் அவன். “அவர்கள் நால்வரும் அழகன் பெருமாளும் இப்போது இங்கு இல்லை!” என்று கூறியபடியே படியிறங்கி வந்து கொண்டிருந்தாள் இரத்தினமாலை. இளையநம்பி அதைக் கேட்டுத் திகைப்படைந்தான். இரண்டாம் பாகம் * * * சிறைக்கோட்டம் 1. களப்பிரர் சூழ்ச்சிக் கூடம் மதுரை மாநகரக் கோட்டைக்குள் அரண்மனையைச் சுற்றி இயல்பை மீறிய பரபரப்பும், பாதுகாப்பும் தென்பட்டன. அரண்மனையில் உட்கோட்டையைச் சுற்றியிருந்த இரண்டாவது சுற்று அகழியைச் சூழப் பூதபயங்கரப் படை வீரர்கள் உருவிய வாளுடன் காவலாக நின்று கொண்டிருந்தனர். முதற்கோட்டை வாயிலுக்கும் இரண்டாம் கோட்டை வாயிலுக்கும் நடுவே உள்ள பகுதியில் இருந்த சிறைக் கோட்டத்தின் வாயிலில் யவனக் காவல் வீரர்கள் செதுக்கி மெருகிட்ட செப்புச் சிலைகள் போல் வேல்களோடு காவலாக நின்றிருந்தனர். பாண்டியர்களின் பரம்பரைக் கோட்டைக் காவலர்களாக இருந்த சில யவனர்களும் கூடக் களப்பிரர்கள் ஆட்சியைக் கைப்பற்றிய பின் அவர்களுடைய கட்டுப்பாட்டின் கீழ் வந்திருந்தனர். அன்று கோட்டையிலும், கோட்டையைச் சுற்றியிருந்த பகுதிகளிலும் இயல்பை மீறிய பரபரப்பு இருந்ததற்குக் காரணம் களப்பிர மன்னனான கலியன் ஓர் அந்தரங்கமான மந்திராலோசனைக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்ததுதான். அவிட்ட நாள் விழாவன்று பிடிபட்ட ஒற்றர்களைப் பற்றியும், ஆட்சியைச் சூழ்ந்திருக்கும் பிற அபாயங்களைப் பற்றியும் அந்த மந்திராலோசனைக் கூட்டத்தில் பேசுவதற்கு இருந்தார்கள். அங்கு பேசப்படுகிற எதுவும் வெளியேறிப் பரவி விடக் கூடாது என்பதற்காக, மந்திராலோசனை மண்டபத்திலும், அதனைச் சார்ந்துள்ள இடங்களிலும் ஏவலாளர், காவல் இளைஞர், ஓவியச் சுற்றம், உட்படு கருமத்தார் ஆகியோரில் தமிழர் யாரும் இருந்து விடாதபடி தவிர்த்திருந்தனர் களப்பிரர். உட்படு கருமத்தார் தெரிந்து கூறிய செய்திகளிலிருந்து மன்னனும், அமைச்சரும் பதறிக் கலங்கிப் போயிருந்தனர். பல்லாண்டுகளாக அடிமைப்படுத்தி ஆண்டு வரும் பாண்டிய நாடு தங்களிடமிருந்து கை நழுவிப் போய் விடுமோ என்ற பயமும், தாங்கள் துரத்தப்பட்டு விடுவோமே என்ற பயமும் என்றும் இல்லாதபடி இன்று அவர்களுக்கு வந்திருந்தன. இழந்ததை மீண்டும் பெறலாம் என்ற நம்பிக்கையோடு காத்திருப்பவன் வீரன். பெற்றதை மீண்டும் இழந்து விடுவோமோ என்று பயந்துகொண்டே இருப்பவன் கோழை. அவன் பெற்றதையும் இழப்பான்; வீரத்தையும் இழப்பான். பயம் அதிகமாக, அதிகமாகக் களப்பிரர்களிடம் வீரம் குன்றி முரட்டுத்தனமும், பாண்டியர்களுக்கு ஆதரவான குடிமக்களை அழித்து விட வேண்டும் என்ற வெறியுமே மிகுந்தன. அன்று நடைபெற்ற மந்திராலோசனைக் கூட்டத்துக்கு வரும் போது, கலிய மன்னனின் முகம் இருண்டிருந்தது. கண்களில் ஒளி இல்லை. உயரமும், பருமனும் உருவத்தை எடுத்துக் காட்டும் வளங்கெழு மீசையும், வசீகரமான மணிமுடியும் அவனது ஒளியிழந்த முகத்தோடு ஒட்டாதவை போலத் தோன்றின. மந்திராலோசனைக் கூட்டம் பாலிமொழியில் நடைபெற்றது. அமைச்சர்களும், உட்படு கருமத் தலைவர்களும், யானைப் படை, தேர்ப் படை, காலாட் படைத் தலைவர்களும், பூத பயங்கரப் படையின் தலைவனும், கலிய மன்னனின் அரச குருவும், ஆலோசனைக் கூட்டத்துக்கு வந்திருந்தனர். கலிய மன்னன் பொறுமையிழந்து போயிருந்தான். நிதானம் அறவே பறி போயிருந்தது. அவன் குரல் குரூரமாக ஒலிக்கத் தொடங்கியது. “இவ்வளவு காலத்துக்குப் பின் இந்நாட்டு அடிமைகளின் கூட்டத்திலிருந்து வீரர்கள் தோன்றிக் கொண்டிருப்பதாகச் சொல்லுகிறீர்கள். பல காத தூரம் கடந்து வந்து கைப்பற்றிய பேரரசை யாரும் அசைக்க முடியாதபடி பிடித்து விட்டதாக நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன். நீங்களோ அசைத்துக் கொண்டிருப்பவர்களில் நால்வரையோ, ஐவரையோ சிறைப் பிடித்துக் கொண்டு வந்து விட்டோம் என்கிறீர்கள்! எதிரிகளை உயிரோடு பார்ப்பது எனக்குப் பிடிக்காது என்பது உங்களுக்குத் தெரியும். எனக்குப் பிணங்களாகக் காட்ட வேண்டியவர்களை நீங்கள் இன்னும் உயிருள்ளவர்களாகச் சிறை வைத்திருக்கிறீர்கள்! இல்லையா?” என்று கூறிக் கொண்டே தன் வலது கையை மடக்கி, இடது உள்ளங்கையில் ஓங்கிக் குத்தினான் கலியன். அப்போது பூத பயங்கரப் படையின் தலைவன் எழுந்து மறுமொழி கூறலானான்:- “வேந்தே! உயிர் அவர்கள் உடலிலிருந்து போய் விட்டால், சித்திரவதையை அவர்கள் உணரவும், அனுபவிக்கவும் முடியாமல் போய்விடும். சித்திரவதைகளை உணரவும், அனுபவிக்கவும் வேண்டும் என்பதற்காகத்தான் அவர்களைப் பிணங்களாக்கி விடாமல் இன்னும் நடைப் பிணங்களாகவே வைத்திருக்கிறோம்.” “உன் வீரப் பிரதாபங்களால் நீ அவர்களை நடைப் பிணங்களாக வைத்திருப்பது பற்றித் தெரிவதை விட அவர்களிடமிருந்து நீ அறிந்த வேறு செய்திகள் என்ன என்ன என்பதைக் கூறினால் நன்றாயிருக்கும்!” என்று குறுக்கிட்டார் அது வரை அமைதியாக இருந்த அரச குரு. “பொறுத்தருள வேண்டும் அரச குருவே! அவர்களிடமிருந்து எதையும் அறிய முடியவில்லை. சித்திரவதை செய்தும் பயன் இல்லை! அவர்களின் மன உறுதி வியக்கத் தக்கதாக இருக்கிறது.” “எய்தவன் இருக்க அம்பை நொந்து பயனில்லை! பாண்டியர்களைக் கலகத்துக்குத் தூண்டும் மூல சக்திகள் எங்கு இருக்கின்றன என்று கண்டு பிடித்து அழிக்க வேண்டும். அதைச் செய்யாத வரை நம்முடைய பூத பயங்கரப் படையின் திறமையை நான் போற்ற முடியாது” என்றான் கலிய மன்னன். இந்த வார்த்தைகளைச் சொல்லும் போது அரசனின் முகத்தில் எள்ளும், கொள்ளும் வெடிப்பதையும் கண்கள் இரண்டும் நெருப்புக் கோளங்களாகக் கனல்வதையும் கண்டு பூத பயங்கரப் படைத் தலைவனின் முகம் இருண்டது. குறை முழுமையும் தங்களைச் சேர்ந்தது என அரசன் ஒரேயடியாகத் தங்கள் மேல் குற்றம் சுமத்தியதை அவனால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. ஆயினும், அரசனுடைய கோபத்துக்கு அஞ்சி அவன் அந்தக் குற்றத்தை ஏற்றுக் கொள்வது போல் வாளாவிருந்தான். அப்போது அந்த மந்திராலோசனைக் கூட்டத்தில் கலிய மன்னனின் இருக்கைக்கு இரு புறமும், பணிப் பெண்கள் இருவர் வெண் சாமரம் வீசிக் கொண்டிருந்தனர். அவர்கள் தமிழ்ப் பெண்கள் என்பதைக் கண்டு கொண்ட அரசனின் சினம் திடீரென்று அவர்கள் மேல் திரும்பியது. கலிய மன்னனின் ஆத்திரத்தைக் கண்டு வெருண்டோடினர் அந்தப் பெண்கள். மீண்டும் பூத பயங்கரப் படையினரின் தலைவன் பக்கமாகத் திரும்பி இரைந்தான் அரசன்; "இந்த மந்திராலோசனைக் கூட்டத்தில் களப்பிரர் அல்லாதார் யாரும் இருக்கலாகாது என்று முன்னெச்சரிக்கையாக உனக்குக் கட்டளை இட்டிருந்தும், நீ தவறு செய்திருக்கிறாய்! நாம் பாலியிலேயேதான் உரையாடுகிறோம் என்று நீ சமாதானம் சொல்ல முடியாது. கோநகரிலும், அரண்மனையிலும் உள்ள பெரும்பாலான தமிழர்கள் நன்றாகப் பாலி மொழியைப் புரிந்து கொள்கிறார்கள் என்பதும் உனக்குத் தெரிந்திருக்க வேண்டும்.” “தெரியும். ஆனால் இந்தப் பெண்கள் இருவரும் அரண்மனை அந்தப்புரத்து உரிமை மகளிர். இவர்கள் அரண்மனையிலிருந்து எங்கும் வெளியேற முடியாது. யாரையும் சந்திக்கவும் முடியாது.” “நீ அப்படி நினைக்கிறாய்! நான் அப்படி நினைக்கவில்லை. பல செய்திகள் வெளியேறுகின்றன இல்லையா? அவிட்ட நாள் விழாவன்று யாத்திரீகர்கள் என்ற போர்வையில் ஆயிரக்கணக்கான கலகக்காரர்கள் அகநகருக்குள் வந்திருக்க முடியாது அல்லவா?” இவ்வாறு பேசிய மன்னனை எதிர்த்து மறுமொழி கூறும் துணிவு பூத பயங்கரப் படைத் தலைவனுக்கு இல்லை. அவன் பயந்து அடங்கி விட்டான். அந்தக் குழுவில் ஏனைய படைப் பிரிவுகளின் தலைவர்களும் பூத பயங்கரப் படையின் தலைவனுக்குப் பரிந்து கொண்டு வரவில்லை. எல்லாருமே அரசன் என்ன சொல்கிறான் என்பதையே பயபக்தியோடு கவனித்துக் கொண்டிருந்தார்கள். உட்படுகருமத் தலைவர்களோ, அமைச்சர் பிரதானிகளோ கூட அதிகம் பேசவில்லை. அவர்களுடைய பேச்சு அதிகம் மதிக்கப்படாது என்பதை அவர்கள் உணர்ந்திருந்தனர். யாருடைய குரலாவது அரசனுடைய குரலை விட மேலெழுந்து வலிமையாக ஒலிக்க முடியுமென்றால், அது அங்கே அரசனுக்கு மிக அருகே அமர்ந்திருக்கும் அரச குருமாவலி முத்தரையருடையதாகத் தான் இருக்கும் என்பதை அவர்கள் அனைவருமே நன்கு உணர்ந்திருந்தனர். யார் எதைக் கூறினாலும், கலியரசன் இறுதியாக மாவலி முத்தரையர் சொல்படிதான் கேட்பான் என்பது எல்லாருக்கும் தெரியும். அதனால் மற்றவர்கள் நடுவே மாவலி முத்தரையருக்குக் ‘கலிய மன்னனின் சகுனி’ என்பது போல் ஒரு சிறப்புப் பெயரும் இரகசியமாக வழங்கி வந்தது. கலிய மன்னனின் சகுனியாகிய மாவலி முத்தரையர் அந்தச் சூழ்ச்சிக் கூட்டத்தில் என்ன கூறப் போகிறார் என்பதைக் கேட்பதிலேயே அனைவரும் ஆவலாக இருந்தார்கள். கலிய மன்னனும் “நீங்கள்தான் வழி சொல்லவேண்டும், அடிகளே!” என்பதுபோல், இறுதியாக அவரைப் பார்த்தான். 2. மாவலி முத்தரையர் நன்றாக மழித்து முண்டனம்[1] செய்து மின்னும் தலையும் நீண்டு தொங்கும் காதுகளும், கண்களின் கீழேயும் நடு நெற்றியிலும் கோரமாகத் தழும்பேறிய கருமையுமாக மாவலி முத்தரையர் எழுந்து நின்றார். ஒரு குருவுக்குரிய சாந்தமோ, அமைதியோ அவர் கண்களில் இல்லை. நெற்றியிலும், கண்களின் அடியிலேயும் இருந்த கறுப்புத் தழும்புகள் வேறு, மேலும் அந்த முகத்தைக் கொடூரமாகக் காண்பித்தன. பார்த்த மாத்திரத்திலேயே ஒரு கபட சந்நியாசிக்கு முன் நிற்கிறோம் என்று உணர வைத்து விடும் அளவுக்கு அவர் தோற்றமும் அவர் மேற்கொண்டிருந்த புனிதமான கோலமும் முரண்பட்டன. அவர் பேசலானார்:- “கலியா! இந்த மந்திராலோசனைக் கூட்டத்தில் ஏற்கெனவே உன்னுடைய பூத பயங்கரப் படையினர் மூலம் நீ தெரிந்து கொண்டிருப்பதை விட அதிகமான செய்திகளை நான் கூற முடியும் என்று நினைக்கிறேன். தென் பாண்டி நாட்டு நெற்கழனிகளில் நெல்லும், கொற்கைத் துறைச் சிலாபங்களில்[2] முத்துகளும், பொதியமலையில் சந்தனமும், தேக்கும், அகிலும் விளைகின்ற மகிழ்ச்சியில், என்றோ கைப்பற்றிய இந்தப் பாண்டிய நாட்டைக் கவலையில்லாமல் ஆண்டு கொண்டிருக்கலாம் என்று நீயும், நானும் நினைத்துக் கொண்டிருக்கிறோம். தம்மைச் சுற்றி உள்நாட்டிலேயே உருவாகிக் கொண்டிருக்கும் அபாயங்களையும், பகைகளையும் நீ எந்த அளவு உணர்ந்திருக்கிறாய் என்பது எனக்குத் தெரியாது. ஆனால் நான் இதை மிக நன்றாக உணர்ந்திருக்கிறேன்.” “அடிகள் உணர்ந்தால் நானே உணர்ந்தது போல்தான்! பாண்டியர்கள் கலகம் செய்து ஆகப் போவது என்ன? நாம்தான் அந்தப் பழம் பெரும் அரச மரபை மறுபடியும் தலையெடுக்க முடியாதபடி பூண்டோடு அழித்து விட்டோமே? வம்சமே இல்லாமற் போய் விட்ட ஒரு குலம் மறுபடி வாகை சூட முடியுமா?” “கலியா! பலமுறை நீ என்னிடம் இப்படியே கூறி வருகிறாய்! உன் நினைப்புத் தவறானது. மேலாகத் தெரியும் அடி மரத்தின் வாட்டத்தைக் கொண்டு கீழே வேர்கள் எல்லாமே வாடி விட்டன என்பதாக நீ அநுமானம் செய்வதை நான் ஒருபோதும் ஏற்க மாட்டேன். பாண்டிய அரச ம்ரபுக்கு இன்னும் வேர்கள் இருக்கின்றன என்பதை நான் உறுதியாக நம்புகிறேன்.” “எதைக் கொண்டு தாங்கள் அப்படி நம்புகிறீர்கள்?” “மிகப் பெரிய ஆலமரங்கள் எளிதாக அழிவதில்லை!” “அழித்துப் பல ஆண்டுகள் கடந்து விட்டனவே?” “விழுதுகளில் சிலவற்றை அழித்து விட்டு மூல விருட்சமே பட்டுப் போய் விட்டதாக நீ நினைக்கிறாய்?” “மூலவிருட்சம் எங்கே இருக்கிறது?” “எங்கே இருக்கிறது என்பதுதான் எனக்கும் தெரியவில்லை. ஆனால், இருக்கிறது என்பதை மட்டும் நம்புகிறேன். அந்த மூல விருட்சத்துக்குப் பெயர் என்ன தெரியுமா?” “தெரியாது! அதையும் தாங்கள்தான் கூறியருள வேண்டும் அடிகளே!” “வைகை வள நாட்டு நடுவூர் நன்மை தருவார் குலத்துத் தென்பாண்டிய மதுராபதி வித்தகன்! அவன் உயிரோடு இருக்கும் வரை பாண்டிய குலம் அழிந்திருக்கும் என்பதை நான் நம்ப மாட்டேன்! பாண்டிய குலம் அழிந்திருந்தால், அந்தக் கிழச் சிங்கம் இதற்குள் வெளிப்பட்டு வந்து காவியுடை தரித்துத் துறவியாகி இருக்கும். அந்தக் கிழச் சிங்கம் இன்னும் மறைந்திருப்பதே பாண்டிய மரபின் வேர் இன்னும் இருக்கிறது என்பதற்கு அடையாளம். ஊக்கமுடையவன் ஒடுங்கியிருப்பதும், மறைந்திருப்பதும் பயத்தினால் அல்ல. இயலாதவர்கள் ஒடுங்குவது கையாலாகாமை. இயன்றவர்கள் ஒடுங்குவது தங்களை மேலும் வலிமைப்படுத்திக் கொள்வதற்காகவே.” “இருக்கட்டும்! ஆனால் ஒரு துறவி தனியாகத் தான் மட்டுமே முயன்று அழிந்து போன பேரரசு ஒன்றை மீண்டும் எப்படி உருவாக்க முடியும்?” “துறவியா? யார் துறவி? நான் உயிரோடு இருக்கிற வரை அந்த மதுராபதி துறவியாக இருக்க முடியாது. அவன் உயிரோடு இருக்கிற வரை நானும் முழுத் துறவியாக இருக்க முடியாது. துறவிகள் விருப்பு வெறுப்பற்றவர்களாக இருக்க வேண்டும். ஆனால், அவன் உயிரோடு இருக்கிற வரை எனக்கும் நான் உயிரோடு இருக்கிற வரை அவனுக்கும் வெறுப்பதற்கும், பகைப்பதற்கும் நிறைய விஷயங்கள் உண்டு...” “நீங்கள் கூறுவது எனக்குப் புரியவில்லை அடிகளே!” “புரிவது சற்றே சிரமமானதுதான். களப்பிரர்களுக்கும், பாண்டியர்களுக்கும் இடையிலுள்ள இந்தப் பழம் பகையில், இரண்டு அறிவு வீரர்களின் தனிப் பகையும், குரோதமும், பொறாமையும் சம்பந்தப்பட்டிருக்கின்றன. காலம் வரும் போது அது உனக்குத் தெரியும். இந்த இரண்டு அறிவாளிகள் ஒருவரை மற்றொருவர் எப்படிப் பழி தீர்த்துக் கொள்ளப் போகிறார்கள் என்பதைப் பொறுத்தே அந்த மற்றொரு பகையின் முடிவும் இருக்கும்.” இதைக் கூறும் போது மாவலி முத்தரையரின் அந்தக் கண்கள் கோவைப்பழம் போலச் சிவந்துவிட்டன. அவருடைய சரீரமே தீப்பற்றி எரிவது போல் கனன்று புழுங்கியது. நெருப்பாய்க் கொதிக்கிற பகைமையும், குரோதமுமே வந்து எதிரே வடிவு கொண்டு நிற்பது போல் அப்போது களப்பிரக் கலிய மன்னனின் முன்னிலையில் தோன்றினார் மாவலி முத்தரையர். அவருடைய முன்னிலையில், அப்போது நடுவூர் நன்மை தருவார் குலத்து மதுராபதி வித்தகர் எதிர்ப்பட்டால், தாவிப் பாய்ந்து கழுத்தை நெறித்துக் கொன்று விடுவார் போன்று மாவலியார் அவ்வளவு கோபமாயிருந்தார். அந்த அரசவையில் அப்போது, மாவலி முத்தரையரை எதிர்த்துப் பேசவோ வாதம் செய்யவோ துணிந்தவர்கள் யாருமில்லை. அவர் போர்த்திக் கொண்டிருந்த துறவுக் கோல உடை கூட அந்த வேளையில் உடையாகத் தோன்றாமல் அவரது சரீரமே கோபத்தால் கனல் பற்றிக் கொழுந்து விட்டு எரிவது போல் தோற்றமளித்தது. மதுராபதி வித்தகர் மேல் உள்ள ஆறாச் சினத்தைத் துறவு நிலைக்குப் பின்னும் விட முடியாத அளவிற்கு அது ஆழமானது என்பதை மாவலி முத்தரையரின் முகத்திலிருந்து அறிய முடிந்தது. அறிவுப் பகை துறவியானாலும் நீங்காது போலிருக்கிறது. அதே சமயத்தில், மதுராபதி வித்தகர் பற்றி மாவலி முத்தரையர் கூறிய சினம் மிக்க வார்த்தைகளின் ஊடே கூட, ‘உன்னளவு நான் உயரமுடியாத படி நீ இணையற்ற உயரத்துக்கு அறிவிலும் சாதுரியத்திலும் வளர்ந்து நிற்கிறாயே’ --என்று மதுராபதி வித்தகரை நோக்கிப் பெறாமைப்படும் தொனியே புலப்பட்டது. மதுராபதி வித்தகரின் மேல் முதலில் மதிப்பு ஏற்பட்டு, அந்த மதிப்பே நாளடைவில் ஆற்றாமையாகவும், கோபமாகவும், பொறாமையாகவும், மாறி உருவெடுத்திருக்க வேண்டும் என்று தெரிந்தது. மாவலி முத்தரையர் முதலில் ஏலாமையாலும், அதன் பின்பு சினத்தினாலுமே கனன்றார் என்பதையும் அநுமானிக்க முடிந்தது. தன் பகையை அரசியற் பெரும் பகையாக மாற்றவும் அவரால் இயன்றது. ↑ மொட்டைத் தலை ↑ முத்துக் குளிக்கும் இடம் 3. மூல விருட்சம் மாவலி முத்தரையரின் முகத்தில் அவர் பூண்டிருந்த துறவுக் கோலத்திற்கு ஒரு சிறிதும் பொருத்தமற்ற கொலை வெறியைக் கண்டு, கலிய மன்னன் உட்பட அந்த மந்திராலோசனைக் குழுவில் இருந்த அனைவருமே திகைத்துப் போனார்கள். ‘வையை வளநாட்டு நடுவூர் நன்மை தருவார் குலத்துத் தென் பாண்டிய மதுராபதி வித்தகனுக்கும், இந்த மாவலி முத்தரையருக்கும் அப்படி என்ன ஜன்மப் பகை இருக்க முடியும் என்பது அவர்களுக்குப் புரியவில்லை. உடலே கனன்று எரியும் படி அந்தப் பகை வெளிப்படையாகத் தெரிவதைக் கண்டுதான் அவர்களுக்கு வியப்பாக இருந்தது. உட்படு கருமத் தலைவர்களில் ஒருவர் மற்றவர் காதருகே மெல்லக் கேட்டார்:- “இந்தக் கூட்டத்தில் பாலி மொழியைத் தாய் மொழியாகக் கொண்ட களப்பிரர்கள் மட்டும்தான் இருக்கலாம் என்று கடிந்து கொண்டு, ஒரு பாவமும் அறியாத பணிப் பெண்களைக் கூட அரசர் இங்கிருந்து துரத்தினாரே; அதே அடிப்படையில் பார்த்தால் மாவலி முத்தரையர் அல்லவா இங்கிருந்து முதலில் துரத்தப்பட வேண்டும்?” “அது எப்படி முடியும்? மாவலி முத்தரையர் பாலியில்தான் பேசுகிறார். அரசரின் வலது கரம் போல் அவருக்கு நெருக்கமாக உதவுகிறார். இந்த ஆட்சியில் அவர் தமிழரா, களப்பிரரா என்று நாம் சந்தேகப்படுவது கூடக் குற்றமாகி விடும்.” “இருக்கலாம்! ஆனால், உண்மையைப் பொய்யாக்குவதற்குச் செல்வாக்கு மட்டுமே போதாது.”-- “நீங்கள் எப்படி வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளுங்கள், அதைப் பற்றி நான் கவலைப்படப் போவதில்லை. ஆனால், செல்வாக்கும், அதிகாரமும் உண்மைகளைப் பொய்யாக்கியிருப்பதை இந்த மாவலி முத்தரையரைப் பொறுத்த மட்டும் கண்கூடாகக் காண்கிறோம்.” இவ்வளவில் இந்த இரு உட்படு கருமத் தலைவர்களும் தங்களுக்குள் காதும் காதும் வைத்தாற் போல் தனியே இரகசியமாகப் பேசிக் கொள்வதை அரசனே பார்த்து விடவே, “என்ன அங்கே நீங்கள் மட்டும் தனியாகப் பேசிக் கொள்கிறீர்கள்? நாம் அனைவரும் கலந்து பேசவே இந்த மந்திராலோசனைக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக நான் நினைக்கிறேன். தனித் தனியாக அவரவருக்குத் தோன்றுவதைப் பேசிக் கொள்வதானால் இங்கே எல்லோரும் சேர்ந்து சந்திக்க வேண்டிய அவசியமே இல்லையே?” என்று இரைந்தான். உட்படு கருமத் தலைவர்களின் பேச்சு உடனே அடங்கி விட்டது. கலிய மன்னன் அரச குரு மாவலி முத்தரையரைப் பார்த்து வினவினான்:- “யார் இந்தத் தென்பாண்டி மதுராபதி வித்தகர்? அவனால் எப்படி மீண்டும் பாண்டிய குலத்தைத் தழைக்கச் செய்து விட முடியும்? அவன் உயிரோடு மறைந்திருக்கிற வரை பாண்டிய குலம் அழியாது என்பது ஏன்?” “கலியா? உன்னுடைய வினாவுக்கு ஓரளவு குறிப்பாகவே நான் மறுமொழி கூற முடியும். இந்த மந்திராலோசனைக் கூட்டத்தில் பலவற்றை நான் தெளிவாகவும், வெளிப்படையாகவும் கூற முடியாமலிருப்பதற்காக நீ என்னைப் பொறுத்துக் கொள்ள வேண்டும். நான் எப்போதும் என் எதிரியைக் குறைத்து மதிப்பிடுவதில்லை. அந்த மதுராபதி வித்தகனை, வாளினால் வெல்ல முடியாது! ஓர் இணையற்ற அறிவாளியைக் கொல்லுவதற்கு, இணையற்ற பலசாலியால் முடியாது என்பதை நம்புகிறவன் நான். அவனைவிடப் பெரிய புத்தி சாதுரியமுள்ளவனையோ, அவனை விடப் பெரிய அரச தந்திரியையோ எதிரே கண்டாலே அவன் அழிந்து விடுவான். ஆனால் அந்த நன்மை தருவார் குலத்து மதுராபதி வித்தகனை விடச் சிறந்த புத்தி சாதுரியமோ, அரச தந்திரமோ உள்ளவர்கள் இன்று இங்கு யாரும் இல்லை." “நீங்களே அவனைப் பழி வாங்கவும் துடிக்கிறீர்கள்! வியந்து போற்றவும் செய்கிறீர்கள்! மதுராபதி வித்தகனைப் புரிந்து கொள்வது அப்புறம் இருக்கட்டும். இப்போது உங்களையே என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை அடிகளே!” “நான் அவனைப் பழி வாங்கத் துடிப்பதற்குக் காரணமே அவனுடைய அறிவுதான். அதை நான் குறைவாக மதிப்பிட்டிருந்தால், இந்தப் பழி வாங்கும் எண்ணமும், குரோதமும் எனக்கு ஏற்பட்டிருக்காது. அறிவின் எல்லையைத் தொட்டு விட்டவனைப் பார்த்து, அதில் பின் தங்கி விட்டவனுக்கு ஏற்படுகின்ற கோபம்தான் இது.” “நீங்கள் சொல்வது ஒன்றும் எனக்குப் புரியவில்லை அடிகளே!” “அறிவால் போரிட்டுக் கொண்டிருப்பவர்களின் பகையை, ஆயுதங்களால் போரிடுகிறவர்கள் புரிந்து கொள்வது கடினம்தான்.” “நிதானமாகவும், காரண காரியங்களோடும் நடை பெறுகிற எந்தப் போரையும் அரசர்கள் விரும்ப முடியாது. ஒரு போரில் எதிர்ப்பவர், எதிர்க்கப்படுகிறவர் இருவரில் யாராவது ஒருவர் அழிந்தாக வேண்டும். இருவருமே நீடிக்கிற போர் எங்களைப் போன்றவர்களுக்குப் பிடிப்பதில்லை.” “அப்படியானால் நீயும், உன்னைப் போன்றவர்களும் என்னையொத்த அறிவாளியின் குரோதத்தையோ, பகையையோ புரிந்து கொள்வது மிகவும் சிரமமானது.” “எதிரியின் உடலை அழிப்பதால், நாம் வென்று விடுவதுதான் வெற்றி. அதுவே போரின் இலட்சியத்தை முடிவு செய்து விடுகிறது என்பது என்னுடைய கருத்தாகும்.” “அறிவாளிகளின் போரில் உடல் அழிக்கப்படுவதோ, அங்கங்கள் சிதைக்கப்பட்டு அவமானப் படுத்தப்படுவதோ வெற்றியை நிர்ணயிப்பதில்லை கலியா! வாதம் பலவீனப் படும் போதுதான் வாதிப்பவனுக்குக் கோபம் வரும். விவாதம் புரியும் இருவரில் யாருக்கு முதலில் கோபம் வருகிறதோ, அவன் தோல்வியடையத் தொடங்குகிறான் என்பதுதான் பொருள்.” “உங்களுக்கே மதுராபதி வித்தகன் மேல் கோபம் வருகிறதே?” “அதனால்தான் நான் அவனை இன்னும் வெல்ல முடியவில்லை. என் கோபம் பல முறை தோற்றவனுக்கு வரும் கோபம். என் எதிரே, இந்தக் கோபம் என்று அந்த மதுராபதி வித்தகனுக்கு வந்து, அவன் முதலில் ஆத்திரத்தால் நிலை தடுமாறுகிறானோ அன்று நான் வென்றவனாக இருப்பேன்.” “ஆகவே, நாம் முதலில் அந்த மூல விருட்சத்தை அழிக்க வேண்டும் என்கிறீர்கள்...” “ஆம்! ஆனால் எப்படி அழிப்பது என்பதில்தான் நாம் இருவரும் வேறுபடுகிறோம்.” “நம்மால் எப்படியும் அழிக்க முடியும்!” “நீங்கள் எப்படி அழிப்பீர்கள் என்பது வாதமில்லை. அவன் எப்படி அழிவான் என்பதே நம் வாதமாக இருக்க வேண்டும்.” “ஒவ்வொருவரும் முடிவதற்கு ஏதாவது ஒரு தலைவிதி இருக்கும் அடிகளே!” “மதுராபதி வித்தகன் யாரோ ஏற்படுத்திய விதிகளுக்குத் தான் கட்டுப்படுவதில்லை. விதிகளையே ஏற்படுத்தவும், கட்டுப்படுத்தவும் வல்ல அறிவு அவனுக்கு இருந்து தொலைக்கிறது.” “அவன் இப்போது எங்கிருக்கிறான் என்று சொல்ல முடிந்தால் போதும்! மற்றவற்றை நான் பார்த்துக் கொள்கிறேன்.” “எந்த இடத்தில் அவன் இருப்பதாக நமக்குத் தெரிந்தாலும், நாம் தெரிந்து கொண்டு செயல் படுவதற்குள் அவன் வேறு இடம் மாறிவிடுவான். அவ்வளவு சுலபமாக அகப்பட்டு விடுகிறவனில்லை அவன்." இந்தச் சமயத்தில் பூத பயங்கரப் படைத் தலைவன் மெல்ல எழுந்திருந்தான். அரச குரு மாவலி முத்தரையர் ஏளனமாக அவனைப் பார்த்தார். கலிய மன்னனோ பூத பயங்கரப் படைத் தலைவன் ஏதோ சொல்லப் போகிறான் என்று அவன் பக்கம் ஆவலோடு திரும்பினான். “மாமன்னர் கட்டளையை மேற்கொண்டு பூதபயங்கரப் படையினர் திருமோகூரை முற்றுகையிட்டுச் சோதனை செய்தோம். அங்கும் அந்தப் பாண்டியர் குலத் தலைவன் கிடைக்கவில்லை. அரண்மனைக் களஞ்சியங்களுக்கு நெல்லுதவி செய்யும் பெரிய காராளர் மாளிகைக்குக் கட்டுக்காவல் வைத்துக் கண்காணிக்கத் தொடங்கியிருக்கிறோம்.” “காராளர் பெரிய உபகாரி! அவர் இந்தக் களப்பிரர் ஆட்சிக்கு மிகவும் உதவி வருகிறவர். அவரைப் போன்றவர்களை நீங்கள் மிகவும் கொடுமைப் படுத்தி விடக் கூடாது.” “இது பற்றிய தங்களுடைய திருவுள்ளக் குறிப்பை ஏற்கெனவே நன்கு அறிவேன் அரசே!” என்றான் பூத பயங்கரப் படைத் தலைவன். “அவிட்ட நாள் விழாவின் போது, இங்கும் திருமோகூரிலும் சிறைப்பட்டவர்களை இங்கே கொண்டு வந்து நிறுத்தினால், அவர்களிடமிருந்து ஏதேனும் தெரிந்து கொள்ள முடியுமா என்று பார்க்கலாம்” என்றார் அரச குரு. “அதுதான், அவர்களைச் சித்திரவதை செய்து பார்த்தும் கூட எதையும் தெரிந்து கொள்ள முடியவில்லையாமே? நீங்கள் மட்டும் எப்படி அந்த உண்மையை வரவழைக்க முடியும்?” என்று அரச குருவைப் பார்த்துக் கேட்டான் கலிய மன்னன். “என்னால் ஒரு வேளை அது முடியுமானால் உனக்கும் நல்லதுதானே கலியா? சாம தான பேத தண்ட முறைகளில் கடைசி முறையாகிய தண்ட முறையில் தொடங்கியதால்தான் அவர்கள் பிடிவாதமாக இருந்தார்களோ என்னவோ? மற்ற உபாயங்களைக் கடைப் பிடித்து நான் முயன்று பார்க்கிறேன். என்னால் இப்போது அவர்களிடமிருந்து ஏதேனும் தெரிந்து கொள்ள முடிந்தால் களப்பிரர்களுக்கு எதிரான பகை வேரோடியிருக்கும் மூல விருட்சம் எது என்றும், எங்கே என்றும் நானே காண்பேன்” என்று சூளுரைத்தார் மாவலி முத்தரையர். சிறைப்பட்டவர்களை உடன் அங்கே கொண்டு வருமாறு பூத பயங்கரப் படைத் தலைவனுக்குக் கட்டளையிட்டான் கலிய மன்னன். உடனே பூத பயங்கரப் படைத் தலைவன் சிறைக் கோட்டத்துக்கு விரைந்தான். அவன் புறப்பட்டுச் சென்றதும் படை நிலைமைகள் பற்றி அங்கே அமர்ந்திருந்த நால்வகைத் தானைத் தலைவர்களையும் கேட்டறிய முற்பட்டான் களப்பிரக் கலிய மன்னன். 4. காம மஞ்சரி சிறிது நேரத்திலேயே சிறைப் பட்டிருந்த நால்வரையும் ஒவ்வொருவராக அந்த மந்திராலோசனைக் குழுவினரின் முன் கொண்டு வந்து நிறுத்தினான் பூத பயங்கரப் படைத் தலைவன். முதலில் ஒரு வேங்கைப் புலியை இரும்புச் சங்கிலியிட்டுப் பிணைத்து இழுத்து வருவது போல், தென்னவன் மாறனை இழுத்து வந்தார்கள். அடுத்துக் காண்பவர்களைப் பயமுறுத்தும் பூதாகரமான தோற்றத்தோடு திருமோகூர் அறக்கோட்டத்து மல்லன் இழுத்து வரப்பட்டான். அவனைத் தொடர்ந்து அகநகரில் அவிட்ட நாள் விழாவன்று சிறைப்பட்டவர்கள் வந்தனர். அாச குரு மாவலி முத்தரையர் தம் இருக்கையிலிருந்து எழுந்து சிறையிலிருந்து கொண்டு வந்து நிறுத்தியவர்களை நெருங்கிக் கூர்ந்து கவனிக்கலானார். ஒவ்வொருவராகச் சுற்றிச் சுற்றிப் பார்ப்பது, அங்கம் அங்கமாக அளந்தெடுப்பது போல் பார்த்து விட்டு மீண்டும் திரும்பி வந்து, ‘தென்னவன் மாறன்’ அருகிலேயே நிலைத்து நின்று அவனை வைத்த கண் வாங்காமல் உற்றுப் பார்க்கலானார் அவர். “இந்தப் பிள்ளையாண்டானை எங்கே சிறைப் பிடித்தாய்?” என்று மாவலி முத்தரையர், பூத பயங்கரப் படைத் தலைவனைக் கேட்டவுடனே, அவன் ஒரு சிறிதும் தயங்காமல், “இவனையும், அதோ அந்த முரட்டு மல்லனையும் திருமோகூர்ப் பெரியகாராளர் வீட்டு முன்றிலில் சிறைப் பிடித்தோம்” என்று மறுமொழி கூறினான். மேலும் சில விநாடிகள், தென்னவன் மாறனின் முகத்தையே ஏதோ வசியம் செய்வதற்குப் பார்க்கிறவர் போல் இமையாமல் பார்த்துக் கொண்டு நின்றார் மாவலி முத்தரையர். பின்பு நிதானமாகத் தம்முடைய பாதக் குறடுகள் ஒவ்வொரு முறை அடி பெயர்ந்து வைக்கும் போதும், நடைக்குத் தாளமிடுவது போல் ஒலிக்க நடந்து கலிய மன்னனின் அருகே சென்று கூறலானார்:- “இந்த நால்வரில் இதோ புலித் தோல் அங்கி அணிந்திருக்கிறானே; இவனிடம்தான் சாமுத்திரிகை இலக்கணத்துக்குப் பொருந்திய சாயல்கள் உள்ளன. இவர்களில் இவன் அரச மரபைச் சேர்ந்தவனாக இருப்பானோ என்பது என் ஐயப்பாடு ஆகும்...” “ஆம்! என் சந்தேகமும் அதுதான்! இந்த அரண்மனையின் பழமையான ஓவிய மாடத்தில் உள்ள பல பாண்டிய இளவரசர்களின் ஓவியங்கள் எப்படி இருக்கின்றனவோ, அப்படியே இவன் தோற்றமும் இருக்கிறது. இவனைச் சிறிதும் தாமதியாமல் சிரச்சேதம் செய்தால் என்ன மாவலி முத்தரையுரே?” “கூடவே கூடாது! ஆத்திரப்பட்டுக் காரியத்தைக் கெடுத்துவிடாதே கலியா! ‘கைக்காடையை விட்டுக் காட்டுக் காடைகளைப் பிடிக்க வேண்டும்’ என்று ஒரு பழமொழி உண்டு. இவனை வைத்து இவனோடு சேர்ந்தவர்களையும் இவனைப் போன்று இயங்குகிறவர்களையும், ஒவ்வொருவராகப் பிடிக்க வேண்டும்.“ “ஆம், அந்த தென்பாண்டி மதுராபதி வித்தகன் உட்பட அனைவரையும் பிடிக்க வேண்டும்.“ “அவசரப்படாதே கலியா! காடைகளைத்தான் வலையில் பிடிக்கலாம், சிங்கங்களை வலையில் பிடிக்க முடியாது.“ “நன்மை தருவார் குலத்துக் கிழச் சிங்கம் அவ்வளவு சுலபமாக உனக்குக் கிடைத்து விடாது.“ இதைச் சொல்லும் போது மாவலி முத்தரையரின் குரல் சலனமில்லாத உறுதியுடன் இருந்தது. அவர்கள் பாலியில் பேசிக் கொண்டிருந்தார்கள். பதினாறடி வேங்கை வரிப் புலியை இரும்புச் சங்கிலியால் பிணைத்து நிறுத்தியது போல் தென்னவன் மாறன் சீற்றம் கனலும் விழிகளோடு நின்று கொண்டிருந்தான். திடீரென்று பூத பயங்கரப் படைத் தலைவனை நோக்கி “அந்தப் புலித்தோல் அங்கியைக் கிழித்தெறி! சிறைப்பட்டிருப்பவனுக்கு அங்கி என்ன கேடு“ என்பதாக இடி முழங்கும் குரலில் இரைந்தான் கலிய மன்னன். அந்தக் காட்டு வேங்கையை நெருங்கவே பயமாயிருந்தாலும், அதன் கைகளும், கால்களும் சங்கிலியால் பிணிக்கப்பட்டிருப்பதை உறுதி செய்து கொண்டதால், நீங்கிய பயத்தோடு அங்கே நெருங்கித் தன் வாளால் அங்கியை அகற்றினான் பூத பயங்கரப் படைத்தலைவன். அங்கி கீழே விழுந்த போது, அந்த வீரனின் பரந்த மார்பில் வாள் சற்றே அளவுக்கு மீறிப் பதிந்து விட்டதால், குறுக்கே ஒரு செங்கோடு இழுத்தது போல் இரத்தக் கீறல் தெரிந்தது. இரண்டு தினங்களாக உண்ணாததால், தளர்ந்திருந்த தென்னவன் மாறனுக்குக் கண்கள் இருட்டிக் கொண்டு வந்தன. நடுமார்பில் இரத்தக் கீறலும், கால்களிலும், கைகளிலும் இரும்புச் சங்கிலிகளின் கனமுமாக அவனை நெடுநேரம் நிற்க விடாமல் செய்ததோடு தலையைச் சுற்றிக் கொண்டு வந்தது. அந்த நிலையில் அரசனருகே நின்றிருந்த மாவலி முத்தரையர் கீழே நின்றிருந்த தென்னவன் மாறனிடம் ஏதோ காணாததைக் கண்டு விட்டதைப் போன்று விரைந்து வந்தார். அவர் அவனருகே வந்து, அவனுடைய வலது தோளின் மேற்பகுதியின் பொன் நிறச் சருமத்தில் முத்திரையிட்டது போல் அழகாகத் தெரிந்த அந்தச் சங்கு இலச்சினையைத் தொட முயன்ற போது, கடுங் கோபத்துடன் அவரை மோதிக் கீழே தள்ளி விடுகிறவன் போல் அவர் மேல் பாய்ந்தான் தென்னவன் மாறன். ஆத்திரமடைந்த மாவலி முத்தரையர் வலது முஷ்டியை மடக்கி, அவன் நடுமார்பில் ஒரு குத்துக் குத்தினார். ஒரு துறவியின் கரம் இப்படி இரும்பிற் செய்தது போல் இருக்கும் என்று அவன் கனவிலும் எதிர் பார்க்கவில்லை. ஏற்கெனவே தளர்ந்திருந்த தென்னவன் மாறன், மாவலி முத்தரையரின் இரும்புக் கரத் தாக்குதலையும் பொறுக்க முடியாமல் நினைவிழந்து கீழே விழுவது போல் தள்ளாடினான். பிரக்ஞை தவறியது. அவ்வளவில் அவன் கீழே விழுந்து விடாமல், யாரோ அவனைத் தாங்குவதை அவனே உணர்ந்தான். அதற்கு மேல் எதையும் உணர அவனுக்கு நினைவில்லை. ஃ⁠ஃ⁠ஃ தென்னவன் மாறனுக்கு மறுபடி விழிப்பு வந்த போது, தன்தலை சுகமான பட்டு மெத்தையில் சில்லென்ற உணர்வும், வாசனைகளும் தெரியச் சயனித்திருப்பதை அறிய முடிந்தது. யாருடைய வெப்பமான மூச்சுக் காற்றோ அவன் முகத்தருகே சுட்டது. மல்லிகைப் பூக்களின் கிறங்க வைக்கும் வாசனையையும், அதே மல்லிகைப் புதரருகே மூச்சு விட்டுச் சீறும் ஒரு நாக சர்ப்பத்தின் சூடான உயிர்ப்பையும் ஒருங்கே சேர்த்து உணர்வது போன்ற நிலையில் அப்போது அவன் இருந்தான். கண் விழித்துப் பார்த்தவுடன் கூச்சத்தால் துணுக்குற்று எழ முயன்ற அவனை, அந்தப் பூங்கரம் எழுவதற்கு விடவில்லை. 'அந்தப் பேரழகி யார்? தான் எப்படி அவள் மடியில் தலை வைத்துப் படுத்திருக்க நேர்ந்தது? தன் உடலைப் பிணித்திருந்த சங்கிலிகள் எங்கே?' என்பதெல்லாம் அலையலையாய் அவன் மனத்தில் வினாக்களாக எழுந்தன. அந்தப் பெண்ணின் செழுமையான உடற்கட்டு, அடர்ந்த புருவம், துறுதுறுவென்ற கண்கள், மறைக்காமல் அழகை உதறிக் காண்பிப்பன போன்ற அங்கங்கள், பெரிதாக முடிந்த அளகபாரம் யாவும் சேர்ந்து அவளைக் களப்பிரயினத்தினள் என்று அவன் புரிந்து கொள்ளத் துணை செய்தன. அவளுடைய செழுமையான வளை ஒலிக்கும் கைகளை விலக்கித் தள்ளி விட்டு, அவன் துள்ளி எழுந்திருந்தான். எழுந்த வேகத்தில் விலகி நின்று கொண்டு அவன் அவளை நோக்கிக் கேள்விக் கணைகளைத் தொடுத்தான்:- “பெண்ணே, நீ யார்? சிறைக் கோட்டத்திலிருந்து நான் இங்கே எப்படி வந்தேன்? யாருடைய கட்டளையின் பேரில் நீ இந்தப் பணிவிடைகளை எல்லாம் இங்கு எனக்குச் செய்கிறாய்?” இந்தக் கேள்விகளையெல்லாம் கேட்ட பின் முதலில் ஒரு கணம் வாயால் மறு மொழி எதுவும் கூறாமல் அவனை விழுங்கி விடுவது போல் பார்த்து நகைத்தாள் அவள். அந்தக் கண்களும், அந்தப் புன்னகையும், குருதி பூத்தது போன்ற அந்தச் செவ்விதழும், உறை நெகிழ்ந்த பொன் வீணை போன்ற அந்த உடலும், எதிர்ப்படுவோரை மயக்கி ஆட்படுத்துவதற்கென்றே படைக்கப்பட்டவை போலிருந்தன. அவனுடைய கேள்விகளுக்கு மறு மொழி கூறாததோடு தன்னுடைய வசீகரம் என்னும் மதுவினால், அவனுள் வெறியேற்ற முயன்று, அவன் மனத்தையே ஒரு கேள்வியாக வளைக்க முயன்றாள். அவள் விழிகளால், அவனுடைய உறுதியான உணர்வுகளைச் சுருட்ட முயன்று கொண்டே அழைப்பது போன்ற சிரிப்பும், சிரிப்பது போன்ற அழைப்புமாக நோக்கும் அவளை மீண்டும் அவனுடைய இடி முழக்கக் குரல் நினைவுலகிற்குக் கொணர்ந்தது; "பெண்ணே, நீ யார்? வெட்கமும் கூச்சமுமில்லாமல் வெறும் இச்சை மட்டுமே உடைய முதற் பெண்ணை நான் இப்போதுதான் பார்க்கிறேன்.” “வெட்கமும், கூச்சமும் எல்லாம் வெறும் போர்வைகள்! என் போன்ற அழகின் அரசிகளுக்கு அவை தேவை இல்லை!” அவள் குரல் இனிமையாக இருந்தாலும், களப்பிரர் பேசும் தமிழின் முதிராத மழலைத் தன்மை அதில் இருப்பதைத் தென்னவன் மாறன் கண்டான். அவனுக்குக் கோபம் மூண்டாலும், அதை அடக்கிக் கொண்டு — “அம்மா, அழகின் அரசியே! உன் பெயர் என்ன என்று நான் அறியலாமா?” “காம மஞ்சரி.” “உன்னைப் பொறுத்த வரை முற்றிலும் பொருத்தமான பெயர்தான். உன்னிடம் காமம் மட்டும்தான் ஒன்று சேர்ந்து இணைந்திருக்கிறது. பெண்ணை நான் தாயாகப் பார்த்திருக்கிறேன். இன்றுதான் முதன் முதலாக வெறும் காமமாகப் பார்க்கிறேன்.” “ஒரு தமிழன்தான் இப்படிப் பஞ்சணையிலும் வேதாந்தம் பேச முடியும்!” “ஒரு களப்பிரப் பெண்தான் இப்படி முன்பின் தெரியாதவனிடமே, பார்த்த மறுகணம் பஞ்சணையைப் பற்றிப் பேச முடியும்...” — இதற்கு மறுமொழி கூறாமல் எழுந்து, அவனருகே ஒவியம் நடப்பது போல் நடந்து வந்து தழுவிக் கொள்வது போல் நெருங்கிய அவளை, அருகே நெருங்க விடாமல் தடுத்தான் அவன்: “பெண்ணே! என்னை நீ மிக எளிமையாக ஏமாற்றி விட முடியாது. நான் கோநகரங்களின் மிருதுவான சுபாவங்களை உடைய மென்மையான மனத்தினன் இல்லை. காட்டு மனிதன். அழகு, வசீகரம், மயக்கம் போன்ற மெல்லிய உணர்ச்சிகளால் என்னை வசப்படுத்தி ஒற்றறிய உங்கள் அரசரோ, மற்றவர்களோ உன்னிடம் என்னை விட்டிருந்தார்களானால் அவர்களுக்காக நான் பரிதாபப்படவே செய்வேன்." “வலிமையும், அழகும் உள்ள ஆண் மகன் பெண்ணிடம் அன்பு செய்ய வேண்டுமே தவிர, பரிதாபப்பட்டுக் கொண்டிருக்கக் கூடாது.’’ “அன்பு என்பது தானாக நெகிழ்வது! அது வலிந்து யாரிடமும் செய்யப்படுவது அல்ல.” மீண்டும் அந்தக் கொல்கின்ற காம விழிகள் அவனைச் சுருட்ட முயன்றன. அவன் அவளைப் பயமுறுத்தினான்: “பெண்ணே! நான் மிகவும் பொல்லாதவன். முதலில் இதிலுள்ள சதி என்ன என்று என்னிடம் சொல்! இல்லா விட்டால் நீ என்னிடம் இருந்து உயிர் தப்ப முடியாது.” 5. ஒரு சாகஸம் தென்னவன் மாறன் கூறியதைக் கேட்டு அந்த வேல் விழியாள் எந்த விதத்திலும் அஞ்சியதாகத் தெரியவில்லை. நிதானமாக அவள் அவனுக்கு மறுமொழி கூறினாள்:- “யார் யாரிடமிருந்து உயிர் தப்ப முடியாது என்பது போகப் போகத் தெரியும்...” “ஆண் புலியைப் பார்த்துப்பெட்டைப் பூனை சீறுகிறது” “சிறைப்பட்டவர்கள் சிறைப்படுத்தியவர்களைப் பார்த்து உயிர் தப்ப முடியாது என்று பயமுறுத்தினால், சீறாமல் பின் சிரிக்கவா செய்வார்கள்?” “வீரர்களைக் காமக் கிழத்தியர் தங்கள் தோள்களிலே சிறைப்படுத்தி விடலாம் என்று களப்பிரர்கள் நினைத்தால் அது பேதமை.” தனக்கு இணையற்ற அழகுச் செருக்கும், உடல் வளமும் உள்ள ஒரு யுவதி கம்பீரமான ஆடவன் ஒருவனால் அலட்சியப் படுத்தப்பட்ட ஆற்றாமைக் கோபத்தில் எப்படிச் சீறுவாளோ, அப்படிச் சீறினாள் அவள். அப்போது அவன் தன்னைக் கையைப் பிடித்து இழுத்து அறைந்திருந்தால் கூட அவளுக்குக் கோபம் வந்திருக்காது; கோபமே, அந்த விநாடி வரை அவன் அப்படித் தன்னைக் கையைப் பிடித்து இழுத்தும் கூட அறைய முற்படவில்லையே என்பதனால் தான் 'ஏ முரட்டு ஆண் மகனே! தயவு செய்து என்னைப் பெண்ணாக ஏற்றுக் கொள்ள மாட்டாயா? என்னை ஏன் இப்படி அலட்சியம் செய்கிறாய்? நீ அடக்கி ஆளக் கூட நான் தகுதியற்றவளா?’ என்று இறைஞ்சி இரப்பது போல் ஒரு கணமும், உடனே மாறிய மன நிலையில் அடியுண்ட நாகம் சீறுவது போல் மறு கணமும் மாறி மாறிப் பார்க்கும் பார்வைகளை உடையவளாகத் தவித்தாள் அவள். ‘நீர் என்னை ஒரு பேதைப் பெண்ணாக ஒப்புக் கொண்டு உம்முடைய கைகளால் வதை செய்தால் கூட நான் உம் அடிமையாகி விடுவேன்’ என்பது அவள் தாபமாக அவன் எதிரே நின்றது. அந்தத் தாபத்தை அவன் அங்கீகரிக்கவில்லை என்பதே அவள் சீற்றமாக இருந்தது. அவன் அலட்சியமாக அவளை நோக்கிக் கூறலானான்: “எனக்குத் தெரியும் பெண்ணே! பேயின் முகத்தைப் போல் கொடிய முகத்தை உடைய உங்கள் அரச குரு மாவலி முத்தரையரின் ஏற்பாடாகத்தான் இருக்கும் இது. ஆணைப் பெண்ணால் மயக்கி வசப்படுத்த வேண்டும். பெண்ணை, ஆணால் மயக்கி வசப்படுத்த வேண்டும் என்ற வெளிப்படையான அளவுகளை வைத்து யாவற்றையும் திட்டமிடுகிறார் அவர்.” “அவ்வளவுக்கு அவர் சிறுபிள்ளைத்தனமான அரச தந்திரி இல்லை ஐயா வாலிப வீரரே! பெண்களால் வசப்படுத்தி, மயக்க முடியாத ஆண்களும், ஆண்களால் வசப்படுத்தி, மயக்க முடியாத பெண்களும் அபூர்வமாக இந்த உலகில் இருப்பார்கள் என்பது மாவலி முத்தரையருக்கும் தெரிந்திருக்கும்!" “தெரிந்தால் இப்படி நடந்திருக்காது.” “எப்படி நடத்தப் பட வேண்டும் என்பதைச் சிறைப் பட்டிருப்பவர்கள் முடிவு செய்ய வாய்ப்பில்லை; பாவம்.” “பாவம் என்று நீ என்னிடம் பரிதாபம் காட்ட வேண்டியதில்லை பெண்ணே! பாண்டிய நாட்டு வீரர்கள், பெண்களின் பரிவில் உயிர் வாழ விரும்புவதில்லை! அவர்கள் மன உறுதி படைத்தவர்கள்.” “உண்மைதான்! கல் மனம் படைத்தவர்களுக்கு யாருடைய பரிவும் தேவைப்படாது.” இதைச் சொல்லும் போதும் அவள் குரலில் அளவற்ற தாபமும், தாகமும், தவிப்புமே ஒலித்தன. அடுத்த கணம் அவன் முற்றிலும் எதிர்பாராத விதமாகத் திடீரென்று இருந்தாற் போலிருந்து அவள் விசும்பி விசும்பி அழத் தொடங்கினாள். தென்னவன் மாறன் எதிர்பார்க்கவில்லை. பெண்ணிடம் இரண்டு விதமான படைக்கலங்கள் இருக்கின்றன. ஒன்று புன்னகை, மற்றொன்று கண்ணீர். ஓர் அழகிய பெண் இந்த இரண்டு படைக்கலங்களாலும் வெற்றி அடைய முடியும். ஒன்றினால் தவறி விட்டால், மற்றொன்றினால் உறுதியாக வெற்றி கிடைக்கும். தென்னவன் மாறன் அவளுடைய புன்னகை என்ற படைக்கலனால் தாக்கப்பட்ட போது உறுதியாக இருந்து, எதிர்த்து அவளைத் தோற்கச் செய்திருந்தான். முதல் தோல்வியைப் புரிந்து கொண்டு இப்போது இந்த இரண்டாவது வகைப் போரைத் தொடங்கியிருந்தாள் அவள்.'சில சமயம் புன்னகைகளால் வெல்ல முடியாத கல் மனம் படைத்தவர்களைப் பெண்கள் கண்ணீரினால் வென்று விடுவார்கள்’ - என்று பலமுறை கேள்விப் பட்டிருந்ததை நினைத்துத் தன் விஷயத்திலும், இப்போது அப்படி நடந்து விடாமல் இருக்க வேண்டுமே என்று எண்ணி மனத்தைத் திடப்படுத்திக் கொண்டான் அவன். அரச தந்திரக் காரியங்களைச் சாம, தான, பேத, தண்ட முறைகளால் சாதித்துக் கொள்வது எல்லா அரசமரபிலும் வழக்கம்தான். சேர, சோழ, பாண்டிய மரபிலோ, தென் தமிழ் நாட்டுக் குறுநில மன்னர்களிடையிலேயோ, பெண்களின் அழகைப் பயன் படுத்திச் சாதிக்கப்படும் அரச தந்திர சாதனைகள் மிகவும் கெளரவமாக மதிக்கப்படுவது கிடையாது. ஆனால், களப்பிரர்கள் இதிலும் தரக் குறைவாக இறங்கியிருப்பதாகப் பெரியவர் மதுராபதி வித்தகர் போன்றவர்கள் அடிக்கடி சொல்லி வந்ததை, இப்போது தென்னவன் மாறன் தன் சொந்த அநுபவத்திலேயே கண்டான். “கூர்மையான வாள்களின் காரியத்தை மென்மையான பூக்களால் சாதிக்க முடியாது! பூக்களைக் கொண்டு வாள்களின் காரியத்தைச் சாதிப்பது வாள்களை அவமானப் படுத்துவதற்குச் சமம்"-என்று பெரியவர் மதுராபதி வித்தகர் அடிக்கடி சொல்வது உண்டு. அதை இப்போது மீண்டும் நினைவு கூர்ந்தான் தென்னவன் மாறன். நீண்ட நாட்களாகக் களப்பிரர்களின் வாள்கள் முனை மழுங்கிப் போய் விட்டதாலோ என்னவோ, வாள்களைப் பயன்படுத்த வேண்டிய காரியங்களுக்கு மலர்களைப் பயன்படுத்திக் கொண்டிருந்தார்கள் அவர்கள். தென்னவன் மாறன் காம மஞ்சரி என்ற வெறியூட்டும் அழகுக் கருவூலத்துக்கு முன் மிகவும் விழிப்பாக இருந்தான். பெண்களின் அரச தந்திரம் என்பது மலர்களால் எழுப்பும் கோட்டைச் சுவரைப் போன்றது. அந்தச் சுவர் எங்கே சரிந்து விழும், எப்போது சரிந்து விழும், எதற்கு முன்பு சரிந்து விழும் என்பதை முன் கூட்டியே ஒன்றும் சொல்ல முடியாது என்று அவன் நினைத்துக் கொண்டிருந்த போதே, அந்த நினைவை நிரூபிப்பது போன்ற ஒரு காரியத்தைக் காம மஞ்சரி செய்தாள். தன்னால் எந்த வகையிலும் வெல்ல முடியாத அவன் ஆண்மைக்கு முன்னால், அவளுடைய மலர்க் கோட்டையின் மெல்லிய தந்திரச் சுவர்கள் பொலபொலவென்று சரிந்தன! ‘ஐயா! சுந்தர வாலிபரே! தயைகூர்ந்து நீங்கள் இங்கிருந்து உடனே எப்படியாவது வெளியேறி விடுவது நல்லது. இல்லா விட்டால், நாளைக்குச் சூரியோதயத்திற்குள் உங்களைச் சிரச்சேதம் செய்து விடுவதாக ஏற்பாடு ஆகியிருக்கிறது. அப்படி நீங்கள் என்னென்ன இரகசியங்களை ஒற்றறிய முடியுமோ அவற்றை எல்லாம் அறிவதற்கான சாகலங்களைப் புரிவதற்கே நான் வந்தேன். நீங்கள் என் மேல் கருணை காட்டவில்லை என்றாலும், நான் என் கடமை தவறியாவது, உங்கள் மேல் கருணை காட்டுகிறேன். உங்கள் மேல்-என்ன காரணமோ சொல்லத் தெரியவில்லை; என் மனம் பித்துப் பிடித்தது போல் அடிமைப் படத் தொடங்கி விட்டது” என்று கண்ணீரும், கம்பலையுமாக மன்றாடிய அவள் விழிகளில்-முகபாவத்தில் எந்த அளவு கபடம் இருக்கிறது என்பதைக் கூர்ந்து கவனிக்கலானான் தென்னவன் மாறன். இப்படி அவள் ஒரேயடியாகச் சரணாகதி அடைவது போல் தன்னிடம் மன்றாடுவதும் கூட ஒரு சாகஸமோ என்று பயந்தான் அவன். ‘பஞ்சணையில் வேதாந்தம் பேசும் தமிழன்’ என்று தாபம் பொறுக்க முடியாமல் அழகுத் திமிரோடும், உணர்ச்சி வெறியோடும் தன்னை எடுத்தெறிந்து பேசியவளா, திடீரென்று இப்படித் தன்னுடைய அரண்களை எல்லாம் தானே சிதைத்துக் கொண்டு, எதிர்ப்பட்டுச் சரணாகதியாகிறாள் என்று நினைத்த போது நம்புவதற்கு அருமையாகவும் இருந்தது. நம்பாமலும் இருக்க முடியவில்லை. இந்த இரண்டும் கெட்ட மனநிலையில் நாகரிகங்களை அதிகம் பழகாத அவனுடைய நாட்டுப்புறத்து மனப் பான்மை அவனைக் காப்பாற்றியது. அந்த நாட்டுப்புறத்துப் பிடிவாதம் அவனை அவளுக்கு முன் அந்த நிலையிலும், இளகி விடாமல் தடுத்தது. தன் மார்பில் பூத பயங்கரப் படைத் தலைவனின் வாள் இலேசாகக் கீறியிருந்த காயத்துக்கு அவள் கைகள்தான் மருந்திட்டிருக்க வேண்டும் என்று புரிந்ததும், மனத்துக்குள் அதற்காக நன்றியுணர்வு சுரந்தாலும் கூட அவளிடம் அதிகம் பேசவில்லை அவன். “உன்னுடைய கருணைக்கு நன்றி பெண்ணே! ஆனாலும் உன்னை நியமித்தவர்களுக்கு, நீ துரோகம் செய்வது எனக்குப் பிடிக்கவில்லை. காம மஞ்சரி! பெண்களின் உதவியோடு தப்பி ஒட நான் விரும்ப மாட்டேன் என்பது உனக்குப் புரிந்திருந்தால், நீ இப்படி என்னிடம் பேசியிருக்க மாட்டாய்!” “இருக்கலாம்! ஆனால், இந்த இடத்தில் இப்போது என்னைத் தவிர, உங்களுக்கு வேறெவரும் உதவ மாட்டார்கள். நேரே பூத பயங்கரப் படை வீரர்களோடு, நாளை பொழுது புலர்வதற்கு முன் கொலைக் களத்துக்குப் போவதுதான் இனி உங்கள் விதி.” “என் தலை விதியை மாற்றுவதற்காக மட்டும்தான், ஆண்டவன் உன்னைப் படைத்திருப்பதாக நீ நினைக்கிறாய் போலும்.” அவள் மறுமொழி கூறவில்லை. நடைப் பிணம் போல் அவனைத் திரும்பித் திரும்பிப் பார்த்தபடியே, தளர்நடை நடந்து பயத்தோடு, அந்தக் கூடத்திலிருந்து அவள் வெளியேறிச் செல்வதை அவன் பார்த்துக் கொண்டிருந்த போதே, இன்னொரு வாயில் வழியாகப் பூத பயங்கரப் படை வீரர்களின் கூட்டம் ஒன்று திமுதிமுவென்று உள்ளே நுழைந்து, மீண்டும் அவனுடைய கைகளையும் கால்களையும் சங்கிலியால் பிணைக்கத் தொடங்கியது. 6. புலவர்களும் பொய்யும் மந்திராலோசனைக் குழுவினர் பேசி முடித்த பின் வடக்கே களப்பிர தேசத்திலிருந்து வந்திருந்த நாலைந்து பாலிமொழிக் கவிகள் அரசனைக் கண்டு பரிசில் பெறக் காத்திருந்தார்கள். களப்பிரர் ஆட்சியில் அடிமைப் பட்ட பின், அரசவையில் பாலி மொழிக் கவிஞர்களுக்கும், புலவர்களுக்கும் இருந்த செல்வாக்கு, தமிழ்க் கவிஞர்களுக்கும், தமிழ்ப் புலவர்களுக்கும் இல்லாமற் போயிருந்தது. புலவர்கள், பரம்பரையாகச் சந்திக்கவும் நூல்களை அரங்கேற்றவும் இருந்த தமிழ்ச் சங்கத்தின் புகழ் பெற்ற கட்டிடங்களை யானைகள் கட்டுமிடமாகவும், குதிரைகள் கட்டுமிடமாகவும் பயன்படுத்தத் தொட்ங்கி யிருந்தார்கள் களப்பிரர்கள். மந்திராலோசனைக் கூட்ட முடிவில், தென்னவன் மாறன் தன் நினைவிழந்து மயங்கி விழுந்தவுடனே, அவனை ஒற்றறியக் காம மஞ்சரியிடம் விட்ட பின் மற்ற மூவரும் மீண்டும் சிறைக் கோட்டத்துக்கே அனுப்பப்பட்டு விட்டார்கள். எல்லைகளில் படை பலத்தைப் பெருக்கி வைத்திருக்குமாறு மீண்டும் நால்வகைத் தானைத் தலைவர்களையும் கலிய மன்னன் கேட்டுக் கொண்டான். அவ்வளவில் மந்திராலோசனைக் குழுவினர் கலைந்தனர். சிறைப் பட்டிருந்த நால்வரில் தென்னவன் மாறனைப் பற்றி மட்டுமே கலிய மன்னனுக்கும், மாவலி முத்தரையருக்கும் அதிகமான பயம் ஏற்பட்டிருந்தது. "நாளைப் பொழுது விடிந்தால், அவனைச் சிரச்சேதம் செய்யப் போகிறோம். அதற்குள்ளே அவனை மயக்கி வசப்படுத்தி அவனிடம் இருந்து அறிய வேண்டியவற்றை அறிய வேண்டும்" என்பதாகக் காம மஞ்சரியிடம் கட்டளையிடுமாறு பூத பயங்கரப் படைத் தலைவனிடம், கலிய மன்னர் கூறிய போது அரசகுரு மாவலி முத்தரையர் குறுக்கிட்டார்: “அப்படிச் சொல்லாதே கலியா! இவனை உடனே கொன்று அழித்து விடுவதால், நமக்குப் பயன் இல்லை. நான் முன்பே உன்னிடம் சொல்லியது போல் கிடைத்த பறவையை வைத்துத் தப்பி விட்ட பறவைகளைப் பிடிக்க வேண்டும்.” “பிடிக்கலாம்! ஆனால் காம மஞ்சரியைப் பற்றி எனக்கு நன்றாகத் தெரியும்! நீங்கள் காலக் கெடு வைத்துத் துரிதப் படுத்தினால் அன்றி, அவளுடைய சாகஸம் விரைந்து பயன்படாது. ஆகவே, அவளிடம் நாளை வைகறையிலேயே, நம்மிடம் சிறைப்பட்டிருக்கும் இந்தப் பாண்டிய குல இளைஞன் சிரச்சேதம் செய்யப்படுவான் என்று கூறினால்தான் நல்லது” என்றான் கலியன். “கூற வேண்டியவற்றை எல்லாம் காம மஞ்சரியிடம் மிகவும் தந்திரமாகக் கூறியிருக்கிறேன். பாண்டிய மரபின் உறுதுணையானவர்களில் இவன் ஏதோ ஒரு விதத்தில், மிக மிக இன்றியமையாதவனாக இருக்க வேண்டும். இதே சங்கு முத்திரை உள்ள ஒருவனைப் பற்றி மிகவும் சந்தேகப்பட்டு முன்பொரு சமயம், சில ஆண்டுகளுக்கு முன் கழுவேற்றியிருக்கிறோம். எனக்கு அது இன்னும் மறந்து போய் விடவில்லை. இப்போது இவனையும் அப்படிக் கொன்று விடுவதன் மூலம் மிகப் பலவற்றை அறியவும், காணவும் நேரும் வாய்ப்புக்களை நாம் இழந்து விடுவோம்.” “முயல்களுக்கு விரித்த வலையில், தெரிந்தோ தெரியாமலோ ஒரு வேங்கை சிக்கியிருக்கிறது என்கிறீர்! இல்லையா?” “பொருத்தமான உவமையைச் சொல்கிறாய் அரசே! இவன் ஒரு வேங்கையேதான். உன்னுடைய சாகஸக் காரிகை காம மஞ்சரி இவனை மயக்கி இவனிடமிருந்து எதையும் தெரிந்து கொள்வதற்குப் பதில், அவளை இவன் மயக்கி அவளிடமிருந்து இவன் எல்லாவற்றையும் தெரிந்து கொண்டு விடாமல் இருக்க வேண்டுமே என்பதுதான் என் கவலை கலியா!” “உங்கள் சந்தேகம் வீணானது! வில்லாலும், வாளாலும் வெல்ல முடியாதவர்களைப் பல முறை அவள் விழிப் பார்வையே வென்று தந்திருக்கிறது அரச குருவே!” பேசிக் கொண்டே அவர்கள் பாலி மொழிப் புலவர்கள் கலிய மன்னனை எதிர்பார்த்துக் காத்திருந்த கொலு மண்டபத்திற்கு வந்து சேர்ந்திருந்தனர். புலவர்கள் எழுந்து நின்று, அரசனை வாழ்த்தி வரவேற்றனர். அரசன் களைத்து வந்திருப்பதை அறிந்து, அவன் மனக் குறிப்பு உணர்ந்த புலவர்கள் அவனை மகிழ்விக்கக் கருதினர். அரச குரு புலவர்களை எல்லாம் மிக மிக ஏளனமாகவும் அலட்சியமாகவும் ஏறிட்டுப் பார்த்தார். அரச குருவின் செல்வாக்கை அறிந்த புலவர்கள் அவரையும் வாய் நிறைய வாழ்த்தினர். அரச குரு மாவலி முத்திரையர் உள்ளுற நகைத்துக் கொண்டார். இந்தப் புலவர்களில் பலர் உண்மையைப் பற்றிக் கவலைப்படாமல் அரசன் மனம் மகிழ வேண்டும் என்பதற்காக இல்லாததையும், பொல்லாததையும் புனைந்து கூறி, அரசனிடம் பரிசில் பெற்றுக் கொண்டு போவது ஒன்றையே நோக்கமாகக் கொண்டு அலைவதால், மாவலி முத்தரையருக்கு இவர்கள் மேல் என்றைக்கும் மதிப்பு எதுவும் இல்லை. இன்றும் அப்படியே நடந்தது. முதல் புலவரே சிங்காரச் சுவை நிறைந்த கற்பனை ஒன்றைப் புனைந்து பாடினார். ‘கலிய மன்னனே! அழகிய பெண்கள் ஆகிய நாங்கள் உன்னை நினைத்து உருகிக் கருத்தைப் பறிகொடுத்துக் கைவளைகள் சோர்ந்ததால், நான்மாடக் கூடல் நகரத் தெருக்களின் இரு சிறகிலும் குவியல் குவியலாகப் பொன் வளைகள் கேட்பாரற்றுக் குவிந்து விட்டன. வளையிழந்து கை சோர்ந்த பெண்கள் உன்னைத் தேடி அலைந்து கொண்டிருக்கிறோம்” என்று அர்த்தம் வருமாறு பாடினார் அவர்:- “தெருமருங்கின் இருசிறகும் பொன்னினொளிர் தொடிநிறைந்து குவிந்திருந்த நான்மாடத் தருமருந்திற் கூடல்நகர் ஆரணங்கார் அய்யா கலியழகா அறிவாழித் திருவுருவே திண்தோளாய் வலிமிக்காய்! திண்டிநினைக் கூடுமின்பம் வலிமிக்காய்! வருநாளாய் நீதருநாளாய்த் திருநாளாய் வளையிழந்து தெருவெல்லாம் அலைகின்றோம்” மேற்கண்ட பொருளமைந்த பாலி மொழிக் கவிதையை முதற் புலவர் பாடி முடித்ததும் மாவலி முத்தரையர் அடக்க முடியாமல் வாய் விட்டுச் சிரித்து விட்டார். அவருடைய ஏளனம், இயல்பை மீறி இருப்பதை அரசன் கவனித்தான். “ஐயோ, பாவம் அவ்வளவு பெண்களையும் இங்கே அழைத்து வந்து, நம் கலிய மன்னனைக் காண்பித்து விட்டுத் தெருக்களில் தேர்களும், யானைகளும், குதிரைகளும் போவதற்கு இடமில்லாதபடி வளைகள் குவிந்து விடாதவாறு தடுத்திருக்கலாமே!” என்று முத்தரையர் ஏளனம் செய்ததற்கு, ஒரு புலவர் மறுமொழி கூறலானார்:‘மெய்யாகவே வளைகள் அப்படிக் கழன்று குவியாது! இதெல்லாம் ஒரு வகைக் கற்பனை அதிசயோக்தி. உயர்வு நவிற்சி என்பார்கள் உங்கள் தமிழில்.” “நீங்கள் எல்லாம் இப்படியே கற்பனையைப் புனைந்து தள்ளிக் கொண்டிருந்தீர்களானால் இந்தக் களப்பிரப் பேரரசின் வீரம் கூட ஒரு நாள் கற்பனையாகப் போய் விடும்.” எந்த ஒரு மகிழ்ச்சியை எதிர் பார்த்து அரச குரு தம்முடைய குரூரமான இயல்பை விடுத்துச் சிரிக்கத் தொடங்கியிருக்கிறார் என்பதைக் கலியன் சிந்தித்தான். அரச குருவுக்குப் பயந்தபடியே இரண்டாவது புலவர், கலிய மன்னன் நான்மாடக் கூடல் வீதியில் உலாப் போகும் போது, பேதை, பெதும்பை, அரிவை, தெரிவை, மங்கை, மடந்தை, பேரிளம் பெண் ஆகிய ஏழு பருவ மகளிரும் மயக்கமுற்று மையலானதைப் பற்றிய உலாக் கவிதையைப் பாடலானார்:- “இந்த ஏழு பருவ மகளிரும் பல நூறு ஆண்டுகளாக அரசர்கள் தெருவில் வரும்போது மட்டும்தான் மையல் கொள்ளுகின்றார்கள்! இந்த மதுரை மாநகரம் பாண்டியப் பேரரசின் தலைநகராக இருந்த போது, பாண்டிய மன்னனைப் புகழ்ந்து பாடிய புலவர்களும் இப்படித்தான் ஒரு பாவமும் அறியாத ஏழு பருவ மகளிரை வம்புக்கு இழுத்துப் பாடியிருப்பார்கள். இன்று நம் கலிய மன்னன் உலாப் போகும் போதும் இந்த ஏழு பருவ மகளிர்தான் மையல் கொள்கிறார்கள். நாளைக் கலிய மன்னனின் மகன் உலாச் சென்றாலும் இவர்கள்தான் மயங்க வேண்டும் இவர்களுக்கும் உங்களுக்கும், வேறு வேலையே இல்லையா?” என்று இரண்டாவது புலவரையும் ஏளனம் செய்தார் அரச குரு. ஒரு நிலைமைக்கு மேல் அவர் தன்னையே ஏளனம் செய்கிறாரே என்றுகூட அரசன் உள்ளுற உணரத் தலைப்பட்டான். அங்கு அப்போது யாருமே எதிர்பாராத விதமாகக் காம மஞ்சரி மான் நடந்து வருவது போல் அன்னநடை பயின்று, கொலு மண்டபத்திற்குள் வந்தாள். உடனே அரசனும் மாவலி முத்தரையரும் பரபரப்படைந்தனர். அவளைப் பின் தொடர்ந்து பூத பயங்கரப் படைத் தலைவனும் அங்கு வந்தான். புலவர்களையும் வைத்துக் கொண்டு காம மஞ்சரியிடம் தான் விசாரித்தறிய வேண்டியதை எப்படி விசாரிப்பது என்று கலியன் தயங்கினான். அரச குரு அப்படித் தயங்காமல் கேட்டுவிட்டார்:- “உன்னிடம் ஒப்படைத்த காரியம் என்ன ஆயிற்று? வெற்றிதானே?” “இல்லை. அந்த முரட்டு ஆடவனை எந்த நளினமான உணர்வுகளாலும் வசப்படுத்த முடியவில்லை. இறுதியில் நான் அவனிடமிருந்து உயிர் தப்புவதே அரும்பாடு ஆகிவிடுமோ என்ற பயத்தில் ஒரு கண்ணீர் நாடகம் ஆட வேண்டியிருந்தது. அந்த இறுதி நாடகத்தில் மட்டுமே நான் அவனை வென்று தப்பினேன். மாமன்னருக்குத் துரோகம் செய்து, அவன் மேலுள்ள பிரியத்தால் அவனைத் தப்பிச் செல்ல விடுவதற்கு உதவுவது போல் நடித்துத்தான் நானே, அவனால் எனக்கு அபாயம் விளையாமல் பிழைத்தேன்!” கலியன் ஏதோ சந்தேகத்துடன் அவளைக் கூர்ந்து நோக்கினான். 7. விரக்தியில் விளைந்த நன்மை கலிய மன்னனின் பார்வையில் கருணையும், நிதானமும் வறண்டிருப்பதைக் காம மஞ்சரியும் குறிப்பால் புரிந்து கொண்டாள். அவன் தன்னை நம்பவில்லை என்பது அவளுக்குத் தெரிந்தது. “சொந்த வனப்புக்களைச் சாகஸமாக்கி ஒப்படைத்த காரியத்தை வெற்றி பெறச் செய்யாத முதல் களப்பிரப் பெண்ணை இப்போதுதான் நான் சந்திக்கிறேன்” - என்றான் அரசன். அவனோடு அரச குரு மாவலி முத்தரையரும் சேர்ந்து கொண்டார்:“பெண் சபலங்களின் வடிவம் என்பதை நீயும் நிரூபித்து விட்டாய் காம மஞ்சரி! தன்னுடைய சபலங்களையே அடக்கி வெற்றி கொள்ள முடியாதவளால் பிறரை வெற்றி கொள்ள முடியாதுதான்.” “இதில் சபலங்களைப் பற்றிய பேச்சுக்கே இடமில்லை ஐயா! நீங்கள் வீணாக என் மேல் பழி சுமத்துகிறீர்கள். நானும் என்னால் முடிந்த வரை முயன்றுதான் பார்த்தேன். எதிராளி உணர்ச்சிகளால் வெல்ல முடியாதவனாக இருக்கும் போது நான் எத்தகைய சாகலம் புரிந்தாலும் பயனில்லை”, என்று காமமஞ்சரி கூறிய வார்த்தைகளையும் மாவலி முத்தரையர் ஏற்கவில்லை. அவர் கூறினார்: “மயக்க வேண்டியவளாகிய நீயே மயங்கியிருப்பாய். அதனால்தான் உன்னால் காரியத்தைச் சாதிக்க முடியவில்லை! பெண்களிடமுள்ள தவிர்க்க முடியாத நோய் இது. அழகிய ஆண் பிள்ளைகளிடம் ஒற்றறிய இவர்களை நம்பி அனுப்பினால், அந்த ஆண் பிள்ளைகளிடம் இவர்களே வயமிழந்து மயங்கிப் போகிறார்கள்.” காம மஞ்சரி இதற்கு மறுமொழி கூறவில்லை. அவளருகே நின்றுகொண்டிருந்த பூத பயங்கரப் படைத் தலைவன், அரசரின் கோபமோ, மாவலி முத்தரையரின் கோபமோ, தன் மேலேயே திரும்பி விடக் கூடாதே என்ற கவலையுடனும், முன்னெச்சரிக்கையுடனும் அரசருக்கு நல்ல பிள்ளையாக வேண்டுமென்ற எண்ணத்தில் இருந்தான். “ஐயா! அந்தப் புலித்தோல் அங்கி அணிந்த இளைஞனை மறுபடியும் சிறையில் அடைத்து விட்டேன்”, என்று மாவலி முத்தரையரை நோக்கிச் சொன்னான் அவன். மாவலி முத்தரையரோ, கலிய மன்னனோ அப்போதிருந்த மனநிலையில் இந்தச் சொற்களைக் காதில் வாங்கியதாகவே காண்பித்துக் கொள்ளவில்லை. காம மஞ்சரியால் ஒற்றறிய முடியாமற் போய் விட்டது என்பதே அவர்களுடைய வருத்தமாக இருந்தது. “நீ போகலாம்! இனிமேல் இப்படிக் காரியங்களில் உன்னையும் நம்ப முடியாது", என்று கலிய மன்னன் கூறிய போது காம மஞ்சரி அந்தக் குரலில் வேற்றுமை கண்டாள். வழக்கமாக இப்படிக் காரியங்களின் முடிவில் பொன் ஆரமும், முத்தும், மணியும், இரத்தினமும் வைத்துப் பரிசு கொடுக்கும் அரசன், இன்று தன்னை வெறும் கையளாக அனுப்புவதோடு மட்டுமின்றிச் சந்தேகத்துக்கு உரியவளாகவும் கருதுவதைப் புரிந்து கொண்டாள். அவளுள்ளே பெண்மை சீறியது. பதினாறடி வேங்கை போன்ற அந்தப் பாண்டியகுல வாலிபனை வெற்றி கொள்ள முடியாத ஏமாற்றத்தால், ஏற்கெனவே துடித்துக் கொண்டிருந்த அவள் மனத்தை அரசனும், மாவலி முத்தரையரும் இப்போது இன்னும் அதிகமாகச் சோதனை செய்திருந்தனர். ‘அவனிடமிருந்து நான் தப்புவதற்காக அவனைத் தப்ப விடுவது போல் பேசினேன்’ என்று தான் கூறியதை அரசன் இரசிக்கவில்லை என்று அவளுக்கே புரிந்தது. அந்த வார்த்தைகளைக் கூறிய போதுதான் கலிய மன்னனுக்குத் தன் மேல் கடுமையான சந்தேகம் மூண்டது என்பதையும் அவள் உணர்ந்திருந்தாள். அரசனும், மாவலி முத்தரையரும் நடந்து கொண்டதிலிருந்து அவள் மனம் விரக்தியின் எல்லைக்குப் போயிருந்தது. முறைகளையும், சம்பிரதாயங்களையும் துறந்து அரசனிடமோ, மாவலி முத்தரையரிடமோ சொல்லி விடை பெற்றுக் கொள்ளாமலே அங்கிருந்து வெளியேறினாள் அவள். அங்கிருந்து அவள் வெளியேறும்போது அரச குருவோ கலிய மன்னனோ அவளைப் பொருட்படுத்தவில்லை. கலிய மன்னன் கொலு மண்டபத்துப் புலவர்களின் புகழ்ச்சியிலே மீண்டும் குளிர் காயப் போய்விட்டான். மாவலி முத்தரையரோ மதுராபதி வித்தகரின் இருப்பிடத்தைக் கண்டு பிடிப்பதற்கு அடுத்த உபாயமாக எதை மேற்கொள்ளலாம் என்ற சிந்தனையில் ஆழ்ந்து போனார். அடிபட்ட பெண் புலியின் சீற்றத்தோடு திரும்பிக் கொண்டிருந்த காம மஞ்சரி போகிற போக்கில் களப்பிரர் களுக்கு மனம் அறிந்தே ஒரு பெரும் கெடுதலைச் செய்து விட்டுச் சென்றாள். இந்தக் கெடுதலை அவள் செய்ததற்குக் காரணம், அவள் மனத்திலிருந்த ஒரு பெரும் சந்தேகம்தான். “ஐயா! சுந்தர வாலிபரே! தயை கூர்ந்து நீங்கள் இங்கிருந்து உடனே எப்படியாவது வெளியேறி விடுவது நல்லது. இல்லாவிட்டால் நாளைக்குச் சூரியோதயத்திற்குள், உங்களைச் சிரச்சேதம் செய்து விடுவதாக ஏற்பாடு ஆகியிருக்கிறது. அப்படி நீங்கள் சிரச்சேதம் செய்யப்படுவதற்குள் உங்களிடமிருந்து என்னென்ன இரகசியங்களை ஒற்றறிய முடியுமோ, அவற்றை எல்லாம் அறிவதற்கே நான் வந்தேன்” என்று தனியறையில் உணர்ச்சி வசப்பட்டு எதிரியிடம் தான் கூறியவற்றை எல்லாம், தனக்கே தெரியாமல் வெளியில் மறைந்திருந்து, காத்துக் கொண்டிருந்த பூதப் பயங்கரப் படைத் தலைவன் கேட்டிருந்து, அப்படியே அவற்றை எல்லாம் அரச குருவிடமோ அரசனிடமோ போய்ச் சொன்னால், தன் நிலைமை என்ன ஆகும் என்றெண்ணியே இப்போது காம மஞ்சரி அஞ்சினாள். இந்த அச்சமும், சந்தேகமுமே அவளை விரக்தியுடையவளாக்கியிருந்தன. அவள் தனியறையிலிருந்து வெளியேறும் முன்பே, முற்றிலும் எதிர்பாராத விதமாகப் பூத பயங்கரப் படைத் தலைவன் உள்ளே நுழைந்ததனால்தான் அவளுக்கே இந்தப் பயம் வந்திருந்தது. தன்னை அவர்கள் முழுவதும் நம்பியிருக்கவில்லை என்ற எண்ணமும் அவளை அச்சுறுத்தியது. புலித்தோல் அங்கி இளைஞனை ஒற்றறியத் தன்னை அனுப்பி விட்டுத் தன்னை ஒற்றறியப் பூத பயங்கரப் படைத் தலைவனை அனுப்பியிருந்தார்களோ என்ற சந்தேகமும் அவளுள் கிளர்ந்தது. 'தான் அபாயத்துக்கு ஆளாகி விட்டோம்’ என்ற பதற்றத்தில் அவள் முழு விரக்தி அடைந்தாள். அந்தப்புர உரிமை மகளிர் பகுதிக்கு, நடைப்பிணமாக அவள் திரும்பிக் கொண்டிருந்த போதுதான் அந்தச் சந்திப்பு நிகழ்ந்தது. அவள் வழியில், எதிரே அந்தப்புரத்திற்கும் சிறைக் கோட்டங்கள் இருந்த பகுதிக்கும், வழிகள் பிரியும் முனையிலே பூத பயங்கரப் படை வீரர்கள் அறுவர் நின்று கொண்டிருந்தனர். எதற்கோ தயங்கி நின்ற அவர்கள் அறுவரும் தன்னைக் கண்டதும் ஏன் அவ்வளவு மருள்கிறார்கள் என்பது அவளுக்குப் புரியா விட்டாலும், அவர்கள் முன் தன்னையறியாமலே அவள் தயங்கி நின்றாள். அவர்களை உற்றுப் பாாததாள. அவர்கள் அறுவரில் ஒருவன் முன் வந்து சற்றே திருந்தாத மழலைப் பாலியில், “சித்திர மாடத்து உப்பரிகைக்கு எந்த வழியாகச் செல்ல வேண்டும்? அங்கே அடைக்கப்பட்டிருக்கும் பாண்டிய நாட்டு வீரன் ஒருவனை மீண்டும் சிறையில் கொண்டு போய் அடைக்குமாறு எங்களுக்குக் கட்டளை இடப்பட்டிருக்கிறது” என்று அவளிடம் கேட்டான். இதற்கு முதலில் பதில் எதுவும் சொல்லாமல் அவர்களைப் பார்த்துச் சிரித்தாள் அவள். அவளுடைய சிரிப்பைக் கண்டு அவர்கள் அறுவரும் ஓரளவு பதறினாலும், அவர்களில் முதலில் பேசியவனே மீண்டும் அவளைக் கேட்டான், “ஏன் சிரிக்கிறாய் பெண்ணே?” “சிரிக்காமல் வேறென்ன செய்வது? உங்களுக்குப் பாலியில் பேசவும் தெரியவில்லை; அரண்மனையில் உள்ள இடங்களுக்கு வழியும் தெரியவில்லை. மொழியும், வழியும் தெரியாதவர்கள் எப்படி இந்த அரசின் ஆணையின் கீழ்ச் சேவை செய்யும் பூத பயங்கரப் படை வீரர்களாக இருக்க முடியும் என்று நினைத்தேன். உடனே சிரிப்பு வந்தது.” “நாங்கள் பெரும்பாலும் புறநகரப் பகுதிகளிலும், பாண்டிய நாட்டின் எல்லைப்புறப் பகுதிகளிலும் இருந்த பூத பயங்கரப் படை வீரர்கள். அதிகமாகத் தமிழ் வழங்கும் பகுதிகளில் பழகியவர்கள். புதிதாக இங்கே வந்திருக்கிறோம். மொழியும், வழியும் புரியாததற்கு அதுவே காரணம்.” “மொழியும், வழியும் புரியாதவர்கள் என்று மட்டும் உங்களை நான் நினைக்கவில்லை; இன்னும் எதை எதையோ எல்லாம் புரிந்து கொள்ளத்தான். நீங்கள் இங்கே வந்திருக்கிறீர்கள் என்பதும் எனக்குத் தெரியும். நீங்கள் தேடி வந்திருக்கும் புலித்தோல் அங்கி இளைஞர் இப்போது சித்திர மாடத்தில் இல்லை. இங்கே என் எதிரே நின்று மழலைப் பாலி பேசும் உப வனத்து அழகன் பெருமாள் மாறனாருக்கு என் பாராட்டுகள்!” இந்த வாக்கியத்தை அவள் கூறி முடிக்கும் முன்னே உருவிய வாளின் நுனி ஒன்று அவளுடைய அழகிய கழுத்தில் உராயத் தொடங்கியிருந்தது. “என்னை எப்படித் தெரியும் உனக்கு?” “அரண்மனை அந்தப்புரத்து உரிமை மகளிருக்கு எத்தனை முறை பூக்களும், மாலைகளும், சந்தனமும் கொடுக்க வந்திருப்பீர்கள்? நீங்கள் என்னதான் மாறு வேடத்தில் இருந்தாலும் எனக்கு உங்களைப் புரிகிறது!” “இந்த நிலையில் நீ எங்களைக் காண்பித்துக் கொடுத்தால் உயிர் தப்ப மாட்டாய் காம மஞ்சரி!” “இனி என் உயிரைப் பற்றிப் பெரிதாகப் பேசி ஒரு பயனும் இல்லை ஐயா! நீங்கள் விட்டுவிட்டாலும் எங்கள் அரச குருவோ, பூத பயங்கரப் படைத் தலைவனோ கூட, விரைவில் என்னைக் கொன்று விடலாம். நான் துரோகி என்று அவர்களும் நினைக்கிறார்கள். மெய்யாகவே துரோகியானால் கூட நல்லது என்று எண்ணும் அளவுக்கு அவர்கள் என்னை விரக்தி அடையச் செய்து விட்டார்கள்" என்று தொடங்கி, நடந்தவை எல்லாவற்றையும் இவர்களிடம் கூறி விட்டாள் காம மஞ்சரி. அவர்களுடைய விரக்தியைப் பயன்படுத்திக் கொண்டு பூத பயங்கரப் படை வீரர்கள் போல் அரண்மனையில் ஊடுருவியிருந்த அழகன் பெருமாளும், ஏனைய உப வனத்து நண்பர்களான காரி, கழற்சிங்கன், சாத்தன், குறளன், தேனூர் மாந்திரீகன், செங்கணான் ஆகிய ஐந்து பேரும் அவளிடமிருந்து அறிய முடிந்த இரசியங்களை எல்லாம் அப்போது உடனேயே அறிந்தனர். தென்னவன் சிறுமலை மாறனைச் சித்திர மாடத்து உப்பரிகையில் வைத்து, தான் மயக்க முயன்றதையும், அவன் மயங்காததையும், அவன் மேல் இனம் புரியாத மையலால் தான் ஆட்பட்டதையும் எல்லாம் காம மஞ்சரி அவர்களுக்குக்கூறி, அவனும் மற்றப் பாண்டிய வேளாளர்களும் அடைக்கப்பட்டிருக்கும் சிறைக் கோட்டத்துக்கு வழியும் கூறி விட்டுச் சென்றாள். அவளுடைய விரக்தி அவர்களுக்கு இந்த நன்மையைச் செய்தது. 8. குறளியும் மாற்றுக் குறளியும் அரண்மனையிலும், கோட்டையின் மற்ற உட்பகுதிகளிலும் நள்ளிரவின் அமைதி சூழ்ந்தது. காவலிருக்கும் வீரர்கள் தாங்கள் விழித்திருக்கிறோம் என்பதை அறிவிக்க, ஒருவருக்கொருவர் கேட்கும்படி உரத்துக் கூவும் எச்சரிக்கைக் குரல்கள் தான் இடையிடையே அமைதியைக் கிழித்துக் கொண்டு ஒலித்தன. அந்தக் குரல்கள் ஒலிக்காத வேளையில், எங்கும் இருளின் மிகுதியை எடுத்துக் காட்டுவது போல் நிசப்தமே சூழ்ந்திருந்தது. எப்போதாவது அகழி நீரில், ஒரு பெரிய முதலை வாலைச் சுழற்றி அடிக்கும் ஓசை, கோட்டை மதில்களின் சுவர்களில் எதிரொலித்தது. மதில் மேல் காவலுக்கு நிற்போரின் உருவம், நிழல் போல் இருண்டு தெரிந்தது. அன்று அந்த நள்ளிரவு வேளையில் பெரியவர் மதுராபதி வித்தகரின் கட்டளைப்படி, களப்பிரர்களிடம் சிறைப்பட்டு விட்ட தென்னவன் மாறனையும், பிறரையும் சிறை மீட்கும் முயற்சியில் அழகன் பெருமாளும் நண்பர்களும் ஈடுபட்டிருந்தனர். நள்ளிரவுக்குச் சிறிது நேரம் கழித்து அவர்கள் அறுவரும் சிறைக் கோட்டப் பகுதியை அடைந்து விட்டனர். சிறைக் கோட்டத்தின் பிரதான வாயிலில் நாலைந்து முரட்டுக் களப்பிரர்கள் காவல் இருந்தனர். அவர்களோடு போரிட்டுக் கொன்று விட்டு உள்ளே நுழையலாமா, அல்லது தந்திரமாக ஏதாவது செய்து, அவர்களை ஏமாற்றி விட்டு உள்ளே நுழையலாமா என்று அவர்கள் தயங்கிக் கொண்டிருந்தபோது, தேனூர் மாந்திரீகன் அந்தத் தயக்கத்தைத் தீர்த்து வைத்தான். அவன் கூறினான்: “இவர்களோடு நாம் போரிட்டுக் கொண்டிருக்கும் போதே, வேறு களப்பிரர்களும் இங்கே வந்து சேர்ந்து கொண்டால், நம்மால் அவர்களை வெல்ல முடியாமல் போகும். ஆகவே, தந்திரமோ மந்திரமோதான் இந்த நிலையில் நம்மைக் காப்பற்றும். ஆகவே, நான் என்னுடைய மாந்திரீக முறைப்படி இவர்கள் கண்களைக் கட்டி ஏமாற்றிக் குறளி வேலை செய்து காட்டுகிறேன். ‘ “என்ன செய்யப் போகிறாய் செங்கணான்?” “சிறிது நேரம் பொறுமையாயிருந்து பாருங்கள். புரியும்.” மற்ற ஐவர் கண்களும் செங்கணானையே நோக்கின. தேனுர் மாந்திரீகன் செங்கணான் கண்களை மூடி ஏதோ மந்திரங்களை உச்சரித்தான். எதிரே தரையையும், மதிற் சுவரையும் கையால் சுட்டிக் காட்டினான். ஏதோ மெல்லச் சொன்னான். என்ன விந்தை! அடுத்த கணம் தரை நெடுக எங்கிருந்தோ கொண்டு வந்து குவித்தது போல், நாக சர்ப்பங்கள் படமெடுத்துச் சீறின. எதிர்ப்புறம் மதிற்கவர் தீப்பற்றிக் கொழுந்துவிட்டு எரிந்தது. சிறைக் கோட்ட வாயிலில் நின்ற களப்பிர வீரர்கள், நிலை குலைந்து பதறி ஓடினர். சிலர் பாம்புகளை அடிக்க முற்பட்டனர். சிலர் தீப்பற்றிய சுவரை மருண்டு நோக்கினர். உடனே செங்கணான் தன்னைச் சேர்ந்தவர்களை நோக்கி, “இதைக் கண்டு நம்மவர்கள் பயமோ பதற்றமோ அடையக் கூடாது! இது அவர்கள் கவனத்தைத் திசை திருப்ப நான் செய்த குறளி வேலை. அவர்கள் இதைக் கண்டு பாம்பை அடிக்கவும், தீயை அணைக்கவும் முயன்று கொண்டிருக்கும் போதே நாம் உள்ளே புகுந்து நம்மவர்களை விடுவித்து மீட்டுக் கொண்டு வெளியேறி விட முடியும். வாருங்கள்’ என்று துரிதப் படுத்தினான். செங்கணானைப் பின்பற்றி மற்ற ஐவரும் சிறைக்கோட்டத்திற்குள் நுழைந்தனர். வெளியே பாம்பை அடிக்கவும், தீயை அணைக்கவும் கூவி, மற்றவர்களைக் கூப்பிடும் பாலிமொழிக் கூக்குரல்கள் கதறின. அழகன் பெருமாளும் நண்பர்களும் விரைந்து சிறைக் கோட்டத்தில் புகுந்து தென்னவன் சிறுமலை மாறனும், பிறரும் அடைக்கப்பட்டிருந்த பகுதியில் பிரவேசித்தபோது, இவர்கள் பூத பயங்கரப் படையினரின் தோற்றத்தில் இருந்த காரணத்தால், அவர்கள் இவர்களை வெகுண்டு நோக்கினர். தென்னவன் சிறுமலை மாறனும் மற்ற மூவரும் தங்களை இனம் கண்டுகொள்வதற்காக இவர்கள் கயல் என்று தொடங்கி நல்லடையாளச் சொற்களை மெல்லக் கூறிய பின்பே, அவர்களும் பதிலுக்கு நல்லடையாளச் சொல்லைக் கூறி இவர்களை நோக்கி முகம் மலர்ந்தனர். உடனே இவர்கள் அறுவரும், அவர்கள் நால்வரையும் பிணித்திருந்த சங்கிலிகளையும், விலங்குகளையும் நீக்கி, அவர்களைத் தங்களோடு தப்பி வெளியேறுவதற்கு ஏற்றபடி ஆயத்தமாக்கினார்கள். “உங்களையும் சிறைப்பட்டிருக்கும் நம்மவர்களையும் விடுவிக்கச் சொல்லிப் பெரியவர் மதுராபதி வித்தகரிடம் இருந்து எங்களுக்குக் கட்டளை ஒலை வந்தது. அந்தக் கட்டளையைச் சிரமேற் கொண்டு கோட்டைக்குள் நாங்கள் ஊடுருவி வந்தோம். உடனே புறப்படுங்கள். நாம் உடனே தப்ப வேண்டும்” என்று அழகன் பெருமாள் துரிதப்படுத்தினான். தென்னவன் சிறுமலை மாறனையும், மற்ற மூவரையும் உடன் அழைத்துக் கொண்டு அவர்கள் பத்துப் பேரும் வெளியேறி ஓடினர். சிறைக் கோட்டத்தின் அந்தப் பகுதிக்கும், அவர்கள் குறளி ஏவலால் உள்ளே நுழைந்த பிரதான வாயிற் பகுதிக்கும் நெடுந் தொலைவு இருந்தது. பாதித் தொலைவு கடந்ததுமே, திடீரென்று செங்கணான் அழகன் பெருமாளிடம் ஒர் எச்சரிகை விடுத்தான்: “அழகன் பெருமாள்! எனக்கு ஒரு சந்தேகம் இப்போது மனத்தில் தோன்றுகிறது. களப்பிரர்களில் பலர் சூன்யம், குறளி, ஏவல், போன்ற மாந்திரீக வகைகளில் வல்லுநர்கள் என்பதை நாம் மறந்து விடலாகாது. இந்த மதுரை மாநகர் அரண்மனை அகநகர எல்லையில் யாராவதொரு மாற்று ஏவல் வைத்துக் குறளி விடுகிறவன், விழித்துக் கொள்வதற்குள் இங்கிருந்து நாம் தப்பி விட வேண்டும். என் மனம் எதனாலோ சில கணங்களாகப் பதறுகிறது. நிச்சயமாக இங்கே ஒரு மாற்று ஏவலாளன் இருப்பான் என்றே நான் ஐயுறுகிறேன்.” இப்படிப் பேசிக் கொண்டே அவர்கள் சிறைக் கோட்டத்தின் பிரதான வாயிலருகே வந்திருந்தனர். பிரதான வாயில் அடைத்திருந்ததைக் கண்டு அழகன் பெருமாள் திகைத்தான். மதிற் சுவர் எரிவது போல் தெரியவில்லை. தரையில் சர்ப்பங்கள் தென்படவில்லை. வெளிப்புறம் அடைக்கப்பட்ட கதவுகளின் அருகே முன்பு எத்தனை களப்பிர வீரர்கள் காத்துக் கொண்டிருந்தார்களோ, அத்தனை பேர் இப்போதும் அமைதியாகக் காத்திருந்தனர். தப்பி ஓடுவதற்கு இருந்த அழகன் பெருமாள் முதலிய பத்துப் பேரும் அடைக்கப்பட்ட கதவுகளின் உள்ளே இருந்து திகைத்துக் கொண்டிருந்தனர். அவர்களுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. உள்ளே வரும் போது கூட அடைக்கப்பட்டிராத கதவுகள் இப்போது ஏன் அடைக்கப் பட்டிருக்கின்றன என்பது புரியாமல் அவர்கள் மருண்டனர். அழகன் பெருமாள் வினாவுகின்ற பாவனையில் தேனூர் மாந்திரீகனின் முகத்தைப் பார்த்தான். மாந்திரீகனின் முகம் கலவரமுற்றிருந்தது. அவன் பதறிய குரலில் பதில் சொன்னான்: “நான் பயந்தபடியே நடந்திருக்கிறது.” “அப்படி என்ன நடந்திருக்கிறது செங்கணான்?” “யாரோ மாற்று ஏவல் செய்திருக்கிறார்கள் இதோ நான் மீண்டும் சர்ப்பங்களையும், நெருப்பையும் ஏவுகிறேன். பலிக்கிறதா, இல்லையா என்று பார்க்கலாமே?” என்று கூறி விட்டுக் கண்களை மூடித் தியானித்து ஏதோ முணுமுணுத்தான் தேனுர் மாந்திரீகன் செங்கணான். ஆனால் ஒன்றுமே நிகழவில்லை. தரையில் பாம்புகள் தோன்றவில்லை. சுவரில் தீப்பிடிக்கவில்லை. சில கணங்களுக்குப் பின், தேனூர் மாந்திரீகன் செங்கணான் வாளாவிருக்கும் போதே அவர்கள் எதிரில் திடீரென நரிகளும், ஒநாய்களும் தோன்றிக் கோரமாக வாய்களைப் பிளந்து கொண்டு ஊளையிடலாயின.தேனுாரான் தளர்ந்த குரலில் கூறலானான்: “என் ஏவல் செயல்பட மறுக்கிறது அழகன் பெருமாள்! வேறு யாரோ வலுவான முறையில் மாற்று ஏவல் விடுகிறார்கள். இந்த நரிகளும், ஓநாய்களும் அந்தப் பிறர் ஏவலின் விளைவுதான்-” இப்படி அவன் கூறி முடிப்பதற்குள் மூடிய கதவுகளின் வெளியேயிருந்து: “பாம்புக்கும், நெருப்புக்கும் குறளி விடுகின்றவர்கள், இந்த நரிகளுக்கும், ஒநாய்களுக்கும் பயப்பட மாட்டீர்கள் அல்லவா?”, என்று வினாவி விட்டுப் பேய்ச் சிரிப்புச் சிரித்தது ஒரு குரல். அந்தக் குரலுக்குரிய மனிதனைப் பார்க்க அவர்கள் பத்துப் பேருடைய இருபது விழிகளும் ஏக காலத்தில் திரும்பி நிமிர்ந்தன. எதிரே கதவுகளின் வெளியே அரச குரு மாவலி முத்தரையர் கம்பீரமாக நின்று கொண்டிருந்தார். மாற்று ஏவலின் கைகள் யாவை என்பது தேனூர் மாந்திரீகனுக்கு இப்போது ஒருவாறு விளங்கியது. மாந்திரீக முறையிலேயே அந்த எதிரியின் கைகளை எப்படிக் கட்டிப் போடலாம் என்று விரைந்து சிந்திக்கத் தொடங்கியது செங்கணான் மனம். 9. இரத்தினமாலையின் ஊடல் அழகன் பெருமாளும் அவனைச் சேர்ந்த உப வனத்து நண்பர்கள் ஐவரும் தனக்குத் தெரியாமலும், தன்னிடம் சொல்லி விடை பெற்றுக் கொள்ளாமலே கணிகை மாளிகையிலிருந்து வெளியேறிச் சென்று விட்டார்கள் என்ற செய்தியை இரத்தினமாலை, தன்னிடம் தெரிவித்த போது, இளையநம்பியின் கோபம் முழுமையும் அவள் மேல்தான் திரும்பியது. அந்தக் கோபத்திற்கு உரிய இலக்கு அவள் இல்லை என்றாலும், எதிரே நின்ற காரணத்தினால் அவளே அதற்கு ஆளானாள். “சொல்லாமல் கொள்ளாமல் போய் விடுவதும், சொல்லாமல் கொள்ளாமல் போய் விடுகிறவர்களுக்கு உதவுவதும்தான் கோநகரத்து நாகரிகம் என்று நான் இதிலிருந்து புரிந்து கொள்ள வேண்டும் போலிருக்கிறது!” “உங்கள் கோபம் வீணானது? நாகரிகமே இல்லாத ஒரு கூட்டம் பாண்டி நாட்டை ஆண்டும் அடிமைப்படுத்தியும் வருகின்றது. அநாகரிகமானவர்களை நாகரிகங்களைக் கொண்டு மட்டுமே வென்று துரத்திவிட முடியாது. வன்மையானவர்களை மென்மையான முறைகளால் அணுகி மட்டுமே வென்று விட வழியில்லை. “ “நான் களப்பிரர்களைப் பற்றி உன்னிடம் கேட்கவில்லை இரத்தினமாலை! அழகன் பெருமாள் ஏன் என்னிடம் சொல்லாமல் கொள்ளாமல் இங்கிருந்து போக வேண்டும்? அதைத்தான் கேட்கிறேன்?” “அவர்கள் எதை நிறைவேற்றும் குறிக்கோளுடன் போகிறார்களோ, அதில் உங்களைத் தவிர்க்க வேண்டும் என்று பெரியவர் அவர்களுக்குக் கட்டளை இட்டிருக்கிறார்.” “சிறைப்பட்டு விட்ட தென்னவன் மாறனை மீட்கும் காரியத்தில் நான் ஈடுபடக் கூடாது என்றுதான் பெரியவர் கட்டளை இட்டிருக்கிறாரே தவிர, அதற்காகப் புறப்பட்டுப் போகிறவர்கள் என்னிடம் சொல்லிக் கொள்ளாமலே போக வேண்டும் என்று கட்டளை இட்டிருப்பதாக எனக்கு நினைவில்லையே?” “நீங்கள் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தீர்கள். யாமக் கோழி கூவுவதற்கு முன்பே அவர்கள் புறப்பட்டு விட்டார்கள். உங்கள் உறக்கத்தை அவர்கள் கலைக்க விரும்பவில்லை. தவிரவும் உங்களை எழுப்பிச் சொல்லிக் கொண்டு புறப்ப்ட நேர்ந்து, நீங்களும் உடன் வருவேனென்று வற்புறுத்துவீர்களோ எனவும் அவர்கள் தயங்கியிருக்கலாம்." “அவர்கள் ஏன் என்னிடம் சொல்லாமல் புறப்பட்டார்கள் என்பது எனக்குத் தெரிய வேண்டுமேயொழிய, அதைப் பற்றி நீ என்ன அநுமானம் செய்கிறாய் என்பது எனக்குத் தெரிய வேண்டியதில்லை.” “இது அர்த்தமற்ற கோபம்.” “இந்த மாளிகைக்கு வந்ததிலிருந்து நான் அர்த்தம் உள்ளதாக எதைத்தான் செய்ய முடிகிறது?” அவனுடைய இந்த வார்த்தைகளுக்கு, அவள் மறு மொழி எதுவும் கூறவில்லை. இமையாத விழிகளால் ஓரிரு கணங்கள் அவன் முகத்தையே ஏறிட்டுப் பார்த்தாள். அவன் கண்களில் அமைதியில்லை. எதையோ நினைத்து அடைந்த கோபத்தையும், பதற்றத்தையும் செலுத்துவதற்கு இலக்கு இல்லாமல், அவன் தன் மேல் செலுத்துவதை அவளாலும் புரிந்து கொள்ள முடிந்தது. 'இங்கே வந்த பின்பு அர்த்தம் உள்ளதாக எதைத்தான் செய்ய முடிகிறது?' என்று மனத்தைப் புண்படுத்துவது போன்ற சொற்களை அவன் கூறியிருந்தும், சுடச்சுட அதற்குப் பதில் சொல்லும் முனைப்பை அவள் வலிந்து அடக்கிக் கொண்டாள். ஒரு விருந்தினர் பேசும் கடுமையான வார்த்தைகளை, அதே கடுமையான வார்த்தைகளால் எதிர்த்து உரையாட நினைப்பதும் பாவம் என்பதை அவள் மறந்து விடவில்லை. இளையநம்பியோ அந்த மாளிகையில் விருந்தினன் மட்டுமில்லை. அதைவிடச் சிறப்பும், உரிமையும் உள்ளவன். அவளால் நேசிக்கப்படுகிறவன். அவளையும் நேசிக்கிறவன். நேசிக்கிற ஆணுக்கும், பெண்ணுக்கும் நடுவே நேர்பவை கோபங்கள் அல்ல. வெறும் ஊடல்களுக்குக் கோபங்கள் என்று கடுமையான பெயரை சூட்ட அவள் விரும்பவில்லை. அப்போது அந்த நிலையில் அவனைத் தனியே சிந்திக்க விடுகிறவள் போல் அவள் ஒன்றும் பேசாமல் மாளிகையின் உட்பக்கமாகச் சென்று விட்டாள். கோபத்தை எதிர் கொண்டு அவிப்பதில் பெண்கள்தான் உலகத்திலேயே மிகச் சிறந்த அரச தந்திரிகள் என்பதை அவள் அப்போது நிரூபிக்க முற்பட்டாள். தனியே விடப்பட்ட இளையநம்பியின் சிந்தனை உள்முகமாகத் திரும்பியது. தினவெடுத்த தன் தோள்களுக்கு வேலையில்லாமல் போகும்படி யாழும், முழவும், குழலும், இசையும், பெண்களும் மட்டும் நிறைந்திருக்கும் ஒரு கணிகை மாளிகையின் எல்லைக்குள், தான் தங்கி விடக் காரணமான கட்டளையைப் பெரியவர் மதுராபதி வித்தகர் இட்டு விட்டாரே என்று அவனுடைய ஏலாமைக் கோபம், அவர் மேல் ஒரு கணம் திரும்பியது. அடுத்த கணமே அந்தக் கோபம் அழகன் பெருமாள் மேலே திரும்பியது. ஆனால் அது அழகன் பெருமாள் மேலேயும் நிலைத்து நிற்கவில்லை. கட்டளைக்குக் கீழ்ப்படிகிறானே என்பதற்காகக் கோபப்பட்டுப் பயனில்லை என்று தோன்றவே, இளையநம்பியின் கோபம் அங்கேயும் நிலைக்க முடியாமல் நழுவியது. முனை மழுங்கிய ஊசி போல் எங்கும் தைக்காத அந்தக் கோபம், இறுதியில் சுய சிந்தனையாக மாறியது திருக்கானப்பேரிலிருந்து புறப்பட்டு வரும்போது எண்ணிய எண்ணங்களுக்கும், இப்போதிருக்கும் நடைமுறைகளுக்கும் இடையே இருக்கும் வேறுபாட்டைத் தனக்குத் தானே நினைத்துப் பார்த்துக் கொண்டான் அவன். நினைத்துக் கொண்டு வந்த இளமை வேகத்திற்கும், துடிப்பிற்கும் ஏற்ப இங்கு எதுவும் நடைபெறவில்லை. மந்திரம் போட்டுப் பேய் துரத்துவது போல் களப்பிரர்களை அவ்வளவு வேகமாகத் துரத்திவிட முடியும் என்று தோன்றவில்லை. அவிட்ட நாள் பெருவிழாவன்று கோநகரில் பெரியவர் திட்டமிட்டிருந்தபடி, எல்லாம் முடியாமற் போன பின், இன்னும் சிறிது காலம் வெற்றிக்காகக் காத்திருக்கத்தான் நேரிடும் போலிருக்கிறது. வைகறையின் மங்கலமானவையும், இனியவையுமான பணிகளில் கவனமாயிருந்த இரத்தினமாலை அவன் பக்கம் திரும்பவே இல்லை. நீராடி உடை மாற்றிக் கொண்டு புதுமையான உணர்வுகளுடன் அமர்ந்த போது அவனுக்கே தன் தவறு புரிந்தது. விடிந்ததும் விடியாததுமாக அரசர்களைத் துயிலெழுப்புவது போல் தன்னை மங்கலம் பாடித் துயிலெழுப்பிய அவள் மேல் தான் சினம் கொண்டது தவறு என்பதை அவனே மெல்ல மெல்ல உணர்ந்தான். அவனை உண்பதற்கு அழைத்த போதும், பணிப் பெண்களே வந்து அழைத்தனர். அவள் அவன் முன் தென்படுவதே குறைவாக இருந்தது. நண்பர்கள் அனைவரும் வெளியேறி விட்ட பின் அந்த மாளிகையின் எல்லையிலேயே அவன் மனம் விட்டுப் பேசவும், பழகவும் அவள் ஒருத்திதான் இருந்தாள். அவளும் அவன் மேல் பிணக்குக் கொண்டு ஒதுங்கினாற் போல் இருக்கவே, அவன் நரக வேதனைக்கு ஆளானான். அந்த மாளிகையின் சுவர் ஓவியங்களைப் பார்ப்பதில், சிறிது நேரம் கழிந்தது. இசைக் கருவிகள் வரிசையாக அடுக்கப்பட்டிருந்த கருவிக் கூடத்தைக் காண்பதில் சிறிது நேரம் கழிக்க முடிந்தது. அங்கிருந்த இன்ச, நாடக, நடன நூற் சுவடிகள் அடங்கிய பகுதியில் சற்றே நேரம் போக்க முடிந்தது. நண்பகல் வரை அவளை, அவனும் தனிமைப்படுமாறு வாட்டினான். அவனை, அவளும் தனிமைப் படுமாறு வாட்டினாள். ஊடல்[1] நீடித்தது. அவளுடைய ஊடலை வழிக்குக் கொண்டு வர அவன் ஒரு தந்திரம் செய்தான். பெண்ணின் பலவீனமான எல்லை எது என்பதையும் புரிந்து கொண்டு, அந்தத் தந்திரத்தை அவன் செய்தான். தவறு தன்னுடையதுதான் என்று புரிந்தாலும், அவளிடம் தானாக முதலில் பேசுவதற்கு அவன் மனம் இறங்கி வரவோ, விட்டுக் கொடுக்கவோ விரும்பவும் இல்லை. எனவே அவளை வழிக்குக் கொண்டுவர, அவன் இந்தத் தந்திரத்தில் ஈடுபட்டான். இரத்தினமாலையின் பணி மகளும் அடித் தோழியும் ஆகிய பூங்குழல் நாச்சியார் என்பவளைக் கூப்பிட்டு, “நாச்சியார்! உன்னுடைய மென்விரல்களால் நீ யாழ் வாசிப்பதை நான் கேட்டு மகிழ ஆசைப்படுகிறேன். என் விருப்பத்தை நீ உடனே நிறைவேற்றுவாய் என்று நான் நம்புகிறேன்” என்று இரத்தின மாலை அருகிலிருக்கும் போதே அவளைப் பொருட்படுத்தாதவன் போல், அதே சமயம் அவள் காது கேட்கப் பணி மகளை யாழ் வாசிக்கச் சொல்லிக் கட்டளையிட்டான். அவன் எதிர்பார்த்தபடியே நாச்சியார் இரத்தின மாலையின் முகத்தை ஏறிட்டுப் பார்த்துத் தயங்கினாள். தலைவியின் முன்னிலையில், தான் யாழ் வாசிப்பது எப்படி என்று அவள் பயந்து கூசுவதாகத் தோன்றியது. அவனோ மீண்டும் அவளை வற்புறுத்தினான் “நீ வாசித்தால்தான் என் மனம் மகிழும் நாச்சியார்!” நாச்சியாரின் முகத்தில் நாணமும், பயமும் மாறி மாறிப் பிரதிபலித்தன. அவள் இதழ்களில் வெளிப்பட முயன்ற நகை, தன்னையே வைத்த கண் வாங்காமல் பார்க்கும் தலைவிக்கு அஞ்சி மறைந்து ஒளிந்தது. மீண்டும் அவன் குழைந்த குரலில் நாச்சியாரை இறைஞ்சிய போது, அங்கே அவனிடம் நேரில் பேசாமல், ஆனால் அவன் கேட்கும்படி நாச்சியாரிடம் பேசுவது போல், “இந்த மாளிகைப் பெண்கள் தலைவிக்குக் கட்டுப்பட்டவர்கள். நம்பிக்கை மாறாதவர்கள். நன்றியுடையவர்கள் என்பதை நீ உன் மறுப்பால், உன்னை வேண்டுபவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும் நாச்சியார்!”, என்றாள் இரத்தின மாலை. இளையநம்பியும் பதிலுக்குப் பணிப் பெண்ணிடம் பேசுவது போலவே கேட்டான்: “விருந்தினர்களைப் பணிப் பெண்களிடம் அவமானம் அடையச் செய்வதுதான் இந்த மாளிகை வழக்கமா என்று அங்கே கேள் நாச்சியார்?” “பணிப் பெண்களின் தலைவியை, அந்தப் பணிப் பெண்களுக்கு முன்பே அவமானப்படுத்த விரும்பும் எந்த விருந்தினரையும் நாங்கள் இங்கே மதிக்க முடியாது” என்று கோபம் தாங்க முடியாமல் நேரே அவனிடமே பேசி விட்டாள் இரத்தினமாலை. ஆத்திரத்தில், தான் அவனிடம் நேரே பேசக் கூடாது என்ற பிணக்கு அவளுக்கே மறந்து விட்டது. “அப்படி வா வழிக்கு! உன்னை என்னோடு நேரே பேச வைக்கத்தான் இத்தனை நாடகமும் ஆட வேண்டியிருந்தது: எங்கே? இப்போது நீயே யாழ் வாசிக்கலாம்..” “நான் உங்களோடு பேச விரும்பவில்லை.” “பெண்கள் எதை அதிகம் விரும்புகிறார்களோ, அதை விரும்பவில்லை என்றுதான் சொல்வது வழக்கம்.” இதைக் கேட்டு இரத்தினமாலை அடக்க முடியாமல் சிரித்து விட்டாள். அதுதான் பொருத்தமான நேரம் என்று இருவருக்கும் நல்லவளாக விரும்பிய தோழிப் பெண் நாச்சியார், அங்கிருந்து ஓடிப் போய் யாழை எடுத்துக் கொண்டு வந்து தலைவியிடம் கொடுத்து, ‘வாசியுங்கள் அம்மா பாவம்! கேட்க ஆசைப்படுகிறார்’ என்று அவனுக்காகப் பரிந்து உரைக்கலானாள். “அடி பேதைப் பெண்ணே! ஆண்களைச் சுலபமாக நம்பி விடாதே! அவர்களால் எதையும் சாதித்துக் கொள்ள, நடிக்கவும் முடியும். என்னையே எடுத்துக் கொள்! இப்போது நான் மிக எளிதில் ஏமாந்து போய்விட்டேன். ஒரு விநாடி பலவீனத்தில் என் ஊடல் எங்கேயோ போய் விட்டதே? ஆண் குலத்தை இப்படித் தொடர்ந்து வெற்றியடைய விட்டுக் கொண்டே இருப்பதால்தான் நாம் இன்னும் பேதைப் பெண்களாகவே இருக்கிறோம் நாச்சியார்...” என்று கூறியபடியே யாழுக்குச் சுருதி கூட்டலானாள் இரத்தின மாலை. “உடனே, நன்றாகச் சுருதி சேருகிறதே" என்று குறும்பாகக் கூறினான் இளையநம்பி. அவள் ஊடல் தவிர்த்து மனம் தன்னோடு இணையத் தொடங்கியதையும், அந்த வாக்கியத்தின் மூலமே இரட்டுற மொழிதலாக அவளுக்குப் புலப்படுத்தி விட்டான் அவன். அவள் யாழ் வாசிக்க இணங்கியதன் மூலம், இளையநம்பியின் மேற் கொண்டிருந்த ஊடல் தவிர்ந்தது. ↑ ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே நேரும் நளினமான பிணக்கு. 10. திருமால் குன்றம் இரத்தின மாலைக்கும், இளைய நம்பிக்கும் பிணக்கு ஏற்பட்டுத் தவிர்ந்த தினத்திற்கு, முந்திய நள்ளிரவிலேயே அங்கிருந்து புறப்பட்டிருந்த திருமோகூர்க் கொல்லன், பெரியவர் மதுராபதி வித்தகரைச் சந்திப்பதற்காக விரைந்து கொண்டிருந்தான். கணிகை இரத்தின மாலையின் மாளிகையிலிருந்து புறப்பட்டு, நிலவறை வழியே உப வனத்தை அடைந்து, இரவோடிரவாக வைகையை நீந்திக் கடந்து, புறநகரில் போய், அங்கிருந்து திருமோகூர் செல்லும் சாலையை நாடாமல், நேர் வடதிசையில் திருமாலிருங் குன்றத்தை நோக்கி விரைந்தான் கொல்லன். நடு வழியில் எங்காவது களப்பிரப் பூத பயங்கரப் படையினரிடம் அகப்பட்டுக் கொள்ளக் கூடாதே, என்ற பாதுகாப்பு உணர்வினால், சில இடங்களில் காடுகளிலும், புதர்களிலும் வழி விலகி நடந்தான் அவன். திருமால் குன்றத்து இறைவனை வேண்டிக் கொண்டே வழியைக் கடந்து, கிழக்கு வெளுக்கும் நேரத்திற்கு முன்பாகவே மலையடிவாரத்தை அடைந்து விட்டான் அவன். எழில் குலவும் அந்த மலையடிவாரத்தில், கலின் கலின் என்று சிலம்புகள் குலுங்க ஒர் அழகி பாதம் பெயர்த்து நடப்பது போல் பாயும் சிலம்பாற்றின் கரையில் நின்று, சூரியோதயத்தைக் காண்பது கண் கொள்ளாக் காட்சியாயிருந்தது. பறவைகளின் வித விதமான ஒலிக் கலவைகளும், வைகறையின் தண்மையும், மலைச் சாரலின் பசுமையும், பசுமையின் கதம்பமான வாசனைகளும், அவனுடைய வழி நடைக் களைப்பைப் போக்கின. உடலுக்கு நன்மை செய்ய வல்ல பல வகை வேர்களிலும், மூலிகைகளிலும் ஊறி வரும் பட்டுப் போல் மென்மையான சிலம்பாற்று நீரில் மூழ்கி எழுந்து ஈர உடையோடு, அந்த மலையின் ஒரு பகுதியில் மறைந்திருந்த பெரியவரைக் காணப் புறப்பட்டான் அவன். முதன்முறை அவன் பெரியவரைக் காண அங்கு வந்த போது, அவர் புண்ணிய சரவணம் என்ற புகழ் பெற்ற பொய்கைக்கும் இட்டசித்தி, பவகாரணி என்ற மற்றப் பொய்கைகளுக்கும் அப்பால் மலை உச்சியில் பிலம்[1] போலிருந்த குகைகளில் ஒன்றில் மறைந்திருந்தார். இப்போதும் அவர் அங்கேதான் இருப்பார் என்று உறுதி கூற முடியாது. எதிரிகளிடம் முன்னெச்சரிக்கையாகவும், பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும் என்பதற்காகத் திருமோகூரிலிருந்து சொல்லாமல் கொள்ளாமல் இடம் மாறியது போல் இந்தத் திருமால் குன்றத்திலும் அவரே அடிக்கடி இடம் மாறலாம் என்ற குறிப்பை முதலில் இங்கு வந்து அவரைச் சந்தித்த தினத்தன்று அவரோடு பேசிய போதே புரிந்து கொண்டிருந்தான் கொல்லன். இருபுறமும் மேல் நோக்கி ஓங்கிய மலைப் பக்கங்களின் நடுவே கணவாய் போன்ற அந்தப் பள்ளத்தின் முனையில்தான் சிலம்பாறு என்ற மலைமகளின் செல்வி,தரையில் சிலம்பு ஒலிக்க இறங்குகிறாள். அந்த இடத்தில் நின்று, நீராடிய ஈர உடையோடு அவன் இப்படிச் சிந்தித்துக் கொண்டிருந்த போது, கீழ்ப் பக்கம் மேலே மலைச் சரிவில் பாண்டியர்களைச் சேர்ந்த மதுராபதி வித்தகரின் ஆபத்துதவிகள் இருவர் விரைந்து தன்னை நோக்கி இறங்கி வருவதைக் கண்டான். அவர்களைக் கண்டதும், பெரியவரின் இருப்பிடத்தைத் தேடுவது பற்றிய கவலை அவனிடமிருந்து அகன்றது. புறப்பட இருந்தவன், அவர்களுக்காக நின்றான். நீராடும் போதும் தவறி விடாமல் பத்திரமாகத் தனியே எடுத்து வைத்திருந்த இளையநம்பியின் தாழைமடற் சுருளை, மேலும் ஒரு தேக்கு இலையைத் தேடிச் சுருட்டி வைத்துக் கொண்ட பின், அவன் அவர்களை எதிர் கொண்டான், தெரிந்திருந்தும் முறைப்படி நல்லடையாளச் சொற்களைப் பரிமாறிக் கொண்ட பின், அவர்கள் அவனை மலைப் புதரில் வழி விலக்கி அழைத்துச் சென்றனர். அவன் முதலில் சந்தேகப்பட்டது நடந்திருந்தது. பெரியவர் முதலில் தங்கியிருந்த இடத்திலிருந்து வேறோர் இடம் மாறியிருக்க வேண்டும் என்பது அவர்கள் அழைத்துச் சென்ற பாதை மாறுபடுவதிலிருந்தே அவனுக்குப் புரிந்தது. அடர்ந்த புதர்களின் நடுவே நெடுந் தொலைவு நடக்க வேண்டியிருந்தது. நடந்து போகும் போதே, பெரியவரிடம் எதை, எதைச் சொல்ல வேண்டும், எப்படி, எப்படிச் சொல்ல வேண்டும் என்பதை ஒரு முறைக்கு இரு முறை நினைத்துப் பார்த்துக் கொண்டான் கொல்லன். “நீ திரும்பி வரும்போது நிலைமைகள் எப்படி இருக்குமோ, தெரியாது. ஆனால் நிலைமைகளை அறிந்து வந்து சொன்னால் மட்டும் போதும்; இளையநம்பியிடமிருந்தோ அழகன் பெருமாளிடமிருந்தோ, இரத்தினமாலையிடமிருந்தோ மறுமொழி ஓலை என்று எதுவும் வாங்கிக் கொண்டு வராதே! நீ அகப்பட நேர்ந்தால், அந்த ஒலைகளும் சேர்ந்து எதிரிகளிடம் அகப்பட நேர்ந்து, பல இரகசியங்கள் எதிரிகளுக்குப் புரிந்து விடும். அதனால் நீ திரும்பும் போது தெரிந்து கொள்ள வேண்டியவற்றை மட்டும் தெரிந்து வந்து சொல்! போதும்”, என்று பெரியவரே கட்டளை இட்டிருந்ததனால், தான் தெரிந்து வந்தவற்றை அவரிடம் கூற வேண்டிய முறைப்படி மனத்தில் வரிசைப்படுத்திக் கொள்ளத் தொடங்கினான் கொல்லன். குடை போல் கவிந்திருந்த ஒரு குருந்த மரத்தடியில் நெற்றி நிறையப் பளீரென்று திருநீறு துலங்கத் தியானத்தில் அமர்ந்திருந்தார் பெரியவர். காலைக் கதிர் ஒளியில் அவருடைய மேனி உருகும் செம்பொன் சாயலைப் பரப்பிக் கொண்டிருந்தது. அருகே கமண்டலமும், சில சுவடிகளும், ஒரு மண் பாண்டத்தில் சில கனிகளும் தென்பட்டன. அவர் தியானம் கலைகிறவரை அவன் காத்திருந்தான். அவருடைய கண்கள் திறந்ததுமே, அவன்தான் முதலில் பார்க்கப்பட்டான். “போன காரியம்... ?” “யாவும் முடிந்தன ஐயா!” “திருக்கானப்பேர் நம்பி...?” “இரத்தினமாலையின் பொறுப்பில் கோநகரில் பாதுகாப்பாக இருக்கிறார் ஐயா!” இதைக் கேட்ட போது மட்டும் அவருடைய கண்களில் சிரிப்பின் மெல்லிய சாயல் படர்ந்து மறைவது போல், கொல்லனுக்குத் தோன்றியது. சில விநாடிகள் ஏதோ சிந்திப்பது போல் இருந்த பின் மீண்டும் அவர் அவனைக் கேட்டார்; “தென்னவன் மாறனையும் சிறைப்பட்டிருக்கும் மற்றவர்களையும் மீட்க என்ன ஏற்பாடு?” “அழகன் பெருமாளும், உப வனத்து நண்பர்களும் அதை உடனே செய்வதாக வாக்குறுதி அளித்திருக்கிறார்கள் ஐயா!” “நல்லது! இந்தப் புதிய இடம் பற்றி நீ யாருக்கும் கூறவில்லையே?” “கூறவில்லை ஐயா!” “திருமோகூர் நிலைமை?” “காராளர் மேல் பூத பயங்கரப் படையின் கண்காணிப்பு இருக்கிறது! வேறு அபாயம் இல்லை. காராளர் மேலுள்ள ஐயப்பாட்டாலும், தாங்கள் திருமோகூர் சுற்றுப்புறத்தில் எங்காவது தங்கியிருக்கக் கூடும் என்ற அநுமானத்திலும், அங்கே தண்டு இறங்கிய களப்பிரப் படையினர் இன்னும் புறப்படவில்லை! சில நாளில் ஒரு வேளை அவர்கள் சந்தேகம் நீங்கிப் புறப்பட்டாலும் புறப்பட்டு விடலாம்...” “சில நாளில் அப்படி நடக்கலாம் என்பது உன் அநுமானம்தானே? இன்றோ, நாளையோ அந்தப் படைகள் திரும்ப வழியுண்டா?” “இல்லை...” “அப்படியானால் நீ இப்போதே விரைந்து திருமோகூர் திரும்பி, அங்கே எனக்காக உடனே செய்ய வேண்டிய காரியம் ஒன்று உண்டு." “தங்கள் ஆணை என் கடமை!” “தென்னவன் மாறனைச் சிறை மீட்க வேண்டியது எவ்வளவு அவசியமோ, இளையநம்பியை ஆபத்தின்றிப் பாதுகாக்க வேண்டியது எவ்வளவு அவசியமோ, அவ்வளவு அவசியமான மற்றோர் ஆணையை உன்னிடம் நான் இப்போது சொல்லிக் கொண்டிருக்கிறேன்.” “புரிகிறது! அந்த ஆணையை எல்லா வகையிலும் இந்த அடிமை நிறைவேற்ற முடியும் என்று தாங்கள் உறுதியாக நம்பலாம் ஐயா!” அவர் அவனை இன்னும் சிறிது நெருக்கமாக அருகே அழைத்துக் கூறலானார்:- “இளையநம்பி என்னைத் தேடி வந்தது போல் இன்று பிற்பகலில், தெற்கே கொற்கையிலிருந்து ஒர் இளைஞன் திருமோகூருக்கு என்னைக் காண வருவான். விளக்கு வைக்கும் நேரத்துக்குத் திருமோகூர் கொற்றவைக் கோவிலின் வாயிலிலுள்ள வன்னி மரத்தடியில் அவன் வந்து நிற்பான். அவனிடம் நீ நம்முடைய வழக்கமான நல்லடையாளச் சொல்லைக் கூறினால், அவனுக்கு அது புரியாது. ‘பெருஞ்சித்திரன்’ என நீ அவனிடம் குரல் கொடுத்தால், அவன் தன் வலது கையில் ஒன்பது ஒளி நிறைந்த முத்துகளை எண்ணி எடுத்து வைத்து, உன்னிடம் நீட்டுவான். அதுதான் அவனை நீ இனம் காணும் அடையாளம். உடனே நீ அவனை ஊருக்குள் அழைத்துச் செல்லாமல், ஊர்ப்புற வழியாக ஒதுக்கி, இரவோடு இரவாக இங்கே கூட்டிக் கொண்டு வந்து விட வேண்டும். மலையடிவாரத்தில் சிலம்பாற்றங்கரைக்கு வந்து நின்றால் போதும். அங்கே நம் ஆபத்துதவிகள் உங்களை என்னிடம் அழைத்துவரக் காத்திருப்பார்கள்.” உடனே தலை வணங்கி, அந்தப் பணியை ஏற்றுக் கொண்டு, திருமோகூர் திரும்புவதற்காக விரைந்தான் கொல்லன். ↑ ஆழமான பாறைப் பிளவு 11. இரும்பும் இங்கிதமும் பெரியவரின் ஆணையைப் பெற்றுத் திருமோகூர் திரும்புவதற்காகச் சிறிது தொலைவு வரை மலைச் சரிவில் கீழிறங்கி வந்து விட்ட கொல்லனை, மறுபடியும் இரண்டு ஆபத்துதவிகள் பின் தொடர்ந்து துரத்தி வந்தனர். "இரவெல்லாம் வழி நடந்து ஒடி வந்திருக்கிறாய்! இங்கு வந்ததும் வராததுமாக, மறுபடி திருமோகூருக்கு ஒட நேர்ந்திருக்கிறது. பசியாறுவதைப் பற்றிய நினைப்பே உனக்கும் இல்லை. நாங்களும் மறந்து விட்டோம். இதோ இவற்றைப் போகிற வழியில் சிலம்பாற்றங்கரையில் அமர்ந்து உண்டு விட்டுப் போ", என்று வேக வைத்த பனங்கிழங்குகள் சிலவற்றையும், நாலைந்து கதலிக் கனிகளையும், இரண்டு விளாம்பழங்களையும் அவனிடம் கொடுத்து விட்டுச் சென்றனர் அந்த ஆபத்துதவிகள். அவனும் அவற்றை வாங்கித் தன் மேலாடையில் முடிந்து கொண்டான். அவர்கள் அப்படித் தேடி வந்து தன் பசியை எண்ணிக் கவலையோடும், சிரத்தையோடும் நடந்து கொண்டது அவனுக்குப் பெருமையாக இருந்தது. புதிய இடத்தில் தங்களுக்கு என்று சிரமப்பட்டுச் சேகரித்து அவித்த பனங் கிழங்குகளில் சிலவற்றையும், பழங்களையும் துரத்தி வந்து தந்த ஆபத்துதவிகளை அவன் மனம் வாழ்த்தியது. நன்றியோடு பாராட்டியது. ‘களப்பிரர்கள் நாட்டைத்தான் பாண்டியர்களிடமிருந்து பறித்துக் கொள்ள முடிந்ததேயொழியப் பிறர்க்குதவும் பண்பு, பிறர் பசியை அறிந்து உணவிடும் பெருந்தன்மை ஆகிய குடிப் பண்புகளை ஒருபோதும் பறிக்க முடியாது’ என்று இறுமாப்போடு தோள்கள் விம்மி எழ, எண்ணினான் அவன். விண்ணவர் அமுதைப் பருகுவது போல் விரும்பிப் பருக ஏற்ற சிலம்பாற்று நீரோடு ,அந்தச் சிறிய அளவு உணவை உண்டு முடிந்த பின் நடையைத் தொடர்ந்தான் அவன். கைகளிலும் வாயிலும் விளாம்பழ வாசனை இன்னும் தொடர்ந்தது. இன்னும் பல நாட்கள் தொடர்ந்து தங்க நேரிட்டாலும், விளாம்பழங்களும் நல்ல மலை வாழைக்கனிகளும் அந்த மலையில் போதுமான அளவு கிடைக்கும் என்று தோன்றியது. அடிவாரத்தில் பனங்கிழங்குகள் கிடைக்கவும் வழி இருந்தது. மிகப் பல ஆண்டுகளாக மறைந்து வாழும் பாண்டிய ஆபத்துதவிகளும், முனை எதிர் மோகர்களும், வாய்க்குச் சுவையாக உண்ண இயலாமல் இப்படித்தான் அங்கங்கே கிடைத்த உணவுகளை உண்டு நிறைவு கொள்ள வேண்டிய நிலையிலேயே இருந்தனர். விருந்துகளையும், உண்டாட்டுக்களையும், ஆள்பவர்கள் அநுபவிக்க முடியாது என்று புரிந்திருந்தும், பாண்டிய வீரர்கள் தியாக மனப்பான்மையோடு தலைமையின் ஆணைக்குக் கட்டுப்பட்டுப் பணி புரிந்து வந்தனர். நாட்டை விடுவிக்கும் வேட்கையில், பசியையும் ருசியையும் கூட மறந்திருந்தனர். பாண்டியர் குடிப் பண்பான அதே கட்டுப்பாடு திருமோகூர்க் கொல்லனிடமும் இருந்தது. அவர்கள் பின் தொடர்ந்து வந்து கொடுத்து விட்டுப் போகவில்லையென்றால், அவன் உணவையும் மறந்து விட்டே பயணத்தைத் தொடரும்படி ஆகியிருக்கும். ஞாபகமாகத் தன் பசியை நினைவு கூர்ந்து, தேடித் துரத்தி வந்து தனக்குக் கொடுத்து விட்டுப் போன அந்த ஆபத்துதவிகள், தம் அளவில் இன்னும் பசியாறினார்களோ, இல்லையோ என்று சிந்தித்த போது அவன் உள்ளம் உருகியது. சில நாட்களுக்கு முன்பு திருமோகூரிலிருந்து இடம் மாறியவுடன் பார்த்திருந்ததையும் விட, இன்று திருமால் குன்றில் பெரியவர் மதுராபதி வித்தகரின் முகம் இன்னும் ஒளி மிகுந்து காட்சி தந்ததாகவே அவனுக்குத் தோன்றியது. களப்பிரர்களால் விளைந்த புதிய சோதனைகளும் தப்பித்துக் கொள்வதற்காக ஒடி இடம் மாற நேர்ந்ததும் அவரைச் சிறிதும் கலங்கவோ, தளரவோ விட்டு விடவில்லை என்பதை அவன் நினைத்தான். துன்பங்களினால் சிறிதும் கலக்கமே அடையாத அந்த நிலை, அவனை மெய் சிலிர்க்கச் செய்தது. “பேரரசுகளின் நடுவே இப்படிப்பட்டவர்கள் பிறப்பதில்லை! இப்படிப்பட்டவர்கள் பிறந்த பின்புதான் ஒரு பேரரசே பிறக்கிறது", என்று இதயத்தில் அவரை வியந்தபடியே அவன் திருமோகூர் திரும்பினான். திருமால் குன்றத்திலிருந்து காட்டுப் பாதையாகச் சுருங்கிய வழி இருந்ததனால், பிற்பகலிலேயே அவன் திருமோகூரை அடைந்து விட்டான். முதலில் தன் உலைக் களத்திற்குச் சென்றான் கொல்லன். சிறிது நேரத்திற்குப் பின், பெரியகாராளர் மாளிகைக்குச் சென்றான் அவன். அங்கே பூத பயங்கரப் படை வீரர்கள் சிலர் காவலிலிருந்தாலும், அவனைத் தடுக்கவோ, கேட்கவோ இல்லை. பெரியவர் சொல்லியிருந்த கொற்கை மனிதனைச் சந்திக்க இன்னும் நேரம் இருந்ததால்தான், முதலில் அவன் இங்கே வந்திருந்தான். அப்போது காராளர் வீட்டில் இல்லை. கழனிகளை மேற்பார்க்கச் சென்றிருப்பதாகக் காராளர் மனைவி கூறினாள். அவர் வெளியே சென்று வரத் தடை இல்லை என்பதைக் கொல்லன் இப்போது புரிந்து கொண்டான். அடுத்த கணமே செல்வப் பூங்கோதை ஒவியம் போல் அடக்கமாக, அவனை எதிர் கொண்டாள். காராளர் மனைவியும் உடனிருந்ததால் அந்த அம்மையாருக்குச் சந்தேகம் எழாமல் “கூடலில் தெய்வத்தை கண்டு வணங்கும்போது தங்கள் வேண்டுதலைச் சேர்த்தேன் அம்மா! இதோ பிரசாதம்!”, என்று அந்தத் தாழம்பூச் சுருளை எடுத்துச் செல்வப் பூங்கோதையிடம் சாதுரியமாக அளித்தான், கொல்லன். செல்வப் பூங்கோதையும் அதைப் புரிந்து கொண்டாள். அவள் கொடியாக வாடித் துவண்டு போயிருப்பது அவனுக்குப் புலப்பட்டது. அன்பு, மனிதர்களை எந்த அளவு தவிக்கச் செய்யவும் முடியும் என்பதை அவன் கண் கூடாகக் கண்டான். ஆறுதலாக இருக்கட்டும் என்று கருதி, அவனே மீண்டும், “தெய்வம் கை விடாது அம்மா! நல்ல காலம் விரைவில் வரும்”, என்றான். அவன் இப்படிக் கூறிய போது அவள் அந்தத் தாழம்பூச் சுருளையும், சந்தனத்தையும் கண்களில் ஒற்றி எடுத்துக் கொண்டிருந்தாள். அவள் விழிகளில் புதிய ஒளியை இப்போது அவன் கண்டான். “துன்பப்பட்டுத் தவிப்பவர்களின் வேதனைகள் தெய்வத்துக்கு எங்கே உடனே புரிகிறது? அந்தத் தெய்வம் அருளுகிற வரை நாம்தான் காத்துக் கொண்டிருந்து துயரப்பட வேண்டியிருக்கிறது. அன்பரைக் காக்க வைக்காத நல்ல தெய்வமே இந்த உலகம் எங்கும் இல்லை போலிருக்கிறது!”, என்றாள் அவள். இந்தச் சமயத்தில் காராளரின் மனைவி ஏதோ வேலையாக உட்பக்கம் சென்றாள். தாய் உள்ளே சென்றதும், செல்வப் பூங்கோதையின் கண்களில் நீர் நெகிழ்ந்து ஈரம் பளபளத்தது. 'அவரைப் பற்றி இன்னும் ஏதாவது சொல்லேன்-இன்னும் ஏதாவது சொல்லேன்', என்று அவனை இறைஞ்சியது அந்தப் பேதையின் துயரப் பார்வை. “கவலைப்படாதீர்கள் அம்மா! நீங்கள் அனுப்பிய ஒலையைப் படித்து, அந்தத் திருக்கானப்பேர் நம்பி மிகவும் மனம் உருகி உணர்வுகள் நெகிழ்ந்ததை, நான் நேருக்கு நேர் என்னுடைய இரண்டு கண்களாலும் கண்டேன். இங்கே நீங்களும் அவரை நினைத்து உருகித் தவிக்கிறீர்கள். அங்கே அவரும் உங்களை நினைத்து உருகித் தவிக்கிறார். இந்தப் பாழாய்ப் போன களப்பிரர் ஆட்சி ஒழிந்ததுமே, உங்கள் இருவருக்கும் நல்ல காலம் விடியும் அம்மா!", என்று அவளுக்கு ஆறுதலாக மேலும் சொன்னான் அவன். திருக்கானப்பேர் நம்பி அந்த ஒலையைக் கணிகை மாளிகையின் சந்தனம் அரைக்கும் பகுதியிலிருந்து படித்து மகிழ்ந்ததை ஒரு சிறிது மிகைப்படுத்தியே 'உருகினார்', 'நெகிழ்ந்தார்' என்றெல்லாம் இங்கே செல்வப் பூங்கோதையிடம் அவன் சொல்ல வேண்டியிருந்தது. காரணம், ‘துன்பப்பட்டுத் தவிப்பவர்களுக்கு மகிழ்ச்சியை உண்டாக்கும் சொற்கள் பொய்யாக இருப்பினும், அத்தகைய பொய்களை வேண்டிய மட்டும் கூறலாம்’ - என்று அவன் மனதில் ஒரு நாட்டுப்புற நியாயம் இருந்தது[1]. இந்த நிலையில் மேலும் தொடர்ந்து பொய்யே சொல்லுவதா, அல்லது என்ன செய்வது என்று அந்தத் தூதனையே குழப்பும், அடுத்த வினாவைக் கேட்கலானாள் அவள்: “கோநகரத்தில் யாரோடு எங்கே தங்கியிருக்கிறார் அவர்? உடனிருப்பவர்கள் அவருக்கு ஒரு குறைவும் வராமல் நன்றாகப் பார்த்துக் கொள்கிறார்களா?” இந்தக் கேள்விக்கு அவன் உடனே மறுமொழி கூறி விடவில்லை. சற்றே சிரித்தான்; தயங்கினான். பெண்களின் நளினமான உணர்வுகளைப் பற்றியும் பொறாமை, புகைதல்களைப் பற்றியும் அவனுக்கு அதிக அனுபவ ஞானம் இல்லை என்றாலும், பொதுவான உலகியல் ஞானம் இருந்தது. இரும்பை உருக்கியும், வளைத்தும், நீட்டியும், காய்ச்சியும், அடித்தும் பழகிய கைகளில் தங்கம் வந்தது போல் மிருதுவானதும் இங்கிதமானதும் ஆகிய ஒரு வினா இப்படி வந்து சேர்ந்திருக்கிறது. கரும் பொன்னாகிய இரும்பிற் பழகுகிறவனிடம் அரும் பொன்னாகிய தங்கம் வந்திருக்கிறது. அதன் பணி வகைகளை அறியவும், தெரியவும் தயங்கினாலும் இது தங்கம் என்பதையும், இதை இங்கிதமாக அணுக வேண்டும் என்பதையும், ஒரு விநாடி கூட அயராமல், உடனே நிர்ணயம் செய்து கொண்டான் அவன். இளையநம்பி கூடல் மாநகரில் கணிகை மாளிகையில் தங்கியிருப்பதையும், ஆடல் பாடல்களில் வல்லவளும் அதியற்புதப் பேரழகியுமான இரத்தின மாலை என்ற இளம் கணிகை அவனோடு உடன் இருந்து அவனைக் கவனித்துக் கொள்கிறாள் என்பதையும், அப்படி, அப்படியே செல்வப்பூங்கோதையிடம் கூறினால், அதன் விளைவுகள் எப்படி இருக்கும் என்பதை முன்கூட்டியே அவனால் உய்த்துணர முடிந்தது. இவற்றையெல்லாம் எண்ணி மிகவும் சாதுரியமாகச் செல்வப் பூங்கோதைக்கு மறுமொழி கூறலானான் அவன்:- “அம்மா! இந்தக் காராளர் பெருமாளிகையில், தாங்கள் இடைவிடாமல் அருகிருந்து உபசாரம் செய்து கவனித்துக் கொண்டால், அவரை எப்படிக் கண்ணும் கருத்துமாகக் கவனித்துக் கொள்வீர்களோ, அப்படிக் கவனித்துக் கொள்கிறவர்களோடு, அவ்வளவிற்கு வளமான ஒரு மங்கல மாளிகையில்தான் அவர் மதுரை மாநகரில் பாதுகாப்பாக மறைந்து தங்கியிருக்கிறார்.” -கரடுமுரடான இரும்பில் தொழில் செய்து பழகியவன், முதன்முதலாகப் பொன்னில் இங்கிதமாக நகை செய்திருந்தாற் போல அமைந்தது, இந்த மறுமொழி. இவ்வளவு நளினமானதும் பாதுகாப்பு நிறைந்ததுமான மறுமொழிக்குக் கூட அவளிடம் இருந்து ஒரு மறுப்பு எதிர்ப்பட்டது. அவள் கோபமாக அவனை எதிர்த்து உடனே கேட்டாள்: “அதெப்படி முடியும்? இந்த மாளிகையில் நான் அவரைக் கண்காணித்துப் பேணிப் பாதுகாத்து, உபசரிப்பது போல் வேறு எங்கும், வேறு எவராலும் அவரை என்றும் உபசரித்து விடமுடியாது? உன் ஒப்புவமையே தவறானது! நான் உபசரிப்பது போல் வேறு யாரும் அவருக்கு உபசாரம் செய்ய முடியாது என்பது தெரிந்திருந்தும், நீயே இப்படி ஒப்பிடலாமா? உன் உவமை தவறானது...” “தவறுதான் அம்மா! அவர் நல்ல இடத்தில், நன்றாக இருக்கிறார் என்பதை உங்களுக்குத் தெளிவாகப் புலப்படுத்தவே அப்படிச் சொன்னேன். அந்த ஒப்புவமைக்கு வேறு எந்த வகையிலும் முழுமையான அர்த்தம் இருப்பதாக நீங்கள் நினைக்கவோ, இந்த ஏழையின் மேல் கோபப்படவோ கூடாது அம்மா!” அவன் இப்படி மறுமொழி கூறிய பின் அவள் முகத்தில் கோபத்தின் சாயல் மெல்ல மறைந்தது. “மீண்டும் எப்போது கோநகருக்குப் போக வேண்டுமோ, அப்போது என்னிடம் சொல்லிக் கொள்ளாமல் போய் விடாதே. பெரியவர் எங்கிருக்கிறார் என்பதை நான் தெரிந்து கொண்டால் கூடவா ஆபத்து?” “போகும் போது உங்களிடம் சொல்லிக் கொள்ளாமல் போகமாட்டேன் அம்மா!” - என்று அவளுடைய வினாவின் முன் பகுதிக்கு மட்டும் மறு மொழி கூறிவிட்டு மெல்லச் சிரித்தான் அவன். வினாவின் பிற்பகுதிக்கு அவனிடமிருந்து தனக்கு மறுமொழி கிடைக்காது என்பதை, அவனது அந்தச் சிரிப்பு மூலமே அவள் அறிய முடிந்தது. ‘எந்தப் பெண்களிடமும், அரசியல் ரகசியங்களையும் அரச தந்திரச் செய்திகளையும் விதிவிலக்காக நம்பிக் கூடச் சொல்லாதே! இரத்தினமாலையிடம் கூட நான் சொல்லலாம் என்று குறிப்பவற்றை மட்டுமே சொல்ல வேண்டும்’, என்று தன்னிடம் பணிகளை ஒப்படைக்கு முன்னர் மதுராபதி வித்தகர் தனக்குக் கூறியிருந்த அறிவுரை மீண்டும் தன் செவிகளில் ஒலிப்பது போலிருந்தது அவனுக்கு. அவள் மேலும் எதையும் தன்னிடம் கேட்பதற்கு முன், அவனே பேசத் தொடங்கினான். “உங்கள் தந்தையார் வீடு திரும்பியதும், அவரிடம் நான் இங்கே வந்து போனதாகச் சொல்லுங்களம்மா! ஆனால் எக்காரணத்தைக் கொண்டும் என்னிடத்துக்கு அவர் தேடி வரக் கூடாது என்பதையும் அவரிடம் நீங்கள் சொல்லி விட வேண்டும். அது அவருக்கே அபாயத்தை உண்டாக்கி விடும். நானே மீண்டும் நாளை அல்லது மறு நாள் இங்கு வந்து அவரைக் காண்பேன். களப்பிரர்கள் நெல் உதவியை மனத்திற் கொண்டு உங்கள் தந்தையாரைப் பகைத்துக் கொள்ள அஞ்சுகிறார்களே ஒழிய முழுமையாகச் சந்தேகம் நீங்கியிருப்பதாகச் சொல்ல முடியாது. அவர் எங்கெங்கே போகிறார், வருகிறார், யாரைக் காண்கிறார், என்ன என்ன பேசுகிறார் - என்பதை அறிவதற்காகவே அவரைக் கட்டுக் காவல் இன்றி வெளியே உலவ விட்டிருக்கிறார்களோ என்று கூட நான் நினைக்கிறேன்” என்று மகளிடம் தந்தையைப் பற்றிப் பொதுவாக எச்சரித்தான் அவன். இதற்குள் காராளரின் மனைவி ஒர் ஒலைக் கூடை நிறைய அவன் தின்பதற்குச் சுவையான பணியாரங்களைக் கொண்டு வந்து கொடுத்தாள். அந்தப் பணியாரங்களை அங்கேயே அமர்ந்து தின்பதற்கும் நேரமில்லாமல், அடுத்த வேலையின் இன்றியமையாத நிலையை நினைத்தான் அவன். காராளர் மனைவி கொடுத்த பணியாரங்களை வாங்கி மேலாடையில் முடிந்தபடி கொற்றவைக் கோவில் வன்னி மரத்தடிக்கு அவன் விரைந்தான். அந்த விரைவிலும், தன்னைப் பின் தொடரும் ஒர் இடையூற்றை அவன் கவனிக்கத் தவறவில்லை. விழிப்படைந்தான் அவன். 12. அடையாளக் குழப்பம் தாமரைத் தடாகங்களும், தண்ணென்ற மூங்கில் மரக்கொத்துகளும், பசுமை போர்த்த நெல் வயல்களும் நிறைந்த மருத நில ஊரான திருமோகூரில் அந்திப் போது மெல்ல வந்து கொண்டிருந்தது. மாமரத்துக் குயில் பிரகாசம் மிகுந்த பகற்பொழுது முழுவதும் மறைந்து போன அல்லது விட்டுப் போன எதையோ இரவுக்கு நினைவூட்டுவது போல் திரும்பத் திரும்பக் கூவிக் கொண்டிருந்தது.பகல் என்னும் நாயகனை இழந்த மேற்குத் திசை நங்கை, பால் ஒழுகும் வாயுடைய பிறைமதி என்னும் குழந்தையை இடுப்பில் ஏந்திக் கொண்டு தனிமையிற் புலம்புவது போன்ற சோகமயமான அந்த மாலை, மேற்கு வானம் எங்கும் செந்தீப்பட்டு எரிவது போல வந்து கொண்டிருந்தது. வந்து விட்ட இந்த அஸ்தமன வேளையை நாளையோ, நாளன்றைக்கோ விரைந்து வரப் போகும் களப்பிரர் ஆட்சியின் நிரந்தரமான அஸ்தமனத்தோடு ஒப்பிட்ட படி நடந்தான் கொல்லன். பெரிய காராளர் மாளிகையிலிருந்து வெளியேறியதுமே, வீதித் திருப்பத்திலிருந்து ஒரு களப்பிரப் பூத பயங்கரப் படை வீரன் தன்னைப் பின் தொடர்வதை அவன் புரிந்து கொண்டான். பின் தொடர்கிறவனின் ஐயப்பாடும் பரபரப்பும் பெருகுவதற்கு ஏற்ற வகையில், திரும்பித் திரும்பிப் பார்க்காமல் யாருமே தன்னைப் பின் தொடராதது போல் சென்றான் கொல்லன். இடையே ஒரு மாற்றத்தையும் செய்தான் அவன். பின்னால் வருகிறவன் ஒளிவதற்கோ, மறைவதற்கோ வழியில்லாமல் ↑ பொய்ம்மையும் வாய்மை இடத்த புரைதீர்ந்த நன்மை பயக்கும் எனின். ஒரு பெரிய நெற்களம் வழியிலே குறுக்கிட்ட போது, அந்த நெற்களத்தின் ஒரத்திலிருந்த பனை மரத்தடி மேட்டில் அமர்ந்து, காராளர் வீட்டில் தந்த பணியார மூட்டையை அவிழ்த்தான் கொல்லன். நெய் மணம் கமழ்ந்த அந்தச் சுவையான பணியாரங்களில், அவன் நாவும் வாயும் ருசி கண்டு கொண்டிருந்தன. பின் தொடர்ந்து வந்தவனும் அருகில் நெருங்கிக் கொண்டான். வருகிறவன் பூத பயங்கரப் படைவீரன்தான் என்பதைப் பற்றிக் கொல்லனுக்கு ஒரு சிறிதும் சந்தேகம் இருக்கவில்லை. அவன் தன்னை எப்படி எதிர் கொள்கிறானோ, அதற்கு ஏற்பத்தான் அவனை எதிர் கொள்வது என்ற திடமான முடிவுடன் பணியாரத்தை, அசைத்துப் புரளும் நாவுக்கு வேலை கொடுத்தபடி கொல்லன் தின்று கொண்டிருந்தான். வருகிறவன் தாக்குதலில் இறங்கினால், தாக்குதலில் இறங்குவது, வம்பு பேச வந்தால் வம்பு பேசுவது, உளவறிய முயன்றால் ஒன்றும் தெரியாதவனாக நடிப்பது என்று நினைத்து வைத்துக் கொண்டே காத்திருந்தான் கொல்லன். கொற்றவைக் கோவிலில் வைத்து இந்த எதிரியைச் சந்திப்பது, அங்கே சந்திக்க வேண்டிய கொற்கை நண்பனின் சந்திப்பிற்கு இடையூறாகவும், தடையாகவும் நேர்ந்து விடும் என்றெண்ணியே கொல்லன் இந்த நெற்களத்தில் அமர்ந்திருந்தான். கொல்லன் நினைத்த படி அந்தக் களப்பிர வீரன் இவனருகே வந்து சேர்ந்தான். அதே சமயம், கொல்லனைக் குழப்பத்தில் ஆழ்த்தும் ஒரு காரியத்தையும் வந்தவன் செய்தான். வந்தவன் கொல்லனை நெருங்கியதும் நன்றாகப் பழகிய தமிழில், ஒலிப் பிழை கூட நேராமல், தெளிவாகக் 'கயல்' என்று கூறிவிட்டு இவன் முகத்தை உற்று நோக்கினான். எதை எதையோ எதிர்பார்த்திருந்த கொல்லன், இதை முற்றிலும் எதிர் பார்க்கவே இல்லை. இவன் திகைத்தான். மலைத்தான். குழப்பமுற்றான். எதிராளி அந்த நல்லடையாளச் சொல்லைக் கூறுவதை உணர்ந்து, இவன் ஒன்றுமே பேசாமல் வந்தவனின் முகத்தைப் பார்த்து விட்டு ஓரிரு கணங்களில் நிதானம் வரப் பெற்றவனாய்த் தன்னிடமிருந்த பணி யாரக் குவியலிலிருந்து தேன்குழலை எடுத்து நீட்டினான். வந்தவனும் விடாக்கண்டனாக இருந்தான். தேன் குழலை வாங்கிக் கொள்ளாமல் கீழே உட்கார்ந்து, கொல்லனின் காதருகே நெருங்கி மீண்டும் ‘கயல்’ என்று அவன் இரைந்து கூவினான். கொல்லனோ அந்தச் சொல்லையே காதினுள் ஏற்காதவன் போல், “அதனால் என்ன? தேன் குழல் வேண்டாம் என்றால் அதிரசம் தருகிறேன். சிலருக்கு எப்போதுமே உப்புப் பண்டம் பிடிக்காது. உப்பிட்டவருக்கு நன்றியும் பாராட்ட வேண்டி யிருக்கும். இனிப்பாக ஏதாவது தின்னலாம் அல்லவா?”, என்று கூறியபடி ஓர் அதிரசத்தை எடுத்து நீட்டினான். வந்தவன் ஒரு கணம் அயர்ந்து போனான். தான் எதிர்பார்த்து வந்தது நடவாத காரணத்தால் அவனுக்கு ஏமாற்றமாக இருந்ததோ என்னவோ, தெரியவில்லை. ஒன்றும் பேசாமல் கொல்லன் கொடுத்த அதிரசத்தை வாங்கித் தின்னத் தொடங்கினான் வந்தவன். இதற்குள் கொல்லனின் உள்ளுணர்வு மிக நன்றாக விழித்துக் கொண்டு விட்டது. ‘வன்னி மரத்தடிக்குச் செல்லும்போது வழக்கமான நல்லடையாளச் சொல் வேண்டாம்' என்று பெரியவர் காலையில் கூறியிருந்தது வேறு இவனுக்கு ஞாபகம் வந்து விட்டது. வேறொரு காரணத்துக்காக அவர் அப்படிக் கூறியிருந்தாலும், இந்தப் புதிய சூழ்ச்சியை முறியடிக்கவும் இவனுக்கு அதுவே பயன்பட்டது. திருமோகூரில் அவ்வளவு நாட்கள் தங்கியதால் களப்பிரர்களின் பூத பயங்கரப் படைக்குக் கிடைத்த ஒரே வெற்றி, பாண்டியர்களின் நல்லடையாளச் சொல் எப்படியோ அவர்களிடம் சிக்கியிருப்பதுதான் என்பதைக் கொல்லன் புரிந்து கொண்டான். முடியுமானால், அன்றிரவே பெரியவரைச் சந்திக்கும் போது இந்த நிகழ்ச்சியைக் கூறிப் பாண்டியர்களின் நல்லடையாளச் சொல்லை உடனே மாற்ற வேண்டும் என்று நினைத்துக் கொண்டான் அவன். இல்லாவிட்டால், பயங்கர விளைவுகள் ஏற்பட்டு விடும் என்பது புரிந்தது. தன் தந்திரம் பலிக்காததால், வந்தவன் இவனிடம் ஏதேதோ வம்பு பேசினான். இவன் அளித்த பணியாரங்களைச் சுவைத்துத் தின்றான். புறப்பட்டுப் போவதற்கு முன் பயமுறுத்துவது போன்ற சில வாக்கியங்களைக் கூறியபடியே இவன் முகத்தைக் கவனித்தான் வந்தவன்: “உனக்குத் தெரியுமா அப்பனே! களப்பிர குல திலக மகாபராக்கிரம வீர தீர ராஜாதி ராஜமார்த்தாண்டரான கலியரசரின் புதிய கட்டளைப்படி மறைந்திருக்கும் பாண்டியர்களுக்கு உதவி செய்கிறவர்களும், உதவி செய்வதாகச் சந்தேகப்படுவதற்கு உரியவர்களும் மதுரை மாநகரில் ஈவிரக்கமின்றிக் கழுவேற்றப் படுவார்கள்...” “இந்த ஊரில் அப்படி யாரும் இல்லை! களப்பிர மன்னருக்கு உதவுகிறவர்கள்தான் இவ்வூரில் அதிகம். எங்களுர்ப் பெரு நிலக்கிழாரும், வள்ளலும் ஆகிய பெரிய காராளர் தம் கழனிகளில் விளையும் நெல்லிற் பெரும் பகுதியைக் களப்பிரர்களின் அரண்மனை உபயோகத்துக்கும், அறக் கோட்டங்களில் தேசாந்திரிகளாக வருபவர்களுக்கு உணவிடவுமே பயன்படுத்துகிறார். அவரைப் போல ராஜ விசுவாசம் உள்ளவர்கள் இந்த ஊரில் இருக்கும் போது இங்கே கெடுதல் எப்படி இருக்க முடியும்?”, என்றான் கொல்லன். வந்தவன் சிரித்தபடியே இதைக் கேட்டுக் கொண்டு போய் விட்டான். அவன் நெடுந் தூரம் சென்று மறைகிற வரை அங்கேயே உட்கார்ந்து கொண்டு பார்த்தான் கொல்லன். இருளில் அவன் உருவம் தொலைவில் மறைந்த பின்பே இவன் எழுந்தான். தன்னை யாரும் தொடரவோ, கவனிக்கவோ இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு கொற்றவைக் கோயில் வன்னி மரத்தடியை அடைவதற்காகப் புறப்பட்டான் கொல்லன். போகிற வழியில் கொற்றவைக் கோயிலுக்கு முன்னிருந்த ஒரு தாமரைக் குளத்தில், நாலைந்து பேதைப் பருவத்துப் பெண்கள் குடங்களோடு அமர்ந்து படித்துறையில் பேசிச் சிரித்துக் கொண்டிருப்பதையும், யாரோ வெளியூர் அந்நியன் போல் தோன்றிய பால் வடியும் இளம் முகத்தினனான ஓர் விடலைப் பருவத்து இளைஞன் அவர்களிடம் ஏதோ வினாவுவதையும், அவர்கள் அவனைப் பொருட்படுத்தாமலே மேலும் தங்களுக்குள் சிரித்துக் கொண் டிருப்பதையும் கொல்லன் கண்டான். பெண்களைக் கவரும் கம்பீரமான ஆண்மைக் குரல், அந்த விடலை இளைஞனுக்கு இல்லை. அவன் குரல் இனியதாகவும், மிருதுவாகவும் தாழ்ந்தும் ஒலித்தது. அவன் முகத்திலும் கூடப் பெண்மைச் சாயலே அதிகம் புலப்பட்டது. அவனருகே நெருங்கிய கொல்லன்: “என்ன வேண்டும் உங்களுக்கு? என்னைக் கேட்டால் மறுமொழி சொல்ல முடியும்!” என்று தானாகவே அவனை அணுகி வினவினான். “ஒன்றுமில்லை ஐயா! இந்தப் ‘பெட்டைப் பயல்'களுக்கு இருக்கிற கர்வத்தைப் பாருங்களேன்! கொற்றவைக் கோயில் வன்னி மரத்தடிக்கு வழி கேட்டால் வழி கூறாமல் சிரிக்கிறார்கள்”, என்ற தொடரும் இவனைச் சிந்திக்க வைத்தன. சில கணங்கள் தயங்கியும், சிந்தித்தும் முடிந்தபின், “ஆனாலும் உள்ளூரில் வருவது போல வெளியூரில் உங்களுக்கு இப்படிக் கோபம் வரக் கூடாது. என்னோடு வந்தால் அந்த இடத்தை உங்களுக்குக் காட்ட முடியும்” - என்று கூறி விட்டு அவன் தன்னைப் பின் தொடர்வதையும் உறுதி செய்து கொண்ட பின் விரைந்து நடந்தான் கொல்லன். 13. பெருஞ்சித்திரன் காதோரங்களிலும் பிடரியிலும் கருகருவென்று அலையலையாகச் சுருண்ட குஞ்சியின்[1] அழகும், அவனுடைய இளம் முகத்தின் பெண்மைச் சாயலையே மிகைப்படுத்திக் காட்டுவதை அசைப்பிலே திரும்பிப் பார்த்துக் கவனித்தான் கொல்லன். கொற்றவைக் கோயிலிலே வன்னி மரத்தடியில் அன்று மாலை விளக்கு வைக்கிற நேரத்திற்குத் தான் யாரைச் சந்தித்து அழைத்து வர வேண்டும் என்று பெரியவர் தன்னை விரட்டியிருந்தாரோ அந்தப் பிள்ளையாண்டான் இவனாகத்தான் இருக்க வேண்டும் என்று கொல்லன் சுலபமாகப் புரிந்து கொண்டான். பேதைப் பருவத்துப் பெண்களைப் ‘பெட்டைப் பயல்கள்’ என்று கூறும் சொல் வழக்குப் பாண்டிய நாட்டின் எல்லையிலேயே கொற்கையிலும், கொற்கையைச் சூழ இருந்த[2] மாறோக வளநாட்டுப் பகுதியிலும்தான் உண்டு என்று கொல்லன் கேள்விப்பட்டிருந்தான். இவன் கொற்கை சூழ்ந்த மாறோக வளநாட்டைச் சேர்ந்தவனே என்பதை அந்தப் பதப் பிரயோகமே நிரூபித்து விட்டது. ஆயினும் கொல்லன் இன்னும் அவனைப் பெயர் சொல்லிப் ‘பெருஞ்சித்திரன்’ என அழைக்கவில்லை. வன்னி மரத்தடி வருகிற வரை வழி காட்டுகிறவனைப் போலவே கொல்லன் நடித்தான். அந்த விடலைப் பிள்ளையாண்டானோ, 'இவன் தான் நாம் சந்தித்து ஒன்பது முத்துகளைத் தந்து, உறவு கொண்டு பழக வேண்டியவன்’ என்ற சிறு அனுமானம் கூட இல்லாமல் வன்னி மரத்தடி வந்ததும் பட்டு நூலிழை போன்ற தனது அந்த இனிய குரலில், “ஐயா எனக்கு வழி காட்டியதற்கு மிக்க நன்றி. இனி நீங்கள் போகலாம்” என்பது போல் கொல்லனுக்கு விடை கொடுத்து அனுப்ப ஆயத்தமானான். இதைக் கேட்டுக் கொல்லன் உள்ளுறச் சிரித்துக் கொண்டான். அவன் விடை கொடுத்த பின்பும் போகாமல் தயங்கி நின்ற கொல்லனை, ‘என்னடா, இவனைப் போகச் சொல்லியும் விடாமல் இன்னும் தயங்கி நிற்கிறானே’ - என்று நினைத்துப் பொறுமை இழந்து போய் நோக்கினான் இளைஞன். அதற்கு மேலும் தனக்கு வழி காட்டியவனை அங்கிருந்து போகச் சொல்லி வற்புறுத்த, அந்த வெளியூர் இளைஞன் தயங்கியிருக்க வேண்டும். பொது இடமாகிய கொற்றவைக் கோயிலை விட்டு, மற்றொரு மனிதனை வெளியே துரத்தத் தனக்கென்ன அதிகாரம் என்ற தயக்கமும், அதே சமயம் அந்த இடத்தில் அப்போது தனக்குத் தேவையான தனிமையை நாடும் மனமுமாக இருதலைக் கொள்ளி எறும்பு போல் தவித்தான் பிள்ளையாண்டான். அவன் நிலையைக் கண்டு கொல்லனால் சிரிப்பை அடக்க முடியாவிட்டாலும், சிரமப்பட்டு அடக்கிக் கொண்டான். “ஐயோ பாவம்! இவ்வளவு தவிக்கிறானே, இவனுக்கு சிறிது தனிமையைக் கொடுத்துத்தான் பார்க்கலாமே’ என்று கொற்றவைத் தெய்வத்தை வலம் வருவதற்குப் போனான் கொல்லன். கொற்றவையை ஒன்பது முறை வலம் வந்து, ‘பாண்டி மரபுக்கு விரைவில் நல்ல காலம் பிறக்க வேண்டும்: என்று பிரார்த்தனை செய்த பின் கொல்லன் வன்னி மரத்தடிக்குத் திரும்பியபோது, இவனைத் தவிர்க்க விரும்பியவன் போல் அவன் எழுந்து வலம் வருவதற்குச் சென்றான். இம்முறை கொல்லன் பிடிவாதமாக வன்னி மரத்தடியிலேயே உட்கார்ந்து கொண்டான். இவனைத் தவிர்ப்பதற்காக வலம் வரச் சென்ற பிள்ளையாண்டான், மறுபடி வன்னி மரத்தடிக்கு வந்து பார்க்கும் போது இவன் அங்கேயே இருக்கக் கண்டு திகைத்தான். அந்த நிலையில் கொல்லனே சுற்றும் முற்றும் பார்த்து விட்டு, அவனருகே சென்று ‘பெருஞ்சித்திரன்’ என்று மெல்ல அழைத்தான். அந்த அழைப்பின் மூலம் 'இவன்தான் நாம் காண வந்தவனா?’, என்ற வியப்பை அடைந்த இளைஞன் அடுத்த அடையாளத்தையும் உறுதி செய்து கொள்ளக் கருதி, “எண்ணிக்கை?”, என்று கொல்லனை நோக்கி வினாவும் தொனியில் கேட்டான். கொல்லனும் உடனே ஒரு கணம் கூடத் தயங்காமல் “ஒன்பது?” என்றான். அவனோ மேலும் விடாமல் ‘எவை ஒன்பது?’ என்று வினாவைத் தொடர்ந்தான். பொறுமை இழந்து விடவோ, சினம் கொள்ளவோ செய்யாமல், “முத்துகள்-கொற்கைத்துறை முத்துகள்” என்று ஒரு முறைக்கு இருமுறையாக அழுத்திச் சொன்னான் கொல்லன். உடனே வந்திருந்த இளைஞன் தன் இடுப்புக் கச்சையிலிருந்து சிறிய பட்டுத் துணி முடிப்பு ஒன்றை எடுத்து அவிழ்த்து, ஒன்பது முத்துகளை எண்ணித் தேர்ந்து கொல்லனிடம் கொடுத்தான். முத்துகள் கைக்கு வந்ததும், மேற்கொண்டு தாமதம் எதுவும் செய்யாமல், தன்னைப் பின் தொடருமாறு அவனுக்கு சைகை காட்டி விட்டு நடந்தான் கொல்லன். அந்த இளைஞனும் மறு பேச்சுப் பேசாமல் கொல்லனைப் பின் தொடர்ந்தான். ஊர் எல்லையைக் கடந்து அடர்ந்த காட்டுப் பகுதி வருகிற வரை விரைந்து நடப்பதைத் தவிர இருவரும் ஒருவருக்கொருவர் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. ‘அபாய எல்லையைக் கடந்து விட்டோம்’ என்ற நம்பிக்கை வந்த பின்பு கொல்லன் அந்த இளைஞனை விசாரித்தான்: “ஐயா! இன்னும் ஐந்தாறு நாழிகைப் பயணம் போக வேண்டும். உங்களுடைய பசி, தாகம், எப்படி? நிலைமைகள் எனக்குத் தெரிந்தால் நல்லது.” அந்தப் பிள்ளையாண்டான் தன் வயதிற்கு மிகவும் இளைஞனாகத் தோன்றினாலும், பெரியவரைத் தேடிக் காண வந்திருக்கும் சிறப்பு நோக்கி, அவனுக்கு மிகவும் மதிப்புக் கொடுத்தே விளித்துப் பேசினான் கொல்லன். “ஆம்! எனக்குப் பசிக்கிறது!... பகலில் சிறிது அவலும் இரண்டு பொரிவிளங்காய் உருண்டையும் சாப்பிட்டேன். என்னிடமே இன்னும் மூன்று நான்கு வேளைக்குப் போதுமான அவலும் பொரிவிளங்காயும் இருக்கும். நீர் பருக ஏற்றாற்போல் ஒடையோ, காட்டாறோ குறுக்கிட்டால், அங்கே அமர்ந்து உண்ட பின், பயணத்தைத் தொடரலாம்” என்று அவன் மறுமொழி கூறவே, ஒர் ஒடையின் கரைக்கு அவனைக் கொல்லன் அழைத்துச் செல்ல வேண்டியதாயிற்று. அந்த முன்னிருட்டு வேளையில் ஒடையின் கரையில் ஒரு பாறை மேல் அமர்த்தி அவனை உண்ணுமாறு வேண்டினான் கொல்லன். அவன் கொல்லனிடம் பேச்சுக் கொடுத்தான்: “வேறு எந்த உணவானாலும் பருக நீரின்றிக் கூட உண்டு விடலாம் ஐயா! இந்த அவலை மட்டும் அப்படி உண்ண முடியாது! உங்களுக்குத் தெரியுமா, அவலை விக்கியே பலர் செத்துப் போயிருக்கிறார்கள். ஆனாலும் வழிப் பயணத்தில் கெடாத உணவு அவல்தான். அதனால் இந்த அவலையும், பொரிவிளங்காயையும் விட்டுத் தொலைக்கவும் முடியவில்லை.” “செத்துப் போவதைப் பற்றிக் கவலைப்பட்டுக் கொண்டே உண்பதும், பருகுவதும் எனக்குப் பிடிக்காது! வாழ்வதைப் பற்றிய அக்கறையுடனும், பிரியத்துடனும் உண்ண வேண்டும், பருக வேண்டும், தின்ன வேண்டும். ஐயா! சாகிறவர்கள் அவல் விக்கித்தான் சாக வேண்டும் என்பதில்லை... உண்பதற்கு அவல் கூடக் கிடைக்காததாலும் சாக முடியும்” என்றான் கொல்லன். இதற்கு இளைஞன் பதில் ஒன்றும் கூறவில்லை. கல் உருண்டைகளைப் போல் இருக்கிற இரண்டு பொரி விளங்காய்களை எடுத்துக் கொல்லனிடம் நீட்டினான் அவன். கொல்லனும் மறுக்காமல் வாங்கிக் கொண்டான். வாயில் இட்டுப் பல்லால் கடிக்க முயன்று தோற்றபின், கொல்லன் அந்தப் பொரிவிளங்காயை எடுத்துப் பாறை மேல் அடித்து உடைக்கலானான். அப்படியும் அது உடையவில்லை. கொல்லன் சிரித்தான். “ஏன் ஐயா சிரிக்கிறீர்கள்? பொரிவிளங்காய் உங்களுக்குப் பிடிக்காதா?” “பிடிக்குமா, பிடிக்காதா என்பதை விட உடையுமா, உடைக்குமா என்பதுதான் இப்போது பொருத்தமான கேள்வியாக இருக்கும் போலிருக்கிறது. இந்தப் பொரி விளங்காயை வைத்து மதுரைக் கோட்டையையே கூட உடைத்துக் களப்பிரர்களை ஒடச் செய்து விடலாம்...” அவன் இதைக் கேட்டுக் குலுங்கக் குலுங்கச் சிரித்தான். பின்பு சொன்னான்: - “வாயில் சிறிது நேரம் ஊறினால், அப்புறம் தானே உடைந்து விடும்." “ஆம், உண்மைதான். சிறிது ஊற விட்டால் எதுவும் உடைந்து போய் விடும்.” கொல்லனின் இந்த வாக்கியத்தை அந்த இளைஞன் மிகவும் இரசித்துப் பாராட்டினான். அவன் உண்டு முடித்ததுமே, “பெரியவரைக் காக்க வைக்கக் கூடாது. நாம் விரைவில் போக வேண்டும்” என்று துரிதப்படுத்தி அவனை அழைத்துக் கொண்டு இருளில் பயணத்தைத் தொடர்ந்தான் கொல்லன். கொற்கை இளைஞன் சிறிது தொலைவு நடப்பதற்குள்ளாகவே தள்ளாடினான். மிகவும் கோமளமான மெல்லுடல் வாய்ந்த அவன், வாடிப் போய்த் தளர்ந்து விட்டான் என்று புரிந்தது. சிரிக்கச் சிரிக்க எதை,எதையாவது வம்பு பேசி உற்சாகப்படுத்தியே அவனை அழைத்துச் செல்ல வேண்டியிருந்தது. இளைஞன் இவனைக் கேட்டான். “அந்தப் பொரிவிளங்காய்களை உண்ண முடிந்ததா இல்லையா?” “இல்லை! பத்திரமாக வைத்திருக்கிறேன். நாளைக்கோ, நாளன்றைக்கோ ஊர் திரும்பிய பின், என் உலைக் களத்தில் சம்மட்டியால் அடித்து நொறுக்கினால் அது உடையலாம். யார் கண்டார்கள்? உங்களுடைய கொற்கைப் பொரி விளங்காய் என் சம்மட்டியையே உடைத்தாலும் வியப்பு அடைவதற்கில்லை.” இதைக் கேட்டும் அவன் விழுந்து, விழுந்து சிரித்தான். சிறு குழந்தையைக் கதை சொல்லி உறங்கச் செய்வது பேர்ல் அவனைச் சிரிக்க வைத்துக் களைப்புத் தெரியாமல் அழைத்துப் போக வேண்டிய கடமை கொல்லனுக்கு இருந்தது. அன்று பகலில் திருமோகூர்ப் பெரிய காராளர் மகள் செல்வப் பூங்கோதையின் நளின உணர்வுகளைக் கலைத்து விடாமல் காப்பதற்காக, இரும்பில் வேலை செய்து பழகிய தான், பொன்னிற் புனைபவன் போல் இங்கிதமாகப் பேசிப் பழக வேண்டியிருந்ததை ஒப்ப, இப்போது இந்தக் கொற்கை நகர் விடலைப் பிள்ளையாண்டானிடம் நகை வேழம்பனைப்[3] போல்தான் நடிக்க வேண்டியிருப்பது கொல்லனுக்கே புரிந்தது. திருமால் குன்றத்திலிருந்து மதுரைக்கும், திருமோகூருக்கும், திருமோகூரிலிருந்து மறுபடி திருமால் குன்றத்துக்கும் என்பதாகக் கடந்த சில தினங்களாய் இடைவிடாமல் அலைந்ததனால், இரும்புத்தசைகள் எனத் திரண்டிருந்த கொல்லனின் முழங்கால் கூட வலித்தன. 'தன் பணிகளையும், தான் ஒடும் ஒட்டங்களையும், பெண்ணின் நளினங்களைக் கொண்ட அந்த இளம் ஆண் பிள்ளையால் ஒரு நாள் போதாவது தாங்க முடியுமா?' என்று நினைத்துப் பார்த்தான் கொல்லன். இப்படி எண்ணியவாறே அந்த இளைஞனும் உடன் வரக் குறுகலான காட்டு வழியே நடந்து கொண்டிருந்த போது, ஒரிடத்தில் எதையோ பார்த்து விட்டுப் பயந்து அலறிப் பின் வாங்கினான் இளைஞன். அவன் சுட்டிக்காட்டிய திசையில் பார்த்தால், காட்டு மரங்கள் எரியும் தீ வெளிச்சத்தில் தேர் வடம் போன்ற பூதாகரமான மலைப்பாம்பு ஒன்று, காட்டு எலியைப் பிடித்து விழுங்கிக் கொண்டிருந்தது. இளைஞன் பயந்தாங்கொள்ளியாகவும், விளையாட்டுப் பிள்ளையாகவும், பேதைத் தன்மை நிறைந்தவனாகவும் இருப்பதைக் கொல்லன் சந்தேகத்துக்கு இடமில்லாமல் புரிந்து கொண்டான். திருக்கானப்பேர்ப் பாண்டியகுல விழுப்பரையரின் பேரன் இளையநம்பி, தென்னவன் சிறுமலை வேங்கைப்புலி மாறன் ஆகிய தீரர்களோடு இணையாக இவனை நினைத்துப் பார்க்கவும் கூட முடியாமலிருந்தது. “மலைப்பாம்பு எலியை விழுங்குகிறது! அதில் நீங்கள் பயப்பட ஒன்றும் இல்லை. பேசாமல் என்னோடு நடந்து வர வேண்டும் நீங்கள். உங்களுக்கு எந்த அபாயமும் வராது”, என்று தைரியம் கூறி, அந்த இளைஞனை மேலே வழி நடத்திச் சென்றான் கொல்லன். ஒரு நிலைமைக்கு மேல் கொல்லனுக்குக் கோபமே கூட வந்து விட்டது. நல்லடையாளச் சொல் வெளியாகி விட்ட கவலை, களப்பிரர்களின் கொடுமை, இவற்றைப் பற்றிய தீவிரமான சிந்தனைகளுக்கு நடுவே வெறும் பிள்ளைக் கதைகளையும் பெருஞ் சிரிப்பையும் மட்டும் விரும்பும் ஒருவனை வழி நடத்திப் போவது பெரியவரின் ஆணைக்குக் கட்டுப்பட்டு அதை அவன் செய்தாக வேண்டியிருந்தது. ↑ குடுமி ↑ தொல்காப்பியம் சொல்லதிகாரம் 164-ம் சூத்திர உரை - சேனாவரையர். ↑ நகைச்சுவைக் கூத்தாடுபவன் 14. நவ நித்திலங்கள் கொற்கை நகரத்திலிருந்து வந்திருந்த புதிய இளைஞனும், கொல்லனும் சிலம்பாற்றின் கரையை அடையும் போது நள்ளிரவுக்கு மேலாகி விட்டது. ஏற்கனவே அறிவித்திருந்தபடி, மலைச்சரிவில் ஆபத்துதவிகள் தீப்பந்தங்களுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தனர். இருளில் அந்த மலைக் கணவாயில் காற்று சுழித்து வீசிக் கொண்டிருந்தது. மேலே மலைப் பகுதிகளில் எங்கோ மழை பெய்திருந்ததனால், சிலம்பாற்றின் ஓட்டத்திலே வெள்ளமும், வேகமும் கூடியிருந்தன. இருளிலே அந்த மலைப் பிளவிலே பல்லாயிரம் போர் வீரர்கள் ஒரு சமயத்தில் உற்சாகக் குரல்களை எழுப்பிக் கொண்டே, விரைந்து பாய்ந்தோடுவதைப் போன்ற ஆரவாரத்தோடும், ஓசையோடும் சிலம்பாறு துள்ளிக் குதித்துச் சுழன்று, சுழித்துப் பொங்கிப் புடைத்து, ஒசையெழ ஒடிக் கொண்டிருந்தது. பேயாட்டம் போடுவது போல் மரங்கள் தலைகள் சுழலக் காற்றில் ஒசையிட்டு ஆடிக் கொண்டிருந்தன. கோபம் கொண்ட தேவர்கள் கரிய வானத்தில் நீள நீளமான வெள்ளி வாள்களால் தாறு மாறாக வீசிப் போட்டாற் போல் மின்னல்கள் சொடுக்கி மறைந்தன. ஊசியால் குத்துவது போலக் குளிர்ந்த காற்று உடலில் பட்டு உறைத்தது. இந்தப் புதிய சூழ்நிலையில், உடன் வந்த இளைஞன் மருண்டு மருண்டு விழிப்பதைக் கண்டான் கொல்லன். அவனுடைய கண்களில் பாதி மருட்சியும், பாதி உறக்கச் சோர்வும் தெரிந்தது. இவர்கள் மலைச் சரிவில் மேலே ஏறிச் செல்லுமுன்பே, ஆபத்துதவிகள் கீழே இறங்கி வந்து இவர்களை எதிர்கொண்டனர். வந்த ஆபத்துதவிகளில் ஒருவன், கொல்லனின் காதருகே ஏதோ இரகசியமாகச் சொன்னான். உடனே கொல்லன் தன்னோடு வந்த கொற்கை இளைஞனை நோக்கி, ‘ஐயா! நீங்கள் சோர்வு அடைந்து களைத்துப் போய் விட்டீர்கள். இவர்களோடு சென்றால், ஒரு மலைக் குகையில் நீங்கள் சுகமாக உறங்குவதற்கு வழி செய்து கொடுப்பார்கள். உங்களால் மேலும் நடக்க முடியாது போலத் தோன்றுகிறது. பெரியவர் இப்போது மறைந்திருக்கும் இடத்துக்குப் போக, இன்னும் ஒரு மலை ஏறி இறங்கி, அடுத்த சரிவுக்குச் செல்ல வேண்டும். இப்போது உங்களால் அது முடியும் என்று தோன்றவில்லை. பெரியவரும் காலையில்தான் உங்களைக் காண விரும்புவதாகச் சொல்லியிருக்கிறார்” என்றான். அந்த இளைஞனோ, புதிய மனிதர்களோடு உறங்கச் செல்வதற்குத் தயங்குவதாகத் தெரிந்தது. கொல்லன் மேலும் உறுதி கூறலானான்: “பயப்படாதீர்கள்! இவர்கள் எல்லாருமே நம்மவர்கள்தாம்! உங்களைக் கண்ணும், கருத்துமாகப் பாதுகாப்பார்கள்.” தயக்கமும், பயமும் இருந்தாலும் கூட, உறக்கம் தாங்க முடியாமல் கொல்லன் சுட்டிக் காட்டிய ஆபத்துதவிகளோடு புறப்பட்டுச் சென்றான் அந்த இளைஞன். இளைஞனை மற்றவர்களோடு அனுப்பிவிட்டுத் தன்னிடம் செய்தியைக் கூறிய ஆபத்துதவியுடன் மலைச் சரிவில் ஏறத் தொடங்கினான்.கொல்லன். “இந்தப் பிள்ளையாண்டானைப் போல் பத்துப் பேர் இருந்தால் போதும்! அங்கங்கே மறைந்திருந்து துடிதுடிப்புடனும், களைப்பின்றியும் பாடுபட்டு வரும் ஆயிரக்கணக்கான பாண்டிய வீரர்களையும் இந்தப் பத்துப் பேரே கெடுத்து விடுவார்கள். வீரர்களின் கூட்டத்தில் இவனைப் போன்றவர்கள் இருக்க முடியாது; இருக்கக்கூடாது!...” என்றான் உடன் வந்த ஆபத்துதவி. கொல்லன் அதைக் கேட்டுக் கொண்டானே தவிர, தன் கருத்தை அவனிடம் வாய் விட்டுக் கூறவில்லை. அவன் மனத்தில் அப்போது மிக,மிக இன்றியமையாததான வேறொரு சிந்தனை தோன்றிக் கவலையையும், எச்சரிக்கையையும் அளித்துக் கொண்டிருந்தது. நாடு முழுவதும் தங்கள் நம்பிக்கைக்குரியவர்களைப் புரிந்து கொள்ளவும், தெரிந்து கொள்ளவும் ஒரே அடையாள வார்த்தையாக எது இருந்ததோ, அதைப் பூத பயங்கரப் படையைச் சேர்ந்த களப்பிர வீரன் ஒருவன் தன்னிடமே சோதித்துப் பார்க்க வந்ததை நினைத்த போது கொல்லனுக்கு இதயம் கொதித்தது. இந்த அபாயம் உடனே தவிர்க்கப்பட முடியாவிடில், பாண்டிய நாட்டில் பல இடங்களில் பல வீரர்கள் களப்பிரர்களிடம் மாட்டிக் கொள்வார்கள் என்று தெளிவாகவே புரிந்தது. இந்த இரகசியம் எந்த முனையிலிருந்து எப்படி அவர்களுக்கு எட்டியிருக்க முடியும் என்று கொல்லனால் அநுமானம் செய்யவே முடியாமலிருந்தது. பாண்டிய வீரர்கள் இருவர் சந்திக்கும் போதே, மிக அருகிலிருந்து மறைவாய்க் கவனித்து ஒட்டுக் கேட்ட யாரோ ஒரு களப்பிரன் மூலமாகவோ, அல்லது எதிரே வந்து சந்திப்பவன் யாரென்று தெரியாமலே, மாற்றானிடம் அவசரப்பட்டுத் தன் நல்லடையாளச் சொல்லைத் துணிந்து கூறி விட்ட ஒரு பாண்டிய வீரன் மூலமாகவோ, மிக அண்மையில்தான் இந்த இரகசியம் அம்பலமாகியிருக்க முடியும் என்று தோன்றியது. வேறு விதமாக நினைக்க முடியவில்லை. பாண்டிய நாடெங்கும் மறைந்து, ஆழமாக வேரோடி யிருக்கும் பாண்டியர் இயக்கத்தைச் சேர்ந்தவர்களுக்கு நாளைப் பொழுது விடிவதற்குள் பழைய நல்லடையாளச் சொல்லை உடனே கைவிட வேண்டும் என்றும் புதிய நல்லடையாளம் என்ன என்றும் விரைந்து அறிவிப்பது எவ்வாறு சாத்தியமாகும் என்பதுதான் அவனுக்குப் புரியவில்லை. மேலும் இரண்டு நாழிகைப் பயணத்துக்குப் பின், பெரியவர் மதுராபதி வித்தகர் தங்கியிருந்த மலைக் குகைக்கு வந்து சேர்ந்தார்கள் அவர்கள். உடன் வந்த ஆபத்துதவி வெளியிலேயே நின்று கொண்டான். கொல்லன் உள்ளே நுழைந்த போது தீப்பந்த ஒளியில் அவர் ஒலைச் சுவடியில் எழுத்தாணியால் ஏதோ அழுத்திக் கீறிக் கொண்டிருந்தார். காலடி ஓசை கேட்டு நிமிர்ந்ததும், அவர் தன்னைக் கேட்ட முதல் கேள்வியே கொல்லனை வியக்கச் செய்தது. “வா! இங்கிருந்து இன்று காலை புறப்பட்டுச் சென்றது முதல் இந்த விநாடி வரை நம்முடைய நல்லடையாளச் சொல்லை, எங்காவது நீ பயன்படுத்த நேர்ந்ததா?” தன் மனத்தில் எதைப் பற்றிய சிந்தனை மேல் எழுந்து நிற்கிறதோ, அதைப் பற்றியே அவரும் கேட்கிறாரே என்று மனத்தில் எழும் வியப்புடன் வணங்கி, அவருக்கு மறுமொழி கூறினான் அவன். “இல்லை. ஐயா!...ஆனால்... ?” “ஆனால்....... என்ன?” திருமோகூர் நெற்களத்தில் முற்றிலும் எதிர்பாராத விதமாக, களப்பிரன் ஒருவன் அதே நல்லடையாளச் சொல்லுடனே தன்னை அணுகிச் சோதனை செய்ததையும், அதன்பின் நடந்தவற்றையும் ஒன்று விடாமல் அவரிடம் விவரித்தான் கொல்லன். எல்லாவற்றையும் பரபரப்பு எதுவும் அடையாமல், செவிமடுத்த பின் அவர் கூறலானார். “இன்று பிற்பகல் என் மனத்தில் ஏதோ பொறி தட்டுவது போல் தட்டுப்பட்டது. உடன், 'நம்முடைய நல்லடையாளச் சொல்லை மாற்றி விட வேண்டும்’ என்று நானே நினைத்தேன். என் மனத்தில் பட்ட படியேதான் நடந்திருக்கிறது இருக்கட்டும்... எங்கே அந்த முத்துகள்...?” கொல்லன் முத்துகளைக் கொடுத்த போது, இயல்பை மீறி அவர் எழுந்து நின்று அவற்றை இரு கைகளாலும் வாங்கிக் கண்களில் ஒற்றிக் கொள்ளவே, அது அவனுக்குப் புதுமையாகத் தோன்றியது. அந்த முத்துகளில் ஏதோ மிகப் பெரிய மதிப்புக்கான அந்தரங்கம் அடங்கியிருக்க வேண்டும் என்று அவன் புரிந்து கொண்டான். இவ்வளவு பெரிய பொறுப்பைத் தாங்கி வந்த விடலை இளைஞனை எண்ணினான் அவன். இப்படி அவன் எண்ணிக் கொண்டிருப்பதை அப்படியே பிரதிபலிப்பது போல் அந்தக் கணமே- “வாகனங்களை விட அவை எவ்வளவு மதிப்புக்குரியவற்றைச் சுமந்து வருகின்றன என்பதுதான் பெரிது. அந்த இளைஞன் நீ எதிர்பார்த்தபடி இல்லாதது உனக்கு ஏமாற்றத்தை அளித்திருக்கும்!”, என்று சொல்லி முகம் மலர்ந்தார் அவர். இந்த நிலையில் அவர் முன்பாக எதையுமே நினைப்பதற்குப் பயந்தான் கொல்லன். நினைப்பில் கூட எதையும் மறைக்க விடாதவருக்கு முன், நினைக்கவே தயங்கினான் அவன். ஏதோ குழப்பம் வரலாம் என்று தீர்க்க தரிசனமாக முன் கூட்டியே உணர்ந்து முத்துகளோடு வருகிறவனையும், தன்னையும் பழைய நல்லடையாளச் சொல்லைத் தவிர்க்கச் செய்த அவர் மதி நுட்பத்தை அவனால் வியக்காமல் இருக்க முடியவில்லை. பழைய நல்லடையாளச் சொல் தன்னையும் அபாயத்தில் ஆழ்த்தியிருக்கும் என்று இப்போது அவன் எண்ணினான். அப்போது மீண்டும் அவர் குரல் கணிரென்று ஒலித்தது. “பல தலைமுறைகளின் புனிதமான உணர்வுகளும், அந்தரங்கங்களும் இந்த நவநித்திலங்களில் அடங்கியிருக்கிறது. எனவே நாளை வைகறையிலிருந்து ‘நவநித்திலம்’ என்ற தொடரையே நம்முடைய புதிய நல்லடையாளச் சொல்லாக நியமிக்கிறேன். இந்தப் புதிய நல்லடையாளம் பற்றிப் பிறர் புரிந்து கொள்ள முடியாத சித்திரக் கரந்தெழுத்துகளால் இந்த ஒலையில் எழுதியிருக்கிறேன். இந்த ஒலையை எடுத்துச் சென்று விடிவதற்குள், வையையின் திருமருத முன் துறையில், கிழக்கு மேற்காக எண்ணினால், ஏழாவது மருத மரத்தின் அடிப்பொந்தில் வைத்து விடும் பணியை நீ உடன் செய்யப் புறப்பட வேண்டும். ஒவ்வொரு நாளும் இருந்த வளமுடையார் கோயிலிலிருந்து திருமஞ்சன நீர் எடுக்க வரும் நம் யானைப் பாகன் அந்துவன், இந்த ஏழாவது மருத மரப் பொந்தைப் பார்க்காமல் திரும்ப மாட்டான். ஒலையை அவன் பார்த்து விட்டால், புதிய நல்லடையாளம் விரைந்து எங்கும் பரவுவதற்கு ஆவன செய்யும் வழியை அவனறிவான். திருமோகூரிலும், சுற்றுப்புறங்களிலும், காராளரிடமும் இந்தப் புதிய அடையாளத்தினை நீயே சொல்லி விடலாம்.” அப்படி அந்த நவநித்திலங்களில் அடங்கியிருக்கும் மகத்துவம் என்ன என்று உடனே அறியும் ஆவலை, அவர் சொற்கள் தன் உள்ளத்தில் கிளரச் செய்திருந்தும், கட்டளையை நிறைவேற்றும் பொறுப்பை உணர்ந்து ஒலையைப் பெற்றுக் கொண்டு அவன் வணங்கி விடை பெற்றுப் புறப்பட்டான். கால்கள் விண் விண்ணென்று வலித்தன. கடமையோ மீண்டும் அவனைத் துரத்தியது. 15. சிறை மாற்றம் தன்னுடைய ஏவலோ, மந்திரமோ பலிக்க முடியாத படி மாவலி முத்தரையர் தடுத்துக் கட்டி விட்டதை உணர்ந்தான் தேனூர் மாந்திரீகன். கூண்டோடு அனைவரும் சேர்ந்து சிறைப்படுவதைத் தவிர அந்நிலையில் வேறு எதுவும் மீள வழி தோன்றவில்லை. எல்லாரும் செங்கணான் முகத்தையே கவலையோடு பார்த்துக் கொண்டிருந்தார்கள். மூடிய கதவுகளின் வெளியே இருந்து மாவலி முத்தரையரின் ஏளனச் சிரிப்புத் தொடர்ந்து ஒலித்துக் கொண்டே இருந்தது. கதவுச் சட்டங்களின் இடைவெளி வழியே அவர் முகத்தையும் இவர்கள் உட்புறம் இருந்தே காண முடிந்தது. “இதற்கு மேல் உங்கள் ஏவல் பலிக்காது! பேசாமல் மறுபடியும் சிறைக் கோட்டத்துக்குள் போய்ச் சேருங்கள். இனிமேல் தப்ப முடியும் என்று கனவு கூடக் காணாதீர்கள்!” என்று கடுமையான குரலில் அவர்களை நோக்கி அறைகூவினார் மாவலி முத்தரையர். இந்த அறைகூவலுக்கு மாந்திரீகன் செங்கணானோ, அழகன் பெருமாளோ, தென்னவன் மாறனோ, மாவலி முத்தரையரை நோக்கி மறுமொழி கூறிச் சீறவில்லை; என்றாலும் தங்களுக்குள் ‘மேலே என்ன செய்வது’ என்ற வினாவும் முகக் குறிப்பில், ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். தென்னவன் மாறன் மாவலி முத்தரையரை நோக்கி ஏதோ கடுமையாக மறுமொழி சொல்லத் துடிதுடித்துக் கொண்டிருப்பதைப் புரிந்து கொண்டு, ‘இப்போது அவருக்கு எதுவும் பதில் சொல்ல வேண்டாம்’ என்பது போல் கண் பார்வையாலேயே குறிப்புக் காட்டி விட்டான் அழகன் பெருமாள். இவர்கள் ஒடுங்கி விட்டார்கள் என்பதாக இந்த அமைதியைப் புரிந்து கொண்ட மாவலி முத்தரையர் தம்முடைய ஏவலை மீட்டுக் கொண்டார். ஒநாய்களும், நரிகளும் மறைந்தன. மாவலி முத்தரையர் திமிரான குரலில் மீண்டும் கூறினார்: “இரவு நேரமாகி விட்டது. பாவம்! நீங்கள் எல்லாரும் மிகவும் களைத்திருப்பீர்கள். சிறையில் போய் இன்றிரவாவது உறங்குங்கள். நாளைக் காலையில் ஒருவேளை உங்கள் தலைவிதியின் கோர முடிவை நீங்கள் எதிர் கொள்ள வேண்டியிருக்கும்!” இதைக் கேட்டுக் குறளன் உதடுகளைப் பிதுக்கி முகத்தைக் கோணி மாவலி முத்தரையருக்கு அழகு காட்டினான். நண்பர்களின் உயரமான உருவங்களுக்கு நடுவில் நின்று கொண்டிருந்ததனால், அவனுடைய குள்ள உருவம் அழகு காட்டியதை நண்பர்கள்தான் காண முடிந்ததே ஒழியக் கதவுக்கு வெளியே நின்ற மாவலி முத்தரையர் காண முடியவில்லை! இவர்களுடைய மெளனம் பணிவாகவும், பயமாகவும் புரிந்து கொள்ளப்பட்டு விட்டதனால் மாவலி முத்தரையர் இவர்களோடு பேசுவதை நிறுத்திக் கொண்டு வேறு ஏற்பாடுகளைக் கவனிக்கத் தொடங்கினார். சில கணங்களில் மாவலி முத்தரையரைத் தேடிக் களப்பிரப் பூத பயங்கரப் படைத் தலைவன் அங்கே வந்து சேர்ந்தான். அவனுடன் ஆயுதபாணிகளாகப் பூதபயங்கரப் படை வீரர்களும் வந்திருந்தனர். “நம்மைப்போல் அரசியல் காரியங்களில் ஈடுபட்டிருப்பவர்கள் எதிலும் முன்னெச்சரிக்கையாக விழித்திருக்க வேண்டும். ஒரு விநாடி தாமதமாகவோ, பின் தங்கியிருந்தோ விழித்தால் கூடப் பெரிய தோல்விகள் வந்துவிடும். இந்தச் சிறைக் கோட்டத்துக் காவலை இரு மடங்காக ஆக்க வேண்டும் என்பதை இப்படி நான் சொல்லி நீ செய்யும்படி ஆகியிருக்கக் கூடாது. இவர்களை மட்டுமே இங்கிருந்து தப்ப விட்டு விடுவோமானால், மிக விரைவில் இந்தக் களப்பிரர் ஆட்சியே பறி போய் விடும் என்பதை நீ எந்த அளவு உணர்ந்திருக்கிறாய் என்பது எனக்குப் புரியவில்லை” என்று மாவலி முத்தரையர், பூத பயங்கரப் படைத் தலைவனிடம் இரைந்து கொண்டிருப்பது உள்ளே நின்ற இவர்களுக்கும் கேட்டது. சிறைக் கோட்டத்தின் வாயிலில் காவலுக்கு நிற்கும் வீரர்களின் எண்ணிக்கையை அதிமாக்கிப் பாதுகாப்பு ஏற்பாடுகளை வலிமைப் படுத்தப் போகிறார்கள் என்பதும் உள்ளே இருப்பவர்களுக்குப் புரிந்தது. இந்த நிலைமை அவர்கள் கவலையை அதிகமாக்கியது. வெளியே மாவலி முத்தரையரின் குரல் கேட்கவில்லை. இப்போது அவர் புறப்பட்டுப் போயிருக்க வேண்டும் என்று தோன்றியது. பூத பயங்கரப் படைத் தலைவன் மட்டும் காவல் வீரர்களுக்கு, ஏதோ எச்சரிக்கைகளையும், கட்டளைகளையும் இட்டுக் கொண்டிருப்பது கேட்டது. சிறிது நேரம் கழித்துக் தென்னவன் மாறனும், அழகன் பெருமாளும் முற்றிலும் எதிர்பாராதவிதமாக வீரர்கள் சூழப் பூத பயங்கரப் படைத் தலைவன் சிறைக் கோட்டத்துக் கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்தான். “உள்ளே வருகிறவர்கள் என்ன செய்தாலும் வாளா இருப்பதா, அல்லது ஒரு நிலைமைக்கு மேல் அவர்களை எதிர்த்துத் தாக்கி விட்டுத் தப்பி ஓட முயற்சி செய்யலாமா, உள்ளே வருகிறவர்களை எதிர்த்துப் போரிடும் அளவுக்கு நம் எண்ணிக்கை இருக்கிறது என்பதை நீங்களே அறிவீர்கள்? என்ன செய்யலாம்?” என்று கழற்சிங்கன், அழகன் பெருமாளின் காதருகே மெல்ல வினாவினான். “அவசரப்பட்டு விட வேண்டாம். அது நிலைமையை மேலும் கெடுத்து விடும். நீ சொல்கிறபடி செய்ய வேண்டும் என்றால், அப்படிச் செய்யும் வண்ணம் நானே சைகை காட்டுவேன். நான் சைகை காட்டாத பட்சத்தில், என்ன நடந்தாலும் யாரும் உணர்ச்சி வசப்படக் கூடாது” - என்று அழகன் பெருமாளிடமிருந்து கழற்சிங்கனுக்கும் பிறருக்கும் மறுமொழி கிடைத்தது. தென்னவன் மாறனும், அவனோடிருந்த திருமோகூர் அறக்கோட்டத்து மல்லனுமே, தலைக்கு ஐவரை எதிர்க்கவும், அடித்து நொறுக்கவும் போதுமானவர்கள் என்றாலும், அவர்கள் பசி தாகங்களால் தளர்ந்து போய் நலிந்திருக்கிறார்கள் என்று அழகன் பெருமாளுக்குப் புரிந்தது. அவசரப்பட்டுத் தப்ப முயன்று, முடியாமல் அகப்பட்டுக் கொண்டால் பின்பு நிரந்தரமாகவே தப்ப முடியாமற் போய் விடுமோ என்ற முன்னெச்சரிக்கைதான் அழகன் பெருமாளுக்கு நிதானத்தைக் கொடுத்திருந்தது. உள்ளே வந்த பூத பயங்கரப் படைத் தலைவன், முதலில் தென்னவன் சிறுமலை மாறனையும், குன்றம் நிற்பது போல் தோன்றிய அறக்கோட்டத்து மல்லனையும் மற்றவர்களிடம் இருந்து தனியே பிரித்து நிறுத்திச் சங்கிலிகளாலும், விலங்காலும் பிணைத்துக் கட்டுமாறு, தன்னோடு வந்த வீரர்களுக்குக் கட்டளையிட்டான். இந்தக் கட்டளையை அந்த வீரர்கள் நிறைவேற்றுமாறு விடுவதா, எதிர்த்துத் தாக்குவதா என அறியும் ஆவலோடு நண்பர்கள் அழகன் பெருமாளின் கண்களையே பார்த்துக் கொண்டு நின்றார்கள். பூத பயங்கரப் படைத் தலைவன் சிறைக் கோட்டத்திற்கு உள்ளே, தன்னோடு அழைத்து வந்த வீரர்களை வெளிப்புறம் மதிலோரமாக நிறுத்தி வைத்திருக்க வேண்டும் என்பது அழகன் பெருமாளின் சந்தேகமாயிருந்தது. எந்த விநாடியில் பூத பயங்கரப் படைத் தலைவன் குரல் கொடுத்தாலும், வெளியே இருந்து நூற்றுக்கணக்கான வீரர்கள் ஓடி வர முடியும் என்ற நிலைமையை உய்த்துணர்ந்து நிதானமாக இருந்து விட்டான் அழகன் பெருமாள். வந்திருந்த களப்பிர வீரர்கள் தென்னவன் மாறனையும், அறக்கோட்டத்து மல்லனையும் விலங்கிட்டுச் சங்கிலியால் பிணிக்கத் தொடங்கினார்கள். அப்படி அவர்கள் இருவரும் பிணிக்கப்படும் போது மற்ற எட்டுப் பேரும் என்ன மன நிலையில் இருக்கிறார்கள் என்று முகங்களிலிருந்தே கண்டு பிடிக்க முயன்றவன் போல் இவர்களையே கூர்ந்து கவனிக்கத் தொடங்கியிருந்தான் அந்தக் களப்பிரப் படைத் தலைவன். இவர்களும் அது புரிந்து மிகவும் தந்திரமானதும், எதிரி புரிந்துகொள்ள முடியாததுமான அமைதியைக் கடைப் பிடித்தனர். அந்த விநாடி வரை தன் கட்டளையையும் பேச்சுகளையும் பாலியிலேயே நடத்திக் கொண்டிருந்த களப்பிரப் படைத் தலைவர்களின் பேச்சையோ, எதையுமோ தெரிந்து கொள்ளாதது போல், அதே சமயம் எல்லாவற்றையுமே புரிந்து கொண்டும் தெரிந்து கொண்டும் மெளனமாக இருந்தார்கள் இவர்கள். இவர்கள் அவற்றைப் புரிந்து கொண்டது போலும் அறிந்து கொண்டது போலும் வெளிப்படையாகக் காட்டிக் கொள்வார்களேயானால் இவர்களுக்கு எந்த அளவு பாலி மொழி தெரியும் என்பதை அதிலிருந்து அவன் அனுமானிக்கக் கூடும். முதல் முயற்சியில் அவனால் அதைச் சாதிக்க முடியவில்லை. எனவே, தான் அறிந்தவரை உச்சரிக்க முடிந்த பிழையான கொச்சைத் தமிழில், “இவர்கள் இருவரையும் தனியே வேறு சிறையில் பிரித்து வைக்க வேண்டும். இவர்களைப் பாதாளச் சிறைக்கு இழுத்துச் செல்லுங்கள்” என்ற பொருளில் கூறினான் அவன். தன்னுடைய கட்டளை களைத் தான் பாலியில் கூறிய வரை எதிரிலிருக்கும் மனிதர்கள் அடக்கமாகவும், அமைதியாகவும் இருந்தது மாறித் தானே தமிழில் கட்டளையிட்டதும் புரிந்து கொண்டு பொங்கி எழுகிறார்களா, இல்லையா என்பதை அவன் கவனிக்கவும், கணிக்கவும் முயலுவது போலிருந்தது. அப்படி அவன் தமிழில் கட்டளையிட்ட போதும் இவர்கள் எந்த மாறுதலையும் காண்பிக்கவில்லை. குறளன் மட்டும் யாரும் தன்னைப் பார்க்காத வேளையில் உதட்டைப் பிதுக்கி முகத்தைக் கோணி அழகு காட்டி முடித்துக் கொண்டான். மற்றவர்களின் இடுப்பு உயரத்தில் இவன் முகம் இருந்ததால், மற்றவர்கள் முகங்களையும், இவன் முகத்தையும் ஒரு சேரப் பார்ப்பது என்பது ஒரே சமயத்தில் இயலாது. மற்றவர்கள் முகங்களை நேருக்கு நேர் பார்க்கும் போது, இவன் முகம் தெரியாமலும், இவன் முகத்தை மட்டுமே நேருக்கு நேர் பார்த்தாலோ, மற்றவர்களின் இடுப்புகள் மட்டுமே தெரிவது போலவும் இருந்ததனால், எல்லார் முகங்களையும் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்த படைத் தலைவனால் இவன் அழகு காட்டியதைக் கவனிக்க முடியாது போயிற்று. யாரை மீட்பதற்காகக் கோட்டைக்குள் வர நேர்ந்ததோ அவனையே வேறு சிறைக் கோட்டத்துக்கு மாற்றிக் கொண்டு போகிறார்கள் என்பது அழகன் பெருமாளுக்கு வருத்தத்தைக் கொடுத்தது என்றாலும், அதை எப்படித் தடுப்பது அல்லது தவிர்ப்பது என்பதுதான் புலப்படவில்லை. மாவலி முத்தரையர் பயமுறுத்திவிட்டுச் சென்றது போல் தென்னவன் மாறனுக்கோ, மற்றவர்களுக்கோ உயிர் அபாயம் ஏற்படுமுன் தப்பி விட வேண்டும் என்ற தவிப்பு மட்டும் உள்ளுற அழகன் பெருமாள் மனத்தில் இருந்தது. அவன் இப்படி நினைத்துத் தவித்துக் கொண்டிருந்த போதே அவனும், மற்றவர்களும் காணத் தென்னவன் மாறனையும், மல்லனையும் அங்கிருந்து வேறு சிறைக் கோட்டத்துக்கு அழைத்துக் கொண்டு போய் விட்டார்கள். இருவரும் போகும் போது கூட ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ள முடியவில்லை. படைத் தலைவன் கவனக் குறைவாயிருந்த ஒரு கணத்தில், ‘கவலைப்பட வேண்டாம்; நாம் எல்லாரும் சேர்ந்தே இங்கிருந்து தப்ப முடியும்! இன்னும் எனக்கு நம்பிக்கை இருக்கிறது" என்ற பொருள் புரியத் தென்னவன் மாறனுக்குச் சைகை மூலம் அறிவித்தான் அழகன் பெருமாள். இந்தச் சைகையைத் தவிர வேறெதையும் இவர்களால் செய்ய முடியவில்லை. இவர்கள் எட்டுப் பேரையும் விலங்குகளாலோ, இரும்புச் சங்கிலிகளாலோ இட்டுப் பிணிக்காமல், அப்படியே அந்தப் பழைய சிறைக் கோட்டத்தில் அடைத்து விட்டுப் போனார்கள். பூத பயங்கரப் படைத் தலைவனும் வீரர்களும், வந்தவர்கள் எல்லோரும் போய் விட்டார்கள் என்பதையும் தாங்கள் எட்டுப் பேர் மட்டுமே இருக்கிறோம் என்கிற தனிமையையும் உறுதி செய்து கொண்ட பின், இவர்கள் மேற்கொண்டு பேச வேண்டியதைப் பேசித் திட்டமிடலாயினர். 16. யார் இந்த ஐவர்? “என்னப்பா இது? உன்னைப் போல் மந்திரக்காரர்களையும், தந்திரக்காரர்களையும் நம்பினால் இப்படித்தான் பாதிக் கிணறு தாவ முடியும் போலிருக்கிறது!” என்று கழற்சிங்கன், தேனூர் மாந்திரீகனைக் கோபித்துக் கொள்ளத் தொடங்கிய போது, ‘இப்படி எல்லாம் பேசாதே! வாயை மூடு!’ - என்பது போல் கழற்சிங்கனைக் கடுமையாக உறுத்துப் பார்த்தான் அழகன் பெருமாள். கழற்சிங்கன் உடனே பேசுவதை நிறுத்தி விட்டான். அழகன் பெருமாள் சிறிது நேரம் யாரிடமும் எதுவும் பேசாமல் சிந்தனையில் ஆழ்ந்திருந்தான். தங்கள் தலைவனின் ஆழ்ந்த சிந்தனையைப் புரிந்து கொண்டு, அதை மதிப்பது போல் மற்றவர்களும் ஒருவருக்கொருவர் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. அழகன் பெருமாள் மேல் விளைவுகளை நினைத்தான். “அரச விசுவாசமுள்ள பாண்டியர் குடி மக்கள் போல் நேற்று வரை நானும் என்னைச் சேர்ந்தவர்களும் புறநகரில் உப வனத்திலும், அகநகரிலும் உரிமையோடும், பயமின்றியும் பழக முடிந்தது போல் இனி மேல் பழக முடியாது. என்னுடைய அந்தரங்கமும், என்னோடு உப வனத்தில் உடனுறைந்து வாழ்கிறவர்களின் அந்தரங்கமும் களப்பிரப் பேரரசுக்குத் தெரிந்த பின் இனிமேல் நாங்கள் எந்தச் சார்பும் அற்ற மனிதர்களாக எங்களைக் காண்பித்துக் கொள்ள முடியாது. காதும் காதும் வைத்தாற் போல், மீட்க வந்தவர்களையும் மீட்டுக் கொண்டு தப்பியிருந்தோமானால், கவலையில்லை. அப்படி மீட்கவும், தப்பவும் முடியாததால், என்னதான் மாறு வேடத்தில் இருந்தும் பயனில்லை. இன்றில்லாவிட்டாலும் நாளைப் பொழுது புலர்ந்ததும், யார் யார் என்று எதிரிகளுக்கு நம்மைப் பற்றிப் புரிந்து விடும். பாண்டியர்களின் மனிதர்கள் என்றுதான் இதுவரை பொதுவாகப் புரிந்திருக்கும். அந்தக் காம மஞ்சரிக்கு மட்டும் எல்லாம் தெரிந்திருந்தாலும், மாவலி முத்தரையருக்கோ, ‘பூத பயங்கரப்படைத் தலைவனுக்கோ இன்னும் அவ்வளவு தெரிந்திருக்க நியாயமில்லை. பூத பயங்கரப் படையினர் போன்ற வேடந் தாங்கித் தங்களவர்களைச் சிறை மீட்க வந்த பாண்டியர்களின் ஆட்கள்’ என்று மட்டும்தான் இந்த விநாடி வரை அவர்கள் நம்மைப் பற்றி அறிந்திருக்க முடியும் என்றாலும், தொடர்ந்து இங்கே சிறையில் இருக்க நேரிடுகையில், இதை விட அதிகமாகக் களப்பிரர்கள் நம்மைப் பற்றி அறிந்து கொள்ள முயலுவார்கள். விரைந்து தப்பாவிடில் பல தீய விளைவுகள் இருக்கும்’ - என்று சிந்தித்தான் அழகன் பெருமாள். நண்பர்கள் ஏதேதோ வழிகளைச் சொன்னார்கள். மனநிலை தெளிவாக இல்லாததால், “விடிந்த பின்பு சிந்திப்போம்” என்றான் அழகன் பெருமாள். ஆனாலும் அந்தக் குழப்பமான மனநிலையில் கூட, “களப்பிரர்களில் யார் இங்கே வந்தாலும், எதை வினவினாலும் அவசரப்பட்டு முந்திக் கொண்டு யாரும் எந்த மறு மொழியையும் சொல்லி விடாதீர்கள். மறு மொழியாக நான் என்ன சொல்கிறேன் என்று பொறுத்திருந்து பார்த்த பின், அதற்கு ஏற்ப நீங்களும் நடந்து கொள்ள வேண்டும். பதற்றமோ, அவசரமோ கூடாது. எதிரிகள் நண்பர்கள் போல் வந்து பேச்சுக் கொடுப்பதும், இங்கே இருக்கும். எச்சரிக்கை தேவை.” என்று தெளிவாக அறிவுரை கூறியிருந்தான் அவன். இதைக் கூறிய பின், தேனூர் மாந்திரீகனிடம் அவன் ஒரு வேண்டுகோள் விடுத்தான்: “செங்கணான்! உன்னிடம் மை போட்டுப் பார்க்கத் தேவையான சாதனங்கள் இருக்குமானால், தயை கூர்ந்து நம் தென்னவன் மாறனையும், மல்லனையும் இந்த அரண்மனைக்குள்ளோ, சிறைக் கோட்டத்திற்குள்ளோ எங்கே வைத்திருக்கிறார்கள் என்பதைக் கண்டு பிடித்துச் சொல்ல முடியுமா?” செங்கணான் உடனே தன் மேலாடை முடிப்பிலிருந்து யாளியின் முகம் போன்ற அமைப்பை உடைய ஒரு சிமிழை எடுத்துத் திறந்து, ஏதோ மந்திரங்களைச் சொல்லிக் கண்களை மூடி எங்கேயோ, எதையோ, மனக் கண்ணில் பார்ப்பவனைப் போல் தேடி விட்டுச் சில கணங்களுக்குப் பின் கண்களைத் திறந்தான். எல்லோரும் அவன் என்ன கூறப் போகிறான் என்பதையே ஆவலோடு கவனித்தார்கள். “இப்போது நாம் நின்று பேசிக் கொண்டிருக்கும் இந்தச் சிறைக் கோட்டத்துக்கு நேர் கீழே இருட்கிடங்காக இருக்கும் பாதாளச் சிறையில் தென்னவன் மாறனும் மல்லனும் இருக்கிறார்கள். அந்தப் பாதாளச் சிறைக் கோட்டம் கோட்டையின் அகழிகளுக்கும் கீழே இருப்பதால், நீர் கசியும் தரையில் அமரவும் முடியாமல், படுக்கவும் வழியின்றி அவர்கள் துன்பப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இன்னொரு செய்தி...” என்று சொல்லிக் கொண்டே வந்த மாந்திரீகன் திடீரென்று தன் மனத்தை மாற்றிக் கொண்டவன் போல் அந்தச் செய்தியை மட்டும் அழகன் பெருமாளின் காதருகே கூறினான். அந்தச் செய்தி என்னவாக இருக்கும் என்று அறியும் ஆவல் மற்றவர்கள் மனத்தில் அதிகரித்தது. அந்த இரகசியச் செய்தியை மாந்திரீகன் தன் காதருகே கூறிக் கொண்டிருந்தபோது, அழகன் பெருமாளின் முகம் மலர்ச்சி உற்றதையும், அவர்கள் கண்டிருந்ததனால் அவர்களுடைய ஆவல் இன்னும் பெருகியிருந்தது. மைச்சிமிழை மூடி, மறுபடியும் மேலாடையில் முடிந்து கொண்டான் மாந்திரீகன். அதற்குப் பின் விடியும் வரை அவர்கள் யாரும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. சிறைக் கோட்டத்தின் கரடு முரடான கல் தளத்தில் உடலைச் சாய்ப்பதும், உறங்குவதும் களைப்புக் காரணமாகச் சிரமமானவையாகத் தெரியவில்லை அவர்களுக்கு. அழகன் பெருமாளும், தேனூர் மாந்திரீகனும் அருகருகே படுத்திருந்ததனால், இடையிடையே மெல்லிய குரலில் தங்களுக்குள் மட்டும் ஏதோ உரையாடிக் கொள்ள முடிந்தது. மற்றவர்களுக்கோ ஆவலின் காரணமாக, உரையாடாமல் வாளா இருந்த நேரத்தில் கூட அவர்கள் ஏதோ இரகசியம் பேசிக் கொண்டிருப்பது போல் கேட்டது. சிறிது நேரம்தான் இந்த ஆவல், பரபரப்பு எல்லாம் இருந்தன. அப்புறம் அயர்ந்துவிட்ட காரணத்தால் யாருக்கும் எதுவும் நினைவிருக்கவில்லை. மறுநாள் பொழுது புலர்ந்தது. நண்பர்கள் எட்டுப் பேருக்கும் பயங்கரமான பசி. களப்பிரர்கள் சிறைப்பட்ட எதிரிகளுக்கு உணவு தருவார்களா, அல்லது சிறைப்பட்டவர்களே தங்களுக்கு உணவுதானே என்று சாக விட்டு விடுவார்களா என்பது தெரியவில்லை. அந்த நிலையில் முற்றிலும் எதிர்பாராமல், ஐந்து புதிய மனிதர்கள் அவர்களைத் தேடிச் சிறைக் கோட்டத்துக்கு வந்தனர். அவர்கள் தமிழர்களைப் போல் தோன்றினர். உடை, சாயல் எல்லாம் அப்படியே இருந்தன. வந்தவர்களிடம் ஒரு பெரிய ஒலைக் கூடை நிறைய பிட்டு, அப்பம் முதலிய பணியாரங்கள் இருந்தன. சிறைக் கோட்டத்துக் கதவுகளை எல்லாம் கூட அவர்கள் திறந்து கொண்டு உள்ளே வந்து, பணியாரக் கூடையை அழகன் பெருமாள் முதலியவர்களை வணங்கி விட்டு, எதிரே வைத்தனர். வைத்தவுடனே மூவரும் சொல்லி வைத்தது போல் ஒன்றாகத் தலை நிமிர்ந்து இந்த எட்டுப் பேரையும் பார்த்து இரகசியம் பேசுவதை ஒத்த குரலில் 'கயல்' என்றார்கள். அழகன் பெருமாள் பதிலுக்கு அந்நல்லடையாளச் சொல்லைக் கூறாததோடு, வந்தவர்களைக் கூர்ந்து கவனிக்கத் தொடங்கினான். மற்றவர்களுக்கோ பசிக்கு வழி பிறக்கப் போகிறது என்ற மகிழ்ச்சியில் ‘கயல்’ என்றுகூடச் சொல்லி விடலாம் போலிருந்தது. ஆனால், யாரும் தன்னை முந்திக் கொண்டு பேசக் கூடாது என்று முந்திய இரவில், அழகன் பெருமாள் கட்டளையிட்டிருந்ததை நினைத்து மெளனமாக இருந்தனர். வந்த ஐவரில் ஒருவன் கூறலானான்: “நீங்கள் இங்கிருந்து தப்பிச் செல்ல உதவுவதற்கு வந்திருக்கிறோம். இதோ உங்கள் பசிக்குப் பணியாரங்கள் ஏற்றருள வேண்டும். நாங்கள் நடுவூர் நன்மை தருவார் குலத்து மதுராபதியாரின் தூதர்கள்." இன்னும் அழகன் புெருமாள் சிலை போல்தான் நின்று கொண்டிருந்தான். பேசியவனுக்கு மறுமொழியும் கூறவில்லை. நல்லடையாளச் சொல்லைப் பதிலாகவும் அளிக்கவில்லை! அந்தப் பணியாரக் கூடையை அங்கீகரித்துக் கொள்ளவும் இல்லை. அழகன் பெருமாளின் இந்தப் பெரிய தயக்கம் மற்ற எழுவரையும் எச்சரிக்கை செய்தது. 17. பொன் கூண்டிலிருந்து? இசையும் கூத்தும், இன்பமும் நிறைந்த இரத்தின மாலையின் மாளிகையில் ஒரு குறைவுமில்லை என்றாலும், தான் சிறைப்பட்டிருப்பது போல் உணரத் தொடங்கினான், இளையநம்பி. அவன் தனிமையை உணர்ந்து விடாதபடி எவ்வளவோ பேணிப் பிரியப்பட்டு நெருங்கிப் பாதுகாத்து வந்தாள் இரத்தினமாலை. ஓர் இணையற்ற வாலிபப் பருவத்து வீரனை அன்பினாலும், உபசரணைகளாலும் மட்டுமே தடுத்து வைப்பது என்பது எவ்வளவு அரிய காரியம் என்பதை அவள் உணர முடிந்தது. சில வேளைகளில், தன்னோடு பேசிக் கொண்டிருக்கும் போதே, அவனது சிந்தனை வேறெங்கோ போய் விடுவதை அவள் கண்டிருந்தாள். சில இரவுகளில், மஞ்சத்தில் அவன் உறக்கமின்றிப் புரள்வதையும், பெருமூச்சு விடுவதையும், எழுந்து அமர்ந்து கன்னத்தில் கையூன்றிய வண்ணம் கவலையோடு சிந்திப்பதையும் கூட அவள் காண நேர்ந்திருந்தது. அப்படி அவன் மஞ்சத்தின் மேல் விழித்துக் கொண்டு உட்கார்ந்திருந்த ஓர் இரவில், அவள் மிக மிகக் கனிவான குரலில், “உங்களைப் பார்த்தால் எனக்கே பரிதாபமாக இருக்கிறது. சமயா சமயங்களில், நீங்கள் முள்ளின் மேல் இருப்பதைப் போல் பொறுமையற்றுத் தோன்றுகிறீர்கள். எங்களிடையே இருப்பதில் உங்களுக்கு ஏதேனும் உபசாரக் குறைவு இருந்தால் அதைத் தயங்காமல் சொல்லலாம்” என்று அவனிடமே கேட்டாள். அவன் ஒருவித ஏக்கத்தோடு மறுமொழி கூறினான்: “இரத்தினமாலை! இங்கே எனக்கு ஒருகுறையும் இல்லை என்பதே மிகப் பெரிய குறைதான். ஒரு குறையோ, தடையோ எதிர்ப்படாத வாழ்வில் ஆண் மகன் தன்னை ஓர் ஆண் மகன் என்றே நிரூபித்துக் கொள்ள முடியாமல் போகிறது. இந்தச் சுகவாசம் என்ற பொன் கூண்டிலிருந்து நான் விடுபட்டாலொழிய, என் மனம் ஆறுதலடையாது. என் வேதனையின் முழு அர்த்தத்தை நீயும் புரிந்து கொள்ளவில்லை என்றே நினைக்கிறேன். வீரர்களை வெறும் அன்பினால் மட்டும் புரிந்து கொள்ள முடியாது போலிருக்கிறது.” “நீங்கள் ஒரு பக்கத்து வாதத்தை மட்டுமே சொல்கிறீர்கள் வீரர்களை வெறும் அன்பினால் புரிந்து கொள்ள முடியாது என்பது உண்மையா? அல்லது உணர்வு மயமாக நெகிழ்ந்த அன்பை வீரர்களால் புரிந்து கொள்ள முடியாது என்பது உண்மையா?” “நமக்குரிய தேசத்தைக் காப்பாற்ற வேண்டும் என்கிற பெரிய அன்பு மேலெழும்போது, நமக்குரிய மனிதர்களைப் பற்றிய சிறிய அன்பு அதில் கரைந்து போய் விடுகிறது என்பதை நீ புரிந்து கொள்ள வேண்டும்.” “என்னை மறப்பதற்கும், நிராகரிப்பதற்கும் நீங்கள் கூறுகிற தத்துவமோ இது?” “மனிதர்களை மறப்பதற்கும், நிராகரிப்பதற்கும் தத்துவங்கள் பிறப்பதில்லை. தத்துவங்களுக்கு மறப்பதையும், நிராகரிப்பதையும் விட உயர்ந்த நோக்கங்கள் உண்டு.” “ஆனால் மனிதர்களுக்கு மட்டும் சமயா சமயங்களில் அப்படி உயர்ந்த நோக்கங்கள் இருப்பதாகத் தோன்றவில்லை.” இதைக் கேட்டு அவள் முகத்தை ஏறிட்டுப் பார்த்து மெல்லச் சிரித்தான் இளையநம்பி. ஒரு கவலை நிறைந்த சூழ்நிலையில், தன் உரையாடலால் அவனை மனம் நெகிழ்ந்து சிரிக்கச் செய்தது, இரத்தினமாலைக்குத் திருப்தியைக் கொடுத்தது. “உன்னைப் போல் வசீகரமும், மயக்கும் சக்தியும் உள்ள பெண்கள்தான் வீரர்களின் முதல் எதிரிகள். எவ்வளவு பெரிய வீரனின் அன்பையும், ஒரு குறுகிய எல்லைக்குள் கொண்டு வந்து அடக்கி விடுகிறீர்கள் நீங்கள்!” இப்போது அவள் அவன் முகத்தை ஒரக் கண்களால் நோக்கி மெல்ல நகைத்தாள். “உன்னுடைய தடையையும், பாதுகாப்பையும் மீறி நான் இந்த மாளிகை எல்லையைக் கடந்து நகர வீதிகளைக் காணப் புறப்பட்டால் நீ என்ன செய்வாய்? எனக்கு இங்கிருந்து வெளியே புறப்பட்டுச் செல்ல வேண்டும் போல ஆசையாயிருக்கிறது.” “உங்கள் ஆசைகள் உங்களைவிடப் பெரிய சக்தியால் கட்டுப்படுத்தப் பட்டிருக்கின்றன. நீங்கள் நினைத்தபடி எல்லாம் ஆசைப்பட்டு விட முடியாது. ஆசைப்பட்ட படியெல்லாம் நினைத்து விடவும் முடியாது.” “இதற்கு ஒர் இடம் மட்டும் விதிவிலக்கு!” “எதைச் சொல்லுகிறீர்கள் நீங்கள்?" “'எதைச் சொல்லுகிறீர்கள்' என்று இப்போது இதைக் கேட்கும் பெண்ணழகி மட்டும் இங்கு விதி விலக்காகி விட்டாள் என்றேன்.” “உண்மையான அன்பு என்பது ஒரு விதி விலக்கில்லை. என் அன்பை நீங்கள் விதி விலக்காகக் கூறுவது எனக்கே பிடிக்கவில்லை. என் அன்பை, நீங்கள் அப்படி அலட்சியமாக நினைக்கலாம். ஆனால் நான் அப்படி நினைக்க முடியாது.” “என் மேல் உண்மையான அன்பு இருக்குமானால் நீ எனக்கு ஒர் உதவி செய்ய வேண்டும்.” “என்ன உதவி? செய்ய முடிந்த உதவியாயிருந்தால், நிச்சயம் செய்யலாம்.” “செய்ய முடியாத உதவியாயிருந்தாலும் செய்வதுதான் உண்மை அன்பு.” “செய்ய முடியாததற்கும் செய்யக் கூடாததற்கும் வேறுபாடு உண்டு.” “அன்பு என்ற அடிப்படையில் பார்க்கும் போது, எதிலும், எதற்கும் வேறுபாடு கிடையாது என்பது நான் சொல்லித்தான் உனக்குத் தெரிய வேண்டும் என்பதில்லை. மனிதர்களுக்கும், அவர்களுடைய கருத்துகளுக்கும் நடுவே உள்ள வேறுபாடுகளையும், இடைவெளிகளையும் குறைப்பதுதான் அன்பு. பொது அன்பின் இலக்கணமே இதுதான் என்றால், பிரியத்தின் விளைநிலமாகிய பெண்களின் அன்பு இன்னும் சிறப்பாயிருக்க வேண்டும்...” “காரியத்தைச் சாதித்துக் கொள்வதற்கு ஏற்ற இனிய வார்த்தைகளை ஒவ்வொன்றாகத் தேர்ந்தெடுத்துப் பேசுகிறீர்கள் நீங்கள்!” “ஆனாலும் என் காரியம் இன்னும் சாதிக்கப்பட்டு முடியவில்லை.” அவள் இதற்கு மறுமொழி கூறவில்லை. நளினமும் அழகும் நிறைந்த புன்னகை ஒன்று அவள் இதழ்களில் தோன்றி மறைந்தது. நடு இரவு கழிந்து, பனியும் மென்காற்றும், பூக்களின் மலருங் காலத்துப் புது மணமும் ஒன்று சேர்ந்து புறப்படும் பின்னிரவு வந்து கொண்டிருந்தது. இன்னும் அவர்கள் இருவருமே மஞ்சங்களில் அமர்ந்து, பேசிக் கொண்டுதான் இருந்தனர். இருவருக்கும் உறக்கம் அறவே கலைந்து போய் விட்டது. ஒரே ஒரு நாள் நகர வீதிகளில் போய்த் தன் விருப்பப்படி சுற்றிப் பார்க்க ஆசை தெரிவித்தான் இளையநம்பி. அவளோ, அவனை அப்படி விருப்பம் போல் வெளியே அனுப்புவதற்கு இசையவில்லை. சிரித்தும், பேசியும் அவனை வசியப்படுத்தி மயக்கி, அவனுடைய வெளியேறும் விருப்பத்தை மெல்ல மறக்கச் செய்ய முயன்றாள். இளம் வைகறையின் சீதக் காற்று பூக்களின் நறுமணங்களோடு சாளரத்தின் வழியே உட்புகுந்தது. பணிப் பெண் ஒருத்தி புறத்தே வந்து நின்று குரல் கொடுத்தாள். முதலில் இரத்தினமாலைதான் எழுந்து சென்று பணிப் பெண்ணை எதிர் கொண்டாள். பின் தொடர்ந்து இளையநம்பியும் சென்றான். வந்த பணிப் பெண்ணின் முகத்தில் பதற்றமும் கலவரமும் தெரிந்தன. வார்த்தைகளால் எதுவும் கூறாமல் நிலவறை முனை உள்ள சந்தனம் அரைக்கும் பகுதியைச் சுட்டிக் காட்டினாள் பணிப்பெண். உடனே இளைய நம்பியும் இரத்தினமாலையும் அங்கே விரைந்தனர். நிலவறை வழிக்குக் காவலாக இருக்கட்டும் என்று இரு பணிப் பெண்களை, ஒவ்வோர் இரவிலும் சந்தனம் அரைக்கும் பகுதியிலேயே படுத்துக் கொள்ளப் பணித்திருந்தாள் இரத்தினமாலை. அவர்களில் ஒருத்திதான் இப்போது எழுந்து வந்திருந்தாள். மற்றொருத்தி சந்தனம் அரைக்கும் பகுதியின் முன்புறம் தூக்கக் கிறக்கத்தோடு தளர்ந்து போய் நின்று கொண்டிருந்தாள். இரவாயிருந்தபடியினாலும், நிசப்தத்தினாலும் சிறிய ஒலி கூடப் பெரியதாகக் கேட்டது. வழக்கமாக அந்த நேரத்திற்கு நிலவறை வழியே யார் வந்தாலும், சிறிது தொலைவில் வரும் பொழுதே படியேறி மேற்புறம் அடைப்புக் கல்லைத் திறப்பதற்கு முன்பே ஒசை கேட்கும். இப்போதும் அப்படியே யாரோ நடந்து வருகிற காலடி ஓசை கேட்டது. இளைய நம்பியும், இரத்தினமாலையும் அடைப்புக் கல்லின் அருகே நின்று, கீழே யாரோ படியேறி வரும் ஒசையைக் கேட்டனர். கூர்ந்து செவிமடுத்ததில் கீழே ஒருவர் நடந்து படியேறி வரும் ஓசைதான் கேட்டது. என்றாலும், இரத்தினமாலை மிகவும் முன் எச்சரிக்கையோடு, “வருவது யார் என்று உறுதியாகத் தெரியாத நிலையில் நீங்கள் இங்கே எதிர்ப்பட்டு நிற்பது நல்லதில்லை. தயை கூர்ந்து நீங்கள் மறைந்திருக்க வேண்டும். இது நான் உங்களுக்கு இடும் ஆணையில்லை. அன்புக் கட்டளை” என்று இளையநம்பியிடம் கூறினாள். அவள் கூறியதை அவன் ஏற்றுக் கொண்டான். “அன்புக் கட்டளை என்பது பொன் கூண்டில் சிறை வைக்கிறேன் என்பது போன்றதுதான். இடுகின்ற சிறையைப் பொன் கூண்டில் வைத்து இட்டால் என்ன? இரும்புக் கதவுகளின் இடையே வைத்து இட்டால் என்ன? எல்லாம் ஒன்றுதான்" என்று சிரித்துக் கொண்டே கூறி விட்டு மறைந்து நிற்பதற்காக, வெளியேறிச் சென்றான் இளையநம்பி. நிலவறைப் பாதை வழியே வந்து கொண்டிருப்பது தன் மனிதர்களில் ஒருவரா அல்லது வேற்றவரா என்பதை வந்து கொண்டிருப்பவரின் முகம் தெரிந்தால் அன்றிப் புரிந்து கொள்ள முடியாது என்பதனால், இளைய நம்பியை மறைந்திருக்குமாறு வேண்டினாள் அவள். காலடியோசை மேல் நோக்கி நெருங்க நெருங்க அவள் நெஞ்சு வேகமாக அடித்துக் கொண்டது. இதோ மேல் அடைப்புக் கல் நகர்த்தப்படும் ஓசையும் கேட்கிறது. அவள் மனத்துடிப்புப் பெருகி வளர்கிறது. இருளிலிருந்து கோணிய முகத்தில் பெரியதாகச் சிரிக்கும் வாயுடன் அந்துவனின் தலை தெரிந்த பின்புதான், அவள் கவலை நீங்கி, நிம்மதிப் பெருமூச்சு விட்டாள். “திருக்கானப் பேர் நம்பியை எங்கே காணோம்? இன்னும் உறக்கம் நீங்கித் திருப்பள்ளி எழுச்சி ஆகவில்லையா? நம்மவர்களிடம் இருக்கிற மிகப் பெரிய குறைபாடு இதுதான். விழித்துக் கொள்ள வேண்டிய சமயத்தில் உறங்கிப் போய் விடுவதும், உறங்க வேண்டிய சமயத்தில் அவசியமில்லாமல் விழித்துக் கொண்டிருப்பதுமே வழக்கமாகி விட்டது. அதனால்தான் நம்முடைய பல காரியங்கள் கெட்டுப் போய் விடுகின்றன" என்று பொதுவாகக் குற்றம் கூறிக் கொண்டே வந்தான் இருந்த வளமுடையார் கோயில் யானைப் பாகன் அந்துவன். குரலைக் கேட்டு மறைந்து வெளியேறி நின்றிருந்த, இளைய நம்பியும் உள்ளே வந்து சேர்ந்தான். உள்ளே வந்ததுமே, இளைய நம்பி அந்துவனைக் கேட்டான்; “என்ன அந்துவன்? இருந்த வளமுடைய பெருமாளுக்கு இன்று காலைப் பொழுது புலர்ந்ததும், உன்னுடைய முகத்தில் விழிக்கும் வாய்ப்புக் கிடைக்க விடாமல் இங்கே வந்து விட்டாய்?” “என்ன செய்வது ஐயா? இருந்த வளமுடைய பெருமாளை விட அதிகமான அபாயத்திலிருக்கும் உங்களைப் போன்ற ஒருவருக்கு அந்த நல்ல வாய்ப்பைத் தர வேண்டியிருந்தது. அதனால்தான், இங்கே புறப்பட்டு வந்தேன். கோவிலிலிருந்து திருமஞ்சன நீர் எடுத்து வர வைகைக்குப் புறப்படும் போது, நான் இன்று உங்களைத் தேடி இங்கே வருகிற திட்டம் எதுவும் இல்லை. திருமருத முன் துறைக்கு வந்த பின்பே உங்களை இன்றே, இப்போதே உடனே சந்தித்தாக வேண்டியிருந்த காரியம் ஏற்பட்டு விட்டது.” “அது என்ன அத்தனை அவசரமான காரியம்?” “இதோ, இதைப் பார்த்தால் புரியும் பெரியவரிடமிருந்து இந்த ஒலை இன்று அதிகாலையில் திருமருத முன் துறையில் எனக்குக் கிடைத்தது” என்று அதை எடுத்து நீட்டினான் அந்துவன். இப்படி இந்த ஒலையை அந்துவன் நீட்டிய போது இளையநம்பியையும் முந்திக் கொண்டு விரைந்து அவன் கையிலிருந்து அந்த ஒலையைப் பறிப்பது போல் வாங்கினாள் இரத்தினமாலை. விரைவோடு விளக்கருகே கொண்டு போய், சித்திரக் கரந்தெழுத்துக்களில் எழுதப்பட்டிருந்த அந்த ஒலையைப் படிக்கவும் செய்தாள் அவள். தான் படித்த பின், இரண்டாம் முறையாக இளையநம்பியும் கேட்கும்படி வாய் விட்டுப் படித்தாள் அவள். அந்த ஒலையைப் படித்து முடித்ததும், ஒரிரு விநாடிகள் அவர்களிடையே மெளனம் நிலவியது. அந்துவன்தான் முதலில் அந்த மெளனத்தைக் கலைத்தான். “பெரியவர் விரைந்து அறிவித்திருக்கும் இந்தப் புதிய ‘நல்லடையாளம்’ நம்மவர்கள் எல்லாருக்கும் உடனே அறிவிக்கப்பட வேண்டும், பழைய நல்லடையாளம் எப்படியோ எங்கோ, எப்போதோ எதிரிகளுக்குத் தெரிந்து விட்டது போலிருக்கிறது! அதனால்தான் பெரியவர் விரைந்து இதை அறிவித்திருக்கிறார். அதோடு திருக்கானப் பேர் நம்பி மிகமிகப் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதையும் இதில் எழுதியிருப்பதைப் பார்த்தீர்கள் அல்லவா?” இந்த வினாவுக்கு இரத்தினமாலை மறுமொழி கூறினாள்; “பார்த்தேன்! இந்தப் பொன் கூண்டிலிருந்து இவர் தப்ப ஆசைப்படும் வேளை பார்த்து, அதன் கதவுகளை இன்னும் இறுக்கி மூடச் சொல்லி, இந்த ஆணை கிடைத்திருக்கிறது.” இளையநம்பி எதுவும் பேசவில்லை. மெளனமாக அந்துவன் முகத்தையும், இரத்தினமாலையின் முகத்தையும் பார்த்தபடி நின்று கொண்டிருந்தான். “புறாக்களின் மூலமும், பறவைகளின் மூலமும் கொற்கை முதலிய தென்பாண்டி நாட்டு ஊர்களில் உள்ள நம்மவர்களுக்கு இச்செய்தியை உடன் அனுப்ப வேண்டும். சிறு சிறு ஒலை நறுக்கில் இரகசிய எழுத்துக்கள் மூலம் எழுதி, பழகிய புறாக்களின் கால்களிலும், பழகிய பறவைகளின் கால்களிலும் கட்டி அனுப்ப வேண்டும். இப்போது நான் விரைந்து திரும்ப வேண்டும். இல்லையானால், என்னோடு வந்து திருமருத முன் துறையிலே காத்திருக்கும் மற்ற யானைப் பாகர்களும், ஊழியர்களும் என்மேல் ஐயப்படுவார்கள். மேல் பாண்டி நாட்டுக்கும் கீழ் பாண்டி நாட்டுக்கும் புதிய நல்லடையாளத்தை நான் அனுப்பிவிடுவேன். வட பாண்டி நாட்டுக்குத் திருமோகூர்க் கொல்லன் மூலமாகப் பரவி விடும் என்று பெரியவரே எழுதியிருக்கிறார். தென்பாண்டி நாட்டுக்குச் செய்தி அனுப்பும் பொறுப்பை இந்த மாளிகை ஏற்றுக் கொண்டால் நல்லது” என்றான் அந்துவன். “இந்த மாளிகையில் ஏழு புறாக்கள் இருந்தன. அதில் ஒரு புறா சென்ற திங்களில் எங்கோ சென்று திரும்பும் போது, பருந்துக்கு இரையாகிவிட்டது. ஆறு புறாக்கள் இருக்கின்றன. ஆறு இடங்களுக்குக் கரந்தெழுத்தில் ஒலைத் துண்டுகளை அனுப்பமுடியும்” என்று இரத்தினமாலையும் அதற்கு இணங்கிய பின், அவளிடமும் இளைய நம்பியிடமும் சொல்லி விடை பெற்றுக் கொண்டு, விரைவாகத் திரும்பி நிலவறையில் இறங்கிச் சென்றான் அந்துவன். 18. உட்புறம் ஒரு படிக்கட்டு அந்த ஐவரும் அழகன் பெருமாள் முதலியவர்களை மன்றாடாத குறையாகப் பணிந்து இறைஞ்சிப் பார்த்தார்கள். தாங்கள் கொண்டு வந்திருக்கும் சுவையான பணியாரங்களை உண்டு, பசியாறுமாறு வேண்டினார்கள். மீண்டும் மீண்டும் வந்தவர்களாகிய அவர்கள் தான் பேசிக் கொண்டிருந்தார்களே தவிர, அழகன் பெருமாளோ அவனுடன் இருந்தவர்களோ வாயைத் திறக்கவே இல்லை. வந்த ஐவரில் ஒருவன், மீண்டும் பழைய வாக்கியத்தையே திரும்பவும் சொன்னான்; “நாங்கள் நடுவூர் நன்மை தருவார் குலத்து மதுராபதியாரின் தூதர்கள். எங்களை நீங்கள் புரிந்து கொள்ளாமல் அலட்சியம் செய்வதைக் க்ண்டு நான் மிகவும் வருந்துகிறேன்." அழகன் பெருமாள் இப்போது மறு மொழி கூறவில்லை. அவனுடைய சந்தேகமே, தொடர்ந்து உறுதிப்பட்டுக் கொண்டிருந்தது. வந்திருப்பவர்கள் உண்மையிலேயே உதவ வந்த நண்பர்களாகவும், மதுராபதி வித்தகரின் தலைமைக்கு உட்பட்டவர்களாகவும் இருந்தால், அவரை இப்படி முற்றிலும் அந்நியமான ஒரு பெயரால், 'நடுவூர் நன்மை தருவார் குலத்து மதுராபதியார்’ என்று அழைக்க முடியாது. தன்மையான மனிதர்களிடம், அவரைக் குறிக்கப் 'பெரியவர்' என்ற பெயரே மதிப்புக்குரியதாக வழங்கி வருகையில், இவர்கள் அந்தப் பெயரையே அறியாதவர்கள் போல் புது விதமாகக் கூப்பிட்ட வேறுபாட்டை உணர்ந்து கொண்டான் அழகன் பெருமாள். இந்த வேறுபாடு வெண்பளிங்கிற் சிவப்பு நூல் கோர்த்தது போல் தனியே நிறம் விட்டுத் தெரிந்த ஒரே காரணத்தால்தான், வந்தவர்கள் கூறிய நல்லடையாளச் சொல்லை அவன் பொருட்படுத்தவே இல்லை. தங்களை உளவு அறிய, மாவலி முத்தரையர் சிறைக்குள்ளேயே அனுப்பியிருக்கும் மனிதர்களாகத்தான் இவர்கள் ஐவரும் இருக்க வேண்டும் என்று அழகன் பெருமாளுக்கு உறுதியாகப் புரிந்துவிட்டது. ஆகவே அவன் உணர்வுகள் நன்றாக விழித்திருந்தன. அப்போது வந்தவர்களில் ஒருவன் மீண்டும் பேசலானான்; “நடுவூர் நன்மை தருவார் குலத்து மதுராபதியாரின் ஆட்கள் என்று சொல்லியும் நீங்கள் எங்களை மதிக்கவில்லை! ‘கயல்’ என்று அடையாளச் சொல்லைத் திரும்பத் திரும்பக் கூறியும் ஏற்கவில்லை...” முதன்முதலாக இப்போதுதான் அழகன் பெருமாள் அவர்களுக்கு மறுமொழி கூற முன் வந்தான். வந்திருக்கும் பகைவர்களைக் குழப்பத்தில் ஆழ்த்த வேண்டும் என்கிற திட்டத்தோடு, பேசியவனிடம் அழகன் பெருமாள் வினாவத் தொடங்கினான்:- “ஐயா! உங்கள் அக்கறையைக் கண்டு மிகவும் வியப்படைகிறேன். ஆனால் ‘நடுவூர் நன்மை தருவார் குலத்து மதுராபதியார் என்று நீங்கள் ஏதோ ஒரு பெயர் சொல்கிறீர்களே, அந்தப் பெயர்தான் எங்களுக்கு விளங்கவில்லை. இன்னும் நீங்கள் ஐவரும் இங்கே உள்ளே நுழைந்தவுடன் ‘கயல்’ என்று ஏதோ ஒரு வார்த்தை கூறினீர்கள், அதையும் எதற்காகக் கூறினீர்கள் என்று எங்களுக்குப் புரியவில்லை.” வந்தவர்களின் முகங்களில் குழப்பம் தெரிந்தது. முதலில் அழகன் பெருமாளோடு பேசியவனே, திரும்பவும் பேசத் தொடங்கினான்:- “விளங்காமல் இருப்பதற்கும், விளங்காமல் இருப்பது போல் பாவனை காட்டுவதற்கும் வேறுபாடு தெரிய முடியாத அளவுக்கு நாங்கள் சிறுபிள்ளைகள் இல்லை. புரியாமல் இருப்பதற்கும், புரியாததுபோல் நடிப்பதற்கும் உள்ள வேறுபாட்டை எங்களால் புரிந்து கொள்ள முடியும்.” புதியவனின் இந்த மறுமொழியில் இருந்த உணர்ச்சி வேகமும், கோபமுமே அழகன் பெருமாளின் சந்தேகம் நியாயமானது என்பதை நிரூபித்து விட்டன. வந்திருப்பவர்களின் உரையாடலில் தமிழ்ச் சொற்கள் எல்லாம் தீர்ந்து போய்த் தாங்கள் களப்பிர ஒற்றர்கள் என்பதை அவர்களாக அறிவிப்பது போல், இயல்பாய் அவர்களால் பேச முடிந்த பேச்சைப் பேசுகிற வரை விடுவதில்லை என்ற பிடிவாதத்துடன் அவர்களைத் திகைக்கச் செய்தான் அழகன் பெருமாள். அவன் எண்ணி எதிர்பார்த்தது நடந்தது. நடிப்பதற்குரிய வார்த்தைகள் தீர்ந்து, வந்தவர்கள் கைகளைப் பிசைந்து கொண்டு நிற்க நேர்ந்த சமயம் பார்த்து, அழகன் பெருமாள் சிரித்துக் கொண்டே... “நல்லது! நீங்கள் விடை பெற்றுப் புறப்பட வேண்டிய நேரம் வந்து விட்டது. இதோ உங்கள் பணியாரக் கூடையையும் எடுத்துக் கொண்டு போகலாம். களப்பிரர்கள் விருந்தினருக்கு நஞ்சு கலந்த பணியாரங்களை உணவாகப் படைக்கும் அசுர வழக்கத்தை எப்போது கற்றார்கள் என்று எங்களுக்கு வியப்பாயிருக்கிறது. ஆனாலும் அதற்காக உங்களை நாங்கள் மன்னிக்க முடியும்..." “குற்றவாளிகள் மன்னிக்க முடியாது. மன்னிக்கப்பட முடியும்!” “உண்மைதான்! யார் குற்றவாளிகள் என்பது தெரிந்துதான், நான் உங்களை மன்னிக்க முடியும் என்று சொன்னேன். உணவில், நீரில், பாலில் நஞ்சிடுபவர்களை விடப் பெரிய குற்றவாளிகள், நரகத்தில் கூட இருக்க முடியாது.” “யாரிடம் பேசுகிறீர்கள் என்று தெரிந்துபேசுங்கள்!” “அதுதான் முதலிலேயே தெரிந்துவிட்டதே ஐயா! தெரிந்துதான் ஒன்றுமே பேசாமல் இருந்தேன். பேசாமல் இருந்தவனை, நீங்கள் தான் பேச வைத்தீர்கள். இப்போதோ நான் பேசினால், உங்களுக்கே கோபம் வருகிறது. தப்பிச் செல்ல உதவுவதற்கு வந்திருப்பதாகச் சொல்லிக் கொண்டு வந்தீர்கள். விரோதியைப் போல் கோபித்துக் கொண்டு புறப்படுகிறீர்கள். நீங்கள் நண்பர்கள் போல் வந்ததற்கும் நாங்கள் பொறுப்பில்லை. நீங்கள் விரோதிகள் போல் இப்போது இப்படிக் கடுங்கோபத்தோடு திரும்புவதற்கும் நாங்கள் பொறுப்பில்லை.” “சிறைப்பட்டிருப்பவர்களுக்கு இவ்வளவு வாய்க் கொழுப்பு ஆகாது.” “சிறைப்படுத்தியிருப்பவர்களுக்கு இவ்வளவு மமதை இருந்தால், சிறைப்பட்டவர்களுக்கும் ஏதாவது இருக்கத் தானே செய்யும்?” இதைக் கேட்டு அழகன் பெருமாளை உறுத்துப் பார்த்தார்கள் அவர்கள். அழகன் பெருமாளும் நண்பர்களும் ஒதுங்கி நின்று, அவர்களுக்கு வழி விட்டனர். வந்தவர்கள் ஐவரும் ஏமாற்றத்தோடும் பணியாரக் கூடையோடும் திரும்பிச் சென்ற பின், “இது ஒரு பெரிய சூழ்ச்சி நாடகம்! நம்மை மாட்ட வைப்பதற்கு மிக மிகத் தந்திரமாக வலை விரித்திருக்கிறார்கள் களப்பிரர்கள். விழிப்பாக இருந்ததால் பிழைத்தோம்” என்று நண்பர்களை நோக்கிக் கூறினான் அழகன் பெருமாள். எல்லாரும் பசிக் களைப்போடு இருந்தாலும் சூழ்ச்சிக்கு ஆளாகாமல் தப்பி விட்டோம் என்ற மன நிறைவு புதிய தெம்பைக் கொடுத்திருந்தது. சில கணங்களுக்குப் பின் அழகன் பெருமாள், தேனூர் மாந்திரீகன் செங்கணானை நோக்கி, “செங்கணான்! காரியத்தைக் கவனிக்கலாம்! தென்னவன் மாறனும், திருமோகூர் மல்லனும் அடைப்பட்டிருக்கும் பாதாளச் சிறை இப்போது இங்கே நாம் நின்று கொண்டிருக்கும் தளத்திற்கு கீழே இருக்கிறது என்றாய்! அதோடு நாம் நிற்கும் இந்தக் கல் தளத்தில் எங்கோ ஒர் கோடியில் சிறைக்குச் செல்லும் படிக்கட்டு ஒன்று இருப்பதாகவும் என்னிடம் இரகசியமாகத் தெரிவித்தாய்! அந்தப் படிக்கட்டை அடைவதற்கு, எந்த இடத்தில் தளத்தின் மேற்பகுதிக் கற்களைப் பெயர்க்க வேண்டும் என்பதை வந்து காட்டு!” எனக் கட்டளையிட்டான். மாந்திரீகன் மைச்சிமிழை மீண்டும் எடுத்துப் பார்த்து விட்டுச் சிறிது சிந்தித்த பின் ஈசானிய மூலையில், இரண்டு வரிசையான அடுத்தடுத்த தளக் கற்களை அவற்றின் மேல் நடந்து காட்டி அடையாளம் சொன்னான். உடனே அழகன் பெருமாள் தன்னோடு இருந்தவர்களை அருகில் கூப்பிட்டு, அதிக ஒலி எழாமல் அந்த இரு தளக் கற்களைத் தூக்கி நகர்த்துமாறு உத்தரவிட்டான். அவர்கள் மூச்சு திணறும்படி முதற் கல்லைத் தூக்க முயன்று கொண்டிருந்தனர். மூச்சு இரைக்கும் அந்த ஒலி கூடக் காட்டிக் கொடுத்து விடுமோ என்று தயக்கமாகவும் பயமாகவும் இருந்தது அழகன் பெருமாளுக்கு. சிறிது நேரத்தில் முதற் கல்லைப் பாதி நகர்த்தி விட்டார்கள் நண்பர்கள். கீழே இறங்கும் படிக்கட்டுகள் கூடத் தெரிந்தன. பாசி படிந்து வழுக்கலாக இருந்த முதற் படியைக் கை நீட்டித் தொட்டுப் பார்க்கக் கூட முடிந்தது. அந்த நேரம் பார்த்து, வெளியே வீரர்கள் புடை சூழ, மாவலி முத்தரையரும், பூத பயங்கரப் படைத் தலைவனும் துழைந்து, இவர்கள் இருந்த சிறைக்கோட்டக் கதவைத் திறந்து கொண்டு உள்ளே வரலானார்கள். அழகன் பெருமாள் திடுக்கிட்டுப் போனான். செய்து கொண்டிருந்த காரியத்தை எப்படி உடனே மறைப்பது என்று புரியவில்லை. பின்புறம் திரும்பி நண்பர்களுக்கு அவன் சைகை செய்யக் கூட அவகாசம் இல்லை. அவர்களும் உள்ளே வரத் தொடங்கி விட்டார்கள். வருகிறவர்களை முன்பாகவே எதிர் கொண்டு சென்றான் அழகன் பெருமாள். திகைப்பினால் அவன் நெஞ்சு விரைந்து அடித்துக்கொண்டது, பதறியது. 19. மரபு என்னும் மூலிகை அந்த மலைச் சாரலில் சிலம்பாற்றின் கரையில், பொழுது புலர்வது மிக மிக அழகாயிருந்தது. பசுமைச் செறிவினிடையே பல்லாயிரம் பல்லாயிரம் இரத்தினங்களைக் கீழ்த் திசையிலிருந்து தூவினாற் போலக் கதிரவனின் ஒளி வீச்சுக்கள் நுழைந்தன. பிரம்ம முகூர்த்தமாகிய மங்கல வைகறை வேளையிலேயே, மதுராபதி வித்தகர் துயில் எழுந்து புறப்பட்டு விட்டார். அவரைப் பொறுத்த வரை ஆழ்ந்த உறக்கம் என்பதை நீத்துப் பல ஆண்டுகள் ஆகியிருந்தன. பாண்டிய குலத்தை மறுபடி அரியணை ஏற்றுகிற வரை அவரால் உறங்க முடியாது போலிருந்தது. எப்போதும் எதையாவது சிந்தித்துத் திட்டமிட்டுக் கொண்டே இருந்ததால், அவர் உறங்குவது போல் உடலை மான் தோலில் கிடத்தியிருந்தாலும் அது அறிதுயிலாகவே அமைந்தது. அந்த அறிதுயிலில், நினைப்புகள் உண்டு. செயல்களைப் பற்றிய எதிர்காலச் சிந்தனைகள் உண்டு. தவங்களும் உண்டு. ஆனால், துயில்தான் கிடையாது. முந்திய இரவில் திருமோகூர்க் கொல்லன் மாறோகவள நாட்டுக் கொற்கைப் பெருஞ்சித்திரனைக் கொற்றவைக் கோயிலில் சந்தித்துத் திருமால் குன்றத்துக்கு அழைத்து வந்ததையும், நவநித்திலங்களைக் கொண்டு வந்து சேர்த்ததையும், புதிய நல்லடையாளச் சொல்லை நியமித்து அனுப்பியதையும், இனி விளைய இருக்கும் மேல் விளைவுகளையும் சிந்தித்தபடியே, சிலம்பாற்றில் நீராடச் சென்று கொண்டிருந்தார் அவர். நிழல் போல் அவரைப் பாதுகாத்துப் பின் தொடரும் ஆபத்துதவிகள் இருவர், ஒரு பனைத் தூரம் பின்னால் அவரைத் தொடர்ந்து வந்து கொண்டிருந்தனர். அவர் சிலம்பாற்றின் கரையை அடைந்த போது வேறொரு திசையிலிருந்து எதிர்ப்பட்ட முனையெதிர் மோகர் படை வீரர்கள் இருவர் அவரிடம் ஏதோ சொல்ல வந்தவர்கள் போல வணங்கி நின்றனர். அவர்கள் கூற வந்ததைக் கேட்கக் கருதி அவருடைய விரைந்த நடை தயங்கியது. இந்த மூப்பிலும் அவர் நடை, மற்றவர்களால் உடன் தொடர முடியாத அளவு வேகமாக இருக்கும். வில்லிலிருந்து புறப்பட்ட அம்பு போல் விரையும், அந்த நடையைத் தொடர முடியாமல், காராளரும், கொல்லனும், பிற வீரர்களும் பலமுறை சிரமப் பட்டிருக்கிறார்கள். நடையைப் போலவே பலவற்றில் அவரைப் பின் தொடர முடியாதவர்களாகவே இருந்தார்கள் அவர்கள். அவரை எதிர் கொண்டு வந்த முனையெதிர் மோகர் படை வீரர்கள், பணிந்த குரலில் கைxகட்டி நின்று கூறலாயினர்:- “ஐயா! நேற்றிரவு திருமோகூர்க் கொல்லன் இங்கு அழைத்து வந்த கொற்கை நகரப் பிள்ளையாண்டான் இன்னும் உறக்கத்திலிருந்து எழுந்திருக்கவில்லை. நன்றாக உறங்கிக் கொண்டிருக்கிறார். எழுப்பலாமா, கூடாதா என்றும் தெரியவில்லை. நேற்று இரவு எங்களிடம் ஒப்படைக்கும் போது, ‘காலையில் அந்தப் பிள்ளை தங்களைக் காண வேண்டியிருக்கும்’ என்று கூறி உறங்கிக் கொண்டிருப்பவரை எழுப்பி அழைத்து வருகிறோம்...” “வேண்டியதில்லை! அவன் உறங்கட்டும். நன்றாக உறங்கட்டும். அவனைப் போன்றவர்கள் உறங்கினாலும், விழித்திருந்தாலும் ஒன்றுதான்!” அவருடைய மறு மொழி கிடைத்ததும் விரைந்து திரும்பினார்கள் அவர்கள். ஏதோ சொல்ல நினைத்தவர் போல், அவர்களில் ஒருவனை மீண்டும் கை தட்டி அழைத்தார் அவர். இருவரில் ஒருவன் அவரருகே வந்தான். குரலை முதலில் தணித்து, அவன் காதருகே ஏதோ கூறிய பின், “ஞாபகம் வைத்துக் கொள் மறந்து விடாதே. மீண்டும் என்னிடம் வந்து தெரிவிக்க வேண்டும்” என்று எதையோ உரத்த குரலில் சொல்லி அவனை அனுப்பினார். ஏதோ ஒரு சக்தி வாய்ந்த வேரினால் தந்த சுத்தி[1] செய்து முடித்தார் அவர். வயதிலும் கட்டுவிடாமல் வரிசையாக மின்னிய வெண் பற்கள் அவருடைய தவம், உடலைப் பாதுகாத்திருக்கும் பான்மையைக் காட்டியது. சிலம்பாற்று நீர் படிகம் போல் இருந்ததனாலும், தெளிவின் காரணமாகவும், ஆழம் கண்டு பிடிக்க இயலாததாயிருந்தது. முழங்காலளவு கூட ஆழம் இராதோ என்று தோன்றிய நீரில் அவர் இறங்கி நின்றபின் அவருடைய உயரத்துக்கே மார்பளவு மூழ்கியது. தவத்தினால் மல மாசுகளைச் சுட்டெரித்த அந்தச் செம்பொன் மேனி நீர் நடுவே பெரிய செந்தாமரைப் பூ ஒன்று பூத்து நிற்பது போல் காட்சி அளித்தது. ஆற்று நீரில் மூன்று முறை மூழ்கி எழுந்து, கிழக்கு நோக்கிக் கதிரவனை வணங்கி, நியமங்களைச் செய்த போது அவர் விழிகளில் தெய்வீக ஒளி மின்னியது. குளிர்ந்த நீரில் அமிர்தத்தைப் போல், உடலை நித்திய இளமையுடன் வாழ வைக்கும் ஆற்றல் இருக்கிறது என்று நம்பினார் அவர். தமிழில் நீர்மை என்ற பதத்துக்குக் குணம், பண்பு என்றெல்லாம் கூடப் பொருள் இருப்பதைப் பலமுறை சிந்தித்து வியந்திருக்கிறார் அவர். குணங்களின் உருவகமே பழகும் தண்ணீரின் மகத்துவத்தினால்தான் அமைகிறதோ என்று கூட அவர் நினைத்ததுண்டு. சிலம்பாற்று நீரோ மேனியில் மிருதுவான பட்டு ஒழுகுவது போல் படும் தன்மையை உடையது. பட்டுப் போன்ற பனி நீர் அவரை அதிக நேரம் விரும்பி நீராடச் செய்தது அன்று. ‘கொல்லன் இந்நேரத்திற்குள் வையைக் கரையில் திருமருத முன்துறைக்குப் போய் அங்கே புதிய நல்லடையாளச் சொல் பற்றிய செய்தி பரவச் செய்து விட்டு உடனே விடிவதற்குள் திருமோகூர் திரும்பிக் கொண்டிருப்பான்’ என்று நினைத்துக் கொண்டார் அவர். இந்தப் புதிய நல்லடையாளச் சொல் போய்ச் சேருவதற்குள், பழைய நல்லடையாளச் சொல்லை வைத்து எதிரிகள் எதுவும் குழப்பங்கள் புரிந்திருப்பார்களோ என்ற தயக்கமும் ஒரு கணம் அவர் மனத்தில் உண்டாயிற்று அப்போது. அப்படிக் குழப்பங்கள் நடந்திருக்க முடியாது என்பதும் அடுத்தகணமே அவருடைய மாசுமறுவற்ற மனத்தில் தெளிவாகத் தோன்றியது. நீராடிக் கரையேறி மீண்டும் தம்முடைய தனி இடத்துக்குத் திரும்பி அவர் வழிபாட்டையும், நியமங்களையும் முடித்துக் கொண்டு எழுந்தபோது, காலையில் சந்தித்த முனையெதிர் மோகர்களில் ஒருவன் திரும்பி வந்து அவரைக் காணக் காத்திருந்தான். ‘என்ன?’ என்று பார்வையாலேயே அவனை வினாவினார் அவர். அந்தக் கூரிய பார்வையில் உள்ளடங்கி நிற்கும் கேள்வியும், குறிப்பும் வந்தவனுக்குப் புரிந்தன. அவன் மெல்லிய குரலில் அருகே நெருங்கிக் கூறினான்:- “ஐயா! இன்னும் கூட அந்தக் கொற்கை நகர்ப் பிள்ளையாண்டான் எழுந்திருக்கவில்லை. தாங்கள் கூறியனுப்பிய படி அவனுடைய வலது தோளின் மேற்பகுதியைப் பார்த்தேன். அங்கே சங்கு முத்திரை பொறிக்கப்பட்டிருந்தது. தங்கள் கட்டளையின்படியே இதைத் தங்களிடம் தெரிவித்து விட்டுப் போகவே வந்தேன்.” “நல்லது! அவன் உறங்கி எழுந்ததும், நீராடிப் பசியாறிய பின், அவனை நீயே இங்கு என்னிடம் அழைத்து வர வேண்டும். இப்போது நீ போகலாம்” என்று அவனிடம் ஆணையிட்டு அனுப்பினார் மதுராபதி வித்தகர். அவன் புறப்பட்டுச் சென்ற பின்பும் சிறிது நேரம் வரை அவர் ஏதோ சிந்தனையில் இலயித்தவராக அங்கேயே நின்று கொண்டிருந் தார். வலிமையும் கம்பீரமும் வாய்ந்த சிங்கம் ஒன்று, காட்டில் தனியே நின்று கொண்டிருப்பது போல் அந்த நிலையில் அவர் காட்சியளித்தார். நேர் எதிரே அம்பு பாய்வது போல் பார்க்கின்ற அந்தப் பார்வையும், சூழ இருந்த மலையின் பசுமை அடர்த்தியும், பாறைப் பிளவாகிய குகை வாயிலும் சேர்ந்து, அப்போது அவரைச் சிங்கத்தோடு ஒப்பிடுவதற்கு மிகவும் பொருத்தம் அளித்தன. சிறிது நேரத்திற்குப் பின் உள்ளே திரும்பி, பாறைப் பிளவில் மிகவும் பத்திரமாக மறைத்து வைத்திருந்த ஒலைப் பெட்டியை எடுத்து, அதில் முடிச்சுப் போல் தென்பட்ட பட்டுத் துணிப் பொதியை அவிழ்த்து ஒன்பது முத்துகளையும் கூர்ந்து கவனித்தார். உருண்டு திரண்டு அளவில் சற்றே பெரியனவாகவும், நிலவின் ஒளியை உமிழ்வது போல் குளிர்ந்த கதிர் விரிப்பனவாகவும் இருந்த அந்த வெண்முத்துகளை என்ன காரணத்தாலோ, நெடுநேரம் கண்களை இமையாமல் பார்த்துக் கொண்டிருந்தார் அவர். பார்த்து முடித்ததும், மீண்டும் அந்த முத்துகளை, அவை இருந்த பட்டுத் துணியிலேயே கவனமாக முடிந்து வைத்தார். பின்பு அதே ஒலைப் பேழையினுள் இருந்து சில தாமிரத் தகடுகளையும், ஒலைச் சுவடிகளையும் எடுத்துத் தனித் தனியே பார்த்தார். பாண்டிய குலத்தின் அரச வம்சாவளியைப் பற்றியும், களப்பிரர்கள் கைப்பற்றி ஆளத் தொடங்கிய பின் அந்தப் பழைய பாண்டிய வம்சத்தின் கடைசிக் கொழுந்துகள் எப்படி, எங்கே யார், யாராக எஞ்சியிருக்கின்றனர் என்ற குறிப்புகள் பற்றியும் அந்தச் செப்பேடுகளிலும், ஒலைச் சுவடிகளிலும், மதுராபதி வித்தகரின் தந்தையார், பாட்டனார், முப்பாட்டனார் காலத்துக் கணக்குகள் எழுதப்பட்டிருந்தன. அவற்றைப் பரிசீலனை செய்து பரிசோதனை பார்த்த பின், கைவசம் இருந்த வெற்று ஒலைகளில் எழுத்தாணியால் ஏதேதோ குறித்து, ஒரு கணக்குப் பார்த்தார் மதுராபதி வித்தகர். நாள், நட்சத்திரம், திதி உட்படப் பல பிறப்புக் கணிதக் குறிப்புகள் அந்த ஒலைகளிலே இருந்தன. சில கணிப்புகளை எழுதிய போது மேலே எழுதத் தோன்றாமல் அவர் கையும் தயங்கி நடுங்கியது. முகமும் இலேசாக இருண்டது. வேறு சில குறிப்புகளை எழுதும் போது அவர் கை விரைந்து உற்சாகமாக எழுதியது. முகத்திலும் கண்களிலும், ஒளியும், மகிழ்ச்சியும் மெல்லிய சாயல்களாகத் தென்பட்டன. களப்பிரர் கொடுங்கோலாட்சி ஒழிந்து, மீண்டும் பாண்டியர் பேரரசு தழைப்பதற்கான சாத்திய, அசாத்தியங்களை நாள்களாலும், கோள்களாலும் கணித்துப் பார்க்க முயன்றார் அவர். அவர் முகத்தில் மாறி,மாறி இருளும், ஒளியும் தெரிந்தன. சில நாழிகை நேரம் இந்தக் கணிப்பில் கழிந்தது. அரும் பெரும் மூலிகை ஒன்றைப் பத்திரமாகச் சேகரித்து வைப்பது போல் அந்த மாபெரும் இரகசியங்களை இத்தனை காலமாகக் கட்டிக் காத்து வந்திருக்கிறார் அவர். பாண்டியர் மரபில் தோன்றிய மீதமிருந்த ஐவரில், இருவர் களப்பிரர்களால் கொலை செய்யப்பட்ட காலங்களையும் எண்ணிப் பார்த்தார் அவர். சுவடிகளில் அந்த இருவரின் பிறப்பு, வளர்ப்பு, நாள் கோள்களைப் பற்றிப் படித்தவுடன், அது தொடர்பான கழிவிரக்க நினைவுகளையும், துயரங்களையும் அவர் மனம் அடைந்தது. இறந்து விட்டவர்களைக் கழித்து, மீதியிருக்கும் மூவரைக் கணக்கிட்ட போது மூன்று முனைகளை உடைய ஒரு திரிசூலம்தான் அவருக்கு உருவகமாக நினைவில் தோன்றியது. அந்தத் திரிசூலத்திலும், ஒரு முனை மிகவும் மருங்கிக் குன்றிப் போயிருந்தது போல் பட்டது. தென்னவன் சிறுமலை மாறனும், திருக்கானப்பேர்ப் பாண்டியர் குல விழுப்பரையரின் பேரன் இளையநம்பியும், எவ்வளவிற்குக் கூர்மையாகவும், எதிரிகளைப் பாய்ந்து அழிக்கும் வல்லமை உடையவர்களாகவும் இருந்தார்களோ, அவ்வளவிற்கு மூன்றாமவனாகிய கொற்கைப் பெருஞ்சித்திரன் எதற்கும் பயனற்ற மந்தத் தன்மை உடையவனாக இருந்தான். பெரியவர் மதுராபதி வித்தகருக்கு இது முன்பே தெரியும் என்றாலும், இளையநம்பியையும், தென்னவன் மாறனையும் பற்றிய நம்பிக்கையில் இந்த மூன்றாமவனைப் பற்றிய பலவீனத்தை மறந்திருந்தார் அவர். எங்கெங்கோ மறைந்து வளர்ந்து வந்த இந்த மூவருமே, இப்போது பாண்டியர் கோநகரை நெருங்கி வந்திருக்கிறார்கள் என்பது அவருக்கு நம்பிக்கையை அளித்திருந்தது. பொருளுக்கு உரிமையும் உடமையும் கொண்டாட வேண்டியவர்கள் அதன் மிக அருகே நெருக்கமாக வந்து விட்டார்கள் என்பது பொருள் நிச்சயம் மீட்கப்படும் என்று நம்புவதற்கு இடம் கொடுத்தது. ஒலைப் பேழையை மூடிப் பட்டுக் கயிற்றால் கட்டி, மீண்டும் அதனைப் பாறைப் பிளவில் மறைத்து வைத்து விட்டு அவர் திரும்பி நிமிர்ந்த போது முனையெதிர் மோகர் படையின் அந்த வீரன், கொற்கைப் பிள்ளையாண்டானோடு அங்கே உள்ளே வந்து கொண்டிருப்பதைக் கண்டார். ↑ பல் விளக்குதல் 20. பெருஞ்சித்திரன் பேசினான் நீராடிப் புலர்த்திய கூந்தல் முதுகில் புரள, அந்தக் கூந்தலோடு தெரிந்த அவன் முகம் பெண் பிள்ளை ஆண் கோலம் புனைந்து வருவது போலிருந்தது. பெரியவரை வணங்குவதற்காகத் தரையில் நெடுஞ்சாண் கிடையாக அவன் விழுந்த போது கூட இயல்பாக வணங்குவதற்குக் கீழே கிடப்பது போல அமையாமல் நாணிக் கோணித் தடுக்கி விழுவது போல் அமைந்தது. வணங்குகிறவனை வாழ்த்த வேண்டுமே என்ற முறைக்காகப் பெரியவர் அவனை வாழ்த்தினார். “நீ பாண்டியகுல அரசுடைமைச் சின்னங்களாகிய நவநித்திலங்களை, இங்கே கொண்டு வந்து சேர்த்திருக்கிறாய்! அதற்காக உனக்கு நன்றி சொல்ல வேண்டும்! உன் குடும்பத்து உடைமையை, அந்தக் குடும்பத்தில் ஒருவனாகிய நீயே கொண்டு வந்திருப்பதற்கு நான் நன்றி கூறுவது முறையில்லை என்றாலும், உன்னை ஒத்த பருவத்து விடலைப் பிள்ளைக்கு நன்றியும், பாராட்டும் பெரிய மகிழ்ச்சியைக் கொடுக்கலாம் என்பதை உணர்ந்தே நான் இப்படிப் பாராட்டுகிறேன்." அந்தப் பிள்ளை விடலைத் தனம் நீங்கிப் பொறுப்புள்ளவனாக வளர்ந்திருக்கிறானா, இல்லையா என்பதை மிகமிகத் தந்திரமான முறையில் பரிசோதனை செய்ய விரும்பித்தான் அவர் இவ்வாறு சிறிதும் பொருத்தமற்ற விதத்தில் சற்றே அதிகமான வார்த்தைகளைக் கொட்டி அவனுக்கு நன்றி கூறியிருந்தார். தகுதியற்றவனைத் தூற்றி வசை பாடித்தான் அவமானப்படுத்த வேண்டும் என்பதில்லை; அளவற்றுப் புகழ்வதன் மூலமாகவும் அவமானப்படுத்த முடியும். எதிரிகளை வசை பாடி அவமானப் படுத்துவது பாமரர்கள் காரியம். துதிபாடி அவமானப் படுத்துவது அரச தந்திரிகள் காரியம். கொற்கைப் பெருஞ்சித்திரன் மதுராபதி வித்தகருக்கு எதிரி இல்லை என்றாலும், பலவீனமான துணைவனாகவே இருந்தான். முதல் தரமான விரோதியை விடப் பலவீனமான நண்பன் கெடுதலானவன் என்று பெரியவருக்குத் தெரியும். தாம் அவனுக்கு நன்றி கூறி, அவன் நவநித்திலங்களைக் கொற்கையிலிருந்து கொண்டு வந்து சேர்த்ததைப் பாராட்டிய வஞ்சப் புகழ்ச்சியைப் புரிந்து கொண்டு உடனே அவன், “ஐயா, நீங்கள் இந்த எளியேனை நன்றி கூறிப் பாராட்டலாமா? நானும் என் மரபினரும் தங்களுக்கு அல்லவா, கல்பகோடி காலத்துக்கு நன்றி சொல்ல வேண்டும்?” என்பதாக உபசாரத்துக்காகவாவது சொல்கிறானா, இல்லையா என்று எதிர்பார்த்தே அவர் பேசியிருந்தார். அரச குடும்பத்துப் பிள்ளைக்கு இருக்க வேண்டிய தந்திரமும், உடனே அநுமானித்து முடிவெடுக்கும் இயல்பும், இந்தப் பிள்ளையிடம் சிறிதேனும் இருக்கிறதா, இல்லையா என்று முடிவாக அறியவே அவர் இதைச் செய்ய வேண்டியிருந்தது. கொற்கைப் பெருஞ்சித்திரனோ, அவர் தன்னைப் புகழ்ந்து நன்றி சொல்லுவதை மெய்யாகவே வார்த்தைக்கு வார்த்தை பொருளுள்ளதாக எடுத்துக் கொண்டு மகிழ்ந்து முகம் மலர்ந்தான்.அதோடு அமையாமல், “ஐயா! வழி நடைக் களைப்பும் சோர்வும் எனக்குச் சொல்லி மாளாத அளவு வேதனையைக் கொடுத்து விட்டன. இந்த முனையெதிர் மோகப் படை வீரர் மட்டும் வந்து, என்னை எழுப்பியிருக்க வில்லையாயின் இன்னும் மூன்று நாளானாலும், என்னுடைய தூக்கம் கலைந்திருக்காது” என்றான் பெருஞ்சித்திரன். மதுராபதி வித்தகர் பொறுமையாக அதைக் கேட்டுக் கொண்டார். அவர் மனம் உள்ளே நகைத்தாலும், முகம் சலனமற்று இருந்தது. “அப்படியா? நாம் நன்றாக உறங்க வேண்டும் என்பதற்காகத்தானே களப்பிரர்கள் நமக்குப் பல்லாண்டு காலமாக ஆட்சிப் பொறுப்பிலிருந்து ஒய்வு கொடுத்திருக்கிறார்கள் பெருஞ்சித்திரா? கொற்கையில் இவ்வளவு காலமாக நீ செய்து கொண்டிருந்ததும் அதுதானே?” அவருடைய அந்தக் கேள்விக்கு அவன் மறுமொழி கூறவில்லை. இப்போது அவன் தலை குனித்து நின்றான். அவர் தன்னைப் புகழவில்லை என்பதும், சினத்தோடு எள்ளி நகையாடிப் பேசுகிறார் என்பதும் மெல்ல அவனுக்கு உறைத்து விட்டது. எனவே, அவனால் அவருக்கு உடனே மறுமொழி எதுவும் கூற முடியவில்லை. “சோனகர் நாட்டிலிருந்து வரும் குதிரைக் கப்பல்கள் கொற்கைத் துறைக்கு வந்து விட்டனவா, இல்லையா? அந்தக் கப்பல்கள் பற்றிய விவரங்களை உடனுக்குடன் அனுப்ப வேண்டும் என்று கூறியிருந்தும், நீ அதன்படி செயல்படவில்லை.” “.........” “கொற்கைக் குதிரைக் கொட்டாரத்து இளநாக நிகமத்தான் எப்படி இருக்கிறான்? அவனுக்காவது பாண்டிய மரபின் மேல், இன்னும் நன்றியும், நம்பிக்கையும் நன்றாக இருக்கிறதா இல்லையா?” “..........” “நீ விழித்துக் கொண்டிருக்கிறாயா? அல்லது என் எதிரே நின்றபடியே உறங்குகிறாயா என்பதாவது எனக்கு உடனே தெரிய வேண்டும்! நான் கேட்கக் கேட்க நீ பதிலே சொல்லாமல் நின்று கொண்டிருந்தால் என்ன அர்த்தம்?” இந்தக் குரலின் கனம் தன்னை அழுத்துவது போல் உணர்ந்தான் கொற்கைப் பிள்ளையாண்டான்.அவனுடைய நா பேச மேலெழாமல் ஒட்டிக் கொண்டாற் போல ஆகி விட்டது. துணிந்து பேசலாம் என்றாலோ நாக்குழறி விடுமோ என்றும் பயமாக இருந்தது. அவருடைய கண்கள் இரண்டும் இமையாமல், அவனையே பார்த்துக் கொண்டிருந்தன. ஒவ்வொரு வார்த்தையாக மெல்ல அவன் பேசலானான். “குதிரைக் கப்பல் வந்து சில நாட்கள் ஆகிவிட்டன... ஆனால், அந்தக் குதிரைகளை எல்லாம் உடனேயே அங்கிருந்து இங்கே கோநகரத்துக்குக் கொண்டு... வந்து விட மாட்டார்கள். ஏறக்குறைய ஆறு திங்கள் காலமாவது அவற்றைப் பழக்கி வசப்படுத்திய பின்பே ஏறிப் பயணம் செய்யவோ, தேர்களில் பூட்டவோ, கடிவாளமிடவோ, அவை பயன்பட முடியும்.” “போதும்! போதும்! பேச்சை நிறுத்து. எனக்கு நீ குதிரையின் விலங்கியல்புகளைப் பற்றிப் பாடம் நடத்த வேண்டிய அவசியம் இல்லை. கப்பல்கள் வந்தாயிற்றா, இல்லையா என்பதுதான் உன்னிடமிருந்து எனக்குத் தெரியவேண்டும்.” “அதுதான் வந்தாயிற்று என்று முதலிலேயே சொன்னேனே...?” “குதிரைக் கோட்டத்து இளநாக நிகமத்தான்[1] பற்றி நான் கேட்ட கேள்விக்கு நீ இன்னும் மறுமொழி கூறவேயில்லையே?” “அவர் என்னிடம் மனம் விட்டு எதுவும் பேசுவதில்லை. நாளும், நேரமும் குறிப்பிட்டு நவ நித்திலங்களைக் கொண்டு வந்து சேர்க்குமாறு நீங்கள் செய்தியனுப்பிய பின் என்னைக் கூப்பிட்டுப் பல அறிவுரைகளும், எச்சரிக்கைகளும் செய்த பின் திருமோகூருக்கு அனுப்பி வைத்தார். இன்னொன்று இப்போதுதான் நினைவு வருகிறது. நான் அங்கிருந்து புறப்படுமுன் தங்களிடம் தெரிவிப்பதற்கென்று ஏதோ சில அந்தரங்கமான செய்திகளைத் தொகுத்து, என்னிடம் உரைப்பதாகக் கூறியிருந்தார். புறப்படும் முன்பாக நானும் அவற்றை எல்லாம் நினைவூட்டிக் கேட்டேன். ஆனால் என்ன காரணத்தாலோ கடைசியில் எதுவும் கூறாமலே, முத்துகளுடன் அவர் என்னை அனுப்பிவிட்டார்....” “கூறுகிறவருக்கு நம்பிக்கை ஏற்படுத்த முடியாவிட்டால், கூறப்படுகிறவர்களால் எதையும் பெறமுடியாமல் போவது இயல்பு...” “.......” “நிகமத்தான் இங்கு வருவதாகச் சொன்னானா?” “என்னிடம் அப்படி ஏதும் சொல்லவில்லை... ஆனால், வந்தாலும் வரலாம் ஐயா!” “பதில் மட்டும் போதும்! உன்னுடைய அநுமானமோ, உய்த்துணர்வோ எனக்குத் தேவையில்லை. ஏனெனில் அவற்றைச் செய்யவோ, சொல்லவோ போதிய பக்குவம் உனக்கு வந்திருப்பதாகத் தோன்றவில்லை. இப்போது நீ போகலாம். நான் மறுபடி சொல்கிற வரை நீ இங்கிருந்து எங்கும் போகக் கூடாது. இந்த மலை எல்லையில், இதோ உன் அருகில் இருக்கிறானே இவன் உன்னைப் பாதுகாத்துக் கொண்டு எப்போதும் உன்னோடு இருப்பான். நீயாகத் தனியே எங்காவது செல்ல முயன்றாயோ களப்பிரர்கள் பனங்காயைச் சீவுவது போல் உன் தலையைச் சீவி விடுவார்கள்...” இதைக் கேட்டு அவன் முகத்திலும், கண்களிலும் பயத்தின் சாயல் வந்து படர்ந்தது. அவரை வணங்கி விட்டு, வெளியே இருந்த முனையெதிர் மோகர் படை வீரனோடு போய்ச் சேர்ந்து கொண்டான் அந்த இளைஞன். அந்தக் காவல் வீரனை மட்டும் தனியே உள்ளே கையசைத்து அழைத்தார் மதுராபதி வித்தகர். அவன் வந்தான். “அதிக எச்சரிக்கையோடு கவனித்துக் கொள் இந்தப் பிள்ளையாண்டானைப் போல் மன உறுதியற்றவர்கள் எதிரிகளிடம் சிக்கி விட்டால் அதைப் போன்று வினை வேறு இல்லை” என்று அவனிடம் பெருஞ்சித்திரனைப் பற்றி அழுத்தமாக எச்சரித்து அனுப்பி வைத்தார் அவர். அவர்கள் சென்றபின், அவர் சிந்தனையில் இளைய நம்பியையும், தென்னவன் மாறனையும், பெருஞ்சித்திரனையும் ஒப்பு நோக்கிய பல்வேறு எண்ணங்கள் எழுந்தன. இளையநம்பியை விட வலியவனும், மூத்தவனும் ஆகிய தென்னவன் மாறனின், முன் கோபமும், முரட்டுத் தனமும் கூட ஓரளவு குறைபாடுடைய அரச குணங்களாகவே அவருக்குத் தோன்றின. இணையற்ற அரசகுணம் என்பது பிறருடைய சிந்தனைக்கு உடனே பிடிபடாத பல தந்திரங்களைக் கொண்டது. அது இளையநம்பியிடமும் அதிகமாக வளர்ந்திருப்பதாக அவருக்குத் தோன்றவில்லை. ஆனால் இளையநம்பியிடம் அவர் எதிர் பார்க்கும் அரச சுபாவங்களை உண்டாக்கி பக்குவப்படுத்துவதற்கான மூலக்கூறு இருப்பதாகத் தோன்றியது அவருக்கு. இவர்களில் மூன்றாமவனாகிய பெருஞ்சித்திரனைப் பற்றி அவர் நினைக்கவே ஒன்றும் இல்லாமல் போயிற்று. அவர் சிந்தனை பாண்டிய நாட்டின் நாளைய தினங்களைப் பற்றியதாக இருந்தது. அதில் கவனம் செலுத்தும் கடமையும் அவருக்கு இருந்தது. அந்த வேளையில் முற்றிலும் எதிர்பாராதவிதமாக அவருடைய ஆபத்துதவிகள் இருவரும் பரபரப்பாக அங்கே மூச்சு இரைக்க உள்ளே நுழைந்தனர். அவர்கள் வந்த நிலை மிக மிகப் பதற்றமானதாக இருக்கவே அவர் சலனமடைந்தார். ஏதோ புதிய அபாயம் நெருங்கியிருக்க வேண்டும் என்பது ஒன்று மட்டுமே அப்போது அவருக்குப் புரிய வந்தது. ↑ வணிகன் 21. ஒரு போதையின் உணர்வுமே பெரியவர் மதுராபதி வித்தகரின் புதிய நல்லடையாளச் சொல் பற்றிய ஒலையை வையையாற்றின் திருமருத முன்துறையில் வரிசையாக இருந்து மருத மரங்களில் ஒன்றில் வைத்து விட்டு, விடிவதற்குச் சில நாழிகைகள் இருக்கும் போதே, திருமோகூர் திரும்பியிருந்தான் கொல்லன். ஊர் திரும்பியதும், உடனே காராளரைச் சந்தித்துப் புதிய நல்லடையாளச் சொல்லை அறிவிக்க வேண்டியிருந்தாலும், பூத பயங்கரப் படையினருக்காக, ஒரு போக்குக் காட்ட நினைத்துத் தன் உலைக்களத்திற்குச் சென்றான் அவன். விடாத நடையினால் கைகால்கள் சோர்ந்திருந்தன. கண்களில் உறக்கம் வந்து மன்றாடிக் கொண்டிருந்தது. விடிகின்ற வரை காத்திருக்க முடியாமல், அவன் மனம் பரபரப்படைந்தது. காராளரைச் சந்திக்க விரும்பியது. அதே வேளையில், திருமோகூர் பெரிய காராளர் மாளிகையில் வேறோர் மெல்லிய இதயமும் உறக்கமின்றி, சிந்தித்துத் தவித்துக் கொண்டிருந்தது. வைகறையின் தண்மையில் பூக்கள் இதழ் விரிக்கும் அந்த அருங்காலை வேளையில் செல்வப் பூங்கோதையின் இதய மலரும், இதழ் விரித்து மணம் பரப்பிக் கொண்டிருந்தது. அந்த ஒரு பெரிய மலரில் பல்லாயிரம் பூக்கள் நறுமணமும் ஒருங்கிணைந்தது போல் அவ்வளவு நினைவுகளை அவள் நினைத்திருந்தாள். பூட்டி வைத்தாலும் பேழைக்கு உள்ளேயே மணக்கும் சந்தனத்தைப் போல் நினைவுகள் அவள் உள்ளத்தில் மணந்து கொண்டிருந்தன. அவளுடைய இந்த நிலையை, அவள் தாயும் கண்டிருந்தாள். “உறங்கவில்லையா மகளே? இரவு முழுவதும் உன் கைகளின் வளை ஒலிகளையும், நீ படுக்கையில் புரள்வதை யும், பெருமூச்சு விடுவதையும் நான் கண் விழித்த போதெல்லாம் கேட்டுக் கொண்டுதான் இருந்தேன். ஏன் இப்படி இருக்கிறாய்? எதை நினைத்து வேதனைப்படுகிறாய்? உன்னிடம் ஏற்பட்டிருக்கும் மாறுதல்களை என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லையடீ பெண்ணே...?" என்று எதை நன்றாகவும், தெளிவாகவும் புரிந்து கொண்டிருந்தாளோ, அதை ஒரு சிறிதுமே புரிந்து கொள்ளாதவள் போல் பேசினாள் செல்வப்பூங்கோதையின் தாய். ஒரு தாய் புரிந்து கொண்டாலும், புரிந்து கொண்டிருப்பதை உடனே மகளிடம் வெளிக் காட்டிக் கொள்ளக் கூடாத மிக நுண்ணிய உணர்வைச் செல்வப்பூங்கோதையின் தாயும் அப்போது அடைந்திருந்தாள். தான் நினைப்பவை எதுவும் தாய்க்குப் புரியவில்லை என மகளும், தான் புரிந்து கொண்டவை எதுவும் மகளால் அறிந்து கொள்ளப்படவில்லை எனத் தாயும், தத்தமக்குள் எண்ணிக் கொண்டிருந்தார்கள். திருப்திப்பட்டுக் கொண்டிருந்தார்கள். செல்வப் பூங்கோதை மிகவும் சாதுரியமாக நடந்து கொள்கிறவளைப் போல், “அம்மா! அந்தத் திருக்கானப்பேர் இளைஞர் மீண்டும் பெரியவர் மதுராபதி வித்தகரைச் சந்திக்க வேண்டும் என்று விரும்பி, ‘அவர் இப்போது இங்கே இல்லாததைப் பற்றித் தெரியாமல், அவரைக் காணலாம் என்னும் ஆசையில் இங்கே புறப்பட்டு வந்தால் என்ன செய்வது? களப்பிரர்கள் இந்த ஊரெல்லாம் மூலைக்கு மூலை பூத பயங்கரப் படையினரை உலாவ விட்டிருப்பதும், பெரியவர் இந்த ஊரை விட்டு வெளியேறியிருப்பதும் அவருக்குத் தெரியுமோ, தெரியாதோ?” என்று தன் அன்னையைக் கேட்டாள். மகள் தன் சொற்கள் மூலமே வகையாக மாட்டிக் கொள்வதைப் புரிந்து கொண்ட தாய் அதற்காக உள்ளுறச் சிரித்துக் கொண்டாள். அன்பும், பிரியமும் தன் மகளை எவ்வளவு பேதைமையுள்ளவளாக்கி விட்டன என்று எண்ணிப் பார்த்தாள் தாய். அன்பைப் பிடிவாதமாகச் செய்வதற்குப் பேதைமையும் ஓரளவு வேண்டும் என்றே தோன்றியது தாய்க்கு. பேதைமை அறவே இல்லாத காய்ந்த அன்பில், எந்த நெகிழ்ச்சியும் இருக்க முடியாது என்பதையும் அவள் உணர்ந்திருந்தாள். பெரியவர் திருமோகூரை விட்டு வெளியேறியிருப்பதும், பூத பயங்கரப் படையின் தொல்லைகள் பெருகியிருப்பதும் முறையாகவும், மிக விரைவாகவும் இளையநம்பிக்கு அறிவிக்கப்பட்டிருக்கும் என்பதை அறிந்திருந்தும், மகள் ஏன் இப்படி அறவே அறியாதவள் போல், தன்னை அது பற்றி வினாவுகிறாள் என்பது புரிந்து நினைத்தாள் தாய். யாரிடமாவது உடனே திருக்கானப்பேர் இளைய நம்பியைப் பற்றிப் பேச வேண்டும் என்ற மகளின் ஆர்வத்தை இதிலிருந்து தாய் அறிந்து கொள்ள முடிந்தது. எதையோ மிகவும் திறமையாக ஒளிக்க முயல்கிறவளைப் போன்ற முயற்சியில், அதையே வேறொரு விதத்தில் தெளிவாகத் தெரியச் செய்து கொண்டிருக்கும் மகளின் நிலைமையைப் புரிந்து கொண்டாலும், அவள் மனம் அந்தப் பேதைமையில் நினைப்பதனால் அடைய முடிந்த மகிழ்ச்சியைத் தான் தடுக்கக் கூடாதென்று, மகளை விடப் பெரிய பேதையைப் போல் நடித்தாள் தாய். அந்த நடிப்பையும் அவள் மகளுக்காகவே செய்ய நேர்ந்தது. “நீ நினைப்பது போல் ஆண் பிள்ளைகளும் அரச கருமத்தில் ஈடுபட்டிருப்பவர்களும், அவ்வளவு வெள்ளையாக நடந்து கொண்டு எதிரிகள் கையிலே சிக்கி விட மாட்டார்கள் பெண்ணே” என்று தாய் மகளுக்கு மறுமொழி கூறிக் கொண்டிருந்த வேளையிலேயே, மாளிகையின் முன் கூடத்தில் காராளரும், கொல்லனும் பேசும் குரல்கள் உட்புறம் கேட்கத் தொடங்கின. அப்போது ஏறக்குறையப் பொழுது புலர்கிற வேளை ஆகியிருந்தது. கூட்டத்திலிருந்து கேட்க முடிந்த பேச்சுக் குரல்களைக் கொண்டு உய்த்துணர்ந்து, கொல்லன் திரும்ப வந்திருக்க வேண்டும் என்பதைச் செல்வப் பூங்கோதையும் தாயும் புரிந்துகொண்டனர். உடனே மாளிகைக் கூடத்துக்கு ஒடிப் போய்க் கொல்லன் தந்தையாரிடம் என்ன கூறுகிறான் என்பதையும், தந்தையார் அவனிடம் எதை, எதை வினாவுகிறார் என்பதையும் ஒட்டுக் கேட்க ஆவலாயிருந்தது செல்வப் பூங்கோதைக்கு. ஆனால் நன்றாக விடியாத அந்த இருட்காலையில் அவசர, அவசரமாக எழுந்து ஒடிப்போய்த் தந்தையாருக்கு முன் நிற்கவும் தயக்கமாக இருந்தது மகளுக்கு. ஒரு வேளை தாய் எழுந்து போய்த் தந்தையாரும், கொல்லனும் பேசுகிற இடத்தில் நின்று கொண்டால், தானும் தாயோடு சென்று நிற்க முடியும் என்று தோன்றியது மகளுக்கு. அவள் தாயைக் கேட்டாள்: “அம்மா! கொல்லன் மறுபடியும் திரும்ப வந்திருக்கிறான் போலிருக்கிறதே; தந்தையும், கொல்லனும் பேசிக்கொள்ளும் குரல் கேட்கிறதே?” “ஆமாம்! கொல்லன் வந்திருக்கிறான்...” “நான் எழுந்திருந்து போக நேரமாகவில்லையா அம்மா? நீராடப் போகும் வேளையாகிவிட்டதே!” “மகளே! நீராடப் போவதற்காகப் புறப்பட வேண்டுமா? அல்லது கொல்லனும் உன் தந்தையும் உரையாடுவதைக் கேட்க வேண்டுமா? உன் மனம் எனக்குப் புரிகிறது” என்று கேட்டுவிட்டு மெல்லச் சிரித்தாள் செல்வப் பூங்கோதையின் தாய். மகள் தன் குறிப்புத் தாய்க்கும் புரிந்து விட்டதை அறிந்து நாணினாள். தன் அந்தரங்கத்தைப் புரிந்து கொண்ட அன்னையின் முன் பேசத் தயங்கிச் சில கணங்கள் வாளாவிருந்தாள் செல்வப் பூங்கோதை. ஆயினும் மகளின் மனங்கோணாமல் நடந்து கொள்ள ஆசைப்பட்ட தாய் நீராடப் பொய்கைக்குச் செல்வது போல், குடத்தோடு மகள் பின் தொடரக் கூடத்தில் போய் நின்று கொண்டாள். இருவரும் கூடத்தில் நுழைந்த வேளையில்- “...சிறைப்பட்டு விட்டவர்களைக் களப்பிரர்களிடம் இருந்து மீட்பது மிக மிகக் கடினமாகத் தோன்றுகிறது’ என்று கொல்லன் பெரிய காராளரிடம் கூறிக் கொண்டிருந்தான். அவ்வளவில், தாயும், மகளும் எதிர்பாராத விதமாகப் பெரிய காராளரும், கொல்லனும் பேசிக் கொண்டே வெளியேறிப் போய் விட்டார்கள். அதிகாலையிலே நெற்கழனிகளிடையே வரப்புகளில் நடந்து உலவித் திரும்புகிற வழக்கத்தை உடைய காராளர், கொல்லனையும் பேசிக் கொண்டே தம்மோடு வருமாறு கூப்பிட்டுக் கொண்டு போய் விட்டார் என்பதை அவர்கள் உணர முடிந்தது. ஆனால், கொல்லனின் வாய் மொழியாய் அரைகுறையாகக் கேட்ட அந்த வாக்கியம் மட்டுமே, அவள் மனத்தில் அல்லாத, பொல்லாத சந்தேகங்களை எல்லாம் உண்டாக்கி விட்டது. எந்த உரையாடலை ஒட்டுக் கேட்டுக் கொண்டு நின்றால், தன் இதயத்தைக் கொள்ளை கொண்டவரைப் பற்றிய செய்திகள் தெரியும் என்று நம்பி அவள் தாயோடு எழுந்து வந்தாளோ, அந்த நோக்கம் இப்போது வீணாகி விட்டது. ஆனாலும் கூட்டத்திற்குள் நுழைந்த வேளையில் காதில் விழுந்த வாக்கியத்தில், ‘களப்பிரர்களிடம் இருந்து மீட்பது மிக மிகக் கடினமாகத் தோன்றுகிறது?’ ... என்று குறிப்பிட்டது யாரை எண்ணிக் குறிப்பிட்டதாக இருக்கும்? ஒருவேளை திருக்கானப்பேரைச் சேர்ந்தவர் கோநகரில் ஏதாவது தீய சூழ்நிலையின் காரணமாகக் களப்பிரர்களிடம் சிக்கிக் கொண்டு விட்டாரா? அவரை மீட்பதுதான் கடினமாகத் தோன்றுகிறது என்று கொல்லன் தந்தையிடம் கூறிக் கொண்டு போகிறானா? என்றெல்லாம் எண்ணி எண்ணிச் சஞ்சலமும், சலனமும், கவலையும் அடைந்து கொண்டிருந்தது அவள் உள்ளம். “அம்மா! நீயும், நானும் இங்கே உள்ளே நுழைந்து கொண்டிருந்த போது அவர்கள் பேசிக் கொண்டிருந்ததை நீ கேட்டாயா? ஏதோ கவலைப்படுவதற்குரிய காரியம் நடந்திருக்கிறது. இல்லாவிட்டால் இவ்வளவு தீவிரமாகச் சிந்தித்தபடியே பேசிக் கொண்டு வெளியே போக மாட்டார்கள் அவர்கள் இருவரும். என் மனமோ காரணம் புரியாமலே வேதனை கொள்கிறது. நீ என்ன நினைக்கிறாய்? கடவுள் அருளால் யாருக்கும் எந்தக் கெடுதலும் வராது அல்லவா?" என்று உருகி நெகிழ்ந்த குரலில், தாயைக் கேட்டாள் செல்வப் பூங்கோதை. பெண்ணின் பேதைமையையும் காரணமற்ற சந்தேகங்களையும் எள்ளி நகையாடிப் பேசி விட முடியும் என்றாலும், அவளுடைய இளமை உள்ளம் வாடி விடாமல் பாதுகாக்கக் கருதிய தாய், “நீ நினைப்பது போல் கவலைப்படுவதற்குரிய காரியங்கள் எவையும் நடந்திருக்க முடியாது பெண்ணே ஆலவாய் இறைவனும், இருந்த வளமுடைய பெருமாளும் அவருக்கு ஒரு கெடுதலும் வராமல் உற்ற துணையாயிருப்பார்கள் என்ற நம்பிக்கையும், மனோதிடமும் உனக்கு வேண்டும்” என்று ஆறுதலாக மறுமொழி கூறினாள். தந்தையும், தாயும் கூடப் புரிந்து கொள்ள முடியாத குறிப்பான வார்த்தைகளில் கொல்லனிடம் திருக்கானப்பேர் நம்பியின் நலனையும், பிற நிலைமைகளைப் பற்றியும் ஏதாவது விசாரிக்கலாம் என்று செல்வப் பூங்கோதை எண்ணியிருந்தாள். கொல்லனும், தந்தையும் தற்செயலாகப் பேசிக் கொண்டே வெளியேறி விட்டதால், அவள் நினைத்ததைச் செய்ய இயலவில்லை. “நீங்களும் இங்கே அவரை நினைத்து உருகித் தவிக்கிறீர்கள். அங்கே அவரும் உங்களை நினைத்து உருகித் தவிக்கிறார். இந்தப் பாழாய்ப் போன களப்பிரர் ஆட்சி ஒழிந்ததுமே, உங்கள் இருவருக்கும் நல்லகாலம் விடியும் அம்மா!” என்பதாகச் சென்ற முறை, மதுரையிலிருந்து திரும்பியதும், கொல்லன் கூறியிருந்த ஆறுதலையே இப்போது மீண்டும் நினைத்துக் கொண்டு தாயோடு நீராடி வரப் புறப்பட்டாள் செல்வப் பூங்கோதை. தான் இங்கே எக்காலமும் அவரை நினைத்து உருகித் தவிப்பது போல், ஒரு நாளைக்கு ஒரு முறையாவது மதுரை மாநகரில் அவர் தன்னை நினைத்துத் தவிப்பாரா என்று எண்ணி எண்ணி மனம் மருகினாள் அவள். அவர் தன்னை எண்ணி உருகுவதாகக் கொல்லன் வந்து கூறியிருந்தாலும், பேதையாகிய தான் தவிக்கும் தவிப்பிற்கும் வீர ஆண்மகனாகிய அவர் தன்னை நினைக்கும் ஞாபகத்திற்கும், நிறைய வேறுபாடு இருக்கும் என்றே செல்வப் பூங்கோதைக்குத் தோன்றியது.  22. களப்பிரர் கபடம் கொல்லன் திருமருத முன்துறையில் இருந்து மோகூர் திரும்பித் தன் உலைக் களத்தில் சிறது நேரம் தங்கிய பின், விடிவதற்குச் சிறிது நாழிகைக்கு முன்புதான் காராளர் மாளிகைக்குச் சென்றான். அவன் செல்வதற்கு முன்பே, காராளர் பள்ளி எழுந்து கழனிகளைச் சுற்றிப் பார்த்து வருவதற்காக மாளிகையிலிருந்து புறப்பட்டுக் கொண்டிருந்தார். கொல்லனைக் கண்டதும், “நேற்றைக்கு நள்ளிரவே பூத பயங்கரப் படை அறவே மோகூரிலிருந்து திரும்பிச் சென்று விட்டது. இனி நமக்கு எந்தக் கவலையும் இல்லை! எனக்கும் என் மாளிகையைச் சேர்ந்தவர்களுக்கும், இந்தச் சில நாட்களில் பூத பயங்கரப் படையினரால் நேர்ந்த பரிசோதனைகளையும், காவல்களையும் மறந்து எப்போதும் போல் அரண்மனையோடும் நல்லுறவும், நட்பும் கொண்டிருக்க வேண்டும்-என்று அரண்மனையிலிருந்து எனக்குச் சொல்லி அனுப்பி விட்டார்கள்!” என்று காராளர் அவனிடம் கூறினார். இதைக் கேட்டவுடனே கொல்லன் எவ்வளவு உற்சாகத்தை அடைவான் என்று காராளர் எதிர்பார்த்திருந்தாரோ, அவ்வளவு உற்சாகத்தை அவன் அடையவில்லை. அவர் கூறியதற்கு, அவனுடைய பதில் உணர்வு என்ன என்பதே அவருக்குப் புரியவில்லை. அது அவருக்கு வியப்பை அளித்தது. மேலும் வெளிப்படையாக வலிந்து அவனிடம் அவரே கேட்டார்: “இது பற்றி நீ என்ன நினைக்கிறாய்? திருமோகூரைப் பற்றியும், என்னைப் பற்றியும் களப்பிரர்களுக்கு ஏற்பட் டிருந்த சந்தேகங்கள் தீர்ந்து விட்டன என்று எனக்குத் தோன்றுகிறது..." “பொறுத்தருள வேண்டும் ஐயா! எனக்கு அப்படித் தோன்றவில்லை. இதில் ஏதோ கபடம் இருக்கக் கூடும் என்றே நான் நினைக்கிறேன். இங்கிருந்துதான் நம்முடைய மிகப் பெரிய அந்தரங்கமான நல்லடையாளச் சொல் அவர்களுக்கு எட்டியிருக்கிறது. இங்கேயிருந்துதான் தென்னவன் மாறனையும், அறக் கோட்டது மல்லனையும் அவர்கள் சிறைப் பிடித்திருக்கிறார்கள். உங்களையும் சில நாட்கள் இந்த மாளிகை எல்லைக்குள்ளேயே காவலில் இருக்கச் செய்து வெளியேற விடாமல் தடுத்திருக்கிறார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக இங்கே என்னிடமே ஒரு பூத பயங்கரப் படை வீரன் தேடி வந்து, நம் நல்லடையாளச் சொல்லைக் கூறிப் பதிலுக்கு நான் எப்படி நடந்து கொள்கிறேன் என்பதைப் பரிசோதித்து விட்டான். பெரியவருடைய எச்சரிக்கை மனத்தில் இருந்ததால், நான் சாதுரியமாக அந்தப் பரிசோதனையில் தப்பினேன். இல்லாவிட்டால் களப்பிரர்களிடம் சிறைப்பட்டிருக்க நேர்ந்திருக்கும். முன்பு சிறைப்பட்டவர்களையே களப்பிரர்களிடம் இருந்து மீட்பது மிக மிகக் கடினமாகத் தோன்றுகிறது. இப்போது புதிதாக நானும் மாட்டிக் கொண்டிருந்தால் என்ன ஆவது?” இங்கே இப்படி, அவன் அவரைக் கேட்டுக் கொண்டிருந்த போதுதான் மாளிகையின் உட்பகுதியிலிருந்து காராளர் மனைவியும், மகளும் வருவது தெரிந்தது. ஆனால் காராளர் அதற்குள், “வா! பேசிக் கொண்டே உலாவி விட்டு வரலாம்” என்று அவனையும் அழைத்துக் கொண்டு வெளியேறி விட்டார். அவனும் அவரைப் பின் தொடர்ந்து, வெளியேறிச் செல்ல வேண்டியதாயிற்று. ஒரு சில காரணங்களை முன்னிட்டுப் புதிய நல்லடையாளச் சொல் பற்றிய செய்தியை அவரிடம் தனிமையில் கூற விரும்பினான் அவன். அதனால் அவர் அங்கிருந்து வெளியேறிச் செல்ல வேண்டும் என்று கூறிய போது, அவனும் அதை விரும்பி உடன் சென்றான். மாளிகையிலிருந்து வெளியேறிச் சிறிது தொலைவு செல்வதற்குள்ளேயே, “பெரியவர் மதுராபதி வித்தகர் எங்கே, எந்தத் திசையில், எவ்வளவு தொலைவில், எப்படித் தங்கியிருக்கிறார்கள்?” என்பதைத் தமக்கு உடனே கூறச் சொல்லி, இரண்டு மூன்று முறை கொல்லனை வற்புறுத்தி விட்டார் அவர். தன்னை விட உயர்ந்தவரும், தன்னைப் போன்றவர்களின் செஞ்சோற்றுக் கடனுக்கும், நன்றிக்கும் உரியவரும் ஆகிய காராளரிடம், “தயை செய்து அதை மட்டும் இப்போது கேட்காதீர்கள்!” என எப்படிக் கடுமையாக மறுத்துச் சொல்வது என்று புரியாமல் திகைத்தான் கொல்லன். திகைப்பு ஒரு புறமிருந்தாலும், முள்ளிலிருந்து மேலாடையை எடுப்பவன், முள்ளும் குத்தி விடாமல், ஆடையும் கிழிந்து விடாமல் மிக மிகக் கவனமாக ஆடையை எடுப்பது போல், அவர் மனமும் புண்படாமல், தன் உணர்வும் பலவீனப்பட்டுப் போகாமல், மிக மிகச் சாதுரியமாக அவருக்கு மறுமொழி கூறினான் கொல்லன்:- “ஐயா! தாங்கள் இப்போது என்னிடம் வற்புறுத்திக் கேட்பதை விடப் பெரிய செய்தி ஒன்றைத் தங்களிடம் கூறுவதற்காகவே, பெரியவர் என்னை இங்கே அனுப்பியிருக்கிறார். நமது பழைய நல்லடையாளச் சொல் எப்படியோ எதிரிகளுக்குத் தெரிந்து விட்டது. உடனே அந்தச் சொல்லை மாற்றிப் புதிய சொல்லை நியமிக்கா விட்டால் ஏற்படும் அபாயங்களை உணர்ந்து புதிய சொல்லை நியமித்து அனுப்பி இருக்கிறார், அவர். அதைத் தங்களிடமும் தங்கள் மூலமாக வேறு சிலரிடமும் அறிவிக்கவே, அடியேன் இவ்வளவு அவசரமாக இங்கே வந்தேன்.” “என்ன சொல் அது? மற்றப் பகுதிகளுக்கும் அதைச் சொல்லி அனுப்பியாயிற்றா, இல்லையா?” காராளரின் இந்த வினாவுக்கு அதற்கு முன் பேசியது போல், உரத்த குரலில் மறுமொழி கூறாமல் அவர் காதருகே நெருங்கி, அவருக்கு மட்டுமே கேட்கிற இரகசியக் குரலில் மறுமொழி கூறினான் கொல்லன். அவரும் அதைக் கவனமாகக் கேட்டுக் கொண்டார். “நீ எச்சரிப்பதைப் பார்த்தால், இந்தப் புதிய நல்லடையாளச் சொல்லை எல்லாருக்கும் கூற வேண்டாம் என்றல்லவா அர்த்தப் படுகிறது?” “ஆம், ஐயா! அப்போதுதான் இதனுடைய இரகசியத்தைக் காப்பாற்ற முடியும்! சிலரிடம் ‘பழைய நல்லடையாளச் சொல்லை, எங்கும், எவர் முன்னிலையிலும் திருப்பிக் கூறக் கூடாது; அது களப்பிரர்களுக்கு வெளிப்படையாகத் தெரிந்து விட்டது' -என்ற எச்சரிக்கையை மட்டும் செய்தால் போதுமானது. புதியதைச் சொல்லவே வேண்டியதில்லை. புதிய நல்லடையாளச் சொல்லையும் மாற்றும் நிலை வரக் கூடாதென்பதற்காகவே இந்த ஏற்பாடு.” “இந்த ஏற்பாடு பாராட்டத் தக்கதுதான்! ஆனால், பெரியவர் இங்கே என்னருகில் இல்லாமல் போனால், எந்த ஏற்பாடும் சிறப்பாக நடைபெறாது. அவரை வணங்குவதாலும், வழிபடுவதாலுமே நான் ஆயிரம் யானையின் பலத்தை அடைந்து வந்தேன். சில நாட்களாக, அந்தச் சுடரொளி முக மண்டலத்தைக் காணாமல் எனக்குப் பித்துப் பிடித்து விடும் போலாகி விட்டது. என்னுடைய இந்த மன நிலையை நீயாவது உணர முடியும் என்று நான் நம்புகிறேன். நானாகத் தேடிப் போய் அவரைக் காண, அவரது இருப்பிடத்தை நீ எனக்குச் சொல்ல மாட்டேன் என்கிறாய். அவராக மீண்டும் நான் நாள் தோறும் காணும் படி, இங்கு வந்து தங்கவும் வழி இல்லை என்கிறாய். அவர் தங்கியிருந்த அந்த மாபெரும் ஆலமரத்தையும், அவர் நீராடி எழும் தாமரைப் பொய்கையையும் பார்க்கும் போதெல்லாம் நான் கண்களில் நீர் நெகிழ மெளனமாக அழுவது போல் ஆகி விடுகின்றேன். தேர்ந்த வழிகாட்டியைக் கிடைப்பதற்கு அரிய குருவை, என்னிடமிருந்து விலக்கிக் கொண்டு போய் விட்டு, நல்லடையாளச் சொல்லை மட்டும் நீ வந்து எனக்குக் கூறுவதில் பயன் என்ன?” காராளரின் உணர்ச்சிகளில் இருந்த வேதனை, அவனுக்குப் புரிந்தது. ஆயினும், அவனால் அது தொடர்பாக அவருக்கு எந்த உதவியையும் புரிய முடியவில்லை. “நீங்கள் மதிக்கிற அதே பெரியவரை நானும் மதிப்பதால்தான், அவருடைய இருப்பிடத்தை உங்களுக்குக் கூற முடியவில்லை ஐயா!" “ஏன் அப்படி? நான் என்னப்பா பாவம் செய்தேன்?” “அதில் பாவ,புண்ணியம் எதுவும் இல்லை. நீங்கள் எங்கே சென்றாலும், பூத பயங்கரப் படை உங்களைப் பின் தொடரும் என்பது இன்னும் கூட உறுதி தான் ஐயா! திருமோகூரை விட்டு நீங்கள் வெளியேறினால் உங்களைப் பின் தொடர்ந்து கண்காணிப்பதற்கு, நான்கு திசைப் பாதைகளிலும் ஆட்கள் இருக்கிறார்கள். இங்கிருந்து அறவே வெளியேறி விட்டதாக, நீங்கள் கூறும் பூத பயங்கரப்படை நம் ஊரைச் சுற்றிலுமுள்ள எல்லாக் காடுகளிலும் சிறு சிறு பிரிவுகளாகப் பிரிந்து மறைவாகத் தங்கியிருக்கிறது. இதை நீங்கள் அறிய மாட்டீர்கள். இப்படி எல்லாம் நீங்கள் அறியவோ, அநுமானம் செய்யவோ கூடாதென்று, உங்கள் கவனத்தைத் திசை திருப்பி விடுவதற்குத்தான் களப்பிரர்கள் உங்களைப் பாராட்டி, நல்லுறவும் நட்பும் நீடிக்க வேண்டும் என்று சொல்லி அனுப்பியிருக்கிறார்கள். அந்த வலையில் நீங்கள் விழாமல் இருக்க வேண்டும். என்னைப் போன்றவர்கள், எப்படியும் தப்பி விடுவோம். ஆனால் நீங்கள் பெரிய வேளாளர். அரசருடைய களஞ்சியங்களுக்கே நெல்லளிப்பவர். எங்கே புறப்பட்டுப் பயணம் செய்தாலும், ஒரு சிறு நில மன்னர் உலாப் புறப்படுவது போல் பல்லாக்கு, சிறு படை எல்லாம் உங்களோடு உடன் வரும். அப்படி நீங்கள் செல்வதால் பெரியவருக்கு ஆபத்துகள் அதிகமாகும் என்று தெரிந்தே, உங்களிடமும், கோநகரில் உள்ளவர்களிடமும் இப்போது தாம் இருக்கும் இடத்தைக் கூற வேண்டாம் என்று பெரியவர் தடுத்திருக்கிறார். இது நியாயமானது என்றே நானும் கருதுகிறேன். தவிர, உங்களிடம் பெருந்தயக்கத் தோடு இன்னொரு வேண்டுகோளையும் இப்போது சொல்ல ஆசை!” “என்ன அது? சொல்லேன்.” “தவறாக எடுத்துக் கொள்ள மாட்டீர்களே?” “தவறாக எடுத்துக் கொள்ள இதில் என்ன இருக்கப் போகிறது? ஒரு பொது நோக்கத்திற்காக நாம் யாவரும் சேர்ந்து உழைக்கிறோம். கவலைப்படுகிறோம். கட்டுப்படுகிறோம்.” காராளர் இவ்வளவு மனம் விட்டுக் கூறிய பின்பும் கொல்லன் தயங்கினான். தலை குனிந்தான். காராளருக்கும் அது அப்படி என்ன விநோத வேண்டுகோளாக இருக்கும் என்பது புரியவில்லை. அவர் கொல்லனின் முகத்தைப் பார்த்தார். 23. இருளில் ஒரு பெண் குரல் பூத பயங்கரப் படைத் தலைவன் பின் தொடர, மாவலி முத்தரையர் சிறைக் கோட்டத்துக்குள் வந்த போது, கீழே பாதாள நிலவறைக்குள் இருந்த தென்னவன் மாறனைக் காண்பதற்காகத் தளத்தின் கற்களைப் பெயர்த்துப் படியிறங்க முயன்று கொண்டிருந்த, தானும், தன்னைச் சேர்ந்தவர்களும் அகப்பட்டுக் கையும் களவுமாகப் பிடிபட்டு விடுவோமோ என்று அழகன் பெருமாள் அஞ்சினான். அந்த அச்சமும், நடுக்கமும், உந்தித் தள்ளியதால்தான் மாவலி முத்தரையரும், பூத பயங்கரப் படைத் தலைவனும் சிறைக்கோட்டத்திற்கு உள்ளே நுழைந்து வருவதற்குள்ளேயே, அழகன் பெருமாள் எதிர் கொண்டு சென்று அவர்களைச் சந்தித்தான். பணியாரக் கூடையுடன் நண்பர்களைப் போல் நல்லடையாளச் சொல்லைக் கூறிக் கொண்டு வந்திருந்த அந்த ஐவரும், தங்களிடம் தோற்று ஏமாறித் திரும்பிய மறுகணமே, மாவலி முத்தரையர் வந்திருப்பதிலிருந்து, ‘அவர்களை அப்படி அனுப்பியதும் இவராகத்தான் இருக்க வேண்டும்’ என்று அழகன் பெருமாளால் அநுமானிக்க முடிந்தது. வந்ததுமே வம்புக்கு இழுத்தார் மாவலி முத்தரையர்: “நடுவூர் நன்மை தருவார் குலத்து மதுராபதி வித்தகரின் குழுவைச் சேர்ந்தவர்களுக்குப் பசி தாகம் எல்லாம் கூட மறந்து போய் விடும் போலிருக்கிறதே?” அழகன் பெருமாள் அவருக்கு மறுமொழி எதுவும் கூறவில்லை. அவன் முகத்தையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த அவர், அவனுடைய ஆத்திரத்தைக் கிளறிவிடும் வகையில், ஏளனமான தொனியில் இரைந்து சிரிக்கலானார். இந்தச் சிரிப்பு அவனுக்கு எரிச்சலூட்டுகிறதா, இல்லையா என்பதை அவர் கவனிக்க விரும்பியது போலிருந்தது. அவர் தன் ஆத்திரத்தைத் தூண்டி அதன் மூலம் எதையோ தன்னிடமிருந்து அறிந்து கொள்ள விரும்புகிறார் என்பதை அழகன் பெருமாள் புரிந்து கொண்டான். அவருடைய போக்கைத் தெரிந்து நிதானப்படுத்திக் கொள்கிற வரை, தானாக ஆத்திரப்பட்டு எதுவும் பேசுவதில்லை என்ற முடிவை அவன் வகுத்துக் கொண்டிருந்தான். அவன் தனக்குப் பயந்து பேசாமல் இருப்பதாக, மாவலி முத்தரையர் நினைத்துக் கொண்டார். மங்கலத் தன்மை அறவே இல்லாத அந்தச் சூனியமான முகத்தை இரண்டாவது முறை ஏறெடுத்துப் பார்க்கவும் விரும்பாமல், வெறுப்போடு வேறு திசையிலே பார்த்தான் அழகன் பெருமாள். இதற்குள் அழகன் பெருமாளே வியந்து போகும்படியான ஒரு காரியத்தை உள்ளே தள வரிசைக் கல்லைப் பெயர்த்துக் கொண்டிருந்தவர்கள் செய்திருந்தார்கள். பெயர்த்த கற்களை அப்படியே வைத்து விட்டுக் கல்லைப் பெயர்த்ததால் ஏற்பட்ட பிளவு வெளிப்பட்டுத் தெரிந்து விடாதபடி அதன் மேலேயே கால்களை நீட்டிக் கொண்டு வரிசையாக உட்கார்ந்திருந்தார்கள் அவர்கள். தான் கட்டளையிடவோ, சைகை செய்யவோ முடியாமல் சிறைக் கோட்டத்திற்குள் நுழைகிறவர்களை எதிர் கொள்ளப் போன சமயத்திலும் அவர்கள், தாங்களாகவே எச்சரிக்கையடைந்து தந்திரமாகத் தளத்தில், அந்த இடத்தை மறைத்திருப்பதைக் கண்டு அதைச் செய்த நண்பர்களை மனத்துக்குள் பாராட்டிக் கொண்டான் அழகன் பெருமாள். அடுத்த கணமே, மாவலி முத்தரையர் இடிக் குரலில் அவனை வினாவினார்: “இவர்கள் ஏன் இப்படி வரிசையாக உட்கார்ந்திருக்கிறார்கள்? சிறைப் பட்டிருப்பவர்கள், பெருமைக்குரியவர்கள் உள்ளே வர நேரும் போது எழுந்து நின்று எதிர் கொள்ள வேண்டும் என்பதைக் கூட இவர்கள், மறந்து விட்டார்களா என்ன?” “பசி தாகத்தினால் அவர்கள் நலிந்து போயிருக்கிறார்கள். உங்கள் சிறைக் கூடத்தில் அகப்பட்டு விட்டால் உண்ண உணவும், பருக நீரும் கூடத் தருவதில்லை. உண்ணாமலும் பருகாமலுமிருப்பவர்கள், அதற்குக் காரணமானவர்களை எப்படி மதிக்க முடியும்?” என்று அதுவரை பேசாமல் இருந்த அழகன் பெருமாள் பதில் பேசினான். மாவலி முத்தரையரும் கோபத்துடனேயே, இதற்கு மறுமொழி கூறினார். “இன்னும் சில நாழிகை நேரத்தில் கழுமரம் ஏறிச் சாகப் போகிறவர்கள் உண்ட பின் செத்தால் என்ன? உண்ணாமலே செத்தால் என்ன?” “அப்படியானால், இன்னும் சில நாழிகை நேரத்தில் சாகிறவர்கள், எழுந்து நின்று எதிர் கொண்டால் என்ன? எழுந்து நிற்காமலே எதிர் கொண்டால் என்ன? கொல்லப்படப் போகிறவர்களிடத்தில், கொல்கிறவர்கள் ஏன் முறைகளையும், பெருமைகளையும் எதிர்பார்த்து வருத்தப்பட வேண்டும்?” என்று அவரிடம் பதிலுக்குச் சுடச் சுடக் கேட்டான் அழகன் பெருமாள். “எல்லாரையும் கொல்லுவது எங்கள் நோக்கமில்லை. எங்களுக்குப் பயன்படுகிறவர்களையும், உதவி புரிபவர்களையும் நாங்கள் துன்புறுத்துவதும் வழக்கமில்லை” என்று அதுவரை உரையாடலில் கலந்து கொள்ளாமல் இருந்த பூத பயங்கரப் படைத் தலைவன் பேசினான். வந்திருக்கும் இருவருக்குமே, தங்களை வசப்படுத்தி உண்மைகளை அறிய முயலும் நோக்கம் இருப்பதை அழகன் பெருமாள் புரிந்து கொண்டான். வந்திருக்கும் இருவரும் அதிக நேரம் சிறைக் கோட்டத்திற்குள் தங்காமல் வெளியேறி விட்டார்களாயின், தானும், நண்பர்களும் உடனே தப்பி விடலாமென்று விநாடிகளை எண்ணிக் கொண்டிருந்தான் அழகன் பெருமாள். ஆனால், மாவலி முத்தரையரோ, அந்தச் சிறைக் கோட்டத்தைத் தேடி வந்து அதிக நேரம் அங்கே செலவழிக்கத் திட்டம் இட்டிருந்தவர் போல், மெல்ல ஒவ்வொன்றாகப் பேசிக் கொண்டும் கவனித்துக் கொண்டும் இருந்தார். மற்றவர்கள் எல்லாரும் தளத்திலே கற்களைப் பெயர்த்த இடத்தைச் சுற்றி உட்கார்ந்து கொண்டு விட்டதனால், மாவலி முத்தரையருடனோ, பூத பயங்கரப் படைத் தலைவனுடனோ உரையாட அழகன் பெருமாள்தான் எஞ்சியிருந்தான். மாவலி முத்தரையர் நயமாகவும், பயமுறுத்தியும் ஏதேதோ பேச்சுக் கொடுத்துப் பார்த்தார். அழகன் பெருமாள் பட்டும் படாமலும், தொட்டும் தொடாமலும் தந்திரமாக அவருக்கு மறுமொழி கூறி வந்தான். மாவலி முத்தரையர் கேட்டார்: “கயல் மீன் அடையாளம் பாண்டிய மரபினருக்குச் சொந்தமானது. இப்போது பாண்டியர்கள் ஆட்சியுரிமையோடு இல்லை என்றாலும், மறுபடி பாண்டியர் நாட்டைக் கைப்பற்றி ஆள வேண்டும் என்று விரும்புகிறவர்கள் இன்றும் அங்கங்கே இருக்கிறார்கள். கயல் என்கிற சொல்தான் அவர்களுடைய தாரக மந்திரமாக இருக்கிறது. இவையெல்லாம் எனக்குத் தெரியும்...” “அப்படியா?... எனக்கு இவற்றைப் பற்றி எதுவுேமே தெரியாது ஐயா” என்றான் அழகன் பெருமாள். இதைக் கேட்டு மாவலி முத்தரையர், பற்களையும், உதடுகளையும் இறுக்கிக் கடித்தது போல் முகத்தைக் கடுமையாக வைத்துக் கொண்டு அவனைப் பார்த்தார். அடுத்த கணையை மெல்ல எய்தார். “இதைப் பற்றித் தெரியுமா? உங்களைப் போலவே ஏற்கெனவே எங்களிடம் சிறைப்பட்டிருக்கும் அந்தப் புலித் தோல் அங்கி இளைஞன் பாண்டிய அரச மரபைச் சேர்ந்தவன் என்கிற இரகசியத்தையும் நான் அறிவேன்." “பொறுத்தருள வேண்டும் ஐயா! தாங்கள் எதைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள்; ஏன் என்னிடம் சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள் என்பதே எனக்கு விளங்கவில்லை. நாங்கள் வெறும் குடிமக்கள், எளியவர்கள். அரச மரபுகளையும் அதன் இரகசியங்களையும் பற்றி நாங்கள் கவலைப்பட்டோ, தெரிந்து கொண்டோ ஒன்றும் ஆகப் போவதில்லை” என்றான் அழகன் பெருமாள். முதலில் விடிந்ததும், விடியாததுமாக உண்பதற்குப் பணியாரக் கூடையோடு வந்த ஐவரும் இப்போது வந்திருக்கும் மாவலி முத்தரையரும் ஒரே முயற்சியோடு தான் தங்கள் எதிரே நிற்கிறார்கள் என்பது நன்றாக அழகன் பெருமாளுக்குப் புரிந்து விட்டது. நயமாக முயன்று, தங்களிடமிருந்து செய்திகளை அறிய அவர்கள் விரும்புகிறார்கள் என்பது அவனை மிகவும் எச்சரிக்கையாக இருக்கச் செய்தது. மாவலி முத்தரையர் மேலும் அவனைக் கேட்டார்: “அப்படியானால் உங்களைப்போல எளிய குடிமக்கள் பூத பயங்கரப் படையினரைப் போன்ற மாறு வேடத்தில், கடுமையான பாதுகாப்புகளையும் மீறிக் கோட்டைக்குள் ஏன் வந்தீர்கள்?” “கோட்டைக்குள் வரும் போதுதான் பூத பயங்கரப் படையின் உடையை அணிந்து கொண்டோம் என்பதில்லை. களப்பிரர்களது பூத பயங்கரப் படையினர் உடை எங்களுக்கு மிகவும் பிடித்திருக்கிறது. இந்த உடைக்காகவே அப்படையில் சேர நாங்கள் ஆசைப்பட்டது உண்டு. ஆனால் யாரும் சேர்த்துக் கொள்ள மறுத்துவிட்டார்கள். உடைகளில் எங்களுக்குப் பிரியம் அதிகம். இதை நீங்கள் தவறாகப் புரிந்து கொள்ளக் கூடாது.” இதைக் கேட்டு மறுமொழி கூறாமல் விஷமச் சிரிப்புச் சிரித்து விட்டு, வாளாவிருந்தார் மாவலி முத்தரையர். அந்தச் சிரிப்பும், அந்த மெளனமும் அவர் அழகன் பெருமாள் கூறியதை ஏற்கிறாரா இல்லையா என்பதைக் கண்டு கொள்ள முடியாதவையாயிருந்தன. “மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றும் பாண்டியர் இயக்கத்துக்குத் தலைவனான வையை வளநாட்டு நடுவூர் நன்மை தருவார் குலத்து மதுராபதி வித்தகன், ஒரு காலத்தில் எனக்கு மிக நெருக்கமானவனாக இருந்து பின் பகைவனாகியவன் என்பதையும் நீ அறிந்திருக்க மாட்டாய்” என்று மீண்டும் அவர் உரையாடலைத் தொடங்கிய விதத்திலிருந்தே அழகன் பெருமாளைப் பழைய வலையில் சிக்க வைக்க முயல்வது தெரிந்தது. நெடுநேரம் இப்படியே எதையாவது பேசிக் கொண்டிருந்தால் எந்த இடத்திலாவது எதிராளி தன்னை அடையாளம் காட்டிக் கொள்ள மாட்டானா என்று அவர் தவிப்பது பேச்சில் தெரிந்தது. “பகை, நட்பு என்பன எல்லார் வாழ்விலும் இருப்பது இயல்பு. தங்களுக்கும் அது ஏற்பட்டிருக்கலாம். ஆனால் அந்த நட்பும், பகையும் தங்களைப் பொறுத்து யாரோடு எப்படி ஏற்பட்டிருக்கும் என்பதை நான் எவ்வாறு அறிய முடியும்?” என்றான் அழகன் பெருமாள். இதைக் கேட்டு மீண்டும் அவர் நச்சுப்புன்னகை பூத்தார். அழகன் பெருமாளை ஏற இறங்கப் பார்த்தார். கூறலானர்: “நீ மிகவும் சாதுரியமானவன் அப்பனே! உன்னிட மிருந்து எதையாவது தெரிந்து கொள்ள முயல்வது என்பது கல்லில் நார் உரிக்கலாம் என்பதைப் போல் அசாத்தியமானதாயிருக்கிறது. ஆனால் சாதுரியங்கள், வார்த்தைகளைப் பாதுகாக்குமே ஒழிய, உங்கள் உயிரைப் பாதுகாக்காது என்பதை நினைவு வைத்துக் கொள்...” “நீங்கள் புகழ்கிற அளவு நாங்கள் சாதுரியம் உள்ளவர்கள் இல்லை. அறியாமையினால் பூத பயங்கரப் படையினரின் உடையை அணிந்து, கோட்டையைச் சுற்றிப் பார்க்க வரப் போக, இங்கே சிறையில் சிக்கிக் கொண்டு விட்டோம். இது எவ்வளவு பெரிய பேதைமை?” “எது பேதைமை ? யார் பேதைகள் என்பது போகப் போகத் தெரியும்” என்று கூறி விட்டு, மேலாடையைச் சுழற்றி வீசித் தோளில் சாற்றிக் கொண்டு கோபமாக அங்கிருந்து வெளியேறினார் மாவலி முத்தையர். பூத பயங்கரப் படைத் தலைவனும் சிறைக் கோட்டக் கதவுகளைப் பூட்டிக் கொண்டு அவரைப் பின் தொடர்ந்து, அவரோடு சென்றான். அவர்கள் இனிமேல், தங்களை உயிரோடு விடுவது சந்தேகமே என்ற அளவு அழகன் பெருமாளுக்குப் புரிந்து விட்டது. உடனே கற்களை நகர்த்தித் தளவ ரிசையை மூடினார்கள். கீழ் நோக்கி இறங்கிய படிகளும், சுவரும் அகழி நீர்ப் பரப்புக்குச் சமமான பள்ளமாயிருந்ததனால், நீர் கசிந்து வழுக்கின. இருட்டு வேறு மைக்குழம்பாயிருந்தது. படிகளைக் கடந்து கீழே பாதாளச் சிறைக்குள் வந்து விட்டோம் என்ற நிலைமையை உணர்ந்ததும், அழகன் பெருமாள், தென்னவன் மாறனை மெல்லக் கூப்பிட்டான். பதில் இல்லை. பசியினாலும், களைப்பினாலும் தென்னவன் மாறனும், அவனோடு இருக்கும் திருமோகூர் அறக் கோட்டத்து மல்லனும் சோர்ந்து தளர்ந்து, பதிலுக்குக் குரல் கொடுக்கவும் ஆற்றலற்றுப் போய் விட்டார்களோ என்று அழகன் பெருமாள் தவித்துக் கொண்டே கைகளால் துழாவிய போது, கிணற்றின் ஆழத்திலிருந்து ஒலிப்பது போல் ஒரு பெண் குரல் அங்கே ஒலித்தது. அழகன் பெருமாளும் அவனோடு இருந்தவர்களும் திகைத்தார்கள். “நீங்கள் யாரைத் தேடி வந்திருக்கிறீர்களோ, அவர்கள் இருவரும் இங்கிருந்து தப்பி விட்டார்கள்! உயிர் வேண்டுமானால் நீங்களும் இங்கிருந்து உடனே தப்ப வேண்டும். அபாயம் உங்களை நெருங்கிக் கொண்டிருக்கிறது” என்று மீண்டும் அந்தக் குரல் ஒலித்த போது, அந்தக் குரல் யாருடை யது என்பது அழகன் பெருமாளுக்கு ஞாபகம் வந்து விட்டது. அது காம மஞ்சரியின் குரல் என்பதை அவன் உணர்ந்தான். அவள் காலடியோசை நடந்த திசையைப் பின்பற்றி, அவர்கள் நடந்தார்கள். இருளில் மற்றொரு படிக்கட்டை அவள் அடையாளம் காட்டினாள். “ஐயா! இதன் வழியே சென்றால் நடுவூரில் உள்ள வசந்த மண்டபத்து நந்தவனத்தின் அருகே கொண்டு போய் விடும். அப்புறம் அங்கிருந்து தப்ப வேண்டியது உங்கள் பொறுப்பு. இந்தப் பேதை இதற்குப் பிரதிபலனாக உங்களிடம் வேண்டுவது ஒன்றே ஒன்றுதான். உங்கள் ஆண் அழகரும் பெருவீரருமான தென்னவன் மாறனார், என்னை வெறும் காமக் கணிகை என்று மட்டுமே நினைத்திருந்தார், வெறுத்தார், அலட்சியப்படுத்தினார். இங்கிருந்து தப்பிய விநாடி வரை என்னைப் பொறுத்து அவர் கருத்து மாறியதா, இல்லையா என்றே எனக்குத் தெரியாது. இப்படி இங்கே வந்து அவரையும், உங்களையும் தப்ப விட்டதன் மூலம் உயிரை இழக்க நேர்ந்தால் கூட, என் வாழ்வின் பெரும்பாக்கியமாக அதை நான் கருதுவேன் என்பதை அவரிடம் தயை கூர்ந்து, நீங்கள் சொல்ல வேண்டும். என் உடலை அவரிடம் இழக்கும் பாக்கியம்தான் எனக்குக் கிடைக்கவில்லை. என் உடல், பொருள், ஆவி அனைத்தையும் அவருக்காக இழக்கும் பாக்கியத்தைப் பெறுவேன். அதற்கு அவர் கூடக் குறுக்கே நிற்க முடியாது” என்று அவள் கூறிய போது, அழகன் பெருமாளின் மனம் நெகிழ்ந்தது. மற்றவர்களுக்கோ கண்ணில் நீர் நெகிழ்ந்தது. 24. வழியும் வகையும் அந்தப் பெண் காம மஞ்சரிக்கு ஆறுதலாக ஏதேனும் இரண்டு நல்ல வார்த்தைகள் கூறி விட்டுப் படியில் இறங்க விரும்பினான் அழகன்பெருமாள். அவளோ அவனையும், மற்றவர்களையும் விரட்டாத குறையாக விரைவு படுத்தினாள். “மேலேயுள்ள சிறையிலிருந்து உங்களையும், கீழே இந்தப் பாதாளச் சிறையிலிருந்து அவர்கள் இருவரையும், கொலைக் களத்துக்கு இழுத்துச் செல்ல ஆட்கள் வந்து கொண்டிருக்கிறார்கள். இன்னும் ஒரு கணம் தாமதித்தால் கூட ஆபத்து.” “இந்தப் பேருதவிக்கு எப்படி நன்றி கூறுவது என்றே தெரியவில்லை அம்மா?” என்று அவன் கூறத் தொடங்கு முன்பே அவனைப் படிக்கட்டில் இறங்குமாறு கரங்களைப் பற்றிக் கொண்டு இறைஞ்சத் தொடங்கி விட்டாள் காம மஞ்சரி. அழகன் பெருமாளைப் பின்தொடர்ந்து மற்றவர்களும் அந்த நிலவறை வழியில் இறங்கினார்கள். அவர்கள் சிறிது தொலைவு நடந்ததும், அந்த நிலவறை வழி மேற்புறமாக மூடப்பட்ட ஓசையும், அதையடுத்து ஒரு மெல்லிய பெண் குரல், விசும்பி விசும்பி அழும் ஒலியும் தெளிவாகக் கேட்டன. “வாழ்க்கை எவ்வளவு விநோதமானது பார்த்தாயா? உதவி செய்கிறவர்கள் எங்கே, எப்படி, எப்போது எதிர்ப்படுவார்கள் என்று தெரியாமல், எதிர்ப்படுகிற விநோதத்தை எப்படி வியப்பதென்றே தெரியவில்லை செங்கணான்?” என்று தேனூர் மாந்திரீகனிடம் கூறிக் கொண்டே இருளில் நடந்தான் அழகன்பெருமாள். ‘இவ்வளவு மென்மையான மனமுள்ள பெண்ணையா அன்று பயமுறுத்தினோம் நாம்?’ என்று எண்ணியபோது அழகன் பெருமாளுக்கு இதயம் கூசியது. இருளில் கைகோர்த்த படி ஒருவர் பின் ஒருவராக நெடு நேரம் நடந்தார்கள் அவர்கள். “ஐயா! அவள் கூறியதிலிருந்து நம் தென்னவன் மாறனும், மல்லனும் கூடச் சிறிது நேரத்திற்கு முன்பே, இந்தப் பாதை வழியாகத் தப்பியிருக்க வேண்டும் என்று தெரிகிறது. நாம் விரைந்து நடந்தால், பாதை முடிந்து வெளியேறுகிற மறு முனையில் அவர்களைச் சந்தித்து விடலாம் அல்லவா?” -என்று அழகன் பெருமாளைக் கேட்டான் கழற்சிங்கன். அவர்களைச் சந்திக்க முடியுமா, முடியாதா என்பது பற்றி அழகன் பெருமாளால் அதுமானிக்க முடியாமல் இருந்தது. ஆயினும் “சந்திக்க முயல்வோம்” என்று நம்பிக்கையோடு கழற்சிங்கனுக்கு மறுமொழி கூறியிருந்தான் அழகன் பெருமாள். காம மஞ்சரி செய்திருக்கும் உதவியையும், தியாகத்தையும் பற்றிய சிலிர்ப்பு இன்னும் அவன் மனத்தில் இருந்தது. ‘அன்பு என்பது பெண்ணின் இதய ஊற்று! அவள் களப்பிரப் பெண்ணாயிருந்தால் என்ன? தமிழ்ப் பெண்ணாயிருந்தால் என்ன? அவள் பெண்ணாயிருப்பதை நிரூபித்துக் கொள்ள அன்புதான் ஒரே அடையாளமாயிருக்கிறதே தவிர மொழியும், இனமும், குலமும் அடையாளங்களாவதில்லை. எங்கே அன்பு முதிர்கிறதோ, அங்கே விளைகிறாள். கனிகிறாள். பெண்ணாகிறாள். எப்படியோ இருந்த இந்தக் காம மஞ்சரி என்ற அரண்மனைக் கணிகையை, நம்முடைய முரட்டுத் தென்னவன் மாறன் பாகாய் உருகிப் பணிய வைத்து விட்டானே? இவன் அவளை வெறுத்தும், அவள் இவனுக்காக உயிரை விடத் துடிக்கிறாளே; இந்த அன்பை என்னவென்று வியப்பது அரசர்களின் பகை இதயங்களின் கனிவைத் தடுக்கக் கூட முடியவில்லையே? இது பெரிய விந்தைதான்...’ என்று எண்ணி வியந்தபடியே இருளில் நடந்து கொண்டிருந்தான் அழகன் பெருமாள். காம மஞ்சரி எச்சரித்ததில் ஒரு சிறிதும் மிகையாக இருக்க முடியும் என்று அழகன் பெருமாளுக்குத் தோன்றவில்லை. அன்றிரவுக்குள் எப்படியும் மாவலி முத்தரையர் தங்களையும், தென்னவன் மாறனையும், மல்லனையும் கொன்று விடக் கூடும் என்பது அவனே அநுமானித்திருந்ததுதான். தன்னை அவர் தந்திரமாக வினாவியிருந்த வினாக்களுக்குத் தான் கூறியிருந்த எந்த மறுமொழியும், அவரைச் சந்தேகங்களிலிருந்து விடுவிக்காததோடு அவருடைய சந்தேகங்களை மேலும் அதிகமாக்கி விட்டிருக்கக் கூடுமென்றே அவன் புரிந்து கொண்டிருந்தான். அப்படிப் பார்க்கும் போது, இவள் செய்திருக்கும் உதவி காலமறிந்து செய்த பேருதவி என்பதில் அழகன் பெருமாளுக்கு ஒரு சிறிதும் சந்தேகமே ஏற்படவில்லை. இருளில் அபயம் அளிக்க வந்தது போல் ஒலித்த அவளுடைய சோகக் குரலை மீண்டும் நினைவு கூர்ந்தான் அவன். கோட்டைக்குள் தானும் நண்பர்களும் நுழைந்த போது, சிறைக் கோட்டத்துக்கு அவள் வழி சொல்லிய உதவியை விட இப்போது செய்திருப்பது பெரியதும் அரியதும் ஆகிய உதவி என்று அழகன்பெருமாள் மட்டுமின்றித் தப்பிச் சென்று கொண்டிருந்த நண்பர்கள் எல்லாருமே நினைத்தார்கள். நடந்து போய்க் கொண்டிருக்கும் போதே காரி ஒர் ஐயப்பாட்டை வினவினான்: - “ஐயா! இந்த வழி மதுரை மாநகரின் நடுவூர்ப் பகுதியிலுள்ள வசந்த மண்டபத்து நந்தவனத்தில் கொண்டு போய் விடும் என்று அவள் கூறினாள். அங்கிருந்து அப்புறம் நாம் எங்கே போவது? எப்படிப் போவது? உப வனத்துக்குப் போவதா? இரத்தின மாலையின் மாளிகைக்குப் போவதா? வசந்த மண்டபத்தில் இருந்து நாம் நகரில் பிரவேசிப்பது துன்பங்களைத் தராது என்பது என்ன உறுதி? வசந்த மண்டப வழியாக வெளியேறாமல், இதே நிலவறை வழிக்குள்ளேயே சிறிது நேரம் தங்கலாம் என்றால் சிறைக் கோட்டத்திலிருந்து பூத பயங்கரப் படை இதே வழியில் நம்மைப் பின் தொடர்ந்தால் என்ன செய்வது? இதையெல்லாம் நாம் இப்போதே சிந்தித்துக் கொண்டு விடுவது நல்லது அல்லவா? வருமுன் காத்துக் கொள்வதுதானே சிறப்பு?” அழகன் பெருமாள் மறுமொழி கூறினான்: “நீ வினாவிய வினாக்கள் எல்லாமே சிந்திக்க வேண்டியவைதான்! ஆனால் ஒன்றே ஒன்றை மட்டும் நான் ஒப்புக் கொள்ள மாட்டேன். சிறைக் கோட்டத்திலிருந்து தப்பிக் கொண்டிருக்கிற நம்மை இதே வழியாகப் பூத பயங்கரப் படை பின் தொடரும் என்று சந்தேகப்படுகிறாயே; அது மட்டும் நடக்காது. அந்தப் பெண் காம மஞ்சரி நுணுக்கமான அறிவுள்ளவள். பூத பயங்கரப் படையினரின் கவனத்தைத் திசை திருப்ப ஏற்ற விதத்தில் நிலவறை வழியைப் பற்றி அவர்களுக்கு ஒரு சிறிதும் சந்தேகமே எழாத படி வேறொரு வழியைக் கூறி, அந்த வழியாக நாம் தப்பி ஓடியதைத் தான் கண்டதாக விவரிப்பாள் அவள். “இருக்கலாம்! ஆனால், மாவலி முத்தரையர் இவளைப் போல் ஒரு பெண்பிள்ளை கூறுவதற்கு நேர் மாறாகத்தான் முடிவு செய்வார். அவருடைய சாதுரியம், இவளைப் போல் நூறு பெண்களின் பொய்யை நிலை நிறுத்தி முடிவு செய்கிற அளவு கபடமானதாயிற்றே?” “சிந்திக்க வேண்டிய காரியம்தான்; மாவலி முத்தரையர் வந்து குறுக்கிட்டால், நடப்பது வேறாகத்தான் இருக்கும்.” “அவர் குறுக்கிடாமல் இருப்பார் என்று நான் நினைக்கவில்லை ஐயா.” காரி, மாவலி முத்தரையரின் பெயரை இழுக்கவும் மிக மிகத் துணிவாயிருந்த அழகன் பெருமாளின் மனத்தில் கூடக் கவலை வந்து சூழத் தொடங்கியது. நடையும் தடைப்பட்டது. எப்படி மறுமுனையில் வெளியேறித் தப்புவது என்பதைப் பற்றியும், ஏற்கனவே வெளியேறியிருக்கிற தென்னவன் மாறனும், மல்லனும் என்ன நிலையை அடைந்திருப்பார்கள் என்பது பற்றியும் அழகன் பெருமாள் ஆழ்ந்து சிந்திக்கத் தொடங்கினான். வழி தெரிந்தது, ஆனால் வகை தெரியவில்லை. 25. இருளும் வடிவும் தன்னுடன் பேசிக்கொண்டே வந்த கொல்லனின் வேண்டுகோள் என்னவாக இருக்கும் என்பது புரியாமல் முதலில் காராளர் திகைத்தாலும் அவன் அதை வாய்விட்டுக் கூறியவுடன் திகைப்பு நீங்கி, தெளிவடைந்து விட்டார். “ஐயா! புதிய நல்லடையாளச் சொல்லைப் பொறுத்த அளவில், தாங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பழைய நல்லடையாளச் சொல் எப்படியோ எதிரிகளுக்குத் தெரிந்து விட்டாலும், அது எதிரிகளுக்குத் தெரிந்து விட்டது என்பதை உரிய வேளையில் விரைவாய் அறிந்து, உடனே வேறு நல்லடையாளச் சொல்லை மாற்றி விட்டோம். இனி மேலும் அப்படி நமது நல்லடையாளம் வெளியானால், உடனே அதை நாம் அறிந்து மாற்ற முடியாமல் போனாலும் போய் விடலாம்... ஆகவே, தயை கூர்ந்து நீங்கள்...” “என்னிடம் புதுமையாக இன்றுதான் பழகத் தொடங்குகிறவனைப் போல நீ ஏன் இவ்வளவு தயங்குகிறாய்?” “தயக்கம் ஒன்றுமில்லை ஐயா! நீங்கள் தவறாக எடுத்துக் கொண்டு விடக் கூடாதே என்றுதான் அஞ்சுகிறேன். இந்தப் புதிய நல்லடையாளச் சொல்லைத் தங்கள் திருக்குமாரிக்குக் கூட அறிவிக்க வேண்டாம் என்பது என் கருத்து” என்று குரலைத் தணித்துக் கொண்டு அவரருகே வந்து நெருங்கி நின்று கூறினான் கொல்லன். அவன் கூறியதைக் கேட்டு அவர் மெல்ல நகைத்தார். பின்பு சில விநாடிகள் கழித்து, “நீ சொல்வது நியாயம்தான்! பெண்கள் மிகவும் மென்மையானவர்கள். அவர்களுக்கு எதையும் எதிர்மறையாகவும், வேறு, வேறு கோணங்களிலும் நினைத்துப் பார்த்து முடிவு செய்யத் தெரியாது. எளிமையாகப் பிறரை நம்பி விடுவார்கள்” என்று அவரே அவன் கூறியதை ஒப்புக் கொள்வது போல் மறுமொழி கூறினார். தான் அவருடைய செல்வ மகளைப் பற்றிக் கூறிய கருத்து, அவர் மனத்தில் வேறுபாட்டையோ, ஆத்திரத்தையோ உண்டாக்கவில்லை என்பது அவனுக்கு மனநிறைவு அளிக்கக் கூடியதாக இருந்தது. ஆனால், அடுத்த கணமே, அவர் பெரியவரின் இருப்பிடத்துக்குத் தம்மை அழைத்துச் செல்ல வேண்டும் என்ற தம்முடைய பழைய ஆவலையே, மீண்டும் வெளியிடத் தொடங்கி விட்டார். அரிய முயற்சி செய்து பல காரணங்களை எடுத்து விளக்கி, அந்த ஆவலைத் தற்காலிகமாகத் தவிர்க்கும்படி அவரை வேண்டிக் கொண்டான் கொல்லன். அவரும் விடுகிற வழியாயில்லை. “அப்படியானால் மீண்டும் பெரியவரை நான் எப்போதுதான் பார்க்க முடியும் என்பதையாவது சொல்லேன். அவரைக் காணவும், அவருடைய உபதேசங்களைக் கேட்கவும் முடியாமல், என் நாட்கள் மலை போல் மெல்ல நகர்கின்றன." “ஐயா! இந்த எளியேன் சொல்லியா, தங்களுக்குத் தெரிய வேண்டும்? பாண்டியர்கள் மீண்டும் நாட்டைக் கைப்பற்றும் காலம் தொலைவில் இல்லை. அந்நியர்களும், ஈவு இரக்கமற்ற கொள்ளைக்காரர்களும் ஆகிய களப்பிரர்களை வென்று துரத்தினால், பாண்டிய மரபு மீண்டும் தழைக்கும். அப்போது பெரியவரை, நீங்களும் நானும் எல்லாரும் கண்டு மகிழலாம்.” “அந்தக் காலம் மிக மிகத் தொலைவில்தான் இருக்கிறதோ என்று நான் அஞ்சுகிறேன். மாபெரும் பாண்டியர் கானப் பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதிக்குப் பின் அந்த மரபைச் சுற்றி இருள் சூழச் செய்து விட்டார்களே, பாவிகள்...?” “ஆலவாய் அண்ணல் திருவருளால், இருள் எல்லாம் விலகி ஒளி பரவும் காலம் வந்து விட்டது” என்றான் கொல்லன். அவர்கள் இருவரும் இவ்வாறு உரையாடிக் கொண்டே உலாவி முடித்ததும், பொய்கையில் தந்த சுத்தி செய்து நீராடினர். நீராடி முடித்ததும், கொல்லனைத் தம்மோடு மாளிகைக்கு வந்து பசியாறுமாறு வேண்டினார் காராளர். மாளிகைக்குச் சென்றால், காராளர் மகள் செல்வப் பூங்கோதையின் துயரக் கோலத்தையும், வேதனையையும் காண வேண்டியிருக்கும் என்ற எண்ணத்தில்; “நான் இங்கிருந்தே வேறு வழியாக வீட்டுக்குப் போகிறேன் ஐயா! நன்றாக விடிந்து விட்டது. இனி நாம் வீதியில் ஒன்று சேர்ந்து போக வேண்டாம்” என்றான் கொல்லன். அவரும் அவன் கூறியதற்கு மேல் வற்புறுத்தாமல் விடைபெற்றுக் கொண்டு புறப்பட்டுப் போய்விட்டார். பொய்கைக் கரையிலிருந்து மற்றொரு வழியாகத் தன் உலைக் களத்திற்குத் திரும்பினான் கொல்லன். மறுமுறை பெரியவரிடமிருந்து அழைப்போ, கட்டளையோ வரும் வரை தன் உலைக் களத்திலேயே நிறைய வேலை இருந்தது அவனுக்கு. அவனும், அவனோடு சேர்ந்த பிற கொல்லர்களும் பணியாட்களும், இன்னும் சிறிது காலத்திற்குள் நிறைய வேல்களையும் வாள்களையும் உருவாக்கி, அடுக்க வேண்டியிருந்தது. அன்று முதல் அந்த வேலையில் முனைந்து ஈடுபட்டான் அவன். களப்பிரர்கள் அறியாமல், உருவாக்கி மறையில் அடுக்கி நிறைக்க வேண்டிய ஆயுதங்கள் அவை. ஏற்கனவே பாண்டிய நாட்டின் வேறு பகுதிகளில் உள்ள பெரியவரின் அன்புக்குப் பாத்திரமான பிற கொல்லர்களும், அவனும் இப்படி நிறையப் படைக்கலன்களைச் சேர்த்து வைத்திருந்தார்கள். அந்தப் படைக்கலன்களின் எண்ணிக்கையைப் பெருக்கும் செயலில் மேலும் முனைந்து ஈடுபட்டான் கொல்லன். அவனுடைய நாட்கள் அதில் கழியத் தொடங்கின. காராளரைப் பொறுத்த வரை, பெரியவர் இல்லாத திருமோகூர் மந்தமாக இருப்பது போல் தோன்றிக் கொண்டிருந்தது. விலை மதிப்பற்ற அருமருந்தில் மீதமிருக்கும் சிறிய அளவைப் போல் பாண்டியன் கானப் பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதிக்குப் பின் இன்று அந்த வம்சாவளியில் எஞ்சியிருக்கும் இளையநம்பி, தென்னவன் மாறன், கொற்கைப் பெருஞ்சித்திரன் ஆகிய மூவரையும் பற்றிப் பெரியவர் மதுராபதி வித்தகர், திருமால் குன்றத்து மலைப் பிளவில் ஒப்பு நோக்கிச் சிந்தித்துக் கொண்டிருந்த சிந்தனையை, அப்போது அங்கே பதற்றத்தோடு விரைந்து நுழைந்த ஆபத்துதவிகள் கலைத்தனர். வந்தவர்களுடைய பரபரப்பு, அவருடைய கவனத்தை உடனே ஈர்த்தது. வந்தவர்கள் பதற்றத்தோடு கூறலாயினர்: “ஐயா! அபாயம் நெருங்குகிறது! இந்த மலையடிவாரத்தில் உள்ள காட்டுப் பகுதிகளிலும் சிலம்பாறு தரையிறங்குமிடத்தில் உள்ள மாந்தோட்டத்திலும், சிறு சிறு குழுக்களாகக் களப்பிரர்களின் பூத பயங்கரப் படை வந்து தங்கியிருக்கிறது. இந்த நிலைமை இன்று காலையில்தான் தெரிய வந்தது. நாம் உடனே இடம் மாற வேண்டும். மலையின் உட்பகுதியில் இன்னும் நெடுந் தொலைவு தள்ளிச் சென்று தங்கி விடுவோம். அபாயத்தைத் தவிர்ப்பதற்கு ஒரே வழி அதுதான். உடனே புறப்படுங்கள்!" இதைக் கேட்டு ஒரு கணம் தயங்கினாற் போல் நின்றார் மதுராப்தி வித்தகர். அடுத்த கணமே, அவர் கூறலானார்: “உனக்குத் தெரியாது! நாம் அப்படிச் செய்யக் கூடாது. மலையின் உட்பகுதிக்குப் போகப் போக, நாம்தான் நம்மைத் தப்ப முடியாதவர்களாகவும், அபாயத்துக்கு உட்படுத்திக் கொள்கிறவர்களாகவும் மாற்றிக் கொள்கிறோம். நீங்கள் கூறுவது சாதுரியமான உபாயம் அல்ல. கீழே மலை அடிவாரத்துக் காடுகளிலும், சிலம்பாறு தரையிறங்கும் இடத்திலும் எதிரிகள் சிலர் வந்து தங்கியிருக்கிறார்கள் என்றால், நம்மவர்களைக் கொண்டு அவர்களைக் கண்காணிக்கச் செய்யுங்கள். அவர்கள் ஒருவேளை தங்கியிருக்கும் இடங்களிலிருந்தே சந்தேகம் நீங்கித் திரும்பிப் போய் விடலாம். அப்படித் திரும்பாமல் முன்னேறி, இங்கே வரத் தொடங்குவார்கள் என்று ஆகுமாயின், அப்புறம் என்ன செய்யவேண்டும் என்பதை நான் சொல்லுவேன்.” அந்த ஆபத்துதவிகள் இருவரும் வந்த போது, இருந்த சிறிதளவு சலனமும் இப்போது அவரிடம் இல்லை. அவர் கூறியதைக் கேட்ட பின்பும், ஆபத்துதவிகள் தயங்கி நின்றனர். அவர்களைத் துரத்தாத குறையாக இரைந்தார் அவர். “உடனே போய் மரங்களின் மேல் ஏறி, அடர்ந்த கிளைகளிடையே மறைந்திருந்து கவனியுங்கள். பூத பயங்கரப் படையினர் மேலே வருவார்கள் என்று சிறு அறிகுறி தெரிந்தாலும், உடனே வந்து சொல்லுங்கள். மற்றவற்றைப் பின்பு பார்த்துக் கொள்ளலாம்.” அவர்கள் சென்றார்கள். அவர் எதிர்காலத்தைப் பற்றிய சிந்தனையில் மூழ்கினார். பல்லாண்டு கால இருளுக்குப் பின்னர், மீண்டும் பாண்டியர்கள் நாட்டைக் களப்பிரர்களிடமிருந்து மீட்கும் காலம் நெருங்கிக் கொண்டிருப்பதை அவர் மனம் கணித்தது. மனத்தில் இயல்பாகப் பொங்கும் அந்த நம்பிக்கை வீண் போகாது என்பது அவருக்குத் தெரியும். அந்தப் பொற்காலம் நெருங்குவதை உணர்ந்துதான், திருக்கானப்பேர்க் காட்டிலும், தென்னவன் சிறு மலையிலும், கொற்கையிலும் மறைந்து வளர்ந்து கொண்டிருந்த மூன்றே மூன்று பாண்டிய வம்சாவளியினரான இளையநம்பியையும் தென்னவன் மாறனையும், கொற்கைப் பெருஞ்சித்திரனையும், பாண்டியர் குலதனமாகிய நவ நித்திலங்களையும் வரவழைத்திருந்தார் அவர். இந்த ஒரே ஒரு குறிக்கோளை நிறைவேற்றி முடிப்பதற்காகத் தம்மை முழுத் துறவியாக ஆக்கிக் கொள்ளாமல் விருப்பு வெறுப்புகளோடு வாழ்ந்தார் அவர். இந்த இலட்சியம் நிறைவேறி விட்டால் மறு விநாடியே விருப்பு வெறுப்புகளற்ற முழுத் துறவியாய்க் காவியுடுத்தி உலக பந்தங்களிலிருந்து நீங்கியவராகக் கங்கை நீராடி, இமய மலைச்சாரலில் அவர் தவம் செய்யப் போய்விடலாம். கடுமையான நியமங்களை மேற்கொண்டிருந்தும் ஒரு துறவிக்குரிய அருள் உள்ளமும், உலக பந்தங்களில் இருந்து நீங்கிய இயல்பும் இல்லாமல் தாம் வாழ வேண்டி நேர்ந்திருப்பதை எண்ணி, எண்ணி அவர் உள்மனம் வருந்தாத கணமில்லை. இப்போதும் அதே ஆத்மார்த்தமான தவிப்பை அடைந்திருந்தார் அவர். உள்ளத்தில் சிந்தனைகள் ஓடின. ‘இன்னாருக்கு நான் மிகவும் வேண்டியவன். இன்னாருக்கு நான் மிகவும் வேண்டாதவன்’ என்றெல்லாம் வேண்டுதலையும், வேண்டாமையையும் கற்பித்துக் கொள்ளத் தொடங்கிய பின், அதில் துறவுக்கே இடமில்லை. துறவு என்பது விருப்பு, வெறுப்பையே துறக்கிற அளவு பந்தபாசமற்றதாக இருக்க வேண்டும்.ஒரு பெரிய அரச மரபை உருவாக்கி, மீண்டும் நாட்டை மீட்க நான் பொறுப்பு எடுத்துக் கொண்டேன். பல ஆண்டுகளுக்கு முன், எனக்கும், செல்லூர் மாவலி முத்தரையனுக்கும், வெள்ளியம்பலமன்றில் நிகழ்ந்த ஒரு தர்க்கத்தில், பல தேசத்து அறிஞர்கள் முன்னிலையில், அவனைத் தோல்வியுறச் செய்தேன் நான். அந்தக் காலத்தில், இப்படி நான் தலை மறைவாகிற அளவு களப்பிரர்களின் கொடுமை இல்லை. என்னால் தோற்கச் செய்யப்பட்ட வையை வடகரைச் செல்லூரான் மாவலி முத்தரையன் தாங்க முடியாத அறிவுப் பொறாமையினாலும், காழ்ப்பினாலும் என்னை எதிர்த்து வேரறுப்பதற்குக் களப்பிரர்களோடு உறவாடத் தொடங் கினான். நான் பாண்டிய குலத்து உறுதுணையாளன் என்ற அந்தரங்க உண்மை மாவலி முத்தரையனுக்குத் தெரியும். அவன் என் பகைவனாக மாறிய பின் சமயம் பார்த்து, அதை அவன் களப்பிரப் பேரரசுக்கு அறிவித்து என்னை ஒழிக்க முயல்வானோ என்ற முன்னெச்சரிக்கையின் காரணமாகவே, அந்தப் பகைமை ஏற்பட்ட நாள் முதல் நான் தலை மறைவு கொள்ள நேரிட்டு விட்டது. இப்படி மறைந்து வசிக்கவும், பாண்டியர் வெற்றிக்குத் திட்டமிடவும், ஏற்பாடுகள் செய்யவும் நேர்ந்தது கூட ஒரு விதத்தில் நல்லதுதான். இல்லையானால் வேறு விதமாகவும் விளைவுகள் மாறியிருக்கலாம். விரோதியாயிருந்தாலும், முழுமையாக நான் இந்தச் செயலில் ஈடுபடும்படிச் செய்த மாவலி முத்தரையனுக்கு ஒரு விதத்தில் நன்றி செலுத்தத்தான் வேண்டும். என் மேல் அறிவுப் பொறாமை ஏற்பட்டு மாவலி முத்தரையன் என்னுடைய பகைவனாக மாறவில்லை என்றால், நான் என் குறிக்கோளை நிறைவேற்றிக் கொள்வதில் இவ்வளவு முனைந்திருக்க முடியாது. நம்முடைய முழுமையான பகைவன்தான் நமது முயற்சிக்குச் சுறுசுறுப்பும், உயிரும் ஊட்டுகிறான் என்பது எவ்வளவு பெரிய உண்மை? தமக்குத் தாமே உள் முகமாகச் சிந்தித்துக் கொண்டிருந்த அவர், அதில் நேரம் போவதே தெரியாமல் ஈடுபட்டிருந்தார். நண்பகலுக்கு மேல் முன்பு வந்த பூத பயங்கரப் படையின் அபாயத்தைத் தெரிவித்த அதே ஆபத்துதவிகள் மீண்டும் அவரைத் தேடி வந்தனர். இப்போது அவர்களிடம் பரபரப்போ, பதற்றமோ இல்லை. அமைதி தெரிந்தது. “முன்பு தென்பட்ட இடங்களிலிருந்து பூத பயங்கரப் படைகள் பின் வாங்கித் திரும்பிச் சென்றுவிட்டார்கள். தாங்கள் அநுமானித்தபடியே நடந்திருக்கிறது. நாங்கள்தான் எங்கள் உணர்ச்சி வேகத்தில், ஏதேதோ நினைத்து விட்டோம். நமக்கு உடனே ஒர் அபாயமும் இல்லை. இடமும் மாற வேண்டாம்” - என்று அவர் கேட்பதற்கு முன் அவர்களாகவே கூறினார்கள். வந்தவர்கள் பின் வாங்கித் திரும்பி விட்டாலும், தொடர்ந்து மலையடிவாரத்தையும் சிலம்பாற் றங்கரையையும் விடாமல் கண்காணித்துக் கொண்டிருக்குமாறு, அவர்களுக்கும் அவர்கள் மூலமாக மற்ற ஆபத்துதவிகளுக்கும் கட்டளையிட்டு அனுப்பினார் அவர். அவர்கள் சென்ற பின், மீண்டும் சிந்தனைகளில் ஆழ்ந்தார். அங்கங்கே பல பகுதிகளில் மறைந்திருந்து உடனே எழுச்சி பெறத் தக்க நிலையிலுள்ள பாண்டியர்களின் படை பலம், ஆயுதங்களின் பலம், சூழ்நிலை எல்லாவற்றையும் மனக் கணக்காகக் கணக்கிட்டு நினைத்துப் பார்த்தார் அவர். அவிட்ட நாள் விழாவன்று இந்தக் கணக்கு எதிர்பாராத விதமாக பொய்த்துப் போனாலும், மிக விரைவில் களப்பிரர்களை அவர்களே எதிர்பாராதபடி, வளைத்து மடக்கிப் பாண்டியர்கள் நாட்டைக் கைப்பற்றலாம் என்று தெளிவாக அவருக்குப் புரிந்தது. சுற்றிலும் மாலை சூழ்ந்து, மலையில் இருட்டிக் கொண்டு வந்தது. அவரது சிந்தனையிலோ, அப்போதுதான் விடிவு தெரிவது போல் இருந்தது. விடியும் என்று நம்பினார் அவர். 26. எதிர்பாராத அபாயம் தயக்கமும், எச்சரிக்கையும், மாறி, மாறி நிலவும் மனநிலையோடு அழகன் பெருமாள் முதலிய நண்பர்கள் காம மஞ்சரி காட்டிய நிலவறை வழியே வெளியேறி, அதன் மறு முனையாகிய மதுரை மாநகரத்து நடுவூர் வசந்த மண்டபத்து நந்தவனத்தை அடைந்து விட்டனர். மறுமுனையில் தங்களுக்கு முன் அதே வழியாகத் தப்பிய தென்னவன் மாறனும், திருமோகூர் மல்லனும் தங்களை எதிர்பார்த்து மறைந்து, அங்கே காத்திருக்கக் கூடும் என்று அழகன் பெருமாள் எதிர்பார்த்தான். அவனும் நண்பர்களும் நினைத்தபடி, தென்னவன் மாறனையோ, மல்லனையோ அங்கே காணமுடியவில்லை. தவிர அந்த நந்தவனப் பகுதி அப்போது இயல்பை மீறிய அமைதியில் ஆழ்ந்திருந்தது. மனிதர்கள் அதிகம் பழகாத இயற்கை வளமே உள்ள இடத்தினது அழகின் அமைதியாக அது இல்லை. இந்த அமைதி வேறுபாடு உடையதாகவும் சந்தேகத்துக்கு உரியதாகவும் இருந்தது. காரி, குறளன், கழற்சிங்கன் முதலியவர்களும் கூட இந்த அமைதியைப் பற்றி ஐயப்பாடு கொண்டனர். அழகன் பெருமாளுக்கு இன்னதென்று காரணம் புரியாமலே, மனத்தில் ஏதோ இடறியது. பேசாமல், கொள்ளாமல் வந்த வழியே திரும்பி நிலவறையில் இறங்கி உள்ளேயே போய்விடலாமா என்று கூடத் தோன்றியது. அடர்த்தியான அந்த நந்தவனத்தில் எங்கே போய், எப்படி வெளியேறி, எவ்வாறு தப்புவது என்றும் அவர்களுக்கு உடனே விளங்கவில்லை. ஒரே குழப்பமாயிருந்தது. அப்போதுதான் எதிர்பாராதபடி அந்த அபாயம் நடந்தது. அவர்கள் முற்றிலும் எதிர்பாராத நேரத்தில் திடீரென்று நாற்புறமும் புதர்களிலிருந்து நூற்றுக்கணக்கான பூத பயங்கரப் படை வீரர்கள் வெளிப்பட்டு ஆயுதபாணிகளாகப் பாய்ந்தனர். அழகன் பெருமாள் முதலியவர்கள் எப்படித் தப்புவது, என்ன செய்து தப்புவது என்று விழிப்படையும் முன்பாகவே மீண்டும் சிறைப் பிடிக்கப்பட்டு விட்டனர். கண்மூடித் திறப்பதற்குள் இது நடந்து முடிந்து விட்டது. யாரும் எங்கும் ஒடித் தப்ப வழியில்லை. அந்தப் பரபரப்பான சூழ்நிலையிலும், சிறைப்பட்டு விட்ட தங்களுடைய எண்ணிக்கையில் ஒன்று குறைவதை அழகன் பெருமாள் தெளிவாக உணர்ந்தான். உருவத்தில் மிகவும் சிறியவனாகிய குறளன் மட்டும் மின்னல் வேகத்தில் தப்பியிருந்தான். அந்த வினாடியில் பூத பயங்கரப் படையினரும் அதைக் கவனிக்கவில்லை என்று தெரிந்தது. தங்களில் ஒருவர் தப்ப முடிந்ததனால் தொடர்புள்ள மற்றவர்களுக்கு வெளியே போய், நடந்ததை அறிவிக்க முடியும் என்பதையும், மீட்பதற்கு ஏற்பாடு செய்ய முடியும் என்பதையும் எண்ணி மகிழ்ந்தான் அழகன் பெருமாள். அப்போது மற்றும் நால்வர் வேறொரு புதரிலிருந்து வெளிப்பட்டனர். பூத பயங்கரப் படைத் தலைவனும் மாவலி முத்தரையரும், அவர்களோடு, கை கால்கள் இரும்புச் சங்கிலிகளால் பிணைக்கப்பட்ட நிலையில், தென்னவன் மாறனும், மல்லனும் தென்பட்டனர். சிறையிலிருந்து வெளியேற முயன்ற அனைவருமே, திட்டமிட்டுப் பிடிக்கப்பட்டு விட்டதை அழகன் பெருமாள் புரிந்து கொண்டான். அந்த நிலையில் குறளன் மட்டும் தப்ப முடிந்ததை ஒர் அதிசயமாகத்தான் நினைத்தான் அவன். இப்படி வகையாக மாட்டி வைப்பதற்காகவே ஒரு நீலிக் கண்ணீர் நாடகமாடினாளோ என்று காம மஞ்சரியைப் பற்றியே இப்போது சந்தேகம் வந்தது அவனுக்கு. ஆனால், அடுத்த கணமே, மாவலி முத்தரையர் பேசிய பேச்சிலிருந்து அந்தச் சந்தேகம் நியாயமற்றது என்பதை உணர்ந்து அப்படி நினைத்ததற்காகத் தன்னைத் தானே கடிந்து கொண்டான் அழகன் பெருமாள். மாவலி முத்தரையர் இடிக் குரலில் கூறினார்; “எவ்வளவுதான் நடித்தாலும், நீங்கள் எல்லோரும் யாரென்பது இப்போது தெள்ளத் தெளிவாகப் புரிந்து விட்டது. இனி நீங்கள் தப்ப முடியாது. உங்களுக்கு உதவி புரிந்த அந்தக் கேடு கெட்ட காம மஞ்சரியும் தப்ப முடியாது. நீங்களே உங்களைத் தெளிவாக அடையாளம் காட்டிக் கொண்டு விட்டதற்கு நன்றி.” அழகன் பெருமாள் முதலியவர்களும், தென்னவன் மாறனும், மல்லனும் இதைக் கேட்டு குனிந்த தலை நிமிராமல் நின்றார்கள். அந்த நிலையில் அவர்களிடம் மேலும் மாவலி முத்தரையரே பேசலானார்; “இப்போது கூட ஒன்றும் குடி முழுகி விடவில்லை! எனக்குத் தெரிய வேண்டிய ஒரு பெரிய உயிர் நிலைச் செய்தி உங்களிடமிருந்து தெரியுமானால் மற்ற எல்லாத் தவறுகளையும் மறந்து, உங்களை நான் விட்டு விட முடியும். அந்த மதுராபதி வித்தகன் எங்கே இருக்கிறான் என்பதை மட்டும் சொன்னால் போதுமானது. இடத்தைச் சொல்ல முடியாவிட்டால், ஊரைச் சொல்லுங்கள். ஊரைச் சொல்ல முடியாவிட்டால் திசையைச் சொல்லுங்கள்." தமது இந்த வேண்டுகோளுக்கு இணங்கி அவர்களில் உயிர்ப் பயமும், விடுதலையாகும் வேட்கையும் உள்ள யாராவது ஒருவனாயினும் முன் வருகிறானா என்று, அழகன் பெருமாள் முதலிய ஒவ்வொருவர் முகமாக ஏறிட்டுப் பார்த்தார் மாவலி முத்தரையர். யாருடைய முகத்திலும் இசையும் சிறு அடையாளம் கூடத் தென்படவில்லை. இந்த முயற்சியைக் கனிவாகவும், கடுமையாகவும், பயமுறுத்தியும் தொடர்ந்து சிறிது நேரம் வரை செய்து பார்த்தார் மாவலி முத்தரையர். எந்தப் பயனும் விளையவில்லை. முடிவில் குரூரமும், வெறுப்பும் நிறைந்து வெடிக்கும் கடுமையான குரலில் தென்னவன் மாறன் பக்கமாகக் கையைச் சுட்டிக் காட்டி, ‘இந்தப் புலித்தோல் அங்கிக்காரனைத் தவிர மற்றவர்களை ஒளியே நுழைய முடியாத இருட்டறையில் கொண்டு போய்த் தள்ளுங்கள். பல ஆண்டுகள் சிறையில் கிடந்து ஒவ்வொருவராகச் செத்துத் தொலையட்டும்” என்றார் அவர். உடனே பூத பயங்கரப் படைவீரர்கள் பாய்ந்து சிறைப்பட்டவர்களை இழுத்துக் கொண்டு சென்றனர். தென்னவன் மாறனை மட்டும் பூத பயங்கரப் படைத் தலைவனும், மற்ற இரு வீரர்களும் வேறு திசையில் இழுத்துச் சென்றனர். கால்களில் தளரத் தளர இடம் விட்டுப் பிணைக்கப் பட்டிருந்த இரும்புச் சங்கிலியின் காரணமாக, தள்ளாடித் தள்ளாடி இயல்பாக எட்டு வைத்து நடக்க முடியாமல், சிரமப் பட்டுச் சென்றான் தென்னவன் மாறன். மாவலி முத்தரையர் களப்பிரக் கலியரசனைக் காணச் சென்றார். அப்போது உடனே அரசனைக் கண்டு, தென்னவன் மாறனையும், காம மஞ்சரியையும் கடுமையாகத் தண்டிக்குமாறு வற்புறுத்த வேண்டியிருந்தது அவருக்கு. ஃ⁠ஃ⁠ஃ இப்பால் அழகன் பெருமாள் முதலியவர்களை இழுத்துச் சென்ற பூத பயங்கரப் படை வீரர்கள் முன்னை விடக் கொடுமையானதும் இருட்குகை போன்றதும் ஆகிய ஒரு பயங்கரச் சிறைக் கூடத்தில் அவர்களைத் தள்ளி அடைத்தார்கள். அப்போது தங்களை அடைத்த வீரர்களில் ஒரு பூத பயங்கரப்படை வீரனிடம் தனக்குத் தெரிந்த அளவில் பாலி உச்சரிப்போடு, “ஏனப்பா, அந்தப் புலித்தோல் அங்கி வீரரை எப்போது இங்கே கொண்டு வந்து எங்களோடு அடைப்பார்கள்?” என்று வினாவினான் அழகன் பெருமாள். இதற்கு, முதலில் அந்த வீரன் பதில் கூறவில்லை. வஞ்சகம் தோன்றச் சிரித்தான். பின்பு சிறிது நேரம் கழித்துப் போகிற போக்கில் மிகவும் சுருக்கமாக, ‘எப்போதும், எங்கும் திரும்பி வர முடியாதவர்களைப் பற்றி விசாரித்து உன் நேரத்தை வீணாக்கிக் கொண்டிராதே அப்பனே!’ என்று பாலியிலேயே பதில் சொல்லி விட்டுப் போனான் அந்த வீரன். இந்த மறுமொழியைக் கேட்டு அழகன் பெருமாளும் நண்பர்களும் துணுக்குற்றனர். தென்னவன் மாறனை உயிர் மீட்கும் காரியத்தை மேற்கொண்டு, அதன் பொருட்டே கோட்டைக்குள்ளே வந்த தாங்கள் அதை நிறைவேற்ற முடியாமற் போகிறதே என்று துடிதுடித்துத் தவித்தார்கள் அவர்கள். தாங்கள் தலைவணங்கும் குலக்கொழுந்து ஒன்று கருகுவதை அழகன் பெருமாளால் எண்ணிப் பார்க்கவும் முடியாமல் இருந்தது. பெரியவர் தங்களுக்கு ஒலை மூலம் அனுப்பிய கட்டளையை இன்று தாங்கள் நிறைவேற்ற முடியாமற் போய் விட்டதே என்ற துயரத்தின் சுமை அவன் நெஞ்சை அழுத்தியது. “எக்காரணத்தைக் கொண்டும் திருக்கானப்பேர் நம்பியைத் தென்னவன் மாறனை மீட்கும் பணிக்காகக் களப்பிரர் அரண்மனைக்குள்ளோ, கோட்டைக்குள்ளோ போக விடக் கூடாது” என்று பெரியவர் வற்புறுத்தித் தடுத்திருந்ததன் பொருள் இப்போது அழகன் பெருமாளுக்குப் புரிந்தது. அந்த எச்சரிக்கையின் பயன் இமய மலையளவு பெரிதாகித் தோன்றியது இப்போது. ஒரு குலக் கொழுந்தைக் கருக விடாமல் காப்பாற்றிக் கொண்டு வரும் பணியில் ஈடுபட, இன்னொரு குலக் கொழுந்தை அனுப்புவதன் மூலம் அந்த இரண்டு குலக் கொழுந்துகளையுமே பகைவர் கருக்கி விடக் கூடாது என்ற கவலையும் முன்னெச்சரிக்கையும் கவனமும் கொண்டு, பெரியவர் காரியங்களைத் திட்டமிட்டிருக்கும் திறனை இந்த வேதனையான சூழ்நிலையிலும் அழகன் பெருமாளால் வியக்காமல் இருக்க முடியவில்லை. தங்களோடு சிறையிலிருந்து விட்டுத் தப்பிப் போயிருக்கும் குறளன், இளைய நம்பியையோ, பெரியவரையோ போய்ச் சந்தித்து, எல்லா விவரங்களையும் கூறுவான் என்ற ஒரே நம்பிக்கைதான், அவ்வளவு இருளின் நடுவேயும் அவன் முன் ஒளியாக இருந்தது. இந்தப் புதிய சிறையில் ஒளியோ, பகல் இரவோ, உலகத் தொடர்போ இல்லாத காரணத்தால் இனிமேல் காலம் நகர்வது கூடத் தெரியாமற் போய்விடும் போலிருந்தது. சிறையின் பெரிய இரும்புக் கதவில் கையும் பாத்திரமும் நுழைகிற அளவு துவாரம் இருந்தது. அந்தத் துவாரத்தின் வழியே வெளிப்புறம் இருந்து குரல் வந்தால், காலையோ மாலையோ உண்பதற்கு ஏதோ கொடுக்க வந்திருக்கிறார்கள் என்று அர்த்தம். அந்தத் துவாரத்தில் உணவுக்காக அழைக்கும் குரலை வைத்துத்தான் கால ஒட்டமே அவர்களுக்குத் தெரிகிற அளவு உலகம் அவர்களைப் பொறுத்தவரை ஒடுங்கி விட்டது. மறுபடி உயிரோடு வெளியேறிக் காற்றையும், கதிரவன் ஒளியையும், வையையாற்றையும் கூடல் கோநகரையும் இப்பிறவியில் இனிமேல் கண்ணாரக் காண முடியுமா என்ற சந்தேகத்தை அநேகமாக அவர்கள் எல்லாருமே அடைந்திருந்தனர். இப்படி அவர்கள் இந்தப் புதிய காராக்கிருகத்தில் அடைக்கப்பட்ட மறு தினமே திடுக்கிடத்தக்க ஒரு துயரச் செய்தி கிடைத்தது அவர்களுக்கு, மறுநாள் துவாரத்தின் வழியே உணவை நீட்டியவனிடம்- “எங்களில் ஒருவராகிய அந்தப் புலித்தோல் அங்கியணிந்தவர் ஏன் இன்னும் இங்கே கொண்டு வந்து அடைக்கப்படவில்லை? அவர் என்ன ஆனார்? எங்கே போனார்?” என்று கேட்டான் அழகன் பெருமாள். வெளியே சிரிப்பொலிதான் ஏளனமாகக் கேட்டது. வேறு பதில் வார்த்தைகள் இல்லை. மறுநாள் மாவலி முத்தரையர் தீப்பந்தங்களோடும், ஐந்தாறு பூத பயங்கரப் படை வீரர்களோடும் சிறைக்குள் வந்தார். அழகன்பெருமாளை அடையாளம் கண்டு அவர் நேரே அவனருகே வந்து, "அப்பனே! நேற்று உங்களில் யாரோ ஒருவன் இங்கே உணவு கொடுக்க வந்தவனிடம் அந்தப் புலித்தோல் அங்கிக் காரனைப் பற்றி விசாரித்தீர்களாம். பாவம்! இனி அவனைப் பற்றியும், அந்த நன்றி கெட்ட கணிகை காம மஞ்சரியைப் பற்றியும் விசாரித்து ஆகப் போவது ஒன்றுமில்லை. இருவருமே இப்போது இந்த உலகில் இல்லாதவர்களாகி விட்டனர். இதோ பார்?” என்று இரத்தக்கறை படிந்து, நிணம் நாறும் புலித்தோல் அங்கியின் கிழிந்த பகுதிகளை அவர்கள் எல்லார் முன்பாகவும் எடுத்துக் காட்டினார். வயிறெறிந் தார்கள், குருதி கொதித்தது. அவர்களால் சகித்துக் கொள்ள முடியாத மரணத்தைப் பற்றி மிகவும் அலட்சியமாகச் சொல்லி விட்டுப் போய்விட்டார் மாவலி முத்தரையர். அன்று அவர் சென்ற பின் சூழ்ந்த இருளுக்குப் பின் நெடுங் காலம் அந்தச் சிறையில் உள்ளவர்களுக்கு விடிவே பிறக்கவில்லை. தென்னவன் மாறன் என்ற வலிய இரும்பு மனிதனை ஒரு ஈயை நசுக்குவது போல் களப்பிரர்கள் நசுக்கிக் கொன்று விட்டதை அவர்களால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. தென்னவன் மாறனோடு நெருங்கிப் பழகிய திருமோகூர் மல்லன் பல மாதங்கள் அந்த இருட்சிறையில் மெளனமாக மலை அமர்ந்து அழுவது போல் ஒரு மூலையில் அமர்ந்து கண்ணிர் வடித்துக் கொண்டிருந்தான். அழகன் பெருமாள் மனம் ஒடிந்து போனான். இடையிடையே அவர்களில் ஒருவனாவது, மதுராபதி வித்தகர் இருக்கும் இடத்தைப் பற்றி உளவு சொல்ல மாட்டானா என்ற ஆசையில் மாவலி முத்தரையர் அடிக்கடி வந்து பயமுறுத்திப் பார்த்துத் தோல்வியோடு திரும்பிக் கொண்டிருந்தார். அவர்கள் உயிரை இழக்கவும் ஆயத்தமாயிருந்தார்களே ஒழியத் தங்களுடைய மாபெரும் வழிகாட்டியின் இருப்பிடத்தைக் காட்டிக் கொடுக்கச் சித்தமாயில்லை. காலம் ஓடியது. கோடையும், மாரியும் மாறின. முன்பனியும், பின்பனியும் வந்து, வந்து போயின. ஏறக்குறைய அந்தச் சிறைக் கோட்டத்திலேயே தங்கள் வாழ்வு முடிந்து விடுமோ என்று அவர்கள் நம்பிக்கை இழந்து விட்டார்கள். ஆனால் நம்பிக்கையை அவர்கள் இழந்து விட்டார்களே ஒழிய, நம்பிக்கை அவர்களை இழக்கவில்லை என்பது நிரூபணமாகும் நாள் அவர்களையும் அறியாமலேயே விரைவாக நெருங்கிக் கொண்டிருந்தது. மூன்றாம் பாகம் * * * வெற்றி மங்கலம் 1. சூழ்நிலைக் கனிவு களப்பிரப் பேரரசுக்கு எதிராகக் கலகம் செய்ய முயல்வோர் எப்படித் தண்டிக்கப்படுவார்கள் என்பதை யாவருக்கும் எச்சரிக்கவும் பயமுறுத்தவும் கருதித் தென்னவன் மாறன் கழு ஏற்றப்பட்டதையும், அவனுக்கு உதவி செய்ய முயன்ற குற்றத்துக்காகக் காம மஞ்சரி நஞ்சூட்டிக் கொல்லப்பட்டதையும் பாண்டிய நாடு முழுமையும் பறையறைந்து அறிவிக்கச் செய்திருந்தார் மாவலி முத்தரையர். இந்தச் செய்தியை அறிந்து, இரண்டு மூன்று நாட்கள் உண்ணவும் உறங்கவும் பிடிக்காமல் கண்களில் நீர் நெகிழப் பித்துப் பிடித்தது போல் கிடந்தான் இளைய நம்பி. கொலை செய்யப் பட்ட தென்னவன் மாறன், தாயாதி உறவில் இளைய நம்பிக்கு அண்ணன் முறையாக வேண்டும் என்ற உண்மையையும் அந்த வேளையில்தான் இரத்தின மாலை அவனுக்குத் தெரிவித்திருந்தாள். களப்பிரர்கள் கையில் சிக்கிய பின், தென்னவன் மாறன் உயிருடன் மீள மாட்டான் என்ற அநுமானம் பெரியவர் மதுராபதி வித்தகருக்கு இருந்தாலும், அவன் கொல்லப்பட்டு விட்டான் என்ற துயரத்தை உணர்ச்சிகளுக்கு அப்பாற்பட்ட அவராலும் கூடத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. சூழ்நிலை கனிகிற வரை பாண்டிய மரபு மேலும் சிறிது காலம் அடங்கி ஒடுங்கி இருக்க வேண்டியதன் அவசியத்தை அவரும் நன்கு புரிந்து கொண்டார். தம்மிடமிருந்து கட்டளை வருவதற்கு முன் இளைய நம்பி இரத்தினமாலையின் மாளிகையிலிருந்து எங்கும் வெளியேறக் கூடாதென்று மீண்டும் அவனை வற்புறுத்திச் செய்தி அனுப்பியிருந்தார் பெரியவர். கண்ணை இமை பாதுகாப்பது போல், அவனை அகலாமல் அருகிலிருந்து பாதுகாக்க வேண்டும் என்று இரத்தினமாலைக்கும் இரகசியமாகச் சொல்லி அனுப்பியிருந்தார் அவர். தென்னவன் மாறனை இழந்து விட்ட சூழ்நிலையில், இளைய நம்பியைப் பேணிப் பாதுகாக்க வேண்டியது இன்றியமையாத தாகியிருந்தது. இளம் பருவத்தினனும், இணையற்ற வீரமுடையவனும் ஆகிய ஒருவனை ஆடல் பாடல்களும், சுவையான உணவும், அலங்காரமும், சுகபோகங்களும் மட்டுமே உள்ள ஒரு மாளிகையில் நெடுங்காலமாக அடைத்து வைத்திருப்பதிலுள்ள சிரமங்களை மதுராபதி வித்தகரும் அநுமானித்திருந்தார். இருந்தாலும், வேறு வழியில்லாத காரணத்தாலும், இளைய நம்பி தங்குவதற்கு அதைவிடப் பாதுகாப்பான வேறு இடம் இல்லாததாலும், அவனை அங்கேயே தங்க வைத்துப் பத்திரமாகக் கவனித்துக் கொள்வது அவசியமாகி இருந்தது. உபசரிப்பதிலும், பேணிப் போற்றி அன்பாகப் பாதுகாப்பதிலும், இணையற்றுத் தேர்ந்திருந்த இரத்தினமாலை மட்டும் அருகில் இல்லா விட்டால், இளைய நம்பியை அப்படி ஒரே இடத்தில் உறையச் செய்திருக்க இயலாமற் போயிருக்கும். அவளால் மட்டுமே அது இயலும். அவளால் மட்டுமே அது அப்போது இயன்றதாகியிருந்தது. நாட்டைக் கைப்பற்றுவதற்கான சூழ்நிலை கணிகிற வரை தாமும், தம்மைச் சேர்ந்தவர்களும், தம் ஆணைக்குக் கட்டுப்பட்டவர்களும் ஒடுங்கியிருப்பது போல் பாவனை காண்பிக்க எண்ணினார் பெரியவர். ஏறக்குறைய எட்டுத் திங்கள் காலம் வரை இந்த ஒடுக்கம் நீடித்தது. ‘பாண்டிய மரபாவது இனிமேல் தலை எடுப்பதாவது? அந்த மரபைத் தான் நாம் அடியோடு தொலைத்து விட்டோமே’ என்று களப்பிரர்கள் மனப்பூர்வமாக நம்பிப் பாண்டியர்களுக்கு எதிரான பூத பயங்கரப்படை, பாதுகாப்பு ஏற்பாடுகள் எல்லாவற்றையும் கை விடுகிற வரை பொறுமையாக இருந்தார் மதுராபதி வித்தகர். ‘இனி நமக்கு எதிர்ப்பே இல்லை’ என்று களப்பிரர்கள் அயர்ந்த பின்பே, சூழ்நிலை கனிந்திருப்பதை அவர் உறுதி செய்து கொண்டார். களப்பிரர்களை எதிர்த்துப் போர்க் கொடி உயர்த்துவதற்கு அதுதான் ஏற்ற நேரம் என்று எல்லாக் கோணங்களிலும் கணித்து முடிவு செய்த பின், அவர் வெகு காலத்துக்குப் பின் முதன் முதலாக, ஒரு முனை யெதிர் மோகர் படை வீரனைத் திருமோகூருக்கு இரகசியத் தூது அனுப்பிப் பெரிய காராளரையும், கொல்லனையும் அழைத்து வருமாறு ஏவினார். அப்போது நல்ல மாரிக்காலம். ஒவ்வொரு பிற்பகலிலுமே மழை கொட்டிக் கொண்டிருந்தது. மாலையிலும், இரவிலும் திருமால் குன்றத்துச் சிலம்பாற்றில் பயங்கர வெள்ளம் பெருகி ஓடியது. காரிருளும் இடியும் மின்னலுமாக மழை மிக மிக அதிகமாயிருந்த அந்த இரவில், பெரிய காராளரும், கொல்லனும், தப்பி வந்து அவர்களோடு திருமோகூரில் மறைந்திருந்த குறளனும், பெரியவரைக் காண்பதற்காகத் திருமால் குன்றத்துக்குத் தேடி வந்தனர். அவர்கள் தேடி வந்த சமயத்தில், பெரியவர் சிலம்பாற்றின் மறு கரையில் தங்கியிருந்தார். சிலம்பாற்றில் மழை காரணமாக வெள்ளப் பெருக்கு அதிகமாகி இருந்ததால், திருமோகூரிலிருந்து சென்றிருந்த மூவரும், ஆற்றின் மறு கரையில் இருளோடு இருளாக, நெடு நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது. ஆற்றின் குறுக்கே பாலமிட்டது போல், பிரம்மாண்டமான மரம் ஒன்று முறிந்து விழுந்திருந்தது. அந்த மரத்தை நம்பி, ஆற்றைக் கடக்கலாமா, கூடாதா என்று அறிவதற்காக முதலில் தங்கள் மூவரிலுமே உருவில் சிறியவனான குறளனை, அந்த மரத்தின் வழியே மறு கரைக்குச் செல்லும்படி அனுப்பிப் பார்த்தார்கள் அவர்கள். குறளன் ஓர் இடையூறுமின்றி மறு கரைக்குப் போய்ச் சேர்ந்து, அப்படிச் சேர்ந்து விட்டதற்கு அடையாளமாகக் குரலும் கொடுத்தான். தொடர்ந்து காராளரும், கொல்லனும் அந்த மரத்தைப் பற்றி ஏறி, மறுகரை சேர முடிந்தது. மறுகரையில் இவர்களை எதிர்பார்த்துக் காத்திருந்த ஆபத்துதவிகள், உடனே மூவரையும் பெரியவரது இடத்திற்கு விரைந்து அழைத்துச் சென்றனர். நீண்ட காலத்திற்குப் பின்பு, பெரியவர் மதுராபதி வித்தகரை முதல் முதலாகச் சந்திக்கப் போகிறோம் என்று எண்ணும் போது காராளருக்கு மெய்சிலிர்த்தது. அந்த மலையில் பெரியவர் தங்கியிருந்த குகையை அடைவதற்கு ஒரு நாழிகைப் பயணத்துக்கு மேல் ஆயிற்று. குகை வாயிலில் இருந்த முனையெதிர் மோகர் படைக்காவல் வீரர்கள் நல்லடையாளம் பெற்ற பின், இவர்களை உள்ளே செல்ல விட்டனர். ஆபத்துதவிகள் வெளியே தங்கி விட்டதால், முதலில் காராளரும், அடுத்துக் கொல்லனும், மூன்றாவதாகக் குறளனும் குகைக்குள்ளே சென்றனர். உள்ளே இருந்து தீப்பந்தத்தின் ஒளியில், பாறைமேல் மற்றொரு செம்பொற் சோதி சுடர் விரித்து இருப்பது போல், பத்மாசனம் இட்ட கோலத்தில் அமர்ந்திருந்தார் மதுராபதி வித்தகர். காலடியோசை கேட்டுக் கண் விழித்த அவர், நெஞ்சாண் கிடையாகக் கண்களில் நீர் மல்க வீழ்ந்து வணங்கிய காராளரையும், மற்றவர்களையும் வாழ்த்தினார். எழுந்து அங்கே வந்து, விழிகளில் உணர்ச்சி நெகிழ நின்ற காராளரை, நெஞ்சாரத் தழுவிக்கொண்டார். காராளர் குரல் உடைந்து உணர்வு பொங்கப் பேசலானார்; “ஐயா! பல திங்களாகத் தங்களைக் காணும் பேறு இன்றித் தாய்ப் பசுவைத் தேடித் தவிக்கும் கன்று போல் தவித்துப் போனேன். திருமோகூர் முழுவதுமே இருள் சூழ்ந்தது போல் ஆகிவிட்டது. செய்வதற்குச் செயல்களும் இல்லை. செய்யச் சொல்லிக் கட்டளை இடுவாருமில்லை. நான் அநாதையைப் போல் ஆகியிருந்தேன்." “இப்போது செய்வதற்கு மிகப் பெரிய செயல்களும் வாய்த்திருக்கின்றன. உம்மை நம்பித் தேர்ந்தெடுத்துச் செய்யச் சொல்லிக் கட்டளையிட்டு அனுப்புவதற்குத்தான் இப்போது இங்கு எல்லாரையுமே நான் வரவழைத்திருக்கிறேன்” என்றார் பெரியவர். “அப்படியானால் அது எளியேன் பெற்ற பெரும் பேறாக இருக்கும்! தயை கூர்ந்து கட்டளை இட வேண்டுகிறேன்.” “காராளரே! உடனே நீங்கள் பல்லவர் நாட்டிற்கும், சேர நாட்டிற்கும் திவ்ய தேச யாத்திரை புறப்பட வேண்டும். அரண்மனையிலுள்ள களப்பிரக் கலியரசனை நேரில் கண்டு, அவனுடைய வாழ்த்துகளுடனேயே, அவனிடமே சொல்லி விடை பெற்று உங்கள் திவ்ய தேச யாத்திரையைத் தொடங்க வேண்டும்...” “ஐயா தாங்கள் மெய்யாகவே அடியேனைத் திவ்ய தேசயாத்திரை போகச் சொல்கிறீர்களா, அல்லது இதுகாறும் பல திங்கட் காலமாகத் தேசப்பணியில் சோம்பி இருந்து விட்டேன் என்பதற்காக இப்படி எள்ளி நகையாடுகிறீர்களா? நாடு இன்றுள்ள நிலையில் அடியேன் எப்படி யாத்திரை போக முடியும்?” “காராளரே! நான் இப்போது உம்மிடம் விளையாட்டுப் பேச்சாகவோ, உம்மைக் குத்திக் காட்டுவதற்காகவோ, இந்தக் கட்டளையை இடவில்லை. நான் அப்படி எல்லாம் சற்றே சிரித்து மகிழச் சொற்களைப் பயன்படுத்தி, உரையாடுகிற இயல்பு உடையவனில்லை என்பதும் உமக்கே தெரியும். அப்படி இருந்ததும் நீர் என்னிடம் இவ்வாறு கேட்பதைக் கண்டு நான் வியப்படைகிறேன்....?” “பொறுத்தருள வேண்டும் ஐயா! தங்கள் திருவுளக் குறிப்பை எளியேன் புரிந்துகொள்ளத் தவறி விட்டேன்.” “சூழ்நிலை நன்றாகக் கனிந்து, நமக்கு இசைவாக இருக்கிறது காராளரே! வடதிசையில் பல்லவர் நாட்டிற்கும், மேற்கே சேர நாட்டிற்கும் நீர் போய் வர வேண்டும் என்று இரண்டு இடங்களைக் குறிப்பிட்டு நான் கூறிய போதே, அதிலுள்ள குறிப்பை நீர் புரிந்து கொண்டிருக்க வேண்டும். களப்பிர அரசனிடம் சொல்லி அவன் இசைவுடன் நீர் யாத்திரையைத் தொடங்க வேண்டும் என்று நான் கூறியதிலுள்ள அரச தந்திரமும் சாதுரியமும் கூட உங்களுக்கு இதற்குள் விளங்கியிருக்க வேண்டும்.” “இப்போது நன்றாக விளங்குகிறது ஐயா! திவ்ய தேச யாத்திரை என்று கூறிக் கொள்வதாலும், களப்பிரக் கலியரசனிடமே சொல்லி விடை பெற்று யாத்திரையைத் தொடங்குவதாலும், ஐயப்ப்ாடுகளிலிருந்து என்னை நான் தவிர்த்துக் கொள்ள முடியும். ஆனால் மெய்யாகவே பல்லவர் நாட்டிலும், சேர நாட்டிலும் தங்களுக்காக அடியேன் என்னென்ன காரியங்களைச் சாதித்துக் கொண்டு வர வேண்டும் என்பதைத் தாங்கள் இனிமேல்தான் கூறப் போகிறீர்கள் என்று எண்ணுகிறேன்!” “உங்கள் எண்ணம் தவறானதில்லை காராளரே! சேர வேந்தனுக்கும், பல்லவ மன்னனுக்கும் முத்திரையிட்டு, நம் இலச்சினை பொறித்த இரு இரகசிய ஒலைகளைத் தனித் தனியே நான் உங்களிடம் இப்போது தரப் போகிறேன். அந்த ஒலைகளை அவர்களிடம் சேர்ப்பதுடன், என் கருத்தை அந்த இரு பெருமன்னர்களுக்கும் விளக்கிக் கூறி, நான் ஒலை மூலம் அவர்களிடம் கோரியிருக்கும் உதவிகளைப் புரிய முன் வருமாறு செய்ய வேண்டும். இப்போதுள்ள நிலைமையில் உங்களைத் தவிர, வேறு யார் இங்கிருந்து இப்படித் திவ்ய தேச யாத்திரை புறப்பட்டாலும், களப்பிரர்கள் அவர்கள் மேல் சந்தேகப்படுவார்கள், பின் தொடர்வார்கள், தடுப்பார்கள். ஆனால், நீங்கள் புறப்படுவதை, அதுவும் தன்னிடமே வந்து, ஆசி பெற்றுப் புறப்படுவதைக் களப்பிரக் கலியரசன் தடுக்க மாட்டான். ஆனாலும் அதிலும் ஓர் அபாயம் இருக்கிறது காராளரே! அரசன் சந்தேகப் படாவிட்டாலும், அவனோடு நிழல் போல இணை பிரியாமல் இருக்கிற மாவலி முத்தரை யன் உங்கள் திவ்ய தேச யாத்திரையைப் பற்றி நிச்சயமாகச் சந்தேகப்படுவான். அவனுக்கும் சந்தேகம் வரமுடியாதபடி ஒர் உபாயத்தை நான் உமக்குச் சொல்லிக் கொடுத்து அனுப்புகிறேன்.” “என்ன உபாயம் ஐயா அது?” “கலியரசனுக்கு முன்பு நெகிழ்ந்த குரலில், கண்களில் நீர் கசிய அழுவது போன்ற தொனியோடு, 'அரசே! நான் களப்பிரப் பேரரசுக்கு எவ்வளவோ நெல் உதவி புரிந்தும், எவ்வளவோ நன்றி விசுவாசத்தோடு இருந்தும், பூத பயங்கரப் படையினர் என் மேல் ஐயுற்று திருமோகூரில் என்னை வீட்டோடு சிறை வைத்தார்கள். சோதனைகளும் பாதுகாவலும் புரிந்தார்கள். எளியேன் பாண்டிய நாட்டு எல்லையில், திருமோகூரில் இருப்பதாலேயேதானே மாமன்னருக்கு, இப்படி என்மேல் ஒரு வீணான சந்தேகம் தோன்ற நேர்ந்தது? ஆகவே, மாமன்னர் மனம் எளியேன் மேல் ஐயப்பட நேரிடாதபடி, இனிமேல் இன்னும் சில திங்கள் காலத்துக்குத் திவ்ய தேசங்களில் யாத்திரை செய்யவும் புண்ணிய தீர்த்தமாடவும், புனிதத்துறை படியவும் நான் முடிவு செய்து புறப்பட்டு விட்டேன். தங்கள் நம்பிக்கையிலும் மதியமைச்சர் மாவலி முத்தரையருடைய விசுவாசத்திலும், இந்த அடிமை தாழ்வாகவோ, குறைவாகவோ, மதிக்கப்பட்டு விடக் கூடாதே என்று கருதியே இப்பயணம்?' என்பதாகப் போய் மன்றாட வேண்டும் நீங்கள்...” “நல்ல உபாயம்! நிச்சயம் பலிக்கும் சூழ்நிலை இசைவாக இருக்கிறது! இப்போது எதுவும் பலிக்கும்.” அதன் பின், பல்லவனுக்கும், சேரனுக்குமாக எழுதி முத்திரை இட்ட ஒலைகளைக் காராளரிடம் அளித்து விட்டு, எங்கெங்கே எப்படி எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் தனியே நீண்ட நேரம் விவரித்தார் மதுராபதி வித்தகர். பெரியவர் எல்லாவற்றையும் கூறிய பின், “தீர்த்த யாத்திரையை நான் தனியே மேற்கொள்வதா? மனைவியை யும், மகளையும் கூட அழைத்துச் செல்வதா?” என்று உடனே வினாவினார் காராளர். “நீர் குடும்பத்துடனேயே செல்லுவது நல்லது. மெய்யாக நீர் செல்லும் அரச தந்திரக் காரியம் எதுவோ, அது உம் மனைவிக்கும் மகளுக்கும் கூடத் தெரியலாகாது” என்றார் பெரியவர். காராளரும் அதை ஒப்புக் கொண்டு உறுதி கூறினார். காராளரிடம் பேசி முடித்த பின், கொல்லனையும் குறளனையும் அழைத்து, “உனக்கும் குறளனுக்கும் நான் இடப்போகும் கட்டளை சிரமமானதுதான் என்றாலும், நம்முடைய முனை எதிர் மோகர் படை வீரர்கள் சிலரது துணையுடன், பாண்டிய நாட்டில் மோகூரிலும், வேறு பல இடங்களிலும் நாம் உருவாக்கி மறைத்து வைத்திருக்கும் வேல், வாள், கேடயம், ஈட்டி முதலிய படைக் கலங்களையும் பிற ஆயுதங்களையும், காராளர் தீர்த்த யாத்திரை முடிந்து திரும்புவதற்குள், நீங்கள் படிப்படியாய் நிலவறை வழியாக இரத்தினமாலையின் மாளிகைக்குள்ளே கடத்திக் கொண்டு போய் அங்கே அடுக்கி விட வேண்டும். இரத்தினமாலையின் மாளிகையில் இடம் போதாவிடில், அம்மாளிகையின் கீழுள்ள நிலவறைப் பகுதியிலும் வெள்ளியம்பல மன்றின் கீழுள்ள நிலவறைப் பகுதியிலும் ஆயுதங்களை அடுக்கலாம். ஆயுதங்களைக் கொண்டு போய் அடுக்கும் வேலை முடிந்ததுமே, நம் வீரர்களில் இருநூற்றுவருக்கு மேல் நிலவறை வழியே சென்று, இளையநம்பியோடு சேர்ந்து கொள்ள வேண்டும். மேலும் பன்னூறுபேர் வெள்ளியம்பல மன்றில் அடையாளம் காண் முடியாதபடி ஊடுருவ வேண்டும். சில நூறு பேர், நடுவூர் வசந்த மண்டபத் தோட்டத்தில் மறைந்திருக்க வேண்டும். மற்றவற்றை நான் கவனித்துக் கொள்வேன். இதற்கு இடையில் முடிந்தால் கொற்கையிலுள்ள குதிரைக் கோட்டத்துத் தலைவன், மருதன் இளநாக நிகமத்தானை என்னிடத்திற்கு அழைத்து வர ஒருவர் போய் வர வேண்டும்” இவ்வாறு கட்டளையிட்டு அவர்களை அனுப்பினார் பெரியவர். 2. பிடி தளர்ந்தது மழைக் காலத்து நள்ளிரவில் திருமால் குன்றத்து மலைக் குகையில் பெரியவர் வகுத்த திட்டங்கள் நிறைவேறின. அவர் கூறிய தந்திரமான யோசனையின் படியே காராளர் மதுரைநகர் சென்று களப்பிரர் கலியரசனையும், மாவலி முத்தரையரையும் நம்பச் செய்து, அவர்களுடைய முழு ஒப்பு தலுடன், ஆசியும் பெற்றுக் குடும்பத்தோடு தீர்த்த யாத்திரையைத் திவ்ய தேசப் பயணமாகத் தொடங்கி விட்டார். திருமோகூர்க் கொல்லன், குறளன் ஆகியோர் பணிகளும், மெல்ல மெல்ல நடந்து கொண்டிருந்தன. நாடு உண்மையாகவே அமைதியடைந்து பாண்டியர்கள் ஒடுங்கிவிட்டார்கள் என்று களப்பிரர்களும், பூதபயங்கரப் படையும் நம்பி அயர்ந்திருந்த நேரம் அது, சந்தேகத்துக்கு இடமான பழைய அந்த அவிட்ட நாள் விழாவின் போது கோநகரத்தில் களப்பிரர்கள் எவ்வளவு பாதுகாப்பாகவும் எச்சரிக்கையாகவும் இருந்தார்களோ அவ்வளவு எச்சரிக்கையாகவும், பாதுகாப்பாகவும் இப்போது இல்லை. இனி நம்மை யாரும் எதுவும் செய்துவிட முடியாது” என்ற அளவுகடந்த துணிவினால் அயர்ந்து போயிருந்தார்கள் அவர்கள். தென்னவன் மாறனும், காமமஞ்சரியும் கொல்லப்பட்டு விட்டதாலும், கோநகரில் சந்தேகத்துக்கு உரியவர்களாக அவர்களுக்குத் தோன்றிய அழகன் பெருமாள் முதலியவர்களை வெளியேற முடியாத காராக்கிருகத்தில் அடைத்து விட்டதாலும் கலியரசனே. “மாவலி முத்தரையரே! இனிமேல் பாண்டியர்களைப் பற்றி மறந்து விடலாம். அந்த வமிசம் போன இடத்தில் புல் முளைத்துவிட்டது” -என்று அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தான். ஆனால் மாவலி முத்தரையர் என்னவோ அதை அப்படியே ஒப்புக் கொண்டு முழுமையாக நம்பி விடவில்லை. “கலியா! நீ எவ்வளவு சொன்னாலும் அந்த மதுராபதி வித்தகன் உயிரோடு இல்லை என்பது தெரிகிற வரை இதை நான் நம்பமாட்டேன், எதற்கும் விழிப்பாயிரு.” என்றுதான் மாவலி முத்தரையர் அடிக்கடி பிடிவாதமாக அவனை எச்சரித்துக் கொண்டிருந்தார். இடையிடையே மாவலி முத்தரையர் இருட் சிறையில் நலிந்து கொண்டிருந்த அழகன் பெருமாள் முதலியவர்களிடம் இருந்து நயமாகவும், பயமாகவும் மதுராபதி வித்தகரைப் பற்றி அறிய முயன்று கொண்டே இருந்தார். ஒரு நாள் அப்படி அவர் அறிய முயன்ற போது, அவர் செய்த சித்திரவதை பொறுக்க முடியாமல் அவரை வேண்டும் என்றே குழப்பி விட்டுக் கவனத்தைத் திசை திருப்பி ஏமாற்றக் கருதிய அழகன் பெருமாள், “ஐயா! உங்கள் சித்தரவதை பொறுக்காமல், இன்று நான் உள்ளதைச் சொல்லி விடுகிறேன்! நேற்று வரை மதுராபதி வித்தகர் என்பவர் யார் என்றே எனக்குத் தெரியாதென்று உங்களிடம் கூறி வந்தேன். அது பொய்! பல மாதங்களுக்கு முன் அந்தப் பழைய அவிட்ட நாள் விழாவன்று, கோநகரைக் கைப்பற்ற முயன்று முடியாமற் போன ஏமாற்றத்தில் மதுராபதி வித்தகர் தென்னவன் சிறுமலைக் காட்டில் ஒரு பெரிய சிகரத்தில் இருந்து கீழே குதித்து உயிரை மாய்த்துக் கொண்டு விட்டார். அவர் அமரராகிப் பல மாதங்கள் ஆகி விட்டன. அவர் இறந்ததைக் களப்பிரர்கள் அறிந்தால் எங்கள் பாண்டியர் இயக்கத்தை அறவே ஒடுக்கி விடுவார்களோ என அஞ்சியே, அவர் இன்னும் உயிரோடு இருந்து வழி காட்டி வருவதாக நாங்கள் நடிக்க நேர்ந்தது!” என்று மாவலி முத்தரையரை நம்ப வைத்து விட ஏற்ற உருக்கமான குரலில் கூறினான். அவன் எதிர் பார்த்தபடி மாவலி முத்தரையர் அதை உடனே நம்பிவிடவில்லை. “அப்பனே! நீ என்னை இவ்வளவு எளிதாக ஏமாற்றி விட முடியாது, மதுராபதியானை எனக்கு நன்றாகத் தெரியும். அவன் தற்கொலை செய்து கொள்ள மாட்டான் என்பதை நான் நன்கு அறிவேன். நீ சொல்வது போல் அவன் இறந்திருந்தால், பாண்டியர் இயக்கமும் அத்துடன் உயிரற்றுப் போயிருக்கும்... அப்படிப் போகாததாலும் வேறு பல சான்றுகளாலும் நீ கூறுவதை நான் நம்ப முடியாது...” “நீங்கள் நம்புகிறீர்களோ, நம்பவில்லையோ, நடந்தது நடந்ததுதான்...” - என்று குரல் துக்கத்தால் குன்றிக் கண்களில் நீர் நெகிழ, அவர் முன் நடித்தான் அழகன் பெருமாள். அவனுடைய கண்ணீரும், குரலின் நெகிழ்ச்சியும் மாவலி முத்தரையரைக் குழப்பமடையச் செய்தன. ஒருவேளை உண்மையிலேயே மதுராபதி வித்தகர் மரணம் அடைந்திருப்பாரோ என்ற சந்தேகம் கூட அவருள்ளத்தில் மெல்ல எழுந்தது. ஆனால் எதிரே நிற்பவர்களால், தம் உணர்வுகள் கட்டுப்படுத்தப் படுகிற அளவு பலவீனப்பட்டு விடக் கூடாதே என்ற முன்னெச்சரிக்கை உணர்வு அவரைத் தடுத்தது. அவர் விழிப்பாயிருந்தார். அழகன் பெருமாளே, முதலில் பெரியவர் மதுராபதி வித்தகரைப் பற்றி அப்படி ஒர் அமங்கலமான பொய்யைச் சொல்லத் தயங்கினான் என்றாலும், எதிரிகளின் கவனத்தைத் திசை திருப்பவும், பெரியவரின் பாதுகாப்புக்கும் அந்தப் பொய் மிக மிகப் பயன்படும் என்ற நம்பிக்கையே அவனைத் துணிய வைத்திருந்தது. சிறையிலேயே, அப்போது உடனிருந்த காரி, கழற் சிங்கன், முதலிய நண்பர்களுக்குக் கூட அழகன் பெருமாள் கற்பனையில் சொல்லிய அந்தப் பொய் பிடிக்கவில்லை என்றாலும், அதில் ஏதேனும் தந்திர உபாயம் இருக்க வேண்டும் என்று கருதிக் கட்டுப்பட்டு, அவர்கள் மெளனமாக இருந்து விட்டனர். - இந்தப் பொய்யின் மூலம் தன்னையும், தன்னுடன் இருக்கும் நண்பர்களையும் இருட்சிறையிட்டு அவர்கள் புரியும் கொடுமைகளின் பிடி ஒரளவு தளரும்-தளரலாம் என்று அவன் எதிர்பார்த்தான். அந்த அளவிற்கு அது பயனளித்தது. மாவலி முத்தரையரின் கவனத்தைப் பெரியவர் இறந்து விட்டதாகச் சொல்லித் திசை திருப்பியதன் மூலம், அவரது கடுமையான சந்தேகத்தின் பிடி தளர்ந்திருப்பது மட்டும் புரிந்தது. அவருடைய உடனடியான முதற் சந்தேகத்தைப் பிடி தளர்த்தி வேறு சந்தேகத்தில் திசை திருப்பிவிட்ட அளவு, அழகன் பெருமாளுக்கு வெற்றி கிடைத்திருந்தது. மாவலி முத்தரையர் எதையும் அறிந்து கொள்ள விடாமல் அவரது கவனம் பெரியவர் பற்றியே திரும்பச் செய்ய முடிந்த வரை அவர்கள் சாதுரியமாகவே செயல் பட்டிருந்தார்கள். ஒரு பிடி தளர்ந்தது. ஆனாலும் அதுவும் முழுமையாகப் பலிக்கவில்லை என்று சிறிது நேரத்தில் மாவலி முத்தரையர் பேசிய பேச்சிலிருந்து புரிந்தது. நம்பிக்கைதான் அரச காரியங்களைச் செய்பவர்களின் மூலதனமோ என்று புரிந்து கொள்ளத் தக்க விதத்தில் மறுபடி சீறத் தொடங்கினார் அவர். இன்னும் அவர் தங்களை ஆழம் பார்க்கிறார் என்பதை அழகன் பெருமாள் அதன் மூலம் அறிந்து கொண்டான். 3. அழகன்பெருமாளின் வேதனை அழகன் பெருமாள் மிக மிகச் சாதுரியமாக நடித்த அரச தந்திர நாடகத்தை மாவலி முத்தரையர் நம்பாததுடன் விரைந்து அவனை எதிர்த்துச் சொல்லால் மடக்கினார். குறுக்குக் கேள்விகள் கேட்டு அவனைத் திகைக்கச் செய்தார். “தம்பி! என் வயதை நோக்க நீ மிகவும் இளைஞன்தான். உன்னைப் போன்ற பாண்டியர் இயக்கத்து இளைஞர்களிடம் நான் அத்தனை எளிதாக ஏமாறி விட மாட்டேன் என்பதை நீ மறந்து விடக் கூடாது! திடீரென்று எதையாவது சொல்லி, நம்ப வைத்து என்னையோ, என்னைச் சேர்ந்தவர்களையோ நீ கவிழ்த்து விட முடியாது. நாங்கள் மிகவும் விழிப்பாக இருக்கிறோம். நீங்கள் களப்பிரர்களிடம் ஆட்சியையும், நாட்டையும் இழந்திருப்பவர்கள். இழந்ததை மீட்கத் தவிப்பவர்களின் அறிவும், ஒற்றுமையும், வலிமையும், சாதுரியங்களும், எல்லாமே மிகமிகக் கூர்மையாக இருக்கும் என்பதை நான் அறிவேன் அப்பனே! முன்பு ஒருநாள் வினாவும் போது நீயே என்னிடமும், என் ஆட்களிடமும் ‘நடுவூர் நன்மை தருவார் குலத்து மதுராபதி வித்தகன் யாரென்றே எனக்கும் மற்றவர்களுக்கும் தெரியாது'என்பது போல் நடித்திருக்கிறாய். இன்றோ இருந்தாற் போலிருந்து உள்ளுற ஏதோ சதித் திட்டம் செய்து கொண்டு பேசுவது போல ‘மதுராபதி வித்தகன் ஏமாற்றத்தால் மலை உச்சியிலிருந்து குதித்து உயிரை மாய்த்துக் கொண்டு விட்டதாகக்’ கதை அளக்கிறாய்!" “இல்லை ஐயா! இதில் கதை எதுவும் கிடையாது. நான் இப்போது கூறுவதுதான் மெய்யாக நடந்த காரியம்! மதுராபதி வித்தகர் இப்போது இல்லை. நீங்கள் அவரைப் பற்றி நினைத்து வீணாகக் கவலைப் பட வேண்டாம்” என்று மீண்டும் உறுதியாகக் கூற முயன்றான் அழகன் பெருமாள். அவர் அதை நம்பாமலே மேலும் பேசினார். “நீ என்னை இத்தனை சுலபமாக ஏமாற்றி விட முடியாது அப்பனே! மதுராபதி வித்தகனை எனக்கு மிக நன்றாகத் தெரியும். ஒரு சிறிய முயற்சி. முதல் முறை தோற்றுப் போவதை ஏற்றுத் தாங்கிக் கொள்ள முடியாமல், மனம் உடைந்து மலை மேல் ஏறிக் குதித்து உயிர் விடுகிற கோழை அவனில்லை. விரக்தியையே விரக்தியடையச் செய்து தன்னை அணுக விடாமல் துரத்தும் வீரன் அவன். ஏமாற்றத்தையே ஏமாற்றம் அடையச் செய்து, தன்னை நெருங்கி விடாமல், எட்டி நிற்கச் செய்கிற வல்லாண்மை அவனுக்கு உண்டு. இப்படி ஒரு கதை கட்டி விட்டால், நீ கூறும் இதை உண்மை என்று நம்பி, நான் உன்னை இந்த இருட்சிறையிலிருந்து விடுதலை செய்வேன் என நீ நினைந்தால், அது பேதமை இதை நான் நம்பவில்லை....” “நீங்கள் என்னை விடுதலை செய்யா விட்டாலும் எனக்குக் கவலை இல்லை. ஆனால், மதுராபதி வித்தகர் உயிரை மாய்த்துக் கொண்டார் என்பது உண்மைதான்! உயிரோடு இருப்பவரை மாய்ந்து போனதாக உங்களிடம் பொய் கூறி இப்போது எனக்கு ஆகப் போவது என்ன?” என்று மேலும் முன் சொன்னதையே அவரிடம் அழகன் பெருமாள் வற்புறுத்தினான். மாவலி முத்தரையர் அவன் கூறியதை ஏற்றதாகக் காண்பித்துக் கொள்ளவில்லை என்றாலும், நம்பாமல் சிறிதும் நம்பிச் சிறிதும் மனம் குழம்பினார் அவர். நேரே போய் அவர் களப்பிர அரசனிடம் அந்தச் செய்தியைக் கூறினார். கூறிய சுவட்டோடு, தாம் இந்தச் செய்தியை நம்பவில்லை என்றும் களப்பிரக் கலியரசனிடம் தெரிவித்தார். கலியரசன், மதுராபதி வித்தகர் இருக்கிறாரோ, மாண்டு போய் விட்டாரோ என்று அவரிடம் விவாதிக்கவில்லை. ஆனால் பாண்டிய வம்சம் தலையெடுக்க இனி வழியில்லை என்பது போல், ஏற்கெனவே தனக்குள் இருந்த ஒரு முடிவை மேலும் நம்பினான் அவன். இந்த உறுதியான நம்பிக்கையினால், கோநகரிலும், கோட்டையின் உள்ளேயும், வெளியேயும், செய்திருந்த கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளையும், படை பலப் பெருக்க ஏற்பாடுகளையும் மெல்ல மெல்லப் பிடி தளர்த்தி விட்டான். படை வீரர்களில் பெரும் பகுதியைக் கோட்டையில் வைத்திருந்த நிலையை மாற்றி, வடக்கேயும், தெற்கேயும், நாட்டின் எல்லைப் பகுதிகளுக்கும் அந்தப் படைகளைப் பிரித்து அனுப்பினான். மாவலி முத்தரையரை மீறியே இதைச் செய்தான் அவன். அழகன் பெருமாள் முதலியவர்களைக் காராக்கிருகத்தில் இருந்து விடுதலை செய்து விடக் கூடக் கலியரசன் சித்தமாயிருந்தான். ஆனால், அதை மட்டும் முத்தரையர் பிடிவாதமாக மறுத்ததோடு, தடுத்து நிறுத்தியும் விட்டார். “இந்தப் பாண்டிய வேளாளர்கள் நம் வசம் சிறைப்பட்டிருக்கிற வரைதான் வெளியே அங்கங்கே இலைமறை காய் போல் ஒளிந்திருக்கின்ற வேறு சில பாண்டிய வேளாளர்கள் நமக்கு அஞ்சித் தயங்க முடியும். இவர்களையும் விட்டு விட்டால், மறுபடி பூசல்களை மூட்ட இவர்களே வெளியே போய்த் தூண்டினாலும் தூண்டலாம். ஆகவே, நான் சொல்கிற வரை இவர்களை நீ வெளியே விடவே கூடாது” என்று அரசனைக் கடுமையாக எச்சரித்து விட்டார் மாவலி முத்தரையர். கலியரசனும் இந்தச் சிறிய விஷயத்தில் அவரைத் தட்டிப் பேச விரும்பாமல் அவர் சொல்கிறபடியே கேட்டு விட்டான்... அதே நேரத்தில் இருட்சிறையில் “பெரியவர் இறந்து விட்டதாக உன் வாயால் நீ ஏன் அமங்கலமாக ஒரு சொல் சொல்ல வேண்டும்?” என்று தன்னைக் கோபத்தோடு வினாவிய மற்ற நண்பர்களுக்கு, அழகன் பெருமாள் ஆத்திரப் படாமல் நிதானமாக மறுமொழி கூறினான்: “நண்பர்களே? நான் இப்படி ஒரு பொய்யைக் கூறி மாவலியாரைத் திசை திருப்பி நினைக்க விட்டிருப்பதால் நமக்குப் பொன்னான வாய்ப்புகள் பல நேரும். போகப் போக நீங்களே அவற்றை அறிவீர்கள் . இப்போது உங்களுக்கு அது புரியாதுதான். நான் கூறியதால் மட்டுமே, பெரியவர் இல்லையாகி விட மாட்டார். அவர் இல்லை என்பதை அந்த மாவலியாரே நம்பவில்லை; பார்த்தீர்களா? ஆனால் இந்தக் குழப்பத்தினை நான் உண்டாக்கி விட்டிருப்பது நம் பெரியவருக்கே நல்லது. இனி இவர்கள், அவர் தலையைத் தேடி அலையும் முயற்சிகள் தானாகக் குறையும். அதனால் அவருக்கு அதிகப் பயன் விளைந்து, மற்ற திட்டங்களை அவர் நினைத்தபடி நிறைவேற்றுவார். பார்த்துக் கொண்டே இருங்கள்! எல்லாம் நமக்குச் சாதகமாகத் திரும்பப் போகிறது” என்று அழகன் பெருமாள் கூறிய பின்பே இது விஷயத்தில் நண்பர்களின் ஐயப்பாடுகள் தீர்ந்தன. ஒரு தந்திரத்திற்காகத் தான் கூறியுள்ள இந்தப் பொய்யை உறைத்துப் பார்க்கக் கருதி, மாவலி முத்தரையர் கோநகரில் பரப்புவாரானால், அதன் விளைவாகக் கோநகரிலேயே இருக்கும் தன் மனிதர்களும் கூடக் குழப்பமடைய நேரிடுமே என்ற ஒரு பயம்தான் அப்போது அழகன் பெருமாளின் அந்தரங்கத்தில் இருந்தது. மாவலி முத்தரையர், தான் கூறிய மதுராபதி வித்தகர் பற்றிய செய்தியைக் கோநகரில் பரவச் செய்து விடுவாரானால், அதன் விளைவாகக் கணிகை இரத்தினமாலை, இளையநம்பி, பாண்டியர்களுக்கு வேண்டிய பிறர் எல்லாருமே ஒன்றும் புரியாமல் திகைக்கவும், குழப்பம் அடையவும் நேரிடுமே என்று அஞ்சினான் அழகன் பெருமாள். ஆனால், அப்படியெல்லாம் குழப்பமோ, கெடுதலோ நேராது என்றும் அவன் உள் மனத்தில் ஏதோ ஓருணர்வு உறுதியாக நம்பிக்கை அளித்தது. பெரியவரைத் தொடர்பு படுத்திக் கூறிய ஒரு பொய்க்காக அவன் மனம் வருந்தியது. ‘புரை தீர்ந்த நன்மை பயக்கக் கூடியது’ என்றால், அப்படிப்பட்ட ஒரு பொய்யையும் சொல்லலாமா என்ற முன்னோர் முடிவையும், வழுவமைதியையும் நினைத்தால், ஓரளவு அவனுக்கு ஆறுதலாகவும் இருந்தது. தான் சமயோசிதமாக இட்டுக் கட்டிக் கூறிய இந்தப் பொய்யை, மாவலி முத்தரையர் முழுமையாக நம்பி விடா விட்டாலும், மதுராபதி வித்தகர் மறைந்திருக்கும் இடத்தைத் தேடிக் கண்டு பிடித்து அழிக்க வேண்டும் என்ற வேகத்தைக் குறைக்கவும் திசை திருப்பவும் இது பயன்பட முடியும் என்று அழகன் பெருமாள் நம்பினான். சிறையிலிருந்தபடியே தந்திர உபாயத்தின் மூலம் செய்ய முடிந்த மிகப் பெரிய தேச சேவையாக இதை அவன் கருதினான். தானும், ஏனைய உப வனத்து நண்பர்களும், தென்னவன் மாறனைச் சிறை மீட்கும் குறிக்கோளுடன் பூத பயங்கரப் படையினர் போன்ற மாறு வேடத்தில் அரண்மனைக்குள் நுழைந்த போது, இப்படிப் பன்னெடுங் காலமாகச் சிறையில் தாங்களே சிக்கித் தவிக்க நேரிடும் என்று அழகன் பெருமாளோ, மற்றவர்களோ கனவில் கூட நினைத்ததில்லை. இப்போது இந்த இருட் சிறையிலிருந்து வெளியே என்னென்ன நிகழ்ந்து கொண்டிருக்க முடியும் என்பதை அநுமானம் செய்வது கூடச் சிரமமாக இருந்தது. தன்னிடம் ஒப்படைத்த பொறுப்பை நிறைவேற்றித் தென்னவன் மாறனைத் தான் விடுவித்துப் பெரியவரிடம் அழைத்துச் செல்லுமுன், களப்பிரர்கள் அந்தப் பாண்டிய குல வீரனின் நல்லுயிரை இந்த உலகிலிருந்தே விடுவித்து விட்டார்கள் என்று எண்ணும் போது, அழகன் பெருமாளின் இதயம் கனத்தது. அவன் சிந்தனையில் விரக்தியும் வேதனையுமே வந்து தங்கின. அவன் எண்ணினான்: ‘நான் இந்த இருட்சிறையிலிருந்து மீண்டு உயிர் பிழைத்தாலும், இனி எந்த முகத்தோடு பெரியவர் முன்னிலையிலே போய் நிற்பேன்? அப்படிப் பெரியவர் முகத்தில் விழிக்க வெட்கப்படும் நிலையுடன் இந்தச் சிறையிலிருந்து மீள்வதை விட இதிலேயே நலிந்து ஒடுங்கி அழிந்து போவது மேல். நமது பெருமதிப்புக்குரியவர் நம்மை மதிக்காத நிலையிலும், உயிர் வாழ்வதா பெரிய காரியம்? “என்னால் சிறை மீட்க முடியாமற் போனதால், தென்னவன் மாறனைக் களப்பிரர்கள் கழு ஏற்றிக் கொன்று விட்டார்கள்” என்பதாக எப்படி நான் பெரியவரிடம் போய் வாய் கூசாமல் சொல்லுவேன்? தனக்கு இடப்பட்ட கட்டளையை வெற்றியுடன் நிறைவேற்றி விட்டு முன்னே போய் நிற்கிற வீரன் பட முடிந்த பெருமையைத் தோற்றுவிட்டு நிற்பவன் எதிர்பார்க்கவே முடியாது. நானோ தோற்று விட்டவன். இங்கிருந்து விடுபட்டு வெளியேறினாலும், பெரியவர் முன்னால் போய்த் தலை நிமிர்ந்து நிற்க எனக்கு இனி என்ன தகுதி இருக்கிறது! நான் இந்தச் சிறைக்குள்ளேயே சாவதுதான் மேல். எதனாலும் தாழ்ந்து போகக் கூடாது. தாழ்ந்து போய் விட்டால், அப்புறம் உயிர் வாழ்ந்து கொண்டிருப்பதில் அர்த்தமில்லை. ஆபத்துதவிகள் என்றாலே ஆபத்தில் உதவவும், மீட்கவும் கடமைப்பட்டவர்கள். நானோ உதவவும், மீட்கவும் முடியா மற் போனதுடன், பிறரை ஆபத்திலிருந்து மீட்கத் தவறிய குற்றத்தோடு, என்னையும், என்னைச் சேர்ந்தவர்களையும் ஆபத்தில் சிக்க வைத்துக் கொண்டு விட்ட மிகப் பெரிய குற்றத்தையும் புரிந்து விட்டேன். இனி எனக்குக் கழுவாயோ, தீர்திறனோ இல்லவே இல்லை! நான் மிகப்பெரிய பாவி' என்று நினைத்து, நினைத்து, தவித்து நெக்குருகிக் கண்ணீர் வடித்தான் அழகன் பெருமாள். தான் செய்துவிட்ட பிழையால், இனிமேல் பாண்டியக் குலத்துக்கு விடிவே இல்லாமல் போய் விடுமோ என்று அவன் உள்ளம் பதறியது, பயந்தது, தவித்தது, உருகியது, உழன்றது, மறுகியது, மலைத்தது. 4. புன்னகையும் வார்த்தைகளும் கூடற்கோநகரத்தின் வானத்தில் மழை மேகங்களோடு, மெல்ல இருண்டு கொண்டு வந்த பின், மாலை வேளையில் மாளிகையின் கூடத்தில், இரத்தின மாலைக்கும் இளைய நம்பிக்கும் இடையே இந்த உரையாடல் நிகழ்ந்தது. அப்போது அவள் தரையில் அமர்ந்து பூத்தொடுத்துக் கொண்டிருந்தாள். அவன் அருகே அமர்ந்து அவள் பூத்தொடுக்கும் அழகைக் கண்களாலும், இதயத்தாலும் இரசித்தவாறு பேச்சுக் கொடுத்துக் கொண்டிருந்தான். “இரத்தினமாலை! அழகன் பெருமாளும் உப வனத்து நண்பர்களும்தான் களப்பிரர்கள் வசம் சிறைப்பட்டிருக்கிறார்கள் என்று நீ சொல்கிறாய்! ஒரு விதத்தில் பார்க்கப் போனால், நானும்தான், இந்த மதுரை மாநகர எல்லைக்குள் சிறைப்பட்டிருக்கிறேன். அவர்கள் களப்பிரர்களிடம் சிறைப்பட்டிருக்கிறார்கள். நான் நம்மவர்களிடமே, சிறைப்பட்டுப் போய் விட்டேன். கொலை செய்யப்பட்டு விட்ட என் தமையன் தென்னவன் மாறனை அவர்களாலும் மீட்க முடியவில்லை. நான் மீட்பதற்கும் முயல முடியாமல், எல்லாருமாகச் சேர்ந்து என் கைகளைக் கட்டிப் போட்டு விட்டீர்கள். இதன் விளைவாகக் களப்பிரர்கள் காட்டில்தான் இன்னும் மழை பெய்து கொண்டிருக்கிறது. அவர்களுடைய நல்வினைக் காலம் இன்னும் முடியவில்லை போலிருக்கிறது.” “ஆத்திரம் வரும் போதெல்லாம், உங்களுக்கு இப்படி என்னிடம் ஏதாவது வம்புக்கு இழுத்தாக வேண்டும். என்னைப் போருக்கு இழுக்காவிட்டால் உங்களுக்குப் பொழுது போகாதோ?” “கோபித்துக் கொள்ளாதே இரத்தினமாலை! இங்கே நான் செய்ய முடிந்ததாக மீதமிருக்கும் ஒரே போர் இதுதான்! வேறு போர்களிலிருந்தும், முயற்சிகளிலிருந்தும் நான்தான் தடுக்கப்பட்டிருக்கிறேனே?...” “யார் சொன்னார்கள் அப்படி? நீங்கள் செய்வதற்குப் பெரிய, பெரிய போர்கள் எல்லாம் மிக அருகில் நெருங்கி வந்து கொண்டிருக்கின்றன. விரைவில் தெரிந்து கொள்வீர்கள்.” “விரைவில் என்றால் எப்போது?” “இப்போதே இன்றிரவில் கூட அது தொடங்கப் படலாம்! நான் கூறுவது மெய்...” “மெய்யாயிருக்கலாம். ஆனால், நீ ஒன்றை மறந்து விடக் கூடாது இரத்தினமாலை. ஆயுத பலமும், ஆள் பலமும், இல்லாமல் களப்பிரர்களோடு மோத முடியாது. போருக்கு நம்மிடம் வலிமை இல்லை. போரே இல்லா விட்டாலும் ஒரு சிறு கலகம் புரியக் கூட நம்மிடம் ஆள் வலிமை இல்லை...” “போருக்கும், கலகத்துக்கும், மிகப் பெரிய வேறுபாடுகள் இருப்பதாய் நீங்கள் கருதுவதாகத் தெரிகிறது.” “அதில் சந்தேகமென்ன? தொடக்கமும், முடிவும் நியாயமும், இலக்கணமும் உடையது போர். அதற்கு இரு தரப்பிலும் வலிமை வேண்டும். ஆனால், ஒரு கலகத்தை எப்போதும், எப்படியும், எவ்வளவு குறைந்த வலிமையோடும் எங்கேயும் தொடங்கலாம். கலகத்துக்கு முடிவு இல்லை. போருக்குத் தொடக்கத்தைப் போலவே முடிவும் உண்டு...” “களப்பிரர்களை எதிர்த்து இனி நாம் செய்ய வேண்டியது போரா, கலகமா?” “நாம் நீண்ட காலம் காத்திருந்து விட்டோம். பல பூசல்களுக்கும், கலகங்களுக்கும் பின்பு கூட, நமக்குப் பயன் விளையவில்லை. போருக்குத்தான் முடிவான பயன் உண்டு! கலகத்துக்கு அது இல்லை. எனவே, இம்முறை நாம் எதைச் செய்தாலும், அது நமக்கு முடிவான பயனைத் தரக் கூடியதாக இருக்க வேண்டும்.” “அப்படியானால், இங்கே நீங்கள் அதற்குத் திட்டமிட வேண்டிய காலம் வந்து விட்டது...” “வெறும் கை முழம் போட முடியாது! பெரியவரிடம் இருந்து கட்டளை இல்லை. வீரர்கள் இல்லை. மாபெரும் களப்பிர அரசை எதிர்க்கப் போதிய படைக்கலங்கள் இல்லை. திட்டமிடுவது மட்டும் எப்படிச் சாத்தியமாகும்? தரையில் உள்ள பூக்களை எடுத்துக் கைகளால் தொடுப்பது போல், அது அவ்வளவு சுலபமான காரியமில்லை.” “நீங்கள் அப்படி நினைக்கிறீர்கள்! ஆனால், இப்போதுதான், இங்கே உங்கள் எதிரே அமர்ந்து பூத்தொடுப்பது எவ்வளவு சுலபமாயிருக்கிறதோ, அவ்வளவு சுலபமாகப் போர் தொடுப்பதையும் ஆக்கி வைத்திருக்கிறோம். எல்லா ஏற்பாடுகளும் இங்கு அருகருகே உள்ளன.” “நீ சொல்வது எனக்கு விளங்கவில்லை இரத்தின மாலை போர் தொடுப்பது என்பது பூத்தொடுப்பதை விடப் பெரிய காரியம்.” “பெரிய காரியம்தான்! ஆனால் சமயமும், வேளையும் பொருந்தியிருந்தால், அதுவே பூத்தொடுப்பதை விட எளிதாகிவிடும்...” “ஆனால் சமயமும், வேளையும் இப்போது அப்படிப் பொருந்தி வந்திருப்பதாக எனக்குத் தோன்றவில்லையே? உனக்கு மட்டும் எவ்வாறு அப்படித் தோன்றுகிறது? குறைபாடுடைய கணிப்புக் காரணமாக நீ அப்படி நினைக்கிறாயா?” எதிரே அமர்ந்து அவன் இப்படி வினாவிக் கொண்டிருந்த போது அவள் பூக்களைத் தொடுத்து முடித்திருந்தாள். தொடுத்து முடித்த கண்ணியைக் குடலையில் வைத்து எடுத்துக் கொண்டு புறப்படும் போது, அவனை நோக்கி நகைத்தாள் இரத்தினமாலை. அவன் கேள்விக்கு அவள் இன்னும் மறு மொழி கூறவில்லை. அவன் மேலும் அவளை வற்புறுத்திக் கேட்டான்; “என்ன பதில் சொல்லாமலே எழுந்து போகிறாய்? வார்த்தைகளால் வினாவிய வினாவுக்குப் புன்னகை மட்டுமே பதிலாகி விடாது.” “என்ன செய்வது? வார்த்தைகளை விட அதிகப் பொருளாழம் உள்ளவற்றைப் புன்னகையால் மட்டுமே கூற முடிகிறது. சற்றே பொறுத்திருங்கள்! இருட்டியதும், பதிலைச் சொற்களால் சொல்லாமல், கண் முன் காட்டியே விளக்குகிறேன்" என்று கூறினாள் இரத்தினமாலை. சிறிது நேரம் கழித்து, மாளிகையின் உணவுப் பொறுப்பைக் கவனித்துக் கொள்ளும் மடைப்பள்ளி பணிப் பெண்களிடம், "பணிப் பெண்களே! இன்றிரவு நம் மாளிகையில் விருந்தினர்கள் இருநூற்றுவருக்கு மேல் எதிர் பார்க்கப்படுகிறார்கள். அவ்வளவு பேருக்கும் இங்கேயே உணவு படைக்க வேண்டியிருக்கும்” என்று கட்டளையிட்டுக் கொண்டிருந்தாள் இரத்தினமாலை. இதை இளையநம்பியும் கேட்க நேர்ந்தது. அவனுக்கு இது புதிராய் இருந்தது. ஆயினும் ஏனென்று அவளைக் கேட்கவில்லை. - அன்று மழையின் காரணமாக, விரைந்து இருட்டியது. இருட்டி வெகு நேரமாகியும், மழை நிற்கவில்லை. மாளிகையில் எல்லா இடங்களிலும், அந்தி விளக்குகள் ஏற்றப்பட்ட சிறிது நேரத்திற்கெல்லாம், இரத்தினமாலை அவனைத் தேடி வந்து அழைத்தாள்: “தயை செய்து என்னோடு வரலாம் அல்லவா? இது கட்டளை அல்ல. அழைப்புத்தான். நீங்கள் கட்டளையை மறுக்கலாம். அழைப்பை மறுக்கக் கூடாது.” “மறுக்காமல் வருகிறேன் இரத்தினமாலை! ஆனால், ஒரு நிபந்தனை. நீ தெளிவாக எல்லாவற்றையும் வார்த்தைகளால் பேச வேண்டும். மறுபடியும் புன்னகையால் பேச முயலுவாயானால், நான் நிச்சயமாக வருவதற்கில்லை.” “ஏன்? என் புன்னகை உங்களுக்குப் பிடிக்கவில்லையோ?” “புன்னகை பிடிக்காமல் என்ன? புன்னகையையும் புன்னகை செய்பவளையும் சேர்ந்தே பிடிக்கிறது... ஆனால், புன்னகையைக் கருவியாகக் கொண்டு பேச்சை மறைப்பதுதான் பிடிக்கவில்லை” என்று கூறி நகைத்தபடியே, அவளோடு எழுந்து புறப்பட்டான் இளைய நம்பி. அவள் மாளிகையின் பின்புறம், தோட்டம் இருந்த பகுதிக்கு அவனை அழைத்துச் சென்றாள். அங்கே கூரைச்சார்பு வேய்ந்த கூடாரங்களில் கறவைப் பசுக்கள் கழுத்து மணி ஆடி ஒலிக்கப் புல் தின்று கொண்டிருந்தன. பசுக்களின் கொட்டாரத்தை அடுத்த பெரிய கூரைக் கொட்டாரத்தில், நீளமும் பருமனுமாக நூற்றுக் கணக்கான விறகுக் கட்டுகள் வரிசை குலையாமல் ஒழுங்காக அடுக்கப்பட்டிருந்தன. மழையில் நனைந்து விடாமல் அவை மிகமிகப் பாதுகாப்பாக அடுக்கப்பட்டிருந்ததைப் பார்த்து இளைய நம்பி கேட்கலானான்: “மழைக் காலத்தில் பயன்படட்டும் என்று கட்டுக் கட்டாக விறகு வாங்கி அடுக்கியிருக்கிறாய் இரத்தினமாலை! கடந்த சில நாட்களாக வாயிற் பக்கமாகவும், புறங்கடைப் பக்கமாகவும், பணியாட்கள் விறகுக் கட்டுகளைக் கொண்டு வந்து அடுக்கிய வண்ணமாயிருக்கிறார்கள். இவ்வளவு விறகிலும், உணவு சமைக்கத் தகுந்த அவ்வளவு பெரிய எண்ணிக்கையில், இனி உன் மாளிகைக்கு விருந்தினர்களும் வருவார்கள் போலிருக்கிறது!” “இது போதாது! இன்னும் விறகுக் கட்டுகள் வந்து கொண்டிருக்கின்றன. மேலும் நிறைய வர வேண்டியுள்ளது.” “அப்படியா? பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் காலத்து மதுரையைக் கண்ணகி தன் கற்பினால் எரித்ததாகச் சொல்வார்கள். இப்பொழுது இந்தக் களப்பிரக் கலியரசனின் மதுரையை நீ விறகினால் எரிக்கத் திட்டமிட்டிருக்கிறாய் போல் இருக்கிறது! அந்தக் கண்ணகியைப் போல் உனக்கும் மதுரையை எரித்துப் புகழ் பெறும் ஆசை வந்துவிட்டதா, என்ன?” என்று அவன் வினாவிய போது, இதைச் செவியுற்றுச் சிரித்தாள் அவள். உடனே அவன் அவளைக் கேட்டான்: “பார்த்தாயா? பார்த்தாயா? மறுபடியும் புன்னகையால் பேசத் தொடங்கி விட்டாயே இரத்தின மாலை.” “ஆமாம்! நீங்கள் வார்த்தைகளால் பேசுவது எனக்குப் புரிகிறது. ஆனால் நான் புன்னகையால் பேசுவது எதுவோ, அதை நீங்கள் இன்னும் புரிந்து கொள்ள முயலக் கூட இல்லை...” “அப்படியா? புரிந்து கொள்ள முயல்வதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதையாவது சொல்லேன்; அப்படியாவது புரிகிறதா என்று மீண்டும் முயன்று பார்க்கிறேன்...” இதைக் கேட்டு மீண்டும் அவள் புன்னகை பூத்தாள். அவளுடைய ஒவ்வொரு புன்னகையும், அவன் வியப்பை அதிகமாக்கின. விறகுக் கட்டுகள் அடுக்கப்பட்டிருந்த பகுதியில் பசுக் கொட்டாரத்தின் விளக்கொளி படர்ந்திருந்தது. விளக்கொளியில் அவன் கண் காண அவள் ஒரு பெரிய விறகுக் கட்டின் கயிற்று முடிப்புக்களை அவிழ்த்துக் கட்டை நெகிழ்த்தி விட்டாள். என்ன அதிசயம்! நெகிழ்ந்த விறகுகளினிடையே வாள்களும், வேல்களும், பிற படைக்கலங்களும் மின்னின. உள்ளே ஆயுதங்களை வைத்துக் கட்டியிருப்பது தெரியாமல் மிகச் சாதுரியமாக அந்த விறகுக் கட்டுகள் அனைத்தும் கட்டப்பட்டிருந்தன. அவள் புன்னகையின் மர்மம், இளையநம்பிக்கு இப்போதுதான் புரிய ஆரம்பித்தது. “ஐயா திருக்கானப்பேர் வீரரே! உங்கள் கேள்விக்குப் புன்னகையால் மட்டுமே நான் மறுமொழி கூறியதாக வருத்தப்பட்டுக் கொண்டீர்கள். இப்போது வார்த்தைகளாலும் மறுமொழி கூறுகிறேன். இதோ, கேட்டுக் கொள்ளுங்கள். “இந்த விறகுகள் மதுரையை எரிக்காது. ஆனால், களப்பிரர்களை எரித்து நிர்மூலமாக்கி விடும் என்பது என்னவோ சர்வ நிச்சயமானது.” இப்படி அவள் பேசி முடித்த போது வியப்பில் ஒன்றும் சொல்லத் தோன்றாமல் அவளை நோக்கி அவன் புன்னகை புரிந்தான். ஒரு பெரும் போருக்கு வேண்டிய படைக்கலங்கள் விறகுக் கட்டுகள் மூலம் உள்ளே வந்திருப்பதை அவன் அறிந்த போது, அது அவள் சாதுரியமா அல்லது அதை அப்படி அனுப்பி வைத்தவர்கள் சாதுரியமா என்று உடனே அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை. இந்த வியப்பிலிருந்து அவள் மீள்வதற்குள்ளேயே. “என்னோடு வந்தால் இதைவிடப் பெரிய மற்றோர் அதிசயத்தையும் காட்ட முடியும்! கருணை கூர்ந்து தாங்கள் வந்தருள வேண்டும்” என்றாள் இரத்தினமாலை. “எங்கே வர வேண்டும்?” “கீழே நிலவறைக்கு” என்று கூறி நிலவறை வழியே நுழைவாயிலுக்கு அவனை அழைத்துச் சென்றாள் அவள். 5. அணிவகுப்பு இரத்தினமாலையைப் பின் தொடர்ந்து போன இளையநம்பி சந்தனம் அரைக்கும் பகுதிக்குச் சென்று நிலவறை வழிக்கான அடைப்புக் கல்லைத் திறந்த போது, உட்புறம் ஏற்கனவே ஒளி தெரிந்தது. உடனே இளையநம்பி இரத்தின மாலையை நோக்கி, “உன்னை ஆடல் பாடல்களில் வல்லவள் என்பதை விட, ஓர் அரச தந்திர மேதை என்றே சொல்லலாம் போலிருக்கிறதே இரத்தினமாலை! நீ என் வியப்புகளை ஒவ்வொன்றாக வளரச் செய்கிறாய்” என்றான். “எப்படி வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளுங்கள். ஆனால், நீங்கள் வியக்கின்ற வியப்புகளும், சொல்லுகின்ற புகழ் வார்த்தைகளும் என்னைச் சேர வேண்டியவை அல்ல. அவை பெரியவர் மதுராபதி வித்தகரைச் சேர வேண்டியவை. இந்தக் காரியங்களை எல்லாம் அவரே திட்டமிடுகிறார். அவரே மூலமாக இருந்து இயக்குகிறார் என்பது உங்களுக்குத் தெரிந்ததுதான்” என்று இரத்தினமாலை மிகவும் தன்னடக்கமாக மறுமொழி கூறினாள். அங்கே உள்ளே படியிறங்கிப் பார்த்ததும் நிலவறையின் இரு முனைகளிலும் கண்ணுக்கு எட்டிய தொலைவுவரை பாண்டிய வீரர்கள் வரிசையாக நின்று கொண்டிருந்தார்கள். அங்கங்கே சொருகியிருந்த தீப்பந்தங்கள் நிலவறையில் மண்டிக் கிடந்த இருளைப் போக்கியிருந்தன. படியிறங்குகிற இடத்தில் திருமோகூர்க் கொல்லன் இளையநம்பியை வணங்கி வரவேற்றான். “எல்லாம் நல்ல ஏற்பாடுதான் இரத்தினமாலை! ஆனால் ஒரே ஒரு சந்தேகம். தந்திரமாக வீரர்களையும் ஆயுதங்களையும் கோநகருக்குள் வரவழைத்து விட்டோம். உபவனத்திலும், அகநகரில் வெள்ளியம்பல மன்றத்தின் தோட்டத்திலுமாக இரு வேறு முனைகளில், இந்த நிலவறைக்குள்ளே இறங்கி வர வழிகள் இருக்கின்றன. எதிர்பாராதவிதமாகக் களப்பிரர்களின் படைகள் இன்றோ, நாளையோ இந்த இரு முனைகளையும் கண்டு பிடித்து உள்ளே இறங்கி இரண்டு பக்கங்களிலிருந்துமே நம்மை வளைத்துத் தாக்குமானால் நாம் என்ன செய்யமுடியும்?” என்று வினவினான் இளையநம்பி. அவனுடைய இந்த வினாவிற்கு ஒரே சமயத்தில் ஒரே விதமான மறுமொழியை இரண்டு குரல்கள் கூறின. “நீங்கள் சொல்கிறபடி செய்வதற்குப் போதுமான வீரர்களோ, ஏற்பாடுகளோ இப்போது களப்பிரர்களிடம் அகநகரில் இல்லை. தவிர இந்த இரு முனைகளிலும் யாத்திரீகர்கள் போல் தங்கி நம்மவர்கள் நூற்றுக்கணக்கில், நிலவறை வழிகளைப் பாதுகாத்து வருகிறார்கள்” என்று இரத்தினமாலையும், கொல்லனும் ஏக காலத்தில் கூறவே, இந்த ஏற்பாட்டை அவர்கள் மிகவும் திட்டமிட்டு முனைந்து செய்திருக்கிறார்கள் என்பது இளையநம்பிக்கு விளங்கியது. “பெரியவர் எங்கே இருக்கிறார் என்பதை இப்போதாவது சொல்ல முடியுமா அப்பனே?” என்று இளையநம்பி கொல்லனை அணுகிக் கேட்டான். கொல்லன் முதலில் மெல்லச் சிரித்தான். பின்பு சில கணங்கள் கழித்து, “பொறுத்தருள வேண்டும் ஐயா! இதை அறிவதற்கு இனிமேல் தாங்கள் அதிக காலம் காத்திருக்க வேண்டியதிருக்காது. ஒருவருக்கொருவர் மறைந்தும், மறைத்தும் வாழ நாளை உருவாக்கி வரும் பாண்டியர் பேரரசில் இடம் இருக்காது” என்றான். இந்த மறுமொழியைக் கொல்லன் தன்னிடம் கூறிக் கொண்டிருந்த போது, மறைந்தாற் போல அவனருகே ஒட்டிக் கொண்டு நின்ற குறளனின் உருவத்தை, இளையநம்பி பார்த்து விட்டான். உடனே வியப்படைந்த அவன், “அடே இந்தத் தம்பி இங்கே எப்படி வர முடிந்தது? இவன் தென்னவன் மாறனை மீட்பதற்கு, அழகன் பெருமாளுடன் சென்ற குழுவில் அல்லவா இருந்தான்?” என்று கேட்டான். உடனே, குறளன் முன்னால் வந்து நடந்ததை ஆதியோடு அந்தமாக இளையநம்பிக்குச் சொன்னான். அவன் கூறியதையெல்லாம் கேட்டு விட்டு, “நடுவூர் வசந்த மண்டபத்தில் நீங்கள் தப்பிய கரந்து படை வழியெல்லாம் இவ்வளவு நாட்களுக்குப் பின் இன்னும் உனக்கு நன்றாக நினைவிருக்கிறது அல்லவா? மறுபடி ஒரு காரியம் நேருமானால், அவற்றை நீ அடையாளம் காண்பிக்க இயலுமா?” என்று வினவினான் இளையநம்பி. சிறிதும் தயங்காமல், 'இயலும்' என்று உடனே மறுமொழி கூறினான் குறளன். கொல்லனிடம் காராளர் குடும்பத்தைப் பற்றி விசாரித்தான் இளையநம்பி. காராளர் குடும்பத்தோடு வட திசையிலும், மேற்கேயும் தீர்த்த யாத்திரை போயிருப்பதைக் கூறினான் கொல்லன். அதைக் கேட்டு இளையநம்பிக்கு ஆச்சரியமாக இருந்தது. நாடும், பாண்டியர்களும் இவ்வளவு சிரமமான முயற்சிகளை மேற்கொண்டிருக்கும் இந்த வேளையில், காராளர் எதைப் பற்றியும் கவலைப்படாமல் எப்படித் தீர்த்த யாத்திரை போகத் துணிந்தார் என்று சிந்தித்தான் அவன். காராளரைப் பற்றியும், அவர் மகளைப் பற்றியும், வேறு அந்தரங்கச் செய்திகளையும் இளையதம்பி கொல்லனிடம் கேட்க முடியாமல் இரத்தினமாலை அங்கே உடன் இருந்தாள். கொல்லனுக்கும் இளையநம்பியிடம் மட்டும், தனியே தெரிவிக்கச் சில செய்திகள் இருந்தன. ஆனால், இருவர் விருப்பமும் நிறைவேற முடியாமல் இருந்தது. அந்த நிலையில் கொல்லன் ஒரு தந்திரம் செய்தான். “ஐயா! தங்களுக்கு மறுப்பில்லை என்றால், நிலவறையின் மறுகோடி வரை உள்ள நம் படைக் கலன்களையும், வீரர்களையும் பார்த்து வரலாம். இந்த வீரர் குழு செயற்படும் போது தங்கள் தலைமையில் செயற்பட வேண்டும் என்பது பெரியவர் கட்டளை” என்று இரத்தினமாலைக்கு ஒரு சிறிதும் சந்தேகம் தோன்றாதபடி, இளையதம்பியை நிலவறையின் மறுகோடிக்குத் தன்னோடு தனியே வருமாறு அழைத்தான் கொல்லன். அதேநேரத்தில் இரத்தினமாலையும் அதை இயல்பாக வரவேற்று, “ஐயா! நீங்கள் இருவரும் பேசி ஆகவேண்டிய காரியங்களைக் கவனியுங்கள். நான் மேலே மாளிகைக்குள் போய், இவர்கள் அனைவரும் வயிறார உண்பதற்கான ஏற்பாடுகளைக் கவனிக்கிறேன்’ என்று கூறிவிட்டுப் படியேறிச் சென்றாள். பேசிக் கொண்டே நிலவறையில் நடந்து சென்ற இளைய நம்பியும், கொல்லனும் படை வீரர்கள் கூட்டத்தை எல்லாம் கடந்து தனியானதொரு பகுதிக்கு வந்திருந்தனர். அதுவரை ஆவலை அடக்கியவாறு நடந்து வந்திருந்த இளையநம்பி கொல்லனைக் கேள்வி மேல் கேள்வியாகத் தொடுத்துக் கேட்டான், “காராளர் எதற்காக இப்போது பார்த்துத் தீர்த்தயாத்திரை போக வேண்டும்? நல்ல சமயத்தில் அவர் இப்படி விட்டு விலகிப் போகலாமா?” என்று இளையநம்பி கேட்டதற்கு, “ஐயா! அவரை இப்போது தீர்த்த யாத்திரைக்குப் போகச் சொல்லிக் கட்டளை இட்டதே நம் பெரியவர்தான்! ஏதோ ஒரு தீர்மானத்தோடுதான் அவர் அனுப்பப்பட்டிருக்கிறார்” என்று கொல்லனிடமிருந்து மறுமொழி வந்தது. அடுத்த கேள்வியை இளையநம்பி கேட்பதற்கு முன்பாகவே, கொல்லன் அந்தக் கேள்வி என்னவாக இருக்கும் என்பதைக் குறிப்பறிந்து, தானே மறுமொழி கூறினான்; “ஐயா! தங்களைக் காணவும் முடியாமல், தங்களிடமிருந்து ஒலையும் பெற முடியாமல், காராளருடைய மகள் செல்வப்பூங்கோதை மிகவும் ஏங்கிப் போய் விட்டாள். என்னைக் காண நேரும் போதெல்லாம், தங்களிடம் இருந்து ஏதாவது செய்தி கிடைக்கலாம் என்ற தவிப்புடன் அவள் என்னெதிரே வந்து, கண்களில் நீர் நெகிழ நிற்பது ஒரு வழக்கமாகவே ஆகி விட்டது.” “சென்ற முறை நீ அந்த மடலைக் கொண்டு வந்து கொடுத்ததற்குப் பதிலாக, நான் அனுப்பிய சந்தனத்தையும், தாழம்பூ மடலையும் நீ அங்கே கொண்டு போய்ச் சேர்த்தாய் அல்லவா?” “என்ன கேள்வி கேட்டீர்கள் ஐயா? அவற்றை நான் அங்கே கொண்டு போய்ச் சேர்த்திருக்கா விட்டால், அந்தக் கொடி உடலில் இத்தனை காலம் உயிர் தங்கியிருக்கவே முடியாமற் போயிருக்கும்...” இளையநம்பி இதைக் கேட்டுச் சில கணங்கள் ஒன்றும் சொல்லத் தோன்றாமல் திக்பிரமை பிடித்துப் போய் இருந்தான். தன்னால் ஆறுதல் சொல்ல முடியாத ஒர் ஏக்கம் அப்போது தன் தலைவனைத் துன்புறுத்துவது கொல்லனுக்குப் புரிந்தது. அவனும் எதுவுமே சொல்லத் தோன்றாமல், தலைகுனிந்து நின்றான். ஒரு பேதைப் பெண்ணின் காரணமாக, எவ்வளவு பெரிய வீரனும் நிலை குலைந்து ஏங்கி நின்று விடுகிற உணர்வைக் கொல்லன் வியந்தான். அடுத்த சில கணங்களில் கொல்லன் தன் நிதானத்துக்கு வந்தான். “ஐயா! முதலில் தாங்கள் அடியேனை இந்தக் கால தாமதத்துக்காகப் பொறுத்தருள வேண்டும். காராளர் தீர்த்த யாத்திரை புறப்படுவதற்கு முந்திய தினம் மாலை, இந்த ஒலைகளைத் தங்களிடம் சேர்த்து விடும்படி செல்வப் பூங்கோதை எளியேனிடம் சேர்ப்பித்திருந்ததன் காரணமாக, இதைத் தங்களிடம் இவ்வளவு நாள் கழித்துத் தர நேரிடுகிறது” என்று கூறியபடியே, அந்த ஒலைகளை எடுத்து, இளையநம்பியிடம் கொடுத்தான் கொல்லன். “இன்னும் சிறிது முன்பாகவே இதை நீ என்னிடம் கொடுத்திருக்க வேண்டும். ஆனாலும் நீ மிகக் கொடிய தாமதக்காரன்” என்றான் இளையநம்பி. “என் தவறு இதில் எதுவும் இல்லை! கணிகை மாளிகைத் தலைவியை அருகில் வைத்துக் கொண்டு, இந்த ஒலையைத் தங்களிடம் தர விரும்பாமலே இன்று காலம் தாழ்த்தினேன்” என்று கொல்லனும் அதற்கு உரிய மறுமொழி சொன்னான். கைக்குக் கிடைத்த செல்வப் பூங்கோதையின் ஒலையைப் பிரிப்பதற்கு முன், கொல்லனுடைய முகத்தை ஏறிட்டுப் பார்த்தபடியே இளையநம்பி அவனை ஒரு கேள்வி கேட்டான்: “நான் கோநகருக்குள் வந்த நாளிலிருந்து, இங்கே இப்படி இந்தக் கணிகை மாளிகையில்தான் தங்கியிருக்கிறேன் என்பது செல்வப் பூங்கோதைக்குத் தெரியுமா?” “தெரியுமா, தெரியாதா என்பதை நான் அறிய மாட்டேன். ஆனால், என் வாயினால் அதைத் தெரிய விடவில்லை என்பதற்கு மட்டுமே நான் உறுதி கூற முடியும்" என்றான் கொல்லன். அவனுடைய சாதுரியமான மறுமொழியை உள்ளுற வியந்து கொண்டே, இளையநம்பி அவனை மேலும் கேட்டான்: “தென்னவன் மாறனுக்கு நேர்ந்த கொடுமையைப் பற்றிப் பெரியவர் என்ன எண்ணுகிறார்?” “அதை நான் அறிய முடியவில்லை ஐயா! ஆனால், பெரியவரின் துயரங்களோ, மகிழ்ச்சிகளோ மிகவும் ஆழமானவை. மேலோட்டமாகத் தெரியாதவை. திருமோகூருக்கு வந்து சேர்ந்தவுடன், தென்னவன் மாறனுக்குப் பெரியவர் கூறியிருந்த அறிவுரைகளின்படி மட்டும் அவர் நடந்து கொண்டிருப்பாராயின், இப்படிச் சிறைப்பட்டிருக்கவும், கழுவேறவும் நேரவே நேர்ந்திருக்காது. தென்னவன் மாறனின் உணர்ச்சி வேகமும், முன் கோபமுமே அவரைக் காட்டிக் கொடுத்து விட்டன. தாங்களும் அப்படி உணர்ச்சி வசப்பட்டு, எங்காவது அகப்பட்டுக் கொண்டு விடக் கூடாதே என்பதற்காகத்தான், ‘இங்கே இந்தக் கணிகை மாளிகையை விட்டு எக்காரணத்தைக் கொண்டும் எங்கேயும் வெளியேறி விடக் கூடாது’ என்று தங்களுக்குத் திரும்பத் திரும்ப வற்புறுத்திச் சொல்லி அனுப்புகிறார் பெரியவர். ‘கை கால்களைக் கட்டிப் போட்டு ஒரே இடத்தில் சிறை வைத்தது போல் ஆக்கி விட்டாரே’ என்று தங்களுக்குக் கூடப் பெரியவர் மேல் மனத்தாங்கல் இருந்தாலும் இருக்கலாம். ஆனால் பெரியவர் இவ்வளவு சிரத்தை எடுத்துக் கொள்ளவில்லை என்றால், தாங்கள் எங்கெங்கோ எத்தனை எத்தனையோ அபாயங்களில் சிக்கிக்கொள்ள நேர்ந்திருக்கும்-” என்று ஒரளவு விரிவாகவே இளையநம்பிக்கு மறுமொழி கூறினான் கொல்லன். “காராளர் தீர்த்தயாத்திரை புறப்பட்டு எவ்வளவு காலமாயிற்று?” என்று இளைய நம்பி வினாவிய போது, “ஐயா! அவர் யாத்திரை புறப்பட்டுப் போய் அதிக நாட்களாகி விட்டன. அதனால்தான், இந்த மடலைத் தங்களிடம் இவ்வளவு காலந் தாழ்த்திச் சேர்ப்பதைப் பொறுத்தருளுமாறு முதலிலேயே கூறினேன்" என்றான் கொல்லன். அவ்வளவில் கொல்லனிடம் உரையாடுவதை நிறுத்திக் கொண்டு, சந்தனமும், பூக்களும், இளம் பெண்கள் மேனிக்குப் பூசிக் கொள்ளும் நறுமணச் சுண்ணமும் மணக்கும், அந்த ஒலைக் கற்றையைப் பிரித்தான் இளையநம்பி. அவன் அந்தரங்கமான அவ்வோலையைப் படித்து அறியும் போது, தான் அருகில் நின்று அவனுடைய தனிமைக்கு இடையூறாகி விடலாகாது என்று கருதியும், திடும் என்று இரத்தினமாலை அங்கே வந்து விடாமல், கண்காணித்துக் கொள்ள நினைத்தும் விலகி நடந்து சென்று நிலவறையிலிருந்து கணிகை மாளிகைக்குப் படியேறுகிற இடத்தில், நின்று கொண்டான் கொல்லன். தான் நின்ற இடத்தின் பக்கச் சுவரில் சொருகியிருந்த தீப்பந்தத்தின் கீழே போய், அந்த ஒலையைப் படிக்கலானான் இளையநம்பி. 6. கடுங்கோன் ஆகுக! இளைய நம்பிக்குச் செல்வப் பூங்கோதை எழுதியிருந்த அந்த ஒலை, கோபத்தோடும் தாபத்தோடும் தொடங்கியது. அதில் கோபம் அதிகமா, தாபம் அதிகமா என்று பிரித்துக் கண்டு பிடிக்க இயலவில்லை. ஏனெனில் அந்த மடலில் தொனித்த கோபத்திலும், தாபம் கலந்திருந்தது. அதே போல் தாபத்திலும், கோபம் கலந்திருந்தது. ஒர் அழகிய இளம் பெண்ணின் கோபத்தில், அதன் மறுபுறமுள்ள தாபங்களே அதிகம் தெரிய முடியும் என்பதைத்தான் செல்வப் பூங்கோதையின் சொற்கள் காட்டின. “திருக்கானப்பேர் நம்பிக்கு, அடியாள் செல்வப் பூங்கோதை வரையும் இந்த மடலை அவர் நலத்தோடும் நல்லுறவோடும் காணட்டும். தாங்கள், இந்தப் பேதையை நினைவு வைத்திருக்கிறீர்களோ இல்லையோ, தங்களை நித்தியமாகவும், நிரந்தரமாகவும், நினைவு வைத்துப் போற்றுவது இப்பேதையின் கடமையாகி விட்டது. திருமோகூரில் இருந்தாலாவது, கொல்லன் எதிர்ப்படுகிற போதெல்லாம் நேராகவோ, குறிப்பாகவோ, தங்களைப் பற்றி விசாரித்து அறிய முடியும். இன்னும் சில திங்கள் காலத்துக்குத் தீர்த்த யாத்திரை செய்ய வேண்டும் என்று பெரியவர் இட்ட கட்டளையை மேற்கொண்டு, நாளைக் காலையில் பிரம்ம முகூர்த்தம் கழிவதற்குள் மங்கல நேரத்தில் தந்தையும், தாயும், அவர்களோடு நானும் யாத்திரை புறப்படுகிறோம். இனி மேல் தங்களைப் பற்றி ஆவல் தீரக் கேட்டறியவோ, விசாரிக்கவோ கூட என்னருகே மனிதர்கள் இல்லை. தந்தையிடம் நானாக வலியச் சென்று, தங்களைப் பற்றிப் பேச முடியாது. தாயிடம் பேசினால், அவள் சந்தேகப்படுகிறாள். என் உணர்வுகளைப் பெற்ற அன்னையிடம் கூட நான் பூரணமாகக் காண்பித்துக் கொள்ள முடியவில்லை. எங்கள் ஊருக்கு நீங்கள் வழிப்போக்கராகப் பிரவேசித்த முதல் தினத்தன்று, நீங்கள் என்னை ஊமை என்பதாகக் கூறி ஏளனம் செய்தீர்கள். அப்போது அன்று நான் காரியத்திற்காக ஊமையாக நடிக்க வேண்டியிருந்தது. இப்போதெல்லாம், உங்களைப்பற்றிப் பேசவோ, விசாரிக்கவோ, அருகில் யாருமே அந்தரங்கமானவர்கள் இல்லாத காரணத்தால், நான் உண்மையிலேயே ஊமையைப் போலாகி விட்டேன். வாய் திறந்து நான் பேசும் எதுவும் உங்களைப் பற்றிய பேச்சாகவே இருக்க வேண்டுமென்று தவிப்பதால், வேறெதையும் நான் பேச முடியவில்லை. செவிகளால் கேட்க முடிந்த எதுவும் உங்களைப் பற்றிய நற்செய்திகளாகவே இருக்க வேண்டும் என்று தவிப்பதால், வேறெதையுமே நான் கேட்க முடியவில்லை. உங்கள் மேற்கொண்ட காதல் இப்படி என் பொறி புலன்களின் இயக்கத்தைக் கூட ஒடுக்கி விட்டது. தாபத்தில் உருகுகிறேன். கோபத்தில் உங்களைச் சபித்து விட வேண்டும் போல் ஆத்திரம் ஆத்திரமாக வருகிறது. தாபமும், கோபமுமே என்னைக் கொல்கின்றன. என் வரையில் நீங்கள் ஒரு சிறிதும் கருணை இல்லாதவர்! பாண்டிய மன்னர் மரபில் வந்தவர்கள், தண்ணென்ற மென்மையான இதயமுள்ளவர்கள் என்ற புகழ் வார்த்தைகள் கூறிப் போற்றுவார்கள். மாறன், வழுதி, செழியன், தென்னவன் என்றெல்லாம் இளமையாகவும் மென்மையாகவும் ஒலிக்கும் பல சிறப்புப் பெயர்கள் பாண்டியர்களுக்கு உண்டு. முடி சூடி, அரியணை ஏறும் காலத்தில், இந்தச் சிறப்புப் பெயர்களும் குடிப் பெயர்களும் அவர்கள் இயற் பெயரோடு சேர்ந்து மணக்கும். ஆனால் இத்தனை காலமாக, என்னை நீங்கள் தவிக்க விட்டிருக்கும் கடுமைக்கும், கொடுமைக்கும் ஆளாகிய பின் நான் மட்டும் உங்களுக்கு முடி சூட்டு விழாக் காலத்துப் பெயர் மங்கலமாக, எந்தச் சிறப்புப் பெயரையாவது தேர்ந்தெடுக்கும் உரிமை பெற்றால், ஒரு சிறிதும் தயங்காமல் உங்களைக் ‘கடுங்கோன்’ என்று அழைக்கத் தொடங்கி விடுவேன். ‘பிரியத்துக்குரிய நீயே, இப்படிச்சாபம் கொடுப்பது போல் என்னை அழைக்கலாமா?’ என்பதாக, உங்களுக்கு இந்த இடத்தைப் படிக்கும் போது, அடியாள் மேல் சினம் தோன்றலாம். என் வரையில், இளங்கோவாக நடந்து கொள்ளாத உங்களைக் கடுங்கோனாக வர்ணிப்பதே பொருந்தும் என்று நான் நினைத்தால், அதில் பிழை என்ன? எந்தப் பேரரசை மீட்பதற்காக நீங்கள் ஓர் எளிய வழிப்போக்கனைப் போல் திருக்கானப் பேரிலிருந்து புறப்பட்டு வந்தீர்களோ, அந்தப் பேரரசை மீட்கும் முதல் ஒற்றையடிப் பாதையை உங்களுக்குக் காட்ட உதவியவள் இந்தப் பேதைதான் என்பதை இதற்குள் நீங்கள் மறந்து போயிருக்க மாட்டீர்கள். அறிந்தோ, அறியாமலோ அந்த முதல் வழியை நான் காட்டினேன். சாம்ராஜ்யவாதிகளுக்கு வழிகாட்டும் ஏழைகளுக்கு வெறும் அன்பைக் கூடவா, நீங்கள் பிரதி உபகாரமாகத் தரலாகாது? என்னைப் போல் ஏழைகளும், பேதைகளும் அன்பைப் பெறுவதற்குக் கூடத் தகுதியற்றவர்களா? நம்முடைய பெரியவர் மதுராபதி வித்தகர்தான் மென்மையான உணர்வுகளே நெகிழாத கருங் கல்லைப் போன்றவர் என்றால், தாங்களுமா அப்படி இருக்க வேண்டும்? அடியாள் முன்பு கொல்லனிடம் கொடுத்தனுப்பிய மடலை ஏற்றுக் கொண்டதற்கு அடையாளமாகத் தாழம்பூ மடலும், சிறிது பொதியை மலைச் சந்தனமும் கொடுத்து விட்டிருந்தீர்கள். ஆனால், அந்தப் பூவும், சந்தனமும் என் கைகளில் கிடைக்கும் போது வாடிப் புலர்ந்து போய் விட்டன. இந்தப் பேதையைப் பொறுத்த வரை தங்கள் அன்பும், பிரியமும் கூட இப்படி வாடிப் புலர்ந்து போய் விடுமோ என்று பயமாகவும், கவலையாகவும் இருக்கிறது. கவலையும், பயமும், தவிப்பும், தாபமும் எல்லாமே எனக்குத்தான். தங்களுக்கு ஒரு கவலையும் இருக்காது. மிகவும் சுகமாகவும், பாதுகாப்பாகவும், எல்லா விதமான உபசாரங்களுடனும், தாங்கள் கோநகரில் இருந்து வருகிறீர்கள் என்று கொல்லனிடம் கேட்டுத் தெரிந்து கொண்டேன். அதோடு, கொல்லன் என் உள்ளத்தில் பொறாமையேற் படும்படியான இன்னொரு செய்தியையும் என்னிடம் சொன்னான். ‘அம்மா! இங்கே இந்தக் காராளர் பெருமாளிகையில், தாங்கள் இடை விடாமல் அருகிருந்து உபசாரம் செய்து கவனித்துக் கொண்டால், அவரை எப்படிக் கண்ணும் கருத்துமாகக் கவனித்துக் கொள்வீர்களோ, அப்படிக் கவனித்துக் கொள்கிறவர்களோடு, அவ்வளவிற்கு வளமான ஒரு மங்கல மாளிகையில்தான் அவர் மதுரை மாநகரில் பாதுகாப்பாக மறைந்து தங்கியிருக்கிறார்’ என்பதாகக் கொல்லன் என்னிடம் சொல்லிய போது, கோநகரத்தில் உங்களை அப்படி அருகிருந்து பேணி உபசரிப்பவர்கள் யாரோ, அவர்கள் மேல் எனக்குப் பொறாமை தாங்க முடியவில்லை. உடனே, நான் பொறுக்க முடியாத கோபத்தோடு, ‘இன்னொரு முறை அப்படிச் சொல்லாதே! இந்தத் திருமோகூர் மாளிகையில் நான் அவரைக் கவனித்துப் பேணிப் பாதுகாத்து உபசரிப்பது போல் வேறு எங்கும், வேறு எவராலும் என்றும் உபசரித்துவிட முடியாது. உன் ஒப்புமையே தவறானது. நான் உபசரிப்பது போல் வேறு யாரும் அவருக்கு உபசாரம் செய்ய முடியாது என்பது உனக்கு நன்றாகத் தெரிந்திருந்தும் நீயே இப்படி ஒப்பிடலாமா? உன் உவமை மிக மிகத் தவறானது' என்று கொல்லனைக் கடிந்து கொண்டேன். நீங்களே சொல்லுங்கள். உங்களிடம் இந்தப் பேதை கொண்டாட முடிந்த உரிமையை, இன்னொருவரும் கொண்டாட முடியும்படியான இடத்திலேயா தாங்கள் வாழ்கிறீர்கள்? மறுபடி திருமோகூர் மண்ணில் தங்கள் பாதங்கள் பதியும் நாள் எப்போது வரும் ஐயா? இங்கு ஒருத்தி தங்களை நினைத்துத் தேய்ந்து போய்க் கொண்டிருக்கிறாள் என்பதாவது, தங்களுக்கு இன்னும் நினைவிருக்கிறதா? தீர்த்த யாத்திரையை முடித்துக்கொண்டு எப்போது மீண்டும் திருமோகூர் திரும்புவோம் என்பதைத் தந்தையார் எங்களுக்குத் தெரிவிக்கவில்லை. நான் தொழ வேண்டிய தெய்வம் மதுரையில் இருக்கிறது. என் பெற்றோர் வேறு எங்கேயோ இருக்கும் பலப் பல தெய்வங்களைத் தொழுவதற்காக என்னை அழைத்துப் போகிறார்கள். என்னுடைய தெய்வத்தின் கடுங்கோன்மை தவிர்த்து, அதன் அருளை என்றைக்கு நான் அடையப் போகிறேனோ தெரியவில்லை. தங்களைக் கடுங்கோன் என்று கூறியதற்காகப் பெருந்தன்மையோடு இந்த எளியவளைப் பொறுத்தருள வேண்டும். அப்படி ஒரு சாபமே கொடுக்கிற அளவிற்குத் தாங்கள் என்னைத் தவிக்க விட்டிருக்கிறீர்கள் என்பதைத்தான், தங்களுக்கு இந்தப் பேதை சூட்டியிருக்கும் மென்மையும், இங்கிதமில்லாத புதிய பெயர் குறிப்பிடுமே ஒழிய, அகங்காரத்தைக் குறிப்பிடாது. என் அகங்காரங்களை நான் உங்களிடம் பறிகொடுத்துப் பல நாட்கள் ஆகிவிட்டன என்பதைத் தாங்களே நன்கு அறிவீர்கள். இவ்வளவில் இப்போது தங்கள் பாதார விந்தங்களில் மானசீகமாக வீழ்ந்து, வணங்கி இந்த மடலை முடிக்கிறேன். முடிவாக ஒரு வார்த்தை-நானும் பெற்றோர்களும் தீர்த்த யாத்திரை முடித்து திரும்பும் போது, நீங்கள் வெற்றிவாகை சூடி நிற்கப் போகிறீர்கள்! நாங்கள் திரும்பி வந்து அதைக் காணத்தான் போகிறோம்.” என்பதாக முடிந்திருந்தது அவள் மடல். பல ஒலைகளில் எழுதி இணைத்து சிறிய சுவடியாகவே ஆக்கி அனுப்பியிருந்தாள் செல்வப் பூங்கோதை. இந்த மடல் இளையநம்பியின் சிந்தனைகளைக் கிளர்ந்தெழச் செய்திருந்தது. ‘பெண்ணே நீ என்னைத் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறாய். ஆனால், உன்னைப் போல் என்மேல் அன்பு செய்யும் பெண்களிடம் நான் ஒரு போதும் கடுங்கோனாக ஈவு இரக்கமின்றி நடந்து கொள்ள மாட்டேன்’ என்று அந்த ஒலையைப் படித்த உணர்ச்சிப் பெருக்கில் தனக்குத் தானே சொல்லிக் கொண்டான் அவன். ஒலையைப் படித்து முடித்த இன்பக் கிளர்ச்சிகளிலிருந்து அவன் முழுமையாக விடுபடுவதற்குள், கொல்லன் விரைந்து வந்து மேலும் ஒரு செய்தியைக் கூறினான்: ‘ஐயா! மற்றொரு நல்ல செய்தியைத் தூதன் இப்போதுதான் கொண்டு வந்தான். நம்முடைய இந்த அணிவகுப்புக்கும், ஏற்பாட்டிற்கும் சாதகமான ஒரு செயல் வட திசையில் இப்போது நடந்திருக்கிறது.’ 7. இரு வாக்குறுதிகள் படைப்புக் காலந் தொட்டு மேம்பட்டு விளங்கி வந்த பாண்டிய மரபு மீண்டும் தலையெடுக்கும் என்று நம்ப முடிந்த நற்செய்தி முதலில் வடதிசையிலிருந்து திருமால் குன்றத்துக்கு வந்து, அங்கிருந்து ஒர் ஆபத்துதவி மூலம் கணிகை மாளிகைக்குச் சொல்லி அனுப்பப்பட்டிருந்தது. திருமால் குன்றத்திலிருந்து வந்திருந்த ஆபத்துதவியிடமிருந்து செய்தியை அறிந்தவுடன், முதலில் அந்த ஊக்கமளிக்கும் செய்தியை இளையநம்பியிடம் தெரிவிப்பதற்கு ஓடோடி வந்திருந்தான் கொல்லன். அவன் மகிழ்ச்சியோடு கூறலானான்: “ஐயா! களப்பிரர்களை எதிர்த்து வடதிசையில் பல்லவ சைனியம் படையெடுத்து வந்திருக்கிறது. வெள்ளாற்றங் கரையில் வந்து தாக்குதலைத் தொடங்கிவிட்டார்கள் பல்லவர்கள். இன்னும் சில நாட்களில் தெற்கு முனையிலோ, தென் மேற்கு முனையிலோ சேர நாட்டுப் படைகளும், களப்பிரர்களை எதிர்த்துத் தாக்குதலைத் தொடங்கி விடும். போரை எதிர்பாராவிடினும், களப்பிரர்கள் தங்களிடம் இருக்கும் முழுமையான படைபலத்தை இரு கூறாக்கி ஏற்கெனவே இந்த இரு முனைகளிலும் நிறுத்தியுள்ளனர்.” “ஆகவே, களப்பிரர்களை எதிர்த்து மூன்றாவது முனைத் தாக்குதலாகப் பாண்டியர்களாகிய நாம் உட்புக இருக்கிறோம்...” “ஆகவே, போரைத் தொடங்கினால் நமக்கு வெற்றி உறுதி என்கிறாய்!” “அதில் சந்தேகம் என்ன ஐயா? நம் பெரியவர், காராளரைத் தீர்த்த யாத்திரை அனுப்பிய போதே இந்தத் திட்டத்தை மனத்திற் கொண்டுதான் அனுப்பியிருப்பார்.” “இம்முறை நாம் தோற்க முடியாது. தோற்கக் கூடாது” என்று குரலில் உறுதி பொங்கக் கூறினான்.இளையநம்பி. இப்போது ஓர் அரிய உண்மை, அவனுக்கு நன்றாகப் புலப்படத் தொடங்கியது. காராளரைப் பெரியவர் தீர்த்த யாத்திரை என்ற பெயரில், அனுப்பி வைத்த பயணத்தின் மாபெரும் அரசியல் சாதனைகள் சிறிது சிறிதாகப் புரிந்தன. அந்த அரச தந்திரப் பயணத்தை முதலில் தவறாக எண்ணியதற்காக உள்ளுற வருந்தி வெட்கப்பட்டான் அவன். அவருடைய தீர்த்த யாத்திரையின் பயனால், மாபெரும் பாண்டிய நாடே களப்பிரர் கொடுங்கோலாட்சியில் இருந்து விடுதலை பெறப் போகிறது என்பது இளையநம்பியின் மனத்தில் தெளிவாயிற்று. மங்கல நேரம் பார்த்து, நல்ல நிமித்தம் தேர்ந்து, பாட்டனார் திருக்கானப்பேரில் இருந்து, தன்னை நீண்ட நாட்களுக்கு முன்பு எதற்காக விடை கொடுத்து வழியனுப்பி வைத்தாரோ, அந்த நன்னோக்கம் நிறைவேறும் நாள் தொலைவில் இல்லை என்பது அவனுக்குப் புரிந்தது. திருக்கானப்பேர்க் காட்டில் அஞ்ஞாத வாசம் போல மறைந்து வாழும் பாட்டனாருக்கோ, பிறருக்கோ இந்தத் திருப்பங்களும், மாறுதல்களும், அதிகமாகத் தெரிந்திருக்கக் கூட முடியாது என எண்ணினான் அவன். இருந்தாற் போலிருந்து, வேறு ஏதோ ஞாபகம் வந்தவன் போல், "அழகன் பெருமாள் முதலியவர்களோடு களப்பிரர்களிடம் சிறைப்பட்டிருந்து நடுவே தப்பி வந்த அந்தக் குறளனைப் பத்திரமாக நம்மோடு இருக்கச் செய்யுங்கள். பல காரியங்களில் அவனுடைய உதவி நமக்கு வேண்டிய தாயிருக்கும்...” என்று இளையநம்பி, கொல்லனிடம் நினைவூட்டினான். வெற்றிக்குப் பின்பு நிகழ வேண்டிய, உண்டாட்டு விழாவோ, பெருஞ்சோற்றுக் கொண்டாட்டமோ முன்னதாகவே கொண்டாடப்பட்டது போல், அன்றிரவு கணிகை மாளிகையில் அந்த வீரர்களுக்கு விருந்தளித்து மகிழ்ந்தாள் இரத்தினமாலை. அன்றிரவு அவர்கள் நெடுநேரம் உறங்கவில்லை. வீரர்களின் வாள் போர்த்திறன், ஈட்டி எறிதல், வேல் எறிதல், வில்லை நாண் ஏற்றி அம்பு செலுத்துதல் ஆகியவற்றைத் தானே முன் நின்று பரிசோதித்துத் திருப்தி அடைந்தான் இளையநம்பி. அவனே ஒரு சோதனைக்காகக் கொல்லனோடு வாட்போர் செய்து, தன் திறமையையும் சோதித்துக் கொண்டான். வடக்கேயும், தெற்கேயும், படை எடுத்து வந்திருப்பவர்களோடு களப்பிரர்கள் போரிட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில் பாண்டிய நாட்டு மக்களின் ஆதரவோடு அரசைக் கைப்பற்றி விட முடியும் என்ற உறுதி இளையநம்பிக்கு இருந்தது. பல்லாண்டுக் காலமாகப் பாண்டிய நாட்டு மக்களை இந்த உள் நாட்டுப் போருக்கு அந்தரங்கமாக ஆயத்தப்படுத்தி வைத்திருந்தார் பெரியவர். தேசபக்தி என்ற மூலக் கனல் அறவே அவிந்து, பாண்டிய மக்கள் அடிமைகளாகி அடிமைத் தனத்தையே ஏற்றுக் கொண்டு விட்டதாகக் களப்பிரர்கள்தான் தப்புக் கணக்குப் போட்டிருந்தார்களே ஒழிய, அந்த மூலக் கனல் இன்னும் நீறுபூத்த நெருப்பாக இருந்தது. தொடர்ந்து, சில நாட்களாகக் கோட்டையையும், அகநகரையும் கைப்பற்றுவதற்கான சூழ்ச்சிகளைச் சிந்திக்கத் தொடங்கியிருந்தார்கள் அவர்கள். நாலைந்து நாட்கள் கழித்து, ஒர் இரவில் மீண்டும் பெரியவரிடமிருந்து, தூதுவன் ஒருவன் இவர்களைத் தேடி வந்தான். அவன் கொண்டு வந்திருந்த ஒலையும் பொருள்களும், வெற்றி நம்பிக்கையை உறுதிப்படுத்துவனவாயிருந்தன. ‘திருக்கானப்பேர் நம்பிக்கு நல்வாழ்த்துகளுடன் வரையும் ஒலை. காலம் நமக்கு இசைவாகக் கனிந்து வருகிறது. நான் அறிந்த வரையிலும், அங்கங்கே உள்ள நம் ஒற்றர்கள் சொல்லியனுப்பியிருக்கும் செய்திகளின் படியும், அடுத்த பெளர்ணமிக்குள் மதுரைக் கோட்டையில் நெடுங்காலத்திற்குப் பின் நமது மீனக் கொடியைப் பறக்க விட முடியும் என்று தெரிகிறது. கோட்டைக்குள்ளும், கோநகரிலும், உள்நாட்டின் பிற பகுதிகளிலும், அந்தப் பழைய அவிட்டநாள் விழாவின் போது இருந்த அவ்வளவு பாதுகாப்பு ஏற்பாடுகளைக் களப்பிரர்களால் இப்போது செய்ய முடியவில்லையாம். எல்லா வீரர்களையும், படைபலத்தையும் அவர்கள் எல்லைகளில் குவித்து விட்டார்களாம். என்னைச் சந்திப்பதற்காக மாறோக வள நாட்டுக் கொற்கையிலிருந்து, இங்கு வந்து திரும்பிய மருதன் இளநாக நிகமத்தானும் இதையே கூறிச் சென்றிருக்கிறான். தென்திசையில், நம் காரியங்களைச் செய்யுமாறு அவனுக்குக் கட்டளை இட்டிருக்கிறேன். இன்னும் சில நாட்களிலேயே, தென்மேற்கே சேரர்கள் களப்பிரர்களைத் தாக்கத் தொடங்கி விடுவார்கள். அப்போது களப்பிரர்களின் கவனம் முழு அளவில் எல்லைகளைக் காப்பதில்தான் திரும்ப முடியும். அந்தச் சமயத்தில், வளர் பிறைக் காலத்தில் ஓர் இரவில் நீங்கள் கோட்டையைக் கைப்பற்றி நம் மீனக் கொடியை, அதிகாலையில் மங்கலமான பிரம்ம முகூர்த்தத்தில் அங்கே ஏற்றி விட வேண்டும். அநேகமாகக் களப்பிரக் கலியரசன் போர் முனைக்குப் போக மாட்டான் என்று தெரிகிறது. அவன் அரண்மனையில் இருந்தால், அவனை அழிப்பதற்கும், நீங்கள் தயங்க வேண்டியதில்லை. எதிரியை அழிப்பதும், போர் அறங்களில் முதன்மையானது. கோட்டையில் நமது கொடி ஏறிய பின், நான் அங்கு வருவேன். அதற்கு முன், நான் பாண்டிய நாட்டின் எதிர்கால நலனை முன்னிட்டுக் கேட்க இருக்கும் இரண்டு வாக்குறுதிகளைச் சூரிய சந்திரர்கள் சாட்சியாக எனக்கு அளிப்பதாக, இவ்வோலை கொண்டு வரும் தூதனிடம் மாற்றோலையாகத் திருக்கானப்பேர் நம்பி வரைந்தனுப்ப வேண்டும். அந்த இருவாக்குறுதிகள் என்ன என்பதை நானே பின்பு நேரில் கூறுவேன். இவ்வோலையோடு முதல் முதலாகக் கோட்டையில் ஏற்றப்பட வேண்டிய மீனக் கொடியையும் நானே எழுதிக் கொடுத்துள்ளேன். கொடியைத் தவிர அரண்மனையில் முதல் முதலாக நுழையும் போது, அணிந்து செல்ல வேண்டிய இடைவாளும், உறையும் இதனோடு உள்ளன. இந்த வாளின் நுனியில் வெற்றிகள் குவியும். இந்த வாள் ஒரு பேரரசைப் பல்லாண்டுகளுக்குப் பின்பு மீட்கும் நலத்தை அடையப் போவது என்பதையும் அறிக!’ என்று முடிந்திருந்தது அவர் ஒலை. இளையநம்பி தூது வந்திருந்தவனிடம் இருந்து அந்தக் கொடியையும், வாளையும் பயபக்தியோடு வணங்கிப் பெற்றுக் கொண்டான். இரத்தினமாலையைக் கூப்பிட்டு ஒலையும், எழுத்தாணியும் கொண்டு வரச் சொல்லி வேண்டிப் பெற்ற பின், பெரியவருக்கு மாற்றோலை வரைவதற்கு முன்னால் அவர் கேட்டிருக்கும் அந்த இரு வாக்குறுதிகள் என்னவாக இருக்க முடியும் என்று இளைய நம்பி சிந்திக்க முயன்றான். எவ்வளவோ முயன்றும், அவனால் புரிந்து கொள்ள முடியாதவைக இருந்தன. அவை. அதே சமயம் பாண்டிய மரபை ஒளி பெறச் செய்வதற்காகத் தம் வாழ்வையே தத்தம் செய்து கொடுத்திருக்கும், பெரியவரின் வேண்டுகோள் என்னவாக இருந்தாலும், அதை நிறைவேற்ற வேண்டிய கடமை தனக்கு இருப்பதையும் அவன் உணர்ந்தான். “தேவரீர் திருவடித் தாமரைகளில், அடியேன் இளைய நம்பி தெண்டனிட்டு வணங்கி வரையும் ஒலை. சூரிய சந்திரர்கள் சாட்சியமாகப் பாண்டிய நாட்டின் எதிர்கால நலனை முன்னிட்டுத் தாங்கள் கேட்கும் இரண்டு வாக்குறுதிகளை, மறுக்காமலும், மறக்காமலும் நிறைவேற்றுவதாக ஆலவாய் அண்ணல் மேலும், இருந்த வளமுடையார் மேலும் ஆணையிட்டுச் சத்தியம் செய்கிறேன். தாங்கள் எழுதியுள்ள குறிப்புகளின்படியே, எல்லாச் செயல்களையும் செய்வேன். தங்கள் நல்லாசியுடன் வந்த மீனக் கொடியையும், இடை வாளையும் வணங்கிப் பெற்றுக் கொண்டேன். ஒளி திகழும் தங்கள் திருமுக மண்டலத்தைத் தரிசனம் செய்யும் நாளை ஆவலோடு எதிர் நோக்கியுள்ளேன்” என்று ஒலையை எழுதி முடித்து, வந்திருந்த தூதுவனிடம் கொடுத்தான் இளையநம்பி. தூதன் திரும்பிய பின், கொடியையும், வாளையும் இரத்தினமாலையிடம் கொடுத்து, “மீண்டும் நான் கேட்கிற வரை இவற்றைப் பாதுகாப்பாக வைத்திரு” என்றான். இரத்தினமாலை அவற்றை வாங்கிச் சென்று, உள்ளே வைத்து விட்டுத் திரும்பி வந்தாள். “ஐயா! தாங்கள் வேறுபாடாக நினைக்கவில்லை என்றால், பெரியவர் இன்று இங்கே அனுப்பிய ஒலையில், தங்களுக்கு என்ன எழுதியிருந்தார் என்பதை இந்தப் பேதையும் அறிய ஆசைப்படுகிறேன்” என்றாள் அவள். அந்த ஒலையை அவள் படித்தறிவதில் தவறில்லை என்று கருதிய இளையநம்பி, “நீயே படித்துப் பார் இரத்தினமாலை!" என்று அவளிடமே அதை எடுத்துக் கொடுத்து விட்டான். அதைப் படித்ததும், ஏதோ சிந்தனை வயப்பட்டவள் போல் நெடு நேரம் ஒன்றும் பேசாமல் அவனெதிரே அமர்ந்திருந்தாள் அவள். இடையிடையே அவள் நெட்டுயிர்ப்பதை இளைய நம்பி கண்டான். அந்த ஒலைச் செய்தி அவளுக்கு ஏன் மகிழ்ச்சியளிக்கவில்லை என்பதை அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை. அவன் அவளைக் கேட்டான்: “கோட்டையில் மீண்டும் நமது கொடி பறக்கப் போகிறது என்னும் செய்தி, உனக்கு ஏன் மகிழ்ச்சியை அளிக்கவில்லை இரத்தினமாலை?” “.............” அவளிடமிருந்து இதற்கு மறுமொழி இல்லை. அவள் கண்களில் ஈரம் பளபளப்பதை அவன் பார்த்தான். அவள் செவ்விதழ்கள் துடித்தன. எதைக் கூறுவதற்கு அவை அப்படித் துடிக்கின்றன என்பதையும், அவனால் உடனே விளங்கிக் கொள்ள முடியவில்லை. தொலை தூரத்தில் இருந்து கேட்கும் சோகம் நிறைந்த ஓர் இன்னிசையைப் போல் மெல்லிய விசும்பல் ஒலியும், விரைந்து மூச்சு விடும் உயிர்ப்புக்களும் அவள் பக்கமிருந்து அவன் செவிகளில் விழுந்தன. மிகமிகத் திடமானவள் என்றும், ஓரளவு ஆணின் உறுதியுள்ளவள் என்றும் அவன் நினைத்திருந்த இரத்தினமாலை இப்படிப் பேதையாக நெகிழ்ந்ததைக் காணப் பொறுக்காமல் அவன் பதறிப்போனான். தன் சொற்களோ, பெரியவரின் அந்த ஒலையிலுள்ள சொற்களோ, அவளை எந்த விதத்தில் வருத்தியிருக்க முடியும் என்பதை அவனால் புரிந்து கொள்ளவே முடியவில்லை. ஓர் இதயம் கரைந்து பொங்குவது போன்ற அந்த இனிய விசும்பல், மெல்லிய இசையாக அவன் செவிகளில் நுழைந்து இதயத்தில் பதிந்து வேதனை செய்தது. 8. புதிய நிபந்தனை நீண்ட நேரம் வரை அந்த நிலையில், இரத்தின மாலையிடம் அவன் என்ன பேசினாலும் மறு மொழி கிடைக்கவில்லை. அவன் ஏதாவது வினாவினால், அந்த வினாவைக் கேட்டு அவள் விசும்பல் இன்னும் அதிகமாகியது. அழுகை பெருகியது. கடைசியில் அவளைப் பேச வைக்க அவன் ஒரளவு கடுமையான வார்த்தைகளைக் கூறி வினாவ வேண்டியதாகி விட்டது. “இரத்தினமாலை! பெண்களைப் பற்றிய ஒரு பேருண்மை இன்றுதான் எனக்குப் புரிகிறது! தங்களால் அன்பு செய்யப்படுகிற ஆடவனுக்கு நல்ல காலம் வரும் போது கூட, அதற்கும் மகிழாமல் அழுவதற்குத் துணிகிற கொடுமையான உள்ளம் பெண்களுக்கு மட்டுமே இருக்கும் போலும்.” “பேதைகளின் உள்ளங்களைக் கோட்டை கொத்தளங்களை மீட்டுக் கொடியேற்றச் செல்லும் மாமன்னர்கள் ஞாபகம் வைத்திருக்கக் கூட முடியாது ஐயா! அரசர்களின் உலகில், இதயங்களை விடக் கோட்டை கொத்தளங்கள் பெரியதாகி விடலாம். ஏற்கெனவே வெற்றி கண்ட ஒரு மனத்தை, நாளை வெல்லப் போகும் ஒரு கோட்டையின் வெற்றி-ஞாபகத்தில், அவர்கள் மிக எளிதாக மறந்து போய் விடுவார்கள். அவர்களை நம்பி, வலுவில் முன் வந்து அன்பினால் தோற்றவர்களை வென்றதாகக் கூட அவர்களுக்கு நினைவு இருக்காது...” “களப்பிரர்களோடு நான் இன்னும் போரைத் தொடங்கவே இல்லை! அதற்குள்ளேயே நீ உன்னோடு என்னைப் போருக்கு இழுக்கிறாய்! இதுவும் என் தீவினை என்றுதான் சொல்ல வேண்டும்.” “நீங்கள் புரியும் வாதம் பிழையானது! உங்களுக்கு முன் மனப்பூர்வமாகத் தோற்று நிற்பவர்கள், உங்களிடமே தொடங்குவதற்குப் போர் எதுவும் இருக்க முடியாது." “பின் என்ன? இல்லாமலா தொடங்குகிறாய் நீ?” “நான் எதையும் புதிதாகத் தொடங்கவில்லை. ஏற்கெனவே மனப்பூர்வமாகத் தொடங்கியது எதுவோ, அது முடியப் போகிறதே என்றுதான் கண் கலங்குகிறேன்...” “மனப்பூர்வமாகத் தொடங்கும் எதற்கும் முடிவே இல்லை இரத்தினமாலை! அதை முடியவும் விடக் கூடாது...” “பதவிகளும், சுகபோகமும், ஏற்றத் தாழ்வும் உங்களுக்கும் எனக்கும் குறுக்கே மலைகளாக நிற்கும் என்பதை மறந்து விடாதீர்கள்...” “உண்மை! அவை உன் உடலுக்கும், என் உடலுக்கும் குறுக்கே நிற்கலாம். இதயங்களுக்கு நடுவே எதுவும் குறுக்கே நிற்க முடியுமா?” “பல திங்கள் காலம் உங்களை அன்போடு உபசரிக்கும் பேறு பெற்றதற்காக நான் முற்பிறவியில் புண்ணியம் செய்திருக்க வேண்டும்.” “நீ மட்டுமில்லை! நானும்தான்...” “ஆனால், இப்போது நாம் பிரியும் நாட்கள் நெருங்குகின்றன என்பதை எண்ணும் போது என்னால் வேதனையைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. நான் தவிப்பதை உங்களால் உணர முடியவில்லையா?” “உணராமல் இருப்பதற்கு நானோ, என் இதயமோ குருடாகி விடவில்லை. நீ அணிந்த மலர் மாலைகளைத் தாங்கிய தோள்கள், இனி அரச பாரத்தைத் தாங்கப் போகின்றன. என்னுடைய புதிய சுமையை, நீ கவலையோடும் அநுதாபத்தோடும் நோக்க வேண்டும். இந்த மாளிகையில் அடைபட்டுக் கிடந்த காலத்தில், ஒர் அரச குடும்பத்து இளைஞனுக்கு நீ அளித்த மகிழ்ச்சிகளை இனிமேல் அரியணையில் அமர்ந்திருக்கும் போதோ, போர்க்களங்களில் ஊடாடும் போதோ அவன் அடைய முடியாது...” “என் போல் திருவடித் தொண்டு செய்யும் கணிகைகள், உங்களோடு அரியணையில் ஏறிக் கொலு அமர அரச குலத்து நியாயங்கள் இடம் தர மாட்டா..." “அரச குல நியாயங்கள் கண் இல்லாதவை! ஆனால், என் இதயத்தில் நீ கொலு வீற்றிருப்பதை, எந்த நியாயமும் தடை செய்ய முடியாது...” “நீங்கள் இங்கிருந்து அரண்மனைக்குப் போய் விடுகிற மறு நாளே இந்த மாளிகை சுடுகாடு போலாகிவிடும், அதன் பின் இங்கே மங்கல வாத்தியங்களின் ஒலி எழாது. நறுமணங்கள் இராது. மாலைகளும் சந்தனமும் மணக்காது. விளக்குகள் இருண்டு விடும். நான் உருகித் தேய்ந்து மாய்ந்து போவேன்...” “நீ உண்மையில் என்னிடம் இதயத்தைத் தோற்றவளாயிருந்தால், அப்படிச் செய்யக் கூடாது.” “வாழ முடியாதவர்கள் சாவதைத் தவிர வேறு என்ன வழி இருக்கப் போகிறது!” “நாயகனைப் போர்க்களத்துக்கு அனுப்பும் தமிழ்ப் பெண்கள், அவன் திரும்பும் வரை அவன் நலத்தோடு திரும்பி வர நோன்பிருக்க வேண்டும்.” “இந்தப் போர்க்களத்தில் என் நோன்பிற்குப் பலன் இராது. நீங்கள் வென்ற மறுகணமே அரியணை என்ற மேட்டில், என் கண்ணுக்கு எட்ட முடியாத உயரத்துக்கு ஓடிப் போய் விடுவீர்கள்.” “மீண்டும் உன்னிடமே திரும்பி வருவேன்! ஆனால் அது வரை உன் நோன்பின் பலனை எதிர் பார்த்துக் காத்திருக்க, உனக்குத்தான் பொறுமை வேண்டும்.” “அப்படி எவ்வளவு காலம் நான் பொறுத்திருக்க வேண்டுமோ?” “அடுத்த பிறவி வரை பொறுத்திருக்க வேண்டும்! இந்தப் பிறவியில் நான் பாழாய்ப் போன அரச குடும்பத்தில் வேறு வழி முறையினரே இல்லாத ஒற்றைக்கொரு வீரனாகப் பிறந்து தொலைத்து விட்டேன் பெண்ணே! அரச பாரச் சுமை என்னை இப்போது விடவே விடாது. அந்த அரச குடும்பத்து நியாயங்கள் நீயே கூறியது போல், உன்னை என்னருகே அமர விடவும் இசையமாட்டா. தயை செய்து இன்னும் ஒரு பிறவி வரை எனக்காக நோன்பிருந்து கழித்து விடு இரத்தினமாலை! அடுத்த பிறவியில் நான் குழலூதும் கலைஞனாகவோ, யாழ்ப்பாணனாகவோ, ஒரு இன்னிசைக் கவிஞனாகவோ பிறக்கிறேன். அப்போது எந்த நியதிகளும் நம்மைத் தடுக்க முடியாது” என்று கூறிக் கொண்டே வருகையில் இளையநம்பியின் கண்களிலும் நீர் மல்கி விட்டது. உணர்ச்சிப் பெருக்கில் அவன் சொற்கள் தடைப் பட்டன. அவள் அவன் நெஞ்சில் சாய்ந்தாள். அவளை ஆரத் தழுவி மகிழ்ந்தான் அவன். அவன் கண்ணீர் அவள் தலையில் சிந்தி நனைத்து, அவளை மறு பிறவிக்கு அங்கீகரித்துக் கொண்டது. “ஐயா! நீங்கள் பாணனாகவோ, கலைஞனாகவோ திரும்பி வருவது உறுதியாயின், ஒரு பிறவி என்ன ஆயிரம் பிறவிகள் வேண்டுமானாலும் காத்திருப்பேன்” என்று அவன் மார்பில் புதைத்த முகத்தை நிமிர்த்திக் கூறினாள் அவள். இந்தச் சொற்கள் இளையநம்பியை மெய் சிலிர்க்கச் செய்தன. சிறிது நேரம் மன நெகிழ்ச்சியில், எதுவுமே பேச இயலாமல் வாய்ச் சொற்கள் பயனற்ற நிலையில், இளைய நம்பியும் இரத்தினமாலையும் இருந்தார்கள். மீண்டும் இரத்தினமாலைதான் முதலில் உரையாடலைத் தொடங்கினாள்: “ஐயா! நீங்கள் அழகன் பெருமாளுடன் உப வனத்திலிருந்து நிலவறை வழியே இந்த மாளிகைக்கு வந்த முதல் தினம் என் மேல் கடுங் கோபத்தோடும் உதாசீனத்தோடும் இருந்தீர்கள்... அந்த உதாசீனமும், கோபமுமே என்னைப் படிப்படியாக உங்களுக்குத் தோற்கச் செய்தன...” “முதலில் நான் மனம் வேறுபட்டு இருந்தது உண்மைதான் இரத்தினமாலை! ஆனால், உன் அன்பு மயமான உபசாரங்களும், தேனூர் மாந்திரீகன் இங்கே காயப்பட்டு வந்த போது நீ கருணையோடு அவனுக்குச் செய்த பணிவிடைகளும் என் மன வேறுபாட்டை மாற்றிவிட்டன. நீ என்னை மயக்கிவிட்டாய்..." “அது எனக்குத் தெரியாது! நான் உங்களிடம் மயங்கிப் போய் உருகுவதை மட்டுமே என் உணர்வுகள் அறிந்திருக்கின்றன. நீங்கள் என்னிடம் முதலில் மயங்காத உறுதிதான், என்னை உங்கள்பால் விரைந்து மயங்க வைத்தது...” “முன்பு ஒரு முறை நீயே கூறியது போல் பெரிய பூக்களைச் சிறிய நாரினால் தொடுப்பதை ஒத்து, நீ உன் அன்பினால் நுணுக்கமாக் என்னைக் கட்டிவிட்டாய்...” “கட்டியும் பயனில்லை! அந்தச் சிறிய கட்டை அறுத்துக் கொண்டு பெரிய அரச போகத்தை நோக்கி ஓடி விடப் போகிறீர்கள் நீங்கள்...” “நான் போகப் போவது உண்மை. ஆனால், நீ கட்டியிருக்கும் மெல்லிய அன்பு நார் அடுத்த பிறவி வரை அறப் போவதில்லை என்று உறுதி கூற ஆயத்தமாயிருக்கிறேன் நான்...” “இது மெய்யானால், அடுத்த பிறவி வரை உங்களுக்காக மகிழ்ச்சியோடு நோன்பியற்றிக் காத்திருப்பேன்.” “உன் நோன்பு என்னை எப்போதும் மானசீகமாகப் பாதுகாக்கும் இரத்தினமாலை!” இதற்குச் சொற்களால் மறுமொழி கூறாமல், பூக்குடலையிலிருந்து ஒரு பெரிய மாலையை எடுத்து வந்து அவன் தோள்களில் சூட்டி, அவனுக்குத் திலகமிட்டாள் இரத்தின மாலை. பின்பு தன் கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டு அவனை நிமிர்ந்து பார்த்துப் புன்னகை புரிந்தாள். அவனும் புன்னகை புரிந்தான். அவளைத் தழுவிக் கொண்டான். - - “இந்தப் பொன்னுடலே எக்காலமும் மாலையைப் போல் என் மேனியில் தீண்டிக் குளிர்விப்பதாக நான் பாவித்துக் கொள்வேன் இரத்தினமாலை” என்று அவன் கூறியதை அவள் செவி குளிரக் கேட்டாள். அதன்பின் அன்றும், அதற்கடுத்த நாளும் இணை பிரியாமல் அருகிலிருந்து அவனை உபசரித்தாள் இரத்தின்மாலை. மூன்றாம் நாள் மறுபடி பெரியவரின் தூதன் வந்து தென்மேற்குத் திசையில் சேரர்களும் படையெடுத்து வந்து, பாண்டிய நாட்டு எல்லையில் களப்பிரர்களைத் தாக்கத் தொடங்கி விட்டதாகத் தெரிவித்து விட்டுச் சென்றான். அகநகரையும் கோட்டையையும், இளையநம்பி கைப்பற்றுவதற்கு நாட்கள் நெருங்கிக் கொண்டிருந்தன. கொற்கை மருதன் இளநாக நிகமத்தானின் உதவியால் அங்கங்கே இருந்த பாண்டிய வீரர்களுக்குப் போதுமான புதிய குதிரைகள் வந்து சேர்ந்திருந்தன. இதற்கு இடையே கொல்லனும், இளையநம்பியும் கணிகை மாளிகையின் கீழே நிலவறையில் தனியே சந்தித்துக் கொள்ளக் கிடைத்த ஒரு சந்தர்ப்பத்தின் போது, “நான் இங்கே மிகவும் சுகமான உபசரிப்புகளோடு நல்லதொரு பெருமாளிகையில் கவலையின்றி இருக்கிறேன் என்பது போன்ற கருத்துப்படக் காராளர் மகளிடம் கூறியிருக்கக் கூடாது. அது வீணாக அவள் மனத்தில் இல்லாத சந்தேகங்களை எல்லாம் உண்டாக்கியிருக்கிறது என்பதையே அவள் ஒலை காட்டுகிறது” என்று கொல்லனைக் கடிந்து கொண்டான் இளையநம்பி. “ஐயா! நான் அப்படிக் கூறா விட்டாலும், அகநகரில் நீங்கள் மிக மிகத் துன்பப்படுவதாக எண்ணி அவள் தவிக்க நேரிட்டு விடும். குறிப்பிட்டு எதையும் கூறாமல் பொதுவாகவே, நான் அதைச் சொல்லி விட்டு வந்தேன்” என்று மறுமொழி கூறினான் கொல்லன். நான்காம் நாள் பெரியவரிடம் இருந்து வந்த தூதன் கொண்டு வந்திருந்த கட்டளை ஓலையில் இளையநம்பி முதலியவர்கள் நிலவறை வழியே கோட்டையைக் கைப்பற்றிக் கொடியேற்றுவதற்குப் புறப்பட வேண்டிய நாள், நேரம், செயற்பட வேண்டிய முறைகள், உபாயங்கள் எல்லாவற்றையும் எழுதியிருந்தார் பெரியவர். ஓலையின் முடிவிலே ஒரு புதிய செய்தியும் இருந்தது. அதை ஒரு முறைக்கு இரு முறையாகப் படித்துப் புரிந்து கொள்ள முயன்றான் இளையநம்பி. ‘தீர்த்த யாத்திரை முடிந்து காராளர், மனைவியோடும் மகளோடும் திருமோகூர் திரும்பி விட்டார். களப்பிரர்களிடம் இருந்து பாண்டிய நாட்டை மீட்கும் முயற்சிக்கு உறுதுணையாகப் பல்லவர்களை வடக்கு எல்லையிலும், சேரர்களைத் தென்மேற்கு எல்லையிலும் தாக்குதல் தொடங்கச் சொல்லி, உதவி கேட்டுத்தான் தீர்த்த யாத்திரை என்ற பெயரில் காராளரை அனுப்பியிருந்தேன். ஏற்கெனவே பல்லவர்கள் களப்பிரர்களைத் தமிழ் நாட்டிலிருந்து விரட்டும் எண்ணம் கொண்டிருந்ததால், நமது வேண்டுகோளை ஒரு நிபந்தனையுமின்றி உடனே ஏற்று விட்டார்கள். ஏற்றதற்கு அடையாளமாக, வடக்கு எல்லையில் வெள்ளாற்றங்கரையில், அவர்கள் படை களப்பிரர்களை எதிர்த்து வந்து போர் முரசு கொட்டிவிட்டது. ஆனால், தென்மேற்கே நமக்கு உதவ வந்துள்ள சேர வேந்தன், இப்போது ஏறக்குறைய ஒரு சிற்றரசனின் நிலையில் இருந்தாலும், நமக்கு இந்த உதவியைச் செய்ய ஒரு நிபந்தனை இட்டிருக்கிறான். அதை இப்போதே உன்னிடம் கூற எனக்குத் தயக்கமாக இருக்கிறது. ஆனால், வேறு வழி இல்லை. அந்த நிபந்தனைக்கு உன் சார்பில் நான் இணங்கி விட்டேன். என் பொருட்டு நீயும் அதற்கு இணங்கியே ஆகவேண்டும். நாம் அரசைக் கைப்பற்றி வெற்றி வாகை சூடும் போது, அந்த நிபந்தனை என்ன என்பதை உனக்குச் சொல்லுகிறேன்’ என்று ஒலையை முடித்திருந்தார் அவர். 9. புது மழை தீர்த்த யாத்திரை முடித்துத் திரும்பியதுமே, மகளையும் மனைவியையும் திருமோகூரில் கொண்டு வந்து விட்ட பின், உடனே பெரியவரைச் சந்திப்பதற்காகத் திருமால் குன்றத்திற்கு விரைந்தார் பெரிய காராளர். அப்படிச் சென்றவர் அதன் பின் பல நாட்கள் ஊர் திரும்பவில்லை. பெரியவருடனேயே, திருமால் குன்றத்தில் தங்கி விட்டார் அவர். பெரியவருடன் சேர்ந்து செய்யப் பல பணிகள் அவருக்கு இருந்தன. நீண்ட யாத்திரையை முள்ளின் மேற் கழிப்பது போல், கழித்துவிட்டுத் திரும்பியிருந்த செல்வப்பூங்கோதைக்கு இளைய நம்பியைப் பற்றி யாரிடமுமே பேச முடியாமல் ஒரே தவிப்பாயிருந்தது. கொல்லன் ஊரில் இல்லை என்று தெரிந்தது. ஊரிலும், சுற்றுப்புறங்களிலும் புதுமை தெரிந்தது. ஏதோ மிகப் பெரிய மாறுதல்களை எதிர்பார்க்கும் அமைதி தென்பட்டது. எங்கும் பூத பயங்கரப் படைவீரர்களே காணப் படவில்லை. மக்கள் அங்கங்கே கூடுமிடங்களில் எல்லாம், வெளிப்படையாகவே களப்பிரர்களை எதிர்த்தும், தூற்றியும் பாண்டியர்களை ஆதரித்தும், வாழ்த்தியும் நிர்ப்பயமாக உரையாடத் தொடங்கினர். வடக்கேயும், தென்மேற்கேயும் போர்கள் நடப்பதால், உள்நாட்டில் களப்பிரர்கள், இருதலைக் கொள்ளி எறும்பு போல் இடையே அகப்பட்டு விட்ட நிலையில் நலிந்திருப்பதை, எங்கும் வெளிப்படையாகப் பேசிக் கொண்டார்கள். நாட்டு நிலைமை தெளிவாகப் புரியும்படி இருந்தது. இந்நிலையில் ஒரு பிற்பகலில் வெளியே மழை பெய்து கொண்டிருந்த போது தாயும் செல்வப் பூங்கோதையும் மாளிகைக் கூடத்தில் அம்மானை விளையாடிக் கொண்டிருந்தார்கள். அம்மானை ஆடும் வேளையில் மகளின் மனப் போக்கை அறிந்த தாய், விளையாட்டின் போது பாடும் பாடலில் தானே சுயமாக இரண்டு மூன்று அடிகளை இட்டுக்கட்டி இயற்றி, ‘கலிகொண்ட களப்பிரனைக் கொன்ற புகழ் மலிகொண்டு திருக்கானம் மகிழ்நம்பி வலிகொண்டு வென்றானென் றம்மானை’ என்பது போலப் பாடிவிட்டு மகள் முகத்தைக் கூர்ந்து கவனித்தாள். தாய் எண்ணியது போலவே, அந்தப் பாடல் பகுதி மகளின் கவனத்தைக் கவர்ந்தது. அவள் உடனே அம்மானை ஆடுவதை நிறுத்தி விட்டு, "இப்போது நீ பாடியதை எனக்காக இன்னொரு முறை பாடு அம்மா!" என்று குழைந்த குரலில் ஆவலோடு தாயைக் கேட்டாள். மகளின் வேண்டுகோளுக்காகத் தாய் மீண்டும் அந்த அடிகளைப் பாடினாள். உடனே மகள் குறுக்கிட்டுக் கேட்கலானாள்:- “உன் பாடலில் பொருட்பிழை, இலக்கணப் பிழை, காலவழு எல்லாமே குறைவின்றி நிறைந்திருக்கின்றன அம்மா! இந்தக் கணம் வரை நாம் களப்பிரர்களின் ஆட்சியில்தான் இருக்கிறோம். நீ பாடலில் பாடியிருப்பது போல் திருக்கானப் பேர் நம்பி இன்னும் களப்பிரர்களை வெல்லவும் இல்லை. கொல்லவும் இல்லை.” “இப்படிப் பாடுவதுதான் அம்மானையில் வழக்கம் மகளே! மிகைப்படுத்திப் பாடுவதும், விரைவில் நிகழ இருப்பதை, இப்போதே நிகழ்ந்து விட்டது போல் பாடுவதும் எல்லாம் அம்மானை விளையாடும் போது இயல்பாக நடப்பதுதான்...” “நீ ஆசைப்படுவது எல்லாம், நீ ஆசைப்படுகிறாய் என்பதற்காகவே நடந்து விடுமா அம்மா?” “நான் ஆசைப்படுவது மட்டுமில்லையடீ, பெண்ணே! நீ உன் அந்தரங்கம் நிறைய ஆசைப்படுவது எதுவோ, அதைப் புரிந்து கொண்டு உன் திருப்திக்காகவே இப்படிப் பாடினேன்! நீயோ, என்னிடம் ஒன்றும் தெரியாதது போல் நடிக்கிறாய்...” நேருக்கு நேர் தாய் இவ்வாறு கூறியதும், செல்வப் பூங்கோதை கையும் களவுமாகப் பிடிப்பட்டுவிட்ட உணர்வோடு நாணித் தலை கவிழ்ந்தாள். தன் அந்தரங்கத்தை மிக மிகத் தந்திரமாகத் தாய் கண்டு பிடித்து விட்டாளே என்று கூசினாள் அவள். நீண்ட நேரமாகப் பெண் குனிந்த தலை நிமிராமல் இருக்கவே, “விளையாட்டைத் தொடரலாம் வா” என்று அவள் மோவாயைத் தொட்டு முகத்தை நிமிர்த்திய தாய் திகைத்தாள். மகளின் நீண்ட அழகிய மீன்விழிகளில் நீர் மல்கியிருந்தது. அது ஆனந்தக் கண்ணீரா, துயரக் கண்ணீரா என்று புரிந்து கொள்ள முடியாமல் மலைத்தாள் தாய். மகளைத் தழுவியபடி, “எதற்காகக் கண்ணீர் சிந்துகிறாய் மகளே! நீ மகிழ வேண்டும் என்பதற்காக நான் இட்டுக் கட்டி இயற்றிய பாடலைக் கேட்டு, நீயே அழுதால் என்ன செய்வது? கவலையை விட்டு விடு! முகமலர்ந்து சிரித்தபடி என்னைப் பார். உன் அந்தரங்கம் எனக்குத் தெரியும். அதை நான் நிறைவேற்றி வைக்கிறேன்” என்று ஆறுதலாகச் சொன்னாள் தாய். “உனக்குத் தெரியாதம்மா அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு மறதி அதிகம். அவர்கள் தங்களை நினைத்துத் தவிக்கும் பேதைகளை எளிதாக மறந்து விடுவார்கள். இதிகாச காலத்தில் இருந்து அப்படித்தான் நடந்திருக்கிறது. சகுந்தலையின் கதை என்ன? தன்னை மறந்து போய்விட்ட ஓர் அரசனை மறக்க முடியாமல் அவள் எவ்வளவு தவித்தாள்?” “நீ அப்படித் தவிப்பதற்கு அவசியம் நேராது மகளே! உன் தந்தை உன்னை அழ விட மாட்டார்.” தாய் இப்படிக் கூறிய போது, அவளை நேருக்கு நேர் ஏறிட்டுப் பார்க்கக் கூசியவளாக மகள், முகத்தை வேறு புறம் திருப்பிக் கொண்டு கேட்டாள்: “அம்மா! நாம் நிலங்களை ஆளும் வேளாளர் குடியினர். மாபெரும் பாண்டியப் பேரரசை, நம் விருப்பப்படி இசைய வைக்கச் சக்தி இல்லாதவர்கள் என்பதை எல்லாம் மறந்து விட்டுப் பேசாதே. ஏதோ சிரம தசையில் இருந்த போது ஒர் அரச குடும்பத்து வாலிபருக்கு, நாம் வழி காட்டி உதவினோம். நம் மாளிகையில் விருந்திட்டோம். நமது சித்திர வண்டியில் ஆயிரம் தாமரைப் பூக்களால் மூடி மறைத்து அகநகரில் கொண்டு போய் விட்டோம். இந்த உதவிகளுக்கு இவற்றை விடப் பெரிய மாற்று உதவியை அவர்களிடமிருந்து நீ எதிர்பார்க்க முடியுமா அம்மா?” “முடியும்! நீ நினைப்பது போல் நாம் அரச குடும்பத்தோடு தொடர்பற்றவர்கள் இல்லை. பல தலைமுறைகளுக்கு முன் களப்பிரர் ஆட்சி வராத நற்காலத்தில் இந்தக் குடும்பத்தில் பாண்டிய இளவரசர்கள் பெண் எடுத்திருக்கிறார்கள், மணந்திருக்கிறார்கள் என்றெல்லாம் வரலாறு உண்டு. தவிர, உன் தந்தைக்கு இந்தப் பாண்டியப் பேரரசும், பெரியவர் மதுராபதி வித்தகரும் மிக மிகக் கடமைப்பட்டிருக்கிறார்கள். உன் தந்தை அறக் கோட்டங்கள் என்றும், ஊட்டுப்பிறை என்றும் பெயர் சூட்டிப் பல இடங்களில், முனை எதிர் மோகர் படையினரையும், ஆபத்துதவிகளையும் நெடுங் காலமாகப் பேணி வளர்த்தவர். அவர் இட்ட செஞ்சோற்று உதவியால்தான், நாளைக்குப் பாண்டிப் பேரரசே களப்பிரர்களிடம் இருந்து மீளப் போகிறது. அந்தச் செஞ்சோற்றுக் கடனைத் திருக்கானப்பேர் நம்பி மறந்து விடவோ மறுத்து விடவோ முடியாது.” தாய் கூறிய ஒரு வரலாறு, செல்வப் பூங்கோதையின் வயிற்றில் பால் வார்த்தது. ‘பல தலைமுறைகளுக்கு முன் பாண்டிய அரச மரபினர், இந்தக் குடும்பத்தின் முன்னோர்களிடம் பெண் எடுத்து மணந்திருக்கிறார்கள்’ என்று அவள் கூறிய சமயத்தில், செல்வப் பூங்கோதை மகிழச்சியால் மனம் பூரித்தாள். திருக்கானப்பேர் நம்பிக்கும் தனக்கும் நடுவே முறைகள், வரம்புகள் என்ற பெயரில் எதுவும் குறுக்கே நிற்க முடியாதென்ற நம்பிக்கை அவளுக்கு ஏற்பட்டது. செஞ்சோற்றுக் கடனையும், காதலையும் தொடர்புபடுத்தி வாக்குறுதி கேட்கும் காரியத்தைத் தன் தந்தை ஒரு போதும் செய்ய மாட்டார் என்பதை அவள் அறிவாள். தந்தையை வற்புறுத்தித் தன் தாயே பிடிவாதம் செய்தாலும், பெரியவரையோ, இளைய நம்பியையோ வற்புறுத்துவதற்குத் தந்தையின் பெருந்தன்மை நிறைந்த உள்ளம் இசையாது என்பதும் அவளுக்குத் தெரிந்ததுதான். ஆனால் தாய் என்னவோ, “கவலைப்படாதே மகளே, நானாயிற்று!” -என்பது போல் திரும்பத் திரும்பக் கூறிக் கொண்டிருந்தாள். தாய் கூறியதை, அவளால் நிறைவேற்ற முடியுமா, முடியாதா என்பதில் ஐயப்பாடு இருந்தாலும், தாய் ஒருத்தியாவது தன் இதயத்தை முழுமையாகப் புரிந்து கொண்டிருக்கிறாளே என்பது ஆறுதலாக இருந்தது. மனத்தின் அந்தரங்கமான சுமையினை, நம்பிக்கையான மற்றொரு தலைக்கு மாற்றிய நிம்மதி இப்போது செல்வப் பூங்கோதைக்குக் கிடைத்திருந்தது. நம்பிக்கையை இழக்க முடியாமல் தாய் உறுதிப்படுத்தியிருந்தாள் என்றாலும் என்ன ஆகுமோ? என்ற அச்சமும் கூடவே இருந்தது. திருமோகூர்க் கொற்றவைக் கோயிலின் அருகே இருள் மங்கும் அந்தி வேளையில் முதன் முதலாக இளையநம்பியாரைச் சந்தித்த அநுபவம் தொடங்கி ஒவ்வொன்றாக மீண்டும் எண்ணிப் பார்த்தாள் அவள். பசித்த போது பழங் கணக்குப் பார்ப்பது போலிருந்தது அவள் நிலை. இளையநம்பி திருமோகூருக்கு வந்தது, அங்கிருந்து தாமரைப் பூங்குவியலில் மறைந்து அகநகருக்குள் சென்றது, எல்லாம் நேற்றும், அதற்கு முன்தினமும்தான் நடந்திருந்தவை போல அவ்வளவு பசுமையாக அவள் உள்ளத்தில் நினைவிருந்தன. ‘பெண்ணே! உனக்கு எவ்வாறு நன்றி சொல்வது என்று தெரியவில்லை. ஆனால், ஒன்றை மட்டும் இப்போது சொல்ல முடியும். இந்த உதவியைச் செய்ததற்காகக் காலம் உள்ளளவும் நீ பெருமைப்படலாம்’ என்று அன்றைக்கு முதன் முதலாகச் சந்தித்த போது, திருமோகூர்க் கொற்றவைக் கோவிலுக்குப் போகிற வழியில், தன்னிடம் இளையநம்பி கூறியிருந்த சொற்கள், அவளுக்கு இந்தக் கணத்திலும் ஞாபகம் வந்து ஆறுதலளித்தன. அந்தப் பழைய நினைவுகள் இப்போது அவள் செல்வமாயிருந்தன. அந்தச் செல்வத்தைக் குறைவின்றி, இன்றும் அவள் ஆண்டு கொண்டிருந்தாள். இன்று தாயுடன் அம்மானை ஆடிய போது, செல்வப் பூங்கோதை தன் மனத்துக்கு ஆறுதலும், மகிழ்ச்சியும் தர வல்ல வேறொரு குறிப்பையும் புரிந்து கொண்டிருந்தாள். தன் ஆருயிர்த் தாயினால், தான் நன்றாகவும், அதுதாபத்துடனும் புரிந்து கொள்ளப் பட்டிருப்பது அவளுக்கு ஆறுதலளித்தது. இந்தப் பிரியமும், அன்பும் இப்படித் தன் கருத்துக்கு இசைவாக இருக்கும் என்பதைத் தான் முன்பே நன்றாக விளங்கிக் கொள்ள முடியாமற் போனதற்காக, இப்போது வருந்தினாள் அவள் தீர்த்த யாத்திரை செல்லும் முன் தாயின் நல்லுள்ளம் புரியாமல் 'தாய் தன்மேல் சந்தேகப்படுவதாக' இளையநம்பிக்குக் கொல்லன் மூலம் எழுதியனுப்பிய ஒலையில், தானே தவறாகக் குறிப்பிட்டு விட்டதை எண்ணி அவள் மனம் கூசியது. மகள் என்ற முறையோடும், அன்பு உரிமையோடும் தாய் தன்னை இடை விடாமல் பேணிக் கவனிப்பதையே, அவள் தன் மேல் சந்தேகப்பட்டுக் கண்காணிக்கிறாளோ என்பதாகத் தான் கருதி அஞ்சியது எவ்வளவு பெரிய பேதைமை என்று இப்போது உணர்ந்தாள் செல்வப்பூங்கோதை, தாயின் அன்பும், ஆதரவும், ‘மகளே உன் தந்தையும் நானும் உன்னைத் தவிக்க விட மாட்டோம்’ என்ற உறுதிமொழியும் வெளிப்படையாகக் கிடைத்த பின், அன்று செல்வப் பூங்கோதை மிக மிக உற்சாகமாயிருந்தாள். நீண்ட காலத்துக்குப் பின் அவள் இதழ்கள் தெரிந்தவையும், அறிந்தவையும் ஆகிய பாடல்களை முறித்தும், முறியாமலும் மகிழ்ச்சியோடு இசைத்தன. புறங்கடையில், தோட்டத்தில் போய்க் காரணமின்றி மழையில் நனைந்தபடியே உலாவினாள் அவள். மாளிகைக்குள் திரும்பி ஆடி[1]யில் முகம் பார்த்து மகிழ்ந்தாள். தாயைக் கூப்பிட்டுக் குழல் நீவி, எண்ணெய் பூசி, வாரிப் பூ முடித்து விடச் சொன்னாள். நெற்றியில் திலகமிட்டு அழகு பார்த்துக் கொண்டாள். புதுக் கூறையுடுத்திப் புனைந்து கொண்டாள். இடையிடையே தீர்த்த யாத்திரைக்கு முந்திய நாளன்று, ‘சாம்ராஜ்யாதிபதிகளுக்கு வழி காட்டும் பேதைகளுக்கு அவர்கள் அன்பைக் கூடவா பிரதியுபகாரமாகத் தரக் கூடாது?’ என்று திருமோகூர்க் கொல்லனிடம், தான் கொடுத்தனுப்பியிருந்த ஒலையில் இளையநம்பியைக் கேட்டிருந்த கேள்வியும் நினைவுக்கு வந்தது. தன்னுடைய அந்தக் கேள்வியைக் கண்டு அவர் என்ன நினைப்பார்?-என்றும் இப்போது அவள் சிந்தித்தாள். “பெண்ணே அம்மானை விளையாடி முடித்ததிலிருந்தே, இன்று நீ மிகவும் மகிழ்ச்சியாயிருக்கிறாய். நெடுநாளைக்குப் பின்பு இன்றுதான் உன் முகத்தில் சிரிப்பைப் பார்க்கிறேன். ஊரில் பெய்யும் புது மழையைப் போல் உன் இதயத்திலும் ஏதோ புது மழை பெய்து கொண்டிருக்கிறதடி பெண்னே! இனி என்றும் இப்படியே இரு” என்று அந்த வேளையில் அவளருகே வந்த தாய் அவளை வாழ்த்தினாள். முகத்தில் பரவும் நாணத்தைத் தவிர்க்க முடியாமலும், அந்தரங்கமான உணர்வுகளைத் தாய்க்குத் தெரிய விடாமலும் வேறு புறம் திரும்பித் தலை குனிந்தாள் மகள். தாய் கூறியது போலவே தன் இதயமாகிய நிலத்தில் ஏதோ புது மழை பெய்து குளிர்விப்பதை அவளும் அப்போது புரிந்து கொண்டுதான் இருந்தாள். ↑ கண்ணாடிக்கு அக்காலப் பெயர். 10. அளப்பரிய தியாகம் பெரியவர் மதுராபதி வித்தகர் தன் சார்பில், சேர வேந்தனிடம் ஒப்புக் கொண்டிருக்கும் நிபந்தனை என்னவாக இருக்கும் என்று எண்ணித் தயங்கவோ, அஞ்சவோ செய்யாமல் முழு மனத்தோடு அதையும் ஏற்றுக் கொண்டான் இளையநம்பி. உடனே திருமால் குன்றத்திலிருந்து பெரியவர் அனுப்பியிருந்த தூதனிடம், ‘ஐயா! தாங்கள் சேரனுக்குக் கொடுத்திருக்கும் வாக்குறுதியை, என் வாக்குறுதியாகவே கருதி நிறைவேற்றக் கடமைப் பட்டிருக்கிறேன் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். தாங்கள் செய்யும் எந்தச் செயலிலும் பாண்டிய நாட்டின் எதிர்கால நன்மைதான் அடிப்படையாயிருக்கும் என்பதை எளியேன் நன்கு அறிவேன்’ என்று விநயமாகவும், வணக்கத்துடனும் மறுமொழி ஒலை எழுதிக் கொடுத்தனுப்பி விட்டான் அவன். பெரியவரிடம் இருந்து வந்த தூதன் மறுமொழி ஒலையோடு திரும்பிச் சென்ற பின், கீழேயுள்ள நிலவறையில் வீரர்களுக்குப் போர்ப் பயிற்சி அளித்துக் கொண்டிருந்த கொல்லனை உடனே தன்னைச் சந்திக்க வருமாறு, கணிகை மாளிகையின் மேற்பகுதிக்குக் கூப்பிட்டு அனுப்பினான் இளையநம்பி. கொல்லன் வருவதற்குள் ஒலைகளை எடுத்து, எழுத்தாணியால் ஏதோ அவற்றில் எழுதத் தொடங்கினான். சிறிது நேரங் கழித்து எழுதுவதை நிறுத்திக் கொண்டு, ஏதோ, நினைவுக்கு வந்தவன் போல், திருமோகூரிலிருந்து காராளர் மகள் செல்வப்பூங்கோதை அனுப்பியிருந்த, பழைய ஓலைகளை எடுத்து மீண்டும் படிக்கலானான். படித்துவிட்டுத் தனக்குத் தானே சிரித்துக் கொண்டான். சில கணங்களில் சிரிப்பு மெல்ல மெல்ல அவன் முகத்திலிருந்து மறைந்தது. முகத்தில் துயரம் தெரிய, வேதனையோடு நெட்டுயிர்க்கத் தொடங்கினான். அவன் துயரமும், மகிழ்ச்சியும் மாறி, மாறி நிலவிட அவன் மனத்திற்குள், ஏதோ ஒரு போராட்டம் நிகழத் தொடங்கியிருந்தது. எழுதுவதற்கு எடுத்த ஒலைகளில், மீண்டும் அவன் எழுதத் தொடங்கிய போது யாரோ மிக அருகில் நடந்து வரும் காலடியோசை கேட்டது. நிமிர்ந்து ஏறிட்டுப் பார்க்காமலே, வருவது கொல்லன் இல்லை என்பதை அவன் புரிந்து கொள்ள முடிந்தது. காலடி ஓசையை முந்திக் கொண்டு வரும் நறுமணங்களும், கை வளைகள், காற்சிலம்புகள் ஆகியவற்றின் இங்கித நாதங்களும் இரத்தினமாலைதான் தன்னருகே வந்து கொண்டிருக்கிறாள் என்பதை அவனை உணரச் செய்தன. உடனே அவன் முன்னெச்சரிக்கையும், விழிப்பும் அடைந்தவனாகச் செல்வப்பூங்கோதையிடமிருந்து தனக்கு வந்திருந்த ஒலைகளையும், அப்போது செல்வப்பூங்கோதைக்குக் கொடுத்தனுப்புவதற்காகத் தான் வரைந்து கொண்டிருந்த ஓலையையும், எழுத்தாணியையும் எல்லாவற்றையும் சேர்த்து விரைந்து மேலாடையால் போர்த்தி மறைக்க முயன்றான். இன்னிசையாய்க் கலீரென்ற சிரிப்பொலி அவன் செவிகளை நிறைத்தது. அவன் முயற்சியை இரத்தினமாலை கவனித்துவிட்டாள் என்பதற்கு இந்தச் சிரிப்பொலி அடையாளமாய் இருந்தது. அவன் நிமிர்ந்து அவளை ஏறிட்டுப் பார்த்து வினாவினான்: “ஏன் சிரிக்கிறாய் இரத்தினமாலை?” “ஏன் சிரிக்கிறேன் என்று உங்கள் மனத்தையே கேட்டுப் பாருங்கள்! தெரியும்! அடுத்த பிறவி வரை உங்களுக்காகக் காத்திருக்கத் துணிந்தவளை, இந்தப் பிறவியிலேயே நீங்கள் நம்பாததைப் பார்த்துத்தான் சிரிக்கிறேன்.” “நான் உன்னை நம்பவில்லை என்பதை நீ இப்போது எப்படிக் கண்டுபிடித்தாய்?” “என்னிடமே மறைக்கவும், ஒளிக்கவும் உங்களுக்கு இரகசியங்கள் இருக்கின்றன. அப்படி நான் எதையும் உங்களிடம் ஒளிக்க முயன்றதில்லை...” இளையநம்பியின் நெஞ்சில் சுரீரென்று தைத்தன இந்தச் சொற்கள். உடனே ஒரு வைராக்கியத்தோடும், நிர்ப்பயமான நேர்மையோடும், எந்த அந்தரங்கத்தையும் பங்கிட்டுக் கொள்ள ஏற்ற அவளிடம் எதையும் மறைக்க வேண்டியதில்லை என்ற நியாய உணர்வோடும், மேலாடையால் மறைத்திருந்த ஒலைகளை எல்லாம் எடுத்து, “இந்தா! இதில் உன்னிடம் ஒளிக்க எதுவும் இல்லை. இவற்றை நீயும் படிக்கலாம். இவற்றைப் படித்த பின்பும், நீ அடுத்த பிறவி வரை எனக்காகக் காத்திருக்கச் சித்தமாயிருப்பாய் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு இரத்தினமாலை!” என்று அவற்றை அவளிடம் அளிக்கலானான் இளையநம்பி. அவள் அவற்றைப் பெற்றுக் கொள்ளாமலேயே, அவனை நோக்கிப் புன்னகை புரிந்தாள். “சில வேளைகளில் உன் வார்த்தைகளை விட புன்னகைகள் கடுமையானவையாக இருக்கின்றன, இரத்தினமாலை!” “ஐயா! இப்போது நான் கூறப் போவதைக் கேட்டு நீங்கள் திகைப்படையவோ, என் மேல் கோபப்படவோ கூடாது. என்னைப் பொருத்தருள வேண்டும்! இந்த ஒலைகளை நீங்கள் அறியாமலே, பலமுறை உங்கள் அங்கியிலிருந்து ஏற்கெனவே எடுத்துப் படித்திருப்பதற்காகத் தாங்கள் இந்தப் பேதையை முதலில் மன்னிக்க வேண்டும்.” “அப்படியானால் அதை ஏன் என்னிடம் நீ மறைத்தாய்?” “மறைத்ததற்குக் காரணம் உண்டு. என்னால், தாங்கள் சலனமோ, மனக்கிலேசமோ அடைந்து, ஒரு பாவமும் அறியாத அந்தப் பேதை செல்வப்பூங்கோதையிடம் வேறுபாடு கொள்ளக் கூடாது என்பதற்காகவே, நான் இவற்றை அறிந்ததை உங்களிடம் காண்பித்துக் கொள்ளவில்லை. சொல்லப் போனால், இவற்றை அறிந்த பின்பே, என் நிலையை அவளோடு ஒப்பிட்டுச் சிந்தித்துக் கொண்டுதான் அன்று நான் உங்களிடம், 'ஏற்கெனவே மனப்பூர்வமாகத் தொடங்கியது எதுவோ, அது முடியப் போகிறதே என்றுதான் நான் கண் கலங்குகிறேன். புதிதாக எதையும் தொடங்கவில்லை’ என்று கண்ணீர் சிந்திக் கதறினேன். நீங்கள் உறுதி கூறிய பின்பு, அடுத்த பிறவி வரை காத்திருப்பதாக வாக்களித்தேன். என் தியாகத்தை நான் இந்தச் செல்வப்பூங்கோதையின் நலனுக்காகவே செய்தேன் என்பதைக் கூட, அன்று நான் உங்களிடம் கூறவில்லை. காரணம் அவ்வளவு ஏமாற்றங்களையும், நிராசைகளையும் தாங்கிக் கொள்ளும் மனோதிடமும், உறுதியும் அந்தத் திருமோகூர்ப் பெண்ணுக்கு இருக்கும் என்று அவள் எழுதிய ஒலைகளிலிருந்து தெரியவில்லை. அவளுடைய உரிமை முதன்மையானது. உங்களைப் போன்றதொரு சாம்ராஜ்யாதிபதிக்கு அந்த அரசை நோக்கிச் செல்லும் முதல் ஒற்றையடிப் பாதையையே அவள் காட்டியிருக்கிறாள். அவள் என்னை விடப் பாக்கியசாலி. என்னை விடக் கொடுத்து வைத்தவள். என்னை விட உங்களை, உலகறிய மணப்பதற்கு ஏற்ற குடிப் பிறப்பு உள்ளவள். நானோ அரச தந்திரங்களோடும், அரசியல் சூழ்ச்சிகளோடும் பழகிப் பழகி மனம் மரத்துப் போனவள். பெரிய ஏமாற்றங்களைக் கூட என்னால் எளிதாகத் தாங்கிக் கொண்டு விட முடியும். அவளால் அது முடியாது... முடியும் என்று தோன்றவும் இல்லை...” பேசிக் கொண்டே வந்தவள் பேச்சுத் தடைப்பட்டு இருந்தாற் போல் இருந்து சிறு குழந்தைபோல் விசும்பி விசும்பி அழத் தொடங்கினாள். மேலே அவளால் எதுவும் பேச முடியவில்லை. அவள் செய்திருக்கும் அந்தரங்கமான தியாகம் எவ்வளவு பெரியது என்று நினைக்க, நினைக்க இளையநம்பியின் மனத்தில் அந்தத் தியாகத்தின் எல்லை பெரிதாகி வளர்ந்து கொண்டிருந்தது. “உனக்கு நான் மிகப் பெரிய கொடுமை செய்து விட்டேன் இரத்தினமாலை! நீ ஏன் இப்போது அழுகிறாய்? கல் நெஞ்சனாகிய நான் அல்லவா கதறி அழவேண்டும்? அழவும் முடியாத பாவியாகி விட்டேனே நான்?” என்று விரக்தியோடு கூடிய ஒரு சினத்தின் வயப்பட்டவனாக அந்த ஒலைகளைக் கிழிக்க முற்பட்ட இளையநம்பியை அவள் தடுத்தாள். கண்ணீருக்கிடையே அவனிடம் மன்றாடினாள்:- “எந்தப் பேதைக்காக நான் தியாகம் செய்தேனோ, அவள் துன்பப்படக் கூடாது ஐயா? இப்போது நீங்கள் அவளுக்குக் கொடுத்தனுப்ப எழுதத் தொடங்கிய ஒலையை மகிழ்ச்சியோடு எழுதிக் கொல்லனிடம் கொடுத்தனுப்ப வேண்டும். இல்லையானால், நீங்களே இந்தப் பேதையின் தியாகத்தை அர்த்தமற்றதாக்கி விடுகிறீர்கள் என்று ஆகும்.” திக்பிரமை பிடித்தவனாக வீற்றிருந்த இளைய நம்பி கண்களில் நீர் மல்க, அவள் கூறிய படியே செய்வதாகத் தலையசைத்தான். தான் செய்த தியாகத்தைக் கூட ஒர் அரச தந்திரக் காரியம் போல், மிக மிக இரகசியமாகவும், யாருக்கும் தெரியாமல் ஆத்மார்த்தமாகவும் அவள் செய்திருப்பதை உணர்ந்து, அவளை எப்படி வியப்பது என்றும், எப்படிப் புகழ்வது என்றும் சொற்கள் கிடைக்காமல் திகைத்திருந்தான் இளைய நம்பி. அவன் இதயத்தில் இரத்தினமாலை ஒரு புனிதமான தியாக தேவதையாகக் குடியேறிக் கொலு வீற்று விட்டாள். ‘எவ்வளவு பெரியவள்’ என்று அவன் ஏற்கெனவே அவளைப் பற்றி மதிப்பிட்டிருந்தானோ, அதையும் விடப் பெரியவளாக இப்போது உயர்ந்திருந்தாள் அவள். கணிகை மாளிகையில் அடியெடுத்து வைத்த முதற் கணத்தில், தனக்கும் அழகன் பெருமாளுக்கும் நடந்த விவாதமும் அன்று அழகன் பெருமாள் இரத்தினமாலையின் குணச் சிறப்பை வியந்து புகழ்ந்ததும், இப்போது இளையநம்பிக்கு நினைவு வந்தன. பெரியவர் மதுராபதி வித்தகர் போன்ற பெரிய ஞானியின் ஆசி மொழியை இரத்தினமாலை எப்படி அடைந்திருக்க முடியும் என்பது இப்போது அவனுக்கு மிக மிக எளிதாகவே புரிந்தது. அவன் எதிரே நிமிர்ந்து பார்த்தான். உடல் புல்லரித்தது. இரத்தினமாலை கண்ணீரைத் துடைத்துக் கொண்டு மீண்டும் புன்னகை பூத்தபடி நின்றிருந்தாள். “ஒலையை எழுதி முடித்துச் செல்வப் பூங்கோதைக்கு அனுப்புங்கள் ஐயா! உங்கள் தனிமைக்கு இப்போது இங்கே நான் இடையூறாக இருக்க விரும்பவில்லை” என்று சிரித்தபடியே கூறி விட்டு உட்புறம் சென்று மறைந்தாள் அவள். நெடுநேரம் திகைத்திருந்து விட்டுப் பின், ஒருவாறு ஒலையை எழுதி முடித்தான் இளையநம்பி. அதற்குள் கொல்லனும் கூப்பிட்டனுப்பிய கட்டளையை ஏற்று, நிலவறையிலிருந்து வந்திருந்தான். “நாளை இரவு நாம் கோட்டைக்குள் புகுந்து, ஆட்சியைக் கைப்பற்றி நமது மீனக்கொடியை மீண்டும் மதுரை மாநகரில் பறக்கச் செய்யப் போகிறோம். அதற்குள் நீ திருமோகூர் சென்று இந்த ஒலையை எனக்காகக் காராளர் மகளிடம் சேர்த்து விட முடியுமா?” என்று இளையநம்பி அவனைக் கேட்டான். உடனே அதைச் செய்ய இணங்கி, ஒலையை வாங்கிக் கொண்டு புறப்பட்டான் கொல்லன். ‘விரைந்து மீண்டும் நிலவறைக்குத் திரும்பி வந்துவிட வேண்டும்’ என்பதை அவனிடம் ஒரு முறைக்கு இரு முறையாக வற்புறுத்திய பின், அவனுக்கு விடை கொடுத்து அனுப்பினான் இளையநம்பி. கொல்லன் திருமோகூருக்குப் புறப்பட்டுச் சென்ற தினத்தன்று, அவன் சென்ற சிறிது நேரத்திற்கெல்லாம், எதிர்பாராத விதமாகத் திருமால் குன்றத்திலிருந்து காராளரும், அவரோடு இளையநம்பிக்குப் புதியவனாகிய இன்னோர் இளைஞனும் நிலவறை வழியே கணிகை மாளிகைக்கு வந்து சேர்ந்தார்கள். 11. இரத்தினமாலையின் முத்துமாலை நீண்ட நாட்களுக்குப் பின்பு காராளரைச் சந்தித்ததும் ஏற்பட்ட வியப்பில், அவரிடம் பேசுவதற்கு எவ்வளவோ செய்திகள் இருந்தும், இளையநம்பியால் சில கணங்கள் எதுவும் பேச முடியவில்லை. தவிரவும், காராளரோடு வந்திருந்த புதிய இளைஞன் வேறு உடன் இருந்ததால், இளையநம்பி அவரிடம் மனம் விட்டுப் பேசவும் இயலவில்லை. ஒருவருக்கொருவர் நலன் விசாரித்துக் கொள்ள முடிந்த அளவில் உரையாடல் நின்று போயிற்று. அப்போது காராளரே முன் வந்து, “பெரியவர் தங்களிடம் இந்த ஒலையைச் சேர்த்து விடச் சொல்லிக் கொடுத்தனுப்பினார்” என்று ஓர் ஒலையை எடுத்து இளைய நம்பியிடம் அளித்திருந்தார். பிடரியிலும், காதோரங்களிலும் சுருண்டு வளர்ந்திருந்த முடியுடனும், பெண்மை முகச் சாயலுடனும், காராளரின் அருகே நின்று கொண்டிருக்கும் இந்தப் புதிய இளைஞனைப் பற்றிப் பெரியவர் அந்த ஒலையில் ஏதாவது எழுதியிருக்கக் கூடும் என்று எதிர்பார்த்தபடியே அதை முத்திரை நீக்கிப் பிரித்தான் இளையநம்பி. அவன் எதிர்பார்த்தது வீண் போகவில்லை. அந்தச் செய்திகள் அதில் இருந்தன. “... மங்கல நல்வாழ்த்துகளுடனும் நற்பேறுகளுடனும் இளையநம்பி காண்பதற்கு விடுக்கும் ஒலை. இந்த ஒலைதான் திருமால் குன்றத்திலிருந்து நான் உனக்கு விடுக்கும் இறுதி ஒலையாக இருக்கும். என் இடத்தை இனி நீ அறிவதால் அபாயமில்லை. இதற்குப் பின்னால் இப்படி மறைந்திருந்து யாரும் அறியாமல் உனக்கு ஒலையனுப்பவும், கட்டளைகளை இடவும், உபாயங்களைச் சொல்லிக் கொடுக்கவும் அவசியம் இராது. விரைவில் மதுரை மாநகரத்து அரியணையில் புகழ் பெற்ற பாண்டியர் வெண் கொற்றக் குடையின் கீழ், நீ வெளிப்படையாக அரசு வீற்றிருப்பாய். களப்பிரர் ஆட்சியால் வீழ்ச்சியடைந்து விட்ட நமது சமயமும், மொழியும், கலைகளும், நாகரிகமும் மீண்டும் வளரும். நீ அவற்றை வளரச் செய்வாய் என்ற திடநம்பிக்கை எனக்கு உண்டு. நாளை நள்ளிரவு நடு யாமத்திற்குப் பின்னர் களப்பிரக் கருநாடவேந்தன் கலியரசனின்[1] ஆட்சி பாண்டிய நாட்டில் இருக்க முடியாது. நாளை நள்ளிரவிற் கோட்டையைக் கைப்பற்று முன் கடைப்பிடிக்க வேண்டிய முறைகளைப் பற்றி, இந்த ஒலையில் உனக்கு நான் தெரிவிக்கப்போகிறேன். இதிற் கண்ட கட்டளைகளை அணுவளவும் பிழையாமல் நிறைவேற்ற வேண்டியது உன் கடமை. இந்தக் கடமையை நீ செம்மையாக நிறைவேற்றுகையில், உனக்கு உறுதுணையாய் இருப்பதற்காகவே, காராளரையும் அனுப்பி இருக்கிறேன். காராளரோடு வந்திருக்கும் புதிய இளைஞன் யார் என்ற கேள்வி இப்போது உன் மனதில் எழலாம். நீ திருக்கானப் பேர்க்காட்டிலிருந்து முதன்முதலாக என்னைச் சந்திக்கத் திருமோகூருக்கு வந்த மறுநாள் காலையில், ‘களப்பிரர்கள் சந்தேகப்பட்டுக் கொன்றுவிட்ட இருவரைத் தவிரப் பாண்டிய அரச வம்சத்தில் நீ உட்பட இன்னும் மூவர் எஞ்சியிருக்கிறீர்கள்’ என்று நான் உன்னிடம் கூறினேன். உடனே நீ என்னிடம் அந்த மூவரில் உன்னொருவனைத் தவிர, ‘மற்ற இருவரும் எங்கிருக்கிறார்கள்?’ என்று கேட்டது இன்னும் ஞாபகம் இருக்கும் என்று எண்ணுகிறேன். 'இப்போது நீ அதைத் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியம் இல்லை தம்பீ. நீங்கள் மூவரும் சந்தித்துக் கொள்ள ஒரு சமயம் வரும். அப்போது பார்க்கலாம்' என்று அன்று, அந்த அதிகாலை வேளையில் உனக்கு நான் மறுமொழி கூறியிருந்தேன். தீவினையோ அல்லது நமது துர்ப்பாக்கியமோ தெரியவில்லை; அதில் ஒருவனை நீ சந்திக்க முடியாமலே போய் விட்டது. களப்பிரர்கள் அவனைக் கழுவேற்றிக் கொன்று விட்டார்கள். தென்னவன் மாறன் கழுவேற்றப்பட்ட தினத்தன்று, அவன் உனக்குத் தமையன் முறை ஆக வேண்டும் என்ற உண்மையை உன்னிடம் தெரிவித்து விட்டதாக இரத்தினமாலை எனக்கு அறிவித்திருந்தாள். அந்தத் தென்னவன் மாறனைத் தவிர, எஞ்சியிருக்கும் மற்றொருவன்தான் இப்போது காராளரோடு உன்னைக் காண வந்திருக்கிறான். இவன் பெயர் பெருஞ்சித்திரன். இதுவரை இவன் மாறோக வளநாட்டுத் துறைமுகப்பட்டினமாகிய கொற்கையில் குதிரை கொட்டாரத்துத் தலைவன் மருதன் இளநாக நிகமத்தானின் பொறுப்பில் வளர்ந்தவன். பாண்டியர் குலநிதியாகிய நவநித்திலங்களோடு, சில திங்களுக்கு முன்புதான் இவன் என்னைக் காண வந்தான். இதற்கு மேல் குறிப்பறியும் திறனுள்ள உனக்கு நான் எதையும் அதிகமாகக் கூற வேண்டியதில்லை. வீரமோ, திடசித்தமோ, ஆண்மையோ அதிகம் இல்லாத இந்தப் பிள்ளையாண்டான் உனக்குத் தம்பி முறை ஆக வேண்டும். ஒரு தம்பியைத் தமையன் எப்படி வரவேற்க வேண்டுமோ, அப்படி முறையாக நீ இவனை வரவேற்கவும், ஏற்றுக் கொள்ளவும் கடமைப்பட்டிருக்கிறாய். எனினும் மிகப் பெரிய சாதனைகளைச் சாதித்துக் கொடுக்கும் எந்தத் திறனையும், நீ இவனிடம் எதிர் பார்க்க முடியாது. பிறவற்றைக் காராளர் உன்னிடம் விவரிப்பார். இனி இந்த ஓலையின் தொடக்கத்தில் நான் உனக்கு இடப் போவதாகக் கூறிய கட்டளைகள் வருமாறு: வெள்ளியம்பலத்திலும், அகநகரின் பிறபகுதிகளிலும், நம்மவர்கள் நிறைய ஊடுருவி இருக்கிறபடியால், நாளை மாலை மயங்குகிற வேளையில், அவர்களைக் கொண்டு புறத் தாக்குதலைத் தொடங்க வேண்டும். இந்தப் புறத் தாக்குதலுக்கு நீ தலைமை தாங்கிப் படை நடத்திச் செல்லக் கூடாது. களப்பிரர்கள் அகநகரில் இப்போது மிகவும் பலவீனமாக இருக்கிறார்கள். பார்வைக்கு ந்ன்றாகத் தெரிந்தாலும், ஒரு மணல் கோட்டை எப்படித் தொட்டால் உடனே சரிந்து விழுந்து விடுமோ, அப்படித்தான் களப்பிரர்களின் கோட்டையும் இப்போது இருக்கிறது. படை வீரர்கள் எல்லாரும் எல்லைகளில் போரிட்டுக் கொண்டிருக் கிறார்கள். ஒரு மமதையின் காரணமாகத் தானே போர்க் களத்திற்குச் செல்லாமல், படைவீரர்களே வெற்றியை ஈட்டிக் கொண்டு வருவார்கள் என்ற தப்புக் கணக்கில் களப்பிரக் கலியரசன் மதுரையிலேயே அரண்மனையில் மாவலி முத்தரையனுடன் வட்டாடிக் கொண்டு[2] கிடக்கிறான். கூடியவரை அரண்மனையிலும், அகநகர் எல்லையிலும் உள்ள சிறிதளவு களப்பிர வீரர்களின் எண்ணிக்கையும் தனித்தனியே சிதறும்படியாகச் செய்து பல முனைகளில் அவர்களைப் பிரித்துத் தாக்க வேண்டியது நம் கடமை. வெளிப்படையாக நடைபெறும் புறத்தாக்குதலைத் தொடங்கி அரண்மனையை வளைத்துக் கொள்ளச் செல்லும் நம் வீரர்கள் குழுவிற்குப் பெருஞ்சித்திரன் மட்டும் தலைமை தாங்கினால் போதும். மாலையில் தொடங்கும் இந்தப் புறத்தாக்குதலால், நள்ளிரவுக்குள் நமக்குச் சாதகமான பல மாறுதல்கள் ஏற்படும். நள்ளிரவில் இந்த மாறுதல்கள் தெரிந்த பின், சூழ்நிலையை உறுதி செய்து கொண்டு, அதன்பின் நீயும் காராளரும், கொல்லனும், நிலவறையிலுள்ள நம் வீரர்களும் கரந்துபடை வழியாக அரண்மனையிற் புகமுடியும். அவ்வாறு அரண்மனையில் புகுந்ததும், முதல் வேலையாக அங்கே சிறைப்பட்டுக் கிடக்கும் அழகன் பெருமாள் முதலியவர்களை விடுவிக்க வேண்டும். அவர்கள் அரண்மனையில் எங்கே சிறைப்பட்டிருப்பார்கள் என்பதை உங்களுக்குக் காட்டுவதற்கு உங்களோடு இருக்கும் உப வனத்துக் குறளன் உதவியாக இருப்பான். மதுரை மாநகரத்துக் கோட்டையில், நம் மீன் கொடி பறக்கத் தொடங்கியதும், அதைக் கண்டு வந்து என்னிடம் தெரிவிக்க, வையையின் இக்கரையில் செல்லூர் அருகே நானே ஆட்களை நிறுத்தியிருக்கிறேன். கோட்டையில் நம் கொடி பறப்பதை அறிந்த சில நாழிகைகளில், நானும் என்னோடு மறைந்திருக்கும் மற்றவர்களும் கிழக்குக் கோட்டை வாயில் வழியே அகநகரில் புகுந்து, அங்கே அரண்மனைக்கு வந்து சேருவோம். இக்கட்டளைகளை எவ்விதத் தயக்கமும், ஐயப்பாடும் இன்றி நிறைவேற்றுக...” என்று பெரியவர் ஒலையை முடித்திருந்தார். ஒலையைப் படித்து முடித்ததும், பெருஞ்சித்திரனை நெஞ்சாரத் தழுவிக் கொண்டு உறவு சொல்லி மகிழ்ந்தான் இளையநம்பி. அரச வம்சத்தின் கடைசி இரண்டு குலக் கொழுந்துகள் சந்தித்துத் தழுவிக் கொண்ட அந்தக் காட்சியைக் காராளர் விழிகளில் ஆனந்தக் கண்ணிர் மல்கக் கண்டு மகிழ்ந்தார். இரத்தினமாலை தன் மாளிகைக்குப் புதிய விருந்தினர்களாகிய காராளரையும், பெருஞ்சித்திரனையும் வரவேற்று உபசரிக்கத் தொடங்கினாள். உணர்ச்சிக் குமுறல்களை எல்லாம் உள்ளேயே அடக்கிக் கொண்டு இரத்தினமாலை அவ்வளவு விரைவாய் வந்திருப்பவர்களுக்கு முன்னால் எப்படி இத்தனை இயல்பாகச் சிரித்து மகிழவும், வரவேற்கவும் முடிகிறதென எண்ணி வியந்தான் இளையநம்பி. அவளுடைய திறமையை அவன் அப்போது காண முடிந்தது. அன்று அந்த மாளிகையில், அவர்கள் மூவரையும் ஒரு சேர அமர வைத்து விருந்து பரிமாறினாள் இரத்தினமாலை. விருந்துண்டு முடிந்ததும், மாளிகைக் கூடத்தில் அமர்ந்து மிகமிக நுட்பமான அரச தந்திர உபாயங்களைப் பற்றிக் காராளரும் இளையநம்பியும் உரையாடிக் கொண்டிருந்தார்கள். மூன்றாவதாக உடனிருந்த பெருஞ்சித்திரன் இடையிடையே கொட்டாவி விட்டபடி, உறக்கக் கலக்கத்தில் இருந்ததையும் கவனித்துக் கொண்ட இளையநம்பி, “தம்பீ! நீ உறங்கப் போவதாயிருந்தால், போகலாம்” என்று சிரித்துக் கொண்டே அவனை நோக்கிச் சொன்னான். பெருஞ்சித்திரனோ, இளையநம்பி அப்படிச் சொல்லுவதற்காகவே காத்திருந்தவனைப் போல் உடனே எழுந்திருந்து உறங்கப் போய்விட்டான். அதைக் கண்டு இளையநம்பி பெரிதும் ஏமாற்றம் அடைந்தான். ஏமாற்றத்தோடு அவன் காராளரைக் கேட்டான்: “ஐயா, நாளை மாலை அரண்மனையை வளைத்துப் புறத் தாக்குதல் நடத்திச் செல்லும் படையணிக்கு இவன் தலைமை தாங்கினால் போதும் என்று பெரியவர் கட்டளையிட்டிருக்கிறாரே; அதை நினைத்தால்தான் எனக்குக் கவலையாக இருக்கிறது. இவனோ பொறுப்பில்லாதவனாகத் தெரிகிறான். மன உறுதியும் போதாது போலிருக்கிறதே?" “உண்மைதான்! ஆனால், பெரியவருக்கும் இவனைப் பற்றி நன்கு தெரியும்: தெரிந்திருந்தும், அந்தப் படையணிக்கு இவனைத் தலைவனாக அவர் நியமித்திருக்கிறார் என்றால், அதில் வேறு ஏதாவது நுணுக்கமான காரணம் இருக்கும். அவர் கட்டளைப்படியே செய்து விடுவதுதான் நமக்கு நல்லது...” என்றார் காராளர். பெருஞ்சித்திரனைக் கண்டு மிகமிக வேதனையும், ஏமாற்றமும் அடைந்திருந்தான் இளையநம்பி. புகழ் மிக்க பாண்டிய மரபில் வந்தவனாகவே நம்ப முடியாதபடி விடலைத் தனமாகவும், விட்டேற்றியாகவும் தோன்றினான் அவன். ஒடுக்கப்பட்டுவிட்ட ஓர் அரச குடும்பத்து இளைஞனுக்கு இந்த இளம் பருவத்தில், தான் இழந்த நாட்டை மீட்பதில் எவ்வளவு ஆவலும், சுறுசுறுப்பும் இருக்க வேண்டுமோ, அதில் ஒரு சிறிதும் பெருஞ்சித்திரனிடம் இல்லை என்பது இளையநம்பிக்குப் புரிந்தது. ‘தென்னவன் மாறனின் இயல்பு இவனுக்கு நேர் மாறானது ஐயா! சீறிப் பாயும் பதினாறடி வேங்கை போன்ற கனலும் தோற்றமும், எதிரிகள் பெயரைக் கேட்டாலே பொங்கி எழும் வீரமும் தென்னவன் மாறனுடையவை. இந்தப் போரில் தென்னவன் மாறன் இருந்திருக்க வேண்டும் ஐயா’ என்று கொலையுண்ட பாண்டிய குல மகா வீரனும் இளையநம்பிக்குத் தமையன் முறையுடையவனும் ஆகிய தென்னவன் மாறனைப் பற்றி நினைவூட்டினார் காராளர். களப்பிரர்களால் சிறை செய்யப்பட்டுக் கொலையுண்ட தன் தமையனைப் பற்றி அவர் நினைவூட்டவே, ஓரிரு கணங்கள். ஒன்றும் பேசத் தோன்றாமல், அப்படியே கண் கலங்கிப் போய் இருந்து விட்டான் இளையநம்பி. அவன் அடைந்த வேதனையைக் கண்டு தென்னவன் மாறனைப் பற்றி நினைவூட்டியதன் மூலம், அப்போது அவன் உணர்வுகளைப் பெரிதும் பாதிக்கச் செய்து விட்டோமோ என்று காராளருக்குக் கூட வருத்தமாக இருந்தது. அவனைத் தனிமையில் இருக்க விட்டு விட்டு, இரத்தினமாலையைத் தேடி அவளிடம் பேசுவதற்குச் சென்றார் காராளர். அதன் பின்பு பிற்பகல் வரை, அவர்கள் ஒருவருக்கொருவர் சந்தித்து உரையாடிக் கொள்ள வாய்ப்பின்றியே கழிந்தது. முன்னிரவின் தொடக்கத்திலேயே இளைய நம்பியால் திருமோகூர் அனுப்பப்பட்டிருந்த கொல்லன் திரும்பி வந்து சேர்ந்திருந்தான். “ஐயா! தங்கள் ஒலையைக் காராளர் திருமகளிடம் சேர்த்து விட மட்டுமே முடிந்தது. ஒலையைக் காராளர் மகள் படித்தறிகிற வரை காத்திருந்து மறுமொழியோ, மாற்று ஒலையோ தரச் சொல்லிப் பெற்று வர நேரமில்லை. நான் காலந் தாழ்த்தாமல், உடனே இங்கு திரும்பி வர வேண்டும் என்று தாங்கள் கட்டளை இட்டிருந்ததைக் கருதித்தான் விரைந்து திரும்பி விட்டேன். இங்கு நான் வந்து, நிலவறையிற் படியேறி மேலே வரும் போதுதான் ஏற்கெனவே காராளரும், கொற்கைப் பெருஞ்சித்திரனும், இங்கு வந்து சேர்ந்திருப்பதாக நம் வீரர்கள் கூறினார்கள்" என்றான் திருமோகூர் கொல்லன். காராளர் மூலம் அறியக் கிடைத்த பெரியவரின் கட்டளைகளை எல்லாம் கொல்லனிடமும் விவரித்தான் இளையநம்பி. கொல்லனும் அவற்றையெல்லாம் கவனமாகக் கேட்டுக் கொண்டபின், “அகநகரின் புறத்தாக்குதலைத் தாங்கள் தலைமை நடத்துவது காரணமாகத் தங்களுக்கு அபாயம் எதுவும் நேரிட்டு விடக் கூடாதே என்று கருதித்தான் பெரியவர் கொற்கைப் பெருஞ்சித்திரனை அதற்கு அனுப்பச் சொல்லி இருக்கிறார் போலும்” என்று சொன்னான். உடனே அதற்கு இளையநம்பியிடமிருந்து பதில் வந்தது. “இது உன் அநுமானம் என்று நினைக்கிறேன்...” “ஆம் ஆனால் இந்த அதுமானத்தில் பிழையிருக்காது என்பது மட்டும் உறுதி” என்று மீண்டும் தீர்மானமாக அழுத்திச் சொன்னான். இளையநம்பி அவனிடம் மேலும் ஒரு கேள்வியைக் கேட்டான். “ஆமாம், இந்தப்பெருஞ்சித்திரன் கொற்கைக் குதிரைக் கோட்டத்துத் தலைவன் மருதன் இளநாக நிகமத்தானுடைய பொறுப்பில் வளர்ந்தும் ஏன் இப்படி ஒரு பொறுப்பும் அறியாத விட்டேற்றியாகத் தலையெடுத்திருக்கிறான்?” “மருதன் இளநாக நிகமத்தார் குதிரைகளை வளர்ப்பதிலும், பழக்குவதிலும், தேர்ச்சி பெற்றவர். மனிதர்களைப் பழக்குவதிலும், வளர்ப்பதிலும் அவர் திறமை எவ்வளவு என்பதற்கு நம் பெருஞ்சித்திரனே சான்று!” கொல்லனின் இந்த மறுமொழியைக் கேட்டு இளையநம்பிக்குச் சிரிப்பு வந்தது. இரும்புப் பட்டறையில் பொன் இழை போன்ற நகைச்சுவையாக, முதன் முதலாக இப்போதுதான் அவனிடமிருந்து கேட்டான் இளையநம்பி. பேசிக்கொண்டே இருவரும் மாளிகையின் அலங்கார மண்டபத்தருகே சென்றனர். அங்கே பேரொளியாக மின்னும் தீபாலங்காரங்களிடையே, விளக்குகளுடன் பகை செய்வது போற் சுடர் மின்னுகிற வெண்முத்துகளைக் கொட்டிக் குவித்து ஒவ்வொன்றாகத் தேர்ந்து பட்டு நூலில் கோத்து ஆரமாக்கிக் கொண்டிருந்தாள் இரத்தினமாலை. “என்ன? முத்துமாலை உருவாகிக் கொண்டிருக்கிறாற் போலிருக்கிறதே? நாங்கள் எல்லாம் வாள் முனையைத் தீட்டிக் கூராக்கிக் கொண்டிருக்கிறோம். இங்கே இரத்தினமாலையின் கையிலோ முத்துமாலை கோர்க்கப்படுகிறது...” என்று கூறியபடியே அருகில் வந்த இளையநம்பியை, ஒன்றும் மறுமொழி கூறாமல் அமைதியாக ஏறிட்டுப் பார்த்தாள் இரத்தினமாலை. சில கணங்கள்.அந்த அமைதி நீடித்தது. பின்பு நிதானமாக அவனிடம் இந்த மறுமொழியைக் கூறினாள். “அரசகுமாரர்கள் வாள் முனையைக் கூராக்குவார்கள். போர் முனையில் வெற்றி பெறுவார்கள்! அப்படி வெற்றி பெற்ற பின், அவர்களை மணக்கும் உரிமையுள்ள நற்குடியிற் பிறந்த பெண்ணழகிகள், அந்த அரசகுமாரரை மாலை சூடி மணக்க ஓடோடி வருவார்கள். அப்படி மணக்கும் வேளையில், அந்தப் பாக்கியத்தைப் பெற்ற பெண்ணரசிக்கு அந்தப் பாக்கியத்தைப் பெற முடியாத என் போன்ற பேதைகள், இப்படி அன்பளிப்பாக எதையேனும் தொடுத்தோ, சூடியோ கொடுக்கத்தான் முடியும்." கொல்லன் உடனிருந்ததால், சுபாவமாகச் சொல்லுவது போல் இந்தச் சொற்களை அவள் கூறியிருந்தாலும், நீறு பூத்த நெருப்பைப் போல் இதன் ஆழத்திலிருந்து, அவளுடைய துயர வெம்மை கனல்வதை இளையநம்பி உணர முடிந்தது. அந்த நிலையில் அவளோடு அதிகம் பேச விரும்பாமல், கொல்லனுடன் நிலவறைக்குச் சென்று படைவீரர்களைக் கவனிக்கும் எண்ணத்தோடு புறப்பட்டான் இளையநம்பி. ↑ ஆதாரம்- வேள்விக்குடிச் செப்பேடுகள். ↑ தாயக்கட்டம் போல் ஒரு விளையாட்டு 12. எதிர்பாராத அழைப்பு புறத்தே பெய்த புது மழையைப் போல், இதயத்திலும் ஒரு புதுமழை பெய்தாற் போன்ற மகிழ்ச்சி நிலவியதை அடுத்து, முற்றிலும் எதிர்பாராத விதமாய் மின்னலைப் போல் வந்து தோன்றிய கொல்லன், இளையநம்பியின் அந்த ஓலையைக் கொடுத்து விட்டுப் போகவே, செல்வப் பூங்கோதையின் உவகை கட்டுக்கட்ங்காத பூரிப்பாகப் பெருகியது. பல நாள் வெம்மையைப் புறத்தே போக்கி விட்ட அந்தப் புது மழையைப் போல், தன் இதயத்தின் கோபதாபங்கள் எல்லாமே உடன் மறைந்து விட்டாற் போலிருந்தது அவளுக்கு. காத்தற் கடவுளாகிய, இருந்த வளமுடைய பெருமாளே, தன் துயரங்களுக்கு இரங்கி அருள் புரிந்து விட்டதாக அவள் உணர்ந்தாள். தானே உருகி உருகி ஒலைகளை எழுதிக் கொண்டிருந்த வேண்டுகோளுக்குச் செவிசாய்த்து, அவரிடம் இருந்தும் ஓர் ஒலை தனக்கு மறுமொழியாகக் கிடைத்ததைத் திருவிழாக் கொண்டாடி வரவேற்கலாம் போலிருந்தது. அதை மீண்டும் மீண்டும் படித்து மகிழ்வதற்கு ஏற்ற தனிமையை நாடி, மாளிகையின் பின்புறமிருந்த மலர் வனத்திற்குச் சென்றாள் அவள். மாலை வேளையின் இதமான சூழ்நிலையும், அவளுடைய உல்லாசத்திற்குத் துணை புரிவதாயிருந்தது. தாயின் கண்காணிப்பிலிருந்து விடுபட்டுச் சுதந்திரமான உற்சாகத்தோடு, அந்த ஒலையைப் படிக்க விரும்பினாள் அவள். “என்மேல் அன்பு செய்வதையே ஒரு நோன்பாக இயற்றி வரும் ஆருயிர்க் காதலை உடைய செல்வப் பூங்கோதைக்கு இளைய நம்பி வரையும் மடல்: சூழ்நிலை இயைந்து வராத காரணத்தால், நீ ஆறுதலடையும்படி என் கைப்பட இதுவரை நான் எதுவும் உனக்கு எழுத முடியவில்லை. என் பக்கம் அது ஒரு குறைதான். ஆனால் அந்தக் குறை நீ எனக்குக் ‘கடுங்கோன்’ என்று குரூரமாகவும், கோபமாகவும் பெயர் சூட்டிச் சபிக்கும் அளவிற்குப் பெரியது என்பதை அண்மையில் நீ எழுதியதைப் பார்த்துத்தான் தெரிந்து கொண்டேன். ஆருயிர்க் காதலனுக்குச் சாபம் கொடுக்கும் அளவிற்கு, அன்பில் உரிமையும், அதிகாரமும் உள்ள பெண்கள் திருமோகூரில்தான் பிறக்க முடியும் என்று தெரிகிறது. காராளர் குடும்பம், பாண்டிய அரச வம்சத்துக்கு இணையான பெருமை உடையது. அந்தக் குடும்பத்து இளம்பெண் ஒருத்திக்குத் தன் காதலன் மேற் சாபம் விடும் அளவு கோபம் கூட இருக்கலாம்தான். ஆனால், உன் கோபத்தில் திரும்பத் திரும்ப நீ சுமத்தியிருக்கும் ஒரு குற்றத்தை நான் மறுக்க முடியும். நான் ஏதோ உன்னை அடியோடு மறந்து போய்விட்டது போலவும், நீ மட்டுமே என்னை நினைத்துத் தவித்துக் கொணடிருப்பது போலவும் எழுதுகிறாய். நான் மறந்ததை நீ எப்படி அறிய முடியும்? நீ என்னை மறவாமல் நினைந்துருகுவதை நிரூபிக்க நான் எல்லாவற்றையுமே மறந்து விட்டதைப் போல, ஒரு குற்றத்தை என் தலையில் சுமத்த வேண்டியது அவசியம்தானா? நியாயம்தானா? நீ கொற்றவைக் கோயிலுக்கு ஒரு மண்டலம் நெய் விளக்குப் போட்டதும், இருந்த வளமுடையாரை ஆயிரத்தெட்டுத் தாமரை மலர்களால் அர்ச்சித்ததும் ஒரு போதும் வீண் போகாது. என் பிரிவு உன்னை மெய்யாகவே ஊமையாக்கி விட்டதாக இரண்டு ஓலைகளிலுமே திரும்பத் திரும்ப எழுதியிருக்கிறாய்! பேச்சுத்தான் ஊமையாகி இருக்கிறதே ஒழிய, உன் கோபதாபங்கள் இன்னும் ஊமையானதாகத் தெரியவில்லை. கொற்றவைக் கோயிலுக்கு நெய் விளக்கு வேண்டுதல், இருந்த வளமுடையாருக்கு ஆயிரத்தெட்டுத் தாமரை மலர் அர்ச்சனை, ஆகியவை போதாதென்று இப்போது தாய் தந்தையுடன் தீர்த்த யாத்திரை வேறு சென்று விட்டு வந்திருக்கிறாய். இவ்வளவு புண்ணியப் பயன்களைப் படைகள் போல் ஒன்று சேர்த்துத் திரட்டி வைத்துக் கொண்டிருக்கிற நீ வெற்றி பெறாமல், வேறு யார் வெற்றி பெறப் போகிறார்கள் செல்வப்பூங்கோதை? உன் அன்புக்குப் புண்ணியப் பயன் இருக்கும் போது நீ பயப்படுவானேன்? இங்கிதமான குரலில் கடுமையான வார்த்தையைச் சொன்னாலும், இனிமையாகத்தான் இருக்கும். அதுபோல் பிரியத்திற்குரிய நீ என்னைக் ‘கடுங்கோன்’ என்று அழைக்கிறாய். ஆனால், இன்று இந்த விநாடியில் இதை எழுதிக் கொண்டிருக்கும் போது, வேறு ஒருவருக்கும் நான் கடுங்கோன் ஆகிவிட்டேன். என்னை இத்தனை காலம் இந்த மதுரை மாநகரில் மறைந்திருக்க இடம் அளித்து அன்போடு பேணி உபசரித்துக் கண்ணை இமை காப்பது போல் காத்த ஒருவருக்கு உண்மையிலேயே நான் கடுங்கோனாக நேர்ந்து விட்டது. இங்கே நான் கடுங்கோனாக நேர்ந்ததே உனக்குக் கடுங் கோனாகக் கூடாது என்பதனால்தான். இதை நீ இப்போது விளங்கிக் கொள்ள இயலாவிடினும், எப்போதாவது நானே உன்னிடம் விளக்கிச் சொல்லுவேன். உன் வெற்றியில், இங்கே என்னருகிலுள்ள இன்னொருவருடைய தியாகம் அடங்கப் போகிறது. நான் உன்னை நினைக்கவே இல்லை என்று நீ என் மேல் குற்றம் சுமத்தும் போது எனக்கு, இளமையில் திருக்கானப்பேரில் நான் கல்வி கற்ற காலத்து நிகழ்ச்சி ஒன்று நினைவு வருகிறது பெண்ணே! என்னோடு ஒரு சாலை மாணவனாகக் கற்ற இளைஞன் ஒருவன், தான் காதலித்த பெண்ணை அடையமுடியாத ஏமாற்றத்தில் பித்துப் பிடித்து மடலேறும்[1] நிலைக்குப் போய் எக்காலமும் அவள் பெயரையே கூவி அரற்றிக் கொண்டு, தெருக்களில் திரிந்தான். திருமோகூரில் உன் தந்தையோடு அமர்ந்து விருந்துண்ண மாளிகைக்குள் வந்த போது, அன்று முதன்முதலாக நீயும், உன் தாயும் என்னை மங்கல ஆரத்தி எடுத்து வரவேற்றீர்கள். அப்போது, நீ என்னை நோக்கிச் சிரித்த சிரிப்பைக் கண்டு, எனக்கு அந்தத் திருக்கானப்பேர்ப் பித்தனின் காதல்தான் நினைவு வந்தது. உன் சிரிப்பில் எங்கே நான் பித்தனாகி விடுவேனோ என்று கூட அஞ்சினேன். அந்தத் திருக்கானப் பேர்ப் பித்தனைப் போல் நான் தெருவில் எல்லாம், உன்னைப் பெயர் சொல்லிக் கூவித் திரிந்தால்தான் எனக்கு உன் ஞாபகம் இருப்பதாய் நீ நம்புவாய் போலிருக்கிறது. அழகிய பெண்ணின் புன்சிரிப்பில், எதிரே நிற்கிற இளைஞன் கவியாகிறான் என்பார்கள். நீ அந்த திருக்கானப்பேர்ப் பித்தனைப் போல், என்னையும் கவியாக்கி விட்டாய். மொழியின் நயங்களையும், பொருள் நுணுக்கங்களையும், தேர்ந்த கை மலர் தொடுப்பது போல், பதங்களை இணைக்கும் இங்கிதங்களையும் அறியாத பாமரனைக் கூட ஒர் அழகிய பெண் கவிஞன் ஆக்கி விடுகிறாள். நான் பாமரன் இல்லை. ஆனால் என்னையும் நீ கவியாக்கியிருப்பதை அறிந்தால், உன் மனம் ஒரு வேளை அதற்காக மகிழலாம். கர்வப்படலாம். கீழ்வரும் பாடல் மூலம் உனக்கு அந்தக் கர்வத்தை நான் அளிக்கலாமா? “முத்தும் பவழமும் நல்லிதழும் முறுவலுமாய்ச் சித்திரமே போல்வந்தென் சிந்தை குடிபுகுந்த நித்தில வல்லி! செல்வப் பூங்கோதாய்! கத்தும் கடல்ஏழும் சூழ்தரு காசினியில் சித்தம் நினைப்புச் செய்கை உள்ளளவும் எத்தாலும் நின்னை மறப்பறியேன் என்பதனை வித்தும் முளையும்போற் கலந்திணைந்த விருப்பத்தால் சற்றேனும் நினைத்திருந்தால் தவிர்ந்திடுவாய் சீற்றமெலாம்'’ இப்போது சொல் செல்வப்பூங்கோதை! ஒவ்வோர் அழகிய பேதைப் பெண்ணும் தன்னை நினைத்துத் தவிக்கும் யாரோ ஓர் ஆண் மகனைக் கவிஞனாக்கி விட்டு, அவன் கவிஞனாகியதற்குக் காரணமே தான் என்பதை மறந்து திரிகிறாள் என்பது எவ்வளவு நியாயமான வாதம்? நீயும் அப்படி மறந்து திரிகிறாய் என்று நான் உன்மேற் குற்றம் சுமத்த முயன்றால், அது எவ்வளவிற்குப் பொருந்துமோ, அவ்வளவிற்கே நீ நான் உன்னை மறந்து விட்டதாக என் மேற்சுமத்தும் குற்றமும் பொருந்தும். நான் உன்னை விடக் கருணை உள்ளவன் பெண்ணே! நீ சிறிதும் இங்கிதமில்லாமல், என்னைக் ‘கடுங் கோன்’ என்று சபித்தாய்.நானோ உன்னை அழகிய சிறப்புப் பெயர்த் தொடராகத் தேர்ந்து ‘நித்தில வல்லி’ என அழைத்திருக்கிறேன். யாருடைய காதற் பெருந்தன்மை அதிகம், யார் மறக்கவில்லை என்பதற்கெல்லாம் இவையே சாட்சி." என்று அந்த ஓலையை முடித்திருந்தான் இளையநம்பி. இந்த ஓலையைப் படித்து முடித்ததும், மகிழ்ச்சியின் எல்லையில் திளைத்தாள் செல்வப் பூங்கோதை. அவ்வளவு நாட்களாக இளையநம்பியைப் பிரிந்தும், காணாமலும் இருந்ததால் ஏற்பட்ட தாபம் எல்லாம் இந்த ஒரே ஒரு கணத்துக்குள் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டது போலிருந்தது. அந்த ஓலையைத் திரும்பப் படித்து மகிழ்ந்தாள் அவள். நீற்றறையின் வெம்மையில் வாடியவன், நீரில் மீண்டும் மீண்டும் மூழ்கி எழுவதை ஒத்திருந்தது அவள் செய்கை. தாபம், தவிப்பு என்ற நீற்றறையில் பல நாட்களாகப் புழுங்கிய அவள் மேல் தண்ணென்று அன்பு மழையே பெய்தது போல் வந்திருந்தது அந்த ஓலை. ஓலையைக் கொடுத்ததுமே கொல்லன் விரைந்து திரும்பிப் போய்விட்டானே என்றெண்ணி இப்போது வருந்தினாள் அவள். ‘அவன் திரும்பிப் போகாமல் இருந்தாலாவது, ஒர் ஒலையை எழுதி அவருக்குக் கொடுத்தனுப்பலாம்’ என்றும் கழிவிரக்கம் கொண்டாள் அவள். மகிழ்ச்சி வெறியில் உடல் சிலிர்த்தது. நிலை கொள்ளாத உவகையில், தோட்டத்து மாதவிக் கொடியை யாரும் காணாத தனிமையில் தழுவி மகிழ்ந்தாள் அவள். பூங்கொத்துகளை முகத்தோடு முகம் சேர்த்து, மென்மையையும், நறுமணத்தையும் நுகர்ந்தாள். வாய் இனிமையாக இசைத்துக் களித்தது. 'நித்திலவல்லி’ என்ற அந்த அழகிய பெயரை மெல்லிய குரலில் தனக்குத் தானே சொல்லிப் பார்த்துக் கொண்டாள். மானாகத் துள்ளியும், மயிலாக ஆடியும் தன் மகிழ்ச்சி வெள்ளம் தோட்டம் நிறையப் பெருகும்படி குயிலாக இசைத்தும் உவகை பூத்தாள். பெறற்கரிய செல்வமாகிய, அந்த ஓலையை மறைத்துக் கொண்டு மீண்டும் அவள் மாளிகைக்குள் நுழைந்தபோது மாளிகையில் தாய் அந்தி விளக்கு ஏற்றிக் கொண்டிருந்தாள். பெருமாளிகை வாயிற் புறமாகிய தெரு முன்றிலில், யாரோ கூப்பிடுவது கேட்டு, “யார் என்று போய்ப் பார்த்து விட்டு வா மகளே!” என்று செல்வப்பூங்கோதையை வேண்டினாள் தாய். வாயிலுக்கு விரைந்த போது படி தடுக்கவே, ஒரு கணம் தயங்கி நின்றாள் மகள். மாளிகை நடுக் கூடத்திற்கும், வாயிற் புறத்துக்கும் இடையே நெடுந் தொலைவு நடந்து செல்ல வேண்டியிருந்தது; இருட்டி விட்டதால் தெரு முன்றிலில் நிற்பவர் யாரென்று உள்ளேயிருந்து காண முடியவில்லை. இடைகழியின் மங்கலான விளக்குகள் இருளோடு போராடிக் கொண்டிருந்தன. பழையபடி வாயிற்புறமிருந்து மீண்டும் யாரோ கூப்பிடுகிற குரல் எழவே, தாய், “உன்னைத்தான் செல்வப் பூங்கோதை மறந்து விட்டாயா அதற்குள்? வாயிற்புறம் போய் யாரென்று பார்த்து விட்டு வா அம்மா” என்று மறுபடியும் நினைவூட்டினாள். நடை தடுக்கித் தயங்கி இருந்த செல்வப்பூங்கோதை வாயிலுக்குச் சென்றாள். இடை கழிகளில் அம்பாரம் அம்பாரமாகக் குவித்திருந்த புது நெல் மணம் நாசியில் புகுந்து நிறைந்தது. களஞ்சியங்கள் இருந்த கூடாரத்தையும் கடந்து, அவள் முன் வாயிற்புறத்திற்கு வந்து பார்த்த போது, அங்கே இருளோடு இருளாக இருவர் நின்றிருந்தனர். அவர்கள் இருவருமே விளக்கொளியில் நேருக்கு நேர் முன் வந்து நிற்கத் தயங்குவதாகத் தோன்றியது. முதலில் அஞ்சினாலும், பின்பு துணிவடைந்தாள் அவள். “யார் நீங்கள்? உங்களுக்கு என்ன வேண்டும்?"-என்று கேட்டுக் கொண்டே மாடப் பிறையிலிருந்த கை விளக்கை எடுத்து அவர்கள் அருகே ஒளியைப் பரவவிட்ட செல்வப் பூங்கோதை, இருவரும் யாரென்று தெரிந்ததும் திகைத்தாள். அவர்கள் இருவரும் பெரியவர் மதுராபதி வித்தகருக்கு மெய்க் காவலாக நியமிக்கப்பட்டிருந்த தென்னவன் ஆபத்துதவிகளாக இருக்கக் கண்டு அவளுக்கு வியப்பாயிருந்தது. பெரியவர், அந்தப் பகுதியை விட்டு எங்கோ மறைவாகப் போய்ப் பல திங்கள் காலம் கடந்த பின், நீண்ட நாட்களுக்கு அப்பால் தன் எதிரே அவருடைய மெய்க் காவலர்களைக் கண்டு ஒன்றும் புரியாத மனக் குழப்பத்தோடு, “தந்தையார் ஊரில் இல்லை! உங்களுக்கு என்ன வேண்டும்? பெரியவர் இப்போது எங்கே எழுந்தருளி இருக்கிறார்?” என்று வினவினாள் அவள். “உங்கள் தந்தையார் இப்போது இங்கே திருமோகூரில் இல்லை என்பதை நாங்களும் அறிவோம் அம்மா! இப்போது நாங்கள் தேடி வந்தது உங்களைத்தான்! உங்கள் தந்தையாரை அல்ல...பெரியவர் இப்போது இந்தக் கணத்தில் உங்களைச் சந்தித்துப் பேசுவதற்காக, இங்கே திருமோகூருக்கே எழுந்தருளி, ஆல மரத்தடியில் தங்கியிருக்கிறார் என்று நாங்கள் கூறினால், நம்புவதற்கு அரியதாயிருக்கும்.” “மெய்யாகவா இங்கு எழுந்தருளியிருக்கிறார்?” “உயிரே போவதானாலும் தென்னவன் ஆபத்துதவிகள் பெரியவர் பற்றி மெய் அல்லாததைக் கூறமாட்டோம் அம்மா! அவர் கட்டளைப்படியே தங்களை உடனே அழைத்துச் செல்லத்தான் இப்போது இங்கு வந்தோம்." இதைக் கேட்டு அவள் திகைப்பும் குழப்பமும் முன்னை விட அதிகமாயின. ↑ தான் காதலித்த பெண்ணை அடைய வேண்டிக் கூரிய பனை மடலாற் செய்த குதிரையில் ஏறி, ஓர் இளைஞன் தன்னையே கொடுமைப் படுத்திக் கொள்ளுதல் 13. மகாமேருவும் மாதவிக்கொடியும் பெரியவர் மதுராபதி வித்தகர் பேதைப் பெண்களில் ஒருத்தியாகிய தன்னைச் சந்திப்பதற்காகவே, மீண்டும் திருமோகூர் வந்திருக்கிறார் என்பதைத் தன் செவிகளாற் கேட்டுமே, செல்வப்பூங்கோதை அதை நம்ப முடியாமல் திகைத்தாள். பெரியவரை எந்நேரமும் நிழல் போற் காத்துவரும் அந்த ஆபத்துதவிகள் இருவரையும், அவள் நன்கு அறிவாளாகையினால் அவர்கள் மேல் அவளுக்கு ஒரு சிறிதும் சந்தேகம் எழவில்லை. பொய் சொல்லுவார்கள் என்றோ, ஏமாற்றுவார்கள் என்றோ, அவர்களைப் பற்றி நினைப்பது கூடப் பெரும் பாவம் என்பதை அவள் தெளிவாக உணர்ந்திருந்தாள். அப்படியிருந்தும் காரணமின்றியே, அவள் மனம் வேகமாக அடித்துக் கொண்டது. பதற்றத்தோடு அவள் அவர்களைக் கேட்டாள்:- “உள்ளே போய்ச் சொல்லி அன்னையையும் உடன் அழைத்துக் கொண்டு வரலாம் அல்லவா?” “இல்லை, அம்மா தங்களை மட்டுமே தனியே அழைத்து வரச் சொல்லித்தான் கட்டளை!” “அப்படியானால் உள்ளே சென்று, தாயிடம் வேறு ஏதாவது புனைந்து சொல்லிவிட்டு நான் மட்டும் வருகிறேன்” என்று அவர்களிடம் கூறி விட்டு, மாளிகைக்குள் சென்ற செல்வப்பூங்கோதை கொற்றவைக் கோவிலுக்குச் சென்று வருவதாகத் தாயிடம் கூறி விடை பெற்ற பின், மீண்டும் வாயிற்புறம் வந்தாள். தாய் ‘வாயிற்புறம் யார்?’ என்று கேட்ட போது, வேறு ஏதோ புனைந்து கூறியிருந்தாள் அவள். தாயிடம் கூறியது பொய்யாகி விடாமல், போகிற வழியிலேயே கொற்றவையை வணங்கிச் செல்லவும் நினைத்தாள். “போகலாம்! வாருங்கள்” என்று சொல்லி அவர்கள் புறப்பட்டதும் பின் தொடர்ந்தாள் அவள். வாயிற்புறம் வரும்போது முதலில் நடை தடுக்கியதனாலும், மனம் இனம் புரியாமலே வேகமாக அடித்துக் கொண்டதாலும், இன்னதென்று புரியாத ஒருவகை மருட்சியும், பயமும் ஆட்கொண்டிருந்ததாலும், இளையநம்பியின் காதல் மயமான ஓலையைப் படித்த உற்சாகம் அவள் இதயத்தில் இன்னும் நிறைவாக இருந்தது. அந்த உற்சாகம், அவளை எவ்வளவு தொலைவு வேண்டுமானாலும் நடந்து போகச் செய்ய முடியும் போலிருந்தது. நடு வழியில் கோவில் வாயிலில், ஒரு கணம் நின்று கொற்றவையை வணங்கினாள். மனத்தின் உற்சாகம் புறத்தே தெரிய, அப்போதில் அவள் நடையே ஒட்டமாக இருந்தது. பெரியவர் வழக்கமாகத் தங்கும் அந்தப் பெரிய ஆலமரத்தடிக்குப் போய்ச் சேர்ந்ததும், அவளை அழைத்து வந்த ஆபத்துதவிகள் வெளிப்புறமே விலகி நின்று கொண்டனர். உள்ளே செல்லும் முன்பாக வந்த வேகம் குறைந்து, அவள் கால்கள் வெளிப்புறமே தயங்கின. என்ன காரணத்தினாலோ, உள்ளே செல்வதற்குக் கால்கள் நகர மறுப்பதை அவள் உணர்ந்தாள். ஆனால் செயல்பட முடியவில்லை. அன்று என்னவோ இருள் சூழ்ந்து விட்ட அந்த நேரத்தில், அந்தப் பழம் பெரும் ஆலமரமும், அதைச் சுற்றிய பகுதிகளும் இயல்பை மீறிய அமைதியோடு தென்பட்டன. குகை போல் இருந்த அடிமரப் பொந்தின் முனையில் ஒளி தந்து, தீப்பந்தம் ஒன்று எரிந்து கொண்டிருந்தது. முன்பெல்லாம் பெரியவர் இதே இடத்தில் தங்கியிருந்த போது, இந்தப் பகுதி இந்த நேரத்திற்கு எவ்வளவு கலகலப்பாக இருக்குமோ, அவ்வளவு கலகலப்பாக இன்று, இப்போது இல்லை என்பது போல் அவளுக்குப் புரிந்தது. எல்லாமே, எதையோ எதிர்பார்த்து ஒடுங்கி உறைந்து போயிருப்பது போல் ஒரு சூனிய அமைதி நிலவிக் கொண்டிருந்தது. இவ்வளவு இரகசியமான இத்தனை குறைவான எண்ணிக்கையுள்ள ஆபத்துதவிகளுடன், எதற்காகத் திடீரென்று இவர் திருமோகூருக்கு மீண்டும் வந்திருக்கிறார் என்று சிந்திக்கவும், அநுமானிக்கவும் முயன்று தோற்றது அவள் மனம். வேகமாகத் துடிக்கும் இதயத்துடன் துணிந்து ஒவ்வோர் அடியாகப் பெயர்த்து வைத்து உள்ளே சென்றாள் அவள். கணிரென்ற அந்தக் குரல் அவளை வரவேற்றது. “வா, அம்மா! நீயும் உன் அன்னையும் மற்றவர்களும் நலமாக இருக்கிறீர்கள் அல்லவா?” முன்னை விடத் தேசு நிறைந்து சுடர் விரிக்கும் அந்தத் தோற்றத்தையும், முகத்திலிருந்து ஊடுருவும் ஒளி நிறைந்த கண்களையும், பார்த்துக் கூசிய அவள் ஒரிரு கணங்கள் மறு மொழி கூற வார்த்தைகளே இன்றி திகைத்தாற் போல் அப்படியே நின்று விட்டாள். செம்பொன் நிறமுடையதும், மிகப் பெரியதுமான மகா மேரு மலையைத் திடீரென்று மிக அருகில் கண்டு துவண்ட ஒரு சிறிய மாதவிக் கொடி போல், தளர்ந்து திகைத்திருந்தாள் செல்வப் பூங்கோதை. மீண்டும் அவர் குரலே ஒலித்தது:- “உன்னைத்தானே கேட்கிறேனம்மா? ஏன் பதில் சொல்லாமல் நின்று விட்டாய்?” “தங்கள் திருவருளால், இதுவரை நலத்துக்கு ஒரு குறைவும் இல்லை, ஐயா!” மீண்டும் இமையாமல் அவள் முகத்தைக் கூர்ந்து நோக்கி விட்டு, அவர் கூறினார்: “இன்று நீ மிகவும் ம்கிழ்ச்சியாயிருப்பதாகத் தெரிகிறது செல்வப்பூங்கோதை” “தங்களை ஒத்த பெரியோர்களைக் கண்டு வணங்கும் பேறு கிடைத்தால், இந்தப் பேதை அதற்காக அடையாத மகிழ்ச்சியை வேறு எதற்காக அடைய முடியும்?" “இன்று உன் பேச்சுக் கூட மிகவும் சாதுரியமாக இருக்கிறது. ஆயினும் இது என்னைக் காண்பதற்கும் முன்பாகவே உனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பது எனக்குப் புரிகிறது பெண்ணே...” இந்தச் சொற்களைக் கேட்டு நடுங்கிய நடுக்கத்தில், தன் இடைக் கச்சினுள் மறைக்கப்பட்டிருந்த இளையநம்பியின் ஓலையே மெல்ல நழுவி, அவர் முன்பாகக் கீழே விழுந்து விடுமோ என்று அஞ்சினாள் செல்வப்பூங்கோதை. இந்த வினாவிற்குப் பின், எதிரே அமர்ந்திருந்த அந்தக் கம்பீரமான வடிவம் மிகப் பெரிய சிகரமாய் உயர்வது போலவும், தான் அந்தச் சிகரத்தின் முன்னே பெருங்காற்றில் ஆடும் ஒரு சிறு தளிர்க் கொடி போல் தளர்வதாகவும் உணர்ந்தாள் அவள். பயத்தில் அவளுடைய உடல் பதறியது. பேச்சை வேறு திசைக்கு மாற்ற முயன்று, “ஐயா தீர்த்த யாத்திரை முடிந்து திரும்பித் திருமோகூர் வந்ததுமே, என் தந்தை இங்கிருந்து வெளியேறியவர்தான்; இன்னும் அவர் திரும்பி வரவில்லையே?” என்றாள். “அவர் வேறெங்கும் போய் விடவில்லை, செல்வப்பூங்கோதை என்னிடம்தான் வந்திருந்தார். இப்போதும் என் காரியமாகத்தான் போயிருக்கிறார். தீர்த்த யாத்திரை முடிந்ததும் நான்தான் அவரை என்னிடம் உடனே வரச் சொல்லியிருந்தேன்" என்று அதற்கு அவரிடமிருந்து மறுமொழி வந்தது; தன்னையும் தன் உள்ளுணர்வுகளையும் அவர் காண விடாமல் விலக்கும் நோக்கத்தோடு, வேறு பேச்சுகளை வளர்க்க விரும்பிய அவள், 'இவ்வளவு காலமாகத் தாங்கள் எங்கே சென்றிருந்தீர்கள் ஐயா?' என்று கேட்க எண்ணினாள்; ஆனால் அப்படி எண்ணிய மறு கணமே அந்தக் கேள்வி தன் நிலைமையை மீறியது என்னும் பயத்துடன், அவ்வாறு அவரை வினாவும் எண்ணத்தை உடனே விரைந்து தவிர்த்தாள். ‘இவ்வளவு காலமாகத் திருமோகூர் எல்லையில் தங்களைக் கண்டு வணங்கும் பேறு எங்களுக்குக் கிட்ட வில்லையே; ஏன்?’ என்று வேண்டுமானால் பணிவாகவும், அதே கேள்வியை வேறு விதமாக மாற்றிக் கேட்கலாமே தவிர, முதலில் நினைத்தபடி, 'எங்கே போயிருந்தீர்கள் இவ்வளவு காலம்?’ என்பது போல் அவரைக் கேட்கவே கூடாது என்று தன் நாவை அடக்கிக் கொண்டு விட்டாள் அவள். வாளின் நுனியில் நடப்பது போல் மிக,மிக எச்சரிக்கை உணர்வோடு அவள் அவர் முன்பு நிற்க வேண்டியிருந்தது. அவள் இவ்வாறு சிந்தித்துத் தயங்கிக் கொண்டிருந்த போதே, அவர் காலடியிலும் அருகிலும் இருந்த புற்றுகளில் இருந்து, நாகப் பாம்புகள் சீறியபடி, செக்கச் செவேரென்று பிளந்த நாவோடு வெளிப்பட்டு, உடலின் மேலேறின. படமெடுத்தன; அவரோ அசையாமல், அவளைப் பார்த்தபடியே அமர்ந்திருந்தார். கழுத்திலும், தோளிலும், காலிலும் கொடிய நாக சர்ப்பங்களோடு முன்பும் சில சந்தர்ப்பங்களில், இப்படிக் கோலத்தில் அவள் அவரைக் கண்டு பயந்திருக்கிறாள். இன்றும் கூட, அந்தப் பயத்தையும், நடுக்கத்தையும் அவளால் தன்னிடமிருந்து தவிர்க்க முடியவில்லை. பயமும், திகைப்பும் மாறி, மாறித் தெரியும் விழிகளோடு அவள் அவர் எதிரே மருண்டு நின்று கொண்டிருந்தாள். அந்த நிலையில் அவரே சிறிது நேரத்திற்குப் பின் மெல்ல மீண்டும் அவளை வினாவத் தொடங்கினார்:- “இன்று மாலையில் நீ எல்லையற்ற மகிழ்ச்சியோடு இருப்பதை நான் குறுக்கிட்டுப் பாழாக்கி விட்டேனே என்று உனக்கு என் மேல் கோபம் வருகிறதல்லவா?” “அப்படி ஒரு போதும் இல்லை ஐயா! தாங்கள் என் போன்ற பேதைகளின் கோபத்துக்கு அப்பாற்பட்டவர்! இன்னும் சொன்னால், என்னை ஒத்த பேதைகளைக் கோபித்துக் கொள்வதற்கும், கடிந்து கொள்வதற்கும் உரியவர்...” “நீ சொல்வது போல் உரிமை இருப்பதாக நினைத்துக் கொண்டுதான் நானும் இங்கு இன்று வந்தேன். உன்னைக் கூப்பிட்டனுப்பினேன். நீயும் என் அழைப்புக்கிணங்கி வந்திருக்கிறாய்..." நேராக எதைச் சொல்ல முடியாததனால், இதையெல்லாம் சுற்றி வளைத்துச் சொல்லிக் கொண்டிருக்கிறார் என்று அவர் சொல்லியதிலிருந்து, சொல்ல விரும்புவதைப் புரிந்து கொள்ள முடியாமல் மருண்டாள் செல்வப் பூங்கோதை. அதிகாரமோ, ஆணையோ, சினமோ, சீற்றமோ சிறிதுமின்றி அவர் எல்லையற்ற நிதானத்தோடும், எல்லையற்ற பொறுமையோடும் இன்று தன்னிடம் பேசியதே அவளுக்குச் சந்தேகத்தையும், பயத்தையும் உண்டாக்கிற்று. இந்த அடக்கம் இயல்பானதில்லை என்பதும் அவளுக்குப் புரிந்தது. இந்த நிதானமும், ஐயப்பாட்டிற்கு உரியதாகவே அவளுக்குத் தோன்றியது. 'தந்தையாரை இவரே வேறு காரியமாக எங்கோ அனுப்பியிருக்கிறார். தாயை உடன் அழைத்து வரவேண்டாம் என்று முன்கூட்டியே இவர் எனக்குச் சொல்லி அனுப்பி விட்டார். என்னை மட்டும் தனியே அழைத்து இப்படிப் பேசுவதற்கு அது என்னதான் அவ்வளவு பெரிய அந்தரங்கமாக இருக்கும்' என்று அவள் மனம் ஒவ்வொரு கணமும் நினைத்துத் தயங்கிக் கொண்டேதான் இருந்தது. அந்தத் தயக்கத்தோடுதான் அவள் அவர் முன்பாக அப்போது நின்று கொண்டிருந்தாள். “செல்வப்பூங்கோதை முன்பெல்லாம் வெள்ளிக்கிழமைகளில் மாலை தோறும் எனக்கு நீ கொண்டு வந்து அளித்த தேனும், தினைமாவும் எவ்வளவு சுவையாக இருந்தன தெரியுமா?” என்று சிறிது நேர மெளனத்திற்குப் பின், பழைய நாட்களில் எப்போதோ அவள் செய்த உபசாரம் ஒன்றை இருந்தாற் போலிருந்து நினைவு கூர்ந்து பேசினார், அவர். இப்படி அவர் பழைய நிகழ்ச்சிகளை நினைவுபடுத்தித் தன் மனத்தை மெல்ல மெல்ல இளகச் செய்வது அவளுக்கே புரிந்தாலும், அவருடைய பேச்சில் இசைந்து வணங்கி வசப்படுவதைத் தவிர்க்க ஆற்றலின்றி இருந்தாள். மிகவும் பணிவாக அவளே அவரை வேண்டவும் செய்தாள்:- “ஐயா! இப்போது கூடத் தாங்கள் கட்டளையிட்டால், நாளைக்கே தங்களுக்குத் தேனும், தினை மாவும் கொண்டு வந்து படைக்கின்ற பேறு இந்தப் பேதைக்குக் கிடைக்கும்..." “இன்று நீ மிக, மிக மகிழ்ச்சியாயிருப்பதால், உன்னை நான் விரைவாக விடை கொடுத்து அனுப்புவதுதான் முறை. செல்வப்பூங்கோதை! நாளை மாலைக்குள் நீ மீண்டும் வா! வரும் போது இந்தக் கிழவனின் ஆசையை மறந்து விடாமல், தேனும் தினை மாவும் கொண்டுவா... நாளை இரவில், நான் இங்கிருந்து புறப்பட்டு விடுவேன். கோநகர் சென்று, வையையின் வடகரையில் மறைந்து தங்கப் போகிறேன். அப்படிப் புறப்படுமுன் இந்தக் கிழவனுக்கு உன்னிடமிருந்து ஒரு நல்வாக்குக் கிடைக்க வேண்டும். அந்த நல்வாக்கைக் கோரவே இன்று இங்கு வந்தேன்! நீ மறுக்க மாட்டாய் என்பதை நான் அறிவேன்.” “ஐயா! தங்களைப் போன்றவர்கள் வேண்டவும், கோரவும் செய்கிற அளவு நான் அத்துணைப் பெரியவளில்லை. தாங்கள் எனக்குக் கட்டளை இடவேண்டும். தங்கள் கட்டளைக்கு இந்தப் பேதை எக்காலத்திலும் கடமைப்பட்டிருப்பவள். தாங்கள் நினைப்பதை நாங்கள் நிறைவேற்றக் காத்திருக்கிறோம்” என்று மிகவும் பணிவாகக் கை கூப்பினாள் செல்வப்பூங்கோதை. இப்படி வணங்கும் போதே, அவரைக் கருங்கல்லாகவும், தன்னை மென்மையான மலர் மாலையாகவும் ஒப்பிட்டுச் சிந்தித்துத் தான் முன்பொரு முறை அஞ்சியதையும் நினைத்துக் கொண்டாள் அவள். கொடியாகத் துவண்டு பணிந்து மறுமொழி கூறிக் கொண்டிருந்தாலும், உள்ளுற அவளுக்கு அவரிடம் அச்சமாக இருந்தது. தயக்கமாகவும் இருந்தது. அந்த மாமலை, வாடித் துவளும் கொடி போன்ற தன்னைத் தலையெடுக்க விடாத படி எந்தத் தந்திரத்தினாலாவது நசுக்கி விடுமோ என்று. பயந்து பதறினாள் அவள். தன்னைப் போன்ற பேதைப் பெண்களைப் பற்றி, இவ்வளவு அக்கறையோடும், பிரியத்தோடும் நினைக்கிற வழக்கமே இல்லாத அவர், இன்று காட்டும் இந்தப் பரிவைப் பார்த்து அவள் வியந்ததை விடப் பயந்ததே அதிகமாயிருந்தது. “நாளைக்கு மாலையில் மீண்டும் வா அம்மா! தேனையும் தினை மாவையும் மட்டும் மறந்து விடாதே.” என்று கூப்பிட்டனுப்பிய விரைவுக்கு ஏற்ப, எதையுமே பேசாமல், தனக்கு அவர் மிகவும் சுலபமாகவே விடை கொடுத்துத் திரும்பப் போகச் சொல்லியதையும் அவளால் புரிந்து கொள்ள முடியவில்லை. அவர் எதற்காகவோ, தன்னைச் சிறிது விட்டுப் பிடிக்க முயல்கிறார் போலும் என்றும் அவளுக்கே தோன்றியது. மாளிகை வரை ஆபத்துதவிகள் துணை வந்து அவளைத் திரும்பக் கொண்டு வந்து விட்டனர். இரவு முழுதுமே அவருடைய பரிவின் காரணத்தைப் பற்றிச் சிந்தித்துப் புரிந்து கொள்ள முயன்றாள் அவள். 14. கொற்றவை சாட்சியாக... எதிர்பாராத விதமாகத் தன்னை நோக்கிப் பெருகும் அந்தப் பரிவின் காரணம் அவளுடைய அநுமானத்திற்கும் எட்டாததாகவே இருந்தது. பெரியவர் திருமோகூருக்கு வந்திருப்பதையோ, தான் போய் அவரைச் சந்தித்ததையோ தாயிடம் கூட அவள் சொல்லவில்லை. இரவு நெடுநேரம் உறக்கமின்றி, அவள் மஞ்சத்தில் புரண்டு கொண்டிருந்த போதும், “பெண்ணே அந்தி மயங்குகிற வேளையில் புறப்பட்டுப் போய்க் கொற்றவைக் கோவிலில் இப்படி உறங்காமலிருக்க வரம் பெறுவதற்காகத்தான் அவ்வளவு நாழிகை காத்திருந்து வேண்டி வந்தாயா!” என்றுதான் தாயே அவளைக் கடிந்து கொண்டாள். தான் கொற்றவைக் கோவிலுக்குச் சென்று வருவதாகச் சொல்லி விட்டுப் பெரியவர் அனுப்பியிருந்த ஆபத்துதவிகளோடு புறப்பட்டுச் சென்றதைப் பற்றித் தாய் ஐயுறவில்லை என்பதை, அவளுடைய சொற்களாலேயே விளங்கிக் கொண்டாள் செல்வப்பூங்கோதை. மறுநாள் காலை பொழுது புலர்ந்து நீராடி முடித்ததுமே, உரலில் தினை இடிக்கத் தொடங்கினாள் அவள். இப்படி அடிக்கடி அவள் தினை இடிப்பதும் வழக்கமான காரியமே என்பதனால், தாய் அதைப் பற்றியும், அவளை எதுவும் கேட்கவில்லை. பெரியவரே வாய் திறந்து கேட்டிருக்கிறார் என்பதனால், நல்ல செந்தினையாக எடுத்து முறத்தில் இட்டு, நொய்யும், நுறுங்கும் களைந்து புடைத்த பின்பே, உரலில் கொட்டி இடிக்கலானாள். நாவின் சுவைக்கு ஆசைப்பட்டுத்தான் பெரியவர் தேனும், தினை மாவும் கொண்டு வரச் சொல்லித் தன்னை வேண்டிக் கொண்டதாக அவளால் இன்னும் நம்ப முடியவில்லை. கசப்பு நிறைந்த காஞ்சிரங் காயையும் வேப்பிலைக் கொழுந்தையும் தின்று உடலை வைரம் பாய்ந்ததாக்கிக் கொண்டிருப்பவர், தேனுக்கும் தினை மாவுக்கும் ஆசைப்பட்டுத் தன்னை வரவழைத்துப் பேசியிருக்க முடியும் என்பதை அவளால் ஒப்புக் கொள்ளவும் இயலவில்லை. வேறு ஏதோ பெரிய வேண்டுகோளைத் தன்னிடம் கேட்பதற்கு ஏற்ற பரிவையும், பக்குவத்தையும் உண்டாக்குவதற்குத் தக்கபடி தான் இருப்பதையும், இல்லாததையும் சோதித்து ஆழம் பார்க்கவே இந்த ஏற்பாடோ என்று அவளுக்குச் சந்தேகமாயிருந்தது. சந்தேகம் ஒருபுறம் இருந்தாலும், மிகவும் சிரத்தையாகத் தினை மாவை இடித்துப் பிசைந்தாள் அவள். மாளிகைப் பணியாட்களிடம், நல்ல கொம்புத் தேனாகத் தேடி இறக்கிப் பிழிந்து வருமாறு அனுப்பினாள். பிற்பகலுக்குள் செங்குழம்பாகப் புத்தம் புதிய கொம்புத் தேன் பிழிந்த நுரையோடு வந்து சேர்ந்தது. பதம் பார்த்து அளவாகவும் சுவையாகவும் கலந்து நெல்லிக்கனிப் பிரமாணத்திற்கு உருண்டை உருண்டையாக உருட்டி வைத்துக் கொண்டாள். தனியே ஒரு சிறிய குவளையில் தேனும் எடுத்துக் கொண்டாள். பெரியவரைத் தேடி அவள் மாளிகையிலிருந்து புறப்படும் போது, பிற்பகல் கழிந்து மாலை வேளை தொடங்கியிருந்தது. முதல் நாளைப் போலவே கொற்றவைக் கோயிலுக்குச் சென்று வணங்கிவிட்டுத் திரும்பி வருவதாகத்தான் தாயிடம் சொல்லிக் கொள்ள முடிந்தது. இன்றும் ஆபத்துதவிகள் தன்னைத் தேடி வந்து அழைத்துக் கொண்டு போக வேண்டும் என்று எதிர்பார்த்திராமல் அவளே புறப்பட்டிருந்தாள். வழியில் கொற்றவைக் கோயிலை, வலம் வந்து வணங்கிச் செல்லவும் நேரம் இருந்தது. அந்த வழிபாட்டையும் குறைவின்றி நிறைவேற்றிக் கொண்டு, அப்புறம் ஆலமரத்தடிக்குச் சென்றாள் அவள். அங்கே அவள் சென்ற போது, உள்ளே அமர்ந்து கொண்டிராமல் ஆலமரத்தின் விழுதுகளிடையே குறுக்கும் நெடுக்குமாக நடந்து உலவிக் கொண்டிருந்தார் பெரியவர். அவளைப் பார்த்ததும், அவரருகே மரத்தடியில் நின்றிருந்த ஆபத்துதவிகள் இன்னும் தொலைவாக விலகிச் சென்று நின்று கொண்டனர். “வா, அம்மா! உன்னைத்தான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். இன்னும் சில நாழிகைகளில் நான் கோநகரை நோக்கிப் புறப்பட வேண்டும்” என்றுதான் கூறி வரவேற்றாரே ஒழிய, அவள் கைக்கலசத்தில் இருந்த தினை மாவையோ குவளையில் இருந்த தேனையோ அவர் கவனித்ததாகவே தெரியவில்லை. “ஐயா தேனும், தினைமாவும் கொண்டு வரச் சொன்னீர்களே! நானே காலையிலிருந்து மா இடித்துப் பிசைந்து புதுத்தேன் பிழிந்து கொண்டு வந்திருக்கிறேன்” என்று அவள் கூறினாள்; அவருக்கு அது மறந்து போயிற்றா, அல்லது அதைவிடப் பெரிய வேறு ஏதாவது நினைவு அவரைப் பற்றி விட்டதா என்று புரிந்து கொள்ள முடியாமல் மருண்டாள் அவள். அவரோ ஒரு சிறிதும் தயங்காமல், பசுமைப் பாய் பரப்பியது போன்ற அந்தப் புல் தரையில் அப்படியே அமர்ந்து, கீழே உதிர்ந்திருந்த பழுத்த ஆலிலை ஒன்றைக் கையில் எடுத்துக் கொண்டு பிச்சைப் பாத்திரத்தை நீட்டும் ஒரு துறவியைப் போல், அதை அவள் முன் நீட்டினார். உடனே அவள் சிரித்துக் கொண்டே, இரண்டு உருண்டைத் தினை மாவை அந்த ஆலிலையில் இட்டுக் குவளையிலிருந்த சிறிது கொம்புத் தேனையும் ஊற்றினாள். அவ்வளவில் “எனக்கு இது போதும் அம்மா! மற்றவற்றை எல்லாம் அப்படியே, அதோ அவர்களிடம் பாத்திரத்தோடு கொடுத்து விடு...” என்று கூறித் தொலைவில் நின்று கொண்டிருந்த ஆபத்துதவிகளைச் சுட்டிக் காட்டினார். அவளும் அப்படியே செய்தாள். ‘தேனும் தினை மாவும் கொண்டு வா’ என்று முதல் நாளிரவு அவர் தனக்குக் கட்டளையிட்டது தன் சிரத்தையையும், உபசரிக்கும் இயல்பையும் சோதிப்பதற்காகத்தான் என்பது இப்போது அவளுக்கு நன்றாகப் புரிந்துவிட்டது. தன்னைப் புரிந்து கொள்ள அது ஒரு பாவனை என்பதை அவள் விளங்கிக் கொண்டாள். உண்பதிலோ, ருசிகளிலோ அந்த மாபெரும் அரச தந்திரிக்கு அவ்வளவு அக்கறை இல்லை என்பது முன்பே அவளுக்குத் தெரிந்திருந்த உண்மை, இன்று மீண்டும் உறுதிப்பட்டது. கடந்த காலத்தில் பல நாட்களில் தந்தை சொல்லி, அவள் கனிகளும், தேனும், தினை மாவும் கொண்டு வந்து அவருக்குப் படைத்த போதுகளிலேயே அவரைப் புரிந்து கொண்டிருந்தாலும், நேற்று அவரே தினை மாவுக்காகவும், தேனுக்காகவும் தவிப்பது போல் ஆடிய சாதுரிய நாடகம் அவளையே ஏமாற்றியிருந்தது. அவர் ஏதோ பெரிய காரியத்திற்காகப் பேதையாகிய தன்னை ஆழம் பார்க்கிறார் என்பதை, அவள் தன் மனத்தில் உறுதி செய்து கொண்டு விட்டாள். அவர் உண்ணுகிற வரை பொறுத்திருந்த அவள், பதற்றமின்றி நிதானமாக அவருடைய இருப்பிடம் வரை சென்று கை கழுவவும், பருகவும் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்து அவரை உபசரித்தாள். பின்பு அவரே என்ன சொல்லுகிறார் என்று எதிர் பார்த்துக் காத்திருப்பது போல் சிறிது நேரம் அவருடைய முகமண்டலத்தையே கவனித்துக் கொண்டிருந்தாள். ஒவ்வொரு பெண்ணுடனும் கூடவே பிறந்துவிடும் பிறவி சாதுரியமும், பாதுகாப்பு உணர்வுமே அப்போது அவளுக்குத் துணை நின்றது. அவரோ அவள்தான் முதலில் கேட்கட்டுமே என்று விட்டுப் பிடிப்பது போன்ற மன நிலையில், தேனையும் தினை மாவையும் பற்றி மட்டும் நான்கு வார்த்தைகள் பாராட்டிச் சொல்லிவிட்டு வாளா இருந்தார். 'எதற்காகக் கூப்பிட்டு அனுப்பியிருப்பார்! எதற்காகக் கூப்பிட்டு அனுப்பியிருப்பார்?’ என்று அவளை எண்ணி ஏங்கித் தவிக்க விட்ட பின், ஒடி ஒடித் தவித்த மானைத் தந்திரமாக வலை வீசிப் பிடிப்பது போல், இறுதியாக அவளை வீழ்த்தும் சாதுரியமான வேடனைப் போன்று தன் சொற்களை அடக்கி மெளனமாகக் காத்திருந்தார் அவர். எதிர் எதிர் மெளனங்களை இருவருமே ஒருவருக்கு ஒருவர் விரும்பாத அந்த நிலை, சிறிது நேரம் நீடித்தது. ஆவலை அடக்க முடியாமல் அவள் தன் மெளனக் கோட்டையின் கதவுகளைத் தானே திறந்து கொண்டு வெளிப்பட்டாள்: “ஐயா! தாங்கள் இந்தப் பேதையைத் தனியே கூப்பிட்டனுப்பிய காரியம் பெரியதாயிருக்க வேண்டும். அது இன்னும் எளியாளிடம் தெரிவிக்கப்படவில்லை... அந்தக் கட் டளைக்காகவே இன்னும் இங்கே காத்து நிற்கிறேன் நான்...” “உன்னிடம் நான் இங்கிருந்து புறப்படு முன், ஒரு நல் வாக்கு வேண்டப்போகிறேன் என்று நேற்றே சொல்லி யிருந்தேன்... நினைவிருக்கிறதா, செல்வப் பூங்கோதை?” “நன்றாக நினைவிருக்கிறது ஐயா.” “ஒரு வீரனின் குறிக்கோள் தன் வாளுக்கு மட்டும் வெற்றியைத் தேடுவதோடு நிறைவு பெற்றுவிடுகிறது அம்மா! ஆனால் என்னைப் போல ஒர் அரச தந்திரி, தாம் சார்ந்திருக்கும் தேசம் முழுமையும் வெற்றி பெறுகிற வரை அறிவினால் போராட வேண்டியிருக்கிறது... இடைவிடாமல் போராட வேண்டியிருக்கிறது. நிகழ்கால வெற்றிக்காக மட்டுமின்றி, எதிர்கால வெற்றியையும் இன்றே தீர்மானித்துப் போராட வேண்டியிருக்கிறது.” அவர் எதற்காக இதைத் தன்னிடம் கூறுகிறார் என்பது அவளுக்கு உடனே புரியவில்லை. ஆனால் மனம் மட்டும் பதறியது. பதற்றத்தோடு பதற்றமாக அவள் கேட்டாள்: “ஐயா! பாண்டி நாட்டை மீட்கத் தாங்கள் மேற்கொண்ட துன்பங்கள் பெரியவை... நன்றிக்குரியவை... என்றுமே மறக்க முடியாதவை." “ஆனால், அந்தத் துன்பங்களைப் புரிந்து கொள்ளாமல், முன்பு சில வேளைகளில் நீயும் என் மேல் கோபப்பட்டு உனக்குள் கொதித்திருக்கிறாய், செல்வப்பூங்கோதை” அவள் துணுக்குற்றாள். எல்லாமே அவருக்குத் தெரிந்திருக்குமோ என்று பயமாகவும் இருந்தது. ஆயினும் விட்டுக் கொடுக்காமல் பேசினாள்:- “அப்படி இந்தப் பேதை அறியாமையால் எப்போதேனும் எண்ணியிருந்தாலும், அதைத் தாங்கள் பொறுத்தருளக் கடமைப்பட்டிருக்கிறீர்கள் ஐயா!” “கோபிப்பதற்கும், பொறுப்பதற்கும் இது தருணமில்லை பெண்ணே! நாளை, பொழுது புலர்வதற்குள் மதுரை மாநகரின் கோட்டையில் பாண்டியர் மீனக் கொடி பறக்கத் தொடங்கி விடும். அக்கொடியைக் கீழே இறக்கி, வேற்றவர் கொடி பறக்க நேரிடாமல் இருக்க, இங்குள்ள ஒவ்வொருவரும் சபதம் செய்ய வேண்டும். அந்த வகையில் நீ செய்ய வேண்டிய சபதமும் ஒன்றுண்டு.” “தங்கள் கட்டளை எதுவாயினும் அதைச் செய்யக் கடமைப்பட்டிருக்கிறேன், ஐயா! தயங்காமல் சொல்லியருளுங்கள். ஏற்கத் தலை வணங்கி நிற்கிறேன்.” “வெற்றி பெறும் பாண்டியர் நலனுக்கு இடையூறாக, எந்த நலனையும் நான் அடைய முயல மாட்டேன். பாண்டிய நாட்டின் நலனை விட, என் சொந்த நலன் பெரிதில்லை என்று கொற்றவை சாட்சியாக ஒரு சத்தியம் செய்ய வேண்டும் நீ. இப்படிச் சத்தியங்களையும், வாக்குறுதிகளையும் என்னுடன் பழகும் எல்லோரிடமும் நான் கேட்டுப் பெற்றிருக்கிறேன் அம்மா! அது போல் இப்போது உன்னிடமும் கேட்கிறேன்.” செல்வப்பூங்கோதை உடனே அந்தச் சத்தியத்தைச் செய்ய முயன்ற போது, சொல் எழாமல் அவள் நா இடறி அரற்றியது. மனத்தை திடப்படுத்திக் கொண்டு அவர் கூறிய சொற்களையே, மீண்டும் சொல்லிக் கொற்றவை சாட்சியாகச் சத்தியம் செய்தாள் அவள். அவர் முகம் முதன் முதலாக அவள் கண் காண மலர்ந்தது. ஒரு மகிழ்ச்சிக்காக இப்படி வெளிப் படையாக அவர் மலர்வதை, இன்றுதான் அவள் காண்கிறாள். அது அவளுக்குக் கண் கொள்ளாக் காட்சியாயிருந்தது. “இப்படிச் சில சத்தியங்கள் செய்யும் போது, பொதுவாக இருக்கலாம். ஆனால், நிரூபணமாகும் போதுதான் அது எவ்வளவு பெரியது என்று உலகுக்குப் புரியும். நீ இன்று செய்த சத்தியமும் அப்படிப் பெரியது. செல்வப் பூங்கோதை!” -என்றார் அவர். அவரே புகழ்ந்த இந்தச் சொற்களை உடனே அவளுக்குத் தெளிவாக விளங்கவில்லை என்றாலும், அவரை வணங்கி விடை பெற்றாள் அவள். அவரும் அவளை உணர்வு நெகிழ்ந்த குரலில், வாழ்த்தி அனுப்பினார். அவள் தயங்கித் தயங்கி நடந்து சென்றாள். அவள் தோற்றம் மறைந்ததும், ஈரம் நெகிழ்ந்திருந்த கண்களை மேலாடையால் துடைத்துக் கொண்டு, அவர் ஆபத்துதவிகளைக் கைதட்டி அழைத்து, “இன்னும் சிறிது நேரத்தில் நாம் கோநகர் செல்ல எல்லாம் ஆயத்தமாகட்டும்” என்று கட்டளையிட்டார். அவரது அந்தக் கட்டளைக் குரலில் இருந்த உணர்வின் நெகிழ்ச்சி, அவர்களுக்கே புதுமையாயிருந்தது. 15. போர் மூண்டது அன்று அதி காலையிலிருந்தே, பாண்டிய நாட்டின் கோநகரமாகிய மதுரை எதையோ விரைந்து எதிர்பார்ப்பது போன்ற மர்மமான அமைதியில் திளைத்திருந்தது. அரண்மனைக்குள்ளும், கோட்டை மதில்களின் புறத்தேயும் வெறிச்சோடிக் கிடந்தது. பிரதான வாயில்களிலும், முக்கிய இடங்களிலும் மட்டும் மிகக் குறைந்த எண்ணிக்கையுள்ள களப்பிர வீரர்கள் கூரிய, வேல்களை ஏந்தியபடி காத்துக் கொண்டிருந்தனர். கோநகரப் பொது மக்கள் எதையோ புரிந்து கொண்டது போலவும், எதையோ வரவேற்பது போலவும், எதற்கோ ஆயத்தமாயிருப்பது போலவும் தோன்றினர். வெள்ளியம்பல மன்றத்தில் வெள்ளம் போல் பெரிய யாத்திரிகர் கூட்டம் கூடியிருந்தது. பெருமழை பெய்ய மேகங்கள் கூடி மூட்டம் இருட்டிப்பது போல், நகர் எங்கும் ஒரு மர்மமான சூழ்நிலை மூடியிருந்ததைக் கூர்ந்து நோக்குகிற எவரும் புரிந்துகொள்ள முடிந்தது. யாரும் கட்டுப்படுத்தி விட முடியாத ஓர் உணர்ச்சி, நகர் எல்லையில் மெல்ல மெல்லப் பொங்கிப் புடைத்துக் கிளர்ந்து எழுந்து கொண்டிருந்தது. இருந்த வளமுடையார் கோவிலிலும், ஆலவாய் இறையனார் திருக்கோயிலிலும், ஆறு போற் பெருங் கூட்டம் வழி பட திரும்பிக் கொண்டிருந்தது. திருப்பரங்குன்றிலிருந்து கோநகருக்கு வந்து சேரும் அரச வீதியாகிய புறச்சாலையில், கடல்போற் பெரிய மக்கள் கூட்டம் தென்பட்டது. எல்லாரும் அகநகரைச் சேர்ந்தவர்களாகவும் தெரியவில்லை. புலவர்களைப் போல் சிலர் தோன்றினார்கள். உழுதுண்ணும் வேளாண்குடி மக்களைப் போல் சிலர் தோன்றினார்கள்; மற்போர் மைந்தர்களைப் போல் சிலர் தோன்றினார்கள். எல்லாரும் ஒரே நோக்கமுடையவர்கள்தான் என்பது போல், அவர்களைப் பற்றி அதுமானம் செய்து கொள்ள மட்டும் இடமிருந்தது. வந்திருப்பவர்களின் தோற்றங்கள் வேறு, வேறாக இருந்தாலும், நோக்கம் ஒன்றாகவே இருக்கும் என்று நினைக்க முடிந்த விதத்திலேயே அவர்கள் ஒருவருக்கொருவர் பழகிக் கொண்டனர். கலகத்துக்குக் கருக் கொள்வது போல் பகல் முழுவதும் இதே நிலை நீடித்தது. கதிரவன் மலையில் விழுகிற நேரத்துக்கு முதற் கலகம் விளைந்தது. இரத்தம் சிந்தியது. வெள்ளியம்பல மன்றில் இறங்கித் தங்கியிருக்கும் யாத்திரிகர் கூட்டம் முழுமையுமே மாறு வேடத்தில் வந்திருக்கும் பாண்டிய வேளாளர் படையோ என்ற ஐயப்பாட்டோடு பிற்பகலில் மாவலி முத்தரையர், கலியரசனைக் கண்டு பேசி எச்சரித்தார். கொற்கையில் இருந்து போர் முனைகளுக்குப் போக வேண்டிய குதிரைகள் போகவில்லை என்பதும் அவரால் கலியரசனுக்குத் தெரிந்தது. “கலியா! குடி முழுகி விட்டது. முன்பு பழைய அவிட்ட நாள் விழாவின் போது அவர்கள் ஏமாந்தார்கள். இப்போது நாம் ஏமாற்றப் பட்டு விட்டோம். கோநகரில் இந்தக் கணத்தில் ஆயிரக்கணக்கான பாண்டிய வீரர்கள் ஊடுருவியிருக்கிறார்கள் என்று அறிகிறேன். புற நகரிலும் அவர்கள் கூடி வளைத்திருக்கிறார்கள். நம்முடைய எல்லா வலிமையையும், எல்லைகளில் குவித்து விட்டதால், இங்கே இப்போது நாம் பலவீனமாயிருக்கிறோம்! கப்பலில் வந்திறங்கிய குதிரைகளும், பாண்டிய வேளாளர்களால் கைப்பற்றப்பட்டிருக்குமோ என அஞ்சுகிறேன்.” இதைக் கேட்டுக் களப்பிரக் கலியரசன் துள்ளி எழுந்தான். முன் கோபத்தில் பற்களை நறநறவென்று கடித்தான். தீயெழ விழித்தான். சீறினான். அரண்மனை எல்லையிலிருந்த சில நூறு வீரர்களை ஒன்று திரட்டி மாவலி முத்தரையர் தலைமையில், உடனே வெள்ளியம்பல மன்றத்திற்குத் துரத்தினான். அரண்மனை உட்கோட்டை மதில்களை அடைத்துக் கொண்டான். உள்ளேயிருந்த எஞ்சிய களப்பிர வீரர்களை மதில் மேல் ஆங்காங்கே மறைந்திருந்து மதிற் புறத்தை வளைக்க வரும் பாண்டிய வீரர்கள் மேல் வேலெறிந்தும், அம்பெய்தும் தாக்குமாறு கட்டளை யிட்டான். பதற்றத்தில் அவனுக்கு என்ன செய்வதென்றே தோன்றவில்லை. தடுமாறினான். மாவலி முத்தரையர், தம்முடன் கலியரசன் அனுப்பிய நூறு களப்பிர வீரர்களோடு வெள்ளியம்பல மன்றத்தை நெருங்குவதற்கு முன்பே, நிலைமை கை மீறிப் போயிருந்தது. வெள்ளியம்பல மன்றிலில் இருந்த ஆயிரக் கணக்கான யாத்திரிகர்களும், தேசாந்திரிகளின் கோலம் மாறிப் போர் வீரர்களாக எழுந்து நின்றனர். அவர்கள் மூட்டை முடிச்சுகள் எல்லாம் அவிழ்க்கப்பட்டு, ஆயுதங்களாக வெளிப்பட்டு, வேலாகவும், வாளாகவும், கேடயங்களாகவும் விளங்கின. “நீங்கள் முன்னேறிச் சென்று, எதிரிகளைத் தாக்குங்கள்!நான் இதோ வருகிறேன்... “ என்று வெள்ளியம்பல மன்றிலின் எதிரே இருந்த ஜைன மடத்திற்குள் நுழைந்த மாவலி முத்தரையர், மறுபடி வரவே இல்லை. பாண்டியர் பெரும்படையின் நடுவே சிக்கிய நூறு களப்பிர வீரர்களில் பெரும்பாலோர் மாண்டனர். சிலர் சின்னாபின்னமாகி மூலைக்கொருவராகச் சிதறி ஓடினர். பாண்டியர் படைக்கும் ஒரளவு சிறு இழப்பு ஏற்பட்டது. படையணியின் முன்னே வெள்ளியம்பல மன்றிலின் வாயிலில் தலைமை ஏற்று நின்ற கொற்கைப் பெருஞ்சித்திரன் போரில் மாண்டு போனான். குறிப்பிடத்தக்க அந்த மரணம், பாண்டிய வீரர்களின் குருதியில் சூடேற்றி வெறியூட்டியது. பழிக்குப் பழியாகப் பல களப்பிர வீரர்களை வெட்டி வீழ்த்தினார்கள், அவர்கள். அரண்மனை உட்கோட்டையை வளைத்துப் பிடிக்கப் பாண்டியர் படை முன்னேறியது. எண்ணிக்கையிற் சிறிய அளவினராக வந்த களப்பிர வீரர்கள் தாக்குதலைத் தொடங்கிய வேகத்தில், பாண்டியர் அணியின் தலைவனும் இளவரசர்களில் ஒருவனும் ஆகிய கொற்கைப் பெருஞ் சித்திரனைக் கொன்று விடவே, பாண்டியர் அணிக்கு அடக்க முடியாத ஆத்திரம் மூண்டு விட்டது. வெள்ளியம்பல மன்றிலின் மன்றிலில் போரின் முதல் களப்பலியாகப் பாண்டியர்கள் பக்கமிருந்து பெருஞ்சித்திரன் மாண்டான் என்றால், களப்பிரர்கள் பக்கம் பல வீரர்கள் வெட்டுண்டு வீழ்ந்தார்கள். கதிரவன் மறைந்து நன்றாக இருட்டுவதற்குள், அகநகர் எல்லையில் போர் முழு அளவில் மூண்டு விட்டது. சில நாழிகைப் போதிலேயே அரண்மனை உட் கோட்டையைத் தவிர அகநகரிலும், புறநகரிலும் எல்லாப் பகுதிகளிலும் பாண்டியர் படையின் கட்டுப்பாட்டிற்குள் அடங்கிவிட்டன. உட்கோட்டை மதில்களை முற்றுகையிட்டும், உள்ளே இருந்தவர்கள் முற்றுகைக்கு வீழ்ந்து விடாமல் நேரத்தைக் கடத்தி வந்தார்கள். மதில் மேல் அங்கங்கே மறைந்திருந்த சில களப்பிர வீரர்கள் கீழே முற்றுகையிட்டிருந்தவர்கள் மேல் கல்லெறிதல், அம்பு எய்தல் போன்ற தாக்குதல்களைச் செய்து கொண்டுதான் இருந்தனர். முற்றுகை தொடங்கியதுமே நடந்தவற்றை இளைய நம்பிக்கு அறிவிக்க உடனே ஒரு பாண்டிய வீரன், கணிகை மாளிகைக்கு அனுப்பப்பட்டிருந்தான். கணிகை மாளிகையின் நிலவறையில், பல நூறு வீரர்களோடு, இளையநம்பியும், காராளரும், கொல்லனும் ஆயுதபாணிகளாகப் போர்க் கோலம் பூண்டு காத்திருந்தனர். புறத்தாக்குதலைப் பற்றிய விளைவுகளை அறிந்து, நிலவறை வழியே, உட்கோட்டையில் அரண்மனைக்குள் ஊடுருவி, வெளியே மதிற்புறத்தை வளைத்துக் கொண்டிருக்கும் தங் களைச் சேர்ந்தவர்களுக்கு உதவியாக இருப்பது, கோட்டைக் கதவுகளைத் திறந்து விட்டு, அவர்களை உள்ளே ஏற்பது போன்ற செயல்களுக்கு ஆயத்தமாக இருந்தார்கள். இளையநம்பி முதலியவர்கள், முன்னணிப் படையோடு பெரியவர் மதுராபதி வித்தகர் ஓலை மூலம் இட்டிருந்த கட்டளைப்படியே பெருஞ்சித்திரனை அனுப்பி விட்டு, இப்படி ஆயத்தமாகக் காத்திருந்தவர்களுக்குப் பெருஞ்சித்திரன் வெள்ளியம்பலத்துக்கு முன்னால் நடந்த போரில் மாண்டு விட்டான் என்ற செய்தி பெரும் அதிர்ச்சியை அளித்தது. “பெருவீரனான ஒரு தமையனையும் களப்பிரர்கள் கொன்று விட்டார்கள். பயந்த சுபாவமுள்ளவனான ஒரு தம்பியையும் இப்போது களப்பிரர்கள் கொன்றுவிட்டார்கள். நான் மட்டும் இந்த அரசைப் போரிட்டு வென்று, என்ன செய்யப் போகிறேன்?” என்று கண் கலங்கியபடி மனம் சோர்ந்து பேசினான் இளையநம்பி. காராளரும், கொல்லனும் எவ்வளவோ ஆறுதல் கூறிப் பார்த்தனர். சோர்வின்றி உடனே தாங்கள் உட்கோட்டையில் நுழைந்து, தாமதமின்றிக் கோட்டைக் கதவுகளைத் திறந்து, வெளியே மதிலை வளைத்துக் கொண்டிருப்பவர்களை உள்ளே ஏற்றுக் கொண்டு, வெற்றிக்குப் பாடுபட வேண்டும் என்பதை அவர்கள் இளைய நம்பியிடம் எடுத்துக் கூறினார்கள். “ஐயா! தங்களைப் போல்தான் நீண்ட காலத்துக்கு முன் குருட்சேத்திரப் போர்க் களத்தில் மகாவீரனான அர்ச்சுனனும் சோர்ந்து நின்றான். அப்போது அவன் சோர்வைப் போக்குவதற்குக் கரியமேனிக் கடவுளாகிய கண்ணபிரானே, அறிவுரை கூற வேண்டியிருந்தது. தங்களுக்கு அறிவுரை கூறுமளவுக்கு நான் ஞானியில்லை. ஆயினும், அரச குலத்தோர் போர்க்களத்தில் சோர்ந்து நிற்பது, அறமாகாது என்பதை மட்டுமே கூற என்னால் முடியும்” என்றார் காராளர். அவருடைய சொற்களும், பாரதப் போரைச் சுட்டிக் காட்டி அவர் கூறிய போர் அறமும், இளையநம்பியின் தளர்ச்சியைப் போக்கி அவனை உறுதிப்படுத்தின. இரத்தினமாலையும் அவனுக்கு ஆறுதல் கூறினாள். அவளும், கணிகை மாளிகைப் பெண்களும், “வாகை சூட வேண்டும்” என்று வாழ்த்தொலி இசைத்து, வெற்றித் திலகமிட்டு, இளையநம்பிக்கு விடை கொடுத்தனர். நிலவறைப் படை விரைந்து புறப்பட்டது. காராளரும், கொல்லனும் உப வனத்துக் குறளனும் பின் தொடர இளையநம்பி படை நடத்திச் சென்றான். வெள்ளியம்பலத்தில் படை வெளியேறி, மீண்டும் நள்ளிரவில் நடுவூர்ப் பகுதியிலுள்ள வசந்த மண்டபத்து நந்தவனத்தில் நுழைந்தது. அங்கிருந்து குறளன் காட்டிய நிலவறை வழியே அரண்மனை உட்கோட்டையில் புகுந்தனர். அந்த வழியாக நேரே சென்றால், அழகன் பெருமாள் முதலியவர்கள் அடைக்கப்பட்டிருந்த பாதாளச் சிறைக் கூடம் இருந்த பகுதிக்குள் செல்ல முடியும் என்று குறளன் கூறினான். பெரியவர் கட்டளைப்படி முதலில் அழகன் பெருமாள் முதலியவர்களை விடுவிக்க வேண்டும் என்பதை நினைவூட்டினார்கள் காராளரும், கொல்லனும். எல்லாமே திட்டமிட்டது போல் காலத்துடன் நிறைவேறின. உட்கோட்டையிலோ, சிறைகூடப் பகுதிகளிலோ இவர்களை எதிர்ப்பதற்கு யாருமே இல்லை. அங்கங்கே இருந்த களப்பிர வீரர்களை எல்லாம் ஒன்று சேர்த்துப் பாண்டியர்களின் மதிற்புற முற்றுகையாகிய உழிஞைப் போரை எதிர்க்க நிறுத்தியிருந்தார்கள். கோட்டை மிக எளிதாக வீழ்ந்து விடும் என்று உள்ளே நுழைந்ததுமே இளையநம்பிக்குப் புரிந்தது. பெரியவரே தம் ஓலையில் ஒப்பிட்டுச் சொல்லியிருந்தது போல் அப்போதுள்ள நிலையில் அது வெறும் மணல் கோட்டை போல்தான் இருந்தது. எல்லாமே பாதுகாப்பற்ற நிலையில் இருந்தன. உள்ளே நுழைந்ததும், இவர்கள் சிறைக்கூடங்களைத் தகர்த்து விடுவித்த போது அந்த இருட் கூடத்தில், யார் எதற்காகக் கதவுகளை உடைத்துத் தங்களை விடுவிக்கிறார்கள் என்பதை முதலில் அழகன் பெருமாள் முதலியவர்களே புரிந்து கொள்ள முடியவில்லை. அருகில் வந்து தழுவிக் குரல் கொடுத்த போதுதான் நண்பர்கள் ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டு மகிழ்ச்சியில் திளைத்தனர். நல்ல உணவும், நல்ல காற்றும், நல்ல ஒளியும் இல்லாமல் அவர்கள் அந்தச் சிறையில் வாடித் தளர்ந்திருந்தனர். பாதாளச் சிறைப் பகுதியிலிருந்து மேற்புறம் அரண்மனைப் பகுதிக்கு வந்தவுடன், அவர்கள் எதிர் பாராதது ஒன்று நடந்தது. உடன் வந்து கொண்டிருந்த திருமோகூர் அறக் கோட்டத்து மல்லன் திடீரென்று வெறி கொண்டவனாக மாறி, அருகே நின்றிருந்த கொல்லனின் இடை வாளை உருவிக் கொண்டு, “தென்னவன் மாறனைக் கொன்ற அந்தப் பாவியைப் பழி தீர்க்காமல் விட மாட்டேன்” என்று உரத்த குரலில் சூளுரைத்தவாறே உருவிய வாளுடன் அரண்மனைக்குள் பாய்ந்து ஓடினான். மின்னல் வேகத்தில் புயல் புறப்பட்டது போல் பாய்ந்து ஓடிய அவனை யாராலும் அப்போது தடுக்க முடியவில்லை. “மல்லா பொறு... ஆத்திரப்படாதே” என்று காராளர் கூறியதையும், அவன் பொருட்படுத்தவில்லை. இளையநம்பியின் தலைமையில் நிலவறை வழியாக அரண்மனைக்குள் நுழைந்த வீரர்கள், நான்கு வேறு அணிகளாகப் பிரிந்தனர். இளையநம்பி ஓரணியையும், காராளர், கொல்லன், அழகன் பெருமாள் ஆகிய மற்ற மூன்று அணிகளையும் தலைமை தாங்கி நடத்திக் கோட்டைக் கதவுகளைத் திறந்தனர். வெளியே முற்றுகை இட்டிருந்த பாண்டிய வீரர்களும் உள்ளே நுழைந்ததால், பாண்டியர் படை பலம் கடலாகப் பெருகியிருந்தது. கோட்டை வீழ்ந்து விட்டது. அரண்மனை வாயிலில் பல்லாயிரம் பாண்டிய வீரர்கள் வாழ்த்தொலி முழக்க, இளஞ் சிங்கம் போல் நின்று கொண்டிருந்தான், இளைய நம்பி. அவன் கண் காணக் களப்பிரர் கொடி கீழிறக்கப் பட்டது. காராளர் முதலியவர்கள் எல்லாரும் பயபக்தியோடு அவனருகே நின்று கொண்டிருந்தனர். அந்த வேளையில், அரண்மனையின் உட்புறமிருந்து அதே பழைய வெறிக் குரலோடும் உருவிய வாளோடும் ஒடி வந்தான் மல்லன். இப்போது அவன் கை வாளில் குருதி படிந்திருந்தது. "பழி தீர்ந்தது...என் எதிரியைக் கொன்று விட்டேன்" என்று வெறியோடு கூவிய படியே ஓடி வந்து, அந்தக் குருதி படிந்த வாளை இளைய நம்பியின் காலடியில் வைத்து விட்டு மூச்சு இரைக்க அவனை வணங்கி நின்றான் மல்லன். 16. கோட்டையும் குல நிதியும் மல்லன் தெரிவித்த செய்தியைக் கேட்டதும் அழகன் பெருமாள், இளையநம்பியின் காதருகே வந்து மெல்லக் கூறினான்: “ஐயா! தென்னவன் மாறனைக் கொன்றதற்காகக் களப்பிரக் கலியரசனைத் தன் கைகளாலேயே, பழி வாங்கப் போவதாகச் சிறையிலிருக்கும் போதே இவன் பல நாள் விடாமல் கோபத்தோடு எங்களிடம் சொல்லிக் கொண்டிருந்தான். அதை இப்போது நிறைவேற்றிவிட்டான் என்று தெரிகிறது! கலியரசனோடு போரிடும் வேலை இனி நமக்கு இல்லை. அதை இவன் நிறைவேற்றிப் பழி தீர்த்து விட்டான்.” பகைவனின் குருதி படிந்த அந்தக் கொலை வாளைப் பார்த்து, இளையநம்பியின் கண்கள் கூசின. அந்த வாளில் யாருடைய குருதி படிந்திருந்ததோ, அந்தக் குருதிக்கு உரியவன் தன் உடன் பிறந்தவர்களில் இருவரையும், உடன் பிறவாத சகோதரர்களாகிய பல பாண்டிய வீரர்களையும் கொன்றிருக்கிறான் என்பது நினைவு வந்தவுடன், அவனுடைய கூச்சம் அகன்று மனதில் கடுமை சூடேறியது. கோட்டையைக் கைப்பற்றியதும் முதல் கட்டளையாக, “இங்கே அரண்மனை அந்தப்புரத்தில் உள்ள களப்பிரப் பெண்களையும், நகரின் எல்லையிலுள்ள பாலி மொழிப் புலவர்களையும், கலைஞர்களையும், களப்பிரர்களின் சமயத்தைச் சேர்ந்த துறவிகளையும் மிகவும் பாதுகாப்பாகப் பாண்டிய நாட்டின் எல்லை வரை வெளியேற்றிக் கொண்டு போய் விட்டு வர வேண்டும்-” என்று முன் எச்சரிக்கையாக அறிவித்திருந்தான் இளையநம்பி. களப்பிரர்-பாண்டியர் பழம்பகையில் பெண்களும், புலவர்களும், கலைஞர்களும், துறவிகளும் துன்புற நேரிடக் கூடாது என்றே முன்னெச்சரிக்கையோடு இந்தக் கட்டளை பிறப்பிக்கப்பட்டிருந்தது. பாண்டிய மரபின் பெயர் களங்கப்படும் விதத்தில் எந்தப் பூசலும் கோநகரில் நிகழ்ந்து விடக் கூடாதென்பதில் இளையநம்பி கண்ணும் கருத்துமாயிருந்தான். பாண்டிய மரபின் பெருமைக் குறைவின்றி உரிய முறையில் இலவந்திகைக் காட்டில் பெருஞ்சித்திரனின் அந்திமக் கிரியைகள் நடைபெற்றன. அது முடிந்து மீண்டும் அரண்மனைக்குத் திரும்பும், பெரியவர் கூறியிருந்த பிரம்ம முகூர்த்த வேளை நெருங்கிக் கொண்டிருந்தது. அவரே நல்வாழ்த்துகளுடன் அனுப்பியிருந்த கொடியை, மதுரை மாநகரக் கோட்டையில் ஏற்ற வேண்டும். ஊரறிய, உலகறிய மீண்டும் பாண்டியப் பேரரசு உதயமாவதன் அடையாளமாக இப்போது அவர்கள் அதைச் செய்ய வேண்டியிருந்தது. வைகறையின் குளிர்ந்த காற்றோடு, அந்தக் கொடியேற்றத்திற்கு வானமே வாழ்த்துக் கூறுவது போல் மெல்லிய பூஞ்சாரலாக மழையும் பெய்யத் தொடங்கியிருந்தது. விடிகாலைப் பறவைகளின் குரல்களும், வைகறைப் பண் பாடும் இசைவாணர் வாழ்த்தொலிகளும், கோட்டை முன்றிலில் கூடியிருந்த ஆயிரமாயிரம் பாண்டிய வீரர்களும், ஆபத்துதவிகளும், முனையெதிர் மோகர் படையினரும் செய்த மகிழ்ச்சி ஆரவாரம் பொங்க, மதுரை மாநகரின் பழம்பெரும் கோட்டையிலே மீண்டும் பாண்டியர் மீன் கொடி ஏறியது. இருள் நீங்கிப் பொழுதும் புலர்ந்தது. கொடியுடன், பெரியவர் கொடுத்தனுப்பியிருந்த இடை வாளை அணிந்து ஆலவாய் இறையனார் கோயிலுக்கும், இருந்த வளமுடையார் கோயிலுக்கும் சென்று வணங்கிய பின், மங்கல வேளையில் அரண்மனையிற் பிரவேசம் செய்தான் இளையநம்பி. மதுரை மாநகரத்து அரண்மனையின் கீழ்த்திசையில் கோட்டை மதில்களிலே தெரியும் காலைக் கதிரவனின் ஒளியைக் கண்ட போது, முதன் முதலாகத் தான் பெரியவர் மதுராபதி வித்தகரைத் திருமோகூரில் சந்தித்த போது, 'பாண்டிய நாட்டில் இருட்டிப் போய் நெடுங்காலமாயிற்று' என்று அவர் கூறியதற்கு மறுமொழியாக, ‘ஒவ்வோர் இருட்டுக்குப் பின்னும் ஒரு வைகறை உண்டு ஐயா!' என்று நம்பிக்கையோடு அவருக்கு மறு மொழி கூறியிருந்தது, இன்று இப்படி நிதரிசனமாகி இருப்பதை உணர்ந்தான். அரண்மனைக்குள்ளோ, கொலுமண்டபத்திலோ அதிக நேரம் தங்காமல் ‘கொடி ஏறிப் பறக்கத் தொடங்கிய சில நாழிகை நேரத்திற் கிழக்குக் கோட்டை வாயில் வழியாக நானே நகருக்குள் வருவேன்' என்று பெரியவர் தெரிவித்திருந்ததை ஞாபகப்படுத்திக் கொண்டு காராளரும் பரிவாரமும் புடைசூழக் கிழக்குக் கோட்டைவாயிலுக்கு விரைந்தான் இளையநம்பி. பாண்டியப் பேரரசு மீண்டும் உதயமாகக் காரணமான பெரியவரை, வரவேற்பதைத் தன் முதற்கடமையாக அவன் கருதினான். கோநகரக் குடிமக்கள் இந்த மாபெரும் வெற்றிக்காகக் காத்திருந்தவர்களைப் போல், தெரு எங்கும் தோரணங்கள் கட்டி, வாழை மரங்கள் நட்டுக் கோலமிட்டு அலங்கரித் திருந்தனர். கோநகரும், சுற்றுப்புறங்களும் விழாக்கோலம் பூண்டிருந்தன. மங்கல வாத்தியங்களும், வெற்றி முரசங்களும், வாழ்த்தொலிகளும் எல்லாத் திசைகளிலும் எழுந்து, பேராரவாரமாக ஒலித்துக் கொண்டிருந்தன. இளையநம்பி கிழக்குக்கோட்டை வாயிலுக்குப் போய்ச் சேருவதற்கு முன்பே, அங்கே ஆயிரம் வெண் புரவிகளில் அணி வகுத்த வீரர்களோடு புறப்பட்டுக் கொற்கையிலிருந்து வந்து காத்திருந்தான் குதிரைக் கோட்டத்து மருதன் இளநாக நிகமத்தான். முக படாம் தரித்த யானையின் மேல் அந்துவன் எடுப்பாக அமர்ந்திருந்தான். இளையநம்பியைக் கண்டதும் யானைப்பாகன் அந்துவன், “அரசே! இந்த ஏழையின் முகராசிக்குக் கெட்ட பெயர் வராமல் காப்பாற்றியதற்காகத் தங்களுக்கு எப்படி நன்றி சொல்லுவதென்றே தெரியவில்லை. ‘இந்த நகரத்தில் முதலில் என் முகத்தில் விழிப்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் வந்த காரியம் நிச்சயமாக வெற்றி பெறும்’ என்று பல திங்கள் காலத்துக்கு முன் உங்களிடம் சொல்லியதை இப்போது நிறைவேற்றி விட்டேன்" என்றான். அவனுடைய கள்ளங் கபடமற்ற பாராட்டை ஏற்றுப் புன்முறுவல் பூத்தான் இளையநம்பி. பூர்ண கும்பத்துடனும், மங்கல தீபத்துடனும் பெரியவருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்கும் நோக்குடனும், அங்கே தன் பணிப்பெண்களோடு காத்திருந்தாள் கணிகை இரத்தினமாலை. கிழக்குக் கோட்டை வாயிலிலிருந்து அரண்மனை வரை அழைத்துச் செல்வதற்காக இரத்தினமாலையின் முத்துப்பல்லக்கும் காத்திருந்தது. அழகிய பெண்கள் இருமருங்கும் வெண்சாமரம் வீசக் காத்திருந்தனர். வழிநெடுக மலர்களைத் தூவியிருந்தார்கள். மங்கலப் பொருள்களைச் சிதறியிருந்தார்கள். பாண்டியன் இளையநம்பி, நகருக்குள் பிரவேசிக்கப் போகும் அந்த மாபெரும் அரச தந்திரிக்கு மாலை சூட்டி வரவேற்பதற்காகவே காராளரோடும், அழகன்பெருமாளோடும் பரிவாரங்களோடும் காத்திருந்தான். நெடுநேரம் காத்திருந்த பின், கீழ்த்திசையில் மற்றொரு சூரியன் புதிதாக உதித்து வந்தது போல், ஒளி திகழும் அந்தப் பேருருவம் ஆபத்துதவிகள் சூழ வந்து தோன்றியதும், கடல் அலை போல் கூட்டத்தில் பேராரவாரம் எழுந்தது. வாழ்த்தொலி விண்ணை எட்டியது. மதிற்சுவர்களின் மேலிருந்தும், கோட்டைக் கதவுகளிலிருந்தும், மரங்களின் மேலிருந்தும், அந்த ஒளிமயமான பேருருவத்தின் மேல் மலர்மாரி பொழிந்தது. இன்றுதான் வாழ்விலேயே ஒரு புதிய மாறுதலாக உணர்வுகளே தெரிய விடாத அந்த முக மண்டலத்தில் வெளிப்படையாகப் புன்முறுவலைப் பார்த்தான் இளையநம்பி. இரத்தினமாலை நிறைகுடமும், மங்கல தீபமும் காண்பித்து ஆரத்தி எடுத்து அவரை வரவேற்றாள். முழந்தாள் மண்ணில் பதிய மண்டியிட்டு வணங்கிய பாண்டியன் இளையநம்பியைத் தூக்கி நிறுத்தி, நெஞ்சாரத் தழுவிக் கொண்டார் பெரியவர் மதுராபதி வித்தகர். நாத்தழுதழுக்க இளையநம்பி அவரிடம் கூறலானான்:- “ஐயா! இந்தப் பேரரசை நீங்கள்தான் மீட்டுத் தந்திருக்கிறீர்கள்! நான் வெறும் கருவிதான். ஆயுதங்களும் வீரர்களும் வென்ற வெற்றி என்பதை விட இதைத் தங்கள் சாதுரியத்தின் அரச தந்திர வெற்றி என்றே கூறலாம்.” “இந்த வெற்றியில் என் சாதுரியம் மட்டுமில்லை! இதோ இவர்களுக்கு எல்லாம் அதில் பங்கு இருக்கிறது” என்று தம்மைச் சூழ இருந்த காராளர், கொல்லன், அழகன் பெருமாள், இரத்தினமாலை, யானைப்பாகன் அந்துவன், ஆபத்துதவிகள், உப வனத்து ஊழியர்கள், மருதன் இளநாக நிகமத்தான் எல்லாரையும் சுட்டிக் காண்பித்தார் பெரியவர். அப்போது அவருக்குப் பின்புறம் நின்ற ஆபத்துதவி ஒருவன், முன்னால் வந்து அதுவரை தன் கையிற் சுமந்து கொண்டிருந்த ஒரு பேழையை அவரிடம் கொடுத்தான். “இளையநம்பீ! நெடுங்காலத்துக்கு முன் இந்நாட்டைக் களப்பிரர்களிடம் தோற்ற போது இங்கே மதுரை மாநகரத்து அரண்மனையிலிருந்து இரவோடிரவாக நிலவறை வழியே வெளியேறிய உன் முன்னோர்கள், இது தங்கள் குலநிதி என்பதற்கு ஒர் அடையாளமாக அரண்மனைக் கருவூலத்திலிருந்து ஒன்பதே ஒன்பது முத்துகளை மட்டும் எடுத்துக் கொண்டு புறப்பட்டார்கள் என்பது செவி வழி வழக்கு. இந்த முத்துகள், சில தலைமுறைகளாகக் கொற்கையில் பாதுகாக்கப்பட்டு வந்தன. அண்மையில்தான் இவற்றோடு உன் தம்பி முறையிலான பெருஞ்சித்திரன் நான் கூப்பிட்டனுப்பி என்னிடம் வந்தான் நேற்று மாலைப் போரில் அவன் மாண்ட செய்தியையும், வருகிற வழியில் கேள்விப்பட்டு வருந்தினேன். இப்போது உன் குலநிதியாகிய இந்த முத்துகளை உன்னிடம் ஒப்படைத்து விட வேண்டியது என் கடமை. உன் அரச பண்டாரமாகிய பொக்கிஷத்தில் இந்த முத்துகளை முதலில் கொண்டு போய் வைத்து, ஆட்சியைத் தொடங்கு!” என்று கூறிப் பேழையைத் திறந்து முத்துகளை, எல்லார் முன்னிலையிலும் எடுத்து, இளைய நம்பியிடம் வழங்கினார் பெரியவர். வணக்கத்தோடு அவற்றைப் பெற்றுக் கொண்டான் இளையநம்பி. அந்த முத்துகளை கண்களில் ஒத்திக் கொண்டு அவன் நிமிர்ந்த போது, இரத்தினமாலை கண்களில் நீர் நெகிழ, அவனையே இமையாமல் பார்த்துக் கொண்டு நிற்பது தெரிந்தது. மதுராபதி வித்தகர் இரத்தினமாலையின் முத்துப் பல்லக்கில் நகர் வலமாக அழைத்துச் செல்லப்பட்டு அரண்மனையை அடைந்தார். ஏழு வெண் புரவிகள் பூட்டிய தேரில், இளைய நம்பியும் நகருலாவாகச் சுற்றி வந்து, அரண்மனையை அடைந்தான். பெரியவர் ஆவலாய் இறையனார் திருக்கோயிலுக்கும், உவணச் சேவற் கொடி உயர்த்திய இருந்த வனத்திற்கும் சென்று நெஞ்சுருக வழிபட்டு வணங்கினார். களப்பிரர் ஆட்சிக் காலத்தில் நலிந்து போயிருந்த கோநகரின் சிறந்த புலவர்கள், கலைஞர்கள், வீரர்கள், சமய வாதிகள் அறக்கோட்டங்கள் எல்லாரையும், எல்லாவற்றையும் மீண்டும் மதுரை மாநகரின் புகழுக்கும் பெருமைக்கும் சிறப்புக்கும் உரியதாகும்படி அவர் இளைய நம்பியிடம் கூறி மாற்றினார். இளையநம்பியின் பாட்டனாரும், தம்முடைய நெருங்கிய நண்பரும் ஆகிய திருக்கானப்பேர் பாண்டியர் குல விழுப்பரையரை, உடனே எல்லாப் பெருமைகளுடனும் உரிய கெளரவத்துடனும் கோநகருக்கு அழைத்து வருமாறு, தூதர்களை அனுப்பச் செய்தார். காராளரைக் கூப்பிட்டு, “கோநகரின் வெற்றி மங்கலக் கோலாகலங்ளைக் கண்டு களிக்க உங்களுடைய குடும்பத்தினரைப் புறப்பட்டு வரச் சொல்லி ஆளனுப்புங்கள்” என்று கட்டளையிட்டார். காராளரும் உடனே தம் மனைவியையும், மகள் செல்வப்பூங்கோதையையும் கோநகருக்கு அழைத்து வருமாறு கொல்லனை திருமோகூருக்கு அனுப்பி வைத்தார். பைந்தமிழ்ப் புலவர்கள் அரண்மனைக் கொலு மண்டபத்தில் வந்து வெற்றி மங்கலம் பாடிப் பரிசுகள் பெறலாமென்று எங்கும் முரசறைந்து அறிவிக்கப்பட்டது. மிக முதிய புலவரும், பாண்டிய மரபுக்கு மிகவும் வேண்டியவருமான ஒருவர் இளையநம்பிக்கு முடி சூட்டுங் காலத்துச் சிறப்புப் பெயராக, ‘இருள் தீர்த்த பாண்டியன்' என்ற அடைமொழியை வழங்கிப் புகழ்மாலை சூட்டினார். தொடர்ந்து, கோநகரும், அரண்மனையும் வெற்றிக் களிப்பில் திளைத்திருந்தன. திருக்கானப்பேரிலிருந்து பாண்டிய குல விழுப்பரையர் சில நாட்களில் அழைத்து வரப்பட்டார். செல்வப் பூங்கோதையும், அவள் தாயும் கோநகருக்கு முன்பே வந்து சேர்ந்தார்கள். இன்னும் எல்லைகளில் நடைபெற்றுக் கொண்டிருந்த போர்களின் முடிவு தெரியவில்லையே என்று கவலைப்பட்டுக் கொண்டிருந்தார் பெரியவர். கோட்டையில் மீனக் கொடி பறக்கத் தொடங்கி ஏழு நாட்கள் ஒடி விட்டன. எட்டாம் நாள் காலையில் போர் நிகழும் எல்லைகளிலிருந்து தூதர்கள் தேடி வந்திருக்கிறார்கள் என்று அறிந்ததும், பெரியவர் அவர்களைச் சந்திக்க வந்தார். அரண்மனையில் தூதர்களை எதிர் கொள்ளும் அந்தரங்க மந்திராலோசனை மண்டபத்துக்கு அவர் வந்த போது, இளையநம்பியும் அங்கே இருந்தான். 17. கடமையும் காதலும் போர் நிகழும் எல்லைகளில் இருந்து வந்திருந்த தூதர்கள், வெற்றிச் செய்தி கொண்டு வந்திருந்தார்கள். கோநகரையும், சுற்றுப் புறங்களையும் பாண்டியர்கள் கைப்பற்றி விட்டதன் விளைவாக வடக்கே வெள்ளாற்றங்கரைப் போரில் களப்பிரப் படை வீரர்கள் சின்னாபின்னமாகி அழிந்தார்கள். எஞ்சியவர்கள், மதுரைக்கு திரும்பாமல் தங்கள் பூர்வீகமாகிய வடகருநாடக நாட்டை நோக்கித் தோற்று ஓடிப் போய் விட்டார்கள். பாண்டியர்கள் உள்நாட்டையும், கோநகர் கோட்டையையும், அரண்மனையையும் கைப்பற்றி வென்று, களப்பிரக் கலியரசனைக் கொன்று விட்டார்கள் என்று செய்தி தெரிந்ததும், களத்தில் போரிட்டுக் கொண்டிருந்த பூத பயங்கரப் படையினருக்கும், ஏனைய களப்பிர வீரர்களுக்கும் மிகப்பெரிய தடுமாற்றமும் தளர்ச்சியும் ஏற்பட்டன.இரண்டு போர் முனைகளிலுமே, களப்பிர வீரர்கள் தெம்பிழந்து நம்பிக்கையற்றுப் போயினர். தோல்விக்கும், வீழ்ச்சிக்கும், இதுவே காரணமாய் அமைந்தது. பாண்டிய நாட்டின் வடக்கு எல்லைப் போரில் ஈடுபட்ட களப்பிர வீரர்களாவது தலை தப்பினால் போதும் என்று தோற்றதும், சொந்த நாட்டிற்குத் திரும்பியோடும் வாய்ப்பிருந்தது. தென் மேற்கே சேரனோடு போரிட்டுக் கொண்டிருந்த களப்பிர சேனையோ பெரும்பகுதி அழிந்து விட்டது. எஞ்சியவர்களைச் சேரன் சிறைப் பிடித்து விட்டான் என்று தெரிந்தது. இந்தப் போரில் வென்றால், வெற்றி பெற்றதுமே மதுரை மாநகரில் நிகழப் போகும் புதிய பாண்டியப் பேரரசின் முடி சூட்டு விழா வைபவத்திற்கு வந்து, கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என முன்பே சேரனுக்கும், பல்லவனுக்கும் எழுதியிருந்த ஒலைகளில் இவர்களை மதுரைக்கு அழைத்திருந்தார் பெரியவர். இப்போது போர் முடிவுக்குப் பின், இன்று வெற்றிச் செய்தியோடு, பாண்டிய நாட்டின் தலைநகருக்கு வந்திருந்த தூதர்கள் இருவரில், சேரவேந்தனின் தூதுவன் தன்னுடைய அரசன் முடிசூட்டு வைபவத்துக்காகப் பரிவாரங்களோடு மதுரையை நோக்கிப் புறப்பட்டு வந்து கொண்டிருப்பதாகத் தெரிவித்தான். பல்லவ வேந்தன் சிம்ம விஷ்ணுவோ, ‘களப்பிரநாடு தன்னுடைய எல்லையில் இருப்பதாலும், பாண்டிய நாட்டிலும், தெற்கெல்லையிலும், வெள்ளாற்றங்கரையிலும் தோற்ற தோல்விகளுக்காகப் பழி வாங்குவதற்காக, களப்பிரர்கள் எந்த சமயத்திலும் தன் மேல் படையெடுக்கலாம் என்பதாலும், மதுரை மாநகருக்கு வந்து முடிசூட்டு விழாவில் கலந்து மகிழ இயலாதென்று', தன் தூதன் மூலம் மதுராபதி வித்தகருக்குச் சொல்லியிருந்தான். பல்லவன் சொல்லி அனுப்பியதில் உள்ள நியாயம் பெரியவருக்குப் புரிந்தது. பல்லவன் சிம்ம விஷ்ணு காலத்தாற் செய்த உதவிக்கு நன்றி உரைத்துப் பதில் ஒலை வரைந்து தூதனிடம் கொடுத்திருந்தார். அவர் முடிசூட்டு விழாவுக்காகப் பல்லவ மன்னன் மதுரை வந்தால், அந்த நேரம் பார்த்து பல்லவ மண்ணிற் படையெடுத்துத் துன்புறுத்தக் களப்பிரர்கள் தயங்க மாட்டார்கள் என்பதைப் பெரியவர் புரிந்து கொள்ள முடிந்தது. வடதிசையிலிருந்து மீண்டும் தெற்கே களப்பிரர் படையெடுப்பு நேராதிருக்க, வலிமை வாய்ந்த சிம்ம விஷ்ணு அரணாகவும் பாதுகாப்பாகவும் நடுவே இருக்க வேண்டிய இன்றியமையாத நிலையை உணர்ந்தே, மதுரைக் கோநகரின் மங்கல முடி சூட்டு விழாவுக்கு வரச் சொல்லி மீண்டும் அவனை வற்புறுத்தாமல் விட்டு விட்டார் பெரியவர். மற்றொருவனாகிய சேர தூதனிடம், “மகிழ்ச்சியோடு உங்கள் சேர வேந்தனை வரவேற்கக் காத்திருக்கிறோம் என்பதையும், போருக்கு முன் உங்கள் அரசனுக்கு நான் அளித்திருக்கும் வாக்குறுதியை நிச்சயம் நிறைவேற்றுவேன் என்பதையும் எதிர் கொண்டு சென்று தெரிவித்து, உங்கள் அரசனை இங்கு அழைத்து வா!” என்று சொல்லி விளக்கி அனுப்பினார் மதுராபதி வித்தகர். அவர் முன்னிலையில், அரச தூதர்களுக்குரிய முறைகளுடனும், பெருமைகளுடனும், அவர்களை விடை கொடுத்து வழியனுப்பி வைத்தான் இளையநம்பி. ஃ⁠ஃ⁠ஃ வந்திருந்த தூதர்கள் புறப்பட்டுச் சென்ற பின், அந்த மாபெரும் அலங்காரக் கூடத்தில் பெரியவர் மதுராபதி வித்தகரும், பாண்டியன் இளைய நம்பியும் தனியே எதிர் எதிராக நின்று கொண்டிருந்தனர். பிரம்மாண்டமான தூண்களும், பளிங்குத் தரையும், முத்துப் பதித்த இருக்கைகளும், இரத்தினக் கம்பளங்களும் எல்லாம் நிசப்தமாக ஒடுங்கியிருந்து, அவர்கள் இருவரையும் கவனிப்பது போல தோன்றின. அவனிடம் பேசுவதற்கு என்று அவரிடமும், அவரிடம் பேசுவதற்கென்று அவனிடமும் இரகசியங்கள் இருந்தன. முதலில் யார் தொடங்குவது, எப்படித் தொடங்குவது என்று ஒரே சமயத்தில் இருவருமே தயங்கி நின்றாற் போலிருந்தது அவர்கள் நிலை. அவருடைய அந்தப் பெரிய கண்கள், அவனையே நேருக்கு நேர் நோக்கிக் கொண்டிருந்தன. சில கணங்கள் தயக்கத்திலும், மெளனத்திலும் கழிந்த பின் அவர் தாம் முதலில் பேசினார்: “இந்தக் கணத்தில் நீ என்னிடம் கேட்கத் தவிப்பது என்னவாக இருக்கும் என்பதை நானே புரிந்து கொள்ள முடிகிறது. இளையநம்பி! நான் உன்னிடம் கேட்க வேண்டியவற்றைக் கேட்டுவிட்டால், அதன்பின் நீ என்னிடம் கேட்க நினைத்ததைக் கேட்க வேண்டிய அவசியமே இல்லாமலும் போய்விடலாம்! அரசர்கள் கொடுக்க வேண்டியவர்களே, தவிர கேட்க வேண்டியவர்கள் இல்லை! ஆனால், நீ இன்னும் முறைப்படி முடி சூட்டிக் கொண்டு பாண்டிய நாட்டின் அரசன் ஆகிவிடவில்லை. ஆகவே நான் உனக்குக் கட்டளையிடலாம். அரசனாகிய பின், உன்னிடம் என் வாக்குறுதிகளை நான் கேட்க முடியுமோ, முடியாதோ? இப்போதே உன்னிடம் அவற்றைக் கேட்டு விடுகிறேன்." “ஐயா! தாங்கள் அப்படிச் சொல்லக் கூடாது! இந்த அரசே தாங்கள் மீட்டுத் தந்தது. இதில் தங்களுக்கில்லாத உரிமையா? தாங்கள் வேண்டும் வாக்குறுதிகள் எவையாயினும் சிரமேற் கொண்டு அவற்றை உடனே நிறைவேற்றுவது என் கடமையாகும்.” “உன் பணிவைப் பாராட்டுகிறேன்; ஆனால் உன் பணிவையும், அன்பையும் தவறாகப் பயன்படுத்தி, முன் கேட்காத புதிய வாக்குறுதிகள் எதையும் இப்போது மீண்டும் நான் கேட்டு விட மாட்டேன், பயப்படாதே. சூரிய சந்திரர்கள் சாட்சியாக ஆலவாய் இறையனார் மேலும், இருந்த வளமுடைய பெருமாள் மேலும் ஆணையிட்டு எனக்கு இரு வாக்குறுதிகள் நீ அளித்திருக்கிறாய். என் சார்பில் போரில் உதவுவதற்கு நிபந்தனையாகச் சேர மன்னனுக்கு ஒரு வாக்குறுதியும் தனியே அளித்திருக்கிறாய்..” “ஆம், ஐயா! நன்றாக நினைவிருக்கிறது. அந்த வாக்குறுதிகள் என்னவென்று கூறினால், இப்போதே அவற்றை நான் நிறைவேற்றக் காத்திருக்கிறேன்.” அவர் இதற்கு மறுமொழி கூறத் தயங்கி, அவனை நோக்கி மெல்லப் புன்னகை பூத்தார். பின்பு கூறலானார். “என் வாக்குறுதிகள் இரண்டும் சுலபமானவை. பாண்டிய நாட்டின் நீண்ட கால நலனை மனத்திற் கொண்டவை. அவற்றை நீ உடனே ஏற்றுக் கொண்டு விட முடியும். ஆனால்... சேரனுக்காக நிறைவேற்ற வேண்டிய வாக்குறுதி மட்டும் சற்றே சிரமமானது...?” “சிரமமானது என்று எதுவுமே இருக்க முடியாது ஐயா! போரில் நமக்கு உதவி, நம் நாட்டை மீட்டுக் கொடுத்தவர்களுக்கு, நாம் அளித்த வாக்குறுதியை மறக்க முடியுமா?” “மறக்க முடியாது. மறக்கவும் கூடாது! ஆனால், இந்த உலகில் கண்ணீரோடுதான் சில வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டியிருக்கும்..." “தாங்கள் கூறுவது புரியவில்லையே ஐயா?” அவன் குழப்பத்தோடு அவர் முகத்தை ஏறிட்டுப் பார்த்தான். அவரோ தயங்கினாற் போல் நின்றார்; மீண்டும் மெளனமும், ஒருவரை ஒருவர் எதிர்பார்க்கும் அமைதியும், இருவருக்கு இடையேயும் நிலவின. மெளனம் நீங்கி அவனே, அவரைக் கேட்டான்:- “தயை கூர்ந்து வாக்குறுதிகளைச் சொல்லுங்கள் ஐயா?” “இளையநம்பீ! என் முன்னோர்கள் பரம்பரையாகச் சங்கமிருந்து தமிழாய்ந்த புலவர்கள். நான் அந்த மரபில் வந்தவனாக இருந்தும், என் காலம் முழுவதும் நான் களப்பிரர்களை ஒழிக்கச் சாதுரியமும், சூழ்ச்சியும் புரிவதிலேயே கழித்து விட்டேன். காரணம், களப்பிரர் ஆட்சி நடந்த தலைமுறைகளில், அவர்கள் சிறிது சிறிதாகத் தமிழ் நாகரிகத்தையே அழித்து விட முயன்றார்கள். தமிழ்ச் சங்கத்தை அழித்தார்கள். தமிழ்ப் புலவர்களைச் சீரழிய விட்டார்கள். ஆகவே, நீ செய்ய வேண்டிய முதற் காரியம், உன் முன்னோர்கள் புகழ் பெற நடத்திய தமிழ்ச் சங்கத்தை மீண்டும் நடத்திப் புலவர்கள் தமிழாராயவும், நூல்களை அரங்கேற்றவும், பரிசில் பெறவும் உதவுவதாக இருக்க வேண்டும். ஒரு மொழியோடு, நாகரிகமும் அழியாமற் காக்க இதை நீ உடனே செய்ய வேண்டும். இந்த வேண்டுகோளை உன் முதல் வாக்குறுதியால் நிறைவேற்று!” “மகிழ்ச்சியோடு நிறைவேற்றுகிறேன் ஐயா! இனி அடுத்த வாக்குறுதிக்கான வேண்டுகோளைச் சொல்லுங்கள்!” “உன் ஆட்சிக் காலம் வரை, எக்காரணத்தைக் கொண்டும் நீ பாண்டிய நாட்டின் எல்லைப்புற நாடுகளைப் பகைத்துக் கொள்ளக் கூடாது. அவர்களோடு போரைத் தவிர்க்க வேண்டும். இல்லையேல், மீண்டும் களப்பிரர்கள் தனியாகவோ, வேறு யாருடனாவது சேர்ந்தோ, உன் மேல் படையெடுத்து வருவது தவிர்க்க முடியாததாகி விடும். நட்புள்ள எல்லைப்புற நாடுகள் இருந்தால், உன்னால் துணிவாக எதையும் சாதிக்க முடியும்!” “தங்களது இந்த இரண்டாவது வாக்குறுதியையும் நிச்சயம் நிறைவேற்றுவேன் ஐயா!” “பொறு! இப்படி அவசரப்பட்டு ஒப்புக் கொள்வதை விட இந்த இரண்டாவது வாக்குறுதியை ஒரளவு நிதானமாகச் சிந்தித்த பின், ஒப்புக் கொள்வதே உனக்கு நல்லது!” “சிந்திக்கவோ, தயங்கவோ இதில் எதுவும் இல்லை ஐயா! எனக்கும் நாட்டுக்கும் நன்மை தராத எதையுமே, தாங்கள் ஒரு போதும் கூற மாட்டீர்கள்...” “இதில் ஒரு வேளை உன் நன்மை பாதிக்கப்பட்டாலும், நாட்டின் நன்மையைப் பாதிக்க விட மாட்டேன் நான்” என்று அவன் கூறிய வாக்கியத்தையே சிறிது திருத்தி, அர்த்தம் நிறையச் சிரித்த படியே மீண்டும் திருப்பிச் சொன்னார் அவர். அதை ஏன் அவர் அப்படித் திருப்பிச் சொல்கிறார் என்பது அவனுக்கு விளங்கவில்லையாயினும், சேரனின் சார்பில் நிறைவேற்றியாக வேண்டிய மூன்றாவது வாக்குறுதியைக் கூறுமாறு அவன் அவரை வேண்டினான்:- எதற்காகவோ அவர் மீண்டும் தயங்கினார். அவனைக் கூர்ந்து பார்த்தார். பின்பு மெல்ல அதைச் சொல்லத் தொடங்கினார்: “போரில் நமக்கு உதவியதற்கு ஒர் அடையாளப் பிரதியுபகாரமாகச் சேரமன்னனின் மகளைப் பாண்டிய நாட்டு வெற்றிக்குப் பின் முடி சூடும் முதற் பாண்டியனின் பட்டத்தரசியாக ஏற்க வேண்டும் என்பதுதான் மூன்றாவது வேண்டுகோள்! இப்போதுள்ள சூழ்நிலையில் பாண்டிய நாட்டின் எல்லைப்புற அரசன் ஒருவனிடம், பெண் கொண்டு மணந்து உறவை வளர்ப்பது நாட்டின் பாதுகாப்பிற்கு மிக மிக இன்றியமையாதது ஆகும்” இதைக் கேட்டு இளைய நம்பியின் முகம் போன போக்கைப் பார்த்து அவர் பேச்சைப் பாதி யிலேயே நிறுத்திக் கொண்டார். எதுவுமே பதில் பேசத் தோன்றாமல், அப்படியே திக் பிரமை பிடித்து நின்று விட்டான் அவன். “நான் உன்னிடம் கேட்க வேண்டியவற்றைக் கேட்டு விட்டால், அதன் பின், நீ என்னிடம் கேட்க நினைத்ததைக் கேட்க வேண்டிய அவசியம் இல்லாமலும் போய் விடலாம்” என்று, உரையாடலைத் தொடங்கும் போதே, அவர் கூறியதை இப்போது மறுமுறை நினைத்தான் அவன். நினைவுகள் தளர்ந்து, உணர்வுகள் ஓய்ந்து அந்த வேண்டுகோளைச் செவியுற்ற பின், கண்களில் நீர் மல்க, அவன் தம் எதிரே நின்ற வேதனைக் கோலத்தைக் கண்டு, அவருக்கே வருத்தமாக இருந்தது. அவர் கூறினார்- “என் மேல் தவறில்லை இளையநம்பி! 'இந்த உலகில் கண்ணீரோடுதான் சில வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண் டியிருக்கும்’ என்று நான் முதலிலேயே சொல்லி விட்டேன்.” “இதில் என் கண்ணீர் மட்டுமில்லை ஐயா, திருமோகூர்க் காராளர் மகள் செல்வப்பூங்கோதையின் கண்ணீரும் அடங்கியிருக்கிறது...” “எனக்கு எல்லாம் தெரியும்! கொல்லனிடம் இருந்து நான் அனைத்தையும் கேட்டறிந்திருக்கிறேன். நானாகவும் உங்கள் நேசத்தை அநுமானித்திருந்தேன். காராளர் மகளை மணக்க விரும்பும் உன் ஆசையைத்தான், நீ இன்று இங்கே என்னிடம் வெளியிட இருந்தாய் என்பதைக் கூட நான் அறிவேன். அதனால்தான், ‘நான் என் வாக்குறுதிகளைக் கூறிய பின், நீ என்னிடம் கேட்க எதுவும் இல்லாமலும் போகலாம்’ என்று முதலிலேயே கூறியிருந்தேன்!” “இப்படி ஒரு நிலை வரும் என்றால், நான் இத்தனை பெரிய சாம்ராஜ்யத்தை முயன்று வென்றிருக்க வேண்டியதே இல்லை! ஒரு பாவமும் அறியாத பேதைப் பெண்ணொருத்தியைக் கண்ணீர் சிந்தி அழவிட்டு விட்டு நான் அரியணை ஏறுவதை விடச் சாவது மேலான காரியமாக இருக்கும் ஐயா!" “இப்படி ஒரு கோழையைப் போல் பேசாதே! நீ நினைத்தா, இந்த வெற்றியும் மாற்றமும் விளைந்தன? நாட்டின் நன்மையை விட எந்தத் தனி ஒருத்தியின் கண்ணீரும் பெரியதில்லை. 'நாட்டின் நன்மைக்குக் குறுக்கே நிற்கமாட்டேன்’ என்று அந்த ஒருத்தியிடமே, கொற்றவை சாட்சியாகச் சத்தியம் செய்து வாக்கு வாங்கியிருக்கிறேன் நான்...” “நீங்கள் வாக்கு வாங்கியிருக்கலாம்! ஆனால், இந்த நாட்டின் வெற்றியை நாடி நான் முதன் முதலாகத் திருக்கானப் பேரிலிருந்து புறப்பட்டு வந்த போது அந்த வெற்றிக்காகத் தங்களைக் காண வேண்டிய முதல் ஒற்றையடிப் பாதையை எனக்குக் காண்பித்தவள் அவள்...” “சில ஒற்றையடிப் பாதைகளில் அதைக் காட்டுகிறவர் உடன் நடந்து வர முடியாமலும் போய்விடலாம்.” “ஆனால், அதில் நடக்கத் தொடங்கியவன் அதன் வழியே நடந்து ராஜபாட்டைக்குச் சேர்ந்தவுடன், முதற் சிறு வழியைக் காட்டியவர்களை மறந்து விடுவது, என்ன நியாயம் ஐயா?” “இளையநம்பீ! நியாயங்களைக் கேட்டு என்னைச் சோதனை செய்யாதே. இதில் உன்னையும், செல்வப் பூங்கோதையையும் விட என் அந்தராத்மா கோவென்று கதறி, உங்களைப் போல் அழ முடியாதபடி அறிவும், சாதுரியமுமே என்னைக் கல்லாக்கியிருக்கின்றன என்பதை நீ அறிவாயா?” இதைக் கேட்ட பின், அவனால் அப்போது அவரை எதிர்த்து எதுவும் பேச முடியவில்லை. “மூன்று வாக்குறுதிகளை நீயும், 'நாட்டின் நன்மைக்குக் குறுக்கே நிற்பதில்லை’ என்ற ஒரு வாக்குறுதியைச் செல்வப் பூங்கோதையும் ஏற்கிறீர்கள்?" என்று அவர் மீண்டும் உரத்த குரலில் கட்டளை போல் கூறியதும், கடமையை உணர்ந்து ‘ஆம்’ என்பதற்கு அடையாளமாகக் கண்ணீரோடு அவர் முன்பு தலை வணங்கினான் அவன். கோர்த்துப் பேசுவது போல் வேண்டுகோளை மெல்ல வெளியிட்டார். செல்வப் பூங்கோதையிடம் நேரில் கூறத் தயங்கி, அவள் தந்தையிடம் பேசுவது போல் அவர் இவற்றைப் பேசியிருந்தாலும், அவளை எதிர் நோக்கியே சொற்கள் கூறப்பட்டிருந்தன. அவர் எதிர்பார்த்தது போல், அவள் கண்ணீர் சிந்தி அழவில்லை. கதறவில்லை. சீறவில்லை. சாடவில்லை. ஒரு சிலையாகி நின்று விட்டாற் போல் ஆடாமல், அசையாமல் அவரையே பார்த்துக் கொண்டு நின்றாள். ஏளனமும், சோகமும், வரட்சியும், விரக்தியும் அவள் விழிகளில் மாறி, மாறித் தோன்றுகிறாற் போல் அவர் பார்வையில் பட்டது. அவள் இன்னும் சாந்தமாகவே நின்று கொண்டிருந்தாள். நீண்ட நேரம் அப்படி நின்ற பின், அவரைப் பார்த்து விரக்தியோடு சிரித்தாள் அவள். “உன் சிரிப்புக்கு என்ன அர்த்தம் என்றும் புரியவில்லை செல்வப் பூங்கோதை?” “ஒன்றுமில்லை ஐயா! ஏதோ நினைத்துக் கொண்டேன். சிரித்தேன். அதை நீங்கள் புரிந்து கொண்டாலும் புரிந்து கொள்ளா விட்டாலும் எனக்குக் கவலை இல்லை. ஏனென்றால், உங்களைப் போன்ற மேதைகளுக்கு அறிவு மட்டும்தான் இருக்கிறது. இதயம் இல்லை. இதயம் இல்லாதவர்களால், இதயம் உள்ளவர்களின் அழுகையையும், சிரிப்பையும், கண்ணீரையும், வேர்வையையும் புரிந்து கொள்ள முடியாதுதான். இந்த உலகில் உங்களைப் போன்றவர்கள், ஒவ்வொரு தலைமுறையிலும், யாராவது ஒரு பேதையின் அன்பைப் பலியிட்டு, அந்தப் பலிபீடத்தின் மேல் சிம்மாசனங்களின் உறுதிக்குக் கால்களை நடுகிறீர்கள்... செய்யுங்கள்... எத்தனை காலம் வேண்டுமானாலும் இப்படிச் செய்து பாருங்கள். உங்களால் மனித இதயங்களையும் அன்பையும் சேர விடாமற் செய்ய முடியலாம். ஆனால் அழித்து விட முடியாது..." “உன் சொற்களால் பன்னெடுங்காலமாகச் சாகாமல் வடக்கிருப்பது போல், உயிருடன் நோன்பிருந்து ருசிகளை வெறுத்திருக்கும் இந்தக் கிழவனை இன்று நீ கொல்கிறாய் செல்வப்பூங்கோதை!” “ஏமாற்றத்தினால் ஏற்கெனவே செத்துப் போய் விட்டவர்கள், எப்படி ஐயா மற்றவர்களைக் கொல்ல முடியும்?” “நாம் பிழை செய்து விட்டோமோ என்ற தாழ்மை உணர்வை, என் வாழ்நாளிலேயே இன்று உன் முன், இந்தக் கணத்தில் அடைவது போல் வேறென்றும் எங்கும் நான் அடைந்ததில்லை செல்வப்பூங்கோதை! மகளே! நான் இதற்கு மேல் தாங்கமாட்டேன்! என்னைப் பொறுத்துக் கொள்...” “ஐயா! அதிகம் பேசி, உங்களைப் புண் படுத்தி விட்டதற்காக வருந்துகிறேன். உங்களுக்குக் கொற்றவை சாட்சியாக வாக்கு அளித்தபடி பாண்டிய நாட்டின் எதிர் கால நலனுக்கு நான் குறுக்கே நிற்க மாட்டேன். நீண்ட நாட்களுக்கு முன் தனக்கு நியாயம் கிடைக்கவில்லை என்பதற்காக ஒரு பெண், இந்த மதுரையையே தீயிட்டு எரித்தாள். இன்று எனக்கும் நியாயம் கிடைக்கவில்லை. ஆனால், நான் அதற்காக இன்று மதுரையை எரிக்கமாட்டேன். எரிக்கவும் கூடாது; இந்த ஆறாத்துயரில் என் இதயம் மட்டுமே எரியும். அவர், சேரன் மகளையோ, சோழன் மகளையோ அல்லது பாண்டிய நாட்டின் எதிர்கால நலனுக்கும், எல்லைப்புறப் பாதுகாப்புக்கும் அவசியமான எல்லா அரசர்களின் எல்லாப் பெண்களையுமோ மணந்து கொள்ளட்டும். அதைப் பற்றி நான் வருந்தவில்லை. தயை செய்து எனக்கும் என் பெற்றோருக்கும் இப்போது இங்கிருந்து விடை கொடுத்து அனுப்புங்கள்.” இப்படி ‘வருந்தவில்லை’ என்று அவள் கூறிய குரலிலேயே துயரம் வெள்ளமாகத் தெரிந்தது. ஆசி கூறும் பாவனையில், வலது கையை உயர்த்தியபடியே தளர்ந்து கண் கலங்கி நின்றார். சிறிது நேரத்திற்கு முன் அவளால் இதய மற்றவர் என்று குற்றம் சாட்டப்பட்ட அந்தப் பெரியவர். அவர்கள் அவரிடமிருந்து விடை பெற்றார்கள். புறப்படு முன் காராளரை நெஞ்சாரத் தழுவிக் கொண்ட வித்தகர், “தயை கூர்ந்து உடனே திருமோகூருக்குத் திரும்பிப் போய் விடாதீர்கள். முடிசூட்டு விழாவின் போது பழம் பெரும் பாண்டிய குல மரபுப்படி உங்களைப் போல வேளாளர் ஒருவர்தான் திருமுடியை எடுத்து அளிக்க வேண்டும்! இங்கே இருந்து அதைச் செய்வதற்கு உரியவர் நீங்களே!” என்று வேண்டினார். காராளரும் உணர்வு நெகிழ்ந்த குரலில், அதற்கு இணங்கினார். காராளரும், அவர் மனைவியும், மகளும் விடை பெற்றுச் சென்ற பின்பும் கூட, நெடு நேரம், மேலே எதுவும் செயற்பட முடியாமல் பிரமை பிடித்தாற் போல் அமர்ந்திருந்தார் மதுராதிபதி வித்தகர். நிறைவேறாத காரியங்களைப் பற்றிக் கவலைகள் பட நேரலாம். ஆனால் அவரோ, அப்போது நிறைவேற்றிவிட்ட சில காரியங்களை நினைத்துக் கவலையும், துயரமும் பட நேரிட்டிருந்தது. இந்த வெற்றி மகிழ்ச்சிக்குக் கீழே யார் யாருடைய துயரங்கள் மூடப்பட்டிருக்கின்றன என்பதை எண்ணிக் கணக்கிட்ட போது, எதற்கும் கலங்காத அவர் மனமும் கலங்கியது. உருகியது. உழன்றது. காராளர் மகள் செல்வப் பூங்கோதைதான் எல்லாரையும் விட அதிகமாக அழுது அடம் பிடிப்பாள் என்று எதிர் பார்த்திருந்தார் அவர். ஆனால் அவள் தன்னை எதிர் கொண்ட அடக்கமும், அமைதியும் அவரையே உள்ளமுருகச் செய்து விட்டன. அவளுடைய சகிப்புத் தன்மையும், கொடுத்த வாக்குறுதியைக் காக்கும் வன்மையும் இவ்வளவு பெரிதாயிருக்கும் என்று அவர் எதிர்பார்க்கவே இல்லை. பற்றற்ற துறவிகளை எல்லாம் விடப் பெரிய துறவியாக அவள் நடந்து கொண்டிருந்தாள். அந்தச் சமயத்தில் அவளுக்கு முன். அவரே கூசிக் கூனிச் சிறிதாகியிருந்தாற் போல் தமக்குத் தாமே உணர்ந்திருந்தார். அவள் கூறியிருந்த சொற்கள் இன்னும் அவர் செவிகளில் ஒலித்துக் கொண்டே இருந்தன. உறுத்திக் கொண்டேயிருந்தன: “உங்களுக்குக் கொற்றவை சாட்சியாக வாக்களித்தபடி, நாட்டின் எதிர்கால நலனுக்கு நான் குறுக்கே நிற்கமாட்டேன். நீண்ட நாட்களுக்கு முன் தனக்கு நியாயம் கிடைக்கவில்லை என்பதற்காக, இங்கு ஒரு பெண் மதுரையையே எரித்தாள். இன்று எனக்கும் நியாயம் கிடைக்கவில்லை. ஆனால் அதற்காக நான் இன்று மதுரையை எரிக்க மாட்டேன். எரிக்கவும் கூடாது. இந்த ஆறாத்துயரில் என் இதயம் மட்டுமே எரியும்.” என்ற அவளுடைய சொற்களை நினைத்த போது, இவ்வளவு பெரிய அன்பைப் பிரித்து வைத்துத்தான் ஒரு பேரரசைக் காப்பாற்ற வேண்டுமா என்று அவர் மனமே நடுங்கியது. முன்பு திருமால் குன்றத்தில் மறைந்திருந்த போது, நினைத்துத் திட்டமிட்டபடி, தாம் எல்லா பந்த பாசங்களிலிருந்தும் விடுபட்டு, உடனே இப்போதே துறவியாக, வடதிசை நோக்கி இமயத்தையும், கங்கையையும் நாடிப் புறப்பட்டு விடலாமா என்று கூடத் தோன்றியது அவருக்கு. ‘பல்லாண்டு காலமாகப் பாடுபட்டு மீட்ட பாண்டிய நாட்டின் வளர்ச்சிக்கு, அருகிலிருந்து அறிவுரை கூறாமல், பெரியவர் இப்படி விலகிப் போகலாமா?’ என மக்கள் தம்மைப் பழி தூற்றுவார்களோ என்ற ஒரே பயத்தில்தான், அதைச் செய்யத் தயங்கினார் அவர். வாழ்க்கையின் ஒரே குறிக்கோளாகிய பாண்டிய நாட்டை மீட்கும் பணியைச் செய்த உடன், அதை விட்டு விட்டு ஓடுவது கோழைத் தனமாகிவிடும் என்றும் தோன்றியது. அவரால் எல்லாவற்றையும் துறக்க முடிந்தது. தேசபக்தியைத் துறக்க முடியவில்லை. நாட்டுப் பற்றை விட முடியவில்லை. காராளர் போன்ற வேண்டியவர்களைக் கண்ணீர் சிந்த வைத்தும் கூட, நாட்டைக் காக்க விரும்பினார் அவர். தாம் நடந்து கொண்ட விதத்தினால், காராளர் மகள் செல்வப்பூங்கோதை அவருடைய கருங்கல் மனத்தையும் இளக்கிக் கலங்க வைத்திருந்தாள். அவளுக்காக உருகி வருந்தினார் அவர். “உங்களைப் போன்ற மேதைகளுக்கு வெறும் அறிவு மட்டும்தான் இருக்கிறது. இதயம் இல்லை. இதயம் இல்லாதவர்களால், இதயமுள்ளவர்களின் அழுகையையும், சிரிப்பையும், கண்ணீரையும், வேர்வையையும் புரிந்து கொள்ள முடியாதுதான்?” என்று அவள் சற்று முன் தன்னைக் கேட்டிருந்த சொற்கள் இன்னும் அவருடைய உள்ளத்தைச் சுட்டுக் கொண்டிருந்தன. அவரால் அதைச் சுலபமாக மறந்து விட முடியவில்லை. ஓர் அழகிய பேதையின் தூய்மையான உள்ளத்தைக் கசக்கிப் பிழிந்து துயரப்படுத்தி அந்தத் துயரத்தின் மேல் ஓர் அரசை நிலை நாட்டித்தான் ஆக வேண்டுமா என்ற கேள்வி இப்போது அவருள்ளேயும் எழுந்தது. சேரனுக்குக் கொடுத்திருந்த வாக்குறுதி நினைவு வரவே, உடனே இப்படிப் புறக்கணிக்க முடியாததாகவும் இருந்தது அந்தப் பிரச்னை. ‘இளையநம்பியையும் கண் கலங்கச் செய்து, காராளர் செல்வ மகளையும் கண்கலங்கச் செய்து, இவர்கள் இருவரையும் தவிர, அவருடைய அநுமானத்திலேயே அவருக்குப் புரிந்திருந்தபடி கணிகை இரத்தினமாலையையும் அந்தரங்கமாக நெஞ்சழிய வைத்து, இப்படி நாம் ஓர் அரச தந்திரச் சதுரங்கம் ஆடி விட்டோமே’ என்று எண்ணிய போது, எதற்கும் கலங்கியறியாத அவரது அந்த உள்ளமும் கலங்கியது. கழிவிரக்கப்பட்டது. தென்னவன் மாறனின் கழு ஏற்றம், பெருஞ்சித்திரனின் மரணம் ஆகியவற்றின் போதெல்லாம் கூட ஆறுதலடைய முடிந்தது போல், இந்தக் காராளர் மகளின் வேதனையைத் தாங்கி, மறந்து ஆறுதலடைய முடியாமல் தவித்தார் அவர். அந்தத் திருமோகூர்ப் பெண் சீறிச் சினந்து ஆவேசமாக எதிர்த்து வாதிடாமல் அமைதியாக அடங்கிப் பணிந்தே, தன்னை வென்று விட்டிருப்பது இப்போதுதான் அவருக்கு மெல்ல மெல்லப் புரியத் தொடங்கியது. தம் இதயம் இவ்வளவு தவிப்பதை சிறிதும் புரிந்து கொள்ளாமல், ‘உங்களுக்கு இதயமில்லை’ என்று அவள், தம் முன்பு நின்று குற்றம் சுமத்தியதையும் நினைத்தார் அவர். தம் இதயம் தனிமையில் படும் வேதனையை அவளறியும் படி, அவளிடமே நெஞ்சைப் பிளந்து காண்பித்து விட முடியுமானால், எவ்வளவு தெளிவாயிருக்கும் என்றும் தோன்றியது அவருக்கு. கவலைகள் இதயத்தை வாட்டிப் பிழிந்தாலும், சேர வேந்தனிடம் அளித்துள்ள வாக்குறுதியையும் அவ்வளவு எளிதாக மறந்துவிட முடியாதென்பதையும் அவர் உணர்ந்திருந்தார். அதிக நேரம் அவர் கவலைப்பட்டு ஒடுங்கிச் செயலிழந்து அமர்ந்திருக்க முடியவில்லை. பரிவாரங்களோடு கோநகருக்கு வந்து கொண்டிருக்கும் சேர வேந்தனை வரவேற்க அவர் ஆயத்தமாக வேண்டியிருந்தது. ஊரறிய உலகறிய வெளியிடவோ, பிறரிடம் பங்கிட்டுக் கொண்டு பேசிக் கவலை தவிர்க்கவோ முடியாத அந்தரங்கத் துயரங்களை மனத்திலேயே புதைத்துக் கொண்டு எழுந்து நடந்தார். அவர் சேரனை எதிர் கொண்டு வரவேற்கப் பரிவாரங்களுடனும், அலங்கரிக்கப்பட்ட சித்திரத் தேருடனும், அரண்மனை முன்றிலில் இளையநம்பி முதலியவர்கள் ஏற்கனவே காத்திருப்பதாகவும், அவர்கள் அவரை எதிர்பார்ப்பதாகவும், அழகன் பெருமாள் வந்து அழைத்தான். அவரது முகத்தில் அமைதியின்மை தெரியா விட்டாலும், வாட்டம் இருப்பதை அழகன் பெருமாள் காணமுடிந்தது. பாண்டியப் பேரரசை மீண்டும் வென்று உருவாக்கிய மகா மேதையின் அந்தக் கணத்துக் கவலைகள் என்னவாக இருக்கும், எவ்வளவாக இருக்கும் என்பதை அவனாலும் அப்போது கணிக்க முடியவில்லை. ஃ⁠ஃ⁠ஃ கோலாகலமான வரவேற்பிற்கிடையே சேரவேந்தன் தன் பரிவாரங்களோடும், பட்டத்தரசியோடும், பாண்டிய நாட்டின் பட்டத்தரசியாகச் சில தினங்களில் ஆகும் பேறு பெற்ற தன் மகளோடும் மதுரை மாநகருக்கு வந்து சேர்ந்தான். மதுரை மாநகர் விழாக் கோலம் பூண்டது. அலங்கரிக்கப்பட்ட யானை மேல் அமர்ந்து, வள்ளுவன் முடிசூட்டு விழாச் செய்தியையும், பாண்டியனுக்கும், சேரன் மகளுக்கும் மணமங்கலம் நிகழ இருக்கும் செய்தியையும் முரசறைந்து நகருக்கும், சுற்றுப்புறங்களுக்கும் அறிவித்துப் பரப்பினான். நகர் எங்கும் உண்டாட்டுகள் நிறைந்தன. நகர் எங்கும் பெருஞ் சோற்றுப் படையல்கள் நிகழ்ந்தன. வீரர்களும், புலவர்களும், கலைஞர்களும், பாணர்களும், பாடினிகளும் அரண்மனைக் கொலு மண்டபத்திலிருந்து கூட்டம், கூட்டமாகப் பரிசில் பெற்றுத் திரும்பிக் கொண்டிருந்தனர். மங்கல வாத்தியங்களின் இன்னிசை ஒலி நகரம் எங்கும் இடைவிடாமல் ஒலித்துக் கொண்டிருந்தது. அரண்மனை அந்தப்புர மகளிருக்கு அலங்கரிக்கும் உரிமை பெற்ற இரத்தினமாலை, தான் கோர்த்து வைத்திருந்த முத்துமாலையால், இளையநம்பியின் பட்டத்தரசியாக வந்திருக்கும் சேரன் மகளை அலங்கரிக்கும் போது, தன் சொந்த உணர்வுகளை எவ்வளவோ அடக்கிக் கொள்ள முயன்றும், அவளுக்குக் கண் கலங்கியது. நெஞ்சில் ஏதோ வந்து அடைப்பது போலிருந்தது. கூர்ந்து நோக்கினால் அவள் சேரன் மகளுக்கு அணிவித்துவிட்ட முத்து மாலையைத் தவிர, அவளுடைய கண்களிலும் ஒரு முத்துமாலை பிறந்து கொண்டிருந்தது தெரியும். எந்த முத்துமாலையைத் திருமோகூர்க் காராளர் மகள் செல்வப் பூங்கோதைக்கு அணிவிக்க வேண்டியிருக்கும் என்று அவள் எண்ணி எண்ணித் தொடுத்திருந்தாளோ, அதே முத்துமாலையினை இப்போது சேரன் மகளுக்கு அணிவிக்க நேர்ந்திருந்தது. முன்பு, தன் துயரத்துக்காகக் கண்ணீர் சிந்திய அவள், இப்போதெல்லாம் செல்வப்பூங்கோதைக்கு நேர்ந்து விட்ட பெருந் துயரத்துக்காகவும், அந்த நாட்டுப்புறத்துப் பேதைப் பெண்ணை எண்ணியும் கண்ணீர் சிந்தினாள். - “முடிசூட்டு விழாவும், மணமங்கலமும் நிகழ்கிற வரை இருந்து செல்ல வேண்டும்” என்று பெரியவர் வேண்டிக் கொண்டதற்கு இணங்கி, அரண்மனையில் தங்கியிருந்த காராளரும், அவர் மகளும், மனைவியும் தங்கள் மனவேதனை பிறருக்கு வெளிப்புட்டுத் தெரிந்து விடாமல், மிகவும் அடக்கமாகவும், எதுவுமே நடவாதது போலவும் இருக்க முயன்றனர். ஒரே ஒரு கணம் எப்படியாவது செல்வப் பூங்கோதையைக் கண்டு, தன் நிலைமையை விளக்கிட எண்ணிய இளையநம்பிக்கு, அரண்மனையின் பரபரப்பிலும், முடிசூட்டு விழா ஆரவாரங்களிலும் அது இயலாமலே தட்டிப் போய்க் கொண்டிருந்தது. அரண்மனையில் மங்கல நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றாய் நிகழ்ந்தன. முடிசூட்டு விழாவுக்குப் பல்லவன் வரவில்லை என்றாலும், அவன் சார்பில் ஒர் அரச தூதர் வந்திருந்தார். முடிசூட்டுவிழா நேரத்தில், காராளர் உழவர் குடிக்கே உரிய கைராசியோடு முத்துகள் பதித்த திருமுடியை எடுத்து, அரசனுக்கு அணிவதற்காக அளித்தார். உடனே முடிசூட்டு விழாக் காலத்துத் தொன்று தொட்டு வரும் மரபாக முதுபெரு புலவர் ஒருவர் எழுந்து முன்பே இளையநம்பிக்கு அளிக்கப்பட்டிருந்த ‘இருள் தீர்த்த பாண்டியர்’ என்ற சிறப்புப் பெயரைச் சூட்டி அரசனை வாழ்த்தினார். உடனே முடி சூடிக் கொண்ட பாண்டியன் இளையநம்பியே எழுந்து, “என் குடிமக்களில் அனைவரினும் என்னுடைய பேரன்பின் இருப்பிடமான ஒருவர் முன்பே, எனக்குப் ‘பாண்டிய கடுங்கோன்’ என்று கோபமாகச் சிறப்புப் பெயர் சூட்டிவிட்டார். அப்படிப் பெயர் சூட்டிய அன்பு உள்ளம் இப்போது இந்தப் பேரவையிலேயே இருந்தாலும், உங்களிடம் யாரென்று கூற முடியாமல் இருக்கிறேன். என் மக்கள் இந்தக் கணத்திலிருந்து இனி எந்நாளும் என்னைப் ‘பாண்டியன் கடுங்கோன்-என்று அழைப்பார்களாயின், அந்தப் பெயரை எனக்குச் சூட்டியவரின் நினைவால் நான் அளவிலா மகிழ்ச்சி கொள்வேன்” என்று பல்லாயிரம் பேர்களிடையே வெளிப்படையாகப் பிரகடனம் செய்த போது, பெண்களின் கூட்டத்தோடு கூட்டமாக, நீறு பூத்த நெருப்பாய் நின்று கொண்டிருந்த செல்வப்பூங்கோதையின் அழகிய கண்களில் நீர் மல்கியது. யாரும் தன்னைக் கவனித்து விடாமல், தன்னுடைய கண்ணீரை அவசர அவசரமாகத் துடைத்துக் கொண்டாள் அவள். ஆனாலும் அந்தப் பெருங் கூட்டத்தில், இரண்டு கண்கள், அப்போதும் அவளைக் கவனிக்கத் தவறவில்லை. - . அவை, மதுராபதி வித்தகரின் கண்கள். தாங்கள் கூறிய ‘இருள் தீர்த்த பாண்டியன்’ என்னும் பொருள் பொதிந்த பெயரை விட்டு விட்டு, அரசன் தானே ஏன் கடுங்கோன் என்ற இங்கிதமில்லாத குரூரமான பெயரைத் தனக்குச் சூட்டிக் கொண்டான் என்பது அந்த அவையிலிருந்த புலவர்களுக்கு மட்டும் புரியாத புதிராகவே இருந்தது. முடி சூட்டு விழா நிகழ்ந்த மறு நாள், அதிகாலையில் இருள் பிரியுமுன்பே வைகறையில் காராளர் குடும்பத்தினர் திருமோகூருக்குப் பயணமானார்கள். கொல்லனும் அவர்களோடு புறப்பட்டு விட்டான். அந்த வேளையில் அரண்மனை முன்றிலில், பெரியவர் மதுராபதி வித்தகரும், திருக்கானப்பேர்க் கிழவர் பாண்டிய குல விழுப்பரையரும், அழகன் பெருமாளும் விடை கொடுத்து அவர்களை வழியனுப்பினர். கண்களில் நீர் சரிவதையும், உள்ளே இதயம் பொருமுவதையும் மறைத்தவளாய், இருளில் சித்திரம் அசைவது போல் நடந்து வந்து, பெரியவரை அவர் பாதங்களில் சிரந் தாழ்த்தி வணங்கினாள் செல்வப்பூங்கோதை. தம் பாதங்களில் வெம்மையாக அவள் கண்ணீர் நெகிழ்வதை உணர்ந்து, மனம் கலங்கினார், எதற்கும் கலங்காத அந்த மகா மேதை. நாத்தழுதழுக்க அவர் அவளிடம் கூறினார்:- “என்னைப் பொறுத்துக்கொள் மகளே! என்மேல் தவறில்லை! நீ என்னிடம் திருமோகூரில் அன்று வாக்குறுதி அளித்துச் சத்தியம் செய்த போதே, 'சில சத்தியங்கள் செய்யும் போது பொதுவாக இருக்கலாம்: ஆனால் மீண்டும் நிரூபணமாகும் போதுதான் அது எவ்வளவு பெரியது என்று உலகுக்குப் புரியும்', என்பதாக நான் கூறிய வார்த்தைகள் இன்றும் உனக்கு நினைவிருக்கும் என்று எண்ணுகிறேன். உன் சத்தியமும் இன்று அப்படி மிகப் பெரியதாக நிரூபணமாகி விட்டது அம்மா.” இதற்கு அவள் மறு மொழி எதுவும் கூறவில்லை. அவர்கள் எல்லோரும் விடை பெற்றுப் புறப்பட்டார்கள். பயணத்தின் போது யாரும் யாரிடமும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. கோநகரின் கோலாகலமான ஒலிகள் குன்றின. காட்சிகள் மறைந்தன. பாண்டியர் கோநகரும், வையையாறும் திருமருத முன்துறையும் மெல்லமெல்லச் செல்வப்பூங்கோதையின் கண் பார்வையிலிருந்து நழுவின. நீர்த்திரை கண்களை மறைத்தது. எத்துணையோ பல முறைகள் வந்து திரும்பும் போதெல்லாம், கோநகரிலிருந்து மிகமிக அருகில் இருந்த திருமோகூர், இப்போது மட்டும் பல காத தூரத்துக்கு, முடிவற்று நீண்டு வழி பெருகிக் கொண்டே போவது போல் பிரமையாயிருந்தது அவளுக்கு. இன்னும் நெடுந்தூரம், இந்த வேதனையைத் தாங்கியபடியே முடிவற்றுப் பயணம் செய்ய வேண்டும் போல் ஏதோ கனமான சுமை தன்னை அழுத்துவதை நெஞ்சில் உணர்ந்தாள் அவள். இருந்தாற் போலிருந்து இதமான மெல்லிய ஆண் குரல் ஒன்று, “நித்திலவல்லி செல்வப்பூங் கோதாய் கத்தும் கடலேழும் சூழ்தரு காசினியில் சித்தம் நினைப்புச் செய்கை உள்ளளவும் எத்தாலும் நின்னை மறப்பறியேன்...” எனப் பின்னாலிருந்து கூவி அழைப்பது போல் தோன்றியது. ஆனால், பின்புறம் வழியைத் திரும்பிப் பார்த்த போது, அப்படித் தன்னை யாரும் அழைக்கவில்லை, அது வீண் பிரமைதான் என்று தெரிந்தது. திரும்பிய கண்களில் ஒரு கணம் மேக மண்டலங்களை எட்டுவது போல், உயர்ந்த மதுரை மாநகர்க் கோட்டையின் உச்சியில் பறக்கும் புகழ் பெற்ற பாண்டியர்களின் மீனக் கொடி தொலை தூரத்தில் மங்கலாகத் தென்பட்டது. அடுத்த கணமே சென்று கொண்டிருந்த வழி, திரும்பியவுடன் அவள் பார்வையிலிருந்து மறைந்து விட்டது. நிறைந்தது இந்த மின்னூலைப் பற்றி உங்களுக்கு இம்மின்னூல், இணைய நூலகமான, விக்கிமூலத்தில் இருந்து கிடைத்துள்ளது[1]. இந்த இணைய நூலகம் தன்னார்வலர்களால் வளருகிறது. விக்கிமூலம் பதிய தன்னார்வலர்களை வரவேற்கிறது. தாங்களும் விக்கிமூலத்தில் இணைந்து மேலும் பல மின்னூல்களை அனைவரும் படிக்குமாறு செய்யலாம். மிகுந்த அக்கறையுடன் மெய்ப்பு செய்தாலும், மின்னூலில் பிழை ஏதேனும் இருந்தால் தயக்கம் இல்லாமல், விக்கிமூலத்தில் இம்மின்னூலின் பேச்சு பக்கத்தில் தெரிவிக்கலாம் அல்லது பிழைகளை நீங்களே கூட சரி செய்யலாம். இப்படைப்பாக்கம், கட்டற்ற உரிமங்களோடு (பொதுகள /குனு -Commons /GNU FDL )[2][3] இலவசமாக அளிக்கப்படுகிறது. எனவே, இந்த உரையை நீங்கள் மற்றவரோடு பகிரலாம்; மாற்றி மேம்படுத்தலாம்; வணிக நோக்கத்தோடும், வணிக நோக்கமின்றியும் பயன்படுத்தலாம் இம்மின்னூல் சாத்தியமாவதற்கு பங்களித்தவர்கள் பின்வருமாறு: Balajijagadesh TI Buhari Ramnath61 Info-farmer Pavithra.A Sgvijayakumar * * * ↑ http://ta.wikisource.org ↑ http://creativecommons.org/licenses/by-sa/3.0/ ↑ http://www.gnu.org/copyleft/fdl.html