திருக்குறள் செய்திகள் பேரா. டாக்டர். ரா. சீனிவாசன் 1995 8 அக்டோபர், 2020 அன்று விக்கிமூலத்தில் இருந்து பதிவிறக்கப்பட்டது உலகளாவிய பொதுக் கள உரிமம் (CC0 1.0) இது சட்ட ஏற்புடைய உரிமத்தின் சுருக்கம் மட்டுமே. முழு உரையை https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode என்ற முகவரியில் காணலாம். பதிப்புரிமை அற்றது இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர். நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை. *** இது, உலகத் தமிழ் விக்கியூடகச் சமூகமும் ( https://ta.wikisource.org ), தமிழ் இணையக் கல்விக் கழகமும் ( http://tamilvu.org ) இணைந்த கூட்டுமுயற்சியில், பதிவேற்றிய நூல்களில் ஒன்று. இக்கூட்டு முயற்சியைப் பற்றி, https://ta.wikisource.org/s/4kx என்ற முகவரியில் விரிவாகக் காணலாம். Universal (CC0 1.0) Public Domain Dedication This is a human readable summary of the legal code found at https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode No Copyright The person who associated a work with this deed has dedicated the work to the public domain by waiving all of his or her rights to the work worldwide under copyright law including all related and neighboring rights, to the extent allowed by law. You can copy, modify, distribute and perform the work even for commercial purposes, all without asking permission. *** This book is uploaded as part of the collaboration between Global Tamil Wikimedia Community ( https://ta.wikisource.org ) and Tamil Virtual Academy ( http://tamilvu.org ). More details about this collaboration can be found at https://ta.wikisource.org/s/4kx. திருக்குறள் செய்திகள் பேராசிரியர் டாக்டர் ரா. சீனிவாசன் எம்.ஏ.எம்.லிட்., பிஎச்.டி. அணியகம் சென்னை - 600 030 ii முதற்பதிப்பு - ஆகஸ்டு 1994 இரண்டாம் பதிப்பு - செப்டம்பர் 1995 விலை ரூ. 40.00 ஆசிரியரின் பிற நூல்கள் கம்பராமாயணம் 30 மாபாரதம் 30 சீவக சிந்தாமணி 25 திருவிளையாடற்புராணம் 30 கண்ணனின் திருக்கதை 15 நளன் தமயந்தி 15 திவ்விய பிரபந்த சாரம் 15 திருப்பாவை விளக்கவுரை 20 நவீன தெனாலிராமன் 10 குப்பைமேடு 25 படித்தவள் 25 அணியும் மணியும் 30 நாலடியார் செய்திகள் 20 சங்க இலக்கியத்தில் உவமைகள் (Ph.D.) ஆய்வு நூல் 60 வெளியீடு : அணியகம் 5. செல்லம்மாள் தெரு, செனாய் நகர், சென்னை - 600 030 தொலைபேசி : 611230 * * * V.P.P.யில் பெறலாம் முன்பணம் தேவை இல்லை. அஞ்சல் செலவு பதிப்பகம் ஏற்கும்; தேவைக்கு எழுதுக. சங்கப்பலகை மையங்களிலும் இந்நூல் நேரில் கிடைக்கும். உள்ளடக்கம் அணிந்துரை பாரட்டுரை மகிழ்வுரை இனித் தினமும் நன்றியுரை 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120 121 122 123 124 125 126 127 128 129 130 131 132 133 உள் தலைப்புகள் மதிப்புரைகள் அணிந்துரை தமிழவேள் புலவர் இராம. சுப்பிரமணியன், எம்.ஏ. அவர்கள் தமிழ்ப் பேராசிரியர், சென்னைப் பச்சையப்பன் கல்லூரி - ஓய்வு தொலைபேசியில் ஒலிகேட்டது; பேராசிரியர் ரா.சீயின் பேச்சுத் தொடர்ந்தது; “திருக்குறள்செய்திகள்” என்னும் நூல் எழுதுவதாய் அறிவித்தார்; சில வரிகள் படித்தார்; வியப்பில் ஆழ்ந்தேன். ‘அரிய தொண்டு’ என்று கூறிப் பாராட்டினேன். வாழ்த்தினேன். டாக்டர் ரா. சீனிவாசன் பச்சையப்பன் கல்லூரியில் 1940 முதல் 45 வரை மாணவர் 1945 முதல் 1981 வரை தமிழ்த்துறைப் பேராசிரியர், தலைவர்; அவர் தலைமையில் பணியாற்றும் பேறு எனக்குக் கிடைத்தது; எந்தவித முரண்பாடும் அவரிடம் நான் கண்டதே இல்லை. காட்சிக்கெளியர்; இன் சொல்லினர்; பழகற்கினியர்; பண்பாளர்; நான் மதிக்கும் பேராசிரியருள் ஒருவராய் அவரைக் கருதிவருகிறேன். அவர் எழுத்துப் பல துறைகளில் இயங்கிவருகிறது: மொழியியல், தமிழ் இலக்கணம், கட்டுரை நூல்கள், நாவல்கள், நாடகம், புதுக்கவிதை எனப் பல துறைகளிலும் அவர் நூல்கள் வெளிவந்துள்ளன; ‘சங்க இலக்கியத்தில் உவமைகள்’ என்னும் ஆய்வு நூல் மூன்று பதிப்புகளைக் கண்டது. மொழியியல் பத்துப் பதிப்புகளைக் கண்டது; அவர் எழுதிய உரைநடை நூல்களுள் ‘அணியும் மணியும்’ இன்றும் பாராட்டப்படுகிறது. அக்கட்டுரை நூலும், ‘சொல்லின் செல்வன்’ என்னும் நாடக நூலும், ‘வழுக்கு நிலம்’. ‘நனவோட்டங்கள்’ என்னும் நாவல்களும் பல்கலைக் கழகப் பாடநூல்களாக அவ்வப்பொழுது வைக்கப்பட்டு வருகின்றன; எழுத்து, அவர் தொடர் பணியாய் இருந்துவருகிறது. 1991முதல் கம்பராமாயணம், மகாபாரதம், சீவக சிந்தாமணி முதலிய காவியங்கள் உரைநடையாக்கம் பெற்றன. இத்தகு எழுத்துப் பின்னணியில் அதன் உச்சகட்டமாய்த் ‘திருக்குறள் செய்திகள்’ எனும் இவ் வரைநடை நூல் வெளிவருகிறது; இம் முயற்சியே கவர்ச்சியாய் இருக்கிறது. “இதற்கு வரவேற்பு உண்டு” என்று வாழ்த்தினேன; பாராட்டினேன். நூல் வந்ததும் பேராவலொடு புரட்டிப் பார்த்தேன்; ஒரு காவியத்தைப் படிப்பது போன்ற உணர்வு ஏற்பட்டது. அறநெறி கூறும் அறிவுநூலை ஒரு காவியமாயத் தந்திருப்பதனைக் காண்கிறேன்; இதற்கு அவரது தனித்தமிழ் நடையே காரணம் என்பதனை அறிகிறேன்; ‘உரைநடைக்கும் யாப்பும் அணி நலமும் அமைக்க முடியும்’ என்பதனை அவர் எழுத்தில் காணமுடிகிறது. திருக்குறள் பாக்களை அச்சிடாமல் ஆற்றொழுக்காய்த் தொடர்ந்து செய்திகளைமட்டும் தந்திருப்பது புதுமுயற்சியாகும்; டாக்டர் மு.வ. தெளிவுரை தந்தார்; இவர் அதனைத் தொடர்ந்து செய்திகளைமட்டும் தந்திருக்கிறார். இந் நூல் இன்றைய தேவை; இதனால், இஃது ஓர் அரிய சேவையாயும் அமைந்திருக்கிறது; மீண்டும் என் பாராட்டுகள்: வாழ்த்துகள்: வாழ்க பல்லாண்டு! இராம. சுப்பிரமணியன் சென்னை - 106 1–8–1994 செந்தமிழ் வேந்தர் சு. ஸ்ரீபால், இ.கா.ப. அவர்கள் (தமிழ்நாட்டுக் காவல்துறைத் தலைமை இயக்குநர். சென்னை - 600 004) பாராட்டுரை காடுவிட்டு நாடு வந்து, பறவைகள் கூடு கட்டி வாழ்வது கண்டு, வீடுகட்டி வாழத் தொடங்கிய காலத்திலேயே மனிதனுக்கு ‘மனம்’ என்னும் ஆறாவது புலன் அரும்பி, இயங்கி, மணம் வீசத் தொடங்கியது. “அம் மனமே அன்பு, அருள், அகிம்சை, அழுக்காறாமை, அவாவறுத்தல் ஆகிய பண்பு நலன்களாகும். தொடர்ந்து, “தமக்கென வாழாப் பிறர்க்குரியர் ஆதல் வேண்டும்; செய்தி கொன்றோர்க்கு உய்தி இன்று; யாதும் ஊரே, யாவரும் கேளிர்; பெரியரை வியத்தலும் இலம்; சிறியரை இகழ்தல் அதனினும் இலம்: வாய்மையே மனத்தைத் தூய்மையாக்கும்; அத் தூய்மை பெறுவதே வாழ்வின் பயன்” என்பன போன்ற அறநெறிகள் கோவையாய் மனத்துள் எழத் தொடங்கின. ‘தான் கண்ட அறவழிகளைப் பிறரும் பின்பற்ற வேண்டும்’ என்று விரும்பினான் மனிதன். அவற்றைத் தொகுத்துச் சேர்ப்பன சேர்த்து, நீக்குவன நீக்கி வகைதொகைப்படுத்தி, வழங்கும் ஆற்றல், அக் காலத்திய மனிதன் அறியாத ஒன்று. அச் செயற்கரிய செயலைச் செய்யத் தோன்றினார் ஓர் அருளாளர்; அவர் பெயர் ‘குந்தகுந்தாச்சார்யார்’ என்பது. அவர் செவ்விதாகப் படைத்தளித்த நூலே திருக்குறள்; அதனால், தமிழ் இறவாப் புகழ்பெற்றது. திருக்குறள் தோன்றிப் பல்லாயிரம் ஆண்டுகள் ஆயின; காலத்தின் இடையீட்டினால், சொற்கள் பல உருமாறின. சில, பொருளால் வேறாயின; அதனால், திருக்குறள் மூலம் மட்டும் படித்து நேர்ப்பொருள் காண்பது அரிதாயிற்று. நல்லறிஞராகிய அருளாளர் பதின்மர் குறளுக்கு உரை எழுதியதாய் மரபுவழிச் செய்தி ஒன்று உண்டு; அவற்றுள் இன்று கிடைப்பன மிகச் சிலவே; அவற்றுள்ளும் தெற்றெனப் பொருள் புரிந்துகொள்ளக்கூடியன ஒன்றிரண்டே; அதனால், காலந்தொறும் புத்துரைகள் தோன்றிக்கொண்டே வரலாயின. அவை ‘குறளின் பொருளை எளிதாக்கிக் காட்டுதற்கு மாறாய்த் தாம்தாம் சொல்வதே சரி’ என்று சாதிப்பதையே முதன்மையாய்க்கொண்டு குழப்பத்தை மிகுதியாக்கின. “குழப்பம் இல்லாமல், தெளிவாய்க் குறைமதியினரும் அறிந்து உய்தல் வேண்டும்” என்னும் கருணையினால், பேராசிரியர் ரா. சீநிவாசன் எனும் பேரறிஞர் குறட்பாக்களைத் தொடாமல், அவை காட்டும் சாரத்தைமட்டும் கோதின்றி வடித்து, எளிய தேன்பாகாய்த் தந்துள்ளார். குறள் கற்பதுபோல் தோன்றாமல், ஏதோ இனிய கதை படிப்பது போன்ற உணர்ச்சி தோன்றுமாறு குறளின் சாரம் முழுதையும் சுவைபடத் தந்துள்ளாார். இவ் வரிய செயலுக்கு அவ் வருளாளரின் பல்லாண்டு காலப் பயிற்சியும் பயிற்றுவித்த பாங்கும் துணைபுரிந்துள்ளன. இந் நூல் குறள் அன்று; குறளின் உரையும் அன்று; ஆனால், குறள் முழுதும் பயின்று கடைப்பிடிக்கச் செய்யும் ஊற்றுக்கோல்! “குறள் அறநுட்பங்களை எல்லாம் செய்தி வாசிப்பது போல் எளிதாய் வாசித்து, அறிந்துகொள்ளலாம்” என்று உணர்த்துதற்கே “திருக்குறள் செய்திகள்” என்று எளிய பெயரைச் சூட்டியுள்ளார். பேராசிரியர் ரா. சீ. அவர்கள், இதே முறையில் மேலும் பல நூல்களுக்கு விளக்கங்கள், செய்திகள் எழுதியருளினால் கற்றவர், மற்றவர் என்னும் வேற்றுமையின்றி அனைவர்க்கும் பயன் விளையும். “இப் பெரும்பணி ஆற்றுதற்கு ஊற்றமும் தேற்றமும் இறைவன் அருளுக” என்று வாழ்த்துவோம். 7.9.94 சு.ஸ்ரீபால் கணியூர் மதுநெஞ்சன் மகிழ்வுரை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்க் கட்டப்பட்ட ஓர் இரண்டு அடுக்கு மளிகை! மூன்று வாயில்களிலும் உள்ளே புகுந்து 133 பேசும் பதுமைகளுடன் பேசி வரலாம். இந்த மாளிகையின் அழகினைப் பேசும் பதுமைகளுடன் பேசுதற்காகப் பரிமேலழகர் என்ற ஒரு (வழிகாட்டியைப்) பல பேர் துணைக்கு அழைத்துவந்தார்கள். அவர் அற்புதமாக வருணித்தார் விளக்கங்கள் தந்தார். அவருக்குப் பின்னர் ஆயிரக்கணக்கான வழிகாட்டிகள்! இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் எளிய விளக்கமான மு.வ. என்ற வழிகாட்டி! அவருக்கு அடுத்த வீட்டுக்காரரான ரா.சீ. என்ற புதிய வழிகாட்டி! அறத்தின் வழியே பொருள் சேர்த்து. இன்பத்தையும் காணுதற்கு இந்த மாளிகையின் பதுமைகள் விளக்கம் தருகின்றன. இப் பதுமைகளுடன் நாம் பேசி விளங்கிக்கொள்வதைக் காட்டிலும் வாழ்வியல் வழிகாட்டியான ரா.சீ. அவர்களுடன் சென்று விளங்கிக்கொள்வதையே ‘திருக்குறள் செய்திகள்’ என்னும் நூல் சொல்லுகிறது. இளந்தென்றலாய் மிதந்துவரும் அவர் வார்த்தைகள்! அடுக்கடுக்காய்ப் புரண்டுவரும் கடல் அலைகளைப் போல் வார்த்தைகளில் எதுகைகள்...! மோனைகள்...! முத்துகளாய்க் கருத்துக் குவியல்கள்...! விஞ்ஞான யுகத்தில் பாராமுகங்களாய் ஆகிக் கொண்டிருக்கும் செய்யுள்கள், இலக்கியங்கள் போன்றவை எல்லாம் இனிமேல் புதுக்கவிதைக்கார்களின் எழுத்துவீச்சாய்க் கருத்துச் சுழற்சிகளினால்தான் வீசப்பட வேண்டும். அந்த வீச்சாய் விழுந்ததுதான் ரா.சீ.யின் திருக்குறள் செய்திகள்! இதில் இல்லாத பொருளில்லை; சொல்லாத செய்தியில்லை. கடவுள், வான், அன்பு, விருந்து, மருந்து, ஈகை, புகழ், தவம், வாய்மை, கல்வி, காதல், நாணம், புணர்ச்சி, ஊடல் சொல்லிக் கொண்டே போகலாம். வள்ளுவன் கருத்துக்கெல்லாம் ரா.சீ யின் வார்த்தைகள் மெருகுபோட்டுள்ளன. சாணை பிடிக்கப்பட்ட கத்திமுனைப் பதங்கள்! யதார்த்த வாழ்வின் நடப்புக் கொடுகள்! அறுபது ஆண்டுகளாய்த் தமிழை வளைத்து வளைத்து. ‘இப்போதும்’ தானே வளைந்து கொடுக்கும் அற்புதச் சொற்கள்.! அறன் வலியுறுத்தலின்விளக்கமாய், “அறத்தைக்கடைப்பிடி: ஆக்கம் உண்டாகும்; அதனைக் கைவிட்டால் வாழ்க்கையில் தேக்கமே ஏற்படும்; நன்மைகளின் நீக்கம் தொடரும்; கேடுகள் உன்னைத் தேடி வரும்” என்றும்; “நடுநிலைமை’ பற்றி விளக்குமிடத்துத் “தவறான வழியில் பொருளை ஈட்டி, அவர்கள் சலவைக்கல் பதித்து வீடு கட்டி இருந்தாலும் அவர்களை வெளுத்துக் கட்டாமல் இருக்கமாட்டார்கள்” இஃது அவர் தொடர்; ‘உலகம் அவர்களை விடாது” என்ற கருத்தில் கூறுகிறார். ‘சலவை’ ‘வெளுத்தல்’ என்ற வார்த்தைகள் ஒரு சுகமான அர்த்தத்தை உண்டாக்குகின்றன. “அளவோடு உண்பது வளமான வாழ்வுக்கு வழி வகுக்கும்” - இது ரா.சீ யின் சுவையான வரிகள். இப்படி நூல் முழுக்க எங்கு நோக்கினும் திருக்குறளின் கருத்துகள் சுவையான தமிழில் அழகுற எழுதப்பட்டுள்ளன. வெறும் பொழிப்புரையாக இல்லாமல், சுவையான செய்திகள், நல்ல நண்பரின் அன்பான அனுசரனணயான புத்திமதிபோல் எழுதப்பட்டுள்ளன. ‘திருக்குறள்’ பற்றி முழுதுமாக அறிந்துகொள்ள வேண்டும்” என்று விரும்பும் பலர், பல புத்தகங்களைப் பாதியிலே விட்டுவிடுவதைப் பார்த்திருக்கிறேன். ஆனால், ‘திருக்குறள்செய்திகள்’ எனனும் நூல்சுவையானது; நூலைப் படிக்கத் தொடங்கிவிட்டால் முடிக்கும்வரை இது சுகமானது. இஃது அனைவரின் இல்லங்களிலும் உள்ளங்களிலும் இருக்க வேண்டிய அற்புதமான நூல். அன்பன், மதுநெஞ்சன் 1048, கடத்தூர்ச் சாலை, கணியூர் - 638 203 இனித் தினமும் தெய்வப்புலவன் வள்ளுவன் தந்த அறிவுக் கதிர் செழுஞ்சுவை தோய்ந்த பாகு என அமைந்த சொல்தேர்வு பாலொடுதேன் கலந்து வைத்தன்ன உரைஅமுது எளியோரும் அறிய அவர்வழி நின்றே ஈர்க்கும் காந்தம் பழந்துண்டுகள் எனப் பாங்காய் அமைந்த பழமொழிகள் படிக்க அலுப்பு இல்லை விறுவிறுப்புடன் கூடிய புதினம் இது உப்பமைந்தன்ன சுவையழகு தோற்றும் உவமைச் செய்திகள் அன்னை தமிழுக்கு அணியகம் இழைத்த அணிகலம் நிரந்து இனிதுகூற அமைத்துவைத்த சொல்லடுக்குகள் இனித் தினமும் பேசிப் பழகிட ராசீயின் திருக்குறள் செய்தி டாக்டர் இரா. குமரன், பூண்டி. நன்றியுரை திருக்குறள் தெளிவுரைகள் பல வெளிவந்துள்ளன. பதவுரைப் பதிப்புகளும் உள்ளன. இது குறட்பாக்களைத் தாராமல் செய்திகளை மட்டும் தர முற்படுகிறது. குறட்பாப் படிப்பலர் அதன் செய்திகளை அறிவதில்லை; ஒரு சில குறட்பாக்களை ஒப்புவிக்கின்றனர். அவை தேர்ந்து எடுக்கப்பட்டவை; அடிக்கடி ஆளப்படுபவை. மொத்தமாகக் குறட்பா கூறுவது யாது? என்று கேட்டால் சொல்ல இயல்வதில்லை. செய்திகள், கற்றோர்க்கும் புலமை பெறாதவர்க்கும் தேவை: அவை வாழ்க்கைக்குப் பயன்படுவன. வள்ளுவர் கருத்துகளை இன்றைய நடைமுறை மொழியில் தெரிவிக்க எடுத்தக் கொண்ட முயற்சி இது. நூலை அறிமுகப்படுத்த அணிந்துரைகள் தேவைப்படுகின்றன. இவற்றை நல்கிய அறிஞர் காவல்துறைத் தலைவர் ஸ்ரீபால் செந்தமிழ் வேந்தர் அவர்களுக்கும், கவிஞர் மதுநெஞ்சன் அவர்களுக்கும், புலவர் ஐயா திரு. இராம. சுப்பிரமணியன் அவர்களுக்கும், கவிஞர் குமரன் அவர்களுக்கும் நன்றி உடையேன். திருக்குறளைப் பிற மொழியாளர் அறிய முடிகிறது: தமிழ் அறிந்தவர்கள் அறிய முடிவதில்லை. தொடர்ச்சியாக உரை நடையில் படிக்கும்போது அந்தக் கருத்துகளை அறிய முடிகிறது. வாழ்க்கைக்கு வழிகாட்டுவது திருக்குறள்; பயன்மிகப் பெரிது, புலமை குறுக்கிடத் தேவையில்லை. அனைவரும் படிக்க எழுதப்பட்டது. ரா. சீனிவாசன் திருக்குறள் செய்திகள் 1. அறத்துப் பால் 1. கடவுள் வாழ்த்து ஏட்டுச் சுவடி எடுத்துக் காட்டும் முதல் எழுத்து அகரமாகும். கூட்டிக் கழித்துப் பார்த்தால் உலகைப் படைத்தவன் இறைவன் ஆவான்; அவனே உலகத்தின் தொடக்கமும் ஆவான். படித்துப் படித்து நீ பண்டிதன் ஆகலாம்; அதை மடித்து வைத்துவிட்டு நீ சுயமாகச் சிந்தித்துப்பார்; இறைவன் தாளை நீ வணங்காதவிடத்து, நீ படித்த தாள்கள் அத்துணையும் வெறும் கோடுகள்; உன் படிப்பும் பயனற்றது ஆகிவிடும். அடியவர் உள்ளத் தாமரையில் உவந்து குடியிருப்பவன் இறைவன்; அவன் வெள்ளைத் தாள்களை மனத்தில் நிறுத்து; நீ நிலமிசை நீடு வாழ்வாய். விருப்பு வெறுப்பு என்பது அவனிடம் இருப்புக் கொள்வது இல்லை. அவன் தாளை வணங்கு; உன் இடும்பைகள் தீரும். இறைவனின் புகழ் பொருள் மிக்கது. அவன் புகழைப் பாடு; இருளில் சேர்க்கும் தீய வினைகள் உன்னை வந்து அடையா. பொறிகளை அடக்கி நெறிப்பட வாழ்பவர் இறையருள் பெற்று நிறைநாள் வாழ்வர். இறைவனுக்கு உவமை இந் நிலஉலகில் யாரையும் கூற இயலாது. தனக்கு உவமை இல்லாதவன்; அவன் தாளை, வணங்கு; உன் மனக்கவலைகள் மாய்ந்து மகிழ்வு பெறுவாய்; அறத்தின் கடல்; அருள்வடிவினன்; அவன் தாள் சேர்பவர் பிறப்பு அறுப்பர்; வீடுபேறு பெறுவர். மதிக்கத் தக்க பண்புகள் மிக்கவன் படைத்தோன். அவன் திருவடிகளை வணங்காத தலை பயனற்றது. தலைமை அதனை விட்டு நீங்கிவிடும்; உணர்வு அற்ற பிண்டமாக மதிக்கப்படும். பிறப்பு நீந்த முடியாத பெரிய கடல் என்றால், அதனைக் கடக்கும் தெப்பம் இறைவன் திருவடிகள்: பற்றுக அவன் தாள்களை. அவன் தாள்களைப் பற்றியவரே பிறவிக் கடலைக் கடப்பர். 2. வான் சிறப்பு வானத்தைத் தன் இருப்பிடமாகக் கொண்டது மழை; அதனால் அதனை அமுதம் என்று அழைப்பர். உண்பவர்க்கு உணவு படைத்துத் தருவது மழை; பருகுவதற்குப் பயன்படுவதும் மழையே, மனித உயிர் வாழ்வுக்குத் தனித்து உதவுவது மழையேயாகும். வான்மழை பொய்த்துவிட்டால் இந்த உலகுதான் எப்படி வாழ முடியும்? பசி இதனை வாட்டுவது உறுதி. கார் காலத்து மழை பெய்யாவிட்டால் ஏர் பிடித்த உழவன் என்ன செய்ய முடியும்? உழவும் வேறு வழி யில்லாமல் அழிவுதான் பெற வேண்டும். ஆவதும் அழிவதும் மழையாலே, மழையின் துளி விழவில்லை என்றால் பசும்புல்லும் தலை காட்டவே காட்டாது. ஆழநீர்க் கடல்தான்; அதுவும் மழை இல்லாவிட்டால் பாழ்பட்டுப் போகும்; அதன் தன்மை திரியும்; அழுகிவிடும்; மழைநீரே அதனைப் புதுப்பிக்கும். வானம் வறண்டுவிட்டால் தானம் இல்லை; தருமம் இல்லை; கோயில் இல்லை; பூசை இல்லை; மணி ஓசையும் இல்லை. நீர் இல்லை என்றால் உயிர் வாழ்க்கை இல்லை; அதன்பின் அவரவர்தம் ஒழுக்கம் கடைப்பிடிக்க இயலாது; அறத்துப் பாலே மழைக்கு அப்பால்தான். 3. நீத்தார் பெருமை துறவிகள் உலகத்து உறவினை நீத்தவர்கள்; அவர்கள் பெருமையை அற நூல்கள் ஓதிக்கொண்டே இருக்கின்றன. செத்தவர் இதுவரை எத்தனை பேர்? எண்ணிச் சொல்ல முடியாது; துறவிகளின் உயர்வை யாவராலும் அளந்து கூற முடியாது. துறவிகளின் தூய ஒழுக்கம் அவர்களுக்குப் பெருமை சேர்க்கிறது; இத் துறவிகள் சிலராவது இருப்பதனால்தான் உலகம் உயர்வு பெறுகிறது. பெருமை கொள்கிறது. இத்துறவிகள் ஐம்பொறிகளை அடக்கியவர்கள்: ஆசைகளை விட்டவர்கள்; வானவராலும் மதிக்கப் படுகின்றனர். இந்திரன் உயர்பதவி பெற்றவன். அவன் தவம் செய்தவன் என்பதால் உயர் வரங்களைப் பெற்று உயர்ந்தான்; ஆசைகளை நீத்தும், புலன் அடக்கம் கொண்டும் நீண்ட தவம் செய்தால் மற்றவர்களும் அவனைப்போல் உயர் பதவிகள் பெற முடியும். இத் துறவிகள் பெருமைக்கு உரியவர்கள்; செயற்கரிய செய்பவர்கள். சிறியவர் அரிய செயல்களை ஆற்றுவது இல்லை. பெருமைக்கும் சிறுமைக்கும் இதுவே வேறுபாடு ஆகும். உலகம் அறிவாளியின் கைகளில்தான் இருக்கிறது; அவன் சுவை, ஒளி, ஊறு, ஒசை, நாற்றம் என்னும் ஐந்து உணர்வுகளை நன்கு அறிந்தவன்; அறிவு தெளிந்தவன்; அவன் துறவிகளைப் போலவே மதிக்கப்படுகின்றான். சான்றோர்களும் துறவிகளுக்கு நிகரானவர்கள்: அவர்கள் பண்புமிக்க செயலையும், அன்புமிக்க உள்ளத்தையும், அறிவு மிக்க சிந்தனையையும் உலகம் வேதமாக மதிக்கிறது. இவர்கள் குணம் என்னும் சிகரத்தை எட்டிப் பிடித்தவர்கள்; இவர்கள் சினம் கொண்டால் யாரும் தடுத்து நிறுத்த இயலாது. அந்தணர்களும் துறவிகளைப் போல மதிக்கத்தக்கவர்கள். அந்தணர் என்போர் அறவோராகத் திகழ்வர்; ஈவு இரக்கம் கொண்டு உயிர்களை நேசித்து அருள் அறம் பூண்டவர்கள்; இவர்களும் நீத்தார் என்றே மதிக்கப் படுகின்றனர். பற்றுகளை விட்டு அறவாழ்க்கையும், ஒழுக்க உயர்வும் கொண்டவர்கள்; இவர்கள் துறவிகள், சான்றோர், பெரியோர், அறிஞர், அந்தணர் என்று அவரவர் தவ ஒழுக்கத்துக்கு ஏற்ப அழைக்கப்படுகின்றனர். கடவுள், மழை இவற்றிற்கு அடுத்து மதிக்கத் தக்கவர்கள் இவ்வொழுக்கத்தில் உயர்ந்த பெரியோர்கள். 4. அறன் வலியுறுத்தல் அறத்தின் காவலர்கள் துறவிகள்; சான்றோர் காட்டும் நெறியில் வாழ்வதே அறமும் ஆகும். உயிர்க்கு ஆக்கம் தருவது அறம்; அதனால் உயர் சிறப்புகள் சேர்கின்றன. செல்வமும் சேர்கிறது; இதனை விட நன்மை தருவது வேறு ஒன்றும் இருக்க முடியாது; அறமே எல்லா நன்மைகளுக்கும் காரணம் ஆகிறது. அறத்தைக் கடைப்பிடி; ஆக்கம் உண்டாகும். அதனைக் கைவிட்டால் வாழ்க்கையில் தேக்கமே ஏற்படும். நன்மைகளின் நீக்கம் தொடரும்; கேடுகள் உன்னைத் தேடி வரும். இயன்றவரை அறம் செய்க; வாய்ப்புகளைத் தவற விடாதே; விடாது அறம் செய்க. அறம் என்பது யாது? அது புறத்தில் இல்லை; உன் அகத்தைத் தூய்மைப்படுத்திக்கொள்; மனத்துக்கண் மாசு இல்லாமல் தூயதாக வைத்துக்கொள்; அதுவே அறம் ஆகும். ஏனைய செயல்கள் வீண் ஆரவாரம் ஆகும். மாசு என்று குறிப்பிட்ட குற்றங்கள் யாவை? பொறாமை, பேராசை, கோபம், கடுஞ்சொல் இவை நான்கும் தவிர்ப்பதே அறச்செய்கையாகும். இவையே மனத்தில் எழும் குற்றங்கள் ஆகும். நாளைக்கு என்று அறம் செய்வதைத் தள்ளிப் போடாதே; இன்றே தொடங்குக; அது பெருகும் பல மடங்கு அஃது இறுதிக்காலத்தில் உறுதிகளைத் தரும். காலன் அழைக்கும்போது அவனைத் தடுத்து நிறுத்தும். பல்லக்குச் சுமக்கிறவன் ஒருவன்; அதில் சுகவாசி ஏறிச் செல்கிறான்; இருவரும் வாழ்க்கையின் இரு எல்லைகள்; இவர்கள் நாம் கூறும் அறத்தைக் கேட்கும் நிலையில் இருக்கமாட்டார்கள். ஒருவருக்குப் பசி; மற்றவருக்குச் செல்வ மயக்கம்; இருவரும் செவி கொடுத்துக் கேட்கும் நிலைக்கு வரமாட்டார்கள். அற வேட்கை உடையவர்க்கே கேட்கையும் நிகழும். வாழும் நாள் சிலவே. அதனை வீழும் நாளாக மாற்றாதே அறம் செய்க, அஃது உன் பிறப்பு அறுக்கும் முயற்சிகளில் முதன்மையானது; துஞ்சிய நாள் போக எஞ்சிய நாள் சிலவே உள்ளன; பிறப்பு வாராமல் தடுக்க அறம் செய்க. இன்பம் தேவைதான்: அறத்தின்வழி அஃது அமை யட்டும்; அது புகழைத் தரும்; ஏனைய வழிகளில் இன்பம் வரலாம்; அதனால் புகழ் கிடைக்காது. தக்கது இது, தகாதது இது என்று மிக்கது கூற வேண்டுமென்றால் அறம் செய்வதே தக்கது; தகாதது பழி விளைவிக்கும் செயல்; பழி நீக்குக, அறம் வளர்க்க. 5. இல்வாழ்க்கை குடும்ப வாழ்க்கை என்பது பிறர் இடும்பை தீர்ப்ப தாகும்; சொந்தத் தொழில் இல்லாத துறவிகள், சோற்றுக்கு வழி இல்லாத வறியவர்கள், ஆதரவு அற்ற அநாதைகள் இவர்களுக்கு இல்வாழ்க்கையர் சுமைதாங்கிகள் ஆவர். பெற்ற தாயும் உற்ற தந்தையும், மதிக்கத்தக்கவர்கள்; முன்னோர்கள் உழைப்பால்தான் அவர்தம் சந்ததியர் தலைநிமிர்ந்து வாழ்கின்றனர். செத்தவர்களை மதித்துப் பிதிர்க்கடன் செய்வதும், கடவுளை வழிபடுவதும் குடும்புத் தலைவனின் கடமைகள் ஆகும். காசு பணம் இல்லை என்றால், குடும்ப வாழ்வு மாசு பட்டுவிடும். அடுப்பு எரிய வேண்டுமென்றால் துடுப்புக் கொண்டு படகைச் செலுத்தித்தான் ஆக வேண்டும். பொருள் ஈட்டுவது குடும்பத் தலைவனின் கடமையாகும்; அதற்காக ஊரை அடித்து உலையில் போடுவது அடுக்காது. நேர் வழியில் பொருள் ஈட்டுக; வாழ்க்கையைச் சீராக நடத்துக. அன்பும் அறமும் குடும்ப வாழ்வின் இருகோடுகள்; அவை இல்வாழ்வின் இயல்புகள்; அதன் விளைவும் அவை யாகும். அன்பும் அறமும் இயைந்த வழியில் இயங்குக; உன் இயக்கமும் அதன் முடிவும் அவையேயாகும். அதனால் இவற்றைப் பண்பும் பயனும் ஆகும் என்று கூறுவர்; இவை இல்வாழ்க்கையின் தொடக்கமும் முடிவும் ஆகும். இல்லறத்தின் இனிய சுகத்தை, அறியாதவர்கள் பொறுப்பைத் தட்டிக் கழிப்பவர்கள்; இவர்களே துறவு வாழ்க்கையை மேற்கொள்வர். அறம் வழுவாமல் பிறருக்கு உதவியாக இயங்கி அன்பும் அறமும் வளர்த்து இன்ப வாழ்வு அடைவது குடும்ப வாழ்க்கை; சுமைகளுக்கு அஞ்சி வாழ்வின் சுவைகளை இழப்பவர்கள் துறவிகள். அறநூற்படி செம்மையான வாழ்வு நடத்தி வெற்றி பெறுவது அரிய சாதனையேயாகும். மறுமை வாழ்வில் அடையும் சுவர்க்க இன்பங்களை இம் மண்ணுலகில் வாழ்ந்தே பெறமுடியும். துறக்க வாழ்வுக்கு இஃது ஒரு திறவுகோல் என்றும் கூறலாம். துறவைவிட உறவே மேலானது என அறிக. 6. வாழ்க்கைத் துணைநலம் குடும்ப வாழ்க்கைக்கு உற்ற துணைவியாக இருப்பவள் மனைவி; அவள் எத்தகையவளாக இருக்க வேண்டும்? குடும்பத்தை நடத்துவதற்கு வேண்டிய நற்குண நற்செயல்கள் அவளிடம் அமைதல் வேண்டும்; முக்கியமாக வரவுக்கு ஏற்பச் செலவு செய்பவளாக இருக்க வேண்டும். குடும்ப வாழ்க்கையே மனைவியால்தான் சிறப்பு அடைகிறது. கோடிப் பணம் கொண்டுவந்து குவித்தாலும் நாடி அதைச் செம்மைப்படுத்திச் சீராக அமைக்கவல்ல மனைவி இருந்தால்தான் அந்த வீடு இன்பம் கொழிக்கும்; அடங்காப் பிடாரி ஒருத்தி மனைவியாக அமைந்தால் அந்த வீடு குட்டிச்சுவர்தான். பணம் இருந்துமட்டும் பயன் இல்லை. குணம் மிக்க மனைவி இருந்தால்தான் இன்பமாக வாழ முடியும். மகளிரிடம் எதிர்பார்க்கப்படும் பண்புகளில் தலையாயது கற்பு என்னும் பொற்பு ஆகும். கற்பு என்பது உறுதிபடைத்த நெஞ்சு. அதனை நிறை என்றும் கூறுவர். அத்தகைய பெண் இல்வாழ்க்கைக்குப் பெருமை சேர்க்கிறாள். அவள் தெய்வத்தைத் தொழத் தேவையே இல்லை; கொழுநனைத் தொழுது எழுந்து பின் தன் கடமையில் ஆழ்கிறாள். அத்தகையவள் ‘மழை பெய்க’ என்று கூறினால் வான்மழையும் தானாகப் பெய்யும். தெய்வமும் அவள் ஏவல் கேட்டு அவளுக்குக் காவல் புரியும். அவள் முதலில் தன்னைக் கற்பினின்று தவறாமல் காத்துக்கொள்கிறாள்; கணவனுக்கு உற்ற துணையாக நின்று பணி செய்து உதவுகிறாள்; கணவனின் புகழுக்கு உறுதுணையாக நிற்கிறாள்; சோர்வு என்பது அவளிடம் தலை காட்டுவது இல்லை. இந்த நான்கு நற்பண்புகளும் அவளிடம் அமைதல் வேண்டும். கற்பு என்று சொல்லி அவளுக்குக் காவல் வைத்தால் அஃது அற்பத்தனமாகும்; அவள்மீது நம்பிக்கை இல்லை என்பதாக அமையும்; அவளை இழிவுபடுத்துவதாகவும் அமையும். அஃது அவள் சொந்தப் பொறுப்பு: பிறர் வற்புறுத்தி அமைவது இல்லை. சிறையிட்டுக் காப்பது அநாகரிகம்; அடிமைப்படுத்துவதும் ஆகும்; அவள் நிறையை அவளே காப்பது அவளுக்கு உயர்வு தரும். நம்பிக்கைதான் இருவரையும் பிணைக்கும் கயிறு. அன்பை வளர்ப்பது இல்வாழ்க்கை; கணவனிடம் அன்பும் அடக்கமும் காட்டி இன்பம் கொழிக்கச் செய்பவள் வாழ்க்கைத் துணைவி; கணவனின் நன்மதிப்பையும் அன்பையும் பெற்று அவள் உயர்வுபெறுகிறாள்; வானவரும் அவளை வாழ்த்தி வரவேற்பர். ஒருவன் தன்மானத்தோடு வாழ்கிறான் என்றால் அதற்குத் துணை செய்கிறவள் மனைவி; அவள் உத்தமி என்று. பெயர் வாங்கினால் அதனால் அவனுக்குப் பெருமை சேர்கிறது; பகைவர் முன் பீடுநடை அமைய ஈடு இணையற்ற மனைவியின் மாண்பும் காரணமாக அமைகிறது; நடத்தை கெட்ட மனைவி அமைந்தால் அவன் நாலு பேர் முன் தலைநிமிர்ந்து நடக்க நானுவான். ஒரு வீட்டுக்கு மங்கலமாக விளங்குபவள் நற்குண நற்செயல்களுடைய மனைவி; இந்தக் குடும்பத்துக்கு அழகு சேர்ப்பது நன்மக்களைப் பெறுதல். எனவே இல்வாழ்க்கை மக்கட்பேற்றுக்குத் துணை செய்வதாகும். வாழ்க்கைத் துணைவியாகிய மனைவியும், தாம் பெறுகின்ற மக்களும் நல்லவர்களாக அமைய வேண்டும். அப்பொழுதே இல்வாழ்க்கை நல்வாழ்க்கையாக ஒளிவிடும்; பயன்படும்; நிறைவுபெறும். 7. மக்கட்பேறு மக்கள் மதிக்கத்தக்க செல்வமாவர்; இதனைவிட அரிய செல்வம் வேறு ஒன்றும் இருக்க முடியாது என்று திட்பமாகக் கூறமுடியும். பிறக்கும் மக்கள் அறிவு உடைய மக்களாக வளர வேண்டும்; இல்லை என்றால் மக்களைப் பெற்றும் மிக்க பயன் இல்லை. எனவே பெறுவதைவிட அவர்களை வளர்ப்பது பொறுப்புமிக்க செயலாகும். மக்கள் பெற்றோர்த்ம் சுமையைக் குறைப்பவர்களாகப் பயன்பட வேண்டும். அவர்கள் சுமைகளாகப் பெற்றோர்களுக்கு ஆகக்கூடாது; பணிவுமிக்கவர்களாகவும், பழிகளைக் கூட்டும் வழிகளைத் தேடாதவர்களாகவும் நடந்துகொள்ள வேண்டும். அத்தகைய நன்மக்களைப் பெற்றால் அது பெற்றோர்களுக்குப் பெருமை அளிப்பதாகும்; வலிமை சேர்ப்பதும் ஆகும்; அவர்கள் கவலை நீங்கி வாழ முடியும்; ஏழு பிறப்புக்கும் அவர்களை எந்தத் துன்பமும் வந்து தாக்காது; அவர்களைத் தம் உடைமையாக மதித்துப் போற்றலாம். மதிக்கத்தக்க நன்மக்களைப் பெறுவதற்கும் கொடுத்து வைத்திருக்க வேண்டும்; அஃது அவரவர் செய்த நல்வினையின் பயனே என்றும் கூறலாம். ஒருசிலருக்கே இந்த நல்வாய்ப்புக் கூடி வருகிறது. அவர்களை அதிர்ஷ்ட சாலிகள் என்றுதான் கூற முடியும். குழந்தைகள் மாபெருஞ் செல்வம் என்பதனை மறுக்க முடியாது. அவர்களால் நன்மையும், சிறப்பும், உயர்வும் கிடைக்கின்றன. அவர்கள் தாம் அள்ளித் தின்னும் சோற்றைச் சிதற வைத்து இருகையாலும் பிசைந்து தின்றது போக விட்டதை உண்ணும் பேறு கிடைப்பது மகிழ்வுக்கு உரியது. அமுதத்தைவிட அது மிக்க இனியதாகும். குழந்தையை எடுத்து அணைத்துக் கொள்வதற்கு நிகரான இன்பம் எதுவுமே இருக்க முடியாது. உச்சிதனை மோந்தால் உள்ளம் குளிர்வது உறுதி; மெச்சி ஊரார் அவனைப் புகழ்ந்தால் மேனி சிலிர்த்துவிடும். நச்சி அவன் சில சொற்கள் பேசினால் செவிக்கு அவை இன்ப ஊற்றாக அமைந்துவிடும். மழலைமொழி பேசும் அந்த இனிய சொற்கள் எங்கிருந்துதான் அந்த இனிமையைப் பெற்றனவோ! யாழும் குழலும் அவற்றின்முன் நிற்க முடியாமல் தம் தோல்வியை ஒப்புக்கொள்கின்றன. இசையினும் இனியது தம் குழந்தைகளின் மழலைச்சொல் என்பதனை ஒப்பிட்டுப் பார்ப்பவர் அறிவர். அறிவுடைய மக்களைப் படைத்துத் தருவது செறிவுடைய கல்வியால் இயல்வதாகும்; கற்றவர் கூடும் சபையில் பற்பல பேசித் தன் புலமையையும் அறிவையும் காட்டும் மகன் தன் தந்தைக்கு மிகவும் கடமைப்பட்டவன் ஆகிறான். ஒவ்வொரு தந்தையும் தன் மகனைச் சபையில் முந்தி இருக்கச் செய்ய வேண்டும்; அதற்குத் தக்க கல்வியையும் தகுதியையும் உண்டாக்கித் தரவேண்டும். அஃது அவர் கடமையாகிறது. ‘தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயும்’ என்பர். மகன் தந்தையைவிட அறிவாளி என்று பெயர் எடுப்பதுதான் தந்தைக்குப் பெருமை; உலகத்துக்கும் நன்மை. பெற்றவள் கற்ற தன் மகனைச் சான்றோன் எனப் பிறர் பாராட்டினால் அதனைக் கேட்டு ஈன்ற ஞான்றினும் பேரு வகை கொள்கிறாள். அதே போலத் தந்தை அவன் வளர்ச்சி கண்டு மனக்கிளர்ச்சி பெறுகிறார். “இவனைப் பெறுவதற்கு இவன் தந்தை என்ன தவம் செய்தாரோ?” என்று உலகம் பாராட்டினால் அது போதும்; நற்புகழ் எய்தி நானிலம் மதிக்க மகன் வாழ்ந்தால் அதுவே அவன் தந்தைக்குச் செய்யும் கைம்மாறு ஆகும். காசு பணத்துக்காக அந்தத் தந்தை தம் மகனிடம் கையேந்தி நிற்கமாட்டார்; மாசில் புகழ் வந்து அடையத் தம் மகன் திகழ்கிறான் என்றால் அவர் அக மகிழ்வு பெறுவார். 8. அன்புடைமை அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பு உடையது; பயன்மிக்கது என்பர். இல்வாழ்க்கையில் அன்பு வளர்கிறது; அன்புடைமையே எல்லா உயிர்வாழ்க்கையின் இயக்கமும் ஆகும். அன்பை யாரும் பூட்டி வைக்க முடியாது; தாம் நேசிப்பவர்கள் படும் துயரம் கண்டு விடும் கண்ணிர் அவர்தம் உண்மையான அன்பைப் புலப்படுத்திவிடுகிறது. கண்ணிருக்கும் அன்புக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. கண்ணிர் சோககீதம் பாடும். அன்புடையர் வஞ்சகமும் கஞ்சத்தனமும் இல்லாதவராக இருப்பர். கேட்டு இல்லை என்று சொல்லி அவர்கள் நா அடக்கம் பெறாது. அன்பில்லாதவர் வன்புடைய நெஞ்சம் உடையவர். பிறருககு ஈவது என்பது அவர்களுக்கு ஒத்து வாராது; இறுகப் பிடித்து மனத்தை இரும்பாக்கிக் கொள்வர். அன்புடையவர் தம் சதையையும் அறுத்துக் கொடுத்து மற்றவர்க்கு வரும் துன்பத்தைப் போக்குவர். எலும்பைப் படைத்தவன் அதில் உயிரையும் இணைத்தான்; அவன் மானிடன் என்று கூறப்படுகிறான்; உயிர் உள்ளவன் என்பதை எடுத்துக் காட்டுவது அன்புதான்; அன்பு உயிரின் இயல்பு. அன்பு ஒரு காந்த சக்தி; அஃது ஆர்வத்தைத் தூண்டும்; நேயத்தை வளர்க்கும்; நட்பை உண்டாக்கும். நட்புக்கே அடிப்படை அன்பைப் புலப்படுத்துதல் எனக் கூறலாம். அன்புற்றார் எய்தும் சிறப்பு யாது? அவர்கள் எதனைச் சாதிக்கிறார்கள்? ஏன் அன்பு காட்ட வேண்டும்? இன்பத்துக்கு அடிகோலுவதே அன்புதான். அன்புடையவரே இன்பமாக வாழ்க்கை நடத்த முடியும். அறத்திற்குத் துணையாக இருப்பது அன்பு என்று கூறுவர். அவர்களை முற்றும் அறிந்தவர் என்று கூற முடியாது. வீரத்துக்கும் அன்பே துணை செய்கிறது. தாம் நேசிக்கும் நாட்டு மக்களையும், மக்கள் தலைவனையும் காப்பாற்றுவதற்கே வீரன் ஒருவன் போர்மேற் செல்கிறான். இதற்கு அடிப்படை யாது? நாட்டின்மீது உள்ள அன்பு: மக்கள்மீது காட்டும் நேயம். எனவே உலகத்து நன்மைகளுக்கு எல்லாம் தூண்டுகோலாக உள்ளது அன்புதான்; அதனால்தான் அன்பே கடவுள் என்றும் அறிவிப்பர். அறம் உயிர்களை வாழ வைக்கும்; அன்பு உடையவர்களுக்கு அஃது ஆற்றலைத் தரும்; உயர்ந்த செயல்களைச் செய்யத் தூண்டும். அன்பு அற்றவரை அறக்கடவுள் காயும்; அவர்களை அழிக்கும்; அவர்களைத் தழைக்கவிடாது. புழுவுக்கு எலும்பு இல்லை; வெய்யில் அதனைச் சுட்டுப் பொசுக்கிவிடுகிறது. அதுபோலத்தான் அன்பு அற்ற மானிடச் சடங்களை அறம் காயும்; அவர்கள் வாழ்வு சாயும். உள்ளத்தில் அன்பு இல்லை என்றால் அவர்கள் பள்ளத்தில் விழ வேண்டியதுதான். அன்பு அகத்து இல்லாத உயிர்வாழ்க்கை தளிர்க்கவே தளிர்க்காது; கொடிய பாலை நிலம் அங்கே மழையைக் காணாமையால் மரம் வற்றி விடும்; பட்டுப் போன அந்த மரம் மறுபடியும் துளிர்விடும் என்று கூறவே முடியாது. நீர் இல்லாத மரம் தளிர்க்காது; அன்பு உள்ளத்தில் இல்லை என்றால் அந்த வாழ்க்கை தலை எடுக்காது. அவனை உயிருள்ள மனிதன் என்றே கூறமுடியாது. அவனாயினும் சரி, அவளாயினும் சரி, தோற்றம் அழகு உடையது; என்றாலும் அன்பு உள்ளத்தில் இல்லை என்றால் அவர்களுக்கு ஏற்றம் இல்லை; புறத்துறுப்பு வடிவு தரும்; அகத்துறுப்பே இயக்கம் தரும். பொம்மை அழகாகத்தான் இருக்கிறது என்றாலும் அதனை உயிர் உள்ள மனிதன் என்று கூறார்; அதனை அவன் என்றோ, அவள் என்றோ கூற முடியாது. “ஆள் பார்க்க நன்றாகத்தான் இருக்கிறான்; ஆனால் அவன் யாருக்கும் உதவமாட்டான். அவனால் எந்தப் பயனும் இல்லை” என்றுதான் உலகம் பேசும்; அவனை ஏசும். அன்பின் வழியேதான் உயிர் நிலைத்து இருக்கிறது. அன்பு இல்லை என்றால் அவன் வெறும் சடப்பொருள் தான். எலும்பைத் தோல் போர்த்திக்கொண்டு இருக்கிறது என்றுதான் அத்தகையவனைப் பற்றிக் கூற முடியும்; இரத்தம் சதை உடையவர் என்றுகூட அவனைப்பற்றிக் கூற முடியாது. 9. விருந்தோம்பல் வீடு என்ற ஒன்றும், அதற்கு ஒரு முகவரி என்றும் வைத்துக்கொண்டு குடும்பம் நடத்துவது எல்லாம் விருந்தினரை உபசரித்து, அவர்களை உணவு அருந்தவைத்து அன்பு காட்டுவதற்கே; திண்ணைக்கு வெளியே நிற்க வைத்துவிட்டு வெண்ணெய் கலந்த வெண்சோறு ஆயினும் தின்று சுவை கண்டால் பன்றிக்கும் அவனுக்கும் என்ன வேறுபாடு உள்ளது? அமுதமேயாயினும் விருந்தினரை வெளியே இருக்கச் சொல்லிவிட்டுத் தனியே உண்ண நினைப்பது அநாகரிகம்; அற்பத்தனமும் ஆகும. நம்பினார் கெடுவதில்லை; இது மறைகளின் தீர்ப்பு: விருந்தினரை ஒம்பியவரும் கெடுவது என்றுமே இல்லை; அவன் செல்வம் வற்றாத ஊற்றாகப் பெருகக்கொண்டே இருக்கும்; விருந்தினர் வருவதும் போவதுமாக இருக்க “இங்கு என்ன சிறப்பு?” என்று அதனைக் காண வெளியே செல்வமகளாகிய திருமகள் காத்துக் கிடப்பாள்; அவள் அழைப்பு இன்றியே உறவுகொண்டு அங்கேயே தங்கி விடுவாள்; அவள் களிநடம் புரிந்து அந்த வீட்டைப் பொலிவு பெறச் செய்வாள். பூமகள் புகுந்துவிட்ட வீட்டில் அவ் வீட்டுக்கு உரியவனுக்கு என்ன குறை? அவன் செல்வம் கொழிக்க வீட்டில் அவன் பிழைக்க வழிதேட வேண்டியது இல்லை; உழைக்க அவன் நிலம் தேடிச் செல்ல வேண்டியது இல்லை; வந்தவருக்கு உண்ணத் தந்துவிட்டு மிச்சத்தை மிசைவான். அவன் நிலபுலத்தை அவனே சென்று கவனிக்க வேண்டும் என்பது இல்லை; தொட்ட இடம் எல்லாம் பொன் துலங்கும்; மற்றவர்கள் அவனுக்காக உழைக்க முன் வருவார்கள். அந்திக் காலத்தில் அவனைச் சந்திக்க வானவரும் வருவர்; அருவிருந்தாக வரவேற்றுச் சிறப்புச் செய்வர்; அவன் வாழ்க்கை வடுவந்து பாழ்படுவது இல்லை. வருகின்ற விருந்தினரை மிக்க வகையில் உபசரிக்க வேண்டும் என்பதைவிடத் தக்க வகையில் கவனிக்க வேண்டும். தேவை அறிந்து அவர்களுக்கு உணவும் உறையுளும் தந்து களைப்பைப் போக்கி மனம் மகிழ வைக்க வேண்டும். நீ எவ்வளவு செய்கிறாய் என்பதைவிட யாருக்குச் செய்கிறாய் என்பது அடிப்படை தகுதி அறிந்து உபசரித்தால் மிகுதியான நன்மைகள் வரும். விருந்து அவர்களுக்கு இட்டு அருந்துக; அது தனி இன்பம்; அந்த வாய்ப்பு அனைவர்க்கும் வாய்க்கும் என்று கூற இயலாது. இல்வாழ்க்கை நடத்தும் நல்வாழ்க்கை உடையவனால் அஃது இயலும்; இந்த இணையற்ற வாய்ப்பும், அதனால் அமையும் உயர்வும் அடைய முடியாதவரே வாழ்க்கையைவிட்டு ஓடுவர்; விரக்திகொண்டு விடுதலை பெற நாடுவர்; இல்வாழ்வில் இந்த நல்வாய்ப்பு இருக்கிறது என்பதனை அறிய முடியாதவரே காவி உடை ஏந்திக் கமண்டலத்தைக் கைபிடிப்பர். விருந்தினரை ஒம்புவது ஏழைகளால் இயலாது; வறியவருக்கு முடியாது; செல்வர்களே செய்ய முடியும். செல்வத்தின் பயன் இதுதான். பணம் படைத்தும் விருந்தினரைப் போற்றும் குணம் படைக்காவிட்டால் அவர்கள் வாழ்க்கை மணக்காது. செல்வர்கள்தாம்; ஆனால் விருந்தினரை ஓம்ப மனம் இல்லாததால் அவர்கள் ஏழைகளே; மடமை மிக்கவர்கள் என்றுதான் கூற முடியும். விருந்தினரை உபசரிப்பது நுட்பமான கலை. அதன் விலை இன்முகம். தூரத்தில் இருந்தே நம் அன்பின் ஈரத்தை அவர்களால் உணர முடியும். அனிச்சப்பூ முகர்ந்தால் தான் குழையும்; விருந்தினர் முகம் திரிந்து நோக்கினாலேயே மனம் மாறுபடுவர். நீ எவ்வளவு செய்தாய் என்று பேசமாட்டார்கள்; நீ எப்படி நடந்துகொண்டாய் என்பதைப் பற்றித்தான் கூறி ஏசுவார்கள். 10. இனியவை கூறல் சொற்களில் கருத்து இருக்கட்டும்; அன்பு கலந்து பேசுக; உள்ளொன்று வைத்துப் புறம் ஒன்று பேசும் கரவு, உறவைக் கெடுக்கும்; கடுமை தவிர்த்துக் காதுக்கு இனிமை சேர்க்கவும். கொடைவள்ளல் என்று பிறர் தடையின்றிப் பேசுவர்; உள்ளம் உவந்து ஈவதைவிடக் கள்ளம் தவிர்த்து முகம் மலர்ந்து இனிய சொல் பேசுக; அதையே அவர்கள் எதிர் பார்க்கின்றனர். கோயில் பூசைக்கு வருபவர் அதன் மணி ஒலியையும் கேட்க விழைவர். உன் நோக்கம் எதுவாயினும் சரி; உன் பார்வை அவர்களைப் பெரிதும் தாக்கும்; கனிவு அவர்கள் துயரைப் போக்கும்; இன்சொற் கூறுவது அறச்செயலும் ஆகும். யாரிடத்தும் எப்பொழுதும் இனிதாகப் பேசுக: “இவனா? யாருக்கும் கெடுதி செய்யமாட்டான்” என்ற பெயர் எடுப்பாய்; உனக்கு எந்தக் கெடுதியும் செய்ய எந்த எதிரியும் பிறக்கமாட்டான். பகை இல்லாமல் வாழ நகைமுகத்தோடு பழகுதல் வேண்டும். பணிவும் உனக்கு அணி செய்யும்; ஆரவாரம் இல்லாமல் அடக்கமாகப் பேசினால் அனைவரும் உன்னிடம் ஒடுக்கம் காட்டுவர். மிடுக்கு அடுக்கிய துன்பங்களைத் தரும். நல்லனவற்றை நாடி இனிய பேசினால் தீமைகள் தேயும்; அறம் பெருகும். பண்பிலிருந்து நீங்காத பயனுடைய சொற்கள் நன்மைகளை உண்டாக்கும். செருக்கு நீங்கிய சொற்கள் மற்றவர் நெஞ்சை உருக்கி நட்பினை விளைவிக்கும்: இப் பிறவிக்குமட்டும் அன்று; அடுத்த பிறவிகளிலும் இன்பம் சேர்க்கும். இன்சொல் பேசினால் நன்மைகள் உண்டாகின்றன என்பது தெரிந்தும் வன்சொல் வழங்குவது ஏன்? பிழைக்கத் தெரிந்தவர்கள் இத் தவறுகளை இழைக்கமாட்டார்கள். கனிகள் இருக்கக் காயை யாரும் தேடமாட்டார்கள். இனிய சொற்கள் இருக்கும்போது கடுஞ்சொற்களை யாரும் நாடமாட்டார்கள்; இனிக்கும் கனி இருக்கப் புளிக்கும் காயைத் தேடாதே; சொல்லாடச் சோர்வு போகும் என்பர்; அதாவது இனிய சொற்களைப் பேசினால் மற்றவர்கள் சோர்வு நீங்கிவிடும் என்பதை உணர்க. 11. செய் நன்றி அறிதல் நல்லது செய்கிறார்கள்; உடனே அதனை மறந்துவிடுகிறோம்; மறதியா இதற்குக் காரணம்? அசதிதான் காரணம். உலகில் ஏன் ஒருவர் மற்றவருக்கு ஏதாவது உதவி செய்கிறார்கள்? அதுதான் மனிதப் பண்பாடு; மழை ஏன் பெய்கிறது? அது மேகத்தின் கொடைத் தன்மை. நீ எந்த உதவியும் செய்தது இல்லை; முன்பின் பழகியதும் இல்லை; யாரோ எவரோ உன் தேவையை அறிந்து உதவிசெய்கிறார். உதவிசெய்வது அவர் உத்தி யோகம் அன்று; கடமையும் அன்று; மனப்பண்பாடு: அவ்வளவுதான்; அதற்கு நிகராக எதனைத் தந்தாலும் ஈடு ஆகாது; வானமும் ஈடாகாது; இந்த வையகமும் நிகராகாது. காலத்தில் வந்து உதவுகிறவர் செய்யும் உதவி சிறிது எனினும் அது தக்க சமயத்தில் செய்யப்பட்ட செயல் ஆகும்; அதன் விளைவு மிகப் பெரிது ஆகும். உயிர்போகும் ஒருவனுக்குப் பருக நீர் தந்ததால் அவன் உயிர் நிற்கிறது. நீ தந்தது வெறும் தண்ணிர்தான்; காசு இல்லாமல் கிடைப்பது; என்றாலும் ஓர் உயிரைக் காப் பாற்ற முடிந்தது. இது காலத்திற் செய்த உதவி; இதற்கு ஈடு எதனைக் கூற முடியும்? ஞாலமே தந்தாலும் இதற்கு ஈடு ஆகாது; உதவி தினை அளவுதான்; பயன் பனை அளவு என்பதை மறக்க முடியாது. எனவே தூய உள்ளம் படைத்த இந் நல்லோரின் தொடர்பை எப்பொழுதும் மறக்கக்கூடாது; அவர்கள் உறவு நிலைத்து இருப்பது தக்கது; துன்பத்தில் துயர் துடைத்தவர்களை அன்பர்களாகக் கொள்க. எழு பிறப்பும் தம் துன்பத்தைத் துடைத்தவனின் நட்பை மறக்கக் கூடாது; இந் நல்லுறவை நட்பாக மதிப்பது ஒட்பமாகும். நண்பர்கள் என்று எடுத்துக்கொண்ட பிறகு அவர்கள் ஏதோ சில சமயம் தீமையும் செய்துவிடலாம். அவர்கள் செய்த நன்மையை நினைத்துப் பார்; தீமை தீயின்முன் வைக்கும் தூசாக மாறிவிடும். தீமையை மறந்துவிடுவது தக்கது; நன்மையை மறக்காதே. கொலைக்கு நிகரான கொடுமையைச் செய்திருக்கலாம்; அவன் உனக்கு நண்பன்; அவன் ஒரு சமயம் உன் உயிரையும் காப்பாற்றி இருக்கலாம். கடுமையான சோதனைகளில் கைகொடுத்து உதவி இருக்கலாம். அடுக்கிய நன்மைகள் உனக்கு அவன் செய்திருப்பான்; அவற்றுள் ஒன்றினை நினைத்துப்பார். விளக்கின் முன் இருள்போல் அவன் செய்த தீமைகள் மறைந்துவிடும். அவன் செய்திருக்கும் நல்லவற்றுள் ஒன்றை நினைத்துப் பார். அவன் செய்த தீமைகள் உன் நினைவுவிட்டு நீங்கிவிடும் அறம் என்று குறிக்கப்படுவன பல உள்ளன; அவற்றுள் நன்றி மறவாது இருத்தல் ஒன்று ஆகும். அறம் பிற நீ துறந்து விட்டாலும், கைவிட்டாலும் நீ மன்னிக்கப்படுவாய்; அறம் உன்னைச் சீறாது. நன்றி மறந்தால் அதற்கு மன்னிப்பே கிடையாது. தகாத பல செய்தாலும் தாங்கிக்கொள்ள முடியும்; செய்த நன்மையை மறந்து கேடு செய்தால் அவனைப் போன்ற பாதகன் இருக்க முடியாது. அவனுக்கு விமோசனமே கிடைக்காது. 12. நடுவுநிலைமை முறை கெடாமல் எதனையும் ஏற்றுச் செய்ய வேண்டும்; நிறைகெட்டால் பொருள் கிட்டும் என்பதற்காக நடு நிலைமை பிறழ்ந்தால் அவன் கெடுவது உறுதி ஆகும். தட்டு ஒரு பக்கம் சாயச் சீர்தூக்கும் கோலை வலியச் சாய்த்தால் அவன் சாய்வது நிச்சயம். நேர்வழியில் பொருள் ஈட்டினால் அதனைச் சீராக வைத்துக்கொள்ள முடியும்; அது நிலைத்து நிற்கும். குறுக்கு வழியில் சென்றால் சறுக்கி விழ வேண்டியதுதான். புதை குவியல் என்று செல்வத்தைச் சேர்த்து வைக்கலாம். அஃது அழுகிப் பின் கெடும் அவியல் என்று அவனுக்குத் தெரியாது. உழைக்காமல் ஈட்டிய செல்வம் எளிதில் கிடைத்த பொருள் என்பதால் அதனைக் காக்கும் முயற்சி அவனிடம் இருக்காது. கொள்ளை அடித்த பொருள் அதன் அருமை தெரியாது; அணுஅனுவாகச் சேர்க்கும் பொருள் உழைப்பின் பின்னணியைக் கொண்டது; எளிய இன்பங்களுக்கு அவற்றை அளித்துவிட்டு அவன் பிறரிடம் காசுக் காகப் பல் இளிக்கும் நிலையை அடைகிறான்; அவன் வாழ்க்கையில் எளியன் ஆகிவிடுகிறான். அவன் விட்டுச் செல்லும் சந்ததிக்கு அவன் ஈட்டிய பொருள் எட்டவே எட்டாது. அப்படி அவர்கள் கைக்கு வந்தாலும் அவர்கள் அதனை வைத்துக் காப்பாற்ற மாட்டார்கள்; அழிக்கும்வரை அவர்கள் விழித்துச் செயல்படுவர். வாழும் போது ஒருவன் எப்படி வாழ்கிறான் என்பதனைப் பிறர் பேச மாட்டார்கள். அவன் கண் மூடியதும் மற்றவர்கள் அப்பொழுதுதான் தம் கண் திறந்து பார்ப்பார்கள்; அவன் குறைகள் வெளிப்படும்; சுத்தமான விமர்சனங்கள் நடைபெறும். தக்க வழியில் உழைத்துப் பொருளை ஈட்டினானா? தகாதவழியில் குவித்தானா? என்பன வெளிப்படும். நேற்று அடுக்கிய செல்வத்தோடு வாழ்ந்தவன் இன்று ஒடுக்கிய வறுமையில் உழன்று அடங்கிவிடுகிறான்; செல்வம் அதன் பெயருக்கு ஏற்ப அது செல்லும் இயல்பினது; இடத்திற்கு இடம் தாவும்: அஃது ஒரு நிலை கொள்ளாது: பொருள் இன்று வரும்; நாளை போகும்; அவன் நாணயம் ஒன்றைத்தான் மற்றவர்கள் நாநயம் விமரிசிக்கும்; பாராட்டும். ஒருவன் எப்படி வாழ்ந்தான்? எப்படிப் பொருளைச் சேர்த்தான்? என்பது அவன் வாழும்போது விளங்காது. தன்னை விற்று அவன் உயர்ந்தானா? அசைந்து கொடுக்காமல் கொள்கைப் பிடிப்போடு கொடி தாங்கினானா? என்பது அவன் மறைந்தபின்தான் பேசுவார்கள். ஒழுங்காக வாழ்ந்தவர்களின் மனச்சான்று தீர்ப்பாக அவர்களுக்கு நற்சான்றைத் தரும்; தவறான வழியில் பொருளை ஈட்டி அவர்கள் சலவைக்கல் பதித்து வீடுகட்டி இருந்தாலும் அவர்களை வெளுத்துக் கட்டாமல் இருக்கமாட்டார்கள். மனச்சான்று ஒருவனுக்கு ஆசான். குருவின் ஆணைக்குக் கீழ்ப்படிவதுதான் நன்மாணாக்கனின் கடமை; குருவை மீறி எந்தச் சீடனும் நடந்துகொண்டால் அவன் சீர் பெற முடியாது. நல்லது செய்து அதனால் அவன் கெட்டு விட்டாலும் அவனைப் பாராட்டாமல் இருக்கமாட்டார்கள். வறுமை கண்டும் அவர்கள் அவன் பெருமையைப் பேசுவர்; நன்மையில் புடம்போட்டு எடுத்த பொற்கலம் அவன் வாழ்வு எனப் போற்றுவர்; சமன்செய்து சீர்தூக்கும் தராசு போல ஒரு பக்கம் சாயாது வாழ்வது ஒருவனுக்குப் பெருமை தரும்; சால்பு உடையவன் என்று எடைபோட்டுக் கூறுவர். அவன் மதிப்பு உயரும். நடுநிலைமை கெட்டுப் பொருள் நாடும் நிலைமையைத் தான் ஊழல் என்று கூறுவர். ஊழல் பெருகினால் நேர்மை குறையும்; உழைப்பவன் இழப்பு அடைகிறான்; அவன் உழைப்பைப் பதவியில் இருப்பவன் உறிஞ்சிக் கொழுத்து விடுகிறான். இது சமூக அநீதி ஆகும். சொல்லில் நேர்மை இருந்தால் செயலிலும் சீர்மை இருக்கும். வார்த்தை தவறுவதற்கே காரணம் உள்ளத்தில் நேர்மையாக வாழ வேண்டும் என்ற உறுதி குலைவதால் தான். எனவே மனத்தாலும், சொல்லாலும், செயலாலும் தவறாமல் இருந்தால் அவ் வாழ்வு செப்பம் உடையது என்று கூறலாம். வாணிபம் செய்வது, ஏனைய தொழில்களைப் போல உழைத்துப் பொருள் ஈட்டுவது ஆகும். நாணயம், நேர்மை, நம்பிக்கை இதன் உயிர்நாடிகள்; எப்படியும் பொருள் ஈட்டிக் குவிப்பதுதான் இதன் நோக்கம் என்ற தவறான கருத்து உருவாகி உள்ளது; பிறர் பொருளையும் தம் பொருள்போல் மதித்து மிகையாகக் கொடுத்தாலும் அதனை ஏற்கக் கூடாது. நாணயம் இருக்க வேண்டும். அது வாணிகத்தில் நம்பிக்கை ஊட்டி அதனை வளர்ப்பதற்கு உதவும். மிகையாகப் பொருள் பெற்றாலும் அது நடுவுநிலைமைக்குப் பகையாகவே அமையும். 13. அடக்கம் உடைமை அடக்கம் உன்னிடம் அடங்கி இருந்தால், நீ உயர்ந்து காணப்படுவாய். மரிக்காமலேயே உன்னை அமரன் என்று பாராட்டுவர்; அடங்காது இருப்பது உன்னை நிறை இருளில் ஆழ்த்திவிடும். காத்துப் பழகிய நீ அடக்கத்தையும் உன் உள்ளடக்கத்தில் சேர்த்து வைக்கவும்; அதனைவிட உன் உயிருக்கு ஆக்கம் தருவது வேறு எதுவும் இருக்க முடியாது. வாயை மூடிவை; செவிகளைத் திறந்துவை; அறிய வேண்டியவற்றை அமைதியாக அறிய முயற்சி செய். காற்றும் வெளிச்சமும் ஆரோக்கிய வாழ்வுக்கு அவசியம். அவசரப்பட்டு முத்துகளை உதிர்க்காதே; தேவைப்படும் போது அவற்றுக்குத் தக்க விலை கிடைக்கும். மலை என்ற பெயரே அஃது எதற்கும் குலையாமல் இருப்பதால்தான். நீ உன் நிலையில் திரியாதே; அடங்கி இரு; எளிதில் அசைக்க எந்தச் சூறாவளியாலும் முடியாது. அடங்கி அமைதியாக இருப்பவனின் தோற்றம் மலையினும் மாட்சி உடையது; மதிக்கத் தக்கது. பேதமற்ற நிலை என்ற ஒன்றைக் கூறினால் அனைவருக்கும் உரியது அடக்கம். இதில் ஏழை, செல்வன் என்ற வேறுபாடு இருக்காது. எனினும் பணிவு என்பது செல்வர்க்கே அழகை மிகுதியாகச் சேர்க்கும். ஆமை என்பது பிறருக்குப் புலப்படாமை உடையது. கனத்த ஓடு அஃது உறையும் கூடு; கடன்காரனைப் போல அஃது அடிக்கடி தலைகாட்டாது; மானம் உள்ளவனாக உள்ளே ஒடுங்கி இருக்கும். அஃது உன்னால் இயலாமை தான்; என்றாலும் அடக்கம் தற்காப்பு அளிக்கும்; ஏழு பிறப்புக்கும் நன்மை விளைவிக்கும்; உன்னை யாரும் தொட இயலாது; உன் வாழ்வு கெட வாய்ப்பு நேராது. நா அடிக்கடி வெளியே நீட்டுகிறது. அதைக் கட்டிப் போடு. இல்லாவிட்டால் வீண்வம்பை விலைக்கு வாங்கி வந்துவிடும்; பிறகு வருந்துவாய்; அதனால் நாவினைக் காப்பாயாக. உன் நண்பன் மானமுள்ளவன்; கோபம் பொத்துக் கொண்டு வந்துவிடும்; நீ நன்மைகள் பல செய்திருக்கிறாய்; என்றாலும் அசதியில் வசவு உன் சொற்களில் ஏற்பட்டு விடுகிறது. அவன் மானமுள்ளவன்; நிதானம் இழந்து விடுகிறான்; நல்லதை எல்லாம் மறந்துவிடுவான்; ஒன்றை வைத்தே ஓயாமல் பகைமையை வளர்ப்பான்; அவன் உன் நண்பன்தான். தீ சுட்டுவிட்டது; மருந்து போட்டதால் புண் ஆறி விட்டது; வடு மட்டும் தெரிகிறது; அதனைப்பற்றி நீ கவலைப்படுவதே இல்லை. உன் நண்பன்தான். அவன் சுடுசொல் உன் நெஞ்சில் வடு உண்டாக்கிவிட்டது. அஃது ஆறவே இல்லை; அஃது ஏன்? சொல்; அஃது ஆறாது. பத்திரப்படுத்திவை; உன் சினத்தை வெளிக்காட்டாதே; சிரமமான காரியந்தான்; நீ கிரமமாகப் படித்திருக்கிறாய்; பக்குவப்பட முடியும்; பழகிக் கொள்; பண்புடையவன் ஆகி விடுவாய்; சினம் அடக்கு; அறம் உனக்கு நண்பன் ஆகி விடும். அறம் உன்னைவிட்டு விலகாது; பிறகு நீ தவறே செய்யமாட்டாய்; சினத்தை அடக்குவது அடக்கத்தில் தலையாயது; முதன்மையானது. 14. ஒழுக்கம் உடைமை இமயத்தின் உச்சி உயரமானது; அதனை நச்சி ஒருவன் ஏற முனைகிறான்; அதற்கு ஆற்றல், பிடிப்பு, நெஞ்சுறுதி இவை தேவைப்படுகின்றன; ஒழுக்கம் உயரமானது; அஃது உயர்வு தருகிறது. அஃது அவனை மிகவும் உயரத்தில் வைக்கிறது என்றாலும் அதன் படிகள் கடுமையானவை; பிடிப்பு விட்டால் தடுக்கி விழவேண்டியதுதான். ஒழுக்கம் உயர்வு தருவதால் அதனை உயிரினும் மேலாகக் கருதிப் போற்ற வேண்டும். ஒழுக்கம் ஒழுக்கம் என்று சொல்லி அறுத்துக்கொண்டு இருக்கிறார்கள்; அலுத்துவிட்டது; ஒழுக்கத்தைக் கை விட்டால் என்ன? விஷப்பரீட்சை செய்யாதே; ஒழுக்கத்தைக் கைவிட்டால் மிகப் பள்ளத்துக்குள் வழுக்கி விழுவாய். உன்னை மீட்பதற்கு எந்த நூல் ஏணியும் பயன்படாது. குடுமிவைத்த பார்ப்பான் படித்து வைத்த வேதத்தை மறந்தான்; சாத்திரம் கற்ற ஐயன்மார்கள் அதற்காக அவனைச் சாதியில் இருந்து விலக்கவில்லை. “மறுபடியும் படித்துக் கொண்டு வா” என்று சொல்லி அனுப்பி விட்டார்கள். மறுநாள் நீதியை விட்டு நியதியை மறந்தான்; நல் ஒழுக்கத்தைத் துறுந்தான். அவன் பூணுால் அன்று முதல் களையப்பட்டது. பழி ஏற்பட்டுவிட்டால் அதிலிருந்து மீள்வதற்கு வழியே ஏற்படுவதில்லை; வேதத்தை மறந்தாலும் படித்துக் கொள்ளலாம். ஒழுக்கத்தைத் துறந்தால் சரிப்படுத்திக் கொள்ள இயலாது. அழுக்காறு கொண்டு அதே வேதனையில் ஒருவர் தாம் ஏதும் செய்யாமல் அழிந்துவிடுவதும் உண்டு. அதே போல ஒழுக்கம் தவறியவன் எவனுமே நிலைத்து முன்னேறுவதில்லை; உயர்வு அவனிடம் செல்ல மறுத்துவிடுகிறது. ஒழுக்கம் உயர்வு தரும்; இழுக்கம் பழியைத் தரும். ஒழுக்கம் உடையவன் சொல்லாலும் சோர்வுபடப் பேச மாட்டான். கீழ்நிலையில் வாழும் ஒருவன் பேசும்மொழி, சேற்று நிலத்துச் சொற்களாக அமைவது உண்டு. வேற்று ஆள் ஒருவன் அதனைக் கண்டாலும் இவ்வாறு பேசக் கூடாது என்று சுட்டிக் காட்டமாட்டான். மேன்மக்கள் தவறியும் தாழ்சொற்களை உதிர்க்கமாட்டார்கள். வாய்தவறி அச்சொற்களில் கறை ஏற்பட்டால் அந்தக் குறை வெள்ளைச் சட்டையில் பட்ட கறுப்பு மையாக வெளிக்காட்டி விடும். அதனால் அவர்கள் விழிப்போடு இருப்ப்ார்கள்: வார்த்தை வழுச் செய்யமாட்டார்கள். கோபுரக் கலசம் அது கீழே இறங்குவதில்லை. அஃது ஒளிவிட்டுக் கொண்டே இருக்கிறது. குப்பைக் கோழி புழுப்பூச்சியைத் தின்றுகொண்டு தரையில் மேயும். ஒழுக்கத்தில் உயர்ந்தவன் மேலோன்; ஒழுக்கம் தாழ்ந்தோன் கீழோன் ஆகிறான். ஒழுக்கம் என்பது நன்னடத்தையும் ஆகும். உயர்ந்தோர் காட்டிய வழியில் நடப்பது உயர்வுதரும். நூல் பல கற்ற வராயினும் உலக நடை அறிந்து ஒழுகுவது அவசிமாகும். உலகநடை என்பது உயர்ந்தோர் சுட்டிக்காட்டும் நன்னெறிகளே. 15. பிறனில் விழையாமை அறநூல் அறிந்தவர்கள் பிறன் மனைவியை நயத்தலை ஒழித்து ஒதுக்குவர். ஒருவன் எந்தத் தவறு செய்தாலும் அவனை மன்னிக்க முற்படுவார்கள்; பிறன் ஒருவன் வாசற்கடையில் நின்று ஏசப்படும் நிலையில் நடந்து கொள்வானானால் அவனை மன்னிக்கமாட்டார்கள். நல் உணர்வு அற்றவனைச் செத்தவனாகவே மதிப்பர். ஒருசிலர் தம்மைப் பெரிய மனிதன் என்று சொல்லிக் கொள்ளலாம். ஒருவன் பின்விளைவு பாராமல் ஒருத்தியை விழைந்தால் அவன் மதிப்பு இழந்தவன் ஆகிறான். அவன் எத்தகையவனாக இருந்தாலும் அவன் இத்தகைய செயலைச் செய்தால் வெறுப்புக்கு ஆளாவது உறுதி; எதிர்ப்புக்கு உரியவன் ஆவான். வாசற்கதவைக் கடந்து மற்றொருத்தியோடு உறவு கொள்ள நினைப்பது தவறு. அப்படி ஒருவன் நடந்து கொண்டால் அவனுக்கு அப்பொழுது எந்தத் தீமையும் நேராமல் இருக்கலாம்; தெரிந்தால் என்ன ஆகும்? அழியாப் பழி அவனை அழித்துவிடும். இதனால் என்னதான் ஆகிவிடும்? குடி முழுகியா போய்விடும் என்று தடித்தனமான வினாவை எழுப்பலாம்; அவனைச் சார்ந்தோருக்கு முதலில் தெரிந்தால் பகை உண்டாகும். குத்துவெட்டு ஏற்படாமல் இருந்தால் புண்ணியந்தான். கொண்டவன் இதனைக் கண்டுகொண்டு மண்டாகவா இருப்பான்? தண்டுகொண்டு தாக்க மாட்டானா? தப்பித்துக்கொள்ளலாம்; ஆனால் அந்தப் பகை என்றும் நிலைத்து இருக்கும். யாரும் இதனைக் கவனிக்கவில்லை; எந்தக் கேடும் நிகழவில்லை என்று நினைக்கலாம். ஆனால் அறநூல்கள் இதனைப் பாவமான செயல் என்று காண்பிக்கத்தான் செய்யும். உன் மனச்சான்று இடித்து உரைக்கும்; நீ செய்வது அறத்துக்கு மாறுபட்ட செயல் என்பதை அது சொல்லிக் கொண்டே இருக்கும். இதில் நீ கண்டது என்ன? அச்சம்தான் மிச்சம். நடுங்கி நடுங்கிச் சாகவேண்டியதுதான். இதற்கு விளக்கம் தேவையில்லை; அஞ்சி அஞ்சிச் சாவார்கள் இந்த அவதியிலே. இம் மூன்றுமே அல்லாமல் பழி என்பது உச்சகட்டமாக அமையும்; அக்குடும்பத்தின் இன்ப வாழ்வை அன்பு உறவைச் சிதைத்தான் என்ற பழி என்றும் நிலைத்து நிற்கும். பிறர்க்கு ஏற்படும் பாதிப்புகள் இருக்க அவனுக்கே ஏற்படும் பரிதவிப்பும் உள்ளது. பேராண்மை என்பது பிறன் மனைவியை விரும்பாத நல்லொழுக்கம்; ஒருத்தியோடு வாழ்ந்து இல்வாழ்க்கையைச் சிறப்பித்து மனநிறைவோடு வாழ்ந்தால் அவனுக்கு அது வெற்றியாகும். வாய்ப்புகள் வரலாம்; அந்தத் தளைகளுள் அகப்படாமல் இருப்பதுதான் ஆண்மைக்கு அழகு; அவன் மனைவியும் அவனை மதிப்பாள். அன்பு வளரும்; அறம் அவனை வாழ்த்தும். தன்னால் சில பழக்கங்களை விடமுடியாது என்று பிதற்றுபவரும் உளர். குடிப்பது தமக்குப் பழக்கம் அதனை விடமுடியவில்லை என்பார்கள். திருடுவது தேவை என்று ஒருசிலர் அநியாயத்தை நிறுவி நியாயம் பேசுவார்கள், முரடன், வீணன், கொடியவன், கீழ்மையன், கயவன் என்று பெயரெடுத்தாலும் அவன் தீய செயல்களைப் பொருட்படுத்தமாட்டார்கள். அற்பத்தனமாகப் பிறன் மனைவியை விரும்புதல் ஆகிய இக்கீழ்மையை மேற்கொள்பவனை யாரும் மதிக்கமாட்டார்கள். அவனுக்கே தற்காப்பு, இந்த ஒரு குற்றம் மட்டும் செய்யாதிருப்பது. 16. பொறை உடைமை கையிலே கடப்பாரை; பக்கத்திலே மண்வெட்டி: நிலத்தைக் குழிப்படுத்துகிறான். அவனை அந்தக் குழியிலேயே போட்டு மிதிக்க நினைக்கலாம்; நிலம் என்னும் தங்கை வெட்டினாலும் தட்டிக் கேட்பது இல்லை; அவனைத் தாங்கிக் கொண்டுதான் இருக்கிறது; தன்மீது நிற்பவனைச் சாய்த்துவிடுவதில்லை. பொறுமையும் அப்படித்தான்; எதிரி எவ்வளவு தீமைகள் தொடர்ந்து செய்தாலும் அவற்றைத் தாங்கும் சக்தி ஒருவனுக்கு வேண்டும்; நிலம் அவனுக்குச் சொல்லித்தரும் பாடம் இது. பிறர் செய்யும் தவறுகளை எப்படிப் பொறுத்துக் கொள்வது என்று கேட்கலாம்; எளிய வழி இருக்கிறது; அவற்றை உடனே மறந்துவிடு; பெரிய சுமை உன்னை விட்டு நீங்கிவிடும்; தூக்கி எறிந்துவிடு; பொறுப்பதே, தக்கது. அதனைவிட மறப்பது அதனினும் மேலானது ஆகும். பொருள் இருந்தும் விருந்தினரைப் போற்றாவிட்டால் அவன் வறியவனே ஆகிறான். அதேபோல அறிவுஇருந்தும் பிறர் தவறுகளை மன்னிக்காவிட்டால் அவன் சிறியவனே. அதற்குத் தக்க மனவலிமை வேண்டும்; அதனை ஒருவன் உண்டாக்கிக் கொள்ள வேண்டும். ஒறுத்துப்பார்; அதனால் வெறுப்புகள்தாம் மிஞ்சும்; பொறுத்துப்பார்; அதனால் உன் புகழ் எஞ்சும்; உன்னைத் தங்கமான மனிதன் என்று எங்கும் எப்பொழுதும் போற்றுவர். பதிலுக்குப் பதில் தீமை செய்துவிடலாம். அஃது ஒரு நாளைக்குத்தான் மனநிறைவைத் தரும். பொறுத்தால் பொன்போல் ஒளிவிடுவாய்; பொன்றும் துணையும் புகழ் நிற்கும். அவன்தான் மடையன்; தவறு செய்கிறான்; அதற்கு நீயுமா திருப்பித் தீமை செய்ய வேண்டும்? அவனைவிட நீ உயர வாய்ப்பு உள்ளது. பயன்படுத்திக்கொள்; நல்லதே செய்க. செல்வச் செருக்கால் அல்லல் விளைவிக்கும் செயலை மற்றொருவன் உனக்குச் செய்கிறான். அவனுக்குத் திருப்பி நன்மையே செய்துபார்; திருந்திவிடுவான். பொறுமை என்பது எளிய செயல் அன்று; பிறர் தரும் துன்பங்களையும் தீமைகளையும் தாங்கிக்கொள்ள வேண்டும். அந்த வகையில் அஃது ஒரு தவமே; துறவு உள்ளம் இருந்தால்தான் இந்தத் துன்பங்களைத் தாங்கிக் கொள்ள முடியும். விரதங்களை ஏற்றுத் தவம் புரியும் துறவிகளைவிடச் சந்ததமும் பிறர் செய்யும் தீமைகளைத் தாங்கிக்கொள்ளும் பொறுமைசாலிகள் உயர்ந்தோர் என்று மதிக்கப்படுவர். 17. அழுக்காறாமை அழுக்காறு என்பது பொறாமையைக் குறிக்கும் சொல்லாகும்; அது கூடாது என்பதே இங்குக் கூறப்படுகிறது; எதிர்மறைச் சொல்லாகும். பொறாமை என்பது பிறர் நன்கு வாழ்வதனைக் கண்டு மனம் அழுங்குதல்; அது கூடாது என்று அறிவிக்கவே அழுக்காறாமை என்ற தலைப்புத் தரப்பட்டுள்ளது. பிறர் செல்வமும் நல்வாழ்வும் கண்டு நீ புழுங்கினால் உன் மனம் அழுக்குப் படிகிறது; வெளிச்சம் மறைந்து விடுகிறது. அதனால் நீ இருட்டில் தடுமாறுகிறாய்; உன் சொந்த முயற்சியும் குறைகிறது; மற்றவனைக் கெடுக்கும் தீய எண்ணங்களும் மலர்கின்றன. அத்தீயில் நீ கருகிவிட வாய்ப்பு உள்ளது. அழுக்காறு அதனை உடையவனை அழித்துவிடும். காற்றும் மழையும் வந்தால் முன்னெச்சரிக்கையாகத் தடுத்து நிறுத்த முடியும்; படகு கவிழாது; நமக்குத் தெரியாமல் செல்லரித்துக்கொண்டே போனால் படகில் ஒட்டைவிழும்; அதனைக் கவனிக்கமாட்டார்கள்; வெளிப்பகையைத் தாக்குப் பிடிக்க முடியும்; உட்பகையைத் தடுத்து நிறுத்த முடியாது; பொறாமை உடையவர்க்கு அதுவே போதும் அதனை உடையவனை அழிக்க; வெளியே இருந்து பகைவர்கள் வரத்தேவை இல்லை. அழுக்காறு உடையவன் பிறர் செல்வம் கண்டு புழுங்கிக் கொண்டே இருந்தால் அவன் தேறவே மாட்டான். வறுமை அவனை இறுகப் பற்றும்; அவன் சுற்றத்தவரும் அவனை நம்பி வாழ்பவரும் அவனோடு சேர்ந்து அழிந்துவிடுவர். அந்த வீடு சோம்பல் தங்கும் இடமாக மாறிவிடும்; தரித்திரம் தாண்டவம் ஆடும்; அங்குத் திருமகள் எட்டியும் பார்க்கமாட்டாள்; அவள் தமக்கை மூதேவியை அனுப்பி வைத்துவிட்டுத் தான் வெளியேறிவிடுவாள்; அவன் வாழ்க்கை பொலிவு இழந்துவிடும். அதே போலப் பொறாமை என்னும் பேய்க்கு இடம் கொடுத்தால் அது வீட்டில் உள்ள பொருள்களை எல்லாம் நாசம் செய்துவிடும்; அவனைத் தீய வழிகளில் கொண்டு சென்று அவனையும் அழித்துவிடும். அழுக்காறு என்னும் பேய் எந்தப் பாவமும் செய்யத் துணியும். பாவத்துக்குக் காரணமான இந்தப் பொறாமையை அகற்றுவதுதான் தக்க செயல் ஆகும். ஒருசிலர் பொறாமை உடையவர்கள் முன்னுக்கு வந்திருக்கலாம்; நேர்வழியில் வாழ்கிறவர் சரிந்தும் போய் இருக்கலாம். இவர்கள் எல்லாம் நமக்கு உதாரண புருஷர்கள் என்று எடுத்துக்கொள்ளக் கூடாது. அவர்கள் விதிவிலக்குகள் என்று கொள்க. நேர்வழியும் விடாமுயற்சி யும் பொறாமை இன்மையும் ஒருவனை உயர்த்தும்; அவன் செல்வமும் நல்ல நிலையும் பெற்று உயர்வது உறுதி. அழுக்காறு உடையவன் வழுக்கி விழுவது உறுதி. 18. வெஃகாமை பிறரை வஞ்சித்துப் பொருள் ஈட்ட நினைத்தால் அவன் குடி கெடும்; குற்றங்கள் சேரும். நேர்மை தவறாதவர்கள் மிக்க பயனைக் கருதிப் பழி தரும் செயல்களைச் செய்யமாட்டார்கள். அற்ப சுகங்களுக்கு ஆசைப்பட்டு அறன் அல்லாதவற்றைச் செய்யமாட்டார்கள். நிலைத்த இன்பம் இவை பயக்கா. தம்மைக் கட்டுப்படுத்திக்கொண்டு வாழ்பவர் தம் வறுமையைப் போக்கப் பெருமை கெடும் செயல்களில் ஈடுபட மாட்டார்; பிறர் பொருளை விரும்ப மாட்டார்கள். நூல் பல கற்றவரும் தம்மைக் கட்டுப்படுத்திக் கொள்ளாமல் பிறரிடம் கைநீட்டிப் பொருள் கேட்டுத் தம் கண்ணியத்தைக் குறைத்துக்கொள்கின்றனர். இவர்கள் தம்மைக் கற்றவர் என்று கூறிக்கொள்ள என்ன அருகதை இருக்கிறது? அருளறத்தில் நம்பிக்கை வைத்து வாழ்பவன் பொருள் வேட்கையில் நம்பிக்கை வைத்துப் பிறர் பொருளுக்கு ஆசைப்படுவது தகாது; அஃது அறமாகாது. பிறர் பொருளைத் தவறான வழியில் பெற்றுச் சேர்த்து வைக்கும் பொருள் நிலைக்காது; கைக்கெட்டுவது வாய்க்கு எட்டாமற் போய்விடும். பிறரிடம் கையேந்திப் பொருள் சேர்த்தால் தம்மிடம் உள்ள பொருளும் கைவிட்டுப் போகும்; அவரவர் தத்தம் உழைப்பால் உயர்வது உறுதி தரும். பிறரை வஞ்சிக்காதவன்; அவனைத் திருமகள் தேடி வருவாள்; நாடியதை அவள் தந்து அவனை உயர்த்துவது உறுதி. சிந்தனை அற்று நிந்தனை தரும் செயலாகிய பிறர் பொருளை விரும்புவது அழிவைத் தரும். எந்தக் காரணத்தைக் கொண்டும் பிறன் பொருள் வேண்டா என்ற உறுதியான கொள்கை உடையவனாக இருந்தால் அதுவே வாழ்க்கையில் வெற்றிதரும்; பெருமிதத்தோடு வாழ முடியும். 19. புறங்கூறாமை பிற அறங்களைக் கைவிடட்டும்; அறம் அல்லவையும் செய்யட்டும்; பிறனைப்பற்றி அவன் இல்லாதபோது அவனைப் பற்றிக் குறைகூறாமல் இருக்கட்டும்; அது போதும். அறத்தை அழித்துத் தீயவை செய்வதைவிட நேரில் பழகும்போது சிரித்துப் பேசிவிட்டு இல்லாத போது பழித்துக் கூறுதல் மிகவும் தீயது ஆகும். அவனைப்பற்றிக் குறைகூறாமல் இருக்கட்டும்; அது போதும். நட்புக்கே பொருள் இல்லாமல் போய்விடுகிறது. அந்த நட்புப் பொய்யானதாகும்; புறங்கூறிப் பேசி விட்டு அவனை நேரில் காணும்போது பொய்யாக உறவாடுதல் கீழ்மையாகும்; அதனைவிடச் செத்துப் போகலாம்; தவறுகள் செய்யமாட்டான். நேரில் சந்திக்கும்போது கன்னத்தில் அறைந்தாற் போல நாலு சொல் சொல்லிக் கண்டித்துவிடு அது மேலானது ஆகும்; அவன் இல்லாதபோது அவனைப் பழித்துக் கூறாதே. புறம்கூறி உன்னைத் தாழ்த்திக்கொண்டால் அறம் கூறும் நெஞ்சத்தன் அல்லன் என்று உன்னை இகழ்வார்கள்; நீ சொல்வதை யாரும் நம்பமாட்டார்கள். பிறன் குறையை அவன் இல்லாதபோது பேசிக் கொண்டே இருந்தால், அவனும் உன் குறைகளை அறிந்து வைத்து அவற்றைப் பலபேருக்கும் பரப்புவான். ஏன் இந்த வீண் வம்பு உனக்கு? சிரித்துப் பேசி நட்பை வளர்ப்பதை விட்டுப் பிரித்துப் பேசிப் பிளவை ஏற்படுத்துவது அறியாமையாகும். நெருங்கிப் பழகியவரிடத்தேயே குறைகளைக் கண்டு தூற்றும் ஒருவன் பழகாத புதுமையாளரோடு எவ்வாறு நடந்துகொள்வான்? அவனைக் கட்டுப்படுத்த முடியாது; உளறுவதே தொழிலாக்கிக் கொள்வான். புறங்கூறிப் பொய்த்து வாழ்பவனை அறம் நோக்கி இந்த மண் சுமக்கிறது என்றுதான் கூற முடியும். அது தன் கடமையைச் செய்கிறது. இவர்கள் வாழத் தகுதி உடையவர்கள் அல்லர்.  குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை; பிறர் குற்றத்தை ஆராய்வதுபோல அவரவர் தம் குறைகளையும் எண்ணிப் பார்க்கவேண்டும்; குறையற்றவர் யாருமே இந்த மண்ணில் பிறக்க முடியாது என்பதை உணர்வர். 20. பயனில சொல்லாமை படித்தவர் கூடும் சபையில் பயனற்ற சொற்களைப் பேசாதே; அவர்கள் வெறுப்பார்கள்; புத்தி கெட்டவன் என்று இகழ்ந்தும் பேசுவர். நண்பர்களிடத்தே தகாத முறையில் நடந்துகொள்வது தவறு; அதனை அவர்கள் தாங்கிக்கொள்வார்கள்; பல பேர் முன்னால் பயனற்ற சொற்களைப் பேசினால் யாரும் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள். வெற்றுப்பேச்சுப் பேசி வீண்பொழுது போக்குபவரை வெற்று வேட்டு என்று கடிந்து கூறுவர். பலபேர் கூடி இருக்கும் இடத்தில் கண்டபடி கருத்து இல்லாமல் பேசினால் அவர்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள்; தீமைகளே விளையும். கழுத்தைப் பிடித்துத் தள்ளுவர். அறிவு மிக்கவன் என்று சொல்லிக்கொண்டு செறிவு நீங்கிய சொற்களைப் பேசினால் அவனைப்பற்றிய மதிப்பும் மரியாதையும் நீங்கிவிடும். அவன் சராசரி என்று எடை போடுவார்கள். பயனற்ற சொற்களைப் பேசுபவனைக் கற்றவன் என்று கூறார்; வெறும் பதர் என்று கூறுவர்; உள்ளீடு அற்றவன் என்று இகழ்வர். பண்பு மிக்கவர்கள் நன்மை தரும் சொற்களைப் பேசாவிட்டாலும் பயனற்ற சொற்களைப் பேசினால் அவர்க்கு அஃது இழுக்கு ஆகும். ஆழமான கருத்துகளை ஆராயும் அறிவு உடையவர் பயன் ஏதும் விளைவிக்காத வெற்றுப் பேச்சுப் பேசித் தம்மைத் தாழ்த்திக்கொள்ள மாட்டார்கள். மயக்கம் நீங்கிய தெளிந்த அறிவு உடையவர்கள் பொருளற்ற வெற்றுரைகளை மறந்தும் பேசமாட்டார்கள். வாய் திறந்து பேசினால் அதிலிருந்து வெளிவரும் சொற்கள் பயனுடையவையாக இருக்க வேண்டும்; வெற்றுப் பேச்சுப் பேசுவது வீணாகும். 21. தீவினை அச்சம் தீயவர்கள் தீமை செய்யத் தயங்குவது இல்லை; சொல்லி முடிப்பதற்குமுன் தீமைகளைச் செய்து முடித்து விடுவார்கள். நல்லவர்கள் தீமை செய்ய அஞ்சுவர்; அந்த நினைப்பே அவர்களை அச்சுறுத்தும். ஒரு தீமை மற்றைய தீமைகளுக்குக் காரணம் ஆகிவிடுகிறது; சிறு பொறி பெரு நெருப்பாகிவிடுகிறது. அதனால் தீமையை நெருப்பு எனக் கருதி விலக்குக. பகைவன் என்றாலும் அவனுக்குத் தீமை கருதாதே. அழிவு அழிவுதான் பொருள் நஷ்டம் உலகத்துக்கு இழப்பு. மறந்தும் பிறருக்குக் கேடு செய்ய நினைக்காதே; அறம் உனக்கு அழிவை உண்டாக்கிவிடும்; கெடுவான் கேடு நினைப்பான். காசு இல்லை; தீமை செய்தால் தன் வறுமை தீரும் என்று கருதாதே. காசும் வாராது; வறுமை முன்னைவிட அதிகமாகும். நீ நிம்மதியாக வாழ வேண்டும் என நினைத்தால் வீண் வம்புகளை விலைக்கு வாங்காதே; மற்றவர்களுக்குத் தீமை செய்யாதே. நீ மற்றவருக்குத் தெரிந்து தீமை செய்யாதே; அவர்கள் வஞ்சம் வைத்துப் பழிதீர்ப்பர். உன் நிழல் உன்னைத் தொடராமல் விடாது; நீ செய்த தீமையின் விளைவும் உன்னைத் தொடராமல் இருக்காது. உன்னை நீ நேசித்தால், நீ தொல்லை இல்லாமல் வாழவேண்டும் என்று நினைத்தால், பிறர் உனக்குத் தீமை செய்யக் கூடாது என்று கருதினால் தீய செயல்களைச் செய்ய நினைக்காதே. நீயாகச் சென்று தீமைகளைத் தேடிக்கொண்டால் அதற்கு நீதான் பொறுப்பு; தீயது நாடாதே; தெரிந்து அழிவைத் தேடாதே. 22. ஒப்புரவு அறிதல் வானம் மண்ணுக்கு மழை வழங்குகிறது; அஃது எந்தக் கைம்மாறும் எதிர்பார்ப்பது இல்லை; இதற்குத்தான் உபகாரம் என்று பெயர். உபகாரம் செய்யும் மன இயல்பு உடையவன் அந்த உயர்ந்த இலட்சியத்துக்காகவே பொருள் ஈட்டுவான்; பிறர் துயரைக் களைய முன்வருவான். உபகாரம் செய்யும் இந்த வாய்ப்புத் தேவர் உலகத்திலும் வாய்க்காது. பிறர்க்கு எது தேவையோ அதனை அறிந்து தக்க சமயத்தில் உதவுவது உபகாரியின் செயல்; அவனைய்யே உயிர் வாழ்பவன் என்று கருதுவர்; மற்றவர் வாழ்ந்தும் செத்தவராகவே மதிக்கப்படுவர். அவர்கள் செல்வம் பலருக்கும் தேவைக்கு ஏற்பப் பயன்படுவதால் ஊர்ப் பொதுக்கிணறு போன்றது என்று கூறலாம்; ஊர் நடுவில் பழுத்த மரம் என்றும் கூறலாம்; பலருக்கும் பயன்படும் மருந்துச்செடி என்றும் கூறலாம். ஆற்றுப் பெருக்கு அற்று அடிசுடும் கோடைக் காலத்திலும் ஊற்றுப் பெருக்கால் அஃது உலகு ஊட்டும். உபகாரிகள் தம்மிடம் பொருள் இல்லாவிட்டாலும் தம்மால் இயன்ற அளவு எப்படியாவது உதவுவார்கள். உபகாரி ஏழையாகிவிடலாம்; வறுமை உற்றபோதும் அவர்கள் நெஞ்சு வற்றிவிடுவது இல்லை. உபகாரம் செய்ய வேண்டும் என்ற துடிப்பு இருந்துகொண்டே இருக்கும்: செய்ய இயலவில்லையே என்று வருந்துவர். உபகாரம் செய்வதால் தனக்குக் கேடுவரும் என்றாலும் அவன் தயங்குவது இல்லை; தன்னை விற்றாவது அவன் உபகாரம் செய்துகொண்டே இருப்பான்; அவ்வாறு துணிவது தக்க செயலாகும். 23. ஈகை ஒப்புரவு என்பது ஒத்த நிலையில் இருப்பவர்க்கு உதவுவது; ஈகை என்பது வறியவர்க்குத் தருவது ஆகும். செல்வர்க்குத் தருவது அவரிடமிருந்து நன்மைகளை எதிர்பார்த்துத் தருவது ஆகும். பிறரிடமிருந்து பொருள் பெறுதல் அறநெறிச் செயல்களுக்கே என்றாலும் ஏற்பது இகழ்ச்சியே; கொடுத்தால் மேல் உலகம் வாய்க்காது என்று மருட்டினாலும் அதனைப் பொருட்படுத்தாமல் வறியவர்க்குக் கொடுப்பதே நன்மையாகும். ‘இல்லை’ என்று கூறும் சொல் ஈயும் குடிப்பிறந்த வனிடத்துத் தோன்றாது. தரப் பொருள் இல்லை என்று கூற அவன் நா இடம் தாராது; எப்படியும் கொடுத்து உதவுவான். பிறர் பசி தீர்க்கும் வள்ளன்மை உடையவன் தவசியை விட மேலானவன் ஆவான்; தவசி தன் பசியை மட்டும் தாங்கிக்கொள்கிறான். பசியை அவனால் அடக்க முடிகிறது: இவர்கள் பிறர் பசியை அடக்கித் தீர்த்தும்விடுகிறார்கள். பொருள் பெற்றவன் வறியவரின் கடும்பசியைப் போக்க வேண்டும். அப்பொழுதே அப் பொருளுக்கும் பெருமை உண்டாகும். பிறர் பசி போக்குவதற்குத் தம் கைப்பொருளைப் பங்கிட்டுத் தரும் கொடையாளி வறுமையால் வாடுவான் என்று கூற முடியாது; அத்தகைய நல்லோன் என்றும் எதற்கும் துன்பப்பட மாட்டான்; அவன் செல்வம் பெருகுமேயன்றிக் குறையாது. பிறருக்குத் தந்து அவர் துயர் தீர்க்கும் போது உண்டாகும் மகிழ்ச்சியை ஈயாதவர் அறியமாட்டார்கள். அவர்கள் தேடி வைத்த பொருளைத் தீயவர்கள் அனுபவிப்பர். அவர்கள் நல்லதுக்குத் தரமாட்டார்கள். தட்டு நிறையச் சோற்றைப் போட்டுக்கொண்டு மிச்சம் வைக்காமல் தனித்து உண்பவன் பிச்சை எடுத்து உண்பவனைவிட இழிந்தவன் ஆவான்; பிச்சைக்காரர் உள்ளம் வஞ்சமற்றது; பிறருக்குத் தரக்கூடாது என்ற எண்ணம் அவர்களுக்கு இல்லை. சாவது கசப்புதான்; அதுவும் சில சமயம் இனிப்பாக மாறுகிறது. எப்பொழுது பிறர்க்கு ஈய முடியாத இழிநிலை ஏற்படுகிறதோ அப்பொழுதே அவன் உலகுக்குப் பயன் படாதவன் ஆகிறான்; மண்ணுக்கு வீண் சுமையாகி விடுகிறான். 24. புகழ் புகழ் என்பதே ஈகையால் வருவது; அதுவே உயிர் வாழ்வுக்கு நன்மை தரும். பிறர் உன்னைப் புகழ்ந்து பேச வேண்டுமென்றால் அவர்கள் உன் செல்வத்தையோ சாதனைகளைப்பற்றியோ சிறப்பித்துப் பேசமாட்டார்கள். நீ பிறர்க்கு உதவுவதைத் தான் புகழ்ந்து பேசுவார்கள். புகழே கொடையால்தான் அமைகிறது. முத்து ஈனும் நத்தை தான் அழிவதற்கோ சாவதற்கோ தயங்குவதில்லை; வித்தகர்களும் புகழுக்காகத் தம்மை அழித்துக் கொள்வதற்கு அஞ்சுவது இலலை; புகழுக்காக எதனையும் இழக்கத் துணிவர். இந்த உலகத்தில் நிலைத்து நிற்பது புகழ்தான்; மற்றவை மாறிவிடும்; சில மறைந்துவிடும். உன் புகழ் திக்கெட்டும் பரவட்டும்; அது வானவர் செவிக்கு எட்டும்; அவர்களும் உன்னைப் பாராட்டிப் புகழ்வர். உலகத்தில் பிறந்தால் புகழ்பட வாழ வேண்டும்; அஃது இல்லாமல் வாழ்வது வீண் சுமையாகும். மற்றும் எந்தத் தொழிலை மேற்கொண்டாலும் அதில் நீ சிறந்து விளங்கி நற்புகழைத் தேடவேண்டும். இல்லாவிட்டால் அந்தப் பொறுப்பை ஏற்பதில் பொருள் இல்லை. வாய்ப்பு ஒரு முறைதான் வரும்; அதனைத் தவற விட்டால் மறுபடியும் அது வாய்க்காது. புகழுக்குரிய செயல்களைச் செய்து நன்மை பெற முயல வேண்டும்: எதுவுமே செய்யாமல் மற்றவர்கள் தம்மைப் புகழ வேண்டும் என்று எதிர்பார்ப்பது மடமையாகும். இசைபட வாழ முயல வேண்டும்; வசைபட வாழ்வது பயனற்றதாகும். நீ வாழ்ந்த பிறகும் உன்னைப்பற்றி வகையாகப் புகழும்படி வாழ வேண்டும். பாட்டுக்குப் பண் இனிமை கூட்டுவதுபோல் வாழ்வுக்குப் புகழ் உயர்வு சேர்க்கும். இசையற்ற வாழ்க்கை இனிமை பயக்காது. பழி நீங்கி வாழ்பவரே வழியறிந்து வாழ்பவராவர்; புகழ்பட வாழ முயல்க. 25. அருளுடைமை அன்பு அருளாக மலர்கிறது; இதை மனித நேயம் என்று கூறலாம். அருட்செல்வம் மதிக்கத் தக்க செல்வ மாகும். பொருட்செல்வம் கீழ் மக்களுக்கும் வந்து சேர்கிறது. அதனால் அதற்குப் பெருமை இல்லை. எவ்வகையில் சிந்தித்துப் பார்த்தாலும் அருளறமே மனிதன் ஏற்றுக்கொள்ளத்தக்க சிறந்த அறமாகும். அருள் உள்ளம் கொண்டவர்கள் இந்த உலகத்துத் தீமைகளைக் கண்டு மருளவே மாட்டார்கள்; அறியாமை அவர்களை அணுகவே அணுகாது. பிற உயிர்களைக் காத்து உதவும் அருள்மிக்க நெஞ்சு உடையவர்களுக்குத் தம் உயிரைப்பற்றிய அச்சம் தோன்றுவது இல்லை. அருளை ஆள்பவர்க்கு எந்தத் துன்பமும் அணுகாது; இந்த உலகம் அதற்குச் சான்று பகரும். நல்லவர்கள் என்றுமே கெட்டதில்லை; நன்மை செய்பவர்க்கு எந்தத் தீமையும் வாராது. குறிக்கோள் இல்லாத வாழ்க்கை உடையவர்களே அருளறத்தைப்பற்றிச் சிந்திக்காமல் வாழ்வர். காசு பணம் இல்லையென்றால் இவ்வுலகில் வாழ்வது கடினம் என்று பலரும் பேசி வருவர். அதேபோல அருள் இல்லாதவர்க்குத் தருமநெறியே அமையாது என்றும் கூறலாம். பொருளை இழந்தாலும் அதனை மறுபடியும் ஈட்டிக்கொள்ள முடியும். நன்மை செய்யும் வாய்ப்பை இழந்துவிட்டால் மறுபடியும் அந்த வாய்ப்புக் கிடைக்காது. அருளற்றவர் எக்காலத்தும் திருந்தி வாழ்வதற்கு வழியே கிடையாது. தெளிவற்றவர் மெய்ப்பொருளைக் காண்பதில்லை. அதுபோல அருள்நோக்கு இல்லாதவன் செய்யும் தொழில் களில் எல்லாம் அறம் இருப்பதில்லை. அதனால் உலகுக்கு எந்த நன்மையும் விளையாது. அருள் உள்ளம் தேவை என்பதற்கு விளக்கம் தேவையா? எளியவர் உன்னை அணுகும்பொழுது நீ இகழ்வுபட அவர் களை நோக்குகிறாய்! வலியார்முன் நீ எப்பொழுதாவது உதவியை நாடி அவரிடம் சென்றிருப்பாய்; அப்பொழுது நீ எவ்வளவு வேதனைப்பட்டிருப்பாய்? அதனை நினைத்துப்பார்; கூனிக்குறுகி உன்முன் நிற்கிறானே அவன் பலமுறை எண்ணிப் பார்த்தே வேறுவழியில்லாமல் உன்னை அணுகுகிறான் என்பதை அறிக. பிறர் துன்பம் தீர்ப்பது ஒவ்வொரு மனிதனின் கடமை ஆகும். 26. புலால் மறுத்தல் தன் உடம்பில் ஊனைப் பெருக்குவதற்குத் தான் பிறிதின் ஊன் உண்பான் என்றால் அவன் எப்படி அருளை ஆள முடியும்? பொருளைப் போற்றிக் காப்பாற்றாதவன் அதனை இழந்துவிடுவான்; அதுபோல் அருளைப் போற்றி நாடாதவன் அதனை ஆள இயலாது. ஒன்றன் உடற்சுவை உண்டவரின் மனம் கொலையாளியின் மனம்போல் கொடியதாக இருக்கும்; அத் தகையவரே இச் செயலைச் செய்வர். பொருளற்ற செயல் யாது என்றால் கொலை செய்தல்; அறம் அற்ற செயல் யாது எனின் அதன் ஊனைத் தின்பது. உயிர் வாழ்க்கை உயிரைக் கொன்றுதான் அமைய வேண்டும் என்பதனை ஏற்க இயலாது; ஊன் உண்டால் நரகம்தான் கிடைக்கும். தின்பதற்காக விலை கொடுத்து வாங்குவார் இல்லை என்றால், அதனைக் கொல்ல எந்த வியாபாரியும் வர மாட்டான். ஊன் என்பது பிறிது ஒன்றன் புண் என்று உணர்வாரேயானால் அதனை யாரும் உண்ணமாட்டார். குற்றம் நீங்கிய ஞானம் உடையவர்கள் உயிரைக் கொன்று அதன் ஊனைத் தின்னமாட்டார்கள். நெய் சொரிந்து ஆயிரம் வேள்விகள் செய்வதைவிட ஒன்றன் உயிர் அழித்து உண்ணாமை நல்லது ஆகும். புலால் உண்ண மறுக்கும் அருளாளனை எல்லா உயிரும் கைகூப்பித் தொழுது அஞ்சலி செலுத்தும். 27. தவம் தனக்கு உற்ற துன்பத்தைத் தாங்கிக்கொள்வதும், பிறர்க்குத் தீமை செய்யாமல் இருப்பதுமே தவமாகும். தவம் அதனைச் செய்பவர்க்கே பொருந்துவது ஆகும்; அதில் நாட்டம் இல்லாதவர் தவத்தை மேற்கொள்வது வீணாகும். துறவிகளுக்கு உணவு தருவதை அறமாகக் கொண்டு இல்வாழ்க்கையில் இருப்பவர், அதுதான் தம் கடமை என்று தவத்தை மறந்துவிட்டார்கள் போலும்; தவம் என்பது அனைவரும் செய்யத்தக்கது ஆகும். தவம் என்பது விடாமுயற்சி, பகைவரை வெல்லவும் தவம் வேண்டும்; உறவினரை வாழ வைக்கவும் அது தேவைப்படுகிறது. விரும்பியதைத் தவத்தைக்கொண்டு அடைய முடிகிறது; அதனால் தவம் தொடர்ந்து தொடரப்படும். தவம் செய்பவர் தம் தொழிலிலும் முழுக் கவனம் செலுத்துவர்; மற்றவர்கள் எத்தொழிலிலும் சரியாக ஈடுபாடு கொள்ள மாட்டார்கள்; அவர்கள் காலத்தை வீண்படுத்துவர். பொன் சுடச்சுட ஒளிரும்; துன்பமும் தொடர்ந்து தாக்க நோற்பவர் தம் உள்ளம் உறுதிபெறுவர். தன்னைத்தான் கட்டுப்படுத்திக்கொண்டு செயல் ஆற்ற வல்லவனை மற்றவர்கள் தொழுது மரியாதை செலுத்துவர். தவத்தால் ஆற்றல் பெறும் சிறப்பினை உடையவரைக் கண்டு எமனும் சற்று விலகியே நிற்பான். சிலரே வாழ்க்கையில் முன்னேறுகின்றனர்; காரணம் தொடர்ந்து தவம் செய்து முன்னேறுகின்றனர். பலர் வீணராக வாழ்ந்து வருவது அவர்களிடம் எந்த நன்முயற்சியும் இல்லாமையே. 28. கூடா ஒழுக்கம் காவி உடுத்திக்கொண்டு கம்பீரமான வாழ்க்கை வாழத் துணிந்துவிட்டு வஞ்சியர் சிலரிடம் கொஞ்சிக் குலவுவது தவநிலைக்கு இழுக்காகும். அவனுடைய மனச் சான்றே அவனுக்கு அதனைத் தவறு என்பதை இடித்து உரைக்கும். துறவி என்று கூறிக்கொண்டு அவன் தகாத உறவுகளை வைத்துக்கொள்வது முரண்பாடாகும். பிறர் கண்ணுக்கு நல்லவனைப்போல நடித்துத் தீயன செய்கிறான். அவன் செயல்கள் புலித்தோல் போர்த்த பசுவின் கதை ஆகிறது. அது நெற்பயிர் மேய்வதை யாரும் தடுப்பதில்லை; புலி புல்லைத் தின்னாது என்பதால் யாரும் அதனைச் சந்தேகிப்பதில்லை. வேடுவன் வலை வீசிப் பறவைகளைப் பிடிக்கிறான். அவன் புதரில் மறைந்து இருப்பதை அப் பறவைகள் கவனிக்க இயல்வதில்லை. அதேபோல் மிருகத்தன்மை கொண்ட தவசி தவக்கோலத்தில் மறைந்துகொண்டு அவக்கேடான செயல்களைச் செய்வதை யாரும் கவனிப்ப தில்லை. இவர்களைப் போன்ற கொடியவர்கள் வேறு யாரும் இருக்கமுடியாது. குன்றிமணி சிவப்பு; அதன் கருமணி பிறர் கண்ணுக்குப் புலப்படுவதில்லை. அவன் உடுத்துவது காவி உடை, நினைவுகள் மகளிரைச் சுற்றி வட்டமிடுகின்றன. அவன் வாழ்க்கை களங்கமுடையது என்பதைப் பிறர் அறியாமல் மறைத்து வாழ்கிறான். அவன் போலி வாழ்க்கையை யாரும் அறிய இயல்வதில்லை. நேம நிஷ்டைகளில் அவன் தவறுவதே இல்லை; என்ன பயன்? இஷ்ட தேவதைகளை வழிபடுகிறான். அதனை நிறுத்துவதில்லை. கஷ்டம் கஷ்டம்; கசடர்கள் இவர்கள். அம்பு நேராகத்தான் இருக்கிறது; அஃது உண்மையில் கொலைக்கருவி. யாழ் வளைந்து இருக்கிறது; ஆனால் அஃது இசைக்கருவி. தோற்றத்தைக் கண்டு எதனையும் முடிவு செய்ய முடியாது. செயலிலும் இவர்கள் தூயராக மாறினால்தான் மதிப்பும் உயர்வும் பெறுவர். தாடியும் மொட்டையும் அடித்துக்கொண்டு ஆசை அற்றவன்போல் இவர்கள் நடிக்கிறார்கள்; இவை வெறுங் கோலம்; செயல்கள் அனைத்தும் அலங்கோலம்; இவர்கள் புறஞ்சுவர் கோலம் செய்பவர்கள்; அகம் கருகி வாழ்பவர்கள். 29. கள்ளமை வஞ்சித்துப் பொருள் ஈட்டுபவரை இந்த வையகம் தாழ்த்திப் பேசும். அதனால் பிறர் பொருளை வெளவக் கிஞ்சித்தும் நினைக்கக் கூடாது. கள்ளத்தால் பிறர் பொருளைக் கவருவோம் என்று உள்ளத்தால் நினைப்பதும் தீயது ஆகும். களவினால் ஈட்டிய செல்வம் இருப்பது போலக் காட்டும். ஆனால் தீய பழக்கங்களுக்கு அவன் அடிமையாக அதுவும் தீர்ந்துவிடும். வஞ்சித்துப் பிறர் பொருளை வாரிக் குவித்துவிடலாம் என்றாலும் அவற்றை அனுபவிக்க இயலாது. துன்பங்கள் தொடர்ந்து வந்து அதனை அனுபவிக்க முடியாமல் செய்துவிடும். எவன் அசந்து கிடக்கிறானோ என்று பார்க்கும் கழுகின் பார்வையை உடையவர்கள், மற்றவர்கள் துன்பம் கண்டு உருகுவார்கள் என்று கூறுவதற்கில்லை. பொருள்வேட்கை உள்ள அவனிடம் அருள்வேட்கை இடம் பெறாது. அவர்கள் பிறரிடம் அன்பு காட்டமாட்டார்கள். பிறர் பொருளை நம்பி அதனைக் கவருவதே நோக்கமாகக் கொண்டிருப்பவர்கள், அத் தீமையிலும் அளவோடு நிற்கமாட்டார்கள். அதே போல அவர்கள் அளவறிந்தும் வாழ்க்கை நடத்தமாட்டார்கள்; தாறுமாறாகச் செலவுசெய்து அவர்கள் விரைவில் சீரழிவார்கள். போதும் என்ற மனத்தோடு வாழ்பவர் நெஞ்சில் அறம் நிற்கும். களவு வாழ்க்கை உடைய இவர்கள் நெஞ்சில் வஞ்சகமே தலைதூக்கி நிற்கும். களவு தவிர வேறு செயல் அறியாத இவ் வஞ்சகர் தீய செயல்கள் பலவற்றைச் செய்து அவற்றால் விரைவில் அழிந்துவிடுவர். நேர்வழியில் வாழ்பவர் சீரோடும் சிறப்போடும் வாழ்ந்து இறுதியில் பலரும் போற்றும் நல்வாழ்வை அடைவர்; கள்ள மனமுடையவர்கள் நோய்நொடிகளுக்கு இரையாகி விரைவில் மரணத்தையும் சந்திப்பர். 30. வாய்மை வாய்மை என்பது தீமை விளைவிக்காத சொற்களைப் பேசுவது என்பதாகும். பொய்யே துணிந்து பேசலாம்; ஆனால் அது நன்மை விளைவிப்பதாக அமையவேண்டும். குற்றம் தீர்ந்த நன்மை பயக்கும் என்றால் பொய்ம்மையும் வாய்மையாகும். நெஞ்சாரப் பொய் சொன்னால் அவன் நெஞ்சே அவனைச் சாடும்; மனச்சான்று அவனைக் கண்டிக்கும். ஒருவன் நினைவிலும் பொய் நீங்கி வாழ்வானாகில் அவன் உலகத்தார் உள்ளங்களில் எல்லாம் நிலைத்து இருப்பான். அவன் வாய்மையை விரதமாகக் கொண்டு ஒழுகுவான் ஆகில் தவமும் தானமும் செய்பவர்களைவிட மேலானவன் ஆவான்; பொய்யே பேசாது இருந்தால் அஃது அவனுக்குப் புகழைத் தரும். பொய்மை என்பதனை அறமாக மேற்கொண்டு அதனை முழுவதும் கடைப்பிடித்தால் அவன் வேறு எந்த அறத்தையும் பின்பற்றத் தேவையில்லை; இதிலேயே எல்லா அறங்களும் அடங்கிவிடுகின்றன. உடம்பைத் தூயதாக வைத்துக்கொள்ள நீர் ஒன்றே போதும்; அதுபோல மனத்துய்மை வாய்மையால் அமையும். புற இருளை விலக்குவதற்கு எரிவிளக்குகள் தேவைப்படும்; அகி இருளைப் போக்குவற்குப் பொய்யாமை ஆகிய விளக்கு அவசியம் ஆகும். இதற்கு மற்றைய விளக்குகள் பயன்படா. எண்ணி எண்ணிப் பார்த்தால் வாய்மையைத் தவிர வேறு எந்த அறமும் சிறந்தது என்று கூறமுடியாது. 31. வெகுளாமை வெகுளுதல் என்றால் அருவருத்துக் கோபித்தல். பிறரை வெறுப்பதாலேயே சினம் தோன்றுகிறது. வெறுப்பே சினத்துக்குக் காரணம் ஆகிறது. சினம் பொல்லாதது; அது நம் சீர்மையைக் கெடுக்கும். நம்மைவிட எளியவரிடத்துக் கோபம் கொள்கிறோம்; நம்மைவிட வலியவரிடத்து அடங்கி இருக்கிறோம். கோபமும் அது செல்லும் இடம், செல்லா இடம் தெரிந்து தன்னைக் காட்டிக்கொள்கிறது. எந்த இடத்திலும் கோபம் காட்டாமல் இருப்பதுதான் மனிதத் தன்மை; அதனால் பல நன்மைகள் உண்டாகும். நேற்றுவரை சிரித்துப் பழகிய நண்பர்கள் நம்மை விட்டுப் பிரிகிறார்கள் என்றால் அதற்குக் காரணம் கோபமாகச் சில வார்த்தைகளைப் பேசியதுதான். கடுகடுப்பாக நடந்துகொண்டால் யாரும் மகிழ்ச்சியாகப் பழக மாட்டார்கள்; சுடுமூஞ்சி என்று கூறிவிடுவார்கள். பகை உண்டாவதற்குப் பெரிய காரணங்கள் தேவை இல்லை; சொல்வதனையும் பிறர்மனம் புண்படாமல் சொல்ல வேண்டும். அவசரம், ஆவேசம், ஆக்கிரமிப்பு அதனால் கோபம் மிக்கு வருகிறது. கோபத்தில் பேசும் வார்த்தைகள் மற்றவர்களைச் சுட்டுவிடுகின்றன; அவர்கள் அண்ட அஞ்சுகிறார்கள்; பிறகு அது பகையாக முடிகிறது. கோபத்தைக் கொன்றுவிடு; இல்லாவிட்டால் அஃது உன்னை அழித்து விடும். உன்னைமட்டும் அன்று; உன் குடும்பத்தையே அழித்துவிடும்; அது சிறு பொறிதான்; பரவினால் பெரு நெருப்பு ஆகிவிடுகிறது. நிலத்தைக் கைகொண்டு அறைந்தால் உன் கைதான் வடுப்படும்; அந்த நோயினின்று தப்ப முடியாது. நிலத்தை அறைவானேன்? கையில் இரத்தம் உறைவானேன்? பழகிய பிறகு கோபத்தால் மனம் மாறுபட்டுப் பிரிதல் அறிவுடைமை ஆகாது; அவர்கள் எரிச்சல் ஊட்டும்படி நடந்துகொண்டாலும் பொறுமையைக் காட்டுவதுதான் நட்பை வளர்க்கும். அவசரப்பட்டு ஆவேசம் காட்டித் துவேஷத்தை உண்டாக்கக் கூடாது. கோபம் சண்டாளம் என்பர்; கோபம் இருந்தால் எதனையும் சாதிக்க முடியாது. அதனை விட்டுவிட்டால் நினைத்த எந்தக் காரியத்தையும் சாதிக்க முடியும். கோபத்துக்கு இரையானால் யாரும் உன்னை மதிக்க மாட்டார்கள்; பழகமாட்டார்கள்; ஒதுக்கிவிடுவார்கள். ஏன்? செத்தவனுக்குச் சமானமாகிவிடுவாய். சினத்தைத் துறந்துவிட்டால் நீ துறவிக்குச் சமானம் ஆவாய்; எந்தத் துன்பமும் உன்னைப் பாதிக்காது; உன்னால் எந்தத் தீமையும் நேராது என்று அனைவரும் பழகுவர்; பயன் உண்டாகும். 32. இன்னா செய்யாமை ‘வாழ்க, வாழ விடுக” இதுதான் வாழும் முறை: காட்டு விலங்குகள் பிற எளிய விலங்குகளை அடித்துத் தின்றால்தான் அவை உயிர் வாழமுடியும்; அது காட்டு நெறி. மனிதன் மிருக நிலையைக் கடந்து அறிவுடன் வாழக் கற்றிருக்கிறான். அவன் மற்றவர்களைக் கெடுத்துத் தான் வாழ வேண்டும் என்ற கட்டாயம் இல்லை; அடுத்தவனைக் கெடுக்காமல் அழகாக வாழ முடியும். அதுதான் அறநெறி. பதவி வருகிறது என்றால் மற்றவனைக் கீழே தள்ளி விட்டு நீ மேலே உயரலாம் என்று ஆசைப்படுவது அநாகரிகம்; பொறுத்திருந்து நீ உயர முயற்சி செய்; அது நிலையானது. சிறப்பும் செல்வமும் கிடைக்கும். பிறர்க்குக் கெடுதி செய்யாதிருப்பது மாசு நீங்கிய மனத் தினரின் கொள்கையாகும். மற்றவன் உனக்குக் கெடுதி செய்தான் என்பதற்காக அவனுக்கு நீ திருப்பிக் கெடுதி செய்தால்தான் பதிலுக்குப் பதிலாக அமையும் என்று நினைக்கலாம். நன்மை செய்து விடு; அதுதான் தக்க பதிலாக அமையும். “அவனுக்குத்தான் புத்தி கெட்டுவிட்டது; உனக்கு அறிவு எங்கே போயிற்று?” என்று உன்னை உனக்கு வேண்டியவர்கள் கேட்பார்கள்; யோசித்துச் செயல்படு. “எதிரி தவறு செய்துகொண்டே போனால் அவனை விட்டுவிடுவதா? இது கோழைத்தனம்” என்று வாதாடலாம். அவனை வெல்வதற்கு ஒரு வழி இருக்கிறது. அவனுக்கு நன்மை செய்துகொண்டே இரு நெருப்பை நெருப்பால் அணைக்க முடியாது; தண்ணீர்தான் நெருப்பை அணைக்க முடியும். துன்பம் என்பது யாரையும் தாக்கும்; ஒரு கஷ்டம் வந்தால் அதனால் நீ எவ்வளவு வேதனைப்படுகிறாய்? அந்த வேதனை எதிரியும் படவேண்டுமா? அதனால் உனக்கு என்ன நன்மை? மற்றவர்கள் கஷ்டப்படுவதைக் கண்டு நீ ரசிக்கக் கூடாது. “அது பிறர் வருத்தத்தில் கொள்ளும் மகிழ்ச்சி” என்று எடுத்துக் காட்ட வேண்டிவரும். சிலர் பிறரை வருத்துவதிலேயே மகிழ்ச்சி காண்பர். இது மிருகத்தனமானது: அறிவுடையவர்கள் இதனை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். தவறு செய்தவர்களைத் தண்டிப்பதற்கு ஒரே வழி இருக்கிறது. அஃது அவர்கள் நாணும்படி நன்மை செய்தல் ஆகும். மற்றவர் நோயையும் சிந்தித்து அவர்களுக்கு ஊறு செய்யக்கூடாது என்பதைக்கூடப் பின்பற்றாமல் இருந்தால் தான் பெற்ற அறிவினால் என்ன பயன்? அறிவாளிக்கும் முட்டாளுக்கும் வேறுபாடு இல்லாமல் போய்விடும். துன்பம் என்று தெரிந்தால் எந்த அளவும் யாருக்கும் மனமறிந்து செய்யாமல் இருப்பதுதான் சிறந்ததாகும். பிறர்க்குக் கெடுதி நாம் முன் ஒருநாள் செய்தால், பின் ஒருநாள் நமக்கு அத் துன்பம் தானே வரும்; தப்பித்துக் கொள்ள முடியாது. நீ ஒருவருக்கும் துன்பம் செய்யாமல் இரு. யாரும் உனக்குப் பகை என்று தோன்றமாட்டார்கள். உனக்கு எந்தத் துன்பமும் வாராது. நீ யாரையும் கெடுக்காதே; உன்னை யாரும் கெடுக்க நினைக்கமாட்டார்கள். நல்லது செய்ய இயலவில்லை என்றாலும் தீயது செய்வதைத் தவிர்க்கவும். 33. கொல்லாமை கொலை நிகழ்ச்சி ஏன் பொதுவாக நிகழ்கிறது? பொருள் அற்ற நிலைதான்; வாழ வழியில்லாவிட்டால் அவன் வன்முறையை நாடுகிறான்; இஃது அரசியல் சீர் குலைவால் ஏற்படும் நிலை; பகுத்து உண்டு பலரும் வாழ வேண்டும் என்ற சமுதாய நல்வாழ்வுக் கொள்கை பரவாதிருக்கும்வரை கொலை நிகழ்ச்சிகளைத் தவிர்க்ச இயலாது. பசி வந்தால் பத்தும் பறந்து போகும்; மனிதன் மிருகமாக மாறிவிடுவான்: அதனால் கொலையைத் தவிர்க்க அறிவுடையார் சிந்திக்க வேண்டிய அறக்கொள்கை இது. ‘பகுத்து உண்டு பல்லுயிர் ஒம்புதல் நூலோர் தொகுத்த வற்றுள் எல்லாம் தலை’ என்ற சிந்தனை, கொலையைத் தவிர்ப்பதற்குக் கூறப்படும் அறிவுரையாகும். உள்நாட்டு அறப்போராட்டங்களும், வெளிநாட்டுப் போர்களும் தவிர்க்க முடியாதவை என்று கருதப்படலாம்; அகிம்சையும் சத்தியமும் இவற்றைத் தீர்க்கவும் மாற்றவும் தக்க வழிகள் எனக் கொள்வது தக்கதாகும். வன்முறை தவிர்க்க அறப்போர் மேற்கொள்வது தக்கது ஆகும். மற்றும் வேறு பல காரணங்களால் கொலை நிகழ்ச்சிகள் நிகழ்கின்றன. நிலத்தகராறு, பாகப் பிரிவினைகள், இல்லறச் சச்சரவுகள் இவற்றைத் தீர்க்கத் துரிதவழி, நல்ல வழி கொலைதான் என்று ஒருசிலர் அவசரப்பட்டுச் செயல்பட்டு விடுகிறார்கள். எனினும் கொல்லாமை என்பதுதான் அறிவுடைமையாகும். கொன்றுதான் ஆகவேண்டும் வேறுவழி இல்லை என்ற நிலை ஏற்படுமானால், மென்மையான மனம் படைத்தவர்கள் வாழ்க்கையில் வெறுப்புற்றுத் துறவு கொள்கின்றனர்; பலர் துறவு கொள்வதற்குக் காரணம் இக்கொலைகள், கொடுமைகள், அலைவுறுத்தல் முதலிய தீமைகளினின்று விடுபடவே எனக் கூறலாம். தன்னுயிர் போகும் எதிரியைக் கொல்லாவிட்டால் என்னும் சூழ்நிலை ஏற்படுகிறது. மாற்றானைக் கொல்வதை விடத் தன்னுயிரை ஈவது பேரறமாகும். துணிந்து தன்னைக் கொலை செய்ய வருபவன் முன் நின்றால் அவன் மனம் மாறுபடக் காரணம் ஆகும்; மனம் மாறாமல் கொன்று விட்டால் தியாகச் சுடராக விளங்கலாம்; அவனை உலகம் போற்றும்; அமரனாகும் நிலை ஏற்படும். தியாகிகள் இப்படித்தான் உருவாகிறார்கள். கொன்றால்தான் தீர்வு ஏற்படும்; வேறு வழியில்லை என்றாலும் கொலை என்ற முடிவுக்கு வருவது மிகவும் கொடுமையாகும்; உயிரை மதிக்காமை ஆகும். உயிரை உடம்போடு சேர்த்தது படைப்பின் செயல்; அதைப் பிரிக்க மானுடர்க்கு உரிமை கிடையாது. மற்றும் கொலைக்குற்றம், அதிலிருந்து தப்பவும் முடியாது. அவரவர் மனம் அவர்களை அரித்துக்கொண்டே இருக்கும். கொலையாளி, அவன் கொடுமைகளின் இருப்பிடமாகத்தான் இருக்க முடியும்; நிச்சயம் அவன் செய்யும் பாவத்தை அவன் அனுபவித்துத் தான் தீர்வான்; வறுமை, நோய் முதலியன அவனை வாட்டாமல் போகா; வாழ்வு அவனை ஒதுக்கிவிடும். 34. நிலையாமை நேற்று நன்றாகப் பேசிக்கொண்டிருந்தான்; இன்று அவனைத் தூக்கிச் செல்கிறார்கள்; சாவு வெற்றி முழக்கம் செய்கிறது. யார் எப்பொழுது சாவார்கள் என்று கூற முடியாது; அதே போலத்தான் செல்வமும். கண்முன் பார்க்கும் போதே ஈட்டி வைத்த செல்வம் இவனுக்குக் கைகாட்டி விடுதலை பெற்றுக்கொண்டு அவனைவிட்டு நீங்குகிறது. அவனாக அழித்தாலும் ஆச்சு; மற்றவர்கள் ஏமாற்றிச் சுழித்தாலும் போச்சு. மனிதன் தான் நிலைத்து நீண்டகாலம் வாழப் போகிறோம்; நம்மிடம் செல்வம் நிலைத்து இருக்கும்; நாம் அனுபவித்து மகிழ்ச்சியோடு இருக்கலாம் என்று நினைப்பான். அஃது இயலாது; நிலையாமை என்ற கோட்பாடு நம் வாழ்வில் ஊடுருவி நிற்கிறது. நீயே கால மெல்லாம் கொடிகட்டிக் கொண்டு பறக்க முடியும் என்று கனவு காண்பது வீண். சரி, சாகப்போகிறோம்; நம் பொருளும் நம்மைக் கைவிட்டு விடும்; இனி நாம் என்ன செய்ய வேண்டும்? வாழ்நாளை நல்ல வகையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்; வீண் படுத்தக் கூடாது. செல்வம் இருக்கும் போதே அறம் செய்ய வேண்டும்; அறச் செயல்களைச் செய்து முடிக்க வேண்டும். ஆயுள் என்பது இறைவன் தந்த வரம்; அதனை நன்கு பயன்படுத்துவதே நாம் மேற்கொள்ளும் தவம்; நாள் காட்டி ஏடுகளை கிழித்துக்கொண்டே போகிறோம்; எஞ்சி நிற்கப் போவது வெறும் அட்டைதான். நாள் அது நம் வாழ்நாளை அறுக்கும் வாள் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும். உயிருக்கும் உடம்புக்கும் உள்ள உறவு நிலைத்தது அன்று; கூட்டைவிட்டுப் பறவை எப்பொழுது வேண்டு மானாலும் பறந்துவிடும்; அவ்வளவுதான் உயிருக்கும் உடம்புக்கும் உள்ள உறவு. உயிர் போனால் இந்த உடம்பு வெறும் கூடுதான்; அதுவும் சுட்டு எரிக்கப்படுகிறது. விஞ்ஞானிகள் எத்தனையோ கண்டுபிடிப்புகள் செய்து வாழ்வை வாழத் தக்கதாக ஆக்கிவருகிறார்கள்; என்றாலும் உயிர் வாழ்வை அவர்கள் தரமுடிவதில்லை. செத்தவர் செத்தவர்தான்; உடம்பில் உயிரை நிறுத்தி வைக்கும் வித்தையை இதுவரை யாரும் கற்கவில்லை. சாவும் தூக்கம் போன்றதுதான்; தூக்கத்தில் மறுபடியும் எழுகிறோம். இதில் மறுபடியும் விழிப்புக் கிடையாது. வேறுபாடு, இவ்வளவுதான். நிலையான உறக்கமே சாவாகும்; எனினும் அந்த அனுபவத்தை நாளும் அறிந்துவருகிறோம். காலையில் விழிக்கிறோம்; மாலையில் கண் மூடுகிறோம். அவ்வளவுதான் மனிதனின் கதை. 35. துறவு செல்வமும் இளமையும் யாக்கையும் நிலைப்பது இல்லை என்பதை உணர்பவர் உலகத் தளைகளினின்று விடுபட நினைப்பர். எது எதிலிருந்து விடுபட முடியுமோ அது அதனின்று விடுபடுவதே துறவு ஆகும். ஒருசிலர் வீட்டைத் துறக்கின்றனர்; இல்வாழ்வைத் துறக்கின்றனர்; அரச வாழ்வைவிட்டு அறக்கோட்டங்களை நாடுகின்றனர்; பாசபந்தங்களை நீக்கித் தேச பந்துக்களாக மாறுகின்றனர். துன்பங்களினின்று விடுபடவே துறவை மேற் கொள்கின்றனர். மறுபடியும் துன்பம் தரும் செயல்களில் ஈடுபட்டால் அவர்களுக்கு விடுதலை கிடைக்காது. ஒழுக்கம் உயர்வு தருகிறது; ஆசைகளைக் குறைத்துக்கொண்டு அறிவைப் பெருக்குதல் துறவு ஆகும். முதற்கண் ஐம் புலன்களைக் கட்டுப்படுத்திக்கொண்டு காமநுகர்வைக் கைவிட வேண்டும். துறவிக்கு இஃது அடிப்படையாகும். மற்றொன்று அவன் தனக்கு என்று வாழும் மன நிலையை மாற்றிக்கொண்டு, பிற உயிர்களுக்குத தொண்டு செய்யவே வாழ்கிறோம் என்ற மனநிலையைப் பெற வேண்டும். அதற்குத் ‘தான்’, ‘தனது’ என்னும் செருக்குகள் முதலில் அவனைவிட்டு நீங்கவேண்டும். அப்பொழுதே அருளறத்தில் அவன் நின்று நிலைபெற முடியும். அடுத்தடுத்துப் பற்றுகள் நீங்கி வாழவேண்டும்; உறவுகளைவிட்டு விலகி வாழவேண்டும். எதனையும் விலகி நின்று ஆராய்ந்தால்தான் தெளிவு ஏற்படும்; மயக்கம். நீங்கும். காவி உடை அணிந்துகொண்டு காணிநிலம் வாங்கினால் அவனைத் துறவி என்று கூறமுடியாது. ஆண்டிக்கு அம்பாரம் கணக்குத் தேவை இல்லை; உண்பது ஒருவேளை: உடுப்பது நான்கு முழம்; எளிமை அவன் பின்பற்றும் வழியாக இருக்கவேண்டும். செல்வ வாழ்வின் சுகபோகங்களுக்கு அடிமையாகாமல் தொண்டு வாழ்க்கையில் அமைதியும் இன்பமும் காணவேண்டும். எந்தக் காரியம் செய்தாலும் அதில் பற்றுக் காட்டாமல் செயல்பட வேண்டும். பற்றுகள் நீங்குவது எளிதன்று; உலகப் பற்றுகள் நம்மைவிட்டு விலக மேலான ஒரு பொருளைப் பற்றிக் கொள்ளவேண்டும். அதனைப் பரம்பொருள் என்று கூறலாம். இறைப்பற்று மிகுந்தால் இந்தப் பாசச்சிறை கழன்று விடுதலை பெறமுடியும்; பிறப்பு என்னும் தளையினின்றும் விடுபடலாம். 36. மெய்யுணர்தல் “கண்ணால் காண்பதும் பொய்; காதால் கேட்பதும் பொய்; தீர விசாரிப்பதுதான் மெய்” என்பர்; பொருள் அல்லாதவற்றை மெய்ப்பொருள் என்பது ஒருவகை மயக்கம். அதனால் தளைகள் ஏற்பட்டுவிடுகின்றன. இத்தயை மயக்கத்தினின்று விடுபட்டுத் தெளிவான அறிவு படைத்தவருக்கு அறியாமை நீங்கும்; இன்பம் நிலைக்கும்; காணும் வடிவம் சிலையோ, மகனோ என்று முதலில் நினைப்பது ஐயம்; பிறகு இது சிலை வடிவிலான உருவம் என்று காண்பது தெளிவு. இதேபோல் உலகத்தில் காணும் பொருள்களைப் பிரித்து அறியவேண்டும். ஐயம், திரிபு, மயக்கம் இம் மூன்றினின்றும் விடுபடுவதே மெய்யறிவு எனப்படும். இவை நம்மை மயக்குகின்றனவா? அரியாமையில் ஆழ்த்துமா? அறிவுக்கு வழிகூட்டுமா? என்று ஆராய வேண்டும். பின்பு தெளிவு பெறவேண்டும். அத் தெளிவே அறிவுக்கு வித்தாகும். எந்தப் பொருளாயினும் அஃது எத்தகையது ஆயினும் அதன் இயல்பு யாது? அஃது எங்கே கொண்டு சென்றுவிடும்? அதனால் உண்டாகும் நன்மைகள் யாவை? அவை அறத்தின் அடிப்படையில் அமைந்தனவா? இன்பமும் பொருளும் கிடைக்குமா? என்று பலவகையாலும் ஆராய்ந்து தெளிவு பெறவேண்டும். இவற்றோடு வீடுபேற்றுக்கு வழி வகுக்குமா என்ற ஆய்வும் அமைதல் வேண்டும். மொத்தத்தில் நன்மை பயப்பது மெய்ப்பொருள்; தீமை தருவது பொய்ப்பொருள் ஆகும். பயனற்றவை என்று தெரிந்தால் அவற்றினின்று விலகுவது நன்மை தரும். நம்மை அறியாமையிலும், தீய வாழ்க்கையிலும் செலுத்துவன மூன்று மனநிலைகள்; அவை: ஒன்று காமம், மற்றொன்று சினம், மூன்றாவது மயக்கம். காமம் என்பது விருப்பம்; சினம் என்பது விரும்பிய பொருளைப் பெறாமையால் வரும் மன உளைச்சல்; மயக்கம் என்பது திரிபுபட உணர்தல். இவை மூன்றும் நம்மிடம் இடம் பெறாமல் தடுத்தால் வாழ்வில் ஏற்படும் பல்வகைத் துன்பங்களையும் தவிர்க்க முடியும். துன்பங்களுக்குக் காரணமாவது பிறப்பு என்னும் தளை. அதனின்று விடுபட இத் தீமைகளினின்று விடுபட வேண்டும். அவ் விடுபடும் அறிவே மெய்யுணர்வு என்று கூறப்படுகிறது. 37. அவா அறுத்தல் ஆவல் என்பதனையே அவா என்று கூறுவர்; எதற்காகவாவது ஆசைப்பட்டுக் கொண்டே இருப்பது உயிர்களின் இயல்பு; ஆசை இல்லை என்றால் செயல் இல்லை; உலகத்தின் எல்லாச் செயல்களுக்கும் அவற்றைச் செய்ய வேண்டும் என்ற விருப்பமே துண்டுதல் ஆகும். மேலும் மேலும் தளைகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம் என்றால் ஆசைகளைக் குறைத்துக்கொள்வது தான் வழி. ஒருசிலர் ஆசைகளை நிறைய வளர்த்துக்கொள்கின்றனர்; பேயாக அலைகின்றனர்; அவர்களுக்கு உறங்குவதற்கும் நேரம் இருப்பது இல்லை. பொருள் தேவைதான்; எல்லாம் நமக்கே வேண்டும் என்று அலைந்தால் மன அமைதி கெடுகிறது; இன்பம் விடுபடுகிறது. பந்தங்களை வளர்த்துக் கொள்வதால் கட்டுகள் ஏற்பட்டுவிடுகின்றன. அதனால் மற்றவர்கள் துன்பமும் நம்மைத் தாக்கிக்கொண்டு இருக்கின்றன. ஓய்வே இல்லை; உளைச்சல்தான் மிகுதி, நம்மால் சுமக்க முடியாத பொறுப்புகளை நாம் தலையில் இட்டுக்கொள்கின்றோம். மற்றவர்களுக்கும் பங்கிட்டுத் தந்தால் நாம் சற்று ஓய்வு பெறலாம்; நல்ல சிந்தனைகளில் காலம் கழிக்கலாம். மறுப்பு என்பது உறுதிபடைத்த நெஞ்சு உடையவர்க்கே இயலும். பதவிகளும், இன்ப சுகங்களும் தேடித் தேடி அலுத்துவிடுவோர் பலர். ஆசைகள் நம்மை அடிமை கொள்கின்றன. அவற்றிலிருந்து விடுதலை பெறுவதே இன்பத்துக்கு வழி; ‘வேண்டாமை’ என்று மறுக்கும் மன உறுதி மேலான செல்வமாகும். அதற்கு நிகரான செல்வம் வேறு இருக்காது. மனம் அழுக்குப் பெறுவது ஆசைபற்றி அவதிகளுக்கு உள்ளாவதால்தான். மனம் துயநிலை பெற்றால் பாதிப்புகள் குறைந்துவிடுகின்றன. பொய்ப்பொருளை நிஜம் என்று நினைத்து அவற்றின்பின் பலர் ஓடுகின்றனர். கானல்நீரை நம்பி, அது நிஜம் என்று சென்றால் நம் வேட்கை தீராது. மெய்ப்பொருளைக் காணும் வேட்கை எழுந்தால் ஆசைகள் அறுகின்றன; மனமும் தூய்மை பெறுகிறது. அறத்திற்குக் கட்டுப்பட்டு வேட்கைகளைக் குறைத்துக் கொண்டு நாள்களைப் போக்குவது நல்லது. இன்பங்களை விரும்பி ஆசைகளுள் சிக்கி அல்லல் உறுவது அறியாமை. துன்பத்திற்குக் காரணமே ஆசைகள்தாம்; அவற்றை அறுத்து மெய்ப்பொருளை நாடிப் பற்றற்ற நிலைக்குச் சென்றால் அஃது இன்பம் தரும்; அவ் வின்பம் நிலையானது ஆகும். “ஆசைக்கு ஒர் அளவே இல்லை” என்று கூறுவர். அவற்றிற்கு முற்றுப்புள்ளி வைத்தால் நிரந்தரமான இன்பம் வாய்க்கும். 38. ஊழ் ஊழ் என்பது நம்மைச் சூழ்ந்துவரும் எதிர்பாராத சக்திகளின் செயல்; சூழ் என்ற சொல்லின் திரிபே ஊழ் என்பது ஆகும்; சூழ்நிலைதான் திரிந்து ஊழ் என்று திரிந்தது. ஆவதற்கும் இந்தச் சூழ்நிலைதான் காரணம்; அழிவதற்கும் அதுவே காரணம் ஆகும். ஆகவேண்டும் என்று இருந்தால் சுறுசுறுப்புத் துணை செய்யும்; அழியவேண்டும் என்று இருந்தால் சோம்பல் இழுத்துப் பிடிக்கும். அறிவு ஆக்கம் தரும்; அறிவின்மை இழப்பைத் தரும்; அதற்கும் இந்தச் சூழ்நிலைகள்தாம் காரணம் ஆகும். நுண்ணிய நூல்கள் பல கற்றாலும் அவை கைகொடுப்பது இல்லை; சமய சந்தர்ப்பங்கள் அவையே வழிகாட்டும்; வழிதிறக்கும். ஒருவன் செல்வனாக இருப்பதற்கு அவன் பிறந்த குடும்பச் சூழ்நிலையே காரணம் ஆகிறது; அவன் முயற்சியும் துணை செய்கிறது. செல்வர்களைப் படைப்பதும் கல்வி வல்லவர்களை உண்டாக்குவதும் சூழ்நிலைகளே ஆகும்; இவற்றின் சூழ்நிலைகள் வேறுபட்டவை. தொட்டது எல்லாம் சிலருக்குப் பொன் ஆகிறது; சிலருக்கு எது எடுத்தாலும் மண் ஆகிறது. செல்வம் பெருகுவதற்கும், அதில் இழப்பு ஏற்படுவதற்கும் இந்த ஊழ்தான் காரணம் ஆகிறது. ‘கொடுக்கிற தெய்வம் கூரையைப் பிய்த்துக்கொண்டு கொடுக்கும்’ என்பர்; போக வேண்டும் என்று இருந்தாலும் யாரும் அதனைத் தடுத்து நிறுத்த முடியாது. அடுக்கிய செல்வம் இருந்தாலும் ஒடுக்கிய வயிறு உடையவன் படுக்கையில் கிடக்க வேண்டியதுதான். அவன் வயிற்றுநோய்க்காரன் என்று மருத்துவர் சொன்ன பிறகு அனுபவிக்க அவன் அருகதை அற்றவன் ஆகி விடுகிறான். இந்த உலகில் எதுவும் உறுதி இல்லை; செல்வம் நிலைப்பது இல்லை; சூழ்நிலைகள் மாறலாம்; ஊழ் வலிவுடையது; அதன் ஆற்றலை அறிந்து ஒருசிலர் துறவும் கொள்கின்றனர். அதிர்ஷ்டம் துணை செய்யும்போது ஆகாயத்தில் பறக்கிறான்; அவனே படுபாதாளத்திற்குப் போய் விடுகிறான்; சந்தோஷப்பட்டவன் இப்பொழுது அழுது என்ன பயன்? எழுவதும் விழுவதும் அவன் கையில் இல்லை. ஊழைவிட வலிமை மிக்கது யாதும் இல்லை. சூழ்நது செயல்பட்டாலும் விழுந்தவன் விழுந்தவன்தான். சூழ்நிலைகள் தனிமனிதனைவிட ஆற்றல் மிக்கவையாகும். 2. பொருட்பால் 39. இறைமாட்சி (அரசனது நற்குண நற்செயல்கள்) படை, குடிமக்கள், விளைபொருள்கள், அமைச்சு, நட்பு, அரண் இவ் வாறும் அரசனது நல்லாட்சிக்கு அடிப்படைகள் ஆகும். இவற்றை அரசு அங்கம் என்றும் கூறுவர். அரசனிடம் தக்க படைவலிமை இருந்தால்தான் அவன் காவல் சிறப்புற அமையும்; படைஞர்களை அவன் ஊக்குவிக்க வேண்டும். குடிமக்கள் நலமாக இருந்தால்தான் அரசாட்சி நிலைக்க முடியும். அவர்களுக்கு அவன் காட்சிக்கு எளியவனாக இருந்து அவர்கள் குறைகளைக் கேட்டு அறிந்து தீர்க்க முற்பட வேண்டும். நாட்டுக்கு உணவு அடிப்படை, பொருள் உற்பத்திகளும் தேவை. இவற்றை உண்டாக்க அரசன் ஆக்கப் பணிகள் செய்ய வேண்டும். அவர்களிடம் வரிப்பணம் பெற்று அதனைத் தக்கபடி காத்துக் காத்தவற்றை அரச காரியங்களுக்குப் பங்கீடு செய்வது அவன் கடமை யாகும். 5 அமைச்சர்களைத் தேர்ந்து எடுத்து அவர்கள் கூறும் கருத்துகளைக் கசப்பானதாக இருந்தாலும் செவிமடுத்துக் கேட்டு நல்லது கெட்டது ஆராய்ந்து செயல்படுத்த வேண்டும். தக்க நண்பர்களைத் தேடி வலிமை சேர்த்துக்கொள்ள வேண்டும்; நட்பினை ஆராய்ந்து தேர்ந்து எடுத்துக்கொள்ள வேண்டும். நாட்டுக்கு மதில், அகழி முதலிய அரண்களைச் சரிவர அமைத்துக் கொண்டு எதிரிகளின் தாக்குதல்களினின்று நாட்டைக் காப்பது அவன் கடமையாகும். நாட்டை ஆளும் அரசனுக்கு அஞ்சாமை, ஈகை, அறிவு, ஊக்கம் இவை எப்பொழுதும் குறையவே கூடாது; அதற்கு விழிப்பு உணர்வு, கல்வி, துணிவுடைமை ஆகிய இம் மூன்றும் நிலைத்து இருக்க வேண்டும். அவன் விழிப்புடன் செயல்பட வேண்டும். ஆட்சி அறவழிகளில் இயங்க வேண்டும். நீதிக்கும் சட்டத்திற்கும் புறம் ஆகியவற்றை நீக்க வேண்டும். வீரம் குறையாத மானம் அவனிடம் நிலைத்து இருக்க வேண்டும். தன்னை இழித்துக் கூறினால் அவர்களை அழித்து ஒழிக்கச் செயல்பட வேண்டும். போர் தொடுக்க வேண்டும் எனில் அதற்கு அஞ்சக் கூடாது. மக்களிடம் இனிய சொற்களைப் பேசி இரவலர்க்கும் புலவர்க்கும் ஏனைய கலைஞர்க்கும் ஈத்தளித்தலும் அவன் கடமையாகும். கொடை, அருள், செங்கோன்மை, குடிமக்களைக் காப்பது இந் நான்கும் உடையவனே பேரரசன் என்று பாராட்டப்படுவான். 40. கல்வி கல்வி என்பது கற்றுக்கொள்வது; அஃது அறிவுக்குத் துணை செய்வது. கற்கும் நூல்கள் நீதிநூல்களாக இருப்பது நல்லது; அவை உணர்த்தும் அரசநீதிகளை அரசன் பின்பற்றினால்தான் ஆட்சி செம்மையாக அமையும். கல்வி என்பதை எண்ணும், எழுத்தும் என இருவகையாகப் பிரிக்கலாம். அவை மக்கள் உயிர்வாழ்வுக்குக் கண் போன்றவை ஆகும். கல்வி அறிவு தருவதோடு இன்பமும் பயக்கிறது. நூல் நயங்களைப் புலவர்கள் எடுத்துக் கூறும்போது அவை கேட்போரை மகிழ்விக்கின்றன. அவர்கள் சொல்லாடச் சோர்வு நீங்குகிறது. அவர்கள் முத்துகளைப் போன்ற கருத்துகளை எடுத்துக் கூறும்போது அவை சிந்தனையைத் தூண்டுகின்றன; புலவர்கள் அளவளாவுவதே தனி இன்பம். கல்வி கற்பது சிரமமான காரியம்தான்; ஆசிரியர்களை அணுகி அடக்கமாக நின்று கேட்டு அறிவு பெறவேண்டும். அரசன் மகனாக இருந்தாலும் ஆசான்முன் அடங்கியிருந்தே கற்கவேண்டும். அறிவுப்பசி அவனைத் தூண்ட வேண்டும். விடாமுயற்சியும், பலகால் கேட்டு அறிவுபெறும் பயிற்சியும் தேவையாகின்றன. கல்வி ஊற்றுப் போன்றது; மணலின்கண் தோண்டும் கேணிநீர் எடுக்க எடுக்கக் குறையாது; தோண்டத் தோண்டச் சுரந்துகொண்டே இருக்கும். கல்வியும் அத்தகையதே; கற்கக் கற்க அறிவு பெருகிக்கொண்டே இருக்கிறது. அதற்கு அளவே இல்லை. கற்றோர்க்குச் செல்லுமிடமெல்லாம் சிறப்புக் கிடைக்கிறது. அவர்களுக்கு யாதும் ஊரே; யாவரும் உறவினர் ஆகின்றனர்; கல்விக்குக் கரையே இல்லை; வாழ்நாள் முழுவதும் கற்றுக்கொண்டே இருக்கலாம். பயிற்றுவதும் இன்பம் பயப்பதாகும். செல்வம் மிகையானாலும் பகைதான் உண்டாகும்; அஃது அழியக் கூடியது; கைமாறக் கூடியது. கல்வி பலருக்கும் பயன்படுகிறது; ஏழு தலைமுறைக்கும் அது சென்று பயன்படுகிறது. அள்ள அள்ளக் குறையாத செல்வம் கல்வி ஆகும். 41. கல்லாமை கல்வி கல்லாத மூர்க்கரும் உலகில் உளர்; கண் விழித்துப் பார்க்காத குருடரும் உண்டு. கல்வி அறிவு பெற்றுத் திகழாதவர்கள் கல்லாதவர்கள் என்று பொதுவாகக் குறிப்பிடப்படுவார்கள்; இங்குக் கல்லாதவர்கள் என்பது எழுத்து அறிவு இல்லாதவர்களை அன்று. கற்ற கல்வியே போதும் என்று நூலறிவை மேலும் மேலும் பெருக்கிக் கொள்ளாதவரே கல்லாதவர் என்று குறிப்பிடப்படுகின்றனர். தொடர்ந்து படித்துக்கொண்டே இருக்க வேண்டும்; கற்றவர்முன் திறம்படப் பேசும் தகுதியைப் பெற்றுக்கொள்ள வேண்டும். சூது ஆடச் சென்றாலும் அதற்கும் காயும் கவறும் வேண்டும்; ஆடுவதற்கு வட்டப் பலகையும் வேண்டும். அதே போலச் சபைக்குச் சென்று நாலுவார்த்தை பேச வேண்டுமென்றாலும் நூலறிவு வேண்டும்; படிக்காமல் எதனையும் பேசிவிடமுடியாது. கல்லாதவன் கற்றவர் மத்தியில் பேசத் தொடங்குவது பருவம் அடையாத இளம் பெண் ஆடவரைக் கவர நினைப்பது போன்றது ஆகும். நூல்களைக் கற்று அறிவை வளர்த்துக்கொள்ளாத ஒருவன், அறிவுள்ள கருத்துகள் ஒருசில வெளியிட முற்படலாம். அவை சரியானவை என்று பட்டாலும் அறிவுடையார் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்; நூற் சான்றுகள் காட்டாமல் எதனைக் கூறினாலும் ஏற்க மாட்டார்கள். சட்டம் படிக்காமல் வழக்கு மன்றத்தில் வாதாட முடியாது; இயற்கை அறிவுமட்டும் போதாது; கல்வி அறிவு மிக்கு வேண்டும். அவர்களால்தாம் வாதங்களுக்குத் தாக்குப்பிடிக்க முடியும்; இல்லையென்றால் தோல்வியை அடைந்துவிடுவார்கள். இவர்கள் பேச்சுக்கும் விவாதத்துக்கும் ஈடுகொடுக்க இயலாது; வெறும் களர் நிலம் போல்வர் எனக் கருதப்படுவர். மேற்போக்காகக் கல்வி கற்று இருக்கலாம்; அதனால் ஒருவன் தன்னைக் கற்றவன் என்று கூறிக்கொள்ள முடியாது; மண்பொம்மை நிறம் தீட்டப்பெற்று இருக்கலாம்; அதனால் அதற்கு உயிர் உண்டு என்று கூறமுடியாது; அதனை வாரி எடுத்து அணைத்துக்கொள்ள முடியாது. நுண்மையான அறிவும், நிறைந்த புலமையும் உடையவரே கற்றார் எனப்படுவர். கல்விச் செல்வம் இருந்தால்தான் தற்காப்போடு வாழ முடியும்; வறுமை இருந்தாலும் செம்மையாக வாழ முடியும்; அதற்கும் கல்வி வேண்டும்; பொருட்செல்வம் இருந்தால் அதனைப் போற்றிக் காக்கவேண்டும்; ஞான சூனியராக இருந்தால் எளிதில் ஏமாற்றம் அடைந்துவிடுவர். நூல் பல கல்லாதவன் விலங்குகளுக்கு நிகரானவன். 42. கேள்வி முறையாக ஆசானை அடுத்தும் நூல் பல கற்று அறிவு பெறுவது கல்வி எனப்பட்டது; அதனை மேலும் விருத்தி செய்யாமல் இருப்பது அறிவை மங்கச் செய்துவிடும்; இது கல்லாமை எனக் கூறப்பட்டது; கேள்வி என்பது அறிவுடையோர் பேசக் கேட்டுப் பயன் அடைதல் என்ப தாகும். அரசர்களுக்கு நூல்கள் பல கற்க நேரம் இருக்காது; அதனால் கேள்விஞானம் அவர்களுக்குத் தேவைப்படுகிறது. அது பெரும்பாலும் அறிவுரையாகும்; அறிவு மிக்கவர்கள் எடுத்துக் கூறுவதைக் கேட்டுவைத்தால் அது தக்க சமயத்தில் பயன்படும். வழுக்கும்போது ஊன்றுகோல் பயன்படுவது போல அவ் அறிவுரைகள் பயன்படும். கேட்பது என்றால் எதனைக் கேட்பது? கல்வி என்பது நூல் பல கற்றல்; கேள்வி என்பது நல்லவை சில கேட்டல் ஆகும். எந்தச் சிறிய அளவானாலும் அறிவுமிக்க விஷயங்களைக் கேட்பது அறிவைத் தரும்; கேட்பவனை உயர்த்தி அறிவுச் செல்வம் உடையவர் பக்குவப்படுத்துகின்றனர். தவறியும் கீழ்த்தரமான சொற்கள் அவர்கள் வாயினின்று வாரா; பண்பாடு உடையவராகத் திகழ்வர் நுட்பமான அறிவு பெறுதற்குக் காரணமான கேள்விஞானம் உடையவர்கள் பணிவும் அடக்கமும் கற்றுக்கொள்கின்றனர். எனவே கேள்விச் செல்வம் பயன் உடையதாகும்; அது மதிக்கத் தக்க செல்வமாகிறது. வாய்ச் சுவைக்கே அடிமையாவதை விட்டு அறிவுப்பசிக்கு இடம் கொடுப்பவன் அறிவாளி; செவிச்சுவை பயன் உடையது. அவர்கள் சால்பு பெருகுகிறது. நிலத்தில் வாழ்ந்தாலும் தேவர்களைப்போல் பெருமையும் பெறுகின்றனர். செவிப்புலன் கண்களைப் போலவே அறிவு பெறுவதற்கு நுழைவாயிலாக உள்ளது. நூல்கள் பல கற்றுப் பெறும் அறிவை, அறிஞர் பேச்சுத் தருகிறது; சில ஆயினும் அவை சாரம் மிக்கவையாக அமையும். கண்வழிக் கல்வி கற்கும் காலம் மாறி விண் வழி வரும் தொலைக்காட்சி செவிச் செல்வத்தையும் தருகிறது. செவிவழிக் கல்வியை வானொலியும் தருகிறது. ஒளியும் ஒலியும் மக்களால் விரும்பி வரவேற்கப்படுகின்றன. 43. அறிவுடைமை அறிவு என்பது தற்காப்புக்குப் பயன்படுகிறது. அது நுட்பமானது; அதே சமயம் கூர்மையானது; வலிமை மிக்கது; எதிரிகள் அதனைக் கொள்ளைகொண்டு போக முடியாது; அஃது ஒருவன் உடைமையாகும். அறிவு சிதறக் கூடாது; நன்மையில் அதனை நிறுத்த வேண்டும். தீயதன்கண் நாட்டம் சென்றால் அதனைக் கட்டுப்படுத்துவது அறிவு. அறிவு என்பது நூல்பல கற்பதால் வரும் என்று சொல்வதைவிடக் கேள்விகள் சில கேட்பதாலும் வருகிறது. அது யார் சொன்னாலும் எத்தகையதாக இருந்தாலும் அதன் உண்மையை அறிந்துகொள்ள முயலவேண்டும். நாம் பிறரிடம் எடுத்துச் சொல்லும்போது புரியும்படி பேச வேண்டும்; பிறரும் அவ்வாறே நம்மிடம் பேசுவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. அவர்கள் கூறுவது தெளிவாக இல்லாமல் இருக்கலாம்; அதனை விளங்கிக்கொள்வது நம் கடமையாகும். எப்பொழுதும் நாம் எளிய சொற்களைக் கொண்டு சுருக்கமாகக் கூறி எதனையும் விளக்க முயல வேண்டும். நாம் நினைப்பதே சரி என்று நம் விருப்பப்படி நடந்து கொள்வது அறிவு அற்ற செயலாகும். உலகம் எது தக்கது என்று நினைக்கிறதோ அதனை அறிந்து தெளிந்து அதன்படி நடந்துகொள்வதுதான் அறிவுடைமைக்கு அறிகுறியாகும். அறிவுடையவர்கள் எதிர்காலத்தில் வரப்போகும் நன்மை தீமைகளை அறிந்துகொண்டு அதற்கு ஏற்பத் தம்மைத் தகுதி ஆக்கிக்கொள்வர்; சுற்றுப்புறத்தையும் திருத்திக்கொள்வர்; அறிவற்றவர்கள் வருவதை அறிந்து தீமைகளைக் குறைக்கத் திறம் இல்லாதவர்களாக விளங்குவர். அஞ்சத்தக்கனவற்றுக்கு அஞ்சித்தான் ஆகவேண்டும்; “எது வந்தாலும் கவலைப்படமாட்டேன்” என்று மிகைபடப் பேசுவது கவைக்கு உதவாது. வருமுன் காப்பவனே அறிவாளி. வந்த பின் சிந்திப்பவன் ஏமாளி. அறிவுடையவன் முன்கூட்டிச் சிந்தித்து அதிர்ச்சிகளைத் தாங்க வழிவகுத்துக் கொள்வான். மற்றவர்கள் வழிவகை தெரியாமல் இருளில் ஆழ்வார்கள். அறிவுடையவர் பொருள் இலராயினும் அவர்கள், கலங்காமல் வாழ்வர்; வழிவகை தெரிந்து வாழ அவர்களால் இயலும். அறிவற்றவர்கள் செல்வம் மிக்கு உடையவராயினும் அதனைச் சீராக வைத்துக்கொண்டு வாழமாட்டார்கள். 44. குற்றங்கடிதல் (குற்றங்களை நீக்குதல்) அறிவு அழிவினைத் தடுக்கும் கருவி என்றார். நாம் அழிவதற்குக் காரணமாக இருப்பவை நம்மிடம் நிகழத்தக்க குறைபாடுகளே. அக் குற்றங்களில் குறிப்பிடத் தக்கவை செருக்கு, சினம், காமம் என்று கூறுவர். இவை மூன்றும் நீங்கியவர் பெருமை பெறுவர். அரசர்கள் முக்கியமாகத் தவிர்க்க வேண்டியவை ஈயாத உலோபத்தனமும், பொய்யான மான உணர்வும், தேவை இல்லாத மகிழ்ச்சியும் என்று கூறலாம். மகிழ்வு கொள்வது அளவாக இருக்கவேண்டும். மகிழ்ச்சியில் கடமைகளை மறக்க வாய்ப்பு நேர்கிறது. பழிக்கு நாணுபவர் தினை அளவு குற்றம் நேரும் என்றாலும் அதனைப் பனையளவாகக் கொண்டு தவிர்ப்பர். குற்றம் வாராமல் காத்துக்கொள்க; குற்றமே அழிவைத் தரும் பகையாகும். வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன் வைத்த வைக்கோல் போலக் கெடும். முதலில் தன் குற்றத்தை ஆராய்ந்து நீக்குக; பின் பிறர் குற்றம் காண்க. அரசன் இவ்வாறு தன்னை முதலில் தூயனாக வைத்துக்கொள்வது அவசியமாகும்; அவனுக்கு எந்தத் தீமையும் வாராது. செலவு செய்ய வேண்டியது அவசியம் என்றால் அதனை மிச்சப்படுத்துவது அறிவீனம். அத்தகையவன் செல்வம் அழிந்து நீங்கிவிடும்; அதன் அழிவை யாரும் தடுத்து நிறுத்த முடியாது. பொருள் தாராவிட்டால் யாரும் அவனுக்கு உதவமாட்டார்கள். எக்காலத்திலும் தன்னைத் தான் புகழ்ந்து பேசுவதைத் தவிர்க்கவும்; நமக்கு நன்மை தாராத செயல்களை எப்பொழுதும் செய்யக்கூடாது. சில இன்பங்களைத் துய்ப்பதிலிருந்து தப்பமுடியாது என்றால், அதனை ரகசியமாக அனுபவித்துக் கொள்வது அறிவுடைமையாகும்; விளம்பரப்படுத்திக் கொள்ளக் கூடாது. விளம்பரம் விநாசத்தை உண்டுபண்ணும்; தம் குறைபாடுகளைப் பகைவர் அறியாதபடி நடந்துகொள்வது அழிவு வாராமல் காக்கும். உனக்கு உள்ள குறைபாடுகளைத் தற்பெருமைக்காகக் கூடப் பறைசாற்றாதே. எதனையும் வெளிப்படையாகச் சொல்பவன் ஏமாளி; மற்றவர் சிரிப்பதற்கு இடம் தருபவன் கோமாளி; குற்றங்களை மறைத்து வெளிப்படுத்தாதவனே அறிவாளி. 45. பெரியாரைத் துணைக்கோடல் அறன் அறிந்தவர், முதிர்ந்த அறிவு உடையவர் இவர்களையே பெரியவர்கள் என்று கூறுவார்கள். அவர்கள் நட்பு மிகவும் அவசியம்; அவர்கள் எவ்வாறு நமக்குப் பயன்படுவார்கள் என்பதை ஆராய்ந்து பின் அவர்களைத் தழுவிக் கொள்க; அவர்களோடு உறவு கொள்க. துன்பங்கள் இரண்டு வகைப்படும். நாம் தற்போது படும் அவதிகள்; இனி வரக்கூடிய கெடுதல்கள். இப்பொழுதைய துன்பங்களை நீக்க வல்லவரும், வரப்போகும் துன்பங்களை முன்கூட்டிப் போக்கத் துணையாக அமைபவரும் இத்தகைய பெரியார்களே! இப் பெரியோர்களைப் போற்றி அவர்கள் உதவிகளைப் பெறுக. அரியவற்றுள் அரிது ஒன்று இருக்கிறது என்றால், பெரியவர்களைப் போற்றி அவர்களை உறவு ஆக்கிக் கொள்ளுதல் எனலாம்; இஃது ஒர் அரிய கலை ஆகும். நம்மைவிட எல்லாவகையிலும் பெருமை உடையவர்களை நம் துணைவராகக் கொள்வது வலிமைகளுள் சிறந்தது ஆகும். அஃது ஆற்றலையும் வலிமையையும் தரும்; அஃது ஒரு பெரிய வாய்ப்பு ஆகும். எது நல்லது? எது கெட்டது? எது செய்யத் தக்கது? எது செய்யத் தகாதது? என்று காரண காரியங்களைக் கொண்டு ஆராய்ந்து அறிவிப்பவர் நமக்கு ஒளி தரும் கண்கள் போன்றவர்; அவர்களுள் யார் தக்கவர் என்பதை அறிந்து அவர்களைத் துணையாகக் கொள்க. தக்க துணைகள் ஒருவருக்கு வாய்த்தால் அவர்கள் எதனையும் எளிதில் சாதிக்க முடியும்; வெற்றி காண்பர். இடித்து அறிவுறுத்தும் துணைவர்களை ஆள்பவர்களை யாரும் கெடுக்க முடியாது; இப் பெரியவர்கள் அஞ்சாமல் தாம் கருதியதை அவர்களுக்கு அறிவுறுத்துவர். இடித்துச் சொல்லித் திருத்தக்கூடிய அறிஞர்களைத் துணைவராகப் பெறாவிட்டால் அரசன் தன்னைக் கெடுப்பவர் இல்லாவிட்டாலும் தானே கெட்டு அழிவான். முதற்பணம் போடாமல் இலாபமே இல்லை; அதனைப் போலத் தக்க சார்பு இல்லாதார்க்கு நிலைபேறு இல்லாமல் போய்விடும். பலபேர் பகை ஏற்படலாம்; அதனைவிடத் தீமை தருவது நல்லார்தம் தொடர்பைக் கைவிடுவது, பத்து மடங்கு தீயதும் ஆகும். இவர்கள் துணை தற்காப்பைத் தருவது ஆகும். இவர்கள் துணை நமக்கு இல்லை என்று தெரிந்தால் எதிரிகள் எளிதில் நம்மை அழித்துவிடுவர். 46. சிற்றினம் சேராமை பெருமைக்கு உரிய நல்லோர்கள் சிந்தித்துச் செயல்படுவர்; அவசரப்பட்டுக் கண்டவரோடு சிநேகம் கொள்ளமாட்டார்கள்; சிறியவர்கள் முன்பின் யோசிக்காமல் கண்டவர்களோடு சகவாசம் கொள்வர். தண்ணிருக்குத் தன் இயல்பு உண்டு; எனினும் அது சாரும் நிலைக்கு ஏற்ப நிறம் மாறும்; தன்மையும் கெடும்; மாந்தரும் இயல்பாக நல்லர்களாக இருக்கலாம் என்றாலும் சேருவாரோடு சேர்ந்து சீர் அழிதலும் உண்டு. ஒரு பழமொழி இருக்கிறது. “நீ உன் நண்பனைச் சொல்லுக நீ யார் என்பதைத் தெரிவிக்கிறேன்” என்பது அந்தப் பழமொழி. நல்லவனா கெட்டவனா என்பது அவர் நண்பர்களைக் கொண்டு கூறிவிட முடியும். தீயவர்களோடு சேர்ந்தால் ஆக்கம் கெடுத்துச் குட்டிச்சுவர் ஆக்கிவிடுவர். அப்பாவும் அம்மாவும் நல்லவர்களாக வாழ்ந்தால் அவர்கள் பிள்ளைகளும் ஒழுங்காக வாழ்வார்கள்; சந்ததியாரும் நல்லவர்களாக வாழ்வர். நண்பர்கள் சகாயம் மிகவும் அவசியம்; அவர்கள் எதனையும் சாதித்துத் தருவார்கள்; தக்கவர்களைத் தேடிக் கொள்க. மனநலம் உயிரோடு தொடர்பு உடையது; செயற்பாடு அவன் சார்பை ஒட்டியது; இகழ்ச்சிக்கும் புகழ்ச்சிக்கும் நண்பர்களே காரணம் ஆகி நிற்பர். இப் பிறவிக்கு மட்டும் அன்று; தொடரும் பிறவிகளிலும் மனநலமும் இனநலமும் தூயதாக இருப்பது நல்லது. நல்லவர்களோடு சேர்க; அஃது உனக்கு எல்லா நன்மை களையும் தரும்; தீயவர்களைவிட்டு விலகிவிடு; அவர்கள் உன்னைச் சிக்கலில் மாட்டிவிட்டு அவர்கள் தப்பித்துக் கொள்வர்; நீ மீளவே முடியாது. 47. தெரிந்து செயல்வகை (ஆராய்ந்து செய்யும் திறம்) பெரியாரைத் துணைக்கொள்வதும் சிற்றினம் சேராமையும் அவரவர் தம் கடமைகளைச் செய்யவே ஆகும். தாம் மேற்கொண்ட செயல்களை எவ்வாறு திட்டமிட்டுச் செயல்படுத்துவது? அது தெரிந்து செயல்வகை எனப்படும். ஆராய்ந்து செயலில் ஈடுபடுதல் என்பது இத் தொடரின் பொருளாகும். ஒரு செயலைத் தொடங்குமுன் இதனால் ஆரம்பத்தில் நமக்கு ஏற்படும் இழப்பு யாது? ஆக்கம் யாது? என்று நிருணயிக்க வேண்டும். எந்தத் தொழிலும் தொடங்கும் போது அதிக இலாபம் எதிர்பார்க்க முடியாது. பின்னால் வரும் ஆதாயம் யாது என்பதையும் கணக்கில் இட வேண்டும். தொழில் தெரிந்த நண்பர் உதவியுடன் கலந்தாலோசித்து முடிவுசெய்ய வேண்டும்; அதனோடு நன்மை தீமைகளை ஆராய்ந்து செயலில் இறங்கவேண்டும். அவர்கள் நிச்சயம் வெற்றி பெறுவார்கள். இலாபம் வருகிறது என்று முதற்பொருளை இழக்கக் கூடிய செயல்களில் அறிவுடையவர் இறங்கமாட்டார்கள்; உறுதியாக நன்மை கிடைக்கும் என்று தெரிந்தால் அன்றி எந்தக் காரியத்திலும் இறங்கமாட்டார்கள். ஒரு செயலை எடுத்துக்கொண்டால் அதன் தன்மைகளை முழுவதும் ஆராய்ந்தே தொடங்க வேண்டும். சிறப்பாகப் போர்வினை தொடங்குவது என்றால் முன்கூட்டியே எல்லாவகையிலும் திட்டமிட வேண்டும். சேற்றில் காலை வைத்த பிறகு எடுக்க முடியாமல் திணற நேரிடும். ஒரு காரியத்தைச் செய்யத் தொடங்குவார்; அது முற்றுப் பெற வேண்டிய அனைத்துச் செயல்களையும் விடாமல் செய்ய வேண்டும். செய்யத் தகாத முயற்சிகளைச் செய்தாலும் அது கெட்டுவிடும்; செய்ய வேண்டுவன செய்யாமையாலும் மேற்கொண்ட காரியம் பழுது ஆகிவிடும். ஒரு செயலை மேற்கொள்ளுமுன் நன்கு ஆராய்ந்து பின் தொடங்குவது என்று முடிவு செய்ய வேண்டும்; தொடங்கிய பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்பது கூடாது. திட்டமில்லாத எதுவும் வெற்றி பெறாது. தீர யோசித்தே ஒரு முடிவுக்கு வரவேண்டும். தொடங்கிவிட்டுப் பிறகு எப்படிச் செய்வது? இதனால் நன்மை உண்டாகுமா? என்று யோசித்துக் கொண்டிருப்பதனால் எந்தப் பயனும் விளையாது. எதனையும் முன்கூட்டியே முடிவு செய்ய வேண்டும். வழிவகை கண்டு தொடங்காத எந்த முயற்சியும் பலர் நின்று உதவினாலும் வெற்றி பெறாது; எடுக்கும் வினை வெற்றி பெறுமா? என்பதை எண்ணிப் பார்த்தே இறங்க வேண்டும். மேற்கொள்ளும் செயல் உன்னதமானதாக இருக்கலாம்; மிக நல்லதாகவும் இருக்கலாம்; வருவாய் தருவதாகவும் இருக்கலாம்; அதனை உடனிருந்து செய்பவர் எத்தகையவர் என்பதை ஒட்டியே அதில் வெற்றி அமையும். செய்பவரின் திறமை, பண்பு இவையும் அடிப்படை ஆகும். தனக்கு உகந்த தொழிலையே மேற்கொள்ள வேண்டும்; தொடர்பு இல்லாத தொழிலில் இறங்கினால் தோல்வியே ஏற்படும். 48. வலி அறிதல் எடுத்துக்கொண்ட செயலின் வலிமை, தன் வலிமை, பகைவரின் வலிமை, இரு பக்கமும் உதவி செய்யக் கூடியவர்தம் வலிமை இவற்றை எல்லாம் ஆராய்ந்து, தனக்கு வெற்றி கிடைக்கும் என்றால்தான் அந்தச் செயலில் இறங்கலாம். ‘ஆழம் தெரியாமல் காலை விடக்கூடாது’ என்பது பழமொழி; செயல் இத்தகையது என்று முதலில் அறிந்து கொள்ள வேண்டும்; பின் அதில் முழுமையாக ஈடுபட வேண்டும்; அவர்கள் எதனையும் சாதிக்க முடியும். நம்பிக்கையும் ஊக்கமும் மட்டும் கைகொடா; வினை வலிவுடையது என்றால் அதற்கு எளியவரால் ஈடு கொடுக்க இயலாமல் போகலாம்; பாதிவழிக் கிணறு தாண்டி இடையில் விழுபவரும் உண்டு. நேரிற் சென்று தக்க துணைவரோடு செயல்படாமல் தன்னைத் தானே வியந்துகொண்டால் கடையை இழுத்துப் போட்டு மூட வேண்டியதுதான். மயிற்பீலி பெய்த வண்டியும் பாரம் மிகுமானால் அது முறிந்துவிடும். மரத்தின் நுனிக்கு மேலும் ஏறியவர் மேலே ஏறினால் விழுந்து கை கால் முரிய வேண்டியதுதான். எந்தச் செயலைச் செய்து முடிப்பதற்கும் பொருள் வேண்டும்; அப் பொருளைக்கொண்டு முதலீடு செய்கிறாய்; அளவறிந்து செயல்படுக; பணியாளர்க்கு அளவோடு ஊதியம் தருக; வருவாய்க்கு மீறிய செலவுகள் தவிர்க்கப்பட வேண்டும். அளவறிந்து வாழாவிட்டால் திடீர் என்று கவிழ்ந்துபோக நேரிடும். பிறர் உதவியைத் தேடித் தாராளமாக நடந்துகொண்டால் சேர்த்துவைத்த சேமிப்பு பூஜ்யம் ஆகிவிடும். எதுவும் உன் சக்திக்கு மீறிய செயல்களில் ஈடுபட்டால் உழைப்பும் உறுதியும் முயற்சியும் எல்லாம் பாழாகிவிடும். யாருக்குமே நன்மை கிடைக்காமல் போய்விடும். 49. காலம் அறிதல் கோட்டானைக் காக்கை பகலில் வென்றுவிடுகிறது. வலிமைமிக்கது கோட்டான் என்றாலும் அது காக்கையிடம் தோற்றுவிடுகிறது. காரணம் காலம் காக்கைக்குத் துணை செய்கிறது. அதே போலப் பகைவரை வெல்லக் கருதுபவர்கள் அதற்கு உரிய காலத்தை ஆராய்ந்து தெளிந்து செயலில் ஈடுபட வேண்டும். கருவியும் காலமும் இயைந்தால் கருதியது கைகூடும். அன்றாட நடைமுறையில் எந்தக் காலத்தில் எதனைச் செய்யவேண்டுமோ அதனைக் காலமறிந்து செய்ய வேண்டும். எதனையும் தள்ளிப் போட்டுக்கொண்டு சென்றால் தேக்கம் ஏற்பட்டுவிடும். அவசரப்பட்டு எதனையும் செய்துவிடக் கூடாது. ‘பருவமறிந்து பயிர்செய்’ என்பது பழமொழி; அவர்கள் செல்வம் சிதையாது; விழிப்புணர்வு அழிவினைக் காப்பாற்றும். காலமும் ஆராய வேண்டும்; தக்க இடமும் தேர்ந்து எடுக்க வேண்டும், அவர்கள் எந்தக் காரியத்தையும் செய்து, சாதிக்க முடியும். ஊக்கம் உடையவர் சில சமயம் ஒடுங்கி இருக்க வேண்டும்; தக்க சமயம் அறிந்து செயல்பட வேண்டும். ஆட்டுக்கிடாய்கூடப் பின்னால் இடம்வாங்கித் திடீர் என்று முன்சென்று தாக்கும்; இது செயல்திறம் ஆகும். அறிவுடையவர்கள் அவசரப்படமாட்டார்கள்; ஆவேசமும் கொள்ளமாட்டார்கள்; ஆர அமரச் சிந்தித்துச் செயல்படுவர்; எவ்வளவு கோபம் இருந்தாலும் அதனை உள்ளுக்குள்ளேயே வைத்துத் தக்க சமயத்தில் செயல் படுவர். பகைவரைக் கண்டால் பொறுத்துக்கொள்க; அவர்களுக்கு அழிவு காலம் வரும்; அவர்கள் தாமே அழிந்து விடுவர். காலம் எதனையும் சரியாக முடிவு செய்யும். அரிய வாய்ப்புக் கிடைத்தால் நெகிழவிடக்கூடாது; காற்றுள்ள போதே தூற்றிக்கொள்ள வேண்டும். அதிர்ஷ்டம் ஒரு முறைதான் வரும்; அதனைப் பயன்படுத்துவதில்தான் ஒருவரின் றிறமை இருக்கிறது. பொறுத்திருக்க வேண்டிய காலத்தில் பொறுமையாக இருந்து எல்லாவற்றையும் கவனித்துக்கொண்டே இருக்க வேண்டும். காலம் வரும்போது உடனே செயல்பட்டு அதனைச் சாதிக்க வேண்டும். கொக்கு அசையாமல் கூம்பி இருக்கும். தக்க இரைவந்தால் உடனே அதனைக் கவ்வி விடும். “ஓடுமீன் ஓட உறுமின் வருமளவும் வாடி இருக்குமாம் கொக்கு” என்பர். அதுபோலத் தக்க சமயம் வாய்க்கும்வரை காத்திருந்து ஏற்ற சமயம் வாய்க்கும் போது துரிதமாகச் செயல்பட்டு வெற்றி பெறவேண்டும். காலத் தேர்வு போலவே இடத் தேர்வும் செயல்திறனுக்கு அடிப்படையாகும். 6. 50. இடன் அறிதல் எந்தத் தொழிலைச் செய்தாலும் அதன் வெற்றி, தேர்ந்து எடுக்கும் இடத்தை ஒட்டியே அமையும். வலிமை மிக்க படை இருந்தால் மட்டும் அரசர்க்கு அது வெற்றியைத் தந்துவிடாது. எந்த இடத்தில் இருந்து தாக்குவது தக்கது என்று முடிவு செய்துகொள்ள வேண்டும். அதே போலப் படை சிறிதாக இருந்தாலும் தற்காப்புக்கு இடம் தக்கதாக இருக்க வேண்டும். மதில்கள், அகழிகள் முதலியன தக்கபடி அமைத்துக்கொள்ள வேண்டும். இடம் தமக்குச் சாதகமாக இருந்தால் எளியவரும் வலியவரை வெற்றிகொள்ள முடியும். ஒவ்வொன்றுக்கும் ஓர் இடம் என்ற வரையறை உண்டு; நீரில் செல்ல வேண்டிய கப்பலை நிலத்தில் செலுத்த முடியாது; தேரைக் கடலில்விட்டுத் தெப்பத் திருவிழா நடத்த முடியாது; எலி வளைக்குள் யானை புக முடியாது; பெரிய படை இருந்தால் மட்டும் வெற்றி பெற்றுவிட முடியாது; இடத்துக்கு ஏற்ற வகையில் படை செயல்பட வேண்டும். நீரில் முதலை யானையையும் வெல்லும், தரையில் பிற விலங்குகள் அதனை வெல்லும். இடம் அறிந்து செயல்பட்டால் துணிவு ஒன்றே போதும்; மிக்க படை தேவையில்லை. எதிரிக்கு மிக்க படைபலம் இல்லை என்றாலும் அவன் இடத்துக்குச் சென்று தாக்குவது தவறாக முடியும். அரசனுக்குத் தக்க பாதுகாப்பு, சொந்த இடத்தில் கிடைக்கும். எதிரி அங்குச் சென்றால் சோறு தண்ணிர் கூடக் கிடைக்காமல் போய்விடும். படைவீரனின் வேலுக்கு அஞ்சாத யானைகூடச் சேற்றில் அகப்பட்டுக்கொண்டால் சிறு நரிகளும் அதனைச் சூழ்ந்து கொன்றுவிடும். காலம், இடம் என்பவை புறப் பரிமாணங்கள்; அவற்றை அனுசரித்தே செயல்பட வேண்டும். சொந்த இடத்தில் எதனையும் சாதிக்க முடியும். பிழைப்புத் தேடி அந்நிய இடத்துக்கும் செல்ல நேரிடலாம்; அஃது ஒருவருக்குச் சாதகமாகவும் அமையலாம். எனவே எந்த இடமும் அவரவர் மேற்கொள்ளும் செயலுக்கு உகந்ததா என்பதை ஆராய்ந்து தெளிந்து செயல்பட வேண்டும். 51. தெரிந்து தெளிதல் (ஆராய்ந்து தெளிதல்) ஓர் ஆளை வேலைக்கு அமர்த்த அவன் விவரப் பட்டியலைக் கேட்டுப் பெறுக. திருட்டுப் புத்தி எப்படி? நாலு பேரை விசாரித்து அறியவும். இன்ப வேட்கையனா? பெண்ணைக் கண்டதும் கண்ணைத் திறந்து பார்த்தால் பரவாயில்லை; கண்ணியத் தோடு நடந்துகொள்வானா? இன்பத் துறையில் எளியனா? தொடை நடுங்கியாக இருந்தால் அவன் எதற்கும் உதவமாட்டான். ‘ஏதாவது ஆபத்து ஏற்பட்டால்’ என்று அடிக்கடி கேட்பவனாக இருந்தால் அவனை ஏற்க வேண்டா; கோழையாக இருப்பான். தருமத்தில் நம்பிக்கை உள்ளவனா? நல்லது கெட்டது அறிந்து யோக்கியனாக நடந்துகொள்வானா? அதற்குத் தக்க நற்சான்று இதழ் கேட்டுப் பெறுக. அதாவது அவன் நற்குடியில் பிறந்தவனா? அவன் சூழ்நிலை சுற்றுப்புறம் எப்படி? படிப்பும் பட்டமும் ஆராய்க. பட்டம் பெற்றவனாக இருந்தால் மட்டும் போதாது; தொழில் திறமை இருக்கிறதா? இதனைக் கேட்டு அறியவும். குறை இல்லாத மனிதரே இருக்க முடியாது; குணம் குற்றம் இவற்றை ஆராய்க; சிறு குறைகள் இருக்கலாம்; அவற்றைப் பொருட்படுத்தாதே. “நான் அநாதை; சுற்றம் இல்லாதவன்; அக்குதொக்கு இல்லை” என்றால் பக்கத்திலேயே சேர்க்காதே. அவன் பழிக்கு நாணமாட்டான்; வழிக்கு வரமாட்டான். உறவுக்காரன் என்றால் வீட்டோடு வைத்துக் கொள்ளவும்; அலுவலகத்தில் அனுமதிக்காதே. அங்கு அவன் பிறர் வேலைகளில் தலையிடுவான்; வீட்டில் உன் மனைவியிடம் கோள் மூட்டுவான்; அதிகாரம் அனைத்தும் அவன் கையில் கொண்டுவர முனைவான்; மற்றவர்களைப் பற்றிக் கோள் சொல்வான். இவ்வளவும் அவனுக்கு வைக்கப்ப்ட்ட தேர்வுகள்: அதற்கப்புறமும் அவனைச் சந்தேகித்துக் கொண்டிருந்தால் நீ உருப்படமாட்டாய். அவன் தொழிலைச் செய்து முடிப்பான்; உன் தலையீடு அடிக்கடி கூடாது. அப்புறம் அவன் சுயமாகச் சிந்தித்துத் தொழில் செய்யமாட்டான்; பொறுப்பைத் தட்டிக் கழித்து உனக்குச் சுமை கொடுப்பான். நீ ஒவ்வொன்றிலும் தலையிட்டால் அந்த ஆள் தேவையே இல்லை. 52. தெரிந்து வினையாடல் (ஆராய்ந்து செயற்படுதல்) பந்தாடச் சென்றாலும் அதனை உதைக்கத் தெரிந்திருந்தால் மட்டும் போதாது; விதிமுறைகளுக்கு உட்பட வேண்டும். அப்பொழுதுதான் அதனை ஆட்டம் என்று கூறுவர். அதனைக் கோட்டத்திற்குள் போடவேண்டும்; அப்போதுதான் அவன் வெற்றியடைந்தான் என்று ஆகும். நீ தேர்ந்து எடுத்துக்கொள்ளும் வினையும் அத்தகையதே. தொடங்கிவிட்டால் போதாது; அதனைச் செம்மையாகச் செயல்படுத்த வேண்டும். ‘எங்கள் வீட்டுக்காரரும் கச்சேரிக்குப் போகிறார்’ என்று ஒரு தொழிலைத் தொடங்கிவிட்டு அங்குப் போய்க்கொண்டு இருந்தால் போதாது. இதனை இப்பொழுது எடுத்துச் செய்தால் அதற்கு விற்பனைச் சந்தை இருக்கிறதா? விற்பனை ஆகுமா? போட்டியில் வெல்ல முடியுமா? தொழிலாளர் கிடைப்பார்களா? கருவிகள் அமையுமா? தொழில் தொடங்கும் இடம் சரிதானா? என்று எல்லாம் கவனித்துச் செய்ய வேண்டும். இலாபம் கருதி அதனை அடைய முடியாமல் முதல் இழக்கும் வினையை யாரும் செய்ய மாட்டார்கள். இந்தத் தொழிலைச் செய்வதற்கு நீ தேர்ந்து எடுக்கும் ஆள், அவன் தகுதிகள், யோக்கியதை எல்லாம் ஆராய்ந்து தக்கவனைப் பணிசெய்யத் தேர்ந்து எடுக்க வேண்டும். அடிப்படையில் அவன் அன்பாகப் பழகுகிறானா? மற்றவர்களை வெறுக்காமல் நடந்துகொள்வானா? மனித நேயம் உடையவனா? ‘சிடுசிடு’ என்று இல்லாமல் சுமுகமாகப் பழகுவானா? இவற்றை அறிக. அவன் தொழில்அறிவு உடையவனா? பொது அறிவும் உள்ளவனா? புத்திசாலியாகச் செயலாற்றுவானா? தெளிவான மனநிலை உள்ளவனா? பதற்றம் இல்லாமல் எதையும் செய்வானா? என்பனவற்றையும் கவனிக்கவும். தொழிலில் தேர்ந்த ஞானம் உள்ளதா? அதன் நுட்பங்களை அறிவானா? பழுதுபட்டால் அவற்றைச் சீர்செய்து கொள்ளும் திறமை உள்ளதா? என்பதனையும் ஆராய்க. தொழில்மேல் கவனம் இல்லாமல் பேராசை கொண்டு சதா நச்சரிப்பானா? சுருட்டுவானா? பண ஆசை மிகுதியாக உடையவனா? இவை எல்லாம் பார்க்கவும். மற்றொன்று; ருசி கண்ட பூனை திருடாமல் இருக்காது. வந்து உள்ளே புகுந்தபின் நெளிவுசுளிவுகளை அறிந்து மெல்லச் சுருட்டத் தொடங்குவதும் செய்வான். அவன் நிலையாகத் தவறு செய்யாமல் இருக்கிறானா? சந்தர்ப்பங்களில் கெடுகிறானா? கவனிக்கவும். அவன் தனிப்பட்ட முறையில் விற்பன்னனாக இருக்கலாம். ஒரு குறிப்பிட்ட தொழில் செய்வதற்கு அவனுக்குத் திறமை உள்ளதா? கவனிக்கவும். மூன்று முனைகள் சந்தித்தால்தான் முக்கோணம் ஏற்படும். தொழில், காலம், ஆள் மூன்றும் பொருத்தமாக இருந்தால்தான் தொழில் செம்மை பெறும். ‘இன்னான் இன்ன தொழில் செய்வதற்குத் தகுதி’ என்று ஆராய்ந்து அதனை அவனிடம் ஒப்படைப்பது தக்கது ஆகும். அதற்குப் பிறகு அவனைச் சந்தேகிக்காதே. தொழிலாளி அடிக்கடி வந்து காசு கேட்பான்; பெண்டாட்டிக்குப் பிரசவம் என்பான்; “அதனால் உனக்கு என்ன? “ என்று கேட்டுக்கொண்டு இராதே; பணம் கொடுத்து உதவி செய்க. அவன் வீட்டில் நிம்மதி இருந்தால் தான் மனம் ஒன்றி வேலை செய்வான்; அவன் நன்மை உன் நன்மை எனக் கருதுக; உயர்வு தாழ்வு கருதாதே; அவனை நன்கு அறிந்து பழகுக. 53. கற்றம் தழாஅல் (சுற்றத்தினரைத் தழுவிக் கொள்ளுதல்) நொந்துவிட்டால் வந்து உதவக் கூடியவர்கள் சுற்றத்தவர்தாம். தொழிலில் நொடிப்பு ஏற்படலாம்; எதிர்பாராத கஷ்டம் வந்தாலும் வரலாம்; பழைமை பாராட்டி உதவுவர். நாலு காசு மட்டும் இருந்தால் போதாது; நாலுபேர் வரப்போக இருக்க வேண்டும். அவர்கள் நல்லுறவு உன் செல்வத்தை வளர்க்கும்; அவர்களால் நன்மைகள் வளரும். குளத்துக்குக் கரை இல்லாவிட்டால் அது பெரிய குறைபாடு ஆகும். வளத்துக்கு வகையான சுற்றம் இல்லா விட்டால் அது வகைதெரியாமல் மறைந்துவிடும். சுற்றத்தவர் சுகம் விசாரிக்க வருவர்; நீயும் அவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதைக் கேட்டு அறிக. கடன் கேட்பார்கள்; மறுத்துவிடாதே; உதவி கோருவர்; தள்ளாதே. இனிமையாகப் பேசினால் அவர்கள் இதயம் குளிரும். பருகக்கூடச் சிலர்க்குத் தேநீர் கொடுக்க மனம் வாராது; இனிக்கப் பேசி அனுப்பி வைப்பதில் அவர்கள் திறமையைக் காட்டுவார்கள். அவர்கள் அநாகரிகம் உடையவர்கள். வருவதே ஒருவருக்கு ஒருவர் உதவியாக இருக்க. கேட்கும் முன் அவர்கள் தேவை அறிந்து நீட்டுக; அன்பு காட்டுக; கடுக்கப் பேசி அவர்களை நடக்க வைக்காதே. காக்கை தன் இனத்தையே கூவி உண்ணும். நீ மட்டும் ஏன் தனித்து உண்கிறாய்? சுற்றத்தார்க்கு விருந்து வை; அவர்களை அருந்த வை. அவர்களுக்கும் மகிழ்ச்சி: உனக்கும் புகழ்ச்சி ஏற்படும். பொதுஉடைமை, சமநீதி என்று கூறிக்கொண்டு அவரவர் தகுதி போற்றாது பொதுநோக்கால் நோக்கின், யாருமே நீ தாழும் போது கைகொடுத்து உதவ மாட்டார்கள். சிலரைத் தேர்ந்து சாதகமாக்கிக் கொள்க: அவர்களுக்கு வேண்டுவன தருக; அவர்கள் உன்னைச் சுற்றிப் பாதுகாப்பாக இருப்பர். ஏதோ மனத் தகராறு ஏற்படுவது சகஜம்தான்; குற்றம் பார்க்கில் சுற்றமே இல்லை; கண்ணில் கை பட்டுவிட்டால் அதனை வெட்டிவிட முடியுமா? மறுபடியும் அவர்கள் வந்து சேர்ந்துவிடுவார்கள். வேறுபாட்டுக்குக் காரணமாக இருந்தது கால ஓட்டத்தில் மறைந்துவிடும்; பழைய சுற்றப் பெருக்கம் மீண்டும் தளிர்க்கும்; தளிர்க்க வை. கருத்து வேறுபாடு காரணமாக உன்னைவிட்டுப் பிரிந்து போயிருக்கலாம். பழைய பாசம் விடாது. மறுபடியும் வந்து சேர்ந்துவிடுவார்கள். அவர்களை விலக்காதே. பொருள் கொடுத்தும் சேர்த்துக்கொள். பழைய உறவை மறந்து விடாதே. பழகியவர்கள் பண்போடு நடந்துகொள்வார்கள். 54. பொச்சாவாமை (மறதி இன்மை) களிப்புக்கடலில் கடமையை மறந்துவிடுவர். கடுஞ் சினம் தீது; அதுபோல் மிக்க மகிழ்ச்சியும் தீயது ஆகும். எதிலும் அளவு இருக்கவேண்டும். அறிவு மிக்கவன் என்று சொல்லிக்கொள்வான்; படிப்பாளிதான்; எனினும் அவன் எதனையும் செய்து வெற்றி காண்பது இல்லை; காரணம் பொருள் இல்லாமை; வறுமையில் அறிவு மங்கிவிடும். அதே போல எல்லா வசதிகளும் ஒருவன் பெற்று இருப்பான்; மறதி ஒன்று அனைத்தையும் செயலிழக்கச் செய்துவிடும். மறதி உடையவர் புகழ் தரக்கூடிய செயல்களைச் செய்ய முடிவது இல்லை; அவர்களுக்குப் புகழ் உண்டாவது இல்லை. அச்சம் உடையவர்க்கு அரண்கள் இருந்தும் பயனில்லை; அதே போல மறதி உடையவர்க்கு எதுவும் கைகொடுக்காது. வருமுன் காப்பவன் அறிவாளி; வந்தபின் சிந்திப்பவன் ஏமாளி; முன்கூட்டித் தடுக்காமல் போய்விட்டோமே என்று பின்னர் வருந்துவான். எங்கும் எவரிடத்தும் மறதி கூடாது; எப்பொழுதும் விழிப்புடன் செயல்படுதல் அவசியம் ஆகும். தக்க கருவிகளோடு மறதி இல்லாமல் செயல்பட்டால் செய்து முடிக்க முடியாத வேலை எதுவும் இருக்க முடியாது. எடுக்கும் பணி மிக உயர்ந்ததாக இருப்பது நல்லது. அதனைச் செய்யாமல் விட்டால் பிறகு எந்தக் காலத்திலும் வருந்திக் கொண்டே இருப்பர். நல்ல காரியங்களை உடனுக்குடன் செய்து முடிக்க வேண்டும். மகிழ்ச்சியால் மயங்கிக்கிடந்து செய்ய வேண்டியவற்றை உரிய காலத்தில் செய்யாமல் புறக்கணித்துவிடுவர். இதனைப் போல் எதனையும் உதாசீனப்படுத்திக் கெட்டவரை நினைத்துப் பார்த்தால் அவர்கள் வாழ்க்கை ஒரு படிப்பினையாக இருக்கும் நினைத்ததை முடிப்பது எளிது; எப்பொழுதும் அதனைப்பற்றியே இடைவிடாது எண்ணிச் செயல்பட வேண்டும். மறதியே கூடாது. 55. செங்கோன்மை அரசனது நீதித்துறைபற்றிப் பேசுவது செங்கோன்மை யாகும். நீதித்துறையையும் அரசனே மேற்கொண்டிருந்தான். அவன் வைத்ததுதான் சட்டம்; சொன்னதுதான் தீர்ப்பு. அதனால் அவன் பொறுப்போடு நடந்துகொள்ள வேண்டும். குற்றம் என்று தெரிந்தால், அவன் தான் பெற்ற மகனாயினும் தேர்க்காலில் இட்டுத் தண்டித்தது அந்தக் காலம். குற்றம் செய்தவன் யாராயினும் அவனைத் தண்டிப்பதுதான் நீதி, தானே தவறு செய்தாலும் கையைக் குறைத்துக்கொண்ட பாண்டியனும் இருந்திருக்கிறான். இரக்கம் காட்டினால் நீதி உறக்கம் கொள்ளும். உயிர்வாழ்வுக்கு மழை தேவை; மக்கள் நல்வாழ்வுக்கு அரசநீதி செம்மையாக இருக்க வேண்டும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. அறம் வளர்க்கும் அறச்சாலைகளும், கல்வியைப் பெருக்கும் கல்விநிலையங்களும், வழிபாடுகள் மிக்க கோயில் தலங்களும் சீர்பெற்றுச் சிறப்புற அரசனது நல்லாட்சி தேவையாகும். ஆட்சி குலைந்தால் அறங்கள் வீழ்ச்சியுறும். மக்கள் நல்லொழுக்கத்தால்தான் மழை பெய்கிறது என்ற நம்பிக்கை உள்ளது. மழை நன்கு பெய்தால்தான் ஒழுக்கம் சிறப்புறும். இதுதான் உண்மை. இதனை மாற்றிச் சொல்கிற பழக்கம் ஏற்பட்டுவிட்டது. அரசன் காவான் எனின் மழையும் அரசனுக்கு மாறாகப் பெய்யாமல் தவிர்க்கும் என்ற நம்பிக்கை உள்ளது. மழை பெய்யா விட்டால் அரசன் அநீதிதான் காரணம் என்று சொல்வார்கள். அதனால் நீதி தவறக்கூடாது. வீரர்கள் வெற்றி பெறுவதற்கு உழவர் உழைக்க வேண்டும்; நாட்டில் வளம் கொழிக்க வேண்டும்; நல்லாட்சி நிலவவேண்டும். அதனால்தான் வேல் அன்று வெற்றி தருவது; அரசனது செங்கோல் என்று கூறப்படுகிறது. அரசனின் ஆட்சிமுறை மக்களுக்கும் பாதுகாப்பு: மக்களும் அவனுக்காகத் தம் உயிரையும் விடுவர். அஃது அரசனது நல் ஆட்சியைப் பொறுத்தது. நீதி கேட்க நிதி செலவழிக்க வேண்டி இருக்கிறது. அந்த விதி மாறவேண்டும். எளிதாக அரசனைப் பார்த்து முறையிட வாய்ப்பு அளிக்க வேண்டும். கடும் குற்றம் செய்பவரை நடுங்க வைத்து அவர்களைத் தண்டிப்பது அரசனது கடமையாகும். அரசனும் ஓர் உழவன்தான். பயிர் செழித்து வளர உழவன் களை பிடுங்கி எறிகிறான். குற்றவாளிகளைக் களைவது அரசனது பொறுப்பு ஆகும். 56. கொடுங்கோன்மை கோல் வளைந்தால் அது கொடுங்கோல் ஆகும். நீதி சில சமயம் வளைந்து கொடுக்கிறது. ஏன்? தனக்கு வேண்டியவர்க்கு நன்மை செய்ய அது தாழ்ந்து விடுகிறது. நேர்மை தவறினால் மக்கள் வாழ்வு சீர்மை கெடுகிறது. மக்களிடம் ஒருசில விதிகளைக் காட்டி வரிப்பணம் பெறுவது அரச நீதியாகும். பொதுவாக ஆறில் ஒரு பகுதி வரிப்பணம் செலுத்தி வந்தார்கள். அவர்கள் வருவாயில் ஒரு பகுதி செலுத்துவது நியாயம் ஆகும். மிகையாகக் கேட்பதும், வற்புறுத்திப் பெறுவதும் மக்களை வாட்டுவனவாகும். அப்பொழுது கொள்ளையனுக்கும் இந்தச் சள்ளையனுக்கும் வேறுபாடு இல்லாமல் போய்விடுகிறது. அடுத்தது நீதித்துறை; மக்கள் குறைகளை உரைக்கக் கேட்டு உடனுக்குடன் நீதி வழங்க வேண்டும். அவ்வப்பொழுது கேட்டு உடனுக்குடன் நீதி வழங்க வேண்டும். அப்பொழுதுதான் மக்களுக்கு அராஜகம் நடக்காது என்ற நம்பிக்கை ஏற்படும். தண்டிப்பதற்கு ஒருவன் இருக்கிறான் என்றால்தான் மக்கள் கண்டிப்புடன் வாழ்வார்கள்; தவறு செய்ய அஞ்சுவார்கள். அரசன் மக்கள் உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும். சட்டம் ஒழுங்காக இல்லாவிட்டால் களவு, கொலை இந் நிகழ்ச்சிகள் மிகுந்துவிடும். அரசன் அநீதிகள் இழைத்துக்கொண்டிருந்தால் மக்கள் எதிர்க்க முடியாது. ஆற்றாது அழும் கண்ணிர் வீண்போகாது. அஃது அவன் அழிவுக்குக் காரணம் ஆகிவிடும். காலம் வரும்போது அவன் ஆட்சி கவிழ்ந்துவிடும். மழைத்துளி பயிர்களுக்கு அவசியம்; அதுபோல் அரசனது நற்செய்கைகள் மக்களுக்கு அவசியம். அவன் ஈகைப் பண்பை மக்கள் பெரிதும் எதிர்பார்ப்பர். நாட்டில் அராஜகம் விளைந்தால் ஏழைகள் அதிகம் பாதிக்கப்படுவது இல்லை. செல்வர்கள் தம் உடைமையை இழப்பர்; அவர்கள் சொத்துகளுக்கும் பொருளுக்கும் பாதுகாப்பு இருக்காது. முதற்கண் அரசனே அவர்களை வருத்திப் பொருள் கேட்டுப் பெறுவான். செல்வர்கள் நிம்மதியாக வாழமுடியாது. ஆட்சி சரி இல்லை என்றால் எந்தத் தொழிலும் சரிவர நடக்காது: பால்வளம் குறையும்; அந்தணர்கள் வேதம் ஓத இயலாது; அறவினைகளும், ஆக்கப் பணிகளும் செம்மையாக நடைபெறா. 57. வெருவந்த செய்யாமை (அச்சுறுத்தல் செய்யாமை) குற்றவாளிகளைத் தண்டிப்பது அரசனின் கடமை யாகும்; அளவுகடந்து அவர்களுக்கு தண்டனை விதிக்கக் கூடாது. கடுமையாகத் தண்டிப்பது போலத் தோற்றம் அளிக்க வேண்டும்; ஆனால் அதில் கடுமை இருக்கக் கூடாது. ஆசிரியர்கள் மாணவர்களை அடிக்கும்போது பிரம்பை வேகமாக மேலே ஓங்குவார்கள்; அடிக்கும்போது மெல்லவே அடிப்பார்கள்; அச்சம் ஊட்ட வேண்டும்; ஆனால் அதிர்ச்சியை உண்டாக்கக் கூடாது. மனித உரிமைகள் மதிக்கப்பட வேண்டும்; சிறைக்கைதி என்றால் அவர்களை அடித்துத் துன்புறுத்தலாம் என்பது கூடாது. அதிகாரிகள் தட்டிக் கேட்கலாமே தவிர முட்டிக்கு முட்டி அடிக்கக் கூடாது. அதேபோலக் குடிமக்களிடமும் கடுமை காட்டக் கூடாது. அவர்கள் குறைகள் கூறச் சந்திக்க விரும்பினால் வந்து கவனிக்க வேண்டும்; காட்சிக்கு எளிமையாக அவர்களுக்கு அமைய வேண்டும்; கடுகடுத்த முகத்தோடு அவர்களை நடுங்க வைக்கக் கூடாது. அரசன் சினத்தினால் எந்த முடிவையும் எடுக்கக் கூடாது; விருப்பு வெறுப்புகளுக்கு இடம் தரக்கூடாது; தக்க அமைச்சருடன் கலந்து யோசித்தே எதனையும் முடிவு எடுக்க வேண்டும்; தன்னிச்சையாக எதையும் செய்வது நல்லது அன்று. நாட்டுத் தற்காப்புக்கு அரண்கள் தக்கபடி அமைக்க வேண்டும். பகைஅரசர் எளிதில் வந்து தாக்கி மக்களை அவதிக்கு உள்ளாக்க இடம் தரக்கூடாது. கடமைகளைச் செய்யத் தவறுவதும் கொடுஞ்செயலாகும். தீயவர்களைத் துணையாகக் கொண்டு ஆட்சி செலுத்தக் கூடாது; முரடர்களைக் கும்பல் சேர்த்துக் கொண்டு அவர்கள் கைப்பாவையாக இயங்கக் கூடாது; அவர்கள் ஆட்சிக்குச் சுமையாவர்; அரசன் சுதந்திரமாகச் செயல்பட வேண்டும். 58. கண்ணோட்டம் (தாட்சணியம்) மிக்க அழகுடைய பெண்; அவள் தக்க உணவு பரிமாறுகிறாள்; மற்றவர்கள் பசியைப் போக்கி அவர்களை மகிழ்விக்கிறாள். உலகம் ‘பெண்ணே நீ வாழ்க’ என்று வாழ்த்துகிறது. அந்தப் பெண் வேறு யாரும் இல்லை, தாட்சணியம் என்னும் நல்ல குணம்தான். உலகின் நடைமுறைகள் தயவு தாட்சணியம் இவற்றை ஒட்டித்தான் இயங்குகின்றன. அஃது இல்லாதார் நிலத்துக்குச் சுமையாவர். பண் இல்லை என்றால் பாடலுக்கு இனிமை இல்லை. அதுபோலத் தாட்சணியம் இல்லை என்றால் கண்ணுக்கு அழகு இல்லை. இரக்கம் காட்டாத அசுர குணம் படைத்தவனைக் குருடர் என்றே கூறிவிடுவர். அந்த ஆளுக்குக் கண்ணே இல்லை ‘குருடன்’ என்று இழித்துக் கூறுவர். கண்ணுக்கு அழகு செய்வது மை அன்று; தண்மை; அதாவது தாட்சணியம். தாட்சணியம் இல்லாதவனை நொள்ளைக்கண்ணன் என்றுதான் குறிப்பிடுவர். அது கண் அன்று புண். அவன் கடின சிந்தையன்; அசைந்தே கொடுக்க மாட்டான்; அப்படியானால் அவனுக்கும் மரத்துக்கும் என்னதான் வேறுபாடு இருக்கிறது? கண்கள் பார்வைக்குத்தான்; பார்த்தபின் நிகழும் செயற்பாடு சிந்தனை; கடுமை தவிர்த்துப் பரிதாபப்படு; மன்னிக்கக் கற்றுக் கொள்; அதுதான் கண்ணியம். இரக்கம் காட்டுதல் வேண்டும்; அதே சமயம் கடமையினின்று தவறக்கூடாது; சட்டதிட்டங்களையும் புறக்கணிக்காதே; அவற்றையே நன்மைக்குப் பயன்படுத்திச் செயலாற்றுக. குற்றம் செய்தார் ஆயினும் கடுமையாகத் தண்டிக்க வேண்டும் என்பது இல்லை. சட்டங்கள் தண்டிக்க அல்ல; திருத்துவதற்கு ஏற்பட்டவை என அறிக. நண்பர்களோ பகைவர்களோ நஞ்சைத் தந்தாலும் அச்சம் கொள்ளாமல் அமைதியாக ஏற்று அவர்களுக்கு இரக்கம் காட்டுதல் உயர் பண்பு ஆகும். பகைவனுக்கும் அருள் செய்யும் இரக்கப் பண்பும் கண்ணோட்டம் ஆகும். 59. ஒற்றாடல் (ஒற்றரைக்கொண்டு உளவுஅறிதல்) பிறர் செய்யும் களவைத் தெரிந்துகொள்ள உளவு தேவையாகும். நாட்டு நடப்பியலை அறியவும், பகை நாட்டுப் போரியலைத் தெரிந்துகொள்ளவும் ஒற்றர்கள் தேவைப்படுவர். மற்றும் விஷயங்களை அறிந்துகொள்ள அவ்வத் துறைகளைப்பற்றிய நூல்களைக் கற்க வேண்டும். எட்டு அறிவும், ஒற்றர்கள் கொண்டுவந்து தரும் கூட்டு அறிவும் உண்மைகளை நிலைநாட்டத் தேவைப்படுவன ஆகும். அரசனது பார்வை விசாலமானதாக இருக்க வேண்டும். எங்கெங்கே என்ன நடக்கிறது? அதனை உடனுக்குடன் அவன் அறிய வேண்டும். விழித்துக் கண்மூடாத நிலையில் மூலை முடுக்குகள் எல்லாம் துருவி ஆராய்ந்து செய்தி கொண்டு தருபவர் அரசனுக்கு அவசியம் ஆகின்றனர். இவர்கள் நேரிடையாகச் செய்திகளைத் திரட்டமாட்டார்கள். யாரைச் சந்தித்தால் செய்தி கிடைக்குமோ அவர்களைச் சந்தித்துப் பேசித் தெளிவு பெறுவார்கள். அரசன்கீழ் வேலை செய்பவர் யாராக இருந்தாலும் அவர்கள்மீதும் ஒரு கண் வைத்துக்கொண்டே இருக்க வேண்டும். மேலோட்டமாகப் பார்த்துவிட்டு அப்பாவிகள் என்று ஒருசிலரைக் கருதி முடிவு செய்துவிடக்கூடாது. “திருப்பதிக்குப் போய்வருகிறான்; அதனால் தீமை செய்யமாட்டான்” என்று முடிவு செய்துவிடக் கூடாது. வேண்டியவர், வேண்டாதவர், செல்வாக்கு உடையவர் என்ற இவ் வேறுபாடுகள் குறுக்கே நிற்கக்கூடாது. மதம் மிக்க யானைபோல அஞ்சாமல் எங்கும் புகுந்து விளையாட வேண்டும்; இடத்துக்குத் தகுந்த வேடம் போட்டு மற்றவர்கள் சந்தேகப்படாதபடி பழகிச் செய்திகளைத் திரட்ட வேண்டும்; காவி உடை அணிந்தும் செல்ல நேரிடும்; அதற்கும் தயங்கக் கூடாது. புதிய செய்திகள் மற்றவர்களுக்குத் தெரியாதவை; அவற்றைச் சேகரிக்க வேண்டும். தெரிந்த செய்திகளே யாயினும் அவற்றை உறுதி செய்துகொள்ள ஆதாரங்களைத் தேடவேண்டும். ஒரே ஒற்றன் கொண்டுவந்த செய்தியை ஆதாரமாகக் கொள்ளக்கூடாது; மற்றொருவன் அதே செய்தியைச் சொன்னால் அஃது உண்மை என்று கொள்ளலாம். மற்றும் ஒருவனைக் கொண்டு உறுதிசெய்க. யாரையும் இந்தத் துறையில் நம்பமுடியாது. அரசன் தான் அமர்த்திய ஒற்றனையே மற்றொரு ஆள் கொண்டு அவன் போக்கினையும் நடத்தையினையும் ஆராய 7 வேண்டும். எதிரிகள் இவர்களை எளிதில் விலைக்கு வாங்கி விடுவார்கள்; மகளிர் மயக்கத்திலும் தம்மை விற்றுக் கொள்வர். அதனால், இவர்கள் நடத்தையினையும் செயற்பாடுகளையும் அவர்கள் அறிய முடியாதபடி ஆராய்வது தக்கது ஆகும். ஒற்றர்களே சில சமயம் பகைவரிடம் காட்டிக் கொடுத்துவிடுவார்கள். ஒற்றனுக்குச் சீருடை தரக் கூடாது. அவர்கள் யார் என்பதை விளம்பரப்படுத்திக் கொள்ளும் முகவரி சட்டையில் ஒட்டிக்கொள்ளக் கூடாது. செயற்கு அரிய செயல்கள் செய்தார் எனினும் அவர்களுக்குப் பரிசோ பாராட்டுதலோ தந்து அதனால் அவர்களைப் பிரபல்யப்படுத்தக் கூடாது. அவர்களைச் சட்டைப் பையில் வைத்திருக்க வேண்டுமேயன்றிச் சட்டசபையில் கொண்டு வந்து நிறுத்தக் கூடாது. புகழ்பெற முடியாத துறை ஒன்று இருக்கிறது என்றால் இந்த ஒற்றாடல்தான். அஃது அவர்கள் உயிருக்கும் ஊறு விளைவிக்கும்; சுதந்திரமாக உலவ முடியாது; தான் எதனையும் அறிய முடியாமற் போய்விடும். 60. ஊக்கம் உடைமை செயலில் காட்டும் ஆர்வமும், அதற்காக எடுக்கும் விடாமுயற்சியும் ஊக்கம் எனப்படும். தொடர்ந்து செய்வதில் தளர்ச்சி காட்டாதிருத்தலும் ஊக்கத்தின்பால் படும். ஒரு காரியத்தைச் செய்து முடிக்கக் கருவிகள் இருக்கலாம்; முதற்பொருள் இருக்கலாம்; எடுத்த காரியத்தில் நம்பிக்கையும், விடாமுயற்சியும், மேலும் தொடர வேண்டும் என்ற செயற்பாடும் இல்லை என்றால் தோல்விதான் காண முடியும். அந்தச் செயற்பாட்டைத்தான் ஊக்கம் என்பர். தோல்வி சில சமயம் எடுத்த வெற்றிக்குத் துணை யாவதும் உண்டு. தோல்வி தரும் பாடம் வெற்றிக்கு உதவ வேண்டும். ஏன் தோல்வி ஏற்பட்டது என்று ஆராய்ந்து பார்க்க வேண்டும். தோல்வி கண்டு துவளக் கூடாது. ஊக்கம் மறுபடியும் ஆக்கம் தரும். ஊக்கமும் செயற்பாடும் இருந்தால் நன்மை அவனைத் தேடிக்கொண்டு வந்துசேரும். நீரில் பூக்கும் மலர்கள் அந்த நீரின் அளவே உயரும். அதுபோல மாந்தர்தம் ஊக்கத்தின் அளவாகவே அவர்கள் உயர்வும் அமையும். எண்ணும்போதே தாழ்வாக நினைக்காதே. எலி வேட்டைக்குச் செல்வது இழிவு; புலிவேட்டைக்குப் போகிறான் என்றால் அது பெருமை. எண்ணுவது எல்லாம் உயர்வாக எண்ணுக; அவை நிறைவேறாவிட்டாலும் கவலை இல்லை. அம்பு உடம்பில் புதைந்தாலும் யானை இடம்விட்டு அசையாது; அது தளராமல் கம்பீரமாக நிற்கும். அதுபோல நெஞ்சு உரம் உடையவர் எதற்கும் தளராமல் நிலைத்து நிற்பர். ஊக்கம் உடையவரே மனம் சோராமல் இருப்பர். உயிர்வாழ்வதற்குப் பொருள் தேவை; அது குறைந்தாலும் ஈட்டிக்கொள்ள முடியும்; இழப்பு எது வந்தாலும் உழைப்புக் குறையாமல் ஊக்கத்தோடு செயல்படுக. யானை பெரியது; கூர்மையான கொம்புகளை உடையது; எனினும் புலி தாக்க முற்பட்டால் அஞ்சாமல் இருக்காது. யானை உருவம் பெரிது; எனினும் ஊக்கம் மிகுதியாக உடைய புலிக்கு அஞ்சத்தான் வேண்டியுள்ளது. நெஞ்சு உரம் ஒருவர்க்கு ஊக்கம் தரும்; அதுவே செல்வமும் ஆகும். அஃது இல்லாதவர் மரம் என்றுதான் மதிக்கப்படுவர்; வெறும் சடம் என்றுதான் கூறவேண்டும். 61. மடி இன்மை (சோம்பல் இன்மை) ஊக்கம் இருக்கலாம்; அஃது உள்ளத்தைப் பொறுத்தது. செயல் வேறு; அதில் சோம்பல் காட்டினால் அவ்வளவு தான்; அவன் தானும் உயர முடியாது; தன் குடும்பத்தையும் உயர்த்த முடியாது. ஒரு காரியத்தை விரைவில் முடிக்க வேண்டும்; அதனை நீட்டித்துக்கொண்டே போவதும் குறைபாடுதான். மறதி, சோம்பல், தூக்கம் இவையும் வெற்றிக்குத் தடைகள் ஆகும். செல்வாக்கு மிக்கவராக இருந்தும் செயல்திறன் அற்றுச் சோம்பிக் கிடந்தால் யாரும் வந்து உதவ முடியாது. உன் சொந்த முயற்சி இருந்தால்தான் பெரியவர்களின் செல்வாக்கும் உதவியும் பயன்படும். அரசனே உனக்கு வேண்டியவனாக இருந்தாலும் நீ எதனையும் சாதித்துக் கொள்ள முடியாது. சோம்பிக் கிடப்பவனைப் பார்த்து மற்றவர்கள் சும்மா இருக்கமாட்டார்கள்; இடித்துக் கூறி இகழ்ந்து பேசுவர் “ஏண்டா, இப்படி உட்கார்ந்திருந்தால் எப்படி? சோம்பேறியாக இருக்கிறாயே இது தகாது” என்று அறிவுரை கூறிக் கொண்டே இருப்பர். சோம்பல் மிகவும் கெடுதி; உழைக்கும் கரங்கள் சோம்பல் காரணமாக ஓய்வெடுத்துக் கொண்டால் பிழைக்கும் வழிகள் அடைபட்டுவிடும்; உயர்குடியில் பிறந்தவராயினும் யாரும் வந்து உதவமாட்டார்கள். அவன் பகைவர்களுக்குப் பணிந்து அவர்களுக்கு அடிமையாகிவிட வேண்டியதுதான். சோம்பலை முறியடித்துச் சுறுசுறுப்பாகச் செயல் பட்டால் விரைவில் முன்னேற்றம் காணலாம். அவன் குடும்பம் உயர்ந்துவிடும். அவன் ஆண்மை மிக்கவன் என்று மற்றவர்களும் பாராட்டுவார்கள். சோம்பல் காட்டாத மன்னன் முயன்றால் இந்த உலகத்தையே தன் அடிக்கீழ் கொண்டுவர இயலும். 62. ஆள்வினை உடைமை (செயலாற்றும் திறன்) “இது நம்மால் முடியாது” என்று அவநம்பிக்கை கொள்ளத் தேவை இல்லை; முயன்று பார்; வெற்றி உன் காலடியில் வந்து விழும். ஒரு காரியத்தை எடுத்தால் சோர்வு காரணமாக ஒரு சிலர் விட்டுவிடுவதும் உண்டு. அஃது அவர்தம் ஆண்மைக்கு அழகு அன்று. எடுத்த காரியத்தை முடிப்பது தான் அரசனுக்குப் பெருமை தரும். எவனொருவன் விடாமுயற்சி கொண்டு உழைத்து முன்னேறுகிறானோ அவன்தான் தாராள மனப்பான்மை கொள்ள முடியும்; தன்னை வந்து அணுகுபவருக்கு உபகாரமும் செய்ய முடியும். உழைத்து உயராதவன் உபகாரமும் செய்ய இயலாது. பேடி தன் கையில் வாள் எடுத்தால் வேடிக்கையாக இருக்குமே தவிர வீரம் அங்கு விளையாடாது. இன்பம்! அதனைத் தேடிச் செல்லமாட்டான்; செயல் மீது நோக்கம் வைப்பான்; அவன்தான் சுற்றத்தினரின் துன்பத்தைத் துடைக்கமுடியும்; தூணாக நின்று அவர்கள் சார உதவுவான். முயற்சி செல்வத்தை உண்டாக்கும், முயற்சி இன்மை வறுமையில் ஆழ்த்திவிடும். சோம்பிக்கிட; மூதேவி வந்து தங்குவாள்; சுறுசுறுப்பாக இயங்கு; சீதேவி வந்து உதவுவாள். விதி கூட்டவில்லை என்றால் யாரும் பழிக்க மாட்டார்கள். அறிய வேண்டியவற்றை அறிந்து திறம்படச் செயலாற்றாவிட்டால் பழிக்கு ஆளாவதைத் தவிர்க்க முடியாது. ஊழ் வந்து உதவவில்லை என்றாலும் முயற்சி செய்து கடின உழைப்பு மேற்கொண்டால் அதற்குத் தக்க ஊதியம் கிடைக்கும். “ஊழைவிட வலிமை மிக்கது வேறு யாதும் இல்லை” என்று பேசப்பட்டாலும் அதனையும் பெரு வெற்றிகொள்ள முடியும். சோர்வு இல்லாமல் உரிய காலத்தில் எதனையும் செய்து முடித்தால் ஊழைத் தலைகாட்டாதபடி செய்து விடமுடியும்; அதிக உழைப்பும் ஊக்கமும் செயற்பாடும் இருந்தால் விதியையும் வெல்ல முடியும். 63. இடுக்கண் அழியாமை (துன்பத்துக்குக் கலங்காமை) இடுக்கண் வருங்கால் அதனைக் கண்டு சிரித்துவிடு; கலங்காதே; மனம் துவளாவிட்டால் அதுவே முதல் வெற்றியாகும். துன்பம் அடுக்கி வந்தாலும் உள்ளம் ஒடுக்கம் இல்லாமல் இருந்தால் அவை இருக்குமிடம் தெரியாமல் மறைந்துவிடும். இடும்பைக்கு ஒர் இடும்பனாகச் செயல்படு; அஃது இடிபட்டு நொடியில் மறைந்துவிடும். செல்லும் வழி எல்லாம் எதிர்த்துப் போராடி, கரடு முரடான பாதையைப் பொருட்படுத்தாது வண்டியை இழுத்துச் செல்லும் எருதினைப் போலத் தடைகள் குறுக்கிட்டாலும் யோசித்து அவற்றிற்கு விடைகள் காண்பதுதான் அறிவுடைமை ஆகும். துன்பம் அடுக்கி வரலாம்; ஒவ்வொன்றாக அவற்றை எதிர்த்து வெற்றி கொள்வதுதான் வழி; கலக்கமில்லாமல் இருந்தால் எதனையும் விலக்கிக்கொள்ள முடியும். செல்வம் வந்தபோது அதனைக் காப்பாற்றாதவர் வறுமை உறும்போது அவதிப்பட்டு என்ன பயன்? இந்த உடம்பு துன்பம் தாங்குவதற்கே படைக்கப் பட்டது என்ற மன இயல்பு கொண்டுவிட்டாலே எந்தக் கலக்கமும் அடையத் தேவை இல்லை. இன்பத்தை விழைவது இல்லை; துன்பம் வந்தால் அது சகஜம் என்று மேற்கொள்பவன் எந்த நிலையிலும் துன்பம் உறுவது இல்லை. துன்பம் வந்தாலும் அது தனக்கு ஒரு பாடம்; அனுபவித்துத்தான் தீரவேண்டும் என்று ஒருவன் கொள்வானேயானால் அவன் பகைவரும் மதிக்கும் சிறப்பினை அடைவான். 64. அமைச்சு (அமைச்சரது இயல்பு) கருவி, காலம், செயல், செய்யும் வகை இவற்றை ஆராய்ந்து செய்பவனே சிறந்த அமைச்சனாக இருக்க முடியும்; இவற்றோடு மன உறுதி, நற்குடிப் பிறப்பு, குடிமக்களைக் காக்கும் பொறுப்பு, நூல்களைக் கற்று அறிவது, ஆள்வினை இவை ஐந்தும் அமையவேண்டும். பகைவரின் துணைவரை அவரிடமிருந்து பிரித்தலும், தம் அரசர்மாட்டு உள்ளவரைப் பிரிந்து போகாமல் போற்றிக் காத்தலும், தம்மிடமிருந்து பிரிந்துவிட்டவரைச் சேர்த்துக் கொள்வதும் அவன் திறமையாகும். எதனைச் செய்ய வேண்டுமோ அதனைத் தேர்ந்து எடுத்துத் திறம்படச் செய்வதும், எதனையும் ஆராய்ந்து ஒரு தக்க முடிவு எடுத்து அறிவித்தலும் அவன் தொழில்களாகும். அரசியல் அறம் அறிந்தவனாகவும், கல்வி நிறைந்தவனாகவும், செயல்திறமை உடையவன் ஆகவும், காலம் அறிந்து தக்க கருத்துகளைக் கூறுபவனாகவும் இருப்பவனே சூழ்ச்சி மிக்கவன் ஆவான். சூழ்ந்து ஆராய்வதே சூழ்ச்சி எனப்படும். நூல் அறிவோடு இயற்கை அறிவும் பெற்றுக் கூர்மை யாளனாகத் திகழ வேண்டும். நூலறிவு கற்றவரிடம் உண்டு; அதனைத் தக்கபடி பயன்படுத்துவதோடு சுயமாகச் சிந்தித்துக் கூறுபவனாகவும் இருக்க வேண்டும். அரசனுக்கு அறிவு துணை செய்யாமல் தவறான முடிவுகளைக் கொண்டால் அப்படியே விட்டுவிடக் கூடாது. எது சரி என்பதனைத் தக்க நியாயங்களும், காரணங்களும் காட்டி அவனை மாற்ற வேண்டும். எது நல்லது என்பதை அமைச்சர் முடிவு செய்து அறிவிக்க வேண்டும். தீமை கருதும் அமைச்சன் ஒருவன் இருந்தால் போதும் அரசனைக் கெடுக்க; பகைவர் பலர் இருந்தாலும் சமாளித்துக் கொள்ளலாம். உடன் இருந்து குழிபறிக்கும் குள்ளநரி பொல்லாதது; அவனை அரசன் நீக்கிவிட வேண்டும். சிலர் திறம்படத் திட்டம் வகுப்பர்; “சென்று தேய்ந்து இறுதல்” என்ற கொள்கைப்படி போகப் போகத் தொய்ந்து விடுவர்; செயலை முடிக்கமாட்டார்கள். அத்தகையவர் நல்ல அமைச்சராக இருக்க முடியாது. 65. சொல்வன்மை ஆற்றல் பலவற்றுள்ளும் சொல்லாற்றலுக்கு நிகரானது வேறு எதுவும் இருக்க முடியாது. தான் கூறும் சொல்லால் ஆக்கமும் கேடும் உண்டாகிவிடும்; அதனால் சொல்லில் பிழை நேராமல் காத்துக்கொள்ள வேண்டும். சொல்வதனைத் தெளிவாகச் சொல்லித் தமக்கு வேண்டிவர்களைக் கவர வேண்டும்; மாறுபட்டவரையும் தாம் சொல்வதை நிதானமாக ஏற்கச் செய்ய வேண்டும். தாம் சொல்வது சரி என்று எத்தகையவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்; அதற்குத் திறம்படப் பேசுதல் மிகவும் அவசியம். நீ தேர்ந்து எடுக்கும் சொல் தக்கதாக இருக்க வேண்டும். அதனைவிட வேறுவிதமாகச் சொல்ல முடியாதபடி அஃது அமைய வேண்டும். “சொல்லாட்சி” திறம்பட அமைவது வெற்றி தரும். நீ பிறரிடம் பேசும்போது அவர்கள் கேட்கப் பிரியப் பட வேண்டும்; எளிதாக உணர்த்த வேண்டும். மற்றவர்கள் எப்படிப் பேசினாலும் அதனைப் பொறுமையாகக் கேட்டு அறிந்து பயன்பெற வேண்டும். சொல்லில் வல்லமை வேண்டும்; சோர்வுபடாமல் இருத்தல் வேண்டும். அவனை யாரும் பேச்சில் வெல்லவே முடியாது. எதனையும் வரிசைப்படுத்திச் சொல்லப் புகுந்தால் ஞாலத்தினர் அனைவரும் விரைந்து நீ கூறும் ஏவலைக் கேட்டு நடப்பர். குறட்பாப் போலச் சில சொற்கள் பேசி அறிவுறுத்தத் தெரியாதவரே மிகைபடப் பேசிக்கொண்டு இருப்பர்; பல சொற்களைத் தேடுவர். கற்றது விரித்து உரைக்கத் தெரியாதவர் கொத்தாக மலர்ந்திருந்தும் மணம் கமழாத பூவைப் போன்றவர் ஆவர். 66. வினைத்தூய்மை (செயலில் தூய்மை) உனக்கு உன் நண்பர்கள் உதவி செய்யலாம்; ஆனால் நீ எடுத்துக்கொண்ட செயல், அதனின் தூய தன்மை, அதனைப் பொறுத்துதான் எல்லா நன்மைகளும் இருக்கின்றன. வினை தூயதாக இருக்க வேண்டும். புகழும நன்மையும் தாராத செயலை எப்பொழுதுமே தொடங்கக் கூடாது; வாழ்க்கையில் உயர விரும்புபவர் புகழ் கெடக்கூடிய செயலில் இறங்கவே கூடாது. தெளிந்த அறிவுடையவர்கள் இடர்கள் மிகுதியாகப் பெற்றாலும் இழிவான செயல்களை மேற்கொள்ள மாட்டார்கள். ஏன் இதனைச் செய்தோம் என்று இரங்கத்தக்க வகையில் ஒரு காரியத்தைச் செய்யாதே; தவறிச் செய்து விட்டால் அதனை மேலும் தொடராதே. பெற்ற தாய் பசித்தாலும் அதற்காக நீ தாழ்ந்து போகாதே; அவளை வாழ்விக்கவும் தவறு செய்யாதே; பழியோடு கூடிய செயல் செல்வத்தைக் குவிக்க உதவினாலும் அது மதிக்கத்தக்கது அன்று. சான்றோர் வறுமை அவர்களுக்குப் பெருமை தரும். பிறர் அழும்படி வருத்தி ஈட்டிய செல்வம் நிலைக்காது; நல்ல வழியில் ஈட்டியவற்றை இழந்தாலும் மறுபடியும் சம்பாதித்துக் கொள்ள முடியும். வஞ்சித்துப் பொருளைச் சேர்த்து வைப்பது பச்சை மண்குடத்தில் நீர் சேமித்து வைப்பதுபோல் ஆகும்; அது நிற்காது; நாலாவழியும் கசிந்து போகும்; பொருள் நசிந்து போகும். 67. வினைத்திட்பம் (செயலில் உறுதி) ஒரு செயலை ஏற்றால் அதனைச் செய்து முடிப்பது என்ற மனஉறுதி இருக்க வேண்டும். இடையூறு வருமுன்பே அறிந்து நீக்குக: வந்தபின் அதனைக் கண்டு தளராதே. எதனையும் முன்கூட்டிச் சொல்லிவிடாதே; செய்து முடித்தபின் மற்றவர்கள் தாமே அறியட்டும்; இடையில் அதனை வெளிப்படுத்தினால் தடைகள் ஏற்படும்; அதனைக் கெடுத்துவிடுவர். சொல்வது யாருக்கும் எளிது; அதனைச் செய்து முடிப்பதில்தான் சிரமம் இருக்கிறது. வாய்ச்சொல் பயன் தாராது. வினைத்திட்பம் ஆளுமையைத் தரும்; எதனையும் செய்து முடிக்க இயலும், எண்ணியது கிட்டும்; கருதியது முடிக்கலாம். இவனால் என்ன முடியும் என்று ஆளைக் கண்டு எடை போடாதே; தேருக்கு அச்சாணி சிறிதுதான்; அதனைப் போலப் பயன்படுவார் உளர். வெற்றி தரும் என்று திட்டமிட்டுச் செயலில் இறங்கிய பிறகு சோம்பிக் கிடக்காதே; காலத்தை வீணாக்காதே; தொடர்ந்து செயலில் இறங்குக. துன்பம் மிக்கு வந்தாலும் எடுத்த வினையைத் தளர விட்டுவிடாதே; அதனால் நன்மை உண்டாகும் என்று தெரிந்தால் செயற்படுத்துக. செயலாற்றலுக்கு உறுதி காட்டாதவரை உலகம் மதிக்காது; வாய்ச்சொல்லில் வீரம் காட்டினால் போதாது; வினை செய்வதில் உறுதி காட்டவேண்டும்; மனக் கோட்டை கட்டிக்கொண்டு மவுனம் சாதிப்பவரை உலகம் ஏற்காது. 68. வினைசெயல் வகை (செயல் செய்யும் திறம்) முதலில் நீ செய்யும் தொழிலைப்பற்றி நன்கு ஆராய்ந்து முடிவு செய்க, தீர்மானித்தபின் செயற் படுத்துக; காலதாமதம் செய்யவேண்டா. அவசரப்படக் கூடாது என்று பட்டால் நிதானிக்கவும்: அவசரமாகச் செய்யவேண்டியதனை உடனே செய்து முடிக்கவும்; எங்கே நம் ஆதிக்கம் செல்லுமோ அங்குத் துணிந்து முன்னேறுக; அடங்கி இருந்தால் நல்லது என்று பட்டால் அங்கு அடங்கி இருக்கவும். எடுத்த தொழிலை எப்படியும் முடிக்க வழிவகைகளைத் தேடிக் கொண்டே இருக்க வேண்டும். ஒரு தொழிலைத் தொடங்கிவிட்டு முடிக்காமல் இருக்காதே; அதே போலப் பகை என்று வந்த பிறகு அதனை முடிக்கும் வரை ஒய்வு கொள்ளக் கூடாது; எடுக்கும் எந்தத் தொழிலும் முடித்தே தீரவேண்டும். எடுத்துக்கொண்ட பொருள், கருவி, காலம், வினை, இடம் ஐந்தும் சாதகமாக இருக்கின்றனவா என்று எண்ணிப் பார்த்துச் செயல்படுக. ஒரு காரியத்தின் முடிவு என்ன? வரக்கூடிய இடையூறுகள் யாவை? இவற்றை எல்லாம் வென்று நாம் சாதிப்பதன் பயன் யாது? இவை தீரக் கணக்கிட்டு ஒரு செயலில் இறங்குக. செய்யும் தொழில், செய்பவன், செய்யும் முறை இம் மூன்றையும் பொருத்திப் பார்த்து நன்மை விளையும் என்றால் செயலில் இறங்குக. ஒரு செயல் செய்யும்போதே அதனை அடுத்த வினைக்குப் பயன்படுத்திக் கொள்க; ஒன்றிலிருந்து மற்றொன்றிற்குத் தொடர்புபடுத்திக் கொள்க. இது கட்டுக்கு அகப்பட்டுப் பழகிய யானையைக் காட்டி மற்றொரு மதம் பிடித்த யானையைப் பிடிப்பது போன்றது. நம் நண்பர்களுக்கு நல்லது செய்து அவர்களை மேலும் வசப்படுத்த நினைப்பதைவிட, பகைவரை ஏதாவது தந்து நம் பக்கம் சேர்த்துக்கொள்வது மிக்க பயனைத் தருவது ஆகும். மற்றும் தம் நாட்டுக் குடிமக்கள் பகைவர்க்குத் தாக்குப் பிடிக்க முடியாது என்ற நிலைமை ஏற்பட்டால், வீண் பெருமை பாராட்டிக்கொண்டு எதிர்த்துக் கொண்டிருந்தால் பயன் இல்லை; குடிமக்கள் அழியத் தேவை இல்லை. நல்லது கருதிச் சமாதானமாகப் போவதுதான் புத்திசாலித் தனமாகும். தோல்வியைத் துணிந்து ஏற்க வேண்டும்; அதற்காக வெட்கப்படத் தேவை இல்லை. 69. தூது அந்நிய நாட்டுக்குத் தூதுவராக அனுப்பப்படுபவர்கள் எத்தகையவர்களாக இருக்க வேண்டும்? நாட்டுப் பற்று, நற்குடிப் பிறப்பு, அரசன் விரும்பும் நற்பண்புகள் ஆகிய இவை இருக்க வேண்டும். இவையேயன்றி அவனிடம் மற்றும் இந்த மூன்று சிறப்புகள் உள்ளனவா என்பதை ஆராய்க. அரசனிடம் அன்பு, அவனுக்கு எது நல்லது என்று அறியும் அறிவு, பேச்சுத் திறமை இம் மூன்றும் சிறப்பாக இருத்தல் வேண்டும். நூற் புலமையும் அமைந்திருக்க வேண்டும். இயற்கையான அறிவு, காண்பவர் மதிக்கும் தோற்றம், விஷயம் அறிந்த ஞானம் இம் மூன்றும் மேலும் அவனிடம் எதிர்பார்க்கப்படுகின்றன. பேசும்போது வகுப்பறை என்று விரிவுரை நிகழ்த்தக் கூடாது; தொகுத்துக் கூற வேண்டும். வெறுக்கத்தக்க செய்திகளைத் தவிர்க்க வேண்டும்; மாற்றரசனை மகிழ வைக்கும்படி சிரிக்க வைத்துப் பேசித் தன் அரசனுக்குச் சீர்மைகளைத் தேடித் தரவேண்டும். நூல்கள் பல கற்று அவற்றைச் சான்றாக எடுத்துக் கூறும் புத்திசாதுரியம் தேவைப்படும்; அரச அவையைக் கண்டு அஞ்சக் கூடாது; மாற்று அரசன் என்ன செய்வானோ என்ற அச்சம் இருக்கக் கூடாது. அங்கே சில விதிமுறைகள் இருக்கலாம்; எப்படிப் பேசுவது? யாரிடம் சொல்லி அனுப்புவது? எப்பொழுது பேசுவது? என்பன போன்ற விதிமுறைகள் இருக்கலாம். அவற்றை அறிந்து அதன்படி நடந்துகொள்ள வேண்டும்; கண்டபடி கண்ட நேரத்தில் பேசக்கூடாது; அங்கு வந்து இருப்பவர்கள் யார் யார்? அந்தச் சூழ்நிலையில் இதைப் பேசலாமா என்பது எல்லாம் ஆராய்ந்து பேச வேண்டும். அவ் வரசன் மனநிலை எத்தகையது என்பதையும் அறிந்து அவன் ஏற்றுக்கொள்ளத்தக்க சூழ்நிலையில் பேச வேண்டும். காலம், இடம் அறிந்து பேசும் திறமை வேண்டும்; எதனைப் பேச வேண்டுமோ அதனை முன் கூட்டி எண்ணிப் பார்த்தபின்னரே பேசவேண்டும். சொந்த நலன் எதுவும் தனக்கு இருக்கக் கூடாது; மாற்றரசன் தன்னை விலைக்கு வாங்கத் தான் இடம் தரக்கூடாது; இதனைச் செயல்துய்மை என்று கூறலாம். தன் கருத்துக்கு அரசனின் அமைச்சர் துணையாகக் கூடிய அளவில் அவர்களையும் தழுவிக்கொண்டு பேசுவது தேவை; அதே சமயத்தில் பகைவர் மருட்டலுக்கு அஞ்சாமல் துணிந்து எடுத்துக் கூறவேண்டும். வேற்று நாட்டு அரசனிடம் பேசும்போது நம்பும் வகையில் செய்திகளில் நம்பிக்கை தோன்ற எடுத்து உரைக்க வேண்டும். அதில் உண்மை இருக்க வேண்டும். பேச்சில் நெகிழ்வும், வழவழப்பும், நெளிந்து பிறழும் போக்கும் இருக்கக்கூடாது; எதனையும் தெளிவாக உரைக்க வேண்டும். தனக்கு ஏதாவது கெடுதி உண்டாகிவிடுமோ என்று அஞ்சி வாய் தவறியும் தன் நாட்டுக்கும், அரசனுக்கும் துரோகம் உண்டாகும் நிலையில் பாதகமாகப் பேசிவிடக் கூடாது; தன் அரசனைத் தாழ்த்திப் பேசக் கூடாது. ஏந்திய கொடி அதனைத் தாழ்த்தத் தான் காரணமாக இருக்கக் கூடாது. தன் அரசனுக்கு உறுதி பயப்பனவற்றைத் துணிந்து பேசவேண்டும். அதனால் தன் உயிருக்கு இறுதி ஏற்பட்டாலும் அதற்குக் கவலைப்படக் கூடாது. அஞ்சாமை, துணிவு, வீரம், சொல்திறம், சூழ்நிலைக் கேற்பப் பேசும் நிலை, கல்விநலம், கூர்த்த அறிவு அனைத்தும் தூதுவனிடம் இருக்க வேண்டும். 70. மன்னரைச் சேர்ந்து ஒழுகல் (அரசரைச் சார்ந்து நடந்து கொள்வது) குளிர் காய்பவர் நெருப்பை விட்டு விலகக் கூடாது; அதே சமயம் நெருங்கவும் கூடாது. அது போலத்தான் அரசனைச் சார்ந்து ஒழுகும் அமைச்சர் முதலானவரும் நடந்துகொள்ள வேண்டும். அரசனோடு போட்டி போட்டுக்கொண்டு அவன் விரும்பும் பொருள்களையும், பதவி பாராட்டுகளையும், இன்பச் சிறப்புகளையும் தானும் அடைய நினைக்கக் கூடாது; அடக்கமாகவே இருக்க வேண்டும். அரசனிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும். தவறாக யாராவது போய்ச் சொல்லிவிட்டால் அதனை மாற்ற முடியாது. அதனால் தான் எந்தப் பிழையும் செய்யாமல் தன்னைக் காத்துக்கொள்வதுதான் அறிவுடைமையாகும். தவறான அபிப்பிராயங்களுக்கு இடமே தரக் கூடாது. பிறகு அவற்றை மாற்றவே முடியாது. அரச அவையில் அமர்ந்திருக்கும்போது காதோடு காது கடிப்பது போல நெருங்கி மற்றவர்களோடு ரகசியமாகப் பேசுதலைத் தவிர்க்க வேண்டும். மற்றவர்களோடு சேர்ந்து ஆரவாரித்துச் சிரிப்பதையும் தவிர்க்க வேண்டும். மிகை நகை தகைமை அன்று. அரசன் மற்றவர்களோடு தனித்துப் பேசிக்கொண்டிருக்கும்போது அங்கே தலைகாட்டக் கூடாது. என்ன பேசுகிறார்கள் என்பதனை அறிய ஆவல் காட்டக் கூடாது; சந்தர்ப்பம் வரும்போது அரசனாகச் சொன்னால் கேட்டுக் கொள்ள வேண்டும். அரசனுக்கு ஏதாவது சொல்ல வேண்டும் என்று பட்டால் அவன் மனக்குறிப்பு அறிந்து பேசுக; இது தக்க காலமா என்பதனையும் அறிக: வெறுப்புத் தோன்றாதபடி அதனை உணர்த்துக. பயன்படும் செய்திகளை அரசன் கேட்காவிட்டாலும் தக்க சமயத்தில் சொல்லி வை; பயன் இல்லாதவற்றை அரசனிடம் தேவை இல்லாமல் சொல்ல வேண்டா. 8 அரசன் வயதில் இளையவனாக இருந்தாலும், அவன் மதிப்புக் குறைந்தவனாகப் பட்டாலும் அவனை மதிக்கக் கூடாது என்று கருதாதே; அந்தப் பதவிக்கு மதிப்புக் கொடுத்து அடக்கமாக நடந்துகொள்க. “அரசன் நன்மதிப்பு நமக்கு இருக்கிறது; அவனை நம் கைக்குள் போட்டுக்கொண்டு இருக்கிறோம்” என்று கருதிக் கொண்டு எதனையும் செய்துவிடலாம் என்று முற்படாதே. இளமை முதல் பழகியவனாக இருக்கலாம்; தான் பழைய ஆள் என்ற தெம்போடு எப்படியும் பழகலாம் என்று தகாத செயல்களில் ஈடுபட்டு நட்புரிமையை நாட்டாதே. பழக்கம் வேறு; பதவி வேறு; பதவிக்கு மதிப்புக் கொடுப்பது அழகு. அதிகமாகப் பூசிக்கொள்வது விபரீதத்தை உண்டாக்கி விடும். 71. குறிப்பு அறிதல் (மன்னனது குறிப்பை அறிதல்) அரசன் தான் கருதியதை வரிசைப்படுத்தி அமைச்சனுக்குக் கூறத் தேவை இல்லை; நா அசைவதை விடக் கண் அசைவு அதுவே போதும்; அஃது ஆற்றல் மிக்கது. அந்தக் குறிப்பை அறிய நுண்ணுணர்வு தேவைப் படுகிறது; அத்தகைய அறிவு படைத்தவன் பிறரால் மதிக்கப்படுவான். அவனே அமைச்சன் ஆவதற்குத தகுதி படைத்தவன் ஆகிறான். மற்றவர் என்ன நினைக்கிறார்? அதனைத் தெளிவாக அறிந்துகொள்ளும் ஆற்றல் நுட்ப அறிவு உடையவர்க்கே அமையும்; அவர்களைத் தெய்வத்துக்கு நிகராக மதிப்பர். அத்தகையவரை அமைச்சனாக ஏற்றுக்கொள்வது அரசனுக்கு நன்மையாகும். முகக் குறிப்பைக்கொண்டே மனக்கருத்தை அறியக் கூடிய மதிநுட்பம் உடையவரை எந்த விலை கொடுத்தும் அமைச்சர் பதவிக்கு அமர்த்திக்கொள்வது அரசர்க்கு அமைவு உடையது ஆகும். அத்தகைய ஆற்றல் உடைய அமைச்சர்கள் கூரிய அறிவு உடையவர்; அவர்கள் மற்றவர்களைவிட மதிக்கத்தக்கவர் ஆவர். கண்கள் வெறும் கண்ணாடி அல்ல பிம்பங்களைப் பிரதி பலிக்க முகக் குறிப்புகளைக்கொண்டு மனக்குறிப்பை அறிவதில் அவை ஆற்றல் மிக்கவையாகும். கண்கள் அறிவு விளக்கக் கதிர்கள். அடுத்த பொருள் இது என்று காட்டுவது பளிங்கு; அது போல் நெஞ்சம் கருதுவதை முகம் காட்டிவிடும். வெறுப்பையும், விருப்பையும் அறிவிப்பதில் முகம் முந்திக்கொள்கிறது. அரசனும் அமைச்சனும் கருத்துகளைப் பரிமாறிக் கொள்ள அவர்களுக்குச் சொற்கள் தேவை இல்லை; கைச் சைகைகள் வேண்டியது இல்லை; முகத்தொடு முகம் நோக்கினால் வாய்ச்சொற்களுக்கு இடமே இல்லை. எனவே முகமும் கண்களும் கருத்து அறிவிக்கும் கருவிகள் ஆகிவிடுகின்றன. அரசன் பிறரைப் பகைக்கிறானா? அவரோடு நகைத்து உறவு கொள்கிறானா? என்பதனை அமைச்சன் மன்னவன் கண்களைக் கொண்டே அறிந்துவிடுவான்; அத்தகைய நுட்பம் அவனுக்குத் திட்பமாக அமையும். நுண்ணிய அறிவுடைய அமைச்சன், அரசன் கண்ணியது அறிய அவன் கண்களை நோக்கினால் அதுவே போதும். எனவே குறிப்பறிந்து செயல்படுபவனே அறிவுள்ள அமைச்சன் ஆவான். மனிதன் அறிவு நிரம்பியவன்; எதனையும் குறிப்பாக அறிவிக்கும் ஆற்றல் உடையவன்; எத்தகைய உணர்வுகளையும் ஒருவர் கண்களைக்கொண்டே நோக்கி அறிந்து கொள்ள முடியும். பார்வை ஆற்றல் மிக்கது; நுட்பம் வாய்ந்தது; குறிப்புகளை உணரவும் உணர்த்தவும் வல்லது ஆகும். 72. அவை அறிதல் (சபை அறிதல்) அவையின் நடைமுறைகளை அறிந்துகொண்டு பொருத்தமான கருத்துகளைக் கூறுக; இடைஇடையே குறுக்கிட்டுப் பேசுவதைத் தவிர்க்க; பிறர் மனநிலையை அறிந்துகொண்டு தக்க சமயத்தில் தேவையான கருத்துகளைக் கூறுக; அவை அறிந்து முறைப்படிப் பேசுக. அப்பொழுதே கற்றவர் என்று உன்னைக் கருதி மதிப்பர். அறிவு மிக்கவர் மத்தியில் உன் அறிவுத் திறனைக் காட்டுக; அங்கு ஒளி பெற முயற்சி செய்க, சாமானியர் மத்தியில் உன் நூலறிவைக் கொண்டு திணிக்காதே; ஒன்றும் தெரியாதவர் போல் நடித்துப் பழகிக்கொள்; அவர்களுள் ஒருவனாக இருக்க முயற்சி செய்க. அறிவு மிக்க சான்றோர் கூடிய அவையில் அடக்கம் மேற்கொள்வது தக்கது. தேவை இல்லாமல் முந்திக்கொள்ள வேண்டா. அவர்கள் பேசுவதைக் கவனி; அதுவே அவர்களுக்குச் செய்யும் மரியாதையும் ஆகும். கருத்துப் பிழைபடப் பேசிவிட்டால் அறிவு நிரம்பியவன் என்று மதிக்கமாட்டார்கள். மேலோர் சிறிது ஒழுக்கம் குன்றினாலும் அவர்களுக்கு இழுக்கு ஏற்பட்டு விடும். அதுபோலத்தான் கருத்தில் பிழைகள் ஏற்படுதல். கற்று அறிந்த அறிஞர் திறம்படப் பேசினால் பேசுபவனின் கல்வி, புலமை வெளிப்படும்; அத்தகைய அவைகளில் பேசுவது சிறப்பு ஆகும். அதனால் ஒருவனுக்குப் புகழும் மதிப்பும் உண்டாகும் - அறிவு மிக்க மேதைகள் கூடி இருக்கும் அவையில் அவர்களுக்குத் தெரிந்தவற்றையே பேசுவது மிகையாகும். இது மழைநீர் பட்டுத் தானாக வளரும் பயிர்களுக்குக் குடத்தில் நீர்கொண்டு பாய்ச்சுவது போல ஆகும். அறிஞர் அவையில் அறிவிக்க வேண்டிய அதி அற்புதமான செய்திகளை, அவற்றைப் புரிந்துகொள்ள முடியாத சாமானியர்களிடையே பேசிக் காலத்தை வீண் படுத்தாதே; பசி இல்லாதவருக்கு இடும் உணவு அஃது ஆகும். அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாது; மறந்தும் அவர்களிடம் கடினமான கருத்துகளைக் கூறாதே. தாம் கூறுபவற்றைச் செவிமடுத்து அவற்றை ஏற்கும் நிலையில் இல்லாதவரிடம் அரிய கருத்துகளைக் கூறுவது அமுதத்தைக் கொண்டுபோய்க் கழிநீர்க் கால்வாயில் கொட்டுவதுபோல் ஆகும். 73. அவை அஞ்சாமை (சபைக்கு அங்சாமை) கொச்சைத் தமிழில் பேசித் தன் இச்சைப்படி கருத்துகளைக் கூறினால் யாரும் அவனை நச்சமாட்டார்கள். தூய மொழியில் செய்திகளை வகைப்படுத்திக் கொண்டு முறையறிந்து பேச வேண்டும். நூல்கள் பல கற்றும் அவையின்கண் எடுத்துப் பேச ஆற்றல் இல்லை என்றால் அவர்கள் கற்ற கல்வி ஒளி விடாது; கற்றது விரித்துரைக்கும் ஆற்றலும் தேவையாகும். அவைக்கண் பேசுவதற்கு மனத் திண்மையும், தன்னம்பிக்கையும், அஞ்சாமையும், கருத்துத் தெளிவும் வேண்டும். போர்க்களத்தில் சென்று மடியப் பலர் துணிந்து வருவர்; அவைக்களத்தில் நின்று பேசுவது எளியது அன்று. மேடை ஏறி விடலாம்; ஆனால் அதில் மேன்மை பெற வேண்டும். கல்லாதவரிடையே சொல்லாடுக; அவர்களுக்கு நீ அறிந்தவற்றைத் தெளிவுபட அறிவிக்க; அவர்கள் கூறும் கருத்துகளை அறிவதில் ஆர்வம் காட்டுக; அறிவைப் பெருக்கிக் கொள்க. வேற்று அரசர்தம் அவையின்கண் பேச வாய்ப்பு நேரும்; அவர்களுக்குத் தக்க மாற்றம் தருதற் பொருட்டுத் தேவையான நூல்களைக் கற்றுச் செல்க. வழிப் பயணத்துக்குச் சோறு கட்டிக்கொண்டு செல்ல வேண்டும்; அவைப் பேச்சுக்கு உன்னைத் தயார்படுத்திக் கொள்ளச் செய்திகளைச் சேகரித்துக் கொள்க. கல்வி கற்ற அறிஞரிடையே பேச இயலாதவர் நூல்களைக் கற்றவர் என்று சொல்லிக்கொள்வதில் பொருளே இல்லை. வாள் வைத்துக்கொண்டு எடுக்க அஞ்சும் பேடி போர்க்களம் செல்வது வீண், வெட்கக் கேடு, அதே நிலை தான் நூல் பல கற்றும் அவை அஞ்சும் மதியாளர் நிலையும். அவைக்கு அஞ்சுவது ஒரு குறைபாடு ஆகும். நூல் பல கற்றும் அவைக்கு அஞ்சுபர் அங்குச் சென்று பங்குகொள்ளத் தயங்குவர். அவர்கள் யாருக்கும் பயன்பட மாட்டார்கள். அவர்களிடம் எதிர்பார்த்து மற்றவர்கள் ஏமாற்றம் அடைகிறார்கள். கல்லாதவரே இவர்களைவிட மேலானவர் என்று கருதப்படுவர். ஏன்? அவர்கள் சொல்லாடுவது இல்லை; சோர்வு கொள்வதும் இல்லை. கல்வி கற்றுச் சிரமப்படுவதும் இல்லை. இன்னும் சொல்லப்போனால் ஒருசிலர் நன்றாகப் படித்துவிட்டு எதுவும் செய்யாமல் மூலையில் ஒடுங்கிக் கிடக்கிறார்கள்; அவையின்கண் சென்று பேச அஞ்சுகிறார்கள்; இவர்களை யாருமே சிந்திப்பது இல்லை; உயிரோடு வாழ்வார் எனினும் அவர்களை யாரும் நினைவில் நிறுத்தி மதிப்பது இல்லை. அவர்கள் வாழ்ந்தும் வாழாதவர் ஆகின்றனர். செல் அரித்துவிட்ட ஏடுகள் இவர்கள். 74. நாடு நாடு விளைபொருள்கள் கொண்டதாக இருக்க வேண்டும்; தகுதி வாய்ந்த குடிமக்கள் அங்கே வாழ வேண்டும்; அழிவில்லாத செல்வம் நிறைந்து இருக்க வேண்டும். நாட்டில் பொருள்கள் மிகுதியாக விளைவதாக இருக்க வேண்டும் வேற்று நாட்டவரும் விரும்பித் தங்கு வதற்கு ஏற்றதாக அமையவேண்டும்; கேடுகள் அற்ற நிலையில் விளைபொருள்கள் மிகுதியாக இருக்க வேண்டும். பிற நாட்டுக் குடிமக்கள் விரும்பித் தங்குவதற்கு ஏற்ற வசதிகளும், அவர்களும் உழைத்து உயர வாய்ப்புகளும் உடையதாக அமைய வேண்டும். எல்லா வகையிலும் வரிகள் மிகுதியாக அரசனுக்கு வர வாய்ப்புகள் இருக்க வேண்டும். மிக்க பசியும், தீராத நோய்களும், அழிக்கும் பகையும் சேராமல் இருப்பதே நாடு எனத் தகும். நாட்டில் குழப்பம் விளைவிககும் பல்வேறு பிளவுபட்ட கட்சிகளும், பாழ் செய்யும் உட்பகையும், மக்களை அச்சுறுத்தும் வன்முறையாளர்களும் இல்லாமல் இருப்பது தக்கது ஆகும். கொள்ளையர்கள் தொல்லைகள் இருக்கக் கூடாது. வெள்ளம், புயல், பூகம்பம் முதலிய இயற்கை அழிவுகள் வாராதனவாக அமைய வேண்டும். அப்படி வந்தாலும் அவற்றைத் தாங்கிக் கொள்ளும் வலிமையும், வசதிகளும், வளமும் இருத்தல் வேண்டும்; எதிரிப் படைகள் வந்து அழிவு செய்தாலும் தாக்குப் பிடித்துத் தடுக்கும் வலிமை மிக்க அரணும் அமைய வேண்டும். ஆறுகளும் மலைகளும் நாட்டிற்கு எழிலையும் ஏற்றத்தையும் தருவன ஆகும். ஆற்று நீர், ஊற்று நீர் அமைய வேண்டும்; மவைளம் மிக்கு நீர்ப்பெருக்கு உடையதாக இருக்க வேண்டும். மலைவீழ் அருவிகள் ஆறுகளைப் பெருக்கித் தரும்; அத்தகைய மவைளமும் ஊட்டம் தருவதாகும். நோய் இன்மை, செல்வம், விளைச்சல், மகிழ்ச்சி, பாதுகாப்பு இவை ஐந்தும் ஒரு நாட்டிற்கு அழகு செய்வன ஆகும். நாடு என்பது பிற நாட்டினரை எதிர்பாராமல் வாழும் வளம் உடையது. பிறரை ஒவ்வொன்றுக்கும் எதிர் பார்த்தால் அது நாடு என்று கூறமுடியாது; சுய தேவைகளை நிறைவுசெய்ய வேண்டும். மேற்குறிப்பிட்ட எல்லா வளமும் ஒருங்கு அமைந்து இருந்தாலும் தகுதி உடைய அரசனின் ஆட்சி அமையவில்லை என்றால் பயன் இல்லை. ஆட்சியும் மாட்சி பெற்று இயங்க வேண்டும். நாட்டுக்கு நல்ல தலைவர்களும் தேவை யாகின்றனர். 75. அரண் (பாதுகாப்பு) அரண் இல்லாத நாடு பிறருக்குச் சரண் அடைய வேண்டியதுதான்; போர்மேற் செல்ல வேண்டுமானாலும் அரண் தேவை; அதனைவிடத் தற்காப்புக்கும் அரண் அடிப்படையாகும். நீர்நிறைந்த அகழியும், அதனை அடுத்துப் பரந்த வெற்று நிலமும், மலைகளும், செறிவு மிக்க காடுகளும் உடையதே அரண் உடையது என்று கூறப்படும். பிறர் ஏற முடியாத அளவு உயரமும், கடக்க முடியாத படி திண்மையும், அணுகுவதற்கு முடியாத அருமையும் பெற்று இருக்கும் மதில்களைக் கொண்டு விளங்க வேண்டும். அதுவே அரண் எனப்படும். காவல் இடம் சிறியதாக இருக்க வேண்டும்; அப்பொழுது பிறர் புக முடியாதபடி தடுக்க இயலும்; வாழும் உள்ளிடம் பெரிதாக இருக்க வேண்டும்; பகைவர்கள் ஊக்கத்தை அழிப்பதாக இருக்கும் மதில்களைப் பெற்றிருக்க வேண்டும். பகைவர் எளிதில் கொள்ள முடியாததாக நாடு இருக்க வேண்டும்; தாக்குப் பிடிக்கும் அளவுக்கு உணவுப் பொருளின் சேமிப்பு இருக்க வேண்டும்; உள்ளிருக்கும் வீரர்கள் வரப் போக வழிகள் தக்க வகையில் பெற்றிருக்க வேண்டும். எல்லாப் பொருளும் உடையதாக இருக்க வேண்டும். போர்க் காலங்களில் வீரர்களுக்கு உடன் இருந்து உதவ ஆள்களும் மிக்க அளவில் இருக்க வேண்டும். நாட்டு அமைச்சர்களும், காட்டிக் கொடுக்கும் கயவர்களும் எதிரிக்கு உளவுகள் சொல்லி அழிவுக்கு வழி தேடினாலும் தாக்குப் பிடிக்கக்கூடிய போக்குகளையும், தற்காப்பு இடங்களையும் உடையதாக இருக்க வேண்டும்; எதிரிகள் எளிதில் கைப்பற்றக் கூடாததாக இருக்க வேண்டும். பெரிய படை வந்து முற்றுகையிட்டாலும் உள்ளிருந்து சிறு படையைக்கொண்டே எதிர்த்துப் போரிட்டுத் தாக்கும் தகுதியை அரண் உண்டாக்கித் தரவேண்டும். வீரர்கள் தக்க இடத்தில் மறைந்திருந்து தாக்கும் பொறிவகைகளைப் பெற்று வீறுகொண்டு விளங்குவது சிறந்த அரண் ஆகும். எத்தகைய அமைப்புகள் நிரம்ப இருந்தாலும் போர் முனையில் மாட்சி உடைய வீரர்கள் இல்லை என்றால் அரண்கள் பயன்படா. வீரம் மிக்க போர்வீரர்கள் நாட்டின் அரண் எனவே மதிக்கப்படுவர். 76. பொருள்செயல் வகை (பொருள் ஈட்டும் திறம்) காசுக்கு உதவாதவர்களையும் மதிக்கும்படி செய்வது பொருள் ஆகும். இல்லாதவனைக் கட்டிய மனைவியும் விரும்பமாட்டாள்; பொதுவாக அனைவரும் எள்ளுவர்; செல்வர்களும் சிறப்புகள் செய்யார். பொருள் என்னும் ஒளிவிளக்கு வறுமை என்னும் இருளை அகற்றும். எந்த இடத்திலும் அவர்கள் எதனையும் சாதிக்கலாம். ஈட்டும் வகை அறிந்து அறவழியில் நாட்டிய பொருள் அறத்தைத் தரும்; இன்பத்தையும் நல்கும். மக்களை வருத்திப் பெறும் பொருள் அரசனுக்குப் பயன்படாது. மக்களிடம் அன்பு காட்டியும், அருளொடு நடந்தும் பொருளைப் பெற வேண்டும். மிக்க வரிப்பொருளும், சுங்கமாக வரும் பொருளும், பகைவர் பணிந்து திறையாக அளக்கும் பொருளும் அரசனுக்கு வரும் வருவாய்கள் ஆகும். அருள் என்பது அன்பின் வளர்ச்சி; அதுவும் பொருள் என்னும் செவிலித்தாய் இல்லாவிட்டால் தக்க வளர்ச்சியைப் பெறாது. ஒருவர் தம் கையகத்து மிக்க பொருள் இருந்து எந்தத் தொழிலைச் செய்தாலும் கவலை இல்லை; குன்றுமீது ஏறி இருந்து கீழே நடக்கும் யானைப் போரைக் கண்டு மகிழ்வது போல் ஆகும். பிறர் கையேந்தி நிற்கக் கூடாது. பொருளைச் செய்க, பகைவர் செருக்கினை அழிக்கும் கூரிய படை அதனைவிட வேறு இருக்க முடியாது. அறவழியில் ஆக்கிய பொருள் மிகுதியாக இருக்குமாயின் அறச்செயல்கள் ஆற்ற முடியும்; இன்ப வாழ்க்கை எளிதில் அமையும். ஒருவன் நற்குணம் நற்செயல்களுக்குத் துணை செய்வதும் பொருளே. பொருள்தான் இன்று உலகை ஆட்டிப் படைக்கிறது. 77. படைமாட்சி மனைமாட்சி, இறைமாட்சி இவற்றைப்போன்று ஒரு புதிய சொல்லாட்சி இது. அரசனுக்கு வேண்டியது படைமாட்சி. போர்ப் படையின் நற்குண நற்செயல்கள் இங்குக் கூறப்படுகின்றன. படை என்பது எல்லா வகையிலும் முழுமை பெற்றுள்ளதாக இருக்கவேண்டும். ஆள்மிகுதி, போர்க் கருவிகள் மற்றும் எந்தக் குறையும் இருக்கக் கூடாது. படைவீரர்கள் துன்பங்களுக்கு அஞ்சக் கூடாது; வெற்றி பெற்றுத் தரவேண்டும், அத்தகைய துணிவும் ஆற்றலும் தேவைப்படுகின்றன. படைவீரர்கள் தொடை நடுங்கிகளாக இருக்கக் கூடாது. இடையில் ஏதேனும் அதிர்ச்சி ஏற்பட்டாலும் அதனை அவர்கள் பொருட்படுத்தக்கூடாது. இந்த மனநிலை வீரமரபில் பிறந்த குலத்தினருக்கே வாய்க்கும். படை மிகுதி கண்டு அஞ்சத் தேவை இல்லை; எலிகள் கூட்டமாக வந்தாலும் நாகம் அஞ்சுவது இல்லை. அது வெறும் மூச்சுவிட்டாலே அவை நடுங்கிவிடும். போர்முனையில் திடீர் என்று அச்சம் ஆட்கொள்ளச் செயலிழப்பர் சிலர்; அந்த நிலைமை தோன்றக்கூடாது; அச்சம் என்பது அறவே கூடாது; பகைவரை முறியடிக்கும் செயலாற்றல் வேண்டும். கூற்றுவனும் தன்னை எதிர்க்க வந்தாலும் அதற்கு மாற்று என்று மதிக்கும் படி படைதிரண்டு நிற்க வேண்டும்; மாற்றரசன் முன்னேற அஞ்சும்படி செய்ய வேண்டும். மறம், மானம், சிறந்த வழிகளில் இயங்குதல், தெளிவு பெறுதல் இந் நான்கும் கொண்டது படையின் தன்மை. எதிரியின் தூசிப்படை (முன்னணிப்படை) மிக்க வலிமை உடையது; ஆயினும் அதனைத் தடுத்து நிறுத்தும் ஆற்றல் நாட்டில் படைவீரர்களுக்கு இருத்தல் வேண்டும். அலைகள் வரும்போது தடுத்து நிறுத்துவதே அணைகள் கட்டியதன் பயனாகும். அடுகின்ற ஆற்றலும், மற்றவர்கள் விடுகின்ற படையைத் தாங்கும் வலிவும் இல்லாவிட்டாலும் வீரர்களின் தோற்றம் ஏற்றம் உடையதாக இருக்க வேண்டும். ஆளைக் கண்டே பகைவர் நடுங்க வேண்டும். அரசனுக்கு உரிய படை அளவில் சிறிதாக இருத்தல் கூடாது. வீரர்களுக்கு அரசனிடம் தொடர்ந்த வெறுப்பும், தமக்குப் பற்றாக்குறையும் இருத்தல் கூடாது; இவை நீங்கிய மனநிறைவு உடைய படையே வெற்றி கொள்ளும். படைமாட்சி உடையதாயினும் அதனை இயக்கும் படைத் தலைவன் தக்கவனாக அமைய வேண்டும்; தலைமையும் சிறப்பாக இருக்க வேண்டும். 78. படைச்செருக்கு வீரர்கள் செருக்கு மிக்கவராக விளங்கினர்; எந்தச் செய்கையிலும் தம் வீரத்தின் முத்திரையைப் பொறித்தனர். ஒரு வீரன் கூறுகிறான். “என் தலைவன்முன் நிற்காதீர்; அவனை எதிர்த்துக் கல்லறைக்குச் சென்றவர்கள் பலர்’ என்கிறான். அவன் வீரம் போற்றப்படுகிறது. இவ்வாறு ஒருவன் படைச் செருக்கை மற்றொருவன் பாராட்டுகிறான். இவ்வாறே காட்டு முயலை வேட்டையாடி வெற்றி பெறுவதைவிட யானையை நோக்கி வேல் எறிவதைப் பெருமையாகக் கொள்கிறான் ஒருவன். அது குறி தவறினாலும் பரவாயில்லை என்று கருதுகிறான்; இதுவும் படைச் செருக்கு ஆகும். பகைவனுக்கு அருள் காட்டும் பண்பும் படைச் செருக்கு ஆகும்; இதனைப் பேராண்மை எனக் கருதினர். எதிரி ஊறுபட்டான் என்றால் அவனுக்கு உதவிசெய்தல் பெருமிதம் ஆகும். இதுவும் படைச்செருக்கு ஆகும். கையில் உள்ள வேலினை யானை மீது நோக்கி விட்டான்; அது பிளிறிக்கொண்டு செல்கிறது. ம்ற்றொரு யானை இவனை எதிர்நோக்கி வருகிறது. என்ன செய்வது? அவன் மார்பில் மற்றொரு வீரன் பாய்ச்சிய வேலினைத் தன் கையில் எடுத்துக்கொண்டு கொக்கரித்து ஆரவாரம் செய்கிறான்; மகிழ்ச்சியோடு அதனை விரட்ட முனைகிறான். இதுவும் படைச் செருக்கு ஆகும். போர் செய்து மார்பில் வீர வடுப் பெறாத நாள் எல்லாம் வாழ்ந்த நாளாக அவன் கருதுவது இல்லை; இதுவும் படைச் செருக்கு ஆகும். எதிரி வேல் எடுத்தாலும் அதனைக் கண்டு அஞ்சாமல் கண் இமைத்தலும் செய்யான்; இதுவும் படைச்செருக்கு ஆகும். உயிரை இழக்கத் துணிந்து தன் காலில் வீரக் கழலை அணிகிறான்; புகழ்தான் அவனுக்குப் பெரிது; உயிர் பெரிது அன்று: அக் கழல் அவனுக்கு அழகு செய்கிறது. போர் தொடங்கிய பிறகு உயிர் இழப்புக்கு அஞ்சி அரசன் நின்று தடுத்தாலும் அதனைக் கேளாமல் களத்துக்குச் செல்லும் மாவீரம் அதுவும் படைச்செருக்கு ஆகும். வஞ்சினம் கூற, அதன் விளைவால் போர் தொடுத்து உயிர்விடும் வீரன் அவன்மீது யார் நடவடிக்கை எடுக்க முடியும்? யாரும் ஏன் இப்படிச் செய்தாய் என்று விசாரிக்க முடியாது. வஞ்சினம்தான் தனக்குப் பெருமை என வாழ்வான். இதுவும் படைச்செருக்கு ஆகும். தன்னை ஆளாக்கிப் போர்க்களத்துக்கு அனுப்பி வைத்த தலைவனுக்காக உயிர்விடுகிறான்; அவன் இறப்புக்கு வருந்திக் கண்ணிர்விடுகிறான் தலைவன். அந்தக் கண்ணிருக்காக விரும்பி மரணத்தை ஒருவன் ஏற்கலாம்; அது பெருமை தரக்கூடியது. இதுவும் படைச் செருக்கு ஆகும். 79. நட்பு ‘நள்’ என்ற சொல்லே நட்புக்கு அடிச்சொல்; நண்ணுதல் என்பதும் இதன் அடியில் எழுந்தது. நிறைமதி போன்று நாளும் வளர்வது உயர்நட்பு ஆகும். தீய நட்புத் தேய்பிறை போன்றது; உணர்ச்சிதான் நட்பாகும் உறவைத் தரும்; பழகிக்கொண்டே இருக்கத் தேவை இல்லை. நட்பு ஒப்புயர்வு அற்றது; அழைத்தால் வருவார்கள்; விழைந்தால் பழகுவார்கள். அவர்கள் உயிரையும் ஈயும் உத்தமர்கள் ஆவார்கள். அவர்கள் உனக்கு அரண்; பாதுகாப்பு வேண்டும்போது வந்து உதவுவார்கள்; வேண்டாதபோது விலகி நிற்பார்கள். பழகும்தோறும் நூல்நயம் போல் இன்பம் செய்வார்கள். முகம் நக நட்பது நட்பு அன்று; நெஞ்சு அகம் நக நட்பதே நட்பு ஆகும். மாலை வேளை; பொழுது போக வில்லை; கூடி நின்று கூத்து ஆடிக் களிப்பில் முழுகி அழியக் கூடுபவர்கள் அவர்கள் அழிவாளிகள்; நண்பர்கள் அல்லர். கொள்ளை அடிப்பதில் கூட்டுச் சேர்பவரும் இருப்பார்கள்; அவர்கள் கூட்டாளிகள். மதுஉண்டு மகிழவும், மாதர் நலம் புனையவும் கூட்டுத் தேவைப்படுகிறது. அதற்காக மட்டமான மகிழ்ச்சிக்குத் திட்டமிட்டு அமைக்கும் மகிழ்ச்சி மன்றங்களும் உள்ளன. சீட்டு ஆடிச் சிரித்துப் பொழுதுபோக்குவர்; பொருளைப் பறித்தும் வீட்டுக்கு அனுப்புவர். இவர்கள் எல்லாம் நண்பினர் என்று கூற இயலாது. பண்பினர்தாம் நண்பினர் என்று கூறமுடியும். ‘உயிர் காப்பான் தோழன்’ என்னும் அமுதமொழியைக் கேட்டது இல்லையா! அவன் தக்க சமயத்தில் வந்து உதவுவான்; மானம் போகும் நிலையில் நிதானம் தவறாமல் வந்து உன்னைத் தூக்கிவிடுபவன் தோழன்; இடுக்கண் வரும்போது நடுக்கம் தீர்க்க வந்து சேருவான்; கட்டி இருக்கும் வேட்டி இடுப்பைவிட்டு நெகிழ்கிறது. கைகளை வேட்டியோ, இடுப்போ அழைக்கவில்லை. உடனே இரண்டு கைகளும் தாவிச் செல்கின்றன; அதனை இழுத்துப் பிடித்து நிறுத்திக் கட்ட அந்தக் கைகள்தாம் உதவின; கைகள்போல் உதவுபவர் நண்பினர்; இந்த நட்புத் தனி மனிதனுக்குத் தேவைப்படுகிறது. நாட்டு அரசுக்கும் நட்பு அவசியமாகிறது. ஒப்பந்தங்கள் கையெழுத்திட்டு உறுதி செய்யப்படுகின்றன. அமைதியான காலத்தில் பொருள் உதவி கிடைக்கிறது; போர்க்காலத்தில் படை உதவி கிடைக்கிறது. 80. நட்பு ஆராய்தல் நட்பு ஓர் ஒட்டு நோய்; பழகிவிட்டால் விடமுடியாது; உன்னை ஒட்டிக்கொள்வதற்கு முன் அதனால் உனக்கு உண்டாகும் நன்மை தீமைகளை எண்ணிப் பார்த்து உறவு கொள்க. ஆராய்ந்து தேர்ந்து எடுத்துக்கொள்ளாத நட்புச் சாகும் வரை தொடர்ந்து துயரம் தரும். குணம், குடிமை, குறைகள், அவர்தம் சுற்றத்தினர் இவர்களை ஆராய்ந்து நட்பை அமைத்துக்கொள்க. நற்குடியில் பிறந்து உன் நன்மைகளைக் கருதி உனக்கு உண்டாகும் பழிகளை எதிர்த்துப் போக்குபவனை எந்த விலை கொடுத்தும் நட்பாக ஏற்றுக்கொள்க. கேட்பவர் வருந்துவதாயினும் அதனைப் பொருட்படுத்தாது அழச்சொல்லி இடித்துக்கூறி உலக இயல்பு இஃது என்று அறிவுறுத்த வல்லவர்தம் நட்பினை ஆராய்ந்துகொள்க. 9 கேடுகள் வரும்போதுதான் நம் உண்மையான நண்பர் யார் என்பதை உணர முடியும். எனவே நமக்குக் கேடுகள் வருவதும் ஒருவகையில் நல்லதே. அறிவற்ற சிறுமைத்தனம் உடையவர்தம் நட்பை நீக்கி விடுவது ஒருவனுக்கு ஊதியம் என்று கொள்க. ஊக்கம் குறையக் காரணமான செயல்களை நினைத்தும் பார்க்காதே; அதேபோலக் கஷ்ட காலத்தில் கைவிடும் அற்பர்களின் நட்பைக் கொள்ளாதே. கெடுதி வரும்போது விடுதல் செய்யும் கீழ்மகனின் செயலை மறக்கவே முடியாது. சாகும்போதும் அஃது ஒரு வனை உறுத்திக்கொண்டே இருக்கும். மாசு அற்றவர் உறவினைப் பொருந்துக. காசு ஏதாவது தந்தும் ஒத்துவாராதவர் நட்பை விட்டுவிடுக. 81. பழைமை (பழகிய உறவு) பழைமை என்பது பழகிய தோஷம் என்று கூறலாம்; நண்பன் பழகிவிட்டவன்; அவன் நமக்கு எதிரிடையாக நடந்துகொண்டாலும் அதனைப் பெரிதாகப் பொருட் படுத்தாமல் விட்டுவிடுவது இதுதான் பழைமை; ஏன் விட்டுக்கொடுத்தாய் என்று கேட்டால் ‘பழகிய தோஷம்’ என்பர். அதனால் ஏற்படுகின்ற தீமைகளும் மன்னிக்கத் தக்கவை என்பதாகும். நட்புக் குறையாமல் காப்பதே பழைமை எனப்படும். நட்புக்கு அடையாளம் விட்டுக்கொடுத்தல்; உரிமைகளை விட்டுக்கொடுப்பது பழகிய தோஷத்தால். அவன் உனக்கு நன்மை என்று கருதி, நீ இல்லாத நேரங்களில் சில முடிவுகள் எடுத்திருக்கலாம்; அது தவறாக முடிந்திருக்கலாம்; “என்னைக் கேட்காமல் எப்படி இந்த முடிவு எடுத்தாய்?” என்று கேட்பது பண்பின்மையைக் காட்டும். நண்பனுக்கு அந்த உரிமை உண்டு என்று ஒப்புக்கொண்டு தான் ஆக வேண்டும். நண்பன் எடுக்கும் முடிவுகளுக்கு ஒருவன் கட்டுப் படாவிட்டால் நட்புக்கே பொருள் இல்லாமல் போய் விடுகிறது. அவன் தவறு செய்துவிட்டாலும் அதற்குக் காரணம் ஒன்று அறியாமையாக இருக்க வேண்டும்; அல்லது அவன் எடுத்துக்கொண்ட உரிமையாக இருக்க வேண்டும். தீயது செய்ய வேண்டும் என்ற அடிப்படை அவனுக்கு இருந்திருக்காது. நட்பின் எல்லையில் நின்று பழகியவர்கள், ஒருவர் ஏதாவது சிக்கலில் அகப்பட்டுக்கொண்டால் விட்டு விலகி வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கமாட்டார்கள். தம்மாலான எல்லா உதவிகளையும் செய்வர். அழிவு மிக்க செயலைச் செய்துவிட்டாலும் அன்புடன் பழகிவிட்டவர்கள் அதற்காக நண்பனைப் பகைவனாகக் கருதமாட்டார்கள். ‘தெரியாமல் நடந்துவிட்டது’ என்று எடுத்துக் கொள்ளும் மனப்பான்மையே நிலவ வேண்டும். “யார் செய்தால் என்ன? நானே அந்தத் தவற்றைச் செய்திருப்பேன்” என்று கூறிச் சமாதானப்படுத்திக் கொள்வதே பெருந்தன்மை ஆகும். தனக்காகத் தன் நண்பர் ஒரு நல்ல முடிவை எடுத்துச் செயலாற்றும்போது நஷ்டங்கள் ஏற்பட்டுவிட்டன என்றால் அதற்காகக் கஷ்டப்படக் கூடாது. தன் நண்பன் தன்மீது காட்டிய அக்கறையின் புனிதத் தன்மையை மதித்துப் பெருமையும் பெருமகிழ்வும் கொள்ள வேண்டும். தவறுகள் காரணமாகப் பிரிந்து விடுபவர் ஏராளம்; தவறுகளை மன்னிப்பது ஒருவர் மனப்போக்கின் தாராளம், அத்தகைய மனப்போக்கு உடையர்வகளை உலகம் மதித்துப் போற்றும். 82. தீ நட்பு (தீய நட்பு) ஒரே தட்டில் இருவரும் சோறு பகிர்ந்து உண்கிறார்கள்; நெருங்கிய நட்பு; அவன் அளவாக நிற்காமல் அத்து மீறுகிறான்; வங்கிக் கணக்கில் நண்பனுக்குத் தெரியாமல் கை வைக்கிறான்; பண்பு கெட்டால் அவனை விட்டு விலகுக: தீக்குச்சி உராயும்போதுதான் தெரிகிறது, அது நெருப்பை உண்டாக்குகிறது என்பது. பழகியவன் தான் எனினும் அழிவு கருதுபவனோடு இழையாதே. காரியம் வரும்போது காலைப் பற்றுகிறான்; முடிந்த பின் அவன் தலை காட்டுவது இல்லை; கேட்டால் நேரம் இல்லை என்கிறான். அவனைக் கழித்துவிடுவதே தக்கதாகும். பயன் கருதிப் பழகும் நண்பன்; இவன் பொருளுக்காக முயங்க இடந்தரும் மங்கைக்கு நிகராவான்; கள்வனுக்கும் இவனுக்கும் வேறுபாடே இல்லை. விழித்துக் கொண்டுதான் இருக்கிறாய்; அவன் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு இருப்பதனைச் சுருட்டுகிறான்; அத்தகைய தீயவனை விரட்டி அடித்துவிடு. அறிவாளியின் நட்பு உனக்குக் கிடைக்கவில்லை. என் செய்வது? அதற்காக ஒரு முட்டாளின் தொடர்பையா தேடுவது? அவன் செய்யும் தவறுகள் உன்னையும் பாதிக்கும்; ஏன் அழிக்கவும் செய்துவிடும்; அறிவற்றவனின் தொடர்பு அறவே நீக்குக. செய்யும் தொழிலைச் செய்யவிடாதபடி தடுத்துக் குறுக்கே நிற்பவரை மெதுவாகக் கழற்றிவிடவும்; எதுவும் விளக்கம் கூறாமல் பற்று அறுத்துக் கொள்க. சொல்வது ஒன்று, செய்வது வேறு என்று மாறி நடப்பவரின் உறவு தேவை இல்லை; அதனைத்துறப்பதே மேலாகும். நேரே தனித்துப் பழகும்போது இனிக்கப் பேசுகிறான்; மன்றத்தில் பலர் முன்னிலையில் கசக்கச் சாடுகிறான்; இந்த முரண்பாடு உடையவன் உனக்கு அரண் ஆக மாட்டான் அவனை அகற்றிவிடு. 83. கூடா நட்பு (உதவாத நட்பு) பலரோடு பேசலாம்; சிலரோடு பழகலாம் மிகச் சில தோடுதான் நட்புக்கொள்ள முடியும். வெளுத்தது எல்லாம் பால் ஆகிவிடாது. சேர ஒட்டுவார்கள்; சமயம் பார்த்துக் காலை வெட்டுவார்கள். இவர்கள் கூடா நட்பினர். பாலுக்கும் சுண்ணாம்புக்கும் வேறுபாடு உள்ளது. இவர்கள் சுண்ணாம்பு என்பது, நீரில் போட்ட பிறகுதான் தெரியும். கொதிவந்ததும் தெரிந்துவிடும். மிக வேண்டியவன் என்று கூறி வந்து உன்னோடு அண்டிக்கொள்வார். சுரண்ட முடியவில்லை என்றால் புதிய நண்பனைத் தேடி அலைவார்; பொருட்பெண்டிர் மனம் போல இவர்கள் இடம் தாவுவர். சாத்திரங்கள் பல கற்றவனாக இருப்பான்; அவன் நேத்திரங்கள் மட்டும் திறப்பது இல்லை. அவன் மனம் திருந்துவதே இல்லை; அவனிடம் உண்மை அன்பு எதிர் பார்க்க இயலாது. சிரித்துக்கொண்டே இருப்பான்; அவன் பையில் கத்தியை மறைத்து வைத்திருப்பான். எப்பொழுது எடுப்பான் என்ன செய்வான் என்று கூற முடியாது. சிரிக்கிறான் என்பதனால் அவனை நம்பிவிடாதே. உள்ளங் கலந்து பழகாதவன் என்றும் அபாய அறிகுறியே; அவன் சொல்லைக் கொண்டு அவனை நம்பி விடாதே. நண்பனைப் போல வேண்டியதை எடுத்துக் கூறுவான்; அவன் பகைவன் என்பது பின்னால் தெரிந்து விடும். பணிவாகப் பேசுகிறானே என்று கருதிக் கனிவாகப் பேசாதே; வில் வளைவதே பின் தாக்குவதற்கே. தொழுத கையில் படை ஒடுங்கிக் கிடக்கும்; அழுத கண்ணீரும் அத்தகையதே. அவன் சிரித்துப் பேசியே உன்னைக் கெடுக்கிறான் என்று தெரிந்தால், நீ வெறுத்துச் சினந்து பகைக்காதே. நல்ல விதமாக அவனிடம் இருந்து விலகிவிடு. பகைவன் நண்பனாக நடிக்கிறான்; உன்னோடு ஒட்ட வருகிறான் என்றால் முகம் சுளித்து விலக்காதே. நீயும் சிரித்துக்கொண்டு அவனை ஒட்டவிடு, பின்னர் மெதுவாக உறவை நல்லவிதமாகவே வெட்டிவிடு. 84. பேதைமை ஒன்றும் தெரியாதவன் என்று சிலரைக் குறிப்பிடலாம். அப்படிக் கூறக் காரணம் என்ன? எதனையும் தெரிந்து கொள்ள முனையமாட்டார்கள். இந்த வியாபாரம் வேண்டா; நஷ்டம்தான் வரும் என்று சொன்னால் அவன் கேட்பதே இல்லை; அவன் தொடுகின்ற இடமெல்லாம் இழப்புதான். சொன்னாலும் ஏற்கமாட்டான்; சுயபுத்தியும் இருப்பது இல்லை. “ஒழுக்கம் அது படி என்ன விலை?” என்று கேள்வி கேட்பான். சில நாள் வாழப் போகிறோம். அதற்குள் அனுபவித்துச் செத்துவிடலாம் என்று தத்துவம் பேசுவான். இவனை என்ன என்று சொல்வது? அறிவிலி என்றுதான் சொல்வார்கள். தவறு செய்வதற்கு வெட்கப்படமாட்டான்; யாரையும் நேசிக்கமாட்டான்; எதனையும் வைத்துக் காப்பாற்ற மாட்டான்; யாவற்றையும் இழப்பான்; அடகுக்கடையே இவனை நம்பித்தான் நடக்கிறது. கெட்ட சகவாசம் அதிகம் இருக்கும்; மோசடி, கடத்தல் வியாபாரம் எல்லாவற்றிலும் கால் வைப்பான்; ஒரு நாளைக்குக் கட்டிப்போட்டு இவனைக் காவலில் வைப்பது உறுதி. தப்பித்தவறி நாலுகாசு சம்பாதித்தால் தாறுமாறாகச் செலவு செய்வான்; ஊரார்க்குத் தானம் செய்துவிட்டு வீட்டில் ஊறுகாய் வைத்துக்கொண்டு பழஞ்சோறு சாப்பிடுவான்; சொந்தக்காரர்களைக் கவனிக்கமாட்டான். கையிலே காசு வந்துவிட்டால் அவனைப் பிடிக்கவே முடியாது. அவன் ஆடினதுதான் ஆட்டம்; வெறிபிடித்து அலைவான்; நெறி தவறுவான். அப்பப்பா! இந்த மாதிரி ஆள்களோடு பழகாமல் இருந்தால் தப்பித்தோம். யாருக்கும் எவருக்கும் எந்த இலாபமும் இல்லை. படித்த பெரிய மனிதர் கூட்டத்திலே கால் வைக்கவே இவனுக்கு அருகதை கிடையாது. 85. புல்லறிவாண்மை பேதைமை என்பது முற்றிலும் அறியாமை. புல்லறிவாண்மை என்பது தெரிந்தும் தவறாக நடப்பது. முட்டாள் என்று ஒருசிலரை அழைத்துவிடுகிறார்கள்; யார் இந்த ஆள்? எப்படி அவன் இருப்பான்? என்ன அப்படி அவன் தவறு செய்கிறான்? எதனை வைத்து இவன் அறிவின்மையைச் சாடுகிறார்கள்? இதுவும் வறுமையில் ஒரு வகை என்றே கூறலாம். இவன் யாருக்கும் எந்த உதவியும் செய்யமாட்டான்; இவனால் யாருக்கும் எந்தப் பயனும் இருக்காது. இவன் தன்னைத்தானே அழித்துக்கொள்வான்; பகை வரும் அத்தகைய கேடு செய்யமாட்டார்கள். படிப்பு அரைகுறை; எதனையும் சரியாகப் படித்து அறியமாட்டான். ஆனால், தான் மேதாவி என்று சொல்லிச், செருக்குக்கொள்வான். எதனையுமே அவனால் மறைக்கத் தெரியாது; நல்ல காலம் உடம்பை மறைக்க ஆடையாவது கட்டி இருக்கிறான்; எல்லாவற்றையும் கொட்டிவிடுவான். எது சொல்லலாம்; எது கூடாது என்பனவற்றை எண்ணிக்கூடப் பார்க்க மாட்டான். யார் பேச்சையும் கேட்கமாட்டான்; தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் என்று சாதிப்பான்; மற்றவர்கள் உண்டு என்றால் இவன் இல்லை என்பான். எதனையும் மறுத்துப் பேசுவது அவனுக்குப் பழக்கமாகிவிடுகிறது. இந்த அறிவின்மையைச் சுட்டத்தான் மற்றவர்கள் இவனை அறிவிலி என்று அழைக்கின்றனர். அதுவே புல்லறிவு ஆண்மை எனப்படுகிறது. மற்றவர்கள் புத்தி சொன்னால் அதனைக் கேட்க மாட்டான்; தொடர்ந்து பிழைகளைச் செய்துகொண்டே இருப்பான். பிடிவாதம் அவனுடைய போக்காக இருக்கும். தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வமே இருக்காது. அதனால் அவன் அந்தக் குடும்பத்திற்குச் சுமையாகி விடுகிறான். நல்லது செய்யாவிட்டாலும் மன்னித்து விடலாம். தொடர்ந்து தவறுகளையே செய்து கொண்டிருந்தால் என்ன செய்வது? 86. இகல் (மாறுபாடு) இகல் என்பது கடத்தல் என்னும் பொருளினது; எல்லை கடப்பது இகல்; அதாவது மாறுபடுவது எனப்படும். இயன்றவரை மறுத்துப்பேசாதே; பொறுத்துக் கொள்; கருத்து மாறுபட்டால் பகைகள் விருத்தியாகும். அவன் உன்னோடு வேறுபடுகிறான்; அதனால் மாறுபாடு கொள்கிறான். அவனிடம் அதனால் பகை கொள்ளாதே; கருத்து வேறுபாட்டுக்கு மதிப்புத் தருக. கல்லைச் குத்துவான் ஏன்? கை நோகிறது என்று சொல்வான் ஏன்? அவனிடம் மோதிக்கொள்கிறாய்; அதனால் வேதனை அடைகிறாய்; பகை தவிர்த்து வாழ வேண்டும்; ஒருவகையாக ஒதுங்கி வாழ்வதே மேல்; அதுவே மன நிம்மதியைக் கொடுக்கும். எதிர்த்துப் பேசுவதே ஏற்றது என்று வாழ்பவர் என்றும் முன்னேற்றம் காண்பது இல்லை. நா அடக்கம் வேண்டும். வீண் வம்புகளை விலைக்கு வாங்குபவர் அவற்றிற்கு உரிய விலையைச் கொடுத்துத்தான் தீர வேண்டும்; ஏதோ வழியில் கிடப்பதை எடுத்துப் போட்டுக் கொண்டு குடைகிறதே என்றால் அது யார் தவறு? தருமத்தில் கண்ணாக இருப்பவர் வீண் கருமங்களில் தலை இடார்; முரண்பட்டுத் தம் உரத்தைக் கெடுத்துக் கொள்ளக் கூடாது. நாணல் வளைந்து கொடுக்கிறது. நீர் வெள்ளம் அதனை அழிப்பது இல்லை; வளையாத நெடு மரம் வெள்ளத்தில் அடித்துக்கொண்டு போகப்படுகிறது. பகையைத் தேடுபவன் அழிவை நாடுகிறான்; வீண் பகை பொல்லாதது; அது தவிர்த்து வாழ்க; பகை, நட்பு இவற்றில் உனக்கு எது வேண்டும்? நட்பு நலன்களை நல்கும். 87. பகைமாட்சி மனைமாட்சி, இறைமாட்சி, படைமாட்சி என்பவை போலப் பகைமாட்சியும் ஒரு தலைப்பாக அமைந்துள்ளது. பகைவனுடைய இயல்புகள் யாவை? இவை இரண்டையும் கூறுவது பகைமாட்சி எனப்படுகிறது. பகை கொள்ளும்போது அதனை ஏற்கவும் செய்யலாம்; தவிர்க்கவும் முயலலாம். உன்னைவிட மிக்க வலிமை உடையவரோடு மோதுவதால் அழிவு உனக்குத்தான். அதனால் அவர்களோடு பகை கொள்ளற்க; உன்னைவிட வலிமை குறைந்தவன் எதிர்க்கிறான் என்றால், அப்பொழுதும் அமைதியைக் கையாள வேண்டும் என்பது இல்லை; பகையை ஏற்க. பகைவனுடைய மாட்சிகள் ஒரு புறம் இருக்க எதிர்ப்பவரின் ஆற்றலையும் வலிமையையும் கணக்கிட்டுப் பார்க்க வேண்டும். தன்னந்தனியனாக ஒதுங்கி வாழ்ந்து விட்டுப் பகை என்று யார் மீதாவது பாய்ந்தால் இவன்தான் அழிவான். கோழைத்தனம் உடையவனும், அறிய வேண்டிய வற்றை அறியாதவனும், பிறரோடு நல்லுறவு இல்லாதவனும்; பொருள் ஈயும் பண்பு இல்லாதவனும் பகைவர்க்கு எளிதில் அடங்கிவிட வேண்டியதுதான். சினம் நீங்காதவனும், மனதைக் கட்டுப்படுத்தாதவனும், நிறையற்றவனும் எப்பொழுதும் யார்க்கும் எளியவன் ஆகிவிடுவான். எதிர்க்கும் வழிகளைச் சிந்திக்கமாட்டான்; வெல்லும் வாய்ப்புகளை மேற்கொள்ளமாட்டான்: தீயன செய்வதால் உண்டாகும் பழியை எண்ணிப் பார்க்கமாட்டான்; நற்பண்புகள் இல்லாதவன் ஆகிய இவன் பகைவர்க்கு எளியவன் ஆகிவிடுவான். கடுஞ்சினத்தவன், மிக்க காமம் உடையவன் இவர்களை எதிர்ப்பது எளிது; அவர் தோல்வியைச் சந்திப்பர். அடுத்து இருந்து கெடுக்கக் கூடிய தீயவனை எந்த விலை கொடுத்தும் அப் பகையை முடிக்க வேண்டும். நற்குணங்கள் இல்லாதவனாகவும், குற்றங்கள் பல புரிபவனாகவும் இருந்தால் அவன் துணை இன்றி இருப்பான். அவன் பகையை எளிதில் வெல்ல முடியும். அறிவு அற்றவராகவும், அஞ்சும் இயல்பினராகவும் இருந்தால் அவர்களை வெல்வது யார்க்கும் எளியது ஆகும். அறநூல்களைக் கல்லாதவனாக இருந்து அநீதிகளைச் செய்வானாயின் அவனை எதிர்ப்பது கடமையாகும். அப்படி எதிர்க்காவிட்டால் இகழ்ச்சியே உண்டாகும்; புகழ் அமையாது. 88. பகைத்திறம் தெரிதல் பகையே பொதுவாக இல்லாமல் இருந்தால் கவலை இல்லாமல் உவகையோடு வாழமுடியும்; விளையாட்டுக்குக் கூட வீண் பகை தேடிக்கொள்ளாதே. வீரர்களின் பகையைத் தேடிக்கொண்டாலும் அறிஞர்களின் பகையைத் தேடிக்கொள்ளாதே. தனி ஒருவனாக இருந்து பலரோடு பகைகொண்டால் அவன் பித்தம் பிடித்தவன் என்றே மதிக்கப்படுவான். பகைவரையும் நட்பினராக மாற்றிக்கொள்ளும் ஆற்றல் உடையவன் எல்லா வகையிலும் உயர்வு பெறுவான். பகைவர் இருவர்; நீ ஒருவன்; உன்னால் என்ன செய்ய முடியும்? அந்த இருவரில் ஒருவனை உன்பக்கம் சேர்த்துக் கொள். அந்த உறவு தற்காலிகமாகவாவது இருக்கட்டும்; நிலையானது ஆகவாவது இருக்கட்டும். நண்பனாகக் கொள்கிறாயோ வேறுபட்டு இயங்குகிறாயோ உனக்கு அழிவு வரும் காலங்களில் அவர்களோடு எந்த உறவும் புதுப்பிக்காதே; நடுநிலைமையில் இருந்து அவர்களைச் சாராமல் இருக்க வேண்டும். நண்பன் உன் துன்பத்தை அவனாக அறிந்துகொள்ள வேண்டும்; உன் கஷ்டங்களை அவனிடம் எடுத்து உரைக்காதே; அதேபோல உன் எதிரியிடமும் உன் மெலிவுகளைக் கூறாதே. செயல்படும் வகை அறிந்து, தன்னை வலிமைப் படுத்திக்கொண்டு தற்காப்பு ஆராயும் இயல்பினர் பகைவரின் செருக்கை அடக்க முடியும். முள்மரத்தைத் தொடக்கத்திலேயே களைக; முற்றிய பிறகு களைவது கடினம்; கையை அந்த முள் வருத்தும். பகை பெரிது; தீது என்று தெரிந்தும் புறக்கணித்து விட்டால் எதிரிகள் தக்க சமயம் பார்த்து உன்னை ஒழித்துவிடுவார்கள். 89. உட்பகை நிழலும் நீரும் இனியன; அவையே நோய் செய்யும் எனின் கடுமைய; ஆரோக்கிய வாழ்வுக்கு இவற்றினின்று விடுபடலே நல்லது ஆகும். வாளைப் போன்ற பகைவர்களை விடக் கேளிரைப் போல் நடந்து உறவாடிக் கெடுப்பவர்கள் தீயவர்கள்; தேளைப்போல் கொட்டிக்கொண்டே இருப்பர். குயவன் மட்பாண்டம் செய்கிறான்; அவன் சறுக் கென்று அதன் கழுத்தைச் சக்கரத்தில் வைத்து அறுப்பான்; அறுப்பதே தெரியாது; நோகாமல் நோன்பு செய்து சாதிப்பர். புற்றில் உறையும் பாம்பு; அது எப்போது வெளிப் பட்டுச் சீறும் என்று கூற முடியாது. உறவைக் கெடுக்கும் உறவினர் உள் இருந்தே சுரண்டி விடுவர்; அவர்களிடம் விழிப்புடன் பழகுக. ஆகாத உறவினர் அவர்கள் வேகாத சோறு; அவர்களைச் சீரணம் செய்வது கடினம். சாடியும் மூடியும் ஒன்றாக இறுகத் தழுவிக்கொண்டு தான் இருக்கும். என்றாலும் சாடி வேறு; மூடி வேறுதான். முப்பட்டை தீட்டிய அரம்; அது சிறிய கருவிதான்; அஃது இரும்பை அராவிவிடும். எள்ளின் அளவுதான் உட்பகை; அவர்கள் உன்னைச் சுட்டு எரித்துவிடுவர். பொத்தல் குடிசை; நீ ஒற்றை ஆள்; பாம்போடு உறைய முடியாது; வீண்வம்பு; உட்பகை செய்பவர்களை முதலில் வெளியேற்றுக. 90. பெரியாரைப் பிழையாமை யானைக்குத் தீங்கு இழைத்தால் அவன் பாகனாயினும் பகை தீர்த்துக் கொள்ளும். உன்னைவிட ஆற்றலும், அதிகாரமும், செல்வாக்கும் மிக்கு உள்ளவர்களைப் பகைத்துக் கொள்ளாதே. எடுத்த காரியம் முடித்து வெற்றி பெற நீ அடுத்து உள்ள பெரியவர்களை நச்சி நட; அவர்களை ஆற்றல் குறைந்தவர் என்று அவசரப்பட்டுப் பேசிவிடாதே; அவர்கள், உதவுவதை நிறுத்திக் கொள்வார்கள். பெரியவர்களைத் துச்சமாக மதித்தால் நிச்சயம் அவர் தொடர்ந்து தொல்லைகளைத் தருவர்; அவர்களை மதிக்கக் கற்றுக்கொள். நீ கெட்டுத் தொலைய வேண்டும் என்று உறுதி கொண்டால் யாரும் உன்னைத் தடுக்க இயலாது; பெரியவர்களோடு மோதிக் கொள்; அவர்கள் உன்னை அழிக்காமல் இருக்கமாட்டார்கள். பெரியவர்கள் என்பவர்கள் அதிகாரம் மிக்கவர்கள். அவர்களை எதிர்த்துக்கொண்டு நீ வாழ முடியாது; அடங்கிப் போவதுதான் நல்லது. தீயில் அகப்பட்டாலும் எடுத்துவிடலாம்; உயிர் தப்பலாம்; இவர்கள் சினத்தில் அகப்பட்டால் சிதறித்தான் போவாய். பக்கத்துணை பலர் இருந்தாலும் பகை தவிர்த்துப் பழகிக்கொள்; உன்னிலும் பெரியவர்களைப் பகைத்துக் கொள்ளாதே. நீ வாழ முடியாது. 91. பெண்வழிச் சேறல் (அடிமை இன்மை) உன் மனைவிக்கு ஏவல் செய்து நீ அடிமையாகாதே. அவளுக்கு உலக நன்மை முன் நிற்காது. தன் சொந்த நலன் தான் அவள் கருதுவாள். நீ துணிந்து ஒரு தரும காரியம் செய்ய முடியாது; அவள் உன்னைத் தட்டிக் கேட்பாள். உழைத்துச் சேர்த்த பணம்; அவள் ஊதாரித் தனமாகச் செலவு செய்வாள். மாடுபோல் உழைக்கும் நீ பின் ஓடு எடுக்க வேண்டிய நிலைக்கு உன்னைத் தள்ளி விடுவாள். நாணம் என்பது பெண்மைக்கு அழகு சேர்ப்பது; நீ நாலு பேர் மத்தியில் நாணி வெட்கப்படும்படி உன்னைச் செய்துவிடுவாள், மானம், மரியாதை இவை உன்னை விட்டு விலகிவிடும். அம்மா உத்தரவு இல்லாமல் எதனையும் நீ செய்ய முடியாது; உன் செயல்திறன் அடங்கிவிடும். அவள் பேச்சுக் கேட்டால் குளிருக்கு அவள் இதம் தருவாள்; வெற்றிலை மடித்துத் தருவாள்; மென்று கொண்டே இருக்கலாம். நீ பாயில் சுருண்டு கிடக்க வேண்டியதுதான். உன் பெருமை எல்லாம் அங்கே படுக்கையில் சுருட்டி வைக்க வேண்டியதுதான். அவள் சிவந்த இதழ் உன்னைக் கருகச் செய்துவிடும். அவள் பேச்சைக் கேட்க நீ ஆணாகப் பிறக்கத் தேவை இல்லை; உன்னைவிடப் பெண்பிறப்பே மேல்; பேசாமல் நீயும் சேலை கட்டிக்கொள்; அவளுக்குச் சமமாகவாவது நீ வாழ முடியும். நீ மொத்தத்தில் ஒரு பூஜ்யம் ஆகிவிடுவாய்; எண் சேர்ந்தால்தான் இயக்கம் அமையும்; அவள் அந்த எண்ணாக இயங்குவாள். சுயமதிப்பும் திடசித்தமும் சிதறாமல் இருக்கச் சுய சிந்தனையோடு செயல்படுக. அவள் பக்கம் அதிகம் சாயாதே; சாயம் ஒட்டிக்கொள்ளும். 92. வரைவில் மகளிர் (விலை மகளிர்) சொன்னால் நீ கேட்கமாட்டாய்; அவள் உன்னிடம் பிரியம் காட்டுகிறாள் என்று சொல்கிறாய்; நீ காசு இல்லாமல் போ; உன்னைச் செல்லாக் காசுக்கும் மதிக்கமாட்டாள். அந்த வீடு அன்பு அகம் அன்று; பொருள் அகம்; இவர்களைப் பொருட்பெண்டிர் என்றுதான் வழங்குகின்றனர். அளவோடு இனிக்கப் பேசி வளமாக வாழ்கிறவள் அந்த வனிதை; உன் மனைவி அதிகம் பேசி அலுப்பைத் தந்துவிடுகிறாள் இவள் குறைவாகப் பேசுவாள்; நிறை வாகச் சம்பாதிப்பாள். அஃது அவள் தொழில்; இனபம் அளவுச் சாப்பாடுதான். அவள் உன்னை இறுகத் தழுவுகிறாள்; அதனைக் கண்டு நீ மனம் உருகுகிறாய்; அவள் உடம்புதான் தழுவ இடம் கொடுக்கிறது; உணர்வு உங்களைப் பிணிக்கவில்லை. அதனை விட இருட்டறையில் முன்பின் பார்க்காத ஒரு பிணம் இருந்தால் அதனைத் தழுவலாம். அதற்கு உணர்வு இருக்காது. இவளைவிட அது மேல்; அது காசு கேட்காது. அருள் உள்ளம் படைத்தவர், ஒழுக்கம் உடையவர் இவர்களுக்கு அவர்கள் வீட்டின் முகவரியே தெரியாது. சலன புத்தி உடைய சாமானியரே அவர்கள் வாடிக்கைக்காரர் ஆகின்றனர். இந்த நரகத்தில் கால் வைப்பவர் மீள்வதே இல்லை. தீய பழக்கங்கள் என்று கடியப்பட்டவை சூதும் கள்ளும்; இவற்றோடு இந்த மாதையும் சேர்க்க வேண்டியது 10 தான். இந்தப் பழக்கம் உடையவர் பொருளை வைத்துக் காப்பாற்றமாட்டார்கள். ‘திருமகள் இல்லம்’ என்று வெளியே இதற்கு முன் எழுதி இருந்தான்; அதற்கு வேலையே இல்லை. செல்வம் அங்குக் குடியிருக்க மறுத்துச் செல்விகளை நாடிச் சென்றுவிடுகிறது. இத் தீய பழக்கம் உடையவர் வாழ்வு கருகிவிடும் 93. கள் உண்ணாமை “குடிகாரன் நாலு தட்டுத் தட்டினாால் விழுந்து விடுவான்; அவனைக் கண்டு பயப்படத் தேவை இல்லை” என்று செர்ல்வார்கள். பகைவர்கள் இவனைக் கண்டு பயப்படவே மாட்டார்கள். படித்து இருக்கிறான்; திறமைசாலி; நன்றாக உழைப்பான்; என்ன பயன்? சாயுங்காலம் ஆனால் அது போடாமல் அவனால் இருக்க முடியாது. “குடிகாரன் பேச்சு பொழுது விடிந்தால் போச்சு” என்று சொல்லுவார்கள். அறிஞர்கள் கூடிய சபையில் குடித்துவிட்டு ஒருவன் பேச முடியாது; அவன் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளி விடுவர். பெற்ற தாய்; தன் மகன் சான்றோன் ஆவான் என்று எதிர்பார்த்தாள்; வல்லவனாக வளர்வான் என்று எதிர் பார்த்தாள்; ஆடி அசைந்துகொண்டு வருகிறான்; நாடி தளர்ந்து நின்றுகொண்டு ‘ஏடி வாடி போடி’ என்ற சொற்களை உதிர்க்கிறான். “அடப்பாவி உன்னைப் பெற்றேன்; இந்த வயிறு புலி கிடந்த வயிறு என்று பெருமைப் பட்டேன்; புளிகரைத்து ஊற்றுவாய் என்று எதிர் பார்க்கவில்லை” என்கிறாள். கட்டிய வேட்டி அவிழ்ந்துவிடுகிறது; ஜட்டியோடு தடுமாறுகிறான். வெட்கம் அவனை விட்டு வெளியேறி விடுகிறது. மானம் ஈனம் அது எதுவும் இல்லை. நிதானம் தவறிவிட்டான்: ஈன புத்தியோடு ஞான நன்னெறி பேசி உளறுகிறான். புளிக்கும் கள்ளைக் களிப்புத் தரும் என்று குடிக்கிறான். அது விஷம்; விஷமத்தனத்துக்கு அது வித்தாகிறது. ஏன்? மற்றவர்கள் கைகொட்டிச் சிரிக்கிறார்கள். உடம்பெல்லாம் புழுதி, கண்டபடி உளறுகிறான். அவன் எள்ளல் பொருள் ஆகிறான். நீரில் முழுகியவனை எடுத்துவிடலாம்; குடியில் முழுகியவனைத் தெளிவுபடுத்தி மீட்க முடியாது. குடிகாரன் எப்படி இருப்பான் என்பதனை அறிய ஒரு குடிகாரனின் ஆட்டத்தைக் கவனி; அதற்குப் பிறகு குடியை நாடுவதை நீ நிறுத்திவிடுவாய். 94. சூது (சூது ஆடுதல்) ‘வா வா’ என்று அழைக்கிறது; வெற்றியும் தருகிறது. ஒன்று வைத்தால் பத்துக் கிடைக்கிறது. இந்தப் பத்துதான் உன் சொத்தை இழக்கும் வித்து ஆகிறது; தூண்டில் முள்; அதில் உள்ள புழு அதனைத் தின்ன மீன் தாவுகிறது. மாட்டிக்கொண்டு துடிக்கிறது. தூண்டில் முள்ளில் உள்ள புழு கவர்ச்சி தருகிறது. அதே ஆசையைத்தான் இங்கே முதல் வெற்றி உனக்கு அளிக்கிறது. ‘வரும்; போகும்; இது வெறும் விளையாட்டு” என்று கருதலாம்; வருவது ஒன்று; இழப்பது நூறு; இந்த ஒன்று தான் உனக்குத் தெரிகிறது. இழந்த நூறு பற்றி நீ எண்ணிப் பார்க்க மறுக்கிறாய். காயை உருட்டுகிறாய்; எதிரி உன் பொருளைச் சுருட்டுகிறான்; என்றாலும் அந்தச் சூது உன்னை மருட்டுகிறது; அதனால் உன் செல்வம் இருட்டுகிறது. கிழிந்த சட்டை, கிழிந்த நோட்டு, ஒழிந்த வாழ்வு காரணம் என்ன? அழிந்தது உன் செல்வம்; ஒடுகின்ற குதிரை ஓடிக்கொண்டுதான் இருக்கிறது. எது வெல்லும்? சொல்ல முடியாது. நன்றாக ஓடி வந்த குதிரைதான்; அன்று சண்டித்தனம் பிடித்துவிட்டது; நீ வாழ்க்கையில் நொண்டியாகிவிட்டாய். பொழுது விடிந்து பொழுது சாயும்வரை அவன் இருப்பது கழகம்; பல்கலைக்கழகம் அன்று: சூதாடும் இடம்: கையால் உருட்டுவது தாயம்; காயும் கையுமாக அன்று மாலைவரை அங்கேயே கழிக்கிறான்; தன்னை வெல்வார் இல்லை என்று பெருமை பேசுகிறான். சோற்றை மறந்தான்; வீட்டைத் துறந்தான். இவன் இறந்தவன் என்றே எண்ண வேண்டியுள்ளது. ஒன்று தெரியுமா? தத்துவஞானி ஒருவன் உயிரைப் பற்றியே கவலைப்படமாட்டான்; “வாங்குகிற மூச்ச சுழிமாறிப் போனாலும் போச்சு” என்று தத்துவம் பேசி வந்தான். உடம்பு கெட்டுவிட்டது; மருத்துவனிடம் சென்றான்; எவ்வளவு ஆனாலும் பரவாயில்லை. செலவிடுகிறான். மருத்துவனுக்கு நம்பிக்கை அற்று விட்டது. உயிர் போகும் என்று தெரிவிக்கிறான். நாடிகள் அடங்குகின்றன; உயிர்மீது பற்று; எப்படியாவது பிழைக்க விரும்புகிறான். இவன் பேசிய தத்துவங்கள் எல்லாம் வெறும் மித்தை ஆகிவிட்டன; துன்பம் மிகுகிறது; உடம்பெல்லாம் ஒரே வலி; விடுதலை பெற்றால் சுகம் தான்; அந்தத் துன்பத்திலும் துடிப்பிலும் உயிரைக் காதலிக்கிறான். எப்படியாவது வாழ விரும்புகிறான். சூதும் அத்தகையதுதான்; பொருளை இழக்கும் தோறும் அதனை விட முடிவதில்லை; இழந்ததை எப்படி யாவது மீட்டுவிடலாம்; ஒரே ஆட்டத்தில் சரிப்படுத்தி விடலாம் என்று நினைக்கிறான்; ஆட்டம் அவனைக் கை விட்டு விட்டது. ஆனால் அவன் அதனை விடமுடிவதில்லை. வாட்டம் அவனைச் சூழ்ந்துகொள்கிறது. 95. மருந்து நோய் நாடி, நோய்க்குக் காரணம் நாடி, அது தணிக்கும் வழி நாடி, எது செய்ய வேண்டுமோ அதுதான் செய்ய வேண்டும். இது நாடி வைத்தியர் சொல்லும் வழியாகத் தெரிகிறது. மருத்துவம் இதில் நான்கு பேர் உள்ளடக்கம் பெறுவர். (1) நோயாளி; இவர் இல்லை என்றால் மருத்துவத்துக்கே பேச்சு இல்லை, (2) அடுத்தது மருத்துவர், (3) மருந்து, (4) அதனை அருகிலிருந்து கொடுக்கும் பணிப்பெண் (அல்லது அக்கறை உள்ள சொந்தக்காரர்). இந் நால்வர் மருத்துவத்திற்குத் தேவைப்படுவர். நாடியைப் பார்த்தால் எல்லாம் சரியாக இருக்க வேண்டும். மிகுந்தாலும் குறைந்தாலும் அவர் நோயாளி என்று முடிவு செய்துவிடலாம். ஒரு குறிப்பிட்ட அளவு தான் உடம்பில் சூடு இருக்க வேண்டும். அதிகமாகி விட்டால் சுரம், காய்ச்சல் என்று கூறுகிறார்கள். அதிகக் கொழுப்பு இருந்தால் உடம்புக்கு இழுக்கு என்கிறார்கள். இரத்தக் கொதிப்பு என்பது மிகைப்பட்ட ஒட்டம் உண்டாக்குகிறது. சருக்கரை அதிகம் ஆகிவிட்டால் அதுவும் தப்பு: உப்பு அளவாக இருக்க வேண்டும். தமிழ் மருத்துயப்படி வாதம், பித்தம், சிலோட்டுமம் இந்நாடிகள் ஒழுங்காக வேலை செய்ய வேண்டும் என்பர். மருத்துவத்தை முழுவதும் சொல்லிவிட்டால் மருத்துவருக்கே வேலை இல்லாமல் போய்விடும். மருந்து எல்லாம் அருகே இருந்துதான் ஆளைப் பார்த்துத் தேர்வு செய்து பின் எழுதிக் கொடுக்க வேண்டும். ஆளைப் பார்க்காமல் எந்த மருந்தும் தரமுடியாது. இந்த நோயாளிகள் யாரைக் கேட்டாலும் என்ன சொல்கிறார்கள்; அஜீர்ணம்; இதுதான் பெருவாரி. அதிகம் சாப்பிட்டு உடம்பைக் கெடுத்துக் கொள்கிறவர்கள்தாம் மிகுதி. “வேளா வேளைக்குச் சாப்பிடவேண்டும். சத்துள்ள உணவு சாப்பிட வேண்டும்; ‘சூப்’ வைத்துக் குடிக்க வேண்டும். வயிறார உண்ணவேண்டும்.” இப்படிச் சொல்லக் கூடாது; இப்படிச் சாப்பிடுவதால்தான் உடம்பு கெடுகிறது. (1) உண்டது செரிக்கட்டும்; (2) உடம்புக்கு ஒத்துக்கொள்ளாத உணவு சாப்பிடாதே; (3) அதிக உணவு விரும்பாதே; (4) பசி அளவு அறிந்து அளவாக உண்க. இந் நான்கு விதிமுறைகளைக் கடைப்பிடித்தால் நோய் மிகுதியாக வாராது. வேறு சில புதிய நோய்கள் வருகின்றன: தடுப்புக்கு வழி கூறலாமேயன்றித் தீர்ப்பதற்கு அவ்வளவு எளிதாகக் கூறிவிட முடியாது; குடிப்பழக்கம் நோய் தரும்: புகைபிடிக்கக் கூடாது. தீய ஒழுக்கங்கள் பயங்கரமான நோய்களை உண்டாக்கும். இவற்றை எல்லாம் உடம்புக்கு ஒவ்வாதனவற்றுள் அடக்கிவிடலாம். அளவோடு உண்பது வளமான வாழ்வுக்கு வழிவகுக்கும். 96. குடிமை குடிமை என்பது நாட்டுப்பற்றைக் குறிப்பதாகும்; இந்த நாட்டின் குடிமகன் என்ற தகுதியை உண்டாக்கிக் கொள்வது என்பது ஆகும். “பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் வானினும் உயர்ந்தவை” என்று மதிக்க வேண்டும். இதனைச் சிறிய அளவில் குறிப்பிட்டால் குடும்பப் பற்று என்றும் கூறலாம். ஒருவன் பிறந்த வீடு அவன் வளர்ச்சிக்கு உதவுவதாகும். நேர்மையும் நாணமும் நற்குடிப் பிறந்தவரிடத்தே தான் அமையும். ஒழுக்கம், வாய்மை இவையும் அவர்களிடம் அமையும். மற்றும் எப்பொழுதும் மலர்ச்சியோடு விளங்குதல், சிரித்த முகம் அவர்களை இனியவர்கள் ஆக்குகின்றன. பேசும் சொல் என்றால் அஃது இனி தாகவே இருக்கும்; பிறரை வருத்தாத சொற்கள் அவை. இல்லை என்று சொல்லாத இயல்பு அவர்கள்தம் ஈகையைக் காட்டுவது ஆகும். பிறரை இகழ்ந்து பேச மாட்டார்கள். கோடிப் பொன் கொண்டுவந்து கொட்டித் தந்தாலும் கீழ்மையான செயலுக்கு இவர்கள் இடம் கொடுக்க மாட்டார்கள். வறுமை வந்து அவர்களை வாட்டத் தொடங்கினாலும் அவர்கள் ஈதலைத் தவிர்க்கமாட்டார்கள், நற் பண்புகளில் இருந்து நழுவமாட்டார்கள். வஞ்சனை, சூது இவற்றை அவர்கள் அறியமாட்டார்கள். அவர்களிடம் சிறிது குற்றம் காணப்பட்டாலும் மற்றவர்கள் கண்களுக்கு அவை புலப்பட்டுக்கொண்டு இருக்கும். ஒருவனிடம் அன்பு ஆகிய நற்பண்பு இல்லை என்றால் அவன் கீழ்மகனாகவே கருதப்படுவான்; உயர்குடிக்குத் தகுதி இருக்காது. நிலத்தில் வெளிப்படும் முளை அதன் இயல்பைக் காட்டிவிடும். அதுபோல நற்குலத்தில் பிறந்தவர் வாய்ச்சொல் அவர்கள் இயல்பை வெளிப்படுத்திவிடும். சிறப்பாக அவனிடம் நாணம் உள்ளதா? என்று எதிர்பார்ப்பர்; மேலும் பணிவுடைமையும் எதிர்பார்ப்பர். இவை குடும்பத்தின் வளர்ப்பினால் அமைவன ஆகும். முந்திரிக்கொட்டை மாதிரி எதுவும் தான்தான் என்று தலை காட்ட மாட்டான். அடக்கமும் பணிவும் அவனை ஒளிவிடச் செய்யும். 97. மானம் மானம் என்றால் உயர்வு என்று பொருள்படும்; உச்சியை அடைந்தவர் உயரத்தைவிட்டு இறங்க விரும்பமாட்டார்கள். இவர்கள் முதற்கண் குடிப் பெருமையை விட்டுக்கொடுக்க மாட்டார்கள். புகழ் குன்றிவிடும் செயல்களை இவர்கள் எப்பொழுதும் செய்ய மாட்டார்கள். செல்வம் பெருகிய காலத்தில் அடக்கமும், சுருங்கிய நிலையில் நிமிர்வும் இருக்க வேண்டும்; தாழக்கூடாது. மானத்துக்குத் தக்க உதாரணம் சொல்ல வேண்டுமா? தலையில் இருக்கம்போது மயிர் சிறப்பு அடைகிறது. அதனை வாரி முடிக்கிறார்கள்; மலரும் இட்டு அழகு செய்கின்றனர். திருப்பதி மொட்டை அவனைக் கேள்; அது தூக்கி எறியும் குப்பை ஆகிவிடுகிறது. மானம் இழந்து தாழ்ந்துவிட்டால் அவர்களை யாரும் மதிக்கமாட்டார்கள். மலைபோல் உயர்ந்து இருப்பவர் நிலையில் தாழ்ந்து விட்டால் அவர்கள் குலைந்துவிடுவர்; பிறரை நச்சி வாழும் அளவுக்குத் தாழ்ந்துவிடுவர். சிலர் பகைவரை அடைந்து அவர்கள் காலில் வீழுந்து கிடப்பர். பெருமை கெட்டு விட்டால் பிறரை அண்டி வாழும் நொண்டி வாழ்க்கை மதிப்பற்றது ஆகும். பெருமை அழிந்த பிறகு உயிர்வாழ்க்கை பயனற்றதாகும்; சாவதற்கு வழி தேடலாம். கவரிமான் ஒரு மயிர் உதிர்ந்து கீழே விழுந்துவிட்டால் அஃது உயிர் வாழாது என்பர்; மானம் மிக்கவர்களும் தம் பெருமை குன்றுமானால் வாழ்வை முடித்துக்கொள்வர். மானத்துக்காக உயிர்விட்டான் என்றால் அது மிகவும் பாராட்டத்தக்கதாகும். இவர்கள் உயர்ந்த மதிப்புகளுக்கு வாழ்க்கை நடத்துபவர் ஆகின்றனர். அவர்கள் புகழை உலகம் பாராட்டும். 98. பெருமை சிலர் வாழ்ந்தால் போதும்; புகழாவது இகழாவது அதனைப்பற்றிக் கவலைப்படுவது இல்லை. அதற்கு அருத்தமிருப்பதாக அவர்கள் நினைப்பதும் இல்லை. பேர் கெட்டுவிடும் என்றால் அதனைப்பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை. வேளைக்குச் சோறு; இருக்க ஒரு வீடு; வசதிகள் இருந்தால் போதும். அவன் பெரிய மனிதன் என்று தன்னைத்தான் நினைத்து மகிழ்ந்து கொள்கிறான். இஃது ஒரு பிழைப்பு என்று கூற முடியாது. நீ என்ன தொழில் செய்கிறாய்? உன்னால் இந்த உலகுக்கு என்ன பயன்? நிலத்துக்குச் சுமையாக இருக்கக்கூடாது; பிறர் மதிக்க வேண்டும். அதற்குச் சராசரி வாழ்க்கை போதாது. சிலர் பதவி காரணமாகத் தாம் மேன்மக்கள் என்று கருதிக்கொள்வது உண்டு. ஆனால் அதற்குத் தக்கபடி செயல்கள் அமைவது இல்லை; சங்கு சுட்டாலும் வெண்மை தரும். உயர்ந்தவர்கள் வறுமையில் கெட்டாலும் ஒளிவிடுவர். கற்புடைய பெண்டிர் தம் நிலையில் தாழ்வது இல்லை. அதுபோல ஏதாவது தொழில் செய்துகொண்டு நாணயம் கெடாமல் புகழ்பட வாழ்வது அவசியமாகும். இதனையும் ஒருவகையில் கற்புக்கு நிகராகக் கூறலாம். ‘பெருமை’ என்றால் ஒருசிலர் தாம் வைத்திருக்கும் பொருள் மிகுதியால் பிறர் மதிக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பர். இஃது அவர்கள் கீழ்மையையே காட்டும் எனலாம். அவர்கள் சாதிப்பது என்ன? அரிய செயல் யாது? எப்படிப் பிறரோடு பழகுகின்றனர்? வீணாகத் தம்மை உயர்த்திப் பேசிக் கொள்கிறார்களா? செருக்கற்று வாழ்கின்றார்களா? பெருமை என்பதற்கு இந்த அடிப் படைகள் தேவை. சிறியவர்கள் தம்மை உயர்த்தியே பேசிப் பிறர் மதிப்பைத் தேடுவார்கள். பெருமை உடையவர்கள் தன்னடக்கம் காட்டுவார்கள். அவர்கள் வாழ்வில் எளிமை இருக்கும். ஆடம்பரத்துக்கு அடிமையாகமாட்டார்கள். இவர்கள் பிறர் குறைகளைத் தூற்றிப் பேச மாட்டார்கள். சிறுமைக் குணம் படைத்தவர்கள் பிறர் குறைகளைக் கூறித் தூற்றுவதனை வழக்கமாகக் கொள்வர். 99. சான்றாண்மை நல்லது எதுவோ அதனை முன்னிருந்து நடத்துவது தான் சான்றாண்மை எனப்படும். நற்குணங்கள் நிரம்பிய பொற்பு அவர்களிடம் உண்டு. அவை அன்பு, நாணம், ஒப்புரவு, கண்ணோட்டம், வாய்மை எனப்படுவன ஆகும். தவம் என்பது கொல்லாமை என்பர். சான்றாண்மைகூட ஒருவகையில் தவம் போன்றதே ஆகும். பிறர் தீமைகளைச் சொல்லாத நற்போக்கே சான்றாண்மையாகும். எதனையும் அடக்கமாகச் செய்வதுதான் சான்றாண்மை எனப்படும். விளம்பரமும் வீண் பெருமையும் அவர்களைத் தாழ்த்திவிடும். சால்புக்கு உரைகல் யாது என்றால் தனக்கு நிகர் அல்லாதவரிடத்தும் தம் தோல்வியை ஒப்புக் கொள்வது ஆகும். தீமை செய்தவர்களுக்கும் நன்மை செய்வதே சான்றோரின் நற்பண்புக்குச் சான்று ஆகும். அப்படி நன்மை செய்யாவிட்டால் அவர்கள் சான்றோர் என்று சொல்லிக் கொள்வதில் பொருளே இல்லை. சால்பு என்னும் திண்மை உறுதி இருந்தால் அதுவே ஒருவனுக்குச் செல்வம் ஆகும். பொருள் இன்மை ஒருவனுக்கு இழிவு அன்று; மனத்தின் திண்மைதான் செல்வம் ஆகும். சான்றாண்மைக்கு வரம்பு என்று கூறப்படுபவர் ஊழிபெயர்ந்தாலும் தாம் தம் நிலை பெயரார். கடல்நீர் தன் கரை கடக்கலாம்; இவர்கள் தம் நிறை கடக்க மாட்டார்கள். சான்றோர் தம் சால்பு குன்றிவிட்டால் இந்தப் பூமியே தன் சுமையைத் தாங்காமல் சோர்ந்துவிடும்; உலகம் இவ் அதிர்ச்சியைத் தாங்கிக்கொள்ளாது. 100. பண்புடைமை ‘பண்’ என்னும் சொல்லில் இருந்து பண்பு என்னும் சொல் உண்டாகி இருக்க வேண்டும். பண் இசை எனப்படும்; இனிமை தருவது பண்புடைமை. அந்த இனிமை எவ்வாறு உண்டாகிறது? எளிமையாகப் பழகு; மற்றவர்கள் உன்னைப் பார்க்க இடம்கொடு; கெடுபிடி கூடாது; பண்புடைமை தம் குடிப்பிறப்பின் உயர்வைக் காட்டும்; நற்சொற்களும், செயல்களும் பண்புடைமை எனப்படும். மனிதன் என்பதற்குக் கை, கால், கண் இவை தக்கன வாக அமைந்தால் மட்டும் போதாது; நற்பண்புகளும், செயலும் அவனிடம் அமைவதே மனிதன் என்பதற்கு வேண்டிய அடையாளங்களாகும். நீதியும் நன்மையும் நிலவச் செயல்படுவார் பண் புடையார் எனப்படுவர். அவர்களை உலகம் பாராட்டும். பகைவனாயினும் அவனை நகைத்துப் பேசாதே; விளையாட்டுக்குக் கூட மற்றவர்களை எள்ளிப் பேசி விடாதே, அஃது உன் பண்பைக் கெடுத்துவிடும். பண்புடையார் இருப்பதனால்தான் இந்த உலகம் வாழும் தகுதி பெற்றிருக்கிறது; இல்லாவிட்டால் மண் புகுந்து புரையோடிப்போகும். அரம்போலும் கூரிய அறிவு படைத்தவராக இருக்கலாம்; மக்கட் பண்பு இல்லாதவர் மரம் போல்வர் ஆவர்; நல்லுணர்வு அற்றவராகக் கருதப்படுவர். பகைவனாக இருந்தாலும் அவனிடம் நகைமுகம் காட்டுவது நற்பண்பு ஆகும்; பண்பு கெட எந்தத் தீமையும் செய்யக்கூடாது. சிரித்துப் பழகுவது சீர்மை பயக்கும்; நகைத்து மகிழ முடியாதவர்க்கு உலகம் பகலாயினும் இருட்டாகத்தான் தெரியும். பண்பு இல்லாதவன் செல்வம் மிகுதியாகப் பெற்றிருந்தாலும் அது பயன்படாது; களிம்பு பொருந்திய கலத்தில் பால் பெய்தால் அது யாருக்கும் பயன்படாது; திரிந்து கெட்டுவிடும். 101. நன்றியில் செல்வம் பணம் இருக்கிறது; ஆனால் அவன் அதனை அனுபவிப்பது இல்லை; செத்தவனுக்கும் இவனுக்கும் என்ன வேறுபாடு இருக்கிறது? தானும் உண்ணப்போவது இல்லை; பிறர்க்கும் உதவப் போவதும் இல்லை. நன்மைக்குப் பயன்படாத செல்வம்; மதிக்கத்தக்கது அன்று. பணம்தான் எல்லாம்; அஃது இருந்தால் வேறு எதுவும் தேவையே இல்லை என்ற தவறான கருத்து உடையவர் பலர் இருக்கிறார்கள். அவர்கள் யாருக்கும் எந்த உதவியும் செய்ய முன்வர மாட்டார்கள். அவர்கள் நிலத்துக்குச் சுமை. இந்தப் பணப்பித்து உனக்கு இருந்தால் பணத்தை நீயே வைத்துக்கொள்; பணம் உடையவன் என்று பெருமை பேசிக்கொண்டே இரு; உதவாக்கரையாக வாழ்ந்து உளுத்துப் போக வேண்டியதுதான். இரும்புப் பெட்டியில் இருதயம் வைத்தால் உன் வாழ்வு துருப்பிடித்துத்தான் போகும்; ஈட்டு; அதனை மற்றவர்க்கும் தந்து புகழை நாட்டு; அப்பொழுது அமையும் உன் வாழ்வு மற்றவர்க்குச் சிறந்த எடுத்துக்காட்டு. ஏனய்யா நீமட்டும் சாப்பிடுகிறாய்? யாருக்கும் தர மாட்டாய்? உன் பின்னால் உன்னைப்பற்றிப் பேசுவதற்கு என்னதான் வைத்துவிட்டுப் போகப் போகிறாய்? கொடுத்தாய் என்று நற்புகழ் உனக்கு நல்லது. ஈக, ஈட்டுக புகழை. மற்றவருக்கும் கொடு; நீயும் சாப்பிடு. இவை இரண்டும் இல்லையென்றால் அடுக்கிய கோடி உனக்கு இருந்தாலும் உன் வாழ்வு பயன் இல்லை. யாருக்கும் கொடுத்து உதவாத பெருஞ் செல்வம் உனக்கே தீமையை உண்டாக்கிவிடும். உன்னால் பணம் வைத்துக்கொண்டு சும்மா இருக்க முடியாது; தீய வழிகளில் செல்ல அவை உன்னைத் தூண்டிவிடும். இல்லாதவர்க்கு ஈயாத பெருஞ்செல்வம் அதனால் பயன் யாது? மிகவும் அழகிதான்; இளம் நலம் வாய்ந்தவள் தான்; ஆனாலும் யாருமே அவளை வைத்து வாழவில்லை; பூத்துக் காய்க்காத வாழ்வு; தனியளாக வாழ்ந்து முதிர்ந்து போகிறாள்; அம் முதிர்கன்னி எதனை அனுபவித்தாள்; அந்த கதிதான் உனக்கும். ஊர் நடுவே நச்சுமரம் பழுத்து இருக்கிறது; யாருக்கு என்ன நன்மை? அதனிடம் செல்லவே அச்சம் கொள்வர். அதேபோலத்தான் யாரும் நெருங்க முடியாதபடி சேர்த்து வைக்கும் பணம் யாருக்கும் பயன்படாது; பிறரை வாட்டி ஈட்டிய பொருள் அதனை வந்து கொள்ளையடித்துச் செல்வர் அஃது அவனுக்குப் பயன்படாமல் போகும். சீர் பெற்ற செல்வம் சிலருக்கு ஏதோ காலக் கேட்டினால் குறைந்து போகலாம்; வருவாய் தடைபட்டிருக்கலாம். அது மழை காலத்தில் பெய்யவில்லை என்பது தான் பொருள்; அந்த வறுமை நிலை நீடித்து இருக்காது; மழை மறுபடியும் பெய்யத்தான் செய்யும்; அவன் வாழ்வு தழைக்காமல் இருக்காது. 102. நாண் உடைமை நாணம் என்பது மகளிரிடம் எதிர்பார்ப்பது; ஆடவர் முன்வர அவர்கள் வெட்கம் காட்டுவர்; அந்தத் தயக்கம் அவர்களுக்கு அழகு சேர்க்கும். ஆண்களுக்கும் நாணம் வேண்டும். இது பெண் கொள்ளும் நாணத்துக்கு மாறு பட்டது. செய்யும் தொழில் மட்டம்எனில் அதை அணுக அஞ்சுவர்; தாழ்வான தொழிலை அவர்கள் ஏற்க மறுத்து ஒதுங்குவர். இதுவே ஆண்கள்பால் எதிர்பார்க்கப்படும் நாணம், இஃது ஆடவர் மகளிர் இருவருக்கும் தேவையான பண்பு. உண்ணும் உணவு, உடுத்தும் உடை; ஏனைய வசதிகள் மாந்தர்க்கு அடிப்படைப் பொதுக் தேவைகள்: இவற்றில் வேறுபாடுகள் இல்லை. நாண் உடைமையே மாந்தர்க்குச் சிறப்புத் தருவதாகும். தவறு செய்யப் பின்வாங்கும் நல்லியல்பு அவர்களுக்குப் பெருமை சேர்க்கிறது. உடம்புக்கு உணவு தேவை. அதுபோலச் சான்றாண்மைக்கு நாணம் அடிப்படையாகும். நாண் உடைமை அவர்கள் அணிகலம் ஆகும். அது மட்டும் அன்று; நாண் இல்லை என்றால் அவர்கள் பெருமித நடை அவர்களுக்குப் பிணியாகும். பிறருக்கு ஏற்படும் பழிக்கும் தனக்கு அதனால் உண்டாகும் இழிவுக்கும் ஒப்ப நாணுபவரே சான்றோர் எனக் கொள்ளப்படுவர். “பழி மற்றவர்களைச் சாரும்; நாம் தப்பித்துக் கொள்ளலாம்” என்று தவறு செய்வதும் பிழை ஆகும். நாண்மா நாணயமா என்றால் நாணத்தையே நல்லோர் ஏற்பர். காசு இன்று இருக்கும்; நாளை போகும்; அதனை ஏற்பது மாசு, நாணமே மக்கள் வாழ்வுக்கு ஆசு; அதனால் இல்லை அவர்களுக்குப் பிறர் கூறும் ஏசு. நாணத்தை மேற்கொள்பவர் உயிரையும் நாணத்தின் பொருட்டுத் துறப்பர்; உயிருக்காக நாணத்தைத் துறக்க மாட்டார். உயிரைவிட நாணம்தான் அவர்களுக்குப் பெரிது. பிறர் நாணத்தக்க செயலுக்குத் தான் நாணாவிட்டால் அறமே வெட்கித் தலைகுனிய வேண்டியதுதான். அறம் தாழ்ந்துவிடும்; ஒழுக்கம் கெட்டால் குடி கெட்டுவிடும்; குலம் தாழும்; நாணம் கெட்டால் நன்மைகள் அழிந்து விடும். நாணம் உள்ளத்தில் இல்லாமல் இருப்பவர் நடமாட்டம், மரப்பாவை கயிறுகொண்டு ஆடுவது போன்றது ஆகும். இயக்கம் இருக்கும்; உயிர் இருக்காது. 103. குடிசெயல் வகை குடிப்பெருமை என்பது அதில் பிறந்த மகன் செய்யும் நற்செயல்களைப் பொறுத்தது ஆகும். தனக்கு உள்ள புகழ், செல்வம், கல்வி இவை போதும் என்று ஒதுங்கிவிடக் கூடாது. குடும்பம் என்பது ஆலமரம் போன்றது, அதனில் ஒதுங்கி வாழ்பவர் பலர்; சிலருக்குத் திறமை இருக்கலாம். சிலருக்கு வாய்ப்பு இல்லாமல் போகலாம். வாய்ப்புகள் ஒருசிலருக்கே அமைகின்றன. அவர்கள் தன்னலம் கருதாது குடும்ப நலம் கருதி உழைப்பது கடமையாகும். “எனக்கு என்ன வந்தது? எது எக்கேடு கெட்டாலும் கெட்டுப் போகட்டும்” என்பவன் கடமையில் இருந்து நெகிழ்பவன் ஆகிறான். கருமம் செய்வது தன் கடமை என்று எவன் கொள்கிறானோ அவனே விரும்பத் தக்கவன்; பெருமைக்கு உரியவன் ஆகிறான். விடாமுயற்சியும், கடின உழைப்பும், நிறைந்த அறிவும் குடியை உயர்வு பெறச் செய்யத் தேவையாகும். குடியை உயர்த்துவேன் என்று முற்பட்டுச் செயலில் இறங்கினால் தெய்வமும் அவனுக்கு உறுதுணையாக நின்று உதவி செய்யும். அஃது அவனை வந்து தாங்கிக் கொள்ளும். அவனுக்குத் தான் மேற்கொண்ட காரியம் சிரமம் இன்றி எளிதில் கைகூடிவிடும். 11 நேர்வழியில் உழைத்துக்குடியை உயர்த்துபவனை உலகம் உயர்த்திப் பாராட்டும். நல்ல ஆளுமை என்பது ஒருவனுக்குத் தான் பிறந்த குடியை உயர்த்தும் தன்மையை ஒட்டியது ஆகும். போர்க்களத்தில் வீரர்க்கே பெருமை; வீட்டுச் சூழலில் எதனையும் தன் மேலே போட்டுக்கொண்டு தயங்காமல் உழைப்பவனையே எதிர்பார்த்து நிற்பர். “எப்பொழுது செய்வது?” என்று காலம் கருதிக் காத்துக் கொண்டிருக்க மாட்டான். பருவம் அவனுக்குத் தேவை இல்லை; “பிறகு பார்த்துக் கொள்ளலாம்” என்று சோம்பிக் கிடப்பவர்க்கு எந்த நன்மையும் கிடைக்காது. “நானா வேலை செய்வது? எனக்கு இஃது அவமானம்” என்று நடப்பது தக்கது ஆகாது; குடும்பத்துக்குத் தொடர்ந்து உழைப்பவன் துயரங்களைத் தடுக்கும் கவசம் போன்றவன் ஆவான். அடுத்துத் தாங்கும் ஆள் இல்லாத குடும்பம் துன்பம் வந்தால் சரிந்துவிடும். 104. உழவு எப்படிச் சுற்றி வந்தாலும் உழவுத் தொழிலைத்தான் நம்பி உலகம் வாழ வேண்டி இருக்கிறது. உழவர்கள் வண்டிக்கு இருகபோன்றவர்கள்; அவர்கள்தாம் மற்ற எல்லோரையும் தாங்குகிறார்கள். நிலத்தை மூலதனமாகக் கொண்டு உழுபவர் யாரையும் தொழுது வாழ வேண்டியது இல்லை. இவர்கள் பிழைப்பு மற்றவர்களை எதிர்பார்ப்பது அன்று. உழவர்கள் தக்கபடி உழுது நெல் உற்பத்தி செய்தால்தான் நாட்டு அரசனும் தன் படைவீரர்களுக்குச் சோறு போட முடியும்; பிற நாட்டினர் வந்து தாக்கினால் எதிர்க்க முடியும். வீரம் தழைக்கப் பயிர்கள் ஈரம் செழிக்க வேண்டும். உழவன் மற்றவர் கையை எதிர்பார்ப்பதே இல்லை; இவன் மற்றவர்களுக்குக் கொடுப்பானே தவிர, இவன் கையேந்தி நிற்கமாட்டான். அவன் வேலை செய்யாமல் கையை மடக்கிவிட்டால் மற்றவர்கள் எல்லாம் மூலையில் முடங்கிக் கிடக்க வேண்டியதுதான். ஆழ உழுதல் வேண்டும்; அதனைவிடத் தக்க எரு இடுவது அவசியம். எரு இடுவதனைவிட நிலத்தைப் பண்படுத்த வேண்டும். புழுதியை நன்றாக உலர்த்த வேண்டும். நிலத்து மண் ஈரம் போக்க வேண்டும். அப்படிக் காயப்போட்டால் எருக் கூடத் தேவையே இருக்காது. நாற்று நட்டுக் களை எடுத்தபின் நீர் பாய்ச்ச வேண்டும். பயிரைச் சுற்றி வேலி இட்டுக் காக்க வேண்டும். நிலத்தை அவ்வப்பொழுது அதற்கு உரியவன் சென்று கவனித்துக்கொள்ள வேண்டும். மனைவிகூடக் கவனிக்கா விட்டால் ஊடல் கொள்வாள். நிலமும் அப்படித்தான்; அது விளைச்சல் தாராது. இந்த நாட்டிலே பல பேர் வேலைவெட்டி இல்லாமல் திரிகிறார்கள். “கேட்டால் வேலை கிடைக்கவில்லை” என்று கூறுகிறார்கள். அவர்களைப் பார்த்து நிலம் என்னும் நங்கை சிரிக்கிறாள். “தடிப்பசங்களா நான் இருக்கிறேன்; என்னை வந்து உழுங்கள்; நான் விளைச்சல தருகிறேன்” என்று கூறி அவர்கள் சோம்பலை எள்ளி நகையாடுகிறாள். வியர்வை துளிர்க்க உழைத்தால் பயிர்வகை ஏன் தளிர்க்காமல் போகாது; உயிர் வாழ வழியா இல்லை; உழவுத் தொழில் உயர்வு தரும். 105. நல்குரவு வறுமை மிகவும் கொடியது; அதனை விடக் கொடியது வேறு ஒன்றும் இருக்க முடியாது. இல்லாமை என்னும் இந்தப் பாவகாரணி இம்மையும் வரும்; மறுமையும் தொடர்ந்து வரும். குடிப் புகழையும் குடிப் பண்பையும் இந்த வறுமை கெடுத்துவிடும். நற்குடிப் பிறந்தவரையும் நலிவுறச் செய்வது வறுமை; அவர்தம் சொற்களில் உறுதி நிற்காது; சோர்வு ஏற்படும். வறுமைதான் துன்பங்களுக்குத் தாய். எல்லாத் துன்பங்களுக்கும் இதுவே தொடக்கம் என்று கூறுவர். நற்பொருளை நன்கு உணர்ந்து சொன்னாலும் அவன் சொற்பொருள் எடுபடாது. அறம் சாராத வறுமையைத் தாயும் வெறுப்பாள்; அவனை அந்நியனாகக் கருதுவாள். நேற்று வந்த நெருப்புப் போன்ற வறுமை இன்றும் வந்து வாட்டுமோ என்ற கவலையை அஃது உண்டாக்குகிறது. நெருப்பிலும் தூங்க முடியும்; அது வெறும் சதையைத் தான் எரிக்கும். இஃது அவன் கதையையே மாற்றிவிடும். வறுமை வந்த பிறகு வீடு எதற்கு? வாசல் எதற்கு? அனைத்தையும் விட்டுவிட்டுச் சந்நியாசியாகி விடுக. மற்றவர்கள் உள்ளவர்களைக் கவனித்துக் கொள்வர். அனாதை இல்லத்தில் சேர்ப்பதற்குப் பிறர் அக்கறை காட்டுவர். 106. இரவு (இரக்கம் தோன்றக் கேட்பது) தேவைப்பட்டால் இரப்பதில் தவறு இல்லை, கேட்டும் மறுத்தால் தவறு மறுப்பவர்களைச் சாரும். இரப்பது ஒரு சுமை அன்று; அஃது ஈவானைப் பொறுத்தது; அதனால் வரும் நன்மை தவிர்க்கத்தக்கது அன்று. இரப்பதற்காக வெட்கப்படத் தேவை இல்லை; புரப்பார் இருந்தால் இரப்பதும் ஓர் அழகே. “இரத்தல் இழிவு; ஈதல் உயர்வு” என்று கருதத்தக்கது அன்று; இது கொடுக்கல் வாங்கல் போன்றது. தருபவர் இருப்பதால்தான் பெறுபவரும் துணிந்து கேட்கின்றனர்; கொடைப் பண்பு இன்னும் மறையவில்லை. அதனால்தான் உலக நடைமுறை இயங்குகிறது. ஈயும் இயல்பினரைக் கண்டால் இரப்பவரது வறுமை ஓய்வு கொள்ளும் அதனால் வரும் துன்பங்கள் மாயும். இகழ்ந்து எள்ளாமல் தருபவரைக் கண்டால் இரப்பவனின் உள்ளம் மகிழ்ச்சியில் துள்ளும்; உள்ளுக்குள் மகிழ்வான். இரப்பவரே இல்லை என்றால் இந்த உலகம் மரப் பாவையைக் கொண்டதாக விளங்கும்; அவர்கள் இயக்கம் அதில் உயிர்மை இருக்காது; கயிற்றில் இழுக்கப்படுவது போல் அமைந்துவிடும். ஈவார் புகழ் பெறக் காரணமாக இருப்பதே ஈகையால் தான். இரப்பு இல்லை என்றால் புகழின் பரப்பே கிடையாது. இரப்பவனுக்கு எந்தச் சூழ்நிலையிலும் சினம் வரக் கூடாது; மறுத்தால் எரிச்சல் காட்டக்கூடாது; அவனுடைய வறுமைத் துன்பம் அவனுக்கு அறிவு புகட்டும் ஆசானாக அமையும். 107. இரவு அச்சம் இரத்தல் தேவையை ஒட்டிதான்; என்றாலும் அதனை நியதியாகக் கொள்வது நன்மைதராது. இயன்றவரை ‘ஈக’ என்று கேளாதிருப்பது உயர்ந்த கொள்கையாகும். இரந்துதான் உயிர் வாழவேண்டும் என்ற கட்டாயம் ஏற்படுமானால் இந்த விதிக்குக் காரணமான படைப்பின் முதல்வன் கெடுவானாக; புரட்சி ஓங்குக. இரந்துதான் வாழவேண்டும் என்ற கட்டாயத்திற்குள் தள்ளப்பட்டால் அதனைவிடக் கொடுமை வேறு ஒன்றும் இருக்க முடியாது. அந்த நிலைமை வரக்கூடாது. வயிற்றுக்குச் சோறு என்று பயிற்றிக் கூறுவதும் ஒப்புக் கொள்ள முடியாத ஒன்று ஆகும். பசித்தாலும் புலி புல்லைத் தின்னாது. கூழ் ஆனாலும் உழைத்து உண்பதில் தனி மகிழ்ச்சி உண்டு. அதனைவிட வேறு இன்பம் இருக்க முடியாது. பகவுக்கு நீர் வேண்டும் என்று கேட்டாலும் அது பிழைதான்; அது கேட்ட நாவுக்கு இழிவு உண்டாக்கும். மறுக்கும் உலோபிகளிடம் மட்டும் தயவு செய்து போய்க் கேட்காதீர்கள். இரப்பவருக்கு அது பெருத்த அவமானமாகும். கடலில் அலைவுறும் மரக்கலம் போன்றது எளியவரின் தாழ்வு; அவர்கள் வாழ்வு பாறையில் மோதக் கூடாது. ஈயாதவர்கள் பாறை போன்றவர்கள். இரப்பாரின் துயரத்தைக் கண்டால் கல்லும் கரைந்து விடும்; மனம் உருகும்; ஈயாதவரின் கரவுள்ளத்தைக் கண்டால் மனம் கருகும். இரப்பவன் உயிர் நடுங்கும்; ஈயாதவர் இல்லை என்று கூறும்போது அவன் நடுங்குவதே இல்லை; அஃது எப்படி? வியப்பாகத்தான் இருக்கிறது. 108. கயமை கயமை என்பது சூழ்ச்சியால் எதனையும் சாதிப்பது என்று கூறலாம். அறக்கொள்கைகளைக் காற்றில் பறக்க விட்டுக் கீழ்மையாக நடந்துகொள்வது கயமை என்றும் கூறலாம். நாடகங்களில் கதாநாயகன் நன்மைக்குப் போராடுவான்; தீமைகளைத் தொடர்ந்து செய்பவனை ‘வில்லன்’ என்று கூறுவர். பொதுவாக அவன் மிகவும் கொடியவனாகத்தான் இருப்பான். இவர்கள் பொதுவாக முரடர்களாக இருப்பார்கள். இங்கே கயமை என்பது, ‘வில்லன்’ என்று குறிப்பிடப்படும் தீயவனை அன்று; நல்லவர்களைப் போல் தோற்றமளித்து மறைவாகத் தீமைகளைச் செய்துகொண்டு வாழ்பவரையே குறிப்பிடும். இந்தக் கயவர்களை எளிதில் அடையாளம் கண்டு கொள்ள முடியாது; இவர்கள் எப்படியாவது தாம் வாழ்ந்தால் போதும் என்று மற்றவர்களைக் காட்டிக் கொடுத்துவிட்டுத் தாம் தப்பித்துக்கொள்வார்கள். நடிப்பு இவர்களிடம் அதிகமாக இருக்கும். இவர்கள் மிகப் பெரிய மனிதர்கள்; தேவர்களைப் போன்றவர்கள்; தேவர்கள் தாம் கருதியதை எப்படியும் அடைந்தே தீர்வார்கள்; இன்பம்தான் அவர்களுக்குக் குறிக்கோள். விருப்பப்படி நடந்துகொண்டு எதனையும் சாதிப்பதில் இவர்கள் தேவர்களைப் போன்றவர். மனச்சான்று என்பது இவர்கள் வளர்த்துக்கொள்வது இல்லை; பிறர்க்குத் தீமை செய்யும்போது அதற்காக வருத்தப்படவே மாட்டார்கள். மனத்தில் எந்தக் கவலையும் கொள்ள மாட்டார்கள்; பிறரைக் கெடுப்பதே தான் முன்னேறும் வழி எனக் கண்டவர்கள். கயவர்கள் தம்மைவிட அதிகாரம் மிக்கவர்களைக் கண்டால் தாழ்ந்து போவார்கள்; அவர்கள் இடும் கட்டளை களை மறுக்கமாட்டார்கள்; தம்மினும் மிகவும் தாழ்ந்தவர்களைக் கண்டால் அவர்கள்மீது ஆதிக்கம் செலுத்துவார்கள்; மருட்டுவார்கள்; கடிந்து பேசுவார்கள்; வாட்டுவார்கள். அச்சத்தின் காரணமாக ஆசாரம் உடையவர்கள்போல் நடந்துகொள்வார்கள்; நன்மைகள் உண்டாகுமானால் அந்த ஆசாரங்களை உடனே கைவிட்டுவிடுவர். தமக்குத் தெரிந்த இரகசியச் செய்களை எல்லாம் பலரும் அறிய வெளியிடுவர்; பறை அடிப்பதுபோல அங்கங்கே சொல்லித் திரிவர். இஃது அவர்கள் நடவடிக்கை. மனம் விரும்பி எச்சில கையால் கூடக் காக்கையை ஒட்டமாட்டார்கள் அதன் சோற்றுப் பருக்கையை அது தின்று விடும் என்பதால். அடி உதை என்றால் உடனே படிந்து விடுவார்கள்; சான்றோர்கள் சொன்னால் கேட்பார்கள்; பயன்படுவர்; கயவர் “கொல்லுகிறேன்” என்றால்தான் அஞ்சி அடங்கிப் பயன்படுவர். உதைத்தால்தான் ஒழுங்குக்கு வருவார்கள். கரும்பைக் கசக்கிப் பிழிந்தால் தான் சாறு வெளிப்படும். அடித்து உதைத்தால்தான் இவர்கள் குற்றத்தை ஒப்புக்கொள்வார்கள்; திருந்துவார்கள். நல்ல முறையில் சொன்னால் இவர்கள் வழிக்கு வர மாட்டார்கள். பிறர் நன்றாக இருந்தால் இவர்களால் தாங்கிக்கொள்ள முடியாது. வெள்ளையாக உடுத்திவருவதைப் பார்த்தால் அவர்கள் உள்ளம் வெந்து எரியும். மற்றவர்கள் மேன்மை அடைந்தால் இவர்கள் பொறுக்க மாட்டார்கள். அவர்களைக் கெடுப்பது எப்படி என்று சூழ்ச்சி செய்துகொண்டே இருப்பார்கள். கயவர் நம்பிக்கைக்கு உரியவர் அல்லர், ஒரு நன்மை கிடைக்கிறது என்றால் உடனே தம்மை விற்றுவிடுவர்; தன்மானம் இழந்துவிடுவர்; எந்தத் தீமையும் செய்ய முன் வருவர். கொள்கை அற்றவர்கள் இவர்கள். 3. காமத்துப்பால் அன்பின் ஐந்திணை பொருள் அகம், புறம் என இருவகைப்படும்; அகம் என்பது இன்னது என்று வெளிப்படுத்த இயலாத காதலின்பம்; புறம் என்பது ஊர் பெயர் குறிப்பிடப்பட்டு நடக்கும் உலகத்து நிகழ்ச்சிகள். அகத்தைக் கூறுவது அகப் பொருள் என்பர். இதனை அன்பின் ஐந்திணை என்றும் கூறுவர். மன மொத்த காதலை ஐந்திணை என்று கூறுவர்; ஒருதலைக் காதலைக் கைக்கிளை என்று கூறுவர். பொருந்தாக் காதலைப் பெருந்திணை என்று கூறுவர். ஈண்டு அன்பின் ஐந்திணையே கூறப்படுகிறது. காதல் ஒழுக்கம் களவியல், கற்பியல் என்ற பாகுபாடுகளைக் கொண்டது. மணம் நடைபெறுமுன் ஏற்படும் சந்திப்புகளும், கூட்டமும், பிரிவும் களவு ஒழுக்கம் எனக் கூறப்படும். மணமானபின் ஏற்புடும் பிரிவுகளையும், மீண்டும் அவர்கள் கூடி இன்புற்று வாழ்தலையும் கற்பியல் என்று கூறுவர். கற்பியலில் ஊடல் நிகழும். இச் செய்திகளையே வள்ளுவர் காமத்துப் பாலில் 25 அதிகாரங்களில் கூறுகிறார். இருவரும் முதன்முதலில் சந்திக்கும் சந்திப்பில் நிகழ்ச்சிகள் அமைகின்றன. உரையாடல்கள் நாடகப்பாங்கில் தலைவன் கூற்றாகவும், தலைவி கூற்றாகவும், கவிஞன் கூற்றாகவும் இடம் பெறுகின்றன. களவியல் 109. தகை அணங்கு உறுத்தல் (தலைவியின் அழகு தன்னை வருத்தியதாக அறிவுறுத்தல்) தலைவன் கூற்று “சோலையில் சொக்கிப் போகத் தக்க அழகியைத் தலைவன் தனிமையில் காண்கிறான்; அவன் தான் கண்ட காட்சியையும், அதனால் ஏற்பட்ட மருட்சியையும் விவரிக்கின்றான்”. “இந்த அழகி யார்? என்னை வருத்துகிறாள். மாநிலப் பெண்ணா? தேவ மகளா? மயிலியல் இவளிடம் வந்து பயில்வு பெறுகிறது. இவள் சாயல் என்னை மயக்குகிறது.” “என் விழிகள் அவள் விழிகளைச் சந்திக்கின்றன; அவள் எதிர்நோக்கினாள்; நான் அதிர்ந்துவிட்டேன். படை கொண்டு தாக்கியதைப் போல இருந்தது.” “கூற்றுவன் கொடியவன் என்பதனை முன்பு அறிந்தது இல்லை. இன்று அவன் பெண்வடிவில் வந்து என்னைப் பேதைமைப்படுத்திவிட்டான். என் விழிகள் அவள் அழகைப் பருகின. அவள் பார்வை என் உயிரையே பருகுகிறது.” “தாக்குவதால் கூற்றுவனையும், மயக்குவதால் பெண் மானையும் நிகர்க்கும் அவள் கண்கள் எனக்கு அருளுவதால் பெண்மையையும் பெற்றிருக்கிறது." “அவள் கண்களுக்குமேல் புருவங்கள் வளைந்து எங்கள் இருவருக்கும் இடையே இடப்பட்ட கேடயமாக விளங்குகிறது. அஃது அவள் பார்வையின் கூர்மைக்குத் தடுப்பாக உள்ளது.” “அவள் தாவணி அணிந்திருக்கிறாள். அஃது என்னைத் தாவி அணைக்காமல் தடுத்து நிறுத்துகிறது யானைக்கு முகபடாம் ஏன் அணிவிக்கிறார்கள்? என்பது இப்பொழுது தான் விளங்குகிறது. “களம் கண்ட வீரன் நான்; அவள் என் உளம் கொண்டு விட்டாள்; பீடு அழிந்து நிற்கின்றேன்; அவள் காதலுக்கு என் பெருமையை ஈடு கொடுத்துவிட்டேன்.” “அவள் நாணமும், மான்போன்று மருளும் பார்வையும் அவளுக்கு அழகைத் தருகின்றன. கூடுதலாக அணிகலன்கள் வேறு எதற்கு அணிகிறார்கள்? நகை அவளுக்கு மிகை.” “கள் உண்டால்தான் மயக்கும்; காதல்! அது கண்டாலே போதை தருகிறது. வெறி ஊட்டுவதில் இரண்டும் நிகர் என்று கூறலாம்.” 110. குறிப்பு அறிதல் தலைவன் கூற்று “காதல் நோயை உண்டாக்கியதும் அவள் பார்வை தான்; வேதனைப்படுத்தியதும் அதன் விளைவுதான். பின் காதலைத் தொடர்ந்து செய்ய உதவியதும் மீண்டும் அவள் பார்த்த பார்வையே. இருநோக்கு இவள்கண் உள்ளது. ஒன்று நோய் நோக்கு மற்றொன்று அது தீர்க்கும் மருந்து.” “அவள் என்னைப் பார்த்த பார்வை கள்ளப் பார்வை; அஃது என் உள்ளத்தைக் கொள்ளை கொண்டுவிட்டது. அவள் என்னைத் தொடர்ந்து பார்க்கவில்லை; மின்வெட்டு தான். அதற்கே என் நெஞ்சு கட்டு அவிழ்ந்துவிட்டது; அது காமத்தின் சரிபாகம் அன்று; பாதிக்குமேல் அவள் சாதித்து விட்டாள்.” “அவள் என்னை நோக்கினாள்; நோக்கித் தலை குனிந்தாள், அஃது அவள் வளர்க்கின்ற காதற்பயிருக்கு வார்த்த தண்ணிராகும்”. “யான் அவளைப் பார்க்கும்போது அவள் நிலத்தைப் பார்த்தாள்; யான் நோக்காதபோது அவள் தான் நோக்கி மெல்லச் சிரித்தாள்”. “என்னைக் குறிக்கொண்டு நேரே நோக்குவாள் என்று எதிர்பார்த்தேன். அவள் ஒரு கண் சிறக்கணித்தாற் போலக் கோணல் பார்வையோடு என்னைப் பார்த்துச் சிரித்தாள்.” “அவள் பேசியது கடுஞ்சொல்தான்; அன்பு இல்லாதவள் போல் பேசினாள்; ஆனால் அது சுடு சொல்லாகப் படவில்லை. எனக்கு அஃது இதமே தந்தது.” “நடிப்பில் வல்லவளாக இருந்தாள்; கோபத்தில் துடிப்புக் காணப்பட்டது; ஆனால் அடிப்படையில் அவள் உள்ளத்தில் சினமே இல்லை; நெஞ்சில் கனமே இல்லை. பகைத்தவர் போலப் பார்த்த அவள் பார்வை நகைத்தது; என்னோடு உறவாடியது. அவள் அசைந்து நடப்பதிலே ஓர் அழகு இருந்தது; அதனோடு புன்முறுவலும் சேர்ந்து புதுமுருகு தந்தது; என் நெஞ்சை உருகச் செய்தது.” “முன்பின் அறியாதவள்போல் அன்பின் உளத்தினள்; என்னைப் பொதுநோக்கில் பார்த்தாள்; மற்றவர் அவள் உள்ளக் குறிப்பை அறியமுடியாதபடி மறைத்துக் கொண்டாள். ஏதிலார்போலப் பொதுநோக்கு நோக்குதல் காதலரிடத்தே உள்ளது.” “கண்ணோடு கண்ணிணை நோக்கு ஒத்துப் போனால் வாய்ச்சொற்களுக்கே வேலை இல்லை; மவுனகீதம் பாடின அவள் கண்கள்; அவள் மனக்குறிப்பை விழியாலேயே உணர்த்திவிட்டாள்.” 111. புணர்ச்சி மகிழ்தல் தலைவன் கூற்று “இஃது அவள் முதற் சந்திப்பு: அவளைப் பார்ப்பதே இன்பம்; அவள் பேசுவதைக் கேட்பதில் இன்பம்; அவள் இதழ்ச்சுவை தேன்; சுவைத்தேன். முகர்வதற்கு அவள் பூ மணம்; தொட்டால் துவள்கிறாள்; அணைத்துக் கொண்டாள்; அடடா இன்பத்தின் எல்லை. கண்டு, கேட்டு, உண்டு, உயிர்த்து, உற்று அறியும் ஐம்புல இன்பமும் என் பேரழகியிடம் காண்கிறேன். புலனை அடக்கினால் புத்தி தெளியும் என்பர்; அதனை முடக்காமல் அவளை அடைந்தால் ஐந்து புலன்களுக்கும் இன்பம் கிடைக்கிறது. இங்கே புலன்கள் ஒருமுகமாக அடங்கிப் புகுமுகம் புரிந்து புது இன்பம் பெறுகிறது. புலன்கள் அவளிடத்தில் அடங்கிவிடுகின்றன. அவள் தரும் நலன்கள் இன்பப் பேறாக அமைகின்றன.” “கிள்ளியும் விடுகிறாள்; தொட்டிலை ஆட்டித் தூங்கவும் வைக்கிறாள். என்னைத் தூண்டியதும் அவளே: யான் வேண்டியது தருபவளும் அவளே. “தாமரைக்கண்ணாள் அவள் தோளில் துயில இடம் தந்தாள்; தாமரைக் கண்ணான் உலகு சுவர்க்க பூமி என்பார்கள்; இவள் தோள் தரும் இன்பத்திற்கு அஃது இணையாகாது.” “அவள் அருகில் இருந்தால் குளிர்கிறாள்; விலகி நின்றால் சுடுகிறாள்; இந்தத் தீ புதுமையானது. இந்தத் தீயை இவள் எப்படித்தான் பெற்றாளோ?” “வேட்கை உறும்போது எல்லாம் அவள் தோள்கள் தழுவ இடம் அளிக்கின்றன.” “அமிழ்தில் இயன்றவையோ என்று கூறும் படி என் உயிர் தளிர்க்கச் செய்கிறாள்; தோளைத் தொடும்போது எல்லாம் அவள் இனிமை தருகிறாள்.” “அவள் முயக்கு என்னை மயக்கும். ஒருவன் தன் வீட்டில் இருந்துகொண்டு தன் உழைப்பில் சாப்பிட்டுப் பிறர்க்கும் பகிர்ந்து உண்டு வாழும் மனநிறைவை இவள் மயக்கில் அடைகிறேன். அவர் தம் வீட்டில் இருந்து அவரவர் உழைப்பில் உண்பது அந்தச் சுகத்துக்கு எதுவும் நிகராகாது என்று நினைத்து வந்தேன்; அதே சுகத்தை அவள் தழுவலில் காண்கிறேன்.” “விரும்பும் இருவர் முயக்கில் காற்று இடை புகுதல் அதற்குத் தடையாகிறது. காற்றுப் புகும் இடை வெளியும் அவள் அணைப்பில் அமையாதபடி இணைந்து இன்பு எய்தினேன்.” “காதல் அணைப்பில் என்ன சுகம் காண்கிறாய்? இந்த வினாவுக்கு விடை இதுதான்; ஊடல்; அது மாறினால் கூடல்; இவை அல்லது வேறு சுகம் காதலின்பத்தில் காண்பது இல்லை." “நூல்களைக் கற்கும் தோறும் புதிய செய்திகள் கிடைத்துக் கொண்டே இருக்கும். புதிய சுவையும் தந்துகொண்டே இருக்கும். காமமும் அறியும்தோறும் புதுமை தருகிறது; அறிவதற்கு நிறைய உள்ளது என்று விருப்புத் தோன்றிக்கொண்டே இருக்கிறது. விழைவும் வேட்கையும் காதலுக்கு நுழை வாயில்கள்.” 112. நலம் புனைந்து உரைத்தல் (காதல் வெறி தலைக்கேறுகிறது; தலைவன் கவிஞன் ஆகிவிடுகிறான். கற்பனை நயம் அமைய அவன் உரையாடல்கள் இயங்குகின்றன.) “அனிச்ச மலர் மற்றைய எல்லாப் பூக்களையும் விட மெல்லிது என்று சொல்லி வந்தார்கள். அதனை உண்மை என்று நம்பிக் கொண்டிருந்தேன்; என் தலைவியின் மேனி அதனைத் தொட்டேன்! துவண்டாள்; இவள் மேனி அனிச்ச மலரைவிட மெல்லிது என்று உணர்கிறேன்.” “புதுப் பூ ஒன்று பூத்திருந்தது; அதனைப் பார்த்துக் கொண்டே நிற்கிறேன். அஃது என் தலைவியின் பொலிவைப் பெற்றிருக்கிறதா? என்று ஆராய்வேன். இப்பொழுது பூஞ்சோலைக்குப் போவது புதுப் பழக்கம் ஆகிவிட்டது. வாழ்க்கையை நேசிக்கிறேன்; பூக்கள் என்னைக் கவர்கின்றன. பூவையின் அழகை அவை காட்டுகின்றன.” “மாந்தளிர் போன்றது அவள் கரிய நிறத்து மேனி; முறுவல் வெண்முத்து; அவள் மேனியில் தோன்றும் மணம் பூக்களை நினைவுபடுத்துகின்றன. விழி வேல்; தோள் மூங்கில்." “குவளை இவளைக் கண்டால் நாணி நிலம் நோக்கு கிறது; இவள் அழகிய கண்களுக்கு நிகராக மாட்டோம் என்று வெட்கப்பட்டு அது தலை சாய்க்கிறது.” “அனிச்சப் பூவைக் காம்பு களையாமல் சூடிக் கொண்டாள். எடை கூடி விட்டது. இடை சுமக்க முடியாமல் அவளை வருத்தியது.” ‘நட்சத்திரங்கள் தம் வானவெளியில் தம் தலைவனாகிய நிலவைத் தேடின. இவள் முக அழகைக் கண்டு திகைத்து நின்றுவிட்டன. முகம்நிலவு இவற்றிற்கு வேறுபாடே தெரியாமல் கலங்கி நின்றுவிட்டன. பின் அவற்றிற்குத் தெரிந்தது மதிக்கு மறு உண்டு; முகத்துக்கு மறு இல்லை என்பது; அதனால் தம் பதியாகிய நிலவினை அவை அடைந்தன.“ “மாதர் முகம்போல நிலவே நீ ஒளிவிட முயுமா? முடியாது. பேசாமல் ஒளிந்துகொள்; தலைகாட்டாதே. ஒளிவிட முடிந்தால் உன்னை நான் பாராட்டி வாழ்த்துவேன்.” “மலர் போன்ற கண்ணை உடைய மங்கை நல்லாளின் முகம் போல நீ ஒளிவிட விரும்பினால் நீ பலர் காண வெளியே வராதே; உனக்குப் பாதுகாவல் இருக்காது. பேரழகி என் தலைவி, அவள் முகம் அழகுக்கு நீ ஒவ்வமாட்டாய்; பலர்காண நீ வெளிப்பட்டுத் தோல்வி அடையாதே. “அனிச்சப்பூவும், அன்னத்தின் தூவியும் மிக மென்மை யானவை; எனினும் அவை என் தலைவியைப் பொறுத்த மட்டில் அவள் பாதங்களுக்கு நெருஞ்சிப் பழம்: முட்களையுடையது நெருஞ்சிப் பழம்.” 12 113. காதற் சிறப்பு உரைத்தல் (தலைவன் தலைவி இருவரும் காதலின் சிறப்பைப் பேசுகின்றனர்) தலைவன் கூற்று “அவள் வாய் இதழ்ச்சுவை தேன்; அது பாலொடு தேன் கலந்ததுபோல இருந்தது.” “எம் நட்புப் பிரிக்க முடியாதது; உடம்புக்கும் உயிருக்கும் உள்ள இயைபு அஃது என்று கூறுவேன்.” “கண்களில் உள்ள கருமணி சற்று விலகினால்தான் என் காதலிக்கு அங்குத் தங்க இடம் தர முடியும். அதனைச் சற்று ஒதுங்கச் சொல்ல வேண்டியதுதான்.” “சேரும்போது அவள் என்னை வாழ வைக்கிறாள்; பிரியும்போது என் உயிரே போய்விடும் போல இருக்கிறது. வாழ்வும் சாவும் அவள் கையில்தான் இருக்கின்றன.” ‘அவளை நினைக்க வேண்டுமென்றால் மறக்க வேண்டி உள்ளது; அவளை மறக்க இயலவில்லை.” தலைவி கூற்று “என் கண்களிலேயே காதலர் உறைகின்றார்; இமைத்தாலும் அதனால் அவர் துன்பப்படுவது இல்லை; மிகவும் நுட்பமானவர் என் காதலர்.” “மை இட்டு எழுதுவதில்லை; அவர் என் கண்விட்டு மறைந்துவிடுவார் என்பதனால்.” “சூடாக எதனையும் யான் குடிப்பது இல்லை; அவர் என் நெஞ்சில் தங்கி இருப்பதனால்." “கண் இமைத்தால் காதலர் மறைவார் என்பதனால் யான் உறங்குவது இல்லை; இதனை இந்த ஊரார் புரிந்து கொள்ளாமல் காதலர் பிரிவு அதனால்தான் யான் தூங்க வில்லை என்று பிழைபடப் பேசுகின்றனர்.” “என் உள்ளத்தில் அவர் உறைகிறார். இத்னை அறியாதவர்கள் கள்ளத்தில் அவர் பிரிந்துவிட்டார் என்று பேசுகிறார்கள்.” 114. நாணுத் துறவு உரைத்தல் (வெட்கம் விட்டுப் பேசுதல்) தலைவன் கூற்று “அன்றில் இணைந்து வாழும் பனைமரத்தைத் தடிந்து கொண்டுவந்து நிறுத்துவேன்; மடவேறுவதைத் தவிர அவளை அடைவதற்கு வழியே தென்படவில்லை. அதுவே தக்க வழியாகும்.” “ஆமாம்! வெட்கப்பட்டு என்ன பயன்? வெளியே சொல்லக்கூடாதுதான்; முடியவில்லையே! என் வீரம்: ஆண்மை எல்லாம் தோற்றுவிட்டன. வேறு வழியே இல்லை; மடலேற வேண்டியதுதான்.” “சின்னப் பெண்தான்; அந்தப் பேரழகி என்னைச் சீண்டிவிட்டாள். வேறு வழியில்லை; மடலேறுவது தவிர வேறு வழியே இல்லை. எந்த நேரமானாலும் எனக்கு என்ன? நடுயாமம் ஆனாலும் இந்த இடத்தைவிட்டு விலகப் போவது இல்லை." தலைவி கூற்று “ஆண்பிள்ளை மடல் ஏறலாம்; பெண்பிள்ளை ஏறக்கூடாது. இது மரபு! மடலேறாத பெண் மதிக்கத் தக்கவள்; அதனால் அடங்கி இருக்கிறேன்!” “மடல் ஏறாவிட்டால் போகிறது. மன்றம் ஏறி ஊரறியச் செய்வேன்; இருந்து இருந்து பார்த்தேன்; இவர் எந்த முயற்சியும் செய்வதுபோல இல்லை.” “பெண் கிரகலட்சுமி, வீட்டைவிட்டு வெளியே கால் அடி எடுத்து வைக்கக்கூடாது என்கிறார்கள். என்னைத் தான் கிரகம் ஆட்டிப் படைக்கிறதே. தெருவுக்கு வந்தால்தான் வழக்கே தோன்றும். பூட்டை உடைத்தாகிவிட்டது; கதவு திறக்க வேண்டியது. நாணம் விட்டாகிவிட்டது; நியாயம் அடைய வேண்டியதுதான், இந்த ஊரார் என் தனிமை கண்டு நகைப்பர்; அவர்கள் இனி என் செயல் கண்டு திகைப்பர்.” 115. அலர் அறிவுறுத்தல் தலைவன் கூற்று “உலையைத் தட்டுக்கொண்டு மூடி வைக்கிறோம். அது தாளம் போட்டுத் தன் கொதிப்பை வெளிக்குக் காட்டுகிறது. இனி மூடியை எடுத்துவிட வேண்டியதுதான்.” “அலர் எழுந்தால்தான் எங்கள் காதல் உறுதிபெறும். காதலுக்குச் சாரம் இருந்தால்மட்டும் போதாது; காரமும் வேண்டும். உப்பு இல்லாத பண்டம் குப்பையிலே. ‘கிசுகிசுப்பு’ இல்லை என்றால் எங்கள் காதல் ‘மசமசப்புக்கு’ அர்த்தமே இருக்காது.” “கள் குடிக்கக் குடிக்கப் போதை தரும்; காதல் பற்றிப் பேசப் பேச அது பரவுதலைப் பெறும். அலர் எழுந்தால் தான் காதல் மலர்ச்சியை மற்றவர்கள் அறிவார்கள். குடித்தவன் என்று பேசினால்தான் குடிக்கே பெருமை சேர்கிறது: காதல் படிந்தவர் என்றால்தான் எங்களுக்கும் பெருமை சேர்கிறது.” தலைவி கூற்று “யாருக்கும் தெரியக்கூடாது என்றுதான் இருட்டியதும் எங்கள் சந்திப்பை வைத்துக்கொள்வோம்; ஒரே ஒரு முறை இந்த ஊரார் கண்ணில் அகப்பட்டுக் கொண்டோம்; பிடித்தது சனியன்; எங்களை விட்டுவிட மறுக்கிறார்கள்; சந்திரனைப் பாம்பு கவ்விய செய்தியாக எங்கும் பேசத் தொடங்கிவிட்டார்கள்; வம்பு பேசுவதற்கு நாங்கள் அகப்பட்டுக் கொண்டோம்.” “எங்கள் காதலைக் கிளறிக்கொண்டே இருக்கிறார்கள்; அது காதற் பயிருக்கு இடும் எரு. அதனோடு சேர்த்து அன்னையின் கடுஞ்சொற்கள் பயிருக்குப் பாய்ச்சும் தண்ணீர் ஆகிவிட்டது.” “நெருப்பை நெய்கொண்டு அணைக்க முடியாது. எங்கள் காதலை இவர்கள் அலர் தூற்றுதல் மாற்றாது.” “அஞ்சாதே என்று உறுதிதந்தவர் இன்று அவர் எஞ்சாதே வருவது தவிர்த்தார். மிஞ்சாது அலர் தூற்றுதற்கு நான் நாண முடியாது; பணியமுடியாது.” “அலர் எங்களை இங்கே வாழவிடாமல் ஊரைவிட்டுத் துரத்துகிறது; உடன்போக்கு அதுதான் அடுத்த கட்டம். என் காதலர் அதற்கு உடன்படுவார். அதன்பின் அச்சிட்டு அழைப்பிதழ் தரவேண்டியதுதான்." கற்பியல் 116. பிரிவு ஆற்றாமை தலைவி கூற்று “பிரித்து செல்லவில்லை என்றால் அஃது எனக்கு உரை; சென்று திரும்புகிறேன் என்றால் வேறு எவளாவது ஒருத்தி காத்திருப்பாள்; அவளுக்குக் கூறிச் செல்க.” “முன்பு அவர் பார்வை இனிமையைச் செய்தது; அவர் அணைப்பு எனக்கு இப்பொழுது அதிர்ச்சியைத் தருகிறது.” “பிரியேன் என்று கூறிய சொற்கள் அவற்றை அவர் காப்பாற்றவில்லை; அவர் எது பேசினாலும் என்னால் இனி நம்பவே முடியாது.” “நம்பியது என் தவறு; அதற்கு உரிய தண்டனையை அனுபவிக்கிறேன்.” “புத்திசாலிகள் பிரிவுக்கு ஒப்புக்கொள்ளக் கூடாது; பிரிந்தபின் அவர் வருவார் என்று காத்திருப்பது மடமை யாகும்.” “பிரிவு உரைக்கும் கொடுமை அவரிடம் இருக்கிறது என்றால் அவர் எங்கே எனக்காக இரக்கம் காட்டி வரப் போகிறார்?” “அவர் பிரிவை என் கைவளையல்கள் நெகிழ்ந்து பிறருக்கு அறிவிக்கின்றன. அவற்றை எப்படித் தடுக்க முடியும்?" “சொந்தக்காரர் இல்லாத புதிய ஊரில் குடி இருப்பது வெறுமையாகும்; தலைவன் இல்லாமல் இங்கே வாழ்வது சிறுமையாகும்.” “நெருப்புத் தொட்டால்தான் சுடுகிறது; காமம் விரும்பினாலே சுடுகிறது.” “என் நிலைமைதான் இப்படியோ என்னைப் போல் பிறரும் இவ்வாறு வேதனைப்படுகின்றனரோ? பிரிவு என்னைத்தான் வாட்டுகிறதா? பெண்களையே இவ்வாறு இது வருத்துகிறதா?” 117. படர் மெலிந்திரங்கல் (துன்பத்தால் தலைவி வருந்திக் கூறுதல்) “என் துன்பத்தை மறைக்க முயல்கிறேன்; என் கண்ணீர் அதனை உரைப்பதற்கு முந்திக்கொள்கிறது.” “இதனை மறைக்கவும் முடியவில்லை; அவருக்கு எடுத்து உரைக்கவும் நாண வேண்டி இருக்கிறது.” “காமம் ஒரு பக்கம்; நாணம் மறுபக்கம்; இருபக்கம் தனித்தனியே இழுக்க நடுவில் யான் காவடித் தண்டுபோல் சுமக்க முடியாமல் நசுங்கிப் போகிறேன்.” “காமம் ஒரு கடல் என்றால் அதனைக் கடக்கும் தெப்பம் எதுவும் கிடைக்கவில்லை.” “காதலர் என் நண்பர்; நட்பாக இருக்கும்போது துயர் செய்கிறார் என்றால் பகையாக மாறினால் அவர் தரும் வேதனைக்கு அளவு உண்டோ?” “காமம் மகிழ்விக்கும்போது கடல் போன்றது; துயர் உறுத்தும்போதும் அது கடலைவிட மிக்கது.” “காமக்கடலைக் கடக்க வழி அறியேன்; யாமத்தும் ஏமம் இன்றித் துயில் இழந்து வருந்துகிறேன்.” “இரவு, அனைவரையும் துயிலச் செய்துவிட்டது; அதற்குத் துணை வேண்டுமே! அஃது என்னைத் தேடிக் கொள்கிறது.” “இரவு நீள்கிறது; என உயிர் மாள்கிறது. பிரிவு என்னை ஆள்கிறது.” “என் உள்ளம் காதலர் இருக்கும் இடம் தேடிச் சென்றுவிடுகிறது: கண்கள் என்னைவிட்டு நீங்காமல் தனியே வருந்திக் கண்ணிர் விட்டுக்கொண்டு இருக்கின்றன. மனத்தின் வாய்ப்புக் கண்களுக்கு இல்லை; தனிமை துயர் தருகிறது.” 118. கண் விதுப்பழிதல் (கண்ணீர்விட்டு வருந்துதல்) “கண்களே காதலரைச் சுட்டிக் காட்டியது; முதல் குற்றவாளி கண்கள்; அவை துன்பப்படட்டும், கண்ணிர் வடிக்கட்டும்.” ‘பின்விளைவை நோக்காது அவசரப்பட்டு அவரைப் பார்க்க முனைந்தன; இப்பொழுது அவரைப் பார்க்க இயலாமல் வருந்துகின்றன”. “கண் அவசரப்பட்டன; இன்று எள்ளல் பொருளாக மாறிவிட்டன; பிறர் நகைக்க இடம் தந்துவிட்டன.“ “கண்கள் நீர் வற்றிவிட்டன; அழவும் முடியாமல் அவதிப்படுகின்றன.” “உறக்கம் இன்றி என் கண்கள் துயர் உழக்கின்றன; இரக்கப்பட்டு என்ன பயன்?” “கண்கள் எனக்குத் துன்பம் விளைவித்தன. அவை இப்பொழுது வேதனைப்படுகின்றன; எனக்குத் துன்பம் செய்த கண்கள் வருந்துவதில் எனக்கு மகிழ்ச்சியே.” “விரும்பி அவரைக் காணச் சென்றன; இன்று உறக்க மின்றி வருந்துகின்றன; வருந்தட்டும்.” “சொல்வேறு அவர் செயல்வேறு; அப்படி இருந்தும் அவரைப் பார்க்க விழைகின்றன; அமைதி இன்றித் தவிக்கின்றன என் கண்கள்.” “அவர் வராவிட்டாலும் தூங்குவது இல்லை; அவர் வந்துவிட்டாலும் உறங்குவது இல்லை; என் செய்வது?” “கண்கள் துன்பத்தை வெளிப்படுத்தி என்னை ஊரவர்க்குக் காட்டிக் கொடுத்துவிடுகின்றன. அவற்றை நான் திருத்தவா முடியும்?” 119. பசப்பு உறு பருவரல் (பசப்புத் தரும் துன்பம்) தலைவி கூற்று “தவறு என்னுடையதுதான்; நான்தான் என்னை விட்டுப் பிரிந்து போக அவரை அன்று அனுமதித்தேன்." “பசலை காதலர் தந்தது; அதனால் அது தன் விருப்பப்படி பரவுகிறது; அதனைத் தடுத்து நிறுத்த என்னால் இயலவில்லை.” “என் சாயலையும், நாணத்தையும் அவர் கைக் கொண்டார்; அதற்கு மாறாகத் துன்பத்தையும்; பசலை யையும் எனக்குத் தந்துவிட்டார்.” “எப்பொழுதும் அவரையே நினைத்துக்கொண்டிருக்கிறேன்; நான் கவனிக்கவே இல்லை; கள்ளத்தனமாக இப்பசப்பு என்னை வந்து அடைந்துவிட்டது.” “இருக்கும்போது சற்று அசைந்தால் இந்தப் பசலை ஒட்டிக்கொள்ளும்; அவர் பிரிந்து விட்டார்; இனிச் சொல்லவா வேண்டும்?” “விளக்கு ஒளி மங்கும்போது இருள் வந்து புகுந்து விடுகிறது; காதலர் விலகும்போது இலகுவாகப் பசலை வந்து இடம்பிடித்துக் கொள்கிறது.” “அவர் தழுவ, அவரைவிட்டு நான் சிறிது நழுவினேன். அவ்வளவுதான், என் மேனி பொன்னிறம் பெற்றுவிட்டது; பசலை செய்த சதி அது.” ‘பசந்தாள் என்று என்னைப்பற்றிப் பழி கூறுவர்; அதற்குக் காரணம் யார்? அவர் கசந்தார் என்பதை யாருமே கூறுவது இல்லை.” “கடமை கருதிக் காதலர் சென்றிருக்கிறார்: அது தவிர்க்க இயலாதது என்றால் பசலை வருவதும் தவிர்க்க முடியாதது ஆகிவிடுகிறது.” 120. தனிப்படர் மிகுதி (தனிமை தரும் துயரம்) தலைவி கூற்று “காதலரைப் பிரியாமல் மகிழ்ந்து வாழ்பவர் கொடுத்து வைத்தவர்; எனக்கு அப் பேறு அமையவில்லை.” “பயிருக்கு மழைநீர் தரும் ஆதரவு போன்றது காதலர் காட்டும் பரிவு; அந்த வாய்ப்பு எனக்கு இல்லை.” “பிரிவுத்துயர் பெரிது அன்று; காதலர் அருள் இருக்கிறது என்றால் எந்தத் துன்பத்தையும் தாங்கிக்கொள்ள முடியும்.” “காதலரின் விருப்பமும் விழைவும் இல்லாத மகளிர், வருந்தும் வாழ்க்கையே வாழ்வர்; வருந்துவதைத் தவிர வேறு வழியே இல்லை.” “அவர் என்னைக் காதல் செய்யாமல் நான் மட்டும் அவர்மீது பிரியம் வைத்துக்கொண்டிருந்தால் யாருக்கு என்ன நன்மை பயனில்லாத வாழ்வு.” “ஒருதலைராகம் இசை தாராது; இருபக்கம் காதல் இருந்தால் அது காவடிபோலச் சுமையாக இருந்தாலும் தாங்க எளிதாகும்.” “மன்மதன் நடுநிலை பிறழ்ந்துவிட்டான்; அவன் நீதி குன்றுகிறான்; ஒருவரை மட்டும் வாட்டி வதைப்பதில் என்ன நியாயம் இருக்கிறது?” “கணவரோடு இனிமையாக உரையாடிக் கொண்டிராமல் பிரிந்து உழல்கின்ற பெண்கள் கல் நெஞ்சு உடையவர் ஆவர்." “அவர் எனக்கு அருள் செய்யாமல் இருக்கலாம்; அவர் கடமை காரணமாக அடையும் வெற்றி புகழைச் சேர்க்கிறது; அஃது எனக்கு இனிக்கிறது.” “நெஞ்சமே! உன் மடத்தனத்துக்கு இரக்கப் படுகிறேன். உன்னோடு உறவு கொள்ளாதவரிடம் ஏன் துன்பத்தைக் கூறுகிறாய்? வீண் முயற்சி; அதனைவிட இந்தக் கடலையே நீ தூர்த்துவிடலாம். அரிய சாதனையாக அமையும்.” 121. நினைந்து அவர் புலம்பல் (தலைவனை நினைத்துத் தலைவி தனிமையில் வருந்துதல்) தலைவி கூற்று “நினைத்தாலும் மகிழ்வு செய்வது காமம்; அதனால் கள்ளினும் காமம் இனிது.” “பிரிவிலும் பழைய இன்ப நினைவுகள் இன்பத்தைக் கூட்டுகின்றன.” “தும்மல் வருகிறது; அடங்கிவிடுகிறது! காதலர் நினைக்கிறார்; உடனே அதனை நிறுத்திவிடுகிறார் போலும்.” “என் நெஞ்சத்தில் அவர் நிலைத்து இருக்கிறார்; அது போல அவர் நெஞ்சில் எனக்கு இடம் தருகிறாரா? தெரியவில்லை.” “அவர் நெஞ்சில் இடம் கொடுக்க மறுப்பவர், எந்த முகம் கொண்டு என் நெஞ்சில் இடம் கேட்டுப் பெறுகிறார்?" “கூடிய காலத்துக் கிடைத்த இன்ப அலைகளை நாடி அதில் மயங்கிக் கிடக்கிறேன். இதுவும் ஓர் இன்பம்தான்.” “பழைய நினைவுகள் என்னை வாழ்விக்கின்றன; பிரிவுத்துயர் என்னைத் தாழ்விக்கிறது.” “அவரை எவ்வளவு மிகுதியாக நினைத்தாலும் அவர் அஃது எனக்குத் தகுதி என்று அனுமதிக்கிறார்; காதல் வாழ்க என்று வாழ்த்துகிறார்.” “நீ வேறு நான் வேறு அல்ல’ என்று கூறியவர் தனித்து என்னைவிட்டுப் பிரிந்திருப்பது துயர் விளைவிக்கிறது.” “நிலவே! நீ மறையாதே; என் காதலரை என் கண்கள் காண விழைகின்றன.” 122. கனவுநிலை உரைத்தல் தலைவி கூற்று “காதலர் அனுப்பிய தூதாக வந்த கனவினுக்கு எவ்வாறு விருந்து அமைப்பேன் திகைக்கிறேன்.” “கண்கள் உறக்கம் கொண்டில; அவை சற்று மூடினால் கனவில் என் காதலரைக் காண்பேன்; என் பிரிவுத்துயரை எடுத்து உரைப்பேன்.” “நனவில் எனக்கு அருள் செய்திலர்; கனவில் அவரைக் கண்டு மகிழ்வேன்; உயிர் வாழ்வேன்." “நனவு தாராத புதிய சந்திப்புகளைக் கனவு தருகிறது; கனவே நீ வாழ்க.” “நனவில் அடைந்த இன்பம் அப்பொழுது அஃது உண்மையாக இருந்தது; கனவிலும் காண்பதும் உண்மை; இரண்டுக்கும் வேறுபாடே இல்லை.” “நனவு ஒன்று தேவையே இல்லை; காதலரைக் கனவிலேயே கண்டு கொண்டிருக்க முடியும்.” “நனவில் பிரிந்து வருத்தும் தலைவர், கனவில் வந்து ஏன் கூடி நெஞ்சை அலைவுறுத்துகிறார்?.” “துயிலும்போது என் தோள்மேல் இருப்பார்; விழிக்கும்போது என் நெஞ்சில் ஏன் ஒளித்துக் கொள்கிறார்?” “கனவுகளில் தம் காதலரைச் சந்திக்காத பெண்களே, தம் காதலர் கொடியவர் என்று பழி தூற்றுவர்; அன்பில்லாதவர் என்றும் அறைகுவர்.” ‘கனவில் அவர் வந்து போவதை அறியாதவர் காதலர் என்னைப் பிரிந்துவிட்டார் என்று பிழைபடப் பேசுவர்.” 123. பொழுதுகண்டு இரங்கல் தலைவி கூற்று “மாலைப்பொழுது கொடிது; பிரிந்தவர் உயிர் உண்கிறது; ஊழிக்கால இறுதி போன்றது அது." “மாலையே நீயும் வருந்திக் காணப்படுகிறாயே! நீயும் உன் காதலனைப் பிரிந்துவிட்டாயோ?.” “பனி அரும்பிய மாலைப்பொழுது; அப்பொழுது என் காதலர் உடன் இருந்தார்; இனிதாக இருந்தது; அஃது ஏன் இப்பொழுது தனிமையைத் தருகிறது?” “காதலர் இல்லை என்றால் மாலைப்பொழுது முன் பின் பழக்கமில்லாத கொலையாளி போல வந்து அச்சுறுத்துகிறது.” “காலை எனக்கு நண்பனாக இருக்கிறது; மாலையே நீமட்டும் ஏன் பகையாக மாறுகிறாய்?” “மாலை இந் நோய் செய்யும் என்பதனை அவருடன் இருந்தகாலை யான் அறிந்தது இல்லை.” “இப் பிரிவுநோய் காலையில் அரும்புகிறது; பகலில் முகை ஆகிறது; மாலையில் மலர்கிறது.” “மாலை நெருப்பு என்றால், குழல் ஒசை அதனை அறிவிக்கும் தூதாக முன் வந்து ஒலிக்கிறது; இஃது எங்களைக் கொல்கிறது.” “நான்மட்டுமா வருந்துகிறேன்; இந்த ஊரில் பிரிந்த மகளிர் எல்லாம் என்னைப் போல்தான் இந்த மாலைக் காலத்தில் தனிமை உற்று வருந்துகிறார்கள்.” “பொருளைத் தேடி அவர் சென்றுவிட்டார்; அவர் அருளை நாடி நான் இங்கு ஏங்குகிறேன். இருளைத் தேடிவரும் மாலையே! நீ வந்து எனக்கு மருளைத் தருகிறாய்." 124. உறுப்புநலன் அழிதல் தலைவி கூற்று “மலர் போன்று இருந்த என் கண்கள் சருகுபோல் உலர்ந்துவிட்டன.” “கண்களும் கவின் இழந்து பிரிவுத்துயரைக் காட்டிக் கொண்டு இருக்கின்றன.” “மணந்த நாள் பருத்த என் தோள்கள் தணந்த நாள் இப்பொழுது சிறுத்துவிட்டன; அவை தன் வெறுமையை மற்றவர்க்கு உரைத்துக்கொண்டு இருக்கின்றன.” “தோள்களில் உள்ள அழகு தொலைந்துவிட்டது; கைவளையல்களும் நெகிழத் தொடங்கிவிட்டன”. “கவின் இழந்த தோளும், நெகிழ்ந்துவிட்ட வளையல்களும் என் துயரைத் தெரிவித்துக்கொண்டிருக்கின்றன.” “வளை நெகிழ்வும் தோள் மெலிவும்பற்றிப் பிறர் என் தலைவனைப் பழிப்பது எனக்கு வருத்தம் தருகிறது.” “நெஞ்சே! நீ என் தோள் மெலிவை எடுத்துக் கூறு: தலைவர் உன்னைப் பாராட்டிப் பெருமைப்படுத்துவார்; சொல்ல உனக்குச் செய்தி உள்ளது.” தலைவன் கூற்று “முயங்கிய என் கைகள் சிறிது தயங்கிய போது பசலை வந்து அவள் நெற்றியைச் சூழந்துகொண்டது.” “காற்று இடைப்புகுந்து சிறிது எங்களை வேற்றுமைப் படுத்தியது; அப்பொழுதே என் தலைவியின் கண்கள் பசலை பூத்துவிட்டன.” “நெற்றியில் வந்து ஒற்றிய பசலையைக் கண்டு கண் வருந்தித் தானும் பசந்துவிட்டது.” 125. நெஞ்சொடு கிளத்தல் தலைவி கூற்று “நெஞ்சே இத் துன்பநோயைத் தீர்க்கும் மருந்து நீ அறிந்து சொல்வாயாக!” “நெஞ்சே! அவருக்கு நம்மிடம் காதல் இல்லை; நீ மட்டும் அவர் பின்னால் சென்றுகொண்டிருக்கிறாய்! நீ என்ன சாதிக்கப் போகிறாய்? சொல்லுக.” “நெஞ்சே! அவர் வருகையை நினைத்து நீ வருந்திக் கொண்டிருந்தால் ஆகப்போவது என்ன? அவர் இங்கு வரப்போவது இல்லை; நம்மைப்பற்றி அவர் நினைத்து வருந்துவதாகவும் இல்லை.” “நெஞ்சே! நீமட்டும் அவரிடம் செல்ல எண்ணுகிறாய்; என் கண்கள் அவரைக் காணத் துடிக்கின்றன, அவற்றையும் அழைத்துச் செல்; அவை இங்கே அடம்பிடிக்கின்றன.” “காதலர் நம்மைக் கைவிட்டுவிட்டார் என்று நாம் வெறுத்து ஒதுங்கி வாழ முடியுமா? முடியாது.” “காதலரைக் காணும்போது பொய்யாகச் சற்று ஊடி நில் என்று கூறினேன்; உன்னால் அவரை விளையாட்டுக்குக் கூட வெறுத்து ஒதுக்க முடியவில்லை. நீ அவரைக் கொடியவர் என்று இப்பொழுது என்னிடம் கூறுகிறாய; இது வெறும் நடிப்பு.” “காதல் அதனை விடவேண்டும்; அதனை விடமுடியாது என்றால் வெட்கத்தை விட்டு வெளிப்படையாகப் பேச வேண்டும். எதையாவது ஒன்றனை நெஞ்சே செய்க.” “பிரிந்தவர் நமக்கு அருள் செய்யார்; அவர்பின் நீ செல்வது ஏன்? மடமைதான்.” “உள்ளத்தில் காதலர் இருக்கும்போது நீ வெளியே எங்கே சென்று தேடப்போகிறாய்? வீண் முயற்சி.” “முற்றும் துறந்துவிட்டார்; இனி நாம் என்ன செய்ய முடியும்? அவரை நினைந்து நினைந்து அழகை இழக்க வேண்டியதுதான்.” 126. நிறை அழிதல் தலைவி கூற்று “நாணம் தாழ்ப்பாள்; நிறை கதவு, காமவேட்கை கோடரி; இது நாணத்தையும் நிறையையும் உடைத்து விடுகிறது.” “காமம் இரக்கமற்றது; நடு இரவிலும் என்னைத் தூங்கவிடாமல் துயர் தருகிறது.” “காமத்தை மறைக்கின்றேன்; தும்மல் கட்டுமீறி வெளிப்படுவது போல் என்னைக் காட்டிக் கொடுத்து விடுகிறது." “நிறை உடையவள் என்று பெருமை கொண்டிருந்தேன்; காமம் என்னை நடுத் தெருவுக்குக் கொண்டு நிறுத்திவிடுகிறது” “வெறுத்து ஒதுக்கியவர் பின் செல்லக் கூடாது என்ற வீறாப்பு எல்லாம் காமநோய் உற்றால் செயல்படுத்த முடியாத ஒன்று.” “வெறுத்து நீங்கிய அவர்பின் என்னை நிறுத்துகிறது இக் கொடிய காமநோய்; நான் என்ன செய்வது? தோற்று விட்டேன்.” “அவர் என்னைத் தொடும்போதும் என்னைத் தழுவ வரும்போதும் என் நாணம் என்னைவிட்டு நழுவி விடுகிறது.” “மயக்கிப் பேசும் இனியர்; அவர் பணிந்த மொழிக்கு என் பெண்மை தோற்றுவிடுகிறது; என்னை அவர்க்குத் தந்துவிடுகிறேன்.” “புலப்பது என்று உறுதியாக இருப்பேன்; என் நெஞ்சு அவரோடு கலத்தல் விரும்புகிறது; இனி அவரைத் தழுவிக் கொள்வது தவிர வழியே இல்லை.” “மெழுகு தீயிற்கு உருகிவிடுகிறது; அத்தகைய இளகிய நெஞ்சு எனது; அவரைக் கண்டால் உருகி விடுகிறேன்; என் நிறை கருகிவிடுகிறது. 127. அவர்வயின் விதும்பல் தலைவி கூற்று “நோக்கி நோக்கி என் கண்கள் ஒளி இழந்துவிட்டன; என் விரல்கள் நாள் எண்ணி எண்ணிச் சுவரில் தொட்டுத் தொட்டுத் தேய்ந்துவிட்டன." “தோழி! என் தலைவரை ஒரு நாள் மறந்தாலும் என் தோள் அழகு குறைந்துவிடுகிறது.” “வினை நாடி ஊக்கம் துணையாகச் சென்றார்; அவர் வருகை நாடி இன்னும் உயிர் வைத்துக்கொண்டிருக்கிறேன் யான்.” “பிரிந்த காதலரை அடைய என் நெஞ்சு விம்மி அவாவுகிறது; பூரித்து எழுகிறது.” “என் தலைவனைக் கண்களால் காண்பேன்; அப்பொழுதே பசலை என்னைவிட்டு நீங்கும்.” “நாள் பல கடந்தாலும் அவருக்காகக் காத்திருப்பேன்; அவர் வரும் நாள் திருநாள்; என் வேட்கை தீர அவர் அணைப்புக்கு இணங்குவேன்; மகிழ்வேன்.” “என் காதலர் வந்தால் புலப்பேனோ? அணைப் பேனோ? கலப்பேனோ என் செய்வேன்? எனக்கே தெரியாது.” தலைவன் கூற்று “அரசன் மேற்கொண்ட போர்வினை முடியும்; நானும் வீடுமுனை நோக்கிச் செல்வேன்; அவள் தரும் புது விருந்து அருந்தி மகிழ்வேன்.” கவிஞன் கூற்று “பிரிந்த தலைவன் வருகைக்காகக் காத்திருக்கும் மகளிர்க்கு ஒரு நாள் ஒரு யுகம்போல் தோன்றும்." தலைவி கூற்று “உள்ளம் உடைந்து சிதைந்துவிட்ட பிறகு அவர் வந்தால் என்ன? கலந்தால் என்ன? உடைந்த பானை கூடவா போகிறது?” 128. குறிப்பு அறிவுறுத்தல் தலைவி கூற்று “நீ பேசத் தேவை இல்லை; கண்கள் உன் மனக் கருத்தை உரைக்கும்.” தலைவன் கூற்று “கண்ணுக்கு இனியவள்; மூங்கில் போன்ற தோளை உடையவள்; இளநங்கை; அவள் பெண்மை என்னைக் கவர்கிறது.” “மணிக்கு உள்ளே நூல் இழை ஓடுகிறது; அவள் அழகில் கவர்ச்சிக் குறிப்பு ஒன்று உண்டு.” “அரும்பாத முகைக்குள் நாற்றம் அடங்கி இருக்கிறது; நகைக்காத முறுவலில் ஒரு மனக்குறிப்பு உண்டு; அஃது அவள் காதற் குறிப்பு ஆகும்.” “அவள் காட்டிய கள்ளக் குறிப்பு என் காதல் துன்பத்தைத் தீர்க்கும் மருந்தாக உள்ளது.” தலைவி கூற்று “இனியது பேசி ஆறுதல் கூறி அணைத்து மகிழ்ந்தார்; பிரிவுப் பயணத்துக்கு அஃது அச்சாரம் ஆகும்.” “மலைநாட்டுத் தலைவன் நம்மை அறிவுறுத்திப் பிரிய நினைப்பதனை என்னைவிட என் வளையல்கள் அறிந்துகொண்டன; அவை நிலைகொள்ள மறுக்கின்றன.” “நேற்றுதான் அவர் என்னைவிட்டுப் பிரிந்தார். ஏழு நாள் ஆகிவிட்டது போல் ஆகிவிட்டது; பசலையும் மேனியில் இடம் பெற்றுவிட்டது.” தலைவன் கூற்று “கைவளையல்களை நோக்கினாள்; தன் மெல்லிய தோளைக் குறிப்பாகக் காட்டினாள்: கால் அடி நோக்கினாள். அவள் உணர்த்தும் செய்தி யாது? பிரிவு தாங்க இயலாது; செலவுதவிர்ப்புதான் வழி என்பதனை உணர்த்திவிட்டாள்.” கவிஞன் கூற்று “தான் உற்ற காம நோயை யாருக்கும் எடுத்து உரையாத மனநிலை பெண்மைக்கே உரியது; அது பெண்மைக்குச் சிறப்புச் சேர்க்கிறது; கண்ணினால் தான் கருதியதைக் காதலனுக்கு உணர்த்தும் குறிப்பு அவளுக்கு உண்டு; அஃது அவளுக்குப் பெருமை சேர்க்கிறது.” 129. புணர்ச்சி விதும்பல் (சேர்க்கையை விரும்புதல்) கவிஞன் கூற்று “நினைத்தாலே இன்பம் தருவது; காண மகிழ்வு தருவது காமம்; அந்த இயல்பு கள்ளுக்கு இல்லை." தலைவி கூற்று “பனை அளவு காமம் உடையவர் தினை அளவும் ஊடுதல் செய்யார்.” “காதலர் புறக்கணித்தாலும் என் கண்கள் அவரையே கணிக்கின்றன. அவரைப் பார்க்காமல் என்னால் இருக்க முடியாது.” “ஊடுதற்கு என்று சென்றேன்; தோழி! அது மறந்து கூடற்கண் சென்றுவிட்டது என் நெஞ்சு.” “எழுதும்போது எழுதுகோல் கண்ணுக்குத் தெரிவது இல்லை; தலைவனின் பழிகள் அவரைக் காணும்போது என்முன் நிற்பது இல்லை; மறைந்துவிடுகின்றன.” “நேரில் பார்க்கும்போது தவறுகளே தெரிவது இல்லை; அவர் என்னைவிட்டு விலகி இருக்கும்போது அவர் தவறுகள்தாம் வந்து முன் நிற்கின்றன.” “ஆற்று வெள்ளத்தில் கால் வைத்தால் அஃது எங்கே அடித்துக்கொண்டு போய்விடும் என்பதைக் கூற முடியாது; ஊடலில் இறங்கி இனிய நேரத்தைப் பாழ் படுத்திக்கொள்ள யான் விரும்பவில்லை.” “கள்வா! நீ என்னை வருத்தி வாட்டினாலும் களித்த என் கண்களுக்கு உன் மார்பு கள் போன்றது; நீ என்னை மயக்கிக்கொண்டே இருக்கிறாய்.” தலைவன் கூற்று “மலரைவிட மென்மையானது காமம்! சிலரே அதன் மென்மை கெடாமல் நுகர வல்லவர்." “கண்களால் சிறிது ஊடிவிட்டு உடனே கூடுவதில் என்னை அவள் முந்திக்கொண்டாள்.” 130. நெஞ்சொடு புலத்தல் (தலைவி தன் நெஞ்சொடு மாறுபடுதல்) “அவர் நெஞ்சு அவரைவிட்டு இங்குப் பாய்வ தில்லை; கட்டுக்குள் அடங்கி இருக்கிறது. நீ மட்டும் ஏன் சொன்ன பேச்சுக் கேட்கமாட்டேன் என்கிறாய்! இங்கேயே அடங்கி இரு என்றால் இருக்கமாட்டாய்; அவரை நாடிச் செல்கிறாய்.” “அவர் நம்மிடம் அன்பு காட்டவில்லை; அழையாத வீட்டுக்குள் நீ ஏன் நுழைகிறாய்! விழைந்து உன்னை வரவேற்பார் என்று கருதிச் செல்கிறாய்; உன் முயற்சி வீண் முயற்சி ஆகும்.” “கெட்டுப் போனவர்க்கு நண்பர்கள் உதவ வேண்டும் என்ற பரந்த மனப்பான்மையால் தனித்து இருக்கும் அவருக்குத் துணையாக நீ செல்ல நினைக்கிறாயா!” “ஊடல் செய்து அவரிடம் ‘பிகு’ பண்ணிக்கொள்ள வேண்டும் என்று மன உறுதியோடு இருக்கும் என்னை மாற்றிவிடுகிறாய்; அவர் பக்கம் சாய்ந்துவிடுகிறாய்; நீ என் கட்சியைவிட்டு எதிர்கட்சியில் சேர்ந்துவிடுகிறாய்; உன்னை நம்பி உன்னோடு எதனையும் கலந்து ஆலோசிப்பதால் என்ன பயன்?” “கவலைக்கே காவல் செய்யும் அவலநிலைக்கு நீ ஆளாகிறாய்; அவரை அடையாதபோது அதற்காகக் கவலைப்படுகிறாய். அடைந்த பிறகு அவர் பிரிந்துவிடக் கூடும் என்று அஞ்சுகிறாய்; உன்னை எப்படித் திருத்துவது என்பதே தெரியவில்லை?” “என் தனிமையில் நீ எனக்குத் துணை இருப்பாய் என்று நினைத்தேன்; என்னைப் பிய்த்துத் தின்கிறாய் அவரை அடைய வேண்டும் என்று; நிம்மதியாக என்னை விட மறுக்கிறாய்.” “அவரை மறக்க முடியாத பாழ் நெஞ்சோடு சேர்ந்து நான் என் நாணத்தையும் மறந்துவிட்டேன்; அதனைப் போலவே அவரிடம் தாவ விழைகின்றேன்.” “காதலை உயிராக மதிக்கும் என் நெஞ்சு அவரை மறக்க முடியாமல் அவரையே நினைத்து வேதனைப் படுகிறது; இதனைத் தடுக்க முடியாது.” “துன்பத்திற்கு யாரே துணையாக முடியும்? அவரவர் நெஞ்சுதான் உற்ற துணையாக இருந்து உதவ முடியும்!” “நம் நெஞ்சமே தக்க துணையாக இல்லாதபோது அயலார் வந்து உதவுவார் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்?” 131. புலவி (ஊடல் கொள்ளுதல்) கவிஞன் கூற்று “குழந்தையைச் சற்றுக் கிள்ளினால்தான் அஃது அழும்; அந்த அழுகை சுவைக்கத் தக்கது. சிறிது சீண்டினால்தான் சுவாரசியமே அமையும்; ஊடல் அதனைத் தூண்டிவிடுகிறது.” “உப்பு இல்லாப் பண்டம் குப்பையிலே; அளவோடு சேர்த்தால் உணவு சுவைக்கும். அதனை மிகுதியாகச் சேர்க்கக் கூடாது. ஊடலும் நீட்டிக்கவிடக் கூடாது.” “ஏற்கெனவே நொந்து இருக்கும் நிலையில் ஊடலைத் தொடங்கிவிட்டுப் பின் கூடாமல் போனால் அந்த வேதனையைத் தாங்கிக்கொள்ள முடியாது; ஊடல் தொடக்கம்; கூடல் முடிவு.” “ஊடிய மகளிரை ஊடிவிட்டுக் கூடாது இருத்தல் வாடிய வள்ளிக்கொடிக்கு நீர் ஊற்றாதது மட்டும் அன்று; அதனை அடியோடு பிடுங்கி எறிவதற்கு ஒப்பும் ஆகும்.” “ஆடவர்க்கு அழகு மகளிர் நெஞ்சில் ஊடலைத் தோற்றுவிப்பது.” “ஊடல் தொடக்கம்; அது மிகுந்தால் ‘துணி’ எனப்படும். இவை இரண்டும் இல்லை என்றால் காமம் சுவையற்றதாகிவிடும; பழம் மிகவும் கனிந்து விட்டாலும் புளிக்கும்; செங்காயாக இருந்தாலும் துவர்க்கும். அளவாகக் கனிந்தது சுவைக்கும். எல்லை கடவாமல் ஊடலை நீட்டிப்பது சுவைதருவது ஆகும். ஊடலே இல்லை என்றாலும் பயன் இல்லை.” “ஊடல் இன்பம் தருவதுதான்; என்றாலும் அதனை நீட்டித்து விட்டால் கூடலுக்கு வாய்ப்பு இருக்குமோ இருக்காதோ என்ற கவலையையும் அது தருகிறது; அதனால் அது துன்பம் தருவதாகவும் அமைகிறது.” “தலைவியின் மனம் நோகக்கூடும் என்று நினைத்துப் பார்க்கும் நுட்ப உணர்வு இல்லாதவரிடத்து ஊடல் கொள்வதால் பயனே இல்லை; நுட்ப உணர்வினரே அதன் அழகை அறிய முடியும்.” “நீரும் நிழலின்கீழ் இருந்தால் குளிர்ச்சி தரும்: சுவைக்கும்; அதுபோலப் புலவியும் அன்புடையவரிடத்தே தான் இனிமை தரும்.” தலைவி கூற்று “ஊடிய பின் அதனை அவர் தீர்த்து வைக்கவில்லை என்றாலும் அவரோடு ஊடுவதற்கு என் நெஞ்சு நாடத்தான் செல்கிறது. அதற்குக் காரணம் கூடுதலில் உள்ள வேட்கையே.” 132. புலவி நுணுக்கம் (ஊடல் நுட்பம்) தலைவி கூற்று “உன் மார்பினை ஏனைய மகளிரும் கண்ணில் கண்டு பொதுவாகச் சுவைக்கின்றனர்; அதனால் அது பரத்தமை பட்டுவிட்டது. அதனால் யான் தழுவ விழையவில்லை.” “ஊடி இருந்தோம்; அப்பொழுது அவர் சற்றுத் தும்மினார்; நீடுவாழ்க என்று வாழ்த்தினேன்; என்னைப் பேச வைத்துவிட்டார். இஃது அவர் சூழ்ச்சி.” தலைவன் கூற்று “பூப்பறித்து வந்து அவள் கூந்தலில் சூட்டினாலும் புலப்பாள்; வேறு ஒருத்தியை மனத்தில் ஒப்புமை கொண்டு அழகை ரசிக்கிறேன் என்று கருதுகிறாள்.” “மற்ற யாவரையும்விட உன்னைக் காதலிக்கிறேன் என்று சொல்லிவிட்டேன். யாவரையும்விட என்று கூறி விட்டதால் அவள் உடனே ஊடல் கொண்டுவிட்டாள்; ஒப்புமைக்காகக்கூட மற்றொருத்தியைக் குறிப்பிட அவள் சம்மதிக்கவில்லை.” “இந்த இப் பிறவியில் உன்னைப் பிரியமாட்டேன் என்று கூறினேன்; உடனே கண்களில் நீர் பெருக்கினாள். ‘அடுத்த பிறவி?’ என்பது அவள் வினா.” “உன்னை நினைத்தேன்’ என்றேன்; மறந்தால்தானே நினைக்க வேண்டி வரும் என்று காரணம் காட்டிக் கலுழத் தொடங்கினாள்.” “முன்னர்த் தும்மியபோது வாழ்த்தினாள்; அவ்வாறே வாழ்த்துவாள் என்று நினைத்துத் தும்மத் தொடங்கினேன். பிடித்துக்கொண்டாள்; யாரோ உம்மை நினைத்துக் கொள்கிறார்கள்; அதனால்தான் தும்மினிர் என்றாள்.” “அவளிடத்தில் பணிந்து பேசி ஊடலைத் தணிவிக்க முயன்றேன்; ‘இப்படித் தானே மற்ற மகளிரிடமும் பணிவீர்’ என்று கூறிச் சினந்துகொண்டாள்; அதுவும் ஊடலுக்கு ஒரு காரணம் ஆகிவிட்டது.” “அவளை நிதானித்து அழகை ரசித்தாலும் காய்கிறாள்; ‘யாரையோ மனத்தில் வைத்து ஒப்புமை காண்கிறீர்’ என்று குற்றம் காண்கிறாள்.” 133. ஊடல் உவகை தலைவி கூற்று “அவரிடத்துத் தவறு இல்லை; எனினும் அவர் அன்பைப் பெற ஊடுதல் தேவையாகிறது.” “ஊடல் அது துன்பம் தரத்தான் செய்யும்; அவர் காட்டும் அன்பு சற்று வாடினும் அது பெருமை உடையதே ஆகும்.” “மண்ணோடு மழைநீர் கலத்தல் போல் எம் அன்புடைய நெஞ்சம் கலந்துவிட்டது. அவரோடு ஊடுவது ஒப்பற்ற இன்பமாகும்; விண்ணவருக்கும் இந்த வாய்ப்பு அவர்கள் உலகத்தில் கிடையாது.” “கூடலுக்கு இடையே அமையும் ஊடல் அஃது என் உள்ளத்தை உடைக்கும் ஈட்டி ஆகும்.” “தவறு இல்லை அவர்மாட்டு எனினும் சற்று ஊடலின் காரணமாக விலகி இருப்பதில் ஒர் இன்பம் உள்ளது.” தலைவன் கூற்று “உணவு உண்பதனைவிட அது சீரணித்தல் இன்பம் தருவதாகும். கூடலைவிட ஊடல் இன்பம் பயக்கும்.” “ஊடலில் தோற்றவர் அவர்க்கு அத் தோல்வி நன்மையதே; கூடலில் வெற்றி காண்பர்.” “மற்றும் ஒரு முறை ஊடியபின் கூடுவோம்; அது புதிய இன்பம் தரும்.” “அழகிய ஆபரணம் அணிந்த என் தலைவி ஊடிக் கொண்டே இருப்பாளாக; அதற்கு ஏற்ப இந்த இரவு நீடித்துக்கொண்டே இருப்பதாக!” “ஊடுதல் காமத்திற்கு இன்பம்; அதனோடு நிற்கக் கூடாது; மறுபடியும் கூடுதல் பெற வேண்டும்; அதுவே இன்பமாகும்.” உள் தலைப்புகள் பக்கம் பக்கம் அடக்கமுடைமை 23 உட்பகை 141 அமைச்சு 103 உழவு 162 அரண் 121 உறுப்புநலன் அழிதல் 192 அருளுடைமை 42 ஊக்கம் உடைமை 98 அலர் அறிவுறுத்தல் 180 ஊடலுவகை 204 அவர்வயின் விதும்பல் 195 ஊழ் 62 அவா அறுத்தல் 60 ஒப்புரவறிதல் 38 அவை அஞ்சாமை 117 ஒழுக்கமுடைமை 25 அவை அறிதல் 116 ஒற்றாடல் 96 அழுக்காறாமை 31 கடவுள் வாழ்த்து 1 அறன் வலியுறுத்தல் 5 கண்ணோட்டம் 95 அறிவுடைமை 71 கண்விதுபழிதல் 184 அன்புடைமை 12 கயமை 167 ஆள்வினையுடைமை 101 கல்லாமை 68 இகல் 137 கல்வி 67 இயன் அறிதல் 82 கள்ளாமை 48 இடுக்கண் அழியாமை 102 கள்ளுண்ணாமை 146 இரவச்சம் 166 கனவுநிலை உரைத்தல் 189 இரவு 165 காதற் சிறப்புரைத்தல் 178 இல்வாழ்ககை 7 காலம் அறிதல் 80 இறைமாட்சி 65 குடிசெயல்வகை 161 இன்னா செய்யாமை 52 குடிமை 151 இனியவை கூறல் 17 குறிப்பறிதல் 111 ஈகை 39 குறியறிதல் 172 பக்கம் பக்கம் குறிப்பறிவுறுத்தல் 197 நல்குரவு 164 குற்றங்கடிதல் 72 நன்றியில் செல்வம் 157 கூடா ஒழுக்கம் 46 நாடு 19 கூடா நட்பு 133 நாணுடைமை 159 கேள்வி 69 நானுத் துறவுரைத்தல் 179 கொடுங்கோன்மை 92 நிலையாமை 56 கொல்லாமை 54 நிறையழிதல் 194 சான்றாண்மை 155 நினைந்தவர் புலம்பல் 188 சிற்றினம் சேராமை 75 நீத்தார் பெருமை 3 சுற்றந்தழாஅல் 87 நெஞ்சொடு கிளத்தல் 193 சூது 147 நெஞ்சொடு புலத்தல் 200 செங்கோன்மை 90 பகைத்திறம் தெரிதல் 140 செய்நன்றி அறிதல் 19 பகைமாட்சி 138 சொல்வன்மை 105 பசப்புறு பருவரல் 185 தகையணங்கு உறுத்தல் 171 படர்மெலிந்திரங்கல் 183 தவம் 45 படைச்செருக்கு 125 தனிப்படர் மிகுதி 187 படைமாட்சி 124 தீநட்பு 131 பண்புடைமை 156 தீவினையச்சம் 37 பயனில சொல்லாமை 36 துறவு 58 பழைமை 130 தூது 110 பிரிவாற்றாமை 182 தெரிந்து செயல்வகை 77 பிறனில் விழையாமை 27 தெரிந்து தெளிதல் 83 புகழ் 41 தெரிந்து வினையாடல் 85 புணர்ச்சி மகிழ்தல் 174 நட்பாராய்தல் 129 புணர்ச்சி விதும்பல் 198 நட்பு 127 புல்லறிவாண்மை 136 நடுவுநிலைமை 20 புலவி 201 நலம்புனைந்துரைத்தல் 176 புலவிநுணுக்கம் 203 பக்கம் பக்கம் புலால் மறுத்தல் 44 மன்னரைச் சேர்ந்தொழுகல் 112 புறங்கூறாமை 34 மானம் 152 பெண்வழிச்சேறல் 143 மெய்யுணர்தல் 59 பெரியாரைத் துணைக்கோடல் 74 வரைவின் மகளிர் 145 பெரியாரைப் பிழையாமை 142 வலியறிதல் 79 பெருமை 153 வாய்மை 49 பேதைமை 135 வாழ்க்கைத் துணைநலம் 8 பொச்சாவாமை 89 வான்சிறப்பு 2 பொருள் செயல்வகை 122 விருந்தோம்பல் 15 பொழுதுகண்டு இரங்கல் 190 வினைசெயல்வகை 108 பொறையுடைமை 29 வினைத்திட்பம் 107 மக்கட்பேறு 10 வினைத்துய்மை 106 மடியின்மை 100 வெகுளாமை 50 மருந்து 149 வெஃகாமை 33 வெருவந்த செய்யாமை 93 மதிப்புரைகள் "மிக அழகாகவும் எளிய முறையில் யாவரும் புரிந்த கொள்ளும்படியாகவும் நடைமுறையில் கருத்துகள் சொல்லப் பட்டுள்ளன. இதுவரையில் இந்தமாதிரி ஒரு புத்தகத்தை நாம் கண்டதில்லை" 16-8-94 (ஒப்பம்) S. சம்பந்தம் சென்னை -600 081 "தங்கள் திகட்டாத 'திருக்குறள் செய்திகள்' என்னும் நூல் தின இதழ், தினத்தந்திபோல் படித்தவர்க்கும் பாமார்க்கு பயன்படும் பாங்கு பெற்றதாகும்." "கவியரசு கண்ணதாசனை, ' நீ கவிதைக்குப் புருஷன் உரைநடைக்கு அரசன்' என்றார் கவிஞர் வாலி. ஆனால் நீங்களோ "இரண்டுக்கும் இணையற்ற ஏகோபித்த எஜமானனாக, வேதத்தின் வியாசராக, எழிலான செந்தமிழ் சிம்மாசனத்தில் சீலத்துடன் அமர்ந்து ஒளிர்கிறீர்கள்" 31-8-94 (ஓப்பம்) டாக்டர் மன் ஜெயராமன் "கவியரசு கண்ண தாசன் கழகம் சென்னை -600 00 இந்த மின்னூலைப் பற்றி உங்களுக்கு இம்மின்னூல், இணைய நூலகமான, விக்கிமூலத்தில் இருந்து கிடைத்துள்ளது[1]. இந்த இணைய நூலகம் தன்னார்வலர்களால் வளருகிறது. விக்கிமூலம் பதிய தன்னார்வலர்களை வரவேற்கிறது. தாங்களும் விக்கிமூலத்தில் இணைந்து மேலும் பல மின்னூல்களை அனைவரும் படிக்குமாறு செய்யலாம். மிகுந்த அக்கறையுடன் மெய்ப்பு செய்தாலும், மின்னூலில் பிழை ஏதேனும் இருந்தால் தயக்கம் இல்லாமல், விக்கிமூலத்தில் இம்மின்னூலின் பேச்சு பக்கத்தில் தெரிவிக்கலாம் அல்லது பிழைகளை நீங்களே கூட சரி செய்யலாம். இப்படைப்பாக்கம், கட்டற்ற உரிமங்களோடு (பொதுகள /குனு -Commons /GNU FDL )[2][3] இலவசமாக அளிக்கப்படுகிறது. எனவே, இந்த உரையை நீங்கள் மற்றவரோடு பகிரலாம்; மாற்றி மேம்படுத்தலாம்; வணிக நோக்கத்தோடும், வணிக நோக்கமின்றியும் பயன்படுத்தலாம் இம்மின்னூல் சாத்தியமாவதற்கு பங்களித்தவர்கள் பின்வருமாறு: Guruleninn Ramesh kaniyam Balajijagadesh Info-farmer * * * ↑ http://ta.wikisource.org ↑ http://creativecommons.org/licenses/by-sa/3.0/ ↑ http://www.gnu.org/copyleft/fdl.html