தாவிப் பாயும் தங்கக் குதிரை பாவலர் நாரா. நாச்சியப்பன் 1985 8 அக்டோபர், 2020 அன்று விக்கிமூலத்தில் இருந்து பதிவிறக்கப்பட்டது உலகளாவிய பொதுக் கள உரிமம் (CC0 1.0) இது சட்ட ஏற்புடைய உரிமத்தின் சுருக்கம் மட்டுமே. முழு உரையை https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode என்ற முகவரியில் காணலாம். பதிப்புரிமை அற்றது இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர். நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை. *** இது, உலகத் தமிழ் விக்கியூடகச் சமூகமும் ( https://ta.wikisource.org ), தமிழ் இணையக் கல்விக் கழகமும் ( http://tamilvu.org ) இணைந்த கூட்டுமுயற்சியில், பதிவேற்றிய நூல்களில் ஒன்று. இக்கூட்டு முயற்சியைப் பற்றி, https://ta.wikisource.org/s/4kx என்ற முகவரியில் விரிவாகக் காணலாம். Universal (CC0 1.0) Public Domain Dedication This is a human readable summary of the legal code found at https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode No Copyright The person who associated a work with this deed has dedicated the work to the public domain by waiving all of his or her rights to the work worldwide under copyright law including all related and neighboring rights, to the extent allowed by law. You can copy, modify, distribute and perform the work even for commercial purposes, all without asking permission. *** This book is uploaded as part of the collaboration between Global Tamil Wikimedia Community ( https://ta.wikisource.org ) and Tamil Virtual Academy ( http://tamilvu.org ). More details about this collaboration can be found at https://ta.wikisource.org/s/4kx. தாவிப் பாயும் தங்கக் குதிரை நாரா நாச்சியப்பன் தமிழாலயம் 137, ஜானி ஜான்கான் தெரு சென்னை-600 014 BIBLIOGRAPHICAL DATA Title of the Book ... THAVIP PAAYUM THANGAK KUTHIRAI Author ... NARA NACHIAPPAN Language ... Tamil Publication ... July, 1985 Copy-right ... Author Paper used ... 10.9 kg. White Printing Size ... Crown octavo Printing types used ... 14 Point Pages ... 48 Copies ... 1200 Price ... Rs, 4/- Printers ... NOVEL ART PRINTERS. ⁠Madras - 600 014. ⁠ Phone : 82731 Publishers ... Thamizhalayam ⁠137, Jani Jan Khan Road, ⁠ Madras 600 014. Subject ... A Fairy Tale பதிப்புரை பொதுவாகவே தேவதைக் கதைகளும் மாய மந்திரக் கதைகளும் சிறுவர் உள்ளத்தைக்கவர்ந்து விடுகின்றன. சிறுவர்களின் இந்த மனவியல்பைக் கண்டுதான் பல சான்றோர்கள், சிறுவர்களுக்கு எதையும் சொல்ல வேண்டுமானால், தேவதைக் கதைகளின் மூலம் சொல்லுவது சிறந்தது என்று இந்த முறையைப் பின்பற்றினார்கள். ‘தாவிப் பாயும் தங்கக் குதிரை’ என்ற இக் கதை அத்தகைய சிறந்த கதைகளிலே ஒன்று. ஆங்கிலத்தில் உள்ள ஒரு கதையைத் தழுவி இதை எழுதியிருக்கிறார் திரு. நாரா நாச்சியப்பன். அவர் சிறுவர்களுக்காகத் தமிழில் சிறந்த பல நூல்கள் எழுதியிருக்கிறார். தமிழ்நாட்டில் சிறுவர் இலக்கிய வளர்ச்சிக்கு வழி வகுத்துக் கொண்டுவரும் பலருள் திரு நாரா. நா. அவர்கள் குறிப்பிடத்தக்கவராவார். அவருடைய தங்கு தடையின்றிச் செல்லும் தமிழ் நடை மாணவர்களின் மொழி வளர்ச்சிக்கும் அறிவு முதிர்ச்சிக்கும் பெரிதும் உதவும் என்று நம்புகிறோம். தமிழாலயம் தங்கக் குதிரைக்கு உயிர் கொடுத்த இளவரசி மேகமாலை உள்ளடக்கம் அரசி முகிலி மாயக்காரி வசீகர சுந்தரி பச்சைக் குழந்தைகள் பலி வந்தது வந்தது தங்கக் குதிரை தேன்கதலி நாடு வெற்றி வேலன் வீரமகனின் உறுதிமொழி உதவி பெற்ற தேவதை சிற்றப்பன் சூழ்ச்சி வீரன் புறப்பட்டான் பாட்டன் ஏறிவந்த குதிரை மூன்று அருஞ்செயல்கள் நெருப்பு மூச்சுவிடும் எருதுகள் மாய வீரர்கள் வேதாளத்துடன் சண்டை மேகமாலை திருமணம் தங்கக் குதிரைக்கு உயிர் கொடுத்த இளவரசி மேகமாலை  தாவிப் பாயும் தங்கக் குதிரை அரசி முகிலி முன்னொரு காலத்தில் இன்பவள நாடு என்று ஒரு நாடு இருந்தது. அந்த இன்பவள நாட்டை அரசு புரிந்த மன்னன் ஒரு பெரிய வீரன். அவன் மனைவியோ சிறந்த அழகி. அந்த அழகரசியின் பெயர் முகிலி. அழகிய கருங் கூந்தலும், செக்கச் சிவந்த உடலும் சேர்ந்தாற்போல் பார்க்கும்போது, மாலையில் கதிரவன் ஒளிபட்டுப் பளபளக்கும் மேகத்தைப் போலிருக்கும். முகிலி என்றால் மேகத்துக்கு உரியவள் என்று பொருள்படும். அரசி முகிலிக்கும் கார்மேகங்களுக்கும் எப்படியோ ஒரு தொடர்பு இருந்தது. கார் மேகங்கள் அடர்ந்து, மழை பொழியும் கார்காலத்தில் அரசி முகிலியைப் பார்த்தால் தளதளவென்று பூரித்து அழகாயிருப்பாள். பொட்டு மழைகூடப் பெய்யாத முதுவேனிற் காலத்தில், வானில் தென்படுகின்ற ஒன்றிரண்டு மேகங்களும் வெளுத்துப் போய் இருப்பது போல் அவளும் முகம் வெளுத்து உடல் மெலிந்து காணப்படுவாள். அப்போது அரசி முகிலியைப் பார்த்தால் துயரமே வடிவெடுத்து வந்ததுபோல் இருக்கும். துயரத்தை இனித் தாங்க முடியாது என்ற நிலைவரும்போது, அவள் தன் நாட்டை விட்டுப் போய் விடுவாள். மேகங்கள் கூடிக் கருத்து மழை கொட்டும் வேறு நாடுகள் நோக்கிப் போய் விடுவாள் என்று மக்கள் பேசிக் கொள்வார்கள். கார் காலத்தில் தான் அவள் திரும்பவும் தன் நாட்டுக்கு வருவாள். அவளுக்கு ஆணும் பெண்ணுமாக இரண்டு குழந்தைகள் இருந்தார்கள். அரசி முகிலியின் மகன் பெயர் வில்லழகன். இளவரசியின் பெயர் பொன்னழகி. அவர்கள் இருவரும் தங்கள் தாய் அருகில் இருக்கும் போது இன்பமாக ஓடியாடி விளையாடுவார்கள். அவள் பிரிந்து சென்ற பிறகு, ஒருவரையொருவர் பார்த்து அழுதுகொண்டும் பெருமூச்சு விட்டுக் கொண்டும் ஏக்கத்தோடு இருப்பார்கள். மாயக்காரி வசீகர சுந்தரி இன்பவள நாட்டின் அரசர், அரசி முகிலியைத் திருமணம் செய்துகொண்டு வாழ்க்கை நடத்தத் தொடங்கியபோது, அவள் பிரிவைப் பொறுத்துக் கொண்டார். ஆனால் மீண்டும் மீண்டும் ஒவ்வோர் ஆண்டும் அவள் பிரிந்து சென்றதை அவரால் பொறுக்க முடியவில்லை. அதுவே நாளடைவில் அவள்மீது வெறுப்பாக மாறிவிட்டது. அந்த ஊரில் வசீகர சுந்தரி என்று ஒருத்தி இருந்தாள். அவள் அந்த நாட்டைச் சேர்ந்தவள் அல்ல. வடக்கே மிகத் தொலைவில் இருக்கும் ஒரு நாட்டிலிருந்து வந்தவள். அவள் மிக அழகானவள். அரசர் உலாவரும்போது ஒரு நாள் வசீகர சுந்தரியைக் கண்டுவிட்டார். அவள் அழகு அவரை மயக்கமடையச் செய்தது. வசீகர சுந்தரி சாதாரணப் பெண் அல்ல. அவள் ஒரு மாயக்காரி. அரசர் தன்னை விரும்புகிறார் என்று தெரிந்து கொண்டவுடன் அவள் அவரைத் திருமணம் செய்துகொண்டுவிடவேண்டும் என்று திட்டமிட்டாள். அரசி முகிலி இல்லாத நாட்களில் அடிக்கடி அரண்மனைக்குப் போய் வந்தாள். தன்னுடைய மாயவித்தைகளைக் காட்டி அரசரை மயக்கினாள். கடைசியில் அரசி முகிலி இல்லாதபோது, அரசர் அவளை மறுமணம் செய்து கொண்டுவிட்டார். மாயக்காரியை அரசர் மணம் புரிந்தது, அந்த நாட்டு மக்களையெல்லாம் வெறுப்படையச் செய்தது.  எங்கிருந்தோ வந்த அவள் இன்பவள நாட்டின் அரசியாகி விட்டாள். அரசியானவுடன் அவள் அரண்மனையிலேயே தங்கினாள். அவளுக்கு இளவரசன் வில்லழகனையும், இளவரசி பொன்னழகியையும் பார்க்கவே வெறுப்பாயிருந்தது. அவர்கள் நல்ல பிள்ளைகளாய் இருப்பதைக் கண்டு அவள் கோபித்துக் கொண்டாள். அவர்கள் அழகாய் இருப்பதைக் கண்டு அவள் அருவெறுப்புக் கொண்டாள். எப்போதும் அவர்கள் உண்மை பேசுவதைக் கண்டு எரிந்து விழுந்தாள். அவர்கள் சிரித்து விளையாடுவதைப் பார்த்து அவளால் பொறுத்துக் கொண்டிருக்க முடியவில்லை. அவர்களை அடித்து உதைத்து அடிமைகளைப்போல் வேலை வாங்கினாள். கடுகடுத்துப் பேசி அவர்களைக் கண்கலங்க வைத்தாள். கடைசியில் அவர்கள் உடுத்தியிருந்த பட்டாடைகளைப் பறித்துக் கொண்டு அரண்மனையை விட்டே விரட்டிவிட்டாள். பஞ்சம், பசி, பட்டினி தன்னந்தனியாகச் சென்று கொண்டிருக்கும் அந்தச் சின்னஞ்சிறு பிள்ளைகளை ஆடு மேய்த்துக் கொண்டிருந்த ஓர் இடையன் கண்டான். அவர்கள் மேல் இரக்கம்கொண்டு, அவன் தன் வீட்டுக்கு அழைத்துச் சென்றான். கஞ்சியும் கூழும் ஊற்றி அவர்களை வளர்த்து வந்தான். அன்புள்ளங் கொண்ட அந்த இடையனுக்கு ஆடுமேய்க்கும் வேலையில் அவர்கள் ஒத்தாசையாக இருந்தார்கள். ஒரு மலைக்குன்றின் அடிவாரத்தில் அவர்கள் ஆடுமேய்க்கும் பச்சைப் புல்வெளியிருந்தது. ஆட்டுக் குட்டிகளோடு போட்டி போட்டுக்கொண்டு கள்ளமில்லாத உள்ளங் கொண்ட அந்தச் சிறு பிள்ளைகள் ஓடியாடி விளையாடுவார்கள். கஞ்சி குடித்தாலும் அவர்கள் நெஞ்சில் இன்பம் நிறைந்திருந்தது. மாயக்காரியின் கொடுமைகள் இல்லாத அந்த மலையடிவாரம் அவர்களுக்கு மகிழ்ச்சி தரும் இடமாக இருந்தது. அம்மா அருகில் இல்லையே என்ற ஒரு துன்பத்தைத் தவிர வேறு எவ்விதத் துன்பமும் இல்லாமல் அவர்கள் வாழ்ந்து வந்தார்கள். நாட்டை விட்டுப்போன அரசி முகிலி, திரும்பி வரவேயில்லை. தானிருக்க வேண்டிய இடத்தில் ஒரு மாயக்காரி இருக்கிறாள் என்று கேள்விப்பட்டுத்தான் அவள் திரும்பி வரவில்லை என்று மக்கள் பேசிக் கொண்டார்கள். காலம் மாறியது. கார் காலம் வந்தது. ஆனால், கார்மேகங்கள் வானில் கூடவில்லை. கோடை காலத்தினும் கொடுமையாக வெயிலடித்தது. நாளாக நாளாக வெயிலின் கடுமை ஏறிக்கொண்டு போனதே தவிர ஒரு துளி மழைகூட வரவில்லை, அரசி முகிலிக்குக் கோபம் வந்து விட்டதால் தான் மேகங்கள் கூடவில்லை என்று மக்கள் பேசிக் கொண்டார்கள். பஞ்சம் நீடித்தது. வயல்கள் விளையவில்லை. மரங்களும் செடி கொடிகளும் கருகிப் போயின. உணவு ஒன்றும் இல்லாமல் மக்கள் வாடினார்கள். பட்டினிச் சாவு அதிகரித்தது. தெய்வங்களுக்கு ஏதோ கோபம் ஏற்பட்டு விட்டது என்று அரசன் நினைத்தான். பக்கத்து நாட்டிலே ஒரு பெரிய மடாதிபதி இருந்தார். அந்த மடாதிபதி தெய்வங்களோடு அடிக்கடி பேசுவார் என்று அரசன் கேள்விப்பட்டிருந்தான். அவருக்கு முன் காலத்தையும் பின் காலத்தையும் அறியக்கூடிய சக்தி இருந்ததென்று அரசனிடம் பலர் கூறியிருந்தார்கள். ஆகவே, அரசன் தன் அதிகாரிகள் சிலரை அந்த மடாதிபதியிடம் அனுப்பினான். தன் நாட்டில் மழை பொய்த்துப் போனதற்குக் காரணம் என்ன என்றும், அதற்கு மாற்றுக் கழுவாய் என்ன என்றும், கேட்டறிந்து வரும்படி அவன் அந்த அதிகாரிகளுக்குக் கட்டளையிட்டான். இதையறிந்த வசீகர சுந்தரி ஒரு தந்திரம் செய்தாள். மடாதிபதியிடம் அனுப்பப்பட்ட அதிகாரிகளை அவள் தனியாகச் சந்தித்தாள். அவர்களுக்கு நிறையப் பொன்னும் பொருளும் தருவதாகச் சொல்லி, அவர்களை மடாதிபதியிடம் போகாமல் இருக்கும்படி கேட்டுக் கொண்டாள். அவர்கள் அவள் திட்டத்துக்கு ஒப்புக்கொண்டார்கள். அவர்கள் வேறு எங்காவது போய்த் திரும்பி வந்து, மழை பெய்யாமல் இருப்பதற்குக் காரணம் வில்லழகனும் பொன்னழகியும் உயிருடன் இருப்பதுதான் என்றும், அவர்களைக் கொன்றால், தெய்வங்களின் கோபம் தீர்ந்து மழை பொழியும் என்றும் மடாதிபதி கூறியதாகக் கூறவேண்டும் என்றும் அவள் தன் திட்டத்தை விளக்கினாள். ஆசைபிடித்த அந்த அதிகாரிகள் அவ்வாறே செய்தார்கள். அரசாங்கச் செலவில் உல்லாசமாகப் பல ஊர்களில் சுற்றித் திரிந்து விட்டுத் திரும்பி வந்தார்கள். வில்லழகனையும் பொன்னழகியையும் வெட்டிப் பலியிட்டால் தான் தெய்வ கோபம் தீர்ந்து, மழை பொழியும் என்று மடாதிபதி கூறியதாகச் சொன்னார்கள். மூட நம்பிக்கையுடைய அந்த அரசன் அவர்கள் கூறியதை உண்மை என்று நம்பினான். ஆனால், தன்மக்களைத் தானே எப்படிக் கொன்று பலியிடுவது என்று தயங்கினான். ஆனால் வசீகர சுந்தரி அவனுடன் பல விதமாய்ப் பேசி அந்தச் சிறு பிள்ளைகளைத் தெய்வபலி கொடுப்பதற்கு அரசன் ஒப்புக் கொள்ளும்படி செய்து விட்டாள். பச்சைக் குழந்தைகள் பலி ஒரு நாள் காலை நேரம். கோயில் வாசலில் இருந்த பலிபீடம் பூமாலைகள் இட்டு அழகாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. இளவரசனும் இளவரசியும் கழுத்தில் மஞ்சள் துண்டும் கதம்ப மாலையும் கட்டிய கோலத்தில் பலியாடுகள்போல் கொண்டு வரப்பட்டார்கள். கூடியிருந்தார்கள். பழி பாவம் அறியாத இரண்டு பிள்ளைகளைப் பலிகேட்ட ஒரு தெய்வமும் தெய்வமா என்று அவர்கள் தெய்வத்தின் பேரிலேயே வெறுப்புக் கொண்டார் கோயிலில் தேவதைகளுக்குப் பூசை நடந்தது. பூசை முடிந்தவுடன் பூசாரி கையில் அரிவாளுடன் வெளியில் வந்தான். இரண்டு மூன்று ஆட்கள் இளவரசனையும் இளவரசியையும் பலிபீடத்தின் மேல் ஏற்றி நிற்க வைத்தார்கள். பூசாரியும் பலிபீடத்தின் மேல் ஏறினான். வானத்தை நோக்கி, “தேவர்களே, நீங்கள் விரும்பிய பலியை ஏற்றுக் கொள்ளுங்கள் நாட்டைச் செழிக்கச் செய்யுங்கள்! அற்ப உயிர்களாகிய எங்கள் மேல் உள்ள வெறுப்பையகற்றி உங்கள் அன்பைப் பொழியுங்கள்!” என்று கூவினான்.  வந்தது வந்தது தங்கக் குதிரை அப்போது வானில் ஓர் இடி முழக்கம் கேட்டது. கண்ணைப் பறிக்கும் ஒரு மின்னல் பளிச்சிட்டது. அந்த மின்னலைத் தொடர்ந்து ஓர் இறக்கை முளைத்த தங்கக் குதிரை, தரையை நோக்கித் தாவிப் பாய்ந்து பறந்து வந்து கொண்டிருந்தது. அந்தத் தங்கக் குதிரை பலிபீடத்தின் மீது வந்து இறங்கித் தன் பின்னங்காலால் பூசாரியை ஓர் உதை உதைத்துக் கீழே தள்ளியது. அந்தத் தங்கக் குதிரையைக் கண்டவுடன் இளவரசன் வில்லழகன் அதன் முதுகில் பாய்ந்து ஏறினான். தன் தங்கை பொன்னழகியையும் கையைப் பிடித்து இழுத்துத் தூக்கித் தனக்குப் பின்னால் உட்கார வைத்துக் கொண்டான். அவர்கள் இருவரும் ஏறிக் கொண்டதும் அந்தத் தங்கக் குதிரை இறக்கைகளை அசைத்து அசைத்துக்கொண்டு மேலெழும்பிப் பறந்தது. கீழே வியப்போடு பார்த்துக் கொண்டிருந்த மக்கள், அரசனையும் மாயக்காரி வசீகர சுந்தரியையும் பழித்துப் பேசிக் கொண்டும், அந்த அருமைக் குழந்தைகளைக் காப்பாற்றிய தெய்வங்களைப் புகழ்ந்து போற்றிக் கொண்டும் தங்கள் தங்கள் வீடு நோக்கிக் கலைந்து சென்றார்கள். அரசி முகிலி, தன் குழந்தைகளைப் பிரிந்து சென்றாலும் அவர்களைக் கவனிக்காமல் விட்டுப் போய்விடவில்லை. அவள் மேலேயுள்ள மேகமண்டலத்திலிருந்து அவர்களைக் கவனித்துக் கொண்டு தான் இருந்தாள். அவள் தான் கடைசி நேரத்தில், மேகமண்டலத்தில் இருந்த தங்கக் குதிரையை யனுப்பித் தன் குழந்தைகளைக் காப்பாற்றினாள். தேன்கதலி நாடு இரண்டு குழந்தைகளையும் தூக்கிக் கொண்டு அந்தத் தங்கக் குதிரை காற்றினும் வேகமாகப் பறந்து சென்றது. காடும் மேடும் கடலும் மலையும் மாறி மாறிக் கடந்து மிகத் தொலைவில் உள்ள தேன்கதலி நாட்டில் போய் இறங்கியது. அங்கு இறங்கியவுடன் நெடுந்தூரம் பறந்து வந்த களைப்பில் அந்தக் குதிரை சோர்ந்து விழுந்தது. அப்படியே அதற்கு மூச்சு நின்று அது இறந்து போய் விட்டது. வில்லழகன், அதை ஒரு மரத்தடியில் நிறுத்திவைத்து, அதற்கு ஒரு வேதாளத்தைக் காவல் வைத்தான். தேன்கதலி நாட்டு அரசனுக்கு ஆண் பிள்ளைகள் கிடையாது. அவனுக்கு மகள் ஒருத்திமட்டும் இருந்தாள். தேன்கதலி நாட்டு அரசன் வில்லழகனையும் பொன்னழகியையும் விரும்பி வரவேற்றுத் தன் அரண்மனையிலேயே வளர்த்து வந்தான். வில்லழகன் ஆற்றலும் வீரமும் மிகுந்த இளைஞனாக மாறியவுடன் அவனையே தன் நாட்டின் அரசனாகப் பட்டம் சூட்டி அவனுக்குத் தன் மகளைத் திருமணம் செய்து கொடுத்தான். பொன்னழகியையும் அருகில் இருந்த ஒரு நாட்டின் இளவரசனுக்கு மணம் செய்து கொடுத்தான். வில்லழகன் தேன்கதலி நாட்டைச் சீரும் சிறப்புமாக அரசு புரிந்தான். அவனுக்குப் பின் அவன் வழியில் வந்த மக்களும் பேரரும் தொடர்ந்து அரசாண்டு வந்தார்கள். பிற்காலத்தில் அந்த நாட்டில் இருந்த தங்கக் குதிரை உலகத்துப் பெருஞ் செல்வங்களிலே ஒன்றாக மதிப்பிடப்பட்டது.  வெற்றி வேலன் வில்லழகன் இறந்து பலப்பல ஆண்டுகள் கழிந்துவிட்டன. அப்போது உலகின் வேறொரு பகுதியில் இருந்த ஒரு நாட்டையாண்ட மன்னனுக்கு ஒரு குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தை ஆண் குழந்தை. அதன் பெயர் வெற்றிவேலன். வெற்றி வேலன் கற்றுத் தேர்ந்து முற்றும் வளர்ந்து ஒரு கட்டழகுடைய இளைஞனாக வளரும் முன்னாலேயே ஒரு நாள் திடீரென்று அவனுடைய சிற்றப்பன் பெரும் படையுடன் வந்து நாட்டைக் கவர்ந்து கொண்டான். ஆண்டு கொண்டிருந்த அண்ணனையும் அவர் குடும்பத்தையும் காட்டுக்கு விரட்டியடித்துவிட்டு அந்தச் சிற்றப்பன் நாட்டைக் கவர்ந்து கொண்டான். உயிருக்குத் தப்பி ஓடிய அரசனும் அரசியும் அவர்களின் செல்ல மகனான வெற்றி வேலனும், ஏழைகளாய்ச் சிற்றுார்களில் சுற்றித் திரிந்து கொண்டிருந்தார்கள், கடைசியில், அந்த அரசர் ஒரு சிற்றுாரில் நிலையாகத் தங்கி அங்கு ஒர் உழவனிடம் வேலைக்குச் சேர்ந்து கொண்டார். உழைத்துப் பிழைக்க வேண்டிய ஏழையாக மாறிவிட்ட போதிலும் அரசர் தன்மகன் வெற்றி வேலனை ஓர் இளவரசனை வளர்க்க வேண்டிய முறை தப்பாமல் வளர்த்து வந்தார். தமக்கு ஓய்விருந்த போதெல்லாம் அவனுக்குக் கல்வியும், கலையும், வாட்பயிற்சியும், வேற்பயிற்சியும் கற்றுக் கொடுத்தார். வெற்றிவேலன் வலிவும் பொலிவும் உடைய இளைஞனாக வளர்ந்துவிட்டான். ஆற்றலும் வீரமும் அஞ்சா நெஞ்சும் கொண்ட காளை போல் அவன் தோன்றினான். எந்தச் செயலிலும் வெற்றி காணக் கூடிய தனித் திறமை தன் மகனுக்கு வந்துவிட்டது என்பதை அரசர் கண்டு கொண்டார். இனி இவனை நாம் இங்கே வைத்திருக்கக் கூடாது என்று அவர் முடிவு கட்டினார்.  வீரமகனின் உறுதிமொழி கடுமையாக உழைத்து அவர் சிறிது பணம் சேர்த்தார். போதுமான அளவு பணம் சேர்ந்தவுடன் ஒருநாள் காலையில் அவர் தன் மகனை அழைத்தார். அவர் கண்கள் கலங்கியிருந்தன. ஆனால், அவற்றிலே ஒரு நம்பிக்கை ஒளி வீசியது. ஓர் உறுதி வெளிப்பட்டது. “வெற்றி வேலா, என் அன்பு மகனே! நீ நினைத்துக் கொண்டிருப்பது போல் நீ ஓர் உழவனின் மகனல்ல; நீ ஓர் இளவரசன்!” என்று கூறினார். வெற்றி வேலன் வியப்படைந்தான். “நான் இளவரசனா? அப்படியானால் என்னைப் பெற்ற அரசர் யார்? அரசி யார்?” என்று கேட்டான். “மகனே! உன்னைப் பெற்றவர் நாங்கள் தான்! ஆனால், நாங்கள் வஞ்சகத்தால் வாழ் விழந்தோம்!” என்று கூறிக் கோவென்று கூவி அழுதாள் அரசி, “அம்மா அழாதீர்கள்! என் உடலில் ஒரு சொட்டு இரத்தம் இருக்கும் வரையில், நான் நம்முடைய நாட்டை மீட்கப் போராடுவேன். உங்களை மீண்டும் அரியாசனத்தில் வைத்துப் பார்ப்பதே இனி என் இலட்சியம்” என்று சூளுரைத்தான் வெற்றி வேலன். “மகனே, நான் இன்று தான் உன்னைப் பெற்றதன் பலனை அடைந்தேன். உன் இலட்சியம் வெற்றியடையுமாக!” என்று வாழ்த்தித் தாங்கள் வாழ்விழந்த கதையைக் கூறினார் அரசர். "மகனே,எப்போதும் உண்மையே பேசு; என்றும் உண்மைக்கே பாடுபடு; எவரிடத்திலும் அன்பாயிரு; உன்னை யண்டி வந்தவர்களுக்கு உதவி புரி” என்று அறிவுரைகள் கூறி விடைகொடுத்து வழியனுப்பினாள் அரசி. இளவரசன் புறப்பட்டான். அரசனும் அரசியும் தங்கள் பிரிவுத் துயரத்தை யடக்கிக் கொண்டார்கள். உதவி பெற்ற தேவதை வெற்றிவேலன் தன் வழியில் சென்று கொண்டிருந்தான். ஒரு சிற்றாறு குறுக்கிட்டது. அதில் தண்ணீர் பெருகி வழிந்து ஓடிக் கொண்டிருந்தது. அதன் கரையில் ஒரு கிழவி நின்று கொண்டிருந்தாள். அவள் ஆற்றைக் கடந்து போக ஏதாவது வழியுண்டா என்ற ஏக்கத்தோடு நின்றுகொண்டிருந்தாள். வெற்றிவேலனுக்குத் தன் தாயார் கூறிய சொற்கள் நன்றாக நெஞ்சிற் பதிந்திருந்தன. அவன் அந்தக் கிழவியின் அருகில் சென்றான். “பாட்டி, அக்கரைக்குப் போக வேண்டுமா? நான் உதவி புரிகிறேன்” என்று கூறினான். கிழவி நன்றியறிதலோடு அவன் உதவியை ஏற்றுக் கொண்டாள். வெற்றிவேலன் கிழவியைத் தன் தோளில் தூக்கி வைத்துக் கொண்டான். பெருக்கெடுத்துப் போகும் சிற்றாற்றில் இறங்கி நடந்தான். தண்ணீரின் வேகம் அதிகமாக இருந்தது. அடி எடுத்து வைக்கும் போதெல்லாம் ஆளைச் சாய்த்துவிடும் போலிருந்தது. எப்படியோ, மூச்சைப் பிடித்துக்கொண்டு, ஆற்றைக் கடந்து அக்கரை சேர்ந்து விட்டான். தன் தோளிலிருந்து கிழவியைக் கீழே இறக்கி விட்டான். இறக்கிவிட்டவுடன் அவளை நோக்கிய வெற்றிவேலன் பெருவியப்படைந்தான். அது கிழவியல்ல; ஒரு தேவதை! அந்தத் தேவதையை அவன் வணங்கினான். “மகனே, உன்னிடம் நல்ல மனம் இருக்கிறது. அந்த மனத்தில் உறுதியிருக்கிறது. உனக்கு நலம் பல உண்டாகட்டும்!” என்று வாழ்த்து மொழிகள் கூறி அந்தத் தேவதை மறைந்து விட்டாள். எல்லாம் கனவுபோல் இருந்தது. வெற்றிவேலன் தான் ஒரு தேவதையைக் கண்ட வியப்பிலிருது மீள நெடுநேரம் ஆகியது. பிறகு அவன் தன் வழியே நடக்கத் தொடங்கியபோது அவன் காற் செருப்பில் ஒன்று காணாமற் போயிருந்ததைக் கண்டான். ஆற்றைக் கடக்கும்போது அது நழுவிவிட்டது என்பது அவனுக்கு அப்போது தான் தெரிந்தது. ஒற்றைக்கால் செருப்போடு அவன் மீதி வழியெல்லாம் நடந்து சென்றான். பல சிற்றூர்களையும் காடுகளையும் மலைகளையும் கடந்து அவன் கடைசியாகத் தன் சொந்த நாட்டுக்கு வந்து சேர்ந்தான். அரண்மனைக்குப் போய்ச் சேர்ந்தவுடன் அரசனைப் பார்க்க வேண்டும் என்று கூறினான். காவலர்கள் அவனை அரச சபைக்கு அழைத்துச் சென்றார்கள். அவனைக் கண்டவுடனேயே அவன் சிற்றப்பனுக்குப் பீதி ஏற்பட்டுவிட்டது. ஏனென்றால் ஒற்றைக் காலில் செருப்பணிந்து கொண்டு வரும் ஓர் இளைஞன் உன் நாட்டைப் பறித்துக் கொள்வான் என்று ஒரு முனிவர் அவனுக்குச் சாபம் கொடுத்திருந்தார். இருந்தாலும் அவனுடைய சிற்றப்பன் தன் பயத்தை வெளிப்படுத்திக் கொள்ளாமல், “தம்பி நீ யார்? எங்கு வந்தாய்?” என்று குழைவான குரலில் கேட்டான். “நான் தான் வெற்றிவேலன். உங்கள் அண்ணன் மகன். என் நாட்டைத் திரும்பப் பெறுவதற்காக வந்திருக்கிறேன்.” என்று கூறினான் வெற்றிவேலன்.  சிற்றப்பன் சூழ்ச்சி இவனிடம் கோபமாகப் பேசக்கூடாது. நயமாகப் பேசித்தான் கொல்லவேண்டும் என்று தீர்மானித்துக் கொண்ட சிற்றப்பன் தன் அண்ணனை நினைத்து வருந்துவதுபோல் நடித்தான். “வெற்றிவேலா, அன்று நாடாளும் ஆசையில் அண்ணனைக் காட்டுக்கு விரட்டி விட்டேன். ஆனால் அதன் பிறகுதான் என் மனச்சாட்சி என்னைக் குத்திக்காட்டியது. எப்படியாவது அண்ணனைத் தேடிப்பிடித்து மீண்டும் அரசர் ஆக்கி அவர் கீழே இருந்து பணி செய்தால் போதும் என்று நினைத்தேன். ஆனால் என் ஆட்கள் அவரைத் தேடிப்போன போதெல்லாம் அவர்கள் தன்னைப் பிடித்துக் கொல்லத்தான் வருகிறார்கள் என்று பயந்து ஓடிவிட்டார். என்னால் அவரைக் கண்டு பிடிக்க முடியாமலே போய்விட்டது. நல்ல வேளையாக நீ இப்போது வந்து சேர்ந்தாய். உன் அப்பா எங்கே இருக்கிறார்? சொல். அவரை அழைத்து வந்து அடுத்த மாதமே உனக்குப் பட்டம் கட்டிவிட்டு நான் ஒய்வு எடுத்துக் கொள்கிறேன்” என்று கூறினான். வெற்றிவேலன் தன் சிற்றப்பனின் பேச்சை உண்மை என்று நம்பிவிட்டான். தன் தாய்தந்தையர், இருக்குமிடத்தை அந்த வஞ்சகனிடம் கூறிவிட்டான். அந்த வஞ்சகனுடைய சொற்களை நம்பி அவனிடம் அன்பு பாராட்டவும் தொடங்கினான். அன்று இரவு அவன் தன் சிற்றப்பனுடன் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தான். சாப்பிடும்போதே அவர்கள் பல செய்திகள் பற்றிப் பேசிக் கொண்டார்கள். வீரர்களைப் பற்றிய பேச்சு வந்தது. பேச்சோடு பேச்சாக அந்தச் சிற்றப்பன் “அந்தக் காலம் மலையேறி விட்டது. அப்படிப்பட்ட வீரர்கள் இப்போது எங்கே இருக்கிறார்கள்” என்று சலித்துக் கொண்டான். “ஏன் இல்லை? எத்தனையோ வீரர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் தங்கள் வீரத்தை நிலைநாட்டும் வாய்ப்புத்தான் கிடைக்கவில்லை” என்றான் வெற்றிவேலன். இதைக் கேட்டு அவன் சிற்றப்பன் சிரித்தான். “உனக்கு ஒன்றும் தெரியாது போலிருக்கிறது. இங்கிருந்து மிகத் தொலைவில் தேன்கதலி நாடு என்று ஒரு நாடு இருக்கிறது. அந்த நாட்டிலே ஒரு தங்கக் குதிரை இருக்கிறது. அந்தத் தங்கக் குதிரையை இங்கு கொண்டு வந்து சேர்க்கக்கூடிய ஒரு வீரனை தேடித்தேடிப் பார்த்து எனக்கு அலுத்து விட்டது. அந்தக் குதிரை மட்டும் கிடைத்து விட்டால் நம் நாட்டிற்கு ஒரு பெருஞ்செல்வம்கிடைத்த மாதிரி இருக்கும்” என்று மொழிந்தான் சிற்றப்பன். “அந்தத் தங்கக் குதிரையை அடைவதில் என்ன தடை இருக்கிறது?’ என்று கேட்டான் வெற்றிவேலன். “அல்லும் பகலும் கண்மூடாமல் அங்கு ஒரு வேதாளம் காவல் இருந்து வருகிறது. அந்த வேதாளத்தைக் கொன்று வீழ்த்தக்கூடிய வீரன் இந்த மண்ணுலகில் இன்னும் பிறக்கவில்லை” என்று சொன்னான் சிற்றப்பன். “இதோ நான் பிறந்திருக்கிறேன். சிற்றப்பா இப்பொழுதே என்னை அனுப்பி வையுங்கள். எப்படியும் அந்தத் தங்கக் குதிரையை இங்கே கொண்டு வந்து சேர்க்கிறேன். இந்த முயற்சியில் நான் இறந்தாலும் சரியே” என்று வீராவேசமாக முழங்கினான் வெற்றிவேலன். உண்மையிலேயே இந்த வீரமொழிகளைக் கேட்டு அவன் சிற்றப்பன் மகிழ்ந்து போனான். தன் சூழ்ச்சி பலித்தது என்று கருதினான். வேதாளத்தின் கைப்பிடியில் சிக்கியவர்கள் உயிருடன் மீண்டதில்லை. அவர்களோடு இவனும் போய்ச் சேரட்டும் என்றுநினைத்துக் கொண்டு வெற்றிவேலனை வழி அனுப்பி வைத்தான். வீரன் புறப்பட்டான் வெற்றிவேலன் கடற்கரைக்குச் சென்று ஒருபெரிய மரக்கலம் கட்டினான். அந்த மரக்கலத்திற்கு வேண்டிய மரங்களையும் கயிறுகளையும் வேறு பொருள்களையும் சிற்றப்பனின் ஆட்கள் தயாரித்துக் கொடுத்தார்கள். எப்படியாவது அவனை நாட்டைவிட்டு வெளியேற்றினால்போதும் என்று சிற்றப்பன் எல்லா உதவிகளும் செய்தான். அந்த மரக்கலத்தில் அவனுடன் ஐம்பது வீர இளைஞர்கள் புறப்பட்டுச் சென்றார்கள். பயங்கரமான கடலில் அந்த மரக்கலம் தன் பயணத்தைத் தொடங்கியது. தேன்கதலி நாடு இருக்கும் திசை நோக்கி அதன் பாய்மரங்களைக் காற்று தள்ளிக்கொண்டு சென்றது. இளம் வீரர்கள் ‘வெற்றி வெற்றி ’என்று முழங்கிக்கொண்டு அந்தக் கப்பலில் சென்று கொண்டிருந்தார்கள். கப்பல் புறப்பட்ட மறுநாளே வெற்றிவேலனின் சிற்றப்பன் தன் அண்ணன் இருந்த இடத்திற்குச் சில ஆட்களை அனுப்பினான். ஒரு நாள் அரசரும் அரசியும் இரவில் தூங்கிக் கொண்டிருந்தபொழுது அந்த ஆட்கள் அவர்களைக் கொலை செய்து விட்டார்கள். பாட்டன் ஏறிவந்த குதிரை வெற்றிவேலனும் அவனுடன் சென்ற வீரர்களும், வழியில் பல இக்கட்டுகளுக்கு ஆளாகிக் கடைசியில் தேன்கதலி நாட்டை அடைந்தார்கள். அந்த ஊர்க் கடற்கரையில் அவர்கள் இறங்கியவுடனேயே நேரே அரண்மனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். தேன்கதலி நாட்டை அப்பொழுது வில்லழகனின் கொள்ளுப் பேரனாகிய ஓர் அரசன் ஆண்டு வந்தான். அவனுக்கு ஒரு பெண்னும் பிள்ளையும் இருந்தார்கள். பெண், பருவ வயதை யடைந்திருந்தாள்; அவள் பெண்களுக்குரிய பல கலைகளையும் அறிந்திருந்ததோடு, மாய மந்திர வித்தையும் தெரிந்து வைத்திருந்தாள். பையனோ அப்போது ஒரு சிறுவனாகவே யிருந்தான். வெற்றிவேலனும் மற்ற வீரர்களும் அரண்மனை போய்ச் சேர்ந்தபொழுது, அரச சபையில் சிங்காதனத்தின்மீது அமர்ந்து கொண்டிருந்தான், தேன்கதலி நாட்டின் அரசன். அவனுக்கு இருபுறத்திலும் அவன் மகள் மேகமாலையும் மகன் கார்வண்ணனும் அமர்ந்திருந்தார்கள். வெற்றிவேலனும் வீரர்களும் எதிரில் அழைத்து வரப்பெற்றதும், அவர்களை நோக்கித் தேன்கதலி நாட்டரசன், அவர்கள் எதற்காக அங்கு வந்தார்கள் என்று கேட்டான். “அசே, தங்கள் நாட்டில் தங்கக் குதிரை ஒன்று இருப்பதாகக் கேள்விப்பட்டோம்.அதை எங்கள் நாட்டுக்கு எடுத்துச் செல்லவே இங்கு வந்தோம்” என்று உறுதி குன்றாத குரலில் மறுமொழி கூறினான் வெற்றிவேலன். “வீரனே, தேவர்களே நெருங்கப் பயப்படுவார்கள் அந்தத் தங்கக் குதிரையை இன்ப வள நாட்டிலிருந்து எங்கள் பாட்டனை ஏற்றிக் கொண்டு வந்தது அந்தத் தங்கக் குதிரை. அதை அடைபவன் உண்மையிலேயே பெரும் வீரனாக இருக்க வேண்டும். நீங்கள் அதை அடைவது அரிது என்றே நான் நினைக்கிறேன்” என்றான் அரசன். “அரசே, தங்கக் குதிரையில்லாமல் தாயகம் செல்வதில்லை” என்ற உறுதியான முடிவுடன் வந்திருக்கிறேன். எப்படியும் அதை அடைந்தே தீருவேன்” என்றான் வெற்றிவேலன். “வீர இளைஞனே, உன் உறுதியை நான் போற்றுகிறேன். ஆனால், அது வீரம் ஒன்றினால் மட்டும் அடையக் கூடியதல்ல. நான் சொல்லும் மூன்று அருஞ்செயல்களைச் செய்து முடித்தால்தான் அந்தப் பெருமைக்குரிய தங்கக் குதிரை கிடைக்கும்” என்றான் அரசன்.  மூன்று அருஞ்செயல்கள் தங்கக் குதிரை தன் நாட்டை விட்டுப் போய்விடாது என்ற உறுதி அரசனுக்கிருந்தது. அப்படியானால், அந்த அருஞ்செயல்கள் மிகக் கடுமையானதாகத்தான் இருக்கவேண்டும் என்று எண்ணினார்கள் மற்ற வீரர்கள். ஆனால் வெற்றிவேலன் அயர்ந்து விடவில்லை. “அரசே, அந்த அருஞ்செயல்கள் என்ன என்று கூறுவீர்களா?” என்று கேட்டான். “சொல்கிறேன் கேள்” என்று கூறத் தொடங்கினான் அரசன். “என்னிடம் யாருக்கும் அடங்காத இரண்டு பெரிய எருதுகள் இருக்கின்றன. அவை மூச்சு விடும்போது நெருப்பு வெளிப்படும். நெருப்பு மூச்சுவிடும் அந்த இரண்டு எருதுகளையும் அடக்கி நுகத்தடியில் மாட்டி நான்கு காணிநிலத்தையும் உழுது தர வேண்டும். “இரண்டாவதாக, உழுது முடித்த அந்த நிலத்தில் பறக்கும் மாயப் பாம்புகளின் பற்கள் சிலவற்றை விதையாக நடவேண்டும். நட்டவுடனே நிலத்திலிருந்து முளைத்தெழும்பும் மாய வீரர்களைப் போரிட்டு கொல்ல வேண்டும். “கடைசியாக, தங்கக் குதிரையின் அருகில் இருந்து இரவும் பகலும் தூங்காமல் காவல் புரியும் வேதாளத்தைக் கொன்று வீழ்த்தவேண்டும். இந்த அருஞ்செயல்களைச் செய்து முடித்தால் அந்தத் தங்கக் குதிரையை நீ அடைவதற்கு நான் தடையாக இருக்க மாட்டேன்” என்று சொல்லி முடித்தார் அரசர். “எப்படியும் நான் இந்த அருஞ்செயல்களை முடிப்பேன்” என்று உறுதி மொழிந்து விட்டு வெளியேறினான் வெற்றிவேலன். அரச சபையில்தான் அவன் உறுதி கூறினானே தவிர, அவன் உள்ளத்திற்குள் ஒரு தளர்ச்சி ஏற்படத்தான் செய்திருந்தது. இல்லாத தெய்வங்களை யெல்லாம் வேண்டிக் கொண்டு தன் கப்பலுக்குத் திரும்பினான். அங்கே அவனுக்கு ஓர் உதவி காத்துக் கொண்டிருந்தது. இளவரசி மேகமாலைதான் அங்கே காத்துக் கொண்டிருந்தாள். அவள் சில மாய மருந்துகள் கொடுத்தாள். அவை கையில் இருந்தால் கத்தியும் நெருப்பும் அவனை ஒன்றும் செய்ய முடியாதென்று கூறினாள். அந்தக் கொடிய எருதுகளை எப்படி அடக்க வேண்டும் என்றும், பாம்பு விதையிலிருந்து கிளம்பும் வீரர்களை எப்படி யழிக்கவேண்டும் என்றும் சொல்லிக் கொடுத்துவிட்டு அவள் போய்விட்டாள். அவள் சென்றபிறகு வெற்றிவேலன் தன் மரக்கலத்திற்குச் சென்று ஓய்வெடுத்துக் கொண்டான். மறுநாள் கலையில் குறிப்பிட்ட நான்கு காணி நிலத்தையும் சுற்றி மக்கள் கூட்டம் கூட்டமாக நின்றார்கள். சாவைச் சந்திக்க வந்திருக்கும் வெளிநாட்டு வீரனைச் சந்திக்கக் காத்திருந்தார்கள். ஓர் உயர்ந்த மேடையின் மீது அரசனும் மகள் மேகமாலையும் மகன் கார்வண்ணனும் அமைச்சர்களும் அமர்ந்திருந்தாாகள். நிலத்தின் மத்தியில் அந்தப் பயங்கர எருதுகள் பலமான கயிறுகளால் கட்டப்பட்டு நின்று கொண்டிருந்தன அவற்றின் மூக்கிலிருந்து நெருப்பு குப்குப்பென்று வெளிப்பட்டுக் கொண்டிருந்தது. அந்த எருதுகளிடம் அகப்பட்டு மடிய எங்கிருந்தோ வந்திருக்கிறானே இந்த வெற்றிவேலன் என்று மக்கள் அவனுக்காக இரக்கப்பட்டுக் கொண்டிருந்தார்கள். மேகமாலை ஒருத்தியைத் தவிர எல்லோரும் அவன் இறுதிக் காலம் வந்துவிட்டதென்றே எண்ணிக் கொண்டிருந்தார்கள்.  நெருப்பு மூச்சுவிடும் எருதுகள் தன் தோழர்களான ஐம்பது வீரர்களும் புடைசூழ வெற்றிவேலன் அந்த நிலத்திற்குள் நுழைந்தான். வீரர்களை ஒரு புறத்தில் நிற்க வைத்துவிட்டு அவன் அந்த எருதுகளை நெருங்கினான். வெற்றிவேலன் எருதுகளின் அருகில் வந்தவுடன், அரசனுடைய ஆட்கள் அவற்றைக் கட்டியிருந்த கயிற்றை வாளால் வெட்டித் துண்டித்து விட்டார்கள். உடனே அவை பெரு மூச்சுவிட்டுக் கொண்டு அனல் கக்கியவண்ணம் வெற்றிவேலனை நோக்கிப் பாய்ந்தன. அவற்றின் கொம்புகள் இருப்பாணிபோல் கூர்மையாக இருந்தன. வெயில் ஒளிபட்டுப் பளபளவென்று மின்னின. அவை பாய்ந்தோடி வந்த போது நிலம் அதிர்ந்தது. அவற்றின் மூக்குத் துவாரங்களிலிருந்து முன்னிலும் அதிகமாக நெருப்புச்சுழல்கள் வெளிப்பட்டன. அந்த நிலமே நெருப்புப் பற்றி எரிவதுபோல் காட்சியளித்தது. ஆனால், அவை வெற்றி வேலனை ஒன்றும் செய்யவில்லை. மேகமாலையின் மாய மருந்து அவன்கையில் இருந்ததால் நெருப்பின் அனல் அவனை ஒன்றும் செய்யவில்லை. வெற்றிவேலன் நிலத்தின் நடுவில் நின்றான். எதிர்ப் புறத்திலிருந்து அவனைத் தாக்க ஓடி வந்தன எருதுகள். இரண்டும் நெருங்கி வரும் நேரம் வெற்றிவேலன் சட்டென்று தான் நின்ற இடத்தை விட்டு விலகிக் கொண்டான். இரண்டு எருதுகளும் ஒன்றையொன்று முட்டிக்கொண்டன. உடனே அந்த எருதுகளுக்கு ஒன்றுக்கு ஒன்று கோபம் ஏற்பட்டு இரண்டும் முட்டி மோதிக் கொண்டு சண்டையிட்டன. தங்கள் பொது எதிரியை அவை மறந்துவிட்டன. வெற்றிவேலன் அவற்றைக் கவனித்துக் கொண்டு நின்றான். அவை சண்டையிட்டுத் களைத்த நேரம் பார்த்து அவற்றின் அருகில் பாய்ந்து சென்று இரண்டையும் கொம்பைப் பிடித்து இழுத்தான். தயாராக இருந்த ஏரின் நுகத்தடியின் கீழ் அவற்றை நுழைத்துப் பூட்டினான். அவை பசுப் போல் அடங்கிவிட்டன. அவன் முதுகில் தட்டிக் கொடுக்கக் கொடுக்க முன் நடந்து சென்றன. தட்டிக்கொடுத்துத் தட்டிக்கொடுத்து அவன் அந்த நான்கு காணி நிலத்தையும் உழுது விட்டான். தங்களை அவன் அடித்துத் துன்புறுத்தாததால் அவை அவனுக்கு நன்றியுடன் வேலைபார்த்தன. மக்கள் எல்லோரும் இந்தச் சாதனையை வைத்த கண் வாங்காமல் வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள். வெற்றிவேலன் உழுது முடித்து எருதுகளை மீண்டும் கட்டிப்போட்டபோது மாலைக் கதிரவன் மேலை மலைகளில் சாய்ந்து விட்டான். மறுநாள் காலையில் நிலத்தில் விதையிடலாம் என்று அரசர் கூறினார். மக்கள் கலைந்து சென்றார்கள். வெற்றிவேலன் தன் வீரத் தோழர்களுடன் மரக்கலத்திற்குத் திரும்பினான். அரசர் தன் ஆட்களோடும் மக்களோடும் அரண்மனை சென்றார்.  மாய வீரர்கள் அடுத்த நாள் பொழுது விடிந்தது. ஊர் மக்கள் திரண்டு வந்து அந்த நான்கு காணி நிலத்தையும் சுற்றிக் கூடி நின்றார்கள். முதல் நாள் நினைத்ததுபோல் மக்கள் அன்று நினைக்கவில்லை. முதல்நாள் வெற்றிவேலன் சாகப் போகிறான் என்று நினைத்தார்கள். அன்றோ அவன் எப்படி வெல்லப் போகிறான் என்று காணவேண்டும் என்ற ஆவலோடு நின்றார்கள். அவன் வெற்றி பெறவேண்டும் என்று அவர்களின் நெஞ்சங்கள் துடித்துக் கொண்டிருந்தன. அரசர் தன் மகளுடனும் மகனுடனும் வந்து மேடையில் அமர்ந்து விட்டார். சிறிது நேரத்தில் வெற்றிவேலனும் தன்னைச் சுற்றி ஐம்பது வீரர்கள் புடைசூழ்ந்துவர வந்து சேர்ந்தான். அவன் களத்திற்குள் நுழைந்தவுடனேயே அரண்மனை ஆட்கள் ஒரு கூடையைக் கொண்டுவந்து கொடுத்தார்கள். அந்தக்கூடை நிறையப் பறக்கும் மாயப் பாம்புகளின் பற்கள் நிறைந்திருந்தன. கூடையைக் கையில் வாங்கிய வெற்றிவேலன் அந்த மாயப் பற்ளை அந்த நான்கு காணி நிலத்திலும் ஒவ்வொன்றாக நட்டு விதைத்தான். எல்லாப் பற்களையும் அவன் நட்டு முடித்தவுடன் திடீரென்று அந்த நிலத்திலிருந்து நூற்றுக்கணக்கான வீரர்கள் தோன்றினார்கள். மண்ணுக்குள்ளிருந்து தோன்றிய அந்த மாய வீரர்கள் அனைவரும் வெற்றி வேலனை நோக்கி ஓடிவந்தார்கள். வெற்றிவேலன் பெரிய பெரிய கற்களை எடுத்து அவர்கள் மீது வீசினான். அவன் ஓரிடத்தில் நில்லாமல் சுற்றிச் சுற்றி வந்து அவர்கள் மீது கற்களை வீசினான். அந்த மாய வீரர்களுக்கிடையே குழப்பம் ஏற்பட்டது. எதிரில் வருபவர்கள்தான் தங்கள் மீது கல்லை எறிகிறார்கள் என்று ஒவ்வொரு வரும் நினைத்துக் கொண்டார்கள். எனவே எதிரெதிராக வந்த வீரர்கள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டார்கள். தங்களுக்குள்ளேயே ஒருவரையொருவர் வெட்டிக்கொன்று கொண்டு செத்தொழிந்தார்கள். வெற்றிவேலனின் அறிவுத் திறமையினால் ஏற்பட்ட வெற்றியைக் கண்டு மக்கள் ஆரவாரித்தார்கள். வேதாளத்துடன் சண்டை தேன்கதலி நாட்டின் அரசர் வெற்றிவேலனின் திறமையை மனத்திற்குள் பாராட்டினார். ஆனால், தன் நாட்டில் ஒரு பெருஞ் செல்வமாய் இருக்கும் தங்கக் குதிரையை இந்த வெற்றிவேலன் கொண்டு போய்விடுவானோ என்ற அச்சம் அவர் மனத்தில் குடிபுகுந்து விட்டது. முந்தியநாள் வரையில் அவர் அதைப் பற்றிக் கவலைப்படாமலே இருந்தார். இப்போது அந்தக் கவலை ஏற்பட்டுவிட்டது. இருந்தாலும் தன் பீதியை வெளிப்படுத்திக் கொள்ளாமல், வெற்றி வேலனைப் பாராட்டிப் பேசினார். “இளவரசனே! உன்வீரத்தையும்அறிவுத் திறமையையும் அஞ்சா நெஞ்சத்தையும் பாராட்டுகிறேன். நீ தங்கக் குதிரையை அடைவதற்கு இன்னும் ஒரு செயல் செய்யவேண்டியதிருக்கினது. அதை நாளைக் காலையில் செய்து முடித்தாயானால், தங்கக் குதிரையை மட்டுமல்ல என் மகளையும் உனக்கே கட்டித் தருகிறேன்!” என்று கூறினார். அவர் இப்படி யெல்லாம் கூற வேண்டும் என்று நினைக்கவேயில்லை. ஆனால், வெற்றிவேலனின் கள்ளமற்ற இனிய முகத்தைப் பார்த்தவுடன் அவருக்கு மனத்தில் ஓர் அன்பு சுரந்துவிட்டது. இரண்டு போட்டிகளில் அவன் வெற்றி பெற்றுவிட்டான் என்று கண்டபோதே அவனை ஒரு மாவீரனாக அவர் மனம் மதிக்கத் தொடங்கிவிட்டது. அதனால்தான் இப்படிப்பட்ட சொற்கள் அவர் வாயிலிருந்து புறப்பட்டன. வெற்றிவேலன் மகிழ்ச்சியுடன் தன் தோழர்களை அழைத்துக்கொண்டு மரக்கலத்திற்குத் திரும்பினான். மறுநாள் காலையில் மக்கள் கூட்டம் நான்கு காணி நிலத்தைச் சுற்றிக்கூடவில்லை. அந்த நான்கு காணி நிலம் சுடுகாடுபோல் காட்சியளித்தது. மாயப் பாம்புப் பற்களிலிருந்து முளைத்த வீரர்களின் எலும்புகளும் தோலும் நினமும் இரத்தமுமாகக் காட்சியளித்த அந்த நிலத்தில் கழுகுகளும் பருந்துகளும் காக்கைகளும் தான் வட்டமிட்டுக் கொண்டிருந்தன. தங்கக் குதிரை இருந்த மரத்தைச் சுற்றித் தான் மக்கள் கூடி நின்றார்கள். அங்குக்காவல் நின்ற வேதாளம், என்றுமில்லாதபடி அன்று மக்கள் தன்னைச் சுற்றிக் கூடியிருப்பதைக் கண்டு பெருங்கோபம் கொண்டது. யாரும் மரத்தடியை நெருங்காதபடி அது அவர்களைப் பயமுறுத்தி விரட்டிக்கொண்டு நின்றது. எல்லோரும் தூரத்திலேயே நின்று கொண்டிருந்தார்கள். அரசரும் அவர் மகள் மேகமாலையும் மகன் கார்வண்ணனும் அந்த மரத்தடிக்குவந்து அங்கிருந்த மேடை ஒன்றின்மீது அமர்ந்தார்கள். வேதாளம் அவர்கள் எதிரில் வந்து நின்று வணங்கியது. “ஏ, வேதாளமே! உன்னுடன் சண்டை செய்ய ஓர் இளம் வீரன் வருகிறான். எச்சரிக்கை!” என்று கூறினார் அரசர். வேதாளம் இதைக் கேட்டவுடன் ஆங்காரத்துடன் எழுந்து தங்கக் குதிரையின் அருகிலே போய் நின்றுகொண்டது. சிறிதுநேரத்தில் வெற்றிவேலன் அங்கு வந்து சேர்ந்தான். கூடவந்த ஐம்பது வீரர்களையும் துரத்திலேயே நிற்க வைத்துவிட்டு அவன் தன்னந்தனியாக வேதாளத்தை நோக்கிச் சென்றான். வேதாளம் ஆவேசமாக அவனை நோக்கிப் பாய்ந்தோடி வந்தது. உடனே வெற்றிவேலன் தன் கையில் இருந்த ஒரு மாயப் பொடியை அதன் முகத்தில் தூவினான். அந்த வேதாளம் அந்த இடத்திலேயே மயக்கம் போட்டு விழுந்தது. உடனே அவன் தன் வாளினால் அதன் தலையை வெட்டி உடலைக் கூறுகூறாகத் துண்டித்துப் போட்டான். கூடி நின்ற மக்கள் குதுகலத்துடன் ஆரவாரித்தார்கள். அரசரும் அவனுடைய திறமையைப் பாராட்டினார். மேகமாலை திருமணம் அன்றே அவர் அவனுக்குத் தங்கக் குதிரையைக் கொடுத்தார். அதற்கு மறுநாளே தன் மகளைத் திருமணம் செய்து கொடுத்தார். திருமணம் முடிந்தவுடன் அவன் சில நாட்கள் விருந்துண்பதற்காகத் தங்கினான். பிறகு தன் நாட்டுக்குப் புறப்பட்டான். தங்கக் குதிரையைப் பிரிவதுகூட அரசருக்குப் பெரிதாகப்படவில்லை. தன் மகளைப் பிரிவதுதான் பெரும் துயரமாக இருந்தது. “அப்பா, நீங்கள் கவலைப்பட வேண்டாம் நாங்கள் அடிக்கடி உங்களை வந்து பார்த்துக் கொள்ளுகிறோம்” என்று மேகமாலை கூறினாள். கடைசியில் அவர்கள் ஒருநாள் புறப்பட்டு விட்டார்கள். வெற்றிவேலன் தன் மரக்கலத்தைப் புறப்படுவதற்குத் தயாரித்தான். அதைப் பார்த்த மேகமாலை, “மரக்கலத்தில் உங்கள் வீரர்கள் வரட்டும். நாம் தங்கக் குதிரையிலேயே செல்வோம்” என்றாள். “எப்படி?” என்று கேட்டான் வெற்றிவேலன். “இப்படித்தான்!” என்று சொல்லி அவள் சில மந்திரங்களைத் தங்கக் குதிரையின் காதில் கூறினாள். உடனே அது தன் இறக்கைகளை அசைத்தது. அதற்கு மூச்சு வந்து விட்டது. அரசரிடம் விடைபெற்றுக் கொண்டு வெற்றிவேலனும் மேகமாலையும் தங்கக் குதிரையில் ஏறி உட்கார்ந்தார்கள். அது தாவிப் பாய்ந்து வானில் ஏறி மேகமண்டலங்களின் வழியாகச் சென்றது. வெற்றிவேலன் நாட்டை நோக்கிப் பறந்தது. வெற்றிவேலனின் சிற்றப்பன் அன்று அரண்மனை உப்பரிகையின்மேல் காற்று வாங்கிக் கொண்டு நின்றுகொண்டிருந்தான். அப்போது வானில் ஒரு மின்னல் ஒளி தோன்றியது. நிமிர்ந்து பார்த்தான். தாவிப் பாய்ந்து தங்கக் குதிரை பறந்து வருவதைக் கண்டான். அதன்மீது ஓர் இளவரசியுடன் தன் அண்ணன் மகன் ஏறிவருவதைக் கண்டான். எதிர்பாராமல் அவன் திடீரென்று கண்ட காட்சி அவன் மூளையைச் சிதறடித்து விட்டது. “ஐயோ! இனி நான் பிழைக்கமாட்டேன்!” என்று கூறியபடி கீழே தடாலென்று வீழ்ந்தான். அவ்வளவுதான்! அவன் மூச்சு நின்றுவிட்டது. வெற்றிவேலன் அந்த நாட்டை மேக மாலையின் உதவியுடன் சீரும் சிறப்புமாக ஆண்டு வந்தான். தாவிப்பாயும் தங்கக் குதிரையில் ஏறி மேகமாலை அடிக்கடி தேன்கதலி நாட்டுக்குச் சென்று தன் தந்தையையும் தம்பியையும் பார்த்து வந்தாள். எல்லோரும் இன்பமாக இருந்தனர். எங்கும் இன்பம் தங்கவே இனிய கதையும் முடிந்ததே!  தமிழாலயம் வெளியீடுகள் நாரா நாச்சியப்பன் எழுதியவை 1 நாச்சியப்பன் பாடல்கள் I 15-00 2 நாச்சியப்பன் பாடல்கள் II 15-00 3 மூன்று திங்களில் அச்சுத்தொழில் 10-00 4 புதுமுறை பஞ்சதந்திரக் கதைகள் 15-00 5 நாயகப் பெருமான் 4-00 6 ஏழாவது வாசல் 5-00 7 அசோகர் கதைகள் 2-00 8 பறவை தந்த பரிசு 4-00 9 மாயத்தை வென்ற மாணவன் 5-00 10 அப்பத் தின்ற முயல் 5-00 11 தாவிப்பாயும் தங்கக் குதிரை 4-00 12 பள்ளிக்குச் சென்ற சிட்டுக் குருவிகள் 5-00 13 குயில் ஒரு குற்றவாளி 5-00 14 பாடுபாப்பா 4-00 15 நான்கு பார்வைகளில் பாரதிதாசன் 7-00 16 பாசமுள்ள நாய்க்குட்டி 5-00 தமிழாலயம்: 137, ஜானிஜான் கான் தெரு. சென்னை.600 014. இந்த மின்னூலைப் பற்றி உங்களுக்கு இம்மின்னூல், இணைய நூலகமான, விக்கிமூலத்தில் இருந்து கிடைத்துள்ளது[1]. இந்த இணைய நூலகம் தன்னார்வலர்களால் வளருகிறது. விக்கிமூலம் பதிய தன்னார்வலர்களை வரவேற்கிறது. தாங்களும் விக்கிமூலத்தில் இணைந்து மேலும் பல மின்னூல்களை அனைவரும் படிக்குமாறு செய்யலாம். மிகுந்த அக்கறையுடன் மெய்ப்பு செய்தாலும், மின்னூலில் பிழை ஏதேனும் இருந்தால் தயக்கம் இல்லாமல், விக்கிமூலத்தில் இம்மின்னூலின் பேச்சு பக்கத்தில் தெரிவிக்கலாம் அல்லது பிழைகளை நீங்களே கூட சரி செய்யலாம். இப்படைப்பாக்கம், கட்டற்ற உரிமங்களோடு (பொதுகள /குனு -Commons /GNU FDL )[2][3] இலவசமாக அளிக்கப்படுகிறது. எனவே, இந்த உரையை நீங்கள் மற்றவரோடு பகிரலாம்; மாற்றி மேம்படுத்தலாம்; வணிக நோக்கத்தோடும், வணிக நோக்கமின்றியும் பயன்படுத்தலாம் இம்மின்னூல் சாத்தியமாவதற்கு பங்களித்தவர்கள் பின்வருமாறு: Info-farmer Arun kaniyam * * * ↑ http://ta.wikisource.org ↑ http://creativecommons.org/licenses/by-sa/3.0/ ↑ http://www.gnu.org/copyleft/fdl.html