சோழர் கால அரசியல் தலைவர்கள் பேரா. கா. ம. வேங்கடராமையா 8 அக்டோபர், 2020 அன்று விக்கிமூலத்தில் இருந்து பதிவிறக்கப்பட்டது உள்ளுறை சோழர் கால அரசியல் தலைவர்கள் 1. அருணிதி கலியன் ... 1 2. அம்பலவன் பழுவூர் நக்கன் ... 12 3. சிற்றிங்கணுடையான் ... 19 4. பார்த்திவேந்திராதிபன்மன் ... 29 5. மதுராந்தகன் கண்டராதித்தன் ... 53 6. பொய்கைநாடு கிழவன் ... 59 7. ஜெயங்கொண்ட சோழப் பிரம்மாதிராசன் ... 74 8. கருணாகரத் தொண்டைமான் ... 81 9. நெற்குன்றங்கிழார் ... 95 10. மணவில் கூத்தன் ... 102 11. சேக்கிழார் ... 117 12. அமராபரணன் சீயகங்கன் ... 133 13. பெருமான் நம்பிப் பல்லவராயன் ... 138 14. மணவாளப் பெருமாள் ... 147 உலகளாவிய பொதுக் கள உரிமம் (CC0 1.0) இது சட்ட ஏற்புடைய உரிமத்தின் சுருக்கம் மட்டுமே. முழு உரையை https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode என்ற முகவரியில் காணலாம். பதிப்புரிமை அற்றது இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர். நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை. *** இது, உலகத் தமிழ் விக்கியூடகச் சமூகமும் ( https://ta.wikisource.org ), தமிழ் இணையக் கல்விக் கழகமும் ( http://tamilvu.org ) இணைந்த கூட்டுமுயற்சியில், பதிவேற்றிய நூல்களில் ஒன்று. இக்கூட்டு முயற்சியைப் பற்றி, https://ta.wikisource.org/s/4kx என்ற முகவரியில் விரிவாகக் காணலாம். Universal (CC0 1.0) Public Domain Dedication This is a human readable summary of the legal code found at https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode No Copyright The person who associated a work with this deed has dedicated the work to the public domain by waiving all of his or her rights to the work worldwide under copyright law including all related and neighboring rights, to the extent allowed by law. You can copy, modify, distribute and perform the work even for commercial purposes, all without asking permission. *** This book is uploaded as part of the collaboration between Global Tamil Wikimedia Community ( https://ta.wikisource.org ) and Tamil Virtual Academy ( http://tamilvu.org ). More details about this collaboration can be found at https://ta.wikisource.org/s/4kx. ௳ அருணிதி கலியன்[1] முன்னுரை “அருணிதி தரவரும் ஆனந்த மலையே அலைகடலே பள்ளி எழுந்தருளாயே“ என்ற மாணிக்கவாசகர் அருளிய திருப்பள்ளியெழுச்சி வரியும், கலியநாயனார்[2] திருப்பெயரும், “அருணிதிகலியன்” என்ற மாத்திரையானே நினைவுக்கு வரும். இந்நாட்டில் வாழ்ந்த பண்டைப் பெரியோர்கள் இங்ஙனம் சமயகுரவர் வாக்குகளைத் தம் பெயராகக் கொண்டிருந்தனர் என்பது நாம் நன்கறிந்த தொன்று[3] . தந்திவர்மனது திருவல்லிக்கேணிக் கல்லெழுத்தில் (கி. பி. 787ல்) புகழ்த்துணை விசையரையன்[4] என்று ஒருவன் குறிக்கப்பெற்றுள்ளான் ; இவன் பெயர் புகழ்த்துணை நாயனார்[5] திருப்பெயரை நமக்கு நினைவூட்டும். இங்ஙனம் நாயன்மார் பெயர்களை நினைவூட்டும் பல பெயர்கள் கல்லெழுத்துக்களிற் பயிலுதல் நன்கு தெரியவரும். அருணிதி கலியன் அருணிதி கலியன் என்பான் முதற் பராந்தகன் என்னும் சோழ அரசனுடைய அதிகாரிகளில் ஒருவன். இவன் சோழ நாட்டவன் ; மருதூர் என்னும் ஊரவன் ; மருதூருடையான் அருணிதி கலியன் என்றும் கூறப்பெறுபவன். இவனைக் குறித்து முதற்பராந்தக சோழனுடைய ஆனைமலைக் கல்வெட்டால் அறியப்பெறுகின்றது. அக்கல்லெழுத்துப்பகுதி வருமாறு :- "மதிரை[6] கொண்ட கோப்பரகேசரி[7] பன்மற்கு யாண்டு முப்பத்து மூன்றாவது இவ்வாண்டு தேவதானம்[8] கீழிரணிய முட்டத்துப்[9] படும் பிரமதேயம்[10] நரசிங்க மங்கலத்துச்[11] சபையோம் சோழப் பெருமானடிகள் அதிகாரிகள் சோழ நாட்டுப் புறங்கரம்பை நாட்டு[12] மருதூர் மருதூருடையான் அருணிதி கலியனுக்கு ஒட்டிக் குடுத்த பரிசாவது.”★ சோழப் பெருமானடிகள் மேற்குறித்த கல்லெழுத்துப் பகுதியில் அருணிதி கலியன் என்பான் சோழப் பெருமானடிகள் அதிகாரிகள் என்று மரியாதையாகக் கூறப்பெற்றுள்ளான். சோழப் பெருமானடிகள் என்பது சோழவரசன் எனப் பொருள்படும். இங்குக் குறித்த சோழவரசன் முதற் பராந்தக சோழன் ஆவன். இவன் 907 முதல் 953 வரை ஆட்சி செய்தவன் ; மதுரை கொண்ட கோப்பர கேசரி பன்மன் என்றும் இக்கல்லெழுத்தில் குறிக்கப் பெற்றுள்ளான் ; இவனுடைய 3-ஆம் ஆட்சி யாண்டுக் கல்வெட்டுக்களிலிருந்தே இவன் இங்ஙனம் கூறப்பெற்றுள்ளமையின் இவன் கி. பி. 910 லேயே மதுரையைக் கைப்பற்றினான் என்றறியலாம். இவனிடம் தோற்ற பாண்டிய அரசன் மூன்றாம் இராசசிம்மன் ஆவன்.[13] அருணிதி கலியனுக்கு ஒட்டிக்கொடுத்த பரிசு[14] அருணிதி கலியனொடு ஆனைமங்கலத்துச் சபையார் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டார்கள். அது மேற்குறிப்பிட்ட முதற் பராந்தகசோழனது முப்பத்துமூன்றாவது, ஆட்சியாண்டில் தரப்பெற்ற ஆனைமங்கலக் கல்லெழுத்தில்[15] கூறப்பெற்றுள்ளது. அவ்வொப்பந்தம் பின்வருமாறு :- 'நரசிங்கப் பெருமானடிகள்[16] தம்முடை நிலத்தால் சபையார்க்குக் கொடுக்கவேண்டிய ஈழக்காசு பதினெட்டு. இத்தொகையின் மூன்றில் ஒருபங்காகிய ஆறு ஈழக் காசுகளை வட்டியாகப் பெறும்பொருட்டு அருணிதி கலியன் சபையார்க்கு இறைகாவலாகப்[17] பதினைந்து ஈழக்காசுகளை அளித்தான். ஒரு ஈழாக்காசுக்குத் திங்கள் ஒன்றுக்கு வட்டி புத்தக்கம் ; பதினைந்து ஈழாக்காசுகளுக்குத் திங்கள் ஒன்றுக்கு 3 புத்தக்கம்.[18] இது ஆண்டொன்றுக்கு 45 புத்தக்கம் ஆகிறது. ஒரு ஈழக்காசுக்கு 7, புத்தக்கம் எனில் 45 புத்தக்கம் 6 ஈழாக்காசு ஆகிறது. இங்ஙனம் 15 ஈழக்காசுக்கு 6 ஈழக்காசு வட்டி. நரசிங்கப் பெருமானடிகள் சமையார்க்கு இன்னும் கொடுக்கக் கடவ 12 ஈழாக்காசுகளும் நீக்கப்பெற்றன. இனி ௸ இறைகாவலாகக் கொடுத்த 15 காசினால் ஊருடையான் குளமான கலியனேரி[19] என்ற (ஏரியுள்ள) நிலப்பகுதி விலைக்கு வாங்கப்பெற்றது. இவ்வொப்பந்தப்படி அருணிதி கலியன் இக்குளத்தைக் கல்லி ஆழமாக்கலாம் ; கரை நீளமாக்கலாம் ; கரையை உயர்த்தலாம் ; குளத்தில் வேண்டிய அளவு நீரை நிறைத்துக் கொள்ளலாம். இக்குளத்தின்கீழ் நீர்நிலன்[20] இருவேலியை அருணிதி கலியன் விலைக்குக் கொண்டான். இதிலிருந்து வந்த வருமானம் அஞ்ஞாழிக்காலால்[21] முன்னூறு கலம் நெல் ஆகும். இதில் 150 கலம் நரசிங்கப் பெருமானுக்கு மூன்று சந்தியும் திருவமுது செய்விக்க வேண்டும். எஞ்சிய 150 கலமும் பிற்குறித்தவாறு செலவு செய்யவும் ஏற்பாடு :- உத்தம அக்கிரமாகத்[22] தேவர்[23] அமிர்து செய்யும்பொழுது வேதப் பிராமணர் நிசதம்[24] ஐவர்க்கு அமுது செய்விக்க வேண்டும் ; பத்தெட்டுக் குத்தல் அரிசி [25] நாள் ஒன்றுக்கு இருநாழி ; கறிமூன்று : தயிர் நாழி ; நெய் இருசெவிடு[26] ; காயிலை[27] இரண்டு ;. தாலம்[28] ஐந்து; வட்டில்[29] ஐந்து; ஒட்டூட்டி[30] ஒன்று: சட்டுவம்[31] ஒன்று. அடுவான் ஒருவனுக்கு நாடோறும் நெல் ஐந்து நாழி; ஆறு திங்களுக்கு ஒரு புடவை[32] மேற்குறித்தவாறு நரசிங்கப் பெருமானுக்கு நிவேதனம் செய்விக்கவும், வேதப்பிராமணர்க்கு அன்னம் பாலிப்பு நடத்தவும் ஏற்பாடு. தொடங்கவேண்டிய காலம் : இவ்வாட்டை கற்கடக நாயிற்று[33] வெள்ளிக்கிழமைபெற்ற ஆயிலியத்துநாள் குரிய கிரகண வேலை குறைகிராணம்[34] பற்றின. அன்று முதலாக நடத்தப்பெற வேண்டும் என்றும், சிறீ காரியம்[35] ஆராய்கின்ற திருவாய்ப்பாடி[36] நாராயணனும் இவ்வூர்ச் சபையாரும் சந்திராதித்தவல்[37] நடத்தவும் ஒப்புக் கொண்டனர். நடத்தாவிடில் ! ஸ்ரீ காரியம் ஆராய்பவன் அல்லது சபையாருள் ஒருவன் இத்தருமத்தை நடத்தாவிடில் நாடோறும் இருகாசு அன்றாள் கோவினுக்குத் தண்டம் கொடுத்தல் வேண்டும். அக்காசு கொண்டு திருமாலுக்குத் திருவிளக்கு எரிக்க வேண்டும். சபையார் எல்லோரும் சேர்ந்து இத்தருமத்தை நடத்தாவிடில் ஆறு காசு தண்டம் செலுத்த வேண்டும். இத்தண்டம் இறுத்தும் முட்டின்றிச் சந்திர சூரியர் உள்ளவரை இத்தருமம் நடத்தவேண்டும். இதிற்குறித்த வட்டி வீதம் 15 ஈழக்காசுகளுக்கு 6 ஈழக்காசுகள் வட்டியென இக்கல்லெழுத்துக் கூறுகிறது ; எனவே இங்குக் குறித்த வட்டி 100-க்கு 40 வீதம் ஆகிறது. இது அதிகமாகத் தோன்றுவது இயல்பே. இங்ஙனம் அதிக வட்டி பெறுவது மிக அருகி இருந்திருத்தல் வேண்டும். சில சமயத்து 37%-ம் 50%ம் வட்டி பெற்றதாகக் கல்லெழுத்துக்கள் பகர்கின்றன. கடன் தருதல் வாங்குதல் இவற்றின் தரத்துக்கு ஏற்பவும், மக்கள் வாழ்க்கையில் மாறுதல் ஏற்படக்கூடிய அரசியல் நிலைக்கு ஏற்பவும், அதிக வட்டி வாங்கப்பெற்றது என்று கூறவும் முடியாது. எனவே அதிகவட்டி வாங்கியதேன் ? என்பதற்கு விடை எளிதில் தரவியலாது.[38] (அருணிதி கலியன் அளித்த தொகையை வட்டிக்கு விடவில்லை ; இவ்வாறு வட்டி கணக்கிடப் பெற்றது என்பதே அறிதற்பாலது.) ஈழக்காசு இருபது ஈழக்காசு 10 கழஞ்சு பொன் என்று ஒரு கல்வெட்டுக் கூறுகிறது.[39] எனவே ஒரு ஈழக்காசு கழஞ்சு எடையுடையதென அறியலாம். ஈழக்காசு ஈழ நாட்டினின்று வந்த நாணயமுறை என்றும், சோழ அரசர் ஈழத்தை வெல்வதற்கு முன்னதாகவே காசுகள் அங்கு வழக்கிலிருந்தன என்றும், சோழ நாட்டில் 9, 10 நூற்றாண்டுகளில் இக்காசுகள் வழங்கப் பெற்றன என்றும், பராந்தகன் காலத்து ஈழக்கிரசும் ராசராசனது காசும் துாய்மையிலும் எடையிலும் ஒத்திருந்தன என்றும் ஆராய்ச்சியாளர் கூறியுள்ளனர்.[40] அக்கம் அக்கம் எத்தகைய நாணயம் என்று அறிந்து கொள்ள முடியவில்லை. 7 புத்தக்கம் (புது அக்கம்) ஒரு ஈழக்காசு என்று இக்கல்லெழுத்துப் பகர்கிறது. ’’அக்கம் என்பது காசில் 12-ல் ஒரு பங்கு என்றும், கழஞ்சில் 24-ல் 1 பங்கு என்றும் உறுதியாகக் கூறலாம்.’’[41] திருவிளக்குத் திருத்தொண்டு வேதாரண்யத்தில் ஒரு விளக்கு எரிக்க 90 ஆடுகளை இவ்வருணிதி கலியன் அளித்ததாகப் பராந்தக சோழனது 28-ஆம் ஆட்சி யாண்டுக் கல்வெட்டுக் கூறுகிறது.[42] ஆனைமலைக் கோயில் கட்டிய காலம் இனி, ஆனைமலையிலே நரசிங்கப் பெருமாள் கோயில் கட்டப்பெற்ற காலத்தை அறிதலும், ஏற்புடைத்தே. ”பரம வைஷ்ணவன் தானாகி நின்றிலங்கு மணி நீண்முடி நிலமன்னவன்” என்று சீவரமங்கலத்துச் செப்பேடுகளில் புகழப்பெற்ற நெடுஞ் சடையன் பராந்தகன் (765-790) என்னும் பாண்டிய அரசன் காலத்தில் இத்திருக்கோயில் அமைக்கப்பெற்றது. இவ்வரசனின்முதலமைச்சன் மாறன் காரி என்ற பெயருடையவன். இவனே கி. பி. 770-ல் நரசிங்கப் பெருமாள்கோயிலைக் குடைவித்து அக்கோயிற் கண்மையில் அந்தணர்களைக் குடியேற்றினன். இவன் தம்பி மாறன் எயினன் எனப்பெற்றான்; அவனே முக மண்டபம் அமைத்துக் கடவுள் மங்கலமும் செய்வித்தவன் ஆவன்.[43] கலி 3871-ல் இக்கற்றளியமைக்கப் பெற்றதென்று வடமொழிக் கல்வெட்டொன்றும் கூறுகிறது.[44] முடிப்புரை ஆனைமங்கலத்து நரசிங்கப் பெருமாளுக்குத் தொண்டு செய்தமையின் அருணிதி கலியனின் திருமால் பக்தியும், வேதாரணியத்துத் திருவிளக்குத் திருத்தொண்டு ஆற்றியமையின் சிவபக்தியும் விளங்கும். கலியனேரியை ஆழமும் நீளமும் உள்ளதாக ஆக்கி ஏரிகரையைச் செப்பனிட்டமையின், அருணிதி கலியன் குடிகளின் நலத்தின் பொருட்டுப் பாடுபட்டவன் என்றும் அறியலாம். * * * ↑ இது ஞானசம்பந்தம் திங்களிதழில் வெளிவந்தது. ↑ கலியநாயனார் வரலாற்றை உமாபதி சிவாசாரியார் எழுதிய பின்வரும் திருத்தொண்டர் புராணசாரச் செய்யுளால் அறிக :- தடமதில் சூழ் ஒற்றியூ ரதனில் வாழும் ⁠சக்கரப்பா டியர் குலமெய்த் தவமா யுள்ளார் படர்புகழார் கலியனார் நலியும் கூற்றைப் ⁠பாய்ந்தவர்க்கு விளக்கெரிக்கும் பரிவால் மற்றோர் உடலிலராய்ச் செக்குழல்வார்க் கதுவும் நேரா(து) ⁠உயர்மனைவி யைக்கொள்வார் ஊரும் இன்றி மிடறுதிரம் அகல்நிறைய அரிய நாதன் ⁠வியன்கைகொடு பிடிப்பஅருள் மேனாவிர. ↑ “பொன்னார் மேனி“ என்ற சுந்தரர் வாக்கு, “பொன்னார் மேனி பட்டன்“ என்று ஒருவர் பெயராக அமைந்தது. இவ்வாசிரியர் வெளியிட்ட இலக்கியக்கேணி என்ற நூலில் “பொன்னார் மேனியன்“ என்ற கட்டுரை காண்க. நீறணி பவளக்குன்றம், எடுத்த பாதம், மழலைச் சிலம்பு என்ற திருவிசைப்பாத் தொடர்கள் முற்காலத்து மக்கள் பெயராக வழங்கின. (திரு. மு. இராகவையங்கார் சாஸனத் தமிழ்க்கவி சரிதம், பக்கம் 38). முதலாம் இராசராசன் காலத்துத் திருப்பதிகம் ஓத நியமிக்கப்பெற்றவர் பெயர்களையும் காண்க. ↑ புகழ்த்துணை விசையரையனைப் பற்றி ஞானசம்பந்தம் மலர் 18, இதழ் 4, பக்கம் 260 - 264 காண்க. ↑ புகழ்த்துணை நாயனார் வரலாற்றைப் பின்வரும் , திருத்தொண்டர் புராணசாரத்தான் அறிக :- "புண்ணியர்கள் புகழ் அழகார் திருப்பத் தூர்வாழ் ⁠புகழ்த்துணையார் அகத்தடிமைப் புனிதர் சின்னாள் மண்ணிகழ மழைபொழியா வற்கா லத்தால் ⁠வருந்துடலம் நடுங்கிடவும் மணி நீர் ஏந்தி அண்ணல்முடி பொழிகலசம் முடிமேல் வீழ ⁠அயர்ந்தொருநாள் புலம்பஅரன் அருளால் ஈந்த நண்ணவரும் ஒருகாசுப் படியால் வீழ்ந்து ⁠நலமலி சீர் அமருலகம் நண்ணி னாரே." ↑ மதிரை - மதுரை. ↑ பரகேசரி, ராசகேசரி என்பன சோழவரசர்கள் மாறி மாறிப் புனைந்துகொண்ட பட்டப் பெயர்கள். ↑ தேவதானம் - கோயில்களுக்கு விடப்பட்ட இறையிலி நிலம். ↑ கீழிரணியமுட்டம் - ஆனைமலையைச் சுற்றியுள்ள பகுதி, இரணியமுட்டத்துப் பெருங்கௌசிகனார் என்ற புலவர் கடைச்சங்க காலத்தவர் ; மலைபடுகடாம் என்ற நூலின் ஆசிரியர். இரணியமுட்டம் என்ற நாட்டின் பகுதி சங்க காலத்திலேயே இப்பெயரோடிருந்தமை இப்புலவர் பெயரான் அறியப்பெறும். ↑ பிரமதேயம்-அந்தணர்களுக்கு விடப்பெற்ற இறையிலி நிலம். ↑ நரசிங்கமங்கலம் - ஆனைமங்கலத்துக்கு ஒரு பெயர் ↑ இஃது பிற்காலத்து அருமொழிதேவ வளநாட்டின் பகுதியாயிற்று. ↑ கி. பி. 575-ல் கடுங்கோனால் நிறுவப்பெற்ற பாண்டிய அரசு கி. பி. 915- ல் பராந்தகசோழனால் இராசசிம்மன் காலத்தில் அழிவுற்றது. ↑ ★ ஒட்டிக்கொடுத்த பரிசு - ஒப்புக்கொண்டு எழுதிக்கொடுத்த ஒப்பந்தம். ↑ S. I. I. Vo1. III, Part III No 106. ↑ நரசிங்கப் பெருமானடிகள் - ஆனைமங்கலத் திருக்கோயிலில் எழுந்தருளியிருந்த திருமால் திருநாமம். ↑ இறைகாவல் - இறைதிரவியம் - வரிப்பணத்துக்குப் பதிலாகச் செலுத்தப்படும் முதற் பொருள். ↑ புத்தக்கம் - புதிய அக்கம்; அக்கம் - ஒரு நாணயம். ↑ கலியனேரி - அருணிதிகலியன் பெயரால் அமைந்த ஏரி. ↑ நீர்நிலன் - நன்செய் நிலம். ↑ அஞ்ஞாழிக்கால் - மரக்கால் பெயர். ↑ உத்தம அக்கிரமாக - சிறந்த முறையில். ↑ தேவர் - நரசிங்கப் பெருமாள். ↑ திசதம் - நாடோறும். ↑ பத்தெட்டுக் குத்தல் அரிசி - பலதடவை குற்றிய அரிசி ↑ செவிடு - ஆழாக்கு. ↑ காயிலை - பாக்கு வெற்றிலை ↑ தாலம் - தாம்பாளம். ↑ வட்டில் - கிண்ணம் (CUP). ↑ ஒட்டூட்டி - தண்ணீர் வார்க்கும் செம்பு போலும் (?) ↑ சட்டுவம் - அகப்பை. ↑ புடவை - ஆண்கள் உடுக்கும் ஆடையும் புடவையெனப் பெற்றது. (தமிழ்ப்பொழில் - ஏழாம்துணர் - பக்கம் 552 - 3 ல் காண்க.) ↑ கற்கடகநாயிறு - ஆடி மாதம். ↑ குறைகிராணம் - குறைகிரகணம்: நிறைகிரகணம் என்று பாடமிருப்பின் சிறக்கும். ↑ சிறீகாரியம் - சிரீகாச்சியம் - சிரிகாற்றியம் என்று ஸ்ரீகாரியம் என்ற சொல் பிழையாக இக் கல்லெழுத்தில் காணப்பெறுகிறது. ↑ திருவாய்ப்பாடி - சண்டீசப்பெருமான் தலம் போலும்! ( திருப்பனந்தாளுக்கு அண்மையிலுள்ளது.) ↑ சந்திராதித்தவல் - சந்திர சூரியர் உள்ளவரை. ↑ K. A. N. COLAS Part II, Page 426. ↑ S. I. I. Vol. v No 720. ↑ K. A. N. COLAS Part II, Page 450. ↑ do do Page 450. ↑ K.A.N. COLAS Part I, Page 426; 445 of 1904 ↑ திரு. பண்டாரத்தார் - பாண்டியர் வரலாறு - பக்கம் 55-56. ↑ திரு. K. S. சீனிவாசபிள்ளை - தமிழ் வரலாறு - பிற். பக்கம் - பாகம் 154. அம்பலவன் பழுவூர் நக்கன்[1] கோவந்தபுத்தூர், விசயமங்கை கோவந்தபுத்தூர், கொள்ளிடத்தின் வடகரையிலுள்ள பாடல் பெற்ற சிவதலம். இதனை அப்பரும் சம்பந்தரும் பாடியுள்ளனர். கோவந்தபுத்தூர் என்பது ஊரின் பெயர்; செயமங்கை என்பது திருக்கோயிலின் பெயராகும். இதனை, ‘கொள்ளி டக்கரை கோவந்த புத்தூரில் வெள்வி டைக்கருள் செய்விச யமங்கை‘ என்ற அப்பர் தேவாரத்தான் அறியலாம். ஒரு பசு சிவலிங்கத் திருமேனியின்மீது பால் சொரிந்(து அபிஷேகம் செய்)தமையால் இதற்குக் கோவந்தபுத்தூர் என்ற பெயர் எய்தியது என்பர். இது, ‘கோதனம் வழிபடக் குலவு நான்மறை வேதியர் தொழுதெழு விசய மங்கையே‘ என்று ஞானசம்பந்தர் கூறியமையால் அறியப்பெறும். ‘வெள் விடைக் கருள்செய் விசயமங்கை‘ என்று அப்பர் கூறியபடியால் இடபதேவருக்கு அருள் செய்த வரலாறும் இங்கு அறியப்படுவ தொன்றாகும். இனி, விசயன் (அருச்சுனன்) வழிபட்டமையால் இத் திருக்கோயில் விசயமங்கை என்ற பெயர் எய்தியதென்பர். ‘பாண்டு வின்மகன் பார்த்தன் பணிசெய்து வேண்டும் நல்வரங் கொள் விச யமங்கை‘ என்ற திருநாவுக்கரசர் தேவாரம் இதனை வலியுறுத்தும். பிரமதேயம் “வேதியர் தொழுதெழு விசயமங்கை“ என்று அப்பர். குறித்தமையின் இங்கு வேதியர்கள் பலர் வாழ்ந்திருத்தல் கூடும். இடைக்காலத்திலும் இத்தலத்தில் வேதியர் நிறைந்து வாழ்ந்திருந்தமையின் சோழர் கல்லெழுத்துக்களில் இவ்வூர் பிரமதேயமாகவே குறிக்கப்பெற்றது; “வடகரைப் பிரமதேயம்[2] பெரிய வானவன் மாதேவிச் சதுர்வேதிமங்கலம் (165 of 1929) என்றமை காண்க. இச்சிலைமேல் எழுத்தினின்று இவ்வூர்க்குப் “பெரிய வானவன் மாதேவிச் சதுர்வேதி மங்கலம்“ என்ற பெயர் வழங்கிவந்தது என்றும் அறியலாம். இறைவன் விஜய மங்கலத்து மகாதேவர் எனப்பெற்றார் (164 of 1929). கோயில் திருப்பணி செய்தவன் இச்சிறப்பு வாய்ந்த கோயிலைக் கருங்கல் திருப்பணி செய்தவனைக் குறித்துக் கோவிந்தபுத்தூர்க் கோயிலில் பல கல்லெழுத்துக்கள் கிடைத்துள்ளன. அத்தலைவன் ’அம்பலவன் பழுவூர்நக்கன்’ என்ற பெயருடையவன். இவன் உத்தமசோழனது 10ஆம் ஆட்சியாண்டு (கி. பி. 979) முதற்கொண்டு (170 of 1929), முதலாம் இராசராசனின் 7-ம் ஆட்சியாண்டு (கி. பி. 992) வரை (160 of 1929) கல்லெழுத்துக்களில் குறிக்கப் பெற்றுள்ளான். சிறப்புப் பெயர்களும் பண்புகளும் பழுவூர்நக்கன் உத்தமசோழனது பெருந்தரம்; உத்தம சோழனால் விக்கிரமசோழமாராயன்[3] என்ற சிறப்புப்பெயர் அளிக்கப்பெற்றவன் (164, 165. 1929); இவன் குவளாலத்தினின்று[4] போந்தவன் (166 of 1929; 291 of 1917); வேளாள குலத்தவன்; பெருங் கொடையாளி. இவன் முதலாம் இராச ராசசோழனது மூன்றாம் ஆட்சியாண்டில் விக்கிரமசோழ மகாராசன் என்று குறிக்கப்பெற்றிருப்பினும், மும்முடிச்சோழப்[5] பெருந்தரம் ஒன்றும் வழங்கப்பெற்றன். இனி இராசராசனது 7ஆம் ஆட்சியாண்டில் இவன் ராசராசப்பல்லவரையன் என்று குறிக்கப்பெற்றிருக்கிறான் என்று அறியப்படுதலின், இராசராசனும் தன் பெருந்தரத்து அதிகாரிகளில் ஒருவனை இப்பழுவூர்நக்கனுக்கு இப்பட்டம் அளித்துச் சிறப்புச் செய்தனன் என்பது தெள்ளிது. சிவத் தொண்டுகள் அம்பலவன் பழுவூர்நக்கன் விசயமங்கைத் திருக்கோயிலைக் கல்லால் கட்டுவித்தமையோடு ஸ்ரீவிமானத்தையும் கல்லால் கட்டுவித்து (165 of 1929), நெடுவாயில் என்ற ஊரைத் தானமாக அளித்தான். இக்கோயிலில் - நான்கு வேளைகளிலும் திருவமுதுக்கு அரிசிக்கும், பொறிக்கறியமுது, நெய்யமுது, தயிரமுது, அடைக்காயமுது, சந்தனம், கற்பூரம் ஆகியவற்றுக்கும், ஆடியருளப் பாலுக்கும், ஆடைக்கும் நுந்தா விளக்கு ஐந்தினுக்கும், சிறுகாலை எட்டு-உச்சியம்போது எட்டு-இரவுக் குப் பதினான்கு சந்தி விளக்குகளுக்கும்”[6] இந்நில் வருவாய் பயன்படுத்தப்பெற்றது (175 of 1929). முதலாம் இராசராசனது 3-ஆம் ஆட்சியாண்டில் விநயாபரணவிண்ணகர்[7] எம்பெருமான் கோயிலில் முன்னர் உள்ள மண்டபத்தில் சபை கூடியது; இத்தலைவனிடம் இருந்து அச்சபையார் 2000 கழஞ்சு (பொன்னை) இறைகாவலாகப்[8] பெற்றுக் கொண்டு 15 வேலி நிலத்தை இறையிலியாக்கிக் கோவிலுக்கு அளித்தனர். இனி, இவ்வரசனது 7-ஆம் ஆட்சியாண்டில் இத் தலைவன் இத்திருக்கோயிலில் கூத்தப்பெருமானையும், உமாபட்டாலகியையும் எழுந்தருள்வித்து அவர்களுக்குப் பொன் அணிகலன்களை யளித்துள்ளான் என்று ஒரு கல்லெழுத்து (163 of 1929) நுவல்கின்றது. திருவிளக்குத் திருத்தொண்டு பரகேசரிபன்மரது[9] 10 ஆவது ஆண்டில் ஒரு விளக்கு எரிக்கவும் (170 of 1929), 12 ஆவது ஆண்டில் 4 விளக்குகள் எரிக்கவும் (169 of 1929) இவன் ஆடுகளைத் திருவிசய மங்கையில் அளித்துள்ளான். இவனுடைய தொண்டு கூகூரிலும் நிகழ்ந்துளது; அங்கு ஒரு விளக்கு எரிக்க 90 ஆடுகளை அளித்ததாக ஒரு கல்வெட்டினின்று (291 of 1917) அறிகிறோம். கோயிலதிகாரியை நியமித்தல் இவன் முதல் இராசராசசோழனது 7-ஆம் ஆட்சி யாண்டில் வங்கிப்புரத்துச் சேட்டபோசன் வெண்ணய கிரமவித்தன்[10] என்பானைக் கோயிலதிகாரியாக நியமித்தான் (160 of 1929). கோயில் காரியம் பார்ப்பவர்களை மேற்பார்வை செய்ய இவ்வதிகாரிக்கு உரிமை தரப்பெற்றது. அன்றியும் வேளாளர் இவனை எதிர்த்தால் வேலையினின்று நீக்கவும், பிராமணர் எதிர்த்தால் 25 கழஞ்சு பொன்தண்டம் விதிக்கவும் இவற்கு அதிகாரம் அளிக்கப் பெற்றது (ARE 1929 1129). பழுவூர்நக்கப்புத்தேரி மேற்கூறியாங்கு இரண்டு பேரரசர்களால் சிறப்பிக்கப் பெற்றமையின், பழுவூர்நக்கன் சோழநாடு முழுவதும் நன்கு அறியப்பெற்றவகை அந்நாளில் விளங்கியவனாதல் கூடும். இவன் காலத்துக்கு ஏறத்தாழ 60 ஆண்டுகளுக்குப் பிறகு (அதாவது இரண்டாம் இராசேந் திரனின் 4-ஆம் ஆட்சியாண்டில் கி. பி. 1055ல்) தரப். பெற்ற மணிமங்கல சபையார் சாஸசனத்தில் (s. I. I., Vol. II Part No. 29) பழுவூர்நக்கப்புத்தேரி என்று ஓரேரி குறிக்கப்பெற்றுள்ளது. தொண்டைமண்டலத்து மணிமங்கலத்து இவ்வேரி இருந்ததாகக் காணப்பெறினும், இவ்வேரிக்குப் பெயர் இவன் பெயரையொட்டி யமைந்ததாகவே கொள்ளலாம். இவன் மனைவியர் இவ்வதிகாரிக்கு இருமனைவியர் இருந்தனர் என்று இரண்டு கல்லெழுத்துக்களினின்றும் அறியப் பெறுகின்றது. ஒருவர் அபராஜிதன் செய்யவாய்மணி என்பவர்; மற்றாெருவர் சிங்கபன்மன் காஞ்சி அக்கன் என்பவராவர். (அக்கன் என்றமையால் இவரே மூத்த மனைவியாதலும் கூடும்). இவ்விருவரும் விசய மங்கைக் கோயிலில் விளக்கு எரிக்க ஆடுகளை யளித்துத் தம் புகழை நிறுவியுள்ளார்கள். புறவுரை நெடுவாயில் தானசாஸனத்தில் ’அறம் மறவற்க; அறமல்லது துணையில்லை’ என்றுள்ள அறிவுரை கவனிக் கற்பாலது. இவ்வூரில் திருத்தொண்டத்தொகையான் திருமடம்[11] என்று ஒரு மடம் இருந்தது. மூன்றாம் இராசேந்திரன் காலத்தில் ஒரு கல்வெட்டுத் தொடக்கத்தில்[12] ‘வாழ்க அந்தணர்‘ என்ற திருப்பாடல் எழுதப் பெற்றுள்ளது. முடிப்புரை இத்தலைவன் உத்தமசோழன் காலத்தில் குவளாலத்தினின்று வந்திருந்தனன் என்றதிலிருந்து ஒரு அரசியல் செய்தி ஊகித்து அறியப்பெறுகின்றது; உத்தமசோழன் காலத்தில் கங்கநாடு வரையில் சோழர் ஆட்சி பரவியிருந்தது என்பதே அச்செய்தியாகும். இங்ஙனம் குவளாலத்திலிருந்து, சோணாட்டுக்கு வந்து, தேவாரம் பெற்ற தலத்தில் வதிந்து, சிவத்தொண்டுகள் பல புரிந்து, அந்நாள் சைவர் நெஞ்சுள் அமர்ந்து, இந்நாளில் ஆய்வாளர் சிந்தைக்கு விருந்தாய் விளங்கும் அம்பலவன் பழுவூர்நக்கனின் பெயரும் பீடும் நீடுவாழ்க! (இவ்வூர்க் கல்லெழுத்துக்களுட் சிலவற்றைத் தமிழ்ப்பொழில் துணர் 7, பக்கம் 296-301ல் காண்க). * * * ↑ இது ‘குமரகுருபரன்‘ ‘ஞானசம்பந்தம்‘ ஆகியவற்றுள் வெளிவந்துள்ளது. ↑ பிரமதேயம்-அந்தணர்களுக்கு விடப்பட்ட இறையிலி நிலம். ↑ இச்சிறப்புப் பெயரை அளித்தமையால் சோழனுக்கு விக்கிரம சோழன் என்ற பெயரிருந்த பெறும். ↑ குவளாலம் - கோலார். ↑ மும்முடிச்சோழன் என்பது முதலாம் இராசராசனுக்கு வழங்கிய சிறப்புப் பெயர்களில் ஒன்று. ↑ தருமபுர ஆதீனப் பதிப்பு-சம்பந்தர் தேவாரம்-3 ஆம் திருமுறை-கல்வெட்டுக் குறிப்பு-திரு. சு. வாண்டையார். ↑ விண்ணகர் - திருமால் கோயில். ↑ இறைகாவல்-பின்னால் செலுத்தவேண்டிய வரிக்காக மொத்தமாகச் செலுத்தும் பணம் (S.I.T.1. பாகம் 3, பக்கம் 1 40 1 ). பக்கம் 5, குறிப்பு 16 காண்க. ↑ பரகேசரி என்று மட்டும் உள்ள கல்வெட்டுக்களிலும், பரகேசரி உத்தமசோழன் என்றுள்ள கல்லெழுத்துக்களிலும் அம்பலவன் பழுவூர் நக்கன் குறிக்கப் பெற்றுள்ளான். ஆகவே இத்தலைவனைக் குறித்துள்ள பரகேசரிவர்மனது கல்வெட்டுக்கள் உத்தமசோழன் காலத்தவை என்பது திண்ணம். ↑ கிரமவித்தன்-வேதத்தைக் கிரமமுறையில் அத்தியயனம் செய்தவன். (கிரமமாவது முதற்பதமும் இரண்டாவது பதமும் கூறிப், பின்னர் இரண்டாவது பதமும் மூன்றாவது பதமும் கூறிப், பின்னர் மூன்றாவது பதமும் நான்காவது பதமும் கூறி, இங்ஙனமே தொடர்ந்து சொல்லுவது). ↑ இவ்வாசிரியர் வெளியிட்ட ‘’இலக்கியக்கேணி‘’ என்ற நூலில் ‘’திருத்தொண்டத் தொகை‘’ என்ற கட்டுரை காண்க. ↑ 1932 Of 1939. சிற்றிங்கணுடையான் முன்னுரை ஈங்கா[1] நாட்டின்கண்ணது சிற்றிங்கண் என்னும் ஊர். இச் சிற்றிங்கண் ஊரவன் சிற்றிங்கணுடையான் எனப்பெற்றான். இவனது இயற்பெயர் கோயில்மயிலை என்பதாம். இவன் இரண்டாம் பராந்தகனாகிய சுந்தர சோழன் காலத்தில் பராந்தகமூவேந்த வேளான் என்று சிறப்பிக்கப்பெற்றான். ஆகவே இச் சுந்தரசோழன் மகனாகிய ஆதித்தகரிகாலன் கல்வெட்டுக்களில் சிற்றிங்கணுடையான் கோயில் மயிலை பராந்தக மூவேந்த வேளான் என்று குறிக்கப்பெற்றனன் இவன் திருவிடை மருதூர்க் கோயிலுள் ஸ்ரீகாரியம் ஆராய்கின்ற அதிகாரிகளாகத்திகழ்ந்தான். ஆதித்தகரிகாலன்[2] ஆதித்தகரிகாலனை, இரண்டாம் ஆதித்தன் என்பர் ஆராய்ச்சியாளர். 957 முதல் 970 வரை ஆண்ட இரண்டாம் பராந்தகனாகிய சுந்தரசோழனுக்கு இவன் முதன் மகனாவான். இவனது கல்லெழுத்துக்கள் தஞ்சை, திருச்சி, தென்னாற்காடு மாவட்டங்களில் கிடைத்துள்ளன; 5 ஆவது ஆட்சியாண்டு வரை காணப்பெறுகின்றன. இவன் 'பாண்டியன் தலைகொண்ட கோப்பரகேசரி வர்மன்' எனப்பெறுகிறான். இரண்டாம் பராந்தகனாகிய சுந்தரசோழனால் கி. பி. 966ல் வெல்லப்பெற்ற வீரபாண்டியனே இவனால் வெல்லப்பட்ட பாண்டியனாதல் கூடும். இவ்வாதித்த கரிகாலன் தன் தந்தையின் ஆட்சிக்காலத்திலே சில வஞ்சகர்களால் கொல்லப்பட்டான். இவ்வாதித்தகரிகாலனது ஆட்சியாண்டுகள் குறிக்கப்பெற்ற கல்லெழுத்துக்களினின்று சிற்றிங்கணுடையானின் சிறந்த தொண்டுகளைக் காண்பாம். திருவிடைமருதூர் கல்லெழுத்து[3] திருவிடைமருத்ல ஆழ்வார் ஸ்ரீகாரியம் ஆராய்கின்ற அதிகாரிகள் சிற்றிங்க ணுடையான் கோயில் மயிலை பராந்தக மூவேந்தவேளானும், திரை மூர்ச்சபையாரும் திருவிடைமருகில் நகரத்தாரும், தேவகன்மிகளும் நாடக சாலையில் கூட்டம் கூடினர். அவ்வூரில் சித்தி மறைக் காடானான திருவெள்ளறைச் சாக்கை என்ற ஆடல் வல்லான் ஒருவன் இருந்தான். அவன் தைப்பூசத் திரு நாளிலும், தீர்த்தமாடின பிற்றைநாள் தொடங்கி மூன்று நாட்களும், வைகாசித் திருவாதிரையின் பின் பிற்றை நாள் தொடங்சி மூன்று நாட்களும் ஆக ஏழு தடவை திருவிடை மருதில் உடையார் திருமுன் ஆரியக்கூத்து[4] ஆடுவதற்குப் பதினாற்கலம் நெல் கொடுப்பதற்காக ஒரு வேலி நிலத்தை அவர்கள் ஒதுக்கினர்கள். இச்செயல் இரண்டாம் ஆதித்தனின் 4-ஆம் ஆட்சியாண்டில் நடை பெற்றது. இத்தகைய கூத்து நிலையக நடத்த இவ்வதிகாரி முயற்சி எடுத்துக்கொண்ட மையான் நாகரிகக் கலைகளை வளர்ப்பதில் இவனுக்கிருந்த ஆர்வம் புலப்படு கின்றது. படிமாற்றுயர்த்தல் ஆதித்தகரிகாலனது 4 ஆவது ஆட்சியாண்டு 170 ஆவது நாள் குறிப்பிடப்பெற்ற கல்லெழுத்தொன்று[5] ஒரு அரிய செய்தியை அறிவிக்கின்றது. திரைமூர், சாஸனத்துள் கண்டவண்ணம் ஒரு குடி நீக்கி தேவதானம்;[6] ஆண்டுதோறும் பஞ்சவாரமாக 260 கலம் நெல் கொடுக்க வேண்டும். ஆனால் படிமாற்றில் [7]நூற்றறுபது கலம் நெல் வரவு வந்தது. திரைமூர் தேவதானம் இருபதிற்று வேலியும் குடிநீக்கிற்றில்லை என்று கூறி 800 கலம் நெல் கொடுக்கப்பெற்று வந்தது. சிற்றிங்கண் உடையான் திரைமூரைத் தேவதானமாக்கிய மூல வோலையை வருவித்தான்; குடி நீக்கி என்பதைக் கண்றிந்தான் ; இனி அடை ஓலைப்படி திருவிடைமருதன் என்னும் மரக்காலால் 2800 கலமும், பஞ்சவாரமாக 260 கலமும் கொடுத்துவரல் வேண்டும் என்று உத்தரவிட்டான்; இதுகாறும் கொடுக்காத தொகையை முதற் பொருளாக்கி, அம்முதற் பொருளினின்று கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு, படிமாற்றை மிகுவித்தான். இங்ஙனம் கோயில் கணக்குசளை நன்கு ஆய்ந்து, கோயில் வருமானத்தை மிகுவித்துப் படிமாற்றை அதிகரித்தமை, இச்சிற்றிங்கணுடையானின் இறைபணி நிற்றலில் பொறுப்புணர்ச்சியை நன்குணர்த்தும். அன்னம் பாலிப்பு கும்பகோணத்திலுள்ள நாகேசுவரசுவாமி கோயில் குடந்தைக் கீழ்க்கோட்டம்[8] எனப்பெறும். அங்கு இரண்டாம் ஆதித்தனின் மூன்றாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டொன்று[9] கிடைத்துள்ளது. திருக்குடந்தைச் சபையினர் சிற்றிங்கணுடையானுக்கு நிலம் விற்றனர். அந்நிலவருவாய் கொண்டு, வேதம் வல்ல அபூர்விகள்[10] இருபதின்மருக்கும், ஐந்து சிவயோகிகளுக்கும்[11] திருக்கோயிலில் அன்னம்பாலிக்கச் சிற்றிங்கணுடையான் ஏற்பாடு செய்தான். ’’உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே’’ என்றதை நன்குணர்ந்து பணியாற்றும் இத்தலைவன், பின்னும் குடந்தைக் கீழ்க்கோட்டத்தில் 50 பிராமணர்களுக்கு அன்னம் பாலிக்க நிலமளித்தான் என்று இன்னொரு சிலாலேகை[12] செப்புகின்றது. பிராபாகரம்வக்காணித்தல் திருக்குடமூக்கில் மூலப்பருடைப் பெருமக்கள்[13] சிற்றிங்கணுடையானுக்கு இரண்டாம் ஆதித்தனின் மூன்றாம் ஆட்சியாண்டில் இரண்டு மா நிலம் விற்றனர். அந்நிலத்தைப் பிராபாகரம் வக்காணிப்பார்க்குப் பட்ட விருத்தி[14] யாகச் சிற்றிங்கணுடையான் அளித்தனன் என்று ஒரு கல்லெழுத்து[15] நுவல்கின்றது. பிராபாகரம்[16] ‘‘யாகங்களை எவ்வாறு செய்வது என்பதும், மந்த்ரங்களை எம்முறையில் கூறவேண்டும் என்பதும், எச்செயல்கள் அங்கி எச்செயல்கள் அங்கம் என்பதும், இவை போன்ற பலவும் ச்ரெளதஸுத்ரங்களிலும் க்ருஹ்ய ஸுத்ரங்க்ளிலும் கூறப்பட்டன. வேதத்தில் பூர்வ காண்டத்தில் மந்த்ரங்கள் யாகங்களில் வழங்கவேண்டிய முறையிலே கூறப்படாமையாலும், எச்செயல்கள் அங்கி எவை அங்கம் என ஆங்குக் கூறப்படாமையாலும், அவையெல்லாம் மந்த்ரங்கள், விதிகள், அர்த்தவாதங்கள் இவற்றின் ஆராய்ச்சியால் அறிதல் வேண்டும். வேத வாக்கியங்களில் முரண்பாடு இருப்பின் எதனைக் கொள்ளல் வேண்டும் என்பதும், வேத வாக்கியத்துக்கும் ஸ்மிருதி வாக்கியத்துக்கும் முரண்பாடு இருப்பின் யாது பிரமாணமாகும் என்பதும், இவை போன்ற பலவும் இவ்வாராய்ச்சியால் அறிதல் கூடும். இவ்வாராய்ச்சி நூலுக்குப் பூர்வமீமாம்ஸா எனப்பெயர். பூர்வமீமாம்ஸாவை முதன்முதலில் சாஸ்திரமாக இயற்றியவர் ஜைமினி மஹர்ஷியாவர். இவர் சுமார் கி. மு. 600-ல் இருந்தவர். மீமாம்ஸ ஸுத்ரம் 12 அத்தியாயங்களைக் கொண்டது. இதற்கு சபரஸ்வாமி என்பவர் பாஷ்யம் இயற்றினர். இவரது காலம் கி. பி. 200 என்பர். இவர்க்குப்பின் ஆசார்ய சுந்தரபாண்டியன் மீமாம்ஸா வார்த்திகம் எழுதினர். இவர்க்குப் பிறகு குமாரில பட்டர் சபரபாஷ்யத்துக்கு உரை எழுதினர். இவர் காலம் கி. பி. 620 - 680 என்பர். குமாரிலபட்டரின் கொள்கைகளுக்கு மாறுபாடாக பிராபாகரமிச்ரர் சபரபாஷ்யத்துக்கு இரண்டு உரை எழுதினர். முதலுரை ஆயிரம் கிரந்தமும், இரண்டாமுரை பன்னிராயிரம் கிரந்தமும் உடையது. அவற்றிற்கு விவரணம் நிபந்தனம் எனப் பெயர். சாலிகநாதர் என்பார் விவரணம் நிபந்தனம் ஆகிய இரண்டிற்கும் உரை எழுதினர். சாலிகநாதர் காலம் கி. பி. 690-760. குமாரில பட்டரின் மதம் எவ்வாறு பரவியதோ அவ்வாறு பிரபாகர மதம் பரவவில்லை.” எனவே பூர்வமீமாம்ஸ்மதமே பிரபாகரரால் விவரிக்கப் பெற்றது என்றும், அப்பிரபாகரரால் எழுதப்பெற்றவற்றை (பிரபாகர மதத்தை) விளக்குவதற்குத் திருக்குடந்தையில் நிபந்தம் அளிக்கப்பெற்றது என்றும் அறியப்பெறும். இதனான் சிற்றிங்கணுடையான் சமய அறிவு படைத்தவன் என்றும், சமய அறிவைப் பரப்புவதில் ஆர்வம்கொண்டு ஆவன செய்தான் என்றும் தெரியலாம். பிறாண்டும் பிராபாகரம் இராமநாதபுரம் மாவட்டத்தில் திருக்கோட்டியூர் என்ற ஊரில் முதலாம் இராசராசனது 11-ஆம் ஆட்சி யாண்டுக் கல்லெழுத்தொன்று,[17] திரைமூர் நாட்டுச் சாத்தமங்கலத்தவர் ஒருவர், பிராமணர் ஒருவரால் பிராபாகரம் வக்காணிக்கவும், விளக்கெரிக்கவும், நில தானம் செய்ததை உணர்த்துகின்றது. இதனாலும் சோழ நாட்டிலும் பிற இடங்களிலும் பிராபாகரம் பரவச் செய்ய முயற்சிகள் எடுக்கப்பெற்றன என்றும், சோழநாட்டவருள் வடமொழிவல்லார் அந்நாளில் பிராபாகரம் கற்று வல்லவராய் இருந்தனர். என்றும் அறியக்கிடக்கின்றது. காப்புரை பிராபாகரம் வக்காணிப்பார்க்குப் பட்ட விருத்திதந்த திருக்குடந்தைச் சாஸனத்தில் ’ஆயிரம் திருவடியு முடையார் ரக்ஷை’ என்று காப்புரை காணப்பெறுகிறது. ஆயிரம் திருவடியு முடையார் என்பது மகாவிஷ்ணுவைக்குறிக்கும் என்றும், புருஷசூக்தத்தில்[18] ஸஹஸ்ர பாத் என்றுள்ளது என்றும், ஆய்வாளர் ஒருவர் கூறியுள்ளார்.[19] ஆனால் இத் தொடர் சிவபெருமானைக் குறிப்பதாகக் கொள்ளுதலே ஈண்டைக்கு ஏற்புடைத் தாகும். என்ன ? ‘ஆயிரம் தாமரை போலும் ஆயிரம் சேவடி யானும் ஆயிரம் பொன்வரை போலும் ஆயிரம் தோளுடை யானும் ஆயிரம் ஞாயிறு போலும் ஆயிரம் நீண்முடி யானும் ஆயிரம் பேருகந் தானும் ஆரூ ரமர்ந்த அம்மானே’ என்ற தேவாரத்துள் அப்பர், ’ஆயிரம் சேவடியான்’ சிவ பெருமான் என்று கூறுவர். இக்காப்புரை சிவபெருமான் திருக்கோயில் சிலைமேலெழுத்தில் காணப்படுதலால் இத் தொடர் சிவபெருமானைக் குறிப்பதாகக் கோடலே சாலவும் பொருந்தும். அன்றியும், ”ஸஹஸ்ர சரணம்” என்று பஸ்மஜாபா லோபநிஷத்தும், ”ஸஹஸ்ரபாத்’’ என்று சுவேதாசுவத ரோபநிமிஷத்தும், ஸுபாலோபநிஷத்தும் கூறுதலின்[20] சிவபெருமானே ஆயிரம் திருவடியுமுடையார் என்று குறிப்பிடப்பெற்றுள்ளார் எனல் உறுதியாதல் காண்க. மதுராந்தக மூவேந்தவேளான் இரண்டாம் ஆதித்தன் கல்வெட்டுக்களில், சிற்றிங்கணுடையான், பராந்தக மூவேந்த வேளான் என்று சிறப்பிக்கப் பெற்றான் என்பது முன்னரே கூறப் பெற்றது. கி. பி. 970 முதல் 984 வரை ஆட்சி செய்த உத்தம சோழன் காலத்திலும் இவன் திருவிடை மருதூரில் சில காலம் ஸ்ரீ காரியம் ஆராய்கின்றவனாகவே காணப்பெறுகிறான். ஆனல் இவ்வுத்தம சோழன் காலத்து இவன் மதுராந்தகமூவேந்த வேளான் என்று குறிக்கப்பெற்றுள்ளான்.[21] கோனேரிராசபுரத்து உத்தம சோழனது கல்வெட்டொன்று[22] ’’இவனை நம் கருமம் ஆராய்கின்ற மதுராந்தக மூவேந்த வேளான்’’ என்று குறிப்பிடுகிறது. யாண்டு மூன்றாவது முதல் நந்தவனப்புறமாய் தேவதான இறையிலியாக வரியிலிட்டுக்கொள்க என்று நமக்குச் சொல்ல ... ... ... யாண்டு மூன்றாவது முதல் வரியிலிட்டுக்கொள்க என்று நாம் சொல்ல, நம் கருமம் ஆராய்கின்ற கோனூருடையான் பரமேசுவரன் அரங்கனான இருமுடிச்சோழவேந்த வேளானும், சிற்றிங்கண் உடையான் கோயில் மயிலையான மதுராந்தக மூவேந்த வேளானும், பருத்திக்குடி யுடையான் கொதுகுலவர் சாத்தனான பரகேசரி மூவேந்த வேளானும், ஆணத்தி[23] யாலும்‘‘ என்பது அச்சாஸனப்பகுதி. இதனால் இவன் இவ்வுத்தரவு நிறைவேற்ற ஆணத்தியாக இருந்தான் என்பது பெறப்படும். ஆனால் இதே சாஸனத்தில், யாண்டேழாவது நாள் 240-ல் கொடுக்கப்பெற்ற உத்தரவில், கருமம் ஆராய்கின்ற பரகேசரி மூவேந்த வேளான் மட்டும் குறிக்கப்பெறுகிறான். ஆகவே 7-ஆம் ஆட்சி யாண்டில் சிற்றிங்கண் உடையான் கோனேரிராசபுரத்தில் இல்லை என்பது தெளிவு. இனித் திருவிடைமருதுாரிற் கண்ட பரகேசரிவர்மனது ஆறாவது யாண்டுக் கல்லெழுத்தில் மீண்டும் இவன் திருவிடை மருதுாரிற் காணப்படுகின்றமையின், இவ்வுத்தம சோழன் ஆட்சியிலேயே மீண்டும் திருவிடைமருதூர்த் திருக்கோயில் அலுவலுக்கு இவன் வந்துவிட்டான் என்று கொள்ளலாம். முடிந்தது முடித்தல் இதுகாறும் கூறியவாற்றான் சிற்றிங்கணுடையான் ஆதித்த கரிகாலன் காலத்தும் (ஆதாவது சுந்தரசோழன் ஆட்சிக்காலத்திலும்) சுந்தர சோழனுக்குப் பின்னர் ஆட்சி செய்த உத்தம சோழன் காலத்திலும் வாழ்ந்தவன் என்பதும், இவ்விருவராலும் சிறப்பிக்கப்பெற்றவன் என்பதும், திருவிடைமருதுார்க்கோயிலில் ஸ்ரீ காரியம் ஆராய்கின்ற அலுவலில் இருந்தான் என்பதும், இறை பணி நிற்றலில் சிறந்தவன் என்பதும், நாகரிகக் கலைகள் வளர்த்தவன் என்பதும், சமய அறிவைப் பரப்புவதில் ஆர்வங்கொண்டவன் என்பதும் பிறவும் தெளியப்பெறும். இங்ஙனம் இன்னோர் அன்னோர் வரலாறறிந்து அன்னோர் போல ஒழுகுவதற்கு முயல்வோமாக. இடைமருதுறையும் எந்தாய் போற்றி ! * * * ↑ இங்கண் நாடு எனினும் ஆம் ; அருமொழிதேவ வள நாட்டு இங்கணாடு என்றும் க்ஷத்திரிய சிகாமணி வளநாட்டு இங்கணாட்டு இங்கண் என்றும் ஒரே கல்லெழுத்தில் காணப்படுக்கின்றமையின் (70 of S.I.I. Vol II Part III) இவ்விரு வளநாடுகளுள் ஒன்றின் கண்ணது சிற்றிங்கண் இருந்த இங்கணாடு என்று கூறலாம். ↑ ஆதித்த கரிகாலனும் பார்த்திவேந்திரபன்மரும் ஒருவரே யாதல் கூடும் என்பர் ஒருசாரார்; இது குறித்து இந்நூலுள் ‘ ‘பார்த்திவேந்திராதிபன்மன்‘ என்ற கட்டுரை காண்க. ↑ 154 of 1895. S. I.I. Vol V No 718 ; Vol III 202. ↑ புராண இதிகாசக் கதைகளைத் தழுவிவரும் கூத்து ஆரியக்கூத்து எனப்பெறும் மு. ரா. ஆராய்ச்சித் தொகுதி - பக்கம் 453 அடிக்குறிப்பு. ↑ 214 of 1907: S. I I I 203. ↑ பழங்குடிகளை நீக்கிக் கோயிலுக்கு அளிக்கும் நிலம் அல்லது ஊர் இதனால் கோயிலே மேல்வாரம் குடிவாரம் இரண்டும் அனுபவிக்க முடியும் (S. I. T. I. Vol III Part II Page 1418). ↑ படிமாற்று - Scale of expenses in the temple; செலவுத் திட்டம். ↑ திருநாவுக்கரசர் பாடியுள்ள தாண்டகம் மட்டுமே கிடைத்துள்ளது. ↑ 230 of 1911. ↑ அபூர்விகள் - பெரும்பாலும் தல யாத்திசை செய்யும் பிராமணர்கள் (S. J. T. I. Vol. III Part II Page 1393). ↑ சிவபெருமானத் தியானம் புரிந்து யோகநெறியைப் பயில்பவர்; சிவயோகம் ஆவது யாதென்பதனை, ’’எப்பொருள் வந்துற்றிடினும்’’ என்ற உண்மைநெறி விளக்கச் செய்யுளால் அறிக. ’’சிவயோகி ஞானி செறிந்த அத்தேசம் - அவயோகமின்றி அறிவோருண் டாகும்’’ என்ற திருமந்திரத்தால் சிவ யோகிகளின் பெருமை விளங்கும் ; பிரமோத்தரகாண்டம் சிவயோகியர் மகிமைச் சருக்கமும் காண்க. ↑ 231 of 1911. ↑ திருக்குடமூக்கு - கும்பகோணம் ; மூலப்பருடைப் பெருமக்கள் - சிவன்கோயில் நிர்வாகத்தை நடத்தும் குழுவினர். ↑ பட்டவிருத்தி - கல்வி வல்ல பிராமணருக்கு விடப்பெற்ற இறையிலி நிலம். ↑ 233 of 1911 ; S. I. I. III 200. ↑ இத்தலைப்பில் எழுதியிருப்பவை ஸ்ரீ P. S. சுப்பிரமணிய சாஸ்திரிகள் எழுதி, அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தார் வெளியிட்ட ‘வடமொழி நூல் வரலாறு‘‘ என்ற நூலில் பக்கம் 240 - 2 45 ல் எழுதப்பெற்றுள்ளனவாம். ↑ 333 of 1923. ↑ புருஷசூக்தம் - ’புரு : எல்லா உயிர்களுடைய இதய குகையில், ஷ : படுத்திருப்பார் ; புர் : எல்லாவற்றிற்கும் முதலில், உஷ : இருப்பவர்’ என்று பொருள் கூறுவர் பெரியோர். இது ரிக்வேதத்திலுள்ள ஒரு மந்திர விசேடம். ↑ S. I.I. Vo1 III பக்கம் 377. ↑ திரு. ஆர். ஈசுரமூர்த்திப் பிள்ளை எழுதிய ”சிவபரத்துவ நிச்சயம்” காண்க. ↑ பரகேசரிவர்மனின் 6 ஆவது ஆண்டு - திருவிடை மருதூர் : 219 Of 19O7. ↑ S. I. I. III. Part III பக்கம் 3O2. ↑ ஆணத்தி - அரசன் உத்தரவை நிறைவேற்றுவோர்.  பார்த்திவேந்திரபன்மன்[1] பார்த்திவேந்திரபன்மன் யார் ? தென்னாற்காடு, வடஆற்காடு, செங்கற்பட்டு மாவட்டங்களில் பார்த்திவேந்திரபன்மன் கல்லெழுத்துக்கள் காணப்பெறுகின்றன. இரண்டாம் பராந்தகனாகிய சுந்தர சோழனுக்கு (957-970) ஆதித்த கரிகாலன் (ஆதித்தன் 11) என்ற ஒரு மகன் இருந்தான். இவ் ஆதித்த கரிகாலனுடைய கல்வெட்டுக்களையும், பார்த்திவேந்திரபன்மனுடைய கல்வெட்டுக்களையும் ஆராய்ந்து திரு. H. கிருஷ்ணசாஸ்திரி அவர்கள் இருவரும் ஒருவரேயாதல் கூடும் என்று முடிவுகட்டினர். அதனேயே தாமும் ஏற்றுக்கொண்டு திரு. K. A. நீலகண்ட சாஸ்திரி அவர்கள் ஆங்கிலத்தில் எழுதியதன் சுருக்கம்[2] பின் வருமாறு :- இவ்விருவரும் ”வீரபாண்டியன் தலை கொண்டவர்கள்” என்று கூறப்பெறுகின்றனர். இரண்டாம் பராந்தகனாகிய சுந்தரசோழனுடன் போரிட்ட வீரபாண்டியனே இவர்களால் வெல்லப்பட்ட வீரபாண்டியனாதல் ஏற்புடைத்து. இருவரும் பரகேசரி எனப்பெறுகின்றனர். ஆதித்த கரிகாலன் கல்லெழுத்துக்கள் மிகச் சிலவே. அவை தாமும் தஞ்சை, திருச்சி, தென்னாற்காடு மாவட்டங்களில் உள்ளன; 5-ஆவது ஆண்டுக்கு மேலும் காணப்பெறவில்லை. பார்த்திவேந்திரபன்மனுடைய கல்லெழுத்துக்கள் பல தொண்டை மண்டலத்திலுள்ளன; அவை அவனது 13-ஆம் ஆட்சியாண்டு வரை கொடுக்கப்பெற்றனவாம். பார்த்திவேந்திரன் இவ்வரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசனாதல் கூடும். ஆராய்ந்து பார்த்தால் இவ்விருவருடைய கல்லெழுத்துள்ள இடங்கள் தாம் வேறுபடுகின்றன. எனினும் பார்த்திவேந்திர பன்மனும் ஒரு பரகேசரி;[3] கோவிராசமாராயர்[4] என்று குறித்துக் கொள்கிறான்; மூன்றாவது ஆண்டுக் கல்வெட்டு ஒன்றில்[5] பார்த்திவேந்திர ஆதித்தபர்மர் என்றும் குறிக்கப் பெறுகிறான். அவனுடைய மனைவியர்களும் உடையார் தேவியார் வில்லவன் மஹாதேவியார்,[6] பெருமானடிகள் தேவியார் தன்மப்பொன்னார்;[7] பெருமானடிகள் நம்பிராட்டியார் திரிபுவன மஹாதேவியார்[8] ’’ என்று அரச குலத்துக்கு ஏற்றவகையில் சிறப்பிக்கப் பெறுகின்றனர். இவ்வளவு சிறப்புக்களோடு இருந்த இவன் அரச குடும்பத்தைச் சேர்ந்தவனுக இருத்தல் கூடும் என்பது உறுதி. ’’ பார்த்திவேந்திர ஆதித்தவர்மன் ” என்பதும், அதன் பிற வடிவங்களும், ’’பார்த்திவேந்திரன்’’ என்ற சிறப்புப் பெயரை ஆதித்தன் கொண்டனன் என்பதைக் காட்டுவனவாகும். ஆகவே பார்த்திவேந்திரபன்மனும், ஆதித்த கரிகாலனும் ஒருவரேயாதல் கூடும். எனவே இவன் இளைஞனாயிருக்கும்போதே வீர பாண்டியனுடன் போர் செய்தான்; பின்னர்ச் சோழ நாட்டு வடபுலத்தைக் காக்கும் பொறுப்பேற்றுத் தன் தந்தையின் ஆட்சிக் காலத்திலேயே சில வஞ்சகர்களால் கொல்லப்பட்டான். இவன் காலம் 956-969.[9] இனி இவ்விருவரும் ஒருவரேயல்லர் என்பாரும் உண்டு. ’’பாண்டி நாட்டுக்குப் பெரும் படையுடன் சென்று வீரபாண்டியனோடு போர் நடத்திய தலைவர்கள் சுந்தரசோழன் புதல்வனாகிய ஆதித்த கரிகாலன், கொடும்பாளுர்வேள் பூதி விக்கிரமகேசரி, தொண்டைநாட்டுச் சிற்றரசன் பார்த்திவேந்திரவர்மன் என்போர் ’’ என்று திரு. T.v. சதாசிவ பண்டாரத்தார் அவர்கள்[10] கூறியுள்ளமையின், ஆதித்த கரிகாலனும் பார்த்திவேந்திரனும் ஒருவரேயல்லர் என்ற கருத்துடையவர் இவர் என அறியலாம். தென்னாற்காடு ஜில்லா தாயனூரில் வீரபாண்டியன் தலைகொண்ட கோப்பரகேசரிபன்மருடைய (அதாவது இரண்டாம் ஆதித்தனுடைய) கல்வெட்டுக்களும், பார்த்தி வேந்திரனுடைய கல்வெட்டுக்களும் உள்ளன. ஆனால் இவற்றை நோக்கின் இவ்விருவரும் ஒரே காலத்தவர் என்பதையும், இவ்விருவருக்கும் உள்ள உறவுமுறை என்ன என்பதையும் விளக்குவதற்குரிய குறிப்புச் சிறிதேனும் இல்லை[11] என்று ஒரு ஆராய்ச்சியாளர் எழுதியுள்ளார். எங்ஙனமாயினும் பார்த்திவேந்திர பன்மன், முதற்பராந்தகன் காலத்தில் தொண்டை நாட்டில் இருந்து ஆட்சி செய்தவன் என்பது மறுக்கப்படாததொன்று. பார்த்திவேந்திரனின் மனைவியர் தக்கோலத்துத் திருவூறல் ஆழ்வார்க்குத் திருப்பள்ளிக்கட்டில் அளித்த அருமொழிநங்கை;[12] உத்தர மேரூரில் ஸ்ரீவெளி விஷ்ணுகிரகத்தில் ஸ்ரீபலி கொட்டுவதற்கு நிலம் வாங்கியளித்தவரும்,[13] ௸ கோயிலில் இரண்டு விளக்கு எரிக்க 192 ஆடுகளை அளித்துப் பன்மைச்சேரி வெள்ளாளர்க்கும் வியாபாரிகளுக்கும் சமமாகப் பங்கிட்டு அளித்தவரும்[14] ஆகிய பெருமானடிகள் நம்பிராட்டியார் திருபுவன மகாதேவியார்; காஞ்சி புரத்தில் 50 கழஞ்சு பொன் அளித்துப் பன்னைப்புரம் ஊரவர் 100 காடி நெல் வட்டியாகத் தரவேண்டும் என்று ஏற்பாடு செய்த பெருமானடிகள் தேவியார் தருமப் பொன்னர் ஆன திரைலோக்யமாதேவியார்,[15] திருபால் புரத்தில் இரண்டு விளக்கு எரிக்கப் பட்டாளமான எழுநூற்றுவச் சதுர்வேதி மங்கலத்தவரிடத்தில் 25 கழஞ்சு பொன் கொடுத்த வஜ்ஜவை மகாதேவியார்[16] ; உத்தர மேரூரில் தன்னுல் எழுந்தருள்விக்கப் பெற்ற படிவத் திற்கும், திருக்கோயிலுக்கு ஸ்ரீபலிக்கும், அர்ச்சனா போகத்துக்கும் 2920 குழி நிலம் அளித்த உடையார் தேவியார் வில்லவன் மகாதேவியார்[17] ஆகிய இவ்வைவரும் பார்த்திவேந்திரபன்மனுடைய மகாதேவியராக அறியப் பெறுகின்றனறர். திருப்பாற்கடல் கல்லெழுத்து திருப்பாற்கடல் என்பது வட ஆற்காடு மாவட்டம் காவிரிப் பாக்கத்துக்கு அண்மையில் உள்ள ஓரூர். இவ்வூரில் கரபுரேசுவரர் கோயில் இறையக வடபுறச் சுவரில் இக்கல்லெழுத்துக் காணப்பெறுகிறது.[18] இது பார்த்தி வேந்திராதிபன்மனது மூன்றாவது ஆட்சியாண்டுக் கல் வெட்டாகும். திருப்பாற் கடலில் பெரியதளி அபிஷேக மண்டபத்தில் படுவூர்க்கோட்டத்துக்[19] காவிரிப்பாக்கமான[20] அவநிநாராயணச் சதுர்வேதிமங்கலத்துச் சபை யாரும், அந்த ஆண்டுக்குரிய சம்வத்ஸர-, தோட்ட-, ஏரி-, கழனி-, பஞ்சவார-, கணக்கு-, கலிங்கு-, தடிவழி வாரியப் பெருமக்களும்[21] பட்டர்,[22] விசிட்டர்,[23] ஸ்ரீ வடவீரநாராயணப் பெருமக்களும்,[24] ஊராள்கின்ற பல்லவ பிரம்மாதரயனும், கண்காணி அரும்பாக்கிழானும் கூடினர். தானம்[25] உடைய சிவபிராம்மணன் மாகண்டனன் திருக்கரபுரத்துப் பெருமாற்கு அருச்னாபோகமான தோட்டமும் நிலமும் ஆறும்[26] உடைந்து மணல் மேடிட்டுக்கிடந்தன வென்று சபையாரிடம் விண்ணப்பித்தனன். சபையார், ஊர் மஞ்சிக்கத்தினின்று[27] கழனிக் கோலால் அளந்து 1400 குழி சிலாலேகை செய்து தருக, என்று கழனி வாரியத்தார்க்கு உத்தரவு பிறப்பித்தனர். 1400 குழியும் ஆமாறு (1) இவ்வூர்ப் பிடாகை[28] ஒச்சேரி வடகழனியிற் செல்லும் மஹாத வாய்க்காலுக்குத் தெற்கேயுள்ள ஊர் மஞ்சிக்கம் 400 குழி; இதன் எல்லை:-கிழக்கு - மாங்காட்டுச் சோமாசி நிலம்; தெற்கு - ஊர் மஞ்சிக்கமாய்க் கிடந்த மேடு; மேற்கு - திருப்பன்றீஸ்வரத்துத் திருமூலட்டானத்துப் பெருமானடிகள் உதமாதம்பட்டி;[29] வடக்கு மஹாத வாய்க்கால். (2) இதன் தெற்கில் திருநாராயண வாய்க்கால் வடசிறகில் உள்ள ஊர்மஞ்சிக்கமான மேட்டுச் சிறு கருகேசுவக் கழனி 400 குழி; இதன் எல்லை:- கிழக்கு - அங்காரை மாதேவ பட்டர் பூமிமே லருகே போன நடைகால்; தெற்கு - திருநாரண வாய்க்கால்; மேற்கு - ஐயன் பெருமான் பூமி; வடக்கு முடும்பைப் பொற்கூளி பூமி. (3) திருநாரணவாய்க்காலுக்குத் தெற்கில் ஊர் மஞ்சிக்கமாய் வரி கொடாதிருந்த பூமி 600 குழி; இதன் எல்லை:- கிழக்கு - வரி செலுத்தாது கிடந்த பூமி, தெற்கு - அவட்டை கிழவன் நிலமான சோமாசி பூமிக்குக் கிழக்கிலுள்ள குண்டில்; மேற்கு - எடுக்குபட்டிகளும் இகுடிகளாய[30] சோமாசி பூமி; வடக்கு - கால் (-நாராயண வாய்க்கால்). வாரியங்கள் ஊர்ச்சபையின் உட்கழகங்கள் வாரியம் என்ற பெயராலும், வாரியத்தில் இருந்து யணியாற்றுபவர் வாரியப்பெருமக்கள் எனவும் கூறப்பெற்றனர். காவிரிப் பாக்கத்தில் எட்டு வாரியங்கள் இருந்தன வென்பது மேலே கூறப்பெற்றது. ஆனல் திருப்பாற் கடலில் நான்கு வாரியங்களே இருந்தன என்று பராந்தக சோழனது 12-ஆம் ஆட்சி யாண்டுக் கல்வெட்டொன்று இயம்பு கின்றது.[31] சம்வத்ஸ்ரவாரியம் : இவ்வாரியப் பெருமக்கள் தமக்குரிய அலுவல்களை ஓராண்டுக் காலம் இருந்து ஆற்றும் தகுதியுடையர் ஆவர். அறநிலையங்களைக் கண்காணிப்பதும், நியாயம் வழங்குவதும் இவர் கடமையாகும். இவ்வாரியம் எல்லா வாரியங்களையும்விடச் செல்வாக்குள்ளது; சிறப்பு வாய்ந்தது. மற்ற வாரியப் பெருமக்கள் தேர்ந்தெடுக்கப் பெறுவதற்கு முன்னதாக இவ்வாரியப் பெருமக்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். தோட்ட வாரியத்திலோ ஏரி வாரியத்திலோ இருந்து பணியாற்றினவர்களும், கல்வியறிவில் சிறப்புடையவர்களும், வயதில் முதிர்ந்தவர்களுமே இவ்வாரியத்துக்குத் தகுதி யுடையராவர். இதில் பன்னிரண்டு உறுப்பினர் இருப்பர்.[32] தோட்டவாரியம் : 'நிலங்களைப்பற்றிய' , எல்லா விஷயங்களையும் கண்காணிப்பது தோட்டவாரியரது கடமை என்பர் திரு. பண்டாரத்தார் அவர்கள். தோட்டங்களைப் பற்றியவற்றைக் கண்காணிப்பதும் இவர் கடமையாகலாம். ஏரிவாரியம் : நீர் நிலைகளைப் பாதுகாத்துப் பயன்படச் செய்வது இவர் கடமை என்பது திரு. பண்டாரத்தார் கருத்து. சிற்றூர்களில் உள்ள ஏரிகளை அடிக்கடி பழுதுபார்க்க வேண்டிய செலவுக்காக நிலங்கள் ஊரவையார் பார்வையில் விடப்பட்டிருக்கும். அவை ஏரிப்பட்டி எனப்பெறும். ஏரிப்பட்டியை மேற்பார்வையிட்டவர் ஏரிவாரியப் பெருமக்கள் எனப்பெற்றனர் என்றும் சிலர் கூறுவர்.[33] கழனிவாரியம் : நன்செய் நிலங்களைப் பற்றியவற்றைக் கவனிப்பது இவர் கடமை. பஞ்சவார வாரியம் : ’அரசனுக்குக் குடிமக்கள் செலுத்த வேண்டிய நிலவரியையும் பிறவரியையும் வாங்கி அரசாங்கப் பொருள் நிலையத்துக்கு அனுப்புபவர்’ என்பர் திரு. பண்டாரத்தார் அவர்கள். நாடோறும் அரசாங்க அலுவல்களை மேற்பார்வை செய்வதும் கணக்குகளைப் பார்த்தலும் அவர் கடமையாகலாம் என்பர் Dr. S. K. ஐயங்கார் அவர்கள்.[34] ஒவ்வொரு சிற்றூரிலும் அறுவடை ஆனதும் பஞ்ச ஒழிப்பிற்கென்று ஒரு பகுதி நெல் ஒதுக்கிவைக்கப்பெறும். அதனைச் சேர்த்தல், மேற்பார்வையிடல், காத்தல், பஞ்ச காலத்தில் குடிகட்குத் தந்துதவல் முதலிய வேலைகளைச் செய்து வந்தவர் கூட்டமே பஞ்சவார வாரியம் எனப்பெறும் ” என்பர் டாக்டர் இராசமாணிக்கனார் (பல்லவர் வரலாறு, பக்கம் - 228). கணக்கு வாரியம் : அரசியல் கணக்குகளைப் பரிசீலனை செய்வது இவர் கடமையாகலாம். கலிங்கு வாரியம் : ஏரிக் கலிங்குகளை[35] மேற்பார்வை செய்பவர் இவர். தடிவழி வாரியம் : வயல்களைக் கண்காணிப்பவர் இவர் ( Fields Supervision Committee); ‘தடி என்னும் அளவையால் அளக்கப்பெறும் பெருவழிகளைப் பார்வையிடுபவர் என்று திரு. S. K. ஐயங்கார் அவர்கள் கருதுவர்.[36] உறுப்பினரைத் தேர்ந்திடுமாறு "உறுப்பினரைக் குடவோலை வாயிலாக ஆண்டு தோறும் தேர்ந்தெடுப்பார்கள். தேர்ந்தெடுக்கும் இடத்துத் தர்மகிருத்தியம் கடைகாணும் வாரியர், அரசன் ஆனைப்படி நாட்டில் சபை கூடுதற்கென்று அமைத்த பெரு மாளிகையில், இளைஞர் முதல் முதியோர் வரையுமுள்ள எல்லோரையும் குறைவறக் கூட்டி, அன்று அவ்வூர் நம்பிமார் அனைவரையும் அழைத்து வந்து அம்மாளிகையினுள் இருக்கச்செய்து, அவர்க்கு நடுவில் குடத்தினை வைப்பார்கள். அவருள் வயது முதிர்ந்தார் ஒருவர் அக்குடத்தினை மேலே உயர்த்து, அதனுள் ஒன்றுமில்லை என்பதை எல்லோரும் அறியக்காட்டிக் கீழே வைத்த பினனர், ஒவ்வொரு ஊரையும் முப்பது பகுதி(Ward)களாகப் பகுத்து, ஒவ்வொரு பகுதியிலுள்ள ஒவ்வொருவரும் தகுதியுடையரெனத் தமக்குத் தோன்றும் ஒருவர் பெயரைத் தனி ஓலையில் எழுதி, எழுதிய ஓலைகளை ஒருங்கு சேர்த்து இன்ன பகுதியைச் சார்ந்த ஓலை என்பது விளங்க, அப்பகுதியின் பெயர் எழுதிய வாயோலை பூட்டிக் கட்டிக் குடத்தில் இடுவர். இவ்வாறு முப்பது பகுதியினரும் இட்ட பின்னர், அம்முதியார், அங்கு நடைபெறுவது இன்னதென்றறியாத ஒரு சிறுவனக்கொண்டு, அக்குடத்தினின்று ஒரு ஓலைக் கட்டினை எடுப்பித்து, அதனை அவிழ்த்துப் பிறிதொரு குடத்திலிட்டுக் குலுக்கி, அவற்றுள் ஒரு ஓலையை அவனைக்கொண்டு எடுக்கச்செய்து அதனைத் தாம் வாங்கி, அங்கிருக்கும் கரணத்தான் கையில் கொடுப்பர். அவன் தன் ஐந்து விரல்களையும் அகலவிரித்து அகங்கையில் அதனை ஏற்று அதன்கண் எழுதப்பெற்றுள்ள பெயரை யாவரும் அறிய வாசிப்பன். அங்கிருந்த நம்பிமார் அனைவரும் அவ்வோலையைப் படித்திடுவர். அதன் பின்னர் அப்பெயர் ஒரு ஒலையின் கண் எழுதிக்கொள்ளப்படும். இவ்வாறு மற்றைய கட்டுக்களையும் ஒன்றன்பின் ஒன்றாக முன்போல் எடுப்பித்துப் பிரித்துக் குடத்திட்டுக் குலுக்கி, முன்னையிற்போல ஒவ்வொரு ஓலையாக எடுக்கச்செய்து எழுதிக்கொள்வார்கள். இவ்வண்ணம் எழுதிய முப்பதின்மருள் கல்வியின் முதிர்ந்து வயதின் மூத்தார் பன்னிருவரைச் சம்வத்சர வாரியர் எனத் தேர்ந்திடுவர். மற்றைய பதினெண்மருள் பன்னிருவர் தோட்டவாரியராகவும், அறுவர் ஏரிவாரியராகவும் தேர்ந்திடப்பெறுவர். பின்னரும் இம் முறையே முப்பது ஓலைகளைத் தேர்ந்து குடத்திலிட்டுக் குலுக்கி, அவற்றுள் பன்னிரண்டினை எடுப்பித்து, அறுவரைப் பொன் வாரியராகவும், அறுவரைப் பஞ்சவாரியராகவும் ஏற்படுத்துவார்கள் ”.[37] பொன்வாரியம் : இக்கல்லெழுத்தில் 'பொன்வாரியம் என்று ஒரு வாரியம்' குறிக்கப்பெறவில்லை. ’’பல்வகையானும் திரட்டப்படும் காசுகளை ஆராய்வு செய்வது பொன்வாரியக்காரர் பொறுப்பாக இருந்தது’’ என்று பண்டித எல். உலகநாதபிள்ளை அவர்கள் கூறுவர். நிலத்தை அளக்கும் கோல் திருப்பாற்கடல் கல்லெழுத்தில் நிலம் அளக்கும் கோல், கழனிக் கோல் என்று கூறப்பெற்றுள்ளது. காவனூர்க் கல்லெழுத்தில்[38] நிலம் அளக்கும் கோல் 'கடிகைக் களத்துக் கோல்' என்று சொல்லப்பெற்றுள்ளது. முதல் இராசராசனது ராஜக்கல் கல்வெட்டிலும் இக்கோல் குறிக்கப்பெற்றுள்ளது.[39] நில வருமானத்தைச் செலவுசெய்யுமாறு மேலே கூறப்பட்ட 1400 குழியும் முன் இருந்த பூமியோடு திருக்கரபுரத்துப் பெருமானடிகளுக்கு இறையிலி அர்ச்சனாபோக[40] மாக அளிக்கப்பட்டது. இந்நில வருமானத்தைக்கொண்டு திருக்கரபுரத்துப் பெருமானடிகளும் நிசதம் இருநாழி அரிசியால் ஒருபொழுது திரு அமுது செய்யவும், மூன்று சந்தியும் ஒரு விளக்கு எரிக்கவும் ஏற்பாடு செய்யப்பெற்றது.[41] சில சொற்றாெடர்களும் வழக்காறுகளும் மஞ்சிக்கம் என்பது ஊர்களில் இருக்கும் புறம்போக்கு நிலம். இது ஊர்ச்சபையாரின் மேற்பார்வையில் இருக்கும்; இந்நிலப்பகுதியை இங்ஙனம் சாசனம் செய்து கொடுக்கும் உரிமை ஊர்ச்சபையார்க்கிருந்தது. இம்மஞ்சிக்கம் வரி செலுத்தாது கிடந்த பூமி என்பது ”ஊர் மஞ்சிக்கமாய் வரிசிலத்துக் கிடந்த பூமி” என்ற பகுதியால் அறியலாம். ’வரி சிலத்துக்கிடந்த’, ’வரிசிரையாய்க் கிடந்த’ என்ற பகுதிகள் ’’வரி செலுத்தாதிருந்த’’ என்ற பொருளைத் தருவனவாம். இனி உத்தரவுகள் பிறப்பிப்பது சபையாரது உரிமை என்றும், வயல்களைப்பற்றிய உத்தரவுகளை நிறைவேற்றுவது கழனி வாரியப் பெரு பெருமக்களது கடமை என்றும் இக்கல்லெழுத்தினின்று அறிகிறோம். ’’குறி’’ என்ற சொல் சபை என்று பொருள்படும். ஊராள்கின்றவன், கண்காணி, மத்யஸ்தன் கணக்கன் என்ற அலுவலர்கள் பெயர்களும் அறியப் பெறுகின்றன. கண்காணி என்பது மேற்பார்வை செய்பவர் (overseer) என்று பொருள்படும். மத்யஸ்தன் என்பவர் கரணத்தான் என்றும் கூறப்பெறுவர்; வாரியப் பெருமக்கள் அல்லது ஊர்ச் சபையினர் பணித்தவற்றைச் செய்வது இவர் கடமை. இக்கல்லெழுத்திலிருந்து ஊராட்சிமுறை அக்காலத்துச் சிறந்திருந்தமை அறிந்து மகிழ்வோமாக ! பிற்கல்லெழுத்துச் செய்திகள் வியாக்கியான விருத்தி திருக்கோவில்களில் வியாக்கியான மண்டபங்கள் இருந்தன. அங்குப் பெரும்புலவர்கள் இலக்கணத்தை விளக்கி விரிவுரை யாற்றுவர். இங்ஙனம் இலக்கண விரிவுரை நடாத்துபவர்க்கு ஊதியம் அளித்தற்பொருட்டு நிலம் ஒதுக்கப்பெறுவதுண்டு; இது குறித்து உத்திரமேரூர் வைகுண்டப்பெருமாள் கோவிலில் வடபுறத்துச் சுவரில் உள்ள பார்த்திவேந்திர பன்மனுடைய 3-ஆம்ஆட்சி யாண்டுக் கல்லெழுத்துக் கூறுகிறது.[42] வியாகரன விருத்தியாக (1) பத்ரங்கது வாசுதேவபட்ட சோமாசியார் 3-ஆம் தரம் 480 குழியும், (2) ஓதிமுகில் மாதவபட்டர் தலைதரம் 720 குழியும், (3) துர்பில் நரசிங்க கிரமவித்தன் தலைதரம் 220 குழியும், (4) இவையிற்றுக்கு நீர்பாயும் வாய்க்கால் 35 குழியும் ஆக 1455 குழி நிலம் அளித்தனர் என்று அறியப்படுகிறது.[43] விஷஹரபோகம் மக்களின் உடற்பினிை போக்க ஆதுரசாலைகள் பல முற்காலத்து இருந்தன. அங்குச் சல்லியக்கிரியை பண்ணுவாரும் (Surgeons) இருந்தனர். வைத்தியர்களுக்கு மருத்துவக் காணியும் அளிக்கப்பெற்றது.[44] பார்த்திவேந்திரபன்மனுடைய ஐந்தாம் ஆட்சியாண்டுக்குரிய உத்திரமேரூர்க் கல்லெழுத்து,[45] விடம் தீர்க்கும் வன்மையுள்ள மருத்துவரை நியமித்து அவற்கு ஊதியம் அளித்தற்கு இறையிலிநிலம் அளித்த செய்தியைப் புகல்கின்றது. அது ‘விஷஹரபோகம்’ எனப்பெற்றது. விஷஹரபோகமாக அளிக்கப்பெற்ற நிலம் 1280 குழி. இந்த நிலத்துக்கு யாராவது இறை செலுத்தவேண்டும் என்று கூறி இறை வசூலித்தால் தன்மாசனத்துக்கு.[46] இருபத்தைந்து கழஞ்சு பொன் தண்டம் செலுத்த வேண்டும். இக்கல்லெழுத்தில் கானும், சபையாரிடம் பணிபெற்றார். ... ... யுடையாரே அனுபவிக்கப்பெறுவாராகவும் ’’ என்ற பகுதியால் விடம் தீர்த்தலில் வல்ல மருத்துவரைச் சபையாரே நியமிப்பர் என்றும்,விஷஹரபோகத்தை வழிவழி அனுபவிக்க முடியாதென்றும் அறிகிரறோம். ஸ்ரீபலிபோகம் திருக்கோயில்களில் ஸ்ரீபலி என்று ஒரு சடங்கு நடைபெறும். வாத்தியம் முழக்கிச் சோறும் பூவும் திருக்கோயிலில் (குறித்த இடங்களில்) தூவுதலே ஸ்ரீபலி எனும் சடங்காகும். ஸ்ரீபலி இடும்போது விக்கிரகத் தோடு வலம்வருவர். அப்பொழுது இசைக்கருவிகளை வாசிப்பர். ஸ்ரீபலி என்பது, ஹவிர்பலி எனவும் தீயெறி சோறு எனவும் கூறப்பெறும். இதற்கு நிபந்தம் விட்டதாகப் பார்த்திவேந்திரனது 5-ஆவது ஆட்சியாண்டுக் கல்லெழுத்துச் செப்புகிறது.[47] ஸ்ரீமந் நீலகங்கரையன் அண்ணாவன் நாட்டடிகளுக்குத் தாயனூர் ஊரார் விண்ணப்பித்தனர். சூரியகிரகண நாளில் ஸ்ரீபலிபோகம் தரப்பெற்றது. ஸ்ரீபலிக்கு ஐந்துபேர் தணக்கமலை மகா தேவர் திருமுன் வாச்சியங்கள் முழக்க வேண்டும் என்று ஏற்பாடாயிற்று. இதற்குரிய நிலம் 1 (வேலி). இந்த 1 (வேலி) நிலமும் உம்பளநாட்டு மேற்குடிகிழான் திரன் மூதையனும் இவன் தம்பி திரன் உலகடிகளும் பொன்கொடுத்து இறையிழிச்சி, ஸ்ரீபலி போகமாகக் கொடுத்தனர். உத்திரமேரூரில் ஸ்ரீ பலிபோகமாக நிலம் அளித்த செய்தி இரண்டு கல்லெழுத்துக்களில்[48] கூறப்பெற்றுள்ளது. அன்றியும் ஸ்ரீ பலிக்கும் அர்ச்சனாபோகத்துக்குமாக உடையார் தேவியார்[49] வில்லவன் மஹாதேவியார் 2920 குழிநிலம் உத்தரமேரூரில் அளித்தார். சிரத்தாமந்தர்[50] இவ்வறத்தை நன்கு நடைபெறக் கண்காணித்தல் வேண்டும் ; தவறு நிகழின் 25 கழஞ்சு தண்டம் வசூலிக்கவும் அவர்களுக்கு உரிமை தரப் பெற்றது.[51] உத்தரமேரூரில் கொங்கரையர் என்பார் ஸ்ரீ வெளி விஷ்ணு கிருகத்தைக்[52] கட்டினார். சில நிலங்களை அவ்வூர் விவசாயிகளிடமிருந்து தம்பிராட்டியார்[53] திருபுவன மகாதேவியார் விலைக்கு வாங்கி அக்கடவுளுக்கு ஸ்ரீ பலி கொட்டுவதற்காகக் கொடுத்தார். பூர்வாசாரம்[54] பெற்று அந்நிலம் இறையிலியாக்கப் பெற்றது.[55] பாண்டூரில் ஸ்ரீ பலி கொட்டுவதற்கு இசைவல்ல எழுவர் நியமிக்கப் பெற்றனர் என்று இவ்வரசனது 15-ஆம் ஆட்சியாண்டுக் கல்லெழுத்துக் கூறுகிறது[56] ஸ்ரீ பலி போகம் எனினும் சீபலிப்பட்டி எனினும் ஒன்றேயாம். மூதையனும் உலகடிகளும் இவ்விருவரும் மேலே கூறிய தாயனூர்க் கல்லெழுத்தில் (பக்-44) கூறப்பெற்ற உடன் பிறந்தோர் ஆவர். இவ்விருவரைப் பற்றியும் தாயனூரில் ஒரு வீட்டின் பின்புறத்தில் ஒரு பாறையிலுள்ள கல்லெழுத்திலிருந்து ஒரு அரிய செய்தி தெரியவருகிறது[57] மேற்குடி கிழான் திரன் மூதையனும் இவன் தம்பி உலகடிகளும் தாயனூரார்க்கு 30 கழஞ்சு பொன் கடன் கொடுத்தனர். ‘‘கடன் ஓலை‘‘ காணாமற்போயிற்று. போனாலென்ன ! வட்டியும் முதலுமாக 45 கழஞ்சு பொன் இவ்விருவரும் திரும்பப் பெற்றனர். காணாது போன ஓலை அகப்பட்டால், ‘அவ்வோல சாவோலையாகக் கருதப்பெற வேண்டும்‘ என்று இக்கல்லெழுத்துப் பகர்கின்றது. இதிலிருந்து கடன் கொடுத்தார் கொண்டார் ஆகிய இவ்விருதிறத்தாருடைய நேர்மை தெள்ளிதின் விளங்குகின்றது ! ஆனையாள் அளித்த தருமம் பார்த்திவேந்திரபன்மரது 13-ஆம் ஆட்சியாண்டுக்குரிய திருமால் புரக் கல்லெழுத்து[58] இவ்வரசனது ஆனையாள்பற்றி அறிவிக்கிறது. ஆனையாள், “மன்னன் கண்ணனாகிய சாமாமோக வாரணப் பேரரையன்’ எனும் பெயரினன் ; பெருமாள் பிறகேறும் ஆனையாள் ’’ என்று குறிக்கப் பெற்றுள்ளான்; திருமால் அடியவன்; தாமல் கோட்டத்து வல்லநாட்டு ஸ்ரீ கோவிந்தப்பாடி நின்றருளிய பெருமானடிகளும் ஸ்ரீகாரியம் செய்கின்ற வைஷ்ணவதாசரிடமிருந்து சிற்றியாற்றூரில் 2000 குழி நிலம் விலைக்கு வாங்கி அவ்வூரில் உள்ள ஒரு மடத்தில் உத்தமாக்கிரமாக நாடோறும் ஒரு பிராமணனுக்கு உணவு அளித்தற் பொருட்டுக் கொடுத்தனன். தண்ணீர்ப்பட்டி (செங்கற்பட்டு மாவட்டம்) காட்டூரில் அம்பலம் அமைத்தவர் பெருந்தரத்து மேனாயகம் செய்கின்ற பட்டையனார் என்பவர் ஆவர். இவர்க்கு இவ்வூரவர் தண்ணீர்ப்பட்டியாக நிலம் விற்றனர் என்று பார்த்தி வேந்திரனது 9-ஆம் ஆட்சியாண்டுக் கல்லெழுத்துள் காணப்பெறுகிறது.[59] தண்ணீர்ப்பட்டி என்றால் என்ன என்று இக்கல்லெழுத்தினின்று அறிந்துகொள்ள இயலவில்லை ; தண்ணீர்ப்பந்தல் தருமத்துக்கு விடப்பெற்ற நிலம் என்பர் சிலர்; எனினும் ஏரி, குளம், வாய்க்கால் முதலிய நீர்ப்பாசனத்துக்குரியவைகளைப் பாதுகாப்பதற்குரிய செலவுகளுக்கென ஒதுக்கப்பெறும் நிலப்பகுதி எனக்கொள்ளுதலும் தகும். இங்ஙனம் கொடுக்கப்பெற்ற நிலத்தின் ஒரு பகுதி, ‘‘ஏரிப்பட்டியில் வடக்கில் கழுவல் நான்குமா’’ என்று குறிக்கப்பெற்றுள்ளது. ஏரிப்பட்டியாவது ஏரிகளைப் பழுது பார்த்துச் செவ்வனே வைத்திருக்க மானியமாகக் கொடுக்கப்பெறும் நிலம் ஆகும். விராடராசன் தொண்டுகள் திருமால்புரக் கல்லெழுத்துக்களில் விராடராசன் ஒருவன் பேசப்பெறுகிறான். அனயமன்[60] ஆன பர மண்டலாதித்தியன் என்பது அவன் பெயர். அவன் பார்த்திவேந்திரனது மூன்றாவது ஆட்சியாண்டில்[61] திருமால்புரக் கோயிலையும் சுற்றியுள்ள தாழ்வாரத்தையும் கட்டினான். இவனே பன்னிரண்டாம் ஆட்சி யாண்டில்[62] ஒரு மண்டபத்தைக் கோயிலில் அமைத்தான். இவனோ இவன் மகனோ நாடோறும் பதினைந்து பிராமணர்களுக்கு அன்னம் பாலிக்க நிலதானம் செய்தான்.[63] அய்யன் மஹா சாஸ்தா அய்யனார் அல்லது மாசாத்தனார் என்பார் ஹரிஹர புத்திரர் என்றும் கூறப் பெறுவர். இவர்க்கு உத்தர மேருச் சதுர்வேதிமங்கலத்தில்[64] ஒரு கோயில் இருந்தது. இக் கோயிலுக்குப் பார்த்திவேந்திரனது 3-ஆவது ஆட்சி யாண்டில் நிலம் அளிக்கப்பெற்றது.[65] எம்மூர்த் தெற்கில் அய்யன் மஹா சாஸ்தாவுக்குத் திருச்சென்னடைக்கும், நுந்தாவிளக்குக்கும், ஸ்ரீ பலிக்கும், அர்ச்சனா போகத்துக்கும் வைத்த பூமி என்பது கல்லெழுத்து வாசகம். (திருச்சென்னடை - நாடோறும் இடையீன்றி நடத்தப்பெறவேண்டிய நித்திய பூசை முதலியன ; நுந்தா விளக்கு - இடையறாது எரியும் விளக்கு ; அர்ச்சனா போகம் - அர்ச்சனைக்காக ஒதுக்கப்பெறும் நிலவருமானம்.) ஜேஷ்டை ஜேஷ்டை அல்லது சேட்டையார் திருமகளின் தமக்கை என்பர். சேட்டையார்க்குக் கோயில் இருந்ததென உத்திரமேரூர்க் கல்லெழுத்து இயம்புகிறது.[66] பெருங்குறி மகாசபையார்[67] குமண் பாடியிலுள்ள நிலத்தைப் பூர்வாசாரம் பெற்று இறையிலியாக அளித்தனர். (எண்ணாயிரம் என்னும் ஊரில் ஜேஷ்டையார் முதலிய தெய்வங்களுக்குக் கோயில்கள் இருந்தன வென்று முதலாம் இராசேந்திரனின் 25-ஆம் ஆண்டுக் கல்லெழுத்து நுவல்கிறது.[68] ) சப்தமாதர்கள் அபிராமி, மகேச்வரி, கெளமாரி, நாராயணி, வராகி, இந்திராணி, காளி என்பவர் சப்த மாதராவர். பெரும்பாலான திருக்கோயில்களில் இவர் எழுந்தருள்விக்கப் பெற்றுள்ளனர். இச்சப்தமாதர் பூசைக்காக நிபந்தங்கள் விடப்பெற்ற செய்தியைச் சில கல்லெழுத்துக்கள் குறிப்பிடுகின்றன. இராசகேசரியின் 25-ஆம் ஆண்டில் ஆலம்பாக்கத்திலும்[69] முதல் இராசராசனின் 23-ஆம் ஆட்சி யாண்டில் ஆத்தூரிலும்[70] முதல் இராசேந்திரனின் 25-ஆம் ஆட்சியாண்டில் எண்ணாயிரத்திலும்[71] சப்த மாதர்கோயில்களைப்பற்றி அறிவிக்கும் சாசனங்கள் கிடைத்துள்ளன. செங்கற்பட்டு ஜில்லா வேளச்சேரியில் பார்த்திவேந்திரனுடைய 10-ஆம் ஆட்சியாண்டுக் கல்லெழுத்துளது.[72] சோழநாட்டு மழநாட்டுத் திருவேட்பூ ருடை யான் தேவடிகள் என்பார் சப்த மாதர்க்கு நாட் பூசைக்காகப் பூதிபாக்கன் செறு தடி நாலினால் நிலம் 200 குழியும், இரண்டெற்றி என்னும் நிலம் 539 குழி ஆக 739 குழி நிலம் இறையிலியாகக் கொடுத்தார். சப்த மாதரைப் பூசிக்கும் பூசகரை ”மாத்ருசிவர்” என்று இக்கல்லெழுத்து அறிவிக்கிறது. குமரடி நங்கை தொண்டு[73] தக்கோலம் என்றவூர் திருவூறல் என்ற பெயருடைய திருப்பதிகம் பெற்ற சிவதலமாகும் ; ”ராஜமார்த்தாண்ட சதுர்வேதிமங்கலம்” என்னும் பெயருடையதாயிருந்தது. குமரடி நங்கை என்பார், திருவூறல் கோயிலில் இரணசிங்கவீரர் பள்ளிக்கட்டில் மண்டபத்தில் “களிகை விடங்கர்” என்ற திருமேனியை எழுந்தருள்வித்தார் ; நாள் வழிபாட்டிற்கு 92 கழஞ்சு பொன் இச்சதுர்வேதி மங்கலத்துச் சபையாரிடம் ஒப்படைத்தார். இக்குமரடி நங்கையின் தாய் பெயர் ”நந்தி நங்கை”; இந்நந்தி நங்கையின் தந்தை பெயர் ”திருவூறல் தேவனார்” என்பதாகும். வட்டி பெருமானடிகள்[74] தேவியார் தருமப்பொன்னார் ஆன திரைலோக்ய மாதேவியார் 50 கழஞ்சு பொன் அளித்து 200 காடி நெல் வட்டியாகத் தரவேண்டும் என்று ஏற்பாடு செய்தார்.[75] இவரே 50 கழஞ்சு பொன்னுக்குப் பன்னை புரத்தவர் 100 காடி நெல் வட்டியாகக் கோயிலுக்குத் தரவேண்டும் என்று அளித்தார்.[76] இங்ஙனம் வட்டி விகிதம் அறிதல் தகும். முகத்தலளவை “காடி’’ என்பதே பெரும்பாலும் காணும் அளவையாகும். காடி என்பது கலத்தில் மூன்றில் ஒரு பங்கு ஆகும். தக்கோலம் கல்லெழுத்தில்[77] ’’கவாரமொழி’’ என்று ஒரு மரக்காலின் பெயர் கூறப்படுகிறது, “ஊரகத்து நின்றார் காடக்கீழ் நாழி’’ என்று ஒரு நாழியின் பெயர் ஒரு கல்லெழுத்தில் காணப்பெறுகிறது.[78] நிஷ்கா (வட ஆர்க்காடு மாவட்டம் பிரமதேசத்திலுள்ள பார்த்தி வேந்திரனது 13-ஆம் ஆண்டுக் கல்லெழுத்து மூவாயிரவன் திரைராஜ்ய கடிக மத்யஸ்தன் என்பான் ஒரு அபிஷேக பிராமணனுக்கு ஊதியமளிக்க 30 கழஞ்சு பொன் அளித்த செய்தியை உணர்த்துகிறது.[79] இதில் ஒரு நிஷ்கா என்பது ஒரு கழஞ்சுக்குச் சமமாகும் என்றுள்ளது. முதற்பராந்தகனது 30-ஆம் ஆட்சியாண்டுக்குரிய திருவொற்றியூர்க் கல்லெழுத்தில் தமிழ்ப் பகுதியில் “கழஞ்சு’’ என்று குறித்து, வடமொழிப்பகுதியில் “நிஷ்கா’’ என்று குறிக்கப்பெற்றுள்ளது.[80] முதற் பராந்தக சோழனுடைய ஆட்சியிறுதியில் “கச்சியும் தஞ்சையும் கொண்ட கன்னர தேவனாகிய” மூன்றாம் கிருஷ்ணனுடைய 20-ஆம் ஆட்சிக்குரிய திருவொற்றியூர்க் கல்லெழுத்தில்[81] சதுரானன பண்டிதர் என்பார் 100 நிஷ்கா பொன் திருவொற்றியூர்க் கோயிலுக்கு அளித்த செய்தி கூறப்பெறுகிறது. இனி இக்கால வெல்லைக்கு ஒரு நூற்றண்டுக்குப் பின்னர்த் தந்த முதற் குலோத்துங்க சோழனுடைய திருவாமாத்தைர்க் கல்வெட்டிலும் நிஸ்கா குறிக்கப் பெற்றுள்ளது.[82] இவற்றால் நிஷ்கா என்பது ஒரு பொன் நாணயம் என்றும், ஒரு கழஞ்சு எடையுள்ளது என்றும் தெரியலாம். தொகுப்புரை இவ்வேந்தன் ஆட்சியில் தொண்டை மண்டலத்தில் அமைதி நிலவியது ; ஊராட்சி செவ்வனே நடைபெற்றது ; இலக்கண விரிவுரையாற்ற நிலமளித்தல் போன்ற செயல்களால் கேள்விச்செல்வம் ஓங்கியது ; விஷ வைத்தியம் செய்ய மருத்துவரிருந்தனர் ; கோயில்களில் எல்லாச் சடங்குகளும் நடந்தன ; உடையாக் தேவிமார் கோயில்களுக்கு நிபந்தம் அளித்தனர் ; இசைவல்லார் ஆதரிக்கப்பெற்றனர் : பொதுமக்கள் கோயில் காரியங்களில் கவனம் செலுத்தினர் , திகுமேனிகளை எழுந்தருள்வித்தனர் : சைவம் வைணவம் ஆகிய இரு சமயங்களும் ஓங்கி வளர்ந்தன ; அய்யனார், சேட்டையார், சப்த மாதர்கள் கோயில்களில் இடம் பெற்றிருந்தனர் : அந்தணர் அருந்தவர்க்கு அன்னம் பாலிக்கப்பெற்றன என்றின்னோரன்ன அறிகிறோம். * * * ↑ இது ஞானசம்பந்தத்தில் வெளிவந்தது. ↑ K. A. N. COLAS - Part I-Pages 178 and 179. ↑ திருவடந்தை 20 of 1910; S. I. I. III 180. ↑ do 26 of 1910; S. I. I. III 186. ↑ உத்தரமேரூர் - 38 of 1898; S. I. I. III 158. ↑ S. I. I. III 193 ↑ 17 of 1921. ↑ S. I. I. III 195 ; 52 of 1898. ↑ K. A. N. COLAS Part I, P. 180. ↑ சோழர் வரலாறு - பகுதி I பக்கம் 78. ↑ K. A. N. COLAS Part I. P. 453 Footnote. ↑ தக்கோலம் 3 ம் ஆண்டு S. I. I. 166. ↑ உத்தரமேரூர் 12ம் ஆண்டு, do 194. ↑ 13 ம் ஆண்டு, do 195. ↑ காஞ்சிபுரம் - 12 ம் ஆண்டு, 17 of 1921. ↑ திருமால்புரம் - 1 8 ம் ஆண்டு, S. I. I. III 197. ↑ உத்தரமேரூர் - 11-ஆம் ஆண்டு, S.I.I. III 193. ↑ S. I. I. III 156; 692 of 1904. ↑ படுவூர்க் கோட்டம் - தொண்டை மண்டலத்து 24 கோட்டங்களுள் ஒன்று. ↑ காவிரிப்பாக்கம் - இது அவதிநாராயணச் சதுர்வேதி மங்கலம் எனப்பெற்றது. அவதிநாராயணன் என்பது மூன்றாம் நந்திவர்மனுக்குரிய சிறப்புப் பெயர்களுள் ஒன்று. ↑ பெருமக்கள் - அவையின் உறுப்பினர். ↑ பட்டர் - கோயில் பூசகர். ↑ விசிட்டர் - ஊரிலுள்ள சான்றோர். ↑ இச் சதுர்வேதிமங்கலத்தின் வடபகுதியிலுள்ளவர் போலும்; வீரநாராயணன் என்பது முதற் பராந்தகனது சிறப்புப் பெயர்களுள் ஒன்று. ↑ தானம் - கோயில் உரிமை. ↑ ஆறு - பாலாறு. ↑ மஞ்சிக்கம் - புரம்போக்கு; தரிசுநிலம். ↑ பிடாகை - ஊருடன் சேர்ந்திருக்கும் சிற்றுார்; உட் கிடையூர். ↑ உதமாதம்பட்டி - நிலத்தின் பெயர். ↑ பொருள் விளங்கவில்லை. ↑ S. I. I. III. 99; 693 of 1904. ↑ Dr. Meenakshi - Administration and Social life under the Pallavas – P. 128: Footnote No. 25. ↑ Dr. இராசமாணிக்கம்-பல்லவர் வரலாறு-பக்கம் 214; Dr. Meenakshi - Administration and Social iife under the Pallavas P. 146. ↑ Hindu Administrative Institutions in S. IndiaPage 199. ↑ கலிங்கு - அனை; மதகு. ↑ Hindu Administrative Institutions in S. IndiaPage 134 and 171. ↑ முதல் இராசசாசசோழன் - உலநாத பிள்ளை - பக்கம் 53 – 53. ↑ இரண்டாம் ஆதித்தனது 8-ஆம் ஆண்டு, 160 of 1921; பார்த்திவேந்திரவர்மனது 18-ஆம் ஆண்டு, 156 of 1 9521. ↑ 172 Of 192 1 ↑ அர்ச்சனா போகம் - அருச்சனை ஆராதனைகளுக்காக அளிக்கப் பெறுவது. ↑ 962 of 19O4; S. I. I. III 156. ↑ 41 18 of 1898; S. I. I. III 161. ↑ திருவொற்றியூரில் வியாகரணதான வியாக்கியான மண்டபம் ஒன்று இருந்தது. அங்கு வியாகரணம் கற்பிப்பார்க்கும், கற்பார்க்கும் ஆக முன்றாம் குலோத்துங்கன் காலத்தில் நிபந்தம் ஏற்படுத்தப்பெற்றது. ஜடாவர்மன் சுந்தரபாண்டியன் பொன் வரி என்று ஒரு வரி வசூலித்து அவ்வியாக்கியான மண்டபத்தைப் பழுது பார்த்தற்கு அளித்ததன், ( 2O1 of 1912 and 11O of 1912; தென்னிந்திய கோயில் சாஸனங்கள் எண் 5 18, 5.10.) ↑ இவைகுறித்து இவ்வாசிரியர் வெளியிட்ட இலக்கியக்கேணி’ என்ற நூலில் ‘கல்லெழுத்துக்களில் மருத்துவ சாலைகள்‘ என்ற கட்டுரையில் காண்க. ↑ 36 of 1898 : S. I. I. III 177 ↑ தன்மாசனம் - நீதிமன்றம். ↑ 362 of 19O9 ; S. I. I. III 178. ↑ 55 of 1898: S. I. I. III 171; and 20 of 1898: S. I. I. III 182. ↑ பார்த்திவேந்திர பன்மனது மனைவி. ↑ சிரத்தாமந்தர் - கோயில் தருமங்களைச் சிரத்தையோடு (பற்றாேடு) பார்ப்பவர். ↑ 32 of 1898: S. I. I. III 193. ↑ விஷ்ணு கிருகம் - திருமால்கோயில். ↑ பார்த்திவேந்திரனது மனைவி. ↑ பூர்வாசாரம் - முன்னாள் வழக்கம். ↑ 49 of 1898: S. I. 1. III 194. ↑ 75 of 1923. ↑ 364 of 19O9; S. I. I. VoI. III 175. ↑ 328 of 19O6; S. I. I. III 1 88. ↑ 252 of 1912; S. I. I. III 189. ↑ ஆனையமன் என்றிருக்கலாம். ↑ 267 of 1906. ↑ 323 Of 1906. ↑ 324 Of 19O6. ↑ சதுர்வேதிமங்கலம் - வேதம் வல்ல அந்தணர்கள் வாழுமிடம் ; சதுப்பேதி மங்கலம், சருப்பேதிமங்கலம் எனவும் கல்லெழுத்தில் காணப்பெறும். ↑ S. I. I. III 1 6 7; 1 5 of 1898 ↑ 23 Of 1898 ; S. I. I. III 169. ↑ அகரப்பிரமதேயக்கிராமத்துச் சபையினர். ↑ 335 Of 1917. ↑ 705 Of 1909. ↑ 245 of 193O. ↑ 335 of 1917. ↑ 316 of 1911 ; S. I. III 191. ↑ 19 Of 1897. ↑ பார்த்திவேந்திரபன்மன் ↑ 17 Of 1921. ↑ 18 Of 19321. ↑ 13 of 1897. ↑ 19 of 1921. ↑ 197 of 1915 ↑ 17O of 1912; S. I. I. III 104. ↑ 181 of 913. ↑ 25 of 1922 மதுராந்தகன் கண்டராதித்தன் பன்னிரு திருமுறைகள் சைவத் திருமுறைகள் பன்னிரண்டு. முதல் மூன்று திருமுறைகள் திருஞானசம்பந்தர் அருளிய திருநெறிய தமிழ் ; 4, 5, 6 திருமுறைகள் அப்பர் அருளிய அருந்தமிழ் ஏழாம் திருமுறை சுந்தரர் செந்தமிழ் ; எட்டாம் திருமுறை மணிவாசகர் திருவாசகம் ; ஒன்பதாம் திருமுறை கருவூர்த்தேவர் முதலிய ஒன்பதின்மர் பாடிய திருவிசைப் பாவும் திருப்பல்லாண்டும் ; பத்தாம் திருமுறை திருமூலர் திருமந்திரம் : பதினோராந் திருமுறை திருவாலவாயுடையார், காரைக்காலம்மையார், சேரமான் பெருமாள் முதலிய பன்னிருவர் அருளிய பைந்தமிழ் ; பன்னிரண்டாம் திருமுறை சேக்கிழார் அருளிய திருத்தொண்டர் புராணமாகிய பெரிய புராணம் ஆகும். முதற் கண்டராதித்தன் இப்பன்னிரு திருமுறைகளுள் ஒன்பதாம் திருமுறையாகிய திருவிசைப் பாவில் கோயில் எனப்பெறும் சிதம்பரத்தின்மேல் பாடிய திருவிசைப்பாப் பதிகங்களில் ஒன்று, கண்டராதித்தர் என்பவரால் பாடப்பட்டது. இக் கண்டராதித்தர் பிற்காலச் சோழர் பேரரசில் கி. பி. 907-953 வரை பேரரசனாக வீற்றிருந்த முதற் பராந்தக சோழனின் இரண்டாவது மகனாவர். இவர் சிவபக்திச் செல்வம் வாய்ந்தவர் ; கி. பி. 950 முதல் 957 வரை சோழவரசனாக வீற்றிருந்தவர். இவரது மனைவியார் எல்லையற்ற சிவபக்தியுடையராய் மாதேவடிகள் என்று சிறப்பிக்கப் பெற்ற செம்பியன் மாதேவியார் ஆவர். இவர்களுக்கு ஒரு மகன் இருந்தான். அவன் மதுராந்தக தேவரான உத்தம சோழன் என்ற பெயருடையவன் ; கி. பி. 970 முதல் 985 வரை அரசாண்டவன். இவ்வுத்தம சோழனது மகனே மதுராந்தகன் கண்ட ராதித்தன் ஆவான். அரசியல் அலுவலன் முதற் கண்டராதித்தர் கி. பி. 957-ல் சிவபெருமான் திருவடி நீழலை அடைந்தார். அந்நாளில் உத்தம சோழன் சிறு குழந்தையாய் இருந்தான். ஆகவே கண்டராதித்தர் தன் தம்பி அரிஞ்சனை அரசனாக ஆக்கினார். அரிஞ்சயனும் தில திங்களே அரசாண்டு இறந்து போனான். பின்னர் அரிஞ்சயன் மகன் இரண்டாம் பராந்தகனாகிய சுந்தரசோழன் என்பான் கி. பி. 957-ல் சோழப் பேரரசனாகி கி. பி. 970 வரை அரசாண்டான். சுந்தர சோழனுக்குப் பின் அவன் மகன் (முதலாம்) இராசராசன் அரசனாக வரவில்லை : தன் பெரிய பாட்டனாகிய முதலாம் கண்டராதித்தர் புதல்வனும் தனக்குச் சிறிய தந்தையுமாகிய உத்தம சோழனுக்கு அரசாளவேண்டும் என்ற விருப்பம் இருந்தமை அறிந்து, உத்தமசோழன் சோனாட்டரசனாக இருக்க விட்டுக்கொடுத்தான். உத்தம சோழனும் கி. பி. 970-985 வரை அரசாண்ட பின்னர், முதலாம் இராசராசசோழன் அரசனான். எனவே உத்தம சோழனுடைய மகனாகிய மதுராந்தகன் கண்டராதித்தனுக்கு அரசுரிமை கிடைக்கவில்லை. முதல் இராசராச சோழனாட்சியில் இவன் கோயில் காரியங்களும் அறநிலையங்களும் நன்கு நடைபெறுமாறு கண்காணிக்கும் அலுவலில் இருந்தான். திருமாற்பேற்றில் தொண்டை நாட்டுப் பாடல்பெற்ற தலங்களுள் ஒன்றாகத் திகழ்வது திருமாற்பேறு. அவ்வூரில் கண்ட சில கல்லெழுத்துக்களில் மதுராந்தகன் கண்டராதித்தன் குறிக்கப் பெறுகிறான். பரகேசரி வரமனது[1] 14-ஆம் ஆட்சி யாண்டுக் கல்வெட்டில் (280 of 1906) திருமாற்பேற்று இறைவனுக்குத் திங்கள்தோறும் நூற்றெட்டுக் குடங்கள் தேன் நெய் தயிர் அபிடேகம் செய்ய மதுராந்தகன் கண்டராதித்தனால் நிபந்தம் அளிக்கப்பட்ட செய்தி குறிக்கப்பட்டுள்ளது. இவனே இவ்வூர்க் கோயிலில் இராச கேசரிவர்மனது[2] மூன்றாவது ஆட்சியாண்டில் ஒரு விளக்கு வைக்கப் பதினைந்து கழஞ்சு (பொன்) அளித்திருக்கிறான் (285 of 1906). இராசகேசரி வர்மனது மூன்றாவது ஆட்சியாண்டில் ஒரு நில விற்பனைச் செய்தி கூறுமிடத்தும் இவன் குறிக்கப் பெறுகிறான் (294 of 1906). அதுவே ஆட்சி யாண்டில் இவன் ஒரு விளக்கு எரிக்கப் பதினைந்து கழஞ்சுபொன் அளித்ததாகக் குறிக்கப் பெற்றுள்ளான் (296 of 1906). முதலாம் இராசராச சோழனுடைய நான்காம் ஆட்சியாண்டில் இவன் திருமாற்பேறு அக்னிசுவரர் கோயில் நடைமுறைச் செய்திகளை ஆய்ந்தான் ; கோயில் நிலங்கள் பிறரால் கைக்கொள்ளப்பட்டமையையும், இறைவனுக்குரிய நிவேதனம் இரண்டு நாழி அரிசியாகக் குறைக்கப் பட்டமையையும் கண்டு பிடித்தான் ; ஐவர் அடங்கிய ஒரு குழுவுடன் இவற்றை ஆராய்ந்தான் ; மடைப் பள்ளிக்குப் பொறுப்புடையவர்களிடம் குற்றம் கண்டு தண்டம் விதித்தான் (283 of 1906) ; இச்செய்தி முதலாம் இராசராசனுடைய 12-ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டிலும் குறிக்கப் பெற்றுள்ளது (282 of 1906). திருவல்லத்தில் கோ இராசகேசரிவர்மனுடைய ஏழாவது ஆட்சியாண்டில் இவன் திருத் தீக்காலி வல்லத்தில் இருந்துள்ளான். பேராசிரியர் கீல் ஹார்ன் அவர்கள் கணக்குப்படி 26-9-991-ல் ஐப்பசித் திங்கள் முழுமதி ரேவதி விண் மீன் கூடிய சந்திர கிரகணத்தன்று திருத் தீக்காலி வல்லத்துப் பெருமாளுக்குச் சகஸ்ர கடாபிஷேகம் செய்வித்து வழிபாடாற்றினான். அப்பொழுது இறைவனுக்குப் படைக்கப்பெறும் திவேதனம் இரண்டு நாழி அரிசியாக இருத்தலையும், கறியமுது நெய்யமுது தயிரமுது படைக்கப் பெறாமல் இருந்தமையையும், திருநுந்தா விளக்கு ஏற்றப் படாமையையும் கண்டான். அத்திருக்கோயில் சிவப் பிராமணரையும் தீக்காலி வல்லத்து அவையாரையும் அழைத்து, ’’இக்கோயில் பெருமானுடைய வரவும் செலவும், அரசன் ஆணைக்கும் திருவோலைக்கும் உரிய வண்ணம் சொல்லுக ’’ என்று வினவச், சிவப்பிராமணரும், தீக்காலி வல்லத்து அவையாரும் (சொன்னார்கள்). எஞ்சிய செய்தியுள்ள கல்வெட்டுப் பகுதி கட்டப் பட்டு இருக்கின்றமையின் மேற்கொண்டு மதுராந்தகன் கண்டராதித்தன் எடுத்துக் கொண்ட நடவடிக்கை தெரிய கிற்றிலது. எனினும் இக்கல்வெட்டாலும், இம்மதுராந்தகன் கண்டராதித்தன் கோயில் கணக்குகளையெல்லாம் ஆராயும் படியான செல்வாக்கோ அல்லது அலுவலோ உடையனாயிருந்தான் என்பது உறுதிப் படுகிறது ( 1O of 1890; S. I. I. Volume III No 49.) இவன் மேற்குறித்த ஆண்டிலேயே திருவல்லம் கோயில் கணக்குகளை ஆய்ந்தான் ; அக்கோயிலுக்கு நாள்வழிபாடு நன்கு நடைபெற அவ்வருவாய் குறைவாயிருத்தலைக் கண்டு, தான் ஏழு கழஞ்சு நான்கு மஞ்சாடி பொன் அளித்தான் ; கோயில் நிலங்களைச் சிவப் பிராமணர்கள் தமக்குரியதாக ஆக்கிக் கொண்டமையைக் கண்டு பிடித்து, அங்ஙனம் செய்தவர்களுக்கு 74 கழஞ்சு பொன் அபராதம் விதித்தான் ; இவற்றிற்கு ஒரு திட்டமும் வகுத்தான் ; அத்திட்டங்களை யார் யார் கண்காணிக்கவேண்டுமென்பதையும் ஏற்பாடு செய்தான் (218 of 1921). குடிமல்லத்தில் இராசகேசரி வர்மனுடைய நான்காம் ஆட்சியாண்டில் கண்டராதித்தன் குடிமல்லத்தில் இருந்தான் ; அங்கு இறைவன் திருமேனி ஒன்றை எழுந்தருளுவித்து நாள் வழிபாட்டிற்கு நிலதானம் அளித்துள்ளான். இதனை அவ்வூர்க் கல்வெட்டு ஒன்று கூறுகின்றது (222 of 1903). முடிப்புரை இதுகாறுங் கூறியவாற்றால் மதுராந்தகன் கண்டராதித்தன் தொண்டை நாட்டிலே கோயில்களைக் கண்காணிக்கும் அரசியல் தலைவனாக இருந்தமை பெறப்படும்: இந்நாளில் கோயில் முதலாய அறநிலையங்களையெல்லாம் பாதுகாத்தற்கு அறநிலையப் பாதுகாப்பு ஆணையர் இருத்தலை நாமறிவோம். அத்தகைய பெருந்தர அதிகாரியாக மதுராந்தகன் கண்டராதித்தன் விளங்கினானென்று கொள்ளலாம். கி. பி. 1001 வரையிலேயும் இவனது பாட்டியார் செம்பியன் மாதேவியார் சோனடு முழுவதும் பல திருக்கோயில்களைப் புதுப்பித்தும், அணிகலன்கள் முதலியன அளித்தும், பல நிபந்தங்கள் நல்கியும் சிவப்பணிகள் பல ஆற்றிய காலங்களில், இம்மதுராந்தகன் கண்டராதித்தன் தொண்டை நாட்டில் அதே போன்ற தொண்டிலேயே ஈடுபட்டிருந்தனன். முதற் கண்டராதித்த சோழரும், அவர் மனைவியாகிய செம்பியன் மாதேவியாரும், பேரனுகிய மதுராந்தகன் கண்டராதித்தனும், அந்நாளைய பேரரசனாகிய இராசராச சோழனும் தென்னாட்டைப் பூலோக சிவலோகமாக ஆக்கியமை அறிந்து மகிழ்வோமாக ! * * * ↑ உத்தம சோழனாக இருத்தல் கூடும். ↑ இராசகேசரிமர்மன் இராசராசன் (985-1014) பொய்கைநாடு கிழவன்[1] பொய்கைநாடு சோழமண்டலம் முதலாம் இராசராசசோழனது ஆணையின்படி ஒன்பது வளநாடுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது.[2] அவற்றுள் இராசேந்திர சிங்கவளநாடு என்பது ஒன்று. ஒவ்வொரு வளநாடும் சிலநாடு[3]களாகப் பிரிக்கப்பட்டிருந்தது. பொய்கை நாடு என்பது இராசேந்திர சிங்க[4] வளநாட்டைச் சேர்ந்தது. திருவையாறு[5] திருநெய்த்தானம்[6] , திருமழபாடி[7] என்பன இப்பொய்கை நாட்டைச் சேர்ந்த தலங்கள் என்றால் இப்பொய்கை நாட்டின் எல்லை ஒருவாறு அறியப்பெறும், இவ்விராசேந்திர சிங்க வளநாடு காவிரியின் வடகரைநாடு என்பதும் திருவையாற்று ஒலோகமாதேவீச்சரத்துக் கல்லெழுத்தால் அறியலாம். பொய்கைநாடு கிழவன் அலுவல் இப்பொய்கைநாட்டின் தலைவனாக இராசராசன் I காலத்தில் விளங்கியவன் பொய்கைநாடு கிழவன் எனப் பெற்றன். இவன் இயற்பெயர் ஆதித்தன் சூரியன் என்பதும், தென்னவன் மூவேந்தவேளான் என்பது இவன் சிறப்புப் பெயராக இருத்தல் வேண்டும் என்பதும் அறியத்தகும். இப்பொய்கைநாடு கிழவன் முதலாம் இராசராசனின் 9-ஆவது ஆட்சியாண்டாகிய கி. பி. 985ல் திருச்சோற்றுத் துறையில் சில அறங்களைச் செய்துள்ளான். அக்கல்லெழுத்தில் ‘பொய்கைநாடு கிழவன் ஆதித்தன் சூரியனை தென்னவன் மூவேந்த வேளான்’ என்று குறிக்கப் பெற்றுள்ளான். முதல் இராசராசனது 29-ஆம் ஆட்சியாண்டுக் கல்லெழுத்துக்களிலும் முதல் ராசேந்திரசோழனது 3-ஆவது ஆட்சியாண்டுக் கல்லெழுத்துக்களிலும் (கி. பி. 1015ல்) அதாவது முதல் இராசேந்திரன் பட்டத்திற்கு வந்த ஆண்டில் காணும் பல கல்லெழுத்துகளிலும் ”ஸ்வஸ்திஸ்ரீ உடையார் ஸ்ரீ ராஜ ராஜீஸ்வரமுடையார்க்கு ஸ்ரீ கார்யம் செய்கின்ற பொய்கை நாடு கிழவன் ஆதித்தன் சூரியனை தென்னவன் மூவேந்த வேளான்” என்று குறிக்கப்படுவதால் தஞ்சையில் இராசராசேச்சரம்[8] எடுப்பித்த பிறகு இராசராசசோழனால் ஸ்ரீகார்யம் செய்கின்ற அலுவலில் நியமிக்கப்பட்டிருந்ததாக அறியப்பெறுகிறது. இவன் சிறந்த சிவபக்தி யுடையவன். இவன் தன் வாழ்நாளில் சிவனடியார்களிடத்தும் அரசனிடத்தும் ஒப்பற்ற அன்பு பூண்டொழுகியவன். ஆதலின், இவனது சிறந்த பண்புகளையறிந்து, இராசராசன் இராசராசேச்சுரத்தில் ஸ்ரீகாரியஞ்செய்யும் வேலையில் இவனை அமர்த்தினன் என்னலாம். திருச்சோற்றுத்துறைக் கல்லெழுத்து முதலாம் இராசராசனின் 9-ஆம் ஆட்சி ஆண்டில் திருச்சோற்றுத்துறை மகாதேவர்க்குப் பொய்கைநாடு கிழவன் பொன்னின் வெண் சாமரைக்கை-1க்கு, நிறை 19; கணபதியார்க்கு இராசந்தி விளக்கு ஐந்தனுக்கும் நொந்தா விளக்கினுக்கும்... ... ... வைத்தகாசு 10; (இங்ஙனம் பல தருமங்கள் சொல்லப்பட்டுள்ளன); 'யாண்டு 10-ஆவது ... ... ... திருப்பதியம் பாடுவார்க்கு நெல்லு 70 கலத்துக்கு வைத்தபொன் 33; துர்க்கையார்க்குத் திருவமிது நெல்லு 20க்கு வைத்தகாசு 10...' இரண்டு திருவிழாவுக்குப் பெருந்திருவமிர்து செய்ய நெல்லுக்கு வைத்தகாசு 12, என்ற இக்கல்லெழுத்துப் பகுதியினின்று கி. பி. 985-ல் திருச்சோற்றுத்துறை மகாதேவர் கோவிலுக்குப் பொய்கை நாடு கிழவன் சில அறங்கள் செய்துள்ளான் என்றும் அறியப்படுகிறது. இதில் திருப்பதியம் பாடுவார்க்குப் பொன் அளித்துள்ளமை குறிப்பிடத் தக்கது. மூவர் படிமங்களை எழுந்தருளுவித்தமை திருச்சோற்றுத் துறையில் தேவாரம் பாடுவதற்கு நிபந்தம் அளித்த பொய்கைநாடு கிழவன், தஞ்சை இராசராசேச்சுரத்தில் ஸ்ரீகாரியம் செய்கின்ற அலுவல் ஏற்றுக்கொண்டதும் தேவார மூவருடைய படிவங்களைத் தஞ்சை இராசராசேச்சுரத்தில் எழுந்தருளுவித்து அவற்றுக்கு அணிகலன்களும் அளித்தான் என்பதை இரண்டு கல்லெழுத்துக்களினின்றும் அறியலாம்[9]. விளக்கம் வருமாறு:- 1. நம்பி ஆரூரர்-சுந்தரமூர்த்தி சுவாமிகள் படிவம் பாதாதி கேசாந்தம் பதினெழுவிரல் இரண்டு தோரை[10] உயரமும் இரண்டு திருக்கையும் உடையவராய்க் கனமாக[11] எழுந்தருளுவிக்கப்பெற்றது; இது செப்புப் பிரதிமம்; இவர் நின்ற பத்மம் இரு விரலரை உயரமுடையது; இதனோடுங்கூடச் செய்த பீடம் எண் விரல் சம சதுரத்து மூவிரலே இரண்டு தோரை உயரம் உடையது. இவர்க்குப் பொய்கைநாடு கிழவன் கொடுத்தது ருத்ராக்ஷத் தாழ்வடம் ஒன்றில் பொன்னின் சுரி 56-ம் ருத்ராக்ஷம் 56-ம் உள்பட நிறை 8-கழஞ்சே 9– மஞ்சாடி[12] ; விலை காசு 25. குறுவானியக் குடியாகிய[13] பரகேசரிபுரத்து நகரத்தார். கொடுத்தது ருத்ராக்ஷம் பொன்னின் சுரி கட்டிற்று ஒன்றும், நாண்படு கண்ணும் கொடுக்குவாயும் உள்பட நிறை கழஞ்சே 7 மஞ்சாடி; விலைகாசு 3. வெண்ணி[14] நகரத்தார் கொடுத்தன திருக்கம்பி ஒன்று, பொன் கழஞ்சே மஞ்சாடியும் குன்றி; திருக்கம்பி ஒன்று, பொன் கழஞ்சே மஞ்சாடி: திரள்மணிவடம் ஒன்று, பொன் இருகழஞ்சே மஞ்சாடியும் குன்றி; திருக்கைக் காறை ஒன்று, பொன் 1 கழஞ்சே 4 மஞ்சாடி, திருக்கைக் காறை ஒன்று, பொன் 1 கழஞ்சே 3 மஞ்சாடியும் குன்றி; திருக்காற்காறை ஒன்று, பொன் 1 கழஞ்சே 3 மஞ்சாடியும் குன்றி; திருக்காற் காறை ஒன்று, பொன் 1 கழஞ்சே 4 மஞ்சாடியாக இரண்டிற்கு 3 கழஞ்சே 3 மஞ்சாடி. 2. நங்கை பரவையார் படிவம் பதினறு விரல் உயரத்து இரண்டு திருக்கையுடையராகக் கனமாக எழுந்தருளுவிக்கப்பெற்றது; இவர் எழுந்தருளிநின்ற பத்மம் இருவிரலே இரண்டு தோரை உயரமுடையது; இதனேடுங் கூடச்செய்த பீடம் 6 விரலே 2 தோரை சம சதுரத்து மூவிரல் உயரமுடையது. இவர்க்குப் பொய்கைநாடு கிழவன் கொடுத்தன திருக்கைக்காறை ஒன்று, பொன் 1 கழஞ்சாக இரண்டினால் பொன் முக்கழஞ்சு; திருக்காற்காறை ஒன்று பொன் 1 கழஞ்சாக இரண்டினால் பொன் முக்கழஞ்சு; மோதிரம் ஒன்று, பொன் கழஞ்சே மஞ்சாடியும் குன்றி. பரகேசரிபுரத்து நகரத்தார் கொடுத்தது திருகு ஒன்று உள்பட பட்டைக்காறை ஒன்று, பொன் முக்காலே குன்றி. வெண்ணி நகரத்தார் கொடுத்தன திருக்கம்பி ஒன்று, பொன் கழஞ்சே 2மஞ்சாடியும் குன்றி; திருக்கம்பி ஒன்று, பொன் கழஞ்சே 2 மஞ்சாடி. 3. திருநாவுக்கரசர் பிரதிமம் பாதாதி கேசாந்தம் 22 விரலே 2 தோரை உயரத்து இரண்டு திருக்கையுடையராகக் கனமாக எழுந்தருளுவிக்கப் பெற்றது; இவர் எழுந்தருளி நின்ற பத்மம் இரு விரலே ஆறு தோரை உயரமுடையது; இதனோடுங்கூடச் செய்த பீடம் எண்விரலே ஆறு தோரைச் சம சதுரத்து நால்விரல் உயரமுடையது. இவர்க்குப் பொய்கைநாடு கிழவன் கொடுத்தன ருத்ராக்ஷச்சுரி பொன்னின் நூலிற் கோத்த ருத்ராக்ஷம் ஒன்று உள்பட நிறை ஆறு மஞ்சாடியும் இரண்டு மா; விலை காசு ஒன்று. ருத்ராக்ஷச்சுரி பொன்னின் நூலிற் கோத்த ருத்ராக்ஷம் ஒன்று உள்பட நிறை ஆறு மஞ்சாடியும் இரண்டுமா, விலை காசு ஒன்று. கண்டிகை ருத்ராக்ஷம் ஒன்றும் சுரி ஒன்றும் நிறை ஐங்கழஞ்சே மஞ்சாடியும் குன்றி: விலை காசு எட்டு. திருப்பொற்பூ ஒன்று, பொன் கழஞ்சே 4 மஞ்சாடியும் குன்றி; திருக்கைக்காறை ஒன்று, பொன் இரு கழஞ்சு; திருக்கைக் காறை ஒன்று, பொன் 1 கழஞ்சே 4 மஞ்சாடி. பரகேசரிபுரத்து ககரத்தார் கொடுத்தது ருத்ராக்ஷம் பொன்னின் சுரி கட்டிற்று ஒன்றும் நாண்படு கண்ணும் கொக்கு வாயும் உட்பட நிறை கழஞ்சே ஏழு மஞ்சாடி; விலை காசு மூன்று. 4. திருஞானசம்பந்தர் பிரதிமம் பாதாதி கேசாந்தம் இருபத்திருவிரலே இரண்டு தோரை உயரத்து இரண்டு திருக்கை யுடையாராகக் கனமாக எழுந்தருளுவிக்கப்பெற்றது; இவர் எழுந்தருளி நின்ற பத்மம் இருவிரலே இரண்டுதோரை உயரமுடையது; இதனொடுங்கூடச் செய்த பீடம் ஒன்பதிற்று விரலே இரண்டு தோரைச் சமசதுரத்து நால்விரல் உயரமுடையது. இவர்க்குப் பொய்கைநாடு கிழவன் கொடுத்தன ருத்ராக்ஷச்சுரி பொன்னின் நூலிற் கோத்த ருத்ராக்ஷம் ஒன்றுட்பட நிறை கழஞ்சே இரண்டு மஞ்சாடிக்கு விலை 1 காசு. ருத்ராக்ஷச்சுரி பொன்னின் நூலிற் கோத்த ருத்ராக்ஷம் ஒன்றுட்பட நிறை கழஞ்சே மஞ்சாடியும் குன்றிக்கு விலை 1 காசு. தாழ்வடம் ஒன்றிற் பொன்னின் சுரி 56-ம், ருத்ராக்ஷம் 56-ம் உட்பட நிறை எண் கழஞ்சே 4 மஞ்சாடியும் குன்றிக்கு விலை 25 காசு. திருப்பொற்பூ ஒன்று, பொன்கழஞ்சே குன்றி. திருக்கைக் காறை ஒன்று, பொன் இரு கழஞ்சே குன்றி. திருக்கைக் காறை ஒன்று, பொன் 1 கழஞ்சே 4 மஞ்சாடி. திருப்பட்டிகை ஒன்று, பொன் இருகழஞ்சு. பரகேசரி புரத்து நகரத்தார் கொடுத்தது ருத்ராக்ஷம் பொன்னின் சுரி கட்டியது ஒன்றும் நாண்படு கண்ணும் கொக்கு வாயும் உட்பட நிறை கழஞ்சே ஏழு மஞ்சாடிக்கு விலைகாசு மூன்றேகால். 5. அரசன் அரசியர் பிரதிமங்கள் பொய்கைநாடு கிழவன் தன் அரசனிடத்தில் மிக்க அன்பு உடையவன் என்பது இராசராசனது படிவத்தையும், அவனது பெருந்தேவியாகிய ஒலோகமாதேவியார் படிவத்தையும் தஞ்சைப் பெரிய கோயிலில் எழுந்தருளுவித்ததினின்று அறியப் பெறுகின்றது. இராசராசன் பிரதிமம் பாதாதிகேசாந்தம் ஒரு முழமே நால்விரலரை உயரத்து இரண்டு திருக்கையுடையராக எழுந்தருளுவிக்கப் பெற்றது; இவர், கல்வெட்டில் பெரிய பெருமாள் என்று குறிக்கப் பெறுகிறார்; இவர் எழுந்தருளி நின்ற பீடம் ஐவிரலே இரண்டு தோரை உயரங்கொண்டது; இதனோடுங்கூடச் செய்த பீடம் 11 விரல் சமசதுரத்து ஐவிரலே ஆறு தோரை உயரமுடையது. இவர்க்குப் பொய்கைநாடுகிழவன் கொடுத்தன திருக்கைக்காறை ஒன்று, பொன்கழஞ்சே ஆறு மஞ்சாடியும் மூன்றுமா ஆக இரண்டினால் பொன் 2 கழஞ்சு 2 மஞ்சாடி ஆறுமா. திருக்குதம்பை ஒன்று, பொன் எட்டு மஞ்சாடி ஏழு மாவாக இரண்டினால் பொன் கழஞ்சு இரண்டு மஞ்சாடி நான்கு மா. 6. தேவாரதேவர் திருமேனி[15] இப்பிரதிமம் பெரிய பெருமாள் திருமுன் வைக்கப்பட்டிருத்தல் கூடும். ‘‘பெரிய பெருமாளுக்குத் தேவார தேவராக எழுந்தருளுவித்த தேவர்” என்று குறிக்கப் பெறுதலின் இராசராசன் தேவாரம் ஓதுங்கால் ஒரு விக்கிரகத்தை எதிரில் எழுந்தருளுவித்து ஓதுவது பழக்கம்போலும் என்ற செய்தியை அறிகிறோம். இத்திருமேனி சந்திரசேகரர் எனப் பெறுவார். இவர் ஐவிரலே இரண்டு தோரை உயரத்து நான்கு திருக்கை யுடையவர்: இத்திருமேனி பித்தளையால் ஆயது; இவரோடுங் கூடச் செய்த பத்மம் 1 விரல் உயரமுடையது; பீடம் இருவிரலே நாலு தோரை சமசதுரத்து ஒரு விரலுயரமுடையது. ஒரு விரல் சுற்றில் கனமாகச் செம்பால் செய்த பிரபை ஒன்றும் இத்திருமேனியைக் கவித்து இருந்தது. 7. ஒலோகமாதேவியார் பிரதிமம் இருபத்திருவிரலே இரண்டு தோரை உயரத்து இரண்டு திருக்கை யுடையராகக் கனமாக எழுந்தருளு விக்கப்பெற்றது; இவர் எழுந்தருளி நின்ற பத்மம் ஐவிரல் உயரமுடையது; இதனொடுங்கூடச் செய்த பீடம் ஒன்பதிற்று விரல் சமசதுரத்து ஐவிரலே இரண்டு தோரை உயரமுடையது. இவர்க்குப் பொய்கைநாடு கிழவன் கொடுத்தன திருக்குதம்பை ஒன்று, பொன் ஏழு மஞ்சாடியும் குன்றியாக இரண்டினால் பொன் முக்கால் கழஞ்சு. திருக்கைக் காறை ஒன்று, பொன் கழஞ்சே இரண்டு மஞ்சாடியும் மூன்றுமா. திருக்கைக்காறை ஒன்று, பொன் கழஞ்சே எட்டுமா. விளக்குகளை அளித்தமை மேற்குறித்த ஆறு பிரதிமங்களும் ஒரு திருமேனியும் இராசராசசோழனது 29-ஆம் ஆட்சியாண்டில் எழுந்தருளுவிக்கப் பெற்றன. அடுத்த ஆண்டில் அதாவது (இராசேந்திரனின் 3-ஆவது ஆட்சியாண்டு எனக் குறிக்கப்பெற்ற) இராசேந்திரன் I பட்டத்துக்கு வந்த ஆண்டில் பொய்கைநாடு கிழவன் தான் எழுந்தருளுவித்த நம்பியாரூனார்க்கும், திருஞானசம்பந்தருக்கும், திருநாவுக்கரசருக்கும் 41 பலம் நிறையுள்ள இருப்பு நாராசத்தோடு கூடிய தரா[16]நிலை விளக்கு ஒன்றும், பெரிய பெருமாளுக்கு[17] 120 பலம் நிறையுள்ள இருப்பு நாராசத்தோடு கூடிய தராநிலைவிளக்கு ஒன்றும், 4. பலம் எடையுள்ள வெண்கல மடல் ஒன்றும் அளித்துள்ளான்.[18] வெண்கல மடல் இப்பிரதிமங்களை வணங்க வருவார்க்குத் திருநீறு அளித்தற் பொருட்டுக் கொடுக்கப்பட்டது போலும் ! சிறுத்தொண்டர் மெய்ப்பொருளார் வரலாறுகளைப் போற்றியமை பொய்கைநாடு கிழவன், செயற்கருஞ் செயல்கள் செய்த சிறுத்தொண்டர், மெய்ப்பொருள் நாயனார் முதலியவர்களுக்குத் தஞ்சைப் பெரிய கோயிலில் படிமங்களை எழுந்தருளுவித்தான் என்று இரண்டு கல்லெழுத்துக்களினின்று அறிகிறோம். 8. சிறுத்தொண்டர்[19] சிறுத்தொண்டர் திருச்செங்காட்டங்குடி என்னும் ஊரினர் ; பரஞ்சோதியார் எனும் இயற்பெயரினர் ; இவர் பல்லவ அரசனுக்குத்[20] தானைத் தலைவராய் அமர்ந்து வாதாபி வரையிலும் சென்று வாதாபியை அழித்துப் பல பொருள்களையும் கவர்ந்து அரசன் முன் கொணர்ந்தார்.[21] அரசன் இவரது சிவபக்தியை அறிந்து இவர்க்கு ஓய்வு அளித்தார். இவர் திருச்செங்காட்டங்குடியில் இருந்து அடியார்களுக்குத் திருவமுது அளித்துவரும் தொண்டில் ஈடுபட்டிருந்தார். இவரது வாழ்க்கைத் துணைவியார் திருவெண் காட்டுநங்கை எனப் பெறுவர். ஒரு நாள் இவரது அன்னதானச் சிறப்பைச் சோதிக்கத் திருவுளங் கொண்ட சிவபெருமான் பைரவக்கோலம் தாங்கிவந்தார்; அடியாரை நோக்கி ஆறு திங்களுக்கு ஒரு முறையே உண்பதாகவும் பிள்ளைக்கறி இடுவதாயின் உண்பதாகவும் கூறினார். தொண்டானார்க்கு எந்நாளும் சோறளிக்கும் திருத்தொண்டர் தன் மனைவியோடு உசாவினார் , தம் ஒரு மகவாகிய சீராளரைச் சமைத்து அடியார்க்கு உணவளிக்க உறுதி கொண்டார் ; வாளால் மகவரிந்து ஊட்டினார் ; பைரவராக வந்த இறைவனும் காட்சிய ளித்தார் இவ்வரலாற்றில் பங்குபெறும் சிறுத்தொண்டர், திருவெண்காட்டு நங்கை, சீராளதேவர், பைரவமூர்த்தி, காட்சிகொடுத்த இறைவர் ஆகிய ஐவருக்கும் பிரதிமங்களும், திருமேனியும் பொய்கைநாடு கிழவன் எழுந்தருளுவித்தான் ; விளக்கம் வருமாறு : 1. க்ஷேத்திரபாலதேவர் பாதாதிகேசாந்தம் முக்காலே அரைக்கால் முழ உயரத்து எட்டுத்திருக்கைகளை யுடையவர் ; இவர் எழுந்தருளி நின்ற பீடம் 9 விரல் சமசதுரத்துப் பத்மத் தொடும் கூடியது. இவர்க்குப் பொய்கைநாடு கிழவன் கொடுத்தன திரள்மணிவடம் ஒன்று, பொன்கால் : சுருக்கின வீரபட்டம் ஒன்று, பொன் ஏழுமஞ்சாடி; திருக்குதம்பைத் தகடு இரண்டு, பொன் மூன்று மஞ்சாடி. இந்த சேஷத்திரபால தேவரே சிறுத்தொண்டருக்குக் காட்சி கொடுத்த தேவராக எழுந்தருளுவிக்கப் பெற்றார் எனக்கோடல் பொருந்தும். 2. பைரவமூர்த்திகள் திருமேனி பதினெண் விரல் உயரத்து இரண்டு திருக்கை யுடையராய் ஆடுகிறாராக எழுந்தருளுவிக்கப் பெற்றது : இவர் எழுந்தருளி நின்ற பீடம் ஒன்பதிற்று விரல் உயரத்து எண்விரலகலத்துப் பத்மத்தொடும் கூடியது. இவர்க்குப் பொய்கைநாடு கிழவன் கொடுத்தன திரள்மணிவடம் ஒன்று, பொன் 4 மஞ்சாடி : முப்பத்து மூன்று முத்துக்கள் கோத்த முத்துவடம் ஒன்று, நிறை அரைக் கழஞ்சே 4 மஞ்சாடியும் குன்றி : விலே காசு. 37 முத்துக்கள் கோத்த முத்துவடம் ஒன்று, நிறை எட்டு மஞ்சாடி ; விலே காசு. 3. சிறுத்தொண்ட நம்பி பாதாதிகேசாந்தம் 17 விரல் உயரத்து இரண்டு கையுடையவர். இவர்க்குப் பொய்கைநாடு கிழவன் கொடுத்தன திரள்மணிவடம் ஒன்று, பொன் மூன்று மஞ்சாடியும் குன்றி : ருத்ராக்ஷக்காறை ருத்ராக்ஷம் நீக்கிப் பொன் அரைக் கழஞ்சே மஞ்சாடி. 4. திருவெண்காட்டு நங்கை பாதாதி கேசாந்தம் 15 விரல் உயரத்து இரண்டு கை உடையவர். இவர்க்குப் பொய்கைநாடு கிழவன் கொடுத்தது பட்டைக்காறையிற் கோத்த தாலி உட்படப் பொன் ஒன்பது மஞ்சாடியும் குன்றி. 5. சீராள தேவர் பாதாதி கேசாந்தம் 12 விரல் உயரத்து இரண்டு கையுடையவர். இவர்க்குப் பொய்கை நாடு கிழவன் கொடுத்தன சுருக்கின வீரபட்டம் ஒன்று, பொன் நான்கு மஞ்சாடி, திருக் குதம்பைத் தகடு இரண்டு, பொன் மஞ்சாடியும் குன்றி, பட்டைக்காறையும் சூலமும், பொன் அரைக் கழஞ்சே நாலு மஞ்சாடியும் குன்றி. பிரதிமங்கள் மூவரும் கின்ற பீடம் : 23 விரல் நீளத்து ஏழு விரல் அகலத்து எண் விரல் உயரத்துப் பத்மத்தொடும் கூடியது. இவ்வைவருக்கும் திருமேனிகளும் பிரதிமங்களும் எழுந்தருளுவித்ததை நோக்கின் சிறுத்தொண்டர் திருநாள் தஞ்சை இராசராசேச்சரத்தில் நிகழ்த்தவேண்டும் என்று பொய்கைநாடு கிழவன் கருதினன்போலும் என்று நினைக்க இடம் தருகிறது. 9. மெய்ப்பொருள் நாயனார்[22] மெய்ப்பொருள் நாயனாருடைய படிவத்தைப் பொய்கைநாடு கிழவன் எழுந்தருளுவித்திருக்கிறான். இந்நாயனாது படிவத்தை வைத்த செய்தியைக் கூறும் கல்வெட்டில் இவர் பெயரைக் கூறாமல் ’’தத்தா நமரே காண்’’ என்ற மிலாடுடையார் படிவம் என்று கூறியுள்ளமையை நோக்கப், பொய்கைநாடு கிழவன் நாயன்மார்களுடைய வரலாற்றில் ஈடுபாடு உடையவனாய் இருந்தான் என்பதும், நாயன்மார்களுடைய வரலாறுகளைக் கூர்ந்து அறிந்திருந்தான் என்பதும் அறியப்பெறும். நாயனாரை வஞ்சனையாகக் கொல்லவந்த முத்த நாதன், தான் எண்ணியதையே முடிக்கத், தத்தன் என்ற வாயிற் காவலன் முத்தநாதனைக் கொல்ல வாளோச்சின்னான். நாயனர் ’’தத்தா நமரே காண்’’ என்று கூறித் தத்தனை விலக்கினார். நாயனார் வாக்கில் முகிழ்த்த இச்சொற்றாெடர், நம்பியாண்டார்நம்பி திருவந்தாதியில் தவழ்ந்து, கல்லெழுத்தில் பதிந்தவாற்றை அறிந்தால் சோழவரசர் ஆட்சியில் இருந்த தமிழரது சைவ சமயப் பற்றுத் தெற்றென விளங்கும். தத்தா நமரே காண் பாதாதிகேசாந்தம் இருபதிற்றுவிரல் உயரத்து இரண்டு திருக்கையுடையராகச் செய்யப்பெற்றது, தத்தா நமரே காண்' என்ற மிலாடுடையார் படிவம். இவர் நின்ற பத்மத்தொடுங்கூடச் செய்த பீடம், பதிற்று விரல் நீளம் எண் விரல் அகலம் எண் விரல் உயர முடையது. இவர்க்குப் பொய்கைநாடு கிழவன் கொடுத்தது ருத்ராக்ஷம் ஒன்றிற் கட்டின பொன் ஏழு மஞ்சாடி உட்பட ருத்ராக்ஷம் ஒன்று ; நிறை அரைக் கழஞ்சே நாலு மஞ்சாடியும் குன்றி ; விலை காசு ஒன்று. முடிப்புரை இந்நாளில் திருக்கோயில்களில் கோயில் அலுவல்களை மேற்பார்வை செய்யும் இறை பணியாளர் (Executive Officer) போன்று முன்னாளில் ஸ்ரீ காரியம் ஆராய்கின் றவர் என்ற அலுவலர் இருந்து கோயில் அலுவல்களைச் செவ்வனே நடத்தினர். முன்ளனாலும் பின்னாளிலும் இவ்வலுவலில் பலர் இருந்திருப்பினும் பொய்கை நாடு கிழவன் போன்று சிலைமேல் எழுத்தில் நின்றவர் சிலரே. பொய்கை நாடு கிழவன்போன்று இந்நாள் இறைபணியாளர் தொண்டாற்றிச் சைவர் நெஞ்சில் நிலை பெறுவாராகுக. * * * ↑ இது ஞானசம்பந்தத்தில் வெளி வந்தது. ↑ அவையாவன: அருண்மொழிதேவ வளநாடு; க்ஷத்திரிய சிகாமணி வளநாடு; உய்யக்கொண்டான் வளநாடு; தித்தவிநோத வளநாடு; பாண்டிய குலாசனி வளநாடு; கேரளாந்தக வளநாடு: இராசாசிரிய வளநாடு; இராசராச வளநாடு; இராசேந்திர சிங்க வளநாடு (பண்டாரத்தார் - சோழர் வரலாறு - பாகம் 1 - பக்கம் 1 18 அடிக்குறிப்பு.) ↑ நாட்டை இக்காலத்துத் தாலூகாவிற்குச் சமமாகவும், வளநாட்டை ஜில்லாவிற்குச் சமமாகவும் கொள்ளலாம் ↑ இராசேந்திர சிங்கன் என்பது முதலாம் இராசராசனது சிறப்புப் பெயர்களில் ஒன்று. ↑ ராஜராஜ தேவர்க்கு யாண்டு 22-ஆவது வடகரை ராஜேந்திர சிங்கவள நாட்டுப் பொய்கை நாட்டுத் தேவ தானம் திருவையாற்று ஒலோகமாதேவீச்சரத்து மகாதேவர் (S. I. I. Volume V 516) ↑ ஸ்வஸ்திஸ்ரீ கோவிரச கேசரி பன்மர்க்கு யாண்டு: 3-ஆவது பொய்கை நாட்டுக் கீழ் பிலாற்றுத் தேவதானம் திருநெய்த்தானத்து மகாதேவர் (S. 1. 1. Vol. V No. 580) ↑ கோப்பரகேசரிபன்மரான உடையார் ஸ்ரீ ராஜேந்திர சோழ தேவர்க்கியாண்டு 16-ஆவது ராஜேந்திர சிங்க வளநாட்டுப் பொய்கை நாட்டுத் திருமழபாடியுடைய மகாதேவர். ↑ கி. பி. 1009ல் இராசராசேச்சுரத்திருப்பணி முடிவுற்றதாதல் வேண்டும் - உலகநாதபிள்ளே. ↑ S. I. I. Vol. II Part II No. 38 & 41 ↑ தோரை - நெல்; (8 தோரை- 1 விரல்; 12 விரல்- 1 சாண்; 2 சாண் - 1 முழம்.) ↑ Solid image (உள் இடைவெளி இல்லாதது). ↑ 2 குன்றி - 1 மஞ்சாடி, 20 மஞ்சாடி - 1 கழஞ்சு. ↑ இது இராசேந்திர சிங்க வளநாட்டில் இருந்த ஊர்; தஞ்சை ராசராசேச்சுரத்துத் தேவதானங்களுள் ஒன்று. ↑ இதுவும் இராசராசேச்சுரமுடையார் தேவதானம்; நித்த வினோதவளநாட்டது. ↑ கடவுள் வடிவம் : ‘‘திருமேனி‘‘ என்றும், மக்கள் வடிவம் ‘பிரதிமம்‘ என்றும் வழங்கப்பெறும். ↑ தரா-எட்டுப் பாகம் செம்பும், ஐந்து பாகம் காரீயமும் கலந்த உலோகம். ↑ பெரிய பெருமாள்-இராசராசன் I ↑ S. I. I. Vol II, Part II, No 41. ↑ S. I. I. Voi. II No. 43. ↑ முதல் நரசிம்மவர்மன். ↑ ‘‘மன்னவர்க்குத் தண்டுபோய்‘‘ என்ற பெரிய புராணம்-சிறுத்தொண்ட புராணம் செ. 6 காண்க. ↑ S. I. I. Vol II Part II No 40. இவ்வாசிரியர் வெளியிட்ட ’இலக்கியக்கேணி’ என்ற நூலுள் ’தத்தா நமரே காண்’ என்ற கட்டுரை காண்க. சயங்கொண்டசோழப் பிரமாதிராசன் மணிமங்கலம் இது செங்கற்பட்டு மாவட்டம் சைதாப்பேட்டை வட்டத்தில் பல்லாவரத்துக்கு அருகில் இருக்கும் ஓர் ஊர். இவ்வூர் வரலாற்றுச் சிறப்புடையது ; பரமேஸ்வர வர்மனின் கூரம் செப்பேடுகளிலேயும் பல்லவ மல்லனாகிய இரண்டாம் நந்திவர்மன் காலத்திய உதயேந்திரச் செப்பேடுகளிலேயும் குறிக்கப்பட்டுள்ளது. சளுக்கிய அரசனாகிய இரண்டாம் புலிகேசியை முதலாம் நரசிம்மவர்மன் தோல்வியுறச் செய்த போர்க்களங்களுள் இஃதொன்று. இவ்வூரில் மூன்று திருமால் கோட்டங்களும் இரண்டு சிவன் திருக்கோயில்களும் உள்ளன. திருமால் கோயில்கள் ஸ்ரீ இராச கோபாலப் பெருமாள், வைகுண்டப் பெருமாள், கிருஷ்ணசாமி ஆகியோர்க்கும், சிவபெருமான் கோயில்கள் ஸ்ரீ தர்மேசுவரர், கயிலாச நாதர் ஆகியோர்க்கும் உரியவை. இராச கோபாலப் பெருமாள் கோயிலில் ஏறத்தாழப் பதினான்கு கல்வெட்டுக்கள் உள்ளன. அவையாவும் சோழர் காலத்தவை. இம் மணிமங்கலம் வட மொழியில் ரத்நாக்ரஹாரா என்றும் ’ரத்நக் கிராமா’ என்றும் குறிக்கப் பெற்றுளது. இராசகேசரி வர்மனுடைய கல்வெட்டில் இவ்வூர் ’லோக மாதேவிச் சதுர்வேதி மங்கலம்’ என்றும், முதலாம் இராசாதி ராசன், இரண்டாம் இராசேந்திரன், வீரராசேந்திரன் ஆகியோர் கல்வெட்டுக்களில் ’ராச சூளாமணிச் சதுர்வேதி மங்கலம்’ என்றும், முதலாம் குலோத்துங்கசோழன் காலமுதற் கொண்டு மூன்றாம் குலோத்துங்கன் காலம் முடியப் ’பாண்டியனை இருமடி வெங்கொண்ட சோழச் சதுர்வேதி மங்கலம்’ என்றும், மூன்றம் இராச ராசனுடைய 18-ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டுக்களில் கிராம சிகாமணிச் சதுர்வேதி மங்கலம் என்றும் குறிக்கப் பெற்றுளது. வீர ராசேந்திர சோழன் காலம் வரையில் இது செயங்கொண்ட சோழ மண்டலத்துச் செங்காட்டுக் கோட்டத்து மாகனூர் நாட்டு மணிமங்கலம் என்றும், குலோத்துங்க சோழன் காலத்திலிருந்து செயங் கொண்ட சோழ மண்டலத்துக் குலோத்துங்க சோழ வளநாட்டுக் குன்றத்தூர் நாட்டு மணிமங்கலம் என்றும், மூன்றாம் இராசராச சோழனுடைய கல்வெட்டில் புலியூர்க் கோட்டம் குலோத்துங்க சோழவளநாடு என்ற பெயருடையது என்றும் அறிய வருகிறது. இந்நாளைய இராச கோபாலப் பெருமாள், முன்னாளில் ஸ்ரீமத் துவராபதி என்றும், ஸ்ரீமத் துவராபுரி தேவர் என்றும், வண் துவராபதி என்றும் ஸ்ரீ காமக்கோடி விண்ணக ராழ்வார் என்றும், கல் வெட்டுக்களில் கூறப்பெற்றுள்ளார். பெற்றாேர் இம்மணிமங்கலத்தில் செயங்கொண்ட சோழப் பிரமாதிராசன் என்ற பெயருடைய சேனைத்தலைவன் ஒருவன் வாழ்ந்து வந்தான். இவன் இரண்டாம் இராசேந்திரனுடைய நான்காம் ஆட்சி யாண்டுக் கல்வெட்டிலும் (கி. பி. 1054), வீர ராசேந்திர சோழனுடைய ஐந்தாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டிலும் (கி. பி. 1068) குறிக்கப் பெற்றிருக்கிறான் . இவனுடைய தந்தை மஞ்சிப் பயனாரான ஜெயசிம்ம குலாந்தகப் பிரம்ம மாராயர் என்று சொல்லப்பட்டார் (S. I. I. Vol III Part I No. 30.) இவனுடைய தாய் காமக்கவ்வையள் என்ற பெயருடையவர் (s. 1. I. Vol III Part 1 No. 29). சேனாபதி வீர ராசேந்திரனுடைய கல்வெட்டில், ”இவ்வூர் ஜிவிதமுடைய சேனாபதிகள் ஜெயங்கொண்ட சோழப் பிரம்மாதிராஜர்” என்று இவன் குறிக்கப்பட்டுள்ளான். சயங்கொண்ட சோழன்[1] என்பது முதலாம் இராசாதிராசனுடைய சிறப்புப் பெயர்களுள்ளும் ஒன்று. இதனை - மனு நெறி நின்று அசுவமேதம் செய்து அரசு வீற்றிருந்த ஜெயங்கொண்ட சோழன் உயர்ந்த பெரும்புகழ்க் கோவிராச கேசரிபன் மரான உடையார் ஸ்ரீ ராஜாதி ராஜ தேவர் ’’ (s. I. I. Vol III Part I No. 28) என்ற இரண்டாம் இராசாதி ராச சோழனுடைய 29-ஆம் ஆட்சி யாண்டுக் கல்வெட்டினின்று அறியலாம் (கி. பி. 10.46). எனவே இப்பிரம்மாதி ராசன் செயங்கொண்ட சோழன் என்ற சிறப்புப் பெயர் பெற்ற இராசாதி ராசனுடைய சேனைத்தலைவர்களுள் ஒருவன் என்பதும், இராசா திராச சோழனுடைய போர்கள் சிலவற்றில் கலந்து கொண்டு சோழ வரசனுக்கு வாகை சூட்டியிருத்தல் வேண்டுமென்பதும், இவனுடைய பேராற்றலை மதித்து இவனுக்குச் செயங் கொண்ட சோழப் பிரம்மாதி ராசர் என்ற பட்டப் பெயரை இராசாதிராசன் அளித்திருத்தல் கூடும் என்பதும் அறிதற் பாலன. இவனுடைய தந்தையும் ”ஜெயசிம்ம குலாந்தகப் பிரம்ம மாராயர்” எனப்படுதலின், அவரும் மேலைச் சளுக்கியர்களோடு போர் செய்து சோழர்களுக்கு வெற்றிதந்த சேனாபதிகள் ஆவர். ஜெயசிம்ம குலாந்தக னென்பது ’மேலைச் சளுக்கியர் குலத்துக்குக் காலன் போன்றவன்’ என்று பொருள்படும். எனவே மேலேச்சளுக்கியர்களோடு இடையீடின்றிப் போருடற்றிய இராசாதிராசனுக்கு இச்சிறப்புப் பெயர் இருந்திருத்தல் கூடும். ஆகவே தந்தையும் மகனும் இராசாதிராசன் I காலத்துப் போர்களிலே படைத் தலைமை பூண்டு சோழர்களுக்கு வெற்றியளித்தவராவர். பிரம்மாதிராஜர் என்ற பட்டம் அளிக்கப் பெற்றமையின் இவர்கள் பிராமணர்கள் என்பது தெளிவு. சீவிதம் வீர ராரேந்திரனுடைய 5-ஆம் ஆட்சி யாண்டுக் கல்வெட்டில், இவ்வூர் ஜீவிதமுடைய சேனாபதிகள் ஜெயங்கொண்ட சோழப் பிரம்மாதிராஜர் தகப்பனார் மஞ்சிப் பயனரான ஜெயசிங்க குலாந்தகப் பிரம மாராயர் பக்கல் ஸ்வம் கொண்டு முன்பு இவர்க்கு இறையிலியாகக் கொடுத்து இவர் அனுபவித்து வருகிற நிலமாவது என்ற பகுதியினின்று சில செய்திகளை நாம் அறிகிறோம். அரசியல் அதிகாரிகளுக்கு அரசாங்கப் பொருள் நிலையத்திலிருந்து சம்பளம் கொடுக்கும் பழக்கம் முன்னாளில் இல்லை. அவரவர் தகுதிக்கேற்ப அன்னேர் வானாள் முழுதும் அனுபவித்துக் கொள்ளுமாறு சோழ மன்னர்களால் நிலம் அளிக்கப்பெற்றது. அங்ஙனம் அளிக்கப் பெற்ற நிலம் ஜீவிதம் எனப்படும். அன்னோர் மக்களுக்கு இதில் சிறிதும் உரிமையில்லை. அவர்கள் குறிப்பிடத்தக்க பெருந்தொண்டுகள் புரிந்து மிகு புகழ் பெற்றால் அன்னோர் நாளிலேயே ஜீவித வகையிலிருந்து மாற்றி அவர்கள் வழித்தோன்றல்களும் அனுபவித்துக் கொள்ளுமாறு கொடுத்து விடுவதுண்டு (திரு. பண்டாரத்தார்-சோழர் வரலாறு, பாகம் 111). எனவே, செயங் கொண்ட சோழப் பிரமாதி ராசனுக்கு அவன் செய்த பெருந்தொண்டுகளைப் பாராட்டி முதலாம் இராசாதி ராச சோழன் ஜீவிதமாக மணிமங்கலத்தில் நிலமளித்தனன். பிரமாதிராசன் தருமம் மேலே குறித்த கல்வெட்டுப் பகுதியினின்று மஞ்சிப் பயனாருக்கு மணிமங்கலத்தில் 4450 குழி நிலம் இருந்தது என்றும், மணிமங்கலம் சபையார் ஸ்வம் (பொருள்) கொண்டு இறையிலியாக்கினர் என்றும் அறிய வருகின்றது. வீர ராசேந்திரனின் 5-ஆம் ஆட்சியாண்டில் மனிமங்கல சபையார், சேனாபதிகள் ஜெயங் கொண்ட சோழப் பிரமாதிராஜர் ஸ்ரீமத்துவராபதி ஸ்ரீ காமக்கோடி விண்ணகராழ்வார்க்கு அந்நிலத்தை அர்ச்சனாமாக[2]மாகக் கொடுத்தனர். இதில் கமுகம் தோட்டம் 250 குழி என்றும், இதனை இவன் முன்னதாகவே விலைக்கு வாங்கி யிருந்தான் என்றும் தெரிய வருகிறது. காமக்கவ்வையள் தருமம் இவ்வம்மையார் செயங்கொண்ட சோழப் பிரமாதி ராசனின் தாயார். இவ்வம்மையாரிடம் இராச சூளா மணிச்சதுர்வேதி மங்கலத்தார் ஸ்வம் கொண்டு மணிமங்கலத்துத் தென்பிடாகை அமண்பாக்கத்து நிலத்தை இறையிலியாக்கி ஸ்ரீமத் துவராபதியான ஸ்ரீ காமக்கோடி விண்ணகராழ்வார்க்குக் கொடுத்தனர். இச்செய்தி இரண்டாம் இராசேந்திரனுடைய 4-ஆம் ஆட்சியாண்டுக்குரிய மணி மங்கலத்துச் சாசனத்தினின்று அறியப்பெறும். அமண்பாக்க மென்பது மணிமங்கலமாகிய இராசசூளாமணிச் சதுர்வேதி மங்கலத்துத் தென்பிடாகை; அதாவது அச்சதுர்வேதி மங்கலத்துத் தெற்குப்பகுதியிலிருந்த உட்கிடையூர் (Hamlet). அமண் பாக்கம் என்பது இந்நாளைய மணிமங்கலத்துக் கோயிலுக்குத் தெற்கிலுள்ள அம்மணம் பாக்கம் ஆகும். ஸ்வம் என்பது பொருள் என்று பொருள்படும். இது சொம்மு என்ற தெலுங்கச் சொல்லோடு தொடர்புடையதாகக் காணப் பெறும். (சொம்மு அணிகலன்). இச் சொல் ஸ்ரீகுமரகுருபர சுவாமிகளால் சொம் என்ற உருவில் இரண்டிடங்களில் எடுத்தாளப் படுகிறது. முத்துக்குமார சுவாமிப் பிள்ளைத் தமிழில் செங்கீரைப் பருவம், செய்யுள் 2 ‘‘கும்பாதி‘‘ என்று துவங்கும் பாடலிலும், காசிக் கலம்பகம் செய்யுள் -35 ‘‘அம்மனே’’ என்ற முதற் குறிப்புடைய பாடலிலும் இச் சொல் பயின்றுள்ளது. தெலுங்கரா ? முதல் இராசராச சோழன் காலமுதற் கொண்டு கீழைச் சளுக்கியரோடு சோழர்கள் மணமுறையால் பிணிக்கப்பட்டிருந்தனர் என்பது தெரிந்ததே. ஆகவே தெலுங்க நாட்டிலிருந்து போந்தவருட் சிலர் சோழர்களுக்குத் தானைத் தலைவர்களாகவும், மண்டலத் தலைவர்களாகவும் இருந்துள்ளனர். மஞ்சிப்பயன் என்ற ஒருவன் வீர ராசேந்திரனுடைய மேலைச் சளுக்கியப் போர்களில் 1065ல் நடந்த 4-ஆவது போரில் கலந்துகொண்ட சளுக்கிய தண்ட நாயகரில் ஒருவனாகக் காணப்படுகிறான். எனவே மஞ்சிப் பயன் என்ற பெயர் ஆந்திரர்களுக்குரிய பெயராகக் காணப்படுகிறது. மஞ்சிப் பயனாருடைய மனைவியின் பெயரில் கண்ட அக்க என்ற பகுதியும் தெலுங்கில் தமக்கை என்ற பொருளது. மஞ்சிப் பயனாரும் தொண்டை மண்டலத்தில் நிலையாக வாழ்ந்தவர். இந் நாளிலும் மணிமங்கலத்தைச் சார்ந்த சிற்றூர்கள் பலவற்றிலும் தெலுங்க மொழி பேசும் அந்தணர் குடும்பங்கள் பல (இக்கட்டுரையாசிரியர் குடும்பம் உட்பட) இருக்கின்றன. எனவே மஞ்சிப் பயனார் தெலுங்க நாட்டினின்று போந்து தொண்டை நாட்டில் வாழ்ந்தவர் என்பது தெளிவு. முடிப்புரை முதலாம் இராசாதிராசன் கொப்பத்துப் போர்க்களத்தில் கி. பி. 1051-இல் இறந்து போனான். இரண்டாம் இராசேந்திர சோழன் அக்கொப்பத்துப் போரில் வாகை சூடினான். அவன் தம்பியாகிப வீரராசேந்திரனும் மேலைச் சளுக்கியர்களை ’’ஐம்மடி வெந் கொண்டவனுக’’க் கூறப்படுகிறான். இவ்வாறு 11-ஆம் நூற்றாண்டின் முற் பகுதியில் நடைபெற்ற மேலைச் சளுக்கியப் போர்களில் செயங்கொண்ட சோழப் பிரமாதி ராசனும் அவன் தந்தை மஞ்சிப்பயனரான ஜெயசிம்ம குலாந்தகப்பிரம மாராயரும் பெரும் பங்கு கொண்டு வெற்றி பெற்றுச் சோழ அரசர்களது அன்புக்குரியராகிப் பேரும் புகழும் பெற்றுத் திகழ்ந்து கொடைக் குணம் மிக்குடையராய்த் திருமால் பக்தியில் சிறந்தவராய் வாழ்ந்தனர் என்பது கண் கூடு. * * * ↑ முதலாம் இராசராச சோழனுக்கும் இச்சிறப்புப் பெயர் உண்டு ↑ அர்ச்சனாபோகம் : கோயிலுக்கு அர்ச்சனே முதலியவற்றிற்காகக் கொடுக்கப்படும் இறை (வரி)யிலி நிலம். கருணாகரத் தொண்டைமான் முதற் குலோத்துங்க சோழன் தாய் வழியால் சோழர் பரம்பரையைச் சேர்ந்தவனும், தந்தை வழியால் கீழைச் சாளுக்கிய பரம்பரையைச் சேர்ந்தவனுமாகிய முதற் குலோத்துங்க சோழன் கி. பி. 1070 முதல் கி. பி. 1120 வரையிலும் அரசு வீற்றிருந்த சோழ மன்னனாவான். இவன் அரசனானதும் மேலைச் சளுக்கியர்களோடு ’துங்கபத்திரைச் செங்களத்திடைப்’ போர் செய்து வென்றான்; ’வடகடல் தென்கடல் படர்வது போலத் தன்பெருஞ் சேனையை ஏவிப்’ பாண்டியர் ஐவரை வென்றான் ; பின்னர்ச் சேரருடன் போர் நடத்தி, விழிஞத்திலும் காந்தளுர்ச் சாலையிலும் வெற்றிகொண்டு, கோட்டாற்றை யழித்து, அங்கு நிலைப்படையொன்று நிறுவினான் ; இங்ஙனம் சோழரது ஆட்சியின் தென்னாட்டெல்லை காட்டிப் பின்னர் வடக்கே தென் கலிங்கப் போரை நிகழ்த்தினான். இத் தென் கலிங்கப் போர், கி. பி. 1096 ல் நடைபெற்றது. இம் முதற் கலிங்கப் போர் இவன் மகனாகிய விக்கிரம சோழனால் நிகழ்த்தப் பெற்றது. பின்னர் கி. பி. 1112 - ல் நிகழ்த்தப் பெற்றதே வட கலிங்கப் போர். இப்போர்நிகழ்ச்சியைத் திருச்சிமாவட்டம் சீனிவாச நல்லூரில் உள்ள இவனது 42 - ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டும், (608 of 1904), தஞ்சை மாவட்டம் ஆலங்குடியிலுள்ள 45 - ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டும் (S. IV No. 445) அறிவிக்கின்றன. செயங்கொண்டார் என்னும் புலவர் பெருந்தகையார் குலோத்துங்க சோழன் மீது பாடிய ’கலிங்கத்துப் பரணி’ என்னும் நூல் இப்போரை விரித்துக் கூறுகின்றது. இப்போரை நடத்தி வாகை சூடிக் குலோத்துங்க சோழனுக்குப் புகழெய்துவித்தவன் ’கருணாகரத் தொண்டைமான்’ என்னும் படைத் தலைவனேயாவான். வட கலிங்கப் போர் ஒரு நாள் குலோத்துங்க சோழன் காஞ்சிமாநகரில், தன் அரண்மனையில், சித்திர மண்டபத்து இருந்தான். அப்பொழுது தென்னவர், வில்லவர், கூவகர், சாவகர், சேதிபர், யாதவர், கன்னடர், பல்லவர், கங்கர், கடாரர், சிங்களர், வங்களர் முதலிய பல மன்னர்கள் திறைப் பொருள் கொணர்ந்து, அளித்து நின்றனர். அரசன், ”திறை கொடாது ஒழிந்தோர் யாரேனும் உளரோ ?” என்று கேட்க, ”வடகலிங்க அரசன் இரண்டுவிசை திறை கொடு வருகிலன்” என மந்திரக் கணக்கர் பணிந்து புகன்றனர். மன்னன் முறுவல் கொண்டு ”வடகலிங்க வேந்தனைக் கொணர்மின்” என்று கூறினன். உடனே கருணாகரத் தொண்டைமான், ”எழு கலிங்கமவை எறிவன் ; எனக்கு விடையளிக்க” என்று வேண்டப், புலியுயர்த்தவன் விடைகொடுத்தனன். கருணாகரன் யானைமேல் ஏறிக் கொண்டான். கருணாகரனுடைய அண்ணனாகிய பல்லவர்க் கரசு என்பானும் யானை மேல் புறப்பட்டான். இவர்களுடன், வாணகோவரையனும், முடிகொண்ட சோழனும் குதிரை மேலும் யானை மேலும் முறையே ஏறிப் போர்க்குப் புறப்பட்டனர். பாலாறு, குசைத்தலை, பொன் முகரி, பழவாறு, கொல்லி, வடபெண்ணை, மண்ணாறு, குன்றி, பேராறு (கிருஷ்ணை), கோதாவரி, பம்பை, காயத்திரி, கோதமை என்னும் ஆறுகளைக் கடந்து, வடகலிங்க நாட்டை யாவரும் அடைந்தனர். கருணாகரனின் படைகள், சில நகரங்களில் எரி கொளுவிச் சில ஊர்களைச் சூறையாடின. இதனைக் கண்ணுற்ற வடகலிங்கக் குடிகள் தம்மரசனாகிய அனந்தபன்மனிடம் முறையிட்டனர். கலிங்க அரசனும் வெகுண்டு “கானரணும் மலையரணும், கடலரணும் சூழ் கிடந்த கலிங்கர் பூமி என்பதனை நன்கு அறியாது சோழரது சேனை வருகின்றது போலு’ மென்று தடம் புயங்கள் குலுங்க நக்கான். அது போழ்து உடனிருந்த எங்கராயன் என்னும் அமைச்சன் சோழப் படையின் வலிமையையும், கருணாகரன் தலைமை பூண்டு படை வருதலையும் கூறித் ’திறை செலுத்தலே முறை’ என்னும் உட்கருத்தோடு உரைத்தனன். அனந்தபன்மனோ அமைச்சனது உரையை இகழ்ந்து பேசித் தன் சேனைகளுக்குப் போர் தொடங்குமாறு ஆணையிட்டனன் : கலிங்கப் படைகளும் போர்க்குப் புறப்பட்டன. போர் கடுமையாக நடந்தது ! கருணாகரன் தன் யானையைப் போரில் முந்திச் செலுத்தினான். “புரைசை மதமலை ஆயிரம் கொடு பொருவம்” என்று அரசன் உரை செய்த ஆண்மை அழித்துக் கலிங்க மன்னனது படைகள் ஒதுங்கின. கலிங்கர் படையிலுள்ள யானை குதிரை முதலியவற்றைக் கருணாகரனது படை வீரர்கள் கைப்பற்றினர். அனந்த பன்மன் தலை மறைவானான். ’எழுகலிங்கர் தம் இறையையும் கொடு பெயர்தும்; அவன் இருந்துழி அறிக’ என்று கருணாகரன் பணிக்க, ஒற்றர்கள் கலிங்க வரசன் மறைந்திருந்த மலைக்குவட்டைக் கண்டறிந்து அதனை முற்றுகையிட்டனர். அவ்விடத்தைச் சுற்றி, வேலாலும் வில்லாலும் வேலி கோலி விடியும் வரை காத்திருந்து அனந்த பன்மனைச் சிறைப் பிடித்தனர். கலிங்க வீரர்கள் பலரும் மாறுவேடம் பூண்டுகொண்டு தப்பியோடினர். இங்ஙனம் கலிங்க மெறிந்து வாகை சூடியவனாகிய கருணாகரத் தொண்டைமான் கடகரியும் குவிதனமும் குலோத்துங்கன் திருமுன்னர் வைத்து வணங்கினன். இப்போர்ச் செய்திகள் யாவும், கலிங்கத்துப் பரணியில் காளிக்குக் கூளி கூறியது என்ற பகுதியில் விரிவாகக் கூறப்பட்டுள்ளன. பரணியில் தொண்டைமான் கருணாகரத் தொண்டைமான் வரலாற்றைக் கலிங்கத்துப் பரணி கொண்டு விளக்கமாகவும், திராட்சா ராமக் கல்வெட்டால் சுருக்கமாகவும் அறிய முடிகிறது. கலிங்கத்துப்பரணி இன்றேல் இவனுடற்றிய கலிங்கப் போரைப் பற்றி நன்கு தெரியாது போயிருக்கும். கருணாகரன் பல்லவர் குலத் தோன்றல். இதனைச் செயங் கொண்டார் கலிங்கத்துப் பரணியில் வண்டை வளம்பதி பாடீரே ... பல்லவர் தோன்றலைப் பாடீரே (தா. 534) என்று குறித்தார் ; அன்றியும் வண்டையர் அரசன் அரசர்கள் நாதன் மந்திரி உலகு புகழ் கருணாகரன் (11-132) என்றும், கலிங்கப் பரணி நம் காவலன்மேல் சூட்டிய தோன்றல் தொண்டையர் வேந்தன் (13-33) என்றும், வண்டைமன் தொண்டைமான் (11-16) என்றும், வண்டைநகர் அரசன் (11-30) என்றும், வண்டையர்க் கரசு (11-53) என்றும், கண்ணாகிய சோழன சக்கரமாம் கருணாகரன் (11-52) என்றும், வண்டையர் கோன் (11-160) என்றும், அபயன் மந்திரி முதல்வன் (11-149) என்றும், வண்டையர் கோன் தொண்டைமான் (11-160) என்றும் கருணாகரனைப் பலவாறு புகழ்ந்து கூறியுள்ளார். ஊர் செயங்கொண்டார் வண்டைமன் எனக் கருணாகரனைக் கூறியுள்ளமையால், இவன் வாழ்ந்த ஊர் ’வண்டை’ என்ற பெயருடையதாக இருத்தல் வேண்டுமென அறிகிறோம். வண்டை என்பதைத் தொண்டை நாட்டிலுள்ள ’வண்டலூர்’ என்று டாக்டர் ’உல்விடி’ போன்றவர்கள் கருதினர். (S. i. 1.1 P. 133)தொண்டை மண்டல சதகமும் இவனைத் தொண்டை நாட்டின்னாகவே எண்ணுகின்றது:- ”பண்டையோர் நாளையில் ஓர் ஏழ் கலிங்கப் பரணிகொண்டு செண்டையும் மேருவில் திட்டுவித்தான் கழற்செம் பியன் சேய் தொண்டைநன்னாடு புரக்கின்ற கோனத்தி தோன்ற லெங்கள் வண்டையர் கோனங் கருணாகரன் தொண்டை மண்டலமே?” (தொ. ம. ச. 92) தொண்டை நன்னாட்டில் அரசியல் தலைவனாக இருந்தமை பற்றி இவனைத் தொண்டை நாட்டினனாக இப்பாடல் கூறுகின்றது. எனினும் இவன் ஊராகிய வண்டை என்பது சோழவள நாட்டைச் சேர்ந்த ஓரூர் என்று காஞ்சிபுரக் கல்வெட்டால் அறியப் பெறும். அச்சாசனம் பின் வருமாறு :- “ஸ்வஸ்தி ஸ்ரீ கோஇராசகேசரி வன்மரான திரிபுவன சக்கரவர்த்திகள் ஸ்ரீ குலோத்துங்க சோழ தேவர்க்கு யாண்டு நாற்பத்து மூன்று-ஜயங்கொண்ட சோழ மண்டலத்து எயிற்கோட்டத்து எயில்நாட்டுத் திருவத்தியூராழ்வார்க்குச் சோழ மண்டலத்துக் குலோத்துங்கசோழ வளநாட்டுத் திருநறையூர் நாட்டு வண்டாழஞ்சேரி யுடையான் வேளான கருணாகரனான, தொண்டைமானார் தேவியார் அழகிய மணவாளனி மண்டையாழ்வார் வைத்த திருநுந்தா விளக்கு” (S. I. I. Vol. IV No 862). இக் கல்லெழுத்தில் ‘கருணாகரத் தொண்டைமான் சோழ மண்டலத்துக் குலோத்துங்க சோழவளநாட்டுத் திருநறையூர் நாட்டு வண்டாழஞ் சேரி உடையான்‘ என்று கூறப்படுதலால் இவனூர் சோழநாட்டு ‘வண்டாழஞ்சேரி‘யா யிருத்தல் வேண்டும் என அறியலாம். இந்நாளில் இவ்வூர் ‘வண்டுவாஞ்சேரி‘ என்ற பெயரில் கும்பகோணத்திலிருந்து குடவாசலுக்குச் செல்லும் பெரு வழியில், திருநறையூருக்கும் திருச்சேறைக்கும் இடையில் அமைந்துள்ளது. இவன் மனைவி மேலே காட்டிய கல்வெட்டிலிருந்து இவன் மனைவி அழகிய மணவாளனி மண்டையாழ்வார்‘ என்ற பெயருடையவர் என்று அறியலாம். முன்னாளில் பெருந்தரத்து அதிகாரிகள், அரசர்கள், அமைச்சர்கள் போன்றாேருடைய மகளிரை ‘ஆழ்வார்’ என்ற சிறப்புப் பெயரால் வழங்கும் மரபு பற்றி இவ்வம்மையாரும் ஆழ்வாரென்று வழங்கப் பெற்றார். இவ்வம்மையார் காஞ்சிபுரத்து வரதராசப் பெருமாள் திருக்கோயிலுக்குத் திருநுந்தா விளக்கு’ வைத்ததாக அறியப் படுகிறது. திராட்சாராமக் கல்வெட்டு கோதாவரி மாவட்டம் திராட்சாராமத்தில் காணப் பெறும் கல்வெட்டொன்று முதற் குலோத்துங்க சோழனின் 33-ஆம் ஆட்சியாண்டிற்குரியது (349 of 1893; S. 1. 1. IV 1239). இக் கல்வெட்டால் கருணாகரனின் தந்தை பெயர் சீரிளங்கோ என்றும், திருநறையூர் நாட்டு மண்டலஞ்சேரி என்ற ஊரவன் என்றும், கருணாகரனின் இயற் பெயர் ‘திருவரங்கன்’ என்றும், இவன் ’வண்டுவராஜன்’ என்று கூறப் பெறுவானென்றும், இவன் சத்வைஷ்ணவன் என்றும் அறியலாம். மேலும் இக்கல்வெட்டினின்று கருணாகரன் ஆலவேலி என்ற ஊரில் திருமால் கோயில் கட்டினானென்றும், அதற்கு நிலதானம் செய்தானென்றும், திராட்சாராமக் கோயிலுக்குப் பல அறங்கள் செய்தானென்றும் அறிய வருகின்றது. இவனது சமயம் திராட்சாராமக் கல்வெட்டில் இவன் சத்வைஷ்ணவன் என்று கூறப்பட்டிருப்பதாலும், ஆலவேலியில் திருமாலுக்குக் கோயிலெடுப்பித்து நிபந்தம் விட்டிருப்பதாலும், இவனது மனைவி காஞ்சிபுரம் திரு அத்தியூ ராழ்வார்க்குத் திருநுந்தா விளக்கு நிபந்தம் அளித்துள்ளமையாலும், இவனது திருமால் பக்தி நன்கு விளங்கும். இவனது பெயர் ஆகிய ’கருணாகரன்’ என்பது, இராமன் திருநாமங்களி லொன்று. கலிங்கத்துப் பரணி யாசிரியரும் இராமப் பெயரோடு இவன் பெயரையும் வைத்து, இணைத்து ஒரு தாழிசையில் பின்வருமாறு கூறியுள்ளார்:- ’’இலங்கை எறிந்த கருணாகரன்றன் ⁠இகல்வெஞ் சிலையின் வலிகேட்பீர் கலிங்கம் எறிந்த கருணாகரன்றன் ⁠களப்போர் பாடத் திறமினோ !’’ (2- 44) இதனானும் இவன் வைணவச் சார்பினனென்று ஊகித்தறிதல் கூடும். இவன் தமையன் தொண்டைமானுக்குத் தமையன் ஒருவன் இருந்தான். தொண்டைமான் கலிங்கத்தின்மேல் படையெடுத்துச் சென்றபோது இவன் தமையனும் துணைப்படைத் தலைவனாகச் சென்றானென்பது பின்வரும் கலிங்கத்துப் பரணித் தாழிசையாலறியலாம் :- “தொண்டையர்க் கரசு முன்வரும் சுரவி துங்க வெள் விடை உயர்த்தகோன் வண்டையர்க் கரசு பல்லவர்க் கரசு> மால் களிற்றின்மிசை கொள்ளவே.’’ (11-53) இத்தாழிசையிலிருந்து இவன் தமையன் ’பல்லவர்க்கரசு’ என்ற பெயருடையவனென்றும், மிக்க வள்ளன்மை உடையவன் என்றும் அறிகிறோம். தொண்டையர்க்கரசு முன்வரும் சுரவி’ என்பது இதனை வலியுறுத்தும். (சுரவி. காமதேனு.) இப் பல்லவர்க்கரசு திருப்பனந்தாள் கல்லெழுத்தில் கண்ட ’’இராசராச மூவேந்த வேளார் சேனபதிப் பல்லவ அரசர்’’ ஆக இருக்கக் கூடும் (46 of 1914) என்று திரு. மு. இராகவ ஐயங்காரவர்கள் கருதுவர் (சாசனத் தமிழ்க்கவி சரிதம் பக்கம் 57). பல்லவர்க்கரசு என்று சொல்லப் பட்டமையின் சோழ நாட்டுக்கு அடங்கியிருந்த சோழ அரசுக்குட்பட்ட பல்லவநாட்டுத் தலைவனாக இவன் இருந்திருத்தல் கூடும். சோழனசக்கரம் கலிங்கப் போருக்குக் கருணாகரன் புறப்பட்ட செய்தியைக் கூறவந்த செயங்கொண்டார், பின்வரும் தாழிசையில், கருணாகரன் சேனை முழுமைக்கும் கண் போன்றவன்’ என்றும், ’சக்கரம் போன்றவன்’ என்றும் கூறியுள்ளார். அத்தாழிசை பின்வருமாறு :- ‘’தண்ணா ரின்மலர்த் திரள் தோள் அபயன் தான் ஏவிய சேனை தன்க்(கு) அடையக் கண்ணாகிய சோழன சக்கரமாம் கருணாகரன் வாரண மேற்கொளவே.‘’ (1 1-52) திருமால் தம்பகைவர்மேல் சக்கரத்தைச் செலுத்துவது போலத் திருமாலின் அம்சமாகிய சோழனும், கலிங்கப் பகையை அழிக்கக் கருணாகரனாகிய சக்கரத்தை ஏவினானென்பது இத்தாழிசையின் கருத்தாம். வடகலிங்க வேந்தன் அனந்த பன்மனுக்கு அவன் மந்திரி எங்கராயன் அறிவுரை கூறிய காலத்தில், ‘‘கண்டு காணுன் புயவலி நீயுமத் தண்டு கொண்டவன் சக்கரம் வந்ததே‘‘ என்னுமிடத்தும் கருணாகரனைச் சோழவேந்தனது சக்கரமாக உருவகித்துள்ளார். தஞ்சை மாவட்டம் மாயூரத்துக்கு அருகில் ‘சோழ சக்கர நல்லுர்’ என்ற வூர் இருக்கிறது. அஃது கருணாகரத் தொண்டைமானின் சிறப்புப் பெயராகிய ‘சோழன சக்கரம்’ என்பதை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டிருத்தல் கூடும். உடன் சென்ற பிற தானைத் தலைவர்கள் வடகலிங்கப் போருக்குச் சென்ற தானைத் தலைவர்களுள் கருணாகரனது தமையனாகிய ‘பல்லவர்க் கரசு‘ என்பானும் ஒருவன் என்பது முன்னர்க் கூறப்பட்டது. ‘‘வாசி கொண்டரசர் வாரணங் கவர வாண கோவரையன் வாண்முகத் தூசி கொண்டு முடிகொண்ட சோழன் ஒரு சூழி வேழமிசை கொள்ளவே” (11-54) என்ற வித்தாழிசையால் ‘வாணகோவரையன்‘ என்பானும், ‘முடிகொண்ட சோழன்‘ என்பானும், துணைப்படைத் தலைவராகச் சென்றனர் என்பது புலப்படும். வாணகோவரையன் என்பான் ‘சுத்த மல்லன் உத்தம சோழனாகிய லங்கேசுவரன்‘ எனக் கல்வெட்டுக்களில் குறிக்கப் பெறுகிறான். இவன் திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள மேலப் பழுவூரில் செங்கற் கோயிலைக் கற்றளியாக அமைத்தான்; அதற்குக் குலோத்துங்க சோழேச்சுரம் எனப் பெயரிட்டு இறையிலி நிலங்கள் வழங்கினான் (389 of 1924, 392 of 1924). இதனால் இவனுடைய பக்தியும், அரசன்பால் கொண்ட பேரன்பும் தெளிவாக அறியப்படும். இவ்வாணகோ வரையனை விக்கிரம சோழனுலாப் பின்வருமாறு கூறும் :- ‘‘புல்லாத மன்னர் புலாலுடம்பைப் பேய்வாங்க ஒல்லாத கூற்றம் உயிர்வாங்கப் - புல்லார்வந்(து) ஆங்கு மடமகளிர் தத்தம் இழைவாங்க வாங்கும் வரிசிலைக்கை வாணனும்.‘‘ (விக். 151-154) முடிகொண்ட சோழன் என்பான் தென்னார்க்காடு வட்டம் சித்தலிங்க மடம் கல்வெட்டொன்றில் குறிக்கப் பெறுகிறான் இது விக்கிரம சோழனுடைய நான்காவது ஆட்சியாண்டுக் கல்வெட்டாகும் (383 of 1909). இதினின்று ஆடவல்லான் வாசுதேவனான முடி கொண்ட சோழ மூவேந்த வேளான்‘ எனப்படுபவன் ஓய்மா நாட்டுப் பண்டித கோஷ்டிச் சதுர்வேதி மங்கலமான முன்னூர் என்ற வூரவன் என்றும், ஆடவல்லான் வாசுதேவன் என்ற இயற்பெய ருடையவன் என்றும் அறியப்பெறும் (1. M. P. - S. A. - 786) பிற போர்கள் முதற் குலோத்துங்கனது 33-ஆம் ஆட்சி ஆண்டிற்குரிய திராட்சா ராமக் கல்வெட்டினின்று இவன் செய்த போர்களைப் பற்றி அறிய முடிகிறது. அதில் கலிங்கத்தை அழித்ததும், கங்கனைப் போரில் வென்றதும், கோசலர் படையின் உதவியால் தேவேந்திர வர்மன் என்பவனையும் பிறரையும் அடக்கியமையும், ஒட்டர தேசத்து எல்லையில் இராசேந்திர சோழனது வெற்றித் தூணை நிறுவியமையும் கூறப்பட்டுள்ளன. இவற்றைப் பற்றிய விளக்கங்கள் நன்கு தெரியவில்லை. எனினும் கலிங்கப் போருக்குமுன் பல போர்கள் நிகழ்த்திக் கருணாகரத் தொண்டைமான் சிறந்து விளங்கினான் என்பதை அறிவிக்க இக் கல்வெட்டொன்றே சாலும். விக்கிர சோழனாட்சியில் முதற் குலோத்துங்கனுக்குப்பின் அரசனான விக்கிரம சோழனாட்சியிலும் கருணாகரத் தொண்டைமான் வாழ்ந்திருந்தா னென்பது ஒட்டக் கூத்தர் பாடிய விக்கிரம சோழனுலாவினா லறியப் பெறுகின்றது. அவ்வரிகள் பின்வருமாறு:- ⁠⁠⁠⁠⁠⁠-சேட்புலத்துத் தென்னரும் மாளுவரும் சிங்களரும் கொங்கணத்து மன்னரும் தோற்க மலைநாடர் - முன்னம் குலையப் பொருதொருநாட் கொண்ட பரணி மலையத் தருந்தொண்டை மானும் (விக். 134 - 137 விக்கிரம சோழனாட்சியில் இவன் அரசாங்க அலுவல்களிலிருந்து நீங்கி ஓய்வுபெற்ற நிலையிலிருந்திருக்கக்கூடும். இவனைப் பற்றிய பிற நூற் பாடல்கள் கலிங்கத்துப் பரணிப் பிரதிகளிலும் தண்டியலங்கார மேற்கோள்களிலும் கருணாகரனைப் பற்றியும், கலிங்கப் போரைப் பற்றியும் சில பாடல்கள் காணப்படுகின்றன. அவை பின்வருமாறு :- “ஒருவர் ஒருவர் மேல் வீழ்ந்து வடநாடர் அருவர் அருவரென அஞ்சி - வெருவந்து தீத்தித்தீ யென்றயர்வர் சென்னி படைவீரர் போர்க் கலிங்க மீதெழுந்த போது.”* இது தண்டியலங்காரத்தில் சொற் பொருட் பின்வரு நிலையணிக்கு மேற்கோள். “கரடத்தான் மாரியும் கண்ணால் வெயிலும் திரைவயிரக் கோட்டான் நிலவும் - சொரியுமால் நீளார்த் தொடையதுலன் நேரார் கலிங்கத்து வாளாற் கவர்ந்த வளம்.‘’ இது தண்டி-கருவிக் காரக வேதுவணிக்கு மேற்கோள். “கோட்டம் திருப்புருவம் கொள்ளா அவர்செங்கோல் கோட்டம் புரிந்த கொடைச்சென்னி - நாட்டம் சிவந்தன வில்லை திருந்தார் கலிங்கம் சிவந்தன. செந்தித் தெற.‘’ இது தண்டி - குணக்குறை விசேட அணிக்கு மேற்கோள் ; வீர சோழியம் - அலங்காரப் படலத்தில் இதுவே அணிக்கு மேற்கோளாகவும் காட்டப்பட்டுள்ளது. பின்வரும் பாடல்களிரண்டும் கலிங்கத்துப் பரணி கையெழுத்துப் பிரதிகளில் கண்டனவாகக் கூறப்படுகின்றன :- ’தடங்குலவு நாண்மாலைத் தாமத்தன் கையில் விடங்குலவு வெள்வாள் விதிர்ப்ப - நடுங்கியதே கோண்மேவு பாம்பின் கொடுமுடிய தல்லவோ வாண்மே வியகலிங்கர் மண். ’’ ’’சரநிரைத் தாலன்ன தண்பனி ⁠தூங்கத் தலைமிசைச்செங் கர நிரைத் தாரையும் காண்பன் கொலோ ⁠கலிங்கத்து வெம்போர் பொர நிரைத்தார் விட்ட வேழமெல்லாம் ⁠பொன்னி நாட்டளவும் வர நிரைத் தான்தொண்டை மான்வண்டை மாநகர் மன்னவனே. ’’ கருணாகரன் செய்த கலிங்கப் போரைக் குறித்த கல்வெட்டுப் பகுதி பின்வருமாறு : ’’வடதிசை வேங்கை மண்டலம் கடந்து ஆங்கவர் கலிங்க மேழும் கனலெரி பரப்ப விலங்கல் போல விளங்கிய வேந்தர் விட்டவெங் களிற்றொடு பட்டுமுன் புரளப் பொருகோ பத்தொடு போர்முக மதிர வருகோ மட்டையன் மாதவன் எதிர்பட எங்க ராயன் இகலவ ரேச்சணன் மாப்பிறளா மதகரி யிராசனன் தண்டுபதி யாகிய தலைச்சே னாபதி மண்டலிக தாமய னெண்மர்த் திசைமுகன் போத்தயன் கேத்தணன் செருச்சே னாபதி என்றிவ ரனைவரும் வெற்றவே ழத்தொடு பட்டு மற்றவர் கருந்தலை யொடுவெண் ணினங்கழு கோடு பருந்தலைத் தெங்கணும் பரப்ப உயர்த்துக் கருங்கட லடையத் தராதலந் திறந்து கலிங்க மேழுங் கைக்கொண்டு.” முடிப்புரை இராசேந்திர சோழன் கங்கை கொண்ட சோழனானமைக்கு அவனுடைய படைத்தலைவனே காரணன் ஆவான் ஆனால், அப்படைத் தலைவன் யார் என்பதை இலக்கியம் அல்லது கல்வெட்டுச் சான்றுகளால் அறுதியிட்டுக் கூறமுடியவில்லை. அவனுடைய தலைமைச் சேனதிபதி, விக்கிரம சோழச் சோழிய வரையனான இராசராசன் என்பான் கங்கைப் படையெடுப்பில் தலைமை வகித்து நடத்தி யிருக்கலாம் என்று ஆய்வாளர் கூறுவர். முதற் குலோத்துங்க சோழன் காலத்தில் நிகழ்ந்த கலிங்கப் படையெடுப்பில் வெற்றிகொண்ட கருணாகரத் தொண்டைமான் பெயரும் கல்வெட்டுக்களில் தெளிவாக இடம் பெறவில்லை. என்றாலும் அவன் புகழை எஞ்ஞான்றும் நிலைபெறச் செய்யக் கலிங்கத்துப் பரணி யொன்றே சாலும். பரணி பாடிய பாவலனையும், பரணி கொண்ட காவலனையும், கலிங்கப் பரணி காவலனுக்குச் சூட்டிய தோன்றலாகிய தொண்டைமானையும் போற்று வோமாக ! காட்டிய வேழ அணிவாரிக் கலிங்கப் பரணி நம் காவலன்மேல் சூட்டிய தோன்றலைப் பாடீரே ! தொண்டையர் வேந்தனைப் பாடீரே ! (தா. 535 * * * நெற்குன்றங் கிழார் முதற் குலோத்துங்கன் காலத்துப் புலவர்கள் முதற்குலோத்துங்க சோழன் காலத்தில் ஆசிரியர் செயங்கொண்டார் வாழ்ந்து கலிங்கத்துப் பரணி பாடியமை யாவரும் அறிந்ததே. இச் செயங்கொண்டார் காலத்தில் கவிகுமுத சந்திர பண்டிதராகிய திருநாராயண பட்டர், நெற்குன்றங்கிழார் களப்பாள ராயர், வீரைப் பரசமய கோளரிமாமுனி, மருதூருடையான் குன்றன் திருச்சிற்றம்பல முடையான் முதலிய புலவர்கள் வாழ்ந்தனரென்று வரலாற்று ஆசிரியர்கள் பகர்வர். அன்னோருள் நெற்குன்றங்கிழார் களப்பாளராயர் முதற் குலோத்துங்கன் காலத்திலும், விக்கிரம சோழன் காலத்தில் சில ஆண்டுகளும் வாழ்ந்தவராகக் கருதப் பெறுகிறார். அரசியல் அலுவலர் நெற்குன்றங்கிழார் தொண்டை மண்டலத்தில் புலியூர்க்கோட்டத்துப் போரூர் நாட்டிலுள்ள நெற்குன்றம் என்ற ஊரில் வாழ்ந்த ஓர் அரசியல் தலைவராவர். இவருக்குக் கருவுணாயகர் என்பது இயற்பெயர். நெற் குன்றம் என்ற வூரைக் காணியாகக் கொண்டமையின் நெற்குன்றங் கிழார் என வழங்கப் பெற்றார் ; வேளாண் மரபினராதலின் களப்பாளராயர் எனப் பெற்றார். புலவர்களை வாழ்வித்தமை ஒட்டக்கூத்தர் இவருடைய முதுமைப் பருவத்தில் வாழ்ந்தவராகத் தெரியவருகிறது. ஒட்டக் கூத்தர் புலவர்கள் பலராகப் பெருகிவந்ததைச் சிறிதும் பொறுக்காது செய்த செயலை, “இரண்டொன்றா முடிந்துதலை இறங்கப் போட்டு வெட்டுதற்கோ கவிஒட்டக் கூத்த னில்லை” என்ற படிக்காசுப் புலவர் பாடற்பகுதி வலியுறுத்தும். கூத்தரது இச்செயலைத் தடுக்கவேண்டுமென்று நெற் குன்றங்கிழார் நினைத்தார் ; அதனால் ஒட்டக் கூத்தரின் முன்நின்று பின்வரும் பாடலைப் பாடியதாகத் தமிழ் நாவலர் சரிதை கூறும் :- “கோக்கண்டு மன்னர் குறைகடற் புக்கிலர் கோகனகப் பூக்கண்டு கொட்டியும் பூவா தொழிந்தில; பூவில் விண்ணோர் காக்கண்ட செங்கைக் கவிச்சக்ர வர்த்திநின் கட்டுரையாம் பாக்கண் டொழிவர்க ளோதமிழ் பாடிய பாவலரே.” இப்பாடலின்கீழ் “கவிஞரை வெட்டவேண்டா என்று நெற்குன்றவான முதலியார் பாடியது” என்ற ஒரு குறிப்பும் அந்நூலுள் காணப்படுகிறது. நம்பிகாளி இவர் காலத்தில் நம்பிகாளி என்ற ஒரு புலவர் இருந்தார். அவரைப் பற்றித் தக்கயாகப் பரணி உரையாசிரியரும் குறித்திருக்கிறார். தக்கயாகப் பரணி 457-ஆம் தாழிசை உரையில், “உலகக் கவிப்பு என்னும் பெயர் கவிச் சக்ரவர்த்திகள் தாம்படைத்த திரிசொல்லென உணர்க. பண்டு நம்பிகாளியார் கடற்குப் பெயர் மழு வென்றிட்டு எறிதலும், கூர்த்தலும், திரைத்தலும் உடைய தென்றார்; அதுபோலும் இதுவென்க“ என்றமை காண்க. நம்பிகாளியார் அந்நாளில் வாழ்ந்த ஒரு சிறந்த புலவர். ஒட்டக்கூத்தர் ஆக்கிய சொல்லிற்கு நம்பிகாளி ஆக்கிய சொல்லைத் தக்கயாகப் பரணி உரையாசிரியர் மேற்கோளாகக் காட்டியிருக்கின்றமையின் நம்பிகாளியும் கூத்தரும் ஒருங்கு இணைத்துக் கூறப்பெறும் அரும் புலவர்களென்பது அறியப்பெறும். “கம்பனென்றும் கும்பனென்றும்“ என்ற தொடக்க முடைய தனிப் பாடலில் “காளி ஒட்டக் கூத்தன்“ என்று இவ்விருவரும் ஒருங்கு கூறப்பெற்றமை காண்க. நம்பிகாளி ஒரு சமயம் நெற்குன்ற வாணரைப் பாடிப் பரிசில் பெறச்சென்றார். நெற்குன்ற வாணர் வெளியூர்க்குச் சென்றிருந்தார். அவர்தாதி நம்பிகாளியாரின் புலமையை அறிந்து சிறப்புக்களைச் செய்தாள். நெற்குன்ற வாணர் திரும்பியதும் இச்செய்தியை அறிந்து அகமிக மகிழ்ந்து பின்னும் அப்புலவர்க்குப் பல பரிசில்களை வழங்கினர். இதனைப், “பன்னுந் தமிழ்க்கவன் மாமனைத் தாதி பரிசளிப்ப முன்நம்பி காளிக்கு நெற்குன்ற வாண முதலிஎன்போன் பின்னும் சிலபல பொன்னும் கொடுத்துத்தன் பேர்நிறுத்த மன்னும் தமிழு முரைத்தா னவன்தொண்டை மண்டலமே“ என்ற தொண்டை மண்டல சதகப் பாடலால் அறியலாம். நம்பிகாளியார் வல்லை என்னும் ஊரினர் ; யாதவ குலத்தினர். நெற்குன்ற வாணர் இந்நம்பி காளியிடம் மிகவும் ஈடுபாடு உடையராயினார். இவற்றைக், “கற்கும் கவிவல்லை யாதவர் கோன் நம்பி காளிக்கியாம் விற்கும் பரிசனம் ஆகிவிட் டோம்வட வேங்கடமும் பொற்குன்ற மும்புகழ்க் கங்கா நதியும் பொதியமும்போல் நெற்குன்ற மும்நம் மரபும்எந் நாளும் நிலை நிற்கவே“ என்ற பாடல் பகரும். மேற்கூறப்பட்ட செய்திகளிலிருந்து நெற்குன்ற வாணரது செந்தமிழ்ப் புலமையும் பெருங்கொடைத் திறனும் பெறப்படும். திருப்புகலூர்க் கல்வெட்டு நெற்குன்றவாணர் திருப்புகலூரிலும் வாழ்ந்து வந்தவராக அறியப் பெறுகிறார். சோழ நாட்டுத் திருப்புகலூர்த் திருக்கோயிலில் கண்ட முதற் குலோத்துங்க சோழனது 49-ஆவது ஆட்சியாண்டிற்குரிய கல்வெட்டொன்று, “ஸ்ரீ புகலூர்த் தேவர் மத்தியான்னம் அமுது செய்தருளும் போது...நித்தம் பன்னிரண்டு பிராமணர் உண்பதாக ஜயங்கொண்ட சோழ மண்டலத்துப் புலியூர்க் கோட்டத்துப் பேரூர் நாட்டு நெற்குன்றத்து நெற்குன்றங் கிழார் அரையன் கருவுணாயகரான களப்பாள ராஜர் செய்வித்த சாலைக்கு ... ... சாலைப் புறமாக இறையிலி செய்து என்றுள்ளது.“[1] இக் கல்வெட்டுப் பகுதியிலிருந்து இவர் ஜயங்கொண்ட சோழ மண்டலத்து நெற்குன்றம் என்ற ஊரவர் என்றும், அரையன் என்ற சிறப்புப் பெயர் உடையவர் என்றும், கருவுணாயகர் என்பது இவருடைய இயற்பெயரென்றும் அறியப்பெறும். இந் நெற்குன்றங் கிழார் திருப்புகலூர்ச் சிவபெருமானிடத்தில் மிகவும் பக்தி கொண்டிருந்தமையின் அவ்வூரில் ஓர் உணவுச்சாலை அமைத்துச் சாலைப்புறமாக இறையிலி நிலமும் அளித்தார். திருப்புகலூர் இறைவனிடத்தில் இவர்கொண்ட பக்தி இவரியற்றிய திருப்புகலூர் அந்தாதி என்ற நூலாலும் உறுதி யெய்தும். செவிவழிச் செய்தி நெற்குன்ற வாணர் திருப்புகலூர் அந்தாதி பாடியமை பற்றி ஒரு கதை வழங்குகின்றது. அக்கதை வருமாறு : ஒரு சமயம் நெற்குன்றங் கிழாரால், பஞ்சக் கொடுமையினால் அரசனுக்குச் செலுத்த வேண்டிய வரியைச் செலுத்த முடியவில்லை. ஆகவே தம் மனத்துக்கினிய தலமாகிய திருப்புகலூர்க்குச் சென்றார். வரி செலுத்தாமையின் நெற்குன்றங் கிழாரைச் சிறைப்படுத்தற் பொருட்டு அரச னேவலரும் அங்குற்றனர் ; அரசனது ஆணையையும் அறைந்தனர். அது கேட்ட நெற் குன்றங் கிழார், திருப்புகலூர் இறைவனைக் கண்டு கும்பிட்டு வருவதாகக் கூறித் திருவதிகைக் கோயிலைச் சூழ்ந்துள்ள பொய்கையில் நீராடி விநாயகப் பெருமான் கோயிலே அடைந்து பின்வரும் பாடலைப் பாடினர் :- “உரை செய் மறைக்கும் தலைதெரி யாவொரு கொம்பை யென்றே பரசு மலர்க்குப் பெருநிழ லாக்கும் பழனமெல்லாம் திரைசெய் கடற்றுரைச் சங்கமு லாவும் திருப்புகலூர் அரசினிடத்து மகிழ்வஞ்சி யின்றவோர் அத்திநின்றே.” அவ்வமயம் விநாயகப் பெருமானை வணங்க வந்த ஒரு மாது இப்பாடலக் கேட்டு மனமகிழ்ந்து, “இச்செய்யுளை ஒரு அந்தாதிக்குக் காப்பாக அமைத்தல் சாலவும் நன்று” என்றனள். நெற்குன்ற வாணர், “அங்ஙனமே ஆகுக ; அந்தாதிக்குக் காப்பாக்கினால் அரசிறைக்குப் பொருளாதல் யாங்ஙனம் ?” என்றார். அம்மாது, நெற்குன்றங் கிழார் கூறியதன் பொருளை அறியாது திகைக்க, அரச ஏவலர் செய்தியைக் கூறினர். அவள் நெற்குன்ற வாணர் செலுத்த வேண்டிய இறைப் பணத்தை முழுவதும் செலுத்தினாள். நெற்குன்ற வாணரும் மேலே காட்டிய பாடலையே காப்பாகக் கொண்டு திருப்புகலூர் அந்தாதி என்ற நூல் பாடி முடித்தார். திருப்புகலூரந்தாதி திருப்புகலூர் அந்தாதியைப் பாடியவர் நெற்குன்ற வாணர் என்பதை அந்நூலிறுதியில் கண்ட ”களப்பாளன் நெற்குன்ற வாணன் அந்தாதி கலித்துறையே” என்ற தொடரால் அறியலாம். இந்நூல் சோழ நாட்டுத் திருப்புகலூர்ச் சிவபெருமான் பேரில் அந்தாதித் தொடையில் பாடப்பட்ட நூறு கட்டளைக் கலித்துறைகளை உடையது ; சொல் நயம், பொருள் நயங்களுடையது ; திரிபு என்னும் சொல்லணி சிறப்பாகப் பொருந்தியது. சுந்தரர் ”தம்மையே புகழ்ந்து” என்று திருப்புகலூரில் பாடிய பாட்டின் பொருளைச் ”செல்வர் பால் கவி நூறு உரைத்துத் தாக்கு அமருக்கு முருகா அருளென் பர் ... ... புகலூரைப் போற்றி உய்யார்” என்று இரண்டாவது பாடலில் குறித்துள்ளார். நான்காவது பாட்டில் இறைவன் பிட்டுக்கு மண் சுமந்த வரலாற்றைத் ”தென்னன் முன்னே மாவடி வந்திக்கு மண் சுமந்தோர்” என்றமைத்தார். இறைவன் ”கொங்கு தேர் வாழ்க்கை” என்ற பாடலைப் பாடிய செய்தியை 4-ஆம் பாட்டில் ... , ”உரைத்த அப்பாவை முற்சங்கத்தில் ஏறி நின்று ஒதும் ஐயர்” என்று குறிப்பிட்டுள்ளார். 50-ஆவது பாட்டில் திருப்பழனம், திருவையாறு, திருநள்ளாறு, திருவெண் காடு, திருவிடை மருதூர் என்ற தலங்களைக் குறிப்பிட்டிருக்கிறார். இறைவன் சுந்தரர் பெருட்டுப் பரவையாரிடத்தில் தூது சென்றமையை ”அன்னநடைப் பரவைக்குத் திருத்தூது சென்ற நளினத்திலே” என்று குறித்தார். இறைவனை வணங்குவதற்குத் திருமூலர் ”யாவர்க்குமாம் இறைவர்க் கொரு பச்சிலை” என்றார் ; இதனை நினைப்பிக்கும் முறையில் 83-ஆம் பாட்டில், “புற்றிலை யாபுக லூரிலை யாவெனப் போற்றியின்றே சற்றிலை யாயினும் தூவுநெஞ் சேபினைச் சாவிலேயே” என்றார். “படைக்கலமாக உன் நாமத்து எழுத்தஞ்சும் என் நாவிற் கொண்டேன்” என்ற அப்பர் வாக்கை, “அடைக்கலம் நானுன் அடித்தா மரையினைக்(கு) ஐந்தெழுத்தாம் படைக்கலம் நாவிலுண்(டு) அஞ்சேன் எவர்க்கும்...” என்ற வரிகள் நினைவூட்டும். விக்கிரம சோழன் ஆட்சியில் சிவ பக்திச் செல்வராகவும், பெரும் புலவராகவும், அருங்கொடை வள்ளலாகவும், புலவர்களை ஊக்கிக் காத்தவராகவும் விளங்கிய நெற்குன்றங் கிழார், முதலாம் குலோத்துங்க சோழனுடைய மகனாகிய விக்கிரம சோழன் ஆட்சிக் காலத்திலும் திருமந்திர ஓலை நாயகமாக விளங்கினர். இதனை விக்கிரம சோழனது 11-ஆம் ஆட்சியாண்டுக்குரிய தஞ்சை மாவட்டம் ஆலங்குடிச் சாசனத்தினின்று அறியலாம். “ ...--- திருவாய் மொழிந்தருளினாரென்று திருமந்திர ஓலை நாயகம் செயங்கொண்ட சோழ மண்டலத்துப் புலியூர்க் கோட்டமான குலோத்துங்க சோழ வளநாட்டு பெ...நாட்டு நெற்குன்றத்து நெற்குன்றங் கிழான் அரையன் கருவு... ...” என்பது அச்சானப் பகுதி (195 of 1894 ; S. I. I. Vol. V 458) இதனால் விக்கிரம சோழனது ஆட்சியின் முற்பகுதியிலும் நெற்குன்றங்கிழார் சோழ நாட்டில் இருந்தமை தெளிவு. * * * ↑ சாசனத் தமிழ்க்கவி சரிதம், பக்கம் 64.  மணவில் கூத்தன்[1] ஊரும் பேரும் மணவில் கூத்தன் என்பான் தொண்டை மண்டலத்து மணவில் என்னும் ஊரினன்; "மட்டார் பொழில் மணவில் வாழ் கூத்தன்" என்பது சாசனப் பாடல். இவன் வேளாண்குடியிற் பிறந்தவன். இவற்கு அருளாகரன், அரும்பாக்கிழான், நரலோக வீரன், காலிங்கர்கோன், பொன்னம்பலக்கூத்தன் என்ற பெயர்களும் வழங்கலாயின. இவனுக்கு மானாவதாரன் என்ற விருதுப் பெயரும் இருந்ததெனச் சித்தலிங்கமடம் என்ற ஊரில் கிடைத்த கல்லெழுத்தால் அறியப்பெறுகிறது. (No. 367 of 1909.) அலுவலும் வெற்றிகளும் இவன் முதல் குலோத்துங்கன் (1070-1120) காலத்துப் படைத்தலைவனாய் இருந்தவன்; குலோத்துங்கன் வேணாடு, மலைநாடு, பாண்டி நாடு, வடநாடு முதலிய நாடுகளில் பல போர்கள் நடத்தியபொழுது, இம்மணவில் கூத்தன் படைத்தலைமை பூண்டு வெற்றி பெற்றுத் தன் புகழையும் தன் அரசன் புகழையும் நிலை நிறுத்தினன். இவன் வெற்றிகளைக் கூறும் சாசனப் பகுதிகள் பின்வருமாறு :- 1. தென்னாடன் சாவேற்றின் திண்செருக்கை அன்றமைத்தான் தொண்டையர்கோ னாங்கு. 2. ⁠⁠⁠⁠・・・・・・ போரில் கொலைநாடு வெஞ்சினவேல் கூத்தன் குறுகார் மலை நாடு கொண்டபிரான் வந்து. 3. தென்னர், குடமலை நாடறிந்து கொண்ட வேற்கூத்தன். 4.⁠⁠⁠⁠ ............ கொல்லம் அழிவுகண்டான் சேரன் அளப்பரிய ஆற்றற் கிழிவுகண்டான் தொண்டையர்கோன் ஏறு. 5. ⁠⁠⁠ ............ தென்னர் மலைமன்னர் ஏனை வடமன்னர் மற்றக் குலமன்னர் செல்வமெலாம் கொண்டு. விக்கிரமசோழன் காலத்தில் முதற்குலோத்துங்க சோழனுக்குப் பிறகு சோழப் பேரரசனாகத் திகழ்ந்தவன் விக்கிரமசோழன். இவ் விக்கிரம சோழனுடைய ஆட்சியின் முற்பகுதியினும் மணவிற்கூத்தன் நிலவியிருந்தான். விக்கிரசோழனுலா விக்கிரம சோழனது அவைக்களப் புலவராய் வீற்றிருந்தவர் ஒட்டக்கூத்தர். இவ்வொட்டக்கூத்தர் விக்கிரமசோழனுலா என்னும் நூலொன்று விக்கிரமசோழன் பேரில் இயற்றியுள்ளார். இவ்வுலாவில் இம்மணவிற் கூத்தனான காலிங்கர் கோனின் வெற்றிகள் பற்றிப் பின்வருமாறு காணப்பெறுகிறது :- ⁠⁠⁠ ............ வேங்கையினும் கூடார் விழிஞத்தும் கொல்லத்தும் கொங்கத்தும் ஓடா விரட்டத்தும் ஒட்டத்தும்-நாடா தடியெடுத்து வெவ்வே றரசிரிய வீரக் கொடியெடுத்த காலிங்கர் கோன் ... (வேங்கை - வேங்கிநாடு : கூடார் - பகைவர்; இரட்டம் - இரட்ட பாடி, ஒட்டம்-ஒட்ரதேசம்) சிவபக்தி இத்தகைய பெருவீரனாகிய மணவிற் கூத்தன் பெருஞ் சிவபக்தனாகத் திகழ்ந்தான். இவன் தில்லையிலும் திருவதிகையிலும் செய்த சிவப்பணிகள் அளப்பில. அவற்றைத் தில்லையம்பதியில் கல்லெழுத்தாக அமைந்துள்ள 36 வெண்பாக்களாலும், திருவதிகை வீரட்டானத்தில் சிலாசாசனம் செய்யப் பெற்றுள்ள இருபத்தைந்து வெண்பாக்களாலும் அறியலாம். (பிறநலப்பணிகள் என்ற தலைப்பிலும் காண்க.) இவனைப்பற்றித் தில்லையில் காணும் பாடற் கல்லெழுத்துக்கள் தென்னிந்திய சாசனங்கள் நான்காவது தொகுதியில் 225-ம் எண்கொண்ட கல்வெட்டாகப் பதிப்பிக்கப்பெற்றுள்ளன (A. R. No. 120 of 1888); பெருந்தொகை என்ற நூலில் 1059-1094 எண்கொண்ட பாடல்களாக அச்சிடப்பெற்றுள்ளன. திருவதிகை வீரட்டானத்தில் நடராசப் பெருமான் சன்னிதியிலுள்ள இரண்டு தூண்களில் இவனைப்பற்றிய 25 வெண்பாக்கள் 1921-ஆம் ஆண்டுக்குரிய 369-ஆம் எண் கொண்ட கல்வெட்டாகப் படியெறிக்கப் பெற்றுள்ளன; பெருந்தொகை என்ற நூலிலும் 1095-1119 எண்கொண்ட பாடல்களாக அச்சிடப் பெற்றுள்ளன. தில்லைத் திருப்பணிகள் இவன் பகைவேந்தரை வென்று கொணர்ந்த செல்வமெலாம் கொண்டு தில்லைச்சிற்றம்பலத்துத் திருக்கொடுங்கைக்குப் பொன் வேய்ந்தான்; பொன்னம்பலத்தையும் பொன் வேய்ந்தான்; பேரம்பலத்துக்குச் செம்பு வேய்ந்தான்; செம்பொற் காளம் செய்து கொடுத்தான்; “ஆடும் தனித் தேனுக்கு அம்பலத்தே கர்ப்பூரம்-நீடும் திருவிளக்கு நீடமைத்தான்.” பொன்னம்பலம் சூழப் பொன்னின் திருவிளக்குகளை அமைத்தான்; “ஆடும் தெளிதேனை ஆயிர நாழி நெய்யால் ஆடும்படி கண்டான்.” “மல்லல் குலவரையா நூற்றுக்கான் மண்டபத்தைத் தில்லைப்பிரானுக்குச் செய்தமைத்தவன்” இவனே. இந்நூற்றுக்கால் மண்டபத்தில் 12 தூண்களில் விக்கிரம சோழன் திருமண்டபம் என்ற பெயர் காணப்படுவதனால், இத்தலைவனால் (மணவில் கூத்தனால்) விக்கிரம சோழன் ஆணையின்படி இத்திருப்பணி நடைபெற்ற தாதல் வேண்டும்[2] என்று அறிஞர் கருதுகின்றனர். “தில்லைப் பெரிய திருச்சுற்று மாளிகையை எல்லைக்குலவரை போல்” அமைத்தான்; புட்கரணிக்குக் கல்படிக்கட்டுகள் அமைக்கச் செய்தான்; “வீதிசூழ் நல்விளக்கும் வீற்றிருக்க மண்டபமும்” செய்வித்தான். திருநந்தவனத்தை ஏற்படுத்தினான்; நூறாயிரம் கமுகு மரங்களை வைத்தான்; ஒராயிரம் கறவைப் பசுக்களைக் கொடுத்தான் ; குழந்தைகளுக்குப் பாலும் எண்ணெயும் நாடோறும் கொடுக்கச் செய்தான்; தில்லைப் பேரேரிக்குக் கல்லினால் மதகு ஒன்று அமைத்தான். மாசி மாதத்தில் (மக விழாவில்) இறைவனைக் கடலில் நீராட்டுவித்து வீற்றிருக்கச் செய்ய ஒரு மண்டபத்தைக் கட்டினான்; நீராடச் செல்லுவதற்கு ஒரு பெரு வழியொன்றும் அமைத்தான். அம்மண்டபம் இற்றை நாளில் சிதம்பரத்துக்கு அருகில் கிள்ளை என்னும் ஊரில் இருக்கிறது என்று ஆராய்ச்சியாளர் கூறுவர்.[3] தில்லையில் சிவகாமக் கோட்டத்தை யமைத்தவன் இவனே; காமக்கோட்டத்தின் திருச்சுற்றினையும் இவன் கட்டுவித்தான்; இச்செய்திகளைக் கூறும் பாடல்கள் படித்து இன்புறத்தக்கன :- நடங்கவின்கொள் அம்பலத்து நாயகச்செந் தேனின் இடங்கவின்கொள் பச்சையிளந் தேனுக்கு-அடங்கார் பருமா ளிகைமேல் பகடுகைத்த கூத்தன் திருமா ளிகையமைத்தான் சென்று. எவ்வுலகும் எவ்வுயிரும் ஈன்றும் எழிலழியாச் செல்வியாள் கோயில் திருச்சுற்றைப்-பவ்வஞ்சூழ் எல்லைவட்டம் தன்கோற் கியலவிட்ட வாட்கூத்தன் தில்லைவட்டத் தேயமைத்தான் சென்று. தேவாரம் ஒதுவதற்கும், இருந்து அன்பர்கள் செவிமடுத்து இன்புறுவதற்குமாக ஒரு மண்டபத்தைக் கட்டினான். 'நட்டப் பெருமானார் ஞானங் குழைத்தளித்த சிட்டப் பெருமான் திருப்பதியம்-முட்டாமைக் கேட்போர்க்கு மண்டபத்தைச் செய்தான்‘ என்ற பாடற் பகுதி இதனை வலியுறுத்தும். “அன்றியும் சம்பந்தர் கோயிலுக்கு இவன் பொன் வேய்ந்தான் என்று ஒரு பாடல் கூறுகிறது. ’’தென்வேந்தன் கூனிமிர்த்த செந்தமிழர் தென்கோயில் பொன்மேய்ந்து திக்கைப் புகழ்வேய்ந்தான் ’’. இதனுள் ’தென்வேந்தன்’ என்றது கூன்பாண்டியனை 'கூன்நிமிர்த்த செந்தமிழர்’ என்றது ஞானசம்பந்தரை. இனி, இம்மணவிற் கூத்தன் திருமுறைகளைச் செப்பேடு செய்வித்தான் என்பது சிறப்பாகக் குறிப்பிடத் தக்க செய்தியாகும். முற்திறத்தார் ஈசன் முதல் திறத்தைப் பாடியவாறு ஒத்தமைத்த செப்பேட்டி னுள்ளெழுதி-இத்தலத்தின் எல்லைக் கிரிவாய் இசையெழுதி னான்கூத்தன் தில்லைச்சிற் றம்பலத்தே சென்று. இதில் ”பாடியவாறு” என்ற சொற்றாெடர் கவனிக்கற்பாலது. சம்பந்தர் அப்பர் சுந்தரர் ஆகியவர்கள் பதிகங்களை எம்முறையில் பாடியருளினார்களோ அம் முறையிலேயே அப்பதிகங்கள் மனவிற்கூத்தனது முயற்சியால் எழுதப்பட்டன என்று இச்சொற்றாெடரால் அறியலாகும். எத்தலத்துக்குப் பின் எத்தலத்திற்குச் சமய (குரவர் சென்றார்கள் என்றும், அங்குப் பாடிய பதிகங்கள் எவை என்றும், ஆய்ந்து, திருவருட்டுணைகொண்டு, பெரிய புராணத்தை எழுதியவர் சேக்கிழார் என்பது யாவரும் அறிந்ததொன்று. சேக்கிழார் காலத்துக்கு முன்பே பதிகங்கள் பாடிய வரிசைமுறை கொண்ட செப்பேடுகள் இருந்தன என்பது இப்பாடலால் உறுதி பெறுமாயின், சேக்கிழார் சுவாமிகளுக்கு இச்செப்பேடு களும் பயன்பட்டிருத்தல் கூடும் என்று கூறலாம். “ஒத்தமைத்த” என்ற சொற்றாெடரும் கவனிக்கத்தக்கது. செப்பேடுகள் ஒவ்வொன்றும் ஒரே அளவினதாக இருந்திருத்தல் வேண்டும் ; ஒவ்வொரு செப்பேட்டில் ஒவ்வொரு பதிகம்மட்டும் எழுதப்பட்டது போலும் என்று இதனால் கூர்ந்து அறியலாம். திருவதிகைத் திருப்பணிகள் தில்லையில் பல திருப்பணிகளைச் செய்தவனாகிய மணவிற்கூத்தன் திருவதிகையில் செய்த திருப்பணிகளும் பல. “பொன்மகர தோரணமும் பூணணியும் பட்டிகையும், தென்னதிகை நாயகர்க்குச் செய்தமைத்தான் ’’; பொற் சதுக்கம், மேகடம்பம்[4] என்றிவற்றை சேர்ப்பித்தான்; மண்டபமும் மாளிகையும் எடுப்பித்தான் நூற்றுக்கால் மண்டபத்தைக் கட்டினான்; திருக்கோயில் மடைப்பள்ளியையும் பெரிய திருச்சுற்றையும் கருங்கல்லால் கட்டுவித்தான்; பகைவேந்தரைவென்று கொணர்ந்த செம்பொன்னால் பரிகலங்களைச் செய்தான் ; வீரட்டர் கோயிலைச் செம்பொனால் வேய்ந்தான் ; ஆயிரம் நாழி நெய்யால் விரட்டானேசுவரருக்கு அபிஷேகம் செய்வித்தான் ; நல்ல திருநந்தாவனம் அமைத்தான் , ஐம்பதினாயிரம் கமுக மரங்களை வைத்து வளர்த்தான்; குராற்பசு ஐஞ்ஞூறு கொடுத்தான் ; 10 பொன் விளக்களை அமைத்தான் ; எண்ணில் வயல் விளக்கும் பேரே! ஒன்று அமைத்தான்; அருளாகர நல்லூர் என்று தன் பெயரால் ஒரு ஊரையும் ஆங்கொரு ஏரியையும் உண்டாக்கினான். காமக்கோட்டம் (அம்மையார் திருக்கோயிலைக்) கட்டுவித்துப் பெருவிபவம் கண்டான் : அம்மையார்க்கு நிறைய அணிகலன்களை அளித்தான் :- மாசயிலத் தம்மைக்கு வாழதிகை வீரட்டத் தீச னிடமருங்கி லேந்திழைக்கு-மாசில் முடிமுதலா முற்றணிகள் சாத்தினான் வேளாண் குடிமுதலான் தொண்டையர் கோன். நடராசப் பெருமான் எழுந்தருளத் திருக்கோயிலைக் கட்டச் செய்தான்; ”நீடும் அதிகையான் நித்தல் பெருங் கூத்தை, ஆடும் அரங்கமைத்தான் ... ... தொண்டையாரேறு” என்றமை காண்க. இனித் திருவதிகைதான் திருநாவுக்கரசர் சூலை நீங்கித் திருநாவுக்கரசு என்னும் நாமத்தை மன்னிய தலமாகும். இத்தலத்தில் திருநாவுக்கரசருக்குத் திருக்கோயில் கட்டப் பெற்றது: ”ஈசன் அதிகையில்வா கீசன் எழுந்தருள மாசில் பெருங்கோயில் வந்தமைத்தான்” என்பது திருவதிகைச் சாசனக் கவியாகும். உமாதேவியார் காஞ்சிபுரத்தில் எண்ணான்கு பேரறங்களையும் செய்தருள்கிறார் என்பது சைவரறிந்த உண்மை. இதனைச் சேக்கிழார் சுவாமிகள், ”நண்ணும் மன்னுயிர் யாவையும் பல்க நாடு காதலின் நீடிய வாழ்க்கைப் புண்ணியத்திருக் காமக்கோட்டத்துப் பொலிய முப்பதோ டிரண்டறம் புரக்கும்” என்று குறிப்பிடுவர். இங்ஙனம் உமையம்மையார் முப்பத்திரண்டறமும் திருவதிகையில் கண்கூடாகச் செய்தல் வேண்டும் என்று நரலோக வீரன் கருதினான் ; அங்ஙனமே முப்பத்திரண்டறங்களும் நாடோறும் நடைபெறச் செய்தான். இதனைக் கீழ்க்கண்ட செய்யுள் விளக்கும்:- அண்ணல் அதிகையரன் ஆகம் பிரியாத பெண்ணினல்லாள் எண்ணான்கு பேரறமும்-எண்ணி அவை நாணாள் செலவமைத்தான்... இதில் “நாணாள்” என்பது நாடோறும் என்று பொருள்படும். நற்பண்புகள் இது காறும் கண்டவாற்றான் இவனது சிவபக்தி சிறப்புத் தெற்றென விளங்கும். இவனைப்பற்றிய பாடல்களினின்று இவன் ஒரு பெரு வீரன் என்றும், பெரு கொடையாளி என்றும், தன் அரசனுடைய புகழை மிகுவித்தவன் என்றும் அறிகிறோம். “தொல்லை மழை வளர்க்க வெங்கலியை மாற்றி, வழுவாமல் அறம் வளர்த்தவன்” இவன். “பொன் மழையோடொக்கத் தரும் கொடையான்” ஆகவும் இவன் திகழ்ந்தான். இவன் சமய குரவரிடத்தில் கொண்ட பக்தி, தில்லையில் திருஞான் சம்பந்தர் கோயிலுக்குப் பொன் வேய்ந்தமையாலும் திருவதிகையில் திருநாவுக்கரசருக்குக் கோயிலமைத்தமையாலும் அறியப் பெறுகின்றது. இவன் சைவ சமயத்துக்கு ஆற்றியுள்ள சிறந்த பணி மூவர் தேவரங்களையும் செப்பேடு செய்வித்தமையேயாகும். இதனால் இவன் சைவர் நெஞ்சில் நிலவுபவன் ஆவன். பிற நலப்பணிகள் நெய்வணை என்று இந்நாளில் வழங்கும் ஊர் முன்னாளில் திருநெல் வெண்ணெய் என்று வழங்கப்பட்டது. இது சம்பந்தரால் பாடப்பட்ட தலம். முதற் குலோத்துங்க சோழனது 26-ஆவது ஆட்சியாண்டில் அரும்பாக் கிழான் வேண்டுகோட்படி இவ்வூர் சுங்கம் தவிர்த்த சோழநல்லூர் என்று பெயரிடப்பட்டது; பொற்குடம் கொடுத்தருளிய தேவர்க்கு நிலங்கள் அளிக்கப்பட்டன. (374 of 1908) இதில் அரும்பாக் கிழானுக்குப் பொற்கோயில் தொண்டைமான் என்ற பெயரும் வழங்கப்படுகிறது. (இப்பெயர் திருப்பாசூரிலுள்ள இவன் மகனைப்பற்றிய கல்வெட்டிலும் (128 of 1930) குறிக்கப் பெற்றுள்ளது.) கீழுர் என்பது திருக் கோவலூரில் சிவன் கோயிலுள்ள பகுதி. இவ்வூரில் முதற் குலோத்துங்க சோழனுடைய 31-ஆம் ஆட்சியாண்டில் அரும்பாக்கிழான் இருக்கோவலூரான மதுராந்தகச் சதுர்வேதி மங்கலத்துச் சபையாரிடத்தில் தெங்கந் தோட்டம் விலைக்குக் கொண்டு திருவீரட்டான முடையார்க்குத் திரு நந்தவனமாகக் கொடுத்தான் (264 of 1902; S.I.I. Vol VII No. 892) என்றுள்ளது. தக்கோலம் என்பது முன்னாளில் திருவூறல் என்று வழங்கப்பட்டது. இது தொண்டை நாட்டிலுள்ள பாடல் பெற்ற தலம். முதற் குலோத்துங்கனுடைய 45ஆவது ஆட்சியாண்டில் சங்கரப்பாடி நகரத்தாரிடத்து அரும்பாக் கிழான் அறுபது பொன் கொடுத்துப் பத்து விளக்குகள் எரிக்க எற்பாடு செய்தான். இக்கல்வெட்டில் தக்கோலம் குலோத்துங்க சோழபுரம் என்று குறிக்கப்பட்டுள்ளது (264 of 1924). திருப்புலிவனம் என்ற ஊரிலுள்ள முதற் குலோத்துங்கனுடைய 45-ஆவது ஆட்சியாண்டுக் கல்வெட்டிலிருந்து அரும்பாக்கிழான் நான்கு விளக்குகள் எரிக்கப் பன்னிரண்டு கழஞ்சு பொன் கொடுத்ததாக அறிகிறோம் (207 Of 1923). திருப்பாசூர் என்பது செங்கற்பட்டு மாவட்டத்திலுள்ள ஒரு பாடல் பெற்ற தலம். இவ்வூர்க் கோயிலில் முதற் குலோத்துங்கனுடைய 45ஆவது ஆட்சியாண்டுக் கல்வெட்டு ஒன்று உள்ளது. அது சிவப்பிராமணரும் ஜயதரபுரத்து நகரத்தாரும் முறையே நான்கும் ஆறும் விளக்குகளை எரிக்க அரும்பாக் கிழானிடமிருந்து பொன் பெற்றார்கள் என்று கூறுகின்றது. எலவானாசூர் என்றவூரில் முதற் குலோத்துங்க சோழனுடைய 48-ஆவது ஆட்சியாண்டில் அரும்பாக் கிழான் பள்ளியறை நம்பிராட்டியாரை எழுந்தருளுவித்தான். அப்பள்ளியறை நம்பிராட்டியாருக்கு இறையா நரையூரான சோழகேரளச் சதுர்வேதி மங்கலச் சபையார் ஓடிப்போன இரண்டு கணக்கரது நிலங்களை அவர்கள் கொடுக்க வேண்டிய வரியின் பொருட்டு விற்றளித்தார்கள் (164 of 1906). திருவதிகை, திருநாவுக்கரசருக்குச் சூலை நோய் நீங்கிய தலம். திருநாவுக்கரசரும் இத்தலத்தை அதி அரைய மங்கை என்று குறிப்பிடுவர். முதற் குலோத்துங்கனுடைய 48-ஆவது ஆட்சியாண்டுக் கல்வெட்டில் இவ்வூர் அதிராஜ மங்கல்யபுரம் என்று குறிக்கப்பட்டுள்ளது. இந்நகரத்தார் அரும்பாக் கிழானுக்குரிய 48,000 குழி புன்செய் நிலத்தை நன்செய் நிலமாக மாற்றுவதற்கு ஆதரவு அளித்த செய்தி கூறப்படுகிறது; அந்நிலம் திருநாவுக்கரச தேவமடத்துக்கு மடப்புறமாகவும் அளிக்கபட்டது (382 of 1921). சித்தலிங்கமடம் என்றவூரில் முதற் குலோத்துங்க சோழனுடைய, ஆட்சியாண்டு தெரியாத கல்வெட்டொன்று உள்ளது. அது வடமொழிச் சுலோகமாகும்; திருக்கோவலூர் ஆண்டபிள்ளை பட்டன் என்பான் எழுதியது. ”மணவிலாதிபதி சபாநர்த்தக காலிங்கராயன்” என்பான் அவ்வூர்ச் சிவன் கோயிலைப் புதுப்பித்தான் என்பது அச்சுலோகத்தில் கண்ட செய்தியாகும் (367 of 1909). இன்னோரு கல்வெட்டில்: விமானமும் கமுகுகள் சூழ்ந்த பிராகாரமும் ஒரு மண்டபமும் சகம் 1025-ல் வியாக்கிரபாத முனிவர் தொழும் திருவடிகளையுடைய சிவபெருமானுக்கு மணவிலாதிபதி அமைத்தனன் என்று கூறப்பட்டுள்ளது. (இவ்வூர்ப் பெருமானுக்கு வியாக்கிர பாதீஸ்வரர் என்பது வடமொழிப் பெயர்; திருப்புலிப் பகவர் என்பது தமிழ்ப் பெயர்.) ஆத்தூர் எனப்படும் திருச்செந்தூர்த் தாலூகாவிலுள்ள ஊரில் கிடைத்த வடமொழிச் சுலோகமாகவுள்ள கல்வெட்டொன்று, அரும்பாக் கிழான் மகரதோரணம் ஒன்றை இறைவனுக்கு அளித்தான் என்றும் இரண்டு விளக்குகள் எரிக்கப் பொன் கொடுத்தான் என்றும் அறிவிக்கின்றது (405 of 1929-30). இக்கல்வெட்டில் அரசன் பெயர் ஜயதரன் என்றும், தலைமை அமைச்சன் பெயர் மானாவதாரன் என்றும் குறிக்கப் பெற்றுள்ளது. ஜயதரன் என்பது முதற் குலோத்துங்கனயும், மானாவதாரன் என்பது இம்மணவிற் கூத்தனையும் குறிக்கும். திருவாரூரில் விக்கிரம சோழனுடைய நான்காம் ஆட்சியாண்டுக் கல்வெட்டொன்று உள்ளது. அக் கல்வெட்டினால்,திருநல்லூர்ச் சபையினர் இரண்டேமுக்காலே சின்னம் பரப்புடைய நெடுங்குளம் ஒன்றை அரும்பாக் கிழானுக்கு நூறு காசுக்கு விற்றனரென்றும், அரும்பாக் கிழான் அதைப் பெற்றுத் திருவாரூர்த் திருமூலட்டான முடையார்க்குச் செங்கழுநீர் மாலைகள் அளிக்க ஏற்பாடு செய்தான் என்றும் அறிய வருகிறது (563 of 1904.) திண்டிவனம் என்ற வூரிலுள்ள விக்கிரம சோழனுடைய 5-ஆவது ஆட்சியாண்டுக் கல்வெட்டுள்ளது. அவ்வாண்டில் அரும்பாக்கிழான் 120 அன்றாடு நற்காசு கொடுக்கக் கிடங்கிலான இராசேந்திர சோழ நல்லூர் என்னும் ஊரவர் திருத்திண்டீசுவரம் உடையார்க்கு 6- வேலி நிலம் நீர்ப்பாசன உரிமைகளுடன் விற்றுக் கொடுத்தனர். நிலத்துக்கு விலை இருபது காசு. எஞ்சிய நூறு காசுக்குரிய வட்டியைக் கொண்டு அந்நிலத்துக்குச் செலுத்த வேண்டிய திருவெழுச்சிக் குடிமை, பெருவரி, சில்லிறை, வெட்டிமுட்டையாள் முதலியவற்றை ஊரவரே செலுத்த ஒப்புக்கொண்டனர். நத்தக் கொல்லையையும் பத்துக்காசுக்குக் குடிகள் குடியிருக்க விற்றுக் கொடுத்தனர். அந்தக் கொல்லைக்கு உப்புக்காசு, செந்நீர் அமஞ்சி, திருவெழுச்சிக் குடிமை முதலாகிய வரிகள் நீக்கப்பட்டன (205 of 1902; S. I. 1. Vol VII No 832). திருபுவனி என்ற புதுச் சேரிக் கண்மையிலுள்ள ஊரில் விக்கிரம சோழனின் ஆறாம் ஆட்சியாண்டிற்குரிய கல்வெட்டொன்று உள்ளது. அரசனுடைய நன்மையின் பொருட்டு அருளாகர ஈசுவர முடையாரை ஐந்தாவது ஆட்சியாண்டில் அரும்பாக்கிழான் எழுந்தருளுவித்தான். அக்கோயில் கட்டவும் திருமுற்றம் பூந்தோட்டம் ஆகியவை அமைக்கவும் திருபுவன மாதேவிச் சதுர்வேதி மங்கலத்தார் இக்கோயிலுக்கு நிலம் கொடுத்தனர் (175 of 1919). நரலோகவீரன் மண்டபம் திருப்புகலூர்த் திருக்கோயிலில் உள்ள மண்டபங்களுள் ஒன்றிற்கு நரலோகவீரன் மண்டபம் என்று பெயரிருந்ததென்று ஒரு கல்வெட்டு (97 of 1927-28) அறிவிக்கிறது. அம்மண்டபத்தில் ஊர்ச்சபை கூடிற்று. எனவே இப்பெருவீரர் பெயரால் ஒரு மண்டபம் விக்கிரம சோழனது ஆட்சியின் தொடக்கத்திலேயே கட்டப்பெற்றது என அறியலாம். நரலோகவீரநல்லூர் திருநெல்வேலி மாவட்டத்தில் மருவாய்க் குரிச்சி என்ற ஊர் நரலோகவீரகல்லூர் என்ற பெயரால் அழைக்கப்பெற்றது என்று நாங்குனேரியிலுள்ள சுந்தர பாண்டியனுடைய கல்லெழுத்தொன்று (265 of 1927-28) கூறுகிறது. நரலோக வீரன் தென்னாட்டுக்குப் படையெடுத்துச் சென்று வென்றபொழுது அவ்வூர்க்குத் தன் பெயரமைத்தனன் என்று அறியலாம். இவன் மகன் சூரைகாயகன் மாதவராயன் என்பவன் இம்மணவிற் கூத்தனுக்கு மகன் என்று தெரிய வருகிறது. திருப்பாசூரிலுள்ள கல்வெட்டொன்று (128 of 1930) இம்மாதவராயன் செய்த சிவத்தொண்டினைக் குறிப்பிடுகிறது. இவன் திருப்பாசூர்க் கோயிலுக்குப் பல அணிகலன்களை அளித்தனன்; அவற்றுள் ஒன்று பொன்னால் செய்த மகர தோரணமாகும்; அதன் முடியில் இரத்தினம்பதித்த குடை கவிக்கப்பட்டிருந்தது; அன்றியும் பொன்னாலாகிய முப்புரி நூலும், பலநூறு மணியும் இரத்தினங்களும் பதித்த, பொற்றகடும் மாதவராயன் அளித்தான்;[5] சில பசுக்களை அளித்து நான்கு விளக்குகளை எரியச் செய்தான். இவன் விக்கிரம சோழனது ஆட்சியில் இருந்தவன். இவனும் இவன் தந்தையைப் போல் சிவபக்தியில் சிறந்து விளங்கியவன் என்பது அறியத்தகும். முடிப்புரை முதற்குலோத்துங்கனும், விக்கிரம சோழனும் பல சிவப்பணிகளை ஆற்றியுள்ளனர். விக்கிரமசோழனது தில்லைத்திருப்பணிகளைத் திருமழபாடிச் சாசனம்[6] விளக்கமாகக் கூறுகிறது. மன்னன் எவ்வழியோ அவ்வழியில் மன்னுயிர் மன்னும் ஆகையால் பேரரசர் போலவே அவர்களது உயர்தர அலுவலர்களும் சிவபக்தியிற் சிறந்து விளங்கினர் ; சிவப்பணிகள் ஒல்லும்வா யெல்லாம் செய்தார்கள். இற்றை ஞான்று சைவர்கள் ஆகிய நாம் புதிய பணிகளைச் செய்ய வேண்டியதில்லை; முன்னேர் செய்த சிவப்பணிகளை அழிவுறாவண்ணம் காத்தலும், பழுதுற்றவற்றைப் புகுக்குதலும் நாம் செய்ய வேண்டுவனவாம். இந்நெறியில் நின்று தில்லைத் திருமதில் போன்றவற்றைப் புதுக்கும் முயற்சியில் ஒவ்வொருவரும் உதவினால் நரலோகவீரன் போன்றவர்களை நினைவு கூர்ந்து போற்றியவ ராவோம். * * * ↑ ’திருக்கோயில்’ என்ற திங்களிதழில் வெளிவந்தது. ↑ திரு. பண்டாரத்தார் - சோழர் வரலாறு - பகுதி 11 பக்கம் 77. ↑ பிற்காலச் சோழர் சரித்திரம், பகுதி11, பண்டாரத்தார் பக்கம் 78. ↑ மேற்கட்டி ↑ A. R. for 1930: Page 79; Para 22. ↑ S. I. I. Vo1. | II Part lI No. 79.  சேக்கிழார் தொண்டை நன்னாடு "உயிர்களுக்கு எல்லையில் கருணைத் தாயனாள் அரும் தவம் புரியத் துாய மாதவம் செய்தது "தொண்டை நன்னாடு; நடுநிலை ஒழுக்கத்துத் தலைமைசால் பெருங்குடி தழைத்தது தொண்டை நன்னாடு; பழையனூர் சிறுத் தொண்டர் தம் சொல்லையே காக்க வணிகன் பொருட்டு உயிர் நீத்த பெரும் சிறப்புடையது பெருந் தொண்டை நாடு: சேரனார் திருமலை நாட்டு வயவர்கள் மைத்துனக் கேண்மை பூண்டது பெருந்தொண்டை நாடு; செங்கண் மால் விடையார் திருக்காளத்தியும், ஆறுசூழ் அண்ணலார் திருவிடைச் சுரமும், நீள் வரைப்பின் உம்பர் நாயகர் திருக்கழுக்குன்றமும், செங்கண் மால் தொழும் திருமுல்லை வாயிலும், மறையவர் பூதிசாதனம் போற்றிய வல்லமும், மருவு கங்கை வாழ் சடையவர் மகிழ்ந்த மாற் பேறும், பருங்கை யானையை உரித்தவர் திருப்பாசூரும், மன்னவன் இறக்கிய வரியை 'ஒற்றியூர் நீங்க’ என்று எழுதும் திருவொற்றியூரும், மட்டிட்ட புன்னையங் கானல் மடமயிலைக் கட்டு இட்டங் கொண்ட காபாலிச் சரத்தான் மகிழும் திருமயிலாபுரியும், தண் பொழில் சூழ் திருவான்மியூரும், எவ்வுகங்களுள்ளும் உள்ளது என்று யாவரும் ஏத்தும் காஞ்சிமா நகரமும் முதலாய தெய்வ நெறிச் சிவம் பெருக்கும் திருத்தலங்கள் எண்ணான்கு கொண்டது தொண்டை நன்னடு; தீய என்பன கனவிலும் நினைவிலாச் சிந்தைத் தூய மாந்தர் வாழ்ந்ததும் தொண்டை நன்னாடு; தூக்கு சீர்த்திருத் தொண்டத் தொகை விரி வாக்கினால் சொல்ல வல்ல பிரான்-எங்கள் பாக்கியப் பயன் வாழ்பதி குன்றத்தூர் இருப்பதும் இத்தொண்டை நன்னாடே. வேளாளர் சிறப்பு "வேளாளர் என்பவர்கள் வள்ளன்மையால் மிக்கிருக்கும் தாளாளர்” என்று ஞானசம்பந்தரால் புகழப் பெற்றவர்கள். 'உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்’ என்று சிறப்பிக்கப் பெற்றவர்கள் இவர்கள். “வெண்ணெயூர்ச் சடையன் தங்கள் மரபுளோர் கொடுக்க வாங்கி வசிட்டனே புனைந்தான் மெளலி" என்ற கம்பர் சொல்லுக்கு ஏற்ப அரசனுக்கு முடி கொடுக்கும் உரிமையுடையவர்கள் இவ்வேளாளர்கள். இவர்கள், "மேழி பிடிககுங்கை; வேல் வேந்தர் நோக்குங்குங்கை; ஆழி தரித்தே அருளுங்கை;- சூழ்வினையை நீக்குங்கை; என்றும் நிலைக்குங்கை; நீடுழிக் காக்குங்கை; காராளர் கை" எனப் புலவர்களால் பாராட்டப் பெற்றுள்ளார்கள். மேலும் வேளாளர்கள் பாராளும் திறலரசருக்கு வெற்றி விளைவிக்கும் தானைத் தலைவர்களாகவும் விளங்கினர். வாயிலார் சத்தியார் விறல்சேர் மிண்டர் வாக் கரையர் சாக்கியர்கோட் புலிகஞ் சாறர் ஏயர்கோன் கலிக்காமர் முளைவித் தாக்கும் இளையான்றன் குடிமாறர் மூர்க்கர் செங்கைத் தாயனார் செருத்துணையார் செருவில் வெம்போர் சாதித்த முனையடுவார் ஆக நம்பி பாயிரஞ்சேர் அறுபதுபேர் தனிப்பேர் தம்மில் பதின் மூவர் வேளாளர் பகருங் காலே (செ. 17) என்ற திருத் தொண்டர் புராண வரலாற்றிற்கண்ட வண்ணம் அறுபான் மும்மை நாயன்மார்களுள் பதின்மூவர் வேளாண் குலச் செம்மல்கள் ஆவர். சேக்கிழார்குடி தொண்டை நாட்டு இருபத்து நான்கு கோட்டங்களுள் புலியூர்க் கோட்டத்தைச் சேர்ந்த திரு ஆம் ஊர் குன்றத்தூர். இக்குன்றத்தூரில் குடியேறிய வேளாளர்களில் கூடல்கிழான், புரிசைகிழான், வெண்குளப்பாக் கிழான், குளத்துழான், சேக்கிழான் என்ற பல முதன்மைக் குடிமக்கள் வாழ்ந்து வந்தனர். இவர்கள் அறிவு, ஒழுக்கம், சீலம், வாய்மை முதலிய நற்பண்புகள் உடையராய்ச் சிவபக்தியில் சிறந்து வாழ்ந்தனர். அருண் மொழித் தேவர் அன்னோருள் சேக்கிழார் குடியில் வெள்ளியங் கிரியார் என்ற ஒருவர் வாழ்ந்து வந்தார். அவருடைய மனைவியார் அழகாம்பிகை எனப் பெற்றர். “எங்கள் பாக்கியப் பயனால்“ இவர்களுக்கு ஒரு ஆண் மகவு பிறந்தது. அக்குழந்தைக்கு அருண் மொழித் தேவர் எனப் பெயர் சூட்டப்பட்டது. அருண்மொழித் தேவன் என்பது சோழ அரசர்களுள் முதலாம் இராசராச சோழனுடைய பெயர்; இராசராசனும் சிவபக்தியில் சிறந்தவன். சிறந்த சிவபக்தியுடைய வெள்ளியங் கிரியாரும் தம் அருமை மைந்தற்குப் பண்டு வாழ்ந்த சோழ அரசனது பெயரையே இட்டார். அந்நாளில் அருண் மொழித்தேவர் என்ற பெயர் பலரும் பூண்டிருந்ததாகவும் தெரியவருகிறது. எனவே இப்பெயர் சேக்கிழாருக்குப் பெற்றாேரிட்ட பெயராகவும் கொள்ளலாம். இனி இப்பெயரைக் காரணப் பெயராகக் கொள்ளினும் அமையும். சேக்கிழார் பாடிய நூலாகிய பெரிய புராணம் திரு அருள் வாய் மொழி ஆகும். ஆகவே இவருக்கு அருள் மொழித்தேவரென்ற பெயர் வந்ததெனவும் கொள்ளலாம். சேக்கிழார் இனி இவருக்குச் சேக்கிழார் என்ற பெயரே எல்லோராலும் அறியப் பெற்ற தொன்று. சேக்கிழார் என்பது இவர் பிறந்த குடிப்பெயர். அக்குடிப் பெயராலேயே இவருக்குப் பெயரமைந்தது. அமைச்சரானமை கல்வி, அறிவு, ஒழுக்கங்களில் சிறந்தவராகச் சேக்கிழார் வாழ்ந்து வருங்கால் சோழவரசனாகிய அநபாய சோழன், “ஞாலம், மலை, கடல் இவற்றினும் பெரியன யாவை?“ என்று ஒரு வினா விடுத்தனன். புலமை சான்ற பலரும் விடை பகரகிற்றிலர். இதனை அருண் மொழித் தேவர் அறிந்து சோழனது வினாவுக்கு விடையாகக், “காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது“ “நிலையில் திரியா(து) அடங்கியான் தோற்றம் மலையினும் மானப் பெரிது“ “பயன்றூக்கார் செய்த உதவி நயன்தூக்கின் நன்மை கடலின் பெரிது” என்னும் மூன்று குறட்பாக்களை எழுதி அரசனுக்கு ஓலை விடுத்தார். அரசன் மனமகிழ்ந்து, சேக்கிழாரைத் தனது அவைக்கு வரச் செய்து, அவரை அமைச்சராக ஆக்கி, உத்தம சோழப் பல்லவன் என்னும் பட்டமும் அளித்தனன். இச்செய்தியைச் சபாபதி நாவலர் அவர்கள் இயற்றிய சிதம்பர சபாநாத புராணத்திலே அமைத்துள்ள சேக்கிழார் தோத்திரப் பாடலினின்றறியலாம்: “ஞாலமலை கடல்தன்னில் பெரிய தெ(து) எனஎடுத்து ஞால மாள் செங் கோலன் அநபாயன் வினவிய முத்திறக் குறிப்பைக் குறிப்பி னோர்ந்து சாலவுயர் திருக்குறளில் மூன்று இறையாக எழுதியவன் அரசு தாங்கி வாலறிவால் திருத்தொண்டின் புகழ் விரித்த சேக்கிழார் மலர்த்தாள் போற்றி” என்பது அப்பாடல். கம்பர் பாடியதாகக் கருதப்படும் திருக்கை வழக்கம் என்னும் நூலிலும், “மண்ணில் கடலில் மலையில் பெரியதென எண்ணி எழுதிக் கொடுத்த ஏற்றக்கை” என்ற வரிகளில் இச்செய்தி குறிக்கப்பட்டுள்ளது. இவர் அமைச்சர் தலைவராக வீற்றிருக்குங் கால் “எண்ணி இதுசெய் திடின் இதனால் எய்தப் படுவ(து) இஃ(து) எய்தா (து) இரியப் படுவ(து) இஃ(து) உண்மை எய்தப் படலாற் பயனின்றே கண்ணி யவதை மறந்தொழிக நள்ளார் முனை மேல் இப்பொழுது நயந்து படர்ந்து பொருதுவமே நமதே யாகும் நகுவாகை தண்ணிம யம்போற் புகழ்ப்போர்வை தாங்கற் காய கருமமிது தப்பா தாற்றப் பொருள் வருவாய் தவாதுண் டாமென்(று) இவைமுதலாங் கண்ணி வளவற்(கு) உரைத் தருள்செய் கனிவாய் முத்தம் தருகவே கனகக் குன்றை யனகசெழுங் கனிவாய் முத்தம் தருகவே” என்று சேக்கிழார் பிள்ளைத்தமிழ் ஆசிரியர் கூறிய வண்ணம், ‘நன்கு ஆராய்ந்து இச்செயல் செய்தால் இச்செயல் நிறைவேறும் ; இச்செயல் நிறைவேறாது என எண்ணிக் காரியங்களைச் செய்ய வேண்டும்’ என்றும், “ஒரு பொருளைப் பெற்றால் அதனால் பயனில்லை யென்றால் மறந்தொழிதல் வேண்டு மென்றும், பகைவரை இன்ன சமயத்தில் சென்று பொருதால் வெற்றி எய்தலாம்’ என்றும், புகழெய்தற் குரிய காரியங்கள் இன்னவை” என்றும், இன்ன காரியங்களைச் செய்யின் உறுதியாகப் பொருள் வரும்’ என்றும், இன்னோரன்னவற்றைத் தம் அரசனாகிய அநபாய சோழனுக்கு அறுவுறுத்தி வந்தார். பெரிய புராணம் பாடியமை அந்நாளில் பலரும் ஐம் பெருங்காப்பியங்களில் ஒன்றாகிய சீவகசிந்தாமணியைக் கற்று அதன் சுவைகளை நுகர்வாராயினர். அங்ஙனமே அரசனாகிய அநபாயனும் அந்நூலையே பெரிதும் பாராட்டிக் கேட்பானாயினான். சேக்கிழார் அரசனை நோக்கிச், ‘சமணப் பொய்ந் நூல் இது ; மறுமைக்கு ஆகாது ; இம்மைக்கும் அற்றே , வளம் மருவு சிவகதை இம்மைக்கும் மறுமைக்கும் உறுதி” என்று புகன்றார். சேக்கிழார் பிள்ளைத்தமிழாசிரியரும் இச் செய்தியைப் பின் வருமாறு கூறியுள்ளார்:- ”கார்கொண்ட அமணசிந் தாமணியை வளவர்கோன் கங்குல்பகல் ஆராய்தரக் கண்டொழித் தாவதிது வேயென்று தொண்டர்தம் மகத்துவங் கருதவுய்த்துப் பார்கொண்ட மன்னரல் லவைநீக்கி நல்லவை பரித்திடச் செயலமைச்சர் பண்பெனத் தெரித்தகுன் றத்தூ ருதித்தவெம் பரமனைக் காக்கவென்றே” (காப்புப்பருவம், 8.) அரசனும் இது பயனற்ற கதையானால் அம்மையும் இம்மையும் உறுதி பயக்கத்தக்க சிவகதை யாது ? அதனை அடைவுபடக் கூறுக” என்று கேட்டுக் கொண்டான். சேக்கிழாரும், “திருவாரூரில் இறைவன் சுந்தர மூர்த்தி சுவாமிகளுக்குத் தில்லைவாழ் அந்தணர்என்று அடியெடுத்துக் கொடுக்க அந் நம்பியாரூரரும் திருத் தொண்டத் தொகையைப் பாடி அடியார்களைத் துதித்தார் ; பின்னர்த் திருநாரையூரில் பொல்லாப் பிள்ளையாரின் திருவருள் பாலிக்கப்பெற்ற நம்பியாண்டார் நம்பிகள் திருத்தொண்டர் திருவந்தாதி என்ற நூலைப் பாடி அடியார்களைத் துதித்தார்; அத்திருவந்தாதியை இராசராச சோழன் (1) சிவலாய முனிவர் முதலியோர் கேட்டுப் பாராட்டினர்’’ என்று கூறினார். அரசன், அத்தூயகதையை அடைவுபடச் சொல்வீர்” எனக்கேட்கச் சேக்கிழாரும் தில்லை நகரை அடைந்து கூத்தப் பெருமானை வணங்கி ‘உனது அடியர் சீர் அடியேன் உரைத்திட அடியெடுத்து இடர் கெடத் தருவாய் ’’ என வழுத்தினார். இறைவனும் தொண்டர் சரித்திரமனைத்தும் அவரது மனஅறையில் குவித்ததோடு[1] “உலகெலாம்’ என்று அடியெடுத்துக் கொடுத்தார். அதனையே முதலாகக் கொண்டு அச்சொற் றொடரையே தமது புராணத்தின் நடுவிலும் ஈற்றிலும் பொருத்திச் “சைவ பரிபாஷைகளையும் சம்பிரதாயங்களையும் தெரித்து நாயன்மார் வரலாறுகளைச் சேக்கிழார் பாடி முடித்தார். நூல் அரங்கேற்றம் இச்செய்தியை அரசன் கேட்டு மகிழ்ந்து தில்லைக்கு வந்து சேர்ந்தான். வளவர்கோன் வரவறிந்து தில்லை மறையோரும், வண்மை மடபதிகளும், மற்றுமுள்ள பெரியோர்களும், சேக்கிழார் பெருமானும் வரவேற்றனர். யாவரும் ஒருங்கு சென்று நடராசப் பெருமானை வணங்கினர். நடராசப் பெருமானும், இந்நூலை அரங்கேற்றுக என அருள் செய்தார் ; திருச்சிலம் பொலியும் உடன் கேட்டது. அரங்கேற்றத்துக்குத், ”திருநெறித்தமிழ் வல்லபேர்கள் சிவாகமங்கள் படித்தபேர் கருநெறிப்பகை ஞானநூல்பல கற்றபேர்மறை கற்றபேர் குருநெறிக்குரி யோர்இலக்கண லக்கியங்கள் குறித்தபேர் பெருநெறிப்பல காவியங்கதை பேசவல்லவ ரனைவரும்.[2]” வந்திருந்தனர். சேக்கிழார் பெருமான் சித்திரைத் திங்கள் ஆதிரைநாள் தொடங்கி எதிராம் ஆண்டு சித்திரைத்திங்கள் ஆதிரை வரையிலும் தாம்செய்த சிவகதையினை விளங்க விரித்துச் சொல்ல அடியாரெல்லாம் சுருதி மொழி இதுவெனக் கை தொழுது, நெஞ்சம் கனியக் கனியக் கண்ணீர் வாரக் கேட்டனர். அங்ஙனம் கேட்டவர்கள்[3] சேக்கிழாரை, நாடிய விரி நூல் சொற்றிடு திறனால் நன்னூலாசிரியன்’ என்று புகழ்ந்தார்கள். 'நகு பாசுரமுதல் உரை செய்தலினால் நவில் உரையாசிரியன் என்று சில ரியம்பினர். “பரசமயக் குழி வீழ்ந்தவர் நீப்பப் போதனை செய்நிலையால் போதகாசிரியன்’ என்று சிலர் புகழ்ந்தனர். சிலர் இவர் பாடல்களை அத்தி தருங்கவி [4]என்றனர். வேறுசிலர் ‘புத்திதருங்கவி எனப் புகன்றனர். மற்றுஞ் 'சிலர் சித்தி தருங்கவி ’ எனச் செப்பினர். மேலுஞ்சிலர் ’எல்லாத் தீர்த்தங்களும் விளைவியாத சுத்தி தருங்கவி’ என்றனர். பின்னும் ‘பத்தி தருங்கவி’ என்றும், பல்லோர்க்கும் முத்தி தருங்கவிஎன்றும் பலரும் புகன்றனர்; இம்மட்டோ ? ‘நனவி லிரும்புகழ் மிகுசம் பந்தரும் நாவுக் கிறைய வரும் நாவலர் கோவும் சிரகர கம்பித நன்கு புரிந்தருள முனிவில் தமிழ்க்கவி பாடிய புலவன்’ என்று சேக்கிழாரையும் அவர் பாடல்களையும்புகழ்ந்துரைத்தனர். புராணவுரை நிறைவேறிய பின் சேக்கிழாரையும் அவரியற்றிய புராணத்தையும் யானைமேலேற்றித் தானும் ஏறி ’இணைக்கவரி துணைக்கரத்தால் வீசி இது வன்றாே யான் செய்த தவப்பயன்’ என்று அரசன் மகிழ்ந்து உலாவரச் செய்தனன். பின்னர்த் தொண்டர் சீர் பரவுவார் என்ற திருப் பெயரைச் சேக்கிழாருக்குச் குட்டி அரசனும் ஏனையோரும் வணங்கினர். முன் நம்பியாண்டார் நம்பிகள் தொகுத்த பதினொரு கிருமுறைகளோடு சேக்கிழார் பாடிய இப்புராணத்தையும் பன்னிரண்டாம் திருமுறை என்று நியமித்துச் செப்பேடு செய்து நடராசர் சந்நிதியில் ஏற்று வித்தார்கள். பின்னர்ச் சேக்கிழார் பெருமானும் தில்லை நகரில் அடியார்களுடன் கூடி அருந்தவந் தனிலிருந்து ஒரு வைகாசிப்பூச நாளில் சிவ பெருமான் திருவடி நீழலை எய்தினார். புராணத்துக்கு இட்ட பெயர் ’’இங்கிதன் நாமங் கூறின்..... திருத்தொண்டர் புராணம் என்பாம்’’ ‘ என்ற சேக்கிழார் வாக்கின்படி இந்நூலுக்குத் திருத்தொண்டர் புராணம் என்பது சேக்கிழார் இட்ட பெயராதல் கூடும். 14-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த உமாபதி சிவாசாரியார் இந்நூல் பாடியவரலாற்றைத் திருத்தொண்டர் புராண வரலாறு என்று தாமே பெயரிட்ட நூலில் ”சேண்டகைய திருத்தொண்டர் புராண மெனப் புராணத் திருமுறைக்குத் திருநாமம் சீர்பெற அமைத்திட்டு” (53) என்று பாடி யிருக்கின்றமையின் இந்நூலுக்குத் திருத்தொண்டர் புராணம் என்பதே முன் நாளிலும் வழங்கிய பெயராகக் கோடல் பொருந்தும். ”எடுக்கு மாக்கதை இன் தமிழ்ச் செய்யுளாய்” என்ற சேக்கிழார் வாக்கின்படி இதற்குப் பெரியபுராணம் என்ற பெயர் வந்தது என்று கூறுவாரு முளர். ஏனைய புராணங்களினும் சிறந்து விளங்கும் பெற்றியுடைத் தாதலின் இந்நூற்குப் பெரியபுராணம் என்ற பெயர் சாலவும் பொருந்தும. இப்புராணத்துக்கு ஆதரவுகள் சுந்தரர் அருளிய திருத்தொண்டத் தொகை இப் புராணத்துக்கு முதல் நூல்; நம்பியாண்டார் நம்பிகள் அருளிய திருத்தொண்டர் திருவந்தாதி வழிநூல். இப் புராணம் அவற்றின் வழியே வந்த விரிநூல். மற்றும் வித்தகப்பாடல் முத்திறத்து அடியார் பாடிய திருநெறிய மெய்ஞ்ஞானத்தமிழ் ஆகிய தேவாரங்களும், காரைக்கால் அம்மையாருடைய அருள் நூல்களும், சேரமான் பெருமாள் நாயனார் போன்றவர்கள் அருளிய நூல்களும், செவிவழிச் செய்திகளும் இந்நூலுக்கு ஆதரவுகளாம். உமாபதி சிவாசாரியாரும் இவற்றை யெல்லாம் இந்நூலுக்கு உறுப்பாகவும், பொருள்கோள் உயிராகவும், விருத்தப்பா உடல் ஆகவும் கொண்டு நடந்தது என்று சுவைபடக் கூறுகிறார். (செய்யுள், 81.) காலம் சேக்கிழார் தம்காலத்து அரசனைத் தம் புராணத்தில் பத்து இடங்களில் குறித்துள்ளார். அப்பத்து இடங்களிலும் அநபாயன் என்றே குறிக்கின்றர். சேக்கிழார் புராண ஆசிரியர் (உமாபதி சிவம்) ஓரிடத்தில் (செய் 98) அநபாயன் என்று குறிக்கின்றார். இவ்வாசிரியர் அபயன் என்று (செய் 59) குறித்தாற் போலவே, சேக்கிழாரும் இரண்டிடங்களில் அபயன் என்று குறித்துள்ளார். பெரிய புராணத்தில் பத்து இடங்களில் அநபாயன் குறிக்கப்பெற் திருத்தலின் அன்னவனே சேக்கிழார் காலத்தரசன் என்று துணிந்து கூறலாம். அநபாயன் பேரம்பலம் பொன் வேய்ந்தவன் என்று சேக்கிழார் பெருமான் செப்புவர். இவ்வநபாயனுக்குத் திருநீற்றுச் சோழன் என்ற சிறப்புப் பெயரும் உண்டு. அநபாயன் யார் ? : இரண்டாம் குலோத்துங்க சோழனுடைய 7-ஆம் ஆட்சியாண்டிற்குரிய திருவாரூர்க் கல்வெட்டில் (269 of 1901) ”ஆடிய நம்பிக்கும் பரவை நாச்சியார்க்கும் அர்ச்சனா போக இறையிலியாக அநபாய நல்லூர் என்னும் திருநாமத்தால்” என்ற பகுதியாலும், திருவாரூரிலுள்ள வடமொழிக் கல்வெட்டொன்றில் (73 of 1890) வியாக்கிராக்ரஹாரா ஹேம சபா நடேச பாதாரவிந்த மதுப அநபாயதாமாங்“[5] என்ற பகுதியாலும், இவனது 12-ஆம் ஆட்சியாண்டுக்குரிய களத்தூர்க் கல்வெட்டில் (346 of 1911) இவனது திருமந்திர வோலை “அநபாய மூவேந்த வேளான்” என்று காணப்படுவதாலும், அநபாயன் என்ற சிறப்புப் பெயர் இரண்டாங் குலோத்துங்க சோழனுக்கே உரியது என்பது உறுதியெய்தும். இவ்விரண்டாங் குலோத்துங்க சோழன் கி. பி. 1133 முதல் கி. பி. 1150 வரை அரசாண்டவன்; விக்கிரம சோழனுடைய மகன்; இரண்டாம் இராசராசனுடைய தந்தை. திருமழபாடிக் கல்வெட்டு : சேக்கிழார் எக்காலத்தில் வாழ்ந்தார் என்பதை அறிய இரண்டாம் இராசராச சோழனுடைய 17-ஆம் ஆட்சியாண்டுக் குரிய திருமழபாடிக் கல்வெட்டுச் சான்று பகர்கின்றது. அக்கல்வெட்டுப் பகுதியாவது:- ”ஜெயங் கொண்ட சோழ மண்டலத்துக் குலோத்துங்க சோழ வளநாடான புலியூர்க் கோட்டத்துக் குன்றத்தூர் நாட்டுக் குன்றத்தூர்ச் சேக்கிழான் மாதேவடிகள் இராம தேவனை உத்தம சோழப் பல்லவ ராயன்” (95 of 1920) என்பது. பாலறாவாயர் : மூன்றாம் குலோத்துங்க சோழனுடைய இரண்டாம் ஆண்டிற்குரிய கோட்டுர்ச் சாசனத்தில் (445 of 1912) சேக்கிழார் பாலறாவாயர் என்று ஒருவர் குறிக்கப் பெறுகிறார் சேக்கிழாருக்கு உத்தம சோழப் பல்லவராயன் என்ற சிறப்புப் பெயருண்மையை உமாபதி சிவாசாரியர் தாம்பாடிய சேக்கிழார் புராணத்தே குறிப்பிட்டமையா லறியலாம். சேக்கிழாருக்குப் பாலறாவாயர் என்ற இளவல் ஒருவர் இருந்தமையையும், சேக்கிழார் பெரிய புராணம் பாடிய பின்பு அரசர் பாலருவாயரை அழைத்து அவரையே தம் அமைச்சராகக் கொண்டார் என்றும் சேக்கிழார் புராணத்தில் உமாபதி சிவாசாரியர் பாடியுள்ளார் (செய் 98-99). இனிச் சாசனத்தில் கண்ட பாலறாவாயரும், உமாபதி சிவாசாரியர் கூறிய பாலறாவாயரும் ஒருவரே என்பதற்குத் தடையில்லை. மாதேவடிகள் : இனித் திருமழபாடிச் சாசனத்தில் கண்ட சேக்கிழார்க்கு மாதேவடிகள், இராமதேவன் என்ற சிறப்புப் பெயர்கள் இருந்தமை அக்கல்வெட்டால் அறியப் பெறுகின்றது. இச் சிறப்புப் பெயர்களை உமாபதி சிவாசாரியர் கூறவில்லை; எனினும், சேக்கிழாருடைய சிவபக்திச் சிறப்புக் கருதி மாதேவடிகள் என்று குறிக்கப்பட்டார் என்னலாம். உமாபதி சிவாசாரியர் 'குன்றை முனி சேக்கிழார்’ என்றும் (செய் 84), *அண்டவாணர் அடியார்கள் தம்முள் அருந் தவந்தனில் இருந்தவர்’ என்றும் (செய்யுள் 100) கூறியிருத்தலால், சேக்கிழாரை மாதேவடிகள் என்று சாசனம் குறித்தது. சாலப் பொருந்தும். இராமதேவன் : சாசனத்தில் சேக்கிழாருக்கு இராமதேவன் என்ற பெயருண்மையைக் காண்கிறோம். சாசனத்திலுள்ள முறையைக் காணின் இராமதேவன் என்பது சேக்கிழாரது இயற் பெயராகக் கொள்ளத் தோன்றுகின்றது. இராமதேவன் என்பது வைணவப் பெயராயிற்றே! சிறந்த சிவபக்திச் செல்வம் வாய்ந்த தந்தை வெள்ளியங்கிரியார் இவருக்கு இப்பெயர் அமைத் திருப்பரோ?’ என்ற ஐயம் எழக்கூடும். அறுபான் மும்மை நாயன்மார்களுள் நரசிங்க முனையரையரும், ஒன்பதாம் திருமுறை ஆசிரியர்களுள் புருஷோத்தம நம்பியும் சிவனடிமைத் திறம் உடைய வைணவப் பெயரினராவர். எனவே இராமப் பெயர் வைத்திருப்பினும் சாசனச் சேக்கிழார், பெரிய புராணம் பாடிய சேக்கிழாராதற்குத் தடையின்று. முடிந்தது முடித்தல்: இதுகாறும் கூறியவாற்றான் இரண்டாம் இராசராசனுடைய 17-ஆம் ஆட்சியாண்டுக்குரிய திருமழபாடிக் கல்வெட்டில் கண்ட சேக்கிழாரே பெரிய புராணம் அருளிய சேக்கிழார் ஆவர் என்று கொள்ளலாம். இரண்டாம் குலோத்துங்கன் கி. பி. 1150 வரை அரசாண்டவன். இரண்டாம் இராசராசனது ஆட்சி 1146 முதல் கணக்கிடப் பெறும். எனவே திருமழபாடிக் கல்வெட்டு கி. பி. 1163-க்கு உரியதாகும். எனவே சேக்கிழார் இரண்டாம் குலோத்துங்க சோழன் காலத்தில் சில ஆண்டுகள் அமைச்சராக இருந்து ஒய்வுபெற்று, இரண்டாம் இராசராச சோழனுடைய காலத்தில் சோழ நாட்டிலேயே வாழ்ந்திருந்தவராதல் கூடும் என்றும், அங்ஙனம் வாழ்ந்த பொழுது திருமழபாடி முதலிய தலங்களில் அறங்கள் புரிந்தாரென்றும் கொள்ளலாம். (மு. ரா. சாசனத்தமிழ்க்கவி சரிதம்.) சேக்கிழாரும் திருநாகேச்சுரமும் சேக்கிழாருக்குச் சோழ நாட்டுத் திருநாகேச்சுரத்து எம்பெருமான் மீது மிக்க அன்புண்டு. அவர் அத்தலத்தைத் தனக்குரிய அபிமானத் தலமாகவும், ஆன்மார்த்த தலமாகவும் கொண்டார்; அத்தலத்திலே பலகாலும் தங்கியிருந்து பல திருப்பணிகள் செய்துள்ளார். அத்தலத் திருக்கோயில் உட்பிராகாரம் தென் புறத்தில் சேக்கிழார், அவர் தம்பி பாலருவாயர், அவர் தாயார் ஆகிய மூவ உருவங்களும் எழுந்தருளுவிக்கப் பெற்று, வழிபாடுசெய்யப் பெறுகிறது. இத்தலத்தின் மேல் தனக்குள்ள அன்பு காரணமாகத் தொண்டை நாட்டிலே குன்றத்தூர் எல்லையில் திருநாகேச்சுரத்தைப் போன்றதோர் கோயிலைக் கட்டி அவ்வூர்ப் பகுதிக்கும் திருநாகேச்சுரம் என்று பெயரிட்டார். அக்கோயிலில் சேக்கிழாருக்கும் தனிக் கோயில் இருக்கிறது. உமாபதி சிவாசாரியாரும் இச் செய்திகளைப் பின்வரும் பாடலில் புகன்றுள்ளார்:- “ஆங்கவர் நீர் நாட்டு நித்தனுறை திருநாகேச் சுரத்தில் நிறைதலினால் மறவாத நிலைமை மிக்கார்” (அன்பு (செய் 18) என்பதும், “தம்பதிகுன் றத்துாரில் மடவ ளாகம் தானாக்கித் திருக்கோயில் தாபித் தாங்கண் செம்பியர் கோன் திருநாகேச் சுரம்போ லீதுந் திருநாகேச் சுரமெனவே திருப்பேர் சாற்றி அம்புவியில் அங்காங்க வைப வங்கட்(கு) ஆணபதி கலந்திருநாள் பூசை கற்பித்(து) இம்பர் புகழ் வளவன்அர சுரிமைச் செங்கோல் இமசேது பரியந்தம் இயற்று நாளில்” (செய். 1 9) என்பதும் அவை. சேக்கிழாரைப்பற்றிய நூல்கள் இங்ஙனம் சைவசமய உலகிற்கு ஆதவன் போன்ற சேக்கிழார் பெருமானின் வரலாற்றை உமாபதி சிவாசாரியார் இயற்றிய திருத் தொண்டப் புராண வரலாறு என்னும் இலக்கியத்திலும், திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளையவர்கள் இயற்றிய சேக்கிழார் பிள்ளைத்தமிழ் என்னும் இலக்கியத்திலும் நன்கு சுவைக்கலாம். மேலும், சைவ புராணங்களிலும், சைவத்தல புராணங்களிலும் சேக்கிழாரைப் பற்றிய தோத்திரங்கள் பல காணப்படுகின்றன. சேக்கிழாரைப் பற்றித் திரு. சோமசுந்தர தேசிகர் அவர்கள் சைவ சிகாமணிகள் இருவர் என்ற நூலில் உரை நடையில் வரைந்துள்ளார். திரு கா. சுப்பிரமணியப்பிள்ளை அவர்கள் சேக்கிழார் சுவாமிகள் சரித்திரம் என்ற நூலையும், திரு. சி. கே. சுப்பிரமணிய முதலியார் அவர்கள் சேக்கிழார் என்ற நூலையும் இயற்றித் தந்துள்ளனர். டாக்டர் திரு மு. இராசமாணிக்கனார் அவர்கள் பெரிய புராண ஆராய்ச்சி என்ற நூலிலும், திரு மு. இராகவையங்கார் அவர்கள் சாசனத் தமிழ்க் கவி சரிதம் என்ற நூலிலும், திரு. தி. கி. நாராயணசாமி நாயுடு அவர்கள் பெரிய புராணம் சமாஜப் பதிப்பிலும், சேக்கிழார் காலத்தை ஆய்ந்துள்ளனர். முடிப்புரை ”தாங்கும் வளவன் அநபாயன் தங்கள் மணியாய் அவனமைச்சர் தங்கள் சூளா மணியாயுத் தமச்சோ ழப்பல் லவன்எனும்பேர் ஓங்கும் படிகொள் விண்மணியாய் உவக்கும் அடியார் சரித்திரமுற்(று) உரை செய்து அருள் சிந்தாமணியாய்” விளங்கும் சேக்கிழார் பெருமானின் மா புராணமாகிய திருத்தொண்டர் புராணத்தை மக்கள் ஓதி யுய்க! * * * ↑ சேக்கிழார் பிள்ளைத் தமிழ், காப்புப் பருவம், செய்யுள் 4. ↑ திருத் தொண்டர் புராண வரலாறு செய்யுள், 77 ↑ சேக்கிழார் பிள்ளைத் தமிழ், சப்பாணிப் பருவம் செய்யுள் 29. ↑ அத்தி தருங் கவி-முப்பொருள் உண்மையைக் கூறும் கவி. ↑ இப்பகுதியின் பொருள்:- சிதம்பரத்தில் பொற்சபையில் உள்ள நடேசப் பெருமானின் திருவடித் தாமரைகளில் ஊதும் வண்டாக உள்ள அநபாயன் என்ற பெயருடையவன். அமராபரணன் சீயகங்கன்[1] கங்கர்கள் இந்நாளைய மைசூர்ப் பகுதியை ஆண்ட முன்நாளைய குறுநில மன்னர்கள் கங்கர்கள் என்று கூறப்பெறுவர். அன்னோர் கி. பி. மூன்று நான்காம் நூற்றாண்டு முதற் கொண்டு வரலாற்றில் குறிக்கப் பெறுகிறார்கள். பல்லவர் ஆட்சிக் காலத்தில் ஒரு சமயத்தில் பல்லவர் பக்கமுமாக இருந்தவர்கள். பெரும்பாலும் இவர்கள் மேலைச்சளுக்கியர்களுக்கு அடங்கியவர்களாகக் காணப்படுகின்றனர். சோழவரசர்கள் உயர் நிலையில் இருந்தபொழுது சோழர்களுக்கு அடங்கிய சிற்றரசர்களாகவே இவர்கள் தோன்றுகின்றனர். சீயகங்கன் என்ற பெயருடையான் முதற் குலோத்துங்கன் காலத்தில் ஒருவன் இருந்தான்; இரண்டாம் குலோத்துங்கன் காலத்திலும் ஒருவன் இருந்தான் ; இவ்விருவரும் சிவபக்தர்களாகவே திகழ்ந்தனர். அமராபரணன் சீயகங்கன் மேற்குறித்த இரு சீயகங்கரின் வழி வந்தவனும், கங்கமரபைச் சேர்ந்தவனும், மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் அவனுக் கடங்கிய குறுநில மன்னனாக விளங்கியவனு மாகியவனே அமராபரணன் சீயகங்கன். இற்றை நாளில் ’கோலார்’ என்று கூறப்படும் குவளாலபுரம் இவனுடைய தலைநகரமாகும். வடார்க்காடு மாவட்டம் திருவல்லத்தில் காணப்படும் கல்வெட்டில்: “ஸ்வஸ்தி ஸ்ரீ குலோத்துங்க சோழ தேவர்க்கு யாண்டு முப்பத்து நாலாவது அமராபரணன் சீயகங்கன் நம்பிராட்டியாரான அரியபிள்ளை "திருவல்ல முடைய நாயனர்க்கு வைத்த சந்தி விளக்கொன்றும்" (M. E. R. No. 446 of 1912-Sii Vol IIL No. 62) என்றும் காஞ்சிபுரத்து ஏகாம்பர நாதர் கோயிலில் கண்ட மூன்றாம் குலோத்துங்கனின் 27-ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டில், "ஸ்ரீமத் குவளாலபுர பரமேஸ்வரன் கங்க குலோற்பவன சிய்யகங்கன் அமராபரணான திருவேகம்ப முடையான் வைத்த திருநுந்தா விளக்கு ஒன்றுக்குப் பசு முப்பத்திரெண்டு ரிஷபம் ஒன்று’ (10 of 1893 Si Wol IV No. 823) என்றும், திருக்காளத்தியிலுள்ள மூன்றாம் குலோத்துங்கனுடைய மூன்றாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டில், “குவளாலபுர பரமேஸ்வர சீயகங்கரான சூரநாயகர்’ (195 of 1892 Vol IV 643) என்றும், திருக்காளத்தியில் உள்ள மூன்றம் குலோத்துங்க சோழனின் 34-ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டில், "உடையார் திருக்காளத்தியுடையார்க்குக் குவளால பரமேஸ்வரன் கங்ககுலோத்தமன் சூரநாயகன் திரு வேகம்பமுடையானான அமராபரணன் சீயகங்கன்" (116 of 1922) என்றும் காணப்படும் பகுதிகளிலிருந்து சீயகங்கன் என்ற இக்குறுநில மன்னனைப் பற்றி அறிய வருகிறது. மேற்கண்ட கல்வெட்டுக்களிலிருந்து இச்சீயகங்கனுக்கு இயற்பெயர் திருவேகம்பமுடையான் என்பது என்றும், சூரநாயகன், அமராபரணன் என்பன இவனுக்குரிய சிறப்புப் பெயர்கள் என்றும் அறியலாம். இச்சீயகங்கனின் கல்வெட்டுக்கள் மூன்றம் குலோத்துங்க சோழனின் மூன்றாம் ஆட்சியாண்டு முதல் முப்பத்துநான்காம் ஆட்சியாண்டு முடியத் தமிழகத்தில் காணப்படுகின்றன. பவணந்தி முனிவர் அமராபரணன் சீயகங்கன் காலத்தவரே பவணந்தி முனிவராவர். பவணந்தி முனிவர் இவ்வரசன் வேண்டு கோட்படியே நன்னூலை இயற்றினாரென்பது, அந்நன்னுாற் சிறப்புப் பாயிரத்தால் அறிந்ததாகும். குணகடல் குமரி குடகம் வேங்கடம் எனுநான் கெல்லையின் இருந்தமிழ்க் கடலுள் அரும்பொருள் ஐந்தையும் யாவரும் உணரத் தொகைவகை விரியில் தருகெனத் துன்னார் இகலற நூறி இருநில முழுவதும் தனதெனக் கோலித் தன்மத வாரணம் திசைதொறும் நிறுவிய திறலுறு தொல்சீர்க் கருங்கழல் வெண்குடைக் கார்நிகர் வண்கைத் திருந்திய செங்கோல் சீய கங்கன் அருங்கலை விநோதன் அமரா பரணன் மொழிந்தன னாக... என்பன அச்சிறப்புப் பாயிரவடிகள். பல்கலைக் குரிசில் பவணந்தி என்னும் புலவர் பெருமான் சனகாபுரத்தவல் என இச் சிறப்புப் பாயிரத்துப், "பொன்மதிற் சனகைச் சன்மதி முனியருள் பன்னருஞ் சிறப்பின் பவணந்தி" என்ற அடிகள் தெளிவுப்படுத்துகின்றன. சனகாபுரம் (சனகை) என்பது மைசூர் மாவட்டம் திருமுக்கூடல் நரசிபுரம் தாலுகாவிலுள்ள சனாகாதபுரம் ஆகும் (திரு. பண்டாரத்தார் சோழர் சரித்திரம், பாகம் 2, பக்கம் 116.) பவணந்தி முனிவர் ஒரு சமணர் என்பது யாவரும் அறிந்ததே. சீயகங்கனின் மனைவி மேலே குறித்த திருவல்லத்துச் சாசனம், இவனது மனைவியின் பெயர் அரிய பிள்ளை என்று பகரும். இவள் மூன்றாம் குலோத்துங்க சோழனுடைய 34-ஆம் ஆட்சி யாண்டில் (கி. பி. 1212-ல்) திருவல்லத்திலுள்ள சிவன் கோயிலுக்குத் திருவிளக்கு வைக்க நிபந்தம் அளித்துள்ளனள். சீயகங்கனின் மக்கள் இவனுடைய மகன் அருங்குன்றைப் பிள்ளையாரான செயகங்கன் (சீயகங்கன்) என்ற பெயருடையவன். அவன் திருக் காளத்தி ஈசர்க்குத் திருநுந்தா விளக்கு வைக்க 32-பசுக்கள் அளித்தனன். அவனுக்கு ஒரு தங்கை இருந்தாள் என்றும், அவள் வடவாயில் செல்வியாரான சந்திரகுல மாதேவியார் என்ற பெயருடையவள் என்றும் பிற்குறித்த கல்வெட்டினின்று அறியலாம்: "ஸ்வஸ்தி ஸ்ரீ திரிபுவன சக்ரவர்த்திகள் ஸ்ரீ குலோத்துங்க சோழ தேவற்கு யாண்டு மூன்றவது உடையார் திருக்காளத்தி யுடையார்க்குக் குவளால புர பரமேஸ்வரர் சீயகங்கரான சூரநாயகர் மகள் வடவாயில் செல்வியாரான சந்திரகுல மாதேவியார் தமையனார் அருங் குன்றைப் பிள்ளையாரான செயகங்கர் திருநுந்தா விளக்கு ஒன்றுக்கு விட்ட சாவா மூவாப் பசு முப்பத்திரெண்டு" (195 of 1892; Vol IV No. 643.) முடிப்புரை இதுகாறும் கூறியவாற்றான் இக்கங்கர் மரபினர் சிறந்த சிவபக்தி உடையவர்களாய் இருந்தனர் என்றும், சிறந்த தமிழ்ப்பற்று வாய்ந்தவர்களாய் விளங்கினர் என்றும் தெரியவருகிறது. "முன்னுரல் ஒழியப் பின்னூல் பலவினுள் எந்நூ லாரும் நன்னூ லாருக்(கு) இணையோ என்னும் துணிவே மன்னுக" என்று இலக்கணக் கொத்து ஆசிரியர் போற்றும் பெருமை வாய்ந்த நன்னூலை இயற்றுவித்த அருங்கலை விநோதனாகிய சீயகங்கனைப் போற்றும் முறையில் நன்னூலைக் கசடறக் கற்று, "மொழித்திறத்தின் முட்டறுத்து, முதனூற் பொருளுணர்ந்து" தமிழ் மாணாக்கர் விளங்குவாராக. * * * ↑ இது ஞானசம்பந்தத்தில் வெளிவந்தது. பெருமான் நம்பிப் பல்லவராயன் ஊரும் பேரும் பெருமான் நம்பிப் பல்லவராயன் எனப்படுபவன் ஜெயங்கொண்ட சோழ மண்டலத்து ஆமூர்க் கோட்டத்துக் காரிகைக் குளத்தூர் என்னும் ஊரவன். ஜெயங் கொண்ட சோழ மண்டலமென்பது முதலாம் இராசராச சோழன் காலத்திலிருந்து தொண்டை மண்டலத்துக்கு அமைந்த பெயர். தொண்டை மண்டலத்தின் இருபத்து நான்கு கோட்டங்களில் ஆமூர்க் கோட்டம் என்பதொன்று. அதிலொரு பகுதி சிறு குன்ற நாடு எனப்பட்டது; காரிகைக் குளத்தூர் உள்ள பகுதியே இது. அமிதசாகரர் என்பார் யாப்பருங்காலக் காரிகையைக் குளத்துணரிலிருந்து பாடிய காரணத்தால் குளத்தூர், காரிகைக் குளத்து என்று வழங்கலாயிற்று. இது இந்நாளில் பாலாற்றங் கரையில் செங்கற்பட்டுக்கு அருகிலுள்ள ஓரூராகும். இக்குளத்தூரில் வாழ்ந்த வேளாண் பெருமக்களில் ஒருவரே, குளத்துழான் திருச்சிற்றம்பல முடையான் பெருமான் நம்பியாரான பல்லவராயர். திருத்தொண்டர் புராண வரலாற்றாசிரியரும் வேளாண்குடிப் பெருமக்களுள் ஒரு வகையினர் எனக் குளத்துழான் குடியினரைக் குறிப்பிடுவர். இக் குளத்துழான் குடியிற் பிறந்தமையின் இக்குடிப் பெயர் இவன் பெயரோடிணைந்துள்ளது. பல்லவராயன் என்பது இரண்டாம் இராசராச சோழனால் அளிக்கப் பெற்ற சிறப்புப் பெயராகும். அலுவல் கி. பி. 1146 முதல் 1163 வரை சோழப் பேரரசனாக விளங்கிய இரண்டாம் இராசராச சோழன் காலத்திலும், அவனுக்குப் பிறகு அரசாண்ட இரண்டாம் இராசாதிராச சோழன் காலத்தில் ஏறத்தாழ எட்டாண்டுகள் (கி. பி. 1171) வரையிலும் இவன் சிறந்த படைத்தலைவனாக விளங்கியவன். இரண்டாம் இராசராச சோழன் காலத்திலே பாண்டி நாட்டுப் போரில் ஈடுபட்டுச் சிங்களப் படையை வென்று தன் புகழ் நிறுவியவகைக் காணப் படுதலின், இவன் அந்நாளில் சோழப் பேரரசில் திகழ்ந்த பெருந்தானத் தலைவன் என்பது உறுதி. பல்லவராயன் பேட்டைச் சாசனத்திலிருந்து (433 of 1924) மேலே குறிப்பிட்ட சிங்களப் படையை வென்ற செய்தியை அறிய வருவதோடு இவனுடைய இன்னொரு அலுவலும் தெரிய வருகிறது. இரண்டாம் இராசராச தேவருடைய பத்துக் கோயில் கொத்துக்களுக்கும், யானை குதிரை முதலிய எல்லாத் துறைகளுக்கும் தலைவனாகவும்: முன் ஏவல் செய்யும் ஏற்றமும் பெற்றிருந்த அரசனது அரண்மனை உள்துறைப் பேரலுவலனகவும் இருந்தான் என்று மேற் குறித்த பல்லவராயன் பேட்டைச் சாசனத்தின் 6-7-ஆம் வரிகளில் குறிக்கப் பெற்றுள்ளது. சேரனை வென்றமை பல்லவராயன் சேரனைப் போரில் வென்று அவன் பால் திறைகொண்டு வந்தான் என்ற செய்தி தக்கயாகப் பரணியிலுள்ள பின்வரும் தாழிசையால் அறியலாம் :- ”வில்லவனைத் திறைகொண்ட வேற்றண்டகாபதியைப் பல்லவனைப் பாடாதார் பசியனைய பசியினமே” (தக், 236) இத்தாழிசையில் கண்ட தண்டகா பதியைத் தக்கயாகப் பரணியின் உரையாசிரியர், 'தொண்டை நாட்டுக் குளத்துழார் குடியிற் பிறந்த பல்லவராயனான நம்பிப் பிள்ளை என்று குறித்துள்ளார். பல்லவராயன் பேட்டை பல்லவராயன் பேட்டை என்னும் ஊர் மாயூரத்துக்கு அண்மையில் உள்ளது. முன்னாளில் இவ்வூர்க்குக் குளத்தூர் என்ற பெயர் இருந்தது. இக் குளத்தூர், பின்னர் இப்பல்லவராயன் பெயராலே பல்லவராயன் பேட்டை என்று வழங்கி வரலாயிற்று. இவ்வூரில் பல்லவராயன் தன் அரசன் பெயரால் இராசராசேச்சுரம் என்னும் கோயிலெடுப்பித்து, அதற்கு இறையிலியாக நிலமும் அளித்தான் என்று இரண்டாம் இராசராசனுடைய 10-ஆம் ஆட்சியாண்டு (கி. பி. 1156) க்குரிய கல்வெட்டுக் கூறுகிறது. (435 of 1924). இந்தக் கோயிலுக்கு நாங்கூர் அவையினர் காசு கொள்ளா ஊர்க் கீழ் இறையிலியாக நிலமளித்தனர் என்று இரண்டாம் இராசராசனுடைய 15-ஆம் ஆட்சியாண்டுக்குரிய பல்லவராயன் பேட்டைக் கல்வெட்டில் உள்ளது (11 of 1925). திரு இந்தளூர் (திருவழுந்தூர்) மகா சபையினர், ஒரு வாய்க்கால் வெட்டுவதற்காகக் கொண்ட இக் கோயில் நிலத்துக்குப் பதிலாக, ஊர்க்கீழ் இறையிலியாக ஏழுமா நிலத்தை இக்கோயிலுக்குக் கொடுத்து, அவ்விடத்தில் தீர்த்தக்குளம் ஒன்று வெட்டுவதற்கு உத்தரவும் பெற்றனர் (6 of 1925). பல்லவராயன் இறந்த பிறகு இவ்வூரிலுள்ள நாற்பது வேலி நிலம் இவனுடைய மனைவி மக்கள் அனுபவிக்குமாறு இரண்டாம் இராசாதிராச சோழனால் அளிக்கப் பெற்ற செய்தி இவ்வூரில் கண்ட இன்னொரு சாசனத்தா (433 of 1924) அறியலாம். இரண்டாம் இராசாதிராசன் அரசன் ஆனமை. இரண்டாம் இராசராச சோழன் நோய்வாய்பட்டு இறக்கும் தறுவாயில் இருந்தான். அந்நாளில் அவனுக்கு ஈராண்டும் ஓராண்டும் நிரம்பிய இரு குழந்தைகள் இருந்தனர். மிக்க இளங்குழவிகளாதலின் அன்னோர்க்கு முடிசூட்ட இயலாமைக்கு மன்னன் பெருங்கவலை கொண்டான். அந்நாளில் கங்கைகொண்ட சோழபுரத்தில் சில அரச குமாரர்கள் இருந்தனர். அவர்களை வருவித்து அவர்களுள் விக்கிரம சோழ தேவருடைய பேரனாகிய நெறியுடைப் பெருமாளின் மகன் எதிரிலிப் பெருமாள் என்பவனுக்கு இளவரசுப் பட்டம் கட்டி அந்நாளிலேயே இரண்டாம் இராசராச சோழன் இறந்து போனான். அப்பொழுது சோழ நாட்டில் ஆட்சி உரிமை பற்றிக் கலகம் நிகழ்ந்திருத்தல் வேண்டும். அதனால் அமைச்சர் தலைவனாகிய பல்லவராயன் பழையாறையில் இருந்த ஆயிரத்தளி படை வீட்டிலிருந்து இராசராசனுடைய அந்தப்புர மகளிரையும், இளங் குழந்தைகள் இருவரையும், பரிவாரங்களோடு அழைத்து வந்து, இராசராசபுரத்திலே (தாரசுரத்தில்) காவல்மிக்க இடத்தில் இருக்கச் செய்து காப்பாற்றினான்; நாட்டுக்கும் எந்தக் குறைவும் உண்டாகாதவாறு பார்த்துக் கொண்டான்; இளவரசனாக ஆக்கப்பட்ட எதிரிலிப் பெருமாளை நான்காண்டுக் காலம் வரையிலும் இளவரசனாகவே இருக்கச் செய்து பின்னர் (இரண்டாம்) இராசாதிராசன் என்று அபிடேகம் செய்வித்துச், சோழப் பேரரசனாக ஆக்கினான் ; இரண்டாம் இராசாதிராச சோழன் ஆட்சியிலும் தலைமை அமைச்சனாக வீற்றிருந்து அரசியல் பொறுப்பையும் ஏற்று அரசாட்சியைத் திறமையாகப் பல்லவராயனே நடத்தி வந்தான். பாண்டிய நாட்டுப் போர் இரண்டாம் இராசாதிராச சோழன் காலத்தில் பாண்டிய நாட்டில் மதுரையில் அரசாண்டவன் பராக்கிரம பாண்டியன் எனப் பெற்றான். அவனுக்கும் அவன் தாயத்தின்னான குலசேகர பாண்டியனுக்கும் போர் மூண்டது. குலசேகர பாண்டியன் மதுரை நகரை முற்றுகை யிட்டான். பராக்கிரம பாண்டியன் தனக்கு உதவுமாறு சிங்கள வேந்தனாகிய பராக்கிரம பாகுவை வேண்டினான். இலங்காபுரித் தண்ட நாயகன் தலைமையில் சிங்களப் படை ஒன்று வந்தது. அப்படை வருவதற்குள் பராக்கிரம பாண்டியனும் அவன் மக்களும் கொல்லப்பட்டனர். இதனை யறிந்த இலங்காபுரித் தண்ட நாயகன் குலசேகர பாண்டியனை எதிர்த்துக் கடும்போர் புரிந்து வெற்றி யெய்தினான் ; மதுரை நகரைக் கைப்பற்றினான் ; கொலை செய்யப்பட்ட பராக்கிரம பாண்டியன் மகனும் மலை நாட்டுக்கு ஓடி ஒளிந்தவனுமாகிய வீரபாண்டியனை வருவித்து அவற்கு மதுரையை அளித்தான் ; கீழை மங்கலம் மேலை மங்கலம் முதலாகிய ஊர்களைப் பிடித்துக் கண்டதேவமழவராயன் ஆண்டு வருமாறு செய்தான் ; தொண்டி, கருந்தங்குடி முதலான ஊர்களைக் கைப்பற்றி மாளவச் சக்கர வர்த்தி என்பானிடம் ஒப்படைத்தான். இங்ஙனம் இலங்காபுரித் தண்ட நாயகன் வெல்வதையறிந்த குலசேகரன் மீண்டும் வீரபாண்டினைத் தாக்கினான் ; வீரபாண்டியன் மதுரையை விட்டு ஓடினன். இதைக் கண்ட இலங்காபுரித் தண்ட நாயகன் படைத்துணை அனுப்புமாறு வேண்ட, இலங்கையரசனாகிய பராக்கிரமபாகு ஜெகத் விஜய தண்ட நாயகன் என்பான் தலைமையில் பெரும் படையை அனுப்பினான். இவ்விரு படைத் தலைவர்களும், குலசேகர பாண்டியனைத் தோல்வியுறச் செய்து வீரபாண்டியனை மீண்டும் அரியணையில் அமர்த்தினார்கள். குலசேகர பாண்டியன் பன்முறை தோல்வி யுற்றமையால் மனம் நொந்து ஏறத்தாழக் கி. பி. 1167-ல் சோழ நாட்டிற்கு வந்து ‘‘என்னுடைய ராஜ்யம் நான் பெறும்படி பண்ண வேணும்‘‘ என்று இரண்டாம் இராசாதிராசனிடம் கேட்டுக் கொண்டான். இராசாதிராச சோழனும் திருச்சிற்றம்பல முடையான் பெருமான் நம்பிப் பல்லவராயன் தலைமையில் ஒரு படையை அனுப்பினான். தொண்டி, பாசி முதலாகிய ஊர்களில் போர்கள் நடந்தன ; ஈழப்படை வெற்றி யெய்தியது. சோழ மண்டலத்திலும் மற்றுமுள்ள நாடுகளிலும் உள்ள மக்களெல்லாம் அஞ்சினார்கள். இதனையறிந்த எதிரிலி சோழச் சாம்புவராயன் என்பான் உமாபதி தேவராகிய ஞானசிவதேவர் என்பாரிடம் விண்ணப்பித்துக்கொள்ள அவரும் சிங்களப் படை தோல்வியுற்று ஓடவேண்டும் என்று 28 நாட்கள் இரவும் பகலும் தவங்கிடந்தார். இறைவன் திருவருளால் பெருமான் நம்பிப் பல்லவராயன் சிங்களப் படைகளை வென்றன் ; சிங்களப் படைத் தலைவர்கள் இருவரையும் கொன்றான் ; அவர்கள் இருவர்களுடைய தலைகளையும் மதுரை வாசலிலே தைப்பித்தான். பிறகு குலசேகர பாண்டியனை மதுரையில் ஆட்சி செய்து வருமாறு செய்தான். (திரு. பண்டாரத்தார், சோழர் வரலாறு பாகம் II, பக்கம் 128-131) பல்லவராயனின் இறுதி இங்ஙனம் பாண்டிய நாட்டுப் போரில் வெற்றி யெய்திக் குலசேகர பாண்டியனுக்கு மதுரையும் அரசும் அளித்துத் திரும்பிய சில காலத்துக்கெல்லாம் (ஏறத்தாழக் கி. பி. 1171-ல்) பெருமான் நம்பிப் பல்லவராயன் நோய்வாய்ப்பட்டு இறந்தான். இவனுக்குப் பிறகு இரண்டாம் இராசாதிராச சோழனுக்குத் தலைமை அமைச்சனாக வந்தவன் ஜெயங் கொண்ட சோழ மண்டலத்துப் பழையனூர் நாட்டுப் பழையனூர் உடையான் வேதவன முடையான் அம்மையப்பனரான அண்ணன் பல்லவராயன். பல்லவராயன் பேட்டைச் சாசனம் இரண்டாம் இராசாதிராச சோழனுடைய 8-ஆவது ஆட்சியாண்டில் இச்சாசனம் கொடுக்கப் பட்டது. கி. பி. 1171-ல் பெருமான் நம்பிப் பல்லவராயன் இறந்தபோது அவன் விருந்தங்களுக்கும் (மனைவியர்களுக்கும்), மக்களுக்கும், பெண் மக்களுக்கும், தாயார்க்கும், உடன் பிறந்தாளுக்கும், உடன் பிறந்தாள் மக்களுக்கும் இராசாதிராசன் குளத்தூரில் நாற்பதிற்று வேலிநிலம், வேதவனமுடையான் அம்மையப்பனாரான அண்ணன் பல்லவராயன் நிச்சயித்தபடி இரண்டாம் இராசாதிராச சோழனால் அளிக்கப்பட்டது. அங்ஙனம் அளிக்கப்பட்ட நிலத்தின் விவரம் பின்வருமாறு : I. மனைவியர் 1. சிற்றாலத்தூருடையான் மகளுக்கு 3-வேலி நிலம் 2. ஆலி நாடுடையான் மகளுக்கு 3- „ 3. நெற்குன்றங்கிழார் களப்பாளராயர்[1] மகளுக்கு 3-வேலி நிலம் 4. அம்பர் அருவந்தை காலிங்கராயர் மகளுக்கு 3- „ II. மக்கள் 1. ஆலி நாடுடையான் மகளுக்கு மக்களான மூவர்க்கு 6- „ 2. நெற்குன்றங்கிழார் களப்பாளராயர் மகளின் மகன் அழகிய தேவனுக்கு 3- „ :மேற்படியாளின் மூன்று பெண் மக்களுக்கு 6- „ 3. அம்பர் அருவந்தை காலிங்கராயர் மகளுக்கு மக்களில், சேந்தன் திருநட்டமாடி வீர நம்பி தேவங்குடையான் மகளுக்கும் இவள் மகளுக்கும் 2- „ III. உறவினர் இராஜராஜ தேவர் மனைவிகளுக்கும் மக்களுக்கும் 8- „ IV. தாயார் வைப்பூருடையார் மகளார்க்கு 1- „ V. உடன் பிறந்தார் விழியூருடையானுக்குப்புக்க பெண்ணுக்கும் அவள் மகளுக்கும் 2- வேலிநிலம் ----------------- ஆக அளிக்கப்பட்ட நிலம் கூடுதல் 40 வேலி ----------------- மேற் குறித்தவற்றிலிருந்து பெருமான் நம்பிப் பல்லவராயனுக்கு நான்கு மனைவிமார்கள் இருந்தனர் என்றும், ஐந்து ஆண்மக்களும் மூன்று பெண் மக்களும் இருந்தனர் என்றும், ஒரு மகன் இவன் இறப்பதற்கு முன்னதாகவே இறந்திருத்தல் கூடுமென்றும், இவன் இறந்த பிறகும் இவன் தாயாகிய வைப்பூருடையான் மகளார் உயிர் வாழ்ந்திருந்தாள் என்றும், இவனுக்கு ஒரு உடன் பிறந்தாள் இருந்தாள் என்றும் தெரிய வருகிறது. மேல் III-ல் உறவினர் என்ற பகுதியில் குறிக்கப்பட்ட இராசராச தேவர் எனப்படுபவன் பெருமான் நம்பிப் பல்லவராயனுக்கு நெருங்கிய உறவினனாகவும், அவன் அன்புக்கு உரியவனாகவும் இருந்திருக்கவேண்டும். இவ் இராசராச தேவர் என்பானை இரண்டாம் இராசராச சோழன் என்பாரும் உளர்.[2] அக் கருத்துப் பொருந்துவதாகத் தோன்றவில்லை. “உடையார்“ என்னும் அரசருக்குரிய அடைமொழி இன்மையும் ஆகைப்பட்டனல்லன் என்ற கருத்தையே வலியுறுத்தும். * * * ↑ முதற் குலோத்துங்கன் காலத்தில் வாழ்ந்த புலவரும் அரசியல் அலுவலரும் இப் பெயருடையவர் : 1120 இல் வாழ்ந்தவர். ↑ Colas, K. A. N. Vol. II p. 92. மணவாளப் பெருமாள் காடவராயர்கள் காடவராயர்கள் பல்லவர் வழியில் ஒரு கிளையினர் : திருமுனைப்பாடி நாட்டுக் கூடலூரையும் சேந்த மங்கலத்தையும் தலை நகராகக் கொண்டு சோழர்களின் கீழ் அதிகாரிகளாக இருந்தவர்கள். இவர்கள் பெரும்பாலும் சோழ அரசர்களிடம் பேரன்பு உடையவர்களாய் உற்றுழி உதவியும் வந்துள்ளனர். சிம்ம விஷ்ணுவை முதலாகக் கொண்ட பல்லவமரபினர் தம்மைக் காடவர் என்று கூறிக் கொள்ளவில்லை எனினும், இரண்டாம் நந்திவர்மனது முன்னோர்கள் காடவர்குலத் தோன்றல்கள் என்று தம்மைக் குறிப்பிட்டுக் கொண்டார்கள் என்பது இங்கு அறியத் தகும். வீரசேகரக் காடவராயன் இவன் மேற்குறித்த காடவர் மரபில் தோன்றியவன்; கூடலூர் என்ற நகரில் வாழ்ந்தவன். இவன் அரச நாராயணன் ஆளப்பிறந்தானான வீரசேகரக் காடவராயன் என்று கல்வெட்டுக்களில் குறிக்கப் பெற்றுள்ளான். இவன் மூன்றாம் குலோத்துங்கனுடைய 9-ஆம் ஆட்சி யாண்டில் திருநறுங்கொண்டை நாற்பத் தெண்ணாயிரப் பெரும் பள்ளித் தேவர்க்குத் திருநாமத்துக் காணியாக நிலமளித்துள்ளான் (381 of 1902); அக்குலோத்துங்கனுடைய 13-ஆம் ஆட்சி யாண்டில் திருவண்ணாமலை யுடைய நாயனார்க்குச் சாத்தியருள ஏகாவலி வடம் ஒன்று அளித்துள்ளான் (531 of 1902). மேற்படி குலோத்துங்கனின் 25-ஆம் ஆட்சியாண்டு (கி. பி. 1203)க்குரிய திரு வெண்ணெய் நல்லூர்க் கல்வெட்டில் (312 of 1902 s.I.I.VI.1941) இவன் கூடலூருடையான் வீரசே அதிகைமான் என்று குறிப்பிடப்பெறுகிறான்- னால் இவன் அதிகைமானை வென்றிருத்தல் கூடும் என்று அறியப்பெறும். சகரயாண்டு 1108-க்குரிய (கி.பி. 1186) விருத்தாசலம் கோயிலில் கண்ட பாடல் சாசனத்தில் (74 of 1918; S. 1. . Vol XII No 263) இவன் முன்னேர்கள் சிலருடைய வரலாறுகள் கூறப்படுவதோடு, இவன் அதிகைமானை வென்றமையும் கூறப்ட்டுள்ளது. 'கண்டராதித்தன் வாசலுக்கு மேற்கே புறப்பட்டுக் டக மாராயன் கூடலும் அதிகைமானாடும் அழித்து வெற்றிக்கொடி யுயர்த்தி அனுமனும் பொறித்தான்' என்ற கல்வெட்டுப் பகுதி. இதில் கண்டராதித்த வாசல் என்பது இந்தக் கல்வெட்டிருக்கும் கோபுரமாகக் கருதப்படுகிறது. இதில் கண்ட கூடல் என்பது சேலம் மாவட்த்திலுள்ள தீர்த்தாமலை என்னும் ஊர் என்பர். இந்தக் கல்வெட்டின்படி ஒன்று திருவெண்ணெய் நல்லூர்க் புரீஸ்வரர் கோயிலிலேயும் காணப்படுகிறது. (464 21: S I Vol xi No 264). இவ்விரு கல்வெட்டுக்களிலிருந்து இவன் ஆளப்பிறந்தான் என்ற சிறப்புப் பெயரை உடையவன் என்றும், அதிகைமானை வென்றவன் என்பதும், கூடல் என்பது கற்கடக மாராயனுக்கு உரிது என்றும், இவனுடைய கொடி அனுமக்கொடி என்றும் அறியலாம். இவ்வீர சேகரக் காடவராயனின் மகனாகக் கருதப்படுபவன் கூடல் ஏழிசைமோகன் மணவாளப்பெரு வாணிலை கண்ட பெருமாளாகிய இராஜராஜக் காடவராயன். சமோகன் இராஜராஜக் காடவராயன் ஏழிசை மோகன் என்பது இவன் முன்னோர்களும் கொண்டிருந்த சிறப்புப் பெயர்களுள் ஒன்று. ஏழிசை மோகன் திருமண்டபம்என்று ஒருமண்டபம் இரண்டாம் குலோத்துங்க சோழனது 15-ஆம் ஆட்சியாண்டில் கட்டப்பட்டதாக ஒரு கல்வெட்டு விருத்தாசலத்தில் கானப்படுகிறது. எனவே ஏழிசைமோகன் என்பது இவன் குலத்தோருக்குரியசிறப்புப்பெயர் என அறியலாம். இராஜராஜக் காடவராயன் என்பது இவனது இயற்பெயராகும். வாணிலை கண்ட பெருமாள் வானிலை என்பது புறப்பொருள் துறைகளில் ஒன்று. ’செற்றார்மேல் செலவமர்ந்து, கொற்றவாணாட் கொண்டன்று’ என்பது கொளு. இக் கொளுவிற் கண்டவண்ணம் வாளைப் புறவீடு செய்வித்துப் பகைவர்மேற் சென்று வாள்கொண்டு வெற்றி யெய்தியமையின் இவனுக்கு வாணிலை கண்ட பெருமாள் என்ற சிறப்புப் பெயர் வந்திருக்க வேண்டும். அதுவும் மூன்றாம் குலோத்துங்கன் நிகழ்த்திய போர்களில் செற்றார் மேல் சென்று வென்றமையின் இவன் இங்ஙனம் பாராட்டப் பெற்றான். இவனுக்குரிய இச்சிறப்புப்பெயர் மூன்றாம் குலோத்துங்கனின் 17-ஆம் ஆட்சியாண்டிற் குரிய (கி.பி. 1195) திரு வெண்ணெய் நல்லூர்க்கல்லெழுத்திலும் (313 of 1902), இச்சோழனுடைய 28-ஆம் ஆட்சியாண்டிற்குரிய விருத்தாசலம் கல்வெட்டிலும் (133 of 1900) குறிக்கப்பெற்றுள்ளன. மணவாளப் பெருமாள் மேலே கூறிய விருத்தாசலம், திருவெண்ணெய் நல்லூர்க் கல்லெழுத்துக்களினின்று இவனுக்கு மணவாளப் பெருமாள் என்ற சிறப்புப் பெயர் இருந்தது என்று தெரியவருகிறது. இவனுடைய போர் வீரத்தையும் பேராற்றலையும் கண்ட மூன்றாம் குலோத்துங்கசோழன் இவனுக்கு மகள் ஒருத்தியைத்திருமணம் செய்வித்துச் சிறப்புச் செய்தான். அந்நாள் முதல் இவன் மணவாளப்பெருமாள் என்று வழங்கப் பெற்றனன் என்று ஆய்வாளர் பகர்வர் (திரு. பண்டாரத்தார், சோழர் வரலாறு பாகம் 2, பக்கம் 179-180). வாணிலை கண்ட பெருமாள் என்ற சிறப்பு எய்துவதற்கு முன்னதாகவே மணவாளப் பெருமாள் என்ற சிறப்பை இவன் எய்தியிருத்மல் கூடும். இதனை 'மணவாளப் பெருமாளான ரிலே கொண்ட பெருமாளான ராஜராஜக்காடவராயர்’’ என்ற கல்வெட்டுத் தொடரில் கண்ட முறை யினின்று கூர்ந்து அறியலாம். இவனை முதற் கோப்பெருஞ் சிங்கன் என்றும் ஆராய்ச்சியாளர் கூறுவர். சோழனோடு முரண்பட்டமை மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்தில் குறுநில மன்னர்கள் தத்தம் நாட்டுப் பகுதிகளைச் சுதந்திரம் பெற்றே ஆண்டு வந்தார்கள். ஒரோவழித் தங்களுக்குள் முரண்பட்டுப் பேரரசுக்கு இடையூறு விளைவித்தவரும் உண்டு. அவ்வமயங்களில் சோழப் பேரரசின் நன்மையின் பொருட்டும் சோழப் பேரரசின் பெருமைக்கு இழுக்கு வாரா திருத்தற் பொருட்டும், பலரும் ஒருங்கு சோழ அரசனுக்கு அடங்கியிருப்பதாக உடன்படிக்கை செய்து கொள்வதுண்டு. அரசனது ஆணையை மீறி நடந்தால் அரசனிடம் அன்புடையவர்கள் எல்லோரும் ஓருங்கு சேர்ந்து பேரரசனைப் பகைத்த குறுநில மன்னன் இடம் தாமும் பகைமை பூண்டு உடன்படிக்கை செய்து கொள்வதுமுண்டு. அங்ஙனம் செய்த உடன்படிக்கைகளில் மூன்றாம் குலாத்துங்கனுடைய 27-ஆம் ஆட்சியாண்டுக்குரிய திருவண்ணாமலைக் கல்வெட்டில் பதின்மர் தலைவர்கள் ஒருங்கு சேர்ந்து அரசியலுக்குக் கேடு சூழ்ந்த சிலருடன் பகைமை கொள்ள உடன்படிக்கை செய்து கொண்டது ஒன்று. கேடு சூழத் தொடங்கியவர்கள் குலோத்துங்க சோழ வாணகோவரையன், மகதை நாடாழ்வானான வாணகோவரையன் என்பவர்களோடு, இராஜராஜக் காடவராயனும் காணப்படுகின்றான். மேற்படி உடன்படிக்கையின் சில பகுதிகள் வருமாறு:- “நாங்கள் ஒரு காலமும் இராஜ காரியத்துக்குத் தப்பாமே நின்று, சேதிராயர் அருளிச் செய்தபடியே பணி செய்யக் கடவோமாகவும். இப்படிச் செய்யுமிடத்துக் குலோத்துங்க சோழ வாணகோவரையனும், மகதை நாடாழ்வானான வாணகோவரையனும், இவர்கள் பக்கல் ஆளாதல் ஒலையாதல் போகக் காட்டுதல் உறவு பண்ணுதல் செய்யக் கடவோம் அல்லாதோம் ஆகவும்... ... ... எங்களிலே ஒருவுரை வாணகோ வரையராதல், இராஜ ராஜக் காடவராயராதல் வினை செய்தாருண்டாகில் படையும் குதிரையும் முதலுக்கு நேராகக் கொண்டு குத்த கடவோமாகவும் (S. I. I. Vol VIII No. 106). இப்பகுதியினின்று, இராஜராஜக் காடவராயன் தன்னலம் கருதி அரசனுக்கு முரண்பட்டவனுகக் கருதப்பட்டானென அறிய வருகிறது. இவன் செய்த அடாத செயல்களே பின்னர்ச் சோழப் பேரரசின் அழிவுக்கு வழி கோலியன. தன்னலங் கருதிச் செய்த செயலானது ஒரு பேரரசுக்கே முடிவு கோலியதாயிற்று! ஏழிசை மோகன் சந்தி சேந்த மங்கலத்துள் “சகலபுவன சக்ரவர்த்திகள் ஸ்ரீ மணவாளன் பெருமாளுடையார்க்கு யாண்டு அஞ்சாவது“ என்று தொடங்கி ஒரு கல்வெட்டுள்ளது (S. I. I. Vol VIII No. 850). ஸ்ரீ மணவாளன் பெருமாளுடையார் என்பது இங்கு எடுத்துக்கொண்ட தலைவனாகவே கருதல் தகும். இம் மணவாளன் பெருமாள் சேந்த மங்கலத்துள் ஊரும் படைவீடும் செய்து, வாணிலை கண்டீசுரமுடைய நாயனாரை எழுந்தருளப் பண்ணி அப் பெருமானுக்கு ஏழிசை மோகன் சந்தி என்ற நாள் வழிபாட்டையும் தொடங்கி நிபந்தம் விட்டான் என்று அக் கல்வெட்டில் உள்ளது. ’ஊரும் படை விடும் செய்து’ என்றதால் இவனே சேந்த மங்கலத்தை அரண் பொருந்திய ஊராக அமைத்தான் என்றும், ’வாணிலை கண்டீசுவர நாயனாரை எழுந்தருளப்பண்ணி’ என்றமையான் இவனே தன் சிறப்புப் பெயரால் கோயில் அமைத்து இறைவனை எழுந்தருள்வித்தான் என்றும், “இந்நாயனார்க்கு நாம் கண்ட ஏழிசைமோகன்சந்தி’ என்ற பகுதியால் இவன் தன் குலப்பெயராகிய ’ஏழிசை மோகன்’ என்ற பெயரால் நாள் வழிபாட்டை நியமித்து நிபந்தம் விட்டான் என்றும் அறிய வருகிறது. முடிப்புரை இதுகாறும் கூறியவற்றால் இவனும் இவன் முன்னோரும் சிறந்த சிவபக்திச் செல்வம் வாய்ந்தவர்கள் என்பதும், மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்திலும் அவனுக்கடுத்து வந்த மூன்றாம் இராசராச சோழன் காலத்திலும் இவன் திகழ்ந்தவன் என்பதும், முதலில் மூன்றாம் குலோத்துங்க சோழனாலே அபிமானிக்கப் பெற்று அவனால் சிறப்பிக்கப் பெற்றவனென்பதும், இவனே பின்னர்ச் சகல புவனச் சக்ரவர்த்திகள் முதற் கோப்பெருஞ் சிங்கனாக விளங்கினானென்பதும் அறியலாம். * * * இந்த மின்னூலைப் பற்றி உங்களுக்கு இம்மின்னூல், இணைய நூலகமான, விக்கிமூலத்தில் இருந்து கிடைத்துள்ளது[1]. இந்த இணைய நூலகம் தன்னார்வலர்களால் வளருகிறது. விக்கிமூலம் பதிய தன்னார்வலர்களை வரவேற்கிறது. தாங்களும் விக்கிமூலத்தில் இணைந்து மேலும் பல மின்னூல்களை அனைவரும் படிக்குமாறு செய்யலாம். மிகுந்த அக்கறையுடன் மெய்ப்பு செய்தாலும், மின்னூலில் பிழை ஏதேனும் இருந்தால் தயக்கம் இல்லாமல், விக்கிமூலத்தில் இம்மின்னூலின் பேச்சு பக்கத்தில் தெரிவிக்கலாம் அல்லது பிழைகளை நீங்களே கூட சரி செய்யலாம். இப்படைப்பாக்கம், கட்டற்ற உரிமங்களோடு (பொதுகள /குனு -Commons /GNU FDL )[2][3] இலவசமாக அளிக்கப்படுகிறது. எனவே, இந்த உரையை நீங்கள் மற்றவரோடு பகிரலாம்; மாற்றி மேம்படுத்தலாம்; வணிக நோக்கத்தோடும், வணிக நோக்கமின்றியும் பயன்படுத்தலாம் இம்மின்னூல் சாத்தியமாவதற்கு பங்களித்தவர்கள் பின்வருமாறு: Deepa arul Deepa arul kaniyam Guruleninn Arularasan. G Balajijagadesh Info-farmer * * * ↑ http://ta.wikisource.org ↑ http://creativecommons.org/licenses/by-sa/3.0/ ↑ http://www.gnu.org/copyleft/fdl.html