கம்பராமாயணம் (உரைநடை) டாக்டர் ரா. சீனிவாசன் 8 அக்டோபர், 2020 அன்று விக்கிமூலத்தில் இருந்து பதிவிறக்கப்பட்டது உலகளாவிய பொதுக் கள உரிமம் (CC0 1.0) இது சட்ட ஏற்புடைய உரிமத்தின் சுருக்கம் மட்டுமே. முழு உரையை https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode என்ற முகவரியில் காணலாம். பதிப்புரிமை அற்றது இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர். நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை. *** இது, உலகத் தமிழ் விக்கியூடகச் சமூகமும் ( https://ta.wikisource.org ), தமிழ் இணையக் கல்விக் கழகமும் ( http://tamilvu.org ) இணைந்த கூட்டுமுயற்சியில், பதிவேற்றிய நூல்களில் ஒன்று. இக்கூட்டு முயற்சியைப் பற்றி, https://ta.wikisource.org/s/4kx என்ற முகவரியில் விரிவாகக் காணலாம். Universal (CC0 1.0) Public Domain Dedication This is a human readable summary of the legal code found at https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode No Copyright The person who associated a work with this deed has dedicated the work to the public domain by waiving all of his or her rights to the work worldwide under copyright law including all related and neighboring rights, to the extent allowed by law. You can copy, modify, distribute and perform the work even for commercial purposes, all without asking permission. *** This book is uploaded as part of the collaboration between Global Tamil Wikimedia Community ( https://ta.wikisource.org ) and Tamil Virtual Academy ( http://tamilvu.org ). More details about this collaboration can be found at https://ta.wikisource.org/s/4kx. கம்பராமாயணம் பேராசிரியர் டாக்டர் ரா.சீனிவாசன் எம்.ஏ., எம்.லிட்.,பி.எச்.டி., அணியகம் நூல் விளக்கம் முதற்பதிப்பு: 1992 இராண்டாவது பதிப்பு: 1998 மூன்றாவது பதிப்பு: 2000 நூலின் பெயர்: கம்பராமாயணம் ஆசிரியர்: ரா. சீனிவாசன் பொருள்: இலக்கியம் பதிப்பகம்: அணியகம், 5, செல்லம்மாள் தெரு, செனாய் நகர், சென்னை-30. தொலைபேசி: 6479772. தாள் மேப்லித்தோ: 13.6 Kg. அளவு: Crown 1/8 எழுத்து: 10 புள்ளி விலை: ரூ. 90 அச்சகம்: மைக்ரோ அச்சகம் சென்னை - 29. உள்ளடக்கம் முன்னுரை விமர்சனம் இறை பால காண்டம் அயோத்தியா காண்டம் ஆரண்ய காண்டம் கிட்கிந்தா காண்டம் சுந்தர காண்டம் யுத்த காண்டம் முன்னுரை கம்பர் வடமொழிக் காவியத்தைத் தென் தமிழ் மொழியில் கவிதைச் சொற்களைக் கொண்டு காவியம் படைத்துத்தந்திருக்கிறார். கம்பர் காவியத்துக்கே அவர் எடுத்தாளும் சொற்கள் தனிச் சிறப்பைத் தருகின்றன. “செஞ் சொற் கவி இன்பம்” அவர் ஊட்டியது. அவ்வின்பம் சிறிதும் குறையாது உரைநடையில் இந்நூல் படைக்கப்பட்டுள்ளது. கம்ப ராமாயணக் கதை மட்டும் எடுத்துக் கூறுவது இவ்வுரைநடை நூல். கதைக் கோவை கெடாமல் நிகழ்ச்சிகளைச் சித்திரிக்கிறது இந்நூல்; உரைநடை இதற்குத் தனிச்சிறப்புத் தருகிறது. சில பதிப்புகளைக் கண்ட இந்நூல் அழகாக அச்சிடப்பட வேண்டும் என்ற முயற்சி எடுத்துக் கொள்ளப்பட்டது. ஒளி அச்சில் தக்கதாளில் இந்நூல் வெளிவருகிறது. இந்நூல் தரம் மிக்கதாக அமைய எல்லா முயற்சிகளும் எடுத்துக் கொள்ளப்பட்டன. எம் வெளியீடுகள் சில இலக்கியப் பின்புலம் கொண்டவை; அவை நிலைபேறு பெறத்தக்கவை என்பதால் மறுபதிப்புக் காண்கின்றன. ரா.சீனிவாசன் விமரிசனம் கம்பராமாயணம் ராசீ அமரகவி பாரதியாரால் பாராட்டப் பெற்ற கம்பனின் காவியமான கம்பராமாயணம் இன்றைய உரைநடை உலகத்தில் புதிய உருவெடுத்து ‘உரை நடை’ நூலாக வெளி வந்துள்ளது. சிலபேர் உரை நடையைக் கவிதையாக்கிக் கொண்டிருக்கிற இக்கால கட்டத்தில் உரைநடை ஆசிரியர் கவித்துவமான வரிகளை உரைநடையின் பெயரில் காவியச் சுவை குன்றாமல் செறிவான வரிகளுடன், நளினமான வார்த்தைக் கோப்புகளுடன் வளமையான தமிழில் வழங்கியுள்ளார் இலக்கிய சோதனைக்காரர் ‘பேராசிரியர் ராசீ’. இவரின் புதுமுயற்சி வெற்றிபெற்றுள்ளது என்று தான் கூற வேண்டும். தெளிவான சிறந்த சொல்லாட்சி ஆசிரியரின் வெற்றிக்கு அடிப்படைக் காரணமாகும். இன்றியமையாத தருணங்களில் மட்டுமே ‘கவிதை வரிகள்’ கண் சிமிட்டுகின்றன. மற்றபடி நூலெங்கும் உரைநடை ராஜ நடை போடுகிறது. பண்டித தமிழிலன்றிப் பழகு தமிழில், சுவைபட எழுதப்பட்டுள்ளதால் நூலின் பக்கங்கள், நம் விரல் 8 துடுப்புகளில் விரைந்து தள்ளப்படுகின்றன. தொய்வில்லாத ஆற்றொழுக்கான உரைநடை. காட்சிகள் கண் முன்னே உயிர்பெற்று உலவும் அதிசயத்தை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்; இதனை மிகச் சிறந்த உலக அளவிலான நாடக நூல் என்று அறுதியிட்டுக் கூறலாம். பாராட்டு கம்பனுக்கு மட்டுமல்ல; போராசியர் ராசீக்கும் தான். உரையின் சிறப்புக்குச் சான்று:- இதோ:-அனுமனிடம் சீதை கூறியது “தாரம் அல்லள் என்று சொல்லி என்னை ஒரம் கட்டலாம். அதற்காகத்தன் வீரம் காட்டாமல் இருப்பது அவன் ஆண்மைக்கு இழுக்கு என்பதை நினைவுறுத்து.....” என்றாள். “வாழ்வதா, வீழ்வதா என்பதுதான் என் வாழ்க்கைப் பிரச்சனை” என்றாள். மொத்தத்தில் அனைவருக்கும் பயனளிக்கும் நூல்; சிறந்த முயற்சி; பாராட்டுக்கள். எம்.எஸ். தியாகராஜன் சீரை சுற்றித் திருமகள் முன் செல முரிவிற்கை இளையவன் பின் செலக் காரை யொத்தவன் போம்படி கண்ட அவ் ஊரை உற்றது உணர்த்தவும் ஒண்னுமோ இறை வணக்கம் உலகம் யாவையும்தாம் உள ஆக்கலும் நிலைபெறுத்தலும் நீக்கலும் நீங்கலா அலகு இலா விளையாட்டு உடையார் அவர் தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே. படைத்தலும், காத்தலும், அழித்தலும் இறைவனுக்குத் தொடர்ந்த விளையாட்டுகளாகும். அவர் எம் தலைவர் ஆவார். அன்னவர்க்கே நாங்கள் அடைக்கலம். இறைவன் எம்மைக் காப்பானாக. கம்பராமாயணம் பால காண்டம் கோசல நாடு மானுடத்தின் வெற்றியை உலகுக்கு உணர்த்திய முதல் தெய்வ மகன் இராமன்; அவன் அவதரித்த அழகிய திருநாடு கோசல நாடு. அது பழம் பெருமைமிக்கது; அதைச் சத்திய விரதன் ஆகிய தசரதன், சக்கரவர்த்தி என்ற பெருமையோடு ஆண்டு வந்தான். அவன் உதித்த குலம் சூரிய குலம் என்பர். மனு என்பவனும் இக் குலத்தில் பிறந்தவனே. மக்களை நன்னெறிப்படுத்த நீதிநெறிகளை வகுத்துக் கொடுத்தவன் இவன். மழைவளம் குன்றி, மண்வளம் குறைந்த மகிதலத்துக்கு விண்ணுலகினின்று கங்கையை வரவழைத்த பகீரதனும் இக்குலத்தில் தோன்றியவனே. அவனுடைய விடாமுயற்சியை மாநிலம் போற்றுகிறது. அரிதின் முயன்று ஆற்றும் செயலுக்குப் “பகீரதப் பிரயத்தனம்” என்ற தொடர் இன்றும் வழங்குகிறது. இச்சுவாகு என்ற அரசனின் மெச்சத்தக்க புகழ் இன்றும் பேசப்படுகிறது. அவனால் இக்குலம் “இச்சுவாகு குலம்” என்று நச்சி உலகம் போற்றுகிறது. காகுத்தன் என்பவன் தேவர்களின் ஆகுலங்களைத் தீர்த்தவன்; அவர்கள் குறை கேட்டு அசுரர்களோடு போராடி அவர்கள் வாழ்வை மலரச் செய்தவன். பெருமைமிக்க இக் குலத்தில் பிறந்ததால் இவனைக் “காகுத்தன்” என்றும் அழைத்தனர். ரகு என்ற அரசனும் இக்குலத்திற்குப் பெருமை சேர்த்தவர்களுள் ஒருவன்; அதனால் இராமனை, “இரகுராமன்” என்றும், “இரகுகுல திலகன்” என்றும் அழைத்து வந்தனர். நீதியும் நேர்மையும் வீரமும் பேராற்றலும்மிக்க மன்னர் இராமனின் குல முதல்வர்களாய்த் திகழ்ந்தனர். இராமன் பிறந்ததால் இக்குலமும், உயர்வு பெற்றது; இக்குலத்தின் பெருமையால் இராமனும் உயர்வு பெற்றான். நாட்டு வளம் மழை வளம் கரந்தால் நாட்டின் வளம் மறைந்து விடும். கோசல நாட்டில் பருவ மழை தவறாது பெய்தது. வெள்ளிப் பனிமலை மீது உலவிய கரிய மேகங்கள் அள்ளிப் பொழிந்த மழைநீர் வெள்ளமாகப் பெருக் கெடுத்தது; அது சரயூநதியாகப் பாய்ந்தது. மலைபடு பொருள்களாகிய மணியும், பொன்னும், முத்தும், சந்தனமும், அகிலும், தேக்கும் அவ்வெள்ளம் அடித்து வர அலைபடு பொருள்கள் ஆயின. வணிக மக்களைப்போல அந்நதி இப் பொருள்களை வாரி அடித்துக் கொண்டு வந்தது. நீள்நதி அந்த மலையின் உச்சியையும் அகலத்தை யும் தழுவி வந்ததால் அது கணிகை மகளை ஒத்திருந்தது. அலைக் கரத்தில் மலைப் பொருள்களை ஏந்தி வந்து அடி வாரத்தில் குவித்தது. சரயூநதி, குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்னும் ஐவகை நிலங்களில் பாய்ந்தது; அந் நாட்டை வளப்படுத்தியது. மலைக் கற்களிடையே தோன்றி வெள்ளம், கானாறாய்ப் பெருகிப் பாய்ந்து குளம், குட்டை, ஏரி, கால்வாய்களில் பரவி, வயல்களையும் சோலைகளையும், பசுமையுறச் செய்தது. மூலப் பொருள் ஒன்று எனினும் ஞாலம் அதைப் பல்வேறு பெயர்களைக் கொண்டு அழைக்கிறது. அதேபோல் கடல் நீர், மேகம், மழை, அருவி, வெள்ளம், வாய்க்கால், ஏரி, குளம், ஆறு, தடாகம் என்னும் பல வடிவங்களைக் கொண்டு விளங்கியது. கல்வியும் செல்வமும் ஏட்டையும் தொடுவது தீமை என்று கூறி, நாட்டைக் கெடுத்தவர்கள் அக்காலத்தில் இல்லை. பெண் கல்வி நாட்டு முன்னேற்றத்திற்கு நலம் விளைவிக்கும் என்பதை நன்கு உணர்ந்திருந்தனர். பொருட் செல்வம் இயற்கை தருவது; கல்வி மானுடர் தேடிப் பெறுவது. செல்வக் குடியிற் பிறந்த செல்வியர் கல்வி கற்றுக் கவின் பெற்றுச் சிறப்பு அடைந்தனர். கலைமகளும், திருமகளும் அவர்களை அடைந்து கொலுவீற்றிருந்தனர். கற்ற இப்பெண்களால் உற்ற நல் அறங்கள் சீரும் சிறப்பும் பெற்றுத் திகழ்ந்தன. இவர்கள் வறியவர்க்கு இல்லை என்னாமல் வாரி வழங்கினர்; விருந்தினர் வந்தால் விழைந்து வரவேற்றனர்; இன்முகம் காட்டி நல்லுரை பேசி உணவும் உறையுளும் தந்து சிறப்புச் செய்தனர். மாதரார்தம் செயலால் மாட்சி மிக்க அறங்கள் தழைத்து ஓங்கின. அன்ன சத்திரங்கள் ஆயிரக்கணக்கில் செயல் பட்டன. அங்கே சோறு வடித்த கஞ்சி ஆறு போலப் பெருகியது. அது கால்வாய்களாகக் கிளைத்துச் சோலைகளிலும், வயல் நிலங்களிலும் பாய்ந்து வளம் பெருக்கியது; தேர் ஒடுவதால் தெருக்களில் துகள் கிளம்பியது. யானையின் மதநீர்பட்டு அது தெருவினைச் சேறு ஆக்கியது; அதில் யானைகள் வழுக்கி விழுந்தன. மகளிர் குழை எறிந்து கோழி எறியும் செல்வ வாழ்க்கையைப் பெற்றிருந்தனர். சிறுமியர் சிற்றில் இழைத்துச் சிறுசோறு சமைத்தனர். முத்துகளை அவர்கள் சிறுசோறாக அமைத்தனர்; அம் முத்துகளை இளம் விளையாட்டுச் சிறுவர்கள் தம் காலில் இடறிச் சிதைத்தனர். அவை அவர்கள் திரட்டி எடுத்துப் போடும் குப்பைகளாகக் குவிந்து கிடந்தன; அவை ஒளி செய்தன. மருத நிலத்துச் சோலைகளில் மயில்கள் தோகை விரித்து ஆடின; குயில்கள் கூவின; தாமரை முகைகள் விளக்குகள்போல் ஒளி வீசின; முகில்கள் இடித்து முழவாக் ஒலி செய்தன; நீர் அலைகள் அழகிய திரைச்சீலைகள் ஆயின. குவளைகள் கண்விழித்து நோக்கின. இவ்வாறு மருத நிலம், நாட்டிய அரங்காகப் பொலிவு பெற்று அழகு செய்தது. அன்னப் பறவைகள் தாமரை மலர்களை அடைந்து துயில் கொண்டன; தம் அருகே தம் இளங்குஞ்சுகளை உறங்கச் செய்தன. சேற்று நிலத்தில் கால் வைத்த எருமைகள், தம் கொட்டிவில் உள்ள கன்றுகளை நினைத்துக் கொண்டு ஊற்று எனச் சுரந்த பாலை இச் சின்னப் பறவைகள் வாய்வைத்து மடுத்தன. தேரைகள் எனப்படும் பசுமை நிறத் தவளைகள் தாலாட்டுப் பாடின. அவை அதனைக் கேட்டு மயங்கித் துயின்றன. சேற்று நிலத்தில் எருமைகள் பாலைச் சொரிந்ததால் நாற்று நடும் வயல்கள் வளம் காட்டின. நெற்பயிர்கள் செழித்தன. அரங்குகளில் அரிவையர், ஆடலும் பாடலும் நிகழ்த்தினர். யாழும் குழலும் இணைந்து இசை அரங்குகளில் இனிமை கூட்டின. சதங்கை ஒலிகள், பதங்களுடன் சேர்ந்து, நாட்டிய நங்கையருக்கு நளினம் சேர்த்தன. இசையும் நாட்டியமும் வசையில் கலைச் செல்வங்களாய்க் கவின் செய்தன. காவியக் கதைகளில் தேர்ச்சி மிக்கவர் சொரியும் கவி அமுதம் செவிநுகர் கனிகள் ஆயின. நகர் வளம் இந்நாட்டின் தலைநகர் அயோத்தி என்னும் மாநகர் ஆகும். செல்வச் சிறப்பால் அளகை நகரையும், இன்பச் சிறப்பால் பொன்னகராம் அமராவதியையும் இது ஒத்து இருந்தது. எழில்மிக்க இந் நகரைப் பொழில் சூழ்ந்த மதில்களும், குழிகள்மிக்க அகழிகளும் சூழ்ந்திருந்தன. மதில்கள் விண்ணைத் தொட்டன. அகழிகள் மண்ணின் அடித்தலத்தை அழுத்தின. காவல்மிக்க இக் கடிநகரை நால்வகைப் படைகள் காத்துப் போற்றின. மக்கள் தம் உயிர் என மன்னனை மதித்தனர். அவனும் மக்களைக் கண்களை இமை காப்பது போல் காத்துவந்தான். ஏழையின் கந்தல், உழைப்பாளியின் ஒரே நிலம் அவர்களின் உடைமைகள்; அவற்றைப் போல அரசன் நாட்டைக் காத்தது, அவன் கடமை ஆயிற்று. பகைவர் காட்டிய பகை, அவன் முன் எரிமுன் வைத்த பஞ்சு ஆகியது. அவர்கள் அஞ்சிப் புறமுது கிட்டனர். மக்கள் பசியும், பிணியும் நீங்க, வளனும் வாழ்வும் பெற்று, அவன் குடை நிழலில் குளிர்ந்தனர். உட்பூசலும் வெளித்தாக்கலும் இன்றி நாட்டில் அமைதி நிலவியது; ஆக்கம் தழைத்தது; ஊக்கம் நிலவியது; செம்மைகள் நிலைத்தன. மாதரார்தம் கற்பின் திறத்தால் நாட்டின் பொற்பு உயர்ந்தது. அறத்தின் ஆக்கத்தால் துறக்கமும் தோற்றது. ஆடவர் தம் மறச் செயலால் வீரம் செறிந்தது; புகழ்மிக்க நாடு எனத் திகழ்ந்தது. கொடைச் சிறப்பால் வறுமை நீங்கியது: வள்ளல்கள் என்று ஒரு சிலர் புகழ் பெற முடியாமல் அனைவரும் பிறர் துன்பத்தைக் களைந்தனர். பிறர் கை ஏந்தாமல் பீடும் பெருமையும் பெற்று, மக்கள் வாழ்க்கை நடத்தினர். செல்வம், தனி உடைமை என்று கூற முடியாமல் அனைவர்க்கும் உரியதாய் இருந்தது. கல்வியும் மக்கள் உடைமையாக இருந்தது. கற்றவர் கல்லாதவர் என்ற பேதம் இன்றி, அனைவரும் கல்வி கற்று அறிவிற் சிறந்தவராய்த் திகழ்ந்தனர். மகவு வேள்வி புறச் செல்வத்திலோ, அற வாழ்க்கையிலோ குறை காணாத மன்னன், தன் அக வாழ்வில் நிறைவு காணாத வனாய் வாழ்ந்தான். மக்கட்செல்வம் அவனிடம் வந்து அவனை மகிழச் செய்யவில்லை. யாழும் குழலும் அவனுக்குத் திகட்டிவிட்டன. அமுதமொழி பேசும் குழந்தைகளின் மழலைமொழி கேட்டு மகிழ விரும்பினான். கோடி இருந்தும் என்ன பயன்? நாடித் தன்மடியில் தவழும் நன்மக்களை அவன் பெறவில்லையே. “ஒருத்திக்கு மூவர், அவனுக்கு மனைவியர்; எனினும் கருத்தரித்துக் காதல் நன்மகனைப் பெற்றுத் தரவில்லை” என்ற குறை அவனை அரித்தது. “சூரிய குலம் அவனோடு அத்தமித்து விடுமோ?” என்ற அச்சம் உண்டாகியது. அவனுக்குப் பின் யார் அந்த நாட்டை ஆள்வது? வாரிசு இல்லாமல் வறுமை உற்றுக் கிடந்தது அவன் வாழ்வு. இன்பம் சேர்ப்பதற்கு ஏந்திழையர் பலர் இருந்தனர்; துன்பம் துடைப்பதற்கு ஒரு மகவு இல்லையே என்ற ஏக்கம் அவனைத் தாக்கியது. வயித்தியனைக் கேட்டான்; வழிவகை அவனால் கூற இயலவில்லை. ஆசிரியனை அணுகினான். வசிட்டர் அவன் குலகுரு; அரசியல் ஆசான்; வாழ்க்கை வழிகாட்டி: சாத்திரம் அறிந்தவர். அவரை அடைந்து தன் குறையை வெளியிட்டான். “பொருட் செல்வமும் கல்விச் செல்வமும் மாந்தர்தம் முயற்சியால் பெருகுவன; அவை ஈட்டத் தக்கன; மக்கட் செல்வம் பெறத் தெய்வ அருள் தேவைப்படுகிறது. அதற்கு மறை கற்ற மாமறையோன் நீர் தாம் வழி காட்ட வேண்டும்” என்றான். மழை இல்லாவிட்டால் மறையவர் வேள்விகள் இயற்றுகின்றனர்; மற்றையோர் இசை பொழிவித்து இறைவனை வேண்டுதலும் உண்டு. இந்த மரபுகளை ஒட்டி மகவு இல்லை என்றால் யாகம் எழுப்பித்தல் அக்கால மரபாகக் கொண்டிருந்தனர். அதற்குப் புத்திர காமேட்டி யாகம் என்று பெயரிட்டனர். “மகவினை நல்கும் மகிமை இந்தப் புத்திர காமேட்டி யாகத்துக்கு உள்ளது என்றும், தக்கவரைத் தலைமையாகக் கொண்டு இதை நடத்துக” என்றும் வசிட்டர் அறிவுரை தந்தார். தெய்வ அருளால் பிறக்கும் மகன் ஆற்றல் மிக்கவனாய் விளங்குவான் என்ற நம்பிக்கையும் சேர்ந்து கொண்டது. அக்கால வழக்கப்படி இம்மகவு வேள்வி இயற்றுதற்குமுன் மற்றோர் வேள்வி இயற்ற வேண்டும் என்ற மரபு இருந்தது. இதற்கு அசுவமேதயாகம் என்று பெயரிட்டனர். மாபெரும் மன்னர், தம் வெற்றிச் சிறப்பைத் திக்கு எட்டும் அறியச் செய்ய விரும்பினர். அடக்க முடியாத குதிரை ஒன்றினை முன் அனுப்பி அதனை மடக்குபவரை எதிர்க்கப் படைகள் பின் தொடர்ந்தன. அதனைக் கட்டி வைப்பவர் மாவீரன் என்ற புகழ் பெறுவர்; அவர்களை எதிர்த்து வெற்றி பெற்றுத் திறை பெற்றுத் தம் இறையிடம் சேர்த்தனர். சிற்றரசர்கள் அடி பணிந்து பேரரசனின் ஆணையை ஏற்றனர். அரசன் மாமன்னன் என்று புகழப்பட்டான். தசரதனும் இப்பரிவேள்வியைச் செய்து முடித்துவிட்டுப் பின் இம்மகவு நல்கும் நல்வேள்வி நடத்தினான். தெய்வங்கள் புகழ்ச்சிக்கும் வழிபாட்டுக்கும் மகிழ்ந்து கேட்ட வரங்களைக் கொடுத்து வந்தன. தவம் செய்வோர்க்கு ஆற்றலையும், ஆயுளையும் தந்தன. அசுரர்களும் அமரர்களும் மாறிமாறித் தவங்கள் செய்து சிவனிடமும் பிரமணிடமும் வேண்டிய வரங்களைப் பெற்றனர். வரங்களைப் பெற்றதும் தம் தரங்களை மறந்து, உரம் கொண்டு முனிவர்களுக்கும் தேவர்களுக்கும் இடையூறு விளைவித்தனர். அரக்கர்களை எதிர்க்கும் ஆற்றல் இல்லாத தேவர்களும், மாமுனிவர்களும் தெய்வங்களை அடைந்து தம்மைக் காக்கும்படி வேண்டினர். வரம் கொடுத்த தெய்வங்களே வழி தெரியாமல் திகைத்தன. பிரமனும் சிவனும் பாற்கடலில் பள்ளி கொண்டிருந்த பரமனிடம் சென்று முறையிட்டனர்; அவர்களோடு இந்திரனும் சென்றான். திருவுறை மார்பன் ஆகிய திருமால் அருள் செய்ய வந்து, அவர்களுக்கு ஆறுதல் உரை கூறினார். தெய்வங்கள் தந்த வரத்தை மானுடனே மாற்ற முடியும் என்று கருதித் தான் மானுட வடிவம் எடுத்துத் தசரதன் மகனாய்ப் பிறந்து, அந்தக் கொடியவரை வேர் அறுப்பதாய் வாக்களித்தார். அங்கு முறையிட வந்த வானவர்கள், தாமும் மண்ணில் வானரராகப் பிறந்து உதவுவதாய் உறுதி அளித்தனர். அவனுக்கு “வண்ணப் படுக்கையாய் இருந்த ஆதி சேடன், இலக்குவனாகப் பிறக்க” என்று ஆணையிடப் பட்டது; “தம் கைகளில் தங்கி இருந்த சங்கு சக்கரங்கள் பரத சத்தருக்கனர்களாகப் பிறக்க” என்று ஆணை பிறப்பிக்கப்பட்டது. தெய்வங்கள் நேரிடையாகக் களத்தில் இறங்கத் தயங்கினர். அவர்கள் குரங்களுக்குத் தலைமை தாங்கினர். இந்திரனின் கூறு, வாலியாகவும், அங்கதனாகவும் செயல்பட்டது; காற்றின் மைந்தனாக ஆற்றல் மிக்க அனுமன் பிறந்தான். பிரமனின் கூறாகச் சாம்பவான் ஏற்கனவே பிறந்திருந்தான் என்பது அறிவிக்கப்பட்டது. “அனுமன் காற்றின் மைந்தன்; எனினும், சிவனின் சீற்றமும், ஆற்றலும் விரச் செயலும் அனுமன்பால் அமையும்” என்று அறிவிக்கப்பட்டது. தெய்வ நகர்களில் தேவர்களும், தெய்வங்கள் மூவரும் முன் பேசிய பேச்சுரைகள் இப்பொழுது செயற்படும் காலம் வந்துவிட்டது என்பதை வசிட்டர் உணர்ந்தார். திருமால் தசரதன் மகனாய்ப் பிறப்பார் என்பதை அறிந்து செயல்பட்டார்; மகனை நல்கும் வேள்வி செய்விக்க வழி வகைகளைக் கூறினார். “வேள்விக்குரிய ஆசான் யார்? அவர் எங்கு இருக்கிறார்? எப்படி அவரை அழைத்து வருவது” என்ற முறைகளைக் கேட்டுத் தசரதன் செயல்பட்டான். “வேள்வி ஆசான் அதற்குத் தகுதி, கலைக்கோட்டு மாமுனிவர்க்குத் தான் உளது” என்று வசிட்டர் அறிவித்தார். அவரை ருசிய சிருங்கர் என்றும் கூறுவர். அவர் அங்க நாட்டில் தங்கி இருக்கிறார் எனவும், உரோம பாதர் அந்நாட்டு அரசன் எனவும், அவர் தம்மகளை இம் முனிவருக்கு மணம் முடித்துத் தம் அரண்மனையில் மருகனாய் இருக்க வைத்திருக்கிறார் எனவும் தெரிவிக்கப்பட்டன. “அங்க நாட்டிற்கு அக் கலைகோட்டு மாமுனிவர் செல்லக் காரணம் யாது?” என்று தசரதன் வினவினான். கலைக்கோட்டு மாமுனிவர் வரலாறும் அழைப்பும் அங்க நாட்டில் தொடர்ந்து மழை பெய்யாமல் பொய்த்துவிட்டது. பஞ்சமும் பசியும் மக்களை அஞ்ச வைத்தன. ‘நல்லார் ஒருவர் இருந்தால் அவர் பொருட்டு மழை எல்லார்க்கும் பெய்யும்’ என்று கூறுவார்கள். எனவே நன்மை மிக்க அம்முனிவர் இருக்கும் இடம்நாடி அவரைத் தம் மண்ணை மிதிக்க வைத்தனர். கலைக்கோட்டு மாமுனிவர் விபாண்டன் என்னும் தவ முனிவரின் ஒரே மகன்; அவர் வெளியுலகப் பாதிப்புகள் இல்லாமல் வளர்க்கப்பட்டார்,‘காமம்’ என்பதன் நாமமே அறிய முடியாதபடி அவர் வளர்ந்தார்; காட்டில் திரியும் மான்! அதற்குக் கொம்பு உண்டு. மகளிர்க்கு வம்பு செய்யும் வனப்பு உண்டு; அவரைப் பொறுத்தவரை மானுக்கும் பெண்ணுக்கும் வேறுபாடே இல்லை; கச்சணிந்த மாது ஆயினும், இச்சையைத் துண்ட இயலாதபடி அவர்களிடமிருந்து ஒதுக்கி அவர் வளர்க்கப்பட்டார். காட்டுச் சூழலில் தவசிகள் மத்தியில் வாழ்ந்ததால் நகர மாந்தர்தம் ஆசைகள் அவருக்கு அமையவில்லை. “சுத்தம் பிரமம்” என்று சொல்லத்தக்க நிலையில் ஞானியாய் வாழ்ந்து வந்தார். அவரை மயக்கி நகருக்கு அழைத்து வர அந்த நாட்டு நங்கையர் சிலர் முன்வந்தனர். அவர்கள் அரசன் உரோமபாதரிடம் “கலைக் கோட்டு முனிவனைத் தம்மால் அழைத்து வரமுடியும்” என்று உறுதி தந்திருந்தனர்; அவர்கள் ஆடல் பாடலில் வல்ல அழகியர். அரசனும் மட்டற்ற மகிழ்ச்சி கொண்டான்; கட்டற்ற செல்வத்தை அவர்களுக்கு வாரி வழங்கினான்; ஆடை அணிகள் தந்து, அவர்களைச் சிறப்பித்தான். நாட்டைவிட்டுக் காட்டை அடைந்த அக் காரிகையர், தூரிகையில் எழுதிய சித்திரங்கள்போல் அவன்முன் நின்றனர். முல்லை சூடிய அம் முறுவலினர் அவர் தங்கியிருந்த தவச் சாலையை மகளிர் சாலையாக்கினர்; காயும் கனியும் கொண்டு சென்று மருளும் மான்போல அவரை அணுகினர். புத்தம் புதிய மாதராய அவர்களை முதற்கண் நித்தம் தவம் புரியும் தவசியர் என்றே நினைத்தார். அழகும், இளமையும் அவரை ஈர்த்தன; அவர்கள் தந்த பழங்களைச் சுவை பார்த்தார். “தம்மோடு வருக” என்று அவர்கள் அழைத்தனர்; விழிகளால் அவருக்கு வழிகாட்டித் தம் பின்னால் வரச் செய்தனர்; வேல்விழி மாதரார் காட்டிய சாலை வழியே சென்று நாட்டு மண்ணை மிதித்தார் அம் மாமுனிவர்; காலடி பட்டதும் வறண்ட நிலங்கள் எல்லாம் வான் மழை நீரால் நிரம்பி ஆனந்தக் கண்ணிர் சொரிந்தன. வற்றி உலர்ந்திருந்த மரங்கள் எல்லாம் பசும் தழைகளைப் போர்த்தன. மயில்கள் எல்லாம் களிநடம் செய்தன. சாய்ந்து கிடந்த நெற்பயிர்கள் தழைத்துக் கதிர் மணிகளை விரித்து, முகம் காட்டின. உரோமபாதர், “கலைக்கோட்டு மாமுனிவர் வருகையால்தான் மழை பெய்தது” என்பதை உணர்ந்தார்; ஒடோடி வந்து அவர் மலரடிகளில் விழுந்து வணங்கினர்; நங்கையர் சிலர் தவசிகள்போல வந்து மயக்கியமையை மன்னிக்கும்படி வேண்டினர்; ‘எல்லாம் நன்மைக்கே’ என்று அம் மாமுனிவர் நயம்படக்கூறி, அவர் அச்சத்தைப் போக்கினார். காவி உடை அணிந்து காயத்திரி தேவியைச் செபம் செய்து வந்து தவசி, சாவித்திரி ஒருத்தியைக் கைப் பிடிக்க அரசன் வழி வகுத்தான். தன் ஒரே மகள் சாந்தை என்பாளை அவருக்கு மணம் முடித்து உயர்பேறு பெற்றான். சுத்த பிரம்மம் ஆக இருந்த ஞானி மாயையின் பிடியில் அகப்பட்டு உலகக் குடிமகனாக மாறினார். எனினும், ஒழுக்கசீலர் என்பதால் விழுப்பம் உடையவர் என மதிக்கப்பட்டார். உரோமபாதரின் மருமகனாக இருந்த கலைக்கோட்டு மாமுனிவரை அழைத்து வரத் தசரதன் சென்றான். அவர் தலைமையில் மகவு நல்கும் வேள்வி நடத்த இருப்பதாயும், அவரை அனுப்பி வைக்கும்படியும் அழைப்பு விடுத்தான். மாமன்னன் வேண்டு கோளை மறுக்க முடியாமல் மாமுனிவராகிய கலைக் கோட்டா சானை அவரிடம் அனுப்பி வைத்தார் உரோம பாதர். வந்தவருக்கு வரவேற்பும், வாழ்த்தும் கூறிச் சிறப்புகள் செய்தான் தசரதன். வேள்வி தொடங்குதல் கலைக்கோட்டு ஆசான் வேள்வித் தலைவராய் இருந்து சடங்குகளையும், முறைபாடுகளையும் செம்மை யாய்ச் செய்வித்து அவ்வேள்வியை நடத்தி வைத்தார். வேள்விக் குழிகளில் வெந்தி எழுப்பி மகப் பேற்றுக்கு உரிய அவிசுப் பொருள்களை அதில் இட்டு வேத மந்திரங்களை விளம்பித் தேவர்களுக்கு இட அவர்கள் மகிழ்ந்து அருள் செய்தனர்; ஒமக் குழியில் இருந்து பூதம் ஒன்று வெளிப்பட்டது; தட்டு ஒன்று தாங்கி வந்து அதைக் கலைக்கோட்டு ஆசானிடம் தந்து விட்டு மறைந்துவிட்டது. பொன்னொளி வீசிய பொற்புடைய தட்டில் அற்புதமான அமுதப் பிண்டம் இருந்தது. அந்தப் பிண்டத்தை அவர் அரசனுக்குத் தந்து நல் ஆசி கூறினார். தட்டில் இருந்த அமுதத்தைக் கட்டிய மனைவியர் மூவர்க்கும் பகிர்ந்து அளித்தான். தசரதன் எஞ்சியிருந்த மிச்சத்தை மீண்டும் இளையவள் சுமித்திரைக்குத் தந்து, அவளை இரட்டையர்க்குத் தாயாக்கினான். இலக்குவன் சத்துருக்கனன் சுமித்திரைக்குப் பிறந்தனர். கோசலைக்குக் கரிய செம்மலாகிய இராமனும், கைகேயிக்கு அரிய பண்பினன் ஆகிய பரதனும் பிறந்தனர். தசரதன் வாழ்வு மலர்ந்தது. எல்லாச் செல்வமும் அவனை வந்து அடைந்து மகிழவைத்தன. மக்கட் செல்வம் அவனை மிக்கோன் ஆக்கியது. கல்வியும் பயிற்சியும் கட்டிளங்காளையர் நால்வரும் கலை பயில் தெளிவும், மலை நிகர்த்த ஆற்றலும், போர்ப் பயிற்சியும் பெற்று நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் வளர்ந்து வந்தனர். வசிட்டர் அவர்களுக்கு வேத சாத்திரங்களைப் பயிற்றுவித்தார். நூலறிவும் போர்ப் பயிற்சியும் மிக்கவர்களாய் வளர்ந்தனர். நாட்டாட்சி முறை கற்க, அவர்கள் மக்களோடு பழகினர்; அவர்கள் குறைகளை நேரில் கேட்டு அறிந்தனர். மாலை வேளைகளில் சாலை நிலைகளில் ஊர்ப் புறம் சென்று மக்களைச் சந்தித்தனர். உதய சூரியன் உதித்ததுபோல அவர்கள் அவனை மதித்துப் போற்றினர். செல்லும் இடம் எல்லாம் வெல்லும் திறனுடைய இளவல் இலக்குவன், இராமனைத் தொடர்ந்தான். அவ்வாறே பரதனைச் சத்துருக்கனன் நிழல்போல் தொடர்ந்தான். “தம்பி உள்ளான் படைக்கு அஞ்சான்” என்று கூறும்படி இலக்குவன் இராமனுக்கு அரணாக விளங்கினான். “உடன் பிறப்பு’ என்பதற்கு இலக்கணம், இந்நால்வர் உறவில் விளக்க முற அமைந்திருந்தது. பாசம் அவர்களைப் பிணித்தது; மூத்தவன் இராமன் என்பதால் மற்றவர் அவனிடம் யாத்த அன்பும் பாசமும் காட்டி மதித்தனர். தலைமை இராமனிடம் இயல்பாக அமைந்து கிடந்தது. மக்களும் அவனை மற்றையவர்களைவிட மிகுதியாய் நேசித்தனர். விசுவாமித்திரர் வருகை ஆற்றுவரியாக இயங்கிய தசரதன் வாழ்க்கை புயலையும் இடியையும் சந்திக்க நேர்ந்தது. மக்களைப் பெற்று மனைநலம் பெற்றிருந்த மன்னன், அவர்களைப் பிரியும் சூழல் உருவாகியது. விசுவாமித்திரர் “ராஜரிஷி” என்று பாராட்டப் படுபவர்; அவர் அரசராய் இருந்தவர்; அவர் தம் அரச பதவியை விலக்கிக் கொண்டு, தவ வேள்விகளைச் செய்து, உயர்பேறுகளைப் பெற்று வந்தார். வேகமும், விவேகமும் அவர் உடன்பிறப்புகள். சினமும் சீற்றமும் அவர் நாடித் துடிப்புகள், அவர் வருகையைக் கண்டாலே மாநில அரசர்கள் நடுங்கினர்; அடுத்து என்ன நேருமோ என்று அஞ்சினர். பீடுநடை நடந்து ஏற்றமும் தோற்றமும் தோன்றத் தன் அவைக் களம் அணுகிய அம் முனிவரைத் தசரதன் தக்க வழிபாடுகள் கூறி வரவேற்று அமர வைத்தான். “தாங்கள் எழுந்தருளியதற்கு நாங்கள் மிக்க தவம் செய்தோம்” என்று அடக்கமாய்ப் பேசி, அன்புடன் வரவேற்றான். இருகை வேழம் என விளங்கிய தசரதன், “தருகை எது வாயினும் தயங்கேன்” என்று கூறினான். கேட்பது எதையும் தருவதாய் வாக்கும் அளித்தான். “யான் கேட்பது பொன்னும் பொருளும் அல்ல; பூவும் வழிபாடும் அல்ல; உன் நன்மகன் இராமன்! அவனை என்னுடன் அனுப்புக” என்றார் முனிவர். கேட்டதை அரசனால் மறுக்க முடியவில்லை. அதே சமயத்தில் மகனைவிட்டுப் பிரியவும் அவனால் இயலவில்லை. “அதைத் தவிர வேறு ஏதேனும் கேட்டால் உவப்பேன்” என்றான் “வந்ததே அவனுக்காகத்தான்; தருவேன் என்று கூறியபின் மறுப்பு ஏன்?” என்றார் முனிவர். “துறவிக்கு இவன் எவ்வகையில் உதவுவான்; இவனை மறப்பதற்கு வழி தேடின் நலமாகும்” என்றான் வேந்தன். “நான் துறவிதான்; அறம் தழைக்க அவனை அழைக்கின்றேன். இழைக்கும் வேள்விகளை அழிக்கும் அரக்கரை ஒழிக்கும் வகைக்கு அவன் வந்து உதவ வேண்டும்” என்றார் முனிவர். “போர்ப் படை காணாத பச்சிளம் பாலகன் என் மகன்; தேர்ப்படை கொண்டு உமக்குத் துணையாக நானே வருகிறேன்” என்றான் வேந்தன். “கேட்டது தருவேன் என்றாய்; வேட்டது தருவாய் என்று கேட்டேன்; வாய்மை தவறாத மன்னன் நீ; இப்பொழுது வாய் தவறுகின்றாய்; பாசமும், பந்தமும், உன் மகன்பால் வைத்த நேசமும் உன்னை இழுத்துப் பிடிக்கின்றன; இருதலைக் கொள்ளி எறும்புபோல் உன் நிலைமை ஆகிவிட்டது. மறுத்தலைச் சொல்லும் உன் மாற்றம் வியப்புக்கு உரியது” என்றார் முனிவர். நீரினின்று எடுத்துப் போட்ட மீனின் நிலைமையை மன்னவன் அடைந்தான்; எதிர்பாராத சூழ்நிலையில் எது பேசுவது என்பது தெரியாமல் தவித்தான்; “தவிர்க” என்றும் சொல்ல இயலவில்லை; “செல்க” என்று வாழ்த்தி அனுப்பவும் முடிய வில்லை; “முடியாது” என்று முடிவு கூறவும் இயலாமல் தவித்தான். வசிட்டர் தசரதனைப் பார்த்து, “உம் பாசம் போற்றத்தக்கது தான்; அதனால் உன் மகனுக்கு நாசம் விளைவித்துக் கொள்கிறாய்; குடத்து விளக்குப்போல் உன் மகனை வளர்க்கிறாய்; அவனைத் தடத்தில் விட்டுத் தழைக்கச் செய்ய வழி விடுக; காற்று வரும்போது தூற்றிக் கொள்வது ஏற்றம் தரும். கல்வி கரையற்றது; கற்க வேண்டியவை இன்னும் உள; படைக் கலம் பயின்ற மாமுனிவன், உன் மகன் கரை ஏறக் கிடைத்த மரக்கலம் என அறிக, ஆசானாக வந்த அறிஞர் அவர்; அவருடன் அனுப்புக; அரச முனிவர் ஆதலின் விரசுபடைக் கலன்கள் பல அவரிடம் உள்ளன; அவற்றைத் தக்கவர்க்குத் தரக் காத்து இருக்கிறார்; “'உன் மகன் வீரம்மிக்கவன்” என்று தெரிந்தால் அவற்றை அவனுக்கு அளிப்பது அவர் உறுதி; வாய்ப்புகள் வந்துகொண்டே இருப்பதில்லை; அதைத் தவறவிட்டால் வழுக்கி விழ வேண்டுவதுதான். நீர் அவருக்கு உதவுவது எளிது; அதைவிட அந்த வாய்ப்பை உம் மகனுக்குத் தருவது வலிது. அதனால் அவனுக்குப் புதுப் பயிற்சிகள், முயற்சிகள், வெற்றிகள் காத்துக் கிடக்கின்றன. அவனை அனுப்பி விட்டு மறுவேலை பார்; அவனைத் தடுக்க நீர் யார்?” என்று நன்மைகளை எடுத்துக்கூறிச் செல்வதன் நன்மையை அறிவுறுத்தினார். இருள் அகன்றது; ஒளி தெரிந்தது, பாசத் திரை தன் பார்வையை மறைத்திருந்தது. அதை விலக்கிவிட்டு, விழி பெற்றவனாகத் தசரதன் நடந்து கொண்டான்; வழி தவறியதற்கு வருந்தினான்; குருடனாக நடந்துகொண்ட அவன், புத்தொளி பெற்று, மகனை முனிவனுடன் அனுப்பி வைத்தான். விசுவாமித்திரர் இராமனைத்தான் கேட்டார்; இலக்குவன் வருவதைத் தடுக்கவில்லை. நிஜத்தை விட்டுப் பிரியாத நிழலாக இளையவன் இலக்குவன், அழைக் காமலே அண்ணன் இராமனைப் பின் தொடர்ந்தான்; முனிவன் முன்னே நடக்க, அவன் பின்னே இவ் விளையவர் இருவரும் தொடர்ந்து நடந்தனர். உடன்போதல் கூட்டை விட்டுப் பறவைகள் வெளியே பறந்து செல்வதுபோல, நாட்டை விட்டுக் காட்டு வழியே முனிவனுடன் சென்றனர்; மாட மாளிகைகளும், கூடகோபுரங்களும், அசையும் கொடிச் சீலைகளும், அவர்களை வழி அனுப்பின. வானவில்லின் வண்ண நிறங்களும், பிரபஞ்சத்தின் பேரொளியும் அவர்கள் கண்ணைக் கவர்ந்து மகிழ்வு ஊட்டின. காந்தத்தின் பின் தொடரும் இருப்பு ஊசிபோலக் கறுப்புநிறச் செம்மலும் இளவலும் தவ முனிவன்பின் சென்றனர்; அறிவு நிரம்பிய ஆசானின் அணைப்பில் அவர்கள் பெருமிதம் கொண்டனர்; புதிய இடங்களுக்குச் சென்று மனதில் பதியும் புதிய காட்சிகளைக் கண்டனர்; அவற்றைக் கண்டு வியப்பும் அறிவும் பெற்றனர்; ஆறுகளையும், சோலைகளையும் கடந்து, வேறுபட்ட சூழல்களைக் கண்டனர். அந்தப்புரங்களையும், ஆடல் அரங்குகளையும் கண்டவர் எளிமையும், எழிலும், ஞானப் பொலிவும் நிரம்பிய முனிவர்களின் ஒலைக் குடிசைகளைக் கண்டனர். ஆசிரமங்கள் அவர்களுக்குப் பசும்புல் விரிப்புகளைப் பரப்பி, வரவேற்புச் செய்தன; காட்டு மரங்கள் காற்றில் அசைந்து அவர்களோடு கவிதைகள் பேசின; மனிதர்களைப் போலவே தாவரங்கள், மரம், செடி, கொடிகள் அவர்களிடத்தில் பாசமும், பரிவும் காட்டின; விலங்குகளும் தத்தமக்கு உரிய நெறிகளின் படி உலவிச் செயல்பட்டுத் திரிவதைக் கண்டனர். தேவைக்கு மேல் அவை உயிர்களைக் கொன்று தின்பதில்லை; தேடித் திரிவதுமில்லை; மனிதன் தேவைக்கு மேல் பொருள் திரட்டுவதைக் கண்டு பழகிய அவர்களுக்கு அம்மிருகங்கள் மதிக்கத்தக்கவையாக விளங்கின. மாந்தர்விடும் மூச்சில் கலந்துள்ள அசுத்தங்களைத் தாம் வாங்கிக் கொண்டு காற்றைத் துய்மைப்படுத்தி உதவும் தாவரங்களின் உயர்வை அறிய முடிந்தது. தீமை செய்பவர்க்கும் தாம் உள்ள அளவும் நன்மை செய்யும் நல்லியல்பு அவற்றிடம் காண முடிந்தது. தம்மை வெட்டிக் கீழே சாய்க்கும் முரடனுக்கும் காயும், கனியும் நறுநிழலும் தந்து உதவும் அவற்றின் உயர்வைக் காணமுடிந்தது. பூத்துக் குலுங்கும் பூவையரின் எழிலையும் பொலிவையும் செடி கொடிகளிடம் முழுமையாகக் காண முடிந்தது. காமாசிரமம் சரயூநதிக் கரையில் சஞ்சரித்த அவர்கள், பசுமையான சோலை ஒன்றனைக் கண்டனர். அதில் தவசியர் வசிக்கும் குடில்கள் மிக்கு இருந்தன. அம் முனிவர் இவர்களைக் கண்டதும் பேருவகை அடைந்தனர்; வரவேற்பும், உண்டியும், இடமும் தந்து உபசரித்தனர்; எழில்மிக்க பொழில்கள் சூழ்ந்த ஆசிரமத்தில் இரவுப் பொழுதைக் கழித்தனர். பொழுது புலர்ந்தது; அந்த ஆசிரமம் அவர்கள் கண்ணையும் கருத்தையும் கவர்ந்தன. அதன் ஆதி அந்தத்தைக் கேட்டு அறிய அவாவினர். அதன் பெயரே புதுமையாய் இருந்தது. “காமாசிரமம்” என அது வழங்கப்பட்டது. காமத்தை ஒழித்து, ஏமநெறி காணும் முனிவர்கள், தாம் வாழும் இடத்துக்கு இப் பெயர் சூட்டியுள்ளமை வியப்பைத் தந்தது. “இதற்கு ஏதேனும் தக்க காரணம் இருக்க வேண்டும்” எனக் கருதினர். ஆரண வேதியனை அணுகி, “இப்பெயர் இதற்கு அமையக் காரணம் யாது?” என்று வினவினர். “மலரம்புகளை விட்டு மற்றவரை எரிக்கும் காமன் இங்கே எரிபட்டான்; அதனால், இந்த இடம் “காமாசிரமம்” என வழங்கலாயிற்று” என்றார். “'காமன் கூடவா தவம் செய்ய இங்கு வந்தான்?'