கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1 கி. வா. ஜகந்நாதன் 2003 8 அக்டோபர், 2020 அன்று விக்கிமூலத்தில் இருந்து பதிவிறக்கப்பட்டது உலகளாவிய பொதுக் கள உரிமம் (CC0 1.0) இது சட்ட ஏற்புடைய உரிமத்தின் சுருக்கம் மட்டுமே. முழு உரையை https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode என்ற முகவரியில் காணலாம். பதிப்புரிமை அற்றது இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர். நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை. *** இது, உலகத் தமிழ் விக்கியூடகச் சமூகமும் ( https://ta.wikisource.org ), தமிழ் இணையக் கல்விக் கழகமும் ( http://tamilvu.org ) இணைந்த கூட்டுமுயற்சியில், பதிவேற்றிய நூல்களில் ஒன்று. இக்கூட்டு முயற்சியைப் பற்றி, https://ta.wikisource.org/s/4kx என்ற முகவரியில் விரிவாகக் காணலாம். Universal (CC0 1.0) Public Domain Dedication This is a human readable summary of the legal code found at https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode No Copyright The person who associated a work with this deed has dedicated the work to the public domain by waiving all of his or her rights to the work worldwide under copyright law including all related and neighboring rights, to the extent allowed by law. You can copy, modify, distribute and perform the work even for commercial purposes, all without asking permission. *** This book is uploaded as part of the collaboration between Global Tamil Wikimedia Community ( https://ta.wikisource.org ) and Tamil Virtual Academy ( http://tamilvu.org ). More details about this collaboration can be found at https://ta.wikisource.org/s/4kx. கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள் பாகம்-1 கி.வா. ஜகந்நாதன் அல்லயன்ஸ் (நூற்றாண்டு கண்ட முதல் தமிழ்ப் புத்தக நிறுவனம்) உரிமை பதிவு அல்லயன்ஸ் முதற் பதிப்பு : 2003 மொத்த பக்கங்கள் (8+352) = 360 விலை: ரூ. 115.00 அல்லயன்ஸ் கம்பெனி 244, ராமகிருஷ்ணா மடம் சாலை, தபால் பெட்டி எண்: 617, மயிலாப்பூர், சென்னை - 600 004. தொலைபேசி: 2494 1314 Laser Typeset by - Print Point Graphics, Chennai–20. Printed at - Kay Em Packaging Industries, Chennai – 14. பதிப்புரை 'வாகீச கலாநிதி' கி.வா. ஜகந்நாதன் அவர்கள் எங்கள் குடும்பத்துடன் நெருங்கிப் பழகிய எழுத்தாளர்களுள் ஒருவர். எங்கள் நிறுவனர் வி.குப்புஸ்வாமி ஐயருக்கு, மூத்த குமாரர் போல் பழகி வந்தவர். அவருடைய நூல்கள் நமது நிறுவனத்தின் மூலம் மூன்று தலைமுறையினரால் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகின்றன. இவர் தமிழ் இலக்கியத்தில் கரை கடந்தவர்; ஆன்மிகத்தில் பரம்பொருளைக் கண்ட ஞானி. எனவே இவரை 'ஞானப் புலவர்' என்று கூறினால், அது மிகையாகாது. இப்புவியில் அவ்வப்போது இப்படிப் பல ஞானப்புலவர்கள் தோன்றிக் கொண்டே இருப்பதால்தான், நமது மொழிச் செல்வமும், ஞானச் செல்வமும், இறைவனது கட்டளைப்படி காப்பாற்றப்பட்டு வருகின்றது எனலாம். இப்போதும் நம்மிடையே திரு. சுகி சிவம், திரு. பி.என். பரசுராமன் போன்ற பல ஞானப்புலவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். இவர்கள் எல்லாம் சாதாரண மனித சக்தியை மீறி, இறைவன் திருவருளால், ஏராளமான சொற்பொழிவுகளையும்; நூல்களையும் இயற்றிக் கொண்டிருக்கிறார்கள். பிறவிப் பெருங்கடலை நீந்த நமக்கு வழிகாட்டியாக விளங்குகிறார்கள். இவர்களுடைய பேச்சுக்களையும், எழுத்துக்களையும் நாம் பின்பற்றி வந்தாலே போதும். அதுதான் அவர்கள் எல்லாம் பாமரராகிய நமக்குக் காட்டும் வழி. சற்றேறக்குறைய 600 ஆண்டுகளுக்கு முன்பு இப்படி ஒரு ஞானப் புலவர் இருந்தார். அவர்தான் அருணகிரிநாதர். இறைவனை நேரில் தரிசித்து அருளைப் பெற்றவர். இவர் அருளிய நூல்கள் எல்லாம் நமக்கு, பரப்பிரம்மத்தை உணரவைக்கும் வழிகாட்டிகள். இப்படி இவர் அருளிய நூல்களுள் 'கந்தர் அலங்கார'த்திற்கு விரிவான, அழகான, தெளிவான - தொடர் சொற்பொழிவை, ஒரு சமயம் கி.வா.ஜ. அவர்கள் நிகழ்த்தினார்கள். அந்தச் சொற்பொழிவின் தொகுப்புதான் இந்நூல். இதைப் பற்றி அவரே, தனது முன்னுரையில் விரிவாக எடுத்துக் கூறியுள்ளார்கள். 1986 வாக்கில் ஒரு நாள், அடியேன், கி.வா.ஜ. அவர்களுடன் 'புரூஃப்' பார்த்துக் கொண்டிருக்கும்போது, அவர் என்னிடம், "நீ  என்னுடைய அலங்காரப் புத்தகங்களைப் போடுகிறாயா?" என்று கேட்டார். ஒரு தெய்வப் புலவர் எழுதியதை மற்றொரு தெய்வப் புலவர் விளக்கமாகக் கூறிய நூலை 'வெளியிடுகிறாயா?' என்று கேட்கப்பட்டவுடன் அதிர்ச்சி அடைந்தேன்; இவ்வளவு பெரிய பாக்கியம் நமக்கு உள்ளதா? என்று எண்ணி வியந்தேன். அன்று அவர் போட்ட பிள்ளையார் சுழி இன்றும் தொடர்ந்துகொண்டே போகிறது. எல்லாம் அவன் அருள்! 2005-ம் வருடம் கி.வா.ஜ. அவர்களின் நூற்றாண்டு வருகிறது. இந்தச் சமயத்தில் அவருடைய அனைத்து நூல்களையும், ஒன்றன்பின் ஒன்றாக வெளியிட, இறைவனைப் பிரார்த்திக்கிறோம். நல்லதையே எண்ணினால், நல்லவைகளே நடைபெறும் என்பது ஞான வாக்கு, அதேபோல, இப்படிப்பட்ட நல்ல நூல்களை வெளியிட எண்ணி, அதன்படி நாங்கள் நடந்து வருவதால், இதைப் படிக்கும் வாசகர்களுக்கும் நல்லவைகளே சித்தி பெறும். இந்நூல் இப்போது நமது நிறுவனத்தின் மூலம் ஒரே தொகுப்பாக (6 பாகங்களாக) முதல் பதிப்பாக வெளிவந்தாலும், 1956 வாக்கிலிருந்து சிறுசிறு நூல்களாக, அவ்வப்போது வெளியிடப்பட்டதுதான். வாசகர்களே! கி.வா.ஜ. அவர்களின் ஞானப் பெருக்கையும், அவர் கையாண்ட தமிழ் அழகையும் நீங்களே படித்து ரஸியுங்கள்; சுவையுங்கள்; போற்றிப் பாதுகாத்து பயன்பெறுங்கள். - 'அல்லயன்ஸ்'ஸ்ரீநிவாஸன் உள்ளுறை 1. அலங்காரம் அருணகிரியார் செய்த அலங்காரம் (7 - 32) அநுபவப் புதையல் (8), மகாத்மாக்கள் (9), அன்பின் விரிவு (10), வழிகாட்டி (13), கருணைக்கு அருணகிரி (14), அன்பு வித்து (16), அருள்நிலைக்கு உயர்தல் (17), திருப்புகழ் (20), கந்தன் (21), பற்றுக்கோடு (22), கடவுளின் திருவுருவம் (24), பொறியை வசமாக்குதல் (27), அலங்காரம் (28), சொல் அலங்காரம் (30), கந்தர் அலங்காரம் (31) கடதட கும்பக் களிறு (33 - 46) மரபு (33), வருவார் தலையில் (34), அடலருணை (34), திருக்கோபுரம் (38), அந்த வாயில் (39), விநாயகர் (40), தடபடெனப்படு குட்டு (41), ஆத்ம சோதனை (42), சர்க்கரை மொக்கிய கை (43), கருணை மதம் (44), காப்பு (46) கிருபாகரன் (47 - 69) மூவகை வினை (48), பிரபஞ்சம் (49), பெரிய குடும்பம் (53), சிவபெருமான் (56), கங்காதரன் (57), அரவாபரணன் (59), கொன்றையணிந்தோன் (60), தும்பை சூடினோன் (62), சந்திரசேகரன் (64), மூன்று பகுதி (67), தலைவாசல் (67) அயில்வேலன் கவி (70 -102) உபதேசம் (70), அதிகாரி (70), முருகனும் தமிழும் (71), நாக்குத் திருந்த (72), மறைமுகமாகப் புலப்படுத்தல் (73), உடம்படு புணர்தல் (74), கால நிலை (75), ஞான சக்தி (76), கற்றல் (77), அநுபவ ஞானம் (78), தமிழர் வாழ்வில் பாட்டு (81), எழுத்துக்கள் (82), மழலையும் பேச்சும் (82), பேச்சிலே சிறந்தது (84), வாய் பெற்ற பயன். (88), யாரைப் புகழ்வது? (89), அதன் பயன் (92), அப்போது நினைத்தல் (92), கலந்து பாடுதல் (94), பாதுகாப்பு (96), மரண வேதனை (97), பயமும் பக்தியும் (98), எப்போது வருவான்? (100) வேலின் பெருமை (103 - 120) கவிஞன் கலை (104), திரிபுர சங்காரம் (104), வேஷம் மாறுதல் (107), இறைவன் கருணை (108), உட்கருத்து (109), வேலின் செயல் (111), கிரெளஞ்ச சங்காரம் (111), அசுரசங்காரம் (113), சூரசங்காரம் (113), தேவர் பெற்ற வாழ்வு (114), அசுரசம்பத்தும் தேவசம்பத்தும் (114), இருவகைக் கருணை (115), மூன்று இயல் (117), கந்த புராணம் (118), பழைய வரலாறுகள் (119) 2. குறிஞ்சிக் கிழவன் ஐந்து பகைவர் (129 - 159) உடம்பாகிய வீடு (130), யாருக்குச் சொந்தம் (130), குடியிருக்கும் வீடு (132), ஐவர் செயல் (132), ஐந்து களிறு (1.36), விதை நெல் (136), பொறியை அடக்குதல் (138), மாடும் முளையும் (140), மனத் திண்மை (143), ஒருமைப்பாடு (147), வேற்றுமையில் ஒற்றுமை (147), ஒர்தலும் உன்னுதலும் (149), மூன்று நிலை (150), சூர சங்காரம் (152), கருணை வீரம் (156) குறிஞ்சிக் கிழவன் (160 - 187) சொல்லும் முறை (160), கிழவன் (160), ஐந்திணை (161), குறிஞ்சி (162), குறிஞ்சிக் கடவுள் (162), சமத்காரம் (163), என்றும் இளையவன் (164), குழந்தையின் செயல்கள் (164), முருகக் குழந்தையின் செயல்கள் (166), புவனங்கள் ஈன்ற பாவை (168), உயிர்கள் திருந்தல் (170), அவதாரக் கதை (172), ஐம்பூத முத்திரை (174), இறைவியின் அருள் (176), தாமரைத் தொட்டில் (178), கார்த்திகை மாதர் (180), அழுகையின் எதிரொலி (182), புதிய கதை (185) தனிப் பரமானந்தம் (188 - 212) புராணச் செய்திகள் (188), தமிழ்நாடும் கடவுளன்பும் (188), பழங்காலம் (189), தொகுத்து அறிதல் (189), வள்ளி திருமணம் (191), இரண்டு மணம் (192), கந்த புராணமும் சொந்தப் புராணமும் (194), தினைப் புனம் (195), தினையும் நெல்லும் (196), தினைகாத்தல் (199), ஓடிவந்தான் (200), அழைத்தால் வருவான் (201), கருணை மலிவு (203), மெல்ல மெல்ல உள்ளுதல் (204), ஆனந்தம் அரும்புதல் (205), கரும்பும் தேனும் (208), முன்னும் பின்னும் (210) பேய் விளையாட்டு (213 - 234) மயக்கம் (213), வஞ்சனை (216), அசட்டுச் செயல் (218), பேய்க் கூத்து (221), திருமுருகாற்றுப்படையில் (222), பரணி நூல்கள் (226), மரபு வழியே (228), திருவகுப்பு (229), பேய் விளையாட்டு (232), மார்பிற் புண் (232) 3. ஆனந்தத் தேன் ஆனந்தத் தேன் (245 - 270) அநுபவமும் வியப்பும் (245), தேசிகன் (246), மலையின் தோற்றம் (247), பார்வை விரிதல் (248), குணம் என்னும் குன்று (250), மலைத்தேன் (251), ஆனந்தத் தேன் (252), குறிப்பாகச் சொல்லுதல் (254), சித்தர் பாட்டு (255), உள் உருக்கும் தேன் (257), இருளும் ஒளியும் (258), அருள் ஒளி (259), ஞான மலை (261), அறிவும் அன்பும் (262), தோழியும் மணப்பெண்ணும் (263), அறிவு நழுவுதல் (265), வெறும் பாழ் (266), வெறுந்தனி (268) வள்ளி கோன் உபதேசம் (271 - 288) ஹிந்து மதம் (271), அருளியல் ஒற்றுமை (272), வைதிக மதம் (273), சுட்டாத வேதம் (274), நேதி (275), எதிர்மறைத் துதி (275), அன்மைச் சொல் (276), வள்ளி நாயகி (277), மொழி இனிமை (278), தேன் மொழி (279), பாகு மொழி (281), அன்று (282), மூவகைச் சுட்டு (282), உபதேசம் (283), வான் அன்று (284), கால் அன்று (284), தீ அன்று (285), நீர் அன்று (285), மண் அன்று (285), மூவிடம் (286) சும்மா இருக்கும் எல்லை (289 - 303) அநுபவாதிசயம் (289), இருவகை எல்லை (290), எல்லாம் இழத்தல் (290), பிறவிப் பிணி (291), மூவகை மோனம் (292), சும்மா இருப்பது (293), மோன நிலைக்கு வழி (295), வள்ளி நாயகன் (293), வள்ளியின் மொழி (297), பேச்சும் மோனமும் (299), மோனமும் அநுபவமும் (300), வள்ளியின் தன்மை (302) மயிலின் வேகம் (304 - 322) வேலும் மயிலும் (304), பரிபாடலில் (306), பிரணவ உருவம் (307), பாசப் பாம்பு (307), வாசி யோகம் (308), மூன்று வாகனங்கள் (309), மூன்று மயில்கள் (310), மயிலான சூரன் (311), மயிலின் வீரம் (311), வெற்றி வேலோன் வாகனம் (318), மேரு அசைதல் (315), உயர்வு நவிற்சி (316), மலையும் கடலும் (317), மேடும் பள்ளமும் (317), சமநிலை (318), சமநிலை பெற்றோர் (319), சாத்தியமா? (319), மயில்வாகனன் சமநிலை அருளுதல் (321) சேவற் பதாகை (323 - 341) இயல்புக்கு ஏற்ற கற்பனை (323), அருணகிரி நாதக் குழந்தை (324), புகழ் விரிக்கும் மரபு (325), விறகு சுமந்த சொக்கன் (325), சேவலின் பெருமை (327), வாகனமும் கொடியும் (328), நாத தத்துவம் (328), சேவலான சூரபன்மன் (329), கொக்கறு கோ (329), அன்பும் நினைப்பும் (330), ஹரதத்தர் மனப்பண்பு (331), ஆஞ்சநேயர் பண்பு (332), உலகத்துக் கோழி (332), அகவிருள் (333), சாதன அருள் (333), வேலவன் (334), தடையற்ற சேவல் (335), சிறகடிக்கும் சேவல் (336), பிறவிக் கடல் (337), பிரபஞ்ச வாசனை (337), தேவலோக இன்பம் (338), அகங்கார மமகாரங்கள் (339), ஞான உதயம் (340) கிங்கிணி ஓசை (342 - 352) குழந்தைப் பருவம் (342), சோமாஸ்கந்தர் (343), தாயின் சார்பு (344), கிங்கிணி ஓசை (346), அசுரர் நிலை (346), திக்குச் செவிடு படல் (347), மலைகள் அதிர்தல் (348), வைராக்கிய வகை (349), அசுர இயல்பு (350), தேவர் மகிழ்ச்சி (350), முருகன் பராக்கிரமம் (351) முகவுரை முருகனுடைய திருவருளில் ஈடுபட்டவர்கள் பலர். ஆனால் மற்றவர்களையும் அப்படி ஈடுபடச் செய்யும் வழிகாட்டிகளிலே சிறந்தவர் அருணகிரிநாதர். அவர் பாடிய திருப்புகழ் இன்று தமிழர் வாழும் இடமெல்லாம் பரவி முருக பக்தியை மேன்மேலும் வளர்த்து வருகிறது. அந்த நூலையன்றி அருணகிரிநாதப் பெருமான் அருளிய கந்தர் அலங்காரம், கந்தர் அநுபூதி, கந்தர் அந்தாதி, திருவகுப்பு என்னும் நூல்களும் அற்புதமானவை; பாராயண நூல்களாக மேற்கொள்வதற்கு உரியவை. கந்தர் அலங்காரம் நூறு கட்டளைக் கலித்துறையால் ஆகியது.    “கந்தன் நன்னூல்"    அலங்காரம் நூற்றுள் ஒருகவி தான்கற் றறிந்தவரே" என்று அந்நூலின் பயனாக உள்ள பாட்டினால், அது நூறு பாடல்களை உடையது என்று தெரிய வருகிறது. ஆயினும் நூற்றுக்கு அப்பாலும் சில கவிகள் வழக்கில் இருந்து வருகின்றன. அலங்காரம் என்ற பெயரோடு உள்ள நூல்கள் முன்பும் தமிழில் இருந்தன. ஆனால் அவை தமிழ் இலக்கணம் ஐந்தில் ஒன்றாகிய அணி இலக்கணத்தைச் சொல்லும் நூல்கள். தண்டியலங்காரம், மாறன் அலங்காரம் என்பவை அத்தகையனவே. கண்டன் அலங்காரம் என்ற நூல் ஒன்று முன்பு இருந்த தென்று தெரிய வருகிறது. அதிலுள்ள சில செய்யுட்கள் மாத்திரம் இப்போது கிடைக்கின்றன. அவற்றிலிருந்து அது கண்டன் என்னும் சிறப்புப் பெயரை உடைய இரண்டாம் இராசராச சோழனுடைய புகழைச் சொல்லும் நூல் என்றும், அகத்துறைப் பாடல்கள் அமைந்தது என்றும் புலனாகிறது. சமீப காலத்தில் வாழ்ந்த திருப்புகழ்ச் சுவாமிகள் என்ற தண்டபாணி சுவாமிகள் தமிழ் அலங்காரம் என்று ஒரு நூல் பாடியுள்ளார். அது தமிழின் பெருமையை விளக்கும் நூல். கந்தர் அலங்காரத்தை எண்ணி அமைத்த பெயர் அது என்றே தோன்றுகிறது. இவற்றையன்றிச் சொக்கர் அலங்காரம் என்ற பெயரோடு ரெயில் உண்டான புதிதில் ரெயில் பிரயாணத்தைப் பற்றியும் மதுரைத் தலத்தைப் பற்றியும் யாரோ பாடிய இசைப்பாட்டு ஒன்று உண்டு. கந்தருக்கு அலங்காரமாக அமைந்த நூலாதலால் இதற்கு இப்பெயர் உண்டாயிற்று. அருணகிரி நாதருடைய நூல்கள் யாவற்றுக்கும் பொதுவாக அமைந்த இயல்புகளை இதிலும் காணலாம். இந்த நூலுக்குச் சில அன்பர்கள் பொருள் எழுதி வெளியிட்டிருக்கிறார்கள். * தேனாம்பேட்டை, பால சுப்பிரமணிய தேவஸ்தானத்து அறப்பாதுகாப்பாளராகிய ஸ்ரீ சந்திரசேகரன் அவர்களும் பிறரும் என்னிடம் அன்பு கூர்ந்து பல முறை தம் விருப்பம் ஒன்றைத் தெரிவித்துக் கொண்டார்கள். ஏதேனும் ஒரு நூலைப் பற்றி வாரந்தோறும் ஒரு நாள் அவ்வாலயத்தில் சொற்பொழிவாற்ற வேண்டும் என்று சொன்னார்கள். வரையறையாக இடையீடின்றிச் செய்ய வேண்டிய கடமையாதலின், நான் மெல்லப் போக்குக் கூறிக் காலம் கழித்து வந்தேன். அவர்களும் விடாப்பிடியாக என்னைத் தம் அன்பு வலைக்குள் போட்டு இறுக்கி வந்தனர். கடைசியில் ஒப்புக் கொண்டேன். முருகன் திருவருளைத் துணைக் கொண்டு ஏதோ ஒரு வகையில் வாரந்தோறும் கந்தர் அலங்கார விரிவுரை ஆற்றலாம் என்ற நம்பிக்கை எழுந்தது. திருமுருகாற்றுப் படை, கந்தர் அநுபூதி, ஞானசம்பந்தர் தேவாரம் ஆகியவற்றைத் தொடர்ந்து சொல்லியதுண்டு. அந்த வழக்கத்தால், இதையும் நிறைவேற்றலாம் என்று எண்ணினேன். நான் இந்தக் கடமையை ஏற்றுக் கொண்டதற்கு முக்கியமான காரணம் ஒன்று உண்டு. எப்படியும் வாரம் ஒரு முறையாவது முருகனைப் பற்றி ஆழ்ந்து நினைந்து விரிவாகச் பேச வேண்டிய கட்டுப்பாடாக இருப்பதால் என் மனத்தில் உணர்ச்சி உண்டாகும் அல்லவா? எதை எதையோ பேசுவதற்கு இடையிலே,"அயில் வேலன் கவியை"ப் பேச வகை அவனருளால் வந்தது என்று எண்ணினேன். அதுவே இப்பணியில் புகுவதற்குரிய தலைமையான காரணம். இந்தச் சொற்பொழிவுத் தொடர் 25.1.1956 அன்று தொடங்கியது. என்னுடைய அன்பரும் நல்ல பக்தருமாகிய ஸ்ரீ அனந்தன் அவர்கள் ஒவ்வொரு வாரமும் நான் பேசுவதைச் சுருக்கெழுத்தில் எடுத்து மீட்டும் தட்டெழுத்தில் பெயர்த்துத் தரும் அரிய உபகாரத்தைச் செய்ய முன்வந்தார். அவராகவே அன்பு வைத்து இதனைச் செய்யத் தொடங்கினார். அவர் அப்படிச் செய்வதை அறிந்த அமுத நிலையத் தலைவரும் என் கெழுதகை நண்பருமாகிய ஸ்ரீ ரா. ஸ்ரீ. ஸ்ரீகண்டன் அவர்கள் அவர் எழுதுபவற்றைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார். அவர் விருப்பப்படியே இந்த வெளியீடுகள் இப்போது உருவாகின்றன. கந்தர் அலங்காரப் பாடல்களுக்கு மாத்திரம் விளக்கம் எழுதினால் அது இவ்வளவு விரியாது. சொற்பொழிவுகளாக ஆற்றியதால் சொல் விளக்கமும், பொருள் விளக்கமும் இருப்பதோடு, உவமை, உதாரணம், மேற்கோள், தத்துவம், பழங்கதை, ஒப்புமை, அநுபவச் செய்தி ஆகியவற்றையும் இவற்றில் காணலாம். பேசும்போது கேட்டதையே படித்தால், கேட்கும்போது இருந்த சுவை ஓரளவு குறையும். சில இடங்களில் பன்னிப் பன்னிச் சொன்னதுபோலத் தோற்றும். ஓரிடத்தில் சொன்ன செய்தியே வேறு ஓரிடத்தில் வருவதும் கூடும். ஆயினும் சொற்பொழிவு நடையாகவே இருக்கட்டும் என்ற நினைவினால் அவற்றை நான் சுருக்கவில்லை. ஒரு முறை இவற்றைப் பார்த்துக் சிறிதளவே செப்பஞ் செய்து, வெளியிடக் கொடுத்து விட்டேன். இது புதுவகையான முயற்சி. அன்பர்கள் நன்றாக இருக்கிறதென்றால் முயற்சி வெற்றி பெற்றது என்று மகிழ்வேன். அன்பர்களின் கருத்தைத் தெரிந்து கொண்டால் அதற்கு ஏற்றபடி செய்யலாம் என்று தோன்றுகிறது. இந்த முயற்சி உருவாக அருளிய முருகன் திருவருளை வழுத்துகிறேன். என் சொற்பொழிவுகளை ஒரு மணி, ஒன்றரை மணி நேரம் தொடர்ந்து சுருக்கெழுத்தில் எடுத்து மீட்டும் தட்டெழுத்துருவில் வடித்துத் தரும் அன்பர் ஸ்ரீ அனந்தனுடைய பேரன்புக்கு என்ன கைம்மாறு செய்வது? அவருடைய உதவியே இந்த வரிசைக்கு உரமூட்டுகிறது. அவருக்கு என் நன்றியறிவைத் தெரிவித்துக் கொள்கிறேன். நான் எப்போதும் எதையாவது எழுதிக் கொண்டே இருக்க வேண்டும் என்று எண்ணி என்னைத் தூண்டி ஊக்கமூட்டி வரும் அன்பர் ஸ்ரீ ரா. ஸ்ரீ. ஸ்ரீகண்டன் அவர்கள் இந்த வரிசை மலர்வதற்கு நீர் வார்க்கிறவர். அவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தச் சொற்பொழிவு வரிசையைப் பாலசுப்பிரமணியர் ஆலயத்தில் நிகழ்த்தும்படி பணித்து என்னை இப்பணியில் புகச் செய்த ஆலயக் காப்பாளர் ஸ்ரீ சந்திரசேகரன், ஸ்ரீ நரசிம்மன், ஸ்ரீ திருவேங்கட நாயகர் முதலியவர்களுக்கும் வாரந்தோறும் இச்சொற்பொழிவுகளைக் கேட்டு ஊக்கமூட்டிவரும் அன்பர்களுக்கும் என் நன்றி உரியதாகும். முருகன் திருவருளால் கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள் இனிது நிறைவேறுமென்று நம்புகிறேன். கி.வா. ஜகந்நாதன் 01.01.1956  அலங்காரம் அருணகிரியார் செய்த அலங்காரம் 1 இறைவன் திருவருளினால் உலகத்தில் திரு அவதாரம் செய்த அருணகிரி நாதரைப் பற்றிப் பலர் பலவிதமான கதைகளைச் சொல்லுகிறார்கள். அந்தக் கதைகள் அனைத்துக்கும் சான்று உண்டு என்று சொல்ல இயலாது. திருப்புகழைக் கொண்டு பார்த்தால் அருணகிரி நாதப் பெருமானைப் பற்றிய செய்திகள் பல தெரியவரும். அவர் பலவிதமான கலைகளிலும் வல்லவர், சிறந்த நூற்பயிற்சி மிக்கவர், இறைவன் அருட் காதலில் மீதுர்ந்தவர், அவனருளாலே அவன் தாளைப் பணிந்து சிறந்தவர், ஆண்டவனது திருவடியை அடைந்து இன்புற்றவர் என்று தெரியவரும். திருப்புகழ், திருவகுப்பு, கந்தர் அலங்காரம், கந்தர் அநுபூதி, கந்தர் அந்தாதி ஆகிய அழகான நூல்களிலிருந்து இவற்றை ஒருவாறு அறியலாம். அந்த நூல்களால் அவர் பல சாஸ்திரம் அறிந்தவரென்று தெரியவரும்; ஞானம் பெற்றவரென்று தெரியவரும். சரியை முதலிய மார்க்கம் அறிந்தவரென்பதும், தலங்களின் சிறப்பை உணர்ந்தவரென்பதும் அறிந்து கொள்ளலாம். பலவகையான செய்திகளை அவர் அறிவார். உலா, கோவை போன்ற பிரபந்தங்களிலும் அவருக்குப் பழக்கம் உண்டு. சங்ககால நூல்களிலும் பயிற்சி உண்டு. இவற்றை அறிந்து கொள்வதற்குரிய பல குறிப்புக்களை முன் சொன்ன அவர் நூல்களிற் காணலாம். அருணகிரிநாதப் பெருமானை இனி நாம் காண முடியாது. ஆனால் அப்பெருமான் திருவாய் மலர்ந்தருளிய நூல்கள் இன்றும் இருக்கின்றன. அவற்றினூடே புகுந்து பார்க்கும்போது அவர், திருவருட்பேற்றை அடைந்தவர் என்பதை நாம் உணர்ந்து கொள்ள முடியும். தமிழ் நாட்டிலுள்ள நூல்களிற் பெரும் பாலானவை இறைவனைப் பற்றியவையே இறைவனைப் பற்றிய தொடர்புள்ள நூல்களையே இந்த நாட்டுப் பெரியோர்கள், 'நல்ல நூல்கள்' என்று போற்றினார்கள். அருணகிரியார் அருளிய நூல்கள் மிகவும் நல்ல நூல்கள். அநுபவப் புதையல் அருணகிரிநாதர் இயற்றிய திருப்புகழ் முதலிய நூல்களைப் படிக்கும்போது, அவற்றினிடையே காணக் கிடைக்கும் தமிழ் இலக்கிய நயங்களை மட்டும் தெரிந்து கொண்டால் போதாது, அவற்றினிடையே வரும் சாஸ்திர உண்மைகளைத் தெரிந்து கொண்டாலும் போதாது. இலக்கிய நயத்தை மாத்திரம் உணர்ந்து கொள்ள இலக்கிய நூல்களைப் பார்க்கலாம். சாஸ்திர உண்மைகளை அறிந்து கொள்ளச் சாஸ்திர நூல்களைப் பார்க்கலாம். அருணகிரிநாதர் இயற்றிய நூல்களிலோ அநுபவம் புதைந்து கிடக்கின்றது. அவர் தம் வாழ்க்கையில் என்ன என்ன துன்பத்தை அடைந்தாரோ அந்த அந்தத் துன்பத்தின் நிழலையும், அவர் என்ன என்ன இன்பத்தை அடைந்தாரோ அந்த இன்பத்தின் ஒளியையும் ஒரு சேரப் பார்க்கலாம். நிழலும் ஒளியும் கலந்திருப்பதனால்தான் அவர் பாடல்கள் நமக்கு இனிக்கின்றன. தாம் அடைந்த துன்பத்தை அவர் சொல்லும்போது அதைப் படிக்கிற நமக்கு அருணிகிரிநாதர் நம்மை ஒத்தவர் போலும் என்ற நினைப்பு வரும்; அந்த நிலையில் அவர் நமக்கு அண்மையில் இருப்பவராகத் தோன்றுகிறார். ஆனால் ஒளி மயமான இன்பங்களை அவர் கூறும்போது அவை நமக்கு விளங்குவதில்லை. 'நம்மைப்போல இருந்த ஒருவர், ஒளி மயமான திருவருளைப் பெற்று இன்பம் அடைந்தார்; நாமும் அந்த நிலையை முயன்றால் அடையலாம்' என்ற நம்பிக்கை மாத்திரம் உண்டாகிறது; திருவருளின் நினைப்பும் வருகிறது. நம்மைப் போலவே இந்த உலகியல் வாழ்க்கையில் துன்பமுற்று, இன்னலுற்று அலைந்த தன்மையை அருணகிரி நாதர் தம் பாடல்களில் சொல்லும்போது நம்மை எண்ணித்தான் அவர் அவ்வாறு பாடியிருக்கின்றாரோ என்று தோன்றும். உண்மையும் அதுதான். அந்த நூல்களில் அவர் கூறியிருக்கிற பாவங்கள், குற்றங்கள் எல்லாவற்றையும் வரிசையாக எடுத்துச் சொன்னால் ஒரு மனிதன் ஒரு வாழ்க்கையில் அத்தனையையும் செய்யக்கூடு மென்று சொல்ல இயலாது. அவ்வளவு விரிவான குற்றங்களை அவர் சொல்லியிருக்கிறார். அவ்வளவையும் அருணகிரிநாதப் பெருமான் தம் வாழ்நாளில் புரிந்தார் என்றால் அதனை நம்ப முடியாது. அவை ஒரு வாழ்நாளில் செய்யக் கூடியவை அல்லவே! இருந்தாலும் அவற்றையெல்லாம் தம் வாழ்நாளில் தாமே புரிந்ததுபோல அவர் சொல்லியிருக்கிறாரே என்றால், அப்படிச் சொல்வது பெரியவர்களின் வழக்கம். இதை 'நைச்சி யானுசந்தானம்' என்று சொல்வார்கள். மகாத்மாக்கள் அந்தப் பெரியவர்கள் தம்மை மாத்திரம் நினைந்து பாடுவதில்லை. உலகம் முழுவதிலும் இருக்கின்ற மக்கள் புரிகின்ற பாவங்களை, படுகின்ற துன்பங்களை, தாமே செய்தவை போலவும், தாமே அநுபவிப்பன போலவும் இறைவனிடத்தில் விண்ணப்பித்துக் கொள்வது அவர்களுடைய வழக்கம். ஒரு வக்கீல் தாம் செய்யாத குற்றத்தைப் பற்றிய சமாதானத்தைத் தம் கட்சிக்காரன் சார்பில் நின்று எடுத்துச் சொல்வது போலக் கருணை நிரம்பிய பெரியவர்கள் உலகத்தினர் படும் துன்பங்களையெல்லாம் தாம் ஏற்றுக்கொண்டு, அவர்களுக்காக வக்காலத்து வாங்கிக் கொண்டு, இறைவனிடத்தில் மன்றாடி நிற்கிறார்கள். "நான் பல பாவங்களை புரிந்திருக்கிறேன்; நான் பல துன்பங்களை அடைந்து துயருறுகிறேன்" என்று அவர்கள் சொல்லும்போது உலகத்திலுள்ள மக்கள் வேறு, தாம் வேறு என்ற நினைவும் அவர்களுக்கு இருப்பதில்லை. எவ்வுயிரும் தம் உயிர்போல நினைக்கின்ற இயல்பினால் அம்மகான்கள் அப்படிச் சொல்லுகிறார்கள். அவர்கள் மகாத்மாக்கள்; மற்றவர்கள் அல்பாத்மாக்கள். மகாத்மா என்றால் பெரிய உயிர் என்றும் அல்பாத்மா என்றால் சின்ன உயிர் என்றும் பொருள். சின்ன உயிர் பெரிய உயிர் என்று மக்கள் இப்போதும் சொல்வதைக் கேட்கிறோம். சின்ன உயிர் என்று கொஞ்ச நாள் இருந்துவிட்டு மறைகின்றவர்களையும், பெரிய உயிர் என்று அதிக நாள் உயிரோடு இருக்கின்ற வயது முதிர்ந்தவர்களையும் குறித்துச் சொல்லுகிறோம். மகாத்மாக்கள், அல்பாத்மாக்கள் என்பவற்றிற்கும் அத்தகைய பொருளைக் கொள்ளக்கூடாது. க.சொ.l-2 உடம்பில் உயிர் இருக்கிறது; மூன்று கரணங்கள் இருக்கின்றன. மனம், வாக்கு, காயம் ஆகியவை கரணங்கள். இவற்றோடு இயைந்து உயிர் இயங்குகிறது. உயிர் உடம்பினுள் புகுந்து இருப்பதனால் கரணங்கள் பல விதமான தொழில்களைச் செய்கின்றன. அந்தத் தொழில்களின் வாயிலாகக் கிடைக்கும் இன்ப துன்பத்தை உயிர் அநுபவிக்கிறது. பெரும்பாலும் மூன்று கரணங்களாலும் மனிதன் தனக்கு வேண்டியவற்றையே செய்து கொள்கிறான். தன்னைப் பற்றியே சிந்திக்கிறான். தன்னைப் பற்றியே பேசுகிறான். தன்னைப் பற்றிய காரியங்களையே செய்கிறான். தன்னைப் பற்றியே சிந்திக்கும் மனம் பிறரைப் பற்றியும் சிந்திக்க வேண்டும்; பிறர் துன்பங்களைப் பற்றியும் சிந்தித்து இரங்க வேண்டும். அதற்கு மனம் விரிய வேண்டும். தன் உடம்பை மாத்திரம் எண்ணும் நினைப்பை விட்டு, பிறர் உடம்புகளைப் பற்றியும் நினைக்க வேண்டுமானால், இப்போது தன்னலத்தை மட்டும் சிந்திக்கும் சுருக்கமான நிலையில் உள்ள மனத்தால் இயலாது. இந்த மனத்திலே அன்பு என்ற ஒன்று பிறந்துவிட்டால் அது விரிவு பெறும். அன்பின் விரிவு ஒரு பிரமசாரி கடைக்குப் போய் ஒரு மாம்பழம் வாங்குகிறான். அதை நறுக்கித் தா என்று கடைக்காரனை கேட்டு, அவன் நறுக்கிக் கொடுக்க, கடை வாயிலிலேயே நின்று அந்த மாம்பழத்தைத் தின்று விட்டுப் போகிறான். கல்யாணம் ஆன பிறகு அதே கடைக்குப் போய் ஒரு மாம்பழம் வாங்குகிறான். வாங்குகிற மாம்பழத்தை, நறுக்கித் தரச் சொல்லி அவனே உண்பது வழக்கமாதலால் இன்றைக்கும் கடைக்காரன் அந்த மாம்பழத்தை நறுக்க முந்துகிறான். "அப்பா, அதை நறுக்காதே" என்று சொல்லி மாம்பழத்தை முழுதாகவே வாங்கிக் கொண்டு வீட்டுக்குப் போகிறான் இளைஞன். ஏன் தெரியுமா? முன்பு அந்த மாம்பழத்தை வாங்கும்போது அவனுக்குத் தன்னைப் பற்றிய நினைவு மாத்திரம் இருந்தது. இன்றைக்கோ தன் மனைவிக்கும் அந்த மாம்பழத்தை நறுக்கிக் கொடுக்க வேண்டும்மென்ற அன்பு பிறந்துவிட்டது. முன்பு அவனுக்கு ஒரு வயிறுதான். இன்றைக்கு மனைவியின்மேல் அன்பு மனத்தினால் பிறந்ததனால், வயிறும் இரண்டாக விரிகிறது. ஒரு குழந்தையும் பிறந்து விட்டால், வயிறு மூன்று ஆகிறது. இப்படி அன்பு விரிய விரிய, மனமும் விரிவடைகிறது. தன்னலமும் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து போகிறது. எல்லா உயிரையும் தன்னுயிர்போலக் காண்கின்ற நிலை வருகிறது. ஓர் உபமான வாயிலாக இதைத் தெரிந்து கொள்ளலாம். ஒர் ஆழாக்கு நல்ல பாலிலே இரண்டு ஆழாக்கு, மூன்று ஆழாக்குத் தண்ணீரை ஊற்றினால் அதைச் சுயப்பால் என்று சொல்ல முடியாது; இருந்தாலும் அது பாலாகத்தான் இருக்கும். ஐந்து ஆழாக்கு, ஆறு ஆழாக்குத் தண்ணிரை ஊற்றினால் அப்போது பாலின் வெண்மை நிறம் இருக்கும்; ஆனால் பாலாக இராது; பால்போலத் தோன்றும். 'வெளுத்ததெல்லாம் பால் அல்ல' என்ற பழமொழியைக் கேட்டிருக்கிறோம் அல்லவா? பின்னும் தண்ணீரை ஊற்றினால் அது தண்ணிராகவே ஆகிவிடும்; பாலின் நிறங்கூட இருக்காது. அதைப் போலவே இல்லறத்தில் வாழ்கின்ற ஒருவன் அன்பு நீரை ஊற்றிக் கொண்டே இருந்தால் சுயநலம் என்பது வர வர மறைந்து கடைசியில் உள்ளமெல்லாம் அன்பு வெள்ளமாகும்; தன்னலமே அற்றவனாகப் போய்விடுவான். முதலில் மனைவியிடம் பிறந்த அன்பு விரிந்து குழந்தையிடமும் பின்பு வீட்டிலுள்ளவரிடமும் பரவுகிறது. வீட்டிலிருந்து வீதிக்கு விரிகிறது. கடைசியில் உலகமெல்லாம் விரிந்த அன்பாக ஆகிவிடுகின்றது. இப்படி அன்பு விரிந்துகொண்டே போகப் போக அவனது அகங்காரம் மங்கிவிடுகிறது. அவனைப் பற்றியிருந்த 'யான்', 'எனது' என்ற இரண்டு பற்றுக்களும் அன்புத் தண்ணீர் விட விட, இருந்த இடம் தெரியாமல் மறைந்து போய்க் கடைசியில் அன்பு மாத்திரம் தெளிவாகப் பரந்து நிற்கின்றது. பெரியவர்கள் இவ்வாறு அன்பு மயமாக இருந்தனர்; எல்லா உயிர்களையும் தம்முயிர் போலவே கருதினர்; எல்லா உடம்புக்குள்ளும் தாம் நின்று இன்ப துன்பங்களை அடைவதுபோல உணர்ந்தார்கள்; பிற உயிர்களுக்குச் சிறிய தீங்கு ஏற்பட்டாலும் தமக்கு ஏற்பட்ட தீங்கைப் போலவே எண்ணித் துடித்தார்கள். நம் வீட்டிலுள்ள சின்னஞ்சிறு குழந்தைக்கு நோய் வந்தால் நாம் தவிக்கிறோம். நம் மனைவிக்கு நோய் வந்து விட்டால் நாம் எவ்வளவு பாடுபடுகின்றோம்! அப்பொழுதெல்லாம் நம்முடைய உள்ளம் துடிக்கின்றது; துன்பமும் அடைகிறோம். "நம் உடம்பில் ஏதாவது நோய் வந்தால்தான் துன்பம் உண்டாகும்; அதை உணரலாம். பிறர் உடம்பில் வருவதை நாம் எப்படி உணர முடியும்?" என்று தோன்றலாம். "எவ்வளவு நெருங்கிய உறவானாலும் உடம்பும் உடம்பும் வேறுதானே?" என்று கேட்கலாம். துன்பம் என்பது மனத்தைப் பொறுத்தது. கையில் இருக்கும் ஒரு கட்டியை டாக்டர் அறுத்துச் சிகிச்சை செய்கிறார். கை துடிப்பதனால் துன்பம் உண்டாவதில்லை. கை துடிப்பதை மனம் அறிந்து கொள்வதால்தான் துன்பம் உண்டாகிறது. "இல்லை, கை துடிப்பதனால்தான் துன்பம்" என்றால் டாக்டர் நமக்கு மயக்க மருந்தை கொடுத்துவிட்டுக் கையை 'ஆபரேஷன்' செய்யும்போது ரத்தம் வருகிறதே, அப்போது துன்பம் தோன்றுகிறதா? இல்லை. காரணம், கையை வெட்டும் போது மனம் அங்கே இணையவில்லை. கையில் தோன்றிய புண்ணில் மனம் இணைந்தால்தான் துன்பம் உண்டாகிறது. ஆகவே, மனத்திலே இணைந்து தோன்றுகின்ற உணர்ச்சியையே இன்பம், துன்பம் என்று சொல்லுகிறோம். நம் கையிலே புண் ஏற்படுகிறதை மனம் உணர்கிறபோது துன்பம் உண்டாகிறது. அதாவது மனத்தைச் செலுத்திப் பார்க்கிற போதுதான் துன்பத்தை உணர்கிறோம். அன்பினால் மனம் விரிந்தவர்கள், தம்மைப் போலவே எல்லா உயிர்களையும் பார்க்கின்றவர்கள். எங்கோ ஒரு மூலையில் ஒரு பசுமாடு துன்புற்றாலும் தாம் துன்புறுவதுபோல உணர்ந்து வருகிறார்கள். ஒரு பசுவின் கன்று தன் மகனுடைய தேர்க்காலில் சிக்கி உயிர் விட, அதனால் அந்தப் பசுமாட்டிற்கு ஏற்பட்ட துன்பத்தைத் தன் துன்பம் போலவே எண்ணியதால் அன்றோ, மனுநீதிச் சோழன் தன் மகனையே தேர்க்காலில் வைத்து ஊர நினைந்தான்?    "எவ்வுயிரும் என்னுயிர்போல் எண்ணி இரங்கவும்நின்    தெய்வ அருட்கருணை செய்யாய் பராபரமே" என்று தாயுமானவர் சொல்லுகிறார். எவ்வுயிரையும் தன் உயிர் போல எண்ணுவதோடு மாத்திரம் அல்ல; எண்ணி இரங்க வேண்டும். இதைத்தான் சர்வுபூத தயை என்று சொல்வார்கள். தம் உயிரையே பெரிதாக எண்ணித் தம் நலம் பேணி வாழும் அல்பாத்மாக்களைப் போலன்றிப் பிற உயிரையும் தம் உயிராக எண்ணி அவ்வுயிர்களுக்கு வரும் துன்பங்களையும் தம்முடையனவாக உணரும் மகாத்மாக்கள் எல்லாச் சமயத்திலும் இருக்கிறார்கள். அருணகிரி நாதரும் உலகத்திலுள்ள எல்லா உயிர்களும் படும் துன்பங்களைத் தாம் படும் துன்பங்களாகவே மேற்கொண்டு கூறுகின்றார். நாமும் பிறர் படுகின்ற துன்பங்களை எல்லாம் எடுத்து மேடையில் பேசிக்கொண்டே போகலாம். ஆனால் அருணகிரிநாதர் அந்தத் துன்பங்களிலிருந்து விடுபட்டுத் தாம் பெற்ற இன்பத்தையும், அந்த இன்பத்திலே மீதுார்ந்து நிற்கும் நிலையையும் பற்றிப் பேசுகின்றார். அவற்றைப் பார்க்கும்போது அருணகிரிநாதப் பெருமான் துன்ப நிலையினின்றும் மாறி, இறைவன் திருவருளால் இன்ப நிலையை அடைந்தார் என்று தெரிந்து கொள்ளுகிறோம். கந்தர் அநுபூதி, கந்தர் அலங்காரம் போன்ற நூல்களைப் பார்த்தால் அவற்றில் இறைவன் திருவருளைப் பற்றி, இன்பத்தைப் பற்றி, துன்பத்தைப் பற்றிப் பல செய்திகள் இருப்பதைக் காணலாம். துன்பங்களைப் பற்றிச் சொல்லும்போது நமக்குள்ள அனுபவங்களை அப்படி அப்படியே எடுத்துச் சொல்வதுபோலத் தோன்றும். திருவருட்பேற்றினால் கிடைத்த இன்பத்தைப் பற்றி அவர் சொல்லும்போதும் தம் அநுபவத்தையே சொல்கிறார். இருந்தாலும் அது நமக்கு அவ்வளவாக விளங்குவது இல்லை. துன்பங்கள் நமது அநுபவத்தோடு ஒட்டியிருப்பதனால் உண்மையென்றும், இன்ப நிலை நமக்குப் புலப்படாததனால் பொய்யென்றும் சொல்லலாமா? ஒன்று உண்மையானால் மற்றொன்றும் உண்மைதான். துன்பநிலையை நாம் அநுபவித்ததுபோல இன்ப நிலையையும் அடைய முயல வேண்டும். அதுதான் கந்தர் அலங்காரம் முதலிய நூல்களைப் படிப்பதன் பயன். வழிகாட்டி இறைவன் திருவடிகளை அடைந்ததனால் உண்டான இன்பத்தைப் பாட்டாகப் பாடுகிறார் அருணகிரிநாதர். அந்த இன்பத்தை நினைந்து வியப்பில் ஆழ்கிறார். உலகத்திலேயுள்ள உயிர்கள் எல்லாம் மலத்திலே அழுந்தியிருக்கின்றன. மலம் நீங்க வேண்டுமானால் ஆண்டவனைப் பற்றிக்கொள்ள வேண்டும். மலத்திலிருந்து விடுபட்ட ஒருவன் நான் இவ்வாறு விடுபட்டேன் என்று சொன்னால் அந்த இன்ப அநுபவம் நமக்கு வழிகாட்டியாக இருக்கும். இந்த வழிகாட்டி நிலையில் இருக்கின்றது அருணகிரிநாதப் பெருமானுடைய வாக்கு. செத்த பிறகு சிவலோகம் வைகுந்தம் சேர்வதற்காக இறைவன் திருவருளைப் பெற வேண்டும் என்று நினைக்கிறோம். இந்த உலகத்தில் இருக்கும்போதே, இப்பிறவியிலேயே, இன்ப நிலை பெறலாம். "இத்தேகமொடு காண்பேனோ?" என்று தாயுமானவர் ஏங்குகிறார். இத்தேகத்தோடு வாழும்போதே இன்ப நலம் பெறலாம் என்பதை அருணகிரிநாதர் சொல்லுகின்றார். "நான் ஏதோ முற்பிறப்பில் நல்ல புண்ணியம் செய்ததனால்தான் இந்தப் பிறவியில் எனக்கு ஞான நிலை வந்தெய்தியது என்று எண்ண வேண்டாம். நான் பேறு சற்றும் இல்லாதவன்; தவம் சற்றும் இல்லாதவன்" என்கிறார். அப்படி இருந்தும் எனக்கு இப்பிறவியிலேயே, "இறைவன் அருளால் இன்பம் கிடைத்தது" என்று பெருமிதத்தோடு பாடுகின்றார். அத்தகைய பாடல்களைக் காணும்போது நாமும் நிச்சயமாக அந்த இன்ப நிலையை எய்த முடியும் என்ற நம்பிக்கை தோன்றும். தோன்றுவதோடு மாத்திரம் நிற்கக் கூடாது. 'நம்மைப் போலவே வாழ்ந்தவர், நம்மைப் போலவே உலகியல் துன்பங்களை அடைந்தவர் ஒருவர், நம்மிலும் சிறந்து நின்று, இன்ப வாரிதியில் மூழ்கித் திளைத்தார் என்றால், நாமும் அவர் காட்டிய நெறிப்படி வாழ்ந்து, அந்தப் பேரின்பத்தைத் துய்க்க வேண்டும்' என்ற ஆர்வம் உண்டாக வேண்டும். கருணைக்கு அருணகிரி அருணகிரிநாதப் பெருமானைப் பற்றிப் பல பெரியார்கள் பலவகையாகப் பாடியிருக்கிறார்கள். அவர்களில் ஒருவர்,    "காசுக்குக் கம்பன் கருணைக்கு அருணகிரி" என்று பாடுகிறார். 'கருணைக்கு அருணகிரி' என்று சொல்லியிருப்பதற்குக் காரணமாக ஒரு கதை சொல்வார்கள்.  வில்லிபுத்துாரரும், அருணகிரிநாதப் பெருமானும் ஒரு சமயம் வாதம் செய்தார்கள். யார் அந்த வாதத்திலே வெற்றி பெறுகிறாரோ அவர் தோற்றவருடைய காதை அறுப்பது என்பது நிபந்தனை. வில்லிபுத்துரர் இப்படிப் பல பேர்களைத் தோல்வியுறச் செய்து அவர்களுடைய காதை அறுத்துக் கொண்டே வந்தாராம். அவருடைய கர்வத்தை அடக்குவதற்காகவே அருணகிரிநாதர் அவரோடு வாதத்திற்குச் சென்றார். கடைசியில் அருணகிரிநாதரே வென்றார். வில்லிப்புத்தூரர்தம் காதை அருணகிரிநாதப் பெருமானிடம் நீட்டி, தாம் தோற்றுப் போய்விட்டதால் அறுக்கும்படியாகச் சொன்னாராம். அருணகிரிநாதப் பெருமான் அவர் காதை அறுக்காமல், "என் பாட்டுக்குக் காதை நீட்டினதே போதும்" என்று சொல்லிவிட்டாராம். அதனாலே கருணைக்கு அருணகிரி என்று பெயர் வந்ததாகச் சொல்வார்கள். இந்தச் சரித்திரம் பிற்காலத்தில் எழுந்தது. வில்லிபுத்துரரின் அற்புதமான பாடலைப் பார்த்தால் அவரை அவ்வளவு முரடர் என்று சொல்ல முடியாது. புலவரைப் பற்றிப் பல கற்பனைக் கதைகள் எழுந்திருக்கின்றன. அத்தகையை கதைகளுள் இது ஒன்று எனத்தான் எனக்குத் தோன்றுகிறது. 'கருணைக்கு அருணகிரி' என்பது வேறு காரணத்தால்தான் அவருக்கு வந்திருக்க வேண்டும். மகாத்மா காந்தி அவர்கள் சிறந்த நிலையிலேயே வாழத் தகுதி பெற்றவர். அவர் விரும்பியிருந்தால் பிர்லா போன்ற கோடீசுவரர்கள் பட்டு மெத்தையிலே அவரை உறங்க வைத்திருப்பார்கள். அவ்வளவு சிறந்த நிலையிலே வாழ்வதற்கு வசதியிருந்தாலும் சமுதாயத்தில் யார் மிகத் தாழ்ந்த நிலையிலே இருந்தார்களோ அவர்களுடைய மத்தியிலே வாழ்ந்தார். மிகவும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வேண்டிய சேவைகளைப் புரிந்தார். அவர்களுக்கு வரும் துன்பங்களைத் தம்முடையனவாக ஏற்றுக் கொண்டார். அதற்கு காரணம் அவருடைய கருணை. பிறருடைய துன்பங்களை எல்லாம் ஏற்றுக்கொள்ளும் கருணைதான் எல்லாக் கருணையிலும் பெரியது. பிறருடைய துன்பத்தைக் காணுவது ஒரு கருணை; கண்டு இரங்குவது ஒரு கருணை; அந்த துன்பத்தைத் தாம் ஏற்றுக் கொள்வது ஒரு கருணை; அவர்களுடைய துன்பத்தைத் தாம் ஏற்றுக்கொண்டு அதைத் துடைப்பது ஒரு கருணை. இப்படிக் கருணை கொஞ்சம் கொஞ்சமாக வளரும். பிறர் துன்பத்தைக் காண்பது என்ற கருணையே நமக்கு இல்லை. கண்ட பிறகு அல்லவா நம் உள்ளத்தில் கருணை வளர வேண்டும்? கண்டாலும், "அவன் துன்பத்தை அநுபவித்தால் அநுபவிக்கட்டுமே; அவன் விதி; அவன் அந்தத் துன்பத்தைப் படத்தான் வேண்டும்" என்று சொல்பவர்களைப்போல் அல்லாமல், "அவன் துன்பப்படுகிறானே" என்று இரங்க வேண்டும். இரங்குவதோடு மட்டுமல்லாமல் அவனது துன்பத்தை நாமே ஏற்றுக்கொண்டு அதை நீக்குவதற்கு முயல வேண்டும். இதுவே கருணையின் வடிவு. அருணகிரிநாதப் பெருமான் பாமர மக்களைப்போலவே உயிர் வாழ்ந்து, பிறகு இறைவனின் திருவருளில் மூழ்கித் திளைத்து அன்பு உள்ளத்துடன் வாழ்ந்தார். அதோடு மாத்திரம் நிற்கவில்லை. அந்த மக்கள் படுகின்ற துன்பங்களை எல்லாம் கண்டு இரங்கினார். அதோடும் நிற்கவில்லை. அவர்கள் படும் துன்பங்களைத் தாமே படுவதாக நினைத்தார். "ஆண்டவனே, நான் படுகின்ற இந்தத் துன்பம் போதாதா? இதை நீக்கி இன்பம் அருள மாட்டாயா?" என்று பாடினார். பிறருக்காகப் பாடிய பாடல்கள் இவை. "நான் இந்தத் துன்பத்தை அடைந்தேன்" என்று அவர் சொல்வன எல்லாம் அவருடைய கருணைப் பிரவாகத்தைக் காட்டுகின்றன. அருணகிரிநாதர் இப்படிப் பாடுகின்ற பாட்டை நினைந்து, 'கருணைக்கு அருணகிரி என்று அந்தப் புலவர் பாடியிருக்கிறாரோ என்று எனக்குத் தோன்றுகிறது. 'கருணைக்கு அருணகிரி' என்றது அவர் காலத்தில் நிகழ்ந்த நிகழ்ச்சியை மாத்திரம் குறிப்பது அன்று. அவர் இயற்றிய திருப்புகழ், கந்தர் அலங்காரம் முதலிய நூல்கள் மக்கள் வாழ்கின்ற காலமெல்லாம் அவர்களுடைய குறைகளை இறைவனிடம் முறையிடுவதற்கு வாய்ப்பாக இருக்கின்றன. ஆகவே அருணகிரிநாதருடைய கருணை இன்று வரையில் பயன்படுகிறது; இனியும் பயன்படும். அன்பு வித்து மனிதன் தன் உள்ளத்தில் தோன்றுகின்ற தீய உணர்ச்சிகளை எல்லாம் காட்ட வார்த்தைகளை நிரம்பக் கற்றுக் கொண்டிருக்கிறான். அதுவும் இந்தக் காலத்தில் பிரசங்க மேடைகளிலும், பத்திரிகைகளிலும் கொள்ளை, கொலை, தீ, பகிஷ்காரம், வெறி' போன்ற வார்த்தைகள் கொப்புளிப்பதைப் பார்க்கிறோம். அன்புக்கு வார்த்தை பஞ்சமாகப் போய்விட்டது. தீய உணர்ச்சிகளின் விளைவுகளைச் சொல்லும் வார்த்தைகளே அளவுக்கு மிஞ்சி வளர்ந்து விட்டன. ஆனால் இறைவன் எல்லோருடைய மனத்திலும் நல்லுணர்ச்சிகள் உண்டாவதற்கும் வாய்ப்பு அளித்திருக்கிறான். மனத்தில் தீய உணர்ச்சி மாத்திரம் இடம் பெறும் என்பது இல்லை; நல்லுணர்ச்சியும் இடம் பெறும். தீய உணர்ச்சிகள் மனத்திற்குத் தெரிவது போலவே அன்பு உணர்ச்சியும் தெரியத்தான் தெரியும். தன் மனையாட்டியிடத்தில் காதல் கொள்ளத் தெரிந்தவன் மனத்தில் காதல் உணர்ச்சி நிச்சயமாக இருக்கிறது. ஆனால் அந்த அன்பைப் பரவலாக விடுவது இல்லை. தன்னைச் சேர்ந்தோரிடத்தில் அன்பு செய்யத் தெரிந்த மனம் உலகத்து மக்கள் எல்லாரிடமும் அன்புகாட்டும்படி விரிவது இல்லை. தன் தாயிடத்தில் அன்பு பூண்ட ஒருவன் சமூகத்திலுள்ள எல்லாப் பெண்களையும் தாயாகப் பார்க்க முடியும்; அது இயல்போடு ஒட்டியதுதான். இறைவன் எல்லோருடைய மனத்திலும் அன்பை வித்தாக வைத்திருக்கிறான். புதியதாக அன்பு அவனுக்கு வர வேண்டியதில்லை. பிறந்தவுடனேயே தாயிடத்தில் அன்பு உண்டாகிறது. அந்த அன்பு மனத்திலே வித்தாக இருக்கிறது. ஆனால் அந்த வித்தானது முளைத்துக் கப்பும் கிளையுமாகப் படர்வது இல்லை. காரணம் அதற்கு ஏற்ற முயற்சி இல்லை. வித்து இடாத மண்ணிலே என்னதான் எருப்போட்டு, நீர் ஊற்றினாலும் ஒன்றும் முளைக்காது. மனம் அத்தகையது அன்று. இறைவன் இயற்கையிலேயே மனிதன் மன்த்திலே ஒரு வித்தை நட்டிருக்கிறான். அந்த அன்பாகிய வித்தை முயற்சி நீர் ஊற்றி வளர்த்தால் கருணைக் கனி பழுக்கும்; அந்த உள்ளத்திலே அருள் சுரக்கும். அருள் நிலைக்கு உயர்தல் பிறரிடத்திலுள்ள எல்லாப் பொருள்களையும் தானே பறித்துக் கொள்ள வேண்டும் என்பது ஒரு தன்மை. தன் பொருளைத் தானே அனுபவிக்க வேண்டும் என்று பற்றிக் கொண்டிருப்பது ஓர் இயல்பு. தன்னைச் சேர்ந்தவர்களுக்கு மாத்திரம் கொடுப்பது ஒரு வகை இயல்பு. தனக்குச் சம்பந்தம் இல்லாதவர்களுக்கும் கொடுப்பது மற்றோர் இயல்பு. இப்படி நான்கு விதமான இயல்புகள் உண்டு. இந்த நான்கு விதமான தன்மைகளில் தானே மற்றவர்களுடையவற்றையும் பெற்று வாழ வேண்டும் என்று இருப்பவன் மனிதர்களுள் மிகவும் மட்டமானவன். தன்னுடைய பொருளைத் தானே அநுபவிக்க வேண்டுமென்று இருப்பவன் அவனைவிடச் சிறிது உயர்ந்தவன். தன்னைச் சேர்ந்தவர்களுக்கும் கொடுக்க வேண்டுமென்று விரும்புபவன் நல்லவர்களில் கொஞ்சம் மட்டம். எல்லோருக்கும் கொடுக்க வேண்டுமென்று விரும்புபவன் நல்லவர்களில் உத்தமமானவன். பிறரிடத்திலுள்ள பொருள்கள் எல்லாம் தனக்கு வேண்டுமென்று கை நீட்டுகிறானே, அவனுடைய குணத்திற்கு அவா என்று பெயர். தன்னுடைய பொருளைத் தானே அனுபவிக்க வேண்டுமென்று விரும்புபவன் பற்று உள்ளவன். தன்னுடைய பொருளைத் தன்னைச் சார்ந்தவர்களுக்கும் கொடுக்க வேண்டுமென்று விரும்புபவன் அன்பு உள்ளவன். தன்னிடமுள்ள பொருளை எல்லோருக்கும் கொடுக்க வேண்டுமென்று விரும்புபவன் அருள் உள்ளவன். அவா முதல் அருள் வரையில் உள்ள நான்கு இயல்புகளும் மனத்தில் எழுவனவே. அவா உள்ளவன் கடுமையான இருள் உலகத்தில் இருக்கிறான். பற்று உள்ளவன் மங்கிய இருள் உலகத்திற்குள் வருகிறான். அன்பு உள்ளவன் மங்கிய ஒளி உலகத்திற்கு வருகிறான். அருள் உள்ளவன் நல்ல ஒளி உலகத்தில் மிளிர்கிறான். ஒளி உலகக் கோடு அன்பிலே தோன்றுகிறது. இருள் உலகக் கோடு பற்றிலே தோன்றுகிறது. அவா நிலையிலிருந்து பற்று நிலைக்கு உயர வேண்டும்; பற்றிலிருந்து அன்பு நிலைக்கு உயர வேண்டும்; அன்பு நிலையிலிருந்து அருள் நிலைக்கு உயர வேண்டும். அருணகிரி நாதர் அருள் நிலைக்கு உயர்ந்தவர். நம்மைப் போலவே அவர் அவா நிலையிலே வாழ்ந்தவர் என்றாலும், அவா நிலையிலிருந்து பற்று நிலையிலே வாழ்ந்து, பற்று நிலையிலிருந்து அன்பு நிலையிலே வாழ்ந்து, அன்பிலேயிருந்து அருள் நிலைக்கு உயர்ந்தவர். நாம் எல்லோரும் இருள் உலகத்தில் கிடக்கிறோம். அவா நம்மைப் பற்றியிருப்பதால் துன்பங்களும் பற்றியிருக்கின்றன. துன்பத்தை நீக்க வேண்டுமானால் ஆசையை அறுக்க வேண்டும்.    "ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள்     ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள்;     ஆசைப் படப்பட ஆய்வருந் துன்பம்     ஆசை விடவிட ஆனந்த மாமே" என்றார் திருமூலர். ஒருவனுக்கு ஒரு வீசை ஆசை நீங்கிற்று என்றால் அவனுக்கு ஒரு வீசைத் துக்கம் இல்லை. ஒரு மணு நீங்கிற்று என்றால் அவனுக்கு ஒரு மணுத் துக்கம் இல்லை. ஒருவனுக்கு எந்த அளவுக்கு ஆசை நீங்குகிறதோ அந்த அளவுக்குத் துக்கம் இல்லை.    "யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்     அதனின் அதனின் இலன்" என்கிறார் திருவள்ளுவர். ஆசை அதிகப்படத் துன்பமும் அதிக மாகும். பிறவித் துன்பத்திற்கு மூலம் ஆசைதான்.    "அவாவென்ப எல்லா உயிர்க்குமெஞ் ஞான்றும்     தவாஅப் பிறப்பினும் வித்து" என்பது திருக்குறள். அந்த ஆசை வித்தைப் பற்றாக்கி, பற்று நிலை மாறி அன்பைப் பெற்று, அதைப் பெருக்கினால் அருள் ஆகிவிடும். அருணகிரிநாதர் இந்த நிலையில் இருந்து உலகத்திலே மக்கள் எல்லாம் படுகின்ற இன்பதுன்பத்தைக் கண்டு, துன்பம் மிகுதியாக இருப்பதையும் பார்த்து, அந்தத் துன்பங்களை எல்லாம் தாமே படுவதாக நினைத்து, அவற்றிற்குக் காரணமான பாவச் செய்கைகளைத் தம்மேலேயே ஏறிட்டுக்கொண்டு பேசினார். இந்தப் பெருங்கருணையை அவரிடத்தில் பார்த்த பெரியோர்கள், 'கருணைக்கு அருணகிரி' என்று சொன்னார்கள். திருப்புகழ் அருணகிரிநாத சுவாமிகள் பதினாயிரம் திருப்புகழ்ப் பாடல்களைப் பாடினார். இன்றைக்கு 1330 திருப்புகழ்ப் பாட்டுக்களே கிடைத்திருக்கின்றன. திரு.வ.த. சுப்பிரமணிய பிள்ளை என்பவர் மிகவும் முயன்று ஆங்காங்குச் சென்று சுவடிகளைத் தேடித் தொகுத்து 1330 திருப்புகழை வெளியிட்டார். அதற்கப்புறம் அவர் குமாரராகிய தணிகைமணி திரு.வ.சு. செங்கல்வராயப் பிள்ளை அவர்கள், புதியதாகக் கிடைத்த பாட்டுகளையும், முந்தினவற்றோடு சேர்த்து நன்கு சீர்திருத்தி மூன்று புத்தகங்களாக வெளியிட்டிருக்கிறார். திருப்புகழ் படிக்கின்ற எல்லோரும் அந்தக் குடும்பத்தை வாழ்த்தக் கடமைப்பட்டிருக்கிறார்கள். திருப்புகழ்ப் பாடில்கள் மிக அற்புதமானவை. உலகம் எல்லாம் அற்புதம் என்று ஒதப் பாடும்படி இறைவன் அருளினானென்று அவரே சொல்கிறார்.    "பூர்வ பச்சிம தட்சிண உத்தர       திக்குள பக்தர்கள் அற்புதம் எனஒதும்    சித்ர கவித்துவ சத்தமி குத்ததி       ருப்புகழைச்சிறி தடியேனும்    செப்பென வைத்துல கிற்பர வத்தெரி       சித்தஅ நுக்ரகம் மறவேனே" என்கிறார். திருப்புகழ் பாடல்களில் ஓசை நயமும் சந்த நயமும் அதிகம். சந்தப் பாடல்கள் பாடுவது அருமை. எந்தப் பாடலைப் பாட முடிந்தாலும் சந்தப் பாடலைப் பாடுவது எளிதன்று. தத்த, தந்த, தைய, தான, தனன முதலிய சந்தங்கள் வரும். வல்லினத்துக்கு வல்லினம், மெல்லினத்துக்கு மெல்லினம், நெடிலுக்கு நெடில், குறிலுக்குக் குறில், இப்படியாக மாறாமல் அமையும்படி பாட வேண்டும். அத்தகைய பாடல்களை முருகன் திருவருளால் அருணகிரிநாதர் வெள்ளம் போலப் பாடினார். பெரும்பான்மையான பாடல்கள் எளிதில் பொருள் விளங்கும் நிலையில் இருக்கின்றன. அவற்றில் ராமாயணக் கதை வரும்; பாரதம் வரும். விநாயகர் புகழ் வரும்; அம்பிகையின் பெருமை வரும். சிவ பிரான் திருவிளையாடல்களையும் பாடியிருப்பார்; கண்ணன் விளையாடல்களையும் பாடியிருப்பார். எல்லாவற்றையும் கடைசியில் முருகனோடு இணைத்துவிடுவார். திருமாலைப் பற்றி விரிவாகச் சொல்லிக் கடைசியில் இத்தகையவனுக்கு மருகோனே என்று பாடுவார். உமாதேவியாரின் பெருமைகளைக் கூறி அப்பெருமாட்டியின் புதல்வோனே என்று முடிப்பார். அவர் பாடல்களில் சமரசநெறி விரவியிருக்கும். அவைமட்டும் அன்று. வேதாந்த சித்தாந்தக் கருத்துக்களையும் திருப்புகழில் காணலாம். யோகசாஸ்திரத்தில் உள்ள செய்திகளும் வரும். வருணனைகளோ அபாரம். எதைச் சொன்னாலும் கடைசியில் முருகனிடத்திலேதான் வந்து முடியும். சில ரெயில் வண்டிகளில் சில சாமான் வண்டிகள் இருக்கும். பிறகு பிரயாணிகள் ஏறிய வண்டிகள் இருக்கும். எல்லாவற்றையும் சேர்த்து இழுத்துச் செல்ல எஞ்சின் முன்னாலே இருக்கும். அதுபோலவே அருணகிரிநாதர் உபதேசங்களாகிய பண்டங்களை ஒரு வண்டியில் ஏற்றுவார்; திருமால் புகழாகிய மக்களை ஒரு வண்டியில் ஏற்றுவார். முருகன் என்னும் எஞ்சினை மாட்டி விட்டு விடுவார். வண்டித் தொடரில் பலவகையான பண்டங்களும் மக்களும் ஏறியிருந்தாலும் எஞ்சின் மட்டும் மாறுவதில்லை; எஞ்சின் இல்லாமல் ஓடுவதும் இல்லை. 2 கந்தன் முருகன் என்பது தமிழில் அமைந்த அழகிய பெயர். பெரும்பாலும் வடமொழி தென்மொழி இரண்டிலும் பொதுவாக வழங்கும் நாமம் ஸ்கந்தன் அல்லது கந்தன். கந்தப் பெருமானுடைய வரலாற்றைச் சொல்லும் நூல் கந்தபுராணம். சுப்பிரமணியன் என்ற பெயர் இருந்தாலும் வடமொழியில் கந்தன் என்ற பெயரையே பெரும்பாலும் வழங்குவர். ஸ்கந்தோபநிஷத், ஸ்காந்தபுராணம் என்ற நூற்பெயர்களைப் பார்த்தால் இது விளங்கும். அருணகிரிநாதரும் கந்தர் அலங்காரம், கந்தர் அநுபூதி, கந்தர் அந்தாதி என்று இந்த நாமத்தோடு இணைந்த மூன்று நூல்களைப் பாடியிருக்கிறார். நான் இங்கு விரிவுரையாற்றப் போகின்ற நூலின் பெயர் 'கந்தர் அலங்காரம்' என்பது. கந்தருக்குரிய அலங்காரம் என்பது அதற்குப் பொருள். 'கந்தர் என்பது 'ஸ்கந்த' என்ற வடச் சொல்லின் திரிபு. ஸ்கந்தமாக இருப்பவன் எவனோ அவனே ஸ்கந்தன். ஸ்கந்தம் என்றதற்குப் பற்றுக்கோடு, கம்பம், இணைப்பு முதலிய பொருள் உண்டு. முருகன் பற்றுக்கோடாக இருப்பதனால் கந்தன் என்ற பெயர் பெற்றான். கம்பம்போல இருப்பதனால் கந்தன் ஆனான். இணைந்த பொருளாக இருப்பதனால் கந்தன் என்ற திருநாமத்தை ஏற்றான். பற்றுக்கோடு இறைவன்தான் நமக்குப் பற்றுக்கோடாக இருப்பவன். யார் தளர்ந்து கீழே விழுகிறார்களோ, யார் தள்ளாடித் தடுக்கிக் கீழே விழுகிறார்களோ அவர்களுக்குப் பற்றுக்கோடு அவசியம் வேண்டும். அறுபது வயசுக்கு மேற்பட்டவர்கள் கைத்தடி ஊன்றி நடப்பதைப் பார்க்கிறோம். சிலர் தாம் கைத்தடி ஊன்றி நடப்பதாகப் பிறர் எள்ளி நகையர்டக்கூடாதே என்ற நினைவால் கையில் நாகரிகத் தடியைச் சுற்றிக்கொண்டே போவார்கள். இருந்தாலும் தளர்ந்து விழும்போது அதை ஊன்றிக் கொள்ளலாம் என்பதே நோக்கம். தங்க்ளுக்கு தளர்ச்சி ஏற்பட்டு விட்டது என்பதை அவர்கள் உணர்ந்தே அதனை எடுத்துச் செல்லுகிறார்கள். 'இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல்’ என்று வள்ளுவர் அந்தக் கோலைச் சொல்கிறார். இவ்வுலகிலுள்ள உயிர்கள் பற்றுக்கோடு இல்லாமல் தளர்கின்ற நிலையில் இருக்கின்றன. அவற்றிற்கு ஏற்ற பற்றுக் கோடு இறைவன். நான் ஓர் இடத்தைச் சார்ந்து இருக்கிறேன்; எனக்கு அவ்விடம் ஒரு பற்றுத்தான். ஒரு மனிதரைச் சார்ந்து வாழ்கிறேன்; அவரும் ஒரு பற்றுத்தான். ஆனால் இறைவனைப் பற்றிக் கொள்ளும் பற்று வேறு. இறைவனாகிய பற்றுக்கொண்டவர்களுக்குப் பிறப்பு, இறப்பு ஆகிய இரு துன்பங்களிலிருந்தும் விடுதலை கிடைக்கிறது. பிறப்பு, இறப்பு ஆகிய துன்பங்களிலிருந்து விடுபட இறைவனைப் பற்ற வேண்டும். இறைவனைப் பற்றிக்கொள்ள வேண்டுமானால் நமக்குள்ள பிற பற்றுக்களை எல்லாம் அறுக்க வேண்டும். இந்தப் பற்றுக்கள் அறுபட்ட பின்பு இறைவனைப் பற்றிக் கொள்ளலாம் என்று நினைத்தால், "அலை ஒய்ந்த பின் சமுத்திரத்தில் நீராடலாம்' என்று நினைப்பவன் கதியாகத்தான் முடியும். சமுத்திரத்தில் என்றும் அலை ஒயப்போவதில்லை. உலகப்பற்று அலை அலையாக நம்மைத் தாக்கிக் கொண்டே இருக்கிறது. அதை ஒழித்து விட்டு பின்பு இறைவனைப் பற்றலாம் என்றால் அது நடக்கிற காரியம் அன்று. பற்று அறுவதற்கே இறைவன் திருவருளைப் பற்றிக் கொள்ள வேண்டும். உலகத்திலுள்ள உயிர்கள் எல்லாம் பல பொருள்களின் மீது வைத்திருக்கின்ற பாசந்தான் பெரிய பற்று. இந்தப் பற்றே இன்ப துன்பத்திற்குக் காரணமாக இருக்கிறது. இந்தப் பற்றை நழுவச் செய்ய மற்றொரு பற்றைப் போட வேண்டும்.    "பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்    பற்றுக பற்று விடற்கு” என்பார் திருவள்ளுவர். ஒரு பற்றும் இல்லாதவன் இறைவன். உயிர்கள் துன்பம் அடைவதற்கு மூல காரணமாக இருக்கின்ற உலகப் பற்றுக்களை விடுவதற்கு பற்று அற்றானாகிய இறைவனது பற்றைப் பற்றிக் கொள்ள வேண்டும். ஒருவன் சேற்றில் இருகாலும் புதைந்து வெளிவர முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறான். அவன் அந்தச் சேற்றிலிருந்து விடுபட்டு வெளியே வர வேண்டுமானால் காலைப் பிடுங்கிப் பிடுங்கி மறுபடியும் சேற்றிலேயே ஊன்றி மிதித்து வெளிவர முடியுமா? அது முடியாத காரியம். மறுபடியும் அவன் சேற்றுக்குள் தான் புதைந்து போவான். அந்தச் சேற்றிலேயே கிடக்கும் ஒரு கல்லையோ, மரத்துண்டையோ பற்றிக்கொண்டு வெளிவரலாம் என்று நினைத்து அவற்றை பிடித்துக் கொண்டு முயற்சி செய்தாலும், அந்தக் கல்லும் கட்டையும் சேற்றுக்குள் புதைந்து. போகுமே தவிர அவனால் சேற்றிலிருந்து வெளி வர முடியாது. ஆனால் சேற்றுக்கு அப்பால் ஒரடி, இரண்டடி தள்ளியிருக்கிற ஒரு மரத்தின் கொம்பையோ ஒரு மனிதனின் கையையோ பிடித்துக் கொண்டு வெளிவர முயற்சி செய்தால் முயற்சி பலிக்கும்; சேற்றிலிருந்து வெளி வரலாம். அதைப் போலவே, பற்றில் அழுந்திப் புதைந்து கிடக்கும் நம்மைப் பற்றுக்களிலேயே அழுந்திக் கிடக்கும் வேறு எந்த மனிதராலும் காப்பாற்ற முடியாது. பற்றுக்கு அப்பால் இருக்கிற, பற்று அற்ற, ஒரு பொருளை பற்றிக் கொண்டால், இந்தப் பற்றுக்களிலிருந்து நாம் விடுபட முடியும். அந்தப் பற்றுக்கோடு யார்? அவனே இறைவன். "நான் பற்றுக்கோடாக இருக்கிறேன்" என்பதை அவன் திருநாமமாகிய ஸ்கந்தன் என்பது காட்டுகிறது. பாசமாகிய சேற்றில் அழுந்திக் கிடக்கிற உயிர்கள் அதிலிருந்து விடுபட்டு வெளிவருவதற்குப் பற்றுக்கோடாக இருக்கின்ற தன் நிலையை அறிவிப்பதற்குக் கந்தன் என்ற பெயரோடு காட்சி கொடுக்கிறான் இறைவன். பெயர் விலாசத்தாலேயே அவன் தன்மையை உணர்ந்து கொண்டு நாம் அவனைப் பற்றிக் கொள்ள வேண்டும். ஸ்கந்தன் என்பதற்குரிய வேறு ஒரு பொருள் தூண் என்பது. சிவபெருமானுக்கு ஸ்தாணு என்று ஒரு பெயர். ஸ்தாணு என்பது கம்பத்துக்குப் பெயர்; கம்பம்போல் அசைவின்றி இருப்பவன் என்பது பொருள். சிவபெருமானுக்கும் முருகனுக்கும் வேறுபாடு இல்லை; இருவருக்கும் இந்த இயல்பு பொருத்தமானது. ஸ்கந்தன் என்பதற்கு இணைப்பை உடையவன் என்பது மற்றொரு பொருள். ஆறு வேறு தனிக் குழந்தைகளாக இருந்த முருகனை உமாதேவி தன் திருக்கரங்களால் ஒருசேர அணைத்து எடுத்தாள். அந்த அணைப்பிலே இணைப்பும் உண்டாயிற்று. ஆறு குழந்தைகளும் ஒன்றாயின; ஆறு முகமும் பன்னிரண்டு கரங்களும் உடையவனாக முருகன் தோன்றினான். கடவுளின் திருவுருவம் "உருவம் இல்லாத கடவுளுக்கு உருவம் அமைப்பது தவறு அல்லவா?" என்று கேட்கத் தோன்றும். கடவுளுக்கு உருவம் இல்லையானாலும் அவன் உருவத்தோடு இருக்க மாட்டான் என்பது இல்லை. அவன் தன் உருவத்தை அருள் பெற்ற பெரியோர்களுக்குக் காட்டுகிறான். மனம் கிடைத்த மனிதனுக்கு அந்த மனத்தை அடக்கினால்தான் திறமை உண்டாகும். மனத்துக்கு எட்டாதவன் இறைவன். மனமோ உருவத்தைத்தான் பற்றும். இறைவனது உருவத்தைத் தியானம் பண்ணும்படியாகப் பழக்கினால் மனம் அமைதி பெறும். அந்தத் தியானத்துக்காகவே இறைவனுடைய உருவங்கள் இருக்கின்றன. மனத்தை மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம். நல்ல மனம் ஒரு பகுதி. நடுநிலைமையாக இருப்பது அது. அதுவே சத்துவ குணமணம். ரஜோ குணமனம், தாமச குணமனம் என்று வேறு இரண்டு பகுதிகள் உண்டு. சத்துவம் ராஜசம், தாமசம் என்ற மூன்று குணங்களும் சேர்ந்து மனம் அமைந்திருக்கிறது. இந்த மூன்று குணங்களும் கலந்து நின்றே நாம் நினைக்கிறோம். நமது மனத்திலே சத்துவகுணம் அதிகமாக மற்றவை தாழ்ந்து விடும். கடைசியில் சத்துவ குணமும் அடங்கி மனம் இயக்கமின்றி ஒழியும். சுடுகாட்டில் பிணங்களை எரிக்கும்போது, அதனை எரிப்பவன் என்ன செய்கிறான்? பெரிய மூங்கில் கழி ஒன்றை எடுத்துக் கொண்டு பிணத்தைப் புரட்டி நெருப்பிலே தள்ளிச் சாம்பலாக்கும் படி பொசுக்குகிறான். பிணம் பொசுங்கிய பிறகு அந்த மூங்கில் கழியையும் நெருப்பிலேயே போட்டுக் கொளுத்தி விடுகிறான். பிணத்தை எரிப்பதற்கு உதவிய அந்த மூங்கில் கழி கடைசியில் அந்த அக்கினியில் தன்னையும் எரித்துக் கொள்கிறது. இதைப் போன்றதுதான் சத்துவகுண மனமும். சத்துவகுணத்தைக் கொண்டு ராஜச தாமச குணங்களை முதலில் இருந்த இடம் தெரியாமல் பொசுக்க வேண்டும். சத்துவகுணம் மிகுதி ஆக ஆக மற்ற மனங்கள் எல்லாம் மறைந்து விடும். கடைசியில் சத்துவகுண மனமும் ஞானாக்கினியால் நீறாகி விடும். தியானம் செய்வதனால் சத்துவகுண மனத்தின் ஆற்றல் மிகுதியாகிறது. இறைவன் திருவுருவத்தை மனத்தில் நிறுத்திப் பழகுவதே தியானம். பழக்கம் இல்லாமல் எதையும் சாதிக்க முடியாது. நாம் இப்போது கண்ணை மூடிக் கொண்டால் இருட்டுத்தான் தெரிகிறது. நமக்குப் பிரியமானவர்களை நினைத்தாலும் அவர்கள் உருவம் தெளிவாகத் தெரிகிறதில்லை. ஆனால் கனவிலே தோன்றும் உருவங்கள் தெளிவாகத் தெரிகின்றன. இந்த மனந்தான் அப்போதும் அந்த உருவங்களைக் காண்கின்றது. இப்போது கண்ணை மூடிக் கொண்டால் தெளிவாகத் தோன்றாமல் அப்போது மாத்திரம் ஏன் தெளிவாகத் தெரிகிறது? இப்போது நாம் ஜாக்கிரத்தில் இருக்கிறோம். கண்ணை மூடிக் க.சொ.1-3 கொண்டாலும் காது திறந்து இருக்கிறது; உடம்பில் பரிச உணர்ச்சி இருக்கிறது; மற்றப் புலன்களும் உணர்வுடையனவாக இருக்கின்றன. கனவிலே எல்லாம் அடைத்துப் போகின்றன. அது சொப்பனாவஸ்தை. நனவில் காது முதலியவை அடைத்துப் போகும்படியான நிலை வந்தால் தியானம் பண்ணும் பொருள் தெளிவாகத் தெரியும்; பொறிகள் அடங்கி நிற்க, உள்ளே கனவிலே தெளிவாகக் காண்பதுபோல ஒன்றைக் காண முடியும்; அதை ஜாக்கிரத்தில் சொப்பனம் என்று சொல்லுவார்கள். ஜாக்கிரத்திலும் கண்ணை மூடிக்கொள்ளும் போது முழு உருவம் நமக்குத் தோன்ற வேண்டுமானால், முதலில் இந்த உடம்பினுள் உள்ள ஜன்னல்களை எல்லாம் அடைக்கப் பழக வேண்டும். உடலில் உள்ள புறக் கதவுகளை எல்லாம் அடைப்பதற்கு மனத்தில் சத்துவகுணம் அதிகப்பட வேண்டும். கோயிலுக்குப் போகிறோம். ஆண்டவன் அலங்காரத்தைப் பார்த்துக் கன்னத்தில் போட்டுக் கொண்டு வந்து விடுவது போதாது. சில நல்ல பக்தர்கள் கண்ணை மூடிக் கொள்வார்கள். வெளியிலே நன்றாக அலங்காரம் பண்ணி வைத்திருக்கின்ற கடவுளைப் பார்க்காமல் எதற்காக அவர்கள் கண்ணை மூடிக் கொள்ளுகிறார்கள் என்று நமக்குத் தோன்றும். இறைவனைப் புறக்கண்ணால் பார்த்தவுடன் அவனுடைய அழகிய திருவுருவத்தை உடனே உள்ளே பார்க்க வேண்டும்; கண்ணை மூடிக் கொண்டு உள்ளே பார்க்க வேண்டும். பிறகு வீட்டுக்குப் போய்த் தியானம் பண்ண வேண்டும். எதற்காகக் கர்ப்பூர தீபாராதனை செய்ய வேண்டும்? கர்ப்பூரம் கொஞ்சம் கொஞ்சமாக எரிந்து அதன் ஜ்வாலை தணிகிறது. இறைவன் திருவுருவத்தை அந்த ஒளியில் பார்த்துப் பார்த்து, கர்ப்பூர ஒளி மங்கிய பின் அந்த ஒளியை மனத்தில் கொண்டு இறைவனைக் காண வேண்டும். இதற்காகத்தான் கர்ப்பூர தீபம் காட்டுகிறார்கள். அந்தத் திருவுருவம் மனத்திலே பதியச் சிறிது நேரம் ஆகும். கர்ப்பூரம் மெல்ல மெல்ல எரிந்து குறையும். அப்போது மனத்துக்குள் அவ்வுருவத்தைப் பார்த்துப் பழக வேண்டும். தினந்தோறும் தியானம் பண்ணிப் பண்ணித்தான் இறைவனுடைய உருவம் நமது உள்ளத்திலே பதியும். அப்படிப் பதி வதைத் 'தாரணை' என்று சொல்வார்கள். வெளியில் காணும் மூர்த்தியை நமது உள்ளத்திலே காணப் பழக வேண்டும். முன்பு தம் உள்ளத்திலே கண்டு பழகியவர்கள்தாம் கடவுளுக்குப் புறத்தே திருவுருவம் அமைத்திருக்கிறார்கள். பொறியை வசமாக்குதல் கடவுளுக்கு அலங்காரம் பண்ணுவதே நம் கண்கள் அந்தத் திருவுருவத்திலே கவிய வேண்டும் என்பதற்காகத்தான். அழகாக அலங்காரம் பண்ணாமல் பார்த்தால் அந்தத் திருவுருவத்தில் நமது மனமும் கண்களும் கவிவது இல்லை. நம் வயிற்றுக்குள் போகின்றது ஜிலேபி, அந்த ஜிலேபிக்கு நல்ல நிறத்தை ஊட்டிப் பண்ணுகிறார்கள். வயிற்றுக்குள் போவதுதானே என்று ஒரே உருண்டையாக உருட்டி வைத்தால் நமக்கு அதனைத் தின்பதற்குத் தோன்றுகிறதா? அதனை வாங்கித் தின்னும்போது அது சுவைக்கிறது. வாங்குவதற்கு முன்னால் அதனை வாங்கித் தின்ன வேண்டும் என்ற விருப்பத்தை உண்டாக்குவன அதன் நிறம் வடிவு முதலியவை. அவற்றைக் கண்ணுக்கு அழகாகப் பலவிதமான வர்ணங்களை ஊட்டி வைக்கிறார்கள். அதோடு காதுக்கு இன்பம் அளிக்க ரேடியோ வைத்திருக்கிறார்கள். உடம்புக்கு இன்பம் அளிக்க விசிறிக் காற்று இருக்கிறது. நல்ல மேஜை போட்டிருக்கிறார்கள். நாற்காலியில் உட்கார்ந்துகொண்ட பிறகு ஜிலேபியை நாக்குக்கு இனிமையாக அளிக்கிறார்கள். ஹோட்டல்காரர்களுக்குத் தெரியும் இந்த விளம்பர யுக்திகூட நம் பெரியோர்களுக்குத் தெரியாதா? கடவுளுக்கு உருவம் அமைத்ததுகூடப் போதாது எனக் கருதி, அந்த உருவத்துக்குப் பலவிதமான அலங்காரங்களைச் செய்தார்கள். நாசிக்கு இனிமையான பல நறுமணப் புகைகளை எழுப்பினார்கள். காதுக்கு இனிமையான சங்கீதம் வைத்தார்கள். உடம்புக்கு இனிமையான பூங்காற்றைக் கொடுக்க அழகான நந்தவனங்களை ஏற்படுத்தினார்கள். நாவுக்கு இனிக்கும் பிரசாதங்களை வழங்கச் செய்தார்கள். உடம்பிலுள்ள இந்திரியங்களின் மூலமாகப் பலவிதமான இன்பங்களை அநுபவிக்க மனிதர்கள் விரும்புவதால் ஆலயங்க ளிலும் அந்த இந்திரியங்களுக்கு இன்பம் அளிக்கப் பலவிதமான ஏற்பாடுகளைச் செய்தார்கள். நம்முடைய நாட்டிலுள்ள ஆலயத்தில் கொடுக்கும் பிரசாதம் வேறு எந்த நாட்டு ஆலயத்திலும் கிடையாது. ஐந்து இந்திரியங்களின் வாயிலாக உலகத்திலே உள்ள பொருள்களை அநுபவிக்கின்ற மனிதனை, இறைவன்பால் அழைத்துச் செல்ல அவனுடைய இந்திரியங்களை எல்லாம் வசப்படுத்துவதற்கு, இத்தகைய பல காரியங்களை ஆலயத்தில் ஏற்படுத்தி வைத்திருக்கிறார்கள் நம் பெரியவர்கள். அலங்காரம் ஆகவே, கண்ணுக்கு இன்பம் அளிக்க ஆண்டவனது திருவுருவங்களுக்கு அலங்காரம் பண்ணினார்கள். இறைவனுக்கு மாத்திரம் அலங்காரம் பண்ணவில்லை. இறைவன் வீற்றிருக்கிற ரதத்திற்கும் அலங்காரம் பண்ணினார்கள். ரதத்தின் கீழே இருக்கிற சக்கரம் முதற்கொண்டு தேர் அச்சு வரையில் உள்ள எல்லாவற்றுக்கும் அலங்காரம் பண்ணினார்கள். இறைவன் திருவுருவத்திற்கு அலங்காரம் திருவுருவம் வைக்கப்பட்டிருக்கிற சப்பரத்திற்கு அலங்காரம்; சப்பரம் இருக்கிற தேருக்கு அலங்காரம்; தேர் ஓடுகிற சக்கரத்திற்கு அலங்காரம்; சக்கரம் ஒடுகிற வீதிக்கு அலங்காரம்; வீதியிலுள்ள வீடுகளுக்கு எல்லாம் அலங்காரம் - இவ்வளவு விதமான அலங்காரத்தினாலும் கவரப் பெற்ற மனம், இவ்வளவுக்கும் நடுநாயகமாக விளங்குகின்ற இறைவன் திருவுருவத்தின்பால் கவிகிறது. மனம் நேராக இறைவனிடத்தில் போய்ப் பாயாது. அங்கங்கேயுள்ள அலங்கரிக்கப்பட்ட பொருள்களின் மீது பாய்ந்து, ஒன்றை விட்டு ஒன்றாகத் தாவிக் கடைசியில் இறைவன் திருவுருவத்தின்பால் சென்று நிற்கிறது. சாப்பிடும்போது எல்லாம் வயிற்றுக்குள்தானே போகிறது என்று ஒரேயடியாக உருட்டித் திரட்டிச் சாப்பிடுகிறோமா? குருடன்தான் அப்படிச் சாப்பிடுவான். தலைவாழை போட்டு அதில் பலவிதமான வர்ணமுடைய பதார்த்தங்களைச் சுற்றி வைத்து வெள்ளை வெளேர் என்று இருக்கும் அன்னத்தை நடுவிலே வைத்தால் அதைச் சாப்பிட நம் மனம் விரையும்; நாக்கிலே நீர் சுரக்கும். அது போலத்தான் இறைவனுடைய திருவுருவத்தைத் தரிசிக்கும் முன் பலவகையான அலங்காரங்களைக் கண்டு மனம் ஈடுபட்டுச் செல்கிறது. இப்படிப் புலன்களின் வழியே நின்று இன்பத்தைச் சுவைக்கின்ற மனிதர்களுடைய உள்ளங்களைக் கவர்வதற்காக இறைவன் சப்பரத்திலே வருகிறான்; தேரிலே வருகிறான். யானையின் மேல் வருகிறான்; சிங்கத்திலே வருகிறான்; ஆண்டவனுக்கு அலங்காரம் செய்வது எதற்கு? நம் கண்ணை இழுப்பதற்கு. ஆண்டவனுக்கு அதனால் லாபம் ஒன்றும் இல்லை. பிறந்த குழந்தையின் காலுக்குக் காப்புப் போடுகிறோம். காது குத்தி ஜிமிக்கி போடுகிறோம். காதைக் குத்தும்போது வலி பொறுக்க மாட்டாமல் அது வீரிட்டு அலறுகிறது. குழந்தைக்காக அலங்காரம் என்றால், "எனக்கு அலங்காரமே வேண்டாம்" என்று அந்தக் குழந்தை அலறுகிறதே! உண்மையில் குழந்தைக்கு அலங்காரம் பண்ணி நாம் பார்க்க வேண்டுமென்று ஆசைப்படுகிறோம். அந்தக் குழந்தையின் காலுக்கு அலங்காரம் செய்கிறோம். அதன் காலுக்காக அல்ல; நம் கண்ணுக்காகத்தான். ஆண்டவனுக்கு அற்புதமாகச் சிங்காரம் பண்ணுவதும் அவனுக்காகப் பண்ணும் சிங்காரமல்ல. நமது கண் அவனருகே கவிய வேண்டுமென்பதற்காகப் பண்ணும் சிங்காரம் அது. பாலோடு பொங்கல் பண்ணி நைவேதனம் செய்வது அவனுக்காக அன்று. சாமி சாப்பிடாது; ஆசாமி சாப்பிடுவதற்காகத்தான். அந்தச் சாப்பாட்டை நினைத்தாவது அவன் இறைவன் ஆலயத்திற்கு வர வேண்டும் என்பது ஆன்றோர் எண்ணம். நாம் அலங்காரம் பண்ணிக் கொள்வது நாமே பார்த்து மகிழ அன்று. பிறர் கண்களில் நாம் நன்றாகப் பட வேண்டும் என்பதற் காகத்தான்.    "உன்னைச் சிங்காரித்து உன்அழகைப் பாராமல்    என்னைச் சிங்காரித்து இருந்தேன் பராபரமே" என்கிறார் தாயுமானவர். "மேலான பொருளுக்கும் மேலான பொருளே, உன்னைச் சிங்காரித்து உன் அழகைப் பாராமல், இந்தப் பாழும் உடம்பைச் சிங்காரித்து வாழ்வை வீணாக்கினேன்" என்கிறார். அவனுக்குச் சிங்காரம் செய்வது அவன் அழகை நாம் பார்ப்பதற்காக. பார்ப்பதனால் மனம் ஒன்றி இன்புறுபவர்களும் நாமே. அன்புடைய தாய் தன் குழந்தையைச் சிங்காரிப்பது போல, இறைவன்பால் அன்புடைய பக்தர்கள் இறைவனைச் சிங்காரித்தார்கள். அருணகிரிநாதர் கந்தபிரானுக்கு அலங்காரம் செய்தார், நம் மனம் அவனிடத்திலே கவிய வேண்டும் என்பதற்காக. ரோஜாப்பூத் தோட்டம் போட்டிருப்பவன் தன் பெண்ணின் கல்யாணத்துக்கு ரோஜாப் பூவினாலேயே பெரிய பந்தல் போட்டு விடுவான். அதைப்போல அருணகிரிநாதப் பெருமான் தம்மிடம் உள்ள சிறந்த மலர் போன்ற தமிழ்ச் சொற்களால் கந்தருக்கு அலங்காரம் பண்ண வேண்டுமென்று பார்த்தார். சொல் அலங்காரம் அலங்காரம் பண்ணுகிறவர்களுக்கு வேண்டிய பொருள்கள் ஆடை, அணி, மாலை முதலியன அல்லவா? நல்ல நறுமணமுள்ள மலர்களைக் கொண்டு அலங்காரம் பண்ணலாம்; ஆனால் அம்மலர்கள் மறுநாள் வாடிவிடும். நல்ல ஆடைகளால் அலங்காரம் பண்ணிப் பார்க்கலாம்; அந்த ஆடையும் நாளடைவில் கிழிந்து விடும். தங்க ஆபரணங்களால் அலங்காரம் பண்ணிப் பார்க்கலாம்; அந்த ஆபரணங்களும் சில ஆண்டுகளில் தேய்ந்து போகும். இவையெல்லாம் என்றோ ஒரு நாளைக்கு அழிவன. அருணகிரிநாதர் பார்த்தார். தங்க வியாபாரிகள் தங்கள் பேட்டையிலுள்ள முருகனுக்குத் தங்கத்தினாலேயே அலங்காரம் பண்ணுவதும், வைர வியாபாரிகள் தங்கள் பேட்டையிலுள்ள முருகனுக்கு வைரத்தாலேயே ஜோடனை செய்வதும் வழக்கமல்லவா? அருணகிரிநாதர் பல காலத்துக்கு மறையாத, கிழியாத, தேயாத ஒரு பொருளினாலே, நெடுங்காலம் உலகத்தில் செலாவணி ஆகக் கூடிய ஒரு பொருளாலே, அலங்காரம் பண்ண வேண்டுமென்று விரும்பினார். சொல்லாலேயே அலங்காரம் பண்ணினார். கல் எல்லாம் மாணிக்கக் கல் ஆவதில்லை. சொல் எல்லாம் நல்ல சொல் ஆவதில்லை. நாமும் சொல்லை வைத்திருக்கிறோம். அவை எல்லாம் வெறும் சொல். ரோடு போடுகிற கல்லுக்கும் கல் என்றுதான் பெயர். நகை பண்ணுகிற கல்லுக்கும் கல் என்றுதான் பெயர். அதுவும் கல்தானே என்று எண்ணிக் கொண்டு எவனாவது ஒருவன் ரோட்டிலே இருக்கும் கல்லை ஆபரணமாகப் பண்ண நினைப்பானா? இரண்டுக்கும் கல் என்ற பெயர் இருந்தாலும் அது வைரக் கல்; இது சாதாரணக் கல். கங்தர் அலங்காரம் நாமும் சொல்லை வைத்திருக்கிறோம். நாம் சொல்வன எல்லாம் உத்தமமான சொல் ஆவதில்லை. உத்தமமான சொல்லைக் கொண்டு, கந்தருக்கு அலங்காரம் பண்ணினார் அருணகிரிநாதர். நம்முடைய அன்புப் பொருளுக்கு அலங்காரம் பண்ணிப் பார்ப்பது இயல்பல்லவா? தூண் போலத் தம்முடைய மனத்திலே இருக்கிற ஆண்டவனைப் பிறரும் பற்றிக் கொண்டு இன்பம் அடைய, அந்த இறைவன்பால் அவர்களுடைய மனங்களும் ஈடுபடச் செய்ய, அருணகிரிநாதர், தம்மிடமுள்ள மிகச் சிறந்த பொருளாகிய சொற்களின் குவியலினாலே அலங்ங்காரம் பண்ணுகிறார். அந்த அலங்காரந்தான் கந்தர் அலங்காரம். "பல இடங்களில் தாம் படும் துக்கத்தைச் சொல்லுகிறாரே, துக்கம் எப்படி அலங்காரம் ஆகும்?" என்பது ஒரு கேள்வி. “கந்தப் பெருமானுடைய அழகைச் சொல்லட்டும்; அவன் கருணா விலாசத்தைச் சொல்லட்டும்; அவன் திருமேனியை வர்ணிக்கட்டும். இவை எல்லாம் அலங்காரம் ஆகும். ஆனால் தாம் படுகிற துன்பத்தை, தம் குறைகளை எடுத்துச் சொல்லி, நான் பாவி என்று சொல்லிக் கொள்வது எப்படிக் கந்தனுக்கு அலங்காரம் ஆகும்?" என்று கேட்கலாம். அதற்கும் விடை உண்டு. இறைவனுக்குப் பெரிய மாலை சாத்த விரும்புகிறோம். நல்ல நறுமண மலர்களைக் கொண்டு மாலை கட்டச் சொல்லியிருக்கிறோம். மாலை கட்டுகிறவர்கள் என்ன செய்கிறார்கள்? அந்த மாலையின் இடையே ஐந்து அங்குலம் ஆறு அங்குலத்துக்கு ஒரு தடவை ஆடுகூடத் தொடாத இலையைப் பறித்து வைத்துக் கட்டுகிறார்கள். அந்த இலைக்கு வாசனை உண்டா? இல்லை. இருந்தாலும் அந்தக் கதம்ப மாலையின் அழகை, இடையிடையே வைக்கின்ற அந்தப் பச்சிலை அதிகப்படுத்திக் காட்டுகிறது. மலர்களின் வண்ணத்தையும், மணத்தையும் அவை இல்லாத அந்தப் பச்சிலைகள் பின்னும் எடுத்துக் காட்டுகின்றன. அதுபோல இறைவனுடைய குணநலங்களைச் சொல்லுகிற பாட்டுக்கு இடையே குணநலங்கள் அற்ற மக்கள் புரிகின்ற குற்றங்களையும் எடுத்துச் சொல்கிறார் அருணகிரியார். ஆண்டவனுக்கு உகந்த அழகு மலர் மாலை அல்லவா? துன்புறுகிறவர்களைக் காப்பாற்றுகிறவன் என்பதை அறிவித்து, ஆண்டவனது கருணையை அதிகமாக எடுத்துக்காட்ட உதவுவன அவை. ஆண்டவனது பெருமையையே சொல்லிக் கொண்டிருந்தால் ஆண்டவன்பால் மனம் குவியாது. "நான் பாவி; நான் இன்ன இன்ன குற்றங்களைப் புரிகிறேன்” என்று சொன்னால் மனம் உருகுகிறது; இறைவன் கருணையை நினைக்கிறது. அதனால் தான் இறைவனது குணங்களை எடுத்துச் சொல்லிக் கொண்டே போகும்போது இடையிடையே தம்முடைய குற்றங்களையும் எடுத்துச் சொல்கிறார் அருணகிரிநாதர். கந்தர் அலங்காரம் என்ற தொடருக்குப் பொருள் கந்தருக்கு உரிய அலங்காரம் ஆகிய நூல் என்பது; தேவாரம் என்பதற்கும் அப்படி ஒரு பொருள் இருக்கிறது. தே என்றால் தெய்வம்; ஆரம் என்றால் மாலை; தேவாரம் என்பதற்கு, தெய்வத்துக்குப் போடுகிற மாலை என்று பொருள் செய்யலாம்; சொற்களால் தொடுக்கப்பட்ட மாலை என்பது பொருள். அருணகிரிநாதப் பெருமான் 100 பாடல்களினால் கந்தனுக்கு அலங்காரம் செய்கிறார்; 100 அழகான பாடல்களை உடைய மாலையை முருகப்பெருமானுக்குச் சமர்ப்பிக்கிறார். கடதட கும்பக் களிறு 1 மரபு ஒருவர் ஒரு காரியத்தைச் செய்வதற்குப் பல வழிகளிலே முயன்று கடைசியில் எந்த வழியாக வெற்றி பெற்றாரோ அந்த வழியைப் பின்னால் வருகின்றவர்களுக்கும் சொல்வதைச் சம்பிரதாயமாக வைத்திருக்கிறார்கள். 'கல்' என்றும், 'மண்' என்றும் சிலவற்றுக்குப் பெயர் வைத்திருக்கிறார்கள். "இதற்கு கல் என்று பெயர் வைப்பானேன்? இதை மண் என்றும், அதைக் கல் என்றும் ஏன் சொல்லக்கூடாது?" என்று கேட்கலாம். அப்படியும் சொல்லலாம். ஆனால், கல்லைக் கல் என்று சொல்கிறவர்கள் எல்லோரும் அதை மண் என்று மாற்றிச் சொல்ல வேண்டுமானால் பல காலம் ஆகும். ஆகவே, முன்னே நம் பெரியோர்கள் எந்த வழியில் சென்றார்களோ அதே வழியில் நாமும் செல்வது நல்லது. அதனை மரபு, சம்பிரதாயம் என்று சொல்வார்கள். அந்தச் சம்பிரதாயப்படி, ஒரு நூலைத் தொடங்க வேண்டுமானால் அந்த நூலின் ஆரம்பத்தில் விநாயகரைத் துதிப்பது வழக்கம். சிவாலயத்துக்குப் போகும்போது முதலில் விநாயகரை வணங்குவது மரபு. திருவண்ணாமலை ஆலயத்தின் கோபுரம் கிழக்கு நோக்கி இருக்கிறது. அந்தக் கோபுரத்தின் வழியே உள் வாசலுக்குச் சென்றால் அந்த வாசலின் ஒரு பக்கம் விநாயகப் பெருமான் வீற்றிருக்கிறார். மற்றொரு பக்கம் குமாரக் கடவுள் எழுந்தருளியிருக்கிறார். அருணகிரி நாதப் பெருமான் திருவண்ணாமலைக்குச் செல்கிறார். நம்மையும் உடன் அழைத்துப் போகிறார். கோபுர வாசலுக்கு வலப்பக்கம் விநாயகர் இருக்கிறார். இடப்பக்கம் முருகப் பெருமான் இருக்கிறான். விநாயகருக்கு அவர் தனியாகத் துதி சொல்லவில்லை. விநாயகரை நினைக்கிறார். 'ஒரு பாட்டிலே விநாயகரையும் சொல்ல வேண்டும்; முருகனையும் சொல்ல வேண்டும் என்று எண்ணுகிறார். அதை எப்படிச் சொல்வது? நம் தாய்மார்கள் தம்முடைய மாப்பிள்ளையைச் சொல்லும்போது தம் பெண்ணைச் சொல்லி அவரைக் குறிப்பிடுவார்கள்; "நம் லட்சுமி புருஷன்" என்று குறிப்பிப்பார்கள். இதைப் போலவே அருணகிரிநாதர் பாடுகிறார். "நான் திருவண்ணாமலைக்குப் போனேன். கோபுர வாசலுக்குப் போனேன். உள் வாசலில் உள்ள களிற்றுக்கு இளைய களிற்றைத் தரிசித்தேன்" என்று பாடுகிறார்.    அடலரு ணைத்திருக் கோபுரத் தேஅந்த வாயிலுக்கு    வடவரு கிற்சென்று கண்டு கொண்டேன்... முருகனைக் கண்டுகொண்டேன் என்று சொல்ல வந்தவர். களிறாகிய விநாயகருக்குத் தம்பியாகிய களிற்றைக் கண்டேன் என்கிறார். அண்ணாவாகிய களிறு எத்தகையது? வருவார் தலையில்    தடப டெனப்படு குட்டுடன் சர்க்கரை மொக்கியகைக்    கடதட கும்பக் களிறு. "அதோ விநாயகர் வீற்றிருக்கிறார். அவரைப் பார். அந்தக் களிற்றுக்கு இளைய களிறாகிய முருகனை நான் கண்டு கொண்டேன்" என்று அவர் குறிப்பிடுகிறார். இந்த பாடலில் ஐந்து பகுதிகள் இருக்கின்றன. திருவண்ணாமலை, திருவண்ணாமலையிலுள்ள கோபுரம், அதிலேயுள்ள உள்வாயில், அந்த வாயிலுக்குத் தெற்கே இருக்கிற விநாயகர், வடக்குப் பக்கத்தில் இருக்கிற குமாரசுவாமி ஆகிய ஐந்து பொருள்களையும் இந்தப் பாடலில் காணலாம். அடல் அருணை புராணங்களிலும், காவியங்களிலும் நகரச் சிறப்பைச் சொல்லும் படலம் ஒன்று முன்னே இருக்கும். இங்கே நகரப் படலத்தைச் சுருக்கமாகக் கூறிக்கொண்டு பாட்டை ஆரம்பிக்கிறார் அருணகிரிநாதர். "வீரர்கள் மிக்க திருவண்ணாமலைக்கு வாருங்கள். ஆலயத்தின் கோபுரத்தைப் பாருங்கள். உள் வாசலுக்கு வாருங்கள். அந்த வாசலுக்கு இடப்பக்கம் இருப்பது யார் தெரியுமா? அந்த வாசலின் வலப்பக்கம் கும்பக் களிறு இருக்கிறதே, அதனுடைய இளைய களிறுதான் இடப்பக்கம் இருக்கிறது. மூத்த களிறு விநாயகர் என்றால் இளைய களிறு முருகன். இளைய களிறாகிய முருகனை நான் கண்டுகொண்டேன்" என்று சொல்லுகிறார். இளைய களிற்றைக் கண்டுகொண்டதாகச் சொன்னாலும் அவரைப் பற்றிப் பின்னே விரிவாகச் சொல்லப் போகிறார். இங்கே மூத்த களிற்றைப் பற்றிச் சற்று விரிவாகப் பேசுகிறார். அந்தப் பாட்டைப் பார்ப்போம்.    அடலரு ணைத்திருக் கோபுரத் தேஅந்த வாயிலுக்கு    வடவரு கிற்சென்று கண்டுகொண் டேன்வரு வார்தலையில்    தடய டெனப்படு குட்டுடன் சர்க்கரை மொக்கியகைக்    கடதட கும்பக் களிற்றுக் கிளைய களிற்றினையே. அடல் என்றால் அடுதல் என்று பொருள் உண்டு. வீரம் என்று மற்றொரு பொருளும் உண்டு. அடுதல் - அழித்தல் அல்லது சங்காரம் செய்தல். அழித்தல் என்ற பொருளை ஆரம்பத்தில் வைத்து நூல் தொடங்கலாமா? ஆகவே அடல் என்பதற்கு இங்கே வீரம் என்று பொருள் கொள்ள வேண்டும். 'அடல் அருணை' என்பதற்கு வீரத்தையுடைய அருணை என்று பொருள். அருணைக்கு வீரம் எது? "சென்னை பணம் பெருத்த ஊர்' என்றால் சென்னையில் உள்ளவர்கள் பணக்காரர்கள் என்பது பொருள் அல்லவா? "தஞ்சை ஜில்லா சங்கீதம் பெருத்த ஊர் தஞ்சாவூர் மண்ணுக்கே சங்கீதம் சொந்தம்" என்றால், தஞ்சை ஜில்லாவிலுள்ள மக்களுக்குச் சங்கீத ஞானம் மிகுதி என்றுதானே பொருள். அதைப் போலவே அடல் அருணை என்றால், அந்த ஊரில் வாழ்கிறவர்கள் வீரர்கள் என்பது பொருள். அவ்வூரிலுள்ளவர்கள் பெரிய படை வீரராகவோ, படைத் தலைவராகவோ இருக்க வேண்டுமென்பது இல்லை. வீரத்தில் சிறந்தவன் முருகன். தேவ சேனாபதி என்று அவனுக்கு ஒரு பெய்ர் உண்டு; அமரர்கள் படைக்குத் தலைவன் அவன். வீரம் பொருந்திய அவன் எழுந்தருளியிருக்கும் இடம் திருவண்ணாமலை. அதுவும் வீரம் நிறைந்த இடம்; அடல் அருணை என்ன வீரம்? ஞான வீரம் படைத்த இடம் அது. அந்த ஊரில் பல ஞானப் பெரியார்கள் வாழ்ந்திருக்கிறார்கள். நம் கண்ணுக்கு முன்னாலேயே ரமண மகரிஷி அங்கே இருந்தார். அவர்கள் தங்கள் பொறிகளை வென்றவர்கள். உடம்பிலே சக்தி உடையவர்கள் எல்லோரையும் வீரம் உடையவர்கள் என்று சொல்ல முடியாது. உள்ளத்திலே தோன்றுகிற காமம் முதலிய ஆறு குணங்களையும் வென்றவர்களே ஞான வீரம் படைத்தவர்கள். ஐம்புலன்களையும் வென்றவர்கள் வீரர்கள். "புலனைந்தும் வென்றான்றன் வீரமே வீரம்" என்று ஒளவையார் சொல்லுகிறார். திருக்கோவலூரைத் தலைநகராகக் கொண்டு சேதி நாட்டை மெய்ப்பொருள் நாயனார் என்ற அரசர் ஆண்டு வந்தார். சிவனடியார்களின் வேடத்தையே மெய்ப்பொருள் என்று அவர் கருதி வந்ததால், அவரை மெய்ப்பொருள் நாயனார் என்று மக்கள் அழைத்தார்கள். முத்திநாதன் என்ற அரசன் அவர்பால் பகைமை கொண்டிருந்தான். அவன் பலமுறை முயன்றும் மெய்ப்பொருள் நாயனாரைச் சண்டையில் வெல்ல முடியாது போகவே வஞ்சனையால் அவரைக் கொன்றுவிட எண்ணினான். சிவனடியார் போல உடம்பெல்லாம் திருநீறு பூசி, ருத்திராட்சம் அணிந்து மெய்ப்பொருள் நாயனாரின் அரண்மனையை அடைந்தான். சிவ வேடம் தாங்கி வருபவர்களை யாரும் தடுக்கக் கூடாது என்று மெய்ப்பொருள் நாயனார் ஆணையிட்டிருந்ததால், அவன் அவருடைய அரண்மனை அந்தப்புரம் வரை சென்று விட்டான். தத்தன் என்ற காவலாளி அரசன் உறங்குகிறான் என்று சொல்லியும் கேளாமல் அந்தப்புரத்திற்குள் நுழைந்தான். மெய்ப் பொருள் நாயனார் படுத்திருந்தார். அவர் மனைவி அருகிலே உட்கார்ந்திருந்தாள். சிவவேடம் தாங்கிய முத்திநாதன் உள்ளே நுழைந்தவுடன் மெய்ப்பொருள் நாயனார் எழுந்து பணிந்து நின்றார். "சிவபெருமானால் நேரே எனக்குக் கொடுக்கப்பட்ட ஆகமநூல் ஒன்று என்னிடம் இருக்கிறது. அதை உனக்கு மாத்திரம் தனிமையில் உபதேசிப்பதற்காக நான் வந்திருக்கிறேன்" என்று அவன் சொல்ல, மெய்ப்பொருள் நாயனார் தம் மனைவியை அப்பால் போகச் சொல்லிவிட்டு, தம் கையைக் கூப்பிக் கும்பிட்டு வணங்கி, "தங்கள் திருவுள்ளப்படியே அடியேனுக்கு உபதேசிக்க வேண்டும்" என்று கூறினார். முத்திநாதன் தன் வஞ்சகக் கருத்தை நிறைவேற்றிக் கொண்டான். புத்தகத்தை எடுப்பவனைப் போல மறைத்து வைத்திருந்த வாளை எடுத்து மெய்ப்பொருள் நாயனாரை குத்திவிட்டான். இங்கே வென்றவர் யார்? முத்திநாதனா? மெய்ப்பொருள் நாயனாரா? மெய்ப்பொருள் நாயனாரை கொல்ல வேண்டும் என்பது முத்திநாதனின் கருத்து. அதை நிறைவேற்றி விட்டதால் முத்திநாதனுக்குத்தானே வெற்றி? தோற்றுப் போனவர் மெய்ப்பொருள் நாயனார்தாமே? அப்படி இல்லை என்கிறார் சேக்கிழார். மெய்ப்பொருள் நாயனாரே வென்றாராம். ஏன்? அவரது கொள்கை என்ன? சிவவேடத்தை மெய்ப்பொருள் என்று வணங்குவதுதானே? கத்தியை எடுத்துக் குத்த வந்த போதும் அவர் தொழுத கையை மாற்றவில்லை. முத்திநாதன் தரித்திருந்த சிவவேடம் மாறவில்லையே! ஆகவே உயிர் போகின்ற காலத்தும் தம் உயிரின்மேல் ஆசை கொண்டு தாம் கொண்ட கொள்கையை அவர் மாற்றவில்லை. உயிரைக் கொடுத்து கொள்கையை அவர் காப்பாற்றினார். ஆகவே தம் கொள்கையைக் கடைப்பிடித்து உயிருக்கு எதிரே நின்று வென்றார், மெய்ப் பொருள் நாயனார். இதைச் சொல்லுகிறார் சேக்கிழார் பெருமான்.    "கைத்தலத் திருந்த வஞ்சக்      கவளிகை மடிமேல் வைத்துப்    புத்தகம் அவிழ்ப்பான் போன்று      புரிந்தவர் வணங்கும் போதில்    பத்திரம் வாங்கித் தான்முன்      நினைந்தஅப் பரிசே செய்ய    மெய்த்தவ வேட மேமெய்ப்      பொருளெனத் தொழுது வென்றார்." மெய்பொருள் நாயனார் பெரிய வீரர் என்று தெரிகிறதல்லவா? இத்தகைய ஞான வீரமே மெய்வீரம். மெய் வீரர்கள் பலர் வாழ்ந்த இடம் திருவண்ணாமலை. அங்கே வாழ்ந்தவர் அருணகிரிநாதர். ஆகவே அருணை, அடல் பொருந்தியது, வீரம் பொருந்தியது என்று சொல்லுகிறார். திருக்கோபுரம் ஊரின் சிறப்பை ஒரு சொல்லிலே சொல்லிவிட்டு அங்குள்ள கோயிலைப் பற்றிச் சொல்ல வருகிறார். கோயிலுக்கு அடையாளம் எது? நெடுந்துாரத்திலே இருந்து பார்த்தாலும் இங்கே ஆலயம் இருக்கிறதென்று காட்டுவது கோபுரம். அதை ஸ்தூல லிங்கம் என்று சொல்வார்கள். லட்சுமீகரம் பொருந்திய ஊர் என்று காட்டுவதற்குக் கோபுரத்தைக் கட்டினார்கள். "கோயிலில்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்' என்பது அந்தக் காலத்திய உபதேச மொழி.    "மாடக்குச் சித்திரமும் மாநகர்க்குக் கோபுரமும்” அழகு என்று இலக்கண நூல் சொல்லுகிறது.கோபுரம் இறைவன் திருக்கோயில்களின் புறச்சின்னம். ஆனால் இன்றைக்கு மனிதன் வசிக்கும் மாளிகைக்குக் கோபுரம் வைக்கிறார்கள். சாமிக்குக் கோபுரம் போய் விட்டது; ஆசாமிக்கு வந்துவிட்டது. ஒர் ஊரிலேயுள்ள கோயிலுக்குக் கோபுரம் கட்டுவது அந்த ஊரில் லட்சுமீகரம் இருக்கிறதென்பதைக் காட்டும் அடையாளம். அந்த ஊர் மக்களுடைய உழைப்பு இறைவனைச் சார்ந்து பயன் பெற்றது என்பதைக் கோயில் காட்டுகிறது. இப்போது மக்களுடைய சொந்தத் தேவைகள் மிக அதிகமாகப் போய்க் கொண்டிருக்கின்றன. மக்களுக்கு வேண்டிய பலபல பொருள்களை உற்பத்தி செய்யக் கூடிய தொழில்களும், தொழிற்சாலைகளும் வளர்ந்துகொண்டே போகின்றன. முன்பெல்லாம் மக்களுடைய தேவை மிகக் குறைவு. ஆனால் அவர்களுடைய பலம் இப்போது இருப்பவர்களுடைய பலத்தைப் போல் பத்து மடங்கு, இருபது மடங்கு அதிகமாக இருந்தது. எல்லோரும் சுறுசுறுப்பாய் இருந்தார்கள். அவர்களுடைய சக்தி எல்லாம் என்ன ஆயின? அவை வீணாகவில்லை. அவை ஒன்றாகச் சேர்ந்தமையால் பெரிய பெரிய ஆலயங்கள் வானளாவ எழுந்தன. அவர்கள் ஒருவருக்கொருவர் அடித்துக் கொண்டு சாகவில்லை. யாவரும் கூட்டாக வேலை செய்து இறைவனுக்குரிய கோயில்களையும், கோபுரங்களையும் எழுப்பினார்கள். ஊரில் கோயில் இருந்தால் அங்கே திருமகள் விலாசம் இருக்கும். இல்லையானால் திரு இருக்கமாட்டாள். "திருக்கோயில் இல்லாத திருஇல் ஊரும்" என்பது அப்பர் வாக்கு. கோபுரம் இல்லாத ஊர், அதாவது திருக்கோயில் இல்லாத ஊர், மூதேவி உறைகின்ற ஊர் என்பது அவர் குறிப்பு. இறைவன் திருக்கோயில் இல்லாத ஊரை ஊர் என்று சொல்லக்கூடாது. "அவையெல்லாம் ஊர் அல்ல; அடவி காடே" என்பர் அப்பர். இதனை உடம்பு என்று சொல்லுகிறோம். கை, கால், மூக்கு, கண், காது என்பவற்றைத் தனித்தனியாக உடம்பு என்று சொல்லுகிறதில்லை. உயிர் இருந்தால்தான் அதற்கு விலாசம். உயிர் இருந்தால்தான் ராமசாமி ஐயர், ராமசாமி நாயுடு, ராமசாமி முதலியார் என்பன போன்ற விலாசங்கள் அமையும். உயிர் இல்லாவிட்டால், கை, கால், கண், மூக்கு, காது இருந்தாலும் 'பிணம்' என்றுதான் பெயர். அவ்வாறே ஆண்டவன் திருக்கோயில் இல்லாத ஊரில் வீடுகள், பார்க்குகள், தொழிற்சாலைகள் முதலியன இருந்தாலும் அது காட்டுக்கு ஒப்பானதே. ஊர் என்று சொல்வதற்கு ஏற்றபடி இருக்க வேண்டுமானால் அங்கே லட்சுமீகரம் பொருந்திய திருக்கோயில் இருக்க வேண்டும். கோயிலுக்கு அடையாளம் கோபுரம். வீரம் பொருந்திய திருவண்ணாமலையில் திருமகளின் விலாசம் நிறைய உண்டு. திருக்கோபுரம் இருக்கிறது. திருவின் விலாசம் உள்ள கோபுரம், திருக்கோபுரம். அந்த வாயில்    அடலரு ணைத்திருக் கோபுரத்தேஅந்த வாயிலுக்கு. அந்த வாயிலுக்கு என்றால் உள் வாயிலுக்கு என்பது பொருள். உள்ளேயிருப்பது அந்தப்புரம்; உள்ளே உள்ள கரணம் அந்தக்கரணம். "ஞான வீரர்கள் நடமாடிய ஊர் திருவண்ணாமலை; திருமகள் தாண்டவமாடும் ஊர். அதற்கு அடையாளமாக விளங்கும் இந்தத் திருக்கோபுரத்தைப் பாருங்கள். உள்வாசலுக்கு வாருங்கள்" என்று நம்மை அழைத்துக் கொண்டு போய் நிறுத்துகிறார். கோபுரம் கிழக்குப் பார்த்திருக்கிறது. வலப்பக்கம் தென்புறம். இடப்பக்கம் வடபுறம்.    ..............அந்த வாயிலுக்கு    வடவரு கிற்சென்று கண்டுகொண்டேன்... இப்படிச் சொல்லும்போதே, "யாரைக் கண்டு கொண்டீர்கள் என்ற கேள்வி பிறக்கிறது. "முருகனைக் கண்டு கொண்டேன்' என்று சுருக்கமாகச் சொல்லிவிடலாம். அப்படிச் சொல்லவில்லை. அவர் பழைய சம்பிரதாயத்தை விட்டுவிடவில்லை. முன்னாலே விநாயகரைச் சொல்வது மரபு அல்லவா? ஆகவே இரண்டடியில் விநாயகக் கடவுளைப் பற்றிச் சொல்கிறார். 2 விநாயகர் யார் யார் தம்மை அணுகவில்லையோ அவர்களுக்கு விக்கினத்தை உண்டாக்கி, தம்மைப் பணிந்தவர்களுடைய விக்கினத்தை எல்லாம் நீக்குபவர் விநாயகர். நல்ல போலீஸ்காரன் தவறு பண்ணுகிறவர்களைத் துன்புறுத்துகிறான். தவறு பண்ணாதவர்களுக்கு நன்மையும் செய்கிறான். அப்படியே விநாயகரும் இருக்கிறார். கூட்டம் கூடுகிற இடங்களிலெல்லாம் போலீஸ்காரன் இருப்பதைப்போல, விநாயகரும் இருக்கிறார். நாற்சந்தியிலும் இருக்கிறார்; நகருக்குள்ளும் இருக்கிறார். அரச மரத்தடியிலும் இருக்கிறார்; ஆற்றங்கரையிலும் இருக்கிறார்; கணங்களுக்குப் பதி அவர்; 'கணபதி' என்ற பெயர் படைத்தவர் பூதங்களுடைய கூட்டத்திற்குத் தலைவர். சிவபெருமானே அவருக்குப் போலீஸ் உத்தியோகம் தந்தார். சட்டத்தை உண்டுபண்ணினவனே சட்டத்தை மீறினால் அந்தச் சட்டத்தை மீறிய குற்றத்திற்காக அவனைப் போலீசார் கைது செய்து விடுவார்கள். கணபதியாகிய போலீஸ்காரனை நியமித்தது சிவபெருமான்தான் என்றாலும், சட்டத்தை மீறினால் விநாயகர் அவனிடமும் தம் கடமையைச் செய்வார் என்கிற தத்துவம் உலகத்திற்கு விளக்கப்படுவதுபோல, விநாயகர் சிவபெருமானது தேரின் அச்சை ஒரு சமயம் முறித்துவிட்டார். அச்சிறுப்பாக்கம் என்று ஒர் ஊர் இருக்கிறது. திரிபுர சங்காரம் செய்வதற்காகச் சிவபெருமான் புறப்பட்டபோது தம்மை வணங்காமற் சென்றமையால் அவரது தேரின் அச்சை முறித்து விட்டார் விநாயகர். அச்சு இற்ற பாக்கமே அச்சிறுபாக்கம். சட்டத்தை உண்டுபண்ணினவனாலும் சட்டத்தை மீறினால் தண்டனை உண்டு என்பது தர்மம். அந்தத் தர்மத்தைச் சிவனே இத்திருவிளையாடலால் காட்டினான். தடபடெனப் படு குட்டு விநாயகரைக் களிறு என்று சொன்னார். அந்த களிறு எத்தகையது? "வருவார் தலையில் தடபடெனப்படு குட்டுடன், சர்க்கரை மொக்கியகைக் கடதட கும்பக் களிறு" என்று மூன்று இலக்கணங்கள் கூறுகிறார். தடபடெனப்படு குட்டை ஏற்றுக் கொள்ளும் களிறு அது, சர்க்கரை மொக்கிய கையை உடைய களிறு, கடதட கும்பக் களிறு. . முதல் இரண்டும் விநாயகர் செய்கின்ற காரியத்தைச் சொல்வது. குட்டைப் பெற்றுக் கொண்டு சர்க்கரையை ஏந்தியிருக்கிறார். இறைவன் சந்நிதானத்திற்குப் போகும்போது மக்கள் பணிவாகப் போக வேண்டும். நம்மிலும் உயர்ந்தவர்கள் யாரும் இல்லை என்று சில சமயங்களில் இறுமாந்து இருக்கிறோம். அப்படித் தலைநிமிர்ந்து நடக்கும்போது தலையில் குட்டு விழுகிறது. நாம் உயர்ந்தோம் என்று எண்ணித் தலை நிமிர்ந்து போகும்போது யாராவது நம் தலையில் குட்டி உட்கார வைத்து விடுகிறார்கள். நாமே தலை குனிந்து போய்விட்டால் நம்மைப் பிறர் குட்ட வேண்டிய அவசியம் இருக்காது.    "எல்லார்க்கும் நன்றாம் பணிதல்" என்று திருவள்ளுர் சொல்லுகிறார். "ஏழைகளே பிறருக்குப் பணிந்து போக வேண்டும். பணக்காரர்களாகிய நாங்களுமா, அறிவுடையவர்களாகிய நாங்களுமா, பிறருக்குப் பணிந்து போக வேண்டும்?" என்று சிலர் கேட்கலாம். "எல்லார்க்கும் நன்றாம் பணிதல் என்பதிலுள்ள எல்லார்க்கும் என்ற வார்த்தை எங்களையுமா க.சொ.1-4 உட்படுத்தும்?" என்று பணக்காரர்கள் கேட்கலாம். புத்தி படைத்தவர்கள் கேட்கலாம். பணம் படைத்தவர்களுக்கும், பதவியில் உள்ளவர்களுக்கும் பயந்து, "நீங்கள் பணிய வேண்டாம்" என்று வள்ளுவர் சொல்லுவாரா? பொய்யாமொழிப் புலவர் அவர். பணக்காரர்களுக்காக உண்மையை மறைக்க மாட்டார். ஒரு நாடு, ஒரு மொழி, ஒரு சாதி, ஒர் இனம், ஒரு சமயம் என்கின்ற பாகுபாடு இல்லாமலே, உலகத்திலுள்ள மக்கள் எல்லாரும் லட்சிய வாழ்க்கை வாழ்வதற்கு உரிய இலக்கணத்தைச் சொல்கிறவர் அவர் "செல்வர்க்கே செல்வம் தகைத்து" என்கிறார். "செல்வர்க்கே" என்று ஏகாரம் போட்டுச் சொல்வது, "எல்லோரும் வாழ்க்கையில் பணிவாக இருக்க வேண்டும். அவர்களிலும் செல்வம் படைத்தவர்கள் நிச்சயமாகப் பணிவாக இருக்க வேண்டும்" என்று வலியுறுத்துகிறது. நம்மிடம் பணிவு இல்லாவிட்டால் யாராவது நம்மைக் குட்டி உட்கார வைத்து விடுவார்கள். அம்மாதிரியாகப் பணிவது அவமானம். நாமாகப் பணிவதுதான் புகழ்; வெகுமானம். இதனை நமக்கு விநாயகப் பெருமான் அறிவுறுத்துகிறார். "ஆண்டவன் திருக்கோயிலுக்குப் போகும்போது தலை நிமிர்ந்து கொண்டு போகாதே. நான் வாசலிலேயே உட்கார்ந்து கொண்டு இருக்கிறேன். என் எதிரில் நின்று தலையில் குட்டிக் கொண்டு போ" என்று அறிவுறுத்துகிறார். "வருவார் தலையில் தடப டெனப் படுகுட்டுடன்" அவர் உட்கார்ந்திருக்கிறார். அவரைப் பார்க்கின்ற நாம் எல்லோரும் முதலில் குட்டிக் கொண்டு பணிவுடன் போக வேண்டும். ஆத்ம சோதனை தம்மைத் தாமே குட்டிக் கொள்ளுவது, தம்மைத் தாமே சீர்திருத்திக் கொள்ளுவதற்கு அடையாளம். அத்தகையவர்களுக்கு அவர் அநுக்கிரகம் செய்பவர். அதனை அவருடைய சர்க்கரை மொக்கிய கை காட்டுகிறது. சர்க்கரையை மொக்குகிறவர், உண்ணுகிறவர் அவர். அவர் கையில் அது இருக்கிறது. தாம் உண்ணுவதை அடியார்களுக்கும் கொடுப்பார். அதுதானே பிரசாதம்? தன்னைத்தானே சோதித்துக் கொள்வதும், தன்னைத் தானே சீர்திருத்திக் கொள்வதும் உயர்ந்த குணங்கள். மகாத்மா காந்தி அவர்கள் தம்முடைய சரித்திரத்தை எழுதினார். அதற்குச் சத்திய சோதனை" என்று பெயர் கொடுத்தார். சத்தியத்தை அவர் சோதித்தார் என்றோ, சத்தியம் அவரைச் சோதனை பண்ணியது என்றோ கொள்ளலாம். அந்தச் சோதனையில் அவர் வென்றார். தம்மைத்தாமே சோதித்துக் கொண்டவர் அவர் தம்மைத்தாமே சோதித்துக் கொள்பவர்கள், ஆத்ம சோதனை பண்ணுகிறவர்கள், பிறரிடத்தில் தோல்வி உறமாட்டார்கள். நமக்கு நாமே வைத்துக் கொள்ளுகிற பரீட்சையில் நாம் தோல்வியுற்றால் அவமானம் உண்டாகாது. இன்னும் நாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பதை மாத்திரம் தெரிந்து கொண்டு முன்னேறுகிறோம். பிறர் வைக்கும் பரீட்சையில் தோல்வியுற்றாலோ அவமானம் உண்டாகிறது. தம்மைத் தாம் சோதித்துக் கொள்வது மகான்களுடைய குணம். ஆண்டவனுடைய சந்நிதானத்திலே குட்டிக்கொண்டு தோப்புக்கரணம் போட்டால் மகான்களுடைய குணத்தில் எள்ளளவாவது நம்மிடம் படியும். தன்னைத் தானே சோதித்துக் கட்டுப்பாட்டை மேற்கொள்வதற்கு அது தொடக்கமாக நிற்கும்.    "ஏதிலார் குற்றம்போல் தன்குற்றம் காண்கிற்பின்    தீதுண்டோ மன்னும் உயிர்க்கு" என்கிறார் வள்ளுவர். நமக்கு இரண்டு விதமாக பார்வைகள் இருக்கின்றன. குற்றத்தைப் பார்க்கும் பார்வை, குணத்தைப் பார்க்கும் பார்வை என்று இருவகை. அந்த இரண்டையும் எப்படிப் பார்க்கிறோம்? அதில் உள்ள வேறுபாட்டினால் நம் பண்பின் உயர்வும் தாழ்வும் அமைகின்றன. நாம் எதையும் பெரிதாகவே பார்க்கிறோம். பெரியவர்களும் அப்படித்தான் பார்க்கிறார்கள். நாம் பிறருடைய சிறிய குற்றத்தைப் பெரிதாகப் பார்க்கிறோம்; நம்முடைய சிறிய குணத்தையும் பெரிதாகப் பார்க்கிறோம். பெரியவர்களோ பிறருடைய சிறிய குண்த்தைப் பெரிதாகப் பார்க்கிறார்கள்; தம்முடைய சிறிய குற்றத்தைப் பெரிதாகப் பார்க்கிறார்கள். இரண்டு பேருக்கும் சின்னதைப் பெரிதாகப் பார்க்கிற தன்மை பொதுவாக இருக்கிறது. ஆனால் அப்பார்வை அமையும் முறைதான் நமக்குத் தெரியவில்லை. யார் குற்றத்தைப் பெரிதாகப் பார்க்க வேண்டும், யாருடைய குணத்தைப் பெரிதாகப் பார்க்க வேண்டும் என்ற வரையறை நம்மிடையே இல்லாததுதான் உலகில் ஏற்படுகிற எல்லாக் கோளாறுகளுக்கும் காரணமாக இருக்கிறது. பெரியவர்களைப் போல நாமும் ஆத்மசோதனை செய்ய ஆரம்பித்தால் நம்மிடையே உள்ள குற்றங்களை நாமே பார்த்துத் திருத்திக் கொள்ள முடியும். நம்மை நாமே வென்று கொண்டு விட்டால், இந்த உலகம் முழுவதும் நம் வசப்பட்டுப் போகும். சர்க்கரை மொக்கிய கை அந்த வகையில் வாழ்ந்த மக்கள் இந்த நாட்டுப் பெரியோர்கள். அவர்கள் நமக்குப் பலவிதமான பழக்கங்களைச் செய்து காட்டியிருக்கிறார்கள். விநாயக வணக்கமும் அந்த மரபில் வந்ததுதான். கோயிலுக்கு வந்தால் முதலில் பணிவாகக் குட்டிக் கொண்டு வணங்க வேண்டும்; வணங்கினால் ஆண்டவனுடைய பிரசாதம் கிடைக்கும் என்பதை, "வருவார் தலையில் தடப டெனப்படு குட்டுடன் சர்க்கரை மொக்கிய கையை உடைய விநாயகர் நமக்கு உணர்த்துகிறார். எம்பெருமானுடைய சந்நிதியிலே வணங்கி நின்றால் அவர்களுக்குச் சர்க்கரை கிடைக்கும்; அவர் வாழ்க்கை சர்க்கரை போல இனிக்கும் என்பதை அது குறிப்பிக்கிறது. 3 "கடதட கும்பக் களிறு" என்று விநாயகரைச் சொல்லுகிறார் அருணகிரிநாதர். கடம் என்பது மதம். தடம் என்பது அது பிறக்கின்ற சுவடு. கும்பம் என்பது தலை; மஸ்தகம். மதம் வழிந்தோடுகின்ற சுவட்டோடு கூடிய தலையைப் பெற்ற யானை என்பது பொருள். கருணை மதம் உலகத்தில் நாம் பார்க்கிற யானைக்கு மதம் உண்டு. அந்த யானைக்கு வெறி உண்டானால், மற்றப் பிராணிகளுக்குத் துன் பத்தை அளிக்கிறது. ஆனால் விநாயகருக்கு உண்டாகிற மதம், பிறருக்குத் தீங்கை விளைப்பதில்லை; அருளாக அது வெளிப்படுகிறது. அரண்மனையின் வாசலில் யானையைக் கட்டி வைக்கி றார்கள். அதுபோல அரனுக்கு மனையாகிய திருக்கோயிலின் வாசலில் விநாயகராகிய களிறு இருக்கிறது. கருணையென்னும் மதம் பொழிய, அது இருக்கிறது.    "உள்ளமெனும் கூடத்துள் ஊக்கமெனும்       தறிநிறுவி உறுதி யாகத்    தள்ளரிய அன்பென்னும் தொடர்பூட்டி       யிடைப்படுத்தித் தறுகட் பாசக்    கள்ளவினைப் பசுபோதக் கவளமிடக்       களித்துண்டு கருணை யென்னும்    வெள்ளமதம் பொழிசித்தி வேழத்தை       நினைந்துவரு வினைகள் தீர்ப்பாம்" என்று பரஞ்சோதி முனிவர் அந்தக் கடதடகும்பக் களிற்றைப் பாடுகிறார். அந்த யானை தன்னை அண்டிய பக்தர்களுடைய காரியங்களை எல்லாம் நிறைவேற்றி வைக்கின்ற கருணை உடையது. உள்ளம் என்னும் கூடத்தில், ஊக்கமென்னும் தறியை ஊன்றி, தள்ளரிய அன்பு என்னும் சங்கிலியை உறுதியாகப் பூட்டி அந்த யானையைக் கட்ட வேண்டும். ஆன்மா தன்னிடம் உள்ள அறியாமையை அதற்குக் கவளமாகக் கொடுத்தால் போதும். அதனை மிகக் களிப்புடன் உண்ணுமாம். பிறகு அது கருணையாகிற மதத்தைப் பொழியும். ஆகவே, இந்தக் கடதட கும்பக் களிறு, உலகத்திலுள்ள மற்ற யானைகளைப் போன்றது அல்ல. தன்னை வந்து பணியும் மக்களுக்கு அருள் என்னும் மதத்தைப் பொழியும் களிறு இது. இந்த யானைக்கு மூன்று இலக்கணம் உண்டு; தடபடவென மக்கள் போட்டுக் கொள்கிற பெருமான், சர்க்கரை மொக்கிய கையையுடைய பெருமான், கடதட கும்பம் உடைய பெருமான். அவரைப் பணிவுடன் வணங்க வேண்டும். அப்படி வணங்கினால் இனிமையான பிரசாதம் கிடைக்கும். பசு போதத்தை அவருக்குக் கவளமாகக் கொடுத்து விட்டால் அவர் கருணை மழை பொழிவார். காப்பு இந்த மூத்த களிறு அந்தத் திருக்கோயிலின் தெற்குப் பக்கத்தில் கருணையாகிற மதம் பொழியவிட்டுக் கொண்டு வீற்றிருக்கிறது. வட பக்கத்திலே இந்தக் களிற்றின் இளைய களிறாகிய முருகன் உட்கார்ந்திருக்கிறான். இந்த முருகப் பெருமானை நான் கண்டு கொண்டேன் என்று முதல் பாட்டிலே அருணகிரிநாதர் சொல்கிறார். விநாயகரை நேர்முகமாகச் சொல்லாமல் முருகனோடு சார்த்திச் சொன்னாலும் இப்பாட்டில் விநாயகருடைய பெருமையே சிறப்பாக நிற்கிறது. ஆகையால், தனியே விநாயகருக்குக் காப்புச் செய்யுள் இல்லாவிட்டாலும் இச்செய்யுளே காப்பைப் போல அமைந்திருக்கிறது.    அடலரு ணைத்திருக் கோபுரத்       தேஅந்த வாயிலுக்கு    வடவரு கிற்சென்று கண்டுகொண்       டேன்வரு வார்தலையில்    தடய டெனப்படு குட்டுடன்       சர்க்கரை மொக்கிய்கைக்    கடதட கும்பக் களிற்றுக்       கிளைய களிற்றினையே. (வீரம் செறிந்த திருவண்ணாமலையில் உள்ள கோயிலில் இருக்கும் திருமகள் விலாசமுள்ள கோபுரத்துக்கு உள் வாசலுக்கு வடபக்கத்திற் சென்று, வருபவர்கள் தலையில் தடபட என்று விழுகின்ற குட்டை ஏற்றுக் கொள்வதோடு சர்க்கரையை உண்ட கைகளுடன் வீற்றிருக்கும், மதம் பிறக்கும் சுவடுகளை உடைய மத்தகத்தைப் பெற்ற யானையாகிய விநாயகருக்கு இளைய யானை போன்ற முருகனைத் தரிசித்துக் கொண்டேன். அடல்-வீரம். திரு-திருமகள் விலாசம். அந்த வாயில்-உள்வாயில். அருகு-பக்கம். தடபட என என்றது தடபடென என்று ஆயிற்று: தொகுத்தல் விகாரம். குட்டுடன்-குட்டைப் பெறுவதோடு. மொக்கிய உண்ட. கடம்-மதம். தடம்-மதம் பிறக்கும் இடம். கும்பம்-யானையின் மத்தகம். சென்று களிற்றினைக் கண்டு கொண்டேன் என்று கூட்டுக.) கிருபாகரன் 1 கந்தர் அலங்காரமே மிகப் பெரிய கோயிலைப் போன்றது. சொற்கோயில் அல்லவா? அதன் முகப்பில் விநாயகர் உட்கார்ந்திருக்கிறார். அந்தக் கோயிலை அணுகும்போதே அருணகிரிநாதருக்கு எல்லையில்லாத மகிழ்ச்சி உண்டாகிறது. பலகாலம் வறுமையினால் அல்லற்பட்டுப் பணம் இல்லாமல் தவிக்கின்ற ஒருவனுக்குத் தன் உழைப்பினால் பணம் கிடைத்தால் மகிழ்ச்சி உண்டாகிறது. உழைப்பே இல்லாமல் திடீரென்று ஒருவர் இரண்டு லட்சம் ரூபாயை கொடுத்தார் என்றால், அவன் எவ்வளவு ஆனந்தம் அடைவான் அந்த நிதி கொடுத்தவரை எந்த எந்த வகையில் புகழ இயலுமோ அப்படியெல்லாம் புகழ முயல்வான் அல்லவா? அருணகிரிநாதப் பெருமானும் கோயிலுக்குள் நுழையும் போதே, "கடதட கும்பக் களிற்றுக்கு இளைய களிற்றினையே கண்டு கொண்டேன்ங என்று உள்ள மகிழ்ச்சியோடு துள்ளிக் கொண்டு போகிறார். "இளைய களிற்றைக் காண்பதில் உங்களுக்கு ஏன் அவ்வளவு ஆனந்தம்?" என்று கேட்டால், அவர் அதை அடுத்த பாட்டில் சொல்கிறார். "நான் பெரும் பாவியாக இருந்தேன். பற்பல பிறவிகள் எடுத்து உழன்று கொண்டிருந்தேன். எத்தனையோ பெரியார்கள் ஆண்டவனது திருவருளை அடைவதற்குப் பல்லூழி காலம் தவம் செய்திருக்கிறார்கள். நான் எந்தவிதமான தவமும் முன் பிறவிகளில் செய்யவில்லை. விட்ட குறை தொட்ட குறை என்பார்களே, அதைப் போல, எனக்கு இப்போது முருகன் அருளால், கிடைத்த இன்பம், நான் முன் பிறவிகளில் செய்த புண்ணியத்தின் பயன் என்று எண்ணக் கூடாது. முன் செய்ததன் பயனாகிய பேறு, பாக்கியம், சற்றும் இல்லாதவன் நான். சென்ற காலத்தில் தவம் செய்யாவிட்டாலும், இந்தப் பிறவியிலாவது செய்தேனா? அதுவும் இல்லை. முன்னே செய்த தவத்தின் விளைவான பேறும், பின்னே செய்த தவமும் இல்லாத என்னைப் பிரபஞ்சம் என்னும் சேற்றைக் கழிய வழிவிட்டவன் அந்த முருகன்" என்று பாடுகிறார். மூவகை வினை நாம் பலவிதமான குற்றங்களைப் புரிந்து, பலவிதமான பாவ அழுக்குகளைச் சேர்த்துக் கொண்டு ஆண்டவன்பால் போகிறோம். அவன் மிக்க கருணையாளன். நம்மிடம் இருக்கும் பாவ அழுக்கு மூட்டைகளையெல்லாம் வாங்கி வைத்துக் கொண்டு, ஒரு வேட்டி, ஒரு துண்டு மாத்திரம் கொடுத்து, "அப்பா, உலகமாகிற ஆற்றுக்குப் போய் இவற்றையெல்லாம் நன்றாக வெளுத்துக் கொண்டு, சுத்தமாக வா" என்று நம்மை அனுப்புகிறான். உலகமென்னும் ஆற்றில் அநுபவமாகிற கல்லில் நம் வினைகளைத் துவைத்துத் தூய்மை செய்து கொண்டு அவன்பால் போவதற்குப் பதிலாக, ஆற்றிலுள்ள சேற்றையெல்லாம் பூசிக் கொள்ளுகிறோம். முன்பு இருந்த அழுக்குப் போதாது எனப் பின்னும் அழுக்காக்கிக் கொள்ளுகிறோம். உயிரிலே ஏறியிருக்கிற வினையாகிய அழுக்கை உலகமாகிற ஆற்றிலே போட்டுக் கழுவுவதற்குப் பதிலாக, வினைச் சேற்றைப் பின்னும் பூசிக் கொள்ளுகிறோம். இப்படி மூன்று விதமான சேறு, அழுக்கு நம்மேல் ஏறியிருக்கின்றன. புண்ணியம், பாவம் என்ற இரண்டுமே பிறப்புக்குக் காரணமாதலின் இரு வினையையும் அழுக்கென்று சொல்ல வேண்டும். பலகாலமாகச் சேர்த்து வைத்திருக்கிற அழுக்குக்கு சஞ்சிதம் என்று பெயர். அந்தச் சஞ்சிதம் நம்முடைய பெயர் போட்டு அப்படியே ஆண்டவனிடம் கட்டி வைக்கப்பட்டிருக்கிறது. ஆண்டவன் நம்பாலுள்ள கருணையினால் "அத்தனை அழுக்கு மூட்டைகளையும் வெளுத்து வா" என்று சொல்லாமல், அவற்றையெல்லாம் தன்னிடம் மூட்டை கட்டி வைக்கச் சொல்லிவிட்டு, ஓர் அழுக்கு வேட்டி, ஒரு மேல் துண்டோடு நம்மை இந்த உலகமாகிய ஆற்றுக்குப் போய் வெளுத்துக் கொண்டு வா என்று அனுப்புகிறான். இந்தப் பிறவியில் போக்கிக் கொள்வதற்கென்று பங்கிட்டு அமைத்த வினைக்குப் பிராரப்தம் என்று பெயர். இங்கு நாம் வந்து புதியதாக பூசிக் கொள்ளுகிற சேற்றுக்கு ஆகாம்யம் என்று பெயர். இறைவனைப் போலக் கருணை மிக்கவர்கள் ஒருவரும் இல்லை. நாம் கொண்டு வந்த அழுக்குத் துணியை நன்றாகத் துவைத்துக் கொண்டு பரிசுத்தமாக அவன்பால் சென்றால் அதாவது முன்பு கொண்டு வந்த பிராரப்தமாகிற அழுக்கைப் போக்கிப் பின் ஆகாம்யமாகிற சேற்றைப் பூசிக் கொள்ளாமல் சென்றால், முன் பிறவிகளிலே சேர்த்து வைத்திருக்கிற சஞ்சிதமாகிற அழுக்கு மூட்டைகளைக் கொடுத்துத் துவைக்கச் சொல்வதில்லை. "அப்பா, அந்த அழுக்குத் துணிகளை எல்லாம் நான் பொசுக்கி விட்டேன். உனக்குப் புதுச்சட்டை தருகிறேன். இதை அணிந்து கொள்” என்று சொல்லுகிறான். இதைத்தான் வேறு வகையில் சாஸ்திரங்கள் சொல்கின்றன. "ஞானம் பெற்றவர்களுக்கு ஆகாம்யம் இல்லை. சஞ்சிதமும் கிடையாது’ என்று சொல்கின்றன. "குளிக்க வந்தவன் சேற்றைப் பூசிக் கொள்வதுபோல நான் இந்தப் பிறவியிலும் பல பாவங்களைச் செய்து, பல குற்றங்களைச் செய்து ஆகாம்யத்தை அதிகப்படுத்திக் கொண்டு இருந்தேன். பிரபஞ்சம் என்னும் சேற்றைப் பூசிக் கொண்டிருந்தேன். அந்தச் சேற்றை முருகன் போக்கி விட்டான் என்ன ஆச்சரியம்" என்று பெருமிதத்தோடு பேசுகிறார் அருணகிரிநாதர்.    பேற்றைத் தவம்சற்றும் இல்லாத என்னைப்       பிரபஞ்சமென்னும்    சேற்றைக் கழிய வழிவிட்டவா! பிரபஞ்சம் ஐந்தால் ஆனது பிரபஞ்சம். பஞ்ச பூதங்களின் சம்பந்தம் உடையது இந்த உலகம். சித் என்றும், ஜடம் என்றும் இரண்டு வகைப் பொருள்கள் உலகில் இருக்கின்றன. சித் என்பது உயிர்; மற்றவை ஜடம். உயிரும் உடம்பும் சேர்ந்திருக்கின்றன. சித்தும் ஜடமும் சேர்ந்து உலகம் நடைபெறுகிறது. சித்தாகிய உயிரோடு மனம் என்ற ஒன்று இணைந்திருக்கிறது. ஜடம் ஐந்து பொருள்களாலானது. மூன்று விதமான வர்ணங்களைக் கொண்டு பல வர்ணமுள்ள படங்களையும் போட முடியும் என்று ஓவியக்காரர்கள் சொல்வார்கள். மஞ்சள், சிவப்பு, நீலம் ஆகிய இந்த மூன்று வண்ணங்களின் சேர்க்கையினால் பல வண்ணங்கள் உண்டாகின்றன. அதைப் போலவே சத்துவம், ராஜஸம், தாமஸம் ஆகிய மூன்று குணங்களினால் மனம் அமைகிறது. எல்லாக் குணங்களையும் இந்த மூன்றில் அடக்கி விடலாம். ஜடப் பொருள்களும் பிருதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாசம் என்னும் ஐந்து தத்துவங்களினால் ஆனவை. பிரபஞ்சம் ஐம்பூதச் சேர்க்கையாலானது. இந்த உண்மையை நம் நாட்டில் சாதாரணப் பழமொழியில் வைத்துக் காட்டுவார்கள். "அஞ்சும் மூன்றும் உண்டானால் அறியாப் பெண்ணும் கறியாக்கும்' என்று ஒரு பழமொழி உண்டு. அஞ்சும் மூன்றும் எட்டு என்று சேர்த்து, எட்டு வயசானால் எந்தப் பெண்ணும் சமையல் செய்வாள் என்று இதற்கு பொருள் கொள்ளலாம். அது அவ்வளவு சிறப்பானது அன்று. அடுப்புக்கு வேண்டியது மூன்று கல். சமையலுக்கு வேண்டிய சாமான்களைப் போட்டு வைத்துக் கொள்வது அஞ்சறைப் பெட்டி. அடுப்புக்கல் மூன்றும் பண்டம் நிரம்பிய அஞ்சறைப் பெட்டியும் இருந்தால் அறியாத பெண்ணும் கறி சமைப்பாள் என்று பொருள் கொள்ளலாம். உலகியலுக்கு ஏற்ற பொருள் அது. அதற்குள்ளே மற்றொரு வேதாந்தக் கருத்தையும் வைத்திருக்கிறார்கள். நம் வாழ்க்கைப் போக்கிலேயே ஆத்மார்த்த உண்மைகளையும் நம் பெரியோர்கள் புலப்படுத்தினார்கள் என்பதற்கு இது ஒரு சான்று. உலகத்தைச் சித்து, ஜடம் ஆகிய இருவகைப் பொருள்களையும் கொண்டு பராசக்தி படைக்கிறாள். ஜடத்தை ஐந்து தத்துவங்களைக் கொண்டும், சித்தோடு இணைந்த மனத்தை மூன்று குணங்களைக் கொண்டும் படைக்கிறாள். வேதமும் முனிவரும் அறியாத பெண்ணாகிய பராசக்தி (அறியாப் பெண்) முக்குணத்தையும், ஐம்பூதத்தையும் கொண்டு உலகத்தைப் படைத்து நடத்துகிறாள். இந்த கருத்தை உள்ளடக்கியது அந்தப் பழமொழி. பஞ்சம் என்பது ஐந்து. ஐம்பூதங்களால் அமைந்ததாதலின் பிரபஞ்சம் என்ற பெயர் வந்தது. உலகம் முழுவதிலும் உள்ள ஜடப் பொருள் அத்தனையும் ஐந்து பூதங்களின் கலப்பு. உப்புமா, தோசை, இட்டிலி என்று பலவிதமான சுவையுள்ள பண்டங்களைப் பண்ணினாலும் அவை எல்லாம் சில பொருளின் மாறுபட்ட உருவங்கள். இப்படியே பஞ்ச பூதங்களின் சேர்க்கையினால் உலகிலுள்ள பொருள்கள் எல்லாம் ஆகின்றன; உடல் ஆகிறது. உடலில் இருக்கிற பகுதிகளை எல்லாம் பிரித்தால் அவை இந்த ஐந்து தத்துவங்களில் அடங்கி விடும். இதற்குப் "பஞ்சீகரணம்" என்று பெயர். உலகம் ஐந்தாலானது என்பதைச் சுந்தரகாண்டத்தில் கம்பர் மிகவும் அழகாகச் சொல்லுகிறார். அக்காண்டத்தின் கடவுள் வணக்கப்பாட்டில் அதைச் சொல்கிறார். ராமன் ஒரு 'சர்ஜன்'. அவன் தன் கையில் உள்ள ஆயுதத்தால் கீறக்கூட வேண்டாம்; அதைத் தன் கையில் வைத்துக் கொண்டு நின்றாலே போதும். வீக்கம் வடிந்து விடும்; மாயையாகிற வீக்கம் வடிந்து விடுமாம். ஐந்து பூதங்கள் தனித்தனியே இராமல், கலந்து உலகமாக நிற்கின்றன. அந்தக் கலப்பினால் உண்டாகும் வேறுபாட்டினால் உண்மையை அறியாமல் நாம் மயங்குகிறோம். அந்த மயக்கமே மாயை. அது மேலும் மேலும் அதிகமாகிறது; வீங்குகிறது. அந்த வீக்கம் ராமனைக் கண்டால் கலங்குமாம். கல்யாணம் முதல் நாள் ஆனவுடன், வாடிப்போன மாலைகளை வாயிலில் போட்டு விட்டார்கள். இரவில் வீதி வழியே போனவன் அந்த வாடிப்போன மாலையைக் கண்டு பாம்பு என எண்ணி அலறுகிறான். பின்பு பார்த்தால் அது வாடிப்போன மாலை என்று தெரிகிறது. மாலையைப் பாம்பு என்று முதலில் மயங்கினான். பிறகு அந்த மயக்கம் தெளிந்தது. அப்படியே உலகிலுள்ள பலபல பொருள்களை எல்லாம் உண்மை என நினைத்து நாம் வாழ்கிறோம். உண்மையைத் தெரிந்து கொண்டால் அவையாவும் பஞ்ச பூதங்களின் வேறுபாடு, தோற்றம் என்று அறியலாம். அறியாமல் மாயையுட் சிக்கியிருக்கும் மக்களுக்கு, அந்த வேறுபாடுற்ற வீக்கத்தை ராமன் போக்குவான்.    "அலங்கலில் தோன்றும் பொய்ம்மை     அரவெனப் பூதம் ஐந்தும்    விலங்கிய விகாரப் பாட்டின்     வேறுபாடு உற்ற வீக்கம்    கலங்குவது எவரைக் கண்டால்     அவர்என்பர் கைவில் ஏந்தி    இலங்கையில் பொருதார் அன்றே     மறைகளுக்கு இறுதி ஆவார்.” "மலர் மாலையில் அரவென்று அஞ்சும்படி பொய்யாக தோன்றுகிற தோற்றத்தைப் போல், ஐந்து பூதங்களும் மாறுபட்டுக் கலந்து காட்டுகிற விகாரத்தின் வீக்கம் ராமனுடைய தரிசனம் கிடைத்த மாத்திரத்தில் அகன்று விடுகிறது. கையிலே கோதண்டம் தாங்கி நிற்கின்ற அந்த ராமன் மறைகளுக்கு எல்லாம் இறுதியாக இருக்கும் ஆண்டவன்தான்". இந்தப் பாட்டில் பிரபஞ்சம் என்ற பெயர் வந்ததற்கு எது காரணமோ அதைக் கம்பர் எடுத்துக் காட்டுகிறார். ஐந்து பொருள்களாலானது இந்தப் பிரபஞ்சம். பிரபஞ்சம் என்னும் சேற்றிலே நாம் எல்லோரும் உழன்று கொண்டிருக்கிறோம். ஆனால் அந்தச் சேற்றில்தான் அழகான தாமரை முளைக்கிறது. தாயுமான சுவாமிகள் "பார்க்குமிடம் எங்கும் ஒரு நீக்கமற நிறைகின்ற" ஆண்டவனைக் கண்டார்; பிரபஞ்சச் சேற்றிலே தாமரையைக் கண்ட பெரியார் அவர். அவரைப் போன்றவர்கள் உலகத்திலுள்ள யாவும் இறைமயம் எனக் கண்டு மாயா விகாரத்தில் அகப்படாமல் தெளிவான காட்சி பெற்றவர்கள். "எல்லா உலகமும் ஆனாய் நீயே" என்று அப்பர் அநுபவிக்கிறார். அருணகிரிநாதர் சொல்லுகிறார் : "முன் பிறப்பிலும் அவன் கருணையை அடைவதற்கான முயற்சி செய்து புண்ணியத்தைச் சேர்க்கவில்லை. இந்தப் பிறவியிலும் அவன் அருளைப் பெறுவதற்கான தவம் ஒன்றும் செய்யவில்லை. பேறு சற்றும் இல்லாதவன்; தவம் சற்றும் இல்லாதவன். நான் இப்பிரபஞ்சச் சேற்றிலே விழுந்தேன். முருகனுடைய கருணையைப் பெறுவதற்கு எந்த விதமான தகுதியும் இல்லாத பாவி நான். அவனை நினைப்பதற்கேற்ற பக்குவம் என் மனத்தில் இல்லை. இப்படிப் பக்குவமற்ற நிலையிலே இருந்த என்னைப் பிரபஞ்சம் என்னும் சேற்றைக் கழிய வழி விட்டானே, என்ன அதிசயம்!" என்று ஆனந்த அதிசயத்தோடு பாடுகிறார். "வழிவிட்டவா!" என நீட்டும்போது அவர் பாடுகின்ற ஆச்சரியம் தெரிகிறது. "வழி விட்டவாறு என்னே" என்று பொருள் கொள்ள வேண்டும். அதிகமாக ஆனந்தப்படுபவனுக்கோ, துக்கப்படுபவனுக்கோ வார்த்தை எதுவும் முறையாகச் சொல்ல வருவதில்லை. மிக்க கூட்டமான இடத்திற்குப் போய் நமக்கு வேண்டிய ஒரு சாமானை வாங்கி வரும்படி ஒருவனிடம் சொல்கிறோம். அதை அவன் வாங்கி வந்துவிட்டானானால், அந்த மகிழ்ச்சியிலே அவன் நம்மிடம் வந்ததும் வராததுமாகத் தான் பட்ட சிரமத்தைச் சொல்ல ஆரம்பிப்பான். "வாங்கி வந்தாயா, இல்லையா?” என்று கேட்டாலுங்கூட, "'நான் போனேனா ஒரே கூட்டம். அடேயப்பா என்னை நெரித்து விட்டார்கள்" என்று சொல்ல ஆரம்பிப்பான். அதைப்போல, அருணகிரிநாதர் முருகன் கருணையைச் சொல்ல ஆரம்பித்தவர் முருகனை முதலில் சொல்லவில்லை. அவன் பேற்றைப் பெற்ற எல்லையில்லா ஆனந்தத்தில் தம் பழைய நிலையைப் பற்றிச் சொல்லுகிறார். 'பேற்றைத் தவம் சற்று மில்லாத பாவி’ என்று தம்மைச் சொல்லுகிறார். பக்குவம் இல்லாத என்னை அவன் ஆண்டு கொண்டான் என்று சொல்லும்போது அவரது நன்றி பொங்குகிறது. "வழிவிட்டவா" என்று ஆச்சரியத்தோடு சொன்னாரேயன்றி வழி விட்டவன் யார் என்பதை முன்னே சொல்லவில்லை. சற்று நின்றார்; பின்பு சொல்லத் தொடங்குகிறார். அவன் யார் தெரியுமா? கிருபாகரன் அவன் என்கிறார். அவன் கருணைக் கடலாம். அவனை இன்னார் பிள்ளையென்று அறிமுகப்படுத்துகிறார். 2 பெரிய குடும்பம் முதலில் உள்ள காப்பில், "விநாயகருக்குத் தம்பியைக் கண்டேன்" என்று சொல்ல வந்து, விநாயகரை நமக்கு அறிமுகப் படுத்திய அருணகிரிநாதர், அடுத்த பாட்டாகிய இதில், "நான் சிவபிரானுடைய குமாரனால் பிரபஞ்சச் சேற்றைப் போக்கிக் கொண்டேன்" என்று சொல்லுகிறார். அப்படிச் சொல்லும்போது சிவபெருமானை அறிமுகப்படுத்துகிறார். இறைவனுடைய குடும்பம் பெரிய குடும்பம். நம்முடைய குடும்பத்தைக் காட்டிலும் பெரியது. நம் குடும்பத்தில் நம் தாய், தகப்பனார், சகோதரர்கள், மனையாட்டி, நம் மக்கள் இருப்பது போலச் சிவபிரானுடைய குடும்பத்தில் அவன் மனைவி உமா தேவியார், அவன் பிள்ளைகள் விநாயகன், சுப்பிரமணியன், அவனுடைய மைத்துனன் திருமால், அவனுடைய பிள்ளை பிரம்மா ஆகியவர்களே இருக்கிறார்கள் என்று நினைக்கலாம். உலகில் உள்ள எல்லா உயிர்களும் அக்குடும்பத்தைச் சேர்ந்தவர்களே. ஒரு வீட்டில் எல்லாவிதமான உறவினர்களும் இருந்தாலும் அது நல்ல குடும்பம் என்று சொல்ல வேண்டுமானால் அந்த வீட்டில் ஒரு வகையினர் அவசியம் இருக்க வேண்டும். வீடு கட்டிக் கல்யாணம் பண்ணிக் கொண்டு வாழ்கின்ற வாழ்க்கை அந்த ஒரு வகையினரை அந்த வீட்டில் நிரப்புவதற்காகத்தான் என்று இந்த நாட்டிலுள்ள பெரியோர்கள் சொல்லுகிறார்கள். இல் வாழ்வது அறம் வளர்ப்பதற்காக. அறம் பல காலம் தொடர்ந்து நடை பெறுவதற்காக நல்ல மக்களைப் பெற்றுக் குடும்பத்தை வளர்க்க வேண்டும். பிள்ளைகளைப் பெறுவது பரம்பரையாகத் தர்மம் வளர வேண்டுமென்பதற்காக பிள்ளை இல்லாத குடும்பம் நல்ல குடும்பம் அன்று என்று நம்முடைய பெரியோர்கள் நினைத்தாாகள. இறைவன் குடும்பத்தில் இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள். அவர்கள் அவனோடே இருப்பவர்கள். அவனுக்கும், அவர்களுக்கும் வேறுபாடு இல்லை என்றே சொல்ல வேண்டும். அந்தப் பிள்ளைகளோடு சரியா? இல்லை, இல்லை. இறைவன் குடும்பத்தில் நாமும் சேர்ந்தவர்கள். பெரும்பான்மைக் கட்சி நாம்தாம். ஆண்டவன் நம் அப்பன்; அவன் மனைவி நம் தாய். அந்த அம்மை அப்பனுக்கு உலகத்திலுள்ள எல்லா உயிர்களும் குழந்தைகள். இந்த உலகம் எல்லாம் அவன் வீடு. உலகம் முழுவதும் ஆண்டவன் குடும்பமாக இருக்கிறது.அவன்.குழந்தைகளாகிய முருகனும்,கணபதியும் ஒரு வகையில் சிறுபான்மைக் கட்சியினர்; மைனாரிட்டி மெஜாரிட்டிக் குழந்தைகள் நாமே. ஆகவேதான் அவனுடைய குடும்பம் பெரிய குடும்பம் என்று சொன்னேன். பஹு குடும்பியாய் இருப்பவன் என்று பிரபந்த வியாக்கியானக்காரர்கள் கடவுளைப் பற்றிச் சொல்லுகிறார்கள். எல்லா உலகத்தையும் தன் வீடாகவும், எல்லா உயிர்களையும் தன் குழந்தைகளாகவும் கொண்டுள்ள ஆண்டவனுக்கு இரண்டு குழந்தைகள் பெரியவர்களாக இருக்கிறார்கள். எல்லாக் குழந்தைகளுக்கும் பிரதிநிதியாகவும், ஆண்டவனுக்கும் பிரதிநிதியாகவும் விளங்குகிறான் குழந்தை முருகன். அவனுக்கும் தந்தைக்கும் வேறுபாடு இல்லை. முருகன் என்ற குழந்தை கலெக்டர் வீட்டுக் குழந்தையைப் போன்றவன். அக்குழந்தைக்குக் கலெக்டருக்குள்ள சுகம் எல்லாம் உண்டு. கலெக்டர் வீட்டில் பண்ணுகிற பட்சணங்கள் எல்லாம் கிடைக்கும். கலெக்டர் வீட்டுக்கு வருகின்ற எல்லோரும் அக்குழந்தைக்கு மரியாதை பண்ணுவார்கள். ஆனால் அக்குழந்தை அவர்கள் வீட்டுச் சேவகனுடைய குழந்தைகளோடும் விளையாடப் போவான். தகப்பனாருக்குச் சமமாக எல்லாவிதமான கெளரவத்தையும் அனுபவித்தாலும், தகப்பனாரிடம் கைகட்டி நிற்பவர்களோடும் எளியவனாகப் பழகுவான். முருகன் குழந்தைக் கோலத்தோடு இருப்பது இந்த எளிமையைக் குறிக்கிறது. இறைவனுடைய குழந்தையாகிய முருகனுக்கு இறைவனுக்குரிய மரியாதையாவும் கிடைக்கும். ஆனால் சிவபெருமானைக் காட்டிலும் கருணை மிகுதியாகப் பொழிகின்ற திருவுருவம் அது. சிவபெருமானுடைய அவதாரமேயானாலும் அது மூலத்தைவிட உயிர்களுக்கு அருள் தருவதில் எளிதாயிருக்கிறது. முன் உள்ள வித்தைவிட அதிலிருந்து முளைத்த செடி நிழல் தருவதுபோல மிகவும் எளிமையாக இருக்கிற தன்மையினால் முருகனைக் கலியுக வரதன் என்று சொல்கிறோம். ஆற்றுத் தண்ணிரை மேடான பிரதேசத்திற்குக் கொண்டு போக வேண்டுமானால் 'பவர் ஸ்டேஷன்' ஏற்படுத்துவது போல, ஆண்டவனுடைய அருள் வெள்ளத்தைத் தேக்கி வைத்துக் கொள்ளக்கூடிய அளவு அன்புப் பள்ளம் விழாத மக்களுக்கு அருள் புரிய முருகன் கலியுக வரதனாக இருக்கிறான்; ஆறுமுகமுடையவனாக எழுந்தருளுகிறான். முருகன் எம்பெருமானுடைய பிள்ளை என்றால், அந்த உறவு நம்முடைய வாழ்க்கையில் நாம் கொண்டாடுகின்ற உறவு போன்றதாகக் கொள்ளக் கூடாது. அந்தப் பிள்ளை வேறு, அவனுடைய தந்தை வேறு என்று இல்லை. அவனுடைய தந்தையின் ஆற்றல் பல இடங்களுக்குச் செல்லாது; ஆனால் அவனுடைய ஆற்றல் பல இடங்களுக்குச் செல்லும். ஒரு சாதாரணக் குடும்பத்திலே இருக்கின்ற நாம் நாமே போக முடியாத இடங்களுக்கு நம் பிள்ளையை அனுப்பி, "கல்யாணம் விசாரித்து வந்து விடு" என்று சொல்கிறோம். இந்தச் சின்னச் சம்பிரதாயந்தான் தெய்வக் குடும்பத்திலும் இருக்கின்றது. சிவபெருமான் தானே நேரில் செல்ல முடியாத இடங்களுக்கு எல்லாம் தன் மகன் முருகனை அனுப்புகிறான்; அல்லது அந்த அவதாரத்திலே சென்று அருள் செய்து வருகிறான். முருகன் சிவபெருமான் குமாரன்; கிருபைக்கு இருப்பிடமாக இருக்கிறவன். “பெருமான் குமாரன் கிருபாகரனே!" சிவபெருமான் அந்தப் பெருமானாகிய சிவபிரானை அடையாளத்தோடு சுட்டுகிறார்.    ... ... ... ... செஞ்ச டாடவிமேல்    ஆற்றைப் பணியை இதழியைத் தும்பையை அம்புலியின்    கீற்றைப் புனைந்த பெருமான். ஐந்து பூதங்களாலான பிரபஞ்சத்தைப் பற்றிச் சொன்னவர், ஐந்து அடையாளங்களைச் சொல்லிச் சிவபெருமானை முதலில் அறிமுகப்படுத்தி வைக்கிறார். அந்த ஐந்து பொருள்களும் மிக உயர்ந்த பொருள்களா? அப்படிச் சொல்ல முடியாது. ஆண்டவனுடைய திருச் சந்நி தானத்தைச் சேர்ந்து விட்டால் உயர்ந்தது, தாழ்ந்தது என்ற பேதம் இல்லை. எல்லாமே உயர்ந்தவை ஆகிவிடுகின்றன. விலாச வேறுபாடு அங்கே கிடையாது. அவன் சந்நிதானத்திற்கு வந்த பிறகு எல்லாம் ஒரே விலாசந்தான். கங்கையில் யமுனை புகுந்தாலும் கங்கைதான்; சாக்கடை புகுந்தாலும் கங்கைதான். இரண்டிற்கும் அதில் வேறுபாடு இல்லை. அதைப்போல எம்பெருமானுடைய சம்பந்தம் பெற்ற பொருள்கள் யாவும் ஒன்றுதான்; ஒன்றுக்கொன்று வேறுபாடு கிடையாது. சிவபெருமானைப் பற்றிச் சொல்லும்போது முதலில் அவனது திருக்கோலத்தைக் காலில் இருந்து வர்ணிப்பதா? தலையில் இருந்து வர்ணிப்பதா? எல்லாவற்றையும் வர்ணிக்கப் பாட்டுப் போதாது. ஒன்றை வர்ணித்தாலே முழுவதும் வர்ணித்ததாக ஆக வழி உண்டா? நமக்குத் தலையில்லாவிட்டால் உடல் எல்லா ஒரே மாதிரிதான் இருக்கும். தலையாகிற சின்னத்தைக் கொண்டுதானே அடையாளம் கண்டு கொள்ளுகிறோம்? உடம்புக்குள் தலை உத்தமமானது. அதற்கு 'உத்தமாங்கம்' எனப் பெயர். ஆகவே, சிவபிரான் சிவந்த சடைக் காட்டின்மேல் செஞ்சடாடவிமேல், என்ன இருக்கின்றன என்று சொல்கிறார். அவனது கருணையை காட்டுகிற பொருள்கள் அங்கே இருக்கின்றன. அப்படி உள்ளனவற்றுள் ஐந்து பொருள்களைச் சொல்கிறார். அவன் கங்கை ஆற்றை அணிந்த பெருமான்; பாம்பை அணிந்த பெருமான்; இதழியை அணிந்த பெருமான், தும்பை மலரை அணிந்த பெருமான்; அம்புலியின் கீற்றை அணிந்த பெருமான். அவனது ஜடா முடியில் கங்கை ஆறு, அரவாபரணம், கொன்றைப்பூ, தும்பைப்பூ, பிறைமதி ஆகிய ஐந்து பொருள்கள் இருக்கின்றன. ஒர் ஆறு, இரண்டு மலர்கள், ஒரு மதி ஆகிய கூட்டதிற்கிடையேயும் பாம்பும் இருக்கிறது. அதற்கு உணவாகிய மதி பக்கத்தில் இருந்தாலும் அது உண்ணுவது இல்லை. கங்காதரன் எம்பெருமானுடைய செஞ்சடை ஆகிய அடவியில் இருக்கிற பொருள்களைச் சொல்ல வந்தவர் முதலில் ஆற்றைச் சொன்னார். "பிரபஞ்சமென்னும் சேற்றைக் கழிய வழி விட்டவா" என்று சேற்றைச் சொன்னவர் உடனே ஆற்றைச் சொல்வது பொருத்தந்தானே? "நான் பிரபஞ்சம் என்னும் சேற்றைக் கழிய வழிவிட்ட கிருபாகரனுடைய தகப்பனார் கங்கையைத் தலையில் சுமந்து கொண்டிருக்கிறார்" என்று முதலில் அடையாளம் காட்டுகிறார். க.சொ.1-5 கங்கை எல்லோருடைய அசுத்தத்தையும் போக்கும் புனிதம் உடையது. ஆனால் அதற்கே ஒரு காலத்தில் அசுத்தம் வந்து விட்டது; குணபேதம் வந்தது. யாராவது கஷ்டப்பட்டால் அதனைக் கண்டு உடனே இரங்குபவர்கள் பெண்கள். கங்கை பாய்ந்தால் தன்னுடைய முன்னோர்களின் சாபம் தீருமென்று தெரிந்து கொண்டு பகீதரன் கங்கையை நோக்கித் தவம் செய்தான். அவன் செய்த தவத்தை நினைந்தால் எல்லோருடைய மனமும் இளகும். அத்தகைய பெருந்தவத்தை அவன் செய்தாலும் கங்கையின் மனம் இரங்கவில்லை. அவள் ஆணவத்தால் சீறி நின்றாள். இரக்கமற்றவனை நெஞ்சிலே ஈரம் அற்றவன் என்கிறோம். ஈரம் இரக்கத்தைக் காட்டுகிறது. நீருருவம் உடைய கங்கைக்கு இயற்கையிலேயே ஈரம் இருக்க வேண்டும். ஆனால் அவளிடம் ஈரமே இல்லை; பகீரதன் செய்த கடுந்தவத்தைக் கண்டும் இரக்கம் உண்டாகவில்லை. அவள் தண்மை இல்லாமல் செருக்கால் கொதிப்படைந்திருந்தாள். "நான் வருவேன். ஆனால் என்னைத் தாங்குவார் யார்?" என்று ஆணவத்தால் இறுமாந்திருந்தாள். "நான் தாங்குகிறேன்" என்று சிவபெருமான் சொல்லி அவள் ஆணவக் கொதிப்பை மாற்றத் தன் சடையில் ஏற்றான்.    "விண்ணுக் கடங்காமல் வெற்புக் கடங்காமல்    மண்ணுக்கடங்காமல்..." அவள் குபுகுபு என வந்தாலும் தன் சடாமகுடத்திலே அடக்கினான் சிவபெருமான். யாருக்கும் பயன்படாமல் இருந்த கங்கையை, தன் அகங்காரத்தால் அழுக்காகிக் கொதிப்படைந்திருந்த கங்கையை, தன் சடையில் தாங்கிப் புனிதமாக்கி, தண்மையைக் கொடுத்தான். அப்பால் அது யாவருக்கும் பயன்படும் திரிபதகை ஆயிற்று. எல்லாவற்றையும் புனிதம் ஆக்கும் கங்கை அழுக்கடைந்தபோது அதனைத் தன் சடையில் ஏற்றுப் புனிதமாக்கிய பெருங் கருணையாளன் சிவபெருமான் என்பதை நினைக்கச் செய்கிறது அந்த ஆறு. திருநாவுக்கரசு சுவாமிகள் இறைவனைப் புனிதமானவன் என்று சொல்ல வந்தார். அவன் எல்லோருடைய அழுக்கையும் போக்குகின்ற தன்மை உடையவன். டாக்டர் நோயாளியினுடைய நோயைக் குணப்படுத்துவார். ஆனால் அந்த டாக்டருக்கு நோய் வந்தால் அவருடைய நோயைக் குணப்படுத்துபவர் மிகவும் கெட்டிக்காரராக இருக்க வேண்டும் அல்லவா? அதைப்போலக் கங்கை எல்லோருடைய அழுக்கையும் போக்கிப் புனிதமாக்குகிறது. ஆனால் அந்தக் கங்கையே அழுக்கடைந்தபோது, புனிதம் நீங்கியிருந்தபோது அதனைத் தன் புரிந்த சடைமேல் ஏற்று மீட்டும் புனிதம் ஆக்கியன் இறைவன் என்று அப்பர் புலப்படுத்துகிறார். "புரிசடைமேல் புனல்ஏற்ற புனிதன் தான்காண்” என்பது அவர் வாக்கு ஆண்டவனுடைய சந்நிதியில் ஆணவம் அடங்கும் என்பதற்கும் கலக்கம் தெளியும் என்பதற்கும் அடையாளம் ஆறு. அரவாபரணன் அவனது சிவந்த சடைமேல் இருக்கும் மற்றொரு பொருள் பணி (பாம்பு). அது எதைக் குறிக்கிறது? - மெத்தப் படித்தவர்களுக்குத் தலை நிமிர்ந்து போய்விடும்.    "ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்    கெழுமையும் ஏமாப் புடைத்து" என்கிறார் வள்ளுவர். நல்ல முறையில் படித்திருந்தால், கல்வியால் பயன் என்ன என்பதை உணர்ந்து படித்திருந்தால், ஏழு பிறப்புக்கும் உதவுமாம். ஆனால், படித்தவனுக்கு செருக்கு வந்தாலோ யாரும் சமாளிக்க முடியாது. அதனால்தான்,    "கற்றாரை யான்வேண்டேன் கற்பனவும் இனிஅமையும்" என்று மாணிக்கவாசகர் சொல்கிறார்.    "கல்லாத பேர்களேநல்லவர்கள் நல்லவர்கள்    கற்றும்அறி வில்லாதஎன் கர்மத்தை என்சொல்வேன்" என்று தாயுமானவர் பாடுகிறார்.    "கலையே பதறிக் கதறித் தலையூ    டலையே படுமா றதுவாய் விடவோ?” என்று அருணகிரிநாதர் அநுபூதியில் பாடுகிறார். மெத்தப் படித்து விட்டது காரணமாக, கடவுளே இல்லை; நான்தான் உயர்ந்தவன் என்று பிதற்றி அலையும் நிலைக்கு வந்து விடலாமா? அத்தகையவர்கள் இந்தக் காலத்தில் மட்டும் இருக்கிறார்கள் என்பதில்லை. அந்தக் காலத்திலும் தாருகாவனத்தில் இருந்தார்கள். "ஆண்டவன் என்ன? நான்தான் பெரியவன்" என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள் சிலர். அவர்கள் வேதம் படித்தவர்கள்; வேள்வி செய்தவர்கள். வேதம் படித்த பிராமணர்கள் என்றாலும் அவர்களுக்கு ஞானம் வரவில்லை. சாமான்ய தர்மங்களைக்கூட அவர்கள் அநுஷ்டிக்கவில்லை. விசேஷ தர்மங்கள் எல்லாம் சாமான்ய தர்மங்களைக் கடைப்பிடித்த பிறகே பயனைத் தரும். சாமான்ய தர்மங்களைக்கூடச் செய்யாதவர்களுக்கு விசேஷ தர்மங்களைச் செய்வதனால் தவறுதான் உண்டாகும். அடிப்படையான கடமைகளே சாமான்ய தர்மங்கள். உயிர்களிடத்தில் அன்பு, இறைவனிடத்தில் நம்பிக்கை இவை மிகவும் அடிப்படையானவை. இத்தகைய தர்மங்களைச் செய்யாத அவர்கள் விசேஷ தர்மமாகிய யாகங்களைச் செய்ய ஆரம்பித்தார்கள். அஸ்திவாரம் இல்லாத கட்டிடம் கீழே விழுந்து விடும். அதைப் போல அவர்கள், நாம் வேதம் படித்தோம் என்ற செருக்கால் இறைவனை நினையாமல் இருந்தார்கள். எம் பெருமான் அவர்கள் செருக்கை அடக்கினான். அப்போது அவர்கள் யாகம் செய்து பாம்பை வருவித்து இறைவன்மேல் படையாக விட்டார்கள். இறைவன் அதனைப் பற்றிச் சடையின் மேல் வைத்துக் கொண்டான். இறைவன் நஞ்சுக்கு நஞ்சாக இருப்பவன்; காலகாலன். அவன் திருமுன் கல்வித் தருக்கு உள்ளவர்களும், கர்மத் தருக்கு உள்ளவர்களும் கர்மத் தருக்கு அடங்கியவர்களாகப் போய் விடுவார்கள் என்பதற்கு அடையாளம் பாம்பு. கொன்றை அணிந்தோன் சிவபெருமான் சடையில் உள்ளவையாக அருணகிரிநாதர் காட்டும் பொருள்களில் மூன்றாவது இதழி; இதழி என்பது கொன்றை மலர். கார்காலத்தில் அது மலரும். அதனால் அதை, 'கார் நறுங் கொன்றை" என்று சங்கப் புலவர்கள் சொல்வார்கள். இறைவனைக் குறிப்பிடச் சில அடையாளங்கள் உண்டு. அவற்றில் மாலை ஒன்று. தலைவன் என்றால் அவனுக்கும் பத்து அங்கங்கள் உண்டு; அவற்றைத் தசாங்கம் என்பர். அந்த அங்கங்களில் ஒன்று கண்ணி; அடையாள மாலை. சிவபெருமானுக்குக் கண்ணி அல்லது அடையாள மாலை கொன்றை. ⁠"கண்ணி கார்நறுங் கொன்றை" என்பது புறநானூறு. சிவபெருமான் திருமுடியில் அணிந்திருப்பது கொன்றை மலர். கொன்றை மலர் பொன்னிறம் பெற்றது. அதன் கேசரம் வளைந்து இருக்கும். அதனைப் பிரணவ புஷ்பம் என்று சொல்வார்கள். ஒம் என்ற எழுத்தைப் போல் அது வளைந்திருக்கிறது. பிரணவத்தை இந்திய நாட்டில் இருக்கிற எல்லாச் சமயங்களும், புத்த ஜைன சமயங்களும்கூட ஒப்புக் கொள்கின்றன. ஓங்காரத்தை விளக்கப் பல பல உருவங்களை வைத்திருக்கிறார்கள். விநாயகரே பிரணவ உருவம் உடையவர்தாம். அவரது உருவத்தைத் தலையோடும், தும்பிக்கையோடும் பார்த்தால் பிரணவ உருவத்துக்கும், அந்தக் கோலத்துக்கும் உள்ள ஒப்புமை தெரியவரும். கொன்றை ஓங்காரத்தை நினைப்பூட்டும் மலர். அது சிவபெருமானுக்கு மிகவும் விருப்பமானது. அதனால் அதைத் தன் ஜடாபாரத்தில் வைத்திருக்கிறான். நல்ல மணமும் நிறமும் உடையது அந்த மலர். பிறக்கின்றபோது சிலர் நல்லவர்களாக இருப்பார்கள். ஆனால் சேர்க்கைக் கோளாற்றினால் தலை கொஞ்சம் திரும்பும். அவர்களுடைய தாய் தந்தையர்களின் பண்பாட்டினால் மறு படியும் நல்லவர்களாகவே மாறிவிடுவதும் உண்டு. சிலர் பிறக்கும் பொழுதே தீயவர்களாகப் பிறப்பார்கள்; ஆயுள் முழுவதும் தீயவர்களாகவே இருப்பார்கள். சிலர் பிறக்கும் பொழுது இயற்கையிலேயே நல்லவர்களாகப் பிறப்பார்கள்; ஆயுள் முழுவதும் நல்லவர்களாகவே இருப்பார்கள். இயற்கையிலேயே நல்லவர்களாகப் பிறந்து, நடுவில் தலை திரும்பிப் போய்ப் பின்பு இறைவனை அடைந்ததால் மறுபடியும் நல்லவர்களாக மாறி விடுகிறவர்களுடைய கூட்டத்திற்குப் பிரதிநிதி கங்கை. இயற்கையிலேயே கெட்டவர்களாகப் பிறந்து, ஆயுள் முழுவதும் கெட்டவர்களாகவே இருப்பவர்களுங்கூட இறைவனை அடைந்த மாத்திரத்திலே தங்கள் கெட்ட குணத்தை விட்டவர்களாகிறார்கள். இப்படிப்பட்டவர்களுடைய கூட்டத்திற்கு பிரதிநிதி பாம்பு. இயற்கையிலேயே நல்லவர்களாக பிறந்து, ஆயுள் முழுவதும் நல்லவர்களாகவே இருக்கின்றவர்களும் இறைவனை அடைகிறார்கள். இத்தகையவர்களுடைய கூட்டத்தின் பிரதிநிதி கொன்றை மலர். ஆண்டவனுடைய சந்நிதிக்கு நல்லவர்கள் மாத்திரம் போக வேண்டும் என்பதில்லை. பிறக்கின்றபோதே நல்லவர்களாக இருந்தாலும் சரி, பிறக்கின்றபோதே கெட்டவர்களாக இருந்தாலும் சரி, பிறக்கின்ற போது நல்லவார்களாக இருந்து இடையில் ஏற்பட்ட சேர்க்கையினால் கெட்டவர்களாக மாறினாலும் சரி, ஆண்டவன் சந்நிதியை அடைந்து விட்டால் உய்வு பெற்று விடுவார்கள் என்பதை இந்த மூன்று பொருள்களும் காட்டுகின்றன. தும்பை சூடினோன் நான்காவது பொருள் தும்பை. அதுவும் இறைவனுடைய சிவந்த சடாடவியின்மேல் இருக்கின்றது. தும்பை மலர் ஒரே ஒர் இதழை உடையது. மலர் என்றால் மணம் இல்லாவிட்டாலும், நிறம் வேண்டும் என்பதை இன்றைய நாகரிகத்தில் பார்க்கிறோம். மணமேயில்லாத கனகாம்பரத்தை இன்று ரூபாய் போட்டு நிறுக்கிறார்கள்! நமது நாகரிகம் அப்படி வளர்ந்திருக்கிறது. தமிழ் நாட்டில் உள்ள மலர்களுக்குத்தான் சிறந்த மணம் உண்டு. குருடனும் மலரை அநுபவிக்கும்படி உள்ளது தமிழ்நாடு. இத்தகைய தமிழ்நாட்டில் மணமுள்ள மலரை விட்டு நிற மலரைச் சூடி அநுபவிக்கிற நாகரிகம் வந்துவிட்டால் என்னவென்று சொல்வது! மலர் என்றால் மணம் வேண்டும்; இதழ்கள் இருக்க வேண்டும்; நிறம் வேண்டும். ஆனால் தும்பை மலரைப் பார்த்தால் அதற்கு நிறம் இல்லை; இதழ்களும் இல்லை; வாசனையும் இல்லை. அதுவும் இறைவன் சடையில் இருக்கிறது. நிறம், மணம், இதழ்கள் இல்லாத தும்பையை யார் சூடிக் கொள்வார்கள்? மணம் இல்லா விட்டாலும், நிறம் இருந்தால் சூடிக்கொள்வார்கள். நிறத்திற்காகக் காகிதப் பூவைச் சூடிக் கொள்ளுகிறார்கள் அல்லவா? ஏன் அதை அணிந்து கொள்ள வேண்டும் என்று கேட்டால், "வாடா மலர்" என்கிறார்கள்! ஆனால் தும்பையை யாரும் சூடிக் கொள்வது இல்லை. அதை இறைவன் அணிந்திருக்கிறான். அந்த மலருக்கு மணம் இல்லாவிட்டாலும், நிறம் இல்லாவிட்டாலும், பல இதழ்கள் இல்லாவிட்டாலும் அதில் ஒன்றே ஒன்று மாத்திரம் இருக்கிறது; மென்மை.    "மலரினும் மெல்லிது காமம்" என்று வள்ளுவர் சொல்லுகிறார். மலருக்கு மென்மை ஓர் இயல்பு. நிறம் இல்லாத வெள்ளைமலர் பல உண்டு. ஆனால் இவற்றுக்கு மிக்க வாசனையாவது இருக்கும். மல்லிகை, முல்லைப்பூ இல்லையா? தும்பை மலருக்கோ வாசனை இல்லை. வாசனை இல்லாவிட்டாலும் மலர் என்பதற்குரிய மென்மை இதனிடம் இருப்பதனாலேயே அதனை எம்பெருமான் ஏற்றுக் கொண்டான். "படாடோபம் வேண்டுவதில்லை. மந்திர ஜபம் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. பெரிய கோயில்களுக்குப் போய்த் தவம் பண்ண வேண்டுவதும் இல்லை. அன்பு என்ற ஒன்று இருந்தால் போதும், ஆண்டவன் ஏற்றுக் கொள்வான்" என்பதைக் குறிப்பாகப் புலப்படுத்திக் கொண்டு சின்னப் பூவாகிய தும்பை ஆண்டவன் தலையில் இருக்கிறது; கொன்றை மலருக்கு அருகில் இருக்கிறது. ஆண்டவனுடைய செஞ்சடையில் பெரிய, அழகான, மணமுள்ள கொன்றை மலருக்கு அருகிலேயே, நிறம் இல்லாத, வாசனையற்ற தும்பை மலரும் இருக்கிறது. இதிலிருந்து எவ்வளவு பெரியவனாக இருந்தாலும், எவ்வளவு சிறியவனாக இருந்தாலும் இறைவன் சந்நதிதானத்திற்கு வந்து விட்டால் ஒரே நிலையை உடையவர்கள் என்ற உண்மையைத் தெரிந்து கொள்ள வேண்டும். சந்திரசேகரன் ஐந்தாவது பொருளாக இறைவனுடைய சடையில் இருப்பது சந்திரன். சிவபெருமான் "அம்புலியின் கீற்றைப் புனைந்தவன்". அம்புலியின் கீற்று அவன் செஞ்சடாடவியின் மேல் ஏறிக் கொண்டு, அவனுடைய அளப்பருங் கருணையைக் காட்டுகிறது. எம்பெருமான் பூமாலையை வைத்திருப்பது போல சந்திரனைத் தலையில் வைத்திருக்கிறான். அம்புலியைச் சூடிக் கொண்டிருப்பதால்தான் அவனுக்குச் சந்திரசேகரன் என்ற பெயர் வந்தது. இறைவன் பிறையை அணிந்திருப்பதன் உட்கருத்தை எண்ணிப் பலர் சந்திரசேகரனாக இறைவனைப் பார்க்கிறார்கள். ஞான சம்பந்தப் பெருமான் உமாதேவியார் ஊட்டிய சிவஞானப் பாலைக் குடித்த மாத்திரத்தில், "தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண் மதி சூடி" என்று பாட ஆரம்பிக்கிறார். "பித்தா பிறைசூடீ" என்று சுந்தரமூர்த்தி சுவாமிகள் பாடுகிறார். தனக்குப் பிரியமானவர்களையே ஆண்டவன் தலையில் சூடிக் கொண்டு ஆடுகிறான் என்பதில்லை; தனக்குத் தவறு எண்ணியவனையும் ஆண்டவன் ஆட்கொள்ளுகிறான் என்பதைச் சந்திரன் காட்டுகிறான். உலகத்தில் இரண்டு காரியம் எல்லாவற்றையும்விடத் தவறானவை. குருவுக்கு அபராதம் பண்ணுவது, இறைவனுக்கு அபராதம் பண்ணுவது ஆகிய இரண்டு காரியங்களும் மன்னிக்க முடியாத குற்றங்கள். தந்தை தாய்க்கு அபசாரம் பண்ணுவதும் குற்றந்தான். அதைவிட மிஞ்சிய குற்றம் குருவுக்கு அபசாரம் பண்ணுவது. சந்திரன் குருவுக்கு அபசாரம் பண்ணினவன்; அதோடு சிவபிரானுக்கும் இவன் தவறு இழைத்தான். தட்சன் ஒரு பெரிய யாகம் பண்ணினான். அந்த யாகத்துக்குச் சிறப்பான ஏற்பாடுகளைப் பண்ணியிருந்தான். எல்லோருக்கும் அழைப்பு அனுப்பியிருந்தான்; ஆனால் பரமேசுவரனுக்கு அனுப்பவில்லை. பமமேசுவரன் யாகத்திற்குத் தலைவன்; அதனால் அவனுக்கு யக்ஞேசுவரன் என்று பெயர். எல்லா ஏற்பாடுகளும் கல்யாணத்திற்குச் செய்திருந்தாலும் மாப்பிள்ளை இல்லாவிட்டால் அது கல்யாணம் ஆகுமா? அதைப்போல யக்ஞத்திற்குத் தலைவனாகிய பரமேசுவரனை அழைக்காமல் மற்றவர்களை எல்லாம் அழைத்து யாகம் செய்தால் அது யாகம் ஆகாது. தட்சன் வேள்விக்கு எல்லோரும் வந்திருந்தார்கள். சிவபெருமானுக்கு அழைப்பு இல்லையாதலால் அவன் வரவில்லை. அதனால் என்ன ஆயிற்று? மாணிக்க வாசகர் சொல்லுகிறார்:    "சாவமுன் னாள்தக்கன் வேள்வித் தகர்தின்று" என்கிறார். தக்கன் வேள்வியில் அவியை நுகரவில்லை. புலாவைத்தான் உண்டார்கள். தேவர்கள் தாம் வாழ அவி பெறுவது வழக்கம். இங்கேயோ அவர்கள் தாம் சாகும்படி தகரைத் தின்றார்களாம். ஆண்டவன் தலைமை இருந்தால்தான் வேள்வி என்று சொல்லலாம். இல்லையானால் அதனை வேள்வி என்று சொல்ல முடியாது. சிவபெருமான் வீரபத்திர உருவத்தோடு யாகசாலை சென்றான். தேவர்களுக்குத் தண்டனை அளித்தான். ஒவ்வொரு தேவனுக்கும் ஒவ்வொரு தண்டனை கிடைத்தது. சூரியனுடைய கண்ணைப் பிடுங்கினான். சந்திரனைக் கீழே தள்ளிக் காலால் தேய்த்தான். தூங்கிக் கொண்டிருக்கிற ஒருவருடைய வாயில் தேன் சிந்தினால் அது இனிக்காதா? கோபத்தால் ஒருவன் மேலே தேனுள்ள பாத்திரத்தை எறிந்தால் அந்தப் பாத்திரத்திலுள்ள தேன் அவன் வாயிலே தெறிக்கும்போது அந்த தேன் இனிக்காதா? அதைப்போல, ஆண்டவனுடைய கோபத்தால் சந்திரனுக்குத் தண்டனை உருவத்தில் கிடைத்தது ஒரு பெரிய லாபம். சந்திரனைக் காலால் தேய்த்தான் அல்லவா இறைவன்? அதனால் அவனுடைய திருவடி சம்பந்தம் சந்திரனுக்குக் கிடைத்தது. இறைவனுடைய திருவடியைக் காணாமல் எத்தனையோ முனிவர்கள் தவம் கிடக்க, சந்திரனுக்கு அவனுடைய திருவடி சம்பந்தம் எளிதில் கிடைத்தது. தண்டனையாக இருந்தாலும் அடியின் தொடர்புக்குப் பயன் உண்டு அல்லவா? "அமுதக் கடலுக்கு இருவர் போனார்கள். ஒருவன் அதன் கரையில் நின்று. கொண்டிருந்தான். மற்றொருவன் அமுதக் கடலுள் வீழ்ந்துவிட்டான். வீழ்ந்தவன் கதி என்ன ஆகும்" என்று தம் மாணவர்களை ஒரு ஞானி கேட்டாராம். "அமுதக் கடலுக்குள் விழுந்தவன் திக்குமுக்காடிச் செத்துப் போவான்" என்றார்கள் சிஷ்யர்கள். "இல்லை இல்லை; அமுதம் உண்டால் இறப்பில்லாத அமரத்துவந்தானே கிடைக்கும்? கரையில் இறக்கிறவனுக்கு அமுதத்தால் பயன் உண்டு என்றால் அதில் மூழ்கியவனுக்கு ஏது சாவு?" என்று அவர் கேட்டாராம். அதுபோலச் சந்திரனுக்குப் பரமேசுவரன் காலில் அகப்படும் தண்டனை கிடைத்தாலும் திருவடி சம்பந்தம் பெற்றமையால் இறைவனது தலையில் ஏறிக் கொள்ளும் பேறு அவனுக்குக் கிடைத்துவிட்டது. இறைவனுக்கு அபராதம் செய்தவனாக இருந்தாலும் அவன் திருவடியை அடைந்துவிட்டால், அவன் தன் தலையில் வைத்துக் கொள்வதற்குரிய உயர்ந்த பொருள் ஆகி விடலாம் என்பதைச் சந்திரன் காட்டுகிறான். இறைவன் அவ்வளவு கருணை உடையவன். இத்தகைய கருணைப் பெருமானுடைய பிள்ளை கருணைக் கடலாகத்தானே இருப்பான்? அதனால்தான்,    ஆற்றைப் பணியை இதழியைத் தும்பையை அம்புலியின்    கீற்றைப் புனைந்த பெருமான் குமாரன் கிருபாகரனே என்றார் அருணகிரியார். 3 இறைவன் அருளைப் பெறத் தவம் செய்ய வேண்டும் என்கிறார்கள். எனக்கு முன்னைப் பேறு இல்லை. பின்னைத் தவமும் இல்லை. கருணையே வடிவான சிவபிரான் தன்னுடைய ஜடாபாரத்திலே தன் கருணையைப் புலப்படுத்தும் அடையாளமாக ஐந்து பொருள்களை வைத்துக் கொண்டிருக்கிறான். அவனுடைய திருக்குமரன் இரண்டும் கெட்ட எனக்கு அற்புதமான ஆனந்தத்தைத் தந்தான். அவன் அருளிய பேற்றை என்ன என்று சொல்வேன்' என்பது இந்தப் பாட்டின் திரண்ட பொருள்.    பேற்றைத் தவம்சற்றும் இல்லாத என்னைப் பிரபஞ்சம் என்னும்    சேற்றைக் கழிய வழிவிட்ட வாசெஞ்ச டாடவிமேல்    ஆற்றைப்பணியை இதழியைத் தும்பையை அம்புலியின்    கீற்றைப் புனைந்த பெருமான் குமாரன் கிருபாகரனே. மூன்று பகுதி இந்தப் பாட்டு மூன்று பகுதிகளை உடையது. ஆன்மாவைப் பற்றிய பகுதி, பாசத்தைப் பற்றிய பகுதி. ஆண்டவனைப் பற்றிய பகுதி என்பன அவை. "பேற்றைத் தவம் சற்றும் இல்லாத என்னை" என்பது ஆன்மாவைப் பற்றிச் சொல்லியது. "பிரபஞ்சமென்னும் சேறு" என்பது மலம் அல்லது பாசத்தைப் பற்றிச் சொல்லியது. மற்றவை பதியைப் பற்றிச் சொல்லியவை. ஆன்மா மாயையாகிற சேற்றிலே இருந்தது. அங்கிருந்து அலசப் பெற்று ஆண்டவன் இருப்பிடத்தில் போய் சேர்ந்தது. இதையே உலகத்திலுள்ள எல்லாத் தத்துவ நூல்களும் வெவ்வேறு வகையில் சொல்கின்றன. உலகம், உயிர், இறைவன் என்ற மூன்றைப் பற்றிய ஆராய்ச்சியை எல்லாச் சமயங்களும் திருப்பித் திருப்பி செய்து வருகின்றன. அந்த மூன்றுக்கும் உள்ள உறவு என்ன, இன்ப நிலை எது, அதை எப்படி அடைய வேண்டும் என்ற விவரங்களில் வேற்றுமை இருக்கலாமேயன்றி, இந்த மூன்று அடிப்படையான பொருள்கள் உண்டென்று சொல்வதில் வேறுபாடு இல்லை. ஆன்மா ஆண்டவனை அடைவதற்குத் தடையாக இருப்பது ஒன்று. அதுதான் பிரபஞ்சச் சேறு. ஆன்மா இந்தப் பிரபஞ்சச் சேற்றிலே புதைந்து, செய்ய வேண்டிய தவங்களைச் செய்யாமல், பெறவேண்டிய பேறுகளைப் பெறாமல் துன்பப்பட்டுக் கொண்டிருக்கிறது. சேற்றைக் கழுவி இன்பம் அடைய வேண்டுமானால் புனிதமான ஆண்டவன் திருவருளைப் பெற வேண்டும். இந்த மூன்று பகுதியை உடைய பாடலைக் கந்தர் அலங்காரத்தின் முதற்பாட்டாக வைத்தார். மாளிகை கட்டினால் அதன் சிறப்பை எடுத்துக் காட்டும் வகையில் வாசல் பக்கத்தை அழகாகக் காட்டுவார்களேயன்றிக் குகை மாதிரியாகவா கட்டு வார்கள்? கந்தர் அலங்கார மாளிகைக்கு இந்த முதற்பாட்டு, தக்கபடி அமைந்த வாயிலாக இருக்கிறது. தலைவாசல் கந்தர் அலங்காரம் என்ற நூலின் தலைவாசலை இந்தப் பாட்டிலே திறக்கிறார் அருணகிரியார். அதனால் அந்த மாளி கைக்குள் என்ன என்ன பொருள்கள் இருக்கும் என்பதையும் குறிப்பாகத் தெரிந்து கொள்கிறோம். நம் வாழ்வில் ஏற்படுகின்ற அழுக்கு இன்னதென்று தெரிந்து கொண்டோம். அந்த அழுக்கைப் போக்குகின்ற ஆண்டவனைப் பற்றியும் தெரிந்தது. அழுக்குப் போகப் பெற்றதனால் ஏற்படுவது இன்பம் என்பதையும் அறிந்தோம். ஆனால் அந்த இன்பத்தை அருணகிரிநாதர் சொல்லவில்லை; சொல்லவும் முடியாது. அதை அடைவதற்கான வழியைச் சொல்ல முடியுமேயன்றி அதை அவரவர்களே அநுபவித்துத்தான் தெரிந்து கொள்ள வேண்டும். "கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டிலர்" என்று சொல்வார்கள். கந்தர் அலங்காரத்தில் ஆன்மாவின் இலக்கணத்தைப் பார்க்கலாம். ஆன்மா பிரபஞ்சச் சேற்றிலே உழன்று அடைகின்ற துன்பத்தைப் பார்க்கலாம். பாசம் அகலும் போது ஆன்மா, ஆண்டவனைச் சார்ந்து இன்பம் அடைகிறது என்பதைப் பார்க்கலாம். இத்தனையையும் கந்தர் அலங்காரம் என்ற நூலுக்குத் தலைவாசல் போலிருக்கின்ற முதல் பாட்டிலேயே அருணகிரிநாதர் புலப்படுத்துகிறார்.    பேற்றைத் தவம்சற்றும் இல்லாத      என்னைப் பிரபஞ்சம்என்னும்    சேற்றைக் கழிய வழிவிட்ட      வா!செஞ்ச டாடவிமேல்    ஆற்றைப் பணியை இதழியைத்      தும்பையை அம்புலியின்    கீற்றைப் புனைந்த பெருமான்      குமாரன் கிருபாகரனே! (முன் செய்த தவத்தின் பயனையும், இப்போது செய்த தவத்தையும் சிறிதேனும் பெற்றிலாத அடியேனை, சிவந்த சடைக் காட்டில் ஆற்றையும், பாம்பையும், கொன்றை மலரையும், தும்பை மலரையும், சந்திரனது கீற்றையும் அணிந்த சிவபெருமானுடைய குமாரனும் கருணைக்கு இருப்பிடமுமாகிய முருகன் பிரபஞ்சம் என்கின்ற சேற்றினின்றும் கழியும்படியாக வழிவிட்டவாறு என்ன வியப்பு! பெருமான் குமாரனாகிய கிருபாகரன் என்னைச் சேற்றினின்றும் கழிய வழி விட்டவா என்று கூட்டுக. பேற்றைச் சற்றும் இல்லாத, தவம் சற்றும் இல்லாத என்று தனித்தனியே கூட்டுக, சேற்றை - சேற்றினின்றும். வழிவிட்டவா - வழி விட்டவாறு என்ன வியப்பு! செஞ்சடாடவி - செம்மையாகிய சடைக்காடு. இதழி - கொன்றை. மூன்றாம் பிறைச் சந்திரனை அம்புலியின் கீற்று என்றார். கிருபா ஆகரன் - கிருபைக்கு இருப்பிடமானவன்; கிருபாகரன் என்று பிரித்துக் கிருபையைச் செய்கிறவன் என்றும் பொருள் கொள்ளலாம்.)  அயில்வேலன் கவி 1 உபதேசம் மகா ஞானிகள் தம்மைச் சார்ந்தவர்கள் இன்பம் அடைய வேண்டுமென்று பல வகையிலே உபதேசம் செய்வார்கள். அவர்கள் தம்முடைய சிஷ்யர்களுக்கு மந்திரோபதேசம் செய்வதன் மூலம் அருள் பாலிக்கலாம். கண்களினால் அவர்களைப் பார்த்த மாத்திரத்திலேயே அவர்களுக்கு ஞானம் உண்டாகும்படியும் செய்யலாம். அவர்களைத் தொட்டு அருள் ஊட்டலாம். நலம் ஏற்பட வேண்டுமென்று நினைத்தும் அருளை வழங்குவது உண்டு இவையாவும் அவர்கள் காலத்திலேயே வாழ்ந்த மக்களுக்குத்தான் பயன்படும். தம் காலத்தில் வாழாத மக்களுக்கும் பயன்படும் வகையில் அருணகிரிநாதரும் அவரைப் போன்றவர்களும் பாமாலைகளைத் தொடுத்து வைத்திருக்கிறார்கள். அவற்றின் வாயிலாக நாம் பெறும் உபதேசங்களும் அறிந்து கொள்ளும் நுட்பங்களும் பல. அதிகாரி 'உபதேசம் பெறுவதற்கு இன்னார் அதிகாரி என்ற வரையறை உண்டு. எந்த உபதேசத்தைச் சொன்னாலும், இதற்கு முன் இன்ன இன்ன தெரிந்து கொண்டவன் இதற்கு அதிகாரியாவான் என்று சொல்வது பெரியவர்கள் வழக்கம். அருணகிரிநாதரும் பாமாலைகளைக் கற்றுக் கொள்பவர் எப்படி இருக்க வேண்டும் என்று தெளிவுபடுத்துகிறார். "நீங்கள் இந்த முறையில் பாமாலையைக் கற்றுக் கொள்ளாமல் இருக்கிறீர்களே!" என்ற போக்கில் சொல்லி, அந்தத் தகுதி இன்னதென்று புலப்படுத்துகிறார். உபதேசமாக உள்ள பாக்களைக் கற்றுக் கொள்பவன் எப்படி இருக்க வேண்டும்? தமிழ் நன்றாகக் கற்றவனாக இருக்க வேண்டும்; ஆண்டவனிடத்தில் பக்தியுடையவனாக இருக்க வேண்டும். இதைக் கந்தர் அலங்காரத்தின் இரண்டாவது பாட்டில் சொல்கிறார். முருகனும் தமிழும் பாமாலையைப் பெறுபவன் முருகன். அவன் நல்ல நூலறி புலவன்; தமிழுக்குத் தெய்வம் என்று போற்றப் பெறுகிறவன்; அகத்திய முனிவருக்குத் தமிழ் இலக்கணத்தைச் சொன்ன பெருமான். பார்வதி கல்யாணத்தின்போது எல்லா மக்களும், எல்லாத் தேவர்களும் கயிலைக்குச் சென்றார்கள். கூட்டம் அதிகமானதால் வடதிசை தாழ்ந்து, தென் திசை உயர்ந்து போயிற்று. பூமியைச் சமநிலையில் வைக்க எண்ணிய இறைவன் அகத்திய முனிவரைத் தென் திசைக்குப் போ என்று அருளினான். "அங்கே போனால் அந்த நாட்டு மொழி எனக்குப் புரியாதே! நான் என்ன செய்வேன்" என்று அகத்தியர் கேட்க, சிவபெருமான், "நான் சொல்லித் தருகிறேன்" என்று கூறித் தமிழைக் கற்பித்தருளினான். தமிழ் பேசவும், தமிழ் பேசுகிறவர்களின் கருத்தைப் புரிந்து கொள்ளவும் வல்லவராய் அவர் வடக்கே இருந்து தெற்கே வந்தார். இங்கே வந்த பிறகு இலக்கண அறிவைத் தெரிந்து கொள்ள வேண்டுமென்று விரும்பினார். இலக்கண அறிவு இல்லாவிட்டால் ஒரு மொழியிலுள்ள குறைபாடு தெரியாது. எந்த சமயத்தில் நாம் வழுக்கிவிழுவோமோ அது தெரியாது. இலக்கண அறிவு இருப்பது யானையின் பலம் வந்தது போன்றது. உடலுக்கு எலும்பு பலம் அளிப்பது போல இலக்கணம் மொழிக்குப் பலம் அளிக்கும். அத்தகைய இலக்கண அறிவை அகத்திய முனிவர் வேண்ட, அதனை அவருக்கு முருகப் பெருமான் அருளினான். சிவபெருமான் அவருக்குத் தமிழ் கற்றுக் கொடுத்தான்; அவர் பிள்ளையாகிய முருகன் அந்த மொழியின் இல்க்கணத்தை அவருக்கு அருளினான்.    "குறுமுனிக்கும் தமிழுரைக்கும் குமரமுத்தம் தருகவே" என்றும்,    சிவனைநிகர் பொதியவரை முனிவன்அக மகிழஇரு    செவிகளிலும் இனியதமிழ் பகர்வோனே" என்றும் பெரியவர்கள் பாடியிருக்கிறார்கள். பெரிய புலவனாக இருந்தால், தான் கற்றுக்கொண்டதைப் பிறருக்குச் சொல்ல வேண்டும். முருகப்பெருமானிடம் இலக்கணத்தைக் கற்றுக் கொண்டு தமிழ் மொழியிலே பெரிய புலவரான அகத்தியர் அழகிய இலக்கணம் ஒன்றைத் தமிழில் வடித்துத் தந்தார். அதற்கு அகத்தியம் என்று பெயர். அவ்வாறு அகத்தியருக்குத் தமிழ் இலக்கணத்தைக் கற்றுக் கொடுத்த முருகப் பெருமானைப் பற்றிய தமிழ்ப் பாட்டைப் பாடும்போது இலக்கணப் பிழையோடு பாடலாமா? அருணகிரிநாதப் பெருமான் நல்ல தமிழ்ப் புலவர். அவர் புகழ்ந்து பாடிய முருகன் அகத்திய முனிவருக்கே இலக்கணம் கற்றுக் கொடுத்தவன். அத்தகைய முருகன் மீது நல்ல தமிழ்ப் புலவரால் பாடப் பெற்றப் பாட்டைப் படிக்கின்றவர்களும் தமிழறிவு உடையவராய் அந்தப் பாட்டைப் பிழையின்றிப் படிக்கக் கற்றுக் கொள்ள வேண்டுமல்லவா? "முருகனைப் பற்றிய தமிழ்ப் பாட்டை எழுத்துப் பிழை இல்லாமல் கற்றுக் கொள்ள வேண்டும்" என்று சொல்கிறார் அருணை முனிவர்.    அழித்துப் பிறக்கவொட் டாஅயில் வேலன் கவியை அன்பால்    எழுத்துப் பிழைஅறக் கற்கின் றிலி எரிமூண்டதென்ன    விழித்துப் புகைஎழப் பொங்குவெங் கூற்றன் விடும் கயிற்றால்    கழுத்திற் சுருக்கிட் டிழுக்குமன் றோகவி கற்கின்றதே? நாக்குத் திருந்த அருணகிரிநாதர் மிகவும் சதுரர். "அவர் ஞானி. அவர் ஆண்டவன் அருளைப் பெற்றவர் என்பது ஒருபுறம் இருக்கட்டும். அவர் நல்ல ஆசிரியர். தமிழை நாம் எல்லோரும் சுத்தமாகப் படிக்க வேண்டும், நாக்கு திருந்த வேண்டுமென்று விரும்புகிறார். மற்ற எழுத்துக்களை சொல்வதைக் காட்டிலும் ழகர றகரங்களை நன்கு உச்சரிக்கக் கற்றுக் கொண்டுவிட்டால் நம்முடைய நாக்கு திருந்திவிடும். இந்தப் பாட்டில் ழகர, றகரங்களை மிகுதியாக வைத்திருக்கிறார். தமிழுக்கே உரிய சிறப்பெழுத்தான ழகறத்தை நன்றாகச் சுத்தமாக உச்சரிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். இந்தப் பாட்டில் ஏழு ழகரம் வைத்திருக்கிறார். அவர் மனத்தில் தமிழைப் பிழையறச் சொல்ல வேண்டும் என்ற கருத்து உதயம் ஆகிறது. அந்தக் கருத்தில், 'ழகர றகரங்களைப் பிழை இல்லாமல் உச்சரிக்கக் கற்றுக் கொண்டு விட்டால், மற்ற எழுத்துக்கள் எல்லாம் தாமே வந்து விடும்; பாட்டைப் பிழை இல்லாமல் படிக்க முடியும்' எனத் தோன்றுகிறது. கருத்துக்கேற்ப வார்த்தைகள் வந்து விழுகின்றன. மறைமுகமாகப் புலப்படுத்தல் “ழகரத்தையும், றகரத்தையும் நன்றாக உச்சரிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதை நேரே சொல்லாமல் மறை முகமாகப் புலப்படுத்துகிறார் இந்தப் பாட்டிலே. அப்படிச் சொல்வது ஒரு முறை. இலக்கணமாகத் தனியே ஒன்றை எடுத்துச் சொல்லாமல், தாமே பிரயோகம் செய்து அந்தப் பிரயோக வாயிலாகச் சொல்ல வேண்டியதைக் குறிப்பால் புலப்படுத்துவது ஒரு மரபு. "காலையில் எழுந்து நீராடு; திருநீறு அணிந்து கொள்; இட்டிலி சாப்பிடு; பிறகு என் வீட்டுக்கு வா" என்று நேர்முகமாகச் சொல்லலாம். இது ஒரு முறை. "நீ காலையில் எழுந்திருந்து நீராடி விட்டுத் திருநீறு அணிந்துகொண்டு, இட்டிலி சாப்பிட்டு விட்டு, வெளியே போவாயே, அப்பொழுது என் வீட்டுப் பக்கம் வந்து விட்டுப் போ" என்று மறைமுகமாகவும் சொல்லலாம். இப்படிச் சொன்னாலும், "என் வீட்டுக்கு வரும் போது நீராடி விட்டுவா, திருநீறு அணிந்து வா" என்பதுதான் பொருள். ஆனால் இப்படி மறைமுகமாகச் சொல்வதில் ஒரு நயம் இருக்கிறது; நாசூக்கு இருக்கிறது. எங்கள் ஆசிரியர் அப்படிச் சொல்வது வழக்கம். அந்த முறையை அவர்கள் மணி ஐயர் அவர்களிடம் கற்றுக் கொண்டதாகச் சொல்வார்கள். ஒரு சமயம் ஐயர் அவர்கள் ஒரு சம்ஸ்தானத்திற்குச் சென்றார்கள். அந்தச் சம்ஸ்தானத்தில் ஒவ்வோர் க.சொ.1-6 ஆண்டும் நவராத்திரி பூஜையின்போது பல பிராமணர்களுக்கும், ஏழைகளுக்கும் அன்னதானம் செய்வது வழக்கம். "இந்த ஆண்டு பிராமண போஜனம் வேண்டாம்; ஏழைகளையும் உட்கார வைத்து அன்னம் போட வேண்டாம். சாதத்தை உருட்டி வேண்டுமானால் கையில் கொடுத்து அனுப்பி விடலாம். அதனால் செலவு குறையும்" என்று அந்த ஆண்டு புதிதாக வந்திருந்த திவான் சொன்னாராம். அதனைச் சம்ஸ்தானாதிபதியும் ஒப்புக் கொண்டுவிட்டாராம். இதனால் பெரிதும் ஏமாற்றம் அடைந்த பிராமணர்களும், ஏழைகளும் யாரிடம் சொன்னால் தங்கள் காரியம் நடக்கும் என்று எண்ணி, எங்கள் ஆசிரியரிடம் வந்து சொன்னார்கள். "மகாராஜா அப்படி எல்லாம் செய்ய மாட்டார்கள். நீங்கள் போங்கள்; நான் பார்த்துக் கொள்கிறேன்" என்று எங்கள் ஆசிரியர் அவர்களுக்குத் தேறுதல் சொல்லி அனுப்பிவிட்டுத் தர்பாருக்குச் சென்றார்கள். அங்கே பல புலவர்கள் இருந்தார்கள்; படித்த அறிவாளிகள் இருந்தார்கள்; வேறு யார் யாரோ வந்திருந்தார்கள். அந்தச் சமயத்தில் ஐயரவர்கள் மகாராஜாவைப் புகழத் தொடங்கினார்கள். "மகாராஜாவின் பரம்பரைப் பெருமையை என்னவென்று சொல்வது தங்கள் முன்னோர்கள் செய்த தான தர்மங்கள் என்ன! அந்த மரபில் வந்த மன்னர்கள் எல்லாம் எத்தனை பேருக்கு அன்னதானம் செய்திருக்கிறார்கள்! பெரியவர்கள் செய்து வந்ததை நிறுத்தக் கூடாது என்ற எண்ணத்தோடு தாங்களும் அறம் செய்கிறீர்கள். போன ஆண்டு இரண்டாயிரம் பேருக்குமேல் நவராத்திரியின்போது உணவளித்தீர்கள். இந்த வருஷம் ஐயாயிரம் பேர்கள் வந்திருக்கிறார்கள். இந்த ஆண்டும் அன்னதானத்திற்கு ஏற்பாடு செய்திருக்கிறீர்கள். தங்களைப் போல யார் இப்படிப் பண்ணப் போகிறார்கள் என்று சொன்னார்கள். அதைக் கேட்டவுடன் அந்த அரசர் அவ்வாண்டும் வழக்கம்போல அன்னதானம் செய்ய ஏற்பாடு செய்துவிட்டார். உடம்படுபுணர்தல் பெரியவர்கள் இப்படிச் சொல்வது வழக்கம். எதையும் நேர்முகமாகச் சொல்லாமல் பிரயோக வாயிலாகப் புலப்படுத் துவதும் இதைப் போன்ற முறைதான். விதியாகச் சொல்லாமல் பிரயோகத்தில் வைத்துக் காட்டுவதை உடம்படுபுணர்த்தல் என்று இலக்கணத்தில் சொல்வார்கள். அவ்வாறே அருணகிரிநாதர், "ழகர றகரத்தை நன்றாக உச்சரியுங்கள்" என்று சொல்லாமல் அவ்விரண்டையும் இந்தப் பாட்டிலே மிகுதியாக அமைத்துச் சொல்கிறார். இந்தப் பாட்டில் ஏழு ழகரங்கள் இருக்கின்றன என்று முன்னே சொன்னேன். றகரங்களோ பதின்மூன்று இருக்கின்றன. எண்ணிப்பார்த்தால் தெரியும். நம் வீட்டிலே நாமே செடிகளை வைத்துப் பயிரிட்டு, மலர்களைப் பறித்துக் கொண்டு வந்து ஆண்டவனுக்குச் சாத்துவது என்றால் முடியாத காரியம். மலரைக் கடையிலிருந்து வாங்கி வந்து ஆண்டவனுக்கு அர்ச்சனை பண்ணலாம். அப்படிப் பண்ணும் போது நமக்குச் சிரத்தை இருந்தால், அன்பு இருந்தால், அந்த மலரின் காம்புகளை எல்லாம் கிள்ளிவிட்டுச் சுத்தமான மலராக அர்ச்சனை பண்ணலாம். இதுதான் முறை. அப்படிச் செய்யவில்லை என்றால் சிரத்தை இல்லையென்றே கொள்ள வேண்டும். அதுபோலவே இறைவன்மேல் நம்மால் பாட்டுக்கள் புனைய முடியாவிட்டாலும் பெரியவர்கள் பாடிய பாடல்களை எழுத்துப் பிழையில்லாமல் சொல்ல வேண்டும். காலநிலை அருணகிரிநாதர் காலத்தில் இந்த நாட்டில் கன்னடர்களுடைய ஆட்சி இருந்தது. கன்னடம் பேசும் அதிகாரிகள் அங்கங்கே இருந்தார்கள். "கருநடப்பேர் வெள்ளத்து விழாமல்" என்று வில்லிபாரதச் சிறப்புப் பாயிரம் சொல்வதிலிருந்து இது தெரிய வருகிறது. கன்னடக்காரர்களோடு சேர்ந்து எழுத்தைத் தவறாக உபயோகிக்கின்ற மக்களைப் பார்த்து மனம் குமுறி, அப்படி உபயோகிக்காதீர்கள் என்று சொல்ல எண்ணினாரோ அருணகிரிநாதர் என்று தோன்றுகிறது. இதே நிலை இப்பொழுது இருக்கிறது. நுனி நாக்கிலே பேசுகின்ற ஆங்கிலமொழியின் கலப்பினால் வார்த்தைகளைச் சரியாக நாம் உச்சரிப்பதில்லை. நாமும் நுனி நாக்கிலே பேசுகிறோம். அதனால் இந்தப் பாட்டு இன்றும் நமக்குப் பயன் தருவது. இந்தப் பாட்டில், காலனை வெல்ல வேண்டுமென்றால் நன்றாக எழுத்துப் பிழையறக் கற்க வேண்டும் என்று அருணகிரிநாதர் சொல்கிறார். எதைக் கற்பது? கவியை எழுத்துப் பிழையறக் கற்க வேண்டும். எந்தக் கவியை அயில் வேலன் கவியை. எழுத்துப் பிழையறக் கற்றால் போதாது. அன்போடு எழுத்துப் பிழையற அயில் வேலன் கவியைக் கற்க வேண்டும். அப்படிக் கற்றால் காலனை வென்று விடலாமாம். இதனை எப்படிச் சொல்கிறார் என்று பார்ப்போம். ஞானசக்தி    அழித்துப் பிறக்கவொட் டாஅயில் வேலன் அழித்து என்றால் மீட்டும் என்று பொருள். உலகத்தில் பிறந்த அத்தனை பேரும், உடம்பைப் பெற்றவர்கள். அவர்கள் உடம்புக்குள்ளிருந்து உயிர் என்றாவது ஒரு நாள் வெளிப்பட்டே ஆக வேண்டும். அதுதான் மரணம். அந்த உயிர் வேறு பிறவி எடுக்கிறது. ஆனால் இறைவன் அருள் பெற்றவர்கள் மீட்டும் பிறக்க மாட்டார்கள். மீட்டும் இந்தப் பிறவியை பெறாதபடி செய்பவன் அயில் வேலன். அயில் வேல் என்பதற்குக் கூர்மையான வேல் என்று பொருள். முருகன் கையிலுள்ள வேலை ஞானசக்தி என்பார்கள். இறைவனிடத்தில் இருக்கும் சின்னங்கள் எல்லாம் சில சில தத்துவங்களை நினைப்பூட்டுபவை. முருகன் கையிலுள்ள வேல் ஞானத்தைக் காட்டுகிறது. ஆன்மாக்களைப் பற்றியுள்ள அஞ்ஞானத்தைப் போக்கும் ஞானசக்தியே வேல். அஞ்ஞானம் அல்லது அவித்தையினால் நாம் உலகத்தில் பிறக்கின்றோம். அவித்தை அழிந்தால், அறியாமை ஒழிந்தால், பிறப்பு ஒழியும். ஞானமே ஆண்டவன் திருக்கரத்தில் வேலாக இருக்கிறது. அந்த ஞான வேலினால் அஞ்ஞானம் தொலையும்; அதனால் பிறவி போகும். இவற்றை மனத்தில் நினைத்தே, "அழித்துப் பிறக்க வொட்டா அயில்வேலவன்" என்றார். அவனுடைய கவியைக் கற்க வேண்டும். கற்க வேண்டுமென்று சொல்லாமல், இன்னும் கல்லாமல் இருக்கிறீர்களே" என்று இரங்குகிறார்.    அயில்வேலன் கவியை அன்பால்    எழுத்துப் பிழையறக் கற்கின்றிலீர்! 2 கற்றல் கல்வியைக் கற்பது எப்படி என்று சற்று நின்று பார்க்க வேண்டும். ஒரு முறை படிப்பது, பலமுறை படித்து மனனம் பண்ணுவது, பொருளைத் தெரிந்து கொள்வது முதலாகக் கற்பதில் பல படிகள் உண்டு. கல்வி அநுபவமாக மாறும் போது தான் அது முற்றுப் பெறும் என்று சொல்வர் பெரியோர். உண்மையான படிப்பு, படித்த உண்மையைத் தெளிந்து அடங்கும்போது தான் நிறைவேறும். ஆண்டவனுடைய புகழைக் கற்றுக் கேட்டு உணர்ந்து, அதனால் இன்பத்தை அநுபவிப்பது கல்வியால் ஆய பயன். அந்த அநுபவ நிலை வந்துவிட்டால் கல்வி நிறைவை அடைந்துவிட்டதாகக் கொள்ளலாம். உலகில் மிகப் பெரிய ஞானிகள் பலர் இருந்திருக்கின்றார்கள். பழங்காலத்தில் சனகர், சனந்தனர், சனத்சுஜாதர், சனத்குமாரர் என்று நான்கு ஞானிகள் இருந்தார்கள். அவர்கள் கல்லாதது, கேளாதது ஒன்றுமே இல்லை. நாலு வேதம், ஆறு சாஸ்திரம், அறுபத்து நாலு கலை என்று சொல்லும் எல்லாவற்றையும் கற்றவர்கள். அப்படியிருந்தும் அவர்களுக்குச் சந்தேகம் நீங்கினபாடில்லை; அநுபவ நிறைவு ஏற்படவில்லை. அந்த ஐயத்தைத் தெளிவிக்க வேண்டுமெனப் பல பேர்களைக் கேட்டார்கள். அவர்கள் எல்லாம் புத்தகத்தில் இருக்கும் பொருள்களையே சொன்னார்கள். அவற்றை அவர்கள் முன்பே படித்தவர்களாதலால் அவற்றைக் கேட்டும் அவர்கள் சந்தேகம் நீங்கவில்லை. அவர்களுடைய கல்வி நிரம்பவில்லை. அந்த ஐயத்தைப் போக்குவதற்கு வழி என்ன? கடைசியில் இறைவன் அவர்களுடைய கல்வியையும், கேள்வியையும் பூரணமாக்கினான்; ஐயத்தைப் போக்கினான். கல்லாலமரத்தின் அடியில் உட்கார்ந்து அவர்களுடைய சந்தேகத்தைச் சின் முத்திரையினால் விளக்கினான். பேசாத பேச்சினாலே அந்த முனிவர்களுடைய சந்தேகம் தீர்ந்தது. வாக்குக்குள் அகப்பட்ட எல்லாவற்றையும் கல்வி கேளிவியால் உணர்ந்திருந்த அந்த நால்வரும், வாக்கு இறந்த மோன உபதேசத்தால் தெளிவு பெற்றார்கள்.    “கல்லாலின் புடைஅமர்ந்து நான்மறைஆ றங்கமுதற்    கற்ற கேள்வி    வல்லார்கள் நால்வருக்கும் வாக்கிறந்த பூரணமாய்    மறைக்கப் பாலாய்    எல்லாமாய் அல்லதுமாய் இருந்ததனை இருந்தபடி    இருந்து காட்டிச்    சொல்லாமற் சொன்னவரை நினையாமல் நினைந்துபவத்    தொடக்கை வெல்வாம்" என்று பரஞ்சோதி முனிவர் தட்சிணாமூர்த்தியின் புகழைப் பாடுகிறார். கேள்வி எப்பொழுது முடிவு பெறும்? கேளாத நிலையில் தான் முடிவு பெறும். வாக்கு எப்பொழுது முடிவு பெறும்? வாக்கு இல்லாத இடத்திலேதான் முடிவு பெறும். ஆகவே அந்த நிலையை அடைகின்ற வரையிலும் நாம் கற்கின்ற கல்வி எல்லாம் முடிவு பெறவில்லை என்றே சொல்ல வேண்டும். அநுபவ ஞானம் இறைவன் கல்வியினால் அறிய முடியாத பொருள்; அறிந்தேன் என்பவர்களால் அறியப்படாத பொருள். 'அறியவில்லையே, அறியவில்லையே' என்று ஏங்கி அவனை அறிய வேண்டுமென்ற ஆர்வத்தோடு அலைந்து கொண்டிருக்கிறவர்களுடைய அறிவுக்குப் புலனாகின்ற பொருள். எவன் எல்லாவற்றையும் நன்றாகப் படித்து விட்டேன் என்று சொல்லுகிறானோ அவன்தான் உண்மைப் பொருளை அறியாதவன். அறிந்தபோது அநுபவம் தோற்றி, மோனம் தலைப்படும். இதனை ராமகிருஷ்ண பரமஹம்சர் மிகவும் நன்றாக ஒரு கதையின் வாயிலாகச் சொல்கிறார். ஒரு பெளராணிகர் பாகவதத்தைப் பலமுறை திருப்பித் திருப்பிப் படித்தார். தாம் படித்த வற்றைப் பிறருக்கு வெகு நன்றாகச் சொல்ல வேண்டு மென்று படித்தார். பிறருக்கு உபந்நியாசம் செய்தார். ஒரு நாள் அரசனிடம் சென்று, "பாகவதத்தை ஒரு முறை மகாராஜாவுக்கு முன் சொல்ல ஆசைப்படுகிறேன்" என்றார். அரசன் அவரைப் பார்த்து, "பாகவதத்தை நீங்கள் நன்றாகப் படித்திருக்கிறீர்களா?" என்று கேட்டான். "ஒ, மிக நன்றாகப் படித்திருக்கிறேனே!" என்று அவர் சொன்னார். அரசன் அவரைப் பார்த்து, "இன்னும் ஒரு முறை படித்து விட்டு வாருங்கள், பார்ப்போம்" என்று சொல்லி அனுப்பி விட்டான். "அரசன் இப்படிச் சொல்லுகிறானே!" என எண்ணிக் கோபம் கொண்ட பெளராணிகர் அதனைக் காட்டிக் கொள்ளாமல் மறுபடியும் சென்று ஒரு முறை படித்துவிட்டு அரசருடைய தர்பாருக்கு வந்தார். அரசன் முன்போலவே, "நன்றாகப் படித்துவிட்டு வந்தீர்களா?" என்று கேட்டதற்கு, அவர் முன்போலவே, "மிகவும் நன்றாகப் படித்து வந்திருக்கிறேன்" என்று விடை சொன்னார். அரசன் அவரிடம் மறுபடியும், "இன்னொரு முறை படித்துவிட்டு வாருங்கள். படித்தது போதாதென்று தோன்றுகிறது" என்று சொல்லி அனுப்பிவிட்டான். இவ்வாறே ஒவ்வொரு வாரமும் அந்தப் பெளராணிகர் அரசனுடைய தர்பாருக்குச் சென்று, "நான் மிகவும் நன்றாகப் படித்துவிட்டு வந்திருக்கிறேன்" என்று சொல்வதும், அரசன் அவரை, "திரும்பவும் போய்ப் படித்துவிட்டு வாருங்கள்" என்று சொல்வதும் வழக்கமாகி விட்டன. பெளராணிகருக்கு அளவற்ற கோபம் வந்து விட்டது. இனி மிக நன்றாகப் படிக்காமல் அரசனுடைய தர்பாருக்குப் போகக் கூடாதென்று எண்ணி மறுபடியும் படிக்க ஆரம்பித்தார். ஒரு முறை படித்தார். பல முறை படித்தார். மனம் ஊன்றிக் கவனித்துப் படித்தார். அரசனுக்குச் சொல்ல வேண்டும் என்பதை மறந்து படித்தார். படிக்கப் படிக்க அவர் உள்ளம் அதில் ஆழ்ந்தது. கண்ணன் விளையாடல்களை உணரத் தொடங்கினார். பக்தி ஆர்வம் பொங்க, ஏதோ ஒரு வகையான அமைதியும் இன்பமும் உண்டாயின. அந்த அநுபவ நிலையிலேயே நின்றார். பகல் தெரியவில்லை; இரவு தெரியவில்லை; நாள் போனது தெரியவில்லை; வாரம் போனதும் தெரியவில்லை. அரசனிடம் போக வேண்டுமென்ற எண்ணங்கூடத் தோன்றவில்லை. அரசன் பார்த்தான். வாரம் தப்பினாலும் குறித்த நாள் தப்பாமல் வந்து கொண்டிருந்த பெளராணிகரைக் காணவில்லையே என்று எண்ணி அவர் இருந்த இடம் தேடி அரசனே வந்தான். வந்து பார்த்தால் ஒரே கண்ணன் மயமாக ஆகிக் கண்ணனையே தம் ஒளிமிக்க கண்களினாலே பார்த்துக் கொண்டு, வாய் அடைத்து உட்கார்ந்திருக்கும் நிலையிலே பெளராணிகர் இருந்தார். "சுவாமி, தாங்கள் இப்போது பாகவதத்தைச் சொல்லுங்கள்" என்று அரசன் அவர் காலிலே வீழ்ந்தான். ஆனால் அவர், "அரசே, நான் சொல்வது என்ன இருக்கிறது! தாங்களே எனக்குக் குரு" என்று அவர் காலிலே வீழ்ந்தார். அவர் அநுபவ ஞானி ஆகிவிட்டார். இந்த அநுபவ ஞானத்தை அபரோக்ஷ ஞானம் என்று சொல்வார்கள்; பரஞானம் என்பதும் அதுதான். நூல் அறிவினாலே வருகின்றது அபரஞானம், அல்லது பரோக்ஷ ஞானம். கற்றதனால் ஆய பயன் என்ன? இறைவன் நற்றாள் தொழுவது தானே? கற்க வேண்டும். அது இன்றியமையாததே. அதைவிட முக்கியமானது கசடறக் கற்றபின் அதற்குத் தக நிற்பது; அதாவது அநுபவத்தில் இன்பத்தைப் பெறுவது. ஆகவே, ஆண்டவனுடைய கவியை அன்பால் கற்றுக் கொள்ள வேண்டும்; அநுபவ முதிர்ச்சி உண்டாகும்படி கற்க வேண்டும்; பிழையில்லாமலும் கற்றுக் கொள்ள வேண்டும். முதலில் இன்றியமையாதது அன்பு. அது வளரத் துணையாக இருப்பது இறைவன் புகழைப் பாடுவது. அந்தப் பாட்டைப் பிழை இல்லாமல் சொல்லக் கற்றுக் கொள்ள வேண்டும். கற்றுக் கொள்ள எத்தனையோ கவிகள் உண்டு. ஆனால் அன்போடு கற்றுக் கொள்ள வேண்டுமானால் ஆண்டவனைப் பற்றிய கவியாக இருக்க வேண்டும்; அயில் வேலன் கவியாக இருக்க வேண்டும். தாம் பாடிய கவியை மாத்திரம் நினைந்து, அருணகிரிநாதர் இப்படிச் சொல்லவில்லை. அவருக்கு முன்னாலே தோன்றிய நக்கீரர் முதலிய பெரியார்கள் முருகப் பெருமானைப் பற்றியும், ஆழ்வாராதிகள் திருமாலைப் பற்றியும், ஞான சம்பந்தர் முதலியவர்கள் சிவபிரானைப் பற்றியும் பாடியிருக்கிறார்கள். அப்பெரியார்கள் இறைவனுடைய திருவருளிலே ஈடுபட்டுப் பல பல பாடல்கள் பாடியிருக்க, அவற்றை எல்லாம் பயன்படுத்திக் கொள்ளாமல் வீணே வாழ்நாளைக் கழிக்கின்ற மக்களை நினைந்து இரங்கி இந்தப் பாட்டைப் பாடினார். தமிழர் வாழ்வில் பாட்டு தமிழுக்கும் பாட்டுக்கும் தொடர்பு அதிகம். பழந்தமிழ் நூல்கள் யாவுமே கவிகளால் அமைந்தவை. “பாட்டியல் தமிழுரை பயின்ற எல்லை" என்பது பெரிய புராணம். தமிழ் நாட்டில் பாட்டுக்குப் பெருமை அதிகம். மனிதனுடைய வாழ்நாளில் பல வகையில் பாட்டுக் கலந்திருக்கிறது. குழந்தை பிறந்தால் தாலாட்டுப் பாட்டு: குழந்தைக்குத் தொட்டில் போட்டால் பாட்டு: குழந்தை நடக்க ஆரம்பித்தால் பாட்டு; குழந்தை விளையாடும் விளையாடல்களுக்கு ஏற்ற பாட்டு; கல்யாணம் வந்தால் நலங்குப் பாட்டு, ஊஞ்சல் பாட்டு; கடைசியில் இறக்கும்போது ஒப்பாரிப் பாட்டு. இப்படித் தமிழர் தம் வாழ்வைப் பாட்டினால் அளக்கிறார்கள். அந்தப் பாட்டுக்களை எல்லாம் மனிதர் கற்றுக் கொள்ளலாம். அவை யாவும் அவ்வப்போது இன்பம் தந்து ஒரளவு மனத்திலே அமைதியைத் தரத் தக்கன. ஆனால் அவற்றால் கால ஜயம் பண்ண முடியாது. கவிகளைக் கற்றுக் சுவை காண்பதால் ஒருவகை அமைதி உண்டாகிறது. மீட்டும் பிறவாத இன்ப நலம் மிக்க அமைதி வேண்டுமென்றால் எந்தக் கவியைக் கற்றுக் கொள்ள வேண்டும்? அயில்வேலன் கவியைக் கற்றுக் கொள்ள வேண்டும். எப்படிக் கற்றுக் கொள்ள வேண்டும்? அன்பால் கற்றுக் கொள்ள வேண்டும். அவனைத் தியானிக்க அன்பு இருந்தால் போதும். அந்தத் தியானம் மனத்திலே நிலைக்க அவனைப் பாடித் துதிக்க வேண்டும். அதற்குத் தமிழறிவு வேண்டும். எழுத்துக்கள் தமிழ் அறிவு எப்படிப் புலப்படும்? பாடும்போது நன்றாக உச்சரிக்கும் வாக்கினாலே புலப்படும். பாடலைப் பாடும்போது எழுத்துப் பிழை இல்லாமல் சொல்ல வேண்டும். எழுத்து ஒவ்வொன்றையும் சரியாக உச்சரிக்காவிட்டால் பயன் இல்லை. ஒவ்வொரு எழுத்தும் பராசக்தியிடமிருந்து தோன்றியது என்று பெரியவர்கள் சொல்வார்கள். 51 எழுத்துக்களுக்கும், 51 விதமான தத்துவங்கள் இருக்கின்றன. தனித்தனித் தேவதைகள் உண்டு என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. ஏதேனும் ஒர் எழுத்தைத் தவறாக உச்சரித்தால் அந்த எழுத்துக்குரிய தேவதை கோபித்துக் கொள்ளும். ஒரு பெரிய அதிகாரியின் பெயரையோ, விலாசத்தையோ தவறாகச் சொன்னால் அவருக்குக் கோபம் வராதா? அதுபோலவே நம் நாவிலிருந்து நடமாடுகிற தேவதைகள் தங்களுக்கு உரிய எழுத்தைச் சரியாக உச்சரிக்காவிட்டால் கோபம் அடைகின்றன. சரியாக உச்சரித்தால், அவற்றுக்குரிய இலக்கண அமைதி இருந்தால், அதனால் கிடைக்கும் நன்மையைப் பெறலாம்; தேவதைகளும் மகிழ்ச்சி அடைவார்கள். 3 மழலையும் பேச்சும் அழுகையே தன் மொழியாகப் பிறக்கும் குழந்தை பின்பு மழலை பேசுகிறது. வளர வளர நன்றாகப் பேசக் கற்றுக் கொள்கிறது. குழந்தைகளின் மழலைச் சொல் இசைக் கருவிகளை விட இனிமையானது என்று வள்ளுவர் சொல்கிறார். இளங் குழந்தை மழலை பேசினால் அது குறைபாடு ஆகாது. எழுத்தைத் தவறாக உச்சரித்ததாகவும் ஆகாது. குழந்தை சோறு என்பதை, 'சோச்சி' என்கிறது. பழம் என்பதைப் 'பயம்' என்கிறது. காபி என்பதை 'காவி' என்கிறது. அவை எழுத்து குறைபாடு உடையவை; ஆனாலும் இனிமையை உடையன.    "குழலினிது யாழினிது என்பதம் மக்கள்    மழலைச்சொல் கேளாதவர்" என்று வள்ளுவர் சொல்கிறார். "திருவள்ளுவருக்கு இசை வராது போலிருக்கிறது. அதனால்தான் அவருக்கு யாழின் இனிமையும் தெரியவில்லை. குழலின் இனிமையும் தெரியவில்லை" என்று சொல்பவர்கள் இருக்கிறார்கள். அவர் கருத்து இன்னதென்று தெரிந்து கொண்டால் அப்படிச் சொல்ல மாட்டார்கள். குழல் ஒலி இனிமையானது அல்ல, யாழ் ஒலி இனிமையானது அல்ல என்பது அவர் கருத்து அன்று. ஒருவன் முயற்சி செய்தால் பத்து ஆண்டுகளிலே குழலை மிக இனிமையாக வாசிக்கக் கற்றுக் கொள்ளலாம். வீணையும் பத்து ஆண்டுகளில் கற்றுக் கொள்ளலாம். எவ்வளவு பெரிய நாடகத்தில் நடிக்கும் நடிகனாக இருந்தாலும் சின்னஞ்சிறு குழந்தையைப் போலப் பேச வராது. விகடம் பண்ணுகிறவர்கள் ஆடு மாதிரிக் கத்தலாம்; யானை மாதிரி பிளிறலாம்; வெவ்வேறு மனிதரைப் போலப் பேசலாம். ஆனால் குழந்தையைப் போலப் பேச முடியாது. குழந்தைக்கு இரண்டு பக்கத் தாடையும் வலுவடைய வில்லை. பற்கள் முளைக்கவில்லை. இவற்றுக்கு மேல், அதன் உள்ளம் அழுக்கடையவில்லை. பற்களும் வரிசையாக முளைத்து, தாடையும் வலுவடைந்து, உள்ளமும் நன்றாக அழுக்கேறி விட்டால் மழலை ஒலி வராது. "கல்லா மழலைக் கணியூறல்” என்று ஒரு புலவர் சொல்கிறார். முயற்சி செய்து கற்றுக் கொள்ளுகிற குழலையும் யாழையும்விடக் கற்றுக் கொள்ள முடியாத மழலையே சிறந்தது; இனிமையானது. எழுத்து நிறைவு பெறாததனால் மழலை இன்பத்தை உண்டாக்குகிறதா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உண்டா? முழு வார்த்தையையும் பேசத் தெரியாத குழந்தை மழலை பேசுகின்றது; அதைக் கண்டு களிப்படைகிறாள் பெற்ற தாய்; உவகை அடைகிறான் பெற்ற தந்தை. எழுத்து நன்றாகத் தெரியாத மழலையில் இன்பம் இருக்கிறதென்றால், அந்தக் குழந்தை பதினாறு ஆண்டுகள் நிரம்பப் பெற்ற பிறகும் மழலையாகவே திக்கித் திணறிப் பேசினால் அவர்கள் மகிழ்ச்சி அடைகிறார்களா? "குழந்தைக்கு ஏதோ என்னவோ!" என்று பயந்து கொண்டு டாக்டரிடம் அழைத்துப்போய்த் தொண்டை, நாக்கு இவற்றைப் பார்க்கச் சொல்கிறார்கள். வள்ளுவர் சொல்லியிருக்கிறாரே என்று எண்ணிப் பதினாறு வயசில் தம் மகன் மழலையாகப் பேசினால் பெற்றோர் கள் சந்தோஷப்படமாட்டார்கள்; அதனை ஒரு நோயாகவே கருதித் துடித்துப் போவார்கள். அப்படியானால் குழந்தை பேசும் மழலையில் இனிமை உண்டாக என்ன காரணம்? அடுத்தடுத்த வீடுகளில் இரண்டு குழந்தைகள் பிறக்கின்றன. இரண்டு வயசு ஆன பின்பு ஒரு குழந்தை 'பாபா' என்கிறது; 'மாமா' என்கிறது; மழலையாகப் பொரிந்து தள்ளுகிறது. மற்றொரு குழந்தையோ 'பூ பூ பூ' என்கிறதே தவிர எழுத்தின் ஒலியை வெளியிட மாட்டாமல் திணறுகிறது. அதைக் கேட்டு, 'ஐயோ! இது ஊமை போல இருக்கிறதே!' என்று பெற்றோர்கள் கதிகலங்கிப் போகிறார்கள். "மாமா" என்று சொல்லுகிற குழந்தையின் தாய் அதனைக் கேட்டு மிகவும் மகிழ்வதற்குக் காரணம், தன் குழந்தை ஊமை அல்ல, இனி நன்றாகப் பேசும் என்ற நம்பிக்கையை அந்த மழலை அவளுக்கு உண்டாக்குவதுதான். அதனால் அது அவளுக்கு இனிக்கிறது. ஒரு விதையை நட்டால் முளை வெளியே வந்தவுடன் அது இனிச் செடியாகி நன்றாக வளரும் என எண்ணி மகிழுவது போல, அந்த மழலைச் சொல்லைக் கேட்டவுடன், இனி நன்றாக வளர்ந்து அழகாகப் பேசும் நிலையை அக்குழந்தை அடைந்து விடும் என்று எண்ணிக் களிப்படைகிறாள். ஆகவே மனிதன் வளர வளர மழலை மாறிப் பேசக் கற்றுக் கொள்கிறான். மழலை நிலை மாறிப் பேச்சு நிலை வருவதுதான் வளர்ச்சிக்கு அறிகுறி. மனிதன் பெற்ற பெரும் வரம் பேச்சு. பிறருக்குத் தன் கருத்தைத் தெரிவிப்பதற்காக ஒருவன் வாயிலிருந்து வருகின்ற ஒலித்திரளே பேச்சு. வாயிலிருந்து வரும் ஒலி பொருளுடையதாக இருந்தால்தான் பேச்சாகும். ஊமையின் ஒலி பிறருக்கு எந்தக் கருத்தையும் தெரிவிக்காது. அவன் காகூ என்று உண்டாக்கும் ஒலி அவன் வாயிலிருந்து பிறந்தாலும் அது பேச்சல்ல. பேச்சிலும் நல்லது, பொல்லாதது உண்டு. பேச்சிலே சிறந்தது மழலை, பேச்சுக்கு முளையாதலால் இன்பத்தை உண்டாக்குகிறது. தீமை இல்லாததால் விரும்பிக் கேட்கிறோம். மழலை வளர்ந்த பேச்சும் குழந்தை பேசுவதுபோலத் தீமை இல்லாமல் இருக்க வேண்டும். பிறருடைய உள்ளத்துக்குத் தன் கருத்துப் புரியும்படி செய்து, அவர்களுக்கு இன்பம் உண்டாகும்படி பேசுகின்ற பேச்சுதான் பேச்சு; நல்ல பேச்சு, பிறருடைய உள்ளம் புண்படும்படியாகப் பேசுகின்ற பேச்சுத் தாழ்ந்தது. நம்மைப் படைத்துக் காக்கின்ற இறைவனுடைய உள்ளம் குளிரும்படியாகப் பேசுகின்ற பேச்சு எல்லாவற்றையும்விட மிகச் சிறந்த பேச்சு. இறைவன் உள்ளம் குளிரும்படி பேசுவதற்கு நமக்கு என்ன தெரியும் என்று கேட்கலாம். "நான் உனக்கு ஆயிரம் ரூபாய் தருகிறேன்' என்று சொன்னால் அந்தப் பேச்சினாலே ஒருவனுடைய உள்ளம் குளிருகின்றது. அந்தப் பேச்சினாலே தனக்கு வரும் பெரிய ஊதியத்தை எண்ணியே அவன் மனம் குளிருகின்றது. ஆனால் இறைவனுக்கு நாம் எதைத் தருவதாகச் சொல்லலாம்? நம்மிடம் அவனுக்கு அளிக்கத் தக்க பொருள் என்ன இருக்கிறது? இறைவன் நம்மால் பெறுவது ஒன்றும் இல்லை. அவன் நமக்கு எல்லாவற்றையும் கொடுத்துக் கொண்டிருக்க, நாம் அவனுக்குக் கொடுப்பதாவது! பலவகையான அணிகளைத் தங்கத்தினால் பண்ணி அணிந்து கொள்கிறோம். அந்தத் தங்கத்தினாலே நமக்குப் பலவிதமான பயன்கள் இருக்கின்றன. நம்மால் அந்தத் தங்கத்திற்கு என்ன பயன் இருக்கிறது? இறைவன் தங்கம் போன்றவன். அவனுடைய அருளினாலே நாம் தனுகரணபுவன போகங்களைப் பெற்றிருக்கிறோம். ஆனால் நம்மாலே ஆண்டவனுக்கு ஏதாவ உபகாரம் உண்டா? இல்லை. இதைப் பட்டினத்தார் சொல்கிறார்.    "பொன்னாற்ப்ர யோசனம் பொன்படைத்     தாற்குண்டு.அப் பொன்படைத்தான்    தன்னாற்ப்ர யோசனம் பொன்னுக்கங்     கேதுண்டத் தன்மையைப்போல்    உன்னாற்ப்ர யோசனம் வேணதெல்     லாமுண்டிங் குன்றனக்கே    என்னாற்ப்ர யோசனம் ஏதுண்டு     காளத்தி ஈச்சுரனே" என்பது அவர் பாட்டு. நமக்கு எல்லா இன்ப நலங்களையும் அளிக்கின்ற கடவுளுக்கு நம்மால் உபகாரம் ஒன்றும் இல்லை என்று அவர் சொல்கிறார். அபகாரந்தான் உண்டாகிறது. இறைவன் கொடுத்த நாக்கினால் வாய் கூசாது கடவுள் இல்லை என்று சொல்லித் தவறு செய்கிறோம். இறைவனைத் திட்டுகிறோம், அவன் குழந்தைகளாகிய மக்களை வைகிறோம். இப்படி அவனுக்கு நாம் அபசாரம் செய்கிறோமே தவிர ஒரு விதமான உபகாரமும் செய்யவில்லை. இவ்வாறு இருந்தால் எப்படி அவன் மனம் குளிரும்? குழந்தை தத்தித் தத்திக் கீழே விழாமல் நடக்கத் தெரிந்து கொண்டால் தாய் மகிழ்ச்சி அடைகிறாள். மழலைச் சொல்லாலே, அம்மா என்று குழந்தை கூப்பிட்டால் அதனைக் கேட்டு எல்லையில்லாத ஆனந்தம் எய்துகிறாள். பள்ளிக்குச் செல்ல ஆரம்பித்தவுடன் வகுப்பிலேயே முதலாக இருக்கிறான் என்று சொல்லக் கேட்டால் அவள் உள்ளமெல்லாம் குளிர்ந்து போகிறாள். அந்தக் குழந்தை படித்து விட்டு நல்ல உத்தியோகத்திற்குப் போய்விட்டால் அவள் அடைகின்ற மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லாமல் போய்விடுகின்றது. தன் குழந்தை நல்லவன் என்று பிறர் கூறக் கேட்கும் பொழுதெல்லாம் அவள் அடைகிற இன்பம், அக்குழந்தையைப் பெற்ற காலத்தில் அடைந்த இன்பத்தையும்விட மிக அதிகமானது என்று வள்ளுவர் சொல்கிறார். அதைப்போன்று எல்லா உலகத்திற்கும், எல்லாக் காலத்திற்கும், எல்லா ஜீவன்களுக்கும் பரம மாதாவாக விளங்குகிறவன் ஆண்டவன். இந்த உலகத்தில் எல்லா உயிர்களும் எந்த வகையில் முடியுமோ அந்த வகையில் சிறந்து விளங்கினால் அது அவனுக்குப் பேருவகையைக் கொடுக்கும். அதனால் அவன் உள்ளம் குளிரும். “இவன் மிகவும் நன்றாகப் பேசுகிறான்; இவனுக்கு மேலும் மேலும் நன்றாகப் பேசக் கற்றுக் கொடுக்க வேண்டும்' என்று தோன்றும். ஒரு தாய், தன் மகன் தினமும் பள்ளிக்கூடத்திற்குப் போகும் போது இரண்டணாக் கொடுத்து அனுப்புவாள். மத்தியான்ன வேளையில் வயிறு பசித்தால் ஏதாவது வாங்கித் தின்னட்டும் என்று அப்படிச் செய்வாள். பையன் பள்ளிக்கூடத்தின் வாசலுக்கு எதிரே ஒரு கிழவி ஊசற் கடலையைக் கொண்டு பண்ணின சுண்டலை விற்றுக் கொண்டிருந்தாள். அதனை வாங்கித் தின்றான். இரண்டு மூன்று நாள் சாப்பிட்டான். உடனே அவனுக்கு உடல் நலிவு வந்துவிட்டது. தலைவலி என்றான்; உடம்பு வலி என்றான். பள்ளிக்கூடம் போகாமல் வீட்டிலேயே படுத்துக் கொண்டுவிட்டான். தாய் என்ன நினைப்பாள் 'ஏதோ நல்ல பொருளாகப் பசி நேரத்திற்கு வாங்கிச் சாப்பிடட்டும் என்று இரண்டணாக் கொடுத்தால் இந்தப் பையன் உடம்புக்கு ஆகாத பொருளை வாங்கிச் சாப்பிட்டுவிட்டான் போலிருக்கிறது. வாந்தி எடுக்கிறான். இனி இவனுக்குக் காசு கொடுத்துப் பள்ளிக்கூடத்திற்கு அனுப்பக் கூடாது' என்றுதானே நினைப்பாள்? இறைவன் நமக்கு நல்ல வாயைக் கொடுத்து, பேசும் ஆற்றலையும் கொடுத்து அனுப்புகிறான். அந்த நாக்கை நன்றாகப் பயன்படுத்திக் கொண்டால் அவன் மிகவும் மகிழ்ச்சி அடைவான். மேலும் மேலும் நன்றாகப் பேச்சு வளரும்படி செய்வான். தாய் இரண்டணாக் கொடுத்துப் பள்ளிக்கு அனுப்பிய பிள்ளையாண்டான் ஊசற் கடலையை வாங்கித் தின்று உடம்புக்குத் தீங்கு தேடிக் கொண்ட போது தான் கொடுத்து அனுப்பிய இரண்டணாவைக் கொடுக்காமல் நிறுத்திவிட்டது போல, ஆண்டவன் நமக்குக் கொடுத்தனுப்பிய நாவைக் கொண்டு அவனுடைய திருநாமத்தைப் பேசாமல், பேசத் தகாதன எல்லாம் பேசிப் பிறருடைய மனத்தைப் புண்படுத்திக் கொண்டிருந்தால், அவன் நம்மை ஊமையாக்கிவிடுவான். பொல்லாத பேச்சுக்களில் நான்கு வகை உண்டு. கடுமையாகப் பேசி பிறர் மனம் புண்படும்படி செய்வது ஒரு வகை. பயன் இல்லாத சொற்களைப் பேசுவது ஒரு வகை. ஒருவனைக் காணாதபோது இகழ்ந்து பேசுவது ஒரு வகை. பொய் சொல்வது ஒரு வகை. இந்த நான்கு வகையாகப் பேசுவதையும் ஒழித்து இவற்றிற்கு மாறான பேச்சைப் பேச வேண்டும். பிறர் மணம் உவகை கொள்ளும்படி இன்சொல்லைப் பேச வேண்டும்; மெய்யைப் பேச வேண்டும்; புறங்கூறாமல் நேரே நயமாகச் சொல்ல வேண்டும்; பயனுள்ளவற்றையே பேசவேண்டும். நாம் எதையேனும் வாயில் போட்டுக் கொண்டு அதைத் திரும்ப வெளியில் துப்பினால் அதனை எச்சில் என்று சொல்லுகிறோம். உடம்புக்குள் போன எந்தப் பொருளாகட்டும், எந்த வழியாக வெளியே வந்தாலும் அதனை எச்சில் என்றோ, மலம் என்றோதான் சொல்கிறோம். நம்மிடமிருந்து வெளிவரும் அழுக்கை நாமே அருவருத்து ஒதுக்குகிறோம். ஆனால் உடம்புக்குள் இருந்து வெளியே வருவனவற்றுள் சிறந்த ஒன்று, எச்சில் படாத ஒன்று, மலமாகாத ஒன்று பேச்சுத் தான். அந்தப் பேச்சை சரியானபடி சொன்னால் எல்லோரும் கேட்பார்கள். உடம்புக்குள் இருந்து வெளி வருகின்ற எல்லாவற்றையும் எச்சில் என்றும், மலம் என்றும் சொல்லி வெறுக்கும் மனிதர்கள் விரும்பிக் கேட்டு அநுபவிக்கக் கூடியது பேச்சு. அவ்வளவு அருமையாக நமக்குக் கிடைத்திருக்கும் பேச்சைப் பிறருடைய மனம் புண்படும்படியாகப் பலர் பயன்படுத்துகிறார்கள். குழந்தை தங்கக் கிண்ணத்தை எடுத்து வீதியில் போகிற நாயை அடிக்கிறமாதிரிதான் இருக்கிறது அது. இறைவனுடைய அருளினால் பெற்ற வாக்கை அவனுடைய திருவருளை நினைந்து பாடுவதற்குப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதுவே மிகச் சிறந்த பயன். வாய் பெற்ற பயன் இறைவன் நமக்கு வாய் தந்திருப்பது சாப்பிடுவற்காக மாத்திரமா? அப்படியானால் எல்லா உயிர்களுக்கும் வாய் இருக்கிறது. நம்மைக் காட்டிலும் யானைக்கு மிகப் பெரிய வாய் இருக்கிறது. ஆனால் அதை வாயில்லாப் பிராணி என்றுதான் சொல்கிறோம். நாம் ஒரு கவளம் சாப்பிட்டால் யானை நூறு கவளத்தை ஒரே வாயில் சாப்பிட்டுவிடும். பெரிய பிராணி அல்லவா யானை? ஆனாலும், அதனை நாம் வாயில்லாப் பிராணி என்றே சொல்கிறோம். சாப்பிடுகின்ற வாய் வாயாகாது. பேசும் வாய்தான் வாய். யானைக்குப் பேசத் தெரியாது. ஆகையால் அது வாயில்லாப் பிராணி ஆயிற்று. நாம் பேசும் வாய் படைத்ததன் பயன் என்ன?    "வாழ்த்த வாயும் நினைக்க மடநெஞ்சும்    தாழ்த்தச் சென்னியும் தந்த தலைவனை" என்று அப்பர் அருளியிருக்கிறார். அவ்வாறு வாய் படைத்தவர்கள் எல்லோரும் அவனை வாழ்த்தாவிட்டால் ஆண்டவன் என்ன செய்வான்? "போன பிறப்பில் இவனுக்கு அழகாகப் பேசக் கூடிய வாயைக் கொடுத்தோம். இவன் அதை நன்கு பயன்படுத்தாமல் இன்னாதன கூறி, பிறர் மனத்தைப் புண்படுத்தி வாழ்ந்தான். புறங்கூறிப் பெரிய பெரிய சண்டைகளைக் கிளப்பி விட்டான். பொய் கூறினான். வழவழவென்று பயனற்ற வம்புப் பேச்சைப் பேசினான். இவனுக்கு வாய் கொடுத்துப் பயன் இல்லை. இவன் வாயில்லாப் பிராணியாகவே போகட்டும்" என்று செய்து விடுகிறான். நன்றாகப் பேசக் கூடிய வாயைப் பெற்றிருந்தும், அந்த வாயையும், நாவையும் கொடுத்த இறைவனைப் புகழாதவனுக்கு வாய் இருந்தும் என்ன பயன்? இராமலிங்க சுவாமிகள்,    "எந்தைநினை வாழ்த்தாத பேயர்வாய் கூழுக்கும்    ஏக்கற் றிருக்கும்வெறு வாய்” என்று வருந்திச் சொல்கிறார். யாரைப் புகழ்வது? ஆகவே நாவை நமக்கு இறைவன் கொடுத்ததற்குக் காரணம் என்ன? நம்முடைய கடமை என்ன? வாய் கொடுத்த இறைவனை வாழ்த்துவது நம்முடைய முதற் கடமை. நமக்கெல்லாம் அவன் வாய் கொடுத்தது தன்னை எல்லாரும் புகழ வேண்டுமென்ற எண்ணத்தினாலா? அப்படி அல்ல. நாம் புகழ்ந்து அவனுக்கு ஆக வேண்டியது ஒன்றும் இல்லை. ஆனாலும் நம்முடைய கடமை அது. நாம் நம்முடைய நாவைக் கொண்டு மற்ற மக்களைப் புகழ்ந்து பேசினால் அவர்களுக்கு இன்பம் உண்டாகும். ஆனால் அவரிடம் விருப்பம் இல்லாதவர்களுக்குத் துன்பம் உண்டாகும். நாலு பேர் இருக்கும்போது ஒருவரைப் புகழ்ந்தால் மற்ற மூவரும், "நம்மை இவன் புகழவில்லையே!” என்று எண்ணக் கூடும். எல்லோரையும் புகழ வேண்டுமென்றால் இந்த நாவினாலே முடியாது; ஆயிரம் நா நமக்கு இருந்தாலும் முடியாது. ஆகவே, யார் நமக்கு உபகாரம் செய்கிறார்களோ அவர்களைப் புகழ்கிறோம். உபகாரம் செய்பவரைப் புகழ க.சொ.1-7 வேண்டும் என்று தெரிந்து கொண்டது உண்மையானால், அப்போதும் இறைவனைப் புகழ வேண்டும். மக்கள் எல்லோரும் உபகாரம் செய்கிறார்கள். அவர்கள் செய்கிற உதவிக்கு எல்லை உண்டு. தாம் நினைத்தபடி எல்லாம் உபகாரம் செய்ய வேண்டுமென்றால் அவர்களிடம் மிகப் பெரிய சக்தி இருக்க வேண்டும். தன் குழந்தையைத் தொட்டால் அது உடனே வஜ்ரமாக ஆகிவிட வேண்டுமென்று ஒரு தாய் ஆசைப்படுகிறாள். ஆனால் அவளால் செய்ய முடிவதில்லை. அவளுக்கு வெறும் ஆசைதான் இருக்கிறது. ஆசையை நிறைவேற்றும் ஆற்றல் இல்லை. அவளிடம் உண்டாகிற ஆசைகள் பல. அவற்றில் ஒரளவு நிறைவேறுகிறது என்றால் அது ஆண்டவனுடைய சக்தியினால்தான் நிறைவேறுகின்றது. குழந்தைக்கு அவள் உபகாரம் செய்கிறாள் என்று நினைக்கிறோம். கொடுக்கும் கருவி அவள். அவள் மூலமாகக் கொடுக்கிறவன் ஆண்டவன். யாரோ ஒருவர் நமக்கு ஒரு புத்தகம் கொடுக்கிறார். இறைவனால் தூண்டப்பட்டுக் கொடுக்கிற அவர் இறைவனுடைய அருளாணைக்குரிய கருவியாகத்தான் இருக்கிறார். ஆண்டவன் மற்றவர்களையன்றி அவரை ஒரு கருவியாகக் கொண்டு கொடுப்பதனால் அவருக்கு ஒரு பெருமை உண்டு. அதனால் அவர் மகிழ்ச்சி அடையலாம். நாமும் அவரைப் போற்றலாம். ஆனால் அதனை அவர் நமக்குக் கொடுப்பதற்கு யார் மூல காரணமாக இருந்தானோ அவனை மறந்துவிடக்கூடாது. தஞ்சாவூரிலிருந்து ஒருவர் நமக்கு ஐம்பது ரூபாய் மணியார்டர் பண்ணியிருக்கிறார். அந்த மணியார்டரைக் கொண்டு வந்து தபால்காரன் கொடுக்கிறான். அதனை வாங்கிக் கொண்டு நாம் என்ன செய்கிறோம்? மிகவும் துன்பப்பட்டுக் கொண்டிருந்த சமயத்தில் நமக்கு ஐம்பது ரூபாயைக் கொண்டு வந்து கொடுத்த தபாற்காரனுக்கு ஒர் இரண்டனாவைக் கொடுத்துப் போகச் சொல்லுகிறோம். ஆனால் அதே சமயத்தில், "அப்பாடி! நம்முடைய கஷ்டம் நீங்கிற்று. சரியான சமயத்தில் உதவி செய்த அந்தத் தஞ்சாவூர்ச் செட்டியாருக்கு என்ன கைம்மாறு செய்வோம்!” என்று எண்ணி உள்ளம் உருகுகின்றோம். இவ்வாறே நமக்கு உபகாரம் செய்கின்றவர்களிடம் நாம் ஓரளவு நன்றி பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறோம். அதே சமயத்தில் எல்லாவற்றுக்கும் மூலகாரணமாயிருக்கிற ஆண்டவனிடத்தில் நாம் மிக்க நன்றி பாராட்ட வேண்டும் அல்லவா? நாம் அவனுக்கு வேறு எவ்விதமாகக் கைம்மாறு செய்ய முடியும்? அவன் புகழைச் சொல்வதுதான் நன்றியறிவுக்கு அறிகுறி.    "இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்    பொருள்சேர் புகழ்புரிந்தார்மாட்டு" என்பது வள்ளுவர் வாய்மொழி. பொருள் சேர் புகழ் என்பதற்கு உண்மையான புகழ் என்பது பொருள். இறைவனுடைய புகழ்தான் உண்மையான புகழ். மற்றவர்களைப் புகழ்வது ஏதோ ஒரு சம்பிரதாயத்திற்காகத்தான். மற்றவர்களைக் கருவியாகக் கொண்டு எல்லாக் காரியத்தையும் யார் செய்கின்றானோ அவனைப் புகழ்வதே உண்மையான புகழ்ச்சி. ஆகையால் எல்லோரையும் புகழ்வதற்குப் பதிலாக எல்லாவற்றுக்கும் மூலப் பொருளாகிய ஆண்டவனைப் புகழ்ந்தால், உண்மையை நாம் உணர்ந்து கொண்டவர்களாகவும் ஆவோம்; எல்லோரையும் புகழ்ந்ததாகவும் ஆகும். இதனை உணர்ந்து அப்பர் பெருமான் சொல்லுகிறார்.    "பொன்னானாய் மணியானாய் போக மானாய்    'பூமிமேல் புகழ்தக்க பொருளே' உன்னை    என்னானாய் என்னானாய் என்னின் அல்லால்    ஏழையேன் என்சொல்லி ஏத்து கேனே!" பொன்னாயும், மணியாயும், அவற்றால் ஏற்படுகின்ற போகமாயும் நீ இருக்கின்றாய். ஆகையால் பூமி மேல் யாரையாவது புகழ வேண்டுமென்றால் யாரைப் புகழ்வது? எல்லாம் நீயாகவே இருக்கின்றதனால் உன்னைத்தானே புகழ வேண்டும்? எந்த வகையைக் கொண்டு உன்னை நான் புகழ்வேன்? நீ எப்படி இருக்கின்றாய் என்று அறிந்தால்தானே புகழ முடியும்? உன்னை எப்படிப் புகழ்வது என்று எனக்குத் தெரியவில்லையே!” என்று பாடுகிறார். பல பல தேவாரத் திருப்பதிகங்களைப் பாடிய அப்பர் சுவாமிகள் நான் எப்படிப் புகழ்வேன் என்பாரானால், நாம் எல்லாம் என்ன சொல்வது? 4 அதன் பயன் இறைவனைப் புகழ்வது நம் கடமை; வாய் படைத்த பயன்; முன்னால் இறைவனால் பெற்ற பயனை நினைந்து நன்றி கூறும் செயல். அது மட்டுமல்ல. இனியும் அதனால் விளையும் பயன் ஒன்று உண்டு. அது என்ன என்று பார்க்கலாம். ஆண்டவன் கவியை அன்பால் பிழையறக் கற்றுக் கொண்டவர்கள், சாகுங் காலத்தில் ஒரு பாவி வந்து மிரட்டுவானே, அவனுடைய மிரட்டலுக்குப் பயப்பட வேண்டாம். நம்மிடம் இருக்கும் சொத்தைக் கண்டு அந்தக் காலன் பயப்படமாட்டான். பதவி கண்டும் பயந்து உயிரை விட்டுப் போக மாட்டான். எந்த நிமிஷத்தில், எந்தக் கணத்தில் வந்து சுருக்கிட்டு இழுத்துப் போக வேண்டுமென்பது அவனுக்குத் தெரியும். அவனை வெல்ல வேண்டுமென்றால் அயில்வேலன் கவியை அன்பால் படிக்க வேண்டும். நன்றாக வாழ்கின்ற காலத்தில் அப்படிப் படிக்காமல் இருந்துவிட்டால், அந்தப் பாவி யமன் வந்து கழுத்தில் சுருக்கிட்டு இழுத்துப் போவானே, அப்பொழுதா படிக்க முடியும்? சாகிற காலத்தில் சங்கரா, சங்கரா என்றால் வருமா? வராது. மனிதனுடைய பழக்கத்தால் உண்டான வாசனை எதுவோ அதுவே சாகிற காலத்தில் முந்திக் கொண்டு நிற்கும். அப்போது நினைத்தல் இறைவன் நினைப்புச் சாகிற போது வருமா என்பதை அநுபவத்தில் ஒவ்வொரு நாளும் பார்த்துக் கொள்ளலாம். தினந்தோறும் உறங்குகிறோம். உறங்குவதும் ஒரு சாவுதான். "உறங்குவது போலும் சாக்காடு" என்று சொல்லுகிறார் வள்ளுவர். நம்முடைய அநுபவத்தில் நம் நினைவில் என்ன என்னபடுகின்றனவோ அவை கனவில் வருகின்றன. திருடனைக் கண்டு பயப்படுகிறோம்; திருடனைப் பற்றிக் கேட்டு அஞ்சுகிறோம்; கனவில் திருடன் தோன்றி நம்மை அலற வைக்கிறான். தினந்தோறும் நாம் இறைவனை நினைத்தால் கனவிலும் இறைவன் வருவான். நாம் நினைப்பதில்லை; அவன் நம் கனவில் வருவதில்லை. நம் மனத்தில் உள்ள அழுத்தமான நினைவுகள் கனவில் தோன்றுகின்றன. கனவிலே ஆண்டவனைக் காண வேண்டுமென்றால் நனவில் அவனை அழுத்தமாக நினைக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் படுத்து உறங்குகின்ற சாக்காட்டிலேயே இறைவன் நினைவு வரவில்லையென்றால், உடலை விட்டுப் போகும் பொழுது இயற்கையான வாசனையை மீறிக் கொண்டு ஆண்டவனது நினைவு எப்படி வரும்? பயத்தால் அலறும்போது, "அம்மா, அப்பா!" என்று அலறுகிறோம்; "ஐயோ!" என்று கூவுகிறோம். அப்படிக் கூவிப் பழக்கம் ஆகிவிட்டது. அப்போது ஆண்டவனை அழைப்பதில்லை. அந்தப் பழக்கம் திடீரென்று நம்மிடம் வராது. பலநாள் பழக்கத்தால் வர வேண்டும். சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருவாரூர்த் தியாகேசரிடம் மிகுதியான அன்பு கொண்டவர். அவர் திருவொற்றியூர் வந்தார். தாம் திருவொற்றியூரை விட்டுப் போவதில்லை எனச் சபதம் செய்து கொடுத்துவிட்டுச் சங்கிலி நாச்சியாரை மணந்து கொண்டார். திருவாரூர்ப் பெருமானைப் பிரிந்திருக்க அவரால் முடியவில்லை. "சங்கிலி நாச்சியாருக்குச் சத்தியம் செய்து கொடுத்தால் என்ன?" என்று புறப்பட்டுவிட்டார். சத்தியத்தை மீறியதால் அவர் கண்கள் குருடாகிவிட்டன. அப்போது இறைவனை நினைந்து அவர் புலம்புகிறார். 'சுவாமீ, உன்னை நான் எப்போதும் நினைக்கிறவனாயிற்றே. தடுக்கி விழுந்தாலும் உன் திருநாமத்தைச் சொல்வதையல்லாமல் ஐயோ, அம்மா, அப்பா என்று எனக்கு சொல்லத் தெரியாதே! என் கண்ணுக்கு ஒரு மருந்து சொல்ல மாட்டாயா?" என்று கதறுகிறார்.    "அழுக்கு மெய்கொடுன் திருவடி அடைந்தேன்      அதுவும் நான்பெறற் பாலதொன் றானால்    பிழுக்கை வாரியும் பால்கொள்வர் அடிகேள்!      பிழைப்ப னாகிலும் திருவடிப் பிழையேன்;    வழுக்கி விழினும் திருப்பெயர் அல்லால்      மற்று நான்அறியேன்மறு மாற்றம்;    ஒழுக்க என்கணுக் கொருமருந் துரையாய்      ஒற்றி யூரெனும் ஊர்உறை வானே!" பின்னும் ஓரிடத்தில்,    "நற்ற வாஉன்னை நான்ம றக்கினும்      சொல்லுநா நமச்சி வாயவே" என்கிறார். இறைவன் நாமத்தைச் சொல்லிச் சொல்லிப் பழகிப் போனதால் அவர் இறைவனை மறந்தாலும் அவருடைய நாக்கு அவன் நாமத்தை மறக்காமல் சொல்கிறதாம். அத்தகைய நிலை நமக்கும் வரவேண்டுமென்றால் இப்பொழுதிலிருந்தே பழகி வர வேண்டும். யமன் வரும்போது பார்த்துக் கொள்ளலாம் என்று இருந்தால், அவன் இப்போது வருவேன் என்று அறிக்கை அனுப்பிவிட்டு வர மாட்டான். எப்போது வருவான் என்பதை நாமாகத் தெரிந்து கொள்ளவும் முடியாது. ஆகவே, இப்பொழுதிலிருந்தே அயில் வேலன் கவியைச் சொல்லிப் பழகினால் இறக்கும் பொழுது வேலன் நினைவு வரும். அந்தச் சமயம் அவன் ஓடோடியும் வந்து காப்பாற்றுவான். கலந்து பாடுதல் வாக்கிலே கவி வந்துவிட்டால் மாத்திரம் போதாது. வாக்கிலே வரும் கவி எண்ணத்திலே பல சமயங்களில் வருவது இல்லை. இறைவன் திருநாமம் வெறும் பெயர் மாத்திரம் அல்ல. அதற்குச் சிறப்பான பொருள் உண்டு. அதனாற் பெறும் உணர்ச்சியும் உண்டு. அன்போடு சொல்லச் சொல்ல, அது மனத்திலே ஏறி, அதன் பொருள் உள்ளத்திலே தங்கும்; அதனுடைய சாரம் மனத்திலே பதியும்; அதனால் எழுகின்ற உணர்ச்சி பதியும். இறைவன் பற்றும் உண்டாகும். பிறகு இன்ப அநுபவம் உண்டாகும். அன்பினால் சொன்னால்தான் படிப்படியாக இந்த அநுபவங்கள் ஏற்படும். ஒரு பெண் இருக்கிறாள். அவள் வீட்டுக்குப் பக்கத்தில் ஆறுமுகம் என்று ஒரு பையன் இருக்கிறான். அவன் பெயரைப் பலர் கூப்பிடக் கேட்கிறாள் அந்தப் பெண். அந்தப் பெயரைக் கேட்கும் போது எந்தவிதமான உணர்ச்சியும் அவளுக்கு உண்டாவதில்லை. பெண்ணுக்குக் கல்யாணம் ஆகிறது. அவளுடைய கணவர் பெயரும் ஆறுமுகம் என்பதுதான். வழக்கம்போல் பக்கத்து வீட்டுப் பையனை அவன் தந்தை, 'ஆறுமுகம்' என்று கூப்பிட, அந்த ஒலி இன்றைக்கு அவள் காதில் ஜில்லென்று விழுகிறது. காரணம்? அந்தச் சொல் இப்போது அந்தப் பெண்ணுடைய நாயகனின் திருநாமம். அந்தப் பெயரைச் சொல்லி வேறு ஒருவரைக் கூப்பிடுவதாக இருந்தாலும், அவள் காதிலே விழும்போது இனிமை உண்டாகிறது. தன் நாயகனை நினைப்பூட்டுவதால் அந்த இன்பத்தைப் பெறுகிறாள். இதைப் போலவேதான் ஆண்டவன் நாமத்தை அன்பினால் சொல்ல்ப் பழகிவிட்டால், அந்தச் சொல்லானது கேட்ட மாத்திரத்தில் தன் பொருளாகிய இறைவன் திருவுருவத்தை நினைப்பூட்டுகிறது. அதனால்தான், "இறைவன் திருநாமத்தைச் சொல்லும் போதெல்லாம் நாக்கு இனிக்கிறது" என்று பெரியவர்கள் சொல்லுகிறார்கள். தேன் இனிக்கும் என்பது நமக்குத் தெரியும். தேனை நாக்கிலே விட்டுக் கொண்டால்தான் அந்த இனிமை தெரியும். அவ்வாறே இறைவன் திருநாமம் இனிக்கும் என்றால், அது கருத்தோடு கலந்தால்தான் இனிக்கும். அயில்வேலன் கவி அன்பால் கருத்தோடு கலந்தால் இனிக்கும். எப்போதும் சொல்லத் தோன்றும். யமன் வரும்போதும் சொல்லி இன்புறலாம். நாம் பாடினால் அவ்வளவாக இனிக்கிறது இல்லை. ஆனால் பெரியவர்கள் இனிக்கிறது என்று சொல்லியிருக்கிறார்கள். 'ஏதோ சம்பிரதாயத்திற்குச் சொல்லியிருக்கலாமோ?’ என்ற சந்தேகம் நமக்கு எழுகிறது. கருத்தோடு இணைந்து நிற்கும்படி நாமும் பாடினால் அப்போது நமக்கும் இனிக்கும்; அவர்கள் சொன்னது உண்மையென்று தெரியும். மாணிக்கவாசகர் பாட்டை இராமலிங்க சுவாமிகள் அநுபவித்தார். எப்படி?    "வான் கலந்த மாணிண்க வாசகநின் வாசகத்தை    நான்கலந்து பாடுங்கால் நற்கருப்பஞ் சாற்றினிலே    தேன்கலந்து பால்கலந்து செழுங்கனித்தீஞ் சுவை கலந்தே    ஊன்கலந்தென் உளங்கலந்தே உவட்டாமல் இனிப்பதுவே" என்கிறார். அவருக்கு மட்டும் இனிப்பானேன்? நமக்கு அப்படி இனிக்காமற்போவது ஏன்? நான் ஒருவர் வீட்டுக்குச் சென்றேன். அவர்கள் எனக்குக் குடிக்கப் பால் தந்தார்கள். அதைக் கொஞ்சம் சாப்பிட்டபோது தித்திப்புத் தெரியவில்லை. "சர்க்கரை போடவில்லையோ?” என்று கேட்டேன். “சர்க்கரை அடியில் இருக்கும். கலந்திருக்காது; கலந்து சாப்பிடுங்கள்" என்றார் அவ்வீட்டுக்காரர். சர்க்கரையைப் பாலிலே கலக்கும்படி செய்து சாப்பிடும்போது பால் இனிக்கிறது. சர்க்கரை தன் உருவம் தோற்றாமல் பாலிலே கலந்துவிட வேண்டும். சர்க்கரை வேறு, பால் வேறாக இருந்தால் பால் இனிக்காது. சர்க்கரை கரைந்து பாலிலே ஒன்றிக் கலந்து விட்டால், பால் இனிக்கிறது போல, தம்மை மறந்து, பாட்டு மயமாகக் கலந்து யார் பாடுகிறார்களோ அவர்களுக்கு அந்தப் பாட்டு இனிக்கும். "நான் கலந்து பாடுங்கால்” என்று இராமலிங்கர் சொல்வதை ஊன்றிக் கவனிக்க வேண்டும். நாம் அயில்வேலன் கவியில் கலந்து நம்மை மறந்து அன்போடு பிழையறக் கற்றுப் பாடினால் யமதர்ம ராஜனையே வெல்லலாம் என்று அருணகிரிநாதர் புலப்படுத்துகிறார். அவர் சொல்லும் பாட்டு எதிர்மறை வாய்பாட்டில் இருக்கிறது. “அவனுடைய பாட்டை நீங்கள் அன்பாலே பாடவில்லை. எழுத்துப் பிறையறக் கற்கவில்லை. எரிமூண்டதென்னப் பொங்கு வெங்கூற்றன் தன் பாசக் கயிற்றால் கழுத்தில் சுருக்கிட்டு இழுப்பானே, அப்போது நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் அந்தச் சமயத்தில் கவி கற்றுக் கொள்ளலாம் என்று இருப்பீர்களானால் பயன் இல்லையே!" என்று கேட்கும் கேள்வியாக அது இருக்கிறது. பாதுகாப்பு அருணகிரிநாதர் ஒர் இன்ஷஅரன்ஸ் ஏஜண்டு. "ஐயா இப்போதே இன்ஷூரன்ஸ் பண்ணிக்கொண்டு விடுங்கள். நீங்கள் திடீரென்று செத்துப் போனால் என்ன ஆவது? உங்கள் குடும்பம் போகும் கதி என்ன?" என்று நம்மிடம் வந்து கேட்கிறார்களே, இன்ஷூரன்ஸ் ஏஜெண்டுகள், அந்த முறையில் சொல்கிறார். உயிருக்குப் பாதுகாப்புத் தேடிக்கொள்ள வேண்டுமென்பதை அவர் நினைவூட்டுகிறார். "உலகத்தவர்களே, அயில்வேலன் கவியை, அன்பால் பிழையறக் கற்றுக் கொள்ளாமல் இருக்கிறீர்களே, நாளைக்கு வந்து விடுவானே யமன். தன்னுடைய பாசக் கயிற்றால் உங்கள் கழுத்தில் சுருக்கிட்டு இழுக்க வந்து விடுவானே' என்கிறார். 5 மரண வேதனை மனிதனுக்கு மரணத்தைவிட மிகத் துன்பமானது எதுவும் இல்லை. "சாதலின் இன்னாதது இல்லை" என்று வள்ளுவர் பேசுகிறார். சாகிறவன் மரணசமயத்தில் எப்படித் துன்பப்படுவானோ நமக்குத் தெரியாது. செத்தவர்கள் யாரும் தாங்கள் பட்ட வேதனையைத் திரும்பி வந்து சொன்னது இல்லை. ஆனால் சாகும் தறுவாயில் இருக்கிறவன் படுகிற பாட்டைக் கண்ணால் பார்க்கிறவர்களுக்கு மரண அவஸ்தை எவ்வளவு கடுமையானது என்று ஒரளவு ஊகிக்க முடியும். இறக்கும் நிலையில் இருப்பவன் வாயில் நுரை வருகின்றது. கண் பிதுங்குகிறது. நாக்கு வெளியே தள்ளுகிறது. காது கேளாமல் போய் விடுகிறது. கழுத்திலே கயிற்றைப் போட்டு முறுக்கினால் அப்படித்தான் நுரை தள்ளும்; கண் பிதுங்கும். மரணாவஸ்தையில் தோற்றும் அறிகுறிகளும் கழுத்தில் கயிற்றை இறுக்கி முறுக்கினால் உண்டாகும் அறிகுறிகளும் ஒரே மாதிரியானவையே. அந்த வேதனையைக் கண்டவர்கள் மரணத்தை உண்டாக்கும் சக்திக்கு உருவம் கொடுத்து யமன் என்று பெயர் வைத்து, அவன் கையிலும் ஒரு கயிறு இருப்பதாகச் சொல்லி, அவன் அந்தக் கயிற்றினால் கழுத்தில் சுருக்கிட்டு இழுக்கிறான் என்று சொன்னார்கள். தெரியாத பொருளையும், நுட்பமான பொருளையும் நாம் உணர்ந்து கொள்ளும்படி பருப்பொருளாகச் சொல்வது பெரியவர்கள் வழக்கம். மரணத்தை விளைவிக்கிறவன் யமன் என்று சொல்வது மரபு. அவனுக்குக் கூற்றுவன் என்றும் ஒரு பெயர் உண்டு. கூறு போடுதல் என்றால் பிரித்து வைத்தல் என்று பொருள். யமன் உடம்பிலிருந்து உயிர் போகும் நேரம் வரும் போது, "ஏ, உயிரே, நீயாக இந்த உடம்பிலிருந்து வெளியே போய்விடு" என்று சொன்னால், பழக்கப்பட்ட வீட்டை விட்டு வெளியே போவதற்கு அதற்கு மனம் வருமா? ஒருவனுடைய வீட்டில் நான்கைந்து ஆண்டுகள் குடியிருந்துவிட்டாலே, வீட்டுக்காரன் வீட்டைக் காலி பண்ணு என்றால் குடியிருப்பவனுக்கு அதை விட்டுப் போக மனம் வருவது இல்லை. பல ஆண்டுகள், பிறந்ததிலிருந்தே, இந்த உடம்பில் இருந்து வாழும் உயிரை அதை விட்டுப் போ என்றால் போகுமா? போகாது. அதனை வெளியே வரும்படி செய்ய, ஓர் அதிகாரி வருகிறான். எருமைக் கடாவில் யமன் வந்து, தன் கையிலுள்ள பாசக் கயிற்றால் சுருக்கிட்டு இழுக்கிறான். அவனை நாம் பாவி, கூற்றன், யமன் என்கிறோம். காலன் தன்னுடைய ஊழியத்தைச் செய்கிறான். அதனை அறியாமல் நாம் அவனைப் பாவி என்கிறோம். ஆனால் பெரியவர்கள் அவனைத் தர்மராஜன் என்று சொல்வார்கள். அவர்கள் மரணத்தை வரவேற்கிறவர்கள். உடம்பினின்றும் உயிரைப் பிரிக்கும் கடமையை நிறைவேற்றுகின்றவனாதலால் தர்மராஜா என்கிறார்கள். நாமோ மரணத்தைக் கண்டு பயப்படுகிறோம். அதனால் அவனை வைகிறோம். பயமும் பக்தியும் யமன் எருமைக் கடாவின் மீது ஏறி வருவான். அவனுக்குக் கோரப் பற்கள் இருக்கும். அவன் பார்க்கும் போதே கண் அனல் கொப்புளிக்கும்; புகைவிடும். அவன் நம் கழுத்தில் சுருக்கிட்டு இழுக்கப் பாசக் கயிற்றைக் கையில் வைத்திருக்கிறான் என்றெல்லாம் சொல்லும்போதே அது நமது உள்ளத்தில் பயத்தை உண்டாக்குகிறது. மரணம் பயமுடையதென்று எண்ணுகிற நமக்குக் காலனும் அச்சந்தரும் கோலத்துடன் இருக்கிறான். "மரணத்தைக் கண்டு ஏன் பயப்பட் வேண்டும்? மரணத்தை வரவேற்கும்படியாகச் சொல்லக் கூடாதா?" என்றால், மரணத்தில் பயம் ஏற்பட்டால்தான் மரணத்தினின்றும் விடுதலை பெற வேண்டும் என்ற ஆசை தோன்றும். தப்பும்படி அருள்கின்ற இறைவனிடத்தில் பக்தி உண்டாகும். காலனால் உண்டாகும் பயத்தை எடுத்துச் சொல்லி, அந்தப் பயத்தைப் போக்குகின்ற இறைவனிடத்தில் பக்தியை உண்டாக்கி வந்தார்கள், நம் நாட்டுப் பெரியோர்கள். மரண பயம் உண்மையில் மனத்தில் தோன்றினால் அழுத்தமான பக்தி உண்டாகும். அதனால்தான் 'பயபக்தி' என்ற தொடர் வந்தது. ஒரு வீட்டிலே ஒருவர் இறந்து போகிறார். அயல் வீட்டுக் கிழவர் மயானம் வரையிலும் அந்தப் பிணத்தோடு சென்று வருகிறார். மயானத்திலே அவர், "உம்; எல்லோரும் இப்படிப் போக வேண்டியதுதான். இன்றைக்கு இல்லாவிட்டால் நாளைக்கு யமன் வருவான்" என்று சொல்கிறார். ஆனால் வீட்டிற்கு வந்தவுடன் அந்த அறுபது வயசுக் கிழவர் இன்னும் அறுபது ஆண்டுகளுக்குரிய குத்தகைச் சீட்டில் கையெழுத்துப் போடுகிறார். அவருக்கு உண்மையிலேயே நாளைக்கு யமன் வருவான் என்ற பயம் ஏற்பட்டிருந்தால் அப்படிச் செய்வாரா? வீட்டுக்கு வந்தவுடனேயே அவருக்குப் பயம் போய்விடுகிறது. மயானத்தில் தோன்றிய அறிவு, குளத்தில் பாசி சற்றே விலகி மறுபடியும் நீரை மூடிக் கொள்வது போல, மறைந்து போகிறது. அவருக்கு ஏற்பட்ட வைராக்கியம் ஸ்மசான வைராக்கியம். ஒருவன் தலையில் தீப்பற்றிக் கொண்டுவிட்டதானால், அவன் அந்த நெருப்பை அணைக்க, "எங்கே நீர்? எங்கே நீர்?" என்று தவிதவித்து ஒடுவான். "இந்தா அப்பா, இது மிகவும் சுவையான அல்வா" என்றால் அவன் அதனை வாங்கித் தின்ன நிற்பானா? "காசு கொடுக்க வேண்டாம் அப்பா இனாமாகவே தின்றுவிட்டுப் போ" என்றால்தான் நிற்பானா? "எங்கே நீர்? எங்கே நீர்?" என்று அலறுவதை நிறுத்த மாட்டான். மரணம் என்கிற துன்பத்தை நினைத்துப் பார்த்து, அது தனக்கு வந்து விடுமே என்னும் உண்மையான பயத் தீ ஒருவனைப் பற்றிக் கொண்டுவிட்டால் அதனை அணைக்க, "எங்கே அருள் தண்ணீர்? எங்கே அருள் தண்ணீர்?" என்று அலறித் தேடி ஒட மாட்டானா? ராமகிருஷ்ண பரமஹம்சர் தீவிரமான பக்தி எப்படி இருக்கும் என்பதை விளக்குகிறார். சீடன் தன் குருவை, "எப்படிப் பக்தி செய்வது? என்று கேட்டானாம். குரு அவனை, "இங்கே வா" என்று அழைத்துக் கொண்டு ஒரு குளத்திற்குப் போனார். அவனை அந்த நீரில் குளிக்கச் சொன்னார். அவன் அந்தக் குளத்திற்குள் அமிழும்போது அவன் தலையை வெளியே தூக்க மாட்டாமல் நீருக்குள்ளேயே அழுத்தினார். ஒரு நிமிஷத்திற்குப் பின் விட்டு விட்டார். அவன் மூச்சு விட முடியாமல் திணறித் துடித்துக் கொண்டு எழுந்தான். அவனைப் பார்த்து, "தண்ணிருக்குள் நீ என்ன நினைத்தாய்?" என்று கேட்டார். "எந்தச் சமயத்தில் வெளியே வருவேன், என்று எண்ணினேன்" என்றான் அவன். 'இப்படி ஆண்டவனை எந்தச் சமயத்தில் காணுவோம் என்று துடிதுடித்து நினைத்துப் பக்தி செய்தால் ஆண்டவன் அருள்வான்" என்று சொன்னார். அந்தத் துடிப்பை எப்படிப் பெறலாம்? மரணத்தினால் உண்டாகும் வேதனையை மனமார உணர்ந்தால் பெறலாம். எப்போது வருவான்? நாம் யமன் வாயில்தான் தூங்குகிறோம். அவன் வாயிலுள்ள நம்மை அவன் எந்தச் சமயத்திலும் கொண்டு போய்விடுவான். அது இன்ன சமயம் என்று நமக்குத் தெரியாது. யமன் முன் எச்சரிக்கை அனுப்பி விட்டு வருகிற பேர்வழி அல்ல. அதனால் நாம் எப்போதுமே பாதுகாப்புடன் இருக்க வேண்டும். ஞானசம்பந்தர்,    "நீநாளும் நன்னெஞ்சே நினைகண்டாய் யார் அறிவார்    சாநாளும் வாழ்நாளும்?" என்று நெஞ்சுக்கு உபதேசம் செய்கிறார். எந்த நாள் யமன் வருவானோ? யார் அறிவார்கள் சா நாளும், வாழ் நாளும் யார் அறிவார்கள்? தான் செத்துப் போகிற நாள் எது, வாழ்கின்ற நாள் எது என்று யாருக்காவது தெரியுமா? தெரியுமானால் அந்தச் சமயத்தில் ஆண்டவன் பேரைச் சொல்லலாம். ஒருவன் ஒர் ஊருக்குப் போகிறான். அந்த ஊர் போகும் வண்டி மணிக்குக் கிளம்புகிறது என்று ஒருவரைக் கேட்கிறான். அவர் பத்து மணிக்கு என்கிறார். மற்றொருவரைக் கேட்கிறான். அவர் பதினொரு மணிக்கு என்கிறார். இவன் ஒன்பது மணிக்கே ஸ்டேஷனில் போய் உட்கார்ந்து கொண்டு விடுகிறான். "எந்தச் சமயத்தில் வண்டி கிளம்பும் என்பது நிச்சயமாகத் தெரியவில்லை. எதற்கும் முன்னாடியே போய்விட்டால் நல்லதென்று வந்து விட்டேன்?" என்று சொல்கிறான். அதைப்போலவே மரணம் என்பது எப்போது வரும் என்று நிச்சயமாகத் தெரியாததாலே, அதிலிருந்து தப்ப வேண்டுமானால் அதற்கு முன்னாலேயே இறைவனை வாழ்த்தத் தொடங்க வேண்டும். எப்போதுமே இந்தக் கவசத்தை அணிந்து கொண்டால் யமன் எப்போது வந்தாலும் பயம் இல்லை. ஆகவே மீட்டும் பிறவாத நிலை தந்து நம்மை எல்லாம் ஆட் கொள்ளுகிற இறைவனைப் பாட வேண்டும். அவன் ஒருவன் தான் உண்மையான புகழுக்கு உரியவன். அந்தப் புகழுக்கு உரியவனாக இருப்பது மாத்திரம் அல்ல. புகழ்வதற்குரிய நாக்கைத் தந்தவனும் அவன்தான். நம் கடமை, நாக்கைத் தந்தவனைப் புகழ்வது என்பது மட்டும் அன்று; புகழ்வதனால் மேலும் நமக்குப் பயன் உண்டு. அவனைப் புகழ்ந்தால் காலனை வெற்றி கொள்ளலாம்.    ......எரி மூண்டதென்ன    விழித்துப் புகையெழப் பொங்குவெங் கூற்றன். கூற்றன் மிகவும் சீற்றத்தோடு வருகிறான். அவன் கண்களில் அனல் கொப்புளிக்கிறது. புகை எழுகிறது. முகம் கோபத்தால் சிவந்திருக்கிறது. அவன் தன் பாசக் கயிற்றைப் போட்டு, நம் கழுத்தில் சுருக்கிட்டு இழுக்கிறான். அவனது கொடுமையான பிடியிலிருந்து தப்ப வேண்டுமென்றால் அயில்வேலன் கவியைப் பாட வேண்டும். நன்றாக வாழ்கின்ற காலத்து அவன் கவியைக் கற்றுக் கொள்ளாதிருக்கிறீர்களே; மரணம் உண்டாகும் சமயத்தில் எப்படி உங்களுக்குப் பாட வரும்?' என்பது அருணை முனிவர் கேள்வி. "பேச்சு என்ற பெரு வரம் பெற்ற மக்கள் நாம். ஆதலால் நல்ல பேச்சைப் பேசுங்கள். முருகன் பேச்சைப் பேசுங்கள். அயில்வேலன் கவியைக் கற்றுக் கொள்ளுங்கள். அன்பால் எழுத்துப் பிழையறக் கற்றுக் கொள்ளுங்கள். கூற்றன் வந்து கழுத்தில் சுருக்கிட்டு இழுக்கும்போது அந்தக் கவி வந்து உதவும். அந்தச் சமயத்தில் கற்றுக் கொள்ளலாம் என்று இருப்பீர்களானால் நிச்சயமாக அப்போது கற்றுக் கொள்ள முடியாது" என்று இதனால் தெரிந்து கொள்ளும்படி உபதேசம் செய்கிறார் அவர்.    அழித்துப் பிறக்கவொட் டாஅயில்      வேலன் கவியைஅன்பால்    எழுத்துப் பிழையறக் கற்கின்றி      லீர்எரி மூண்டதென்ன    விழித்துப் புகையெழப் பொங்குவெங்      கூற்றன் விடுங்கயிற்றால்    கழுத்திற் சுருக்கிட் டிழுக்குமன்      றோகவி கற்கின்றதே? (மீட்டும் பிறக்காமல் செய்யும் கூர்மையான வேலையுடைய முருகனைப் புகழும் கவியை அன்பினால் எழுத்துப் பிழைகள் இன்றிக் கற்காமல் இருக்கிறீர்களே கனல் மூண்டாற்போல விழித்து அதிலிருந்து புகை எழும்படியாகக் கோபத்தால் பொங்கும் கொடுமையுடைய யமன் தான் விடுகிற பாசக் கயிற்றால் கழுத்தில் சுருக்கிட்டு இழுக்கும் அந்த நாளிலா கவி கற்பது? அழித்து - மீட்டும். அயில் - கூர்மை. கற்கின்றிலீர் - நீங்கள் கற்கவில்லையே. பொங்கு-கோபித்து எழும்.)  வேலின் பெருமை 1 அருணகிரி நாதர் முதலில் விநாயகரை நினைத்தார். பிறகு முதல் பாட்டிலே தாம் பெற்ற இன்பத்தைச் சொன்னார். "இறைவன் திருவருளினால் எந்த விதமான தகுதியும் இல்லாமல் இருந்த நான் பெரிய பேற்றைப் பெற்றேனே!" என்று இந்தச் சொற் கோயிலுக்குள் போகும்போதே, தாம் இருந்த நிலையை நினைவு கூர்ந்து, தாம் அடைந்த பேற்றைச் சொன்னார். தாம் மாத்திரம் இன்பம் பெற்றால் போதுமா? உலகமும் அந்த இன்பத்தைப் பெற வேண்டாமா? உலக மக்களும் அந்தப் பேரின்பத்தைப் பெறுவது எப்படி என உபதேசம் செய்ய வேண்டாமா? அந்த உபதேசத்தைச் செய்தார் இரண்டாவது பாடலிலே. "அயில்வேலன் கவியை எழுத்துப் பிழையறப் பாட வேண்டும், அதனால் யம பயம் இல்லாமல் போகும். அந்தக் கவியைக் கல்லாமல் இருக்கிறீர்களே, நாளைக்குக் காலன் வரும்போது என்ன செய்வீர்கள்?" என்று இரங்கினார். அயில்வேலன் கவியைக் கற்கச் சொல்கிறாரே; அவன் எத் தகையவன்? என்ன பெருமை உடையவன்? அவன் கையிலுள்ள அயில் வேலுக்கு என்ன பெருமை? சாதிக்க முடியாத காரியம் எதையாவது அது முன்பே செய்திருக்கிறதா? இந்தக் கேள்விகளுக்கு அருணகிரி நாதர் மூன்றாவது பாட்டிலே விடை சொல்கிறார். உலகம் எல்லாம் ஒப்புக் கொள்ளும்படி, அவன் புகழைப் பெரியோர்கள் கவியில் சாசனம் செய்திருக்கிறார்கள். கந்த புராணம் என்ற பெரிய நூலில் முன்பே அவன் புகழ் பரந்து சொல்லப் பெற்றிருக்கிறது. முருகனுடைய அவதாரத்திற்கு வியாஜம் சூரனைச் சங்கரிப்பது. அந்தக் சூர சங்காரம் செய்ததே அவன் திருக்கரத்திலுள்ள வேல்தான். அதை இப்போது சொல்கிறார். கவிஞன் கலை ஏதாவது பொருளைப் பற்றிச் சொல்ல வேண்டுமானால் உள்ளபடியே சொன்னால் அந்தப் பொருளில் கவர்ச்சி இராது. அதைச் சுற்றி வளைத்து வருணனைகளோடு அழகுபடுத்திச் சொன்னால் சுவை பிறக்கும். அழகான பொருளை அலங்காரம் பண்ணி வைக்கும்போது அதனைத் தரையில் வைக்க மாட்டார்கள். அடியிலே அழகான பீடம் போட்டு, அதனையும் அலங்காரம் செய்து அதன்மேல்தான் வைப்பார்கள். நவராத்திரி சமயத்தில் ஒருவர் வீட்டில் ஐந்து படி கட்டினார்கள் என்றால், அடுத்த வீட்டில் ஏழு படி கட்டி, ஏழாவது படியின்மேலே ஆண்டவன் விக்கிரகத்தை அலங்காரம் பண்ணி வைக்கிறார்கள். அப்படித் தான் கவிஞன் தான் சொல்வதைப் பல படிகளைக் கட்டி உயரத்தில் வைக்கிறான். திரிபுர சங்காரம் ஆண்டவன் திருக்கரத்திலுள்ள வேலின் பெருமையைச் சொல்ல வந்த அருணகிரிநாதர் அதனை அழகாகச் சொல்கிறார். முருகன் தன் கையிலுள்ள வேலினால்தான் சூரனைச் சங்காரம் பண்ணினான். அவன் தகப்பனார் யார் தெரியுமா?    தேர்அணி இட்டுப் புரம்எரித்தான் "தேர் அணி இட்டு' என்றால் தேரை அலங்காரம் பண்ணி என்று பொருள். சிவபெருமான் முப்புரங்களைச் சங்காரம் பண்ணினான். பறக்கும் கோட்டைகள் மூன்று இருந்தன. இரும்பாலான கோட்டை, வெள்ளியால் ஆன கோட்டை, தங்கத்தாலான கோட்டை ஆகிய மூன்றையும் முருகப் பெருமானுடைய தந்தை எரித்தான். அந்த மூன்று கோட்டைகளையும் உடைய மூன்று அசுரர்கள் மிக்க துன்பத்தைப் பிறருக்கு அளித்து வந்தார்கள். அதனால் அவர்களுடைய புரங்களை அழித்தான். உடம்பினாலும், உள்ளத்தினாலும் அசுரர்களாக இருந்தவர்களைப் பற்றிப் புராணம் சொல்கிறது. உள்ளத்தினால் அசுரராக இருப்பவர்கள் எல்லாக் காலத்திலும் உண்டு. தன் காரியங்களால் தானே இன்பம் அடைகிறவன் மனிதன்; தன் காரியங்களால் தானும் இன்புற்றுப் பிறரையும் இன்புறச் செய்பவன் தேவன்; தன் செயலால் பிறருக்குத் துன்பத்தை விளைவித்து அதைக் கண்டு இன்புறுகிறவன் அசுரன். இன்றைக்கும் தம் காரியங்களால் பிறருக்குத் ஊறு விளைவித்து உவகை கொள்கிறவர்கள் பல பேர் இருக்கிறார்கள்; அவர்கள் எல்லோரும் அசுர சாதியைச் சேர்ந்தவர்களே. சங்க நூலாகிய கலித்தொகையில் ஒரு பாட்டு வருகிறது. பாலை நிலம்; அந்த நிலத்தில் தண்ணிர் இராது. மரங்கள் கருகிப் போய் இருக்கும். மான் தண்ணீர் என்று கானல் நீரைத் தேடி ஓடி அலையும். தப்பித் தவறி அங்கே யாராவது போய்விட்டால் அவர்கள் அங்குள்ள விலங்குகளுக்கு இரையாகிவிடுவார்கள். ஆறலை கள்வர் அவர்களை அடித்துப் பறிப்பார்கள். வழிப்போக்கர்களிடம் இருக்கும் அவல், அரிசி, கோதுமை, பொருள் முதலியவற்றை அவர்கள் பறித்துக் கொண்டு போவார்கள். அங்கே பயிர் பச்சை இல்லை. உழைத்துச் சாப்பிட வசதி கிடையாது. தொழில் செய்து பிழைக்கலாம் என்று வேறு பிரதேசங்களுக்குப் போகும் முயற்சியும் அவர்களிடம் இல்லை. ஆகையால் அந்தப் பக்கம் போகிறவர்களை அடித்து நொறுக்கி வழி மறித்துத் திருடிச் சாப்பிடுவதே அவர்கள் வழக்கம். வழிப்பறி செய்துவிட்டுப் போனால் போகட்டும், ஆளையாவது உயிரோடு போக விடுகிறார்களா என்றால், அப்படியும் போக விட மாட்டார்கள். அவர்களுக்குக் கூத்துப் பார்ப்பதிலே மிக்க மகிழ்ச்சி அந்தப் பாலை நிலத்திலே கூத்தாட யார் வரப் போகிறார்கள்? வழிப்போக்கர்களின் கழுத்தைச் சீவியவுடனே, தலையிழந்த அவர்களது முண்டம் துள்ளும் அல்லவா? அதைக் கண்டு களிப்படைகிறார்களாம். "துள்ளுநர்க் காண்பான் தொடர்ந்துஉயிர் வவ்வலின்" என்று ஒரு புலவர் பாடுகிறார். இந்த வேடர்களை அசுரர்கள் என்றே சொல்ல வேண்டும். பிறருக்குத் துன்பத்தை விளைவித்து அதனாலே இன்பம் அடைகிறவர்கள் அல்லவா? மூன்று கோட்டைகளுக்கும் சொந்தக்காரராகிய அசுரர்கள் என்ன செய்தார்கள்? ஆகாயத்தில் விமானம் போல மூன்று கோட்டைகளும் பறந்து வந்து மக்கள் மிகுதியாக வாழும் பகுதியில் அப்படியே இறங்கும். அவை கீழே உட்கார்ந்து கொண்டவுடன் க.சொ.1-8 அந்தப் பகுதியிலுள்ள மக்கள் அப்படியே நசுங்கிச் செத்துப் போவார்கள். இதனால் என்ன பயன் என்று கேட்கலாம். இவ்வாறு மக்களைச் சாகச் செய்து பார்ப்பதில் அவர்களுக்குக் களிப்பு. இதைக் கண்டு தேவர்களுக்கு மிக்க கலக்கம் ஏற்பட்டு விட்டது. உலகம் வாழ்ந்தால்தான் தேவர்கள் எல்லோரும் வாழ முடியும். அவர்களுடைய தொழில் மின்சாரப் பகுதியில் வேலை செய்கின்ற ஊழியர்களின் வேலையையும், வளர்ச்சித் துறையில் வேலை செய்கிறவர்களின் வேலையையும் போன்றது. உலகத்திலுள்ள மக்கள் ஒன்றும் செய்யாமல், வரி கொடுக்காமல் இருந்தால், அவர்களுக்கு உத்தியோகமும் இல்லை; சம்பளமும் இல்லை. இறைவனுடைய ஆணைப்படி இவ்வுலகத்தைப் பாலிப்பதற்காக உள்ள பலதுறை அதிகாரிகள் தேவர்கள். வருணனுக்கு ஒரு பகுதி, நீர் வளத்தைக் கவனிக்க வேண்டும். வாயுவுக்கு ஒரு பகுதி; அவன் காற்றுக்குரிய மந்திரி. அக்கினி தேவன் வெளிச்சம் போடுகிற மந்திரி. இவர்களுக்கு உலக மக்களாகிய நாம் பண்ணுகிற வேள்விகளும், துதிகளும், பூசைகளும் சம்பளமாக மாறுகின்றன. இவ்வுலகில் மனிதன் வாழாமல் இருந்து விட்டால் தேவர்களுக்குச் சாப்பாடு இல்லை; பட்டினிதான். ஆதலின், உலகம் இப்படி அசுரர்களால் அழிந்து ஒழிந்து போவதைக் கண்டு, தேவர்கள் அலறிக் கொண்டு போய் இறைவனிடம் முறையிட்டார்கள். இறைவன் அதைக் கேட்டான். தேவர்களும் கொஞ்சம் அகங்காரத்தோடு இருந்தார்கள். அக்கினி தன் தொழிலைத் தான் செய்யாவிட்டால் உலகத்திலுள்ளவர்கள் எப்படி வாழ முடியும் என்று தருக்குக் கொண்டிருந்தான். உடம்பில் உயிர் இருப்பது என்னால்தானே என்று வாயு தருக்குக் கொண்டிருந்தான். இப்படியே எல்லாத் தேவர்களும், தாங்கள் தொழில் புரியாவிட்டால் உலகம் நடைபெறாது என்று செருக்குற்றிருந்தார்கள். அவர்களுடைய அகங்காரத்தையும் போக்க வேண்டுமென்று இறைவன் நினைத்தான். நாம் ஒரு காரியத்தைச் செய்தால் அதில் உள்ள ஒரு பகுதி தான் நிறைவேறுகிறது. ஆண்டவன், ஒரு காரியத்தைச் செய்யும் போது பல காரியங்கள் நிறைவேறும்.அவன் திரிபுரத்தில் இருந்த அசுரர்களை அடக்க விரும்பினான். அதோடு தேவர்களுடைய அகங்காரத்தையும் போக்க எண்ணினான். உடனே தேரில் புறப்பட்டான். பூமியைத் தேராக்கி அதை நன்றாக அலங்காரம் பண்ணினான். அதை இழுக்க வேண்டுமே வேதமாகிற நான்கு குதிரைகளைப் பூட்டினான். சூரியன், சந்திரன் ஆகிய இரண்டு சக்கரங்களைக் கோத்தான். நான்கு வேதங்களையும் உணர்ந்தவன் பிரமா. ஆதலால் தேரை ஓட்டுவதற்குரிய சாரதியாக அவனைக் கொண்டான். மேருவை வில்லாக வளைத்தான். வாசுகியை நாணாகப் பூட்டினான். வாயு, அக்கினி, திருமால் ஆகிய மூன்று பேரையும் அம்பாகக் கொண்டான். அம்புக்கு முன் பக்கம் திருமாலையும், நடுப்பக்கம் அக்கினியையும், வால் பக்கம் வாயுவையும் வைத்தான். வேகமாகப் போவதற்காக வால் பக்கம் வாயு இருந்தான். இப்படியே தேரை அணி செய்து யுத்தத்திற்குப் புறப்பட்டபோது சற்று அகங்காரம் கொண்டார் திருமால்; 'சிவ பெருமான் அந்த அசுரர்களோடு போர் செய்யப் புறப்பட்டாலும், அம்பின் நுனியில் இருக்கிற நான்தானே அவர்கள் மேல் பாய்ந்து அழிக்கப் போகிறேன்? என்று எண்ணிக் கொஞ்சம் கர்வத்தோடு இருந்தார்; தமக்குக் கர்வம் உண்டானது போலக் காட்டிக் கொண்டார். அதைப் போக்கச் சிவபிரான் எண்ணினான். வேஷம் மாறுதல் சிவபுராணத்தில் திருமாலுக்கு அகங்காரம் வந்ததாகவும், சிவபெருமான் அடக்கியதாகவும் வருகிறது. விஷ்ணு புராணத்தை எடுத்துப் பார்த்தால், சிவபெருமானுக்கு அகங்காரம் சில சமயங்களில் உண்டானதாகவும், திருமால் அடக்கியதாகவும் இருக்கும். அவற்றைக் கொண்டு சிவபெருமான் உயர்ந்தவரா, விஷ்ணு உயர்ந்தவரா என்னும் வாதத்தில் நாம் இறங்கிவிடக் கூடாது. நாடகக் குழுவைச் சேர்ந்த இரண்டு சகோதரர்கள் பலவிதமான நாடகங்களை நடித்துக் காட்டுகிறார்கள். ஒரு நாடகத்தில் அண்ணன் அரசனாக வருகிறான்; தம்பி வேலைக்காரனாக வருகிறான். மற்றொரு நாடகத்தில் தம்பி அரசனாக வருகிறான்; அண்ணன் வேலைக்காரனாக வருகிறான். இரண்டு பேரும் ஒரே நாடகத்தில் அரசனாக இருக்க முடியாது அல்லவா? அவர்கள் இரண்டு பேரில் யாரும் உண்மையில் அரசன் அல்ல; வேலைக்காரனும் அல்ல. மாறிமாறி வேலைக்காரனாகவும் அரசனாகவும் வந்தாலும், இரண்டு பேரும் உண்மையில் சமமானவர்களே. சிவனும் திருமாலும் மாறி மாறி வேஷம் போட்டுக் கொண்டு நடிக்கிறார்கள். அவர்கள் போட்டுக் கொள்ளுகிற வேஷம் எதுவும் உண்மை அன்று. கதைகளின் உட்கருத்தை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். திரிபுர சங்காரக் கதையில் அகங்காரம் திருமாலிடத்தில் ஏற்பட்டதாக இருக்கிறது. சிவபெருமான் போருக்கு எழுந்தவுடனே திருமால் தலை நிமிர்ந்து நின்றார். இது பரமசிவனுக்குத் தெரியாதா? வில்லை வளைத்து, நாண் பூட்டி, அம்பை விடப் போனவன், திருமாலுக்கு உண்டான அகங்காரத்தை எண்ணி வேடிக்கையாகச் சிரித்தான். அவ்வளவுதான்; அந்தச் சிரிப்பு, திருமாலிடம் தோன்றிய அகங்காரத்தை எரித்தது. அதோடு முப்புரங்களையும் சுட்டுச் சாம்பலாக்கிவிட்டது. திரிபுரங்களுக்கும் தலைவர்களாகிய மூன்று அசுரர்கள் வித்யுன்மாலி, தாரகாட்சன், வாணன் என்போர். சிவபிரான் தன் சிரிப்பினால் மூன்று கோட்டைகளையும் எரித்துச் சாம்பலாக்கினாலும், அந்த மூன்று அசுரர்களையும் அழிக்கவில்லை. இறைவன் கருணை ஒரு குழந்தை தன் கையிலுள்ள கோலினால் அடுத்த வீட்டுக் குழந்தையை அடிக்கிறது. அன்புள்ள தாய் என்ன செய்கிறாள்? குழந்தையை அடிக்க மாட்டாள். அதன் கைக்கோலைப் பிடுங்கி அடுப்பிலே போட்டு விடுவாள். அவ்வாறே செய்தான் சிவபிரான். எல்லாரும் இறைவனுடைய குழந்தைகள் அல்லவா? அசுரர்களும் இறைவனுடைய குழந்தைகள்தாமே? அந்த மூன்று அசுரர்களும் பொல்லாத பிள்ளைகளாக இருந்தார்கள். அவர் களுக்கு அதுகூலமாக மூன்று கோட்டைகள் கிடைத்தன. அவர்கள் அந்தக் கோட்டையின் உதவியால் துன்பத்தை விளைவித்தார்கள். தன் குழந்தையின் கையிலுள்ள கோலைப் பிடுங்கி எரித்துவிடும் தாயைப் போல, தன் குழந்தைகளாகிய அசுரர்களுடைய மூன்று கோட்டைகளையும் எரித்தான் சிவபிரான். ஆனால் அந்த மூன்று பேரையும் எரிக்கவில்லை. புரங்கள் எரிந்தவுடன் அந்த மூன்று அசுரர்களும் இறைவன் காலில் வந்து விழுந்தார்கள். அவனுடைய சந்நிதியில் அவர்கள் நல்லவர்கள் ஆகிவிட்டார்கள். இறைவன் தன் திருவிடியில் வந்து வீழ்ந்த வாணனை மிருதங்க வித்து வானாக வைத்துக் கொண்டான். மற்ற இரண்டு பேரையும் தன் வாயில் காவலராக வைத்துக் கொண்டான். இனி இந்தக் கதையின் உட்கருத்து என்ன என்று பார்க்கலாம். உட்கருத்து ஆணவம், கன்மம், மாயை என்னும் மூன்று மலங்களோடும் உள்ள ஆன்மா இந்த உலகத்தில் பிறந்து துன்பத்தை அடைகிறது. மலத்தோடு சேர்ந்திருக்கும் ஆன்மா களிம்போடு சேர்ந்துள்ள தாமிரத்திற்கு ஒப்பானது. தாமிரத்தை ரஸவாதத்தால் பொன்னாக்குவார்கள்; ஆனால் ஈயத்தைப் பொன்னாக்க மாட்டார்கள். பாதரஸத்தை விட்டு, அதோடு சில மூலிகைச் சாற்றைப் பிழிந்து புடமிட்டுப் பொன்னாக்குவதால் அதற்கு ரஸவாதம் என்று பெயர் வந்தது. தாமிரத்தை நன்றாக விளக்கி வைத்துப் பார்த்தாலே அது பொன்போல ஒளிர்வதைப் பார்க்கலாம். ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக அதில் மாசு ஏறி, அதன் பிரகாசம் மங்குகிறது. தங்கத்தின் தன்மை தாமிரத்தில் இருக்கிறது. தாமிரத்தோடு களிம்பு ஏறாமல் தடுத்தால் அது தங்கந்தான். களிம்பு இல்லாத தாமிரம் தங்கம்; களிம்புள்ள தங்கம் தாமிரம். தங்கம் பரமேசுவரன். தாமிரம் ஆன்மா. ஆன்மாதவிடத்தில் என்றும் ஒட்டிக் கொண்டு பிறவிக்குக் காரணமாக இருக்கிறது மலம் அல்லது பாசம் என்பது. உயிர் இறைவனை ஒட்ட விடாமல் செய்து கொண்டிருப்பது அந்தக் களிம்பாகிய மலம். அது மூன்று விதம்; ஆணவம், கன்மம், மாயை என்பன. யான், எனது என்று கொள்ளும் அகங்காரமமகாரம் ஆணவம், புண்ணிய பாவ வினைகள் கன்மம். கடவுளை உணராமல் ஒன்றை ஒன்றாக மயங்கிக் கிடப்பது மாயை. இந்த மூன்றும் சேர்ந்த களிம்பினால் உயிர் மூடப்பட்டிருக்கிறது. இறைவன் எந்தக் காலத்திலும் மலத்தின் சம்பந்தம் இல்லாதவன். ஆன்மாக்கள் யாவுமே மலத்தோடு சம்பந்தப்பட்ட தாமிரமாக இருக்கின்றன. தாமிரம் தங்கமாக வேண்டும். தாமிரத்தோடு சேர்ந்த களிம்பு போன்றது மலம். அதைப் போக்கும் ஞானமே அக்கினி. மலமாகிய ஆணவம், கன்மம், மாயை ஆகிய மூன்று கோட்டைகளையும் வைத்துக் கொண்டுதான் உயிர்கள் பலவிதமான தீமைகளைப் புரிகின்றன. தன் சிரிப்பினாலேயே திரிபுரங்களையும் சங்காரம் செய்த இறை வனை ஆன்மாக்கள் பற்றிக் கொண்டால், அவனுடைய சிரிப்பாகிய ஞானாக்கினியினால் மூன்று மலங்களும் சாம்பலாகிவிடும்.    "கருமருவு குகையனைய காயத்தின் நடுவுட்      களிம்புதோய் செம்பனையயான்    காண்டக இருத்தியே ஞானஅனல் மூட்டியே      கனிவுபெற உள்உருக்கிப்    பருவம தறிந்துநின் அருளான குளிகைகொடு      பரிசித்து வேதிசெய்து    பத்துமாற் றுத்தங்கம் ஆக்கியே பணிகொண்ட      பட்சத்தை என்சொல்லுவேன்" என்று இந்த ரஸவாதத்தைப் பற்றித் தாயுமானவர் பாடுகிறார். "குகையாகிய உடம்பில் களிம்பு தோய்ந்த செம்பைப் போல் உள்ளவன் ஆன்மாவாகிய நான். என்னை ஞான அனலால் உருக்கிக் களிம்பைப் போக்கி அருளாகிய குளிகையைக் கொண்டு தங்க மாக்கினாய்" என்கிறார். "ஞான அனல் மூட்டியே கனிவு பெற உள்ளுருக்கி என்பதைக் கவனிக்க வேண்டும். ஞானத்தினால் உருக்கம் உண்டாகும். உள்ளம் உருகாவிட்டால் கனிவு இல்லை; இரக்கம் இல்லை; அருள் இல்லை; பிறருடைய துன்பத்தைக் கண்டு இரங்கும் இளகிய மனம் இல்லை. அன்பர்கள் இறைவனைத் துதிக்க அவர்களுடைய மனத்திலே இளக்கம் ஏற்படும்; உள்ளம் உருகும். ஞானத்தீயினாலே உயிரைப் பற்றிக் கொண்டிருக்கிற மலமாகிய களிம்பு பொசுங்கிப் போகும். களிம்பு நீங்கிய தாமிரம் தங்கத்தோடு தங்கமாகச் சேர்ந்து விடுவதைப் போல, மலமாகிய களிம்பு நீங்கிய ஆன்மா இறைவனைச் சார்ந்து விடும். இறைவன் தன்னுடைய சிரிப்பினாலேயே ஆன்மாக்களைப் பற்றியிருக்கிற மும்மலக் கோட்டைகளை எரித்துவிடுகிறான். தீயவர்களை அவன் சுட்டு எரிப்பதில்லை; அவர்களிடமுள்ள தீமையையே போக்கி ஆட்கொள்கிறான். இத்தனை பெரிய தத்துவங்களை விளக்குகிறது திரிபுர சங்காரம். அதனைச் செய்தவனுடைய பிள்ளை முருகன்.    தேரணியிட்டுப் புரம்எரித் தான்மகன் அந்த மகனாகிய முருகன் செங்கையில் வேல் இருக்கிறது. அந்த வேல் என்ன செய்தது? மூன்று புரங்களையும் எரித்து, அவற்றுக்கு உரியவர்களை நல்லவர்கள் ஆக்கி, தன் பணியாளர்களாக வைத்துக் கொண்ட சிவபெருமானுடைய குழந்தை அல்லவா முருகன்? தகப்பனாரிடம் உள்ள அந்தப் பண்பை அவனிடமும் காணலாம். சூரனுடைய உருவத்தை மாற்றி வேலும் மயிலுமாகக் கொண்டருளினான். இவ்விரண்டும் எதிர்த்தவர்களுக்கு முடிவில் அருள் பாலிக்கும் கருணைய வெளியிடுவன. அதனால்தான் இரண்டையும் இங்கே இணைத்துக் காட்டினார் அருணகிரிநாதர். 2 வேலின் செயல் முருகன் கையில் உள்ள வேலே, அதன் கூரிய முனையே, சூரனைச் சங்காரம் செய்துவிட்டதாம்.                 செங்கையில்வேற்    கூர் அணியிட்டுஅணு வாகிக் கிரெளஞ்சம் குலைந்தரக்கர்    நேரணியிட்டு வளைந்த கடகம் நெளிந்தத; சூர்ப்    பேரணி கெட்டது; தேவேந்த்ர லோகம் பிழைத்ததுவே. அந்த வேல் மூன்று காரியங்களைச் செய்தது என்று சொல்வதோடு, அதனால் தேவேந்திர லோகம் பிழைத்தது என்று மங்களமாக முடிக்கிறார். அந்த மூன்று காரியங்கள் என்ன? கிரெளஞ்சம் குலைந்தது; அரக்கர் படை குலைந்தது; சூரன் தலைவனாக இருந்து நடத்திய பெரும் படையும் கெட்டது. கிரெளஞ்ச சங்காரம் 'அனுவாகிக் கிரெளஞ்சம் குலைந்து': கிரெளஞ்ச மலை அணு அணுவாகிக் குலைந்து போயிற்றாம். அணு என்று கண்ணுக்குப் புலப்படாத மிகச் சிறிய பொருளைக் குறிப்பார்கள். பெரிய பொருளை மலை போல இருக்கிறது என்று சொல்வார்கள். கிரெளஞ்சம் என்பது அன்றில் என்ற பறவையின் பெயர். அது நெய்தல் நிலத்தில் இருக்கும். பனை மரங்களில் ஆணும் பெண்ணுமாய் இரட்டை இரட்டையாகவே வாழும்; கணமும் ஒன்றைவிட்டு ஒன்று பிரியாமல் இருக்கும். அந்தப் பறவையைக் காதலுக்கு எடுத்துக்காட்டாகச் சொல்வது வழக்கம். அதன் பெயரை உடையது கிரெளஞ்ச மலை. கெட்டவர்கள் நல்ல பேரோடு நல்லவர்களைப் போல தோற்றம் அளிப்பதுண்டு. அதை இது நினைவூட்டுகிறது. பிறருக்குத் தீங்கு செய்யும் கயவர்கள், மனிதர்களைப் போலவே இருப்பார்கள் என்று சொல்லுகிறது திருக்குறள். தாமரை போன்ற முகம் உடையவள் என்கிறோம். தாமரைக்கும் முகத்துக்கும் வேறுபாடு தெரியும். தம்பி மாதிரியே அண்ணன் இருக்கிறான் என்றால், தம்பி வேறு, அண்ணன் வேறு என்று தெரியும். ஒப்பாகச் சொல்லும் பொருள்களுக்குள் வித்தியாசத்தை அறிந்து கொள்ளலாம். ஆனால் நல்லவர், பொல்லாதவர் என்ற இருவருக்குள்ளும் வேறுபாடே தெரியாதாம்.    "மக்களே போல்வர் கயவர் அவரன்ன    ஒப்பாரி* யாம் கண்டது இல்" என்பது குறள். யார் கயவர் என்பதைக் கண்டுகொள்ள முடியாது. முன் ஒரு நாள் மெய்ப்பொருள் நாயனாரின் வரலாற்றைச் சொன்னேன். நாயனாரைக் கொல்ல வந்த கயவன் முத்திநாதன் சிவனடியாரைப் போலவே வேஷம் தாங்கி வந்தான். உண்மையான சிவனடியார்கூடத் திருநீற்றை உடல் எல்லாம் பூசிக் கொண்டு வேஷம் போட மாட்டார். ஆனால் முத்திநாதன் மெய்யெல்லாம் விபூதி பூசி, ருத்திராட்சம் போட்டுக் கொண்டு வந்தானாம். இப்படிப் புறத்திலே வேஷம் போட்டு வந்த அந்தக் கயவன் மெய்ப்பொருள் நாயனாரைக் கொன்றான். கிரெளஞ்சாசுரன் காதல் உள்ளம் படைத்த அன்றிலைப் போலக் காட்சி அளித்தான். காதல் ஒட்டுவது; பகை வெட்டுவது. காதலுக்கு உதாரணமாகிய அன்றில் பறவையைப் போலப் புறத்திலே தோற்றம் அளித்த அவன், ஒர் அழகான மலைபோல் நின்றான், புலி பசுத்தோலைப் போர்த்துக் கொண்டதுபோல். பலர் உண்மையான மலை என்று எண்ணினார்கள். தவம் செய்வதற்குரிய அழகான இடம் என்று எண்ணிச் சிலர் அந்த மலையில் ஒப்பாரி* - ஒப்பு இருந்த குகைக்குள் செல்வார்கள். அந்தச் சமயம் பார்த்து அவன் அதை மூடிக் கொண்டுவிடுவான். அவ்வளவுதான்; உள்ளே போனவர்கள் அத்தனை பேரும் நசுங்கிச் செத்துப் போவார்கள். இது கிரெளஞ்சாசுரன் வேலை. இந்த அசுரனது சூழ்ச்சி நாளடைவில் எல்லோர்க்கும் தெரிந்தது. தேவர்களுக்கும் தெரிந்தது. அவர்கள் இறைவனிடம் முறையிட்டார்கள். இந்தக் கிரெளஞ்ச மலையைத் தன் கையிலுள்ள வேலினால் அணு அணுவாகக் குலைத்தான் முருகன். அவன் செங்கையில் உள்ள வேலின் கூரானது அண்ணியிட்டு, அணுக, கிரெளஞ்ச மலை குலைந்தது. அசுர சங்காரம் அதற்குப் பிறகு தாரகாசுரனாகிய யானை முகன் தன் படையுடன் வந்தான். பின்பு சிங்கமுகாசுரன் வந்தான். முருகனது கூர்மையான வேல் அவர்களையும் சங்காரம் செய்துவிட்டது. சூரனுக்குத் துணையாக இருந்த கிரெளஞ்சம் குலைந்தது என்றவுடனேயே அசுரக் கூட்டதிற்குத் திகில் வந்துவிட்டது. அடுத்துத் தாரகன் முதலிய அசுரர் நேரே அணிவகுத்து வளைந்த படையும் நிலை குலைந்தது.    அணுவாகிக் கிரெளஞ்சம் குலைந்து அரக்கர்    நேரணியிட்டு வளைந்த கடகம் நெளிந்தது; சூர்ப்    பேரணி கெட்டது. சூரசங்காரம் சூரனே போர்க்களத்திற்கு வந்துவிட்டான். மயிலின் மேல் சின்னஞ்சிறு குழந்தையாக வீற்றிருக்கிற இளமுருகனைப் பார்த்தவுடன், "இவனா நம் படைகளை எல்லாம் அழிக்க வந்தவன்? இந்தச் சின்னஞ்சிறு குழந்தையை ஒரு நொடியில் என்ன செய்கிறேன் பார்!’ என்று கொக்கரித்தான். வேல் அவன் படையையும் கெடச் செய்தது. பெரிய போர்கள் மூன்று. பாரதப்போர், ராமாயண யுத்தம், சூரசங்காரம் என்பன அவை. பாரதப் போர் பதினெட்டு நாட்கள் நடந்ததாம். ராமராவண யுத்தம் அதைவிடப் பெரியது; அது பதினெட்டு மாதங்கள் நடந்தது என்பார்கள். ஆனால் சூரசங்காரப் போர் பதினெட்டு ஆண்டுகள் நடந்தது என்பர். அது எவ்வளவு பெரிய போர் என்பதை அதனால் தெரிந்து கொள்ளலாம். இந்தப் போரிலே தன் சிரிப்பினாலேயே திரிபுர சங்காரம் செய்த சிவ பெருமானுடைய குமாரன் தன் செங்கை வேலினால் முதலில் சூரனது படைக்குப் பெரிய பாதுகாப்பாக அமைந்திருந்த கிரெளஞ்ச மலையை அணு அணுவாகிப் போகும்படி குலைத்தான். பின்பு மற்ற அசுரர் படைகளை ஒழிந்து போகும்படி செய்தான். கடைசியில் சூர்ப்பேரணி கெடச் சூரனையும் சங்காரம் செய்தான். சூரன் அழிந்து ஒழிந்தான் என்று இதில் சொல்ல வில்லை. அவனுடைய பேரணி கெட்டது என்று மாத்திரம் சொன்னார். ஆனாலும் அதைக் குறிப்பாகச் சொன்னதாகவே கொள்ள வேண்டும். சூர சங்காரத்தை அருணகிரிநாதர் இந்தப் பாட்டிலே மூன்று பகுதியாகச் சொன்னார்; முதலில் கிரெளஞ்ச சங்காரம்; அடுத்தது தாரகாசுரன் முதலிய அசுரர்களுடைய படைகளின் அழிவு; கடைசியாகச் சூரனுடைய அழிவு. . தேவர் பெற்ற வாழ்வு பிறருக்குத் துன்பம் விளைவித்து வந்த அசுரர்களை எல்லாம் அழித்தான் முருகன். அதனால் பயன் பெற்று வாழ்ந்தவர் யார்?    தேவேந்த்ர லோகம் பிழைத்ததுவே. சூரன் தன் படையைக் கொண்டு தேவேந்திர லோகத்தைக் கைப்பற்றித் தேவர்களைச் சிறையில் அடைத்தான். தேவர்கள் இதுவரையிலும் செய்து வந்த தொழில்களைச் செய்ய வொட்டாமல் தடுத்தான். அவர்களுடைய இன்ப வாழ்க்கையைக் குலைத்தான்; சுதந்தரத்தைக் குலைத்தான். புரமெரித்தான் மகனுடைய கையிலுள்ள வேல், சூரனையும், அவனுடைய அசுரப் படைகளையும் குலைத்தவுடனே தேவர்கள் சுதந்தரம் பெற்றார்கள், தேவேந்திர லோகம் பிழைத்தது. அசுர சம்பத்தும் தேவ சம்பத்தும் மனிதர்களுடைய வாழ்க்கையில் ஒவ்வொருவரிடமும் சூரசங்காரம் நிகழ வேண்டும். ஒவ்வொரு மனிதனுடைய மனத் திலும் இருக்கின்றவை அசுர சம்பத்தாகிய தீய குணங்கள். தேவ சம்பத்தாகிய நல்ல குணங்களும் இருக்கின்றன. சூரபன்மனுடைய தாயின் பெயர் மாயை. மாயையின் பிள்ளைதான் சூரன். மாயையின் பிள்ளைகளே தீய குணங்கள். அந்த மாயையின் பிள்ளையாகிய சூரன் தேவர்கள் தம் நல்ல காரியங்களைச் செய்யவொட்டாமல் தடுத்துச் சிறையில் போட்டுப் பலவிதமான துன்பங்களைச் செய்தான். நம் மனத்திலே இருக்கிற மாயையின் பிள்ளைகளாகிய காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாச்சரியம் ஆகிய தீய குணங்களோ பிறருக்குத் தீங்கு விளைவிக்காமை, பிறருக்கு உபகாரம் செய்தல், பிறரிடம் அன்பு பாராட்டுதல் முதலியவற்றிற்குக் காரணமான நல்ல குணங்களை அடக்கி, ஆன்மாக்களுக்கு மிகுந்த துன்பத்தை விளைவித்து வருகின்றன. தேவர்களுடைய வாழ்க்கையிடம் போல இருக்க வேண்டியது நம் மனம். ஆனால் அது அசுரர்களின் பூமியாகிவிட்டது. அதனால் ஆன்மாக்கள் விடுதலை பெறாமல் துன்பம் அடைகின்றன. அது மாற வேண்டுமானால் தீய குணங்கள் மாற வேண்டும். அசுரர்களுடைய ஆளுகைக்கு உட்பட்டிருக்கிற மனம், தேவர்களுடைய லோகம் ஆக வேண்டும். சூரனைத் தேவர்களால் அழித்துவிட முடியாது. அதற்கு ஏற்ற ஆற்றல் அவர்களிடம் இல்லை. அதைப்போலவே நம்முடைய மனத்தில் தோன்றுகிற தீய குணங்களை நாமே அழித்துவிட முடியாது. அதற்கு ஏற்ற ஆற்றல் நமக்கு இல்லை. இறைவன் அருளால் ஞானம் ஏற்பட்டு அவை அழிய வேண்டும். முருகன் கையில் உள்ள வேல் ஞான உருவுடையது; ஞான சக்தி. இருவகைக் கருணை தேவர்களுக்கு அசுரர்களை அழிக்கும் ஆற்றல் இருந்தால் அவர்கள் இறைவனை மதிக்க மாட்டார்கள்; மிக்க அகங்காரம் உடையவர்கள் ஆகிவிடுவார்கள். உண்மையில் ஆண்டவன் அசுரர்களைச் சிருஷ்டித்ததே, தன் புகழைத் தேவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டுமென்பதற்காகத்தான். நல்லதைக் கேட்கின்ற குழந்தைகளுக்கு நல்லதை அளிக்கும் தாயாகவும், கெட்ட காரியங்களைச் செய்கின்ற குழந்தைகளை அடித்து உதைத்து அவர்களை நல்வழிப்படுத்துகின்ற தாயாகவும் இறைவன் இருக்கின்றான். அறக் கருணை உடையவனாகவும், மறக் கருணை உடையவனாகவும் அவன் இருக்கிறான். அணைத்துக் காப்பாற்றுவது அறக்கருணை; அடித்துக் காப்பாற்றுவது மறக் கருணை. அசுரர்களை அழித்ததுவும் கருணையே; மறக்கருணை.    "வானம்எங் கே? அமுத பானம்எங் கே? அமரர்      வாழ்க்கைஅபி மானம்எங்கே?    மாட்சிஎங் கேஅவர்கள் சூழ்ச்சிஎங் கே?தேவ      மன்னன்அர சாட்சிஎங்கே?    ஞானம்எங் கேமுனிவர் மோனம்எங்கே?அந்த      நான்முகன் விதித்தல்எங்கே?    நாரணன் காத்தலை நடாத்தல்எங் கே?மறை      நவின் றிடும் ஒழுக்கம்எங்கே?    ஈனம்அங் கேசெய்த தாரகனை ஆயிர      இலக்கமுறு சிங்கமுகனை    எண்ணரிய திறல்பெற்ற சூரனை மறக்கருணை      ஈந்துபணி கொண்டிலைஎனின்    தானம்இங் கேர்சென்னைக் கந்தகோட்      டத்துள்வளர் தலம்ஓங்கு கந்தவேளே    தண்முகத் துய்யமணி உண்முகச் சைவணி      சண்முகத் தெய்வமணியே" என்று இந்த மறக் கருணையை அருட்பிரகாச வள்ளலார் பாராட்டுகிறார். இரண்டு நோயாளிகளுக்கு நோய் வந்தது. இரண்டு பேருடைய நோயையும் குணப்படுத்துபவன் ஒரே மருத்துவன் தான். ஆனால் அவன் ஒருவனுக்கு மருந்தைத் தேனிலே குழைத்துச் சாப்பிடும்படி சொல்கிறான். மற்றவனுக்கோ கத்தியை எடுத்து உடலை அறுத்துச் சிகிச்சை செய்கிறான். "ஏன் எனக்கும் தேனிலே மருந்து கலந்து கொடுக்கக் கூடாது?" என்றால், அவனுக்கு ஏற்பட்ட நோய் இவனுக்கு வந்த வியாதியைப் போன்றது அன்று. ஜூரம் வந்தால் அவன் கொடுக்கிற ஒரு வேளை மருந்திலே சரியாகிவிடும். புற்றுநோய் வந்துவிட்டால் மிக்ஸர் கொடுத்தால் போதாது; ரணசிகிச்சைதான் பண்ண வேண்டும். டாக்டருடைய எண்ணம் இரண்டு பேருடைய நோயையும் குணப்படுத்த வேண்டுமென்பதுதான். அதைப்போலவே இறைவன் எல்லோருக்கும் கருணை காட்ட வேண்டுமென்றே விரும்புகிறான். அவன் காட்டுகின்ற ஒரு கருணை மென்மையாகத் தோன்றுகிறது. மற்றொன்று கடுமையாகத் தோன்றுகிறது. மென்மையாகத் தோன்றுவது அறக் கருணை, கடுமையாகத் தோன்றுவது மறக்கருணை; முருகன் சூரபன்மனிடம் மறக் கருணை காட்டி ஆட்கொண்டான். மூன்று இயல் தேவேந்திரன் தேவலோகத்தை ஆட்சி செலுத்தமுடியாமல் செய்து, அவன் பதவியையும் பற்றிக் கொண்டான் சூரன். எல்லாத் தேவர்களையும் அவரவர்களுடைய தொழிலைச் செய்ய முடியாமல் சிறையில் அடைத்துவிட்டான். அதனால் சிருஷ்டி இல்லை; ஸ்திதி இல்லை; சங்காரம் இல்லை. தேவர்களுக்குச் சாப்பாடு இல்லை; அதனால் ஊட்டம் இல்லை. இறைவன் என்ன என்ன கடமையைத் தேவர்கள் செய்ய வேண்டுமென்று வைத்தானோ அவற்றைச் செய்ய முடியாமல் அவர்களைச் சிறையிட்டான் சூரன். தான் செய்ய வேண்டிய கடமையையும் செய்யவில்லை. அவனை முருகன் வதம் செய்து, மறக் கருணை காட்டி ஆட்கொண்டான்; தேவர்கள் தங்கள் தங்கள் கடமையை மறுபடியும் எவ்வித இடையூறும் இன்றிச் செய்யும்படியாகச் செய்தான். இது புராணம். கந்தபுராணத்தை மூன்று நிலையில் பார்க்கலாம். ஒன்று கதையியல். சூரபத்மன் வதையைக் கூறுவது கதை. இரண்டாவது உலகியல்; மூன்றாவது அருளியல். ஒருவன் தான் செய்ய வேண்டிய கடமையைச் செய்யாததோடு பிறர் செய்கின்ற நல்ல காரியங்களையும் செய்ய விடாமல் தடுத்து, அவர்களுக்குத் துன்பத்தை உண்டாக்கி வந்தால் அவன் அசுரன்தான். அவனைத் தண்டித்து நல்லவர்கள் நல்ல காரியங்களைச் செய்யும்படியாக உதவுபவன் முருகன். இது உலக இயலை ஒட்டிய தத்துவம். உள்ளமாகிய பீடத்தில் தேவர்களுடைய சம்பத்து ஆகிய நல்ல குணங்கள் தங்கள் கடமைகளைச் செய்யவொட்டாமல், அந்தப் பீடத்திலே அசுரர்களுடைய சம்பத்து ஆகிய காமக் குரோத லோப மோக மத மாச்சரியங்கள் வந்து ஆக்கிரமித்துக் கொண்டு, ஆன்மாவுக்குப் பல துன்பங்களை விளைவித்து வருகின்றன. கடமையை உணர்ந்த நல்ல அறிவு என்ற வேல் வந்தால், ஞானமாகிற கூர்மையான வேல் பாய்ந்தால், அஞ்ஞானத்தின் விளைவாகிய அசுரக் கூட்டங்கள் அழிந்து ஒழிந்து போகின்றன என்பது அருளியலை ஒட்டிய தத்துவம். இறைவன் கையிலுள்ள வேல் இந்தக் காரியங்களை எல்லாம் செய்கிறது; மனிதனுடைய உள்ளம் நாய்க் கோலம் பூண்டாலும், யானைக் கோலம் பூண்டாலும், யாளிக் கோலம் பூண்டாலும், அதை அழித்து ஒழித்து உண்மையான அன்புக் கோலம் பூணும் படியாகச் செய்கிறது. இதனை விளக்குவது கந்தபுராணம். 3 கந்த புராணம் கந்த புராணம் மிகவும் பெரிய கதை. அப்புராணத்தில் சொல்லப் பெறாத பொருளே இல்லை. பதினெண்புராணங்களில் மிகவும் பெரியது கந்தபுராணந்தான். "எந்தப் பொருளும் கந்த புராணத்தில்" என்று பெரியவர்கள் சொன்னார்கள். தமிழில் கச்சியப்பசிவாசாரியர் இயற்றியுள்ள கந்தபுராணம், வடமொழியிலுள்ள ஸ்காந்தம் முழுவதையும் மொழிபெயர்த்து அமைத்தது அல்ல; அதில் ஒரு பகுதிதான். இதுவே மிகப் பெரியதாக இருக்கும்போது, மூலம் எவ்வளவு பெரியதாக இருக்கும் என்பதை உணர்ந்து கொள்ளலாம். கந்தபுராணக் கதைகளைக் கந்தர் அலங்காரத்தில் அங்கங்கே பார்க்கலாம். இந்தப் பாட்டை ஐந்து பகுதிகளாகப் பிரிக்கலாம். "தேரணி யிட்டுப் புரம் எரித்தான் மகன்" என்பது முதற் பகுதி. "செங்கையில்வேற் கூரணி யிட்டு அணு வாகிக் கிரெளஞ்சம் குலைந்து" என்பது இரண்டாவது பகுதி. "அரக்கர் நேரணியிட்டு வளைந்த கடகம் நெளிந்தது" என்பது மூன்றாவது பகுதி. "சூர்ப் பேரணி கெட்டது" என்பது நான்காம் பகுதி. "தேவேந்த்ர லோகம் பிழைத்ததுவே" என்பது ஐந்தாவ்து பகுதி. இந்தப் பகுதிகளில் கந்தப்புராணத்தில் விரிவாகக் காணப்படும் ஐந்து பெரிய பகுதிகளின் சாரம் அடங்கியிருக்கிறது. பழைய வரலாறுகள் “கந்தபுராணம் என்பது தமிழிலே கச்சியப்ப சிவாசாரியார் அவர்கள் எழுதியதுதானே? அதற்கு முன்பு கிடையாதே. அதில் உள்ள கதைகள் எப்படிப் பழையன ஆகும்?" என்று சொல்லலாம். முருகனைப் பற்றிய வரலாறுகள் மிகப் பழங்காலத் தொட்டே தமிழ் நாட்டில் வழங்கி வருகின்றன. சங்க நூல்களில் பல செய்திகள் இருக்கின்றன. பரிபாடலின் முருகன் அவதாரச் செய்தி வருகிறது. சூரபன்மனைப் பற்றிப் புலவர்கள் சொல்லியிருக்கிறார்கள். கந்தபுராணத்தில் காணாத செய்திகளையும் அதில் பார்க்கிறோம். சூரபன்மன் ஒரு மாமரமாகத் தலை கீழாய் இருந்தானென்று பழைய நூல் சொல்கிறது. அந்த மரத்தில் பூ, காய், பழம் எல்லாம் கீழே இருந்தன; வேர் மேலே இருந்ததாம். நல்லவர்கள் எல்லாம் நேரே இருந்தால், அசுரர்கள் தலைகீழாய்த்தானே இருப்பார்கள்? கிளெஞ்ச மலை சூரனுக்குக் கவசம் போல் இருந்ததாம். முருகன் தன் வேலால் அந்த மலையையும் சூரபன்மனையும் ஒருங்கே பிளந்தானாம்.    "ஒருதோகை மிசையேறி உழல்சூரும் மலைமார்பும்      உடனஊடறப    பொருதோகை சுரராச புரமேற விடுகாளை      புகழ்பாடுவாம்" என்று ஒட்டக்கூத்தர் தக்கயாகப் பரணியில் பாடுகிறார்.    "கிளைபட் டெழுசூர் உரமும் கிரியும்    தொளைபட் டழியத் தொடுவே லவனே" என்று அருணகிரிநாதர் கந்தரநுபூதியில் பாடுகிறார். இத்தகைய வரலாறுகள் பல பழங்கால முதற் கொண்டு வழங்கி வருகின்றன. பின் வந்த கதைகளில் வேறுபாடு இருக்கலாம். வேறுபாடு இருக்கின்ற காரணத்தினாலேயே இவை கதை, உண்மை அல்ல என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். உள்ளுறையாகிய தத்துவமே உண்மை என்று தெளிய வேண்டும்.    தேர் அணி இட்டுப் புரம்ளித்      தான்மகன் செங்கையில்வேற்    கூர்அணி யிட்டணு வாகிக்      கிரெளஞ்சம் குலைந்தரக்கர்    நேர்அணி யிட்டு வளைந்த    கடகம் நெளிந்தது; சூர்ப்    பேர்அணி கெட்டது, தேவேந்த்ர    லோகம் பிழைத்ததுவே. (பூமியாகிய தேரை அலங்காரஞ் செய்து திரிபுரங்களை எரித்த சிவபெருமானுடைய மகனாகிய முருகனது செங்கையிலுள்ள வேலின் கூரானது, நெருங்கிச் செல்லச் செல்ல, கிரெளஞ்ச மலை அணுவாகிப் பொடியாகிக் குலைய, அசுரர்கள் நேரே அணி வகுத்துச் சூழ்ந்த படை நிலை குலைந்தது; சூரனுடைய பெரிய வியூகம் கெட்டது; தேவேந்திரனுக்குரிய உலகம் உய்ந்தது. அணியிட்டு-அலங்காரம் செய்து. கூர்-கூரிய துணி. அணியிட்டு-அண்ணியிட்டு; நெருங்கி; நெருங்க எனக் கொள்க; எச்சத்திரிபு. கிரெளஞ்சம் அணுவாகிக் குலைந்தது. அரக்கர் என்றது இங்கே அசுரரைச் சுட்டியது. நேர்-நேராக. அணியிட்டு-அணியாக வகுத்து. கடகம்-படை. பேர் அணி-பெரிய படை வகுப்பு.) குறிஞ்சிக் கிழவன் முகவுரை அருணகிரிநாதர் முருகன் அருளில் மூழ்கித் திளைத்தவர். அதுமாத்திரம் அன்று. சிறந்த புலமை உடையவர். அவருடைய திருவாக்கைக் கூர்ந்து ஆராய்ந்தால் தென்மொழியிலும் வட மொழியிலும் ஒருங்கே புலமை பெற்றவர் என்பதை உணரலாம். பழங்காலத்தில் அராகம், வண்ணம், வகுப்பு, முடுகு என்ற பெயரோடு அங்கங்கே சந்த அமைப்பையுடைய கவிகள் இருந்தாலும் முழுவதும் சந்தம் அமைந்த திருப்புகழைப் போலச் சந்தக் கவி பாடியவர்கள் மிக அரியர். அதுவும் ஒரு பாட்டா, இரண்டு பாட்டா? பதினாயிரம் திருப்புகழ்களையல்லவா மேகம் போலப் பொழிந்து தள்ளியிருக்கிறார்? தமிழர்களுடைய இழவூழால் அவற்றில் பெரும்பாலன மறைந்தன. சற்றேறக்குறைய 1300 பாடல்களே இப்போது கிடைத்திருக்கின்றன. பிரபுடதேவராயன் காலத்தில் வாழ்ந்தவர் அருணகிரிநாதர். அம்மன்னன் 16-ஆவது நூற்றாண்டில் வாழ்ந்தவன் என்று தெரிய வருகிறது. அக்காலத்தில் கருநாடக அரசர்கள் இப்பக்கத்தில் ஆண்டதனால் கன்னடத்துக்கு அதிகச் சலுகை இருந்து வந்தது. அப்போது தமிழில் வில்லிபுத்தூரார் சிறந்த கவிஞராகத் திகழ்ந்தார். அவருடைய வாக்கில் முடுகு நடை விரவிய கவிகள் பல உண்டு. அருணகிரிநாதர் வெள்ளம் போலச் சந்தக் கவியைப் பாடிய காலமாதலின் வில்லிபுத்துரரும் சந்த விருத்தங்களைப் பாடினர் போலும்! புதிய வகையில் சந்தக் கவி பாடியது மாத்திரமன்று; முருகனைப் பற்றியே அவ்வளவு பாடல்களையும் பாடினார். அதற்குமுன் முருகனைத் துதித்த பாடல்கள் தமிழில் இருந்தாலும் ஒரே புலவர் இத்துணைப் பாடல்களைப் பாடவில்லை. அதற்கு முன் முருகனைப் பற்றிப் பாடிய கவிகளைத் தொகுத்துப் பார்த்தால் அத்தனைக் கவிகளுக்கும் அதிகமாகவே அருணகிரியார் பாடினார் என்பது தெரியவரும். அருண்கிரியார் பாடலில் இது இரண்டாவது சிறப்பு. மூன்றாவது அவருடைய சமரச இயல்பு. தேவாரம், திவ்யப் பிரபந்தமாகிய அருள் நூல்களிற்கூட ஏனைய சமயத்தார் உள்ளம் புண்படும் இடங்கள் இருக்கலாம். ஆனால் அருணகிரிநாதர் பாடல்களில் எல்லாத் தெய்வங்களும் போற்றப் பெறுகின்றனர். சாதன வகைகளாகிய சரியை, கிரியை, யோகம், ஞானம் என்னும் நான்கைப் பற்றிய செய்திகளையும் அவற்றில் காணலாம். வடமொழி தென்மொழி இணைப்பு, பழமை புதுமை இணைப்பு, இசை இயல் இணைப்பு, சைவ வைணவ இணைப்பு, யோக ஞான இணைப்பு, உலகியல் பதியியல் இணைப்பு முதலிய பல இணைப்புகள் அருணகிரியார் திருவாக்கில் ஒளிவிடும். காழ்ப்பின்றி யாவரையும் தழுவிக் கொண்டு சமரச நெறியிலே வாழ்வதை விரும்பும் இக்காலத்துச் சான்றோர்க்கு உவப்பைத் தருவது அவர் பாடல். இந்தப் பண்புகள் அனைத்தும் கந்தர் அலங்காரத்தில் விரவியிருத்தலைக் காணலாம். இதில் உள்ள பாடல்கள் கட்டளைக் கலித்துறை என்னும் கலிப்பா இனத்தைச் சேர்ந்தவை. ஆயினும் பல பாடல்களில் சந்த அமைதி இருக்கிறது. “சேராநிட் டூரனைச் சூரனைக் காருடற் சோரிகக்கக் கூரகட் டாரியிட் டோரிமைப் போதினிற் கொன்றவனே" என்ற பாட்டினில் தானனத் தானனத் தானனத் தானனத் என்ற சந்தம் அமைந்திருக்கிறது. வேறு சில பாடல்களும் உண்டு. சிவபுராணச் செய்திகளும் கந்த புராண வரலாறுகளும் பாரத ராமாயணத்தில் வரும் நிகழ்ச்சிகளும் திருப்புகழிலும் உண்டு; மற்ற நூல்களிலும் உண்டு. இந்தப் புத்தகத்தில் நான்கு பாடல்களுக்குரிய விளக்கங்கள் இருக்கின்றன. ஐந்து பகைவர், குறிஞ்சிக் கிழவன், தனிப்பரமானந்தம், பேய் விளையாட்டு என்ற தலைப்பில் அவ்விளக்கங்கள் இதில் உள்ளன. பாட்டின் பொருளை மாத்திரம் பதவுரையாகவோ பொழிப்புரையாகவோ எழுதிவிடுவது மிக எளிது. இந்த நான்கும் சொற்பொழிவாகச் செய்த விளக்கம். ஆதலால், சொல்லுக்குப் பொருள் உரைப்பதோடு நில்லாமல் அங்கங்கே உள்ள பொருள்களை வேறு செய்திகளோடு சார்த்தி விளக்கும் முறையில் இச்சொற்பொழிவுகள் அமைந்திருக்கின்றன. கந்த புராணத்திலுள்ள வரலாறுகள் வருமிடங்களில் அவற்றின் உள்ளுறையை என் அறிவுக்குப் புலனாகிய அளவுக்கு விளக்கியிருக்கிறேன். நம் நாட்டில் வழங்கும் புராணங்களில் வரும் கதைகள் நம்பத்தகாதன, குருட்டு நம்பிக்கையினால் எழுந்தன என்று சிலர் சொல்லுவார்கள். மனித ஆற்றலுக்கு அப்பாற்பட்ட நிகழ்ச்சிகளை வைத்துப் புனைந்த கற்பனைக் கதைகள் பல உண்டு; அத்தகைய அபூத கற்பனைகளில் வரும் நிகழ்ச்சிகள் முன்பு நடந்தவை அல்ல; இனியும் நடக்கப் போவன அல்ல. ஆனாலும் அவற்றைப் படித்து இன்புறுகிறார்கள் இக் காலத்து மக்கள். கதைகளில் பாத்திரங்களின் இயல்புகளும் அடிப்படையான உண்மைகளும் உள்ளுறையாக அமைந்திருப்பதால் அவற்றைத் தெரிந்து மகிழ்ச்சியடைகிறார்கள். அதே தெளிவு புராணக் கதைகளிலும் காணலாம். அவற்றிலுள்ள வரலாறுகள் அனைத்தும் அப்படியே நிகழ்ந்தன என்று கொள்ள வேண்டியது இன்றியமையாததன்று. அவற்றினூடே உள்ள கருத்துக்களை, அக்கதைகள் எந்த உண்மையை வெளிப்படுத்த அமைந்தனவோ அந்தக் குறிப்புக்களை, உணர்ந்தால் இப்போது தோன்றும் அபூத கற்பனைகளைச் சுவைப்பது போலவே புராணக் கதைகளையும் சுவைக்கலாம். புராணத்தில் வரும் கதைகள் இந்த நாட்டுக்கு மாத்திரமே உரியன என்பதற்கும் இல்லை. எல்லா நாடுகளிலும் எல்லாச் சமயங்களிலும் எல்லா மொழிகளிலும் இத்தகைய கதைகள் உண்டு. இந்தக் கதைகளை எண்ணித் தங்கள் சமய நெறிகளை இழிவாகக் கருதுபவர் யாரும் இல்லை. மற்ற நாட்டுக் கதைகளினூடே உள்ளுறை இருக்கிறதோ இல்லையோ, திட்டமாகச் சொல்ல இயலாது. இந்த நாட்டுக் கதைகளுக்கு நிச்சயமாகத் தத்துவார்த்தம் உண்டு. மூர்த்திகளின் உருவ வேறுபாடுகளுக்குத் தனித்தனியே உள்ளுறை உண்டு, கோயிலின் அமைப்புக்கும், வழிபாட்டு முறைக்கும், விழாக்களுக்கும், கடவுளின் பல்வேறு திருஉருவங்களுக்கும், திருவிளையாடல்களுக்கும் உள்ளே நுட்பமாக அமைந்த கருத்துக்கள் உண்டு. அக்கருத்துக்களை கருவாகக் கொண்டு உருவெடுத்தவை அவை. பொதுவாக இந்திய நாட்டின் கலைகள் யாவுமே உள்ளுறையுடன் அமைந்த குறிப்புக் கலைகளே (Suggestive Art). ஆதலின் புராணக் கதைகளின் சிறப்பை அறிய வேண்டுமானால் மேலெழுந்த வாரியாகப் பார்த்து, "இது என்ன பைத்தியக்காரக் கதை" என்று புறக்கணிக்கக் கூடாது. "இதன் கருத்து யாது?" என்று கூர்ந்து ஆராய வேண்டும். நம்முடைய சமய உண்மைகளை நிலைக்களமாக வைத்துக் கொண்டு ஒப்பு நோக்க வேண்டும். அப்போது உள்ளுறை விளங்கும். நுண்பொருளைப் பருப்பொருளாகக் காட்டியிருக்கும் கலைத்திறத்தைப் பாராட்டிப் போற்றும் நிலைக்கு வந்துவிடுவோம். இப்புத்தகத்தில் சில இடங்களில் புராண வரலாறுகளின் உள்ளுறையை ஒரளவுக்கு விளக்கியிருக்கிறேன். சொற்பொழிவுகளினிடை விளக்கியவையே அவை. இலக்கிய சம்பந்தமான செய்திகளையும் அங்கங்கே விளக்கியிருக்கிறேன். ஐந்திணையைப் பற்றிய செய்திகள், முருகனைக் குறிஞ்சித் தெய்வமாக வைத்துப் போற்றும் மரபு, விழுப்புண், கள வேள்வி முதலியவற்றை இலக்கிய இலக்கண நூல்களிற் கண்ட பொருள்களோடு வைத்துக் காட்டி விளக்க முயன்றிருக்கிறேன். நான் எழுதியுள்ள திருமுறை மலர்கள் என்ற வெளியீடுகளிலும், வேறு சில நூல்களிலும் காணும் கருத்துக்கள் சில இதில் அங்கங்கே வந்திருக்கலாம். ஒரு கருத்தைப் பல இடங்களில் விளக்க வேண்டி வரும்போது இது மாற்ற முடியாதது என்பது அன்பர்களுக்குத் தெரியும். சமய சம்பந்தமான கருத்துக்கள் நுட்பமானவை. அவற்றை விளக்குவது எளிதன்று. பெரியோர்களின் திருவாக்குகளை மேற்கோள் காட்டினால் மாத்திரம் போதாது. ஆதலின், வாழ்க்கையில் நாம் நேரே அறியும் நிகழ்ச்சிகளை உவமையாக வைத்துப் பல கருத்துக்களை விளக்கியிருக்கிறேன். பழம் புலவர்கள் கூறுவனவற்றைப் புதிய முறையில் அமைத்துக் காட்டும் இடங்களும், முழுதும் புதியனவாகவே உவமை கூறி விளக்கும் இடங்களும் இதில் உண்டு. இவை சொற்பொழிவுகளானமையால் ஒரு பொருளைப் பல வகையில் விளக்கிச் சொல்ல வேண்டியது அவசியமாயிற்று. உவமைகளும், உதாரணங்களும் மேற்கொள்ளும் கருத்துக்களை விளக்க உதவி புரிகின்றன. வாழ்க்கை நிகழ்ச்சிகளிலிருந்து எடுத்துக் காட்டும் உவமைகளால் பொருள் விளங்குவதைப் போல, மற்ற எதனாலும் அவ்வளவு தெளிவாக விளங்குவதிலை. அதனால் பல பல உவமைகளைப் பேச்சினிடையே பயன்படுத்துவது என் வழக்கமாகிவிட்டது. எழுதும் கட்டுரையில் உள்ள செறிவு இதில் இல்லாமல் இருக்கலாம்; ஆனால் விளங்காத பகுதி ஒன்றும் இதில் இராதென்றே எண்ணுகிறேன். பேச்சைக் கேட்கும்போது உண்டாகும் அநுபவம் வேறு. பேச்சில் தொனி வேறுபாடுகளும், பேசுபவனுக்கு நேரே கேட்பவர்கள் இருந்து ஒரு முகமாகக் கவனிக்கும் வாய்ப்பும் உண்டு. அதனால் பேச்சில் ஓரளவு சுவை பிறக்கிறது. அந்த வாய்ப்புக் கட்டுரைகளுக்கு இல்லை. ஆனாலும் பன்முறை படித்துப் படித்து இன்புற இயலும். இதற்கு முன் வெளியிட்ட "அலங்காரம்" என்னும் புத்தகத்தில் உள்ள சொற்பொழிவுகளைச் சுருக்கெழுத்தில் எடுத்துத்தந்த என் அன்பர் திரு. அனந்தன் அவர்களே இந்தப் புத்தகத்தில் உள்ளவற்றையும் எடுத்தார். அவருடைய அன்பை அளவிட்டுச் சொல்வது இயலாத காரியம். ஒன்றரை மணி நேரம் விடாமல் சுருக்கெழுத்து எழுதிப் பிறகு அதைத் தட்டெழுத்தில் வார்த்துத் தர வெறும் ஆற்றல் மாத்திரம் இருந்தால் போதாது; தனியான அன்பு இருப்பதனால்தான் இது அவருக்குச் சாத்தியமாகிறது. அந்த அன்பும் அவர் ஆற்றலும் அவர் நலங்களும் முருகன் திருவருளால் மேன்மேலும் வளர வேண்டும் என்று வாழ்த்துகிறேன். தேனாம்பேட்டையில் உள்ள பாலசுப்பிரமணியர் திருக்கோயிலில் வாரந்தோறும் வியாழக்கிழமையன்று இரவு ஏழு மணி முதல் எட்டரை மணி வரையில் இந்தச் சொற்பொழிவுகளை நிகழ்த்தி வருகிறேன். ஒன்றரை மணி நேரம் பொறுமையோடு இருந்து கேட்கும் அன்பர்கள் என் உள்ளத்தே ஊக்கம் உண்டாகும்படி செய்கிறார்கள். அவ்வப்போது அவர்கள் காட்டும் களிப்புக் குறிப்பு அவ்வூக்கத்துக்கு உரமூட்டுகிறது. வழக்கம்போல் ஒவ்வொரு வாரமும் என்னை அன்புடன் வரவேற்றுச் சொற்பொழிவு இனிது நிகழும்படி வேண்டியவற்றைச் செய்யும் தர்மகர்த்தர்களாகிய ஸ்ரீ சந்திரசேகரன், ஸ்ரீ நரசிம்மன், ஸ்ரீ நாயகர் ஆகியவர்களுடைய பேரன்பை நான் பாராட்டக் கடமைப்பட்டவன். அவர்களுக்கு என் நன்றியறிவைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் புத்தகத்தில் விளக்கப் பெற்ற பாடல்கள் நான்கே. ஆனால் விரிக்கப் பெற்ற பொருள்கள் பல என்பதை அன்பர்கள் உணர்வார்கள் என்று நம்புகிறேன். உள்ளுறையைப் பார்த்தால் இது விளங்கும். முருகன் திருவருள் யாண்டும் மலிவதாகுக. கி.வா. ஜகந்நாதன் 01.01.1956  ஐந்து பகைவர் சிவபெருமான் திரிபுரம் எரித்த கதையையும் ஷண்முகநாதப் பெருமான் சூர சங்காரம் செய்த கதையையும் மூன்றாவது பாட்டில் சொன்னார் அருணகிரி நாதர். தேவலோகவாசிகள் சூரபன்மனது ஆதிக்கத்திற்கு உட்பட்டு, தங்கள் அரசையும் இழந்து, அடிமை வாழ்வில் அகப்பட்டு உழன்று கொண்டிருந்தார்கள். சூரனை வென்று முருகன் அவர்களுக்கு சுயராஜ்யம் வாங்கித் தந்தார் என்று பார்த்தோம். அடுத்தபடியாக அருணகிரி நாதருக்கு ஒரு நினைவு வந்தது. 'தேவலோகத்தைக் கைப்பற்றிக் கொண்டு தேவலோக வாசிகளை அடிமைப்படுத்திய அசுரர்களைச் சங்காரம் செய்து, ஆண்டவன் தேவர்களுக்குத்தானே பிழைப்புக் கொடுத்தான்? அதனாலே நமக்கு என்ன?' என்ற நினைவு யாருக்காவது வந்தால் என்ன செய்வது என்று எண்ணினார் போலும்: "நமக்குத் தேவலோகம் போன்ற ராஜ்யம் எதுவும் சொந்தமாக இல்லை. ஒரு ஜமீன்கூடச் சொந்தம் இல்லை. நமக்கு என்று ஒரு தனி ராஜ்யம் இருந்து, அது போய்விட்டால் மீட்டும் அதனை முருகன் வாங்கித் தருவான். ஒரு வீடுகூடச் சொந்தம் இல்லாமல் இருக்கிற நமக்கு அவனைப் பற்றி என்ன கவலை?" என்று ஒருவர் கேட்பதாக வைத்துக் கொள்வோம். அதற்குரிய விடையைப் புலப்படுத்தும் பாடலை அடுத்தபடி அலங்காரத்தில் பார்க்கிறோம். இதற்கு முன்னாலே, சொன்ன பாட்டில், 'சூர்ப்பேரணி கெட்டது" என்றுதான் சொன்னார்; சூரன் அழிந்ததைக் குறிப்பாகப் பெற வைத்தார். இந்தப் பாட்டில் இவனை முருகன் சங்காரம் செய்தான் என்பதையும் வெளிப்படையாகச் சொல்கிறார். 1 உடம்பாகிய வீடு உலகத்தில் சொத்துப் படைத்தவர்கள் எல்லாம் நிலமும் வீடும் படைத்திருக்கிறார்கள். சிலருக்கு நிலம் இல்லாவிட்டாலும் வீடு இருக்கிறது. நமக்கு என்ன வீடு இருக்கிறது? ஒன்றும் இல்லை என்று நம்மில் சிலர் நினைக்கிறோம். ஆனால் நம் எல்லோருக்கும் வீடு இருக்கின்றது. உயிர்களாகிய ஆன்மாக்கள் தங்கி வாழ்கின்ற வீடு ஒன்று உண்டு. அதற்கு உடம்பு என்று பெயர். தேகமாகிய வீட்டில் இருக்கின்ற உயிரைத் 'தேகி' என்பார்கள். தேகமாகிய வீட்டுக்கு விலாசம் உண்டு; பெயர் உண்டு. விலாசம் உள்ள அந்த வீட்டில் உயிர் குடியிருக்கிறது. மனிதன் என்று உயிர் உள்ளவனைத்தான் சொல்கிறோம். முத்துசாமி செட்டியார், முத்துசாமி ஐயர் என்றெல்லாம் விலாசம் போட்டுச் சொல்வது ஆன்மாவை அடையாளம் கண்டுகொள்வதற்கு அல்ல; உடம்பை அடையாளம் காணத்தான். உயிரோடு வாழ்கிற உடம்புக்குத்தான் அத்தகைய விலாசம் இட்டுச் சொல்கிறோம். உடம்பில் வாழ்கிற உயிர் புறப்பட்டுப் போய் விட்டால் அந்த உடம்புக்கு விலாசம் இல்லை. எல்லா உடம்புக்கும் அப்பொழுது ஒரே பெயர்தான் அமைகிறது. மக்கள் வசிக்காத இடிந்த வீடுகளை விலாசம் இல்லாமல் 'குட்டிச்சுவர்' ன்ன்று அழைப்பதைப் போல, உடம்பாகிய வீட்டிலிருந்து உயிர் போய்விட்டால் இதனைப் பிணம் என்று அழைக்கிறோம். "ஊரெல்லாம் கூடி ஒலிக்க அழுதிட்டுப் பேரினை நீக்கிப் பிணமென்று பேரிட்டுச் சூரையங் காட்டிடைக் கொண்டுபோய்ச் சுட்டிட்டு நீரினில் மூழ்கி நினைப்பொழிந் தார்களே" என்று சொல்கிறார் திருமூலர். யாருக்குச் சொந்தம்? பிணமாக இல்லாமல், உடம்பாக வளர்ச்சியுடன் இருக்கிறது இந்த விடு. மனிதனென்று சிறப்புப் பெறுகிறது. இந்த வீட்டில் உயிர் குடியிருக்கிறது. இந்த உடம்பாகிய வீடு உயிர்க்குச் சொந்தமா? அல்லது சொந்தக்காரர் வேறு யாரேனும் இருக்கிறாரா? இந்த உடம்பு உயிருக்குச் சொந்தம் என்றால் உயிர் நினைத்தபடி உடம்பு அமைய வேண்டும். நமக்குச் சொந்தமான வீட்டில் இரண்டடுக்குகள் இருக்கின்றன; நாம் விரும்பினால் மூன்று அடுக்கு மாளிகையாக அதைக் கட்டிக் கொள்ளலாம். நமக்குப் பிள்ளை அதிகமானாலும், மருமகப்பிள்ளை வீட்டுக்கு வந்தாலும் இன்னும் இரண்டு மூன்று அறைகள் தடுத்துக் கொள்ளலாம். வீட்டுக்குச் சொந்தக்காரர் தம் விருப்பப்படி அதில் பலவிதமான மாறுதல்களைச் செய்து கொள்ள முடியும். உயிரின் விருப்பப்படியே இந்த உடம்பில் வேண்டிய மாறுதல்களைச் செய்து கொள்ள முடியுமா? செவிடாகப் பிறந்த ஒருவர் அந்த செவிட்டை நீக்கிக் கொள்ள முடியுமா? நமக்கு இரண்டு கைகள் போதவில்லை; பன்னிரண்டு கைகள் வேண்டு மென்று விரும்பினால் பாக்கிக் கைகளை ஒட்டிக் கொள்ள முடியுமா? பிறவி ஊமையாகப் பிறந்த ஒருவன் பேச்சில் வல்லவன் ஆக முடியுமா? ஆகையால் இந்த உடம்பு நமக்குச் சொந்தம் அன்று என்றே தெரிந்து கொள்ள வேண்டும். இதில் நாம் குடியிருக்கிறோம். வீட்டைப் படைத்தவன் எந்த எந்த மாதிரியாகப் படைத்தானோ அதில் சிறிதளவுகூட மாற்றம் செய்ய முடியாது. இப்படி இருந்தும் இந்த உடம்பு நமக்குச் சொந்தம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். நமக்கு என்று ஒன்று இருந்தால் அதில் என்ன என்ன இருக்கின்றனவென்று நமக்கு தெரியாதா? நாம் ஒரு பெட்டியை வாங்கிக்கொண்டு வருகிறோம். அதில் பல பொருள்களை வைத்துக் கொண்டிருக்கிறோம். அந்தப் பெட்டி நம்முடைய தாதலால், அதில் பல பொருள்களையும் வைத்தவர் நாமாதலால், எப்போது கேட்டாலும் அந்தப் பெட்டியில் என்ன இருக்கின்றன என்று நம்மால் சொல்ல முடியும். இந்த உடம்பு நமக்குச் சொந்தம் என்றால் இதற்குள் என்ன இருக்கின்றன என்று சொல்ல நமக்குத் தெரிய வேண்டாமா? வயிற்று வலி வந்தால் அது எப்படி வந்தது என்று நமக்குத் தெரிவதில்லை. டாக்டரிடம் போய்க் காட்டுகிறோம். அவருக்கும் தெரிவதில்லை. எக்ஸ்ரே எடுக்க வேண்டுமென்கிறார். எக்ஸ்ரேக்கும் தெரியாமல் எத்தனையோ வியாதிகள் இருக்கின்றன. அது கிடக்கட்டும். இந்த உடம்புக்குள் எத்தனை புழுக்கள் இருக்கின்றன தெரியுமா? அதுவும் தெரியாது. குடியிருக்கும் வீடு நாம் பல ஆண்டுகள் ஒரு வீட்டில் மாதம் மாதம் வாடகை கொடுத்துக் கொண்டு வாழ்ந்தால் அந்த வீட்டை நம்முடையது என்று சொல்கிறோம்; "என்னுடைய வீட்டுக்கு வாருங்கள்" என்று அழைக்கிறோம். அது வழக்கமாகப் போய்விட்டது. அதைப் போல இந்த உடம்பில் நாம் குடியிருப்பதனால் இதை நம்முடையது என்று சொல்லலாம். அந்த மட்டும் உண்மை. ஆனால் குடியிருக்கும் போதாவது அது நமக்கு முழுச் சொந்தமாக இருக்கிறதா? நம்முடைய விருப்பப்படி அதில் வளைய வரலாமா? இதைச் சற்றே சிந்தித்துப் பார்க்கலாம். ஒரு வீட்டில் நாம் குடியிருக்கிறோம். அந்த வீட்டின் சொந்தக்காரனும் அந்த வீட்டிலேயே மற்றொரு பகுதியில் வசித்தால் அதைவிடத் தொல்லை வேறு வேண்டியதில்லை. பெரும்பாலும் அங்கே நமக்குச் சுதந்தரம் இராது. அழகான முருகன் படத்தை அன்றைக்குத்தான் நாம் வாங்கி வந்திருப்போம். அதை மாட்டலாம் என்று சுவரில் ஆணி அடிக்கப் போனால், வீட்டின் சொந்தக்காரன் சண்டைக்கு வந்துவிடுவான்; "ஆணி அடித்து வீணாக்கவா நான் சுவர் எழுப்பினேன்?" என்று கேட்க வந்துவிடுவான். ஐவர் செயல் ஒரு ஜமீன்தார்: அவர் இறக்கும்போது அவருக்கு ஒரு வீடுதான் சொந்தமாக இருந்தது. வீட்டில் ஒருவர் குடியிருந்தார். அந்த ஜமீன்தாருக்கு ஐந்து பிள்ளைகள். அவர்களும் அந்த வீட்டிலேயே வசிக்க வந்துவிட்டார்கள். சின்னஞ்சிறு பிள்ளைகள், செல்லப் பிள்ளைகளாக வாழ்ந்தவர்கள். ஆதலால் அவர்கள் செய்கின்ற குறும்பு சொல்லி முடியாது. அந்த வீட்டில் குடியிருந்தவர் ரேடியோவில் திருவாசகம் பாடுவதை அறிந்து அதைக் கேட்கலாம் என்று உட்காருகிறார். பக்திப் பாடலின் வரிசையில் ஒருவர் அழகாகத் திருவாசகத்தைப் பாடிக் கொண்டிருக்கிறார். ஆனால் அந்த சமயம் பார்த்து, ஜமீன்தாரின் பிள்ளைகளில் ஒருவன் ஒரு தகர டப்பாவை வைத்துக் கொண்டு மிருதங்கம் வாசிக்கிறான். அவனுக்கு மிருதங்கம் கிடைக்கவில்லை. ஆகவே, தகர தப்பாவை வைத்துக் கொண்டு கர்ணகடோரமான ஒலியை எழுப்புகிறான். கேட்டால், "இது என் வீடு. என் விருப்பப்படி என்ன வேண்டுமானாலும் செய்வேன்" என்று பேசுகிறான். மைசூருக்குப் போய் நல்ல மணமுள்ள ஊதுவத்தியை அவர் வாங்கி வந்திருந்தார். ஆண்டவன் படத்திற்கு முன்னாலே உட்கார்ந்து கொண்டு தியானம் செய்யும்போது, அந்த வத்தியைக் கம்மென்று மணக்கும்படி ஏற்றி வைத்திருந்தார். அதே சமயத்தில் ஜமீன்தாரின் மற்றொரு பிள்ளை அவர் வீட்டு ஜன்னலுக்குப் பக்கத்தில் நின்றுகொண்டு மொத்தமான சுருட்டு ஒன்றைப் புகைக்கிறான். இருக்கிற நாற்றம் போதாது என்று புகையிலைச் சுருட்டு நாற்றத்தை வேறு விடுகிறான். அது அவர் மூக்கில் ஏறித் தலைவலி எடுக்கிறது. கேட்டால், "இது என் வீடு. என் விருப்பப்படி சுருட்டுக் குடிக்க எனக்கு உரிமை உண்டு" என்று அவன் பேசுகிறான். அந்த வீட்டின் வாயிலிலே அழகழகான வண்ணக் கோலங்களைக் குடியிருக்கிறவர் போடுகிறார். அடுத்த கணம் ஜமீன்தாரின் மற்றொரு பிள்ளை வாளி நிறையத் தண்ணீரைக் கொண்டு வந்து அதில் கொட்டிக் கோலம் அழிந்து போகும்படி செய்கிறான். கேட்டால் "இது என் வீடு. என் விருப்பப்படி வீதியில் தண்ணிர் கொட்டுவேன். அதைக் கேட்க நீர் யார்?" என்று பேசுகிறான். நல்ல தென்றல் காற்று வருகிறதே என்று அவர் தம் வீட்டு ஜன்னலின் பக்கம் உட்கார்ந்து கொண்டு திருப்புகழைக் கொஞ்சம் படிக்கலாம் என்று ஆரம்பிக்கிறார். ஜமீன்தாரின் மற்றொரு பிள்ளை ஜன்னலை அடைக்கச் சொல்லுகிறான். அவன் சினிமாக் காட்டப் போவதால் இருட்டாக இருக்க வேண்டுமென்கிறான். கேட்டால், "இது என் வீடு. என் விருப்பப். படி நடக்கத்தான் வேண்டும்" என்று பேசுகிறான். அந்த வீட்டில் அவர் மாதந்தோறும் குடிக்கூலி கொடுத்துக் கொண்டு இருந்தாலும், தம் விருப்பப்படி திருவாசகம் கேட்பதற்கு தடை உண்டாகிறது. அவர் விருப்பப்படி ஊதுவத்தியை ஆண்டவன் சந்நிதானத்திலே ஏற்றி வைத்து, அதன் நறுமணத்தை அநுபவிப்பதற்குத் தடை உண்டாகிறது. அவர் விருப்பப்படி அழகான கோலங்களைப் போட்டு அதனைப் பார்த்துக் களிக்கக் கூடிய காட்சிக்குத் தடை உண்டாகிறது. அவர் விருப்பப்படி நல்ல தென்றல் காற்றை அநுபவிக்க முடியாமல் போகிறது. இப்படி அந்த வீட்டின் சொந்தக்காரர்களாகிய ஐந்து பிள்ளைகளாலும், அந்த வீட்டில் குடியிருக்கின்ற அவர் ஐந்து விதமான புலன்களினாலும் அநுபவிக்கின்ற அநுபவங்களுக்குத் தடை உண்டாகிறது. அவர்களுடைய வீட்டில் வசிக்கிற அவர் என்ன செய்வார் குடிக் கூலி கொடுத்துக் கொண்டுதான் அந்த வீட்டில் வசிக்கிறார். ஆனால் தம் விருப்பப்படி எதையும் அங்கே அநுபவிக்கச் சுதந்தரம் இல்லை. இந்தக் கதையைப் போன்றதுதான் நம்முடைய வாழ்வும். நம்முடைய உடம்பாகிய வீட்டில் நாள்தோறும் நடக்கும் நிகழ்ச்சி இது. 'அற்புதமாகத் திருப்புகழை யாரோ பாடுகிறார்களே; அதைக் கொஞ்சம் காது கொடுத்துக் கேட்கலாம்' என்று இவன் ஆசைப்படுகிறான். ஆனால் அவனுடைய காதோ அதைக் கேட்கப் போகிறதில்லை. அந்த வீட்டுக்கு எதிரேயுள்ள டிக்கடையிலிருந்து வரும் சினிமாச் சங்கீதத்தைக் கேட்கத் தாவுகிறது. ஆண்டவன் நமக்கு உண்டாக்கிய கைகள் இருக்கின்றனவே, அவற்றால் நல்ல நல்ல பூக்களை எடுத்து அவனுக்கு அர்ச்சனை செய்யலாம், அலங்காரம் பண்ணலாம் என்று இவன் ஆசைப்படுகிறான். ஆனால் இவனுடைய கைகள் அதைச் செய்யப் போவதில்லை; செய்யத்தகாத பல காரியங்களை எல்லாம் செய்யப் போகின்றன. ஆண்டவனது திருவுருவத்திற்குப் பூவாலும், அணியாலும் அலங்காரம் பண்ணியிருக்கிறார்களே, அதைக் கண் குளிரக் கண்டு கொஞ்சம் களிக்கலாம் என்று இவன் ஆசைப்படுகிறான். ஆனால் அந்தக் கண்கள் அதைக் காணப்போவதில்லை; பார்க்கத் தகாத பொருளை எல்லாம் காசு கொடுத்துப் பார்க்கப் போகின்றன. ஆண்டவனது திருக் கோயிலைச் சுற்றி அழகான நந்தவனங்களை எல்லாம் உண்டு பண்ணியிருக்கிறார்கள்; அங்கே போய்க் கொஞ்சம் நல்ல காற்றை அநுபவித்துவிட்டு வரலாம் என்று இவன் ஆசைப்படுகிறான். ஆனால் இவன் கால்கள் அங்கே போவதில்லை. பருத்தி விலைச் சூதாட்டத்துக்குப் போய்ப் போலீஸ்காரர்கள் வருகிறார்கள் எனப் பயந்து, காற்றுக்கூட உள்ளே புகாத இருட்டறைக்குள் நுழைந்து கொண்டு புழுங்கித் துன்புறப் போகின்றன. ஆண்டவனுக்கு நிவேதனம் செய்து கோயிலிலே நல்ல நல்ல பிரசாதங்கள் கொடுக்கிறார்கள்; அவற்றை வாங்கிச் சாப்பிடுவோம் என்று இவன் ஆசைப்படுகிறான். ஆனால் இவன் நாக்கு அதைச் சுவைப் பதில்லை. "ஹோட்டலுக்கு வா; ஜிலேபி போட்டிருக்கிறார்கள்" என்று இவனைத் தூண்டி அங்கே இழுத்துப் போய்க் காசு கொடுத்து ஜிலேபியை வாங்கித் தின்னச் சொல்லி விட்டு, வீட்டுக்கு வந்து வாந்தி எடுக்கச் செய்கிறது. இப்படியாக, இந்த உடம்பாகிய வீட்டில் இருக்கிற நாம், நல்ல காரியங்களைச் செய்ய வேண்டுமென்று விரும்பினாலுங் கூட, இந்த வீட்டுக்குச் சொந்தக்காரர் என்று சொல்லிக் கொள்ளுகிற ஐந்து இந்திரியங்களும் நம்மை அந்த அந்தக் காரியங்களைச் செய்யவொட்டாமல் தடுக்கின்றன. "ஆண்டவன் கோயிலுக்குப் போகலாம்; அவன் திருவுருவத்தைத் தரிசிக்கலாம்; அதனை மனத்திலே தாங்கிச் சிறிது நேரம் தியானம் செய்யலாம்” என்பன போன்ற நினைப்புக்கள் நமக்கு வந்தாலும், அந்த நினைப்பின் படி நடக்கவொட்டாமல், ஐந்து இந்திரியங்களும் நம்மை வேறு வழிக்கு இழுத்துச் சென்று துன்பப்படுத்துகின்றன. மெய், வாய், விழி, மூக்கு, செவி ஆகிய ஐந்து இந்திரியங்களையும் பொறிகள் என்று சொல்வார்கள். இந்திரியம் என்பது வடமொழி. உலகத்திலுள்ள பொருள்களை எல்லாம் அநுபவிப்பதற்கு இந்த ஐந்து பொறிகளும் உதவுகின்றன. காதாகிய பொறியினால் அநுபவிப்பது சப்தம். கண்ணாகிய பொறியினால் அநுபவிப்பது காட்சிப் பொருள். மூக்காகிய பொறியினால் அநுபவிக்கக் கூடியது மணம். உடம்பாகிய பொறியினால் அநுபவிக்கக் கூடியது ஸ்பர்சம். நாக்காகிய பொறியினால் அநுபவிக்கக் கூடியது சுவை. "சுவையொளி யூறோசை நாற்றமென் றைந்தின் வகைதெரிவான் கட்டே யுலகு" என்று வள்ளுவர் சொல்லுகிறார். பல சமயங்களில் மனம் ஒன்றை நினைக்கிறது. நினைப்பதை இந்திரியங்கள் செய்வதில்லை. நல்ல உணவைத்தான் சாப்பிட வேண்டுமென்று நினைக்கிறோம். சாப்பிடுகின்ற பொறி அதனைக் கேட்பதில்லை. நல்ல பொருள்களையே காண வேண்டுமென்று நினைக்கிறோம். ஆனால் காணுகின்ற பொறி காணத் தகாத பொருளைத்தான் காண்கின்றது. இவ்வாறு இந்த உடம்பாகிய வீட்டில் இருக்கின்ற ஐந்து பொறிகளும், நாம் ஏதேனும் ஒன்றை நினைத்தால் அது அநுகூலமாக நடப்ப தில்லை. நமக்கு அவை பகைவர்களாக இருக்கின்றன. . ஐந்து களிறு இந்த ஐந்து பொறிகளும் மத களிற்றுக்குச் சமானம் என்று பெரியவர்கள் சொல்லுவார்கள். உலகத்திற்குப் பொதுவாக ஒரு சிறந்த நூல் செய்த வள்ளுவரும் அப்படிச் சொல்லுகிறார். “உரனென்னுந் தோட்டியான் ஒரைந்தும் காப்பான் வரவென்னும் வைப்பிற்கோர் வித்து." 'மனத்திண்மை யென்னும் அங்குசத்தால் பொறிகள் ஐந்தாகிய மதயானைகளை அடக்கிக் காப்பவன், எல்லாவற்றையும்விட மேலானது என்று சொல்லப்பெறும் முத்தி நிலத்திற்சென்று முளைக்கும் வித்துப் போன்றவன்' என்பது இதற்குப் பொருள். விதை நெல் இந்த உலகத்தில் சாவியாய்ப் போகும் நெல் உண்டு. பயனுள்ள நெல்லும் உண்டு. நெல்லை அறுவடை செய்தால் எல்லா நெல்லும் நல்ல நெல்லாக இருப்பதில்லை. அறுவடை செய்த நெல்லைத் தூற்றினால் பதர் தனியாகப் பறந்து போய் விழுவது தெரியும். நெல்லாக இருக்கிறவற்றிலும் எல்லா நெல்லும் விதை நெல்லாக இருப்பதில்லை. பெரும்பாலானவை சாப்பாட்டிற்கு உபயோகப்படும் நெல்லாகத்தான் இருக்கும். விதை நெல் சற்றுக் கனமாக இருக்கும். நன்றாக விளைந்து முற்றிய நெல்லையே விதையாகத் தேர்ந்தெடுப்பார்கள். விளைகின்ற நெல்லிலே எப்படிச் சாவியாய்ப் போன நெல், பதராகப் போன நெல் இருக்கிறதோ, அதேபோல மனித சாதியிலும் சாவியாய்ப் போன மனிதர்கள் இருக்கிறார்கள். தம்முடைய அருமையான வாழ்நாளை வீணாக அடிக்கிற மனிதர்கள் அவர்கள். இவர்களை மக்கள் என்று சொல்லக்கூடாது. "மக்களட் பதடியெனல்" என்று சொல்கிறார் வள்ளுவர். தான் பேசுகின்ற பேச்சினாலே தனக்கும் பயன் இல்லாமல், கேட்பவர்களுக்கும் பயன் இல்லாமல் வழவழவென்று பயனில்லாத சொற்களையே பேசுகின்றானே அவனை மனிதன் என்று சொல்லக்கூடாதாம்; பதடி என்று சொல்ல வேண்டுமாம். "பயனில்சொல் பாராட்டு வானை மகனெனல் மக்கட் பதடி யெனல்" அத்தகையவர்கள் உள்ளீடு இல்லாதவர்கள். வெறும் நெல்லைப் போல இருப்பவர்கள் பலர் உண்டு. அவர்கள் தாம் பெற்ற வாழ்விலே எவ்வளவு சுகத்தை அநுபவிக்கலாமோ அவ்வளவும் அநுபவிப்பார்கள். ஆனால் இனிமேல் இந்த உலகத்தில் பிறவாமல் முத்தி இன்பத்தை அடைய இப்பொழுதே அஸ்திவாரம் போடுபவர் யாரோ அவர்கள் விதை நெல்லுக்கு ஒப்பானவர்கள். நன்றாக முற்றி விளைந்த நெல்தானே விளையும்? முற்றின இந்த நெல் முத்தியென்னும் உலகத்தில் விளைவதாகும். 'வரன்’ என்னும் வைப்பாவது முத்தியுலகம். பதினான்கு உலகங்கள் இருக்கின்றன என்று சொல்கிறார்கள். அவற்றை மூன்று தட்டுகளாகச் சொல்வார்கள். ஒன்று வானுலகம். மற்றொன்று பூவுலகம். இந்தப் பூவுலகத்திற்குக் கீழே இருப்பது மூன்றாவதாகிய பாதாள லோகம் என்பது. வானுலகம் மேலே இருக்கின்றது. பூவுலகம் மத்தியில் இருக்கின்றது. பாதாள லோகம் கீழே இருக்கின்றது. அவற்றை "அந்தர் மத்திய பாதலம்" என்று சொல்வார்கள். இந்த மூன்றுவகையான உலகங்களுக்கும் அப்பாற்பட்ட ஒன்று உண்டு. அதுதான் முக்தியுலகம். வானுலகந் தான் தேவலோகம். அதற்கும் மேலான உலகமாய் இருப்பது முத்தி. "வானோர்க் குயர்ந்த உலகம்" என்று திருவள்ளுவர் அதைச் சொல்வார். மாயா லோகமாகிய இந்தப் பூவுலகத்திலே வந்து பிறந்த ஆன்மா இன்ப துன்பங்களை அநுபவித்து, பக்தி மார்க்கத்திலே நின்று தவம் பண்ணி, ஆண்டவன் திருவருளைப் பெற்றுச் சிறந்து நின்றால், அது திரும்பவும் இந்த உலகத்திலே வந்து பிறவாமல், முத்தி உலகத்திலே போய் விளைகின்றது. இந்த ஆன்மாவானது. இந்தப் பூவுலகத்தில் வளர்ந்து விளைந்து கடைசியில் விதைக்குரிய நெல்லாக முற்றி முத்தி லோகத்தில் போய் விளைகின்றது. இன்ப துன்பத்திற்கு அப்பாற்பட்ட ஆனந்தத்தை அங்கே அடைகின்றது. இங்கே விளைந்த வித்து அங்கே போய் முளைக்கிறது. தேவர்கள் நம்மைக் காட்டிலும் சிறந்த இன்ப வாழ்வை அநுபவிக்கிறார்கள் என்று நினைக்கிறோம். ஆனால் அவர்கள் க.சொ.1-10 அடைவது இன்ப வாழ்வு அல்ல; சுக வாழ்வு. ஆனந்தம், சுகத்திற்கும் துக்கத்திற்கும் அப்பாற்பட்டது. விளக்கு நல்ல ஒளியைத் தரக்கூடியதுதான். விளக்கிலிருந்து வெளிச்சம் வருகிறது. ஆனால் அந்த விளக்குக்கு அடியில் போய்ப் பார்த்தால், அந்த விளக்கின் நிழல் படிந்திருக்கும். தேவர்கள் விளக்கு ஒளியைப் போன்றவர்கள். இன்பமாகிய ஒளியும், துன்பமாகிய நிழலும் உடையவர்கள். ஆனந்தம் என்பது சுகமும் அல்லாமல், துக்கமும் அல்லாமல் எல்லாவற்றையும் கடந்து, நிழலே விழாத சூரியனின் ஒளியைப் போன்றது. நிழலே இல்லாத இந்த ஆனந்தத்தை அடைய வேண்டுமென்றால் முத்தியை அடைய வேண்டும். அதனைப் பெறுவதற்கு வழி என்ன? அந்த முத்தியை விளைவிக்கக்கூடிய இந்தப் பூலோகத்தில் வந்து பிறந்து, நல்ல நல்ல காரியங்களை எல்லாம் செய்து, பொறிகளை அடக்கித் தவம் பண்ண வேண்டும்; ஈரம் காய்ந்து முற்றிய வித்தைப் போல ஆக வேண்டும். ஐம்பொறிகளை அடக்கி, ஈரமின்றி முற்றினால், முத்தி நிலத்தில் முளைத்துப் போகம் பெறலாம். திருவள்ளுவர் ஐந்து களிறுகளை அடக்க வேண்டுமென்று சொல்கிறார். இந்த ஐந்து யானைகளும் மதம் பிடித்த யானைகள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு பக்கம் இழுத்துக் கொண்டு போகின்றது. அவற்றை அடக்க வேண்டும். களிற்றை அடக்குவதற்கு யானைப் பாகன் தன் கையில் என்ன வைத்திருக்கிறான்? அங்குசத்தை வைத்திருக்கிறான். பொறிகளை அடக்கும் அங்குசம் ஞானம். யார் ஞானம் என்ற அங்குசத்தைப் பெற்றிருக்கிறார்களோ அவர்கள் ஐந்து பொறிகளாகிய யானைகளை அடக்கி விடுவார்கள். அந்த ஞானத்திற்குத்தான் 'உரன்’ என்று பெயர். உரன் பெற்றவர்கள், ஞானம் பெற்றவர்கள், ஆத்மாவுக்குத் துன்பத்தைத் தருவதற்குக் காரணமான ஐந்து இந்திரியங்கள் என்ற மதம் பிடித்த யானைகளை அடக்குகிறார்கள். அவ்வாறு பொறிகளை அடக்கி வென்றவர்கள் முத்தி நிலத்தில் விளைகின்ற வித்துப் போன்றவர்கள். இது வள்ளுவர் சொல்லும் உண்மை. பொறியை அடக்குதல் பொறிகளாகிய ஐந்து களிறுகளையும் அடக்குவதற்கு நாம் ஒவ்வொருவரும் வாழ்நாளில் முயற்சி செய்ய வேண்டும். அதற்காகத்தான் பூசை முதலியன வைத்திருக்கிறார்கள். ஐந்து பொறிகளையும் இரண்டு விதமான முறையில் அடக்கலாம். தவம் பண்ணி, வேதாந்த சித்தாந்தங்களை எல்லாம் படித்து, ஞான விசாரத்தினால் இந்திரியங்களை நிக்கிரகம் செய்வதன் மூலம் அவற்றை அடக்கிவிடலாம். ஆனால் இந்த முறை சிங்கத்தைக் கட்டிப் போடுவது போன்றது. கட்டிப் போட்டிருக்கிற வரையில் சிங்கம் சாதுவாக இருக்கும். கட்டுத் தளர்ந்து விடுபட்டால் எல்லையற்ற தீங்கு விளைந்துவிடும். அது போன்றதுதான் இந்த முறை. இந்த முறை கடினமானது. நல்ல சுவையுள்ள சாப்பாட்டைச் சாப்பிட வேண்டுமென்று அவர்கள் நாக்கு விரும்பும். சேர்ந்தாற் போலப் பத்து நாள் பட்டினி கிட என்று வயிற்றைப் பட்டினி போடுவார்கள். நல்ல சுகமான தென்றல் காற்றை அநுபவிக்க அவர்கள் உடம்பு விரும்பும். சேர்ந்தாற்போலப் பல ஆண்டுகள் காற்றுப் புகாத குகைக்குள் நுழைந்து கொண்டு உடம்பை புழுக்கத்தால் வாடிப் போகச் செய்வார்கள். குளிர்ச்சியான இடத்திற்குப் போய் இன்புற அவர்கள் உடம்பு விரும்பும். அப்போது தான் மண்டை வெடிக்கிறது போல இருக்கின்ற வெயிலில் நின்று கொண்டு தவம் செய்வார்கள். "நிரம்பக் குளிராக இருக்கிறதே; கொஞ்சம் குளிர் காய்ந்தால் நன்றாக இருக்கும்" என்று அவர்கள் உடம்பு விரும்பும். அப்போதுதான் சில்லென்று இருக்கிற தண்ணிருக்குள் மூழ்கித் தவம் பண்ணுவார்கள். இப்படி அவர்களுடைய பொறிகள் என்ன என்ன அநுபவிக்க வேண்டுமென்று விரும்புகின்றனவோ அதற்கு நேர்விரோதமான பாதையில் அவற்றைச் செலுத்தி அவற்றின் ஆசையைக் குலைத்து வெல்வார்கள். இது ஞானயோகிகளுக்குச் சாத்தியமாகும். இந்த முறை நமக்கு ஏற்றது என்று சொல்ல முடியாது. அந்த ஞானயோகிகள் செல்கின்ற மார்க்கத்திலே ஒரு சின்னத் தவறு ஏற்பட்டு விட்டாலும் அவர்களுக்கு எல்லை இல்லாத தீங்கு உண்டாகி விடும். எறும்பு விழுந்தால் அடிபடாது. யானை கீழே விழுந்தால் என்ன ஆகும்? அந்த மாதிரியே ஞானயோகிகள் தாங்கள் செல்கிற பாதையில் சின்னத் தவறு இழைத்துவிட்டாலும் அது அவர்கள் வாழ்க்கையில் பெரிய தீங்காய் முடியும். ஆனால், முத்தி அடைவதற்கு எளிய வழி ஒன்றும் இல்லையா? இருக்கிறது. "உலகத்திலுள்ள பொருள்களை எல்லாம் ஐந்து பொறிகளின் மூலம் அநுபவிக்க விரும்பினால், அப்படியே அநுபவி. ஆனால் அதில் ஒரே ஒரு சின்ன மாறுதல் செய்ய வேண்டும். ஐந்து புலன்களை அவ்வவ் வழியே போகவிடு. அவ்வாறு போக விடுவதில் ஒரு ஒழுங்கு இருக்கட்டும்" என்று நம் பெரியோர்கள் நமக்குச் சொன்னார்கள். மாடும் முளையும் ஒரு கொண்டி மாடு இருக்கிறது. அதை அவிழ்த்து விட்டால் வயல்களில் போய் மேய்ந்து பயிர்களை அழித்துவிடுகிறது. அதனைக் கட்டிப் போட்டே வைத்தால் பயனில்லை. அதை மேயவும் விட வேண்டும். பயிர் பச்சைகளை அழித்துவிடாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும். இதற்கு என்ன வழி? பழைய காலத்தில் பசுக்கள் மேய்வதற்காக என்று ஒவ்வோர் ஊரிலும் மேய்ச்சல் தரை ஒதுக்கியிருப்பார்கள். அதற்குக் 'கற்றாப் புல்' என்று பெயர். கல்வெட்டுக்களால் இது விளங்குகிறது. அந்த மாட்டைப் புல் தரையில் மேயட்டும் என்று அவிழ்த்து விட்டால், அது அந்தத் தரையிலுள்ள புல்லை மேயாமல், வயலில் இறங்கிப் பயிர்களை அழிக்கிறது. அந்த மாடு புல் தரையில் மேயவும் அதே சமயத்தில் அப்பால் இருக்கிற வயலில் இறங்கிப் பயிரை அழிக்காமல் இருக்கவும் மாட்டுக்காரன் என்ன செய்கிறான்? அந்த மைதானத்தின் நடுவே ஒரு முளையை அடித்து, நீளமான கயிற்றினால் மாட்டைக் கட்டி, அந்தக் கயிற்றின் மறு முனையை இந்த முளையில் கட்டி விடுகிறான். மாடு துள்ளித் துள்ளிக் குதிக்கிறது; ஒடுகிறது. எவ்வளவு தூரம் ஓட முடியும்? கயிறு எவ்வளவு நீளமோ அவ்வளவு நீளந்தானே ஒட முடியும்? முரட்டு மாடு ஆகையால் அது வேகமாக ஒடுகிறது. கயிறு நீளமாக இருப்பதால் தாராளமாக ஓட முடிகிறது. ஆனால் எத்தனை ஓடினாலும் அது முளையைச் சுற்றி சுற்றித்தான் ஓட முடியும். அது ஓட ஓடக் கயிறு முளையில் சுற்றிக் கொண்டே வருகிறது. கயிறு சுற்றச் சுற்ற மாட்டுக்கும் முளைக்கும் உள்ள தூரம் குறைந்து கொண்டே வரும். மாடு முளையை நெருங்கி வரும்; முளைக்கு அருகிலேயே வந்து விடும். பாக்கியிருப்பது இரண்டடி நீளமுள்ள கயிறுதான் என்றால் பின்னும் சுற்றும்போது, கயிறு குறுகிவிடுகிறது. அது நெறிக்க மாடு அப்படியே முளையின் அடியில் படுத்துக் கொண்டுவிடுகிறது. அதுபோல இறைவன் என்ற முளையை அடித்து, ஐந்து பொறிகளான மாட்டை அந்த முளையோடு நீண்ட கயிற்றினால் கட்டி மேய விடுங்கள். நன்றாகச் சாப்பிட வேண்டுமென்று நாக்கு விரும்புகிறது. "சாப்பாடா வேண்டும்? வா கோயிலுக்கு. அங்கே நல்ல சர்க்கரைப் பொங்கல் கொடுக்கிறார்கள். புளியோதரை கொடுக்கிறார்கள். அவற்றை வாங்கி நன்றாகச் சாப்பிடு" என்று சொல்லுங்கள். சர்க்கரைப் பொங்கல் வேண்டுமென்ற நாவின் ஆசையை இங்கே நாம் அடக்கவில்லை. ஆனால் இறைவன் பிரசாதத்தைச் சாப்பிட வேண்டுமென்ற நாட்டத்தை எழுப்புகிறோம். ஆண்டவன் என்ற முளையை அடித்துவிட்டதால், ஆண்டவனுடைய பிரசாதத்தைச் சாப்பிட வேண்டுமென்ற ஆசை எழுகிறது. இதனால் இறைவனுடைய தொடர்பு உண்டாகிறது. சர்க்கரைப் பொங்கல் சாப்பிட வேண்டுமென்ற ஆசை அப்படியே இராது. வர வரக் குறைந்து கொண்டே வரும். இறைவனுடைய சம்பந்தமுள்ள பொருள்களையே நாடும்படியாக முளையடித்து விட்டால் ஒழுங்கற்ற பொறிகளிடம் ஒரொழுங்கு உண்டாகும். அவை யாவும் கடைசியில் வேறு ஒன்றையும் நாடாமல் செயலற்று நிற்கும் நிலைமை வந்து விடும். இந்தக் கண் அழகான காட்சிகளைப் பார்த்துக் களிக்க விரும்புகிறது. அதற்கு, "நீ எதையும் பார்க்காதே" என்று சொல்ல வேண்டாம். “அழகான பொருள்களைத்தானே பார்க்க வேண்டுமென்கிறாய்? விதம் விதமான வண்ணத்தைக் கொண்டு தீட்டிய இந்த ஆண்டவன் படத்தைப் பார்? அழகழகான பூக்களாலும், மணியாலும் அலங்கரித்துள்ள ஆண்டவனுடைய விக்கிரகத்தைப் பார் என்று சொல்ல வேண்டும். தன் இச்சைப்படியே அது பார்க்கிறது. பார்க்கும்போதே ஆண்டவனுடைய தொடர்பு அதற்கு ஏற்படுகின்றது. காது இனிமையான சங்கீதத்தைக் கேட்க வேண்டுமென்று விரும்புகிறது. அப்போது, "நீ எதையும் கேட்காதே" என்று சொல்ல வேண்டாம். "இனிமையான சங்கீதத்தைத்தானே கேட்க வேண்டுமென்று விரும்புகிறாய்? அதோ பாடுகிறார்கள் கேள், தேவாரத்தை, திருப்புகழை" என்று சொல்ல வேண்டும். தன் இச்சைப்படியே அது அந்த இனிமையான சங்கீதத்தைக் கேட்கிறது. கேட்கும்போதே ஆண்டவனுடைய தொடர்பு அதற்கு ஏற்படுகிறது. இப்படியே ஒவ்வொரு புலனையும் ஆண்டவன் என்ற முளையை அடித்துத் தொடர்புபடுத்திவிட்டு அதனதன் இச்சைப்படி போக விட வேண்டும். ஓட ஓடக் கயிறு சுற்றிக் கொள்ள, கடைசியில் மாடு முளைக்கு அருகிலேயே வந்து படுத்துக் கொள்வதுபோல, கடைசியில் புலன்களாகிய மாடுகள் ஆண்டவன் என்ற முளைக்கு அருகிலேயே வந்து படுத்து விடும்; செயலொழிந்து விடும். இது மிகவும் அருமையான காரியம் அன்று. ஒரு குழந்தை எல்லாப் புத்தகத்தையும் கிழிக்கிறது. நாம் ஏதாவது ஒரு முக்கியமான புத்தகத்தை வைத்துவிட்டுப் போனால் அதனைக் கிழித்து விடுகிறது. "அதைக் கிழிக்காதே; அடிப்பேன்" என்று கோபித்துக் கொண்டால் நம்மிடம் இருக்கும் பயத்தில் அப்போதைக்கு அது அதனைக் கிழிக்காமல் இருக்கும். நாம் கொஞ்சம் அப்புறம் போனால் அதைக் கிழித்துவிடும். இதற்கு என்ன செய்வது? அந்தக் குழந்தையை கிழிக்காதே என்றால் கிழிக்கின்ற சுபாவம் உள்ள அதனால் எதையும் கிழிக்காமல் இருக்க முடியாது. ஆனால், "நன்றாகக் கிழி, இங்கே நார் இருக்கிறது. கிழித்து வை" என்று சொல்ல வேண்டும். குழந்தையின் கிழிக்கிற கை அந்த நாரைக் கிழிக்கிறது. ஆனால் கிழிய வேண்டியது கிழிகிறது. அதைப்போலப் பார்க்க வேண்டுமென்று விரும்புகிற புலனைப் பார்க்காதே என்று சொல்லாமல், "இங்கே ஆண்டவன் படம் இருக்கிறது; அதைப் பார்" என்று சுட்டிக் காட்ட வேண்டும். கேட்க வேண்டுமென்று விரும்புகிற பொறியைக் கேட்காதே என்று சொல்லாமல், "இங்கே திருப்புகழ் பாடுகிறார்கள்; அதனைக் கேள்" என்று சொல்ல வேண்டும். இப்படிச் செய்தால் பொறிகள் தம் இச்சையைப் பூர்த்தி செய்து கொள்கின்றன. ஆனால் அவை யாவும் இறைவனோடு தொடர்புடைய அநுபவங்களாகவே அமைகின்றன. புலன்களாகிய யானைகளை இந்த முறையில் நம்முடைய அறிவினாலே ஒழுங்குபடுத்த வேண்டும். அந்த யானைகளை நம் விருப்பப்படி நடக்க வைக்க, அறிவாகிய அங்குசம் நம்மிடம் இருக்கிறது. அந்த அங்குசத்தினால் அவற்றை அடக்கி, இறைவன் என்ற முளையை அடித்து, அதைச் சுற்றிச் சுற்றி எல்லா விதமான இன்ப அநுபவங்களையும் அடையச் செய்தால், அவை தம் விருப்பப்படியே ஒடியாடி, கடைசியில் இறைவனுடைய தொடர்பினால் மனத்தோடு ஒன்றி இறைவன் திருவடியிலேயே படுத்துவிடும். கோயில், அங்கே உள்ள மூர்த்தி, அதற்குச் செய்யும் அலங்காரம், அங்கே கொடுக்கும் பிரசாதம், அங்கே பாடும் திருப்புகழ் இவை அத்தனையும், நம் பொறிகளாகிய மதம் பிடித்த யானைகளுக்கு உணவாகி, அவற்றின் மதத்தை மாற்றி நல்ல நெறியிலே அழைத்துச் சென்று கடைசியில் அவற்றைப் படுக்க வைக்கின்றன. இது பக்தி நெறியாகிய எளிய வழி. "ஆண்டவனிடத்தில் சென்று நீ பக்தி செய். அவனைப் பூசை செய். உன் கைகளினாலேயே அவனுக்கு அலங்காரம் பண்ணிக் கண்குளிரப்பார். அவன் புகழைப் பாடு. அவன் பெருமையைக் கூறுகின்ற பாடல்களை நன்றாகக் கேட்டு அநுபவி. அவன் திருக்கோயிலைச் சுற்றி வலம் வா" என்று நம் நாட்டுப் பெரியவர்கள் சொன்னது, ஐம்பொறிகளாகிய மதம் பிடித்த யானைகள் தத்தம் விருப்பப்படியே உலகத்திலுள்ள பொருள்களை அநுபவிக்கும்போது அவற்றை இறைவனுடன் சம்பந்தப்படுத்தி அநுபவிக்கச் செய்யவும், வரவர அந்தத் தொடர்பு நெருங்க நெருங்க அவற்றை ஒடுங்கச் செய்யவுமே ஆகும். மனத்திண்மை நம் மனம் நல்ல காரியங்களைச் செய்ய வேண்டுமென்று ஆசைப்படுகிறது. ஆனால் அவற்றைச் செயலிலே செய்ய முடியவில்லை. நினைக்கும் மனத்திற்குத் திண்மை இல்லை. நம் மனத்திலே திண்மை இல்லை என்பதற்கு அடையாளம், நாம் நினைக்கிறதை நினைக்கிறபடியே செயலில் செய்ய முடியாதது தான். உண்மையில் இதைவிடப் பலவீனம் வாழ்க்கையில் வேறு எதுவும் இல்லை. நாம் தொட்ட மண் எல்லாம் தங்கமாக மாற வேண்டுமென்று ஆசைப்படுகிறோம். அந்த மாதிரி மாற்றக் கூடிய சக்தி நமக்கு இல்லை. அது நம்முடைய சக்திக்கும் அப்பாற்பட்ட ஆசை. அப்படியின்றி நம்மால் செய்யக்கூடிய காரியத்தைச் சில சமயங்களில் நினைக்கிறோம். பக்கத்து வீட்டுக் குழந்தை வாழைப்பழம் வேண்டுமென்று அழுகிறது. அது ஏழைக் குழந்தை. தெருவிலே போகிற வாழைப்பழத்தை வாங்கிக் கொடுக்க அதன் பெற்றோர்களிடம் காசு இல்லை. நம்மிடம் வாழைப்பழம் இருக்கிறது. 'அந்த ஏழைக் குழந்தைக்கு நம்மிடம் இருக்கும் வாழைப் பழத்தைத் தந்தால் என்ன?’ என்ற நினைப்பு நமக்குத் தோன்றுகிறது. ஆனால் அந்த நினைப்பு உடனேயே செத்துப் போகிது. கருவுற்ற பிறகு அது நன்றாக வளர்ந்து வெளியே வந்தால் அது குழந்தை ஆகிறது. வயிற்றுக்குள்ளேயே செத்துப் போனால் என்ன பயன்? குறைப் பிரசவம் ஆகும். கரு வயிற்றிலேயே இறந்து விட்டால், பெரிய டாக்டர்களைக் கூப்பிட்டு, 'ஆபரேஷன்' செய்து அதனை வெளியே எடுக்க வேண்டிய அபாயம் வந்துவிடுகிறது. கருவும் கெட்டு, அதைத் தாங்கிய உடம்பும் கெடுகிறது. அப்படியே மனத்தில் சில நல்ல எண்ணங்கள் கருவாகத் தோன்றுகின்றன. அந்த எண்ணங்களை வளர்த்துக் செயல் ஆக்குவதற்கு நம்மிடம் திடம் இல்லை. பக்கத்து வீட்டுக் குழந்தைக்கு நம்மிடம் இருக்கும் வாழைப் பழத்தைத் தர வேண்டுமென்ற எண்ணம் கருவாகத்தான் தோன்றுகிறது. அந்த வாழைப் பழம் ஆயிரம் ரூபாய் பெறுமானதன்று. நாம் கடைக்குப் போய் வாங்கி வரவேண்டுமென்பதுகூட இல்லை. நம் கையில் இருக்கிறது. இருந்தாலும் நம்மிடம் இருப்பதைக் கொடுக்கும் மனோதிடம் நம்மிடம் பெரும்பாலும் இருப்பதில்லை. இது மண்ணைத் தங்கம் ஆக்குகிற வித்தை அல்லவே. நம் சக்திக்கு உட்பட்டது தானே? ஆனால் அந்த நினைப்பை, தோன்றிய மனத்திலேயே, குழி வெட்டிப் புதைத்துவிடுகிறோம். வாழைப் பழத்தைக் கொடுக்க வேண்டுமென்ற நினைப்பு மனத்திலே தோன்றுகிறது. "அதனை எடுத்துக் கொடு" என்று கைக்கு உத்தரவு போடும் திண்மை மனத்திற்கு இல்லாமல் போகின்றது. கொடுக்காமல் நின்றுவிடுகிறோம். வீட்டில் நம்மை யாரும் மதிக்கிறது இல்லை என்று சொல்கிறோம். பெண்டாட்டி நான் சொல்வதைக் கேட்க மாட்டேன் என்கிறாள் என்று சிலர் சொல்கிறார்கள். பிள்ளை நம் கருத்துப்படி வேலை செய்வதில்லை என்று சொல்கிறோம். வேலைக்காரர்களிடம் நாம் ஒன்று சொன்னால் அவர்கள் வேறு ஒன்று செய்கிறார்கள் என்று சொல்கிறோம். அப்படிச்சொல்ல நமக்கு என்ன வாய் இருக்கிறது? நாம் நினைக்கிறபடி நாம் முதலில் நடக்கிறோமா? நாமே நினைக்கிற எண்ணத்திற்கு நாமே கெளரவம் கொடுத்து நடக்கிறோமா? இங்கிருந்து ஆகாயத்தில் பறந்து போகவேண்டுமென்று நினைத்தால், அது நம்முடைய ஆற்றலுக்கு அப்பாற்பட்ட செயல். அதைச் செய்ய முடியாததற்குப் பல காரணம் சொல்லலாம். ஆனால் இங்கிருந்து கோயிலுக்குப் போய் வர முடியாதா? நாம் செய்ய வேண்டியதை நினைக்கிறோம்; செய்யக் கூடியதை நினைக்கிறோம். ஆனால் நினைத்தபடி செய்வதில்லை. மனத்திண்மை உடையவர்கள் நினைத்தபடி செய்வார்கள். தங்கள் ஆற்றலுக்கு அப்பாற்பட்ட விஷயங்களை அவர்கள் நினைக்க மாட்டார்கள். மனத்திலே தோன்றிய எண்ணம் மனத்திற்குத் திண்மை இருந்தால் செயலாக விளையும். ஆகவே மனம் திண்மை உடையதாக இருக்க வேண்டும். திண்மை உடையவன் தன் மனத்திலே தோன்றுகிற எண்ணங்களைச் செயலாக மாற்றுவான். நினைத்தவை அனைத்தையும் செயலாக மாற்றுபவர்கள் மனத்திண்மை உடையவர்கள். நினைத்ததில் சிலவற்றைச் செயலாக மாற்றுபவர்கள் முயற்சி உடையவர்கள். நினைத்தவற்றில் பலவற்றைச் செயலாக மாற்ற இயலாதவர்கள் மனத்திண்மை அடியோடு அற்றவர்கள். மனத்திண்மை உடையவன் செய்கிறதை நினைப்பான்; அநாவசியமாக ஆசைப்பட மாட்டான். எனக்குப் பத்துக் கார் வேண்டுமென்று நினைக்க மாட்டான். எனக்கு நடக்கக் காலில் பலம் வேண்டுமென்று நினைப்பான். தன் சக்திக்கு அப்பாற்பட்டதையும், சக்திக்கு உட்பட்டதையும் நினைத்துத் தன் சக்திக்கு உட்பட்ட காரியத்தைக்கூடச் செய்யும் திண்மை அற்றவன் அதமன். தன் சக்திக்கு அப்பாற்பட்டவற்றையும் நினைத்துத் தன் சக்திக்கு உட்பட்ட காரியத்தைச் செய்கிறவன் மத்திமன். தன் சக்திக்கு உட்பட்டு இருக்கிற காரியங்களையே நினைத்து அவை எல்லாவற்றையும் திறம்படச் செய்கிறவன் உத்தமன். "எண்ணிய எண்ணியாங் கெய்துப எண்ணியார் திண்ணிய ராகப் பெறின்" என்று பேசுகிறார் வள்ளுவர். எண்ணியதை எண்ணியபடி செயலிலே செய்வதற்கு மனத்திலே திண்மை வேண்டும்; அவர்கள் தங்களால் செய்யக்கூடிய காரியங்களையே எண்ணுவார்கள். அவற்றைச் செயலிலே ஆற்ற முயற்சி செய்வார்கள். அந்த முயற்சிக்கு எவ்வளவு இடையூறு வந்தாலும் அஞ்ச மாட்டார்கள். தங்கள் முயற்சியிலே கொஞ்சமேனும் தளரமாட்டார்கள். "நான் எல்லாவற்றையும் செய்துவிடுகிறேன்" என்று நாம் அளக்கிறோமே அப்படி அவர்கள் அளக்க மாட்டார்கள். நூறு ரூபாய் தருகிறேன் என்று சொன்னால் கொடுப்பதற்கு நூறு ரூபாய் இருக்கிறதா என்று யோசித்துப் பார்த்துக் கொண்டு சொல்ல வேண்டும். பின்னர் நூறு ரூபாய் இல்லையென்பதற்காக வேறு ஒரு பொருளை அதற்குச் சமமாகக் கொடுப்பதில் பயன் இல்லை. "உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார் உள்ளத்து ளெல்லா முளன்" என வள்ளுவர் பெருமான் கூறுகிறார். மகாத்மா காந்தியடிகளை வெவ்வேறு கட்சிக்காரர்களும் கொள்கை அளவில் எதிர்த்தாலும், சொல்கிற முறை தவறு என்று சொல்லியிருந்தாலும், அவரை நல்லவர் என்று எல்லோரும் பாராட்டினார்கள். அவர் தம் மனத்தில் தோன்றியதைச் சொல்வார். தம் மனத்திலே நினைப்பதைச் செய்வார். தாம் செய்வதையே பிறருக்கும் சொல்வார். அவரிடம் நினைப்பு வேறு, சொல் வேறு, செயல் வேறு என்பதே இல்லை. ஒரே சுவட்டில் இந்த மூன்றும் செல்லுகிற அற்புதமான வாழ்க்கை வாழ்ந்தவர் அவர் சத்தியத்தையே நினைந்து, நினைந்த சத்தியத்தையே செய்துகாட்டி, அந்த மெய்ச் செயலையே பிறருக்கும் உபதேசம் செய்த மகாத்மா உலகத்தார் உள்ளத்துள் எல்லாம் இன்றைக்கு உறைந்துவிட்டார். அப்படிப்பட்ட சத்தியவான்கள் ஒவ்வொரு சமயம் தம் சக்திக்கு அப்பாற்பட்ட எண்ணங்களை எண்ணினாலுங்கூட, அவை அவர்கள் நினைந்த வண்ணம் நடந்து விடும். முதலிலே, செய்யக்கூடியவற்றையே நினைக்கும் பக்குவம் வந்துவிட்டால், பிறகு நினைத்தன எல்லாவற்றையும் செய்யும் பக்குவம் வரும். அந்தப் பக்குவம் வருவதற்கு மனத்திண்மை வேண்டும். இந்த மனத்திண்மை ஒரு நாளில் வராது. பொறிகளை வசப்படுத்தி, நினைப்பையும் சொல்லையும் செயலையும் ஒரு நெறியிலே செலுத்த அந்தத் திண்மையே வேண்டும். ஒருமைப்பாடு ஐந்து பொறிகளும் சேர்ந்து ஒன்றுபட்டு இறைவனுக்குப் பூசை செய்ய வேண்டும். அப்படிச் செய்ய வேண்டுமென்ற நினைப்பு வருகிறது. ஆனால் ஐந்து பொறிகளும் அதற்கு விரோதமாக இருக்கின்றன. அவற்றை அடக்கும் திண்மை நம்மிடம் இருப்பதில்லை. நாம் தினமும் பூசை பண்ணுகிறோம். பூசை பண்ணுகிறபோதே, வீதியில் ஏதாவது கூச்சல் கேட்டால் அது என்ன சத்தம் என்று கேட்கக் காது போய்விடுகிறது. இறைவனுக்கு அழகாக அலங்காரம் பண்ணியிருக்கிறார்கள் என்பதைக் கேட்டு நாமும் ஆலயத்திற்குச் செல்கிறோம். ஆனால் கோயிலுக்குள் போனால் இறைவனைக் கண் பார்ப்பதில்லை. அங்கே உள்ள வேறு காட்சிகளைப் பார்க்க ஓடி விடுகிறது. பட்டினத்து அடிகள், "கையொன்று செய்ய விழிஒன்று நாடக் கருத்தொன்றுஎண்ணப் பொய்ஒன்று வஞ்சக நாஒன்று பேசப் புலால் கமழும் மெய்ஒன்று சாரச் செவிஒன்று கேட்க விரும்புமியான் செய்கின்ற பூசைஎவ்வாறுகொள் வாய்வினை தீர்த்தவனே." என்று பாடுகிறார். வேற்றுமையில் ஒற்றுமை ஒரு சங்கீதக் கச்சேரி நடக்கிறது. அங்கே ஒருவர் வாய்ப்பாட்டுப் பாடுவார். ஒருவர் மிருதங்கம் வாசிப்பார். ஒருவர் பிடில் வாசிப்பார். ஒருவர் குழல் ஊதுவார். ஒருவர் கஞ்சிராத் தட்டுவார். இவர்கள் எல்லோரும் வெவ்வேறு காரியங்களைச் செய்கிறவர்கள்; வெவ்வேறு விதமான இசையொலியை எழுப்புகிறவர்கள். வாய்ப்பாட்டின் ஒலி வேறு. மிருதங்கத்தின் ஒலி வேறு. குழலின் ஒலி வேறு. பிடிலின் ஒலி வேறு. இந்த ஒலிகள் எல்லாம் ஒன்றுக் கொன்று சம்பந்தம் இல்லாதவை போல இருக்கின்றன. ஆனால் எல்லாம் சேர்ந்து, ஒரு சுருதியோடு பூர்ணமாகக் கலந்து, ஒரு பாட்டைப் பாடினால், அது மிக இனிமையாக இருக்கிறது. அதைச் சங்கீதம் என்கிறோம். எல்லாம் ஒரு சுருதியோடு சேர்ந்து அமைந்தால், "மேளம் கட்டிவிட்டது” என்று சொல்வது வழக்கம். 'மேளம்' என்பது கூட்டுறவு என்று பொருள்படும் சொல். வாய்ப் பாட்டு வேறு, மிருதங்கம் வேறு, குழல் வேறு, பிடில் வேறு என்றாலும் எல்லாம் ஒரு நெறியிலே இயங்கும்போது இன்பம் உண்டாகிறது. பல வகையான இசைக்கருவிகளிடையே ஓர் ஒற்றுமை இருக்கிறது. இதை வேற்றுமையில் ஒற்றுமை (Unity in diversity) என்று சொல்வார்கள். பூசையிலும் இந்த ஒற்றுமை வேண்டும். ஐந்து இந்திரியங்களும் வெவ்வேறாகக் சிதறுண்டு இருந்தாலும் அவற்றை நெறிப் படுத்தி இறைவன்பால் அவற்றை ஒருமுகமாகச் செலுத்துவது பூசை. பூசை செய்ய உட்கார்ந்தும் இந்த ஐந்து இந்திரியங்களை வெவ்வேறு வழியில் செல்ல விட்டு, மனம் எதையோ நினைத்துக் கொண்டிருந்தால் அது பூசையாகாது. வாய்ப் பாட்டுக்காரர் ஒரு பாட்டுப் பாட, குழல் ஊதுகிறவர் வேறொரு பாட்டை வாசிக்க, மிருதங்கக்காரன் ஏதோ ஒரு தாளத்துக்கு வாசித்தால் அது கச்சேரி ஆகாது. ஒரே கூச்சலாக இருக்கும். அது போலத்தான் ஐந்து இந்திரியங்களும் வெவ்வேறு காரியங்களைச் செய்ய, நாம் பூசை செய்தால் அது பூசையாக இராது. "ஆண்டவனே. நான் உனக்குப் பூசை செய்ய வேண்டுமென்று ஆசைப்படுகிறேன். ஆனால் இந்த உடம்பாகிய வீட்டுக்குச் சொந்தக்காரர்கள் என்று சொல்லிக் கொள்ளுகிற பொறிகளாகிய ஐந்து பேர்களும் நான் ஆசைப்படுவது போலப் பூசை செய்யவிடமாட்டோம் என்கிறார்களே என்று அருணகிரிநாதர் இந்தப் பாட்டில் சொல்கிறார். ஒரஓட் டார்ஒன்றை உன்னஓட் டார்மலர் இட்டுனதாள் சேரஒட் டார்ஐவர் செய்வதென் யான்? இது கந்தர் அலங்காரத்தின் நான்காவது பாட்டின் முதற் பகுதி. இதில் இரண்டு பிரிவுகள் இருக்கின்றன. தாம் செய்ய விரும்புகிற காரியங்களைச் செய்யவொட்டாமல் தடுக்கிற ஐந்து பொறிகளின் செயல்களும், அதனால் தாம் என்ன செய்ய முடியும் என்று ஏங்குகிற தன்மையும் ஆகிய இரண்டு செய்திகளை அருண கிரிநாதர் புலப்படுத்துகிறார். அந்தப் பாட்டின் இரண்டாவது பகுதியில் இறைவனது திருவிளையாடலைச் சொல்லுகிறார். முன்னாலே நம்முடைய இருள் விளையாடலைச் சொல்லி விட்டார். இருள் என்பது மாயை, அஞ்ஞானம். நாம் இன்றைக்குச் செய்கிற காரியங்கள் எல்லாம் அஞ்ஞானத்தின் விளைவு. இந்தக் காரியங்களுக்குப் பொறிகளாகிய ஐந்து பேர்கள் துணையாக இருக்கிறார்கள். இன்பத்தை அடைவதற்கு உரிய செயல்கள் என்ன என்னவோ அவற்றை நாம் செய்யலாம் என்று நினைத்தால் இந்த ஐந்து பேர்களும் அதற்குச் சத்துருக்களாக இருக்கிறார்கள்; அநுகூலமாக இருப்பதில்லை. நாம் சில நல்ல காரியங்களைச் செய்ய வேண்டுமென்ற சங்கற்பம் செய்து கொள்ளுகிறோம். ஆனால் அவற்றைச் செய்யவொட்டாமல் இப்பகைஞர் தடுக்கிறார்கள். ஒர்தலும் உன்னுதலும் எங்கெங்கோ அலைந்து திரிகிற இந்த மனத்தை, இறைவனையும் அவன் சம்பந்தமான பொருள்களையும் மாத்திரம் நினைக்கச் செய்வது முதல் படி; இறைவனையே நினைக்கச் செய்வது அதற்கு அடுத்த படி; அதற்கும் மேலான படி இறைவனோடேயே கலந்துவிடுவது. இதற்கு ஒர் உபமானம் சொன்னால் விளங்கும். சின்னப் பிள்ளை பம்பரம் விடுகிறான். பம்பரத்தில் கயிற்றைச் சுற்றி வெகு வேகமாக விடுகிறான். பம்பரம் சுழலுகிறது. வேகமாக எங்கெங்கோ சுற்றி சுழலுகிறது. அப்படிச் சுழலும்போது, முதலில் வரையறையின்றிப் பலவிதமான வட்டமிட்டுச் சுற்றிய பம்பரம் கடைசியில் ஒர் இடத்தில் வந்து நிற்கிறது. அப்போதும் பம்பரம் சுற்றிக்கொண்டுதான் இருக்கிறது. ஆனால் அது ஓரிடத்தில் நிற்கிறது. தூங்குகிறது என்று பிள்ளை சொல்லுகிறான். மனிதன் படுத்துத் தூங்குகிறானே அதைப்போல பம்பரம் தூங்கவில்லை. பல இடங்களில் சுற்றிச் சுழன்று வந்த அது ஒரு குறிப்பிட்ட இடத்தில் நேராக நின்று சுழலுகிறது. அவ்வாறே இறைவனோடு சம்பந்தப்பட்ட பொருள்களை எல்லாம் நினைந்து மனம் சுழலுவதை ஒர்தல் என்று சொல்லலாம். குறிப்பிட்ட ஒரு பொருளை மாத்திரம் நினைந்து சுழலுவது இருக்கிறதே அதற்கு 'உன்னுதல்' என்று பெயர். முதலிலே பவலவற்றை ஒர்கிறோம். இறைவன் திருக்கோயில் போக வேண்டும்; அங்கே பாடுகிற திருப்புகழைக் கேட்க வேண்டும்; அங்கே அலங்காரம் செய்து வைத்திருக்கிற மூர்த்தியைக் காண வேண்டும்; அங்கே இறைவனுக்கு நிவேதனம் செய்த பிரசாதத்தை வாங்கிச் சாப்பிட வேண்டும் என்றெல்லாம் ஓர்கிறோம். இவை எல்லாம் பல செயல்களாக இருந்தாலும் அவ்வளவும் ஆண்டவன் என்ற பொருளோடு சம்பந்தம் உடையன. அவற்றை எல்லாம் நினைத்தல் ஒர்தல். வெளியில் வரையறையின்றிச் சுற்றித் திரிந்த மனம் இப்போது ஆண்டவன் என்ற பொருளைச் சுற்றியுள்ள வட்டத்திற்குள் சுழலுகிறது. ஆனால் அது மாத்திரம் போதாது. அதுவே முடிவு அன்று. அதற்குப் பின் இறைவன் திருவடியில் மனம் நின்று சுழல வேண்டும். இறைவன் திருவடியில் துரங்க வேண்டும். மனம் வேறு ஒன்றையும் நினைக்காமல் இறைவனையே நினைந்து அங்கே சுழல வேண்டும். இந்தத் தூக்கத்தைத்தான் தியானம் என்று சொல்வார்கள். மூன்று நிலை சம்பந்தப்பட்ட பலவற்றை நினைப்பது முதற்படி; ஒன்றையே நினைந்து ஒர் இடத்திலே ஆணி அடித்தாற்போல நின்று இறைவனை நினைப்பது தியானம். பின்பு தன்னையே இழப்பது சமாதி. "என்னுடைய பொறிகளாகிய ஐந்து பாவிகள் அப்படிச் செய்ய விடமாட்டேன் என்கிறார்களே!" என்கிறார் அருணகிரிநாதர். ஒரவொட்டார்-உன்னுடைய சம்பந்தமானவற்றை எண்ணிப் பார்க்க விடமாட்டார்கள். உன்னவொட்டார்-உன்னையே மனத்தில் நிறுத்தி ஒருமைப்பாட்டை அடையவும்விட மாட்டார்கள். மலர் இட்டு உன் திருவடியைத் தியானிக்கலாம் என்றாலோ, அதையும் செய்ய விடுவதில்லை. மலர்இட்டு உனதாள் சேரவொட்டார் இறைவனுடைய தாளைச் சேர்தலாவது அவன் திருவடியைத் தியானம் செய்தல். அது பிறவியைப் போக்க ஏற்ற வழி. மனக்கவலை நீங்கும் வழி. இங்கே, சேர்தல் என்பதற்குத் தியானம் செய்தல் என்று பொருள் கொள்ள வேண்டும். “தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால் மனக்கவலை மாற்றல் அரிது" என்ற திருக்குறளின் உரையில் சேர்தல் என்பதற்குத் தியானித்தல் என்று பரிமேலழகர் பொருள் எழுதியிருக்கிறார். இறைவனுடைய தாள்கள் இரண்டு. 'உனதாள்' என்பதற்கு 'உன்னுடைய தாள்கள்' என்று பொருள். உன என்பதில் உள்ள அகரம், பின்வருவது பன்மைச் சொல் என்பதைக் குறிக்கும். உனது தலை என்று சொல்லலாம். அது ஒருமை. உனதாள் என்பதில் உள்ள தாள் பாதங்கள் என்ற பொருளில் வந்த பன்மை. ஆறாம் வேற்றுமையில், வரும்சொல் ஒருமையாக இருந்தால் 'அது' என்னும் உருபும், பன்மையாக இருந்தால் 'அ' என்னும் உருபும் வரும் என்று இலக்கணம் விதிக்கிறது. அப்படி வந்தது இந்த அகரம். "என் உடம்பாகிய வீட்டில் மெய், வாய், விழி, மூக்கு, செவி என்னும் பொறிகளாகிய ஐந்து பாதகர்கள் இருக்கிறார்கள்; அவர்கள் உன்னைப் பற்றியவற்றை எண்ணலாம் என்றால் விட மாட்டேன் என்கிறார்கள். உன்னை உன்ன வேண்டுமென்றால் உன்ன விடமாட்டேன் என்கிறார்கள். மலரிட்டு உன் தாளைத் தியானம் பண்ணலாம் என்றால் அதற்கும் விடமாட்டேன் என்கிறார்கள். நான் என்ன செய்வேன்? எனக்கு ஒன்றும் தெரியவில்லையே!" என்று முறையிடுகிறார் அருணகிரிநாதர். செய்வதென் யான்? "யான் செய்வது என்?" என்று கேட்கிறார். ஒரு வீடு வேண்டுமென்றால் வாடகை அதிகாரிக்கு விண்ணப்பம் போடுகிறோம். அவர் நம்முடைய சம்பளம், உத்தியோகம், வாடகை கொடுக்கும் சக்தி இவற்றை எல்லாம் கவனித்து, "இந்த வீட்டுக்குப் போ" என்று சொல்லுகிறார். அதைப் போலவே, இறைவன் நமக்கு, நாம் செய்திருக்கிற வினைகளைக் கணக்கு எடுத்துக் கொண்டு ஒரு வீட்டைக் காட்டி இதற்குப் போ என்று அனுப்புகிறான். இந்த வீட்டில் இவ்வளவு நாள் குடியிருக்கலாம், இதில் இன்ன இன்ன காரியங்களைச் செய்யலாம் என்று வரையறை செய்து சீட்டு எழுதித் தலையிலே ஒட்டி அனுப்பி விடுகிறான். இதைத்தான் தலையெழுத்து என்று சொல்லு வார்கள். தலையெழுத்தோடு வருகிற நாம் எத்தனை காலம் இந்த வீட்டில் வாழ்வோம் என்று சொல்ல முடியாது. "இருக்கிற காலத்திற்குள் கொஞ்சம் நல்ல காரியம் செய்யலாம் என்று ஆசைப்படுகிறேன். ஆண்டவனே, உன்னை ஒரலாம் என்றாலும், உன்னை உன்னலாம் என்றாலும், உன் தாளை மலரிட்டுச் சேரலாம் என்றாலும் இந்த வீட்டிலே எனக்குச் சத்துருக்களாக வந்திருக்கிற ஐந்து பாவிகளும் என்னை விடுவதில்லையே! இங்கே நான் ஆசைப்படும்படி எதையும் செய்யக்கூடிய சுதந்திரம் இல்லை. என்னுடைய ராஜ்யமாக இருக்க வேண்டிய இந்த உடம்பிலே, ஐந்து பேர்கள் என்னை அடக்கி ஒடுக்கித் தங்களுடைய ராஜ்யமாக வைத்துக் கொண்டு என்னை ஆட்டி வைக்கிறார்கள். அவர்களுடைய கொட்டத்தை அடக்க எனக்கு ஆற்றல் இல்லையே! என்ன செய்யட்டும்?" என்று பேசுகின்றார் அருணகிரி முனிவர். முருகன் கேட்கிறான். "உன்னுடைய பொறிகளை அடக்கி, உன் மனத்தை ஆளக்கூடிய திறமை உனக்கு இல்லாவிட்டால் நான் என்ன செய்வேன்? என்னிடம் எதற்காக வந்து சொல்லுகிறாய்?" என்று கேட்கிறான். அவர் சொல்கிறார். 2 சூரசங்காரம் சென்று தேவர்உய்யச் சோரநிட் டுரனைச் சூரனைக் காருடல் சோரிகக்கக் கூரகட் டாரியிட் டோர்இமைப் போதினிற் கொன்றவனே. "அப்பா, உன்னுடைய பெருமை எனக்குத் தெரியும். தேவர்களுக்கு எல்லாம் நீதான் பிழைப்புக் கொடுத்தாய் எனப் புராணங்கள் பேசுகின்றன. அவர்களுக்குச் சொந்தமான அரசு தேவலோகம். அதை மகா பாவிகளாகிய சூரபன்மன் முதலிய அசுரர்கள் கைப்பற்றிக் கொண்டார்கள். இந்திரன் மகனாகிய சயந்தனைச் சிறையில் அடைத்தார்கள். இந்திரன் மனையாட்டி இந்திராணி தன்னுடைய கற்புக்கு ஊறு நேரிட்டுவிடுமோ என அஞ்சி ஒடி ஒளிந்து கொண்டு விட்டாள். பிள்ளை ஒரு பக்கம் வாட மனைவி ஒரு பக்கம் ஒட, தேவேந்திரன் நாட்டை இழந்து, ஆட்சி உரிமையை இழந்து, அடிமைப்பட்டு வாடினான். தேவர்கள் தாங்கள் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்ய முடியாமல் சிறையில் வாடினார்கள். நீ என்ன செய்தாய்? கோடிக் கணக்கான அசுரர்களையும் வென்று, தேவர்களுக்கு அவர்களுடைய லோகத்தைத் திரும்பவும் வாங்கிக் கொடுத்தாய் அல்லவா? அவர்களுக்கு நீதானே சுயராஜ்யம் வாங்கிக் கொடுத்தாய்? அது எனக்குத் தெரியாதா? கொஞ்ச காலம் குடியிருக்கும்படி எனக்குக் கொடுத்திருக்கிற வீட்டில் ஐந்து அசுரர்கள் புகுந்துகொண்டு துன்பம் இழைத்து வருகிறார்கள். கோடிக் கணக்கான அசுரர்களை வதை செய்த நீ நினைத்தால் இந்த அசுரர்களையும் அழிப்பது பெரிய காரியமா? எனக்கு நீ பிச்சையாகக் கொடுத்தது, இந்த உடம்பு. அதனை ஐந்து பேர்களும் பிடுங்கிக் கொண்டதோடு அல்லாமல், என்னையும் தங்களுக்கு அடிமையாக்கிவிட்டார்கள். இங்கே நான் நினைப்பதைச் செய்யக்கூடிய சுதந்தரம் இல்லை. செய்யவொட்டாமல் அவர்கள் தடுக்கிறார்கள். எனக்குச் சுயராஜ்யம் வேண்டும். பல காலம் போராடித் தேவர்களுக்கு அவர்களுடைய ராஜ்யத்தைத் திரும்பவும் வாங்கிக் கொடுத்த கருணையாளன் அல்லவா நீ? உன்னைத் தவிர நான் வேறு யாரிடம் போய் எனக்குச் சுயராஜ்யம் வாங்கிக் கொடு என்று கேட்பேன்" என்கிறார். இந்தப் பாட்டை இதற்கு முந்திய பாட்டுடன் தொடர்பு செய்தது போலச் சொல்கிறார். முந்திய பாட்டில், "கிரெளஞ்சம் குலைந்தது; அரக்கன் நேரணி இட்டு வளைந்த கடகம் நெளிந்தது; சூர்ப் பேரணி கெட்டது; தேவேந்திர லோகம் பிழைத்தது" என்று சொன்னார். தாங்கள் பெற்ற இன்ப வாழ்க்கையை நடுவிலே இழந்து, சூரபன்மன் முதலியவர்களால் மிகுந்த துன்பத்திற்கு ஆளான தேவர்கள் திரும்பவும் உன்னுடைய கருணையினால் இன்ப வாழ்வைப் பெற்றார்கள் என்று சொன்னார். சூரன் என்ன ஆனான் என்று அங்கே சொல்லவில்லை. இந்தப் பாட்டிலே சொல்கிறார். க.சொ.1-11 சென்று தேவர்உய்யச் சோரநிட் டூரனைச் சூரனைக் கார்உடல் சோரிகக்கக் கூரகட் டாரியிட் டோர்இமைப் போதினிற் கொன்றவனே தேவர் உய்யச் சென்று சூரனை வதைத்தான் முருகன். மற்ற மற்ற அசுரர்களை எல்லாம் கொல்ல முருகன் போகவில்லை. வீரபாகு முதலிய வீரர்கள் பார்த்துக் கொண்டனர். ஆனால் சூரனைச் சங்காரம் செய்ய முருகனே அவன் இருக்குமிடம் சென்றான். எதற்காக? "தேவர் உய்ய" என்கிறார் அருணகிரிநாதர். தேவர்கள் தங்கள் உரிமைகளை எல்லாம் பறிகொடுத்தார்கள்; இன்பமயமாக இருந்த வாழ்க்கை துன்பமயம் ஆகிவிட்டது. அவர்களது வாழ்க்கையை மீண்டும் இன்ப மயமாகக் செய்ய, அவர்கள் உய்யும்படியாகச் செய்ய, முருகன் சூரபன்மன் இருக்குமிடத்துக்குச் சென்றான். பகைவன் இருக்குமிடத்திற்கே சென்று, அவனுடைய கோட்டையை முற்றுகை போட்டு, அவன் தோற்று ஒடும்படியாகச் செய்வது பெரிய வெற்றி. பகைவன் தன்னுடைய நாட்டுக்கு வந்து முற்றுகை போடும்போது, அவனைத் தோல்வியுறச் செய்து ஒடச் செய்வது சாமான்ய வெற்றி. "ஈண்டவன் அடுதலும் ஒல்லான் ஆண்டு.அவர் மாணிழை மகளிர் நாணினர் கழியத் தந்தை தம்மூர் ஆங்கண் தெண்கிணை கறங்கச்சென்று ஆண்டட் டனனே" என்று ஒர் அரசனைப் புலவர் ஒருவர் பாராட்டுகிறார். முருகன் தேவசேனாபதி அல்லவா? அவன் தன்னுடைய இடத்திற்குச் சூரபன்மன் வர அவனோடு போராடி வெல்லவில்லை. அவன் இருக்கிற இடத்திற்கே சென்று போராடினான். அவனை வெல்வதற்குத் தன் கையில் உள்ள வேலை விட்டாலே போதும். ஆயினும் முருகன் தானே அவன் இருக்கு மிடத்திற்கு நேரில் சென்றான். காரணம், 'அந்தச் சமயத்திலாவது அவன், மன்னிப்புக் கேட்டுக் கொண்டு நம் காலில் வந்து விழ மாட்டானா? அவனுக்கு நாம் அருள் செய்யச் சந்தர்ப்பம் ஏற்படாதா?’ என்று கருதியே சென்றான். சூரனுக்குத் துணையாக இருந்த கிரெளஞ்ச மலை முருகன் கைவேலின் கூரினால் அணு அணுவாகிக் குலைந்துவிட்டது. அவனுடைய படை வியூகங்கள் சின்ன பின்னமாகிவிட்டன. அவன் மகன் பானுகோபன் மாண்டுவிட்டான். சிங்கமுகாசுரன் மடிந்துவிட்டான். இவற்றைக் கண்டாவது சூரன், இறைவன் வீரத்தை உணர்ந்து அஞ்சி அவன் காலிலே வீழ்ந்தானா? விழவில்லை. முருகனை எதிர்த்துப் போராடப் போர்க்களத்திற்கு வந்துவிட்டான். அவன் தைரியம் என்ன தைரியம்? அசட்டுத் தைரியம். தன் படைப்பலம் கொண்டு பிறரை என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று எண்ணி இறுமாந்து வந்தான். தன் படைகள் அழிந்து போன பிறகும் தன் பலத்தின் அளவையும் முருகன் பெருமையையும் உணராமல் எதிர்க்கத் துணிந்தான். இது முரட்டுத் துணிவு. சூரனைச் சோரன் என்கிறார் அருணகிரியார். தேவர்களுக்கு உரிய வாழ்வைப் பறித்தவன் அல்லவா? அவன் கொடுமையை உடையவன்; நிட்டுரன். தன் படைப்பலம் கொண்டு பிறருக்கு நன்மை செய்யாததோடு யாவருக்கும் கொடுமை செய்வதையே தொழிலாக அவன் கொண்டான். அவன் பிறருக்கு இழைத்து வந்த துன்பத்திற்கு ஏற்ற தண்டனை கிடைத்தது. ஆண்டவனது திருக்கரத்திலே உள்ள வேல் சூரனது 'காருடல் சோரி கக்கும்படி’ யாகப் பாய்ந்தது. சோரி - ரத்தம். காருடல் - கன்னங்கரேல் என்று கறுப்பாக இருந்த உடல். கறுப்பு, அஞ்ஞானத்தின் அடையாளம். ஞானத்தின் அடையாளம் செம்மை. அஞ்ஞான மயமான சூரனது கரிய உடல் சிவப்பு ரத்தம் கக்கும் படியாக வேல் பாய்ந்தது. முருகன் அவனைக் கூர்மையான கட்டாரி இட்டுக் கொன்றான். கட்டாரி என்றால் குத்து ஈட்டி. இங்கே வேலையே அப்படிச் சொன்னார். அது கட்டாரியைப் போலக் குத்த உதவுவது. சோரநிட் டூரனைச் சூரனைக் காருடல் சோரிகக்கக் கூரகட் டாரியிட்டு ஒரிமைப் போதினில் கொன்றவனே கருணை வீரம் அவனை முருகன் கொன்றது ஓர் இமைப் போதினில்தான் என்கிறார். முருகன் திடீரென்று அவனுக்கு எச்சரிக்கை எதுவும் செய்யாமல் கொன்றுவிடவில்லை. அவனோடு பலகாலம் போரிட்டான். இதற்குள் ஒரு விநாடியிலாவது அவனுக்கு ஞானம் பிறந்து, "இறைவனே என்னை மன்னித்துவிடு" என்று அவன் காலில் வந்து வீழ்ந்திருந்தாலும் முருகன் மன்னிக்கக் காத்துக் கொண்டுதான் இருந்தான். கடைசி நிமிஷத்திலாவது அவன் சரணாகதி அடைய மாட்டானா என்பதுதான் அவன் ஆசை. கெட்டவர்கள் நல்லவர்களாக மாற வேண்டுமென்பதுதானே இறைவனுடைய ஆசை? பொல்லாதவர்களை எல்லாம் அழித்துவிட வேண்டுமென்று நினைப்பவன் அல்ல ஆண்டவன். ஒரு குழந்தையை வெளியே போகாதே என்று சொல்லுகிறாள் தாய். தாயின் சொல் கேளாது அந்தக் குழந்தை வெளியே போகிறது. எங்கோ விழுந்து, காலில் ரத்தம் சொட்ட, "அம்மா!" என்று அழுதுகொண்டே திரும்ப வீட்டிற்குள் வருகிறது. அம்மாவுக்குக் கோபம் வந்துவிடுகிறது. அவள் என்ன செய்கிறாள்? "நான் அப்போதே சொன்னேனே! ஏன் வெளியே போனாய்?" என்று அந்தக் குழந்தையை மேலும் படார் படார் என்று அடிக்கிறாள். அவள் போகாதே என்று சொன்னது உண்மை. அதைக் கேளாமல் அந்தக் குழந்தை வெளியே போனது தவறுதான். அந்தப் பிழைக்கு அவள் தண்டனைக் கொடுக்க வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும்? "இன்றைக்குப் பண்ணியிருக்கிற பட்சணம் தர மாட்டேன்" என்று சொன்னால் போதும். அது தண்டனை. ஆனால் தன் வார்த்தையைக் கேட்கவில்லை என்பதனால் அவளுக்குக் கோபம் உண்டாகிறது. குழந்தையை அடிக்கிறாள். அதனால் தன் கோபத்தைத் தீர்த்துக் கொள்ளுகிறாள். இது தண்டனை ஆகாது. கோபத்தால் அடிக்கிறவள், கால் வலியோடு அடியின் வலி வேறு சேர்கிறதே என்பதை மறந்து விடுகிறாள். சூரனிடம் சினம் மூண்டு அவனை அழித்துவிட வேண்டும் என்று முருகன் நினைக்கவில்லை. அவனுக்குத் தண்டனை கொடுத்து வழிப்படுத்த எண்ணினான். இறைவன் நல்ல காரியத்தைச் செய் என்று ஆணையிட்டபோதிலும், கெட்ட காரியங் களைச் செய்கிறவர்களிடம் கோபம் கொள்ளுவது இல்லை. ஆனால் அவர்களுக்கு அந்த அந்தக் காரியங்களுக்கு ஏற்ற தண்டனையை அளிக்கிறான்; திருந்த வேண்டும் என்ற எண்ணத்தால் தண்டிக்கிறான். "இராவணன் என் மனைவியை எடுத்துப் போய்விட்டான்; அவனை விட்டேனா பார் என்ற கோபம் இராமனுக்கு வந்திருந்தால், போர்க்களத்திலே படைகள் எல்லாம் அழிந்து போக, தன்னுடைய துணைவர்கள் யாவரும் மாண்டு போக நிராயுதபாணியாக நின்ற இராவணனை இதுதான் சமயம் என்று ஒரே அம்பால் கொன்றிருக்கமாட்டானா? அவனுக்கு இராவணனிடம் அப்போது கருணைதான் உண்டாயிற்று. பத்துத் தலையையுடைய இராவணன் தன்னைச் சுற்றிலும் யாரேனும் துணைவர்கள் இருக்கிறார்களா என்று பார்க்கலாம். எல்லோரும் செத்துக் கிடக்கும்போது, படைகள் எல்லாம் அழிந்து கிடக்கும் போது, தன் கையிலுள்ள எவ்விதமான ஆயுதங்களும் இல்லாமல் தனியே நிற்கும்போது, 'இனி இராமனுடன் நான் எப்படிச் சண்டை போட முடியும்? அவன் மனைவியை அவனோடு அனுப்பிவிடலாம்' என்று எண்ணினானா? இல்லை. இராமன் நிராயுதபாணியாக இருந்த இராவணனை ஒரே அடியாக அப்போது அடித்துக் கொன்று விட்டானா? இல்லை. "இன்று போய் நாளை வா" என்றான். அந்தச் சமயத்தில் அவன் காட்டிய வீரம் கருணை வீரம். நிராயுதபாணியிடம் படையைச் செலுத்தாமல் இருப்பதைத் தழிஞ்சி என்று சொல்வார்கள் இலக்கணப் புலவர்கள். "ஆள யாஉனக் கமைந்தன மாருதம் அறைந்த பூளை ஆயின கண்டனை, இன்றுபோய்ப் போர்க்கு நாளை வாஎன நவின்றனன், நாகிளங் கமுகின் வாளை தாவுறு கோசல நாடுடை வள்ளல்" என்பது அவர் பாட்டு. இராவணனிடம் போர் செய்வதற்கு என்ன இருக்கிறது? அவனுடைய துணைவர்கள் எல்லோரும், படைகள் எல்லாம், புயற் காற்றில் அடிபட்ட பூளைப் பூவைப் போலப் போய் விட்டன. அந்தச் சமயத்தில், "இன்று போய் நாளை வா" என்கிறான் கருணை வள்ளலாகிய இராமன். "இன்றைக்குப் போ. இரவில் நன்றாக யோசித்துப் பார். உன் படைகள் எல்லாம் அழிந்துவிட்டன. நீ துணைவர்கள் இன்றி இருக்கிறாய். ஆகவே சீதையைத் திருப்பி அனுப்பிவிடுவோம் என்ற எண்ணம் தோன்றலாம். அப்படித் தோன்றினால், நாளைக்கு நீ வரவேண்டியதில்லை. அப்படியின்றிப் போர் செய்யும் எண்ணம் இருந்தால் நாளைக்கு வா" என்கிறான். அங்கே தன்னுடைய போர் வீரத்தைக் காட்டிலும் சிறந்த கருணை வீரத்தைக் காட்டினான் இராமன். இங்கே முருகன் நினைத்திருந்தால் சூரனை ஒரு நிமிஷத்தில் கொன்றிருக்கலாம். ஆனால், இவன் நல்லவனாக மாட்டானா? தேவர்களுடைய அரசை அவர்களுக்கே திரும்பவும் கொடுத்து, அவர்களைச் சிறையிலிருந்து விடுவித்துவிடமாட்டானா?” என்று பல காலம் போரை நீளச் செய்து காத்திருந்தான்; தன் விசுவரூபத்தைக்கூட காட்டினான். ஆனால் சூரன் ஒவ்வொரு கணமும் ஒவ்வொரு வேஷம் போட்டுக் கொண்டு வந்தான். மாயையின் பிள்ளை அல்லவா? பெரிய பெரிய மாயாஜாலங்களைக் காட்டினான். மாயையை அறுத்து எறிகின்றவன் முருகன். அவனிடம் அவன் மாயாஜாலங்கள் செல்லுமா? எவ்வளவு செறிவாக இருள் இருந்தாலும் ஒரு விளக்கைப் போட்டால் அது ஒடிவிடுகிறதல்லவா? முருகனுக்குச் சூரனைக் கொன்றுவிட வேண்டுமென்ற கோபம் இல்லை. அவனுக்குத் தன் கருணையை வழங்க வேண்டுமென்றே விரும்பினான். ஆகவே அவனுடைய மாயைத் தோற்றங்களை எல்லாம் குலைத்தான். தன் உருவத்தைக் காட்டினான். அப்படியும் அவன் சரணடையவில்லை. பின்பே முருகன் தன்னுடைய படையான வேலை விடுவித்தான். கட்டாரியைப் போன்ற அந்தக் கூர்மையான வேல், கரிய சூரன் உடலில் பாய்ந்து, இரத்தம் கொப்புளிக்க அவனை ஓர் இமைப் போதினில் அழித்தது. போர் நெடுங்காலம் நடைபெற்றாலும் சூரனைக் குத்த வேண்டும் என்ற நினைவு உண்டானது இமைப் பொழுதில்; அந்தக் கணத்தில் முருகன் அவனைச் சங்காரம் செய்து விட்டான். அதனால், "ஓரிமைப் போதினில் கொன்றவனே" என்கிறார் அருணகிரியர். "மாயையின் பிள்ளையாகிய சூரன் என்ன என்னவோ உருவங்களை எடுத்தான். தேவர்கள் உய்ய, சூரன் இருக்குமிடத் திற்கே சென்று, அவனது கரிய உடல் இரத்தம் கக்கும்படியாக உன்னுடைய கட்டாரியைப் போன்ற கூர்மையான வேலை விட்டு, அவனை ஒரு நொடிப் பொழுதினில் கொன்றாய். தேவர்களுடைய ராஜ்யத்தைத் திரும்பவும் வாங்கிக் கொடுத்தாய். அதை போல எனக்கு நீ உதவி செய்யக் கூடாதா? எனக்கு இந்த உடம்பாகிய வீட்டில் சுயராஜ்யம் கிடைக்கும்படியாகச் செய்யக் கூடாதா? உரிமை வாழ்வு எனக்கு அருளக் கூடாதா? என்னுடைய ஐந்து பொறிகளும் எனக்கு அளிக்கின்ற துன்பம் கொஞ்சநஞ்சம் அல்லவே! நான் உன்னை ஒரலாம் என்றாலும், உன்னலாம் என்றாலும், மலரிட்டு உன்தாள் சேரலாம் என்றாலும் இவர்கள் என்னை விடமாட்டோம் என்கிறார்களே உன்னிடம் சொல்லாமல் வேறு யாரிடத்தில் போய் நான் முறையிட முடியும்? யான் என்ன செய்வது?" என்று இந்தப் பாட்டிலே முறையிடுகிறார் அப்பெருமான். இந்தப் பாட்டின் பின் இரண்டியில் சந்தநயம் அமைந்திருக்கிறது. ஒரஒட் டார்; ஒன்றை உன்னஒட் டார்; மலர் இட்டுனதாள் சேரஒட் டார்ஐவர் செய்வதென் யான்? சென்று தேவர்உய்யச் சோரநிட் டூரனைச் சூரனைக் காருடல் சோரிகக்கக் கூரகட் டாரிஇட் டோர்இமைப் போதினிற் கொன்றவனே! (ஐம்பொறிகளாகிய பகைவர் உன் சம்பந்தமான எண்ணங்களை எண்ண விடுவதில்லை; ஒன்றைக் கூர்ந்து சிந்திக்க ஒட்டுவதில்லை; மலர் தூவி உன் தாளைத் தியானிக்க விடுவதில்லை. யான் என்ன செய்வது? அசுரர்கள் உள்ள இடத்துக்குச் சென்று தேவர்கள் உய்வை அடையும் படியாக, கள்வனும் கொடுமையுடையவனுமாகிய சூரனை அவனுடைய கரிய உடல் இரத்தத்தைக் கக்கும்படி கூர்மையான கட்டாரியாகிய வேலைக் கொண்டு குத்தி ஒரு கண நேரத்தில் கொன்றவனே! ஒர-நினைக்க. உன்ன-கூர்ந்து சிந்திக்க. சேர-தியானிக்க. நிட்டுரம்-கொடுமை. நிட்டுரன் என்றது சந்தம் நோக்கி நீண்டது. சோரி-இரத்தம். கூர-கூர்மையான கட்டாரியிட்டுச் சூரனைக் கொன்றவனே.) குறிஞ்சிக் கிழவன் 1 கந்தர் அலங்காரத்தில் முருகனுடைய திருவிளையாடல்கள் வரும். தத்துவ நூற் கருத்துக்கள் வரும். தோத்திரமும் இருக்கும். எல்லாவற்றையும் நயமாக அலங்காரமாகச் சொல்வார் அருணகிரிநாதர். காப்பிய நயங்களைப் பல இடங்களில் பார்க்கலாம். "இது முறையா?" என்று கேட்பது போலச் சில இடங்களில் இருக்கும். அது விடையை எண்ணிக் கேட்பது அன்று. அப்படிக் கேட்பதே ஒரு வித்தகம். அத்தகைய பாட்டு ஒன்றை இப்போது கவனிக்கலாம். சொல்லும் முறை அருணகிரியார் கந்தர் அலங்காரத்தின் முதற்பாட்டில் விநாயகரைச் சொன்னார். பின்பு முருகனுடைய பெருமையினால் தாம் அடைந்த பேற்றைச் சொன்னார். அவன் தன்னுடைய வேலினால் கிரெளஞ்ச சங்காரம் செய்த கதையையும், சூரபன்மனை வதம் செய்த கதையையும் பிறகு சொன்னார். இது புராணமாக இருந்தால் கந்தப் பெருமானின் அவதாரம், அவனுடைய திருவிளையாடல்கள் என்று வரிசையாக வரும். தோத்திர நூல்; அன்பினால் முருகனை நினைந்து வியந்து பாடும் நூல்; ஆதலால் அடைவாக நிகழ்ச்சிகளைச் சொல்லாமல் முன்பின்னாக மாற்றிச்சொல்வார். கிழவன் அருணகிரிநாதருக்கு முன்பே பல பெரியார்கள் முருகனது பெருமையைப் பாடியிருக்கிறார்கள். அவ்வாறு பாடிய பெரும் புலவர்களில் நக்கீரர் ஒருவர். அவர் பாடியது திருமுருகாற்றுப் படை. அந்த நூலின் முடிவிலே, "பழமுதிர் சோலை மலைகிழ வோனே" என்று அவர் பாடியிருக்கிறார். 'கிழவன்' என்ற சொல்லுக்கு இப்போது வழங்கும் பொருள் முன்பு இல்லை. கிழவன் என்பதற்கு உரியவன் என்றுதான் பொருள். ஒரு பெண்ணின் கணவனை, 'கிழவன்' என்று சொல்வார்கள். அவ்வாறே மனைவியை 'கிழவி' என்பார்கள். “செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்து இல்லாளின் ஊடி விடும்" என்று வள்ளுவர் சொல்கிறார். "நிலத்திற்கு உடையவன், தானே நிலத்திற்குப் போய்க் கவனிக்காமல் வீட்டில் இருந்தால், தன்னைக் கவனிக்காத கணவனிடம் மனைவி ஊடல் கொள்வது போல நிலம் விளைவு தராமல் போய்விடும்" என்பது இதன் பொருள். இதில் கிழவன் என்ற சொல் உரியவன் என்ற பொருளில்தான் வந்திருக்கிறது. மலைகளுக்கு உரியவன் முருகன். அவன் மலையாண்டி. மலையும் அதைச் சார்ந்த இடமும் குறிஞ்சி நிலம். குறிஞ்சி நிலத்துக்கு உரியவனாகையால் "குறிஞ்சிக் கிழவன்" என்று முருகனை அழைப்பார்கள். ஐந்திணை உலகத்தைக் குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என்று ஐந்து வகைகளாகத் தமிழர்கள் பிரித்தார்கள். மலையும் மலையைச் சார்ந்த இடமும் குறிஞ்சி நிலம் என்று பெயர் பெறும். ஒன்றும் வளராமல் இருக்கிற இடம் பாலை நிலம். ஒரே காடாக இருக்கிற பகுதி முல்லை நிலம். வேளாண்மை செய்யும் வயல்களை உடைய இடம் மருத நிலம். கடலைச் சார்ந்த இடம் நெய்தல் நிலம். ஒர் ஆறு மலையிலே உற்பத்தியாகி, ஒன்றும் விளையாத பாலைவனத்தின் வழியே போய், காட்டுக்குள் நுழைந்து, மக்கள் வசிக்கின்ற ஊருக்குள் புகுந்து, கடைசியில் கடலோடு கலக்கிறது என்பதை நினைவுபடுத்திக் கொண்டால் இந்த ஐந்து திணைகளையும் முறையாகத் தெரிந்து கொள்ளலாம். குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் ஆகிய இந்த ஐந்து நிலங்களுக்கும் உரியவர்களாக ஐந்து தெய்வங்களைத் தமிழர்கள் அமைத்து வழிபட்டார்கள். மலையும் மலையைச் சார்ந்த இடமுமாகிய குறிஞ்சி நிலத்துக்குத் தெய்வம் முருகன்; புற்பூண்டு ஒன்றும் வளராமல் இருக்கிற பாலை நிலத்துக்குத் தெய்வம் காளி; ஒரே காடாக இருக்கிற முல்லை நிலத்துக்குத் தெய்வம் திருமால்; மக்கள் வேளாண்மை செய்து வாழும் நிலமாகிய மருத நிலத்துக்குத் தெய்வம் இந்திரன்; கடலும் கடலைச் சார்ந்த இடமும் ஆகிய நெய்தல் நிலத்துக்குத் தெய்வம் வருணன். குறிஞ்சி இந்த ஐந்து நிலங்களிலேயும் முதல் நிலம் என்று சொல்வது குறிஞ்சி. முதல் என்பது வரிசையினால் அல்ல; காலத்தினால் முதன்மையானது; பழமையானது. உலகம் தோன்றுவதற்கு முன்னால் எங்கே பார்த்தாலும் தண்ணீர் நிரம்பியிருந்தது. உலகம் தோன்றியபோது முதலில் மலைதான் தன் தலையை நீட்டியது. "கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளோடு முன்தோன்றி மூத்த குடி" என்று தன் குடியின் பழமையை ஒரு மறவன் பேசுகிறான். கல் தோன்றிய பிறகே மண், ஆறு, ஊர், கடற்கரை யாவும் தோன்றின. முதலில் தோன்றிய மலைக்குத் தெய்வம் முருகன் என்று தமிழர் வைத்தார்கள். அதனால் முருகனை முதல்வனாகவும் மிகப் பழைய தெய்வமாகவும் அவர்கள் கொண்டிருந்தார்கள் என்று தெரியவரும். முருக வழிபாடு பழங்காலந்தொட்டே தமிழ் நாட்டில் இருந்து வருகின்றது. குறிஞ்சிக் கடவுள் "சேயோன் மேய மைவரை உலகமும்" என்று தொல்காப்பியம் சொல்கிறது. சேயோன் என்பதற்குச் சிவந்த நிறம் உடையவன் என்று பொருள். சிவந்த நிறம் உடைய முருகன் மலையையும் மலையைச் சார்ந்த இடத்தையும் விரும்பி, அங்கே தங்கி இருக்கிறான். இந்த நாட்டினர் உயர்ந்த கடவுளை உயர்ந்த இடத்தில் வைத்துப் போற்றவேண்டுமென்று எண்ணினார்கள். கொஞ்சம் மரியாதை உள்ளவர்கள் நம் வீட்டுக்கு வந்தால் அவர்களை நாம் உயர்ந்த ஆசனம் போட்டு உட்காரச் செய்கிறோம். "உச்ச ஸ்தானேஷ பூஜ்யந்தே" என்று வடமொழியில் சொல்வார்கள். எல்லோரையும்விட உயர்ந்தவன் முருகன். அவன் படைத்த இந்த நில உலகத்தில் எல்லாப் பொருள்களையும்விட உயர்ந்தது மலை. அந்த உயர்ந்த இடத்தில் முருகக் கடவுளை வைத்துப் போற்றினார்கள். அழகு கெழுமிய முருகனை உயர்ந்த மலைகளுக்கு எல்லாம் உரியவனாகச் செய்தார்கள். "விண்பொரு நெடுவரைக் குறிஞ்சிக் கிழவ" என்று திருமுருகாற்றுப்படையில் வருகிறது. 'வானை முட்டும் உயர்ந்த மலைகளையுடைய குறிஞ்சி நிலத்துக்கு உரியவனே' என்பது பொருள். ஆகவே, நக்கீரர் இரண்டிடங்களில் முருகனைக் கிழவன் என்று சொல்கிறார். இரண்டிடங்களிலும் உரியவன் என்ற பொருளே சொல்ல வேண்டும். ஆனால் இன்றைக்கு, கல்யாணமான ஒரு பெண்ணிடம் போய், "உன் கிழவன் வந்துவிட்டானா?" என்று கேட்டால், "கிழவன் என்று யாரைச் சொல்கிறீர்கள்?" என்று கேட்பாள். "உனக்கு உரியவனாகிய உன் கணவனைத்தான் சொல்கிறேன்" என்றால் அவளுக்குக் கோபம் வந்துவிடும். "என்ன? என் கணவரைக் கிழவன் என்கிறீர்களே! நான் இரண்டாந்தாரமாக வாழ்க்கைப்படவில்லை. என்னைவிட அவருக்கு இரண்டு வயசு தான் அதிகம். எனக்குப் பதினெட்டுதான் ஆகிறது. அவரைக் கிழவன் என்று சொல்லாதீர்கள்" என்று கோபிப்பாள். 'கிழவன்' என்ற சொல்லுக்கு 'வயசானவன்' என்ற பொருள் பிற்காலத்தில் வந்துவிட்டது. அதுதான் அவள் கோபிப்பதற்குக் காரணம். அந்தப் பொருள் அருணகிரிநாதர் காலத்திலேயே வந்துவிட்டது. சமத்காரம் நக்கீரர், என்றும் இளையவனாக உள்ள முருகனை, "விண்பொரு நெடுவரைக் குறிஞ்சிக் கிழவ" என்று பாடியிக்கிறாரே என்று வேடிக்கையாக ஓர் எண்ணம் அருண்கிரியர்ருக்குத் தோன்றியது. 'கிழவன் என்று மற்றவர்களைச் சொன்னாலும் பொருத்தமாக இருக்கும். என்றும் அழகியவனாய், என்றும் இளமையோடு இருக்கிற முருகனை இந்தக் குவலயம் குறிஞ்சிக் கிழவன் என்று சொல்லலாமா? நித்திய யெளவன சுந்தரமூர்த்தி அல்லவா அவன்?' என்ற நினைவு தோன்றியது. என்றும் இளையவன் என்றும் இளையபிரானாக, சதா பால ரூபத்தை உடையவனாக முருகன் இருக்கிறான். பாலசுப்பிரமணியன் என்ற பெயரிலிருந்தே அவன் எப்போழுதும் பாலனாக இருக்கிறான் என்பது தெரியும். பாலன் என்றாலே முருகனைக் குறிக்கும். வடக்கே திருவேங்கட மலை இருக்கின்றது. அங்கே வேங்கடேசப் பெருமாள் எழுந்தருளியிருக்கிறார். அங்கே முருகன்தான் எழுந்தருளியிருக்கிறான் என்று சிலர் சொல்வார்கள். இல்லை என்று சிலர் மறுப்பார்கள். அதைப் பற்றி நமக்குக் கவலை இல்லை. அங்கே திருமால் இருக்கிறார். முருகனும் இருந்தான். முருகன் கோயில் அங்கே இருந்ததற்குப் பல அடையாளங்கள் உண்டு. அங்கே எழுந்தருளியிருக்கும் திரு மாலை நாம் எல்லோரும் வேங்கடேசுவரன் என்று சொல்கிறோம். வைணவர்கள் ஸ்ரீ நிவாசன் என்று சொல்வார்கள். ஆனால் வடநாட்டிலிருந்து வருகிறவர்கள் எல்லோரும், "பாலாஜி, பாலாஜி" என்று சொல்லுவார்கள். பாலாஜி என்பது பாலன் என்ற பொருளுடையது. அப்பெயர் முருகனுக்கே உரியது. குழந்தைப் பெருமானாகிய முருகன் திருவேங்கட மலையில் பழங்காலம் முதற்கொண்டே ஆட்சி பெற்று வந்திருக்கிறான் என்பதற்கு இந்தச் சொல்லும் ஒரு சான்று. இவ்வாறு என்றும் இளையவனாக, சதா பால ரூபத்தோடு இருக்கிற முருகனைக் குறிஞ்சிக் கிழவன் என்று சொல்லலாமா? குழந்தையின் செயல்கள் முருகன், உருவத்தில் மாத்திரம் இளையவன் அல்ல. பல வகைப்பட்ட அவன் செயல்களும் குழந்தைக்கு உரியனவாக உள்ளன. குழந்தைப் பருவத்துக்குரிய இலக்கணங்கள் சில உண்டு. குழந்தை தொட்டிலில் படுத்து விளையாடும். தொட்டிலில் இட்டுத் தாலாட்டும் பருவம் குழந்தைப் பருவம். "தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்" என்ற பழமொழியில் தொட்டில் என்ற பழமொழியில் தொட்டில் என்றது குழந்தைப் பருவத்தைக் குறிக்கிறது. பச்சிளம் பாலகன்தான் தொட்டிலில் படுத்து விளையாடுவான். "அழுத பிள்ளை பால் குடிக்கும்" என்ற பழமொழி சொல்கிறோம். பிள்ளைகள் எல்லாம் தாயாரிடம் பால் குடிக்கும். தாய் பால் கொடுக்க மறந்துவிட்டாலும், அழுது, தாயைக் கூப்பிட்டுப் பால் கொடுக்கச் செய்கிறது குழந்தை. தொட்டிலில் படுத்துத் தூங்குவது குழந்தையின் லட்சணம். பால் குடிப்பது குழந்தையின் இயல்பு. அப்படியே அழுவதும் குழந்தையின் லட்சணம். ஒரு வீட்டில் குழந்தை பிறந்திருக்கிறது என்றால் பழைய காலத்துத் தாய்மார்கள் அந்த வீட்டுக்குப் போய் விசாரிப்பார்கள். இப்பொழுது இருக்கிற நாகரிகப் பெண்களுக்கு தாய்மார்கள் வந்து விசாரிப்பதைக் கேட்டால் இவர்களுக்குக் கோபம் வரும். அவர்கள் குழந்தை பிறந்த வீட்டுக்குப் போய், "குழந்தை அழுது கொண்டிருக்கிறதா?" என்று விசாரிப்பார்கள. 'குழந்தை அழுகிறதா' என்று கேட்கிறார்களே; அமங்கலமான கேள்வி அல்லவா? அப்படிக் கேட்கலாமா? என்று அதன் கருத்தைப் புரிந்துகொள்ளாமல் அவர்கள் கோபித்துக் கொள்ளக் கூடும். வயசான நாம் அழுவது துக்கத்துக்கு அறிகுறி. ஆனால் குழந்தை அழுவது சுகத்திற்கு அறிகுறி. அது அழுதால் சுவாசப் பைகள் நன்றாக இயங்கும். உடம்பு வேலை செய்ய வேண்டுமானால் சுவாசப்பை நன்றாக வேலை செய்ய வேண்டும். குழந்தை அழுதால் சுவாசப்பை விரிந்து சுருங்கி வேலை செய்ய ஆரம்பிக்கிறது. அந்த அழுகை ஆரோக்கியத்தைக் காட்டுகிறது. குழந்தை என்பதற்குரிய முக்கிய இலக்கணங்கள் மூன்று; தொட்டில் விளையாட்டு, பால் குடித்தல், அழுகை, உலகத்திலுள்ள எல்லாப் பச்சிளம் குழந்தைகளுக்கும் இவை இயல்பு. முருகப்பெருமான் எப்போதும் குழந்தை உருவத்தில் இருப்பவன் அல்லவா? உருவத்தில் மட்டும் குழந்தை அல்ல. செயலிலும் குழந்தை என்பதற்குரிய இந்த மூன்று இலக்கணங்களும் அவனிடம் இருக்கின்றன. "குருத்தைப் போலுள்ள அந்தப் பச்சிளம் குழந்தையை கிழவன் என்று உலகத்தார் சொல்கிறார்களே; சொல்லலாமா?" என்று அருணகிரிநாதர் இந்தப் பாட்டிலே சமத்காரமாகச் சொல்கிறார். பாட்டைக் கவனிக்கலாம். 2 முருகக் குழந்தையின் செயல்கள் திருந்தப் புவனங்கள் ஈன்றபொற் பாவை திருமுலைப் பால் அருந்தி உமாதேவியாரின் தனங்களிலேயே ஊறின பாலை அருந்தியவன் முருகன். அவன் பால் குடிக்கும் குழந்தையாக இருப்பவன். சரவணப் பூந்தொட்டில் ஏறி. அவன் சரவணப் பொய்கையில் மலர்ந்திருக்கிற தாமரையாகிய தொட்டிலில் படுத்து விளையாடினான்; தூங்கினான். ஆகவே அவன் தொட்டிலில் படுக்கும் குழந்தையாக உள்ளவன். அறுவர் கொங்கை விரும்பி.... அழும், தனக்குப் பால் கொடுப்பதற்காக, கார்த்திகை மாதர்களாகிய ஆறு பேரும் இன்னமும் வரவில்லையே, அவர்களுடைய பாலை உண்ணவேண்டுமே என விரும்பினான்; அழுதான். கடலழக் குன்றழச் சூரழ விம்மிஅழும் குருந்தை முருகக் குழந்தை அழுகிறது; மற்றக் குழந்தையைப் போலவா அழுகிறது? நம் வீட்டில் பிறந்த குழந்தை அழுதால் அதன் குரல் அடுத்த வீட்டுக்குக்கூடக் கேட்பதில்லை. உடல் வலிமை அல்லாத தாய்க்குப் பிறப்பதனால் அதன் தொண்டை பலமற்று இருக்கும்; நெஞ்சு இறுகி இருக்கும். ஆனால் முருகனென்னும் குழந்தை வலிமையற்ற குழந்தையா? உயர்ந்த இமய மலையில் அழகான சரவணப் பொய்கையில், தாமரை மலராகிய தொட்டிலின் மீது படுத்து அழும்போது, அந்த அழுகை ஒலி மலைகளில் முட்டி மோதி ஒ, ஓ, ஒ என்று எதிரொலிக்கிறது. கடல் அலைகளின் மீது முட்டி மேர்தி எதிரொலிக்கிறது. சூரன் என்னும் அசுரனுடைய காதில் இந்தக் குழந்தையின் அழுகை ஒலி பட்ட மாத்திரத்தில், அவன் தன்னைக் கொல்ல யமன் வந்து விட்டானோ என்று 'ஒ, ஓ, ஒ' என்று அலற ஆரம்பித்து விடுகிறான். அந்தக் குழந்தை ஒரு தடவை மாத்திரம் அழுததா? ஆறு பெண்களை அழைக்க வேண்டாமா? ஆறு முறையாவது அழுதிருக்க வேண்டும். எப்படி அழுதது? விம்மி விம்மி அழுததாம். அறுவர் கொங்கை விரும்பிக் கடல் அழக் குன்று அழச் சூர்அழ விம்மி அழும் குருந்தை ஒரு முறை அழுதவுடனே கடல் அழ ஆரம்பித்துவிட்டது. இரண்டாவது சரணம்போல் மறுமுறை அழுதவுடனே, அதன் எதிரொலிபோல் மலை அழ ஆரம்பித்துவிட்டது. மூன்றாவது சரணம்போல் அடுத்த முறை அழுதவுடனே அதன் எதிரொலி போலச் சூரபன்மன் அழ ஆரம்பித்துவிட்டான். இப்படிப் பால் குடித்துத் தொட்டிலில் தூங்கி அழும் பச்சிளங் குழந்தையைக் கிழவன் என்று சொல்லலாமா? பொருத்தமற்றதாகக் காட்டி இப்படிச் சொல்வதில் ஓர் அழகு இருக்கிறது. கிழவன் என்ற சொல்லுக்கு இப்போது இரண்டு பொருள்கள் உண்டு. உரியவன் என்பது ஒன்று. முதியவன் என்பது ஒன்று. இளங் குழந்தையைக் கிழவன் என்று சொல்லலாமா என்று கேட்கும் கேள்வி, கிழவன் என்பதற்கு முதியவன் என்ற பொருளை மாத்திரம் எண்ணி, இரு முரணன்றோ என்ற கேட்பது போல இருக்கிறது. இந்தப் பாட்டில் "திருந்தப் புவனங்கள் ஈன்ற பொற்பாவை திருமுலைப்பால் அருந்தி" என்னும் பகுதி முருகனது ஒரு திரு விளையாடலைக் குறிக்கிறது. “சரவணப் பூந்தொட்டிலேறி" என்பது இரண்டாவது திருவிளையாடல். "அறுவர் கொங்கை விரும்பி" என்பது மூன்றாவது திருவிளையாடல். "கடலழக் குன்றழச் சூரழ விம்மி அழும், குருந்தை" என்பது நான்காவது திருவிளையாடல். இப்படி இந்த நான்கு அடிகளிலும் நான்கு திருவிளையாடல்கள் அடங்கி இருக்கின்றன. கந்தபுராணத்தில் இருவேறு பகுதிகளில் இவற்றைக் காணலாம். முருகன் உமா தேவியாரின் பாலைக் குடித்தது, சரவணப் பூந்தொட்டிலில் விளையாடியது. கார்த்திகை மாதர்கள் ஆறு பேர்களின் பாலைக் குடித்து வளர்ந்தது ஆகிய மூன்று திருவிளையாடல்களும் கந்த புராணத்தில் உற்பத்தி காண்டத்தில் உள்ளது. நான்காவது திருவிளையாடல், கந்த புராணத்தின் யுத்த காண்டத்தில் இருப்பது. புவனங்கள் ஈன்ற பாவை கந்தர் அலங்காரத்தில் நாம் முருகனைப் பார்ப்பதோடு நிற்பதில்லை. அவனுடைய சுற்றத்தார்கள் எல்லோரையும் பார்க்கிறோம். முதல் பாட்டிலே விநாயகரைக் கண்டோம்; பின்பு, “ஆற்றைப் பணியை இதழியைத் தும்பையை அம்புலியின் கீற்றைப் புனைந்த" பெருமானாகிய அவனுடைய தகப்பனைக் கண்டோம். அன்னை வரவில்லை. இப்பொழுது வருகிறாள்; முருகன் பால் குடிக்கும் கதையைச் சொல்லும்போது வருகிறாள். திருந்தப் புவனங்கள் ஈன்றபொற் பாவை பாவை என்பது பதுமை. பெண்களைப் பதுமைபோல இருக்கிறார்கள் என்று சொல்வது மரபு. அழகும் மெருகும் குறையா வண்ணம் பதுமை இருப்பது போல, அழகிய பெண்கள் இருப்பதால் அப்படிச் சொல்கிறார்கள். எம் பெருமாட்டி எப்போதும் எழில் பொருந்திய முகத்தோடு வாட்டம் இன்றி மெருகு குறையாமல் செக்கச் செவேல் என்று பொன்னிறம் பெற்றவளாக இருக்கிறாள். அதனால் அவளைப் பொற்பாவை என்கிறார். பொற்பாவை - பொன்னாலான பதுமை. பராசக்தியை நாம் உமாதேவி என்கிறோம்; பார்வதி தேவி என்கிறோம். ஆனால் சக்தி உபாசகர்கள், ராஜராஜேசுவரி, மகா திரிபுரசுந்தரி என்று சொல்லுவார்கள். மகாதிரிபுர சுந்தரி செம்பொன் மேனி உடையவள்; பொற்பாவை போல இருக்கிறவள்; சிவந்த மேனி உடையவள். அவள் மாத்திரமா சிவப்பு? பரமேசுவரனும் சிவந்த மேனி உடையவன். எல்லோருமே செம்மையாக இருப்பவர்கள். செம்மையான குடும்பம் அது. பரமேசுவரனை, "சிவனெனும் பெயர் தனக்கே உடைய செம்மேனி அம்மான்" என்று அப்பர் பாடுகிறார். மகா திரிபுரசுந்தரியாகிய பராசக்தியை, "உதிக்கின்ற செங்கதிர் உச்சித் திலகம் உணர்வுடையோர் மதிக்கின்ற மாணிக்கம் மாதுளம் போது மலர்க்கமலை துதிக்கின்ற மின்கொடி மென்கடிக் குங்கும தோயமென்ன விதிக்கின்ற மேனி அபிராமி என்றன் விழுத்துணையே" என்று அபிராமிபட்டர் பாடுகிறார். எம்பெருமாட்டி குங்குமத்தைப் போன்ற சிவந்த திருமேனி உடையவள். இவ்விருவருக்கும் குழந்தையாகிய முருகனை, "செய்யன் சிவந்த ஆடையன்" என்று நக்கீரர் பாடுகிறார். "பவளத்தன்ன மேனி" என்று பெருந்தேவனார் துதிக்கிறார். சிவந்த மேனியை உடைய முருகப் பெருமானை ஈன்ற தாய், செம்பொன்னாலான பாவையைப் போல ஒளிர்கிறாள். அந்தப் பொற்பாவைதான் இந்தப் புவனங்கள் எல்லாவற்றையும் ஈன்றாள். புவனம் என்பது உலகம். இந்த உலகத்தை எல்லாம் ஈன்றவள் பொற்பாவையாகிய எம்பெருமாட்டி ராஜராஜேசுவரி. அவள் தனக்கு ஒரு பயனைக் கருதிப் பெறவில்லை. உயிர்கள் திருந்த வேண்டும், ஒழுங்குபட வேண்டுமென்று ஈன்றாள்; படைததாள். உயிர்கள் உலகத்தில் வாழ வேண்டுமானால் தனி உயிராக இருந்தால் இயலாது. அவை எப்போதும் ஏதேனும் ஒன்றோடு சேர்ந்தே இருக்கும். ஒன்று, அவை பாசத்தோடு இணைந்து இருக்க வேண்டும். இல்லாவிட்டால் பதியோடு இணைந்திருக்க வேண்டும். பாசத்தோடு இணைந்திருக்கிற வாழ்க்கையே நம் வாழ்க்கை. பதியோடு இணைந்து இன்புறும் வாழ்க்கையே முத்தி. பாசத்தோடு இணைந்திருக்கும் உயிர் பதியோடு இணைய வேண்டுமானால் பல பிறவிகள் எடுத்து எடுத்துத் திருந்த வேண்டும். உயிர்கள் யாவும் திருந்த வேண்டுமென்பதற்காகவே பராசக்தி தனு, கரண புவன போகங்களை அவற்றுக்குக் கொடுத்திருக்கிறாள். "புவனங்கள் ஈன்ற பொற்பாவை என்றுதானே சொல்கிறார்? தனு கரண புவன போகங்களை எல்லாம் ஈன்றவள் அவளேயானால் மற்றவற்றைச் சொல்லவில்லையே? இப்படித் தோன்றலாம். அந்த ஒன்றைச் சொன்னால் அதனோடு இனமான மற்றவற்றையும் கொள்ள வேண்டும். அதை உபலட்சணம் என்று இலக்கணக்காரர் சொல்வர். "அம்மா சாதம் போட்டாள்" என்று குழந்தை சொன்னால், "அம்மா சாதம் மாத்திரம் போட்டாள்" என்றா கொள்கிறோம்? "சாதம் போட்டாள்; கறி போட்டாள்; பச்சடி பரிமாறினாள்; குழம்பு விட்டாள், ரசம் விட்டாள்" என்று எல்லாப் பொருளையும் அளித்ததாகவே கொள்கிறோம். நாயனம் மிக அழகாக வாசித்தான் என்றால் நாயனம் வாசித்ததோடு க.சொ.1-12 மேளம் கொட்டினான், தாளம் போட்டான், ஒத்து ஊதினான் என்று தெரிந்து கொள்கிறோம். தலைமையான ஒரு பொருளைச் சொன்னாலே மற்றவற்றையும் கொள்வது மரபு. "ஒருமொழி ஒழிதன் இனம்கொளற் குரித்தே" என்பது இலக்கணச் சூத்திரம். உயிர்கள் திருந்தல் எம்பெருமாட்டி உயிர்கள் எல்லாம் திருந்த வேண்டுமென்பதற்காகப் புவனங்களை ஈன்றாள். தனு கரண புவன போகங்கள் ஆகிய நான்கையும் உயிர்களுக்காகப் பெற்றுத் தருகிறாள். பள்ளிக் கூடம் போகமாட்டேன் என்று அடம்பிடிக்கிற குழந்தைக்கு அதன் தாய் அந்தக் குழந்தை பள்ளிக்கூடம் போய் நன்றாகப் படித்து, வாழ்க்கையிலே சிறப்புற்று விளங்க வேண்டுமென்ற அன்போடு விளையாட்டுப் பொம்மைகளை வாங்கிக் கொடுத்து, தோழர்களையும் சேர்த்துவிட்டு, அது சந்தோஷமாகப் பள்ளிக் கூடம் போய்த் திருந்த வேண்டுமென்று விரும்புகிறாள். உலகத்திலுள்ள உயிர்களுக்குத் தாயாகிய எம்பெருமாட்டி, இறப்பினாலும் பிறப்பினாலும் துன்பப்படுகின்ற உயிர் பூமிக்கு வந்து இன்ப துன்பங்களைத் துய்த்து, நல்வினைகளைச் செய்து ஞானம் பெற்றுப் பிறப்பை அறுக்க வேண்டுமென்ற கருணையினால் தனு கரண புவன போகங்களைத் தருகிறாள். அகிலம் யாவையும் பெற்றவள் எம்பெருமாட்டி அவளை அகிலாண்டேசுவரி என்று அழைப்பர். "ஆத்தாளை எங்கள் அபிராம வல்லியை அண்டமெல்லாம் பூத்தாளை என்று அபிராமிபட்டர் துதிக்கிறார். உலகத்தை எல்லாம் அவள் தந்தவள். உலகத்தை உண்டாக்கினவள் பரமேசுவரன் அல்லவா? பரமேசுவரி படைத்ததாகச் சொல்லலாமா? என்றால் பரமேசுவரன் வேறு, பராசக்தி வேறு அல்லர். ஆண்டவனிடம் இருக்கிற அருட்சக்தி எதுவோ அதுவேதான் விரிந்து அம்பிகையாகிறது. பரப்பிரம்மமாகிய பரமசிவன் சிறிதும் ஆடாது, அசையாது இருந்தால் ஒன்றும் நடவாது. அவனது அருட்சக்தி வெளிப்பட்டு இயங்கினால்தான் யாவும் நடைபெறும். "சிவமெ னும்பொருளும் ஆதி சக்தியொடு சேரின் எத்தொழிலும் வல்லதாம் அவள்பி ரிந்திடின் இயங்குதற்கும் அரிதாம்" என்று செளந்தரியலகரியில் சங்கராசாரிய சுவாமிகள் சொல்கிறார். புவனங்கள் எல்லாம் தந்தவன் பரமேசுவரன் என்றாலும் அவருடைய அருட்சக்தி தந்தது என்றாலும் ஒன்றுதான். அம்மை உலகத்தைப் படைத்து அதில் உயிர்களை விடுவதற்கு, அவை எல்லாம் நல்வழிப்பட வேண்டுமென்பதே காரணம். தாய்க்குக் குழந்தை திருந்த வேண்டும் என்ற ஆசை இருப்பது இயல்புதானே? எம்பெருமாட்டிற்கு அழகழகான ஆயிரம் நாமங்கள் இருந்தாலும் அந்த நாமங்களுக்கெல்லாம் முதன்மையாக லலிதா சகசிர நாமத்தில் "ஸ்ரீமாதா” என்ற நாமத்தை வைத்திருக்கிறார்கள். எல்லா உயிர்களுக்கும் மாதாவாக விளங்குபவள் எம் பெருமாட்டி தான். தான் படைத்துக் கொடுத்திருக்கிற இந்தப் புவனத்தில் உயிர்கள் தனுவாகிய உடலைப் பெற்று, அதில் அமைந்துள்ள கரணங்களைப் பெற்று, அதனாலே இன்ப துன்ப போகங்களை எல்லாம் பெற்று, ஞானத்தைப் பெற்றுத் திருந்தி உய்ய வேண்டுமென்பது உலகன்னையின் விருப்பம். உயிர்கள் திருந்த வேண்டுமென்பதற்காகப் புவனங்களைப் பெற்றாள். துன்பமயமான இறப்பு, பிறப்பு என்னும் பிணிகளினால் உயிர்கள் பீடிக்கப்பட்டு ஆனந்தம் என்பதை அடையாமல் உலகத்தோடு ஒட்டிய சுகம், துக்கம் ஆகிய இரண்டு விதமான அநுபவங்களில் உழன்று வாழ்கின்றன. இப்படி வாழ்கின்ற தன் குழந்தைகளைக் கண்டு, 'இவர்களுடைய வாழ்வில் ஆனந்தம் இல்லையே! இவர்கள் எல்லோரும் ஆனந்தம் பெற்று உய்ய வேண்டாமா?' என்று நினைத்து இந்தப் புவனங்களைப் படைக்கிறாள். நல்ல குழந்தைகளை எல்லாம் அனைத்துக் கொள்கிறாள். தாய் சொல் கேளாத துஷ்டக் குழந்தையாக இருந்தாலும் அதன் போக்கிலேவிட்டு வேண்டிய பொருள்களை எல்லாம் கொடுத்துக் காலப்போக்கில் திருத்துகிறாள். இவ்வளவு காரியங்களுக்கும் மூலகாரணமாக இருப்பது அவள் நெஞ்சில் உள்ள தாயன்புதான். நாம் எல்லோரும் இந்த உலகத்தில் பிறந்து துன்பப்பட வேண்டுமென்பதற்காக எம்பெருமாட்டி இந்தப் புவனங்களை உண்டாக்கவில்லை. உயிர்கள் திருந்தி உய்ய வேண்டுமென்பதற்காகவே உண்டாக்குகிறாள். ஆனால் உயிர்கள் திருந்தாமல், நல்ல வழியில் போகாமல், மாயையில் சிக்கிவிடுவதனால் இன்ப துன்பங்களைப் பெற்று வருந்துகின்றன; அது அவள் குற்றம் அன்று. அவள் உயிர்கள் திருந்தப் புவனங்களை ஈன்றாள். திருந்தப் புவனங்கள் ஈன்றபொற் பாவை திருமுலைப்பால் அருந்தி. அந்தப் பெருமாட்டியின் தனங்களிலே சுரந்த பாலை அருந்தினான் முருகன். இங்கே கதையைச் சிறிது தெரிந்து கொள்ள வேண்டும். அவதாரக் கதை ஆண்டவன் தட்சிணாமூர்த்தியாகக் கல்லால மரத்தின் அடியிலே மோனத்தவம் பண்ணிக் கொண்டிருந்தான். அப்போது தேவர்கள் சூரபன்மன் செய்கின்ற கொடுமைகளுக்கு அஞ்சி, பிழைக்கும் வழி தெரியாமல், "அவனைச் சங்காரம் பண்ண வேண்டுமே; என்ன செய்வது?" என்று கலங்கினார்கள். மோனத்தில் இருந்த சிவபிரானைத் தவம் கலையச் செய்வது எப்படி என்று தெரியாமல் அஞ்சினார்கள். பின்பு அவனைத் தவத்திலிருந்து கலைந்து எழச் செய்ய மன்மதனை ஏவினார்கள். மன்மதன் தன்னுடைய மலர் அம்புகளை இறைவன்மேல் தொடுத்தான். பரமசிவன் தன் நெற்றிக் கண்ணை மெல்லத் திறந்து பார்த்து, அந்தப் பார்வையினால் காமனைச் சங்காரம் பண்ணிவிட்டான். பின்பு இரதி மகாதேவனை வேண்டிக் கொள்ள, "நீ இழந்த உன் கணவன், திரும்ப உன் கண்ணுக்கு மாத்திரம் தெரியும்படி உயிர் பெற்று எழுவான்" எனச் சொல்லி, காமனை உயிர்பெற்று எழச் செய்தான். ஆண்டவனை மணக்க வேண்டுமென்பதற்காக உமாதேவி இமவானுக்கு மகளாகப் பிறந்து, இமயமலைச் சாரலில் தவம் செய்து கொண்டிருந்தாள். அவள் தவத்தின் பெருமையை உணர்ந்து, இறைவன் இமயமலை சென்று அவளைத் திருமணம் செய்து கொண்டான். பார்வதி தேவியோடு இறைவன் இருக்கும் போது தேவர்கள் எல்லோரும் சென்று, தங்களுக்கு மிகவும் துன்பம் இழைத்து வரும் சூரபன்பன் முதலிய அசுரர்களைச் சங்காரம் செய்வதற்கு ஒரு குமாரனைத் தர வேண்டும் என்று வேண்டிக் கொண்டார்கள். உடனே ஆண்டவன் தன்னுடைய ஐந்து முகத்தோடு கீழ்நோக்கி உள்ள அதோ முகத்தையும் சேர்த்து ஆறு முகங்களிலும் உள்ள நெற்றிக் கண்களைத் திறந்து பார்த்தான். அக்கண்களிலிருந்து ஆறு கனல் பொறிகள் எழுந்தன. உலகத்தை எல்லாம் தாக்கி அழிக்கும் வண்ணம் எழுந்த ஆறு பொறிகளையும் பார்த்துத் தேவர்கள் அஞ்சி நடுநடுங்கிப் போய், "எம்பெருமானே, நாங்கள் கேட்ட வரம் என்ன? தாங்கள் என்ன செய்தீர்கள்? இந்த ஆறு பொறிகளும் உலகத்தை அழித்து விடும்போல் இருக்கின்றனவே!" என்று விண்ணப்பிக்க, இறைவன் அந்த ஆறு பொறிகளையும் தன் பக்கத்தில் வரச் செய்து, வாயுவையும், அக்கினியையும் அழைத்து, "நீங்கள் இருவரும் இந்த ஆறு பொறிகளையும் ஏந்திப் போய்க் கங்கையில் விடுங்கள். கங்கை இந்தப் பொறிகளைச் சரவணப் பொய்கையில் கொண்டுபோய் விடுவாள். உங்கள் துன்பத்தை எல்லாம் நீக்குவதற்கு ஒரு குமாரன் வருவான்" என்று திருவாய் மலர்ந்தான். அந்தக் கட்டளையை ஏற்று வாயுவும், அக்கினியும் ஆறு பொறிகளையும் கொண்டு போய்க் கங்கையில் விட்டார்கள். கங்கை அவற்றை இமயமலைச் சாரலில் இருந்த சரவணப் பொய்கையில் கொண்டு போய்ச் சேர்த்தாள். அங்கே ஒரே தர்ப்பைக் காடாக இருந்தது. அதன் நடுவில் இருந்த அழகான சரவணப் பொய்கையில் தாமரை மலர்கள் மலர்ந்திருந்தன. சரவணம் என்பதற்கு தர்ப்பை சூழ்ந்த இடம் என்பது பொருள். ஆறு பொறிகளும் ஆறு குழந்தைகளாக உருப்பெற்று விளையாடின. அப்போது அந்த ஆறு குழந்தைகளையும் எடுத்து, பால் ஊட்டி வளர்த்தார்கள் கார்த்திகைப் பெண்களாகிய ஆறு ரிஷி பத்தினிகள். அந்தச் சமயத்தில் பரமேசுவரன் பார்வதி தேவியிடம், "உன் குழந்தை சரவணப் பொய்கையில் இருக்கிறான். அவனைப் போய்ப் பார்க்கலாம்” என்று சொன்னான். பார்வதி தேவி அன்பு பொங்கச் சரவணப் பொய்கையை அடைந்து, குழந்தைகளை வாரி எடுத்தாள். அவள் அணைத்த மாத்திரத்தில் ஆறு குழந்தைகளும் ஒரே குழந்தையாயின. ஆறு முகமும், பன்னிரு திருக்கரங்களும் உடைய திருக்கோலத்தில் ஒரு குழந்தையாக, கந்தப் பெருமான் விளங்கினான். அவனுக்குத் தன் தனங்களிலே சுரந்த பாலை ஒரு பொற் கிண்ணத்தில் கறந்து எம் பெருமாட்டி ஊட்டினாள். இது முருகப் பெருமானது அவதாரக் கதை. கந்த புராணக் கதையை வெறும் கட்டுக்கதை போல எண்ணக் கூடாது. அதனூடே இருக்கிற ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் ஒரு தத்துவம் உண்டு. சிவபெருமானுடைய நான்கு முகங்கள் நான்கு பக்கம் நோக்கியிருக்கின்றன. மேல் நோக்கிய முகம் ஒன்று, கீழ் நோக்கிய முகம் ஒன்று. ஆக ஆறுமுகங்களையும் கொண்டு ஷண்முகநாதனை அவன் வெளிவரச் செய்தான். ஈசானம், தத்புருஷம், சத்யோஜாதம், அகோரம், வாமதேவம் என்பன அவனுடைய ஐந்து முகங்கள். அவற்றால் இருபத்தெட்டு ஆகமங்களை அருளினான். அவற்றோடு அதோமுகமும் சேர்ந்தால் ஆறு முகங்களாகும். அதோமுகம் வெளிப்பட இராது. "அந்திக்கு நிகர்மெய் யண்ணல் அருள்புரிந் தறிஞ ராயோர் சிந்திக்குந் தனது தொல்லைத் திருமுகம் ஆறுங் கொண்டான்" என்று கந்தபுராணம் சொல்கிறது. ஐம்பூத முத்திரை ஆதியும் அந்தமுமாக இருக்கிற பரமேசுவரன் உலகத்திற்கு அருள் செய்வதற்காகக் கந்தப் பெருமானை அருளினான். ஐந்து முகக் கடவுள் ஆறுமுகக் கடவுளின் மூலம் தன் கருணையை மிகுதியாகப் பரவச் செய்தான். வாக்கு, மனம் ஆகிய சரணங்களுக்கு அப்பால் இருக்கிற கடவுள் இந்த உலகத்தில் அவதாரம் செய்யும்போது இதற்கு ஏற்ப வர வேண்டும். உலகம் என்பது ஐந்து பெரும் பூதங்களின் சேர்க்கை. ஆதலால் இங்கே வரும்போது அப்பூதங்களின் சம்பந்தத்துடனே வர வேண்டும். இறைவனது சரீரம் பூதத்தினால் அமைந்த சரீரம் அல்ல. அது ஞானத்தினால் ஆன உடம்பு. அது உலகத்திற்கு வர வேண்டுமென்றால் உலகத்தின் முத்திரையை அதற்குக் குத்த வேண்டும். கவர்னர் அனுப்புகின்ற கடிதமாக இருந்தாலும், நாம் அனுப்புகிற கடிதமானாலும் தபாலாபீஸ் முத்திரை குத்தியே யாக வேண்டும். பரமேசுவரன் சிதாகாச ஸ்வரூபி. அவன் கண்களிலிருந்து ஆறு பொறிகள் எழுந்தமையால் ஆகாசத்தின் சம்பந்தம் உடையவன் ஆனான், முருகன்; ஆகாசத்திற்கு மூலகாரணமாக உள்ள சிதாகாசத்தின் சம்பந்தம் உடையவன் ஆனான். அந்த ஆறு பொறிகளையும் வாயுதேவனும், அக்கினி தேவனும் தாங்கிச் சென்றார்களாதலால் வாயு, அக்கினி ஆகிய இரண்டின் சம்பந்தம் உடையவனும் ஆனான். அக்கினி பொறிகளைக் கங்கையில் விட்டான், கங்கை நீராதலால் அப்புவின் தொடர்பும் முருகனுக்கு அமைந்தது. கங்கை அந்தப் பொறிகளைச் சுமந்து போய்ச் சரவணப் பொய்கையிலுள்ள திட்டில் விட்டான். ஆதலால் பிருதிவியின் சம்பந்தமும் உண்டாயிற்று. இவ்வாறு சரவணபவன் உலகத்துக்கு வரும்போது உலகத்துக்கு மூலகாரணமாக இருக்கின்ற ஐம்பூதங்களின் முத்திரையைப் பெற்றே வந்தான். ஏன், அப்படி வர வேண்டும்? அந்த முத்திரையைப் பெறாமல் வந்தால் என்ன என்று கேட்கலாம். ஓர் ஏழை, சிறு குடிசையில் வாழ்ந்து கொண்டிருக்கிறவன். அவன் குடிசையின் வாயிற்படி மூன்று அடி உயரந்தான் இருக்கிறது. அவனுக்கு நோய் வந்துவிட்டது. அந்தச் சிறு குச்சுக்குள் படுத்து மிகவும் வேதனைப்படுகிறான். அந்த ஊரிலேயே ஒரு டாக்டர் இருக்கிறார். அவர் ஏழைகளுக்கு இலவசமாக வைத்தியம் செய்வதைத் தம் லட்சியமாகக் கொண்டவர். ஏழை நோயினால் வேதனைப்படுகிறான் என்று அறிந்தவுடன், அவன் குடிசையை நோக்கி ஓடி வருகிறார். அவர் உயரமானவர்; ஆறு அடி உயரம் இருப்பார். குடிசையிலுள்ள ஏழையின் நோயைக் குணப்படுத்த வேண்டுமென்று ஓடி வந்தவர், மூன்றடி உயரமேயுள்ள நிலை வாயிலுக்குள் தம் ஆறு அடி உடம்பை வளைத்துக் குனிந்து கொண்டு செல்கிறார். அவர் ஏன் தம் உடம்பை வளைத்துக் கொண்டு போக வேண்டும்? அது மூன்றடி உயர முள்ள கதவுடைய குடிசை. நோயாளியோ உள்ளே இருக்கிறான். அந்த ஏழைக்கு வைத்தியம் செய்ய வேண்டு மென்ற கருணையோடு ஓடி வந்தவராகையால் குடிசையின் வாயிற்படிக்கு ஏற்பத் தம் உடலைக் குறுக்கிக் கொண்டு உள்ளே போகிறார். அதைப் போல, பிறப்பு, இறப்பு ஆகிய துன்பங்களினால் உயிர்கள் பதியை அடைந்து ஆனந்தம் அடைய மாட்டாமல், ஐம்பூதங்களாலான பிரபஞ்சத்திற்குள் சிக்கி வேதனைப்படுவதைப் பார்த்து, அதனைத் துடைக்க வந்த பவரோக வைத்தியநாதப் பெருமான் ஆதலால், உலகுக்கு ஏற்ப ஐம்பூதங்களின் முத்திரையைப் போட்டுக் கொண்டு அவதாரம் செய்தான். அதனால் அவனுக்கு அழுக்கு ஏற்படாதா என்பது ஒரு கேள்வி. நம் வீட்டுக் குழந்தை பந்து விளையாடிக் கொண்டிருக்கிறது. அது அடித்த பந்து விறகு அடுக்கியிருக்கும் அறைக்குள் விழுந்து விட்டது. பந்து எடுக்க அறைக்குள் குழந்தை ஒடியது. குழந்தையின் தாய் நீராடிவிட்டு, நெற்றிக்குத் திலகம் இட்டு, பட்டுப் புடைவை உடுத்துக் கொண்டு, ஆலயத்துக்குப் போக ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறாள். அந்தச் சமயம் குழந்தை வீரிட்டு அழுதான். தாய் பதறிப் போய் விறகு அறைக்கு ஒடினாள். கரி மூட்டையின் மேல் விழுந்த பந்தை எடுக்கக் குழந்தை மூட்டையின்மேல் ஏறியிருக்கிறான். மூட்டை சரிந்து அவன்மேல் விழுந்து விட்டது. கரி மூட்டைக்கு அடியில் அகப்பட்டு அழுகின்ற குழந்தையைத் தாய் அலறிப் போய் எடுக்கிறாள். நீராடியாகி விட்டதே: கரி மூட்டையைத் தூக்கினால் கரி நம் உடம்பெல்லாம் படுமே என்று அவள் அப்போது நினைப்பாளா? நாம் பட்டுப் புடவை உடுத்துக் கொண்டிருக்கிறோமே! கரி மூட்டையைத் தூக்கினால் நம் புடைவை கரியாகிவிடுமே என்று நினைப்பாளா? தன் உடம்பு கரி ஆனாலும், தன் சேலை அழுக்கானாலும், கரி மூட்டையை அப்பாலே தள்ளிவிட்டு, தன் குழந்தையை வாரி எடுத்து அணைத்துக் கொள்வாள். அப்படியே பஞ்ச பூதங்களினாலான பிரபஞ்சத்திற்குள் அகப்பட்டுத் தவிக்கின்ற தன் குழந்தைகளாகிய உயிர்களைக் காப்பாற்ற ஐந்து பூதங்களின் சம்பந்தம் பெற்று உலகத்திலே அவதாரம் செய்கிறான் ஆண்டவன். இறைவியின் அருள் ஐந்து பூதங்களின் சம்பந்தம் உண்டாகிவிட்டது; போதுமா? பராசக்தியிலிருந்து சிவபெருமான் தனித்து நின்றபோது அவன் கண்களிலிருந்து முருகன் வெளிப்பட்டதனால் முருகனுக்கு பூரணத்துவம் ஏற்படவில்லை. இறைவியின் அருள் சேராவிட்டால் ஒன்றும் நடவாது. உலகத்தில் காதலர் இருவர் கருத்தொருமித்து இருப்பதுவே இன்பம். பரமேசுவரனே படைத்தாலும் அது வெறும் ஞானமயமாகத்தான் இருக்கும். அது செயல் புரிய வேண்டுமென்றால், பராசக்தியின் அருள் வேண்டும். வெறும் பொன்னாக இருப்பதனால் பயன் இல்லை. அது பயன்பட வேண்டுமென்றால் ஆபரணமாக வேண்டும் அல்லது நாணயமாக அடிக்க வேண்டும். வெறும் ஈயத்தைப் பாத்திரத்தில் பூச முடியாது. ஈயம் பூச வேண்டுமென்றால் சிறிது நவாசாரம் சேர்க்க வேண்டும். அதைப் போலப் பரமேசுவரனுடைய கண்களினின்று வெளிப்பட்ட ஆறு பொறிகளிலிருந்து உண்டான குழந்தைகளால் உலகத்திற்குப் பயன் ஏற்பட வேண்டுமென்றால் எம்பெருமாட்டியின் அருள் தொடர்பு வேண்டும். அன்னை வரவில்லையே என்று முருகப் பெருமான் சரவணப் பொய்கையில் காத்துக் கொண்டிருந்தான். ஆறு குழந்தையாக இருந்து விளையாடினான். பிரிந்த பொருள் எதுவும் உலகத்தைக் காக்காது. ஒன்றுபடுவது, கூடுவது, இன்பத்தைத் தரும். எந்த இன்பமானாலும் பிரிந்திருந்தால் இன்பம் இல்லை. முருகன் ஆறு குழந்தையாகப் பிரிந்திருக்கிற வரைக்கும் உலகத்துக்குப் பயன்படவில்லை. எம்பெருமாட்டி வந்து அணைத்தபோதுதான் ஆறுமுகமும், பன்னிரு திருக்கரங்களும் உடைய ஒரு குழந்தை ஆனான். அப்பொழுது உலகத்திற்குப் பயன்படுகிற நிலை வந்தது. எம்பெருமாட்டி ஷண்முகநாதனுக்குப் பால் கொடுத்தாள். திருந்தப் புவனங்கள் ஈன்ற பொற் பாவை திருமுலைப் பால் அருந்தினான் கந்தன். எம்பெருமாட்டியின் தனங்களிலே வாய் வைத்துப் பால் அருந்தவில்லை. ஞானசம்பந்தப் பெருமானுக்கு உமாதேவி தன் திருமுலைப் பாலைப் பொற் கிண்ணத்தில் கறந்து அதில் சிவஞானத்தைக் குழைத்து அருந்தினாள். எம்பெருமாட்டி உலகிலுள்ள மற்ற தாய்மார்களைப் போலக் கருவிருந்து குழந்தையைப் பெறுபவள் அல்ல. தன்னுடைய கருணாகடாட்சத்தால் உலக முழுவதையும் ஈன்றும், அவள் இன்னும் கன்னியாகவே இருக்கிறாள். இது உலக இயலுக்கு விரோதமாகத் தோன்றும். எம்பெருமாட்டியின் தனம் குழந்தை வாய் வைத்துப் பால் குடிப்பதற்கோ, போகத்திற்கோ உரியது அன்று. "ஆதி நாயகன் கருணையாய் அமலமாய்ப் பரம போத நீரதாய் இருந்ததன் கொங்கையிற் பொழிபால் ஏதி லாததோர் குருமணி வள்ளமீ தேற்றுக் காதல் மாமகற் கன்பினால் அருத்தினள் கவுரி" என்று கந்த புராணத்தில் கச்சியப்ப சிவாசாரியார் சொல்கிறார். கவுரி ஆகிய எம்பெருமாட்டியின் தனங்கள் ஆதிநாயகனுடைய கருணையே உருவமாக இருப்பவை; அமலமாய் இருப்பவை; பரிசுத்தம் சிறிதும் குறைவு இல்லாதனவாய், மலம் இல்லாதனவாய் உள்ளவை: பரம போதமாய் உள்ளவை; போதம் என்பது ஞானம்; உயர்ந்த ஞானம் எதுவோ, அதுவே மயமானவை அவை. ஆதலால்தான் எம்பெருமாட்டி தந்த பால் ஞானப்பாலாயிற்று. அதையே ஞானசம்பந்தர் உண்டார். ஞானப் பசியை ஆற்றுகின்ற பாலை, பிறப்பு இறப்புப் பிணியைப் போக்குகின்ற பாலைக் குற்றமில்லாத ரத்தினக் கிண்ணத்தில் ஏற்று, கந்தப் பெருமானாகிய தன் மகனுக்கு கவுரி ஊட்டினாள் என்று கச்சியப்ப சிவாசாரியார் சொல்கிறார். பரமேசுவரனிடம் தோன்றிய முருகன் உலகத்தில் அவதாரம் செய்தமையால் ஐம்பூதங்களின் முத்திரையைப் பெற்று, ஞான மயமாக வந்தான். அவன் ஞானப் பிழம்பு. "நீயான ஞான விநோதந் தனையென்று நீயருள்வாய்" என்று அருணகிரியார் பின்னாலே சொல்லப் போகிறார். ஞானம் வேறு; அவன் வேறு அல்ல. உலகம் பயன்பெற வேண்டித் தன்னுடைய அணைப்பினால் ஆறு குழந்தைகளும் ஒன்று ஆகும் படியாக்கி, ஞான சொரூபமான தன் தனங்களில் பொழிகின்ற பாலைக் கறந்து உமாதேவி ஊட்டினாள். 3 தாமரைத் தொட்டில் அந்தக் குழந்தை எங்கே விளையாடினான்? அந்தக் குழந்தைக்கு யார் தொட்டில் பண்ணிக் கொடுக்க முடியும்? பனி மூடிக் கொண்டிருக்கிற இமயமலைச் சாரலிலே, தர்ப்பைக் காட்டின் நடுவில் அமைந்திருந்த சரவணப் பொய்கையில் அழகாக மலர்ந்திருந்த தாமரைகளையே தொட்டிலாகக் கொண்டு அவன் விளையாடினான். தாமரை இதழ்களின் மீது படுத்துக் கொண்டு தூங்கினான். தண்மை மலிந்த மலர்ப் படுக்கையில் கண் வளர்ந்தான். மெத்தென்ற படுக்கையாக, மென்மை மிக்க மணமுள்ள தாமரை மலர்கள் அமைந்தன. அதில் அவன் விளையாடினான்; படுத்து உறங்கினான். "வளஞ்செரி இணைய பாலால் வான்சர வணமாப் பொய்கைத் தளஞ்செறி பதுமம் ஒன்றில் சராசரம் யாவும் காப்பான் உளஞ்செறி கருணை எய்தி ஒப்பிலாக் குமர மூர்த்தி இளஞ்சிறு மதலை போல இனிதுவீற் றிருந்தான் மன்னோ" என்பது கந்த புராணம். "சரவணப் பூந்தொட்டில் ஏறி" என்று அருணகிரிநாதர் சொல்வது புதிதன்று. இந்தக் கருத்துப் பழங்காலம் முதற் கொண்டே வழங்கி வருகிறது என்பதைப் பழம் பாடல்களால் உணரலாம். இளங்கோவடிகள் சைனர். அவர் இயற்றிய சிலப்பதிகாரத்தில் இந்தச் செய்தியைச் சொல்கிறார். சேர நாட்டு மலைவாழ் மக்கள் முருகனுக்குப் பூசை போடுகிறார்களாம். குரவைக் கூத்து ஆடுகிறார்கள். அப்போது குரவைக்குரிய பாடலைப் பாடுகிறார்கள். குன்றக் குரவை என்ற பகுதியில் அந்தப் பாடல் இருக்கிறது. “சரவணப்பூம் பள்ளியறைத் தாய்மார் அறுவர் திருமுலைப்பால் உண்டான்" என்பது பாட்டின் ஒரு பகுதி. சரவணப் பொய்கையில் பூம்பள்ளியில் முருகன் அறுவர் பாலை உண்டு தங்கினானென்று கூறுகிறது இது. "பயந்தோர் என்ப பதுமத்துப் பாயல்" என்று சங்ககாலத்துப் பரிபாடலில் முருகன் புகழ் வருகிறது. பதுமத்துப் பாயல் - தாமரைப் பூவாகிய படுக்கை. அருணகிரி நாதர் தொட்டில் என்கிறார். அந்தப் புலவர் பாயல் என்றார். பழங்காலம் முதற்கொண்டே இத்தகைய புராண வரலாறுகள் வழங்கி வந்திருக்கின்றன என்பதற்கு இவை அடையாளம். அருணகிரிநாதர் எதையும் கற்பனையாகச் சொன்னதாகக் கருத வேண்டாம். அவர் காலத்திற்கு முன்பே தொன்றுதொட்டு இந்த நாட்டில் முருகனைப் பற்றி வழங்கி வந்த செய்திகளையே அவர் அலங்காரமாகச் சொல்கிறார். சரவணப் பூந்தொட்டிலேறி அறுவர் கொங்கை விரும்பி முருகன் அழுதான். பசி எடுத்தவனைப் போல அழுதான். நமக்கு உண்டாகும் பசிபோன்றது அல்ல அது. பிறருக்கு அருள் செய்ய வேண்டும், தனக்குத் தொண்டு செய்து பிறர் நன்மை அடைய வேண்டும் என்ற கருணையாகிய பசி அது. கருணைப் பசி எடுத்த குழந்தை உலகியலை ஒட்டிப் பாலுக்காக அழும் குழந்தையைப் போல விம்மி விம்மி அழுதான். கார்த்திகை மாதர் கார்த்திகை மாதர்கள் ஆறு பேர். சப்த ரிஷிகள் என்று சொல்லும் ஏழு முனிவர்களுடைய மனைவிமார்களும் வானில் ஏழு நட்சத்திரங்களாக இருக்கிறார்கள். அவர்களில் மிகவும் சிறப்பானவள் அருந்ததி. அவள் தன் கணவராகிய வசிஷ்டருக்கு அருகிலேயே வானில் ஒளிர்கிறாள். மற்ற ஆறு முனிவர்களுடைய மனைவிமாரும் கிருத்திகா நட்சத்திரங்களாக வானிலே இருப்பதைப் பார்க்கலாம். இந்த ஆறு மாதர்களும் சரவணப் பொய்கையில் இருந்த முருகனுக்கு வளர்ப்புத் தாய்களாக அமைந்தார்கள். இந்தக் குழந்தைக்கு அவர்கள் பால் கொடுத்து வளர்த்தார்கள். திருந்தப் புவனங்கள் ஈன்ற பொற்பாவையாகிய உமா தேவியின் திருமுலைப் பாலை முருகன் அருந்தினான் என்று முதலில் சொன்ன பிறகு, கார்த்திகை மாதர் அறுவருடைய பாலைக் குடிக்க விரும்பி அழுதான் என்று சொல்கிறார். சரவணப் பொய்கையில் தாமரையாகிய தொட்டிலில் விளையாடிக் கொண்டிருந்த முருகனுக்கு முதலில் கார்த்திகை மாதர்களே பால் கொடுத்து வளர்த்தார்கள். பிறகு உமாதேவி வந்து வாரி அணைத்து, ஆறுமுகமும், பன்னிரு திருக்கரங்களும் உடைய ஷண்முக நாதனாக உருவம் ஏற்ற முருகப் பெருமானுக்குப் பரம போத நீரதாய் இருந்த தன் கொங்கையில் ஊறிய பாலைப் பொற் கிண்ணத்தில் கறந்து அருத்தினாள் என்பது வரலாறு. இது தோத்திர நூல் ஆனதால் முன் பின்னாகச் சொல்கிறார். கதையைச் சொல்வதானால் முறை பிறழாமல் சொல்வார். அலங்காரமாக அமைக்கும் கவியில் இந்த முறை முன்பின்னாக மாறுவதில் தவறு இல்லை. கங்கை தன்னிடம் விட்ட ஆறு பொறிகளையும் எடுத்துப் போய்ச் சரவணப் பொய்கையில் விட்டாள். அவை ஆறு குழந்தைகளாக உருப்பெற்றன. அவை அழுதன. 'அழுத பிள்ளை பால் குடிக்கும்' என்பது எல்லாக் குழந்தைகளுக்கும் பொருத்த மல்லவா? தனக்குப் பால் கொடுக்கக் கார்த்திகை மாதர்கள் இன்னும் வரவில்லையே என்பது போல அழுதான். எம்பெருமானுடைய கண்களிலிருந்து அவதாரம் செய்த குழந்தை முருகன். அவனுக்குக் கார்த்திகை மாதர்கள் பால் கொடுக்காவிட்டால் அவன் வளர மாட்டானா? பால் குடிக்கும் வியாஜமாக அந்தக் கார்த்திகை மாதர்களுக்கு பெருமையை அளிக்க வேண்டுமென்ற கருத்தோடு அழுதான். அவர்கள் ஓடி வந்தார்கள. பச்சிளம் பாலகனாகப் படுத்து அழுது கொண்டிருந்த பெருமானுக்குப் பால் கொடுத்தார்கள். அதனால் அவர்கள் மிகப் பெரிய பாக்கியத்தை அடைந்தார்கள். வானிலே எத்தனையோ நட்சத்திரங்கள் இருக்கின்றன. இருந்தாலும் கிருத்திகை என்றவுடன் நமக்கு முருகன் நினைவு வருகிறது. அவனுக்குப் பால் கொடுத்த மாதர்களை நினைந்து நாம் உபவாசம் இருக்கிறோம். முருகப் பெருமான் விசாக நட்சத்திரத்தில் அவதாரம் செய்த போதிலும் கிருத்திகை நட்சத்திரத்திற்கு அதிகப் பெருமை ஏற்பட்டுவிட்டது. முருகன் கார்த்திகேயன் என்ற திருநாமத்தை ஏற்று அதன் மூலமாக அவர்களுக்குச் சிறப்பு உண்டாகச் செய்தான். "கார்த்திகேயன் என்னும் நாமம் முருகனுக்கு அமையும்; கார்த்திகை நட்சத்திரத்தில் முருகனை வழிபடுவோர் பெரும் பேற்றைப் பெறுவர்” என்று சிவபெருமான் வரம் தந்ததாகக் கந்தப்புராணம் கூறுகிறது. “கந்தன்றனை நீர்போற்றிய கடனால்இவன் உங்கள் மைந்தன் எனும் பெயர்ஆகுக மகிழ்வால்எவ ரேனும் நூந்தம்பக லிடை இன்னவன் நோன்றாள்வழி படுவோர் தந்தம்குறை முடித்தேபரந் தனைநல்குவம் என்றான்." ஓர் அரசன் பிறந்தபொழுதே தாயை இழந்தான். தாயற்ற அவனை எடுத்துப் பால் கொடுத்து வளர்த்த ஒரு பெண்ணுக்கு அவன் சிங்காதனம் ஏறியவுடனேயே ஒரு கிராமம் முழுவதையும் சாசனம் பண்ணிக் கொடுத்தான் என்று கதை சொல்வதுண்டு. சாமானிய அரசனே இப்படிச் செய்தான் என்றால் இந்த உலகம் முழுவதற்கும் எந்தக் காலத்திலும் அரசனாக விளங்கும் எம் பெருமான் தான் அவதாரம் செய்த காலத்தில் தனக்குப் பால் ஊட்டி வளர்த்த கார்த்திகைப் பெண்களுக்குச் சாசுவத பெருமைப் பட்டயம் வழங்கியதில் என்ன ஆச்சரியம்? அந்தப் பெருமை அவர்களுக்குச் சார வேண்டுமென்ற கருணையோடுதான் அவன் பசி என்ற காரணத்தைக் கொண்டு அழுதான். 4 அழுகையின் எதிரொலி எப்படி அழுதான்? கடலழக் குன்றழச் சூரழ விம்மிஅழும் குருந்தை என்கிறார் அருணகிரியார். சூரபன்மன் என்ற அரசன் தேவர்களுடைய அரசைக் கைப்பற்றிக் கொண்டான்; அவர்களைச் சிறையில் இட்டான்; உலகிலுள்ள உயிர்கள் துன்பம் உறும் வண்ணம் கொடுமை ஆட்சி புரிந்து கொண்டிருந்தான். அவனை அடக்குவார் யாரும் இல்லாததால் அவன் பலம் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டிருந்தது. கொஞ்சம் பணம் வந்தவர்கள், 'அடுத்து அடுத்துப் பணம் வந்து கொண்டே இருக்குமா?' என்று தங்கள் ஜாதகத்தை ஜோசியனிடம் காட்டுவார்கள். அதைப்போல அவன் தன்னுடைய ஜாதகத்தை ஒருவனிடம் காட்டியிருக்கிறான். அவர் நல்ல ஜோசியர் யாருக்கும் பயந்துகொண்டு உண்மையை மறைப்பவர் அல்ல. அவர் அவனுக்கு உண்மையைச் சொல்லிவிட்டார் போலிருக்கிறது. "உன்னுடைய செல்வாக்குக்கு இப்பொழுது ஒன்றும் குறைவு வராது. ஆனால் இந்த உலகத்தில் ஒரு குழந்தையின் அழுகைக் குரல் கேட்கும். உடனே நீ தெரிந்து கொண்டுவிடலாம், உன் வாழ்நாள் அப்பொழுதே முடிந்துவிட்டது என்று" என அவர் சொல்லிவிட்டார். அன்றிலிருந்து அவன் உலகத்தில் பிறக்கின்ற குழந்தைகளின் அழுகையை எல்லாம் கேட்டுக் கொண்டே இருந்தான். அழுகைக் குரல் கேட்டால் அது எங்கிருந்து வருகிறது என்று ஆராய்வான். "இது சாமானியக் குழந்தையின் அழுகுரல் தான்" என்று தெரிந்துவிடும். ஆனால் இன்றைக்குச் சரவணப் பொய்கையில் தாமரைத் தொட்டிலில் படுத்து அழுகிற குழந்தையின் அழுகையைக் கேட்டவுடன் அவன் உடம்பு நடுங்க ஆரம்பித்து விட்டது. 'நம் வாழ்நாளையே குலைக்கவந்த குழந்தையின் அழுகுரல் போலல்லவா இருக்கிறது?' என எண்ணியவன் 'ஒ'வென்று அழ ஆரம்பித்துவிட்டான். இப்படி ஒரு காட்சி தோன்றும்படி அருணகிரி நாதர் அலங்காரமாகச் சொல்கிறார். சூரனுக்கு ஜாதகம் பார்த்துக் சொன்னவரே கிரெளஞ்சாசுரனுக்கும் பார்த்துச் சொல்லியிருக்கிறார். "உலகில் ஒரு குழந்தையின் அழுகை ஒலி கேட்கப் போகிறது. தன் கை வேலினால் உன்னை அணு அணுவாக்கி நீ உருக்குலைந்து போகும்படி செய்பவன் இந்த உலகத்தில் அவதாரம் செய்துவிட்டான் என்று அப்பொழுதே தெரிந்துகொண்டுவிடலாம்" என்று அவர் சொன்னதைக் கிரெளஞ்சாசுரன் கேட்டிருக்கிறான். ஆகவே இன்று, சரவணப் பூந்தொட்டிலில் ஏறி அறுவர் கொங்கை விரும்பி அழுகின்ற குழந்தையின் அழுகுரல் கேட்டவுடனே, அவன் தன் தலையில் கை வைத்துக் கொண்டு ஐயோ என்று அழ ஆரம்பித்துவிட்டான். ஒரு நாள் இந்த ஜோசியர் சமுத்திரத்தின் பக்கம் போயிருக்கிறார். சமுத்திர ராஜனைப் பார்த்தவுடனே அவனுக்கு என்ன ஏற்படப் போகிறது என்று அவருக்குத் தெரிந்துவிட்டது. "நீ மிகப் பாவியாக இருக்கிற சூரன் ஒளிந்து கொள்வதற்கு இடம் அளிக்கப் போகிறாய். அப்போது ஒருவன் தன் கை வேலினாலே நீ வறண்டு போகும்படி செய்யப் போகிறான். அந்தக் குழந்தையின் அழுகைக் குரல் கேட்கும்போதே நீ உண்மையைத் தெரிந்து கொள்ளலாம்" என்று சொல்லியிருக்கிறார். வேலினாலே தன்னைச் சுவறச் செய்யப் போகிற குழந்தையின் அழுகைக் குரல் எப்போது கேட்கப் போகிறது என்று அவன் கலங்கி யோசனை பண்ணிக் கொண்டிருந்தான். அந்தச் சமயத்தில் இந்தச் சத்தம் கேட்டது. மற்றக் குழந்தைகளின் அழுகைக் குரலுக்கும், இந்தக் குழந்தையின் அழுகைக் குரலுக்கும் வித்தியாசம் தெரியாதா? 'தன்னைக் கொல்ல வந்த காலன் பிறந்துவிட்டான்' என்று அவன் 'ஒ'வென்று அலற ஆரம்பித்துவிட்டான். குழந்தை விம்மி அழ அழ இவர்களும் அழ ஆரம்பித்து விட்டார்கள். குழந்தை ஒரு முறை அழுதான். அதைக் கேட்ட மாத்திரத்தில், 'பெரும்பாவியாகிய சூரபன்மனுக்கு ஒளிய இடம் கொடுக்கப் போய் நாம் அழிந்து போகப் போகிறோமே!’ என்று கடல் அழ ஆரம்பித்தது; அந்தக் குழந்தையின் கை வேலினால் சூரனுடைய கவசம் போல் இருக்கிற நாம் தவிடு பொடியாவோமே என்று கிரெளஞ்சாசுரன் அழ ஆரம்பித்தான்; 'நம்மை யாரும் அடக்குவதற்கு இல்லை என்று எண்ணி இதுவரையிலும் இறுமாந்து போய்ப் பற்பல தீமைகளைப் புரிந்து கொடுமை ஆட்சி நடத்தி வந்தோமே; இனி நம்முடைய சுதந்திரம் பறி போய் விடுமே' என்று சூரன் அழ ஆரம்பித்தான். உலகின் உச்சியாகிய இமாசலத்திலுள்ள சரவணப் பொய்கையில் படுத்து முருகன் அழ, அந்த அழுகையின் எதிரொலி போல முதலில் கடலிலிருந்து அழுகை ஒலி கிளம்பியது; பின்பு குன்றிலிருந்து அழுகை ஒலி கிளம்பியது; அப்பால் சூரனிடத்திலிருந்தும் அழுகை ஒலி கிளம்பியது. இப்படி அழகுபட அருணகிரியார் சொல்கிறார். கடலழக் குன்றழச் சூரழ விம்மிஅழும் குருந்தைக் குறிஞ்சிக் கிழவன்என் றோதும் குவலயமே 'கடல் அழுதது; குன்று அழுதது சூரன் அழுதான்' என்று சூரன் அழுததைக் கடைசியாக வைக்கிறார். அவன் அழுதால் மற்றவர்கள் அழுகை நின்று போய்விடும். அவனை அழப்பண்ணினால் தான் தேவர்கள் சிரிப்பார்கள். அவன் அழிந்தால்தான் தேவேந்திரலோகம் பிழைக்கும். குழந்தை அவதாரம் செய்தவுடனே சூரனை அழச் செய்துவிட்டான். கடல் சூரனுடைய சார்பினாலே கெட்டது; இயல்பில் தீங்குடையது அன்று. ஆதலின் முருகன் அழுகையை அது முதலில் உணர்ந்து அழுதது. ஒலியை எளிதில் வாங்கிச் செல்வது நீர் என்று விஞ்ஞானிகள் சொல்வார்கள். அதற்கும் பொருத்தமாக இருக்கிறது இது. அந்தக் குழந்தை ஒருமுறை அழுததோடு நிற்கவில்லை. அது விம்மி அழுதது; விட்டுவிட்டு அழுததாம். அதன் அழுகை ஒலி கேட்கும்போதெல்லாம் கடல் அழுதது, குன்று அழுதது, சூரன் அழுதான். விம்மி அழும் குருந்தை என்கிறார் அருணகிரியார். குருந்து என்பதற்குக் குருத்து என்று பொருள். அவன் பச்சிளங் குழந்தை என்பதைக் குருந்து என்ற சொல்லினால் விளக்குகிறார். "இந்தப் பச்சிளம் பாலகனை, பால் குடிக்கும் குழந்தையை, தொட்டிலில் படுத்து விளையாடும் குழந்தையை, கிழவன் என்று சொல்கிறார்களே; இப்படிச் சொல்லலாமா? இது என்ன பைத்தியக்காரத்தனம்!" என்று சொல்கிறார். புதிய கதை இந்தப் பாட்டை ஒருவர் பார்த்தார். திருப்பரங்குன்றப் புராணம் எழுதிய புலவர் அவர். நக்கீரர் எழுதியுள்ள திருமுருகாற்றுப் படையையும் படித்தார். அவருக்கு அருணகிரிநாதர் பாட்டு சமத்காரமாகப் படவில்லை. இந்தக் கேள்விக்கு உள்ள படியே பொருள் செய்து கொண்டார் அவர் ஒரு கதையையே தம் புராணத்தில் சொல்லிவிட்டார். திருப்பரங்குன்றத்தில் கற்கிமுகி என்ற பூதம், தன்னுடைய குகைக்குள் 999 பேர்களைப் பிடித்து வைத்திருந்தது. இன்னும் ஒரே ஒருவர் வந்தால் போதும்; அந்த ஆயிரம் பேரையும் விழுங்கிவிட எண்ணியிருந்தது. 999 பேர் கிடைத்தும் இன்னும் ஒருவர் கிடைக்கவில்லை. அந்த ஒரே ஒரு பேர்வழியாக நக்கீரர் போய் அகப்பட்டுக் கொண்டார். அவர் உள்ளே போனவுடனே, அங்கே இருந்தவர்கள், "இதுவரையிலும் நாங்கள் குகைக்குள் சுகமாகவாவது சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். நீ வந்து விட்டாயா? உன்னைச் சேர்த்தால் ஆயிரம் பேர்கள் ஆகிவிடுவார்கள். இனி நம்மை அந்தப் பூதம் சாப்பிட்டுவிடும்" என்று அழுதார்கள். நக்கீரர் பார்த்தார். அவர் இருக்கிற இடம் குகை அல்லவா? முருகனுக்குக் குகன் என்ற திருநாமம் உண்டு. இருதயமாகிய குகையில் இருப்பவன் அவன், தகராகாச குகையில் இருப்பதனால்தான் அவனுக்குக் 'குகன்' என்ற பெயர் வந்தது. இருதயமாகிய குகையில் இருக்கிற குகனை, கற்கிமுகி என்னும் பூதம் தம்மை அடைத்து வைத்திருக்கிற குகையிலிருந்து வெளி வருவதற்காக நினைத்தார். திருமுருகாற்றுப் படையை பாடி வேண்டினார். அவருடைய பிரார்த்தனைக்கு இணங்கி முருகப் பெருமான் பூதத்தைச் சங்காரம் செய்து அந்தக் குகையிலிருந்து அவர்களை வெளிப்படுத்தினான். அப்போது முருகப்பெருமானுக்கு நக்கீரரிடம் சிறிது கோபம் வந்ததாகச் சொல்கிறார் புராணக்காரர். ஏன் தெரியுமா? என்றும் இளமை உடையவனாய், பல ரூபத்தோடு இருக்கின்ற நம்மை இந்த நக்கீரன் திருமுருகாற்றுப்படையில் "விண்பொரு நெடு வரைக் குறிஞ்சிக்கிழவ" என்று சொல்லியிருக்கிறானே! அதுவும் ஒருமுறை சொன்னானா, மறந்து சொல்லியிருக்கலாம் என்று நினைக்க? இரண்டாம் முறையாகவும், "பழமுதிர்சோலை மலை, க.சொ.1-13 கிழவோனே" என்றல்லவா பாடிவிட்டான்? நான் கிழவனா? என்று அவனுக்குக் கோபம் வந்ததாம். உடனே, "என்னை நீ கிழவன் என்று பாடலாமா? என்று நக்கீரனைக் கேட்டானாம். "இல்லை சுவாமி. நான் அப்படிப் பாடியது தப்பு, தப்பு” என்று கன்னத்தில் போட்டுக் கொண்டு, “என்றும் இளையாய் அழகியாய் ஏறுர்ந்தான் ஏறே உளையாய்என் உள்ளத்து உறை" என்று பின்பு வெண்பாப் பாடினார் என்று அந்தப் புலவர் சொல்கிறார். திருமுருகாற்றுப் படைக்குப் பின்பு பத்து வெண்பாக்கள் இருக்கின்றன. அந்த வெண்பாக்கள் பக்திச் சுவை நனி சொட்டுவனவாய் உள்ளன. முதல் வெண்பா, "குன்றம் எறிந்தாய் குரைகடலில் சூர்தடிந்தாய் புன்தலைய பூதப் பொருபடையாய் - என்றும் இளையாய் அழகியாய் ஏறுர்ந்தான் ஏறே உளையாய்என் உள்ளத்து உறை" என்பது. இந்த வெண்பாவை நக்கீரரே பாடியிருக்கிறார் என்ற கருத்தின்மேல் எழுந்த கதை அது. எந்த நூலை எடுத்துக் கொண்டாலும், அந்த நூலின் முடிவில் அந்த நூலைப் படிப்பவருக்கு என்ன பயன் உண்டாகும் என்று சொல்வது வழக்கம். பாராயண நூல்களுக்குப் பயன் இருக்கும். வடமொழியில் பலசுருதி என்று சொல்வார்கள். ஞானசம்பந்தப் பெருமான் தம் பதிகங்கள் எல்லாவற்றுக்கும் அப்படிச் சொல்லியிருக்கிறார். திருமுருகாற்றுப் படைக்கு எந்தவிதமான பயனும் சொல்லப்படாததைக் கண்டு பிற்காலத்தில் வந்த புலவர்களில் யாரோ ஒருவர் அந்தப் பத்துப் பாடல்களையும் பாடி அவற்றோடு சேர்த்திருக்க வேண்டுமென்று தோன்றுகிறது. "நக்கீரர் தாம்உரைத்த நன்முருகாற் றுப்படையைத் தற்கோல நாள்தோறும் சாற்றினால் - முற்கோல மாமுருகன் வந்து மனக்கவலை தீர்த்தருளித் தாம்நினைத்த எல்லாம் தரும்" என்று நக்கீரரை மரியாதையாகச் சொல்வதால் அவற்றைப் பாடியவர் வேறு ஒருவரே என்று தெரிகிறது. தம்மைச் சொல்லிக் கொள்ளும்போது நக்கீரர் என்று மரியாதையாக அவரே சொல்லிக் கொள்வாரா? நக்கீரர் பாடாவிட்டால் என்ன? அந்தப் பாடல்கள் மிகவும் இனிமையாக இருக்கின்றன; உள்ளம் கலந்து கரைந்து பாடிய பாடல்களாக உள்ளன. 'என்றும் இளையவனாய், சதாபால ரூபத்தோடு இருக்கின்ற குழந்தையை, இளங்குருத்தை, பச்சிளம் பாலகனை, கிழவன் என்று குவலயம் சொல்கிறதே! இது என்ன பேதைமை என்று பாடும் இப்பாட்டில் அருணகிரியார் ஆண்டவனது அவதாரத்தையும், அவனது திருவிளையாடல்களையும் மிக அலங்காரமாகப் புலப்படுத்தியுள்ளார். திருந்தப் புவனங்கள் ஈன்றபொற் பாவை திருமுலைப்பால் அருந்திச் சரவணப் பூந்தொட்டில் ஏறி அறுவர்கொங்கை விரும்பிக் கடல்அழக் குன்றழச் சூர்அழ விம்மிஅழும் குருந்தைக் குறிஞ்சிக் கிழவன்என்று ஒதும் குவலயமே! (உலகத்து உயிர்கள் யாவும் மலம் நீங்கித் திருத்தம் பெறும் பொருட்டுப் புவனங்களை ஈன்றவளும், செம்பொன்னாலான பதுமையைப் போன்றவளுமாகிய அம்பிகையின் அழகிய முலைப் பாலை உண்டு, சரவணப் பொய்கையில் தாமரைப் பூவாகிய தொட்டிலில் ஏறி, சூரன் ஒளிய இருக்கும் கடல் அழவும், கிரெளஞ்சமாகிய மலை அழவும், சூரன் அழவும் விம்மி அழுத குருத்துப் போன்ற இளங்குழந்தையாகிய முருகனை, உலகத்தார் குறிஞ்சிக் கிழவன் என்று கூறுகிறார்கள். புவனங்கள்: உபலட்சணத்தால் தனு கரண போகங்களையும் கொள்ள வேண்டும். பொற்பாவை: அன்மொழித்தொகை. சரவணத்தில் உள்ள பூவாகிய தொட்டில். அறுவர்: தொகையால் புலனாகும் குறிப்புச் சொல். கொங்கை: ஆகுபெயர்; பாலுக்காயிற்று. சூர்: உயர்திணையை அஃறிணை வாய்பாட்டில் சொன்னது; அரசு, அமைச்சு என்பன போல. குருந்து - குருத்து; மிக்க இளமையைப் புலப்படுத்தியபடி. குவலயம்: ஆகுபெயர்; உலகத்தோருக்கு ஆயிற்று.) தனிப்பரமானந்தம் 1 புராணச் செய்திகள் அருணகிரியார் இறைவனுடைய திருவருளில் ஈடுபட்டுக் கந்த புராணத்தின் கருத்தை எல்லாம் நன்கு தெரிந்து கொண்டவர். அவர் காலத்தில் தமிழில் உள்ள கந்த புராணம் தமிழ்நாட்டில் எங்கும் பரவியதோ இல்லையோ தெரியவில்லை. ஸ்காந்த புராணம் என்று சொல்லும் வடமொழிக் கந்த புராணத்தின் கருத்துகளும் கதைகளும் அவர் காலத்திற்கு முன்பிருந்தே இந்த நாட்டில் வழங்கி வந்திருக்கின்றன. திருமுருகாற்றுப்படை, பரிபாடல் முதலிய சங்க நூல்களில் முருகனைப் பற்றிய வரலாறுகள் பல உள்ளன. எல்லாப் புராணங்களையும்விடக் கந்த புராணம் தமிழ்நாட்டில்தான் அதிகமாக வழங்கி வந்திருக்கிறது. வடநாட்டில் கந்த புராணத்தைப் பற்றி அவ்வளவாகத் தெரியாது. தமிழ்நாடும் கடவுளன்பும் தென்னாட்டில் இருப்பதுபோல ஆலயங்களையோ ஆலய வழிபாடுகளையோ வடநாட்டில் பார்க்க முடியாது. அங்கே மக்கள் கூட்டமாகக் கூடிப் பஜனை செய்வார்கள். சரித்திரக் கண்கொண்டு பார்த்தால், பிறநாட்டவர்களின் அடக்குமுறைக்கும் படையெடுப்புக்கும் வடநாடு அப்போதைக்கப்போது உள்ளாகி வந்திருக்கிறது என்பது தெரியவரும். பிற நாட்டவர்கள் அங்கே அடிக்கடி படையெடுத்து வந்து கலகம் விளைவித்ததால் அமைதி இல்லாமல் போயிற்று. அதனால் அவர்கள் சமயத்துறையில் தென்னாட்டைப்போல அவ்வளவு வளர்ச்சி அடையவில்லை. அவர்களுக்குப் பக்தி இல்லை என்பது அல்ல. அவர்கள் பக்தி செய்த முறை வேறு. தமிழ்நாட்டில் அமைதி நிலவியதால் பல பல ஆலயங்கள் எழும்பின. ஆலயங்களில் மூர்த்திகளைப் பிரதிஷ்டை செய்தார்கள். பூசை நியமங்கள் ஏற்பட்டன. அங்கங்கே உள்ள கோயில்களில் எழுந்தருளியிருக்கும் மூர்த்திகளுக்குப் பெரிய பெரிய விழாக்கள் நிகழலாயின. தமிழ்நாட்டிலுள்ள ஒவ்வொரு தலத்துக்கும் புராணம் இருக்கிறது. மதுரைக்கே ஐந்து புராணங்கள் இருக்கின்றன. அவற்றில் பரஞ்சோதி முனிவர் இயற்றியுள்ள திருவிளையாடற் புராணம் காப்பிய வகையில் மிக உயர்ந்ததாக அமைந்திருக்கிறது. பழங் காலம் கச்சியப்ப சிவாசாரியார் காலத்திற்கு முன்பே, அதாவது தமிழில் கந்த புராணம் ஏற்படுவதற்கு முன்பே, வட மொழியிலுள்ள கந்தபுராணத்தின் வரலாறுகளும், தத்துவங்களும் இந்த நாட்டில் உலவி வந்திருக்கின்றன என்று சொன்னேன். அவற்றைக் கற்றுணர்ந்த பெரியோர்கள் இந்த நாட்டில் இருந்தார்கள். சங்க கால இலக்கியமான பரிபாடலில் ஒரு பாட்டு இருக்கிறது. முருகனைப் பற்றிக் கடுவன் இள எயினனார் என்னும் புலவர் பாடிய பாடல் அது. "மலைச்சாரலில் வாழும் பூசாரி உனக்குப் பூசை போடுகிறான். தாமரையில் நீ அவதாரம் செய்தாய் என்கிறான். உலகத்தைச் சங்காரம் செய்கின்ற சங்கரனுடைய பிள்ளை நீ என்று சொல்கிறான். நீ யாருக்கும் பிள்ளை அல்ல. நீ எங்கும் பிறந்தவனும் அல்ல. ஆகவே அவன் சொல்வது மெய் அன்று. ஆனால் அவன் சொல்வதைக் கேட்டு நீ மகிழ்ச்சி பெற்று அவனுக்கு அருள் செய்கிறாய். அவன் சொல்கிற வார்த்தைகளைக் கேட்டு நீ எழுந்தருளி அருள் செய்வதனால் அவன் சொல்வன பொய்யும் அல்ல. உன் அவதாரம் பல வகைப்படும். அதைக் கொண்டு நின் இயல்பை அளந்தறிய வொண்ணாது" என்று பல செய்திகளை அவர் சொல்கிறார். அப்படிப் பல காலமாக இந்த நாட்டில் வழங்கி வருகிற கருத்துக்களை அருணகிரியார் நன்கு தெரிந்து கொண்டிருந்தார். தொகுத்து அறிதல் மனிதன் ஒன்றைப் பற்றி ஆராய்ச்சி செய்தால் அதைப் பற்றிய பல செய்திகளையும் தொகுத்து அறிந்து கொள்வான். நமக்கு ஒரு பெண் இருக்கிறாள். அவளுக்குக் கல்யாணம் பண்ண வேண்டுமென்று முயலுகிறோம். ஒரு பையனைப் பார்த்தால், அவனுடைய தன்மை எல்லாவற்றையும் தெரிந்து கொள்கிறோம். அவன் எவ்வளவு படித்திருக்கிறான் என்று விசாரிக்கிறோம். என்ன என்ன உத்தியோகம் பார்த்தான், இப்பொழுது என்ன உத்தியோகம் செய்து கொண்டிருக்கிறான் என்று தெரிந்து கொள்கிறோம். அவனுடைய தந்தை, தாய், உறவினர்கள் எந்த எந்த ஊர்களில் இருக்கிறார்கள், அவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பனவற்றையும் தெரிந்து கொள்கிறோம். காரணம், நம்முடைய அன்புக்குரிய பொருளைச் சுற்றிச் சூழ இருக்கும் அத்தனை செய்திகளையும் தெரிந்து கொள்ள வேண்டுமென்ற மனித இயல்புதான். தனக்குப் பிரியமான பொருளைப் பற்றியுள்ள எல்லாச் செய்திகளையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஊக்கம் மனிதனுக்கு இயல்பாக உண்டு. நமக்கு இன்பத்தைத் தரவல்லவன் ஆண்டவன். அவன் உலகத்தில் திரு அவதாரம் செய்தான். அவன் எப்படி எழுந்தருளினான், அவன் என்ன என்ன விளையாடல் செய்தான், அவன் என்ன என்ன தத்துவங்களை உயிர்களுக்கு போதித்தான் என்பன போன்றவற்றை அறிந்து கொள்ள வேண்டுமென்ற துடிப்பு அவனிடம் அன்புள்ளவர்களுக்கு ஏற்படும். அவனைப் பற்றி யார் யாருக்கு என்ன என்ன தெரியுமோ அவை யாவையும் அவர்கள் வாயிலாகக் கேட்க வேண்டுமென்ற ஆசை தோன்றும். அருணகிரிநாதரும் தம் காலத்துக்கு முன்பிருந்தே இந்த நாட்டில் முருகனைப் பற்றி வழங்கி வந்த செய்திகளை எல்லாம் அறிந்திருந்தார். 2 முன்பாட்டில், "எப்போதும் குழந்தை உருவத்தோடு இருக்கும் முருகனை இந்த உலகம் கிழவன் என்று சொல்கிறதே; என்ன பேதைமை!" என அலங்காரமாகக் கூறியதைப் பார்த்தோம். அலங்காரம் என்றால் அழகுபடச் சொல்வது அல்லவா?. முருகனைக் குழந்தை என்று சொல்லிவிடலாம். அது சிறப்பு அல்ல. அதை அலங்காரமாகச் சொல்ல வேண்டும். சென்ற பாட்டில் அப்படிச் சொல்லி, திரு அவதாரதத்துவத்தையும், இளம்பருவத் திருவிளையாடல்களையும் சொன்னார். குழந்தைப் பருவத்துக்கு அடுத்த பருவம் எது? காளைப் பருவம் அல்லது குமரப் பருவம் அல்லவா? அடுத்தபடி அது நினைப்புக்கு வந்தது. அவனைக் காளையாக, குமரனாக இந்தப் பாட்டிலே பாடுகிறார். காளைக்குக் கன்னி வேண்டும் அல்லவா? இந்தப் பாட்டிலே குமரனாகிய முருகன் ஒரு கன்னிகையைக் காதலித்த திருவிளையாடலைச் சொல்கிறார். வள்ளித் திருமணம் பெரும்பைம் புனத்தினுட் சிற்றேனல் காக்கின்ற பேதைகொங்கை விரும்பும் குமரனை என்று தொடங்குகிறது பாட்டு. அவன் எத்தகையவன்? அவன் யாரை விரும்பினான்? அவன் குமரன். பெரும்பைம்புனத்தினுட் சிற்றேனல் காக்கின்ற பேதையை விரும்பிச் சென்றான். இந்த வரலாற்றை கவனிக்கும்போது கந்த புராணத்தில் கடைசிப் பகுதிக்கு வந்துவிடுகிறோம். கந்த புராணம் முருகனது திரு அவதாரத்தில் தொடங்குகிறது. அதனைச் சென்ற பாட்டிலே அருணகிரியார் சொன்னார். அது முக்கியமான பகுதிதான். ஆனாலும் அது ஒன்று தான் முக்கியமான பகுதி என்று சொல்வதற்கில்லை. சூரபன்மனை ஆண்டவன் சங்காரம் செய்த வரலாறு கந்த புராணத்தில் பெரும்பகுதியில் விரவிக் கிடக்கிறது. சூரனும், அவனுடைய தோழர்களும் ஆண்டவனிடம் பல பல மாயங்களைப் புரிய எம்பெருமான் அவற்றைப் போக்கி அவர்களைச் சங்காரம் செய்த வரலாறு விரிவாக இருக்கிறது. அந்தப் பகுதிகளும் நமக்கு முக்கியமானவையே. ஒரு மாமரம் அடி பருத்து நன்றாக வளர்ந்திருக்கிறது; கப்பும் கிளையுமாகப் படர்ந்திருக்கிறது. அந்த மரத்தின் பெரும்பகுதி கிளைகளும், இலைகளுமாகத்தான் இருக்கிறது. ஆனால் ஒருவன் கிளைகளையும், இலைகளையுமா பார்த்துக் கொண்டிருக்கிறான். அந்தக் கிளைகளோடு மரத்தின் பயன் நின்று விடவில்லை. கப்புக்கும் கிளைகளுக்கும் நடுவிலே உச்சியில் இருக்கும் பழந்தான் அதன் பயன். அந்த மரத்தின் உச்சியிலே எந்த இடத்தில் பழம் இருக்கிறது என்றுதான் நாம் எல்லோரும் பார்ப்போம். அந்தப் பழம் கனிந்திருக்கும்; இன்பச்சுவை உடையதாய் இருக்கும். அவ்வாறே கந்த புராணம் முழுமையும் விரிந்து வளர்ந்து கிடப்பது சூரபன்மன் சங்காரம். சூரனுடனும், அவனுடைய தோழர்களுடனும் நெடுங்காலம் போர் நிகழ்ந்தது. அதன் வருணனை கந்த புராணத்தில் மிக விரிவாக இருக்கிறது. ஆனால் அதுவே முடிவான பகுதி அல்ல; பயன் ஆகிய பகுதியும் அல்ல. கந்த புராணம் என்ற மரத்தின் உச்சியிலே ஒரு பழம் பழுத்திருக்கிறது. அந்தப் பழந்தான் வள்ளி திருமணம். கச்சியப்ப சிவாசாரியார் வள்ளி திருமணத்தோடு புராணத்தை முடிக்கிறார். எந்தக் கதையை எடுத்தாலும் கல்யாணத்தோடு முடிக்க வேண்டுமென்று நினைப்பது நம் நாட்டு வழக்கம். மனிதன் வாழ்வு மரணத்திலே முடிகிறதைப் பார்க்கிறோம். எப்பொழுதும் நாற்றமுள்ள இடத்திலே குடியிருக்கும் ஒருவன் சொந்தமாக ஒரு வீடு கட்டிக் கொள்ள முயலும்போது நாற்ற முள்ள இடத்திலா கட்டிக் கொள்வான்? நல்ல காற்றுள்ள இடத்தில் கட்டிக் கொள்ள வேண்டுமென்று யோசிக்க மாட்டானா? அதைப்போல லட்சிய வாழ்வு வாழ வேண்டுமென்று விரும்புகிறவர்கள், மரணத்திலேயே முடிந்து கொண்டிருக்கிற மனித வாழ்வைச் சொல்ல மாட்டார்கள். மரணத்திற்கும் அப்பாற்பட்ட அமர வாழ்வினை அடைய வேண்டுமென்ற லட்சியத்தோடு கதை புனையும் கலைஞர்களுக்குக் கதையை நன்றாக முடிக்க வேண்டுமென்ற கருத்து இருக்கும். கந்தபுரணம் வள்ளியெம்பெருமாட்டியின் திருமணத்தோடு நன்றாக முடிகிறது. இரண்டு மணம் கந்தபுராணத்தில் இரண்டு திருமணங்கள் வருகின்றன. சூரனோடு முருகன் போரிட்டு, அவனைச் சங்காரம் செய்து தேவர்களுக்கு இன்ப வாழ்வை மீண்டும் வழங்கினான். முருகன் செய்த உதவியை எண்ணித் தேவராஜன் தன் மகள் தேவகுஞ்சரியை அவனுக்கு மணம் செய்து வைத்தான். "எம்பெருமானே, நீ எங்களுக்குச் செய்த நன்றியை நாங்கள் என்றும் மறக்க மாட்டோம். போரிலே நீ காட்டிய வீரத்திற்கு நாங்கள் என்ன கைம்மாறு செய்யப் போகிறோம்! பார்வதி பரமேசுவரரைக் காணுவதுபோல உன்னைத் திருமணக்கோலத்தோடு பார்க்க வேண்டுமென்று நினைக்கிறோம். இந்தப் பெண்ணை நீ ஏற்றுக் கொண்டு எங்களுக்கு அருள் செய்ய வேண்டும்" என்று கூறி, வெள்ளை யானையாகிய ஐராவதம் சுமந்து வந்த தேவ யானையை முருகனுக்கு அர்ப்பணம் செய்தான். யுத்த காலத்தில் தேவசேனாபதியாக இருந்தான் முருகன்; அமரர் படைத் தலைவனாக நின்று போராற்றினான். போர் முடிந்தவுடனேயே, தேவசேனையின் பதியாக ஆனான். இது முதல் கல்யாணம். ஆனால் அதற்கு அடுத்தபடியாகக் கந்த புராணத்தின் முடிவில் கச்சியப்ப சிவாசாரியார் வள்ளியெம்பெருமாட்டியின் திருமணத்தை வைக்கிறார். நம் ஊரில் ஒருவர் இருக்கிறார். வேறு ஊரிலிருந்தும் ஒருவர் வருகிறார். இருவரும் சபையில் பேசுகிறார்கள்; என்றாலும் நம் ஊர்ப் புலவர் பேசியதைப் பற்றியே பெருமையாக நினைப்பது இயல்பு. தேவகுஞ்சரி தேவர்கள் பட்டணத்தில் இருந்தவள்; வள்ளியம்மையோ நம்மைப்போல இந்த உலகத்தில் இருந்தவள். நம்மைப் போலவே இந்த உலகத்தில் ஒன்றும் அறியாத பேதைப் பெண்ணாக இருந்த அவளுக்கு கிடைத்தற்கரிய பேறு கிடைத்தது. அவளை எம்பெருமான் இங்கே வந்து மணந்து கொண்டான். அது சிறப்பான விஷயம் அல்லவா? அதோடு நமக்கும் அப்படிப்பட்ட பேறு கிடைக்கும் என்ற நம்பிக்கையை அந்த வரலாறு உண்டாக்குகிறது. கிம்பர்லியில் தங்கம் கிடைக்கிறது என்றால் அது நமக்குக் கதையாக இருக்கிறது; அது நமக்கு பள்ளிக்கூடப் பாடம். ஆனால் நெய்வேலியில் நிலக்கரி கிடைக்கிறது என்றால் உடனே மகிழ்வு எய்துகிறோம்; இந்த ராஜ்யத்தின் பொருளாதார வாழ்வு சிறப்படையும் என்று மகிழ்கிறோம். அதுபோலவே தேவயானையை முருகப் பெருமான் மணந்து கொண்டதனால் வாழ்வு பெற்றவர்கள் தேவர்கள். ஆனால் நமது ஊரில் பிறந்த வள்ளியெம்பெருமாட்டியை முருகன் மணந்து கொண்ட செய்தியைக் கேட்டால் நமக்கும் வாழ்வு உண்டென்று நம்பத் தோன்றுகிறது. நமக்கும் அவனுக்குமுள்ள உறவு அதிலிருந்து மிகுதியாகிறது. ஆகவே வள்ளி திருமணமாகிய பயனோடு கந்தபுராணம் முடிகிறது. சிவபிரான் கண்களிலிருந்து உண்டான பெருமான், திருந்தப் புவனங்கள் ஈன்ற பிராட்டியின் பாலை அருந்திய பிரான், சரவணப் பூந்தொட்டிலில் விளையாடிய பெருமான், சூரன் முதலிய அசுரர்களைச் சங்கரித்த பெருமான், தேவேந்திர லோகத்தை தேவர்களுக்கே திரும்பவும் மீட்டுக் கொடுத்துத் தேவேந்திரனுடைய பெண்ணை மணந்து கொண்டு அவர்களுக்கு வாழ்வு அளித்த பெருமான் நமது ஊருக்கும் வந்து மக்களில் ஒருத்தியாக வாழ்ந்து கொண்டிருந்த பேதைப் பெண் வள்ளியை மணந்து கொண்டு, நமக்கு வாழ்வு அளித்து நம் உறவினர்களில் ஒருவனாக, நம் அன்புக்குரிய நெருங்கிய சுற்றத்தினனாக ஆனான் என்றால், அந்தப் பெருமையான நிகழ்ச்சி நம் நினைவை விட்டு அகலாமல் இருப்பதற்குரியதல்லவா? முருகனை என்றென்றைக்கும் வள்ளி மணாளனாகவே எண்ணி நாம் உறவு கொண்டாடி உய்வு பெறவேண்டுமென்பதற்காகவே வள்ளியெம் பெருமாட்டியின் திருமணத்தோடு கச்சியப்ப சிவாசாரியார் புராணத்தை முடித்திருக்கிறார். இதற்கு முன் பாட்டிலே முருகன் குழந்தையாக இருந்து பல திருவிளையாடல்களைப் புரிந்ததைக் கண்டோம். இந்தப் பாட்டிலே முருகன் கல்யாணக் கோலத்துடன் வருகிறான். கந்த புராணமும் சொந்தப் புராணமும் பெரும்பைம் புனத்தினுட் சிற்றேனல் காக்கின்ற பேதைகொங்கை விரும்பும் குமரனை மெய்யன்பி னால்மெல்ல மெல்லஉள்ள அரும்பும் தனிப்பர மானந்தம் தித்தித் தறிந்தஅன்றே கரும்பும் துவர்த்துச்செந் தேனும் புளித்தறக் கைத்ததுவே. இந்தப் பாட்டில் "பெரும்பைம் புனத்தினுட் சிற்றேனல் காக்கின்ற பேதை கொங்கை விரும்புங் குமரனை" என்பது முதல் பகுதி. இது கந்த புராணம். அடுத்து இருப்பது இரண்டாம் பகுதி. அருணகிரிநாதரது சொந்தப் புராணம். இந்தப் புராணத்தில் மூன்று அத்தியாயங்கள் இருக்கின்றன. "மெய்யன்பினால் மெல்ல மெல்ல உள்ள” என்பது முதல் அத்தியாயம். “அரும்புந் தனிப் பரமானந்தம் தித்தித்து அறிந்தவன்றே" என்பது இரண்டாவது. "கரும்பும் துவர்த்துச் செந்தேனும் புளித்தறக் கைத் ததுவே" என்பது மூன்றாவது. முதற்பகுதியிலே அருணகிரியார் கந்தபுராணக் கதையைச் சொல்லிவிட்டு, பிற்பகுதியிலே மூன்று பிரிவுகளாக அவன் அருளால் பெறும் இன்பத்தைப் புலப்படுத்துகிறார். தினைப்புனம் பெரும்பைம் புனத்தினுட் சிற்றேனல் காக்கின்ற பேதைகொங்கை விரும்புங் குமரனை வள்ளி வாழ்ந்த புனம் எப்படி இருக்கிறது? பச்சைப் பசேல் என்று தினைப் பயிர் விளைந்த கொல்லை அது. கண்ணுக்கு எட்டும் வரைக்கும் எங்கே பார்த்தாலும் தினைப் பயிர் விளைந்திருக்கிறது. புனம் என்பது தினைப்பயிர் விளையும் நிலம். அங்கே வள்ளியம்மை சிற்றேனல் காக்கிறாள். ஏனல் என்றால் தினை என்று பொருள். சிறிய தினையைக் காக்கின்றாள். தானியங்களுள் சிறியது தினை என்றும், பெரியது நெல் என்றும் சொல்வார்கள். தினை விளைகின்ற பூமி புனம். இதனைப் புன்செய் நிலம் என்பர். நெல் விளைகின்ற பூமி நன்செய் நிலம் என்பர். அதிகப் பாடு இல்லாமல் விளைவது தினை. மிக்க உழைப்பினால் விளைவது நெல். ஏழைகள், பண வசதி அற்றவர்கள் தினையை உண்பார்கள். தஞ்சாவூர் மிராசுதார்கள் நெல் உணவு உண்ணுவார்கள். உழைப்பு அதிகமாகக் கொள்ளும் நெல்லுக்கு நிச்சயமாக அதிக உயர்வு இருக்கும். புன்செய்க்கு அத்தனை உழைப்பில்லை. உழைப்பு இல்லாததால் புன்செய்ப் பயிர்கள் உயர்வு பெறாமல் இருக்கின்றன. உயர்வு பெறாமல் உள்ள சிறிய தினைப் பயிரை வள்ளியம்மை காத்துக் கொண்டிருக்கிறாள். அவள் எத்தகையவள்? பேதை; அறியாமையை உடையவள். அந்தப் பெரிய காட்டில் மிகச் சிறியதான தினையைக் காக்கிறாள். சிற்றேனல் தனக்கும் தன்னைச் சார்ந்தவர்களுக்கும் உணவு ஆதலாலே, அதனைக் கிளி, குருவி முதலியவை கொத்திக் கொண்டு போகாமல் இருக்க ஆலோலம் பாடி அவற்றைத் துரத்திக் கொல்லையைக் காவல் செய்து வருகிறாள். அப்படிக் காப்பாற்றுவதையே தன் வாழ்க்கைச் செயல் என்று நினைத்துக் கொண்டிருக்கிறாள். திருமணம் புரிந்து கொண்டு நாயகன் வீடு போகிற வரைக்கும் குற மகளிர்களுடைய வேலை தினைப் புனம் காவல் புரிவது. அந்த வகையில் குறமகளாகிய வள்ளியெம்பெருமாட்டி சிற்றேனலைக் காத்துக் கொண்டிருக்கிறாள். இதன் உள்ளுறை என்ன? மனித வாழ்க்கையில் ஆன்மாக்களாகிய உயிர்கள் இன்றைக்கு என்ன காரியம் செய்து கொண்டிருக்கிறதோ அதையே வள்ளியம்மை செய்கிறாள். இந்த உலகம் விரிந்திருக்கிறது. உயிர்கள் எல்லாம் உடம்பைப் பெற்று, பொறிகளின் வாயிலாக இன்ப துன்பங்களை நுகர்ந்து திரும்பத் திரும்ப இறந்தும் பிறந்தும் வருவதற்கு நிலைக்களமாக இந்த விரிந்த உலகம் அமைந்திருக்கிறது. உலகத்தில் விளைகின்ற பொருள்களை அநுபவித்துக் காத்து, அவற்றைத் தனக்கும் தன்னைச் சார்ந்தவர்களுக்கும் உரிய பொருளாகவே வைத்துக் கொள்ள வேண்டுமென்று ஆன்மாக்கள் காவல் புரிகின்ற பெரிய கொல்லையாக ஆண்டவன் இந்தப் பூமியை அமைத்திருக்கிறான். தினையும் நெல்லும் மலைச்சாரலில் உள்ள நிலத்தில் அதிக உழைப்பு இல்லாத தினைப் பயிரையும் விளைவிக்கலாம். அருவியிலே வருகின்ற தண்ணீரைத் தேக்கிப் பாய்ச்சி நன்செய்ப் பயிரான நெல்லையும் விளைவிக்கலாம். ஆனால் குறமகளான வள்ளி சின்னத் தினையைக் காத்துக் கொண்டிருக்கிறாள். அந்தப் பெரிய வீட்டில் அறியாமை உடையவளான, பேதைப் பெண்ணான, வள்ளி எப்படி மிகவும் சின்னத் தினையைக் காத்துக் கொண்டிருக்கிறாளோ அதைப் போலவே இந்த அகன்ற உலகத்தில் அறியாமையை உடைய உயிர்கள் சிற்றின்பத்தையே அநுபவித்துக் காத்துக் கொண்டிருக்கின்றன. அந்த மலைச்சாரலில் உள்ள நிலத்தில் சக்தி உடையவர்கள், உழைப்பு உடையவர்கள், நன்செய்ப் பயிரான நெல்லைப் பாடுபட்டு உற்பத்தி செய்வது போல, இந்த விரிந்த உலகத்தில் அருட்செல்வர்கள் சிற்றின்பம் அல்லாத, எல்லையில்லாத, பேரின்பத்தைத் தம் உழைப்பினால் விளைத்து இன்பத்தை அடைவார்கள். பணக்காரர்கள் புசிப்பது நெல்; ஏழைகள் உண்பது தினை. அருட்செல்வர்கள் நுகர்வது பேரின்பம்; அருள் இல்லாத ஏழைகள் அநுபவிப்பது சிற்றின்பம். சிற்றின்பத்தைக் கிஞ்சித் போகம் என்றும், பேரின்பத்தை மகா போகம் என்றும் சொல்வார்கள். பேரின்பத்தை விளைவிக்கக் காரணமான நெல் இவ்வுலகத்தில்தான் விளைகின்றது, இவ்வுலகத்திலே, "யான்என தென்னும் செருக்கறுப்பான் வானோர்க்கு உயர்ந்த உலகம் புகும்" என்று வள்ளுவர் சொல்கிறார். செருக்கை அறுப்பதற்கு நிலைக் களமாக இருக்கும் இடம் இவ்வுலகம். உலகத்திற்கு வருகிறவர்கள் செருக்கைப் போக்கிக் கொள்ளலாம்; செருக்கைப் பெருக்கியும் கொள்ளலாம். ஆற்றுக்குப் போகிறவன் தன் உடம்பிலுள்ள அழுக்கை நீரிலே கழுவிக் கொள்ளலாம்; அங்கு இருக்கிற சேற்றை உடலிலே பூசிக் கொள்ளவும் கொள்ளலாம். அதைப்போல இந்த உலகத்திற்கு வருகிறவர்கள் தம் பொறிகளின் வழியே சென்று சிற்றின்பத்தையே தேடி அலைந்து அநுபவித்து அதைப் பிறர் அடையாமல் காவல் காக்கிறார்கள். ஆனால் சிலர் பொறிகளின் பிடிப்பிலிருந்து விடுபட்டுப் பேரின்பத்தை அடைவதற்கான வழி வகைகளைச் செய்து கொள்கிறார்கள். இதே இடத்தில் அவர்களோடு கூடவே வாழ்கின்ற மக்கள் பலர் 'பெரும்பைம் புனத்தினுட் சிற்றேனல் காக்கின்ற பேதைப்' பெண்ணைப் போல இருக்கிறார்கள். தினை சாப்பிடுபவர்கள் சிற்றின்பம் தேடி நிற்பவர்களைப் போன்றவர்கள்; நெல்லஞ்சோறு சாப்பிடுகிறவர்கள் பேரின்பம் நாடி நிற்பவர்களைப் போன்றவர்கள். இந்தக் கருத்தை வள்ளியம்மை வரலாற்றிலேயே காண்கிறோம். அது மட்டுமல்ல. இந்த நாட்டில் புத்தகத்தில் வராமல் இருக்கிற நாடோடிப் பாடலிலும் இந்தக் கருத்தைக் காணலாம். ஒரு பரதேசி பாடிக் கொண்டு போகிறான். தெருவிலே பிச்சை கேட்டுப் போகிற அவன், நமக்கு ஞான நூற் கருத்தைப் பிச்சையிட்டுக் கொண்டே போகிறான். "நேற்றுக் கொடுத்த பணம் - முருகா நெல்லுக்குச் செல்லவில்லை-அதை மாற்றித் தாருங்காணும் - திருத்தணி மலையில் வேலவனே" என்பது ஒரு பாட்டு. நாடோடிப் பாடல்களில் அந்த அந்த நாட்டின் வாசனை அடிக்கும். இறைவனோடு ஒட்டியிருக்கிற தத்துவ வாசனை நிரம்பிய நாடு இது; ஆதலால், அந்தப் பரதேசியின் பாடலிலும் தத்துவ வாசனை கமழ்கிறது. அந்தப் பாட்டைச் சற்று ஊடுருவிப் பார்க்கலாம். ரேஷன் காலம் என்று வைத்துக் கொள்ளுங்கள். ஒருவனுக்கு ரேஷன் அதிகாரி பர்மிட்' கொடுத்திருந்தார். அது காசைப் போலவே இருக்கிறது. அதை எடுத்துப் போய்க் கடையில் காட்டினான். அவனுக்குக் கடைக்காரன் தினை அளந்து போட்டான். அதை அவன் வீட்டுக்குக் கொணர்ந்து குத்திப் புடைத்துச் சோறாக்கித் தின்றான். ஒவ்வொரு தடவையும் கடைக்காரன் அவனுக்குத் தினைதான் கொடுத்தான். ஆனால் வேறு ஒருவனுக்கு நல்ல சம்பா அரிசியைக் கொடுத்தான். அதைக் கண்டு இவனுக்கும் சம்பா அரிசி சாப்பிட வேண்டுமென்று ஆசை உண்டாயிற்று. கடைக்காரனைப் பார்த்து, "எனக்கும் சம்பா நெல்லே போடு" என்றான். அதற்கு அவன், "இந்தக் காசில் தினை கொடுக்கும்படி எழுதியிருக்கிறது. காசை மாற்றி வா. உனக்கு நெல் கொடுக்கிறேன்" என்று சொன்னான். "அப்படியானால் அந்தக் காசை யார் கொடுப்பார்கள்?" என்று இவன் கேட்டான். "இந்தக் காசை உனக்கு யார் கொடுத்தாரோ, அவரே அந்தக் காசையும் கொடுப்பார்" என்று அவன் சொன்னான். இவன் ஒடோடியும் சென்று அந்த அதிகாரியிடம் கேட்கிறான். "நேற்றுக் கொடுத்த பணம்-முருகா நெல்லுக்குச் செல்லவில்லை - அதை மாற்றித் தாருங்காணும்" என்கிறான். இதன் கருத்து என்ன? "என்னுடைய மனத்தில் உள்ள தீமை போய்ச்சத்துவ குணம் வர வேண்டும். ராஜஸ்தமோ குண மனத்தினால் இன்பம் பெற முடியாது. இப்பொழுதுள்ள மனத்தைக் கொண்டு நல்ல அநுபவம் பெறுவதற்குரிய முயற்சி செய்ய முடியவில்லை. இதை நீ எடுத்துக் கொண்டு நல்ல மனம் தா என்பதையே அந்தப் பரதேசி பாட்டுச் சொல்கிறது. இந்தப் பாட்டில் வரும் நெல் என்பது திருவருட் போகம். உலகத்தில் மக்கள் எல்லாம் ஐம்பொறிகளின் வழியே இன்பத்தை நுகர்ந்து நடத்துகின்ற வாழ்க்கை, தினைச் சோற்றைப் போன்றது. அதை உண்ணும்போது அதைப் பறித்துக் கொள்ள யாராவது வந்துவிடப் போகிறார்களே என்று கல்லை எடுத்து அடித்துக் காவல் புரிகிறார்கள். எந்தப் பொருளினிடத்திலும் நமக்குப் பற்று உண்டானால் உடனே பகையும் வரும். எல்லாத் துன்பங்களுக்கும் மூல காரணமாக இருக்கிறது அவா. ஒரு பொருளினிடம் ஆசை பிறந்துவிட்டால், அந்தப் பொருளை இச்சிக்கிற பிறரிடம் வெறுப்பு வரும்; அதனால் கோபம் வரும்; கோபத்தினால் பகை உண்டாகும்; பகையினால் ஹிம்ஸை முளைக்கிறது; பல கொலைகள் நிகழ்கின்றன. இவை எல்லாவற்றுக்கும் மூல காரணமாக இருப்பது எது? அவா ஆசை. தனி மனிதன் ஆனாலும் பேரரசு ஆனாலும் தன் வாழ்வுக்கு மற்றொருவன் போட்டியாக வருகிறானே என்ற எண்ணமும் அதனால் பகையும் உண்டாவது இயல்பு. தினை காத்தல் தனக்கும், தனக்கு உரியவர்களுக்கும் உணவானது தினை என்பதனால் வள்ளிக்கு அதைக் காப்பாற்ற வேண்டுமென்ற ஆசை உண்டாயிற்று. ஆதலால் அவள் ஆலோலம் பாடிக் கொண்டு தினைக் கொல்லையைக் காவல் புரிகிறாள். அவள் பாட்டு நமக்கு இனிமையாக இருக்கிறது என்றாலும், கிளியும், குருவியும் அவள் பாட்டையா கேட்கின்றன? அவள் விடுகின்ற கல்லால் அடிபடுகின்றன; துன்புறுகின்றன. அவளைப் பேதை என்று சொல்ல ஒரு காரணம் உண்டு. உண்மையில் அவள் குறச் சாதியைச் சேர்ந்தவள் அல்ல. அவள் திருமாலினுடைய மகள்; முருகனுக்கு வாழ்க்கைப்பட வேண்டிய உரிமை உடையவள். அவள் குற மக்களுக்கு மத்தியிலே வந்து வளர்கிறாள்; தான் யார் என்பதை அறிந்துகொள்ளாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறாள்; தினைப்புனம் காத்துக் கொண்டிருக்கிறாள். ஆன்மா இறைவனோடு ஒட்டி வாழ வேண்டியது. ஆனால் அது உலகத்திலே பிறந்து, அறியாமையில் சிக்கி, பாசத்திற் கட்டுப்பட்டு, சிற்றேனல் காக்கின்ற பேதைப் பெண் வள்ளியைப் போல் சிற்றின்பத்துக்காக முயன்று அதை நுகர்ந்து கொண்டிருக்கிறது. சிறையில் அகப்பட்ட கைதி, அதனையே தன் வீடாகக் கருதிச் சிறையில் உள்ள மற்றக் கைதிகளோடு உறவு கொண்டாடி வாழ்ந்து வருவதைப் போல, இந்த உலகமாகிய சிறையில் அடைக்கப்பட்ட உயிர்கள் தம்மைப் போலவே இந்தச் சிறையாகிய உலகத்திற்கு வருகின்ற மற்ற உயிர்களோடு உறவு முறை கொண்டாடி வாழ்கின்றன. தம்முடைய சொந்த வீடு எது என்பதை உணராமல் இருக்கின்றன. தினைப் புனத்தில் வள்ளியெம்பெருமாட்டி வாழ்ந்த வாழ்க்கையைத்தான் ஆன்மாக்கள் இந்த உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. ஒடி வந்தான் வள்ளிக்கு வாழ்வளிக்க முருகன் எப்போது வந்தான்? அந்தக் குற மாது தங்களுடைய குல தெய்வமாகிய முருகனைக் கொஞ்சம் நினைத்தாள். நினைத்த மாத்திரத்திலே ஓடி வந்து விட்டான், அவளுக்கு வாழ்வு அளிக்க. வள்ளியாகிய ஆன்மா தன்னை நினைக்கவில்லையே என்று அவன் காத்துக் கொண்டிருக்கிறான். தன்னை மெல்ல நினைத்தாலும் உடனே வேகமாக ஓடி வந்து அருள் செய்கிறவன் முருகன். வரவேற்புப் பத்திரம் வாசித்தளித்தால் வருவேன், மாலை போட்டுப் போட்டோ எடுப்பதாயிருந்தால்தான் வருவேன் என்று அவன் பிகு பண்ணிக் கொள்ள மாட்டான். பருவம் அறிந்து ஓடி வந்து இன்பம் அளிப்பவன் அவன். வள்ளி அவனை அடைவதற்குரிய பருவத்தை அடைந்து விட்டாள். அவள் பருவம் அடைந்துவிட்டாள் என்பதைப் பாட்டில் வருகிற சொல்லே குறிக்கிறது. பேதை கொங்கை விரும்பும் குமரனை பருவம் வந்தவுடனே ஆண்டவன் ஒடி வந்தான். அவளிடம் தான் இன்பத்தை அடைய விரும்பி வந்தவனைப் போல ஒடி வந்தான். இதுதான் பெரியவர்களுடைய தன்மை. யாருக்காவது அவர்கள் உபகாரம் செய்ய நினைத்தால் ஏதாவது சிறு வேலையை அவர்களுக்குக் கொடுத்துவிட்டு, அந்த வேலைக்கு ஈடு செய்வது போலப் பன்மடங்கு உபகாரம் செய்வார்கள். முருகனும் அப்படியே செய்தான். வள்ளிக்கு வாழ்வு அளிக்க விரும்பினான். ஆனால் அவளிடம் இருந்து தான் இன்பம் அடைய விரும்புகிறவனைப் போல ஒடி வந்தான். தன்னைத் திருமணம் செய்து கொள்ளும்படியாக அவளிடம் கெஞ்சிக் கூத்தாடினான். அவனுக்கு மணம் ஆகவில்லையா? தேவர்களுக்கெல்லாம் அரசனான இந்திரனுடைய பெண் தேவயானையை ஐராவதம் சுமந்து வர, தேவர்கள் யாவரும் அந்த அழகான பெண்ணை மணந்து கொள்ள வேண்டுமென்று முருகப் பெருமானைக் கெஞ்சிக் கேட்டு மணம் செய்து கொடுத்தார்கள். அந்தப் பெருமாட்டியின் அழகு வாடவில்லை; அவள் கிழவியாகப் போய்விடவில்லை, இவன் இன்னொரு மனைவியை நாடி ஒட எந்தச் சமயத்திலும் முருகன் விரும்புகிறபடி குறிப்பறிந்து செய்ய அவள் காத்துக் கொண்டிருக்கிறாள். அவனோ குறச் சாதியில் பிறந்த ஒரு பெண்ணை மணந்து கொள்வதற்காக ஓடி வந்தான். அவ்வாறு வந்ததற்குக் காரணம் என்ன? அழைத்தால் வருவான் அவன் பேரருளாளன். தலையிலே சுமையை உடையவன் எங்கே சுமைதாங்கி, எங்கே சுமைதாங்கி என்று பார்க்க மாட்டானா? அதைப்போலத் தன்பாலுள்ள அருட்சுமையை வாங்கிக் கொள்வார் யார் என்று தேடி ஓடி வருகிறான். தன்னிடம் இருக்கும் அருளை வாங்கிக் கொள்ள ஆயத்தமாய் இருப்பவர்களுக்கு உடனே அருளுகிறான். அவனைக் கூப்பிடும் போதே ஓடிவரச் சித்தமாக இருக்கிறான். நாம்தாம் அவனைக் கூப்பிடுவதில்லை. "உன் கடவுள் எங்கே இருக்கிறான்?" என்று கேட்ட இரணியனுக்குப் பிரதலாதன், 'எங்கும் இருப்பான்' என்று சொன்னவுடனே, "இவன் எந்த இடத்திலும் இருப்பான்" என்று சொல்லி விட்டானே; "இரணியன் தட்டுகின்றது எந்த இடமாக இருந்தாலும் அந்த இடத்தில் இருந்து வெளிப்பட வேண்டுமே!" என்று எண்ணி நரசிங்கமூர்த்தி, "இரணியன் எங்கே தட்டுவான்? எங்கே தட்டுவான்?" என்று பார்த்துக் கொண்டிருந்தானாம். பிரகலாதன் வார்த்தையைக் காப்பாற்றும் பொருட்டு இரணியன் தட்டும் இடத்திலே எழுந்தருளினான் இறைவன். நாம் அன்பினால் தட்டினால் நம்மைக் காப்பாற்ற அவன் வருவான். நாம் தட்டுவது இல்லை; தட்டுவதாக நினைத்தால் போதாது; நடித்தால் போதாது. என் வீட்டுக்குப் பக்கத்து வீட்டில் தந்தி ஆபீசில் வேலை செய்யும் ஒருவர் இருக்கிறார். அவருடைய பிள்ளை தன் தகப்பனார் தந்தி அடிப்பதைப் பார்த்திருக்கிறான். அவரைப் போலவே அவனுக்கும் தந்தி அடிக்க வேண்டுமென்று ஆசை. அவர் தம் வீட்டில் பழகுவதற்காக ஒரு டம்மிக் கட்டையைக் கொண்டு வந்து வைத்திருக்கிறார். அந்தப் பிள்ளை அந்தக் கட்டையில், "கடகடகட்டுக்கட்டு" என்று தட்டுகிறான். "நானும் தந்தி அடிக்கிறேன்" என்று அவன் சொல்கிறான். அவன் அடிப்பதை யாராவது கேட்க முடியுமா? வேறு இடத்தில் இருப்பவர் அதைக் கேட்க முடியுமா? வேறு இடத்தில் அதைக் க.சொ.1-14 கேட்க வேண்டுமென்றால் இணைப்பு வேண்டும். நாமும் தட்டித் தான் ஆண்டவனைக் கூப்பிடுகிறோம் என்று சொன்னால், அது அவன் காதில் விழ வேண்டுமே. நம்முடைய தட்டுக்கு அவனோடு இணைப்பு தர வேண்டும். "நானும் ஐந்தரைக் கட்டையில் பாடி, ஜாலராத் தட்டி இறைவனைக் கூப்பிடு கிறேனே; அவன் வரக் காணோமே" என்று சொன்னால் பயன் இல்லை. மெள்ளக் கூப்பிட்டாலும் போதும்; இணைப்பை அமைத்துக் கொண்டு கூப்பிட வேண்டும். உண்மையாக உள்ளம் உருகி, இருதயத்தோடு இணைந்து கூப்பிட்டால் அவன் ஏன் வர மாட்டான்? நாம் தட்டுவது நம் நரம்பிலே போய் அடிக்க வில்லை; முருகா என்று போடும் சத்தம் பலமாக இருக்கிறதே தவிர, இருதயம் அதனோடு இணையவில்லையே! செடியில் பூத்திருக்கிற ரோஜா மலரைப் பறித்துச் சட்டையில் செருகிக் கொண்டால் செடியில் இருக்கும்போது இருந்த அழகு அப்போது இருக்குமா? இறைவனுடைய நாமத்தை நாக்காலே சொல்லிக் கொண்டிருந்தால் மட்டும் போதுமா? இது செடியில் இயற்கையாக இருக்கும் மலரைப் பறித்துச் சட்டையில் செருகிக் கொள்வது போன்றதுதான். நாம் சொல்வது நம் இருதயத்துக்குக் கூடக் கேட்பதில்லையே! அப்படி இருக்கும்போது ஆண்டவனுக்குக் கேட்கவில்லையே என்று சொல்ல நாம் யார்? இருதயத்தோடு இணைந்து, ஒன்றாகி, உள்ளுருகி அழைத்தால் அவன் காதில் விழாமலா போகும்? அப்படிச் சொல்கிற பக்திநிலை உண்டாகிவிட்டால், பக்குவம் வந்துவிட்டால், நமக்கு அருள் செய்வதற்கு அவன் ஓடி வருவான். அதில் சிறிதும் ஐயம் இல்லை. நாடக மேடையில் ஏறி ஒருவன், "அம்மா" என்று கூப்பிட்டால் அவனுடைய சொந்த அம்மாவா, "ஏன் கூப்பிட்டாய்?" என்று ஓடி வருவாள்? அம்மாவாக வேஷம் போட்டுக் கொண்டிருக்கிறவன்தான் வருவான். நாடகத்தில் நடிப்பதைப் போல நாம் முருகா என்று கூப்பிட்டால் முருகன் ஒடி வருவானா "நாடகத்தால் உன் அடியார் போல்நடித்து நான்நடுவே வீடகத்தே புகுந்திடுவான் மிகப்பெரிதும் விழைகின்றேன்" என்று மாண்க்கவாசகர் சொல்கிறார். ஆண்டவன் நமக்கு அருள் செய்யவில்லை என்று குற்றம் சொல்வதற்கு முன்னால், இருதயத்தோடு ஒட்டி, உள்ளுருகி இறைவனை அழைக்கக் கூடிய நிலை நமக்கு வர வேண்டும். அப்படிக் கூப்பிடும் வன்மை இருந்தால் ஆண்டவன் நமக்கு அருள் கொடுக்க ஓடி வரக் காத்திருக்கிறான். இதனை நமக்கு நிரூபிக்கிறாள் வள்ளியெம்பெருமாட்டி. அவள் குறத்தி வேஷத்தில் இருந்தாலும் எம்பெருமானுடைய நினைப்போடு இருந்தாள். முருகனையே நினைக்கிற சாதி அவள் பிறந்த சாதி. குறச்சாதியினர் என்ன செய்வார்கள் தெரியுமா? சங்க நூல் சொல்கிறது. நிலத்தில் தினைப் பயிர் விளைந்தால் விளைந்த பயிரின் முதல் கதிரை அறுத்துக்கொண்டு போய் இறைவன் திருக் கோயிலில் கட்டிவிட்டு வருவார்கள்; அல்லது ஆண்டவனுக்குப் படைப்பதற்காக அதனைத் தனியாகச் சேமித்து வைப்பார்கள். எந்தப் புதிய பொருளையும் முருகனுக்கே உரிமையாக்குவது அவர்கள் வழககம். "கடியுண் கடவுள்" என்று குறுந்தொகையில் ஒரு பாட்டு கூறுகிறது. முதல் முதலாக விளைவது ஆண்டவனுக்கு உரியது. புதிதாக விளைந்ததை உண்ணும் கடவுள் முருகன். எல்லா வகையிலும் முருகனையே நினைந்து வாழ்கின்ற குறச்சாதி மக்களுக்கிடையே வாழ்ந்த வள்ளி முருகனை நினைத்தாள். அவளிடம், தான் இன்பம் நுகர வந்தவனைப்போல முருகன் ஓடி வந்தான். அவள் அவனிடம் போகவில்லை. கருணை மலிவு காய்கறிக் கடைக்குப் போய் நாம் கத்தரிக்காய் வாங்கி வருகிறோம். சில சமயங்களில் சரக்கு மலிந்து போனால் காய் கறிக்காரி வீட்டு வாசலிலேயே காயைக் கொண்டு வந்து விற்கிறாள். அதனை வாங்கிச் சமைத்து உண்கிறோம். சரக்கை விற்று லாபம் பெறக் கருதி வந்தவளைப் போல அவள் வந்தாலும், அதனால் நன்மை அடைகிறவர் யார்? அதனை வாங்கிச் சுவைத்து உண்பவர்களாகிய நாம் அல்லவா? அதனைப் போல, அருள் மலிந்திருக்கிற முருகப்பெருமான், தன்பாலுள்ள அருளைக் கொடுக்க வள்ளியெம்பெருமாட்டி வாழ்ந்த தினைப் புனம் தேடி வருகிறான். "அம்மா உன் கை நல்ல கை. நீ முதலில் கை வைத்தால் என் சரக்கு எல்லாம் நிமிஷத்தில் போணியாகி விடும்" என்று காய் விற்பவள் சொல்வதைப் போல, அவன் வள்ளியெம்பெருமாட்டியிடம் ஒடி வந்து கெஞ்சுகிறான். தனக்குரிய லாபத்தைத் தேடி வருபவனைப்போல வருகிறான். 'பெரும் பைம்புனத்தினுட் சிற்றேனல் காக்கின்ற பேதை கொங்கை விரும்பி' வருகிறான். அவளை ஆட்கொள்வதற்காகவே அவன் வருகிறான். 3 மெல்ல மெல்ல உள்ளுதல் அடுத்த இரண்டடிகளில் அருணகிரியார், உயிருக்கு அவன் எப்படி வாழ்வு அளிக்கிறான் என்று சொல்கிறார். மெய்யன்பினால் மெல்ல மெல்ல உள்ள அரும்புந் தனிப்பர மானந்தம் தித்தித் தறிந்தஅன்றே 'சிற்றேனல் காக்கின்ற பேதை கொங்கை விரும்புங் குமரனை' மெல்ல மெல்ல உள்ள வேண்டும்; மெதுவாக, மெதுவாக நினைக்க வேண்டும்; தியானம் செய்ய வேண்டும். கடுங்கோடைக் காலத்தில் நாக்கு வறள, நெடுந்துாரம் பிரயாணம் செய்து களைப்படைந்து வருகின்ற ஒருவனுக்கு நீர் கொடுத்தால் அவன் அதைச் சிறிதாகவே பருகுவான். மடக்கென்று வேகமாகக் குடித்தால் தொண்டை விக்கிக் கொள்ளும். நீண்ட நாள் நோயிலே அடிப்பட்டவனுக்கு நோய் தெளிந்தவுடன் உணவைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கொடுங்கள் என்று டாக்டர் சொல்வார். பல பல காலமாக இறப்பு, பிறப்பு ஆகிய பிணிகளிலே வேதனைப்பட்டுக் காய்ந்து கருகிப் போய் இருக்கின்ற ஆன்மாக்களுக்கு இறைவனது அருள் தண்ணிரைப் பாய்ச்ச வேண்டுமென்றால் கொஞ்சம் கொஞ்சமாகத்தான் பாய்ச்ச முடியும். ஆறு நிறைய வெள்ளம் போகிறதே என்று அந்த ஆற்றுக்கு அருகில் உள்ள வயலுக்குத் தண்ணீர் பாய்ச்ச ஆற்றின் கரையையே உடைத்துவிட முடியுமா? ஆற்றிலே வெள்ளம் போனாலும் மடை வழியேதான் பாய்ச்ச வேண்டும். அது மாத்திரம் அல்ல. இறைவனது தியானம் எளிதில் மனிதனுக்குக் கிட்டாது. பழக்கத்தால் பல படிகளை ஒவ்வொன்றாகக் கடந்தால்தான் முன்னேற முடியும். மாடி ஏறும்போது ஒவ்வொரு படியாகக் காலைத் தூக்கி வைத்துக் கொண்டுதான் ஏறுகிறோம். இருநூறு வார்த்தைகளை ஒரு குழந்தை ஒரே நாளில் கற்றுக் கொண்டுவிட முடியுமா? ஒவ்வொரு வார்த்தையாகத்தான் அது கற்றுக் கொள்ளும். வாயிலே போட்ட கவளத்தை நன்றாக மென்று உள்ளே செலுத்திய பிற்பாடுதான் மற்றொரு கவளத்தை எடுத்துப் போட்டுக் கொள்கிறோம். அந்த வகையில் இறைவனது தத்துவத்தைத் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் மெல்ல மெல்ல உள்ள வேண்டும். மெல்ல மெல்ல என்பது தாமச குணத்தைச் சொல்லவில்லை. அமைதியாகத் தியானம் பண்ண வேண்டும். நாம் ஒவ்வொரு தடவையும் அவன் திருநாமத்தை உச்சரிக்கும்போது அது நமது உள்ளத்திலே பதியும்படியாகத் தியானிக்க வேண்டும். அப்படித் தியானித்தால் இன்பம் உண்டாகும். அவனை இருதயம் ஒன்றி மெல்ல மெல்ல உள்ளினால்தான் ஆனந்தம் அரும்பும்; பரமானந்தம் அரும்பும்; தனிப் பரமானந்தம் அரும்பும்; நாம் சுகமென்று சொல்லும் நுகர்ச்சிக்கு அப்பாற்பட்ட மிக உயர்ந்த இன்பம் அந்தத் தனிப் பரமானந்தம். தனி என்பது ஒப்பற்றது என்பதைக் குறிப்பது. தனக்குச் சமானம் இல்லாத, மேல் ஒன்றும் இல்லாத, மிக உயர்ந்த ஆனந்தம் அது. அது இறைவனை மெல்ல மெல்ல உள்ளுவதனால் அரும்பும். ஆனந்தம் அரும்புதல் நன்றாகப் பசி உடைய ஒருவனுக்கு உணவைப் படைத்தால் ஒரு பிடி சாப்பிட்டவுடனேயே அவன் பசி தீர்ந்துவிடாது. ஓர் அளவுக்கு பசி தீரலாம். அதைப் போல இறைவன் நாமத்தை ஒரு முறை சொன்னால் அந்த அளவுக்குப் பயன் உண்டு. மெல்ல மெல்லத் தியானிக்க ஆரம்பித்தால் ஆனந்தம் உண்டாகிறது. மேலும் விடாமல் சொன்னால் பரமானந்தம் உண்டாகிறது. சொல்லிக் கொண்டேயிருந்தால் தனிப் பமானந்தம் அரும்புகிறது. சொல்லிக்கொண்டே இருக்கும் ஒரு நிலையை எய்திய பின்தான் அந்த இன்பம் உண்டாகும் என்பது அல்ல. ஒரு பிடி கவளம் சாப்பிட்டவனுக்கே அதன் இன்பம் உண்டென்றால் ஒரு முறை இறைவனது நாமத்தை மனம் கலந்து தினமும் சொல்கிறவனுக்கு அதனால் பயன் உண்டாகாமலா போகும்? பெரியவர்கள், "நான் ஆனந்தம் அடைந்தேன்" என்று எடுத்துச் சொல்லும்போது, அவர்களுடைய உள்ளத்தில் ஆனந்தத்தின் ஒரு துளி அரும்பியிருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளலாம். ஆனந்த வெள்ளத்தில் மூழ்கினால் பேச வராது. பரமானந்தம் அரும்பும் நிலை ஆரம்ப நிலை. ஆனந்த வெள்ளத்தில் மூழ்கும் நிலை வேறு. இறைவனது நாமத்தை மெல்ல மெல்ல உள்ள உள்ளப் படிப்படியாக இன்பம் உண்டாகும். இந்த உலக இயலில் உழைக்கின்ற உழைப்பின் அளவுக்குப் பயன் கிடைக்கிறது என்றால், அருள் நெறியில் உழைத்த உழைப்புக்குப் பயன் இல்லை என்று சொல்பவர் யார்? தியானம் உண்மையாக இருந்தால் உண்மையாக இன்பம் அரும்புவதைக் காணலாம். தொழிலாளி உழைக்கின்ற உழைப்புக்கு அதிகமாகவே ஊதியம் கேட்கிறான். அதனை முதலாளி கொடுக்க மறுக்கிறான். அதனால் குழப்பம் உண்டாகிறது. முதலாளியோ தான் கொடுக்கிற ஊதியத்திற்கு அதிகமாகவே தொழிலாளிகளிடமிருந்து வேலை வாங்க நினைக்கிறான். அதனைத் தொழிலாளி செய்ய மறுக்கிறான். அதனால் குழப்பம் உண்டாகிறது. ஆண்டவன் பெருங்கருணையாளன். அவன் நாம் எவ்வளவுக்கு உழைக்கிறோமோ அதனைவிடப் பன்மடங்கு அருளைத் தருவான். மெல்ல மெல்ல ஆண்டவனைத் தியானிப்பதன் மூலம் தம் உள்ளத்தில் அரும்பிய ஆனந்தத்தைச் சுவைத்துக் காந்தியடிகள் பேசினார். இன்னும் பலர் தாம் பெற்ற ஆனந்தத்தைப் பற்றிச் சொல்லியிருக்கிறார்கள். அவை யாவும் பொய்யா? உலகியலில் ஈடுபட்டிருந்த நமக்கு, உடம்புக்கும் அப்பாற்பட்ட ஆனந்தத்தைச் சுவைத்து, பொறிகள் எல்லாம் அடங்கிச் சமாதி நிலையை அடைவது முடியாமல் இருக்கலாம். ஆனால் சின்னச் சின்னத் துளியாக அரும்புகின்ற ஆனந்தத்தை அநுபவிக்கலாம். அது அரிது அல்ல. வள்ளிமணாளனை மெய்யன்பினாலே மெல்ல மெல்ல தியானித்தால், அந்த உழைப்புக்கு ஏற்ற ஆனந்தம் அரும்பும். நம் கண் எதிரே வாழ்ந்த ரமண மகிரிஷியைப் பார்த்தோமே. அவர் சின்னப் பிராயத்திலே குறும்புகள் புரிந்த குழந்தையாக இருந்தார். பின்பு இறைவன் திருவருளில் ஈடுபட்டு, அடைந்த இன்ப நிலையையும் கண்டோம். எத்தகைய முரடர்களாக இருந்தாலும் ஆண்டவனை மெல்ல மெல்லத் தியானம் செய்ய ஆரம்பித்தார்களானால், அவர்களுடைய மனத்திலே அமைதி பிறக்கும்; இன்ப நலங்களைப் பெற்று, தனிப் பரமானந்தத்தைச் சுவைக்கத் தொடங்குவார்கள். அதன்பின் அவர்களுடைய போக்கே மாறிவிடும். புளிக்கும் மாங்காய் மரத்திலே இருக்கிறது. பச்சைப் பசேல் என்று இருக்கும் அந்த மாங்காயைப் பறித்தால் கண்ணிர் விடுவது போலப் பால் வடிகிறது. அது பழுத்துவிட்டால் என்ன ஆகிறது? அதன் பச்சை நிறம் பொன்னிறமாகிறது. கடினமாய் இருந்தது போய் நெகிழ்ச்சி பெறுகிறது. அதன் புளிப்பு மாறி இனிப்பாகிறது. நன்றாகப் பழுத்துவிட்டால் யாரும் பறிக்காமல் தானாகவே மரத்திலிருந்து நழுவிவிடுகிறது. அந்த நிலை எப்படி வருகிறது? கொஞ்சம் கொஞ்சமாக வருகிறது. நாமும் ஆண்டவன் பாதத்தை நினைந்து அவனைத் தியானம் பண்ணப் பண்ண, அந்தத் தியானம் உள்ளத்தில் ஏற ஏற உள்ளத்தில் ஆனந்தம் அரும்பும். இது இவ்வுலக வாழ்வில் உண்மையில் நடக்கக் கூடியதே அன்றிக் கற்பனை அன்று. இறைவனை மெய் அன்பினால் மெல்ல மெல்ல உள்ள ஆரம்பித்தால், தியானிக்கத் தொடங்கினால், வன்மையாகப் பேசுகிற தன்மை மாறிவிடும். அப்புறம் அவர்களுக்குக் கடுமையாகப் பேச வராது. உலகம் முழுவதிலும் வாழும் மக்களைச் சகோதரர்களாகவே பார்க்கும் நிலை வந்துவிடும். இத்தகைய மனப்பக்குவம் வந்துவிட்டால், வள்ளியெம்பெருமாட்டியை முருகன் தேடி வந்தது போல, நமக்கும் அருள் இன்பம் கொடுக்க அவன் ஓடி வருவான். தன்னை நாடி இன்பம் நுகர்வானைப்போல ஒடி வந்த முருகனை வள்ளி அணைக்கவில்லை. முதுகு கூனி குறுகிப் போன கிழவனாக வந்தான். நாடகம் ஆடினான். அவள் அவனை லட்சியம் செய்யவில்லை. யானை வந்து அவளைப் பற்றி இழுக்கப் போனபோது, "ஆவிக்கு மோசம் வரும்" என்று தெரிந்து கொண்டபோது, "என்னைக் காப்பாற்ற உன்னைத் தவிர வேறு யாரும் இல்லை; உன் பற்றன்றி எனக்கு வேறு ஒரு பற்றும் இல்லை" என்று அவனைப் போய்த் தழுவிக் கொண்டாள். இறைவன் அவளை ஆட்கொண்டான். அவளுக்கு எல்லையில்லா ஆனந்தத்தைக் கொடுத்தான். அத்தகைய ஆனந்தம் கனவில் காண்பது அல்ல; புத்தகத்தில் எழுதியிருக்கிறது மாத்திரம் அல்ல; இந்த உலகத்தில் நமக்குப் பயன்படாதது அல்ல; மனிதப் பிறவிக்கு அப்பாற்பட்டதும் அல்ல; அரும்பும் தனிப்பரமானந்தத்தை இந்தப் பிறவியிலேயே நமக்குச் சொந்தமாக்கிக் கொள்ளலாம். கரும்பும் தேனும் சிற்றேனல் காக்கின்ற பேதைகொங்கை விரும்பும் குமரனை மெய்யன்பி னால்மெல்ல மெல்லஉள்ள அரும்பும் தனிப்பர மானந்தம் தித்தித்து அறிந்த அன்றே கரும்பும் துவர்த்துச்செந் தேனும் புளித்துஅறக் கைத்ததுவே. நம்மிடம் உள்ள பொறிகள் எல்லாவற்றையும்விட நாக்குத் தான் அதிக ஆதிக்கம் செலுத்துகிறது. நாக்காகிய பொறிக்கு நாம் அடிமைப்பட்டிருக்கிறோம். நல்ல இனிமையான சங்கீதத்தைக் கேட்டு அநுபவிக்கின்றோம். அதைச் சொல்லும்போது, அவர் பாடிய பாடல் தேன் மாதிரி இருக்கிறது என்று சொல்கிறோம். நமது அன்பிற்குரிய குழந்தையைப் பார்த்துக் கட்டிக் கரும்பே என்று பாராட்டுகிறோம். இப்படி, எந்தப் பொறியினால் இன்பம் அடையக் கூடிய பொருளாயினும் அதற்கு நாக்காகிற பொறியினால் இன்புறும் பொருளை உபமானமாகச் சொல்கிறோம். நம் வாழ்வில் நாக்கு எல்லாப் பொறிகளையும்விட அதிகம் ஆதிக்கம் செலுத்துகிறதுதான் அதற்குக் காரணம். குழந்தை பிறந்த உடனேயே பாலைச் சுவைத்துக் குடிக்கின்றது. பிறக்கும்பொழுது அது நாக்குக்கு அடிமையாகிவிடுகிறது. கடைசியில் இறக்கும்பொழுது என்ன ஆகிறது? 'காது கேட்கவில்லை; கண்மூடிப் போய்விட்டது. வாயும் கிட்டி விட்டது. பஞ்சால் பாலைத் தோய்த்துத் தோய்த்து விட்டுக் கொண்டிருக் கிறார்கள். இப்பொழுதோ, இன்னும் சற்று நேரத்திலோ போய் விடும்" என்று சொல்கிறார்கள். பாலிலே ஆரம்பித்த வாழ்க்கை, பாலிலேயே முடிகிறது. இறக்கும் அளவும் அவனை அடிமையாக்கி வைத்திருப்பது நாக்காகிய பொறி ஒன்றுதான். நாக்கின் சுவைக்கு நாம் அடிமைப்பட்டிருப்பதாலேயே, மற்றப் பொறிகளால் நுகரும் இன்பத்தைத் தரும் பொருள்களையும் தேன் என்றும், பால் என்றும், கரும்பு என்றும் சொல்கிறோம். அருணகிரியார், "சிற்றேனல் காக்கின்ற பேதை கொங்கை விரும்பும் குமரனை மெய்யன்பினாலே மெல்ல மெல்ல உள்ளுவ தனால் அரும்புகின்ற தனிப் பரமானந்தத்தைச் சுவைத்தவர்களுக்குக் கரும்பும் துவர்த்துப் போகும்; செந்தேனும் புளித்துப் போய்ப் பிறகு கசந்தே போகும்" என்கிறார். கரும்பையும், தேனையும் சுவைப்பது நாக்கு. துவர்த்துப் போன கரும்பை நாக்கு விரும்புமா? புளித்துப் போன தேனை விரும்புமா? விரும்பாது, கரும்பும் தேனும் நாக்கினால் அடைகின்ற இன்பத்தைக் குறிப்பதானாலும் பொறிகளினால் அடைகின்ற இன்பம் அனைத்துக்கும் இவை இரண்டும் அடையாளம். முருகனைத் தியானித்து வரும் ஆனந்தத்தைச் சுவைத்த பிறகு உலக இன்பம் அனைத்தும் சுவையற்றனவாகிவிட்டன; வெறுப்பை அளிப்பவை ஆகிவிட்டனவாம். ஒரு விருந்து சாப்பிடப் போகிறோம். ஜிலேபி போடுகிறார்கள். அதை உண்ணுகிறோம். அதற்குப் பிறகு சேமியா பாயசம் கொண்டு வருகிறார்கள். அதனை வேண்டாம் வேண்டாம் எனச் சொல்கிறோம். சேமியா பாயசம் இனிப்புடையது அல்ல என்பதாலா? இல்லை, இல்லை. மிக இனிப்பான ஒன்றை முதலிலே சாப்பிட்ட பிறகு, சாதாரண இனிப்புடைய மற்றொன்றைக் கொடுத்தால் அது சுவைப்பது இல்லை. எல்லோரும் காபியை விரும்பிச் சாப்பிடுகிறார்கள். ஆனால் பாதாம் ஹல்வா சாப்பிட்ட பிறகு காபியைச் சாப்பிட்டால் அது கசக்கிறது. தினமும் சாப்பிடுகிற சாப்பாட்டிலேயே ஒன்று மிக இனிப்பதானால், மற்றொன்று சுவை இழந்து விடும்போது, பேரின்பத்தைத் தித்தித்து அறிந்த பிறகு, சிற்றின்பத்திலே சுவை எப்படி இருக்கும்? "கரும்பும் துவர்த்துச் செந்தேனும் புளித்து அறக் கைத்ததுவே" என்பது உண்மை அநுபவம். கரும்பும் தேனும் ஐந்து பொறிகளினாலும் அடைகின்ற இன்பங்களுக்கு அடையாளமாக இருக்கின்றன. கரும்பு ஒருவனுடைய முயற்சியினாலே விளைந்து, அவனுக்கு இன்பத்தைக் கொடுக்கின்ற பொருள். தேன் ஒருவனுடைய முயற்சி இல்லாமலேயே விளைந்து அவனுக்கு இன்பத்தைத் தருகின்ற பொருள். மனிதனுடைய இன்பங்கள் இரண்டு வகை. தன்னுடைய முயற்சியினாலே பெறுகின்ற இன்பம் ஒருவகை; முயற்சி இல்லாமலேயே பண்டைத் தவத்தின் பயனாக அடையும் இன்பம் ஒரு வகை. கரும்பும் தேனும் அந்த இரண்டையும் குறிக்கின்றன. அரும்பும் தனிப்பரமானந்தத்தின் ஒரு துளியைச் சுவைத்தாலும் போதும்; பிறகு கரும்பும் துவர்த்துப் போய்விடும்; செந்தேனும் புளித்து, அறவே கைத்துப் போய்விடும். ஐந்து இந்திரியங்களினாலே அநுபவிக்கின்ற இன்பம் யாவும் நமக்குத் துவர்த்துப் போய்விடும்; புளித்துப் போய்விடும்; கைத்துப் போய்விடும் என்பது இதன் குறிப்பு. தினைப்புனம் காத்துக் கொண்டிருந்த பேதைப் பெண்ணாகிய வள்ளியைப் போல, ஆன்மாக்கள் இந்த அகன்ற உலகமாகிற வனத்தில், சிற்றேனல் போன்ற சிற்றின்பத்தைக் காத்துக் கொண்டிருக்கின்றன. தினைப் புனத்தில் சிற்றேனல் காப்பதையே தன் தொழிலாக எண்ணியிருந்தாள் வள்ளியம்மை. ஆனால் இறைவனை அடைந்த மாத்திரத்தில் அவள் இந்த நிலைக்கு மீட்டும் வராத பேரின்ப நிலையை எய்திவிட்டாள். நாமும் அவன் அருட்பேற்றை அடைந்தால், இந்த உலகத்தில் மீட்டும் வந்து பிறவா நிலையை அடைந்து விட முடியும். முன்னும் பின்னும் சமய நெறியிலே சாதனம் புரிகின்றவர்களைப் பார்த்தால் பலருக்கு அவர்கள் செயல் பைத்தியக்காரத்தனம் என்று தோன்றும். ஏழு வயசுப் பெண் குழந்தை இருக்கிறாள். அவளை மணப்பதற்குரிய உரிமை பெற்ற அத்தான் அவள் வீட்டில் இருக்கிறான். அவனுக்கு வயசு பதினாறு. ஒரு நாள் அவன் தன் மாமன் மகளை அணைத்துக் கொள்கிறான். அவளோ அவன் பிடியில் இருந்து ஓடிவிடுகிறாள். அவளுக்கு அவனுடைய முகத்திலுள்ள மீசை குத்துவது அருவருப்பை அளிக்கிறது. இந்தப் பெண் பருவம் அடைந்தவுடனே, அவனே அவளை மணந்து கொள்கிறான். அவளுக்கு இன்பம் கொடுக்கிறான். அப்போது அந்தப் பெண் நினைக்கிறாள். "அடடா நமக்கு இந்த இன்பம் தெரியாமல் போய்விட்டதே! அவர் கைகளைப் பிடித்து உதறி எறிந்தோமே; அது எவ்வளவு பைத்தியக்காரத்தனம்" என்று நினைக்கிறாள். "கன்னிகை ஒருத்திசிற் றின்பம்வேம் பென்னினும் கைக்கொள்வள் பக்குவத்தில்; கணவனருள் பெறின்முனே சொன்னவாறென்னெனக் கருதிநகை யாவள்;அதுபோல் சொன்னபடி கேட்குமிப் பேதைக்கு நின்கருணை தோன்றிற் சுகாரம்பமாம்" என்று பாடுகிறார் தாயுமானவர். நம் உள்ளங்களில் இன்றைக்குக் கன்னியாகிய பேதைப் பெண்ணைப் போல ஆண்டவனைத் தியானிப்பதனால் இன்பம் உண்டாகவில்லை. நாம் மெய்யன்பினால் உள்ளுவதில்லை. நாம் இன்னும் பக்குவம் அடையவில்லை. பக்குவம் நமக்கு வந்து விட்டால் அவனைத் தியானம் செய்யும்போது ஆனந்தம் நமது உள்ளத்தில் அரும்பும். அதைச் சுவைத்த பிறகு, "அடடா, இந்த இன்பம் தெரியாமல் இத்தனை நாளாக இருந்தோமே உலகத்திலுள்ள பொருள்களை எல்லாம் பொறிகளின் வாயிலாகச் சுவைப்பதுதான் இன்பம் என்று எண்ணி ஏமாந்து போய்விட்டோமே! இது என்ன பைத்தியக்காரத்தனம்?" என்று தோன்றும். மற்ற இன்பங்கள் சுவையின்றிப் போய்விடும். உலகியலின்பங்களை விட்டுவிட நமக்கு மனம் வராது. நம்முடைய அநுபவத்தில் பொறிகளால் நுகரும் இன்பமே இன்பமாக இருக்கிறது. வேறு இன்பம் இருப்பதாகச் சொன்னாலும் அதை நம்ப முடிவதில்லை. அதனால் இந்த இன்பங்களை இறுகப் பற்றிக் கொண்டிருக்கிறோம். இந்த இன்ப நுகர்ச்சியை அடியோடு விட்ட பிறகே இறைவனுடைய இன்ப அநுபவம் சித்திக்கும் என்று சொல்வது முறை அன்று. இந்த இன்பத்தில் இருக்கும்போது மெல்ல மெல்லத் தியானிக்கத் தொடங்கினால் அருளின்பம் அரும்பத் தொடங்கும். இந்த இன்பம் புளிக்கத் தொடங்கும். நிரம்ப விலை கொடுத்து ஒருவன் கண்ணாடிப் படம் ஒன்றை வாங்கி வருகிறான். அதைக் கீழே வைக்காமல் பற்றிக் கொண்டிருக்கிறான். அவனிடமுள்ள அதை அப்போது பறிப்பதென்பது முடியாத காரியம். ஆனால் அவனுக்குத் தூக்க மருந்தைக் கொடுத்துவிட்டால், அதன் வேகம் ஏற, ஏற அவன் கையிலுள்ள பொருள் தானே நழுவி விழுந்துவிடும். அப்படி நழுவுவதற்குக் காரணம் தூக்கம். அது அவனிடம் மெல்ல மெல்லச் சென்று பற்றிக் கொண்டது. இறைவனை மெய்யன்பினால் மெல்ல மெல்லத் தியானிப்பதனால் பரமானந்தம் என்னும் தூக்கம் படர்கிறது. அப்போது அது காறும் இனிமையாக இருந்தன யாவும் தாமே நழுவி விடுகின்றன. வள்ளியெம்பெருமாட்டியின் வாழ்வை நமக்கு வழிகாட்டியாக வைத்து, இந்தத் தத்துவத்தை அருணகிரியார் இந்தப் பாட்டிலே சொல்கிறார். பெரும்பைம் புனத்தினுட் சிற்றேனல் காக்கின்ற பேதைகொங்கை விரும்பும் குமரனை மெய்யன்பி னால்மெல்ல மெல்லஉள்ள அரும்பும் தனிப்பர மானந்தம் தித்தித் தறிந்தஅன்றே கரும்பும் துவர்த்துச்செந் தேனும் புளித்தறக் கைத்ததுவே; (பெரிய பச்சையான கொல்லையில் சிறிய தினைப் பயிரைக் காக்கின்ற பேதைப் பெண்ணாகிய வள்ளியின் கொங்கையை விரும்பும் குமரக் கடவுளை, மெய்யான அன்பினால் மெல்ல மெல்லத் தியானிக்க, அதனால் அரும்பும் ஒப்பற்ற மேலான இன்பம் இனிமை தரச் சுவைத்து அறிந்த அன்றைக்கே, அதுகாறும் சுவையுடையதாக இருந்த கரும்பும் துவர்ப் புடையதாகி, செந்தேனும் புளித்து முற்றும் கசந்துவிட்டது. புனம் - தினைக்கொல்லை. ஏனல் - தினைப்பயிர் உள்ள - நினைக்க. அற - முழுவதும்; அடியோடு. கைத்தது - கசந்தது.) பேய் விளையாட்டு 1 தம்முடைய அநுபவத்தை, "இறைவன் திருவருளால் அவனை மெய்யன்புடன் மெல்ல மெல்ல உள்ளினேன். அதனால் தனிப் பரமானந்தம் அரும்பியது. அதன்பின் உலக இன்பங்கள் வெறுத்துப் போயின" என்று அருணகிரியார் சொன்னார். அப்போது அவர் இறைவனுக்கு அருகில் நின்று பெருமிதத்தோடு பேசினார். அவர் கருணை உடையவராதலினால், அப்படியே இருப்பதில்லை. நம் நிலையிலிருந்து இறைவனுடைய அணிமையை அடைந்தவர் அவர். நம் துன்பநிலை அவருக்கு நன்றாகத் தெரியும். மேலே இருந்தபடி நம்மை பார்க்கிறார். 'இவர்களை மறக்கக் கூடாது' என்ற அருள் உள்ளத்தால் மறுபடியும் நம்மிடம் ஓடி வருகிறார். நம்மோடு ஒருவராக நின்று முருகனிடம் விண்ணப்பம் செய்து கொள்கிறார். நமக்காகவே அப்படிச் செய்கிறார். தாம் ஏதோ மயக்கம் அடைந்தது போலவும், அதைப் போக்கி அருள் செய்ய வேண்டும் என்பதற்காகவும் அவர் பாடுகிறார். சளத்தில் பிணிபட்டு அசட்டுக் கிரியைக்குள் தவிக்கும்என்றன் உளத்திற் ப்ரமத்தைத் தவிர்ப்பாய்; அவுணர் உரத்துதிரக் குளத்திற் குதித்துக் குளித்துக் களித்துக் குடித்துவெற்றிக் களத்தில் செருக்கிக் கழுதாட வேல்தொட்ட காவலனே. மயக்கம் “என் உள்ளத்தில் உள்ள ப்ரமத்தைத் தவிர்க்க வேண்டும்" என்பது அவர் வேண்டுகோள். ப்ரமம் என்பது மயக்கம். "அமரும் பதிகேள் அகமாம் எனும்இப் பிமரம் கெடமெய்ப் பொருள்பே சியவா" என்று கந்தர் அநுபூதியிலும் இந்தப் பிரமத்தைச் சொல்கிறார். பிமரம் என்று எழுத்து மாற்றி அங்கே சொல்லியிருக்கிறார். மயக்கம் என்று எதைச் சொல்கிறார்? தெளிவு இல்லாமல் இருப்பதே மயக்கம். தெளிவு என்பது இன்ன பொருள் இத்தகையது என்று உணர்ந்துகொள்ளும் மனநிலை. நாம் தெளிவுடன் இருக்கிறோமா? உண்ணும் உணவைச் சரியானபடி உண்ணுகிறோம். ரூபாய் அணா பைசாவைச் சரியானபடி எண்ணுகிறோம்; நம்முடைய உறவினர்களையும் நண்பர்களையும் சரியானபடி தெரிந்து கொள்கிறோம்; காதினால் கேட்கும் வார்த்தைகளுக்குச் சரியானபடி பொருள் செய்து கொள்கிறோம். ஆகையால் தெளிவான நிலையில்தான் இருக்கிறோம். என்று நினைக்கத் தோன்றும். ஆனால் அந்த எண்ணம் உண்மை அன்று. நாம் காணுகிற அனைத்தும் உண்மை அல்ல. வெவ்வெறு வகையான பொருள்களை நாம் காண்கிறோம். விருப்பு வெறுப்புடன் பார்க்கிறோம். நான் என்ற நினைவு நீங்காமல் இருக்க, அந்த நினைவோடு பார்க்கிறோம். அந்த அந்தப் பொருளை அதன் அதன் இடத்திலேயே வைத்துப் பார்க்காமல் நம்மோடு ஒட்டிப் பார்க்கிறோம். நம் பார்வையும் கருத்தும் நம்மிடத்திலிருந்தே தொடங்குகின்றன. ஆதலால் பொருள்களின் இயல்பை உள்ளவாறே தெரிந்து கொள்ள முடியவில்லை. பல நூல்களைப் படித்தும் நமக்கு முழுத் தெளிவு ஏற்பட்டதாகச் சொல்ல இயலாது. இறந்த பிறகு உயிர் என்ன ஆகிறது? நமக்குத் தெளிவாகத் தெரியாது. நமக்கும் இறைவனுக்கும் என்ன தொடர்பு? உடம்புக்குள் உயிர் ஏன் வந்தது? இனி எத்தனை எத்தனை உடம்புக்குள் புகப் போகிறது? ஏன் இந்த நிலை வர வேண்டும்? - ஒன்றும் நமக்குத் தெளிவாகத் தெரியாது. நம்முடைய உள்ளத்தில் என்ன என்ன எண்ணங்கள் பதுங்கியிருக்கின்றன. நம்முடன் பழகுகிறவர்கள் நம்மைப் பற்றி என்ன நினைக்கிறார்கள்? - ஒன்றும் நமக்குத் தெளிவாகத் தெரியாது. இந்தத் தெளிவற்ற நிலையில் நாம் காண்கிற பொருள்கள் பலவாக இருக்கின்றன: மெய்யாகத் தோன்றுகின்றன. ஆனால் உண்மையான பொருள் இன்னதென்று தெரியாமல் திண்டாடுகிறோம். பெரியவர்கள் இறைவனை மெய்ப்பொருள் என்றும் பரம்பொருள் என்றும் சொல்கிறார்கள். அதை நாம் கேட்கிறோம்; ஆனால் அதை அநுபவத்தில் உணர முடிவதில்லை. பெரியவர்கள் சொல்கிறார்கள் என்பதற்காக மறுத்துப் பேசாமல் இருக்கிறோம். நமக்கு எல்லாமே பொருளாக இருக்கின்றன. சோறு ஒரு பொருள்; குழம்பு ஒரு பொருள்; அணு ஒரு பொருள்; அணு குண்டும் பொருள்தான். தகரம் ஒரு பொருள்; தங்கமும் ஒரு பொருள். காற்றும் நீரும் நெருப்பும் பொருள்களே. மனிதன், குழந்தை, யானை எல்லாம் பொருள்களே. புழு, பூனை, புலி யாவும் பொருள்களே. இத்தனை பொருள்களையும் உணர்ந்தும் நாம் மெய்ப்பொருளை உணரவில்லை. அந்த மெய்ப் பொருள் எங்கே இருக்கிறது? பெரியவர்கள் இத்தனை பொருளாகவும் அந்த மெய்ப் பொருள் இருக்கிறதென்று சொல்கிறார்கள். பலவாகக் காண்பது உண்மை அன்று என்று கூறுகிறார்கள். "ஒன்றாகக் காண்பதே காட்சி" என்று உபதேசம் செய்கிறார்கள். "மெய்ப்பொருள் நம்மை விட்டு, எங்கோ வெகு தூரத்தில் இருப்பது அன்று; அது நம்முடன் இடைவிடாமல் இருக்கிறது" என்று அவர்கள் சொல்வது நமக்குத் தெளிவுபடுவதில்லை. "பார்க்குமிடம் எங்கும் ஒரு நீக்கமற நிறைகின்ற பரிபூரணானந்தமே" என்று தாயுமானவர் சொல்கிறார். ஒரு நீக்கமறப் பார்க்குமிடம் எங்கும் நாம் காணும் பொருள்கள் மரம், மட்டை, மனிதன், வீடு, காடு, நாய், நரி என்பவைகளே. அவரோ பரிபூரண ஆனந்த மயமான பொருள் என்று சொல்கிறார். அவர் காண்பது உண்மையா? நாம் காண்பது உண்மையா? நாம் காண்பது உண்மையானால் நமக்கு மனநிறைவு உண்டாக வேண்டும்; இன்பம் உண்டாக வேண்டும். நாமோ பல வகையில் துன்பப்பட்டுக் கொண்டிருக்கிறோம். அதனால் நாம் காண்பதுவே சரி என்று சொல்ல இயலவில்லை. திருவள்ளுவர் இதை விளக்குகிறார். நாம் படும் துன்பங்களுக்கெல்லாம் மூலம் பிறப்பு. பிறவி என்பது பெரிய துன்பம்; "அமரும் பதிகேள் அகமாம் எனும்இப் பிமரம் கெடமெய்ப் பொருள்பே சியவா" என்று கந்தர் அநுபூதியிலும் இந்தப் பிரமத்தைச் சொல்கிறார். பிமரம் என்று எழுத்து மாற்றி அங்கே சொல்லியிருக்கிறார். மயக்கம் என்று எதைச் சொல்கிறார்? தெளிவு இல்லாமல் இருப்பதே மயக்கம். தெளிவு என்பது இன்ன பொருள் இத்தகையது என்று உணர்ந்துகொள்ளும் மனநிலை. நாம் தெளிவுடன் இருக்கிறோமா? உண்ணும் உணவைச் சரியானபடி உண்ணுகிறோம். ரூபாய் அணா பைசாவைச் சரியானபடி எண்ணுகிறோம்; நம்முடைய உறவினர்களையும் நண்பர்களையும் சரியானபடி தெரிந்து கொள்கிறோம்; காதினால் கேட்கும் வார்த்தைகளுக்குச் சரியானபடி பொருள் செய்து கொள்கிறோம். ஆகையால் தெளிவான நிலையில்தான் இருக்கிறோம் என்று நினைக்கத் தோன்றும். ஆனால் அந்த எண்ணம் உண்மை அன்று. நாம் காணுகிற அனைத்தும் உண்மை அல்ல. வெவ்வெறு வகையான பொருள்களை நாம் காண்கிறோம். விருப்பு வெறுப்புடன் பார்க்கிறோம். நான் என்ற நினைவு நீங்காமல் இருக்க, அந்த நினைவோடு பார்க்கிறோம். அந்த அந்தப் பொருளை அதன் அதன் இடத்திலேயே வைத்துப் பார்க்காமல் நம்மோடு ஒட்டிப் பார்க்கிறோம். நம் பார்வையும் கருத்தும் நம்மிடத்திலிருந்தே தொடங்குகின்றன. ஆதலால் பொருள்களின் இயல்பை உள்ளவாறே தெரிந்து கொள்ள முடியவில்லை. பல நூல்களைப் படித்தும் நமக்கு முழுத் தெளிவு ஏற்பட்டதாகச் சொல்ல இயலாது. இறந்த பிறகு உயிர் என்ன ஆகிறது? நமக்குத் தெளிவாகத் தெரியாது. நமக்கும் இறைவனுக்கும் என்ன தொடர்பு? உடம்புக்குள் உயிர் ஏன் வந்தது? இனி எத்தனை எத்தனை உடம்புக்குள் புகப் போகிறது? ஏன் இந்த நிலை வர வேண்டும்? ஒன்றும் நமக்குத் தெளிவாகத் தெரியாது. நம்முடைய உள்ளத்தில் என்ன என்ன எண்ணங்கள் பதுங்கியிருக்கின்றன. நம்முடன் பழகுகிறவர்கள் நம்மைப் பற்றி என்ன நினைக்கிறார்கள்? ஒன்றும் நமக்குத் தெளிவாகத் தெரியாது. இந்தத் தெளிவற்ற நிலையில் நாம் காண்கிற பொருள்கள் பலவாக இருக்கின்றன; மெய்யாகத் தோன்றுகின்றன. ஆனால் உண்மையான பொருள் இன்னதென்று தெரியாமல் திண்டாடுகிறோம். பெரியவர்கள் இறைவனை மெய்ப்பொருள் என்றும் பரம்பொருள் என்றும் சொல்கிறார்கள். அதை நாம் கேட்கிறோம்; ஆனால் அதை அநுபவத்தில் உணர முடிவதில்லை. பெரியவர்கள் சொல்கிறார்கள் என்பதற்காக மறுத்துப் பேசாமல் இருக்கிறோம். நமக்கு எல்லாமே பொருளாக இருக்கின்றன. சோறு ஒரு பொருள்; குழம்பு ஒரு பொருள்; அணு ஒரு பொருள்; அணு குண்டும் பொருள்தான். தகரம் ஒரு பொருள்; தங்கமும் ஒரு பொருள். காற்றும் நீரும் நெருப்பும் பொருள்களே. மனிதன், குழந்தை, யானை எல்லாம் பொருள்களே. புழு, பூனை, புலி யாவும் பொருள்களே. இத்தனை பொருள்களையும் உணர்ந்தும் நாம் மெய்ப்பொருளை உணரவில்லை. அந்த மெய்ப் பொருள் எங்கே இருக்கிறது? பெரியவர்கள் இத்தனை பொருளாகவும் அந்த மெய்ப் பொருள் இருக்கிறதென்று சொல்கிறார்கள். பலவாகக் காண்பது உண்மை அன்று என்று கூறுகிறார்கள். "ஒன்றாகக் காண்பதே காட்சி" என்று உபதேசம் செய்கிறார்கள். "மெய்ப்பொருள் நம்மை விட்டு, எங்கோ வெகு தூரத்தில் இருப்பது அன்று; அது நம்முடன் இடைவிடாமல் இருக்கிறது" என்று அவர்கள் சொல்வது நமக்குத் தெளிவுபடுவதில்லை. "பார்க்குமிடம் எங்கும் ஒரு நீக்கமற நிறைகின்ற பரிபூரணானந்தமே" என்று தாயுமானவர் சொல்கிறார். ஒரு நீக்கமறப் பார்க்குமிடம் எங்கும் நாம் காணும் பொருள்கள் மரம், மட்டை, மனிதன், வீடு, காடு, நாய், நரி என்பவைகளே. அவரோ பரிபூரண ஆனந்த மயமான பொருள் என்று சொல்கிறார். அவர் காண்பது உண்மையா? நாம் காண்பது உண்மையா? நாம் காண்பது உண்மையானால் நமக்கு மனநிறைவு உண்டாக வேண்டும்; இன்பம் உண்டாக வேண்டும். நாமோ பல வகையில் துன்பப்பட்டுக் கொண்டிருக்கிறோம். அதனால் நாம் காண்பதுவே சரி என்று சொல்ல இயலவில்லை. திருவள்ளுவர் இதை விளக்குகிறார். நாம் படும் துன்பங்களுக்கெல்லாம் மூலம் பிறப்பு. பிறவி என்பது பெரிய துன்பம்; பல துன்பங்களை உண்டாக்கும் தாய் அது. அது நமக்கு எப்படி உண்டாகிறது? மெய்ப்பொருள் அல்லாதவற்றை மெய்யாகக் காண்பதனால்தான் துன்பம் நிறைந்த பிறப்பு உண்டாகிறது’ என்று வள்ளுவர் சொல்கிறார். "பொருள்அல்ல வற்றைப் பொருளென் றுணரும் மருளான்ஆம் மாணாப் பிறப்பு" என்பது குறள். மெய்ப்பொருள் அல்லாதவற்றை மெய்யாக உணர்வதுதான் மருள்: மயக்கம். அதையே அருணகிரியார் ப்ரமம் என்று சொல்கிறார். அதுதான் பிறப்புக்கு ஆதாரம். பிறப்பு மாணாதது; சிறப்பு இல்லாதது. துன்பம் தருவதனால் மாணாததாயிற்று. இந்த மயக்கமாகிய மருள் இறைவன் அருளால் நீங்கும். மருள், ஒன்றை வேறு ஒன்றாகவும் பலவாகவும் காணும்படி செய்கின்றது. அருளோ யாவற்றையும் ஒன்றாகக் காணச் செய்கின்றது. இருட்டிலே தெளிவு இராது. கட்டை மனிதன் போலத் தோன்றும். ஒன்றும் இல்லாத இடத்தில் யாரோ நடமாடுவது போல இருக்கும். இந்த மருள் நீங்கி ஒளி உண்டானால் உள்ளது உள்ளபடியே தோன்றும். அருளால் ஒளி உண்டாக வேண்டும். "என் உள்ளத்தில் இருக்கிற இந்த மருளை நீ நீக்கியருள வேண்டும்" என்று அருணகிரிநாதர் வேண்டுகிறார். இந்தப் பிரமத்தால் உண்டாகும் துன்பங்களையும் அவர் சொல்கிறார். வஞ்சனை சளத்திற் பிணிபட்டு அசட்டுக் கிரியைக்குள் தவிக்கும். உள்ளத்தில் உள்ள மயக்கத்தால் உண்டாகும் விளைவுகள் பலவானாலும் இங்கே சுருக்கி இரண்டாகச் சொல்கிறார். சளத்தில் பிணிபட்டிருப்பது ஒன்று; அந்தப் பிணிப்பினால் அசட்டுக் கிரியைக்குள் தவிப்பது ஒன்று. இவை ஒன்றுக்கு ஒன்று காரணமாக நிற்பவை. ப்ரமத்தால் சளம் உண்டாகிறது; சளத்தால் அசட்டுக் கிரியைகள் உண்டாகின்றன. சளம்-வஞ்சனை. ப்ரமம் சளத்தை உண்டாக்க அதில் பிணிபட்டுக் கிடக்கிறோம். அதன் விளைவாக அசட்டுச் செயல்களைச் செய்கிறோம்; அதனால் தவிக்கிறோம். இந்த விளைவுகளை இனி விரிவாகப் பார்க்கலாம். சளமாகிய வஞ்சனையில் கட்டுப்பட்டு வாழ்கிறோம். அதற்குக் காரணம் முன் சொன்ன ப்ரமம்; அதுவே மயக்கம். அதையே அறியாமை என்றும் அவித்தை என்றும் அஞ்ஞானம் என்றும் கூறுவாாகள. நாம் எத்தகைய வஞ்சனைக்குள் கட்டுப்பட்டிருக்கிறோம்? மனத்தில் ஒன்றும் வாக்கில் ஒன்றும் பேசுவது வஞ்சனைப் பேச்சு. மனத்தில் ஒன்றும் செயலில் வேறு ஒன்றும் செய்வது வஞ்சனைச் செயல். உள் ஒன்று வைத்துப் புறம் ஒன்று பேசுவதாகிய வஞ்சனையைப் பிறரிடம் நாம் காட்டுகிறோம். நாம் சொல்வது வஞ்சனைப் பேச்சு என்று பிறர் அறிவதில்லை. ஆனால் நமக்கு வேண்டிய ஒன்றை நாம் எண்ணும்போது அப்படியே செய்யாமல் நம்மை நாமே வஞ்சித்துக் கொள்கிறோம். நமக்கு நாமே வஞ்சனை செய்து கொள்வதனால் நமக்குக் கவலைகளும் அச்சமும் உண்டாகின்றன. 'தன்நெஞ் சறிவது பொய்யற்க; பொய்த்தபின் தன்நெஞ்சே தன்னைச் சுடும்" என்கிறார் வள்ளுவர். பொய்யை பொய்யாக உணர்வது மருள் அல்லது ப்ரமம். அதிலிருந்து விளைவது உள்ளும் புறமும் ஒவ்வாமல் இருக்கும் பொய். மூலப் பொய்யுணர்வுக்கு ப்ரமம் என்று பெயர். அதிலிருந்து விளையும் பொய்க்கு வஞ்சனை என்று பெயர். பிறரை வஞ்சிக்கும் குணம் தீயது; ஆனால் தன்னைத்தானே வஞ்சிக்கும் இயல்பு அதைவிடத் தீயது. இந்த வஞ்சனையில் நாம் கட்டுப்பட்டிருக்கிறோம். ஒரு செயலால் நமக்குத் துன்பம் விளைவதை அநுபவத்தில் உணரும்போது, இனி இப்படிச் செய்யக்கூடாது என்று எண்ணுகிறோம். ஆனால் மறுபடியும் அந்தச் செயலைச் செய்யப் போகிறோம். இது பெரிய வஞ்சனை. இதைத்தான் ஆத்ம வஞ்சனை என்று சொல்வார்கள். பிறரை வஞ்சிப்பவர்களைவிடத் தம்மைத்தாமே வஞ்சிப்பவர்களைப் பற்றி என்ன சொல்வது? க.சொ.1-15 பித்துப் பிடித்தவன்தனக்குத்தானே தீங்கு தேடுவதைப் போலப் பிரமம் பிடித்தவன் வஞ்சனைக்குள் கட்டுப்பட்டிருக்கிறான். அதனின்றும் விடுபட வேண்டும் என்று எண்ணினாலும் பழக்க மிகுதியால் விடுபட முடிவதில்லை. கரடியைக் கம்பளியென்று ஆற்றில் குதித்தவன் கதையாக வஞ்சனை இயல்பு இறுக்கிப் பிணித்து ஆழ்த்துகிறது. அசட்டுச் செயல் அந்த வஞ்சனையின் விளைவுதான் நாம் செய்யும் அசட்டுக் காரியங்கள். அசட்டுக் கிரியைகளைச் செய்து தவிக்கிறோம். நாம் துன்பப்படுவதற்கு ஏதுவாக இருக்கும் செயல்களை அசட்டுக் கிரியைகள் என்பதில் தவறு என்ன? அசடு என்று அறியாமை உடையவர்களை நாம் கூறுகிறோம். புத்திசாலி அல்லாதவன் அசடு. ப்ரமத்திலிருந்து உண்டான சளத்தின் விளைவு அசட்டுச் செயல். நாம் செய்யும் காரியம் ஒன்றா, இரண்டா? மதுரையில் எம்பெருமான் அறுபத்துநாலு திருவிளையாடல்களைப் புரிந்தான் என்று திருவிளையாடற் புராணம் சொல்கிறது. நாமோ ஒரே நாளில் 640 திருவிளையாடல்களைச் செய்கிறோம். ஒன்றையேனும் உருப்படியாக, பயன் உள்ளதாக, செய்கிறோமா? அதுதான் இல்லை. ப்ரமத்தின் விளைவில் என்ன நன்மை இருக்கும்? "நாம் என்ன காரியம் செய்தோம்? அதனால் என்ன பயன் உண்டாகும்?" என்று நினைத்துப் பார்த்தால் நமக்கே நம்முடைய அறியாமை புலனாகும். அசடு என்ற சொல் எப்படி வந்தது? அசத்து என்பதே அசடு என்று திரிந்தது? சத்து அல்லாதது அசத்து. சத்து என்பது உண்மை; மெய்ப்பொருள். அசத்து, உண்மை அல்லாதது; பொருள் அல்லாதது. மெய்ப்பொருளில் நாட்டமின்றிச் செய்யும் அசட்டுக் காரியங்கள். "அசட்டர்கள் ஐவரை அறுவர் ஆக்கிய வசிட்டன்" என்று கம்பர் சொல்கிறார். ஐந்து பேரை ஆறு பேர் ஆக்கினார் என்று ஒரு பொருள் தோன்றச் சொல்கிறார். ஐந்து பொறிகளாகிய அசட்டர்களை அற்றவர் ஆக்கினார் வசிட்டர். அவர் பொறிகளை அடக்கினவர்; இந்திரிய நிக்கிரகம் செய்தவர். அங்கே 'பொருளல்ல வற்றைப் பொருள்' என்று உணரும் பொறிகளை அசட்டர்கள் என்று கம்பர் சொல்கிறார். உண்மை அறிவு தலைப்பட்டபோது சத்தான செயல்களைச் செய்வோம். அறியாமையாகிய மருள் தோன்றினால் அசத்தான செயல்கள விளையும். மருள் நீங்கி அருள் உண்டானால் இந்த அசட்டுச் செயல்கள் இல்லாமற் போகும். அவற்றால் ஏற்படும் தவிப்பும் இல்லையாகும். உலகப் பொருள்களை இந்திரியங்களின் வாயிலாக நுகர்ந்து, அவற்றின் உண்மையை உணராமல் வாழ்க்கையை நடத்துகிறவர்கள் அசட்டுத்தனம் உடையவர்கள். அந்த நிலை மாற வேண்டுமானால் இந்திரியங்களின் போக்கைத் திருப்பிவிட வேண்டும். அசட்டுக் காரியங்களைச் செய்வதனால் நாம் இன்பத்தை அடைவதில்லை; தவிக்கிறோம் துன்புறுகிறோம். ஜெயிலுக்குள் இருக்கும் கைதி, "நானாக இங்கே வரவில்லை. என்னைப் போலீஸ்காரர்கள் இங்கே கொண்டு வந்து அடைத்து வைத்து விட்டார்கள்" என்று சொல்கிறான். அவன் தானே சிறைக்குள் வரவில்லை என்பது உண்மை. ஆனால் அங்கே வருவதற்கு ஏதுவான அசட்டுக் காரியத்தைச் செய்தவன் அவன்தான். சிறைக்குள் வருவதற்கு மூலகாரணமான குற்றத்தை அவன் செய்யும் போதே சிறையின் வாயிற்கதவை அவன் தனக்காகத் திறந்து கொண்டுவிட்டான். அப்போது அவனுக்கு அது தெரிவதில்லை. அதன் பயனாகச் சிறைவாசம் அநுபவிக்கும்போது தவிக்கிறான். தன்னைக் கொண்டு வந்து போலீஸ்காரர்கள் உள்ளே அடைத்து விட்டார்கள் என்று குறை கூறுகிறான். சிறைக்குள் வருவதற்குக் காரணமான குற்றத்தைச் செய்யாமல் தவிர்த்திருந்தால் அவனை யார் உள்ளே கொண்டு வந்து அடைக்க முடியும்? இந்த உடம்பாகிய சிறைக்குள் வந்து அடைபட்டுத் தண்டனை அநுபவிப்பதற்குக் காரணமான அசட்டுக் காரியங்களைச் செய்தவர்கள் நாம். இங்கு வந்தும் அவற்றை நாம் விடுவதில்லை. கைதியைப்போல, இறைவன் நம்மை இந்த உடம்புக்குள் அடைத்து விட்டு அருள் செய்யாமல் இருக்கிறான் என்று குறை கூறவும் துணிகிறோம். நாம் படும் தவிப்பைத் தாபம் என்று சொல்வார்கள். அது உயிர்களால் வருபவை, சடப் பொருள்களால் வருபவை, தெய் வத்தால் வருபவை என்று மூன்று வகைப்படும். தாபத்திரயம் என்பார்கள். ஆதியாத்மிகம், ஆதிபெளதிகம், ஆதிதைவிகம் என்று தனித்தனியே பெயரிட்டுச் சொல்வதுண்டு. இந்த மூன்று பிரிவில் அடங்கும் தவிப்புக்கு மூலம் நம்முடைய அசட்டுச் செயல்களே. அவற்றிற்கு மூல காரணம் சளம் அல்லது வஞ்சனை. அதற்கும் மூலமாக நிற்பது ப்ரமம். நமக்குக் காலிலோ கையிலோ ஒரு சிரங்கு வந்தால் அதைக் குணப்படுத்த டாக்டர் மருந்தை ஊசி வழியாக ரத்தத்தில் ஏற்றுகிறார். ரத்தத்தில் மருந்து கலந்தால் உடம்பில் எந்தப் பகுதியில் நோய் கண்டாலும் நீங்கும். அதுபோல மனிதனுடைய செயல்களில் உள்ள கோளாறுகளை நீக்க அவற்றுக்கெல்லாம் காரணமாக இருக்கிற உள்ளத்தில் ஊசி போட வேண்டும். உள்ளத்திலுள்ள மயக்கம் நீங்கிவிட்டால் உள்ளும் புறம்பும் ஒத்து நிற்கும். செய்யும் செயல்கள் யாவும் சத்தாகிவிடும். இறைவன் திருவருளால் உள்ளத்தே ப்ரமம் நீங்கி ஒளி உண்டாகிவிட்டால் செய்யும் செயல்கள் யாவும் இறைவனோடு தொடர்புடைய சத்தாகிவிடும். அருணகிரியார் தவிப்பைப் போக்குவாய் என்று சொல்லவில்லை; அசட்டுச் செயல்களை செய்யாமல் இருக்க அருள் என்று சொல்லவில்லை; உள்ளொன்றும் புறம்பொன்றுமாக இருக்கும் வஞ்சனை நிலையை மாற்று என்றும் வேண்டிக் கொள்ளவில்லை. எல்லாவற்றுக்கும் காரணமான ப்ரமத்தைப் போக்க வேண்டும் என்று பிரார்த்திக்கிறார். சளத்தில் பிணிபட்டு அசட்டுக் கிரியைக்குள் தவிக்கும்என்றன் உளத்தில் ப்ரமத்தைத் தவிர்ப்பாய் ப்ரமமாகிய அவித்தை போனால் பிணிபடுதல் இல்லை. உயிர் கட்டுப்பட்டிருக்கிறது. பாசத்தால் கட்டுப்பட்டிருக்கும் உயிர் அந்தக் கட்டினின்றும் விடுபடுவதுதான் முக்தி. முக்தி என்ற சொல்லுக்கே விடுதலை என்பதுதான் பொருள்; வீடு என்பதும் அதுதான். தேசம் விடுதலை பெற்றதென்று மகிழ்ச்சி அடைகிறோம். இது முடிந்த முடிவான விடுதலை அன்று. தேகத்தினின்றும் விடுதலை கிடைக்க வேண்டும். பிறவிப் பிணியினின்றும் நீங்கிச் சுயராஜ்யம் பெற வேண்டும். அது குருவின் மூலமாகக் கிடைக்கும் என்று வேதம் சொல்லுகிறது. ப்ரமம் நீங்கினால் கட்டு நீங்கும்; கட்டு நீங்கினால் அசட்டுச் செயல் நீங்கும்; அது நீங்கினால் தவிப்பு நீங்கும். 2 முதலில் அருணகிரியார் பிரார்த்தனையை வெளியிட்டார். பிறகு முருகனைப் பற்றிச் சொல்கிறார். ஆண்டவன் அமரர்களுக்கு மாத்திரம் இன்பம் தருபவன் அல்லன், பேய்களுக்கும் இன்பம் நல்குபவன். "நான் மனிதனாக நின்று கேட்கிறேன். உன் திருக்கோயில் வந்து வணங்கிக் கேட்கிறேன்; சூரன் முதலிய அசுரர்களைக் கொன்றதனால் தேவலோகம் பிழைத்தது. சுயராஜ்யம் பெற்ற தேவர்கள் மாத்திரம் அதனால் சந்தோஷம் அடையவில்லை. மற்றொரு சாதியார்க்கும் நீ இன்பம் தந்தாய்; பேய்களும் களித்தன. பேய்களுக்கும் இன்பம் தந்த நீ, மனிதனாக இருக்கிற எனக்கு இன்பத்தைத் தரக் கூடாதா?" என்று கேட்பதுபோல, முருகப் பெருமான் சூர சங்காரம் செய்த காலத்தில் பேய்கள் இன்பக் களிப்பினால் குதித்துக் கும்மாளம் போட்டன என்று சொல்ல வருகிறார். பேய்க்கூத்து போரைப்பற்றிச்சொல்லும் பாடல்கள் பலவற்றைப் பழங்கால முதற்கொண்டு புலவர்கள் பாடியிருக்கிறார்கள். போர் நிகழ்ச்சியில் பல துறைகள் உண்டு. தலைவனுக்கும் அவனுடைய பகைவர்களுக்கும் போர் மூண்டதை வர்ணிக்கும் போது, "பகைவர்கள் போர்க்களத்தில் இறந்து ஒழிந்தார்கள்; இறந்து கிடந்த பிணங்களைச் சுற்றிப் பேய்கள் கூத்தாடின; தங்கள் நகங்களால் பிணத்தைப் பீறிப் பீறித் தின்றன" என்று வருணிப்பது ஒரு மரபு. பிற்காலத்தில் எழுந்த நூல்களிலும் இந்த மரபைப் பார்க்கலாம். போர் நிகழ்ச்சிகளைச் சொல்லும் புறத் துறைகளில் பேய்கள் வரும் துறைகளும் சில உண்டு. பிணத்தைத்தான் உண்ண வேண்டுமென்று பேய்களுக்குப் பைரவர் சாபம் கொடுத்தார் என்பது புராணச் செய்தி. உயிரோடு இருக்கிறவர்களை உண்ணக் கூடாதாம். பிணம் எங்கே கிடைக்கும்? மயானத்தில் கிடைக்கும். அங்கே பேய்கள் இருக்கும். மயானத்தைப் பற்றி வருணிக்கும் இடங்களில் பேய்களைப் பற்றிய வருணனையும் வரும். காரைக்கால் அம்மையார் பாடிய பாடல்களில் பேய்களின் வருணனைகள் வருகின்றன. எல்லாப் பேய்களுக்கும் உணவு தர மயானம் போதாது. அதை மாத்திரம் நம்பியிருந்தால் பெரும்பாலானவை பட்டினி கிடக்கத் தான் வேண்டும். வேறு எதையும் சாப்பிடவும் முடியாது. ஆகவே, "ஐயோ பசிக்கிறதே பட்டினி கிடக்கிறோமே! எங்களுக்குச் சோறு கொடு!" என்று அவை யாவும் காளிதேவியைச் சுற்றி நின்று கூக்குரல் போடுமாம். அப்போது எங்கேயாவது போர் நடந்தால் உடனே செய்தி தந்தியாகப் பறந்து வரும். ஒரு பேய் அதைத் தெரிந்து கொண்டு வந்து சொல்லும். யாவும் உடனே கூட்டமாக ஒடிப் போய் யுத்தகளத்திலே மலைமலையாகக் குவிந்து கிடக்கும் பிணங்களைச் சுற்றி நின்று மகிழ்ச்சி ஆர வாரத்தோடு அவற்றை உண்டு களிக்கும். இவ்வாறு சொல்வது கவி மரபு. தொல்காப்பியத்தில் களவேள்வி என்ற துறை ஒன்று வருகிறது. போர்க்களத்தில் இறந்த பகைவர்களுடைய உடம்புகளை பேய்கள் நுகரும்படி வீரம் விளைப்பதைச் சொல்வது அரிது. திருமுருகாற்றுப்படையில் திருமுருகாற்றுப்படையில் நக்கீரர் பேய்களைப் பற்றிச் சொல்கிறார். முதலில் அழகிய அணங்குகளைப் பற்றிச் சொல்லி விட்டுத் தொடர்ந்து அஞ்சத்தக்க உருவத்தையுடைய பேயைப் பற்றிச் சொல்கிறார். இப்படிச் சொல்வது ஓர் அழகு. சிவப்பையும் கறுப்பையும் அருகருகே வைத்துக் காட்டுவது போன்ற அழகு இது. முருகன் காந்தட் கண்ணியை அணிபவன் என்று சொல்ல வந்தவர், அம் மலர் வளரும் மலைச் சாரல் சோலையை வர்ணிக்கிறார். சோலை முழுவதும் மணம் நிறைந்த பலபல வண்ணப் பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன. அதைப் பார்த்தாலே பெண்களுக்கு எத்தனை ஆனந்தம்! 'பூ..... ... பூ.....!' என்று தெருவிலே விற்றுக் கொண்டுபோனால், அந்தப் பூவை வாங்காவிட்டாலும், கூப்பிட்டு அதன் அழகையும் மணத்தையும் சுவைப்பதற்காகவாவது, விலை கேட்கத் தோன்றும் நமது தமிழ்நாட்டுப் பெண்களுக்கு. காந்தள் மலர் மலரும் இடம் இந்தத் தமிழ்நாட்டு மலைச்சாரலில் உள்ள சோலைகள். தேவலோகத்து அரம்பையர் ஆடிப்பாட, இந்தச் சோலைகளுக்கு வருகிறார்கள். தேவ லோகத்தில் கற்பக மரத்தின் பூத்தான் கிடைக்கும். அது பொன் நிறமாக இருக்கும். வேறு நிறம் இல்லை. ஆனால் பூமியில் இருக்கும் மலருக்குப் பலவகையான வண்ணம் உண்டு; மணம் உண்டு. செக்கச் செவேலென்றிருக்கும் வெட்சிப் பூவினாலும் கருநீல நிறமுள்ள குவளை மலர்களாலும் அவ்வணங்குகள் தங்கள் கூந்தலைச் சிங்காரம் செய்து கொள்கிறார்கள். எழில் நிறைந்த வண்ணப் பூக்களால், அந்தப் பெண்கள் தாங்கள் விழைகின்றவாறே அலங்காரம் செய்து கொள்வதற்கு ஏற்ற பொருள்களை அந்தச் சோலைகள் தருகின்றன. ஆகையால் மலை உச்சியில் இருக்கிற பூம்பொழில்களுக்கு சூரர மகளிர் வருகிறார்கள். வந்து அலங்காரம் பண்ணிக்கொண்டு, "கோழிக் கொடி நெடிது வாழ்க!" என்று வாழ்த்தி ஆடுகிறார்கள். உடனே, நக்கீரர் பேய் மகளின் ஆடலைச் சொல்கிறார். அணங்குகளுடைய அழகையும் ஆடலையும் வருணித்தபிறகு பேயின் அழகை வருணிக்கிறார். அதன் தலைமயிர் உலர்ந்து பரட்டையாக இருக்கிறது. முன்னால் அரமகளிரது கூந்தல், ஒத்து வளர்ந்து நெய்ப்போடு கூடியதாக இருக்கிறது எனச் சொன்னார். இங்கே பேய் மகளின் தலைமயிர் உலர்ந்து, வறண்டு பறட்டையாகக் கிடக்கிறது என்கிறார். பற்கள் ஒன்றோடொன்று சேர்ந்து, வரிசையாக, அழகாக இல்லாமல் ஒரே கோரமாய் இருக்கின்றன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு போக்கிலே பிறழ்ந்து இருக்கின்றனது; கோரப் பற்கள். வாயோ பேழ்வாய்; ஆழமான பெரிய வாய். கண்ணோ? எப்பொழுதும் சுழன்று கொண்டிருக்கிற விழிகள்; சுழல்விழி. அரமகளிர் தம்முடைய காதுகளில் சிவந்த அசோகந்தளிர்களைச் செருகியிருக்கிறார்கள் என்று சொன்னார். பேய் மகளிரது காதோ மார்பு வரையில் தொங்குகிறது. மார்பிலுள்ள தனங்களோடு மோதுகிறது. கழன்று விடுமோ என்று தோன்றும் கண்களையுடைய கோட்டானும் பாம்பும் காதில் ஆபரணம் போலத் தொங்குகின்றன. பாம்பிலே கூகையைக் கட்டித் தொங்கவிட்டிருக்கிறாள் பேய்மகள். அரமகளிரது உடம்பு வழவழவென்று பொலிவும் நிறமும் பெற்று மெருகோடு இருக்கின்றது. ஆனால் பேய் மகளின் உடம்பு எப்படி இருக்கிறது? வயிறு நன்றாக வெளியிலே தெரிகிறது. உடம்பு சொர சொரவென்று இருக்கிறது. அவள் பூமியதிர நடந்து வருகிறாள். அவள் நடையைக் காண்பவர் உள்ளம் திடுக்கிடுகிறது. அவள் கொம்மாளம் போடுகிறாள். சூரபன்மன் முதலிய அசுரர்களை, முருகன் தன் திருக்கரத்திலேயுள்ள வேலினால் சங்காரம் பண்ணினானே, அந்தப் போர்க் களத்தில் கொம்மாளமிடுகிறாள். 'மலைமலையாக அசுரக் கூட்டங்களைக் கொன்று குவித்திருக்கிறான். நமக்கு உணவு போட்டிருக்கிறான்' என்று அந்த இடத்திலே போய் முருகனை வாழ்த்திக் கொண்டே மகிழ்ச்சியுடன் ஆடுகிறாள். அவளுடைய கைநகம் வாச்சி போல் இருக்கிறது. அந்த நகத்தினால் பிணங்களின் சதையைப் பிடுங்கிப் பிடுங்கித் தின்கிறாள். ரத்தத்தை அளைகிறாள். அவள் கைவிரல் ரத்தத்தை அளைந்து சிவப்பாக இருக்கிறது. நாம் பனை நுங்கு சாப்பிட்டிருக்கிறோம். பனை மரத்தின் அடியிலே போய், நுங்கின் புற ஒடுகளை நீக்கிவிட்டு, அப்படியே உள்ளே இருக்கும் நுங்கை இரண்டு கட்டைவிரலாலும் எடுத்துச் சாப்பிடுவது ஒரு தனிச் சுவை. நுங்கை எடுத்துவிட்டால், அது இருந்த இடம் பள்ளமாக இருக்கும். இந்தப் பேய் மகள் நுங்கு சாப்பிடுவது போல ஒரு காரியம் செய்கிறாள். இறந்து கிடக்கும் அசுரர்களின் கண்ணை, ரத்தம் தோய்ந்த தன் கைவிரல்களிலுள்ள கூரிய நகத்தினால் அப்படியே தோண்டி எடுத்துத் தின்கிறாள்; நுங்கு எடுக்கப்பட்ட பின்னுள்ள பனம்பழம் போல் தலை இருக்கிறது. அதனை எடுத்துக் கொண்டு கண்டார் பயப்படும்படியாக ஏந்தி வருகிறாள். அவள் வாய் நிணத்தை மென்று கொண்டேயிருக்கிறது. சரியானபடி உணவு கிடைத்தால் ஆட்டம் போடத் தோன்றும் அல்லவா? 'துணங்கை தூங்க.' அவள் துணங்கைக் கூத்து ஆடுகிறாள். ஆண்டவன் சூர சங்காரம் செய்ததினால் வாழ்வு அடைந்தவர்கள் தேவர்கள். தேவலோகப் பெண்கள் அவன் புகழைப் பாடி ஆடிக் களிக்கிறார்கள். ஆண்டவன் சூரசங்காரம் செய்ததனால் பகைவர்கள் போர்க்களத்தில் மாண்டு மலையாகக் கிடந்தார்கள். அப்போது நெடுநாள் பசியுடன் இந்த பேய்கள் தங்களுக்கு வேண்டிய உணவைப் பெற்று மகிழ்ந்தன. அவை பிணத்தை வயிறார உண்டு, முருகனை வாழ்த்திக் கூத்தாடின. 'முகம் குதிரையாகவும், உடம்பு மனிதர்களைப் போலவும் இருந்த சூரன் நடுங்கும்படி, ஆறு முகங்களோடு சென்று தலை கீழாகக் கவிழ்ந்த பூங்கொத்துக்களை உடைய மாமரமாக இருந்த சூரனை அழித்துத் தேவர்களுக்கும் பேய்களுக்கும் மகிழ்வு அளித்தான், குற்றமற்ற வெற்றியையும், யாராலும் அறிதற்கரிய புகழையும் உடைய செவ்வேற் சேய்' என்று நக்கீரர் பாடுகிறார்: 'உலறிய கதுப்பிற் பிறம்பற் பேழ்வாய்ச் சுழல்விழிப் பசுங்கண் சூர்த்த நோக்கின் கழல்கட் கூகையொடு கடும்பாம்பு தூங்கப் பெருமுலை அலைக்கும் காதிற் பினர்மோட்டு உருகெழு செலவின் அஞ்சுவரு பேய்மகள் குருதி ஆடிய கூர்உகிர்க் கொடுவிரல் கண்தொட்டு உண்ட கழிமுடைக் கருந்தலை ஒண்டொடித் தடக்கையின் ஏந்தி வெருவர வென்றடு விறற்களம் பாடித் தோள்பெயரா நினம்தின் வாயள் துணங்கை தூங்க இருபேர் உருவின் ஒருபேர் யாக்கை அறுவேறு வகையின் அஞ்சுவர மண்டி அவுணர் நல்வலம் அடங்கக் கவிழ்இணர் மாமுதல் தடிந்த மறுவில் கொற்றத்து எய்யா நல்இசைச் செவ்வேற் சேய்'[1] பரணி நூல்கள் இப்படி இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே எழுந்த திருமுருகாற்றுப் படையில் நக்கீரர் பேய்களின் கூத்தை விளக்கியிருக்கிறார். புறநானூறு முதலிய நூல்களிலும் வேறு பல சங்க நூல்களிலும் களவேள்வியைப் பற்றிய செய்திகள் பல இடங்களில் வருகின்றன. பேய்கள் பசியினால் வருந்துவதையும் காளியிடம் முறையிடுவதையும் போர் நிகழ்வது தெரிந்து ஓடிச் சென்று களத்தில் பிணங்களைக் கொண்டு விருந்து சமைத்து உண்பதையும் விரிவாகச் சொல்லும் பிரபந்தம் ஒன்று உண்டு. அதற்குப் பரணி என்று பெயர். கலிங்கத்துப் பரணி என்ற நூல் மிகச் சிறந்தது. குலோத்துங்கன் படை வடக்கே சென்று வெற்றி பெற்று வந்ததை அது வருணிக்கிறது. பேய்கள் காளி தேவியைச் சுற்றிக் கொண்டு, "ஐயோ! நாங்கள் சாப்பிட்டுப் பல காலம் ஆகி விட்டனவே, பட்டினியாகக் கிடந்து தவிக்கிறோமே! எங்களுக்குச் சாப்பாடு போடு" என்று கூக்குரல் போடுமாம்; கூத்தாடுமாம். எங்கேயாவது யுத்தம் நடக்கிறது என்று தெரிந்தால், அவைகளுக்கு ஒரே கொண்டாட்டம். பரணிகளில் இதைக் காணலாம். அரசர்களின் வீரத்தைப் பாராட்டும் போது களவேள்வியைப் பற்றிச் சொல்வது பழங்கால வழக்கம். பிற்காலத்தில் ஆண்டவனைப் பற்றிப் பாடும்போதும் களவேள்வியைப் பற்றிப் பலர் பாடியிருக்கிறார்கள். ஒட்டக்கூத்தர் பாடியது தக்கயாகப் பரணி. அதில் பேய்கள் உணவு பெறாமல் வருந்தும் திண்டாட்டமும் தக்கயாக சங்கார காலத்தில் உணவு பெற்றுக் களித்தாடும் கொண்டாட்டமும் வருகின்றன. பேய்கள் எல்லாம் காளியிடம் போய்ச் சொல்கின்றன. "அம்மா உன்னுடைய பிள்ளை முன் காலத்தில் என்ன செய்தான் தெரியுமா? எங்களுக்கு எல்லாம் பெரிய விருந்து வைத்தான். சூர சங்காரம் செய்யும்போது அசுரர்களை மலைமலையாகக் கொன்று குவித்தான்; பள்ளம் விழுந்ததுபோலக் குழி விழுந்து போன எங்கள் வயிறுகள் புடைக்கும்படியாக உணவு போட்டான்" என்று அவை சொல்கின்றனவாம். "குரொடும்பொர வஞ்சிசூடிய பிள்ளையார்படை தொட்டநாள் ஈருடம்பு மிசைந்திரண்டுதிரப்பரப்பும் இரைத் தனம்." "அசும்புதூர்வயி றாரமுன்பவர் செற்றதானவர் அற்றநாள் விசும்புதூர விழும்பிணங்கள் நிணங்களுற மிசைந்தனம்." சூரபன்மனோடு போராட முருகன் புறப்பட்டபோது வஞ்சி சூடிக் கொண்டு புறப்பட்டான். புறப்பட்டுச் சென்று வேலை விட்ட நாளில் சூரனுக்குரிய இரண்டு உடம்புகளையும் பேய்கள் உண்டன. இரண்டு உடல்களின் உதிரத்தையும் குடித்துப் பருத்தன. "போர்க்களத்தில் மலைமலையாகப் பிணங்கள் கிடந்தன. வானமளாவக் குவிந்து கிடந்தன. அவற்றின் கொழுப்புக்களை எங்கள் குழி விழுந்த வயிறுகள் நிரம்பும்படியாக உண்டோம்" என்று அந்தப் பேய்கள் சொல்லுகின்றன. இறைவனைப் பற்றி விரிவாக எண்ண வேண்டுமானால் அவன் வீரமுடையவன், கருணையுடையவன் என்று பல குணங்களுக்கு உரியவனாகவே நினைக்க வேண்டும். வீரம் உடையவன் என்பது எப்படித் தெரியும்? "போர் நடந்தது; பகைவர்கள் மாண்டார்கள்; போர்க்களத்திலே மலைபோலக் கிடக்கின்ற பிணங்களைச் சுற்றிப் பேய்கள் கூடிக்கொண்டு களிப்புடன் அவற்றைத் தின்றன" என்று சொன்னால் தெரியும். அரசர்களும், வீரர்களும் செய்த போரில் பேய்கள் விருந்து நுகர்ந்தன என்ற செய்தி உண்மை நிகழ்ச்சியோடு ஒட்டாமல், கவிமரபாக நிற்கின்றது. வீரத்தைப் பெருகப் பேசுவதற்கு ஏற்ற நிலமாக இத்தகைய செய்திகள் அங்கே பயன்படுகின்றன. ஆனால் இறைவனுடைய வீரத்தைப் பற்றிச் சொல்கையில் அவை மற்ற நிகழ்ச்சிகளோடு ஒட்டி நிற்கின்றன. அரசர் போர் செய்தது வரலாற்று நிகழ்ச்சி, பேய்கள் விளையாடியது கற்பனை நிகழ்ச்சி. இரண்டும் வெவ்வேறு வகை. கவிதையில் இவை இணைகின்றன. ஆனால் இறைவனுடைய பெருமையைக் கூறும் புராணச் செய்திகளில் அவ்விரண்டும் இயல்பாகவே இணைந்து நிற்கின்றன. இறைவன் போர் செய்யும் போது நிகழும் நிகழ்ச்சிகள் உலகியலுக்கு அப்பாற்பட்டவை; பேய்களின் விளையாடலும் அத்தகையனவே. உண்மை நிகழ்ச்சிகளானாலும், கற்பனையானாலும், உள்ளுறையை உடைய கதையானாலும் இரண்டும் ஒரே நிலையில் இருப்பவை. ஆதலின் அரசர் செய்த போரில், களத்தில் பேய்கள் ஆடின என்பதைவிட முருகன் செய்த போரில் பேய்கள் உண்டுகளித்தன என்பது பொருத்தமாகத் தோற்றுகிறது. திருமுருகாற்றுப்படையில் நக்கீரர் பேய்க் கூத்தைப் பாடியதை முன்பு பார்த்தோம். மற்றோரிடத்திலும் சுருக்கமாக இச்செய்தி வருகிறது. முருகப் பெருமானுடைய ஆறு திருமுகங்களும் இன்ன இன்ன காரியங்களைச் செய்கின்றன என்று ஒரிடத்தில் வருணிக்கிறார். அவனுடைய திருமுகங்களில் ஒன்றுமாயிருள் ஞாலம் மறுவின்றி விளங்கும்படியாகப் பலவகைக் கதிர்களைப் பரப்புகின்றது; அன்பர்களுடைய வேட்கைகள் நிறை வேறும்படி வரமளிக்கும் அருட்செயலைச் செய்கின்றது மற்றொரு முகம்; வேத முறைப்படி அந்தணர்கள் செய்கின்ற யாகங்களைத் தீங்கின்றிப் பாதுகாக்கின்றது ஒருமுகம்; யாராலும் விளக்க முடியாமல் இருக்கின்ற பொருள்களை விளக்குகின்றது ஒரு முகம்; வள்ளியெம் பெருமாட்டி யோடு கூட இன்புற்று மகிழும் செயலைப் புரிகின்றது ஒரு முகம். "........................ ஒரு முகம் செறுநர்த் தேய்த்துச் செல்சமம் முருக்கிக் கறுவுகொள் நெஞ்சமொடு களம்வேட் டன்றே" என்பது ஒரு முகத்தைப் பற்றிய செய்தி. வீரர்களுள் தலைசிறந்த வீரன் முருகன்; அவன் தேவசேனாபதி. தேவர்களுடைய பகைவர்கள் அசுரர்கள். அசுரர்களால் தேவர்களுக்கு எவ்விதமான தீங்கும் ஏற்படாதவாறு காப்பாற்ற அவன் விரதம் எடுத்துக் கொண்டிருக்கிறான். "நிருத ரார்க்கொரு காலா ஜேஜய" என்று திருப்புகழில் பாடுகிறார் அருணகிரிநாதர். பகைவர்களை அழித்து, வருகின்ற சண்டைகளைப் போக்கி, கறுவுதல் கொண்ட உள்ளத்தோடே களவேள்வி செய்தது ஒரு முகம் என்பது திருமுருகாற்றுப்படைப் பகுதியின் பொருள். மரபு வழியே இவ்வாறு பழங்காலம் முதற்கொண்டே வழங்கி வருகின்ற மரபை ஒட்டியே அருணகிரிநாதர் பேயின் விளையாட்டைப் பாடுகின்றார். வாழ்நாள் முழுவதும் முருகனைப் பற்றிப் பாடுவதையே தம் பணியாகக் கொண்டவர் அவர். முருகனைப் பற்றி விரிவாகப் பாடுவதற்கான பொருளைத் தொகுத்துக் கொண்டவர். அவருக்கு முன்பிருந்த புலவர்கள் முருகனுடைய வீரத்தை வருணிக்கும்போது, களவேள்வி பற்றிச் சொல்லியிருப்பவற்றை யெல்லாம் சேகரித்துக் கொண்டு நாம் படித்துச் சுவைக்கும் வகையில் அவற்றைச் சொல்கிறார். திருப்புகழில் பேய்களின் விளையாட்டை வெவ்வேறு வகையில் பாடியிருக்கிறார். ஒர் உதாரணம்: "குடிப்பன முகப்பன நெடிப்பன நடப்பன கொழுத்தகு ருதிக்கடலிடையூடே குதிப்பன மதிப்பன குளிப்பன களிப்பன குவட்டினை இடிப்பன சிலபாடல் படிப்பன திருப்புகழ் எடுப்பன முடிப்பன பயிற்றில கைக்குலம் விளையாடப் பகைத்தெழும் அரக்கரை இமைப்பொழு திணிற்பொடி படப்பொரு துழக்கிய பெருமாளே."[2] என்று கந்தர் அலங்காரத்திலும் வேறு ஒரு பாட்டில், "................... முது கூளித்திரள் டுண்டுண் டுடுடுடு டுடு டுடுடுடு டுண்டுடுண்டு டிண்டிண் டெனக்கொட்டி ஆடவெஞ் சூர்க்கொன்ற ராவுத்தனே" என்று பாடுகிறார். திருவகுப்பு இவற்றையன்றித் திருவகுப்பில் மிக விரிவாக அலகைகளின் கூத்தைப் பாடியிருக்கிறார். இருபத்தைந்து பாடல்கள் அமைந்த அந்நூலில் மூன்று பேய்க்கூத்தை வருணிப்பவை. பொருகளத்து அலகை வகுப்பு, செருக்களத்து அலகை வகுப்பு, போர்க்களத்து அலகை வகுப்பு என்ற மூன்றும் போர்க்களத்தில் பேய்கள் விருந்துண்டு கூத்தாடும் செயலை விரிவாகச் சொல்வன. ஏழாவது வகுப்பு: பொருகளத்தலகை வகுப்பு திருத்தணிகையில் இருக்கும் ஆறுமுகம் படைத்த ஒருத்தனாகிய இளைய முருகன், நிசிசரர் இளைத்து பதைத்து மடியும்படியாக ஒர் இமைப்பொழுதில் அமர் பொருதான். அவன் அப்படிப் பொருத களத்தில் உள்ள அலகைகளின் செயல்களைச் சொல்வது அது. அவை ஆனந்தமாகத் தசையைத் தின்கின்றன. பக்கத்தில் நிற்கிற குட்டையான பேய்க்கும் தமக்குப் போக மிஞ்சின தசையைக் கொடுக்கின்றனவாம். அந்தப் பேயும் ஆடுகிறதாம். 'குதித்து மகிழ்வொடு மிதித்து நடமிடு குறட்கு மிகுதசை கொடுத்து வருவன"[3] குதிரையின் இறைச்சியைத் தனித்தனியே குவித்துப் பக்குவமாக அவித்து உண்ணுகின்றன. "கொழுத்த குரகத இறைச்சி வகைவகை குவித்து முறைமுறை அவித்து நுகர்வன.[4] இரத்த ஆற்றிலே குதித்து முழுகி அந்த இரத்தத்தைக் குடித்துக் களிப்போடு வருகின்றன. "குதித்து முழுகியும் இரத்த நதியிடை குளித்தும் உணர்வொடு களித்து வருவன." அவை ஆடுகின்றன; ஆரவாரத்தோடு கூத்தாடுகின்றன. ""தொகுக்கு தொகுதொகு தொகுக்கு தொகுதொகு தொகுக்கு தொகுவென நடித்து வருவன.” அடுத்தது செருக்களத்தலகை வகுப்பு. அது, அடவிப் புனத்தில் உற்ற குறமகளுக்கு ஏற்ற மணிப்புயத்தையுடைய ஆறுமுகன், அடல் மிக்க அசுரர்கள் பட்டு விழும்படியாகப் பொருத செருக்களத்தில் அலகைள் செய்யும் செயல்களைச் சொல்வது. 'குதிரைத் திரள்பட் டபிணத் தைஎடுத் "துதிரப் புனலிற் குளிக்கும் ஒருதிரள்; குருதிக் கடலைப் பெருகப் பருகிக் குணலைத் திறனிற் களிக்கும் ஒருதிரள்"[5] என்று தொடங்குவது அது. 'ஒரு பேய்க் கூட்டம் இறந்து போன திரளான குதிரைப் பிணங்களை எடுத்துக் குருதி வெள்ளத்தில் குளிக்கும். மற்றொரு பேய்க் கூட்டம் ரத்தக் கடலை நிரம்பக் குடித்துக் குணலையென்னும் கூத்தாடிக் களிக்கும்' என்று பாடுகிறார் அருணகிரியார். ஒன்பதாவது திருவகுப்பு, போர்க்களத்து அலகை வகுப்பு, தணிகையென்னும் பதியில் நிற்பவனாகிய முருகன், 'கொலை நிருதரை முனிந்த போர்க்களத்தில் அலகை' செய்தவற்றை விரித்துரைப்பது அது. அந்த அலகைகள் பசியினால் பயிரவியை வாழ்த்துகின்றனவாம். "பவுரிவ ரும்பரி புரம்நரல் பங்கய வித்தா ரத்தன பயிரவி பதங்கள் வாழ்த் தெடுத்த பசியன"[6] அவை இப்போது வேண்டிய உணவைப் பெற்றுக் கூத்தாடுகின்றன. எத்தனை விதமான ஆட்டம்! அவை உருவத்தால் இருண்டன. உலவி நிணம் மொண்டு கூட்டு அமைத்து நுகர்வன. உலகு குலுங்கிட அரிய துணங்கையினைச் சாதிப்பன. உவன படலங்களும் காக்கைகளும் சுற்றி வருவன. இப்படி வருணிக்கிறார். ஒடுகின்ற ரத்த ஆற்றில் முழுகி எழுகின்றன; ஆரவாரம் செய்கின்றன; கடல் அதிரப் பூமி பிளக்க நடை பயில்கின்றன. “ஒழுகுதி ரந்தனில் முழுகிஎ ழுந்தன உச்சா டத்துடன் உடைகடல் அதிர்ந்து கூப்பிளக்கும் நடையின."[7] அவை கூத்தாடும் ஓசையையும் பாடுகிறார். "திரிகட தொங்கிட திரிகட திங்கிட தித்தீ செக்கண செக்கண மொழிந்து கூத்த னைத்தும் நவில்வன." பேய் விளையாட்டு இவ்வாறெல்லாம் பாடிய அருணகிரிநாதர் இந்தப் பாட்டிலும் பேய் விளையாட்டை வருணிக்கிறார். பாட்டின் ஒசையே பேய்கள் குதிப்பதை நினைவூட்டுகின்றது. "அவுணர் உரத்துதிரக் குளத்திற் குதித்துக் குளித்துக் களித்துக் குடித்துவெற்றிக் களத்திற் பெருக்கிக் கழுதாட வேல்தொட்ட காவலனே!” அவுணர் என்பது அசுரருக்குப் பெயர். அவர்களுடைய மார்பிலிருந்து பெருகிய ரத்தம் குளமாகத் தேங்கிக் கிடக்கிறது. இந்தக் காட்சி நிகழும் இடம் போர்க்களம்; முருகன் அவுணரைப் பொருது வெற்றிக் கொண்ட களம். வேலைப் பிரயோகம் செய்து அவன் வெற்றி கொண்டான். முருகன் வென்ற போர்க்களத்தில் அவுணர் உடம்பிலிருந்து பெருகித் தேங்கிய ரத்தக் குளத்தில் பேய்கள் குதிக்கின்றன. குதித்துக் குதித்து எழுகின்றன. குளிக்கின்றன. அவற்றிற்கு அப்போது உண்டான மகிழ்ச்சிக்கு எல்லை ஏது? பல காலம் பசியால் வாடிய உடம்பையுடைய அவற்றிற்கு அப்போதெல்லாம் ஒரு துளி ரத்தம் கிடைக்கவில்லை. இப்போது ரத்தக் குளத்தில் மூழ்கிக் கொம்மாளம் இடுகின்றன. அதைக் குடிக்கின்றன. களிப்புக்குக் கேட்க வேண்டுமா? கழுது என்பது பேய். இப்படிப் பேய்கள் வெற்றிக் களத்தில் செருக்கி ஆட வேலை விட்டான் முருகன். களத்திற் செருக்கிக் கழுதாட வேல்தொட்ட காவலனே! மார்பிற் புண் முருகன் சிறந்த வீரன். போர்க்களத்தில் புறமுதுகு காட்டி ஒடுகிறவர்களைக் கொல்கிறவன் வீரனாகமாட்டான். புறமுதுகு காட்டுவதும், முதுகிட்டார் மேல் படை விடுவதும் வீரனுக்கு ஏற்ற செயல்கள் அல்ல. அசுரர்களின் ஆரவாரச் செயல்களைக் கண்டு அஞ்சாமல் அவர்களைத் தவிடு பொடியாக்கிய முருகன் அவர்களை முதுகில் அடிக்கவில்லை. வேலால் அவர்கள் மார்பைத் துளைத்தான். அதனால் அவர்களுடைய மார்பிலிருந்து குருதி வெள்ளம் பிரிட்டுப் பாய்ந்து குளமாகத் தேங்கியது. அதனால்தான், அவுணர் உரத்து உதிரக்குளத்து என்றார் அருணகிரியார். உரம் என்பது மார்பு. மார்பிலே படுகின்ற புண்ணை விழுப்புண் என்பார்கள். அவுணர் உரத்து உதிரம் என்றது முருகனுடைய சிறந்த வீரத்தைக் காட்டி நிற்கிறது. இராவணனை அம்பு எய்து கொன்றான் இராமன். இறந்து கிடந்த இராவணனை இராமன் போய்ப் பார்த்தான். குரங்குகள் அவன்மேல் ஏறித் துகைத்தன. அப்போது அவன் முதுகில் ஏதோ புண் இருப்பதைக் கண்டான் இராமன். "அடடா! நான் இராவணனை முதுகில் அடித்துக் கொன்றுவிட்டேன்போல் இருக்கிறதே! என்ன காரியம் செய்தேன்!" என்று ஒரு கணம் திடுக்கிட்டான். அதை விபீஷணன் கண்டு அவனைத் தெளிவித்தான். "நீங்கள் வருத்தம் அடையக் காரணமே இல்லை. இவன் திக்கயங்களோடு பொருதபோது அவற்றின் கொம்புகள் மார்பிலே பாய்ந்தன. அவை உருவி முதுகிலே வந்த சுவடு அது. ஆகையால் உங்கள் அம்பினால் உண்டான புண் என்று எண்ணாதீர்கள்" என்று அவன் எடுத்துச் சொன்ன பிறகே இராமன் தெளிவு பெற்றான். முருகனும் முதுகில் அடிக்கிறவன் அல்ல. தேவசேனாபதியாகிய அவன் வீரருள் வீரன். அவன் அவுணர்களின் மார்பிலே வேலைப் பாய்ச்சி வெற்றி பெற்றான். "பேய்கள் பிணத்தைத் தின்று குருதிக் கடலிலே குதித்து விளையாடும்படியாக அசுரர்களைச் சங்காரம் செய்தவன் அல்லவா நீ? என் துன்பங்களுக்கெல்லாம் காரணமான பிரமத்தைப் போக்கியருள மாட்டாயா?" என்று இந்தப் பாட்டில் அருணகிரிநாதர் வேண்டிக் கொள்கிறார். சளத்தில் பிணிபட்டு அசட்டுக் கிரியைக்குள் தவிக்கும்என்றன் க.சொ.1-16 உளத்தில் ப்ரமத்தைத் தவிர்ப்பாய், அவுணர் உரத்துஉதிரக் குளத்தில் குதித்துக் குளித்துக் களித்துக் குடித்துவெற்றிக் களத்தில் செருக்கிக் கழுதுஆட வேல்தொட்ட காவலனே! (வஞ்சனையில் கட்டுண்டு, உண்மையற்ற செயல்களில் அகப்பட்டுத் தவிக்கும் என்னுடைய உள்ளத்தில் உள்ள மயக்கத்தை நீக்கியருள்வாயாக; அசுரர்களின் மார்பிலிருந்து பெருகித் தேங்கிய ரத்தக் குளத்தில் குதித்தும் குளித்தும் களிப்புற்று ரத்தத்தையே குடித்து உனக்கு வெற்றி உண்டான போர்க்களத்தில் இறுமாந்து பேய்கள் விளையாட வேலாயுதத்தை விட்ட பெருமானே! சளம்-வஞ்சனை. பிணி-கட்டு. ப்ரமம்-மயக்கம். அவுணர்-அசுரர். உரம்-மார்பு. செருக்கி-இறுமாந்து. கழுது-பேய். தொட்ட-பிரயோகம் செய்த. காவலன்-தேவலோகத்தைப் பாதுகாக்கும் பெருமான்.) * * * 1. பின்வரும் கம்பராமாயணப் பாடல்கள் இதனைப் புலப்படுத்தும். "வென்றியால் உலகம் மூன்றும் மெய்ம்மையான் மேவி னாலும் பொன்றியார் கின்ற தோளைப் பொதுவற நோக்கும் பொற்பும் குன்றிஆ அற்ற தன்றே! இவன்எதிர் குறித்த போரில் பின்றியான் முதுகிற் பட்ட பிழம்புள தழும்பின் அம்மா." என்பது இராமன் கூற்று. "நாடுள தனையும் ஓடி நண்ணலார் காண்கி லாமல் பீடுள குன்றம் போலும் பெருந்திசை எல்லை யானைக் கோடுள தனையும் புக்குக் கொடும்புறத் தழுந்து புண்ணின் பாடுள தன்றித் தெவ்வர் படைக்கலம் பட்டென் செய்யும்" என்பது விபீஷணன் கூற்று. ↑ 1.உலறிய கதுப்பின்-உலர்ந்த கூந்தலையுடைய. பேழ் வாய்-ஆழமான வாய். சூர்த்த நோக்கு-அச்சம் தரும் பார்வை. கூகை-ஆந்தை. தூங்க-தொங்க. பினர் மோடு-சுரசுரப்பையுடைய வயிறு. உரு-அச்சம். செலவு-நடை உகிர்-நகம் தொட்டு-தோண்டி. கழி முடை-மிக்க நாற்றத்தையுடைய தொடி-வளை. வெருவர-அச்சம் உண்டாக. தோள் பெயரா-தோளை அசைத்து. துணங்கை-கைகோத்து ஆடும் கூத்து. தூங்க-ஆட. அவுணர்-அசுரர். வலம்-வெற்றி, இணர்-பூங்கொத்து. மா முதல்-மாமரத்தின் அடி. தடிந்த-அழித்த. மறு-குற்றம். எய்யா-அறிய இயலாத. இசை-புகழ். சேய்-முருகன். ↑ நெடிப்பன - உயர்ந்து நிற்பன. மதிப்பன-கடைவன. குவடு-மலை. அலகைக் குலம்-பேய்க் கூட்டம். உழக்கிய-கலக்கிய. குடிப்பனவாகியும் முகப்பனவாகியும்... முடிப்பனவாகியும் அலகைக்குலம் பயிற்றி விளையாட அரக்கரை இமைப்பொழுதினில் உழக்கிய பெருமாளே என்று பொருள் கொள்ள வேண்டும். ↑ குறட்கு-குட்டைப் பேய்க்கு. மிகு தசை-தாம் தின்று எஞ்சிய தசை ↑ குரகத இறைச்சி-குதிரை மாமிசம். அவித்து-சுட்டு. ↑ பட்ட-இறந்த. குருதி-இரத்தம். குணலைத் திறனில்-குணலை என்ற கூத்தின் வகையைப்போல. ↑ பவுரி-சுழன்றாடும் கூத்து. பரிபுரம் நரல் பங்கயம்-சிலம்பு ஒலிக்கும் தாமரை போன்ற பாதம். பங்கயத்தையும் தனத்தையும் உடைய பைரவி. ↑ உச்சாடம்-உயர்ந்த ஆரவாரத் தொனி. கூப்பிளக்கும்-பூமியைப் பிளக்கச் செய்யும். ஆனந்தத் தேன் முகவுரை தமிழ்நாட்டில் கடவுளை நினைப்பதற்கு வாய்ப்பாகப் பல அமைப்புக்களும், பொருள்களும் வழக்கங்களும் இருக்கின்றன. கோயில்கள், புராணங்கள், நூல்கள் ஆகியவை கடவுளின் நினைவை எப்போதும் பசுமையாக இருக்கும்படி செய்கின்றன. மக்களுக்கு இடும் பெயர்களும், பண்டிகைகளும் நினைவுக்கு உரமூட்டுகின்றன. கடவுள் ஒருவனே என்ற அடிப்படையான உண்மையை நாம் மறப்பதில்லை. ஆனாலும் அன்பர்களின் விருப்பத்தை நிறைவேற்ற அவன் வெவ்வேறு திருவுருவம் கொள்கிறான் என்று நூல்கள் கூறுகின்றன. அவ்வப்போது திருவவதாரம் செய்த மூர்த்திகளும், அன்பர்களின் வேண்டு கோளுக்கு இணங்க எழுந்தருளிய மூர்த்திகளும் பல பல. திருமால் பத்து அவதாரங்கள் எடுத்தார். ஆனால் அவருடைய திருக்கோலங்கள் பத்தோடு நிற்பவை அல்ல. அவற்றையல்லாமல் வேறு வடிவங்களும் உண்டு. அந்தப் பத்திலும் ஒவ்வொன்றிலும் பல நிலைகள் இருக்கின்றன. ராமன் ஓர் அவதார மூர்த்தி, ஆனாலும் அவனுடைய கோலங்கள் எத்தனை விதமான அன்பர்களுடைய உள்ளத்தே காட்சியளிக்கின்றன. கோசலையின் கைக்குழந்தைகளாகிய கெளசல்யா ராமன் ஒரு மூர்த்தி. தளர்நடை பழகும் ராமன் ஒரு மூர்த்தி. வசிஷ்டரிடம் மாணாக்கனாக இருக்கும் ராமன் ஒரு மூர்த்தி. இப்படியே தசரத ராமன், ஆரண்ய ராமன், சீதா ராமன், கோதண்ட ராமன், பட்டாபிராமன் என்று ராமனுடைய கோலங்களும், நிலைகளும் பலவாக இருக்கின்றன. சிற்பத்திலும் ஒவியத்திலும் வடித்துக் காணும் திருவுருவக் கோலங்களின் வகை இவை. இவற்றையன்றிக் குணநலங்களை நினைக்கும் நுட்பக் கோலங்கள் பல. இவற்றைக் குறிக்கும் பெயர்கள் அனந்தம். வழிபாட்டு முறைகள், மந்திரங்கள், அர்ச்சனைகள், புராணங்கள், துதி நூல்கள் என்று ராமனைக் காட்டும் கருவிகள் பல. இப்படியே கண்ணனைப் பற்றியும் சொல்லலாம். பாகவதக் கதைகளை வைத்துப் பார்த்தால் கண்ணன் ஆயிரமாயிரம் வேறுபட்ட கோலங் கொண்டு விளங்குவது தெரியும். சிவபெருமானைப் பற்றிய எண்ணங்களின் விரிவு கரை காண முடியாதது. தமிழ்நாட்டில் அவை மிக மிக அதிகம். மகா புராணங்களில் காணப்பெறும் மூர்த்தங்கள் பல. அந்த அந்தத் தலங்களின் இறைவன் இயற்றிய திருவிளையாடல்களோடு தொடர்புடைய கோலங்கள் அளவிறந்தன. மதுரைத் திருவிளையாடல் அறுபத்து நான்கு. அவற்றோடு தொடர்புடைய கோலங்கள் அறுபத்து நான்குக்கும் மேற்பட்டவை. திருவாரூர்த் தியாகராச லீலை முந்நூற்றறுபது. ஒவ்வொரு லீலைக்கும் ஒரு கோலத்தை வைத்துக் கொண்டாலும் முந்நூற்றறுபது திருக்கோலங்களை நினைக்கலாம். முருகனுக்கும் புராணங்கள் கூறும் கோலங்கள் பல. தியான சுலோகங்களில் காட்டும் உருவங்கள் பல. அருணகிரியார் உள்ளக்கிழியில் உருவெழுதிக் கண்டவை கணக்குக்கு அடங்காதவை. அவருடைய உலகமே தனியானது. அது விரிந்து விரிந்து செல்கிறது. இப்போது கிடைக்கும் 1300 திருப்புகழைப் பார்த்தாலே அருணகிரியாரின் அன்பு விரிவையும் உள்ள விரிவையும் உணர்ந்து பிரமிக்கிறோம். அவர் இயற்றிய பதினாயிரம் திருப்புகழ்ப் பாடல்களும் கிடைத்திருந்தால்...? தெய்வங்களின் திருவிளையாடற் சிறப்பையும் திருக்கோல அழகையும் தமிழர் உணர்ந்து நுகரும் அளவுக்கு மற்றவர்கள் நுகர இயலாதென்றே தோன்றுகிறது. கல்லிலும், சொல்லிலும் தெய்வங்கள் உருக் கொண்டிருப்பதைக் கொண்டே இதைத் தெரிந்து கொள்ளலாம். தமிழில் முருகனைப் பற்றிய செய்திகள் பழங்கால முதற் கொண்டே வழங்கி வருகின்றன. சங்க நூல்களில் திருமுரு காற்றுப்படையும் பரிபாடலும் அவனைப் பாராட்டுகின்றன. அவனுடைய திருக்கோயில்களைப் பற்றிச் சொல்கின்றன. அவனை மக்கள் வெவ்வேறு வகையில் வழிபடுவதையும் காட்டுகின்றன. பின்பும் பல பெரியோர்கள் முருகனைப் பாடினார்கள். ஆனால் அருணகிரிநாதரைப் போல விரிவாகப் பாடினவர்கள் வேறு யாரும் இல்லை. அவருடைய கற்பனையும் சந்த அமைப்பும் வியக்கத் தக்கவை. அவர் இயற்றிய நூல்கள் எல்லாவற்றிலுமே சில பொதுப் பண்புகளைக் காணலாம். விரிந்த பாட்டாக உள்ள திருப்புகழிலும் கட்டளைக் கலித்துறையாக அமைந்த கந்தர் அலங்காரத்திலும் கலி விருத்தத்தாலாகிய கந்தர் அநுபூதியிலும் அருணகிரிநாதர் பாணி இருக்கும். முருகனுடைய திருவுருவ வருணனையை ஓரிடத்தில் அமைப்பார். அவன் திருநாமங்களைப் பிறிதோரிடத்தில் அடுக்குவார். அவன் குழவிப் பருவ விளையாடல்களைச் சொல்வார். வீரச் செயல்களை விரித்துரைப்பார். வள்ளியம்மைபால் காதல் பூண்ட கருணையைப் பாராட்டுவார். இவை கந்தவேளின் திருவிளையாடல்கள். தமக்கு அவனருளால் கிடைத்த இன்பத்தைச் சில இடங்களில் எடுத்துச் சொல்லி உருகுவார். தகுதியில்லாத தம்மையும் ஆண்டுகொண்ட கருணையை எண்ணி வியப்பார். அவன் திருவருளால் தமக்குக் கிடைத்த அநுபவத்தைச் சொல்ல முடியாமல் திணறுவார். தாம் தவறு செய்வது போலவும் குற்றம் மிக உடையவர் போலவும் கூறி இரங்குவார். தமக்கு அருள் செய்ய வேண்டுமென்று பணிந்து வேண்டுவார். உலகில் மக்கள் இறைவன் அருளைப் பெறாமல் வீணாகப் பிறந்திறந்து அல்லற்படுவதை எண்ணி வாடுவார். இறைவனைப் பணியுங்கள், பாடுங்கள் என்று பணிப்பார். அறம் செய்யுங்கள் என்று அறிவுரை கூறுவார். பாவச் செயல்களைச் செய்து வீணாகிறீர்களே; இவ்வாறு நடவுங்கள் என்று வழிகாட்டுவார். உயர்ந்த ஞானநெறியைச் சொல்வார். சரியை, கிரியை யோகங்ளையும் சொல்வார். முருகனைப் பாராட்டுவதோடு அவனிடம் உள்ள பொருள்களையும் போற்றுவார். அவற்றின் இயல்பை விரித்துரைப்பார். இத்தகைய முறைகளைக் கந்தர் அலங்காரத்திலும் காணலாம். கந்தர் அலங்காரத்தில் ஒரு கருத்தை அழகுபடச் சொல்வதற்குப் பலபல முறைகளை ஆளுகிறார் அருணகிரியார். அவர் அருட்புலவர். அருளநுபவமும் புலமையும் ஒருங்கே வாய்த்தவர். அருளநுபவத்தை உணர்ச்சி வசப்பட்டு, "நான் எவ்வாறு சொல்வேன்!" என்று வியப்புக்குறி போடும்போது காணலாம். புலமையை அவர் கருத்தை அமைக்கும் முறையிலிருந்து தெரிந்து கொள்ளலாம். உருவகம், உவமை, உயர்வு நவிற்சி முதலிய அலங்காரங்கள் கந்தர் அலங்காரத்தில் அழகாக அமைந்துள்ளன. கந்த புராணத்தில் முருகனுடைய திருவவதாரம் முதல், வள்ளியம்மை திருமணம் வரையில் பல வரலாறுகள் இருக்கின்றன. அதிற் கண்ட வரலாறுகளோடன்றி முருகனைப் பற்றிய வரலாறுகள் வெவ்வேறாகப் பழங்கால முதல் வழங்கி வருகின்றன. இராமாயணம், பாரதம், வடமொழிக் கந்த புராணம், குமார சம்பவம் என்னும் வடநூல்களில் முருகனைப் பற்றிய வரலாறுகள் வருகின்றன. அவை யாவும் ஒரே மாதிரி அமைந்தவை என்று சொல்ல இயலாது. பல வேறுபாடுகள் இருக்கும். ஒன்றில் காணப்பெறாத புதிய செய்திகள் வேறு ஒன்றில் இருக்கும். அப்படியே திருமுருகாற்றுப் படை, பரிபாடல் முதலிய பழந்தமிழ் நூல்களிலும் கந்த புராணத்தில் இல்லாத கதைகள் இருக்கும்.[1] அருணகிரிநாதர் வாக்கிலும் பல புதிய வரலாறுகளைக் காணலாம். முருகனையும் அவனைச் சார்ந்துள்ள பொருள்களையும் பற்றிய தத்துவங்களை அவர் பல இடங்களில் விளக்குகிறார். அவனுடைய ஆறுமுகக் கோலம் அநாதியானது என்றும் அவன் மயில் ஓங்கார உருவமுடையதென்றும் அவனைச் சிவபெருமான் வணங்கினார் என்றும் வள்ளியெம்பெருமாட்டியை வணங்கிப் பாதம் வருடினார் என்றும் அவர் கூறும் செய்திகள் புராணத்தில் காணப்படுவதில்லை. ஆனாலும் முருக்ன் அருளில் ஊறிய அவர் கூறுவன ஏற்றுக் கொள்வதற்கு உரியனவே. அப்படியெல்லாம் நடந்தனவா என்று கேட்பதற்கு நாம் யார்? "இல்லை, இல்லை; அப்படி நடக்கவில்லை" என்று சாட்சி கூறும் தகுதிதான் யாருக்கு இருக்கிறது? புலமை மிக்க கவிஞர்கள் தம்முடைய கற்பனையால் உலக நிகழ்ச்சிகளையே வேறு வகையாகக் காட்டும் உரிமை படைத்திருக்கிறார்கள். அவற்றைக் கவி ஸமயம் என்றும் புலவர் மரபு என்றும் கூறுவர். அவ்வாறே இறைவனிடம் முறுகிய பக்தி கொண்டு அவனுடைய திருவருளால் அநுபவ எல்லையிலே சஞ்சரிக்கும் பெரியார்களுக்குத் தம் உள்ளத்தில் விஞ்சியிருக்கும் உணர்ச்சியால் எழும் கற்பனைகளைச் சொல்ல உரிமை உண்டு. புலவர்களுடைய கற்பனைகளைப் பரிவும் கவியுணர்ச்சியும் கொண்டு பார்த்தால் அவற்றின் சுவையை உணரலாம். அருணகிரிநாதரைப் போன்ற அருட் புலவர்களின் வாக்குகளை நுகர்வதற்குப் பரிவு, கவியுணர்ச்சி என்ற இரண்டோடு பக்தியும் வேண்டும். அப்போதுதான் நன்றாக உணர்ந்து அநுபவிக்க முடியும். இந்தப் புத்தகத்தில் கந்தர் அலங்காரத்தில் உள்ள ஆறு பாட்டுக்களுக்குரிய விளக்கம் இருக்கிறது. முதல் மூன்று பாடல்களும் அருணகிரியார் தாம் பெற்ற அநுபவத்தை எண்ணி எண்ணி வியக்கும் நிலையிலே பாடியவை. இவை மூன்றிலும் அருணகிரியாரை அருட்கடலில் மூழ்கிக் களிக்கும் அநுபவியாகவே பார்க்கிறோம். "ஆனந்தத் தேனை, வெறும் பாழைத் தெளிய விளம்பியவா!" என்றும், "உபதேசித்தது ஒன்று உண்டு, கூறவற்றோ?" என்றும் "சும்மா இருக்கும் எல்லையுட் செல்ல எனை விட்டவா!" என்றும் அவர் சொல்லும்போது தாம் உண்ட இனிய விருந்தின் இனிமையைச் சொல்ல முடியாமல் ஏப்பம் விட்டுக் காட்டுபவரைப்போலத் தோற்றுகிறார். வியந்து நிற்பதும், சொல்ல இயலாதென்று சொல்வதும் அவருடைய உணர்ச்சிச் சிறப்பைப் புலப்படுத்துகின்றன. "ஒளியில் விளைந்த உயர்ஞான பூதரத்து உச்சியின்மேல், அளியில் விளைந்ததோர் ஆனந்தத் தேனை" என்னும்போது புலமை நிலையில் நின்று உருவகம் செய்து காட்டுகிறார். உடனே, "அநாதியிலே வெளியில் விளைந்த வெறும் வெறுந்தனியை" என்னும்போது உபநிஷத எல்லையில் நின்று பேசுகிறார். "தெளிய விளம்பியவா!" என்னும்போது அநுபவத்தை நினைந்து வேசாறும் நிலையில் இருக்கிறார். "சொல்லுகைக் கில்லையென்று எல்லாம் இழந்து சும்மா இருக்கும் எல்லையுட் செல்ல எனை விட்டவா" என்று தொடங்கும் போதே வியப்புணர்ச்சியில் மூழ்கிவிடுகிறார். அடுத்தபடி வள்ளி நாயகியினிடம் இறைவன் காட்டிய காதலை நினைந்து, "இகல்வேலன், நல்ல கொல்லியைச் சேர்க்கின்ற சொல்லியைக் கல்வரைக் கொவ்வைச் செவ்வாய், வல்லியைப் புல்கின்ற மால்வரைத் தோள் அண்ணல் வல்லபமே!” என்று பாடுகிறார். மூன்றாவது பாட்டை வள்ளிநாயகியை முதலில் நினைத்து, "தேனென்று பாகென்று உவமிக் கொணா மொழித் தெய்வவள்ளி, கோன்” என்று ஆரம்பிக்கிறார். பிறகு தமக்கு உபதேசித்ததைச் சொல்ல இயலாதே என்று வேசாறுகிறார். "எனக்கு உபதேசித்த தொன்று உண்டு, கூறவற்றோ?" என்கிறார். பிறகு சொல்ல முயல்வாரைப்போல முயன்று, முடியாதென்பதையே புலப்படுத்துகிறார்: "வாணன்று காலன்று தீயன்று நீரன்று மண்ணுமன்று, தானன்று, நானன்று, அசரீரியன்று சரியன்றே" என்று சொல்வதில் அக்கருத்தையே காண்கிறோம். பின் மூன்று பாட்டிலும் அருணகிரியார் புலமைத் திறனாலும் பக்தி உரிமையாலும் செய்யும் கற்பனை விரிகிறது. மயில் நடக்கும்பொழுது விளையும் விளைவுகளை ஒரு பாட்டிலும், சேவல் சிறகடிக்கும்பொழுது விளைவதை ஒரு பாட்டிலும், திருவரைக் கிங்கிணி ஓசையினால் விளைவதை ஒரு பாட்டிலும் கூறுகிறார். இந்தக் கற்பனைக் காட்சிகள் வேறு ஒருவர் கூறியன அன்று. அருணகிரியாரே மனக் கண்ணிலே உருவாக்கிக் கண்டு கூறுபவை. கந்தபுராணத்திலோ முருகன் வரலாற்றைக் கூறும் வேறு நூலிலோ இந்த நிகழ்ச்சிகள் உள்ளனவா என்று தேடிப் பார்த்துக் காண இயலாது. கற்பனையானாலும் அவற்றினூடே ஒரு கருத்தும் இருக்கும். சமய நூல்களில் இப்படி ஒரு குறிப்பு இருப்பதைப் பழைய உரையாசிரியர்களின் உரைகளிலிருந்து தெரிந்து கொள்ளலாம். இந்த உள்ளுறையை இந்தச் சொற்பொழிவுகளில் ஓரளவுக்கு விரிக்க முயன்றிருக்கிறேன். இன்னும் சிறப்பான உள்ளுறை வேறு அறிஞர்களுக்குத் தோன்றலாம். இதுதான் வரையறையான உள்ளுறை என்று சொல்ல மாட்டேன். ஆயினும் இவை ஓரளவு பொருந்தும் என்றே எண்ணுகிறேன். கூர்ந்து உணர்ந்து பொருத்தத்தை ஆராயும்படி அன்பர்களை வேண்டுகிறேன். ★ அலங்கார மாலையில் மூன்றாவது புத்தகம் இது. முன் இரண்டும் எப்படி உருவாயினவோ அதே முறையில்தான் இதுவும் உருவாயிற்று. சுருக்கெழுத்தால் உருவாக்கித் தரும் அன்பர் திரு.அனந்தன் மேலும் மேலும் தம் அன்பை வழங்கி உபசரிக்கிறார். தேனாம்பேட்டை ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் அறக்காப்பாளர் மூவரும் தம் ஆர்வத்தை என்பால் வளர்த்து வருகின்றார்கள். இவர்களுடைய அன்பை எனக்குக் காணியாக்கித் தந்த முருகன் திருவருளை எண்ணி வாழ்த்துவதையன்றி வேறு என் செய்யவல்லேன்! கி.வா. ஜகந்நாதன் 10.08.1956  ஆனந்தத் தேன் அநுபவமும் வியப்பும் முருகவேளின் வெற்றிப் பிரதாபத்தைப் பேய்களின் விளையாட்டு மூலமாக உணர்த்தினார் அருணகிரிநாதர். பழைய மரபைப் பின்பற்றி முருகன் போர்க்களத்திலே வென்று களவேள்வி செய்த செய்தியைச் சொன்னார். பிறகு, என்னுடைய மனமயக்கத்தைத் தீர்த்தருள வேண்டுமென்று வேண்டிக் கொண்டார். நம்முடைய பிரதிநிதியாக இருந்து நாம் செய்ய வேண்டிய விண்ணப்பத்தை அவர் செய்தார். ஆண்டவனுடைய திருவருளால் இன்ப அநுபவத்தைப் பெற்றவர் அவர். கந்தர் அலங்காரத்தில் முதல் பாட்டிலேயே, "பிரபஞ்சம் என்னும் சேற்றைக் கழிய வழி விட்டவா" என்று அந்த அநுபவத்தை எடுத்துச் சொன்னார். மேலும் பல பல பாட்டுக்களில் தம் அநுபவத்தைப் பேசுகின்றார். அப்படிச் சொல்கிற பாட்டு ஒன்றை இப்போது பார்க்கலாம். ஒளியில் விளைந்த உயர்ஞான பூதரத் துச்சியின் மேல் அளியில் விளைந்ததோர் ஆனந்தத் தேனை அநாதியிலே வெளியில் விளைந்த வெறும்பாழைப்பெற்ற வெறுந்தனியைத் தெளிய விளம்பிய வாமுகம் ஆறுடைத் தேசிகனே! "முருகன் ஆறுமுக நாதனாகிய பரமகுரு. அவன் எனக்குச் செய்த உபதேசத்தின் பெருமையை என்ன என்று சொல்வேன்!" என்று ஆச்சரியப்படுகிறார் அருணகிரியார். மிகவும் தாழ்ந்த நிலையில் உள்ள ஒருவன் உயர்ந்த நிலைக்கு ஏறிக் கீழே உற்று நோக்கினால் ஆச்சரியம் உண்டாகும். தரையில் இருந்தவன் மலை உச்சிக்குப் பறந்து போய்விட்டான் என்றால், அங்கிருந்து தரையை நோக்கும் போது பேராச்சரியம் உண்டாவது இயல்பு தான். அருணகிரியார் ஆச்சரியப்படுகின்ற பல பாடல்களைக் கந்தர் அலங்காரத்தில் பார்க்கலாம். முதல் பாட்டு அவர் வியப்பிலே மூழ்கிப் பாடியது. "பிரபஞ்சம் என்னும் சேற்றைக் கழிய வழிவிட்டவாறு என்னே!" என்பதில் வியப்பு இருக்கிறதல்லவா? இப்போது முகமாறுடைத் தேசிகன் விளம்பிய உபதேசத்தை நினைந்து வியப்படைகிறார். தேசிகன் தேசிகன் என்பது குருவைக் குறிக்கும் சொல். இன்ப அநுபவத்தைப் பெறும்படி உபதேசம் செய்த தேசிகன் முருகன். உலகத்திலுள்ள மக்களுக்கு நல்ல குணம் படைத்த மக்கள் குருக்களாக இருக்கிறார்கள். அந்தப் பெரியார்களுக்கு உலகப் பற்றுகளை எல்லாம் ஒழித்துவிட்டு, இந்திரிய நிக்கிரகம் செய்த துறவிகள் குருக்கள். இந்தத் துறவிகளுக்குப் பழங்காலம் முதற் கொண்டே ஒரு குரு பரம்பரை இருந்து வருகிறது. அந்தப் பரம்பரையில் பழையவர்கள் சனகர் முதலிய நான்கு பேர்கள். இந்த நான்கு பேர்களுக்கும் குருநாதர் இன்னாரென்று யாவரும் அறிவர்; அவரே தட்சிணாமூர்த்தி. ஒவ்வொரு கோயிலிலும் தெற்கு நோக்கி வீற்றிருக்கிற பெருமான் தட்சிணாமூர்த்தி. அவரைக் குருமூர்த்தி என்று சொல்வார்கள். குரு பரம்பரை அவரோடு நின்றுவிடவில்லை. அவருக்கும் மேலே போகிறது. சிறந்த குருவாய் இருக்கிற தட்சிணாமூர்த்தியும் ஒரு சமயத்தில் மாணவராக இருந்தார். மற்றவர்களை நோக்க எல்லோருக்கும் பரம குருவாய் இருக்கின்ற தட்சிணாமூர்த்தி வேறு ஒருவனை நோக்க மாணவராக இருந்தார். அவன்தான் குமரகுருபரன். குருமூர்த்திகளுக்குள் உயர்ந்தவன் ஆதலாலே குருபரன் என்ற பெயர் பெற்றான். குமரன் ஆகையினாலே அவனைக் குமரகுருபரன் என்று வழங்குவார்கள். சிவபெருமானுக்குப் பிரணவப் பொருளை உபதேசம் செய்கின்றபோது முருகன் குருவாய் இருந்தான். சிவபெருமானுக்கே குருவாய் இருந்த நல்ல புகழ் உடையவன் என்றால், அவன் ஆத்துமாக்களுக்கு நல்லுபதேசம் செய்வான் என்று சொல்லவும் வேண்டுமா? தமக்கு அவன் உபதேசம் செய்ததனாலே தாம் அடைந்த இன்ப அநுபவங்கள் என்ன என்பதை இந்தப் பாட்டில் பேசுகின்றார். "ஆறுமுகமுடைய தேசிகன், குருநாதன் எனக்கு என்ன எல்லாம் காட்டினான் தெரியுமா?" என்று தாம் அடைந்த இன்ப அநுபவத்தைச் சொல்ல வருகிறார். முதலில் அந்த அநுபவத்தை இனிமையுடைய தேனாகச் சொல்கிறார். மலையின் தோற்றம் ஒருவன் ஒர் ஊருக்குச் சென்றான். நட்ட நடு இரவில் பன்னிரண்டு மணி நேரத்தில் சென்றான். இன்ன வீதி, இன்ன வீடு, இன்ன பொருள் என்ற அடையாளங்களே தெரியவில்லை. ஒரே கும்மிருட்டாக இருந்தால் எப்படித் தெரியும்? இரவு கழியட்டும் என்று அவன் பேசாமல் ஓர் இடத்தில் படுத்துக் கொண்டுவிட்டான். காலை ஆறு மணி ஆயிற்று. கொஞ்சம் தெளிவு உண்டாயிற்று. ஒளிப்பிழம்பான சூரியன் தன் செங்கதிர்களைப் பரப்பிக் கொண்டு கீழ்த் திசையிலே தோன்றினான். அப்பொழுது பார்த்தால் எதிரே உள்ள பொருள்கள் எல்லாம் தெரிந்தன. தான் தங்கியிருக்கும் இடம் தெரிந்தது; வீடு தெரிந்தது; மக்கள் எல்லாம் தெரிந்தார்கள். அவ்வளவு மாத்திரமா? அந்த ஊருக்கு மிக அருகிலேயே உள்ள ஒரு பெரிய மலை தோன்றியது. இரவில் அந்தப் பெரிய மலை தோன்றவில்லை. அந்த ஊரிலிருந்த குளம் குட்டைகளும் தோன்றவில்லை. ஒரே இருட்டாக இருந்ததுதான் காரணம். அந்த இருட்டு அவனுக்கு மிக உயர்ந்த மலையையும் காட்டவில்லை; மிகப் பள்ளமான குளத்தையும் காட்டவில்லை. ஆனால் காலையில் சூரியன் ஒளி பரவிய மாத்திரத்திலே பொருள்கள் யாவும் இயற்கை உருவத்தோடு, நிறத்தோடு தோன்றின. பச்சைப் பசேல் என்று உள்ள வயற்காட்டைப் பார்த்தான். சோலைகளிலே பல வண்ணங்களோடு மலர்ந்திருக்கின்ற மலர்களைப் பார்த்தான். பள்ளமான குளங்களைப் பார்த்தான். மிக உயர்ந்திருக்கிற மலையையும் பார்த்தான். இரவு தான் படுத்து உறங்கிய இடத்தைப் பார்த்தான். "அடடா, மிக அழுக்கான இடத்திலே, ஒரு குட்டிச்சுவருக்கு அருகில் அல்லவா நாம் படுத்து உறங்கியிருக்கிறோம்?" என்றும் உணர்ந்தான். ஆடையெல்லாம் ஒரே புழுதி படிந்திருப்பதையும் கண்டு வெட்கப்பட்டான். நாம் படுத்திருந்த இடத்திற்கு மிக்க அண்மையில் இருந்த மலை நம் கண்ணில் படவில்லையே! எனப் பெரிதும் வியப்பு எய்தினான். இருட்டு அவன் கண்ணில் எந்தப் பொருளும் படாதபடி செய்துவிட்டது. எல்லாப் பொருளும் ஒரே கறுப்பாகத் தான் அவனுக்குத் தோன்றியது. சிறிய பொருளாக இருந்தாலும் சரி, பெரிய பொருளாக இருந்தாலும் சரி அதனை மறைப்பது இருட்டு. ஒளி வந்தபின் அவன் மலையைப் பார்க்கிறான்; மடுவைப் பார்க்கிறான்; எழில் மிக்க மலரைப் பார்க்கிறான். 'அடடா! இவை யாவும் நம் கண்ணில் படாதவாறு இருந்தது என்னே!' என்று வியப்பு எய்துகிறான். மேல் நாட்டில் ஆர்க்கிமிடீஸ் என்ற விஞ்ஞானி ஒரு புதிய பொருளைக் கண்டுபிடித்தபோது, கத்திக் கொண்டு குதித்தானாம். ஒரு புதிய பொருளைக் கண்டுபிடித்தால் வியப்பு உண்டாகும். இந்த மனிதனும் வியப்பில் மூழ்கினான். அவன் கண்டுபிடித்தது சாமானியமான பொருளா? மிக உயர்ந்து நிற்கும் மலை. அந்த இடத்தில் திடீரென்று மலை முளைத்ததா? இல்லை. முன்பே இருந்த அந்தப் பெரிய மலையை, இருட்டுச் சூழ்ந்து கொண் டிருந்ததால், அவன் பார்க்கவில்லை. ஒளி தோன்றியவுடனேயே அந்த மலை அவன் அதிசயிக்கும்படியாக அவன் கண்ணில் தோன்றியது. புதியதாக அங்கே வந்து நின்றது போல இருந்தது அவனுக்கு. உடனே அதன் மேலே ஏற வேண்டு மென்று விரும்பினான். இருட்டிலே நேராக இருக்கின்ற பாதைகூடத் தெரியாது; சிறிய ஒளியின் துணை இருந்தால் நேரான பாதை தெரியும். ஆனால் கரடு முரடாக இருக்கிற ஒற்றை அடிப்பாதை தெரியாது. நல்ல ஒளி இருந்தால் என்ன கவலை? நேராக இல்லாத பாதையாக இருந்தாலும், காலை தூக்கி வைத்து ஏறுகின்ற செங்குத்துப் பாதையாக இருந்தாலும் நன்றாகத் தெரியும். ஆகவே, அவன் நல்ல ஒளியின் உதவியைக் கொண்டு மலை மேலே மெல்ல மெல்ல ஏறிப் போனான். மலை ஏற ஏற அவன் இருக்குமிடம் பூமி மட்டத்திலிருந்து உயர்ந்து கொண்டே போயிற்று. பார்வை விரிதல் நிலத்தில் இருக்கும்பொழுது குறுகிய இடமே அவன்கண்ணில் பட்டது. வீட்டுக்குள் இருந்தால் அந்த வீட்டுக்குள் இருக்கும் பொருள்கள் மட்டுமே தோன்றும்; வீதி தெரியாது; வீதியில் போகின்றவர்கள் யார் என்று தெரியாது. ஆனால் வீதிக்கு வந்தால் அந்த வீதியில் இருக்கிற பொருள்கள் எல்லாம் தோன்றும்; பக்கத்து வீதியில் உள்ள பொருள் ஒன்றும் தெரியாது. மலையின் மேல் ஏறிப் பார்த்தால் அந்த ஊர் முழுவதையும் பார்க்க முடியும். பத்தடி உயரம் ஏறிவிட்டால் அதற்கு ஏற்றபடி முன்பிலும் விரிவான பகுதி அவன் கண்ணில் படும். ஐம்பதடி ஏறினால் பின்னும் விரிவான நிலப்பரப்பைப் பார்க்கலாம். உயர செல்லச் செல்ல அவன் பார்வை விரியும். பார்வை விரிவதாவது என்ன? அவன் கண்ணில் படுகிற பொருள்கள் விரிந்தன. குறுகிய எல்லைக்குள் சில பொருள்களைப் பார்த்த அவன் கண்கள் மிக விரிந்த எல்லைக்குள் பல பொருள்களைப் பார்த்தன. அவன் கண்கள் விரியவில்லை. பார்வைப் பொருள்கள் விரிந்தன. அதாவது, அவன் உயரத்தில் ஏற ஏறப் பார்வையை முட்டுகின்ற தடைகள் கீழே போய் விட்டன. வீட்டுக்குள் இருந்தபோது அவன் பார்வை குறுகி இருந்ததற்குக் காரணம் கண் குறுகியதாக இருந்தது அன்று. பார்வை விரிந்து போகாதபடி சுற்றியுள்ள தடைகள் தடுத்தன; வீதிக்குப் போகமுடியாதபடி சுவர்கள் தடுத்தன. வீதிக்கு வந்த பிறகு அடுத்த விதிக்குப் போக முடியாதபடி பெரிய பெரிய மாளிகைகள் தடுத்தன. வெளியே வந்த பிறகு கண்ணுக்கு எட்டிய தூரம் பார்க்க முடியாதபடி தோப்புத் துரவுகள் தடுத்தன. அவன் மலையின் மேலே போகப் போகத் தடைகளுக்கு மேல் சென்றான். முயற்சியினாலே அவன் உயரப் போனான். அது மாத்திரம் அல்ல. உயரப் போகப் போக பல தடைகள் தாழ்ந்து போயின. அவன் பார்வை விரிந்து போக முடியாதபடி தடுத்து நின்ற பொருள்கள் கீழே போகப் போகக் கண்டறியாதன கண்டேன் என்று குதித்தான். அந்தப் பொருள்கள் எல்லாம் புதியனவாக அங்கே வரவில்லை. அவன் வசிக்கின்ற இந்த உலகத்தில் முன்பே பார்க்க முடியாதபடி இருந்தன; அவ்வளவுதான். அமெரிக்காவுக்குப் போய் அங்கே உள்ள பொருள்களை ஒருவன் பார்க்கிறான். அங்கே போகாதபோது அந்தப் பொருள் தெரிவது இல்லை. அமெரிக்காவில் உள்ள பொருள் தெரியாமல் இருப்பது ஆச்சரியம் அன்று. நாம் வாழும் இந்தியாவிலேயே நாம் பாராத பொருள்கள் எத்தனையோ உண்டு. நம் ஊரிலே க.சொ.-17 அடுத்த வீதியில் ஒரு முருகன் கோயில் இருக்கிறது; அங்கே முருகனுக்கு அலங்காரம் பண்ணியிருக்கிறார்கள் என்று தெரிந்தாலும் அதனைப் போய் நாம் பார்க்கிறது இல்லை. பார்க்க முடியாதபடி நமது பார்வையைத் தடுக்கின்ற தடை ஒன்று இருக்கிறது. வீட்டுக்குள் இருப்பவனுக்கு வீதியில் இருக்கிற பொருள் தெரியாதபடி தடுக்கின்றது சுவர். அதைப்போல மனத்திலே இருக்கிற மாயையாகிய சுவர் வெளியில் உள்ள பொருள்களைத் தெரிந்து கொள்வதற்குப் பெருந்தடையாக இருக்கின்றது. குணம் என்னும் குன்று மலைமேல் ஏற ஏற அவன் பார்வைக்கு தடையாக இருந்தவை கீழே போகின்றமையால் அவன் மிக விரிந்த வெளியில் உள்ள பொருள்களை எல்லாம் பார்க்கிறான். அதைப் போல நம் மனம் இன்றைக்கு இருக்கும் தாழ்ந்த நிலையிலிருந்து உயர வேண்டும். மனத்திலே நல்ல குணங்கள் அமைந்து உயர வேண்டும். “குணமென்னுங் குன்றேறி நின்றார்" என்கிறார் வள்ளுவர். நல்ல குணம் என்னும் மலையின் மீது மனம் ஏற ஏற அதன் பார்வை விரிகிறது. தடையாக இருக்கின்ற பொருள்கள் எல்லாம் கீழே போகின்றன. அவை நமது பார்வையைத் தடுப்பதில்லை. குணம் என்னும் குன்றேறிப் பார்த்தால் நில உலகம் எல்லாம் நல்லதாகத் தெரியும். ஒரு சமயம் தருமபுத்திரனைப் பார்த்து, "இந்த உலகத்தில் யாராவது கெட்டவன் இருக்கிறானா, பார்த்து வா" என்று கண்ணன் கேட்டானாம். அதைப் போலவே துரியோதனனைப் பார்த்து, "இந்த உலகத்தில் யாராவது நல்லவன் இருக்கிறானா, பார்த்து வருக" என்று பணித்தானாம். துரியோதனன் எங்கெங்கோ போய்ப் பார்த்தான். அவனுக்கு ஒரு நல்லவன்கூடக் கிடைக்கவில்லை. கடைசியில் அவன், "இந்த உலகத்திலுள்ளவர்கள் எல்லோரும் போக்கிரிகள், நல்லவன் ஒருவன்கூட இல்லை" என்று சொல்லிக் கொண்டு வந்துவிட்டான். ஆனால் தருமபுத்திரனுக்கோ பார்க்கிறவர் எல்லோரும் நல்லவர்களாகவே தோன்றினார்கள். ஒருவன் திருடியதைப் பார்த்தான். "அவன் வறுமை யினால்தானே திருடினான்? வயிற்றுக்கு உணவு கிடைத்திருந்தால் அவன் திருடி இருப்பானா?" என்று எண்ணினான். அவன் குணம் என்னும் குன்றேறி நின்றவன் அல்லவா? அந்தத் திருடன் புரிகின்ற செயலுக்கு அப்பாலே அதற்கு மூல காரணம் இன்னதென்று உணர்ந்தான். ஆகவே, உலகத்திலே இயல்பாகக் கெட்டவர்கள் என்று யாரும் இல்லை என்பதாக உணர்ந்தான். "குறுகிய மனப்பான்மை கூடாது. விரிந்த மனோபாவம் வேண்டும்" என்று அரசியல்வாதிகள் சொல்கிறார்கள். எங்கே ஏறினால் விரிந்த மனோபாவம் வரும்? மேடையில் ஏறினால் வராது. குணம் என்னும் குன்றேறி நிற்பவர்களே விரிந்த மனோபாவம் உடையவர்கள். மலைத் தேன் மேலே ஏற ஏறக் கண்ணில் படுகின்ற காட்சிப் பொருள் விரிந்து போகும். "அடடா இவ்வளவு நாளாக இந்தப் பொருள்கள் நம் கண்ணில் படாதது என்னே!" என்று வியப்புணர்ச்சி மேலிடும். முன்னே சொன்ன மனிதன் மலை உச்சிக்குப் போய்விட்டான். உச்சியிலே போய்ப் பார்த்தால் அங்கே சந்தன மரங்கள் உயர்ந்து வளர்ந்திருந்தன. சந்தன மரமே உயரமானது. அதுவும் மலை உச்சியின் மேலே வளர்ந்து மிக உயர்ந்து ஓங்கி நிற்கிறது. அந்த மரத்தின் உச்சிக் கொம்பிலே யாரும் தொடாததேன் அடை இருந்தது. மனிதர்கள் வாழ்கிற இடத்திலே இருந்திருந்தால் ஒரு நாள்கூட விட்டு வைத்திருக்க மாட்டார்கள். நெருப்பைப் போட்டுக் கொளுத்தி, வண்டுகளைக் கொலை செய்து தேனை எடுத்துக் குடித்திருப்பார்கள். இங்கோ மனிதன் கண் படாத மலை உச்சியின் மேலேயுள்ள சந்தன மரத்தின் கொம்பில் அந்தத் தேன் அடை இருந்தது; அந்தத் தேன் எப்படி இருக்கும்? “தாமரைத் தண்தாது ஊதி மீமிசைச் சாந்தில் தொடுத்த தீந்தேன் போல' என்று நற்றிணையில் ஒரு பாட்டு வருகின்றது. ஒரு நாயகி உயர் குணங்கள் நிரம்பப் பெற்ற தன்னுடைய நாயகனுடைய அன்புக்கு உவமையாக அதனைச் சொல்கிறாள். "என் நாயகன் அன்பு மிக உயர்ந்தது. உயர்ந்தது மாத்திரம் அன்று; இனியது. இனியது மாத்திரம் அன்று, தூயது, கிடைத்தற்கு அரியது" என்று சொல்ல வருகிறாள். இவை எல்லாவற்றையும் அந்த உவமையைச் சொல்வதன் வாயிலாகப் புலப்படுத்துகிறாள். கீழேயுள்ள தண்ணிய பொய்கையில் தாமரை மலர் மலர்ந்திருக்கிறது. வண்டுகள் அதிலேயுள்ள தேனை எடுத்துச் சென்று மலை உச்சியின் மேலுள்ள சந்தன மரத்தின் கொம்பில் வைக்கின்றன. அது தாமரைத் தேன், தாமரையிலே அது இருக்குமானால், குளத்தில் இறங்கிக் குளிக்கிற எருமை மாடுகள் அந்த மலர், அதன் தேன் எல்லாவற்றையும் வீணாக அடித்திருக்கும். ஆனால் அந்த இனிமையான தேனை வண்டுகள் எடுத்துப் போய்விட்டன. எளிதில் பிறருக்குக் கிடைப்பதற்கரிய மலையின் உச்சிக்கு எடுத்துப் போய் உயர்ந்து வளர்ந்திருக்கும் சந்தன மரத்தில் கட்டிய அடையில் வைத்திருக்கின்றன. அந்தத் தேனைப் போல இனிய, உயர்ந்த, அரிய அன்பு என்னுடைய நாயகன் அன்பு" என்று அந்தத் தலைவி பேசுகின்றாள். மலையின் உச்சியில் உள்ள சந்தன மரத்தேன் மிகச் சிறந்தது என்பதை அந்தப் பாட்டினால் அறியலாம். ஆனந்தத் தேன் பூமியில் இருப்பவர்களுக்கு, மிகவும் தாழ்ந்த நிலையிலேயே இருப்பவர்களுக்கு, அந்தத் தேன் இருப்பது எப்படித் தெரியும்? மலையில் ஏறி உச்சிக்குப் போனால் தெரியும் முதலில் மெல்ல மெல்ல ஏறினால் இதுவரையிலும் பார்க்க முடியாதிருந்த பொருள்கள் கொஞ்சம் கொஞ்சமாகத் தோன்றும். பார்வைக்குத் தடையாக இருந்த பொருள்கள் கீழே போய்விடும். மலையின் உச்சியை அடைந்துவிட்டால் அங்கே வளர்ந்திருக்கும் சந்தன மரம் தெரியும். அதன் கிளையிலே கட்டியுள்ள தேன் அடை தெரியும். அந்தத் தேனைச் சாப்பிட்டால் எப்படி இருக்கும்! அத்தகைய சுவையான அரிய தேன் தமக்குக் கிடைத்ததாக அருணகிரியார் சொல்கின்றார். அதை ஆனந்தத் தேன் என்கிறார். அவருக்கு அந்தத் தேன் எப்படிக் கிடைத்தது? "முகம் ஆறுடைத் தேசிகன் அதை நுகர எனக்கு வழிகாட்டினான். அவன் முதலில் காட்டிய அருள் ஒளியினால் என்னைச் சுற்றி நின்ற இருள் அகன்றுவிட்டது. எங்கே பார்த்தாலும் ஒளி பரவியது. இதுவரையிலும் என்னைச் சுற்றியுள்ள பொருள்கள் இன்னவென்று தெரிந்து கொள்ளாமல் இருந்தவன் யாவையும் தெரிந்து கொண்டேன். அவற்றுக்கு அருகிலேயே இருந்தது ஒரு மலை. அந்த ஞான மலையின் உச்சியின்மேலே இருந்த தேனை நான் கண்டு சுவைத்து இன்புறும்படியாக அவன் உபதேசித்தான். அவன் அப்படி உபதேசித்தவாறு என்னே!" என்று பேசுகிறார். ஒளியில் விளைந்த உயர்ஞான பூதரத்து உச்சியின்மேல் அளியில் விளைந்ததோர் ஆனந்தத் தேனை ... ... ... ... ... ... தெளிய விளம்பிய வாமுகம் ஆறுடைத் தேசிகனே! 'முகம் ஆறுடைத் தேசிகன் நான் தெளியுமாறு உபதேசித்தது என்ன ஆச்சரியம்!' என்கிறார். எதை உபதேசித்தான்? ஆனந்தத் தேனை நான் நுகரும்படியாக உபதேசித்தான். அந்தத் தேன் எப்படிப்பட்டது? ஒளியில் விளைந்த உயர்ஞான பூதரத்து உச்சியின்மேல் அளியில் விளைந்தது ஒளியில் - தன் அருள் ஒளியினால், விளைந்த-உயர்ந்து ஓங்கி வளர்ந்திருந்த, உயர் ஞான பூதரத்து உச்சியின்மேல் - உயர்ந்த ஞானமாகிய மலையின் உச்சியின் மேலே, அளியில்-அன்பிலே, விளைந்தது-பழுத்து முதிர்ந்தது. எது? ஆனந்தத் தேன்; ஆனந்த அநுபவமாகிய தேன். இந்த இருண்ட உலகத்திலே சூரியன் ஒளி பட்ட மாத்திரத்தில் ஊர் தெரிந்தது, ஊரிலுள்ள வீடு வாசல்கள் எல்லாம் தெரிந்தன. அந்த ஊருக்கு அருகிலுள்ள மலை தெரிந்தது. அந்த மலையின் மேலே ஏறிப் போனேன். மலை உச்சியிலே மரத்தின் மேல் தேன் இருந்தது. மலைத் தேன் உயர்ந்தது அல்லவா? அந்தத் தேன் சூரியன் ஒளியாலே கிடைத்தது என்று ஒருவன் சொல்வதுபோல உருவகப் படுத்தி அவர் பேசுகிறார். தேன் என்பது எதைக் குறிக்கிறது? இன்ப அநுபவங்களைக் கூற இயலாது. சிற்றின்பமாக இருப்பினும் பேரின்பமாக இருப்பினும் வார்த்தைக்குள் அடங்காது. சர்க்கரை இனிக்கும் என்று சொல்கிறோம். "எப்படி இனிக்கும்?" என்று கேட்டால் வேறு பொருள் எதையாவது சுட்டிக் காட்டித்தான் விளக்க முடியுமே அன்றி வார்த்தை அளவைக் கொண்டு விளக்க முடியாது; அல்லது சர்க்கரையை வாயில் போட்டுத்தான் அந்த இனிப்பு அநுபவத்தை உணர்த்த வேண்டும். இறைவனுடைய அருளால் கிடைக்கும் அருளநுபவங்களும் அத்தகையனவே. தாய்க்கும் மகளுக்கும் நெருங்கிய அன்பு உண்டு. தாய் எத்தகைய பரம இரகசியங்களையும் தன் மகளிடம் சொல்வாள். ஆயினும் மணாளனோடு ஆடிய இன்பத்தைச் சொல் என்று மகள் கேட்டால் அதனை அவள் எப்படிச் சொல்வாள்? சொல்ல வேண்டுமென்ற ஆசை இருந்தாலும் சொல்ல முடியாது. "மகட்குத் தாய்தன் மணாளனோ டாடிய - சுகத்தைச் சொல்எனிற் சொல்லுமாறு எங்ங்னே?” (திருமூலர்) குறிப்பாகச் சொல்லுதல் இந்திரியங்களுக்கு உட்பட்டு நாம் அநுபவிக்கிற சிற்றின்பமே எடுத்துச் சொல்வதற்கு அரியதாக இருக்கிறதென்றால், இந்திரியங்களுக்கு அப்பாற்பட்ட நிலையில் கிடைக்கும் பேரின்பத்தை எப்படிச் சொல்லில் அடக்கிச் சொல்ல முடியும்? ஆனாலும் அதை உபமான வாயிலாகப் பெரியோர்கள் சொல்வார்கள். தமக்குத் தெரிந்த ஒன்றைப் பிறருக்கும் சொல்ல வேண்டுமென்ற கருணையுடையவர்கள் அவர்கள். சொல்லக் கூடியவற்றையே, இரகசியமான பாஷையில் (Code) அரசியல் துறையில் சொல்லுகிறார்கள். அந்த இரகசிய பாஷை தெரிந்தவர்களுக்கு மட்டுமே அது தெரிய வேண்டும், பிறருக்குத் தெரியக் கூடாது என்பதுதான் காரணம். அதைப்போலவே சமயத் துறையிலும் பல சித்தர்கள் தாங்கள் அடைந்த இன்பப் பேற்றை, சொல்ல முடியாத இன்ப அநுபவங்களை, குறிப்பாகப் பல பாடல்களில் குறிப்பித்தார்கள். அந்தப் பாடல்களை நாம் எவ்வளவு முறை படித்தாலும் ஒன்றும் புரியாது. மிகவும் வேடிக்கையாக இருக்கும். சில சமயங்களில் அர்த்தமற்ற பாட்டாகக்கூட இருக்கும். சொல்லக்கூடாது என்பதற்காகச் சொல்வது அன்று இது, சொல்ல முடியாமையால் இப்படிச் சொல்கிறார்கள். பல சித்திரங்களைப் பார்க்கிறோம். ஒரு பெண் ஒரு பாத்திரத்தைக் கீழே போட்டு விட்டாள். கீழே விழுந்த பாத்திரம் 'டங்'கென்று ஒசையை எழுப்பிற்று என்று வைத்துக் கொள்வோம். பெண்மணியையும், கீழே விழுந்த பாத்திரத்தையும் ஓவியக்காரர் படம் போட்டுவிடுகிறார். டங்' என்ற ஓசையைப் படத்தில் காட்ட அவர் என்ன செய்கிறார்? அந்தப் பாத்திரத்தைச் சுற்றி சிறு சிறு கோடுகளைப் போடுகிறார். அந்தக் கோடுகள் பாத்திரம் கீழே விழுந்தபோது ஏற்பட்ட ஓசையைக் குறிப்பிக்கின்றன. ரோடுகளில் சில இடங்களில் ஒரு பையன் ஒடுவதைப் போன்ற படம் ஒன்றை எழுதி வைத்திருப்பார்கள். அதைப் பார்த்தால் நமக்கு ஒன்றும் விளங்காமல் இருக்கலாம். ஆனால் மோட்டார் ஒட்டிகளுக்கு, "இங்கே பள்ளிக்கூடம் இருக்கிறது. பையன்கள் நடமாடுவார்கள். காரை மெதுவாக ஒட்டு" என்ற பொருளை அது உணர்த்துகின்றது. அதை ஏன் படம் போட்டு அப்படிக் குறிப்பிக்க வேண்டுமென்றால், “இங்கே பள்ளிக்கூடம் இருக்கிறது. காரை ஜாக்கிரதையாகப் பார்த்து ஒட்ட வேண்டும்" என்று நீளமாக எழுதி வைத்திருந்தால் வேகமாகப் போகிறவர்கள் அதனை நின்று படித்துப் பார்த்துவிட்டு, அதற்குத் தக்கபடி ஒட்ட முடியுமா? கண்ணில்பட்ட மாத்திரத்திலேயே, அதனைப் பார்க்கிறவனுக்கு அதன் குறிப்புப் பொருள் தோன்ற வேண்டும் என்பதற்காகவே அப்படிச் செய்கிறார்கள். இது உலக வழக்கம். குறிப்பாக விளக்கும் முறையினால், விளக்க முடியாதவற்றையும் பெரியவர்கள் புலப்படுத்துவார்கள். சித்தர்கள் அப்படி விளக்குவதை இங்கே ஒர் உதாரணத்தால் பார்க்கலாம். சித்தர் பாட்டு "மாங்காய்ப்பால் உண்டு மலைமேல் இருப்பார்க்குத் தேங்காய்ப்பால் ஏதுக்கடி? - குதம்பாய்! தேங்காய்ப்பால் ஏதுக்கடி?” என்று சித்தர் ஒருவர் பாடுகிறார். குதம்பைச் சித்தர் பாடல் இது. இதனை வெளிப்படையாகப் பார்த்தால் வேடிக்கையாக இருக்கும். இன்ப அநுபவத்தைப் பெறுகிறவர்களில் இரண்டு வகையினர் இருக்கிறார்கள். சிலர் தம்மளவில் இன்ப அநுபவத்தைப் பெற்று, அதனைப் பிறருக்குச் சொல்லாமல் போய்விடுவார்கள். சிலர் தாம் பெறுவதோடுகூடப் பிறருக்கும் உணர்த்த எண்ணி, அது சொல்ல முடியாததாதலால் குறிப்பாக உணர்த்திப் போவார்கள். அப்படிப்பட்ட மெய்ஞ்ஞானிகளே சித்தர்கள். "மாங்காய்ப்பா லுண்டு மலைமேல் இருப்பார்க்குத் தேங்காய்ப்பால் ஏதுக்கடி? - குதம்பாய்! என்ற பாட்டைப் பார்த்தால் என்ன விளங்குகிறது? மாங்காய்ப் பால் என்றால் என்ன? மலைமேல் அதை உண்ணுவது என்பது என்ன? பச்சை மாங்காயைக் கிளையில் இருந்து ஒடிக்கும்போது பால் சொட்டும். அதற்குத்தான் பால் என்று பெயரேயன்றி மாங்காய்க்குள் இருக்கும் சாற்றைப் பால் என்று சொல்ல மாட்டார்கள். மாங்காயின் காம்பிலிருந்து வருகின்ற பால் எப்படிப்பட்டது என்பது நமக்குத் தெரியும். குழந்தைகள் அதனைக் கடிக்கும் போது தப்பித் தவறி அந்தப் பால் உதட்டிலே பட்டுவிட்டாலே புண் உண்டாகிவிடும். மேலே பட்டால் புண்ணாகும். அந்தப் பாலையே உண்பவன் எத்தகையவனாக இருக்க வேண்டும்? அந்த ஆசாமி நெருப்பைச் சாப்பிடுகிறவனாகத்தான் இருக்க வேண்டும். அந்தப் பாலை அவன் உண்டு மலை மேலே இருக்கிறான்; அமைதியாக இருக்கிறான். அவன் பெரிய பேர்வழி அல்லவா? இதன் பொருள் என்ன? பிறருக்குத் துன்பத்தைத் தருகின்ற ஒன்று அவனுக்குத் துன்பம் தரவில்லை. எல்லோருக்கும் துன்பத்தைத் தருகின்றவை பொறிகள். அவை இந்த உடம்பில் இருந்தாலும் அவை அவனுக்குத் துன்பத்தைக் கொடுப்பதில்லை. நாம் நம்முடைய ஐந்து பொறிகளுக்குள் அடங்கிச் செயல்புரிந்து துன்பத்தை அடைகின்றோம். அவனோ ஐந்து பொறிகளையும் அடக்கினவன். ஐந்து பொறிகளும் அவனுக்கு அடங்கிச் செயல்புரிகின்றன. நமக்கு ஐந்து பொறிகளும் மாங்காய்ப் பாலைப் போலப் புண் தருகின்றன. வாயிலே புண் ஏற்பட்டால், புண்ணை ஆற்றுவதற்குத் தேங்காய்ப்பால் சாப்பிட வேண்டும். ஐந்து இந்திரியங்களினாலே ஏற்படுகின்ற புண்ணை ஆற்றுவதற்குத் தினப்படி பூசை முதலிய நித்திய கர்மானுஷ்டானங்களைச் செய்ய வேண்டி யிருக்கிறது. ஆனால் இந்திரியங்களை நிக்கிரகம் செய்தவர்கள், இந்திரியங்களைத் தங்களுக்கு அடங்கினவையாகச் செய்தவர்கள், அவற்றால் துன்பத்தை அடையாதவர்கள், அவற்றை எதற்குச் செய்ய வேண்டும்? புழுக்கமான இடத்திலே இருப்பவன் கையிலே விசிறி வைத்திருப்பான். நன்றாகக் காற்று வீசுகிற கடற்கரையில் உட்கார்ந்திருப்பவன் கையில் விசிறி எதற்காக வைத்திருக்க வேண்டும்? "பொறிகளின் குறும்புகளை அடக்கி உயர்ந்த நிலையில் இருப்பவர்களுக்குச் சாதனங்கள், கருவிகள் எதற்கு?" என்ற கருத்தையே, 'மாங்காய்ப்பால் உண்டு மலைமேல் இருப்பார்க்குத் 'தேங்காய்ப்பால் ஏதுக்கடி? - குதம்பாய்! 'தேங்காய்ப்பால் ஏதுக்கடி?” என்று சித்தர் மொழியில் சொன்னார் குதம்பைச் சித்தர். உள் உருக்கும் தேன் அருணகிரிநாதரும் தாம் பெற்ற இன்பத்தை ஆனந்தத் தேன் என்று உருவகமாகச் சொல்கிறார். சுகத்திற்கும், துக்கத்திற்கும் அப்பாற்பட்ட இன்பமே ஆனந்தம். அதனைத் தேன் என்று சொன்னார்; அப்படிச் சொன்னால்தான் நமக்கு விளங்கும். அந்தத் தேனைப் பற்றிப் பலர் சொல்லியிருக்கிறார்கள். 'தினைத்தனை உள்ளதோர் பூவினில்தேன் உண்ணாதே 'நினைத்தொறும் காண்தொறும் பேசுந்தொறும் எப்போதும் 'அனைத்தெலும்பு உண்ணெக ஆனந்தத் தேன் சொரியும் 'குனிப்புடை யானுக்கே சென்றுதாய் கோத்தும்பீ" என்று மாணிக்க வாசகர் பாடுகிறார். தேனை உண்ணுவது வண்டு. இரண்டுவிதமான தேன் உண்டு. நுனி நாக்கில் மட்டும் இனிக்கும் தேன் ஒன்று; உள்ளத்திலும், உயிரிலும் இனிக்கும் தேன் ஒன்று. நுனி நாக்குக்கு மாத்திரம் இனிக்கும் தேனைச் சுவைத்துப் போகிறது வண்டு. மாணிக்கவாசகர் சொல்கின்ற தேனோ நாக்கை மாத்திரம் இனிக்க வைக்கவில்லை. இது ஆனந்தத்தேன். உடம்பில் மிக மிக மென்மையானது நாக்கு. சாதாரணத் தேன் இந்த நாக்கை இனிக்க வைக்கிறது. அவர் சொல்கிற ஆனந்தத் தேன் உடம்புக்குள் மிக மிக வலிதான எலும்பையும் உள்ளே நெகிழும்படி செய்து இனிக்கிறதாம். அதைச் சொரியும் நடனத்தையுடையவனாம் இறைவன். நடராசன் எப்போதும் சுற்றிச் சுழன்று ஆடிக் கொண்டே இருக்கிறான். அதனால் அவன் பாத தாமரை எப்போதும் அசைந்தபடியே இருக்கிறது. அதிலிருந்து அனந்தத் தேன் நாலு பக்கமும் சிதறித் துளிக்கிறது. அவன் எப்போதும் தூக்கிய பாதம் உடையவன். அதை குஞ்சித பாதம் என்று சொல்வார்கள். அந்தக் குஞ்சித பாத தாமரையிலிருந்து தெறிப்பது அந்தத் தேன். அதைச் சுவைக்கின்ற ஆன்மாக்களின் உடம்பிலுள்ள மிக வலியதான எலும்புங்கூட நெகிழ்ந்து இன்மையை உணரும் என்று சொல்கிறார். மனத்தையே வண்டாக வைத்துப் பாடிய பாட்டு இது. இந்த ஆனந்தத் தேனையே அருணகிரியார் சொல்கிறார். "இறைவன் அருளினாலே அந்தத் தேன் எனக்குக் கிடைத்தது" என்று தெரிவிக்கிறார். "அது எனக்கு முன்னாலே கிடைக்காமல் இருந்தது. கிடைக்கும்படியாக விளம்பியவன் முருகன்" என்கிறார். "அந்தத் தேன் எங்கே இருந்தது? மலைமேலே இருந்தது. என்னைச் சுற்றிலும் இருட்டுச் சூழ்ந்திருந்ததால் முதலில் எனக்கு என்னைச்சுற்றியுள்ள பொருள்கள் இன்னவை என்றே தெரியவில்லை. வீடும் தெரியவில்லை. வீதியும் தெரியவில்லை. பள்ளமும் தெரியவில்லை. மேடான மலையும் தோன்றவில்லை. ஒளியாகிய அவன் கருணை கிடைத்த பிறகுதான் எல்லாப் பொருள்களும் தெரிந்தன. அவ்வப் பொருளின் இயற்கை நிறம் தெரிந்தது; உருவம் தெரிந்தது. கண்ணை மூடிக் கொண்டு உலகம் இருண்டு விட்டது என்று பூனை நினைக்கும் என்று சொல்வார்கள். அதைப் போல நான் என் உள்ளத்திலுள்ள மயக்கத்தினால் சளத்தில் பிணிபட்டு அசட்டுக் கிரியைகள் செய்து கொண்டுதான் இருந்தேன். என் உள்ளத்தின் மயக்கம் கெட அவன் மெய்ப்பொருள் பேசினான். அவன் அருள் கிடைத்த மாத்திரத்திலே உலகிலுள்ள யாவும் தெரிந்தன. மலை தெரிந்தது. அதன் மேலே ஏறினேன். அங்கே மரத்தில் உள்ள ஆனந்தத் தேன் கிடைத்தது” என்று அறிவிக்கிறார். இருளும் ஒளியும் இருட்டிலே பார்க்கும்போது உலகிலுள்ள பொருள்களின் உருவம் நிறம் முதலியன எப்படி நமக்குத் தெரியவில்லையோ, அவ்வாறே உலக மாயையில் சிக்கி இருக்கின்ற நம் புறக்கண்களுக்கும் உலகிலுள்ள பொருள்களின் உண்மை இயல்பு விளங்குவதில்லை. சூரியன் ஒளி கிடைத்த மாத்திரத்திலே உலகிலுள்ள பொருள்களின் நிறம், வடிவம் எல்லாம் தோன்றுவதுபோல, இறைவன் திருவருள் ஒளி கிடைத்துவிட்டால் நம் அகக் கண்களிலே உலகிலுள்ள பொருள்களின் உண்மைத் தத்துவம் விளங்கும். நமக்கு உலகம் இருண்டு கிடக்கின்றது. "இருள் தருமா ஞாலம்" என்கிறார்கள். ஆனால் சிலருக்கு உலகம் ஒளி மயமாக இருக்கின்றது. அவர்கள் எல்லோரும் இறைவன் அருளால் ஒளி பெற்றவர்கள். உலகை ஒளியுலகாகப் பார்க்க வேண்டுமானால் இறைவன் அருள் வேண்டும். அவ்வருளாளல் அகக்கண் பெற்றவர்களுக்கு நமக்குத் தோன்றாதன எல்லாம் தோன்றும். உலகத்திலுள்ள பொருள்கள் நமக்கு நிழற்படமாகத்தான் தெரிகின்றன. அவற்றுக்குள் இருக்கும் தத்துவங்கள் எல்லாம் அவர்களுக்கு நன்றாகப் புலப்படும். நமக்குத் தோன்றவில்லையே எனின், நாம் அறியாமையாகிய இருட்டுக்குள் கிடக்கின்றோம். சூரியனுடைய ஒளியினால் எப்படிப் புற இருள் நீங்கிப் போகின்றதோ, அதேபோல இறைவனுடைய திருவருள் கூட்ட உண்டாகும் ஒளியினால் அறியாமை இருள் விலகிப் போகும். பந்தபாசங்கள் எல்லாம் போய்விடும். அதற்கும் அப்பால் ஞான மலையின்மீது கொஞ்சம் கொஞ்சமாக ஏறினால் தத்துவங்கள் விரிந்துகொண்டே போகும். அந்தத் தத்துவங்களை இப்போது நம் கண்களினால் காண முடியாது. இறைவன் திருவருளினால் பெறப்படும் அறிவுக் கண்களுக்குத்தான் அவை புலப்படும். அருள் ஒளி பழங்காலத்தில் ஒரு பாண்டியன் இருந்தான். வரகுண பாண்டியன் என்பது அவன் பெயர். சிவபிரானிடத்திலே அவன் மிகுந்த பக்தி உடையவன். இறைவன் அருளால் அகக்கண் பெற்றவன். ஒரு வேப்பமரம், பழுத்துக் குலுங்கியிருந்தது. பிறர் கண்களுக்கு வெறும் வேப்பம் பழங்களாகத் தோன்றின பொருள் அவன் கண்களுக்குச் சிவலிங்கங்களாகத் தோன்றினவாம். உடனே அந்த மரத்திற்கு அவன் விதானம் அமைக்கச் செய்து விட்டான். அது மாத்திரமா? நல்ல மழைக்காலம் வந்தது. மழைத் தண்ணிர் தேங்கி நின்ற குட்டையில் தவளைகள் இருந்தன. இரவுக் காலங்களில் அவை ஒன்றாகச் சேர்ந்து சங்கீதம் பாட ஆரம்பித்து விட்டன. அவற்றின் குரல் அவனுக்கு எப்படிக் கேட்டது? பக்தர்கள் எல்லோரும் சேர்ந்து "ஹர ஹர" என்று சொல்வது மாதிரியாக அவனுக்குத் தோன்றியதாம். "ஹர நாமத்தைச் சொல்லும் இந்த நல்ல பிராணிகளுக்கு உணவை வீசுங்கள்" என்று அவன் சொன்னான். இறைவனுடைய நினைவு அவன் உள்ளத்திலே பதிவு பெற்றுவிட்டதால், காணும் பொருள்களிடத் தெல்லாம் அவன் இறைவனுடைய தொடர்பைக் கண்டான். அந்த மாதிரியாக நமக்கும் தோன்றவில்லையே என்றால் நமக்கு எப்படித் தோன்றும்? கறுப்புக் கண்ணாடி போட்டுக் கொண்டிருக்கிறவனுக்கு உலகத்திலுள்ள எல்லாப் பொருள்களும் காக்கையைப் போலக் கறுப்பாகத்தான் தோன்றும். காமாலைக் கண்ணனுக்குக் கண்டனவெல்லாம் மஞ்சளாகத்தானே தெரியும்? இறைவனது அருளாகிய வெளிச்சம் நமது உள்ளத்தில் அடித்தால்தான் உலகத்திலுள்ள பொருள்களின் உண்மை தெரியும். இருட்டிலே ஊரிலுள்ள திக்குத் திசை தெரியவில்லை. சூரியன் வந்த பிறகு அந்த ஊரில் இருக்கிற இடம் தெரிந்தது. மிகப் பெரிய மலை தெரிந்தது. அதைப்போல அஞ்ஞானமாகிய இருட்டிலே அகப்பட்டு நாம் எல்லோரும் இந்த உலகத்தில் ஒன்றும் தெரியாமல் தவிக்கிறோம். நம்முடைய வீடு என்று எதனையோ எண்ணிக்கொண்டிருக்கிறோம். அருளாகிய ஒளி வந்தால்தான், “நாம் யார்? நமக்கும் இவ்வுலகிலுள்ள பொருள்களுக்கும் என்ன சம்பந்தம்? இவ்வுலகிலுள்ள பொருள்களின் உண்மை இயல்பு என்ன? நமது உண்மையான வீடு எங்கே இருக்கிறது?" என்பவை தெரிகின்றன. உலகத்தைத் தெரிந்து கொண்டால் போதுமா? போதாது. உலகம், உயிர், கடவுள் என்ற மூன்று பொருள்களையும் தெரிந்து கொள்ள வேண்டும். உலகத்துப் பொருள்களைத் தெரிந்து கொண்டவுடனே, தான் எங்கே இருக்க வேண்டியவன் என்று தெரிந்து கொண்டு, அந்த நிலையை எய்துவது எப்படி எனத் தெரிந்து கொள்கிறான். முன்பு நாம் அப்படி அருவருக்கத் தக்க நிலையில் இருந்தோம் என்பதையும் காண்கிறான். தான் இருக்கிற நிலையிலிருந்து மேலே அண்ணாந்து பார்க்கிறான்; அதாவது, உன்னத திருஷ்டி உடையவனாகிறான். பெரிய மலைக்குப் பக்கத்தில் தான் இருப்பதைப் பார்க்கிறான். உலக இயலுக்கு அப்பாற்பட்ட இறைவனுடைய உண்மையைப் பார்க்கிறான். இவற்றையெல்லாம் பார்க்க அவனுக்கு இறைவனுடைய திருவருள் வேண்டும்; அவன் அருளொளி கிடைக்க வேண்டும். அஞ்ஞானமாகிய இருட்டில் அவன் இவற்றை எல்லாம் பார்க்க முடியாது. எத்தனை தலங்களுக்குப் போனாலும் பயன் இல்லை. எத்தனை முறை ஆகமங்களைப் புரட்டிப் பார்த்தாலும் உண்மை விளங்காது. மாணிக்க வாசகர் சொல்கிறார்: "இத்தந் திரத்திற் காண்டுமென் றிருப்போர்க்கு அந்தத் திரத்தின் அவ்வயின் ஒளித்தும்" இருட்டிலே ஒருவன் உட்கார்ந்து கொண்டு புத்தகங்களின் ஏடுகளைப் புரட்டிக் கொண்டே இருக்கிறான். அதில் ஒன்றுமே தெரியவில்லை என்று சொல்கிறான். எப்படித் தெரியும்? விளக்கைப் போட்டால் புத்தகங்களிலுள்ள எழுத்துத் தெரியும். அப்படித்தான் ஆகமங்களைப் படித்து பார்த்துவிட்டுப் பொருள் புரியவில்லை என்கிறான்; இவன் அறியாமை இருட்டில் இருந்து கொண்டு அதன் ஏடுகளைப் புரட்டுகிறான். ஆனால் ஆண்டவன் அருள் ஒளி கிடைத்த மாத்திரத்திலே அதில் எத்தனை எத்தனையோ பொருள்கள் புலப்படுகின்றன. ஞான மலை அருணகிரியார் இன்ப அநுபவத்தை எப்படிப் பெற்றார்? அவருக்கு முதலில் இறைவன் அருளால் ஒளி தோன்றியது; ஒளி தோன்றிய மாத்திரத்தில் நிலம் தெரிந்தது. நிலம் மாத்திரம் தெரிந்ததோடு நிற்கவில்லை. ஒரு பெரிய மலை விளைந்தது. ஒளியில் விளைந்த உயர்ஞான பூதரத்து. ஒளியில் விளைந்தது வெறும் சாதாரண மலையா? அது ஞான பூதரம். பூதரம் - மலை. அது பெரிய ஞான மலை. வெறும் கல் மலை அல்ல. விளைந்தது என்றால் உண்டாயிற்று என்று பொருள். திடீரென்று பெரிய மலை எப்படி உண்டாயிற்று? எந்தப் பொருளையும் புதியதாகப் பார்க்கும்போது அது புதியது என்று சொல்வது வழக்கம். நான் ஒரு புதிய ஊரைக் கண்டேன் என்றால் அந்த ஊர் அப்பொழுதுதான் உண்டாயிற்றா? இல்லை. அவன் அந்த ஊருக்கு அப்பொழுதுதான் முதல் முதலாகப் போயிருக்கிறான். அவன் காட்சி புதியதே தவிர ஊர் புதியது அல்ல. இவ்வுலகில் புதிய மலையைக் கண்டேன் என்றால் மலை புதியது அல்ல. அது எப்பொழுதும் அங்கே இருப்பது தான். ஆனால் அவன் காட்சி புதியது. இதற்கு முன்னால் அதை அவன் பார்க்கவில்லை. "நான் இத்தனை காலமும் இந்த உலகில் பல பல பொருள்களைக் கண்டு வந்தேன். ஆனாலும் அவற்றினிடையே ஒரு புதிய தத்துவத்தை இப்பொழுதுதான் கண்டேன். அதுவும் அவனது அருளினாலே கிடைத்த ஒளியிலே கண்டேன்" என்பதையே குறிப்பாகச் சொல்கிறார் அருணகிரிநாதர். அருணகிரியார் இறைவனது அருளொளியிலே விளைந்த உயர்ந்த மலை ஒன்றைக் கண்டார். அது ஞான மலை. அந்த மலையின் மேல் ஏற ஏற அவரது பார்வைக்குத் தடையாக நின்ற பொருள்கள் எல்லாம் கீழே போய்விட்டன. உலகம் முழுவதும் விரிந்து கிடக்கின்ற பொருள்களின் உண்மை இயல்புகள் புலனாயின; அந்த மலையின் உச்சிக்குப் போன பிறகு ஒரு புதிய அநுபவம் விளைந்தது. அது எதில் விளைந்தது? அளியில் விளைந்தது; அன்பிலே விளைந்தது. அறிவாகிற மலையில் அவர் கொஞ்சம் கொஞ்சமாக முயன்று ஏறி உச்சிக்குச் சென்றுவிட்டார். இனி அதற்கு மேல் அவர் முயற்சி செய்து போகக் கூடி இடம் இல்லை. எல்லாம் கடந்து நின்ற அவருக்கு, ஆனந்தத் தேன் கிடைத்தது. அது அன்பிலே விளைந்த ஆனந்தத்தேன். அறிவும் அன்பும் அறிவினாலே மாத்திரம் ஆனந்தத் தேனைப் பெறுவது எந்தக் காலத்திலும் முடியாது. உடல் பலத்தினாலேயும் பெறக் கூடியது அன்று அது. அறிவைக் கொண்டு ஒரு விநாடியில் ஆயிரக்கணக்கான பேர்களை அழிக்கும் ஹைட்ரஜன் குண்டுகளை விளைவிக்க முடியும். அவை வெறும் அறிவினாலே விளைபவை. அது பசை இல்லாத அறிவு. எதிலும் ஒட்டாது. வெறும் அறிவில் ஏறி மேலே மேலே அதன் நுனிக் கொம்பையும் தாண்டிப் போக முயன்றால் கீழே விழ வேண்டியதுதான். அறிவின் நுனியை அடைந்த பொழுது அதற்கு ஒரு முற்றுப் புள்ளி வைத்துவிட வேண்டும். நாம் ஒருவருடைய வீட்டுக்கு ஒர் ஆளின் துணை கொண்டு போகிறோம். அவன் நமக்கு அவருடைய வீட்டைக் காட்டத் துணையாக வருகிறான். அந்த வீடு வந்தவுடன், அந்த ஆள் நின்று கொண்டுவிடுகிறான். கூட்டிக் கொண்டு வந்தவனை அவ்விடத்திலேயே விட்டுவிட்டு நாம் அந்த வீட்டின் சொந்தக்காரனோடு உள்ளே போகிறோம். துணைக்கு வந்தவனையுமா உள்ளே கூட்டிக் கொண்டு போகிறோம்? இல்லை. நமக்குத் துணையாக இருப்பது அறிவு. அந்த அறிவின் துணை கொண்டு தத்துவமாகிற சாரலில் ஏறி மலையின் உச்சியை அடைந்து விட்டோம். அந்த இடத்திற்கு அப்பாலே அறிவுக்கு வேலை இல்லை. அறிவு நிற்க வேண்டிய இடம் அது. அதுவரையில்தான் அறிவு நமக்கு வழிகாட்டியாக வர முடியும். அதற்கு அப்பாலே அநுபவம் வரவேண்டும். அது எப்படி வரும்? அன்பு இருந்தால் வரும். அன்பு வராவிட்டால் இன்ப அநுபவம் நமக்குக் கிடைக்காது. அந்த அன்புப் பசைதான் நம்மை இறைவனோடு ஒட்டுகிறது. எனவே, அறிவின் தலைநிலத்தில் நின்ற ஒருவனுக்கு அன்பு விளைந்தால் ஆனந்தத் தேன் வரும். அறிவு மலையின் அன்பு மரத்தில் அநுபவத்தேன் இருக்கிறது. "அன்பிலே விளைந்த முதிர்ந்த ஆனந்தத் தேன் நான் பெறும்படி, அநுபவத்திலே தெரிந்து கொள்ளும்படியாக, விளம்பியவாறு என்னே!" என்று ஆச்சரியப்பட்டுப் போகிறார் அருணகிரியார். தோழியும் மணப்பெண்ணும் அறிவு நிற்கின்ற இடத்திலே, அன்பு விளைகின்ற இடத்திலே, அநுபவம் தோன்றுகிறது. ஒரு பெண் தன் தலைவனோடு கூடி இன்பம் அநுபவிக்கின்ற கல்யாணம், அன்று அவளுடைய பரம ரகசியங்களை எல்லாம் அறிந்துள்ள தோழிகள் அவளைச் சுற்றிச் சூழ நின்று காலையிலிருந்து பரிகாசம் செய்கிறார்கள். இரவு வந்தது. நன்றாக அலங்கரிக்கப்பட்டுள்ள படுக்கை அறைக்குள் அவளை அழைத்துப் போகிறார்கள். தந்தை கூடத்திலேயே நின்றுவிடுகிறார். தாய் கொஞ்சதூரம் வந்துவிட்டு மறைந்து போகிறாள். தோழிகள் அவளோடு இன்னும் சிறிது தூரம் போகிறார்கள். அவர்களுக்குள் உயிர்த்தோழி படுக்கை அறை வரையிலும் வருகிறாள். ஆனாலும் அறைக்குள் அந்தப் பெண் ஒருத்திதான் போகிறாள். அதுவரையிலுந்தான் தோழி வர முடியுமே தவிர அதற்கு அப்பாலும் அவள் அறைக்குள் வர முடியாது. அங்கே அவளுக்கு வேலை இல்லை. அறைக் கதவு வரையிலும் வந்த தன் தோழியை அங்கேயே நிறுத்திவிட்டு, அவள் அறைக்கதவை தாழிட்டுக் கொண்டு உள்ளே போய் விடுகிறாள், ஆனந்தத்தை அநுபவிக்க. அதே மாதிரி ஆன்மாவானது இறைவன் ஒருவன் உண்டென்று அறிந்து, அவனை அடைய முடியாமல் தடுக்கின்ற பல இடையூறுகளையும் அருளாகிய ஒளியைக் கொண்டு போக்கி, உலகத்திலுள்ள உண்மைத் தத்துவங்களை எல்லாம் கண்டு, ஞான மலையின் முடிவை அடைந்துவிட்டால், அதற்குப் பிறகே அங்கே அறிவுக்கு வேலை இல்லை. ஆன்மா தனித்து போய் இறைவனோடு ஒட்டி ஆனந்தத் தேனை, அன்பிலே விளைகின்ற ஆனந்தத் தேனை, அநுபவிக்க வேண்டும்; தத்துவாதீதமாய் இருக்கின்ற எம்பெருமானோடு கலந்து இன்பத்தை அநுபவிக்க வேண்டும். அங்கே போகும் அறிவு இங்கும் நான் இருக்கிறேன் என்று வந்தால் அங்கே இன்பம் இராது. அங்கே நாயகன் வரமாட்டான். நாயகனோடு பெண் தனித்து இருக்க வேண்டிய அறை வரையிலும் துணையாக வந்த தோழி எப்படி அந்த அறையின் வெளியிலே நின்றுவிட்டாளோ, அப்படியே தத்துவங்களை எல்லாம் கடந்து வருவதற்குத் துணையாக இருக்கின்ற அறிவு, ஆன்மா இறைவனோடு ஒன்றுபடும் நிலைக்கு முன்னே வெளியிலேயே நின்றுவிட வேண்டும். அறிவு ஆனந்தத் தேனை அநுபவிப்பதற்குக் காரணமாய் இருக்கிறதே தவிர, அந்தத் தேனைச் சுவைக்கும் போது அது நமக்குத் துணையாக இருக்க முடியாது. அன்பு விளைந்தால்தான் இன்பம் உண்டாகும். அறிவு செல்ல முடியாத இடத்திற்கும் அன்பு செல்கிறது. அறிவு மாத்திரம் இருந்தால் பல பல பேதங்களை எல்லாம் காணும். தெளிந்த அறிவிலே அன்பு கலந்துவிட்டால் அங்கே அபசுரம் இல்லை. ஒரு பெண் என்னதான் தாய் தந்தையர் வீட்டில் மிகச் செல்லமாக வளர்ந்தாலும் அவர்களை விட்டுவிட்டு நாயகன் வீட்டுக்குப் போய்விடுகிறாள். குழந்தையாக இருக்கும்போது அம்மாவை விட்டு ஒருகணங்கூடப் பிரிந்து இருக்க மாட்டாள். அப்பாவுக்குச் செல்லப் பெண். இருந்தாலும் கல்யாணம் ஆகிக் கணவன் வீட்டுக்குப் போன பிறகு ஒரு பத்து நாள் வருகிறாள் என்று வைத்துக் கொண்டாலும், அந்தப் பத்து நாளைக்குப் பல தடவை தன் வீட்டுக்குப் போக வேண்டுமென்று சொல்லி விடுகிறாள். "இதுதான் அம்மா உன் வீடு. நீ தவழ்ந்து ஆடி விளையாடிய கூடம் இதோ இருக்கிறது பார். நீ வைத்த வாழை எப்படி வளர்ந்திருக்கிறது பார்" என்று அவள் தாய் சொன்னாலும் அவள் அவை எல்லாவற்றையும் விட்டுத் தன் வீட்டுக்குப் போக வேண்டுமென்கிறாள். தன் வீடு என்று எதைச் சொல்கிறாள்? நாயகனோடு இருக்கும் இடத்தைச் சொல்கிறாள். பிறந்த வீட்டை அவள் தன் வீடு என்பதே இல்லை. கல்யாணம் ஏதோ ஒரு நாள் நடக்கிறது. கல்யாணம் ஆகிற வரைக்கும் இருபது இருபத்திரண்டு ஆண்டுகள் அவள் தாய் தந்தையர்களின் வீட்டிலே இருந்திருக்கிறாள். ஆனால் அந்த ஒரு நாள் கல்யாணம் ஆன பின், அந்த வீட்டை அவள் தன் வீடு என்று சொல்லமாட்டேன் என்கிறாள். அதே மாதிரியாக உள்ளத்தில் மயக்கம் இருக்கிறவரையில் நாம் இப்பொழுது இருக்கிற வாழ்க்கையே மிக உயர்ந்ததாக நினைத்துக் கொண்டிருக்கிறோம். நாம் இருக்கிற வீடுதான் நமது வீடு என்று எண்ணிக் கொண்டிருக்கிறோம். ஆனால் அறிவு மலையிலே ஏறி மாயை நீங்கிவிட்டால் அப்போது இந்த உலகத்திலே இந்திரியங்களின் வாயிலாக அநுபவிக்கும் இன்பங்களை எல்லாம் வெறுக்கத் தலைபட்டுவிடுகிறோம். அறிவின் துணைக் கொண்டு, உண்மைப் பொருளை அறிந்துவிட்டால், அப்புறம் அங்கே அறிவுக்கு வேலை இல்லை. அறிவு அதோடு நின்று விடுகின்றது. உள்ளத்தில் அன்பு விளைந்தால் அந்த நிலையிலேயே இன்ப அநுபவம் உண்டாகிறது. வெறும் அறிவை மாத்திரம் வைத்துக் கொண்டு பயன் இல்லை. ஆண்டவனுடன் கலந்து ஆனந்தத்தைச் சுவைப்பதற்குத் துணையாக இருப்பது அன்புதான். அறிவு நழுவுதல் சங்கராசாரிய சுவாமிகள் தம் அறிவின் துணை கொண்டு பல பல இடங்களுக்கும் சென்று பல பேரோடு வாதாடி அத்துவைதக் கொள்கையை நிலைநாட்டினார். பிற சமயவாதிகளை எல்லாம் க.சொ.1-18 வென்றார். ஆயினும், அந்த அறிவுக்கும் அப்பாற்பட்ட ஆனந்தத்தை, அன்பாலே விளைந்த ஆனந்தத் தேனை, இறைவனோடு கலந்து அநுபவித்துச் சிறந்து நின்றார். அந்தத் தேனை உண்ட மயக்கத்திலே சிவானந்த லகரி பாடினார். லகரி என்பது மயக்கம். ஆனந்த லகரி அன்பினாலே பிறந்தது. அன்பினாலே உள்ளம் உருகிப் பாடினார். பிற சமயத்தையெல்லாம் வாதத்தினாலே வென்றது, அவரிடம் ஓங்கி நின்ற அறிவு. அது அவருக்கு ஆனந்தத்தைக் கொடுக்கவில்லை. அந்த அறிவுக்கும் எட்டாத ஆனந்தத்தை அவர் அன்பினாலே கசிந்து கசிந்து உருகிப் பெற்றார்; பக்தி இல்லாமல் அன்பு இல்லாமல் யாரும் அறிவினால் மாத்திரம் அந்த ஆனந்தத்தை அடைய முடியாது. அறிவின் துணை கொண்டு உலகத்திலுள்ள பொருள்களின் உண்மையை உணர்ந்து கொண்டிருக்கலாம். உள்ளத்திலுள்ள மயக்கத்தைப் போக்கிக் கொண்டிருக்கலாம். பலபல தத்துவங்களைக் கடந்து செல்லலாம். ஆனால் ஆண்டவனோடு கலந்து இன்பத்தை அடையக் கூடிய நிலையில் அறிவு நழுவிப் போய், அன்பு தலைப்பட வேண்டும். இறைவனுடைய திருவருளினால் மாயா இருளைப் போக்குகின்ற ஒளியைப் பெற்று, அறிவின் துணை கொண்டு, ஞானமலையின் மேலே, தத்துவங்களாகிற படிகனை ஒவ்வொன்றாகக் கடந்து சென்றுவிட்டால், உச்சியை அடைந்துவிட்டால், அறிவு நழுவிப் போய், அன்பு முதிர்ந்து நிற்கும்; அப்போது ஆனந்தத் தேனை அநுபவிக்கலாம். “அதனை நான் அநுபவிக்கும்படியாக விளம்பியவாறு என்னே!" என்று வியப்பு அடைகிறார் அருணகிரியார். ஒளியில் விளைந்த உயர்ஞான பூதரத்து உச்சியின்மேல் அளியில் விளைந்தது ஒர் ஆனந்தத் தேனை,... தெளிய விளம்பியவா, முகம் ஆறுடைத் தேசிகனே! வெறும் பாழ் நமக்குச் சூரியன் ஒளி தெரியும். கல் மலை தெரியும். தேன் தெரியும். இவற்றுக்கு உருவம் உண்டு. அருணகிரியாரும் ஒளி என்கிறார், மலை என்கிறார், தேன் என்கிறார். அப்படியானால் அவர் சொல்லுகின்றவற்றுக்கு உருவம் உண்டா? அவற்றைப் பார்க்கலாமா?' என்ற சந்தேகம் நமக்குத் தோன்றலாம். உண்மையில் அங்கே ஒன்றும் இல்லை. அவை யாவும் நமக்கு அகக்கண் இல்லாவிட்டால் தோன்றா. விளக்க முடியாத உருவற்ற பொருளை உருவம் கொடுத்து நமக்கு விளக்கினார் அவர். தாம் உணர்ந்த பொருளை பிறருக்கு உணர்த்துவதற்காக உருவகமாகச் சொன்னார். "இவை எல்லாம் உண்மை அல்ல. உனக்குப் புரிய வேண்டுமென்பதற்காக உன் மொழியில் சொன்னேன். அறியாமை இருளில் சிக்குண்டு கிடக்கிறவனுக்கு, அருள் ஒளியில் ஞான மலை தோன்ற, அதில் ஏறி ஆனந்தத்தேனை நுகர வேண்டுமென்று உருவகமாகச் சொன்னேன். அங்கு ஒன்றும் இல்லை" என்று பின்பு புலப்படுத்துகிறார். அநாதியிலே வெளியில் விளைந்த வெறும்பாழைப் பெற்ற வெறுந்தனியை, "நான் அடைந்த இன்பத்திற்குக் கால எல்லை இல்லை; அது அநாதி, ஆதி அற்றது. எந்தக் காலத்தில் அந்த ஆனந்தம் உண்டாயிற்று என்று தெரியாது. நான் அநுபவித்த இன்பத்தை பல காலமாகப் பல பெரியோர்களும் அநுபவித்தார்கள். இப்படி அநாதி காலமாக இருந்து வருகின்றது. அது." "அது கால எல்லையைக் கடந்தது என்று சொல்லிவிட்டீர்கள்? அது விளைந்த இடம் எது?” என்று கேட்டால் அதற்கும் விடை சொல்கிறார். வெளியில் விளைந்தது என்று. வெளி என்றால் ஆகாசம். "அதற்கு ஆதாரம் ஆகாசந்தான்" என்று சொன்னார். ஆகாசம் ஐந்து பூதங்களில் ஒன்று. ஆகாசத்திற்குள் நான்கு பூதங்களும் அடங்கி இருக்கின்றன. ஆனாலும் ஆனந்தம் என்பது இந்த ஆகாசத்திற்கும் மேல் இருக்கிற ஒன்று என்பதைக் காட்ட, வெளியில் விளைந்த வெறும்பாழ் என்று சொன்னார். பாழ் என்று சொன்னால் போதாது. நமது ஊரில் பாழ் வெளி இருக்கிறது என்றால் அந்தப் பாழ் வெளிக்கு அப்பாலே ஊர் இருக்கிறது என்று தெரியும். பாழுக்குப் பக்கத்தில் மனிதன் நடமாடுகிற இடம் தெரியும். ஆனால் இந்தப் பாழுக்கு அப்பாலே எதுவும் இல்லை. இது வெறும் பாழ்; தனக்கு அப்பாலே எதுவும் இல்லாத பாழ்; இது இட எல்லை கடந்தது என்று சொன்னபடி. கால எல்லை கடந்தது என்பதற்காக, "அநாதியிலே" என்று சொன்னார். பிறகு இது பஞ்ச பூதங்களுக்கும் அப்பாற்பட்டது என்பதற்காக, "வெளியில் விளைந்த பாழ்" என்று சொன்னார். பிறகு இது இட எல்லையையும் கடந்தது என்பதற்காக "வெறும் பாழ்" என்று சொன்னார். இந்தப் பாட்டின் முன்பகுதியில் உருவம் உடைய பொருள்போல ஒளி, மலை, உச்சி, தேன் என்று சொன்னார். அவை நமக்கு விளங்குவதுபோல இருந்தன. ஆனால் பிற் பகுதியில் ஒரே நுண்பொருள்களாகச் (Abstract) சொல்கிறார். ஏன் அப்படிச் சொல்ல வேண்டும்? நமக்கு விளங்க வேண்டுமென்று முதலில் உருவகமாகச் சொன்னார். அதைக் கேட்ட பிறகு நாம் அதனை, இந்திரியங்களுக்குக் கட்டுப்பட்டது, பொறிகளின் மூலமாகவே அநுபவிக்கக் கூடியது என்று எண்ணி விடாமலிருக்கப் பிற்பகுதியில் இவ்வாறு விளக்குகிறார். அதனைப் பொறிகளின் மூலமாக அநுபவிக்க முடியாது. அது கால எல்லை கடந்தது. பூத எல்லை கடந்தது. இட எல்லை கடந்ததுங என்று புலப்படுத்துகிறார். அநாதியிலே வெளியில் விளைந்த வெறும் பாழ்' என்று சொல்கிறார். வெறுங்தனி அதை "வெறும் பாழ்" என்று மட்டும் சொல்லிவிடவில்லை. "அந்தப் பாழைப் பெற்ற வெறுந்தனி" என்று பேசுகின்றார். தனி என்பதற்கும், வெறுந் தனி என்பதற்கும் வித்தியாசம் உண்டு. "நான் தனியாக இருக்கிறேன்" என்று ஒருவன் சொன்னால் என்ன பொருள்? அவன் இருக்கிற வீடு இல்லையா? அவனைச் சூழ்ந்து பல பொருள்கள் இல்லையா? அவை யாவும் இருந்தாலும் அவன் தனியாக இருக்கிறேன் என்று சொல்கிறான். அதாவது அவனுக்கு இனமான பொருள் அங்கே ஒன்றும் இல்லை என்பது அதற்குப் பொருள். மல்லிகைக் கொடியில் ஒரே ஒரு பூ இருந்தால், அதிலே பல இலைகள், கொடிகள் எல்லாம் இருந்தாலும், வேறு பூக்கள் அங்கே இல்லாமையினால் அது தனி. ஒரு தனி நாற்காலி என்றால், வேறு நாற்காலிகள் அங்கே இல்லை என்பது பொருளே தவிர மேஜை இல்லை, கண்ணாடி இல்லை, வேறு பொருள் ஒன்றுமே இல்லை என்ற பொருள் தோன்றாது. இங்கேயோ தன் இனப் பொருளும் இல்லை, வேறு இனப் பொருளும் இல்லை. அதைத் தெரிவிக்கவே, "வெறுந் தனியை" என்று சொன்னார். இப்படி, காலத்தினால் அளவிடற்கு அரியதான ஒன்றை, வெளியில் அடங்காத ஒன்றை, இட எல்லைக்கும் அப்பாற்பட்டு இருக்கின்ற வெறும் பாழை, அதனைப் பெற்ற வெறுந் தனியைத் தெரிந்துகொள்ளுமாறு விளம்பினவன் முருகன். அவன் எத்தகையவன்? முகம் ஆறுடைத் தேசிகனே! தேசிகன் என்றால் குரு. குருநாதன் ஆகிய அவனுக்கு அடையாளம் என்ன? யாருக்கும் இல்லாத அடையாளம் உண்டு அவனுக்கு. அவன் முகம் ஆறு உடையவன். தேசிகன் என்று பொதுவாகச் சொன்னால் அது யாரையும் குறிக்கும். முருகப் பெருமானையே குறிக்க, "முகம் ஆறுடைத் தேசிகன்" என்றார். சிவபிரான் ஐந்து முகம் உடைய தேசிகன். ஐந்து முகங்களினால் அவர் இருபத்தெட்டு ஆகமங்களைச் சொன்னார். குமரக் கடவுள் ஆறுமுகம் உடையவன். இந்த ஆறுமுகக் கடவுள் ஐந்து முகக் கடவுளுக்கே பிரணவ மந்திரோபதேசம் செய்தவன். அத்தகைய ஆறு முகம் உடைய குருநாதன் எனக்கு உபதேசம் செய்தான் என்றார் அருணகிரிநாதர். எதற்கு உபதேசம் செய்தான்? பொருளைத் தெரிந்துகொள்ள அல்ல என்கிறார். தெளிந்து கொள்ள என்கிறார். அறிவு என்பது நூல்களினாலே அறிவது. காலம், இடம், பூதம் ஆகிய எல்லாவற்றையும் கடந்து நிற்கின்ற ஒரு பொருளை அறிவினாலே தெரிந்து கொள்வது இயலாத காரியம். அதுபவத்தினாலேதான் அது முடியும். அறிவுடையவர்கள் எல்லாம் அந்த ஆனந்தத்தை அடைவார்கள் என்று சொல்ல முடியாது. அறிவினாலே பல பல தத்துவங்களையும் அறிந்து, உணர்ந்து கடந்து செல்லலாம். ஆனால் அந்த அறிவு நழுவிய நிலையில், அன்பு கனியும்போதுதான் அந்த ஆனந்தத்தைப் பெற முடியும். சர்க்கரை இனிக்கும் என்பதை அறிவினாலே தெரிந்து கொள்ளலாம். அல்லது அதைப்போன்ற பல பொருள்களை உபமானமாக வைத்துத் தெரிந்து கொள்ளலாம். ஆனால் எப்படி இனிக்கும் என்பதை அநுபவத்தினாலேதான் அறியலாம். அநுபவத்தினால் அறிந்து கொள்வது தெளிந்து கொள்வது ஆகும். அறிவினாலே அறியப்படுவனவற்றைப் பிறருக்குச் சொல்ல முடியும். அநுபவத்தினாலே உணர்கிறவற்றை யாருக்கும் சொல்ல முடியாது. தெரிந்த பல பொருள்களை அநுபவத்தில் அடையாமல் இருக்க முடியும். தெளிய அறிந்தேன் என்றால் அநுபவத்தினாலேயும் அதனைப் பெற்றேன் என்று பொருள். ஆறுமுகமுடைய தேசிகனின் திருவருளினாலே நான் அருளொளி பெற்று, அதன் எல்லையைக் கடந்து, பூத எல்லையைக் கடந்து, இட எல்லையைக் கடந்து, தனக்குச் சமானம் இல்லாத தன்மையில் இருக்கின்ற ஒன்றை, அன்பினாலே விளைந்த ஆனந்தமாகிய தேனை நான் பெற்றேன். அது வெறும் பாழைப் பெற்ற தனி. அதனை நான் பெறம்படியாக, அவன் உபதேசம் செய்தான். நான் தெளியும்படியாக விளம்பினான் என்று அருணகிரியார் சொல்கிறார். ஒளியில் விளைந்த உயர்ஞான பூதரத்து உச்சியின்மேல் அளியில் விளைந்ததோர் ஆனந்தத் தேனை, அநாதியிலே வெளியில் விளைந்த வெறும்பாழைப் பெற்ற வெறுந்தனியைத் தெளிய விளம்பிய வாமுகம் ஆறுடைத் தேசிகனே! (அருள் என்னும் ஒளியில் புதியதாகத் தோன்றிய உயர்ந்த ஞானமாகிற மலையின் உச்சியில் அன்பிலே விளைந்ததாகிய ஒப்பற்ற ஆனந்தம் என்னும் தேனை, கால எல்லையற்ற அநாதியில், இட எல்லையற்ற வெளியில் உண்டான வெறும் சூனியத்தைப் பெற்ற வெறும் தனியான அநுபவ நிலையை நான் அநுபவத்தால் உணரும்படி முகம் ஆறுடைய குருநாதன் உபதேசம் செய்தவாறு என்ன வியப்பு ஒளியென்றது அருளை. பூதரம்-மலை. அளி-அன்பு. வெளி-ஆகாசம். விளம்பியவா-விளம்பியவாறு என்னே என்று ஒரு சொல்லை வருவித்து முடிக்க வேண்டும். தேசிகன்-குரு) ↑ 'பெரும் பெயர் முருகன்' என்னும் புத்தகத்தில் "எது சரி?" என்ற கட்டுரையில் இந்த வேறுபாடுகளைப் பற்றி ஆராய்ந்திருக்கிறேன். வள்ளிகோன் உபதேசம் ஹிந்து மதம் நமது பாரத நாடு முழுவதும் அமைந்த ஒரு சமயத்தை ஹிந்து மதம் என்று சொல்கிறோம். நாம் சொல்கிறோம் என்று சொல்வதைக் காட்டிலும் மேல்நாட்டார் சொல்ல, நாம் சொல்கிறோம் என்று சொல்வதே பொருத்தம். அவர்கள்தாம் இந்தியா என்றும், ஹிந்து மதம் என்றும் சரித்திரத்தில் எழுதி இருக்கிறார்கள். 'ஹிந்து மதம் என்று ஒரு மதம் உண்டா? இந்தியா முழுமைக்கும் ஒரு சமயம் உண்டா? அப்படியானால் ஹிந்து மதத்திற்குப் பொதுவான தத்துவம் என்ன இருக்கிறது? என்று சிலர் கேட்கிறார்கள். ஹிந்து மதத்திற்குப் பொதுவாக ஏதாவது இலக்கணம் உண்டா என்பதைப் பார்க்கலாம். பொதுவான இலக்கணம் கோயிலுக்குப் போய்க் கும்பிடுவது என்றால், கோயிலுக்குப் போகாத யோகிகள் இந்து மதத்தில் இருக்கிறார்கள்; ஞான விசாரம் பண்ணுகின்ற முனிவர்கள் இருக்கிறார்கள்; அவர்கள் கோயிலுக்குப் போவதில்லை. ஆகையால் கோயிலில் போய்க் கும்பிடுவது இந்து மதத்தின் பொதுக் கொள்கை என்று சொல்ல முடியாது. அப்படியானால் விபூதி பூசுவதை ஹிந்து மத அடையாளம் என்று சொல்லலாமா? நாமம் போடுகிறவர்கள் ஹிந்து மதத்தில் இருக்கிறார்கள். நாமம் போடுவதும் அப்படியே பொதுவான இலக்கணம் ஆகாது. வேஷ்டி கட்டாதவர்கள் ஹிந்து மதத்தினர் ஆகமாட்டார்கள் என்றால், 'பாண்ட்' போடுவது ஹிந்து மதத்திற்கு விரோதம் என்று எங்கும் சொல்லவில்லை. காது குத்துவது ஹிந்து மதத்தின் அடையாளம் என்றால், காது குத்தாமல் பல காலம் வாழ்கின்ற பிள்ளைகள் இருக்கிறார்கள். குழந்தைக்கு உபநயனம் செய்யும் போது காது குத்துவது என்ற வழக்கம் உள்ள குடும்பங்கள் இருக்கின்றன. ஆகவே காது குத்துவதையும் அடையாளமாகச் சொல்ல முடியாது. இவற்றை எல்லாம் பார்த்தால் ஹிந்து மதம் என்று பொதுவாகச் சொல்வது தவறு போலத் தோன்றுகிறது. அத்வைதக் கொள்கையை நிலைநாட்டிய சங்கரர் ஹிந்து மதத்தைச் சார்ந்தவர். ராமாநுஜாசாரியார் விசிஷ்டாத்வைதக் கொள்கையைப் பரப்பினவர்; அவர் ஹிந்து. மத்வாசாரியாரும் ஹிந்து சமயத்தைச் சேர்ந்தவர்; அவர் த்வைதக் கொள்கையை நாட்டில் பரப்பினார். சைவ சித்தாந்தம் இருக்கிறது. வீர சைவம் இருக்கிறது. எல்லாம் ஹிந்து மதத்தைச் சார்ந்தவையே. அவற்றில் ஒன்றை மாத்திரம் ஹிந்து மதம் என்று சொல்ல முடியாது. அரிசி சாப்பிடுகிறவர்கள் ஹிந்துக்கள் என்றால், கோதுமை சாப்பிடுகிறவர்கள் வடக்கே இருக்கிறார்கள். "இப்படி உடை, உணவு, ஆகாரம் ஆகிய எல்லாவற்றிலும் வேறுபாடு இருக்கிற இடத்தில் எப்படி ஐயா ஒரு சமயம் இருக்க முடியும்?' என்ற கேள்வி எழுகிறது. ஹிந்து மதம் என்ற பெயர் நாம் வைத்தது அல்ல. மேல் நாட்டிலிருந்து வந்தவர்கள் இந்தியாவுக்குள் முதலில் கைபர் கணவாய் வழியாக வந்தார்கள். அதைத் தாண்டியவுடன் அவர்கள் கண்ணில் முதலில் தென்பட்டது சிந்துநதிப் பிரவேசம். அதிலிருந்து சிந்து, ஹிந்து என்ற பெயர்கள் வந்தன. அங்கு இருப்பவர்கள் ஹிந்துக்கள், அவர்கள் மதம் ஹிந்து என்றாகிவிட்டது. அவர்கள் அந்தப் பெயரை இந்தியா முழுமையும் இருக்கின்ற ஒரு சமயத்தை நினைந்து வைக்கவில்லை. அப்படியானால், இந்தியாவிலே உள்ள சமயங்கள் பலவென்று சொல்ல வேண்டுமேயன்றி, ஒரு மதம் என்று சொல்வது பொருத்தமன்று என்றே தோன்றுகிறதல்லவா? இவ்வளவுக்கும் அடிப்படையான ஒரு பொதுமை இல்லையா? உண்டு. அருளியல் ஒற்றுமை இந்த நாடு என்றைக்கும் அரசியலில் ஒரு நாடாக இருந்ததில்லை; இப்பொழுதுதான் இருக்கிறது. ஆனால் அருள் இயலில் கன்னியாகுமரி முதல் இமாசலம் வரைக்கும் ஒரே நாடாகப் பழங்காலம் முதற்கொண்டு இருந்து வருகிறது. வடக்கே போனாலும், தெற்கே போனாலும், எந்த மொழி பேசுகிற நாட்டுக்குச் சென்றாலும் மனிதன் தன் வாழ்நாளில் பெற வேண்டிய பயன் நான்கு என்று சொல்வார்கள். தென் குமரியில் தமிழ் பேசும் மனிதன் அந்த நான்கையே சொல்வான்; வடகோடியில் இருக்கிற வங்காளியும் அந்த நான்கையே சொல்வான். வடக்கே உள்ளவர்கள் 'தர்ம அர்த்த காம மோட்சம்' என்று சொல்வார்கள். தெற்கேயுள்ள தமிழன் அவற்றையே 'அறம் பொருள் இன்பம் வீடு' என்று சொல்வான். இவற்றை உறுதிப் பொருள் என்று சொல்வது வழக்கம். வடமொழியில் புருஷார்த்தம் என்பர். இந்த நான்கும் வாழ்க்கையின் பயனென்ற கொள்கை பொதுவானது என்று சொல்லலாம். பாரத நாடு முழுமைக்கும் உரியவை என்று சொல்கிற சட்டம் ஒன்று உண்டு. இந்த நான்கையும் சொல்லும் அந்தச் சட்டத்திற்கு வேதம் என்று பெயர். ஆகமம் பொதுவான நூல் அல்லவா என்று கேட்கலாம். ஆகமங்களில் வெவ்வேறு பிரிவு உண்டு. வைஷ்ணவ ஆகமம், சிவாகமம், தேவி ஆகமம் என்ற வகைகள் இருக்கின்றன. இந்தியாவிலுள்ள எல்லாச் சமயத்தினரும் மேற்கோளாகச் சொல்கின்ற நூல் ஒன்று உண்டானால் அது வேதம். எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் வேதத்திலிருந்து மேற்கோள் காட்டுவார்கள். ராமானுஜர் வேதத்தை மேற்கோளாகக் காட்டியிருக்கிறார். மத்துவாசாரியர் தம் மதத்திற்கு ஆதாரமாக வேதத்திலிருந்து மேற்கோள் எடுத்துக் காட்டியிருக்கிறார். சங்கரரும் வேதத்தைக் காட்டுகிறார். சிவஞானபோத உரைகளிலும் பொதுவான விஷயத்தைச் சொல்லும்போது வேதத்திலிருந்து மேற்கோள் காட்டுகிறார்கள். எத்தனை விதமான வழிகள் உண்டோ அத்தனைக்கும் மூலசட்டமாக இருக்கிற பொதுநூல் வேதம். இந்த நாட்டிலுள்ள எல்லாச் சமயங்களும் வேதத்தைத் தங்கள் சமயச் சட்ட நூலாகக் கொண்டமையினால் இந்த நாட்டின் மதம் ஒன்று என்று சொல்கிறோம். வைதிக மதம் அதற்கு ஹிந்து மதம் என்பது பேராக இருக்க முடியாது. சநாதன தர்மம் என்று இப்பொழுது சொல்கிறார்கள். பழங்கால முதல் இருப்பதனால் அப்படிச் சொல்கிறார்கள். உலகில் பழைய சமயங்கள் சில இருக்கின்றன. அதனால் சநாதனம் என்பது இதற்கென்றே அமைந்த பெயர் ஆகாது. இந்தியாவில் உள்ள சமயங்கள் அத்தனைக்கும் ஒரு பெயர் இருக்குமானால் வைதிகம் என்ற பெயரையே சொல்ல வேண்டும். அவை யாவும் வேதத்தை ஆதாரமாகக் கொண்டமையினால் வைதிக சமயம் என்ற பெயரைப் பெற்றன. சுட்டாத வேதம் பாரத தேசத்தில் எந்தப் பகுதியாக இருந்தாலும், எந்த மொழி பேசும் நாடாக இருந்தாலும், எந்த ஆசாரத்தை வைத்துக் கொண்டவர்களாக இருந்தாலும், வேதத்தை நம்பி, அதை மேற்கோளாக வைத்து தங்கள் தங்கள் சமயத்தை அமைத்துக் கொண்டவர்கள் ஹிந்துக்கள். அறம், பொருள், இன்பம், வீடு என்ற இந்த நான்கு புருஷார்த்தங்களும் எல்லோருக்கும் பொதுவானவை. இந்த நாட்டிலுள்ள எல்லா மொழிக்காரர்களுக்கும், எல்லாச் சமயத்தார்களுக்கும் பொதுவான ஒரு நூலாக இருக்கின்ற வேதம் என்ன சொல்கிறது? மனிதன் வாழ்க்கையைப் பற்றிச் சொல்கிறது; உலகம் எப்படி உண்டாயிற்று என்று சொல்கிறது; இறைவனைச் சுட்டிக் காட்டுவது இல்லை. நடுத்தெருவில் ஒருவன் இருந்தால் அவன் என்று சொல்வோம். ஒரு பொருள் இருந்தால் அது என்று சொல்வோம். அது, இது, உது என்று மூன்றுவிதமான சுட்டுச் சொற்கள் இருக்கின்றன. பக்கத்தில் இருக்கிறதை இது என்றும், தொலைவில் இருக்கிறதை அது என்றும், மேலே இருப்பதை உது என்றும் சொல்வது வழக்கம். 'உது' என்ற சொல் தமிழ்நாட்டில் வழக்கொழிந்துவிட்டாலும், யாழ்ப்பாணத்தில் இன்னும் வழக்கில் இருக்கிறது. இறைவன் மனத்திற்கும் பொறிக்கும் அப்பால் இருப்பதால் அவன் என்று சொல்கிறோம். வேதம் அவனை எப்படிச் சொல்கிறது? அது என்று சொல்கிறது. வாக்கினாலே சுட்டிக்காட்ட முடியாதவன்; ஆகையாலே, 'அநுபவத்திலே நீயே கண்டுகொள்' என்று சொல்கிறது. அவனைச் சொல்லித் தெரிந்து கொள்ள முடியாது. அவனால் வரும் இன்பத்தையும் சொல்ல முடியாது. "அதுவானால் அதுவாவர் அதுவே சொல்லும்" என்கிறார் தாயுமானவர். வேதம் சொல் மயம். சொல்லுக்குள் அடங்காதவனை அதனால் சொல்ல முடியாது. சொல்ல முடியாவிட்டால் அதனால் என்ன பயன் என்று தோன்றும். நேரே சொல்லாவிட்டாலும், ஏதோ ஒரு வகையில் குறிப்பாகப் புலப்படுத்துகிறது. ஒர் அகதி விடுதியில் பத்து ஆண்கள் இருக்கிறார்கள். தன் கணவனைக் காணாத ஒரு பெண் அங்கே வருகிறாள். ஓர் அதிகாரி அந்தப் பெண்ணிடம், "இவன் உன் கணவனா? இவன் உன் கணவனா?” என்று கேட்டு வருகிறார். "இவன் அல்ல, இவன் அல்ல" என்று சொல்லிக் கொண்டே வருவாள். அந்தப் பத்துப் பேர்களுள் ஒருவன் அவளுடைய கணவன். அவனைச் சுட்டிக்காட்டி, "இவன் உன் கணவனா?" என்று கேட்கும்போது அவள் மெளனமாகத் தலைகுனிந்துகொண்டுவிடுவாள். அந்த மெளனத்தின் பொருள் என்ன? "இவன் என் கணவன்" என்பதே பொருள். பல பல பொருள்களை விரித்து விரித்துப் பேசுகிற வேதம் இறைவனைப் பற்றிச் சொல்ல வந்த இடத்திலே மெளனம் சாதிக்கிறது. நேதி வேதம் மற்றப் பொருளைப் பற்றிச் சொல்லி இறைவனை அவை அல்லாத ஒருவன் என்று கூறி மறைமுகமாக எதிர்மறை வாயிலாகச் சுட்டுகிறது. "ந இதி, ந இதி” என்று சொல்கிறது. 'இது அன்று, இது அன்று' என்று பலபல பொருள்களை எல்லாம் மறுத்து ஒதுக்கிவிடுகிறது. இதை நேதி களைந்து பார்த்தல் என்று வேதாந்திகள் சொல்வார்கள். இதைப் பரஞ் சோதியார் சொல்கிறார். "அல்லை ஈதல்லை ஈதென மறைகளும் அன்மைச் சொல்லி னால்துதித் திளைக்குமிச் சுந்தரன்." வேதம் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறது. எல்லாவற்றையும் அக்கு வேராக ஆணிவேராக அறிவிக்கிறது. ஆனால் ஆண்டவனை நேரே சுட்டாமல், "நீ இப்பொருளும் அல்ல, இப் பொருளும் அல்ல" என்று சொல்லித் துதித்து இளைத்துப் போகிறதாம். எதிர்மறைத் துதி இறைவனை, "இது அல்ல, இது அல்ல" என்று சொல்வது எப்படித் தோத்திரமாகும் என்ற கேள்வி எழலாம். நாம் வாழ்கின்ற பேட்டைக்கு ஒரு நல்ல அதிகாரி வருகிறார். அவருக்கு வரவேற்புப் பத்திரம் வாசித்து அளிக்கிறோம். 'உங்களுக்கு முன்பு இருந்தவர்கள் லஞ்சம் வாங்கியதுபோல நீங்கள் வாங்குவது இல்லை; உங்களுக்கு முன்பு இருந்தவர்கள் தங்களுக்கு வேண்டியவர்களுக்கு வேலை வாங்கிக் கொடுத்தது போல நீங்கள் செய்வது இல்லை; அவர்கள் சொத்துத் தேடிக் கொண்டதுபோல நீங்கள் தேடிக் கொள்ளவில்லை" என்று சொல்கிறோம். அவருக்கு அது இல்லை, இது இல்லை என்று சொன்னாலும் அவை அவருக்குப் பெருமையையே உண்டு பண்ணுகின்றன. குற்றம் இல்லாமல் இருப்பதே பெரிய குணம். "உங்களிடத்தில் இந்தக் குற்றங்கள் இல்லை" என்று சொல்வதே அவரிடத்தில் நிறையக் குணங்கள் இருக்கின்றன என்று துதித்தது ஆகும். இறைவனைப் பற்றி வரையறை செய்யப் புகுந்து மேலும் மேலும், "இதுவா, அதுவா?' என்று கேட்கும் கேள்வி வளர்ந்து கொண்டே போகும். அது அல்ல; அது அல்ல என்று விடையும் எல்லையின்றி விரிந்துகொண்டே போகும். வேதம் ஏன் அப்படி அவன் அல்ல என்று சொல்ல வேண்டும்? அவன் அல்லாத பொருளை அவன் என்று நினைக்கிறோம். ஞான விசாரத்தினால், "அது அவன் அல்ல; அது அவன் அல்ல" என்று தெரிந்து விலகிக் கொண்டே வந்தால், அதுபவப் பொருளாக அவன் இருப்பதை உணரலாம். காலத்தினாலும், இடத்தினாலும் வளர்ந்து வரும் பொருள் அத்தனையும் அவன் அல்ல என்று சொல்ல முடியும். அதனால்தான், "இது அல்ல, இது அல்ல" என்று சொல்லிச் சொல்லி அதற்கு முற்றுப் புள்ளியே இல்லாமல் இளைத்துப் போய் வேதம் நிற்கிறதேயொழிய, இவன் இத்தகையவன் என்று திட்டமாகச் சொல்லவில்லை. அன்மைச் சொல் வேதம் சொல்லுகிறதைப் போலவே அருணகிரியார் அன்மைச் சொல்லால் இந்தப் பாடலைச் சொல்கிறார். "ஆண்டவன் எனக்கு உபதேசித்தது ஒன்று உண்டு" என்று முதலில் சொல்கிறார். "அந்த ஒன்றைச் சொல்லுங்கள்" என்று சொன்னால், "அது அன்று; இது இன்று" என்று அடுக்குகிறார். தேன் என்று பாகுஎன்று உவமிக் கொனாமொழித் தெய்வவள்ளி கோன், அன்று எனக்குஉப தேசித்தது ஒன்றுஉண்டு. "வள்ளிமணாளன் எனக்கு உபதேசித்தது ஒன்று உண்டு" என்று உண்டு என்ற வார்த்தையை ஒரு முறை சொன்னார். அப்புறம் எத்தனை 'அன்று' சொல்கிறார் பாருங்கள்: கூறவற்றோ? வான்அன்று, கால்அன்று, தீஅன்று நீர்அன்று, மண்ணும் அன்று, தானன்று, நான்அன்று, அசரீரிஅன்று, சரீரிஅன்றே. உண்டு என்ற வார்த்தையை ஒரு முறை சொன்னவர் 'அன்று' என்ற வார்த்தையை ஒன்பது முறை சொல்லிவிட்டார். இந்தப் பாட்டில் அவ்வளவுதான் அடங்கும்; ஆதலால் ஒன்பதுமுறை சொல்லி நிறுத்தினார். மேலும் சொல்லிக்கொண்டே போனால் பாட்டு நீளமாகப் போகும். வேதமே, அன்று, அன்று என்று சொல்லி இளைக்கிறது என்றால், அருணகிரிநாதர் எவ்வாறு முற்றும் சொல்ல முடியும்? உண்டு என்றால் ஒன்று சொன்னால் போதும். அன்று என்றால் அந்த வரிசைக்குக் கணக்கில்லை; முடிவில்லை; சொல்லிக்கொண்டே இருக்கலாம். வள்ளி நாயகி தாம் அடைந்த இன்ப அநுபவத்தைச் சொல்ல வருகிற பொழுதெல்லாம், அருணகிரியாருக்கு வள்ளி பெருமாட்டியின் நினைவும் உடன் வரும். ஆறாவது பாட்டில், அரும்பும் தனிப் பரமானந்தம் பற்றிச் சொன்னார். அந்த இன்பத்தைத் தரக் கூடியவன் குறப் பெண்ணாகிய வள்ளியம்மையிடம் தான் இன்பம் அடைபவனைப் போலச் சென்ற குமரன் என்று, வள்ளியம்மையைச் சேர்த்துக் சொன்னார். சாதாரணமாகப் பாலை வெள்ளிக் கிண்ணியில் வைக்கிறோம். மண் குடுவையில் கள்ளை வைக்கிறார்கள். பாலை மண் குடுவையில் வைத்தால் அது கள்ளாகிவிடுமா? எந்தப் பாத்திரத்தில் இருந்தாலும் பால் பாலாகத்தான் இருக்கும். ஆண்டவன் எந்த வேஷம் போட்டாலும், காம மயக்கம் உடையவன் போலத் தோன்றினாலும், அவன் பேரின்ப நலத்தையே வழங்குகிறான். எம்பெருமான் வள்ளி நாயகியிடம் காம மயக்கம் உடையவனைப் போல ஒடி வந்தாலும், அவளைத் தடுத்தாட் கொண்டு பேரின்பத்தையே வழங்கினான். இதைப் பலவிடங்களில் நினைப்பூட்டுகிறார் அருணகிரியார். இங்கே தமக்கு ஒன்று உபதேசித்தவன் வள்ளி மணாளன் என்று சொல்கிறார். தேன்என்று பாகுஎன்று உவமிக் கொணாமொழித் தெய்வவள்ளி கோன் அன்று எனக்குஉப தேசித்த தொன்றுஉண்டு வள்ளி குறமகளாக வளர்ந்தாலும் திருமாலின் மகளாதலின், தெய்வத் தன்மை உடையவள். ஒரு பெண்ணைச் சிறப்பிக்கும் போது அவள் குணத்தைச் சொல்லலாம்; அவள் அங்க நலங்களை வருணிக்கலாம். ஆனால் அங்க நலங்கள் மனிதர்களுக்கே உரிய சிறப்பல்ல. உள்ளம் என்பது மனிதர்களுக்கு இருப்பதுபோலவே மற்ற விலங்குகளுக்கும் இருக்கிறது. அவை நினைக்கின்றன; ஆனால் சொல்லத் தெரிவதில்லை. மனிதர்கள் சிறப்பு அடைவதற்குக் காரணம் உள்ளத்தில் இருப்பதை உரைக்கக் கூடிய சக்தி இருப்பதுதான். வள்ளிநாயகியின் சிறப்பைச் சொல்லவந்தவர் அப்பெருமாட்டியினுடைய மொழியின் இனிமையை எடுத்து உரைக்கிறார். மொழி இனிமை வள்ளியெம்பெருமாட்டி தினைப்புனத்தைக காவல் செய்கிறாள். முருகன் மரத்தின் இடுக்கில் ஒளிந்து கொண்டிருக்கிறான். அவளது உடலும், உள்ளமும் அவனுக்குத் தெரியவில்லை. அவள் ஆலோலம் பாடிக் கொண்டிருக்கிறாள். அந்த இனிமையான மொழி அவன் காதில் விழுகிறது. "அடடா இவள் குரல் எவ்வளவு இனிமையாக இருக்கிறது. தேன் போன்றது, பாகு போன்றது என்று உவமித்துச் சொல்லொணாததாக அல்லவா இருக்கிறது?" என்று அவன் நினைக்கிறான். மகளிர் மொழியை தேன் என்றும், பாகு என்றும் உவமித்துச் சொல்வது வழக்கம். வள்ளி நாயகியின் மொழியை அவ்வாறு உவமித்த இடங்கள் இருக்கின்றன. தேன்மொழி வைத்தீசுவரன் கோயிலில் எழுந்தருளியிருக்கும் முத்துக்குமார சுவாமி பிள்ளைத் தமிழில் வள்ளியின் மொழியைத் தேனென்று கூறுகிறார் குமரகுருபரர். அழகான பாட்டாதலால் அதை இப்போது சிறிது பார்க்கலாம். ராமலட்சுமணர்கள் ராவண சங்காரம் செய்துவிட்டுத் தம் பாவங்களைப் போக்குவதற்காக வைத்தீசுவரன் கோயிலுக்கு வந்து பூசை பண்ணினார்களாம். அத்தகைய சிறப்புடைய தலம் அது. அங்கே எழுந்தருளியிருக்கிற வைத்தியநாதப் பெருமானையும், அவனுடைய அருட்சக்தியாகிய பாலாம்பிகையையும் பார்க்க வேண்டுமென்று திரிமூர்த்திகள் வருகிறார்கள். தேவரும் முனிவரும் பக்தருமாகப் பலர் எம்பெருமானது கோயில், வாசலிலே வரிசையாக நின்று கொண்டிருக்கிறார்கள். வைத்தியர் வீட்டிலும், மந்திரம் போடுகிறவர் வீட்டிலும் எப்போதும் கூட்டம் இருப்பதற்குக் கேட்க வேண்டுமா? வைத்தியநாதப் பெருமான் ஒரு பெரிய வைத்தியர். தையல் நாயகியோ பெரிய மந்திரக்காரி. தீராத நோயுடையவர்கள் டாக்டரிடம் வந்து ஆக வேண்டும். தீராத வினை தீர்த்த தம்பிரான் என்று வைத்தியநாத சுவாமிக்குப் பெயர். பேய் பிசாசு பிடித்தவர்கள் மந்திரக்காரி வீட்டுக்கு வராமல் என்ன செய்வது? தையல்நாயகி சந்நிதியில் பேய்கள் ஆடும். அவர்கள் வீட்டில் எந்தக் காலத்திலும் கூட்டத்திற்குப் பஞ்சம் இராது. மும்மூர்த்திகளும் அவர்களுடைய தரிசனத்திற்காக வந்து காத்திருக்கிறார்கள். ஆனால் வாசலிலே பெரிய கூட்டம் நிற்கின்றது. அந்த வரிசையில் நின்றால் அவர்களுடைய தரிசனம் கிடைப்பதற்கு நெடுங்காலம் ஆகும் போல் இருக்கிறது. என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நிற்கிறார்கள். அப்பொழுது ஒருவர் வருகிறார். "திரிமூர்த்திகளாகிய நீங்களா இங்கே காத்துக் கொண்டிருக்கிறீர்கள்? எம்பெருமானையும் எம் பெருமாட்டியையும் காண்பதற்கு நான் உங்களுக்கு ஒரு தந்திரம் சொல்லித் தருகிறேன். இந்த இரண்டு பேரையும் பார்ப்பதற்கு பதிலாக இவர்களுடைய அன்புக்கு உரியவரான ஒருவரைப் பார்த்தாலே போதுமே அது உங்களுக்கு தெரியாதா? இதோ இருக்கிறானே, முத்துக்குமாரசுவாமி. இவன் வைத்தீசுவரப் பெருமானுக்கும் தையல் நாயகிக்கும் அருமருந்து போன்றவன்; அமிருதம் போல இருக்கிறவன். இவனைத் தரிசித்துக் கொள்ளலாம்” என்று சொல்கிறார். அந்த மூன்று பேரும் அதைக் கேட்டு உடனே அந்தக் குழந்தையைப் பார்க்கப் போகிறார்கள். "குழந்தையிடத்தில் போவதானால் அதிகச் சிரமம் இல்லை. கொஞ்சம் வாழைப்பழம், தேங்காய் முதலியவற்றை வாங்கிக் கொண்டு போய்விட்டால் அவன் தரிசனம் எளிதில் கிடைத்து விடும்" என்று எண்ணி அவர்கள் முருகன் கோயிலுக்குப் போகிறார்கள். அங்கும் காத்துக்கிடக்கும்படி ஆகிவிட்டது. அவன் எங்கே போனான்? தினைக் கொல்லையைக் காவல்புரிகின்ற வள்ளியைத் தேடி ஓடி வருகிறான். "அவள் ஒரு வார்த்தை சொல்ல மாட்டாளா? அதைக் கேட்க மாட்டோமா?" என்று ஏங்கி நிற்கிறான். அவள் வாயிலிருந்து எப்பொழுது வார்த்தை உதிரும் என்று காத்துக் கொண்டிருக்கிறான். அவளுடைய தேனூறு கிளவிக்கு வாயூறி நிற்கிறானாம். "மீனேறு குண்டகழி தீவாய் மடுத்ததனி வில்லியார் இளவலோடும் விதிமுறை வணங்கச் சடாயுபுரி யிற்கருணை வெள்ளமென வீற்றிருக்கும் ஆனே றுயர்த்திட்ட ஐயற்கும் அம்மைக்கும் அருமருந் தாகிநின்ற ஆதிப் பிரான் என்று மும்முதற் கடவுளும் ஆடித்தொழும் பாற்றமற்க் கூனேறு மதிநுதல் தெய்வக் குறப்பெண் குறிப்பறிந் தருகணைந்துன் குற்றேவல் செய்யக் கடைக்கண் பணிக்கெனக் குறையிரந் தவள் தொண்டைவாய்த் தேனுறு கிளவிக்கு வாயூறி நின்றவன் செங்கீரை ஆடியருளே செத்துப் பிறக்கின்ற தெய்வங்கள் மணவாள செங்கீரை ஆடியருளே." பாகு மொழி குமரகுருபரர் இந்தப் பாட்டில் வள்ளிநாயகியின் மொழிக்குத் தேனை உவமையாக்கினார். அருணகிரிநாதர் அந்த மொழிக்குப் பாகையும் உவமை கூறினார். “கரங்கமல மின தரம் பவளம்வளைகளம் பகழிவிழி மொழிபாகு கரும்பமுது முலைகுரும்பை குருகுபகரும் பிடியினிடை எயின்மாது என்பது திருப்புகழ். வேறு ஓரிடத்தில், "பாகு கனி மொழி மாது குறமகள்" என்று பாடுகிறார். எம்பெருமானுக்குப் பாகு கொடுக்கும் போது வள்ளிநாயகி இங்கிதமொழி பேசிக் கொடுத்தால் அந்தப் பாகும் கனிந்துவிடுமாம். பாகு கனிவதற்குக் காரணமான மொழி, பாகுக்கும் சுவை மிகச் செய்யும் மொழி என்று பொருள் செய்வது சிறப்பாக இருக்கும். பாகையும் கனியையும் போன்ற மொழி என்றும் சொல்லலாம். இப்படித்தேன் என்றும், பாகு என்றும் வள்ளியின் மொழிக்கு உவமைகளைக் கூறுவது புலவர் வழக்கம். அருணகிரிநாதருக்கு அந்த உவமைகளால் திருப்தி உண்டாகவில்லை. "ஏதோ அவசரத்தில் உபமானம் சொல்லிவிட்டோம். வள்ளியெம்பெருமாட்டியின் மொழிக்கு உபமானம் சொல்வது தவறு" என்று சொல்கிறவரைப்போல இப்போதும் பாடுகிறார். தேன் என்று பாகு என்று உவமிக்கொணா மொழித் தெய்வ வள்ளி" என்கிறார். எம்பெருமானது பேரின்ப அநுபவத்தைப் க.சொ.1-19 பெற்றவள் வள்ளி; அவள் தெய்வத் தன்மை பொருந்தியவள். முருகனே கும்பிடும் தெய்வம் அல்லவா? அன்று அன்று எனக்கு உபதேசித்தது ஒன்று உண்டு. அன்று என்பது அந்த நாள் என்று குறிக்கும் சுட்டுச் சொல். முன்னாலே ஒரு நாளைக் குறிப்பிட்டுப் பின்பு அன்று என்று சுட்டினால் இன்ன நாள் என்று தெரியும். இங்கே அருணகிரியார் எந்த நாளைக் குறிப்பிடுகிறார்? இதற்கு முன்னே இன்ன நாள் என்று குறிப்பிட்டிருக்கிறாரா? அப்படி ஒன்றும் இல்லை. மூவகைச் சுட்டு இங்கே கொஞ்சம் இலக்கணத்தைப் பார்க்கலாம். "ராவணனை அவன் கொன்றான்” என்றால் எவன் கொன்றான் என்பது நமக்குத் தெரியும். ராமன் ராவணனைக் கொன்றான் என்பது உலகு அறிந்த உண்மை. "அந்தக் காந்தி இருந்தாரே" என்றால் அந்த என்பது யாரைச் சுட்டுகிறது என்பது உலகத்திற்குத் தெரியும். அத்தகைய சுட்டுக்கு உலகறி சுட்டு என்று பெயர். "அவன் அன்றி ஓரணுவும் அசையாது" என்றால் அவன் என்பது "யாரைச் சுட்டுகிறது?" இறைவனைச் சுட்டுகிறது. இது உலகத்திற்குத் தெரியும். ஆகவே உலகறிச் சுட்டு. "அன்றைக்கு ராவணனை ராமன் கொன்றான்" என்பதில் அன்று என்பது பழைய காலத்தைச் சுட்டுகிறது. "அந்தக் காலம்" என்பதில் வரும் அந்த என்பதும் அத்தகையதே. இது பண்டறிச் சுட்டு. "என் கல்யாணத்தன்று" என்று ஒரு பெண் தோழி ஒருத்தியிடம் சொல்கிறாள். அந்தப் பெண்ணின் கல்யாணம் என்றைக்கு ஆயிற்று என்று உலகத்திற்குத் தெரியாது; அந்தத் தோழிக்கும் தெரியாது. இது உலகறி சுட்டும் அல்ல; பண்டறிச் சுட்டும் அல்ல. என்றைக்குக் கல்யாணம் ஆயிற்று என்பது அந்தப் பெண்ணின் மனத்திற்கு மாத்திரம் தெரியும். இதற்கு நெஞ்சறி சுட்டு என்று பெயர். "அன்று எனக்கு உபதேசித்தது" என்ற அருணகியார் கூறுவதில் உள்ள அன்று என்பது நெஞ்சறி சுட்டு. அவர் சுட்டும் நாள் அவர் நெஞ்சுக்குத்தான் தெரியும். உபதேசம் "வள்ளிகோன் அன்று உபதேசித்தது ஒன்று உண்டு” என்று முருகன் தமக்கு உபதேசித்தாகச் சொல்கிறார். ஒரு மாணாக்கனுக்கு ஒரு நூலில் ஒன்று விளங்கவில்லை. அதை ஆசிரியன் விளங்கும்படியாகச் சொல்கிறான். நூலிலுள்ள பொருள் விளங்க வில்லையானால் அதற்கு உரை கூறி விளக்குகிறான். இவையாவும் உபதேசங்களே. வேறு சிலர் மந்திரங்களை உபதேசிக்கிறார்கள். மந்திர குருவினுடைய உபதேசத்தையே பெரும்பாலும் உபதேசம் என்று நாம் வழங்கி வருகிறோம். உலகம் நிலையாதது என்பதையும் இறைவன் நிலை இன்னதென்பதையும் வேறு சமய உண்மைகளையும் ஒரு பெரியவர் சொல்கிறார். அவரும் உபதேசம் செய்கிறவரே. சமயப் பிரச்சாரம் செய்கிறவரை உபதேசியார் என்று சிலர் சொல்கிறார்கள். இத்தனை உபதேசங்களும் அறிவிலே தெளிவாகப்பதிகின்றன. முன்பு தெரியாமல் குழம்பியிருந்த அறிவில் இப்போது உபதேசத்தால் தெளிவு உண்டாகிறது; உபதேசித்த பொருள் பதிகிறது. அதன் பயனாக உபதேசம் பெற்றவர்கள் மற்றவர்களுக்கும் அந்தப் பொருளை விளக்கும் ஆற்றல் பெறுகிறார்கள். தாம் உபதேசத்தால் அறிந்த ஒன்றைப் பிறருக்குச் சொல்லும் வன்மை அவர்களுக்கு அமைகிறது. அவர் பெற்ற உபதேசம் அப்படிச் சொல்லும் எல்லைக்குள் அடங்கியிருப்பது. இங்கே, வள்ளிகோன் உபதேசித்தது எப்படி? எதை உபதேசித்தான்? அவன் அறிவிலே பதியும் உபதேசத்தோடு நிற்கவில்லை. அறிவிலே தெளிவுண்டாக்கும் உபதேசம் பிறருக்கு மீட்டும் சொல்லத்தக்க இயல்பை உடையது. "முருகன் தங்களுக்கு உபதேசம் செய்த அந்த ஒன்றை எங்களுக்குச் சொல்லுங்கள்" என்று அருணகிரியாரைக் கேட்டால் அவர், "அந்தோ! அதைக் கூற இயலாதே! கூறும் வன்மை எனக்கு இல்லையே! கூறத்தக்க வன்மையுடையவர்களின் வன்மைக்கு அகப்பட்டது அல்லவே!" என்று சொல்கிறார். "கூறவற்றோ?" என்று பாட்டில் வருகிறது. ஏன் அப்படிச் சொல்கிறார்? அறிவு, அநுபவம் என்று இரண்டு உண்டு. மனத்தின் பகுதி அறிவு. புத்தியில் பதிகின்ற தெளிவே அறிவு விளக்கம். முருகன் செய்த உபதேசம் அநுபவத்தை உண்டாக்கியது. அறிவின் எல்லைக்கு அப்பாற்பட்டது அநுபவம். அநுபவம் வரும்போது அறிவு செயலற்று நின்றுவிடுகிறது. சில இடங்களில் ஞானம் என்று அநுபவ உணர்வைக் குறிப்பிடுவதுண்டு. அங்கே அநுபவம் வேறு, ஞானம் வேறு என்ற பிரிவே இல்லை. அநுபவமே ஞானம்; ஞானமே அநுபவம். மனம் கடந்த நிலை அது. முருகன் உபதேசித்தது, அறிவிலே பதிகிற உபதேசம் அன்று; உயிரிலே பதிந்த அநுபவம். அந்த அநுபவம் உண்டாகும்படி செய்ததையே இங்கே உபதேசித்ததாகச் சொன்னார். அதனால் தான், "அது கூறும் வன்மைக்கு அகப்பட்டதா?" என்கிறார். அநுபவ உணர்வு நுட்பமானது. நுட்பமானவற்றை உப மானத்தாலும் உருவகத்தாலும் சொல்வது வழக்கம். அப்படியாவது இந்த அநுபவத்தை, வள்ளிகோன் உபதேசித்த ஒன்றை, சொல்லிவிட முடியுமா? வான் அன்று எல்லாப் பூதங்களையும் தனக்குள் அடக்கி வைத்திருப்பதுவான்; நுட்பமானது; சுட்டிக்காட்ட இயலாதது. "நீங்கள் சொல்கின்ற ஒன்று இந்த வானோ?” என்றால் "வான் அன்று" என்கிறார். கால் அன்று அப்படியானால் மிகவும் இனிமையாக இருப்பது, வெப்பத்தைப் போக்குவது காற்று அல்லவா? அருணகிரியார் பெற்ற அநுபவம் காற்றுப் போல இருக்கிறதா? பிறவியாகிய வெப்பத்தைத் தீர்ப்பதற்கு ஆண்டவன் அருள் தென்றல் காற்றாக வரும் என்கிறார்களே. "வீசு தென்றலும்" என்று அப்பர் சொன்னாரே! அந்தக் காற்றை உபமானமாகச் சொல்லலாமா? இப்படிக் கேட்டால், "கால் அன்று" என்கிறார். கால் - காற்று. அந்த இன்ப அநுபவத்தைக் காற்று என்றும் சொல்ல முடியாது. தீ அன்று இருக்கின்ற மாசுகளைக் களைவதே இன்பம் என்று சொல்வார்கள். நீரினாலே ஓரளவு மாசுகளைக் களைய முடியும். தீயோ பொருள்களின் மாசுகளைப் போக்கிப் பரிசுத்தத்தைப் தருகின்றவற்றில் சிறந்தது. அந்த அக்கினியை உபமானமாகச் சொல்லலாமா? அதையும் சொல்லக் கூடாது. "தீ அன்று." நீர் அன்று அப்படியானால், அப்புவை அமிருதம் என்று சொல்கிறார்கள். உண்பாருக்கு நல்ல உணவுகளை உளவாக்கி, அவற்றை உண்கிறவர்களுக்குத் தானும் உணவானது நீர். "துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉம் மழை" என்கிறார் வள்ளுவர். நெல்லை விளைப்பதற்குத் தண்ணீர் வேண்டியிருக்கிறது. நெல்லிலிருந்து அரிசியைக் குத்தி எடுத்தால் அதைச் சோறு ஆக்கத் தண்ணீர் வேண்டும். சாப்பிட நாம் உட்கார்ந்தவுடன் தாய் ஒரு பாத்திரத்தில் நீரைப் பக்கத்தில் கொண்டுவந்து வைத்துவிட்டுச் சாதம் போடுகிறாள். சாப்பிடுகிறவனுடைய உணவுப் பொருளையும் தண்ணீர் உண்டாக்கிக் கொடுக்கிறதோடு சாப்பிடுகிறவனுக்குத் தானேயும் தனித்து உணவாகிறது. ஆகையால் மிகச் சிறப்பானது தண்ணிர் என்று அநுபவத்தில் காண்கிறோம். சில காலத்திற்கு முன்னால் மேல்நாட்டிலிருந்து பெரிய விஞ்ஞானி ஒருவர் வந்தார். ஸர்.ஸி.வி. ராமன் அவரிடம் திடீரென்று, "நீங்கள் அமிருதத்தைப் பார்த்திருக்கிறீர்களா?" என்று கேட்டார். அவர் சற்றே யோசனை செய்தார். "ஸ்ரீ ராமன் சுத்தமான தண்ணீர் (Pure and Simple water) என்றார். ஆகவே, நீங்கள் அடைந்த அநுபவம் தண்ணீர் போன்றதா?" என்று கேட்டால் "நீர் அன்று" என்கிறார். மண் அன்று சரி. உயிர்கள் உடம்பு எடுத்துப் பக்குவத்தை அடைகின்றன. உடம்புக்கு ஆதாரமாக இருப்பது பூமி. தரை என்று அதற்குப் பெயர். தரை என்பதற்குத் தாங்குவது என்று பொருள். தனக்குத் துன்பம் செய்கிறவனையும் அது தாங்குகிறது. தன்னைவெட்டுகிறவனையும் தாங்குகிறது. ::"அகழ்வாரைத் தாங்கும் நிலம்" என்கிறார் வள்ளுவர். பூமிக்கு வசுந்தரா என்றும் ஒரு பெயர் உண்டு. வசு என்றால் செல்வம். பலவகையான செல்வங்களை அவள் தன் மடிக்குள் வைத்திருக்கிறாள். சிலர் பணத்தைக்கூடப் பூமியில் புதைத்து வைத்திருக்கிறார்கள். நெய்வேலியில் நிலக்கரி கிடைக்கிறது. கோலாரில் தங்கம் கிடைக்கிறது. இப்படி வெள்ளி, தங்கம், நிலக்கரி, வைரம் ஆகிய எல்லாவற்றையும் பூமி தனக்குள் வைத்திருக்கிறது. தன் வயிற்றில் செல்வத்தை எல்லாம் தாங்குபவள் ஆதலால் வசுந்தரா என்ற பெயர் பூமிக்கு வந்தது. "அத்தகைய பூமியை நீங்கள் அடைந்த அநுபவத்திற்கு ஒப்பாகச் சொல்லலாமா?" என்றால், "மண்ணும் அன்று" என்கிறார். இவ்வாறு ஐம்பூதங்களும் அன்று என்று சொல்வதன் வாயிலாகத் தாம் பெற்ற அநுபவம் பூதங்களுக்கும் அப்பாற் பட்டது என்று உணர்த்தினார். ஐம்பூதங்களாலும் வாழ்க்கையில் நமக்கு அநுபவம் உண்டாகிறது. அவர் அடைந்தது அந்த அநுபவம் அன்று. மூவிடம் அதோடு நிற்கவில்லை. மேலும் அன்று அன்று என்று சொல்கிறார். தான் அன்று, நான் அன்று, அசரீரி அன்று சரி அன்றே தான் என்பதற்கு அவன் என்று பொருள். அவன் என்று சுட்டும் பொருளும் அன்று அந்த அநுபவம். "அப்படியானால் எனக்குத் தெரிந்தது நான்தான். நான் ஆகுமோ?" என்றால், "நான் அன்று" என்கிறார். தான் நான் என்னும் இரண்டும் இனச் சொற்கள். இனத்தைச் சுட்டும் வரையில் பேதம் உண்டு. "யான்தான் எனும் சொல் இரண்டுங் கெட்டாலன்றி யாவருக்கும் தோன்றாது சத்தியம்" என்று அருணகிரியார் கூறுவார். தான், நான் என்று சொல்கின்ற பேத உணர்ச்சி இருக்கிற வரைக்கும் அநுபவம் இல்லை. இந்த இரண்டும் கெட்டாலன்றி அவன் அருளைப் பெற முடியாதாம். நான், நீ, தான் என்னும் மூன்றும் ஓர் இனச் சொற்கள் மூன்று இடங்களைக் குறிப்பவை. நான் என்பது தன்மை; நீ என்பது முன்னிலை; தான் என்பது படர்க்கை. பகல் என்று சொன்னால் இரவு இருக்கிறது என்பது குறிப்பால் தெரியும். வேண்டியவன் இருக்கிறான் என்று சொன்னால் வேண்டாதவனும் இருக்கிறான் என்று ஆகும். அதைப் போலவே, தான் என்று சொன்னால் நான், நீ என்பவற்றையும் நினைக்கச் செய்யும். முதலில் சொன்ன பஞ்சபூதங்களும் முன்னே உள்ள பொருள்கள்; முன்னிலைக்குச் சமமானவை. அவற்றினூடே வாழ்கின்ற நாம் தன்மை, இறைவன் அவன் என்னும் படர்க்கை. இந்த மூன்று இடங்களுக்கும் அப்பாற்பட்ட அநுபவத்தை அருணகிரிநாதர் பெற்றார். அவன் என்ற படர்க்கையாகக் காணாமல் பெற்ற அநுபவம் ஆதலால் தானும் அன்று என்றார். இப்படி அன்று, அன்று என, முன்னிலை, படர்க்கை, தன்மை என்பவற்றை மறுத்துவிட்டுக் கடைசியில் மிகச் சுருக்கமாகச் சொல்லி முடிக்கிறார். உருவம் படைத்த எதையும் உபமானமாகச் சொல்ல முடியாது; உருவம் இல்லாததையும் சொல்வது பொருந்தாது' என்று சொல்கிறார். அசரீரி அன்று, சரீரி அன்றே சுட்டிக் காட்டலாகாத பொருளை எப்படிச் சொல்வது? வேதமே இது அன்று, இது அன்று என்று சொல்லும்போது அவர் எப்படிச் சொல்ல முடியும்? அவர் சொல்லவில்லை என்பதனால் அவருக்கு ஒரு குறைபாடு உண்டாகாது. அவர் சொல்லிவிட்டாரானால் அது அவர் அநுபவத்திற்கு ஒரு குறைபாடு. "கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டிலர்" என்பது அல்லவா வழக்கு? வேதத்தினால் சொல்ல முடியாத ஒன்றை இவர் சொல்லிவிட்டார் என்பதனால் அவர் அநுபவத்திற்குப் பெருமை ஏற்படாது; அவர் அநுபவம் சந்தேகத்திற்குரியது என்றே தோன்றும். எல்லாவற்றையும் நன்கு உணர்ந்துள்ள வேதம் சொல்வதைப் போலவே சொன்னார் இவர்; ஆகவே இவர் அடைந்த அநுபவம் சத்தியம் என்று தெரிகிறது. தேன்என்று பாகுஎன்று உவமிக் கொணாமொழித் தெய்வவள்ளி கோன்அன்று எனக்குஉப தேசித்தது ஒன்றுஉண்டு, கூறவற்றோ? வான்அன்று, கால்அன்று, தீஅன்று, நீர்அன்று, மண்ணும் அன்று, தான்அன்று, நான்அன்று, அசரீரிஅன்று, சரிரீ அன்றே. (தேன் என்றோ பாகு என்றோ உவமை கூற இயலாத இனிய மொழியையுடையவளும் தெய்வத்தன்மை உடையவளுமாகிய வள்ளி நாயகியினுடைய கணவன் அன்றைக்கு எனக்கு உபதேசித்தது ஒன்று உண்டு; அது கூறும் வன்மைக்கு உட்பட்டதோ? அது வானம் அன்று; காற்று அன்று; நெருப்பு அன்று; நீர் அன்று, மண்ணும் அன்று; அவன் அன்று; நான் அன்று; சரீரம் இல்லாதது அன்று; சரீரம் உடையதும் அன்று. கோன்-தலைவன். அன்று: நெஞ்சறிசுட்டு. வற்றோ - வன்மையானதோ: வன்மைக்கு அகப்பட்டதோ) சும்மா இருக்கும் எல்லை அநுபவாதிசயம் "இது அன்று, இது அன்று" சொல்லிக்கொண்டே வந்து ஒரு பாட்டை முடித்துத் தொடர்ந்து அந்தப் பட்டில், "சொல்ல முடியாத தாயிற்றே அது!" என்று கூறுகிறார் அருணகிரியார். அந்த இன்ப அநுபவத்தைச் சொல்லத் தொடங்கி அப்படியே நிறுத்திவிட்டு, "ஆஹா!" என்று வியப்படைகிறார். ஒரு குழந்தை இறந்துவிட்டது. அக்குழந்தையின் தாயிடம் பலர் சென்று, "நேற்றுக்கூட விளையாடிக் கொண்டிருந்தானே! எப்படி இறந்தான்?' எனத் துக்கம் கேட்கிறார்கள். தாய், "நேற்றுக்கூட விளையாடிக் கொண்டுதான் இருந்தான்...உம், ஆ... சாயங்காலம்கூட நன்றாகப் பேசிக் கொண்டிருந்தான்... உம்.ஆ" என எல்லை மீறிய துக்கத்தினால் விஷயத்தைச் சொல்ல முடியாதவாறு இடை இடையே துன்பக் கொட்டாவி விடுவாள். எல்லை மீறிய இன்பம் அடைந்தவனும் இப்படித்தான் சொல்ல முடியாமல் திணறுவான். தாம் அடைந்த இன்ப அநுபவத்தைச் சொல்லும் அருணகிரியாருக்கு இடையிடையே வருகிறது அந்தக் கொட்டாவி. முதல் பாட்டிலேயே, "பேற்றைத் தவம் சற்றுமில்லாத என்னைப் பிரபஞ்சம் என்னும் சேற்றைக் கழிய வழி விட்டவா" என்று இந்த அநுபவாதிசயம் வெளியாயிற்று. இப்போது பார்க்கப் போகும் பாட்டில், "சொல்லுகைக்கு இல்லை என்று எல்லாம் இழந்து சும்மா இருக்கும் எல்லையுள் செல்ல எனைவிட்டவா!" என்று ஆச்சரியம் ததும்ப வெளிப் படுகிறது கொட்டாவி. "விட்டவாறு என்னே!" என்று சொல்ல முடியாத இன்பத் திணறலைக் காண்கிறோம். சில அநுபவங்கள் சொல்ல முடியும்; கேட்டவர்களும் அநுபவிக்க முடியும். பழம் இனிக்கிறது என்று மாத்திரம் சொல்ல முடியும். எப்படி இனிக்கும் என்று ஒருவாறு சொல்ல முடியாது. பழத்தைத் தின்றால்தான் முடியும். ஆனால் ஆத்மாநுபவத்தைச் சொல்லவும் முடியாது; எல்லோரும் அநுபவிக்கவும் முடியாது. இருவகை எல்லை 'நான் ஒர் எல்லைக்குள் இருந்தேன். பிறகு வேறொரு புதிய எல்லைக்குள் புகும்படி முருகன் அருள் செய்தான் என்று தொடங்குகிறார். அவர் முன்பு இருந்த எல்லை நாம் இப்போது இருக்கும் துன்பமான எல்லை; எதையும் வாக்கினாலே சொல்கிற எல்லை; ஒரு கணம்கூடச் சும்மா இருக்க முடியாத எல்லை. எப்பொழுதும் வேகத்தோடு வாழ்க்கை நடத்துகின்ற அந்த எல்லைக்குள் சும்மா செயலற்று இருக்கும் நிலை இல்லை. எங்கே திரும்பினாலும் ஒரே பேச்சுத்தான். சமய இயலானாலும், அரசியல் துறையானாலும், வியாபார விளம்பரமானாலும் ஒரே பேச்சுத் தான். சும்மா இருப்பதனால்தான் சுகம் என்பதைப் பற்றியே எப்போதும் பேசிக் கொண்டிருக்கும் இடம் இது! அருணகிரியார் புகுந்த எல்லை, எல்லாம் அடங்கிச் சும்மா இருக்கும் மோன நிலை. எல்லாம் இழத்தல் சும்மா இருக்கும் இடத்துக்கும், நாம் இருக்கிற இடத்துக்கும் நடுவில் ஒர் எல்லை உண்டு. "அந்த எல்லையைத் தாண்டி, சும்மா இருக்கும் எல்லைக்குள் செலுத்தினான்" என்கிறார். "அதைப்பற்றி எதுவும் சொல்லுகைக்கு இல்லை" என்கிறார். சொல்லுகைக்கு இல்லைஎன்று எல்லாம் இழந்து சும் மாஇருக்கும் எல்லையுட் செல்ல, எனைவிட்டவா! இழப்பது என்பது நஷ்டம் அல்லவா? என்னிடம் இருந்த ஒன்றை இழந்துவிட்டேன் என்று சொன்னால் அது துக்கப்பட வேண்டிய நிலை. ஆனால், இங்கே இழந்ததைச் சிறப்பித்துப் பேசுகிறார். இழப்பது லாபம் என்று சொல்கிறவர் அருணகிரியார். 'உல்லாச நிராகுல, யோகஇதச் சல்லாப விநோதனும் நீஅலையோ? எல்லாம்அற, என்னை இழந்தநலம் சொல்லாய்முரு கா!சுர பூபதியே!" என்று அவர் கந்தர் அநுபூதியில் பாடுகிறார். "எல்லாம் அற என்னையும் இழந்த நலம் எப்படி எனச் சொல்லாய், முருகா" என்று கேட்கிறார். எல்லாம் இழந்ததை நலம் என்கிறார். பாயசம் சாப்பிட்ட குழந்தை, "அம்மா பாயசம் சாப்பிட்டேனே; அது எப்படி இருந்தது சொல்லம்மா" என்று தாயைக் கேட்பது போல இருக்கிறது இது. அதைச் சுவைத்ததிலே தான் அடைந்த இன்பத்தைக் குழந்தையால் சொல்ல முடிவதில்லை. "உலக இன்பத்தை நுகர்வதற்குக் கருவியாக இருக்கும் கருவி கரணங்களை எல்லாம் இழந்தேன். அவற்றை இன்னவாறு இழந்தேன் என்று சொல்லக்கூட முடியாத வகையில் என்னையும் இழந்து விட்டேன். என்னையே இழந்த பிறகு நுகர்ந்ததை உணரவும், சொல்லவும் நான் இல்லையே! நீ இருக்கிறாய். ஆகையால் நீதான் சொல்ல வேண்டும், முருகா!" என்று கேட்கிறார். எல்லாம் இழப்பதில் தன்னை இழந்ததும் அடங்கும். விழுப்புரம் ஸ்டேஷனில் நிறையக் கடைகள் வந்திருக்கின்றன என ஒருவர் கேள்விப்பட்டிருந்தார். ரெயிலில் போகும் போது விழுப்புரம் ஸ்டேஷனைப் பார்க்க வேண்டுமென்று எண்ணினார். ஆனால் சுகமாகக் காற்று வீசியதனால் தூங்கிப் போய்விட்டார். விழுப்புரம் தாண்டிய பிற்பாடுதான் விழித்துக் கொண்டார். அதனால் விழுப்புரம் ஸ்டேஷன் இன்னவாறு இருந்தது என்று அவரால் சொல்ல முடியவில்லை. அப்படி நான் என்ற ஒன்று எப்பொழுதும் விழிப்போடு இருந்தால், தான் அநுபவிக்கிற இன்பம் இன்னவாறு இருந்தது என்று சொல்லலாம். அருணகிரியார் அந்த நான் என்பதையும் இழந்துவிட்டார்; எல்லாவற்றுக்கும் சாட்சியாக இருக்கிற நான் என்பதை இழந்த நிலையிலே ஜீவசாட்சியாக இருக்கிற ஒருவன் ஆண்டவன்தான். பிறவிப் பிணி உடலைப் பற்றியிருக்கிற நோய் நீங்கினால், உடலுக்கு இன்பம் உண்டு. நோய்க்கு இடம் கொடுக்கிற உடம்பு உண்டாவதே ஒரு நோய் அல்லவா? அதுதான் பிறவிப் பிணி. புழுக்கள், ரத்தம், சீழ் முதலியவை நிரம்பிய அசுத்தமான மலபாண்டமாகிய இது வருவது ஒரு நோய். ஜூரம், தலை வலி முதலானவை உடம்புக்கு வரும் நோய். பிறவி உயிருக்கு வரும் நோய். உலகில் பிறந்து புண்ணியம், பாவம் ஆகிய இரு வினைகளையும் செய்வதனால் பிறவி நோய் உண்டாகிறது. மனம், வாக்கு, காயம் ஆகியவற்றினாலே செய்கின்ற புண்ணிய பாவங்கள்தாம், உயிரைப் பிடிக்கும் நோய்க்குக் காரணம். புண்ணியம் செய்தல் எப்படி நோய்க்குக் காரணமாகும் எனக் கேட்கலாம். புண்ணியம் செய்கின்றவர்கள் தேவர்களாகப் பிறந்திருக்கிறார்கள். பாவம் செய்கிறவர்கள் விலங்குகளாகவும், மனிதர்களாகவும் பிறக்கின்றார்கள். ஆகவே, பிறப்பு ஆகிய பிணி புண்ணியம், பாவம் ஆகிய இரு வினைகளையும் செய்வாருக்கு உண்டு. தங்கத்தினால் செய்த விலங்கைக் கைகளில் பூட்டினாலும், இரும்பினால் ஆன விலங்கைப் பூட்டினாலும் விலங்கு விலங்குதான். தங்கத்தினால் அமைந்த விலங்கு காப்பாகிவிடாது. காப்பாக இருந்தால் இரு கைகளையும் தனித்தனியே வீசி நடப்பதற்கு அநுகூலமாக இருக்கும்; இரு கைகளிலும் தனித்தனியே இருக்கும். புண்ணியம், பாவம் ஆகிய இருவினைகளிலும் ஏற்படுகின்ற நோயினால் உயிருக்குச் சுதந்தரத் தன்மை போய்விடுகிறது. இரண்டாலும் பிறப்பு ஏற்படுகின்றது. பிறப்பதனால் துன்பம் உண்டாகும். "இருள்சே ரிருவினையும் சேரா இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு" என்கிறார் வள்ளுவர். இரண்டு வினைகளையும் இருள்சேர் வினை என்று சொல்கிறார். நாம் செய்கின்ற வினைகளான புண்ணியம், பாவம் ஆகியவற்றினால் உயிரைப் பற்றும் பிறப்பாகிய நோய் வருகின்றது. இறைவனை அடைந்தவர்களிடம் இந்த இருவினையும் சேரா. பிறப்புக்குக் காரணமானவை உடம்பினால் நாம் செய்கின்ற செயல், வாக்கினால் நாம் பேசுகின்ற பேச்சு, நெஞ்சினால் நாம் நினைக்கின்ற நினைப்பு என்பவை. மூவகை மோனம் பிறவி என்ற நோய் இல்லாமல் இருந்தால் இன்பம் உண்டாகும். நோய் தீர்ந்தால்தானே இன்பம்? ஆகவே நோய்க்குக் காரணமான செயல்கள் நழுவ வேண்டும்; மூன்று கரணங்களும் செயல் இழந்து போக வேண்டும். மூன்று கரணங்களும்,செயலிழந்து போனால் புண்ணியம் இல்லை; பாவம் இல்லை. புண்ணிய பாவம் இல்லாமையினால் பிறவி நோய் இல்லை. மூன்று கரணங்களும் ஒருங்கே சும்மா இருக்க வேண்டும். ஒர் இடத்தைவிட்டு ஆடாமல் அசையாமல் இருப்பது உடம்பு சும்மா இருத்தல்; எதைப் பற்றியும் சிந்திக்காமல் இருப்பது மனம் சும்மா இருத்தல்; எதைப்பற்றியும் பேசாமல் இருப்பது வாக்கு சும்மா இருத்தல். இந்த மூன்றும் மூவகை மோனம். சும்மா இருப்பது அருணகிரியார், "சும்மா இருக்கும் எல்லையுள் செல்ல என்னை விட்டவாறு என்னே" என்று அதிசயப்படுகிறார். பல இடங்களில் அவர் இதைப் பற்றிச் சொல்கிறார். "சும்மா இருப்பது என்ன அவ்வளவு அருமையானதா? சும்மா எதுவும் பேசாமல் இருப்பவர்கள் சோம்பேறிகள் அல்லவா?" என்ற கேள்வி எழலாம். ஒர் ஊரில் ஒரு சாமியார் இருந்தார். அவர் யாருடனும் எதுவும் பேசாமல் எப்பொழுதும் மெளனமாகவே ஒரு கோயில் திண்ணையில் அமர்ந்திருப்பார். அவருக்கு அந்தக் கோயில் நிர்வாகிகள் ஒரு பட்டைச் சாதம் தினமும் கொடுப்பது வழக்கம். புது நிர்வாகி ஒருவர் வந்தார். கணக்குகளைப் பார்க்கும்போது, "சும்மா இருக்கும் சாமியாருக்கு ஒரு பட்டை" என்று இருப்பதைக் கண்டார். அவருக்கு மிகவும் கோபம் வந்துவிட்டது. "சும்மா இருக்கிற சோம்பேறிகளுக்கு எதற்காகச் சோறு? இனி மேல் அந்தச் சாமியாருக்குச் சோறு கொடுக்கக்கூடாது" என்று உத்தரவு பிறப்பித்தார். சாமியாரிடம் மற்றவர்களுக்கு மரியாதை உண்டு. "அப்படிச் சொல்வது சரியல்ல" என்று அவர்கள் சொல்ல விரும்பினாலும் அதை எப்படிச் சொல்வது என்று தெரியவில்லை. மெல்ல நிதானமாக, "நீங்கள் அப்படி நினைக்கக் கூடாது. சும்மா இருப்பது என்பது சுலபமான காரியம் அல்ல. புலன் ஒடுங்கிய ஞானிகளுக்குத்தான் அது சாத்தியம். அவர் பெரிய ஞானி" என்று அதிகாரியிடம் ஒருவர் சொல்ல ஆரம்பித்தார். "சும்மா இருப்பது என்ன ஐயா அருமை? நான் இன்று முழுவதும் யாருடனும் பேசாமல் சும்மா இருக்கிறேன், பாரும்" என்று பந்தயம் போட்டார் அந்த அதிகாரி. 'சரி' என மற்றவர்கள் விட்டுவிட்டார்கள். அதிகாரி, "இன்றைக்கு யாருடனும் பேசுவது இல்லை" என்ற விரதத்தோடு வீட்டுக்கு வந்தார். இது அவர் மனைவிக்குத் தெரியாது. அவர் வீட்டிற்குள் போவதற்குள்ளேயே, "இன்றைக்கு என்ன சமையல் பண்ணுவது? காய்கறி ஏதாவது வாங்கிக் கொண்டு வருகிறீர்களா?" எனக் கேட்டுக் கொண்டே வந்தாள். அவர் மெளனமாக உள்ளே போனார். அந்த அம்மாவுக்கு மிகவும் கோபம் வந்துவிட்டது. "சரிதான், பேசாவிட்டால் போங்களேன். என்ன சமைக்கிறது என்று கேட்டால் ஊமை போல் இருந்தால் என்ன அர்த்தம்? நானும் பேசாமல் இருந்துவிடுகிறேன்" எனக் கோபமாக உள்ளே போய்விட்டாள். இது ஏதடா வம்பாகப் போய்விட்டதே என்று அதிகாரி ஒன்றும் புரியாமல் மெளனமாகவே இருந்தார். "சாமி" எனக் கோயில் பூக்காரன் வந்தான். "இன்றைக்கு நிலைமாலை கட்ட வேண்டுமா? இல்லாவிட்டால் சரமாகவே கொண்டு வந்துவிடட்டுமா?" என்று கேட்டான். "போங்களடா என் உறுதியைக் குலைப்பவர்கள் போல ஏனடா நிற்கிறீர்கள்?" என்று சொல்ல வேண்டும்போல அவர் மனம் துடித்தது. வாய் பேசவில்லையே தவிர, கையையும் முகத்தையும் காட்டி ஏதோ சைகை செய்தார். அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. தலையைச் சொறிந்துகொண்டே நின்றான். "சாமி மாட்டைப் பட்டிக்குப் பிடித்துக்கொண்டு போய்விட்டார்கள்" என்று மாட்டுக்காரன் ஓடி வந்தான். அதிகாரியின் முகம் கோபத்தால் சிவந்து போய்விட்டது. உலகம் முழுவதும் அவர் மெளனத்தைக் குலைக்கக் கங்கணம் கட்டிக் கொண்டிருப்பது போலத் தோன்றியது. அவருக்குத் தம்முடைய ஒரே ஒரு குழந்தையிடம் அன்பு மிகுதி. அந்தக் குழந்தை பள்ளிக்கூடம் போயிருக்கிறான் என எண்ணிக் கொண்டிருந்தார். ஆனால் பள்ளிக்கூடத்திலிருந்து ஒரு பையன் வந்தான். "மாமா, உங்கள் ராமு பள்ளிக்கூடம் வர வில்லையாம்; வாத்தியார் அழைத்து வரச் சொன்னார்" என்றான். உள்ளே மிகக் கோபமாக இருந்த அவருடைய மனைவியின் காதில் இது விழுந்தது. "ஐயையோ பள்ளிக்கூடம் போகிறேன் என்று அவன் எட்டு மணிக்கே போய்விட்டானே! எங்கே போனான்? கொஞ்சம் தேடிப் பாருங்களேன்" என்று அலறிக் கொண்டு ஓடி வந்தாள். "அப்படியா! எங்கே போயிருப்பான்? தனியாகவா போனான்?" என்று அதிகாரி பேசிவிட்டார். "என்னைக் கேட்டால் கொஞ்சம் போய்த்தான் பாருங்களேன்" என்று துடித்தாள் அவர் மனைவி. "டேய் வேலப்பா, டேய் சாமிநாதா, போய்க் குளம், குட்டையைப் பாருங்கடா; நான் பள்ளிக்கூடத்துக்குப் போய்ப் பார்த்து வருகிறேன்" என அந்தப் பையனை அழைத்துக் கொண்டு அதிகாரி வெளியே போய் விட்டார். சில மணி நேரம் எதுவும் பேசாமல் மெளனமாக இருப்பது எவ்வளவு கஷ்டம் என்பது அப்பொழுதான் அவருக்குத் தெரிந்தது. மறுநாள் கோயிலுக்கு வந்தவர், "சும்மா இருக்கிற சாமியாருக்கு இரண்டு பட்டைச் சோறு" என்று உத்தரவு போட்டுவிட்டார். மோன நிலைக்கு வழி சும்மா இருப்பதை மோன நிலை என்று சொல்வார்கள். உடல் அசையாமல் இருப்பது காஷ்ட மெளனம்; வாக்குப் பேசாமல் இருப்பது வாங் மெளனம்; மனம் சிந்திக்காமல் இருப்பது மனோ மெளனம். இந்த மூன்று வகையான மெளனங்களும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையன. மனம் ஓடாமல் நிற்கிற போதுதான் பேச்சு நிற்கும்; உடம்பு அசையாமல் இருக்கும். ஒருவன் கட்டை போலப் படுத்துத் தூங்கினான் என்றால் அது மெளனம் ஆகாது. இருவர் பட்டினி கிடக்கிறார்கள். ஒருவன் உண்பதற்கு எதுவும் இல்லை என்பதனால் பட்டினி கிடக்கிறான். மற்றவன் உண்பதற்கு மிகுதியான பொருள்கள் இருந்தும், ஏகாதசி என்பதனால் ஒன்றையும் உண்ணாது பட்டினி கிடக்கிறான். சாப்பிடுவதற்குப் பொருள் இருந்தும் எதையும் புசிக்காமல் இருப்பதே விரதம். அதைப்போல உடம்பில் உணர்ச்சி இருக்கும் பொழுது, தூண்டுதல் பல இருந்தாலும் ஜாக்கிரத்தில் எதுவும் செய்யாமல் எதுவும் பேசாமல், எதுவும் சிந்திக்காமல் உடம்பு, வாக்கு, மனம், யோகம், ஆசனம் முதலியவற்றால் உடம்பு அசையாமல் இருக்கப் பழகலாம். இது மோன நிலைக்கு முதற்படி. உடம்பும் வாக்கும் எப்பொழுது செயலற்று.. இருக்கும்? மனம் பலபல பொருள்களைப் பற்றிச் சிந்திக்காமல் ஏதேனும் ஒன்றைப் பற்றியே சிந்தித்தால்தான் இருக்கும். அதற்காகத்தான் தியானத்தை வைத்திருக்கிறார்கள். ஏதேனும் ஓர் உருவத்தை மனத்தில் இருத்திக்கொண்டு தியானம் செய்ய ஆரம்பித்தால் மனம் அடங்கி மனோலயம் ஏற்படும். மனோலயம் வந்த பிறகு மேலும் மேலும் சாதனம் செய்து, அடைவதை அடைந்தவர்களுக்கு மனோ நாசம் ஏற்பட்டுவிடும். ராமகிருஷ்ண பரமஹம்சர் இதற்கு மிகவும் தெளிவான உபமானம் சொல்லியிருக்கிறார். ஒர் உப்புப் பொம்மையைக் கொண்டு நீரின் ஆழத்தை அளக்கத் தொடங்கினால் அது கொஞ்சம் கொஞ்சமாகக் கீழே போய்க்கொண்டிருக்கும். நீரின் அடிக்குப் போவதற்குள் பொம்மை கரைந்து போய்விடும். அதுபோல மனத்திலே ஒர் உருவத்தை நினைத்து தியானம் செய்ய ஆரம்பித்தால் தியானம் பண்ணப் பண்ண உடம்பு அடங்கி, வாக்கு அடங்கிப் போகும். கடைசியில் மனத்தில் புதைத்துக் கொண்ட உருவமும் போய் மனம் நின்றுவிடும். இந்த நிலைதான் சும்மா இருக்கும் நிலை. நாம் சும்மா இருப்பது மனோலயத்தை அடைவதற்கு. முதலில் ஒன்றை மனத்தில் வைத்து மற்றவற்றை மறக்கப் பழகி விட்டால் அந்த ஒன்றையும் கடைசியில் நினைக்காமல் சும்மா இருக்கும் நிலை வரும். "முருகக் கடவுள் சும்மா இருக்கும் எல்லைக்குள் என்னைச் செலுத்தினான்" என்றார் அருணகிரியார். எப்படி இந்த நிலை வந்தது? சொல்லுகைக்கு இல்லை. கை இருந்தும் அது எதையும் செய்யவில்லை. கண் இருந்தும் அது எதையும் பார்க்க வில்லை. உடம்பு இருந்தும் அது இயங்கவில்லை. வாக்கு இருந்தும் அது பேசவில்லை. மனம் இருந்தாலும் அது எதையும் சிந்திக்கவில்லை. எல்லாம் இருந்தும் சும்மா இருக்கும் நிலை அது. வள்ளி நாயகன் யார் அப்படி விட்டான்? அதைப் பிறகு சொல்கிறார். இகல் வேலன் நல்ல கொல்லியைச் சேர்க்கின்ற சொல்லியைக் கல்வரைக் கொவ்வைச் செவ்வாய் வல்லியைப் புல்கின்ற மால்வரைத் தோள் அண்ணல் வல்லபமே. "என்னுடைய ஆற்றலால் நான் எதுவும் செய்யவில்லை. இறைவன் தன்னுடைய அருள் ஆற்றலால் என்னை அந்த எல்லைக்குள் விட்டான். நான் என்னையே இழந்துவிட்டதால் என்னுடைய முயற்சியின் பயனாக அங்கே போகவில்லை. எல்லாம் அற, என்னை இழந்த நலம் விளைவித்தவனாகிய முருகனே அந்த எல்லைக்குள் என்னைச் செலுத்தினான். அவனது அருள் வல்லமை இருக்கிறதே, அதுவே என்னைச் செல்ல விட்டது" என்கிறார். அவன் எத்தகையவன்? இகல் வேலன்; பகைவரோடு மாறுபட்டு எதிர்த்து வெல்லும் வேலைக் கையில் உடையவன். இறைவன் திருவருளினால் தாம் பெற்ற இன்ப அநுபவத்தை எடுத்துச் சொல்லும்போதெல்லாம் வள்ளியம்பெருமாட்டிக்கு கிடைத்த இன்பத்தையும் நினைப்பூட்டுவது அவர் வழக்கம். இதற்கு முன்பு பாட்டிலே அதைப் பார்த்தோம். உள்ளத்தில் அரும்பும் தனிப் பரமானந்தத்தைச் சொல்ல வந்தவர், "பெரும் பைம் புனத்தினுட் சிற்றேனல் காக்கின்ற பேதை கொங்கை விரும்பும் குமரன்” என்று பேசினார். அப்படிச் சொல்லும்போது, 'வள்ளி கல்யாணம் என்பது சிற்றின்பக் காதல் அல்ல; பேரின்பக் காதல்; ஆண்டவன் வள்ளியம்பெருமாட்டியைத் தானே வலிய வந்து ஆட்கொண்டு அருள் வெள்ளத்தைப் பாய்ச்சினான்' என்பதையும் புலப்படுத்துகிறார். வள்ளி மணவாளப் பெருமாள் சிற்றின்பத்திற்கு நாயகன் அல்ல, அவன் பேரின்ப அநுபவம் தந்தவன் என்ற குறிப்புத் தோன்றப் பல இடங்களில் கூறுகிறார். இந்தப் பாட்டிலும் வள்ளியைப் பற்றிப் பேசுகிறார். வள்ளியின் மொழி நல்ல கொல்லியைச் சேர்க்கின்ற சொல்லியை. கொல்லி என்பதற்கு இரண்டு பொருள் உண்டு. ஆளைக் கொல்கின்ற நஞ்சுக்குக் கொல்லி என்று பெயர். மற்றொன்று ஒருவித ராகம்; பண். கொல்லி என்பதற்கு நஞ்சு என்ற பொருள் வரக்கூடாது என்பதற்காகவே, "நல்ல கொல்லி' என்கிறார். நல்ல கொல்லிப் பண் எனப் பொருள் கொள்ள வேண்டும். காதுக்கு நல்லதாக, இனிமை தருவதாக இருக்கிற கொல்லிப் க.சொ.1-20 பண்ணைச் சேர்த்துப் பேசுகின்ற சொல்லை உடையவள் வள்ளி. அவளுடைய பேச்சானது கொல்லிப் பண்ணைப்போல இனிமையாக இருக்கும். கல்வரைக் கொவ்வைச் செவ்வாய் வல்லியை கல்வரை வல்லி, கொவ்வைச் செவ்வாய் வல்லி எனக் கொண்டு பொருள் கொள்ள வேண்டும். வாயிலிருந்து வரும் பேச்சும், அதைப் பேசும் வாயும் அழகையுடையன என்று பாராட்டுகிறார். அவள் கல் நிரம்பிய மலைகளிலே பிறந்தாள். அவள் சொல் கொல்லிப் பண்ணைப்போல இனிமையாக இருந்தது. கோவைப் பழம்போலச் சிவந்த வாயை உடையவள் அவள். கற்கள் நிரம்பிய மலை நாட்டிலே பிறந்தாலும், வள்ளியெம்பெருமாட்டியின் மொழி உள்ளத்தைக் கரைக்கின்ற கொல்லிப் பண்ணைப் போன்றது. அவள் பேச்சிலே முருகன் மயங்கினான். ஆதலால் அவளுடைய அழகில் வேறு எதையும் சொல்லாமல் அருணகிரியார் அவள் சொல்லையே சொல்கிறார். "தேன் என்று பாகு என்று உவமிக்கொணா மொழித் தெய்வ வள்ளி" என்று இதற்கு முந்திய பாட்டிலும் குறிப்பித்தார் அல்லவா? அவளுடைய பேச்சுக்காக ஏங்கி நின்றவன் ஆதலால் அதன் சிறப்பை எடுத்துச் சொன்னார். அவள் மொழியைக் கேட்க வேண்டுமென்று என்ன என்ன காரியம் செய்தான்! அவளுக்குக் கோபத்தை ஊட்டிப் பேச வைத்தான். மகிழ்ச்சியை உண்டாக்கிப் பேச வைத்தான். அவள் வாயைத் திறந்து ஏதேனும் சொல்ல மாட்டாளா என ஏங்கினான். அவள் வாக்கிலிருந்து எந்தப் பேச்சு வந்தாலும் இன்பமாக இருந்தது; கொல்லிப் பண்ணைப்போல இருந்தது. குயில் அழுகிறது; சிரிக்கிறது; சண்டை போடுகிறது. அது நமக்குத் தெரியாது. அதன் வாயிலிருந்து எது வந்தாலும் அது நமக்குப் பாட்டுத்தான். வீணை வாசித்தால் மிக இனிமையாக இருக்கிறது. தூக்கத்தில் பக்கத்தில் இருக்கிற வீணையின்மேல் கையைத் தூக்கிப் போடும்போது 'டங்' என ஒலி வந்தாலும் அது காதுக்கு இனிமையாக்த்தான் இருக்கும். அப்படி வள்ளியின் வாயிலிருந்து எந்தச் சொல் வந்தாலும் கொல்லிப் பண்ணைப்போல இருந்ததாம். முதலில் வள்ளிநாயகி அவனோடு பேசாமல் மெளனம் சாதித்தாள். அவளுக்கு கோபத்தை உண்டுபண்ணி அவளைப் பேச வைத்தான் முருகன். பேசிக் கொண்டிருந்த அருணகிரி யாரைச் சும்மா இருக்கும் எல்லையுள் செல்லவிட்டவன் யாரோ, அவனே சும்மா இருந்த வள்ளியம்மையைப் பேச வைத்தான். 3 பேச்சும் மோனமும் மோன நிலை திடீரென்று வந்துவிடாது. பல பல பொருள்களைப் பற்றி பேசிக் கொண்டிருக்கும் வழக்கத்தை மாற்றி இறைவனைப் பற்றி மிகுதியாகப் பேசிப் பழக வேண்டும். "பெரும்பற்றப் புலியூ ரானைப் பேசாத நாள்எல்லாம் பிறவா நாளே” என்று அப்பர் சொன்னார். வாய் படைத்த பயன் இறைவனை வாழ்த்துவது. மற்ற மற்றக் காரியங்கள் எல்லாம் மெல்ல மெல்ல ஒடுங்க, இறைவனைப் பற்றியே சதா சிந்தித்துக்கொண்டு, அவன் புகழைப்பற்றியே பேசி வர வேண்டும். வாய் படைத்தும், அவனைப் பற்றிப் பேசாமல் இருப்பது என்ன மெளனம்? பலவீன மெளனம். மற்றவற்றைப் பற்றிச் சண்டப் பிரசண்டமாகப் பேசிவிட்டு இதில் மட்டும் மெளனம் சாதிப்பது நல்ல தன்று. இறைவன் நாமத்தைச் சொல்லவிடாமல் தடுப்பது நாணம்; மெளன சாதனையன்று. தன்னைச் சுற்றி உள்ளவர்களை நினைத்துக் கொண்டிருக்கும் போது நாணம் இருக்கும். சொல்வதன் பொருளை நினைத்தால் நாணம் விலகும். நாணம் இருந்தால் இன்பம் இல்லை. இறைவனது திருநாமத்தைச் சொல்வதற்கு நாணினால் இன்ப அநுபவம் கிடைக்காது. நாணத்தை விட்டுவிட்டு இறைவன் நாமத்தை நாம் சொல்ல வேண்டும். "கூட்டத்திலே கோவிந்தா போடுவது" என்பார்கள். நாலு பேர்களுக்கு மத்தியில் நாமும் சேர்ந்து கூட்டத்தோடு கூட்டமாக இறைவன் நாமத்தைக் கூறினால் நமது அபஸ்வரம் புலப்படாது. பல பேர்களுடைய குரலுக்குள் அது கலந்து போய் விடும். இப்படியே சொல்லிச் சொல்லிப் பழகினால் கடைசியில் தனியாக இருந்து அவன் நாமத்தைக் கூறிக் கதற முடியும். அவன் நாமத்தை உள்ளத்தோடு கலந்து, உணர்ச்சி ததும்பச் சொல்ல வேண்டும். அப்படி வாயார அவன் புகழைப் பாடிப் பழகினால் மெளன நிலை தானே சித்திக்கும். தர்மபத்தினியுடன் இல்லறம் நடத்தி வருகின்றவனைச் சந்நியாசிக்குச் சமமானவன் என்று சொல்வார்கள். அதுபோல இறைவன் பேச்சைத் தவிரப் பிற இழிவான, அவலமான பேச்சுக்களைப் பேசாமல் இருப்பது மெளனத்திற்குச் சமானம். இந்த நிலையை அடுத்து உள்ளத்திற்குள்ளேயே இறைவன் நாமத்தைச் சொல்லும் மெளன நிலை வரும். அப்பால் சொல்லுகைக்கு இல்லை என்று சும்மா இருக்கும் நிலை வரும். பேசப் பேச இனிக்கிற பொருள் ஆண்டவன். ஆண்டவனைப் பற்றியே பேசிக்கொண்டிருந்தால், அந்தப் பேச்சு முடிந்த எல்லையிலே மோனம் தலைப்படும். மெளனம் அநுபவத்திற்கு அறிகுறி. ஒரு பெண் பேசிக்கொண்டே இருக்கிறாள். வாசலில் கணவன் வருகின்ற காலடி ஓசை கேட்ட மாத்திரத்தில் வாய் அடங்கி விடும். இதைப் போலவே, இன்ப அநுபவம் தலைப்படும்போது தவ நெறியில் மோனம் தலைப்படும். அதுவரைக்கும் இறைவனைப் பற்றியே பேசிக்கொண்டுதான் இருக்க வேண்டும். மோனமும் அநுபவமும் ஒரு தலைவியைப் பிரிந்து அவள் நாயகன் ஊருக்குப் போகிறான். வர மூன்று நாள் ஆகும் எனச் சொல்லிப் போகிறான். அவன் பிரிவினால் அவளுக்குத் துன்பம் உண்டாகிறது. போகும்போது, "உடம்பைப் பார்த்துக் கொள்ளுங்கள். தவறாமல் கடிதம் போடுங்கள்" என்று சொல்லி அனுப்புகிறாள். அவளுக்குத் துணையாக அடுத்த வீட்டுப் பெண் அவள் வீட்டிலேயே தங்கி இருக்கிறாள். தலைவன் ஊருக்குப் போனது முதல் தலைவி தன் தலைவனுடைய குணங்களைப் பற்றியே பேசிக் கொண்டிருக்கிறாள். இரண்டு நாளாயின; கடிதம் ஒன்றும் இல்லை. ஒரு நிமிஷம் அவளுக்கு ஒரு யுகமாகப் போய்க்கொண்டிருக்கிறது. தலைவன் சொல்லியபடி ஊரிலிருந்து வரவில்லை. தலைவிக்குப் பெருங்கோபம் வந்துவிட்டது. "இவர் எப்போதும் இப்படித்தான். சொன்னால் சொன்னபடி நடப்பதில்லை. கடிதம்கூடப் போடுவதில்லை. வரட்டும் சொல்கிறேன்; என்ன பண்ணுகிறேன் பார்" என்று பக்கத்து வீட்டுப் பெண்ணிடம் சொல்கிறாள். ஊரிலிருந்து தலைவன் வந்தவுடன் ஒரு பெரிய சண்டை நடக்கப் போகிறது என்று அந்தத் தோழி நினைக்கிறாள். அவன் மறுநாள் வந்துவிட்டான். அவன் வரும் பொழுதே அந்தக் காதலியின் முகத்தில் புன்முறுவல் அரும்பிவிட்டது. எதுவும் பேசாமல் தலைவனுக்குக் காபி போட உள்ளே போய்விட்டாள். பெரிய சண்டை ஆரம்பமாகப் போகிறது என்று நினைத்துக் கொண்டிருந்த தோழிக்குப் பெரிய ஏமாற்றம். 'என்ன என்னவோ கேட்கப் போகிறேன்' எனச் சொல்லிய தலைவி எதுவும் பேசாமல் மெளனமாக இருப்பது அவளுக்கு விந்தையாக இருந்தது. அவன் வெளியில் போனவுடன் மெள்ளப் போய்த் தலைவியை, "நீ ஏதோ சண்டைப் போடப் போவதாகச் சொன்னாயே; உன் கணவனிடம் நிறையக் குற்றங்கள் இருப்பதாக அடுக்கினாயே! ஒன்றையும் கேட்காமல் மெளனமாகவே இருந்துவிட்டாயே?" என்று கேட்கிறாள். அவள் தோழிக்கு விடை சொல்கிறாள். திருக்குறளில் அந்த விடை ஒரு பாட்டாக இருக்கிறது. "எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல் கொண்கன் பழிகாணேன் கண்ட விடத்து." பெண்கள் மை இட்டுக் கொள்வது வழக்கம். அதற்காக ஒரு கோல் வைத்திருப்பார்கள். அது தந்தத்தினாலோ, தங்கத்தினாலோ அமைந்திருக்கும். தூர இருக்கும்பொழுது அது தந்தமா, தங்கமா என்பது நன்றாகத் தெரிகிறது. ஆனால் மை தீட்டுவதற்கு அதைக் கண் அருகில் கொண்டு போய்விட்டால் அந்தக் கோல் தெரிவதில்லை. அதுபோலக் கணவன் அருகில் இல்லாதபோது அவன் குறைபாடுகள் தெரிந்தன. ஆனால் அருகில் வந்தபோது, "எழுதுங் கால் கோல் காணாக் கண்ணேபோல் அவன் பழியை நான் காண்பதில்லை" என்கிறாள். நாயகன் அருகில் வந்துவிட்டால் பேச்சு அடங்கிவிடுகிறது. எதுவும் சொல்லத் தோன்றுவதில்லை. இறைவனை உணராத காலத்தில் அவன்பால் பல குறைகளைச் சொல்லத் தோன்றும். "கடவுளுக்குக் கண் இருந்தால் இப்படி நடக்குமா? என் வேண்டுகோளுக்கு அவன் இரங்காமல் இருக்கிறானே" என்றெல்லாம் பலர் பேசக் கேட்கிறோம். அதைக் கேட்டு, அவர்களுக்குக் கடவுளிடத்தில் பக்தி இல்லையோ என்று நினைக்கத் தோன்றும். இது பக்தியினால் ஏற்படுகின்ற தாபத்தின் விளைவு. அதனால் பல பழிச் சொற்கள் வெளிப்படுகின்றன. இறைவனது அருள் கிடைத்துவிட்டால், தாபம் அடங்கிய தன்மை பிறந்துவிட்டால், பேச்சு எங்கே வரும்? எல்லாம் இழந்த நலம் பிறக்கும். வள்ளியின் தன்மை கல்வரைக் கொவ்வைச்செவ்வாய் வல்லியைப் புல்கின்ற மால்வரைத் தோள் அண்ணல் வல்லபமே.' கற்கள் நிரம்பிய மலையில் பிறந்த வள்ளியை, கோவைப் பழம் போலச் சிவந்த வாயை உடைய வள்ளியை, தன்னுடைய பெரிய மலை போன்ற தோளில் அணைந்தான் முருகன். வள்ளி வாழ்ந்தது மலை. அவள் அடைந்ததும் மலைதான். குறமகளாகக் கல் மலையில் வாழ்ந்து கொண்டிருக்கும் வரையிலும் அவளுக்கு இன்பம் இல்லை; துன்பந்தான் இருந்தது. முருகனது தோளாகிய மலையை அடைந்தவுடன் இன்பம் உண்டாயிற்று. உயிரானது ஒன்றோடு இணைந்தே இருக்கும். பாசத்தோடாவது பதியோடாவது சேர்ந்தே இருக்கும். பாசத்தோடு இணைந்திருக்கிற வரையில் அதற்குத் துன்பந்தான். பதியோடு இணைந்துவிட்டால் இன்பம் உண்டாகும். கல் நிரம்பிய மலைகளிலே உறைந்திருந்த வள்ளியின் நிலை, ஆன்மா பாசத்தோடு இணைந்திருப்பதற்கு ஒப்பானது. வள்ளி முருகப் பெருமானது மலை போன்ற புயங்களின் அணைப்பைப் பெற்ற நிலை ஆன்மா பதியை அடைந்ததற்குச் சமானம். "கொல்லிப் பண்ணைப் போன்ற இனிமையான சொல்லை உடையவளும், சிவந்த வாயை உடையவளும் மலையில் பிறந்த வளுமாகிய வள்ளியை, தன் புயங்களாகிய மலையில் முருகன் அணைந்தான். அவன் அருள் வல்லமை இருக்கிறதே, அது என்னைப் பேச்சு அற்ற மோன நிலையான சும்மா இருக்கிற எல்லைக்குள் செல்ல விட்டது; எல்லாம் இழந்த இன்ப நலத்தை அளித்தது" என்கிறார் அருணகிரியார். சொல்லுகைக்கு இல்லைஎன்று எல்லாம் இழந்துசும் மாஇருக்கும் எல்லையுள் செல்ல எனைவிட்ட வா! இகல் வேலன் நல்ல கொல்லியைச் சேர்க்கின்ற சொல்லியைக் கல்வரைக் கொவ்வைச்செவ்வாய் வல்லியைப் புல்கின்ற மால்வரைத் தோள் அண்ணல் வல்லபமே! (பகைவரோடு போராடுகின்ற வேலையுடைய முருகன், கேட்பதற்கு இனிய கொல்லிப் பண்ணின் தன்மையைச் சேர்க்கின்ற சொல்லையுடையவளும், கற்களையுடைய மலையில் இருந்தவளும், கொவ்வைப்பழம் போன்ற சிவந்த வாயையுடையவளுமாகிய வள்ளி நாயகியைத் தழுவுகின்ற பெரிய மலை போன்ற தோள்களையுடைய பெருமை பெற்ற முருகனுடைய அருள் வல்லமை, சொல்வதற்கு இல்லை என்று கருவி கரணங்களெல்லாம் நழுவ அவற்றை இழந்து சும்மா இருக்கும் எல்லைக்குள்ளே செல்லும்படி என்னை விட்டவாறு என்ன ஆச்சரியம்! விட்டவா-விட்டவாறு என்னே! இகல்-இகலுகின்ற; பகைவரோடு மாறுபடுகின்ற, கொல்லி-ஒரு பண். வரை-மலை. வல்லி-வள்ளிநாயகி. புல்கின்ற-அணைகின்ற; புல்குகின்ற என்பது செய்யுளை நோக்கி விகார மாயிற்று. மால்-பெருமை. வல்லபம்-ஆற்றல். வல்லபம் விட்டவா!) மயிலின் வேகம் 1 முருகன் பெருமை அவனைச் சுற்றி சூழ இருக்கிற பொருள்களிடத்திலும் பிரதிபலிக்கும். சூரியன் இயல்பான தேசு உடையவன். சந்திர மண்டலம் என்பது பூமியைப் போன்றது தான். சந்திரனுக்கு இயற்கையான ஒளி இல்லை. சூரியனுடைய ஒளியை வாங்கி அது பிரதிபலிக்கச் செய்கிறது என்று விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். மெய்ஞ்ஞானிகள் என்ன சொல்கிறார்கள்? எம்பெருமான் இயற்கையான காந்தியை உடையவன். அவனிடம் உள்ள அருள் ஆற்றலைப் பெற்றுத் தாமும் ஒளிரும் பண்பு அவனைச் சுற்றிக் சூழ இருக்கிற பொருள்களுக்கும் உண்டு என்கிறார்கள். இறைவனோடு சார்ந்த அவை அவனிடம் உள்ள அருள் ஆற்றலில் பங்கு கொண்டு அவன் சக்தியை வெளிப்படுத்துகின்றன. முருகப் பெருமானுக்கு வாகனமாக இருக்கிற மயில், கொடியாக இருக்கிற கோழி, ஆயுதமாக இருக்கிற வேல் ஆகிய எல்லாம் அவனுடைய சார்பினால் தெய்வத் தன்மையும் ஆற்றலும் பெற்று விளங்குகின்றன. வேலும் மயிலும் அருணகிரிநாதப் பெருமான் கந்தர் அநுபூதி முதற்பாட்டில், "இறைவா, நான் உன்னை வணங்க வேண்டும்" என்று சொல்லவில்லை. "என் வாழ்நாள் முழுவதும் ஓர் உத்தியோகம் வேண்டும்; பாடிக்கொண்டே இருக்கிற உத்தியோகம் வேண்டும்" என்றார். "பாடும் பணியே பணியா அருள்வாய்." எதைப் பாடுகின்ற பணியை அவர் வேண்டுகிறார் தெரியுமா? "ஆடும் பரிவேல் அணிசே வல்எனப் பாடும் பணியே பணியா அருள்வாய்.” 'முருகா, உன் வாகனமாக ஆடிக்கொண்டிருக்கிற மயிலையும், உன் ஆயுதமாகிய வேலையும், உன்னுடைய கொடியாகிய சேவலையும் பாடுவதையே என்னுடைய பணியாக நீ அருள் செய்ய வேண்டும்', என்று கேட்கிறார். எவ்வளவு அறிவுடைய தந்தையாகவேனும் இருக்கட்டும்; தம்மிடம் மாத்திரம் அன்பு வைத்துவிட்டு, தம்மைச் சார்ந்த மகனிடத்தில் வெறுப்பைக் காட்டுகிறவனிடம் முழு அன்பையும் செலுத்த முற்படுவாரா? தம்மிடம் காட்டுகிற அன்பையே தம் குழந்தைகள்பாலும் காட்டுகிறவனிடந்தான் நாட்டம் இருக்கும். அதுபோல இறைவனிடத்தில் அன்பு செலுத்தினால் போதாது. அவனோடு சார்ந்திருக்கும் பொருள்களிடத்திலும் அன்பு உடையவர்களாக இருக்க வேண்டியது அவசியம். முருகனைப் போற்றுவது போலவே அவனிடத்தில் உள்ள வேலையும், மயிலையும், கோழிக் கொடியையும் அடியார்கள் போற்றி வந்தார்கள். தமிழ்நாட்டில் பழங்கால முதலே வேலுக்கும் மயிலுக்கும் மிகச் சிறந்த நிலையைக் கொடுத்திருக்கிறார்கள். மந்திரங்கள் என்று சொல்லப்படுவன வடமொழியில்தான் இருக்க வேண்டும் என்பது இல்லை. தமிழிலும் மந்திரம் உண்டு. பாம்பு மந்திரம், காமாலைப் போக்கும் மந்திரம் முதலியன தமிழில் உள்ளன. 'வேலும் மயிலும்' என்பதும் பழங்காலம் தொட்டு வழங்கி வருகின்ற ஒரு மந்திரம். இதைச் சதா சொல்லிக் கொண்டே இருப்பவன் இடும்பன். சிவபெருமானுக்குக் காவல் காக்கின்ற நந்தியம்பெருமான் எப்படி ஒரு சிறந்த தொண்டரோ அவ்வாறே முருகப் பெருமானுக்குப் பெரிய தொண்டனாக இருப்பவன் இடும்பன். முருகப் பெருமான் கோயிலில் இடும்பனுக்கும் தனியே ஒரு சந்நிதி இருக்கும். இடும்பன் சிவகிரி, சக்திகிரி ஆகிய இரு மலைகளையும் காவடியாகக் கட்டித் தோளில் தூக்கிச் சென்றான். சிவகிரிதான் பழனி என்ற திருப் பெயருடன் இன்றும் நின்று நிலவுகிறது. அவன் இரு மலைகளையும் தோளில் கட்டி எடுத்துச் சென்றதனால்தான் முருகனுக்கு காவடி எடுக்கும் சம்பிரதாயம் வந்தது. காவடி எடுக்கின்ற வழியைக் காட்டிக் கொடுத்த ஆசிரியன் இடும்பன். அவன், 'வேலும் மயிலும்’ என்று சதா சொல்லிக்கொண்டே இருக்கிறவனாம். "வேலும் மயிலும் துணை" என்று சிலர் எழுதுவது பழக்கம். துணை என்று போட வேண்டியதுகூட இல்லை. 'வேலும் மயிலும்' என்பதே ஒரு மகாமந்திரமாக இருக்கிறது. இது இன்று நேற்று வந்த வழக்கம் அல்ல. மிகப் பண்டைக் காலம் முதற்கொண்டு வழங்கி வருகிறது. இலக்கியம் அதற்குச் சான்று. பரிபாடலில் சங்க நூல்களில் பரிபாடல் என்பது ஒன்று. அதில் திருப்பரங்குன்றத்தைப் பற்றி ஒரு பெரும் புலவர் பாடுகிறார். எம்பெருமானுடைய திருவருளினால் நல்ல கணவனைப் பெற்ற காதலி ஒருத்தி இல்லறம் நடத்துகிறாள். அவளுக்கு ஒரு சமயம் தன் நாயகன் மேல் சந்தேகம் வந்தது. திருப்பரங்குன்றம் சென்று பரத்தை ஒருத்தியோடு அளவளாவி வருவதாக அவள் தன் கணவனை ஐயுற்று அதனால் ஊடல் கொள்கிறாள். தலைவன் இதை உணர்ந்து கொள்கிறான். தன்னை அப்படிச் சந்தேகிக்கக் காரணம் இல்லை என்று வற்புறுத்தி ஆணை இடுகிறான். ஆணை இடும்போது தெய்வத்தின் பெயரைக் கூறி ஆணை இடுவார்கள்; தெய்வத்திற்குச் சமானமான பெரியவர்களின் பெயரைச் சொல்லி ஆணை இடுவார்கள்; அல்லது தம் பெயரிலேயே ஆணை இடுவார்கள். தான் பரத்தையர்பால் செல்லவில்லை என்பதற்கு இந்தக் கணவன் தன் நாயகியிடம், "வேல் மேல் ஆணை; மயில் மேல் ஆணை” என்று சொல்கிறான். காதலிக்குப் பக்கத்தில் இருந்து ஆறுதல் அளித்து வருகின்ற தோழி அதைக் கேட்கிறாள். தன்னுடைய தலைவியின் நாயகன் திருப்பரங்குன்றம் போய்ப் பரத்தையருடன் இருந்து வருகிறான் என்றே அவளும் நினைக்கிறாள். 'அக்குற்றத்தைச் செய்ததோடன்றி, அப்படிச் செய்யவில்லை என்று வேலையும் மயிலையும் நினைத்து ஆணை இடுகிறானே! இது பெரும் பாவம் அல்லவா? இந்தப் பொய்யாணையினால் இவனுக்கு இன்னும் என்ன என்ன தீங்கு ஏற்படுமோ?' என அஞ்சுகிறாள். "நீ எதை வேண்டுமானாலும் நினைந்து சூளுரை சொல். வேலையும் மயிலையும் சொல்லிச் சூளுறாதே" என்கிறாள். முருகனுக்கு அருகில் இருப்பவை அவை. ஆதலின் அவற்றுக்கு அஞ்ச வேண்டும். பழங் காலம் முதற்கொண்டே வேலையும், மயிலையும் புகழ்கின்ற வழக்கம் உண்டு என்பதை இது காட்டுகிறது. 2 பிரணவ உருவம் எம்பெருமானுக்குரிய வாகனமாகிய மயில் பல வகையில் சிறப்புடையது. ஆடும் மயில், வட்ட வடிவமாகத் தன் தோகையை விரித்துக் கொண்டு, ஒரு காலைச் சற்றுத் தூக்கிய வண்ணம் இருக்கும். அப்போது அதன் முழு உருவத்தையும் கூர்ந்து பார்த்தால் ஓங்காரம்போலத் தோன்றும். பிரணவ சொரூபியாக இருப்பவன் முருகப் பெருமான். அதன் பொருளாகவும் இருக்கிறான். அதன் பொருளைத் தந்தைக்கு உபதேசம் செய்த குருநாதனாகவும் இருக்கிறான். ஒளியும் ஒலியும் கலந்த அதனூடே ஒளிர்கிறான். ஒலி ஒளி இரண்டும் கலந்தது பிரணவம். "ஓங்காரத்து உள்ஒளிக்கு உள்ளே முருகன் உருவம்கண்டு துங்கார்” என அருணகிரியார் பின்பு ஒரு பாட்டில் சொல்கிறார். ஓங்கார சொரூபியாகிய முருகன் ஓங்கார உருவமான மயிலின் மீது எழுந்தருளி இருக்கிறான். இந்தத் தத்துவத்தை ஆடும் பரியாகிய மயில் காட்டுகிறது. முருகன் ஞான சொரூபி. அவன் ஏறி இருக்கிற வாகனமாகிய மயில் பிரணவ சொரூபம். "ஆன தனிமந்த்ர ரூப நிலைகொண்ட தாடுமயில் என்ப தறியேனே!" என்பது திருப்புகழ். எல்லா மந்திரங்களுக்கும் மேலான மந்திரமாக, ஒப்பற்ற மந்திரமாக, தனி மந்திரமாக இருப்பது பிரணவம். அதன் உருவத்தைப் பெற்றது தோகை விரித்து ஆடும் மயில். பாசப் பாம்பு நம் மனத்தில் பாசம் என்ற கட்டு இருக்கிறது. பாசம் பாம்பைப் போன்றது. அந்தப்பாம்பைப்போக்கவேண்டுமென்றால் பாம்புக்குப் பகையான ஒன்று வேண்டும்; நமக்குப் பயம் கொடுக்காமல், பார்ப்பதற்கு எழிலாக, பாம்புக்கு அச்சத்தைத் தரக்கூடிய ஒன்று வேண்டும். அதுதான் மயில். மயில் பார்ப்பதற்கு அழகாக இருக்கிறது. தோகை விரித்து ஆடுகையில் மிக மிக அழகாக இருக்கிறது. ஆனால் அது பாம்புக்குப் பகை. எம் பெருமான் அமர்ந்திருக்கின்ற மயிலின் திருவுருவத்தைப் பாருங்கள். அதன் காலில் ஒரு பாம்பு இருக்கும். வளைந்து கொண்டு இருக்கிற பாம்பை மயில் கொத்திக் கொத்தி அடக்குகிறது. பாசம் என்ற பாம்பை அடியோடு ஒழிக்கக் கூடிய பிரணவ தத்துவமாக மயில் விளங்குகிறது. அது மட்டும் அன்று. வாசி யோகம் நமது உடம்பில் ஆறு ஆதாரங்கள் உண்டு. மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆக்ஞை ஆகிய அந்த ஆறில் முதலாவது மூலாதாரம். முதுகுத்தண்டினூடே ஓடுகிற நடு நரம்புக்கு சுழுமுனை என்று பெயர். அது இந்த ஆறு ஆதாரங்களையும் உருவிச் செல்கின்றது. மூலாதாரத்தில் உள்ள அக்கினியை எழுப்பி மேலே ஏற்றி ஆறு ஆதாரமும் கடந்து ஸஹஸ்ராரம் வரைக்கும் செல்லும்படி செலுத்துவதை வாசி யோகம் என்பார்கள். மூலாக்கினியை எழுப்பி ஏற்றும்போது இடையிலே குண்டலினி என்ற தடை ஒன்று உண்டு. அது சுருண்ட பாம்பு போல இருப்பது. அந்தத் தடையைப் போக்கி அதை எழுப்பி ஓட்ட வேண்டும். அப்பால் மூலக்கணலை மேலே எழுப்பி மேலுள்ள சந்திர மண்டலத்தளவும் செலுத்தினால் அங்கே உள்ள அமுதம் பொழியும். இவ்வாறு யோக நூல்கள் கூறும். இந்தக் குண்டலினி யோகத்தில் வெற்றி பெற மயில் உதவி செய்யும்; மயில் வாகனப் பெருமானை நினைத்தால் யோகத்தில் சித்தி உண்டாகும். பாம்பை விரட்ட உதவும் மயில் குண்டலினி என்னும் பாம்பையும் எழுப்பி ஓடச் செய்யும். "வாசியாலே மூலக்கணல் வீசியே சுழன்றுவரப் பூசை பண்ணிப் பணிந்திட மாசறக்குண் டலியைவிட் டாட்டுமே - மேல் - ஒட்டுமே” என்று கோபாலகிருஷ்ண பாரதியார் பாடுகிறார். குண்டலினி ஆகிய பாம்பை ஆட்டுவது மயில். யோகம் செய்து சித்தி பெற்ற சித்தர்களுக்கு தெய்வமாக இருப்பவன் முருகன். அவன் மயில் மேல் ஏறி வந்தால் குண்டலினியென்னும் பாம்பு எழுந்து ஒட, வாசியோகம் நிறைவேறும். "வாசியில் ஏறி வருவாண்டி - ஒரு வாசி நடத்தித் தருவாண்டி" என்று இராமலிங்க சுவாமிகள் பாடினார். வாசி என்பது வாகனம், வாசியோகம் இரண்டுக்கும் பெயர். மயிலாகிய வாசியில் ஏறி வரும் முருகன் வாசியோகத்தை நடத்தித் தருவான். மயில் வாகனப் பெருமானைத்தியானித்தால் யோகம் கைகூடும் என்பதைஅதிலிருந்து உணர்கிறோம். மூன்று வாகனங்கள் முருகப்பெருமானுக்கு மூன்று வாகனங்கள் சிறப்பாக உண்டு. ஆட்டுக் கிடா ஒரு வாகனம். நாரதர் யாகம் செய்தபோது உலகத்தை அழிக்கின்ற கிடாய் அதிலிருந்து புறப்பட்டது. அந்தக் கிடாய் உலகத்தை எல்லாம் அழித்துவிடுமே என்று எண்ணி அதை அடக்க அதன் மேல் முருகன் ஏறி அமர்ந்து நடத்தினான்; மேஷ வாகனம் உடையவன் முருகன். பன்னிரண்டு மாதங்களுக்குள் சித்திரை மாதத்திற்கு ராசி மேஷம். சூரியன் சித்திரை மாதம் முழுவதும் மேஷ ராசியில் இருப்பான். மலையாளிகள் சித்திரை மாதத்தையே மேஷ மாசம் என்பர். அந்த மேஷராசிக்குச் சொந்தக்காரன் செவ்வாய். செவ்வாய்க் கிரகத்திற்கு முருகனுடைய அம்சம் உண்டு என்று சோதிட நூல் கூறும். செவ்வாய் சிவந்த உருவம் உடையது. முருகப்பெருமானும் சிவப்பு வண்ணத்தான். செவ்வாய்க்கு வாகனம் ஆடு. முருகனுக்கும் அது வாகனம். செவ்வாய்க் கிரகத்தின் கிருபையை அடைய விரும்புபவர்கள் மேஷ ராசியையும், அதற்குத் தலைமை பெற்ற முருகனது அம்சத்தையும் நினைப்பர். அவனுக்கு மேஷம் வாகனம் என்ற நினைப்பில் இருந்து தோன்றியது இது. முருகனுக்கு மற்றொரு வாகனம் யானை, பிணிமுகம் என்று அதற்குப் பெயர். அடியார்களுக்கு அருள் செய்யும்போது, யானை வாகனத்தில் எழுந்தருளுவான் முருகன். பழம்பெரும் புலவராகிய நக்கீரர் திருமுருகாற்றுப்படையில் இதைச் சொல்கிறார். திருத்தணி குழந்தை என்பன எல்லாம் இளமையுடையவற்றைக் குறிக்கின்றவையானாலும் மனிதக் குழந்தை, காக்கைக் குஞ்சு, யானைக்குட்டி என்று சொல்கிறோம்; இது மரபு. இத்தகைய மரபுகளைத் தொல்காப்பியத்தில் மரபியல் என்ற பகுதி விரிவாகச் சொல்கிறது. பறவைகளில் ஆணைச் சேவல் என்றும் பெண்ணைப் பேடை என்றும் சொல்வது மரபு. ஆண் கோழியைச் சேவல் என்கிறோம். பெண் கோழியைப் பெட்டைக் கோழி என்கிறோம். சேவல் என்று சொன்னால் வீரம் பொருந்தியது, ஆண்மை பொருந்தியது என்று பொருள்படும். மயில் அல்லாத மற்றப் பறவைகளில் ஆணைச் சேவல் என்று அழைக்கலாம் என்று தொல்காப்பியம் கூறுகிறது. ஆண் மயில் அழகாக இருக்கும்; உடல் மென்மையாக இருக்கும். மென்மையான ஒன்றுக்குச் சேவல் என்ற பெயர் கூடாது என்று எண்ணியிருக்கலாம். "சேவற் பெயர்க்கொடை சிறகொடு சிவனும் மாயிருந் தூவி மயிலலங் கடையே."[1] இதற்கு உரை எழுதப் புகுந்த பேராசிரியர் மயிலை விலக்குவதற்குக் காரணத்தைக் கூறினார்; 'அவை தோகையுடையவாகிப் பெண்பால் போலும் சாயலவாகலான் ஆண்பால் தன்மை இல என்பது கொள்க' என்றார். முருகப் பெருமான் ஏறுகின்ற மயில் அழகானது; மென்மையானது. ஆனாலும் அதற்கு ஆண்மையும், வீரமும் இல்லை எனச் சொல்லக் கூடாது. பக்தர்களுக்கு மென்மையாக இருக்கும் அம்மயில் பகைவர்களுக்கு பயத்தை அளிக்கும் வீரம் உடையது. ஆகவே அந்த மயிலைச் சேவல் என்று அழைக்கலாம் என்று அவ்வுரைகாரர் எழுதுகிறார். 'செவ்வேள் ஊர்ந்த மயிற்காயின் அதுவும் நேரவும் படும்’ என்பது அவர் உரை. "எழுந்து முன்னுறு மஞ்ஞையஞ் சேவல்மேல் ஏறி” என்று கந்த புராணத்தில் முருகன் ஏறும் மயிலுக்குச் சேவல் என்ற பெயரையிட்டு வழங்குகிறார் கச்சியப்ப சிவாசாரியார். மயில் வாகனம், போர்புரியும்போது முருகப்பெருமானுக்குப் பயன்பட்டது. அடியார்களுக்கு அருள் செய்யப்போகும்போது பயன்படுகிறது. எந்த இடத்தில் எந்தச் சமயத்தில் நினைத்தாலும் மயிலின் மீது ஏறி வருகின்றான் அருள்புரிய. அத்தகைய வீரமுடைய மயிலைப் பற்றி இந்தப் பாட்டில் அருணகிரியார் பாடுகிறார். 3 வெற்றி வேலோன் வாகனம் குசைநெகி ழாவெற்றி வேலோன், அவுணர் குடர்குழம்பக் கசையிடு வாசி விசைகொண்ட வாகனப் பீலியின்கொத்து அசைபடு கால்பட்டு அசைந்தது மேரு; அடியிடஎண் திசைவரை தூள்பட்ட; அத்தூளின் வாரி திடர்பட்டதே. குறிப்பு அறிந்து போகும் குதிரையானால் குதிரைக்காரன் கடிவாளத்தை இழுத்துப் பிடிக்க வேண்டியதில்லை; சவுக்கால் அடிக்க வேண்டியதில்லை. குதிரை முரட்டுத்தனமாக ஓடினால் கடிவாளத்தை இறுக்கிப் பிடிக்கிறான்; சவுக்கால் அடிக்கிறான். எம்பெருமான் முருகன் ஏறுகின்ற மயில் குறிப்பு அறியும் தன்மை உடையது. ஆதலால் கடிவாளத்தை இறுக்கிப்பிடிக்காமல் நெகிழ்த்து விடுகிறான். குசைநெகிழா, வெற்றி வேலோன். (நெகிழா-நெகிழ்த்து) மயிலையும் வேலையும் ஒருங்கே நினைக்கிறார் அருணகிரியார். பாட்டு மயிலைப் பற்றியது; வெற்றி வேலோன் என்று முருகனைக் குறிப்பிடும்போது வேலைப் பற்றிய எண்ணமும் வந்துவிடுகிறதல்லவா? வெற்றியைத் தருகின்ற வேலைத் தன் திருக்கரத்தில் உடையவன் முருகன். அவன் குசையை நெகிழ்க்க, மயில்வாகனம் வேகமாகச் செல்கிறது. அவுனர் குடர் குழம்ப. அதன் வேகத்தைக் கண்டு அசுரர்களின் குடல்கள் குழம்பின. வயிற்றில் கலக்கம் ஏற்பட்டது. நடக்கப் போகின்ற போரில் நாம் எல்லோரும் க.சொ.1-21 அழியும் காலம் வந்துவிட்டதே என்று அசுரர்கள் மயில் வாகனப் பெருமானைப் பார்த்துக் குடல் கலங்கிப் போனார்கள். கசையிடு வாசி விசைகொண்ட வாகனப் பீலியின்கொத்து அசைபடு கால்பட்டு அசைந்தது மேரு. அந்த வாகனம் எப்படிச் செல்கிறது. தானே குறிப்பு அறிந்து நடக்கிறது. இயல்பாக வேகமாய்ப் போகும் குதிரையைச் சவுக்கால் அடித்தால் எப்படிப் பறக்குமோ அப்படிப் போகிறது மயில். அந்த வேகத்தைச் சொல்ல வருகிறார். மணிக்கு இத்தனை மைல் வேகமென்று சொல்வது யந்திரக் கணக்கு. இங்கே கவிஞர் அல்லவா அந்த வேகத்தைக் கற்பனைக் கண்கொண்டு பார்த்துச்சொல்கிறார்? மயில் வேகமாகப் போகும்போது என்ன ஆகிறது? மயிலின் தோகையில் உள்ள பீலி அசைகிறது. அசையும்போது விசிறி விசிறினாற்போலக் காற்று அடிக்கின்றது. முழுத்தொகையின் காற்றைப் பற்றிச் சொல்லவில்லை. பீலியின் கொத்து அசைகிறது; அசைந்தவுடன் காற்று அடிக்கிறது. அசுரர்களைச் சங்காரம் செய்வதற்காக வீர மூர்த்தியாய் முருகப் பெருமான் எழுந்தருளுகிறான். அவுணர்களிடம் மறக்கருணை காட்டி ஆட்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறான். உலகத்திற்கு ஏற்பட்ட துன்பத்தை நீக்கி இன்பத்தைச் செய்ய வேண்டுமென்று வருகிறான். உயிர்களுக்குத் துன்பம் இழைக்கும் அசுரர்களிடம், நல்வழிக்கு வாருங்கள் என்று சொன்னால் அதை உணர்ந்து அடங்க மாட்டார்கள். அவர்களை அடித்து அடக்கி ஆட்கொள்ள வேண்டுமென்ற எண்ணம்; வீராவேசத்துடன் வருகிறான். அப்படி வரும் போதுஅவனைச் சார்ந்துள்ள பொருள்களிலும் வீரம் எதிரொலிக்கிறது. ஒர் ஆடவன் மிக்க கோபம் அடைகிறான். அந்தக் கோபத்தை மீசை துடித்துக் காட்டுகிறது; கண் சிவந்து காட்டுகிறது; உடம்பு பதறிக் காட்டுகிறது. அதைப்போல முருகன் போருக்கு வேகத்தோடு வருகிறான். அந்த வீர வேகத்தில் வேல் பளபள என மின்னுகிறது. மயில் மிக வேகமாக ஒடுகிறது. அதன் பீலியின் கொத்து அசைகிறது. காற்று அடிக்கிறது. அப்போது என்ன நடக்கிறது? மேரு அசைதல் அசைந்தது மேரு மேருமலை அசைந்தது. பொன்னிற மலை மேரு என்பார்கள். பிரபஞ்சத்துக்கு நடுவில் தூண் போல நிற்பது அது. சூரியனும் சந்திரனும் அதைச் சுற்றி வருகிறார்கள். அந்த மலையின் மீதுதான் தேவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்களாம். அதனால் அதற்குச் சுராலயம் என்று பெயர் உண்டு. பூமியின் நடு அச்சுப் போல் இருக்கிறது அது. அதை யாராவது கண்டது உண்டோ என்ற கேள்வி எழலாம். பூகோளத்தில் பூமத்திய ரேகை என்று ஒன்றைச் சொல்கிறார்கள். உலகத்தின் நடுவிலுள்ள கோடு இது. இந்தக் கோட்டின் பக்கத்தில் வெப்பம் மிக அதிகமாக இருக்கும்; பாலைவனம் அதிகம் என்று படிக்கிறோம். இந்தக் கோட்டை யாராவது கண்ட துண்டா? இல்லை. இது மானசீகக் கோடு. ஆனால் இது உண்மை என்று கொண்டே பல கணக்குகளைப் போடுகிறார்கள். அவை யாவும் உண்மையல்லவா? உண்மைதான். அந்தக் கோடு கற்பனையில் அமைந்தாலும் எப்படி இருப்பதாகவே கொள்கிறார்களோ அப்படியே மேருவும் இருப்பதாகவே புராணக்காரர்கள் கொள்கிறார்கள். வண்டிச் சக்கரம் கீழே விழாமல் சுற்றி வருகிறது. அவ்வாறு செய்வதற்குக் காரணமாகச் சக்கரத்திற்கு நடுவில் அச்சு இருக்கிறது. அது இரும்பால் அமைந்திருப்பதைப் பார்க்கிறோம். உலகம் சுற்றிக் கொண்டே இருக்கிறது என்பதை எல்லோரும் ஒப்புக் கொள்கிறார்கள். இது சுற்றிக் கொண்டே இருக்க வேண்டுமானால் நடு அச்சு ஒன்று வேண்டாமா? அந்த அச்சைத்தான் மேருகிரி என்றனர் நம் பெரியோர். விஞ்ஞானத்தில் ஒரு பொருளை மிக நுட்பமாகச் சொல்வார்கள். புராணத்தில் பருப் பொருளாகச் சொல்வார்கள். மேரு கிரி பொன்மயமானது என்று சொல்கிறார்கள். அதற்கும் ஒரு பொருள் உண்டு. இரும்பு, வெள்ளி, செம்பு, தங்கம் முதலிய எல்லா உலோகங்களுமே பூமிக்குள் இருந்துதான் கிடைக்கின்றன. எல்லா உலோகங்களிலும் சிறந்தது தங்கம். உலகிற்கே நடு அச்சுப் போல் மிக உயர்ந்து இருக்கிற மலையும் பூமியில் இருந்து கிடைக்கும் உலோகங்கள் எல்லாவற்றையும் விட மிக உயர்ந்த தங்கத்தால் ஆனது எனக் கதையாகச் சொன்னார்கள். முருகப் பெருமானது வாகனம் ஆகிய மயில் வேகமாகப் போன போது அதன் பீலியின் கொத்து அசைந்ததனால் காற்று அடித்தது. அதனால் உலகத்தின் அச்சாக இருக்கிற மேரு கிரியே அசைந்தது. உயர்வு நவிற்சி கவிஞன் எதையேனும் சிறப்பித்துச் சொல்லப் புகுந்தால் சில சமயங்களில் அதை அழகுபட மிகைப்படுத்திச் சொல்வது வழக்கம். நம் நண்பர் ஒருவரை ஒரு வாரமாகப் பார்க்கவில்லை. அவர் திடீரென்று வருகிறார். நாம், "அடேயப்பா, உன்னைப் பார்த்து ஒரு யுகம் ஆயிற்றே!" என்கிறோம். பல பல லட்சம் ஆண்டுகளைக் கொண்ட ஒரு யுகமா ஆயிற்று? ஆறேழு நாட்களாகத்தான் அவரைப் பார்க்கவில்லை. இருந்தாலும் யுகமென்று சொல்கிறோம். ஒரு வாரம் பார்க்காததனால் பல காலமாகப் பார்க்காதது போன்ற உணர்ச்சி தோன்றியது. அதை அப்படியே சொல்லாமல் யுகம் ஆயிற்றே என்கிறோம். கதை எழுத்தாளர்களும் இம்முறையை ஆளுகிறார்கள். மிக உயர்ந்த வீடு என்று சொல்வதற்கு, வானத்தை முட்டும் வீடு என்று சொல்கிறார்கள். நாம் ஒவ்வொன்றையும் அளப்பதற்கு ஒவ்வோர் அளவு கருவி வைத்திருக்கிறோம். அடி, முழம் என்று துணியை அளக்கிறோம். மைல் என்று தூரத்தை அளக்கிறோம். படி என்று தானியத்தை அளக்கிறோம். இப்படியே உயர்வை அளப்பதற்குக் கவிஞர்கள் வைத்துக் கொண்ட அளவுகளில் ஒன்று மிகை. இதை உயர்வு நவிற்சி என்று இலக்கணத்தில் சொல்வார்கள். பெரும்புலவராகிய அருணகிரியார் வீர மூர்த்தியாக முருகப் பெருமான் எழுந்தருளியதைச் சொல்ல வந்து, அவனுடைய வேகத்திற்கு ஏற்ப மயில் வாகனமும் வேகமாகப் போயிற்று என்கிறார். வேகத்தை எப்படிச் சொல்வது? ஒரு கார் வேகமாகப் போவதை வருணிக்கும்போது, 'பக்கத்தில் உள்ள சருகுகள் பறந்து ஓடின. புழுதி மண்டலம் கிளம்பிற்று' என்று சொல்வது போல, "மயில் வேகமாகப் போயிற்று. அதன் பீலியின் கொத்து அசைந்த தனால் வீசிய காற்றில் மேரு கிரி அசைந்தது" என்று மிக அழகாக மிகைப்படுத்திச் சொல்கிறார். பிறகு, மயில் அடி எடுத்து வைத்து நடந்ததாம். மலையும் கடலும் அடியிட எண் திசைவரை தூள்பட்ட அத்துளிகள் வாரி திடர்பட்டதே. நேரான திசைகள் நான்கோடு கோணத் திசைகள் நான்கும் சேர்ந்து எட்டுத் திக்குகள் உள்ளன. எட்டுத்திக்கின் முடிவிலும் எட்டு மலைகள் இருப்பததாகச் சொல்வது மரபு. மயில் கால் எடுத்து வைக்க, எட்டுத் திசைகளிலும் உள்ள மலைகள் தூள் தூளாகப் போய்விட்டன. அந்தத் தூள் எங்கே போயிற்று? பெரிய மலைகள் துாளானால் பூமி மேடாகி விடாதா? அதற்கு இடமில்லாமல் அந்தத் தூள் காற்றில் அடித்துச் செல்லப்பட்டுப் பூமிக்குப் பக்கத்தில் இருக்கிற இடம் கடலில் விழுந்தது. அத்தூளின் வாரி திடர்பட்டதே. தூள் நிரம்பவே கடல்கள் மேடிட்டுப் போய்விட்டனவாம். "மயிற் பீலியின் காற்றுப் படவாவது! மேரு கிரி அசையவாவது! கால் எடுத்து வைக்க மலைகள் தூள் தூளாகப் போகவாவது!" என்றால் இப்படி எல்லாம் சொல்வது கவிஞர்களுடைய மரபு. ஆறு, ஆறரை அடி உயரமுள்ள மனிதனை நாம் என்ன சொல்கிறோம்? பனை மரம் மாதிரி இருக்கிறான் என்று சொல்கிறோம். என்ன பொருள்? உயரமாக இருக்கிறான் என்று பொருளே தவிரப் பனை மாதிரியே இருபதடி உயரம் உள்ளவன் என்று ஆகாது. முருகப் பெருமானது வேகத்தை, அவனுடைய வாகனத்தின் வேகத்தைச் சொல்வது போலச் சொல்கிறார். வாகனத்தின் முழு, வேகத்தைக்கூடச் சொல்லவில்லை. அது போகிற வேகத்தில் பீலியின் கொத்துப்பட்டு அடிக்கின்ற காற்றைக் கொண்டே சொல்கிறார். 'அது கால் எடுத்து வைக்கையில் மலைகள் பொடிப் பொடியாகிவிட்டன; மேடு பள்ளம் ஆகிவிட்டது; பள்ளமான கடல்களில் இந்தத் தூள் விழுந்து அவை மேடாகிவிட்டன' என்கிறார். இதன் உள்ளுறை பொருளைக் காண வேண்டும். மேடும் பள்ளமும் சூரபன்மன், தவத்தாலும் குணத்தாலும் உயர்ந்த பெரியவர்களைச் சிறியவர்களர்க்கினான். மிகச் சிறியவர்களாக இருந்தவர்களைப் பெரியவ்ன்ர்க்கின்ர்ன். அவக்குணம் நிரம்பிய அசுரர்கள் பெரியவர்களாகப் போய்விட்டார்கள். தவக்குணம் மிக்க தேவர்கள் சிறியவர்களாகப் போய்விட்டார்கள். இந்திர குமாரனைச் சிம்மாசனத்திலிருந்து இறக்கிச் சிறையில் தள்ளினான். சூரனுடைய பிள்ளை இந்திரன் உட்கார்ந்திருந்த இடத்திலே அமர்ந்துவிட்டான். மேடு பள்ளமாகப் போயிற்று. பள்ளம் மேடாகி உயர்ந்தது. வீரத்தை வீரத்தால் மாற்ற வேண்டும். முள்ளை முள்ளால்தானே எடுக்க வேண்டும்? முருகப் பெருமான் தன்னுடைய வீரத்தால் மறுபடியும் மேட்டைப் பள்ளமாகவும், பள்ளத்தை மேடாகவும் ஆக்க நினைத்தான். அசுரர்களை அடக்கித் தேவலோகத்தை இந்திரனுக்கு மீட்டுக்கொடுக்க எண்ணினான். அவனுடைய வாகனமாகிய மயில் கால் எடுத்து வைத்தனால் மேடு பள்ளமாயிற்று; பள்ளம் மேடாயிற்று. அந்த மயிலுக்கு நாயகனாகிய முருகப் பெருமானும் அதைத்தான் செய்தான். இப்படி நயமாக ஒரு கருத்துத் தோன்றுகிறது. சமநிலை மற்றொரு கருத்தையும் இந்தக் காட்சி உள்ளடக்கியிருக்கிறது. மனிதர்களுடைய உள்ளத்தில் காமம் மோகம் போன்றவைகளினால் பெரும் பள்ளம் வீழ்ந்திருக்கிறது. உயர்ந்த குணங்களினால் மேடும் உண்டாயிருக்கிறது. தீய குணமாகிய கடலும், உயர் குணமாகிய மலையும் இருக்கின்றன. இவற்றால் மனம் என்ற ஒன்று இன்ப துன்பத்திற்கு ஆளாகிறது. இன்ப துன்பம் இரண்டும் கலந்ததே வாழ்க்கை. நமது வாழ்க்கை வெறும் இன்பம் மாத்திரம் அமைந்தது அல்ல; வெறும் துன்பம் அமைந்ததும் அல்ல. முழுவதும் துன்பம் அநுபவிப்பவர் யாரும் இல்லை. முற்றும் இன்பம் அநுபவிப்பரும் இல்லை. இன்ப மேடும், துன்பப் பள்ளமும் உள்ள மனம் தூயதன்று. அதில் அமைதி இராது. சம நிலை பெற்றால்தான் சாந்தி பிறக்கும். சுகத்தால் இன்பமடையாமலும், துக்கத்தால் துன்பமடையாமலும் இருக்கும் மனமே சமநிலையுடைய மண்ம். அந்த நிலையை நிர்வேதம் என்பர். முருகன் மயில் வாகனத்தில் எழுந்தருளி வந்துவிட்டால், அந்த மயில் போடுகின்ற நடையே மலையைப் பொடியாக்கி, கடலைத் திட்டாக்கிவிடும்; மனத்தைச் சமன்படுத்தி விடும். இன்பம் வேறு, துன்பம் வேறு என்று அறியாமல் ஆனந்தமயமாகி இருக்கும் நிலை அல்லது சமநிலை வந்துவிடும்; இன்பத்தினாலும், துன்பத்தினாலும் மன வேறுபாடு அடையாத நிலை அது. சமநிலை பெற்றோர் தந்தையாகிய இரணியனுடைய மடிமீது உட்கார்ந்த போதும் பிரகலாதன் இன்பம் அடையவில்லை; மலையின் மீதிருந்து உருட்டிவிட்ட போதும் துன்பம் அடையவில்லை. இன்ப துன்பமாகிய மேடு பள்ளம் இல்லாமல் அவன் உள்ளம் சம நிலையில் இருந்ததே அதற்குக் காரணம். அப்பர் சுவாமிகள் சமண மதத்தில் ஆசிரியராக இருந்தார். அவர் மீண்டும் சைவ சமயத்திற்கு வந்துவிட்டார். "சமணமதத்தின் தலைவராக இருந்த ஒருவர் சைவ மதத்தில் சேர்ந்ததால் நமக்கு அவமானம் வந்துவிட்டதே" என மற்றவர்கள் அரசனிடம் போய்ச் சொல்ல, அரசன் நாவுக்கரசரைப் பலவகையாலும் துன்புறுத்த நினைத்தான். யானையை விட்டு இடறச் செய்தான். சுண்ணாம்புக் காளவாய்க்குள் தூக்கிப் போடச் சொன்னான். ஆண்டவன் திருநாமத்தைச் சொல்வதன் மூலம் இன்ப துன்பத்தை வென்று மனம் சமநிலைப்பட்ட பெருமான் அவர்; ஆதலாலே அவர் அந்தத் தண்டனைகளால் சிறிது இடர்ப்படவில்லை. உள்ளத்திலும், உடம்பிலும் துன்பம் உண்டாகவில்லை. உள்ளத்தில் இருந்த மலைகள் பொடியாகி, கடல்கள் தூர்ந்து போய்ச் சமநிலை அடையப் பெற்றவர் அவர். ரமண மகரிஷி நம்மைப் போன்ற உடம்பு படைத்தவர்தாம். ஒரு சமயம் பெரிய கதண்டுக் கூட்டத்தில் காலை வைத்தபோது அவை கடித்துவிட்டன. அதனால் ஏற்பட்ட வலியை உடம்பு அநுபவித்தது. "படு, படு" என்று சொன்னாரேயன்றி அந்தத் துன்பத்தினால் மன மாறுபாடு எதுவும் அவருக்கு உண்டாகவில்லை. அவர் மனம் சமநிலை பெற்றுவிட்டது. சாத்தியமா? இது நமக்குச் சாத்தியம் ஆகுமா என்றால், சாத்தியம் ஆகும் என்றே சொல்ல வேண்டும். இப்போதும் நாம் சிலவிதமான துன்பங்களைச் சகித்துக் கொள்கிறோம். ஒர் உதாரணம் பார்க் கலாம். நாம் சுவாரசியமாகச் சீட்டு ஆடிக் கொண்டிருக்கிறோம். அப்போது முதுகில் ஒரு கொசுக் கடிக்கிறது. அது நமக்குத் தெரிகிறது. ஆனால் கையை எடுத்துக் கொசுவை அடிப்பது இல்லை. அது கடிப்பதனால் உண்டான உடல் உணர்ச்சி இருந்தும், சீட்டாட்டத்தில் உள்ள சுவாரசியத்தினால், அதைத் தாங்கிக் கொள்கிறோம். தாங்குகிற ஆற்றல் இருப்பதால் சாட்சியாக இருக்கிறோம். அநுபவம் இருக்கும்; ஆனால் மனவேறுபாடு இராது. அதுதான் சாட்சி மாத்திரமாய் நிற்கும் நிலை. கொசுக் கடித்தாலும் கை அதை அடிக்கிறது இல்லை. கொசுக்கடி தெரியாதவர் போல இருக்கிறோம்; மனத்தில் குழப்பம் ஏற்படாமல் இருக்கிறோம். சீட்டாட்டத்தில் வேகம் இருப்பதனால் கொசுக் கடியைச் சாட்சியாயிருந்து பார்க்கிறோம். திருப்பதிக்கு பிரார்த்தனை என்று சொல்லிச் சில பேர் சாலையில் புரண்டு கொண்டு வருகிறார்கள். அப்படிப் புரளுகிறவன் உடம்பும் நமது உடம்பைப் போன்றதுதான்; அவன் தாய் அவனைப் பத்து மாதம் சுமந்தே பெற்றிருக்கிறாள். அவன் தன் உடம்புக்குக் கவசம் ஒன்றும் போட்டுக் கொள்ளவில்லை. நூற்றுமூன்று டிகிரி வெப்பமுள்ள வெயில் அடிக்கும்போது அவன் கோவிந்தா, கோவிந்தா என்று வீதியில் புரண்டு வருகிறான். அவன் உடம்புக்குச் சூடு தெரியவில்லையா? தெரிகிறது. இருந்தாலும் அந்தச் சூட்டை அவன் தாங்கிக் கொள்கிறான். அந்த அளவில் அவன் மனம் சாட்சி மாத்திரமாக இருக்கிறது. அவனுக்குக் காசு மேலே குறி; பற்று; அதுதான் காரணம். பணத்தின் மேலே அவன் எண்ணம் இருப்பதால் சூட்டை அநுபவிக்கிறான்; மனத்திலே மாறுபாடு இல்லாமல் சாட்சி மாதிரி இருந்து அநுபவிக்கிறான். கர்ணன் பரசுராமனிடம் தான் பிராமணன் எனச் சொல்லி வித்தைகளைக் கற்றுக் கொண்டிருந்தான். ஒரு நாள் ஆசிரியர் படுத்துக் கொள்ள வேண்டுமென்று நினைத்தார். தலையணை இல்லை. தம் மாணாக்கன் மடிமீது தலையை வைத்துக் கொண்டு படுத்தார். தம்மை மறந்து சுகமாகத் துங்கினார். அப்போது ஒரு வண்டு கர்ணன் துடையைத் தொளைக்க ஆரம்பித்தது. அசைந்தால் குருநாதர் எழுந்துவிடுவாரே என்று கர்ண்ன் பேசாமல் இருந்தான். ரத்தம் குபுகுபு எனப் பீறிட்டுவந்தது. இருந்தும் அவன் அசையவில்லை. காரணம் மனத்திலுள்ள் வீரம். வண்டு துளைக்கும் வலி யாகிய அநுபவம் இருந்தது. ஆயினும் மனமாறுபாடு இல்லை; குழப்பமும் இல்லை. மனம் சாட்சி மாத்திரமாக இருந்தது. வ.வே.சு. ஐயர் சிறந்த தேசபக்தர். அவர் இங்கிலாந்தில் இருந்தபோது விநாயக தாமோதர சாவர்க்கர் முதலியவர்களும் அவரும் சேர்ந்து இந்தியா லீகு என்ற சங்கத்தை நடத்தினார்கள். இந்தியா சுதந்திரம் பெறப் பாடுபடுவதே அந்தச் சங்கத்தின் நோக்கம். அவர்கள் எந்தத் துன்பம் வந்தாலும் சகித்துக் கொள்ள வேண்டியிருக்கும் அல்லவா? தமக்கு அத்தகைய தைரியம் இருக்கிறதா என்பதைச் சோதிக்க ஒரு காரியம் செய்தார்கள். கட்டை விரலை ஒரு மேஜையின் மேல் வைத்து ஒர் ஊசியினால் அதன் மேல் குத்தி ஊடுருவி ஊசியின் முனை மேஜை வரையில் போய் மேஜையைக் குத்துகிற வரைக்கும் பொறுத்துக் கொள்ளவேண்டும். வ.வே.சு. ஐயர் அப்படிக் குத்துவதைப் பொறுத்துக் கொண்டார். ஊசி குத்தினால் வலி இருக்காதா? இருக்கும். அதைப்பொறுக்கும் வீரம் வேண்டும் என்பதற்காகவே அவ்வாறு செய்தார்கள். வலியிருந்தும் சாட்சி மாத்திரமாயிருந்து பொறுத்துக் கொண்டார்கள். சாமான்யச் சீட்டு ஆட்டத்திற்காகக் கொசுக் கடியைச் சாட்சி மாத்திரமாய் இருந்து அநுபவிக்கலாம் என்றால், பிச்சைக் காசுக்காக மண்டை பிளந்து போகும் வெயிலைச்சாட்சி மாத்திரமாய் இருந்து சகிக்கலாம் என்றால், இந்திய விடுதலைக்காக ஊசியினால் விரலில் குத்திக் கொள்ளும்போது வலியைச்சாட்சி மாத்திரமாய்ப் பொறுத்துக் கொள்ளலாம் என்றால், இறைவனை எண்ணி, அவன் திருவருளைப் பெற்றவர்கள் உலகத்தில் ஏற்படும் இன்ப துன்பங்களை எல்லாம் சாட்சி மாத்திரமாய் இருந்து நுகர முடியாதா? மனத்திலே சமநிலை ஏற்பட்டால் அது சாத்தியமாகும். சீட்டு ஆடுகிறவர்களும் பிறரும் ஏதோ ஒரு நிகழ்ச்சியில் மனத்தில் ஒரளவு சமநிலையைப் பெறுகிறார்கள்.அருள் பெற்றவர்களோ எப்போதுமே சமநிலையுடன் இருக்கிறார்கள். மயில் வாகனன் சமநிலை அருளுதல் அத்தகைய சமநிலையை முருகன் திருவருளால் பெறலாம். முருகப் பெருமான் மயில் வாகனனாக வர வேண்டும். வந்தால் மேடு பள்ளம் தூர்ந்து போய் எல்லாம் சமமாகிவிடும். முருகப் பெருமானைத் தியாயம் செய்தால், மயில் மேல் ஏறி வரும் கோலத் தில் உள்ளத்தே நடமாடவிட்டால், நித்தியம் போர்க்களமாக இருக்கிற நம் உள்ளம், அசுர சம்பத்தால் பள்ளம் விழுந்தும், தேவ சம்பத்தால் மேடிட்டும் இருக்கிற உள்ளம், சமனாகிவிடும். இன்ப துன்பங்களைச் சாட்சி மாத்திரமாய் இருந்து அநுபவிக்கலாம். இன்ப துன்பங்களுக்கு அப்பாற்பட்ட ஆனந்தத்தை நுகரலாம். இந்தக் குறிப்பும் இப்பாட்டில் உள்ளது. * குசைநெகி ழாவெற்றி வேலோன் அவுணர் குடர்குழம்பக் கசையிடு வாசி விசைகொண்ட வாகனப் பீலியின்கொத்து அசைபடு கால்பட்டு அசைந்தது மேரு; அடியிடஎண் திசைவரை தூள்பட்ட; அத்தூளின் வாரி திடர்பட்டதே. (வெற்றியைத் தரும் வேலையுடைய முருகன் அசுரர்களின் குடல் குழம்பும்படியாக, கடிவாளக் கயிற்றை நெகிழவிட, சவுக்கினால் அடித்த குதிரையின் வேகத்தைக் கொண்ட மயில் வாகனத்தின் பீலியினது கொத்து அசைவதனால் உண்டான காற்றுபட்டு மேருமலை அசைந்தது; அம்மயில் தன் காலை வைக்க, எட்டுத் திக்கிலும் உள்ள மலைகள் தூளாயின; அந்தத் தூளினால் கடல் மேடாகிவிட்டது. குசை-கடிவாளக் கயிறு. நெகிழா-நெகிழ்த்து; நெகிழ்க்க என்ற பொருளையுடையது; எச்சரி திரிபு. நெகிழ்க்க விசை கொண்ட வாகனம் என்று முடியும். அவுணர் - அசுரர். கசை - குதிரையை அடிக்கும் சவுக்கு. வாசி - குதிரை. விசை - வேகம். பீலியின் கொத்து மயிற் பிஞ்சம். கால் - காற்று. அடி இட - காலை வைக்க. வரை - மலை. தூளின் - புழுதியினால். வாரி - கடல். திடர்பட்டது - மேடாயிற்று.) ↑ சேவல் என்னும் பெயரைக் கொடுப்பது, சிறகுடைய பறவைகளோடு பொருந்தும், பெரிய கரிய தோகையையுடைய மயில் அல்லாத இடத்து. சேவற் பதாகை 1 இயல்புக்கு ஏற்ற கற்பனை ஒரு கரிக்கடைக்காரனுக்குக் கொஞ்சம் ஒய்வு நேர்ந்தது. அன்றைக்குக்கடை இல்லாத நாள். தன்னுடைய வீட்டுத்திண்ணையில் உட்கார்ந்து கொண்டிருந்தான். மெல்ல மெல்லச் சிந்தனை ஒடியது. "நம் கடையில் நூறு கரி மூட்டை வைத்திருக்கிறோம். மழைக்காலம் வரப் போகிறது. அப்போது கிராக்கி அதிகமாக இருக்கும். நூறு மூட்டையும் நல்ல விலைக்குப் போகும். மேலும் அதிகமான மூட்டைகளை வாங்கி வைத்துக் கொண்டால் அப்போது நல்ல விலைக்கு அவற்றை விற்கலாம். கரி மூட்டைகளை நாம் வாங்குவதற்குப் பதிலாக ஒரு சவுக்குத் தோப்பிையே ஏலம் எடுத்துக் கரி சுட்டால் இரண்டு வகையான லாபமும் நமக்கு வராதா?" எனச் சிந்தித்தான். கரி மூட்டைக்காரனுக்குச் சிந்தனை அப்படித்தான் போகும். ஒருவனுடைய தொழில் எதுவோ, அவனுக்கு நாட்டம் எதில் அதிகமாக இருக்கிறதோ, அதுவே அவனது சிந்தனைக்கும் கற்பனைக்கும் ஆதாரம், வேறு வகையான கற்பனை சும்மா இருக்கும்போது எழாது. இது மனித இயல்பு. ஆனால், குழந்தை இருக்கிறது. அதற்குக் குறிப்பிட்ட ஒரு தொழிலும் இல்லை; வியாபாரம், பணம் சம்பாதித்தல் ஆகியவற்றில் நாட்டம் இல்லை. சும்மா இருக்கும்போது அது எதைப் பற்றி நினைக்கும்? குழந்தைக்கு எதன் மேலும் நாட்டம் இல்லை என்று சொல்ல முடியாது. குழந்தை பிறந்து அறிவு தோன்ற ஆரம்பித்தவுடன் அதற்கு முழு உருவமாக முதலில் தோன்றுபவள் தாய்தான். பிறகு தகப்பனாரை அறிகிறது. தாய் தந்தையை அறிந்த குழந்தை அவர்களைக் கருவியாகக் கொண்டே உலகிலுள்ளவற்றை அளக்கும். ஒரு போலீஸ்காரன் தன் குழந்தைக்கு, "ஒர் ஊரில் ஒரு ராஜா இருந்தான்" என்று கதை சொல்ல ஆரம்பித்தால், அந்த ராஜா தன் அப்பாவைப் போலவே தொப்பி போட்டிருப்பான், சொக்காய் அணிந்திருப்பான் என்று நினைக்கும். அதற்குத் தாய் தகப்பனையன்றி உலகமே இல்லை. அருணகிரிநாதக் குழந்தை இறைவன் சந்நிதானத்தில் அருணகிரியார் குழந்தையாகி விட்டார். தன்னுடையது என்பது எதுவும் இல்லாமல், தன் செயல் அற்று, எல்லாவற்றையும் தாயின் கையில் ஒப்படைத்துவிட்டு இன்ப துன்பம் எல்லாவற்றையும் தாய் வழியே பெறுவது குழந்தை. அம்மா வீதிப் பக்கம் சென்றால் குழந்தையும் தாயுடனே ஒடுகிறது; உள்ளே வந்தால் உள்ளே வருகிறது; படுத்துக் கொண்டால் படுத்துக் கொள்கிறது. இத்தகைய குழந்தையாக அருணகிரியார் ஆகிவிட்டார். அவருக்கு உலகம் எங்கும் வேறு ஒன்றும் தெரியவில்லை. அவர் நினைவு, கற்பனை எல்லாம் இறைவனைப் பற்றியும் அவனோடு தொடர்புடைய பொருள்களைப் பற்றியுமே எழுகின்றன. உலகிலுள்ள மற்றக் குழந்தைகளுக்கும், அருணகிரிநாதக் குழந்தைக்கும் ஒரு வேறுபாடு. அந்தக் குழந்தைகள் உலகத்தை இன்னும் அறிந்து கொள்ளவில்லை. இந்தக் குழந்தையோ அறிந்து கொண்டதை மறந்துவிட்டது. நான்கு ரூபாயை எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டு வைத்தது குழந்தை; திரும்பவும் அந்த நான்கு ரூபாயை எடுத்து செலவழித்துவிட்டது. மற்றொரு குழந்தை பாத்திரத்தில் ஒரு ரூபாய்கூடப் போடவில்லை. எப்படி இருந்தாலும் கடைசியில் இரு பாத்திரமும் காலியாகத்தான் இருக்கும். அதுபோல, உலகிலுள்ள குழந்தைகள் எதையும் அறிந்து கொள்ளாத உள்ளம் உடையன; அருணகிரிநாதக் குழந்தை நன்றாக வளர்ந்து தன் அறிவினால் அறிந்து கொண்டவை அனைத்தையும் மறந்து விட்ட உள்ளம் உடையது. குழந்தைகளின் உள்ளம் மாசு ஏறாத உள்ளம்; முன்பு மாசு ஏறியிருந்தாலும் அவற்றை எல்லாம் துடைத்துவிட்ட உள்ளம் அருணகிரிநாதக் குழந்தையுடைய உள்ளம். எப்படியாயினும் இரண்டும் ஒரேவிதமாகவே இருக்கும். நாம் பார்க்கிற இயற்கைக் குழந்தைகள் தம் தாய் தந்தையர்களையே மிகப் பெரியவர்களாக நினைப்பார்கள். யாரை நினைத் தாலும் தம் தாய் தந்தையர்களின் அளவைக் கொண்டு நினைக்கின்ற தன்மை உடையது அவர்களின் உள்ளம். அருணகிரிநாதக் குழந்தை என்ன செய்கிறது? அதுவும் ஒரு தந்தையினிடத்தில் அன்பு வைக்கிறது. உயிருக்குத் தந்தையாகிய முருகனை நினைத்து, தன் இன்ப துன்பம், உயர்வு, தாழ்வு ஆகிய எல்லாவற்றையும் அந்த இறைவனைச் சார்த்தியே நினைக்கிறது. கந்தர் அலங்காரம் பாடுகிற அந்த அருணகிரிநாதக் குழந்தை தன் மனம் என்னும் கற்பனைக் குதிரையைத் தட்டிவிட்டு, அதன் வேகத்தில் தன் தந்தையாகிய இறைவனை நினைத்துப் பாடுகிறது. அப்பெருமானிடத்தில் உள்ள பொருள்களை வருணிக்கிறது. புகழ் விரிக்கும் மரபு ஒருவருடைய சிறப்பைப் புலப்படுத்த வேண்டுமானால் நேரே அவர் பெருமையைத்தான் சொல்ல வேண்டும் என்பது இல்லை. அவரைச் சார்ந்தவர்களுடைய பெருமையைச் சொல்வதும் மறைமுகமாக அவருடைய பெருமையைப் புலப்படுத்துவதேயாகும். ஒரு பணக்காரர் புகழைச் சொல்லும்போது, "அவர் வீட்டுக் கணக்கர் கார் வைத்திருக்கிறார்" என்று சொன்னால், அவர் பெருமை பின்னும் அதிகமானது என்று புலனாகும். கணக்கரின் பெருமையை நேர் முகமாகச் சொல்வதுதான் இது; ஆயினும் மறைமுகமாக அவருடைய எசமானது பெருமையையும் அது புலப்படுத்துகிறது. விறகு சுமந்த சொக்கன் பரஞ்சோதி முனிவர் இயற்றிய திருவிளையாடற் புராணத்தில் ஒரு கதை. மதுரை நகரில் பாணபத்திரன் என்ற இசைப் புலவன் ஒருவன் இருந்தான். அவனுக்கு அரசாங்கத்தில் உத்தியோகம். அவன் சிவபக்தன். மதுரையில் சோமசுந்தரக் கடவுள் சந்நிதானத்தில் இசை இசைத்துத் தொண்டு செய்வதிலேயே நாட்டம் உடையவனாக இருந்தான். ஒருநாள் வடநாட்டிலிருந்து ஏமநாதன் என்ற வீணை வித்துவான் ஒருவன் மதுரைக்கு வந்தான். அரசனிடம் தன் பெருமையைச் சொல்லிக் கொண்டதோடு, தன்னை யாழ் வாசிப்பதில் தோல்வியுறச் செய்பவர் யார் இந்த நாட்டில் இருக்கிறார் எனவும் செருக்கோடு கூறினான். அரசன் தன் ஆஸ்தானத்தில் உள்ள பாணபத்திரனுக்கு அவனோடு வாசிக்க வேண்டுமென்று கட்டளையிட்டான். பாணபத்திரனுக்கு இந்த இசைவாதத்தில் ஈடுபட விருப்பம் இல்லை. என்ன செய்வது என்று தெரியாமல் சோமசுந்தரக் கடவுளின் சந்நிதானத்துக்குச் சென்று, "இறைவனே, ஏமநாதனை நான் யாழ் வாசிப்பதில் தோல்வியுறச் செய்ய முடியுமென்று தோன்றவில்லையே! அவனை வெல்ல வேண்டுமென்ற ஆசை எனக்கு இல்லை. அவனிடம் நான் தோற்றுப்போய் விட்டேன் என்றால் அரசன் என்னை வேலையை விட்டுத் தள்ளிவிடுவானே! ஊரை விட்டுப் போக வேண்டி நேர்ந்தாலும் நேருமே! அப்புறம் உன் சந்நிதானத்திற்கு நான் எப்படி வர முடியும்? உனக்குத் திருத்தொண்டு எப்படிச்செய்ய முடியும்?" என்று கண்ணிர்விட்டுக் கதறினான். அன்று மாலை நல்ல மழை வந்துவிட்டது. இறைவன் ஒரு கிழ விறகுவெட்டிக் கோலத்தை எடுத்துக்கொண்டு தன் தலையில் ஒரு விறகுக் கட்டும் அதில் செருகப்பட்டிருக்கும் ஒரு பழைய யாழும் கொண்டு தெருவோடு வந்தான். மழைக்கு ஒதுங்குகிறவனைப் போல, ஏமநாதன் தங்கியிருந்த வீட்டின் வாசலுக்குச் சென்று உட்கார்ந்து கொண்டு, யாழை எடுத்து மெல்ல வாசிக்க ஆரம்பித்தான். அந்த இனிய நாதம் ஏமநாதன் செவியில் பட்டது. யார் பாடுகிறார் என்று பார்த்தான். பார்த்தால் அவனுக்கே நம்பிக்கை இல்லை. ஒரு கிழ விறகுவெட்டி; விறகுக் கட்டும் அவன் அருகில் இருக்கிறது; விறகு போலவே ஒரு யாழ். அந்த யாழிலிருந்தா அவன் இத்தகைய இனிமையான இசையை எழுப்புகிறான்! எழுந்திருந்து அவனிடம் சென்றான். "அப்பா, நீ யார்? இந்த இனிமையான சங்கீதத்தை யாரிடம் கற்றுக் கொண்டாய்?" எனக் கேட்டான். அதை ஏன் கேட்கிறீர்? என் தலைவிதி இப்படி இருக்கும்படி ஆகிவிட்டது! நான் பாடுவது என்ன, அவ்வளவு உயர்ந்ததா? என் குருநாதரிடம் இருக்கிற மற்ற மாணாக்கர்கள் வாசிப்பதைக் கேட்டால் அப்புறம் நீர் என்ன சொல்வீரோ எனக்குத் தெரியாது; நானும் யாழ் கற்றுக் கொள்ள வேண்டுமென்றுதான் குருநாதரிடம் சென்றேன். அவர் எனக்கு மிகவும் சிரமப்பட்டே சொல்லிக் கொடுத்தார். கடைசியில் என் தலை நரையோடிக் கிழவன் ஆகிவிட்டேன். 'போ, இனி உனக்கு வீணை வரவே வராது' என்று சொல்லி என் ஆசிரியர் என்னைத் துரத்திவிட்டார். எனக்கு வேறு வழி இல்லாமல்விறகு வெட்டிப் பிழைக்க ஆரம்பித்தேன்' என்றான். 'வீணையே வராது எனச் சொல்லி கழித்து விடப்பட்ட இவனே இவ்வளவு நன்றாக வாசிப்பான் என்றால், இவன் குருநாதர் எப்படி வாசிப்பாரோ?' என்று வியந்த ஏமநாதன், "உன் குருநாதர் யார் அப்பா?” என்றான். "அவரை உமக்குத் தெரியாதா? அவர்தான் பாணபத்திரர்; பாண்டியன் அவைக்களத்துப் பாணர்" எனச் சொல்லக் கேட்டான் ஏமநாதன். அவ்வளவுதான். அன்றைக்கே இரவோடு இரவாக அந்த ஊரை விட்டே ஒடிப் போய்விட்டான். பாணபத்திரனது பெருமையை இறைவன் நேர்முகமாகச் சொல்லவில்லை. "அவனால் கழித்து விடப்பட்டவன் நான்" என்று சொன்னான். 'நானே இவ்வளவு நன்றாக வாசிக்கிறேன் என்று நீர் சொன்னீரானால், என் குருநாதர் எப்படி வாசிப்பார் என்பதை நீரே ஊகித்துக் கொள்ளலாம்' எனச் சொல்வதுபோலச் சொன்னார். 2 சேவலின் பெருமை இதைப்போலவே இந்தப்பாட்டில் தன் தந்தையின் பெருமையை அருணகிரிநாதக் குழந்தை நேரே சொல்லவில்லை. அவனுடைய கொடியின் பெருமையைச் சொல்வதன் வாயிலாக அவன் பெருமையைப் புலப்படுத்துகிறது. பெரிய வெற்றியை உடைய மன்னர்களின் அரண்மனையிலும், கோட்டைகளிலும் கொடி பறக்கும். நெடுந்துரத்தில் வருகிறபோதே காற்றில் ஆடுகிற அந்த வெற்றிக் கொடியைப் பார்த்துவிட்டு எத்தனையோ பேர்கள் அஞ்சி ஒடுவார்கள். கடவுளரின் திருக்கோயிலின் வாசலிலும் கொடி பறக்கிறது. ஆடுகின்ற அக்கொடி அத்திருமாளிகையின் பெருமையையும், அதில் இருக்கிற தெய்வத்தின் வெற்றிச் சிறப்பையும் விளக்குகிறது. முருகனுடைய திருக்கோயிலில் பறப்பது சேவற்கொடி, அவன் திருக்கரத்தில் இருப்பதும் அதுவே. அதை நினைக்கும் போது அருணகிரியாருக்குக் கற்பனை விரிகிறது. மயிலின் பிரதாபத்தைப் போன பாட்டிலே நினைத்தவர், தொடர்ந்து சேவலின் பெருமையை இப்போது நினைக்கிறார். கோழி எவ்வளவு பெருமையுடையது! தேவர்கள் பாராட்டும் கோழி அது; தேவ மகளிர் வாழ்த்தும் கோழி. "கோழி ஓங்கிய வென்றுஅடு விறற்கொடி வாழிய பெரிது என சூரர மகளிர் வாழ்த்துவார்களாம். திருமுருகாற்றுப் படையில் நக்கீரர் அவ்வாறு சொல்கிறார். அருணகிரிநாதக் குழந்தை இந்த சேவலைப் பற்றிக் கற்பனை செய்ய ஆரம்பித்தது. அந்தக் கற்பனையில் இயற்கையோடு ஒட்டிய பொருத்தம் இருக்க வேண்டுமென்பது அவசியம் அன்று. இது நடக்கும், இது நடக்காது என்று ஆராய்ந்து சொல்வதற்கு அங்கே வேலை இல்லை. இந்த நினைப்பினால் உள்ளம் இன்புறுவதுதான் பயன். இப்போது சேவற்கொடியைப் பாராட்டுகிறார் அருணகிரியார். வாகனமும் கொடியும் கடவுளர்களுக்கு பெரும்பாலும் எது வாகனமோ அதுவே கொடியாக இருக்கும். சிவபிரானுக்கு வாகனம் இடபம்; கொடியும் இடபந்தான். திருமாலுக்கு வாகனம் கருடன்; கொடியும் கருடன் தான். முருகப்பெருமானுக்கு அப்படி அல்ல. வாகனம் மயில்; கொடி கோழி. மயிலும் கொடியாக இருப்பதுண்டு. கொடி வேறாக இருந்தாலும் வாகனத்துக்கும் கொடிக்கும் ஒரு தொடர்பு உண்டு. சூரபன்மனது பாதி அம்சம் வாகனமாகிய மயிலாகவும், மற்றொரு பாதி சேவல் கொடியாகவும் இருக்கின்றன. நாத தத்துவம் மயில் வாகனத்தில் மூன்று வகை உண்டென்று பார்த்தோம். கோழிக் கொடியிலும் இரண்டு வகை உண்டு. முதற் கோழி நாதம் என்ற தத்துவம். உலகம் தோன்றுகின்றபோது கடைசியில் வந்து முடியும் தத்துவம் பூமி, பஞ்ச பூதங்களுள் கடைசித் தத்துவம் பிருதிவி. இயங்காமல் இருக்கும் பரமசிவத்தின் உள்ளத்தில் அருள் என்ற இயக்கம் உண்டாகிறது. இயக்கத்தை ஃபோர்ஸ் (Force) என்றும், அதற்குரிய ஆற்றலை எனர்ஜி (Energy) என்றும் விஞ்ஞானிகள் கூறுவார்கள். பொருளை மாட்டர் (Matter) என்பர். முன்காலத்தில் இருந்த விஞ்ஞானிகள் பொருள் வேறு, சக்தி வேறு என்று நினைத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் இப்பொழுது பொருள் என்பதும், சக்தி என்பதும் ஒன்றுதான் எனக் கண்டுபிடித்து விட்டார்கள். இயங்காமல் இருந்தால் பொருள்; இயங்கினால் சக்தி. பொருள் சிவம்; இயக்கம் சக்தி. சிவத்திலிருந்து சக்தி தோன்றியது. சக்திக்குப் பின் ஒன்றன்பின் ஒன்றாகத் தத்துவங்கள் தோன்றின. அப்படித் தோன்றியவைகளில் முதல் தத்துவம் நாதம். இந்த நாத தத்துவத்தைக் குறிப்பிக்கிறது கோழி. பிரளயகாலத்தில் உயிரினங்கள் எல்லாம் அடங்கிக் கிடக்கின்றன. ஒரு நாள் ராத்திரி என்பது பிரளயத்திற்குச் சமானம். எப்படி எல்லா உயிர்களும் இரவில் அடங்கி இருக்கின்றனவோ, அப்படியே எல்லாத் தத்துவங்களும் ஒன்றில் ஒன்று அடங்கிப் பிரளயகாலத்தில் இருக்கும். தினந்தோறும் தூங்கும் தூக்கத்தை நித்தசங்காரம் என்றும், பிரளயத்தை மகாசங்காரம் என்றும் திருமூலம் குறிப்பிடுவார். மறுபடியும் உயிர்கள் விழிப்படைவது ஜனனம். இரவு விடியப் போகிறது என்பதற்கு அடையாளமாக முதலில் கூவுவது கோழி. பிரளயத்திற்குப் பிறகு உலகம் விரியப் போகிறது என்பதற்கு முதல் அடையாளமாகத் தோன்றுவது நாத தத்துவம். இந்தத் தத்துவத்திற்கு அறிகுறியாக இருப்பது கோழி. சேவலான சூரபன்மன் அடுத்த கோழி சூரபன்மனது சங்கார காலத்தில் எழுந்தது. சூரபன்மனது உடலில் முருகப் பெருமனின் வேல் பாய்வதற்கு முன் அவன் மாமரமாக நின்றான். வேல் அவன் உடலில் பாய்ந்த போது அவனது அகங்காரம், மமகாரம் இரண்டும் பிளக்கப்பட்டு இரு பகுதியாயின. ஒரு பகுதி மயிலாகவும், மற்றொரு பகுதி சேவலாகவும் மாறின. அந்தச் சேவலைத் தன் கொடியாகக் கொண்டான் ஆண்டவன். அது மேலிருந்து கூவுகிறது. 'கொக்கறு கோ' சேவலைப் பற்றி மிகப் பழங்காலத்து நூலாகிய குறுந்தொகையில் உள்ள கடவுள் வாழ்த்துச் சொல்கிறது. க.சொ.1-22 “சேவலங் கொடியோன் காப்ப ஏழ வைகல் எய்தின்றால் உலகே" என்ற அடிகளில் முருகன் ஏந்திய சேவற் கொடியைப் பற்றிய செய்தி வருகிறது. கையில் கோழியைக் கொடியாகப் பிடித்தவன் பாதுகாப்பதால் உலகம் இன்பமான நாளை அடைந்தது என்பது பொருள். உலகிலுள்ள எந்தக் கோழி கூவினாலும் வாழ்வு விடிவது இல்லை. ஆனால் எம்பெருமான் திருக்கரத்திலுள்ள கோழி கூவினால் விடிந்துவிடும். கோழி எப்படிக் கூவுகிறது? "கொக்கறு கோ" என்று கூவுகிறது. தமிழ் நாட்டுக் கோழியானாலும் வேறு எந்த நாட்டுக் கோழியானாலும் இப்படித்தான் கூவுகிறது. இந்தக் குரலுக்குத் தமிழில் ஒரு பொருள் இருக்கிறது. கொக்கு என்பதற்கு மாமரம் என்பது ஒரு பொருள். அறு-அறுத்த; கோ-தலைவன் அல்லது கடவுள். ஆகவே “கொக்கறுகோ" என்பது மாமரத்தை அறுத்த தலைவன் எனப் பொருள்படும். மாமரத்தை அறுத்த தலைவன் யார்? சூரபன்மன் ஆகிய மாமரத்தைப் பிளந்த தலைவன் முருகன். இயற்கையாகவே கோழி கூவுகிறது என்றாலும், தமிழர் அந்தக் குரலுக்குப் பொருள் காண்பதன் மூலம் முருகனை நினைக்கிறார்கள். இப்படி நினைத்துக் கோழி கூவுகிறது எனச் சொல்லவில்லை. அக்குரலைக் கேட்கிற பக்தர்களின் உள்ளம் அப்படி நினைக்கிறது. காலையில் நாம் துங்கிக் கொண்டிருக்கும்போது கோழியைப் பார்ப்பதில்லை; அதன் குரலையே கேட்கிறோம். அந்தக் குரல் நமக்கு மாமரத்தை அறுத்த தலைவன நினைக்கச் செய்கிறது. அன்பும் நினைப்பும் முருகனிடத்தில் முறுகிய அன்பு ஏற்பட ஏற்பட இப்படி எல்லாம் நினைக்கத் தோன்றும். ஒரு ஜவுளிக் கடையில் ஒரு பையன் வேலையாக இருக்கிறான். பட்டுப் பட்டாடைகள் அந்தக் கடையில் குவிந்து கிடக்கும் போதெல்லாம் அவன் அவற்றை ஏறெடுத்தும் பார்ப்பது கிடிையாது. அவன் ஏதாவது கணக்கைப் போட்டுக் கொண்டே இருப்பான். அவனுக்குக் கல்யாணம் ஆயிற்று. அப்பால் கடைக்குச் சென்றபோது கணக்குப் புத்த்கத்தைத் திறப்பதற்கு முன்பு அங்கே கிடந்த் அழகான புடைவைகளைப் புரட்டிப் பார்க்கிறான். இன்றைக்கு அவனது உள்ளத்தில் புடைவை கட்டிக் கொள்ளும் பெண்ணிடம் அன்பு மீதுர்ந்து நிற்பதனால் அவனது நாட்டம் புடைவைகளின்மேல் செல்கிறது. அதை வாங்கிக் கொடுத்து, அவள் உடுத்துக் கொண்டால் எப்படி இருக்கும் என நினைத்துப் பார்க்கிறான். இத்தனை நாளும் அவன் அந்தப் புடைவைகளைப் பார்த்தது இல்லையே என்றால், இத்தனை நாளும் அவன் புடைவை கட்டிக் கொள்பவளுடன் பழகவில்லை. அவன் அன்பு அவள்பால் சென்றது முதல் அவன் பார்வையும் அவளைச் சுற்றிச் சூழ இருக்கிற பொருள்களிடத்தில் செல்கிறது. அது மனித இயல்பு. முருகப்பெருமானை நினைக்காதவர்களுக்குக் கோழி கூவுவதில் பொருள் ஒன்றும் இல்லை என்றே தோன்றும். ஆனால் அவன்மீது அன்பு சுரக்க ஆரம்பித்தவுடன் கோழி கொக்கறு கோ என்று கூவினால் முருகன் திருநாமத்தையே சொல்வதாகத் தோன்றும். ஒவ்வொருவரும் தம் தம் மன இயல்புக்கு ஏற்ற வகையிலே எல்லாப் பொருள்களையும் உணர்ந்து கொள்கிறார்கள். இதற்குப் பல உதாரணங்கள் சொல்லலாம். ஹரதத்தர் மனப்பண்பு ஹரதத்த சிவாசாரியார் என்ற சிவபக்தர் கஞ்சனூர் என்ற ஊரில் இருந்தார். அவர் பெரும் புலவர்; மிகப்பெரியவர். அவர் ஒரு நாள் கோயிலுக்குத் தம் சீடர்களுடன் போனார். அங்கே கோயில் தாசியைக் கம்பத்தில் கட்டி வைத்துத் தர்மகர்த்தர் அடித்துக் கொண்டிருந்தார். அவள் அடி தாங்க முடியாமல் அழுதாள். "ஐயோ! பாவம் இவளை ஏன் இப்படி அடிக்கிறீர்கள்?" என்று ஹரதத்தர் கேட்டார். அதற்கு அந்தத் தர்மகர்த்தர், "இவள் இரண்டு மூன்று நாள் யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் ஊருக்குப் போய் விட்டாள். கடவுளுக்கு யார் சேவை செய்வது? சொல்லிக் கொள்ளாமல் இவள் போகலாமா? அதற்காகத்தான் அடிக்கிறோம்" என்றார். அதைக் கேட்டவுடன் ஹரதத்தர் விசித்து விசித்து அழுதார். உடன் இருந்தவர்களுக்கு இவர் ஏன் இப்படி அழுகிறார் என்று தெரியவில்லை. வீட்டிற்கு வந்த பின் அவருடைய மாணர்க்கார்கள், "சுவாமி, நீங்கள் ஏன் அப்பொழுது அழுதீர்கள்?"என்று கேட்டார்கள். அதற்கு அவர், "கடவுளுக்குச் சேவை செய்யவில்லை என்று தர்மகர்த்தர் அவளை அடித்தாரே, அதுமாதிரி என்னை யாராவது சிறு வயசிலிருந்தே அடித்திருப்பார்களானால் நான் எப்பொழுதோ உயர்ந்திருப்பேனே" என்றார். அவர் சிவபக்தராதலின் அப்படி எண்ணினார். நல்லவற்றையே நினைப்பதற்கும் தனிமனப்பக்குவம் வேண்டும். ஆஞ்சநேயர் பண்பு கம்பராமாயணத்திலே ஓர் இடம். ஆஞ்சநேயர் சீதையைத் தேடிக் கொண்டு இலங்கை போகிறார். இலங்கையிலே சீதையை எங்கும் காணவில்லை. அவர் மனம் துடியாய்த் துடிக்கிறது. "ராமபிரான் சீதையைக் கண்டு வருவேன் எனக் காத்திருப்பாரே; அவருக்கு என்ன சொல்கிறது? சீதையைக் காணோமே! அந்தப் பாவி ராவணன் சீதையை என்ன செய்திருப்பானோ? "கொன்றானோ கற்பழியாக் குலமகளைக் கோளரக்கன் தின்றானோ" என்று நினைத்து வேதனைப்படுகிறார். வேறு சிலர், "அவன் சீதையைக் கெடுத்திருப்பானோ? அதனால் அவள் தற்கொலை செய்து கொண்டிருப்பாளோ?" என்று எண்ணலாம். மனத்தாலும் அவன் அவளைக் கெடுத்திருப்பானோ என்ற ஐய நினைப்பு ஆஞ்சநேயருக்கு உண்டாகவில்லை. இது அவருடையது தூய உள்ளப் பண்பைக் காட்டுகிறது. இப்படித்தான் நல்ல குணம் படைத்தவர்கள் உலகிலுள்ளவற்றையெல்லாம் நல்லனவாகவே நினைக்கிறார்கள். இறைவன் இடத்தில் அன்பு மீதுார்ந்துவிட்டால் எல்லாப் பொருள்களிடத்திலும் இறைவனுடைய தொடர்பையே காண்கிறார்கள். முருகனுடைய பக்தர்களுக்குக் கோழி கூவுவதைக் கேட்டவுடனே விழிப்பு ஏற்பட்டுவிடுகிறது. கொக்கறுகோ என்ற ஒலி முருகனுடைய நினைவை உண்டாக்குகிறது. உலகத்துக் கோழி உலகத்தில் உள்ளவர்கள் இருள் நிரம்பிய இரவில் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள். கோழியின் குரலைக் கேட்ட மாத்திரத்தில் இருள் நீங்கி ஒளி வரப்போகிறது என்பதை உணர்ந்து கொண்டு எழுந்துவிடுகிறார்கள். எழுந்தவுடன் இருள் நீங்குவதில்லை என் றாலும், நிச்சயமாக இன்னும் சிறிது நேரத்தில் பொழுது விடிந்து விடும் என எண்ணி ஒளியை எதிர்நோக்கி விழித்துக் கொண்டு விடுகிறார்கள். சூரியன் எழப் போகிறான்; அவனை எதிர்நோக்கி இப்பொழுதே எழுந்துவிடுங்கள் என்று எச்சரிக்கை செய்வது போலக் கூவுகிறது கோழி. இது உலகத்துக் கோழியின் செயல். அகவிருள் புறத்தே கப்பியிருக்கும் இருளைப் போல மக்களுடைய அகத்திலும் இருள் உண்டு. அந்த இருளுக்கு அறியாமை என்று பெயர். புறத்தே இருளில் எந்தப் பொருளின் உண்மை உருவமும் தோன்றாததுபோல, அகத்துள்ள இருளினால் பொருள்களின் உண்மையான இயல்பு தோன்றுவதில்லை. எது நிலைக்கும் தன்மையை உடையது, எது நிலையாதது என்று பகுத்துப் பார்க்கும் திறமை இருப்பதில்லை. அறியாமையாகிய மருளால் பொருள் அல்லாதவற்றைப் பொருளாக எண்ணி மயங்கி, மேலும் மேலும் பிறவிக்கு வழிதேடிக் கொள்கிறோம். கோழி கூவியும் எழுந்திருக்காத மக்கள் இருக்கிறார்கள். சூரியன் உதயமாகியும் தூங்கும் கும்பகர்ணர்களும் இருக்கிறார்கள். கோழி கூவுவதைப் பயன்படுத்திக் கொள்கிறவர்கள், சூரியன் ஒளியையும் பயன்படுத்திக் கொள்வார்கள். முருகன் ஞானமே வடிவானவன்; ஞானபண்டித சாமி. அவன் அருளால் அறியாமை இருள் ஒழிய வேண்டும். அது ஒழிவதற்கு முன்னால் நம்முடைய தூக்க மயக்கம் போக வேண்டும்; தாமத குணம் தொலைய வேண்டும். அதைப் போகச் செய்வது எது? அதுவும் இறைவன் திருவருள்தான். சாதன அருள் இறைவனுடைய திருவருளில் இரண்டு வகை உண்டு. ஒன்று சாதன அருள்; அவனுடைய பேரருளைப் பெறுவதற்கு ஏற்ற முயற்சிகளைச் செய்யும் ஆற்றலை அளிப்பது. "அவன்அரு ளாலே அவன்தாள் வணங்கி" என்று மணிவாசகர் குறிப்பிடும் அருள் அது. அவன் தாளை வணங்கிப் பக்குவம் அடைந்தபோது கிடைக்கும் அருள் சாத்திய அருள். ஒன்று கருவி; மற்றொன்று பேறு. ஒன்று வழி; மற்றொன்று திருமாளிகை. எல்லோரும் சனாதனங்களைப் பயிலுவதில்லை. அதற்குரிய பாக்கியம் அவர்களுக்கில்லை என்றே சொல்லவேண்டும். தூங்கிக் கொண்டிருப்பவர்களை எழுப்பும் கோழியைப் போல, அவனை வணங்கிச் சாதனை செய்ய இறைவனுடைய அருளே, சாதன அருளே வேண்டும். அந்த அருளுக்கு அடையாளமாக நிற்பது கோழி. அது தூங்குகிறவர்களை எழுப்பி கதிரவனது வருகைக்குக் காத்திருக்கச் செய்கிறது. அவன் அருளைக் கொண்டேதான் உலகிலுள்ளவற்றில் நித்தியம் எது, அநித்தியம் எது என்று சிந்தித்து அறிவும் விவேக உணர்ச்சி உண்டாகும். மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவனுக்கும் நாம் இறந்து போகப் போகிறோம் என்ற உண்மை தெரியாதது அல்ல. ஆறு ஏழு வயசுக் குழந்தைக்கே சாவைப் பற்றித் தெரியும். அதைத் தெரிந்து கொண்ட பிறகும் நல்ல நெறியில் செல்ல முயல்வதில்லை. நமக்குச் சாவு வருவது உறுதியென உணர்ந்து, பிறந்து பிறந்து சாகாமல் இருக்கும் நிலையை நாம் அடைய வேண்டுமென்ற உணர்ச்சி உடையவர்களுக்கு, உலகிலுள்ள இருளில் அகப்பட்டு மயங்கித் தூங்கிப் போகாமல் இருக்க எம்பெருமான் திருக்கரத்திலுள்ள கோழி கூவுகிறது. அதைக் கேட்டு முயற்சி உடைய மனிதர்கள் எல்லோரும் அந்தக்கோழியைக் கொடியாக உடைய எம்பெருமானை வணங்கத் தலைப்படவேண்டும். "கோழிக் கொடியன் அடிபணி யாமல் குவலயத்தே "வாழக் கருதும் மதியிலிகாள் என்று வேறு ஒரு பாட்டில் பாடுகிறார் அருணகிரியார். அந்தச் சேவலின் செயலை அவர் சொல்வதைக் கவனிக்கலாம். 3 வேலவன் படைபட்ட வேலவன் பால்வந்த வாகைப் பதாகை என்னும் தடைபட்ட சேவல் சிறகடிக் கொள்ள. மயிலைப் பற்றிப் போன பாடலிலே சொன்னபோது "வெற்றி வேலோன் வாகனம்" என்றார். இங்கேயும் அந்த வேலை முதலில் எண்ணி, 'படைபட்ட வேலவன்' என்றார். படைபட்ட வேலவன் - படையாக அமைந்த வேலையுடைய முருகன். அவனிடம் வந்த கொடி சேவல். பதாகை என்பது கொடி. வாகை என்பது ஒரு மலர். அது வெற்றி அடைந்தவர்கள் சூடுகிற பூ போருக்குக் கிளம்பும்போது ஒரு மலர், போர் நிகழும்போது ஒரு மலர், வெற்றி அடைந்தால் ஒரு மலர் எனச் சூடுவது மரபு. வெற்றி பெற்றவர்கள் வாகை மலர் சூடுவது வழக்கம். மலரைச் சூட்டிக் கொண்டாலும், சூட்டிக்கொள்ள விட்டாலும் வாகை சூடினான் என்றாலே வெற்றி அடைந்தான் என்று பொருள்படும். வாகைப் பதாகை - வெற்றியையுடைய கொடி. கோழிக் கொடி முருகன் வெற்றியை உடையவன் என்பதற்கு அடையாளமாக இருப்பது மாத்திரம் அன்று. பக்தர்களுக்கு எப்போதும் வெற்றியை உண்டாக்கும் இயல்பையும் உடையது. வேலைத் தன் திருக்கரத்தில் உடையவன் ஆதலால் எல்லோரும் அவனை வேலவன், வேலாயுதன், வெற்றிவேற் பெருமான் என்று பலவகையாக அழைக்கிறார்கள். உலகில் போர் நிகழும் காலத்தில் தான் அவன் கையில் வேல் பிடிக்கிறான் என்பது அல்ல. மக்கள் உள்ளத்தில் நாள்தோறும் போர் நடந்து கொண்டிருக்கிறது. சத்துவ குணத்துக்கும், தாமச குணத்துக்கும் நடக்கும் யுத்தத்தில் சத்துவ குணம் வெற்றிபெற வேண்டி ஞான சக்தியாகிய வேலை அவன் திருக்கரத்தில் வைத்திருக்கிறான். அதைப் போலவே வாகைப் பதாகையும் அவன் திருக்கரத்தில் உள்ளது. ஆன்மாக்கள் தூங்கித் தூங்கி விழிப்பது போல, இறந்து பிறந்து அல்லலுற்று அறியாமையில் சிக்கி இருப்பதைக் கண்டு, அவர்களுக்கு ஞான ஒளிபரப்ப முருகன் வருவான் என்ற நம்பிக்கையை ஊட்ட அது கூவுகிறது. அறியாமை இருளில் தூங்கிக் கிடக்கிற அவர்களை எழுப்புவதற்குக் கங்கணம் கட்டிக் கொண்டு கூவுகிறது. தடையற்ற சேவல் தடைப்பட்ட சேவல் என்பதற்குத் தடை உண்டாகிய சேவல் என்று பொருள் கொள்வது சரியன்று. இறைவன் கரத்தில் ஏறுவதற்கு முன்னால்தான் அந்தச் சேவல் தடையிற்பட்டு இருந்தது. எம்பெருமான் வெற்றி கொடியில் வந்த பிற்பாடு அதற்குத் தடையே இல்லை. சூரசங்காரம் ஆன பிறகு அதன் தடை நீங்கிற்று. இன்றைக்குத் தடைகள் பட்டுப் போன, ஒழிந்த, சேவலாகச் சர்வ சுதந்தரத்துடன் எம்பெருமானது வாகைப் பதாகையில் இருந்து கூவுகிறது. சிறகடிக்கும் சேவல் சேவல் எழுந்து சிறகை அடித்துக் கொண்டு எழும்புவது பறப்பதற்காக அல்ல. மற்றப் பறவைகள் சிறகை அடிக்கும்போது எழுந்து பறக்கும். ஆனால் சேவலோ சிறகை அடித்துக் கொண்டு கூவும். பொழுது புலர்வதற்கு முன்னாலே கோழி கூவும். கோழி கூவிவிட்டால் நிச்சயம் பொழுது புலர்ந்துவிடும் என்று நமக்குத் தெரியும். அது கூவுவதற்கு முன்னால் சிறகை அடிக்கிறது. எம்பெருமான் திருக்கரத்திலுள்ள கோழியும் சிறகை அடிக்கிறது. அதனை வருணிக்கிறார். சாதாரணமான கோழி சிறகை அடித்தாலேயே கீழே உள்ள தூசிகள் பறக்கும். எம்பெருமான் திருக்கரத்திலுள்ள கோழி சிறகை அடித்துக் கொள்கிறபோது என்ன ஆகிறது? உலகமே கிடுகிடாய்க்கிறது. சலதிகிழிந்து உடைபட்டது அண்ட கடாகம்; உதிர்ந்தது உடுபடலம்; இடைபட்ட குன்றமும் மாமேரு வெற்பும் இடிபட்டவே. இது எந்தப் புராணத்தில் இருக்கிறது? எந்தப் புராணத்திலும் இல்லை. தத்துவப் பொருளை உள் அடக்கிய கற்பனை விரிகிறது அருணகிரியாருக்கு. அந்தத் தத்துவத்தை இனிப் பார்ப்போம். வெற்றிக் கொடியிலே நின்று சேவல் சிறகை அடித்துக் கொள்ள, முதலில் என்ன ஆயிற்று? சலதி கிழிந்தது; கடல் கிழிந்து போயிற்றாம். அதற்குப் பிறகு என்ன ஆயிற்று? உடைபட்டது அண்ட கடாகம். பூலோகம் வட்டவடிவமானது எனப் பெரியோர்கள் கற்பனை செய்து சொல்கிறார்கள். கோழி முட்டையைப் போல ஒரு கோளவடிவமாக இருக்கிறது என்பதை வான சாஸ்திரிகளும் சொல்கிறார்கள். சின்னச் சின்ன முட்டை வடிவமான கோளங் களை உடைய பெரிய முட்டையைப் போலப் பிரபஞ்சம் இருக்கிறது. இதைத்தான் அண்டம் என்று சொல்வர். அண்டம் என்பது முட்டைக்கே ஒரு பெயர்; பிரபஞ்சத்திற்கும் பெயர். அந்தப் பிரபஞ்சத்தைச் சுற்றி மண்ணால் ஒரு சுவர் எடுத்தாற்போல அதன் எல்லை இருக்கிறது. அது கண்ணுக்குத் தெரிவது அன்று. ஆனாலும் அந்த எல்லை இருக்கிறது. அந்தப் பிரபஞ்ச எல்லையாகிய சுவர் உடைபட்டது; தூள்தூளாக விழுந்தது. பிறவிக்கடல் இவற்றின் உட்கருத்து என்ன? பிறவியைப் பெருங்கடல் என்று சொல்வது வழக்கம். ஒரு கடலுக்கும் மற்றொரு கடலுக்கும் வேறுபாடு இல்லாவிட்டாலும் அந்த அந்தப் பிராந்தியத்திலுள்ள நீர் பரப்புக்கு இந்துமகா சமுத்திரம் என்றும், பசிபிக் மகாசமுத்திரம் என்றும் வேறு பெயரிட்டு அழைக்கவில்லையா? அதைப் போலப் பிறவிப் பெருங்கடலுக்குக் கரை இல்லாவிட்டாலும் அந்த அந்தப் பிறவியைத் தனியாகப் பார்க்கிறோம். முருகப் பெருமானது கையிலுள்ள கோழி சிறகை அடித்த மாத்திரத்தில் பிறவிப் பெருங்கடல் கிழிந்துவிட்டது; பிறவித் துன்பம் இல்லையாகி விட்டது. பிரபஞ்ச வாசனை இனி வரும் பிறவி இல்லை; இப்பொழுது வந்த பிறவி என்ன ஆயிற்று? இந்தப் பிறவியில் பிரபஞ்ச சம்பந்தமே இல்லாமல் போய்விட்டது. "பிரபஞ்சம் என்னும் சேற்றைக் கழிய வழி விட்டவா" என்று ஆச்சரியப்பட்டவர் அல்லவா அருணகிரியார்? இந்தப் பிறவியில் இருந்த பற்றுக்கள் யாவும் உடைபட்டுவிட்டன. இறைவன் திருவருளினால் உலகம் தோன்றியது. எங்கும் இறைவன் மயமாகவே இருந்தும் அவனை நம்மால் காண முடியவில்லை; அதற்குக் காரணம் மாயை இருள். "பரத்தை மறைத்தது பார்முதற் பூதம் பரத்தின் மறைந்தது பார்முதற் பூதம்" என்பர் திருமூலர். இறைவனிடம் நாட்டம் இல்லாதவர்களுக்கு உலகம் பெரிய முட்டையாக வட்டமாக இருக்கும். ஆனால் ஞானம் பெற்ற ஆன்மாக்களுக்கு இறைவன் மயமாக இருக்கும். அப்பொழுது பிரபஞ்சம் என்பதன் எல்லை உடை பட்டுப் போகும்; பிரபஞ்சமே இல்லையாகும். அண்ட கடாகம் உடைபட்டது என்பது அதையே குறிக்கிறது. இறைவன் திருவருள் அநுபவம் உண்டாவதற்கு முன்னாலே மனப் பக்குவமடைந்து வருகின்றது என்பதற்கான அடையாளங்களாக இவை இருக்கின்றன. இறைவன் திருக்கரத்திலுள்ள கோழி சிறகை அடித்துக் கொண்டாலோ போதும்; பிறவிக் கடல் கிழிந்து போய்விடும்; இனி வருகின்ற பிறவிகள் இல்லை. அது மாத்திரமா? எடுத்த பிறவியிலும் பிரபஞ்ச திருஷ்டி போய்விடும். அதற்கப்பால் என்ன நிகழும்? தேவலோக இன்பம் உதிர்ந்தது உடுபடலம் உடு என்பது நட்சத்திரம். படலம்-பரப்பு. நட்சத்திரப் பரப்பு முழுவதும் உதிர்ந்ததாம். வரப்போகின்ற பிறவிகள் எல்லாம் கிழிந்துவிட்டன; இந்தப் பிறவியிலும் பிரபஞ்ச வாசனை உடைபட்டுப் போய்விட்டது என்ற கருத்தை முன் நிகழ்ச்சிகள் காட்டின. மேலே இருக்கிற நட்சத்திரப் படலங்கள் உதிர்ந்தன என்பதன் மூலம், தேவலோக வாழ்க்கையாகிய சொர்க்க இன்பம் இந்தப் பிறவியில் நான் செய்கின்ற புண்ணியங்களின் விளைவாக ஏற்படும் என்ற ஆசையும் உதிர்ந்தது என்னும் கருத்துக் குறிப்பாகப் பெறப்படும். புண்ணியம் செய்வதனாலே தேவலோகம் கிடைக்கும் எனச் சாதாரண மக்கள் அதனை விரும்பலாம். ஞானிகளுக்கு அதனால் ஒன்றும் பயன் இல்லை. அந்த நிலையையும் விட மேலான ஒரு நிலை இருக்கிறது. அதுவே வீடு. "வானோர்க்கு உயர்ந்த உலகம்" என்று இதனை வள்ளுவர் சொல்கிறார். உண்மையான அருள் இன்பம் பெற்ற ஜீவன் முக்தர்களுக்குக் கிடைக்கின்ற நிலை இது. ஆகவே ஞானிகளுக்குத் தேவலோகத்தினால் பயன் இல்லை. உதிர்ந்தது உடுபடலம் என்பது; இந்தத் தேவலோக இன்பங்களும் பயனின்றி உதிர்ந்தன என்பதை உணர்த்துகிறது. கோழி இறக்கையை அடித்துக் கொண்ட மாத்திரத்தில் பிறவிக் கடல் கிழிந்து போய்விட்டது; இந்தப் பிறவியில் உண்டான பிரபஞ்ச வாசனையும் உடைந்து போய்விட்டது, இனி இறந்தபின் கிடைக்குமென்ற தேவலோக இன்ப வாழ்க்கையும் உதிர்ந்து போய்விட்டது. இனி அடுத்தது என்ன? அகங்கார மமகாரங்கள் இடைபட்ட குன்றமும் மாமேரு வெற்பும் இடிபட்டவே. ஒரு பெரிய மலை; அந்த மலையைச் சுற்றிப் பல குன்றுகள் இருக்கின்றன. இவ்வளவு மலைகள் இருப்பதனாலே இவற்றுக்கு நடுவில் தம்பமாக இருக்கிற மலை மிக வலிவு உள்ளதாகத்தானே இருக்கும்? மிக வலியைப் படைத்த ஒன்றுதான் கடைசியில் அழிந்து போகும். மகா மேரு மலை கிடு கிடுப்பதற்கு முன்னால் இடையிலுள்ள குன்றங்கள் எல்லாம் இடிபட்டன. கடைசியில் மாமேரு வெற்பும் இடிபட்டது. இதன் பொருளையும் சற்றே பார்க்கலாம். அகங்காரமானது, மமகாரத்தைச் சுற்றிலும் பெற்று, மிக்க வலிவுடையதாக, தம்பமாக, நிற்கிறது; மேருவைப் போல நிற்கிறது. இந்த அகங்காரம் என்ற ஒன்று, நான், நான் என்ற குரலை எழுப்பி இந்த உலகத்தில் பிறவிப் பிணியில் சிக்க வைக்கிறது. நான் என்ற ஒன்றைச் சுற்றி எனது என்ற மமகாரம் விரிந்து கொண்டே போகிறது. நான் என்பது அகப்பற்று. எனது என்பது புறப்பற்று. நான் என்பது மனிதன். எனது என்பது மனிதனோடு சம்பந்தப்பட்ட, பிணைக்கப்பட்ட, மற்ற எல்லாம். நான் என்ற தம்பம் ஒன்று. எனது என்ற குன்றுகள் பல. நான் என்ற புள்ளியை மையமாகக் கொண்டு எனது என்ற வட்டம் விரிந்து கொண்டே போகிறது. இவை எல்லாம் நாம் போக வேண்டிய மார்க்கத்தில் தடையாக இருக்கின்றன. நாம் இறைவனை நோக்கிய நெறியில் செல்லவேண்டும். அதற்குத் தடையாக இருப்பவை பிறவிக் கடல், இந்தப் பிரபஞ்ச வாசனை, தேவலோக இன்பம். இவை மூன்றும் முதலில் அற்றுப் போக வேண்டும். இவற்றுக்கும் மேலாக மமகாரம், அகங்காரம் என்பவை இருக்கின்றன. ஒரு பெரிய காற்று அடிக்கும்போது முதலில் ஆலிலைப் பழுப்புக்கள் உதிர்கின்றன. அப்புறம் வீட்டின் கூரைகள் பறக்கின்றன. கடைசியில் வீடே இடிந்து விழுகிறது. அதுபோல இறைவன் திருக்கரத்திலுள்ள கோழி சிறகை அடித்துக் கொண்ட மாத்திரத்தில் பிறவிக் கடல் கிழிகிறது; பிரபஞ்ச வாசனை அற்றுப் போகிறது; தேவலோக இன்பப் பற்று உதிர்ந்து போகிறது. எனது எனது என்ற மமகாரங்களாகிய குன்றுகள் இடிபடுகின்றன. பிறகு, எனது என்ற மமகாரக் குன்றுகளுக்கு எல்லாம் மையமாக இருக்கிற நான் என்ற அகங்கார மேருவும் இடிபடுகிறது. அதுவே கடைசியில் இடிகிறது. ஞான உதயம் நம்மை நல்ல வழிக்குக் கொண்டு வர வேண்டுமென்பதற்காகச் சேவற் கொடியை உயர்த்திப் பிடித்துக் கொண்டிருக்கிறான் எம்பெருமான். அது நமக்குச் சாதன அருளாக நிற்கின்றது. அறியாமை இருளில் தூங்கிக் கொண்டிருக்கிற ஆன்மாக்களுக்கு, ஞான சூரியனது உதயத்தை அறிவிப்பதற்காக அந்தக் கொடியிலுள்ள கோழிக் கூவுகிறது. அது கூவுவதற்கு முன்னே சிறகை அடித்துக் கொள்கிறது. சிறகை அடித்துக் கொள்ளும்போதே ஆன்மாக்களுக்கு மனப் பக்குவம் ஏற்பட்டுவிடுகிறது. கூவினால் இன்பம் பொங்கும். அது சிறகை அடித்துக்கொள்ளும் போது ஆன்மாக்களுடைய பிறவி ஒழிய, பிரபஞ்ச வாசனை போக, தேவலோக இன்பம் என்ற பற்று நீங்க, மமகாரம், அகங்காரம் எல்லாம் அழிந்து போகின்றன. அவை போகும் போது ஞானம் தோன்றுகிறது; இன்பம் உண்டாகிறது. எம்பெருமான் திருவருளைப் பெற்று இன்பநலங்களைத் துய்க்க வேண்டுமானால் அதற்கு எற்ற மனப்பக்குவம் முதலில் நமக்கு வர வேண்டும். அந்தப் பக்குவம் சாதன அருளால் வரும்; அதனை ஏற்படுத்துவதற்காக அவன் திருக்கரத்தில் சேவல் கொடி இருக்கிறது. முதலில் அந்தக் கொடிக்கு ஒரு கும்பிடு போட வேண்டும். படைபட்ட வேலவன் பால்வந்த வாகைப் பதாகைஎன்னும் தடைபட்ட சேவல் சிறகடிக் கொள்ளச் சலதிகிழிந்து உடைபட்டது அண்ட கடாகம்; உதிர்ந்தது உடுபடலம்; இடைபட்ட குன்றமும் மாமேரு வெற்பும் இடிபட்டவே. (ஆயுதமாக அமைந்த வேலையுடைய முருகனிடம் வந்த வெற்றியையுடைய கொடி என்று பலரும் பாராட்டும், தடை அழிந்த சேவலானது, தன் சிறகை அடித்துக் கொள்ள, அதனால் கடல் கிழிய, அண்டச் சுவர் உடைபட்டது; நட்சத்திரப் படலம் உதிர்ந்தது; நடுவில் உள்ள மலைகளும் மகாமேரு கிரியும் இடிபட்டன. படைபட்ட - ஆயுதமாக உண்டான, படையாக அமைந்த. சூர சங்காரத்துக்குப் பின் அவன் கையில் வந்து அமர்ந்தமையின் 'வந்த' என்றார். வாகை - வெற்றி; ஆகுபெயர். பதாகை - கொடி. தடைபட்ட - தடைகள் அழிந்த, அடிக் கொள்ள - அடிக்க. சலதி - கடல். அண்டகடாகம் - பிரபஞ்சப் பரப்பு. உடுபடலம் - நட்சத்திரப் பரப்பு. இடைபட்ட - நடுவிலே உள்ள.) முன் பாட்டில் மயிலின் வேகத்தினால் மேரு அசைய எண்திசை வரைகளும் தூள்பட்டனவென்று பாடினார். இந்தப் பாட்டிலும் அந்த இரண்டும் பட்ட பாட்டைச் சொன்னார். கிங்கிணி ஓசை 1 குழந்தைப் பருவம் முருகனுடைய திருவிளையாடல்களை அழகுபடச் சொல்லி வரும் அருணகிரிநாதர், அவனுடைய குழந்தைப் பருவச்செயல்களைச் சொன்னார். பிள்ளைப் பருவத்தைப் பாராட்டும் ஒருவகைப் பிரபந்தத்துக்குப் பிள்ளைத் தமிழ் என்று பெயர். காப்புப் பருவம், தாலப்பருவம், செங்கீரைப் பருவம், சப்பாணிப் பருவம், முத்தப் பருவம், வருகைப் பருவம், அம்புலிப் பருவம், சிற்றில் பருவம், சிறுபறைப் பருவம், சிறுதேர்ப் பருவம் என்று பத்துப் பருவங்களாகப் பிரித்து ஒவ்வொரு பருவத்தையும் சிறப்பித்துப் பாடுவார் புலவர். அருணகிரியார் தனியே பிள்ளைத் தமிழ் என்று பெயர் வைத்து ஒன்றும் பாடவில்லை. ஆனாலும் பிள்ளைப் பருவ வருணனைகளை அவர் பாடலிற் காணலாம். பெரியாழ்வார் கண்ணபிரான் உடைய பால லீலைகளைப் பாடியிருக்கிறார். பிள்ளைத்தமிழ் என்று பெயரிட்டுச் சொல்லாவிட்டாலும் பிள்ளைப் பருவத்தைப் பற்றிய தமிழ்ப்பாடல்கள் அவை. அப்படியே முருகனுடைய பிள்ளைப் பருவத் திருவிளையாடல்களை அருணகிரிநாதர் அங்கங்கே சொல்லியிருக்கிறார். உமா தேவியாரின் பாலை அருந்திச் சரவணப் பொய்கையில் உள்ள தாமரையாகிய தொட்டிலில் ஏறித் துயின்றதையும், அழுததையும் "திருந்தப் புனவங்கள்" என்ற பாட்டில் வருணித்தார். தாலப் பருவத்துச் செயல்கள் அவை. துயிலுகின்ற முருகக் குழந்தை விழித்துக் கொண்டு காலை உதைத்து விளையாடுகிறது. அதன் உடம்பு அசைகிறது. அப்போது அதன் இடையிலுள்ள சலங்கை குலுங்குகிறது. அந்த ஒசையினால் என்ன என்ன விளைந்தன என்று இந்தப் பாட்டில் அருணகிரி நாதர் சொல்கிறார். சோமாஸ்கங்தர் குழந்தை முருகனுடைய விளையாட்டை நினைக்கிறார். அம்பிகையின் குழந்தை அவன். அந்த அம்பிகை பரம சிவனுடைய மனைவி. சிவனும் சக்தியும் சேர்ந்து நிற்கிற கோலம் அர்த்த நாரீசுவரக்கோலம். இருவரும் இணைந்த மூர்த்தி அது. சிவம், சக்தி, முருகன் மூவரும் இணைந்த கோலம் ஒன்று உண்டு. மாகேசுவர மூர்த்தங்கள் என்று சிவபிரானுக்குரிய திருக் கோலங்கள் இருபத்தைந்தைத் தனியே வரிசைப்படுத்திப் புராணங்கள் கூறும். அந்த இருபத்தைந்தில் சோமாஸ்கந்த மூர்த்தமும் ஒன்று. அம்மை, அப்பன், சேய் என்ற மூவரும் ஒருவராய மூர்த்தி அது. உமாதேவியாரோடும் கந்தனோடும் இணைந்தவனாகச் சிவபெருமான் இருக்கும் கோலம் சிறந்தது. ஒவ்வொரு கோயிலிலும் சோமாஸ்கந்த மூர்த்தியைக் காணலாம். வலப்பக்கத்தில் பரமசிவனும் இடப்பக்கத்தில் அம்பிகையும் இடையில் முருகனும் காட்சி தரும் அந்த இணைப்புக் கோலத்தை நாயகர் என்று சொல்வார்கள். திருவாரூரில் தலைமை பெற்று எழுந்தருளியிருக்கும் தியாகராஜர் சோமாஸ்கந்தரே. ஆலயங்களில் நித்திய பூஜை நடக்கின்றது. அதில் நேரும் குறைபாடுகளுக்குப் பரிகாரமாக நைமித்திகமாகிய விழாக்கள் நடைபெறுகின்றன. ஆலயத்தின் பெருமை விழாக்களால் மிகுதியாகிறது; பயனும் மிகுதியாகிறது. விழாவைச் சிறப்பு என்று சொல்வார்கள். 'சிறப்பொடு பூசனை செல்லாது, வானம் வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு' என்று திருவள்ளுவர் நைமித்திகமாகிய விழாவைச் சிறப்பென்று குறிக்கிறார். விழாக்களுக்குள் சிறந்தது திருத்தேர் விழா அதைப் பிரம்மோற்சவம் என்பர். அதைப் பாராட்டி உலா என்ற பிரபந்தத்தைப் புலவர்கள் பாடியிருக்கிறார்கள். இவ்வளவு சிறப்புடைய பிரம்மோற்சவத்தில் திருத்தேரில் எழுந்தருளும் மூர்த்தி யார் தெரியுமா? சோமாஸ்கந்த மூர்த்தி தான். உலகத்தாருடைய பாவத்தைப் போக்கி அருளை வழங்க இறைவன் குடும்பத்தோடே எழுந்தருளி வருகிறான். அப்பர் சுவாமிகள் இந்தக் குடும்பத்தைப் பாராட்டுகிறார். அம்மையும் அப்பனும் பிள்ளையுமாக இருக்கும் தெய்வக் குடும்பத்தை அவர் பாராட்டும் முறை அவர் சிவ பக்தர் என்பதைக் காட்டுகிறது. "நன்க டம்பனைப் பெற்றவள் பங்கினன்" என்று சொல்கிறார். நன்கடம்பனாகிய முருகன் குழந்தை; அவனைப் பெற்றவள் உமாதேவி; அவளைப் பங்கில் உடையவன் சிவபெருமான். குழந்தை, மனைவி இருவரையும் சொல்லிக் குடும்பத் தலைவனையும் சொல்கிறார். மற்ற இருவர்களையும் குடும்பத் தலைவனோடு சார்த்திச் சொல்கிறார். குடும்பத் தலைவனைப் பாடும் பணியை உடையவர் அவர். அருணிகிரிநாதர் முருகனைப் புகழ்கிறவர். அவனையே முக்கியமாக வைத்துப் பேசுகிறார். முருகன், அவன் தாய், அவள் கணவர் என்ற வரிசையில் கடைசியில் சிவபெருமானிடம் வந்து முடிக்கிறவர் அப்பர். அருணகிரிநாதரோ சிவன், அவன் தலைவி, அவள் குமாரன் என்ற வரிசையில் மூவரையும் வைத்துக் கடைசியில் குமாரனிடம் வந்து முடிக்கிறார். ஒருவரைப் பங்கில் உடையாள் குமாரன் தமக்குச் சமானமே இல்லாதவர் சிவபெருமான், ஒருவர். அவரைத் தம் பங்கில் வைத்துக் கொண்டிருப்பவள் உமாதேவி. அவள் குமாரன் முருகன். அவனைப் பற்றிச் சொல்லப் போகிறார். தாயின் சார்பு இங்கே ஒரு புதுமையைக் காண்கிறோம். அப்பர் சுவாமிகள், "பெற்றவள் பங்கினன்" என்றார். உமாதேவியை ஒரு பாகத்தில் உடையவன் என்று சொல்வதே பெருவழக்கு. அர்த்தநாரீசுவரன் என்ற அந்தக் கோலத்திலுள்ள இறைவனுக்குப் பெயர். அருணகிரிநாதர் அர்த்தநாரீசுவரனைச் சொல்லவில்லை; அர்த்தேசுவர நாரியைச் சொல்கிறார். இறைவனைத் தன் பாகத்திலே கொண்டவள் உமாதேவி என்று அம்பிகைக்குத் தலைமை கொடுத்துச் சொல்கிறார். குழந்தையாகிய முருகன் கட்சியைச் சேர்ந்தவர் அருணகிரியார். குழந்தைக்கு அம்மா, அப்பா இருவரிடமும் அன்பு உண்டு. ஆனால் அம்மாவிடம் ஒரு மாற்று அதிகமாகவே இருக்கும். குழந்தை அம்மாவை உணர்ந்து, பிறகே அப்பாவை உணர்கிறது. தாயினிடம் ஒட்டிக் கொண்டுள்ள குழந்தைக்கு அம்மா, அப்பாவின் மனைவி அல்ல; அப்பாதான் அம்மாவின் கணவர். உலகத்தாருக்கு அவருடைய மனைவி அவள். ஆனால் குழந்தைக்கு அவளுடைய கணவர் அவர். அவளுக்குத்தான் தலைமை. அவள் உடையவள்; அவன் உடைமைப் பொருள். அம்மாவுக்கு பெருமை தரும் குழந்தையின் கட்சியைச் சார்ந்த அருணகிரிநாதரும் அந்த அன்னைக்கே சிறப்புக் கூறுகிறார். "த்ரிபுராந் தகனைத் த்ரியம்பகனைப் பாகத்தில் வைக்கும் பரமகல் யாணி" என்று பின்பும் சொல்வார். அப்பைய தீட்சிதர் என்ற பெரிய வடமொழி வித்துவான் ஒருவர் இருந்தார். அவர் சிறந்த சிவபக்தர். பல நூல்களின் ஆசிரியர். மன்னர்களாலும் மக்களாலும் நன்கு மதிக்கப் பெறுபவர். அவருடைய மனைவியின் பெயர் ராஜம். அந்த அம்மை பிறந்த வீட்டிலும் ஊரிலும் அவளை ஆச்சா என்றே அழைத்து வந்தார்கள். ஒருநாள் அப்பைய தீட்சிதர் தம் மாமனார் ஊருக்குப் போய் இருந்தார். அவரைக் கண்ட ஊர்ப் பெண்கள், “அதோ ஆச்சா புருஷர் போகிறார் பாருங்களடி" என்று பேசிக் கொண்டார்கள். அது அவர் காதில் பட்டது. அவரை நேரே சுட்டி இன்னார் என்று அவர்கள் சொல்லவில்லை. நாட்டில் பலரும் புகழும் கவிஞராய், சாஸ்திர வல்லுநராய், நூலாசிரியராய் விளங்கிப் அவருடைய பெருமைகளில் ஒன்றைக்கூடச் சுட்டவில்லை. அவர் பெயரைக்கூடச் சொல்லவில்லை. ஆச்சாவோடு சார்த்திச் சொன்னார்கள். அவர்களுக்கு ஆச்சாவைத்தான் தெரியும். க.சொ.1-23 இதைக் கேட்ட அப்பைய தீட்சிதர், "அஸ்மிந் கிராமே ஆச்சா பிரஸித்தா" என்றாராம். "என் மனைவியின் ஊரில் ஆச்சாதான் பிரசித்தமானவள்" என்பது பொருள். அதுபோல இங்கே அம்மாவின் ராஜ்யம் நடக்கிறது. ஆதலால் அம்மாவுக்குத்தான் சிறப்பு. 'ஒருத்தியைப் பங்கில் உடையான் குமாரன்' என்று சொல்லாமல் ஒருவரைப் பங்கில் உடையாள் குமாரன் என்று பாடினார் அருணகிரியார். 2 கிங்கிணி ஓசை முருகன் திருவவதாரம் செய்தபோது பாலை விரும்பி அழுதானென்றும், அந்த அழுகையைக் கேட்ட அசுரரும் பிறரும் தாம் வாழ்வைக் குலைப்பவன் பிறந்துவிட்டான் என்று அழுதார்கள் என்றும் முன்பு ஒரு பாட்டில் அவர் சொன்னார். இப்போது அந்தக் குழந்தை ஆடி அசைகையில் அவன் இடுப்பில் கட்டிய கிங்கிணியோசையைக் கேட்டு நடுங்கினார்கள் என்று சொல்ல வருகிறார். குழந்தை இடையில் அணியும் ஆபரணங்களில் உடை மணி என்பது ஒன்று. முருகன் திருவரையிலும் அது இருக்கிறது. அதையன்றிச் சலங்கையும் அணிந்திருக்கிறான். குழந்தை தொட்டிலிற் புரளும்போதும் உட்காரும்போதும் ஆடும்போதும் நடக்க முயலும்போதும் அந்தச் சலங்கை ஜல் ஜல் என்று ஒலி செய்கிறது. அது எங்கும் கேட்கிறது. ஒருவரைப் பங்கில் உடையாள் குமாரன் உடைமணிசேர் திருவரைக் கிங்கிணிஓசை பட முன்பு குழந்தையின் அழுகையைக் கேட்டு நெஞ்சம் துணுக்குற்ற அசுரர்கள், "அந்தக் குழந்தை வளருகிறதா?" என்று விசாரித்துக் கொண்டே இருந்தார்கள். அப்படியே மறைந்த போனால் நல்லது என்பது அவர்களுடைய ஆசை. ஆனால் அது நடக்கிற காரியமா? அசுரர் நிலை அவனுடன் சம்பந்தப்பட்டவர்கள் வருகிறார்களா, அவன் ஏதாவது குரல் எழுப்புகிறானா என்று கண்ணையும் காதையும் தீட்டிச் கொண்டு காத்திருந்தார்கள். சில காலம் ஒன்றும் காணவில்லை. "சரி, வெறும் அழுகையோடு போயிற்று; நாம் பயந்தது வீண்" என்று எண்ணித் தங்கள் காரியத்தில் ஈடுபட்டார்கள். அப்போது திடீரென்று முருகனுடைய திருவரைக் கிங்கிணி யோசை கேட்டது. பசியுடையவனுக்கு சர்க்கரைப் பொங்கலைக் கண்டால் நாவில் நீர் ஊறுகிறது. வயிற்றுவலிக்காரனுக்கு அருவருப்பாக இருக்கிறது. முருகக் குழந்தையின் சலங்கையொலி நல்லவர்களுக்கு இனிதாகவும் பொல்லாதவர்களுக்குக் கடுமையாகவும் கேட்கிறது. இயற்கையில் அது இனிய ஒலிதான். ஆனால் பிறர் தொல்லையுறுவதனால் இன்பம் அடையும் அசுரர்களுக்கு அந்த ஓசை இனியதாக இல்லை. ஒசை மேலே தவறா? அதனால் உண்டாகும் நினைவுக் கோவைதான் அவர்களுக்கு அவ்வொலியினிடம் வெறுப்பை உண்டாக்குகிறது. தம்மை அழிக்கப் போகிறவன் வளர்கிறான், இனிமேல் நம்மிடம் வந்து நம் இன்ப வாழ்வைக் குலைப்பான் என்ற எண்ணம் அந்த ஒலியால் தோன்றுகிறது. அப்போது அதன் இனிமையை உணர இயலுமா? குழந்தையானாலும் தெய்விகக் குழந்தை. அதன் செயல் ஒவ்வொன்றிலும் தெய்வத்திறல் இருக்கும். முருகக் குழந்தையின் திருவரைக் கிங்கிணியோசை அசுரர்களின் காதை எட்டுகிறது. அவ்வளவு வலிமை உடையதாக இருக்கிறது. அதைக் கேட்டு அசுரர்கள் திடுக்கிடுகிறார்கள்; நம் வாழ்வுக்கு இறுதி வரும்போல இருக்கிறதே என்று அஞ்சுகிறார்கள். திருவரைக் கிங்கிணி ஓசை படத்திடுக் கிட்டு அரக்கர் வெருவர. திக்குச் செவிடுபடல் கிங்கிணி ஒசையினால் உண்டான விளைவு அதனோடு நிற்கவில்லை. அவ்வொலி திக்கு முழுவதும் சென்று பரவுகிறது. முன்பெல்லாம் திக்குப் பாலகர்கள் திக்குகளைக் காத்துக் கொண்டிருந்தார்கள். அப்போது சுரராஜ்யம் நடந்து கொண்டிருந்தது. இப்போது அசுரராஜ்யம் அல்லவா நடக்கிறது? சூரபன்மனுடைய அரசாட்சியில் முக்கியமான பதவிகளில் எல்லாம் அவன் தன் துணைவர்களையே வைத்திருக்கிறான். திக்குகளில் அவனுடைய படைவீரர்கள் இருக்கிறார்கள். அங்கெல்லாம் சென்று மோதுகிறது கிங்கிணி ஓசை. திக்குச் செவிடுபட்டுப் போகும்படி அந்த ஒலி பரவுகிறது. திக்குச் செவிடுபட்டு மலைகள் அதிர்தல் மேருமலை நடுவில் நிற்க எட்டுப் பெருமலைகள் சுற்றிலும் நிற்கின்றன. இந்த ஒலி அவற்றையும் அதிரச் செய்கிறது. ஒலியின் சிறப்பையும் வேகத்தின் கடுமையையும் அளவுகாட்ட, மேருவையும் எட்டு மலைகளையும் அவை நடுங்க வைத்தன என்று சொல்வது அருணகிரிநாதருக்கு வழக்கமாகிவிட்டது. மயில் நடக்கும்போது அதன் பீலிக் காற்றுப் பட்டதும், "அசைந்தது மேரு; அடியிட எண் திசைவரை தூள்பட்ட" என்று பாடினார். சேவல் சிறகை அடித்துக் கொண்ட போது என்ன நிகழ்ந்தது? "இடைபட்ட குன்றமும் மாமேரு வெற்பும் இடிபட்டவே" என்று அவர் பாடுகிறார். அந்தக் காற்றின் கடுமையை இந்த நிகழ்ச்சியினால் உணரும்படி செய்கிறார். 'அணுகுண்டு வெடித்தது; அதன் ஆற்றல் இத்தகையது' என்று சொல்ல வருகிறவர்கள் அதனால் விளைந்த விளைவையே சொல்கிறார்கள். ஒரு கணத்தில் மூன்று லக்ஷம் பேர்கள் இறந்தார்கள் என்கின்றார்கள். அது போலவே அருணகிரிநாதரும் விளைவைக் கண்டு நிகழ்ச்சியையும் அதற்குக் காரணமான பொருளையும் சிறப்பிக்கிறார். கிங்கிணி ஓசை பகைவரை நடுங்கச் செய்தது; திக்குச் செவிடு படும்படி செய்தது; எட்டு மலைகளையும், கனகக் குன்றாகிய மேரு மலையையும் அதிரச் செய்தது. எட்டுவெற் பும்கனகப் பருவரைக் குன்றும் அதிர்ந்தன. அந்த வெற்பு ஒவ்வொன்றிலும் சூரபன்மனுடைய ஆட்கள் இருந்தார்கள். சுரர்கள் வாழும் ஆலயமாக இருந்த மேரு இப்போது அசுராலயமாயிற்று. ஆட்சியை மேற்கொள்கிறவன் முக்கியமான நகரங்களையும் கோட்டைகளையும் கைப்பற்றிக் கொண்டு, அங்கங்கே நம்பிக்கையுள்ள அதிகாரிகளை வைப்பது வழக்கந்தானே? சூரனும் அப்படியே செய்தான். எங்கே பார்த்தாலும் தன்னுடைய தளபதிகளையே வைத்தான். முருகன் முன் அறிவிப்பு இல்லாமல் தண்டிக்கிறவன் அல்ல. 'நம் அழுகையைக் கேட்டுத் திருந்தாத அசுரர்கள் இந்த ஒலியைக் கேட்டாவது தம் கொடிய செயலிலிருந்து நீங்கட்டும்’ என்பது அவன் திருவுள்ளம். அதனால் அசுரர்கள் இருக்கும் இடங்களுக்கெல்லாம் பரவித் தன் கிண்கிணியோசை கேட்கும்படி செய்தான். இந்த ஒலி அவர்களை நடுங்கச் செய்தது. அவர்கள் வாழும் இடங்களை அதிரச் செய்தது. அவர்கள் அதைக் கேட்டுத் திருந்தினார்களா? அதுதான் இல்லை. சில நேரம் அந்த அச்சம் இருந்தது. பிறகு பழையபடி தம்முடைய காரியங்களை மேற்கொண்டார்கள். வைராக்கிய வகை நாமும் இந்த நிலையில்தான் இருக்கிறோம். 'இந்த உலகம் நிலையாது; வாழ்க்கை நிலையாது; நாமும் ஒருநாள் இறந்து படுவோம்; காலன் வந்து நம்மைக் கட்டி இழுத்துப் போவான்' என்ற நினைவு நமக்கு உண்டாகும்படியான நிகழ்ச்சிகள் நடக்கின்றன. யாரேனும் இறந்தால் இந்த நினைவு எழுகிறது; அச்சம் உண்டாகிறது. யாரேனும் பெரியவர் உலகத்தின் உண்மையை எடுத்துச் சொல்லிச் சொற்பொழிவு ஆற்றும்போது நமக்கு நினைவு உண்டாகிறது; அஞ்சுகிறோம். 'இனி, போகிற வழிக்குப் புண்ணியம் தேடவேண்டும்' என்ற எண்ணங்கூட உண்டாகிறது. ஆனால் அது சில நிமிஷங்களிலே மறைந்து விடுகிறது. இந்த இரண்டுவிதமான நிகழ்ச்சிகளிலும் உண்டாகிற உணர்ச்சியை ஸ்மசான வைராக்கியம், புராண வைராக்கியம் என்று சொல்லுவார்கள். இந்த வரிசையில் மற்றொன்றும் உண்டு. அதைப் பிரசவ வைராக்கியம் என்று சொல்லுவார்கள். குழந்தையைப் பெறும்போது உண்டாகும் வேதனையைப் பொறுக்க முடியாத தாய், இனித் தன் மணாளனோடு இன்புறக் கூடாது என்று தீர்மானம் செய்து கொள்கிறாள். ஆனால் குழந்தையின் முகத்தைப் பார்த்தவுடன் அந்த வேதனை மறந்து போய்விடுகிறது. இன்னும் ஒரு வைராக்கியம் உண்டு. அது நாயின் வாழ்க்கை யோடு சம்பந்தம் உடையது. நாய், "இனிமேல் நாம் எச்சில் இலையைத் தொடவே கூடாது" என்று முடிவு செய்து கொண்டு குப்பை மேட்டில் படுத்திருக்குமாம். சொத் என்று எங்கேனும் எச்சில் இலை விழுகிற ஒலி காதில் பட்டால் இந்த எண்ணத்தை மறந்து உடம்பை உதறிக் கொண்டு புறப்பட்டுவிடுமாம். இதைச் சுவான வைராக்கியம் என்று சொல்வது வழக்கம். ஒரு கணத்துக்கு நிற்கிற வைராக்கியங்கள் இவை. அசுர இயல்பு மனிதனிடம் இருக்கும் இந்த இயல்பு அசுரர்களிடமும் இருக்கிறது. அப்படிச் சொல்வதைவிட அசுரர்களிடம் உள்ள நிலையற்ற தெளிவு மனிதனிடம் இருக்கிறது என்று சொல்லலாம். ஒவ்வொரு மனிதனிடமும் அசுர இயல்பும் தேவ இயல்பும் கலந்தே இருக்கின்றன. அசுர இயல்புகளைக் கொஞ்சங் கொஞ்சமாகப் போக்கிக் கொண்டு வந்தால் நன்மை உண்டாகும். முருகன் அழுகையொலி கேட்டுப் புலம்பிய அசுரர்கள் அன்றோடு அந்த அச்சத்தை மறந்து போனார்கள். மறுபடியும் எச்சரிக்கை செய்வதுபோல முருகன் கிங்கிணியொலியை எழுப்பினான். அப்போதைக்கு அவர்கள் அஞ்சினார்கள். அவ்வளவுதான். தேவர் மகிழ்ச்சி இறைவனுடைய கிங்கிணி ஓசையைக் கேட்டு அஞ்சினவர்களும் நடுங்கினவர்களும் இருக்கட்டும். யாரேனும் அதைக் கேட்டு மகிழ்ந்தார்களா? அசுரர்களுடைய அச்சத்தில் மகிழ்ச்சியும் முருகனுடைய அவதாரத்தில் தைரியமும் அடைபவர்கள் தேவர்கள். அவர்கள், "நம்மைக் காப்பாற்ற வந்த பெருமான் குழந்தைத் திருவிளையாடல்களைச் செய்து கொண்டு வளர்கிறான்" என்று எண்ணி மகிழும்படி அந்தக் கிங்கிணியோசை செய்தது. இந்தச் சூரபன்மனுடைய கொடிய ஆட்சியைப் போக்க இயலாமல், நாம் நம் இன்ப வாழ்வை இழந்து திண்டாடுகிறோமே! இனியும் நமக்கு எந்த நிலை வருமோ என்று அஞ்சிக் குலைந்து கொண்டிருந்த தேவர்களுக்கு இப்போது அந்த அச்சம் போய் விட்டது; நம்பிக்கை உதயமாயிற்று.    தேவர் பயம் கெட்டதே. சூரியன் வானத்தில் தோன்றும்போது மக்கள் துயிலுணர்ந்து எழுந்து சுறுசுறுப்போடு வேலை செய்யப் புகுகிறார்கள். பறவைகள் சிறகையடித்துக்கொண்டு பறக்கின்றன. தாமரை மலர்கள் மலர்கின்றன. ஆனால் எலும்பில்லாத புழுக்கள் இறக்கின்றன. குவளை கூம்புகிறது. ஆந்தை அஞ்சுகிறது. அவை தம் இயல்புக்கு ஏற்ற பயனை அடைகின்றன. அவ்வண்ணமே, இங்கே முருகன் திரு வரைக் கிண்கிணி ஓசையைக் கேட்டுத் தேவர்களும் அவர்களைச் சார்ந்தவர்களும் முக மலர்ச்சி பெறுகிறார்கள். அதுகாறும் தாம் பெற்றிருந்த அச்சத்தை உதறுகிறார்கள். ஆனால் அசுரர்களோ வாட்டமுறுகிறார்கள். அதுகாறும் அவர்கள் அறியாத அச்சமும் நடுக்கமும் அவர்கள் பால் உண்டாகின்றன. முருகன் பராக்கிரமம் முருகன் கிங்கிணி ஒசையின் இனிமையை அருணகிரிநாதர் இங்கே சொல்லவில்லை. எல்லாக் குழந்தைகளின் கிண் கிணிக்கும் அந்த இனிமை உண்டு. அது கிங்கிணியின் இயல்பேயன்றி, குழந்தையின் பெருமை அன்று. முருகன் திருவரைக் கிங்கிணி ஒசையினால் விளையும் விளைவுகள் அந்தக் கிங்கிணியால் விளைந்தவை அல்ல. முருகனால் விளைந்தவை. கிங்கிணி முருகன் அணிந்ததாக இருப்பதனால் இத்தகைய நிகழ்ச்சிகள் நடந்தன. ஆதலின் கிங்கிணியைப் புகழும் முகத்தால் முருகனுடைய பராக்கிரமத்தையே அருணகிரிநாதர் எடுத்துக் காட்டுகிறார்.    ஒருவரைப் பங்கில் உடையாள்      குமாரன் உடைமணிசேர்    திருவரைக் கிங்கிணி ஓசை      படத்திடுக் கிட்டரக்கர்    வெருவரத் திக்குச் செவிடுபட்       டெட்டுவெற் பும்கனகப்    பருவரைக் குன்றும் அதிர்ந்தன       தேவர் பயம்கெட்டதே. (ஒப்பற்றவராகிய சிவபெருமானைத் தன்னுடைய வலப்பாகத்தில் உடைய உமாதேவியின் குமாரனாகிய முருகனது உடைமணியென்னும் அணி அணிந்த அழகிய இடையில் கட்டிய கிங்கிணியின் ஒசை காதிலே பட, அசுரர் திடுக்கிட்டு அஞ்ச, திசைகள் செவிடுபட்டு எட்டு மலைகளும் பொன்னாலான பெரிய சாரலையுடைய மேருமலையும் அதிர்ந்தன; தேவர்களின் பயம் அழிந்தது. ஒருவர் - ஒப்பற்றவர். உடையாள் - உமாதேவி. உடைமணி - இடையில் அணியும் ஒருவகை ஆபரணம். அரை - இடை. அரக்கர் - ராட்சதர்; இங்கே அசுரரைக் குறித்தது. வெருவர-அஞ்ச. கனகம் - பொன். வரை - மலைப்பக்கம்.) * * * கி.வா.ஜ. அவர்களுக்கு சிறு வயதிலேயே தமிழ் இலக்கியங்கள் மீது பற்று ஏற்பட்டது. டாக்டர் உ.வே. சுவாமிநாதையர் அவர்களுயை தலை மாணாக்கராக இருந்து தமிழ் பயின்று, அவர்களது அருந்தமிழ் பணிக்கும் துணை நின்று, 'கலைமகள்' மாதப் பத்திரிகையின் ஆசிரியராக ஐம்பதாண்டுகளுக்கு மேல் பணியாற்றியுள்ளார். தமிழ் ஆராய்ச்சி, இலக்கியம், பக்தி, இலக்கியங்கள், கவிதைகள், நாடோடிப் பாடல்கள், பழமொழிகள் என இவரே எழுதியும், தொகுத்தும் அளித்துள்ள நூல்கள் இருநூற்றுக்கும் மேற்பட்டனவாகும். குறிப்பாக, இலக்கணத்துக்கு விளக்கம் தருவதில் வல்லவர். சிலேடையாய்ப் பேசுவதில் இவருக்கு நிகர் இவரே. எந்த இலக்கிய நூலிலே சந்தேகம் ஏற்படினும் உடனடியாக விளக்கம் கி.வா.ஜ. அவர்களிடமிருந்து கிடைக்கும் என்பதைத் தமிழ் அறிஞர்கள் பலரும் அறிவர். இவர், பல காலமாக உள்ள ஐயங்களைப் போக்குகின்ற வகையில், கலைமகள் மாத இதழில் பதிலளித்து வந்தார். இவை என்றென்றும் நமக்குப் பயன் விளைக்கக் கூடும். இந்த மின்னூலைப் பற்றி உங்களுக்கு இம்மின்னூல், இணைய நூலகமான, விக்கிமூலத்தில் இருந்து கிடைத்துள்ளது[1]. இந்த இணைய நூலகம் தன்னார்வலர்களால் வளருகிறது. விக்கிமூலம் பதிய தன்னார்வலர்களை வரவேற்கிறது. தாங்களும் விக்கிமூலத்தில் இணைந்து மேலும் பல மின்னூல்களை அனைவரும் படிக்குமாறு செய்யலாம். மிகுந்த அக்கறையுடன் மெய்ப்பு செய்தாலும், மின்னூலில் பிழை ஏதேனும் இருந்தால் தயக்கம் இல்லாமல், விக்கிமூலத்தில் இம்மின்னூலின் பேச்சு பக்கத்தில் தெரிவிக்கலாம் அல்லது பிழைகளை நீங்களே கூட சரி செய்யலாம். இப்படைப்பாக்கம், கட்டற்ற உரிமங்களோடு (பொதுகள /குனு -Commons /GNU FDL )[2][3] இலவசமாக அளிக்கப்படுகிறது. எனவே, இந்த உரையை நீங்கள் மற்றவரோடு பகிரலாம்; மாற்றி மேம்படுத்தலாம்; வணிக நோக்கத்தோடும், வணிக நோக்கமின்றியும் பயன்படுத்தலாம் இம்மின்னூல் சாத்தியமாவதற்கு பங்களித்தவர்கள் பின்வருமாறு: Sanganur குமரன்வலை Arularasan. G Balajijagadesh Info-farmer Pselvaganapathy Sanganur29 * * * ↑ http://ta.wikisource.org ↑ http://creativecommons.org/licenses/by-sa/3.0/ ↑ http://www.gnu.org/copyleft/fdl.html