இதய உணர்ச்சி மார்க்க ஒளரேலியன் 1952 8 அக்டோபர், 2020 அன்று விக்கிமூலத்தில் இருந்து பதிவிறக்கப்பட்டது உலகளாவிய பொதுக் கள உரிமம் (CC0 1.0) இது சட்ட ஏற்புடைய உரிமத்தின் சுருக்கம் மட்டுமே. முழு உரையை https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode என்ற முகவரியில் காணலாம். பதிப்புரிமை அற்றது இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர். நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை. *** இது, உலகத் தமிழ் விக்கியூடகச் சமூகமும் ( https://ta.wikisource.org ), தமிழ் இணையக் கல்விக் கழகமும் ( http://tamilvu.org ) இணைந்த கூட்டுமுயற்சியில், பதிவேற்றிய நூல்களில் ஒன்று. இக்கூட்டு முயற்சியைப் பற்றி, https://ta.wikisource.org/s/4kx என்ற முகவரியில் விரிவாகக் காணலாம். Universal (CC0 1.0) Public Domain Dedication This is a human readable summary of the legal code found at https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode No Copyright The person who associated a work with this deed has dedicated the work to the public domain by waiving all of his or her rights to the work worldwide under copyright law including all related and neighboring rights, to the extent allowed by law. You can copy, modify, distribute and perform the work even for commercial purposes, all without asking permission. *** This book is uploaded as part of the collaboration between Global Tamil Wikimedia Community ( https://ta.wikisource.org ) and Tamil Virtual Academy ( http://tamilvu.org ). More details about this collaboration can be found at https://ta.wikisource.org/s/4kx. இதய உணர்ச்சி பொ. திருகூடசுந்தரம் எம். ஏ. பி. எல்., சென்னைப் பல்கலைக் கழகத் தங்கப் பதக்கம் பெற்றவ கூட்டாசிரியர், தமிழ்க்கலைக் களஞ்சியம். மகரிஷி வ. வே. சு. அய்யர் முகவுரை இசையரசு எம். எம். தண்டபாணிதேசிகர் அநுபவ உரை காந்தி நிலையம் தியாகராயநகர் : : சென்னை-17 விலை ரூபாய் ஒன்று மூன்றாம், நான்காம் பதிப்புகள் உரிமை 1951 ஐந்தாம் பதிப்பு ஆசிரியருடையது 1952 * * * பொ. திரு கூடசுந்தரம் எம். ஏ. பி. எல். 1891-ம் ஆண்டில் பிறந்தவர். 5-வது பாரம் முதல் முதற் பரிசு பெற்றார். எம். ஏ.இல் பல்கலைக் கழகத் தங்கப் பதக்கம் பெற்றார். 1921-ல் வக்கீல் வேலையை விட்டு ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்டார். திருநெல்வேலி ஜில்லாவிலும் செட்டிநாட்டிலும் காந்தீய இயக்கத்தை வேரூன்றச் செய்தார். காந்தியடிகள் கட்டுரைகளை முதன் முதலில் தமிழில் மொழிபெயர்த்தவர். திருநெல்வேலி நகரசபையில் அங்கத்தினராகவும், தேவ கோட்டை நகர சபையில் வைஸ்சேர்மனகவும் இருந்து சமூக சேவை செய்தார். தீண்டாமை விலக்குக்குக் தீவிரமாக உழைத்தார். அவரும் அவர் மனைவியாரும் நாகர் கோவிலில் தீண்டாமை விலக்குச் சங்கம் நிறுவி ஆலயப் பிரவேசத்துக்கு அடிகோலினர். தமிழ் ஹரிஜன் பத்திரிகைக்கு ஆசிரியராகயிருக்கார் ஆங்கிலத்திலும் தமிழிலும் பாண்டித்திய முடையவர். சென்னை செனட் சபையில் அங்கத்தினராக இருந்தார். தமிழில் சொந்தமாக பத்து நூல்களும், மொழி பெயர்ப்பாக பத்து நூல்களும் எழுதியுள்ளார். அவை அறிவும் இன்பமும் பெற விரும்புவோர், படிக்க வேண்டிய நூல்கள். சென்னை சர்க்கார் மூன்று நூல்களுக்கு பரிசு அளித்துள்ளார் சிறந்த கட்டுரையாளர். விஞ்ஞானம் முதலிய கடினமான பொருள்களை எளிதில் விளங்கு மாறு எழுதக்கூடியவர். இப்பொழுது கலைக் களஞ்சியக் கூட்டாசிரியர். எளிய வாழ்க்கையும் உயர்ந்த சிந்தனையு முடையவர். * * * ராஜன் எலக்டிரிக் பிரஸ், சென்னை-1 பொருளடக்கம் 1. வ. வெ. சு. அய்யர் முகவுரை 2. தண்டபாணி தேசிகர் அநுபவ உரை 3. மார்க்க ஒளரேலியன் சரித்திரம் 4. மார்க்க ஒளரேலியனுடைய சித்தாந்தச் சுருக்கம் 5. மார்க்க ஒளரேலியன் மணிமொழிகள் படங்கள் ---------- 1. மார்க்க ஒளரேலியன் (குதிரைமீது) 2. மகரிஷி வ. வெ. சு. அய்யர் 3. இசையரசு தண்டபாணி தேசிகர் 4. மார்க்க ஒளரேலியன் 5. மார்க்க ஒளரேலியன் தந்தை அந்தோனீன பியன் 6. ஆங்கில மகாகவி மாத்யூ ஆர்னqல்ட் 7. பிரஞ்சுப் பேரறிஞர் எர்னஸ்ட் ரெனான். பார்க்க ஒளரேலியன் முகவுரை ஸ்ரீமான் பொ. திருகூடசுந்தரம் பிள்ளை அவர்களின் நூல்களுக்கு அன்னியரின் முகவுரை அனாவசியம் என்று தமிழுலகம் சொல்லும் என்பதில் சந்தேகமில்லை. மகாத்மா காந்தியின் சத்யாகரக வியாசங்களில் பலவற்றைத்தொகுத்துத் தமிழ்செய்து ஸ்ரீமான் பிள்ளையவர்கள் தமிழருக்குப் பேருதவி செய்திருக்கிறார்கள். மகாத்மாவின் நூல்களை மொழிபெயர்ப்பதற் கிடையிலேயே பிள்ளையவர்கள் தமிழ் மொழியின் மீதுள்ள ஆர்வ மிகுதியால் உலகப் பிரசித்தமான இன்னொரு நூலைச் சம்க்ஷேபமாக மொழிபெயர்த்து வெளியிடுகிறார்கள். இந்நூல்தான் மார்க்க ஒளரேலியன் என்னும் ரோம சக்ரவர்த்தியின் ஆத்ம விசார ரூபமான மணிமொழித் தொகுதி. இந்நூலிற்கு உலகத்தின் அற நூல்களில் சிலவற்றைத்தான் இணையாகக் கூற முடியும். எல்லாவற்றையும் யோசித்துப் பார்த்தால் திருவள்ளுவ தேவரின் திருக்குறளின் யோக்கியதை இந்நூலுக்கும் உள்ளது என்று சொல்லலாகும். ஆனால் இதனுள் இன்னொரு விசேஷமிருக்கிறது. திருக்குறள் எழுதியவர் இல்வாழ்க்கையினராக இருந்த போதிலும் உலக விவகாரங்களில் கொஞ்ச மேலும் சிக்கிக்கொள்ளாமல், அவற்றிற்குப் புறம்பாகவே நின்று அவற்றை ஒரு சாக்ஷியைப்போல் பார்த்தறிந்து எழுதினவராவார். மார்க்க ஒளரேலியனோ ஒரு சக்ரவர்த்தி, சுமார் பதினேந்து லக்ஷம் சதுர மைல் விஸ்தீரணமுள்ள ஓர் ஏகாதிபத்தியத்தை ’வறிஞன் ஓம்பும் ஓர் செய் எனக் காத்து’ ரக்ஷித்துவந்த அரசர்க்கரசன். அவனுடைய ஆத்மவிசாரணை போர்க்களத்தினிடையிலும், மந்திர சபை கூட்டங்களின் மத்தியிலும், நீதி செலுத்தும் மன்றங்களிலும், சூழ்ச்சிக்காரர்களுடைய சூழ்ச்சியைக் குலைக்கச் செய்யும் முயற்சிகளுக்கிடையிலும் நிகழ்ந்ததாகும். கர்மணைவஹி ஸம்ஸித்திம் ஆஸ்திதா ஜனகாதய : ஜனகர் முதலானவர்கள் கர்மத்தினாலேயே மோக்ஷ சித்தி அடைந்தனர் என்ற கீதா வாக்கியம் (௩, ௧௯) மார்க்க ஒளரேலியனுக்கும் பொருந்தும் என்றால் அவனுடைய பெருமை படிப்போருக்கு ஒருவாறு விளங்கும். அசோகன், ஸ்ரீ ஹர்ஷன், குலசேகரன், சேரமான் பெரு மாள் நாயனார் ஆகிய இம்மகான்களைத்தான் ஒளரேலியனுக்கு ஒப்பிட்டுச் சொல்லமுடியும். இத்தகைய பெருந்தகை தன்னுடைய அபூர்வமான அனுபவத்தில் தன் மனத்தில் எழுந்த எண்ணங்களையெல்லாம் குறித்துவைத்ததைப் பிற்காலத்தவர் உலகிற்குப் பிரயோஜனமாகும்படி கிரேக்கிலும் லத்தீனிலும் தற்கால பாஷைகளிலும் வெளிப்படுத்தியுள்ளார்கள், ஸ்ரீமான் பிள்ளை ஆங்கில மொழிபெயர்ப்பினின்று இம்மணிமொழிகளைத் தேர்ந்தெடுத்துத் தமிழ்ப் படுத்தி வெளியிடுகிறார்கள். இம்மொழிகளை மொழி பெயர்த்ததோடு நில்லாமல், அவர் ஆசிரியனுடைய சரித்திரத்தையும், அவன் காலத்தில் அவனது ஏகாதிபத்தியம் இருந்த நிலைமையையும் பற்றிய சில செய்திகளை முகவுரையில் எடுத்துக் காட்டிப் படிப்போருக்கு ஆசிரியனுடைய உள்ள நிலைமையை நன்கு தெரியும்படி செய்துவைத்திருக்கிறார்கள். சரீரம் மிகவும் பலஹீனமாயிருந்தும், அடிக்கடி நோய் வாய்ப்பட்டு வீழ்ந்தும், பிள்ளையவர்கள் இத்தகைய நூல்களை எழுதிவந்து தாம் தமக்கென வாழாப் பிறர்க்குரியாளர் என்பதை உலகத்துக்குப் பிரசித்தப்படுத்திக் காட்டி வருகிறார்கள். அவரைப் பார்த்துத் தமிழர் மற்றோரும் மேனாட்டு வடநாட்டு நூல்களைத் தமிழ்ப்படுத்தித் தமிழிலக்கியத்தை வளர்த்து வருவார்களானால் இன்னும் சில வருஷங்களுக்குள் நமது தாய்மொழியானது வங்காளி, குஜராத்தி, மராட்டி, தெலுங்கு முதலிய தனது சகோதரிகளின் முன் தலைநிமிர்ந்து நிற்கலாகும். பிள்ளையவர்களின் நூல்களுக்கு அன்னியரின் நான்முகம் அனாவசியம் என்று முதலில் சொன்னேன். ஆனால் நான் அவருக்கு அன்னியன் ஆகமாட்டேன். அவரை எனது அருமை நண்பர்களில் ஒருவராகவே கருதியுள்ளேன். ஆனதுபற்றியே அவருடைய வேண்டுகோளை மறுக்கத் துணியாது. அனாவசியமாயினும் இம்முன்னுரையை எழுத நான் முன்வந்தனன். படிப்போர் இந்நூலைச் சிரத்தையோடு படித்து, ஆயிரத்து எழுநூறு வருஷங்களுக்குமுன் எழுதப்பட்டிருந்தாலும் சத்தியத்தின் சக்கியினால் நித்தியக் தன்மை பெற்றுவிட்ட மார்க்க ஒளரேலியனுடைய மணிமொழிகளின்படி தங்கள் வாழ்நாளை ஒழுங்குபெற நடாத்திவர முயலவேண்டும் என்று வற்புறுத்தி இவ்வுரையை நிறுத்திக்கொள்வேன். பாரத்துவாஜ ஆசிரமம், சேரமாதேவி, திருநெல்வேலி ஜில்லா. பங்குனி ௨௯, துந்துபி. வ. வெ. ஸுப்ரஹ்மண்ய ஐயர் இசையரசு திரு. எம். எம். தண்டபாணி தேசிகர். அனுபவ உரை உலகமென்பது உயர்ந்தோர் மாட்டே என்ற உண்மைக்கு இணங்க, அறிவு, ஒழுக்கம், அன்பு, அறம் ஆகிய பெரும் பண்புகளையுடைய சான்றோர்கள் எந்தக் காலத்திலும் இருந்து வருவதினாலேதான் மக்கள் இனமானது ஒப்பற்ற தனிப் பெருமையுடையதாகக் திகழ்ந்துவருகின்றது. செயற்கரிய செய்வர் பெரியர்,—சிறியர் செயற்கரிய செய்கலாதார். செயற்கரிய செய்வதினாலேயே இவர்கள் பெரியார் எனப்படுவர். இவர்கள் நாடு, மதம், மொழி என்னும் வேறுபாடு எதுவும் அறியார். இவர்களுள் ஒருவராகிய நாவுக்காசர் "எல்லா உலகமும் ஆனாய் நீயே" என்று இறைவனை இசைத் தமிழால் துதித்துப் போற்றுகின்றார். அது போன்று பெரியோர் அனைவரும் ஒன்றே குலம் ஒருவனே தெய்வம் என்ற ஒருமைப் பண்புடைய இயற்கை மன மாண்பைப் பெற்றவர்களாவர். அவர்கள் அன்பு அறம் என்ற அரண்களைக் கண்ணே போல் காத்து வருவார்கள். மக்களினமானது அவ்வரண்களை அழிக்கும்போது, அப்பெரியார்கள் சமுதாயத்தின் உயிர் நாடியாக, நாகரீகத்தின் சின்னமாக, நாட்டின் ஜீவ சொத்தாகத் தோன்றி நாடு நலமுறவும், ஒழுக்கம் உயர்வு பெறவும் ஆவன செய்து வருகிறார்கள். நமது தமிழ் நாட்டிலும், நாமும் நம் தமிழ் மொழியும் செய்த பெரும் தவத்தால் வள்ளுவர் இளங்கோ போன்ற பேரறிஞர்கள் தோன்றி. நமக்கு அறவுரைகளைப் பொழிந்து நம்மைப் பாதுகாத்து வருகிறார்கள். இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்னர் இத்தாலி நாட்டை ஆண்ட மார்க்க ஔரேலிய மன்னர் அத்தகைய பெரியாராவர். அவர் கோல் வழுவாக் கொற்றவராக இருந்ததோடு தலை சிறந்த சான்றோராகவும் விளங்கினார். அவர் அன்பையும் அறத்தையுமே முதன்மையாகக் கொண்டு அரசியல் நடத்தி வந்தார் என்பதை அவருடைய இதய உணர்ச்சி என்னும் பெரு நூலிலிருந்து அறியலாம். அதில் அவர் தாம் தமது பொறுமையினாலும், இரக்கத்தினாலும், அறிவினாலும் கண்டறிந்த உண்மைகளை எல்லாம், உணர்ச்சியினாலெழுந்த அருள் மொழி மாணிக்கங்களாகத் திரட்டி வைத்திருக்கின்றார். இவ்வளவு அருமை வாய்ந்த சிறந்த நூலைப் படித்து அறிவெய்தவும் இன்ப முறவும் ஓர் நல்ல காலம் தமிழருக்கு கிடைத்துள்ளதை நினைத்து மகிழ்வெய்துகின்றேன். அறிஞர் திரு பொ. திருகூடசுந்தரம் பிள்ளையவர்கள் அந்த நூலைத் தமிழாக்கித் தருகின்றார்கள், பிள்ளையவர்கள் ஆங்கிலத்திலும் தமிழிலும் வல்லவர்களானபடியினால் மூலத்திற்கு முரண்படா வண்ணம் மிகச் செம்மையாகச் செய்திருக்கிறார்கள். தமிழ் நாட்டிலுள்ள பெரியார்களுள் பிள்ளையவர்களும் ஒருவர். அவர்கள் தமிழுக்கும் தமிழ் நாட்டிற்குமே தமது வாழ் நாளைச் செலவு செய்து வருகிறார்கள். அவர்கள் தரும் இந்த அறிவுச் செல்வத்தினைத் தமிழகம் பேராதாவுடன் வரவேற்குமென்பதில் ஐயமில்லை. நான் மார்க்க ஒளரேலியருடைய மணி மொழிகளைக்குறித்து எழுதுவதற்கேற்ற பேரறிவுடையேன் அல்லேன். ஆயினும் எனக்கு மனச்சோர்வு நிகழும் காலங்களிலெல்லாம், இம் மணி மொழிகள் எனக்கு ஊக்கமும் உற்சாகமும் அளித்து உதவிசெய்து வருகின்ற படியினால்தான் இவ்வுரை எழுதத்துணிந்தேன். இவ்வுரை எழுத வாய்ப்பளித்த புத்தக வெளியீட்டாருக்கு எனது உளங்கனிந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். கலையகம் தியாகராய நகர், சென்னை-17. 1–10–1951. எம். எம். தண்டபாணி தேசிகர் * * * மார்க்க ஔரேலியன் சரித்திரம் * * * ஐரோப்பாக் கண்டத்தில் இத்தாலி என்ற ஒரு தேசம் இருக்கிறது. அதில் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்து அரசு புரிந்த சக்கரவர்த்திகளுடைய சாம்ராஜ்யம், மிக விசாலமானதாயும், பெரிதும் வலிமையுடையதாயும் இருந்தது. அதன் வடஎல்லை உலாந்தா முதல் ஹுங்காரியா உக்ரானியா வரையில் இருந்தது. கீழ் எல்லை பாரஸீகத்தையும், எகிப்தையும், அராபியாவையும் தொட்டது. எகிப்தினின்று மொராக்கோ வரையில் உள்ள வட ஆப்பிரிக்காப் பிரதேசங்களெல்லாம் அச் சாம்ராஜ்யத்தின் தெற்கு எல்லையாக விளங்கின. அதன் மேற்கெல்லை அட்லாந்திக் சமுத்திரமேயாகும். அது மாத்திரமில்லை : இங்கிலாந்துகூட அந்த ஏகாதிபத்தியத்தில் ஒரு மாகாணமாகவே இருந்தது, மத்தியதரைக் கடலை ரோமர்கள் தங்கள் வீட்டு ஏரி என்றே சொல்லிக் கொள்ளுவார்கள். அத்தனை விசாலம் அவர்களுடைய ஏகாதிபத்தியம்! அத்தனை செருக்கு அவர்களுடைய இதயத்தில் ரோம ஜாதியார் வீரத்திலும் நீதியிலும் சிறந்திருந்தார்கள். அத்தகைய நாட்டாரோடு அக்காலத்தில் நம் பாண்டி நாட்டிலிருந்த மன்னர்கள் பலவிதத்தில் சிநேக பாவத்தோடு தொடர்பு கொண்டு வாழ்ந்து வந்தனர். அந்தச் சாம்ராஜ்யத்திற்குத் தலைநகர் ரோமாபுரி. அதில் செங்கோலோச்சிய சக்ரவர்த்திகளுள்ளே தலை சிறந்தவன் மார்க்க ஒளரேலியன். அவன் பல சமயங்களில் எழுதி வைத்திருத்த ஞாபகக் குறிப்புக்களே இப்பொழுது ‘மணிமொழிகள்’ என்னும் பெயரால் வழங்கி வருகின்றன. அந்த ஞான மலர்களில் சிலவற்றையே இந்நூலில் மொழிபெயர்த்து அமைத்திருக்கிறேன். அவைகளில் எத்தகைய உயர்ந்த ஞானமும், ஒழுக்க போதமும், ஆன்ம உறுதியும் நிறைந்திருக்கின்றன என்பதை வாசிப்போர் எளிதில் அறிந்துகொள்வர். சக்ரவர்த்தி மார்க்க ஒளரேலியன், உயர்ந்த ஞானத்தைச் சிந்தித்ததோடு நில்லாது, அதன்படியே ஒழுகியும் வந்தவன். உலகில் பெரியோரின் உயர்ந்த ஒழுக்க நடை என்றும் நமக்கு உறுதி பயக்கும். அப்பெரியோரும் அரசராய், அளவற்ற செல்வமும், அகன்ற ராஜ்யமும், அவற்றால் உண்டாகும் சுகானுபவங்களும் தங்களுக்கிருந்தும் அவைகளில் பற்றின்றித் தாமரையிலைத் தண்ணீர்போல் வாழ்ந்திருப்பின், அத்தகையவரின் சரிதையால் நாம் பெறும் நன்மையை அளவிடமுடியாது. ஆகையின் மார்க்க ஒளரேலிய சக்ரவர்த்தியின் மணிமொழிகள் நம்மால் பெரிதும் போற்றத்தக்கன. ஒளரேலியன் ரோமாபுரியில் கிறிஸ்து பிறந்தபின் 121-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பிறந்தான். அவன் தந்தை அன்னிய வேரன் என்பவன் அந்நகரின் தலைமை நீதிபதியாய் இருந்தான். மார்க்கன் பிறந்து மூன்று மாதத்திற்குள் அவன் தந்தை இறந்துவிட்டான். தந்தையின் சகோதரியின் கணவனான அந்தோனீன பியன் என்பவன் அப்பொழுது ரோம ராஜ்யத்திற்குச் சக்ரவர்த்தியாயிருந்தான். ‘உலகத்தில் தோன்றிய சான்றோர்களில் இவனே பரிபூரணமானவன்' என்று மாரிஸ் மாட்டர்லிங்க் என்னும் பேரறிஞர் புகழ்கிறார். இத்தகைய சக்ரவர்த்திக்கு இரண்டு அபிமான புத்திரர் இருந்தனர். அவர்களில் நம் மார்க்க ஒளரேலியன் ஒருவன். ஆகையால் மார்க்கன் சிறந்த கல்வியும் அரசர்க்குரிய வித்தைகளும் கற்பிக்கப் பட்டான். மார்க்கன், தனக்குக் கடவுள் அருளால் வாய்த்த தந்தை, தாய், அபிமான பிதா, ஆசிரியர் அனைவரும் வெகு நல்லவர் என்றும், தான் அவர்களால் அடைந்த பயன் அளவற்றது என்றும், அதற்காகக் கடவுளுக்கு நன்றி செலுத்துவதாகவும் கூறியுள்ளான். அவனுக்குக் கல்வி போதித்த ஆசிரியர்களெல்லோரும் அக்காலத்திய அறிஞர்களில் மிகச் சிறந்தவர்கள். அவர்களில் அவனால் பெரிதும் போற்றப்பட்டவன் ருஸ்திகன் என்பவன். அவன் மார்க்கன் சக்ரவர்த்தியான பின்னும் மார்க்கனுக்கு மதிமந்திரியாயிருந்தான். இவ்வளவு சிறந்த ஆசிரியர்களையும் இவ்வளவு சிறந்த மாணவனையும் காண்பது அரிது என மேனாட்டு அறிவாளிகள் கூறுகின்றனர். மார்க்கன் முதலில் கவி பாடவும், பிரசங்கம் செய்யவும் கற்றான். ஆனால், வயது பதினொன்று வந்தவுடன், அவைகளில் வெறுப்புற்றுத் தத்துவ சாஸ்திரம் கற்பதில் நாட்டங் கொண்டான். தத்துவ சாஸ்திரிகளைப்போல சாதாரண உடை உடுத்தி, ஊண் மிகச் சுருக்கி, படிப்பில் அதிகச் சிரமம் மேற்கொண்டான். அதனால் அவனுடைய தேக சுகமும் சிறிது குறைந்திருந்தது. பின்னர் அரசர்க்கு அவசியந் தெரியவேண்டிய சட்டக் கல்வியையும் ஆயுதப் பயிற்சியையும் மேற்கொண்டான். இருபத்தைந்தாவது வயதில் மார்க்கன் தன் மாமனும் அபிமான பிதாவுமான சக்ரவர்த்தி அந்தோனீன பியனின் புத்திரியாகிய பெளஸ்தீனா என்னும் அரசிளங் குமரியை மணந்தான். சக்ரவர்த்தி அவனுக்கு ரோம் ராஜ்யத்தில் யுவராஜாவுக்கு வழக்கமாக வழங்கும் ஸீஸர் என்னும் நாமம் சூட்டி, ராஜ்ய நிர்வாகக் காரியங்களிற் பலவற்றை அவனிடம் ஒப்புவித்தான். சக்ரவர்த்தியின் மரணகால பரியந்தம் இருவரும் மன ஒற்றுமை மாறமல் நட்புடன் வாழ்ந்து வந்தனர். 161-ஆம் வருஷத்தில் சக்ரவர்த்தி பியன் இறந்து விடவே மந்திராலோசனை சபையார் மார்க்கனைச் சக்கரவர்த்தி பதவியை ஏற்று ராஜ்யபாரத்தை நிர்வகிக்கும்படி கேட்டனர். ஆனால், முன்சொன்னபடி பியனுக்கு வேரன் என்று மற்றோர் அபிமான புத்திரன் இருந்தபடியால் அவனும் தன்னோடு கூடவே சிங்காதனம் ஏறவேண்டுமென்று மார்க்கன் வற்புறுத்தினான். கடைசியாக மந்திராலோசனை சபையாரைத் தனக்கு இணங்கும்படியும் செய்துவிட்டான். ஆகவே இருவரும் சம உரிமையுடன் சக்ரவர்த்திகளாக இருந்துகொண்டு ராஜ்யத்தை ஆள ஆரம்பித்தனர். வேரன் போகாதுரனாகவும் பெரு நோக்கற்றவனாகவும் இருந்தும், மார்க்கன் அவனுடைய குற்றங்களைப் பாராட்டாமல் அவனுடைய தவறுகளால் வரும் திமைகளைப் பொறுமையோடும் சாமர்த்தியத் தோடும் விலக்கிக்கொண்டு, அவனோடுகூடச் சுமுகமாகவே இருந்துவந்தான். சுமார் எட்டு வருஷங்கள் இவ்வாறு நடந்துவந்ததது. ஒன்பதாவது வருஷத்தில் வேரன் இறந்தான். அதன் பிறகு மார்க்கன் ஏகச் சக்கரவர்த்தியாக ஆட்சியை நடத்திவந்தான். 161-ஆம் வருஷத்தில் ராஜ்யபாரம் வகிக்க ஆரம்பித்த நாள்முதல் அவனுடைய ஆயுள் இறுதிவரை, மார்க்கன் தன் விருப்பத்துக்கு மாறாக, தனது காலத்தை யுத்தங்களிலேயே கழிக்கும்படி நேர்ந்தது. 175-ஆம் வருஷத்தில் ஆவீதிய காள்ஸியன் என்னும் ரோமதளபதி ஒருவன் ஆசியாவில் சக்ரவர்த்திக்கு எதிராகக் கலகம் செய்தான். ஆனால் அவனைச் சக்ரவர்த்தியின் அதிகாரிகளில் சிலர் கொன்றுவிட்டனர். அதைக் கேட்டவுடன் மார்க்கன் மிகவும் துக்கித்தான். “அவனை மன்னிப்பதால் வரக்கூடிய ஆனந்தம் கைநழுவிப் போனமைபற்றி வருந்துகிறேன் !” என்று சொன்னான். இத்தகைய நல்லெண்ணத்தோடு மாத்திரம் நில்லாமல், மார்க்கன், அக்காஸ்ஸியனின் குடும்பத்தாரையும் நண்பரையும் மிகப் பட்சமாகவே நடத்தி, தன் அருளுடைமையை விளக்கிச்சிறந்தான். 175-ஆம் வருஷத்தில் போர் நிமித்தமாக வெளியூருக்குச் சென்றிருந்த காலத்தில் மார்க்கன் தன் அருமை மனைவியை இழந்துவிட்டான். அவன் அவளிடம் அதிகமான அன்பு வைத்திருந்தான். "பணிவுடையாள், ஆடம்பரமற்றவள், அன்புடையாள் " என்று அவளைப் புகழ்ந்துரைக்கிறான். ஆகவே, அவள் பிரிவை ஆற்றமல் மிகுந்த கிலேசமுற்றான். தன் தந்தை பியன் தன்னே அரச நிர்வாகத்தில் சேர்த்துக்கொண்டது போல் தானும் மறு வருஷத்தில் தன் மகன் கொம்மோதன் என்பவனைத் தன்னுடன் சேர்த்துக் கொண்டான். மிகுந்த ஒழுக்க சீலனான மார்க்கனுக்குப் பிறந்தும், அவனோடு சேர்ந்து வாழ்ந்தும், கொம்மோதன் தந்தை இறந்தபின் துன்மார்க்கனாய்விட்டான். ஆனால் சிறுவயதில், அதாவது 19-ஆவது வயதில், தந்தையின் மரணத்தால் தனியே விடப்பட்டதனால் அவன் அவ்விதம் துன்மார்க்கனாயிருக்கக்கூடும். மேலும் சன்மார்க்கருக்குத் துன்மார்க்கர் பிறப்பதை அநுபவத்தில் பார்த்திருக்கிறோமல்லவா? மார்க்க ஒளரேலியன் கிறிஸ்தவ மதத்தைச் சார்ந்தவன் அல்லன். அக்காலத்தில் ரோம் ராஜ்யத்தில் பெரும்பான்மையோருடைய மதம் வேறு. அப்பொழுதுதான் கிறிஸ்தவ மதம் சிறிது சிறிதாய்ப் பரவிக்கொண்டிருந்தது. ஆனால் பொதுஜனங்கள் அதை வெறுத்துக் கிறிஸ்தவர்களைத் துன்புறுத்தி வந்தனர். அரசரும் பிறரும் அவர்களால் உண்மை ஞானத்துக்கும், பொது வாழ்வுக்கும், ராஜ்யத்துக்கும் பெருங் கேடே விளையுமென்று உண்மையாய் நம்பியிருந்தனர். இந்நிலைமையில் மார்க்கனும் கிறிஸ்தவர்களைத் துன்புறுத்தும்படி கட்டளையிட்டதாகச் சொல்லப்படுகின்றது. ஆனால், ஆசிரியர்களில் சிலர் அவன் அவ்விதம் செய்தனன் என்றும், சிலர் அவ்விதம் செய்யவில்லை என்றும் கூறுகின்றனர். இச்சிறு நூலில் அதைப்பற்றி விவரித்து நிர்ணயித் தெழுதவேண்டியதில்லை. ஒன்றுமட்டும் சொல்லலாம்: கிறிஸ்து நாதரின் ஹிதோபதேசம் முழுவதும் அவனுக்குத் தெரிந்திருந்தால், அவன் கிறிஸ்தவருக்கு யாதொரு கேடும் செய்ய ஒருப்பட்டிரான் என்பது நிச்சயம். ஏனெனில் பகைவரை மன்னித்தலையே தலைசிறந்த தர்மமெனக் கிறிஸ்து நாதர் கூறியதுபோல் இவனும் கூறி, அவ்விதமே நடந்தும் வந்தவன். மார்க்கன், கி. பி. 179-ஆம் வருஷத்தில், அதாவது தன் ஐம்பத்தொன்பதாவது வயதில், பாசறையிலே இறந்தான். அவன் இறக்கும் சமயத்தில் அவனைச் சூழ்ந்து நின்ற மந்திரிகளும் சேனாதிபதிகளும் அவன் பிரிவை எண்ணி அளவில்லாத துக்க மேலீட்டால் கண்களில் நீர் பெருக நின்றனர். அதைக் கண்ணுற்ற மார்க்கன், “ஏன் அழுகின்றீர்கள்? சேனையைப் பற்றியே சிந்தியுங்கள். எனக்காக வருந்தாதீர். நீங்கள் பின்னால் வருவீர்கள், நான் முன்னால் போகிறேன். அவ்வளவு தானே, விடை தாருங்கள், போய்வருகிறேன்” என்று கூறினன். அவனுடைய தேகம் ரோமாபுரிக்குக் கொண்டு வரப்பட்டு, வெகுவிமரிசையாக அடக்கஞ் செய்யப்பட்டது. கொம்மோதன் அவனுடைய ஞாபகார்த்தமாக ரோமாபுரியில் ஒரு கோபுரம் கட்டி அதன் மீது அவன் சிலையை நிறுத்திவைத்தான். பிரஜைகள் அனைவரும் அவனைத் தங்கள் கிரகதேவதைகளில் ஒன்றாக மதித்து வீடுகளில் அவனுடைய விக்கிரக மொன்றை வைத்துப் பூசித்த வரலாயினர். மார்க்க ஒளரேலியனுடைய புகழைப் பாடாதார் இல்லை. ஒருவனை அவனோடு கூடவே இருந்தவர் புகழ்வதும், அவனுடைய பகைவர் புகழ்வதும் துர்லபம. ஆனால் இவனை உடன் வாழ்ந்தவர் பகைவர் உள்படச் சகலரும் புகழ்ந்தனர் என்றால் இவனுடைய மேன்மையை என்னென்று சொல்வது ! மேலும், உலகம் யாரையும் பரிபூரண புருஷன் என்று ஒப்புக்கொள்வதில்லை; ஒவ்வொருவன் மீதும் ஏதாவது ஒரு குற்றத்தை ஏற்றியே வைக்கிறது. அரசர்கள் ஜீவந்தர்களாக இருக்கும் வரையில் பிரஜைகள் அவர்களிடம் தேவபக்தி செலுத்துகிறார்கள். ஆனால், அவர்கள் இறந்தவுடன் அவர்களுடைய குற்றங்களைப் பற்றிக் கூசாமல் வாதிக்கிறார்கள். ஆயினும், உலகம் அன்று முதல் இன்று வரையில் மார்க்கனைக் கோதிலாப் பெருங் குணத்தானகவே மதித்து வருகிறது. மார்க்கனுடைய விக்கிரகம் இங்கிலாந்து முதலான தூர தேசங்களிலும் வணங்கப்பட்டு வந்தது என்றால் மார்க்கனுடைய சிறப்பை எவ்வாறு அளவிடக்கூடும்? அந்தப் பெருந்தகையின் உடல் வாழ்வு இத்தன்மையதாக, அவனுடைய ஆன்ம வாழ்வின் செளந்தரியத்தைச் சிறிது கவனிப்போம். அவனுடைய ஆன்ம வாழ்வை அறிவதற்கு நமக்கு ஆதாரமாக உள்ளவை அவனுடைய மணிமொழிகளே. இம்மணிமொழிகள், தினந்தோறும் தனக்குத் தோன்றிய பொழுதும், ஆறுதல் வேண்டிய காலத்தும், அநேகமாகப் போருக்குச் சென்றிருந்த காலத்தில் பாசறையில் வைத்தும் எழுதப்பட்டவை. எல்லாம் அவன் சொந்தப் பார்வைக்கென்றே எழுதப் பட்டவை. அவைகளில் அவனுடைய அருளறம் பூண்ட நெஞ்சம் தெளிந்த நீர் போல் பிரகாசிக்கின்றது. அவனுடைய கொள்கையையும், அதன்படி நடக்க அவன் பட்ட கஷ்டங்களையும், அக்கஷ்டங்களை நீக்க அவன் கொண்ட வழிகளையும், பிறவற்றையும் அவைகளில் நாம் பார்க்கக் காணலாம். அவனுடைய மொழிகள் எவ்விதத்தில் நமக்கு நன்மை பயக்கும்? உலகில் எத்தனையோ பெரியோர்கள் நீதிநெறியைப் பல வழிகளில் விளக்கியிருக்கின்றனர். ஆனால் வெகு சிலருடைய மொழிகளே, கேட்பாரைப் பிணித்து, கேட்டவையின்படி செய்யத் தூண்டக் கூடியவைகளாயிருக்கின்றன. அத்தகைய குணமுடையன மார்க்க ஒளரேலியனுடைய மணிமொழிகள். ஆகையால், அனைவரும் அவற்றை வாசித்து, மனம் திருந்தி, நல்வாழ்வு பெறவேண்டு மென்பதே என் அவா. * * * ஒளரேலியனுடைய சித்தாந்தம் * * * மார்க்க ஒளரேலியனுடைய மணி மொழிகளில் உயர்ந்த அறங்களும், உன்னதமான உபதேசங்களும் அடங்கியுள்ளன. ஆனால் உலக வியவகாரங்களில் கலந்து கொள்ளாமல் விலகி நின்ற பெரியோர்களுடைய போதனைகள் எத்துணைச் சிறந்தனவாக இருந்தபோதிலும் நீண்டநாள் மக்கள் நினைவில் நிற்பதில்லை. “தாம் உரைப்பதற்குத் தக நிற்கவும் அதற்காக உயிர் துறக்கச் சித்தமாகவும் இல்லாத பெரியோர் அறவுரைகளால் யாது பயனும் உண்டாகமாட்டாது” என்று ஒளரேலியன் கூறுகிறான். அவன் தன்னுடைய சித்தாந்தத்தின்படியே ஒழுகிய சான்றோன் ஆவன். அவனுடைய சித்தாந்தம்யாது? மனிதன் தன்னுடைய இயற்கைக்கும் பிரபஞ்சத்தின் இயற்கைக்கும் உகந்தவாறு நடப்பதே வாழ்வின் லட்சியமாகும். அவ்வாறு நடப்பவரே உலகத்தில் சாந்தியும், சமாதானமும், சந்தோஷமு மடைவர். மனிதன் தன்னுடைய இயற்கைக்கு உகந்தவாறு நடக்க விரும்பினால் அவன் தன்னுடைய இதயத்தில் கோயில் கொண்டுள்ள பகுத்தறிவு என்னும் கடவுள் காட்டும் வழியிலேயே நடக்க வேண்டும். பகுத்தறிவுக்கு முரணாக நடப்பவன் மனித இயற்கைக்கு முரணாக நடப்பவனே ஆவான். மனிதன் பிரபஞ்சத்தின் இயல்புக்கும் தக்கவாறு வாழவேண்டியவனாவான். பிரபஞ்சத்துக்குத் தக்கவாறு நடப்பதற்காக அவன் எந்தச் சமூகத்தில் பிறந்திருக்கின்றனோ அந்தச் சமூகத்துக்கும் அதன் மூலம் மனித சமுகத்திற்கும் உகந்தவாறு தன்னுடைய வாழ்வை அமைத்துக் கொள்ளுதல் கடன். மக்களை விட்டுப் பிரிந்து நின்று தனியாக வாழ்தல் கூடாது. அப்படித் தனியாக வாழ்தல் சோம்பற்கும் சுகபோகத்துக்கு மாயினும், சிந்தனைக்கும் யோகத்துக்கு மாயினும் தவறேயாகும். செடிகளும் மிருகங்களும் தமக்குக் கிடைத்துள்ள சக்திகளை உபயோகிப்பது போலவே மனிதனும் தனக்குக் கிடைத்துள்ள சக்திகளை உபயோகித்தல் வேண்டும். மனிதன் தனியே வாழாமல் சமூகத்தில் வாழ வேண்டியதற்குரிய காரணம் யாது? மக்கள் எல்லோரும் இரத்த உறவோடு அறிவு உறவும் உடையவர்கள். அதனால் உடம்பிலுள்ள உறுப்புக்கள் போல ஒத்துழைக்க வேண்டியதே மனிதனுடைய இயல்பாகும். ஒருவர்க்கொருவர் விரோதமாக நடப்பது இயற்கைகக்கு விரோதமேயாகும். அத்துடன் அன்பு செய்வதே பகுத்தறிவின் பண்பாகும். நாம் அன்பு செய்தாலும் நமக்குப் பிறர் தீங்கு செய்தால் என் செய்வது? பிறர் தீங்கு செய்தால் உடனே நமக்குக் கோபமும் எரிச்சலும் உண்டாகும். அது இயற்கையே. ஆனால் அவரைத் தண்டிப்பதற்குரிய தலை சிறந்த முறை அவரைப் போல் ஆகாமல் இருப்பதேயாகும். பிறர் தீங்கு செய்ததாக மனத்தில் எண்ணம் உகிக்குமேயானல் உடனே அவன் அறிந்து செய்தானா அறியாமல் செய்தானா என்பதைப் பற்றிச் சிந்திக்க வேண்டும். அப்படிச் சிந்தித்தால் அப்போது கோபம் போய் இரக்கம் உண்டாகும். தங்களுடைய நலத்துக்கும் சமூகத்தின் நலத்துக்கும் முரண்படாதவாறு வாழ விரும்புகிறவன் சிறந்த ஒழுக்கத்துக்கு உகந்த லட்சியங்களை உடையவனாக இருத்தல் இன்றியமையாததாகும். அத்தகைய இலட்சியங்கள் உடையவன் தன் நலமும், சமூகநலமும் முரண்பட்டவையல்ல, ஒன்றேயென்று கண்டு கொள்ளுவான். தேனீச் சமூகத்துக்கு நல மல்லாதது தேனீக்கும் நலமல்லாததே. அதனால் தான் ஒளரேலியன் “சமூக நலனுக்கும் அறிவுக்கும் தக்கவாறு நடப்பதே என்னுடைய இயல்பு”. ஆதலால் என்னுடைய ஊரும், நாடும் மார்க்கன் என்ற நிலைமையில் ரோமாபுரி; மனிதன் என்ற நிலைமையில் உலகம். இந்த இரண்டுக்கும் ஏற்றதே எனக்கும் ஏற்றதாகும்’ என்று கூறுகின்றன். ஆதலால் மனிதன் அறிவை ஐயம், திரிபு இல்லாதபடி தூயதாக வைத்துக்கொள்ள வேண்டும்; அறிவுக்கு முரணான ஆசாபாசங்களை அகற்றிவிட வேண்டும். இடை விடாது மக்கள் நலத்துக்கு உகந்த செயல்களிலேயே ஈடுபடவேண்டும். இவ்வாறு இயற்கைக்கு ஏற்றவாறு நடப்பதே மனித வாழ்வின் குறிக்கோளும், பயனுமாகும். அறத்தின் பயன் அறவாழ்க்கையேயன்றி வேறன்று. இது தான் மார்க்க ஒளரேலியனுடைய சித்தாந்தத்தின் சுருக்கம். எத்தனையோ பெரியோர் இத்தகைய அறவுரைகள் கூறியிருந்த போதிலும் இவனைப்போல் அதற்குத் தக நின்ற உத்தமர்கள் வெகு சிலரே ஆவர். * * * மார்க்க ஒளரேலியன் மணிமொழிகள் * * * காலையில் எழுந்தவுடன் கீழ்க்கண்டவாறு சிந்திப்பாய் : இன்று நான் நன்றி கொல்பவனையோ, அல்லது பொறாமையுடையவனையோ, அல்லது வஞ்சகம் செய்பவனையோ சந்திக்கக்கூடும். அவர்களுக்கு இக்குணங்கள் அமைவது எப்படி? நன்மை இது, தீமை இது என்னும் பகுத்தறிவு இன்மையேயாகும். ஆனால், நன்மை அழகுள்ளது, தீமை அழகற்றது, தீங்கிழைப்பவன் ரத்தத்தால் மட்டுமன்றி, அறிவினாலும், மக்களிடமுள்ள தெய்வாம்சத்தாலும் எனக்கு உறவினனென்று நான் அறிவேன், ஆகையால் ஒருவரும் எனக்குத் திங்கிழைக்க முடியாது, நானும் என் உறவினர்களைக் கோபிக்கவும் முடியாது, பகைக்கவும் முடியாது. நாம் அனைவரும் தேகத்திலுள்ள கை கால்கள், கண்ணிமைகள் போல ஒத்துழைக்கவே உண்டாக்கப்பட்டிருக்கிறோம். ஒருவர்க் கொருவர் விரோதமாய் நடப்பது இயற்கைக்கு விரோதம். ஒருவரிடம் கோபப்படுதலும், அவரைவிட்டு அகலுதலும் ஒருவர்க்கொருவர் விரோதமாய் நடப்பதேயாகும். நீ செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் அஜாக்ரதை, அறிவு காட்டும் வழியில் வெறுப்பு, அடைந்ததில் அதிருப்தி, வஞ்சகம், சுயநலம் முதலியவற்றை அறவே அகற்றி, அவ்வக்காரியத்தை உன் வாழ்நாளில் கடைசிக் காரியமாகப் பாவித்துச் செய்தால் உனக்கு யாதொரு துன்பமும் வராது.2 ★ ★ ★ மனிதனுக்கு நல்வாழ்வுக்கு வழி காட்டுவது எது? தத்துவ சாஸ்திரம் ஒன்று தான். தத்துவ சாஸ்திரம் என்பது மனச்சாட்சிக்கு மாறக நடவாமலும், இன்ப துன்பங்களால் இடருறாமாலும், செய்வதை லட்சியமின்றியோ அல்லது பொய்யாகவோ அல்லது வஞ்சகமாகவோ செய்யாமலும், பிறர் இன்னது செய்யவேண்டும் அல்லது செய்யக்கூடாது என்று விரும்பாமலும், வருவதெல்லாம் தான் வந்த இடத்திலிருந்தே வருவதாய் எண்ணியும், மரண்த்தைப் பயமேது மின்றிச் சந்தோஷத்துடனே ஏற்றுக்கொள்ளத் தயாராக இருப்பதுமேயாகும்.3 ★ ★ ★ நாம் அறநெறிக்கு வருவதற்குக் காலம் தாழ்த்தல் ஆகாது. ஏனெனில், தினந்தோறும் நமக்கு மரணம் சமீபித்துக்கொண்டே வருகிறது. அம்மட்டோ? மரணம் வருமுன்னதாகவே, நன்மை இது, தீமை இது என்று அறியும் பகுத்தறிவை நாம் இழந்துவிடவும் கூடும். 4 ★ ★ ★ இயற்கையில் உண்டாகும் பொருள்களிலிருந்து விளையும் மற்றப் பொருள்களும் மனத்திற்கு மகிழ்ச்சி தருவனவாய் இருக்கின்றன. வளைந்து தொங்கும் தானியக் கதிர்கள் - சிம்மத்தின் கண்ணிமைகள் - கரடியின் வாய் நுரை - தனித்தனியே நோக்கும் பொழுது அழகில்லாதனவாகக் காணப்பட்டாலும், அவை இயற்கையில் உண்டான பொருள்களின் விளைவுகளே. ஆகையால் அழகாகவும் தோன்றுகின்றன, மனத்திற்கு மகிழ்ச்சியும் தருகின்றன. அதுபோல இயற்கையையும் இயற்கை விளைவுகளையும் உள்ளவாறு உணர்ந்தவனே முதியவர்களிடமும் ஒருவித அழகு உண்டென்று அறியக்கூடும்; இளையோரின் அழகையும் அவனே களங்கமற்ற இதயத்தோடு அநுபவிக்கக்கூடும். 5 ★ ★ ★ பலி பீடத்தின்பேரில் பல சாம்பிராணித் துணுக்குகள் விழுந்துவிடுகின்றன. ஒன்று முன் விழும், ஒன்று பின் விழும். ஆனால் அவற்றுள் வித்தியாசம் என்ன இருக்கிறது ? 6 ★ ★ ★ மனச் சாந்தியோடு நின்று தேவ வாழ்வு வாழ்வதற்கு வேண்டிய சாதனங்கள் மிகமிகச் சிலவேயாகும். 7 ★ ★ ★ பிறர் மனத்தகத்தே நிகழ்கின்றவற்றைத் தாம் அறியாமையால் துன்புறுபவரை யாம் கண்டதில்லை. ஆனால் தம் மனத்தகத்தே நிகழ்கின்றவற்றை உன்னிப் பாராதவர் என்றும் இன்பம் உறுதல் இலர். 8 வெகுஜனப் பிரயோசனமான காரியங்களில் பிரவர்த்தியாத காலத்து அயலாரைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டே உன் வாழ்நாளை வீணாக்காதே. ஏனெனில் பிறர் என்ன நினைக்கிறார்கள், என்ன பேசுகிறார்கள், என்ன செய்கிறார்கள் என்று நீ நினைத்துப் பார்க்கும் நேரத்திலெல்லாம் உன்னாற் செய்யக் கூடியவற்றைச் செய்யாதொழிகிறாய்.9 ★ ★ ★ மனத்திலே வியர்த்தமான எண்ணங்களும் எழாமல் நாம் காத்துக்கொள்ள வேண்டும். யாராவது திடீரென்று, “நீ இப்பொழுது என்ன எண்ணிக் கொண்டிருக்கிறாய்?” என்று கேட்டால், உடனே இன்னது என்று பயமின்றிப் பகிரங்கமாய்ச் சொல்லக்கூடிய விஷயங்களைப் பற்றி மட்டுமே எப்பொழுதும் மனத்தில் எண்ணும்படி நாம் பழகவேண்டும். 10 ★ ★ ★ மனிதன் எல்லாருடைய அபிப்பிராயங்களையும் பின்பற்ற வேண்டியதில்லை. இயற்கையோடு இனங்கி நல்வழி நிற்பவரின் அபிப்பிராயத்தையே பின்பற்ற வேண்டும்.11 ★ ★ ★ எப்பொழுதும் சந்தோஷமாக இரு. பிறரால் வரும் சாந்தியையாவது, பிறருடைய உதவியையாவது தேடாதே. மனிதன் தன் பலத்தைக் கொண்டே தானகவே நிமிர்ந்து நிற்க வேண்டும்.12 தீய எண்ணங்களுக்கு ஒருபொழுதும் இடங்கொடாதே. எப்பொழுதாவது சிறிதேனும் இடங்கொடுத்து விட்டால் பின் தடுமாற்றமின்றி நன்மையை நாடுதல் கஷ்டமாய்விடும். 13 ★ ★ ★ மனிதர் ஏகாந்தமாயிருக்க விரும்பிக் கடற்கரைக்கும் மலைகளுக்கும் போகின்றனர். ஆனால் இது வெகு சாதாரணமான மனிதர் செயல். ஏனெனில் எவனும் விரும்பினால் தன்னுள்ளேயே ஏகாந்தமாயிருக்க முடியும். சாந்தி தரக்கூடிய எண்ணங்களைச் சிந்தையில் எழவிட்டால் அவ்வளவு அமைதியும் தனிமையும் வேறெங்கும் காண முடியாது; சாந்தி என்பது அந்தக் கரணத்தின் சீர்பாடேயன்றி வேறன்று என்பேன். ஆகையால் நீ இத்தகைய தனியிடத்திற்கே அடிக்கடி சென்று உன் வாழ்வைப் புதுப்பித்துக்கொள். 14 ★ ★ ★ நீ உன் வாழ்க்கைக்குக் கட்டளைக் கல்லாக வைத்துக் கொண்டிருக்கிற தத்துவங்கள் சிலவாயும் மூலாதாரத் தத்துவங்களாயும் இருக்கட்டும். எங்ஙனமெனின், உனக்கு ஒரு விஷயம் அதிருப்தியை உண்டாக்குகிறது என்று வைத்துக்கொள்வோம். அப்பொழுது நீ உன் தத்துவங்களைத் தியானித்த மாத்திரத்தில் உன் அறிவு நிர்மலமாகிச் சற்று நேரத்திற்கு முன் உனக்கு அதிருப்தியை உண்டாக்கின. பொருள்களி னிடத்து மலர்ச்சியோடு உன்னைச் செலுத்தவேண்டும். மனிதருடைய தீமையைக் கண்டு உன் மனது சஞ்சலமடைகிறதா? அப்பொழுது மனிதர் பரஸ்பர உதவிக்காகவேதான் ஜீவிக்கிறார்கள் என்றும், பொறுமையில்லாதவர் நீதிமான்களாயிருக்க முடியாது என்றும், மனிதர் இஷ்டத்தோடு தீங்கிழைக்கிறதில்லை என்றும் நினைத்துக்கொள். இரண்டு தத்துவங்களைச் சமய சஞ்சீவியான தத்துவங்களாகப் பாவித்து மனத்தில் அவைகளை எப்பொழுதும் நிறுத்திக் கொண்டிரு. அவைகளில் ஒன்று இதுவாகும். அதாவது, உலகத்திலுள்ள பொருள்கள் எல்லாம் ஆன்மாவுக்குப் புறம்பானவை ஆதலால் எப்பொருளுக்கும் ஆன்மாவைப் பாதிக்கும் ஆற்றலில்லை. நம் மனச் சஞ்சலங்களெல்லாம் நம் மனத்தினுள் நின்று எழும் தோற்றங்களினின்றே எழுகின்றன. மற்றத் தத்துவத்தை இதுவென்று கூறலாகும். அதாவது நீ பார்க்கிற இவையெல்லாம் க்ஷண நேரத்தில் மாறுந்தன்மை உடையன. இத்தகைய மாறுதல்கள் இதற்குமுன் எத்தனை பார்த்திருக்கிறாய் என்பதை யோசித்துப்பார். உலகம் நிலையற்றது, என்றும் மாறுந் தன்மையது. வாழ்க்கை என்பது அறிவின் இயக்கமே யன்றி வேறில்லை.15 ★ ★ ★ அகங்கார மமகாரங்களை நீ நீக்கிவிட்டாயானால், “எனக்கு இன்னான் துன்பிழைத்துவிட்டான்” என்கிற எண்ணமே உனக்கு இல்லாமல் போய்விடும். “எனக்கு ஒருவன் துன்பிழைத்துவிட்டான்” என்கிற எண்ணம் இல்லாமற் போய்விட்டதானால் துன்பமே இல்லாது போய்விடும்.16 ★ ★ ★ உனக்குத் தீமை செய்பவன் அதைப்பற்றி எவ்விதம் கருதுகிறானோ அதுபோலேனும், அல்லது நீ அதைப் பற்றி எவ்விதம் கருதவேண்டுமென்று அவன் விரும்புகிறானோ அதுபோலேனும் நீ கருதாதே. ஆனால், அது உண்மையில் எவ்விதம் இருக்குமோ அவ்விதமே நீ அதைப்பற்றிக் கருதுவாய்.17 ★ ★ ★ எப்பொழுதும் உன் வாழ்வில் வழிகாட்டிகளாக இந்த இரண்டு விதிகளைத் தயாராய் வைத்திரு- ஒன்று, உன்னை ஆள்வதும் உனக்கு உத்திரவு இடுவதுமான உன் மெய்யறிவு கூறுவதையே செய்வது.-மற்றொன்று, யாரேனும் உன் அபிப்பிராயம் தவறு என்று சொல்லித் திருத்தினால் உன் அபிப்பிராயத்தை மாற்றிக்கொள்வது. ஆனால், அபிப்பிராயத்தை மாற்றுவதால் சுகம் வரும் என்றோ புகழ் கிடைக்கும் என்றோ கருதாமல், நியாயமானது, பொது நன்மைக் கேற்றது என்று கருதியே அபிப்பிராயத்தை மாற்றிக்கொள்.18 ★ ★ ★ பதினாயிர வருஷகாலம் உயிரோடிருக்கப் போவதாக எண்ணி நடவாதே. மரணம் உனக்காக எப்பொழுதும் காத்துக்கொண்டிருக்கிறது. உடலில் உயிருள்ள பொழுதே நல்வினை செய். உயிர் போனபிறகு உனக்கு எதும் செய்யச் சாத்தியமிராது. 19 ★ ★ ★ பிறர் நினைப்பதையும், சொல்வதையும், செய்வதையும் கருதாமல், தான் செய்வது நீதியும் நெறியும் பொருந்தியதா என்று மட்டும் கருதுபவனை விட்டகலும் துன்பங்கள் பல. பிறர் துன்மார்க்கத்தை லட்சியம் செய்யாதே. நீ மாத்திரம் நெறியினின்று ஒரு மயிரிழையேனும் பிறழாமல் நட. 20 ★ ★ ★ “ மன அமைதி வேண்டுமானால் உன் வேலைகள் மிகச் சிலவாக இருக்கட்டும்” என்று ஒரு ஞானி கூறுகிறார். ஆனால் இது அதைவிட மேலான விதியாயிராதோ என்று யோசித்துப் பார்: அதாவது - “இன்றியமையாத காரியங்களை, பொது நன்மையைக் கவனிப்பதே இயற்கையாகவுடைய உன் நல்லறிவு கூறும் காரியங்களை மாத்திரம் அந்நல்லறிவு கூறும் முறையில் செய்வாய்”.-இதனால் வேலைகள் குறைவதால் வரும் அமைதியோடு அவற்றை நன்றாய்ச் செய்வதால் வரும் அமைதியும் கிடைக்கும். அனாவசியமான செய்கைகளைச் செய்யாமலிருப்பதோடு அனாவசியமான நினைவுகளையும் நினைக்காமல் இருக்க வேண்டும். ஏனெனில் அப்பொழுதுதான் அவசியமற்ற செய்கைகள் நிகழா. 21 ★ ★ ★ எவனேனும் உனக்குத் தீங்கிழைக்கின்றானா? அவன் உண்மையில் உனக்குத் தீங்கிழைக்கவில்லை. தனக்கே தான் கேடு சூழ்ந்து கொள்கிறான். 22 ★ ★ ★ பிறன் கையை எதிர்பார்ப்பவன்தான் ஏழை. தன் வாழ்க்கைக்கு வேண்டிய அனைத்தையும் தன் ஆத்மாவினுள்ளே சேமித்து வையாதவன் தான் வறிஞன். 23 ★ ★ ★ இப்பொழுது நிகழ்பவை இனி நிகழ்பவைகளுக்கு ஒருவிதத்தில் வித்தாகும். 24 “ஒரு பிரேதத்தைச் சுமந்து செல்லும் சிறிய ஆவி“[1] என்று எபிக்தெத்தன் அடிக்கடி கூறுவான்.25 ★ ★ ★ அலைகள் ஓயாமல் மோதும் கற்பாறை போன்று இரு. அது உறுதியாய் நின்று தன்னேச் சூழ்ந்துள்ள ஜலத்தின் வேகத்தை அடக்குகின்றது. 26 ★ ★ ★ இந்தக் கஷ்டம் எனக்கு நிகழ்ந்துவிட்டதென்று துன்புறுகின்றேனா? இல்லை. இக்கஷ்டம் நிகழ்ந்தால் எனக்கென்ன? நிகழ்காலத்தில் என்னை நசுக்கக்கூடியது ஒன்றுமில்லை. வருங்காலத்தில் நான் பயப்படக்கூடியது ஒன்றுமில்லை. ஆதலின் எனக்குத் துன்பம் ஏது?27 ★ ★ ★ சஞ்சலம் ஏற்படும் போதெல்லாம், “இஃது ஒரு கஷ்டமன்று; மற்று இதைத் தீரத்தோடு சகிப்பது ஒரு நல்லதிர்ஷ்டமே யாகும் என்று ஞாபகப்படுத்திக் கொள்.28 ★ ★ ★ உண்பதற்கும் குடிப்பதற்கும் இயற்கை ஓர் எல்லை வைத்திருக்கிறாள். ஆனால், நீ அதை மீறிவிடுகிறாய். வேண்டியதற்கு அதிகமாக உண்கிறாய், குடிக்கிறாய். ஆனால், வேலை செய்வதிலோ நீ இவ்வாறு அளவுக்கு மீறுவதைக் காணோம். அம்மட்டோ! உனக்குச் சாத்தியமான அளவுகூட நீ வேலை செய்வதில்லை. 29 ★ ★ ★ ஒரு வேலையைச் செய்வதோ அல்லது ஒரு வார்த்தையைச் சொல்வதோ நல்லதாகுமானால், அப்படிச் செய்வதையும் சொல்வதையும் கெளரவத் தாழ்வாகக் கருதாதே. 30 ★ ★ ★ மனிதர் வியக்கக்கூடிய கூரிய அறிவு உனக்கில்லை என்ற உனக்குத் தோன்றுகிறது. அந்த அறிவு இல்லையானால் பாதகமென்ன? 'உண்மை, திருப்தி, பொறுமை போன்ற வேறு எத்தனையோ குணங்களைப்பற்றி, “இவை என் சுபாவத்தில் இல்லை, அக்குணங்கள் எனக்குக் கிட்டா” என்று நீ சொல்லிக்கொள்ள முடியாது. அவைகளை அடைதல் உனக்குச் சாத்தியமான காரியமேயாகும். 31 ★ ★ ★ அயலான் ஒருவனுக்கு ஓர் உதவி செய்து விட்டால் ஒருவகை மனிதன் அதைத் தான்செய்த ஒரு பெரும் புண்ணியம் எனக்கொண்டு, தான் ஒரு வள்ளல் போல நடந்து கொண்டு விட்டதாக நினைத்துக் கொள்கிறான். மற்றொருவன் அவ்வளவு தூரம் போவதில்லை; ஆனால், உதவி பெற்றவனைத் தன் கடனாளியாகக் கருதுகிறான். தான் செய்துள்ள உபகாரத்தை அவன் மறக்கிறதே யில்லை. மூன்றாவதொருவன் ஒரு விதத்தில் தான்செய்தது இன்னது என்றுகூட அறியான். பழத்தைக் கொடுத்துவிட்டு அதற்காக யாதொரு கைம்மாறும் வேண்டாத திராட்சைக் கொடி போன்றவன் அவன். பந்தயம் ஓடி வென்ற குதிரை, “இதோ என் சாமர்த்தியத்தைப் பார்!” என்று சொல்வதில்லை. வேட்டையைப் பிடித்து விட்ட நாய், “என் செளரியத்தைப் பார்!” என்று கூறுவதில்லை. தேன் கூட்டி வைத்து விட்ட வண்டு, “என் சக்தியைப் பார்!” என்று பெருமை பேசிக் கொள்வதில்லை. அவைகளைப் போலவே, சால்புடைய ஒருவன் ஒரு நற்காரியம் செய்தவுடன் எல்லோரையும் அழைத்து, “நான் செய்த காரியத்தைப் பாருங்கள்“ என்ற மார்பு தட்டிப் பேசமாட்டான். மற்ற, ஒரு தடவை பழம் தந்துவிட்ட திராட்சைக் கொடியானது வாய் பேசாமல் மறுபடியும் காலக்கிரமத்தில் பழங்களை உயிர்க்கும் காரியத்தில் இறங்குவது போல, அவனும் இன்னொரு புண்ணிய காரியத்தில் பிரவேசித்து விடுகிறான்.32 ★ ★ ★ காரியங்களை அறநெறிப்படி செய்வதில் ஏதாவது ஒரு விஷயத்தில் தவறிப் போனால் அதற்காக வெறுப்பாவது, அதைரியமாவது, அதிருப்தியாவது அடைய வேண்டாம். அறநெறியினின்றும் ஒருகால் வழுவி விட்டாயானால் திரும்பவும் அவ் அறநெறிக்கு வந்து சேர்ந்துவிடு. நீ செய்யும் காரியங்களிற் பெரும்பாகம் மனித இயற்கைக்குப் பொருந்தியதா யிருந்தால் அதுவே பெரிய காரியம் என நினைத்துத் திருப்தியாயிரு. ஆனால் நீ மீண்டு வந்து சேரும் அறநெறியை மாத்திரம் மேலும் மேலும் விரும்பு.33 ★ ★ ★ இப்பொழுது மனத்தில் நான் எண்ணிக் கொண்டிருப்பது என்ன? இப்பொழுது என் மனத்தின் ஸ்வரூபம் என்ன? அது தற்பொழுது குழந்தையின் மனத்தைப் போன்றுளதா? அல்லது ஒரு யௌவன புருஷனுடைய மனத்தைப் போன்றுளதா? அல்லது ஒரு கொடுங்கோல் மன்னன் மனத்தைப் போன்றுளதா? அல்லது சாதாரணமான மிருகத்தின் மனத்தைப் போன்றுளதா? அல்லது ஒரு கொடிய மிருகத்தின் மனத்தைப் போன்றுளதா? இவ்வாறு அப்போதைக்கப் போது நான் சிந்தித்துப் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.34 ★ ★ ★ உன் மனத்தில் வழக்கமாய் நிகழும் எண்ணங்கள் எத்தகையவோ, அத்தகையதே உன் மனத்தின் லட்சணமும்; ஏனெனில் எண்ணங்களின் சாயம் ஆன்மாவுக்கு ஏறுகின்றது. ஆகையால் எப்பொழுதும் ஆன்மாவை நல்லெண்ணங்களின் சாயத்தில் தோய்க்க வேண்டும்.35 ★ ★ ★ ஒரு மனிதன் ஓர் இடத்தில் வாழ்தல் சாத்தியமானால் அவ்விடத்தில் யோக்கியமாக வாழவுங்கூடும். ஆனல் அரண்மனையில் வாழவேண்டியிருக்கிறதே அதற்கும் சொல்லுவேன், அரண்மனையிலுங்கூட நீ யோக்கியமாக வாழக்கூடும். 36 ★ ★ ★ அசாத்தியமானதை நாடுவது பைத்தியமாகும்; ஆனால், தீயோர் அவ்விதம் நாடாமல் இருக்க முடியாது.37 ★ ★ ★ ஒருவன் எவ்வளவு தாங்க முடியுமோ அவ்வளவுக்கு மேலான கஷ்டம் அவனுக்கு ஏற்படுவதில்லை.38 ★ ★ ★ ராஜ்யத்திற்கு எதனால் தீங்கு விளையாதோ அது தனிப் பிரஜை எவனுக்கும் கேடு செய்யாது. ராஜ்யத்திற்கும் யாரேனும் ஒருவனால் ஒரு தீங்கு செய்யப்பட்டால் அவன்மீது கோபம் கொள்ளாதே. அவன் செய்யும் தவறை அவனுக்கு எடுத்துக் காட்டு.39 ★ ★ ★ ‘அதிர்ஷ்டசாலி’ என்றால் நல்லதிர்ஷ்டத்தைத் தேடிக்கொண்டவன் என்றே பொருள். ‘அதிர்ஷ்டம்’ என்பது நல்லெண்ணங்கள், நல்லுணர்ச்சிகள், நற்செய்கைகளேயாகும்.40 ★ ★ ★ தீமை செய்தாரை ஒறுத்தற்குச் சிறந்த மார்க்கம் அவர் போல் நடவாதிருப்பதேயாகும்.41 ஒரு காரியத்தைச் செய்து முடிப்பது உனக்குக் கஷ்டமாயிருந்தால் அது அசாத்தியமென்று நினைத்து விடாதே. மனிதனால் செய்யக்கூடிய, மனித இயல்பிற்கு ஒத்த எதுவும் உனக்கும் சாத்தியமே என்று நினை.42 ★ ★ ★ என் எண்ணமோ அல்லது செய்கையோ தவறு என்று எனக்கு எவனாவது அறிவுறுத்துவானானால், நான் அத்தவறைச் சந்தோஷமாய்த் திருத்திக்கொள்வேன். ஏனெனில் நான் சத்தியத்தையே நாடுகிறேன். சத்தியம் யார்க்கும் எக்காலத்தும் துன்பம் தந்ததில்லை. குற்றத்திலும் அறியாமையிலும் வாழ்பவன்தான் உண்மையில் கஷ்டப்படுபவன்.43 ★ ★ ★ என் கடமையை நான் செய்கிறேன், மற்றெதுவும் எனக்கு லட்சியமில்லை. 44 ★ ★ ★ தேவர்களை வணங்கு, மனிதர்க்கு உதவி செய். வாழ்நாள் சொற்பம். உலக வாழ்வின் பயன் ஒன்றே, அதாவது பக்தி நிறைந்த மனமும் பொது நன்மைக்குரிய செயலுமே.45 ★ ★ ★ மார்க்கன் என்ற நிலைமையில் என் ஊரும் தேசமும் ரோமாபுரி. மனிதன் என்ற முறையிலோ என் ஊரும் தேசமும் உலகமேயாகும். இவ்விரண்டுக்கும் பயன் தருவதுதான் எனக்கும் பயன் தருவதாகும்.46 உலகில் பேர் பெற்றவர்களும், பேர் பிறர்க்குத் தெரியாதவர்களும் முடிவில் மண்ணாகிவிட்டனர். அதனால் அவர்க்கு நேர்ந்த கேடு யாது? உண்மையும் நீதியும் கடைப்பிடித்து, பொய்யரிடத்தும் அநியாயஸ்தரிடத்துங்கூட அன்பு பாராட்டி வாழ்வதே உலக வாழ்வில் உயர்ந்த பயன் தருவதாகும். 47 ★ ★ ★ உனக்குச் சந்தோஷம் வேண்டுமென்று இருந்தால் உடனே உன்னுடன் வாழ்பவரின் குணாதிசயங்களைப் பற்றி நினை. ஏனெனில் நம்முடன் வாழ்பவரிடம் நற்குணங்கள் அதிகமாய் விளங்குமாயின், அத்தகைய நற்குண உதாரணங்களைப்போல் நமக்கு மகிழ்ச்சி தருவது வேறொன்றுமில்லை. ஆகையால் அவர்களை நாம் எப்பொழுதும் இதயத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். 48 ★ ★ ★ தேனீக் கூட்டத்திற்கு நன்மை தராதது தேனீக்கும் நன்மை தராது. 49 ★ ★ ★ மனிதர்களைச் சந்தோஷப்படுத்தி நம் அபிப்பிராயப்படி நடக்கச் செய்ய முயல்வோம். ஆனால் நீதிமுறை அவர்களுடைய விருப்பத்துக்கு விரோதமாக நம்மை நடக்கச் சொன்னால், அப்படி அவர்களுக்கு விரோதமாகவும் நடப்போம். ஆயினும், யாரேனும் பலாத்காரத்தால் நம் காரியத்துக்குத் தடைசெய்தால், சாந்தியும் திருப்தியுமுற்று, உடனே அத்தடையை வேறோர் நற்குணத்தை அனுஷ்டிப்பதற்கு உதவியாகச் செய்து கொள்வோம். நாம் செய்யமுடியாத காரியத்தைச் செய்ய விரும்பவில்லை, செய்யக்கூடிய காரியத்தையே செய்ய முயன்றோம் என்று ஞாபகத்திலும் வைத்துக்கொள்வோம்.50 ★ ★ ★ புகழை விரும்புபவன் பிறருடைய தாளாண்மையைத் தனக்குத் தாயகமாகக் கருதுகிறான். இன்பத்தை விழைபவன் புலன் நுகர்ச்சியையே தன் நன்மையாகக் கருதுகிறான். ஆனால், அறிவுள்ளவனோ தன்னுடைய முயற்சியையே தனக்குத் தாயகமாகக் கருதுகிறான்.51 ★ ★ ★ மக்கள் சிறப்பெல்லாம் அவர் விரும்பி நாடும் விஷயங்களின் சிறப்பளவே யாகும்.52 ★ ★ ★ தீங்கிழைத்தவரிடத்திலும் அன்பு காட்டல் மனிதன் ஒருவனுக்குத்தான் சாத்தியமாகும். ஒருவன் நமக்குத் தீங்கிழைக்கும் பொழுது, அவன் நமக்குச் சகோதரன்தான் என்றும், அறியாமையால்தான் அவன் அவ்விதம் செய்கிறான் என்றும், அவனும் நாமும் வெகு சிக்கிரத்தில் இறந்து ஒழிவோம் என்றும், அவன் தீங்கிழைத்தும் நம் ஆன்மாவிற்கு யாதொரு பங்கமும் ஏற்படவில்லை என்றும் நாம் கருதினால் உடனே அவன்பால் நமக்கு அன்பு பிறக்கும். 53 குற்றம் செய்யும்பொழுது குற்றம் செய்கிறோம் என்று உணரும் அறிவு போய்விட்டால், அதன்பின் உயிர் வாழ்வதால் என்ன பயன்? 54 ★ ★ ★ ஒருவன் உனக்குத் தீங்கு செயதால், உடனே தர்ம அதர்மத்தைப்பற்றி அவன் என்ன அபிப்பிராயம் வைத்துக்கொண்டு அத்தீங்கு செய்தான் என்று யோசித்துப்பார். அவ்வாறு யோசித்துப் பார்த்தால், உனக்கு ஆச்சரியமாவது கோபமாவது வராது ; அவனிடம் உனக்கு இரக்கமே உண்டாகும். ஏனெனில் யோசித்துப் பார்க்கும்பொழுது அவன் செய்ததையோ அல்லது அதைப் போன்ற ஒன்றையோ நீயே நல்லதென்று கருதலாம் ; அப்படியானால் அவனை மன்னிப்பது உன் கடன். அல்லது அவன் தர்மம் என்று நினைப்பதை நீ அதர்மமாகவும், அவன் அதர்மம் என்று நினைப்பதை நீ தர்மமாகவும் கருதலாம். அப்படியானால் தர்ம அதர்மப் பகுத்தறிவு இல்லாத அவனைத் துவேஷிக்க மாட்டாய்.55 ★ ★ ★ உன்னிடம் இருப்பவைகளைப்பற்றி நினைக்கும் அளவு உன்னிடம் இல்லாதவைகளைப்பற்றி நினையாதே. உன்னிடம் இருப்பவைகளிலும் சிறந்தவைகளைத் தேர்ந்து அவைகள் உன்னிடம் இல்லாவிட்டால் எவ்வளவு ஆவலுடன் அவைகளை நீ தேடுவாய் என்று சிந்தித்துப் பார். ஆயினும் அப்படிச் சந்தோஷப்படுத்திக் கொண்டு அவைகளை அளவுக்கு மிஞ்சி மதித்து விடாதே ; மதித்து விட்டால் அவைகளை இழக்க நேரிடும் பொழுது மிகுந்த துயரம் அடைவாய்.56 ★ ★ ★ உன்னுள்ளேயே தனித்திரு. நீதியானதைச் செய்வதில் திருப்தியடைவதும் அதனால் மனச்சாந்தி பெறுவதும் ஆன்மாவின் இயற்கையாகும். 57 ★ ★ ★ உன் உள்ளே நோக்கி வருவாய். சகல நன்மைகளின் ஊற்றும் உன் உள்ளேயே இருக்கின்றது. அந்த ஊற்று தோண்டத் தோண்ட ஊறிப் பொங்கி வரும்.58 ★ ★ ★ ஒருவன் பரமஹம்சனா யிருப்பினும் அவனை மனிதர் அவ்வாறு மதியாதிருப்பது எப்பொழுதும் சாத்தியம் என்பதை உணர்வாய். 59 ★ ★ ★ இன்ப வாழ்விற்கு அவசியமான பொருள்கள் மிக மிகச் சொற்பமே.60 *** ஒவ்வொரு நாளும், “இது என் இறுதி நாளாகப் போய்விடலாம்” என நினைத்தே அதற்கேற்ப நடந்து கொண்டு, பரபரப்பும், சோம்பலும், வஞ்சகமும் இல்லாமல் ஒழுகுபவன் தான் ஒழுக்கம் பூரணமாய் நிறைந்தவன்.61 இதைவிட ஹாஸியகரமான விஷயம் வேறென்ன? தன் தீக்குணத்தினின்று தப்பி ஓடுவது சாத்தியமாயிருக்க ஒருவன் அதனின்று தப்பி ஓடப் பார்க்காமல், தப்பி ஓடுதல் அசாத்தியமாயிருக்கிற பிறனுடைய தீமையினின்றும் தப்பி ஓடப் பார்க்கிறான். 62 ★ ★ ★ நீ ஒருவனுக்கு ஒரு நன்மை செய்கிறாய், அவன் அந்த நன்மையைப் பெறுகிறான். இவ்விரண்டு நன்மைகளும் போதாவோ? மூன்றாவது ஒன்றை ஏன் எதிர் பார்க்கிறாய்? மூடர்தான் புகழாவது கைம்மாறாவது எதிர்பார்ப்பார். 63 ★ ★ ★ பயனுடையதைப் பெறுவத்ற்கு யாரும் சலிப்பதில்லை. இயற்கையின்படி நடப்பதுதான் பயன் தருவதாகும். ஆயின், பிறர்க்கு உபகாரம் செய்து அதனால் ஆன்ம லாபம் பெறுவதற்கு நீ சலியாதே.64 ★ ★ ★ பிறர் என்ன நினைப்பர் என்ற விசாரத்தை விட்டுவிடு. உன் மெய் இயல்பாகிய ஆன்மா கூறுவது போல் இனி வாழ்வதிலேயே திருப்தியுற்றிரு. ஆகையின் உன் ஆன்மா கூறுவதைக் கவனி; வேறொன்றிலும் உன் மனத்தைச் சிதற விடாதே. இன்பத்தை எங்கு தேடி அலைந்தாலும் அதைத் தர்க்கத்திலும் காண முடியாது, புகழிலும் காண முடியாது, செல்வத்திலும் காண முடியாது, உலகானு பவத்திலும்திலும் காண முடியாது. மனிதனுடைய மெய் இயல்பு கூறுவதுபோல் நடப்பதிலேயேதான் இன்பத்தைக் காண முடியும். அந்த மெய் இயல்பு கூறுவது என்ன? மனிதனை நீதிமானாகவும் ஆண்மையுடையவனாகவும் இச்சையடக்க முள்ளுவனாகவும் எது செய்கிறதோ அதுவே அவனுக்கு உறுதி பயப்பது என்பதாம். 65 ★ ★ ★ படிக்க நேரமில்லை என்று கூறுகிறாய். இருக்கட்டும். ஆனால் அகந்தையை அடக்கவும், இன்ப துன்பங்களை அலட்சியம் செய்யவும், புகழை விரும்பாதிருக்கவும், மூடர்களையும் நன்றி கொல்பவர்களையும் வெறுக்காதிருக்கவும், அவர்களைக் காப்பாற்றவும் நேரமில்லை என்று நீ கூற முடியாது. 66 ★ ★ ★ பச்சாத்தாபம் என்பது பயன் தருவ தொன்றை அலட்சியம் செய்ததற்காகத் தன்னைத் தான் கடிந்து கொள்வதாகும். ஆனால் நல்ல காரியம்தான் பயன் தரும். முற்றிலும் நல்ல மனிதன் அதையே நாடுவான். அத்தகைய மனிதன் உடற் சுகத்தைத் தவிர்த்ததற்காக ஒரு பொழுதும் பச்சாத்தாபப்படமாட்டான். ஆகையால் உடற் சுகம் நல்லதுமன்று, பயன் தருவதுமன்று.67 ★ ★ ★ குற்றத்தைக் குற்றமன்று என்று சாதிப்பதுதான் சுதந்திரம் என நினைக்கிறாய். ஆனால் உன் குற்றத்தை எடுத்துக்காட்டிக் திருத்துபவன் சொல்வதை ஏற்றுக் கொண்டு உன் பழைய அபிப்பிராயத்தை விட்டு அவன் சொற்படி நடப்பதும் சுதந்திரத்திற்கு விரோதமன்று என்பதை மறவாதே. ஏனெனில் உன்னுடைய அறிவின்படி நிதானிக்கும் செயல் உன்னுடையதேயாகும். 68 ★ ★ ★ 69 ★ ★ ★ 70 ★ ★ ★ உலகத்தில் சம்சா வாழ்க்கையில் திருப்தி பெறாமல் அதை விட்டு அகல்பவனும், அந்த வாழ்க்கைக்கு ஏலாதன செய்பவனும் உடலினின்றும் வெட்டி எறியப் பட்டதோர் உறுப்புப் போல்வான். ஜன சமூகத்தில் ஒரு பாகமான மனிதன் அதனை விட்டு விலகிவிட்டாலும் மறுபடியும் அதனுடன் சேர்ந்து ஒன்றாவதற்குரிய சக்தி அவனுக்கு உண்டு. இவ்விதம் பிரிந்து பின் சேர்ந்து கொள்வதற்கான சக்தியைக் கடவுள் மனிதனுக்குத் தவிர வேறெதற்கும் தரவில்லை. ஜன சமூக வாழ்விலிருந்து பிரியாமலே இருப்பதற்கும், பிரிந்தால் பின் சேர்ந்துகொள்வதற்கும் ஜீவ சிருஷ்டியில் வேறெதற்கும் தராத சக்தியை மனிதனுக்கு மட்டுமே தந்தருளும் கடவுளது கருணையின் திறம் என்னே ! 71 ⁕⁠⁕⁠⁕ மனிதனுடைய சுபாவத்தில் நியாயத்திற்க்கு விரோதமாக ஒரு நற்குணம் இருப்பதாக நான் மதிப்பதில்லை. ஆனால் போக விருப்பத்திற்கு விரோதமான குணமொன்று எனக்குத் தெரியும், அதுதான் இந்திரிய நிக்கிரகம் என்பது. 72 ⁕⁠⁕⁠⁕ நீ என்னை எங்கேதான் கொண்டுபோய் விட்டாலும் சரி. என் அறிவு மட்டும் தன் இயற்கையின்படி உணரவும் நடக்கவும் கூடுமாயின், அங்கே நான் திருப்தியோடு, அதனால் ஏற்படும் மன அமைதியோடு வாழ்வேன், என் ஆன்மா சோர்ந்தும் பயந்தும் துயருழந்தும் இருப்பதற்கு இடமாற்றம் காரணமாகலாமோ ? 73 ⁕⁠⁕⁠⁕ மனித இயற்கைக்கு ஒத்ததே மனிதனுக்கு நிகழும், மாட்டின் இயற்கைக்கு ஒத்ததே மாட்டுக்கு நிகழும், திராட்சையின் இயற்கைக்கு ஒத்ததே திராட்சைக்கு நிகழும். அவ்விதமே ஒவ்வொன்றுக்கும் அதனதன் இயற்கைக்கு ஒத்ததே வழக்கமாக நிகழுமானால் நீ ஏன் முறையிடுகின்றாய் மனிதனாகிய உன்னால் பொறுக்க முடியாத தொன்றும் உலக இயற்கையில் நிகழாது. 74 ★ ★ ★ உனக்கு வருத்தம் உண்டாக்கும் சம்பவங்கள் நிகழுங் காலத்தில் முதல் தோற்றம் உனக்கு என்ன அறிவிக்கிறதோ அதற்கு அதிகமாக ஒன்றும் நினைத்துக் கொள்ளாதே. உதரணமாக ஒருவன் உன்னே இழித்து உரைத்ததாக வேறொருவன் உன்னிடம் சொல்லுகிறான் என்று வைத்துக்கொள்வோம். ஆனால் அதிலிருந்து உனக்குத் தீங்கு விதைத்ததாக அவன் சொல்வதில்லை. என் குழந்தை வியாதியாயிருக்கிறதை காண்கிறேன்.ஆனால் அதற்கு அபாயமா யிருக்கிறது என்று என் பொறிகள் எங்கே எனக்கு அறிவிக்கின்றன? ஆதலால் இத்தகைய சந்தர்ப்பங்களில் முதல் தோற்றத்தோடேயே எப்பொழுதும் நின்றுவிடு. உன் மனத்தில் எழுகிற எண்ணங்களில் எதையும் நீயாகக் கொண்டுபோய் அதனோடு சேர்க்காதே. அவ்விதம் சேர்க்காமல் இருந்தாயானால் உனக்கு ஒரு துன்பமும் ஏற்படாது. 75 ★ ★ ★ பாகற்காய் கசக்கிறது; அதை எறிந்துவிடு. பாதையில் முட்செடிகள் உள ; அவைகளை விட்டு விலகி நட. இது போதும். ஏன் இத்தகைய பொருள்கள் உலகில் உண்டாக்கப்பட்டன என்று கேட்கப்புகாதே76 ★ ★ ★ மனிதர் உன்னைக் கொல்லலாம், வெட்டலாம், சபிக்கலாம். ஆனால் உன் மனம் சுத்தமாகவும் அடக்கமாகவும், நீதியாகவும், அறிவுள்ளதாகவும் இருப்பதை அவர்கள் செய்கை எவ்வாறு கடுக்க முடியும் ? சுத்தமான தெளிந்த நீரையுடைய சுனையொன்றின் அருகே நின்று அதைச் சபித்தாலும் அது பருகத் தக்க நீரைத் தராது இருந்துவிடாது. அதனுள் அசுத்தங்களை எறிந்தாலுங்கூட அது அவற்றை வெளியே தள்ளி விட்டுத் தான் சுத்தமாகவே விளங்கி நிற்கும். நிரந்தரமாக ஆனந்தத்தைப் பெருக்கிக்கொண்டே வரக்கூடிய அருவி உன்னுள்ளே எவ்வாறு உண்டாகும்? அதற்கு ஒரே ஒரு வழிதான் உண்டு. அதாவது, ஒவ்வொரு நிமிஷமும் உன்னிடத்தில் சுதந்திரமும், திருப்தியும், அடக்கமும், ஆடம்பரமின்மையும் உண்டாக்கிக் கொள்ளவேண்டும்.76 ★ ★ ★ உலகம் இன்னது என்பதை அறியாதவனுக்கு உலகத்தில் அவனுடைய ஸ்தானம் இன்னது என்றும் தெரியாது. உலகம் எதற்காகத் தோன்றி இயங்குகிறது என்று அறியாதவனுக்குத் தான் யாவன் என்பதும் உலகம் இத்தன்மையது என்பதும் தெரியாது. இவற்றில் ஒன்றேனும் அறியாதவனுக்குத் தான் எதற்காக வாழ்கிறான் என்பதைக்கூடச் சொல்ல திறமிராது. அப்படியிருக்கத் தாங்கள் யாவர், உலகில் தங்கள் ஸ்தானம் என்ன என்று அறியாதவர்களுடைய புகழ்ச்சியை விரும்புபவனேப்பற்றி என்ன நினைப்பது?78 ★ ★ ★ பொதுவாக ஒரு மனிதனுடைய தீயொழுக்கத்தினால் உலகிற்கு யாதொரு கேடுமில்லை. முக்கியமாக ஒருவன் செய்யும் தீமை வேறொருவனைக் கெடுத்துவிடுவதில்லை. தான் செய்யாமல் நிறுத்திவிடக்கூடிய தீமையை எவன் நிறுத்தாமல் செய்கிறானோ அவனுக்குக்தான் அத்தீமை கேடு தருகின்றது. 79 ★ ★ ★ மரணத்தை இகழாதே. இயற்கை அமைப்பில் நிகழும் காரியங்களில் அதுவும் ஒன்றென்று உணர்ந்து கொண்டு அதை ஏற்றுக்கொள். எப்படி இளமை, முதுமை, நரை மக்கட்பேறு முதலியன இயற்கையின் நிகழ்ச்சிகளோ அப்படியே மரணமும் இயற்கையின் நிகழ்ச்சியேயாகும். ஆதலால், கருப்பையிலிருந்து குழந்தை வெளிவருவதற்கு எப்படிக் காத்திருக்கிறோமோ அப்படியே நம் உடம்பிலிருந்து உயிர் வெளியே போவதற்கும் காத்திருக்க வேண்டும். அப்படிக் காத்திருப்பது அறிவாளிக்கு அடுத்ததே. அறிவாளிக்கு அடுக்காதது மரண சம்பந்தமாய் ஆத்திரப்படுதல், அல்லது அலட்சியமாயிருத்தல், அல்லது அதை இகழ்தல் இதுவேயாகும். 79 ★ ★ ★ மனிதர் செயலைக் கண்டு கோபமடைதல் ஒழுங்கன்று. அவர்க்குத் தீங்கு வராமல் காத்து அவர் தீச்செயல்களைச் சாந்தமாய்ப் பொறுத்துக் கொள்ளுதலே கடன். 81 ★ ★ ★ தீங்கிழைப்பவன் தனக்கே தீங்கிழைக்கிறான். அநீதி செய்பவன் அதனால் தன்னையே கெட்டவனாக்கிக் கொள்வதால் தனக்கே அநீதி செய்துகொள்கிறான்.82 ★ ★ ★ ஒருவன் செய்யத் தக்கவைகளைச் செய்யாமையாலும் அநீதி செய்கிறான், செய்யத் தகாதவைகளைச் செய்வதாலும் அநீதி செய்கிறான். 82 ★ ★ ★ உன்னுடைய தற்கால அபிப்பிராயம் அறிவை ஆதாரமாகக் கொண்டதாயும், உன்னுடைய நடத்தை சமூகத்தின் நன்மையை நாடியதாயும், உன்னுடைய மனப்பாங்கு எது நடந்தாலும் சம நிலைமையை விட்டு மாறாததாயும் இருப்பின் அதுவே போதும். 82 ★ ★ ★ ஒரேவித குணமுடையவைகள் எல்லாம் தங்களைப் போலொத்த குணமுடையவைகளோடு சேர்வதே இயற்கை. மண் மண்ணோடும், நீர் நீரோடும், காற்று காற்றோடும் சேர விரும்புகின்றன. அவைகளைப் பிரித்து வைக்க விரும்பினால் அதற்குப் பலாத்காரம் தேவை. பதார்த்தங்களும் ஜந்துக்களும் எவ்வளவுக்கு உயர்ந்தவையா யிருக்கின்றனவோ அவ்வளவுக்குத் தங்களைப் போன்றவைகளோடு இயையும் தன்மையுள்ளனவா யிருக்கின்றன. கற்களைவிட மரங்களிலும், மரங்களைவிட மிருகங்களிலும், மிருகங்களைவிட மனிதர்களிலும் இத்தன்மை மிகுந்து விளங்குகின்றது. மிக உயர்ந்தவைகள் பிரிந்தே யிருந்தாலும் அவைகளிடத்தில் ஒற்றுமை இருக்கவே செய்கின்றது. ஆகையால் மனிதர்களிடம் இக்குணம் கட்புலனாகாவிடினும், அவர்கள் வேண்டுமென்று அக்குணத்தை ஒழிக்க முயன்றாலும், அக்குணம் அவர்களைப் பிணித்தே நிற்கின்றது. மக்கள் இயல்பு அவர்களிலும் வலிது. கவனித்துப் பார்த்தால் மண் மண்ணோடு சேராமலிருக்கலாம், ஆனால் மனிதன் மனிதனை விட்டு அறவே பிரிந்திருக்க முடியாது என்பது தெளிவாய் விளங்கும். 85 உன்னால் கூடுமானால் குற்றம் செய்பவரை உபதேச மூலமாக நன்னெறியில் உய்ப்பாய் உன்னால் கூடாதனால்,பிறர் குற்றத்தைப் பொறுப்பதற்காகவே உனக்குத் தயை என்னும் குணம் கொடுக்கப் பெற்றிருக்கிறது என்பதை ஞாபகப்படுத்திக் கொள். கடவுளரும் அத்தகையோர்க்குத் தயை காட்டுகின்றனர். சில காரணத்தை யிட்டுத் தேக சுகம், செல்வம் முதலியன கிடைக்கும்படி உதவியும் செய்கின்றனர். அவர்கள் அவ்வளவு அன்புடன் இருக்கின்றனர். உனக்கும் அப்படியிருக்கச் சக்தியுண்டு, உன்னைத் தடுப்பவர் யார், சொல்வாய் ? 86 இன்று துன்பத்தினின்று விலகிக்கொண்டேன் - அப்படியன்று - துன்பத்தை விலக்கிவிட்டேன், ஏனெனில் துன்பம் எனக்கு வெளியே இருக்கவில்லை. என் அபிப்பிராயங்களால் என்னகத்தேதான் உண்டாயிருந்தது. 87 ★ ★ ★ நீ வேலை செய்யும்போது கதியற்றவன்போலச் செய்யாதே. பிறர் உன்மேல் இரங்கவேண்டுமென்றாவது, அல்லது உன்னைப் போற்றவேண்டு மென்றாவது செய்யாதே. பொது வாழ்விற்குத் தக்கதைச் செய்வதும் தகாததைச் செய்யாதிருப்பதுமே உன் மனத்தைச் செலுத்தவேண்டிய விஷயமாகும். 88 ★ ★ ★ மனிதர்களுடைய மூலாதாரக் கொள்கைகளை ஆழ்ந்து நோக்கு. அப்பொழுது எத்தகைய நியாயாதி பதிகளுக்கு நீ பயப்படுகிறாய் என்பதையும், தங்களுக்கே அவர்கள் எத்தகைய நியாயாதிபதிகளா யிருக்கின்றனர் என்பதையும் எளிதில் அறிந்துகொள்வாய். 89 ★ ★ ★ ஒருவன் குற்றம் செய்தால் அதனால் வரும் கேடு அவனுடையதே. ஒருவேளை அவன் குற்றமே செய்யாமலு மிருக்கலாம். 90 ★ ★ ★ தேவர்களுக்குச் சக்தியுண்டா, இல்லையா ? சக்தி இல்லையானால் அவர்களை நோக்கி ஏன் பிரார்த்தனை செய்கிறாய்? சக்தி இருக்குமானால் பயமும், ஆசையும், கிலேசமுமின்றி யிருக்கச் சக்தியளிக்கும்படி பிரார்த்தனை செய்வதை விட்டு, உனக்கு ஏதாவது வேண்டும் அல்லது வேண்டாம் என்று ஏன் பிரார்த்தனே செய்கிசெய்கிறாய்? 91 யாராவது ஒருவன் உனக்குக் கேடு செய்தால் அத்தகைய மனிதன் உலகில் இல்லாமலிருக்க முடியுமா என்று உடனே உன்னைக் கேட்டுக்கொள். முடியாது. ஆதலால் முடியாத காரியத்தை விரும்பாதே. அத்தகைய மனிதர் உலகில் இல்லாமலிருக்க முடியாது என்று ஞாபகப்படுத்திக்கொண்ட அளவில், ஒவ்வொரு மனிதனிடமும் உனக்கு அன்பு உண்டாய்விடும். மேலும் பிறன் உனக்குச் செய்யக்கூடிய ஒவ்வொரு தீங்கையும் தாக்கி வெல்வதற்கு இயற்கை உனக்கு என்னென்ன நற்குணங்கள் அளித்திருக்கிறாள் என்பதையும் நினைத்துப் பார். அறியாதவனை வெல்வதற்குப் பொறுமை தந்திருக்கிறாள். இதே மாதிரி ஒவ்வொரு தீக்குணத்தையும் வெல்வதற்கு ஒவ்வோர் சக்தியைத் தந்து வைத்திருக்கிறாள். எந்தச் சந்தர்ப்பத்திலும், நெறிபிறழ்ந்து நடக்கும் மனிதனை உபதேசத்தால் திருத்த உன்னால் முடியும். ஏனெனில் குற்றம் செய்யும் ஒவ்வொரு மனிதனும் தன் லட்சியத்தை அடையாது நெறி தவறியவனே. மேலும் உனக்கு என்னதான் தீங்கு விளைந்து விட்டது? குற்றம் செய்தவனாகக் கருதி நீ கோபப்படும் எவனும் உன் ஆன்மாவைக் கெடுக்கக்கூடிய தொன்றும் செய்துவிடவில்லை. தீங்கிற்கு ஆதாரம் உன் மனமே. அறிவு இல்லாதவன் ஒருவன் அறிவு இல்லாதவன் செய்யக்கூடிய காரியத்தைச் செய்வதில் என்ன ஆச்சரியம்? அறிவு இல்லாதவன் அவ்விதந்தான் செய்வான் என்று முன்கூட்டித் தெரிந்து கொள்வதற்குரிய அறிவு உனக்கு இருந்தும், அவன் அவ்விதம் செய்யாமலிருக்க எதிர்பார்த்தது உன் குற்றமன்றோ?92 ஒருவனை நன்றி கெட்டவன் என்று சொல்வதற்கு முன், உன் இதயத்தையே சோதித்துப் பார். ஒருவனுக்கு நன்மை செய்யும் பொழுது கைம்மாறு கருதாமல் செய்திருக்க வேண்டும். அல்லது நீ விரும்பும் சகல லாபமும் நீ செய்யும் காரியத்தாலேயே உனக்குக் கிடைக்கக்கூடிய முறையில் அதைச் செய்திருக்க வேண்டும். அவ்வாறில்லையாயின் குற்றம் உன்னுடையதே. மேலும் ஒருவனுக்கு நீ ஒரு நன்மை செய்த பிறகு உனக்கு வேறென்ன வேண்டும்? மெய் இயல்புக்கு ஒத்த காரிய மொன்றைச் செய்துவிட்டோம் என்று உனக்குத் திருப்தி ஏற்படவில்லையா? கண் பார்ப்பதற்கும், கால் நடப்பதற்கும் கூலி விரும்பினாற் போல நீயும் அதற்குக் கூலியும் விரும்புகிறாயோ? இந்த உறுப்புக்கள் எந்தக் காரியத்துக்காகச் சிருஷ்டிக்கப்பட்டனவோ அந்தக் காரியத்தைச் செய்வதிலேயே பலனடைகின்றன. அது போல் மனிதனும் பிறர்க்கென வாழவே சிருஷ்டிக்கப் பட்டிருக்கிறான், பிறர்க்கென வாழ்வதிலேயே பலனடைகிறான்.93 ★ ★ ★ ஒருவன் தவறு இழைத்தால் அவன் குற்றத்தை அவனுக்கு அன்புடன் உணர்த்து. உன்னால் முடியாவிட்டால் உன்னையே குறைகூறிக்கொள். அல்லது உன்னைக் கூடக் குறைகூறிக் கொள்ளாதே. 94 ★ ★ ★ உலகில் சகல பொருள்களும் ஒன்று மற்றொன்றாய் மாறி வருகின்றது என்று இடைவிடாது சிந்தனை செய். அதனால் பெருந்தகைமை பிறக்கும். அவ்வாறு சிந்தித்து வரும் மனிதன் சரீர ஞாபகமே இல்லாமற் போய் விடுகிறான். தவிர, இவ்வுலகத்திலுள்ள மனிதரையும் பொருளையும் விட்டுவிட்டுத் தான் மரித்துப் போதல் திண்ணம் என்பதை உணர்ந்து அவன் பிரவர்த்தியில் நீதியை அனுசரித்தும், பிறவற்றில் இயற்கையைத் தழுவியும் நடப்பதிலேயே தன் வாழ்நாள் முழுவதையும் கழிப்பான். நீதியான நடையையும் நிகழ்வதில் திருப்தியையும் கைக்கொண்டதால், அவன், பிறர் என்ன நினைப்பர், என்ன சொல்வர், என்ன செய்வர் என்பதைக் கனவிலும் கருதான். கடவுள் நெறியைக் கடைப்பிடித்து ஒழுகுவதைத் தவிர வேறொன்றும் விரும்பான். 95 ★ ★ ★ 96 ★ ★ ★ நல்ல மனிதன் என்பவன் எப்படிப்பட்டவனாய் இருக்கவேண்டு மென்பதைப் பற்றி இனிப் பேசாதே. ஆனால் நீ நல்ல மனிதனாய் இரு. 97 ★ ★ ★ உண்மை நெறி அறிந்தவனுக்கு, துக்கத்தையும் அச்சத்தையும் ஒழித்து இருக்கவேண்டுமென்று ஞாபக மூட்ட வெகு சாதாரணமாயிணும் ஒரு சிறு நீதி வாக்கியம் போதும். உதாரணமாக ஹோமர்[2] உரைத்த மொழியை உற்று நோக்குக : “இலைகளைக் காற்று நிலத்திடை யுதிர்க்கும் ; அவ்விதமே மனிதரும். ”98 ★ ★ ★ நோயற்ற கண், நோக்குவதற்கு உரிய அனைத்தையும் நோக்கவேண்டும். கேடற்ற காது, கேட்பதற்கு உரிய அனைத்தையும் கேட்கவேண்டும். அதுபோல் செம்மையான அறிவு, அறிதற்கு உரிய அனைத்தையும் அறியவேண்டும். அப்படிக்கன்றி, “என் அருமை மக்கள் நெடுங்காலம் வாழ்க, என்னை மனிதர் அனைனவரும் புகழ்க” என்று வேண்டும் அறிவானது, “பசுமையான பொருள்களையே பார்ப்பேன்” என்னும் கண்ணையும், “மிருதுவான பொருள்களை மட்டுமே மெல்லுவேன் ’’ என்னும் பல்லையும் ஒக்கும். 99 ★ ★ ★ ஒரு மரக்கொம்பு ஒரு கிளையினின்று வெட்டப்பட்டாலும், முழு மரத்தினின்றும் வெட்டப்பட்டதேயாகும். அதுபோல் ஒரு மனிதன் மற்றொரு மனிதனை விட்டுப் பிரிந்தாலும், ஜன சமூகத்தை விட்டுப் பிரிந்தனே யாவான். ஆனால் மரக்கொம்பை மரக்கொம்பே வெட்டுவதில்லை; அதற்கு புறம்பான மனிதன் ஒருவன் வெட்டுகிறான். மனிதனோ மற்றொருவனிடத்தினின்று தானாகவே அவனைப் பகைத்து வெறுப்பதன் மூலமாய்ப் பிரிந்து கொள்கிறான். எனினும் அவன் ஜன சமூகத்தையும் விட்டுத் தான் பிரிந்துதுவிட்டதாக உணர்வதில்லை. ஆயினும் எதனின்று பிரிகிறேமோ அதனோடு சேர்ந்து ஒன்றாவதற்குகுரிய சக்தியைக் கடவுள் நமக்கு அளித்திருக்கிறார். ஆனால், பிரிவதும் சேர்வதும் அடிக்கடி நிகழுமாயின் சேர்வது கஷ்டமான காரியமாய்விடும். மேலும், பிரியாதிருக்கும் கிளைக்கும் பிரிந்து சேர்ந்த கிளைக்கும் குணத்தில் வித்தியாசமுண்டு. மரத்தோடு ஒன்றுசேரினும் மன ஒற்றுமை இல்லை. 100 ★ ★ ★ நீதி அல்லது நடுநிலைமையே சகல நற்குணங்களுக்கும் அஸ்திவாரம். நமக்குச் சஞ்சல புத்தியும், ஜாக்ரவதைக் குறைவும், இதர விஷயங்களில் இச்சையும் எளிதில் ஏமாறுந் தன்மையும் இருப்பின் நாம் எங்கனம் நீதியாய் நடக்க இயலும் ? 101 ★ ★ ★ ஒருவன் என்னை இகழ்கிறான் என்று வைத்துக் கொள்வோம். அதற்காக விசாரப்பட வேண்டியவன் அவனேயொழிய நானில்லை. என்னுடைய விசாரம் அனைத்தும், இகழத்தக்கது எதுவும் நான் சொல்லாமலும் செய்யாமலும் இருக்கவேண்டுமே என்று கண்ணுங் கருத்துமாய் இருக்கவேண்டுவ தொன்றுதான். ஒருவன் என்னைப் பகைக்கிறான் என்று வைத்துக் கொள்வோம். அதற்காக விசாரப்பட வேண்டியவன் அவனேயன்றி நானில்லை. நான் மாத்திரம் ஒவ்வொரு மனிதனிடமும் அன்புடனும் அறத்துடனுமே நடந்து கொள்வேன். பகைத்தவனுக்குங்கூட அவன் தவறை எடுத்துக்காட்டத் தயாராயிருப்பேன். அப்படி எடுத்துக் காட்டுவதையும் பழிக்காமலும், நான் பொறுமையுடையவன் என்று பெருமை காட்டாமலும், கண்ணியமாயும் பெருந்தன்மையாயுமே செய்வேன். 102 "நான் உனக்கு வஞ்சகம் செய்யேன்” என்று கூறுபவன் எவ்வளவு கபடஸ்தன்! சொல்வது உண்மையானால் செயலில் விளங்கிவிடுமே. மொழிவது முகத்தில் விளங்கவேண்டும். காதலரின் மனத்தினில் தோன்றும் காதல் அவர்கள் கண்களில் தானாகவே தெரிந்து விடுவது போல, ஒரு மனிதனுடைய தன்மையும் அவனுடைய கண்களில் உடனே தோன்றிவிடும். 103 ★ ★ ★ ஒருவன் உனக்குத் தீங்கிழைத்தால் இவ்விதம் நினைத்துக்கொள் : நானும் எத்தனையோ தவறுகள் செய்கிறேன். மற்றவர்களைப்போல் நானும் ஒரு மனிதன். சில தவறுகளைச் செய்யாவிடினும் அவைகளைச் செய்வதற்குரிய அவா இருக்கவே செய்கின்றது. அவைகளைச் செய்யாதிருப்பதற்கும் கோழைத்தனமோ, உலகத்தாரின் மதிப்பை இழக்கக்கூடாது என்ற எண்ணமோ அல்லது இவைபோன்ற இழிந்த நோக்கங்களோ இவைதாம் காரணங்களாகும். 104 ★ ★ ★ உண்மையாகவே உனக்கு நல்ல சிந்தை இருக்குமாயின் உன்னை ஒருவரும் வெல்லமுடியாது. உனக்கு ஒருவன் தீமை செய்ய முயலும் சமயத்திலே நீ அவனிடம் அன்புகூர்ந்து, “குழந்தாய், அவ்விதம் செய்யாதே. நாம் வேறொன்றிற்காகச் சிருஷ்டிக்கப்பட்டிருக்கிறோம். உன்னால் எனக்குத் தீங்கு நிகழாது என்பது நிச்சயம். ஆனால் குழந்தாய், இச்செய்கையால் நீ உனக்கே தீங்கு விளைத்துக்கொள்கிறாய் !” என்று பட்சமாய்ப் புத்திகூறி அவன் தவறைத் திருத்துவாயானால் எவ்வளவு கெட்ட மனிதனும் உனக்குப் பணிந்து விடுவான். ஆனால் இப்படிச் செய்வதை வஞ்சகமாகவோ அல்லது நிந்தனையாகவோ அல்லது பிறர் மெச்சுவதற்காகவோ இல்லாமல், அன்புடனும் மனத்தில் துவேஷ மில்லாமலும் செய்யவேண்டும். 105 ★ ★ ★ கோபமுண்டாகும் பொழுது அதற்கு இடங்கொடுத்து விடுவது ஆண்மையன்று என்பதையும், அன்பும் சாந்தமுமே ஆண்மைக் குணங்கள் என்பதையும் ஞாபகப் படுத்திக்கொள். இவ்விரண்டு குணங்களையும் உடையவனே பலமும் மனோதைரியமும் உடையவன். காமக் குரோதத்துக்கும் அதிருப்திக்கும் ஆளானவனிடம் பலமும் மனோதைரியமும் இரா. காமக் குரோதாதிகள் அற்ற தன்மையின் அளவேதான் மனிதனக்குப் பலமுண்டு. ஆற்றாமை மாத்திரமேவீனத்துக்கு லட்சணம் என்று சொல்லுவது தவறு. கோபமும் பலவீனத்துக்கு லட்சணமாகும். ஏனெனில் துன்பத்துக்கு இடங்கொடுப்பவன், கோபத்துக்கு இடங்கொடுப்பவன் இருவரும் நோவடைகின்றனர், இருவரும் அடிமைப்பட்டுவிடுகின்றனர். 106 ★ ★ ★ ஒருவன் தன்னிடத்தில் பயனில்லாத எண்ணங்கள், சமூக ஒற்றுமையை உடைக்கும் செயல்கள், மனம் வேறு சொல் வேறாயிருத்தல், எதற்காக வேனும் தன்னைக் கடிந்துகொள்ள வேண்டியிருத்தல் ஆகிய இந்நான்கும் நிகழாவண்ணம் ஜாக்கிரதையாய்ப் பார்த்துக் கொள்ள வேண்டும். அவை நிகழுமாயின் அவைகளை உடனே அகற்றிவிட வேண்டும். மனத்தில் இல்லாததை மொழிவது நியாய விரோதமானது. எதற்கேனும் உன்னே நீயே கடிந்துகொள்ளவேண்டி வந்தால் உன் தெய்வாம்சமானது அழியுந் தன்மையுள்ள உன் ஆக்ஞைக்கும் அதன் சுகானுபவங்களுக்கும் அடிமைப்பட்டுப் போயிற்று என்று ஏற்படும். 107 ★ ★ ★ முற்காலத்தில் அறநெறி வழுவாது நின்று வந்தவர்களில் யாரேனும் ஒருவரைப்பற்றி இடைவிடாது சிந்தித்துக்கொண்டிரு.108 ★ ★ ★ கழிந்த காலத்தைக் கருத்திற் கொள்ளாது, இனி மேல் நிகழப்போவதற்கு இறைவனை நம்பி, நிகழும் இந்நாளை நீதியிலும் பக்தியிலும் கழிப்பாயாக.109 ★ ★ ★ ஒவ்வொரு மனிதனும் பிறரைவிடத் தன்னேயே அதிகமாக நேசித்தாலும், தன் அபிப்பிராயத்தை மாத்திரம் பிறர் அபிப்பிராயத்தைவிடக் குறைவாகவே ஏன் மதிக்கிறான் என்று எனக்கு விளங்கவில்லை. யாரேனும் ஒரு குரு வந்து ஒருவனே, “அப்பா, தோன்றிய மாத்திரத்திலேயே வெளியே சொல்ல விரும்பமுடியாத எண்ணம் எதையும் மனத்தினுள்ளே எண்ணுதே ’’ என்று பணித்தால் அதை அவன் ஒரு நாளைக்குக்கூடக் தாங்கான். தன் மதிப்பை விட பிறருடைய மதிப்பை நாம் அம்மட்டுக்கு விரும்புகிறோம். 110 செய்வது எதையும் முன்யோசனை இன்றியும் குறி ஒன்று இன்றியும் செய்யாதே. மேலும் செய்வதையெல்லாம் பொதுநலம் ஒன்றையே கருதிச் செய். 111 ★ ★ ★ நீ செய்யுங் காரியங்களில் யோசனையின்றியும் நீதி முறை பிறழ்ந்தும் நடவாதே. வெளியேயிருந்து உனக்கு ஏற்படும் துன்பங்களைப் பற்றியோ எனில், அவற்றை செயலாய் ஏற்படலாம், அல்லது தெய்வச் செயலாய் நிகழலாம். தற்செயலை நோதல் தவறாகும், தெய்வத்தைக் குறைகூறுதலும் பொருந்தாது. 112 ★ ★ ★ ஏதேனும் ஒன்றைக் குறித்து நீ துக்கப்படும் பொழுது இவ்விஷயங்களை மறந்துவிடுகிறாய்; நிகழ்வின எல்லாம் இயற்கை முறைப்படியே நிகழ்கின்றன. பிறருடைய தீச்செயல் உன்னைப் பாதிக்காது. நிகழ்வன அனைத்தும் முன்னும் நிகழ்ந்துள, இனியும் நிகழும். மனித ஜாதி அனைத்தும் ஒரு சமஷ்டியானபடியால் ஒவ்வொரு மனிதனுக்கும் மனித ஜாதிக்கும் நெருங்கிய உறவுண்டு. அது இரத்தத்தாலாவது இந்திரியத்தினாலாவது ஏற்பட்ட உறவன்று, அறிவாலாகிற உறவேயாகும். ஒவ்வொரு ஆன்மாவும் கடவுளின் அம்சமாகும். பிரபஞ்சம் அனைத்துமோ கேவலம் சித்த விருத்தியே. எல்லாவற்றிற்கும் மேலே இதை மறந்துவிடுகிறாய்: மனிதனுக்கு நிகழ்காலந்தான் சொந்தம். அதைத்தான் அவன் இழந்துவிடுகிறான்.113 ★ ★ ★ பெருமை நீத்ததாகப் பெருமை பேசிக்கொள்ளும் பெருமையே சகிக்கக்கூடாத பெருமையாகும்.114 “ தேவர்களை வணங்குகிறாயே, தேவர்களை எங்கு கண்டாய்? தேவர்கள் உளர் என்பதை எங்ஙனம் அறிவாய்?” என்று கேட்பவர்க்கு நான் கூறும் மறுமொழி இது: தேவர்களைக் கண்ணாலுங்கூடக் காணலாம். என் ஆன்மாவைக் காணாதிருந்தும் அதை நான் மதிக்கவில்லையோ ? அங்ஙனமே கடவுளரின் சக்தியை இடைவிடாது என் அநுபவத்தில் அறிவதால் அவர்கள் உளர் என்று உணர்ந்து அவர்களை வழிபடுகின்றேன். 115 ★ ★ ★ ஒவ்வொன்றையும் நன்றாய் ஆராய்ந்து, அதன் உண்மை என்ன, சாரம் யாது, தோற்றம் யாது என்பதை அறிந்து, மன முழுவதையும் நீதி செய்வதிலும் உண்மை உரைப்பதிலும் செலுத்துவதே மனித வாழ்வின் க்ஷேமமாகும். ஒரு நற்செய்கைக்கும் இன்னொரு நற்செய்கைக்கும் இடையில் இறைகூட வீண் நேரமின்றி இடைவிடாது நன்மை புரிந்து இன்புறுவதைவிட வாழ்வுக்கு வேறென்ன வேண்டும்? 116 ★ ★ ★ எப்படி அக்கினி தனக்குள் விழும் பொருள்களை உபயோகித்து அவற்றின் பலத்தைக்கொண்டு முன்னிலும் உயரமாகக் கிளம்புகிறதோ, அப்படியே ஆன்மாவும் தனக்குத் தடையாகவுள்ளவைகளையே தன் வளர்ச்சிக்குச் சாதனங்களாக்கிக் கொள்கிறது. நடப்பதனைத்தும் அறிவின் வளர்ச்சிக்கன்றி வேறெதற்காகத்தான் நிகழ்கின்றன? ஆகையின் ஆரோக்கியமான வயிறு தனக்குள் பெய்யப்பட்ட வஸ்துக்களை உபயோகித்துப் பலமடைவது போலும், அக்கினி தனக்குள் விழுபவற்றை உபயோகித்து ஒளி வீசுவது போலும், நீயும் உனக்கு நேரும் அனைத்தையும் உன்னுடைய தாக்கிக்கொள்வதற்கு இடைவிடாது முயல்க. 117 ★ ★ ★ சிற்றின்பம் வேண்டுவோர் சுகானுபவங்களை நாடுவது போல், நீயும் செய்யும் காரியங்கள் அனைத்திலும் மனித இயல்பிற்கு ஒத்தவைகளையே நாடும்வரை உனக்குத் துன்பம் இருந்து கொண்டேயிருக்கும். ஏனெனில், மனிதன் தன் மெய் இயல்பிற்கு ஒத்தவைகளை நாடுவதிலேயே இன்பம் விளையும் என்று கருதவேண்டும். அவ்விதம் நாடுவதும் அவனால் எங்கும் செய்யக் கூடியதே. 117 ★ ★ ★ காலையில் எழுந்திருக்க மனமில்லாதிருந்தால் கீழ்க்கண்டவாறு நினைத்துக்கொள்: “நான் ஒரு மனிதன் செய்யவேண்டிய வேலையைச் செய்வதற்காக எழுகின்றேன். அப்படியிருக்க நான் எதற்காகச் சிருஷ்டிக்கப் பேட்டேனோ அதையும், எதற்காக உயிர் வாழ்கின்றேனோ அதையும் செய்யத் தொடங்குவதில் எனக்கு ஏன் இந்த அதிருப்தி? அல்லது படுக்கையிலேயே படுத்துக்கொண்டு சுகமாய்த் தூங்குவதற்காகச் சிருஷ்டிக்கப் பட்டேனோ?”. சிலர் அவ்விதம் தூங்குவது சுகம் தரும் என்று சொல்லலாம். ஆனால் நீ வேலை செய்வதற்காகவன்றி சுகம் அநுபவிப்பதற்காகவா சிருஷ்டிக்கப்பட்டிருக்கிறாய்? செடிகளும், பறவைகளும், எறும்பும், ஈயும் அதற்கு ஏற்பட்ட வேலையைச் செய்யவில்லையா ? நீ மட்டும் ஏன் உன் இயல்பிற்கொத்ததும் மனிதன் செய்ய வேண்டியதுமான வேலையைச் செய்ய விரும்பாமல் பின்னடைகிறாய்?119 ★ ★ ★ என் தந்தையிடமிருந்து அடக்கமும் ஆண்மையும் அறிந்தேன். என் தாயிடமிருந்து பக்தி, பரோபகாரம், கெட்ட செயல்களும் கெட்ட எண்ணங்களும் நிகழாது காத்தல் செல்வருடைய வழக்கங்களை விட்டு ஆடம்பரமற்ற வாழ்வு வாழ்தல் முதலியன கற்றேன்.120 குழந்தை எப்படிப் பிறக்கிறது ? சென்னை அரசாங்கம் பரிசு தந்த நூல் கல்கி :- அற்புதங்களுள் அற்புதமாகிய சிருஷ்டித் தத்துவத்தைக் குழந்தைகளும் எளிதில் புரிந்து கொள்ளும்படி தெளிவாகவும் ரசமாகக் கதை சொல்வது போலவும் எழுதியிருக்கிறார். படங்கள் நிறைந்த நான்காம் பதிப்பு குழந்தைகள் கேள்வியும் பதிலும் அப்பாவும் மகனும் தந்தையும் மகளும் அண்ணனும் தங்கையும் சிறியவர்களும் பெரியவர்களும் அறியவேண்டிய ஆயிரம் விஷயங்களை விஞ்ஞான முறையில் படங்களுடன் சிறியவர்களும் எளிதில் தெரிந்துகொள்ளக் கூடிய தெளிவான நடையில் விளக்கும் நால்கள். டி. கே. ஸி :-குழந்தைகளுக்கு அறிவு கூர்மை அடையும், தமிழும் வந்து விடும், எதையும் துருவி ஆராயும் திறனும் உண்டாகும். ஜவஹர் கதை சென்னை அரசாங்கம் பரிசு தந்த நூல் அபூர்வமான படத்துடன் கூடிய ஆறாம்பதிப்பு மந்தரை சூழ்ச்சி கற்றோர் களிக்கும் கம்ப ராமாயணத்திலுள்ள மந்தரைசூழ்ச்சிப் படலத்தின் சுவையை யாவரும் பருகி மகிழும்படி வடித்துத் தரும் இன்பத் தமிழ் நூல். காந்தி நிலையம் தியாகராயநகர் : : சென்னை-17. பொ. திருகூடசுந்தரம் கதைபோல் சுவை மிக எழுதிய அழகான நூல்கள் ------------- விஞ்ஞானப் பெரியார்கள் ஆர்க்கிமிடீஸ், கலிலியோ, நியூட்டன், ஹார்வி, டேவி, பாஸ்டியர், ஸி. வி. ராமன், கூரி, பாரடே, போஸ் ஆகிய பத்து பேரறிஞர்களின் சரிதையும் அவர்கள் கண்ட பேருண்மைகளும் அடங்கியது. உலகப் பிரசித்திபெற்ற விஞ்ஞானியும் டில்லி தேசிய பெளதிக ஆராய்ச்சிசாலை அதிபருமான ஸர். கே. எஸ். கிருஷ்னன் முகவுரை. 70 படங்களுடன் கூடிய புதிய பதிப்பு. விஞ்ஞானம் எதற்கு? விஞ்ஞான அறிவு வாழ்க்கைக்கு அவசியந்தான என்பதுபற்றி எல்லோரும் அறிந்து கொள்ளக் கூடிய முறையில் 50 படங்களுடன் விளக்குவது. சென்னை பூசார ஆராய்ச்சி நிலையத் தலைவர் பேராசிரியர் டி. என். சேஷாத்திரி முகவுரை. விவாகமானவர்கட்கு ஒரு யோசனை ஹிந்து:---விளக்கச் சிரமமான விஷயத்தை எளிய நடையில் தெளிவாக எழுதியுளர். படிக்கச்சுவையுள்ளதும் பயன் மிகுந்ததுமான நூல். தமிழ் மக்கள் ஒவ்வொருவர் இல்லத்திலும் இடம் பெறத் தகுதியுடையது. சைவ உணவு எது? ஒரு அற்புதமான சமுதாய ஆராய்ச்சி நூல் ↑ உடலே நித்தியமானது என்று பேதைமையால் எண்ணியிருப்போருக்கு யாக்கை நிலையாமையை இதைவிடச் சிறந்த முறையில் தெளிவுபடுத்த இயலாது. உடலைத் தாங்கித் திரியும் ஆன்மா சவம் சுமக்கும் உயிராகக் கூறப்படுகிறது. ஆன்மா பிரியும்பொழுதுதான் உடல் சவமாகிறது எனினும், உடலின் சிறுமைகளையும் அழிவின் நிச்சயத்தையும் கருதி, அது எப்பொழுதுமே பிரேதம் என்று கூறப்படுகிறது. ↑ ஹோமர் - கிரேக்கர்களின் ஆதிகவி. இலியாது என்றும் ஒதிஸ்ஸே என்றும் இாண்டு மகாகாவியங்கள் எழுதியிருக்கிறார். இந்த மின்னூலைப் பற்றி உங்களுக்கு இம்மின்னூல், இணைய நூலகமான, விக்கிமூலத்தில் இருந்து கிடைத்துள்ளது[1]. இந்த இணைய நூலகம் தன்னார்வலர்களால் வளருகிறது. விக்கிமூலம் பதிய தன்னார்வலர்களை வரவேற்கிறது. தாங்களும் விக்கிமூலத்தில் இணைந்து மேலும் பல மின்னூல்களை அனைவரும் படிக்குமாறு செய்யலாம். மிகுந்த அக்கறையுடன் மெய்ப்பு செய்தாலும், மின்னூலில் பிழை ஏதேனும் இருந்தால் தயக்கம் இல்லாமல், விக்கிமூலத்தில் இம்மின்னூலின் பேச்சு பக்கத்தில் தெரிவிக்கலாம் அல்லது பிழைகளை நீங்களே கூட சரி செய்யலாம். இப்படைப்பாக்கம், கட்டற்ற உரிமங்களோடு (பொதுகள /குனு -Commons /GNU FDL )[2][3] இலவசமாக அளிக்கப்படுகிறது. எனவே, இந்த உரையை நீங்கள் மற்றவரோடு பகிரலாம்; மாற்றி மேம்படுத்தலாம்; வணிக நோக்கத்தோடும், வணிக நோக்கமின்றியும் பயன்படுத்தலாம் இம்மின்னூல் சாத்தியமாவதற்கு பங்களித்தவர்கள் பின்வருமாறு: Athithya Kaniyam Arularasan. G Deepa arul kaniyam Sgvijayakumar Balajijagadesh Info-farmer Yaazheesan Ayyan Vadivel * * * ↑ http://ta.wikisource.org ↑ http://creativecommons.org/licenses/by-sa/3.0/ ↑ http://www.gnu.org/copyleft/fdl.html