[] [cover image] மாந்தருக்குள் ஒரு தெய்வம் கல்கி கிருஷ்ணமூர்த்தி FreeTamilEbooks.com CC0 மாந்தருக்குள் ஒரு தெய்வம் 1. மாந்தருக்குள் ஒரு தெய்வம் 1. Acknowledgements: 2. முகவுரை 3. அமரர் கல்கி / ஆசிரியர் கல்கி 4. பகுதி 1 2. லண்டன் மார்க்கம் 3. ஜன்ம பூமி 4. சுங்கவரி நீக்கம் 5. சாந்தி நிகேதனம் 6. சபர்மதி ஆசிரமம் 7. இராஜ குமார் சுக்லா 8. எதிர்பாராத வெற்றி 9. கிராமத்தொண்டு 10. தொழிலாளர் தோழன் 11. கெயிரா சத்தியாக்கிரஹம் 12. யுத்த மகாநாடு 13. ரவுலட் அறிக்கை 14. ஆத்ம தரிசனம் 15. நாடு எழுந்தது! 16. இமாலயத்தவறு 17. பஞ்சாப் படுகொலை 18. அமிருதஸரஸ் காங்கிரஸ் 19. கிலாபத் கிளர்ச்சி 20. சட்டசபை பகிஷ்காரம் 21. தலைமைக் கிரீடம் 22. சுயராஜ்ய ஜுரம்! 23. வளருதே தீ 24. கராச்சி விசாரணை 25. முழத்துண்டு விரதம் 26. இதய தாபம் 27. பர்தோலி – ஆனந்த் 28. தாழி உடைந்தது! 1. பகுதி 2 29. பஞ்சாப் படுகொலை 30. அமிருதஸரஸ் காங்கிரஸ் 31. சட்டசபை பகிஷ்காரம் 32. தலைமைக் கிரீடம் 33. சுயராஜ்ய ஜுரம்! 34. வளருதே தீ 35. கராச்சி விசாரணை 36. முழத்துண்டு விரதம் 37. இதய தாபம் 38. பர்தோலி – ஆனந்த் 39. தாழி உடைந்தது! மாந்தருக்குள் ஒரு தெய்வம் மாந்தருக்குள் ஒரு தெய்வம்   கல்கி கிருஷ்ணமூர்த்தி   தமிழாக்கம் -       மின்னூல் வெளியீடு : FreeTamilEbooks.com   உரிமை : CC0 கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.   மின்னூலாக்கம் - லெனின் குருசாமி - guruleninn@gmail.com   This book was produced using pandoc   பதிவிறக்கம் செய்ய - http://FreeTamilEbooks.com/ebooks/Mantharukkul_Oru_Theivam} Acknowledgements: Our Sincere thanks go to the Digital Library of India for providing scanned images version of this work. This etext has been prepared via Distributed Proof~reading implementation of Project Madurai. We thank the following volunteers for their assistance in the preparation of this etext: V Devarajan, Sathikumaran, Nagendran, S. Karthikeyan, Nalini Karthikeyan, Subramanian Karthik, Mithra, M. Jeyadharman, R. Navaneethakrishnan, Sankarasadasivan, Sri Ganesh, Thamizhagazhvan and S Subathra Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland. © Project Madurai, 1998~2012. Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet. Details of Project Madurai are available at the website http://www.projectmadurai.org/ You are welcome to freely distribute this file, provided this header page is kept intact. முகவுரை அவதார புருஷர்கள் பலர் தோன்றிய பெருமை உடையது நம் நாடு. யுகதிருப்பங்களில் அரசியல், சமூகம், இலக்கியம், சமயம் இவை சீர்குலைவதற்கான நிமித்தங்கள் தோன்றும் பொழுது, கடவுள்தன்மை மிக்க மகான்கள் எதிர்பாராத விதமாய் வருகின்றார்கள். குறைபாடுகளைத் தீர்த்து விட்டு அதிசயமான வழியில் மறைகின்றனர். புத்தபிரான், சங்கரர், சைதன்யர், இராமகிருஷ்ண பரமஹம்ஸர் போன்ற பெருந்தகையோரின் மரபில் வந்து அண்மையில் நம் கண்முன்பே திருச் செயல்களை நிகழ்த்தியவர் காந்தி மஹாத்மா. மற்ற அவதார புருஷர்களிடம் தென்படாத தனிச்சிறப்பு இவருக்கு உண்டு. மக்களோடு ஒருவராக இவர் இழைந்து பழகியவர்; ஏழையின் உள்ளதை உணர்ந்தவர்; கடல் போன்ற எதிர்ப்புகளுக்கு அசையாத மலை போன்ற உறுதியினர்; தீவிர உண்மைகளைச் சோதனை செய்வதில் சற்றும் தளராதவர்; உடல் வருந்தினாலும் உள்ளத் தெளிவை விடாதவர்; முரணாக நின்று போரிட்ட மூட நம்பிக்கையை விலக்கத் தம் மன்னுயிரையும் இழக்கத் துணிந்தவர். “நாம் யார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்; நரகத்தில் இடர்ப்படோம், நடலை இல்லோம்,ஏமாப்போம், பிணியறியோம், பணிவோம் அல்லோம், இன்பமே எந்நாளும் துன்பமில்லை” என்ற அப்பரது வாக்கை மெய்ப்பித்தவர். அற்புதங்கள் நிரம்பிய இவருடைய வாழ்க்கை வரலாற்றை எழுத முற்றிலும் தகுதி உள்ள ஓர் இலக்கிய கர்த்தா தமிழ் நாட்டுக்குக் கிடைத்தது அதன் பெரும் பாக்கிய மென்றே கூறலாம். இன்று தமிழ் மொழியை உயர்ந்த பீடத்தில் வைத்த பெருமை ’கல்கி’யையே சாரும். தமிழர் இதயத்தில் என்றென்றும் இடம் கொண்ட அவர் ஆக்கிய இந்தத் திவ்ய சரிதை எத்துணை அழகு வாய்ந்ததாய் இருக்க வேண்டும்! இதைப் புத்தக வடிவில் வெளியிடும் எமக்கு ஏற்படும் மகிழ்ச்சி ஒரு புறம் இருக்கட்டும். தாம் சிருஷ்டி செய்த இவ்வரிய செல்வத்தை அனைவரும் படித்து இன்புறுவதைப் பாராமல் அவர் பரமபதம் அடைந்ததுதான் எங்களுடைய பெருங்குறை. இருந்தாலும் நித்திய உலகிலிருந்து இந்தச் சிறு முயற்சியின் மீது தம் நோக்கைச் செலுத்தி அவர் எங்களுக்கு நிறைவான ஆசி தருவாரென்பது திண்ணம். தமிழன்பர்கள் இந்நூலை வரவேற்பதன் மூலம் அவருடைய திருக்குறிப்பைப் பெற்றவராவோம். பதிப்பாளர் அமரர் கல்கி / ஆசிரியர் “கல்கி” எளிய குடும்பத்திலே பிறந்து சுய முயற்சியால் முன்னுக்கு வந்த மேதைகளில், “கல்கி” ச்ரீ ரா. கிருஷ்ணமூர்த்தி அவர் களும் ஒருவர். பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோதே தேசீய இயக்கத்தில் ஈடுபட்டு விட்டார். சிறைக்குப் போனார். விடுதலையாகி வந்த பிறகு, “நவசக்தி”யில் திரு. வி. க. வுக்குக் கீழே சில ஆண்டுகள் தொண்டாற்றினார். பின்பு, ராஜாஜி அவர்களுடைய அன்புக்கும், அபிமானத்துக்கும் பாத்திரராகி திருச்செங்கோடு சென்று கதர்ப் பணியிலும் மதுவிலக்குத் தொண்டிலும் ஈடுபட்டிருந்தார். அப்புறம் ஸ்ரீ எஸ். எஸ். வாசனுடைய அழைப்புக்கிணங்க, சென்னைக்கு சென்று, “ஆனந்த விகடன்” ஆசிரியப் பொறுப்பேற்று, பல ஆண்டுகள் அதைச் சிறப்பாக நடத்தினார். இந்தியாவிலேயே பிரபலமான வாரப் பத்திரிக்கையாக அதை ஆக்கினார். இணையற்ற தம் எழுத்துத் திறமையாலே எல்லோரையும் பிரமிக்க வைத்தார். தமிழ் இலக்கிய வரலாற்றிலே, “ஆனந்த விகடன் யுகம்” என்று சொல்லும்படியாக ஒரு காலத்தையே சிருஷ்டித்தார். பின்பு “கல்கி”யைத் தொடங்கினார். ஸ்ரீ சதாசிவத்தின் அபூர்வமான நிர்வாகத் திறமையாலும் ஒத்துழைப்பின் மூலமும் ஒரு சில ஆண்டுகளுக்குள் அதை “விகட”னுக்கு இணையாக ஆக்கினார். “விகடன்” மூலமும், கல்கி மூலமும் தமிழ்நாட்டில் மொழிப்பற்றும், தேசப் பற்றும் ஏற்பட அவர் செய்த தொண்டை என்றும் மறக்கவே முடியாது. இருபதாம் வயதில் பிடித்த பேனாவை ஐம்பத்து மூன்றாம் வயது வரை, அதாவது, மறையும் வரை கீழே வைக்கவே இல்லை. “சாவதற்குள் என் சக்தி முழுவதையும் உபயோகித்துவிட விரும்புகிறேன். வாழ்கையை ஒரு சிறு மெழுகுவத்தியாக நான் கருதவில்லை. அதை ஒரு அற்புத ஜோதியாக மதிக்கிறேன். அதை எதிர்கால சந்ததியாருக்கு கொடுப்பதற்கு முன், எவ்வளவு பிரகாசமாக எரிய வைக்க முடியுமோ, அவ்வளவு பிரகசமாக அதை எரிய வைக்க விரும்புகிறேன்” என்றார் காலஞ்சென்ற பெர்னார்ட்ஷா. அதை அப்படியே வாழ்கையில் கடைப் பிடித்தவர் “கல்கி”. தமிழ்க் கவிதைக்கு பாரதி எப்படி புத்துயிர் அளித்தாரோ அப்படியே வசன இலக்கியத்துக்கு நவஜீவன் அளித்தவர் “கல்கி”. தமிழில் எதை வேண்டுமானாலும் எழுத முடியும், அதையும் ரொம்ப ரொம்ப தமிழிலேயே எழுத முடியும், குழந்தைகள் கூட அதைப் புரிந்து கொள்ள முடியும் என்பதை நிரூபித்தவர் “கல்கி”. அரசியல், பொருளாதாரம், இலக்கியம், சங்கீத விமர்சனம் - எல்லாவற்றிலும் அவர் தன்னிகரற்று விளங்கினார். கவிதைகளும் இயற்றியுள்ளார். அவர் தொடாதது எதுவுமே இல்லை; அவர் தொட்டுப் பொன்னாக்காதது எதுவுமே இல்லை. சாகா வரம் பெற்ற அபூர்வமான சரித்திர நவீனங்களை அவர் தமிழுக்கு அளித்துள்ளார். “சிவகாமியின் சபதம்”, “பொன்னியின் செல்வன்”, “பார்த்திபன் கனவு” முதலிய நூல்கள், இன்னும் ஆயிரமாயிரம் ஆண்டுகள் கழிந்த பிறகுங்கூட, தமிழ் மக்களின் இதயங்களை இன்பத்தில் ஆழ்த்திக் கொண்டிருக்கும் என்பது நிச்சயம். மொழிக்குப் புத்துயிர் அளித்தது போலவே, மக்களின் வாழ்க்கையிலும் அவர் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார்.நல்ல காரியம் எதுவாயிருந்தாலும் அதில் முன்னின்று உழைத்தார். அவர் கலந்து கொள்ளாத முக்கிய விழா எதுவுமே இல்லை. பாரதிக்கு எட்டயபுரத்தில் ஒப்புயர்வற்ற நினைவுச் சின்னம் கட்டினார். தேசத்தின் தந்தையாகிய காந்திமஹாத்மா வுக்கு ஸ்தூபி கட்ட அரும்பாடு பட்டார். தூத்துக்குடியில் வ.வு.சி.கல்லூரி ஏற்படுத்துவதற்குப் பெரு முயற்சி எடுத்துக் கொண்டார். முது பெரும் எழுத்தாளராகிய வ. ரா. வுக்கும் வேறு பல கலைஞர்களுக்கும் அறிஞர்களுக்கும் நிதி திரட்டிக் கொடுத்து உதவி செய்தார். அன்னதான சிவன் சங்கத்தின் தலைவராக இருந்து சிறந்த பணியாற்றியிருக்கிறார். சொல்லாலும், செயலாலும், எழுத்தாலும் கடைசி மூச்சு இருக்கும் வரை தமிழ்நாட்டுக்கு உழைத்த பெரியார் அவர். ஸ்ரீ. ரா. கிருஷ்ணமூர்த்தி மறைந்து விட்ட போதிலும், “கல்கி” தமிழ் இலக்கிய வானிலே என்றும் அழியாப் புகழுடன், அமர தாரையாக விளங்குவார். மங்கள நூலகம். நுங்கம்பாக்கம் சென்னை - 6 பகுதி 1 லண்டன் மார்க்கம் மாந்தருள் ஒருதெய்வம். தாய் நாட்டுக்குப் போகிற வழியில் லண்டனில் ஸ்ரீகோகலேயைச் சந்தித்துப் பேசுவதற்காக மகாத்மா காந்தி இங்கிலாந்துக்குப் பயணமானார். அவருடன் ஸ்ரீமதி கஸ்தூரிபாயும் மிஸ்டர் காலன்பாக் என்னும் ஜெர்மன் நண்பரும் பிரயாணப் பட்டார்கள். 1914-ஆம் வருஷம் ஜூலை மாதத்தில் மகாத்மா கப்பல் ஏறி ஆகஸ்டு மாதம் 5-ஆம் தேதி லண்டனை அடைந்தார். அதற்கு முதல்நாள் ஆகஸ்டு மாதம் 4 - ஆம் தேதி முதலாவது உலக மகா யுத்தம் ஆரம்பமாகி விட்டது. லண்டன் நகரை அடைந்ததும் மகாத்மா ஸ்ரீகோகலேயைப் பற்றி விசாரித்தார். கோகலே பாரிஸுக்குப் போயிருக்கிறார் என்றும் யுத்தம் தொடங்கி விட்டபடியால் திரும்பி வருவதற்குத் தாமதப்படலாம் என்றும் தெரிந்தது. இந்தியாவில் தாம் செய்யவேண்டிய தேசத் தொண்டைக் குறித்து ஸ்ரீ கோகலேயிடம் மகாத்மா பேச விரும்பினார். கோகலேவைப் பாராமல் இந்தியாவுக்குப் போக விரும்பவில்லை. ஆகையால் அவர் திரும்பி வரும் வரையில் லண்டனிலேயே தங்கி யிருக்கத் தீர்மானித்தார். லண்டனிலிருந்தபோது யுத்தம் சம்மந்தமாகத் தம்முடைய கடமை என்னவென்ற யோசனை ஏற்பட்டது. தென்னாப்ரிக்காவில் போயர் யுத்தத்தின் போது செய்தது போல இந்த யுத்தத்திலும் பிரிட்டனுக்கு உதவி செய்வது இந்தியர்களுடைய கடமை என்று மகாத்மா தீர்மானித்தார். எனவே அச்சமயம் இங்கிலாந்தில் படிப்பதற்காக வந்திருந்த இந்திய மாணவர்களையும் மற்ற இந்தியர்களையும் திரட்டி அவர்களிடம் தமது அபிப்பிராயத்தைத் தெரிவித்தார். “ஆங்கில மாணாக்கர்கள் யுத்த சேவையில் எவ்வளவு ஆர்வத்துடன் ஈடுபடுகிறார்கள், பார்த்தீர்களா? அதுபோல இந்திய மாணாக்கர்களும் யுத்த சேவை செய்வதற்கு முன் வர வேண்டும்” என்று சொன்னார். இந்தியர்களில் சிலர் அதை ஆட்சேபித்தார்கள் “ஆங்கிலேயர் சுதந்திர புருஷர்கள்; ஆளும் சாதியினர்; ஆகையால் சாம்ராஜ்யத்தைக் காப்பாற்றுவதற்காக அவர்கள் யுத்தம் செய்தாக வேண்டும். சுதந்திரம் இல்லாத அடிமை இந்தியர்கள் எதற்காக யுத்த சேவையில் ஈடுபட வேண்டும்? ஆங்கிலேயரக்கு ஏற்பட்டிருக்கும் நெருக்கடியை நமக்குச் சாதகமாக உபயோகித்துக் கொள்வதல்லவா நம்முடைய கடமை” என்றார்கள். இந்த வாதத்தை மகாத்மா ஒப்புக்கொள்ளவில்லை. “இங்கிலாந்துக்கு ஏற்பட்டுள்ள கஷ்டத்தை நம்முடைய சந்தர்ப்பமாக உபயோகித்துக் கொள்வது நியாயம் அல்ல. யுத்தம் நடக்கும் வரையில் நம்முடைய கோரிக்கைகளை வற்புறுத்தக் கூடாது. பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் பாதுகாப்பை நாம் பெற்று வருகிறோம். ஆகையால் யுத்தத்தில் பிரிட்டனுக்கு உதவி செய்ய வேண்டும்” என்று வற்புறுத்தினார். மகாத்மாவின் யோசனையை இந்தியர்கள் பலர் ஒப்புக் கொண்டார்கள். யுத்த சேவைக்காக வாலண்டியர் படையில் சேர்வதாகத் தங்கள் பெயர்களையும் கொடுத்தார்கள். இவர்களில் இந்தியாவின் எல்லா மாகாணத்தினரும் எல்லா மதத்தினரும் இருந்தார்கள். இதனால் திருப்தி யடைந்த மகாத்மா அச்சமயம் இந்தியா மந்திரி பதவி வகித்த லார்ட் குரூவுக்குக் கடிதம் எழுதினார்.தாமும் தம்மைச் சேரந்த இந்தியர்களும் சைன்ய சேவையில் ஈடுபட விரும்புவதாகவும் அதற்கு வேண்டிய பயிற்சி பெறத் தயாரா யிருப்பதாகவும் அந்தக் கடிதத்தில் தெரிவித்தார். லார்ட் குரூ முதலில் சிறிது தயங்கி விட்டுப் பிறகு மகாத்மா எழுதிய வண்ணம் இந்தியர்களின் சைன்ய சேவையை ஒப்புக் கொள்வதாகப் பதில் எழுதினார். முதலில் டாக்டர் காண்ட்லி என்பவரின் கீழ் பிரதம சிகிச்சை முறையில் பயிற்சி அளிக்கப்பட்டது. எண்பது இந்தியர்கள் பயிற்சி பெற்றார்கள். ஆறுவாரத்துக்கெல்லாம் நடந்த பரீட்சையில் ஒருவரைத் தவிர மற்றவர்கள் எல்லாரும் தேறினார்கள். இந்த நாட்களில் காந்திஜிக்குப் பழக்கமான பல இந்தியர்களில் ஒருவர் டாக்டர் ஜீவராஜ் மேத்தா. அப்போது இவர்இங்கிலாந்தில் வைத்தியப் பரீட்சைக்குப் படித்துக் கொண்டிருந்தார். மகாத்மாவின் தலைமையில் சைன்ய சேவைப் படையில் சேர்ந்தார். பிற்காலத்தில் டாக்டர் ஜீவராஜ் மேத்தா காந்தி மகாத்மாவுக்கு உடல்நோய் ஏற்பட்ட காலங்களிலும் காந்திஜி உண்ணாவிரதம் இருந்த காலங்களிலும் அவருடைய நம்பிக்கைக்கு உரிய வைத்தியராய் விளங்கினார். தற்சமயம் டாக்டர் ஜீவராஜ் மேத்தா பரோடா சமஸ்தான பிரதம மந்திரி பதவி வகித்துப் பரோடாவைப் பம்பாய் மாகாணத்தில் சேர்க்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறார். அக்காலத்திலேதான் மகாத்மா காந்தி முதன் முதலாக ஸ்ரீமதி சரோஜனி தேவியையும் சந்தித்தார். போர் வீரர்களுக்கு உடுப்புக்களும் காயம் பட்டவர்களுக்குக் கட்டுகள் போடும் துணிகளும் தயாரிக்கும் வேலையில் ஈடுபட்ட பெண்மணிகளின் சங்கம் ஒன்று லண்டனில் இருந்தது. அந்தச் சங்கத்தில் ஸ்ரீமதி சரோஜினி தேவி அங்கத்தினர். ஒருசமயம் போர் வீரர்களின் உடுப்புக்காக வெட்டப் பட்டிருந்த ஒரு குவியல் துணிகளை மகாத்மா காந்தியிடம் ஸ்ரீமதி சரோஜினி தேவி கொடுத்து அவற்றை உடைகளாகத் தைத்துக்கொண்டு வரும்படி சொன்னாராம். மகாத்மா அவ்விதமே தைத்துக்கொடுத்தாராம். பிற்காலத்தில் இந்தியாவில் மகாத்மா ஆரம்பித்து நடத்திய இயக்கங்களில் ஸ்ரீமதி சரோஜினி தேவி எவ்வளவு ஆர்வத்துடன் ஈடுபட்டிருந்தார் என்பது அனைவரும் அறிந்த விஷயம்.மகாத்மாவிடம் ஸ்ரீமதி சரோஜினி தேவி கொண்டிருந்த பக்தி அளவற்றது. பாதகன் கோட்ஸேயினால் மகாத்மா சுடப்பட்டு இறந்த சம்பவம் ஸ்ரீமதி சரோஜினியின் இருதயத்தைப் பெரிதும் பாதித்துப் பலவீனப் படுத்திவிட்டது. காந்திமகான் காலமாகி ஒரு வருஷத்துக்கெல்லாம் ஸ்ரீமதி சரோஜினி தேவியும் அவரைத்தொடரந்து விண்ணுலகம் சென்றார் அன்றோ? பிரதம சிகிச்சையில் பயிற்சி பெற்றுப் பரீட்சையிலும் தேறியவர்களுக்கு இராணுவ டிரில் பயிற்சி அளிக்குமாறு கர்னல் பேக்கர் என்பவர் நியமிக்கப் பட்டார். இவர் தேவைக்கு அதிகமாகவே இந்தியர்கள் மீது அதிகாரம் செலுத்தத் தொடங்கினார்.தென்னாப்பிரிக்காவிலிருந்து இங்கிலாந்துக்கு வந்து பாரிஸ்டர் பரீட்சைக்குப் படித்துக் கொண்டிருந்த ஸ்ரீ ஸோராப்ஜி அதாஜானியா என்பவர் இது விஷயமாக மகாத்தமாவுக்கு ஆரம்பத்திலேயே எச்சரிக்கை செய்தார். “இந்த அதிகாரி நம்மீது தர்பார் நடத்தப் பார்க்கிறார். அர்த்தமற்ற உத்தரவுகளைப் போடுகிறார். இவர் செலுத்தும் தர்பார் ஒருபுறமிருக்க, இவர் தமக்கு உதவியாக நியமித்துக்கொண்டிருக்கும் ஆங்கில இளைஞர்களும் தங்களை எஜமானர்கள் என்று எண்ணிக்கொண்டு நம்மைக் கேவலமாக நடத்துகிறார்கள். இந்த அதிகார தட புடலை எங்களால் பொறுத்துக் கொண்டிருக்க முடியாது!” என்று சொன்னார். ஆயினும் அவரைப் பொறுமையாக இருக்கும்படியும் கர்னல் பேக்கரிடம் நம்பிக்கை வைக்கும்படியும் காந்தி மகாத்மா கேட்டுக் கொண்டார். “இப்படித்தான் நீங்கள் நம்பிக்கை வைத்து வைத்து ஏமாந்துபோகிறீர்கள். இதனால் உங்களுக்கும் எங்களுக்கும் கஷ்டத்தைத் தேடித்தருகிறீர்கள்!” என்றார் அதாஜானியா. அவர் சொன்னது உண்மை என்று சீக்கிரத்தில் ஏற்பட்டு விட்டது. கர்னல் பேக்கரின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகமாகி வந்தது. அவர் ’கார்ப்போரல்’களாக நியமித்திருந்த ஆக்ஸ்போர்டு மாணாக்கர்களும் போட்டி போட்டுக்கொண்டு அதிகாரம் செலுத்தினார்கள். இந்தியர்களுடைய சுய மரியாதைக்குப் பங்கம் நேரும் நிலைமை ஏற்பட்டு விட்டது. இதன் பேரில் மகாத்மா மேற்படி தலைமை அதிகாரியிடம் போய் இந்தியர்களுடைய கருத்தைத் தெரிநவித்தார். “என்னிடம் நேரே நீங்கள் வந்து புகார் சோல்லக்கூடாது. நான் நியமித்திருக்கும் ’கார்ப்போரல்’களிடம் முதலில் புகார் சொல்லவேண்டும். அதுவும் அவரவர்களே புகார் சொல்ல வேண்டுமே தவிர, நீங்கள் மற்றவர்களுக்காகப் பேசக்கூடாது” என்றார் கர்னல் பேக்கர். மகாத்மா திடுக்கிட்டார். எனினும் நிதானமாகத் தமது கட்சியை எடுத்துரைத்தார். “இந்தியர்களைச் சைன்ய சேவைக் காகத் திரட்டியவன் நான்தான். ஆகையால் அவர்களுக்காக நான் பேசுவதற்கு அநுமதி கொடுக்கவேண்டும். எங்களுடைய சம்மதம் கேட்காமல் ’கார்ப்போரல்’களை நீங்கள் நியமித்திருக்கிறீர்கள். இது சரியல்ல. அவர்களை அனுப்பிவிட்டு எங்களுக்குள்ளேயே சில படைத் தலைவர்களை நியமிப்பது தான் முறை” என்று கூறினார். கர்னல் பேக்கருக்கு மகாத்மாவின் யோசனை பிடிக்கவில்லை. அவருக்குக் கோபம் வந்து விட்டது. “நான் நியமித்த ’கார்ப்போரல்’களை விலக்க வேண்டும் என்றா சொல்கிறீர்?” அது இராணுவக் கட்டுப்பாட்டுக்கு விரோதம்!" என்று கடுமையாகப் பேசினார். காந்திஜி தமது தென்னாப்பிரிக்கா அநுபவத்தைச் சுட்டிக் காட்டினார். அங்கே இந்தியப்படைக்குத் தாமே தலைவராயிருந்ததை எடுத்துச் சொன்னார். அது ஒன்றும் கர்னல் பேக்கரின் காதில் ஏறவில்லை. இதன்பேரில் இந்தியர்கள் கூட்டம் போட்டுச் சைன்ய சேவையிலிருந்து விலகிக்கொன்வது என்று தீர்மானித்தார்கள். இது இராணுவக் கட்டுப்பாட்டுக்கு விரோதமான காரியமாதலால்அதன் பலாபலன்களை மகாத்மா நன்கு எடுத்துச் சொன்னார். இந்த விஷயமாகச் சத்தியாக்கிரஹம் செய்யவேண்டியிருக்கும் என்றும் இராணுவத் தண்டனைக்கு உள்ளாக வேண்டியிருக்கும் என்றும் கூறினார். அதற்கெல்லாம் தாங்கள் தயார் என்று இந்தியர்கள் சொன்னார்கள். பின்னர் காந்திஜி தமது வழக்கமான முறையை அநுசரித்து இந்தியா மந்திரி லார்ட் குரூவுக்குக் கடிதம் எழுதினார். அதற்கு லார்ட் குரூ எழுதிய பதில் வழவழ முறையில் அமைந்திருந்தது. “தென்னாப்பிரிக்கா நிலைமைக்கும் இவ்விடத்து நிலைமைக்கும் வித்தியாசம் உண்டு. படைப் பிரிவுத் தலைவர்களை மேலதிகாரிதான் நியமிக்க வேண்டும். ஆயினும் இனிமேல் படைத் தலைவர்களை நியமிக்கும்போது உங்களைக் கலந்து கொண்டு நியமிக்கும்படி செய்கிறேன்” என்று இந்தியா மந்திரி தெரிவித்திருந்தார். இதற்கிடையில் மகாத்மா காந்தி பாரிச வாயுவினால் பீடிக்கப்பட்டுப் படுத்த படுக்கையானார். அவர் படுத்திருந்த சமயத்தில் இந்திய சைன்ய சேவைப் படையில் பிளவு ஏற்பட்டு விட்டது. ஒரு பகுதியினர் அதிகாரிகளுடன் சண்டை போடுவதில் பயனில்லை என்று தீர்மானித்துச் சைன்ய சேவை செய்ய இணங்கினார்கள். அச்சமயத்திலா நெட்லி என்னும் இடத்திற்குக் காயமடைந்த போர்வீரர்கள் ஏராளமாக வந்திருந்தார்கள். அவர்களுக்குச் சேவை புரிய ஆள் தேவையாயிருந்தது. சேவை செய்ய இணங்கிய இந்தியர்கள் அந்த இடத்துக்கு அனுப்பப் பட்டார்கள். நோயாளியாகப் படுத்திருந்த காந்திஜியைப் பார்ப்பதற்கு உதவி இந்தியா மந்திரி ராபர்ட்ஸ் பலமுறை வந்தார். சேவைக்குப் போகாமல் பின்தங்கிய இந்தியர்களையும் சேவை செய்யப் போகச் சொல்லும்படி காந்திஜியைக் கேட்டுக் கொண்டார். அவர்களுடைய சுயமரியாதைக்குப் பங்கம் எதுவும் நேராது என்று உறுதி கூறினார். அதன் பேரில் காந்திஜி பின் தங்கியவர்களையும் சேவைக்குப் போகும்படி சொன்னார். அவர்களையும் நெட்டிலிக்குப் போனார்கள். ஆனால் மகாத்மா மட்டும் உடல் நோய் காரணமாகப் போக முடியவில்லை. ஜன்ம பூமி காந்தி மகாத்மாவுக்கு இங்கிலாந்தில் பாரிச வாயு நோய் கண்டிருந்தபடியால் அவர் சைனிய சேவைக்குப் போக முடியாமற் போயிற்றல்லவா? டாக்டர் ஜீவராஜ் மேத்தா காந்திஜிக்கு மேற்படி நோய் நீங்கச் சிகிச்சை செய்தார். ஆனால் டாக்டர் குறிப்பிட்ட உணவு வகைகளை மகாத்மா உட்கொள்ள முடியவில்லை. நிலக்கடலை, வாழைப்பழம், எலுமிச்சப்பழம், தக்காளிப்பழம், திராட்சைப்பழம் - இவையே அப்போது மகாத்மாவின் முக்கிய உணவாக இருந்தன. பருப்பு வகைகளையும் தானியங்களையும் உட்கொள்ளுவதை அடியோடு விட்டிருந்தார். பாலும் சாப்பிடுவதில்லை. நிலைமை இப்படியிருந்த பொது ஸ்ரீ கோகலே பாரிஸிலிருந்து வந்து சேர்ந்தார். காந்திஜி நோய்வாய்ப்பட்டிருந்தது ஸ்ரீ கோகலேயுக்குக் கவலை அளித்தது. உணவு சம்பந்தமாக டாக்டருக்கும் காந்திஜிக்கும் ஏற்பட்டிருந்த தகராறையும் கோகலே அறிந்தார். பழ உணவே சிறந்த உணவு என்னும் மகாத்மாவின் கொள்கையில் கோகலேயுக்கு நம்பிக்கை இல்லை. டாக்டர் சொல்லுகிறபடி காந்திஜி உணவு உட்கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தினார். நெடுநேரம் இந்த உபதேசத்தைச் செய்தார். கடைசியில் மகாத்மா யோசிப்பாதற்கு இருபத்திநாலு மணி நேரம் அவகாசம் கேட்டுப் பெற்றார். அன்றிரவெல்லாம் காந்திஜி தமது உணவுப் பரிசோதனையைப் பற்றியும் கோகலேயின் போதனையைப் பற்றியும் ஆலோசித்துக் கடைசியாக ஒரு சமரச முடிவுக்கு வந்தார். அந்த முடிவு வருமாறு; - தேக சுகத்தை மட்டும் முன்னிட்டுத் தாம் கைக்கொண்டிருந்த விரதங்களை டாக்டரின் யோசனைப்படி தளர்த்தி விடலாம். ஆனால் ஆத்ம சாதனத்தை முன்னிட்டு அனுசரித்த உணவுக்கட்டுபாடுகளைக் கைவிடக்கூடாது. ஸ்ரீ கோகலேயிடம் மகாத்மா தமது முடிவைத் தெரிவித்தார். தானியங்களும் பருப்பு வகைகளும் உட்கொள்ளுவதாகவும் ஆனால் பாலும் மாமிசமும் சாப்பிடுவது அசாத்தியம் என்றும் சொன்னார். “பிரதிக்ஞையை மீறிப் பாலும் மாமிசமும் உட்கொள்ளுவதைக் காட்டிலும் மரணமே மேல் என்று கருதுகிறேன். தயவு செய்து என்னை மன்னிக்க வேண்டும்” என்று மகாத்மா கோகலேயிடம் கேட்டுக் கொண்டார். மகாத்மாவின் இந்த முடிவு ஸ்ரீ கோகலேயுக்குப் பிடிக்கவில்லை. ஆயினும் அவருடைய ஆத்ம சாதன நோக்கத்தையும் பிரதிக்ஞையில் உறுதியையும் கருதி டாக்டர் ஜீவராஜ் மேத்தாவிடம்“காந்தி ஒப்புக்கொண்ட வரையில் சரி. மேலும் அவரைத் தொந்தரவு செய்ய வேண்டாம்” என்றார். டாக்டர் கூறியபடி காந்திஜி ஓரளவு உணவை மாற்றிக் கொண்டார். மேலுக்கு மருந்து தடவி டாக்டர் மேத்தா மகாத்மாவுக்கு சிகிச்சை செய்து வந்தார். ஆயினும் பலன் ஒன்றும் தெரியவில்லை. டாக்டர் அல்லின்சன் என்னும் இயற்கை வைத்தியரின் யோசனைப்படி காந்திஜி பச்சைக் கறிகாய்களைச் சாப்பிடத் தொடங்கினார். அதை முழுதும் கையாண்டு பார்க்க உடல் நோய் இடங்கொடுக்கவில்லை. டாக்ட‌ல் ஜீவ‌ராஜ் மேத்தாவோ தாம் சொல்லுகிற‌ப‌டி ம‌காத்மா முழுதும் கேட்டுக் க‌டைபிடித்தால் தான் நோயைக் குண‌ப்ப‌டுத்த‌ முடியும் என்று கூறினார். இந்த நிலையில் ஒரு நாள் மிஸ்டர் ராபர்ட்ஸ் மகாத்மாவைப் பார்க்க வந்தார். அவருடைய நோய் கடுமையாகியிருப்பதைக் கவனித்தார். “நீங்கள் சைன்ய சேவைக்காக நெட்லிக்குப் போகும் எண்ணத்தை விட்டுவிட வேண்டியது தான். இன்னும் கடுமையான குளிர்காலம் வரப்போகிறது. அதை உங்க‌ளால் தாங்க‌ முடியாது. நீங்க‌ள் இந்தியா தேச‌த்துக்கு உட‌னே திரும்பி விடுவ‌துதான் ந‌ல்ல‌து. அங்கே தான் உங்க‌ளுக்கு உட‌ம்பு ந‌ன்றாக‌க் குண‌ம‌டையும். அப்போதும் இந்த‌ யுத்த‌ம் ந‌ட‌ந்துகொண்டிருந்தால் நீங்க‌ள் உத‌வி செய்வ‌த‌ற்கு எத்த‌னையோ ச‌ந்த‌ர்ப்ப‌ங்க‌ள் கிடைக்கும்” என்று மிஸ்டர் ராபர்ட்ஸ் கூறியது சரியான யோசனையாக மகாத்மாவுக்குத் தோன்றியது. +ஜன்ம தேசம் செல்வதற்காக மகாத்மா தம்முடைய தர்மபத்தினியுடன் கப்பல் ஏறினார். மிஸ்டர் காலன்பாக் ஜெர்மானியராகையால் அவர் இநதியா தேசம் போவதற்கு அநுமதிச் சீட்டு கிடைக்கவில்லை. எவ்வளவு முயன்றும் பயனில்லை. காந்திஜி கப்பல் ஏறிப் பிரயாணம் செய்து சூயஸ் கால்வாயை அடைந்ததும் அவருக்கு உடம்பு பூரண சௌக்யம் அடைந்துவிட்டது. கடற்பிரயாணத்தின் தூய்மையான காற்றே தாம் குணமடைந்ததற்குக் காரணம் என்று மகாத்மா கருதினார். பத்து வருஷம் பிரிந்திருந்த பிறகு காந்திஜி ஜன்ம பூமியான இநதியாவுக்கு வந்து சேர்ந்தார். பம்பாய்த் துறைமுகத்தை அடைந்து கப்பலிலிருந்து இறங்கினார். போனிக்ஸ் ஆசிரமத்தைச் சேர்ந்தவர்கள் காந்திஜிக்கு முன்னாலேயே இந்தியா வந்து சேர்ந்திருந்தார்கள். தாம் இந்தியாவுக்கு வரும் வரையில் அவர்கள் ஸ்ரீ ஆண்ட்ரூஸின் யோசனைப்படி நடக்க வேண்டும் என்று மகாத்மா சொல்லியிருந்தார். அவர்களை ஸ்ரீ ஆண்ட்ரூஸ் முதலில் காங்ரி குருகுலத்துக்கு அழைத்துப் போனார். இந்தக் குருகுலம் புகழ்பெற்ற சுவாமி சிரத்தானந்தரால் ஸ்தாபிக்கப்பட்டு அவருடைய தலைமையின்கீழ் நடந்து வந்தது. போனிக்ஸ் கோஷ்டியார் சிலகாலம் காங்ரியில் வசித்த பிறகு மகாகவி ரவீந்திரநாத தாகூரின் சாந்தி நிகேதனத்துக்குச் சென்றார்கள். இரண்டு இடங்களிலும் அவர்கள் மிக்க அன்புடன் நடத்தப்பட்டார்கள். மகாத்மா பம்பாயில் இறங்கியபோது போனிக்ஸ் ஆசிரமத்தார் சாந்திநிகேதனத்தில் இருந்தார்கள். அவர்களிடம் போய்ச் சேரவேண்டும் என்று மகாத்மா மிக்க ஆர்வம் கொண்டிருந்தார். ஆயினும் உடனே புறப்பட முடியாமல் அவருக்குப் பம்பாயில் சில அலுவல்கள் ஏற்பட்டன. தென்னாப்பிரிக்காவில் மகாத்மா நடத்திய சத்தியாக்கிரஹப் போரைப் பற்றிய விவரங்கள் இந்தியாவில் பரவி யிருந்தன. ஆகையால் மகாத்மாவுக்கு பல வரவேற்புகளும் உபசாரங்களும் நடந்தன. ஸ்ரீ ஜெகாங்கீர் பெடிட் என்பவர் பம்பாயில் அப்போது வசித்த பார்ஸி கோடீசுவ‌ரர்க‌ளில் ஒருவ‌ர். அவருடைய ஜாஜ்வல்யமான அரண்மனையை யொத்த இல்லத்தில் ஒரு விருந்து நடந்தது. இந்த விருந்துக்கு பம்பாயின் பிரபல செல்வர்கலும் பிரமுகர்களும் வந்திருந்தார்கள்.எல்லாரும் நவநாகரிக உடை தரித்து வந்திருந்தார்கள். ஆனால் மகாத்மாவோ பழைய கர்நாடக கத்தியவார் பாணியில் இடுப்பில் வேஷ்டியும் உடம்பில் நீண்ட அங்கியும் தலைப்பாகையும் அணிந்திருந்தார். அவ்வளவு நாகரிக மனிதர்களுக்கு மத்தியில் காந்திஜி பேசிப் பழகுவதற்குத் திணறிப்போனார். பெடிட் மாளிகையின் பெருமிதமும் பிரகாசமும் அவரைத் திக்குமுக்காடச் செய்துவிட்டன. ஆயினும் ஸர் பிரோஸிஷா மேத்தாவின் அன்பும் ஆதரவும் காந்திஜி ஒருவாறு சமாளித்துக் கொள்ள உதவி செய்தன. பிறகு, குஜராத்திகள் மகாத்மா காந்தியைத் தங்கள் மாகாணத்தவர் என்று உரிமை பாராட்டி உபசார விருந்து நடத்தினார்கள். குஜராத் மாகாணத்தவராகிய ஜனாப் ஜின்னாவும் இந்த விருந்துக்கு வந்திருந்தார். காந்திஜியை வரவேற்றுப் பாராட்டி ஆங்கிலத்தில் இனிய சொற்பொழிவு ஒன்றும் செய்தார். விருந்துக்கு வந்திருந்த இன்னும் பலரும் ஆங்கிலத்திலேயே பேசினார்கள். ஆனால் மகாத்மா காந்தி உபசாரத்துக்குப் பதில் சொல்ல வேண்டிய சமயம் வந்தபோது “இங்கே எல்லாருக்கும் குஜராத்தி தெரியுமாதலால் குஜராத்தியிலேயே பேச விரும்புகிறேன்! நம் தாய்மொழி இருக்கும் போது அதைப் புறக்கணித்து விட்டு இங்கிலீஷில் ஏன் பேச வேண்டும்?” என்று ஆரம்பித்தார். காந்திஜியின் தாய்மொழிப்பற்றை அனைவரும் பாராட்டினார்கள். இங்கிலீஷில் பேசுவதே கௌரவம் என்று கருதப்பட்டுவந்த காலத்தில் மகாத்மா துணிந்து குஜராத்தியில் பேசியதை மெச்சினார்கள். இந்த அநுப‌வ‌த்தினால் ம‌காத்மாவுக்கு இந்தியாவில் தம்முடைய கொள்கைகளைப் பிரச்சாரம் செய்யலாம் என்னும் தைரியம் உண்டாயிற்று. பம்பாயிலிருந்து மகாத்மா ஸ்ரீ கோகலேயைச் சந்திபதற்காக பூனாவிற்குப் புறப்பட எண்ணினார். பூனாவுக்கு புறப்படுவதற்கு முன்னால் பம்பாய் கவர்னரைப் பார்க்கும்படி கோகலேயிடமிருந்து தந்தி வந்தது. அப்போது பம்பாயின் கவர்னராயிருந்தவர் லார்ட் வில்லிங்டன். (பின்னால் இவர் சென்னை மாகாணத்தின் கவர்னராகவும் இந்தியாவின் கவர்னர் ஜெனரலாகவும் பதவி வகித்தார்.) லார்ட் வில்லிங்டன் வழக்கமான யோகஷேம விசாரணைகுப்பிறகு, “உங்களுக்கு ஒன்று சொல்ல விரும்புகிறேன். இங்கே நீங்கள் அரசாங்க சம்பந்தமான நடவடிக்கை எதுவும் தொடங்குவதாயிருந்தால், முதலில் என்னை வந்து பார்த்துப் பேசி விட்டுத் தொடங்க வேண்டும்!” என்று கூறினார். அதற்குக் காந்திஜி, " நான் அனுசரிக்கும் சத்தியாக்கிரஹ முறையில், எந்தக் காரியமானாலும் எதிராளியின் மனதை அறிந்து ஒத்துப்போக முயற்சி செய்வதே முதல் விதியாகும். ஆகையால் கண்டிப்பாகத் தங்களுடைய யோசனையைக் கடைப் பிடிப்பேன்" என்றார். “உங்களுக்கு எப்போது விருப்பமோ அப்போதெல்லாம் நீங்கள் என்னை வந்து பார்க்கலாம். என்னுடைய அரசாங்கம் வேண்டுமென்று அநீதி எதுவும் செய்யாது என்பதைக் காண்பீர்கள்” என்றார் லார்ட் வில்லிங்டன் துரை. இதே லார்ட் வில்லிங்டன் 1932 -ஆம் வருஷத்தில் இந்தியாவின் இராஜப் பிரதிநிதியாக வந்திருந்தபோது மகாத்மா அவரைப் பேட்டி காண அநுமதி கேட்டார். லண்டன் வட்டமேஜை மகாநாட்டினால் பயன் விளையாமல் மகாத்மா திரும்பி இந்தியாவிற்கு வந்ததும் மறுபடியும் சத்தியாக்கிரஹப் போர் தொடங்குவதற்கு முன்னால் தம்முடைய கட்சியை எடுத்துச் சொல்லி, சமரசத்துக்கு வழி உண்டா என்று பார்க்க விரும்பினார். இதற்காகவே மகாத்மா லார்ட் வில்லிங்டனின் பேட்டி கோரினார். ஆனால் வில்லிங்டனோ மகாத்மாவைப் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் விரோதியாகக் கருதி, பேட்டி கொடுக்க முடியாது என்று சொல்லி விட்டார்! பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் நன்மைக்குப் பாதகம் ஏற்படாத வரையில் பிரிட்டிஷார் நாகரிகமாகவும் மரியாதையாகவும் நடந்து கொள்வது வழக்கம். சாம்ராஜ்யத்துக்கு ஆபத்து என்று ஏற்பட்டால் பிரிட்டிஷாரின் தயை, தாட்சண்யம், நாகரிகம், மரியாதை எல்லாம் பறந்து போய் விடும்! சுங்கவரி நீக்கம் பம்பாயில் கவர்னர் லார்ட் வில்லிங்டனைச் சந்தித்துப் பேசிய பிறகு மகாத்மா பூனாவுக்குச் சென்றார். அங்கே ஸ்ரீ கோகலே மகாத்மாவை மிக்க அன்புடம் வரவேற்றார். இந்திய ஊழியர் சங்கம் என்ற பெயருடன் ஸ்ரீ கோகலே நடத்தி வந்த ஸ்தாபனம் மிகவும் பிரசித்தி பெற்றது. மெத்தப் படித்த அறிவாளிகள் பலர் அந்த ஸ்தாபனத்தில் அங்கத்தினராகியிருந்தார்கள். சொற்ப ஊதியம் பெற்றுக்கொண்டு அவர்கள் தேச சேவையும் சமூக சேவையும் செய்து வந்தார்கள். ஸ்ரீ கோகலேயைப் போலவே இந்திய ஊழியர் சங்கத்தைச் சேர்ந்த அனைவரும் இந்திய அரசியலில் ’மிதவாத கொள்கை’யைக் கடைபிடித்தார்கள். ஸ்ரீ கோகலேயுக்குப் பிறகு மேற்படி சங்கத்தின் தலைவாரகிப் பிரிசித்தியடைந்தவர் மகா கனம் வி. எஸ். சீனிவாச சாஸ்திரியார். இன்னொரு பிரபல அங்கத்தினர் பண்டித ஹ்ரிதயநாத குன்ஸ்ரு. தற்சமயம் ஹரிஜன சேவா சங்கத்தின் காரியதரிசியாக இருந்து அரும்பெரும் தொண்டு செய்துவரும் ஸ்ரீ தக்கர் பாபாவும் மேற்படி சங்கத்தைச் சேர்ந்தவரே. காந்திஜி இந்திய ஊழியர் சங்கத்தில் சேர்ந்துவிட வேண்டும் என்ற விருப்பம் ஸ்ரீ கோகலேயுக்கு இருந்தது. ஆனால் இந்திய ஊழியர் சங்கத்தின் மற்ற அங்கத்தினர் காந்திஜியுடன் பல விஷயங்களையும் பற்றிப் பேசியபோது சங்கத்தின் கொள்கைகளுக்கும் மகாத்மாவின் கொள்கைகளுக்கும் மிக்க வித்தியாசம் இருப்பதைக் கண்டார்கள். ஆகவே காந்திஜியை இந்திய ஊழியர் சங்கத்தில் சேர்ந்துக்கொள்வது உசிதமாயிராது என்று கருதினார்கள். மகாத்மாவுக்கு இது ஏமாற்றமாயிருந்தது. தம்முடைய கொள்கைகளுக்கு எவ்விதமான பங்கமும் இல்லாமல் இந்திய ஊழியர் சங்கத்திலே சேர்ந்து தொண்டு செய்யலாம் என்று மகாத்மா நினைத்தார். மகாத்மா இந்திய ஊழியர் சங்கத்தில் சேரவேண்டும் என்பதில் மகாத்மாவைக் காட்டிலும் ஆர்வம் கொண்டிருந்தவர் ஸ்ரீ கோகலே. ஆனால் அவர் சங்கத்தின் மற்ற அங்கத்தினர் சொல்வதற்கு மாறாக நடக்க விரும்பவில்லை. அவர் மகாத்மாவுக்குச் சமாதானமாக கூறியதாவது: “உங்களுடைய கொள்கை எப்படியிருந்தாலும் நீங்கள் ராஜி செய்து கொள்வதில் ஆர்வங் கொண்டவர் என்பதை இந்தச் சங்கத்தின் அங்கத்தினர் இன்னும் உணரவில்லை. அதைச் சீக்கிரத்தில் அவர்கள் உணர்ந்து தங்களைச் சேர்த்துக்கொள்வார்கள் என்று நம்புகிறேன். அப்படி அவர்கள் சேர்த்துக் கொள்ளாவிட்டாலும் தங்களிடம் அவர்களுக்கு மரியாதையும் அன்பும் இல்லையென்று எண்ணவேண்டாம். உண்மையில் தங்களிடம் உள்ள மரியாதையினாலேயே தங்களுடைய தன் மதிப்புக்கும் கொள்கைகளுக்கும் பங்கம் வரக்கூடாது என்று கருதுகிறார்கள். தாங்கள் விதிமுறைகளின்படி அங்கத்தினர் ஆகாவிட்டாலும் என்வரையில் தங்களைச் சங்கத்தில் சேர்ந்தவராகவே கருதப் போகிறேன்”. இதற்குப் பதிலாக மகாத்மா ஸ்ரீ கோகலேயுக்கு நன்றி தெரிவித்துவிட்டு கூறியதவாது: - “இந்திய ஊழியர் சங்கத்தில் நான் சேர்ந்தாலும் சேராவிட்டாலும் போனிக்ஸிலிருந்து நான் கூட்டி வந்திருந்தவர்களோடு தனியாக ஒரு ஆசிரமம் ஸ்தாபித்துத் தொண்டு செய்ய விரும்புகிறேன். நான் குஜராத்தைச் சேர்ந்தவனாதலால் அங்கே ஆசிரமம் ஸ்தாபிப்பது பொருத்தமாய் இருக்கும். தங்களுடைய ஆசீர்வாதம் வேண்டும்”. இதைக்கேட்ட கோகலே, “ரொம்ப சந்தோஷம். அப்படியே செய்யுங்கள். ஆனால் ஆசிரமம் ஸ்தாபிப்பதற்கு வேண்டிய செலவுகளுக்குப் பணம் வேறு யாரிடமும் கேட்கக் கூடாது. செலவு முழுதும் நானே கொடுப்பதற்கு விரும்புகிறேன்!” என்றார். உதவி செய்வதற்கு ஒரு ஆப்தர் இருக்கிறார் என்ற எண்ணம் காந்திஜிக்கு உற்சாகம் ஊட்டியது. ஸ்ரீ கோகலே வாய்ப்பேச்சோடு நில்லாமல் இந்திய ஊழியர் சங்கத்தின் பொக்கிஷத்தாரரைக் கூப்பிட்டுக் காந்திஜியின் பெயரால் ஒரு பெயரேடு வைத்துக்கொண்டு அவர் கேக்கும் பணத்தையெல்லாம் கொடுத்து வரும்படி உத்தரவிட்டார். காந்திஜி பூனாவை விட்டுப் புறப்படும் முன் இந்திய ஊழியர் சங்கம் அவருக்கு ஒரு விருந்து நடத்தியது. மகாத்மா விரும்பிய பழங்களும் கொட்டைகளும்தான் உணவில் முக்கிய உணவுப் பொருட்கள். கோகலேவின் உடல்நலம் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தது. கோகலே தங்கியிருந்த அறையிலிருந்து விருந்து நடந்த இடம் சில அடி தூரத்திலேயே இருந்தது. கோகலே அந்த இடத்துக்கு நடந்து வந்தார். விருந்துக்கு அவர் வரவேண்டிய அவசியமில்லை என்று காந்திஜியும் பிறரும் கூறியதை கோகலே கேட்கவில்லை. மகாத்மாவினிடம் அவர் கொண்டிருந்த அன்பு காரணமாக வரத்தான் வருவேன் என்று பிடிவாதம் பிடித்து கொண்டு வந்தார். விருந்து நடந்த இடத்துக்கு வந்ததும் மூர்ச்சை அடைந்து விழுந்து விட்டார். அங்கிருந்து அவரை தூக்கிக்கொண்டு போய் அவருடைய அறையில் சேர்த்தார்கள். இதற்குமுன் சில தடவை இம்மாதிரி கோகலே மூர்ச்சித்து விழுந்திருந்தபடியால் அதைக்குறித்து யாரும் பயப்படவில்லை. கோகலேயும் மூர்ச்சை தெளிந்து சுய உணர்வு பெற்றவுடனே விருந்து நடக்கட்டும் என்று சொல்லி அனுப்பினார். அவ்வாறே விருந்து நடந்தது. ஆனால் கோகலே இந்த முறை மூர்ச்சையடைந்தது சாதாரண விஷயமாகப் போய்விட வில்லை. அதற்குப் பிறகு கோகலே உடல் வலிவு பெறவில்லை. அந்திய காலம் அவரை நெருங்கி வந்து கொண்டிருந்தது. பூனாவிலிருந்து காந்திஜி இராஜகோட்டைக்கும் போர்பந்தருக்கும் சென்றார். அவருடைய தமையனார் முன்னமே காலஞ் சென்று விட்டார். காலஞ்சென்றவரின் மனைவியையும் மற்ற உறவினர்களையும் பார்க்க விரும்பி போனார். காந்தி மகாத்மாவின் உடை நாளுக்கு நாள் எளிமையாகி வந்தது. பாரிஸ்டர் வேலை தொடங்கியபோது மேனாட்டு நாகரிக உடுப்புத் தரித்திருந்தார்.தென்னாப்ரிக்காவில் போராட்டத்தில் இறங்கிய பிறகு அங்கே இந்தியத் தொழிலாளர்களைப் போல எளிய உடையை தரிக்கத் தொடங்கினார். ஆனால் இதுவும் பாதி மேனாட்டு முறையில் இருந்தது. தென்னாப்பிரிக்காவை விட்டு இந்தியா வந்தபோது கத்தியவாரில் அந்தஸ்து வாய்த்தவர்கள் உடுக்கும் உடை தரித்திருந்தார். இந்த உடையில் வேஷ்டி, உட்சட்டை, நீண்ட மேலங்கி, அங்கவஸ்திரம், தலைப்பாகை ஆகியவை இருந்தன. பம்பாயிலிருந்து ராஜகோட்டைக்குக் கிளம்பும்போது மூன்றாம் வகுப்பில் பிரயாணம் செய்ய மகாத்மா தீர்மானித்தார். அத்துடன் கத்தியவார் உடையில் நீண்ட மேலங்கியையும் உத்தரியத்தையும் புறக்கணித்து விட்டார். அலங்காரமான தலைப்பாகைக்கு பதிலாக எட்டணா விலையுள்ள காஷ்மீர் குல்லா ஒன்று வாங்கி வைத்துக் கொண்டார். மூன்றாம் வகுப்பில் ஏழைகளோடு பிரயாணம் செய்தபோது இம்மாதிரி எளிய உடுப்பு தரிப்பது தான் உசிதம் என்று கருதினார். அப்பொழுது பம்பாய் மாகாணத்தில் சில இடங்களில் பிளேக் நோய் பரவியிருந்தது. ஆகையால் வழியில் வாத்வான் என்னும் ஸ்டே ஷனில் பிரயாணிகள் வைத்தியப் பரிசோதனை செய்யப் பட்டார்கள். காந்திஜிக்குக் கொஞ்சம் ஜுரம் இருந்தது. அவரைப் பரிசோதனை செய்த உத்தியோகிஸ்தர் “நீர் இராஜ கோட்டை சென்றதும் அங்குள்ள பெரிய வைத்திய அதிகாரியிடம் சென்று ஆஜர் கொடுக்க வேண்டும்” என்று கட்டளையிட்டார். அந்த வாத்வான் ஸ்டே ஷனிலேயே மோதிலால் என்னும் தையற்காரர் ஒருவர் வந்து காந்திஜியை சந்தித்தார். அப்போது பிரிட்டிஷ் ஆட்சிக்கு நேராக உட்பட்ட பிரதேசத்திலிருந்து கத்தியவார் சமஸ்தானப் பிரதேசத்துக்குள் நுழையும் இடத்தில ஒரு சுங்கம் ஏற்படுத்தியிருந்தர்கள். இது வீரம் காம் ஸ்டே ஷனில் இருந்தது. பிரயாணிகளையும் அவர்களுடைய சாமான்களையும் பரிசோதனை செய்து சுங்கவரி விதித்து வசூலித்தார்கள். இதனால் பிரயாணிகள் மிக்க தொந்தரவுக்கு ஆளானார்கள். மேற்படி மோதிலால் என்னும் தையற்காரர் மகாத்மாவிடம் வீரம்காம் சுங்கவரி அநீதியைப்பற்றிப் பேசுவதற்காகவே வந்திருந்தார். அதைக் குறித்த எல்லா விவரங்களையும் எடுத்துச் சொன்னார். காந்திஜிக்கு அப்பொது சுரமாயிருந்தபடியால் அதிகம் பேச முடியவில்லை. ஆகையால் எல்லா விவரங்களையும் தெரிந்துகொண்டு ஒரே ஒரு கேள்வி கேட்டார். “நீங்கள் சிறைபுகுவதற்கு சித்தமா” என்பதுதான் அந்தக் கேள்வி. சிறை என்ற வார்த்தையைக் கேட்டு மோதிலால் பயப்பட்டு விடவும் இல்லை; ஆவேசமான பதில் சொல்லவும் இல்லை; " தாங்கள் தலைமை வகித்து நடத்தினால் நானும் இன்னும் பலரும் சிறை புகுவதற்குத் தயார். தாங்கள் கத்தியவாரைச் சேர்ந்தவர்கள். ஆகையால் தங்கள் பேரில் எங்களுக்கு முதல் உரிமை உண்டு. தாங்கள் தலைமை வகித்து நடத்தி இந்த அநீதியை ஒழிக்க வேண்டும்" என்று நிதானமாகப் பதில் சொன்னார். மகாத்மாவுக்கு இந்தப் பதில் மிகவும் பிடித்திருந்தது. தையற்கார மோதிலால் மீது மதிப்பும் அபிமானமும் ஏற்ப‌ட்டன‌. “ச‌ரி பார்க்க‌லாம்” என்று பதில் சொல்லிவிட்டுப் பிரயாணத்தைத் தொடர்ந்தார். மகாத்மா இராஜகோட்டையை அடைந்ததும் பெரிய சுகாதார அதிகாரியைப் பார்க்கப் போனார். இதற்குள் இராஜகோட்டையில் மகாத்மாவின் பெயர் பிரசித்தி அடைந்திருந்தது. எனவே அந்த உத்தியோகஸ்தர் மகாத்மா தம்மிடம் வர நேர்ந்தது பற்றி வருத்தப்பட்டார். ரயிலில் வைத்திய பரிசோதனை செய்தவர் மீது கோபம் அடைந்தார். மகாத்மா இனி தம்மிடம் வர வேண்டியதில்லை யென்றும் மகாத்மா இருக்கும் இடத்துக்கு இன்ஸ்பெக்டரை அனுப்பிவைப்பதாகவும் கூறினார். மூன்றாம் வகுப்பில் பிரயாணம் செய்தபடியினால் மகாத்மாவுக்கு மேற்கூறிய அநுபவம் கிடைத்தது. மூன்றாம் வகுப்பில் பிரயாணம்செய்து பிரயாணிகள் அடையும் கஷ்டங்களை நேரில் தெரிந்து கொள்வதில் மகாத்மாவுக்கு எப்போதும் ஆர்வம் இருந்தது. மகாத்மா இது சம்பந்தமாகக் கூறியிருப்பதாவது “பெரிய மனிதர்கள் மூன்றாம் வகுப்பில் பிரயாணம் செய்யப் பிரியப்பட்டால் ஏழைகள் உள்ளாக வேண்டியிருக்கும் எல்லா விதிகளுக்கும் அவர்களும் உள்ளாக வேண்டியது அவசியம். ரயில் உத்தியோகஸ்தர்களும் பாரபட்சமின்றி நடந்து கொள்ள வேண்டும். அவர்கள் மூன்றாம் வகுப்புப் பிரயாணிகளைச் சகோதர மனிதர்களாகவே பாவிப்பதில்லை என்பதும், கேவலம். ஆடு மாடுகளாகப் பாவிக்கிறார்கள் என்பதும், என்னுடைய அநுபவம். படித்த பணக்கார வகுப்பாரில் சிலர் தாங்களாகவே ஏழைகளின் அந்தஸ்தை ஏற்க முன்வர வேண்டும். அவர்கள் மூன்றாம் வகுப்பில் பிரயாணம் செய்யவேண்டும். ஏழைகளுக்குக் கிடைக்காத எந்த வசதியையும் தாங்கள் பெறக்கூடாது. பிரயாணத்தில் ஏற்படும் அவமதிப்புக்களுக்கும் அநீதிகளுக்கும் தலைகுனிந்து போகாமல் அவற்றைத் தொலைப்பதற்காகப் போராட வேண்டும்.” இவ்வாறு எழுதிய மகாத்மா காரியத்திலும் அவ்விதமே நடந்து காட்டியிருக்கிறார். கத்தியவாரில் காந்திஜி எந்தப் பகுதிக்குப் போனாலும் வீரம்காம் சுங்க வரித்தொல்லையைப் பற்றி ஜனங்கள் புகார் செய்தார்கள். இது சம்பந்தமாக லார்ட் வில்லிங்டன் கொடுத்திருந்த வாக்குறுதியை மகாத்மா பயன்படுத்திக் கொள்ள விரும்பினார். வீரம்காம் சுங்கவரி சம்பந்தமாகச் சகல விவரங்களையும் சேகரித்து ஜனங்களுக்கு அது பெரிய அநீதிதான் என்பதை உறுதி செய்துகொண்டார். பிறகு பம்பாய் அரசாங்கத்துக்கு அந்த விவரங்களைத் தெரிவித்துக் கடிதம் எழுதினார். முதலில் லார்ட் வில்லிங்டனுடைய காரியதரிசியையும் பிறகு லார்ட் வில்லிங்ட‌னையும் பேட்டி கண்டார். அவர்கள் வாயினால் அநுதாபம் தெரிவித்துவிட்டு, “இது இந்திய சர்க்காரைச் சேர்ந்த விஷயம். ஆகையால் இந்திய‌ சர்க்காருக்கு எழுதிக் கொள்ளுங்கள்” என்று சொல்லிவிட்டார்கள். மகாத்மா இந்திய சர்க்காருக்கும் எழுதினார். பயன் ஒன்றும் கிட்டவில்லை. அப்போது கவர்னர் ஜெனரலா யிருந்த லார்ட் செம்ஸ்போர்டைச் சந்தித்து வீரம்காம் சுங்கத்தைப்பற்றிய விவ‌ர‌ங்க‌ளை எடுத்துக் கூறினார். “இப்ப‌டியும் உண்டா?” என்று லார்ட் செம்ஸ்போர்ட் அதிச‌ய‌ப்ப‌ட்டு விசார‌ணை ந‌ட‌த்தித் த‌க்க‌து செய்வ‌தாக‌ வாக்க‌ளித்தார். சில நாளைக்கெல்லாம் வீர‌ம்காம் சுங்க‌ம் எடுத்து விட‌ப்ப‌ட்ட‌து! சர்க்காருடன் கடிதப் போக்குவரவு நடந்து கொண்டிருந்த காலத்தில் மகாத்மா காந்தி பகஸ்ரா என்னுமிடத்தில் பேசிய போது “வேறு வ‌ழிக‌ள் ப‌ய‌ன் த‌ராவிட்டால் சத்தியாகிரஹத்தைக் கைக்கொள்ள நேரலாம்” என்று குறிப்பிட்டிருந்தார். பின்னர் தான் மகாத்மா பம்பாய் சர்க்காரின் காரியதரிசியைப் பார்க்க நேர்ந்தது. காந்திஜியின் பேச்சைக் காரியதரிசி குறிப்பிட்டு, “இந்தப் பயமுறுத்தலுக்கு சர்க்கார் இணங்கி விடுவார்கள் என்பது உம்முடைய எண்ணமா?” என்று கேட்டார். “நான் கூறியதில் பயமுறுத்தல் ஒன்றுமில்லை. குறைகளை நிவர்த்தி செய்துகொள்ள நியாயமான வழி ஒன்றை மக்களுக்கு எடுத்துக் காட்டினேன். சத்தியாகிரஹ‌ம் பலாத்காரம் சிறிதும் அற்ற ஆயுதம். அதைப்பற்றி ஜனங்களுக்கு எடுத்துச் சொல்வது என் கடமை. பிரிட்டிஷ் அரசாங்கம் மிக்க வலிமை பொருந்தியது என்று எனக்குத் தெரியும். ஆனால் சத்தியாகிரஹம் தோல்வியே அறியாத ஆயுதம் என்பதில் எனக்குச் சிறிதும் சந்‌தேக‌ம் இல்லை” என்று ம‌காத்மா காந்தி ப‌தில் அளித்தார். வீரம்காம் சுங்கவரியைப் ப‌ற்றிய‌ கிள‌ர்ச்சியை ம‌கா‌த்‌மா காந்தி இந்தியாவில் ச‌த்தியாக்கிர‌ஹ இய‌க்க‌த்தின் ஆர‌ம்ப‌ ந‌ட‌வ‌டிக்கை என்று க‌ருதினார். அது வெற்றிக‌ர‌மாக‌ முடிந்த‌து ஒரு சுப‌ச‌குன‌ம் அல்ல‌வா? சாந்தி நிகேதனம் இராஜகோட்டையிலிருந்து காந்திஜி ஸ்ரீ ரவீந்திர நாதரின் சாந்திநிகேதனத்துக்குச் சென்றார். ஏற்கெனவே அவ்விடத்துக்குப் போனிக்ஸ் பண்ணையில் வசித்தவர்கள் போயிருந்தார்கள். அவர்கள் சாந்திநிகேதனத்தில் மிக அன்பாக நடத்தப்பட்டு வந்தார்கள். அவர்களுக்குத் தனியாக இடம் கொடுக்கப் பட்டிருந்தது. அவர்களுக்குத் தலைவர் ஸ்ரீ மகன்லால் காந்தி. இவர் சாந்திநிகேதனத்திலும் போனிக்ஸ் ஆசிரமத்தில் நடத்திய வாழ்க்கை முறையையே தாமும் கடைப்பிடித்து மற்றவர்களையும் கடைப்பிடிக்கும்படி செய்துவந்தார். காந்திஜி சாந்தி நிகேதனம் அடைந்ததும் அவரை அங்கிருந்த ஆசிரியர்கள் மாணாக்கர்கள் எல்லாருமே அன்பு வெள்ளத்தில் முழுகும்படி செய்தார்கள். தென்னாப்பிரிக்காவுக்குச் சென்றிருந்த ஆண்ட்ரூஸும் பியர்ஸனும் அப்போது அங்கே இருந்தார்கள். இவர்கள் தவிர, பரோடா கங்காநாத் வித்யாலயத்திலிருந்து சாந்திநிகேதனத்துக்கு வந்திருந்த காகாசாகேப் காலேல்கர் என்பவரைக் காந்திஜி இங்கே சந்தித்தார். பிற்காலத்தில் காகா சாகிப் காந்திஜியின் சிறந்த நண்பர்களில் ஒருவர் ஆனார். சாந்தி நிகேதனத்தை அடைந்த காந்திஜி வெகு சீக்கிரத்திலேயே அங்கிருந்த ஆசிரியர்கள்மாணாக்கர்கள் எல்லாருடனும் சிநேகம் செய்து கொண்டார். மறுநாளே அவர்களுடன் ஒரு முக்கியமான விஷயத்தைப் பற்றி விவாதம் செய்ய ஆரம்பித்தார். போனிக்ஸ் ஆசிரமத்தைச் சேர்ந்தவர்கள் தங்களுக்கு வேண்டிய உணவைத் தாங்களே சமையல் செய்து கொண்டார்கள். அஅதுமாதிரியே சாந்தி நிகேதன மாணாக்கர்களும் சமையற்காரர்களைப் போகச்சொல்லிவிட்டுத் தாங்களே சமையல் செய்து கொண்டால் என்ன என்று மகாத்மா கேட்டார். இதனால் பிள்ளைகளுக்குத் தேகதிடமும் மனோதிடமும் வளரும் என்று சொன்னார். இது சம்பந்தமாக ஆசிரியர்களுக்குள்ளே இரண்டு கட்சிகள் ஏற்பட்டன. ஒரு கட்சியார் மகாத்மாவின் யோசனையை ஆதரித்தார்கள். இன்னொரு கட்சியார் அது நடக்காத காரியம் என்று தலையை அசைத்தார்கள். காந்திஜியின் யோசனை மாணாக்கர்களுக்குப் பிடித்திருந்தது. புதுமையான காரியம் என்றாலே பிள்ளைகள் விரும்புவது இயல்பு அல்லவா? மகாகவி ரவீந்திரரிடம் போய்ச் சொன்னார்கள். உபாத்தியாயர்களும் மாணாக்கர்களும் சம்மதித்தால் தமக்கு ஆட்சேபம் இல்லை என்று குருதேவர் சொன்னார். மாணாக்கர்களைப் பார்த்து “சுயராஜ்யத்தின் திறவுகோல் இந்தச் சோதனையில் அடங்கியிருக்கிறது!” என்று கூறினார். பின்னர் சாந்திநிகேதனத்தில் ஆசிரியர்களின் மேற்பார்வையில் மாணாக்கர்களே சமையல் செய்யும் சோதனை சில காலம் நடந்தது. கூட்டம் கூட்டமாகப் பிரிந்து ஒவ்வொரு வேலையும் ஒவ்வொரு கூட்டத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது பியர்ஸன் என்னும் ஆங்கிலேய அறிஞர் இந்தப் பரிசோதனையில் பூரண உற்சாகத்துடன் ஈடுபட்டார். தம் உடல் நலத்தைக்கூடப் பொருட்படுத்தாமல் அவர் சமையல் அறையில் வேலை செய்தார். சமையல் அறையையும் சுற்றுப் புறங்களையும் சுத்தம் செய்யும் வேலையை ஆசிரியர்கள் சிலர் ஒப்புக்கொண்டிருந்தார்கள். எம்.ஏ.பட்டம் பெற்ற ஆசிரியர்கள் கையில் மண்வெட்டி பிடித்து வேலை செய்வதைப் பார்க்க மகாத்மா காந்திக்கு மிகவும் சந்தோஷமாயிருந்தது. ஆனால் சாந்தி நிகேதனத்தில் இந்தச் சோதனை சில காலந்தான் நடந்தது. சோதனையில் ஈடுபட்டவர்கள் கொஞ்ச காலத்துக்கெல்லாம் களைப்படைந்து போனார்கள். பியர்ஸன் முதலிய சிலர் மட்டும் இறுதிவரை அந்தச் சோதனையை விடாமல் நடத்தி வந்தார்கள். காந்தி மகாத்மா சில காலம் சாந்தி நிகேதனத்தில் தங்கியிருக்கலாம் என்ற எண்ணத்துடன் வந்திருந்தார். ஆனால் இறைவனுடைய விருப்பம் வேறு விதமாயிருந்தது. ஒரு வாரத்திற்குள்ளே ஸ்ரீ கோகலே மரணமடைந்தார் என்னும் செய்தி வந்து காந்திஜியின் உள்ளத்தைக் கலக்கியது. சாந்தி நிகேதனம் துயரத்தில் மூழ்கியது. மகாத்மா காந்தி தமது பத்தினியையும் ஸ்ரீமகன்லால் காந்தியையும் அழைத்துக் கொண்டு பூனாவுக்குப் பிரயாணமானார். இந்தப் பிரயாணத்தின் போதும் காந்திஜி மூன்றாம் வகுப்புப் பிரயாணத்தில் உள்ள கஷ்டங்களை அனுபவித்து அறியும்படியாக நேர்ந்தது. இது சம்பந்தமாக மகாத்மா காந்தி எழுதியிருப்ப தாவது:- “மூன்றாம் வகுப்புப் பிரயாணிகள் டிக்கட் வாங்குவதில்கூட எவ்வளவு கஷ்டங்களுக்கு உள்ளாகவேண்டியிருக்கிறதென்பதை பர்த்வானில் அநுபவித்து அறிந்தோம். ‘மூன்றாம் வகுப்பு டிக்கட்டுகள் இதற்குள் தரமுடியாது’ என்று முதலில் சொன்னார்கள். அதன்மீது நான் ஸ்டேஷன்மாஸ்டரைக் காணச் சென்றேன். அவரைக் கண்டுபிடிப்பதே கஷ்டமாயிருந்தது. யாரோ ஒருவர் தயவு வைத்து அவர் இருக்குமிடத்தைத் தெரிவித்தார். அவரிடம் சென்று எங்களுடைய கஷ்டத்தை எடுத்துக்கூறினோம். அவரும் அதே பதிலையே தெரிவித்தார். ஆகவே காத்திருந்து டிக்கட் ஜன்னல் திறந்ததும் சென்றேன். ஆனால் டிக்கட் வாங்குதல் எளிய காரியமாயில்லை.” அங்கு “வல்லான் வகுத்ததே வாய்க்கால்” என்னும் சட்டம் அமுலில் இருந்தது. மற்றவர்கள் எக்கேடு கெட்டாலும் கெடட்டும் என்று எண்ணிய பலசாலிகளான பிரயாணிகள் ஒருவர் பின் ஒருவராய் வந்து என்னை இடித்துத் தள்ளிக் கொண்டேயிருந்தார்கள். ஆகவே முதலில் டிக்கட் வாங்குவதற்குப் போனவனாகிய நான் ஏறக்குறையக் கடைசியில் தான் டிக்கட் பெற முடிந்தது. வண்டி வந்து சேர்ந்தது. அதில் ஏறுதல் மற்றொருபிரம்மப் பிரயத்தனமாயிற்று. வண்டியில் ஏற்கனவே இருந்த பிரயாணிகளுக்கும், ஏற முயற்சித்த பிரயாணிகளுக்கும் இடையே வசைமொழிகள் பரிமாறிக்கொள்ளப்பட்டன. ஒருவரையொருவர் பிடித்துத் தள்ளலும் நிகழ்ந்தது. பிளாட்பாரத்தில் மேலும் கீழும் ஓடி அலைந்தோம். ‘இங்கு இடமில்லை’ என்னும் பதிலே எங்கும் கிடைத்தது. கார்டினிடம் சென்று சொன்னேன். அவர் ‘அகப்பட்ட இடத்தில் உள்ளே ஏற முயற்சி செய்யும்; இல்லாவிடில் அடுத்த வண்டியில் வாரும்’ என்றார். மூன்றாம் வகுப்பு ரயில்வே பிரயாணிகளின் துயரங்களுக்கு ரயில்வே அதிகாரிகளின் யதேச்சாதிகாரமே காரணம் என்பதில்ஐயமில்லை. ஆனால் பிரயாணிகளின் முரட்டு சுபாவம், ஆபாச வழக்கங்கள், சுயநலம், அறியாமை முதலியவைகள் அத்துயரங்களை அதிகப்படுத்துகின்றன. இதில் பரிதாபமான விஷயம் யாதெனில், தாங்கள் தவறுதலாகவும், ஆபாசமாகவும், சுயநலத்துடனும் நடந்து கொள்கிறோமென்பதே அவர்களுக்குத் தெரிவதில்லை. தாங்கள் செய்வதெல்லாம் இயற்கையே என்று அவர்கள் விஷயத்தில் படித்தவர்களாகிய நாம் காட்டும் அலட்சியமே என்று கூறலாம். மகாத்மா காந்தி பூனா வந்து சேர்ந்து கோகலேயின் சிரார்த்த காரியங்கள் எல்லாம் நிறைவேறிய பிறகு, இந்திய ஊழியர் சங்கத்தில் சேர்வது பற்றி மற்றும் ஒரு முறை சிந்தனை செய்தார். கோகலேயைக் குரு பீடத்தில் வைத்து மகாத்மா அவரிடம் பக்தி செலுத்தியவர். இப்போது கோகலே காலமாகி விட்டபடியினால் அவர் ஸ்தாபித்த சங்கத்தில் சேர்ந்து அவர் ஆரம்பித்து வைத்த பணிகளை நிறைவேற்றுவது தமது கடமை என்று கருதினார். மீண்டும் இந்திய ஊழியர் சங்கத்தின் அங்கத்தினரிடம் தமது விருப்பத்தைத் தெரிவித்தார். முன் போலவே அந்த அங்கத்தினர்களுக்குள் அபிப்பிராயபேதம் ஏற்பட்டது. சிலர் மகாத்மாவைச் சேர்த்துக் கொள்ளலாம் என்றார்கள். சிலர் கூடாது என்றார்கள். மகாத்மாவைச் சேர்த்துக் கொள்வதை எதிர்த்தவர்கள் இந்திய ஊழியர் சங்கத்தின் இலட்சியங்கள் - கொள்கைகளுக்கும் மகாத்மாவின் இலட்சியங்கள் - கொள்கைகளுக்கும் அடிப்படையான வேற்றுமைகள் இருப்பதைச் சுட்டிக்காட்டினார்கள். கொஞ்ச காலத்துக்குப் பிறகு இந்திய ஊழியர் சங்க அங்கத்தினர் கூட்டம் நடத்தி அதில் பெரும்பான்மையினரது அபிப்பிராயத்தின்படி முடிவு செய்யலாம் என்று தீர்மானிக்கப்பட்டது. மகாத்மா இதை விரும்பவில்லை. தாம் இந்திய ஊழியர் சங்கத்தில் சேர்வதற்கு ஒரு சிலர் விரோதமாயிருந்தாலும் அதில் சேர மகாத்மா இஷ்டப்படவில்லை. சிலருக்கு விரோதமாகப் பெருபான்மை வோட்டுப் பெற்று ஒரு ஸ்தாபனத்தில் சேர்வதில் என்ன நன்மை ஏற்படமுடியும்கோகலேயிடம் தாம் வைத்திருந்த பக்திக்கு அது உகந்ததாகுமா? - இப்படி யோசித்துக் கடைசியாக மகாத்மா தமது விண்ணப்பத்தை வாபஸ் வாங்கிக்கொண்டார். இதன் காரணமாக இந்தியா தேசம் அடைந்த நன்மைக்கு அளவே கிடையாது என்று சொல்லலாம். தாம் மேற்படி சங்கத்தில் சேராததே நல்லது என்றும் தாம் சங்கத்தில் சேர்வதை எதிர்த்தவர்களே தமக்கு நன்மை செய்தவர்கள் என்றும் பிற்காலத்தில் காந்திஜி கருதினார். மேற்கண்டவாறு விண்ணப்பத்தை வாபஸ் பெற்று கொண்டதனால் சங்கத்தின் அங்கத்தினருடன் மகாத்மா காந்தியின் சிநேக பாந்தவ்யம் வளர்ந்து நீடித்திருந்தது. சபர்மதி ஆசிரமம் கும்பகோணத்தில் மாமாங்கம்(மகாமகம்) என்னும் திருவிழா பன்னிரண்டு வருஷத்துக்கு ஒரு தடவை நடைபெறுகிறதல்லவா? அதுபோல வடக்கே இமயமலைச் சாரலில் உள்ள ஹரித்வாரம் என்னும் ஷேத்திரத்தில் பன்னிரண்டு ஆண்டுக்கு ஒரு முறை ‘கும்பமேளா’ என்னும் உற்சவம் நடைபெறுவது வழக்கம்.1915ஆம் வருஷத்தில் ‘கும்பமேளா’ உற்சவம் வந்தது. அந்த உற்சவத்திற்கு லட்சக்கணக்கான யாத்ரீகர்கள் வருவது வழக்கம். அவர்களுக்குச் சேவை செய்வதற்காக இந்திய ஊழியர் சங்கத்திலிருந்து ஒரு சேவைப்படை அனுப்பப்பட்டது. இதையறிந்த மகாத்மா தாமும் போனிக்ஸ் கூட்டத்தாருடன் ஹரித்வார உற்சவத்திற்குப் போக விரும்பினார். உற்சவத்தைப் பார்ப்பதும் யாத்ரீகளுக்குச் சேவை செய்வதும் தவிர, ஹரித்வாரத்துக்குப் பக்கத்தில் ஸ்ரீ முன்ஷிராம் நடத்தி வந்த குருகுலத்தைப் பார்க்கவேண்டும் என்ற நோக்கமும் மகாத்மாவுக்கு இருந்தது. சுவாமி சிரத்தானந்தர் என்ற புனிதமான பெயரை கேள்விபடாதவர் யார்? கிலாபத் இயக்கம் நடந்த காலத்தில் டில்லியில் உள்ள புகழ் பெற்ற ஜும்மா மசூதிக்குள் சென்று அங்கு கூடியிருந்த திரளான முஸ்லிம்களுக்குப் பிரசங்கம் செய்தவரும் அவர்தான். சில காலத்துக்குப் பிறகு வெறி கொண்ட முஸ்லிம் ஒருவனால் குத்தி கொல்லப்பட்டவரும் அவரே தான். அந்த சுவாமி சிரத்தானந்தர் சந்நியாசியவதற்கு முன்னால் ஸ்ரீ முன்ஷிராம் என்ற பெயர் தாங்கி கொண்டிருந்தார். ஹரித்வாரதுக்குப் பக்கத்தில் காங்ரி என்னுமிடத்தில் ஸ்ரீ முன்ஷிராம் நடத்திவந்த குருகுலம் அந்த காலத்தில் மிகவும் பிரசித்தி பெற்றிருந்தது. கும்பமேளா உற்சவத்தில் போனிக்ஸ் ஆசிரமவாசிகள் மிகச் சிறந்த தொண்டு செய்தார்கள். ஆனால் மகாத்மா அந்தத் தொண்டில் அதிகமாக ஈடுபடவில்லை. ஏனெனில் மகாத்மா தென்னாப்ரிக்காவில் நடத்திய போராடத்தின் வரலாறு இதற்குள்ளே பலருக்குத் தெரிந்து போயிருந்தது. எனவே உற்சவத்துக்கு வந்த யாத்ரீகர்கள் பலர் மகாத்மா காந்தியையும் பார்க்க வந்தார்கள். அவர்களுடன் பேசுவதற்கும் மதம், சமூகம், அரசியல் முதலிய விஷயங்களைப் பற்றி விவாதிப்ப தற்குமே நேரம் சரியாயிருந்தது. கும்பமேளாவில் காந்திஜி பார்த்த பல காட்சிகள் அவருக்கு வெறுப்பை அளித்தன. ‘சாதுக்கள்’ என்று சொல்லப்பட்ட சந்நியாசி வே ஷதாரிகளின் நடவடிக்கைகள் காந்திஜிக்குப் பிடிக்கவே இல்லை. மதத்தின் பெயரால் பல ஏமாற்றுகள் நடப்பதையும் காந்திஜி கவனித்தார். உதாரணமாக, ஐந்து கால் உள்ள பசுமாடு ஒன்று அங்கே கொண்டு வரப்பட்டிருந்தது. பசுவைப் போற்றுகிற ஹிந்துக்கள் பலர் மேற்படி ஐந்து கால் பசுவைத் தெய்வ அம்சம் உள்ளதாகக் கருதி அதை வழிபட்டு அதன் சொந்தக்காரனுக்குப் பணமும் கொடுத்துவிட்டுப் போனார்கள். ஐந்து கால் பசு முதலில் காந்திஜிக்கு வியப்பு அளித்தது. பிறகு, விசாரித்து்ப பார்த்ததில், உண்மையில் அந்தப்பபசுவுக்கு ஐந்து கால் இல்லை என்றும், ஒரு கன்றுக் குட்டியின் காலை வெட்டி ஒட்ட வைத்திருக்கிறது என்றும் தெரிந்து கொண்டார்! இந்தக்கொடூரமான செயல் மகாத்மாவின் கருணை நிறைந்த உள்ளத்தைப் பெரிதும் பாதித்தது. மொத்தம் பதினேழு லட்சம் ஜனங்கள் அந்த வருஷத்துக் கும்பமேளா உற்சவத்துக்கு வந்திருந்தார்கள். அவர்களில் மிகப் பெரும்பாலோர் உண்மையான பக்தியுடனே புண்ணியந் தேடிக் கொள்வதற்காகவே வந்திருந்தார்கள் என்பதைக் காந்திஜி அறிந்திருந்தார். ஆனால் சில மோசக்காரர்கள் அக்கிரம தந்திரங்களைக் கையாண்டு பக்தியுள்ள பாமர மக்களை ஏமாற்றி வந்தார்கள். இதற்குப் பிராயச்சித்தமாகத் தாம் ஏதாவது செய்ய வேண்டும் என்று காந்திஜிக்குத் தோன்றியது. ஒருநாளில் தாம் சாப்பிடும் உணவில் ஐந்து பொருள்களுக்கு மேல் சேர்த்துக்கொள்வதில்லை யென்றும், இருட்டிய பிறகு எதுவும் சாப்பிடுவதில்லை என்றும் விரதம் எடுத்துக்கொண்டார். இந்த விரதத்தை மகாத்மா தம் அந்திய நாள் வரையில் நிறைவேற்றினார். கும்பமேளா உற்சவம் முடிந்த பிறகு காந்திஜி ஸ்ரீ முன்ஷிராமின் குருகுலத்துக்குச் சென்றார். காந்திஜியின் வரலாற்றைத் தெரிந்து கொண்டிருந்த ஸ்ரீ முன்ஷிராம் அங்கேயே காந்திஜியும் அவருடைய சகாக்களும் தங்கிவிடவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். ஆனால் காந்திஜியின் மனதில் இதற்கு முன்னாலேயே தம்முடைய இலட்சியங்களை நிறைவேற்றுவதற்குரிய தனி ஆசிரமம் ஒன்றை ஸ்தாபிக்க வேண்டும் என்ற எண்ணம் உதயமாகி யிருந்தது. அத்தகைய ஆசிரமத்தை ஆமதாபாத்தில் ஸ்தாபிக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்திருந்தார். ஏனெனில், தாம் பிறந்த நாடாகிய குஜராத்திலே தான் தம்முடைய தொண்டைச் சரிவரச் செய்யமுடியும் என்ற நம்பிக்கை அவருக்கு ஏற்பட்டிருந்தது. ஆமதாபாத்தோ குஜராத்தின் தலைநகரம். கைத்தறி நெசவுக்குப் பெயர்போன இடம். எனவே, இராட்டைக்கும் கைத்தறிக்கும் புத்துயிர் தரவேண்டும் என்னும் காந்திஜியின் நோக்கம் ஆமதாபாத்தில் நிறைவேறக்கூடும். மேலும் அந்நகரில் வசித்த குஜராத்தி செல்வர்களிடமிருந்து தாம் ஆரம்பிக்கும் ஆசிரமத்துக்குப் பணஉதவி பெறவும் கூடும். ஆரம்ப காலத்தில் எந்த ஆசிரமந்தான் பண உதவி இல்லாமல் நடக்க முடியும்.? எனவே, காங்ரி குருகுலத்தைப் பார்த்ததும் மகாத்மா நேரே ஆமதாபாத்துக்குப் புறப்பட்டார். அங்கே பல நண்பர்கள் காந்திஜிக்கு ஆசிரமம் ஸ்தாபிப்பதில் உதவி செய்வதாகச் சொன்னார்கள். அவர்களுடன் பேசிக் கொண்டிருக்கும்போது தீண்டாமையைப் பற்றிப் பேச்சு வந்தது. “நான் நடத்தும்ஆசிரமத்தில் தீண்டாமையை அனுசரிப்பது நினைக்கவும் முடியாத காரியம்” என்று காந்திஜி கூறினார். “மற்ற அம்சங்களில் தகுதியுடைய தீண்டா வகுப்பினர் ஒருவர் ஆசிரமத்தில்சேர முன் வந்தால் அவசியம் அவரைச் சேர்த்துக் கொள்வேன்” என்றும் உறுதியாகச் சொன்னார். ஆனால், அந்த நண்பர்கள், “ஆசிரமத்தில் சேரக்கூடிய தகுதியுடைய தீண்டாதவர் எங்கிருந்து வரப்போகிறார்!” என்று சொல்லித் திருப்தி அடைந்தார்கள். அப்படிப்பட்ட ஒருவர் அகப்படவே மாட்டார் என்பது அவர்களுடைய நம்பிக்கை. ஆமதாபாத்திலேயே ஆசிரமம் ஸ்தாபிப்பது என்று முடிவாகத் தீர்மானிக்கப்பட்டது. ஆமதாபாத்துக்குப் பக்கத்தில் கோச்ராப் என்ற கிராமத்தில் ஸ்ரீ ஜீவன்லால் தேசாய் என்னும் பாரிஸ்டருக்கு ஒரு பங்களா இருந்தது. அதை வாடகைக்குக் கொடுக்க மேற்படி பாரிஸ்டர் சம்மதித்தார். அந்தப் பங்களாவிலேதான் முதன் முதலில் ஆசிரமம் ஸ்தாபிக்கப்பட்டது. ஆசிரமத்துக்குப் பெயர் என்ன கொடுப்பது என்ற கேள்வி எழுந்தது. “சேவாசிரமம்” “தபோவனம்” என்னும் பெயர்களைச் சில நண்பர்கள் குறிப்பிட்டார்கள். “தபோவனம்” என்பது அதிக டாம்பீகமான பெயர் என்று காந்திஜிக்குத் தோன்றியது. “சேவாசிரமம்” பிடித்திருந்தாலும் பூரணதிருப்தி அளிக்கவில்லை. கடைசியாக இந்தியாவின் விடுதலைக்கு மகாத்மா எந்த வழியைக் கையாண்டு காட்ட வேண்டுமென்று எண்ணியிருந்தாரோ, அந்த வழியைக் குறிப்பிடும் பெயராக இருக்க வேண்டும் என்று “சத்தியாக்கிரஹ ஆசிரமம்” என்னும் பெயர் இடப்பட்டது. ஆரம்பத்தில் இருபத்தைந்து ஸ்திரீ புருஷர்கள் ஆசிரமத்தில் இருந்தார்கள். இவர்களில் சிலர் போனிக்ஸ் ஆசிரமத்தில் காந்திஜியோடு இருந்தவர்கள். மற்றவர்கள் இந்தியாவில் புதிதாகச் சேர்ந்தவர்கள். அந்த ஆரம்ப ஆசிரமத் தொண்டர்கள் இருபத்தைந்து பேரில் பதின்மூன்றுபேர் தமிழர்கள் என்று காந்தி மகாத்மா தமது சுயசரிதத்தில் எழுதி வைத்திருக்கிறார். தமிழர்களுக்கு இது எவ்வளவு பெருமையான விஷயம் என்று சொல்லவும் வேண்டுமோ? ஆசிரமம் ஆரம்பித்துச் சிலமாதங்களுக்குள்ளே நேர்ந்த ஒரு பெருஞ் சோதனையைப் பற்றியும் மகாத்மா எழுதியிருக்கிறார். தகுதியுள்ள தீண்டா வகுப்பினர் எவரும் ஆசிரமத்தில் சேர்வதற்கு வரப்போவதில்லை யென்று ஆமதாபாத் நண்பர்கள் கருதினார்கள் அல்லவா? அவர்களுடைய எண்ணத்துக்கு மாறாக ஒரு காரியம் நிகழ்ந்தது. இந்திய ஊழியர் சங்கத்து அங்கத்தினரில் மகாத்மாவிடம் மிகுந்த அபிமானம் கொண்டவர் ஸ்ரீ அமிருதலால் தக்கர். (இன்றைக்கும் ஹரிஜனத் தொண்டில் மனப்பூர்வமாக ஈடுபட்டுள்ள தக்கர் பாபா அவர்கள் தான்.) அவரிடமிருந்து காந்திஜிக்கு ஒரு கடிதம் வந்தது. அதில் தக்கர் பாபா, “தீண்டா வகுப்பைச் சேர்ந்த ஒரு குடும்பத்தார் தங்கள் ஆசிரமத்தில் சேர விரும்புகிறார்கள். ஒழுக்கமும் அடக்கமும் படைத்தவர்கள். அவர்களை ஏற்றுக் கொள்வீர்களா?” என்று கேட்டிருந்தார். இவ்வளவு சீக்கிரத்தில் இத்தகைய சோதனை ஏற்படும் என்று மகாத்மா எதிர்பார்க்கவில்லை. ஆசிரமத்துக்கு உதவி செய்து வந்த ஆமதாபாத் நண்பர்களுக்கு இது பிடிக்காது என்பது தெரிந்தே இருந்தது. ஆயினும் அதற்காக மகாத்மா தம் வாழ்க்கை தர்மத்தின் அடிப்படையான கொள்கையை மாற்றிக் கொள்வதென்பது நினைக்கக்கூடிய காரியமா? கடிதத்தை மற்ற ஆசிரமவாசிகளுக்குக் காந்திஜி படித்துக் காட்டினார். அவர்களும் உற்சாகமாக அதை வரவேற்றார்கள். எனவே தீண்டா வகுப்புக் குடும்பத்தினரை அனுப்பும்படி மகாத்மா கடிதம் எழுதினார். சில நாளில் அவர்கள் வந்து சேர்ந்தார்கள். மூன்றே பேர் அடங்கிய குடும்பம். குடும்பத் தலைவரின் பெயர் துதா பாய்; அவர் மனைவியின் பெயர் தனி பென்; அவர்களுடைய புதல்வியின் பெயர் லக்ஷ்மி. அப்போது லக்ஷ்மி தவழும் பிராயத்துக் குழந்தை. துதாபாய் பம்பாயில் ஆரம்பப் பாடசாலையில் உபாத்தியாயராயிருந்தவர். சத்தியாக் கிரஹ ஆசிரமத்தின் விதிகளையெல்லாம் நன்கு தெரிந்து கொண்டு அந்த விதிகளின்படி நடப்பதாக ஸ்ரீ துதாபாய் ஒப்புக் கொண்டார். அதன்பேரில் அக்குடும்பத்தார் ஆசிரமத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். பிறகு நடந்தவற்றைக் குறித்து மகாத்மா எழுதியுள்ள வரலாறு பின்வருமாறு:- “ஆசிரமத்துக்கு உதவி புரிந்து கொண்டிருந்த நண்பர்களிடையே இது பெருங் கிளர்ச்சியை உண்டு பண்ணிற்று. முதலில் கிணறு விஷயமாகக் கஷ்டம் ஏற்பட்டது. கிணற்றைப் பங்களாவின் சொந்தக்காரரும் உபயோகித்து வந்தார். ஏற்றம் இறைத்து வந்த மனிதன் எங்களுடைய தொட்டியிலிருந்து தண்ணீர்த் துளிகள் சிந்துவதால் தனக்குத் தீட்டு ஏற்பட்டு விடுமென்று கூறி ஆட்சேபித்தான். ஆதலின் எங்களைத் திட்டவும், துதாபாயைத் தொந்தரவு செய்யவும் தொடங்கினான். வசவுகளைப் பொறுத்துக் கொண்டு தண்ணீர் இழுத்துவரும்படி நான் அனைவருக்கும் சொன்னேன். நாங்கள் திரும்பத் திட்டாததை அந்த மனிதன் கண்டபோது வெட்கமடைந்து எங்களைத் தொந்தரவு செய்வதை நிறுத்தி விட்டான். பண உதவியெல்லாம் நிறுத்தப்பட்டது. ஆசிரம விதிகளை அனுசரிக்கக் கூடிய தீண்டாதார் எங்கே கிடைப்பர் என்று கேள்வி கேட்ட நண்பர், அத்தகைய ஒருவர் வருவார் என எதிர்பார்க்கவேயில்லை. சமூக பகிஷ்காரத்தைப் பற்றிய வதந்திகளும் ஏற்பட்டன. இவற்றிற்கெல்லாம் நாங்கள் ஆயத்தமாயிருந்தோம். எங்களைப் பகிஷ்காரம் செய்து சாதாரண வசதிகள் அளிக்கவும் மறுத்த போதிலும் ஆமதாபாத்தை விட்டுப் போகக்கூடாதென்றும், அதைக் காட்டிலும் தீண்டா வகுப்பினர் வசிக்குமிடஞ் சென்று அங்கே உடலுழைப்பினால் கிடைக்கும் பொருளைக் கொண்டு காலட்சேபம் செய்தல் நலமென்று என் நண்பர்களிடம் சொல்லியிருந்தேன். நிலைமை கடைசியில் நெருக்கடியாயிற்று. ஒருநாள் மகன்லால் காந்தி வந்து, “கையில் இருந்த பணமெல்லாம் ஆகிவிட்டது. அடுத்த மாதச் செலவுக்குப் பணமே கிடையாது!” என்று தெரிவித்தார். “அப்படியானால் நாம் தீண்டா வகுப்பாரின் இருப்பிடம் செல்வோம்” என்று அமைதியாகப் பதிலளித்தேன். இத்தகைய சோதனை எனக்கு நேர்ந்தது இது முதல் முறையன்று. சோதனை நேர்ந்த சந்தர்ப்பங்களில் எல்லாம் ஆண்டவன் கடைசி நிமிஷத்தில் எனக்கு உதவி அனுப்பியே வந்தார். ஆசிரமத்தின் பொருளாதார நிலைமையைப் பற்றி மகன்லால் எச்சரிக்கை செய்து அதிக காலம் ஆவதற்குள் ஒரு நாள் காலை ஆசிரமக் குழந்தைகளில் ஒரு குழந்தை ஓடி வந்து, ஸேத் ஒருவர் வாசலில் மோட்டார் வண்டியில் காத்திருப்பதாகவும் என்னைப் பார்க்க விரும்புவதாகவும் கூறியது. அவரைப் பார்க்கச் சென்றேன். “ஆசிரமத்துக்குக் கொஞ்சம் பொருளுதவி செய்ய விரும்புகிறேன்; ஏற்றுக்கொள்வீர்களா?” என்று அவர் கேட்டார். “நிச்சயமாக ஏற்றுக் கொள்வேன். தற்போது எங்கள் பணமெல்லாம் செலவழிந்து வெறுங்கையுடன் இருக்கிறோம்” என்றேன். “நாளை இந்த நேரத்திற்கு இங்கே வருகிறேன். தாங்கள் இருப்பீர்களா? என்று அவர் கேட்டார்.”ஓ, இருக்கிறேன்" என்றேன். அத்துடன் அவர் புறப்பட்டுச் சென்றார். மறுநாள் குறிப்பிட்ட நேரத்திற்குச் சரியாக வண்டி வாசலில் வந்து நின்றது. குழல் ஊதிற்று. குழந்தைகள் செய்தி கொண்டு வந்தார்கள். ஸேத் உள்ளே வரவில்லை. அவரைப் பார்க்க நான் வெளியே வந்தேன். அவர் என் கையில் 13,000 ரூபாய் நோட்டுகளைக் கொடுத்து விட்டு வண்டியை விட்டுக் கொண்டு சென்றார். இந்த உதவியை நான் எதிர்பார்க்கவே யில்லை. அதிலும் எவ்வளவு புதிய முறையில் உதவி! அந்தக் கனவான் அதற்கு முன் ஆசிரமத்துக்கு வந்ததேயில்லை. அவரை அதற்கு முன் ஒரே ஒரு முறைதான் பார்த்திருப்பதாக எனக்கு ஞாபகம். அவர் ஒருவித விசாரணையும் செய்யவில்லை. ஆசிரமத்தைப் பார்வையிடவும் இல்லை. வந்து பணங் கொடுத்துவிட்டு உடனே போய் விட்டார்! இந்த உதவியின் காரணமாக, தீண்டாதார் இருப்பிடத்துக்கு நாங்கள் குடிபோக வேண்டிய அவசியம் இல்லாமற் போயிற்று. இன்னும் ஓராண்டுக்குப் பணத்தைப் பற்றிய கவலையில்லையென்று தைரியமடைந்தோம். துதாபாய் குடும்பத்தைச் சேர்த்துக் கொண்டது ஆசிரமத்துக்கே ஒரு நல்ல படிப்பினையாயிற்று. ஆரம்பத்திலேயே ஆசிரமத்தில் தீண்டாமை பாராட்ட மாட்டோமென்று உலகுக்குப் பகிரங்கமாய் அறிவித்து விட்டோம். ஆசிரமத்துக்குஉதவி செய்ய விரும்பியவர்களை எச்சரித்தவர்களானோம். இத்துறையில் ஆசிரமத்தில் வேலையும் பெரிதும் எளிதாயிற்று. இவையெல்லாம் நன்கு தெரிந்தும், நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டிருந்த ஆசிரமச் செலவுகளை வைதிக ஹிந்துக்களே பெரும்பாலும் கொடுத்து வந்தார்கள். தீண்டாமையின் அடிப்படை ஆட்டங் கொடுத்துப் போய்விட்டது என்பதற்கு இது அறிகுறியல்லவா?…" பின்னரும் சிலகாலம் கோச்ராப்பில் ஆசிரமம் நடந்து வந்தது. பிறருடைய வாடகைக் கட்டடத்தில் நெடுங்காலம் ஆசிரமம் நடத்த முடியாது என்றும் சொந்த இடம் சம்பாதித்து ஆசிரமத்தை நிலைப்படுத்த வேண்டும் என்றும் மகாத்மா கருதினார். இந்தச் சமயத்தில் கோச்ராப் கிராமத்தில் பிளேக் நோய் பரவியது. கிராமத்து ஜனங்களைச் சுகாதார விதிகளை அனுஷ்டிக்கும்படி செய்வதற்கான சக்தியும் செல்வாக்கும் ஆசிரம வாசிகள் அப்போது பெற்றிருக்க வில்லை. இந்தச் சந்தர்ப்பத்தில் ஸ்ரீ புஞ்சா பாய் ஹீராசந்து என்னும் வியாபாரி ஆசிரமம் ஸ்தாபிக்கத் தகுந்த நிலம் சம்பாதித்துக் கொடுப்பதற்கு முன் வந்தார். அவரும் காந்திஜியும் ஆமதாபாத்தைச் சுற்றித் தக்க நிலம் தேடி அலைந்தார்கள். ஆமதாபாத்துக்கு நாலு மைல் தூரத்தில் சபர்மதி நதிக்கரையில் அத்தகைய இடத்தைக் கண்டுபிடித்தார்கள். ஒரு வாரத்திற்குள் அந்த நிலம் வாங்கப் பட்டது. நிலத்தில் கட்டடமோ, மரமோ ஒன்றும் இல்லை. ஆயினும் ஆசிரமத்தை உடனே அவ்விடத்துக்கு மாற்றிவிட வேண்டும் என்று மகாத்மா தீர்மானித்தார். ஆசிரமவாசிகள் வசிப்பதற்க்குக் கித்தான் கூடாரங்கள் போடப்பட்டன. அப் போது ஆசிரமவாசிகள் ஆடவரும் பெண்டிரும் குழந்தைகளு மாக நாற்பது பேர் இருந்தார்கள். எல்லாரும் கித்தான் கூடாரங்களுக்கு வந்து சேர்ந்தார்கள். இவ்விதமாக, மகாத்மாவின் வாழ்க்கைச் சரிதத்தில் மிகப் பிரசித்திபெற்ற சபர்மதி சத்தியாக்கிரஹ ஆசிரமம் ஆரம்பமாயிற்று. இராஜ குமார் சுக்லா இந்தியாவின் அரசியல் சரித்திரத்தில் 1917-ஆம் வருஷம் மிகவும் முக்கியமான வருஷமாகும். அந்த ஆண்டில் இந்தியாவின் சுதந்திரப் போருக்குப் பலம்தரக் கூடிய பல சம்பவங்கள் நிகழ்ந்தன. அவற்றில் முக்கியமானது ‘சம்பரான் சத்தியாக் கிரஹம்’ என்று பெயர் பெற்றது. அந்த நிகழ்ச்சியின் மூலம் மகாத்மா காந்தியின் ஆத்மசக்தியின் பெருமையை இமயமலையிலிருந்து கன்னியாகுமரி வரையில் இந்திய மக்கள் எல்லாரும் நன்கு அறிந்து கொண்டார்கள். பீஹார் மாகாணத்தில் சம்பரான் ஒரு ஜில்லா. இமயமலையின் அடிவாரத்தின் அருகில் உள்ளது. ஜனக மகாராஜன் ஆட்சிபுரிந்த விதேக நாடு என்பது அதுதான். அங்கே அவுரித் தோட்டங்கள் அதிகம். பெரும்பாலான அவுரித் தோட்டங்கள் ஆங்கில முதலாளிகளுக்குச் சொந்தமானவை. சம்பரானிலுள்ள ஒவ்வொரு குடியானவனும் இருபது ஏக்கரா நிலம் பயிர் செய்தால் அதில் மூன்று ஏக்கரா கட்டாயம் அவுரி பயிரிய வேண்டும் என்னும் விதி அங்கே அமுலில் இருந்தது. அந்த மூன்று ஏக்கராவில் விளையும் அவுரிப் பயிர் நிலச்சுவாந்தாரனைச் சேரும். இவ்விதம் கட்டாயமாக அவுரி பயிரிடும் முறைக்குத் ‘தீன் கதியா’ முறை என்ற பெயர் வழங்கிற்று. . 1917-ஆம் ஆண்டுக்கு முன்னால் இந்த விவரம் ஒன்றும் காந்தி மகானுக்குத் தெரியவே தெரியாது. 1916-ஆம் ஆண்டின் இறுதியில் லக்னௌ நகரில் காங்கிரஸ் மகாசபை கூடியபோது இராஜகுமார் சுக்லா என்பவர் காங்கிரஸ் விடுதியில் மகாத்மாவின் ஜாகையைத் தேடிக் கொண்டு வந்து கண்டுபிடித்தார். இராஜகுமார் சுக்லா சம்பரான் ஜில்லா குடியானவர்களில் ஒருவர். கட்டாய அவுரிப் பயிர் செய்து கஷ்டப்பட்டவர்.தம்மைப் போலவே கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் ஆயிரக் கணக்கான குடியானவர்களுக்குக் கதிமோக்ஷம் பிறக்கவேண்டும் என்ற அவா அவர் மனதில் குடிகொண்டிருந்தது. எனவே மகாத்மாவைக் கண்டு அவரிடம் சம்பரான் குடியானவர்களின் கஷ்டங்களைச் சொன்னார். சம்பரானுக்கு நேரில் வந்து பார்க்க வேண்டும் என்றும் வற்புறுத்தினார். அவர் கூறிய விஷயங்கள் மகாத்மாவுக்குத் தெளிவாக விளங்கவில்லை. எனவே இராஜகுமார் சுக்லா “எங்கள் வக்கீல் பாபுவை அழைத்து வருகிறேன். அவர் எல்லாம் தெளிவாகச் சொல்வார்!” என்று கூறிவிட்டுப் போய் பாபு விரஜ கிஷோர் பிரஸாதை அழைத்துக்கொண்டு வந்தார். பின்னாளில் பாபு விரஜகிஷோர் பிரஸாதும் பாபு ராஜேந்திர பிரஸாதும் தேசத்தொண்டில் மகாத்மாவின் சிறந்த துணைவர்கள் ஆனார்கள். ஆனால் அச்சமயம் பாபு விரஜகிஷோரைப் பற்றி மகாத்மாவுக்கு நல்ல அபிப்பிராயம் உண்டாகவில்லை. ஒன்றுமறியாத ஏழைக் குடியானவர்களிடம் பணம் பறிக்கும் வக்கீல்களில் ஒருவர் என்று எண்ணினார். எனவே, பாபு விரஜ கிஷோர் கூறியதை யேல்லாம் கேட்டுக்கொண்டு, “நிலைமையை நேரில் பார்த்துத் தெரிந்து கொள்வதற்கு முன்னால் நான் ஒன்றுமே சொல்வதற்கில்லை. ஆனால் நீங்கள் இதைப் பற்றிக் காங்கிரஸில் ஒரு தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றுவது நல்லது” என்று சொன்னார். அதன்படியே ஸ்ரீ விரஜ கிஷோர் சம்பரான் குடியானவர்களிடம் அநுதாபம் தெரிவிக்கும் தீர்மானம் ஒன்றைக் காங்கிரஸில் கொண்டுவந்து நிறைவேற்றினார். . இதைக்கொண்டு இராஜகுமார் சுக்லா திருப்தியடைந்து விடவில்லை. “தாங்கள் சம்பரானுக்கு வந்து நேரில் நிலைமை யைப் பார்க்கவேண்டும்.” என்று அவர் மகாத்மாவிடம் சொன்னார். “ஆகட்டும்; அந்தப் பக்கங்களில் சுற்றுப் பிரயாணம் செய்வதற்கு வரும்போது சம்பரானுக்கு வருகின்றேன்” என்றார் மகாத்மா. அவர் கான்பூருக்குப் போனபோது இராஜ குமார் சுக்லா அவரைப் பின் தொடர்ந்தார். “இவ்விடத்திலிருந்து சம்பரான் அதிக தூரம் இல்லை. வருகிறீர்களா?” என்று கேட்டார். மகாத்மா அப்போது அவகாசம் இல்லை என்று கூறிவிட்டு ஆமதாபாத் ஆசிரமத்துக்குச் சென்றார். இராஜகுமார் சுக்லா அங்கேயும் போனார். கடைசியாக, காந்திஜி “நான் கல்கத்தாவுக்கு இத்தனாந்தேதி வருகிறேன். அங்கே வந்து என்னைச் சம்பரானுக்கு அழைத்துப் போங்கள்!” என்று சொன்னார். . மகாத்மா கல்கத்தாவுக்குப் போகு முன்பே இராஜகுமார் சுக்லா அங்கே சென்று ஸ்ரீ பூபேந்திரநாத் வஸுவின் வீட்டில் காந்திஜிக்காகக் காத்திருந்தார். இவ்வாறு, கல்வியறிவு அதிகம் இல்லாத ஒரு குடியானவனுடைய உறுதி காரணமாகத் தேசத்துக்கே ஒரு புதிய ஆதர்சம் ஏற்படலாயிற்று. . காந்திஜியும் இராஜகுமார் சுக்லாவும் கல்கத்தாவில் ரயில் ஏறிப் பாட்னாவுக்கு வந்து சேர்ந்தார்கள். பாட்னாவில் காந்திஜிக்குத் தெரிந்த நண்பர் யாரும் இல்லை. இராஜகுமார் சுக்லாவுக்குத் தெரிந்தவர்களோ அவரை மிகக் கீழான மனிதராகக் கருதினார்கள். பாபு ராஜேந்திரப் பிரஸாத்தின் பங்களாவுக்கு மகாத்மாவைச் சுக்லா அழைத்துச் சென்றார். பாபு ராஜேந்திர பிரஸாத் அச்சமயம் ஊரில் இல்லை. அவருடைய வீட்டு வேலைக்காரர்கள் காந்திஜியையும் சுக்லாவையும் இலட்சியம் செய்யவில்லை. அவர்கள் வீட்டுக் கிணற்றில் தண்ணீர் இழுப்பதைக்கூட வேலைக்காரர்கள் ஆட்சேபித்தார்கள். தண்ணீர்த் துணிதெளித்தால் தீட்டாய்ப் போய்விடுவோம் என்று சொன்னார்கள். மற்ற மாகாணங்களைக் காட்டிலும் பீஹாரில் தீண்டாமை மிகக் கடுமை என்பதை காந்திஜி அறிந்து கொண்டார். இராஜகுமார் சுக்லாவினால் தமக்கு அதிக உதவி கிடைக்காது என்பதையும் கண்டு கொண்டார். குதிரை லகானைத் தாமே இழுத்துப் பிடிக்க வேண்டியதுதான் என்று தீர்மானம் செய்தார். . பாட்னாவில் மௌலானா மஷ்ருல் ஹக் என்னும் பிரசித்தமான தேசீய முஸ்லீம் தலைவர் வசித்து வந்தார். அவர் லண்டனில் பாரிஸ்டர் பரீட்சைக்குப் படித்த காலத்தில் மகாத்மாவுக்கு அவருடைய அறிமுகம் ஏற்பட்டிருந்தது. பிற்பாடு 1915-ஆம் வருஷத்துப் பம்பாய் காங்கிரஸின்போது மகாத்மா அவரைச் சந்தித்தார். பாட்னாவுக்கு எப்போதாவது வந்தால் தம் இல்லத்துக்கு வந்து தங்கும்படி மௌலானா மஷ்ருல் ஹக் காந்திஜியிடம் சொல்லியிருந்தார். அதை இப்போது ஞாபகப்படுத்திக் கொண்டு மகாத்மா அவருக்கு ஒரு சீட்டு எழுதி அனுப்பினார். மௌலானா மஷ்ருல் ஹக் உடனே தமது மோட்டாரில் ஏறி வந்து மகாத்மாவைத் தன் வீட்டுக்கு அழைத்துச் சென்றார். . காந்திஜி அவரிடம் தம் வந்த காரியத்தைத் தெரிவித்தார். சம்பரான் விஷயமாக விசாரணை செய்வதற்குத் தாம் எந்த ஊருக்குப் போகவேண்டுமோ அந்த ஊருக்குத் தம்மை முதல் ரயிலில் ஏற்றி அனுப்பும்படி கேட்டுக் கொண்டார். முஸபர்பூருக்கு முதலில் செல்வது நலம் என்று தீர்மானிக்கப்பட்டது. ஆகவே அன்று மாலை மகாத்மாவை முஸபர்பூருக்கு ரயில் ஏற்றி அனுப்பி வைத்தார் மௌலானா மஷ்ருல் ஹக். . முஸபர்பூரில் அச்சமயம் ஆச்சாரிய கிருபளானி வசித்து வந்தார். அந்நகரில் இருந்த அரசாங்கக் கலாசாலையில் அவர் ஆசிரியராயிருந்து சில நாளைக்கு முன்பு அந்த உத்தியோகத்தை ராஜினமா செய்திருந்தார். மகாத்மா வரும் செய்தி அறிந்து ஆச்சாரிய கிருபளானி ஒரு பெரும் மாணாக்கர் கூட்டத்துடன் நள்ளிரவில் ஸ்டே ஷனுக்கு வந்து மகாத்மா காந்தியை வரவேற்றார். ஆச்சாரிய கிருபளானி தமது நண்பரான ஆசிரியர் மல்கானியின் பங்களாவில் வசித்து வந்தார். மகாத்மா காந்தியை அவர் அந்தப் பங்களாவுக்கு அழைத்துப் போனார். . மறுநாள் காலையில் மகாத்மா வந்திருக்கும் செய்தி அறிந்து முஸபர்பூர் வக்கீல்கள் பலர் அவரைப் பார்க்க வந்தார்கள். வந்தவர்களில் இராம நவமி பிரஸாத் என்பவர், “இராஜகுமார் சுக்லா உங்களிடம் சொல்லியிருக்கும் விவரங்கள் எல்லாம் உண்மை தான். அது விஷயமாக நீங்கள் ஏதாவது வேலை செய்வதாக இருந்தால், அரசாங்க கலாசாலை ஆசிரியரின் வீட்டில் தங்கியிருந்து கொண்டு ஒன்றும் செய்ய முடியாது. எங்களில் ஒருவர் வீட்டுக்கு வந்து தங்கவேண்டும். கயா பாபு என்பவர் இங்கே பிரபல வக்கீல். அவர் சார்பாக உங்களை அழைக்கவே நான் வந்தேன். நாங்கள் எல்லாரும் சர்க்காருக்கு விரோதமாக எந்தக் காரியமும் செய்வதற்குப் பயந்தவர்கள்தான். ஆயினும் எங்களால் இயன்ற உதவியைத் தங்களுக்குச் செய்கிறோம். இந்த மாகாணத்தின் தலைவர்களான பாபு விரஜ கிஷோர் பிரஸாத்துக்கும் பாபு இராஜேந்திர பிரஸாத்துக்கும் தந்தி கொடுத்து அவர்களை வரவழைக்கிறோம்!” என்று சொன்னார். . இதன் பேரில் மகாத்மா கயா பாபுவின் வீட்டுக்குப் போனார். தர்பங்காவிலிருந்து விரஜ கிஷோர் பிரஸாதும் பூரியிலிருந்து இராஜேந்திர பிரஸாதும் சீக்கிரத்தில் வந்து சேர்ந்தார்கள். அவர்களைப்பற்றி மகாத்மா தம்முடைய பழைய அபிப்பிராயத்தை மாற்றிக்கொள்ள வேண்டியதாயிற்று. தாம் எண்ணியதுபோல அவர்கள் ஏழைக் குடியானவர்களிடம் பணம் பறிப்பவர்கள் அல்லவென்றும் நேர்மையும் பரோபகார சிந்தையும் உள்ளவர்கள் என்றும் அறிந்தார். விரைவிலேயே மகாத்மாவுக்கும் மேற் கூறிய இரு பீஹார் தலாவர்களுக்கும் நெருங்கிய நட்பு உண்டாயிற்று. இவர்களில் பாபு விரஜ கிஷோர் பிரஸாதின் மருமகன்தான் சோஷலிஸ்ட் கட்சியின் தலைவரான ஸ்ரீ ஜெயப்பிரகாச் நாராயண் அவர்கள். . நிலைமையை நன்றாய்த் தெரிந்துகொண்ட பிறகு காந்திஜி கூறியதாவது: “குடியானவர்களின் சார்பாகக் கோர்ட்டுகளில் வழக்காடி அவர்களுக்கு உதவி செய்ய நீங்கள் முயன்று வந்திருக்கிறீர்கள். ஆனால் அந்த வழியில் எனக்கு நம்பிக்கை இல்லை. முதலில் குடியானவர்களைப் பயத்திலிருந்து விடுதலை செய்யவேணாடும். ‘தீன்கதியா’ முறையை அடியோடு ஒழிக்க வேண்டும். இரண்டு நாளில் இங்கிருந்து திரும்பிப்போய் விடலாம் என்ற எண்ணத்துடன் நான் இங்கு வந்தேன். ஆனால் அது சாத்தியமில்லை என்று காண்கிறேன். இரண்டு வருஷம் இங்கே இருக்கும்படி நேர்ந்தாலும் நேரிடலாம். அதற்கு நான் தயார். நீங்கள் எனக்கு உதவி செய்ய முடியுமா?” . “என்ன விதமான உதவி வேண்டும்” என்று பாபு விரஜ கிஷோர் கேட்டார். முதலில் தம்முடன் அவர்கள் வந்து குடியானவர்கள் சொல்வதைத் தமக்கு மொழிபெயர்த்துச் சொல்லவேண்டும் என்றும், பத்திரிகைகளுக்கு எழுதுவது, கடிதப் போக்குவரத்து செய்வது முதலிய குமாஸ்தா வேலை அதிகம் இருக்கும் என்றும், கடைசியாகச் சிறைக்குப் போகும் படி நேரந்தாலும் நேரலாம் என்றும் மகாத்மா காந்தி சொன்னார்." . “உங்களுடனேயே இருந்து மொழிபெயர்ப்பு வேலை குமாஸ்தா வேலை செய்வதற்குத் தயாராயிருக்கிறோம். சிறைக்குப் போகிறதென்பது முற்றும் எங்களுக்குப் புதிய விஷயம். அதற்கும் சித்தமாக முயல்கிறோம்” என்று அந்தப் பீஹார் நண்பர்கள் காந்திஜியிடம் சொன்னார்கள். . எதிர்பாராத வெற்றி சம்பரான் குடியானவர்களுடைய குறைகளை விசாரித்துத் தெரிந்து கொள்வதற்கு முன்னால் தோட்ட முதலாளிகளையும் சர்க்கார் அதிகாரிகளையும் காந்திஜி சந்தித்துத் தாம் செய்யப் போகும் வேலையைப் பற்றி அறிவித்துவிட விரும்பினார். பீஹார் மாகாணத்தில் ஒவ்வொரு ஜில்லாவுக்கும் ஒரு கலெக்டரும் மூன்று அல்லது நாலு ஜில்லாக்களுக்கு ஒரு கமிஷனரும் உண்டு. கமிஷனர் ஆதிக்கம் வகிக்கும் பிரதேசத்துக்கு டிவிஷன் என்று பெயர். சம்பரான், திர்ஹத் டிவிஷனில் இருந்தது. மகாத்மா திர்ஹத் கமிஷனரைச் சந்திக்க விரும்புவதாகக் கடிதம் எழுதினார். அம்மாதிரியே சம்பரான் தோட்டக்காரர் சங்கத்தின் காரியதரிசிக்கும் எழுதி அனுப்பினார். . தோட்டக்காரர் சங்கத்தின் காரியதரிசி தமது மனக் கருத்தைக் காந்திஜியிடம் உள்ளபடி வெளியிட்டார். “நீர் யார், ஐயா, இங்கு வந்து விசாரணை செய்வதற்கு? நீர் இந்த ஜில்லாக்காரரா? இந்த மாகாணத்தைச் சேர்ந்தவரா? தோட்ட முதலாளிகளுக்கும் குடியானவர்களுக்கும் மத்தியில் வந்து குறுக்கிடுவதற்கு உமக்கு என்ன உரிமை? யார் அதிகாரம் கொடுத்தது? பேசாமல் வந்த வழியே திரும்பிப் போய்ச் சேரும்; சொந்தக் காரியம் இருந்தால் போய்ப் பாரும். அப்படி ஏதாவது சொல்லிக்கொள்ள விரும்பினால் காகிதத்தில் எழுதித் தபாலில் அனுப்பும். நீர் சொல்லும் எந்த விஷயத்தையும் இப்போது நான் கேட்கத் தயாராயில்லை!” என்றார். . பிறகு காந்திஜி திர்ஹத் டிவிஷன் கமிஷனரைப் பார்க்கப் போனார். அந்த நாளில் இந்தியாவில் அதிகார வர்க்கத்தின் அமுல் பிரமாதம். ஒவ்வொரு ஜில்லா கலெக்டரும் தம்மை அந்த ஜில்லாவின் யதேச்சாதிகாரியாகவே நினைத்துக்கொள்வார். நாலு கலெக்டருக்கு மேற்பட்ட கமிஷனரைப் பற்றிக் கேட்க வேண்டுமா? காந்திஜியை அவர் அதட்டவும் மிரட்டவும் தொடங்கினார். “திர்ஹத் டிவிஷனை விட்டு உடனே வெளி யேறிப் போய்விடும். அதுதான் உமக்கு நல்லது. வெளியேறவில்லை யென்றால் அதன் பலனை அநுபவிக்க நேரிடும்!” என்று கமிஷனர் எச்சரிக்கை செய்தார். . மகாத்மா காந்தி திரும்பி வந்து விரஜகிஷோர் பாபு முதலிய நண்பர்களிடம் நிலைமையை எடுத்துரைத்தார். “தோட்டக்கார முதலாளிகள் வெகு கோபமா யிருக்கிறார்கள். கமிஷனர் துரையோ அவர்களைக் காட்டிலும் கடுமையா யிருக்கிறார். ஆகையால் விசாரணை ஆரம்பிப்பதற்கு முன்னாலேயே என்னைக் கைது செய்து சிறைக்கு அனுப்பினாலும் அனுப்பி விடுவார்கள். எதற்கும் நாம் தயாராக இருக்க வேண்டும். நான் கைது செய்யப்படுவதாயிருந்தால் மோத்திஹாரிலாவது பெட்டியாவிலாவது கைது செய்யப்படுவது நல்லது” என்று காந்திஜி கூறினார். . மோத்திஹாரி, திர்ஹத் டிவிஷனின் தலைநகரம். பெட்டியா இராஜகுமார் சுக்லாவின் கிராமத்துக்கு அருகில் இருந்த பட்டணம். அந்தப் பிரதேசத்திலேதான் குடியானவர்கள் அதிகக் கஷ்டப்பட்டுக்கொண்டிருந்தார்கள். ஆகையினாலேயே மகாத்மா அங்கே சென்று தாம் கைதி யாகவேண்டும் என்று விரும்பினார். . உடனே காந்திஜியும் அவருடைய தோழர்களும் புறப்பட்டு மோத்திஹாரி பட்டணத்தை அடைந்தார்கள். அங்கே பாபு கோரக் பிரஸாத் என்பவர் வீட்டில் தங்கினார்கள். மோத்தி ஹாரிக்கு ஐந்து மைல் தூரத்தில் ஒரு கிராமத்தில் ஏழைக் குடியானவன் ஒருவன் துன்புறுத்தப்பட்டதாக அன்று செய்தி வந்தது. மறுநாள் காலையில் மேற்படி கிராமத்துக்கு மகாத்மா வும் பாபு தாராநிதர் பிரஸாத் என்பவரும் யானை மீது ஏறிக் கிளம்பினார்கள். நம்முடைய நாட்டில் மாட்டு வண்டிப் பிரயாணம் எவ்வளவு சாதாரணமோ அப்படி சம்பரானில் யானைப் பிரயாணம் சர்வ சாதாரணமாகும். . காந்திஜி ஏறியிருந்த யானை இரண்டரை மைல் தூரம் போவதற்குள் பின்னால் ஒரு குதிரை வண்டி வந்து யானையைப் பிடித்தது. அந்த வண்டியில் போலீஸ் சேவகன் ஒருவன் இருந்தான். அவன் மகாத்மாவிடம் “போலீஸ்சூபரிண்டெண்ட் துரை தம்முடைய வந்தனத்தை உங்களுக்குத் தெரிவிக்கச் சொன்னார்!” என்றான். இதன் கருத்து என்னவென்பது காந்திஜிக்குத் தெரிந்துவிட்டது. ஆகவே தாரா நிதர்பாபுவிடம் “நீங்கள் மேலே போங்கள்!” என்று சொல்லிவிட்டுக் காந்திஜி போலீஸ் தூதன் கொண்டுவந்த வன்டியில் ஏறிக் கொண்டார். வண்டி நகரத் தொடங்கியதும் போலீஸ் தூதன் ஓர் உத்தரவை மகாத்மாவிடம் கொடுத்தான். அதில், “சம்பரான் ஜில்லாவை விட்டு உடனே வெளியேறவும்” என்று எழுதியிருந்தது. . ம‌காத்மா இற‌ங்கியிருந்த‌ வீடு போய்ச் சேர்ந்த‌தும் போலீஸ் சேவ‌க‌ன் உத்த‌ர‌வைப் பெற்றுக் கொண்ட‌த‌ற்குக் கையொப்ப‌ம் கேட்டான். ம‌காத்மா “ஆக‌ட்டும்; கையொப்ப‌ம் த‌ருகிறேன்” என்றார். உடனே ஒரு காகிதத்தில் “உத்தரவைப் பெற்றுக் கொண்டேன். ஆனால் நான் தொடங்கியுள்ள ஆராய்ச்சி முடியும் வரையில் சம்பரானை விட்டுப் போகும் உத்தேசம் இல்லை” என்று எழுதிக் கையொப்பம் இட்டுக் கொடுத்தார். . சிறிது நேரத்துக்கெல்லாம் இன்னொரு உத்தரவு வந்தது. அதில் “144-வது பிரிவின்படி போட்ட உத்தரவுக்குக் கீழ்ப்படியாத குற்றத்துக்காக நாளைக்கு மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டில் விசாரணைக்கு வந்து சேரவும்” என்று கண்டிருந்தது. . அன்று இரவெல்லாம் காந்திஜியும் அவருடைய சகாக்களும் தூங்கவேயில்லை. மறுநாள் என்ன நடக்கும் என்பது பற்றியும் காந்திஜி சிறைப்பட்ட பின்னர் என்ன செய்யவேண்டும் என்பது பற்றியும் பேசிக்கொண்டிருந்தார்கள். காந்திஜி தாம் எழுத வேன்டிய கடிதங்களையெல்லாம் எழுதி முடித்தார். . மறுநாள் மோத்தி ஹாரி நகரம் கண்ட காட்சியைப்போல் அதற்குமுன் எந்த நாளிலும் கண்டதில்லை என்று அந்த நகர்வாசிகள் சொன்னார்கள். மகாத்மாவைப் பற்றியோ அவர் தென்னாப்பிரிக்காவில் நடத்திய சத்தியப் போராட்டத்தைப் பற்றியோ அந்த இமயமலை அடிவாரப் பிரதேசத்தில் அதிகம் பேருக்குத் தெரிந்திருக்க‌ நியாய‌மில்லை. இந்த‌ நாளிலேபோல‌ அப்போது ப‌த்திரிகைக‌ளின் செல்வாக்கும் அதிக‌ம் இல்லை. எனினும் ம‌காத்மா காந்தி வந்‌த‌து, அவ‌ருக்கு 144-வ‌து உத்த‌ர‌வு வ‌ழ‌ங்க‌ப்ப‌ட்ட‌து, அத‌ற்கு அவ‌ர் கீழ்ப்ப‌டிய மறுத்தது ஆகிய செய்திகள் நகரிலும் சுற்று வட்டாரத்திலும் இரவுக்கிரவே பரவி விட்டன. காலையிலே பார்த்தால் பாபு கோரக் பிரஸாத் வீட்டைச் சுற்றிலும் ஜனங்கள் ஆயிரக் கணக்கிலே கூடியிருந்தார்கள். . இந்தியாவில் பிரிட்டிஷ் உத்தியோகஸ்தர்கள் ஓர் உத்தரவு போடுவது, அதற்குக் கீழ்ப்படிய மாட்டேன் என்று ஓர் இந்தியர் மறுதளிப்பது, - என்பது அதுவரை என்றும் நடவா நிகழ்ச்சிகள் ஆகும். ஆகையால் அந்த நிகழ்ச்சிகள் மக்களின் உள்ளத்தைக் கவர்ந்ததிலும், அத்தகைய அதிசய மனிதரைப் பார்க்க ஜனங்கள் திரண்டு வந்ததிலும் வியப்பு ஒன்றும் இல்லையல்லவா? . சம்பரானில் மட்டுமல்ல; இந்தியா தேசம் முழுவதிலுமே அச்செய்தி பரவியபோது மக்கள் சொல்லமுடியாத கிளர்ச்சியை அடைந்தார்கள். மேலே என்ன நடக்கப் போகிறது என்பதை ஆவலுடன் எதிர் நோக்கிக் கொண்டிருந்தார்கள். . மகாத்மா கோர்ட்டுக்குப் போகவேண்டிய நேரம் நெருங்கிற்று. ஜனக்கூட்டம் நிமிஷத்துக்கு நிமிஷம் அதிகமாயிற்று. காந்திஜி கோர்ட்டுக்குப் போகப் புறப்பட்டபோது வீதியெல்லாம் ஜனசமுத்திரமாயிருந்தது. கோர்ட்டைச் சுற்றிலும் அப்படியே பெருங்கூட்டம். . இந்தச் சமயத்தில் மக்கள் திரண்டு எழுந்து வந்து தம்மிடம் காட்டிய அன்பைக் குறித்து மகாத்மா கூறுகிறார்:- . “சம்பரானில் என்னை யாருக்கும் தெரியாது. சம்பரான் குடியானவர்களோ கல்வி அறிவு இல்லாதவர்கள். சம்பரான் கங்கை நதிக்கு வெகு வடக்கே நேபாளத்துக்கு அருகில் இமயமலை அடிவாரத்தில் இருக்கிறது. இந்தியாவின் மற்றப் பகுதிகளுக்கும் அதற்கும் தொடர்பே இல்லை. அந்தப் பிரதேசத்தில் காங்கிரஸைப் பற்றி யாருக்கும் தெரியாது. காங்கிரஸின் பெயரைக் கேள்விப்பட்டிருந்த சிலரும் அதில் சேரப் பயந்திருந்தார்கள். இரகசியமாகவோ, பகிரங்கமாகவோ வேலை செய்து எங்கள் வருகைக்கு முன் ஏற்பாடுகள் செய்துவைக்கத் தூதர்கள் யாரையும் நாங்கள் அனுப்பிவைக்கவில்லை. எனினும் சம்பரான் குடியானவர்கள் என்னை நெடுங்கால நண்பனைப்போல் வரவேற்றார்கள். இந்தக் குடியானவர்களின் சந்திப்பில் நான் ஆண்டவனையும் அஹிம்சையையும் சத்தியத்தையும் நேருக்கு நேர் தரிசித்தேன். இந்த சத்திய தரிசனம் பெறுவதற்கு என்னை உரியவனாக்கியது எது? ஜனங்களிடம் நான் கொண்டிருந்த அன்பேயல்லாமல் வேறு எதுவும் சொல்வதற்கில்லை. சம்பரானில் அந்தத் தினம் என் வாழ்நாளிலேயே என்றும் மறக்க வொண்ணாத தினமாகும். சட்டப்படி விசாரணைக்கு உள்ளானவன் நான் என்றாலும் உண்மையில் அரசாங்கமே அப்போது குற்றவாளியின் கூண்டில் ஏறி நின்றதாகத் தோன்றியது. கமிஷனர் எனக்கு விரித்த வ்லையில் என்னை அவர் பிடிக்க வில்லை. அந்த வலையில் அரசாங்கத்தையே விழும்படி செய்தார்!” . கோர்ட்டில் விசாரணை ஆரம்பமாயிற்று. ஆனால் சர்க்கார் தரப்பில் அரசாங்க வக்கீலுக்கும் மாஜிஸ்ட்ரேட்டுக்கும் உத்தியோகஸ்தர்களுக்கும் இன்னது செய்வதென்றே தெரிய வில்லை. வழக்கைத் தள்ளிப்போடும்படி சர்க்கார் வக்கீல் மாஜிஸ்ட்ரேட்டைக் கேட்டுக்கொண்டார். ஆனால் காந்திஜி குறுக்கிட்டு, “உத்தரவை மீறிய குற்றத்தை நான் ஒப்புக் கொள்ளப் போகிறேன். ஆகையால் வழக்கைத் தள்ளிவைக்க யாதொரு முகாந்திரமும் இல்லை!” என்று சொன்னார். பிறகு தாம் எழுதிக்கொண்டு வந்திருந்த வாக்குமூலத்தைப் படித்தார். அதன் சாராம்சமாவது:- . “அதிகாரிகள் 144-வது பிரிவின்படி போட்ட உத்தரவை நான் மீறி நடப்பதாக வெளிப்படையாகத் தோன்றும். இந்த நடவடிக்கையை நான் மேற்கொண்டதின் காரணத்தைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். ஜீவகாருண்யத்தொண்டு செய்யும் நோக்கத்துடன் நான் இந்தப் பிரதேசத்துக்கு வந்தேன். இங்குள்ள குடியானவர்கள் தங்களை அவுரித்தோட்ட முதலாளிகள் கொடுமைப் படுத்துவதாகவும், நான் வந்து உதவி செய்யவேண்டும் என்றும் என்னை அழைத்தார்கள். ஆனால் உண்மை நிலையை நேரில் கண்டு அறிவதற்கு முன்னால் நான் எதுவும் செய்யமுடியாது என்று சொன்னேன். ஆகையால் அவுரித் தோட்ட முதலாளிகள், சர்க்கார் அதிகாரிகள் இவர்களுடைய ஒத்துழைப்புடன் நிலைமையை ஆராய்ந்து தெரிந்துகொள்ள எண்ணி வந்தேன். வேறு நோக்கம் எதுவும் எனக்குக் கிடையாது. என்னுடைய வருகையினால் பொது அமைதிக்குப் பங்கமும் உயிர்ச் சேதமும் நேரிடலாம் என்று உத்தரவில் கண்டிருக்கிறது. இதை நான் நம்பமுடியவில்லை. இத்தகைய காரியங்களில் நான் அதிக அநுபவமுள்ளவன். ஆனால் அதிகாரிகளோ வேறு விதமாக எண்ணுகிறார்கள். அவர்களுக்குக்கிடைத்திருக்கும் தகவல்களை ஆதாரமாகக்கொண்டே அவர்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும், நான் சட்டத்துக்கு அடங்கிய பிரஜை. ஆகையால் உத்தரவைப் பெற்றவுடனே அதற்குக் கீழ்ப்படிய வேண்டும் என்றுதான் எண்ணினேன். ஆனால் அவ்விதம் செய்தால் நான் என்னுடைய கடமையில் தவறியதாகும் என மனச்சாட்சி அறிவுறுத்தியது. நான் யாருடைய நலத்தை முன்னிட்டு இங்கு வந்தேனோ அவர்களைக் கைவிட்டுப் போவதாகவே முடியும். ஆகையால் நானாக இங்கிருந்து போகக்கூடாது என்ற முடிவுக்கு வந்தேன். என் மனச்சாட்சி ஒரு விதமாகவும் சர்க்கார் அதிகாரி களின் முடிவு வேறு விதமாகவும் கட்டளையிடும்போது சர்க்கார் அதிகாரிகளின் உத்தரவை நிறைவேற்றும் பொறுப்பை அவர்களுக்கே விட்டு விடுவதுதான் நியாயமாகும். தற்போது இந்தியாவில் உள்ள அரசியல் அமைப்பின்கீழ் இந்தச் சந்தர்ப்பத்தில் நான் கைக்கொள்ளக் கூடிய வழி இது ஒன்றுதான். உத்தரவுக்குக் கீழ்ப்படிய மறுத்துவிட்டு அதற்குரிய தண்டனையை மனப்பூர்வமாக ஏற்று அநுபவிக்கத் தயாராயிருக்கிறேன். எனக்கு விதிக்கப்படப் போகும் தண்டனையை எவ்வகையிலும் குறைத்துக் கொள்ள நான் விரும்பவில்லை. சட்டம், அரசாங்க அதிகாரம் இவற்றின்மேல் மதிப்புக் குறைவினால் நான் இந்த உத்தரவை மீறவில்லை. சட்டங்களுக்கெல்லாம் மேற்பட்ட மனச்சாட்சி என்னும் சட்டத்துக்குக் கீழ்ப்படியும் பொருட்டே இந்த 144-வது உத்தரவை மீறத் துணிந்தேன்.” . இத்தகைய வாக்குமூலம் காந்திஜி கொடுத்த பிறகு விசாரணையைத் தள்ளிப் போடுவதற்குக் காரணம் ஒன்றும் இல்லை அல்லவா? மாஜிஸ்ட்ரேட்டும் அரசாங்க வக்கீலும் திடுக்கிட்டுப் போனார்கள். இந்த மாதிரி ஒரு அநுபவம் இதற்கு முன் அவர்களுக்கு ஏற்பட்டதே யில்லை. ஆகையால் இன்னது செய்வது என்றும் அவர்களுக்குத் தெரியவில்லை. மாஜிஸ்ட்ரேட் பிற்பாடு தீர்ப்புக் கூறுவதாகச் சொல்லி, அதற்காக ஒரு தேதி யும் குறிப்பிட்டார். பின்னர் கோர்ட்டு கலைந்தது. . நடந்ததை யெல்லாம் தெரிவித்து இராஜப் பிரதிநிதிக்கும், பண்டித மாளவியாவுக்கும், பாட்னா நண்பர்களுக்கும் மகாத்மா காந்தி தந்தி கொடுத்தார். . மகாத்மா தந்தி கொடுப்பதற்கு முன்னாலேயே அவர்களுக்குச் செய்தி போய் விட்டது. இந்தியா தேசமெங்கும் அந்தச் செய்தி பரவிவிட்டது. தேசத்தில் அரசியல் அறிவு பெற்றவர்கள் எல்லாரும் அடுத்தபடி என்ன செய்தி வருகிறதோ என்று ஆவலுடன் எதிர்பார்க்கலானார்கள். . பிரிட்டிஷ் அதிகாரி போட்ட உத்தரவைத் தனி மனிதர் ஒருவர் மீறியிருக்கிறார். மீறியதோடல்லாமல் அதைக் கோர்ட்டில் பகிரங்கமாக ஒப்புக் கொண்டு தண்டனை கொடுக்கும்படியும் கேட்டிருக்கிறார்! இந்த மாதிரி அதிசயத்தை இதற்கு முன்னால் கண்டதும் இல்லை; கேட்டதும் இல்லை. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கு நேர்ந்த இந்த அவமதிப்பைப் பிரிட்டிஷ் அதிகார வர்க்கத்தார் எப்படிச் சமாளிக்கப் போகிறார்கள்? பிரிட்டிஷ் சிங்கம் என்ன செய்யப் போகிறது? . பிரிட்டிஷ் சிங்கம் கர்ஜனை புரிந்தது. ஆனால் அது போர் கர்ஜனை அல்ல; வாலைச் சுருட்டிக் கொண்டு குகைக்குத் திரும்பிச் செல்லும் கர்ஜனை. கத்தியோ துப்பாக்கியோ ஆள் பலமோ பண பலமோ ஆயுத பலமோ, - ஒன்றும் இல்லாத மனிதரின் ஆத்ம சக்திக்கு முன்னால் பிரிட்டிஷ் அதிகார வர்க்கம் தலை வணங்கிற்று! . வைஸ்ராய் செம்ஸ் போர்டு தமது நிர்வாக சபை அங்கத்தினருடன் கலந்தாலோசித்து பீஹார் லெப்டினன்ட் கவர்னருக்குச் செய்தி அனுப்பினார். லெப்டினன்ட் கவர்னர் திர்ஹத் டிவிஷன் கமிஷனருக்குத் தாக்கீது அனுப்பினார்: கமிஷனர் மாஜிஸ்ட்ரேட்டுக்குச் செய்தி அனுப்பினார். . தீர்ப்புக் கூறுவதற்காகக் குறிப்பிட்ட நாள் வருவதற்கு முன்னதாகவே மாஜிஸ்ட்ரேட்டிடமிருந்து மகாத்மாவுக்குச் செய்தி வந்தது. “லெப்டினன்ட் கவர்னர் வழக்கை வாபஸ் பெற்றுக் கொள்ளும்படி உத்தரவு அனுப்பியிருக்கிறார். அதன்படி வழக்கு வாபஸ் பெறப்பட்டது” என்று மாஜிஸ்ட்ரேட் தெரிவித்திருந்தார். சம்பரான் ஜில்லா கலெக்டரிடமிருந்து காந்திஜிக்கு ஒரு கடிதம் வந்தது. “அவுரித் தோட்டங்களில் குடியானவர்களின் நிலைமையைப் பற்றி நீங்கள் உத்தேசித்திருக்கும் விசாரணையைத் தடையின்றி நடத்தலாம். அதற்கு வேண்டிய எல்லா உதவியும் செய்யத் தயாராயிருக்கிறேன்” என்று கலெக்டர் ஹேகாக் எழுதியிருந்தார். . இவ்வாறு காந்தி மகான் இந்தியாவில் முதன் முதலாகத் தொடங்கிய சாத்வீகச் சட்டமறுப்பு அதி சீக்கிரத்தில் மகத்தான வெற்றியாக முடிந்தது. அரசாங்க அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் மகாத்மாஜி சம்பரான் குடியானவர்களின் நிலைமை பற்றிய விசாரணையைச் சாங்கோபாங்கமாக நடத்தினார். இதன் பலனாக அக்குடியானவர்களின் குறைகள் பெரும்பாலும் நிவர்த்தியாயின. கிராமத்தொண்டு சம்பரான் ஜில்லாவில் குடியானவர்களின் நிலைமையைப் பற்றி மகாத்மாவின் விசாரணை ஆரம்பமாயிற்று. குடியானவர்களிடம் அவர்களுடைய கஷ்டங்களைப்பற்றி வாக்குமூலங்கள் எடுக்கப்பட்டன. வாக்கு மூலத்தில் உண்மையை அப்படியே சொல்ல வேண்டும் என்றும் கொஞ்சங்கூட மிகைப்படுத்தக் கூடாது என்றும் மகாத்மா வற்புறுத்தினார். ஒவ்வொரு குடியானவனும் வாக்குமூலம் கொடுத்ததும் அவனை நன்றாகக் குறுக்கு விசாரணை செய்தார்கள். குறுக்குவிசாரணையில் எந்த விஷயமாவது சந்தேகத்துக்கு இடம் என்று ஏற்பட்டால் அதைப் பதிவு செய்யாமல் தள்ளிவிட்டார்கள். குடியானவர்கள் கூட்டங் கூட்டமாக வாக்குமூலம் கொடுக்க வந்தபடியால் ஏக காலத்தில் ஏழெட்டுப் பேர் வாக்குமூலம் பதிவு செய்ய வேண்டியதா யிருந்தது. இதற்கு மகாத்மாவுக்கு உதவி செய்வதற்காகப் பாபு பிரஜகிஷோர் பிரஸாத், ராஜேந்திர பிரஸாத் முதலிய பிரசித்தமான பீஹார் வக்கீல்கள் வந்திருந்தார்கள். அவர்கள் மகாத்மாவுடன் வசித்தபடியால் அவர்களுடைய வாழ்க்கை முறைகளைக் குறித்து மகாத்மா தம் அபிப்பிராயத்தைத் தெரிவிக்க நேர்ந்தது. ஒவ்வொரு வக்கீலும் ஒரு சமையற்காரனையும் ஒரு வேலைக்காரனையும் அழைத்து வந்திருந்தார்கள். இராத்திரி நடுநிசிக்குத்தான் போஜனம் அருந்துவார்கள். அவர்கள் தங்களுடைய செலவை யெல்லாம் தாங்களே செய்துகொண்ட போதிலும் அவர்களுடைய ஆடம்பர வாழ்க்கை மகாத்மாவுக்குப் பிடிக்கவில்லை. சிநேகமுறையில் பரிகாசம் செய்து அவர்களைச் சீர்திருத்த முயன்றார். கடைசியாக அந்த வக்கீல்கள் தங்களுடைய தனித்தனி சமையற்காரர்களையும் வேலைக்காரர்களையும் அனுப்பி விட்டார்கள். மகாத்மாவுடன் தொண்டு செய்து அனைவருக்கும் ஒரே சமையல் சாப்பாடு என்றும், எல்லாரும் ஒரே சமயத்தில் வந்து சாப்பிடவேண்டும் என்றும் ஏற்பட்டது. எல்லாருக்கும் பொதுவாக எளிய சைவ உணவு தயாரிக்கப்பட்டது. இவ்வாறு அந்த ஆரம்ப நாட்களிலேயே காந்திமகான் தம்முடைய சகாக்களைக் கூட தியாக வாழ்க்கைக்குத் தயார் செய்யலானார். கிராமங்களுக்குச் சென்று கிராமவாசிகளின் நிலைமையை அறிய அறிய, அவர்களுக்குக் கல்வி அறிவை ஊட்டினால் அன்றி நிரந்தரமான முன்னேற்றம் ஏற்படாது என்று தெரியவந்தது. ஆகவே சம்பளதுக்காகவன்றித் தொண்டு செய்தல் என்ற முறையில் கிராமப் பள்ளிக்கூடம் நடத்தக் கூடியவர்கள் தேவை என்று மகாத்மா விண்ணப்பம் விடுத்தார். இந்த வேண்டுகோளின் பேரில் தேசத்தின் பல பகுதிகளிலிருந்தும் தொண்டர்கள் வந்தார்கள். மகாத்மாவின் அந்தரங்கக் காரியதரிசியாகயிருந்து அற்புதமான தொண்டுசெய்த ஸ்ரீ மகாதேவதேஸாய் இந்த நாளிலேதான் மகாத்மாவை வந்து அடைந்தார். சத்தியாக்கிரஹ ஆசிரமத்திலிருந்து ஸ்ரீமதி கஸ்தூரிபாய் காந்தியும் ஸ்ரீ தேவதாஸ் காந்தியும் இன்னும் சில தொண்டர்களும் வந்து சேர்ந்தார்கள். முதலில் பரிச்சார்த்தமாக ஆறு கிராமங்களில் ஆறு பள்ளிகூடங்கள் ஏற்படுத்தப்பட்டன. இந்த பள்ளிகூடங்களில் குழந்தைகளுக்கு எழுதவும் படிக்கவும் கணக்குப்போடவும் கற்றுக் கொடுப்பதைக் காட்டிலும் அவர்களுக்குத் தூய்மையும் நல்ல பழக்க வழக்கங்களும் கற்பித்தலே முக்கியமானதென்று காந்திஜி வற்புறுத்தினார். கிராமத் தொண்டுசெய்ய முன் வந்தவர்களில் பல பெண்மணிகளும் இருந்தார்கள். இவர்களில் ஸ்ரீமதி அவந்திகாபாய் கோகலே நடத்திய பள்ளிக்கூடம் மிகச் சிறந்த மாதிரிப் பள்ளிக்கூடமாக விளங்கிற்று. பள்ளிக்கூடங்கள் நடத்த கிராமங்களிலும் அவற்றுக்குச் சுற்றுவட்டாரங்களிலும் வேறு வகைப்பட்ட சமூகத் தொண்டுகளும் தொடங்கப்பட்டன. கிராமவாசிகள் பொதுவாக அறியாமையில் மூழ்கியிருந்தார்கள். சுகாதாரம் சம்பந்தமாக அவர்களுடைய அறியாமை பயங்கரமாயிருந்தது. கிராமங்களில் வீதிகளும், சந்துகளும் குப்பை மயமாயிருந்தன. கிணறுகளைச் சுற்றியும் சேறும் கும்பியுமாக கிடந்தன. ஆண்கள், பெண்கள், குழந்தைகள் எல்லோருமே சொறி சிரங்கு முதலிய சரும வியாதிகளினால் பீடிக்கப்பட்டிருந்தார்கள். எனவே, மகாத்மாவினால் பள்ளிக்கூடம் நடத்துவதுடன் திருப்தி அடைந்து இருக்க முடியவில்லை. வைத்திய உதவியும் சுகாதார முயற்சியும் தொடங்கவேண்டும் என்று விரும்பினார். இந்த வேலைக்குப் பொறுப்பு வகித்து நடத்த இந்திய ஊழியர் சங்கத்திலிருந்து ஓர் ஊழியரை அனுப்பவேண்டும் என்று எழுதிக் கேட்டார். அதன்படி டாக்டர் தேவ் என்பவர் வந்து சேர்ந்தார். கிராமவாசிகள் டாக்டரிடம் சிகிச்சை செய்துகொள்ள வந்தார்கள். ஆனால் சுகாதார விதிகளை அனுசரிப்பதில் அவர்கள் சிரத்தை கொள்ளவில்லை. வயலில் பாடுபட்டு உழைத்து வேலை செய்யும் தொழிலாளிகள் கூடத் தங்கள் வீடு அசுத்தத்தைத் தாங்கள் சுத்தப்படுத்த முன் வரவில்லை. எவ்வளவு சொன்னாலும் அவர்கள் கேட்கும் வழியாக இல்லை. காந்தி மகான் இதனால் மனம் சோர்ந்து விடவில்லை. நாமே செய்து காட்டவேண்டும் என்று டாக்டர் தேவிடம் சொன்னார். அதன்பேரில் டாக்டர் தேவும் அவர் கீழ் வேலை செய்த தொண்டர்களும் ஒரு கிராமத்தைச் சுத்தம் செய்து காட்டுவது என்று தீர்மானித்தார்கள். தங்களுடைய சக்திகளையெல்லாம் திரட்டி அந்த ஒரு கிராமத்தில் உபயோகப் படுத்தினார்கள். கிராமத்தைச் சென்று அடையும் சாலைபுறங்களையும் வீடுகளின் வாசற்புரங்களையும் கூட்டிச் சுத்தம் செய்தார்கள். கிணறுகளிலிருந்து துரு எடுத்துச் சுத்தப் படுத்தினார்கள். அழுக்குத் தண்ணீர் தேங்கியிருந்த பள்ளங்களைத் தூர்த்து மூடினார்கள். இதையெல்லாம் பார்த்த பிறகு அந்தக் கிராமத்து ஜனங்கள் கொஞ்சம் வெக்கப்பட்டு ஊரைத் தாங்களே சுத்தம் செய்வதற்கு முன்வந்தார்கள். இந்த மாதிரி பல கிராமங்கள் சுத்தமாயின. இத்தகைய தொண்டு நடந்து கொண்டிருந்த கிராமங்களுக்கு மகாத்மா அடிக்கடி சென்று பார்வையிட்டு வந்தார். அப்போது காந்திஜி அடைந்த ஒரு அனுபவத்தைப் பல பொதுக்கூட்டங்களில் பின்னால் சொல்லியிருக்கிறார். “சத்தியசோதனை” என்னும் தமது சுய சரிதத்திலும் குறிப்பிட்டிருக்கிறார். மனதை உருக்கும் அச்சம்பவம் வருமாறு:- “பிதிஹர்வா என்னும் சிறு கிராமத்தில் எங்கள் பள்ளிக்கூடம் ஒன்றிருந்தது. அதற்கருகிலிருந்த மற்றொரு சிறு கிராமத்தைப் பார்க்க நான் சென்றிருந்தேன். அங்கே நான் கண்ட ஸ்திரீகளில் சிலர் மிகவும் அழுக்கான ஆடை தரித்திருந்தார்கள். அவர்கள் தங்கள் ஆடைகளை ஏன் துவைப்பதில்லை யென்று கேட்கும்படி கஸ்தூரிபாயிடம் சொன்னே. அவள் அவ்வாறே அவர்களைப் பார்த்துக் கேட்டாள். அப்போது அந்த ஸ்திரீகளில் ஒருத்தி கஸ்தூரிபாயைத் தன் குடிசைக்குள் அழைத்துச் சென்று கூறியதாவது: ‘இங்கே பாருங்கள். வேறு ஆடைகள் வைத்திருக்கும் பெட்டி அல்லது அலமாரி ஏதாவது இவ்வீட்டில் இருக்கிறதா? நான் அணிந்திருக்கும் புடவை ஒன்றுதான் எனக்கு இருக்கிறது. அதை நான் எப்படித் துவைப்பேன்? மகாத்மாஜியிடம் சொல்லி இன்னொரு சேலை வாங்கித்தாருங்கள். அப்போது தான் தினந்தோறும் ஸ்நானம் செய்து சுத்தமான ஆடை அணிந்துகொள்வதாக வாக்குறுதி தருகிறேன்.’ இந்நிலைமை ஏதோ அபூர்வமானதென்று எண்ணவேண்டாம். இந்தியக் கிராமங்கள் பலவற்றிலும் உள்ள நிலைமைக்கு இது ஓர் உதாரணமே யல்லாது வேறில்லை. இந்தியாவில் கணக்கற்ற குடிசைகளில் ஜனங்கள் எவ்விதத் தட்டுமுட்டுச் சாமான்களுமின்றி, மாற்றிக்கட்டிக்கொள்ள இரண்டாவது துணியுமின்றி, மானத்தை மூட ஒரே கந்தையுடன் வாழ்கிறார்கள்." சம்பரான் கிராமங்களில் மகாத்மா அடைந்த மேற்கூறிய அநுபவந்தான் பின்னால் காந்திஜி இராட்டை இயக்கத்தை ஆரம்பிப்பதற்கும், கிராமவாசிகள் தங்கள் சுய தேவைகளைத் தாங்களே பூர்த்திசெய்து கொள்ள வேண்டும் என்னும் இயக்கத்தை நடத்துவதற்கும் மூலகாரணமாயிருந்தது. குடியானவர்களிடம் வாக்குமூலம் வாங்கும் வேலை ஒரு பக்கம் தீவிரமாக நடந்து கொண்டிருந்தது. ஆயிரக்கணக்கான வாக்குமூலங்கள் பதிவாகிவிட்டன. வாக்குமூலங்கள் பதிவு செய்த இடத்தில் சி.ஐ.டி. போலீஸ்காரர்களும் இருப்பார்கள். அதை மகாத்மா ஆட்சேபிக்கவில்லை. சி.ஐ.டி. போலீஸார் இருக்கும்போதே வாக்குமூலம் கொடுக்கச் செய்தால்தான் குடியானவர்களுக்குத் தைரியம் உண்டாகும் என்று மகாத்மா கருதினார். வாக்குமூலங்களின் போக்கைத் தோட்ட முதலாளிகள் அறிந்தபோது அவர்களுடைய கோபம் அதிகமாயிற்று. மகாத்மாவின் விசாரணையைத் தடைப்படுத்தி நிறுத்துவதற்குப் பல முயற்சிகள் செய்தார்கள். மகாத்மாவின் கிராமத் தொண்டுக்கும் இடையூறு விளைவிக்கப் பார்த்தார்கள். மூங்கில் புல்லினால் கட்டியிருந்த ஒரு பள்ளிக்கூடக் குடிசைக்கு அவர்களுடைய தூண்டுதலினால் தீ வைக்கப்பட்டது. அதன் பலன் ஒரு விதத்தில் நல்லதே ஆயிற்று. தொண்டர்கள் மூங்கில் புல் குடிசை இருந்த இடத்தில் பள்ளிக்கூடத்துக்காகச் செங்கல் கட்டடம் கட்டி விட்டார்கள். பிறகு ஒரு நாள் பீஹார் சர்க்காரிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. “உங்களுடைய விசாரணை நீண்டு கொண்டே போகிறதே! சீக்கிரம் முடித்துக் கொண்டு பீஹாரை விட்டுப் போனால் நன்றாயிருக்கும்!” என்பது அக்கடிதத்தின் சாராம்சம். “விசாரணை சீக்கிரம் முடிவதற்கில்லை. இரண்டில் ஒன்று செய்து அரசாங்கம் என்னுடைய விசாரணையை நிறுத்திவிடலாம். ஒன்று, குடியானவர்களின் குறைகள் உண்மை என்று ஒப்புக்கொண்டு அவற்றை நிவர்த்திக்க ஏற்பாடு செய்யலாம்.அல்லது, உத்தியோக முறையில் சர்க்காரே குடியானவர்களின் குறைகளை விசாரித்து முடிவு செய்ய ஒரு கமிட்டி நியமிக்கலாம். இந்த இரண்டில் ஒன்று செய்தால் என்னுடைய விசாரணையை நிறுத்திக் கொள்கிறேன்” என்று மகாத்மா பதில் எழுதினார். அப்போது பீஹாரின் லெப்டினண்ட் கவர்னராயிருந்தவர் ஸர் எட்வர்ட் கேட் என்னும் நல்ல ஆங்கிலேயர். தம்மை வந்து பார்க்கும்படியாக மகாத்மா காந்திக்கு அவர் கடிதம் எழுதினார். அதன்பேரில் காந்திஜி கவர்னரைப் போய்ப் பார்த்தார். “தங்கள் விருப்பத்தின்படியே சம்பரான் குடியானவர்களின் குறைகளை விசாரித்து நிவர்த்திப்பதற்கு ஒரு கமிட்டி நியமிக்கப் போகிறேன். அந்தக் கமிட்டியில் தாங்களும் அங்கத்தினரா யிருக்கவேண்டும்” என்று சொன்னார் ஸர் எட்வர்ட் கேட். “கமிட்டியில் அங்கத்தினன் ஆவதால் குடியானவர்களின் கட்சி பேசும் உரிமை எனக்கு இல்லாமற் போய்விடக்கூடாது. கமிட்டியின் முடிவு திருப்திகரமா யில்லாவிட்டால் குடியானவர்களுக்கு யோசனை சொல்லி நடத்தும் உரிமையும் எனக்கு இல்லாமற் போய்விடக் கூடாது. அப்படியானால், நான் கமிட்டியில் இருக்க ஒப்புக்கொள்கிறேன்” என்றார் காந்திஜி. இந்த நிபந்தனைகளை ஸர் எட்வர்ட் கேட் ஒப்புக்கொண்டார். ஸர் பிராங்க் ஸ்லை என்னும் ஆங்கிலேயர் தலைமையில் சர்க்கார் கமிட்டி நியமிக்கப்பட்டது. அதில் மகாத்மாவும் அங்கத்தினரானார். உத்தியோக முறையில் விசாரணை நடந்தது. குடியானவர்களின் குறைகள் எல்லாம் உண்மையானவையே என்று கமிட்டியார் கண்டார்கள். அநீதிகளை ஒழிப்பதற்குரிய சிபார்சுகளும் செய்தார்கள். அந்தச் சிபார்சுகளை அனுசரித்துச் சீக்கிரத்திலேயே சட்டம் ஏற்பட்டது. நூறு வருஷகாலமாக அந்தப் பிரதேசத்தில் அமுலில் இருந்துவந்த “தீன் கதியா” முறை ஒழிந்தது. இத்துடன் சம்பரான் ஜில்லாவில் தோட்டக் கார முதலாளிகளின் ராஜ்யமும் முடிவுற்றது. தொழிலாளர் தோழன் இந்தியாவில் இப்போதெல்லாம் தொழிலாளர் இயக்கம் பிரமாதப் படுகிறது. பல தொழிலாளர் சங்கங்களும் தொழிலாளர் காங்கிரஸ்களும் போட்டியிட்டுக் கொண்டு தொழிலாளருக்குத் தொண்டு செய்து வருகின்றன. தேச நலனைக் கவனியாது சிலர் தொழிலாளரைத் தூண்டிவிட்டு வேலை நிறுத்தம் செய்யப் பண்ணுவதிலேயே கண்ணும் கருத்துமாயிருக்கின்றனர். அரசியல் செல்வாக்குப் பெறுவதற்காகவே பலர் தொழிலாளர் இயக்கங்களில் சேருகிறார்கள். முதன் முதலாக இந்தியாவில் தொழிலாளர் இயக்கத்துக்கு உயிர் கொடுத்துப் பலப்படுத்தியவர் காந்தி மகாத்மாவேயாவர். இந்தியாவில் முதலாவது பெரிய தொழிலாளர் வேலை நிறுத்தம் மகாத்மாவின் தலைமையிலேயே நடந்தது. அந்த இயக்கம் பூரண அஹிம்சா தர்ம முறையில் நடந்து மகத்தான வெற்றியும் அடைந்தது. அதன் காரணமாக இந்தியா தேசம் முழுவதிலும் தொழிலாளரின் நிலை ஓரளவு உயர்ந்தது என்று சொல்லுவது மிகையாகாது. அந்த வேலை நிறுத்தத்தின் விவரம் பின்வருமாறு’ சம்பரானில் குடியானவர்களின் நிலைமையைப் பற்றி விசாரணை இன்னும் நடந்து கொண்டிருக்கும்போதே ஆமதாபாத்திலிருந்து மகாத்மாவுக்கு ஒரு கடிதம் வந்தது. அதை எழுதியவர் ஸ்ரீமதி அனசூயா பென். ஆமதாபாத்தில் ஆலைகள் அதிகம். அவற்றில் வேலை செய்த தொழிலாளரும் அதிகம். அவர்கள் பெற்று வந்த சம்பளமோ மிகமிகக் குறைவு. சில காலமாக ஆலைத் தொழிலாளர் சம்பள உயர்வு கோரிக் கிளர்ச்சி செய்து வந்தார்கள். ஸ்ரீமதி அனசூயாபென் என்னும் பெண்மணி அத்தொழிலாளர்களூக்கு உதவி செய்து வந்தார். பல நாள் கிளர்ச்சி நடந்தும் பலன் ஒன்றும் கிட்டவில்லை. அதன் பேரில் ஸ்ரீமதி அனசூயா பென் மகாத்மாவுக்குக் கடிதம் எழுதினார். அதில் ஆமதாபாத் தொழிலாளருக்கு வழிகாட்டி உதவ வேண்டும் என்று கேட்டிருந்தார். மகாத்மா சம்பரான் வேலை முடிந்ததும் ஆமதாபாத்துக்கு வருவதாகப் பதில் எழுதினார். அவ்வாறே சம்பரானில் திருப்திகரமான முடிவு ஏற்பட்டதும் மகாத்மா ஆமதாபாத் சென்றார். தொழிலாளரின் நிலைமையை விசாரித்து அறிந்த பிறகு அவர்களுடைய கட்சியில் நியாயம் இருப்பதாகக் கண்டார். எனினும் தொழிலாளரின் போராட்டத்துக்கு அவர் தலைமை வகித்து நடத்துவதில் ஒரு தர்ம சங்கடம் இருந்தது. அதுவரை ஆமதாபாத் ஆலை முதலாளிகள் பலர் மகாத்மா சத்தியாக்கிரஹ ஆசிரமம் ஸ்தாபிப்பதற்கு உதவி புரிந்து வந்தார்கள். ஆலை முதலாளிகளுக்குத் தலைவர் ஸ்ரீ அம்பாலால் சாராபாய். தொழிலாளர் கட்சிக்குத் தலைமை வகித்த ஸ்ரீமதி அனசூயாபென் ஸ்ரீ அம்பாலாலின் சகோதரி. ஆகவே போராட்டம் ஏற்பட்டால் எல்லாருக்குமே மனச் சங்கடம் உண்டாகும். இதையெல்லாம் உத்தேசித்து மகாத்மா ஆலை முதலாளிகளிடம் சென்று, விவாதத்தை மத்தியஸ்தர்களின் தீர்ப்புக்கு விட்டுவிடும்படி கேட்டுக் கொண்டார். முதலாளிகள் இந்த யோசனையை வன்மையாக மறுத்து விட்டார்கள். “எங்களுக்கும் எங்கள் தொழிலாளர்களுக்கும் இடையே மூன்றாவது மனிதர் வந்து மத்தியஸ்தம் செய்வதா? அதற்கு நாங்கள் இணங்கவே முடியாது!” என்று சொல்லி விட்டார்கள். காந்திஜிக்கு வேறு வழி யில்லாமற் போயிற்று. ஆலைத் தொழிலாளருக்கு வேலை நிறுத்தம் செய்யும்படி யோசனை சொல்ல நேர்ந்தது. ஆனால் அவ்விதம் அவர்களுக்கு யோசனை கூறும்போது மகாத்மா நாலு நிபந்தனைகளையும் குறிப்பிட்டார். “இந்த நிபந்தனைகளை நிறைவேற்றுவதாயிருந்தால் நான் உங்களுக்குத் தலைமை வகிக்கிறேன். இல்லாவிட்டால் நான் பொறுப்பு ஏற்றுக்கொள்ள முடியாது” என்று கூறினார். நாலு நிபந்தனைகளும் வருமாறு. 1. எந்த நிலைமையிலும் தொழிலாளர் பலாத்காரத்தைக் கைக்கொள்ளக்கூடாது. 2. கட்டுப்பாட்டை மீறி எந்தத் தொழிலாளராவது வேலைக்குப் போனால் அவர்களை மற்றவர்கள் நிர்ப்பந்திக்கக் கூடாது. 3. வேலை நிறுத்தத்தின்போது வாழ்க்கை நடத்துவதற்குப் பிச்சை எடுக்கக்கூடாது. 4. வேலைநிறுத்தம் எவ்வளவு காலம் நீடித்தாலும் உறுதியாக நிற்கவேண்டும். வேறு தொழில் செய்து பிழைக்க வேண்டும். மேற்படி நாலு நிபந்தனைகளையும் தொழிலாளர் தலைவர்கள் ஏற்றுக்கொண்டார்கள். தொழிலாளர்களின் பொதுக்கூட்டம் கூட்டி அதில் மகாத்மாவின் நிபந்தனைகளை அவர்களுக்குத் தெளிவாகத் தெரியப் படுத்தினார்கள். எல்லாவற்றையும் நன்றாகக் கேட்டுக்கொண்ட பின்னர் தொழிலாளர்கள் ஒருமுகமாக வேலை நிறுத்தம் செய்யத் தீர்மானித்தார்கள். முதலாளிகள், ஒன்று தங்கள் கோரிக்கைகளை ஒப்புக்கொள்ள வேண்டும் அல்லது மத்தியஸ்தத்துக்கு விடச் சம்மதிக்க வேண்டும் என்றும் அதுவரையில் வேலைக்கு யாரும் திரும்பிப் போவதில்லை யென்றும் சபதம் செய்தார்கள். இந்த வேலை நிறுத்தம் நடந்தபோதுதான் மகாத்மாவுக்கு முதன் முதலாக ஸ்ரீ சங்கர்லால் பாங்கர், ஸ்ரீ வி.ஜே.படேல், ஸ்ரீ வல்லபாய் படேல் முதலிய குஜராத்தித் தலைவர்கள் அறிமுகமானார்கள். வேலைநிறுத்தம் ஆரம்பமான பிறகு தினந்தோறும் சபர்மதி நதிக்கரையில் தொழிலாளர் கூட்டம் நடந்து வந்தது. ஆயிரக்கணக்கில் தொழிலாளிகள் கூட்டத்துக்கு வந்தார்கள். மகாத்மா ஒவ்வொரு நாளும் பேசினார். அவர்களுடைய சபதத்தையும் தம்முடைய நாலு நிபந்தனைகளையும் ஞாபகப்படுத்தினார். தொழிலாளிகள் தினந்தோறும் ஆமதாபாத் நகரத்தின் வீதிகளில் அமைதியாக ஊர்வலம் நடத்தினார்கள். “தோழர்களே! சபதத்தைக் காப்பாற்றுங்கள்!” என்று எழுதிய துணிக் கொடிகளைப் பிடித்துக் கொண்டு சென்றார்கள். மகாத்மா அடிக்கடி ஆலை முதலாளிகளைப் போய்ப் பார்த்து வந்தார். தொழிலாளிகளுக்கு நீதி வழங்குமாறு வேண்டிக் கொண்டார். அதில் பயன் விளையவில்லை. “நாங்களும் சபதம் எடுத்துக்கொண்டிருக்கிறோம். எங்கள் சபதத்தை நாங்கள் மீற முடியாது. தொழிலாளிகள் எங்கள் குழந்தைகளைப் போன்றவர்கள். அவர்களுக்கும் எங்களுக்கும் மத்தியில் மூன்றாம் மனிதர்கள் வந்து குறுக்கிடுவதை எப்படி நாங்கள் பொறுக்க முடியும்?” என்றார்கள் முதலாளிகள். வேலை நிறுத்தம் மொத்தம் மூன்று வார காலம் நடந்தது. முதல் இரண்டு வாரம் வரையில் ஆலைத்தொழிலாளிகள் தைரியமாகவும் உறுதியாகவும் இருந்தார்கள். அதற்குப் பிறகு சிலர் தளர்ச்சி அடைய ஆரம்பித்தார்கள். சபதத்தை மீறி வேலைக்குச் செல்வோரைப் பார்த்து மற்ற பெரும்பான்மையோர் கோபம் கொள்ள ஆரம்பித்தார்கள். ஒன்று அவர்கள் பலாத்காரத்தில் இறங்கிவிடலாம் அல்லது தாங்களும் சோர்வு அடைந்து வேலைக்குத் திரும்பி விடலாம் என்று காணப்பட்டது. பொதுக் கூட்டத்துக்கு வந்த தொழிலாளிகளின் முகத்தில் சோர்வும் கிலேசமும் குடிகொண்டிருந்தன. இதை யெல்லாம் பார்த்த மகாத்மாவின் மனதில் கவலை உண்டாயிற்று. தொழிலாளர் வேலை நிறுத்தம் தோல்வியடைந்து விடுமே என்பதைப் பற்றிய கவலையைக் காட்டிலும் அவர்கள் தினந்தோறும் செய்து வந்த பிரதிக்ஞையைக் கைவிட்டு விடலாம் என்ற எண்ணம் காந்திஜிக்கு அதிக மன வேதனையை அளித்தது. இந்த நிலைமையில் என்ன செய்வது என்ற சிந்தனை அவர் உள்ளத்தில் ஓயாமல் இருந்து கொண்டிருந்தது. ஒரு நாள் பொதுக் கூட்டத்தில் மகாத்மா பேசிக் கொண்டிருக்கையில் பளிச்சென்று ஓர் ஒளி உதயமாயிற்று. தாம் செய்ய வேண்டியது இன்ன தென்று தெரிந்தது. உடனே அந்த க்ஷணத்திலேயே மகாத்மா அதைத் தொழிலாளரிடம் வெளியிட்டார்: “நீங்கள் உங்களுடைய கோரிக்கைகள் நிறைவேறும் வரையில் வேலைக்குத் திரும்புவதில்லை யென்று திரும்பத் திரும்பப் பிரதிக்ஞை செய்திருக்கிறீர்கள். ஆனால் இப்போது உங்களில் சிலர் உறுதி குலைந்து வேலைக்குத் திரும்புவதைப் பார்க்கிறேன். இந்த மாதிரி சத்தியப் பிரதிக்ஞை செய்துவிட்டு அதை மீறுவதைப் பார்க்க எனக்குச் சகிக்கவில்லை. ஆகையால் இந்த வேலை நிறுத்தம் முடியும் வரையில் நான் உண்ணாவிரதம் இருக்கத் தீர்மானித்து விட்டேன்!” என்றார். தொழிலாளர் அனைவரும் திடுக்கிட்டுப் போயினர். தங்களுக்காக மகாத்மா பட்டினி விரதம் இருக்கப் போகிறார் என்பதைக் கேட்டு அவர்களுடைய உள்ளம் உருகியது. ’வேண்டாம்; வேண்டாம்; நீங்கள் உபவாசம் இருக்கக் கூடாது. எங்களுடைய தவறுக்காக நாங்கள் உண்ணாவிரதம் இருக்கிறோம். எங்களுடைய பிரதிக்ஞையை நாங்கள் ஒரு நாளும் மீற மாட்டோம். உயிர் போனாலும் சபதத்தைக் காப்பாற்றுவோம். நீங்கள் பட்டினி கிடக்கக் கூடாது" என்று தொழிலாளர்கள் கதறினார்கள். “என்னுடைய உபவாசத்தைப் பற்றி நீங்கள் கவலைப் பட்டுப் பயனில்லை. வேலை நிறுத்தம் முடிந்த பிறகு தான் நான் இனி உணவு அருந்தப் போகிறேன். ஆனால் நீங்கள் உங்கள் பிரதிக்ஞையைக் காப்பாற்றுவதானால் வெறுமனே சோம்பியிருப்பதில் பயனில்லை. பொது ஜனங்களிடம் சென்று பிச்சை எடுத்தலும் கூடாது. அவரவர்களுக்கு ஏதாவது வேலை தேடிக் கொள்ள வேண்டும். உயிர் வாழ்வதற்கு வேண்டிய ஊதியம் கிடைத்தாலும் போதும் என்று கிடைத்த வேலையைச் செய்ய வேண்டும். அப்போதுதான் உங்கள் சபதத்தை நிறைவேற்ற முடியும்!” என்றார் மகாத்மா. மகாத்மாவின் இந்த மகத்தான முடிவு தெரிந்து பிறகு தொழிலாளிகள் யாரும் வேலைக்குத் திரும்பவில்லை. அவரவர்களும் வேறு வேலை பார்த்துக் கொள்ளத் தொடங்கினார்கள். ஸ்ரீ வல்லபாய் படேல் வேலை நிறுத்தம் செய்தவர்களில் சிலருக்கு ஆமதாபாத் நகர சபையின் கீழ் வேலை தேடிக் கொடுத்தார். சபர்மதி ஆசிரமத்தில் கைத்தறி நெசவுப் பள்ளிக் கூடம் ஒன்று அப்போதுதான் ஸ்தாபிக்கப்பட்டது. இந்தப் பள்ளிக்கூடத்தின் அடித்தளத்தை நிரப்ப ஏராளமான மணல் வேண்டியிருந்தது. இந்த வேலைக்குத் தொழிலாளரில் பலரை உபயோகிக்கலாம் என்று ஸ்ரீ மகன்லால் காந்தி சொன்னார். ஸ்ரீமதி அனசூயா பென் முதலில் வழி காட்டினார். கூடையில் மணலை வாரித் தம் தலைமேல் வைத்துக் கொண்டு போய்க் கொட்டினார். அவரைப் பின்பற்றி ஆயிரக்கணக்கான தொழிலாளிகள் மணல் கூடை தூக்கிச் சென்றார்கள். இப்படி யெல்லாம் எத்தனை நாளைக்கு நடக்கமுடியும்? நிலைமை நெருக்கடியாகத்தான் தோன்றியது. ஆனால் காநதி மகாத்மாவின் உண்ணா விரதம் ஆமதாபாத் ஆலை முதலாளி களின் மனதை இதற்குள் கலங்கப்பண்ணி யிருந்தது. அவர்கள் கூடி ஆலோசித்தார்கள். அவர்களுடைய பிரதிநிதிகள் மகாத்மாவிடம் வந்து தங்கள் புகாரைத் தெரிவித்தார்கள். “தாங்கள் உண்ணாவிரதம் இருப்பது நியாயமல்ல. தங்களிடம் நாங்கள் மதிப்பும் அபிமானமும் உள்ளவர்கள். இப்படித் தாங்கள் பட்டினி கிடப்பதால் எங்களைத் தர்ம சங்கடமான நிலையில் கொண்டு வைத்து விட்டீர்கள். இது தங்களுக்கு அழகல்ல” என்று முதலாளிகளின் பிரதிநிதிகள் கடிந்து கொண்டார்கள். இதற்கு மகாத்மா,“என்னுடைய உண்ணா விரதத்துக்காக நீங்கள் உங்கள் உறுதியை மாற்றிக்கொள்ள வேண்டியதில்லை. உங்களை உத்தேசித்து நான் உபவாசம் இருக்கவில்லை. தொழிலாளிகள் பிரதிக்ஞை தவறுவதைத் தடுக்கவே உண்ணா விரதம் இருக்கிறேன்.” என்று சொன்னார். இந்தச் சமாதானத்தை அவர்கள் ஒப்புக்கொள்ள வில்லை. ஆலை முதலாளிகளின் தலைவர் ஸ்ரீ அம்பாலால் சாராபாய் என்று பார்த்தோம் அல்லவா? அவரும் அவருடைய மனைவி ஸாரளா தேவியும் மகாத்மாவிடம் மிக்க அன்பு வைத்திருந்தார்கள். மகாத்மா காந்தி பட்டினி யிருப்பது அவர்களுக்கு மிக்க மன வேதனையை அளித்தது. மூன்று தினங்கள் மகாத்மாவின் உண்ணா விரதம் நீடித்திருந்தது. இதற்குள் ஆலை முதலாளிகளின் மனம் இளகி விட்டது. ஏதாவது சமரச முடிவு காண்பதில் எல்லாரும் சிரத்தை கொண்டார்கள். ஸ்ரீமதி அனசூயாபென் வீட்டில் சமரசப் பேச்சுகள் நடந்தன. முதலாளி-தொழிலாளி தகராறைப் பற்றி விசாரித்து முடிவு கூறுவதற்கு ஸ்ரீ ஆனந்த சங்கர துருவா என்பவர் மத்தியஸ்தராக நியமிக்கப்பட்டார். இருபத்தோரு நாள் நடந்த ஆலைத் தொழிலாளர் வேலை நிறுத்தம் முடிவு பெற்றது. காந்திஜியின் உண்ணா விரதமும் முடிவடைந்தது. இந்த மாதிரி சந்தோஷமான சமரச முடிவு ஏற்பட்டதைக் கொண்டாடுவதற்காகத் தொழிலாளரின் கூட்டம் ஒன்று நடந்தது. அந்தக் கூட்டத்துக்கு ஆலை முதலாளிகளும் ஐரோப்பியக் கமிஷனரும் வந்திருந்தார்கள். கமிஷனர் துரை அக்கூட்டத்தில் பேசினார். இவ்வளவு பெரிய வேலை நிறுத்தம் கொஞ்சங்கூடக் கலவரம் இன்றி இருபத்தோரு நாள் நடந்து முடிந்ததில் அவருக்கு மிக்க மகிழ்ச்சி ஏற்பட்டிருந்தது. இதற்குக் காந்திஜிதான் காரணம் என்பதை அந்த உத்தியோகஸ்தர் உணர்ந்திருந்தார். ஆகையால் அவர் தொழிலாளரைப் பார்த்து, “நீங்கள் எப்போதும் காந்திஜி சொல்லும் புத்திமதியைக் கேட்டு அதன்படியே நடக்க வேண்டும்” என்று கூறினார். ஆனால் இதே ஐரோப்பியக் கமிஷனர் கெயிரா ஜில்லா விவசாயிகளைப் பார்த்து, “காந்திஜி சொல்லும் வார்த்தைகளை நீங்கள் கேட்கக் கூடாது. கேட்டால் உருப்படாமற் போவீர்கள்!” என்று எச்சரிக்கை செய்யும்படியான சந்தர்ப்பம் வெகு சீக்கிரத்திலேயே வருவதற்கிருந்தது. கெயிரா சத்தியாக்கிரஹம் கெயிரா என்றும் கேதா என்றும் சொல்லப்பட்ட ஜில்லா குஜராத்தில் உள்ளது. 1917-ஆம் வருஷத்தில் அந்த ஜில்லாவில் மழை பெய்யாமையால் விளைச்சல் வெகுவாகக் குறைந்து போயிருந்தது. விவசாயிகள் நிலவரி கொடுக்க முடியாத நிலைமையில் இருந்தார்கள். மகாத்மா சம்பரான் விசாரணையில் ஈடுபட்டு அவ்விசாரணை முடியும் தறுவாயில் இருந்தபோது ஆமதாபாத் தொழிலாளர் சம்பந்தமாக வந்த கடிதத்தைப் போலவே கெயிரா ஜில்லாவிலிருந்தும் ஒரு கடிதம் வந்தது. ஸ்ரீ மோகன்லால் பாண்டியா, ஸ்ரீ சங்கர்லால் பாரிக் ஆகியவர்கள் அக்கடிதம் எழுதியிருந்தார்கள். விளைவு குறைந்துவிட்டதால் வரி கொடுக்க முடியாத நிலைமையில் இருந்த குடியானவர்களுக்கு மகாத்மா வந்து வழி காட்டவேண்டும் என்று எழுதி யிருந்தார்கள். எனவே ஆமதாபாத் தொழிலாளர் பிரச்னை ஒருவாறு முடிந்ததும் காந்திஜி கெயிரா ஜில்லாவின் தலைநகரான நதி யாத்துக்குப் போய்ச் சேர்ந்தார். காந்திஜிக்கு முன்னாலேயே ஸ்ரீ அமிருதலா தர்க்கா (தக்கர் பாபா) கெயிராவுக்குப் போய் அங்குள்ளா நிலைமையைத் தெரிந்துகொண்டிருந்தார். ஏறக்குறைய பஞ்சம் என்று சொல்லக்கூடிய நிலைமை மேற்படி ஜில்லாவில் ஏற்பட்டிருந்தது. ஒரு ரூபாய்க்கு நாலணா வீதமோ அதற்குக் குறைவாகவோ மகசூல் கண்டிருந்தால் அந்த வருஷத்தில் வரி வசூலைத் தள்ளி வைப்பதற்கு, சர்க்கார் நிலவரிச்சட்டங்கள் இடங்கொடுத்தன. நாலு அணா விகிதத்துக்குக் குறைவாகவே மகசூல் கண்டிருப்பதாக விவசாயிகள் சொன்னார்கள். சர்க்கார் அதிகாரிகளோ நாலு அணா விகிதத்துக்கு மேல் மகசூல் கண்டிருக்கிறதென்று சாதித்தார்கள். நடுநிலைமையும் ஆராய்ந்த தக்கர் பாபா போன்றவர்கள் குடியானவர்களின் கட்சி தான் உண்மையானது என்று கூறினார்கள். ஸ்ரீ தக்கர் பாபா இது குறித்துக் கமிஷனர் துரையுடன் கலந்து பேசி யிருந்தார். ஸ்ரீ வித்தல்பாய் படேல், ஸர் கோகுல் தாஸ் பாரெக் ஆகியவர்கள் பம்பாய்ச் சட்டசபையில் இந்தப் பிரச்னையைக் கிளப்பி யிருந்தார்கள். அதனால் பயன் ஒன்றும் விளையவில்லை. குடியானவர்களின் கோரிக்கையோ மிகவும் மிதமானது. வரி வசூலை ஒரு வருஷத்துக்குத் தள்ளிப் போடும்படிதான் அவர்கள் கேட்டார்கள். இதைச் சர்க்கார் நேரடியாக ஒப்புக்கொள்ள முடியாவிட்டால், மூன்றாவது மனிதர்களின் மத்தியஸ்தத்துக்கு விட்டுவிடும்படி சொன்னார்கள். இதற்கும் அதிகாரிகள் இணங்கவில்லை. வரியை வசூலித்தே தீர்வது என்று ஒரே மூர்த்தன்யமாயிருந்தார்கள். காந்திஜி எல்லா விஷயங்களையும் ஆராய்ந்து பார்த்துவிட்டு, “வேறு வழியில்லை. குடியானவர்கள் வரி கொடுக்க மறுத்து சத்தியாக்கிரஹம் செய்யவேண்டியது தான்!” என்ற முடிவுக்கு வந்தார். அவ்வாறே கெயிரா ஜில்லா விவசாயிகளுக்கு மகாத்மா யோசனை கூறியதுடன் வரு கொடா இயக்கத்தைத் தாமே தலைமை வகித்து நடத்தவும் ஒப்புக் கொண்டார். கெயிரா சத்தியாக்கிரஹத்தில் மகாத்மாவுக்குத் துணை புரிவதற்காக ஸ்ரீ வல்லபாய் படேல் ஸ்ரீ சங்கர்லால் பாங்கர், ஸ்ரீ இந்துலால் யாக்னிக், ஸ்ரீ மகாதேவ தேசாய், ஸ்ரீ அனுசூயாபாய் முதலியோர் வந்து சேர்ந்தார்கள். இவர்கள் அனைவரும் பின்னர் காந்தி மகானையே பரம குருவாகக் கொண்டு தேசத் தொண்டு ஆற்றுவதற்குத் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணம் செய்துவிட்டார்கள். கெயிரா சத்தியாக்கிரஹத்தின்போதே ஸ்ரீ வல்லபாய் படேல் ஏராளமான வருமானம் அளித்து வந்த தமது வக்கீல் தொழிலை நிறுத்தவேண்டியிருந்தது. அதற்குப் பிறகு தேசத் தொண்டுக்கே நேரம் சரியாயிருந்தபடியால் ஸ்ரீ வல்லபாய் வக்கீல் தொழில் செய்யவே முடிய வில்லை. கெயிரா ஜில்லாவின் தலைநகரான நதியாத் நகரத்தில் இருந்த அநாதாசிரமத்தில் மகாத்மாவும் அவருடைய துணைவர்களும் தங்கினார்கள். வரி கொடாமை இயக்கத்தைச் சேரும் விவசாயிகளிடம் கையெழுத்து வாங்குவதற்கென்று பின்வரும் உறுதிமொழி தயாரிக்கப்பட்டது: “எங்கள் கிராமங்களில் மகசூல் இவ்வருடம் நாலணா மதிப்புக்குக் குறைவானதென்று நன்கறிந்த நாங்கள் அடுத்த வருஷம் வரையில் நிலவரி வசூலை நிறுத்தி வைக்கவேண்டுமென்று அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டோம். ஆனால் அரசாங்கம் எங்கள் பிரார்த்தனைக்கு இணங்கவில்லை. ஆகையால் இவ்வருஷத்து நிலவரி முழுதையுமோ அல்லது பாக்கியுள்ள பகுதியையோ நாங்களாகச் செலுத்துவதில்லையென்று சத்தியம் செய்கிறோம். அரசாங்கம் சட்டபூர்வமான நடவடிக்கைகள் என்ன நடத்தினாலும் பொறுத்திருந்து வரிகொடாமையின் பயன்களை மகிழ்ச்சியுடன் அனுபவிப்போம். எங்களுடைய நிலங்களே பறிமுதல் செய்யப்பட்டாலும் சகித்துக்கொண்டிருப் போமேயல்லாமல் நாங்களாக வலியத் தீர்வை செலுத்த மாட்டோம். ஆனால் ஜில்லா முழுவதும் இரண்டாவது தவணை வரி வசூலிப்பதை நிறுத்திவிட அரசாங்கத்தார் இணங்கினால் எங்களில் பணங்கொடுக்கக்கூடியவர்கள் வரி முழுமையுமோ பாக்கியுள்ள பகுதியையோ கொடுத்துவிடுவோம். வரி கொடுக்கக்கூடிய நிலையிலுள்ளவர்களும் கொடாமலிருப்பதற்குத் காரணமென்னவென்றால், அவர்கள் கொடுத்துவிடின் ஏழை மிராசுதார்களும் பீதியடைந்து தங்களுடைய உடைமைகளை விற்கவும் கடன் வாங்கவும் ஆரம்பித்து அதனால் தங்களுக்குச் சொல்லமுடியாத துன்பங்களை வருவித்துக்கொள்வார்கள் என்பதுதான். இந்நிலைமையில் ஏழைகளின் நன்மையை உத்தேசித்துப் பணம் செலுத்த சக்தியுடையவர்களும் செலுத்தாமலிருத்தல் கடமையாகுமென்று கருதுகிறோம்.” பிறகு காந்திஜியும் அவருடைய துணைவர்களும் கிராமம் கிராமமாகச் சென்று சத்தியாக்கிரஹ தத்துவத்தை விளக்கிச் சொல்லி மேற்படி உறுதி மொழியில் கையெழுத்து வாங்கத்தொடங்கினார்கள். வரிகொடாமை இயக்கத்தின் ஆரம்பத்தில் சர்க்கார் அதிகாரிகள் கடுமையான நடவடிக்கைகளைக் கைக்கொள்ளவில்லை. இயக்கத்துக்கு அதிக செல்வாக்கு ஏற்படாது என்றும், கொஞ்சம் பயமுறுத்தினால் விவசாயிகள் வரி செலுத்தி விடுவார்கள் என்றும் நம்பினார்கள். ஆனால் அவர்கள் நினைத்தபடி நடக்கவில்லை. ஜில்லா முழுதும் விவசாயிகள் ஒரே உறுதியாக வரிகொடாமல் இருந்து வந்தார்கள். பிறகு அரசாங்கத்தின் அடக்குமுறை ஆரம்பமாயிற்று. கையில் அகப்பட்ட ஜங்கம சொத்துக்களை யெல்லாம் அதிகாரிகள் ஜப்தி செய்யத் தொடங்கினார்கள். ஆடுமாடுகளை ஜப்தி செய்து ஏலம் போட்டார்கள். வரிகொடாதவர்கள் எல்லாருக்கும் அபராத அறிக்கைகள் அனுப்பப்பட்டன. கடைசியில் மகசூலையும் ஜப்தி செய்யத் தொடங்கினார்கள். இதனால் விவசாயிகளின் உறுதி குலையத் தொடங்கியது. வயலில் விளைந்திருப்பது நாலில் ஒரு பங்கு மகசூல். அதையும் அதிகாரிகள் ஜப்தி செய்துகொண்டு போய்விட்டால், வருஷம் முழுவதும் சாப்பிடுவது எப்படி? அடுத்த பஸலி சாகுபடிக்கு விதைக்கு எங்கே போவது? மாடுகளை அதிகாரிகள் கொண்டு போய் ஏலம் போட்டு விற்று விட்டால், வயல்களை எவ்வாறு உழுவது? விவசாயிகளில் சிலர் உறுதி தளர்ந்து வரி கொடுக்கத் தொடங்கினார்கள். இன்னும் சிலர் ஜங்கம சொத்துக்களில் அவசியமில்லாத பொருள்களை வீட்டு வாசலில் கொண்டுவந்து வைத்தார்கள். அச்சாமான்களை வீணாக்காமல் கொண்டுபோய் ஏலம் போடட்டும் என்பது அவர்கள் கருத்து. ஆனால் ஒரு பகுதியார் தாங்கள் அடியோடு அழிந்து போனாலும் வரி கொடுப்பதில்லை என்று உறுதியோடிருந்தார்கள். உறுதி குலைந்து வந்த விவசாயிகளுக்குத் தைரியம் ஊட்டுவதற்கு மகாத்மா வழி தேடிக்கொண்டிருந்தார். அத்தகைய சந்தர்ப்பம் ஒன்று ஏற்பட்டது. ஒரு வயலில் இருந்த வெங்காய மகசூலை அதிகாரிகள் தவறாக ஜப்தி செய்ய உத்தரவு போட்டிருந்தார்கள். மகசூலை ஜப்தி செய்வதே கொடுமையான காரியம் என்பது மகாத்மாவின் கருத்து. அதிலும் குறிப்பிட்ட இந்த வயலில் ஜப்தி உத்தரவே காரணமின்றிப் போடப்பட்டிருந்தது. ஆகையால் ஜப்தி உத்தரவைப் புறக்கணித்து வெங்காயத்தை அப்புறப்படுத்தும்படி மகாத்மா யோசனை சொன்னார். ஸ்ரீ மோகன்லால் பாண்டியாவின் தலைமையில் சில தொண்டர்கள் அவ்விதமே செய்தார்கள். உடனே அவர்கள் கைது செய்யப்பட்டார்கள். விசாரணை தினத்தன்று கோர்ட்டில் ஏராளமான ஜனக்கூட்டம் கூடிவிட்டது. ஸ்ரீ மோகன்லால் பாண்டியாவுக்கும் அவருடைய தோழர்களுக்கும் சொற்பகால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. ஸ்ரீ மோகன்லால் பாண்டியாவுக்கு ‘வெங்காயத்திருடன்’ என்ற சிறப்புப்பட்டம் பொதுஜனங்களால் அளிக்கப்பட்டது. ‘வெங்காயத் திருடனுக்கு ஜே!’ என்ற கோஷம் வானத்தை அளாவியது. இந்தச் சம்பவத்தினால் ஜனங்களின் உற்சாகம் புத்துயிர் பெற்றது. ஆனால் அதிக காலம் அது நீடித்திருக்கவில்லை. கஷ்டப்பட்டுத் தேடிய உடைமைகள் பறிபோவதைப் பார்த்துக் கொண்டிருக்க ஜனங்களால் முடியவில்லை. பெரும்பாலோர் களைத்துப் போனார்கள். உறுதியாக நின்ற ஒரு சிலரை மட்டும் அடியோடு அழிந்துபோகும்படி விட்டுவிடுவதா என்ற கவலை காந்திஜியின் மனதில் தோன்றியது. இவ்வளவு மகத்தான தியாகங்களைச் செய்யவேண்டியதாயிருக்கும் சத்தியாக்கிரஹப்போருக்கு மக்களை முன்னதாகவே தக்கபடி தயார் செய்யவில்லை என்ற எண்ணமும் உண்டாயிற்று. நிலையில் நதியாத் தாலுகா தாசில்தார், “பணக்காரர்கள் வரியைச் செலுத்திவிட்டால் ஏழைக் குடியானவர்களிடம் வரி வசூலிப்பது நிறுத்திவைக்கப்படும்!” என்று மகாத்மாவுக்குச் செய்தி சொல்லி அனுப்பினார். தாசில்தார் அவருடைய தாலுகாவுக்கு மற்றும் பொறுப்பானவர். ஜில்லா முழுவதிலும் நடக்கும் இயக்கத்தை ஒரு தாலுகாவில் மட்டும் எப்படி நிறுத்தமுடியும்? ஆகையால் காந்திஜி கெயிரா ஜில்லா கலெக்டருக்குக் கடிதம் எழுதி, நதியாத் தாலூகா தாசில்தார் சொன்னது கெயிரா ஜில்லா முழுவதற்கும் பொருந்துமா என்று கேட்டிருந்தார். ஜில்லா கலெக்டர் எழுதிய பதிலில் அது ஜில்லா முழுவதற்கும் பொருந்தும் விஷயம் என்றும், ‘பணக்காரர்கள் வரி செலுத்திவிட்டால் ஏழைகளிடம் வரி வசூலை நிறுத்தி வைக்கும்படி’ ஏற்கனவே தாம் உத்தரவு போட்டுவிட்டதாகவும் தெரிவித்திருந்தார். இதை அறிந்ததும் ஜனங்கள் வெற்றிக் கொண்டாட்டம் நடத்தத்தொடங்கினார்கள். அவர்கள் கையெழுத்திட்ட உறுதிமொழிப் பத்திரத்தில் அவர்கள் கேட்டிருந்ததும் இதுதான் அல்லவா? ஆகையால் தங்களுடைய இயக்கம் பூரணவெற்றி அடைந்துவிட்டதாக அவர்கள் ஆனந்தக் கூத்தாடினார்கள். ஆனால் காந்திமகானுக்கு இந்தக் கெயிரா போராட்டத்தின் முடிவு அவ்வளவாகத் திருப்தி அளிக்கவில்லை. சத்தியாக்கிரஹ இயக்கத்தின் முடிவில் எதிரிகளுடைய மனம் மாறியிருக்க வேண்டும் என்றும் சமரசமான பேச்சு வார்த்தையுடன் முடிய வேண்டும் என்றும் காந்திஜி கருதினார். ஆனால் இந்த இயக்கத்தினால் அதிகாரிகளுடைய மனம் கொஞ்சங்கூட மாறியதாகத் தெரியவில்லை. ஜனங்களும் சத்தியாக்கிரஹ இயக்கத்தின் தத்துவத்தை நன்கு உணர்ந்துகொண்டதாகத் தோன்றவில்லை. ஆகையால் கெயிரா சத்தியாக்கிரஹம் பூரண வெற்றி அளித்ததாக மகாத்மா காந்தி கருதவில்லை. ஆயினும் அந்த இயக்கத்தின் பின்னைய பலன்கள் மகத்தானவையா யிருந்தன. அதன் பயனாகவே குஜராத் மாகாணத்து மக்கள் விழிப்பு அடைந்து எழுந்தனர். காந்தி மகாத்மாவின் பெருமையை உணர்ந்து அவரைத் தங்கள் மாபெருந்தலைவராக ஏற்றுக்கொண்டனர். யுத்த மகாநாடு முதலாவது உலக மகாயுத்தம் 1918-ஆம் வருஷத்தில் பயங்கரமான கட்டத்தை அடைந்திருந்தது. பிரிட்டன் முதலிய நேச தேசங்களின் நிலைமை மிக நெருக்கடியாகியிருந்தது. இந்த நிலைமையில் இந்தியாவின் இராஜப் பிரதிநிதி லார்ட் செம்ஸ்போர்ட் டில்லியில் ஒரு யுத்த மகாநாடு கூட்டினார். அதற்கு வரும்படி இந்தியாவின் பிரபல தலைவர்கள் பலருக்கும் அழைப்பு அனுப்பினார். மகாத்மா காந்திக்கும் அழைப்பு வந்தது. அழைப்புக் கிணங்கி காந்திஜி டில்லிக்குச் சென்றார். ஆனாலும் யுத்த மகாநாட்டில் கலந்து கொள்வது பற்றிப் பல சங்கடங்கள் அவருக்கு இருந்தன. அச்சமயம் அலி சகோதரர்கள் என்று அழைக்கப்பட்ட மௌலானா முகம்மதலியும், மௌலானா ஷவுகத் அலியும் சிறைப்பட்டிருந்தார்கள். காந்திஜி இந்தியாவுக்கு வந்தது முதல் ஹிந்து முஸ்லீம் ஒற்றுமைக்காகப் பாடுபட்டுக் கொண்டிருந்தார். அத்தகைய ஒற்றுமை இந்தியாவின் விடுதலைக்கும் முன்னேற்றத்துக்கும் மிக அவசியம் என்று நினைத்தார். ஆகையால் அலி சகோதரர்களை விடுதலை செய்யவேண்டிய அவசியத்தைப் பற்றி ஏற்கனவே இந்திய சர்க்காருடன் கடிதப் போக்கு வரவு நடத்திக் கொண்டிருந்தார். அலி சகோதரர்கள் அப்போது கிலாபத் இயக்கத்தை ஆரம்பித்திருந்தனர். முதல் உலக மகாயுத்தத்தில் துருக்கி ஜெர்மனியின் கட்சியில் சேர்ந்திருந்தது. துருக்கி சுல்தான் அகில உலகத்திலும் வசித்த முஸ்லிம்களின் மதத் தலைவராகக் கருதப்பட்டார். இதனால் ‘கலீபா’ என்ற பட்டப் பெயரும் துருக்கி சுல்தானுக்கு இருந்தது. யுத்தத்தில் பிரிட்டிஷ் கட்சி ஜயித்தால் முஸ்லீம் மதத்தலைவரான துருக்கி சுல்தானுடைய கௌரவத்துக்குப் பங்கம் விளையுமோ என்று இந்திய முஸ்லிம்கள் கவலை கொண்டிருந்தார்கள். அப்படி ஏற்படாமல் பார்த்துக்கொள்வதாக பிரிட்டன் வாக்குறுதி தரவேண்டும் என்று கோரினார்கள். இத்தகைய கிளர்ச்சியைத் தலைமை வகித்து நடத்திய காரணத்தினாலேயே அலி சகோதரர்கள் சிறைத் தண்டனை அடைந்திருந்தார்கள். இந்திய முஸ்லீம்களின் நட்புரிமையை மிக முக்கியமாகக் கருதிய மகாத்மா காந்தி அவர்களுடைய மத சம்பந்தமான கோரிக்கையை ஆதரிப்பது தம்முடைய கடமை என்று கருதினார். ஆகையால் அலி சகோதரர்கள் சிறைப்பட்டிருக்கும் நிலைமையில் தாம் யுத்த மகாநாட்டில் கலந்து கொள்ளலாமா என்று யோசித்தார். லோகமான்ய திலகரும் ஸ்ரீமதி பெஸண்டு அம்மையும் மேற்படி யுத்த மகாநாட்டுக்கு அழைக்கப்பட வில்லையென்று அறிந்ததும் மகாத்மாவின் தயக்கம் அதிகமாயிற்று. இந்த நிலைமையில் பூஜ்யர் ஆண்ட்ரூஸ் இன்னும் சில ஆட்சேபங்களைக் கிளப்பினார். “அஹிம்சாவாதியாகிய தாங்கள் யுத்த மகாநாட்டில் எப்படிக் கலந்து கொள்ளலாம்?” என்பது ஓர் ஆட்சேபம். ஆனால் தென்னாப்பிரிக்காவிலேயே ஏற்பட்ட பிரச்னைதான் இது. மகாத்மா இந்த ஆட்சேபத்தைப் பற்றி ஒரு முடிவுக்கு வந்திருந்தார். பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் பாதுகாப்புக்கு உட்பட்டிருக்கிற வரையில் அந்தச் சாம்ராஜ்யத்துக்கு நேரும் அபாயங்களின்போது உதவி செய்யத்தான் வேண்டும். தாம் சொந்த முறையில் நம்பிக்கை கொண்ட அஹிம்சா தர்மத்தை இந்த விஷயத்தில் புகுத்துவது முறையன்று. ஆனால் பூஜ்யர் ஆண்ட்ரூஸ் கூறிய இன்னொரு ஆட்சேபத்துக்கு அவ்வளவு சுலபமாகப் பதில் சொல்ல முடியவில்லை. அச்சமயம் பிரிட்டனுக்கும் இத்தாலிக்கும் ஏற்பட்டிருந்த இரகசிய உடன்படிக்கைகளைப் பற்றி பிரிட்டிஷ் பத்திரிகையில் சர்ச்சை நடந்து கொண்டிருந்தது. “பிரிட்டிஷ் ராஜ தந்திரிகள் இந்தமாதிரி அக்கிரமமான காரியங்களைச் செய்துகொண்டிருக்கும் போது இந்த யுத்தத்தைத் தர்ம யுத்தம் என்று எப்படிச் சொல்லலாம்? நீங்கள் எப்படி இதற்கு உதவி செய்யலாம்?” என்று ஸ்ரீ ஆண்ட்ரூஸ் கேட்டார். மேற்கூறிய எல்லா ஆட்சேபங்களையும் வைஸ்ராய் செம்ஸ்போர்டிடம் நேரில் சொல்லிச் சமாதானம் கேட்பது என்ற எண்ணத்துடன் மகாத்மா டில்லிக்குப் போனார். லார்ட் செம்ஸ்போர்டை நேரில் பேட்டி கண்டு பேசினார். இரகசிய உடன்படிக்கைகள் சம்பந்தமாக லார்ட் செம்ஸ் போர்ட் கூறியதாவது: “பிரிட்டிஷ் மந்திரி சபை செய்யும் ஒவ்வொரு காரியத்துக்கும் நான் பொறுப்பாளியல்ல. பிரிட்டிஷ் அரசாங்கம் தவறே செய்யாது என்றும் நான் சொல்லவில்லை. பொதுவாகப் பிரிட்டிஷ் சம்பந்தத்தினால் இந்தியா நன்மை அடைந்திருக்கிறது என்று நீங்கள் கருதினால் இந்த நெருக்கடியான சமயத்தில் உதவி செய்வது அவசியம். பிரிட்டிஷ் இரகசிய உடன்படிக்கைகளைப்பற்றி பத்திரிகையில் வந்திருப்பதைத் தவிர எனக்கு ஒன்றும் தெரியாது. சில சமயம் பத்திரிகைகள் கற்பனைக் கதைகளைக் கட்டிவிடுவதும் உண்டு. பத்திரிகைக் கதைகளை நம்பி நீங்கள் முக்கியமான ஒரு விஷயத்தில் முடிவு செய்யக்கூடாது. யுத்தம் முடிந்த பிறகு அரசியல் தர்மம் சம்பந்தமான உங்களுடைய பிரச்னைகளைக் கிளப்பி வாதம் செய்யலாம். இந்த நெருக்கடியான சமயத்தில் உதவி செய்ய மறுப்பது உசிதமன்று.” இவ்வாறு லார்டு செம்ஸ் போர்ட் சொன்னதினால் காந்திஜியின் மனம் ஓரளவு சமாதானம் அடைந்தது. எப்படியிருந்தாலும் யுத்த மகா நாட்டுக்குப் போவது என்று தீர்மானித்தார். யுத்த மகாநாட்டில் யுத்தத்துக்கு ஆள் திரட்டும் தீர்மானம் ஒன்று வந்தது. இதுதான் மகாநாட்டில் முக்கிய தீர்மானம். இதை மகாத்மா காந்தி ஆதரித்துப் பேசவேண்டும் என்று வைஸ்ராய் செம்ஸ்போர்ட் விரும்பினார். காந்திஜியும் அதற்கு இணங்கினார். ஆனால் ஹிந்துஸ்தானியில் பேசுவதற்கு அநுமதி கேட்டுப் பெற்றுக்கொண்டார். “என்னுடைய பொறுப்பைப் பூரணமாக உணர்ந்து இந்தத் தீர்மானத்தை ஆதரிக்கிறேன்” என்னும் ஒரே வாக்கியத்தை மகாத்மா இந்த மகா நாட்டில் சொன்னார். காந்திஜி ஹிந்துஸ்தானியில் பேசியது பற்றிப் பலர் அவருக்கு வாழ்த்துக் கூறினார்கள். வைஸ்ராய் பிரசன்னமாகியிருந்த ஒரு கூட்டத்தில் ஹிந்துஸ்தானியில் பேசப்பட்டது இதுதான் முதல் தடவை என்றும் சொன்னார்கள். காந்திஜிக்கு இது மிகவும் அவமானகரமாகத் தோன்றியது. இந்தியா தேசத்தில் இந்தியாவின் பாஷையில் பேசியதற்காக ஒரு பாராட்டுதலா என்று வருந்தினார். சைன்யத்துக்கு ஆள் திரட்டும் தீர்மானத்தை ஆதரித்து மகாத்மா ஒரு வாக்கியந்தான் பேசினார் என்றாலும் அந்தத் தீர்மானத்தைக் காரியத்தில் நடத்தி வைப்பதற்குத் தன்னால் இயன்ற முயற்சியைச் செய்யவேண்டும் என்று கருதினார். அத்தகைய முயற்சி தொடங்குவதற்கு முன்னால் தம்முடைய நிலைமையை நன்கு விளக்கி இராஜப் பிரதிநிதி செம்ஸ்போர்டுக்கு ஒரு கடிதம் வரைந்து அதை ரெவரெண்டு அயர்லாண்டு என்பவரிடம் கொடுத்தனுப்பினார். மேற்படி கடிதத்தின் முக்கியமான பகுதிகள் பின்வருமாறு:- “தங்களுக்கு ஏப்ரல்மீ 26 உ ஒரு கடிதம் எழுதினேன். அதில் யுத்த மகாநாட்டில் நான் கலந்துகொள்ள முடியாமலிருப்பதற்குக் காரணங்களைத் தெரிவித்திருந்தேன். அதன் பின்னர் தாங்கள் அன்பு கூர்ந்து தங்களை நேரில் கண்டு பேச அனுமதி அளித்தீர்கள். அவ்வாறு பேசிய பின்னர், வேறு காரணம் இல்லாவிடினும், தங்களிடம் எனக்கிருந்த பெருமதிப்பை முன்னிட்டேனும் மகாநாட்டில் கலந்து கொள்வதென்று தீர்மானித்தேன். மகாநாட்டில் கலந்து கொள்ளக் கூடாதென்று நான் முதலில் கருதியதற்கு முக்கியமான காரணம், லோகமான்ய திலகர், ஸ்ரீமதி பெஸண்டு அம்மையார், அலி சகோதரர்கள் ஆகியவர்கள் மாநாட்டிற்கு அழைக்கப் படாததேயாகும். பொதுஜன அபிப்பிராயத்தை உருப்படுத்தக்கூடிய மிக சக்தி வாய்ந்த தலைவர்களென்று இவர்களை நான் மதித்திருக்கிறேன். இவர்களை அழையாது விட்டது பெருந் தவறு என்றே இன்னமும் நான் கருதுகிறேன். இத்தவறை நிவர்த்திப்பதற்கு வழியையும் மரியாதையுடன் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இனி, மாகாணந்தோறும் யுத்த மகாநாடுகள் நடைபெறுமெனத் தெரிகிறது. இந்த மகாநாடுகளுக்காவது வந்து அரசாங்கத்துக்கு யோசனை சொல்லி உதவுமாறு மக்களின் மதிப்புக்குப் பாத்திரமான அத்தலைவர்களை அழைக்க வேண்டும். சமீப காலத்தில் நாங்களும் மற்ற குடியேற்ற நாடுகளைப் போலவே பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தில் சம பங்காளிகளாகலாமென்னும் ஆசை கொண்டிருக்கிறோம். எனவே, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கு அபாயம் வந்த காலத்தில் எவ்விதத் தயக்கமுமின்றிப் பூரண ஆதரவு அளித்தல் அவசியமென்பதை நன்குணர்ந்திருக்கிறோம். அவ்வாறே தீர்மானமும் செய்திருக் கிறோம். ஆனால் இவ்வாறு உதவி செய்ய ஆவலுடன் முன்வந்ததற்கு, அதன் மூலம் நமது இலட்சியத்தை விரைவில் அடையலாமென்னும் நம்பிக்கையே காரணம் என்பது உண்மை. கடமையைச் செய்வோன் அந்த அளவில் உரிமையும் பெறுகின்றான். ஆதலின் தங்களுடைய பிரசங்கத்தில் விரைவில் வரப்போவதாகக் குறிப்பிட்டிருக்கும் அரசியல் திருத்தங்கள் காங்கிரஸ் - லீக் திட்டத்தை முக்கிய அம்சங்களில் அனுசரித்திருக்கும் என்று எதிர் பார்ப்பதற்கு ஜனங்களுக்கு உரிமையுண்டு. இந்த நம்பிக்கையின் மேல்தான் மகாநாட்டிற்கு வந்திருந்த அங்கத்தினரில் அனேகர் தங்கள் மனப்பூர்வமான ஒத்துழைப்பை அரசாங்கத்துக்கு அளிக்க முன் வந்தார்கள். தென்னாப்பிரிக்காவிலிருந்து நான் இந்தியாவுக்குத் திரும்பியது முதல், குடியானவர்களிடம் நெருங்கிப் பழகி வந்திருக்கிறேன். அவர்களுடைய சுயராஜ்ய தாகம் நிரம்ப ஏற்பட்டிருக்கிறதென்று தங்களுக்கு உறுதி கூறுவேன். சென்ற காங்கிரஸ் மகாசபையின் கூட்டத்திற்கு நான் சென்றிருந்தேன். குறிப்பிட்ட காலத்திற்குள் பூரண சுயாட்சி பிரிட்டிஷ் இந்தியாவுக்குக் கொடுக்கப்பட வேண்டும் என்னும் தீர்மானத்தை நிறைவேற்றுவதில் நானும் கலந்துகொண்டேன். திட்டமான ஒரு காலத்திற்குள் சுயாட்சி கிடைக்குமென்னும் நம்பிக்கை ஏற்பட்டால் தான் இந்திய மக்கள் திருப்தி அடைவார்களென்பது நிச்சயம். கடைசியாக நான் தங்களைக் கேட்டுக் கொள்ளுவது என்னவென்றால், முஸ்லிம் ராஜ்யங்களைப் பற்றி பிரிட்டிஷ் மந்திரிகள் திட்டமான வாக்குறுதி யளிக்குமாறு தாங்கள் செய்ய வேண்டும். ஒவ்வொரு முஸ்லிமும் இவ்விஷயத்தில் பெரிதும் சிரத்தை கொண்டிருப்பதைத் தாங்கள் அறிவீர்கள். ஆதலின் ஹிந்துவாகிய நான் இவ்விஷயத்தில் அசட்டை காட்டக்கூடாது. அவர்களுடைய துக்கங்களை எங்களுடைய துக்கங்களாகவே கருத வேண்டும். முஸ்லிம் ராஜ்யங்களின் உரிமைகளைக் காப்பது முஸ்லிம் புண்ணிய க்ஷேத்திரங்களின் விஷயத்தில் அவர்கள் உணர்ச்சியை மதிப்பது; இந்தியாவின் சுயாட்சிக் கோரிக்கையைக் காலா காலத்தில் நியாயமான முறையில் நிறைவேற்றி வைப்பது; இவைகள்தான் சாம்ராஜ்யத்தின் பாதுகாப்பிற்கு மிகவும் முக்கியமான சாதனங்களாகும். ஆங்கில மக்களை நான் நேசிக்கிறபடியாலும் ஆங்கிலேயர்களுடைய ராஜ பக்தியை ஒவ்வொரு இந்தியரிடத்தும் உண்டு பண்ண நான் விரும்புவதாலுமே இக்கடிதம் உங்களுக்கு எழுதலானேன்." காந்திஜி 1918-ஆம் வருஷத்தில் இம்மாதிரி இராஜப் பிரதிநிதிக்குக் கடிதம் எழுதினார். அந்த நாளில் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை விட்டு இந்தியா வெளியில் போகக் கூடும் என்ற எண்ணமே யாருக்கும் உண்டானதில்லை. ‘சுதந்திரம்’ என்ற வார்த்தையைக் கூட யாரும் உபயோகிப்பதில்லை. ‘சுயாட்சி’ என்றுதான் எல்லாரும் சொல்லி வந்தார்கள். முப்பது வருஷத்துக்குள் நிலைமை எப்படி மாறிவிட்டது என்பதை நினைத்துப் பார்த்தால் ஆச்சரியமாக இல்லையா? இராஜப் பிரதிநிதிக்குக் கடிதம் எழுதி அனுப்பிவிட்டு மகாத்மா உடனே நதியாத் நகரத்துக்குச் சென்றார். வரிகொடா இயக்கத்தை நடத்திய ஜில்லாவிலேயே சைன்யத்துக்கு ஆள் சேர்க்கும் வேலையை ஆரம்பிக்க வேண்டும் என்று கருதினார். ஸ்ரீ வல்லபாய் படேல் முதலிய சகாக்களுடன்கலந்தாலோசித்தார். அவர்கள் இந்தக் காரியத்தில் அவ்வளவு உற்சாகம் காட்டவில்லை. முயற்சி செய்தாலும் பலன் கிட்டாது என்று சொன்னார்கள். பொது ஜனங்கள் சர்க்காரிடம் கொண்டிருக்கும் விரோதபாவத்தை அவ்வளவு சீக்கிரத்தில் மாற்றிவிட முடியாது என்று கூறினார்கள். ஆயினும் காந்திஜியின் கட்டளையை மதித்து வேலை செய்வதற்கு முன்வந்தார்கள். அவர்கள் முன்வந்தால் மட்டும் போதுமா? பொது ஜனங்களுடைய ஒத்துழைப்பு கிட்டவில்லை. வரிகொடா இயக்கத்தின் போது போட்டி போட்டுக்கொண்டு உதவி செய்ய முன்வந்தவர்கள் இப்போது ஒதுங்கி ஒதுங்கிப் போனார்கள். தலைவர்கள் ஊர் ஊராய்ப் போவதற்கு அப்போது வாடகையில்லாமல் வண்டிகள் கிடைத்தன. இப்போது வாடகை கொடுத்தாலும் வண்டி கிடைக்கவில்லை! ஆகவே தினம் இருபது மைல் வரையில் மகாத்மா காந்திஜியும் அவருடைய துணைவர்களும் நடந்து சென்று பிரசாரம் செய்ய வேண்டியிருந்தது. ஜனங்கள் சாப்பாடு போடுவதிலும் உற்சாகம் காட்டவில்லை. ஆகையால் அவர்கள் கையோடு சாப்பாடு கொண்டுபோக வேண்டியிருந்தது. இப்படியெல்லாம் எதிர்ப்பு இருக்கும் என்று மகாத்மா எதிர்பார்க்கவில்லை. ஆனாலும் அதைக் கண்டு மனந்தளர்ந்து விடவும் இல்லை. கடமை என்று ஏற்றுக்கொண்ட காரியத்தை எத்தனை இடையூறு வந்தாலும் எதிர்த்துச் சமாளித்து நடத்துவது காந்திஜியின் தர்மமல்லவா? கிராமங்களில் பொதுக்கூட்டம் கூட்டினால் முன்போல் ஏராளமாக ஜனங்கள் வருவதில்லை. சிலர்தான் வந்தார்கள். அவர்களும் குறுக்குக் கேள்விகள் கேட்டார்கள். “நீங்கள் அஹிம்சை உபாசகர் ஆயிற்றே? சைன்யத்துக்கு எப்படி ஆள் சேர்க்கலாம்?” என்றார்கள். “அரசாங்கம் எங்களுக்கு என்ன உதவி செய்தது? நாங்கள் எதற்கு இப்போது ஒத்துழைக்க வேண்டும்?” என்றார்கள். ஆயினும் மகாத்மாவின் பிடிவாதமான வேலை பலன்தராமற் போகவில்லை. நாளடைவில் ஜனங்கள் சைன்யத்தில் சேருவதற்குத் தங்கள் பெயர்களைக் கொடுக்க முன் வந்தார்கள். இடைவிடாமல் ஆள் திரட்டும் வேலை செய்து வந்ததின் காரணமாக மகாத்மாவின் உடல் நிலை பாதகம் அடைந்தது. ஒருநாள் வயிற்றுக் கடுப்பு நோய் வந்துவிட்டது. அன்றைக்குச் சபர்மதி ஆசிரமத்திலிருந்து நதியாத்துக்குப் போகத் திட்டம் போட்டிருந்தார். ஆசிரமத்திலிருந்து ஒன்றேகால் மைல் தூரத்திலிருந்த ஸ்டேஷனுக்கு நடந்தே சென்றார். ஆமதாபாத் ஸ்டேஷனில் அவருடன் சேர்ந்து கொண்ட ஸ்ரீ வல்லபாய் படேல் காந்திஜிக்கு உடம்பு சுகமில்லை என்பதைக் கண்டு கொண்டார். திரும்பிவிடலாம் என்று அவர் சொன்னதை மகாத்மா கேட்கவில்லை. இரவு பத்து மணிக்கு இருவரும் நதியாத் ஸ்டே ஷனில் இறங்கி அநாதாசிரமம் சென்றார்கள். அங்கே மகாத்மாவுக்கு வயிற்றுப் போக்கு நோய் மிகக் கடுமையாகிவிட்டது. நண்பர்கள் கவலைப்பட்டு வைத்தியர்களை அழைத்து வந்தார்கள். மகாத்மா வைத்தியம் செய்து கொன்னவும் மருந்து சாப்பிடவும் மறுத்துவிட்டார். ஊசி குத்திக் கொள்ளவும் இணங்கவில்லை. பட்டினி கிடந்தால் சரியாய்ப் போய்விடும் என்ற நம்பிக்கையைத் தெரிவித்தார். இருபத்து நாலு மணி நேரம் பட்டினி கிடந்த பிறகு பசியே இல்லாமல் போய்விட்டது. பலவீனம் முற்றிவிட்டது. வயிற்றுப் போக்குடன் சுரம், பிதற்றல் எல்லாம் சேர்ந்துவிட்டது. மகாத்மா தம்முடைய மரணம் சமீபித்துவிட்டது என்று நம்பினார். அம்பலால் சாராபாய் முதலிய நண்பர்கள் ஆமதாபாத்திலிருந்து அவரைப் பார்க்க வந்தார்கள். தம்மை ஆசிரமத்தில் கொண்டு போய் விட்டுவிடும்படி அவர்களிடம் கேட்டுக்கொண்டார். அவர்கள் அவ்வாறே செய்தார்கள். சபர்மதி ஆசிரமத்தில் காந்திஜி யமனோடு போராடிக் கொண்டிருந்த சமயத்தில் யுத்தம் முடிந்து விட்டது என்றும் இனிமேல் ஆள்திரட்ட வேண்டியதில்லை யென்றும் கமிஷனர் செய்தி அனுப்பினார். அந்தச் செய்தியை ஸ்ரீ வல்லபாய் படேல் மகாத்மாவிடம் வந்து கூறினார். மகாத்மாவின் மனதிலிருந்து ஒரு பாரம் இறங்கியது. உடல் நிலை மோசமானதினால் ஏற்றுக் கொண்ட கடமையைச் செய்யமுடியவில்லையே என்ற கவலை மகாத்மாவின் மனதில் இருந்தது. அந்தக் கவலை இப்போது நீங்கிற்று. அது முதல் மகாத்மாவின் உடம்பும் குணமடையத் தொடங்கியது. ஜல சிகிச்சை, பனிக்கட்டி சிகிச்சை முதலிய இயற்கை வைத்திய முறைகளைக் கடைப்பிடித்து வந்தார். நோய் நீங்கிய பிறகும் உடம்பில் பழைய பலம் வர நெடுநாள் ஆயிற்று. ரவுலட் அறிக்கை இந்திய நாட்டின் சுதந்திரத்துக்காக அந்த நாட்களில் பலவித முயற்சிகள் நடைபெற்று வந்தன. மிதவாதிகள் சட்டத்துக்கு உட்பட்ட முறைகளில் கிளர்ச்சி செய்து பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்துக்கு உட்பட்ட சுயாட்சியைப் பெறுவதற்கு முயற்சி செய்தார்கள். தீவிர வாதிகள் பலாபலன்களைக் கவனியாமல் பொது ஜன உணர்ச்சியை எழுப்பிப் பிரிட்டிஷாரை இந்தியாவிலிருந்து விரட்டிவிட எண்ணினார்கள். இந்த இரு வகுப்பாரையும் தவிர, புரட்சி வாதிகள் அல்லது பயங்கர வாதிகள் என்று சொல்லப்பட்ட ஒரு கூட்டத்தார் இருந்தனர். இவர்கள் இரகசிய சதியாலோசனைகளைச் செய்தும் வெடிகுண்டு துப்பாக்கி முதலிய ஆயுதங்களைக் கையாண்டும் பிரிட்டிஷார்- பிரிட்டிஷ் பக்தர்கள் இவர்களைக் கொன்று பயமுறுத்தி இந்தியாவின் விடுதலையைப் பெறுவதற்கு முயன்றார்கள். தீவிரவாதிகள் ஓரளவுக்குப் பயங்கர வாதிகளிடம் அநுதாபம் கொண்டிருந்தார்கள். காந்தி மகாத்மா மேற்கூறிய மூன்று கூட்டத்தில் எதையும் சேர்ந்தவரல்ல. ஆனால் ஒவ்வொரு விதத்தில் மூன்று சாராரையும் அவர் தனித்தனியே ஒத்திருந்தார். மிதவாதிகளைப் போல் பிரிட்டிஷாரின் நல்ல எண்ணத்தில் அவருக்கு நம்பிக்கை இருந்தது. எந்தக் காரியத்தையும் ஒளிவு மறைவு இன்றிப் பகிரங்கமாகச் செய்ய அவர் விரும்பினார். தீவிர வாதிகளையும் காந்திஜி ஒரு விதத்தில் ஒத்திருந்தார். எப்படியென்றால், பொது ஜனங்களின் உணர்ச்சியை எழுப்பிக் கிளர்ச்சி செய்து அவர்களைக் கொண்டு காரியம் செய்வதில் மகாத்மாவுக்கு நம்பிக்கை இருந்தது. புரட்சி வாதிகளையும் மகாத்மா இன்னொரு விதத்தில் ஒத்திருந்தார். தாம் நல்லதென்று கருதும் கட்சிக்காக உயிரையும் கொடுத்துப் போராடுவதற்கு அவர் சித்தமாயிருந்தார். மேலே சொன்ன மூன்று கூட்டத்துக்கும் பொருந்தாத ஒரு பெருங் குணம் மகாத்மாவிடம் இருந்தது. அதுதான் அஹிம்சா தர்மத்தில் அவர் கொண்டிருந்த பரிபூரண நம்பிக்கை. இலட்சியம் எவ்வளவு நல்லதாயிருந்த போதிலும் பலாத்கார முறைகளின் மூலம் அதை நிறைவேற்றிக் கொள்ள மகாத்மா விரும்பவில்லை. சத்தியம் அஹிம்சை இவற்றின் மூலமாக எவ்வளவு மகத்தான காரியத்தையும் சாதித்துக் கொள்ள முடியும் என்று காந்திஜி பரிபூரணமாக நம்பினார். அந்த நம்பிக்கையைச் சோதனை செய்வதற்கு இப்போது ஓர் அரிய பெரிய சந்தர்ப்பம் கிட்டியது. இந்தியாவில் புரட்சி இயக்கத்தாரின் நடவடிக்கைகளைப் பற்றி விசாரித்து அந்த இயக்கத்தை அடக்குவதற்குச் சிபார்சுகளைச் செய்வதற்காக இந்தியாவை ஆண்ட பிரிட்டிஷ் சர்க்கார் ஒரு கமிட்டி நியமித்திருந்தார்கள். இந்தக் கமிஷனுடைய தலைவர் நீதிபதி ரவுலட் என்னும் வெள்ளைக்காரர். ஆகையால் இந்தக் கமிட்டிக்கு ரவுலட் கமிட்டி என்றும், இந்தக் கமிட்டியார் வெளியிட்ட அறிக்கைக்கு ரவுலட் அறிக்கை என்றும் பெயர் ஏற்பட்டது. காந்திஜி மரணத்தின் வாயிலிலிருந்து மீண்டு கொஞ்சங் கொஞ்சமாகக் குணமடைந்து வந்த காலத்தில் ரவுலட் கமிட்டியின் சிபார்சுகள் வெளியாயின. தினப் பத்திரிகைகளில் காந்திஜி ரவுலட் அறிக்கையைப் படித்தார். அதன் சிபார்சுகள் காந்திஜியைத் திடுக்கிடச் செய்தன. ஏனென்றால், அந்தச் சிபார்சுகள் பயங்கர இயக்கத்தை ஒடுக்குவது என்ற பெயரால் இந்தியாவின் சுதந்திரக் கிளர்ச்சியையே அடியோடு நசுக்கிவிடும் தன்மையில் அமைந்திருந்தன. ரவுலட் கமிட்டி சிபார்சுகளின்படி சட்டம் பிறந்துவிட்டால் இந்தியாவில் சர்க்காரை எதிர்த்து எந்தவிதமான கிளர்ச்சியும் செய்யமுடியாமல் போய்விடும் என்று மகாத்மா கண்டார். சர்க்கார் அதிகாரிகள் எந்தத் தனி மனிதனுடைய சுதந்திரத்தையும் பறித்து விடுவதற்கும், வழக்கு - விசாரணை எதுவும் இல்லாமல் ஒருவனைச் சிறையில் தள்ளி விடுவதற்கும் அந்தச் சிபார்சுகள் இடம் கொடுத்தன. காந்திஜி நோயாகப் படுத்திருந்தபோது தினந்தோறும் ஸ்ரீ வல்லபாய் படேல் வந்து அவரைப் பார்த்துவிட்டுப் போவது வழக்கம். ஒரு நாள் ஸ்ரீ வல்லபாய் வந்திருந்தபோது காந்திஜி ரவுலட் கமிட்டி சிபார்சுகளைப் பற்றிப் பிரஸ்தாபித்தார். “இந்தச் சிபார்சுகளின்படி சட்டம் பிறந்து விட்டால் இந்தியாவில் எந்தவிதக் கிளர்ச்சியையும் நடத்த முடியாமல் போய்விடுமே?” என்றார். “உண்மைதான்; ஆனால் அதை எதிர்த்து நம்மால் என்ன செய்ய முடியும்? பிரிட்டிஷ் சர்க்கார் தங்கள் இஷ்டப்படி சட்டம் செய்யக்கூடியவர்களா யிருக்கிறார்கள். நாம் எப்படித் தடுப்பது?” என்றார் ஸ்ரீ வல்லபாய் படேல். “சத்தியாக்கிரஹ முறை இருக்கவே இருக்கிறது. சத்தியாக் கிரஹத்துக்கு ஆள் கூட்டம் அவசியம் இல்லை. உத்தேச சட்டத்தை எதிர்த்து நிற்பதாக ஒரு சிலர் உறுதியுடன் முன் வந்தாலும் போதும். இயக்கத்தைத் தொடங்கி விடலாம். நான் மட்டும் இப்படி நோயுடன் படுத்திராவிட்டால் தன்னந் தனியனாகவே போராட்டத்தைத் தொடங்கிவிடுவேன். என்னைப் பின் பற்றப் பலர் முன் வருவார்கள் என்ற நம்பிக்கையும் எனக்கு இருக்கிறது” என்றார் காந்திஜி. அதன்பேரில் ஸ்ரீ வல்லபாய் படேல் காந்திஜியிடம் ஏற்கனவே தொடர்பு கொண்டிருந்த நண்பர்கள் சிலரை ரவுலட் கமிட்டி அறிக்கையைப் பற்றி யோசிப்பதற்காக அழைத்தார். இந்தக் கூட்டம் சபர்மதி சத்தியாக்கிரஹ ஆசிரமத்தில் நடந்தது. சுமார் இருபது பேர் தான் கூட்டத்துக்கு வந்திருந்தார்கள். அவர்களில் ஸ்ரீ வல்லபாய் படேல், ஸ்ரீமதி சரோஜினிதேவி, ஸ்ரீ ஹார்னிமான், ஜனாப் உமார் ஸோபானி, ஸ்ரீ சங்கர்லால் பாங்கர், ஸ்ரீமதி அநுசூயாபென் ஆகியவர்கள் முக்கியமானவர்கள். காந்திஜியின் அபிப்பிராயத்தைக் கேட்டபிறகு, ரவுலட் சட்டம் செய்யப்பட்டால் அதை எதிர்த்துச் சத்தியாக்கிரஹம் செய்வது என்று இந்தக் கூட்டம் ஏகமனதாகத் தீர்மானம் செய்தது. காந்திஜியின் யோசனைப்படி சத்தியாக்கிரஹப் பிரதிக்ஞை தயாரிக்கப்பட்டது. அதில் கூட்டத்துக்கு வந்திருந்தவர்கள் எல்லோரும் கையொப்பமிட்டார்கள். இந்த விபரங்கள் பம்பாய் தினப்பத்திரிகைகளில் வெளிப்பட்டன. உடனே இன்னும் பலரும் சத்தியாக்கிரஹப் பிரதிக்ஞையில் கையொப்பமிடுவதற்கு விருப்பம் தெரிவித்தார்கள். அப்போது தேசத்தில் நிலைபெற்றிருந்த காங்கிரஸ், ஹோம் ரூல் லீக் முதலிய ஸ்தாபனங்கள் தம்முடைய சத்தியாக்கிரஹ முறையை ஏற்றுக் கொள்ளும் என்று மகாத்மாவுக்குத் தோன்றவில்லை. ஆகையால் சத்தியாக்கிரஹ சபை என்று ஒரு புதிய ஸ்தாபனம் ஏற்படுத்த முடிவு செய்தார். சத்தியாக்கிரஹ சபையில் பலர் அங்கத்தினர்களானார்கள். இவர்களில் பெரும்பாலோர் பம்பாய்க்காரர்களா யிருந்தபடியினால் சத்தியாக்கிரஹ சபையின் தலைமைக் காரியாலயம் பம்பாயில் ஏற்படுத்தப்பட்டது. சத்தியாக்கிரஹ சபையின் கொள்கைகளை விளக்குவதற்காகப் பொதுக்கூட்டங்கள் நடைபெற்றன. பொது மக்களின் உற்சாகம் நாளுக்கு நாள் வளர்ந்து வந்தது. ரவுலட் சட்டத்தை எதிர்த்துப் பெரும் போர் நடத்த வேண்டியிருக்கும் என்று காந்திஜிக்குத் தோன்றியது. அதற்கு வேண்டிய உற்சாகம் தேசத்தில் பெருகிக்கொண்டு வந்தது. ஆனால் மகாத்மாவின் உடம்பு சரியாகக் குணமானபாடில்லை. மாதிரான் என்னும் இடத்துக்குப் போனால் விரைவில் குணமாகும் என்று சில நண்பர்கள் சொன்னார்கள். அங்கே போய் ஒரு வாரம் இருந்ததில் பலவீனம் அதிகமாகி விட்டது. ஆகவே சபர்மதிக்கு மகாத்மா திரும்பி வந்தார். இந்த நிலைமையைக் குறித்து ஸ்ரீ சங்கர்லால் பாங்கர் யோசித்தார். காந்திஜியின் உடம்பு குணமாக வேண்டியதின் அவசியம் அவருக்கு நன்கு தெரிந்திருந்தது. அந்தப் பொறுப்பைத் தாம் ஏற்றுக்கொள்ளத் தீர்மானித்தார். டாக்டர் தலால் என்பவரை அழைத்துக்கொண்டு வந்து மகாத்மாவின் உடல் நிலையைப் பரிசோதிக்கச் செய்தார். டாக்டர் தலால் காந்திஜியை நன்கு பரிசோதித்து விட்டு “நீடித்த சீதபேதியினால் உங்கள் உடம்பிலுள்ள இரத்தம் பலமிழந்திருக்கிறது. நீங்கள் பால் அருந்தவும் இரும்புச் சத்தை இன்ஜக் ஷன் செய்து கொள்ளவும் சம்மதிக்க வேண்டும். இதற்கு இணங்கினால் முன்போல் உடம்பில் பலம் வந்து விடும். இல்லாவிடில் நான் ஒன்றும் செய்ய முடியாது” என்றார். காந்திஜி, “இன்ஜக் ஷன் செய்து கொள்வதில் எனக்கு விருப்பமில்லை. ஆயினும் தாங்கள் சொல்வதற்காக இணங்குகிறேன். ஆனால் பால் சாப்பிடுவதில்லையென்று நான் பிரதிக்ஞை செய்திருக்கிறேன். அந்தப் பிரதிக்ஞையை எப்படிக் கைவிட முடியும்?” என்றார். “அது என்ன? பால் சாப்பிடுவதில்லை என்று எதற்காகப் பிரதிக்ஞை செய்தீர்கள்?” என்று டாக்டர் கேட்டார். “கல்கத்தா முதலிய நகரங்களில் பசுமாடுகளையும் எருமை மாடுகளையும் இடையர்கள் அதிகப் பால் கறப்பதற்காகச் செய்யும் கொடுமைகளைப் பற்றி அறிந்தேன் அதனால் பால் சாப்பிடுவதையே வெறுத்துப் பிரதிக்ஞை எடுத்துக்கொண்டேன். மேலும், பால் மனிதனுடைய இயற்கை உணவு அல்லவென்றும் கருதுகிறேன்” என்று மகாத்மா கூறினார். இந்தச் சம்பாஷணையைப் பக்கத்தில் நின்று கேட்டுக் கொண்டிருந்த ஸ்ரீமதி கஸ்தூரிபாய், “பசும்பால், எருமைப்பாலை நினைத்துக் கொண்டுதானே விரதம் எடுத்துக் கொண்டீர்கள்? வெள்ளாட்டுப் பால் சாப்பிடுவதற்கு என்ன ஆட்சேபணை? என்றார். டாக்டரும் உடனே இதைப் பிடித்துக் கொண்டார்.”ஆமாம்; வெள்ளாட்டுப் பால் நீங்கள் அருந்தினாலும் போதும். அதுதான் உங்கள் பிரதிக்ஞையில் சேரவில்லையே? வெள்ளாட்டுப் பால் சாப்பிடவும் நீங்கள் மறுத்தால் என்னால் ஒன்றும் செய்ய முடியாது. உங்களுக்கு உடம்பு குணமாகாது!" என்றார். அப்போது காந்திஜியின் உள்ளத்தில் ஒரு போராட்டம் எழுந்தது. அந்தப் போராட்டத்தைப் பற்றியும் அதன்முடிவைப் பற்றியும் மகாத்மா காந்தி எழுதியிருப்பதைக் கேளுங்கள்:- “என் உறுதி குலைந்தது. சத்தியாக்கிரஹப் போர் நடத்த வேண்டுமென்னும் தீவிரமான அவாவினால் உயிர் வாழும் ஆசையும் எனக்கு உண்டாகி விட்டது. எனவே, விரதத்தின் கருத்தைக் கைவிட்டு அதன் எழுத்தைக் கடைப்பிடிப்பதுடன் திருப்தியடைந்தேன். நான் விரதமெடுத்துக் கொண்டபோது பசுவின் பாலும், எருமைப் பாலுமே என் மனதில் இருந்தனவாயினும், இயல்பாக அதனுள் எல்லா மிருகங்களின் பாலுமே அடங்கியதாகும். மற்றும், பால் மனிதனுடைய இயற்கை உணவு அல்ல என்பது என் கொள்கை. ஆகையால் நான் எந்தப் பாலையும் அருந்துவது முறையாகாது. இவையெல்லாம் தெரிந்திருந்தும் வெள்ளாட்டுப் பால் அருந்தச் சம்மதித்தேன். உயிர் வாழும் ஆசை சத்தியப் பற்றினும் வலிமை மிக்கதாகி விட்டது. எனவே சத்திய உபாசகனான நான், சத்தியாக் கிரஹப் போர் துவக்கும் ஆவல் காரணமாக, எனது புனித இலட்சியத்தைச் சிறிது விட்டுக் கொடுக்கலானேன். இதன் ஞாபகம் இன்றளவும் என் இதயத்தை ஓயாது வருத்திக் கொண்டிருக்கிறது. வெள்ளாட்டுப் பாலை விடுவதெப்படி என்று இடைவிடாமல் சிந்தித்து வருகிறேன். ஆனால், ஆசைகளுக்குள் மிக நுண்ணியதாகிய தொண்டு புரியும் ஆசை இன்னும் என்னைப் பற்றி நிற்கிறது. அதனின்றும் இன்னும் நான் விடுதலை பெறக் கூடவில்லை”. - ஆத்ம தரிசனம் ரவுலட் கமிட்டியின் அறிக்கையை எதிர்த்து நாடெங்கும் கிளர்ச்சி ஏற்பட்டு வந்தது. அந்தக் கிளர்ச்சிக்குத் தலைமை வகித்து நடத்துவற்காகக் காந்திமகான் தான் மேற்கொண்டிருந்த பாலருந்தா விரதத்தை ஓரளவு தளர்த்தி உடம்பைக் குணப்படுத்திக்கொண்டு வந்தார். அதே சமயத்தில் ரவுலட் கமிட்டி சிபார்சுகளை யொட்டிச் சட்டம் செய்வதில் சர்க்காரின் உறுதி வலுவடைந்து வந்தது. ரவுலட் கமிட்டியின் சிபார்சுகளை யொட்டிச் சர்க்கார் ஒரு மசோதா தயார் செய்து வெளியிட்டார்கள். பிறகு அந்த மசோதா இந்திய சட்டசபையில் விவாதத்துக்கு வந்தது. அப்போதெல்லாம் இந்திய சட்ட சபையில் உத்தியோகஸ்தர்களும் சர்க்கார் நியமித்த அங்கத்தினர்களுமே அதிகமாயிருந்தார்கள். பொது ஜனங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அங்கத்தினர்கள் ஒரு சிலர் தான். அவர்களிலும் மக்களின் கட்சியை எடுத்துச் சொல்லக்கூடியவர்கள் மிகச் சிலராயிருந்தனர். இந்திய சட்ட சபை விவாதத்தின்போது ரவுலட் மசோதாவை எதிர்த்து அதிதீவிரமான பிரசங்கம் செய்தவர் மகாகனம் சீனிவாச சாஸ்திரியார். அம் மசோதாவுக்கு விரோதமான வாதங்களையும் கண்டனங்களையும் மகா கனம் சாஸ்திரியார் சரமாரியாகப் பொழிந்தார். அந்த மசோதாவைச் சட்டமாக்குவதனால் விளையக்கூடிய விபரீதங்களைப் பற்றி சர்க்காருக்கு எச்சரிக்கை செய்தார். இதையெல்லாம் கவனித்துக்கொண்டிருந்தவர்களில் இருவர் முக்கியமானவர். ஒருவர் இராஜப் பிரதிநிதி சேம்ஸ் போர்டு பிரபு; இன்னொருவர் காந்தி மகான். இந்திய சட்ட சபையின் நடவடிக்கைகளைக் கவனிப்பதற்காகக் காந்தி மகான் அங்கே போயிருந்தது அதுதான் முதல் தடவை. சாஸ்திரியாரின் ஆவேசமான உணர்ச்சி நிறைந்த பேச்சு சேம்ஸ் போர்டு பிரபுவின் மனத்தைக்கூட மாற்றியிருக்கலாம் என்று மகாத்மா எண்ணினார். ஆனால் அவ்விதம் நடைபெறவில்லை. தூங்கிக் கொண்டிருக்கும் மனிதனைத் தட்டி எழுப்பலாம்; தூங்குவதாகப் பாசாங்கு செய்கிறவனை என்ன செய்தாலும் எழுப்பமுடியாது அல்லவா? ஆகையால் தேசத்தில் நடந்த கிளர்ச்சியோ, சட்டசபையில் சாஸ்திரியார் நிகழ்த்திய பிரசங்கமோ, சர்க்காரின் தீர்மானத்தை மாற்ற முடியவில்லை. உத்தியோக அங்கத்தினர்கள்-நியமன அங்கத்தினர்களின் வோட்டுகளால் இந்திய சட்ட சபையில் ரவுலட் மசோதா நிறைவேறிவிட்டது. காந்தி மகாத்மா இராஜப்பிரதிநிதிக்கு அந்தரங்கமாகவும் பகிரங்கமாகவும் எழுதிய கடிதங்களினாலும் யாதொரு பயனும் விளையவில்லை. இத்தகைய நிலைமையில் சென்னையிலிருந்து மகாத்மா காந்திக்கு அழைப்புக் கடிதம் வந்தது. மகாத்மா காந்திஜியின் உடல்நிலை இன்னமும் திருப்திகரமாக வில்லை. பொதுக் கூட்டங்களில் உரத்துப் பேசச் சக்தி கிடையாது. சிறிது நேரம் நின்றுகொண்டு பேசினால் உடம்பு நடுங்கத் தொடங்கியது. இவ்வளவு பலவீனமான நிலைமையிலும் மகாத்மா காந்தி தென்னாட்டிலிருந்து அன்பர்கள் அனுப்பியிருந்த அழைப்பை ஒப்புக்கொண்டு சென்னைக்குப் பிரயாணமானார். மகாத்மாவின் சென்னை விஜயம் மிக முக்கியமான விளைவுகளுக்குக் காரணமாயிருந்தது. சென்னையில் இருந்தபோது தான் காந்திமகான் ரவுலட் சட்டத்தை எதிர்த்துச் சத்தியாக் கிரஹம் செய்வதற்கு ஒரு வழியைக் கண்டுபிடித்தார். அதன் காரணமாக இந்தியா தேசம் நெடுங்காலமாகத் தான் இழந்திருந்த ஆத்மாவைத் திரும்பவும் பெற்றது. பாரத சமுதாயம் புனர்ஜன்மம் எடுத்தது. சென்னைக்குச் சென்றது பற்றிக் காந்தி மகான் தம் சுயசரிதத்தில் எழுதியிருப்பதைக் கேளுங்கள்:_ “தென்னாட்டுக்கு எப்போது சென்றாலும் என் சொந்த இடத்தில் இருப்பதாகவே எனக்குத் தோன்றும். தென்னாப் பிரிக்காவில் நான் செய்த வேலையின் காரணமாக, தமிழர்கள் மீதும் தெலுங்கர்கள்மீதும் எனக்கு ஏதோ தனி உரிமை உண்டென்று நான் எண்ணுவதுண்டு. தென்னாட்டார் என் நம்பிக்கையை ஒருபோதும் பொய்ப்படுத்தியதில்லை. ஸ்ரீ கஸ்தூரி ரங்க ஐயங்காரின் கையொப்பத்துடன் அழைப்பு வந்தது. ஆனால் அந்த அழைப்புக்குப் பின்னால் நின்றவர் ஸ்ரீ இராஜகோபாலாச்சாரி என்பதாகச் சென்னைக்குப் போகும் வழியில் அறிந்து கொண்டேன். ஸ்ரீ இராஜகோபாலாச்சாரி சமீபத்தில் தான் சேலத்திலிருந்து சென்னைக்கு வக்கீல் தொழில் நடத்த வந்திருந்தார். காலஞ்சென்ற ஸ்ரீ கஸ்தூரிரங்க ஐயங்கார் முதலியோர் அவரை வற்புறுத்தி அழைத்திருந்தார்கள். பொது வாழ்வில் இன்னும் தீவிரமாக ஈடுபடவேண்டும் என்பது அவரது நோக்கம். சென்னையில் ஸ்ரீ இராஜகோபாலாச்சாரியின் விருந்தினராகவே நாங்கள் தங்கினோம். ஆனால் இரண்டு மூன்று நாள் ஆனபிறகே இதை நான் கண்டுபிடித்தேன். ஸ்ரீ கஸ்தூரி ரங்க ஐயங்காருக் குச் சொந்தமான வீட்டில் நாங்கள் தங்கியிருந்தபடியால் நாங்கள் அவருடைய விருந்தினர் என்று எண்ணியிருந்தேன். மகாதேவ தேஸாய் எனக்கு உண்மை தெரிவித்தார். அவர் விரைவில் ஸ்ரீ இராஜகோபாலாச்சாரியாருடன் நெருங்கிய பழக்கம் கொண்டார். ஸ்ரீ இராஜகோபாலாச்சாரி தமக்கு இயற்கையாக உள்ள சங்கோச குணத்தினால் எப்போதும் பின்னாலேயே இருந்தார். ஆனால் மகாதேவ் தேஸாய் எனக்கு அவரைப்பற்றித் தெரியப்படுத்தினார். ‘இந்த மனிதரிடம் நீங்கள் பழக்கம் செய்து கொள்ள வேண்டும்’ என்று அவர் ஒரு நாள் கூறினார். அவ்வாறே செய்தேன். போராட்டத்துக்குரிய திட்டங்களைப் பற்றி நாங்கள் தினந்தோறும் விவாதித்தோம். ஆனால் பொதுக்கூட்டங்கள் நடத்துவதை யல்லாமல் வேறெந்த வேலைத் திட்டமும் எனக்குத் தோன்றவில்லை. ரவுலட் மசோதா முடிவில் சட்டமாகி விட்டாலும் அதை எதிர்த்து எப்படி சாத்வீக மறுப்புச் செய்வதென்பது எனக்கு விளங்க வில்லை. அரசாங்கம் அதற்குரிய சந்தர்ப்பம் அளித்தால் தானே சட்டத்துக்கு கீழ்ப்படிய மறுக்கலாம்? அதில்லாவிடில் மற்றச் சட்டங்களையும் சாத்வீக முறையில் மறுத்தல் கூடுமோ? இதுபோன்ற பல விஷயங்களையும் குறித்து நாங்கள் விவாதித்தோம். இது சம்பந்தமாக நன்கு ஆராய்ச்சி செய்யும் பொருட்டு ஸ்ரீ கஸ்தூரிரங்க ஐயங்கார், தலைவர்களின் சிறு மகாநாடு ஒன்றைக் கூட்டினார். அதில் சிறப்பாகக் கலந்து கொண்டவர்களில் ஸ்ரீ விஜயராகவாச்சாரியாரும் ஒருவர். சத்தியாக்கிரஹ சாஸ்திரத்தின் நுட்பமான அம்சங்களையுங்கூட விளக்குமாறு ஒரு விரிவான நூல் நான் எழுத வேண்டுமென்று அவர் யோசனை சொன்னார். இந்த யோசனைகளெல்லாம் நடந்து கொண்டிருக்கையில் ரவுலட் மசோதா சட்டமாகி விட்டது என்னும் செய்தி கிடைத்தது. அன்றிரவு அதைப்பற்றிச் சிந்தித்துக் கொண்டே நித்திரையில் ஆழ்ந்தேன். மறுநாள் அதிகாலையில் சிறிது வழக்கத்தைவிட முன்னதாகவே விழித்துக் கொண்டேன். தூக்கத்துக்கும் விழிப்புக்கும் இடையிலுள்ள நிலையில் இருக்கும் போது சட்டென்று எனக்கு வழி புலனாயிற்று. கனவு கண்டது போலவே இருந்தது. காலையில் ஸ்ரீ இராஜகோபாலாச்சாரியிடம் அதைப்பற்றிய விவரம் முழுவதும் கூறினேன். ‘ஒரு நாள் பூரண ஹர்த்தால் (வேலை நிறுத்தம்) நடத்தும்படி தேச மக்களைக் கேட்டுக் கொள்ள வேண்டுமென்று நேற்றிரவு கனவில் யோசனை உதித்தது. தம்முடைய போராட்டம் புனிதமான போராட்டம் ஆதலின், ஆத்ம தூய்மைக்குரிய ஒரு காரியத்துடன் அதைத் தொடங்குவதே தகுதியென்று நினைக்கிறேன். அன்றைய தினம் இந்திய மக்களனைவரும் தங்கள் வேலைகளை நிறுத்தி உபவாசமிருந்து பிரார்த்தனை நடத்த வேண்டும். எல்லா மாகாணங்களும் தமது வேண்டுகோளுக்கு இணங்குமா என்று சொல்லுதல் கஷ்டம். ஆனால் பம்பாய், சென்னை, பீஹார், சிந்து இம்மாகாணங்களைப் பற்றி எனக்கு நிச்சயமுண்டு. இவ்விடங்களிலெல்லாம் ஹர்த்தால் சரிவர நடந்தாலும் நாம் திருப்தியடையலாம்’ என்றேன். ஸ்ரீ இராஜகோபாலாச்சாரி உடனே இந்த யோசனையை அங்கீகரித்தார். பின்னால் மற்ற நண்பர்களுக்கு அது தெரிவிக்கப்பட்டபோது அவர்களும் அதை வரவேற்றார்கள். சுருக்கமான விண்ணப்பமொன்றை நான் தயாரித்தேன். முதலில் 1919 வருஷம் மார்ச்சு மாதம் 30-ஆம் தேதி ஹர்த்தால் தினமாகக் குறிக்கப்பட்டது. பின்னர் ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதிக்கு மாற்றப் பட்டது. ஜனங்களுக்குச் சொற்பகால அறிக்கையே தந்தோம். வேலை உடனே தொடங்கவேண்டியிருந்த படியால் நீண்ட கால அறிக்கை தருவதற்கு அவகாசம் இல்லை. ஆனால் அவ்வற்புதம் எப்படி நடந்ததென்று யாரால் சொல்ல முடியும்? பாரத நாடு முழுவதிலும் ஒரு மூலையிலிருந்து மற்றொரு மூலை வரையில் நகரங்களும், கிராமங்களும் அன்றைய தினம் பரிபூரணமான ஹர்த்தால் அனுஷ்டித்தன. அது யாரும் எதிர்பாராத அற்புதமான காட்சியாயிருந்தது. நாடு எழுந்தது! சென்னைச் சுற்றுப் பிரயாணத்தை காந்திஜி சீக்கிரமாகவே முடித்துக்கொண்டு பம்பாய்க்கு பிரயாணமானார். ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி கொண்டாட்டத்துக்குப் பம்பாய் வந்து விட வேண்டும் என்று பம்பாய் நண்பர்கள் மகாத்மாவுக்குத் தந்தியடித்திருந்தார்கள். எனவே, பம்பாய்க்கு ஏப்ரல் மாதம் 4-ஆம் தேதி மகாத்மா போய்ச் சேர்ந்தார். மகாத்மா ரயிலில் பிரயாணம் செய்து கொண்டிருக்கும்போதே டில்லியிலிருந்து விபரீதமான செய்திகள் வந்துவிட்டன. ஹர்த்தால் அனுஷ்டிப்பதற்கு மார்ச்சு மாதம் 30-ஆம் தேதி என்று முதலில் குறிப்பிட்டு விட்டு அப்புறம் ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதிக்குத் தள்ளிப்போட்டார்கள் அல்லவா? தேதியைத் தள்ளிப்போட்ட செய்தி டில்லிக்குச் சரியான காலத்தில் போய்ச் சேரவில்லை. ஆகையால் 30-ஆம் தேதி அன்றே டில்லியில் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது. இதற்கு முன்னால் எந்த நாளிலும் டில்லி அத்தகைய காட்சியைப் பார்த்தது கிடையாது. ஹிந்துக்களும் முஸ்லீம்களும் அவ்வளவு ஒற்றுமையுடன் அன்றைக்கு ஹர்த்தால் அனுஷ்டித்தார்கள். பெரிய பெரிய வியாபார ஸ்தலங்களிலிருந்து மிகச் சிறிய சோடாக்கடை வரையில் எல்லாம் மூடப்பட்டிருந்தன. வண்டிக்காரர்கள் அன்று வண்டி ஓட்டவில்லை. வீதிகளில் அங்காடிக் குடைகள் வரவில்லை. அநேகர் உண்ணாவிரதம் அனுஷ்டித்தார்கள். பல ஊர்வலங்கள் நடந்தன; பல பிரார்த்தனைக் கூட்டங்கள் நடந்தன. கூட்டங்களில் எல்லாம்பெரிய பிரம்மாண்டமான கூட்டம் ஜும்மா மசூதியில் கூடிற்று. அன்றைக்கு டில்லி ஜும்மா மசூதியில் சரித்திரம் கண்டிராத அதிசயம் ஒன்று நடைபெற்றது. டில்லி ஜும்மா மசூதி மொகலாய சக்கரவர்த்தி ஷாஜஹான் காலத்தில் கட்டப்பட்டது. இந்தியாவிலேயே மிகப் பெரிய மசூதி அது. அந்த மசூதியின் உட்புறத்து முற்றத்தில் ஐம்பதினாயிரம் பேர் ஏககாலத்தில் கூடிப் பிரார்த்தனை செய்யலாம். வெறும் பொதுக்கூட்டமாகக் கூடினால் ஒரு லட்சம் பேர் கூடலாம். முஸ்லீம்கள் தொழுகை நடத்தும் பிரதான புண்ணிய ஸ்தலமாதலால் அந்த மசூதிக்குள் அதுவரையில் எந்த ஹிந்துவும் பிரசங்கம் செய்ய அனுமதிக்கப்பட்டதில்லை. அத்தகைய என்றும் நடவாத காரியந்தான் அந்த மார்ச் 30-ஆம் தேதிநடந்தது. அப்போது டில்லியில் இரண்டு மாபெரும் தேசீயத் தலைவர்கள் இருந்தார்கள். ஒருவர் ஹக்கீம் அஜ்மல்கான். இன்னொருவர் சுவாமி சிரத்தானந்தர். இவர்கள் இருவரும் வைத்ததே டில்லியில் சட்டம் என்னும்படியான நிலைமை அப்போது ஏற்பட்டிருந்தது. ஜும்மா மசூதியில் நடந்த பிரம்மாண்டமான முஸ்லீம்களின் பிரார்த்தனைக் கூட்டத்தில் சுவாமி சிரத்தானந்தர் பேசுவதற்கு அழைக்கப்பட்டிருந்தார். சுவாமி அவ்விதமே சென்று பேசினார். அவருடைய பேச்சை அவ்வளவு முஸ்லீம்களும் ஆர்வத்துடன் கேட்டு மகிழ்ந்தார்கள். இவ்வாறு சரித்திரத்திலேயே கேட்டிராத அளவில் ஹிந்து-முஸ்லீம் ஐக்கியம் ஏற்பட்டிருப்பதையும் பொது மக்களின் எழுச்சியையும் ஆவேசத்தையும் கண்டு பிரிட்டிஷ் சர்க்காரின் அதிகாரிகள் மிரண்டு போனார்கள். இந்த நிலைமையை அவர்களால் சகிக்க முடியவில்லை. அதற்குச் சில வருடங்களுக்கு முன்புதான் பிரிட்டிஷ் இந்தியாவின் தலைநகரம் கல்கத்தாவிலிருந்து டில்லிக்குச் சென்றிருந்தது. இந்திய ஏகாதிபத்தியத்தின் தலை நகரத்தில் ஒரு முஸ்லீம் தலைவரும் ஹிந்து தலைவரும் சேர்ந்து பொது மக்களின் மீது ஆட்சி நடத்துவதைப் பிரிட்டிஷ் அதிகாரிகளால் பொறுத்துக்கொண்டிருக்க முடியுமா? அன்று நடந்த ஊர்வலங்களில் ஒன்று டில்லி ரயில்வே ஸ்டேஷனை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. போலீஸ் அதிகாரிகள் வந்து ஊர்வலத்தை வழி மறித்தார்கள். ஊர்வலத்தினர் கலைய மறுத்தார்கள். சமயம் பார்த்துச் சில கற்கள் எங்கிருந்தோ வந்து விழுந்தன. அதை வியாஜமாக வைத்துக்கொண்டு போலீஸார் துப்பாக்கிப் பிரயோகம் செய்தார்கள். கூட்டத்தில் சிலர் மாண்டு விழுந்தார்கள். பிறகு ஊர்வலம் கலைந்து போயிற்று. இந்தச் சம்பவம் டில்லியில் பெருங்கலக்கத்தை உண்டுபண்ணியிருந்தது. மக்களின் உள்ளம் கொந்தளித்தது. எந்த நிமிஷத்தில் என்ன நடக்குமோ என்ற கவலை தலைவர்களுக்கு ஏற்பட்டது. நிலைமையைத் தங்களால் சமாளிக்க முடியுமா என்ற ஐயமும் அவர்களுக்குத் தோன்றியது. சுவாமி சிரத்தானந்தர் மகாத்மா காந்திக்கு “உடனே புறப்பட்டு வரவும்” என்று தந்தி அடித்தார். டில்லியில் நடந்தது போலவே லாகூரிலும் அமிருதசரஸிலும் மார்ச்சு மாதம் 30-ஆம் தேதி ஹர்த்தால் நடைபெற்றது. அந்த இரண்டு இடங்களிலும் டில்லியில் நடந்தது போலவே பொது ஜனங்கள் மீது போலீசாரின் துப்பாக்கிப் பிரயோகம் நடந்தது; உயிர்ச்சேதமும் நிகழ்ந்தது. அமிருதஸரஸில் அச்சமயம் இரண்டு தலைவர்கள் ஒப்பற்று விளங்கினார்கள். இவர்களில் ஒருவர் டாக்டர் சத்தியபால்; இன்னொருவர் டாக்டர் கிச்லூ. ஒருவர் ஹிந்து; இன்னொருவர் முஸ்லீம். இந்தியா தேசத்தில் அச்சமயம் ஏற்பட்டிருந்த மகத்தான ஹிந்து முஸ்லீம் ஐக்கியத்துக்கு அறிகுறியாக டாக்டர் சத்தியபாலும் டாக்டர் கிச்லூவும் விளங்கினார்கள். மார்ச்சு 30உ சம்பவங்களுக்குப் பிறகு அந்த இரு டாக்டர்களும் மகாத்மா காந்திக்கு “உடனே புறப்பட்டு வரவும்” என்று தந்தி அடித்தார்கள். காந்திஜி பம்பாய் வந்து இறங்கிய உடனே மேற்கூறிய இரு தந்தி அழைப்புகளும் அவருக்குக் கிடைத்தன. மகாத்மா யோசித்துப் பார்த்தார். டில்லியிலும் அமிருதசரஸிலும் நடந்தது நடந்துபோய்விட்டது. ஆனால் பம்பாயிலோ ஏப்ரல் 6-ஆம் தேதி ஹர்த்தால் நடந்தாகவேண்டும். ஆகையால் 6-ஆம் தேதி பம்பாயில் தங்கிவிட்டு மறுநாள் புறப்பட்டு வருவதாக மகாத்மா மேற்குறிய நண்பர்களுக்குப் பதில் தந்தி அனுப்பினார். 1919-ஆம் வருஷம் ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி இந்தியாவின் சரித்திரத்தில் மிக முக்கியமான ஒரு தினம். இந்தியாவின் சுதந்திரப் போரின் சரித்திரத்தில் அதைப் போன்ற முக்கியமான தினம் வேறு எதுவும் இல்லை என்றே சொல்லலாம். அன்றைக்கு இமயமலையிலிருந்து கன்னியாகுமரிவரை இந்தியாவில் உள்ள நகரங்களிலும் பட்டணங்களிலும் ஹர்த்தால் நடந்தது. காங்கிரஸைப் பற்றியோ சுதந்திரப் போரைப் பற்றியோ அதுவரை கேள்விப்பட்டிராத பட்டிக்காட்டு கிராமங்களில் கூட மக்கள் விழித்தெழுந்தார்கள்; கடை அடைத்தார்கள்; வேலை நிறுத்தம் செய்தார்கள்; ஊர்வலம் விட்டார்கள். பொதுக் கூட்டம் நடத்தினார்கள். ரவுலட் சட்டத்தை எதிர்த்துச் சட்ட மறுப்புச் செய்வோம் என்று ஏக மனதாகத் தீர்மானம் செய்தார்கள். அன்றைக்குச் சென்னைமாநகரின் கடற்கரையில் இரண்டு லட்சம் ஜனங்கள் கூடியிருந்தார்கள். இவ்வளவு பெரியபொதுக் கூட்டத்தைச் சென்னை நகரம் அதற்குமுன் என்றும் கண்டதில்லை. மதுரையிலும் திருச்சியிலும் பொதுக்கூட்டத்தில் ஐம்பதினாயிரம் ஜனங்கள் கூடியிருந்தார்கள். கல்கத்தாவிலும் நாகபுரியிலும் லக்னௌவிலும் அலகாபாத்திலும் பூனாவிலும் ஆமதாபாத்திலும் அவ்வாறே ஹர்த்தால்களும் பொதுக் கூட்டங்களும் ஊர்வலங்களும் நடந்தன. இந்த நிகழ்ச்சிகளில் ஆங்காங்கு லட்சக்கணக்காக ஜனங்கள் கலந்துகொண்டார்கள். சத்தியாக்கிரஹ இயக்கத்தின் தலைமை ஸ்தலம் பம்பாய் நகரம். அன்றைக்கு மகாத்மா காந்தியும் பம்பாயிலேதான் இருந்தார். ஆகையால் பம்பாயில் அன்று நடந்த சம்பவங்கள் மிகவும் முக்கியத்தைப் பெற்றிருந்தன. பம்பாயில் அன்றைக்கு பூரண ஹர்த்தால் நடைபெற்றது. கடை கண்ணிகள் மூடப்பட்டன. ஆலைகள் மூடப்பட்டன. வண்டிகள்,டிராம்கள் ஒன்றும் ஓடவில்லை. பள்ளிக்கூடங்களும் நடைபெறவில்லை. ஹர்த்தால் பூரண வெற்றியோடு நடந்தது; பூரண அமைதியுடனும் நடந்தது. டில்லியில் நடந்ததுபோல் துப்பாக்கிப் பிரயோகம் முதலிய விபரீத சம்பவம் எதுவும் பம்பாய் நகரில் நடைபெறவில்லை. அன்று காலையில் பம்பாய் நகரவாசிகள் ஆயிரக் கணக்கில் சௌபாத்தி கடற்கரைக்கு வந்தார்கள். கடலில் நீராடினார்கள். பின்னர் ஊர்வலமாகக் கிளம்பித் தாகூர் துவாரம் என்னும் கோவிலுக்குப் போனார்கள். ஊர்வலத்தில் பெருந்திரளான முஸ்லிம்களும் ஒரு சில ஸ்திரீகளும் குழந்தைகளும் இருந்தார்கள். தாகூர் துவாரத்தில் ஊர்வலம் முடிந்த பிறகு பக்கத்திலிருந்த மசூதிக்கு வரும்படியாகத் தலைவர்களை சில முஸ்லிம்கள் அழைத்தார்கள். அதற்கிணங்கி மகாத்மா காந்தியும் ஸ்ரீமதி சரோஜினி தேவியும் பக்கத்திலிருந்த மசூதிக்குச் சென்றார்கள். அங்கே அவர்கள் பிரசங்கம் செய்தார்கள். அன்றைய தினம் ஏதேனும் ஒரு முறையில் சட்ட மறுப்பு இயக்கத்தை ஆரம்பித்துவிட வேண்டும் என்று காந்திஜி தீர்மானித்திருந்தார். அதற்கு ஒரு வழியும் கண்டு பிடித்திருந்தார். காந்திஜியின் நூல்களாகிய “இந்திய சுயராஜ்யம்” “சர்வ தயை” என்னும் இரு நூல்களுக்கும் சர்க்கார் ஏற்கனவே தடைவிதித்து அவற்றைப் பிரசுரிக்கக் கூடாது என்றும் தடை உத்தரவு போட்டிருந்தார்கள். மேற்படி புத்தகங்களை அச்சுப் போட்டு அன்றையதினம் பகிரங்கமாக விற்பது என்று தீர்மானிக்கப்பட்டிருந்தது. இவ்விதம் தடுக்கப்பட்ட புத்தகங்களைப் பிரசுரிப்பது சாத்வீக முறையின் சட்டத்தை மீறுவது ஆகுமல்லவா? அன்று சாயங்காலம் உண்ணாவிரதத்தைப் பூர்த்திசெய்து உணவருந்திவிட்டுப் பொது மக்கள் கடற்கரையில் பெருந்திரளாகக் கூடினார்கள். அங்கே மகாத்மா காந்தியும் ஸ்ரீமதி சரோஜினி தேவியும் மற்றும் சத்தியாக்கிரஹப் பிரதிக்ஞையில் கையெழுத்திட்ட தொண்டர்களும் தடுக்கப்பட்ட மேற்படி புத்தகப் பிரதிகளுடன் வந்து சேர்ந்தார்கள். கொண்டு வந்திருந்த ஆயிரக்கணக்கான பிரதிகளும் அதி சீக்கிரத்தில் செலவழிந்துவிட்டன. பிரதி ஒன்றுக்கு நாலணா வீதம் விலை வைக்கப்பட்டிருந்தது. ஆனால் ஒருவராவது நாலணா கொடுத்துப் புத்தகம் வாங்கவில்லை. ஒரு ரூபாயும் அதற்கு மேலேயும் கொடுத்துத்தான் வாங்கினார்கள். ஐந்து ரூபாயும் பத்து ரூபாயும் சர்வ சாதாரணமாய்க் கொடுத்தார்கள். ஒருவர் மகாத்மாவிடம் ஐம்பது ரூபாய் கொடுத்து ஒரு புத்தகத்தை வாங்கிக் கொண்டார். இந்தப் புத்தகங்களை வாங்குவது சட்டப்படி குற்றம் ஆகும் என்றும், வாங்குவோர் சிறைக்கு அனுப்பப் படலாம் என்றும் ஜனங்களுக்குத் தெளிவாக எடுத்துச் சொல்லி எச்சரிக்கப்பட்டது. ஆயினும் ஆயிரக் கணக்கானவர்கள் துணிந்து வாங்கினார்கள். இவ்வாறாக இந்திய சரித்திரத்தில் மிகவும் பிரிசித்திபெற்ற 1919 -ஆம் வருஷம் ஏப்ரல் மீ 6-உ முடிவுற்றது. மறுநாள் 7-உ காலையில் நடந்த பொதுக்கூட்டத்துக்கு முதல் நாளைப்போல பெருங் கூட்டம் வரவில்லை. பொறுக்கி எடுத்தவர்களே வந்திருந்தார்கள். மகாத்மாவின் ஆணைப்படி அவர்கள் சுதேசி விரதமும் ஹிந்து முஸ்லிம் ஒற்றுமைப் பிரத்திஞையும் எடுத்துக் கொண்டார்கள். 7 -உ இரவு மகாத்மா காந்தி டில்லி வழியாக அமிருதசரஸ் போகும் நோக்கத்துடன் ரயில் ஏறினார். மறுநாள் 8-உ மாலை ரயில் வடமதுரை ஸ்டே ஷனை யடைந்தபோது மகாத்மாவின் பிரயாணம் தடை செய்யப்படலாம் என்ற வதந்தி அவருடைய காதில் எட்டியது. டில்லிக்கு முன்னால் உள்ள பால்வல் ஸ்டே ஷனை ரயில் அடைந்ததும் ஒரு போலீஸ் உத்தியோகிஸ்தர் மகாத்மா ஏறியிருந்த வண்டியில் ஏறினார். அவரிடம் ஒரு உத்தரவை சாதரா செய்தார். காந்திஜி பஞ்சாப்புக்கு வருவதால் அமைதிக்குப் பங்கம் நேரம் கூடுமாததால் அவர் அந்த மாகாணத்துக்குள் நுழையக்கூடாது என்று உத்தரவில் கண்டிருந்தது. முன்னொரு தடவை சம்பரானில் கொடுக்கப்பட்டது போன்ற உத்தரவுதான். ஆனால் சூழ்நிலையில் மிகவும் வித்தியாசம் இருந்தது. முன்னர் ஒரு குறிப்பிட்ட சிறு பிரதேசத்தின் புகாரைப் பற்றி விசாரிப்பதில் மகாத்மா ஈடுபட்டிருந்தார். இப்போதோ இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியையே எதிர்த்து ஒரு பெரிய அகில இந்திய இயக்கத்தை ஆரம்பித்திருந்தார். அதிகார வர்கத்தினர் முன்னைப்போல இந்தத் தடவை இலகுவாக விட்டுவிடுவார்களா? காந்திஜி தாம் அந்த உத்தரவுக்குக் கீழ்ப்படியப் போவதில்லை யென்றும், பஞ்சாப்பில் அமைதியைக் காப்பதற்காகவே தாம் போகவதாகவும் அந்த உத்தியோகிஸ்தரிடம் தெரிவித்தார். “அப்படியானால் உம்மைக் கைது செய்கிறோம்” என்று சொல்லி ரயிலிலிருந்து இறக்கி விட்டார்கள். காந்திஜி தம்முடன் வந்த ஸ்ரீ மகாதேவ தேஸாய்க்கு நேரே டில்லிக்குப் போய்ச் சுவாமி சிரத்தானந்தரிடம் எல்லா விஷயங்களையும் தெரிவிக்கும்படிகட்டளையிட்டார். சிறிது நேரம் காந்திஜியும் போலீஸ் அதிகாரிகளும் பால்வால் ஸ்டேஷன் பிளாட்பாரத்தில் காத்திருந்தார்கள். டில்லியிலிருந்து ஒரு வண்டி வந்ததும் அதில் ஏற்றி அழைத்துப் போனார்கள். மறுநாள் உச்சிப் பொழுதில் மாதோபூர் என்னும் ஸ்டேஷனில் மீண்டும் இறக்கினார்கள். அங்கே லாகூரிலிருந்து வந்த மிஸ்டர் பௌரிங் என்னும் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாத்மாவைத் தம் வசப்படுத்திக் கொண்டார். மெயில் வண்டியில் முதல் வகுப்பில் அவரும் மிஸ்டர் பௌரிங்கும் ஏறினார்கள். மிஸ்டர் பௌரிங் மகாத்மாவுக்கு ஹிதோபதேசம் செய்தார். “பஞ்சாப் லெப்டினண்ட் கவர்னர் ஸர் மைக்கேல் ஓட்வயருக்கு உங்கள் பேரில் விரோதபாவம் ஒன்றும் இல்லை. பஞ்சாபில் ஏற்கனவே அமைதிக்குப் பங்கம் ஏற்பட்டிருக்கிறது. நீங்கள் வந்தால் எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றியதுபோல் ஆகிவிடும் என்று பயப்படுகிறார். அவ்வளவுதான். நீங்களே அமைதியாகப் பம்பாய்க்குத் திரும்பிப் போய்விடுவதாக ஒப்புக் கொண்டு விடுங்கள். நாங்கள் நடவடிக்கை ஒன்றும் எடுக்க அவசியம் இல்லாமற் போய்விடும்!” என்று பௌரிங் சொன்னார். அதற்கு மகாத்மா இணங்கவில்லை. “நானாகப் பம்பாய்க்குத் திரும்பிப் போகும் உத்தேசம் இல்லை. உங்கள் இஷ்டம்போல் செய்யலாம்!” என்றார் மகாத்மா. சூரத் ஸ்டே ஷன் வரையில் மிஸ்டர் பௌரிங் மகாத்மாவோடு வந்து அங்கே இன்னொரு போலீஸ் அதிகாரியிடம் ஒப்புவித்துவிட்டுப் போனார். இமாலயத்தவறு காந்திஜியும் போலீஸ் அதிகாரியும் ஏறியிருந்த ரயில் பம்பாயை நெருங்கியதும் போலீஸ் அதிகாரி, “உங்களை இப்போது விடுதலை செய்துவிடப் போகிறேன். ஆனால் மெரீன் லைன் ஸ்டே ஷனில் நீங்கள் இறங்கிவிட்டால் நலம். கொலாபா ஸ்டே ஷனில் பெரும் ஜனக்கூட்டம் சேர்ந்திருக்கிறதாம். உங்களைப் பார்த்தால் ஜனங்கள் அதிக ஆரவாரம் செய்யக் கூடும். அமைதிக்குப் பங்கம் ஏற்படலாம். உங்களுக்கு அதில் இஷ்டம் இல்லையே?” என்றார். மகாத்மாவுக்கோ ஆரவாரமும் பிடிப்பதில்லை; அமைதிக்குப் பங்கம் லவலேசமும் பிடிப்பதில்லை. ஆகையால் அவர், “சரி மெரீன் லைன் ஸ்டேஷனில் இறங்கி விடுகிறேன்” என்றார். போலீஸ் அதிகாரி மகாத்மாவுக்கு வந்தனம் அளித்தார். மகாத்மா மெரீன் லைன் ஸ்டே ஷனில் இறங்கினார். ஒரு நண்பரின் வண்டி அந்தப் பக்கமாகப் போய்க்கொண்டிருந்தது. அதில் ஏறிக்கொண்டு ஸ்ரீ ரேவா சங்கர் ஜாவேரியின் வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தார். அதே சமயத்தில் ஸ்ரீ உமார் சோபானியும் ஸ்ரீமதி அநசூயா பென்னும் அங்கு வந்து சேர்ந்தார்கள். “உங்களை டில்லிக்கருகில் கைது செய்து பம்பாய்க்குக் கொண்டு வரும் செய்தி பம்பாய் வாசிகளுக்கெல்லாம் தெரிந்துவிட்டது. பைதோனிக்கு அருகில் ஏராளமான ஜனக்கூட்டம் கூடியிருக்கிறது. ஜனங்களின் பரபரப்பு நிமிஷத்துக்கு நிமிஷம் அதிகமாகிக் கொண்டு வருகிறது. அவர்கள் கட்டுமீறிப் போனால் என்ன நடக்குமோ தெரியாது. அவர்களை எங்களால் சமாதானப்படுத்த முடியவில்லை. தங்களையே நேரில் பார்த்தால்தான் அவர்கள் அடங்குவார்கள். தாங்கள் உடனே புறப்பட்டு வரவேண்டும்!” என்று அந்த நண்பர்கள் சொன்னார்கள். பிறகு நடந்ததைப் பற்றிக் காந்தி மகாத்மா எழுதியிருப்பதாவது: “மறுபடியும் வண்டியில் ஏறிச் சென்றேன். பைதோனிக்கருகில் பெருங்கூட்டம் சேர்ந்திருப்பதைக் கண்டேன். என்னைப் பார்த்ததும் ஜனங்கள் மகிழ்ச்சிப் பெருக்கினால் பைத்தியங் கொண்டவர்களானார்கள். அவர்கள் என்னைப் பின்தொடர்ந்து ஊர்வலம் போல வரத் தொடங்கினார்கள். ‘வந்தேமாதரம்’ ‘அல்லாஹோ அக்பர்’ என்ற கோஷங்கள் ஆகாயத்தை அளாவின. மேலிருந்து கற்கள் சரமாரியாகப் பொழிந்து கொண்டிருந்தன. அமைதியா யிருக்கும்படி கூட்டத்தை வேண்டிக் கொண்டேன். ஆனால் அந்தக் கல்மாரியிலிருந்து தப்ப முடியாதென்றே தோன்றிற்று. ஊர்வலம் அப்துர் ரஹ்மான் வீதியைத் தாண்டி, கிராபோர்டு மார்க்கெட் பக்கம் போகத் திரும்பியபோது, திடீரென்று குதிரைப்போலீஸ் படையொன்று எதிர்ப்பட்டது. ஊர்வலம் மேலே கோட்டைப் பத்தம் போகாமல் தடுப்பதற்காகக் குதிரைப் போலீஸார் வந்திருந்தனர். ஜனக்கூட்டமோ மிக நெருக்கமாயிருந்தது. ஆகவே போலீஸ் படையைப் பிளந்துகொண்டு கூட்டம் மேலே செல்லத் தொடங்கிவிட்டது. அப் பிரம்மாமாண்டமான கூட்டத்தில் என்னுடைய குரல் கேட்பதே இயலாத காரியம். இத்தகைய நிலைமையில், குதிரைப் படைக்குத் தலைமை வகித்த உத்தியோகஸ்தர், கூட்டத்தைக் கலைக்கும்படி தம்முடைய வீரர்களுக்கு உத்தரவிட்டார்.அவ்வளவு தான்! குதிரை வீரர்கள் தங்களுடைய ஈட்டிகளை வீசிக்கொண்டு கூட்டத்தில் புகுந்தார்கள். ஒரு நிமிஷம் நானும் காயமடைவேன் என்று தோன்றியது. ஆனால் ஈட்டிகள் எங்கள் மோட்டார் வண்டியை உராய்ந்ததுடன் நாங்கள் தப்பினோம். அந்தக் குதிரை வீரர்கள் அதிவேகமாக எங்களைத் தாண்டிச் சென்றார்கள். பொதுக்கூட்டம் சின்னா பின்னமாயிற்று. ஜனங்கள் ஒரே குழப்பத்திற் குள்ளாயினர். பின்னர் ஓடத்தொடங்கினார்கள். சிலர் குதிரைகளின் காலடியினால் மிதிபட்டார்கள். வேறு சிலர் உடம்பெல்லாம் காய மடைந்தார்கள். இன்னும் சிலர் கீழே தள்ளி நசுக்கப்பட்டார்கள். எள் விழுவதற்கும் இடமில்லாமல் நெருங்கி அப்பெருங்கூட்டத்தில் குதிரைகள் போவதற்கு இடமே கிடையாது. ஜனங்கள் கலைந்து போவதற்கு வழியும் இல்லை. ஆதலின் குதிரை வீரர்கள் குருட்டுத்தனமாகக் கூட்டத்திற்குள் புகுந்து இடித்து மிதித்துக் கொண்டு சென்றார்கள். அவர்கள் செய்தது என்னவென்று அவர்களுக்கே தெரியவில்லை யென்று தோன்றியது. மொத்தத்தில், அது ஒரு பயங்கரக் காட்சியா யிருந்தது. இந்தச் சம்பவம் மகாத்மாவின் மனதில் பெரும் துயரத்தை உண்டாக்கியது. அதிகாரிகளிடம் தம் கண்டனத்தை தெரியப்படுத்த விரும்பினார். மோட்டார் வண்டியை நேரே பம்பாய்ப் போலீஸ் கமிஷனரின் காரியாலையத்துக்கு விடச் சொன்னார். அக் காரியாலயத்தில் போலீஸ் ஆர்ப்பாட்டம் பலமாயிருந்தது. ஆயினும் மகாத்மாவை உள்ளே போக விட்டார்கள். கமிஷ்னர் துரையிடமும் அழைத்துப் போனார்கள். கமிஷ்னர் மிஸ்டர் கிரிப்பித் என்பவருக்கு அருகில் பஞ்சாப்பிலிருந்து வந்த மிஸ்டர் பெளரிங் அமர்ந்திருப்பதை காந்திஜி கண்டார். காந்திமகான் பைதோனியில் நடந்த சம்பவங்களை எடுத்துச் சொல்லி, “ஜனங்களின் மீது குதிரைப் படையை ஏவியது அனாவசியம்; அநியாயம்!” என்று தம்முடைய கருத்தைத் தெரிவித்தார். “அதைப் பற்றித் தீர்மானிக்க வேண்டியது பொறுப்பு எங்களுடையது. ஜனங்களுக்கு நீங்கள் செய்யும் போதனையினால் என்ன நேரும் என்பது உங்களுக்கு தெரியாது. உங்களுடைய நோக்கம் என்னவோ நல்லதுதான். அனால் அதை ஜனங்கள் அறிந்து கொள்ள மாட்டார்கள். விரைவில் கட்டுகடங்காமல் போய்விடுவார்கள். பிறகு பெரும் விபரீதங்கள் நிகழும். ஆகையால் ஆரம்பத்திலேயே கண்டிப்பான நடவடிக்கை எடுத்துக்கொள்ளவேண்டியது அவசியம்” என்றார் கமிஷ்னர் கிரிப்பித் துரை. காந்திஜி அதை ஒப்புக் கொள்ளாமல் மறுத்துப் பேசினார். “ஜனங்கள் மீது வீண் பழி சொல்கிறீர்கள். ஜனங்கள் இயற்கையிலேயே அமைதியை விரும்புகிறவர்கள். போலீஸார் தலையிடாதிருந்தால் ஒரு விபரீதமும் நேராது! அதற்கு நான் பொறுப்பு!” என்று சொன்னார். “ஜனங்கள் உங்களுடைய அஹிம்ஸா தர்ம போதனையை ஏற்றுக் கொள்ளவில்லை யென்று நிச்சயமாகத் தெரிந்தால் என்ன செய்வீர்கள்?” என்று கிரிப்பித் துரை கேட்டார். “உடனே சட்ட மறுப்பு இயக்கத்தை நிறுத்தி விடுவேன்!’ என்றார் மகாத்மா. “அப்படியானால் கேளுங்கள். அமிருத சரஸிலும் ஆமதாபத்திலும் இந்த நிமிஷத்தில் ஜனங்கள் கட்டுமீறிப் போய்ப் பயங்கரமான கலவரங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. எல்லா விவரங்களும் எனக்கே இன்னும் வந்து சேரவில்லை. சில இடங்களில் தந்திக் கம்பங்கள் அறுக்கப் பட்டிருக்கின்றன. இந்த விபத்துக் கெல்லாம் நீங்கள்தான் பொறுப்பாளி என்று ஏன் சொல்லக்கூடாது?” என்றார் கமிஷனர் துரை. “நீங்கள் சொல்வது உண்மை என்று நிச்சயமானால் நான் பொறுப்பை ஏற்றுக்கொள்ளத் தயங்கமாட்டேன். அமிருதசரஸைப் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது. நான் அங்கே போனதேயில்லை. என்னை அங்கே போகவொட்டாமல் பஞ்சாப் சர்க்கார் தடுத்திராவிட்டால் அவ்விடத்தில் அமைதியை நிலைநாட்டுவதற்கு உதவி செய்திருப்பேன். ஆனால், ஆமதாபாத் விஷயம் வேறு. அது நான் வசித்த ஊர். அங்கே ஜனங்கள் பலாத்காரத்தில் இறங்கியிருந்தால் அதைக் காட்டிலும் எனக்கு வருத்தமளிப்பது வேறொன்றுமிராது!” என்றார் காந்திஜி. இவ்வாறு போலீஸ் கமிஷனருக்கும் காந்தி மகானுக்கும் நெடுநேரம் வாதம் நடந்தது. கடைசியாக மகாத்மா அன்று மாலையில் சௌபாத்தி கடற்கரையில் பொதுக் கூட்டம் போட்டு ஜனங்களுக்கு அஹிம்சையின் அவசியத்தைப் போதிக்கப் போவதாகச் சொன்னார். கமிஷனரும் அதற்கு இணங்கினார். அவ்வாறே செளபாத்தி கடற்கரையில் அன்று மாலை பொதுக் கூட்டம் நடந்தது. “சத்தியாக்கிரஹ இயக்கத்தின் அடிப்படை சத்தியமும் அஹிம்சையுந்தான். ஜனங்கள் மனோவாக்குக் காயங்களினால் அஹிம்சையைக் கடைப்பிடித்தாலன்றிப் பொது ஜன சத்தியாக்கிரஹ இயக்கத்தை என்னால் நடத்த முடியாது” என்று மகாத்மா வற்புறுத்தினார். அன்றிரவு ஆமதாபாத்தில் நடந்த பயங்கர நிகழ்ச்சிகளைப் பற்றிச் செய்தி வந்துவிட்டது. ஸ்ரீமதி அனுசுயாபென் அப்போது பம்பாயில் இருந்தார். அவர் ஆமதாபாத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் அல்லவா? காந்திஜியோடு ஸ்ரீமதி அனுசுயா பென்னையும் சர்க்கார் கைது செய்துவிட்டதாக ஆமதாபாத்தில் வதந்தி பரவியது. இதனால் தொழிலாளர் ஆவேச வெறிகொண்டு பலாத்காரச் செயல்களில் இறங்கி விட்டார்கள். ஒரு போலீஸ் சார்ஜண்ட் ஜனங்களால் அடித்துக் கொல்லப்பட்டார். இந்தச் செய்திகளை கேள்விபட்டதும் மகாத்மா ஆமதாபாத்துக்குப் புறப்பட்டார். வழியெல்லாம் துயரம் தரும் செய்திகளே கிடைத்துக் கொண்டிருந்தன. நதியாத் ரயில்வே ஸ்டே ஷனுக் கருகில் ரயில் தண்டவாளங்களைப் பெயர்க்க ஜனங்கள் முயன்றதாகவும் வீரம்காம் பட்டிணத்தில் ஓர் அரசாங்க உத்தியோகிஸ்தர் கொல்லப்பட்டதாகவும் ஆமதாபாத்தில் ராணுவச் சட்டம் அமலுக்கு வந்திருப்பதாகவும் தெரிய வந்தன. எல்லா இடங்களிலும் இப்பொழுது உத்தியோகிஸ்தர்கள் பழிக்கு பழி வாங்கி வருவதாகவும் அதனால் ஜனங்கள் பயப்பிராந்தி கொண்டிருப்பதாகவும் வழியில் காந்திஜி கேள்விப்பட்டார். இத்தகைய செய்திகளினால் ஏற்பட்ட மனக் கலக்கத்துடன் மகாத்மா ஆமதாபாத் ரயில் நிலையத்தில் இறங்கினார். அங்கே அவரை வரவேற்பதற்கு ஒரு போலீஸ் உத்தியோகிஸ்தர் காத்துக் கொண்டிருந்தார். அவர் மகாத்மாவை ஆமதாபாத் கமிஷனர் மிஸ்டர் பிராட் என்பவரிடம் அழைத்துப் போனார். மிஸ்டர் பிராட் கோபத்தினால் துடி துடித்துக் கொண்டிருந்தார். ஆமதாபாத்தில் நடந்த கலவரங்களுக்கெல்லாம் காந்திஜியின்மேல் பொறுப்பைச் சுமத்தினார். மகாத்மா சாந்தமாக மறுமொழி சொன்னார். கலவரங்கள் நடந்துவிட்டதற்காகக் தம் வருத்தத்தைத் தெரிவித்து விட்டு அமைதியை நிலைநாட்டும் முயற்சிகளில் தாம் ஒத்துழைப்பதாக வாக்களித்தார். இராணுவச் சட்டம் அமுல் அனாவசியம் என்று தம்முடைய கருத்தைத் தெரிவித்து, சபர்மதி நதிக்கரையில் ஒரு பொதுக் கூட்டம் நடத்த அனுமதி கேட்டார். அந்த யோசனை கமிஷனருக்குப் பிடித்திருந்தது. பொதுக் கூட்டம் நடத்த அனுமதித்தார். அவ்வாறே ஏப்ரல் மாதம் 13-ஆம் தேதி பொதுக் கூட்டம் நடந்தது. கூடியிருந்த ஜனங்களுக்கு மகாத்மா அவர்களுடைய தவறை உணர்த்த முயன்றார். பலாத்காரத்தின் தீமைகளையும் அஹிம்சையின் உயர்வையும் எடுத்து உரைத்தார். ஜனங்கள் அஹிம்சா தர்மத்தை உறுதியாகக் கடைப்பிடிக்காவிட்டால் தாம் சத்தியாக்கிரஹ இயக்கத்தை நடத்த முடியாது என்றும் எச்சரிக்கை செய்தார். கடைசியாக, மகாத்மா கூறியதாவது:- “உங்களிடையே நான் அதிக காலம் வாழ்ந்திருக்கிறேன். உங்களுக்கு என்னால் இயன்ற ஊழியம் செய்திருக்கிறேன். ஆயினும் நீங்கள் என்னுடைய அஹிம்சா தர்ம போதனையை அறிந்து கொள்ளாமல் பலாத்காரச் செயல்களில் இறங்கியது என் மனதைப் புண்படுத்தி விட்டது. உங்களுடைய குற்றத்தில் எனக்கும் பங்கு உண்டு என்று கருதுகிறேன். அதற்குப் பிராயச்சித்தமாக மூன்று நாள் உண்ணாவிரதம் இருப்பது என்று தீர்மானித்து விட்டேன். என்னிடம் உங்களுக்கு அன்பு இருந்தால் நீங்களும் ஒரு நாள் உண்ணாவிரதம் அனுசரியுங்கள். ஆனால் அதுமட்டும் போதாது. பலாத்காரக் குற்றம் செய்தவர்கள் எல்லாம் தாங்களாகவே முன்வந்து தங்களுடைய குற்றத்தை ஒப்புக்கொள்ள வேண்டும்!” இந்தப் பொதுக் கூட்டத்தில் காந்தி மகாத்மா பேசியதன் பலனாக நல்ல பலன் ஏற்பட்டது. மறுநாள் இராணுவச் சட்ட அமுல் நீக்கப்பட்டது. ஆனால் மகாத்மா கூறியபடி பலாத்காரக் குற்றம் செய்தவர்கள் முன்வந்து தங்கள் குற்றத்தை ஒப்புக் கொள்ளவில்லை. சர்க்கார் அதிகாரிகளும், ஏதோ திடீரென்று ஏற்பட்ட வெறியினால் குற்றம் செய்த ஜனங்களை மன்னித்து விடுதலை செய்ய முன் வரவில்லை. இதனால் ஏற்பட்ட மனச் சோர்வுடனே மகாத்மா கெயிரா ஜில்லாவின் முக்கிய பட்டணமான நதியாத் நகருக்குச் சென்றார். அங்கே அவர் அறிந்த செய்திகள் அவருடைய துயரத்தை அதிகமாக்கின. கெயிரா வரிகொடா இயக்கத்தின் போது மகாத்மா அந்த ஜில்லாவில் தங்கிப் பிரயாணம் செய்ததுண்டு. ஆயினும் அந்த ஜில்லா ஜனங்கள் கூடக் கட்டுமீறிப் பலவித பலாத்காரச் செயல்களில் இறங்கினார்கள் என்பது மகாத்மாவின் உள்ளத்தைப் பெரிதும் புண்படுத்தி விட்டது. பொது ஜனங்கள் அஹிம்சா தர்மத்தை நன்குணர்ந்து தகுதி பெறுவதற்கு முன்னால் சட்டமறுப்பு இயக்கத்தைத் தாம் தொடங்கியது பெருந் தவறு என்று மகாத்மாவுக்குத் தோன்றியது. சத்திய சந்தராகிய மகாத்மா தாம் செய்தது தவறு என்று அறிந்ததால், அதைப் பகிரங்கமாக ஒப்புக்கொள்வதற்கு என்றும் தயங்கியதில்லை. அன்று மாலையில் நதியாத் நகரில் நடந்த பொதுக் கூட்டத்தில் மகாத்மா தம் மனவருத்தத்தை வெளியிட்டார். “நான் ‘இமாலயத் தவறு’ செய்து விட்டேன்! ஜனங்கள் தகுதியாவதற்கு முன்னால் சத்தியாக்கிரஹம் ஆரம்பித்து விட்டேன்! இதற்காக மிகவும் வருந்துகிறேன்” என்று பகிரங்கமாகக் கூறினார். அதோடு சட்ட மறுப்பு இயக்கத்தை நிறுத்தி வைக்கத் தீர்மானித்திருப்பதாகவும் தெரிவித்தார். இந்த நதியாத் கூட்டத்தில் மகாத்மா உபயோகப்படுத்திய ‘இமாலயத் தவறு’ என்னும் சொற்றொடர் பிறகு வெகு காலம் அடிபட்டுக் கொண்டிருந்தது. காந்திஜி அவ்விதம் பட்ட வர்த்தனமாகச் சொல்லி விட்டதற்காக நண்பர்கள் பலர் வருத்தப்பட்டார்கள். மகாத்மாவின் எதிரிகளோ அதை அடிக்கடி குறிப்பிட்டு இடித்துக் காட்டி வந்தார்கள். “தேசம் முழுவதிலும் அமைதி நிலவினால் தான் இயக்கம் நடத்த முடியும் என்றால், ஒரு நாளும் அது சாத்தியமாகப் போவதில்லை” என்று நண்பர்கள் சொல்லி வருத்தப்பட்டார்கள்; மகாத்மாவிடம் கோபமும் கொண்டார்கள். ஆயினும் இதனாலெல்லாம் காந்திஜியின் உறுதி எள்ளளவும் மாறவில்லை. அஹிம்சா தர்ம நிபந்தனையை அவர் கைவிடவும் இல்லை; சத்தியாக்கிரஹ ஆயுதத்தில் நம்பிக்கை இழந்துவிடவும் இல்லை. பொது ஜனங்களைச் சத்தியாக்கிரஹ இயக்கத்துக்குத் தகுதி செய்வதற்காகத் தக்க முறையில் தீவிரமான பிரசாரம் செய்யவேண்டும் என்னும் நோக்கத்துடன் மீண்டும் பம்பாய்க்குச் சென்றார். பஞ்சாப் படுகொலை ஒவ்வொரு வருஷமும் ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி முதல் 13-ஆம் தேதி வரையில் தேசீய வாரம் என்பதாக இந்தியா தேசமெங்கும் கொண்டாடுகிறோம். இதற்குக் காரணம் 1919-ஆம் வருஷத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி முதல் 13-ஆம் தேதி வரையில் இந்த நாட்டில் நடந்த மிக முக்கியமான சம்பவங்கள் தான். அந்த வாரத்தில் காந்தி மகாத்மா இந்தியா சுதந்திரம் அடைவதற்கு ஒரு புதிய வழியைக் காட்டினார். இந்திய மக்கள் நீண்ட கால உறக்கத்திலிருந்து விழித்து எழுந்தனர். ஆத்ம சக்தியாகிய ஆயுதத்தின் பெருமையை உணர்ந்தனர். அதே வாரத்திலேதான் இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியின் அசுரத்தன்மை அதன் உச்ச நிலைமையை அடைந்தது. ஜாலியன்வாலாபாக் படுகொலையும் மற்றும் பஞ்சாபில் ஆரம்பமான இராணுவச் சட்டக் கொடுமைகளும் பிரிட்டிஷ் அதிகார வர்க்க ஆட்சிக்கு என்றும் மாறாத அபகீர்த்தியை உண்டு பண்ணின. அந்தக் கொடுமைகளிலிருந்தே இந்தியாவின் விடுதலை இயக்கம் முன்னெப்போதுமில்லாத பலம்பெற்று வளர்ந்தது. அதற்குப்பிறகு பலவருஷகாலம் தேசபக்தர்கள் பதினாயிரக் கணக்கான பொதுக்கூட்டங்களில் “பஞ்சாப் படுகொலை” யைப்பற்றி ஆவேசமாகப் பேசினார்கள். மக்கள் கொதித்து எழுந்து “பிரிட்டிஷ் ஆட்சியை ஒழித்தே தீருவோம்” என்று உறுதி கொண்டார்கள். காந்தி மகாத்மா அடுத்த ஆண்டில் தொடங்கிய ஒத்துழையாமை என்னும் மாபெரும் இயக்கம் பஞ்சாப் கொடுமைக்குப் பரிகாரம் கோருவதை முக்கிய காரணமாகக்கொண்டு எழுந்தது. அந்த இயக்கம் நாடெங்கும் பரவி நாளுக்கு நாள் வலுப்பெற்று வளர்ந்து 1921-ஆம் வருஷக் கடைசியில் வைஸ்ராய் லார்ட் ரெடிங், “நான் செய்வதறியாமல் திகைக்கிறேன்; திணறுகிறேன்” என்று பகிரங்கமாக ஒப்புக்கொள்ளும்படி செய்தது. இவ்வளவு முக்கியமான விளைவுகளுக்கெல்லாம் மூல காரணமாயிருந்த பஞ்சாப் நிகழ்ச்சிகளைப்பற்றி இந்த அத்தியாயத்தில் தெரிந்து கொள்வோம். பாஞ்சாலதேசம் சீக்கியர்களுடைய தாயகம். பொதுவாக வீரத்துக்குப் பெயர் போனது. 1914 முதல் 1918 வரையில் நடந்த முதலாவது உலக மகா யுத்தத்தில் பஞ்சாப்பியர் அடங்கிய பட்டாளங்கள் பல பிரிட்டனுக்கு உதவியாகச் சென்றிருந்தன. பிரிட்டிஷ் கட்சியின் வெற்றிக்குப் பஞ்சாப் பட்டாளங்கள் செய்த உதவியை ஆங்கில இராஜ தந்திரிகள் பெரிதும் பாராட்டினார்கள். அந்தக் காலத்தில் பிரிட்டிஷார் இந்தியாவில் உள்ள மக்களை இரண்டு விதமாகப் பிரித்துக் குறிப்பிடுவது வழக்கம். போர்க்குணம் படைத்த சாதியார் என்றும் போர்க்குணம் இல்லாத சாதியார் என்றும் பிரித்தார்கள். பஞ்சாப்பிலுள்ளவர்கள் போர்க்குணம் படைத்தவர்கள். ஆகையால் இந்திய சைன்யத்துக்குப் பஞ்சாப்பியிலிருந்து அதிகமாக ஆள் திரட்டுவது வழக்கம். இதே காரணத்தினால் பஞ்சாப் மாகாணத்தைத் தேசீயக் காற்றுப் படாமல் காப்பாற்றுவதில் பிரிட்டிஷ் அதிகாரவர்க்கம் அதிகமான கவலை கொண்டிருந்தது.* *இம்மாதிரி இந்தியர்களைப் போர்க்குணம் உள்ளவர்கள், போர்க்குண மில்லாதவர்கள் என்று பிரிப்பது எவ்வளவு பிசகானது என்பது இரண்டாவது உலக மகா யத்தத்தின் போது நன்கு வெளியாயிற்று. உலகத்துப் போர்முனைகளிலும் சமீபத்தில் காஷ்மீரிலும் சென்னை வீரர்களின் போர்த் திறமை சுடர் விட்டுப் பிரகாசித்தது. அப்போது பஞ்சாப் மாகாணம் ஸர் மைக்கேலே ஓட்வியர் என்னும் லெப்டினெண்ட் கவர்னரின் ஆட்சியில் இருந்தது. பிரிட்டிஷ் அதிகார வர்க்கத்தின் பொறுக்கி எடுத்த ‘இரும்பு மனிதர்’களுக்குள்ளே ஸர் மைக்கேலே ஓட்வியர் ஒருவர்.’இந்திய சுதந்திரம்’ என்ற பேச்சுக் காதில் விழுந்தால் அவருடைய கண்கள் சிவக்கும். ‘வந்தேமாதரம்’ என்ற மந்திரம் காதில் விழுந்தால் அவருடைய இரத்தம் கொதிக்கத் தொடங்கும். அந்தக் காலத்து இந்திய தேசீயத் தலைவர்களுடைய பெயர்களைக் கேட்டால் அவருடைய நரம்புகள் புடைத்துக் கொள்ளும். இந்தியாவுக்குச் சுயராஜ்யம் வேண்டும் என்று சொல்லும் தேசீயத் தலைவர்களையெல்லாம் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் பரம விரோதிகள் என்று அவர் கருதினார். பொதுவாக இந்திய அரசியல் வாதிகளையே அவருக்குப் பிடிப்பதில்லை. மிதவாதிகள், அமிதவாதிகள், காங்கிரஸ் வாதிகள், வெடிகுண்டு வாதிகள் -யாராயிருந்தாலும் இவருக்கு ஒன்றுதான். இத்தகைய அபூர்வ மனிதரின் ஆட்சியில் அப்போது பஞ்சாப் மாகாணம் இருந்தது. இவருக்குக் கீழே இருந்த பிரிட்டிஷ் அதிகார வர்க்கத்தினரும் அதே மனோபாவம் கொண்டவர்களாயிருந்தார்கள். அந்த 1919-ஆம் வருஷம் டிசம்பர் மாதத்தில் அமிருதஸரஸில் காங்கிரஸ் மகாசபையை நடத்துவது என்று தீர்மானமாகி யிருந்தது. இந்தச் செய்தி ஸர் மைக்கேல் ஓட்வியரின் ஆங்காரம் சுடர் விடுவதற்குக் காரணமாயிற்று. இத்தகைய நிலைமையிலேதான் பஞ்சாப்பில் பல நகரங்களில் மார்ச்சு மாதம் 30-ஆம் தேதி யன்றும் ஏப்ரல் 6-ஆம் தேதி யன்றும் மகாத்மாவின் கோரிக்கைப்படி ஹர்த்தால்கள் நடந்தன. இந்த ஹர்த்தால்களின்போது பொது ஜனங்களுக்கும் சர்க்கார் அதிகாரிகளுக்கும் தகராறுகள் ஏற்பட்டு விட்டன. போலீஸார் கலையச் சொன்னதும் ஜனங்கள் கலையவில்லை. சில இடங்களில் கல்லெறிதல்கள் நடந்தன; பதிலுக்குத் துப்பாக்கிப் பிரயோகங்கள் நடந்தன. ஆயினும் ஜனங்களுடைய வேகமும் உற்சாகமும் குன்றவில்லை. அதிகமாகி வருவதாகக் காணப் பட்டது. இதையெல்லாம் ஸர் மைக்கேல் ஓட்வியர் பார்த்தார். நிமிஷத்துக்கு நிமிஷம் அவருடைய ஆத்திரம் பொங்கிற்று. “பஞ்சாப்பில் பிரிட்டிஷ் அதிகாரத்தை மக்கள் அலட்சியம் செய்வதா? அதை நாம் பார்த்துக் கொண்டிருப்பதா?” என்று அவருடைய உள்ளம் கொதித்தது. “இந்த ஜனங்களுக்குச் சரியான பாடங் கற்பிக்காவிட்டால் நான் ஸர் மைக்கேல் ஓட்வியர் அல்ல; இந்தப் பொதுஜன உத்வேகத்தை அடக்கா விட்டால் நான் இரும்பு வர்க்கத்தைச் சேர்ந்த லெப்டினெண்ட் கவர்னர் அல்ல” என்று உறுதி கொண்டார். உடனே தம் கீழிருந்த அதிகார வர்க்கத்தைச் சேர்ந்த உத்தியோகஸ்தர்களுக்கெல்லாம் “உங்களுடைய கைவரிசையைக் காட்டுங்கள்!” என்று உத்தரவு அனுப்பி வைத்தார். அதே சமயத்தில்தான் அமிருதஸரஸிலிருந்து மகாத்மா காந்திக்கு அழைப்புப் போயிருந்தது. காந்திஜியும் வருவதாகச் செய்தி அனுப்பியிருந்தார். இதையறிந்த ஸர் மைக்கேல் ஓட்வியர் “காந்திஜி பஞ்சாப்புக்குள் நுழையக்கூடாது” என்று உத்தரவு போட்டார். அந்த உத்தரவை ரயிலிலேயே காந்திஜியிடம் சேர்ப்பித்து அவரை வழிமறித்துத் திருப்பி அழைத்துச் செல்ல போலீஸ் உத்தியோகஸ்தரையும் அனுப்பினார். ரயில் வண்டியிலேயே காந்திஜிக்குத் தடை உத்தரவைக் கொடுத்து அவரை டில்லி ரயிலிலிருந்து இறங்கிப் பம்பாய் ரயிலில் ஏற்றித் திருப்பி அழைத்துக் கொண்டு போனார்கள் அல்லவா? அதே தினத்தில் அதாவது ஏப்ரல் 10-ஆம் தேதி அமிருதஸரஸில் ஒரு முக்கியமான சம்பவம் நேர்ந்தது. அமிருதஸரஸில் அப்போது ஜனத் தலைவர்களாயிருந்தவர்கள் இரண்டு பேர். ஒருவர் டாக்டர் சத்தியபால் என்னும் பிரபல வைத்தியர். இன்னொருவர் டாக்டர் ஸைபுடீன் கிச்லூ என்னும் பிரபல பாரிஸ்டர். இந்த இரு தலைவர்களும் அச்சமயத்தில் அமிருதஸரஸின் ‘முடிசூடா மன்னர்’ களாக விளங்கினார்கள். ஏப்ரல் 10-ஆம் தேதி காலையில் மேற்கூறிய இரு தலைவர்களையும் அமிருதஸரஸ் ஜில்லா மாஜிஸ்ட்ரேட் தம்முடைய வீட்டுக்கு வந்து போகும்படி சொல்லி அனுப்பினார். நகரத்தில் அமைதி காப்பதன் சம்பந்தமாகக் கலந்து ஆலோசிக்க அழைப்பதாக அவர்கள் நினைத்து உடனே புறப்பட்டுச் சென்றார்கள். அவர்கள் வந்ததும் ஜில்லா மாஜிஸ்ட்ரேர் “உங்களைக் கைது செய்திருக்கிறேன்!” என்றார். மூடிய போலீஸ் வண்டிக்குள் அவர்களை ஏற்றி யாருக்கும் தெரியாத இடத்துக்கு அனுப்பி விட்டார். ஜில்லா மாஜிஸ்ட்ரேட் வீட்டுக்குச் சென்ற தலைவர்கள் திரும்பி வரவில்லை என்ற செய்தி அமிருதஸரஸ் நகரத்தில் அதிவிரைவாகப் பரவிவிட்டது. ஜனங்கள் சிறு சிறு கூட்டமாகச் சேர்ந்து கடைசியில் ஒரு பெருங்கூட்டமானார்கள். “எங்கள் தலைவர்களை என்ன செய்தீர்கள்?” என்று கேட்பதற்காக ஜில்லா மாஜிஸ்ட்ரேட்டின் வீடு நோக்கிச் சென்றார்கள். ஜனங்கள் வசித்த அமிருதஸரஸ் நகரத்துக்கும் உத்தியோகஸ்தர்கள் வசித்த ‘ஸிவில் லைன்ஸ்’ என்னும் பகுதிக்கும் நடுவில் ரயில்பாதை கேட் ஒன்று இருந்தது. அங்கே இராணுவப்படை வீரர்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தார்கள். ஜனங்களை மேலே போகக்கூடாது என்று அவர்கள் தடுத்தார்கள். உடனே கற்கள் பல வந்து விழத்தொடங்கின. பொது ஜனங்களுக்கும் அதிகாரிகளுக்கும் இம்மாதிரி ‘லடாய்’ ஏற்படும் போதெல்லாம் கூட்டத்தில் உள்ளவர்களில் சில உற்சாகிகள் கல்லெறிவதைக் கையாளுவது அந்தநாளில் சாதாரணமாயிருந்தது. ஜனங்களிடம் வேறு ஆயுதம் கிடையாது. காந்தி மகாத்மாவின் அஹிம்சா தர்மத்தைப் பற்றியும் இன்னும் ஜனங்கள் சரியாக அறிந்து கொள்ள வில்லை. ஆகவே யாரேனும் சிலர் கல்லெறிய ஆரம்பித்து விடுவது வழக்கம். அவ்வளவுதான்; வெறும் வாயை மெல்லுகிறவர்களுக்கு அவல் கிடைத்தாற்போல் ஆகிவிடும். போலீஸாரும் இராணுடத்தாரும் கல்லுக்குப் பதில் ஜனங்கள்மீது குண்டு எறிய ஆரம்பித்து விடுவார்கள். அநேக இடங்களில் நடந்த துப்பாக்கிப் பிரயோகங்களுக்குக் ‘கல்லெறி’ ஒரு வியாஜமாகவே இருக்கும் ‘கல்லெறிதல்’ சில இடங்களில் பொய்யாகக் கற்பிக்கப்படுவதும் உண்டு. அதிகாரிகளே ஜனக் கூட்டத்தில் சில கையாள்களை நியமித்துக் கல்லெறியச் செய்வதும் உண்டு. துப்பாக்கிப் பிரயோகத்துக்கு ஏதேனும் காரணம் வேண்டும் அல்லவா? அமிருதஸரஸ் ஜனங்கள்மீது ரயில்வே கேட்டில் நின்ற பட்டாளத்தார் சுட்டதில் இரண்டு பேர் செத்து விழுந்தார்கள். செத்தவர்களின் உடல்களைத் தூக்கிக் கொண்டு அந்தப் பெருங்கூட்டம் நகரத்தை நோக்கித் திரும்பியது. திரும்பிப் போகும்போது வெறி கொண்ட மக்கள் பல அட்டூழியங்களைப் புரிந்தார்கள். ஒரு பாங்கியையும் ரயில்வே கூட்ஸ் கொட்டகையையும் இன்னும் சில சர்க்கார் காரியாலயங்களையும் கொளுத்தினார்கள். அந்த கலாட்டாவில் ஐந்து ஐரோப்பியர்கள் கொல்லப் பட்டார்கள். அன்றைய சாயங்காலமே அமிருதஸரஸ் நகரத்தின் நிர்வாகத்தை ஸிவில் உத்தியோகஸ்தர்கள் இராணுவ அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். ஒரு பிரதேசத்தில் கலகமும் குழப்பமும் அதிகமானால் அந்தப் பிரதேசத்தில் ஸிவில் சட்டங்களையும் சாதாரண ஆட்சி முறையையும் நிறுத்தி வைத்து இராணுவச் சட்ட ஆட்சியை அமுலுக்குக் கொண்டுவருவது வழக்கம். இராணுவச் சட்டம் அமுலில் இருக்கும்போது சாதாரண கோர்ட்டுகளுக்கு அதிகாரம் ஒன்றும் கிடையாது. இராணுவ அதிகாரிகள் இட்டதுதான் சட்டம். இராணுவ அதிகாரிகளின் உத்தரவை மீறினால் உடனே கடுந் தண்டனை. சாதாரண சட்டம் அமுலில் இருக்கையில் ஒருவன் குற்றம் செய்தால் அவனைக் கைது செய்வது, ரிமாண்டில் வைப்பது, ஜாமீனில் விடுவது, வக்கீல் வைத்து கேஸ் நடத்துவது, விசாரணை, தீர்ப்பு, அப்பீல், இப்படியெல்லாம் நியாயம் பெறுவதற்குப் பலமுறைகள் உண்டல்லவா? இராணுவச் சட்ட அமுலின் கீழ் இதெல்லாம் ஒன்றுமில்லை. இராணுவ உத்தரவை மீறுவோர் உடனே தண்டனைக்குள்ளாவார்கள். உத்தரவை மீறும்போதே சுட்டுக் கொல்லப்படலாம். அதில் தவறினால் இராணுவக் கோர்ட்டு களில் உடனுக்குடன் ‘விசாரணை’ நடக்கும். கசையடி, தூக்குத் தண்டனை, ஆயுள் தண்டனை எது வேண்டுமானாலும் கொடுக்கலாம். அப்பீல் கிடையாது. ஏப்ரல் மாதம் 10-ஆம் தேதி அமிருதஸரஸ் ஸிவில் அதிகாரிகள் நிலைமையைத் தங்களால் இனி சமாளிக்க முடியாது என்று சொல்லி இராணுவச் சட்ட அமுலைக் கோரினார்கள். இராணுவச் சட்ட அமுலுக்கு இந்திய சர்க்காரின் அநுமதி தேவையா யிருந்தது. இந்த அநுமதி ஏப்ரல் மாதம் 14-ஆம் தேதிதான் வந்தது. ஆனால் இந்திய சர்க்காரின் அநுமதி வரும் என்று எதிர்பார்த்து ஏப்ரல் மாதம் 10-ஆம் தேதியே அமிருத ஸரஸை இராணுவ அதிகாரிகள் ஒப்புக்கொண்டு விட்டார்கள். இந்தக் காரியத்துக்கு பஞ்சாப் லெப்டினெண்ட் கவர்னர் ஸர் மைக்கேல் ஓட்வியரின் ஆதரவு பரிபூரணமாக இருந்தது. அதிகாரிகளுக்கு வேறு என்ன கவலை? ஏப்ரல் மாதம் 13-ஆம் தேதி தமிழ்நாட்டில் புது வருஷப் பிறப்பு தினம் வருவது வழக்கம் அல்லவா? வட இந்தியாவில் பல மாகாணங்களில் ஏப்ரல் 13-ஆம் தேதி ஹிந்துக்களுக்கு வருஷப் பிறப்பு தினம். அமிருதஸரஸில் அன்றைக்கு ஒரு பெரிய பொதுக் கூட்டம் கூடும் என்று காலையில் விளம்பரம் செய்யப்பட்டது. கூட்டம் நடக்கும் இடம் ஜாலியன் வாலாபாக் என்றும் குறிப்பிடப் பட்டிருந்தது. இந்தியாவின் சுதந்திரப் போராட்ட சரித்திரத்தில் ஜாலியன் வாலாபாக் என்றும் அழியாத பெருமை பெற்றதாகும். ஆகையால் அந்தப் பெயரை நன்றாக ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும். ‘பாக்’ (Bagh) என்னும் ஹிந்தி வார்த்தைக்குத் ‘தோட்டம்’ என்று பொருள். ஆனால் ஜாலியன் வாலாபாக்கில் அப்போது தோட்டமே இல்லை; மரமே கிடையாது. அது வெறும் வெட்ட வெளியான மைதானமாயிருந்தது. அதைச் சுற்றிலும் மூன்று பக்கங்களில் உயரமான மச்சு வீடுகள் இருந்தன. அந்த மச்சு வீடுகளின் பின்புறத்து நெடுஞ் சுவர்கள் மைதானத்தைச் சுற்றிக் கோட்டைச் சுவர்களைப்போல் நின்றன. ஒரே ஒரு பக்கத்தில் மாத்திரம், ஒரு ஆள் உயரமான மதில் சுவர் இருந்தது. மைதானத்துக்குள் ஜனங்கள் வருவதற்கும் திரும்பிப் போவதற்கும் வழி ஒன்றே ஒன்றுதான். அந்த ஒரு வழியும் மிகக் குறுகலானது. ஒரே சமயத்தில் ஏழெட்டுப் பேருக்கு மேல் அதன் வழியாக மைதானத்துக்கு உள்ளே வரவோ வெளியே போகவோ முடியாது. இப்படிப்பட்ட ஜாலியன் வாலாபாக் மைதானத்தில் அன்று பிற்பகலிலிருந்தே ஜனங்கள் வந்து கூட ஆரம்பித்தார்கள். வயதானவர்கள், வாலிபர்கள், ஸ்திரீகள், குழந்தைகள் எல்லோருமாகப் பெருங்கூட்டம் சேர்ந்துவிட்டது. டாக்டர் சத்தியபாலும் டாக்டர் கிச்சுலுவும் என்ன ஆனார்கள் என்று ஜனங்களுக்கு இன்னமும் தெரியவில்லை. காந்திஜியை டில்லிக்கு அப்பால் பால்வால் ஸ்டே ஷனில் இறக்கிக் கைது செய்துகொண்டு போய்விட்டார்கள் என்ற செய்தி வந்திருந்தது. டில்லியில் சுவாமி சிரத்தானந்தர் தலைமை வகித்து நடத்திச் சென்ற ஊர்வலத்தின் பேரில் போலீஸார் ‘துப்பாக்கிப் பிரயோகம் செய்வோம்’ என்று சொன்னபோது சுவாமி சிரத்தானந்தர் தமது மார்பை மூடியிருந்த சட்டையை எடுத்து விட்டுச் “சுடுங்கள்!” என்று சொன்ன செய்தியும் வந்திருந்தது. 10-ஆம் தேதியிலிருந்து அமிருதஸரஸில் நடந்துவந்த இராணுவ அதிகார அமுல் மக்களின் உள்ளத்தில் கொதிப்பை உண்டு பண்ணியிருந்தது. ஆகவே ஜாலியன் வாலாபாக்கில் இருபதினாயிரம் ஜனங்களுக்கு மேல் கூடிவிட்டார்கள். அங்கே கூட்டம் போடுவது சட்ட விரோதம் என்றோ, அதிகாரிகள் கூட்டத்தைத் தடுக்கிறார்கள் என்றோ, அந்த ஜனங்கள் அறிந்திருக்கவில்லை. கூட்டம் அமைதியாகவே ஆரம்பமாயிற்று. சிறிது நேரம் நடந்தது. ஹன்ஸ்ராஜ் என்னும் தொண்டர் பேசிக் கொண்டிருந்தார். திடீரென்று படைகள் வரும் சத்தம் கேட்டது. நூறு இந்தியவீரர்களும் ஐம்பது ஐரோப்பிய சோல்ஜர்களும் அடங்கிய படை மைதானத்துக்குள் பிரவேசித்தது. இந்தப் படைக்கு ஜெனரல் டையர் என்பவர் தலைமை வகித்தார். இவர் கவசம் பூண்ட இயந்திர பீரங்கி ஒன்றும் கொண்டு வந்திருந்தார். ஆனால் குறுகிய நுழை வாசல் வழியாக அதை மைதானத்துக்குள்ளே கொண்டுவர முடியவில்லை. ஆகையால் கவச பீரங்கியை வெளியிலே நிறுத்தி விட்டுத் தம்முடன் வந்த வீரர்களுடன் ஜெனரல் டையர் மைதானத்துக்குள் பிரவேசித்தார். அவர் பிரவேசித்த இடத்துக்குப் பக்கத்திலேயே கொஞ்சம் உயரமான மேடை ஒன்று இருந்தது. அந்த மேடையில் வீரர்களை நிறுத்தினார். இந்திய வீரர்களை முன்னாலும் ஐரோப்பிய வீரர்களைப் பின்னாலும் நிறுத்தினார். “உடனே கலைந்து போங்கள்” என்று ஜனங்களைப் பார்த்து உத்தரவிட்டார். அந்த உத்தரவு போட்டு இரண்டே இரண்டு நிமிஷம் பொறுத்துவிட்டுச் “சுடுங்கள்” என்று வீரர்களுக்கு உத்தரவிட்டார்! இருபதினாயிரம் பேர் அடங்கிய அந்தப் பெருங்கூட்டத்தில் சோல்ஜர்கள் வந்திருக்கிற விஷயம் ஒரு சிலருக்கு மட்டுமே தெரிந்தது. ஜெனரல் டையரின் உத்தரவு யாருக்குமே காதில் விழவில்லை. ஆனால் துப்பாக்கிகள் வெடி தீர்க்கும் சத்தம் ஏக காலத்தில் இருபதினாயிரம் பேரின் காதிலும் விழுந்தது. உடனே ஜனங்கள் எழுந்து ஓட ஆரம்பித்தார்கள். ஆனால் எங்கே ஓடுவது? மைதானத்துக்குள் வரும் குறுகிய பாதை வழியாக அவ்வளவு பேரும் ஓடமுடியாது. குறைந்தது அதற்கு இரண்டு மணி நேரம் வேண்டும். சுற்றிலும் மூன்று பக்கம் நெடுஞ்சுவர்கள் நின்றன. ஒரு பக்கத்தில் மட்டும் தாழ்ந்த மதில் சுவர் நின்றது. அதை நோக்கி ஜனங்கள் ஓடி மதில் மேல் ஏறிக் குதிக்கத் தொடங்கினார்கள். அந்தக் குட்டையான மதில் சுவரை நோக்கியே துப்பாக்கிக் குண்டுகளும் அதிகமாக வந்தன. ஏறிக் குதிக்க முயன்றவர்களில் பலர் குண்டு பட்டுச் செத்து விழுந்தார்கள்! அந்த மதில் சுவர் ஓரமாகப் பிணங்கள் குவிந்தன!! ஜெனரல் டையரின் வீரர்கள் அரை மணி நேரம் சுட்டார்கள். மொத்தம் 1600 குண்டுகள் சுட்டார்கள். கொண்டு வந்திருந்த தோட்டாக்கள் எல்லாம் தீர்ந்து போன பிறகுதான் சுடுவதை நிறுத்தினார்கள்! “ஜனங்களைக் கலைப்பதற்காக மட்டும் நான் சுடவில்லை. ஜனங்களுக்குப் பாடம் கற்பிப்பதற்காகச் சுட்டேன்! எத்தனை பேரைக்கொல்லலாமோ அவ்வளவு பேரையும் கொல்லுவதற்குச் சுட்டேன்! அப்போதுதான் மறுபடியும் ஜனங்கள் என்னுடைய உத்தரவை மீறத் துணிய மாட்டார்கள் என்பதற்காகவே அம்மாதிரி செய்தேன்! இன்னும் அதிக தோட்டாக்கள் கைவசம் இருந்திருந்தால் இன்னும் அதிக நேரம் சுட்டிருப்பேன்!” என்று ஜெனரல் டையர் சொன்னார். ஜெனரல் டையர் அன்று சுட்டதில் மொத்தம் 400 பேர் உயிரை இழந்தார்கள். ஆயிரம் பேருக்கு மேல் காயம் பட்டு விழுந்தார்கள். தோட்டாக்கள் தீர்ந்தவுடனே ஜெனரல் டையர் தம் வீரர்களுடன் அங்கிருந்து புறப்பட்டுப் போய்விட்டார். செத்தவர்களின் உடல்கள் இரவெல்லாம் அந்த மைதானத்திலேயே கிடந்தன. காயம்பட்டு விழுந்தவர்கள் இரவெல்லாம் அங்கேயே முனகிக்கொண்டும் ஓலமிட்டுக் கொண்டும் கிடந்தார்கள். அவர்களில் பலர் “தாகம்!தாகம்!” என்று தவித்தார்கள். ஒரு வாய் தண்ணீர் கொடுப்பதற்கும் அங்கே யாரும் இல்லை. அக்கம்பக்கத்திலிருந்தவர்கள் கதிகலங்கிப்போய் வீட்டுக்குள்ளேயே இருந்துவிட்டார்கள். இந்தமாதிரி ராட்சதச் செயல் நடக்கக்கூடும் என்று அவர்கள் கனவிலும் எதிர்பார்க்கவில்லை. காயம்பட்டவர்களுக்குத் தாகத்துக்குத் தண்ணீர் கொடுப்பதற்கோ அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்துவதற்கோ சிகிச்சை செய்வதற்கோ ஜெனரல் டையர் எந்தவித ஏற்பாடும் செய்யவில்லை. மறுநாள் காலையில் ஜெனரல் டையருக்கு ஒரு தந்தி வந்தது. “சரியான காரியம் செய்தீர். லெப்டினெண்ட் கவர்னர் உம்முடைய செயலை அங்கீகரிக்கிறார்!” என்று அந்தத் தந்தி கூறியது. ஜெனரல் டையருடைய பயங்கர லீலைகள் ஜாலியன் வாலாபாக் படுகொலையுடன் முடியவில்லை. கற்பனைக்கெட்டாத பல கொடுமைகளை அவர் நிகழ்த்தினார். அமிருதஸரஸ் நகரத்துக்குக் குழாயில் ஜலம் வருவதையும் தீபங்களுக்கு மின்சார சக்தி கிடைப்பதையும் நிறுத்திவிட்டார். வீதிகளிலே இரண்டு பேருக்கு மேல் சேர்ந்து நடக்கக்கூடாது என்று உத்தரவுபோட்டார். கடைகளைக் கட்டாயமாகத் திறக்கச்செய்து இராணுவ அதிகாரிகள் சொன்ன விலைக்குச் சாமான்களை விற்கும்படி செய்தார். பைசைக்கிள்களையும் வண்டிகளையும் கட்டாயமாகக் கைப்பற்றினார். தெரு முனைகளில் முக்கோணங்களை நாட்டி, இராணுவ உத்தரவுகளை மீறி நடப்பவர்களை யெல்லாம் சவுக்கினால் அடிக்கும்படி செய்தார். ஜெனரல் டையருடைய உத்தரவுகளுக்குள்ளே யெல்லாம் மிகப் பயங்கரமானது, ‘வயிற்றினால் ஊர்ந்துசெல்லும்’ உத்தரவு (Crawling order). மிஸ் ஷெர்வுட் என்னும் ஐரோப்பிய ஸ்திரீ ஒரு சந்தின் வழியாகப் போய்க்கொண்டிருந்த போது இராணுவச் சட்டக் கொடுமைகளினால் வெறி கொண்டிருந்த சில மக்கள் அவளைத் தாக்கினார்கள். ஆனால் அதே சந்தில் வசித்த நல்ல மனிதர்கள் ஓடிவந்து அந்த ஐரோப்பிய ஸ்திரீயைக் காப்பாற்றி விட்டார்கள். இந்தச் செய்தி ஜெனரல் டையருக்குத் தெரிந்ததும் அவர் உடனே இரணிய கசிபுவாக மாறினார்! அந்தச் சந்தின் முனைக்கு வந்து " இனி இந்தச் சந்துக்குள் போகிறவர்கள் எல்லோரும் வயிறு தரையில் படும்படி ஊர்ந்து போகவேண்டும்" என்று கட்டளையிட்டார். அந்தச் சந்தில் குடியிருந்த ஜனங்கள் அனைவரும் வெளியில் போக வேண்டுமானாலும் மறுபடி திரும்பி வீட்டுக்கு வரவேண்டுமானாலும் வயிற்றினால் ஊர்ந்து செல்ல வேண்டியதாயிற்று! அமிருதஸரஸில் ஜெனரல் டையர் ஏற்படுத்திய இராணுவக் கோர்ட்டார் இராணுவ உத்தரவை மீறியதற்காக 298 பேரை விசாரணை செய்தார்கள். அவர்களில் 51 பேருக்கு மரண தண்டனையும் 49 பேருக்கு ஆயுள்பரியந்தம் தீவாந்தர தண்டனையும் 79 பேருக்கு 7 வருஷ தண்டனையும் கிடைத்தன! அமிருதஸரஸில் ராட்சத ஆட்சி நடந்து கொண்டிருந்த அதே சமயத்தில் பஞ்சாப்பின் இன்னும் பல இடங்களிலும் ஜெனரல் டையரின் அண்ணன்மார்களும் தம்பிமார்களும் அவரவர்களுடைய சக்திக்கு இசைந்தபடி அசுர லீலைகளை நடத்திக் கொண்டிருந்தார்கள். லாகூர் நகரில் கர்னல் ஜான்ஸன் ஆட்சிபுரிந்தார். இரவு எட்டுமணிக்கு மேலே வெளியே கிளம்புகிறவர்கள் சுடப்படுவார்கள் என்று அவர் உத்தரவு போட்டார். இந்த உத்தரவு அடங்கிய விளம்பரங்கள் வீட்டுச் சுவர்களில் ஒட்டப்பட்டன. அந்த விளம்பரங்கள் கிழிக்கப்படாமல் காப்பாற்றுவது வீட்டுக்காரர் பொறுப்பு. இரவெல்லாம் கண் விழித்துக் காக்கவேண்டும். காக்கத் தவறினால் மரணதண்டனை, அல்லது கசையடி, அல்லது சிறைவாசம். லாகூர் கலாசாலைகளில் படித்த மாணாக்கர்கள் அனைவரும் நகருக்கு நாலு மைல் தூரத்திலிருந்த இராணுவத் தலைமைக் காரியாலயத்துக்குத் தினம் நாலு தடவை வந்து ஆஜர் கொடுக்க வேண்டுமென்று உத்தரவிட்டார். அப்போது கடுங் கோடைக்காலம். லாகூரில் உஷ்ணத்தின் டிக்ரி அப்போது 108. இந்த வெயிலில் மாணாக்கர்கள் தினம் பதினைந்து மைல் நடக்க வேண்டியதாயிற்று. பலர் சாலையிலேயே மூர்ச்சையடைந்து விழுந்தார்கள். கேள்விப்பட்ட கர்னல் ஜான்ஸன், “ரொம்ப நல்லது. விழுந்த மாணாக்கர்கள் விஷமம் செய்யாமல் இருப்பார்கள் அல்லவா?” என்றார். ஒரு காலேஜ் வாசல் சுவரில் ஒட்டியிருந்த இந்த உத்தரவு விளம்பரம் கிழிக்கப்பட்டது. இதற்காக அந்தக் கலாசாலை பிரின்ஸ்பால், ஆசிரியர்கள் எல்லாரையும் கைது செய்து வீதி வழியாக நடத்தி அழைத்துச் சென்று கோட்டையில் ஒரு மூலையில் மூன்றுநாள் அடைத்து வைத்திருக்கும்படி உத்தர விட்டார். இவ்வாறே குஜர்ன்வாலாவில் கர்னல் ஒப்ரியனும் ஷேக்புராவில் மிஸ்டர் பாஸ்வொர்த் ஸ்மித்தும் காஸூரில் காப்டன் டவ்டனும் அசுர ஆட்சி நடத்தினார்கள். குஜர்ன்வாலாவில் ஆகாய விமானத்திலிருந்து குண்டு போடும் முறையும் கையாளப்பட்டது. லெப்டினண்ட் டாட்கின்ஸ், மேஜர் கார்ப்பி ஆகியவர்கள் ஆகாய விமானத்திலிருந்து கீழே ஜனக் கூட்டத்தைக் கண்டவுடனே வெடி குண்டு எறிந்தார்கள். அல்லது இயந்திர பீரங்கியினால் சுட்டுக் கலைந்தார்கள். இம்மாதிரி ஒரு கலியாண ஊர்வலத்தின்மீது ஆகாய விமானத்திலிருந்து குண்டுகள் எறியப்பட்டன. கர்னல் ஒப்ரியன் என்பவர் ப்ரிட்டிஷ் அதிகாரிகளை இந்தியர்கள் கண்டவுடனே சலாம் போடவேண்டும் என்று உத்தரவிட்டார். இந்தியர்கள் வண்டியில் ஏறியிருந்தால் உடனே இறங்கிச் சலாம் போடவேண்டும் என்றும், குடை பிடித்திருந்தால் உடனே குடையை இறக்கி மூடவேண்டும் என்றும் கட்டளையிட்டார். இந்த உத்தரவை மீறியவர்களுக் கெல்லாம் கசையடி கொடுக்கப்பட்டது. காப்டன் டவ்டன் என்பவர் காஸூர் பட்டணத்தில் ஒரு முக்கியமான நாற்சந்தியில் ஒரு பெரிய தூக்குமேடை கட்டினார். அத்துடன், நூற்றைம்பது பேர் கொள்ளக்கூடிய ஒரு பெரிய இரும்புக் கூண்டு தயாரித்து ரயில்வே ஸ்டே ஷனுக்குப் பக்கத்தில் நாட்டினார். கலகத்தில் சம்பந்தப்பட்டதாகச் சந்தேகத்துக்கு உள்ளவர்களைக் கொண்டுவந்து அந்தக் கூண்டில் அடைத்து வைத்தார். ரயிலுக்குப் போகிறவர்கள், ரயிலிலிருந்து வருகிறவர்கள் எல்லாரும் கூண்டில் அடைக்கப்பட்டவர்களைப் பார்த்துக்கொண்டு போகுமாறு ஏற்பாடு செய்தார்! பஞ்சாப் முழுவதிலும் பொது வாழ்வில் பிரமுகர்களாயிருந்தவர்கள் அனைவரும் இராணுவச் சட்டத்தின்படி கைது செய்யப்பட்டு கடுந்தண்டனைக்கு உள்ளானார்கள். லாகூரில் ஹரிகிருஷ்ணலால் பிரபல காங்கிரஸ் வாதி. பெரிய செல்வந்தர். அவருக்கு 40 லட்ச ரூபாய் சொத்து இருந்தது. அவரைக் கைது செய்து ஆயுள் பரியந்தம் தீவாந்தர தண்டனை விதித்ததுடன் இவருடைய சொத்து முழுவதையும் பறிமுதல் செய்யவும் உத்தரவு போட்டார்கள். லாகூரில் அப்போது பிரபலமாயிருந்த பண்டிதராம் போஜி தத்தர், பண்டித கே. சந்தானம், ‘டிரிப்யூன்’ பத்திரிகை ஆசிரியர் பாபு காளிநாத் ராய் முதலியவர்களும் அதே கதிக்கு உள்ளாயினர். பஞ்சாபில் இவ்விதம் ராட்சத ராணுவ ஆட்சி நீடித்துக் கொண்டே போயிற்று. ஆனால் பஞ்சாப்புக்கு வெளியில் உள்ளவர்களுக்கு அங்கே நிகழ்ந்த கொடுமைகளைப் பற்றி ஒன்றுமே அப்போது தெரியவில்லை. ஏனெனில் செய்திகள் எல்லாம் தணிக்கை செய்து அனுப்பப்பட்டன. வெளி மாகாணங்களிலிருந்து பஞ்சாப்புக்குள் வரவோ பஞ்சாப்பிலிருந்து வெளியில் போகவோ யாரும் அனுமதிக்கப் படவில்லை. பூஜ்யர் ஆண்ட்ரூஸ் பஞ்சாப் சம்பவங்களைப் பற்றி ஓரளவு கேள்விப்பட்டு அங்கே போய் விசாரணை செய்ய விரும்பி மே மாதத்தில் பஞ்சாபுக்குப் போனார். அவரை அமிருதஸரஸில் கைது செய்து ஒரு நாள் ரிமாண்டில் வைத்திருந்து திருப்பி அனுப்பி விட்டார்கள். லாலா ஹரிகிருஷ்ண லாலின் சார்பாக இராணுவக் கோர்ட்டில் வழக்காடுவதற்காக பிரசித்த பாரிஸ்டரான மிஸ்டர் எர்ட்லி நார்ட்டன் பஞ்சாப் சென்றார். அவரும் திருப்பி அனுப்பப் பட்டார். ஜூலை மாதத்திற்குப் பிறகுதான் ஒரு மாதிரியாகப் பஞ்சாப் சம்பவங்களைப் பற்றிய செய்திகள் வெளிவரத் தொடங்கின. அந்த மாதத்தில் கல்கத்தாவில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூடிய போது பிரபல காங்கிரஸ் தலைவர்களிடம் இரகசியமாகப் பஞ்சாப் பயங்கரங்களைப் பற்றி செய்தி சொல்லப்பட்டது. சொன்னவர்கள், “இதெல்லாம் இரகசியமாக இருக்கட்டும். எங்களைக் காட்டிக் கொடுத்துவிட வேண்டாம்” என்று வேண்டிக் கொண்டார்கள். அப்போது வைஸ்ராய் செம்ஸ்போர்டின் நிர்வாக சபையின் அங்கத்தினரா யிருந்தவர்களில் ஸர் சங்கரன் நாயர் ஒருவர். பஞ்சாப்பில் மேலும் இராணுவச் சட்டம் நீடிப்பதைக் கண்டித்து ஜூலை 19-ஆம் தேதி அவர் ராஜினாமா செய்தார். பஞ்சாப்பை மூடியிருந்த இரும்புத்திரை அகன்று உண்மையான செய்திகள் வர ஆரம்பித்துக் காந்தி மகாத்மாவின் காதிலும் விழுந்தன. பயங்கரக் கொடுமைகளுக்கு உள்ளான பாஞ்சாலத்துக்குப் போகவேண்டும் என்று காந்தி மகானின் உள்ளம் துடி துடித்தது. அமிருதஸரஸ் காங்கிரஸ் மகாத்மா காந்தி பஞ்சாப்புக்குப் போக ஆர்வம் கொண்டிருந்த போதிலும் தடைச் சட்டத்தை மீறி அங்கே போக விரும்பவில்லை. அப்படி மீறுவதற்கு முயன்றால் பஞ்சாப்பின் நிலைமை இன்னும் மோசமாகத்தான் ஆகும் என்று கருதினார். ஆகையால் இந்திய சர்க்காருக்குத் தந்திகளும் கடிதங்களும் அனுப்பிப் பஞ்சாப்புக்குப் போக அனுமதி கேட்டுக்கொண்டிருந்தார். அந்த அனுமதி இலேசில் கிடைப்பதாக இல்லை. வைஸ்ராய் செம்ஸ்போர்டு, “பொறுங்கள்” “பொறுங்கள்” என்று சொல்லிக் கொண்டேயிருந்தார். இதற்கிடையில் மகாத்மா ஒரு முக்கியமான பொறுப்பை ஏற்றுக் கொள்ள வேண்டியதாயிற்று. அப்போது “பம்பாய் கிராணிகல்” என்னும் பத்திரிகை இந்திய தேசீய இயக்கத்தைத் தீவிரமாக ஆதரித்து வந்தது. அந்தப் பத்திரிக்கைக்கு ஸ்ரீ பி.ஜி. ஹார்னிமான் என்பவர் ஆசிரியராயிருந்தார். ஸ்ரீ ஹார்னிமான் ஆங்கிலேயரான போதிலும் இந்திய தேசீய வாதிகளின் கட்சியைப் பலமாக ஆதரித்தார். அவருடைய எழுத்து, வன்மை பொருந்தியிருந்தது. ரவுலட் சட்டத்தை எதிர்க்க மகாத்மா காந்தி ஆரம்பித்த சத்தியாக்கிரஹ இயக்கத்தையும் ஸ்ரீ ஹார்னிமான் ஆதரித்து எழுதினார். அதனால் கோபங் கொண்ட பிரிட்டிஷ் அதிகார வர்க்கத்தார் அவரைத் தேசப் பிரஷ்டம் செய்தனர். இந்த நிலைமையில் ஸ்ரீ ஹார்னிமானுக்குப் பதிலாக “பம்பாய் கிராணிகல்” பத்திரிகையை நடத்தும்படி அதன் நிர்வாகிகள் மகாத்மாவைக் கேட்டுக் கொண்டார்கள். அந்தப் பொறுப்பை மகாத்மா ஏற்றுக்கொண்டு சில நாள் பத்திரிகையை நடத்தினார். அதற்குள் சர்க்கார் அடக்கு முறையின் கொடுமை காரணமாகப் பத்திரிகையை நிறுத்திவிட வேண்டிய அவசியம் நேர்ந்து விட்டது. பிறகு அதே ஸ்தாபனத்தினால் நடத்தப்பட்டு வந்த “எங் இந்தியா” என்னும் வாரப் பத்திரிகையை மகாத்மா ஒப்புக் கொண்டார். சில காலத்துக்குப் பிறகு “எங் இந்தியா” ஆமதாபாத்துக்கு மாற்றப் பட்டது. அங்கே நடந்து வந்த “நவஜீவன்” என்னும் குஜராத்தி வாரப் பத்திரிகைக்கும் மகாத்மா ஆசிரியர் ஆனார். இந்த இரண்டு பத்திரிகைகளின் மூலமாகக் காந்தியடிகள் தமது கொள்கைகளையும் திட்டங்களையும் பிரசாரம் செய்யத் தொடங்கினார். “எங் இந்தியா” “நவ ஜீவன்” இரண்டு பத்திரிகைகளும் மிகவும் பிரபலமடைந்து சக்தி வாய்ந்த பத்திரிகைகள் ஆயின. அவை ஒவ்வொன்றுக்கும் 40,000 சந்தாதார் வரையில் சேர்ந்தனர். மகாத்மாவுக்குப் பஞ்சாப்புக்குப் போக அனுமதி அந்த வருஷம் அக்டோபர் மாதத்திலேதான் கிடைத்தது. அனுமதி வந்தவுடனே மகாத்மா பஞ்சாப்புக்குப் புறப்பட்டுச் சென்றார். பஞ்சாப் சம்பவங்களுக்கெல்லாம் மகாத்மாவே பொறுப்பாளி என்று ஸர் மைக்கேல் ஓட்வியர் குற்றம் சாட்டினார். அதேமாதிரியாக்ப் பஞ்சாப் இளைஞர்கள் சிலர் இராணுவச் சட்டக் கொடுமைகளுக்கெல்லாம் மகாத்மாவையே பொறுப்பாளியாகக் கொண்டார்கள். சத்தியாக்கிரஹம் ஆரம்பித்ததற்காக ஸர் மைக்கேல் ஓட்வியர் மகாத்மாவின் பேரில் குற்றம் சாட்டியதுபோல் சத்தியாக்கிரஹத்தை நிறுத்தியதற்காக இவர்கள் மகாத்மாபேரில் குற்றம் சுமத்தினார்கள். சத்தியாக் கிரஹத்தை மகாத்மா காந்தி நிறுத்தியதனால்தான் ஜாலியன் வாலா படுகொலை நடந்தது என்று சொன்னார்கள். “நீர் பஞ்சாப்புக்கு வந்தால் உம்மைக் கொலை செய்து விடுவோம்” என்று பயமுறுத்தி காந்தி மகானுக்குக் கடிதமும் எழுதினார்கள். இப்படிப்பட்ட பயமுறுத்தல்களினால் காந்திஜியைத் தடை செய்யமுடியுமா, என்ன? மகாத்மா காந்தி ரயில் ஏறி லாகூருக்கு வந்து சேர்ந்தார். அவர் எதிர் பார்தததற்கு நேர்மாறான காட்சியை லாகூர் ரயில்வே ஸ்டே ஷனில் பார்த்தார். அந்த ஸ்டே ஷன் பிளாட்பாரத்தில் ஒரு மூலையிலிருந்து இன்னொரு மூலை வரையில் ஜனங்கள் எள்ளுப் போட இடமில்லாமல் நெருங்கி நின்றார்கள். காந்திஜியை வரவேற்பதற்காகத்தான். ரயில் நிலையத்துக்கு வெளியிலும் மாபெருங் கூட்டம் கூடியிருந்தது. லாகூர் நகரவாசிகள் அனைவருமே வீடுகளைப் பூட்டிக்கொண்டு மகாத்மாவை வரவேற்பதற்கு வந்து விட்டதுபோல் காணப்பட்டது. காந்திஜியைக் கண்டதும் அத்தனை ஜனங்களும் ஒரே குரலாக “மகாத்மா காந்திக்கு ஜே”! என்று கோஷம் இட்டார்கள். நெடுநாள் பிரிந்திருந்த உற்ற பந்துவை வரவேற்பதுபோல் லாகூர் வாசிகள் மகாத்மாவை வரவேற்றார்கள். அளவு கடந்த உற்சாகத்தினால் ஜனங்களுக்குத் தலைகால் தெரியாமல் போய்விட்டது. இராணுவச் சட்டம் அமுலின்போது தாங்கள் பட்ட கஷ்டங்களுக்குக் காந்திஜியே காரணம் என்று அவர்கள் கருதியதாகத் தோன்றவில்லை. அந்தக் கஷ்டங்களுக்கெல்லாம் பரிகாரம் தேடித் தரக்கூடிய உற்ற துணைவர் காந்திஜி என்று அவர்கள் நம்பியதாகத் தோன்றியது. இராணுவக் கோர்ட்டினால் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட லாகூர் தலைவர்களின் பண்டித ராம்போஜி தத் சௌத்ரி ஒருவர். அவருடைய மனைவியான ஸ்ரீ சாரளா தேவி சௌதராணியும் பிரபல தேசியவாதி. அவருடைய வீட்டில் மகாத்மா தங்கினார். அதன் காரணமாக அந்த வீடு ஒரு பெரிய சத்திரம் ஆயிற்று. ஸ்ரீ சாரளா தேவி சௌதராணி முகமலர்ச்சியுடன் வந்தவர்களுக்கெல்லாம் உணவு அளித்து உபசரித்தார். ஏற்கனவே பஞ்சாப்புக்கு பண்டித மதன் மோகன் மாளவியா, பண்டித மோதிலால் நேரு, சுவாமி சிரத்தானந்தர் ஆகியவர்கள் வந்திருந்தனர். அவர்களுடன் பஞ்சாப் நிலைமையைப் பற்றி மகாத்மா கலந்து ஆலோசித்தார். அதே சமயத்தில், பிரிட்டிஷ் சர்கார், பஞ்சாப் இராணுவச் சட்ட அமுலைப் பற்றி விசாரிப்பதற்காக லார்டு ஹண்டரைத் தலைவராகக் கொண்டு ஒரு கமிஷனை நியமித்திருந்தார்கள். “பஞ்சாப் பயங்கரங்களைப் பற்றி விசாரிக்க வேண்டும்” என்று தேசமெங்கும் ஏற்பட்டிருந்த பெருங் கிளர்ச்சியின் பயனாக சர்க்கார் மேற்படி ஹண்டர் கமிஷனை நியமித்தனர். விசாரணைக் கமிஷன் என்று நியமித்துவிட்டால் பொது மக்களிடையே பொங்கிய உணர்ச்சியும் ஆத்திரமும் ஒருவாறு அடங்கிவிடும் என்று பிரிட்டிஷ் சர்க்கார் கருதினார்கள். முதலில் ஹண்டர் கமிஷன் முன்பு சாட்சியம் விட்டு ஒத்துழைப்பது என்ற மகாத்மா முதலிய தலைவர்கள் முடிவு செய்தார்கள். ஆனால் அவர்கள் எதிர்பாராத சில தடைகள் ஹண்டர் கமிஷன் அங்கத்தினரால் ஏற்பட்டன. இராணுவச் சட்ட தண்டனைக்கு உள்ளன லாலா ஹரிகிருஷ்ணலால் முதலிய தலைவர்களைக் கமிஷன் விசாரணையின் போது கோர்ட்டில் போலீஸ் பாராவுடன் இருக்கச் செய்ய வேண்டுமென்று மகாத்மா, மாளவியா முதலியவர்கள் வற்புறுத்தினார்கள். உண்மை துலங்குவதற்கு அது அவசியம் என்று அவர்கள் சொன்னார்கள். இதற்கு ஹண்டர் கமிஷன் ஒத்துக்கொள்ளவில்லை. இதிலிருந்து ஹண்டர் கமிஷனிடத்தில் நீதியை எதிர்பார்க்க முடியாது என்று தோன்றிவிட்டது. எனவே, ஹண்டர் கமிஷனைப் பகிஷ்கரித்து, சர்க்கார் சம்பந்தமற்ற விசாரணையொன்று நடத்த ஏற்பாடு செய்வதென்று தீர்மானம் ஆயிற்று. பண்டித மாளவியாவின் யோசனைப்படி மகாத்மா காந்தி, பண்டித மோதிலால் நேரு, ஸ்ரீ.சி.ஆர்.தாஸ், ஜனாப் அப்பாஸ் தயாப்ஜி ஆகியவர்கள் விசாரணை செய்ய நியமிக்கப்பட்டார்கள். இவர்களில் பண்டித மோதிலால் நேரு பிற்பாடு அமிருதஸரஸ் காங்கிரஸ் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபடியால், அவருக்குப் பதிலாக பாரிஸ்டர் எம். ஆர். ஜெயக்கர் அங்கத்தினராக நியமிக்கப்பட்டார். இந்த நாலு பெரும் தனித் தனியே நாலு பக்ககளிலும் சென்று இராணுவ அமுலைப் பற்றிச் சாட்சியம் சேகரிக்கலானார்கள். ஆயினும் அந்த வேலை பெரும்பாலும் காந்திஜியின் தலையிலேயே விழந்தது. விசாரணை செய்யச் செய்ய, சாட்சியங்களைக் கேட்கக் கேட்க, எவ்வளவு பயங்கரமாக கொடுமைகள் இராணுவ அமுலின்போது ஜனங்களுக்கு இழைக்கப்படிருகின்றன என்று காந்திஜிக்குத் தெரிய வந்தது. பஞ்சாப் ஜனங்களோ மகாத்மாவைத் தங்களை ரக்ஷிக்க வந்த தெய்வம் என்று நினைத்து அவரிடம் தாங்கள் பட்ட கஷ்டங்களைச் சொல்லி முறையிட்டர்காள். பஞ்சாப் விசாரணை நடந்து கொண்டிருந்த போதே அமிருதசரஸ் நகரில் காங்கிரஸ் மகா சபை கூடியது. அமிருதஸரஸ் காங்கிரஸ் அதற்குமுன் நடந்த எந்தக் காங்கிரஸையும் விடப் பெருமிதமாகவும் கோலாகலமாகவும் நடந்தது. ஆறாயிரம் பிரதிநிதிகளும் முப்பதினாயிரம் பார்வையாளரும் அந்தக் காங்கிரஸுக்கு வந்திருந்தார்கள். சுவாமி சிரத்தானந்தர் வரவேற்பு சபையின் தலைவர். பண்டித மோதிலால் நேரு காங்கிரஸ் மகாசபையின் அக்கிராசனர். காங்கிரஸ் கூடுவதற்கு முதல் நாள் இராணுவச் சட்டத்தின்படி சிறைப் பட்டிருந்த லாலா ஹரிகிருஷ்ணலால் முதலிய பஞ்சாப் தலைவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டார்கள். சென்ற நாலு வருஷமாகப் பாதுகாப்பில் வைக்கப்பட்டிருந்த அலி சகோதரர்களும் விடுதலையானார்கள். விடுதலையான தலைவர்கள் நேரே அமிருதஸரஸுக்கு வந்து சேர்ந்தார்கள். அலி சகோதரர்கள் அமிருதஸரஸ் வீதிகளில் ஊர்வலமாக அழைத்து வரப்பட்ட போது அந்த நகர் மக்களின் ஆரவாரத்தைச் சொல்லி முடியாது. அலி சகோதரர்கள் அத்தனை நாளும் சிந்த்வாரா என்னுமிடத்தில் சிறையில் வைக்கப்பட்டிருந்தனர். மௌலானா முகம்மதலி தமது பிரசங்கத்தில் “சிந்த்வாராவுக்கு ரிடர்ன் டிக்கெட் என் சட்டைப் பையில் வைத்திருக்கிறேன்” என்று சொன்னார். அதாவது மறுபடியும் சிறைக்குப் போகத் தாம் தயாரா யிருப்பதை அவ்விதம் தெரிவித்தார். இது மக்களின்ஆவேசத்தை அதிகப்படுத்தியது. இத்தகைய சூழ்நிலையில் அமிருதஸரஸ் காங்கிரஸ் கூடியது. இந்தக் காங்கிரஸின்போது மூன்று புதிய தலைவர்கள் நாட்டிலும் காங்கிரஸிலும் சக்தி பெற்று வருகிறார்கள் என்று வெளியாயிற்று. ஒருவர், அக்கிராசனம் வகித்த பண்டித மோதிலால் நேரு. இரண்டாவது தலைவர் பாரிஸ்டர் சித்தரஞ்சன் தாஸ். மூன்றாவது தலைவர் தான் மகாத்மா காந்தி. இந்த மூன்று பேருக்குள்ளேயும் காந்தி மகாத்மாவே சக்தி வாய்ந்தவர் என்பதும் அமிருதஸரஸில் ஒருவாறு தெரிய வந்தது. அமிருதஸரஸ் காங்கிரஸில் நிறைவேறிய மிகவும் முக்கியமான தீர்மானம் சம்பந்தமாக ஏற்பட்ட விவாதங்களிலிருந்து இது வெளியாயிற்று. முதலாவது மகா யுத்தத்தின் ஆரம்ப நாட்களில் இந்தியாவிலிருந்து மெஸபடோமியாவுக்கு அனுப்பிய துருப்புகள் விபரீதமான முடிவை அடைந்தன. இங்கிலாந்தில் இது பெரும் கிளர்ச்சியை உண்டாக்கியது. மிஸ்டர் மாண்டகு என்பவர் பார்லிமெண்டில் இந்திய அதிகார வர்க்கத்தைப் பலமாகத் தாக்கிப் பேசினார். இந்தியாவின் ஆட்சி முறையைக் காலத்துக் கேற்ப மாற்றி அமைக்கவேண்டும் என்ற எண்ணம் இங்கிலாந்தில் பலருக்கும் ஏற்பட்டது. கொஞ்ச நாளைக்கெல்லாம் மிஸ்டர் மாண்டகுவையே இந்தியா மந்திரியாக நியமித்தார்கள். மிஸ்டர் மாண்டகு இந்தியாவுக்கு நேரில் வந்து இங்குள்ள நிலைமையை நன்கு தெரிந்து கொள்ளப் போவதாகவும் பிறகு அரசியல் சீர்திருத்தங்களைப் பற்றிச் சிபார்சு செய்யப் போவதாகவும் சொன்னார். அதன்படியே அவர் வந்தார். இந்தியாவில் பல பிரமுகர்களைச் சந்தித்தார். பல ஸ்தாபனங்களின் அபிப்பிராயங்களைக் கேட்டார். இங்கிலாந்துக்குத் திரும்பிப் போன பிறகு ‘இரட்டை யாட்சி’ என்னும் வேடிக்கையான அரசியல் திட்டத்தைச் சிபார்சு செய்தார். இதன்படி இந்தியாவின் மாகாணங்களில் பாதி இலாக்காக்கள் பழையபடி கவர்னருடைய நிர்வாக சபையினாலும் மற்றப் பாதி இலாக்காக்கள் ஜனங்களினால் தேர்ந்தெடுக்கப்பட்ட மந்திரிகளாலும் நிர்வகிக்கப்படும். போலீஸ்,சட்டம், வருமானம் முதலிய முக்கிய இலாக்காக்கள் கவர்னரிடமே இருக்கும். கல்வி, சுகாதாரம் முதலிய இலாக்காக்கள் மந்திரிகளிடம் ஒப்படைக்கப்படும். இந்தியா மந்திரி மாண்டகுவும் வைஸ்ராய் லார்டு செம்ஸ்போர்டும் சேர்ந்து தயாரித்த திட்டமாதலால் இதற்கு மாண்டகு செம்ஸ்போர்டு திட்டம் என்றும், மாண்ட் போர்ட் திட்டம் என்றும் பெயர்கள் வழங்கலாயின. அமிருதஸரஸ் காங்கிரஸ் கூடுவதற்குச் சில நாளைக்கு முன்னாலேதான் மேற்படி திட்டம் வெளியாகி யிருந்தது. இந்தத் திட்டத்தை ஏற்றுக் கொள்வதா, நிராகரிப்பதா என்பதைப் பற்றிக் காங்கிரஸ் தலைவர்களுக்குள் ஏற்கெனவே ஆலோசனைகள் நடந்து வந்தன. காங்கிரஸிலிருந்து மிதவாதிகள் எல்லாரும் அதற்குள்ளே தனியாகப் பிரிந்து போய்த்தனி ஸ்தாபனமும் ஏற்படுத்திக் கொண்டார்கள். பழம் பெருந் தலைவர்களில் லோகமான்ய திலகர், பண்டித மாளவியா, ஸ்ரீ விபினசந்திரபால் முதலியோர் காங்கிரஸில் இருந்தார்கள். 1917-ஆம் ஆண்டில் டாக்டர் பெஸண்டு அம்மையின் செல்வாக்கு உச்ச நிலையில் இருந்தது. ஆனால் அடுத்த இரண்டு வருஷத்துக்குள் காங்கிரஸில் அவருடைய செல்வாக்கு அடியோடு குன்றிவிட்டது. இரண்டு வருஷமாக ஸ்ரீ சித்தரஞ்சன் தாஸின் நட்சத்திரம் உச்சத்துக்கு வந்து கொண்டிருந்தது. மாதம் அரை லட்சம் ரூபாய் சம்பாதித்துக் கொண்டிருந்த பிரபல பாரிஸ்டர் அவர். சுதேசி இயக்க நாட்களில் ஸ்ரீ அரவிந்த கோஷின் சார்பாகக் கோர்ட்டில் ஆஜராகிப் பேசிப் புகழ் பெற்றிருந்தவர். 1917-ல் டாக்டர் பெஸண்டு அம்மையைக் காங்கிரஸ் தலைவராக்குவதற்கு பாடுபட்டவரும் அவர்தான். தேசீய வாதிகள் பெரும்பாலோர் அவருடைய யோசனையை எதிர்பார்க்கத் தொடங்கி யிருந்தார்கள். மாண்டகு செம்ஸ்போர்டு சீர்திருத்தத் திட்டத்தைப் பற்றி ஸ்ரீ சித்தரஞ்சன்தாஸ் ஒரு தீர்மானம் தயாரித்துக் கொண்டு வந்திருந்தார். “மாண்டகு செம்ஸ்போர்டு திட்டம் போதாது. அதிருப்திகரமானது. ஏமாற்றகரமானது; ஆகையால் அதை இந்தக் காங்கிரஸ் நிராகரிக்கிறது” என்பது தீர்மானத்தின் முக்கிய அம்சம். “ஏற்கெனவே, லோகமான்ய திலகர்”கிடைத்ததைப் பெற்றுக் கொண்டு பாக்கிக்குப் போராட வேண்டும்" என்ற கொள்கையை வெளியிட்டிருந்தார். ஆயினும் அமிருதஸரஸில் ஸ்ரீ சி. ஆர். தாஸைச் சந்தித்துப் பேசிய பிறகு அவருடைய தீர்மானத்தை ஆதரிக்க ஒப்புக் கொண்டார். “மாண்டகு செம்ஸ்போர்டு திட்டத்தை அங்கீகரித்து நடத்துவது” என்று டாக்டர் பெஸண்டு கொண்டு வர விரும்பிய தீர்மானத்தை யாரும் ஒப்புக் கொள்ளவில்லை. இந்த நிலைமையில் மகாத்மா காந்தியின் நிலைமை இன்னதென்று அறிந்து கொள்ளப் பலரும் விரும்பினார்கள். மகாத்மாவினுடைய மனப்பாங்குதான் நமக்குத் தெரியுமல்லவா? எதிராளிகளின் பேச்சில் அவநம்பிக்கை கொள்ளக் கூடாது என்பது அவருடைய திடமான கொள்கை. மாண்டகு நல்ல எண்ணத்துடனே இந்த அரசியல் திட்டத்தை வகுத்திருக்கிறார் என்று மகாத்மா பூரணமாக நம்பினார். ஆகையால் அதை அடியோடு நிராகரிக்கும் யோசனை மகாத்மாவுக்குப் பிடிக்க வில்லை. அதே சமயத்தில் காங்கிரஸில் மிகச் செல்வாக்குள்ள ஸ்ரீ திலகர் முதலிய தலைவர்களுக்கு எதிராகப் பேசவும் அவர் விரும்பவில்லை. ஆகையால் காங்கிரஸுக்கு முதல் நாள் மட்டும் வந்து விட்டு அப்புறம் நடவடிக்கைகளில் கலந்து கொள்ளாமலிருந்துவிட மகாத்மா எண்ணியிருந்தார். இதைப் பண்டித மாளவியாவிடம் கூறியபோது அவர் அதை ஒப்பவில்லை. லாலா ஹரி கிருஷ்ணலால் முதலிய பஞ்சாப் தலைவர்களூம் அதை விரும்பவில்லை. “நீங்கள் அவ்விதம் செய்வது பஞ்சாபிகளுக்கு மிக்க மன வருத்தத்தை அளிக்கும்” என்று அவர் சொன்னார். “என்னுடைய அபிப்பிராயத்தை நான் வற்புறுத்தினால் வோட் எடுக்க நேரிடலாம். இங்கே வோட் எடுக்க வசதி ஒன்றும் இல்லையே? பிரதிநிதிகளுக்கும் பார்வையாளருக்கும் வித்தியாசம் இல்லாமல் எல்லாரும் கலந்து போயிருக்கிறார்களே?” என்றார் காந்திஜி. “வோட் எடுக்கும் சமயத்தில் பார்வையாளரை வெளியில் அனுப்பிவிட ஏற்பாடு செய்கிறோம்” என்றார் ஸ்ரீ ஹரி கிருஷ்ணலால். எனவே, மாண்டகு செம்ஸ்போர்டு திட்டத்தை நிராகரிக்கும் தீர்மானத்தை ஸ்ரீ சி. ஆர். தாஸ் கொண்டு வந்தபோது மகாத்மா அதற்கு ஒரு திருத்தம் பிரேரேபித்தார். “ஏமாற்றமானது” என்ற வார்த்தையை எடுத்துவிட்டு, “முழுப் பொறுப் பாட்சியை அடைவதற்கான முறையில் மேற்படி திட்டத்தை நடத்தி வைக்கத் தீர்மானிக்கிறது” என்பதைக் கடைசியில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று காந்தி மகானுடைய திருத்தம் கூறியது. அத்துடன், மிஸ்டர் மாண்டகு அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வாக்கியம் ஒன்றையும் சேர்க்க வேண்டுமென்று மகாத்மா பிரேரேபித்தார். அப்போது தேச மக்களுடைய மனோநிலை கொதிப்படைந்திருந்தது. காங்கிரஸ் பிரதிநிதிகள் பஞ்சாப் கிலாபத் அநீதிகளைக் குறித்து ஆத்திரம் கொண்டிருந்தார்கள். இப்படிப்பட்ட சமயத்தில் மகாத்மாவின் ஒத்துழைப்புத் திருத்தம் பிரதிநிதிகளுக்கு மிகக் கசப்பாயிருந்தது. ஆனாலும் அவர்கள் காந்தி மகாத்மாவின் விருப்பத்துக்கு விரோதமாக எதுவும் செய்ய விரும்பவில்லை. இந்தியாவுக்குச் சுதந்திரம் கிடைப்பதாயிருந்தால் அது மகாத்மாவினால்தான் கிடைக்கும் என்ற நம்பிக்கை பலருடைய அந்தரங்கத்தில் அப்போது ஏற்பட்டிருந்தது. காந்திஜி ஒரு பக்கமும் திலகர், தாஸ் முதலிய தலைவர்கள் மற்றொரு பக்கமும் மாறுபட்டு நிற்பதையும் ஜனங்கள் விரும்பவில்லை. ஆகவே தீர்மானமும் திருத்தமும் பிரேரணை செய்யப்பட்டபோது பிரதி நிதிகள் - பார்வையாளர் அனைவரும் சோர்வடைந்து முகம் வாடிப் போனார்கள். இந்த நிலைமையில் ஒரு சிலர் இரு சாராரிடையிலும் சமரசம் உண்டு பண்ண முயன்றார்கள். சமரசம் ஏற்பட வேண்டும் என்பதில் மற்றவர்களைக் காட்டிலும் பண்டித மாளவியாவுக்கு அதிக ஆத்திரம் இருந்தது. அவர் காங்கிரஸ் மேடையில் அமர்ந்தபடி சமரசத்துக்கு வழி காண முயன்று கொண்டிருந்தபோது ஸ்ரீ ஜயராம்தாஸ் தௌலத்ராம் மகாத்மாவின் திருத்தத்தில் ஒரு சிறு திருத்தம் செய்து அதைச் சமரசப் பிரேரணையாகச் சமர்ப்பித்தார். “திட்டத்தை நடத்துவது” என்பதைக் “கூடுமான வரையில் நடத்துவது” என்று அவர் திருத்தினார். இதை மகாத்மா ஒப்புக்கொண்டதும், பண்டித மாளவியா லோகமான்ய திலகரை நோக்கினார். திலகர் “தாஸ் சம்மதித்தால் எனக்குச் சம்மதம்” என்றார். தாஸ், விபின சந்திரபாலரைப் பார்த்தார். விபின சந்திரர் தலையை அசைத்தார். உடனே பண்டித மாளவியா எழுந்து நின்று, “பிரதிநிதிகளே! தலைவர்களுக்குள் சமரசம் ஏற்பட்டு விட்டது!” என்று அறிவித்தார். அப்போது சபையில் எழுந்த சந்தோஷ ஆரவாரம் ஆகாயத்தை அளாவியது. அதிலிருந்து தலைவர்கள் ஒத்துப் போகவேண்டும் என்பதில் பிரதிநிதிகளுக்கு எவ்வளவு ஆர்வம் இருந்தது என்பது நன்கு வெளியாயிற்று. அதற்கு பிறகு மேடையில் இருந்த தலைவர்கள் சமரசமாகப் போக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விட்டது. சமரசத் தீர்மானம் மிகுந்த உற்சாகத்துக்கிடையே நிறைவேறியது. சமரசத் தீர்மானம் என்று சொல்லப்பட்டதாயினும் உண்மையில் அது காந்தி மகாத்மா காங்கிரஸ் மகாசபையின் மேடையில் அடைந்த மகத்தான முதல் வெற்றி என்பதை எல்லாரும் உணர்ந்திருந்தார்கள். இதே விதமாக இன்னும் இரண்டு தீர்மானங்களைக் கசந்து விழுங்கிக் கொண்டு காந்தி மகாத்மாவுக்காகவே காங்கிரஸ் பிரதிநிதிகள் நிறைவேற்றினார்கள். அவற்றில் ஒன்று பஞ்சாப் பிலும் குஜராத்திலும் பொது ஜனங்கள் அத்து மீறிப் பலாத்காரச் செயல்களில் இறங்கியதைப் பலமாகக் கண்டனம் செய்தது. அதிகாரிகளுடைய செயல்களினால் கொதிப்படைந்திருந்த பிரதிநிதிகளுக்குப் பொது ஜனங்களைக் கண்டிக்கும் காரியம் சிறிதும் பிடிக்கவில்லை. ஆயினும் மகாத்மா காந்தி கொண்டு வந்தபடியால் அந்தத் தீர்மானமும் நிறைவேறியது. அதோடு அடுத்த வருஷம் வேல்ஸ் இளவரசர் இந்தியாவுக்கு விஜயம் செய்வதைக் காங்கிரஸ் வரவேற்கிறது என்ற தீர்மானமும் மகாத்மாவுக்காகவே நிறைவேறியது. அமிருதஸரஸ் காங்கிரஸில் ஒத்துழைப்புத் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றிய அதே மகாத்மா சில மாதங்களுக்கெல்லாம் ஒத்துழையாமை இயக்கத்துக்குத் துவஜா ரோகணம் செய்தார். மாண்டகு செம்ஸ்போர்டு திட்டத்தின்படி நடக்கும் சட்ட சபைத் தேர்தல்களை அடியோடு பகிஷ்காரம் செய்ய வேண்டும் என்றார். சட்டசபை பகிஷ்காரத்தை மற்ற தலைவர்கள் எதிர்த்தார்கள் ஆயினும் மகாத்மாவின் திட்டத்தைத் தேசமும் காங்கிரஸும் ஒப்புக்கொண்டன. இந்த அதிசயங்களைப் பற்றிப் பின்னர் விவரமாகத் தெரிந்து கொள்வோம். கிலாபத் கிளர்ச்சி பாரத நாட்டின் சுதந்திரத்துக்காக மகாத்மா காந்தி ஆரம்பித்து நடத்திய முதலாவது பேரியக்கத்துக்கு ஒத்துழையாமை இயக்கம் என்று பெயர். இந்த இயக்கத்தின் வித்து 1919-ல் மகாத்மாவின் உள்ளத்தில் விதைக்கப்பட்டது. 1920-இல் அது முளைத்து வளர்ந்தது. அடுத்த 1921-ஆம் ஆண்டில் அந்த இயக்கம் மாபெரும் விருட்சமாகிப் பரவிப் படர்ந்து தழைத்தது. ஒத்துழையாமை இயக்கத்துக்கு முக்கிய காரணங்களாக உதவியவை 1. பஞ்சாப் படுகொலை முதலிய கோர நிகழ்ச்சி களும், 2. கிலாபத்துக்கு ஏற்பட்ட ஆபத்துமாகும். 1919-ஆம் ஆண்டு முதல் 1921-ஆம் ஆண்டு வரையில் பாரத நாட்டின் சரித்திரத்தில் ஒரு மகோன்னதமான காலம். அந்த மூன்று வருஷத்திலும் இந்தியாவில் ஹிந்துக்களும் முஸ்லிம் களும் ஒற்றுமையாகச் சகோதர வாஞ்சையுடன் நடந்து கொண்டதுபோல் அதற்கு முன்னால் நடந்ததில்லை; இனிமேல் நடக்குமா என்றும் சொல்ல முடியாது. இத்தகைய ஹிந்து முஸ்லிம் சகோதர பாவத்துக்குக் காரணமாயிருந்தது கிலாபத்துக்கு வந்த ஆபத்துத்தான். கிலாபத்தைப் பற்றியும் அதற்கு வந்த ஆபத்தைப்பற்றியும் இப்போது தெரிந்து கொள்வோம். முதலாவது உலக மகாயுத்தத்தில் பிரிட்டனும் ஜெர்மனியும் போராடிக் கொண்டிருந்தபோது துருக்கி தேசம் ஜெர்மன் கட்சியைச் சேர்ந்தது. இதனால் இந்திய முஸ்லிம்கள் ஒரு சங்கடமான நிலைக்கு உள்ளானார்கள். துருக்கி சுல்தான் துருக்கி சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்தி மட்டுமல்ல; உலக முழுவதிலும் வசித்த முஸ்லிம்களின் மத குரு என்ற பதவியையும் வகித்து வந்தார். இந்தக் குரு பீடத்துக்குக் கிலாபத் என்று பெயர். கிலாபத் பதவியில் இருப்பவர் “கலீபா” என்று அழைக்கப்பட்டார். உலக முஸ்லீம்களின் குரு என்ற பதவியைத் துருக்கி சுல்தான் திறம்பட வகிப்பதற்கு அவர் ஒரு பெரிய சாம்ராஜ்யத்தின் சர்வாதிகார மன்னராகவும் இருக்க வேண்டுமென்றும் அப்போதுதான் குரு பீடத்தை நன்கு வகிக்க முடியும் என்றும் முஸ்லீம்கள் கருதினார்கள். அதோடு முஸ்லீம்களின் புண்ணிய க்ஷேத்திரங்கள் பலவும் அடங்கிய ஜஸ் ரதுல் அரப் என்னும் பிரதேசம் துருக்கி சுல்தான் ஆதிக்கத்தில் இருக்க வேண்டும் என்றும் அவர்கள் விரும்பினார்கள். ‘ஜஸ் ரதுல் அரப்’ பில் மெஸபடோமியா, அரேபியா, ஸிரியா, பாலஸ்தீனம் இவை சேர்ந்தவை. பிரிட்டனுக்கு எதிர்க்கட்சியில் துருக்கி சேர்ந்த போது இந்திய முஸ்லீம்கள் தங்கள் மதகுருவை எதிர்த்து எப்படித் தாங்கள் யுத்தம் செய்ய முடியும் என்று வேதனைப்பட்டார்கள். யுத்த முடிவில் பிரிட்டன் ஜெயித்தால் ‘கலீபா’ வின் கதி என்ன ஆகுமோ என்று கவலைப்பட்டார்கள். துருக்கி சுல்தானுடைய சாம்ராஜ்யம் பிடுங்கப்பட்டுவிட்டால் அவர் ‘கலீபா’ பதவியை எப்படி வகிக்க முடியும்? ’ஜஸ் ரதுல் அரப்’பிலுள்ள முஸ்லீம் புண்ணிய க்ஷேத்திரங்களின் நிலைமை என்ன? - இந்த சந்தேகங்களை யெல்லாம் யுத்த ஆரம்பத்தில் வெளிப்படையாக எழுதியதற்காகவே அலி சகோதரர்கள் பல வருஷகாலம் பாதுகாப்பில் வைக்கப்பட்டிருந்தார்கள். யுத்தம் ஒரு நெருக்கடியான நிலைமையை அடைந்திருந்த போது அச்சமயம் பிரிட்டிஷ் பிரதம் மந்திரியாயிருந்த லாயிட் ஜார்ஜ் இந்திய முஸ்லீம்களுக்கு சில வாக்குறுதிகளைக் கூறினார். “துருக்கி சுல்தானுடைய அதிகாரத்துக்காவது, கலீபா பீடத்துக்காவது, எந்தவித பாதகமும் ஏற்படாமல் பார்த்துக் கொள்வோம்” என்று சொன்னார். ’சின்ன ஆசியா, திரேஸ் என்னும் பிரசித்தி பெற்ற செழிப்பான பிரதேசங்களையெல்லாம் துருக்கி சாம்ராஜ்யத்திலிருந்து அபகரிக்கும் எண்ணம் எங்களுக்குக் கிடையாது" என்று சொன்னார். இந்த வாக்குறுதி களை நம்பியே இந்திய முஸ்லீம்களில் பெரும்பாலோர் யுத்த முயற்சிகளில் ஒத்துழைத்தார்கள். ஆனால் முதலாவது உலக யுத்தம் 1918-ஆம் ஆண்டின் இறுதியில் முடிந்ததோ, இல்லையோ லாயிட் ஜார்ஜின் வாக்குறுதிகளைப்பற்றிய பிரஸ்தாபமே இல்லை. அந்த வாக்குறுதிகள் காற்றிலே பறக்கவிட்டு விடப்படும் என்று தோன்றியது. இந்த விஷயம் 1919-ஆம் வருஷம் முழுவதிலும் இந்திய முஸ்லிம் தலைவர்களின் மனதைக் கலக்கிக் கொண்டிருந்தது. சின்ன ஆசியாவில் துருக்கியின் ஆதிக்கத்துக்கு உட்பட்டிருந்த ஸிரியா, பாலஸ்தீன் தேசங்களைப் பிரான்ஸும் பிரிட்டனும் கைப்பற்றித் தங்கள் மேலதிகாரத்தை ஏற்படுத்திக் கொண்டன. திரேஸ் மாகாணம் கிரீஸுக்குக் கொடுக்கப்பட்டது. துருக்கி சுல்தான் ஒரு கைதியைப்போல் நடத்தப்படலானார். வெற்றி பெற்ற நேசக் கட்சியார், நியமித்த கமிஷன் துருக்கியை ஆட்சி செய்யத் தொடங்கியது. இந்தச் செய்திகள் எல்லாம் வர வர இந்திய முஸ்லிம்களின் கொதிப்பை அதிகமாக்கிக் கொண்டிருந்தது. ‘கிலாபத்’ பீடத்தின் கௌரவத்தைப் பாதுகாப்பதற்காக இந்திய முஸ்லிம்கள் ஒரு பெரும் போராட்டம் நடத்த விரும்பினார்கள். ஆனால் எந்த விதத்தில் அந்தப் போராட்டத்தை நடத்துவதென்று விளங்கவில்லை. இதைப்பற்றித் தீர்மானிப்பதற்காக அடிக்கடி முஸ்லிம் தலைவர்களின் மகாநாடுகள் நடந்தன. 1919-ஆம் வருஷக் கடைசியில் அலகாபாத்தில் நடந்த முஸ்லிம் தலைவர்களின் கூட்டத்திற்கு அழைக்கப்பட்டு மகாத்மா காந்தி போயிருந்தார். முஸ்லிம் தலைவர்கள் ஆத்திரமாகவும் ஆவேசமாகவும் பேசுவதை எல்லாம் கேட்டுக்கொண்டிருந்தார். கடைசியில் அவருடைய அபிப்பிராயத்தைக் கேட்டபோது, “பிரிட்டிஷ் சர்க்காருடன் எத்தனையோ விதங்களில் நீங்கள் ஒவ்வொருவரும் ஒத்துழைத்து வருகிறீர்கள். அப்படி ஒத்துழைத்துக்கொண்டே சர்க்காருடன் போர் நடத்துவதைப்பற்றிப் பேசுவது பொருத்தமில்லை. முதலில் பிரிட்டிஷ் சர்க்காரோடு ஒத்துழைப்பதை நிறுத்த வேண்டும்” என்றார் காந்திஜி. இப்பேச்சின்போது தான் மகாத்மா ‘நான்-கோ-ஆபரே ஷன்’ என்ற வார்த்தையை முதன் முதலில் உபயோகித்தார். அங்கே கூடியிருந்த முஸ்லீம்களும் மகாத்மாவின் யோசனையை ஒப்புக்கொண்டு பிரிட்டிஷ் சர்க்காரோடு படிப்படியாக ஒத்துழைப்பதை நிறுத்த வேண்டுமென்று தீர்மானித்தார்கள். ஆனால் ஒத்துழையாமை இயக்கம் குறிப்பான திட்டங்களுடன் அப்போது உருவாக வில்லை. அமிருதஸரஸ் காங்கிரசுக்குப் பிறகு மௌலானா முகம்மது அலியும் இன்னும் சில முஸ்லிம் தலைவர்களும் இங்கிலாந்துக்குத் தூது சென்றார்கள். கிலாபத் சம்பந்தமாகவும் முஸ்லிம் புண்ணிய க்ஷேத்திரங்கள் சம்பந்தமாகவும் லாயிட் ஜார்ஜ் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றித் தர வேண்டுமென்று பிரிட்டிஷ் மந்திரிகளிடம் அவர்கள் மன்றாடினார்கள். அவர்களுயை கோரிக்கை பலிக்கவில்லை. சமாதான ஏற்பாடுகள் இங்கிலாந்தின் கையில் மட்டுமில்லை யென்றும் ஜயித்த கட்சியைச் சேர்ந்த மற்ற தேசங்களின் அபிப்பிராயத்தைப் பொறுத்தே முடிவு செய்யவேண்டுமென்றும் பிரிட்டிஷ் ராஜ தந்திரிகள் கூறினார்கள். லாயிட் ஜார்ஜின் வாக்குறுதிகளை நிறைவேற்றி வைக்கப் போவதில்லை என்பது ஒருவாறு நன்கு தெரிந்துவிட்டது. இதையறிந்த இந்தியாவிலிருந்த முஸ்லிம் தலைவர்கள் 1920-மார்ச்சு மாதம் 19-ஆம் தேதியைத் துக்க தினமாகப் பாவித்துத் தேசமெங்கும் கூட்டங்கள் நடத்தவேண்டும் என்று தீர்மானித்தார்கள். அந்தத் துக்க தினக் கூட்டங்களில் சர்க்கார் உத்தியோகஸ்தர்கள் கலந்து கொள்ளக் கூடாது என்று இந்திய சர்க்கார் எச்சரிக்கை செய்தார்கள். இப்படி முஸ்லிம்களின் மனது கொதித்துக்கொண்டிருந்த நிலையில் மகாத்மா காந்தி முன் வந்து ஓர் அறிக்கை விடுத்தார். இந்திய முஸ்லிம்களின் கோரிக்கைகளுக்கு இணங்கத் துருக்கி சம்பந்தமான சமாதான உடன்படிக்கை ஏற்படாவிடில் ஒத்துழையாமை இயக்கத்தை ஆரம்பித்து நடத்தத் தாம் சித்தமாயிருப்பதாக அந்த அறிக்கையில் மகாத்மா காந்தி தெரிவித்தார். அந்த நிலையில் இந்திய முஸ்லிம்கள் ஒருமுகமாக மகாத்மாவைத் தங்கள் தலைவராக ஏற்றுக்கொள்ள முன்வந்தார்கள். முஸ்லிம்களுக்கு மகாத்மாவின் அஹிம்சைக் கொள்கையில் நம்பிக்கை இல்லாவிட்டாலும் மகாத்மாவின் சொல்லுக்கிணங்க அஹிம்சையைக் கைக்கொள்ளவும் இசைந்தார்கள். மசூதிகளில் கூடிய மாபெரும் முஸ்லிம் கூட்டங்களில் ‘வந்தே மாதரம்!’ ‘மகாத்மா காந்திக்கு ஜே!’ என்ற கோஷங்கள் அந்த நாளில் எழுந்தன. மகாத்மாவிடம் நன்றி தெரிவித்துக்கொள்வதற்காகப் பல கிலாபத் கூட்டங்களில் பசுவதையை முஸ்லிம்கள் நிறுத்திவிடவேண்டும் என்று தீர்மானங்கள் நிறைவேறின! இதற்கிடையில் பஞ்சாப் கொடுமைகளைப் பற்றி விசார்ப்பதற்குக் காங்கிரஸ் நியமித்திருந்த கமிட்டியின் அறிக்கை மார்ச் 25-ஆம் தேதி வெளியாயிற்று. அதில் ஸர் மைக்கேல் ஓட்வியரின் கொடுங்கோல் ஆட்சியில் பஞ்சாப்பில் நடந்த அக்கிரமங்களைப் பற்றித் திட்டமான சாட்சியங்களுடன் விவரங்கள் வெளியாயின. பஞ்சாப் கொடுமைகளைப் பற்றியெல்லாம் முதன் முதலில் அப்போதுதான் தேச மக்கள் திட்டமான விவரங்களை அறிந்தார்கள். மக்களின் உள்ளம் எப்படிக் கொதித்திருக்கும் என்று சொல்லவும் வேண்டுமா? 1919-ஆம் வருஷத்தில் ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி முதல் 13-ஆம் தேதி வரையில் நடந்த சம்பவங்களின் ஞாபகார்த்தமாக இந்த வருஷம் 1920 ஏப்ரல் 6-ஆம் தேதி முதல் 13-ஆம் தேதி வரையில் தேசீய வாரம் கொண்டாடப்பட்டது. இந்தக் கொண்டாட்டங்களில் நாடெங்கும் ஹிந்துக்களும் முஸ்லிம்களும் சேர்ந்து ஈடுபட்டார்கள். “வந்தே மாதரம்” “அல்லாஹோ அக்பர்” “மகாத்மா காந்திக்கு ஜே!” என்ற மூன்று கோஷங்களும் சேர்ந்து வானளாவ ஒலித்தன. ஹிந்துக்களும் முஸ்லிம்களும் தாங்கள் ஒரு தாயின் வயிற்றில் பிறந்த இரத்த சகோதரர்கள் என்று எண்ணி அந்தக் காலத்தில் நடந்து கொண்டார்கள். அடுத்த மே மாதத்தில் சமாதான உடன்படிக்கை விவரங்கள் வெளியாயின. அந்தச் செய்தியை வெளியிட்ட வைஸ்ராய் லார்ட் செம்ஸ்போர்டு “சமாதான உடன்படிக்கை நிபந்தனைகள் இந்திய முஸ்லிம்களுக்கு மனத்துன்பத்தை உண்டாக்கக்கூடியது இயற்கைதான். ஆயினும் அவர்கள் பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும்!” என்று ஆறுதல் கூறவும் முன்வந்தார். ஆனால் முஸ்லிம்கள் பொறுமையைக் கடைப்பிடிக்கத் தயாராயில்லை. எரிகிற தீயில் எண்ணெய் விட்டதுபோல, அதே மாதத்தில் இன்னொரு சம்பவமும் கூடச் சேர்ந்தது. பஞ்சாப் கொடுமைகளைப்பற்றி விசாரிப்பதற்கு பிரிட்டிஷ் சர்க்கார் லார்ட் ஹண்டரின் தலைமையில் ஒரு கமிட்டியை நியமித்திருந்தார்கள் அல்லவா? அந்தக் கமிட்டியின் அறிக்கையும் வெளியாயிற்று. எதிர் பார்த்தது போலவே ஹண்டர் கமிட்டி அறிக்கை பஞ்சாப் கொடுமைகளைப் பற்றிப் பூசி மெழுகிவிட முயற்சி செய்தது. சில அதிகாரிகள் அவசியத்தைக் காட்டிலும் அதிகாரத்தைக் கொஞ்சம் அதிகமாக உபயோகித்து விட்டார்கள் என்று மட்டும் சொல்லி, வருங்காலத்துக்கு இராணுவச் சட்ட அமுல் நடத்தும் விதிகளை மாற்றி அமைக்க வேண்டும் என்று ஹண்டர் கமிட்டி சிபார்சு செய்தது. கொடுமை செய்த அதிகாரிகளில் ஜெனரல் டையர் மட்டும் வேலையிலிருந்து அனுப்பப்பட்டார். ஆனால் அவரைப் பற்றியும் மாண்டேகு “டையர் தாம் கடமை என்று கருதியதையே செய்தார்!” என்று முதுகிலே தட்டிக் கொடுத்தார். பஞ்சாபிலிருந்த ஐரோப்பியர்களோ தங்கத்தினாலே ஒரு பட்டாக் கத்தி செய்து ஜெனரல் டையருக்குப் பரிசு வழங்கினார்கள். இந்த நிலைமையில் மகாத்மா காந்தியின் ஒத்துழையாமை இயக்கம் உருவாகிக்கொண்டு வந்தது. அந்தத் திட்டத்தின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:- 1. பிரிட்டிஷ் சர்க்கார் கொடுத்த ராவ் பகதூர், ஸர் முதலிய பட்டங்களை விட்டுவிட வேண்டும். 2. சர்க்கார் சட்டப்படி அமைத்துள்ள சட்டசபைகளைப் பகிஷ்கரிக்க வேண்டும். 3. சர்க்கார் பள்ளிக்கூடங்களிலும் கலாசாலைகளிலும் படிக்கும் மாணவர்கள் அந்தக் கல்வி ஸ்தாபனங்களை விட்டு வெளியேறவேண்டும். 4. சர்க்கார் கோர்ட்டுகளைப் பொதுமக்களும் வக்கீல்களும் பகிஷ்கரித்து விடவேண்டும். 5. அரசாங்க உத்தியோகஸ்தர்கள் தங்கள் உத்தியோகங்களை விட்டு வெளியேறவேண்டும். 6. பொது ஜனங்கள் சர்க்காருக்கு எந்தவிதமான வரியும் கொடாமல் நிறுத்திவிடவேண்டும். மேற்கூறிய திட்டங்களில் முதல் நான்கு படிகளை உடனே அனுசரிக்கவேண்டும். ஐந்தாவது ஆறாவது படிகளைக் கடைசியாக அமுலுக்குக் கொண்டு வரவேண்டும். மேற்கூறிய எல்லாத் திட்டங்களுக்கும் அடிப்படையாக இருக்கவேண்டியவை சத்தியமும் அஹிம்சையும். மே மாதக் கடைசியில் பம்பாயில் கிலாபத் கமிட்டி கூடி மகாத்மாவின் ஒத்துழையாமை இயக்கத்தைப் பரிபூரணமாக ஏற்றுக்கொண்டது. மே மாதம் 30-ஆம் தேதி காசியில் கூடிய அகில இந்தியக் கமிட்டி கூட்டத்தில் அவ்வளவு ஒரு முகமான அபிப்பிராயம் வெளியாகவில்லை. ஏனெனில், சில காங்கிரஸ் தலைவர்கள் கிலாபத் இயக்கத்தைச் சுயராஜ்ய இயக்கத்தோடு சேர்க்க விரும்பவில்லை. காந்தி மகாத்மாவின் ஒத்துழையாமைத் திட்டத்தில் சில அம்சங்களையும் அவர்கள் ஒப்புக்கொள்ளத் தயாராயில்லை. எனவே, நீண்ட விவாதத்திற்குப் பிறகு, ஒத்துழையாமை இயக்கத்தைப்பற்றி தீர்மானிப்பதற்காக செப்டம்பர் மாதத்தில் கல்கத்தாவில் விசே ஷ காங்கிரஸ் கூட்டுவது என்று முடிவு செய்யப்பட்டது. ஆனால் விசே ஷ காங்கிரஸ் கூடும் வரையில் காத்திருப்பதற்குத் தேச மக்கள் தயாராயில்லை. முக்கியமாக, முஸ்லிம்கள் உடனே இயக்கத்தை ஆரம்பித்துவிட விரும்பினார்கள். இந்த நிலைமையை அறிந்த மகாத்மா அலகாபாத்தில் ஜூன் மாதம் 2-ஆம் தேதி எல்லாக் கட்சித் தலைவர்களும் அடங்கிய மகாநாடு ஒன்றைக் கூட்டினார். இந்த மகாநாட்டில் ஒத்துழையாமை இயக்கம் ஒப்புக்கொள்ளப்பட்டது விசே ஷ காங்கிரஸ் கூடும் வரையில் காத்திராமல் ஒத்துழையாமை இயக்கத்தை ஆரம்பித்து விட வேண்டும் என்று மகாத்மா காந்தியும் அவருடைய ஹிந்து முஸ்லிம் சகாக்களும் தீர்மானித்தார்கள். ஆகஸ்டு 1-ஆம் தேதி இயக்கத்தை ஆரம்பிப்பது என்று நாளும் குறிப்பிட்டார்கள். சட்டசபை பகிஷ்காரம் பாரத தேசத்தின் சுதந்திரத்துக்காகப் போராடிய இரண்டு மாபெரும் தலைவர்களைச் சொல்லும்படி கேட்டால், (1) லோகமான்ய திலகர் (2) மகாத்மா காந்தி என்னும் இரு பெயர்களைத்தான் யாரும் சொல்லுவார்கள். 1920-ஆம் வருஷத்துக்கு முன்னால் லோகமான்ய பால கங்காதர திலகர் இந்தியப் பொது மக்களின் இதய சிம்மாசனத்தில் முடிசூடா மன்னராக வீற்றிருந்தார். இந்திய சுதந்திரப் படையின் பிரதம சேனாதிபதியாகவும் ஸ்ரீ திலகர் விளங்கினார். “சுதந்திரம் நமது பிறப்புரிமை” என்னும் மந்திரத்தை அவர் மக்களுக்கு அளித்தார். பிரிட்டிஷ் சர்க்காரிடம் மக்கள் கொண்டிருந்த அச்சத்தை அவர் போக்கினார். தேச சுதந்திரத்துக்காக எத்தகைய தியாகமும் செய்யத் தயாராக இருக்கவேண்டும் என்று தம்முடைய சொந்த வாழ்க்கை உதாரணத்தினால் மக்களுக்குப் போதித்தார். காந்தி மகாத்மாவின் ஒத்துழையாமைத் திட்டத்தைப் பழைய தேசீயத் தலைவர்கள் பலர் ஒப்புக்கொள்ளவில்லையென்று சொன்னோம் அல்லவா? அப்படி ஒப்புக் கொள்ளாதவர்களில் திலகரும் ஒருவர். மகாத்மாவுடன் திலகர் மாறுபட்டதற்குச் சில முக்கிய காரணங்கள் இருந்தன. (1) இந்திய முஸ்லிம்களின் கிலாபத் கிளர்ச்சியுடன் சுயராஜ்ய இயக்கத்தைப் பிணைப்பதைத் திலகர் விரும்பவில்லை. (2) அமிருதஸரஸ் காங்கிரஸ் தீர்மானத்தின்படி புதிய சீர்திருத்தச் சட்டசபைகளைக் கைப் பற்றி அவற்றின் மூலம் சுதந்திரத்துக்கு மேலும் போராட வேண்டும் என்று திலகர் கருதினார். சட்டசபைகளைப் பகிஷ்கரிக்கும் யோசனையைத் திலகர் விரும்பவில்லை. (3) சுதந்திரப் போரைத் தனித்த அரசியல் போராகவே நடத்தவேண்டும் என்று திலகர் கருதினார். பிரிட்டிஷ் ஆட்சி தந்திரத்தினாலும் சூழ்ச்சியினாலும் ஸ்தாபிக்கப்பட்டதாகையால் அந்த ஆட்சியை ஒழிப்பதற்கு இராஜ தந்திரத்தையும் அரசியல் சூழ்ச்சியையும் கையாளவேண்டும் என்றும் கருதினார். காந்தி மகாத்மா அரசியல் போரில் அஹிம்சா தர்மத்தையும் சத்தியத்தையும் வற்புறுத்தியதைத் திலகர் விரும்பவில்லை. லோகமான்யரும் அவரைப்போல இன்னும் பல பழந்தலைவர்களும் இவ்வாறெல்லாம் அபிப்பிராய பேதம் கொண்டிருந்தது இயற்கைதான். கிலாபத் விஷயமாக அவர்கள் கொண்டிருந்த பயம் பின்னால் உண்மையாயிற்று. துருக்கியில் முஸ்தபா கமால் பாட்சா என்பவர் தோன்றி துருக்கி சுல்தான் பதவியையும் கிலாபத் பீடத்தையும் ஒழித்துவிட்டுத் துருக்கியில் குடியரசை ஸ்தாபித்தார். ஆகவே கிலாபத் கிளர்ச்சியின் அடிப் படையே போய்விட்டது. கிலாபத் கிளர்ச்சியில் முன்னணியில் நின்ற முஸ்லிம் தலைவர்கள் உற்சாகத்தை இழந்து தேசீய இயக்கத்திலிருந்து விலகிக்கொண்டார்கள். பலர் காங்கிரஸுக் கும் தேசத்தின் சுதந்திரத்துக்கும் விரோதிகள் ஆனார்கள். “வந்தேமாதரம்” என்று மசூதியில் கோஷம் இட்ட முஸ்லிம் தலைவர்கள் பின்னால் அந்தக் கீதத்தைச் சட்ட சபைகளிலே பாடக்கூடாது என்று ஆட்சேபிக்கவும் தொடங்கினார்கள். ஆகவே திலகர் பெருமான் காந்திஜி ஆரம்பித்த இயக்கத்தைப்பற்றித் தயக்கம் காட்டியதற்குக் காரணம் இல்லையென்று சொல்லமுடியாது. ஆனாலும் தேசீய இயக்கத்துக்குக் காந்திஜி கொண்டு வந்திருந்த புதிய சக்தியைத் திலகர் சரியாக மதிப்பிட்டார். தேசத்தில் ஏற்பட்டிருந்த உணர்ச்சி வேகத்தையும் அறிந் திருந்தார். ஆகையால் காந்திஜியின் இயக்கத்துக்கு அவர் குறுக்கே நிற்கவோ, எதிர்த்துத் தடை செய்யவோ சிறிதும் விரும்பவில்லை. கல்கத்தா விசே ஷ காங்கிரஸில் என்ன விதமாய்த் தீர்மானம் ஆகிறதோ, அதைத் தம் முழு மனதுடன் ஒப்புக்கொள்வதாக லோகமான்ய திலகர் பகிரங்கமாகத் தெரியப்படுத்தினார். ஆனால் அம்மாதிரி காந்தியும் திலகரும் சேர்ந்து போர் நடத்துவதற்குப் பாரத தேசம் கொடுத்துவைக்கவில்லை. கல்கத்தா விசே ஷ காங்கிரஸ் வரையில் திலகர் உயிரோடிருக்க வில்லை. 1920-ஆம் வருஷம் ஆகஸ்டு மாதம் முதல் தேதி காந்திமகான் பம்பாயில் ஒத்துழையாமை இயக்கத்தை ஆரம்பித்து விட்டுத் தேசத்தில் சுற்றுப்பிரயாணம் செய்வதற்குத் திட்டம் போட்டிருந்தார் அல்லவா? அதற்கு முதல் நாள், ஜூலை மாதம் 31-ஆம் தேதி நள்ளிரவில் லோகமான்ய பாலகங்காதர திலகர் இந்தப் பூத உடலை நீத்து அமர வாழ்வு எய்தினார். பாரத தேசத்துக்கும் பாரத தேச மக்களுக்கும் இந்தச் சம்பவம் ஒரு சூசகம்போல் அமைந்தது. இந்திய சுதந்திரப் போரின் சரித்திரத்திலேயே ஒரு சகாப்தம் முடிந்து மற்றொரு சகாப்தம் ஆரம்பமாகிவிட்டது என்பதற்கு லோகமான்ய திலகருடைய மரணம் அறிகுறியாயிற்று. காந்திமகாத்மா தேசீயப் போருக்குத் தலைமை வகித்து அவருடைய புதிய வழியில் போரை நடத்தும்படி விட்டுவிட்டு லோகமான்ய திலகர் விடை பெற்று வீர சொர்க்கம் சென்றது போலவே யிருந்தது. 1920-ஆம் வருஷம் ஆகஸ்டு மாதம் முதல் தேதி பம்பாயில் லட்சக்கணக்கான ஜனங்கள் கூடித் திலகருடைய பிரேத ஊர்வலத்துடன் சென்று தகனக்கிரியை நடத்திவிட்டுத் திரும்பினார்கள். அன்று மாலையே காந்திமகான் குறிப்பிட்ட தேதி தவறாமல் ஒத்துழையாமை இயக்கத்தையும் ஆரம்பித்து வைத்தார். பட்டதாரிகள் பட்டங்களை விடவேண்டும் என்றும், சட்டசபைகளுக்கு தேசீயவாதிகள் நிற்கக்கூடாதென்றும், வோட்டர்கள் வோட்டுக் கொடுக்கக் கூடாதென்றும், வக்கீல்கள் தங்கள் தொழிலை விடவேண்டும் என்றும், மாணவர்கள் சர்க்கார் கலாசாலைகள் - பள்ளிக்கூடங்களைப் பகிஷ்கரிக்க வேண்டும் என்றும் பகிரங்கமாகக் கேட்டுக்கொண்டார். இந்தத் திட்டத்துக்கிணங்க ஆங்காங்கு சில பிரபல வக்கீல்கள் தங்கள் வக்கீல் தொழிலை விட்டார்கள். குஜராத்தில் ஸ்ரீயுத வல்லபாய் படேலும், பீஹாரில் பாபு ராஜேந்திர பிரஸாத்தும், சென்னையில் ஸ்ரீ சக்கரவர்த்தி இராஜகோபாலாச்சாரியாரும் பெரும் வருமானம் அளித்து வந்த வக்கீல் தொழிலை விட்டொழித்தார்கள். இவர்களைப் பின்பற்றிச் சிற்சில வாலிப வக்கீல்களும் தொழிலை விட்டுத் தேசப்பணியில் இறங்கினார்கள். ஆனால் தேசத்தின் பெரும்பாலான தேசீய வாதிகள் கல்கத்தா விசே ஷ காங்கிரஸில் என்ன தீர்மானம் ஆகப் போகிறது என்பதை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஆகஸ்டு மாதத்தில் காந்தி மகானும் அலி சகோதரர்களும் தேசத்தில் சுற்றுப்பிரயாணம் செய்தார்கள். அவர்கள் சென்ற இடங்களில் எல்லாம் பதினாயிரக் கணக்கில் ஜனங்கள் கூடி ஆர்ப்பரித்தார்கள். தலைவர்களுடைய மனப்போக்கு எப்படி யிருந்தாலும் தேச மக்கள் காந்திஜியின் தலைமையையும் அவருடைய ஒத்துழையாமைத் திட்டத்தையும் வரவேற்கிறார்கள் என்பது நாளுக்கு நாள் நன்கு புலப்பட்டு வந்தது. இந்த நிலைமையில் கல்கத்தா விசே ஷ காங்கிரஸ் செப்டம்பர் 4-ஆம் தேதி கூடி 9-ஆம் தேதி வரையில் நடைபெற்றது. இந்த விசே ஷ காங்கிரஸுக்கு லாலா லஜபதிராய் தலைமை வகித்தார். இந்தியாவுக்குள் பிரவேசிக்கக் கூடாது என்று பிரிட்டிஷ் சர்க்காரால் உத்திரவிடப் பட்டுப் பல வருஷகாலம் அமெரிக்காவில் வசித்தவர் லஜபதிராய். அந்த வருஷத்திலேதான் மேற்படி தடை உத்தரவு நீங்கி லஜபதிராய் இந்தியாவுக்குத் திரும்பி யிருந்தார். திலகருக்கு அடுத்தபடியாக அவர் தேச மக்களின் இதயத்தில் நீண்ட காலமாக இடம் பெற்றிருந்தார். அப்படிப் பட்டவர் விசே ஷ காங்கிரஸில் தலைமை வகித்துச் செய்த பிரசங்கத்தில் காந்திஜியின் ஒத்துழையாமைத் திட்டத்தை ஆதரிக்கவில்லை. அதற்கு எதிரான காரணங்களை விஸ்தரித்திருந்தார். வரவேற்புக் கமிட்டித் தலைவரான ஸ்ரீ பி. சக்கரவர்த்தியும் அப்படித்தான். இன்னும் அந்தக் காங்கிரஸுக்கு வந்திருந்த பிரபல தலைவர்கள் பலர் அத்திட்டத்துக்கு விரோதமாகவே இருந்தார்கள். திலகருடைய சீடர்களான ஸ்ரீ கேல்கர், கபார்தே, அப்யங்கர், ஆனே முதலியோரும், வங்காளத் தலைவர்களான ஸ்ரீ விபின சந்திரபால், ஸ்ரீ சித்தரஞ்சனதாஸ் ஆகியவர்களும், ஐக்கிய மாகாணத்திலிருந்து வந்திருந்த பண்டித மாளவியா, பண்டித மோதிலால் நேரு ஆகியவர்களும், சென்னையைச் சேர்ந்த ஸ்ரீ சி. விஜயராகவாச்சாரியார், ஸ்ரீ ஏ. ரங்கசாமி ஐயங்கார், ஸ்ரீ எஸ். சத்தியமூர்த்தி ஆகியவர்களும் மூவகைப் பகிஷ்காரத் திட்டத்தைப் பலமாக எதிர்த்தார்கள். சென்னையில் ஸ்ரீ எஸ். சீனிவாசய்யங்கார் அந்த வருஷத்திலே தான் அட்வகேட் ஜெனரல் பதவியை உதறி எறிந்து விட்டு அரசியல் வாழ்க்கையை மேற்கொண்டிருந்தார். அவருடைய தலைமையில் திருநெல்வேலியில் மாகாண மகாநாடு மிகச் சிறப்பாக அவ்வருஷம் நடைபெற்றது. மகாத்மா காந்தியின் ஒத்துழையாமை இயக்கம் ‘சட்ட வரம்புக்குப் புறம்பானது’ (Unconstitutional) என்ற அபிப்பிராயத்தை ஸ்ரீ எஸ். சீனிவாச அய்யங்கார் தெரிவித்திருந்தார். இத்தகைய எதிர்ப்புகளைப் பார்த்தவர்கள் கல்கத்தா விசேஷ காங்கிரஸ் மகாத்மாவின் திட்டத்தை நிராகரித்து விடும் என்றேகருதினார்கள். எதிர்த்தவர்களில் காந்தி மகாத்மாவின் கட்சிக்குத் திரும்பிய முதல் பிரமுகர் பண்டித மோதிலால் நேரு. அப்போதுதான் அவருடைய அருமைப் புதல்வர் பண்டித ஜவாஹர்லால் நேரு தேசீய வாழ்க்கையில் பிரவேசித்திருந்தார். பஞ்சாப் கொடுமைகளைப் பற்றிய விசாரணையில் ஜவாஹர்லால்ஜி உதவி செய்த போது அங்கு நடந்த கொடுமைகளைப் பற்றித் தெரிந்து கொண்டிருந்தார். அவருடைய உள்ளம் ஆத்திரத்தினால் பொங்கிக் கொண்டிருந்தது. காந்திஜியின் தலைமையிலே தான் பாரத நாடு விடுதலை யடையக்கூடும் என்ற நம்பிக்கையும் அவருக்கு ஏற்பட்டிருந்தது. ஜவாஹர்லால்ஜியின் தீவிரமும் நம்பிக்கையும் பண்டித மோதிலால் நேருவின் மனம் மாறுவதற்குக் காரணமாயிருந்தன. கலாசாலை பகிஷ்காரம், கோர்ட் பகிஷ்காரம் - ஆகிய இரு திட்டங்களையும் ‘கொஞ்சம் கொஞ்சமாக’ நடத்தவேண்டும் என்ற திருத்தத்தை மகாத்மா ஒப்புக் கொண்டதின் பேரில் பண்டித மோதிலால் ஒத்துழையாமைத் திட்டத்தை ஆதரிக்க முன்வந்தார். வோட்டு எடுத்தபோது மகாத்மாவின் திட்டத்துக்குச் சாதகமாக 1856 வோட்டுக்களும் எதிராக 844 வோட்டுக்களும் பதிவாயின. ஆகவே மகாத்மாவின் ஒத்துழையாமைத் திட்டம் நிறை வேறியது. இது பழைய காங்கிரஸ் தலைவர்களுக்கெல்லாம் வியப்பையும் திகைப்பையும் அளித்தது. “இவர் யார், இந்த காந்தி? இவ்வளவு சக்தியுடனும் அதிகாரத்துடனும் இவர் பேசுவதின் இரகசியம் என்ன? தீர்க்காலோசனையுடனும் அநுபவ ஞானத்துடனும் நாம் சொல்லும் யோசனையைப் புறக்கணித்து இவருடைய பேச்சை மக்கள் கேட்பதின் காரணம் என்ன? இதே காந்தி அமிருதஸரஸில் ‘புதிய சீர்திருத்தங்களை நிராகரிக்கக் கூடாது’ என்று சொன்னார். ஜனங்கள் ஒப்புக்கொண்டார்கள். இவரே இப்போது ‘புதிய சட்ட சபைகளைப் பகிஷ்கரிக்க வேண்டும்’ என்கிறார். இவ்விதம் இந்தக் காந்தி முன்னுக்குப் பின் முரணாகச் சொல்வதைக் கூடக் கவனியாமல் இவரை மக்கள் ஆதரிக்கும் அதிசயந்தான் என்ன?” - இவ்வாறு பழைய தேசத் தலைவர்கள் சிந்தனை செய்தார்கள். ஆனால் பொது மக்களுக்கு இத்தகைய சிந்தனை ஒன்றும் இல்லை. “பாரத நாட்டை விடுதலை செய்யவும் பாரத மக்களை மேலே உயர்த்தவும் இதோ ஒரு அவதார புருஷர் தோன்றி விட்டார்” என்று மக்கள் திடமாக நம்பினார்கள். ஆகையால் கல்கத்தா காங்கிரஸ் தீர்மானம் நாடெங்கும் அளவில்லாத உற்சாகத்தை உண்டாக்கியது. கல்கத்தா காங்கிரஸில் தீர்மானம் நிறைவேறி விட்டது. ஆனால் அதைக் காரியத்தில் நடத்தி வைக்க வேண்டிய பொறுப்பு காந்திஜிக்கு ஏற்பட்டது. அது வரையில் தேசீயப் போரின் முன்னணியில் நின்ற காங்கிரஸ் தலைவர்கள் பெரும்பாலும் உற்சாகக் குறைவு அடைந்திருந்தார்கள். சட்டசபை பகிஷ்காரத் திட்டம் அவர்களுக்குப் பிடிக்கவில்லை. ஆனால் காங்கிரல் தீர்மானத்துக்கு விரோதமாகப் போகவும் அவர்கள் விரும்பவில்லை. ஆகையால் சட்டசபைத் தேர்தலுக்கு நிற்கப் போவதாக அறிவித்திருந்த தேசீயவாதிகள் பலர் தாங்கள் நிற்கப் போவதில்லை என்று அறிவித்து விட்டுச் சும்மா இருந்தார்கள். ஆனால் மிதவாதிகள் என்று சொல்லப் பட்டவர்களும் மற்றும் காங்கிரஸுக்கு எப்போதும் எதிராயிருந்தவர்களும் பட்டம் பதவிகளுக்கு ஆசைப்பட்டவர்களும், வகுப்புவாதிகளும் சட்டசபைத் தேரதலுக்கு நின்றார்கள். சென்னை மாகாணத்தில் அப்போதுதான் சர்க்கார் உத்தியோகங்களையும் பதவிகளையும் கைப்பற்றுவதையே முக்கிய நோக்கமாகக் கொண்டு ஜஸ்டிஸ் கட்சி ஏற்பட்டிருந்தது. இந்தக் கட்சியார் சட்டசபைத் தேர்தலில் மும்முரமாக ஈடுபட்டார்கள். ஆகவே நாட்டில் ஓரிடத்திலாவது எந்த சட்டசபை ஸ்தானத்துக்கும் அபேட்சகர் முன் வராமற் போகவில்லை. இந்த நிலைமை ஒருவாறு எதிர்பார்க்கப்பட்டது தான். அதனாலேயே ஸ்ரீ சி.ஆர். தாஸ் முதலியவர்கள் சட்டசபை பகிஷ்காரத்தை எதிர்த்தார்கள். ஆனால் காந்தி மகாத்மா மேற்படி நிலைமை குறித்துச் சிறிதும் கவலைப்படவில்லை. “காங்கிரஸ் திட்டம் நிறைவேறுவது லட்சக் கணக்கான வோட்டர்களைப் பொறுத்ததே தவிர, ஒரு சில பதவி வேட்டைக் காரர்களைப் பொறுத்ததல்ல” என்று மகாத்மா கருதினார். ஆகையால் நாடெங்கும் பிரசாரம் செய்து புதிய சட்டசபைத் தேர்தல்களில் வோட்டர்கள் வோட்டுக்கொடுக்காமல் செய்து விடவேண்டும் என்று சொன்னார். அதற்கு முயற்சியும் ஆரம்பித்தார். காந்திஜியின் ஆத்மசக்தி முறையில் நம்பிக்கை கொண்டு புதிதாக அரசியல் துறையில் இறங்கியிருந்த அவருடைய சீடர்கள் நாடெங்கும் அந்த முயற்சியை நடத்திவைத்தார்கள். பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் முதல் முதலாக அப்போதுதான் (மாண்டேகு செம்ஸ்போர்டு திட்டத்தின்படி) ஏராளமான இந்திய மக்கள் வோட்டுரிமையைப் பெற்றிருந்தனர். பத்து ரூபாய் நிலவரி செலுத்துவோருக்கெல்லாம் மாகாண சட்ட சபைக்கு வோட்டுரிமையும் ஐம்பது ரூபாய்க்கு மேல் நிலவரி செலுத்துவோருகேல்லாம் இந்திய சட்டசபைக்கு வோட்டுரிமையும் கிடைத்திருந்தது. நகரங்களிலும் பட்டணங்களிலும் வீட்டு வரி செலுத்துவோருக் கெல்லாம் வோட்டுரிமை கிடைத்திருந்தது. இதைத் தவிர எழுதப் படிக்கத் தெரிந்த ( அதாவது கையெழுத்துப் போடத்தெரிந்த ) எல்லாருக்கும் வோட்டுரிமை தரப்பட்டிருந்தது. ஆகவே ஒவ்வொரு தொகுதியிலும் ஆயிரக்கணக்கான வோட்டர்கள் இருந்தார்கள். நீண்டகால அரசியல் போராட்டத்தின் பயனாக ஜனங்கள் முதன் முதலாக அடைந்திருந்த இந்த வோட்டுரிமையை “உபயோகிக்க வேண்டாம்” என்று இப்போது பிரசாரம் செய்ய வேண்டியதாயிற்று. “போலிங் ஸ்டே ஷனுக்கு போக வேண்டாம்; வோட்டு கொடுக்க வேண்டாம்!” என்று சொல்ல வேண்டியதாயிற்று. இந்த சங்கடமான காரியத்தை இந்திய தேசமெங்கும் காந்தி மகானின் சீடர்கள் மேற்கொண்டு நடத்தினார்கள். மகாத்மாவின் போர் முறையில் பிரதிக்ஞை செய்துகொள்வது ஒரு முக்கியமான அம்சம். எந்த நல்ல காரியமானாலும் அதைப்பற்றி வெறுமனே பேசுவதைக் காட்டிலும் பிரதிக்ஞை செய்து கொள்வது அதிக பலன் அளிக்கும் என்று காந்திஜி கருதினார். ‘கூட்டத்தில் கோவிந்தா’ என்று பிரதிக்ஞை செய்வதைக் காட்டிலும் காகிதத்தில் எழுதிக் கையெழுத்துப் போடுவதில் இன்னும் அதிக பலந் உண்டு என்று நம்பினார். தென்னாப்ரிக்காவில் பல போராட்டங்களில் பூர்வாங்கமாக மகாத்மா இந்தியர்களிடம் கையெழுத்துக்கள் வங்கியதைப் பார்த்திருக்கிறோமல்லவா? அது போலவே இப்பொழுது இந்தியாவிலும் “சட்டசபைத் தேர்தல்களில் வோட்டுப் போடுவதில்லை” என்ற பிரதிக்ஞா பத்திரங்கள் ஏராளமாக அச்சிடப்பட்டன. அவற்றில் வோட்டர்களின் கையெழுத்து வாங்கப்பட்டது. காந்திஜியின் திட்டத்தில் நம்பிக்கை கொண்ட தலைவர்களும் தொண்டர்களும் கிராமம் கிராமமாகப் போய் வோட்டார்கள் யார் என்று கண்டுபிடித்துக் கையெழுத்து வாங்கினார்கள். அந்தச் சமயத்தில் காந்திஜியைப் பற்றியும் அவருடைய வாழ்கை-போர்முறை-ஒத்துழையாமைத் திட்டம் ஆகியவை பற்றியும் ஜனங்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டியதாயிருந்தது. செப்டம்பர், அக்டோபர் இந்த இரண்டு மாதத்தில் மேற்கூறிய முயற்சி நடைபெற்றது. இந்த இரண்டு மாதத்திலும் இந்தியாவின் கிராமங்களில் தேசீயப் பிரசாரம் நடந்தது போல் அதற்கு முன்னால் எப்போதும் நடந்தது கிடையாது. நவம்பர் மாதத்தில் இந்தியா சட்ட சபைகளுக்கும் தேர்தல்கள் நடந்தன. சட்டசபை பகிஷ்காரப் பிரசாரம் வோட்டர்களிடம் மகத்தான பலனை அளித்திருப்பது நன்றாகத் தெரிய வந்தது. ஆயிரமாயிரம் வோட்டுப் பெட்டிகள் காலியாக திரும்பின. இன்னும் பல வோட்டுப் பெட்டிகளில் கால்வாசிகூட நிரம்பவில்லை. தேசமெங்கும் கணக்குப் பார்த்தபோது 1௦௦-க்கு 15 வீதம் தான் வோட்டர்கள் வோட்டுக் கொடுத்திருந்தார்கள் என்று தெரிய வந்தது. காந்தி மகாத்மாவின் திட்டம் யாரும் எதிர்பார்த்ததைக் காட்டிலும் மகத்தான வெற்றி அடைந்ததாகவே கருதப்பட்டது. இதை இந்திய சர்க்கார் வெளியிடும் வருஷாந்தர நிர்வாக அறிக்கையிலும் குறிப்பிட்டிருந்தார்கள். “காந்திஜியின் ஒத்துழியாமைத் திட்டம் சட்டசபை பகிஷ்காரத்தில் நல்ல செல்வாக்கைப் பெற்றது. காங்கிரஸ் சட்டசபை பகிஷ்காரம் செய்ததின் காரணமாக மிதவாதிகளுக்கு அரசியல் நிர்வாகத்தில் ஈடுபட ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது” என்றும் சொல்லியிருந்தார்கள். ஆனால் அப்படிச் சட்டசபைக்கு சென்ற மிதவாதிகள் முதலியோர் பொதுஜன ஆதரவைப் பெற்றிருக்கவில்லை என்பதை எல்லோரும் ஒப்புக் கொண்டார்கள். மகாத்மா காந்திஜி இந்தியப் பொதுமக்களின் இதயத்தில் “காந்தி மகாராஜா” ஆகிவிட்டார் என்று தெரிந்தது. தலைமைக் கிரீடம் “அந்த நாட்களில் வாழ்ந்திருப்பதற்கே பாக்கியம் செய்திருக்கவேணும்!” என்று சொல்லும்படியாக ஒவ்வொரு நாட்டின் சரித்திரத்திலும் ஒரு காலம் வருவதுண்டு. பாரத நாட்டின் சரித்திரத்திலும் 1921-ஆம் வருஷம் அத்தகைய வருஷம். அந்த வருஷத்தில் காந்தி மகானின் தலைமையில் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் தியாகமாகிய வேள்வித் தீயில் குதித்தார்கள். சுயநலம் என்பதை அடியோடு மறந்து, “தாய்நாட்டிற்கே உழைக்க-ஜன்மம் எடுத்தோம்” என்று பாடிக்கொண்டு சுதந்திரப்போரில் ஈடுபட்டார்கள். இதற்கெல்லாம் காரணமாயிருந்தது நாகபுரி காங்கிரஸ். மகாத்மாவின் ஒத்துழையாமை இயக்கம் சம்பந்தமாகத் தலைவர்களுக்குள் ஏற்பட்டிருந்த வேற்றுமைகள் நாகபுரி காங்கிரஸில் மறைந்து விட்டன. வோட்டு எடுக்காமல் ஏக மனதாகத் தீர்மானங்கள் நிறைவேறின. இந்த அதிசயம் எப்படி நடந்தது என்று பார்க்கலாம். சட்ட சபை பகிஷ்காரம் வெற்றியடைந்தது என்பதாக மகாத்மா காந்தியும் அவருடைய சீடர்களும் கருதினார்கள். ஆனால் கல்கத்தா விசேஷ காங்கிரஸில் ஒத்துழையாமைத் திட்டத்தை எதிர்த்த தலைவர்கள் அவ்விதம் கருதவில்லை. “சட்ட சபை ஸ்தானம் ஒன்றுகூடக் காலியாக இல்லையே? தேசியவாதிகள் கைப்பற்றி யிருக்ககூடிய ஸ்தானங்களில் அதிகார வர்க்க தாஸர்கள் வீற்றிருக்கிறார்களே? வோட்டு எத்தனை பேர் கொடுத்தால் என்ன? காரியம் நடந்து கொண்டு தான் இருக்கிறது? அதிகார வர்க்கத்துக்கஇன்னும் சௌகிரியமாகத்தானே போயிற்று?” என்று அவர்கள் வாதமிட்டார்கள். வக்கீல்கள் வேலையே விடுவது, மாணாக்கர்கள் கலாசாலைகளை விடுவது,- ஆகிய திட்டங்களையும் காரியாம்சத்தில் நிறைவேற்ற முடியாது என்று நினைத்தார்கள். ஆகையால் 1920-ஆம் வருஷம் டிசம்பர் மாதக் கடைசியில் நாகபுரி காங்கிரஸில் மகாத்மாவின் திட்டத்தை மாற்றி விடுவதற்காகப் பலம் திரட்டத் தொடங்கினார்கள். காந்திஜியின் சீடர்களும் சும்மா இருக்கவில்லை. அவர்களும் நாகபுரி காங்கிரஸில் பலப் பரிட்சைக்கு ஆயத்தமானார்கள். ஆகவே நாகபுரி காங்கிரஸ் மிகவும் முக்கியத்தை அடைந்தது. அதற்கு முன்னாலும் பின்னாலும் நடந்த வேறு எந்த காங்கிரஸுக்கும் அவ்வளவு பிரதிநிதிகள் வந்ததில்லை. மொத்தம் 14,582 பிரதிநிதிகள் வந்திருந்தார்கள். ஸ்ரீ சித்தரஞ்சனதாஸ் தம்முடைய சொந்த பணத்தில் முப்பதாயிரம் ருபாய் செலவு செய்து இருநூற்று ஐம்பது பிரதிநிதிகளை அழைத்து வந்தார். (இதில் மூடு மந்திரம் ஒன்றும் இல்லை. சித்தரஞ்சனதாஸ் பகிரங்கமாக கூறிய விஷயந்தான். ) இப்படியே பிரபல தலைவர்கள் தங்கள் கட்சிக்கு ஆதரவாகப் பிரதிநிதிகளைத் திரட்டிக் கொண்டு வந்தார்கள். பழம் பெரும் தேசபக்தரான சேலம் ஸ்ரீ சி. விஜயராகவாச்சாரியார் நாகபுரி காங்கிரஸுக்குத் தலைமை வகித்தார். அவர் தமது தலைமை உரையில் ஒத்துழையாமைத் திட்டத்தை எதிர்த்தே பேசினார். “அப்படி ஒத்துழையாமை இயக்கம் தொடங்குவது என்று ஏற்பட்டால், பஞ்சாப்-கிலாபத் அநீதிகளுக்காக மட்டும் அதைத் தொடங்குவனேன்! சுயராஜ்ய சித்திக்காகவே அந்த இயக்கத்தை நடத்தலாமே?” என்றார். தம்மை எதிர்பவர்களுடைய பேச்சை மகாத்மா எப்போதும் கவனமாகக் காதுகொடுத்துக் கேட்பது வழக்கம். ஏதேனும் ஒன்று நியாமாகத் தோன்றினால் அதை ஒப்புக்கொள்ளத் தவறுவதுமில்லை. பஞ்சாப் கிலாபத் அக்கிரமங்களுக்குப் பரிகாரம் தேடவே ஒத்துழையாமை ஆரம்பிப்பதாகக் காந்திஜி சொன்னதின் காரணம் என்ன தெரியுமா? அந்த இரண்டு அநீதிகளுக்கும் பரிகாரம் பெறுவதில் வெற்றி பெற்றோமானால், அந்தப் போரில் நமக்கு ஏற்படும் பலமே சுயராஜ்யம் அளித்துவிடும் தான். ஆனால், ஸ்ரீ சி. விஜயராகவாச்சாரியாரின் யோசனையை ஏற்று கொள்வதில் ஆட்சேபம் ஒன்றும் இருக்கவில்லை. எனவே, சுயராஜ்ய சித்தியையும் ஒத்துழையாமையின் மூன்றாவது நோக்கமாக கொள்வதாக மகாத்மா ஒப்புக்கொண்டார். ஸ்ரீ சித்தரஞ்சனதாஸ் முதலிய தலைவர்கள் ஒத்துழையாமை இயக்கத்தையே எதிர்ப்பது என்று கங்கணம் கட்டிக் கொண்டு வந்தார்கள் அல்லவா? ஆனால் நாகபுரி காங்கிரஸ் விடுதிக்கு வந்து சேர்ந்ததும் அவர்களுக்குத் தயக்கம் உண்டாகி விட்டது. காந்திஜியை எதிர்ப்பது வீண்வேலை என்று அவர்களுக்குத் தெளிவாகத் தெரிந்து விட்டது. காங்கிரஸ் பிரதிநிதிகளுக்குள்ளே காந்திஜியின் திட்டத்துக்கு அமோகமான ஆதரவு இருப்பதைக் கண்டார்கள். அதுமட்டுமல்ல; அமிருதசரஸ் காங்கிரஸுக்கு வந்திருந்த பிரதிநிதிகளைப் போலவே நாகபுரிக்கு வந்திருந்த பிரதிநிதிகளும் தலைவர்கள் வேற்றுமைப்பட்டு விவாதம் செய்வதை விரும்பவில்லையென்று தெரிந்தது. ஸ்ரீ சித்தரஞ்சனதாஸ் முதலியவர்கள் இன்னொரு விஷயத்தையும் கண்டார்கள். காந்திஜியின் வேலைத் திட்டங்களைச் சாதாரண அறிவாராய்ச்சிகளுக்கு உட்படுத்துவதில் பிரயோஜனமில்லை. அந்த மகான் மற்றவர்களைப்போல லாப நஷ்டங்களையும் பலா பலன்களையும் யோசித்துக்கொண்டு ஒரு திட்டத்தை செலுத்துவதில்லை. அவருடைய அந்தராத்மா எந்த வழியைச் சொல்கிறதோ, அதை அவர் சொல்லுகிறார். தமது உள்ளுணர்ச்சியை ஆதாரமாகக் கொண்டு வாதமிடுகிறார். அவர் சொல்லும் திட்டத்தை நிறைவேற்றுவதற்குத் தமது ஆத்ம சக்தியையே நம்பியிருக்கிறார். இத்தகைய மகா புருஷருக்கு முன்னால் வெறும் வாதங்கள் என்ன செய்ய முடியும்? தேச மக்களும் அவருடைய வார்த்தையே வேத வாக்காகக் கொள்கிறார்களே தவிர, மற்றவர்களுடைய தீர்க்க யோசனை வாய்ந்த அறிவுக்கு உகந்த, வாதங்களைச் செவி கொடுத்துக் கேட்பதுகூட இல்லை! இந்த நிலைமையை நாகபுரிக்கு வந்து சேர்ந்த தலைவர்கள் நன்கு உணர்ந்தார்கள். மகாத்மாவின் ஆத்ம சக்தி அவர்களையும் ஆட்கொண்டது. கல்கத்தா காங்கிரஸின் போதே காந்திஜியை சேர்ந்து விட்ட பண்டித மோதிலால் நேரு இந்தக் காங்கிரஸில் சமரசம் செய்து வைப்பதில் முன்னணியில் நின்றார். மற்றத் தலைவர்களும் சமரசத்துக்குத் தயாராகவே இருந்தார்கள். விஷயாலோசனைக் கமிட்டியில் ஓரளவு விவாதம் நடந்தது. மகாத்மாவின் திட்டத்தை ஸ்ரீ சி.ஆர். தாஸ் முதலியவர்கள் எதிர்த்துப் பேசினார்கள். அந்த நாளில் இந்தியாவின் நண்பர்கள் சிலர் இங்கிலாந்தில் இருந்தார்கள். இவர்களில் கர்னல் வெட்ஜ்வுட், மிஸ்டர் பென்ஸ்பூர், மிஸ்டர் ஹால்பர்ட் நைட் ஆகியவர்கள் நாகபுரி காங்கிரஸுக்கு வந்திருந்தார்கள். அவர்களும் “ஒத்துழையாமைத் திட்டத்தை மேற்கொள்ள வேண்டாம்” என்று சொல்லிப் பார்த்தார்கள். மகாத்மா காந்தி எழுந்து ஆட்சேபங்களுக் கெல்லாம் பதில் சொல்லியபோது எதிர்த்தவர்கள் எல்லாரும் மந்திரத்தில் கட்டுண்டவர்கள் போல் ஆகிவிட்டார்கள். பிறகு யாரும் எதிர்த்துப் பேசவே துணிய வில்லை. எதிர்க்க வந்தவர்களும் எதிர்த்துப் பேசியவர்களும் தங்கள் எதிர்ப்பை வாபஸ் பெற்றுக் கொண்டார்கள். மகாத்மாவின் திட்டத்தையும் பூரணமாக ஒப்புக்கொண்டார்கள். ஆகவே காங்கிரஸ் மகாசபை கூடியபோது, ஒத்துழையாமைத் தீர்மானத்தை ஸ்ரீ சி.ஆர். தாஸ் பிரேரேபித்தார்! ஸ்ரீ லாலா லஜபதிராய் ஆமோதித்தார்!! எதிர்ப்பு என்பதே இல்லை.தீர்மானம் நிறைவேறுவதற்குக் கேட்பானேன்? ஆயிரக்கணக்கான பிரதிநிதிகளின் அமோகமான ஆதரவுடன் தீர்மானம் ஏகமனதாக நிறைவேறியது. அப்போது அந்தப் பிரம்மாண்டமான காங்கிரஸ் பந்தலில் ஏற்பட்ட குதூகலத்தையும் அமளியையும் சொல்லிமுடியாது. தீர்மானம் நிறைவேறியதில் பிரதிநிதிகளுக்குச் சந்தோஷம். அதிலும் தலைவர்களுக்குள்ளே வேற்றுமை இல்லாமல், வோட்டு எடுக்காமல் ஏகமனதாக நிறைவேறியதில் அளவில்லா ஆனந்தம். மகாத்மாவின் தலைமையில் இந்தியா சுயராஜ்யம் அடைவது நிச்சயம் என்ற உறுதி எல்லாருடைய மனதிலும் ஏற்பட்டுவிட்ட படியால் அடங்காத உற்சாகம். இவ்வாறு நாகபுரி காங்கிரசில் தலைமைக் கிரீடம் காந்தி மகாத்மாவுக்குச் சூட்டப்பட்டது. அன்று முதல் 1948-ஆம் வருஷம் ஜனவரி மாதம் 30-ஆம் தேதி வரையில் காந்தி மகாத்மா தான் காங்கிரசின் உண்மையான தலைவராயிருந்தார். அந்தந்த வருஷத்துக் காங்கிரஸ் அக்கிராசனர் யாராயிருந்த போதிலும், மகாத்மாவே காங்கிரஸின் உண்மையான நிரந்தரத் தலைவராயிருந்தார். காங்கிரசிலிருந்து மகாத்மா காந்தி வெளிப்படையாக விலகி நின்ற காலத்திலும், அவரைத் தலைவராக எண்ணிக் கொண்டுதான் மற்றவர்கள் காரியங்களை நடத்தினார்கள். காந்திஜி காங்கிரசின் பூரண தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டு விட்டார் என்பது இன்னொரு முக்கியமான காரியத்தின் மூலமாகவும் நாகபுரியில் வெளியாயிற்று. அது வரையில் காங்கிரசுக்கு ஒழுங்கான சட்டம், விதி, அமைப்புத் திட்டம் ஒன்றும் இல்லாமலிருந்தது. யார் வேண்டுமானாலும் காங்கிரஸ் பிரதிநிதியாக வந்துவிடலாம். வருஷத்துக்கொரு தடவை காங்கிரஸ் கூடிக் கலைந்துவிடும். அடுத்த காங்கிரஸ் வரையில் பொறுப்புடன் வேலை செய்யக்கூடிய ஸ்தாபனம் கிடையாது. காங்கிரஸ் மகாசபையில் நிறைவேறிய தீர்மானங்களை நடத்தி வைக்க ஏற்பாடு ஒன்றும் கிடையாது. அமிருதஸரஸ் காங்கிரஸிலேயே மகாத்மா இந்தக் குறை பாட்டைக் கண்டு சில தலைவர்களிடம் பிரஸ்தாபித்தார். காங்கிரஸுக்கு அமைப்பும் விதிகளும் தயாரிப்பதற்கு அமிருதஸரஸிலேயே ஒரு கமிட்டி நியமித்தார்கள். அந்தக் கமிட்டியில் காந்திஜியையும் அங்கத்தினராக்கினார்கள். மற்ற இரண்டு அங்கத்தினர்கள் சும்மா இருந்துவிட, அமைப்பு விதிகள் தயாரிக்கும் வேலை முழுதும் மகாத்மா காந்தியின் தலையிலேயே சார்ந்தது. காந்திஜி தயாரித்த அமைப்பு, காங்கிரஸ் மகாசபையில் ஒப்புக் கொள்ளப்பட்டது. இதன்படி காங்கிரசின் லட்சியத்தை ஒப்புக்கொண்டு நாலணா வருஷ சந்தா செலுத்துவோரெல்லாம் காங்கிரஸ் அங்கத்தினராகச் சேரலாம். இத்தகைய நாலணா காங்கிரஸ் அங்கத்தினர்கள் மாகாண காங்கிரஸ் கமிட்டி அங்கத்தினர்களைத் தேர்ந்தெடுப்பார்கள். அந்த அங்கத்தினரே காங்கிரஸ் பிரதிநிதிகள் ஆவார்கள். மொத்தம் 6000 பிரதிநிதிகளுக்கு மேல் போகக் கூடாது என்று வரையறுக்கப்பட்டது. (பின்னால் இதுவும் அதிகம் என்று கண்டு காங்கிரஸ் பிரதிநிதிகளின் தொகை மூவாயிரம் ஆகக் குறைக்கப்பட்டது) மாகாண காங்கிரஸ் கமிட்டி அங்கத்தினரால் தேர்ந் தெடுக்கப்படுவோர் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அங்கத்தினர் ஆவர். இவர்களின் தொகை 350. ஆனால் இத்தனை பேர் ஒவ்வொரு தடவையும் கூடி எந்தக் காரியத்தையும் செய்ய முடியாதல்லவா? இதற்காக வருஷம் முழுதும் இடைவிடாமல் காங்கிரஸ் வேலைகளைக் கவனித்து நடத்துவதற்காக, காங்கிரஸ் காரியக்கமிட்டி ஒன்று ஸ்தாபிக்கவும் தீர்மானிக்கப் பட்டது. காங்கிரஸ் அமைப்பு விதிகளைக் காட்டிலும் முக்கியமானது காங்கிரஸின் இலட்சியம். ‘பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்குட் பட்ட குடியேற்ற நாட்டு அந்தஸ்து’ தான் அதுவரையில் காங்கிரஸின் இலட்சியமாயிருந்தது. அதை அடைவதற்கு வழி ‘சட்ட வரம்புகுட்பட்ட’ கிளர்ச்சி என்றும் குறிப்பிட்டிருந்தது. காந்திஜிஇதை மாற்றி ‘அமைதியான, நேர்மையுள்ள, எல்லா முறைகளினாலும் சுயராஜ்யம் அடைதல்’ என்று காங்கிரஸ் இலட்சியத்தை அமைத்தார். “ஒத்துழையாமை இயக்கம் சட்ட வரம்புக்கு உட்பட்டதல்ல” என்று ஆட்சேபம் சொல்லப்பட்டதல்லவா? இப்போது காங்கிரஸ் இலட்சியத்திலேயே ’சட்ட வரம்புக் குட்பட்ட என்ற சொற்றொடர் எடுத்து விடப்பட்டது. ‘சட்ட வரம்பு’ என்றால் பிரிட்டிஷ் சர்க்கார் ஏற்படுத்திய சட்ட வரம்புதானே? பிரிட்டிஷ் சட்டத்தையெல்லாம் நியாயமான சட்டமென்று எப்படி ஒப்புக்கொள்ள முடியும்? நியாயமற்ற சட்டங்களின் வரம்புக்கு ஏன் உட்பட்டு நிற்க வேண்டும்? சிற்சில சந்தர்ப்பங்களில் பிரிட்டிஷ் சர்க்காரின் சட்ட வரம்பை மீறுவதே இந்தியர்களின் கடமை ஆகக் கூடும். அப்படி யிருக்கும்போது, பிரிட்டிஷ் சட்ட வரம்புக்கு நம்மை நாம் ஏன் உட்படுத்திக் கொள்ள வேண்டும்? ஆகவே, புதிய காங்கிரஸ் இலட்சியம் ‘சட்ட வரம்பை’க் கைவிட்டது. அமைதியையும் நேர்மையையும் கைக்கொண்டது. அதுபோலவே குடியேற்ற நாட்டந்தஸ்தைக் கைவிட்டது. ’சுயராஜ்ய’ இலட்சியத்தைக் கைக்கொண்டது. இவ்விதம் காங்கிரஸின் இலட்சியம் மாறியது காங்கிரஸின் தலைமை மகாத்மாவிடம் சென்று விட்டதற்கு அறிகுறியாயிற்று. அதனால் இந்தியப் பொது மக்களின் மனோபாவமும் மாறியது. காங்கிரஸ் என்பது யாரோ இங்கிலிஷ் படித்த ஒரு கூட்டத்தார் தங்களுடைய பட்டம் பதவிக்காக நடத்தும் ஸ்தாபனமல்ல, பாரத தேசத்தின் விடுதலைக்காக வேலை செய்யும் ஸ்தாபனம் என்று மக்களின் மனதில் நிச்சயம் ஏற்பட்டது. சுயராஜ்ய ஜுரம்! நாகபுரி காங்கிரஸ் முடிவடைந்தவுடனே 1921-ஆம் வருஷம் பிறந்தது. பாரத மக்களைச் சுயராஜ்ய ஜுரம் பற்றிக் கொண்டது. ஜுரத்தின் வேகம் நாளுக்கு நாள் ஏறிக் கொண்டிருந்தது. நாகபுரி காங்கிரஸில் ஒற்றுமையான முடிவு ஏற்பட்டதின் பயன் உடனே தெரிந்தது. கல்கத்தாவில் ஸ்ரீ சித்தரஞ்சன தாஸும் அலகாபாத்தில் பண்டித மோதிலால் நேருவும் வக்கீல் தொழிலை நிறுத்தி விட்டதாக அறிவித்தார்கள். ஸ்ரீ சித்தரஞ்சன தாஸ் மாதம் ஒன்றுக்கு வக்கீல் தொழிலில் ஐம்பதினாயிரம் ரூபாய் சம்பாதித்த செய்தி நாடெங்கும் பிரசித்தமாயிருந்தது. அவர் அத்தொழிலை விட்டதைப் போன்ற தியாகம் உலக சரித்திரத்திலேயே கிடையாது என்று சொல்லலாம். அலகாபாத்தில் பண்டித மோதிலால் நேருவும் ஏராளமாகச் சம்பாதித்து வந்தவர். அத்துடன், பண்டித மோதிலால் நேரு அரசர்களெல்லாம் பொறாமைப்படும்படியான சுகபோக வாழ்வு நடத்தி வந்தார் என்றும் மக்கள் அறிந்திருந்தார்கள். ஆகவே, மேற்கண்ட இரு தலைவர்களின் மாபெரும் தியாகம் பாரத மக்களின் உள்ளத்தைக் கவர்ந்து விட்டதில் வியப்பில்லை யல்லவா? தாஸையும் நேருவையும் போலப் பிரபலமில்லாத பல வக்கீல்கள், - நூற்றுக் கணக்கானவர்கள், - தேசமெங்கும் தங்கள் தொழிலை விட்டு ஒத்துழையாமை இயக்கத்தைச் சேர முன்வந்தார்கள். இப்படி முன்வந்த வக்கீல்களில் ஏழைகளாயிருந்தவர்களுக்குப் பொருள் உதவி செய்வதற்காக வென்று ஒரு மனிதர் ஒரு லட்சம் ரூபாய் நன்கொடை அளித்தார்! அதற்கு முன்னால் இவ்வளவு பெரிய நன்கொடையைப் பற்றி யாரும் கேள்விப்பட்டதில்லை யாதலால் தாஸ் – நேருவின் தியாகத்தைப் போலவே இந்த நன்கொடையும் மக்களைத் திகைக்கப் பண்ணியது. நன்கொடை அளித்தவரின் பெயர் சேத் ஜம்னாலால் பஜாஜ். இவர் மார்வார் தேசத்தில் பிறந்தவர். வியாபார நிமித்தமாக மத்திய மாகாணத்துக்கு வந்து வர்தாவில் குடியேறியவர். வர்த்தகத் துறையில் பெரும் பொருள் திரட்டிக் கோடீசுவரர் ஆனவர். இத்தகையவர் மகாத்மாவின் அந்தரங்கச் சீடர்களில் ஒருவரானார். அந்த வருஷத்திலிருந்து மரணமடையும் வரையில் காங்கிரஸ் மகா சபையின் பொக்கிஷதாராக விளங்கினார். முதல் லட்சம் கொடுத்த பிற்பாடு தேசத்துக்காக இன்னும் எவ்வளவோ லட்சம் கொடுத்தவர். பிற்காலத்தில் மகாத்மா சபர்மதி சத்தியாக் கிரஹ ஆசிரமத்தை விட்டு வெளியேற நேர்ந்தபோது வர்தா வுக்கு அருகில் ஒரு கிராமத்தில் ஆசிரமம் ஸ்தாபித்தது சேத் ஜம்னாலாலின் காரணமாகத்தான். புதிய அரசியல் திட்டத்தின்படி சட்டசபைகளை அங்குரார்ப் பணம் செய்து வைப்பதற்கு ஜார்ஜ் மன்னரின் சித்தப்பாவான கன்னாட் கோமகன் (டியூக் ஆப் கன்னாட்) விஜயம் செய்தார். அவருடைய விஜயத்தையும் விஜயம் சம்பந்தமான வைபவங்களையும் பகிஷ்காரம் செய்யவேண்டு மென்று காங்கிரஸ் தலைவர்கள் கட்டளையிட்டார்கள். அதன்படியே கன்னாட் கோமகன் கப்பலில் வந்து இறங்கிய அன்று நாடெங்கும் ஹர்த்தால் நடந்தது. கன்னாட் கோமகன் இந்தியப் பொதுமக்களுக்கும் தலைவர்களுக்கும் சமரசம் கோரி விண்ணப்பம் விடுத்தார். “நான் கிழவன்; வேண்டிக் கொள்கிறேன்; சென்று போனதையெல்லாம் மறந்து மன்னித்து விடுங்கள்; புதிய அரசியல் திட்டத்தை ஏற்றுக்கொண்டு நடத்துங்கள்!” என்று மன்றாடினார். இந்த விண்ணப்பம் செவிடன் காதில் ஊதின சங்காக முடிந்தது. அரசரின் பிரதிநிதி வேண்டிக் கொண்டதை மக்கள் பொருட்படுத்தவில்லை. காந்தி மகாத்மாவின் வாக்கையே சிரத்தையுடன் கேட்டார்கள். மாகாண சட்டசபைகளுக்கும் மாகாண மந்திரிகளுக்கும் மதிப்பே ஏற்படவில்லை. மூவகை பகிஷ்காரங்களில் இன்னொன்று கலாசாலை பகிஷ்காரம் அல்லவா? நாகபுரி காங்கிரஸுக்குப் பிறகு இந்தப் பகிஷ்காரமும் ஓரளவு பலன் தந்தது. கல்கத்தாவில் தேசபந்து தாஸ் விடுத்த விண்ணப்பத்தின் பலனாக ஆயிரம், பதினாயிரம் என்ற கணக்கில் மாணாக்கர்கள் கலாசாலைகளை விட்டு வெளியேறினார்கள். மார்ச்சு மாதம் நடக்கவேண்டிய பரீட்சைகள் பல கலாசாலைகளில் நடைபெறவே இல்லை. கல்கத்தாவைப் போல் அவ்வளவு அதிகமாக இல்லா விட்டாலும் மற்ற மாகாணங்களிலும் பல மாணவர்கள் கலா சாலை பகிஷ்காரம் செய்தார்கள். இவ்விதம் பள்ளிக்கூடங்களையும் கலாசாலைகளையும் விட்டு வந்த மாணாக்கர்களில் ஒரு பகுதியார் தேச சேவைக்கே தங்கள் வாழ்க்கையை அர்ப்பணம் செய்தார்கள். முதலில் இவர்கள் காங்கிரஸ் பிரசாரத்தில் ஈடுபட்டார்கள். பிறகு கள்ளுக்கடை மறியல், விதேசித் துணிக்கடை மறியல், சாத்வீகச் சட்ட மறுப்பு ஆகியவற்றில் ஈடுபட்டுச் சிறைக்கூடம் சென்றார்கள். வாலிபப் பிராயத்துக்குரிய ஆர்வத்துடனும் ஆவேசத்துடனும் தேசத் தொண்டில் ஈடுபட்ட இந்த ஆயிரக் கணக்கான மாணாக்கர்கள் பாரத நாட்டின் விடுதலைக்குப் பெரிதும் காரணமாயிருந்தார்கள். சர்க்கார் கல்வி ஸ்தாபனங்களை விட்ட மாணவர்கள் மேலே கல்வி கற்க விரும்பினால் அவர்களுக்கு வசதி இருக்கவேண்டும் என்பதற்காகத் தேசீய கல்வி ஸ்தாபனங்கள் சில ஏற்பட்டன. இவற்றில் குஜராத் வித்யா பீடம், காசி வித்யா பீடம், அலிகார் ஜமியா மிலியா ஆகியவை முக்கியமானவை. நாகபுரியில் மகாத்மா தயாரித்த புதிய காங்கிரஸ் அமைப்பு இப்போது வேலை செய்யத் தொடங்கியது. இதற்கு முன்னாலெல்லாம் ஜனங்கள் வருஷத்துக்கு ஒரு தடவை,-டிசம்பர் கடைசி வாரத்திலே தான்,- காங்கிரஸைப் பற்றிப் பத்திரிகைகளிலே படிப்பார்கள். இப்போது தினந்தோறும் காங்கிரஸைப் பற்றிய செய்திகளைப் படிக்க நேர்ந்தது. சென்னையில் வெளியான தினப் பத்திரிகைகளில் ஒவ்வொரு நாளும் ஒரு கட்டத்துக்குள்ளே ஒரு விண்ணப்பமோ, அறிக்கையோ வெளியாகி வந்தது. அதன் அடியில் “ச. இராஜகோபாலாச்சாரி, காங்கிரஸ் பொதுக் காரியதரிசி” என்று கையொப்பம் இட்டிருக்கும். நாகபுரியில் பண்டித மோதிலால் நேருவும் ஸ்ரீ சக்கரவர்த்தி இராஜகோபாலாச்சாரியாரும் காங்கிரஸ் மகா சபையின் பொதுக் காரியதரிசிகளாகத்தேர்ந்தெடுக்கப் பட்டார்கள். தென்னிந்தியாவில் ஸ்ரீ ச. இராஜகோபாலாச்சாரியார் காங்கிரஸ் பிரசாரத்தைத் தீவிரமாக நடத்தத் தொடங்கினார். தினந்தோறும் பொதுமக்களின் கவனம் காங்கிரஸ் திட்டங்களின்மீது செல்லும்படி பத்திரிகைகளில் அறிக்கை வெளியிட்டு வந்தார். காங்கிரஸ் காரியக் கமிட்டி ஒவ்வொரு மாதமும் கூடியது.நடந்த வேலைகளைப்பற்றி ஆராய்ந்து நடக்கவேண்டிய வேலைகளைப் பற்றித் தீர்மானித்தது. நாடெங்கும் காங்கிரஸ் தலைவர்கள் சுற்றுப் பிரயாணம் செய்து மக்களின் உற்சாகத்தைப் பெருக்கி வந்தார்கள். காந்தி மகாத்மா மௌலானா முகம்மதலி அல்லது ஷவுகத் அலியைத் தம்முடன் அழைத்துக் கொண்டு சுற்றுப்பிரயாணம் செய்தார். மகாத்மாவும் மௌலானாவும் போகுமிடங்களிலெல்லாம் ஹிந்துக்களும் முஸ்லிம்களும் திரண்டு வந்தார்கள். ஐம்பதினாயிரம், லட்சம் என்று ஜனங்கள் பொதுக் கூட்டங்களில் சேர்வது அவர்களுடைய சுற்றுப் பிரயாணத்தில் சர்வ சாதாரணமாயிருந்தது. அவர்கள் பிரயாணம் செய்யும்போது ரயில்வே ஸ்டே ஷன்களில் ஆயிரக்கணக்கான ஜனங்கள் கூடினார்கள். இரவு பகல் என்று பாராமல் தலைவர்களின் தரிசனம் கோரினார்கள். “வந்தே மாதரம்” “அல்லாஹு அக்பர்”“மகாத்மா காந்திக்கு ஜே!” என்ற கோஷங்கள் வானைப் பிளந்தன; ரயிலுக்குள் தூங்க முயன்ற தலைவர்களின் செவிகளையும் பிளந்தன. இந்தச் சுற்றுப் பிரயாணத்தின்போது மகாத்மா ஒரு தடவை “நான் சொல்லும் நிபந்தனைகளை நிறைவேற்றினால் ஒரு வருஷத்துக் குள்ளே சுயராஜ்யம் தருவேன்!” என்றார். “நிபந்தனைகளை நிறைவேற்றினால்” என்பதைப் பலர் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. “ஒரு வருஷத்துக்குள் சுயராஜ்யம்” என்பதை மட்டும் பிடித்துக் கொண்டார்கள். “ஒரு வருஷத்துக்குள் சுயராஜ்யம்” என்னும் செய்தி மக்களிடையே பரவியது. “அவ்விதம் மகாத்மா வாங்கிக் கொடுக்கப் போகிறார்” என்ற நம்பிக்கையும் பரவியது. பொது மக்களின் சுயராஜ்ய ஜுரம் மேலும் மேலும் ஏறிக்கொண்டே சென்றது! மார்ச்சு மாதக் கடைசியில் பெஜவாடாவில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூடியது. தலைவர்கள் தேசத்தின் நிலைமையை ஆராய்ந்து பார்த்தார்கள். “பட்ட பகிஷ்காரம், சட்டசபை பகிஷ்காரம், கோர்ட் பகிஷ்காரம், கலாசாலை பகிஷ்காரம்” ஆகியவைகள் எல்லாம் ஓரளவிலேதான் வெற்றி பெற்றிருந்தன. பொது மக்களின் உற்சாகம் அளவில்லாமல் பெருகிக் கொண்டிருந்தது. ஆனால் பொங்கி வழிந்து வீணாகிக் கொண்டிருந்ததே தவிர அந்த உற்சாகம் காரியத்தில் பயன்படுத்தப் படவில்லை. மக்களின் உற்சாகத்தைக் காரியமாக மாற்றுவதற்கு மகாத்மா காந்தி மூன்று திட்டங்களை வகுத்தார். “(1) ஒரு கோடி காங்கிரஸ் அங்கத்தினரைச் சேருங்கள்; (2) திலகர் சுயராஜ்ய நிதிக்கு ஒரு கோடி ரூபாய் சேருங்கள்; (3) தேசத்தில் இருபது லட்சம் இராட்டை சுற்றும்படி செய்யுங்கள்” என்று சொன்னார். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அந்தத் திட்டத்தை ஒப்புக் கொண்டது. ஜூன் மாதக் கடைசிக்குள் திட்டம் நிறை வேற வேண்டும் என்று தீர்மானித்தது. இத்திட்டம் தேசமெங்கும் சுருசுருப்பை வளர்த்தது. திட்டத்தை நிறைவேற்றுவதற்குப் புதிய காங்கிரஸ் அமைப்பு மிகவும் உதவி செய்தது. மாகாண காங்கிரஸ் கமிட்டிகளும், ஜில்லா காங்கிரஸ் கமிட்டிகளும், தாலுகா காங்கிரஸ் கமிட்டிகளும், கிராம காங்கிரஸ் சபைகளும் ஏற்பட்டன. மேற்படி கமிட்டிகளுக்கெல்லாம் காரியாலயங்கள் ஏற்பட்டன. அந்தக் காரியாலயங்களின்மீது நடுவில் இராட்டை பொறித்த மூவர்ணக் கொடி பறந்தது. ஆங்காங்கு சர்க்கார் கச்சேரிகளுக்குப் போட்டியாகக் காங்கிரஸின் காரியாலயங்கள் ஏற்பட்டு வருவதாகப் பொது ஜனங்கள் எண்ணினார்கள். முரட்டுக் கதர்ச் சொக்காயும், வெள்ளைக் கதர்க்குல்லாயும் தரித்த தலைவர்களும் தொண்டர்களும் நாடெங்கும் சஞ்சரித்தார்கள். பட்டணங்களிலும் கிராமங்களிலும் காங்கிரஸ் மகா சபைக்கு அங்கத்தினர்களைச் சேர்த்தார்கள். காங்கிர இலட்சியம் அச்சிட்ட லட்சக்கணக்கான அங்கத்தினர் நமூனாக்கள் நாடெங்கும் விநியோகிக்கப்பட்டன. புதிய அமைப்பின்படி, காங்கிரஸ் இலட்சியத்தில் கையெழுத்துப் போட்டு நாலணா வருஷ சந்தா கொடுப்பவர்கள் எல்லாரும் காங்கிரஸ் அங்கத்தினர்கள் அல்லவா? நாலணாச் சந்தாவுடன் காங்கிரஸ் இலட்சியத்தில் கையெழுத்துக்கள் வாங்கப்பட்டன. ஜூன் மாதக் கடைசிக்குள் அறுபது லட்சம் அங்கத்தினர்கள் சேர்ந்து விட்டதாகப் பின்னால் கணக்கு வெளியாயிற்று. நாடெங்கும் உள்ள தச்சர்கள் கைராட்டினம் செய்யும் வேலையில் ஏவப்பட்டார்கள். நூற்றுக் கணக்கிலும் ஆயிரக் கணக்கிலும் ராட்டினங்கள் செய்யப்பட்டன. பரண்களிலே கிடந்த பழைய இராட்டினங்கள் எல்லாம் எடுக்கப்பட்டன. கைராட்டினத்தின் ரீங்காரம் தேசமெங்கும் கேட்கலாயிற்று. பெஜவாடா திட்டத்தின்படி கிட்டத்தட்ட இருபது லட்சம் ராட்டினங்கள் ஜூன் முடிவுக்குள் வேலை செய்யத் தொடங்கி விட்டதாகக் கணக்குச் சொன்னார்கள். இந்த ராட்டினங்களில் நூல் உற்பத்தி எவ்வளவு ஆயிற்று என்பதும், இவை நீடித்து வேலை செய்தனவா என்பதும் வேறு விஷயங்கள். அவற்றைக் குறித்துப் பிற்பாடு கவனிக்கலாம். காங்கிரஸ் அங்கத்தினர் எண்ணிக்கையும் கைராட்டினங்களின் தொகையும் நிச்சயமாகக் குறிப்பிட்ட தேதிக்குள் கணக்கிட முடியாதவை. ஆனால் திலகர் சுயராஜ்ய நிதி விஷயம் அப்படியல்ல. வசூலித்த தொகைகளுக்கு அவ்வப்போது கணக்கு வந்தது. பணம் பாங்கில் சேர்ந்தது. ஆகையால் போட்ட திட்டம் நிறைவேறியதா என்பதை ஜூன் மாதம் 30-ஆம் தேதி நிச்சயமாய்ச் சொல்லி விடலாம். ஜனத்தொகை விகிதாச்சாரப்படி ஒவ்வொரு மாகாணத்துக்கும் ஒரு கோடியைப் பங்கீடு செய்து வசூல் வேலை ஆரம்ப மாயிற்று. எல்லா மாகாணங்களிலும் துரிதமாகவே வசூல் வேலை நடந்து வந்தது. ஆனாலும் குறிப்பிட்ட பங்கீட்டின்படி ஒரு கோடி ரூபாய் வசூலாகும் என்று தோன்றவில்லை. ஒரு பொது நிதிக்கு ஒரு கோடி ரூபாய் வசூலிப்பதென்பது அந்த நாளிலே நினைக்கவும் முடியாத காரியம். அதற்கு முன்னால் பல தடவை காங்கிரஸுக்கு நிதி சேர்க்கும் முயற்சியை ஆரம்பித்துப் பலன் கிட்டாமல் கைவிட்டு விட்டார்கள். பத்தாயிரம் ரூபாய்க்குமேல் காங்கிரஸுக்கு எப்போதும் கையிருப்பு இருந்ததில்லை. அப்படியிருக்க ஒரு கோடி ரூபாய் வசூல் ஆவது எப்படி? நடக்கக் கூறிய காரியமா? பெரும்பாலான ஏழைகளிடம் கொடுக்கப் பணம் கிடையாது. பணக்காரர்களுக்குக் கொடுக்க மனம் கிடையாது. மனம் இருந்தாலும் காங்கிரஸ் நிதிக்குக் கொடுத்தால் சர்க்காரால் உபத்திரவம் நேரிடுமோ என்ற பயம் ஒரு பக்கம். இந்த நிலையில் ஒரு கோடி ரூபாய் வசூலாவது நடக்காத காரியம் என்று பலரும் எண்ணினார்கள். ஜூன் மாதம் 15-ஆம் தேதி வரையில் ஐம்பது லட்சம் ரூபாய்கூட வசூலாகவில்லை. சந்தேகப் பிராணிகளின் வாக்குப் பலித்து விடும் என்றே தோன்றியது. ஜூன் மாதம் 15-ஆம் தேதிக்கு மேல் ஆமதாபாத்தில் ஸ்ரீ வல்லபாய் பட்டேலும் பம்பாயில் மகாத்மா காந்தியும் பணம் வசூலிக்க ஆரம்பித்தார்கள். தினந்தோறும் ஐந்து லட்சம், பத்து லட்சம் என்று நிதி வசூல் பெருகிக் கொண்டு வந்தது. ஆமதாபாத்தில் பத்து லட்சம் ரூபாயும், பம்பாயில் இருபத்தைந்து லட்சம் ரூபாயும் வசூலாயிற்று. இந்தச் செய்திகள் மற்ற மாகாணங்களிலும் நிதி வசூலைப் பெருக்கின. ஜூன் மாதம் 30-ஆம் தேதி முடிந்த போது மொத்தம் ஒரு கோடி பதினைந்து லட்சம் ரூபாய் சேர்ந்து விட்டதாகத் தெரிந்தது. காங்கிரஸுக்கு மகத்தான வெற்றி மகாத்மாவின் சக்திக்கு திட்டமான சாட்சி. இந்தியாவின் தேச பக்திக்கு ஐயமில்லாத அத்தாட்சி. திலகர் சுயராஜ்ய நிதிக்கு ஒரு கோடிக்கு மேலே வசூலாகி விட்டதென்னும் செய்தி நாடெங்கும் உற்சாகக் கிளர்ச்சியை உண்டாக்கிற்று. பொது மக்களின் சுயராஜ்ய ஜுரம் இன்னும் அதிகமாகி மேலே ஏறியது. “வளருதே தீ” பெஜவாடாவில் போட்ட திட்டம் ஒருவாறு நிறைவேறி விட்டது. அடுத்தாற்போல் என்ன? “ஒரு வருஷத்திற்குள் சுயராஜ்யம்” என்று காந்தி மகாத்மா சொன்னாரே? ஜூனமாதம் 30-ஆம் தேதியோடு அரை வருஷம் ஆகிவிட்டதே! மிச்சமுள்ள ஆறு மாதத்தில் சுயராஜ்யம் கிடைத்தாக வேண்டுமே? அதற்கு என்ன வழி? அடுத்த திட்டம் என்ன? அடுத்த திட்டம் என்ன வென்பதைக் காந்தி மகாத்மா சொன்னார்: “(1) அன்னியத் துணி பகிஷ்காரம்; (2) மது விலக்கு;- இந்த இரண்டு திட்டங்களையும் நிறைவேற்றி வையுங்கள். இதற்குப் பிறகும் பிரிட்டிஷார் பணிந்து வரா விட்டால், கடைசி ஆயுதமான சட்டமறுப்பு இருக்கிறது. அதை வருஷக் கடைசியில் உபயோகிக்கலாம்” என்றார். ஜூ லை மாதம் 28-ஆம் தேதி அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பம்பாயில் கூடிற்று. இந்தக் கூட்டத்துக்கு வந்திருந்த அங்கத்தினர்கள் அவ்வளவு பேரும் வெள்ளைக் கதர் உடையும் வெள்ளைக் கதர்க் குல்லாயும் அணிந்து வந்தார்கள். பெஜவாடா திட்டத்தை ஏறக்குறைய நிறைவேற்றிவிட்டோம் என்ற உற்சாகத்துடனும் பெருமிதத்துடனும் அவர்கள் வந்திருந்தார்கள். இதற்குள்ளே ஆங்காங்கு மாகாண காங்கிரஸ் கமிட்டிகளுக்குத் தேர்தல்கள் நடந்திருந்தன. வந்திருந்த அ.இ.கா. கமிட்டி அங்கத்தினர்களும் புதியவர்கள். மிகப் பெரும்பாலும் காந்தி மகாத்மாவிடம் பரிபூரண பக்தியும் நம்பிக்கையும் கொண்டவர்கள். ஆகையால் இந்த அ.இ.கா கமிட்டிக் கூட்டம் பம்பாய்ப் பொது மக்களியையே பெருங்கிளர்ச்சியையும் உற்சாகத்தையும் உண்டுபண்ணியிருந்தது. பம்பாய் வாசிகள் தேசீய நெறி கொண்டிருந்தார்கள். எங்கே நோக்கினாலும் காந்தி குல்லா மயமாகக் காணப்பட்டது. தலைவர்கள் சென்ற இடமெல்லாம் ஜனங்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு நின்று ஜே கோஷம் செய்தார்கள். காந்தி மகாத்மாவைக் கடவுளின் அவதாரம் என்று ஒப்புக்கொள்ளும் அளவுக்குப் பம்பாய்வாசிகள் அவரிடம் பக்தி கொண்டு விட்டார்கள். ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவைப் போல் ஆடை ஆபரணங்கள் அணிவித்த காந்திஜியின் சித்திர படங்களும் வெளியாகியிருந்தன. இந்தப் படங்கள் பதினாயிரக் கணக்கில் செலவாயின. இத்தகைய சூழ்நிலையில் பம்பாயில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூடிக் காந்தி மகாத்மா கூறியபடி அன்னியத் துணி பகிஷ்காரத் தீர்மானத்தை ஒப்புகொண்டது. ஆகஸ்டு மாதம் 1உயிலிருந்து காங்கிரஸ்வாதிகளும் காங்கிரஸ் அநுதாபிகளும் பொதுமக்களும் அந்நியத் துணியை அடியோடு பகிஷ்கரிக்க வேண்டும் என்று அந்தத் தீர்மானம் கேட்டுக் கொண்டது. மேற்படி தீர்மானத்தைக் காரியத்தில் நிறைவேற்றி வைப்பதற்காக மகாத்மா காந்தி ஆகஸ்டுமீ 1உ பம்பாயில் ஒரு மாபெரும் வேள்வியை நடத்தினார். சௌபாத்தி கடற்கரையில் பம்பாய் நகரமே திரண்டு வந்துவிட்டது போன்ற ஜன சமுத்திரம் கூடியிருந்தது. சுமார் ஐந்து லட்சம் ஜனங்களுக்குக் குறையாது. காங்கிரஸ் தொண்டர்கள் சென்ற இரண்டு தினங்களாகப் பம்பாயில் வீடுவீடாகச் சென்று அன்னியத் துணிகளையெல்லாம் கொண்டுவந்து கடற்கரையில் பிரசங்க மேடைக்குக் கொஞ்ச தூரத்தில் குவித்திருந்தார்கள். காந்தி மகாத்மா அந்தக் கூட்டதில் பேசினார். “இந்தியாவில் அடிமைத்தனம் அன்னியத் துணி மூலமாகவே வந்தது. பிரிட்டிஷார் துணி மூட்டையைத் தூக்கிக் கொண்டு தான் இந்தியாவுக்கு வந்தார்கள், வந்த இடத்தில அரசியல் ஆதிக்கத்தை ஸ்தாபித்து கொண்டார்கள். நம்முடைய அடிமைத்தனத்துக்கு அறிகுறியா யிருப்பது அன்னியத் துணிதான். நம்முடைய அவமானத்தின் சின்னம்மாயிருப்பதும் அன்னியத் துணியே. இந்தியாவின் தரித்திரத்துக்குக் காரணம் அன்னியத் துணி.ஆகையால், இங்கே தொண்டர்கள் கொண்டு வந்து குவித்திருக்கும் அந்நியத் துணிக் குவியலில் நான் இப்போது தீ மூட்டப் போகிறேன். இந்தக் கூட்டத்தில் யாரேனும் உடம்பில் விதேசித் துணி அணிந்திருந்தால் அதை நான் மூட்டும் தீயிலே கொண்டு வந்து போட்டு விடுங்கள். இந்த விதேசித் துணிக் குவியல் எரிந்து சாம்பராவது போல் நம்முடைய அடிமைத்தனமும் எரிந்து சாம்பராகட்டும்!” இவ்விதம் மகாத்மா காந்தி பேசிவிட்டு விதேசித் துணிக் குவியலில் தீக்குச்சியைக் கிழித்து நெருப்பு வைத்தார். பெரிய பிரம்மாண்டமான போர் போலக் கிடந்த அன்னியத் துணிக்குவியல் எரிய ஆரம்பித்தது. கூட்டத்திலிருந்தவர்களில் அநேகர் தாங்கள் அணிந்திருந்த அன்னியத் துணிச் சட்டைகளையும் அன்னிய நாட்டுக் குல்லாய்களையும் கொண்டு வந்து எரிகிற தீயில் போட ஆரம்பித்தார்கள். ஆயிரம் பதினாயிரம் குல்லாக்களும் சட்டைகளும் வேறு ஆடைகளும் வந்து விழுந்தன. ‘நீ முந்தி, நான் முந்தி’ என்று ஜனங்கள் போட்டி போட்டுக்கொண்டு ஒருவரை யொருவர் முண்டிக்கொண்டு வந்து, குல்லாய்களையும் துணிகளையும் நெருப்பிலே போட்டார்கள். சிலர் தாங்கள் வைத்திருந்த குடையின் துணி அன்னியத் துணியினால் ஆனது என்ற காரனத்தினால் குடைகளையும் தீயில் வீசி எறிந்தார்கள். “வானை நோக்கிக் கைகள் தூக்கி வளருதே தீ! தீ! இந்நேரம்!” என்று பாரதியார் வேள்விப் பாட்டில் பாடியிருப்பதை லட்சக் கணக்கான பம்பாய் வாசிகள் பிரத்யட்சமாகக் கண்டு புளகாங்கிதம் அடைந்தார்கள். நூற்றைம்பது வருஷ காலமாக இந்தியாவைப் பீடித்திருந்த அன்னிய ஆட்சியும் அடிமைத்தனமும் அந்த விதேசித் துணிக் குவியலைப்போல் பொசுங்கிப் போய் விட்டதாகவே எண்ணிக் குதூகலத்துடன் வீடு திரும்பினார்கள். சென்ற 1920-ஆம் வருஷம் இதே ஆகஸ்டுமீ 1உ தான் காந்தி மகாத்மா ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்கினார். காந்திஜியின் யுத்த சேவையைப் பாராட்டி பிரிட்டிஷ் சர்க்கார் அவருக்கு அளித்திருந்த ‘கெயிஸரி ஹிண்ட்’ என்னும் அபூர்வமான கௌரவப் பதக்கத்தைச் சர்க்காருக்கே திருப்பி அனுப்பி விட்டதாக அன்று பம்பாய் பொதுக்கூட்டத்தில் அறிவித்து விட்டுத் தேசமெங்கும் சுற்றுப்பிரயாணம் கிளம்பினார். அதேமாதிரி இந்த 1921 ஆகஸ்டு மாதம் 1-ஆம் தேதியன்று பம்பாயில் அன்னியத் துணிக் குவியலைக் கொளுத்திவிட்டுச் சுற்றுப் பிரயாணம் தொடங்கினார். மௌலானா முகம்மதலியையும் தம்முடன் அழைத்துக் கொண்டு புறப்பட்டர். பிஹார், அஸ்ஸாம், வங்காளம் ஆகிய மாகாணங்களில் சுற்றுப்பிரயாணம் செய்தார். காந்தி மகானும் மௌலானா முகம்மதலியும் சென்ற இடமெல்லாம் திரள் திரளாக மக்கள் கூடினார்கள். பிரம்மாண்டமான பொதுக் கூட்டங்கள் நடைபெற்றன. மலை மலையான அன்னியத் துணிக் குவியல்களும் தீக்கிரையாயின. இவ்விதம் வடநாட்டில் ஆகஸ்டு மாதம் முழுவதும் செப்டம்பர் முற்பகுதியிலும் சுற்றுப் பிரயாணம் செய்துவிட்டு மகாத்மாவும் மௌலானாவும் சென்னை மாகாணத்துக்குப் பிரயாணம் ஆனார்கள். செப்டம்பர் மாதம் 14ம் தேதி கல்கத்தாவிலிருந்து சென்னை மாகாணத்துக்குப் அவர்கள் வந்து கொண்டிருந்தபோது வழியில் வால்ட்டேர் ஜங்ஷனில் ரயில் நின்றது. மகாத்மாவும் மௌலானாவும் பிரயாணம்செய்யும் காலங்களில் வழியில் ரயில் நிற்கும் இடங்களிலெல்லாம் ஸ்டேஷனுக்கு அருகில் ஜனங்கள் திரண்டு நிற்பது வழக்கம். இருவரும் வண்டியிலிருந்து இறங்கிச் சென்று காத்திருந்த ஜனங்களுக்குச் சில வார்த்தைகள் சொல்லிவிட்டு வந்து ரயிலில் ஏறிக்கொள்வார்கள். அது மாதிரியே வால்ட்டேரில் ரயில் இருப்பத்தைந்து நிமிஷம் நிற்கும் என்று தெரிந்துகொண்டு தலைவர்கள் வண்டியிலிருந்து இறங்கி வெளியில் காத்திருந்த பொதுக்கூட்டத்தில் பேசுவதற்குச் சொன்றார்கள். ரயில்வே ஸ்டேஷனுக்கு வெளியே சில அடி தூரம் சென்றதும் முன்னால் சென்ற மகாத்மா பின்னால் வந்த மௌலானா தம்மை உரத்த சத்தமிட்டு அழைப்பதைக்கேட்டு நின்று திரும்பிப் பார்த்தார். இரண்டு வெள்ளைக்காரப் போலீஸ் அதிகாரிகளும் ஐந்தாறு இந்தியப் போலீஸ்காரர்களும் மௌலானா முகம்மதலியைச் சூழ்ந்து கொண்டிருந்தார்கள். மௌலானா தம் கையில் வைத்திருந்த நோட்டீசைப் படித்துக் கொண்டிருப்பதையும் மகாத்மா பார்த்தார். ஆனால் அவர் முழுதும் நோட்டீசைப் படித்து முடிப்பதற்குப் போலீஸ் அதிகாரிகள் விடவில்லை. அதிகாரிகளில் ஒருவர் மௌலானாவின் கையைப் பிடித்து இழுத்தார். காந்தி மகாத்மாவின் அஹிம்சா நெறியில் பயிற்சி பெற்றிருந்த மௌலானாவும் உடனே படிப்பதை நிறுத்திப் போலீஸாரைப் பின்தொடர்ந்து சென்றார். போகும்போது காந்திஜியைப் பார்த்து புன்னகை புரிந்துவிட்டுக் கையை வீசி ஆட்டிச் சமிக்ஞையினால் ‘போய் வருகிறேன்’ என்று சொல்லிவிட்டுப் போனார். மௌலானா அவ்விதம் போலீஸாரால் கைப்பற்றப்பட்டுச் சென்றபோது காந்திமகானுக்குத் தம்முடைய ஆத்மாவிலேயே ஒரு பகுதி தம்மை விட்டுப் பிரிந்து போவது போலிருந்தது. மகாத்மா காந்திக்கும் அலி சகோதரர்களுக்கும் இந்திய அரசியல் துறையில் ஏற்பட்டிருந்த நட்பு உலக சரித்திரத்தில் ஒரு அற்புத நிகழ்ச்சியாகும். அலி சகோதரர்கள் வீராவேசமே உருக்கொண்டவர்கள். சாந்தம், அஹிம்சை, - இவற்றின் உயர்வைப் பற்றி என்றும் எண்ணாதவர்கள். இஸ்லாமிய சமய நெறியும் முஸ்லிம்களின் சரித்திரப் பண்பும் அவர்களை முற்றும் வேறு விதத்தில் பக்குவப் படுத்தியிருந்தன. ஆனாலும் அந்த அதிசய சகோதரர்கள் மகாத்மாவிடம் அளவில்லாத அன்பு கொண்டு அவரை மனமொழி மெய்களினால் பின்பற்றினார்கள். “நான் மௌலானா ஷவுகத் அலியின் சட்டைப் பையிலே இருக்கிறவன்!” என்று காந்தி மகாத்மா ஒரு தடவை சொன்னார். அதாவது மௌலானாவின் அன்புக்கு அவ்வளவு தாம் கட்டும் பட்டவர் என்று கூறினார். அம்மாதிரியே அலி சகோதரர்களும் மகாத்மாவின் அன்புக்குக் கட்டுப்பட்டிருந்தார்கள். அந்த வருஷம் ஏப்ரல் மாதத்தில் லார்டு ரெடிங் கவர்னர் ஜெனரல் பதவிக்குப் புதிதாக வந்தார். மகாத்மாவைச் சந்தித்துப் பேச விரும்புவதகாத் தெரிவித்தார். மகாத்மாவும் ரெடிங்கைப் பார்க்க விரைந்து சென்றார். “நீங்கள் அஹிம்சா தர்மத்தைப் போதிக்கிறீர்களே! உங்கள் சிஷ்யர்கள் எல்லாரும் அதை அனுசரிப்பார்களா?” என்று லார்ட் ரெடிங் கேட்டார். “என் சிஷ்யர்களுக்கு நான் உத்தரவாதம்!” என்றார் மகாத்மா. “அப்படியானால் இதைப் பாருங்கள்!” என்று சொல்லி லார்ட் ரெடிங் மௌலானா முகம்மதலியின் பிரசங்கம் ஒன்றின் ரிபோர்ட்டை எடுத்துக் காட்டினார். அதில் ஒரு பகுதி மௌலானா முகம்மதலி பலாத்கார முறைகளையும் ஆதரிக்கிறார் என்று அர்த்தம் செய்யக்கூடிய முறையில் இருந்தது. “இந்த மாதிரி தப்பர்த்தம் செய்யக்கூடியவாறு கூட என்னைச் சேர்ந்தவர்கள் பேசக்கூடாதுதான். இதற்குப் பரிகாரம் நான் தேடித் தருகிறேன்!” என்றார் மகாத்மா. அந்தப்படியே மகாத்மா காந்தி மௌலானா முகம்மது அலியை உடனே சந்தித்து “பலாத்கார முறைகளை நீங்கள் ஆதரிக்கவில்லை என்பதைத் தெளிவுபடுத்தி விடுங்கள்!” என்றார். மகாத்மாவின் சொல்லுக் கிணங்கி மௌலானா ஒரு அறிக்கை விட்டார். ரெடிங்-காந்தி சந்திப்பு பற்றிய விவரங்கள் யாருக்கும் அச்சமயம் தெரிந்திருக்க வில்லை. ஆகையால் “மௌலானா முகம்மதலி பயந்து விட்டார்!” என்றும், “மன்னிப்புக் கேட்டுக்கொண்டார்!” என்றும் தேச விரோதிகள் பலர் எக்காளம் கொட்டினார்கள். மௌலானா இதையெல்லாம் சிறிதும் பொருட்படுத்தவில்லை. மகாத்மாவின் விருப்பத்தின்படி நடக்கவேண்டியது தம் கடமை என்று எண்ணிப் பொறுமையுடனிருந்தார். பிறகு கார்டு ரெடிங்கின் சர்க்காரும் “மௌலானா முகம்மதலி மன்னிப்புக் கேட்டுக்கொண்டதின் பேரில் அவர் பேரில் நடவடிக்கை எடுக்காமல் விடப்பட்டது” என்று ஓர் அறிக்கை வெளியிட்டனர். இது காந்திஜிக்கே பொறுக்கவில்லை. உடனே காந்திஜி லார்ட் ரெடிங்குக்கு எழுதி அநுமதி பெற்று அவர்களுடைய சந்திப்பின் விவரங்களையும் தாம் மௌலானாவுக்குக் கூறிய புத்திமதியையும் வெளிப்படுத்தினார். மௌலானா முகம்மதலி ‘பயந்துபோய் மன்னிப்புக் கேட்கவில்லை’ என்பதை அப்போது அனைவரும் அறிந்து கொண்டனர். இவ்விதம் தமக்கு நேர்ந்த அபகீர்த்தியைக் கூடப் பொருட்படுத்தாமல் மௌலானா முகம்மதலி மகாத்மாவின் சொல்லை மேற்கொண்டு வந்தார். அப்படிப்பட்டவரைத் தம்மிடமிருந்து பிரித்துக் கைது செய்து போலீஸார் கொண்டுபோனது மகாத்மாவைக் கலங்கச் செய்துவிட்டது. ஆயினும் அந்தக் கலக்கமானது மகாத்மா காரியம் செய்வதைத் தடைசெய்ய வில்லை. ஜனக்கூட்டம் கூடியிருந்த இடத்துக்கு மகாத்மா நேரே சென்று மக்களை அமைதியாயிருக்கும்படி கேட்டுக் கொண்டார். திரும்பவும் மௌலானாவைச் சிறைப்படுத்தி யிருந்த இடத்துக்கு வந்து அவரைப் பார்த்துப் பேச அநுமதி கேட்டார். அதற்கு அதிகாரிகள் மறுத்துவிட்டனர். மௌலானாவுடன் பிரயாணம் செய்த பீகம் முகம்மதலியும் மௌலானாவின் காரியதரிசியும் அவரைச் சந்தித்துப் பேசிவிட்டு அப்போதுதான் வெளியில் வந்தார்கள். அவர்கள் மௌலானாவை 107-வது பிரிவின்படியும் 108-வது பிரிவின்படியும் கைது செய்திருப்பதாக விவரம் தெரிவித்தார்கள். கன்னிங் காம் என்ற பெயர் தமிழ் நாட்டில் பலருக்கு நினைவிருக்கும். சென்னையில் பின்னால் உப்புச் சத்தியாக்கிரஹம் நடந்தபோது தடபுடலான அடக்கு முறையைக் கையாண்டு கொடுமைக்குப் பெயர் பெற்ற மனிதர். இவர் அச்சமயம் சி.ஐ.டி.போலீஸ் டிபுடி இன்ஸ்பெக்டர் ஜெனரலாயிருந்தார். மௌலானா முகம்மதலியைக் கைது செய்யும் கௌரவம் இவருக்குத்தான் கிடைத்தது. விசாகப்பட்டினம் ஜில்லா மாஜிஸ்ட்ரேட் மேற்படி கன்னிங்காமுக்கு அனுப்பிய உத்தரவின் விவரம் பின்வருமாறு:- “முகம்மது அலி அமைதியாகவும் நன்னடத்தையுடனும் இருப்பதற்காக அவரிடம் 107, 108-வது பிரிவுகளின் கீழ் ஜாமீன் கேட்க வேண்டியிருப்பதால். மேற்படி முகம்மது அலியைக் கைதுசெய்து என் முன்னால் கொண்டுவந்து ஒப்புவிக்கவேண்டியது. இதில் தவறவேண் டாம். 14உ செப்டம்பர் 1921. (ஒப்பம்) ஜே.ஆர்.ஹக்கின்ஸ், ஜில்லா மாஜிஸ்ட்ரேட், விசாகப்பட்டினம்" மேற்படி உத்தரவைப் பற்றித்தெரிந்து கொண்டதும் மகாத்மா காந்தி ரயில் ஏறித் தமது பிரயாணத்தைத் தொடர்ந்தார். ரயிலில் பிரயாணம் செய்துகொண்டே மௌலானா முகம்மதலி கைதியானதைப் பற்றி உருக்கமான கட்டுரை ஒன்று “எங் இந்தியா”ப் பத்திரிகைக்கு எழுதினார். அந்தக் கட்டுரை யின் கடைசிப் பகுதி பின்வருமாறு:- “அலி சகோதரர்களுக்கு நாம் செய்யக்கூடிய மரியாதை என்ன? பயம், சந்தேகம், சோம்பல் ஆகியவற்றை உடனே விட்டொழிப்பதுதான். அலி சகோதரர்களுடைய தைரியம், நம்பிக்கை, அச்சமின்மை, சத்தியம், இடைவிடாச் செயல் திறமை ஆகியவற்றையும் அனைவரும் மேற்கொண்டால் சுயராஜ்யம் அடைவது பற்றிச் சந்தேகம் என்ன? ஜில்லா மாஜிஸ்ட்ரேட் போலீஸ் அதிகாரிக்குப் போட்ட உத்தரவின் கடைசியில்”இதில் தவறவேண்டாம்!" என்று கண்டிருந்தது. அந்த உத்தியோகஸ்தர் அதை நிறைவேற்றுவதில் தவறவில்லை! மேலேயிருந்து வரும் உத்தரவை நிறைவேற்றுவதில் அநேக ஆங்கில உத்தியோகஸ்தர்கள் தங்கள் உயிரையே அர்ப் பணம் செய்திருக்கிறார்கள். இதுதான் இங்கிலீஷ் சாதியின் பெருமை. காங்கிரஸ் இந்தியர்களுக்கு அவ்விதமே ‘உத்தரவு’ இட்டிருக்கிறது. ‘உத்தரவு’ ‘கட்டளை’ ‘புத்திமதி’ – எப்படி வைத்துக்கொண்டாலும் சரிதான். ‘அதில் தவறவேண்டாம்’ என்று கேட்டுக் கொண்டிருக்கிறது. அவ்விதம் நாம் செய்யப் போகிறோமா? மிச்சமுள்ள சில மாதங்களில் நாம் தீவிரமாக வேலை செய்து, ‘காங்கிரஸ் இட்ட கட்டளைகளை நிறைவேற்றுவதில் தவறவில்லை’ என்று நாம் நிரூபிக்கவேண்டும்." கராச்சி விசாரணை மௌலானா முகம்மதலி கைதியானதைப் பற்றி மகாத்மா எழுதிய கட்டுரையில், “அலி சகோதரர்கள் இணை பிரியாத இரட்டையர்கள். அவர்களைப் பிரித்து வைக்க முடியாது. ஆகையால் முகம்மதலியைக் கைது செய்தவர்கள் ஷவுகத் அலியையும் கைது செய்தே தீர்வார்கள்!” என்று குறிப்பிட்டிருந்தார். இது உண்மை என்பது இரண்டு நாளைக்குள் தெரிய வந்தது. மௌலானா முகம்மதலியை விசாகப்பட்டினம் மாஜிஸ்ட்ரேட் கைது செய்தது ஒரு காரணார்த்தமாகத்தான். 17-ம் தேதியன்று மேற்படி 107,108 பிரிவு ஜாமீன் வழக்குகள் வாபஸ் வாங்கப்பட்டன. அந்த க்ஷணமே கராச்சியிலிருந்து வந்திருந்த வாரண்டின்படி மௌலானா முகம்மதலியை மீண்டும் கைது செய்து கராச்சிக்குக் கொண்டு போனார்கள். அதே தேதிகளில் இந்தியாவின் பல பகுதிகளிலும் இருந்த மௌலானா ஷவுகத் அலி, டாக்டர் ஸைபுடீன் கிச்லூ, பீர்குலாம் முஜாதீக், மௌலானா நிஸார் ஆமத், மௌலானா ஹுசேன் ஆமத். ஜகத்குரு சாரதாபீட சங்கராச்சாரியார் ஆகியவர்களையும் கைது செய்தார்கள். எல்லாரையும் கராச்சிக்குக் கொண்டு போய்ச் சேர்த்தார்கள். இப்படி அவர்களை யெல்லாம் கராச்சிக்குக் கொண்டு போனதின் காரணம் என்னவென்றால், ஜூலை மாதம் 8ம் தேதி கராச்சியில் அகில இந்திய கிலாபத் மகாநாடு நடைபெற்றது. அந்த மகாநாட்டுக்கு மௌலானா முகம்மதலி தலைமை வகித்தார். இந்த மகாநாட்டில், அதுவரை காங்கிரஸில் செய்திருந்த தீர்மானங்களையெல்லாம் விடக் கடுமையான தீர்மானம் ஒன்று நிறைவேறியது. “கிலாபத் விஷயமாக பிரிட்டிஷ் சர்க்கார் நீதி வழங்காதபடியால் இனிமேல் மதப் பற்றுள்ள எந்த முஸ்லிமும் சைன் யத்தில் சேவை செய்வதும், சைன்யத்துக்கு ஆள் சேர்ப்பதற்கு உதவி செய்வதும் மார்க்க விரோதமாகும்” என்பது அந்தத் தீர்மானத்தின் கருத்து. கல்கத்தாவிலும் நாகபுரியிலும் நிறைவேறிய ஒத்துழையாமைத் தீர்மானத்தில் சைன்ய சேவையைப் பற்றிக் குறிப்பிடவில்லை. சைன்யத்தில் உள்ளவர்களை வேலையை விடும்படி செய்வதற்குக் காலம் வரவில்லை என்று கருதப்பட்டது. அது மட்டுமல்ல. மற்ற ஒத்துழையாமைத் திட்டங்களையெல்லாம் பிரிட்டிஷ் சர்க்கார் ஒருவேளை அலட்சியமாகக் கருதி விட்டு வைக்கலாம். ஆனால் சைன்ய சேவையை விட வேண்டும் என்று சொன்னால் உடனே மிகக் கடுமையான அடக்குமுறை தொடங்குவார்கள். அதனுடைய பலாபலன்கள் இப்படியிருக்கு மென்று ஊகிப்பது கடினம். ஆகையால் அதைக் கடைசித் திட்டமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று மகாத்மாவும் மற்றத் தலைவர்களும் கருதினார்கள். ஆனால் முஸ்லிம் தலைவர்கள் அவ்வளவு தூரம் பொறுமையைக் கடைப்பிடிக்கத் தயாராயில்லை. “முஸ்லிம்கள் இனிமேல் பிரிட்டிஷ் சைன்யத்தில் சேர்ந்து சேவை செய்வது பாவம்” என்று கராச்சியில் தீர்மானம் நிறைவேற்றினார்கள். அத்துடன் நின்றுவிட வில்லை. அச்சமயத்தில் அங்கோராவில் முஸ்தபா கமால் பாட்சாவின் தலைமையில் புதிய துருக்கி அரசாங்கம் ஏற்பட்டிருந்தது. அந்த அங்கோரா அரசாங்கத்துடன் பிரிட்டிஷ் போர் தொடுத்தால், “இந்திய முஸ்லிம்கள் உடனே சட்ட மறுப்பு இயக்கம் தொடங்கி இந்தியாவில் பூரண சுதந்திரத்தை ஸ்தாபிக்க வேண்டும்” என்றும் ஒரு தீர்மானம் நிறைவேறியது. இந்தத் தீர்மானங்கள் நிறைவேறிய கராச்சி மகாநாட்டுக்கு மௌலானா முகம்மதலி தலைமை வகித்தார். தமது தலைமை யுரையில் மேலே கூறிய கருத்துக்களை அவர் வெளியிட்டார். மௌலானா ஷவுகத் அலி முதலியவர்கள் மேற்படி தீர்மானங்களை ஆதரித்துப் பேசினார்கள். இவ்விதம் இராஜத் துவேஷப் பிரசாரம் செய்த காரணத்துக்காகவே மேற் கூறிய ஏழு தலைவர்களும் பல இடங்களில் கைது செய்யப்பட்டுக் கராச்சியில் விசாரணைக்காகக் கொண்டு போகப்பட்டனர். காந்திஜி வால்ட்டேரில் மௌலானா முகம்மதலியைப் பிரிந்து சென்னைக்கு வந்து சேர்ந்தார். மௌலானாவின் மனைவியான பீகம் முகம்மதலியும் மகாத்மாவுடன் சென்னைக்கு வந்தார். அலி சகோதரர்கள் மிக்க மத வைராக்கியம் உள்ளவர்கள். ஆகவே பீகம் முகம்மதலி இஸ்லாமிய வழக்கப்படி கோஷா முறையை அனுஷ்டித்தார். முகமூடி இல்லாமல் வெளியில் புறப்படுவதில்லை. அப்படிப்பட்ட கோஷாப் பெண்மணி தமது கணவர் தொடங்கிய வேலையைத் தாம் தொடர்ந்து நடத்த வேண்டும் என்று கருதிய மகாத்மாவுடன் சுற்றுப் பிரயாணம் செய்யலானார். சென்னை வந்து சேர்ந்ததும் காந்திஜிக்கு மௌலானா முகம்மதலி கராச்சித் தீர்மானம் காரணமாகக் கைதியானார் என்னும் செய்தி கிடைத்தது. அன்று மாலையில் சென்னைக் கடற்கரையில் மாபெரும் பொதுக் கூட்டம். ஜல சமுத்திரத்தின் கரையில் ஜன சமுத்திரம் திரண்டிருந்தது. மகாத்மாவும் பீகம் முகம்மதலியும் கூட்டத்துக்கு வந்தார்கள். மக்களின் ஆவேசத்தையும் பரபரப்பையும் சொல்லி முடியாது. ஆரவாரம் கொஞ்சம் அடங்கிய பிறகு மகாத்மா காந்தி பேசினார். பேச்சின் ஒவ்வொரு வார்த்தையும் தீப்பொறியைப் போல் சுடர் விட்டது. “மௌலானா முகம்மதலியை எந்தக் குற்றத்துக்காகக் கைது செய்தார்களோ அதே குற்றத்தை நான் இப்பொது செய்யப் போகிறேன்!” என்று காந்தி மகாத்மா கூறியதும் அங்கே திரண்டிருந்த லட்சக் கணக்கான மக்களுக்கும் ரோமாஞ்சலி உண்டாயிற்று. கராச்சியில் மௌலானா முகம்மது அலி என்ன பிரசங்கம் செய்தாரோ, அதையே மகாத்மா காந்தி வார்த்தைக்கு வார்த்தை சரியாக அந்த மாபெருங் கூட்டத்தில் சொன்னார். கராச்சி தீர்மானங்களின் வாசகத்தையும் எடுத்துக் கூறினார். “மௌலானா முகம்மதலி செய்த குற்றத்தை நானும் செய்து விட்டேன். என்னையும் சர்க்கார் கைது செய்யட்டும்!” என்றார் காந்தி மகான். பொது மக்கள், “இதுவல்லவோ சிநேகம்? இதுவல்லவா சகோதர பாவம்!” என்று எண்ணி வியந்தார்கள். தம்முடைய அருமைச் சகோதரரும் சகாவுமான முகம்மது அலியை மகாத்மா காந்தி ஆதரித்து நின்ற மேன்மைக் குணம் மக்களைப் பரவசப் படுத்தியது. பிறகு சென்னைக் கடற்கரையில் தொண்டர்கள் கொண்டு வந்து குவித்திருந்த மலை போன்ற விதேசித் துணிகளுக்கு மகாத்மா தீ மூட்டினார். கூட்டத்திலிருந்த ஆயிரக் கணக்கான ஜனங்கள் தங்கள் மேலிருந்த விதேசித் துணிகளைக் கொண்டு வந்து தீயிலே போட்டார்கள். அத்தனை பெரிய துணிக்குவியலும் அரை மணி நேரத்தில் எரிந்து சாம்பராயிற்று. சென்னைக் கடற்கரையில் மகாத்மா மேற்கண்டவாறு பேசிய செய்தி நாடெங்கும் பரவியது. நாட்டின் நாலா பக்கங்களிலும் இருந்த தேசத் தலைவர்கள் “மௌலானா முகம்மதலி செய்த குற்றத்தை நாங்களும் செய்தே தீருவோம்!” என்று சொன்னார்கள். ஆகவே காந்திஜியும் மற்றும் ஐம்பது பிரபல காங்கிரஸ் தலைவர்களும் கூட்டுக் கையெழுத்துப் போட்டு அக்டோபர் மாதம் 4 - ஆம் தேதி ஒரு விக்ஞாபனத்தை வெளியிட்டார்கள். அக்டோபர் மாதம் 6 - ஆம் தேதி “யங் இந்தியா” வில் மேற்படி விக்ஞாபனமும் கையெழுத்துக்களும் பிரசுரிக்கப்பட்டன. “அலி சகோதரர்களூம் மற்றவர்களும் எதற்காகக் கைது செய்யப் பட்டார்கள் என்பதைப் பம்பாய் சர்க்கார் 1921 - ஆம் வருஷம் செப்டம்பர் மாதம் 15 - ஆம் தேதி வெளியிட்டுள்ளா அறிக்கையில் விளக்கியிருக்கிறார்கள்; மேற்படியார்கள் கைது செய்யப்பட்டதை உத்தேசித்து, கீழே கையொப்பமிட்டிருக்கும் நாங்கள் தனிப்பட்ட முறையில் தெரிவிக்க விரும்புவதாவது:- ராணுவத்திலோ, சிவில் நிர்வாகத்திலோ கலந்து ஜனங்கள் சர்க்காருக்குத் தொண்டு செய்யலாமா, கூடாதா என்பதைப் பற்றித் தாராளமாக அபிப்பிராயம் சொல்ல ஒவ்வொருவருக்கும் உரிமை உண்டு. அரசியலிலும், பொருளாதாரத் துறையிலும், தார்மீகத் துறையிலும் இந்தியா சீர்குலைந்திருப்பதற்குத் தற்போதுள்ள இந்தியா சர்க்காரே காரணமாகும். மக்களுடைய தேசீய அபிலாஷைகளை அடக்கி ஒடுக்குவதற்குப் போலீஸையும் ராணுவத்தையும் சர்க்கார் உபயோகித்திருக்கிறது. இதற்கு உதாரணமாக ரௌலட் சட்டக் கிளர்ச்சியைச் சொல்லலாம். இந்தியாவுக்கு ஒரு தீமையும் செய்தறியாத அராபியர்கள், எகிப்தியர்கள், துருக்கியர்கள் முதலியோருடைய சுதந்திரத்தை நசுக்குவதற்காக இந்திய ராணுவத்தையும் இந்திய சர்க்கார் உபயோகித்திருக்கிறது. இத்தகைய சர்க்காரில் சிவில் உத்தியோகஸ்தராகவும் சேனையில் சிப்பாயாகவும் தொண்டு செய்வது தேசீய கௌரவத்திற்கே பங்கம் விளைவிப்பதாகும். ஆகையால், சர்க்காருடனுள்ள தொடர்பை அறவே ஒழித்து விட்டு, ஜீவனத்திற்கு வேறு ஏதாவது வழியைத் தேடிக்கொள்ள வேண்டியது ஒவ்வொரு இந்திய சிப்பாயினுடையவும் சிவில் உத்தியோகஸ்தருடையவும் கடமை என்று நாங்கள் கருதுகிறோம். (ஒப்பம்) எம்.கே.காந்தி அபுல்கலாம் ஆஸாத்; அஜ்மல்கான் (டில்லி; லஜபதிராய் (லாகூர்); மோதிலால் நேரு (அலஹாபாத்); சரோஜினி நாயுடு (பம்பாய்): அப்பாஸ் தயாப்ஜி, என்.ஸி. கேல்கர், வி.ஜே.படேல், வல்லபாய் படேல் (அஹமதாபாத்); எம்.ஆர்.ஜயகர் (பம்பாய்); டி.வி.கோகலே(பூனா); எஸ்.ஜீ.பேங்கர், ஜவாஹர்லால் நேரு (அலஹாபாத்); கங்காதர தேஷ்பாண்டே (பெல்காம்); லக்ஷ்மி தாஸ் தேர்ஸி, உமர் சோபானி, ஜம்னாலால் பஜாஜ், எம்.எஸ். ஆனே (அம்ரோதி); எஸ்.இ.ஸ்டோக்ஸ், கோட்கார் (சிம்லா); எம்.ஏ. அன்ஸாரி (டில்லி); கலிக்குஸ்ஸமான் (டில்லி); கே.எம். அப்துல் கபூர் (டில்லி); அப்துல் பாரி (லக்ஷ்மண்புரி); கிருஷ்ணாஜி நீல்கண்ட் (பெல்காம்); கி. இராஜகோபாலாச்சாரி (சென்னை); கொண்டா வெங்கடப்பையா (குண்டூர்); ஜி.ஹந்ஸர்வோத்தமராவ் (குண்டூர்); அகஸுயா ஸாராபாய், ஜீதேந்திரலால் பானர்ஜி, எம். ஹெச். கித்வாய் (டில்லி); சியாம் சுந்தர சக்கரவர்த்தி (கல்கத்தா); ராஜேந்திர பிரசாத் (பாட்னா); ஆஸாத் சோபானி, ஹஸரத் மோஹானி (கான்பூர்); மஹாதேவ் தேஸாய், பி.எப்.பரூச்சா, யாகூப் ஹஸன், பி.எஸ். முஞ்ஜே, ஜெயராம்தாஸ் தௌலத்ராம், எம்.ஆர். சோல்கர் (நாகபுரி); வி.வி. தர்தானே, எ.ஹெச், சித்திக் காத்ரி (பம்பாய்); கூடார் ராமச்சந்திர ராவ் (ஆந்திரா) மியா முகம்மது ஹாஜிஜான் முகம்மது சோட்டானி. மேற்படி விக்ஞாபனத்தில் ச்ரி. சி. ஆர். தாஸின் கையெழுத்து காணப்படாதது பலருக்கும் வியப்பை அளித்தது. தந்திப் போக்குவரத்தில் ஏற்பட்ட தாமதந்தான் அதற்குக் காரணம் என்று தெரியவந்தது. எனவே, ச்ரி சித்தரஞ்சன தாஸின் கையெழுத்தும் பிற்பாடும் அந்த விக்ஞாபனத்தில் சேர்ந்தது. அந்தப் புகழ்பெற்ற 1921 - ஆம் வருஷத்தில் காந்தி மகாத்மாவின் முக்கிய துணைவர்களாக விளங்கிய தலைவர்கள் யார் யார் என்பதை மேற்படி விக்ஞாபனத்தின் கீழே வெளியாகியுள்ள கையெழுத்துக்களிலிருந்து தெரிந்து கொள்ளலாம். டில்லியில் ஹக்கீம் அஜ்மல்கான் தலைமையில் கிலாபத் கமிட்டி கூடி சைன்யத்திலிருந்து முஸ்லிம்களை வெளியேறச் சொல்வது முஸ்லிம்களின் மதக் கடமை என்று தீர்மானம் செய்தது. தேசமெங்கும் ஆயிரக் கணக்கான கூட்டங்களில் பிரசங்கிகள் மௌலானா முகம்மதலியின் கராச்சி பேச்சையொட்டிப் பேசினார்கள். மேடையிலிருந்து ஒரு பிரமுகர் அந்தப் பேச்சை ஒவ்வொரு வார்த்தையாகப் படிப்பதும் திரளான மக்கள் திரும்பிச் சொல்வதும் சர்வசாதாரணமாக நடக்கலாயிற்று. இவ்வளவு கிளர்ச்சி தேசத்தில் நடந்து கொண்டிருக்கையில் கராச்சியில் மௌலானா முகம்மதலி மீதும் மற்ற அறுவர்மீதும் விசாரணை நடந்துகொண்டிருந்தது. அலி சகோதரர்களும் மற்ற முஸ்லிம் தலைவர்களும்“எங்கள் மதக் கடமையைச் செய்தோம். சர்க்கார் சட்டம் எப்படியிருந்தாலும் எங்களுக்கு அக்கரையில்லை” என்ற முறையில் கோர்ட்டில் வாக்கு மூலம் கொடுத்தார்கள். அவர்கள் ஒவ்வொருவருக்கும் இரண்டு வருஷம் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. “கவலை வேண்டாம், அலி சகோதரர்கள் சின்னச் சிறையிலும் நாம் பெரிய சிறையிலும் இருக்கிறோம். இரண்டு சிறைக் கதவுகளையும் உடைத்து விடுதலை செய்யும் சக்தி நம் கையில் இருக்கிறது!” என்று காந்தி மகான் கூறினார். முழத்துண்டு விரதம் தமிழ் நாட்டுக்கும் மகாத்மா காந்திக்கும் நெருங்கிய தொடர்புகள் சில உண்டு. தென்னாப்பிரிக்கா சத்தியாக்கிரஹத்தில் மகாத்மாவுக்குத் துணை நின்றவர்களில் தமிழர்கள் முக்கியமானவர்கள். அந்த சத்தியாக்கிரஹப் போரில் தமிழ்நாட்டு வள்ளியம்மை உயிர்த்தியாகம் செய்து அழியாப் புகழ்பெற்றாள். ராவ்லட் சட்டத்தை எதிர்த்து எப்படி இயக்கம் நடத்துவதென்று மகாத்மா காந்தி யோசித்துக் கொண்டிருந்த காலத்தில் ஒரு சமயம் சென்னை வந்தார். ஏப்ரல் 6-ஆம் தேதி அகில இந்திய ஹர்த்தால் நடத்தவேண்டும் என்ற எண்ணம் சென்னையில் தங்கியிருந்த போது மகாத்மாவின் மனதில் உதயமாயிற்று. இவற்றைக் காட்டிலும் மகாத்மாவின் வாழ்க்கையில் பெரும் மாறுதல் உண்டாக்கிய ஒரு சம்பவம் 1921 செப்டம்பரில் மகாத்மா காந்தி தமிழ்நாட்டுக்கு விஜயம் செய்த போது நிகழ்ந்தது. அந்தநாளில் பட்டணங்களிலும் கிராமங்களிலும் காங்கிரஸ் பிரசாரம் செய்வதற்காகச் செல்வோர் தங்கள் பிரசங்கத்துக்கு முக்கியமாகக் கையாண்ட விஷயம் ஒன்று உண்டு. கிழக்கிந்தியக் கம்பெனியின் காலத்தில் இங்கிலீஷ்காரர்கள் துணிமூட்டையைத் தோளிலே சுமந்துகொண்டு இந்தியாவில் துணி விற்க வந்ததிலிருந்து பிரசங்கத்தைத் தொடங்குவார்கள். ஆங்கில நாட்டுத் துணியோடு இந்திய சுதேசித் துணி போட்டி போடாமலிருப்பதற்கு வெள்ளைக்காரர்கள் கையாண்ட முறைகளைச் சொல்வார்கள். இந்தியாவில் கைத்தறியில் உற்பத்தியான துணிகளின் மேன்மையைப் பற்றிப் பேசுவார்கள். டாக்கா மஸ்லின் துணியின் நயத்தைப்பற்றியும், ஒரு பீஸ் மஸ்லினை ஒரு மோதிரத்துக்குள் அடைத்த கதையைப் பற்றியும், அவுரங்க ஜீப்பின் குமாரி டாக்கா மஸ்லின் உடுத்திக்கொண்ட வரலாற்றைக் குறித்தும் விஸ்தாரமாகச் சொல்வார்கள். அத்தகைய அதிசயமான துணிகளை நெய்த கைத்தறிக்காரர்களின் கட்டை விரல்களை ஆங்கிலேயர் துண்டித்தெறிந்த அக்கிரமக் கொடுமையைப் பற்றி இரத்தம் கொதிக்கும்படி ஆத்திரமாய்ப் பேசுவார்கள். “இங்கிலீஷ் ராஜ்யம் இந்தியாவில் லங்காஷயர் துணி வியா பாரத்துக்காகவே ஏற்பட்டது. இப்போதும் லங்காஷயரின் நன்மையை முன்னிட்டே இந்தியா ஆளப்பட்டு வருகிறது. என்றையதினம் இந்தியர்கள் அன்னியத் துணியை வாங்குவதை அடியோடு நிறுத்துகிறார்களோ, அன்றைக்கே இந்தியாவிலிருந்து பிரிட்டிஷார் மூட்டைகட்டி விடுவார்கள்!” என்று கூறுவார்கள். இவ்வாறெல்லாம் அந்தநாளில் காங்கிரஸ் வாதிகள் பிரசாரம் செய்ததில் பெரிதும் உண்மை இருந்தது என்பதை யாரும் மறுக்க முடியாது. அதனாலேயே 1905-1906-ல் வங்காளத்தில் ஒரு தடவை சுதேசி இயக்கம் தீவிரமாக ஆரம்பிக்கப்பட்டது. அப்போது சுதேசி இயக்கத்தின் நோக்கம் பிரிட்டிஷ் துணிகளைப் பகிஷ்கரிப்பதுதான். இந்த இயக்கத்துக்கு அப்போது சில இடையூறுகள் ஏற்பட்டன. அவற்றில் முக்கியமானது பம்பாய்–ஆமதாபாத் ஆலை முதலாளிகளின் பேராசையாகும். சுதேசி இயக்கத்தைப் பயன்படுத்திக்கொண்டு அவர்கள் ஆலைத் துணிகளின் விலைகளைக் கண்டபடி உயர்த்திக் கொள்ளை லாபம் சம்பாதித்தார்கள். இதன் பலன் என்ன ஆயிற்று என்றால், கொஞ்ச காலத்துக்கெல்லாம் பொது மக்களில் பலருக்குச் சுதேசி இயக்கத்தின் பேரில் பற்று விட்டுப் போய்விட்டது. இந்தப் பழைய நிகழ்ச்சிகளையெல்லாம் காந்தி மகான் நன்கு அறிந்திருந்தார். இந்தியாவின் அடிமைத்தனம் போக வேண்டுமானால். இந்தியர்கள் அன்னியத் துணி வாங்குவதையும் அணிவதையும் அடியோடு நிறுத்தியே யாகவே்ண்டும். ஆனால், முன்னொரு தடவை நடந்ததுபோல் ஆலைமுதலாளிகள் பொதுமக்களின் தலையில் கையை வைத்துக் கொள்ளை லாபம் தட்டுவதையும் தடுக்க வேண்டும். இதற்குச் சாதனமாக மகாத்மா காந்தி கைராட்டை இயக்கத்தைக் கைக்கொண்டார். கை ராட்டையில் நூல் நூற்று அந்த நூலைக்கொண்டு கைத்தறியில் நெய்த கதரையே உடுத்தவேண்டும் என்று சொன்னார். இப்படிக் கதர் உடுத்துவதை வற்புறுத்துவதால் ஆலை முதலாளிகள் கொள்ளை லாபம் சம்பாதிப்பதைத் தடுக்கலாம். இது மட்டுமல்ல. மகாத்மாவின் வாழ்க்கைத் தத்துவத்தை நிறைவேற்றக் கைராட்டையும் கதரும் தகுந்த உபகரணங்களாயிருந்தன. மகாத்மா காந்தி தற்கால நவநாகரிக வாழ்க்கையை வெறுத்தார். ஆடம்பர சுகபோக வாழ்க்கையை வெறுத்தார். கைராட்டையும் கதரும் எளிய வாழ்க்கை முறையின் சின்னங்களா யிருந்தன. மனிதராய்ப் பிறந்த ஒவ்வொருவரும் ஏதேனும் ஒரு வகையில் உடலை உழைத்துப் பாடுபடவேண்டும் என்று மகாத்மா கருதினார். அப்படி எல்லாரும் உடல் உழைப்பைக் கைக்கொள்ளக் கைராட்டை நல்ல சாதனமாயிருந்தது. இயந்திர நாகரிகம் மனித சமூகத்தின் ஆத்மீக அழிவுக்குக் காரணமாகும் என்பது காந்திஜியின் கொள்கை. கைராட்டை இயந்திர நாகரிகத்தை எதிர்த்து நிற்பதற்கு ஆயுதமாயிருந்தது. இந்தியாவின் ஏழு லட்சம் கிராமங்களில் வாழும் மக்களை மகாத்மா ‘தரித்திர நாராயணர்’களாகக் கண்டார். அவர்களுடைய வறுமையை நினைத்து உருகினார். வருஷத்தில் ஆறு மாதம் கிராமவாசிகள் வேலையில்லாமலிருக்கிறார்கள் என்பதும் மகாத்மாவுக்குத் தெரிந்தது. லட்சக்கணக்கான கிராமவாசிகளுக்கு வேலையில்லாத நாட்களில் வேலை கொடுக்கக் கூடியது கைராட்டினம் ஒன்றுதான் என்பதை மகாத்மா கண்டார். அநாதை ஸ்திரீகளும் வயதான மூதாட்டிகளும் பிறரை அண்டாமலும் பட்டினி கிடக்காமலும் ’இஷ்டமுடன் தம் குடிசை நிழலிலிருந்து நூல் இழைத்துப் பிழைக்கலாம்’ என்று கண்டார். இத்தகைய காரணங்களினால் கைராட்டினத்தை மகாத்மா காந்தி ‘காமதேனு’ என்று போற்றினார். அதைக் குறித்து இடைவிடாது பேசியும் எழுதியும் வந்தார். இந்தியா தேசத்தின் சிறந்த அறிவாளிகளில் சிலருக்கு மகாத்மா காந்தியின் கைராட்டைப் பிரசாரம் பிடிக்கவில்லை. அவ்விதம் பிடிக்காதவர்களில் ஒருவர் மகாகவி ரவீந்திரநாத தாகூர். மகாத்மாவிடம் மகாகவி எத்தனையோ அபிமானமும் மரியாதையும் கொண்டிருந்தவர். ‘மனித சமூகத்தை ரட்சிக்க அவதரித்த மகாபுருஷர்களில் ஒருவர் மகாத்மா காந்தி’ என்று டாக்டர் தாகூர் பலமுறையும் தமது கருத்தை வெளியிட்டிருக்கிறார். ஆனாலும் காந்திஜியின் கைராட்டைப் பிரசாரத்தை மகாகவி தாகூர் விரும்பவில்லை. இராட்டைப் பிரசாரத்தைப் “பிற்போக்கு இயக்கம்” என்று தாகூர் பகிரங்கமாகக் கூறிக் கண்டித்தார். “இயந்திரங்களினால் மனித சமூகம் எவ்வளவோ முன்னேற்றம் அடைந்திருக்கிறது. காந்திஜி அந்த முன்னேற்றத்தை யெல்லாம் புறக்கணித்து இந்திய மக்களைப் பல நூறு வருஷம் பின்னால் கொண்டு போகப் பார்க்கிறார்” என்று டாக்டர் தாகூர் சொன்னார். காந்தி மகான் மகாகவி தாகூரைக் ‘குருதேவ்’ என்று போற்றி வந்தவர். தென்னாப்பிரிக்காவில் தம்முடன் டால்ஸ் டாய் பண்ணையில் வாழ்ந்தவர்களை இந்தியா வந்ததும் முதன் முதலில் தாகூரின் சாந்திநிகேதனுக்கே மகாத்மா அனுப்பினார் அல்லவா? ஆனபோதிலும் கைராட்டை இயக்கத்தைப் பற்றியவரையில் மகாத்மா காந்தி குருதேவரின் கருத்தை ஒப்புக்கொள்ளவில்லை. “வானத்தில் ஆனந்தமாய்ப் பாடிக் கொண்டு பறக்கும் வானம்பாடிக்குப் பூமியிலுள்ள கஷ்டங்கள் எப்படித் தெரியும்? குருதேவர் தாகூர் மகாகவி; அவருக்கு ஏழைகளின் பட்டினிக் கொடுமை இத்தகையது என்று தெரியாது. தெரிந்திருந்தால் கைராட்டைதான் ஏழைகளின் காமதேனு என்பதை ஒப்புக்கொண்டிருப்பார்” என்று காந்தி மகான் அணுவளவும் தமது கொள்கையிலிருந்து வழுவாமல் தாகூருக்குப் பதில் கூறினார். 1921-ஆம் வருஷம் செப்டம்பர் மாதத்துக்குள் இந்தியாவில் அன்னியத் துணி பகிஷ்காரத்தைப் பூரணமாய் நடத்திவிட வேண்டும் என்று காந்திஜி கருதியிருக்கிறார். செப்டம்பரில் அத்திட்டம் நிறைவேறி விட்டால் அடுத்து வரும் மாதங்களில் சட்டமறுப்பு இயக்கத்தைத் தொடங்கி வருஷக் கடைசிக்குள் சுய ராஜ்யத்தை ஸ்தாபித்து விடலாம் என்று உத்தேசித்திருந்தார். வால்ட்டேரில் மௌலானா முகம்மதலி சிறைப்பட்டது மகாத்மாவின் சுயராஜ்ய தாகத்தைப் பன்மடங்கு ஆக்கியது. விதேசித் துணி பகிஷ்காரத்தை நிறைவேற்றுவதில் அவருடைய ஆர்வமும் பெருகிற்று. இந்த ஆர்வத்துடனே தான் சென்னையிலிருந்து புறப்பட்டுத் தமிழ்நாட்டில் சுற்றுப்பிரயாணம் செய்யத் தொடங்கினார். அவருடன் மௌலானா ஆஜாத் சோபானி என்னும் முஸ்லிம் பெரியாரும் பிரயாணம் செய்தார். காந்திஜி கோஷ்டியார் ஏறிய ரயில் விழுப்புரம் சென்றது. விழுப்புரம் ரயில்வே நிலையத்தில் எள்ளுப் போட்டால் எள்ளு விழாதபடி பதினாயிரக் கணக்கான ஜனங்கள் கூடியிருந்தார்கள். காந்திஜி அவர்களுக்குக் கைராட்டையும் கதரையும் பற்றி எடுத்துச் சொல்ல விரும்பினார். ஆனால் அது சாத்தியப் படவில்லை. கூட்டத்தில் அவ்வளவு இரைச்சல். “உட்காருங்கோ!” “சத்தம் போடாதேங்கோ!” என்று நூற்றுக் கணக்கான குரல்கள் ஏக காலத்தில் எழுந்தன. ஜனங்கள் போட்ட இரைச்சலுடன் இரைச்சலை அடக்க முயன்றவர்களின் கூப்பாடும் சேர்ந்து ஏக இரைச்சலாகிவிட்டது. காந்திஜி ஒரு வார்த்தைகூட அக்கூட்டத்தில் பேச முடியவில்லை. ரயில் வண்டி மேலே சென்றது. பறங்கிப் பேட்டையில் மிஸ் பீடர்ஸன் என்னும் ஐரோப்பிய அம்மையார் ஆரம்பித்திருந்த ஆசிரமத்துக்கு மகாத்மா அஸ்திவாரம் நாட்டினார். பிறகு கூடலூரில் பொதுக் கூட்டத்தில் பேசிவிட்டுக் கும்பகோணத்துக்கு வந்தார். கும்பகோணத்தில் மகாத்மாவைத் தரிசிக்க நாற்பதினாயிரம் ஜனங்கள் கூடியிருந்தார்கள். அவ்வளவு பேரும் காந்திஜியைப் பக்கத்தில் சென்று பார்க்க முயன்றார்கள். கூட்டத்தில் எழுந்த கூச்சலையும் கூப்பாட்டையும் சொல்லி முடியாது. கும்பகோணம் கூட்டத்திலும் மகாத்மாவினால் பேச முடியவில்லை. அங்கிருந்து திரிசிராப்பள்ளிக்குச் சென்றார். திரிசிராப்பள்ளியில் தேச பக்தர் டாக்டர் டி. எஸ். எஸ். ராஜன் அவர்களின் வீட்டில் மகாத்மாவுக்கு நிம்மதி கிடைத்தது. “மகாத்மாவுடன் ஏழு மாதம்” என்னும் நூலில் ஸ்ரீ கிருஷ்ணதாஸ் என்பவர் இதைப் பற்றி எழுதியிருக்கிறார். அந்தப் பிரயாணத்தின் போது மகாத்மாவின் காரியதரிசியாகத் தொண்டு செய்தவர் ஸ்ரீ கிருஷ்ணதாஸ். அவர் மேற்கூறிய புத்தகத்தில் எழுதியிருப்பதாவது:- “திரிசிராப்பள்ளி ஸ்டே ஷனை அடைந்ததும் எங்களுக்கெல்லாம் மிக்க வியப்பும் மகிழ்ச்சியும் ஏற்பட்டன. ரயில்வே நிலையத்தில் ஏராளனமான ஜனங்கள் கூடியிருந்தபோதிலும் இரைச்சல் என்பதே கிடையாது. அன்றைக்கு மகாத்மாவின் மௌன தினம். ரயிலை விட்டு அமைதியாக இறங்கி ஜாகைக்குப் போக முடிந்தது. இங்கே ஜனங்களிடம் காணப்பட்ட அமைதியும் ஒழுங்கும், வழியெல்லாம் ஜனக்கூட்டத்தின் அமளியினால் கஷ்டப்பட்டு வந்த எங்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருந்தது. ரயில்வே நிலையத்துக்குப் பக்கத்தில் உள்ள டாக்டர் ராஜனுடைய வீட்டில் எங்களுக்கு ஜாகை. டாக்டர் ராஜன் அப்போது மாகாண காங்கிரசின் காரியதரிசி. அவருடைய வீடு ஏறக்குறைய ஓர் ஆசிரமமாக மாறியிருந்தது. தம்முடைய குடும்பத்தில் யாரும் இனிக் கடையில் துணி வாங்கக்கூடாது என்றும் அவரவர்களுடைய தேவைக்கு வேண்டிய நூல் அவர்களே நூற்றுக் கொள்ள வேண்டும் என்றும் கட்டளையிட்டு விட்டதாக டாக்டர் ராஜன் மகாத்மாஜியிடம் தெரியப்படுத்தினார். டாக்டர் ராஜனுடைய வீடு திருச்சி நகரத்துக்குக் கொஞ்ச தூரத்தில் ஒரு பெரிய தோட்டத்தின் நடுவில் இருந்தது. புயலிலும் சண்டமாருதத்திலும் அடிபட்டுத் திண்டாடிய கப்பல் ஒரு அமைதியான துறைமுகத்துக்கு வந்து சேர்ந்தால் பிரயாணிகள் எவ்வளவு ஆனந்தம் அடைவார் களோ அவ்வளவு ஆனந்தம் நாங்களும் அடைந்தோம். இவ்வாறு திருச்சியில் டாக்டர் ராஜனுடைய கண்டிப்பான பாதுகாப்பின் காரணமாக மகாத்மாவுக்குக் கொஞ்சம் ஓய்வும் அமைதியும் கிடைத்தது. ஆனால் அமைதி வெளியில் இருந்ததே தவிர அவருடைய மனதில் நிம்மதி ஏற்படவில்லை. விதேசித் துணியைப் பகிஷ்கரிப்பதிலும் கதரைப் பெருக்குவதிலும் அவருடைய மனதில் குடிகொண்டிருந்த தாபத்தை அவர் மக்களுக்கு வெளியிட விரும்பினார். ஆனால் ஜனங்களோ மகாத்மாவை அருகில் சென்று பார்த்துவிட வேண்டும் என்று பிரயத்தனம் செய்தார்கள். மாபெருங் கூட்டம் கூடி மக்கள் போட்ட கூச்சலினால் மகாத்மாவின் வார்த்தைகள் அவர்கள் காதில் விழுவதே இல்லை. “ஐயோ! நாட்கள் போய்க் கொண்டிருக்கின்றனவே. இவ்வளவு ஜனக்களும் வந்து கூட்டம் கூடிக் கூச்சல் போட்டு விட்டு என்னைப் பார்த்து விட்டுப் போய் விடுகிறார்களே? கைராட்டையைப் பற்றியும் கதரைப் பற்றியும் இவர்களுக்கு எவ்வாறு சொல்வேன்? என் இதயக் கொதிப்பை இவர்களுக்கு எவ்வாறு வெளியிடுவேன்?” என்று மகாத்மா யோசனையில் ஆழ்ந்திருந்தார். திருச்சியிலும் ஸ்ரீரங்கத்திலும் பொதுக் கூட்டங்களில் ஓரளவு அமைதி நிலவியது. திருச்சியிலிருந்து மகாத்மா திண்டுக்கல்லுக்குப் போனார். அங்கே பழைய கதைதான். கூட்டம் பிரமாதம்; கூச்சலும் பிரமாதம். மகாத்மாவினால் ஒரு வார்த்தையும் பேச முடியவில்லை. திண்டுக்கல்லிலிருந்து மதுரைக்குப் போனார். மதுரை மகாத்மாவுக்கு அளித்த வரவேற்பு மற்ற ஊர் வரவேற்புகளையெல்லாம் தூக்கி அடித்து விட்டது. அவ்வளவு லட்சக்கணக்கான ஜனங்கள் கூடியிருந்தார்கள். ஆனால் பொதுக் கூட்டத்தைப் பற்றிய வரையில் பழைய கதையேதான்! அமைதியை நிலைநாட்ட மதுரைத் தலைவர்கள் எவ்வளவோ முயன்றார்கள். மகாத்மாவும் முயன்று பார்த்தார். ஒன்றும் பயன்படவில்லை. மகாத்மா பிரசங்கம் செய்யாமலே கூட்டத்தைக் கலைந்து போகச் சொல்லும்படி நேர்ந்தது. மதுரையில் அன்றிரவு மகாத்மாவின் ஜாகையில் அவரைப் பல பிரமுகர்கள் வந்து சந்தித்தார்கள். அவர்களுடன் மகாத்மா பொதுப்படையாக வார்த்தையாடிக் கொண்டிருந்த போதிலும் அவருடைய உள்ளம் யோசனையில் ஆழ்ந்திருந்தது. கதர் இயக்கத்தைப் பிரசாரம் செய்வதற்குத் தகுந்த சாதனம் ஒன்றை அவர் மனம் தேடிக் கொண்டிருந்தது; அத்தகைய சாதனம் வேறு எந்த விதமாயிருக்க முடியும்? பிறருடைய தவறுகளுக்காகத் தாம் உண்ணா விரதம் இருந்து பிராயச்சித்தம் செய்து கொன்கிறவர் அல்லவா ’மகாத்மா? எனவே, மக்களுக்குக் கதரின் முக்கியத்தை உணர்த்தும்படியாகத் தாம் என்னதியாகத்தைச் செய்வது, என்ன விரதத்தை மேற்கொள்வது என்றுதான் அவர் உள்ளம் சிந்தனை செய்தது. மகாத்மாவைச் சந்தித்துப் பேச வந்த பிரமுகர்களிள் ஒருவர் கதர் உடுத்தாமல் அந்நியத்துணி உடுத்திக்கொண்டு வந்தார். அவரைப்பார்த்து மகாத்மா “நீங்கள் என்னைப் பார்க்க வருகிறீர்களே? என்னைப் பார்த்து என்ன பயன்? நான் இவ்வளவு நாள் சொன்னபிறகும் விதேசித் துணி உடுத்தியிருக்கிறீர்களே? ஏன் கதர் அணியவில்லை?” என்று கேட்டார். “கதர் உடுத்த எனக்கு இஷ்டந்தான். ஆனால் கதர் கிடைக்கவில்லை;” என்றார் அந்தப் பிரமுகர். அதே நிமிஷத்தில் மகாத்மாவின் மனதில் அவர் தேடிக் கொண்டிருந்த சாதனம் உதயமாகி விட்டது. “ஆஹா! இவர் கதர் கிடைக்கவில்லை என்கிறார் நாமோ இடுப்பில் பத்துமுழ வேஷ்டி, மேலே இரண்டு சட்டை, குல்லா இவையெல்லாம் அணிந்திருக்கிறோம். எதற்காக இவ்வளவு கதர்த் துணியை நாம் அணிய வேண்டும்?” என்று தோன்றியது. அதே சமயத்தில் தமிழ் நாட்டில் மகாத்மா கண்ட வேறொரு காட்சி நினைவுக்கு வந்தது. வடக்கேயெல்லாம் ஏழைத் தொழிலாளிகள், உழவர்கள் கூட மேலே சட்டை அணிவது வழக்கம். தமிழ்நாட்டில் வயற்புறங்களில் வேலை செய்பவர்கள் பெரும்பாலும் அரையில் முழத்துணியோடு வேலை செய்வது வழக்கம். “இது ஏன்?” என்று காந்திஜி தமிழ்நாட்டுத் தலைவர்களைக் கேட்டார். “ஒருதுணிக்கு மேலே இரண்டாவது துணி வாங்கவும் சட்டை தைக்கவும் அவர்களிடம் பணம் இல்லை” என்று பதில் வந்தது. அந்தப் பதில் மகாத்மாவின் மனதில் பதிந்து போயிருந்தது. இவையெல்லாவற்றையும் எண்ணிப் பார்த்து, மகாத்மா காந்தி அன்றிரவே ஒரு முடிவுக்கு வந்தார். மறுநாள் காலையில் மகாத்மா எழுந்ததும் தம்முடன் பிரயாணம் செய்த சகாக்களை அழைத்தார். “இன்று முதல் நான் இடுப்பில் ஒரு முழ அகலமுள்ள துண்டு மட்டும் அணிவேன். குளிர் அதிகமான காலங்களில் போர்த்திக்கொள்ள ஒரு துப்பட்டி உபயோகிப்பேன். மற்றப்படி சட்டை, குல்லா எதுவும் தரிக்க மாட்டேன். இப்போதைக்கு இந்த விரதத்தை ஒரு மாதத்துக்கு எடுத்துக் கொள்ளப் போகிறேன். பிறகு உசிதம் போல் யோசித்து முடிவு செய்வேன்” என்றார். இவ்விதம் சொல்லிவிட்டு, பத்துமுழ வேஷ்டி–சட்டை– குல்லா எல்லாவற்றையும் களைந்து வீசி எறிந்தார். ஒரு முழ அகலமுள்ள துண்டை எடுத்து இடுப்பில் சுற்றிக் கொண்டார். தம்முடைய சகாக்களைப் பார்த்து “புறப்படலாம் காரைக்குடிக்கு!” என்று சொன்னார். மகாத்மாவின் சீடர்கள் கதி கலங்கிப் போனார்கள். இது ஒரு விபரீதமான விரதமாகவே அவர்களுக்குத் தோன்றியது. ஒரு மாதத்திற்கு இப்போது விரதம் எடுத்துக்கொண்டாலும் அதை மகாத்மா நிரந்தரமாகவே கொண்டு விடுவார் எந்று பயந்தார்கள்! அவர்களில் ஒருவர் ஓடிப்போய் ராஜாஜியையும் டாக்டர் ராஜனையும் அழைத்து வந்தார். ராஜாஜியும் டாக்டர் ராஜனும் எவ்வளவோ காரணங்களைச் சொல்லி வேண்டிக் கொண்டார்கள். ஆனால் மகாத்மா தமது உறுதியைக் கைவிட விரும்பவில்லை. அதன் பேரில், இத்தகைய விரதம் எடுத்துக் கொன்வதைக் கொஞ்சநாள் தள்ளியாவது போடும்படி ராஜாஜியும் டாக்டர் ராஜனும் வேண்டிக்கொண்டார்கள். அதற்கும் மகாத்மா இணங்கவில்லை. விடாமல் வாதம் செய்த ராஜாஜியைப் பார்த்து மகாத்மா, “உங்களுடைய வாதத்துக்கு என்னால் பதில் சொல்ல முடிய வில்லை. ஆனால் நான் செய்வது தான் சரி என்பதில் எனக்குலவலேசமும் சந்தேகமில்லை” என்று சொன்னார். அன்று அதிகாலையில் மூன்று மணிக்குத் தாம் விழித்துக் கொண்டதாகவும், தூக்கமும் விழிப்புமாயிருந்த நிலையில் இந்த யோசனை தமக்குத் தோன்றியதாகவும், அது தம்முடைய அந்தராத்மாவின் கட்டளையென்றும், அதை மீற முடியாது என்றும் மகாத்மா தெரிவித்தார். பிறகு நடந்ததைப் பற்றி ஸ்ரீ கிருஷ்ணதாஸ் எழுதியிருப்பதாவது:- " மகாத்மாஜி இடுப்பில் மட்டும் ஒரு முழ அகலத் துணி ஒன்றை உடுத்திக் கொண்டு காரைக்குடிக்குப் புறப்படத் தயாரானார். மகாத்மாவையும் அவருடைய சகாக்களையும் ஏற்றிச் செல்வதற்கு வாசலில் நாலு மோட்டார் வண்டிகள் தயாராகக் காத்திருந்தன. மதுரைமா நகரின் ஜனங்களும் அதிகாலையிலேயே எழுந்து மகாத்மாவைத் தரிசிப்பதற்குச் சாலையின் இரு புறமும் வந்து மொய்த்துக்கொண்டு நின்றார்கள். மகாத்மா அரைத் துணி ஒன்றுடனே, சட்டை குல்லா அங்க வஸ்திரம் ஒன்றுமில்லாமல், மோட்டார் வண்டியில் போய் ஏறிய போது, அவருடைய சகாக்களும் சீடர்களும் உணர்ச்சி வசப் பட்டுத் தலை குனிந்து நின்றார்கள். திறந்த மோட்டார் வண்டி அதன் பிரயாணத்தைத் தொடங்கிய போது உதய சூரியனின் செங்கிரணங்கள் மகாத்மாவின் மார்பிலும் தலையிலும் விழுந்தன.மகாத்மாவின் தாமிர வர்ணத் திருமேனி ஒரே ஜோதிமயமாய்க் காட்சி அளித்தது. பின்னர் தமிழ்நாடெங்கும் மகாத்மா காந்தி முழத்துண்டு அணிந்தே பிரயாணம் செய்தார். அந்தக் கோலத்தில் அவரைப் பார்த்த ஜனங்கள் பரவசமடைந்தார்கள். மகாத்மா வின் பிரசங்கத்தைக் காது கொடுத்துக் கேட்க வேண்டிய அவசியமே அவர்களுக்கு இனி இல்லை. சட்டை அணியாத மகாத்மாவின் புனிதத் திருமேனியைத் தரிசித்த உடனேயே ஜனங்கள் மகாத்மாவின் விருப்பம் என்ன என்பதைத் தெரிந்து கொண்டார்கள். கை ராட்டைக்கும் கதருக்கும் மகாத்மாவின் புதிய கோலமே மிகச்சிறந்த பிரசார சாதனமாயிற்று, ஆயிரம் கட்டுரைகளினாலும் பதினாயிரம் பிரசங்கங்களினாலும் சாதிக்க முடியாததை மகாத்மாவின் தவக்கோலம் சாதித்து விட்டது. இதய தாபம் முழத்துண்டு விரதம் கொண்ட காந்தி மகான் மதுரையிலிருந்து திருநெல்வேலிக்குப் போனார். காந்திஜியின் விரதத்தைப் பற்றிய செய்தி அவருக்கு முன்னாலேயே திருநெல்வேலிக்குச் சென்று விட்டது. அதை அறிந்த திருநெல்வேலி மக்கள் பக்தி பரவசமாயிருந்தார்கள். காங்கிரஸ் தொண்டர்களும் பொதுமக்களைக் கட்டுக்குள்ளே வைப்பதற்குப் பெரு முயற்சி செய்தார்கள். ஆகையால் பெருந் திரளான மக்கள் கூடியிருந்தும் பொதுக் கூட்டத்தில் அமைதியும் நிசப்தமும் நிலவியது. இதைக் குறித்துக் காந்திஜி திருநெல்வேலி ஜனங்களைப் பெரிதும் பாராட்டினார். “இந்தமாதிரி ஒழுங்கும் கட்டுப்பாடும் இந்தியா தேசமெங்கும் நிலை நாட்டப் பட்டு விட்டல், நம்முடைய இயக்கம் வெற்றி அடைவது பற்றி எனக்கு யாதொரு சந்தேகமும் இல்லை” என்று மகாத்மா கூறினார். பின்னர் இராட்டையின் தத்துவத்தைப் பற்றித் தம்முடைய கருத்துக்களை அவர்களுக்கு தெளிவாக எடுத்துக் கூறினார். காந்திஜி ஒரு ஊருக்குப்போய் ஜாகையில் இறங்கியவுடனே அவரைப் பார்ப்பதற்கு அந்த ஊர்ப் பிரமுகர்கள் பலர் வருவது வழக்கம். அப்படி வருகிறவர்கள் எல்லாரும் காந்திஜியிடம் பக்தி கொண்டவர்கள் என்றோ அவருடைய போதனைகளைக் கடைப்பிடிக்கிறவர்கள் என்றோ சொல்ல முடியாது. “கந்திஜியைப் பார்த்துப் பேசினேன்” என்று பெருமையுடன் சொல்லிக் கொள்வதற்காகவே பலர் வந்து சேர்வார்கள். இப்படிப்பட்ட வீண் பெருமைக்காரர்கள் வந்து மகாத்மாவைப் பார்த்துப் பேசுவதற்குத் திருநெல்வேலியில் ஒரு தடை ஏற்பட்டது. மௌலானா ஆஸாத் ஸோபானி காந்திஜியுடன் பிரயாணம் செய்தார் அல்லவா? காந்திஜி முழத்துண்டு விரதம் கொண்டது பற்றி மதுரையிலிருந்து திருநெல்வேலி போகும்போது மௌலானா ஆஸாத் யோசனை செய்தார். இஸ்லாமிய மதக் கொள்கையின்படி இன்றியமையாத உடையை மட்டும் அணிந்து கொண்டு மற்றதை யெல்லாம் அவரும் புறக் கணித்தார். இடுப்பில் லுங்கியும் மேலே ’வெயிஸ்ட் கோட்“டும் அணிந்துகொண்டு அசல் முஸ்லிம் ’பக்கிரி’யைப் போல் தோற்றம் கொண்டார். திருநெல்வேலியில் காந்திஜி தங்கிய ஜாகையில், அவர் தங்கியிருந்த அறைக்கு வெளிப்புறத்து அறையில் இவர் உட்கார்ந்து கொண்டார். மகாத்மாவைப் பார்க்க வருகிறவர்களிடம்,”உங்கள் உடம்பின் மேல் உள்ள விதேசித் துணிகளைக் இங்கே களைந்து எறிந்துவிட்டு உள்ளே மகாத்மாவைப் பார்க்கப் போங்கள்!" என்று சொன்னார். வந்தவர்களில் சிலர் மனப்பூர்வமாக விதேசித் துணிகளைக் கழற்றிக் கொடுத்தார்கள். ஒரு சிலர் வேறு வழியில்லாத படியால் மனமின்றிக் கொடுத்தார்கள். இன்னும் சிலர் விதேசித் துணிகளைக் கொடுக்க மனமில்லாமல் “மகாத்மாவைப் பார்க்கவேண்டாம்” என்று திரும்பி ஓடியே போய்விட்டார்கள். இவ்வாறு வீணர்கள் வந்து மகாத்மாவின் ஓய்வைக் கெடுப்பதற்கு ஒரு முட்டுக்கட்டை திருநெல்வேலியில் ஏற்பட்டது. விதேசித் துணிகளைத் தியாகம் செய்யத் துணிந்து காந்திஜியைத் திருநெல்வேலியில் வந்து பார்த்தவர்களில் ஒருவர் திருவாங்கூர் சமஸ்தானத்தைச் சேர்ந்தவர். அவர் சென்னை மாகாணத்தில் தீண்டா வகுப்பார் அநுபவிக்கும் இன்னல்களைப்பற்றி மகாத்மாவிடம் எடுத்துச் சொன்னார். தீண்டாதார் ஹிந்துக்களா யிருந்த போதிலும் அவர்கள் ஹிந்து ஆலயங்களில் விடப்படுவதில்லை யென்ற அநீதியைப் பற்றி உருக்கமாகக் கூறினார். இந்த அநீதியைப் போக்குவதற்காகத் திருவாங்கூரில் சில சீர்திருத்த வாதிகள் ஆலயப் பிரவேச இயக்கம் ஆரம்பிக்க விரும்புவதாவும் அவர் தெரிவித்தார். “என்ன மாதிரி இயக்கம் ஆரம்பிக்க உத்தேசம்?” என்று காந்திஜி கேட்டார். “முக்கியமான கோவில் ஒன்றில் உற்சவம் நடக்கப் போகிறது. அச்சமயம் ஒரு பெரிய தீண்டார் கும்பலை அழைத்துக் கொண்டு கோயிலுக்குள் பிரவேசிப்போம். அதை அரசாங்க அதிகாரிகளும் மற்ற ஹிந்துக்களும் தடுத்தாலும் நாங்கள் பின்வாங்கப்போவதில்லை. பலவந்தமாகப் பிரவேசித்தே தீர்வோம்” என்றார் வந்தவர். “கலகம் நேர்ந்தால்?” என்று மகாத்மா கேட்டார். “கலகம் நேர்ந்தாலும் நேரட்டும் அதற்காக நாம் என்ன செய்வது?” என்றார் வந்த மனிதர். அது சரியான மனோபாவம் அல்ல என்பதை மகாத்மா காந்தி அவருக்கு எடுத்துக்காட்டினார். “தீண்டாமை பெரிய அநீதிதான். ஹிந்துக்களில் ஒரு பகுதியாரை ஆலயங்களில் விடுவதில்லை என்பது பெருங்கொடுமைதான். ஆனால் அநீதியையும் கொடுமையையும் பலாத்காரத்தினால் போக்க முடியாது. தீண்டாமை போக வேண்டுமானால் சாதி ஹிந்துக்களின் மனம் மாற வேண்டும். பலாத்காரத்தினால் சாதி ஹிந்துக்களின் மனதை மாற்ற முடியாது. குரோதமும் துவே ஷமும் அதிகமாகும். ஆகையால் ஆலயங்களுக்குள் போவதாயிருந்தால், இரண்டு பேர் அல்லது மூன்று பேராகப் போங்கள். பலாத்காரத்தைக் கையாள வேண்டாம். அதிகாரிகள் சிறைக்கு அனுப்பினால் செல்லுங்கள் இதுதான் சரியான முறை. இப்போது நான் இந்தியாவின் விடுதலையைக் கருதி ஒத்துழையாமை இயக்கத்தை நடத்திக் கொண்டிருக்கிறேன். எனக்கு நீங்கள் கொஞ்சம் அவகாசம் கொடுத்தால் தேச விடுதலை இயக்கம் முடிவடைந்த பிறகு நானே ஆலயப் பிரவேச இயக்கத்தையும் முன்னின்று நடத்துவேன்!” என்றார் காந்திமகான். தீண்டாமையின் கொடுமையைப் பற்றி ஏற்கனவே மகாத்மாவுக்குத் தெரிந்துதானிருந்தது. தீண்டாமை விலக்கைக் காங்கிரஸ் திட்டங்களில் ஒன்றாகச் சேர்த்திருந்தார். ஆயினும் மேற்படி சம்பாஷணையின் பயனாக மகாத்மாவின் மனம் தீண்டாமை விலக்குப் பற்றி அதிகமாகச் சிந்திக்கத் தொடங்கியது. பிற்பாடு மகாத்மா காந்தி பேசிய இடங்களில் எல்லாம் தீண்டாமை விலக்கைப் பற்றியும் அதிகமாக வற்புறுத்திப் பேசலானார். பின்னால் ஒத்துழையாமை இயக்கத்தை நிறுத்தி வைக்க நேர்ந்தபோது, காந்திஜி தீண்டாமை விலக்கிலும் ஆலயப் பிரவேச இயக்கத்திலும் பூரணமாகக் கவனம் செலுத்தியதை நாம் அறிவோம் அல்லவா? காந்தி மகாத்மாவின் பெரு முயற்சியினால் ஹிந்து சமூக்துக்கு ஏற்பட்டிருந்த தீண்டாமை என்னும் நோய் நம்முடைய காலத்திலேயே தொலைந்து ஒழிந்து போனதைப் பார்த்தோம். திருநெல்வேலியிலிருந்து மகாத்மா திரும்பி மதுரை- திருச்சி வழியாக ஈரோட்டுக்கு வந்தார். ஈரோட்டில் அச்சமயம் சிறந்த காங்கிரஸ் தலைவராக விளங்கிய ஸ்ரீ ஈ.வே. இராமசாமி நாயக்கர் அவர்களின் இல்லத்தில் தங்கினார். ஈரோட்டில் சிற்றாற்றாங்கறையில் ஒரு விசாலமான ஆலமரத்தின் அடியில் பொதுக்கூட்டம் மிக அமைதியாக நடந்தது. பல சமூகங்களின் சார்பாக வேலைப்பாடு அமைந்த வெள்ளிப் பேழைகளில் உபசாரப் பத்திரங்கள் மகாத்மாவுக்கு அளிக்கப்பட்டன. வெள்ளிப் பெட்டிகளையெல்லாம் பொதுக்கூட்டத்தில் ஏலம் போட்டுக் கிடைத்த பணம் திலகர் சுயராஜ்ய நிதியில் சேர்க்கப் பட்டது. மகாத்மாவுக்கு எங்கே எந்த விதமான பரிசுப் பொருள் கிடைத்தாலும் அங்கேயே ஏலம் போட்டு ஏதேனும் ஒரு பொது நிதியில் சேர்த்துவிடுவது வழக்கம். பொது நிதிகள் சேர்ப்பதில் மகாத்மாவுக்கு இணையான ஆற்றல் வாயந்தவர் யாருமே கிடையாது. அப்போதெல்லாம் பல பெண்மணிகள் மகாத்மாவை தரிசிக்கப் பக்தியுடன் வருவார்கள். தமிழ்நாட்டுப் பெண்மணிகள் நிறைய நகைகள் அணிந்து கொண்டிருப்பது வழக்கமல்லவா? தம்மைப் பார்க்கவரும் பெண்மணிகளைப் பார்த்து “இந்த நகைகளை எதற்காகச் சுமக்கிறீர்கள்? என்னிடம் கழற்றிக் கொடுத்து விடுங்கள். நல்ல காரியத்துக்குப் பயன் படுத்துகிறேன்” என்று காந்திஜி கூசாமல் கேட்டு விடுவார். இந்த வழக்கத்தை அறிந்த பிறகு பெண்மணிகள் மகாத்மாவின் அருகில் போய் அவரைத் தரிசித்துப் பேச வேண்டும் என்ரு ஆசைப்படுவது குறைந்து போயிற்று. ஈரோட்டிலிருந்து கோயமுத்தூருக்குப் போய்ப் பிறகு காந்திஜி சேலத்துக்குப் போன போது ஒரு சிறு சம்பவம் நிகழ்ந்தது. அப்போது சேலம் டாக்டர் வரதராஜுலு நாயுடு காங்கிரஸ் முன்னணித் தலைவர்களில் ஒருவராயிருந்தார். அவர் தமது குடும்பத்துடன் மகாத்மாவைப் பார்ப்பதற்கு வந்தார். டாக்டர் நாயுடுவின் குமாரி, ஏழு வயதுப் பெண். கையில் பொன் வளையல்கள் அணிந்திருந்தாள். மகாத்மாஜி அதைப் பார்தததும் “இந்த வளையல்கள் உனக்கு என்னத்திற்கு? எனக்குக் கொடுத்துவிடு!” என்றார். மகாத்மா கூறியதை ஸ்ரீ நாயுடு தமிழில் குழந்தைக்குச் சொன்னார். குழந்தை உடனே வளையல்களைக் கழற்றிக் கொடுத்து விட்டாள். “நான் விளையாட்டாகக் கேட்டேன். அம்மா! நீயே வைத்துக்கொள்!” என்று மகாத்மா பலதடவை சொல்லியும் அந்தக் குழந்தை கேட்கவில்லை. மகாத்மாவிடமிருந்து வளையல்களைத் திரும்பப் பெற்றுக்கொள்ளக் கண்டிப்பாக மறுத்து விட்டாள். நாகபுரி காங்கிரஸின் அக்கிராசனர் சேலம் ஸ்ரீ சி. விஜயராகவாச்சாரியார் அல்லவா நியாயமாக, அந்த வருஷத்தில்காங்கிரஸ் வேலைகள் எல்லாம் ஸ்ரீ விஜயராகவாச்சாரியாரின் தலைமையில் நடைபெறவேண்டும். அதற்குப் பதிலாக மகாத்மாவிடமும் அவருடைய சகாக்களிடமும் காங்கிரஸ் திட்டங்களை நிறைவேற்றும் பொறுப்பு வந்துவிட்டது. எனினும், பெருந் தன்மைமிக்க மகாத்மா சேலத்தில் ஸ்ரீ விஜயராகவாச்சாரியாரைப் பார்ப்பதற்கு அவருடைய வீட்டுக்குச் சென்று சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டுத் திரும்பினார். சேலம் நகர சபையார் காந்தி மகாத்மாவுக்கு மிக வேலைப் பாடமைந்த சந்தன மரப்பெட்டி ஒன்றில் உபசாரப் பத்திரம் வைத்துக்கொடுத்தார்கள். அந்தச் சந்தன மரப்பெட்டி அப்போது சென்னைக் கவர்னராக வந்திருந்த லார்ட் வில்லிங்டனுக்காக செய்யப்பட்டது. ஆனால் அதை வில்லிங்டனுக்கு கொடுப்பதற்குள்ளே ஒத்துழையாமை இயக்கம் தோன்றிவிட்டது! தமிழ் நாட்டில் ஒத்துழையாமை இயக்கத்துக்குத் தலைமை வகித்த ஸ்ரீ சக்கரவர்த்தி இராஜகோபாலாச்சாரியார் சேலத்தைச் சேர்ந்தவர். சேலம் ஜில்லா அந்த இயக்கத்தின் முன்னணியில் நின்றது. மற்ற எந்தத் தமிழ் நாட்டு நகரத்தைக்காட்டிலும் சேலத்தில் அதிகமான வக்கீல்கள் தங்கள் தொழிலை நிறுத்தி மகாத்மாவின் இயக்கத்தில் சேர்ந்தார்கள். அப்படிப்பட்ட சேலத்தில் நகரசபையும் தேசீய மனப்பான்மையும் கொண்டிருந்தது. கவர்னருக்கு வரவேற்பு அளிக்கும் உத்தேசத்தை அடியோடு கைவிட்டுச் சேலம் நகர சபையார் கவர்னருக்காகத் தயாரித்திருந்த சந்தனப் பெட்டியை மகாத்தமா காந்திக்குக் கொடுத்ததில் வியப்பில்லையல்லவா? லார்டு வில்லிங்டனுக்கு அந்தப் பெட்டியைக் கொடுத் திருந்தால் லேடி வில்லிங்டன் இந்தியாவிலிருந்து கொண்டு போன எத்தனையோ விலையுயர்ந்த பொருள்களுடன் அதுவும் இங்கிலந்துக்குப் போயிருக்கும். ஆனால் மகாத்த்மாவுக்குக் கொடுத்த பெட்டி சேலத்திலேயே ஏலத்துக்கு விடப்பட்டு விட்டது. தமக்காகச் செய்த பெட்டியை மகாத்மா பெற்றுக் கொண்டார் என்ற விவரம் லார்டு வில்லிங்டனுக்குத் தெரியாமலிருக்க முடியுமா? தெரிந்துதானிருக்கும். அதை அவர் ஞாபகம் வைத்துக் கொண்டிருந்தாரா என்பது நமக்குத் தெரியாது. ஆனால் ஒன்று தெரியும். லார்டு இர்வின் 1931-ஆம் வருஷக் கடைசியில் வைஸராய் பதவியிலிருந்து விலகி இங்கிலாந்து போனதும் லார்டு வில்லிங்டன் அந்தப் பதவிக்கு வந்து சேர்ந்தார். லார்டு வில்லிங்டன் செய்த முதற்காரியம் லண்டன் வட்டமேஜை மகாநாட்டிலிருந்து திரும்பி வந்த மகாத்மா காந்தியைக் கைது செய்து சிறைக்கு அனுப்பியதுதான்! மகாத்மா காந்திக்கு பேட்டி கொடுக்கவும் லார்டு வில்லிங்டன் இணங்க வில்லை. “சட்ட மறுப்பைக் கைவிட்டுச் சரணாகதி அடைந்தால் தான் பேட்டி கொடுக்கமுடியும” என்றார். ‘அதற்கு இஷ்டம் இல்லாவிட்டால் போங்கள் சிறைக்கு என்றார். இதைப்பற்றிப் பின்னால் விவரமாகப் பார்ப்போம். சேலத்தில் காங்கிரஸ் ஊழியர்கள் பலர் மகாத்மாவைப் பேட்டி கண்டார்கள். மேலே நடக்கவேண்டிய காரியங்களைப் பற்றிக் கேட்டார்கள். “இங்கிருந்து நேரே நான் குஜராத்துக்குப் போகிறேன். அடுத்த மூன்று மாதமும் குஜராத்தில் தான் இருப்பேன். சாத்வீகச் சட்ட மறுப்புப் போரை ஆரம்பிப்பதற்குக் குஜராத்தைத் தயார் செய்வேன்!” என்று மகாத்மா காந்தி சேலம் காங்கிரஸ் ஊழியர்களிடம் கூறினார். “ஒரு வருஷத்தில் சுயராஜ்யம்” என்று மகாத்மா கூறினார் அல்லவா? அந்தத் தவணை நெருங்கி வந்து கொண்டிருந்தது. அது நெருங்க நெருங்க மகாத்மாவின் இதய தாபமும் அதிகமாகிக் கொண்டிருந்தது. வேறு எந்தக் காரியத்திலும் அவருடைய மனது செல்லவில்லை. சுயராஜ்யத்துக்காக நடத்த வேண்டிய இறுதிப் போரைப் பற்றியே மகாத்மா காந்திஜியின் உள்ளம் சிந்திக்கத் தொடங்கியது. பர்தோலி – ஆனந்த் இந்தியாவின் சுதந்திர சரித்திரத்திலும் மகாத்மா காந்தியின் வாழ்க்கையிலும் “பர்தோலி” என்னும் பெயர் மிகவும் முக்கியமானது. பாரத நாட்டுக்குப் பர்தோலிதான் விடுதலை தேடித்தரப் போகிறது என்று 1921 - ஆம் ஆண்டின் இறுதியில் அனைவரும் நம்பியிருந்தார்கள். காந்திஜி இந்தியாவின் சுதந்திரத்துக்கான இறுதிப் போரைப் பர்தோலியிலேதான் ஆரம்பித்து நடத்துவது என்று தீர்மானித்திருந்தார். மகாத்மா எண்ணியபடி பர்தோலியில் இறுதிப் போர் நடைபெறவில்லை. ஆயினும் பர்தோலியின் மூலமாகக் காந்தி மகானுடைய சத்திய ஜோதி சுடர்விட்டு ஒளிர்ந்தது. இது எப்படி என்பதை இந்த அத்தியாயத்திலும் வரும் அத்தியாயங்களிலும் பார்க்கப் போகிறோம். செப்டம்பர் மாதக் கடைசியில் சேலத்துக் காங்கிரஸ் தொண்டர்களிடம் காந்திஜி “வருகிற மூன்று மாதமும் நான் குஜராத்திலேயே இருப்பேன்” என்று சொன்னார் அல்லவா? இதற்குக் காரணம் என்ன? - ஒத்துழையாமைத் திட்டம் மகாத்மா காந்தி எதிர்பார்த்தபடி பூரணமாக நிறைவேறவில்லை. வக்கீல்களில் நூற்றுக்கு ஒருவர் தான் தொழிலை நிறுத்தினார்கள். மாணவர்களிலும் நூற்றுக்கு ஒருவர் வீதந்தான் சர்க்கார் கல்வி நிலையங்களைப் பகிஷ்கரித்தார்கள். சட்டசபைகளிலோ, அதிகார வர்க்கத்தார் சொல்லுகிறபடி கையைத் தூக்கும் அங்கத்தினர்கள் நிறைந்திருந்தார்கள். ஸர். திவான்பகதூர், ராவ் பகதூர் பட்டதாரிகளில் மிக மிகச் சிலரே பட்டங்களைத் துறந்தார்கள். நாடெங்கும் மகாத்மா சென்ற இடங்களில் எல்லாம் அன்னியத் துணிக் குவியல்கள் எரிக்கப்பட்டன. ஆயினும் மகாத்மா காந்தி விரும்பிய அளவு இராட்டையும் கதர் இயக்கமும் பரவவில்லை. இவ்விதம் மகாத்மா காந்தி கூறிய திட்டங்களைச் சரிவர நிறைவேற்றாமலிருந்த போதிலும், நாடெங்கும் பொதுமக்கள் போக்குக்கும் மகாராஷ்டிரத் தலைவர்களின் மனப் போக்குக்கும் இருந்த வேற்றுமை நன்கு வெளியாயிற்று. மகாத்மா தயாரித்திருந்த அறிக்கையை வரி வரியாகவும் வார்த்தை வார்த்தையாகவும் ஸ்ரீ வித்தல்பாய் படேல், ஸ்ரீ கேல்கர், ஸ்ரீ ஜயக்கர், டாக்டர் மூஞ்சே ஆகியவர்கள் ஆட்சேபித்தார்கள். காந்திஜியின் கட்சியைத் தாங்கி நின்று மேற்படி ஆட்சேபங்களுக் கெல்லாம் பளிச்சுப் பளிச்சென்று ராஜாஜி பதில் சொன்னார். லாலா லஜபதிராயும் பண்டித மோதிலால் நேருவும் ஒருவாறு சமரசப்படுத்த முயன்றார்கள். கடைசியாக, சிற்சில மாறுதல்களுடன் மகாத்மா காந்தி தயாரித்த அறிக்கை எல்லாத் தலைவர்களாலும் ஒப்புக் கொள்ளப்பட்டது. பலம் பொருந்திய பிரிட்டிஷ் சர்க்காருடன் மகாத்மா ஒரு மகத்தான இறுதிப் போராட்டத்தைத் தொடங்க யத்தனித்துக் கொண்டிருந்தார். இரவு பகல் இருபத்துநாலு மணி நேரமும் அதே சிந்தனையில் ஆழ்ந்திருந்தார். இப்படிப்பட்ட சந்தர்ப்பத்தில் மதிப்புக்குரிய தலைவர்கள் சிலர் சில்லறை ஆட்சேபங்களையெல்லாம் கிளப்பிக்கொண்டிருந்தது மகாத்மாவின் மனதை ஓரளவு புண்படுத்தியது. ஆயினும் இதைப் பற்றி அதிகமாக நினைப்பதற்குச் சாவகாசம் இருக்கவில்லை. ஏனெனில் அன்றைய தினமே, “காந்திஜியைக் கைது செய்யப்போகிறார்கள்” என்ற வதந்தி ஒன்று பரவியது. இது காந்திஜியின் காதுக்கும் எட்டியது. “அலி சகோதரர்கள் செய்த அதே குற்றத்தை நானும் செய்கிறேன்” என்று மகாத்மா காந்தி சொல்லிவிட்டுத் தமிழ் நாட்டில் அதே பேச்சைப் பேசியிருந்தார் அல்லவா? ஆகையால் தம்மைக் கைது செய்யலாம் என்ற வதந்தியைக் காந்திஜி நம்பவேண்டியதாக இருந்தது. ஆகவே, “என்னைக் கைது செய்தால்” என்னும் தலைப்புப் போட்டு அன்றிரவே “எங் இந்தியா” வுக்கு ஒரு கட்டுரை எழுதினார். ஆனால் கைது செய்யப்படுவதற்காகப் பம்பாயிலேயே காத்திருக்க மகாத்மா விரும்பவில்லை. அவர் போட்டிருந்த திட்டத்தின்படி மறுநாள் காலையில் ஆமதாபாத்துக்குப் புறப்பட்டார். கொலாபா ஸ்டேஷனில் எண்ணற்ற ஜனங்கள் வந்திருந்து மகாத்மாவை வழி அனுப்பினார்கள். வந்திருந்தவர்கள் அவ்வளவு பேர் தலையிலும் வெள்ளைக் கதர்க் குல்லா (காந்தி குல்லா) விளங்கியது கண்டு மகாத்மா திருப்தியடைந்தார். ஆயினும் மக்களுடைய இந்த உற்சாக மெல்லாம் நல்ல முறையில் உபயோகப்பட்டு நல்ல பலனை அளிக்கவேண்டுமே? பம்பாயிலிருந்து ஆமதாபாத் சென்று சில தினங்கள் சபர்மதி சத்தியாக்கிரஹ ஆசிரமத்தில் மகாத்மா தங்கியிருந்தார். அங்கிருந்தபடியே குஜராத்தின் பற்பல பகுதிகளிலும் நடந்து வரும் வேலையைப் பற்றித் தெரிந்து கொள்ளலானார். ஆங்காங்கு வேலை செய்து கொண்டிருந்த தலைவர்களும் தொண்டர்களும் ஆசிரமத்துக்கு வந்து மகாத்மாவுக்கு நிலைமையை அறிவித்தார்கள். இப்படி வந்தவர்களில் இருவர் சூரத் நகரத்திலிருந்து வந்தவர்கள். ஒருவருடைய பெயர் கல்யாண்ஜி. இன்னொருவரின் பெயர் தயாள்ஜி. இந்த இரண்டு பேரும் மகாத்மாவின் பரம பக்தர்கள். தேசத்துக்காகப் பரிபூரணத் தியாகம் செய்தவர்கள். ஸ்ரீ தயாள்ஜி தம்முடைய சொத்து முழுவதையும் (ஒரு ரூபாய் கூடத் தமக்கென்று வைத்துக் கொள்ளாமல்) திலகர் சுயராஜ்ய நிதிக்குக் கொடுத்து விட்டவர். இவர் சூரத் ஜில்லா காங்கிரஸ் கமிட்டியின் தலைவர். ஸ்ரீ கல்யாண்ஜி மேற்படி கமிட்டியின் காரியதரிசி. இருவரும் சூரத்தில் இரண்டு “சுயராஜ்ய ஆசிரமங்கள்” நடத்தி வந்தார்கள். ஒவ்வொரு ஆசிரமத்திலும் பல இளைஞர்கள் தேசத் தொண்டுக்குப் பயிற்சி செய்விக்கப் பட்டார்கள். பயிற்சி முடிந்ததும் அத்தொண்டர்கள் ஜில்லாவின் பலபகுதிகளிலும் வேலை செய்வதற்கு அனுப்பப்பட்டு வந்தார்கள். இவ்வளவு அருமையான வேலை செய்து வந்த தயாள்ஜியும் கல்யாண்ஜியும் சபர்மதி ஆசிரமத்துக்கு மகாத்மா திரும்பி வந்த செய்தி அறிந்ததும் அவரைப் பார்ப்பதற்காக வந்து சேர்ந்தார்கள். சூரத் ஜில்லாவில் நடந்திருக்கும் நிர்மாண வேலைகளைப் பற்றி மகாத்மாவிடம் சொன்னார்கள். முக்கியமாக, சூரத் ஜில்லாவைச் சேர்ந்த பர்தோலி தாலுகாவில் மகாத்மாவின் நிபந்தனைகள் எல்லாம் நிறைவேறி யிருக்கின்றன வென்றும், அங்கே பொதுஜனச் சட்ட மறுப்பு இயக்கத்தை ஆரம்பிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்கள். ஆனால் கல்யாண்ஜி, தயாள்ஜி இவர்களுடன் தீவிரமாகப் போட்டியிட இன்னொரு மனிதர் முன்வந்தார். அவர் பெயர் அப்பாஸ் தயாப்ஜி. அவர் தொண்டு கிழவர். பரோடா சமஸ்தான ஹைகோர்ட்டில் தலைமை நீதிபதியாக இருந்து விலகியவர். எல்லையற்ற தேசபக்தி வாய்ந்தவர்; காந்திஜியிடம் இணையில்லா அன்பு கொண்டவர்; இவர் கெயிரா ஜில்லாவில் ஆனந்த் என்னும் தாலுகாவில் பொது ஜனச் சட்ட மறுப்பு இயக்கத்தை முதன் முதலில் ஆரம்பிக்க வேண்டும் என்று வற்புறுத்தினார். மகாத்மாவிடம் அன்பு நிறைந்த கோபத்துடன் அப்பாஸ் தயாப்ஜி பேசினார். அவர் கூறியதாவது:- “நீங்கள் கூறிய நிபந்தனையெல்லாம் நிறைவேற்றி விட்டோம். இன்னும் ஏதாவது நிபந்தனை உண்டானால், சொல்லி விடுங்கள். எல்லாவற்றையும் இப்போதே ஒரேயடியாகச் சொல்லி விடுங்கள். புதிய புதிய நிபந்தனைகளை நினைத்து நினைத்துக் கொண்டு சொல்லாதீர்கள். நீங்கள் இதுவரையில் சொன்ன காரியம் எதை நாங்கள் நிறேவேற்ற வில்லை? திலகர் சுயராஜ்ய நிதிக்கு என்ன பணம் கேட்டீர்களோ, அதைக் கொடுத்து விட்டேன். என்னைப் பாருங்கள்! வயது எனக்கு எழுபத்தைந்துக்கு மேல் ஆகிறது. இந்த வயதில் நீங்கள் சொன்னதற்காக நானே இராட்டையில் நூல் நூற்கிறேன். முரட்டுக் கதர்த்துணி உடுத்திக் கொண்டிருக்கிறேன். ஆனந்த் தாலுகாவில் ஒவ்வொரு கிராமத்துக்கும் நான் போனேன். அப்படிப் போனதினால் என் கிழ உடம்பிற்குள்ளேயிருக்கும் எலும்புகள் எல்லாம் இன்னும் வலிக்கின்றன. ஆயினும் நான் பொருட்படுத்தவில்லை. கிராமங்களில் ஜனங்கள் அவ்வளவு உற்சாகமாயிருக்கிறார்கள். நீங்கள் சொன்ன திட்டங்களையெல்லாம் நிறைவேற்றி யிருக்கிறார்கள். இன்னும் என்ன செய்யச் சொன்னாலும் செய்யக் காத்திருக்கிறார்கள். நீங்களே நேரில் வந்து பார்த்துக் கொள்ளுங்கள். சால்ஜாப்பு மட்டும் சொல்ல வேண்டாம். தள்ளிப் போட வேண்டாம். மூன்று வருஷத்துக்கு முன்னால் கெயிரா ஜில்லாவில் நீங்கள் வரிகொடா இயக்கம் ஒரு தடவை நடத்தினீர்கள். ஆகையால் கெயிரா ஜனங்கள் ஏற்கெனவே உங்கள் கொள்கைகளை அறிந்திருக்கிறார்கள். உங்கள் முறைகளில் பயிற்சி பெற்றிருக் கிறார்கள். ஆகையால் கெயிரா ஜில்லாவுக்குத்தான் இப்போது நீங்கள்ல் முதல் பெருமையைக் கொடுக்க வேண்டும். ஆனந்த் தாலுகாவில்தான் பொது ஜனச் சட்ட மறுப்பை முதலில் ஆரம்பிக்க வேண்டும். அப்பாஸ் தயாப்ஜி இவ்விதம் பேசியபோது குஜராத் மாகாணத்தைச் சேர்ந்த பல தலைவர்களும் தொண்டர்களும் அங்கே இருந்தார்கள். அவர்களுடைய மனமெல்லாம் உருகி விட்டன. வாழ்க்கையில் எவ்வளவோ உயர்ந்த அந்தஸ்துடன் வாழ்ந்த இம்மனிதர், இவ்வளவு தள்ளாத வயதிலும், சிறைபுகவும் கஷ்டப்படவும் தயாராக முன் வந்திருப்பதை நினைத்து வியந்தார்கள். ஆனால் காரியத்திலேயே கண்ணாயிருந்த சூரத்காரர்கள் விட்டுக்கொடுத்து விடவில்லை. அவர்கள் பர்தோலியிலேதான் சட்ட மறுப்பு ஆரம்பிக்க வேண்டும் என்று வற்புறுத்தினார்கள். ஸ்ரீ கல்யாண்ஜி கூறியதாவது:-“ஆங்கிலேயர் முதன் முதலில் சூரத் வழியாகத்தான் இந்தியாவுக்குள் புகுந்தார்கள். சூரத்திலேதான் முதன் முதலில் அவர்கள் வியாபாரக் கிடங்குகள் ஏற்படுத்திக் கொண்டு கோட்டையும் கட்டிக் கொண்டார்கள். இங்கிருந்துதான் அவர்களுடைய வியாபாரம் பெருகிற்று; அரசியல் ஆதிக்கமும் பரவிற்று. ஆகையால் ஆங்கிலேயரின் ஆதிக்கத்தை முடிவு செய்யும் கடைசி இயக்கத்தைச் சூரத் ஜில்லாவில் தொடங்குவதுதான் நியாயம். விஷம் எந்த வழியாக ஏறியதோ, அந்த வழியாகத்தான் இறங்க வேண்டும் இங்கிலீஷ்காரர்கள் எந்த வாசல் வழியாக முதலில் நுழைந்தார்களோ, அந்த வாசல் வழியாகவே அவர்களை வெளியேற்ற வேண்டும். சூரத் அப்போது செய்த பாவத்துக்கு இப்போது பிராயச் சித்தம் செய்ய ஒரு சந்தர்ப்பம் கொடுங்கள். பர்தோலியில் பொதுஜனச் சட்ட மறுப்பை ஆரம்பியுங்கள். நீங்கள் கூறிய எல்லாவித நிபந்தனைகளையும் பர்தோலியில் நிறைவேற்றியிருக்கிறோம். நேரில் வந்து பார்த்துக் கொள்ளுங்கள்.” ஸ்ரீ கல்யாண்ஜியின் வாதமும் அவருடைய பிடிவாதமும் எல்லாருடைய மனதையும் கவர்ந்தன. கடைசியில் மகாத்மா காந்தி சொன்னதாவது:- “ஆகட்டும், நான் நேரில் வந்து பர்தோலி, ஆனந்த் இரண்டு தாலுகாக்களையும் பார்க்கிறேன். பார்த்த பிறகு, எந்தத் தாலுகா அதிகத் தகுதி பெற்றிருக்கிறதோ அங்கே இயக்கத்தை ஆரம்பிக்கலாம். இரண்டு தாலுகாக்களும் தயாராயிருந்தால் இரண்டிலும் ஆரம்பித்து விடுவோம்.” இவ்விதம் இரு தரப்பாரும் திருப்தி யடையும்படி மகாத்மா பதில் கூறியதுடன், தாம் வந்து பார்ப்பதற்குள்ளே இன்னும் தீவிரமாக வேலை செய்து வைக்கும்படியும் சொல்லி அனுப்பினார். தாழி உடைந்தது! 1921 - ஆம் வருஷத்தின் முடிவுக்குள் இந்தியாவின் விடுதலைக்காக ஒரு பெரும் போராட்டத்தை ஆரம்பிக்க மகாத்மா விரும்பினார். அந்தப் போராட்டத்தில் பொதுஜனச் சட்ட மறுப்பு என்னும் ஆயுதத்தை உபயோகிக்க எண்ணியிருந்தார். ஆனால் இந்த ஆயுதத்தை உபயோகிப்பது நெருப்புடன் விளையாடுவதைப்போல் கடினமானது என்பதைக் காந்தி மகான் அறிந்திருந்தார். ஆகையால் எல்லாவிதமான முன் ஜாக்கிரதையும் செய்து கொள்ள அவர் விரும்பினார். அந்த நாளில் தேசமெங்கும் தேசீய உற்சாகம் ததும்பிக் கொண்டிருந்தது. எனவே பர்தோலி - ஆனந்த் தாலுகாக்களில் மகாத்மா பொதுஜனச் சட்டமறுப்பை ஆரம்பித்தவுடனே நாட்டின் மற்றப் பகுதிகளிலும் உற்சாகிகள் அந்த இயக்கத்தை ஆரம்பித்து விடலாம். ஆனால் பர்தோலி - ஆனந்தில் பொது ஜனங்கள் சட்ட மறுப்புக்குத் தயார் செய்யப்பட்டிருந்தார்கள். அப்படி தயார் செய்யப் படாத இடங்களில் சட்ட மறுப்பு ஆரம்பித்து விட்டால் என்ன விபரீதம் ஏற்படும் என்று சொல்ல முடியாது. ஆகையால், சட்டமறுப்பு சம்பந்தமான நிபந்தனைகளை ஐயமறத் தேசத்துக்கு அறிவித்து விட வேண்டியது அவசியம் என்று காந்திஜி கூறினார். இதற்கு ஒரு சந்தர்ப்பம் நவம்பர் 4 - ஆம் தேதி டில்லியில் கூடிய அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிக் கூட்டத்தில் கிடைத்தது. சட்டமறுப்பு சம்பந்தமாக முடிவான தீர்மானம் செய்வதற்காகவே இந்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் கூட்டம் கூட்டப்பட்டது. முதல் நாள் காரியக் கமிட்டியின் கூட்டம் நடந்தது. மகாத்மா தயாரித்திருந்த நகல் தீர்மானம் விவாதத்துக்கு வந்தது. இந்த நகல் தீர்மானத்தில் காந்திஜி சட்ட மறுப்புத் தொடங்குவதற்கு மிகக் கடுமையான சில நிபந்தனைகளை விதித்திருந்தார். ஒரு பகுதியில் பொதுஜனச் சட்டமறுப்பு தொடங்குவதாயிருந்தால் அந்தப் பகுதியில் 100 - க்கு 90 பேர் கதர் அணிகிறவர்களாயிருக்க வேண்டும் என்று வற்புறுத்தினார். தனிப்பட்ட முறையில் யாரேனும் சட்டமறுப்புச் செய்ய விரும்பினால் அவருக்கு இராட்டையில் நூற்கத் தெரிந்திருக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்தார். இந்த நிபந்தனைகள் சில தலைவர்களுக்குப் பிடிக்கவே இல்லை. ஸ்ரீ என்.சி.கேல்கர், ஸ்ரீ வித்தல் பாய் படேல் ஆகியவர்கள் மிகக் கடுமையாக எதிர்த்தார்கள். பண்டித மோதிலால் நேருவும், ஸ்ரீ லஜபதிராயும் நிபந்தனைகளைக் கொஞ்சம் தளர்த்திவிட முயன்றார்கள். தேசபந்துதாஸ் இக்கூட்டத்தில் மகாத்மாவைப் பூரணமாக ஆதரித்தார். சட்டமறுப்பு இயக்கத்தை நடத்தி இந்தியாவுக்கு விடுதலை தேடித்தரக்கூடியவர் மகாத்மா காந்தி ஒருவர்தான் என்று எல்லாத் தலைவர்களுக்கும் தெரிந்தது. ஆனாலும் மகாத்மா காந்தி நடத்தவேண்டிய இயக்கத்துக்கு அவர் கூறிய நிபந்தனைகளை ஒப்புக் கொள்ளச் சில தலைவர்கள் விரும்பவில்லை! கடைசியில் பண்டித மோதிலால் நேருவின் யோசனையின் பேரில் “100 - க்கு 90 பேர் கதர் உடுத்தியிருக்க வேண்டும்”என்னும் நிபந்தனை “மிகப் பெரும்பாலோர் கதர் உடுத்தியிருக்க வேண்டும்” என்று மாற்றப்பட்டது . 4-ஆம் தேதி நடந்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிக் கூட்டத்தில் மேற்படி சமரசத் தீர்மானம் நிறைவேறியது. அத்தீர்மானம் வரி கொடாமை உள்பட பொதுஜனச் சட்ட மறுப்பை ஆரம்பிக்கும் உரிமையை மாகாணக் காங்கிரஸ் கமிட்டிகளுக்கு அளித்தது. ஆனால் அதற்கு இன்னின்ன நிபந்தனைகள் நிறைவேறியிருக்க வேண்டும் என்று வற்புறுத்தியது. இப்படி நிபந்தனைகளுடன் தீர்மானம் நிறைவேறிய போதிலும் மகாத்மாவின் மனதில் நிம்மதி ஏற்படவில்லை. சட்ட மறுப்புக்குத் தாம் விதிக்கும் நிபந்தனைகளில் மற்றத் தலைவர்களுக்குப் பூரண நம்பிக்கையில்லை என்று மகாத்மாவின் மனதில்சந்தேகம் உதித்திருந்தது. எனவே அவசரப்பட்டு எங்கேயாவது சட்டமறுப்பு ஆரம்பித்து விட்டால் காரியம் கெட்டுப்போய் விடுமே? தாம் நடத்த எண்ணியுள்ள இயக்கமும் தடைப்பட்டு விடுமே?– இந்தக் கவலையினால் மகாத்மா காந்தி டில்லியில் கூடியிருந்த தலைவர்களைப் பார்த்து விநயமாக வேண்டிக் கொண்டதாவது- “பொது ஜனச் சட்டமறுப்பு என்பது பூகம்பத்தைப் போன்றது. எந்தப் பிரதேசத்தில் பொதுஜனச் சட்டமறுப்பை ஆரம்பிக்கிறோமோ, அங்கே அரசாங்கம் ஸ்தம்பித்துவிடும். அந்தப் பிரதேசத்தில் ஒவ்வொரு போலீஸ் காரனும் மற்ற சர்க்கார் உத்தியோகஸ்தர்களும் வேலையைவிட்டு விலகிவிடுவார்கள். போலீஸ் ஸ்டே ஷன்கள், கோர்ட்டுகள், அரசாங்கக் காரியாலயங்கள் எல்லாம் பொதுஜனங்களின் உடைமையாகிவிடும். இப்படிப்பட்ட பேரியக்கத்தை நடத்துவது எளிய காரியமல்ல. இயக்கம் நடத்தும் இடத்தில் பரிபூரணமான அமைதி நிலவ வேண்டும். பலாத்காரத்தை ஜனங்கள் அடியோடு மறந்துவிட வேண்டும். என்னவிதமான கஷ்டம் நேர்ந்தாலும் சகித்துக்கொண்டு அஹிம்சையைப் பாதுகாக்க வேண்டும். அந்தப்பிரதேசத்தில் அஹிம்சை நிலவினால் மட்டும் போதாது. ஏதேனும் ஒரு இடத்தில் பொதுஜனச் சட்டமறுப்பு நடந்தபோதிலும் நாட்டில் மற்ற எல்லாப் பகுதிகளிலும் பரிபூரண அமைதி நிலவ வேண்டும். எங்கேயாவது ஒரு மூலையில் அஹிம்சைக்குப் பங்கம் நேரிட்டாலும் பொதுஜன சட்டமறுப்பு வெற்றியடையாது; இயக்கத்தை நடத்தவே முடியாது. ஆகையால் உங்களையெல்லாம் நான் ரொம்பவும் வேண்டிக் கொள்கிறேன். நான் பர்தோலியில் பொதுஜனச் சட்டமறுப்பை ஆரம்பித்து நடத்தும்போது நீங்களும் உடனே சட்டமறுப்பை ஆரம்பித்து விடவேண்டாம். பர்தோலியில் நடக்கும் இயக்கத்தைக் கவனித்து வாருங்கள். கவனித்துத் தெரிந்து கொள்ள வேண்டிய பாடங்களைத் தெரிந்து கொள்ளுங்கள். எல்லா மாகாணங்களையும் சட்ட மறுப்புக்குத் தயார் செய்யுங்கள். ஆனால் இயக்கத்தை ஆரம்பித்து விட வேண்டாம். நீங்கள் வசிக்கும் ஒவ்வொரு பகுதியிலும் அமைதி நிலவும்படி பார்த்துக்கொள்ளுங்கள். உங்களிடம் நான் வேண்டும் உதவி இதுதான். பர்தோலியின் அநுபவத்தைப் பார்த்துக்கொண்டு அடுத்த தாலூகாவில் இயக்கத்தை ஆரம்பிக்கலாம். இவ்விதமே ஒவ்வொரு பிரதேசமாக இயக்கத்தை விஸ்தரித்துக் கொண்டு போகலாம். ஜனங்களைச் சரிவரத் தயார்ப் படுத்தாமல் சட்ட மறுப்பை அவசரப்பட்டு ஆரம்பித்து எங்கேயாவது பலாத்காரச் செயல்கள் நிகழ்ந்து விட்டால் இயக்கம் படுதோல்வியடையும். இயக்கத்தை நிறுத்தவேண்டிய தாகிவிடும். பொதுஜனச் சட்ட மறுப்புக்கு இன்றியமையாத நிபந்தனை பொது ஜன அமைதி, ஆகையால் அவசரப்பட்டுச் சட்ட மறுப்பை ஆரம்பிக்க வேண்டாம். மாகாணங்களுக்குக் காங்கிரஸ் அந்த உரிமை கொடுத்திருந்த போதிலும் அதை உபயோகப்படுத்த வேண்டாம். பர்தோலியைக் கவனித்து வாருங்கள்!” இப்படியெல்லாம் மகாத்மா காந்தி படித்துப் படித்துச் சொன்னார்; திருப்பித் திருப்பி எச்சரிக்கை செய்தார். இதைக் கேட்ட தலைவர்களிலே சிலர் “மகாத்மா எதற்காக இவ்வளவு பயப்படவேண்டும்?” என்று எண்ணினார்கள். அவ்விதமே சொன்னார்கள். சட்ட மறுப்புக்கு மகாத்மா விதித்த கடுமையான நிபந்தனைகளை ஆட்சேபித்தார்கள். ஆயினும் கடைசியில் ஒருவாறு ஒப்புக்கொண்டு போய்ச் சேர்ந்தார்கள். ஆனால் காந்திமகானுடைய எச்சரிக்கை எவ்வளவு அவசியமானது என்று வெகு சீக்கிரத்திலேயே தெரிய வந்தது. மகாத்மா காந்தி தமது சொந்த இடமாகக் கருதிப் பெருமை கொண்டிருந்த பம்பாய் நகரத்தின் மூலமாகவே அந்தப் படிப்பினை வெளியாயிற்று. பயங்கரமான ரூபத்தில் வெளியாயிற்று. முந்தைய 1920-ஆம் வருஷத்தின் மத்தியில் காந்தி மகாத்மா ஒத்துழையாமை இயக்கத்தை ஆரம்பித்தபோது பிர்ரிட்டிஷ் அதிகார வர்க்கத்தினர் அதை அலட்சியம் செய்தனர். “முட்டாள்தனமான திட்டங்களுக்குள்ளே மிக முட்டாள்தனமான திட்டம்” என்று லார்டு செம்ஸ்போர்டு அதைக் குறிப் பிட்டார். ஆயினும் இங்கிலாந்தின் இராஜ தந்திரிகளுக்கு ‘எது எப்படியாகுமோ’ என்ற கவலை கொஞ்சம் இருந்தது. மாண்டகு-செம்ஸ்போர்டு திட்டத்தின்படி ஏற்பட்ட புதிய சட்டசபைகளை ஆரம்பித்து வைப்பதற்கு வேல்ஸ் இளவரசரை அனுப்பி வைப்பதென்று முதலில் உத்தேசித்திருந்ததை முன் ஜாக்கிரதையாக மாற்றிக் கொண்டார்கள். வேல்ஸ் இளவரசரைச் சங்கடமான நிலைமைக்கு உள்ளாக்க விரும்பாமல் அவருக்குப் பதிலாகக் கன்னாட் கோமகனை (டியூக் ஆப் கன்னாட்) அனுப்பினார்கள். கன்னாட் கோமகன் விஜயம் செய்து புதிய சட்ட சபைகளைத் திறந்து வைத்து “மறந்து விடுங்கள்; மன்னித்து விடுங்கள்; ஒத்துழையுங்கள்’ என்ற பல்லவியையும் பாடிவிட்டுப் போனார். பிறகு ஒத்துழையாமை இயக்கம் நாளுக்கு நாள் வளர்ந்து பலம் பெற்று வந்தது. அந்த இயக்கம் பெரும் பொது ஜனக் கிளர்ச்சியாக மாறியது. கடைசியாக இப்போது பொது ஜனச் சட்ட மறுப்பு இயக்கத்தை ஆரம்பித்து அரசாங்கத்தை ஸ்தம்பிக்கச் செய்து விடுவதென்றும் காங்கிரஸ் தலைவர்கள் திட்டம் போட்டு விட்டார்கள். இத்தகைய நிலைமையில் புதிய வைஸ்ராய் லார்ட் ரெடிங் வேல்ஸ் இளவரசர் விஜயத்தை நடத்தி வைக்க உறுதிகொண்டார். வேல்ஸ் இளவரசர் வந்தால், அவருக்காக நடைபெறும் உபசாரக் களியாட்டங்களிலும் ஆடம்பர வைபவங்களிலும் பொது மக்கள் பிரமித்துப் போய்விடுவார்கள் என்றும், அதன் மூலம் காங்கிரஸில் வளர்ந்து வரும் செல்வாக்கைக் குலைத்து விடலாம் என்றும் லார்ட் ரெடிங் கருதினார். இந்திய மக்களின் பரம்பரைக் குணமான இராஜ விசுவாசம் மேலோங்கி மகாத்மாவின் சட்ட மறுப்பு இயக்கத்தை அமுக்கிவிடும் என்று லார்ட் ரெடிங்கும் அவருடைய சகாக்களும் பகற்கனவு கண்டார்கள். ஆகவே, வேல்ஸ் இளவரசரை அனுப்பி வைக்கும்படி ஆங்கில இராஜ தந்திரிகளை இந்திய அதிகார வர்க்கத்தினர் பிடிவாதமாகக் கேட்டுக் கொண்டார்கள். எனவே, 1921-ஆம் வருஷக் கடைசியில் வேல்ஸ் இளவரசர் இந்தியாவுக்கு விஜயம் செய்வார் என்னும் நிச்சயமான செய்தி வெளியிடப்பட்டது. இதைக் காந்தி மகானும் மற்றக் காங்கிரஸ் தலைவர்களும் விரும்பவில்லை. வேல்ஸ் இளவரசரைக் கூட்டி வருவதற்கும் படாடோப வரவேற்புகளை நடத்துவதற்கும் இது சமயமல்ல என்று தலைவர்கள் கருதினார்கள். அதிகார வர்க்கத்தார் தங்களுடைய ஆட்சியைப் பலப் படுத்துவதற்கும் விடுதலை இயக்கத்தை ஒடுக்குவதற்கும் வேல்ஸ் இளவரசரின் விஜயத்தை உபயோகப் படுத்துவார்கள் என்று நினைத்தார்கள். எனவே இந்திய மக்கள் வேல்ஸ் இளவரசரின் விஜயத்தைப் பகிஷ்கரிக்கவேண்டும் என்று தீர்மானம் செய்து வெளியிட்டார்கள். நவம்பர் மாதம் 17-ஆம் தேதி வேல்ஸ் இளவரசர் பம்பாய்த் துறைமுகத்தில் வந்து இறங்குவதாக இருந்தது. அன்றையதினம் இந்தியா தேசமெங்கும் ஹர்த்தால் நடைபெறவேண்டும் என்றும் பிறகு இளவரசர் விஜயம் செய்யும் முக்கிய நகரங்களில் அன்றன்றைக்கு ஹர்த்தால் செய்யவேண்டும் என்றும் மக்களுக்குக் காங்கிரஸ் கட்டளையிட்டிருந்தது. இந்தக் கடமையை வற்புறுத்தி மகாத்மா காந்தி “எங் இந்தியா”வில் எழுதியிருந்ததோடு பல கூட்டங்களில் பேசியிருந்தார். “வேல்ஸ் இளவரசர் மீது தனிப்பட்ட முறையில் நமக்குக் கோபம் ஒன்றுமில்லை. அவரை அவமரியாதை செய்யும் எண்ணம் லவலேசமும் இல்லை. ஆனால் அன்னிய ஆட்சியின் சின்னமாக வேல்ஸ் இளவரசர் வருவதாலும், அதிகார வர்க்கத்தைப் பலப்படுத்துவதற்காக வருகிறபடி யாலும் அவருடைய வரவேற்புக் கொண்டாட்டங்களில் இந்திய மக்கள் கலந்துகொள்ள முடியாது. நம்முடைய அதிருப்தியை வெளியிடுவதற்காக ஹர்த்தால் அனுஷ்டிப்பதும் அவசியமாகிறது” என்று காந்தி மகான் வற்புறுத்தியிருந்தார். பம்பாய் நகரத்தில் காந்தி மகானுக்கு எல்லையற்ற செல்வாக்கு இருந்தது என்பதை முன்னமே பார்த்திருக்கிறோம். பம்பாய் வாசிகளில் பெரும்பாலோர் மகாத்மாவைத் தெய்வமாகக் கொண்டாடினார்கள். அவருடைய வாக்கை வேதவாக்காக மதிக்கத் தயாராயிருந்தார்கள். ஆகையால் நவம்பர் 17-ஆம்தேதியன்று வேல்ஸ் இளவரசர் பம்பாயில் வந்து இறங்கும் தினத்தில் பரிபூரண ஹர்த்தால் நடத்துவதற்குப் பம்பாய் வாசிகள் ஆயத்தமாயிருந்தார்கள். ஆனால் துரதிர்ஷ்டவசமாக காந்தி மகாத்மாவின் கொள்கைகளைப் பம்பாய் வாசிகள் சரிவர உணர்ந்து கொள்ளவில்லை என்பது பின்னால் நடந்தவிபரீதங்களினால் வெளியாயிற்று டில்லியிலிருந்து திரும்பி ஆமதாபத்துக்கு வந்த மகாத்மா நேரே பர்தோலி-ஆனந்த் தாலுகாக்களுக்குப் போய்ப்பரிசீலனை செய்ய உத்தேசித்திருந்தார். ஆனால் பம்பாய்த் தலைவர்கள் காந்திமகானுக்குச் செய்திமேல் செய்தி அனுப்பினார்கள்; தந்தி மேல் தந்தி அடித்தார்கள். நவம்பர் 17-ஆம் தேதி பம்பாய்க்கு வந்து விட்டுப் பிறகு பர்தோலிக்கு போகும்படி அவர்கள் மகாத்மாவை கேட்டுக் கொண்டார்கள். அந்த முக்கியமான தினத்தில் பம்பாய் நகரம் தீவிர கொந்தளிப்பை அடையுமாதலால் அன்றைக்கு மக்களுக்கு வழிகாட்டி நடத்த மகாத்மா பம்பாயில் இருக்க வேண்டும் என்று பம்பாய்த் தலைவர்கள் கோரினார்கள். அவர்களுடைய வேண்டுகோளுக் கிணங்கி மகாத்மாவும் பம்பாய்க்கு 17-ஆம் தேதி அதிகாலை வந்து சேர்ந்தார். 17-ஆம் தேதி காலையில்தான் வேல்ஸ் இளவரசரும் பம்பாய்க் கடலோரத்தில் உள்ள ‘இந்தியாவின் வாசல்’ என்று அழைக்கப்படும் கோபுர மண்டபத்தில் கப்பலிலிருந்து இறங்கினார். இளவரசரை வரவேற்பதற்காகப் பிரமாதமான ஆடம்பர ஏற்பாடுகளை அதிகார வர்க்கத்தார் செய்திருந்தார்கள். இது காரணமாக ஏற்படக்கூடிய ஒரு விளைவைப் பம்பாய்க்காங்கிரஸ் தலைவர்கள் எதிர்பார்த்தார்கள். அதாவது வேல்ஸ் இளவரசர் இறங்கும் தினத்தில் ஹர்த்தாலும் நடப்பதால் வேலையில்லாத ஜனங்கள் வேடிக்கை பார்க்கும். ஆகையால் இளவரசர் இறங்குமிடத்துக்கு வந்து கூட்டம் போடக்கூடும். அப்படியானால், ஹர்த்தாலின் நோக்கம் நிறைவேறாமற் போவதோடு கோபங்கொண்ட ஜனங்களுக்கும் அதிகாரிகளுக்கும் தகராறுகள் ஏற்பட்டு விடக்கூடும். இம்மாதிரி யெல்லம் நடந்து விடக்கூடாது என்பதற்காக, பம்மாய்த் தலைவர்கள் ஒரு ஏற்பாடு செய்திருந்தார்கள். இளவரசர் இறங்கும் இடத்திற்கு வெகு தூரத்தில் பம்பாய் நகரின் இன்னொரு எல்லையில் அதேசமயம் ஒரு பொதுக் கூட்டத்துக்கு ஏற்படு செய்திருந்தார்கள். எல்பின்ஸ்டன் ஆலையை யொட்டியிருந்த விஸ்தாரமான மைதானத்தில் பொதுக் கூட்டம் நடந்தது. அங்கு மகாத்மா காந்தி தலைமை வகிப்பார் என்றும் அறிவிக்கப் பட்டிருந்தது. ஆகையால் லட்சக் கணக்கான ஜனங்கள் அங்கே கூடி விட்டார்கள். கண்ணுக் கெட்டிய தூரம் அரே தலை மயமாகக் காணப்பட்ட அந்த ஜன சமுத்திரத்தின் மத்தியில் மேடைமீது நின்று மகாத்மா பேசினார். அஹிம்சையைப் பாதுகாக்க வேண்டிய அவசியத்தைப் பற்றித்தான் முக்கியமாகப் பேசினார். “சீக்கிரத்தில் பர்தோலியில் பொதுஜனச் சட்டமறுப்பை ஆரம்பிக்கப் போகிறேன். அதன் பயனாகச் சர்க்கார் கடுமையான நடவடிக்கை எடுக்கக் கூடும். ராணுவத்தை ஏவி ஜனங்கள் மீது துப்பாக்கி பிரயோகம் செய்யும்படியும் சொல்லலாம். என்ன நடந்தாலும் சரி, ஜனங்கள் பொறுமையாயிருக்கவேண்டும். எவ்வளவு கோபமூட்டும் காரியம் நடந்தாலும் ஜனங்கள் பலாத்காரத்தில் இறங்கக் கூடாது. பம்பாய்வாசிகளை நான் ரொம்பவும் கேட்டுக் கொள்வது இதுதான்!” என்று காந்திஜி வேண்டிக் கொண்டார். அந்தோ! மகாத்மா இவ்வளவு உருக்கமாக வேண்டிக்கொண்ட அரைமணி நேரத்துக்குள்ளே பொது மக்களின் உற்சாகம் எல்லை கடந்துவிட்டது. வெண்ணெய் திரளும் சமயத்தில் தாழி உடைவதுபோன்ற துயரமான சம்பவங்கள் பம்பாயில் ஆரம்பமாகி விட்டன! பகுதி 2 பஞ்சாப் படுகொலை ஒவ்வொரு வருஷமும் ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரையில் தேசீய வாரம் என்பதாக இந்தியா தேசமெங்கும் கொண்டாடுகிறோம். இதற்குக் காரணம் 1919ஆம் வருஷத்தில் ஏப்ரல் 6ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரையில் இந்த நாட்டில் நடந்த மிக முக்கியமான சம்பவங்கள் தான். அந்த வாரத்தில் காந்தி மகாத்மா இந்தியா சுதந்திரம் அடைவதற்கு ஒரு புதிய வழியைக் காட்டினார். இந்திய மக்கள் நீண்ட கால உறக்கத்திலிருந்து விழித்து எழுந்தனர். ஆத்ம சக்தியாகிய ஆயுதத்தின் பெருமையை உணர்ந்தனர். அதே வாரத்திலேதான் இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியின் அசுரத்தன்மை அதன் உச்ச நிலைமையை அடைந்தது. ஜாலியன்வாலாபாக் படுகொலையும் மற்றும் பஞ்சாபில் ஆரம்பமான இராணுவச் சட்டக் கொடுமைகளும் பிரிட்டிஷ் அதிகார வர்க்க ஆட்சிக்கு என்றும் மாறாத அபகீர்த்தியை உண்டு பண்ணின. அந்தக் கொடுமைகளிலிருந்தே இந்தியாவின் விடுதலை இயக்கம் முன்னெப்போதுமில்லாத பலம்பெற்று வளர்ந்தது. அதற்குப்பிறகு பலவருஷகாலம் தேசபக்தர்கள் பதினாயிரக் கணக்கான பொதுக்கூட்டங்களில் “பஞ்சாப் படுகொலை” யைப்பற்றி ஆவேசமாகப் பேசினார்கள். மக்கள் கொதித்து எழுந்து “பிரிட்டிஷ் ஆட்சியை ஒழித்தே தீருவோம்” என்று உறுதி கொண்டார்கள். காந்தி மகாத்மா அடுத்த ஆண்டில் தொடங்கிய ஒத்துழையாமை என்னும் மாபெரும் இயக்கம் பஞ்சாப் கொடுமைக்குப் பரிகாரம் கோருவதை முக்கிய காரணமாகக்கொண்டு எழுந்தது. அந்த இயக்கம் நாடெங்கும் பரவி நாளுக்கு நாள் வலுப்பெற்று வளர்ந்து 1921ஆம் வருஷக் கடைசியில் வைஸ்ராய் லார்ட் ரெடிங், “நான் செய்வதறியாமல் திகைக்கிறேன்; திணறுகிறேன்” என்று பகிரங்கமாக ஒப்புக்கொள்ளும்படி செய்தது. இவ்வளவு முக்கியமான விளைவுகளுக்கெல்லாம் மூல காரணமாயிருந்த பஞ்சாப் நிகழ்ச்சிகளைப்பற்றி இந்த அத்தியாயத்தில் தெரிந்து கொள்வோம். பாஞ்சாலதேசம் சீக்கியர்களுடைய தாயகம். பொதுவாக வீரத்துக்குப் பெயர் போனது. 1914 முதல் 1918 வரையில் நடந்த முதலாவது உலக மகா யுத்தத்தில் பஞ்சாப்பியர் அடங்கிய பட்டாளங்கள் பல பிரிட்டனுக்கு உதவியாகச் சென்றிருந்தன. பிரிட்டிஷ் கட்சியின் வெற்றிக்குப் பஞ்சாப் பட்டாளங்கள் செய்த உதவியை ஆங்கில இராஜ தந்திரிகள் பெரிதும் பாராட்டினார்கள். அந்தக் காலத்தில் பிரிட்டிஷார் இந்தியாவில் உள்ள மக்களை இரண்டு விதமாகப் பிரித்துக் குறிப்பிடுவது வழக்கம். போர்க்குணம் படைத்த சாதியார் என்றும் போர்க்குணம் இல்லாத சாதியார் என்றும் பிரித்தார்கள். பஞ்சாப்பிலுள்ளவர்கள் போர்க்குணம் படைத்தவர்கள். ஆகையால் இந்திய சைன்யத்துக்குப் பஞ்சாப்பியிலிருந்து அதிகமாக ஆள் திரட்டுவது வழக்கம். இதே காரணத்தினால் பஞ்சாப் மாகாணத்தைத் தேசீயக் காற்றுப் படாமல் காப்பாற்றுவதில் பிரிட்டிஷ் அதிகாரவர்க்கம் அதிகமான கவலை கொண்டிருந்தது.* - இம்மாதிரி இந்தியர்களைப் போர்க்குணம் உள்ளவர்கள், போர்க்குண மில்லாதவர்கள் என்று பிரிப்பது எவ்வளவு பிசகானது என்பது இரண்டாவது உலக மகா யத்தத்தின் போது நன்கு வெளியாயிற்று. உலகத்துப் போர்முனைகளிலும் சமீபத்தில் காஷ்மீரிலும் சென்னை வீரர்களின் போர்த் திறமை சுடர் விட்டுப் பிரகாசித்தது. அப்போது பஞ்சாப் மாகாணம் ஸர் மைக்கேலே ஓட்வியர் என்னும் லெப்டினெண்ட் கவர்னரின் ஆட்சியில் இருந்தது. பிரிட்டிஷ் அதிகார வர்க்கத்தின் பொறுக்கி எடுத்த ‘இரும்பு மனிதர்’களுக்குள்ளே ஸர் மைக்கேலே ஓட்வியர் ஒருவர்.’இந்திய சுதந்திரம்’ என்ற பேச்சுக் காதில் விழுந்தால் அவருடைய கண்கள் சிவக்கும். ‘வந்தேமாதரம்’ என்ற மந்திரம் காதில் விழுந்தால் அவருடைய இரத்தம் கொதிக்கத் தொடங்கும். அந்தக் காலத்து இந்திய தேசீயத் தலைவர்களுடைய பெயர்களைக் கேட்டால் அவருடைய நரம்புகள் புடைத்துக் கொள்ளும். இந்தியாவுக்குச் சுயராஜ்யம் வேண்டும் என்று சொல்லும் தேசீயத் தலைவர்களையெல்லாம் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் பரம விரோதிகள் என்று அவர் கருதினார். பொதுவாக இந்திய அரசியல் வாதிகளையே அவருக்குப் பிடிப்பதில்லை. மிதவாதிகள், அமிதவாதிகள், காங்கிரஸ் வாதிகள், வெடிகுண்டு வாதிகள் யாராயிருந்தாலும் இவருக்கு ஒன்றுதான். இத்தகைய அபூர்வ மனிதரின் ஆட்சியில் அப்போது பஞ்சாப் மாகாணம் இருந்தது. இவருக்குக் கீழே இருந்த பிரிட்டிஷ் அதிகார வர்க்கத்தினரும் அதே மனோபாவம் கொண்டவர்களாயிருந்தார்கள். அந்த 1919ஆம் வருஷம் டிசம்பர் மாதத்தில் அமிருதஸரஸில் காங்கிரஸ் மகாசபையை நடத்துவது என்று தீர்மானமாகி யிருந்தது. இந்தச் செய்தி ஸர் மைக்கேல் ஓட்வியரின் ஆங்காரம் சுடர் விடுவதற்குக் காரணமாயிற்று. இத்தகைய நிலைமையிலேதான் பஞ்சாப்பில் பல நகரங்களில் மார்ச்சு மாதம் 30ஆம் தேதி யன்றும் ஏப்ரல் 6ஆம் தேதி யன்றும் மகாத்மாவின் கோரிக்கைப்படி ஹர்த்தால்கள் நடந்தன. இந்த ஹர்த்தால்களின்போது பொது ஜனங்களுக்கும் சர்க்கார் அதிகாரிகளுக்கும் தகராறுகள் ஏற்பட்டு விட்டன. போலீஸார் கலையச் சொன்னதும் ஜனங்கள் கலையவில்லை. சில இடங்களில் கல்லெறிதல்கள் நடந்தன; பதிலுக்குத் துப்பாக்கிப் பிரயோகங்கள் நடந்தன. ஆயினும் ஜனங்களுடைய வேகமும் உற்சாகமும் குன்றவில்லை. அதிகமாகி வருவதாகக் காணப் பட்டது. இதையெல்லாம் ஸர் மைக்கேல் ஓட்வியர் பார்த்தார். நிமிஷத்துக்கு நிமிஷம் அவருடைய ஆத்திரம் பொங்கிற்று. “பஞ்சாப்பில் பிரிட்டிஷ் அதிகாரத்தை மக்கள் அலட்சியம் செய்வதா? அதை நாம் பார்த்துக் கொண்டிருப்பதா?” என்று அவருடைய உள்ளம் கொதித்தது. “இந்த ஜனங்களுக்குச் சரியான பாடங் கற்பிக்காவிட்டால் நான் ஸர் மைக்கேல் ஓட்வியர் அல்ல; இந்தப் பொதுஜன உத்வேகத்தை அடக்கா விட்டால் நான் இரும்பு வர்க்கத்தைச் சேர்ந்த லெப்டினெண்ட் கவர்னர் அல்ல” என்று உறுதி கொண்டார். உடனே தம் கீழிருந்த அதிகார வர்க்கத்தைச் சேர்ந்த உத்தியோகஸ்தர்களுக்கெல்லாம் “உங்களுடைய கைவரிசையைக் காட்டுங்கள்!” என்று உத்தரவு அனுப்பி வைத்தார். அதே சமயத்தில்தான் அமிருதஸரஸிலிருந்து மகாத்மா காந்திக்கு அழைப்புப் போயிருந்தது. காந்திஜியும் வருவதாகச் செய்தி அனுப்பியிருந்தார். இதையறிந்த ஸர் மைக்கேல் ஓட்வியர் “காந்திஜி பஞ்சாப்புக்குள் நுழையக்கூடாது” என்று உத்தரவு போட்டார். அந்த உத்தரவை ரயிலிலேயே காந்திஜியிடம் சேர்ப்பித்து அவரை வழிமறித்துத் திருப்பி அழைத்துச் செல்ல போலீஸ் உத்தியோகஸ்தரையும் அனுப்பினார். ரயில் வண்டியிலேயே காந்திஜிக்குத் தடை உத்தரவைக் கொடுத்து அவரை டில்லி ரயிலிலிருந்து இறங்கிப் பம்பாய் ரயிலில் ஏற்றித் திருப்பி அழைத்துக் கொண்டு போனார்கள் அல்லவா? அதே தினத்தில் அதாவது ஏப்ரல் 10ஆம் தேதி அமிருதஸரஸில் ஒரு முக்கியமான சம்பவம் நேர்ந்தது. அமிருதஸரஸில் அப்போது ஜனத் தலைவர்களாயிருந்தவர்கள் இரண்டு பேர். ஒருவர் டாக்டர் சத்தியபால் என்னும் பிரபல வைத்தியர். இன்னொருவர் டாக்டர் ஸைபுடீன் கிச்லூ என்னும் பிரபல பாரிஸ்டர். இந்த இரு தலைவர்களும் அச்சமயத்தில் அமிருதஸரஸின் ‘முடிசூடா மன்னர்’ களாக விளங்கினார்கள். ஏப்ரல் 10ஆம் தேதி காலையில் மேற்கூறிய இரு தலைவர்களையும் அமிருதஸரஸ் ஜில்லா மாஜிஸ்ட்ரேட் தம்முடைய வீட்டுக்கு வந்து போகும்படி சொல்லி அனுப்பினார். நகரத்தில் அமைதி காப்பதன் சம்பந்தமாகக் கலந்து ஆலோசிக்க அழைப்பதாக அவர்கள் நினைத்து உடனே புறப்பட்டுச் சென்றார்கள். அவர்கள் வந்ததும் ஜில்லா மாஜிஸ்ட்ரேர் “உங்களைக் கைது செய்திருக்கிறேன்!” என்றார். மூடிய போலீஸ் வண்டிக்குள் அவர்களை ஏற்றி யாருக்கும் தெரியாத இடத்துக்கு அனுப்பி விட்டார். ஜில்லா மாஜிஸ்ட்ரேட் வீட்டுக்குச் சென்ற தலைவர்கள் திரும்பி வரவில்லை என்ற செய்தி அமிருதஸரஸ் நகரத்தில் அதிவிரைவாகப் பரவிவிட்டது. ஜனங்கள் சிறு சிறு கூட்டமாகச் சேர்ந்து கடைசியில் ஒரு பெருங்கூட்டமானார்கள். “எங்கள் தலைவர்களை என்ன செய்தீர்கள்?” என்று கேட்பதற்காக ஜில்லா மாஜிஸ்ட்ரேட்டின் வீடு நோக்கிச் சென்றார்கள். ஜனங்கள் வசித்த அமிருதஸரஸ் நகரத்துக்கும் உத்தியோகஸ்தர்கள் வசித்த ‘ஸிவில் லைன்ஸ்’ என்னும் பகுதிக்கும் நடுவில் ரயில்பாதை கேட் ஒன்று இருந்தது. அங்கே இராணுவப்படை வீரர்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தார்கள். ஜனங்களை மேலே போகக்கூடாது என்று அவர்கள் தடுத்தார்கள். உடனே கற்கள் பல வந்து விழத்தொடங்கின. பொது ஜனங்களுக்கும் அதிகாரிகளுக்கும் இம்மாதிரி ‘லடாய்’ ஏற்படும் போதெல்லாம் கூட்டத்தில் உள்ளவர்களில் சில உற்சாகிகள் கல்லெறிவதைக் கையாளுவது அந்தநாளில் சாதாரணமாயிருந்தது. ஜனங்களிடம் வேறு ஆயுதம் கிடையாது. காந்தி மகாத்மாவின் அஹிம்சா தர்மத்தைப் பற்றியும் இன்னும் ஜனங்கள் சரியாக அறிந்து கொள்ள வில்லை. ஆகவே யாரேனும் சிலர் கல்லெறிய ஆரம்பித்து விடுவது வழக்கம். அவ்வளவுதான்; வெறும் வாயை மெல்லுகிறவர்களுக்கு அவல் கிடைத்தாற்போல் ஆகிவிடும். போலீஸாரும் இராணுடத்தாரும் கல்லுக்குப் பதில் ஜனங்கள்மீது குண்டு எறிய ஆரம்பித்து விடுவார்கள். அநேக இடங்களில் நடந்த துப்பாக்கிப் பிரயோகங்களுக்குக் ‘கல்லெறி’ ஒரு வியாஜமாகவே இருக்கும் ‘கல்லெறிதல்’ சில இடங்களில் பொய்யாகக் கற்பிக்கப்படுவதும் உண்டு. அதிகாரிகளே ஜனக் கூட்டத்தில் சில கையாள்களை நியமித்துக் கல்லெறியச் செய்வதும் உண்டு. துப்பாக்கிப் பிரயோகத்துக்கு ஏதேனும் காரணம் வேண்டும் அல்லவா? அமிருதஸரஸ் ஜனங்கள்மீது ரயில்வே கேட்டில் நின்ற பட்டாளத்தார் சுட்டதில் இரண்டு பேர் செத்து விழுந்தார்கள். செத்தவர்களின் உடல்களைத் தூக்கிக் கொண்டு அந்தப் பெருங்கூட்டம் நகரத்தை நோக்கித் திரும்பியது. திரும்பிப் போகும்போது வெறி கொண்ட மக்கள் பல அட்டூழியங்களைப் புரிந்தார்கள். ஒரு பாங்கியையும் ரயில்வே கூட்ஸ் கொட்டகையையும் இன்னும் சில சர்க்கார் காரியாலயங்களையும் கொளுத்தினார்கள். அந்த கலாட்டாவில் ஐந்து ஐரோப்பியர்கள் கொல்லப் பட்டார்கள். அன்றைய சாயங்காலமே அமிருதஸரஸ் நகரத்தின் நிர்வாகத்தை ஸிவில் உத்தியோகஸ்தர்கள் இராணுவ அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். ஒரு பிரதேசத்தில் கலகமும் குழப்பமும் அதிகமானால் அந்தப் பிரதேசத்தில் ஸிவில் சட்டங்களையும் சாதாரண ஆட்சி முறையையும் நிறுத்தி வைத்து இராணுவச் சட்ட ஆட்சியை அமுலுக்குக் கொண்டுவருவது வழக்கம். இராணுவச் சட்டம் அமுலில் இருக்கும்போது சாதாரண கோர்ட்டுகளுக்கு அதிகாரம் ஒன்றும் கிடையாது. இராணுவ அதிகாரிகள் இட்டதுதான் சட்டம். இராணுவ அதிகாரிகளின் உத்தரவை மீறினால் உடனே கடுந் தண்டனை. சாதாரண சட்டம் அமுலில் இருக்கையில் ஒருவன் குற்றம் செய்தால் அவனைக் கைது செய்வது, ரிமாண்டில் வைப்பது, ஜாமீனில் விடுவது, வக்கீல் வைத்து கேஸ் நடத்துவது, விசாரணை, தீர்ப்பு, அப்பீல், இப்படியெல்லாம் நியாயம் பெறுவதற்குப் பலமுறைகள் உண்டல்லவா? இராணுவச் சட்ட அமுலின் கீழ் இதெல்லாம் ஒன்றுமில்லை. இராணுவ உத்தரவை மீறுவோர் உடனே தண்டனைக்குள்ளாவார்கள். உத்தரவை மீறும்போதே சுட்டுக் கொல்லப்படலாம். அதில் தவறினால் இராணுவக் கோர்ட்டு களில் உடனுக்குடன் ‘விசாரணை’ நடக்கும். கசையடி, தூக்குத் தண்டனை, ஆயுள் தண்டனை எது வேண்டுமானாலும் கொடுக்கலாம். அப்பீல் கிடையாது. ஏப்ரல் மாதம் 10ஆம் தேதி அமிருதஸரஸ் ஸிவில் அதிகாரிகள் நிலைமையைத் தங்களால் இனி சமாளிக்க முடியாது என்று சொல்லி இராணுவச் சட்ட அமுலைக் கோரினார்கள். இராணுவச் சட்ட அமுலுக்கு இந்திய சர்க்காரின் அநுமதி தேவையா யிருந்தது. இந்த அநுமதி ஏப்ரல் மாதம் 14ஆம் தேதிதான் வந்தது. ஆனால் இந்திய சர்க்காரின் அநுமதி வரும் என்று எதிர்பார்த்து ஏப்ரல் மாதம் 10ஆம் தேதியே அமிருத ஸரஸை இராணுவ அதிகாரிகள் ஒப்புக்கொண்டு விட்டார்கள். இந்தக் காரியத்துக்கு பஞ்சாப் லெப்டினெண்ட் கவர்னர் ஸர் மைக்கேல் ஓட்வியரின் ஆதரவு பரிபூரணமாக இருந்தது. அதிகாரிகளுக்கு வேறு என்ன கவலை? ஏப்ரல் மாதம் 13ஆம் தேதி தமிழ்நாட்டில் புது வருஷப் பிறப்பு தினம் வருவது வழக்கம் அல்லவா? வட இந்தியாவில் பல மாகாணங்களில் ஏப்ரல் 13ஆம் தேதி ஹிந்துக்களுக்கு வருஷப் பிறப்பு தினம். அமிருதஸரஸில் அன்றைக்கு ஒரு பெரிய பொதுக் கூட்டம் கூடும் என்று காலையில் விளம்பரம் செய்யப்பட்டது. கூட்டம் நடக்கும் இடம் ஜாலியன் வாலாபாக் என்றும் குறிப்பிடப் பட்டிருந்தது. இந்தியாவின் சுதந்திரப் போராட்ட சரித்திரத்தில் ஜாலியன் வாலாபாக் என்றும் அழியாத பெருமை பெற்றதாகும். ஆகையால் அந்தப் பெயரை நன்றாக ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும். ‘பாக்’ (Bagh) என்னும் ஹிந்தி வார்த்தைக்குத் ‘தோட்டம்’ என்று பொருள். ஆனால் ஜாலியன் வாலாபாக்கில் அப்போது தோட்டமே இல்லை; மரமே கிடையாது. அது வெறும் வெட்ட வெளியான மைதானமாயிருந்தது. அதைச் சுற்றிலும் மூன்று பக்கங்களில் உயரமான மச்சு வீடுகள் இருந்தன. அந்த மச்சு வீடுகளின் பின்புறத்து நெடுஞ் சுவர்கள் மைதானத்தைச் சுற்றிக் கோட்டைச் சுவர்களைப்போல் நின்றன. ஒரே ஒரு பக்கத்தில் மாத்திரம், ஒரு ஆள் உயரமான மதில் சுவர் இருந்தது. மைதானத்துக்குள் ஜனங்கள் வருவதற்கும் திரும்பிப் போவதற்கும் வழி ஒன்றே ஒன்றுதான். அந்த ஒரு வழியும் மிகக் குறுகலானது. ஒரே சமயத்தில் ஏழெட்டுப் பேருக்கு மேல் அதன் வழியாக மைதானத்துக்கு உள்ளே வரவோ வெளியே போகவோ முடியாது. இப்படிப்பட்ட ஜாலியன் வாலாபாக் மைதானத்தில் அன்று பிற்பகலிலிருந்தே ஜனங்கள் வந்து கூட ஆரம்பித்தார்கள். வயதானவர்கள், வாலிபர்கள், ஸ்திரீகள், குழந்தைகள் எல்லோருமாகப் பெருங்கூட்டம் சேர்ந்துவிட்டது. டாக்டர் சத்தியபாலும் டாக்டர் கிச்சுலுவும் என்ன ஆனார்கள் என்று ஜனங்களுக்கு இன்னமும் தெரியவில்லை. காந்திஜியை டில்லிக்கு அப்பால் பால்வால் ஸ்டே ஷனில் இறக்கிக் கைது செய்துகொண்டு போய்விட்டார்கள் என்ற செய்தி வந்திருந்தது. டில்லியில் சுவாமி சிரத்தானந்தர் தலைமை வகித்து நடத்திச் சென்ற ஊர்வலத்தின் பேரில் போலீஸார் ‘துப்பாக்கிப் பிரயோகம் செய்வோம்’ என்று சொன்னபோது சுவாமி சிரத்தானந்தர் தமது மார்பை மூடியிருந்த சட்டையை எடுத்து விட்டுச் “சுடுங்கள்!” என்று சொன்ன செய்தியும் வந்திருந்தது. 10ஆம் தேதியிலிருந்து அமிருதஸரஸில் நடந்துவந்த இராணுவ அதிகார அமுல் மக்களின் உள்ளத்தில் கொதிப்பை உண்டு பண்ணியிருந்தது. ஆகவே ஜாலியன் வாலாபாக்கில் இருபதினாயிரம் ஜனங்களுக்கு மேல் கூடிவிட்டார்கள். அங்கே கூட்டம் போடுவது சட்ட விரோதம் என்றோ, அதிகாரிகள் கூட்டத்தைத் தடுக்கிறார்கள் என்றோ, அந்த ஜனங்கள் அறிந்திருக்கவில்லை. கூட்டம் அமைதியாகவே ஆரம்பமாயிற்று. சிறிது நேரம் நடந்தது. ஹன்ஸ்ராஜ் என்னும் தொண்டர் பேசிக் கொண்டிருந்தார். திடீரென்று படைகள் வரும் சத்தம் கேட்டது. நூறு இந்தியவீரர்களும் ஐம்பது ஐரோப்பிய சோல்ஜர்களும் அடங்கிய படை மைதானத்துக்குள் பிரவேசித்தது. இந்தப் படைக்கு ஜெனரல் டையர் என்பவர் தலைமை வகித்தார். இவர் கவசம் பூண்ட இயந்திர பீரங்கி ஒன்றும் கொண்டு வந்திருந்தார். ஆனால் குறுகிய நுழை வாசல் வழியாக அதை மைதானத்துக்குள்ளே கொண்டுவர முடியவில்லை. ஆகையால் கவச பீரங்கியை வெளியிலே நிறுத்தி விட்டுத் தம்முடன் வந்த வீரர்களுடன் ஜெனரல் டையர் மைதானத்துக்குள் பிரவேசித்தார். அவர் பிரவேசித்த இடத்துக்குப் பக்கத்திலேயே கொஞ்சம் உயரமான மேடை ஒன்று இருந்தது. அந்த மேடையில் வீரர்களை நிறுத்தினார். இந்திய வீரர்களை முன்னாலும் ஐரோப்பிய வீரர்களைப் பின்னாலும் நிறுத்தினார். “உடனே கலைந்து போங்கள்” என்று ஜனங்களைப் பார்த்து உத்தரவிட்டார். அந்த உத்தரவு போட்டு இரண்டே இரண்டு நிமிஷம் பொறுத்துவிட்டுச் “சுடுங்கள்” என்று வீரர்களுக்கு உத்தரவிட்டார்! இருபதினாயிரம் பேர் அடங்கிய அந்தப் பெருங்கூட்டத்தில் சோல்ஜர்கள் வந்திருக்கிற விஷயம் ஒரு சிலருக்கு மட்டுமே தெரிந்தது. ஜெனரல் டையரின் உத்தரவு யாருக்குமே காதில் விழவில்லை. ஆனால் துப்பாக்கிகள் வெடி தீர்க்கும் சத்தம் ஏக காலத்தில் இருபதினாயிரம் பேரின் காதிலும் விழுந்தது. உடனே ஜனங்கள் எழுந்து ஓட ஆரம்பித்தார்கள். ஆனால் எங்கே ஓடுவது? மைதானத்துக்குள் வரும் குறுகிய பாதை வழியாக அவ்வளவு பேரும் ஓடமுடியாது. குறைந்தது அதற்கு இரண்டு மணி நேரம் வேண்டும். சுற்றிலும் மூன்று பக்கம் நெடுஞ்சுவர்கள் நின்றன. ஒரு பக்கத்தில் மட்டும் தாழ்ந்த மதில் சுவர் நின்றது. அதை நோக்கி ஜனங்கள் ஓடி மதில் மேல் ஏறிக் குதிக்கத் தொடங்கினார்கள். அந்தக் குட்டையான மதில் சுவரை நோக்கியே துப்பாக்கிக் குண்டுகளும் அதிகமாக வந்தன. ஏறிக் குதிக்க முயன்றவர்களில் பலர் குண்டு பட்டுச் செத்து விழுந்தார்கள்! அந்த மதில் சுவர் ஓரமாகப் பிணங்கள் குவிந்தன!! ஜெனரல் டையரின் வீரர்கள் அரை மணி நேரம் சுட்டார்கள். மொத்தம் 1600 குண்டுகள் சுட்டார்கள். கொண்டு வந்திருந்த தோட்டாக்கள் எல்லாம் தீர்ந்து போன பிறகுதான் சுடுவதை நிறுத்தினார்கள்! “ஜனங்களைக் கலைப்பதற்காக மட்டும் நான் சுடவில்லை. ஜனங்களுக்குப் பாடம் கற்பிப்பதற்காகச் சுட்டேன்! எத்தனை பேரைக்கொல்லலாமோ அவ்வளவு பேரையும் கொல்லுவதற்குச் சுட்டேன்! அப்போதுதான் மறுபடியும் ஜனங்கள் என்னுடைய உத்தரவை மீறத் துணிய மாட்டார்கள் என்பதற்காகவே அம்மாதிரி செய்தேன்! இன்னும் அதிக தோட்டாக்கள் கைவசம் இருந்திருந்தால் இன்னும் அதிக நேரம் சுட்டிருப்பேன்!” என்று ஜெனரல் டையர் சொன்னார். ஜெனரல் டையர் அன்று சுட்டதில் மொத்தம் 400 பேர் உயிரை இழந்தார்கள். ஆயிரம் பேருக்கு மேல் காயம் பட்டு விழுந்தார்கள். தோட்டாக்கள் தீர்ந்தவுடனே ஜெனரல் டையர் தம் வீரர்களுடன் அங்கிருந்து புறப்பட்டுப் போய்விட்டார். செத்தவர்களின் உடல்கள் இரவெல்லாம் அந்த மைதானத்திலேயே கிடந்தன. காயம்பட்டு விழுந்தவர்கள் இரவெல்லாம் அங்கேயே முனகிக்கொண்டும் ஓலமிட்டுக் கொண்டும் கிடந்தார்கள். அவர்களில் பலர் “தாகம்!தாகம்!” என்று தவித்தார்கள். ஒரு வாய் தண்ணீர் கொடுப்பதற்கும் அங்கே யாரும் இல்லை. அக்கம்பக்கத்திலிருந்தவர்கள் கதிகலங்கிப்போய் வீட்டுக்குள்ளேயே இருந்துவிட்டார்கள். இந்தமாதிரி ராட்சதச் செயல் நடக்கக்கூடும் என்று அவர்கள் கனவிலும் எதிர்பார்க்கவில்லை. காயம்பட்டவர்களுக்குத் தாகத்துக்குத் தண்ணீர் கொடுப்பதற்கோ அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்துவதற்கோ சிகிச்சை செய்வதற்கோ ஜெனரல் டையர் எந்தவித ஏற்பாடும் செய்யவில்லை. மறுநாள் காலையில் ஜெனரல் டையருக்கு ஒரு தந்தி வந்தது. “சரியான காரியம் செய்தீர். லெப்டினெண்ட் கவர்னர் உம்முடைய செயலை அங்கீகரிக்கிறார்!” என்று அந்தத் தந்தி கூறியது. ஜெனரல் டையருடைய பயங்கர லீலைகள் ஜாலியன் வாலாபாக் படுகொலையுடன் முடியவில்லை. கற்பனைக்கெட்டாத பல கொடுமைகளை அவர் நிகழ்த்தினார். அமிருதஸரஸ் நகரத்துக்குக் குழாயில் ஜலம் வருவதையும் தீபங்களுக்கு மின்சார சக்தி கிடைப்பதையும் நிறுத்திவிட்டார். வீதிகளிலே இரண்டு பேருக்கு மேல் சேர்ந்து நடக்கக்கூடாது என்று உத்தரவுபோட்டார். கடைகளைக் கட்டாயமாகத் திறக்கச்செய்து இராணுவ அதிகாரிகள் சொன்ன விலைக்குச் சாமான்களை விற்கும்படி செய்தார். பைசைக்கிள்களையும் வண்டிகளையும் கட்டாயமாகக் கைப்பற்றினார். தெரு முனைகளில் முக்கோணங்களை நாட்டி, இராணுவ உத்தரவுகளை மீறி நடப்பவர்களை யெல்லாம் சவுக்கினால் அடிக்கும்படி செய்தார். ஜெனரல் டையருடைய உத்தரவுகளுக்குள்ளே யெல்லாம் மிகப் பயங்கரமானது, ‘வயிற்றினால் ஊர்ந்துசெல்லும்’ உத்தரவு (Crawling order). மிஸ் ஷெர்வுட் என்னும் ஐரோப்பிய ஸ்திரீ ஒரு சந்தின் வழியாகப் போய்க்கொண்டிருந்த போது இராணுவச் சட்டக் கொடுமைகளினால் வெறி கொண்டிருந்த சில மக்கள் அவளைத் தாக்கினார்கள். ஆனால் அதே சந்தில் வசித்த நல்ல மனிதர்கள் ஓடிவந்து அந்த ஐரோப்பிய ஸ்திரீயைக் காப்பாற்றி விட்டார்கள். இந்தச் செய்தி ஜெனரல் டையருக்குத் தெரிந்ததும் அவர் உடனே இரணிய கசிபுவாக மாறினார்! அந்தச் சந்தின் முனைக்கு வந்து " இனி இந்தச் சந்துக்குள் போகிறவர்கள் எல்லோரும் வயிறு தரையில் படும்படி ஊர்ந்து போகவேண்டும்" என்று கட்டளையிட்டார். அந்தச் சந்தில் குடியிருந்த ஜனங்கள் அனைவரும் வெளியில் போக வேண்டுமானாலும் மறுபடி திரும்பி வீட்டுக்கு வரவேண்டுமானாலும் வயிற்றினால் ஊர்ந்து செல்ல வேண்டியதாயிற்று! அமிருதஸரஸில் ஜெனரல் டையர் ஏற்படுத்திய இராணுவக் கோர்ட்டார் இராணுவ உத்தரவை மீறியதற்காக 298 பேரை விசாரணை செய்தார்கள். அவர்களில் 51 பேருக்கு மரண தண்டனையும் 49 பேருக்கு ஆயுள்பரியந்தம் தீவாந்தர தண்டனையும் 79 பேருக்கு 7 வருஷ தண்டனையும் கிடைத்தன! அமிருதஸரஸில் ராட்சத ஆட்சி நடந்து கொண்டிருந்த அதே சமயத்தில் பஞ்சாப்பின் இன்னும் பல இடங்களிலும் ஜெனரல் டையரின் அண்ணன்மார்களும் தம்பிமார்களும் அவரவர்களுடைய சக்திக்கு இசைந்தபடி அசுர லீலைகளை நடத்திக் கொண்டிருந்தார்கள். லாகூர் நகரில் கர்னல் ஜான்ஸன் ஆட்சிபுரிந்தார். இரவு எட்டுமணிக்கு மேலே வெளியே கிளம்புகிறவர்கள் சுடப்படுவார்கள் என்று அவர் உத்தரவு போட்டார். இந்த உத்தரவு அடங்கிய விளம்பரங்கள் வீட்டுச் சுவர்களில் ஒட்டப்பட்டன. அந்த விளம்பரங்கள் கிழிக்கப்படாமல் காப்பாற்றுவது வீட்டுக்காரர் பொறுப்பு. இரவெல்லாம் கண் விழித்துக் காக்கவேண்டும். காக்கத் தவறினால் மரணதண்டனை, அல்லது கசையடி, அல்லது சிறைவாசம். லாகூர் கலாசாலைகளில் படித்த மாணாக்கர்கள் அனைவரும் நகருக்கு நாலு மைல் தூரத்திலிருந்த இராணுவத் தலைமைக் காரியாலயத்துக்குத் தினம் நாலு தடவை வந்து ஆஜர் கொடுக்க வேண்டுமென்று உத்தரவிட்டார். அப்போது கடுங் கோடைக்காலம். லாகூரில் உஷ்ணத்தின் டிக்ரி அப்போது 108. இந்த வெயிலில் மாணாக்கர்கள் தினம் பதினைந்து மைல் நடக்க வேண்டியதாயிற்று. பலர் சாலையிலேயே மூர்ச்சையடைந்து விழுந்தார்கள். கேள்விப்பட்ட கர்னல் ஜான்ஸன், “ரொம்ப நல்லது. விழுந்த மாணாக்கர்கள் விஷமம் செய்யாமல் இருப்பார்கள் அல்லவா?” என்றார். ஒரு காலேஜ் வாசல் சுவரில் ஒட்டியிருந்த இந்த உத்தரவு விளம்பரம் கிழிக்கப்பட்டது. இதற்காக அந்தக் கலாசாலை பிரின்ஸ்பால், ஆசிரியர்கள் எல்லாரையும் கைது செய்து வீதி வழியாக நடத்தி அழைத்துச் சென்று கோட்டையில் ஒரு மூலையில் மூன்றுநாள் அடைத்து வைத்திருக்கும்படி உத்தர விட்டார். இவ்வாறே குஜர்ன்வாலாவில் கர்னல் ஒப்ரியனும் ஷேக்புராவில் மிஸ்டர் பாஸ்வொர்த் ஸ்மித்தும் காஸூரில் காப்டன் டவ்டனும் அசுர ஆட்சி நடத்தினார்கள். குஜர்ன்வாலாவில் ஆகாய விமானத்திலிருந்து குண்டு போடும் முறையும் கையாளப்பட்டது. லெப்டினண்ட் டாட்கின்ஸ், மேஜர் கார்ப்பி ஆகியவர்கள் ஆகாய விமானத்திலிருந்து கீழே ஜனக் கூட்டத்தைக் கண்டவுடனே வெடி குண்டு எறிந்தார்கள். அல்லது இயந்திர பீரங்கியினால் சுட்டுக் கலைந்தார்கள். இம்மாதிரி ஒரு கலியாண ஊர்வலத்தின்மீது ஆகாய விமானத்திலிருந்து குண்டுகள் எறியப்பட்டன. கர்னல் ஒப்ரியன் என்பவர் ப்ரிட்டிஷ் அதிகாரிகளை இந்தியர்கள் கண்டவுடனே சலாம் போடவேண்டும் என்று உத்தரவிட்டார். இந்தியர்கள் வண்டியில் ஏறியிருந்தால் உடனே இறங்கிச் சலாம் போடவேண்டும் என்றும், குடை பிடித்திருந்தால் உடனே குடையை இறக்கி மூடவேண்டும் என்றும் கட்டளையிட்டார். இந்த உத்தரவை மீறியவர்களுக் கெல்லாம் கசையடி கொடுக்கப்பட்டது. காப்டன் டவ்டன் என்பவர் காஸூர் பட்டணத்தில் ஒரு முக்கியமான நாற்சந்தியில் ஒரு பெரிய தூக்குமேடை கட்டினார். அத்துடன், நூற்றைம்பது பேர் கொள்ளக்கூடிய ஒரு பெரிய இரும்புக் கூண்டு தயாரித்து ரயில்வே ஸ்டே ஷனுக்குப் பக்கத்தில் நாட்டினார். கலகத்தில் சம்பந்தப்பட்டதாகச் சந்தேகத்துக்கு உள்ளவர்களைக் கொண்டுவந்து அந்தக் கூண்டில் அடைத்து வைத்தார். ரயிலுக்குப் போகிறவர்கள், ரயிலிலிருந்து வருகிறவர்கள் எல்லாரும் கூண்டில் அடைக்கப்பட்டவர்களைப் பார்த்துக்கொண்டு போகுமாறு ஏற்பாடு செய்தார்! பஞ்சாப் முழுவதிலும் பொது வாழ்வில் பிரமுகர்களாயிருந்தவர்கள் அனைவரும் இராணுவச் சட்டத்தின்படி கைது செய்யப்பட்டு கடுந்தண்டனைக்கு உள்ளானார்கள். லாகூரில் ஹரிகிருஷ்ணலால் பிரபல காங்கிரஸ் வாதி. பெரிய செல்வந்தர். அவருக்கு 40 லட்ச ரூபாய் சொத்து இருந்தது. அவரைக் கைது செய்து ஆயுள் பரியந்தம் தீவாந்தர தண்டனை விதித்ததுடன் இவருடைய சொத்து முழுவதையும் பறிமுதல் செய்யவும் உத்தரவு போட்டார்கள். லாகூரில் அப்போது பிரபலமாயிருந்த பண்டிதராம் போஜி தத்தர், பண்டித கே. சந்தானம், ‘டிரிப்யூன்’ பத்திரிகை ஆசிரியர் பாபு காளிநாத் ராய் முதலியவர்களும் அதே கதிக்கு உள்ளாயினர். பஞ்சாபில் இவ்விதம் ராட்சத ராணுவ ஆட்சி நீடித்துக் கொண்டே போயிற்று. ஆனால் பஞ்சாப்புக்கு வெளியில் உள்ளவர்களுக்கு அங்கே நிகழ்ந்த கொடுமைகளைப் பற்றி ஒன்றுமே அப்போது தெரியவில்லை. ஏனெனில் செய்திகள் எல்லாம் தணிக்கை செய்து அனுப்பப்பட்டன. வெளி மாகாணங்களிலிருந்து பஞ்சாப்புக்குள் வரவோ பஞ்சாப்பிலிருந்து வெளியில் போகவோ யாரும் அனுமதிக்கப் படவில்லை. பூஜ்யர் ஆண்ட்ரூஸ் பஞ்சாப் சம்பவங்களைப் பற்றி ஓரளவு கேள்விப்பட்டு அங்கே போய் விசாரணை செய்ய விரும்பி மே மாதத்தில் பஞ்சாபுக்குப் போனார். அவரை அமிருதஸரஸில் கைது செய்து ஒரு நாள் ரிமாண்டில் வைத்திருந்து திருப்பி அனுப்பி விட்டார்கள். லாலா ஹரிகிருஷ்ண லாலின் சார்பாக இராணுவக் கோர்ட்டில் வழக்காடுவதற்காக பிரசித்த பாரிஸ்டரான மிஸ்டர் எர்ட்லி நார்ட்டன் பஞ்சாப் சென்றார். அவரும் திருப்பி அனுப்பப் பட்டார். ஜூலை மாதத்திற்குப் பிறகுதான் ஒரு மாதிரியாகப் பஞ்சாப் சம்பவங்களைப் பற்றிய செய்திகள் வெளிவரத் தொடங்கின. அந்த மாதத்தில் கல்கத்தாவில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூடிய போது பிரபல காங்கிரஸ் தலைவர்களிடம் இரகசியமாகப் பஞ்சாப் பயங்கரங்களைப் பற்றி செய்தி சொல்லப்பட்டது. சொன்னவர்கள், “இதெல்லாம் இரகசியமாக இருக்கட்டும். எங்களைக் காட்டிக் கொடுத்துவிட வேண்டாம்” என்று வேண்டிக் கொண்டார்கள். அப்போது வைஸ்ராய் செம்ஸ்போர்டின் நிர்வாக சபையின் அங்கத்தினரா யிருந்தவர்களில் ஸர் சங்கரன் நாயர் ஒருவர். பஞ்சாப்பில் மேலும் இராணுவச் சட்டம் நீடிப்பதைக் கண்டித்து ஜூலை 19ஆம் தேதி அவர் ராஜினாமா செய்தார். பஞ்சாப்பை மூடியிருந்த இரும்புத்திரை அகன்று உண்மையான செய்திகள் வர ஆரம்பித்துக் காந்தி மகாத்மாவின் காதிலும் விழுந்தன. பயங்கரக் கொடுமைகளுக்கு உள்ளான பாஞ்சாலத்துக்குப் போகவேண்டும் என்று காந்தி மகானின் உள்ளம் துடி துடித்தது. அமிருதஸரஸ் காங்கிரஸ் மகாத்மா காந்தி பஞ்சாப்புக்குப் போக ஆர்வம் கொண்டிருந்த போதிலும் தடைச் சட்டத்தை மீறி அங்கே போக விரும்பவில்லை. அப்படி மீறுவதற்கு முயன்றால் பஞ்சாப்பின் நிலைமை இன்னும் மோசமாகத்தான் ஆகும் என்று கருதினார். ஆகையால் இந்திய சர்க்காருக்குத் தந்திகளும் கடிதங்களும் அனுப்பிப் பஞ்சாப்புக்குப் போக அனுமதி கேட்டுக்கொண்டிருந்தார். அந்த அனுமதி இலேசில் கிடைப்பதாக இல்லை. வைஸ்ராய் செம்ஸ்போர்டு, “பொறுங்கள்” “பொறுங்கள்” என்று சொல்லிக் கொண்டேயிருந்தார். இதற்கிடையில் மகாத்மா ஒரு முக்கியமான பொறுப்பை ஏற்றுக் கொள்ள வேண்டியதாயிற்று. அப்போது “பம்பாய் கிராணிகல்” என்னும் பத்திரிகை இந்திய தேசீய இயக்கத்தைத் தீவிரமாக ஆதரித்து வந்தது. அந்தப் பத்திரிக்கைக்கு ஸ்ரீ பி.ஜி. ஹார்னிமான் என்பவர் ஆசிரியராயிருந்தார். ஸ்ரீ ஹார்னிமான் ஆங்கிலேயரான போதிலும் இந்திய தேசீய வாதிகளின் கட்சியைப் பலமாக ஆதரித்தார். அவருடைய எழுத்து, வன்மை பொருந்தியிருந்தது. ரவுலட் சட்டத்தை எதிர்க்க மகாத்மா காந்தி ஆரம்பித்த சத்தியாக்கிரஹ இயக்கத்தையும் ஸ்ரீ ஹார்னிமான் ஆதரித்து எழுதினார். அதனால் கோபங் கொண்ட பிரிட்டிஷ் அதிகார வர்க்கத்தார் அவரைத் தேசப் பிரஷ்டம் செய்தனர். இந்த நிலைமையில் ஸ்ரீ ஹார்னிமானுக்குப் பதிலாக “பம்பாய் கிராணிகல்” பத்திரிகையை நடத்தும்படி அதன் நிர்வாகிகள் மகாத்மாவைக் கேட்டுக் கொண்டார்கள். அந்தப் பொறுப்பை மகாத்மா ஏற்றுக்கொண்டு சில நாள் பத்திரிகையை நடத்தினார். அதற்குள் சர்க்கார் அடக்கு முறையின் கொடுமை காரணமாகப் பத்திரிகையை நிறுத்திவிட வேண்டிய அவசியம் நேர்ந்து விட்டது. பிறகு அதே ஸ்தாபனத்தினால் நடத்தப்பட்டு வந்த “எங் இந்தியா” என்னும் வாரப் பத்திரிகையை மகாத்மா ஒப்புக் கொண்டார். சில காலத்துக்குப் பிறகு “எங் இந்தியா” ஆமதாபாத்துக்கு மாற்றப் பட்டது. அங்கே நடந்து வந்த “நவஜீவன்” என்னும் குஜராத்தி வாரப் பத்திரிகைக்கும் மகாத்மா ஆசிரியர் ஆனார். இந்த இரண்டு பத்திரிகைகளின் மூலமாகக் காந்தியடிகள் தமது கொள்கைகளையும் திட்டங்களையும் பிரசாரம் செய்யத் தொடங்கினார். “எங் இந்தியா” “நவ ஜீவன்” இரண்டு பத்திரிகைகளும் மிகவும் பிரபலமடைந்து சக்தி வாய்ந்த பத்திரிகைகள் ஆயின. அவை ஒவ்வொன்றுக்கும் 40,000 சந்தாதார் வரையில் சேர்ந்தனர். மகாத்மாவுக்குப் பஞ்சாப்புக்குப் போக அனுமதி அந்த வருஷம் அக்டோபர் மாதத்திலேதான் கிடைத்தது. அனுமதி வந்தவுடனே மகாத்மா பஞ்சாப்புக்குப் புறப்பட்டுச் சென்றார். பஞ்சாப் சம்பவங்களுக்கெல்லாம் மகாத்மாவே பொறுப்பாளி என்று ஸர் மைக்கேல் ஓட்வியர் குற்றம் சாட்டினார். அதேமாதிரியாக்ப் பஞ்சாப் இளைஞர்கள் சிலர் இராணுவச் சட்டக் கொடுமைகளுக்கெல்லாம் மகாத்மாவையே பொறுப்பாளியாகக் கொண்டார்கள். சத்தியாக்கிரஹம் ஆரம்பித்ததற்காக ஸர் மைக்கேல் ஓட்வியர் மகாத்மாவின் பேரில் குற்றம் சாட்டியதுபோல் சத்தியாக்கிரஹத்தை நிறுத்தியதற்காக இவர்கள் மகாத்மாபேரில் குற்றம் சுமத்தினார்கள். சத்தியாக் கிரஹத்தை மகாத்மா காந்தி நிறுத்தியதனால்தான் ஜாலியன் வாலா படுகொலை நடந்தது என்று சொன்னார்கள். “நீர் பஞ்சாப்புக்கு வந்தால் உம்மைக் கொலை செய்து விடுவோம்” என்று பயமுறுத்தி காந்தி மகானுக்குக் கடிதமும் எழுதினார்கள். இப்படிப்பட்ட பயமுறுத்தல்களினால் காந்திஜியைத் தடை செய்யமுடியுமா, என்ன? மகாத்மா காந்தி ரயில் ஏறி லாகூருக்கு வந்து சேர்ந்தார். அவர் எதிர் பார்தததற்கு நேர்மாறான காட்சியை லாகூர் ரயில்வே ஸ்டே ஷனில் பார்த்தார். அந்த ஸ்டே ஷன் பிளாட்பாரத்தில் ஒரு மூலையிலிருந்து இன்னொரு மூலை வரையில் ஜனங்கள் எள்ளுப் போட இடமில்லாமல் நெருங்கி நின்றார்கள். காந்திஜியை வரவேற்பதற்காகத்தான். ரயில் நிலையத்துக்கு வெளியிலும் மாபெருங் கூட்டம் கூடியிருந்தது. லாகூர் நகரவாசிகள் அனைவருமே வீடுகளைப் பூட்டிக்கொண்டு மகாத்மாவை வரவேற்பதற்கு வந்து விட்டதுபோல் காணப்பட்டது. காந்திஜியைக் கண்டதும் அத்தனை ஜனங்களும் ஒரே குரலாக “மகாத்மா காந்திக்கு ஜே”! என்று கோஷம் இட்டார்கள். நெடுநாள் பிரிந்திருந்த உற்ற பந்துவை வரவேற்பதுபோல் லாகூர் வாசிகள் மகாத்மாவை வரவேற்றார்கள். அளவு கடந்த உற்சாகத்தினால் ஜனங்களுக்குத் தலைகால் தெரியாமல் போய்விட்டது. இராணுவச் சட்டம் அமுலின்போது தாங்கள் பட்ட கஷ்டங்களுக்குக் காந்திஜியே காரணம் என்று அவர்கள் கருதியதாகத் தோன்றவில்லை. அந்தக் கஷ்டங்களுக்கெல்லாம் பரிகாரம் தேடித் தரக்கூடிய உற்ற துணைவர் காந்திஜி என்று அவர்கள் நம்பியதாகத் தோன்றியது. இராணுவக் கோர்ட்டினால் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட லாகூர் தலைவர்களின் பண்டித ராம்போஜி தத் சௌத்ரி ஒருவர். அவருடைய மனைவியான ஸ்ரீ சாரளா தேவி சௌதராணியும் பிரபல தேசியவாதி. அவருடைய வீட்டில் மகாத்மா தங்கினார். அதன் காரணமாக அந்த வீடு ஒரு பெரிய சத்திரம் ஆயிற்று. ஸ்ரீ சாரளா தேவி சௌதராணி முகமலர்ச்சியுடன் வந்தவர்களுக்கெல்லாம் உணவு அளித்து உபசரித்தார். ஏற்கனவே பஞ்சாப்புக்கு பண்டித மதன் மோகன் மாளவியா, பண்டித மோதிலால் நேரு, சுவாமி சிரத்தானந்தர் ஆகியவர்கள் வந்திருந்தனர். அவர்களுடன் பஞ்சாப் நிலைமையைப் பற்றி மகாத்மா கலந்து ஆலோசித்தார். அதே சமயத்தில், பிரிட்டிஷ் சர்கார், பஞ்சாப் இராணுவச் சட்ட அமுலைப் பற்றி விசாரிப்பதற்காக லார்டு ஹண்டரைத் தலைவராகக் கொண்டு ஒரு கமிஷனை நியமித்திருந்தார்கள். “பஞ்சாப் பயங்கரங்களைப் பற்றி விசாரிக்க வேண்டும்” என்று தேசமெங்கும் ஏற்பட்டிருந்த பெருங் கிளர்ச்சியின் பயனாக சர்க்கார் மேற்படி ஹண்டர் கமிஷனை நியமித்தனர். விசாரணைக் கமிஷன் என்று நியமித்துவிட்டால் பொது மக்களிடையே பொங்கிய உணர்ச்சியும் ஆத்திரமும் ஒருவாறு அடங்கிவிடும் என்று பிரிட்டிஷ் சர்க்கார் கருதினார்கள். முதலில் ஹண்டர் கமிஷன் முன்பு சாட்சியம் விட்டு ஒத்துழைப்பது என்ற மகாத்மா முதலிய தலைவர்கள் முடிவு செய்தார்கள். ஆனால் அவர்கள் எதிர்பாராத சில தடைகள் ஹண்டர் கமிஷன் அங்கத்தினரால் ஏற்பட்டன. இராணுவச் சட்ட தண்டனைக்கு உள்ளன லாலா ஹரிகிருஷ்ணலால் முதலிய தலைவர்களைக் கமிஷன் விசாரணையின் போது கோர்ட்டில் போலீஸ் பாராவுடன் இருக்கச் செய்ய வேண்டுமென்று மகாத்மா, மாளவியா முதலியவர்கள் வற்புறுத்தினார்கள். உண்மை துலங்குவதற்கு அது அவசியம் என்று அவர்கள் சொன்னார்கள். இதற்கு ஹண்டர் கமிஷன் ஒத்துக்கொள்ளவில்லை. இதிலிருந்து ஹண்டர் கமிஷனிடத்தில் நீதியை எதிர்பார்க்க முடியாது என்று தோன்றிவிட்டது. எனவே, ஹண்டர் கமிஷனைப் பகிஷ்கரித்து, சர்க்கார் சம்பந்தமற்ற விசாரணையொன்று நடத்த ஏற்பாடு செய்வதென்று தீர்மானம் ஆயிற்று. பண்டித மாளவியாவின் யோசனைப்படி மகாத்மா காந்தி, பண்டித மோதிலால் நேரு, ஸ்ரீ.சி.ஆர்.தாஸ், ஜனாப் அப்பாஸ் தயாப்ஜி ஆகியவர்கள் விசாரணை செய்ய நியமிக்கப்பட்டார்கள். இவர்களில் பண்டித மோதிலால் நேரு பிற்பாடு அமிருதஸரஸ் காங்கிரஸ் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபடியால், அவருக்குப் பதிலாக பாரிஸ்டர் எம். ஆர். ஜெயக்கர் அங்கத்தினராக நியமிக்கப்பட்டார். இந்த நாலு பெரும் தனித் தனியே நாலு பக்ககளிலும் சென்று இராணுவ அமுலைப் பற்றிச் சாட்சியம் சேகரிக்கலானார்கள். ஆயினும் அந்த வேலை பெரும்பாலும் காந்திஜியின் தலையிலேயே விழந்தது. விசாரணை செய்யச் செய்ய, சாட்சியங்களைக் கேட்கக் கேட்க, எவ்வளவு பயங்கரமாக கொடுமைகள் இராணுவ அமுலின்போது ஜனங்களுக்கு இழைக்கப்படிருகின்றன என்று காந்திஜிக்குத் தெரிய வந்தது. பஞ்சாப் ஜனங்களோ மகாத்மாவைத் தங்களை ரக்ஷிக்க வந்த தெய்வம் என்று நினைத்து அவரிடம் தாங்கள் பட்ட கஷ்டங்களைச் சொல்லி முறையிட்டர்காள். பஞ்சாப் விசாரணை நடந்து கொண்டிருந்த போதே அமிருதசரஸ் நகரில் காங்கிரஸ் மகா சபை கூடியது. அமிருதஸரஸ் காங்கிரஸ் அதற்குமுன் நடந்த எந்தக் காங்கிரஸையும் விடப் பெருமிதமாகவும் கோலாகலமாகவும் நடந்தது. ஆறாயிரம் பிரதிநிதிகளும் முப்பதினாயிரம் பார்வையாளரும் அந்தக் காங்கிரஸுக்கு வந்திருந்தார்கள். சுவாமி சிரத்தானந்தர் வரவேற்பு சபையின் தலைவர். பண்டித மோதிலால் நேரு காங்கிரஸ் மகாசபையின் அக்கிராசனர். காங்கிரஸ் கூடுவதற்கு முதல் நாள் இராணுவச் சட்டத்தின்படி சிறைப் பட்டிருந்த லாலா ஹரிகிருஷ்ணலால் முதலிய பஞ்சாப் தலைவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டார்கள். சென்ற நாலு வருஷமாகப் பாதுகாப்பில் வைக்கப்பட்டிருந்த அலி சகோதரர்களும் விடுதலையானார்கள். விடுதலையான தலைவர்கள் நேரே அமிருதஸரஸுக்கு வந்து சேர்ந்தார்கள். அலி சகோதரர்கள் அமிருதஸரஸ் வீதிகளில் ஊர்வலமாக அழைத்து வரப்பட்ட போது அந்த நகர் மக்களின் ஆரவாரத்தைச் சொல்லி முடியாது. அலி சகோதரர்கள் அத்தனை நாளும் சிந்த்வாரா என்னுமிடத்தில் சிறையில் வைக்கப்பட்டிருந்தனர். மௌலானா முகம்மதலி தமது பிரசங்கத்தில் “சிந்த்வாராவுக்கு ரிடர்ன் டிக்கெட் என் சட்டைப் பையில் வைத்திருக்கிறேன்” என்று சொன்னார். அதாவது மறுபடியும் சிறைக்குப் போகத் தாம் தயாரா யிருப்பதை அவ்விதம் தெரிவித்தார். இது மக்களின்ஆவேசத்தை அதிகப்படுத்தியது. இத்தகைய சூழ்நிலையில் அமிருதஸரஸ் காங்கிரஸ் கூடியது. இந்தக் காங்கிரஸின்போது மூன்று புதிய தலைவர்கள் நாட்டிலும் காங்கிரஸிலும் சக்தி பெற்று வருகிறார்கள் என்று வெளியாயிற்று. ஒருவர், அக்கிராசனம் வகித்த பண்டித மோதிலால் நேரு. இரண்டாவது தலைவர் பாரிஸ்டர் சித்தரஞ்சன் தாஸ். மூன்றாவது தலைவர் தான் மகாத்மா காந்தி. இந்த மூன்று பேருக்குள்ளேயும் காந்தி மகாத்மாவே சக்தி வாய்ந்தவர் என்பதும் அமிருதஸரஸில் ஒருவாறு தெரிய வந்தது. அமிருதஸரஸ் காங்கிரஸில் நிறைவேறிய மிகவும் முக்கியமான தீர்மானம் சம்பந்தமாக ஏற்பட்ட விவாதங்களிலிருந்து இது வெளியாயிற்று. முதலாவது மகா யுத்தத்தின் ஆரம்ப நாட்களில் இந்தியாவிலிருந்து மெஸபடோமியாவுக்கு அனுப்பிய துருப்புகள் விபரீதமான முடிவை அடைந்தன. இங்கிலாந்தில் இது பெரும் கிளர்ச்சியை உண்டாக்கியது. மிஸ்டர் மாண்டகு என்பவர் பார்லிமெண்டில் இந்திய அதிகார வர்க்கத்தைப் பலமாகத் தாக்கிப் பேசினார். இந்தியாவின் ஆட்சி முறையைக் காலத்துக் கேற்ப மாற்றி அமைக்கவேண்டும் என்ற எண்ணம் இங்கிலாந்தில் பலருக்கும் ஏற்பட்டது. கொஞ்ச நாளைக்கெல்லாம் மிஸ்டர் மாண்டகுவையே இந்தியா மந்திரியாக நியமித்தார்கள். மிஸ்டர் மாண்டகு இந்தியாவுக்கு நேரில் வந்து இங்குள்ள நிலைமையை நன்கு தெரிந்து கொள்ளப் போவதாகவும் பிறகு அரசியல் சீர்திருத்தங்களைப் பற்றிச் சிபார்சு செய்யப் போவதாகவும் சொன்னார். அதன்படியே அவர் வந்தார். இந்தியாவில் பல பிரமுகர்களைச் சந்தித்தார். பல ஸ்தாபனங்களின் அபிப்பிராயங்களைக் கேட்டார். இங்கிலாந்துக்குத் திரும்பிப் போன பிறகு ‘இரட்டை யாட்சி’ என்னும் வேடிக்கையான அரசியல் திட்டத்தைச் சிபார்சு செய்தார். இதன்படி இந்தியாவின் மாகாணங்களில் பாதி இலாக்காக்கள் பழையபடி கவர்னருடைய நிர்வாக சபையினாலும் மற்றப் பாதி இலாக்காக்கள் ஜனங்களினால் தேர்ந்தெடுக்கப்பட்ட மந்திரிகளாலும் நிர்வகிக்கப்படும். போலீஸ்,சட்டம், வருமானம் முதலிய முக்கிய இலாக்காக்கள் கவர்னரிடமே இருக்கும். கல்வி, சுகாதாரம் முதலிய இலாக்காக்கள் மந்திரிகளிடம் ஒப்படைக்கப்படும். இந்தியா மந்திரி மாண்டகுவும் வைஸ்ராய் லார்டு செம்ஸ்போர்டும் சேர்ந்து தயாரித்த திட்டமாதலால் இதற்கு மாண்டகு செம்ஸ்போர்டு திட்டம் என்றும், மாண்ட் போர்ட் திட்டம் என்றும் பெயர்கள் வழங்கலாயின. அமிருதஸரஸ் காங்கிரஸ் கூடுவதற்குச் சில நாளைக்கு முன்னாலேதான் மேற்படி திட்டம் வெளியாகி யிருந்தது. இந்தத் திட்டத்தை ஏற்றுக் கொள்வதா, நிராகரிப்பதா என்பதைப் பற்றிக் காங்கிரஸ் தலைவர்களுக்குள் ஏற்கெனவே ஆலோசனைகள் நடந்து வந்தன. காங்கிரஸிலிருந்து மிதவாதிகள் எல்லாரும் அதற்குள்ளே தனியாகப் பிரிந்து போய்த்தனி ஸ்தாபனமும் ஏற்படுத்திக் கொண்டார்கள். பழம் பெருந் தலைவர்களில் லோகமான்ய திலகர், பண்டித மாளவியா, ஸ்ரீ விபினசந்திரபால் முதலியோர் காங்கிரஸில் இருந்தார்கள். 1917ஆம் ஆண்டில் டாக்டர் பெஸண்டு அம்மையின் செல்வாக்கு உச்ச நிலையில் இருந்தது. ஆனால் அடுத்த இரண்டு வருஷத்துக்குள் காங்கிரஸில் அவருடைய செல்வாக்கு அடியோடு குன்றிவிட்டது. இரண்டு வருஷமாக ஸ்ரீ சித்தரஞ்சன் தாஸின் நட்சத்திரம் உச்சத்துக்கு வந்து கொண்டிருந்தது. மாதம் அரை லட்சம் ரூபாய் சம்பாதித்துக் கொண்டிருந்த பிரபல பாரிஸ்டர் அவர். சுதேசி இயக்க நாட்களில் ஸ்ரீ அரவிந்த கோஷின் சார்பாகக் கோர்ட்டில் ஆஜராகிப் பேசிப் புகழ் பெற்றிருந்தவர். 1917ல் டாக்டர் பெஸண்டு அம்மையைக் காங்கிரஸ் தலைவராக்குவதற்கு பாடுபட்டவரும் அவர்தான். தேசீய வாதிகள் பெரும்பாலோர் அவருடைய யோசனையை எதிர்பார்க்கத் தொடங்கி யிருந்தார்கள். மாண்டகு செம்ஸ்போர்டு சீர்திருத்தத் திட்டத்தைப் பற்றி ஸ்ரீ சித்தரஞ்சன்தாஸ் ஒரு தீர்மானம் தயாரித்துக் கொண்டு வந்திருந்தார். “மாண்டகு செம்ஸ்போர்டு திட்டம் போதாது. அதிருப்திகரமானது. ஏமாற்றகரமானது; ஆகையால் அதை இந்தக் காங்கிரஸ் நிராகரிக்கிறது” என்பது தீர்மானத்தின் முக்கிய அம்சம். “ஏற்கெனவே, லோகமான்ய திலகர்”கிடைத்ததைப் பெற்றுக் கொண்டு பாக்கிக்குப் போராட வேண்டும்" என்ற கொள்கையை வெளியிட்டிருந்தார். ஆயினும் அமிருதஸரஸில் ஸ்ரீ சி. ஆர். தாஸைச் சந்தித்துப் பேசிய பிறகு அவருடைய தீர்மானத்தை ஆதரிக்க ஒப்புக் கொண்டார். “மாண்டகு செம்ஸ்போர்டு திட்டத்தை அங்கீகரித்து நடத்துவது” என்று டாக்டர் பெஸண்டு கொண்டு வர விரும்பிய தீர்மானத்தை யாரும் ஒப்புக் கொள்ளவில்லை. இந்த நிலைமையில் மகாத்மா காந்தியின் நிலைமை இன்னதென்று அறிந்து கொள்ளப் பலரும் விரும்பினார்கள். மகாத்மாவினுடைய மனப்பாங்குதான் நமக்குத் தெரியுமல்லவா? எதிராளிகளின் பேச்சில் அவநம்பிக்கை கொள்ளக் கூடாது என்பது அவருடைய திடமான கொள்கை. மாண்டகு நல்ல எண்ணத்துடனே இந்த அரசியல் திட்டத்தை வகுத்திருக்கிறார் என்று மகாத்மா பூரணமாக நம்பினார். ஆகையால் அதை அடியோடு நிராகரிக்கும் யோசனை மகாத்மாவுக்குப் பிடிக்க வில்லை. அதே சமயத்தில் காங்கிரஸில் மிகச் செல்வாக்குள்ள ஸ்ரீ திலகர் முதலிய தலைவர்களுக்கு எதிராகப் பேசவும் அவர் விரும்பவில்லை. ஆகையால் காங்கிரஸுக்கு முதல் நாள் மட்டும் வந்து விட்டு அப்புறம் நடவடிக்கைகளில் கலந்து கொள்ளாமலிருந்துவிட மகாத்மா எண்ணியிருந்தார். இதைப் பண்டித மாளவியாவிடம் கூறியபோது அவர் அதை ஒப்பவில்லை. லாலா ஹரி கிருஷ்ணலால் முதலிய பஞ்சாப் தலைவர்களூம் அதை விரும்பவில்லை. “நீங்கள் அவ்விதம் செய்வது பஞ்சாபிகளுக்கு மிக்க மன வருத்தத்தை அளிக்கும்” என்று அவர் சொன்னார். “என்னுடைய அபிப்பிராயத்தை நான் வற்புறுத்தினால் வோட் எடுக்க நேரிடலாம். இங்கே வோட் எடுக்க வசதி ஒன்றும் இல்லையே? பிரதிநிதிகளுக்கும் பார்வையாளருக்கும் வித்தியாசம் இல்லாமல் எல்லாரும் கலந்து போயிருக்கிறார்களே?” என்றார் காந்திஜி. “வோட் எடுக்கும் சமயத்தில் பார்வையாளரை வெளியில் அனுப்பிவிட ஏற்பாடு செய்கிறோம்” என்றார் ஸ்ரீ ஹரி கிருஷ்ணலால். எனவே, மாண்டகு செம்ஸ்போர்டு திட்டத்தை நிராகரிக்கும் தீர்மானத்தை ஸ்ரீ சி. ஆர். தாஸ் கொண்டு வந்தபோது மகாத்மா அதற்கு ஒரு திருத்தம் பிரேரேபித்தார். “ஏமாற்றமானது” என்ற வார்த்தையை எடுத்துவிட்டு, “முழுப் பொறுப் பாட்சியை அடைவதற்கான முறையில் மேற்படி திட்டத்தை நடத்தி வைக்கத் தீர்மானிக்கிறது” என்பதைக் கடைசியில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று காந்தி மகானுடைய திருத்தம் கூறியது. அத்துடன், மிஸ்டர் மாண்டகு அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வாக்கியம் ஒன்றையும் சேர்க்க வேண்டுமென்று மகாத்மா பிரேரேபித்தார். அப்போது தேச மக்களுடைய மனோநிலை கொதிப்படைந்திருந்தது. காங்கிரஸ் பிரதிநிதிகள் பஞ்சாப் கிலாபத் அநீதிகளைக் குறித்து ஆத்திரம் கொண்டிருந்தார்கள். இப்படிப்பட்ட சமயத்தில் மகாத்மாவின் ஒத்துழைப்புத் திருத்தம் பிரதிநிதிகளுக்கு மிகக் கசப்பாயிருந்தது. ஆனாலும் அவர்கள் காந்தி மகாத்மாவின் விருப்பத்துக்கு விரோதமாக எதுவும் செய்ய விரும்பவில்லை. இந்தியாவுக்குச் சுதந்திரம் கிடைப்பதாயிருந்தால் அது மகாத்மாவினால்தான் கிடைக்கும் என்ற நம்பிக்கை பலருடைய அந்தரங்கத்தில் அப்போது ஏற்பட்டிருந்தது. காந்திஜி ஒரு பக்கமும் திலகர், தாஸ் முதலிய தலைவர்கள் மற்றொரு பக்கமும் மாறுபட்டு நிற்பதையும் ஜனங்கள் விரும்பவில்லை. ஆகவே தீர்மானமும் திருத்தமும் பிரேரணை செய்யப்பட்டபோது பிரதி நிதிகள் பார்வையாளர் அனைவரும் சோர்வடைந்து முகம் வாடிப் போனார்கள். இந்த நிலைமையில் ஒரு சிலர் இரு சாராரிடையிலும் சமரசம் உண்டு பண்ண முயன்றார்கள். சமரசம் ஏற்பட வேண்டும் என்பதில் மற்றவர்களைக் காட்டிலும் பண்டித மாளவியாவுக்கு அதிக ஆத்திரம் இருந்தது. அவர் காங்கிரஸ் மேடையில் அமர்ந்தபடி சமரசத்துக்கு வழி காண முயன்று கொண்டிருந்தபோது ஸ்ரீ ஜயராம்தாஸ் தௌலத்ராம் மகாத்மாவின் திருத்தத்தில் ஒரு சிறு திருத்தம் செய்து அதைச் சமரசப் பிரேரணையாகச் சமர்ப்பித்தார். “திட்டத்தை நடத்துவது” என்பதைக் “கூடுமான வரையில் நடத்துவது” என்று அவர் திருத்தினார். இதை மகாத்மா ஒப்புக்கொண்டதும், பண்டித மாளவியா லோகமான்ய திலகரை நோக்கினார். திலகர் “தாஸ் சம்மதித்தால் எனக்குச் சம்மதம்” என்றார். தாஸ், விபின சந்திரபாலரைப் பார்த்தார். விபின சந்திரர் தலையை அசைத்தார். உடனே பண்டித மாளவியா எழுந்து நின்று, “பிரதிநிதிகளே! தலைவர்களுக்குள் சமரசம் ஏற்பட்டு விட்டது!” என்று அறிவித்தார். அப்போது சபையில் எழுந்த சந்தோஷ ஆரவாரம் ஆகாயத்தை அளாவியது. அதிலிருந்து தலைவர்கள் ஒத்துப் போகவேண்டும் என்பதில் பிரதிநிதிகளுக்கு எவ்வளவு ஆர்வம் இருந்தது என்பது நன்கு வெளியாயிற்று. அதற்கு பிறகு மேடையில் இருந்த தலைவர்கள் சமரசமாகப் போக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விட்டது. சமரசத் தீர்மானம் மிகுந்த உற்சாகத்துக்கிடையே நிறைவேறியது. சமரசத் தீர்மானம் என்று சொல்லப்பட்டதாயினும் உண்மையில் அது காந்தி மகாத்மா காங்கிரஸ் மகாசபையின் மேடையில் அடைந்த மகத்தான முதல் வெற்றி என்பதை எல்லாரும் உணர்ந்திருந்தார்கள். இதே விதமாக இன்னும் இரண்டு தீர்மானங்களைக் கசந்து விழுங்கிக் கொண்டு காந்தி மகாத்மாவுக்காகவே காங்கிரஸ் பிரதிநிதிகள் நிறைவேற்றினார்கள். அவற்றில் ஒன்று பஞ்சாப் பிலும் குஜராத்திலும் பொது ஜனங்கள் அத்து மீறிப் பலாத்காரச் செயல்களில் இறங்கியதைப் பலமாகக் கண்டனம் செய்தது. அதிகாரிகளுடைய செயல்களினால் கொதிப்படைந்திருந்த பிரதிநிதிகளுக்குப் பொது ஜனங்களைக் கண்டிக்கும் காரியம் சிறிதும் பிடிக்கவில்லை. ஆயினும் மகாத்மா காந்தி கொண்டு வந்தபடியால் அந்தத் தீர்மானமும் நிறைவேறியது. அதோடு அடுத்த வருஷம் வேல்ஸ் இளவரசர் இந்தியாவுக்கு விஜயம் செய்வதைக் காங்கிரஸ் வரவேற்கிறது என்ற தீர்மானமும் மகாத்மாவுக்காகவே நிறைவேறியது. அமிருதஸரஸ் காங்கிரஸில் ஒத்துழைப்புத் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றிய அதே மகாத்மா சில மாதங்களுக்கெல்லாம் ஒத்துழையாமை இயக்கத்துக்குத் துவஜா ரோகணம் செய்தார். மாண்டகு செம்ஸ்போர்டு திட்டத்தின்படி நடக்கும் சட்ட சபைத் தேர்தல்களை அடியோடு பகிஷ்காரம் செய்ய வேண்டும் என்றார். சட்டசபை பகிஷ்காரத்தை மற்ற தலைவர்கள் எதிர்த்தார்கள் ஆயினும் மகாத்மாவின் திட்டத்தைத் தேசமும் காங்கிரஸும் ஒப்புக்கொண்டன. இந்த அதிசயங்களைப் பற்றிப் பின்னர் விவரமாகத் தெரிந்து கொள்வோம். 18. கிலாபத் கிளர்ச்சி பாரத நாட்டின் சுதந்திரத்துக்காக மகாத்மா காந்தி ஆரம்பித்து நடத்திய முதலாவது பேரியக்கத்துக்கு ஒத்துழையாமை இயக்கம் என்று பெயர். இந்த இயக்கத்தின் வித்து 1919ல் மகாத்மாவின் உள்ளத்தில் விதைக்கப்பட்டது. 1920இல் அது முளைத்து வளர்ந்தது. அடுத்த 1921ஆம் ஆண்டில் அந்த இயக்கம் மாபெரும் விருட்சமாகிப் பரவிப் படர்ந்து தழைத்தது. ஒத்துழையாமை இயக்கத்துக்கு முக்கிய காரணங்களாக உதவியவை 1. பஞ்சாப் படுகொலை முதலிய கோர நிகழ்ச்சி களும், 2. கிலாபத்துக்கு ஏற்பட்ட ஆபத்துமாகும். 1919ஆம் ஆண்டு முதல் 1921ஆம் ஆண்டு வரையில் பாரத நாட்டின் சரித்திரத்தில் ஒரு மகோன்னதமான காலம். அந்த மூன்று வருஷத்திலும் இந்தியாவில் ஹிந்துக்களும் முஸ்லிம் களும் ஒற்றுமையாகச் சகோதர வாஞ்சையுடன் நடந்து கொண்டதுபோல் அதற்கு முன்னால் நடந்ததில்லை; இனிமேல் நடக்குமா என்றும் சொல்ல முடியாது. இத்தகைய ஹிந்து முஸ்லிம் சகோதர பாவத்துக்குக் காரணமாயிருந்தது கிலாபத்துக்கு வந்த ஆபத்துத்தான். கிலாபத்தைப் பற்றியும் அதற்கு வந்த ஆபத்தைப்பற்றியும் இப்போது தெரிந்து கொள்வோம். முதலாவது உலக மகாயுத்தத்தில் பிரிட்டனும் ஜெர்மனியும் போராடிக் கொண்டிருந்தபோது துருக்கி தேசம் ஜெர்மன் கட்சியைச் சேர்ந்தது. இதனால் இந்திய முஸ்லிம்கள் ஒரு சங்கடமான நிலைக்கு உள்ளானார்கள். துருக்கி சுல்தான் துருக்கி சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்தி மட்டுமல்ல; உலக முழுவதிலும் வசித்த முஸ்லிம்களின் மத குரு என்ற பதவியையும் வகித்து வந்தார். இந்தக் குரு பீடத்துக்குக் கிலாபத் என்று பெயர். கிலாபத் பதவியில் இருப்பவர் “கலீபா” என்று அழைக்கப்பட்டார். உலக முஸ்லீம்களின் குரு என்ற பதவியைத் துருக்கி சுல்தான் திறம்பட வகிப்பதற்கு அவர் ஒரு பெரிய சாம்ராஜ்யத்தின் சர்வாதிகார மன்னராகவும் இருக்க வேண்டுமென்றும் அப்போதுதான் குரு பீடத்தை நன்கு வகிக்க முடியும் என்றும் முஸ்லீம்கள் கருதினார்கள். அதோடு முஸ்லீம்களின் புண்ணிய க்ஷேத்திரங்கள் பலவும் அடங்கிய ஜஸ் ரதுல் அரப் என்னும் பிரதேசம் துருக்கி சுல்தான் ஆதிக்கத்தில் இருக்க வேண்டும் என்றும் அவர்கள் விரும்பினார்கள். ‘ஜஸ் ரதுல் அரப்’ பில் மெஸபடோமியா, அரேபியா, ஸிரியா, பாலஸ்தீனம் இவை சேர்ந்தவை. பிரிட்டனுக்கு எதிர்க்கட்சியில் துருக்கி சேர்ந்த போது இந்திய முஸ்லீம்கள் தங்கள் மதகுருவை எதிர்த்து எப்படித் தாங்கள் யுத்தம் செய்ய முடியும் என்று வேதனைப்பட்டார்கள். யுத்த முடிவில் பிரிட்டன் ஜெயித்தால் ‘கலீபா’ வின் கதி என்ன ஆகுமோ என்று கவலைப்பட்டார்கள். துருக்கி சுல்தானுடைய சாம்ராஜ்யம் பிடுங்கப்பட்டுவிட்டால் அவர் ‘கலீபா’ பதவியை எப்படி வகிக்க முடியும்? ’ஜஸ் ரதுல் அரப்’பிலுள்ள முஸ்லீம் புண்ணிய க்ஷேத்திரங்களின் நிலைமை என்ன? இந்த சந்தேகங்களை யெல்லாம் யுத்த ஆரம்பத்தில் வெளிப்படையாக எழுதியதற்காகவே அலி சகோதரர்கள் பல வருஷகாலம் பாதுகாப்பில் வைக்கப்பட்டிருந்தார்கள். யுத்தம் ஒரு நெருக்கடியான நிலைமையை அடைந்திருந்த போது அச்சமயம் பிரிட்டிஷ் பிரதம் மந்திரியாயிருந்த லாயிட் ஜார்ஜ் இந்திய முஸ்லீம்களுக்கு சில வாக்குறுதிகளைக் கூறினார். “துருக்கி சுல்தானுடைய அதிகாரத்துக்காவது, கலீபா பீடத்துக்காவது, எந்தவித பாதகமும் ஏற்படாமல் பார்த்துக் கொள்வோம்” என்று சொன்னார். ’சின்ன ஆசியா, திரேஸ் என்னும் பிரசித்தி பெற்ற செழிப்பான பிரதேசங்களையெல்லாம் துருக்கி சாம்ராஜ்யத்திலிருந்து அபகரிக்கும் எண்ணம் எங்களுக்குக் கிடையாது" என்று சொன்னார். இந்த வாக்குறுதி களை நம்பியே இந்திய முஸ்லீம்களில் பெரும்பாலோர் யுத்த முயற்சிகளில் ஒத்துழைத்தார்கள். ஆனால் முதலாவது உலக யுத்தம் 1918ஆம் ஆண்டின் இறுதியில் முடிந்ததோ, இல்லையோ லாயிட் ஜார்ஜின் வாக்குறுதிகளைப்பற்றிய பிரஸ்தாபமே இல்லை. அந்த வாக்குறுதிகள் காற்றிலே பறக்கவிட்டு விடப்படும் என்று தோன்றியது. இந்த விஷயம் 1919ஆம் வருஷம் முழுவதிலும் இந்திய முஸ்லிம் தலைவர்களின் மனதைக் கலக்கிக் கொண்டிருந்தது. சின்ன ஆசியாவில் துருக்கியின் ஆதிக்கத்துக்கு உட்பட்டிருந்த ஸிரியா, பாலஸ்தீன் தேசங்களைப் பிரான்ஸும் பிரிட்டனும் கைப்பற்றித் தங்கள் மேலதிகாரத்தை ஏற்படுத்திக் கொண்டன. திரேஸ் மாகாணம் கிரீஸுக்குக் கொடுக்கப்பட்டது. துருக்கி சுல்தான் ஒரு கைதியைப்போல் நடத்தப்படலானார். வெற்றி பெற்ற நேசக் கட்சியார், நியமித்த கமிஷன் துருக்கியை ஆட்சி செய்யத் தொடங்கியது. இந்தச் செய்திகள் எல்லாம் வர வர இந்திய முஸ்லிம்களின் கொதிப்பை அதிகமாக்கிக் கொண்டிருந்தது. ‘கிலாபத்’ பீடத்தின் கௌரவத்தைப் பாதுகாப்பதற்காக இந்திய முஸ்லிம்கள் ஒரு பெரும் போராட்டம் நடத்த விரும்பினார்கள். ஆனால் எந்த விதத்தில் அந்தப் போராட்டத்தை நடத்துவதென்று விளங்கவில்லை. இதைப்பற்றித் தீர்மானிப்பதற்காக அடிக்கடி முஸ்லிம் தலைவர்களின் மகாநாடுகள் நடந்தன. 1919ஆம் வருஷக் கடைசியில் அலகாபாத்தில் நடந்த முஸ்லிம் தலைவர்களின் கூட்டத்திற்கு அழைக்கப்பட்டு மகாத்மா காந்தி போயிருந்தார். முஸ்லிம் தலைவர்கள் ஆத்திரமாகவும் ஆவேசமாகவும் பேசுவதை எல்லாம் கேட்டுக்கொண்டிருந்தார். கடைசியில் அவருடைய அபிப்பிராயத்தைக் கேட்டபோது, “பிரிட்டிஷ் சர்க்காருடன் எத்தனையோ விதங்களில் நீங்கள் ஒவ்வொருவரும் ஒத்துழைத்து வருகிறீர்கள். அப்படி ஒத்துழைத்துக்கொண்டே சர்க்காருடன் போர் நடத்துவதைப்பற்றிப் பேசுவது பொருத்தமில்லை. முதலில் பிரிட்டிஷ் சர்க்காரோடு ஒத்துழைப்பதை நிறுத்த வேண்டும்” என்றார் காந்திஜி. இப்பேச்சின்போது தான் மகாத்மா ‘நான்கோஆபரே ஷன்’ என்ற வார்த்தையை முதன் முதலில் உபயோகித்தார். அங்கே கூடியிருந்த முஸ்லீம்களும் மகாத்மாவின் யோசனையை ஒப்புக்கொண்டு பிரிட்டிஷ் சர்க்காரோடு படிப்படியாக ஒத்துழைப்பதை நிறுத்த வேண்டுமென்று தீர்மானித்தார்கள். ஆனால் ஒத்துழையாமை இயக்கம் குறிப்பான திட்டங்களுடன் அப்போது உருவாக வில்லை. அமிருதஸரஸ் காங்கிரசுக்குப் பிறகு மௌலானா முகம்மது அலியும் இன்னும் சில முஸ்லிம் தலைவர்களும் இங்கிலாந்துக்குத் தூது சென்றார்கள். கிலாபத் சம்பந்தமாகவும் முஸ்லிம் புண்ணிய க்ஷேத்திரங்கள் சம்பந்தமாகவும் லாயிட் ஜார்ஜ் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றித் தர வேண்டுமென்று பிரிட்டிஷ் மந்திரிகளிடம் அவர்கள் மன்றாடினார்கள். அவர்களுயை கோரிக்கை பலிக்கவில்லை. சமாதான ஏற்பாடுகள் இங்கிலாந்தின் கையில் மட்டுமில்லை யென்றும் ஜயித்த கட்சியைச் சேர்ந்த மற்ற தேசங்களின் அபிப்பிராயத்தைப் பொறுத்தே முடிவு செய்யவேண்டுமென்றும் பிரிட்டிஷ் ராஜ தந்திரிகள் கூறினார்கள். லாயிட் ஜார்ஜின் வாக்குறுதிகளை நிறைவேற்றி வைக்கப் போவதில்லை என்பது ஒருவாறு நன்கு தெரிந்துவிட்டது. இதையறிந்த இந்தியாவிலிருந்த முஸ்லிம் தலைவர்கள் 1920மார்ச்சு மாதம் 19ஆம் தேதியைத் துக்க தினமாகப் பாவித்துத் தேசமெங்கும் கூட்டங்கள் நடத்தவேண்டும் என்று தீர்மானித்தார்கள். அந்தத் துக்க தினக் கூட்டங்களில் சர்க்கார் உத்தியோகஸ்தர்கள் கலந்து கொள்ளக் கூடாது என்று இந்திய சர்க்கார் எச்சரிக்கை செய்தார்கள். இப்படி முஸ்லிம்களின் மனது கொதித்துக்கொண்டிருந்த நிலையில் மகாத்மா காந்தி முன் வந்து ஓர் அறிக்கை விடுத்தார். இந்திய முஸ்லிம்களின் கோரிக்கைகளுக்கு இணங்கத் துருக்கி சம்பந்தமான சமாதான உடன்படிக்கை ஏற்படாவிடில் ஒத்துழையாமை இயக்கத்தை ஆரம்பித்து நடத்தத் தாம் சித்தமாயிருப்பதாக அந்த அறிக்கையில் மகாத்மா காந்தி தெரிவித்தார். அந்த நிலையில் இந்திய முஸ்லிம்கள் ஒருமுகமாக மகாத்மாவைத் தங்கள் தலைவராக ஏற்றுக்கொள்ள முன்வந்தார்கள். முஸ்லிம்களுக்கு மகாத்மாவின் அஹிம்சைக் கொள்கையில் நம்பிக்கை இல்லாவிட்டாலும் மகாத்மாவின் சொல்லுக்கிணங்க அஹிம்சையைக் கைக்கொள்ளவும் இசைந்தார்கள். மசூதிகளில் கூடிய மாபெரும் முஸ்லிம் கூட்டங்களில் ‘வந்தே மாதரம்!’ ‘மகாத்மா காந்திக்கு ஜே!’ என்ற கோஷங்கள் அந்த நாளில் எழுந்தன. மகாத்மாவிடம் நன்றி தெரிவித்துக்கொள்வதற்காகப் பல கிலாபத் கூட்டங்களில் பசுவதையை முஸ்லிம்கள் நிறுத்திவிடவேண்டும் என்று தீர்மானங்கள் நிறைவேறின! இதற்கிடையில் பஞ்சாப் கொடுமைகளைப் பற்றி விசார்ப்பதற்குக் காங்கிரஸ் நியமித்திருந்த கமிட்டியின் அறிக்கை மார்ச் 25ஆம் தேதி வெளியாயிற்று. அதில் ஸர் மைக்கேல் ஓட்வியரின் கொடுங்கோல் ஆட்சியில் பஞ்சாப்பில் நடந்த அக்கிரமங்களைப் பற்றித் திட்டமான சாட்சியங்களுடன் விவரங்கள் வெளியாயின. பஞ்சாப் கொடுமைகளைப் பற்றியெல்லாம் முதன் முதலில் அப்போதுதான் தேச மக்கள் திட்டமான விவரங்களை அறிந்தார்கள். மக்களின் உள்ளம் எப்படிக் கொதித்திருக்கும் என்று சொல்லவும் வேண்டுமா? 1919ஆம் வருஷத்தில் ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரையில் நடந்த சம்பவங்களின் ஞாபகார்த்தமாக இந்த வருஷம் 1920 ஏப்ரல் 6ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரையில் தேசீய வாரம் கொண்டாடப்பட்டது. இந்தக் கொண்டாட்டங்களில் நாடெங்கும் ஹிந்துக்களும் முஸ்லிம்களும் சேர்ந்து ஈடுபட்டார்கள். “வந்தே மாதரம்” “அல்லாஹோ அக்பர்” “மகாத்மா காந்திக்கு ஜே!” என்ற மூன்று கோஷங்களும் சேர்ந்து வானளாவ ஒலித்தன. ஹிந்துக்களும் முஸ்லிம்களும் தாங்கள் ஒரு தாயின் வயிற்றில் பிறந்த இரத்த சகோதரர்கள் என்று எண்ணி அந்தக் காலத்தில் நடந்து கொண்டார்கள். அடுத்த மே மாதத்தில் சமாதான உடன்படிக்கை விவரங்கள் வெளியாயின. அந்தச் செய்தியை வெளியிட்ட வைஸ்ராய் லார்ட் செம்ஸ்போர்டு “சமாதான உடன்படிக்கை நிபந்தனைகள் இந்திய முஸ்லிம்களுக்கு மனத்துன்பத்தை உண்டாக்கக்கூடியது இயற்கைதான். ஆயினும் அவர்கள் பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும்!” என்று ஆறுதல் கூறவும் முன்வந்தார். ஆனால் முஸ்லிம்கள் பொறுமையைக் கடைப்பிடிக்கத் தயாராயில்லை. எரிகிற தீயில் எண்ணெய் விட்டதுபோல, அதே மாதத்தில் இன்னொரு சம்பவமும் கூடச் சேர்ந்தது. பஞ்சாப் கொடுமைகளைப்பற்றி விசாரிப்பதற்கு பிரிட்டிஷ் சர்க்கார் லார்ட் ஹண்டரின் தலைமையில் ஒரு கமிட்டியை நியமித்திருந்தார்கள் அல்லவா? அந்தக் கமிட்டியின் அறிக்கையும் வெளியாயிற்று. எதிர் பார்த்தது போலவே ஹண்டர் கமிட்டி அறிக்கை பஞ்சாப் கொடுமைகளைப் பற்றிப் பூசி மெழுகிவிட முயற்சி செய்தது. சில அதிகாரிகள் அவசியத்தைக் காட்டிலும் அதிகாரத்தைக் கொஞ்சம் அதிகமாக உபயோகித்து விட்டார்கள் என்று மட்டும் சொல்லி, வருங்காலத்துக்கு இராணுவச் சட்ட அமுல் நடத்தும் விதிகளை மாற்றி அமைக்க வேண்டும் என்று ஹண்டர் கமிட்டி சிபார்சு செய்தது. கொடுமை செய்த அதிகாரிகளில் ஜெனரல் டையர் மட்டும் வேலையிலிருந்து அனுப்பப்பட்டார். ஆனால் அவரைப் பற்றியும் மாண்டேகு “டையர் தாம் கடமை என்று கருதியதையே செய்தார்!” என்று முதுகிலே தட்டிக் கொடுத்தார். பஞ்சாபிலிருந்த ஐரோப்பியர்களோ தங்கத்தினாலே ஒரு பட்டாக் கத்தி செய்து ஜெனரல் டையருக்குப் பரிசு வழங்கினார்கள். இந்த நிலைமையில் மகாத்மா காந்தியின் ஒத்துழையாமை இயக்கம் உருவாகிக்கொண்டு வந்தது. அந்தத் திட்டத்தின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு: 1. பிரிட்டிஷ் சர்க்கார் கொடுத்த ராவ் பகதூர், ஸர் முதலிய பட்டங்களை விட்டுவிட வேண்டும். 2. சர்க்கார் சட்டப்படி அமைத்துள்ள சட்டசபைகளைப் பகிஷ்கரிக்க வேண்டும். 3. சர்க்கார் பள்ளிக்கூடங்களிலும் கலாசாலைகளிலும் படிக்கும் மாணவர்கள் அந்தக் கல்வி ஸ்தாபனங்களை விட்டு வெளியேறவேண்டும். 4. சர்க்கார் கோர்ட்டுகளைப் பொதுமக்களும் வக்கீல்களும் பகிஷ்கரித்து விடவேண்டும். 5. அரசாங்க உத்தியோகஸ்தர்கள் தங்கள் உத்தியோகங்களை விட்டு வெளியேறவேண்டும். 6. பொது ஜனங்கள் சர்க்காருக்கு எந்தவிதமான வரியும் கொடாமல் நிறுத்திவிடவேண்டும். மேற்கூறிய திட்டங்களில் முதல் நான்கு படிகளை உடனே அனுசரிக்கவேண்டும். ஐந்தாவது ஆறாவது படிகளைக் கடைசியாக அமுலுக்குக் கொண்டு வரவேண்டும். மேற்கூறிய எல்லாத் திட்டங்களுக்கும் அடிப்படையாக இருக்கவேண்டியவை சத்தியமும் அஹிம்சையும். மே மாதக் கடைசியில் பம்பாயில் கிலாபத் கமிட்டி கூடி மகாத்மாவின் ஒத்துழையாமை இயக்கத்தைப் பரிபூரணமாக ஏற்றுக்கொண்டது. மே மாதம் 30ஆம் தேதி காசியில் கூடிய அகில இந்தியக் கமிட்டி கூட்டத்தில் அவ்வளவு ஒரு முகமான அபிப்பிராயம் வெளியாகவில்லை. ஏனெனில், சில காங்கிரஸ் தலைவர்கள் கிலாபத் இயக்கத்தைச் சுயராஜ்ய இயக்கத்தோடு சேர்க்க விரும்பவில்லை. காந்தி மகாத்மாவின் ஒத்துழையாமைத் திட்டத்தில் சில அம்சங்களையும் அவர்கள் ஒப்புக்கொள்ளத் தயாராயில்லை. எனவே, நீண்ட விவாதத்திற்குப் பிறகு, ஒத்துழையாமை இயக்கத்தைப்பற்றி தீர்மானிப்பதற்காக செப்டம்பர் மாதத்தில் கல்கத்தாவில் விசே ஷ காங்கிரஸ் கூட்டுவது என்று முடிவு செய்யப்பட்டது. ஆனால் விசே ஷ காங்கிரஸ் கூடும் வரையில் காத்திருப்பதற்குத் தேச மக்கள் தயாராயில்லை. முக்கியமாக, முஸ்லிம்கள் உடனே இயக்கத்தை ஆரம்பித்துவிட விரும்பினார்கள். இந்த நிலைமையை அறிந்த மகாத்மா அலகாபாத்தில் ஜூன் மாதம் 2ஆம் தேதி எல்லாக் கட்சித் தலைவர்களும் அடங்கிய மகாநாடு ஒன்றைக் கூட்டினார். இந்த மகாநாட்டில் ஒத்துழையாமை இயக்கம் ஒப்புக்கொள்ளப்பட்டது விசே ஷ காங்கிரஸ் கூடும் வரையில் காத்திராமல் ஒத்துழையாமை இயக்கத்தை ஆரம்பித்து விட வேண்டும் என்று மகாத்மா காந்தியும் அவருடைய ஹிந்து முஸ்லிம் சகாக்களும் தீர்மானித்தார்கள். ஆகஸ்டு 1ஆம் தேதி இயக்கத்தை ஆரம்பிப்பது என்று நாளும் குறிப்பிட்டார்கள். சட்டசபை பகிஷ்காரம் பாரத தேசத்தின் சுதந்திரத்துக்காகப் போராடிய இரண்டு மாபெரும் தலைவர்களைச் சொல்லும்படி கேட்டால், (1) லோகமான்ய திலகர் (2) மகாத்மா காந்தி என்னும் இரு பெயர்களைத்தான் யாரும் சொல்லுவார்கள். 1920ஆம் வருஷத்துக்கு முன்னால் லோகமான்ய பால கங்காதர திலகர் இந்தியப் பொது மக்களின் இதய சிம்மாசனத்தில் முடிசூடா மன்னராக வீற்றிருந்தார். இந்திய சுதந்திரப் படையின் பிரதம சேனாதிபதியாகவும் ஸ்ரீ திலகர் விளங்கினார். “சுதந்திரம் நமது பிறப்புரிமை” என்னும் மந்திரத்தை அவர் மக்களுக்கு அளித்தார். பிரிட்டிஷ் சர்க்காரிடம் மக்கள் கொண்டிருந்த அச்சத்தை அவர் போக்கினார். தேச சுதந்திரத்துக்காக எத்தகைய தியாகமும் செய்யத் தயாராக இருக்கவேண்டும் என்று தம்முடைய சொந்த வாழ்க்கை உதாரணத்தினால் மக்களுக்குப் போதித்தார். காந்தி மகாத்மாவின் ஒத்துழையாமைத் திட்டத்தைப் பழைய தேசீயத் தலைவர்கள் பலர் ஒப்புக்கொள்ளவில்லையென்று சொன்னோம் அல்லவா? அப்படி ஒப்புக் கொள்ளாதவர்களில் திலகரும் ஒருவர். மகாத்மாவுடன் திலகர் மாறுபட்டதற்குச் சில முக்கிய காரணங்கள் இருந்தன. (1) இந்திய முஸ்லிம்களின் கிலாபத் கிளர்ச்சியுடன் சுயராஜ்ய இயக்கத்தைப் பிணைப்பதைத் திலகர் விரும்பவில்லை. (2) அமிருதஸரஸ் காங்கிரஸ் தீர்மானத்தின்படி புதிய சீர்திருத்தச் சட்டசபைகளைக் கைப் பற்றி அவற்றின் மூலம் சுதந்திரத்துக்கு மேலும் போராட வேண்டும் என்று திலகர் கருதினார். சட்டசபைகளைப் பகிஷ்கரிக்கும் யோசனையைத் திலகர் விரும்பவில்லை. (3) சுதந்திரப் போரைத் தனித்த அரசியல் போராகவே நடத்தவேண்டும் என்று திலகர் கருதினார். பிரிட்டிஷ் ஆட்சி தந்திரத்தினாலும் சூழ்ச்சியினாலும் ஸ்தாபிக்கப்பட்டதாகையால் அந்த ஆட்சியை ஒழிப்பதற்கு இராஜ தந்திரத்தையும் அரசியல் சூழ்ச்சியையும் கையாளவேண்டும் என்றும் கருதினார். காந்தி மகாத்மா அரசியல் போரில் அஹிம்சா தர்மத்தையும் சத்தியத்தையும் வற்புறுத்தியதைத் திலகர் விரும்பவில்லை. லோகமான்யரும் அவரைப்போல இன்னும் பல பழந்தலைவர்களும் இவ்வாறெல்லாம் அபிப்பிராய பேதம் கொண்டிருந்தது இயற்கைதான். கிலாபத் விஷயமாக அவர்கள் கொண்டிருந்த பயம் பின்னால் உண்மையாயிற்று. துருக்கியில் முஸ்தபா கமால் பாட்சா என்பவர் தோன்றி துருக்கி சுல்தான் பதவியையும் கிலாபத் பீடத்தையும் ஒழித்துவிட்டுத் துருக்கியில் குடியரசை ஸ்தாபித்தார். ஆகவே கிலாபத் கிளர்ச்சியின் அடிப் படையே போய்விட்டது. கிலாபத் கிளர்ச்சியில் முன்னணியில் நின்ற முஸ்லிம் தலைவர்கள் உற்சாகத்தை இழந்து தேசீய இயக்கத்திலிருந்து விலகிக்கொண்டார்கள். பலர் காங்கிரஸுக் கும் தேசத்தின் சுதந்திரத்துக்கும் விரோதிகள் ஆனார்கள். “வந்தேமாதரம்” என்று மசூதியில் கோஷம் இட்ட முஸ்லிம் தலைவர்கள் பின்னால் அந்தக் கீதத்தைச் சட்ட சபைகளிலே பாடக்கூடாது என்று ஆட்சேபிக்கவும் தொடங்கினார்கள். ஆகவே திலகர் பெருமான் காந்திஜி ஆரம்பித்த இயக்கத்தைப்பற்றித் தயக்கம் காட்டியதற்குக் காரணம் இல்லையென்று சொல்லமுடியாது. ஆனாலும் தேசீய இயக்கத்துக்குக் காந்திஜி கொண்டு வந்திருந்த புதிய சக்தியைத் திலகர் சரியாக மதிப்பிட்டார். தேசத்தில் ஏற்பட்டிருந்த உணர்ச்சி வேகத்தையும் அறிந் திருந்தார். ஆகையால் காந்திஜியின் இயக்கத்துக்கு அவர் குறுக்கே நிற்கவோ, எதிர்த்துத் தடை செய்யவோ சிறிதும் விரும்பவில்லை. கல்கத்தா விசே ஷ காங்கிரஸில் என்ன விதமாய்த் தீர்மானம் ஆகிறதோ, அதைத் தம் முழு மனதுடன் ஒப்புக்கொள்வதாக லோகமான்ய திலகர் பகிரங்கமாகத் தெரியப்படுத்தினார். ஆனால் அம்மாதிரி காந்தியும் திலகரும் சேர்ந்து போர் நடத்துவதற்குப் பாரத தேசம் கொடுத்துவைக்கவில்லை. கல்கத்தா விசே ஷ காங்கிரஸ் வரையில் திலகர் உயிரோடிருக்க வில்லை. 1920ஆம் வருஷம் ஆகஸ்டு மாதம் முதல் தேதி காந்திமகான் பம்பாயில் ஒத்துழையாமை இயக்கத்தை ஆரம்பித்து விட்டுத் தேசத்தில் சுற்றுப்பிரயாணம் செய்வதற்குத் திட்டம் போட்டிருந்தார் அல்லவா? அதற்கு முதல் நாள், ஜூலை மாதம் 31ஆம் தேதி நள்ளிரவில் லோகமான்ய பாலகங்காதர திலகர் இந்தப் பூத உடலை நீத்து அமர வாழ்வு எய்தினார். பாரத தேசத்துக்கும் பாரத தேச மக்களுக்கும் இந்தச் சம்பவம் ஒரு சூசகம்போல் அமைந்தது. இந்திய சுதந்திரப் போரின் சரித்திரத்திலேயே ஒரு சகாப்தம் முடிந்து மற்றொரு சகாப்தம் ஆரம்பமாகிவிட்டது என்பதற்கு லோகமான்ய திலகருடைய மரணம் அறிகுறியாயிற்று. காந்திமகாத்மா தேசீயப் போருக்குத் தலைமை வகித்து அவருடைய புதிய வழியில் போரை நடத்தும்படி விட்டுவிட்டு லோகமான்ய திலகர் விடை பெற்று வீர சொர்க்கம் சென்றது போலவே யிருந்தது. 1920ஆம் வருஷம் ஆகஸ்டு மாதம் முதல் தேதி பம்பாயில் லட்சக்கணக்கான ஜனங்கள் கூடித் திலகருடைய பிரேத ஊர்வலத்துடன் சென்று தகனக்கிரியை நடத்திவிட்டுத் திரும்பினார்கள். அன்று மாலையே காந்திமகான் குறிப்பிட்ட தேதி தவறாமல் ஒத்துழையாமை இயக்கத்தையும் ஆரம்பித்து வைத்தார். பட்டதாரிகள் பட்டங்களை விடவேண்டும் என்றும், சட்டசபைகளுக்கு தேசீயவாதிகள் நிற்கக்கூடாதென்றும், வோட்டர்கள் வோட்டுக் கொடுக்கக் கூடாதென்றும், வக்கீல்கள் தங்கள் தொழிலை விடவேண்டும் என்றும், மாணவர்கள் சர்க்கார் கலாசாலைகள் பள்ளிக்கூடங்களைப் பகிஷ்கரிக்க வேண்டும் என்றும் பகிரங்கமாகக் கேட்டுக்கொண்டார். இந்தத் திட்டத்துக்கிணங்க ஆங்காங்கு சில பிரபல வக்கீல்கள் தங்கள் வக்கீல் தொழிலை விட்டார்கள். குஜராத்தில் ஸ்ரீயுத வல்லபாய் படேலும், பீஹாரில் பாபு ராஜேந்திர பிரஸாத்தும், சென்னையில் ஸ்ரீ சக்கரவர்த்தி இராஜகோபாலாச்சாரியாரும் பெரும் வருமானம் அளித்து வந்த வக்கீல் தொழிலை விட்டொழித்தார்கள். இவர்களைப் பின்பற்றிச் சிற்சில வாலிப வக்கீல்களும் தொழிலை விட்டுத் தேசப்பணியில் இறங்கினார்கள். ஆனால் தேசத்தின் பெரும்பாலான தேசீய வாதிகள் கல்கத்தா விசே ஷ காங்கிரஸில் என்ன தீர்மானம் ஆகப் போகிறது என்பதை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஆகஸ்டு மாதத்தில் காந்தி மகானும் அலி சகோதரர்களும் தேசத்தில் சுற்றுப்பிரயாணம் செய்தார்கள். அவர்கள் சென்ற இடங்களில் எல்லாம் பதினாயிரக் கணக்கில் ஜனங்கள் கூடி ஆர்ப்பரித்தார்கள். தலைவர்களுடைய மனப்போக்கு எப்படி யிருந்தாலும் தேச மக்கள் காந்திஜியின் தலைமையையும் அவருடைய ஒத்துழையாமைத் திட்டத்தையும் வரவேற்கிறார்கள் என்பது நாளுக்கு நாள் நன்கு புலப்பட்டு வந்தது. இந்த நிலைமையில் கல்கத்தா விசே ஷ காங்கிரஸ் செப்டம்பர் 4ஆம் தேதி கூடி 9ஆம் தேதி வரையில் நடைபெற்றது. இந்த விசே ஷ காங்கிரஸுக்கு லாலா லஜபதிராய் தலைமை வகித்தார். இந்தியாவுக்குள் பிரவேசிக்கக் கூடாது என்று பிரிட்டிஷ் சர்க்காரால் உத்திரவிடப் பட்டுப் பல வருஷகாலம் அமெரிக்காவில் வசித்தவர் லஜபதிராய். அந்த வருஷத்திலேதான் மேற்படி தடை உத்தரவு நீங்கி லஜபதிராய் இந்தியாவுக்குத் திரும்பி யிருந்தார். திலகருக்கு அடுத்தபடியாக அவர் தேச மக்களின் இதயத்தில் நீண்ட காலமாக இடம் பெற்றிருந்தார். அப்படிப் பட்டவர் விசே ஷ காங்கிரஸில் தலைமை வகித்துச் செய்த பிரசங்கத்தில் காந்திஜியின் ஒத்துழையாமைத் திட்டத்தை ஆதரிக்கவில்லை. அதற்கு எதிரான காரணங்களை விஸ்தரித்திருந்தார். வரவேற்புக் கமிட்டித் தலைவரான ஸ்ரீ பி. சக்கரவர்த்தியும் அப்படித்தான். இன்னும் அந்தக் காங்கிரஸுக்கு வந்திருந்த பிரபல தலைவர்கள் பலர் அத்திட்டத்துக்கு விரோதமாகவே இருந்தார்கள். திலகருடைய சீடர்களான ஸ்ரீ கேல்கர், கபார்தே, அப்யங்கர், ஆனே முதலியோரும், வங்காளத் தலைவர்களான ஸ்ரீ விபின சந்திரபால், ஸ்ரீ சித்தரஞ்சனதாஸ் ஆகியவர்களும், ஐக்கிய மாகாணத்திலிருந்து வந்திருந்த பண்டித மாளவியா, பண்டித மோதிலால் நேரு ஆகியவர்களும், சென்னையைச் சேர்ந்த ஸ்ரீ சி. விஜயராகவாச்சாரியார், ஸ்ரீ ஏ. ரங்கசாமி ஐயங்கார், ஸ்ரீ எஸ். சத்தியமூர்த்தி ஆகியவர்களும் மூவகைப் பகிஷ்காரத் திட்டத்தைப் பலமாக எதிர்த்தார்கள். சென்னையில் ஸ்ரீ எஸ். சீனிவாசய்யங்கார் அந்த வருஷத்திலே தான் அட்வகேட் ஜெனரல் பதவியை உதறி எறிந்து விட்டு அரசியல் வாழ்க்கையை மேற்கொண்டிருந்தார். அவருடைய தலைமையில் திருநெல்வேலியில் மாகாண மகாநாடு மிகச் சிறப்பாக அவ்வருஷம் நடைபெற்றது. மகாத்மா காந்தியின் ஒத்துழையாமை இயக்கம் ‘சட்ட வரம்புக்குப் புறம்பானது’ (Unconstitutional) என்ற அபிப்பிராயத்தை ஸ்ரீ எஸ். சீனிவாச அய்யங்கார் தெரிவித்திருந்தார். இத்தகைய எதிர்ப்புகளைப் பார்த்தவர்கள் கல்கத்தா விசேஷ காங்கிரஸ் மகாத்மாவின் திட்டத்தை நிராகரித்து விடும் என்றேகருதினார்கள். எதிர்த்தவர்களில் காந்தி மகாத்மாவின் கட்சிக்குத் திரும்பிய முதல் பிரமுகர் பண்டித மோதிலால் நேரு. அப்போதுதான் அவருடைய அருமைப் புதல்வர் பண்டித ஜவாஹர்லால் நேரு தேசீய வாழ்க்கையில் பிரவேசித்திருந்தார். பஞ்சாப் கொடுமைகளைப் பற்றிய விசாரணையில் ஜவாஹர்லால்ஜி உதவி செய்த போது அங்கு நடந்த கொடுமைகளைப் பற்றித் தெரிந்து கொண்டிருந்தார். அவருடைய உள்ளம் ஆத்திரத்தினால் பொங்கிக் கொண்டிருந்தது. காந்திஜியின் தலைமையிலே தான் பாரத நாடு விடுதலை யடையக்கூடும் என்ற நம்பிக்கையும் அவருக்கு ஏற்பட்டிருந்தது. ஜவாஹர்லால்ஜியின் தீவிரமும் நம்பிக்கையும் பண்டித மோதிலால் நேருவின் மனம் மாறுவதற்குக் காரணமாயிருந்தன. கலாசாலை பகிஷ்காரம், கோர்ட் பகிஷ்காரம் ஆகிய இரு திட்டங்களையும் ‘கொஞ்சம் கொஞ்சமாக’ நடத்தவேண்டும் என்ற திருத்தத்தை மகாத்மா ஒப்புக் கொண்டதின் பேரில் பண்டித மோதிலால் ஒத்துழையாமைத் திட்டத்தை ஆதரிக்க முன்வந்தார். வோட்டு எடுத்தபோது மகாத்மாவின் திட்டத்துக்குச் சாதகமாக 1856 வோட்டுக்களும் எதிராக 844 வோட்டுக்களும் பதிவாயின. ஆகவே மகாத்மாவின் ஒத்துழையாமைத் திட்டம் நிறை வேறியது. இது பழைய காங்கிரஸ் தலைவர்களுக்கெல்லாம் வியப்பையும் திகைப்பையும் அளித்தது. “இவர் யார், இந்த காந்தி? இவ்வளவு சக்தியுடனும் அதிகாரத்துடனும் இவர் பேசுவதின் இரகசியம் என்ன? தீர்க்காலோசனையுடனும் அநுபவ ஞானத்துடனும் நாம் சொல்லும் யோசனையைப் புறக்கணித்து இவருடைய பேச்சை மக்கள் கேட்பதின் காரணம் என்ன? இதே காந்தி அமிருதஸரஸில் ‘புதிய சீர்திருத்தங்களை நிராகரிக்கக் கூடாது’ என்று சொன்னார். ஜனங்கள் ஒப்புக்கொண்டார்கள். இவரே இப்போது ‘புதிய சட்ட சபைகளைப் பகிஷ்கரிக்க வேண்டும்’ என்கிறார். இவ்விதம் இந்தக் காந்தி முன்னுக்குப் பின் முரணாகச் சொல்வதைக் கூடக் கவனியாமல் இவரை மக்கள் ஆதரிக்கும் அதிசயந்தான் என்ன?” இவ்வாறு பழைய தேசத் தலைவர்கள் சிந்தனை செய்தார்கள். ஆனால் பொது மக்களுக்கு இத்தகைய சிந்தனை ஒன்றும் இல்லை. “பாரத நாட்டை விடுதலை செய்யவும் பாரத மக்களை மேலே உயர்த்தவும் இதோ ஒரு அவதார புருஷர் தோன்றி விட்டார்” என்று மக்கள் திடமாக நம்பினார்கள். ஆகையால் கல்கத்தா காங்கிரஸ் தீர்மானம் நாடெங்கும் அளவில்லாத உற்சாகத்தை உண்டாக்கியது. கல்கத்தா காங்கிரஸில் தீர்மானம் நிறைவேறி விட்டது. ஆனால் அதைக் காரியத்தில் நடத்தி வைக்க வேண்டிய பொறுப்பு காந்திஜிக்கு ஏற்பட்டது. அது வரையில் தேசீயப் போரின் முன்னணியில் நின்ற காங்கிரஸ் தலைவர்கள் பெரும்பாலும் உற்சாகக் குறைவு அடைந்திருந்தார்கள். சட்டசபை பகிஷ்காரத் திட்டம் அவர்களுக்குப் பிடிக்கவில்லை. ஆனால் காங்கிரல் தீர்மானத்துக்கு விரோதமாகப் போகவும் அவர்கள் விரும்பவில்லை. ஆகையால் சட்டசபைத் தேர்தலுக்கு நிற்கப் போவதாக அறிவித்திருந்த தேசீயவாதிகள் பலர் தாங்கள் நிற்கப் போவதில்லை என்று அறிவித்து விட்டுச் சும்மா இருந்தார்கள். ஆனால் மிதவாதிகள் என்று சொல்லப் பட்டவர்களும் மற்றும் காங்கிரஸுக்கு எப்போதும் எதிராயிருந்தவர்களும் பட்டம் பதவிகளுக்கு ஆசைப்பட்டவர்களும், வகுப்புவாதிகளும் சட்டசபைத் தேரதலுக்கு நின்றார்கள். சென்னை மாகாணத்தில் அப்போதுதான் சர்க்கார் உத்தியோகங்களையும் பதவிகளையும் கைப்பற்றுவதையே முக்கிய நோக்கமாகக் கொண்டு ஜஸ்டிஸ் கட்சி ஏற்பட்டிருந்தது. இந்தக் கட்சியார் சட்டசபைத் தேர்தலில் மும்முரமாக ஈடுபட்டார்கள். ஆகவே நாட்டில் ஓரிடத்திலாவது எந்த சட்டசபை ஸ்தானத்துக்கும் அபேட்சகர் முன் வராமற் போகவில்லை. இந்த நிலைமை ஒருவாறு எதிர்பார்க்கப்பட்டது தான். அதனாலேயே ஸ்ரீ சி.ஆர். தாஸ் முதலியவர்கள் சட்டசபை பகிஷ்காரத்தை எதிர்த்தார்கள். ஆனால் காந்தி மகாத்மா மேற்படி நிலைமை குறித்துச் சிறிதும் கவலைப்படவில்லை. “காங்கிரஸ் திட்டம் நிறைவேறுவது லட்சக் கணக்கான வோட்டர்களைப் பொறுத்ததே தவிர, ஒரு சில பதவி வேட்டைக் காரர்களைப் பொறுத்ததல்ல” என்று மகாத்மா கருதினார். ஆகையால் நாடெங்கும் பிரசாரம் செய்து புதிய சட்டசபைத் தேர்தல்களில் வோட்டர்கள் வோட்டுக்கொடுக்காமல் செய்து விடவேண்டும் என்று சொன்னார். அதற்கு முயற்சியும் ஆரம்பித்தார். காந்திஜியின் ஆத்மசக்தி முறையில் நம்பிக்கை கொண்டு புதிதாக அரசியல் துறையில் இறங்கியிருந்த அவருடைய சீடர்கள் நாடெங்கும் அந்த முயற்சியை நடத்திவைத்தார்கள். பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் முதல் முதலாக அப்போதுதான் (மாண்டேகு செம்ஸ்போர்டு திட்டத்தின்படி) ஏராளமான இந்திய மக்கள் வோட்டுரிமையைப் பெற்றிருந்தனர். பத்து ரூபாய் நிலவரி செலுத்துவோருக்கெல்லாம் மாகாண சட்ட சபைக்கு வோட்டுரிமையும் ஐம்பது ரூபாய்க்கு மேல் நிலவரி செலுத்துவோருகேல்லாம் இந்திய சட்டசபைக்கு வோட்டுரிமையும் கிடைத்திருந்தது. நகரங்களிலும் பட்டணங்களிலும் வீட்டு வரி செலுத்துவோருக் கெல்லாம் வோட்டுரிமை கிடைத்திருந்தது. இதைத் தவிர எழுதப் படிக்கத் தெரிந்த ( அதாவது கையெழுத்துப் போடத்தெரிந்த ) எல்லாருக்கும் வோட்டுரிமை தரப்பட்டிருந்தது. ஆகவே ஒவ்வொரு தொகுதியிலும் ஆயிரக்கணக்கான வோட்டர்கள் இருந்தார்கள். நீண்டகால அரசியல் போராட்டத்தின் பயனாக ஜனங்கள் முதன் முதலாக அடைந்திருந்த இந்த வோட்டுரிமையை “உபயோகிக்க வேண்டாம்” என்று இப்போது பிரசாரம் செய்ய வேண்டியதாயிற்று. “போலிங் ஸ்டே ஷனுக்கு போக வேண்டாம்; வோட்டு கொடுக்க வேண்டாம்!” என்று சொல்ல வேண்டியதாயிற்று. இந்த சங்கடமான காரியத்தை இந்திய தேசமெங்கும் காந்தி மகானின் சீடர்கள் மேற்கொண்டு நடத்தினார்கள். மகாத்மாவின் போர் முறையில் பிரதிக்ஞை செய்துகொள்வது ஒரு முக்கியமான அம்சம். எந்த நல்ல காரியமானாலும் அதைப்பற்றி வெறுமனே பேசுவதைக் காட்டிலும் பிரதிக்ஞை செய்து கொள்வது அதிக பலன் அளிக்கும் என்று காந்திஜி கருதினார். ‘கூட்டத்தில் கோவிந்தா’ என்று பிரதிக்ஞை செய்வதைக் காட்டிலும் காகிதத்தில் எழுதிக் கையெழுத்துப் போடுவதில் இன்னும் அதிக பலந் உண்டு என்று நம்பினார். தென்னாப்ரிக்காவில் பல போராட்டங்களில் பூர்வாங்கமாக மகாத்மா இந்தியர்களிடம் கையெழுத்துக்கள் வங்கியதைப் பார்த்திருக்கிறோமல்லவா? அது போலவே இப்பொழுது இந்தியாவிலும் “சட்டசபைத் தேர்தல்களில் வோட்டுப் போடுவதில்லை” என்ற பிரதிக்ஞா பத்திரங்கள் ஏராளமாக அச்சிடப்பட்டன. அவற்றில் வோட்டர்களின் கையெழுத்து வாங்கப்பட்டது. காந்திஜியின் திட்டத்தில் நம்பிக்கை கொண்ட தலைவர்களும் தொண்டர்களும் கிராமம் கிராமமாகப் போய் வோட்டார்கள் யார் என்று கண்டுபிடித்துக் கையெழுத்து வாங்கினார்கள். அந்தச் சமயத்தில் காந்திஜியைப் பற்றியும் அவருடைய வாழ்கைபோர்முறைஒத்துழையாமைத் திட்டம் ஆகியவை பற்றியும் ஜனங்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டியதாயிருந்தது. செப்டம்பர், அக்டோபர் இந்த இரண்டு மாதத்தில் மேற்கூறிய முயற்சி நடைபெற்றது. இந்த இரண்டு மாதத்திலும் இந்தியாவின் கிராமங்களில் தேசீயப் பிரசாரம் நடந்தது போல் அதற்கு முன்னால் எப்போதும் நடந்தது கிடையாது. நவம்பர் மாதத்தில் இந்தியா சட்ட சபைகளுக்கும் தேர்தல்கள் நடந்தன. சட்டசபை பகிஷ்காரப் பிரசாரம் வோட்டர்களிடம் மகத்தான பலனை அளித்திருப்பது நன்றாகத் தெரிய வந்தது. ஆயிரமாயிரம் வோட்டுப் பெட்டிகள் காலியாக திரும்பின. இன்னும் பல வோட்டுப் பெட்டிகளில் கால்வாசிகூட நிரம்பவில்லை. தேசமெங்கும் கணக்குப் பார்த்தபோது 1௦௦க்கு 15 வீதம் தான் வோட்டர்கள் வோட்டுக் கொடுத்திருந்தார்கள் என்று தெரிய வந்தது. காந்தி மகாத்மாவின் திட்டம் யாரும் எதிர்பார்த்ததைக் காட்டிலும் மகத்தான வெற்றி அடைந்ததாகவே கருதப்பட்டது. இதை இந்திய சர்க்கார் வெளியிடும் வருஷாந்தர நிர்வாக அறிக்கையிலும் குறிப்பிட்டிருந்தார்கள். “காந்திஜியின் ஒத்துழியாமைத் திட்டம் சட்டசபை பகிஷ்காரத்தில் நல்ல செல்வாக்கைப் பெற்றது. காங்கிரஸ் சட்டசபை பகிஷ்காரம் செய்ததின் காரணமாக மிதவாதிகளுக்கு அரசியல் நிர்வாகத்தில் ஈடுபட ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது” என்றும் சொல்லியிருந்தார்கள். ஆனால் அப்படிச் சட்டசபைக்கு சென்ற மிதவாதிகள் முதலியோர் பொதுஜன ஆதரவைப் பெற்றிருக்கவில்லை என்பதை எல்லோரும் ஒப்புக் கொண்டார்கள். மகாத்மா காந்திஜி இந்தியப் பொதுமக்களின் இதயத்தில் “காந்தி மகாராஜா” ஆகிவிட்டார் என்று தெரிந்தது. தலைமைக் கிரீடம் “அந்த நாட்களில் வாழ்ந்திருப்பதற்கே பாக்கியம் செய்திருக்கவேணும்!” என்று சொல்லும்படியாக ஒவ்வொரு நாட்டின் சரித்திரத்திலும் ஒரு காலம் வருவதுண்டு. பாரத நாட்டின் சரித்திரத்திலும் 1921ஆம் வருஷம் அத்தகைய வருஷம். அந்த வருஷத்தில் காந்தி மகானின் தலைமையில் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் தியாகமாகிய வேள்வித் தீயில் குதித்தார்கள். சுயநலம் என்பதை அடியோடு மறந்து, “தாய்நாட்டிற்கே உழைக்கஜன்மம் எடுத்தோம்” என்று பாடிக்கொண்டு சுதந்திரப்போரில் ஈடுபட்டார்கள். இதற்கெல்லாம் காரணமாயிருந்தது நாகபுரி காங்கிரஸ். மகாத்மாவின் ஒத்துழையாமை இயக்கம் சம்பந்தமாகத் தலைவர்களுக்குள் ஏற்பட்டிருந்த வேற்றுமைகள் நாகபுரி காங்கிரஸில் மறைந்து விட்டன. வோட்டு எடுக்காமல் ஏக மனதாகத் தீர்மானங்கள் நிறைவேறின. இந்த அதிசயம் எப்படி நடந்தது என்று பார்க்கலாம். * * * சட்ட சபை பகிஷ்காரம் வெற்றியடைந்தது என்பதாக மகாத்மா காந்தியும் அவருடைய சீடர்களும் கருதினார்கள். ஆனால் கல்கத்தா விசேஷ காங்கிரஸில் ஒத்துழையாமைத் திட்டத்தை எதிர்த்த தலைவர்கள் அவ்விதம் கருதவில்லை. “சட்ட சபை ஸ்தானம் ஒன்றுகூடக் காலியாக இல்லையே? தேசியவாதிகள் கைப்பற்றி யிருக்ககூடிய ஸ்தானங்களில் அதிகார வர்க்க தாஸர்கள் வீற்றிருக்கிறார்களே? வோட்டு எத்தனை பேர் கொடுத்தால் என்ன? காரியம் நடந்து கொண்டு தான் இருக்கிறது? அதிகார வர்க்கத்துக்கஇன்னும் சௌகிரியமாகத்தானே போயிற்று?” என்று அவர்கள் வாதமிட்டார்கள். வக்கீல்கள் வேலையே விடுவது, மாணாக்கர்கள் கலாசாலைகளை விடுவது, ஆகிய திட்டங்களையும் காரியாம்சத்தில் நிறைவேற்ற முடியாது என்று நினைத்தார்கள். ஆகையால் 1920ஆம் வருஷம் டிசம்பர் மாதக் கடைசியில் நாகபுரி காங்கிரஸில் மகாத்மாவின் திட்டத்தை மாற்றி விடுவதற்காகப் பலம் திரட்டத் தொடங்கினார்கள். காந்திஜியின் சீடர்களும் சும்மா இருக்கவில்லை. அவர்களும் நாகபுரி காங்கிரஸில் பலப் பரிட்சைக்கு ஆயத்தமானார்கள். ஆகவே நாகபுரி காங்கிரஸ் மிகவும் முக்கியத்தை அடைந்தது. அதற்கு முன்னாலும் பின்னாலும் நடந்த வேறு எந்த காங்கிரஸுக்கும் அவ்வளவு பிரதிநிதிகள் வந்ததில்லை. மொத்தம் 14,582 பிரதிநிதிகள் வந்திருந்தார்கள். ஸ்ரீ சித்தரஞ்சனதாஸ் தம்முடைய சொந்த பணத்தில் முப்பதாயிரம் ருபாய் செலவு செய்து இருநூற்று ஐம்பது பிரதிநிதிகளை அழைத்து வந்தார். (இதில் மூடு மந்திரம் ஒன்றும் இல்லை. சித்தரஞ்சனதாஸ் பகிரங்கமாக கூறிய விஷயந்தான். ) இப்படியே பிரபல தலைவர்கள் தங்கள் கட்சிக்கு ஆதரவாகப் பிரதிநிதிகளைத் திரட்டிக் கொண்டு வந்தார்கள். பழம் பெரும் தேசபக்தரான சேலம் ஸ்ரீ சி. விஜயராகவாச்சாரியார் நாகபுரி காங்கிரஸுக்குத் தலைமை வகித்தார். அவர் தமது தலைமை உரையில் ஒத்துழையாமைத் திட்டத்தை எதிர்த்தே பேசினார். “அப்படி ஒத்துழையாமை இயக்கம் தொடங்குவது என்று ஏற்பட்டால், பஞ்சாப்கிலாபத் அநீதிகளுக்காக மட்டும் அதைத் தொடங்குவனேன்! சுயராஜ்ய சித்திக்காகவே அந்த இயக்கத்தை நடத்தலாமே?” என்றார். தம்மை எதிர்பவர்களுடைய பேச்சை மகாத்மா எப்போதும் கவனமாகக் காதுகொடுத்துக் கேட்பது வழக்கம். ஏதேனும் ஒன்று நியாமாகத் தோன்றினால் அதை ஒப்புக்கொள்ளத் தவறுவதுமில்லை. பஞ்சாப் கிலாபத் அக்கிரமங்களுக்குப் பரிகாரம் தேடவே ஒத்துழையாமை ஆரம்பிப்பதாகக் காந்திஜி சொன்னதின் காரணம் என்ன தெரியுமா? அந்த இரண்டு அநீதிகளுக்கும் பரிகாரம் பெறுவதில் வெற்றி பெற்றோமானால், அந்தப் போரில் நமக்கு ஏற்படும் பலமே சுயராஜ்யம் அளித்துவிடும் தான். ஆனால், ஸ்ரீ சி. விஜயராகவாச்சாரியாரின் யோசனையை ஏற்று கொள்வதில் ஆட்சேபம் ஒன்றும் இருக்கவில்லை. எனவே, சுயராஜ்ய சித்தியையும் ஒத்துழையாமையின் மூன்றாவது நோக்கமாக கொள்வதாக மகாத்மா ஒப்புக்கொண்டார். ஸ்ரீ சித்தரஞ்சனதாஸ் முதலிய தலைவர்கள் ஒத்துழையாமை இயக்கத்தையே எதிர்ப்பது என்று கங்கணம் கட்டிக் கொண்டு வந்தார்கள் அல்லவா? ஆனால் நாகபுரி காங்கிரஸ் விடுதிக்கு வந்து சேர்ந்ததும் அவர்களுக்குத் தயக்கம் உண்டாகி விட்டது. காந்திஜியை எதிர்ப்பது வீண்வேலை என்று அவர்களுக்குத் தெளிவாகத் தெரிந்து விட்டது. காங்கிரஸ் பிரதிநிதிகளுக்குள்ளே காந்திஜியின் திட்டத்துக்கு அமோகமான ஆதரவு இருப்பதைக் கண்டார்கள். அதுமட்டுமல்ல; அமிருதசரஸ் காங்கிரஸுக்கு வந்திருந்த பிரதிநிதிகளைப் போலவே நாகபுரிக்கு வந்திருந்த பிரதிநிதிகளும் தலைவர்கள் வேற்றுமைப்பட்டு விவாதம் செய்வதை விரும்பவில்லையென்று தெரிந்தது. ஸ்ரீ சித்தரஞ்சனதாஸ் முதலியவர்கள் இன்னொரு விஷயத்தையும் கண்டார்கள். காந்திஜியின் வேலைத் திட்டங்களைச் சாதாரண அறிவாராய்ச்சிகளுக்கு உட்படுத்துவதில் பிரயோஜனமில்லை. அந்த மகான் மற்றவர்களைப்போல லாப நஷ்டங்களையும் பலா பலன்களையும் யோசித்துக்கொண்டு ஒரு திட்டத்தை செலுத்துவதில்லை. அவருடைய அந்தராத்மா எந்த வழியைச் சொல்கிறதோ, அதை அவர் சொல்லுகிறார். தமது உள்ளுணர்ச்சியை ஆதாரமாகக் கொண்டு வாதமிடுகிறார். அவர் சொல்லும் திட்டத்தை நிறைவேற்றுவதற்குத் தமது ஆத்ம சக்தியையே நம்பியிருக்கிறார். இத்தகைய மகா புருஷருக்கு முன்னால் வெறும் வாதங்கள் என்ன செய்ய முடியும்? தேச மக்களும் அவருடைய வார்த்தையே வேத வாக்காகக் கொள்கிறார்களே தவிர, மற்றவர்களுடைய தீர்க்க யோசனை வாய்ந்த அறிவுக்கு உகந்த, வாதங்களைச் செவி கொடுத்துக் கேட்பதுகூட இல்லை! இந்த நிலைமையை நாகபுரிக்கு வந்து சேர்ந்த தலைவர்கள் நன்கு உணர்ந்தார்கள். மகாத்மாவின் ஆத்ம சக்தி அவர்களையும் ஆட்கொண்டது. கல்கத்தா காங்கிரஸின் போதே காந்திஜியை சேர்ந்து விட்ட பண்டித மோதிலால் நேரு இந்தக் காங்கிரஸில் சமரசம் செய்து வைப்பதில் முன்னணியில் நின்றார். மற்றத் தலைவர்களும் சமரசத்துக்குத் தயாராகவே இருந்தார்கள். விஷயாலோசனைக் கமிட்டியில் ஓரளவு விவாதம் நடந்தது. மகாத்மாவின் திட்டத்தை ஸ்ரீ சி.ஆர். தாஸ் முதலியவர்கள் எதிர்த்துப் பேசினார்கள். அந்த நாளில் இந்தியாவின் நண்பர்கள் சிலர் இங்கிலாந்தில் இருந்தார்கள். இவர்களில் கர்னல் வெட்ஜ்வுட், மிஸ்டர் பென்ஸ்பூர், மிஸ்டர் ஹால்பர்ட் நைட் ஆகியவர்கள் நாகபுரி காங்கிரஸுக்கு வந்திருந்தார்கள். அவர்களும் “ஒத்துழையாமைத் திட்டத்தை மேற்கொள்ள வேண்டாம்” என்று சொல்லிப் பார்த்தார்கள். மகாத்மா காந்தி எழுந்து ஆட்சேபங்களுக் கெல்லாம் பதில் சொல்லியபோது எதிர்த்தவர்கள் எல்லாரும் மந்திரத்தில் கட்டுண்டவர்கள் போல் ஆகிவிட்டார்கள். பிறகு யாரும் எதிர்த்துப் பேசவே துணிய வில்லை. எதிர்க்க வந்தவர்களும் எதிர்த்துப் பேசியவர்களும் தங்கள் எதிர்ப்பை வாபஸ் பெற்றுக் கொண்டார்கள். மகாத்மாவின் திட்டத்தையும் பூரணமாக ஒப்புக்கொண்டார்கள். ஆகவே காங்கிரஸ் மகாசபை கூடியபோது, ஒத்துழையாமைத் தீர்மானத்தை ஸ்ரீ சி.ஆர். தாஸ் பிரேரேபித்தார்! ஸ்ரீ லாலா லஜபதிராய் ஆமோதித்தார்!! எதிர்ப்பு என்பதே இல்லை.தீர்மானம் நிறைவேறுவதற்குக் கேட்பானேன்? ஆயிரக்கணக்கான பிரதிநிதிகளின் அமோகமான ஆதரவுடன் தீர்மானம் ஏகமனதாக நிறைவேறியது. அப்போது அந்தப் பிரம்மாண்டமான காங்கிரஸ் பந்தலில் ஏற்பட்ட குதூகலத்தையும் அமளியையும் சொல்லிமுடியாது. தீர்மானம் நிறைவேறியதில் பிரதிநிதிகளுக்குச் சந்தோஷம். அதிலும் தலைவர்களுக்குள்ளே வேற்றுமை இல்லாமல், வோட்டு எடுக்காமல் ஏகமனதாக நிறைவேறியதில் அளவில்லா ஆனந்தம். மகாத்மாவின் தலைமையில் இந்தியா சுயராஜ்யம் அடைவது நிச்சயம் என்ற உறுதி எல்லாருடைய மனதிலும் ஏற்பட்டுவிட்ட படியால் அடங்காத உற்சாகம். இவ்வாறு நாகபுரி காங்கிரசில் தலைமைக் கிரீடம் காந்தி மகாத்மாவுக்குச் சூட்டப்பட்டது. அன்று முதல் 1948ஆம் வருஷம் ஜனவரி மாதம் 30ஆம் தேதி வரையில் காந்தி மகாத்மா தான் காங்கிரசின் உண்மையான தலைவராயிருந்தார். அந்தந்த வருஷத்துக் காங்கிரஸ் அக்கிராசனர் யாராயிருந்த போதிலும், மகாத்மாவே காங்கிரஸின் உண்மையான நிரந்தரத் தலைவராயிருந்தார். காங்கிரசிலிருந்து மகாத்மா காந்தி வெளிப்படையாக விலகி நின்ற காலத்திலும், அவரைத் தலைவராக எண்ணிக் கொண்டுதான் மற்றவர்கள் காரியங்களை நடத்தினார்கள். காந்திஜி காங்கிரசின் பூரண தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டு விட்டார் என்பது இன்னொரு முக்கியமான காரியத்தின் மூலமாகவும் நாகபுரியில் வெளியாயிற்று. அது வரையில் காங்கிரசுக்கு ஒழுங்கான சட்டம், விதி, அமைப்புத் திட்டம் ஒன்றும் இல்லாமலிருந்தது. யார் வேண்டுமானாலும் காங்கிரஸ் பிரதிநிதியாக வந்துவிடலாம். வருஷத்துக்கொரு தடவை காங்கிரஸ் கூடிக் கலைந்துவிடும். அடுத்த காங்கிரஸ் வரையில் பொறுப்புடன் வேலை செய்யக்கூடிய ஸ்தாபனம் கிடையாது. காங்கிரஸ் மகாசபையில் நிறைவேறிய தீர்மானங்களை நடத்தி வைக்க ஏற்பாடு ஒன்றும் கிடையாது. அமிருதஸரஸ் காங்கிரஸிலேயே மகாத்மா இந்தக் குறை பாட்டைக் கண்டு சில தலைவர்களிடம் பிரஸ்தாபித்தார். காங்கிரஸுக்கு அமைப்பும் விதிகளும் தயாரிப்பதற்கு அமிருதஸரஸிலேயே ஒரு கமிட்டி நியமித்தார்கள். அந்தக் கமிட்டியில் காந்திஜியையும் அங்கத்தினராக்கினார்கள். மற்ற இரண்டு அங்கத்தினர்கள் சும்மா இருந்துவிட, அமைப்பு விதிகள் தயாரிக்கும் வேலை முழுதும் மகாத்மா காந்தியின் தலையிலேயே சார்ந்தது. காந்திஜி தயாரித்த அமைப்பு, காங்கிரஸ் மகாசபையில் ஒப்புக் கொள்ளப்பட்டது. இதன்படி காங்கிரசின் லட்சியத்தை ஒப்புக்கொண்டு நாலணா வருஷ சந்தா செலுத்துவோரெல்லாம் காங்கிரஸ் அங்கத்தினராகச் சேரலாம். இத்தகைய நாலணா காங்கிரஸ் அங்கத்தினர்கள் மாகாண காங்கிரஸ் கமிட்டி அங்கத்தினர்களைத் தேர்ந்தெடுப்பார்கள். அந்த அங்கத்தினரே காங்கிரஸ் பிரதிநிதிகள் ஆவார்கள். மொத்தம் 6000 பிரதிநிதிகளுக்கு மேல் போகக் கூடாது என்று வரையறுக்கப்பட்டது. (பின்னால் இதுவும் அதிகம் என்று கண்டு காங்கிரஸ் பிரதிநிதிகளின் தொகை மூவாயிரம் ஆகக் குறைக்கப்பட்டது) மாகாண காங்கிரஸ் கமிட்டி அங்கத்தினரால் தேர்ந் தெடுக்கப்படுவோர் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அங்கத்தினர் ஆவர். இவர்களின் தொகை 350. ஆனால் இத்தனை பேர் ஒவ்வொரு தடவையும் கூடி எந்தக் காரியத்தையும் செய்ய முடியாதல்லவா? இதற்காக வருஷம் முழுதும் இடைவிடாமல் காங்கிரஸ் வேலைகளைக் கவனித்து நடத்துவதற்காக, காங்கிரஸ் காரியக்கமிட்டி ஒன்று ஸ்தாபிக்கவும் தீர்மானிக்கப் பட்டது. காங்கிரஸ் அமைப்பு விதிகளைக் காட்டிலும் முக்கியமானது காங்கிரஸின் இலட்சியம். ‘பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்குட் பட்ட குடியேற்ற நாட்டு அந்தஸ்து’ தான் அதுவரையில் காங்கிரஸின் இலட்சியமாயிருந்தது. அதை அடைவதற்கு வழி ‘சட்ட வரம்புகுட்பட்ட’ கிளர்ச்சி என்றும் குறிப்பிட்டிருந்தது. காந்திஜிஇதை மாற்றி ‘அமைதியான, நேர்மையுள்ள, எல்லா முறைகளினாலும் சுயராஜ்யம் அடைதல்’ என்று காங்கிரஸ் இலட்சியத்தை அமைத்தார். “ஒத்துழையாமை இயக்கம் சட்ட வரம்புக்கு உட்பட்டதல்ல” என்று ஆட்சேபம் சொல்லப்பட்டதல்லவா? இப்போது காங்கிரஸ் இலட்சியத்திலேயே ’சட்ட வரம்புக் குட்பட்ட என்ற சொற்றொடர் எடுத்து விடப்பட்டது. ‘சட்ட வரம்பு’ என்றால் பிரிட்டிஷ் சர்க்கார் ஏற்படுத்திய சட்ட வரம்புதானே? பிரிட்டிஷ் சட்டத்தையெல்லாம் நியாயமான சட்டமென்று எப்படி ஒப்புக்கொள்ள முடியும்? நியாயமற்ற சட்டங்களின் வரம்புக்கு ஏன் உட்பட்டு நிற்க வேண்டும்? சிற்சில சந்தர்ப்பங்களில் பிரிட்டிஷ் சர்க்காரின் சட்ட வரம்பை மீறுவதே இந்தியர்களின் கடமை ஆகக் கூடும். அப்படி யிருக்கும்போது, பிரிட்டிஷ் சட்ட வரம்புக்கு நம்மை நாம் ஏன் உட்படுத்திக் கொள்ள வேண்டும்? ஆகவே, புதிய காங்கிரஸ் இலட்சியம் ‘சட்ட வரம்பை’க் கைவிட்டது. அமைதியையும் நேர்மையையும் கைக்கொண்டது. அதுபோலவே குடியேற்ற நாட்டந்தஸ்தைக் கைவிட்டது. ’சுயராஜ்ய’ இலட்சியத்தைக் கைக்கொண்டது. இவ்விதம் காங்கிரஸின் இலட்சியம் மாறியது காங்கிரஸின் தலைமை மகாத்மாவிடம் சென்று விட்டதற்கு அறிகுறியாயிற்று. அதனால் இந்தியப் பொது மக்களின் மனோபாவமும் மாறியது. காங்கிரஸ் என்பது யாரோ இங்கிலிஷ் படித்த ஒரு கூட்டத்தார் தங்களுடைய பட்டம் பதவிக்காக நடத்தும் ஸ்தாபனமல்ல, பாரத தேசத்தின் விடுதலைக்காக வேலை செய்யும் ஸ்தாபனம் என்று மக்களின் மனதில் நிச்சயம் ஏற்பட்டது. சுயராஜ்ய ஜுரம்! நாகபுரி காங்கிரஸ் முடிவடைந்தவுடனே 1921ஆம் வருஷம் பிறந்தது. பாரத மக்களைச் சுயராஜ்ய ஜுரம் பற்றிக் கொண்டது. ஜுரத்தின் வேகம் நாளுக்கு நாள் ஏறிக் கொண்டிருந்தது. நாகபுரி காங்கிரஸில் ஒற்றுமையான முடிவு ஏற்பட்டதின் பயன் உடனே தெரிந்தது. கல்கத்தாவில் ஸ்ரீ சித்தரஞ்சன தாஸும் அலகாபாத்தில் பண்டித மோதிலால் நேருவும் வக்கீல் தொழிலை நிறுத்தி விட்டதாக அறிவித்தார்கள். ஸ்ரீ சித்தரஞ்சன தாஸ் மாதம் ஒன்றுக்கு வக்கீல் தொழிலில் ஐம்பதினாயிரம் ரூபாய் சம்பாதித்த செய்தி நாடெங்கும் பிரசித்தமாயிருந்தது. அவர் அத்தொழிலை விட்டதைப் போன்ற தியாகம் உலக சரித்திரத்திலேயே கிடையாது என்று சொல்லலாம். அலகாபாத்தில் பண்டித மோதிலால் நேருவும் ஏராளமாகச் சம்பாதித்து வந்தவர். அத்துடன், பண்டித மோதிலால் நேரு அரசர்களெல்லாம் பொறாமைப்படும்படியான சுகபோக வாழ்வு நடத்தி வந்தார் என்றும் மக்கள் அறிந்திருந்தார்கள். ஆகவே, மேற்கண்ட இரு தலைவர்களின் மாபெரும் தியாகம் பாரத மக்களின் உள்ளத்தைக் கவர்ந்து விட்டதில் வியப்பில்லை யல்லவா? தாஸையும் நேருவையும் போலப் பிரபலமில்லாத பல வக்கீல்கள், நூற்றுக் கணக்கானவர்கள், தேசமெங்கும் தங்கள் தொழிலை விட்டு ஒத்துழையாமை இயக்கத்தைச் சேர முன்வந்தார்கள். இப்படி முன்வந்த வக்கீல்களில் ஏழைகளாயிருந்தவர்களுக்குப் பொருள் உதவி செய்வதற்காக வென்று ஒரு மனிதர் ஒரு லட்சம் ரூபாய் நன்கொடை அளித்தார்! அதற்கு முன்னால் இவ்வளவு பெரிய நன்கொடையைப் பற்றி யாரும் கேள்விப்பட்டதில்லை யாதலால் தாஸ் – நேருவின் தியாகத்தைப் போலவே இந்த நன்கொடையும் மக்களைத் திகைக்கப் பண்ணியது. நன்கொடை அளித்தவரின் பெயர் சேத் ஜம்னாலால் பஜாஜ். இவர் மார்வார் தேசத்தில் பிறந்தவர். வியாபார நிமித்தமாக மத்திய மாகாணத்துக்கு வந்து வர்தாவில் குடியேறியவர். வர்த்தகத் துறையில் பெரும் பொருள் திரட்டிக் கோடீசுவரர் ஆனவர். இத்தகையவர் மகாத்மாவின் அந்தரங்கச் சீடர்களில் ஒருவரானார். அந்த வருஷத்திலிருந்து மரணமடையும் வரையில் காங்கிரஸ் மகா சபையின் பொக்கிஷதாராக விளங்கினார். முதல் லட்சம் கொடுத்த பிற்பாடு தேசத்துக்காக இன்னும் எவ்வளவோ லட்சம் கொடுத்தவர். பிற்காலத்தில் மகாத்மா சபர்மதி சத்தியாக் கிரஹ ஆசிரமத்தை விட்டு வெளியேற நேர்ந்தபோது வர்தா வுக்கு அருகில் ஒரு கிராமத்தில் ஆசிரமம் ஸ்தாபித்தது சேத் ஜம்னாலாலின் காரணமாகத்தான். புதிய அரசியல் திட்டத்தின்படி சட்டசபைகளை அங்குரார்ப் பணம் செய்து வைப்பதற்கு ஜார்ஜ் மன்னரின் சித்தப்பாவான கன்னாட் கோமகன் (டியூக் ஆப் கன்னாட்) விஜயம் செய்தார். அவருடைய விஜயத்தையும் விஜயம் சம்பந்தமான வைபவங்களையும் பகிஷ்காரம் செய்யவேண்டு மென்று காங்கிரஸ் தலைவர்கள் கட்டளையிட்டார்கள். அதன்படியே கன்னாட் கோமகன் கப்பலில் வந்து இறங்கிய அன்று நாடெங்கும் ஹர்த்தால் நடந்தது. கன்னாட் கோமகன் இந்தியப் பொதுமக்களுக்கும் தலைவர்களுக்கும் சமரசம் கோரி விண்ணப்பம் விடுத்தார். “நான் கிழவன்; வேண்டிக் கொள்கிறேன்; சென்று போனதையெல்லாம் மறந்து மன்னித்து விடுங்கள்; புதிய அரசியல் திட்டத்தை ஏற்றுக்கொண்டு நடத்துங்கள்!” என்று மன்றாடினார். இந்த விண்ணப்பம் செவிடன் காதில் ஊதின சங்காக முடிந்தது. அரசரின் பிரதிநிதி வேண்டிக் கொண்டதை மக்கள் பொருட்படுத்தவில்லை. காந்தி மகாத்மாவின் வாக்கையே சிரத்தையுடன் கேட்டார்கள். மாகாண சட்டசபைகளுக்கும் மாகாண மந்திரிகளுக்கும் மதிப்பே ஏற்படவில்லை. மூவகை பகிஷ்காரங்களில் இன்னொன்று கலாசாலை பகிஷ்காரம் அல்லவா? நாகபுரி காங்கிரஸுக்குப் பிறகு இந்தப் பகிஷ்காரமும் ஓரளவு பலன் தந்தது. கல்கத்தாவில் தேசபந்து தாஸ் விடுத்த விண்ணப்பத்தின் பலனாக ஆயிரம், பதினாயிரம் என்ற கணக்கில் மாணாக்கர்கள் கலாசாலைகளை விட்டு வெளியேறினார்கள். மார்ச்சு மாதம் நடக்கவேண்டிய பரீட்சைகள் பல கலாசாலைகளில் நடைபெறவே இல்லை. கல்கத்தாவைப் போல் அவ்வளவு அதிகமாக இல்லா விட்டாலும் மற்ற மாகாணங்களிலும் பல மாணவர்கள் கலா சாலை பகிஷ்காரம் செய்தார்கள். இவ்விதம் பள்ளிக்கூடங்களையும் கலாசாலைகளையும் விட்டு வந்த மாணாக்கர்களில் ஒரு பகுதியார் தேச சேவைக்கே தங்கள் வாழ்க்கையை அர்ப்பணம் செய்தார்கள். முதலில் இவர்கள் காங்கிரஸ் பிரசாரத்தில் ஈடுபட்டார்கள். பிறகு கள்ளுக்கடை மறியல், விதேசித் துணிக்கடை மறியல், சாத்வீகச் சட்ட மறுப்பு ஆகியவற்றில் ஈடுபட்டுச் சிறைக்கூடம் சென்றார்கள். வாலிபப் பிராயத்துக்குரிய ஆர்வத்துடனும் ஆவேசத்துடனும் தேசத் தொண்டில் ஈடுபட்ட இந்த ஆயிரக் கணக்கான மாணாக்கர்கள் பாரத நாட்டின் விடுதலைக்குப் பெரிதும் காரணமாயிருந்தார்கள். சர்க்கார் கல்வி ஸ்தாபனங்களை விட்ட மாணவர்கள் மேலே கல்வி கற்க விரும்பினால் அவர்களுக்கு வசதி இருக்கவேண்டும் என்பதற்காகத் தேசீய கல்வி ஸ்தாபனங்கள் சில ஏற்பட்டன. இவற்றில் குஜராத் வித்யா பீடம், காசி வித்யா பீடம், அலிகார் ஜமியா மிலியா ஆகியவை முக்கியமானவை. நாகபுரியில் மகாத்மா தயாரித்த புதிய காங்கிரஸ் அமைப்பு இப்போது வேலை செய்யத் தொடங்கியது. இதற்கு முன்னாலெல்லாம் ஜனங்கள் வருஷத்துக்கு ஒரு தடவை,டிசம்பர் கடைசி வாரத்திலே தான், காங்கிரஸைப் பற்றிப் பத்திரிகைகளிலே படிப்பார்கள். இப்போது தினந்தோறும் காங்கிரஸைப் பற்றிய செய்திகளைப் படிக்க நேர்ந்தது. சென்னையில் வெளியான தினப் பத்திரிகைகளில் ஒவ்வொரு நாளும் ஒரு கட்டத்துக்குள்ளே ஒரு விண்ணப்பமோ, அறிக்கையோ வெளியாகி வந்தது. அதன் அடியில் “ச. இராஜகோபாலாச்சாரி, காங்கிரஸ் பொதுக் காரியதரிசி” என்று கையொப்பம் இட்டிருக்கும். நாகபுரியில் பண்டித மோதிலால் நேருவும் ஸ்ரீ சக்கரவர்த்தி இராஜகோபாலாச்சாரியாரும் காங்கிரஸ் மகா சபையின் பொதுக் காரியதரிசிகளாகத்தேர்ந்தெடுக்கப் பட்டார்கள். தென்னிந்தியாவில் ஸ்ரீ ச. இராஜகோபாலாச்சாரியார் காங்கிரஸ் பிரசாரத்தைத் தீவிரமாக நடத்தத் தொடங்கினார். தினந்தோறும் பொதுமக்களின் கவனம் காங்கிரஸ் திட்டங்களின்மீது செல்லும்படி பத்திரிகைகளில் அறிக்கை வெளியிட்டு வந்தார். காங்கிரஸ் காரியக் கமிட்டி ஒவ்வொரு மாதமும் கூடியது.நடந்த வேலைகளைப்பற்றி ஆராய்ந்து நடக்கவேண்டிய வேலைகளைப் பற்றித் தீர்மானித்தது. நாடெங்கும் காங்கிரஸ் தலைவர்கள் சுற்றுப் பிரயாணம் செய்து மக்களின் உற்சாகத்தைப் பெருக்கி வந்தார்கள். காந்தி மகாத்மா மௌலானா முகம்மதலி அல்லது ஷவுகத் அலியைத் தம்முடன் அழைத்துக் கொண்டு சுற்றுப்பிரயாணம் செய்தார். மகாத்மாவும் மௌலானாவும் போகுமிடங்களிலெல்லாம் ஹிந்துக்களும் முஸ்லிம்களும் திரண்டு வந்தார்கள். ஐம்பதினாயிரம், லட்சம் என்று ஜனங்கள் பொதுக் கூட்டங்களில் சேர்வது அவர்களுடைய சுற்றுப் பிரயாணத்தில் சர்வ சாதாரணமாயிருந்தது. அவர்கள் பிரயாணம் செய்யும்போது ரயில்வே ஸ்டே ஷன்களில் ஆயிரக்கணக்கான ஜனங்கள் கூடினார்கள். இரவு பகல் என்று பாராமல் தலைவர்களின் தரிசனம் கோரினார்கள். “வந்தே மாதரம்” “அல்லாஹு அக்பர்”“மகாத்மா காந்திக்கு ஜே!” என்ற கோஷங்கள் வானைப் பிளந்தன; ரயிலுக்குள் தூங்க முயன்ற தலைவர்களின் செவிகளையும் பிளந்தன. இந்தச் சுற்றுப் பிரயாணத்தின்போது மகாத்மா ஒரு தடவை “நான் சொல்லும் நிபந்தனைகளை நிறைவேற்றினால் ஒரு வருஷத்துக் குள்ளே சுயராஜ்யம் தருவேன்!” என்றார். “நிபந்தனைகளை நிறைவேற்றினால்” என்பதைப் பலர் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. “ஒரு வருஷத்துக்குள் சுயராஜ்யம்” என்பதை மட்டும் பிடித்துக் கொண்டார்கள். “ஒரு வருஷத்துக்குள் சுயராஜ்யம்” என்னும் செய்தி மக்களிடையே பரவியது. “அவ்விதம் மகாத்மா வாங்கிக் கொடுக்கப் போகிறார்” என்ற நம்பிக்கையும் பரவியது. பொது மக்களின் சுயராஜ்ய ஜுரம் மேலும் மேலும் ஏறிக்கொண்டே சென்றது! மார்ச்சு மாதக் கடைசியில் பெஜவாடாவில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூடியது. தலைவர்கள் தேசத்தின் நிலைமையை ஆராய்ந்து பார்த்தார்கள். “பட்ட பகிஷ்காரம், சட்டசபை பகிஷ்காரம், கோர்ட் பகிஷ்காரம், கலாசாலை பகிஷ்காரம்” ஆகியவைகள் எல்லாம் ஓரளவிலேதான் வெற்றி பெற்றிருந்தன. பொது மக்களின் உற்சாகம் அளவில்லாமல் பெருகிக் கொண்டிருந்தது. ஆனால் பொங்கி வழிந்து வீணாகிக் கொண்டிருந்ததே தவிர அந்த உற்சாகம் காரியத்தில் பயன்படுத்தப் படவில்லை. மக்களின் உற்சாகத்தைக் காரியமாக மாற்றுவதற்கு மகாத்மா காந்தி மூன்று திட்டங்களை வகுத்தார். 1. ஒரு கோடி காங்கிரஸ் அங்கத்தினரைச் சேருங்கள்; 2. திலகர் சுயராஜ்ய நிதிக்கு ஒரு கோடி ரூபாய் சேருங்கள்; 3. தேசத்தில் இருபது லட்சம் இராட்டை சுற்றும்படி செய்யுங்கள்" என்று சொன்னார். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அந்தத் திட்டத்தை ஒப்புக் கொண்டது. ஜூன் மாதக் கடைசிக்குள் திட்டம் நிறை வேற வேண்டும் என்று தீர்மானித்தது. இத்திட்டம் தேசமெங்கும் சுருசுருப்பை வளர்த்தது. திட்டத்தை நிறைவேற்றுவதற்குப் புதிய காங்கிரஸ் அமைப்பு மிகவும் உதவி செய்தது. மாகாண காங்கிரஸ் கமிட்டிகளும், ஜில்லா காங்கிரஸ் கமிட்டிகளும், தாலுகா காங்கிரஸ் கமிட்டிகளும், கிராம காங்கிரஸ் சபைகளும் ஏற்பட்டன. மேற்படி கமிட்டிகளுக்கெல்லாம் காரியாலயங்கள் ஏற்பட்டன. அந்தக் காரியாலயங்களின்மீது நடுவில் இராட்டை பொறித்த மூவர்ணக் கொடி பறந்தது. ஆங்காங்கு சர்க்கார் கச்சேரிகளுக்குப் போட்டியாகக் காங்கிரஸின் காரியாலயங்கள் ஏற்பட்டு வருவதாகப் பொது ஜனங்கள் எண்ணினார்கள். முரட்டுக் கதர்ச் சொக்காயும், வெள்ளைக் கதர்க்குல்லாயும் தரித்த தலைவர்களும் தொண்டர்களும் நாடெங்கும் சஞ்சரித்தார்கள். பட்டணங்களிலும் கிராமங்களிலும் காங்கிரஸ் மகா சபைக்கு அங்கத்தினர்களைச் சேர்த்தார்கள். காங்கிர இலட்சியம் அச்சிட்ட லட்சக்கணக்கான அங்கத்தினர் நமூனாக்கள் நாடெங்கும் விநியோகிக்கப்பட்டன. புதிய அமைப்பின்படி, காங்கிரஸ் இலட்சியத்தில் கையெழுத்துப் போட்டு நாலணா வருஷ சந்தா கொடுப்பவர்கள் எல்லாரும் காங்கிரஸ் அங்கத்தினர்கள் அல்லவா? நாலணாச் சந்தாவுடன் காங்கிரஸ் இலட்சியத்தில் கையெழுத்துக்கள் வாங்கப்பட்டன. ஜூன் மாதக் கடைசிக்குள் அறுபது லட்சம் அங்கத்தினர்கள் சேர்ந்து விட்டதாகப் பின்னால் கணக்கு வெளியாயிற்று. நாடெங்கும் உள்ள தச்சர்கள் கைராட்டினம் செய்யும் வேலையில் ஏவப்பட்டார்கள். நூற்றுக் கணக்கிலும் ஆயிரக் கணக்கிலும் ராட்டினங்கள் செய்யப்பட்டன. பரண்களிலே கிடந்த பழைய இராட்டினங்கள் எல்லாம் எடுக்கப்பட்டன. கைராட்டினத்தின் ரீங்காரம் தேசமெங்கும் கேட்கலாயிற்று. பெஜவாடா திட்டத்தின்படி கிட்டத்தட்ட இருபது லட்சம் ராட்டினங்கள் ஜூன் முடிவுக்குள் வேலை செய்யத் தொடங்கி விட்டதாகக் கணக்குச் சொன்னார்கள். இந்த ராட்டினங்களில் நூல் உற்பத்தி எவ்வளவு ஆயிற்று என்பதும், இவை நீடித்து வேலை செய்தனவா என்பதும் வேறு விஷயங்கள். அவற்றைக் குறித்துப் பிற்பாடு கவனிக்கலாம். காங்கிரஸ் அங்கத்தினர் எண்ணிக்கையும் கைராட்டினங்களின் தொகையும் நிச்சயமாகக் குறிப்பிட்ட தேதிக்குள் கணக்கிட முடியாதவை. ஆனால் திலகர் சுயராஜ்ய நிதி விஷயம் அப்படியல்ல. வசூலித்த தொகைகளுக்கு அவ்வப்போது கணக்கு வந்தது. பணம் பாங்கில் சேர்ந்தது. ஆகையால் போட்ட திட்டம் நிறைவேறியதா என்பதை ஜூன் மாதம் 30ஆம் தேதி நிச்சயமாய்ச் சொல்லி விடலாம். ஜனத்தொகை விகிதாச்சாரப்படி ஒவ்வொரு மாகாணத்துக்கும் ஒரு கோடியைப் பங்கீடு செய்து வசூல் வேலை ஆரம்ப மாயிற்று. எல்லா மாகாணங்களிலும் துரிதமாகவே வசூல் வேலை நடந்து வந்தது. ஆனாலும் குறிப்பிட்ட பங்கீட்டின்படி ஒரு கோடி ரூபாய் வசூலாகும் என்று தோன்றவில்லை. ஒரு பொது நிதிக்கு ஒரு கோடி ரூபாய் வசூலிப்பதென்பது அந்த நாளிலே நினைக்கவும் முடியாத காரியம். அதற்கு முன்னால் பல தடவை காங்கிரஸுக்கு நிதி சேர்க்கும் முயற்சியை ஆரம்பித்துப் பலன் கிட்டாமல் கைவிட்டு விட்டார்கள். பத்தாயிரம் ரூபாய்க்குமேல் காங்கிரஸுக்கு எப்போதும் கையிருப்பு இருந்ததில்லை. அப்படியிருக்க ஒரு கோடி ரூபாய் வசூல் ஆவது எப்படி? நடக்கக் கூறிய காரியமா? பெரும்பாலான ஏழைகளிடம் கொடுக்கப் பணம் கிடையாது. பணக்காரர்களுக்குக் கொடுக்க மனம் கிடையாது. மனம் இருந்தாலும் காங்கிரஸ் நிதிக்குக் கொடுத்தால் சர்க்காரால் உபத்திரவம் நேரிடுமோ என்ற பயம் ஒரு பக்கம். இந்த நிலையில் ஒரு கோடி ரூபாய் வசூலாவது நடக்காத காரியம் என்று பலரும் எண்ணினார்கள். ஜூன் மாதம் 15ஆம் தேதி வரையில் ஐம்பது லட்சம் ரூபாய்கூட வசூலாகவில்லை. சந்தேகப் பிராணிகளின் வாக்குப் பலித்து விடும் என்றே தோன்றியது. ஜூன் மாதம் 15ஆம் தேதிக்கு மேல் ஆமதாபாத்தில் ஸ்ரீ வல்லபாய் பட்டேலும் பம்பாயில் மகாத்மா காந்தியும் பணம் வசூலிக்க ஆரம்பித்தார்கள். தினந்தோறும் ஐந்து லட்சம், பத்து லட்சம் என்று நிதி வசூல் பெருகிக் கொண்டு வந்தது. ஆமதாபாத்தில் பத்து லட்சம் ரூபாயும், பம்பாயில் இருபத்தைந்து லட்சம் ரூபாயும் வசூலாயிற்று. இந்தச் செய்திகள் மற்ற மாகாணங்களிலும் நிதி வசூலைப் பெருக்கின. ஜூன் மாதம் 30ஆம் தேதி முடிந்த போது மொத்தம் ஒரு கோடி பதினைந்து லட்சம் ரூபாய் சேர்ந்து விட்டதாகத் தெரிந்தது. காங்கிரஸுக்கு மகத்தான வெற்றி மகாத்மாவின் சக்திக்கு திட்டமான சாட்சி. இந்தியாவின் தேச பக்திக்கு ஐயமில்லாத அத்தாட்சி. திலகர் சுயராஜ்ய நிதிக்கு ஒரு கோடிக்கு மேலே வசூலாகி விட்டதென்னும் செய்தி நாடெங்கும் உற்சாகக் கிளர்ச்சியை உண்டாக்கிற்று. பொது மக்களின் சுயராஜ்ய ஜுரம் இன்னும் அதிகமாகி மேலே ஏறியது. “வளருதே தீ” பெஜவாடாவில் போட்ட திட்டம் ஒருவாறு நிறைவேறி விட்டது. அடுத்தாற்போல் என்ன? “ஒரு வருஷத்திற்குள் சுயராஜ்யம்” என்று காந்தி மகாத்மா சொன்னாரே? ஜூனமாதம் 30ஆம் தேதியோடு அரை வருஷம் ஆகிவிட்டதே! மிச்சமுள்ள ஆறு மாதத்தில் சுயராஜ்யம் கிடைத்தாக வேண்டுமே? அதற்கு என்ன வழி? அடுத்த திட்டம் என்ன? அடுத்த திட்டம் என்ன வென்பதைக் காந்தி மகாத்மா சொன்னார்: “(1) அன்னியத் துணி பகிஷ்காரம்; (2) மது விலக்கு; இந்த இரண்டு திட்டங்களையும் நிறைவேற்றி வையுங்கள். இதற்குப் பிறகும் பிரிட்டிஷார் பணிந்து வரா விட்டால், கடைசி ஆயுதமான சட்டமறுப்பு இருக்கிறது. அதை வருஷக் கடைசியில் உபயோகிக்கலாம்” என்றார். ஜூ லை மாதம் 28ஆம் தேதி அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பம்பாயில் கூடிற்று. இந்தக் கூட்டத்துக்கு வந்திருந்த அங்கத்தினர்கள் அவ்வளவு பேரும் வெள்ளைக் கதர் உடையும் வெள்ளைக் கதர்க் குல்லாயும் அணிந்து வந்தார்கள். பெஜவாடா திட்டத்தை ஏறக்குறைய நிறைவேற்றிவிட்டோம் என்ற உற்சாகத்துடனும் பெருமிதத்துடனும் அவர்கள் வந்திருந்தார்கள். இதற்குள்ளே ஆங்காங்கு மாகாண காங்கிரஸ் கமிட்டிகளுக்குத் தேர்தல்கள் நடந்திருந்தன. வந்திருந்த அ.இ.கா. கமிட்டி அங்கத்தினர்களும் புதியவர்கள். மிகப் பெரும்பாலும் காந்தி மகாத்மாவிடம் பரிபூரண பக்தியும் நம்பிக்கையும் கொண்டவர்கள். ஆகையால் இந்த அ.இ.கா கமிட்டிக் கூட்டம் பம்பாய்ப் பொது மக்களியையே பெருங்கிளர்ச்சியையும் உற்சாகத்தையும் உண்டுபண்ணியிருந்தது. பம்பாய் வாசிகள் தேசீய நெறி கொண்டிருந்தார்கள். எங்கே நோக்கினாலும் காந்தி குல்லா மயமாகக் காணப்பட்டது. தலைவர்கள் சென்ற இடமெல்லாம் ஜனங்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு நின்று ஜே கோஷம் செய்தார்கள். காந்தி மகாத்மாவைக் கடவுளின் அவதாரம் என்று ஒப்புக்கொள்ளும் அளவுக்குப் பம்பாய்வாசிகள் அவரிடம் பக்தி கொண்டு விட்டார்கள். ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவைப் போல் ஆடை ஆபரணங்கள் அணிவித்த காந்திஜியின் சித்திர படங்களும் வெளியாகியிருந்தன. இந்தப் படங்கள் பதினாயிரக் கணக்கில் செலவாயின. இத்தகைய சூழ்நிலையில் பம்பாயில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூடிக் காந்தி மகாத்மா கூறியபடி அன்னியத் துணி பகிஷ்காரத் தீர்மானத்தை ஒப்புகொண்டது. ஆகஸ்டு மாதம் 1உயிலிருந்து காங்கிரஸ்வாதிகளும் காங்கிரஸ் அநுதாபிகளும் பொதுமக்களும் அந்நியத் துணியை அடியோடு பகிஷ்கரிக்க வேண்டும் என்று அந்தத் தீர்மானம் கேட்டுக் கொண்டது. மேற்படி தீர்மானத்தைக் காரியத்தில் நிறைவேற்றி வைப்பதற்காக மகாத்மா காந்தி ஆகஸ்டுமீ 1உ பம்பாயில் ஒரு மாபெரும் வேள்வியை நடத்தினார். சௌபாத்தி கடற்கரையில் பம்பாய் நகரமே திரண்டு வந்துவிட்டது போன்ற ஜன சமுத்திரம் கூடியிருந்தது. சுமார் ஐந்து லட்சம் ஜனங்களுக்குக் குறையாது. காங்கிரஸ் தொண்டர்கள் சென்ற இரண்டு தினங்களாகப் பம்பாயில் வீடுவீடாகச் சென்று அன்னியத் துணிகளையெல்லாம் கொண்டுவந்து கடற்கரையில் பிரசங்க மேடைக்குக் கொஞ்ச தூரத்தில் குவித்திருந்தார்கள். காந்தி மகாத்மா அந்தக் கூட்டதில் பேசினார். “இந்தியாவில் அடிமைத்தனம் அன்னியத் துணி மூலமாகவே வந்தது. பிரிட்டிஷார் துணி மூட்டையைத் தூக்கிக் கொண்டு தான் இந்தியாவுக்கு வந்தார்கள், வந்த இடத்தில அரசியல் ஆதிக்கத்தை ஸ்தாபித்து கொண்டார்கள். நம்முடைய அடிமைத்தனத்துக்கு அறிகுறியா யிருப்பது அன்னியத் துணிதான். நம்முடைய அவமானத்தின் சின்னம்மாயிருப்பதும் அன்னியத் துணியே. இந்தியாவின் தரித்திரத்துக்குக் காரணம் அன்னியத் துணி.ஆகையால், இங்கே தொண்டர்கள் கொண்டு வந்து குவித்திருக்கும் அந்நியத் துணிக் குவியலில் நான் இப்போது தீ மூட்டப் போகிறேன். இந்தக் கூட்டத்தில் யாரேனும் உடம்பில் விதேசித் துணி அணிந்திருந்தால் அதை நான் மூட்டும் தீயிலே கொண்டு வந்து போட்டு விடுங்கள். இந்த விதேசித் துணிக் குவியல் எரிந்து சாம்பராவது போல் நம்முடைய அடிமைத்தனமும் எரிந்து சாம்பராகட்டும்!” இவ்விதம் மகாத்மா காந்தி பேசிவிட்டு விதேசித் துணிக் குவியலில் தீக்குச்சியைக் கிழித்து நெருப்பு வைத்தார். பெரிய பிரம்மாண்டமான போர் போலக் கிடந்த அன்னியத் துணிக்குவியல் எரிய ஆரம்பித்தது. கூட்டத்திலிருந்தவர்களில் அநேகர் தாங்கள் அணிந்திருந்த அன்னியத் துணிச் சட்டைகளையும் அன்னிய நாட்டுக் குல்லாய்களையும் கொண்டு வந்து எரிகிற தீயில் போட ஆரம்பித்தார்கள். ஆயிரம் பதினாயிரம் குல்லாக்களும் சட்டைகளும் வேறு ஆடைகளும் வந்து விழுந்தன. ‘நீ முந்தி, நான் முந்தி’ என்று ஜனங்கள் போட்டி போட்டுக்கொண்டு ஒருவரை யொருவர் முண்டிக்கொண்டு வந்து, குல்லாய்களையும் துணிகளையும் நெருப்பிலே போட்டார்கள். சிலர் தாங்கள் வைத்திருந்த குடையின் துணி அன்னியத் துணியினால் ஆனது என்ற காரனத்தினால் குடைகளையும் தீயில் வீசி எறிந்தார்கள். “வானை நோக்கிக் கைகள் தூக்கி வளருதே தீ! தீ! இந்நேரம்!” என்று பாரதியார் வேள்விப் பாட்டில் பாடியிருப்பதை லட்சக் கணக்கான பம்பாய் வாசிகள் பிரத்யட்சமாகக் கண்டு புளகாங்கிதம் அடைந்தார்கள். நூற்றைம்பது வருஷ காலமாக இந்தியாவைப் பீடித்திருந்த அன்னிய ஆட்சியும் அடிமைத்தனமும் அந்த விதேசித் துணிக் குவியலைப்போல் பொசுங்கிப் போய் விட்டதாகவே எண்ணிக் குதூகலத்துடன் வீடு திரும்பினார்கள். * * * சென்ற 1920ஆம் வருஷம் இதே ஆகஸ்டுமீ 1உ தான் காந்தி மகாத்மா ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்கினார். காந்திஜியின் யுத்த சேவையைப் பாராட்டி பிரிட்டிஷ் சர்க்கார் அவருக்கு அளித்திருந்த ‘கெயிஸரி ஹிண்ட்’ என்னும் அபூர்வமான கௌரவப் பதக்கத்தைச் சர்க்காருக்கே திருப்பி அனுப்பி விட்டதாக அன்று பம்பாய் பொதுக்கூட்டத்தில் அறிவித்து விட்டுத் தேசமெங்கும் சுற்றுப்பிரயாணம் கிளம்பினார். அதேமாதிரி இந்த 1921 ஆகஸ்டு மாதம் 1ஆம் தேதியன்று பம்பாயில் அன்னியத் துணிக் குவியலைக் கொளுத்திவிட்டுச் சுற்றுப் பிரயாணம் தொடங்கினார். மௌலானா முகம்மதலியையும் தம்முடன் அழைத்துக் கொண்டு புறப்பட்டர். பிஹார், அஸ்ஸாம், வங்காளம் ஆகிய மாகாணங்களில் சுற்றுப்பிரயாணம் செய்தார். காந்தி மகானும் மௌலானா முகம்மதலியும் சென்ற இடமெல்லாம் திரள் திரளாக மக்கள் கூடினார்கள். பிரம்மாண்டமான பொதுக் கூட்டங்கள் நடைபெற்றன. மலை மலையான அன்னியத் துணிக் குவியல்களும் தீக்கிரையாயின. இவ்விதம் வடநாட்டில் ஆகஸ்டு மாதம் முழுவதும் செப்டம்பர் முற்பகுதியிலும் சுற்றுப் பிரயாணம் செய்துவிட்டு மகாத்மாவும் மௌலானாவும் சென்னை மாகாணத்துக்குப் பிரயாணம் ஆனார்கள். செப்டம்பர் மாதம் 14ம் தேதி கல்கத்தாவிலிருந்து சென்னை மாகாணத்துக்குப் அவர்கள் வந்து கொண்டிருந்தபோது வழியில் வால்ட்டேர் ஜங்ஷனில் ரயில் நின்றது. மகாத்மாவும் மௌலானாவும் பிரயாணம்செய்யும் காலங்களில் வழியில் ரயில் நிற்கும் இடங்களிலெல்லாம் ஸ்டேஷனுக்கு அருகில் ஜனங்கள் திரண்டு நிற்பது வழக்கம். இருவரும் வண்டியிலிருந்து இறங்கிச் சென்று காத்திருந்த ஜனங்களுக்குச் சில வார்த்தைகள் சொல்லிவிட்டு வந்து ரயிலில் ஏறிக்கொள்வார்கள். அது மாதிரியே வால்ட்டேரில் ரயில் இருப்பத்தைந்து நிமிஷம் நிற்கும் என்று தெரிந்துகொண்டு தலைவர்கள் வண்டியிலிருந்து இறங்கி வெளியில் காத்திருந்த பொதுக்கூட்டத்தில் பேசுவதற்குச் சொன்றார்கள். ரயில்வே ஸ்டேஷனுக்கு வெளியே சில அடி தூரம் சென்றதும் முன்னால் சென்ற மகாத்மா பின்னால் வந்த மௌலானா தம்மை உரத்த சத்தமிட்டு அழைப்பதைக்கேட்டு நின்று திரும்பிப் பார்த்தார். இரண்டு வெள்ளைக்காரப் போலீஸ் அதிகாரிகளும் ஐந்தாறு இந்தியப் போலீஸ்காரர்களும் மௌலானா முகம்மதலியைச் சூழ்ந்து கொண்டிருந்தார்கள். மௌலானா தம் கையில் வைத்திருந்த நோட்டீசைப் படித்துக் கொண்டிருப்பதையும் மகாத்மா பார்த்தார். ஆனால் அவர் முழுதும் நோட்டீசைப் படித்து முடிப்பதற்குப் போலீஸ் அதிகாரிகள் விடவில்லை. அதிகாரிகளில் ஒருவர் மௌலானாவின் கையைப் பிடித்து இழுத்தார். காந்தி மகாத்மாவின் அஹிம்சா நெறியில் பயிற்சி பெற்றிருந்த மௌலானாவும் உடனே படிப்பதை நிறுத்திப் போலீஸாரைப் பின்தொடர்ந்து சென்றார். போகும்போது காந்திஜியைப் பார்த்து புன்னகை புரிந்துவிட்டுக் கையை வீசி ஆட்டிச் சமிக்ஞையினால் ‘போய் வருகிறேன்’ என்று சொல்லிவிட்டுப் போனார். மௌலானா அவ்விதம் போலீஸாரால் கைப்பற்றப்பட்டுச் சென்றபோது காந்திமகானுக்குத் தம்முடைய ஆத்மாவிலேயே ஒரு பகுதி தம்மை விட்டுப் பிரிந்து போவது போலிருந்தது. மகாத்மா காந்திக்கும் அலி சகோதரர்களுக்கும் இந்திய அரசியல் துறையில் ஏற்பட்டிருந்த நட்பு உலக சரித்திரத்தில் ஒரு அற்புத நிகழ்ச்சியாகும். அலி சகோதரர்கள் வீராவேசமே உருக்கொண்டவர்கள். சாந்தம், அஹிம்சை, இவற்றின் உயர்வைப் பற்றி என்றும் எண்ணாதவர்கள். இஸ்லாமிய சமய நெறியும் முஸ்லிம்களின் சரித்திரப் பண்பும் அவர்களை முற்றும் வேறு விதத்தில் பக்குவப் படுத்தியிருந்தன. ஆனாலும் அந்த அதிசய சகோதரர்கள் மகாத்மாவிடம் அளவில்லாத அன்பு கொண்டு அவரை மனமொழி மெய்களினால் பின்பற்றினார்கள். “நான் மௌலானா ஷவுகத் அலியின் சட்டைப் பையிலே இருக்கிறவன்!” என்று காந்தி மகாத்மா ஒரு தடவை சொன்னார். அதாவது மௌலானாவின் அன்புக்கு அவ்வளவு தாம் கட்டும் பட்டவர் என்று கூறினார். அம்மாதிரியே அலி சகோதரர்களும் மகாத்மாவின் அன்புக்குக் கட்டுப்பட்டிருந்தார்கள். அந்த வருஷம் ஏப்ரல் மாதத்தில் லார்டு ரெடிங் கவர்னர் ஜெனரல் பதவிக்குப் புதிதாக வந்தார். மகாத்மாவைச் சந்தித்துப் பேச விரும்புவதகாத் தெரிவித்தார். மகாத்மாவும் ரெடிங்கைப் பார்க்க விரைந்து சென்றார். “நீங்கள் அஹிம்சா தர்மத்தைப் போதிக்கிறீர்களே! உங்கள் சிஷ்யர்கள் எல்லாரும் அதை அனுசரிப்பார்களா?” என்று லார்ட் ரெடிங் கேட்டார். “என் சிஷ்யர்களுக்கு நான் உத்தரவாதம்!” என்றார் மகாத்மா. “அப்படியானால் இதைப் பாருங்கள்!” என்று சொல்லி லார்ட் ரெடிங் மௌலானா முகம்மதலியின் பிரசங்கம் ஒன்றின் ரிபோர்ட்டை எடுத்துக் காட்டினார். அதில் ஒரு பகுதி மௌலானா முகம்மதலி பலாத்கார முறைகளையும் ஆதரிக்கிறார் என்று அர்த்தம் செய்யக்கூடிய முறையில் இருந்தது. “இந்த மாதிரி தப்பர்த்தம் செய்யக்கூடியவாறு கூட என்னைச் சேர்ந்தவர்கள் பேசக்கூடாதுதான். இதற்குப் பரிகாரம் நான் தேடித் தருகிறேன்!” என்றார் மகாத்மா. அந்தப்படியே மகாத்மா காந்தி மௌலானா முகம்மது அலியை உடனே சந்தித்து “பலாத்கார முறைகளை நீங்கள் ஆதரிக்கவில்லை என்பதைத் தெளிவுபடுத்தி விடுங்கள்!” என்றார். மகாத்மாவின் சொல்லுக் கிணங்கி மௌலானா ஒரு அறிக்கை விட்டார். ரெடிங்காந்தி சந்திப்பு பற்றிய விவரங்கள் யாருக்கும் அச்சமயம் தெரிந்திருக்க வில்லை. ஆகையால் “மௌலானா முகம்மதலி பயந்து விட்டார்!” என்றும், “மன்னிப்புக் கேட்டுக்கொண்டார்!” என்றும் தேச விரோதிகள் பலர் எக்காளம் கொட்டினார்கள். மௌலானா இதையெல்லாம் சிறிதும் பொருட்படுத்தவில்லை. மகாத்மாவின் விருப்பத்தின்படி நடக்கவேண்டியது தம் கடமை என்று எண்ணிப் பொறுமையுடனிருந்தார். பிறகு கார்டு ரெடிங்கின் சர்க்காரும் “மௌலானா முகம்மதலி மன்னிப்புக் கேட்டுக்கொண்டதின் பேரில் அவர் பேரில் நடவடிக்கை எடுக்காமல் விடப்பட்டது” என்று ஓர் அறிக்கை வெளியிட்டனர். இது காந்திஜிக்கே பொறுக்கவில்லை. உடனே காந்திஜி லார்ட் ரெடிங்குக்கு எழுதி அநுமதி பெற்று அவர்களுடைய சந்திப்பின் விவரங்களையும் தாம் மௌலானாவுக்குக் கூறிய புத்திமதியையும் வெளிப்படுத்தினார். மௌலானா முகம்மதலி ‘பயந்துபோய் மன்னிப்புக் கேட்கவில்லை’ என்பதை அப்போது அனைவரும் அறிந்து கொண்டனர். இவ்விதம் தமக்கு நேர்ந்த அபகீர்த்தியைக் கூடப் பொருட்படுத்தாமல் மௌலானா முகம்மதலி மகாத்மாவின் சொல்லை மேற்கொண்டு வந்தார். அப்படிப்பட்டவரைத் தம்மிடமிருந்து பிரித்துக் கைது செய்து போலீஸார் கொண்டுபோனது மகாத்மாவைக் கலங்கச் செய்துவிட்டது. ஆயினும் அந்தக் கலக்கமானது மகாத்மா காரியம் செய்வதைத் தடைசெய்ய வில்லை. ஜனக்கூட்டம் கூடியிருந்த இடத்துக்கு மகாத்மா நேரே சென்று மக்களை அமைதியாயிருக்கும்படி கேட்டுக் கொண்டார். திரும்பவும் மௌலானாவைச் சிறைப்படுத்தி யிருந்த இடத்துக்கு வந்து அவரைப் பார்த்துப் பேச அநுமதி கேட்டார். அதற்கு அதிகாரிகள் மறுத்துவிட்டனர். மௌலானாவுடன் பிரயாணம் செய்த பீகம் முகம்மதலியும் மௌலானாவின் காரியதரிசியும் அவரைச் சந்தித்துப் பேசிவிட்டு அப்போதுதான் வெளியில் வந்தார்கள். அவர்கள் மௌலானாவை 107வது பிரிவின்படியும் 108வது பிரிவின்படியும் கைது செய்திருப்பதாக விவரம் தெரிவித்தார்கள். கன்னிங் காம் என்ற பெயர் தமிழ் நாட்டில் பலருக்கு நினைவிருக்கும். சென்னையில் பின்னால் உப்புச் சத்தியாக்கிரஹம் நடந்தபோது தடபுடலான அடக்கு முறையைக் கையாண்டு கொடுமைக்குப் பெயர் பெற்ற மனிதர். இவர் அச்சமயம் சி.ஐ.டி.போலீஸ் டிபுடி இன்ஸ்பெக்டர் ஜெனரலாயிருந்தார். மௌலானா முகம்மதலியைக் கைது செய்யும் கௌரவம் இவருக்குத்தான் கிடைத்தது. விசாகப்பட்டினம் ஜில்லா மாஜிஸ்ட்ரேட் மேற்படி கன்னிங்காமுக்கு அனுப்பிய உத்தரவின் விவரம் பின்வருமாறு: “முகம்மது அலி அமைதியாகவும் நன்னடத்தையுடனும் இருப்பதற்காக அவரிடம் 107, 108வது பிரிவுகளின் கீழ் ஜாமீன் கேட்க வேண்டியிருப்பதால். மேற்படி முகம்மது அலியைக் கைதுசெய்து என் முன்னால் கொண்டுவந்து ஒப்புவிக்கவேண்டியது. இதில் தவறவேண் டாம். 14உ செப்டம்பர் 1921. (ஒப்பம்) ஜே.ஆர்.ஹக்கின்ஸ், ஜில்லா மாஜிஸ்ட்ரேட், விசாகப்பட்டினம்" மேற்படி உத்தரவைப் பற்றித்தெரிந்து கொண்டதும் மகாத்மா காந்தி ரயில் ஏறித் தமது பிரயாணத்தைத் தொடர்ந்தார். ரயிலில் பிரயாணம் செய்துகொண்டே மௌலானா முகம்மதலி கைதியானதைப் பற்றி உருக்கமான கட்டுரை ஒன்று “எங் இந்தியா”ப் பத்திரிகைக்கு எழுதினார். அந்தக் கட்டுரை யின் கடைசிப் பகுதி பின்வருமாறு: “அலி சகோதரர்களுக்கு நாம் செய்யக்கூடிய மரியாதை என்ன? பயம், சந்தேகம், சோம்பல் ஆகியவற்றை உடனே விட்டொழிப்பதுதான். அலி சகோதரர்களுடைய தைரியம், நம்பிக்கை, அச்சமின்மை, சத்தியம், இடைவிடாச் செயல் திறமை ஆகியவற்றையும் அனைவரும் மேற்கொண்டால் சுயராஜ்யம் அடைவது பற்றிச் சந்தேகம் என்ன? ஜில்லா மாஜிஸ்ட்ரேட் போலீஸ் அதிகாரிக்குப் போட்ட உத்தரவின் கடைசியில்”இதில் தவறவேண்டாம்!" என்று கண்டிருந்தது. அந்த உத்தியோகஸ்தர் அதை நிறைவேற்றுவதில் தவறவில்லை! மேலேயிருந்து வரும் உத்தரவை நிறைவேற்றுவதில் அநேக ஆங்கில உத்தியோகஸ்தர்கள் தங்கள் உயிரையே அர்ப் பணம் செய்திருக்கிறார்கள். இதுதான் இங்கிலீஷ் சாதியின் பெருமை. காங்கிரஸ் இந்தியர்களுக்கு அவ்விதமே ‘உத்தரவு’ இட்டிருக்கிறது. ‘உத்தரவு’ ‘கட்டளை’ ‘புத்திமதி’ – எப்படி வைத்துக்கொண்டாலும் சரிதான். ‘அதில் தவறவேண்டாம்’ என்று கேட்டுக் கொண்டிருக்கிறது. அவ்விதம் நாம் செய்யப் போகிறோமா? மிச்சமுள்ள சில மாதங்களில் நாம் தீவிரமாக வேலை செய்து, ‘காங்கிரஸ் இட்ட கட்டளைகளை நிறைவேற்றுவதில் தவறவில்லை’ என்று நாம் நிரூபிக்கவேண்டும்." கராச்சி விசாரணை மௌலானா முகம்மதலி கைதியானதைப் பற்றி மகாத்மா எழுதிய கட்டுரையில், “அலி சகோதரர்கள் இணை பிரியாத இரட்டையர்கள். அவர்களைப் பிரித்து வைக்க முடியாது. ஆகையால் முகம்மதலியைக் கைது செய்தவர்கள் ஷவுகத் அலியையும் கைது செய்தே தீர்வார்கள்!” என்று குறிப்பிட்டிருந்தார். இது உண்மை என்பது இரண்டு நாளைக்குள் தெரிய வந்தது. மௌலானா முகம்மதலியை விசாகப்பட்டினம் மாஜிஸ்ட்ரேட் கைது செய்தது ஒரு காரணார்த்தமாகத்தான். 17ம் தேதியன்று மேற்படி 107,108 பிரிவு ஜாமீன் வழக்குகள் வாபஸ் வாங்கப்பட்டன. அந்த க்ஷணமே கராச்சியிலிருந்து வந்திருந்த வாரண்டின்படி மௌலானா முகம்மதலியை மீண்டும் கைது செய்து கராச்சிக்குக் கொண்டு போனார்கள். அதே தேதிகளில் இந்தியாவின் பல பகுதிகளிலும் இருந்த மௌலானா ஷவுகத் அலி, டாக்டர் ஸைபுடீன் கிச்லூ, பீர்குலாம் முஜாதீக், மௌலானா நிஸார் ஆமத், மௌலானா ஹுசேன் ஆமத். ஜகத்குரு சாரதாபீட சங்கராச்சாரியார் ஆகியவர்களையும் கைது செய்தார்கள். எல்லாரையும் கராச்சிக்குக் கொண்டு போய்ச் சேர்த்தார்கள். இப்படி அவர்களை யெல்லாம் கராச்சிக்குக் கொண்டு போனதின் காரணம் என்னவென்றால், ஜூலை மாதம் 8ம் தேதி கராச்சியில் அகில இந்திய கிலாபத் மகாநாடு நடைபெற்றது. அந்த மகாநாட்டுக்கு மௌலானா முகம்மதலி தலைமை வகித்தார். இந்த மகாநாட்டில், அதுவரை காங்கிரஸில் செய்திருந்த தீர்மானங்களையெல்லாம் விடக் கடுமையான தீர்மானம் ஒன்று நிறைவேறியது. “கிலாபத் விஷயமாக பிரிட்டிஷ் சர்க்கார் நீதி வழங்காதபடியால் இனிமேல் மதப் பற்றுள்ள எந்த முஸ்லிமும் சைன் யத்தில் சேவை செய்வதும், சைன்யத்துக்கு ஆள் சேர்ப்பதற்கு உதவி செய்வதும் மார்க்க விரோதமாகும்” என்பது அந்தத் தீர்மானத்தின் கருத்து. கல்கத்தாவிலும் நாகபுரியிலும் நிறைவேறிய ஒத்துழையாமைத் தீர்மானத்தில் சைன்ய சேவையைப் பற்றிக் குறிப்பிடவில்லை. சைன்யத்தில் உள்ளவர்களை வேலையை விடும்படி செய்வதற்குக் காலம் வரவில்லை என்று கருதப்பட்டது. அது மட்டுமல்ல. மற்ற ஒத்துழையாமைத் திட்டங்களையெல்லாம் பிரிட்டிஷ் சர்க்கார் ஒருவேளை அலட்சியமாகக் கருதி விட்டு வைக்கலாம். ஆனால் சைன்ய சேவையை விட வேண்டும் என்று சொன்னால் உடனே மிகக் கடுமையான அடக்குமுறை தொடங்குவார்கள். அதனுடைய பலாபலன்கள் இப்படியிருக்கு மென்று ஊகிப்பது கடினம். ஆகையால் அதைக் கடைசித் திட்டமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று மகாத்மாவும் மற்றத் தலைவர்களும் கருதினார்கள். ஆனால் முஸ்லிம் தலைவர்கள் அவ்வளவு தூரம் பொறுமையைக் கடைப்பிடிக்கத் தயாராயில்லை. “முஸ்லிம்கள் இனிமேல் பிரிட்டிஷ் சைன்யத்தில் சேர்ந்து சேவை செய்வது பாவம்” என்று கராச்சியில் தீர்மானம் நிறைவேற்றினார்கள். அத்துடன் நின்றுவிட வில்லை. அச்சமயத்தில் அங்கோராவில் முஸ்தபா கமால் பாட்சாவின் தலைமையில் புதிய துருக்கி அரசாங்கம் ஏற்பட்டிருந்தது. அந்த அங்கோரா அரசாங்கத்துடன் பிரிட்டிஷ் போர் தொடுத்தால், “இந்திய முஸ்லிம்கள் உடனே சட்ட மறுப்பு இயக்கம் தொடங்கி இந்தியாவில் பூரண சுதந்திரத்தை ஸ்தாபிக்க வேண்டும்” என்றும் ஒரு தீர்மானம் நிறைவேறியது. இந்தத் தீர்மானங்கள் நிறைவேறிய கராச்சி மகாநாட்டுக்கு மௌலானா முகம்மதலி தலைமை வகித்தார். தமது தலைமை யுரையில் மேலே கூறிய கருத்துக்களை அவர் வெளியிட்டார். மௌலானா ஷவுகத் அலி முதலியவர்கள் மேற்படி தீர்மானங்களை ஆதரித்துப் பேசினார்கள். இவ்விதம் இராஜத் துவேஷப் பிரசாரம் செய்த காரணத்துக்காகவே மேற் கூறிய ஏழு தலைவர்களும் பல இடங்களில் கைது செய்யப்பட்டுக் கராச்சியில் விசாரணைக்காகக் கொண்டு போகப்பட்டனர். காந்திஜி வால்ட்டேரில் மௌலானா முகம்மதலியைப் பிரிந்து சென்னைக்கு வந்து சேர்ந்தார். மௌலானாவின் மனைவியான பீகம் முகம்மதலியும் மகாத்மாவுடன் சென்னைக்கு வந்தார். அலி சகோதரர்கள் மிக்க மத வைராக்கியம் உள்ளவர்கள். ஆகவே பீகம் முகம்மதலி இஸ்லாமிய வழக்கப்படி கோஷா முறையை அனுஷ்டித்தார். முகமூடி இல்லாமல் வெளியில் புறப்படுவதில்லை. அப்படிப்பட்ட கோஷாப் பெண்மணி தமது கணவர் தொடங்கிய வேலையைத் தாம் தொடர்ந்து நடத்த வேண்டும் என்று கருதிய மகாத்மாவுடன் சுற்றுப் பிரயாணம் செய்யலானார். சென்னை வந்து சேர்ந்ததும் காந்திஜிக்கு மௌலானா முகம்மதலி கராச்சித் தீர்மானம் காரணமாகக் கைதியானார் என்னும் செய்தி கிடைத்தது. அன்று மாலையில் சென்னைக் கடற்கரையில் மாபெரும் பொதுக் கூட்டம். ஜல சமுத்திரத்தின் கரையில் ஜன சமுத்திரம் திரண்டிருந்தது. மகாத்மாவும் பீகம் முகம்மதலியும் கூட்டத்துக்கு வந்தார்கள். மக்களின் ஆவேசத்தையும் பரபரப்பையும் சொல்லி முடியாது. ஆரவாரம் கொஞ்சம் அடங்கிய பிறகு மகாத்மா காந்தி பேசினார். பேச்சின் ஒவ்வொரு வார்த்தையும் தீப்பொறியைப் போல் சுடர் விட்டது. “மௌலானா முகம்மதலியை எந்தக் குற்றத்துக்காகக் கைது செய்தார்களோ அதே குற்றத்தை நான் இப்பொது செய்யப் போகிறேன்!” என்று காந்தி மகாத்மா கூறியதும் அங்கே திரண்டிருந்த லட்சக் கணக்கான மக்களுக்கும் ரோமாஞ்சலி உண்டாயிற்று. கராச்சியில் மௌலானா முகம்மது அலி என்ன பிரசங்கம் செய்தாரோ, அதையே மகாத்மா காந்தி வார்த்தைக்கு வார்த்தை சரியாக அந்த மாபெருங் கூட்டத்தில் சொன்னார். கராச்சி தீர்மானங்களின் வாசகத்தையும் எடுத்துக் கூறினார். “மௌலானா முகம்மதலி செய்த குற்றத்தை நானும் செய்து விட்டேன். என்னையும் சர்க்கார் கைது செய்யட்டும்!” என்றார் காந்தி மகான். பொது மக்கள், “இதுவல்லவோ சிநேகம்? இதுவல்லவா சகோதர பாவம்!” என்று எண்ணி வியந்தார்கள். தம்முடைய அருமைச் சகோதரரும் சகாவுமான முகம்மது அலியை மகாத்மா காந்தி ஆதரித்து நின்ற மேன்மைக் குணம் மக்களைப் பரவசப் படுத்தியது. பிறகு சென்னைக் கடற்கரையில் தொண்டர்கள் கொண்டு வந்து குவித்திருந்த மலை போன்ற விதேசித் துணிகளுக்கு மகாத்மா தீ மூட்டினார். கூட்டத்திலிருந்த ஆயிரக் கணக்கான ஜனங்கள் தங்கள் மேலிருந்த விதேசித் துணிகளைக் கொண்டு வந்து தீயிலே போட்டார்கள். அத்தனை பெரிய துணிக்குவியலும் அரை மணி நேரத்தில் எரிந்து சாம்பராயிற்று. சென்னைக் கடற்கரையில் மகாத்மா மேற்கண்டவாறு பேசிய செய்தி நாடெங்கும் பரவியது. நாட்டின் நாலா பக்கங்களிலும் இருந்த தேசத் தலைவர்கள் “மௌலானா முகம்மதலி செய்த குற்றத்தை நாங்களும் செய்தே தீருவோம்!” என்று சொன்னார்கள். ஆகவே காந்திஜியும் மற்றும் ஐம்பது பிரபல காங்கிரஸ் தலைவர்களும் கூட்டுக் கையெழுத்துப் போட்டு அக்டோபர் மாதம் 4 ஆம் தேதி ஒரு விக்ஞாபனத்தை வெளியிட்டார்கள். அக்டோபர் மாதம் 6 ஆம் தேதி “யங் இந்தியா” வில் மேற்படி விக்ஞாபனமும் கையெழுத்துக்களும் பிரசுரிக்கப்பட்டன. “அலி சகோதரர்களூம் மற்றவர்களும் எதற்காகக் கைது செய்யப் பட்டார்கள் என்பதைப் பம்பாய் சர்க்கார் 1921 ஆம் வருஷம் செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி வெளியிட்டுள்ளா அறிக்கையில் விளக்கியிருக்கிறார்கள்; மேற்படியார்கள் கைது செய்யப்பட்டதை உத்தேசித்து, கீழே கையொப்பமிட்டிருக்கும் நாங்கள் தனிப்பட்ட முறையில் தெரிவிக்க விரும்புவதாவது: ராணுவத்திலோ, சிவில் நிர்வாகத்திலோ கலந்து ஜனங்கள் சர்க்காருக்குத் தொண்டு செய்யலாமா, கூடாதா என்பதைப் பற்றித் தாராளமாக அபிப்பிராயம் சொல்ல ஒவ்வொருவருக்கும் உரிமை உண்டு. அரசியலிலும், பொருளாதாரத் துறையிலும், தார்மீகத் துறையிலும் இந்தியா சீர்குலைந்திருப்பதற்குத் தற்போதுள்ள இந்தியா சர்க்காரே காரணமாகும். மக்களுடைய தேசீய அபிலாஷைகளை அடக்கி ஒடுக்குவதற்குப் போலீஸையும் ராணுவத்தையும் சர்க்கார் உபயோகித்திருக்கிறது. இதற்கு உதாரணமாக ரௌலட் சட்டக் கிளர்ச்சியைச் சொல்லலாம். இந்தியாவுக்கு ஒரு தீமையும் செய்தறியாத அராபியர்கள், எகிப்தியர்கள், துருக்கியர்கள் முதலியோருடைய சுதந்திரத்தை நசுக்குவதற்காக இந்திய ராணுவத்தையும் இந்திய சர்க்கார் உபயோகித்திருக்கிறது. இத்தகைய சர்க்காரில் சிவில் உத்தியோகஸ்தராகவும் சேனையில் சிப்பாயாகவும் தொண்டு செய்வது தேசீய கௌரவத்திற்கே பங்கம் விளைவிப்பதாகும். ஆகையால், சர்க்காருடனுள்ள தொடர்பை அறவே ஒழித்து விட்டு, ஜீவனத்திற்கு வேறு ஏதாவது வழியைத் தேடிக்கொள்ள வேண்டியது ஒவ்வொரு இந்திய சிப்பாயினுடையவும் சிவில் உத்தியோகஸ்தருடையவும் கடமை என்று நாங்கள் கருதுகிறோம். (ஒப்பம்) எம்.கே.காந்தி அபுல்கலாம் ஆஸாத்; அஜ்மல்கான் (டில்லி; லஜபதிராய் (லாகூர்); மோதிலால் நேரு (அலஹாபாத்); சரோஜினி நாயுடு (பம்பாய்): அப்பாஸ் தயாப்ஜி, என்.ஸி. கேல்கர், வி.ஜே.படேல், வல்லபாய் படேல் (அஹமதாபாத்); எம்.ஆர்.ஜயகர் (பம்பாய்); டி.வி.கோகலே(பூனா); எஸ்.ஜீ.பேங்கர், ஜவாஹர்லால் நேரு (அலஹாபாத்); கங்காதர தேஷ்பாண்டே (பெல்காம்); லக்ஷ்மி தாஸ் தேர்ஸி, உமர் சோபானி, ஜம்னாலால் பஜாஜ், எம்.எஸ். ஆனே (அம்ரோதி); எஸ்.இ.ஸ்டோக்ஸ், கோட்கார் (சிம்லா); எம்.ஏ. அன்ஸாரி (டில்லி); கலிக்குஸ்ஸமான் (டில்லி); கே.எம். அப்துல் கபூர் (டில்லி); அப்துல் பாரி (லக்ஷ்மண்புரி); கிருஷ்ணாஜி நீல்கண்ட் (பெல்காம்); கி. இராஜகோபாலாச்சாரி (சென்னை); கொண்டா வெங்கடப்பையா (குண்டூர்); ஜி.ஹந்ஸர்வோத்தமராவ் (குண்டூர்); அகஸுயா ஸாராபாய், ஜீதேந்திரலால் பானர்ஜி, எம். ஹெச். கித்வாய் (டில்லி); சியாம் சுந்தர சக்கரவர்த்தி (கல்கத்தா); ராஜேந்திர பிரசாத் (பாட்னா); ஆஸாத் சோபானி, ஹஸரத் மோஹானி (கான்பூர்); மஹாதேவ் தேஸாய், பி.எப்.பரூச்சா, யாகூப் ஹஸன், பி.எஸ். முஞ்ஜே, ஜெயராம்தாஸ் தௌலத்ராம், எம்.ஆர். சோல்கர் (நாகபுரி); வி.வி. தர்தானே, எ.ஹெச், சித்திக் காத்ரி (பம்பாய்); கூடார் ராமச்சந்திர ராவ் (ஆந்திரா) மியா முகம்மது ஹாஜிஜான் முகம்மது சோட்டானி. மேற்படி விக்ஞாபனத்தில் ச்ரி. சி. ஆர். தாஸின் கையெழுத்து காணப்படாதது பலருக்கும் வியப்பை அளித்தது. தந்திப் போக்குவரத்தில் ஏற்பட்ட தாமதந்தான் அதற்குக் காரணம் என்று தெரியவந்தது. எனவே, ச்ரி சித்தரஞ்சன தாஸின் கையெழுத்தும் பிற்பாடும் அந்த விக்ஞாபனத்தில் சேர்ந்தது. அந்தப் புகழ்பெற்ற 1921 ஆம் வருஷத்தில் காந்தி மகாத்மாவின் முக்கிய துணைவர்களாக விளங்கிய தலைவர்கள் யார் யார் என்பதை மேற்படி விக்ஞாபனத்தின் கீழே வெளியாகியுள்ள கையெழுத்துக்களிலிருந்து தெரிந்து கொள்ளலாம். டில்லியில் ஹக்கீம் அஜ்மல்கான் தலைமையில் கிலாபத் கமிட்டி கூடி சைன்யத்திலிருந்து முஸ்லிம்களை வெளியேறச் சொல்வது முஸ்லிம்களின் மதக் கடமை என்று தீர்மானம் செய்தது. தேசமெங்கும் ஆயிரக் கணக்கான கூட்டங்களில் பிரசங்கிகள் மௌலானா முகம்மதலியின் கராச்சி பேச்சையொட்டிப் பேசினார்கள். மேடையிலிருந்து ஒரு பிரமுகர் அந்தப் பேச்சை ஒவ்வொரு வார்த்தையாகப் படிப்பதும் திரளான மக்கள் திரும்பிச் சொல்வதும் சர்வசாதாரணமாக நடக்கலாயிற்று. இவ்வளவு கிளர்ச்சி தேசத்தில் நடந்து கொண்டிருக்கையில் கராச்சியில் மௌலானா முகம்மதலி மீதும் மற்ற அறுவர்மீதும் விசாரணை நடந்துகொண்டிருந்தது. அலி சகோதரர்களும் மற்ற முஸ்லிம் தலைவர்களும்“எங்கள் மதக் கடமையைச் செய்தோம். சர்க்கார் சட்டம் எப்படியிருந்தாலும் எங்களுக்கு அக்கரையில்லை” என்ற முறையில் கோர்ட்டில் வாக்கு மூலம் கொடுத்தார்கள். அவர்கள் ஒவ்வொருவருக்கும் இரண்டு வருஷம் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. “கவலை வேண்டாம், அலி சகோதரர்கள் சின்னச் சிறையிலும் நாம் பெரிய சிறையிலும் இருக்கிறோம். இரண்டு சிறைக் கதவுகளையும் உடைத்து விடுதலை செய்யும் சக்தி நம் கையில் இருக்கிறது!” என்று காந்தி மகான் கூறினார். முழத்துண்டு விரதம் தமிழ் நாட்டுக்கும் மகாத்மா காந்திக்கும் நெருங்கிய தொடர்புகள் சில உண்டு. தென்னாப்பிரிக்கா சத்தியாக்கிரஹத்தில் மகாத்மாவுக்குத் துணை நின்றவர்களில் தமிழர்கள் முக்கியமானவர்கள். அந்த சத்தியாக்கிரஹப் போரில் தமிழ்நாட்டு வள்ளியம்மை உயிர்த்தியாகம் செய்து அழியாப் புகழ்பெற்றாள். ராவ்லட் சட்டத்தை எதிர்த்து எப்படி இயக்கம் நடத்துவதென்று மகாத்மா காந்தி யோசித்துக் கொண்டிருந்த காலத்தில் ஒரு சமயம் சென்னை வந்தார். ஏப்ரல் 6ஆம் தேதி அகில இந்திய ஹர்த்தால் நடத்தவேண்டும் என்ற எண்ணம் சென்னையில் தங்கியிருந்த போது மகாத்மாவின் மனதில் உதயமாயிற்று. இவற்றைக் காட்டிலும் மகாத்மாவின் வாழ்க்கையில் பெரும் மாறுதல் உண்டாக்கிய ஒரு சம்பவம் 1921 செப்டம்பரில் மகாத்மா காந்தி தமிழ்நாட்டுக்கு விஜயம் செய்த போது நிகழ்ந்தது. அந்தநாளில் பட்டணங்களிலும் கிராமங்களிலும் காங்கிரஸ் பிரசாரம் செய்வதற்காகச் செல்வோர் தங்கள் பிரசங்கத்துக்கு முக்கியமாகக் கையாண்ட விஷயம் ஒன்று உண்டு. கிழக்கிந்தியக் கம்பெனியின் காலத்தில் இங்கிலீஷ்காரர்கள் துணிமூட்டையைத் தோளிலே சுமந்துகொண்டு இந்தியாவில் துணி விற்க வந்ததிலிருந்து பிரசங்கத்தைத் தொடங்குவார்கள். ஆங்கில நாட்டுத் துணியோடு இந்திய சுதேசித் துணி போட்டி போடாமலிருப்பதற்கு வெள்ளைக்காரர்கள் கையாண்ட முறைகளைச் சொல்வார்கள். இந்தியாவில் கைத்தறியில் உற்பத்தியான துணிகளின் மேன்மையைப் பற்றிப் பேசுவார்கள். டாக்கா மஸ்லின் துணியின் நயத்தைப்பற்றியும், ஒரு பீஸ் மஸ்லினை ஒரு மோதிரத்துக்குள் அடைத்த கதையைப் பற்றியும், அவுரங்க ஜீப்பின் குமாரி டாக்கா மஸ்லின் உடுத்திக்கொண்ட வரலாற்றைக் குறித்தும் விஸ்தாரமாகச் சொல்வார்கள். அத்தகைய அதிசயமான துணிகளை நெய்த கைத்தறிக்காரர்களின் கட்டை விரல்களை ஆங்கிலேயர் துண்டித்தெறிந்த அக்கிரமக் கொடுமையைப் பற்றி இரத்தம் கொதிக்கும்படி ஆத்திரமாய்ப் பேசுவார்கள். “இங்கிலீஷ் ராஜ்யம் இந்தியாவில் லங்காஷயர் துணி வியா பாரத்துக்காகவே ஏற்பட்டது. இப்போதும் லங்காஷயரின் நன்மையை முன்னிட்டே இந்தியா ஆளப்பட்டு வருகிறது. என்றையதினம் இந்தியர்கள் அன்னியத் துணியை வாங்குவதை அடியோடு நிறுத்துகிறார்களோ, அன்றைக்கே இந்தியாவிலிருந்து பிரிட்டிஷார் மூட்டைகட்டி விடுவார்கள்!” என்று கூறுவார்கள். இவ்வாறெல்லாம் அந்தநாளில் காங்கிரஸ் வாதிகள் பிரசாரம் செய்ததில் பெரிதும் உண்மை இருந்தது என்பதை யாரும் மறுக்க முடியாது. அதனாலேயே 19051906ல் வங்காளத்தில் ஒரு தடவை சுதேசி இயக்கம் தீவிரமாக ஆரம்பிக்கப்பட்டது. அப்போது சுதேசி இயக்கத்தின் நோக்கம் பிரிட்டிஷ் துணிகளைப் பகிஷ்கரிப்பதுதான். இந்த இயக்கத்துக்கு அப்போது சில இடையூறுகள் ஏற்பட்டன. அவற்றில் முக்கியமானது பம்பாய்ஆமதாபாத் ஆலை முதலாளிகளின் பேராசையாகும். சுதேசி இயக்கத்தைப் பயன்படுத்திக்கொண்டு அவர்கள் ஆலைத் துணிகளின் விலைகளைக் கண்டபடி உயர்த்திக் கொள்ளை லாபம் சம்பாதித்தார்கள். இதன் பலன் என்ன ஆயிற்று என்றால், கொஞ்ச காலத்துக்கெல்லாம் பொது மக்களில் பலருக்குச் சுதேசி இயக்கத்தின் பேரில் பற்று விட்டுப் போய்விட்டது. இந்தப் பழைய நிகழ்ச்சிகளையெல்லாம் காந்தி மகான் நன்கு அறிந்திருந்தார். இந்தியாவின் அடிமைத்தனம் போக வேண்டுமானால். இந்தியர்கள் அன்னியத் துணி வாங்குவதையும் அணிவதையும் அடியோடு நிறுத்தியே யாகவே்ண்டும். ஆனால், முன்னொரு தடவை நடந்ததுபோல் ஆலைமுதலாளிகள் பொதுமக்களின் தலையில் கையை வைத்துக் கொள்ளை லாபம் தட்டுவதையும் தடுக்க வேண்டும். இதற்குச் சாதனமாக மகாத்மா காந்தி கைராட்டை இயக்கத்தைக் கைக்கொண்டார். கை ராட்டையில் நூல் நூற்று அந்த நூலைக்கொண்டு கைத்தறியில் நெய்த கதரையே உடுத்தவேண்டும் என்று சொன்னார். இப்படிக் கதர் உடுத்துவதை வற்புறுத்துவதால் ஆலை முதலாளிகள் கொள்ளை லாபம் சம்பாதிப்பதைத் தடுக்கலாம். இது மட்டுமல்ல. மகாத்மாவின் வாழ்க்கைத் தத்துவத்தை நிறைவேற்றக் கைராட்டையும் கதரும் தகுந்த உபகரணங்களாயிருந்தன. மகாத்மா காந்தி தற்கால நவநாகரிக வாழ்க்கையை வெறுத்தார். ஆடம்பர சுகபோக வாழ்க்கையை வெறுத்தார். கைராட்டையும் கதரும் எளிய வாழ்க்கை முறையின் சின்னங்களா யிருந்தன. மனிதராய்ப் பிறந்த ஒவ்வொருவரும் ஏதேனும் ஒரு வகையில் உடலை உழைத்துப் பாடுபடவேண்டும் என்று மகாத்மா கருதினார். அப்படி எல்லாரும் உடல் உழைப்பைக் கைக்கொள்ளக் கைராட்டை நல்ல சாதனமாயிருந்தது. இயந்திர நாகரிகம் மனித சமூகத்தின் ஆத்மீக அழிவுக்குக் காரணமாகும் என்பது காந்திஜியின் கொள்கை. கைராட்டை இயந்திர நாகரிகத்தை எதிர்த்து நிற்பதற்கு ஆயுதமாயிருந்தது. இந்தியாவின் ஏழு லட்சம் கிராமங்களில் வாழும் மக்களை மகாத்மா ‘தரித்திர நாராயணர்’களாகக் கண்டார். அவர்களுடைய வறுமையை நினைத்து உருகினார். வருஷத்தில் ஆறு மாதம் கிராமவாசிகள் வேலையில்லாமலிருக்கிறார்கள் என்பதும் மகாத்மாவுக்குத் தெரிந்தது. லட்சக்கணக்கான கிராமவாசிகளுக்கு வேலையில்லாத நாட்களில் வேலை கொடுக்கக் கூடியது கைராட்டினம் ஒன்றுதான் என்பதை மகாத்மா கண்டார். அநாதை ஸ்திரீகளும் வயதான மூதாட்டிகளும் பிறரை அண்டாமலும் பட்டினி கிடக்காமலும் ’இஷ்டமுடன் தம் குடிசை நிழலிலிருந்து நூல் இழைத்துப் பிழைக்கலாம்’ என்று கண்டார். இத்தகைய காரணங்களினால் கைராட்டினத்தை மகாத்மா காந்தி ‘காமதேனு’ என்று போற்றினார். அதைக் குறித்து இடைவிடாது பேசியும் எழுதியும் வந்தார். இந்தியா தேசத்தின் சிறந்த அறிவாளிகளில் சிலருக்கு மகாத்மா காந்தியின் கைராட்டைப் பிரசாரம் பிடிக்கவில்லை. அவ்விதம் பிடிக்காதவர்களில் ஒருவர் மகாகவி ரவீந்திரநாத தாகூர். மகாத்மாவிடம் மகாகவி எத்தனையோ அபிமானமும் மரியாதையும் கொண்டிருந்தவர். ‘மனித சமூகத்தை ரட்சிக்க அவதரித்த மகாபுருஷர்களில் ஒருவர் மகாத்மா காந்தி’ என்று டாக்டர் தாகூர் பலமுறையும் தமது கருத்தை வெளியிட்டிருக்கிறார். ஆனாலும் காந்திஜியின் கைராட்டைப் பிரசாரத்தை மகாகவி தாகூர் விரும்பவில்லை. இராட்டைப் பிரசாரத்தைப் “பிற்போக்கு இயக்கம்” என்று தாகூர் பகிரங்கமாகக் கூறிக் கண்டித்தார். “இயந்திரங்களினால் மனித சமூகம் எவ்வளவோ முன்னேற்றம் அடைந்திருக்கிறது. காந்திஜி அந்த முன்னேற்றத்தை யெல்லாம் புறக்கணித்து இந்திய மக்களைப் பல நூறு வருஷம் பின்னால் கொண்டு போகப் பார்க்கிறார்” என்று டாக்டர் தாகூர் சொன்னார். காந்தி மகான் மகாகவி தாகூரைக் ‘குருதேவ்’ என்று போற்றி வந்தவர். தென்னாப்பிரிக்காவில் தம்முடன் டால்ஸ் டாய் பண்ணையில் வாழ்ந்தவர்களை இந்தியா வந்ததும் முதன் முதலில் தாகூரின் சாந்திநிகேதனுக்கே மகாத்மா அனுப்பினார் அல்லவா? ஆனபோதிலும் கைராட்டை இயக்கத்தைப் பற்றியவரையில் மகாத்மா காந்தி குருதேவரின் கருத்தை ஒப்புக்கொள்ளவில்லை. “வானத்தில் ஆனந்தமாய்ப் பாடிக் கொண்டு பறக்கும் வானம்பாடிக்குப் பூமியிலுள்ள கஷ்டங்கள் எப்படித் தெரியும்? குருதேவர் தாகூர் மகாகவி; அவருக்கு ஏழைகளின் பட்டினிக் கொடுமை இத்தகையது என்று தெரியாது. தெரிந்திருந்தால் கைராட்டைதான் ஏழைகளின் காமதேனு என்பதை ஒப்புக்கொண்டிருப்பார்” என்று காந்தி மகான் அணுவளவும் தமது கொள்கையிலிருந்து வழுவாமல் தாகூருக்குப் பதில் கூறினார். 1921ஆம் வருஷம் செப்டம்பர் மாதத்துக்குள் இந்தியாவில் அன்னியத் துணி பகிஷ்காரத்தைப் பூரணமாய் நடத்திவிட வேண்டும் என்று காந்திஜி கருதியிருக்கிறார். செப்டம்பரில் அத்திட்டம் நிறைவேறி விட்டால் அடுத்து வரும் மாதங்களில் சட்டமறுப்பு இயக்கத்தைத் தொடங்கி வருஷக் கடைசிக்குள் சுய ராஜ்யத்தை ஸ்தாபித்து விடலாம் என்று உத்தேசித்திருந்தார். வால்ட்டேரில் மௌலானா முகம்மதலி சிறைப்பட்டது மகாத்மாவின் சுயராஜ்ய தாகத்தைப் பன்மடங்கு ஆக்கியது. விதேசித் துணி பகிஷ்காரத்தை நிறைவேற்றுவதில் அவருடைய ஆர்வமும் பெருகிற்று. இந்த ஆர்வத்துடனே தான் சென்னையிலிருந்து புறப்பட்டுத் தமிழ்நாட்டில் சுற்றுப்பிரயாணம் செய்யத் தொடங்கினார். அவருடன் மௌலானா ஆஜாத் சோபானி என்னும் முஸ்லிம் பெரியாரும் பிரயாணம் செய்தார். காந்திஜி கோஷ்டியார் ஏறிய ரயில் விழுப்புரம் சென்றது. விழுப்புரம் ரயில்வே நிலையத்தில் எள்ளுப் போட்டால் எள்ளு விழாதபடி பதினாயிரக் கணக்கான ஜனங்கள் கூடியிருந்தார்கள். காந்திஜி அவர்களுக்குக் கைராட்டையும் கதரையும் பற்றி எடுத்துச் சொல்ல விரும்பினார். ஆனால் அது சாத்தியப் படவில்லை. கூட்டத்தில் அவ்வளவு இரைச்சல். “உட்காருங்கோ!” “சத்தம் போடாதேங்கோ!” என்று நூற்றுக் கணக்கான குரல்கள் ஏக காலத்தில் எழுந்தன. ஜனங்கள் போட்ட இரைச்சலுடன் இரைச்சலை அடக்க முயன்றவர்களின் கூப்பாடும் சேர்ந்து ஏக இரைச்சலாகிவிட்டது. காந்திஜி ஒரு வார்த்தைகூட அக்கூட்டத்தில் பேச முடியவில்லை. ரயில் வண்டி மேலே சென்றது. பறங்கிப் பேட்டையில் மிஸ் பீடர்ஸன் என்னும் ஐரோப்பிய அம்மையார் ஆரம்பித்திருந்த ஆசிரமத்துக்கு மகாத்மா அஸ்திவாரம் நாட்டினார். பிறகு கூடலூரில் பொதுக் கூட்டத்தில் பேசிவிட்டுக் கும்பகோணத்துக்கு வந்தார். கும்பகோணத்தில் மகாத்மாவைத் தரிசிக்க நாற்பதினாயிரம் ஜனங்கள் கூடியிருந்தார்கள். அவ்வளவு பேரும் காந்திஜியைப் பக்கத்தில் சென்று பார்க்க முயன்றார்கள். கூட்டத்தில் எழுந்த கூச்சலையும் கூப்பாட்டையும் சொல்லி முடியாது. கும்பகோணம் கூட்டத்திலும் மகாத்மாவினால் பேச முடியவில்லை. அங்கிருந்து திரிசிராப்பள்ளிக்குச் சென்றார். திரிசிராப்பள்ளியில் தேச பக்தர் டாக்டர் டி. எஸ். எஸ். ராஜன் அவர்களின் வீட்டில் மகாத்மாவுக்கு நிம்மதி கிடைத்தது. “மகாத்மாவுடன் ஏழு மாதம்” என்னும் நூலில் ஸ்ரீ கிருஷ்ணதாஸ் என்பவர் இதைப் பற்றி எழுதியிருக்கிறார். அந்தப் பிரயாணத்தின் போது மகாத்மாவின் காரியதரிசியாகத் தொண்டு செய்தவர் ஸ்ரீ கிருஷ்ணதாஸ். அவர் மேற்கூறிய புத்தகத்தில் எழுதியிருப்பதாவது: “திரிசிராப்பள்ளி ஸ்டே ஷனை அடைந்ததும் எங்களுக்கெல்லாம் மிக்க வியப்பும் மகிழ்ச்சியும் ஏற்பட்டன. ரயில்வே நிலையத்தில் ஏராளனமான ஜனங்கள் கூடியிருந்தபோதிலும் இரைச்சல் என்பதே கிடையாது. அன்றைக்கு மகாத்மாவின் மௌன தினம். ரயிலை விட்டு அமைதியாக இறங்கி ஜாகைக்குப் போக முடிந்தது. இங்கே ஜனங்களிடம் காணப்பட்ட அமைதியும் ஒழுங்கும், வழியெல்லாம் ஜனக்கூட்டத்தின் அமளியினால் கஷ்டப்பட்டு வந்த எங்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருந்தது. ரயில்வே நிலையத்துக்குப் பக்கத்தில் உள்ள டாக்டர் ராஜனுடைய வீட்டில் எங்களுக்கு ஜாகை. டாக்டர் ராஜன் அப்போது மாகாண காங்கிரசின் காரியதரிசி. அவருடைய வீடு ஏறக்குறைய ஓர் ஆசிரமமாக மாறியிருந்தது. தம்முடைய குடும்பத்தில் யாரும் இனிக் கடையில் துணி வாங்கக்கூடாது என்றும் அவரவர்களுடைய தேவைக்கு வேண்டிய நூல் அவர்களே நூற்றுக் கொள்ள வேண்டும் என்றும் கட்டளையிட்டு விட்டதாக டாக்டர் ராஜன் மகாத்மாஜியிடம் தெரியப்படுத்தினார். டாக்டர் ராஜனுடைய வீடு திருச்சி நகரத்துக்குக் கொஞ்ச தூரத்தில் ஒரு பெரிய தோட்டத்தின் நடுவில் இருந்தது. புயலிலும் சண்டமாருதத்திலும் அடிபட்டுத் திண்டாடிய கப்பல் ஒரு அமைதியான துறைமுகத்துக்கு வந்து சேர்ந்தால் பிரயாணிகள் எவ்வளவு ஆனந்தம் அடைவார் களோ அவ்வளவு ஆனந்தம் நாங்களும் அடைந்தோம். இவ்வாறு திருச்சியில் டாக்டர் ராஜனுடைய கண்டிப்பான பாதுகாப்பின் காரணமாக மகாத்மாவுக்குக் கொஞ்சம் ஓய்வும் அமைதியும் கிடைத்தது. ஆனால் அமைதி வெளியில் இருந்ததே தவிர அவருடைய மனதில் நிம்மதி ஏற்படவில்லை. விதேசித் துணியைப் பகிஷ்கரிப்பதிலும் கதரைப் பெருக்குவதிலும் அவருடைய மனதில் குடிகொண்டிருந்த தாபத்தை அவர் மக்களுக்கு வெளியிட விரும்பினார். ஆனால் ஜனங்களோ மகாத்மாவை அருகில் சென்று பார்த்துவிட வேண்டும் என்று பிரயத்தனம் செய்தார்கள். மாபெருங் கூட்டம் கூடி மக்கள் போட்ட கூச்சலினால் மகாத்மாவின் வார்த்தைகள் அவர்கள் காதில் விழுவதே இல்லை. “ஐயோ! நாட்கள் போய்க் கொண்டிருக்கின்றனவே. இவ்வளவு ஜனக்களும் வந்து கூட்டம் கூடிக் கூச்சல் போட்டு விட்டு என்னைப் பார்த்து விட்டுப் போய் விடுகிறார்களே? கைராட்டையைப் பற்றியும் கதரைப் பற்றியும் இவர்களுக்கு எவ்வாறு சொல்வேன்? என் இதயக் கொதிப்பை இவர்களுக்கு எவ்வாறு வெளியிடுவேன்?” என்று மகாத்மா யோசனையில் ஆழ்ந்திருந்தார். திருச்சியிலும் ஸ்ரீரங்கத்திலும் பொதுக் கூட்டங்களில் ஓரளவு அமைதி நிலவியது. திருச்சியிலிருந்து மகாத்மா திண்டுக்கல்லுக்குப் போனார். அங்கே பழைய கதைதான். கூட்டம் பிரமாதம்; கூச்சலும் பிரமாதம். மகாத்மாவினால் ஒரு வார்த்தையும் பேச முடியவில்லை. திண்டுக்கல்லிலிருந்து மதுரைக்குப் போனார். மதுரை மகாத்மாவுக்கு அளித்த வரவேற்பு மற்ற ஊர் வரவேற்புகளையெல்லாம் தூக்கி அடித்து விட்டது. அவ்வளவு லட்சக்கணக்கான ஜனங்கள் கூடியிருந்தார்கள். ஆனால் பொதுக் கூட்டத்தைப் பற்றிய வரையில் பழைய கதையேதான்! அமைதியை நிலைநாட்ட மதுரைத் தலைவர்கள் எவ்வளவோ முயன்றார்கள். மகாத்மாவும் முயன்று பார்த்தார். ஒன்றும் பயன்படவில்லை. மகாத்மா பிரசங்கம் செய்யாமலே கூட்டத்தைக் கலைந்து போகச் சொல்லும்படி நேர்ந்தது. மதுரையில் அன்றிரவு மகாத்மாவின் ஜாகையில் அவரைப் பல பிரமுகர்கள் வந்து சந்தித்தார்கள். அவர்களுடன் மகாத்மா பொதுப்படையாக வார்த்தையாடிக் கொண்டிருந்த போதிலும் அவருடைய உள்ளம் யோசனையில் ஆழ்ந்திருந்தது. கதர் இயக்கத்தைப் பிரசாரம் செய்வதற்குத் தகுந்த சாதனம் ஒன்றை அவர் மனம் தேடிக் கொண்டிருந்தது; அத்தகைய சாதனம் வேறு எந்த விதமாயிருக்க முடியும்? பிறருடைய தவறுகளுக்காகத் தாம் உண்ணா விரதம் இருந்து பிராயச்சித்தம் செய்து கொன்கிறவர் அல்லவா ’மகாத்மா? எனவே, மக்களுக்குக் கதரின் முக்கியத்தை உணர்த்தும்படியாகத் தாம் என்னதியாகத்தைச் செய்வது, என்ன விரதத்தை மேற்கொள்வது என்றுதான் அவர் உள்ளம் சிந்தனை செய்தது. மகாத்மாவைச் சந்தித்துப் பேச வந்த பிரமுகர்களிள் ஒருவர் கதர் உடுத்தாமல் அந்நியத்துணி உடுத்திக்கொண்டு வந்தார். அவரைப்பார்த்து மகாத்மா “நீங்கள் என்னைப் பார்க்க வருகிறீர்களே? என்னைப் பார்த்து என்ன பயன்? நான் இவ்வளவு நாள் சொன்னபிறகும் விதேசித் துணி உடுத்தியிருக்கிறீர்களே? ஏன் கதர் அணியவில்லை?” என்று கேட்டார். “கதர் உடுத்த எனக்கு இஷ்டந்தான். ஆனால் கதர் கிடைக்கவில்லை;” என்றார் அந்தப் பிரமுகர். அதே நிமிஷத்தில் மகாத்மாவின் மனதில் அவர் தேடிக் கொண்டிருந்த சாதனம் உதயமாகி விட்டது. “ஆஹா! இவர் கதர் கிடைக்கவில்லை என்கிறார் நாமோ இடுப்பில் பத்துமுழ வேஷ்டி, மேலே இரண்டு சட்டை, குல்லா இவையெல்லாம் அணிந்திருக்கிறோம். எதற்காக இவ்வளவு கதர்த் துணியை நாம் அணிய வேண்டும்?” என்று தோன்றியது. அதே சமயத்தில் தமிழ் நாட்டில் மகாத்மா கண்ட வேறொரு காட்சி நினைவுக்கு வந்தது. வடக்கேயெல்லாம் ஏழைத் தொழிலாளிகள், உழவர்கள் கூட மேலே சட்டை அணிவது வழக்கம். தமிழ்நாட்டில் வயற்புறங்களில் வேலை செய்பவர்கள் பெரும்பாலும் அரையில் முழத்துணியோடு வேலை செய்வது வழக்கம். “இது ஏன்?” என்று காந்திஜி தமிழ்நாட்டுத் தலைவர்களைக் கேட்டார். “ஒருதுணிக்கு மேலே இரண்டாவது துணி வாங்கவும் சட்டை தைக்கவும் அவர்களிடம் பணம் இல்லை” என்று பதில் வந்தது. அந்தப் பதில் மகாத்மாவின் மனதில் பதிந்து போயிருந்தது. இவையெல்லாவற்றையும் எண்ணிப் பார்த்து, மகாத்மா காந்தி அன்றிரவே ஒரு முடிவுக்கு வந்தார். மறுநாள் காலையில் மகாத்மா எழுந்ததும் தம்முடன் பிரயாணம் செய்த சகாக்களை அழைத்தார். “இன்று முதல் நான் இடுப்பில் ஒரு முழ அகலமுள்ள துண்டு மட்டும் அணிவேன். குளிர் அதிகமான காலங்களில் போர்த்திக்கொள்ள ஒரு துப்பட்டி உபயோகிப்பேன். மற்றப்படி சட்டை, குல்லா எதுவும் தரிக்க மாட்டேன். இப்போதைக்கு இந்த விரதத்தை ஒரு மாதத்துக்கு எடுத்துக் கொள்ளப் போகிறேன். பிறகு உசிதம் போல் யோசித்து முடிவு செய்வேன்” என்றார். இவ்விதம் சொல்லிவிட்டு, பத்துமுழ வேஷ்டிசட்டை குல்லா எல்லாவற்றையும் களைந்து வீசி எறிந்தார். ஒரு முழ அகலமுள்ள துண்டை எடுத்து இடுப்பில் சுற்றிக் கொண்டார். தம்முடைய சகாக்களைப் பார்த்து “புறப்படலாம் காரைக்குடிக்கு!” என்று சொன்னார். மகாத்மாவின் சீடர்கள் கதி கலங்கிப் போனார்கள். இது ஒரு விபரீதமான விரதமாகவே அவர்களுக்குத் தோன்றியது. ஒரு மாதத்திற்கு இப்போது விரதம் எடுத்துக்கொண்டாலும் அதை மகாத்மா நிரந்தரமாகவே கொண்டு விடுவார் எந்று பயந்தார்கள்! அவர்களில் ஒருவர் ஓடிப்போய் ராஜாஜியையும் டாக்டர் ராஜனையும் அழைத்து வந்தார். ராஜாஜியும் டாக்டர் ராஜனும் எவ்வளவோ காரணங்களைச் சொல்லி வேண்டிக் கொண்டார்கள். ஆனால் மகாத்மா தமது உறுதியைக் கைவிட விரும்பவில்லை. அதன் பேரில், இத்தகைய விரதம் எடுத்துக் கொன்வதைக் கொஞ்சநாள் தள்ளியாவது போடும்படி ராஜாஜியும் டாக்டர் ராஜனும் வேண்டிக்கொண்டார்கள். அதற்கும் மகாத்மா இணங்கவில்லை. விடாமல் வாதம் செய்த ராஜாஜியைப் பார்த்து மகாத்மா, “உங்களுடைய வாதத்துக்கு என்னால் பதில் சொல்ல முடிய வில்லை. ஆனால் நான் செய்வது தான் சரி என்பதில் எனக்குலவலேசமும் சந்தேகமில்லை” என்று சொன்னார். அன்று அதிகாலையில் மூன்று மணிக்குத் தாம் விழித்துக் கொண்டதாகவும், தூக்கமும் விழிப்புமாயிருந்த நிலையில் இந்த யோசனை தமக்குத் தோன்றியதாகவும், அது தம்முடைய அந்தராத்மாவின் கட்டளையென்றும், அதை மீற முடியாது என்றும் மகாத்மா தெரிவித்தார். பிறகு நடந்ததைப் பற்றி ஸ்ரீ கிருஷ்ணதாஸ் எழுதியிருப்பதாவது: " மகாத்மாஜி இடுப்பில் மட்டும் ஒரு முழ அகலத் துணி ஒன்றை உடுத்திக் கொண்டு காரைக்குடிக்குப் புறப்படத் தயாரானார். மகாத்மாவையும் அவருடைய சகாக்களையும் ஏற்றிச் செல்வதற்கு வாசலில் நாலு மோட்டார் வண்டிகள் தயாராகக் காத்திருந்தன. மதுரைமா நகரின் ஜனங்களும் அதிகாலையிலேயே எழுந்து மகாத்மாவைத் தரிசிப்பதற்குச் சாலையின் இரு புறமும் வந்து மொய்த்துக்கொண்டு நின்றார்கள். மகாத்மா அரைத் துணி ஒன்றுடனே, சட்டை குல்லா அங்க வஸ்திரம் ஒன்றுமில்லாமல், மோட்டார் வண்டியில் போய் ஏறிய போது, அவருடைய சகாக்களும் சீடர்களும் உணர்ச்சி வசப் பட்டுத் தலை குனிந்து நின்றார்கள். திறந்த மோட்டார் வண்டி அதன் பிரயாணத்தைத் தொடங்கிய போது உதய சூரியனின் செங்கிரணங்கள் மகாத்மாவின் மார்பிலும் தலையிலும் விழுந்தன.மகாத்மாவின் தாமிர வர்ணத் திருமேனி ஒரே ஜோதிமயமாய்க் காட்சி அளித்தது. பின்னர் தமிழ்நாடெங்கும் மகாத்மா காந்தி முழத்துண்டு அணிந்தே பிரயாணம் செய்தார். அந்தக் கோலத்தில் அவரைப் பார்த்த ஜனங்கள் பரவசமடைந்தார்கள். மகாத்மா வின் பிரசங்கத்தைக் காது கொடுத்துக் கேட்க வேண்டிய அவசியமே அவர்களுக்கு இனி இல்லை. சட்டை அணியாத மகாத்மாவின் புனிதத் திருமேனியைத் தரிசித்த உடனேயே ஜனங்கள் மகாத்மாவின் விருப்பம் என்ன என்பதைத் தெரிந்து கொண்டார்கள். கை ராட்டைக்கும் கதருக்கும் மகாத்மாவின் புதிய கோலமே மிகச்சிறந்த பிரசார சாதனமாயிற்று, ஆயிரம் கட்டுரைகளினாலும் பதினாயிரம் பிரசங்கங்களினாலும் சாதிக்க முடியாததை மகாத்மாவின் தவக்கோலம் சாதித்து விட்டது. இதய தாபம் முழத்துண்டு விரதம் கொண்ட காந்தி மகான் மதுரையிலிருந்து திருநெல்வேலிக்குப் போனார். காந்திஜியின் விரதத்தைப் பற்றிய செய்தி அவருக்கு முன்னாலேயே திருநெல்வேலிக்குச் சென்று விட்டது. அதை அறிந்த திருநெல்வேலி மக்கள் பக்தி பரவசமாயிருந்தார்கள். காங்கிரஸ் தொண்டர்களும் பொதுமக்களைக் கட்டுக்குள்ளே வைப்பதற்குப் பெரு முயற்சி செய்தார்கள். ஆகையால் பெருந் திரளான மக்கள் கூடியிருந்தும் பொதுக் கூட்டத்தில் அமைதியும் நிசப்தமும் நிலவியது. இதைக் குறித்துக் காந்திஜி திருநெல்வேலி ஜனங்களைப் பெரிதும் பாராட்டினார். “இந்தமாதிரி ஒழுங்கும் கட்டுப்பாடும் இந்தியா தேசமெங்கும் நிலை நாட்டப் பட்டு விட்டல், நம்முடைய இயக்கம் வெற்றி அடைவது பற்றி எனக்கு யாதொரு சந்தேகமும் இல்லை” என்று மகாத்மா கூறினார். பின்னர் இராட்டையின் தத்துவத்தைப் பற்றித் தம்முடைய கருத்துக்களை அவர்களுக்கு தெளிவாக எடுத்துக் கூறினார். காந்திஜி ஒரு ஊருக்குப்போய் ஜாகையில் இறங்கியவுடனே அவரைப் பார்ப்பதற்கு அந்த ஊர்ப் பிரமுகர்கள் பலர் வருவது வழக்கம். அப்படி வருகிறவர்கள் எல்லாரும் காந்திஜியிடம் பக்தி கொண்டவர்கள் என்றோ அவருடைய போதனைகளைக் கடைப்பிடிக்கிறவர்கள் என்றோ சொல்ல முடியாது. “கந்திஜியைப் பார்த்துப் பேசினேன்” என்று பெருமையுடன் சொல்லிக் கொள்வதற்காகவே பலர் வந்து சேர்வார்கள். இப்படிப்பட்ட வீண் பெருமைக்காரர்கள் வந்து மகாத்மாவைப் பார்த்துப் பேசுவதற்குத் திருநெல்வேலியில் ஒரு தடை ஏற்பட்டது. மௌலானா ஆஸாத் ஸோபானி காந்திஜியுடன் பிரயாணம் செய்தார் அல்லவா? காந்திஜி முழத்துண்டு விரதம் கொண்டது பற்றி மதுரையிலிருந்து திருநெல்வேலி போகும்போது மௌலானா ஆஸாத் யோசனை செய்தார். இஸ்லாமிய மதக் கொள்கையின்படி இன்றியமையாத உடையை மட்டும் அணிந்து கொண்டு மற்றதை யெல்லாம் அவரும் புறக் கணித்தார். இடுப்பில் லுங்கியும் மேலே ’வெயிஸ்ட் கோட்“டும் அணிந்துகொண்டு அசல் முஸ்லிம் ’பக்கிரி’யைப் போல் தோற்றம் கொண்டார். திருநெல்வேலியில் காந்திஜி தங்கிய ஜாகையில், அவர் தங்கியிருந்த அறைக்கு வெளிப்புறத்து அறையில் இவர் உட்கார்ந்து கொண்டார். மகாத்மாவைப் பார்க்க வருகிறவர்களிடம்,”உங்கள் உடம்பின் மேல் உள்ள விதேசித் துணிகளைக் இங்கே களைந்து எறிந்துவிட்டு உள்ளே மகாத்மாவைப் பார்க்கப் போங்கள்!" என்று சொன்னார். வந்தவர்களில் சிலர் மனப்பூர்வமாக விதேசித் துணிகளைக் கழற்றிக் கொடுத்தார்கள். ஒரு சிலர் வேறு வழியில்லாத படியால் மனமின்றிக் கொடுத்தார்கள். இன்னும் சிலர் விதேசித் துணிகளைக் கொடுக்க மனமில்லாமல் “மகாத்மாவைப் பார்க்கவேண்டாம்” என்று திரும்பி ஓடியே போய்விட்டார்கள். இவ்வாறு வீணர்கள் வந்து மகாத்மாவின் ஓய்வைக் கெடுப்பதற்கு ஒரு முட்டுக்கட்டை திருநெல்வேலியில் ஏற்பட்டது. விதேசித் துணிகளைத் தியாகம் செய்யத் துணிந்து காந்திஜியைத் திருநெல்வேலியில் வந்து பார்த்தவர்களில் ஒருவர் திருவாங்கூர் சமஸ்தானத்தைச் சேர்ந்தவர். அவர் சென்னை மாகாணத்தில் தீண்டா வகுப்பார் அநுபவிக்கும் இன்னல்களைப்பற்றி மகாத்மாவிடம் எடுத்துச் சொன்னார். தீண்டாதார் ஹிந்துக்களா யிருந்த போதிலும் அவர்கள் ஹிந்து ஆலயங்களில் விடப்படுவதில்லை யென்ற அநீதியைப் பற்றி உருக்கமாகக் கூறினார். இந்த அநீதியைப் போக்குவதற்காகத் திருவாங்கூரில் சில சீர்திருத்த வாதிகள் ஆலயப் பிரவேச இயக்கம் ஆரம்பிக்க விரும்புவதாவும் அவர் தெரிவித்தார். “என்ன மாதிரி இயக்கம் ஆரம்பிக்க உத்தேசம்?” என்று காந்திஜி கேட்டார். “முக்கியமான கோவில் ஒன்றில் உற்சவம் நடக்கப் போகிறது. அச்சமயம் ஒரு பெரிய தீண்டார் கும்பலை அழைத்துக் கொண்டு கோயிலுக்குள் பிரவேசிப்போம். அதை அரசாங்க அதிகாரிகளும் மற்ற ஹிந்துக்களும் தடுத்தாலும் நாங்கள் பின்வாங்கப்போவதில்லை. பலவந்தமாகப் பிரவேசித்தே தீர்வோம்” என்றார் வந்தவர். “கலகம் நேர்ந்தால்?” என்று மகாத்மா கேட்டார். “கலகம் நேர்ந்தாலும் நேரட்டும் அதற்காக நாம் என்ன செய்வது?” என்றார் வந்த மனிதர். அது சரியான மனோபாவம் அல்ல என்பதை மகாத்மா காந்தி அவருக்கு எடுத்துக்காட்டினார். “தீண்டாமை பெரிய அநீதிதான். ஹிந்துக்களில் ஒரு பகுதியாரை ஆலயங்களில் விடுவதில்லை என்பது பெருங்கொடுமைதான். ஆனால் அநீதியையும் கொடுமையையும் பலாத்காரத்தினால் போக்க முடியாது. தீண்டாமை போக வேண்டுமானால் சாதி ஹிந்துக்களின் மனம் மாற வேண்டும். பலாத்காரத்தினால் சாதி ஹிந்துக்களின் மனதை மாற்ற முடியாது. குரோதமும் துவே ஷமும் அதிகமாகும். ஆகையால் ஆலயங்களுக்குள் போவதாயிருந்தால், இரண்டு பேர் அல்லது மூன்று பேராகப் போங்கள். பலாத்காரத்தைக் கையாள வேண்டாம். அதிகாரிகள் சிறைக்கு அனுப்பினால் செல்லுங்கள் இதுதான் சரியான முறை. இப்போது நான் இந்தியாவின் விடுதலையைக் கருதி ஒத்துழையாமை இயக்கத்தை நடத்திக் கொண்டிருக்கிறேன். எனக்கு நீங்கள் கொஞ்சம் அவகாசம் கொடுத்தால் தேச விடுதலை இயக்கம் முடிவடைந்த பிறகு நானே ஆலயப் பிரவேச இயக்கத்தையும் முன்னின்று நடத்துவேன்!” என்றார் காந்திமகான். தீண்டாமையின் கொடுமையைப் பற்றி ஏற்கனவே மகாத்மாவுக்குத் தெரிந்துதானிருந்தது. தீண்டாமை விலக்கைக் காங்கிரஸ் திட்டங்களில் ஒன்றாகச் சேர்த்திருந்தார். ஆயினும் மேற்படி சம்பாஷணையின் பயனாக மகாத்மாவின் மனம் தீண்டாமை விலக்குப் பற்றி அதிகமாகச் சிந்திக்கத் தொடங்கியது. பிற்பாடு மகாத்மா காந்தி பேசிய இடங்களில் எல்லாம் தீண்டாமை விலக்கைப் பற்றியும் அதிகமாக வற்புறுத்திப் பேசலானார். பின்னால் ஒத்துழையாமை இயக்கத்தை நிறுத்தி வைக்க நேர்ந்தபோது, காந்திஜி தீண்டாமை விலக்கிலும் ஆலயப் பிரவேச இயக்கத்திலும் பூரணமாகக் கவனம் செலுத்தியதை நாம் அறிவோம் அல்லவா? காந்தி மகாத்மாவின் பெரு முயற்சியினால் ஹிந்து சமூக்துக்கு ஏற்பட்டிருந்த தீண்டாமை என்னும் நோய் நம்முடைய காலத்திலேயே தொலைந்து ஒழிந்து போனதைப் பார்த்தோம். திருநெல்வேலியிலிருந்து மகாத்மா திரும்பி மதுரை திருச்சி வழியாக ஈரோட்டுக்கு வந்தார். ஈரோட்டில் அச்சமயம் சிறந்த காங்கிரஸ் தலைவராக விளங்கிய ஸ்ரீ ஈ.வே. இராமசாமி நாயக்கர் அவர்களின் இல்லத்தில் தங்கினார். ஈரோட்டில் சிற்றாற்றாங்கறையில் ஒரு விசாலமான ஆலமரத்தின் அடியில் பொதுக்கூட்டம் மிக அமைதியாக நடந்தது. பல சமூகங்களின் சார்பாக வேலைப்பாடு அமைந்த வெள்ளிப் பேழைகளில் உபசாரப் பத்திரங்கள் மகாத்மாவுக்கு அளிக்கப்பட்டன. வெள்ளிப் பெட்டிகளையெல்லாம் பொதுக்கூட்டத்தில் ஏலம் போட்டுக் கிடைத்த பணம் திலகர் சுயராஜ்ய நிதியில் சேர்க்கப் பட்டது. மகாத்மாவுக்கு எங்கே எந்த விதமான பரிசுப் பொருள் கிடைத்தாலும் அங்கேயே ஏலம் போட்டு ஏதேனும் ஒரு பொது நிதியில் சேர்த்துவிடுவது வழக்கம். பொது நிதிகள் சேர்ப்பதில் மகாத்மாவுக்கு இணையான ஆற்றல் வாயந்தவர் யாருமே கிடையாது. அப்போதெல்லாம் பல பெண்மணிகள் மகாத்மாவை தரிசிக்கப் பக்தியுடன் வருவார்கள். தமிழ்நாட்டுப் பெண்மணிகள் நிறைய நகைகள் அணிந்து கொண்டிருப்பது வழக்கமல்லவா? தம்மைப் பார்க்கவரும் பெண்மணிகளைப் பார்த்து “இந்த நகைகளை எதற்காகச் சுமக்கிறீர்கள்? என்னிடம் கழற்றிக் கொடுத்து விடுங்கள். நல்ல காரியத்துக்குப் பயன் படுத்துகிறேன்” என்று காந்திஜி கூசாமல் கேட்டு விடுவார். இந்த வழக்கத்தை அறிந்த பிறகு பெண்மணிகள் மகாத்மாவின் அருகில் போய் அவரைத் தரிசித்துப் பேச வேண்டும் என்ரு ஆசைப்படுவது குறைந்து போயிற்று. ஈரோட்டிலிருந்து கோயமுத்தூருக்குப் போய்ப் பிறகு காந்திஜி சேலத்துக்குப் போன போது ஒரு சிறு சம்பவம் நிகழ்ந்தது. அப்போது சேலம் டாக்டர் வரதராஜுலு நாயுடு காங்கிரஸ் முன்னணித் தலைவர்களில் ஒருவராயிருந்தார். அவர் தமது குடும்பத்துடன் மகாத்மாவைப் பார்ப்பதற்கு வந்தார். டாக்டர் நாயுடுவின் குமாரி, ஏழு வயதுப் பெண். கையில் பொன் வளையல்கள் அணிந்திருந்தாள். மகாத்மாஜி அதைப் பார்தததும் “இந்த வளையல்கள் உனக்கு என்னத்திற்கு? எனக்குக் கொடுத்துவிடு!” என்றார். மகாத்மா கூறியதை ஸ்ரீ நாயுடு தமிழில் குழந்தைக்குச் சொன்னார். குழந்தை உடனே வளையல்களைக் கழற்றிக் கொடுத்து விட்டாள். “நான் விளையாட்டாகக் கேட்டேன். அம்மா! நீயே வைத்துக்கொள்!” என்று மகாத்மா பலதடவை சொல்லியும் அந்தக் குழந்தை கேட்கவில்லை. மகாத்மாவிடமிருந்து வளையல்களைத் திரும்பப் பெற்றுக்கொள்ளக் கண்டிப்பாக மறுத்து விட்டாள். நாகபுரி காங்கிரஸின் அக்கிராசனர் சேலம் ஸ்ரீ சி. விஜயராகவாச்சாரியார் அல்லவா நியாயமாக, அந்த வருஷத்தில்காங்கிரஸ் வேலைகள் எல்லாம் ஸ்ரீ விஜயராகவாச்சாரியாரின் தலைமையில் நடைபெறவேண்டும். அதற்குப் பதிலாக மகாத்மாவிடமும் அவருடைய சகாக்களிடமும் காங்கிரஸ் திட்டங்களை நிறைவேற்றும் பொறுப்பு வந்துவிட்டது. எனினும், பெருந் தன்மைமிக்க மகாத்மா சேலத்தில் ஸ்ரீ விஜயராகவாச்சாரியாரைப் பார்ப்பதற்கு அவருடைய வீட்டுக்குச் சென்று சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டுத் திரும்பினார். சேலம் நகர சபையார் காந்தி மகாத்மாவுக்கு மிக வேலைப் பாடமைந்த சந்தன மரப்பெட்டி ஒன்றில் உபசாரப் பத்திரம் வைத்துக்கொடுத்தார்கள். அந்தச் சந்தன மரப்பெட்டி அப்போது சென்னைக் கவர்னராக வந்திருந்த லார்ட் வில்லிங்டனுக்காக செய்யப்பட்டது. ஆனால் அதை வில்லிங்டனுக்கு கொடுப்பதற்குள்ளே ஒத்துழையாமை இயக்கம் தோன்றிவிட்டது! தமிழ் நாட்டில் ஒத்துழையாமை இயக்கத்துக்குத் தலைமை வகித்த ஸ்ரீ சக்கரவர்த்தி இராஜகோபாலாச்சாரியார் சேலத்தைச் சேர்ந்தவர். சேலம் ஜில்லா அந்த இயக்கத்தின் முன்னணியில் நின்றது. மற்ற எந்தத் தமிழ் நாட்டு நகரத்தைக்காட்டிலும் சேலத்தில் அதிகமான வக்கீல்கள் தங்கள் தொழிலை நிறுத்தி மகாத்மாவின் இயக்கத்தில் சேர்ந்தார்கள். அப்படிப்பட்ட சேலத்தில் நகரசபையும் தேசீய மனப்பான்மையும் கொண்டிருந்தது. கவர்னருக்கு வரவேற்பு அளிக்கும் உத்தேசத்தை அடியோடு கைவிட்டுச் சேலம் நகர சபையார் கவர்னருக்காகத் தயாரித்திருந்த சந்தனப் பெட்டியை மகாத்தமா காந்திக்குக் கொடுத்ததில் வியப்பில்லையல்லவா? லார்டு வில்லிங்டனுக்கு அந்தப் பெட்டியைக் கொடுத் திருந்தால் லேடி வில்லிங்டன் இந்தியாவிலிருந்து கொண்டு போன எத்தனையோ விலையுயர்ந்த பொருள்களுடன் அதுவும் இங்கிலந்துக்குப் போயிருக்கும். ஆனால் மகாத்த்மாவுக்குக் கொடுத்த பெட்டி சேலத்திலேயே ஏலத்துக்கு விடப்பட்டு விட்டது. தமக்காகச் செய்த பெட்டியை மகாத்மா பெற்றுக் கொண்டார் என்ற விவரம் லார்டு வில்லிங்டனுக்குத் தெரியாமலிருக்க முடியுமா? தெரிந்துதானிருக்கும். அதை அவர் ஞாபகம் வைத்துக் கொண்டிருந்தாரா என்பது நமக்குத் தெரியாது. ஆனால் ஒன்று தெரியும். லார்டு இர்வின் 1931ஆம் வருஷக் கடைசியில் வைஸராய் பதவியிலிருந்து விலகி இங்கிலாந்து போனதும் லார்டு வில்லிங்டன் அந்தப் பதவிக்கு வந்து சேர்ந்தார். லார்டு வில்லிங்டன் செய்த முதற்காரியம் லண்டன் வட்டமேஜை மகாநாட்டிலிருந்து திரும்பி வந்த மகாத்மா காந்தியைக் கைது செய்து சிறைக்கு அனுப்பியதுதான்! மகாத்மா காந்திக்கு பேட்டி கொடுக்கவும் லார்டு வில்லிங்டன் இணங்க வில்லை. “சட்ட மறுப்பைக் கைவிட்டுச் சரணாகதி அடைந்தால் தான் பேட்டி கொடுக்கமுடியும” என்றார். ‘அதற்கு இஷ்டம் இல்லாவிட்டால் போங்கள் சிறைக்கு என்றார். இதைப்பற்றிப் பின்னால் விவரமாகப் பார்ப்போம். சேலத்தில் காங்கிரஸ் ஊழியர்கள் பலர் மகாத்மாவைப் பேட்டி கண்டார்கள். மேலே நடக்கவேண்டிய காரியங்களைப் பற்றிக் கேட்டார்கள். “இங்கிருந்து நேரே நான் குஜராத்துக்குப் போகிறேன். அடுத்த மூன்று மாதமும் குஜராத்தில் தான் இருப்பேன். சாத்வீகச் சட்ட மறுப்புப் போரை ஆரம்பிப்பதற்குக் குஜராத்தைத் தயார் செய்வேன்!” என்று மகாத்மா காந்தி சேலம் காங்கிரஸ் ஊழியர்களிடம் கூறினார். “ஒரு வருஷத்தில் சுயராஜ்யம்” என்று மகாத்மா கூறினார் அல்லவா? அந்தத் தவணை நெருங்கி வந்து கொண்டிருந்தது. அது நெருங்க நெருங்க மகாத்மாவின் இதய தாபமும் அதிகமாகிக் கொண்டிருந்தது. வேறு எந்தக் காரியத்திலும் அவருடைய மனது செல்லவில்லை. சுயராஜ்யத்துக்காக நடத்த வேண்டிய இறுதிப் போரைப் பற்றியே மகாத்மா காந்திஜியின் உள்ளம் சிந்திக்கத் தொடங்கியது. பர்தோலி – ஆனந்த் இந்தியாவின் சுதந்திர சரித்திரத்திலும் மகாத்மா காந்தியின் வாழ்க்கையிலும் “பர்தோலி” என்னும் பெயர் மிகவும் முக்கியமானது. பாரத நாட்டுக்குப் பர்தோலிதான் விடுதலை தேடித்தரப் போகிறது என்று 1921 ஆம் ஆண்டின் இறுதியில் அனைவரும் நம்பியிருந்தார்கள். காந்திஜி இந்தியாவின் சுதந்திரத்துக்கான இறுதிப் போரைப் பர்தோலியிலேதான் ஆரம்பித்து நடத்துவது என்று தீர்மானித்திருந்தார். மகாத்மா எண்ணியபடி பர்தோலியில் இறுதிப் போர் நடைபெறவில்லை. ஆயினும் பர்தோலியின் மூலமாகக் காந்தி மகானுடைய சத்திய ஜோதி சுடர்விட்டு ஒளிர்ந்தது. இது எப்படி என்பதை இந்த அத்தியாயத்திலும் வரும் அத்தியாயங்களிலும் பார்க்கப் போகிறோம். செப்டம்பர் மாதக் கடைசியில் சேலத்துக் காங்கிரஸ் தொண்டர்களிடம் காந்திஜி “வருகிற மூன்று மாதமும் நான் குஜராத்திலேயே இருப்பேன்” என்று சொன்னார் அல்லவா? இதற்குக் காரணம் என்ன? ஒத்துழையாமைத் திட்டம் மகாத்மா காந்தி எதிர்பார்த்தபடி பூரணமாக நிறைவேறவில்லை. வக்கீல்களில் நூற்றுக்கு ஒருவர் தான் தொழிலை நிறுத்தினார்கள். மாணவர்களிலும் நூற்றுக்கு ஒருவர் வீதந்தான் சர்க்கார் கல்வி நிலையங்களைப் பகிஷ்கரித்தார்கள். சட்டசபைகளிலோ, அதிகார வர்க்கத்தார் சொல்லுகிறபடி கையைத் தூக்கும் அங்கத்தினர்கள் நிறைந்திருந்தார்கள். ஸர். திவான்பகதூர், ராவ் பகதூர் பட்டதாரிகளில் மிக மிகச் சிலரே பட்டங்களைத் துறந்தார்கள். நாடெங்கும் மகாத்மா சென்ற இடங்களில் எல்லாம் அன்னியத் துணிக் குவியல்கள் எரிக்கப்பட்டன. ஆயினும் மகாத்மா காந்தி விரும்பிய அளவு இராட்டையும் கதர் இயக்கமும் பரவவில்லை. இவ்விதம் மகாத்மா காந்தி கூறிய திட்டங்களைச் சரிவர நிறைவேற்றாமலிருந்த போதிலும், நாடெங்கும் பொதுமக்கள் போக்குக்கும் மகாராஷ்டிரத் தலைவர்களின் மனப் போக்குக்கும் இருந்த வேற்றுமை நன்கு வெளியாயிற்று. மகாத்மா தயாரித்திருந்த அறிக்கையை வரி வரியாகவும் வார்த்தை வார்த்தையாகவும் ஸ்ரீ வித்தல்பாய் படேல், ஸ்ரீ கேல்கர், ஸ்ரீ ஜயக்கர், டாக்டர் மூஞ்சே ஆகியவர்கள் ஆட்சேபித்தார்கள். காந்திஜியின் கட்சியைத் தாங்கி நின்று மேற்படி ஆட்சேபங்களுக் கெல்லாம் பளிச்சுப் பளிச்சென்று ராஜாஜி பதில் சொன்னார். லாலா லஜபதிராயும் பண்டித மோதிலால் நேருவும் ஒருவாறு சமரசப்படுத்த முயன்றார்கள். கடைசியாக, சிற்சில மாறுதல்களுடன் மகாத்மா காந்தி தயாரித்த அறிக்கை எல்லாத் தலைவர்களாலும் ஒப்புக் கொள்ளப்பட்டது. பலம் பொருந்திய பிரிட்டிஷ் சர்க்காருடன் மகாத்மா ஒரு மகத்தான இறுதிப் போராட்டத்தைத் தொடங்க யத்தனித்துக் கொண்டிருந்தார். இரவு பகல் இருபத்துநாலு மணி நேரமும் அதே சிந்தனையில் ஆழ்ந்திருந்தார். இப்படிப்பட்ட சந்தர்ப்பத்தில் மதிப்புக்குரிய தலைவர்கள் சிலர் சில்லறை ஆட்சேபங்களையெல்லாம் கிளப்பிக்கொண்டிருந்தது மகாத்மாவின் மனதை ஓரளவு புண்படுத்தியது. ஆயினும் இதைப் பற்றி அதிகமாக நினைப்பதற்குச் சாவகாசம் இருக்கவில்லை. ஏனெனில் அன்றைய தினமே, “காந்திஜியைக் கைது செய்யப்போகிறார்கள்” என்ற வதந்தி ஒன்று பரவியது. இது காந்திஜியின் காதுக்கும் எட்டியது. “அலி சகோதரர்கள் செய்த அதே குற்றத்தை நானும் செய்கிறேன்” என்று மகாத்மா காந்தி சொல்லிவிட்டுத் தமிழ் நாட்டில் அதே பேச்சைப் பேசியிருந்தார் அல்லவா? ஆகையால் தம்மைக் கைது செய்யலாம் என்ற வதந்தியைக் காந்திஜி நம்பவேண்டியதாக இருந்தது. ஆகவே, “என்னைக் கைது செய்தால்” என்னும் தலைப்புப் போட்டு அன்றிரவே “எங் இந்தியா” வுக்கு ஒரு கட்டுரை எழுதினார். ஆனால் கைது செய்யப்படுவதற்காகப் பம்பாயிலேயே காத்திருக்க மகாத்மா விரும்பவில்லை. அவர் போட்டிருந்த திட்டத்தின்படி மறுநாள் காலையில் ஆமதாபாத்துக்குப் புறப்பட்டார். கொலாபா ஸ்டேஷனில் எண்ணற்ற ஜனங்கள் வந்திருந்து மகாத்மாவை வழி அனுப்பினார்கள். வந்திருந்தவர்கள் அவ்வளவு பேர் தலையிலும் வெள்ளைக் கதர்க் குல்லா (காந்தி குல்லா) விளங்கியது கண்டு மகாத்மா திருப்தியடைந்தார். ஆயினும் மக்களுடைய இந்த உற்சாக மெல்லாம் நல்ல முறையில் உபயோகப்பட்டு நல்ல பலனை அளிக்கவேண்டுமே? பம்பாயிலிருந்து ஆமதாபாத் சென்று சில தினங்கள் சபர்மதி சத்தியாக்கிரஹ ஆசிரமத்தில் மகாத்மா தங்கியிருந்தார். அங்கிருந்தபடியே குஜராத்தின் பற்பல பகுதிகளிலும் நடந்து வரும் வேலையைப் பற்றித் தெரிந்து கொள்ளலானார். ஆங்காங்கு வேலை செய்து கொண்டிருந்த தலைவர்களும் தொண்டர்களும் ஆசிரமத்துக்கு வந்து மகாத்மாவுக்கு நிலைமையை அறிவித்தார்கள். இப்படி வந்தவர்களில் இருவர் சூரத் நகரத்திலிருந்து வந்தவர்கள். ஒருவருடைய பெயர் கல்யாண்ஜி. இன்னொருவரின் பெயர் தயாள்ஜி. இந்த இரண்டு பேரும் மகாத்மாவின் பரம பக்தர்கள். தேசத்துக்காகப் பரிபூரணத் தியாகம் செய்தவர்கள். ஸ்ரீ தயாள்ஜி தம்முடைய சொத்து முழுவதையும் (ஒரு ரூபாய் கூடத் தமக்கென்று வைத்துக் கொள்ளாமல்) திலகர் சுயராஜ்ய நிதிக்குக் கொடுத்து விட்டவர். இவர் சூரத் ஜில்லா காங்கிரஸ் கமிட்டியின் தலைவர். ஸ்ரீ கல்யாண்ஜி மேற்படி கமிட்டியின் காரியதரிசி. இருவரும் சூரத்தில் இரண்டு “சுயராஜ்ய ஆசிரமங்கள்” நடத்தி வந்தார்கள். ஒவ்வொரு ஆசிரமத்திலும் பல இளைஞர்கள் தேசத் தொண்டுக்குப் பயிற்சி செய்விக்கப் பட்டார்கள். பயிற்சி முடிந்ததும் அத்தொண்டர்கள் ஜில்லாவின் பலபகுதிகளிலும் வேலை செய்வதற்கு அனுப்பப்பட்டு வந்தார்கள். இவ்வளவு அருமையான வேலை செய்து வந்த தயாள்ஜியும் கல்யாண்ஜியும் சபர்மதி ஆசிரமத்துக்கு மகாத்மா திரும்பி வந்த செய்தி அறிந்ததும் அவரைப் பார்ப்பதற்காக வந்து சேர்ந்தார்கள். சூரத் ஜில்லாவில் நடந்திருக்கும் நிர்மாண வேலைகளைப் பற்றி மகாத்மாவிடம் சொன்னார்கள். முக்கியமாக, சூரத் ஜில்லாவைச் சேர்ந்த பர்தோலி தாலுகாவில் மகாத்மாவின் நிபந்தனைகள் எல்லாம் நிறைவேறி யிருக்கின்றன வென்றும், அங்கே பொதுஜனச் சட்ட மறுப்பு இயக்கத்தை ஆரம்பிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்கள். ஆனால் கல்யாண்ஜி, தயாள்ஜி இவர்களுடன் தீவிரமாகப் போட்டியிட இன்னொரு மனிதர் முன்வந்தார். அவர் பெயர் அப்பாஸ் தயாப்ஜி. அவர் தொண்டு கிழவர். பரோடா சமஸ்தான ஹைகோர்ட்டில் தலைமை நீதிபதியாக இருந்து விலகியவர். எல்லையற்ற தேசபக்தி வாய்ந்தவர்; காந்திஜியிடம் இணையில்லா அன்பு கொண்டவர்; இவர் கெயிரா ஜில்லாவில் ஆனந்த் என்னும் தாலுகாவில் பொது ஜனச் சட்ட மறுப்பு இயக்கத்தை முதன் முதலில் ஆரம்பிக்க வேண்டும் என்று வற்புறுத்தினார். மகாத்மாவிடம் அன்பு நிறைந்த கோபத்துடன் அப்பாஸ் தயாப்ஜி பேசினார். அவர் கூறியதாவது: “நீங்கள் கூறிய நிபந்தனையெல்லாம் நிறைவேற்றி விட்டோம். இன்னும் ஏதாவது நிபந்தனை உண்டானால், சொல்லி விடுங்கள். எல்லாவற்றையும் இப்போதே ஒரேயடியாகச் சொல்லி விடுங்கள். புதிய புதிய நிபந்தனைகளை நினைத்து நினைத்துக் கொண்டு சொல்லாதீர்கள். நீங்கள் இதுவரையில் சொன்ன காரியம் எதை நாங்கள் நிறேவேற்ற வில்லை? திலகர் சுயராஜ்ய நிதிக்கு என்ன பணம் கேட்டீர்களோ, அதைக் கொடுத்து விட்டேன். என்னைப் பாருங்கள்! வயது எனக்கு எழுபத்தைந்துக்கு மேல் ஆகிறது. இந்த வயதில் நீங்கள் சொன்னதற்காக நானே இராட்டையில் நூல் நூற்கிறேன். முரட்டுக் கதர்த்துணி உடுத்திக் கொண்டிருக்கிறேன். ஆனந்த் தாலுகாவில் ஒவ்வொரு கிராமத்துக்கும் நான் போனேன். அப்படிப் போனதினால் என் கிழ உடம்பிற்குள்ளேயிருக்கும் எலும்புகள் எல்லாம் இன்னும் வலிக்கின்றன. ஆயினும் நான் பொருட்படுத்தவில்லை. கிராமங்களில் ஜனங்கள் அவ்வளவு உற்சாகமாயிருக்கிறார்கள். நீங்கள் சொன்ன திட்டங்களையெல்லாம் நிறைவேற்றி யிருக்கிறார்கள். இன்னும் என்ன செய்யச் சொன்னாலும் செய்யக் காத்திருக்கிறார்கள். நீங்களே நேரில் வந்து பார்த்துக் கொள்ளுங்கள். சால்ஜாப்பு மட்டும் சொல்ல வேண்டாம். தள்ளிப் போட வேண்டாம். மூன்று வருஷத்துக்கு முன்னால் கெயிரா ஜில்லாவில் நீங்கள் வரிகொடா இயக்கம் ஒரு தடவை நடத்தினீர்கள். ஆகையால் கெயிரா ஜனங்கள் ஏற்கெனவே உங்கள் கொள்கைகளை அறிந்திருக்கிறார்கள். உங்கள் முறைகளில் பயிற்சி பெற்றிருக் கிறார்கள். ஆகையால் கெயிரா ஜில்லாவுக்குத்தான் இப்போது நீங்கள்ல் முதல் பெருமையைக் கொடுக்க வேண்டும். ஆனந்த் தாலுகாவில்தான் பொது ஜனச் சட்ட மறுப்பை முதலில் ஆரம்பிக்க வேண்டும். அப்பாஸ் தயாப்ஜி இவ்விதம் பேசியபோது குஜராத் மாகாணத்தைச் சேர்ந்த பல தலைவர்களும் தொண்டர்களும் அங்கே இருந்தார்கள். அவர்களுடைய மனமெல்லாம் உருகி விட்டன. வாழ்க்கையில் எவ்வளவோ உயர்ந்த அந்தஸ்துடன் வாழ்ந்த இம்மனிதர், இவ்வளவு தள்ளாத வயதிலும், சிறைபுகவும் கஷ்டப்படவும் தயாராக முன் வந்திருப்பதை நினைத்து வியந்தார்கள். ஆனால் காரியத்திலேயே கண்ணாயிருந்த சூரத்காரர்கள் விட்டுக்கொடுத்து விடவில்லை. அவர்கள் பர்தோலியிலேதான் சட்ட மறுப்பு ஆரம்பிக்க வேண்டும் என்று வற்புறுத்தினார்கள். ஸ்ரீ கல்யாண்ஜி கூறியதாவது:“ஆங்கிலேயர் முதன் முதலில் சூரத் வழியாகத்தான் இந்தியாவுக்குள் புகுந்தார்கள். சூரத்திலேதான் முதன் முதலில் அவர்கள் வியாபாரக் கிடங்குகள் ஏற்படுத்திக் கொண்டு கோட்டையும் கட்டிக் கொண்டார்கள். இங்கிருந்துதான் அவர்களுடைய வியாபாரம் பெருகிற்று; அரசியல் ஆதிக்கமும் பரவிற்று. ஆகையால் ஆங்கிலேயரின் ஆதிக்கத்தை முடிவு செய்யும் கடைசி இயக்கத்தைச் சூரத் ஜில்லாவில் தொடங்குவதுதான் நியாயம். விஷம் எந்த வழியாக ஏறியதோ, அந்த வழியாகத்தான் இறங்க வேண்டும் இங்கிலீஷ்காரர்கள் எந்த வாசல் வழியாக முதலில் நுழைந்தார்களோ, அந்த வாசல் வழியாகவே அவர்களை வெளியேற்ற வேண்டும். சூரத் அப்போது செய்த பாவத்துக்கு இப்போது பிராயச் சித்தம் செய்ய ஒரு சந்தர்ப்பம் கொடுங்கள். பர்தோலியில் பொதுஜனச் சட்ட மறுப்பை ஆரம்பியுங்கள். நீங்கள் கூறிய எல்லாவித நிபந்தனைகளையும் பர்தோலியில் நிறைவேற்றியிருக்கிறோம். நேரில் வந்து பார்த்துக் கொள்ளுங்கள்.” ஸ்ரீ கல்யாண்ஜியின் வாதமும் அவருடைய பிடிவாதமும் எல்லாருடைய மனதையும் கவர்ந்தன. கடைசியில் மகாத்மா காந்தி சொன்னதாவது: “ஆகட்டும், நான் நேரில் வந்து பர்தோலி, ஆனந்த் இரண்டு தாலுகாக்களையும் பார்க்கிறேன். பார்த்த பிறகு, எந்தத் தாலுகா அதிகத் தகுதி பெற்றிருக்கிறதோ அங்கே இயக்கத்தை ஆரம்பிக்கலாம். இரண்டு தாலுகாக்களும் தயாராயிருந்தால் இரண்டிலும் ஆரம்பித்து விடுவோம்.” இவ்விதம் இரு தரப்பாரும் திருப்தி யடையும்படி மகாத்மா பதில் கூறியதுடன், தாம் வந்து பார்ப்பதற்குள்ளே இன்னும் தீவிரமாக வேலை செய்து வைக்கும்படியும் சொல்லி அனுப்பினார். தாழி உடைந்தது! 1921 ஆம் வருஷத்தின் முடிவுக்குள் இந்தியாவின் விடுதலைக்காக ஒரு பெரும் போராட்டத்தை ஆரம்பிக்க மகாத்மா விரும்பினார். அந்தப் போராட்டத்தில் பொதுஜனச் சட்ட மறுப்பு என்னும் ஆயுதத்தை உபயோகிக்க எண்ணியிருந்தார். ஆனால் இந்த ஆயுதத்தை உபயோகிப்பது நெருப்புடன் விளையாடுவதைப்போல் கடினமானது என்பதைக் காந்தி மகான் அறிந்திருந்தார். ஆகையால் எல்லாவிதமான முன் ஜாக்கிரதையும் செய்து கொள்ள அவர் விரும்பினார். அந்த நாளில் தேசமெங்கும் தேசீய உற்சாகம் ததும்பிக் கொண்டிருந்தது. எனவே பர்தோலி ஆனந்த் தாலுகாக்களில் மகாத்மா பொதுஜனச் சட்டமறுப்பை ஆரம்பித்தவுடனே நாட்டின் மற்றப் பகுதிகளிலும் உற்சாகிகள் அந்த இயக்கத்தை ஆரம்பித்து விடலாம். ஆனால் பர்தோலி ஆனந்தில் பொது ஜனங்கள் சட்ட மறுப்புக்குத் தயார் செய்யப்பட்டிருந்தார்கள். அப்படி தயார் செய்யப் படாத இடங்களில் சட்ட மறுப்பு ஆரம்பித்து விட்டால் என்ன விபரீதம் ஏற்படும் என்று சொல்ல முடியாது. ஆகையால், சட்டமறுப்பு சம்பந்தமான நிபந்தனைகளை ஐயமறத் தேசத்துக்கு அறிவித்து விட வேண்டியது அவசியம் என்று காந்திஜி கூறினார். இதற்கு ஒரு சந்தர்ப்பம் நவம்பர் 4 ஆம் தேதி டில்லியில் கூடிய அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிக் கூட்டத்தில் கிடைத்தது. சட்டமறுப்பு சம்பந்தமாக முடிவான தீர்மானம் செய்வதற்காகவே இந்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் கூட்டம் கூட்டப்பட்டது. முதல் நாள் காரியக் கமிட்டியின் கூட்டம் நடந்தது. மகாத்மா தயாரித்திருந்த நகல் தீர்மானம் விவாதத்துக்கு வந்தது. இந்த நகல் தீர்மானத்தில் காந்திஜி சட்ட மறுப்புத் தொடங்குவதற்கு மிகக் கடுமையான சில நிபந்தனைகளை விதித்திருந்தார். ஒரு பகுதியில் பொதுஜனச் சட்டமறுப்பு தொடங்குவதாயிருந்தால் அந்தப் பகுதியில் 100 க்கு 90 பேர் கதர் அணிகிறவர்களாயிருக்க வேண்டும் என்று வற்புறுத்தினார். தனிப்பட்ட முறையில் யாரேனும் சட்டமறுப்புச் செய்ய விரும்பினால் அவருக்கு இராட்டையில் நூற்கத் தெரிந்திருக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்தார். இந்த நிபந்தனைகள் சில தலைவர்களுக்குப் பிடிக்கவே இல்லை. ஸ்ரீ என்.சி.கேல்கர், ஸ்ரீ வித்தல் பாய் படேல் ஆகியவர்கள் மிகக் கடுமையாக எதிர்த்தார்கள். பண்டித மோதிலால் நேருவும், ஸ்ரீ லஜபதிராயும் நிபந்தனைகளைக் கொஞ்சம் தளர்த்திவிட முயன்றார்கள். தேசபந்துதாஸ் இக்கூட்டத்தில் மகாத்மாவைப் பூரணமாக ஆதரித்தார். சட்டமறுப்பு இயக்கத்தை நடத்தி இந்தியாவுக்கு விடுதலை தேடித்தரக்கூடியவர் மகாத்மா காந்தி ஒருவர்தான் என்று எல்லாத் தலைவர்களுக்கும் தெரிந்தது. ஆனாலும் மகாத்மா காந்தி நடத்தவேண்டிய இயக்கத்துக்கு அவர் கூறிய நிபந்தனைகளை ஒப்புக் கொள்ளச் சில தலைவர்கள் விரும்பவில்லை! கடைசியில் பண்டித மோதிலால் நேருவின் யோசனையின் பேரில் “100 க்கு 90 பேர் கதர் உடுத்தியிருக்க வேண்டும்”என்னும் நிபந்தனை “மிகப் பெரும்பாலோர் கதர் உடுத்தியிருக்க வேண்டும்” என்று மாற்றப்பட்டது . 4ஆம் தேதி நடந்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிக் கூட்டத்தில் மேற்படி சமரசத் தீர்மானம் நிறைவேறியது. அத்தீர்மானம் வரி கொடாமை உள்பட பொதுஜனச் சட்ட மறுப்பை ஆரம்பிக்கும் உரிமையை மாகாணக் காங்கிரஸ் கமிட்டிகளுக்கு அளித்தது. ஆனால் அதற்கு இன்னின்ன நிபந்தனைகள் நிறைவேறியிருக்க வேண்டும் என்று வற்புறுத்தியது. இப்படி நிபந்தனைகளுடன் தீர்மானம் நிறைவேறிய போதிலும் மகாத்மாவின் மனதில் நிம்மதி ஏற்படவில்லை. சட்ட மறுப்புக்குத் தாம் விதிக்கும் நிபந்தனைகளில் மற்றத் தலைவர்களுக்குப் பூரண நம்பிக்கையில்லை என்று மகாத்மாவின் மனதில்சந்தேகம் உதித்திருந்தது. எனவே அவசரப்பட்டு எங்கேயாவது சட்டமறுப்பு ஆரம்பித்து விட்டால் காரியம் கெட்டுப்போய் விடுமே? தாம் நடத்த எண்ணியுள்ள இயக்கமும் தடைப்பட்டு விடுமே? இந்தக் கவலையினால் மகாத்மா காந்தி டில்லியில் கூடியிருந்த தலைவர்களைப் பார்த்து விநயமாக வேண்டிக் கொண்டதாவது “பொது ஜனச் சட்டமறுப்பு என்பது பூகம்பத்தைப் போன்றது. எந்தப் பிரதேசத்தில் பொதுஜனச் சட்டமறுப்பை ஆரம்பிக்கிறோமோ, அங்கே அரசாங்கம் ஸ்தம்பித்துவிடும். அந்தப் பிரதேசத்தில் ஒவ்வொரு போலீஸ் காரனும் மற்ற சர்க்கார் உத்தியோகஸ்தர்களும் வேலையைவிட்டு விலகிவிடுவார்கள். போலீஸ் ஸ்டே ஷன்கள், கோர்ட்டுகள், அரசாங்கக் காரியாலயங்கள் எல்லாம் பொதுஜனங்களின் உடைமையாகிவிடும். இப்படிப்பட்ட பேரியக்கத்தை நடத்துவது எளிய காரியமல்ல. இயக்கம் நடத்தும் இடத்தில் பரிபூரணமான அமைதி நிலவ வேண்டும். பலாத்காரத்தை ஜனங்கள் அடியோடு மறந்துவிட வேண்டும். என்னவிதமான கஷ்டம் நேர்ந்தாலும் சகித்துக்கொண்டு அஹிம்சையைப் பாதுகாக்க வேண்டும். அந்தப்பிரதேசத்தில் அஹிம்சை நிலவினால் மட்டும் போதாது. ஏதேனும் ஒரு இடத்தில் பொதுஜனச் சட்டமறுப்பு நடந்தபோதிலும் நாட்டில் மற்ற எல்லாப் பகுதிகளிலும் பரிபூரண அமைதி நிலவ வேண்டும். எங்கேயாவது ஒரு மூலையில் அஹிம்சைக்குப் பங்கம் நேரிட்டாலும் பொதுஜன சட்டமறுப்பு வெற்றியடையாது; இயக்கத்தை நடத்தவே முடியாது. ஆகையால் உங்களையெல்லாம் நான் ரொம்பவும் வேண்டிக் கொள்கிறேன். நான் பர்தோலியில் பொதுஜனச் சட்டமறுப்பை ஆரம்பித்து நடத்தும்போது நீங்களும் உடனே சட்டமறுப்பை ஆரம்பித்து விடவேண்டாம். பர்தோலியில் நடக்கும் இயக்கத்தைக் கவனித்து வாருங்கள். கவனித்துத் தெரிந்து கொள்ள வேண்டிய பாடங்களைத் தெரிந்து கொள்ளுங்கள். எல்லா மாகாணங்களையும் சட்ட மறுப்புக்குத் தயார் செய்யுங்கள். ஆனால் இயக்கத்தை ஆரம்பித்து விட வேண்டாம். நீங்கள் வசிக்கும் ஒவ்வொரு பகுதியிலும் அமைதி நிலவும்படி பார்த்துக்கொள்ளுங்கள். உங்களிடம் நான் வேண்டும் உதவி இதுதான். பர்தோலியின் அநுபவத்தைப் பார்த்துக்கொண்டு அடுத்த தாலூகாவில் இயக்கத்தை ஆரம்பிக்கலாம். இவ்விதமே ஒவ்வொரு பிரதேசமாக இயக்கத்தை விஸ்தரித்துக் கொண்டு போகலாம். ஜனங்களைச் சரிவரத் தயார்ப் படுத்தாமல் சட்ட மறுப்பை அவசரப்பட்டு ஆரம்பித்து எங்கேயாவது பலாத்காரச் செயல்கள் நிகழ்ந்து விட்டால் இயக்கம் படுதோல்வியடையும். இயக்கத்தை நிறுத்தவேண்டிய தாகிவிடும். பொதுஜனச் சட்ட மறுப்புக்கு இன்றியமையாத நிபந்தனை பொது ஜன அமைதி, ஆகையால் அவசரப்பட்டுச் சட்ட மறுப்பை ஆரம்பிக்க வேண்டாம். மாகாணங்களுக்குக் காங்கிரஸ் அந்த உரிமை கொடுத்திருந்த போதிலும் அதை உபயோகப்படுத்த வேண்டாம். பர்தோலியைக் கவனித்து வாருங்கள்!” இப்படியெல்லாம் மகாத்மா காந்தி படித்துப் படித்துச் சொன்னார்; திருப்பித் திருப்பி எச்சரிக்கை செய்தார். இதைக் கேட்ட தலைவர்களிலே சிலர் “மகாத்மா எதற்காக இவ்வளவு பயப்படவேண்டும்?” என்று எண்ணினார்கள். அவ்விதமே சொன்னார்கள். சட்ட மறுப்புக்கு மகாத்மா விதித்த கடுமையான நிபந்தனைகளை ஆட்சேபித்தார்கள். ஆயினும் கடைசியில் ஒருவாறு ஒப்புக்கொண்டு போய்ச் சேர்ந்தார்கள். ஆனால் காந்திமகானுடைய எச்சரிக்கை எவ்வளவு அவசியமானது என்று வெகு சீக்கிரத்திலேயே தெரிய வந்தது. மகாத்மா காந்தி தமது சொந்த இடமாகக் கருதிப் பெருமை கொண்டிருந்த பம்பாய் நகரத்தின் மூலமாகவே அந்தப் படிப்பினை வெளியாயிற்று. பயங்கரமான ரூபத்தில் வெளியாயிற்று. முந்தைய 1920ஆம் வருஷத்தின் மத்தியில் காந்தி மகாத்மா ஒத்துழையாமை இயக்கத்தை ஆரம்பித்தபோது பிர்ரிட்டிஷ் அதிகார வர்க்கத்தினர் அதை அலட்சியம் செய்தனர். “முட்டாள்தனமான திட்டங்களுக்குள்ளே மிக முட்டாள்தனமான திட்டம்” என்று லார்டு செம்ஸ்போர்டு அதைக் குறிப் பிட்டார். ஆயினும் இங்கிலாந்தின் இராஜ தந்திரிகளுக்கு ‘எது எப்படியாகுமோ’ என்ற கவலை கொஞ்சம் இருந்தது. மாண்டகுசெம்ஸ்போர்டு திட்டத்தின்படி ஏற்பட்ட புதிய சட்டசபைகளை ஆரம்பித்து வைப்பதற்கு வேல்ஸ் இளவரசரை அனுப்பி வைப்பதென்று முதலில் உத்தேசித்திருந்ததை முன் ஜாக்கிரதையாக மாற்றிக் கொண்டார்கள். வேல்ஸ் இளவரசரைச் சங்கடமான நிலைமைக்கு உள்ளாக்க விரும்பாமல் அவருக்குப் பதிலாகக் கன்னாட் கோமகனை (டியூக் ஆப் கன்னாட்) அனுப்பினார்கள். கன்னாட் கோமகன் விஜயம் செய்து புதிய சட்ட சபைகளைத் திறந்து வைத்து “மறந்து விடுங்கள்; மன்னித்து விடுங்கள்; ஒத்துழையுங்கள்’ என்ற பல்லவியையும் பாடிவிட்டுப் போனார். பிறகு ஒத்துழையாமை இயக்கம் நாளுக்கு நாள் வளர்ந்து பலம் பெற்று வந்தது. அந்த இயக்கம் பெரும் பொது ஜனக் கிளர்ச்சியாக மாறியது. கடைசியாக இப்போது பொது ஜனச் சட்ட மறுப்பு இயக்கத்தை ஆரம்பித்து அரசாங்கத்தை ஸ்தம்பிக்கச் செய்து விடுவதென்றும் காங்கிரஸ் தலைவர்கள் திட்டம் போட்டு விட்டார்கள். இத்தகைய நிலைமையில் புதிய வைஸ்ராய் லார்ட் ரெடிங் வேல்ஸ் இளவரசர் விஜயத்தை நடத்தி வைக்க உறுதிகொண்டார். வேல்ஸ் இளவரசர் வந்தால், அவருக்காக நடைபெறும் உபசாரக் களியாட்டங்களிலும் ஆடம்பர வைபவங்களிலும் பொது மக்கள் பிரமித்துப் போய்விடுவார்கள் என்றும், அதன் மூலம் காங்கிரஸில் வளர்ந்து வரும் செல்வாக்கைக் குலைத்து விடலாம் என்றும் லார்ட் ரெடிங் கருதினார். இந்திய மக்களின் பரம்பரைக் குணமான இராஜ விசுவாசம் மேலோங்கி மகாத்மாவின் சட்ட மறுப்பு இயக்கத்தை அமுக்கிவிடும் என்று லார்ட் ரெடிங்கும் அவருடைய சகாக்களும் பகற்கனவு கண்டார்கள். ஆகவே, வேல்ஸ் இளவரசரை அனுப்பி வைக்கும்படி ஆங்கில இராஜ தந்திரிகளை இந்திய அதிகார வர்க்கத்தினர் பிடிவாதமாகக் கேட்டுக் கொண்டார்கள். எனவே, 1921ஆம் வருஷக் கடைசியில் வேல்ஸ் இளவரசர் இந்தியாவுக்கு விஜயம் செய்வார் என்னும் நிச்சயமான செய்தி வெளியிடப்பட்டது. இதைக் காந்தி மகானும் மற்றக் காங்கிரஸ் தலைவர்களும் விரும்பவில்லை. வேல்ஸ் இளவரசரைக் கூட்டி வருவதற்கும் படாடோப வரவேற்புகளை நடத்துவதற்கும் இது சமயமல்ல என்று தலைவர்கள் கருதினார்கள். அதிகார வர்க்கத்தார் தங்களுடைய ஆட்சியைப் பலப் படுத்துவதற்கும் விடுதலை இயக்கத்தை ஒடுக்குவதற்கும் வேல்ஸ் இளவரசரின் விஜயத்தை உபயோகப் படுத்துவார்கள் என்று நினைத்தார்கள். எனவே இந்திய மக்கள் வேல்ஸ் இளவரசரின் விஜயத்தைப் பகிஷ்கரிக்கவேண்டும் என்று தீர்மானம் செய்து வெளியிட்டார்கள். நவம்பர் மாதம் 17ஆம் தேதி வேல்ஸ் இளவரசர் பம்பாய்த் துறைமுகத்தில் வந்து இறங்குவதாக இருந்தது. அன்றையதினம் இந்தியா தேசமெங்கும் ஹர்த்தால் நடைபெறவேண்டும் என்றும் பிறகு இளவரசர் விஜயம் செய்யும் முக்கிய நகரங்களில் அன்றன்றைக்கு ஹர்த்தால் செய்யவேண்டும் என்றும் மக்களுக்குக் காங்கிரஸ் கட்டளையிட்டிருந்தது. இந்தக் கடமையை வற்புறுத்தி மகாத்மா காந்தி “எங் இந்தியா”வில் எழுதியிருந்ததோடு பல கூட்டங்களில் பேசியிருந்தார். “வேல்ஸ் இளவரசர் மீது தனிப்பட்ட முறையில் நமக்குக் கோபம் ஒன்றுமில்லை. அவரை அவமரியாதை செய்யும் எண்ணம் லவலேசமும் இல்லை. ஆனால் அன்னிய ஆட்சியின் சின்னமாக வேல்ஸ் இளவரசர் வருவதாலும், அதிகார வர்க்கத்தைப் பலப்படுத்துவதற்காக வருகிறபடி யாலும் அவருடைய வரவேற்புக் கொண்டாட்டங்களில் இந்திய மக்கள் கலந்துகொள்ள முடியாது. நம்முடைய அதிருப்தியை வெளியிடுவதற்காக ஹர்த்தால் அனுஷ்டிப்பதும் அவசியமாகிறது” என்று காந்தி மகான் வற்புறுத்தியிருந்தார். பம்பாய் நகரத்தில் காந்தி மகானுக்கு எல்லையற்ற செல்வாக்கு இருந்தது என்பதை முன்னமே பார்த்திருக்கிறோம். பம்பாய் வாசிகளில் பெரும்பாலோர் மகாத்மாவைத் தெய்வமாகக் கொண்டாடினார்கள். அவருடைய வாக்கை வேதவாக்காக மதிக்கத் தயாராயிருந்தார்கள். ஆகையால் நவம்பர் 17ஆம்தேதியன்று வேல்ஸ் இளவரசர் பம்பாயில் வந்து இறங்கும் தினத்தில் பரிபூரண ஹர்த்தால் நடத்துவதற்குப் பம்பாய் வாசிகள் ஆயத்தமாயிருந்தார்கள். ஆனால் துரதிர்ஷ்டவசமாக காந்தி மகாத்மாவின் கொள்கைகளைப் பம்பாய் வாசிகள் சரிவர உணர்ந்து கொள்ளவில்லை என்பது பின்னால் நடந்தவிபரீதங்களினால் வெளியாயிற்று டில்லியிலிருந்து திரும்பி ஆமதாபத்துக்கு வந்த மகாத்மா நேரே பர்தோலிஆனந்த் தாலுகாக்களுக்குப் போய்ப்பரிசீலனை செய்ய உத்தேசித்திருந்தார். ஆனால் பம்பாய்த் தலைவர்கள் காந்திமகானுக்குச் செய்திமேல் செய்தி அனுப்பினார்கள்; தந்தி மேல் தந்தி அடித்தார்கள். நவம்பர் 17ஆம் தேதி பம்பாய்க்கு வந்து விட்டுப் பிறகு பர்தோலிக்கு போகும்படி அவர்கள் மகாத்மாவை கேட்டுக் கொண்டார்கள். அந்த முக்கியமான தினத்தில் பம்பாய் நகரம் தீவிர கொந்தளிப்பை அடையுமாதலால் அன்றைக்கு மக்களுக்கு வழிகாட்டி நடத்த மகாத்மா பம்பாயில் இருக்க வேண்டும் என்று பம்பாய்த் தலைவர்கள் கோரினார்கள். அவர்களுடைய வேண்டுகோளுக் கிணங்கி மகாத்மாவும் பம்பாய்க்கு 17ஆம் தேதி அதிகாலை வந்து சேர்ந்தார். 17ஆம் தேதி காலையில்தான் வேல்ஸ் இளவரசரும் பம்பாய்க் கடலோரத்தில் உள்ள ‘இந்தியாவின் வாசல்’ என்று அழைக்கப்படும் கோபுர மண்டபத்தில் கப்பலிலிருந்து இறங்கினார். இளவரசரை வரவேற்பதற்காகப் பிரமாதமான ஆடம்பர ஏற்பாடுகளை அதிகார வர்க்கத்தார் செய்திருந்தார்கள். இது காரணமாக ஏற்படக்கூடிய ஒரு விளைவைப் பம்பாய்க்காங்கிரஸ் தலைவர்கள் எதிர்பார்த்தார்கள். அதாவது வேல்ஸ் இளவரசர் இறங்கும் தினத்தில் ஹர்த்தாலும் நடப்பதால் வேலையில்லாத ஜனங்கள் வேடிக்கை பார்க்கும். ஆகையால் இளவரசர் இறங்குமிடத்துக்கு வந்து கூட்டம் போடக்கூடும். அப்படியானால், ஹர்த்தாலின் நோக்கம் நிறைவேறாமற் போவதோடு கோபங்கொண்ட ஜனங்களுக்கும் அதிகாரிகளுக்கும் தகராறுகள் ஏற்பட்டு விடக்கூடும். இம்மாதிரி யெல்லம் நடந்து விடக்கூடாது என்பதற்காக, பம்மாய்த் தலைவர்கள் ஒரு ஏற்பாடு செய்திருந்தார்கள். இளவரசர் இறங்கும் இடத்திற்கு வெகு தூரத்தில் பம்பாய் நகரின் இன்னொரு எல்லையில் அதேசமயம் ஒரு பொதுக் கூட்டத்துக்கு ஏற்படு செய்திருந்தார்கள். எல்பின்ஸ்டன் ஆலையை யொட்டியிருந்த விஸ்தாரமான மைதானத்தில் பொதுக் கூட்டம் நடந்தது. அங்கு மகாத்மா காந்தி தலைமை வகிப்பார் என்றும் அறிவிக்கப் பட்டிருந்தது. ஆகையால் லட்சக் கணக்கான ஜனங்கள் அங்கே கூடி விட்டார்கள். கண்ணுக் கெட்டிய தூரம் அரே தலை மயமாகக் காணப்பட்ட அந்த ஜன சமுத்திரத்தின் மத்தியில் மேடைமீது நின்று மகாத்மா பேசினார். அஹிம்சையைப் பாதுகாக்க வேண்டிய அவசியத்தைப் பற்றித்தான் முக்கியமாகப் பேசினார். “சீக்கிரத்தில் பர்தோலியில் பொதுஜனச் சட்டமறுப்பை ஆரம்பிக்கப் போகிறேன். அதன் பயனாகச் சர்க்கார் கடுமையான நடவடிக்கை எடுக்கக் கூடும். ராணுவத்தை ஏவி ஜனங்கள் மீது துப்பாக்கி பிரயோகம் செய்யும்படியும் சொல்லலாம். என்ன நடந்தாலும் சரி, ஜனங்கள் பொறுமையாயிருக்கவேண்டும். எவ்வளவு கோபமூட்டும் காரியம் நடந்தாலும் ஜனங்கள் பலாத்காரத்தில் இறங்கக் கூடாது. பம்பாய்வாசிகளை நான் ரொம்பவும் கேட்டுக் கொள்வது இதுதான்!” என்று காந்திஜி வேண்டிக் கொண்டார். அந்தோ! மகாத்மா இவ்வளவு உருக்கமாக வேண்டிக்கொண்ட அரைமணி நேரத்துக்குள்ளே பொது மக்களின் உற்சாகம் எல்லை கடந்துவிட்டது. வெண்ணெய் திரளும் சமயத்தில் தாழி உடைவதுபோன்ற துயரமான சம்பவங்கள் பம்பாயில் ஆரம்பமாகி விட்டன!