[] []       சேதுபதி மன்னர் வரலாறு எஸ். எம். கமால்    அட்டைப்படம் : N. Sathya - experimentsofme@gmail.com  மின்னூலாக்கம் : சீ.ராஜேஸ்வரி -  sraji.me@gmail.com  வெளியீடு  : FreeTamilEbooks.com  உரிமை : Public Domain – CC0  உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.            பதிப்புரை தமிழக வரலாற்றின் அங்கமான மறவர் சீமை மகுடபதிகளான சேதுபதி மன்னர்களது ஆன்மீகப் பணி, தமிழ்த்தொண்டு, சமயப் பொறை ஆகிய நிலைகளின் சிறப்பு அம்சங்களையும் தமிழகத்தில் நிலவிய முந்தைய, சமுதாயச் சூழல்களின் தொகுப்பு ஏடாக இந்த நூலினை வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.  - சர்மிளா பதிப்பகம்  இராமநாதபுரம்                   அணிந்துரை எளிய மக்கள் தங்களது அயராத உழைப்பினாலும் தந்நலமற்ற தொண்டினாலும் பணிவினாலும் படிப்படியாகப் படைவீரர், படைத்தலைவர் என உயர்ந்து இறுதியில் குறுநிலப் பகுதிகளின் மன்னர்களாகவும் ஆக முடியும் என்பதை மெய்ப்பித்துக் காட்டியவர்கள் மறவர் சீமையினர். தமிழகச் சிற்றரசர் மரபினர்களில் இவர்கள் மிகவும் குறிப்பிடத்தக்கவர்கள். வேளிர், மலையமான்கள், அதியமான்கள், தொண்டைமான்கள், முத்தரையர், இருக்குவேளிர், வானாதிராயர்கள் எனத் தமிழகம் பல சிற்றரசு மரபினர்களைக் கண்டுள்ளது. இந்திய வரலாற்றில் போர்வழியிலன்றி ஆன்மிக நெறியில் நின்று இந்தியா முழுவதிலும் புகழ்படைத்த மரபினர் சேதுபதி மரபினர். பிற்காலத் தமிழகத்தில் குறிப்பாக ஆங்கிலேய ஆதிக்கத்திற்கு முந்திய காலகட்டத் தமிழக வரலாற்றில் இவர்களின் பங்கு கொடை ஆகியனபற்றிய விரிவான வரலாறு இன்றும் எழுதப்படவில்லை. குறிப்பாகத் 'தமிழ்ப் புத்தாக்கம்" (Modernization of Tamil) என்ற உயர்ந்த, புதுமையான - இன்றும் மிகத் தேவையான - குறிக்கோள் கோட்பாட்டினை உருவாக்கி அதனை நடைமுறைப்படுத்த முழுமனத்துடன் செயல்பட்ட மரபினர் இவர்கள். இந்தப் பணிபற்றியும் இவர்கள் காலத்தே தமிழ்ப் பண்பாட்டில் நிகழ்ந்த வடநெறியாக்கம் (Sanskritization) மேலைமரபாக்கம் (Westernization) பெருந்தாக்கங்கள் பற்றியும் விரிவாக எழுத இடமுண்டு. இத்தகைய சூழலில் இம்மரபினரின் தொடர்ச்சியான வரலாற்றினையேனும் எழுதவேண்டும் என்ற முனைப்பில் எனது அருமை நண்பர் டாக்டர் எஸ்.எம். கமால் அவர்கள் இச்சிறுநூலைப் படைத்துள்ளார்கள். ஏற்கனவே பாஸ்கர சேதுபதி, முத்துராமலிங்க சேதுபதி, பாண்டித்துரைத் தேவர் ஆகியோரைச் சிறுசிறு நூல்களாகச் சேதுபதி மன்னர் சிலரைப் பற்றி எழுதிய இவர் இந்நூலை எழுதுவதற்கு முழுத் தகுதியுடையவர். இந்நூலில் இவர் குறிப்பிட்டுள்ள படி இம்மன்னர்களது வரலாற்றினைத் தெளிவாகவும், கோவையாகவும், விளக்கமாகவும் எழுதத் துணைபுரியக் கூடிய முதன்மை ஆதாரங்கள் (Primary Sources) பல கவனக் குறைவாலும், புறக்கணிப்பினாலும், வரலாற்றுணர்வின்மையாலும் மறைந்து போய் விட்டன. எனினும் தாம் அரிதின் முயன்று தொகுத்த ஆவணங்கள், கல்வெட்டுக்கள், செப்பேடுகள், செவிவழிச் செய்திகள், தாமே நேரில் கண்டவை ஆகியவற்றைக் கொண்டு இச்சிறுநூலைச் சிறப்பாக எழுதியுள்ளார்.  இந்நூலைச் “சுற்றுலாப் பயணிகட்கான கையேடு” என எளிமையாகவும் இல்லாமல் உயர் ஆய்வாளர்களுக்குப் பயன்படக்கூடிய ஆய்வேடு போலக் கடினமாகவுமில்லாமல் நடுவணதாகப் படைத்துள்ளார். சான்றுகளைக் காட்டி எழுதும் உத்தியினை ஆங்காங்கே ஒல்லுமிடமெல்லாம் பின்பற்றியுள்ளார். சேதுபதி மன்னர்கள் தமிழ்ச் சமுதாயத் திற்காற்றியுள்ள பணி, அவர்தம் ஆன்மீகப் பணி, தமிழ்மொழிப் பணி என்ற மூன்று இலக்குகளைக் கருத்திற்கொண்டு ஆசிரியர் நூலைப் படைத்துள்ளார். தமக்குக் கிடைத்த சான்றுகள், ஆவணங்கள், முதலானவற்றைப் பட்டியலிட்டு நூலின் பின்னிணைப்புகளாகத் தமது நூலை முழுமைப்படுத்தியுள்ளார்.  கண்பார்வை மங்கிய நிலை, உடல் நலக்குறைவு முதலான தடைகள் இருந்தபோதும் தளராது அரிதின் முயன்று இந்நூலைப் படைத்துள்ளார். இவரது வாழ்வும் பணியும் இன்றைய இளைஞர்கட்கு வழிகாட்டிகளாக விளங்குவனவாகும். நூல் அளவிற் சிறிதாயினும் கிடைத்தவற்றைக் கொண்டு சரளமான நடையில் சொல்லப்பட்டிருக்கும் விதத்தால் நம் பாராட்டுதலுக்குரியதாகிறது. சேதுநாட்டு வரலாற்றை அறியத் துணைபுரியும் நல்ல தொடக்க நூல் இது. தமிழ் மக்கள் இந்நூலை வாங்கிப் படித்துப் பயன் கொள்வார்களாக.  ஆசிரியர் நீடு வாழ்ந்து மேலும் பல நல்ல நூல்களைப் படைக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.  முனைவர் கோ. விசயவேணு கோபால்  முதுநிலை ஆய்வாளர், கல்வெட்டியல் துறை பிரெஞ்சு இந்தியவியல் ஆய்வகம்  பாண்டிச்சேரி 20.11.03 நூலினைப் பற்றி தமிழக முடியுடை மன்னர்கள் பற்றிய பல நூல்கள் கடந்த நூற்றைம்பது ஆண்டுகளில் வெளிவந்துள்ளன. சேரர், சோழர், பாண்டியர், பல்லவர், விஜயநகர மன்னர்கள், ஆற்காட்டு நவாப் என்ற ஆட்சியாளர்களைப் பற்றி அந்த நூல்களில் விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்த ஆட்சியாளர் வரிசையில் இறுதியாகப் பிரதான இடம் வகித்து வந்த இந்திய நாடு விடுதலை பெறும் வரை ஆட்சி செலுத்திய ஆங்கிலேயர்களைப் பற்றிய நூல்கள் தமிழில் வெளிவரவில்லை.  இதனைப் போன்றே கொங்குச் சோழர்கள், மதுரை சுல்த்தான்கள், வானாதிராயர்கள், சேது நாட்டு மன்னர்கள் ஆகியோர்களைப் பற்றிய வரலாற்று நூல்கள் வரையப்படவில்லை. தமிழக வரலாற்றைச் சரியாக அறிந்து கொள்வதற்கு இவர்களைப் பற்றிய வரலாற்று நூல்கள் இன்றியமையாதவை.  இந்தக் குறைபாட்டினை நீக்கும் வகையில் கி.பி.12 ஆம் நூற்றாண்டில் வரலாற்றில் இடத்தைப் பெற்று பின்னர் மதுரை நாயக்க மன்னர் ஆட்சியில் சீரழிவு எய்தி மீண்டும் கி.பி.17 ஆம் நூற்றாண்டு தொடக்கம் முதல் வரலாற்று ஏடுகளில் காணப்படுகின்ற சேதுநாட்டு மன்னர்களைப் பற்றிய முழுமையான நூலாக இது வெளியிடப்படுகிறது.  பாண்டிய நாட்டில் கிழக்குக் கடற்கரையினை ஆட்சிக்களமாகக் கொண்ட இந்த மன்னர்கள் தமிழ்ச் சமுதாயத்திற்கும் தமிழர்களது ஆன்மீக வளர்ச்சிக்கும், தமிழ் மொழியின் செழுமைக்கும் தளராது பணியாற்றியவர்கள் ஆவர். ஆதலால் இவர்களது வரலாற்றைத் தமிழக வரலாற்றின் ஒரு சிறப்புப் பகுதியாகக் கொள்ளலாம்.  இதுவரை இந்த மன்னர்களைப் பற்றி வெளிவந்த ஆங்கில, தமிழ் நூல்களில் இடம் பெறாத பல செய்திகள் இந்த நூலில் இடம் பெற்றுள்ளன என்பதை பெரும் மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் இந்த வரலாற்றுத் தொகுப்பினை வரைவதற்கு சேதுபதி மன்னர்களது கல்வெட்டுக்கள், செப்பேடுகள். ஒலை முறிகள், ஆவணங்கள் ஆகிய வற்றைத் தந்து உதவிய அன்பர்கள் பலருக்கும் எனது இதயங்கனிந்த நன்றியினைப் புலப்படுத்திக் கொள்கிறேன்.  மற்றும் தமிழ் மொழிக்கும் தமிழ்ச் சமுதாயத்திற்கும் தளராத தொண்டுசெய்து இறவாப் புகழ் கொண்ட சேது மன்னர்களின் வரலாற்றினை வெளியிட வேண்டும் என்ற பெரு விருப்புடன் என்னைப் பல ஆண்டுகளாக வற்புறுத்தி வந்ததுடன் இந்த வெளியீட்டிற்கு பல்லாற்றானும் உதவியும் ஒத்தாசையும் நல்கிய தஞ்சாவூர்த் தமிழ்ப் பேராசிரியர் திரு மது.ச. விமலானந்தம் அவர்களுக்கு எனது ஆழிய நன்றி.  இந்த நூலின் மெய்ப்புக்களைப் பொறுமையுடன் இரவு பகலாக மூலப் பிரதியுடன் ஒப்பிட்டுச் சரிபார்த்துச் செம்மை செய்துதவிய இராமநாதபுரம் அரசினர் சேதுபதி கலைக் கல்லூரித் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் திரு. மை. அப்துல்சலாம் அவர்களுக்கும் எனது ஆழிய நன்றி.  எஸ்.எம். கமால்  நூலாசிரியர்          இந்த நூல் எழுதுவதற்குத் துணையாக அமைந்த நூல்களும் ஆவணங்களும் 1. Raja Ram Rao. T - The Manual of Ramnad Samasthanam (1891). 2. Nelson. A - The Manual of Madura Country (1861). 3. Ramaswamy. Dr. A. - District Gazetteer Ramanathapuram District (1978). 4. Francis. A - Madura District Gazetteer (1907). 5. Tamil Nadu Archives Records    a) Military Consultations    b) Revenue Consultations    c) Boards Misc. Register Vol. No.2.    d) Diary of Rajah Baskara Sethupathi (1893)  6. Seshatri. Dr.S - Sethupathi's of Ramnad (1974) - Unpublished Ph. D thesis 7. Viswanathan.K - Fort Town of Thirumayyam (1976) - unpublished M.phil thesis 8. Pudukkottai inscriptions 9. Archealogical Report Volume IV & VIII (1876 & 1881) 10. இராமநாதபுரம் நிலமான்ய ஓலைக் கணக்கு  11. கமால். Dr.S.M. - சேதுபதி மன்னர் செப்பேடுகள் (1994).  12. இராமநாதபுரம் சமஸ்தான கோயில்கள் பதிவேடு.  13. இராமநாதபுரம் சமஸ்தான ஆவணங்கள்  14. திருப்புல்லாணித் தல புராணம்  15. Taylor - Old Historical Manuscripts Vol III (1831) 16. General patterson Diary - 1796 - Unpublished records/available in the London Museum 17. Sathya Natha Ayyar - The History of Madurai Nayaks (1928) 18. Kathirvel - Dr.S.- The Marawas (1700 – 1800) 19. K.B. Rangachariya-Topographical list of inscriptions in Madras Presidency - Volume I-III (1909) 20. கமால் Dr. S.M.சேதுபதி மன்னர் கல்வெட்டுக்கள் (2002)  21. இராமப் பையன் அம்மானை - சரசுவதி மஹால் பதிப்பு  22. Rajayan Dr.K. History of Madura (1974) 23. Concise history of ceylon (1954) - Dr. Parunavittana & Nicholson. 24. Dutch Records in the Kalonial Archives in The Hague, Holland. 25. Dr.S. கந்தசாமி - சேதுபதிகளின் தமிழ்ப்பணி  26. James Fergusseon - History of India & the great Eastern Architecture - 1910       பொருளடக்கம் இயல் - I சேதுபதிமன்னர்களது தொன்மையும் தோற்றமும் 9  இயல் - II போகலூரில் வாழ்ந்த சேதுபதிகள் 13  i. உடையான் ரெகுநாத சேதுபதி (எ) சடைக்கன் - I 13  ii. கூத்தன் சேதுபதி 16  iii. தளவாய் சேதுபதி (எ) இரண்டாம் சடைக்கன் சேதுபதி 19  இயல் - III திருமலை ரெகுநாத சேதுபதி 21  இயல் - IV இராஜ சூரிய சேதுபதி, அதான ரகுநாத சேதுபதி 26  இயல் - V ரகுநாத கிழவன் சேதுபதி 27  இயல் - VI 32  i. முத்து வயிரவநாத சேதுபதி 32  ii. முத்துவிஜயரகுநாத சேதுபதி 33  iii. பவானி சங்கர சேதுபதி 36  iv. கட்டையத் தேவர் (எ) குமார முத்து விஜய ரகுநாத சேதுபதி 37  v. சிவகுமார முத்து விஜய ரகுநாத சேதுபதி 38  vi. செல்லமுத்து விஜய ரகுநாத சேதுபதி 39  இயல் - VII 40  i. முத்துஇராமலிங்க விஜய ரகுநாத சேதுபதி 40  ii. இராமன் இல்லாத அயோத்தி 45  iii. தன்னரசு நிலையில் தாழ்ந்த சேதுநாடு 47  iv. சேது மன்னர்களது நிர்வாகம் 48  இயல் - VIII i. சேதுபதி மன்னரது நடைமுறைகள் 51  ii. அரண்மனையும் ஆவணங்களும் 52  iii. அரண்மனை நடைமுறைகள் 56  iv. இராமலிங்க விலாசம் அரண்மனை 58  v. மூலைக் கொத்தளம் 61  இயல் - IX சேதுநாட்டில் ஜமீன்தார் ஆட்சிமுறை 62  i. ராணி மங்களேஸ்வரி நாச்சியார் 64  ii. அண்ணாசாமி சேதுபதி 65  iii. விஜயரகுநாத இராமசாமி சேதுபதி 66  iv. இராணி முத்து வீராயி நாச்சியார் மற்றும் 67   v. ராணி சேது பர்வதவர்த்தனி நாச்சியார் 67  vi. துரைராஜா (எ) முத்துராமலிங்க சேதுபதி 68  vii. மன்னர் பாஸ்கர சேதுபதி (1888-1903) 70  viii. இராஜ இராஜேஸ்வர சேதுபதி (எ)  மூன்றாம் முத்துராமலிங்க சேதுபதி (1910-1929) 72  ix. சண்முக ராஜேஸ்வர நாகநாத சேதுபதி 73  இயல் - X 74   i. ஜமீன்தாரி முறையின் சுவடுகள் 74  ii. சில முக்கிய நிகழ்வுகள் 75  இயல் - XI என்றும் நிலைத்து நிற்க 77  i. திருக்கோயில்கள் 78  ii. திருமடங்கள் 93  iii. அன்னசத்திரங்கள் 97  iv. பள்ளிவாசல்கள், தேவாலயங்கள் 102  v. தமிழ்ப் புலவர்கள் 105  vi. தனியார்கள் 108  இணைப்பு - அ 122  இணைப்பு - ஆ 124  இணைப்பு - இ 136  i. போகலூர் சேதுபதிகள் 140  ii. இராமநாதபுரம் சேதுபதிகள் 141  iii. ஜமின்தார் - சேதுபதி மன்னர்கள் கொடிவழி 142  பிற்சேர்க்கை 143  i.சேதுபதி மன்னர் புலவர்கள் பட்டியல் 143  ii. பெயர்ச்சொற்கள் தொகுப்பு 149  இயல் - I  சேதுபதிமன்னர்களது தொன்மையும் தோற்றமும்   பன்னெடுங்காலமாக வடக்கேயுள்ள வேங்கடமலைக்கும், தெற்கேயுள்ள குமரிமுனைக்கும் இடைப்பட்டதாகத் தமிழகம் அமைந்துள்ளது. இதனை 12ஆம் நூற்றாண்டு இலக்கண நன்னுல் "வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறும் நல்லுலகம்" என வரையறுத்துள்ளது. இந்த நூற்றாண்டின் மாபெரும் கவிஞரான சுப்பிரமணிய பாரதியாரும்,  “நீலத்திரைகடல் ஓரத்திலே - நின்று  நித்தம் தவஞ்செய் குமரி எல்லை - வட  மாலவன் குன்றம் இவற்றிடையே - புகழ்  மண்டிக் கிடக்குந் தமிழ்நாடு"  எனப் புகழ்ந்துள்ளார்.  இந்தப் பெரு நிலப்பரப்பைச் சங்ககாலந்தொட்டு முடியுடை மூவேந்தர்களான சேர, சோழ, பாண்டியர் ஆட்சி செலுத்தி வந்தனர் என்பது வரலாறு. பாண்டிய மன்னர்களது கிழக்கு எல்லையான வங்கக் கடற்கரைப் பகுதி பிற்காலத்தில் மறவர் சீமை அல்லது சேதுநாடு என வழங்கப்பெற்றது. இதிகாசநாயகனான இராமபிரான் அமைத்த திருவணை எனப்படும் சேது. இந்தப் பகுதியின் கிழக்கே அமைந்து இருப்பதாலும், பல நூற்றாண்டு காலமாக மறவர் இன மக்கள் மிகுதியாக, இங்கு வாழ்ந்து வந்ததாலும், இந்தப் பகுதிக்கு இத்தகைய பெயர் ஏற்பட்டது.  மறவர் இன மக்களது ஏழு பிரிவினர்களில் இறுதிப்பிரிவினரான செம்பிநாட்டு மறவர் பிரிவைச் சேர்ந்தவர்கள்தான் இந்த நாட்டின் அதிபதிகளாக, சேதுபதிகள் என்ற சிறப்புப் பெயருடன் ஆட்சி செலுத்தி வந்துள்ளனர். ஆனால் இந்த சேதுபதிகளைப் பற்றிய செய்திகள் குறிப்பாக இவர்கள் எந்த நூற்றாண்டிலிருந்து இந்தப் பகுதியின் ஆட்சியாளராக மாறினர் என்பதும், அவர்களது ஆட்சி, மாட்சி பற்றிய செய்திகளும் வரலாற்றில் தெளிவாக இடம் பெறவில்லை. சேதுபதி மன்னர்களது பூர்வீகம் பற்றிய ஒன்றுக்கொன்று முரணான கதைகள் பலவும் உள்ளன.  முதலாவதாக இலங்கை சென்று சீதாப்பிராட்டியை மீட்டுவந்த இராமபிரானைப் பிரம்மஹத்தி தோஷம் தொடர்ந்து வந்ததால், அதற்கு தோஷநிவர்த்தியாக இராமேஸ்வரம் கடற்கரையில் சீதாப்பிராட்டி மண்ணால் சமைத்த லிங்கத்தை இராமபிரானும் சீதாப்பிராட்டியும் வழிபாடு செய்தனர் என்றும், அதற்குப் பிறகு அவர்கள் அயோத்தி திரும்புவதற்கு முன்னர் அங்கு மிகுதியாக வாழ்ந்த மறவர் இனத் தலைவரைச் சேது அணையைக் காத்து வருமாறு நியமித்தார் என்றும் அந்த மறத் தலைவரது வழிவந்தவர்கள்தான் சேதுபதிகள் என்பதும் செவிவழிச் செய்தி.  மற்றொன்று, இராமேஸ்வரம் செல்லும் பயணிகளுக்குக் கள்வர்களால் ஏற்படும் அபாயம் பற்றித் திருச்சியை ஆட்சி புரிந்த திருமலை நாயக்க மன்னருக்கு முறையீடுகள் வரப்பெற்றதாகவும் அதனை அடுத்து அவர் தமது பணியாளர்களில் ஒருவராகிய உடையாத் தேவர் என்பவரை இராமேஸ்வரம் வழித்தடத்தில் உள்ள கள்வர் பயத்தை நீக்கச் செய்தார் என்றும், அந்த உடையாத் தேவர் வழியினரே சேதுபதிகள் என்பது பிறிதொரு செய்தி[1]  சோழப் பேரரசை நிறுவிய இராஜராஜ சோழனும் அவர் மகன் இராஜேந்திர சோழனும் இலங்கை நாட்டுப் படையெடுப்பை மேற்கொண்டபோது, அவர்களது தானைத் தலைவர்களில் ஒருவரை இராமேஸ்வரம் பகுதிக்குப் பொறுப்பானவராக நியமனம் செய்தார் என்பதும், அவரது வழியினர்தான் சேதுபதி மன்னர்கள் என்பதும் பிறிதொரு செய்தி[2]  இந்தச் செய்திகள் வரலாற்றுக்கு முரண்பட்ட வகையில் அமைந்திருந்த போதிலும் சேதுபதி மன்னர்கள் பாண்டிய நாட்டின் கிழக்குக் கடற்கரைப் பகுதியில் நிலைத்திருந்த தன்னரசு மன்னர்கள் என்பதில் மாற்றுக் கருத்துக்கள் இல்லை. நமக்குக் கிடைத்துள்ள ஆவணங்களின்படி இந்த மன்னர்களின் ஆட்சி இந்தப் பகுதியில் கி.பி. 15ஆம் நூற்றாண்டுத் தொடக்கம் முதல் இருந்ததாகத் தெரிகிறது[3]  இதனை உறுதிப்படுத்தும் மற்றொரு செய்தியும் உள்ளது இராமேஸ்வரம் தீவிற்கு எதிர்க் கரையில் உள்ள இலங்கை நாட்டின் யாழ்ப்பான நல்லூரில் முதன்முறையாகக் குமரவேளுக்குக் கோயில் அமைத்தபோது அங்கு ஆறுகால பூஜை முதலியன முறையாக நடப்பதற்குத் தகுதியான பிராமண சிரேஷ்டர்களை அனுப்பி வைக்குமாறு யாழ்ப்பாண மன்னர், ஆரியச் சக்கரவர்த்தி, சேதுபதி மன்னரைக் கேட்டுக் கொண்டார். அப்பொழுது இருந்த சேதுபதி மன்னரும் ஆகம சாஸ்திரங்களில் வல்ல 10 பிராமணர்களை யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி வைத்தார். இந்தச் செய்தியினை 15ஆவது நூற்றாண்டு இலக்கியமான முத்து ராஜக் கவிராயரது கைலாய மாலை தெரிவிக்கின்றது.  ஆனால், இவர்கள் கி.பி. 1607 - கி.பி. 1792 வரை வழங்கியுள்ள செப்பேடுகளின்படி இவர்களது பூர்வீக நகரமாக இன்றைய இளையான்குடி வட்டத்தைச் சேர்ந்த விரையாத கண்டன் என்ற ஊர் குறிப்பிடப் படுவதிலிருந்து இவர்களது தொன்மை புலப்படுகிறது. மகாவித்துவான் ரா. ராகவய்யங்கார் எழுதிய செந்தமிழ் இதழ்க் கட்டுரையின்படி இவர்கள் சோழ மண்டலத்திலிருந்து மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்தில் தானைத் தலைவர்களாக இந்தப் பகுதிக்கு வந்தவர்கள் என்பது அறியப்படுகிறது. இதனை மேலும் தெளிவு படுத்தக்கூடிய ஆவணங்கள் இல்லையென்றாலும், இந்தச் சேதுபதி மன்னர்களது செப்பேடுகளில் தொடர்ந்து காணப்படும். "துகவூர் கூற்றத்து குலோத்துங்க சோழ நல்லூர்" என்ற ஊரை ஏற்படுத்தி அங்கேயே நிலைத்திருந்தனர் என்பதும் தெரிய வருகிறது. இதனை உறுதிப்படுத்தும் இன்னொரு சான்று மூன்றாம் குலோத்துங்க சோழனைப் பற்றிய இலக்கியமான ”சங்கர சோழன் உலா” வில் 'தஞ்சைக்கும் கோழிக்கும் தாமப்புகாருக்கும் சேதுக்கும்' என்ற தொடரிலிருந்து 3 ஆம் குலோத்துங்க சோழனது ஆட்சியின் ஒரு பகுதியாக சேதுநாடும் இருந்தது என்று தெரிகிறது.  சோழ நாட்டிலிருந்து வந்த இந்த தானைத் தளபதிகள் முதலில் கானாடு என்று வழங்கப்பெறும் திருமெய்யம் பகுதியில் முதலில் நிலைத்து இருந்தனர். அப்பொழுது 12ஆம் நூற்றாண்டில் விஜயரகுநாத முத்துவயிரிய முத்துராமலிங்க சேதுபதி என்பவர் திருமெய்யம் கோட்டையைக் கட்டியதாக வரலாற்றுச் செய்திகள் உள்ளன. அவர்கள் அந்தப் பகுதியில் மிகுதியாக உள்ள மறவர் இன மக்களிடையே இரண்டு ஊர்களிலிருந்து சேதுபதி மன்னருக்குத் தங்களது பெண்மக்களை மணம் புரிந்துகொள்வதற்கு சிறை கொடுத்ததாகவும் அதற்காக அந்த இரண்டு ஊர் மக்களும் சம்பந்தப்பட்ட இரண்டு குடும்பங்களுக்கும் சலுகைகள் வழங்கியதை மேலப்பனையூர் செப்பேடுகள் தெரிவிக்கின்றன.[4]  இந்த மன்னர்கள் கானாட்டில் திருமெய்யம் பகுதியில் முதலில் கி.பி. 12ஆம் நூற்றாண்டில் நிலைத்திருந்ததை உறுதிப்படுத்தும் சில சான்றுகள் அண்மையில் கிடைத்துள்ளன. முதலாவதாக, திருமெய்யம் குன்றின் அடிப்பகுதியில் அரண் ஒன்றினை கி.பி. 1120ல் விஜயரகுநாத முத்து வயிரிய முத்து ராமலிங்க சேதுபதி என்பவரும் இந்தக் குன்றின் மேல் பகுதியில் கி.பி. 1195-ல் முத்து ராமலிங்க சேதுபதி என்பவரும் அமைத்தனர் என தமக்குக் கிடைத்துள்ள இரு செப்பேடுகளின் ஆதாரத்தைக் கொண்டு கி.பி. 1882-ல் திருமெய்யம் தாசில்தார் புதுக்கோட்டை தர்பாருக்கு அறிக்கை ஒன்றினை அனுப்பி உள்ளார்.[5]  மேலும் கி.பி. 1909ல் தயாரிக்கப்பட்ட ஸ்டாட்டிஸ்டிகல் அக்கவுண்ட் ஆப் புதுக்கோட்டை என்ற அறிக்கையின்படி தற்பொழுதைய திருமெய்யம் கோட்டையின் கிழக்கு - வடக்குப் பகுதிகளை 20 அடி உயரமும் 4 அடி அகலமும் கொண்ட கட்சுவர்களால் இராமநாதபுரம் மன்னர் ரெகுநாத கிழவன் சேதுபதி கி.பி. 1676 ல் அமைத்தார் என்ற செய்தி காணப்படுகிறது.  பாண்டிய நாட்டில் கி.பி. 11ஆம் நூற்றாண்டு முதல் 13ஆம் நூற்றாண்டு வரை சோழர்களது ஆட்சி தொடர்ந்து வந்ததும் அதனை அடுத்து கி.பி. 1311 முதல் 1378 வரை டில்லி சுல்த்தான்களது ஆட்சியும், அதனைத் தொடர்ந்து விசயநகர மன்னர்களது மகாமண்டலேசுரர்களது நிர்வாகமும் நடைபெற்று வந்த காலத்தில் ஏற்பட்ட அரசியல் சூழ்நிலையைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு சோழர்களது தானைத் தலைவர்களாக இருந்த செம்பி நாட்டு மறவர்கள் தம்மைத் தன்னாட்சி மன்னர்களாக அறிவித்து, ஆட்சியாளர்களாக மாறினர் என்பதுதான் பொருத்தமான வரலாற்று ஊகமாகும். இதற்கு எடுத்துக்காட்டாக வானாதிராயர்களைப் பற்றிய செய்திகளைச் சொல்வது இங்கு ஏற்புடையதாகும். வாணர்கள் என்றும் பின்னர் வாணாதிராயர்கள் என்றும் வழங்கப்பெற்ற பேராற்றல்மிக்க இனத்தவர்கள் பாண்டியர்கள், சோழர்கள். நாயக்கர்கள் ஆட்சிக் காலங்களில் அவர்களது நிர்வாகத் தலைவராகவும். படைத்தளபதிகளாகவும் இருந்து 15, 16 ஆம் நூற்றாண்டுகளில் தமிழகத்தில் நிலவிய உறுதியற்ற அரசியல் நிலைமைகளைத் தங்களுக்குச் சாதகமாக்கிக் கொண்டு அழகர்கோவில், மானாமதுரை போன்ற இடங்களைத் தங்களது தலைமையிடங்களாகச் சொந்தத் தன்னரசுகளை ஏற்படுத்திக் கொண்டிருந்தனர்,[6] அவர்களைப் போல சோழர்களின் தானைத் தலைவர்களாக இருந்த செம்பிநாட்டு மறவர்கள், அப்பொழுது அவர்களது பொறுப்பில் இருந்த பகுதிக்குத் தங்களை அதிபதியாகப் பிரகடனப்படுத்திக் கொண்டனர். அவர்களது நாடு பின்னர் சேதுநாடு என்று வழங்கப்பட்டது.  ஆனால் சேதுபதி மன்னர்களது தொன்மையைப் பற்றிக் கூறும்போது இலங்கை சென்று திரும்பிய இராமபிரான் அவர் அமைத்த திருவணையாகிய சேது அணையைக் காத்து வர அவரால் நியமிக்கப்பட்ட மக்கள் தலைவரது வழியினர் என்று சொல்லப்படுகிறது.  சேது + பதி --- சேதுபதி  சேனை + அதிபதி --- சேனாதிபதி  மடம் + அதிபதி --- மடாதிபதி  என்ற வழக்கிற்கேற்ப இம்மன்னர்களின் குலப்பெயரும் சேதுபதி என ஏற்பட்டிருத்தல் வேண்டும். "திருவுடை மன்னரைக் காணில் திருமாலைக் கண்டேன்" என்ற ஆழ்வார்களது ஐதீகத்தையொட்டி "சேதுபதி தரிசனமே இராமலிங்க தரிசனம் எனச் செப்பலாமே" என்ற வழக்கும் இருந்து வந்துள்ளது. -  இவர்களது தொன்மை எப்படி இருந்த போதிலும், இவர்களைப் பற்றிக் கிடைத்துள்ள வரலாற்றுச் சான்றுகளின்படி இந்த மன்னர்கள் சிறந்த ஆட்சியாளராகவும், ஆன்மீகத்தையும், தாய்மொழியாகிய தமிழையும், போற்றி வந்துள்ளனர் என்ற உண்மை புலப்படுகிறது.  கி.பி. 1414இல் இராமேஸ்வரம் திருக்கோயில் திருச்சுற்றையும் மேலக் கோபுரத்தையும் உடையான் சேதுபதி என்பவர் அமைத்தார் என்ற கல்வெட்டுச் செய்திதான் சேதுபதி மன்னரைப் பற்றிய மிகப் பழமையான கல்வெட்டுச் செய்தியாக கொள்ளப்படுகிறது. வரலாற்றாசிரியரான ஜேம்ஸ் பர்கூசன் குறிப்பிட்டுள்ள இராமேஸ்வரம் கல்வெட்டுக்களின் படி, சேதுபதி மன்னர்கள் கி.பி. 1487, 1500, 1524 ஆகிய ஆண்டுகளில் இராமேஸ்வரம் திருக்கோயிலுக்கு அறக்கொடைகள் வழங்கியுள்ளதை எடுத்துக் காட்டியுள்ளார்.[7]  கி.பி. 1547இல் இராமேஸ்வரம் பகுதியில் உள்ள வேதாளை கிராமத்தில் போர்ச்சுகல் நாட்டு வீரர்களுக்கும், மதுரை நாயக்கர், சேதுபதி  வீரர்களுக்கும் இடையில் நடந்த போர் நிகழ்ச்சியின்படி சேதுபதி மன்னர்களின் ஆட்சி இந்தப் பகுதியில் 16ஆம் நூற்றாண்டில் தொடர்ந்து வந்துள்ளது என்பதைப் புலப்படுத்துகிறது. துத்துக்குடியைத் தலைமை இடமாகக் கொண்டு மன்னார் வளைகுடாப் பகுதியைத் தங்கள் ஆதிக்கத்தில் வைத்திருந்த போர்த்துக்கீசியரின் ஒரு அணியினர் வேதாளை கிராமத்தில் ஒரு சிறிய கோட்டையை அமைத்துக்கொண்டு இராமேஸ்வரம் செல்லும் பயணிகளுக்கு மிகுந்த இடைஞ்சல் ஏற்படுத்தி வந்தனர்.  அப்பொழுது இருந்த சேதுபதி மன்னர் இந்த ஆக்கிரமிப்பாளர்களை அகற்றுவதற்கான வலிமையற்றிருந்தால் மதுரை மன்னரை அணுகி படைபலம் பெற்றுப் போர்த்துக் கீசியப் பரங்கிகளைத் துரத்தியடித்தார் என்ற செய்தி சேதுபதிகளின் ஆட்சியினை உறுதிப்படுத்துகிறது.[8] மற்றுமோர் வரலாற்றுச் செய்தி, கி.பி. 1530 முதல் மதுரை நாயக்க மன்னராய் இருந்த விசுவநாத நாயக்கர் மதுரையில் தொன்றுதொட்டு ஆட்சியாளராக இருந்த பாண்டியர்களை அழித்து அவர்களை வலுவிழக்கச் செய்து, கயத்தாறு, தென்காசி ஆகிய இடங்களில் பெயரளவில் மன்னராய் இருக்கச் செய்தது போல, மறவர் சீமையின் ஆட்சியாளரான விரையாத கண்டனிலிருந்த ஜெயதுங்க தேவரையும் ஆட்சியிலிருந்து அகற்றியதுடன் அவரைக் கொன்றும் விட்டார். [9]  இதனால் நிலைகுலைந்த மறவர்களது அரசின் நிர்வாகிகளும் அரச குடும்பத்தினரும் கிழக்கே தற்பொழுது போகலூர் என்றழைக்கப்படும் புகலூரில் அடைக்கலம் பெற்றனர். புகலூர் என்ற பெயரே இந்த அரச குடும்பத்தினர் அடைக்கலம் பெற்றதைக் குறிப்பிடுவதாக அமைந்தது. இவர்களது. வாரிசான சடைக்கத் தேவன் என்ற இளைஞன் மட்டும் இலங்கையின் யாழ்ப்பாணம் பகுதியில் தஞ்சம் அடைந்தான். மறவர் சீமையில் இயல்பு நிலை ஏற்பட்ட பொழுது கி.பி. 1600ல் இளைஞன் சடைக்கன் போகலூரில் சேது மன்னர்களது முதலாவது அரசினை நிறுவினான்.  இதனை உறுதிப்படுத்தும் வரலாற்றுச் செய்தி ஒன்று கிடைத்துள்ளது. இளைஞன் சடைக்கன், சடைக்கன் சேதுபதி என்ற பட்டத்துடன் அரசு நிர்வாகத்தை ஏற்ற பிறகு தம்மை இலங்கையிலிருந்து தேடிப் பிடித்துப் போகலூர்க்கு அழைத்து வந்தவர் கீழ்க்கரை நகர மரீச்சி ஆசாரி என்பவரைப் பாராட்டிச் சிறப்புச் செய்தது தான் அந்தச் செய்தி[10]ஆகும்.    1. ↑ கீழ்த்திசை சுவடி நிலையம், சென்னை - சேதுபதிகள் உண்டான விதம் (MSS)  2. ↑ Seshadri. Dr. - Sethupathis of Ramnad. (1974) thesis.  3. ↑ James Fergusson - History India and the Eastern Architecture (1911).  4. ↑ புலவர் சே.ராசு சேதுபதி செப்பேடுகள் (1995) - பக்கங்கள்  5. ↑ Pudukkottai Durbar Records R.Dis. No: 9/1882 Quoted by Prof. K.V. Viswanathan in his M.phil., Thesis (1980)  6. ↑ தனிப்பாடல் திரட்டு  7. ↑ Jamesfargoosan - The history of India and the great eastern architecture. (1876) சே. - 2  8. ↑ Rev. fr. Heras – The aravedu dynasty.  9. ↑ Satyanatha Ayyar. The history of Madura nayakas.  10. ↑ Entries in the inam Register available in the Ramanathapuram collector's office                                  இயல் - II  போகலூரில் வாழ்ந்த சேதுபதிகள் i. உடையான் ரெகுநாத சேதுபதி (எ) சடைக்கன் - I (1601 – 1622)  தமிழக வரலாற்றில் குறிப்பாகச் சேதுபதி மன்னர்களது வரலாறு பதினேழாவது நூற்றாண்டிலிருந்து முரண்பாடுகள் இல்லாத வகையில் தொடக்கம் பெறுவதுடன் இந்த மன்னர்களது தெய்வீகத் திருப்பணிகள் தொடர்வதனால் அவரது ஆட்சிக்காலம் சிறப்புப் பெறுகிறது.  இதற்கு முன்னிருந்த சேது மன்னர்களைப் பற்றிய சரியான தொடர்பான ஆவணங்கள் கிடைக்கவில்லை. போகலூரில் வாழ்ந்த சேதுபதி மன்னர்களின் வரிசையில் முதல் மன்னராக அறிமுகமாகும் சடைக்கன் சேதுபதிக்கும், மதுரை நாயக்கப் பேரரசிற்கும் நெருங்கிய தொடர்பு நிலவிவந்ததால் இந்த மன்னரைப் பற்றிய செய்திகள் வரலாற்றில் தெளிவாகப் பதிவு பெற்றுள்ளன.  இந்த மன்னர் கி.பி. 1601 முதல் கி.பி. 1622 வரை ஆட்சி புரிந்திருக்க வேண்டும். ஆனால் சில வரலாற்றாசிரியர்கள் இந்த மன்னரது ஆட்சித் தொடக்கம் கி.பி. 1603 என வரைந்துள்ளனர். இந்த மன்னரது தந்தையார் பெயர் என்ன என்பதும் அவர் சேதுபதிப் பட்டத்திற்கு எந்த முறையில் தகுதி பெற்றவர் என்பதும் அறியத்தக்கதாக இல்லை. இந்த மன்னர் இராமேஸ்வரம் திருக்கோயிலுக்கு வழங்கிய அறக்கொடைகள் பற்றிய கி.பி. 1607ஆம் ஆண்டு செப்பேட்டின்படி இவரது இயற்பெயர் திருமலை சடைக்கன் என்றும், உடையான் ரகுநாத சேதுபதி காத்தத்தேவர் என்றும் தெரியவருகிறது. சூரியகுலத்தவரான ரெகுநாத சேதுபதி என்பது இராமபிரானைப் பின் பற்றுபவர்கள் என்றும், காத்தத்தேவர் என்பது சேது அணைக்குக் காவலர் என்ற பொருளில் அனைத்து சேதுபதி மன்னர்களுக்கும் ஆட்சிப்பெயராக அமைத்து வழங்கப்பட்டுள்ளது உடையான் என்பது சிவபெருமானது அடியாரைக் குறிக்கும் சொல் இராமனுக்கு ஈஸ்வரனாகிய சிவனை, இராமநாதசாமியை வழிபடும் பக்தன் என்ற முறையில் இந்தப் பெயர் அவருக்கு வழங்கப்பட்டிருக்க வேண்டும். இதனைப் போன்றே இந்த மன்னர் இராமனது அடியார் (அ) இராமபிரானால் நியமனம் பெற்றவர் என்ற வகையில் இராமபிரானது சூரிய வம்சத்தினர் என்று சொல்லிக் கொள்ளும் அளவிற்கு ரகுநாத என்ற சிறப்புப்பெயர் இவரின் இயற்பெயருடன் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும்.  இந்த மன்னரது ஆட்சிக்காலத்தில் இன்றைய இராமநாதபுரம் நகருக்கு மேற்கே எட்டுக்கல் தொலைவில் உள்ள போகலூர் தலைமையிடமாக இருந்தது. ஆனால் இந்த ஆட்சியின் பரப்பைக் குறிப்பிடும் ஆவணங்கள் எதுவும் கிடைக்கப் பெறவில்லை. பொதுவாக கோடிநாடு என்று வழங்கப்பெற்ற இராமேஸ்வரம் தீவுப்பகுதியும் அதனையடுத்து மேற்கே உள்ள கீழ்ச்செம்பிநாடு என்ற பகுதியும் இதற்கும் மேற்கேயுள்ள செவ்விருக்கைநாடு, தாழையூர் நாடு, முத்துர் நாடு, கைக்கிநாடு ஆகிய பகுதிகளைக் கொண்ட அரசின் தலைவராக இந்த மன்னர் இருந்திருக்க வேண்டும்.  இதுபோலவே இந்த மன்னனது தலைநகரான போகலூர் எப்பொழுது கோநகராக மாற்றப்பட்டது என்பதும் தெரியவில்லை. ஆனால் இந்த மன்னரது சமகாலத்தவரான மதுரைப் பேரரசர் முத்துகிருஷ்ணப்ப நாயக்கரது இராஜகுரு இராமேஸ்வரம் யாத்திரை சென்றபோது "புகழுரிலிருந்த சடைக்கத் தேவர் இராஜகுருவைப் பின்தொடர்ந்து இராமேஸ்வரம் யாத்திரைக்கு உதவி செய்தார்' என்று ஒரு ஆவணத்தில் குறிப்பிடப் பட்டிருப்பதால் போகலூர் தலைநகர் என்பது உறுதியாகின்றது.[1]  ஆனால் இந்த மன்னர் கி.பி. 1607 முதல் வழங்கியுள்ள செப்பேடுகளில் "துகவூர் கூற்றத்து குலோத்துங்க சோழன் நல்லூர் கீழ்பால் விரையாத கண்டனிலிருக்கும்” என்ற தொடர் காணப்படுவதால் இவரது (அ) இவரது மூதாதையரது பூர்வீக இடம் விரையாத கண்டன் என்பது உறுதிப்படுகிறது.  மதுரை மன்னர் முத்து கிருஷ்ணப்ப நாயக்கரோடு ஏற்பட்ட தொடர்பு காரணமாக இந்த மன்னரை மதுரை நாயக்க மன்னர்களது தளவாய்களில் ஒருவராக நியமனம் பெற்றதுடன் அதற்கான சிறப்புப் பரிசில்களையும் சேதுபதி மன்னருக்குப் பெற்றுத் தந்தது. இத்தகைய சிறப்பினைச் சேது மன்னருக்கு மதுரை மன்னர் வழங்கியதற்கு ஒரு பின்னணியும் இருந்தது. தென்பாண்டிநாடு முழுவதும் மதுரை நாயக்க மன்னருக்குக் கட்டுப்பட்ட பகுதியாக இருந்தாலும் தூத்துக்குடி கடற்கரையிலுள்ள பரவர்களும், போர்த்துக்கீசியர்களும் நாயக்கமன்னருக்குக் கட்டுப்பட்ட குடிகளாக இருக்கவில்லை. ஏறத்தாழ 100 ஆண்டுகாலமாக மன்னார் வளைகுடாப் பகுதியைத் தங்களது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்த போர்த்துக்கீசியர் கி.பி. 1658இல் தங்களது ஆதிக்கத்தை டச்சுக்காரர்களிடம் இழந்து விட்டனர் என்றாலும் அவர்களது அதிகாரம் பாண்டியநாட்டின் கீழ்க்கடற்கரையில் தொடர்ந்து வந்தது. அதனையடுத்து நிறுத்தவோ எதிர்த்து அழிப்பதற்கோ மதுரை மன்னரிடம் போதுமான படைபலம் இல்லாத பரிதாபநிலை போர்த்துக்கீசிய பாதிரியார்களிடம் ஞானஸ்நானம் பெற்ற பரவர்கள் போர்ச்சுகல் நாட்டு மன்னர்களது குடிமக்களாக மாறினர். அந்த நாட்டுச் சட்ட திட்டங்களையும் பரவர்களது குடியிருப்புகளான மணப்பாடு, பெரியதாழை, வீரபாண்டியன் பட்டினம், வேம்பார் குடியிருப்புகளும் போர்ச்சுகல் நாட்டு வீரர்களது பாதுகாப்பிலும் இருந்து வந்தன.  இந்தப் பரிதாபநிலை கிழக்குக் கடற்கரை முழுவதும் நீடித்ததால் மதுரைப் பேரரசிற்கு மிகப்பெரிய சோதனையாகிவிடும் என்பதை உணர்ந்த முத்து கிருஷ்ணப்ப நாயக்கர் நமது போர்த்துக்கீசிய எதிர்ப்பு அணிக்கு மறவர் சீமையின் மன்னர் பயன்படுவார் என்ற சிந்தனை அவருக்கு இருந்தது.  மற்றும் இந்தப் பணிகளுக்கு மிகவும் பொருத்தமான வீரர் சேதுபதி என்பதை இன்னொரு நிகழ்ச்சி மூலமும் மதுரை மன்னர் கண்டறிந் திருந்தார். பொதுவாக அப்பொழுது ஸ்ரீரங்கத்திற்கும் இராமேஸ்வரத்திற்கும் இடைப்பட்ட பாதையில் பயணிகளுக்குக் கள்ளர்களினால் மிகுந்த இழப்பு ஏற்பட்டு வந்தது. மறவர் சீமையைப் பொறுத்த வரையில் இராமேஸ்வரம் பயணிகளுக்கு எந்தவிதமான தீங்கும் ஏற்படாதவாறு சடைக்கத் தேவரது சிறப்பான நிர்வாகம் கண்காணித்து வந்தது. மதுரை மன்னரது இராஜகுரு இராமேஸ்வரம் தீர்த்த யாத்திரை சென்றபோது இதனை நேரில் உணர்ந்து தீர்த்த யாத்திரை முடிந்தவுடன் மன்னருக்குத் தெரிவித்திருந்தார். ஆதலால் சடைக்கத் தேவரது பேராற்றலில் மதுரை மன்னருக்கு அழுத்தமான நம்பிக்கை இருந்தது.  திருப்பத்தூர் சீமை பட்டமங்கலம் பகுதியில் மதுரை மன்னருக்கு எதிராகக் கிளம்பிய அக்கிரமக்காரர்களை அடக்கி ஒடுக்கியதுடன் அந்தப் பகுதியிலிருந்து மதுரை மன்னருக்குச் சேரவேண்டிய அரசு இறை, முறையாகக் கிடைப்பதற்குச் சேது மன்னர் தக்க ஏற்பாடு செய்தார் என்பது மதுரை நாயக்கர் வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.[2]  அறக்கொடைகள்:  இந்த மன்னர் வழங்கிய செப்பேடுகளில் மூன்று மட்டும் கிடைத்துள்ளன. இவைகளிலிருந்து இந்த மன்னர் இராமேஸ்வரம் திருக்கோயிலின்பால் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார் என்பதும் அதன் காரணமாகக் கோயிலில் பூஜை, நைவேத்தியம், அபிஷேகம் மற்றும் சிறப்புக் கட்டளைகளுக்காக மன்னர் ஆறு கிராமங்களை வழங்கி உள்ளார் என்பதும் தெரிகிறது. மேலும் இந்தக் கோயிலில் பணியாளர்களாகப் பணியாற்றி வந்த பஞ்ச தேச ஆரியப் பெருமக்களுக்கு (பஞ்ச தேசத்து ஆரியர் - மகாராஷ்டிரம், கொங்கணம், கர்நாடகம், கேரளம், ஆந்திரம்) வீடுகள் அமைத்துக் கொள்வதற்காக இராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கரைக்கும் திருக்கோயிலின் நுழைவுவாயிலுக்கும் இடைப்பட்ட பரந்த வெண்ணிலத்தை நிலக்கொடையாக வழங்கியுள்ளார் என்பதும் தெரியவருகிறது.  இந்தக் கோயிலின் ஆறுவேளை வழிபாடுகளையும், ஆண்டு விழாக்களையும், சிறப்புக் கட்டளைகளையும் செவ்வனே நடத்தப் படுவதைக் கண்காணிப்பதற்கு இந்த மன்னர், இந்த பணிக்கெனத் தனியாக ஆதினக்கர்த்தர் என்ற பணிப்பதவியை ஏற்படுத்தியதுடன் அவருக்கு என திருக்கோயிலை ஒட்டிய வளாகத்தில் மடம் ஒன்றினையும் நிறுவினார். (பெரும்பாலும், இந்த மடம் தற்போதைய திருக்கோயிலைச் சேர்ந்த இராமமந்திரம், திருப்பணி மாளிகை, இவைகளை ஒட்டிய பயணியர் விடுதிகளைக் கொண்ட பகுதியில் அமைந்திருத்தல் வேண்டும் என நம்பப்படுகிறது.) இந்த மடம் பிச்சர்மடம் என வழங்கப்பட்டதுடன், இந்த மடத்தில் வாழ்ந்த ஆதினகர்த்தர் சேது இராமநாத பண்டாரம் எனவும் அழைக்கப்பட்டார்.  தஞ்சைத் தரணியில் உள்ள திருமறைக்காடு என்ற ஊரில் வாழ்ந்து வந்த வைதிக வேளாண் குடிமக்களைச் சேர்ந்தவரும் சைவச் சாத்திரங்களில் நன்கு பயிற்சி பெற்றவருமான துறவி ஒருவர் சேது இராமநாத பண்டாரம் பதவிக்கு நியமனம் செய்யப்பெற்றார். இந்த அரிய செயல் இந்த மன்னரது இராமேஸ்வரம் திருக்கோவிலைப் பற்றி நன்கு சிந்தித்துச் செயல்பட்ட தொலைநோக்கினை எடுத்துக்காட்டுவதாக அமைகிறது.  ஏற்கனவே தமிழகத்தில் சோழ மண்டலத்தில் சோழர்களது ஆட்சியில் சோழப் பேரரசர்கள் நூற்றுக்கணக்கான திருக்கோயில்களை அமைத்தார்கள் என்பது வரலாறு. பிற்காலங்களில் இக்கோயில்களில் வழிபாடுகள் முறையாக நடப்பதற்காகத் தருமபுரம், திருவாவடுதுறை, திருப்பனந்தாள் ஆகிய திருமடங்களின் தலைவர்களாகிய மடாதிபதி களைப் போன்று இராமேஸ்வரம் சேதுராமநாத பண்டார நியமனம் நமக்கு நினைவூட்டுவதாக உள்ளது.  இந்த மன்னரது ஆட்சிக்காலத்தில் இராமேஸ்வரம் திருக்கோயில் சிறப்பான ஆதரவினைப் பெற்றது போன்று தேவாரப்பதிகம் பெற்ற திருவாடானைத் திருக்கோயிலும் இந்த மன்னரது அறக்கொடைகளுக்கு உரியதாக இருந்தது என்பதை இராமநாதபுரம் சமஸ்தான ஆவணங்கள் தெரிவிக்கின்றன. கி.பி. 1605இல் கருப்பூர் கிராமமும், கி.பி. 1606ல் அச்சங்குடியையும், 1615ல் நாகனேந்தல், இரட்டை ஊரணி, வில்லடிவாகையையும் அறக்கொடையாக இந்த மன்னர் வழங்கியுள்ளார். இந்த ஊர்களில் இருந்து சேதுபதி மன்னருக்கு வரப்பெறுகின்ற அனைத்து வருவாய்களும் சம்பந்தப்பட்ட கோயிலுக்குக் கிடைப்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டது.  இவ்வாறு சிறப்பாக ஆட்சிபுரிந்த முதலாவது சடைக்கத் தேவர் நான்கு மக்களாகிய கூத்தன், தளவாய் (எ) சடைக்கன். கலியானப் புலித்தேவர், காதலி நாச்சியார் என்ற மக்களையும் தனது வாரிசுகளாக விட்டுவிட்டு 1622ல் காலமானார்.  எட்டையபுரம் வரலாற்றினை எழுதிய கணபதியாப்பிள்ளை என்பவர். இந்த சேதுபதி மன்னர் தெற்கே நம்பிபுரம் என்ற ஊரின் அருகில் நடந்த போரில் தனது முடியையும், அணிமணிகளையும் இழந்துவிட்டு உயிர்தப்பி ஓடினார் என வரைந்துள்ளார். ஆனால் இதனை உறுதி செய்யும் தகவல் இராமநாதபுரம் மெனுவலிலும் வேறு ஆவணங்களிலும் காணப்படவில்லை.    1. ↑ J. W. Taylor- Old historical manuscripts- Vol- II (1881)  2. ↑ Sathya Natha Ayar. A – History of Madura Nayaks (1928)                                ii. கூத்தன் சேதுபதி (கி.பி. 1622 - 1635)  போகலுரைத் தலைநகராகக் கொண்ட சேதுநாட்டின் இரண்டாவது மன்னராக முடிசூடிக் கொண்டவர் கூத்தன் சேதுபதி ஆவார். இவரது ஆட்சிக்காலம் கி.பி. 1622ல் தொடங்கி கி.பி. 1635ல் முடிவுற்றது. ஒரு மன்னரது செம்மையான ஆட்சியைச் சுட்டுவதற்கு அவரது ஆட்சிக்காலம் ஒரு முக்கியமான குறியீடு ஆகும். இந்த மன்னரது ஆட்சி 14 ஆண்டுகளுக்குள் அமைந்து முடிவுற்றாலும் சேது நாட்டின் சமுதாய ஆன்மீகப் பணிகளுக்கு ஏற்ற வடிகாலாக இருந்து வந்ததை வரலாறு விளக்குகிறது.  பொதுவாகக் கார்காலத்தின் மழைப்பொழிவினை நம்பிய வகையில் இந்த நாட்டு மக்கள் தங்களது விவசாயப் பணிகளைத் தொடர்ந்து வந்தனர் இந்த நாட்டின் ஊடே பரவி ஒடுகின்ற கிருதுமால் ஆறு, குண்டாறு, வைகை ஆறு, மணி முத்து ஆறு, விரிசிலை ஆறு ஆகிய ஐந்து ஆறுகளில் வரப்பெறுகின்ற மழைவெள்ளம் இந்த நாட்டு விவசாயத்திற்கு அச்சாக அமைந்திருந்தது. இதனால் மக்கள் ஆங்காங்கே வரத்துக்கால்களையும் தான்போகிக்கால்களையும் குளக்கால்களையும் அமைத்ததுடன் அவைகளைக் கண்மாய், ஏந்தல், குளம், குட்டை ஆகியவைகளை அமைத்து அவைகளில் மேலே குறிப்பிட்டுள்ள ஆறுகளின் வெள்ளத்தைத் தேக்கிப் பயன்படுத்தி வந்தனர். இந்த சேதுமன்னரது ஆட்சியில் மேலும் சில நீர் ஆதாரங்களை இந்த மன்னர் அமைத்து உதவினார் என்பதை வரலாறு தெரிவிக்கின்றது.  சமுதாயப் பணிகள் வைகை ஆற்றின் தென்பகுதி பெரும்பாலும் பார்த்திபனூருக்கு அப்பால் பரமக்குடி, முதுகளத்துார் வட்டங்களில் வறண்ட நிலங்கள் மிகுதியாக இருந்து வந்தன. இந்தக் கன்னி நிலங்களை வளமை கொழிக்கும் கழனிகளாக மாற்றுவதற்கு இந்த மன்னர் முயன்றார். கமுதக்குடி கிராமத்திற்கு மேற்கே கிழக்கு நோக்கிச் செல்லும் வைகை ஆற்றை வழிமறித்துத் தெற்கு நோக்கிச் செல்லுமாறு ஒரு பெரிய காலினை இந்த மன்னர் வெட்டுவித்தார். இதில் வரப்பெறுகின்ற வெள்ளத்தைப் பயன்படுத்திப்பல புதிய கண்மாய்களும், ஏந்தல்களும் ஏற்படுத்தப்பட்டு வறண்ட நிலங்கள் விவசாய நிலங்களாக மாற்றப்பட்டன. இதன் காரணமாக இந்த மன்னர் மறைந்து 300 ஆண்டுகளுக்கு அப்புறமும் இந்தக் கால்வாய் கூத்தன் கால் என்ற பெயருடன் அழைக்கப்பட்டு மக்களது பயன்பாட்டில் இன்றுவரை இருந்து வருகிறது.  இந்த மன்னரது இந்த முன்னோடி முயற்சி பிற்காலச் சேதுபதி மன்னர்களுக்கு வேளாண்மைத் துறையில் வழிகாட்டியாக அமைந்துவிட்டது. ரெகுநாத சேதுபதி மன்னர் குண்டாற்றுக்கு வடக்கே உள்ள பகுதிகள் பயன்பட, நாராயணகாவேரி என்ற கால்வாயையும் முத்து விஜய ரெகுநாத சேதுபதி மன்னர் அதே குண்டாற்றின் கிழக்குப் பகுதியில் ரெகுநாத காவேரி என்ற மிக நீண்ட கால்வாயினைத் தோற்றுவிப்பதற்கும் கூத்தன் கால்வாய் சிறந்த முன்னோடி முயற்சியாக அமைந்தது. மேலும் இந்த மன்னர் வைகை ஆற்றின் வடபுறம் குளத்தூர் அருகே அமைந்துள்ள முதலூர் என்ற ஊரில் ஒரு கண்மாயை வெட்டிக் கலுங்குகளை ஏற்படுத்தினார் என்பதை அவரது கி.பி. 1628 ஆம் வருடத்திய கல்வெட்டு தெரிவிக்கின்றது.[1]  ஆன்மீகப் பணிகள் இவ்விதம் சேதுநாட்டின் சமுதாயப் பணிகளில் மிகுந்த ஆர்வம் காட்டிய இந்த சேதுபதி மன்னர் தமது தந்தையின் பணிகளை அடியொற்றி இராமேஸ்வரம் திருக்கோயிலில் பல புதிய திருப்பணிகளை மேற்கொண்டார். இந்தத் திருக்கோயிலின் முதல் சுற்றுப் பிரகாரத்தை இந்த மன்னர்தான் அமைத்திருக்க வேண்டும் என நம்புவதற்கு ஏற்ற ஆதாரங்கள் உள்ளன. இந்தப் பிரகாரச் சுவற்றினை ஒட்டி மகாமண்டபம் ஒன்றினை இவர் நிர்மாணித்ததுடன் அந்த மதிலின் தென்பகுதியில் விநாயகருக்கு ஒரு சிறிய கோயிலையும் அமைத்துள்ளார். மேலும் இந்தக் கோயிலின் நடமாளிகையையும் இந்த மன்னரே அமைத்தார் என்பதனைக் கல்வெட்டுச் செய்தி ஒன்று தெரிவிக்கின்றது.  அடுத்து மன்னர் கூத்தன் சேதுபதியின் பார்வை இராமேஸ்வரம் திருக்கோயிலின் நிர்வாகத்தில் படிந்து நின்றது. திருக்கோயிலில் பணியாற்றும் பணியாளர்கள் அவர்களுக்குரிய பணி, அவைகளைச் செய்து முடிக்க வேண்டிய நேரம் அதற்குக் கோயிலில் இருந்து வழங்கப்படும் பரிசு என்ன என்பதை அவர்கள் புரிந்து கொள்ளுமாறு செய்து அவர்களிடம் இசைவு முறி ஒன்றினை எழுதி வாங்கினார். மற்றும் திருக்கோயிலின் ஆதினக் கர்த்தராகிய சேதுராமநாத பண்டாரம் கோயிலில் வரப்பெறுகின்ற வருவாய்களை எவ்விதம் பிரித்துப் பயன்படுத்த வேண்டும் என்பதற்கான விளக்க உரையையும் அந்தப் பண்டாரத்திடமிருந்து எழுதிப்பெற்ற செப்பேட்டின் வழியாகத் தெரிந்துகொள்ள முடிவதுடன் அவரது நிர்வாகத்திறனையும் அறிவிக்கும் சிறந்த தடயமாக அந்தச் செப்பேடு அமைந்துள்ளது.  மேலும் இந்தச் செப்பேட்டில் தந்துள்ள வாசகத்தின்படி இந்த மன்னரது மனச்சான்று எவ்விதம் இருந்தது என்பதனையும் அறிய முடிகிறது. இந்த மன்னரது உத்தரவுப்படி இராமேஸ்வரம் திருக்கோயிலில் இரண்டு வகையான கட்டளைகள் இருந்து வந்தன. திருக்கோயிலுக்கு வரப்பெறுகின்ற அன்பளிப்புகள், காணிக்கைகள், நேர்ச்சை ஆகிய அனைத்து வருவாய்களையும் பொன், வெள்ளி அணிகளையும் கோயில் கட்டளையில் சேர்க்க வேண்டும் என்பதுடன், அவை தவிர சேது மன்னர்கள் உடையான் சடைக்கன் சேதுபதி காலம் முதல் சேது மன்னர்கள் வழங்குகின்ற சொந்தத் திரவியங்களும் அணிமணிகளும் மட்டும் தனியாகச் சேது மன்னர் கட்டளையில் சேர்க்க வேண்டும் என்பதும் அந்த உத்தரவு. இதற்கான காரணத்தை விளக்கம் தருகின்ற அந்தச் செப்பேட்டின் வாசகம் வருமாறு:[2] (...."நம்முடைய கட்டளைக்கு நமது சொந்தத் திரவியம் கொண்டு அபிஷேக, நைவேத்தியம், உச்சபம், நடப்பித்து, அந்தப்பலன் நம்மை வந்து சேருகிறதேயல்லாமல், பிறத்தியாருடைய திரவியம் பாவத் திரவியமாக இருக்கும் ஆனபடியினாலே, நம்முடைய கட்டளையிலே அவைகளை வாங்கி நடப்பிக்கத் தேவையில்லை')  அறக்கொடைகள் இந்தக் கோயிலின் ஆண்டுவிழாக்கள் அன்றாட பூஜைகள் ஆகியவற்றை நடப்பித்து வருவதற்காக இந்த மன்னர் கமுதி வட்டத்தில் உள்ள மருதங்க நல்லூர் என்ற கிராமத்தையும் பரமக்குடி வட்டத்திலுள்ள சேதுகால் என்ற ஊரினையும் கோவிலுக்காகச் சர்வமானியமாக வழங்கியிருப்பதை அவரது இரு செப்பேடுகள் தெரிவிக்கின்றன. அத்துடன் இந்த மன்னர் கி.பி. 1624ல் வழங்கப்பட்ட செப்பேட்டின்படி மன்னார் வளைகுடாவில் முத்துச் சலாப காலங்களில் இரண்டு படகுகள் வைத்து முத்துக் குளிக்கும் மன்னரது உரிமையினை இந்தக் கோவிலுக்கு வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்க செய்தியாகும். இதனைப் போன்றே அப்பொழுது மக்களால் மிகுந்த மரியாதையுடன் மதிக்கப்பெற்ற திருவாடானை திருக்கோயிலுக்கும் அந்த வட்டத்தில் உள்ள கீரணி, சேந்தணி, கீரமங்கலம் ஆகிய மூன்று ஊர்களையும் தானம் வழங்கியிருப்பதை இன்னொரு ஆவணம் தெரிவிக்கின்றது.  மேலும் இந்த மன்னரது தெய்வீகத் திருப்பணியின் பட்டியலில் போகலூரில் பகழிக்கூத்த ஐயனார் கோயில் அமைப்பும், இராமநாதபுரம் கோட்டையின் மேற்குச் சுவற்றினை அடுத்து நிர்மாணித்த கூரிச்சாத்த ஐயனார் கோயில் அமைப்பும் இடம் பெற்றுள்ளன.  சேதுபதிச் சீமையில் இந்த மன்னருக்கு முன்னால் கிராமப்புறக் காவல் தெய்வமாகக் கருதப்படும் ஐய்யனாருக்கு வழிபாடும் விழாவும் நடந்ததாகச் செய்திகள் இல்லை. ஆனால் எத்தகைய சூழ்நிலையில் ஐய்யனார் வழிபாடு இந்த மன்னரால் தொடங்கப்பெற்றது என்பது தெரியவில்லை. இவரை அடுத்து வந்த மன்னர்களது ஆட்சியில் சிவவழிபாடு, வைணவ வழிபாடு, அம்பாள் வழிபாடு ஆகிய வெவ்வேறு வழிபாடுகளுடன் குறிப்பாகக் கிராமங்களில் ஐய்யனார் வழிபாடு பரவலாக நடைபெற்றதைப் பல ஆவணங்கள் தெரிவிக்கின்றன. மற்ற பகுதிகளை விட சேதுநாட்டின் வடக்குப் பகுதியில் இராஜசிங்க மங்கலம் வட்டகையில் ஐய்யனாருக்கு மிகுதியான ஆலயங்கள் அமைக்கப்பட்டு இருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இத்தகைய ஆன்மீகப் பணியிலும் சமுதாயப் பணியிலும் வரலாற்றில் தமக்கு எனச் சிறந்த இடத்தைப் பெற்றுள்ள இந்த மன்னர் கி.பி. 1635ல் இயற்கை எய்தினார்.  இந்த மன்னரது ஆட்சியில் நிகழ்ந்த சுவையான செய்தி ஒன்று. இந்த மன்னர் ஒருமுறை இராமேஸ்வரம் திருக்கோயிலினைச் சுற்றிப் பட்டத்து யானையில் அமர்ந்து பவனி வந்து கொண்டிருந்தார். அப்பொழுது முதியவர் ஒருவர் அதற்கு முன்னர் மன்னரைச் சந்திக்கும் வாய்ப்பு கிட்டாததால் மன்னர் அமர்ந்திருந்த யானையின் அருகே சென்று அதன் வாலைப் பிடித்து யானை மேலும் நடந்து செல்ல முடியாமல் தடுத்து நிறுத்தினார். உடன் வந்த வீரர்கள் அவரைச் சூழ்ந்து கொண்டு அவரை விசாரித்த பொழுது தமது அன்றாட உணவிற்கு வழியில்லை என்ற விண்ணப்பத்தைத் தெரிவிக்கவே அவ்விதம் செய்ததாகச் சொன்னார். இதனை அறிந்த மன்னர் அந்த முதியவரது வல்லமையை அறிந்து மகிழ்ந்து அவருக்கு நாள்தோறும் இருவேளை உணவைக் கோயிலிலிருந்து வழங்குமாறு ஆணையிட்டார். இந்தச் செப்பேடு அரசு சென்னை அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. அந்த முதியவரது பெயர் முத்து விஜயன் சேர்வை என்பதாகும்.  நிர்வாகச் சீரமைப்பு இந்த மன்னரது சாதனைகளில் சிறப்பாகக் குறிப்பிடத்தக்க இன்னொரு சாதனையும் உள்ளது. அதாவது இராமேஸ்வரம் திருக்கோயிலில் நாற்புறமும் கடலால் சூழ்ந்த தீவுப் பகுதியாக அமைந்து இருப்பதால் அங்கு நடைபெறும் சமுதாயக் குற்றங்களை உடனுக்குடன் விசாரித்துத் தக்க தண்டனைகள் வழங்குவது சேதுபதி மன்னருக்கு இயலாத காரியமாக இருந்தது. ஆதலால் ஸ்ரீ இராமநாத சுவாமிக்குச் சேதுபதி மன்னர் அறக்கொடையாக வழங்கியுள்ள இராமேசுவரம் தீவுக் கிராமங்களில் உள்ள மணியக்காரர். கணக்கப்பிள்ளைமார், குடியானவர்கள், இராமேசுவரம் திருக்கோயில் பணியில் உள்ள பணியாளர்கள், பரிசுபட்டர், கோயில் தோப்புக்காரர். நந்தவனக்காரர்களை அவரவர் செய்த குற்றங்களுக்கு மறவர் சீமை மன்னர் என்ற முறையில் அவர்களை விசாரித்து ஆக்கினை செய்வதற்கு மன்னருக்குச் சகல அதிகாரங்கள் இருந்தாலும் அவைகளைத் தமது பிரதிநிதியாக இருந்து செயல்படுவதற்கு இராமநாத பண்டாரத்திற்கு அந்த அதிகாரங்களை மன்னர் வழங்கினார். அத்துடன் புனித பூமியான இராமேஸ்வரம் தீவில் குற்றங்கள் பெருகாமல் அவைகளை ஒடுக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்திலும் இறையுணர்வுடனும் இராமநாத பண்டாரம், குற்றங்களைக் களைந்து நியாயம் வழங்குவதில் சமன் செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்து ஒருபுறமும் சாராமல் மேன்மையுடன் நடந்துகொள்வார் என்ற நம்பிக்கையிலும், சேதுபதி மன்னர் ஆதினக்கர்த்தருக்கு இந்த அதிகார மாற்றத்தை அளித்துள்ளார். இந்த நிகழ்ச்சிகளுக்கு பின்னர் எதுவாக இருந்த போதிலும் இந்த செப்பேடு தமிழகக் குற்றவியல் வரலாற்றின் சிறப்பு ஏடாக என்றும் விளங்கும் என்பதே இயல்பு.[3]    1. ↑ கமால் S.M. Dr. சேதுபதி மன்னர் கல்வெட்டுக்கள் (2002)  2. ↑ கமால் Dr. S.M. சேதுபதி மன்னர் செப்பேடுகள் (1994)  3. ↑ S.M. கமால், Dr. - சேதுபதி மன்ன்ர் செப்பேடுகள் (1994 பக்கம்)                                  iii. தளவாய் சேதுபதி (எ) இரண்டாம் சடைக்கன் சேதுபதி (கி.பி. 1635 - 1645)  காலம் சென்ற கூத்தன் சேதுபதி மன்னருக்குத் தம்பித் தேவர் என்ற மகன் இருந்து வந்தார். ஆனால் இராமநாதபுரம் அரண்மனையைச் சேர்ந்த முதியவர்கள் தம்பித் தேவரது உரிமையைப் புறக்கணித்து விட்டுக் கூத்தன் சேதுபதியின் இளைய சகோதரரான சடைக்கத் தேவரை இரண்டாவது சடைக்கன் சேதுபதியாக அங்கீகரித்துச் சேதுபதி பட்டத்தினை அவருக்குச் சூட்டினர். இராமநாதபுர அரண்மனை வழக்கப்படி சேதுபதி மன்னருக்கு அவரது செம்பி நாட்டு மறவர் குலப் பெண்மணியின் மூலமாகப் பிறந்த மகனுக்கே சேதுபதி பட்டம் உரியதாக இருந்தது. கூத்தன் சேதுபதியின் இரண்டாவது மனைவியும் செம்பிநாட்டு மறப்பெண்மணியும் அல்லாத மனைவிக்கு பிறந்தவர் தம்பித்தேவர் என்பதால் அவர் சேதுபதி பட்டத்திற்கான தகுதியை இழந்தவராகக் கருதப்பட்டார். இரண்டாவது சடைக்கன் சேதுபதி கி.பி. 1635 முதல் கி.பி. 1645 வரை 10 ஆண்டுகள் சேதுபதி மன்னராக இருந்து வந்தார். இவரது ஆட்சிக்காலத்தில் மிகப்பெரிய இழப்பும், அழிமானமும் சேதுநாட்டிற்கு ஏற்பட்டன.  தமது பேரரசிற்கு அண்மையிலுள்ள மறவர் சீமையின் வலிமை நாளுக்குநாள் பெருகி வருவதை விரும்பாத மதுரை மன்னரான திருமலை நாயக்கர், சேதுநாட்டின் மீது மிகப்பெரிய படையெடுப்பினை, அதுவரை சேதுநாடு கண்டறியாத மிகப்பெரிய போர் அணிகளைச் சேதுநாட்டிற்குள் கி.பி. 1639ல் அனுப்பி வைத்தார். வடக்கே கொங்கு நாட்டிலிருந்து தெற்கே நாஞ்சில் நாடு வரையிலான நீண்ட பகுதியில் அமைந்திருந்த நாயக்க மன்னரது எழுபத்தி இரண்டு பாளையங்களின் வீரர்கள் இந்தப் படையெடுப்பில் கலந்து கொள்ளுமாறு செய்யப்பட்டனர். இந்தப் படையெடுப்பினைத் தலைமை தாங்கி நடத்தியவர் திருமலை நாயக்க மன்னரது தளவாய் இராமப் பையன். நாயக்கர் படைகள் தொடக்கத்தில் சேது நாட்டிற்குள் புகுந்து எளிதாகப் போகலூர், அரியாண்டிபுரம். அத்தியூத்து ஆகிய கோட்டைகளைக் கைப்பற்றியவாறு கிழக்கே முன்னேறிச் சென்றன.[1] சேதுநாட்டு மறவர்களது கடுமையான தாக்குதலை மேலும் தாங்கமுடியாத மதுரைப் படைகளின் முன்னேற்றத்தில் சற்று தொய்வு ஏற்பட்டது. அத்துடன் மதுரைப் பேரரசிற்கு வடக்கே பிஜப்பூர் சுல்த்தானது படையெடுப்பு அபாயமும் அப்பொழுது இருந்தது. இதனால் சேதுநாட்டுப் போரினைச் சிறிது காலம் நிறுத்தி வைத்த மதுரைத் தளவாய் வடக்கே போர்ச்சுகீசியரின் தலைமை இடமான கோவாவிற்குச் சென்று போர்ச்சுகல் நாட்டு கவர்னருடன் ஒரு ஒப்பந்தம் செய்துகொண்டு தகுந்தபடை உதவியுடன் தளவாய் சேதுநாட்டிற்குத் திரும்பினார்.[2]  வலிமைவாய்ந்த மதுரைப் படையினைச் சமாளிப்பதற்கு ஏற்ற இடமாகக் கருதி சேதுபதி மன்னர் இராமேஸ்வரம் தீவிற்குச் சென்றார். என்றாலும் மதுரைத் தளவாய் பாம்பனிற்கும் மண்டபத்திற்கும் இடையே கடலின்மீது ஒரு பாலம் அமைத்து அதன் வழியாக மதுரைப் படைகள் சேதுபதி மன்னரைப் பின்தொடருமாறு செய்தார்.  இராமேஸ்வரம் தீவில் இராமேஸ்வரம் நகருக்கு முன்னதாக உள்ள இன்றைய தங்கச்சிமடம் அருகே இருபடைகளும் பொருதித் தாக்கின. இரண்டாவது நாள் போரில் சேது மன்னரது படைகளுக்குத் தலைமை தாங்கிய போகலூர் கோட்டை வன்னியத்தேவன் வைசூரி நோயினால் பாதிக்கப்பட்டு இறந்தார். மிகப்பெரிய வீரனாக விளங்கிய வன்னியத் தேவனது திடீர் மறைவு சேதுபதி மன்னருக்கு எதிர்பாராத பின்னடைவை ஏற்படுத்தியது. மதுரைத் தளவாய், சேதுபதியை எளிதில் வெற்றிகொண்டு அவரைச் சிறைபிடித்து மதுரையில் உள்ள திருமலை நாயக்கர்மன்னர் முன் நிறுத்தினார். சிறையில் அடைக்கப்பட்டார். மதுரை திருமலை நாயக்கரது இந்த சேதுநாட்டுப் படையெடுப்பைப் பற்றிய நாட்டுப்புற இலக்கியமான இராமப்பையன் அம்மானை விவரமாக வரைந்துள்ளது. மேலும் இந்தப் போரில் வன்னியத் தேவன் ஆற்றிய போர்ப் பணியையும் சிறப்பாக இந்த அம்மானையில் சொல்லப்பட்டுள்ளது.  ஏற்கனவே சேதுபதி பட்டத்திற்கு உரிமை கொண்டாடிய தம்பித் தேவரைத் திருமலைநாயக்க மன்னர் மறவர் சீமையின் மன்னராக நியமனம் செய்தார். அந்நியரது கைப்பாவையான தம்பித் தேவரை மன்னராக ஏற்றுக்கொள்ள மறுத்த மறக்குடி மக்கள் மறவர் சீமையெங்கும் போர்க்கொடி உயர்த்தினர். குழப்பம், கலகம், சீரழிவு இந்தச் சூழ்நிலையை மேலும் தொடர விரும்பாத திருமலைநாயக்க மன்னர் இரண்டாவது சடைக்கன் சேதுபதியைச் சிறையினின்றும் விடுவித்துப் போகலூருக்குத் திருப்பி அனுப்பி வைத்தார். இந்த நிகழ்வுகள் கி.பி. 1640ல் நிகழ்ந்தன.  அறக்கொடைகள் அடுத்த 5 ஆண்டு காலங்களில் சடைக்கன் சேதுபதி பல தெய்வீகப் பணிகளை மேற்கொண்டிருந்தார் என்பதை சில வரலாற்றுச் செய்திகள் தெரிவிக்கின்றன. திருவாடானை வட்டத்திலுள்ள திருத்தேர் வளையில் எழுந்தருளியுள்ள ஆண்டு கொண்ட ஈசுவரர் கோயிலுக்குக் கொங்கமுட்டி, தச்சனேந்தல், தண்டாலக்குடி ஆகிய ஊர்களையும் புளியங்குடியில் உள்ள பூவணப்புநாத திருக்கோயிலுக்கு விரகடியேந்தல் என்ற ஊரினையும் சர்வமானியமாக வழங்கியதனை அந்தச் செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் தமது தந்தை சடைக்கன் சேதுபதியையும், சகோதரர் கூத்தன் சேதுபதியையும் பின்பற்றியவராக இராமேஸ்வரத் திருக்கோயிலின் நுழைவுவாயிலில் ஏற்கனவே அடிக்கல் நாட்டப்பெற்ற இராஜ கோபுரத்தினை நிர்மாணிப்பதற்கு இந்த மன்னர் முயற்சி செய்தார். இந்தத் திருப்பணிக்காகச் சேதுநாட்டில் தெற்கு வட்டகையான சாயல்குடி பகுதியிலிருந்து கிடைக்கும் அனைத்து வருவாய்களையும் இந்த கட்டுமானத்தில் ஈடுபடுத்தி வந்தார்.[3] என்றாலும் இந்த மன்னரது வாழ்நாளில் இந்தத் திருப்பணி நிறைவு பெறாத நிலையில் கி.பி. 1645ல் இந்த மன்னர் காலமானார். ஆனால் இவரது ஆட்சிக்காலத்தில் இராமநாதபுரம் கோட்டைக்குள் தொடங்கப்பெற்ற சொக்கநாத ஆலயம் இவரது ஆட்சிகாலத்திலேயே நிறைவுபெற்றது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.    1. ↑ இராமப்பையன் அம்மானை - தஞ்சைசரசுவதிகமால் பதிப்பு  2. ↑ Sathya Natha Ayar. A – History of Madura Nayaks (1928)  3. ↑ Seshadri. Dr. Scthupathis of Ramnad. (unpublished Ph.D. thesis 1974)                                  இயல் - III  திருமலை ரெகுநாத சேதுபதி   தளவாய் இரண்டாவது சடைக்கன் சேதுபதி ஆண்வாரிசு இல்லாமல் இறந்து போனதால் சேதுநாட்டின் அரசுரிமை யாருக்கு என்ற பிரச்சனை எழுந்தது. சேதுபதிப் பட்டத்திற்கு மறைந்த மன்னரான தளவாய் சேதுபதியின் தங்கை மக்களான தனுக்காத்த தேவர், நாராயணத் தேவர், திருமலைத் தேவர் ஆகிய மூவர்களில் ஒருவரை சேது மன்னர் ஆக்குவதற்கு அரண்மனை முதியவர்கள் முயற்சித்துக் கொண்டிருந்தனர். இதனை அறிந்த கூத்தன் சேதுபதியின் மகனான தம்பித்தேவர் மதுரை மன்னர் திருமலை நாயக்க மன்னரை மீண்டும் அணுகி சேதுநாட்டிற்குத் தம்மை மன்னராக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். ஏற்கனவே மறவர் சீமையைத் தமதாக்கிக் கொள்ள முயன்ற திருமலை நாயக்க மன்னர் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக்கொள்ள சேதுநாட்டு அரசியலில் தலையிட்டார். தம்பித் தேவரையும் அவரது எதிர்த் தரப்பினரான தனுக்காத்த தேவர் முதலியோரையும் கலந்து ஆலோசித்து அவரது முடிவினை அவர்களிடம் தெரிவித்தார். இதன்படி ஏற்கனவே காளையார் கோவில் பகுதியைத் தன் வசம் வைத்திருந்த தம்பித் தேவருக்கு அந்தப் பகுதியினை ஆளும் உரிமையினையும், தனுக்காத்த தேவருக்கு சேதுநாட்டின் வடகிழக்குப் பகுதியான அஞ்சுகோட்டை பகுதியையும், திருமலை ரெகுநாதத் தேவர் இராமநாதபுரம் கோட்டை உள்ளிட்ட தென் பகுதியையும் ஆள வேண்டும் என்பதுதான் திருமலை நாயக்கரது தீர்ப்பு ஆணைத் திட்டம். வலிமையுடனும், ஐக்கியத்துடனும் ஒன்றுபட்ட சேதுநாட்டை இந்த மூன்று பகுதிகளாகப் பிரிவினை செய்வதன் மூலம் திருமலை நாயக்க மன்னரது இரகசிய திட்டத்திற்கு ஏற்ப இந்தப் பிரிவினை அமைந்தது.  இராமேஸ்வரம் போரினால் பலத்த பொருளாதாரச் சிதைவும் பொதுமக்களுக்குப் பலவிதமான சிரமங்களும் ஏற்பட்டிருந்த நிலையில் மேலும் இரத்தக்களரியையும், குழப்பத்தையும் தவிர்க்கும் வகையில் திருமலை நாயக்க மன்னரது தீர்ப்பினை மூவரும் ஏற்றுக்கொண்டு முறையே காளையார் கோவிலிலும், அஞ்சுக்கோட்டையிலும். போகலூரிலும் தங்களது ஆட்சியினை அந்த மூவரும் தொடங்கினார்கள். ஆனால் திருமலை நாயக்க மன்னருக்கு ஏமாற்றம் தரும் வகையில் சேதுநாட்டில் அரசியல் நிகழ்ச்சிகள் அமைந்தன. காளையார் கோவிலில் தம்பித்தேவரும், அஞ்சுக்கோட்டையில் தனுக்காத்தத் தேவரும் அடுத்தடுத்து, காலமானார்கள். அவர்களுக்கு உரிய வாரிசுகள் இல்லாத காரணத்தினால் அந்த இரு பகுதிகளும் திருமலை ரெகுநாத சேதுபதியின் ஆட்சிப்பகுதியாக அமைந்து சேது நாட்டின் புகழினைப் பரப்பும் வாய்ப்பாக அமைந்தது.  இப்பொழுது மதுரை மன்னர் திருமலை நாயக்கருக்கு அடுத்தடுத்து பல சோதனைகள எழுந்தன. முதலாவதாக அந்த மன்னரது எழுபத்து இரண்டு பாளையக்காரர்களில் ஒருவரான எட்டையபுரத்துப் பாளையக்காரர் மதுரை மன்னருக்கு எதிராக திருநெல்வேலிச் சீமையில் சில பாளையக்காரர்களைத் திரட்டி திருமலை நாயக்கருக்கு எதிராகக் கலகக்கொடி உயர்த்தினார். மதுரை நாயக்க அரசினால் பாளையக்காரர் பதவியைப் பெற்ற எட்டயபுரம் பாளையக்காரர் உள்ளிட்ட தெற்கத்திய பாளையக்காரர்கள் இத்தகைய இக்கட்டான நிலையை உருவாக்கக் கூடும் என்பதைச் சிறிதும் எதிர்பாராத திருமலை நாயக்க மன்னர் செய்வது அறியாது திகைத்தார். முடிவில் ஒருவாறாகத் தேறுதல் பெற்றுச் சேதுபதி மன்னரை அணுகினார்.  இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயம் செய்து விடல்  என்ற பொதுமறைக்கு ஏற்ப மதுரை மன்னர் சேதுநாட்டிற்கு இழைத்த தீங்குகளை மறந்து சேதுபதி மன்னர் மதுரை மன்னருக்கு உதவச் சென்றார்.  மதுரை மீது கன்னடியர் படையெடுப்பு எட்டயபுரம் பாளையக்காரரையும் அவரது கூட்டணியையும் முறியடித்து எட்டையபுரம் பாளையக்காரரைக் கைது செய்து மதுரையில் திருமலை நாயக்கர் அரசவையில் நிறுத்தினார்.  அடுத்து கி.பி. 1658ல் திருமலைநாயக்கர் திடீரென நோய்வாய்ப்பட்ட நிலையில் மைசூரிலிருந்து மாபெரும் கன்னடப் படையொன்று மதுரை நோக்கி வருவதாகச் செய்திகள் கிடைத்தன. மதுரையைக் கைப்பற்ற வேண்டும் என்ற இலக்கில் மூன்றாவது முறையாகக் கன்னடப்படைகள் மதுரை நோக்கி வந்தன. இந்த மோசமான நிலையில் மதுரைப் படைகளுக்குத் தலைமை வகித்துக் கன்னடியர்களை வெற்றி கொள்வது யார்? தமது பாளையக்காரர்களில் வலிமை மிக்க ஒருவரை வடுகரை இந்தப் போரினை நடத்துமாறு பணித்தால். போரில் அவர் வெற்றி பெற்றுத் திரும்பினால் தமக்கு எதிராக மதுரையை ஆள நினைத்தால்...? இந்த வினாக்களுக்கு விடை காண முடியாமல் தத்தளித்த மதுரை மன்னர் சேதுபதி மன்னரை அணுகுவதைத் தவிர வேறு வழியில்லை என்பதை உணர்ந்தார். மதுரை மன்னரது பரிதாப நிலைக்கு இரக்கப்பட்ட திருமலை ரெகுநாத சேதுபதி 15,000 மறவர்களுடன் மதுரைக்கு விரைந்தார். மதுரைப் படைகளுக்குத் தலைமையேற்றுச் சென்று கன்னடப் படைகளை அம்மைய நாயக்கனுரை அடுத்த பரந்த வெளியில் கன்னடியரின் பிரம்மாண்டமான படை அணிகளைத்தாக்கி அழித்து வெற்றி கொண்டார்.[1] வெற்றிச் செய்தியினை அறிந்த மதுரை மன்னர் மதுரைக் கோட்டையில் திருமலை ரெகுநாத சேதுபதிக்கு மிகச் சிறந்த வரவேற்பினை வழங்கிப் பரிசுப் பொருள்களையும் அளித்துப் பாராட்டினார். மேலும் சேது நாட்டின் தென்மேற்கே உள்ள திருச்சுழியல், பள்ளி மடம், திருப்புவனம் ஆகிய மதுரை அரசின் பகுதிகளையும் அன்பளிப்பாக வழங்கிச் சிறப்பித்தார். மேலும் ஆண்டுதோறும் புரட்டாசித் திங்களில் மதுரை மாநகரில் திருமலைநாயக்க மன்னர் நடத்தி வந்த நவராத்திரி விழாவினைச் சேது நாட்டிலும் நடத்தி வருமாறு சொன்னதுடன் அந்த விழாவிற்கு மூலமாக அமைந்துள்ள இராஜராஜேஸ்வரி அம்மனின் பொன்னாலான சிலை ஒன்றினையும் சேதுபதி மன்னருக்கு அன்பளிப்பாக வழங்கினார்.  சேதுநாட்டில் நவராத்திரி விழா வெற்றி வீரராகத் திரும்பிய திருமலை சேதுபதி மன்னர் அந்த அம்மன் சிலையினை இராமநாதபுரம் கோட்டையில் அரண்மனை வளாகத்தில் பிரதிஷ்டை செய்து அந்த ஆண்டு முதல் நவராத்திரி விழா நடத்துவதற்கு ஏற்பாடு செய்தார்.[2] இத்தகைய வெற்றிகளினால் புதிய சிந்தனையும், புது வலிமையும் பெற்ற ரெகுநாத சேதுபதிமன்னர் பல அரிய செயல்களைச் செய்வதற்கு முனைந்தார்.  சேதுநாட்டின் எல்லைப் பெருக்கம் முதலாவதாகச் சேதுபதி மன்னர் உள்ளிட்ட செம்பிநாட்டு மறவர்களது பூர்வீகப் பகுதியான சோழ மண்டலத்தின் வடக்கு. வடகிழக்குப் பகுதியினையும் சேதுநாட்டின் பகுதியாக்கத் திட்டமிட்டார். அதனையடுத்துச் சேதுநாட்டின் வடபகுதி கிழக்குக் கடற்கரை வழியாக அறந்தாங்கி, பட்டுக்கோட்டைச் சீமைகளைக் கடந்து திருவாரூர்ச் சீமை, கள்ளர் சீமை ஆகியவைகளையும் சேதுநாட்டில் இணைத்துச் சேதுநாட்டின் பரப்பை விரிவுபடுத்தினார்.  இவ்விதம் சேதுநாட்டின் எல்லைகளை விரிவு அடையுமாறு செய்த சேது மன்னர் எஞ்சிய தமது காலத்தை ஆன்மீகத்தை வளர்ப்பதிலும் தமது நாட்டு குடிமக்களிடையே நல்லிணக்கமும் சமரச மனப்பான்மையும் வளர்வதை ஊக்குவிப்பதிலும் கவனம் செலுத்தினார்.  கோயில் திருப்பணிகள் இவரது முன்னோரான சடைக்கன் உடையான் சேதுபதி, கூத்தன் சேதுபதி, இரண்டாவது சடைக்கன் சேதுபதி ஆகியோர் சிறப்புக் கவனம் செலுத்தியதைப் போன்று இந்த மன்னரும் இராமேஸ்வரம் கோயில் பணிகளில் மிகுந்த அக்கறை காட்டினார். குறிப்பாக அந்தக் கோயிலின் ஏற்றத்திற்கும், தோற்றத்திற்கும் ஏதுவாக அமைந்துள்ள நீண்ட விசாலமான இரண்டாவது பிரகாரத்தினை அமைக்க முடிவு செய்தார். இந்தக் கோயில் மணற்பாங்கான பகுதியில் அமைந்து நான்கு புறமும் கடலால் சூழப்பட்டுள்ள தீவாக இருப்பதால் பிரகாரத்தின் கட்டுமானத்திற்கான கற்களைத் திருச்சி, மதுரை, நெல்லை சீமைகளின் குன்றுப் பகுதிகளில் இருந்து எவ்விதம் கொண்டு சேர்ப்பது? நீண்ட தொலைவில் இருந்து எவ்விதம் கொண்டு சேர்ப்பது? நீண்ட் தொலைவில் இருந்து பார வண்டிகளில் ஏற்றி எதிர்க்ரையான மண்டபம் தோணித்துறைக்கு கொண்டு வந்து சேர்த்தாலும் அவைகளைக் கடலைக் கடந்து இராமேஸ்வரத்திற்குக் கொண்டு வந்து சேர்ப்பது எப்படி? இந்த வினாக்களுக்கான விடைகளைப் பல நாட்கள் சிந்தித்த பிறகு சேது மன்னர் கண்டுபிடித்தார். கோயில் திருப்பணிக்குத் தேவையான கற்களைத் தமிழ்நாட்டு மலைப்பகுதிகளில் இருந்து வெட்டிக்கொண்டு வந்து சேர்ப்பதற்குப் பதிலாக, கல் தச்சர்களையும், ஸ்தபதிகளையும் எதிர்க்கரையில் உள்ள இலங்கை நாட்டின் மலையிலிருந்து வெட்டிச் செதுக்கிக் கொண்டு வருவது என முடிவு செய்து அதற்குத் தேவையான அரசு அனுமதியைக் கண்டியில் உள்ள இலங்கை மன்னரிடமிருந்து பெற்றார். பொதுவாகத் திருப்பணி நடக்கும் கோயில் பகுதிக்குக் கற்பாலங்களைக் கொண்டு வந்து செதுக்கித் தக்க வேலைப்பாடுகளை அதில் செய்து பின்னர் கட்டுமானத்திற்குப் பயன்படுத்துவது என்பது அன்றையப் பழக்கமாக இருந்தது. இந்த முறைக்கு மாற்றமாக சேதுபதி மன்னர் திட்டமிட்ட வரைவுபடங்களுடன் ஸ்தபதிகளையும், கல் தச்சர்களையும் திரிகோண மலைக்கு அனுப்பி அங்கேயே தேவையான அளவிலும், அமைப்பிலும், கல்துண்களையும், பொதிகைக் கட்டைகளையும், மூடு பலகைகற்களையும் தயாரித்துப் பெரிய தோணிகளில் இராமேஸ்வரத்திற்குக் கொண்டு வந்து இறக்கு வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. திருப்பணி வேலைகளும், இராமேஸ்வரம் திருக்கோயிலில் தொடர்ந்தது. இவைகளை நேரில் கண்காணித்துத் தக்க உத்தரவுகளை வழங்குவதற்கு ஏற்றவாறு சேது மன்னர் இராமேஸ்வரத்திலேயே தங்குவதற்கும் திட்டமிட்டார். இராமேஸ்வரம் வடக்கு ரத வீதியும், மேற்கு ரத வீதியும் சந்திக்கும் இடத்தில் ஒரு அரண்மனை ஒன்றையும் மன்னரது இருப்பிடமாக அமைத்தார். ஆண்டில் பெரும்பாலான பகுதியை மன்னர் இந்த மாளிகையிலேயே கழித்தார்.[3]  இந்தக் கோயிலின் இரண்டாவது பிரகார அமைப்புத் திருப்பணியுடன் அமைந்து விடாமல் இந்த மன்னர் இந்தக் கோயிலின் அன்றாட பூஜை. ஆண்டுவிழா ஆகியவைகளும் சிறப்பாக நடைபெறுவதற்காகப் பல ஊர்களையும் சர்வ மானியமாக வழங்கியுள்ளார். கீழ்க்கண்ட தானங்களுக்கான இந்த மன்னரது செப்பேடுகள் மட்டும் கிடைத்துள்ளன.  1. . இராமநாதசுவாமி, அம்பாள் நித்ய பூசைக்கும் ஆவணி மூலத் திருவிழாவிற்கும் கி.பி. 1647ல் திருவாடானை வட்டத்து முகிழ்த்தகம் கிராமம் தானம்.  2. . இராமேஸ்வரம் கோவில் நித்ய பூஜை கட்டளைக்கு கி.பி. 1658ல் திருச்சுழி வட்டத்து கருனிலக்குடி கிராமம் தானம்.  3. . இராமேஸ்வரம் திருக்கோவிலில் ஆவணி மூலத்திருவிழா மேலும் சிறப்பாக நடைபெறுவதற்கு முதுகளத்துர் வட்டத்திலுள்ள புளியங்குடி, கருமல், குமாரக்குறிச்சி ஆகிய ஊர்கள் கி.பி. 1673ல் தானம்,  இவைதவிர இராமேஸ்வரம் திருக்கோயிலில் பூஜை, பரிசாரகம், ஸ்தானிகம் ஆகிய பணிகளில் ஈடுபட்டு இருந்த மகாராஷ்டிர மாநிலத்து அந்தணர்களை அந்தப் பணிகளின் மூலம் பெரும் ஊதியங்களை அவர்களே அனுபவித்துக் கொள்வதற்கும் இந்த மன்னர் கி.பி. 1658ல் உரிமை வழங்கிப் பட்டயம் அளித்துள்ளார்.[4]  இந்தத் திருக்கோயிலின் திருப்பணிகளுடன் இந்த மன்னர் சேதுநாட்டின் பல பகுதிகளிலும் உள்ள திருக்கோயில்களுக்குச் சமய வேற்றுமை பாராமல் பலவிதமான தானங்களை வழங்கி இருப்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும். கீழக்கரையில் உள்ள சொக்கநாதர் கோவிலுக்குப் புல்லந்தை, மாயாகுளம் கிராமங்களைச் சர்வமானியமாக வழங்கியதை ஒரு செப்பேடு தெரிவிக்கிறது. இராமநாதபுரம் சீமையில் உள்ள திருப்புல்லாணி என்ற திருத்தலம் இராமாயணத் தொடர்பு உடையது ஆகும். இங்குள்ள இறைவன் தர்ப்பாசன அழகியார் மீது திருமங்கையாழ்வார் பல பாசுரங்களைப் பாடியுள்ளார். தமிழகத்தின் வைணவ பெருமக்கள் ஸ்ரீரங்கத்திற்கு அடுத்து பக்திப் பரவசத்துடன் ஏற்றிப் போற்றுகின்ற தலம் இதுவே ஆகும். சிதிலமடைந்துள்ள நிலையில் உள்ள பாண்டியர் கால இந்தக் கோயிலை முழுமையாக திருப்பணி செய்த நிலையில், காங்கேய மண்டபம் நுழைவாயில் கோபுரம், கண்ணாடி மண்டபம், தாயார் சன்னதி, பெருமாள் சன்னதி, ஆண்டாள் சன்னதி, திருச்சுற்றுமதில்கள், இராஜ கோபுரம், சக்கரத்தீர்த்தம் மடைப் பள்ளி ஆகிய கட்டுமானங்களுக்குக் காரணமாக இருந்தவர் இந்த மன்னரே ஆவார். இதே போல சேதுநாட்டின் வடபகுதியில் உள்ள இன்னொரு வைணவத் தலமான திருக்கோட்டியூர் கோயிலிலும் பல கட்டளைகளை இந்த மன்னர் நிறுவினார். மேலும் கள்ளர் சீமையில் உள்ள திருமெய்யம் தளத்தில் அமர்ந்த நிலையில் காட்சியளிக்கும் திருமெய்யம் அழகியாருக்கும் (பெருமாள்) ரெகுநாத அவசரம் போன்ற கட்டளைகளையும் வேறுபல நிலக்கொடைகளையும் வழங்கியுள்ளார்.  இந்த அறக்கொடைகள் அனைத்தும் சேதுபதி மன்னர் சார்ந்துள்ள இருவேறு சமயங்களான சைவம். வைணவம் என்ற இருபிரிவுகளின் கோயில்களாகும் இந்தக் காரணத்தினால் தான் மேலேகண்ட அறக்கொடைகளை இந்த மன்னர் அந்தத் திருக்கோயில்களுக்கு வழங்கினார் என்று கருதினால் அது தவறு என்பதை அவரது வேறு சில அறக்கொடைகள் புலப்படுத்துகின்றன. அப்பொழுது சேதுநாட்டில் மிகச் சிறுபான்மையினராக சமணர்களும், முஸ்லீம்களும் இருந்து வந்தனர். சேது நாட்டின் வடபகுதியாகத் தாழையூர் நாட்டில் அனுமந்தக் குடியில் அமைந்திருந்த சமணர்களது திருக்கோயிலான மழவராயநாதர் கோவிலும், இஸ்லாமியப் புனிதரான செய்யது முகம்மது புகாரி என்பவரது அடக்கவிடமும் திருமலை சேதுபதி மன்னரது அறக்கொடைகளைப் பெற்றுள்ளன என்பதை இங்கு குறிப்பிடுவது பொருத்தமாகும்.  அன்ன சத்திரங்கள் அமைத்தல்:  இந்த அறக்கொடைகளைத் தவிர இந்த மன்னர் இராமேஸ்வரம் திருக்கோயிலுக்குத் தலயாத்திரையாக வருகின்ற பயணிகளது பயன்பட்டிற்காகச் சேதுமார்க்கத்தில் ஆங்காங்கு பல அன்னசத்திரங்களை முதன்முறையாக நிறுவினார். சாலை வசதிகளும், போக்குவரத்து சாதனங்களும் இல்லாத அந்தக் காலத்தில் வடக்கே வெகு தொலைவிலிருந்து இராமேஸ்வரம் யாத்திரையாக ஆண்டுதோறும் பல பயணிகள் கால்நடையாகவே இராமேஸ்வரத்திற்கு நடந்து வந்தனர். வடக்கே சோழ நாட்டிலிருந்தும், தெற்கே நாஞ்சில் நாட்டிலிருந்தும், மேற்கே மதுரைச் சீமையில் இருந்துமாக மூன்று பாதைகள் இராமேஸ்வரத்திற்கு வரும் வழியாக அமைந்திருந்தன. இப்பாதைகள் 'சேது மார்க்கம்' என அழைக்கப்பட்டன. இந்தப் பாதைகளில் எட்டு அல்லது 10 கல் தொலைவு இடைவெளியில் ஒரு சத்திரம் வீதம்பல சத்திரங்களை அமைத்து அங்கே ஒவ்வொரு பயணியும் மூன்று நாட்கள் தங்கி, இளைப்பாறி இலவசமாக உணவு பெறுவதற்கும் சிறந்த ஏற்பாடுகளை இந்த மன்னர் செய்தார். இந்த அன்ன சத்திரப் பணிகள் தொய்வு இல்லாமல் தொடருவதற்குச் சேதுநாட்டில் பல ஊர்களை இந்தச் சத்திரங்களுக்குச் சர்வமானியமாக வழங்கி உதவினார். இந்த மன்னரை அடுத்துச் சேதுபதிகளாக முடிசூட்டிக் கொண்டவர்களும் இந்தப் பணியினைத் தொடர்வதற்குத் திருமலை சேதுபதி மன்னரது இந்த ஆக்கப் பணிகள் முன்னோடி முயற்சியாக அமைந்தன என்றால் அது மிகை ஆகாது.  திருமடங்கள் போற்றுதல்:  இந்த மன்னரது ஆட்சியில் சிறப்புக்களைக் காலமெல்லாம் எடுத்துச் சொல்லும் இந்த ஆன்மீகப் பணிகளான திருக்கோயில், அன்னசத்திரம், சிறுபான்மையினரது வழிபாட்டுத் தலங்கள், என்ற துறைகளில் மட்டும் அமைந்து விடாமல் இன்னும் மிகச் சிறந்த இருபணிகளை இங்கு குறிப்பிடாமல் இருக்க முடியாது. முதலாவது திருமடங்களைப் பாதுகாத்து வளர்த்தது. இரண்டாவது, கற்கண்டிலும் இனிய கன்னித்தமிழை மிகவும் இடர்ப்பாடான காலகட்டத்தில் போற்றி வளர்ததும் ஆகும். திருமடம் என்று சொல்லும்போது நமது மனக்கண்ணில் தோன்றுவது சோழ வளநாட்டில் உள்ள திருவாவடுதுறை திருமடம் ஆகும். தமிழகத்தில் பல வேற்று மதங்களும், ஆற்றிய ஆக்கிரமிப்புகளும் கி.பி. பன்னிரெண்டாம் நூற்றாண்டு முதல் ஏற்பட்டு வந்ததை வரலாறு தெரிவிக்கின்றது. இந்தச் சூழ்நிலையில் 'தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி' எனத் திருவாசகம் தெரிவிக்கின்ற சைவ சித்தாந்தத்தையும், நடைமுறைகளையும் பாதுகாத்து மக்களை நன்னெறிப்படுத்தும் பணியில் தொடங்கப்பெற்றது திருவாவடுதுறை திருமடம் ஆகும். இந்த மடத்தின் தோற்றம் பற்றிய சரியான காலவரையறை அறியத்தக்கதாக இல்லை. ஆனால் பதினென் சித்தர்களில் மூத்தவரான திருமூலர் என்பவர் இந்தத் திருமடத்தின் தலையாய மூலவர் எனத் தெரிகிறது. திருமலை ரெகுநாத சேதுபதியின் ஆட்சிக்காலத்தில் அந்த மடத்தின் தலைவர் ஒருவர் இராமேஸ்வரத்தில் இந்த சேதுமன்னரைச் சந்தித்த போது மன்னர் அவரது மடத்தையும் அவரது ஆட்சியில் அமைந்திருந்த திருப்பெருந்துறை என்ற ஆவுடையார் கோவிலின் சிறப்பையும் பற்றி அறிந்துகொண்டார். பின்னர் ஆதீனமும், திருப்பெருந் துறை திருக்கோயிலும் மன்னரது பல அறக்கொடைகளுக்கு இலக்கு ஆகின. மேலும் திருவாவடுதுறை ஆதீனம் சேதுநாட்டில் தங்களது சமயப் பணிகளைத் தொடங்கி நடத்துவதற்காக இராமநாதபுரம் அரண்மனையின் மேல வீதியில் திருமடம் ஒன்றும், திருவாவடுதுறையினருக்கு நிர்மாணித்துக் கொடுக்கப்பட்டது. அடுத்ததாக தமிழர் பிரான் எனப் பிற்காலத்தில் சேது மன்னர்கள் போற்றப்படுவதற்கு முன்னோடியாக அமைந்தவரும் இந்த சேதுபதி மன்னர்தான். தமிழகம் வடவர்களாலும், வடுகர்களாலும் கி.பி. 14ஆம் நூற்றாண்டு முதல் ஆக்கிரமிக்கப்பட்டு அவர்களது ஆட்சிக்களமாக கி.பி. 17ஆம் நூற்றாண்டு இறுதிவரை இருந்து வந்தது. வடுகர்களது தாய்மொழி தெலுங்கு மொழியாக இருந்ததாலும் அந்த மொழி பிராமணர்களது சமஸ்கிருத மொழியுடன் தொடர்புடையதாக இருந்ததாலும் மதுரை, தஞ்சை செஞ்சி, வேலூர் ஆகிய ஊர்களைத் தலைமையிடமாகக் கொண்டிருந்த நாயக்க மன்னர்கள் தெலுங்கையும, சமஸ்கிருத மொழி ஆகிய இரு மொழிகளை மட்டுமே ஆதரித்து அந்த மொழிகளில் வல்ல புலவர்களுக்கு அன்பளிப்புக்களும், பாராட்டுக்களும் அளித்து வந்தனர். தமிழ்மொழியைக் கற்றுத் தேர்ந்த தமிழ்ப் புலவர்கள் தக்க ஆதரவு இல்லாத காரணத்தினால் வாழ்க்கையில் நலிந்து நொந்து வறுமையின் பிடியில் வாடி வந்தனர்.  இந்த இழி நிலையை அறிந்து மனம் வெதும்பிய சேதுபதி மன்னர் தமிழுக்கும். தமிழ்ப்புலவர்களுக்கும் தேவ தாருவாக (கற்பகத் தாருவாக) விளங்கினார். அப்பொழுது இந்த மன்னரது வீரச் செயல்களையும். கொடைச் சிறப்பையும் செம் பொருளாகக் கொண்டு 100 பாடல்களைக் கொண்ட 'ஒரு துறைக் கோவை' என்ற நூலினைப் பாடிய அமுதகவிராயரைத் தமது அரசவைக்கு வரவழைத்துப் பொன்னும், பொருளும் வழங்கியதுடன் அவரது சொந்த ஊரான சிவகங்கை வட்டாரத்திலுள்ள பொன்னன் கால் என்ற கிராமத்தினையும் அந்தப் புலவருக்குத் தானமாக வழங்கினார்.[5] மேலும் தொண்டை மண்டலத்திலிருந்து சேது நாட்டிற்கு வந்த அழகிய சிற்றம்பலக் கவிராயர் என்ற புலவரையும் ஆதரித்துப் போற்றினார். திருமலை மன்னர் மீது தளசிங்கமாலை என்ற இலக்கியத்தைப் பாடியதற்காக மிதிலைப்பட்டி என்ற கிராமத்தை அந்தப் புலவருக்கு மன்னர் தானமாக வழங்கி உதவினார்.[6] அன்று முதல் அழகிய சிற்றம்பலக் கவிராயரும், அவரது வழியினரும் ஒரு நூறு ஆண்டு காலம் மிதிலைப்பட்டியில் வாழ்ந்து தமிழ்ப்பணியாற்றினர் என்பதை வரலாற்று வழி அறியமுடிகிறது.  இத்தகைய அரிய சிறந்த தெய்வீகத் திருப்பணிகளையும் சமுதாயப் பணிகளையும், தமிழ்ப் பணிகளையும் தமது நீண்ட 31 ஆண்டு கால ஆட்சியில் நிறைவேற்றிய இந்த மாமன்னர் கி.பி. 1676ல் இராம நாதபுரத்திற்கு அண்மையில் உள்ள திருப்புல்லாணித் திருக்கோயிலின் திருத்தேர் விழாவில் வடம்பிடித்துப் பெருமாளையும், தாயாரையும் வணங்கிய நிலையில் மரணமடைந்தார். இவருக்கு ஆண் வாரிசு இல்லையென்பதாக இராமநாதபுரம் சமஸ்தான வரலாறு தெரிவிக்கின்றது. ஆனால் இராமேஸ்வரம் திருக்கோயிலில் அவர் அமைத்த இரண்டாவது பிரகாரத்தில் சுவாமி சன்னதியில் தென்புறம் இந்த மன்னரது உருவச்சிலை அருகே ஒரு சிறுவன் நிற்பதாகச் சிற்பம் அமைக்கப் பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.    1. ↑ Sathya Natha Ayyar - History of Madura Nayaks (1928)  2. ↑ கமால் S.M. Dr. சேதுபதி மன்னர் செப்பேடுகள் (1994). சே. - 3  3. ↑ இந்த அரண்மனை இன்னும் அங்கு இருந்து வருகிறது. (அங்கே மேல்நிலைப் பள்ளி, கூட்டுறவு வங்கி, அன்னசத்திரம் மற்றும் ஹெலிக்காப்டர் இறங்கும் தளமுமாக இந்தக் கட்டிடம் பயன்பட்டு வருகிறது.  4. ↑ கமால் S.M. Dr - சேதுபதி மன்னர் செப்பேடுகள் (1994)  5. ↑ Inam Fair Register - available at the Ramnad Collector's Office  6. ↑ Inam Fair Register-available at the Ramnad Collector's Office.                          இயல் - IV இராஜ சூரிய சேதுபதி, அதான ரகுநாத சேதுபதி   ரெகுநாத திருமலை சேதுபதிக்கு ஆண் வாரிசு இல்லாத காரணத்தால் திருமலை ரெகுநாத சேதுபதியின் சகோதரர் ஆதிநாராயணத் தேவரின் மகன் இராஜ சூரியத் தேவர் சேதுபதியாகப் பட்டமேற்றார். இவரது ஆட்சிக்காலம் மிகக்குறுகிய ஆறுமாதங்களுக்குள் முடிவுற்றது. அப்பொழுது தஞ்சாவூரில் இருந்த அழகிரி நாயக்கருக்கும் திருச்சியிலிருந்த சொக்கநாத நாயக்கருக்கும் ஏற்பட்ட பூசலில் தலையிட்டுச் சமரசம் செய்ய முயன்ற போது தஞ்சைத் தளவாய் வேங்கட கிருஷ்ணப்ப நாயக்கரால் கைது செய்யப்பட்டு திருச்சியில் கொலை செய்யப்பட்டார்.  இவரது பெயரால் இராமநாதபுரம் நகருக்குத் தெற்கேயுள்ள சக்கரக் கோட்டைக் கண்மாயின் தென் கிழக்கு மூலையில் உள்ள கலுங்கும் அதனை அடுத்துள்ள சிற்றுாரும் இராஜசூரியமடை என்று இன்றும் வழங்கப்பட்டு வருகின்றன.  அதான ரகுநாத சேதுபதி இராஜ சூரிய சேதுபதி காலமானதையொட்டி அவரின் இளவல் அதான ரகுநாதத் தேவர் சேதுபதியாக முடிசூட்டிக் கொண்டார். துரதிஷ்டவசமாக அடுத்த சில மாதங்களுக்குள் இவரும் நோய்வாய்ப்பட்டு மரணமுற்றார்.                                            இயல் - V ரகுநாத கிழவன் சேதுபதி   மன்னர் திருமலை சேதுபதியை அடுத்துச் சேதுநாட்டின் மன்னர்களான இராஜ சூரிய தேவரும், அதான ரெகுநாத சேதுபதியும் சிறிது காலத்திற்குள் காலமாகி விட்டதால் இந்த மன்னர் குடும்பத்தைச் சேர்ந்த கிழவன் என்பவர் கி.பி. 1678ல் ரகுநாத கிழவன் சேதுபதி என முடிசூட்டப் பெற்றார். திருமலை ரெகுநாத சேதுபதியின் ஆட்சிக்காலம் போன்றே இவரது ஆட்சிக்காலமும் நீடித்தாலும் அவரது சாதனைகளை விஞ்சிச் சாதனைகள் படைக்க இயலவில்லை காரணம் இவருக்கு உட்பகை மிகுதியாகத் தோன்றி நாட்டின் பல பகுதிகளிலும் பல குழப்பங்களை ஏற்படுத்தின. என்றாலும் அவை அனைத்தையும் தமது அறிவார்ந்த ஆற்றலினாலும், போர்த் திறமையாலும் நசுக்கி அழித்தார். இவருக்கு மிகுந்த தொல்லை கொடுத்தவர் சேதுபதி அரச குடும்பத்தினரும் செருவத்தி பாளையத்தின் தலைவருமான திரையத் தேவர் ஆவார்.  கள்ளர் சீமை என்று வழங்கிய சேது நாட்டின் வட பகுதியைத் திருமலை சேதுபதி மன்னர் தமது நாட்டின் ஒரு பகுதியாக அமைத்தார் என்பதை முன்னர் குறிப்பிட்டுள்ளோம். தற்பொழுதைய புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் அன்று அறந்தாங்கிப் பகுதி நீங்கலாகக் கள்ளர் சீமை என வழங்கப்பட்டு வந்தது. இங்கு வாழ்ந்த குடிமக்கள் மிகப் பெரும்பாலோர் கள்ளர் என்ற இனத்தவர். இவர்களது தலைவராகக் குளத்துர் ரெகுநாதராய தொண்டைமான் இருந்து வந்தார். பேராற்றல் மிக்க இந்த வீரரையும் இவரது சகோதரர் நமனத் தொண்டைமானையும் இராமநாதபுரத்திற்குச் சேது மன்னர் வரவழைத்து அவர்களுக்கு மிக உயர்ந்த இராணுவப் பதவிகளை வழங்கி இருந்தார் என, இராமநாதபுரம் மேனுவலில் வரையப் பெற்றுள்ளது.  இந்த இரு சகோதரர்களது தங்கையான காதலி நாச்சியார் என்பவரும் சிறந்த வீராங்கனையாக விளங்கியதால் அவரை மன்னர் தமது பட்ட மகிஷியாக ஏற்றுக்கொண்டார். மன்னரைப் போன்று இந்தப் பெண்மணியும் ஆன்மீகப் பணிகளில் மிகவும் அக்கறை காட்டி வந்தார் தஞ்சைப் பேரரசின் இராஜ இராஜ சோழனது அன்புக் கிழத்தியான உலக மகா தேவியைப் போன்று இராணியார் சில அறக் கொடைகளை வழங்கியிருப்பதை இராமநாதபுரம் சமஸ்தான ஆவணங்கள் தெரிவிக்கின்றன.  இராமேஸ்வரம் திருக்கோயிலில் கோயில் உள்துறைக் கட்டளைக்கு திரு உத்திரகோச மங்கையை அடுத்த மேலச் சீத்தை என்ற கிராமத்தை கி.பி. 1693ல் இந்த இராணியார் வழங்கியதைச் செப்பேட்டு வாசகம் ஒன்று தெரிவிக்கின்றது. அடுத்து கி.பி. 1709ல் தனுஷ்கோடியில் அந்தணர்களது அக்கிரஹாரம் அமைவதற்கு தேவகோட்டைப் பகுதி களத்தூர் எனற கிராமத்தை இவர் தானம் வழங்கியது இன்னொரு செப்பேட்டின் மூலம் தெரியவருகிறது. இவைகளைப் போன்றே சேதுப் பயணிகளது பயன்பாட்டிற்கென எம்மண்டலமுங் கொண்டான் என்ற கிராமத்தினைத் தானமாக வழங்கியதை இராமநாதபுரம் சமஸ்தான ஆவணங்கள் தெரிவிக்கின்றன. அந்த அன்ன சத்திரம் இன்றும் இராமநாதபுரம் இராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் உச்சிப்புளி என்ற இடத்தில் செயலற்று இருந்து வருகிறது. அந்தக் கிராமம் இன்று என்மனம் கொண்டான் என்ற பெயரில் வழக்கில் உள்ளது.  திருமெய்யம் பாளையக்காரன் சிவந்து எழுந்த பல்லவராயர் என்பவர், சேது நாட்டின் வடக்கில் அமைந்திருந்த காவல் அரணாகிய திருமெய்யம் கோட்டையின் பொறுப்பில் இருந்தவர். அப்பொழுது நிலவி வந்த குழப்பமான அரசியல் சூழ்நிலையில் சிவந்து எழுந்த பல்லவராயர் தஞ்சை மராட்டியருடன் இரகசியமான தொடர்புகளைக் கொண்டு இருந்தார். இதனையறிந்த சேது மன்னர் விசாரணைக்காக அவரைத் தமது அரசவைக்கு அழைத்த பொழுது அவர் மறுத்ததால் அவரைக் கொன்று ஒழித்துவிட்டு அவரது பணிக்கு ரகுநாத ராய தொண்டைமான் என்ற கள்ளர் சீமைத் தலைவரை நியமனம் செய்தார். இவரது உடன் பிறந்தவரான காதலி நாச்சியார் என்பவரைச் சேது மன்னர் ஏற்கனவே தமது மனைவியாகக் கொண்டிருந்தார். இதனால் மன்னரது நம்பிக்கைக்கு உரியவராக இரகுநாத தொண்டைமான் கருதப்பட்டார். என்றாலும் மன்னரது மைத்துனர் என்ற உறவையும் மீறித் திருமெய்யம் உள்ளிட்ட புதிய புதுக்கோட்டை தன்னரசினை இவர் ஏற்படுத்தினார்.[1] இதனால் மன்னர் மிகுந்த சீற்றம் அடைந்த பொழுதிலும் தொண்டைமானைத் தண்டிக்க முற்படவில்லை. மனைவி காதலி நாச்சியாரின் வேண்டுதல் ஒருபுறமும், தெற்குச் சீமையில் எழுந்த கலவரங்களும் மன்னரை மற்றொரு புறமுமாகத் தடுத்துவிட்டன   சேதுநாட்டில் கிறித்துவ சமயப்பணி அப்பொழுது மதுரை கிறித்தவ சபையைச் சேர்ந்த ஜான் டி பிரிட்டோ என்ற போர்ச்சுகல் நாட்டுப் பாதிரியார் சேது நாட்டின் வடபகுதியில் மதமாற்றம் செய்ய வந்தபொழுது செருவத்திப் பாளையக்காரரும் அந்த பாதிரியாரிடம் ஞானஸ்நானம் பெற்றுக் கிறித்துவ மதத்தை ஏற்றுக் கொண்டார். அன்றைய சூழ்நிலையில் பாண்டிய நாட்டு கிறித்துவ சமயத்தை ஏற்ற ஒவ்வொரு குடிமகனும் போர்ச்சுகல் நாட்டு மன்னரது குடிமகன் என்ற தகுதியைப் பெறும் வாய்ப்பு இருந்தது. இதனால் செருவத்தி பாளையக்காரருக்குப் போர்ச்சுகல் நாட்டு மன்னரது உதவி கிடைத்தால்..” இத்தகைய சிந்தனையில் ஆழ்ந்த சேது மன்னர் பிரிட்டோ பாதிரியாரைச் சோழ மண்டலத்திற்கு நாடு கடத்தி உத்தரவிட்டார்.  சில ஆண்டுகளுக்குப் பிறகு தாயகம் திரும்பிய ஜான் டி பிரிட்டோ பாதிரியார் கி.பி. 1692ல் மீண்டும் சேது நாட்டிற்கு வந்து மக்களிடையே மிகுந்த ஆர்வத்துடன் சமயத்தொண்டை மேற்கொண்டார். இதனால் சினமுற்ற, மன்னர், செருவத்தி பாளையக்காரரது தலையீட்டையும் புறக்கணித்துப் பாதிரியாருக்கு மரண தண்டனை வழங்கினார். இந்தக் கடுமையான நடவடிக்கையினால் சேதுபதி மன்னரது கடைசி எதிரி செருவத்தி பாளையக்காரரும் ஒழித்துக் கட்டப்பட்டார்.  மற்றுமொரு மன்னருக்கு எதிரான கிளர்ச்சி சாயல்குடி பகுதியில் எழுந்தது. சேதுபதி மன்னர் அந்தப் பகுதிக்கு முகாம் சென்ற பொழுது சற்றும் எதிர்பாராத வகையில் அந்த வட்டாரத்தைச் சேர்ந்த ஏழு பாளையக்காரர்கள் குடிமக்களைத் திரட்டி மன்னரைத் தீர்த்துக் கட்ட ஏற்பாடு செய்திருந்தனர். தற்செயலாக இந்தச் சதியினைக் கேள்வியுற்ற மன்னர் சதிகாரர்களான பாளையக்காரர்களை ஒருவர் பின் ஒருவராகத் தம்மைச் சந்திக்குமாறு செய்து அவர்களைத் தனித்தனியாகக் கொன்று ஒழிக்க ஏற்பாடு செய்தார். இத்தகைய கடுமையான எதிர் நடவடிக்கைகளினால் குழப்பம். கிளர்ச்சி, சதி என்ற சிக்கல் சேது நாட்டு அரசியலிலிருந்து அகன்று விட்டன. இப்பொழுது மன்னர் அமைதியாகப் பல ஆக்கப் பணிகளில் ஈடுபட்டார்.  திருப்பணிகள் தமது முன்னோர்களைப் போல இராமேஸ்வரம் திருக்கோயிலில் திருப்பணிகள் பலவற்றை மேற்கொண்டார். இராமேஸ்வர திருக்கோயிலில் அன்றாட பூஜை முதலிய கைங்கரியங்களுக்குத் திருவாடானை வட்டம் இராஜசிங்கமங்கலம் ஏரியின் 48 மடைகளில் ஒரு மடை வழியாக வெளிப்படும் வெள்ளப் பெருக்கினால் வேளாண்மை நடைபெறுகின்ற நிலப்பரப்பு முழுமையையும் இந்த மன்னர் கி.பி. 1697ல் தானமாக வழங்கினார். இதன் காரணமாக இந்த மடை பின்னர் இராமனாத மடை எனப் பெயர் பெற்றது. மேலும் இந்தக் கோயிலில் நடைபெறும் ‘'தேவர் கட்டளை” என்ற ‘'உச்சி கால கட்டளை'’ முதலிய நிகழ்ச்சிகளைச் சரிவர நடக்கிறதா என்பதைக் கண்காணிப்பதற்காக இந்த மன்னர் இராமேஸ்வரம் சங்கர குருக்கள் மகன் ரகுநாத குருக்களைத் தமது சொந்தப் பிரதிநிதியாக நியமித்து அவருக்குத் திருக்கோயிலில் வழங்கப்பட வேண்டிய மரியாதைகள் முதலியனவற்றை நிர்ணயம் செய்ததை இந்த மன்னரது இன்னொரு செப்பேட்டுச் செய்தி மூலம் தெரியவருகிறது. இந்தக் கோவிலின் நடைமுறைகளைக் கவனிப்பதற்கு என ஆதீனகர்த்தர் ஒருவர் இருந்து வந்தபொழுதிலும் ரெகுநாத குருக்கள் புதிதாக ஏன் நியமனம் செய்யப்பட்டார் என்ற வினா இங்கு எழுகிறது. இந்தத் திருக்கோயிலின் உச்சிக்காலக் கட்டளையை இந்த மன்னரது முன்னோரான முதலாவது சடைக்கத்தேவர் ஏற்படுத்தியிருக்க வேண்டும். ஆதலால் சேதுபதி மன்னர் இந்தக் கட்டளையை மிகப் புனிதமான செயலாகக் கருதி அதனைச் செம்மையாக நாள்தோறும் தவறாமல் நிறைவேற்றுவதைக் கண்காணிப்பதற்கு ரெகுநாத குருக்கள் நியமிக்கப்பட்டிருக்க வேண்டும் என நம்பப்படுகிறது. மற்றும் இந்தத் திருக்கோயிலுக்கு வருகைதருகின்ற பயணிகளுக்கு இராமேஸ்வரத்தில் அன்னசத்திரம் ஒன்றினை நிறுவி அதன் பராமரிப்புக்கு உதவுவதற்காக முதுகளத்துர் வட்டத்தில் உள்ள நல்லுக்குறிச்சி என்ற ஊரினைச் சர்வமானியமாக வழங்கியதை கி.பி.1691ஆம் ஆண்டு செப்பேடு தெரிவிக்கின்றது. அந்தச் சத்திரம் இன்றும் இராமேஸ்வரம் மேலரத வீதியில் நடத்தப்பட்டு வருகிறது.  தமது முன்னவரான திருமலை ரகுநாத சேதுபதி மன்னரைப் போன்று வைணவ திருத்தலமான திருப்புல்லாணித் திருக்கோயிலின் பூஜை திருவிளக்கு. நந்தவனம், ஆடித்திருவிழா போன்ற திருப்பணிகளுக்காக இராமநாதபுரம், முதுகளத்துர், பரமக்குடி வட்டாரங்களில் உள்ள இருபத்தி ஏழு கிராமங்களை இந்த மன்னர் அந்தக் கோயிலுக்குத் தானமாக வழங்கியிருப்பது வியப்பிற்குரிய செய்தியாக உள்ளது.[2] அதுவரை சேதுபதி மன்னர் எவரும் ஒரு கோவிலுக்கு ஒரே நேரத்தில் இவ்வளவு எண்ணிக்கையிலான கிராமங்களைத் தானம் வழங்கியது வரலாற்றில் காணப்படவில்லை. இன்னொரு வைணவத் திருத்தலமான திருக்கோட்டியூரில் எழுந்தருளியுள்ள செளமிய நாராயணப் பெருமாளுக்கும் சில அறக்கொடைகளை வழங்கி உதவினார். அந்தக் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பாரிவேட்டைத் திருவிழாவிற்கு வழங்கியுள்ள கிராமங்கள் பற்றிய கல்வெட்டு அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.[3] இந்த அரிய நிகழ்ச்சி இந்த சேதுபதி மன்னர் தம்மைச் சார்ந்துள்ள சைவ சமயத்தைப் போன்று வைணவம், சமணம், இஸ்லாம் ஆகிய சமய நிறுவனங்களுக்கு இயல்பான சமயப் பொறையுடன் அறக்கொடைகளை வழங்கியிருப்பதை அவரது செப்பேடுகளும், கல்வெட்டுக்களும் தெரிவிக்கின்றன.  இன்றைய புதுக்கோட்டை மாவட்டம் திருமெய்யம் வட்டத்தில் உள்ள காட்டுபாவா பள்ளிவாசல் தர்மத்திற்காக உத்தார நாட்டு கானுர் கிராமத்தைத் தானமாக வழங்கியிருப்பதை அங்குள்ள கி.பி. 1696ம் ஆண்டைச் சேர்ந்த கல்வெட்டு தெரிவிக்கின்றது.[4] மேலும் இந்த மன்னர் கீழ்க்கண்ட திருக்கோயில்களுக்கு அறக்கொடைகளை வழங்கியிருப்பதைச் செப்பேடுகள் தெரிவிக்கின்றன. திருச்சுழியல் வட்டம் காரேந்தல் கிராமத்து முஸ்லிம் மக்களது தொழுகைப் பள்ளியைப் பராமரிப்பதற்காக இந்த மன்னர் அந்த ஊரினைப் பள்ளிவாசல் தர்மமாக வழங்கியதை இராமநாதபுரம் சமஸ்தானம் நில மானியக் கணக்கு தெரிவிக்கின்றது.  1. சேதுபதி மன்னர்களது ஆட்சியில் குத்தகை நாடு என வழங்கப்பெற்ற அறந்தாங்கிப் பகுதியில் இயங்கி வந்த முருகப்பன் மடம் தர்மத்திற்காகப் பகையணி, பிராந்தணி, திருப்பொற்கோட்டை ஆகிய மூன்று ஊர்களை கி.பி. 1692ல் தானமாக வழங்கினார்.  2. சேது நாட்டின் வடக்கே கிழக்குக் கடற்கரைப் பட்டினமான சுந்தரபாண்டியன் பட்டினத்தில் அக்கிரகார தர்மத்திற்காகவும். அந்த ஊரின் தென்மேற்கே உள்ள திருவேகம்பத்து ஏகாம்பர நாதர் சாமி கோயிலுக்கும் ஆக கி.பி. 1695ல் கொந்தாலன் கோட்டை, பொன்னுக்கு மீண்டான், சிறுகவயல், கரிசல்குளம், எட்டிசேரி, மருங்கூர், உடையநாத சமுத்திரம் ஆகிய ஏழு கிராமங்களைத் தானமாக வழங்கினார்.  3. சேது நாட்டின் வடபகுதியில் உள்ள தென்னாலை நாட்டில் அமைந்துள்ள எழுவன் கோட்டையில் எழுந்தருளியிருக்கும் எழுவாபுரீஸ்வரர், அகிலாண்ட ஈஸ்வரி ஆகியவர்களின் பூஜை, அபிஷேகம், நைவேத்தியம் ஆகியவைகளுக்காக இடையன்வயல், கள்ளிக்குடி, புதுக்கோட்டை ஆகிய மூன்று கிராமங்களை கி.பி. 1694ல் தானமாக வழங்கினார்.  4. இராமநாதபுரத்தை அடுத்த மிகச்சிறந்த சைவத் திருத்தலமாகிய திரு உத்தரகோசமங்கை திருக்கோயிலுக்கு திருஉத்தரகோசமங்கை கிராமத்தையும், அதனை அடுத்துள்ள கிராமங்களையும் கி.பி. 1678ல் தானமாக வழங்கியுள்ளார்.  5. சேதுநாட்டின் சிறந்த பழம்பெரும் துறைமுகமான கீழக்கரையில் அமைந்துள்ள சொக்கநாதர் ஆலயத்திற்கு ஏற்கனவே திருமலை சேதுபதி மன்னர் புல்லந்தை முதலிய கிராமங்களை வழங்கியதை முன்னர் பார்த்தோம்.  இந்தக் கோயிலில் பணியாற்றிய இராமலிங்க குருக்களுக்குத் தகுந்த வருவாய் இல்லாததை உணர்ந்த ரெகுநாத கிழவன் சேதுபதி மன்னர் அந்த ஊரின் துறைமுகத்தில் ஏற்றுமதி, இறக்குமதி ஆகின்ற பொருள்களில் இருந்து ஒரு குறிப்பிட்ட தொகையை மகமையாகக் குருக்கள் பெற்றுக் கொள்வதற்கான உரிமை வழங்கியதை கி.பி. 1678 அவரது செப்பேடு தெரிவிக்கின்றது.  இத்தகைய தெய்வீகத் திருப்பணிகளில் முனைந்திருந்த சேதுமன்னர் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும் தக்க துணையாக வாழ்ந்து வந்தார். மிதிலைப்பட்டி, அழகிய சிற்றம்பலக் கவிராயரை ஆதரித்துச் சிறப்பித்தார். திருமருதூர் என்னும் நயினார் கோவிலில் எழுந்தருளியுள்ள நாகநாத சுவாமி செளந்தரவள்ளி அம்மன் ஆகியோர் மீது அந்தாதி இலக்கியம் ஒன்றை இயற்றிய கார் அடர்ந்த குடி தலமலைகண்ட தேவர் என்ற புலவரைப் பாராட்டிப் பல சிறப்புக்களைச் செய்தார். இன்னும் பல புலவர்கள் இந்த மன்னரால் பொன்னும், பொருளும் வழங்கி சிறப்பிக்கப்பட்டிருந்தாலும் அவர்களைப் பற்றிய முழு விவரங்கள் அறியத்தக்கனவாக இல்லை.  இந்த மன்னரது ஆட்சிக்காலத்தில் சேதுநாட்டைச் சூழ்ந்திருந்த மதுரை நாயக்க அரசு தஞ்சாவூர் மராட்டிய அரசு ஆகியவைகளுடன் நட்பும், நல்லிணக்கமும் கொண்டு நல்ல அரசியல் உறவுகளை வளர்த்து வந்தார். ஆனால் நாயக்க மன்னரும், மராட்டிய மன்னரும் சேதுபதி மன்னருடன் நேர்மையான அரசியல் தொடர்புகளைக் கொண்டிருக்க வில்லை என்பதை வரலாறு தெரிவிக்கின்றது.  கி.பி. 1680ல் திருச்சியிலிருந்த மதுரைச் சொக்கநாத நாயக்கரை, அவர் கோட்டையைவிட்டு உலவுவதற்காக வெளியே சென்றபோது, கோட்டைத் தளபதியான ருஸ்தம்கான் என்பவன் அவரைக் கைது செய்து சிறையிலிட்டான். அடுத்து அவரது உடன்பிறப்பான அலகாத்திரி நாயுடுவை திருச்சி ஆட்சிபீடத்தில் அமரச் செய்து அவரது மேல்பிரதிநிதியாக ருஸ்தம்கான் மதுரை அரசியலை நடத்தி வந்தான். இதனைத் தனது நண்பரும் கன்னிவாடி பாளையக்காரருமான சின்னக் கத்திரி நாயக்கரது மூலம் தெரிந்த சேதுபதி மன்னர், மிகவும் வேதனை அடைந்தார். மேலும் கன்னிவாடி பாளையக்காரர் வேண்டுதலின்படி, இராமநாதபுரம் சீமையிலிருந்த திறமையான போர் வீரர்களது அணியுடன் கன்னிவாடி சென்று அவரையும் அழைத்துக்கொண்டு திருச்சி கோட்டைக்குச் சென்றார். இவர்கள் இருவரும் திட்டமிட்டபடி ருஸ்தம்கானை மரியாதை நிமித்தமாகச் சந்திப்பதுபோல் அவரைச் சந்தித்தபோது, அவர் எதிர்பாராத நிலைமையில் சேதுபதி மன்னரது வீரர்கள் ருஸ்தம்கானைத் தாக்கி ஒழித்தனர். அடுத்துச் சிறையிலிருந்த மன்னர் சொக்கநாத நாயக்கரையும் விடுதலை செய்து மீண்டும் திருச்சியின் ஆட்சிபீடத்தில் அமர்த்தினார். அதனால் மனம் நெகிழ்ந்த சொக்கநாத நாயக்க மன்னர், சேதுபதி மன்னருக்குப் பல பாராட்டுக்களைச் செய்ததுடன் பரராஜகேசரி (எதிரிகளுக்கு சிங்கம் போன்றவர்) என்ற சிறப்பு விருதையும் வழங்கிச் சிறப்பித்தார்.[5] மேலும் சேதுபதிச் சீமை அரசியல் நிர்வாகம் செவ்வனே நடப்பதற்குத் தமது பிரதானிகளில் ஒருவரான குமாரப் பிள்ளையையும் இராமநாதபுரம் கோட்டைக்கு அனுப்பி வைத்தார்.  மதுரை தஞ்சை மன்னர்களது படையெடுப்பு இந்தப் புதிய பிரதானி சேதுபதி மன்னருக்குத் தக்க உதவிகளைச் செய்தவற்குப் பதிலாக மன்னரது சொந்த நடவடிக்கைகளை மிகவும் உன்னிப்பாக நோட்டமிட்டு வந்தார். நாளடைவில் சேதுபதி மன்னரைத் திடீரெனத் தாக்கிக் கைது செய்து திருச்சிக்கு அனுப்பத் திட்டமிட்டிருந்தார். இதனையறிந்த சேதுபதி மன்னர் அந்தப் பிரதானி சிறிதும் சந்தேகப்படாத முறையில் அவரைக் கொன்றழித்துவிடும்படி செய்தார். சொக்கநாத நாயக்கர் இவ்விதம் சேதுபதி மன்னரை ஒழித்துக்கட்டத் தீட்டிய இந்தச் சதித் திட்டம் நிறைவேறவில்லை. ஆனால் அந்த மன்னரையடுத்து மதுரையின் அரசியாக பொறுப்பேற்ற இராணி மங்கம்மாள் எவ்வித காரணமும் இன்றி சேதுநாட்டின் மீது கி.பி. 1702ல் படையெடுப்பை மேற்கொண்டார். இந்த படையெடுப்பை எதிர் கொண்ட சேதுபதி மன்னர் மதுரைப் படைகளைப் பேரழிவுக்கு உள்ளாக்கினார். திருமலை நாயக்கர் மன்னர் காலம் முதல் மதுரை நாயக்க மன்னரிடம் மறைந்திருந்த பொறாமையும், பகைமையும் அறிவதற்கு இந்தப் போர் இறுதிக் காலமாக அமைந்தது. இதனைப் போன்றே தஞ்சை மராட்டிய மன்னரும் சேதுபதி மன்னரிடம் நண்பராக நடித்து வந்தவர். கி.பி. 1709 ஆகஸ்டு மாதம் திடீரென ஏற்பட்ட புயல்மழை வெள்ளத்தினால் சேதுநாட்டுக் குடிமக்கள் சொல்லொனாத துன்பங்களினால் அல்லல் பட்டுக்கொண்டிருந்த சமயத்தில் சேதுநாட்டின் வடபகுதி வழியாகச் சேதுநாட்டை ஆக்கிரமிக்கப் பெரும் படை ஒன்றை அனுப்பினார் தஞ்சை மன்னர். அந்தப் படையெடுப்பையும் சேதுபதி மன்னர் நசுக்கி அழித்தார். இவ்விதம் எதிரிகளுக்குச் சிம்மசொப்பனமாக விளங்கிய சேதுபதி மன்னருக்கு உறுதுணையாக இருந்தது வள்ளல் சீதக்காதி மரைக்காயர் ஆவார். ஒருபுறம் தெய்வீகப் பணிகளும், இன்னொரு புறம் தமிழ் வளர்ச்சிப் பணிகளையும் தொடர்ந்த சேதுபதி மன்னர் தமது நாட்டில் வேளாண்மையும், வணிகமும் செழித்து வளருவதற்கு ஆவன செய்த காரணத்தினால் மக்களது பொருளாதார வசதியைக் கொண்டு எதிரிகளை எளிதாகச் சமாளித்து வெற்றிபெற முடிந்தது.  வள்ளல் சீதக்காதியின் தோழமை மன்னரது சாதனைகளுக்கு மூலபலமாக விளங்கியவர் மன்னரது நண்பரும் வணிக வேந்தருமான கீழக்கரை சீதக்காதி மரைக்காயரே ஆவார். வள்ளுவரது வாக்கின்படி சீதக்காதி மரைக்காயரை நட்பு பாராட்டித் தமது உடன்பிறப்பிலும் மேலாக மன்னர் மதித்து நடந்து வந்தார். கீழ்த்திசை நாடுகள் பலவற்றுக்கும் வணிகம் நிமித்தமாகச் சென்றுவந்த சீதக்காதி மரைக்காயரது அனுபவ முதிர்ச்சியும் நிர்வாகத் திறனும் சேதுபதி மன்னரது சிறந்த ஆட்சிக்குப் பயன்பட்டன என்றால் அது மிகையாகாது.  முதலாவது சடைக்கன் சேதுபதி முதல் சேதுநாட்டின் தலைநகராகப் போகலூர் என்ற கிராமம் இருந்து வந்ததை மாற்றி இராமநாதபுரம் கோட்டையைச் சேது மன்னர்களது தலைநகராக விளங்கும்படி செய்தது சீதக்காதி மரைக்காயர் தான். மேலும் அதுவரை மண்கோட்டையாக இருந்து வந்த இராமநாதபுரம் கோட்டையை மிகச்சிறந்த கற்கோட்டையாக மாற்றியதும், மன்னருக்கு எனக் கோட்டைக்குள் கொலு மண்டபம் ஒன்றையும் அமைத்து அரண்மனை நிர்வாக நடைமுறைகளை வகுத்துக் கொடுத்தவரும் சீதக்காதி மரைக்காயரே ஆவார். மேலும் இவரது வணிகக்கப்பல்கள் கீழ்த்திசை நாடுகளான இலங்கை, வங்கம், கடாரம், மலாக்கா, இந்தோனேஷியா, தாய்லாந்து, கம்போடியா நாடுகளுக்குச் சென்று பலவகையான வணிகப் பொருள்களைச் சேதுபதிச் சீமைக்குக் கொண்டு வந்து சேர்த்ததுடன் பாண்டியநாட்டுப் முத்துக்கல், சோழநாட்டு தானியங்கள். கைத்தறி ஆடைகள், கேரளத்து மிளகு, இலங்கை நாட்டுக் கொட்டைப்பாக்கு ஆகியவைகளைப் பெருமளவில் அந்த நாடுகளுக்கெல்லாம் அவரது கப்பல்கள் எடுத்துச் சென்றன. சேதுநாட்டின் முக்கிய துறைமுகங்களாக கீழ்க்கரை, பாம்பன், தேவிபட்டினம், தொண்டியும் செழித்து விளங்கின. இத்தகைய வியாபாரச் செழுமையில் ஈடுபட்டிருந்த பல ஊர்களைச் சேர்ந்த முஸ்லீம் வணிகர்கள் சேதுமன்னரது குடிகளாக இந்த நாட்டில் நிலைத்து வாழ்ந்தனர். இவர்களைப் போன்றே டச்சுக்கிழக்கிந்திய வணிகக் கம்பெனியாரும், ஆங்கிலக் கிழக்கிந்திய வணிகக் கம்பெனியாரும், சேது நாட்டில் அவர்களுக்குத் தேவையான கைத்தறிகள், தானியங்கள், மிளகு ஆகிய பொருள்களைக் கொள்முதல் செய்து வந்ததால் அவர்களது நாணயங்களும் சேது நாட்டின் செலாவணியில் இடம் பெற்றன.  இவ்விதம் சேது நாட்டின் அரசியல் வலிமையையும், வணிகச் செழுமையையும், சமுதாய அமைதியையும் மிக நீண்ட ஆட்சிக்காலமாக முப்பத்திரண்டு ஆண்டுகள் நீடித்த ரெகுநாத கிழவன் சேதுபதி ஆட்சி கி.பி. 1710இல் அவரது மரணத்துடன் முடிவு பெற்றது.    1. ↑ Sathya Natha Ayyar - History of Madurai Nayaks (1928)  2. ↑ Dr.S.M. கமால் - சேதுபதி மன்னர் செப்பேடுகள் (1994)  3. ↑ கமால் S.M. Dr - சேதுபதி மன்னர் கல்வெட்டுக்கள் (2002)  4. ↑ Dr. S.M. கமால் - சேதுபதி மன்னர் கல்வெட்டுகள் (2002)  5. ↑ Sathya Natha Ayyar. A - History of Madurai Nayaks (1928)                            இயல் - VI i. முத்து வயிரவநாத சேதுபதி மறைந்த கிழவன் சேதுபதிக்கு ஆண்வாரிசு இல்லை என சில வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். ஆனால் நமக்குக் கிடைத்துள்ள ஆவணங்களின்படி ரெகுநாத கிழவன் சேதுபதிக்கு 1) ரணசிங்கத் தேவர். 2) பவானிசங்கரத் தேவர் என்ற இரு ஆண் மக்கள் இருந்து வந்தனர் என்பதை அறிகிறோம். ரணசிங்கத் தேவர் சேதுநாட்டின் வடபகுதியான திருப்பத்தூர் பகுயில் ஆளுநராக இருந்தார் என்றும் கி.பி. 1702ல் சேதுபதி மன்னருக்கும் மதுரை அரசி இராணிமங்கம்மாவிற்கும் ஏற்பட்டப் போரில் வீரமரணம் அடைந்தார் என்றும் தெரியவருகிறது. அடுத்த மகனான பவானிசங்கரத்தேவர் இராமநாதபுரம் அரண்மனை சம்பிரதாயப்படி சேதுபதி மன்னருக்கும் செம்பிநாட்டு மறக்குல பெண்மணிக்கும் பிறக்காதவர் ஆதலால் அவரது அரசு உரிமை மறுக்கப்பட்டது. ரெகுநாத கிழவன் சேதுபதியின் தங்கை மகனான திருஉத்திரகோச மங்கை கடம்பத்தேவர் மகன் முத்துவயிரவநாத சேதுபதி இராமநாதபுரம் மன்னராகத் தேர்வு செய்யப்பட்டார். கி.பி. 1713 வரை ஆட்சி செய்த இவரது ஆட்சிக் காலத்தை குறிக்கும் இரண்டு செப்பேடுகள் கிடைத்துள்ளன. முதலாவதாக கி.பி. 1710ல் செவ்விருக்கை நாட்டு அழகன் குளத்தை அடுத்து பின்னாணியாரேந்தல் ஊரினை அழகன்குளம் மூர்த்தி மடம் என்ற நிறுவனத்திற்கு வழங்கியது. இரண்டாவதாக கி.பி. 1711ல் இராமாயண பிரசங்க சேவையினைப் பாராட்டி மேலச்செல்வனுர் சர்க்கரைப் புலவருக்கு உளக்குடி, கோடாகுடி என்ற இரண்டு ஊர்களை வழங்கியது ஆகும்.  என்ன காரணத்தினால் இவரது ஆட்சி மேலும் தொடரவில்லை என்பதை அறிந்து கொள்வதற்கான ஆவணங்கள் கிடைக்கப்பெறவில்லை. இதுவரை வெளிவந்துள்ள சேதுபதி மன்னர்களது வரலாறுகளில் கிழவன் ரெகுநாத சேதுபதியை அடுத்து கி.பி. 1710-ல் முத்து விஜய ரகுநாத சேதுபதி சேதுநாட்டு மன்னரானார் என்ற செய்தி கொடுக்கப்பட்டுள்ளது. இவரைப் பற்றிக் குறிப்பிடப்படவில்லை.                                    ii. முத்துவிஜயரகுநாத சேதுபதி   முத்துவயிரவநாத சேதுபதியின் இளைய சகோதரர் திருவுடையாத் தேவர் என்பவர் கி.பி.1713ல் முத்து விஜயரகுநாத சேதுபதி என்ற பெயருடன் சேதுபதி மன்னரானார். இதனை உறுதிப்படுத்தும் இவரது முதலாவது செப்பேடு கி.பி.1713ல் வழங்கப்பட்டுள்ளது.  திருவுடையாத் தேவர் இராமநாதபுரத்தில் ஆண்டுதோறும் புரட்டாசி திங்களில் நடைபெறும் விஜயதசமி (தசரா விழா) விழா அன்று முடிசூட்டிக் கொண்டதால் இவரது அதிகாரப் பூர்வமான பெயர் முத்து விஜய ரகுநாத சேதுபதி என வழங்கப்பட்டது. ஆனால் முத்து விஜய ரகுநாத சேதுபதி என்ற அடைமொழி இவருக்கு முன் இருந்த ரெகுநாத கிழவன் சேதுபதிக்கும் ரெகுநாத திருமலை சேதுபதிக்கும் இருந்ததை அவர்களது கல்வெட்டுக்களும் செப்பேடுகளும் தெரிவிக்கின்றன. இந்த மன்னரது ஆட்சி கி.பி.1725 வரை நீடித்த குறுகிய கால ஆட்சியாக இருந்தாலும் இந்தக் காலத்தில் சில அரிய சாதனைகளை இந்த மன்னர் நிகழ்த்தியுள்ளார். முதலாவதாகச் சேது நாட்டின் நிர்வாகத்தைச் சீரமைப்பதில் மிகுந்த அக்கறை காட்டினார். திருமலை ரகுநாத சேதுபதி ஆட்சியில் சேதுநாட்டின் எல்லைகள் வடகிழக்கு வடக்கு. தெற்கு ஆகிய மூன்று திக்குகளிலும், விரிவடைந்த பொழுதிலும் அவரது ஆட்சிகாலத்தில் இந்த பெரிய நிலப்பரப்பின் நிர்வாகத்தைச் சீரமைக்க இயலவில்லை. அவரை அடுத்து சேதுபதிப் பட்டம் பெற்ற ரெகுநாத கிழவன் சேதுபதிக்கு உள்நாட்டின் குழப்பங்களைச் செம்மை செய்வதில் காலம் கழிந்ததால் நிர்வாகத் துறையில் புதியன எதையும் புகுத்த முடியவில்லை.  செம்மையான நிர்வாகம் நடைபெற ஆதலால் இந்த மன்னர் அன்றைய சேதுநாட்டை 72 இராணுவப் பிரிவுகளாகப் பிரித்ததுடன் ஒவ்வொரு பிரிவிற்கும் ஒரு சேர்வைக்காரரை நியமித்து அதில் அடங்கியுள்ள கிராமங்களின் வருவாய் கணக்குகளைப் பராமரிப்பதற்காக மதுரைச் சீமைகளிலிருந்து பட்டோலை பிடித்து எழுதும் வேளாண் குடிமக்களை வரவழைத்து அவர்களை நாட்டுக்கணக்கு என்ற பணியில் அமர்த்தினார். அடுத்ததாக அரசின் வலிமையை நிலைநிறுத்தி வெளிப்புற எதிரிகளிடமிருந்து சேதுநாட்டைக் காப்பதற்காக மூன்று புதிய கோட்டைகளை முறையே ராஜசிங்கமங்கலம், பாம்பன், கமுதி ஆகிய ஊர்களில் புதிதாக அமைத்தார். கமுதிக்கோட்டை புதுமையான முறையில் வட்டவடிவில் மூன்று சுற்று மதில்களுடன் அமைக்கப்பட்டது. இதனை அமைத்தவர்கள் பிரெஞ்சு நாட்டு பொறியியல் வல்லுநர்கள் என இராமநாதபுரம் சமஸ்தான மேனுவல் தெரிவிக்கின்றது. சேதுநாட்டில் ஏற்கனவே திருப்பத்துர், காளையார்கோவில், மானாமதுரை, அனுமந்தக்குடி, இராமநாதபுரம் ஆகிய ஊர்களில் சேதுமன்னருக்குச் சொந்தமான கோட்டைகள் இருந்து வந்தன. இவையனைத்தும் தமிழ்நாட்டில் பாரம்பரிய முறைப்படி கோட்டைவாசல், கொத்தளங்கள், அகழி என்ற பகுப்புகளுடன் செவ்வக வடிவில்அமைக்கப்பட்டிருந்தன. ஆனால் இந்த மரபுகளினின்றும் மாறுபட்டதாக கமுதிக் கோட்டை குண்டாற்றின் வடக்குக் கரையின் பாறைகள் நிறைந்த பகுதியில் கட்டப்பட்டது. தமிழகத்தில் இதனைப் போன்ற வட்டவடிவமான கோட்டை நாஞ்சில் நாட்டில் அமைக்கப்பட்ட உதயகிரி கோட்டை யாகும். இதனை நாஞ்சில் நாட்டு மன்னர் மார்த்தாண்ட வர்மனுக்காக கி.பி.1751ல் டினாய்ஸ் என்ற டச்சுத்தளபதி அமைத்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும். இந்தக் கோட்டை இப்பொழுது உதயகிரி கோட்டை என்று அழைக்கப்படுகிறது.  மூன்றாவதாக, இந்த மன்னர் சேதுநாட்டின் அத்தாணி மண்டபமான இராமலிங்க விலாசத்தை அழகிய சுவர் ஒவியங்களால் கலைக்கருவூலமாக அலங்கரிக்கச் செய்தார். மூன்று பகுதிகளை உடைய இந்தப் பெரிய மண்டபத்தின் உட்புறம் முழுவதும் ஒரு அங்குலம் கூட இடைவெளி இல்லாமல் முழுமையும், தெய்வீகத் திருவுருவங்களாலும், வரலாற்று காட்சிகளாலும் சேது நாட்டு சமுதாய வாழ்வைப் பிரதிபலிக்கும் ஓவியங்களாகவும் இந்த மண்டபத்தின் சுவர் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. ஏறத்தாழ முன்னுற்று ஐம்பது ஆண்டுகள் ஆகியும், இந்த சுவர் ஓவியங்கள் புதுமைப் பொலிவுடன் இன்றும் திகழ்ந்து வருகின்றன.  நான்காவதாக, கலைஉள்ளம் கொண்ட இந்த மன்னர் மிகச்சிறந்த சிவபக்தர் ஆகவும் விளங்கி வந்தார் என்பதைச் சில வரலாற்றுச் செய்திகள் மூலம் தெரிந்து கொள்ளமுடிகிறது. உலக அதிசயங்களில் ஒன்றாகக் கருதப்படும் இராமேஸ்வரம் திருக்கோயிலில் மூன்றாவது பிரகாரத்தை அமைப்பதற்குத் திட்டமிட்டு அடிக்கல் நாட்டியவரும் இந்த மன்னரே ஆகும். இந்தக் கோவிலின் பள்ளியறையில் சுவாமி அம்பாள் பயன்பாட்டிற்காக 18,000 வராகன் எடையில் வெள்ளி ஊஞ்சல் ஒன்றினையும் செய்து அளித்ததுடன் இராமேஸ்வரம் திருக்கோயிலின் ஆடிமாத விழாவின் போது சுவாமியும், அம்மனும் திருவுலா வருவதற்கான திருத்தேர் ஒன்றினையும் புதிதாகச் செய்வித்து அளித்தார். இந்தத் தேர்த் திருவிழாவின் முதலாவது தேர்ஒட்டத்தை இந்த மன்னர் முன்நின்று நடத்தித் தேரின் வடத்தையும் பிடித்துக் கொடுத்தார் எனத் ‘தேவை உலா'’ என்ற சிற்றிலக்கியத்தில் காணப்படுகிறது. மேலும் இராமேஸ்வரம் திருக்கோவிலின் உபயோகத்திற்காக மன்னார் வளைகுடாவில் முத்துச்சிலாபக் காலங்களில் இரண்டு தோணிகள் வைத்து முத்துக்குளிக்கும் உரிமையையும் ஒரு செப்பேட்டின் மூலம் இராமேஸ்வரம் கோவிலுக்குத் தானம் வழங்கியுள்ளார்.  இவை தவிர இராமநாதபுரம் ஆதிமுத்துராமலிங்க சுவாமி திருக்கோவில் இந்த மன்னரால் அமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மணிவாசகப் பெருமானால் திருப்பணி செய்யப்பட்டு திருவாசகப் பாடல்கள் பெற்ற திருப்பெருந்துறை ஆள்உடைய பரம சுவாமி ஆலயத்திற்கும் அந்தக் கோவிலினை நிர்வகித்து வருகின்ற திருவாவடுதுறை ஆதினத்திற்குமாகப் பல ஊர்களைக் குத்தகை நாட்டு அறந்தாங்கி வட்டத்தில் அறக்கொடைகளாக வழங்கியுள்ளார். தஞ்சை மண்டலத்தில் உள்ள திருமறைக்காடு வேதபுரீஸ்வரர் திருக்கோயிலில் ஒரு மண்டபத்தினையும் அமைத்துக் கொடுத்துள்ளார் இன்றும் அந்த மண்டபம் சேதுபதி மண்டபம் என்றே வழங்கப்பட்டு வருகிறது. மற்றும் திருவாரூர் தியாகராஜ சுவாமிகள் ஆலயத்திற்கு நம்பியூர் மாகாணத்து அன்னவாசல் என்ற ஊரினைத் தானமாக வழங்கியிருப்பதைத் திருவாரூர் கோயில் செப்பேடு ஒன்று தெரிவிக்கின்றது. இராமநாதபுரம் கோட்டைக்குள் உள்ளே அமைந்து உள்ள கோதண்டராமசுவாமி ஆலயத்திற்குக் காாாம்பல் என்ற கிராமத்தைத் தானமாக வழங்கியது இந்த மன்னரது சமரச மனப்பான்மைக்கு எடுத்துக்காட்டாக உள்ளது. அத்துடன் அந்தக் கோவிலின் பராமரிப்புச் செலவிற்காகச் சேதுநாட்டுப் பெருங்குடி மக்கள் ஆண்டுதோறும் எவ்வளவு கலம் நெல் இந்தக் கோவிலுக்கு வழங்க வேண்டும் என்று நிர்ணயம் செய்ததுடன் இடையர்குடியைச் சேர்ந்த புதுமணத் தம்பதிகள் எவ்வளவு படி நெய்கொடுக்க வேண்டும் என்று நிர்ணயம் செய்ததை ஒரு செப்பேட்டின் வழி அறிய முடிகிறது.  இந்த மன்னரது இறை பக்தியையும் அறஉணர்வையும் வெளிப்படுத்தக்கூடிய நிகழ்ச்சி ஒன்று வரலாற்றில் பதிவு பெற்றுள்ளது. இராமேஸ்வரத்திற்குச் சேதுபாதை வழியாக கால்நடையாக மண்டபம் தோணித் துறைச் சத்திரத்திற்கு வந்துசேரும் பயணிகள் கடலைக் கடந்து இராமேஸ்வரம் சென்று தங்களது பயணத்தை முடித்து வந்தனர். இவர்களது செளகரியத்திற்காகத் தோணித்துறையிலிருந்து பாம்பன் கரைக்குப் படகுகளை இயக்குவதற்கும் பாம்பன் சத்திரத்தில் தங்கிய இந்தப் பயணிகள் இராமேஸ்வரம் செல்வதற்கும் வசதிகளைச் செய்வதற்காக தண்டத் தேவர் என்ற ஒருவரை இராமேஸ்வரம் தீவு ஆளுநராக நியமனம் செய்தார். இவர் மன்னரது இரு பெண் மக்களையும் மணந்தவர்.  நாளடைவில் தண்டத்தேவர் பாம்பனுக்கும் இராமேஸ்வரத்திற்கும் இடையில் சாலை வசதி ஏற்படுத்துவதற்காக இராமேஸ்வரம் பயணிகளிடம் ஒரு சிறிய தொகையை அன்பளிப்பாக வசூலித்து வந்தார். மன்னரது ஒப்புதல் இல்லாமல் தண்டத்தேவர் மேற்கொண்ட இந்த நடவடிக்கையைக் கேள்விப்பட்ட மன்னர் மிக்க ஆத்திரம் அடைந்தார். அதனை மிகப்பெரிய சிவத்துரோகமாகக் கருதித் தண்டத்தேவருக்கு மரண தண்டனை வழங்கினார். திருவாரூர்ப் புராணத்தில் சொல்லப்படுகின்ற மனுநீதிச் சோழனுக்கு ஒப்பாக இந்தச் சேதுபதி மன்னர் நடந்து கொண்டதால் அவரை மனுநீதி சேதுபதி என மக்கள் அழைத்தனர்.  இவ்விதம் நிர்வாகத்தில் மிகக் கடுமையான நேர்மையுடன் நடந்து வந்த இந்த மன்னர் உள்நாட்டு மக்களது அவலங்களைத் தீர்ப்பதற்கும் முயன்று வந்ததை வரலாறு தெரிவிக்கின்றது. மதுரைச் சீமையிலிருந்து கிழக்கு நோக்கிச் சேதுபதியின் சீமை வழியாகச் சென்று வங்கக் கடலில் சங்கமம் ஆகின்ற வைகை ஆற்றின் நீரினைச் செம்மையாக பயன்படுத்துவதற்காகத் திட்டம் ஒன்றை வகுத்து நிறைவேற்றினார். அதன் முடிவு தான் இராமநாதபுரம் நகருக்கு மேற்கே அமைக்கப்பட்டுள்ள பெரிய கண்மாய் என்ற நீர்த்தேக்கம் ஆகும். இதற்கு ஸ்ரீ இராமபிரானது பெயரால் இரகுநாத சமுத்திரம் என்று பெயர் சூட்டியதை அவரது செப்பேடு ஒன்றின் மூலம் அறியப்படுகிறது.  இதனைப் போன்ற மிகப் பரந்த வறண்ட நிலமாக காட்சியளித்துக் கொண்டிருந்த முதுகளத்தூர் வட்டத்தின் மேற்கு கிழக்குப் பகுதிகளை வளமைமிக்க கழனிகளாக மாற்றுவதற்கு மற்றுமொறு திட்டத்தை இந்த மன்னர் வகுத்தார். கமுதிக்கோட்டைக்குத் தெற்கே கிழக்கு மேற்காகச் செல்லும் குண்டாற்றின் வடகரையில் ஒரு கால்வாயினை அமைத்து அதன் மூலம் முதுகளத்தூர் இராமநாதபுரம் வட்டங்களின் பகுதிகள் குண்டாற்று நீரினால் பயனடையுமாறு செய்தார். இந்தக் கால்வாய்க்கு ரெகுநாத காவேரி என்று பெயர் சூட்டப்பட்டது. இந்தக் கால்வாய் ஏறத்தாழ 30 கல் தொலைவில் கிழக்கேயுள்ள களரிக் கண்மாயில் முடிவடைகிறது.  இவர் தமிழ்ப் புலவர்களையும் ஆதரித்தார் என்பதற்குச் சான்றாக மதுரைச் சொக்கநாதப் புலவரின் பணவிடுதூது, தேவை உலா ஆகிய இருநூல்கள் இருந்து வருகின்றன.  இவ்விதம் சமுதாயத்திற்கும் தெய்வீகத்திற்கும் தமது அரசுப் பணியை உட்படுத்தி வந்த இந்த மன்னருக்கு எதிரியாகப் பவானி சங்கரத் தேவர் எழுந்தது ஆச்சரியம் இல்லை. ரெகுநாத கிழவன் சேதுபதியின் செம்பிநாட்டு மறவர் குல பெண்மணிக்குப் பிறக்காததால் சேதுபதி பட்டம் மறுக்கப்பட்ட பவானி சங்கரத் தேவர் புதுக்கோட்டை தஞ்சை மன்னர்களது உதவியுடன் இராமநாதபுரம் கோட்டையைப் பிடிப்பதற்கு முற்பட்டார். இவரை சேதுநாட்டின் வடக்கு எல்லையில் சந்தித்துப் பொருதுவதற்காக சென்ற பொழுது முத்து விஜயரகுநாத சேதுபதி வழியில் வைசூரி நோயினால் பாதிக்கப்பட்டு இராமநாதபுரம் திரும்பியதும் மரணம் அடைந்தார். இது நிகழ்ந்தது கி.பி.1725ல்.                                                iii. பவானி சங்கர சேதுபதி   தஞ்சை மராத்திய படைகளுக்குத் தலைமை தாங்கி வந்த பவானி சங்கரத் தேவர் கி.பி.1725ல் சேதுபதி மன்னராக இருந்த சுந்தரேஸ்வர ரகுநாத சேதுபதி மன்னரைப் போரில் கொன்று அவரே சேதுபதி மன்னரானார்.  ரகுநாத கிழவன் சேதுபதியின் மகனான இந்த மன்னரது கனவு 15 ஆண்டுகளுக்கு அப்புறம் இப்பொழுது நிறைவேறியது என்றாலும் மிகக் குறுகிய ஆட்சிக்காலத்தில் அவர் இயற்றிய கோவில் திருப்பணிகளில் நயினார் கோயில் திருக்கோயிலுக்கு அண்டக்குடி என்ற ஊரினைத் தானமாக வழங்கிய கல்வெட்டு மட்டும் கிடைத்துள்ளது.  இராமநாதபுரத்தைக் கைப்பற்றுவதற்காகத் தஞ்சை மன்னருடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி பவானி சங்கரத் தேவர் இராமநாதபுரம் சேதுபதியானதும் சேதுநாட்டின் வடபகுதியாக விளங்கிய சோழமண்டலப் பகுதிகளைத் (பட்டுக்கோட்டை சீமையை) தஞ்சை மன்னருக்கு விட்டுக்கொடுக்காத படியினால் கோபமுற்ற தஞ்சை மன்னர் பவானி சங்கர சேதுபதியின் எதிரிகளுக்கு உதவி செய்து மற்றுமொரு படையெடுப்பின் மூலம் சேதுநாட்டின் மீது போர் தொடுத்தார். அந்தப் போரினுக்கு மறைந்த சுந்தரேஸ்வர சேதுபதியின் சகோதரர் கட்டையத்தேவரும், முத்து விஜய ரகுநாத சேதுபதியின் மருகர் ஆன சசிவர்ணத் தேவரும் தலைமை தாங்கி வந்தனர். ஓரியூர் அருகில் நடந்த போரில் பவானி சங்கரத் தேவர் தோற்கடிக்கப்பட்டார். அவர் சிறைபிடிக்கப்பட்டு தஞ்சாவூருக்கு அனுப்பப்பட்டார். அவரது முடிவு பற்றிய விபரங்கள் எதுவும் கிடைக்கவில்லை.                                          iv. கட்டையத் தேவர் (எ) குமார முத்து விஜய ரகுநாத சேதுபதி   சுந்தரேஸ்வர சேதுபதியின் சகோதரரான இவர் குமாரமுத்து விஜயரகுநாத சேதுபதி என்ற பெயருடன் 1728ல் சேதுநாட்டின் மன்னர் ஆனார். இவரது ஆட்சியில் சேதுநாடு இருபகுதிகளாகப் பிரிக்கப்பட்டது. பவானி சங்கரசேதுபதியை தோற்கடிக்க உதவிய தஞ்சை மன்னருக்கு பட்டுக்கோட்டை சீமைப்பகுதியையும் சசிவர்ணத் தேவருக்கு வைகை நதியின் வடகரைக்கும் பிரான்மலைக்கும் இடைப்பட்ட பகுதி சின்ன மறவர் சீமை என்ற பெயருடன் அவருக்குப் பிரித்துக் கொடுக்கப்பட்டது. இதனால் சேதுநாட்டின் வலிமையும், வளமையும் குன்றியது. இவரது ஆட்சியில் தஞ்சை மராத்திய மன்னர் இராமநாதபுரம் சீமையைக் கைப்பற்றுவதற்காகப் பலமுறை முயற்சிகள் செய்தார். அவையனைத்தையும் சேதுபதி மன்னர் சிவகங்கை, எட்டையபுரம் வீரர்களின் உதவியுடனும் தமது தளவாய் வைரவன் சேர்வைக்காராது போர் ஆற்றல்களினாலும் முறியடித்து வெற்றி கொண்டார். இதனைத் தவிர இந்த மன்னரது ஆட்சியில் குறிப்பிடத்தக்க சிறப்பு நிகழ்ச்சிகள் எதுவும் இல்லை.  முந்தையர்களைப் போன்று ஆன்மீகத் துறைக்கு இந்த மன்னரது ஆட்சி அருந்துணையாக அமைந்து இருந்தது. இராமநாதபுரம் கோட்டைக்குத் தென்பகுதியில் உள்ள பாலசுப்பிரமணியசுவாமி கோவிலை ஒட்டி ஒரு அக்கிரஹாரம் அமைப்பதற்கும், கமுதி. திருப்புல்லாணிக் கோவில்களுக்கும் பல அறக்கொடைகளை வழங்கி உள்ளார். மேலும் இந்த மன்னர் பெருவயல் கிராமத்தில் சுப்பிரமணிய சுவாமிக்கு திருக்கோயில் ஒன்றினை அமைத்த அவரது தளவாய் வயிரவன் சேர்வைக்காரது திருப்பணியைப் பாராட்டி அந்தக் கோயிலின் பராமரிப்புச் செலவிற்காகப் பெருவயல், கலையனூர் கிராமத்தினை கி.பி.1736ல் சர்வமான்யமாக வழங்கி உதவினார். சேதுநாட்டில் குமரக் கடவுளை வழிபடும் நிகழ்ச்சியை இங்ஙனம் முதல் முறையாக ஊக்குவித்துள்ளார். மற்றும் சேதுவில், இராமேஸ்வரத்தில் சோம வாரந்தோறும் அன்னதானம் நடைபெறுவதற்காக முத்தூர் நாட்டிலுள்ள குளுவன்குடி என்ற கிராமத்தினையும் தானமாக வழங்கினார்.  முத்து விஜய ரகுநாத சேதுபதியின் நேர்மையான ஆணைப்படி மரண தண்டனை பெற்ற தண்டத்தேவரது இரு மனைவிகளான முத்து விஜய ரகுநாத சேதுபதியின் பெண்மக்கள் சீனிநாச்சியார், லெட்சுமி நாச்சியார் ஆகிய இருவரும் தங்கள் கணவரது சிதையில் விழுந்து தீக்குளித்து மரணம் அடைந்ததை நினைவூட்டும் வண்ணம் பாம்பனுக்கும், இராமேஸ்வரத்திற்கும் இடைப்பட்ட சேதுபாதையில் இரண்டு திருமடங்களை இந்த மன்னர் தோற்றுவித்தார். நாளடைவில் அந்த இருமடங்களைச் சுற்றியுள்ள குடியிருப்புகள் பெருகி இன்று அக்காமடம், தங்கச்சிமடம் என்ற பெயருடன் தனித்தனி ஊர்களாக இருந்து வருகின்றன. இந்த மன்னரது மறைவு பற்றிய சரியான தகவல்கள் இல்லை. இவரையடுத்து இவரது மகன் சிவகுமார முத்து விஜய ரகுநாத சேதுபதி என்ற பட்டத்துடன் இராமநாதபுரம் சீமை மன்னர் ஆனார்.                        v. சிவகுமார முத்து விஜய ரகுநாத சேதுபதி   கி.பி.1740ல் பதவியேற்ற இவரது ஆட்சியிலும் தஞ்சை மராத்தியர் படையெடுப்பு தொடர்ந்தன. வழக்கம்போல சேதுபதியின் தளவாய் வெள்ளையன் சேர்வைக்காரர். அந்தப் படையெடுப்பினைப் படுதோல்வி அடையச் செய்தார். இந்த மன்னரது ஆட்சியில் வேறு குறிப்பிடத்தக்க நிகழ்ச்சிகள் இல்லையென்றாலும் இந்த மன்னர் சமயப் பொறை காத்து சேதுநாட்டின் சிறுபான்மையினரான இஸ்லாமிய மக்களது தொழுகைப் பள்ளிகளுக்கும், தர்ஹாக்களுக்கும் பல நிலக்கொடைகளை வழங்கினார். அவைகளில் குறிப்பிடத்தக்கவை ஏர்வாடி, இராமேஸ்வரம், இராமநாதபுரம், கீழக்கரை ஆகிய ஊர்களில் உள்ள இஸ்லாமிய நிறுவனங்கள் ஆகும்.  சிவகுமார முத்து விஜய ரகுநாத சேதுபதிக்கு ஆண்வாரிசு இல்லாததால் கட்டையத் தேவரின் உடன் பிறந்த சகோதரர் மகன் இராக்கத் தேவரைத் தளவாய் வெள்ளையன் சேர்வைக்காரர் சேதுபதியாக நியமனம் செய்தார். இந்த மன்னர் திறமையற்றவராக இருந்ததால் தளவாய் இவரைப் பதவி நீக்கம் செய்துவிட்டு, சிவகுமார முத்து விஜய ரகுநாத சேதுபதியின் அத்தையின் பேரனாகிய செல்லமுத்துத் தேவரை கி.பி.1748ல் சேதுபதி மன்னராக்கினார்.  இந்தத் தளவாய் சேதுநாட்டின் அரசியலில் மிகுந்த செல்வாக்கு பெற்றிருந்ததால் தளவாயின் நடவடிக்கைகளைத் தடைப்படுத்தவோ. மாற்றி அமைக்கவோ அப்பொழுது இராமநாதபுரம் அரண்மனையில் தகுதியான ஆள் எவரும் இல்லை. இதனால் தளவாய் வெள்ளையன் சேர்வைக்காரர் மன்னருடைய அனுமதி இல்லாமலேயே சேதுநாட்டுப் படைகளைத் திருநெல்வேலி சீமைக்கு நடத்திச் சென்று பெரும்பான்மையான பாளையக்காரர்களைச் சேதுபதியின் ஆட்சிக்கு உட்பட்டிருக்குமாறு செய்தார். அப்பொழுது அவரது படைகள் தங்கியிருந்த இடம் சிவகிரி நகருக்கு அருகில் இராமநாதபுரம் என்ற பெயருடன் இன்றும் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. அத்துடன் மதுரைக் கோட்டையை ஆக்கிரமித்திருந்த நபீகான் கட்டாக், ஆலம்கான், முடேமியா, ஆகிய பட்டாணியத் தலைவர்களை வெளியேற்றி விட்டு மதுரை நாயக்க அரசின் பரம்பரையின் இளவலான விஜய குமார பங்காரு திருமலையை கி.பி.1751ல் மதுரை மன்னராக்கிவிட்டு இராமநாதபுரம் திரும்பினார். இவர் திருப்புல்லாணித் திருக்கோயிலுக்கு வந்து செல்லுகின்ற பயணிகளுக்காகத் திருப்புல்லாணியில் சத்திரம் ஒன்றை அமைத்து உதவினார். இந்த சத்திரத்தின் பயன்பாட்டிற்காக அண்மையில் உள்ள காஞ்சிரங்குடி என்ற கிராமத்தைச் சேதுபதி மன்னரிடமிருந்து தானமாகப் பெற்றார். இவர் எப்பொழுது பதவி விலகினார் அல்லது இறந்தார் என்பதை துலக்கும் ஆவணங்கள் எதுவும் இல்லை.                            vi. செல்லமுத்து விஜய ரகுநாத சேதுபதி   இவரது 14 ஆண்டு கால ஆட்சியில் மூன்று சிறப்பான நிகழ்ச்சிகள் வரலாற்றில் பதிவு பெற்றுள்ளன. முதலாவது, தஞ்சை மராத்தியரது படைகள் இவரது ஆட்சி காலத்தில் சேது நாட்டின் வடபகுதியை ஆக்கிரமித்து இராமநாதபுரம் கோட்டை நோக்கி முன்னேறி வந்தது. இந்தப் படையெடுப்பையும் தளவாய் வெள்ளையன் சேர்வைக்காரர் முறியடித்து சேதுநாட்டுத் தன்னரசு நிலையை நிலை நாட்டினார்.  இரண்டாவது நிகழ்ச்சி, கீழக்கரையில் டச்சுக்காரர்கள் ஒரு தொழிற்சாலையை அமைத்துத் தூத்துக்குடிப் பரவர்களைக் கொண்டு அங்கு நெசவுப்பட்டறை தொடர்வதற்கு அனுமதி அளித்தார். நாளடைவில் டச்சுக்காரர்கள் அந்தத் தொழிற்சாலைப் பகுதியைச் சுற்றி சுவர் எழுப்பி ஒரு சிறு அரணாக மாற்ற முயற்சித்தனர். தகவலறிந்த சேதுபதி மன்னர் அந்த அரணைப் பீரங்கிகளால் இடித்துத் தகர்த்தெறியுமாறு உத்தரவிட்டார். உடனே டச்சுக்காரர்களின் தலைமை இடமான துத்துக்குடியிலிருந்து வந்த துதுக்குழுவினர் சேதுபதியைச் சந்தித்து அவருடைய நடவடிக்கையைக் கைவிடுமாறு கேட்டுக்கொண்டனர். சீற்றம் கொண்ட சேது மன்னர் அத்துாதுக்குழுவினரைச் சிறையிடும்படி உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து துத்துக்குடியிலிருந்து டச்சுக்காரர்கள் கீழக்கரைக்கு ஒரு போர்க்கப்பலை அனுப்பி வைத்தனர். நிலைமை மிகவும் மோசமானதை அறிந்த கீழக்கரை சின்னத்தம்பி மரைக்காயர் என்பவர் டச்சுக்காரரின் பொருட்டு சேதுபதி மன்னரைச் சந்தித்து, சேதுமன்னரும் டச்சுக்காரரும் போரிடும் நிலையைத்தவிர்க்க உதவினார். அதன்பிறகு டச்சுக்காரருக்கும் சேதுபதி மன்னருக்கும் இயல்பான உறவு நீடித்தது.  மூன்றாவது நிகழ்ச்சி தமிழ்நாட்டில் ஆற்காடு நவாபு பதவிக்கு கடைசி நவாபாக இருந்த தோஷ்து முகம்மது என்பவரது மருமகனாகிய சந்தா சாகிபும், நவாபின் மைனர் மகனுக்குப் பாதுகாவலராக நியமிக்கப்பட்ட அன்வர்தீனும் போட்டியிட்டனர். அப்பொழுது ஹைதராபாத் நிஜாம் பதவிக்கும் போட்டி, இதனால் போட்டி நிஜாம்களில் ஒருவர் சந்தாசாகிபையும் மற்றவர் அன்வர்தீனையும் ஆற்காடு நவாபாக நியமித்தனா. இந்த இருவர்களுக்கு இடையே நிகழ்ந்த பூசல்களில் பிரெஞ்சுக்காரரது துணை கொண்ட சந்தாசாகிபை சேதுபதி மன்னர் ஆதரித்தார். திருச்சி அருகே நடைபெற்ற போரில் உதவுவதற்காக 5000 மறவர்களையும் சேதுபதி மன்னர் அனுப்பி வைத்தார்.  அந்தத் திருச்சிப் போரில் பிரெஞ்சு காரரை நம்பிய சந்தாசாகிப் தோல்வியுற்றார். ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆதரவு பெற்ற அன்வர்தீனின் மகன் முகம்மதலி ஆற்காடு நவாபானார். இந்த மாறுபட்ட சூழ்நிலையில் சேதுமன்னர் ஆற்காடு நவாப்பிற்காகத் திருநெல்வேலிப் பாளையக்காரர்கள் மீது படையெடுத்துச் சென்ற ஆங்கில தளபதி ஹெரானுக்கு நல்லெண்ண நடவடிக்கையாக உதவிகளை வழங்க முன்வந்தார். மன்னார் வளைகுடாவில் உள்ள இரண்டு தீவுகளை ஆங்கிலேயரின் பயன்பாட்டிற்குக் கொடுக்க முன்வந்தார். தளபதி ஹெரான் சேதுபதியின் நல்லெண்ண முயற்சிகளைப் பாராட்டி ஏற்றுக் கொண்டாலும். மேலிடம் அதை ஏற்றுக் கொள்ளவில்லை.  முன்னோர்களைப்போல இந்த மன்னரும் திருக்கோயில்களுக்கும், அன்னசத்திரங்களுக்கும் ஆதரவு வழங்கி வந்ததுடன் கி.பி.1762ல் காலமானார். இவருக்கு ஆண்வாரிசு இல்லாததால் இவரது தங்கை முத்துத் திருவாயி நாச்சியார் மகன் முத்துராமலிங்க சேதுபதி என்ற 11 மாதப் பாலகன் சேதுபதியாகப் பட்டம் சூட்டப்பெற்றார்.                இயல் - VII i. முத்துஇராமலிங்க விஜய ரகுநாத சேதுபதி   இந்த மன்னர் பாலகனாய் இருக்கும்போது கி.பி. 1762-ல் பட்டம் சூட்டப்பட்டதால் இவரது அரசப் பிரதிநிதியாக இவரது தாயார் முத்துத் திருவாயி நாச்சியார் பொறுப்புகளை ஏற்று நிர்வாகத்தை நடத்தி வந்தார். இவருக்குப் பிச்சை பிள்ளை. தாமோதரன் பிள்ளை என்ற இரு பிரதானிகள் உதவியாகச் செயல்பட்டு வந்தனர்.  இந்தக் கால கட்டத்தில் தென்னகத்தில் ஆற்காடு நவாபின் ஆதிக்கம் ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியாரின் ஆயுத வலிமை கொண்டு சென்னையில் நிறுவப்பட்டிருந்தது. ஆற்காடு நவாபிற்குக் கட்டுப்படாமல் அவருடைய ஆதிக்கத்தை எதிர்த்த மதுரை, நெல்லைசீமைப் பாளையக்காரர்களை கி.பி. 1751 முதல் மேற்கொண்ட பல போர்களின் மூலம் அவர்களை எல்லாம் அடக்கி ஒடுக்கிக் கப்பத் தொகையை நவாப் பெற்று வந்தார். அப்பொழுது தமிழகத்தில் இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர் என்ற நான்கு தன்னரசுகள் மட்டும் இருந்தன. ஏற்கனவே தஞ்சையை நவாபும், ஆங்கிலக் கிழக்கிந்திய கம்பெனியாரும் பங்கிட்டுக் கொண்டு பெயரளவில் தஞ்சை மன்னரைத் தஞ்சைச் சீமை அரசராக அங்கீகரித்திருந்தனர். எஞ்சிய மூன்று தன்னரசுகளில் கள்ளர் சீமை மன்னரான புதுக்கோட்டை மன்னரை விட்டுவிட்டு, மறவர் சீமையின் மன்னர்களான இராமநாதபுரம், சிவகங்கைச் சீமைகளின் மீது படையெடுப்பதற்கு ஆற்காடு நவாபு திட்டமிட்டு வந்தார்.  இதற்கிடையில் தஞ்சை மன்னராக இருந்த துல்ஜாஜி கி.பி. 1771-ல் மறவர் சீமை மீது படையெடுத்தார். இராமநாதபுரம் சீமையின் வடக்குப் பகுதிகளை வேகமாகக் கடந்து வந்து அனுமந்தக்குடி கோட்டையைத், தஞ்சைப் படைகள் கைப்பற்றி விட்டன. இதையறிந்த ராணி முத்துத் திருவாயி நாச்சியாரும் பிரதானி பிச்சைப் பிள்ளையும் ஆக்கிரமிப்பாளர்களைச் சமாளிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்து வந்தனர். இராமநாதபுரம் சீமைக்கு உரிமை கோரிய ஆறுமுகம் கோட்டை, மாப்பிள்ளைத் தேவர் தஞ்சைப்படைகளை முன் நடத்தி வர இராமநாதபுரம் கோட்டையை முற்றுகையிட்டனர். மன்னர் துல்ஜாஜியும் இந்தப் போரில் நேரிடையாகக் கலந்து கொண்டார். இரு தரப்பினருக்கும் வெற்றி தோல்வி ஏற்படா நிலையில், இந்தப் போர் 30 நாட்கள் நீடித்தன. இதனை முடிவுக்கு கொண்டு வருவதற்காக ஒரு திட்டத்தை இராமநாதபுரம் தரப்பில் வரைந்தனர். திட்டமும் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. அதாவது இராமநாதபுரத்திற்கு மேற்கே உள்ள பெரிய கண்மாய் நீர்த்தேக்கத்தில் நிறைவாக இருந்த நீரைக் கண்மாய்க்கரையைச் சிறிது அகழ்வதின் மூலமாக ஒரு பெரிய உடைப்பை ஏற்படுத்தவும் அதன் வழி மிகுந்த வேகத்துடன் பாய்ந்து சென்ற கண்மாய் நீரை கிழக்கே ஓடிவந்து இராமநாதபுரம் கோட்டையை வடக்கிலும், கிழக்கிலும், தெற்கிலும் சூழ்ந்திருந்த தஞ்சைப் படைகளை முழுமையாக அழித்தது. வேறு வழியில்லாமல் தஞ்சை அரசர் சேதுபதி ராணியுடன் ஓர் உடன்பாடு செய்துகொண்டு ஓரளவு நஷ்டஈட்டையும் பெற்றுக்கொண்டு தஞ்சை திரும்பினார். இது நடந்தது ஜூன் 1771.  ஆற்காடு நவாப்பின் படையெடுப்பு இந்த நிகழ்ச்சிக்கு ஒராண்டு கழித்து ஆற்காடு நவாபின் படைகளும், ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனிக் கூலிப்படைகளும், நவாபின் மைந்தர் உம் தத்துல் உம்ராவும், தளபதி ஜோசப் ஸ்மித்தும் இந்தப் படையெடுப் பிற்கு கூட்டுத்தலைமை ஏற்றனர். திருச்சியிலிருந்து திரட்டி வந்த பெரும்படை 29.05.1772-ஆம் நாள் இராமநாதபுரம் கோட்டையைச் சூழ்ந்தது.[1] தொடர்ந்து மூன்று நாள்கள் ராணி சேதுபதியுடன் பேச்சு வார்த்தை நடத்தியும் ஆற்காடு நவாபிற்குக் கப்பம் கட்ட ராணி மறுத்துவிட்டார். இதனால் சீற்றம் கொண்ட நவாபின் மைந்தர் உம்தத்துல் உம்ரா ஏற்கனவே கோட்டையைச் சுற்றிலும் நிறுத்தப்பட்டிருந்த பீரங்கி வண்டி வீரர்களுக்கு சமிங்ஞை செய்ததும் இராமநாதபுரம் கோட்டை மீது பீரங்கிகள் அக்கினி மழையைப் பொழிந்தன. தொடர்ந்து இரண்டு நாள்கள் போர் நடைபெற்றும் வெற்றி ஈட்டாத எதிர்ப்படைகள் கோட்டையின் கிழக்கு மதிலில் ஏற்பட்ட ஒரு பெரிய வெடிப்பின் வழியாகத் தளபதி ஸ்டிவன்சன் தலைமையில் ஒரு அணி பாய்ந்து சென்றது. இராமநாதபுரம் கோட்டை வாயிலுக்கும் அரண்மனைக்கும் இடைப்பட்ட பரந்த மைதானத்தில் பரங்கியரும், மறவர்களும் கடுமையாகப் போரிட்டனர். முடிவில் 3000 மறவர்களை இழந்த இராமநாதபுரம் ஆக்கிரமிப்பாளர்களுக்கு அடிபணிந்தது. இது நிகழ்ந்தது 03.06.1772. கைது செய்யப்பட்ட ராணி சேதுபதியும் இரண்டு பெண்மக்களும் இளவரசர் முத்துராமலிங்க சேதுபதியும் பாதுகாப்புக் கைதியாக திருச்சிக் கோட்டையில் அடைக்கப்பட்டனர். அங்கு சிறை வாழ்க்கையின்போது ராணியும் அவரது இளைய மகளும் காலமானார்கள்.  நவாபின் ஆட்சி சேது நாட்டில் ஆற்காடு நவாபின் நிர்வாகம் 8 ஆண்டுகள் தொடர்ந்தன. இந்தக் கால கட்டத்தில் ஏற்கனவே தஞ்சை மன்னரது உதவியும் இராமநாதபுரம் சீமையைத் தாக்கிய ஆறுமுகம் கோட்டை மாப்பிள்ளைச்சாமித் தேவர் மைசூர் மன்னர் ஹைதர் அலியின் உதவி பெற்றுச் சேதுபதிச் சீமையில் ஆற்காடு நவாபு நிர்வாகத்தை எதிர்த்துப் போரிட்டார். நவாபின் ஆட்சியில் புகுத்தப்பட்ட அரசாங்க ஆண்டு முறை ஹிஜிரி கணக்கு சேதுநாட்டுப் பணத்திற்குப் பதில் ஆற்காடு வெள்ளி ரூபாய் போன்ற புதிய மாற்றங்களினால் அதிருப்தியுற்ற மக்கள், மாப்பிள்ளைச்சாமித் தேவருடன் இணைந்து எதிர்ப்பு அணியைப் பலப்படுத்தி வந்தனர். இதே காலக்கட்டத்தில் சிவகங்கைச் சீமையையும் ஆக்கிரமித்து அங்கிருந்த மன்னர் முத்துவடுகநாத தேவரை 25.05.1772-ல் காளையார் கோவில் போரில் கொன்று, சீமையின் நிர்வாகத்தை, ஆற்காடு நவாபு ஏற்றிருந்ததால் அங்கும் அதிருப்தி நிலவியது. அடுத்து கி.பி. 1780 ஜூன் மாதம் மைசூர் மன்னர் ஹைதர் அலி வழங்கிய குதிரைப்படைகளின் உதவி கொண்டு மன்னரது விதவை மனைவி இராணி வேலுநாச்சியார் மீண்டும் சிவகங்கையில் மறவராட்சியை ஏற்படுத்தினார்.  இந்தச் சூழ்நிலையில் இராமநாதபுரம் சீமையும் தன்னுடைய கையைவிட்டு நீங்காமலிருப்பதற்காக ஆற்காடு நவாபு ஒரு திட்டத்தினை உருவாக்கி சேதுபதி மன்னரது ஒப்புதலையும் பெற்றார். இதன்படி சேதுபதி மன்னர் ஆற்காடு நவாபின் மேலாதிக்கத்தை ஏற்றுக்கொண்டு ஆண்டுதோறும் அன்பளிப்புத் தொகையாக (பேஷ்குஷ்) ஒரு இலட்சம் ரூபாய் வரை நவாபிற்கு செலுத்தவும் சம்மதித்தார். காலமெல்லாம் திருச்சிக் கோட்டையில் சிறைக்கைதியாக இருந்து சாவதை விட நவாபினது இந்த நிபந்தனையை ஏற்றுக் கொள்ளுவதன் மூலம் சிறை வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டு வந்து விட்டு மீண்டும் சேதுபதி மன்னரான பிறகு நவாபையும், பரங்கியரையும் உறுதியாகவும் இறுதியாகவும் அழித்து ஒழித்து விடலாம் என அந்த இளம் மன்னர் திட்டமிட்டிருந்தார்.  மீண்டும் சேதுபதி மன்னர் ஆட்சி:  பின்னர் சேதுபதி மன்னர் பல விறுவிறுப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டார். சேது நாட்டில் வறட்சி ஏற்படும்போது தஞ்சைச் சீமையிலிருந்து தானியங்களைக் கொள்முதல் செய்து வந்து மக்களுக்கு வழங்குவதற்கும், சேதுநாட்டில் நல்ல அறுவடை ஏற்படும் போது உபரி தானியத்தைப் பக்கத்திலுள்ள இலங்கை நாட்டிற்கும் கேரளத்திற்கும் அனுப்புவதற்கும். ஏற்ற வகையில் கிழக்குக் கடற்கரையில் கிட்டங்கிகளை அமைத்தார். மேலும் கருப்பட்டி, தேங்காய், எண்ணெய் போன்ற அன்றாட வாழ்க்கைக்கு இன்றியமையாப் பண்டங்களைக் கொள்முதல் செய்வதற்கு வியாபாரத் துறை என்ற ஒரு தனி அமைப்பையே உருவாக்கினார். மற்றும் சேதுநாட்டுக் கடலில் கிடைக்கும் சங்குகளைப் படகிலேற்றி வங்காளத்திற்கு எடுத்துச் சென்று அங்கு விற்பனை செய்ய கல்கத்தாவில் ஒரு சேமிப்புக் கிடங்கையும் ஏற்படுத்தினார். அப்பொழுது சேதுநாட்டின் பல பகுதிகளில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக வளர்ந்து வந்த நெசவுத் தொழிலில் சுமார் 650 கைத்தறிகள் சேதுநாட்டின் கிழக்கு, வடக்கு மேற்குப் பகுதிகளில் இயங்கி வந்தன. இவைகளில் பரமக்குடியில் மட்டும் சேது மன்னரது குத்தகைக்கு உட்பட்ட சுமார் 100 கைத்தறிகள் சேதுநாட்டுக்கு வெளியே விரும்பி, வாங்கப்பட்ட (Sea Breeze) போன்ற வகைக் கைத்தறித் துணிகளை உற்பத்தி செய்து வந்தன. இவைகளைப் பிரெஞ்சுக்காரர்களும், டச்சுக்காரர்களும் போட்டியிட்டு வாங்கி காரைக்கால், புதுச்சேரி, பரங்கிப்பேட்டை போன்ற இடங்களுக்கு அனுப்பி வந்தனர். இதனால் சேதுநாட்டில் சேதுபதி நாணயங்களுடன் டச்சுக் காரர்களது நாணயமான போர்டோநோவா, பக்கோடா, பணம் பெருமளவில் சேதுநாட்டின் செலாவணியிலிருந்து நாட்டின் வளமைக்கு வலுவூட்டியது. இந்த நாணயங்களுக்கு ஈடாகச் சேதுநாட்டு நாணயங்களை மாற்றிக் கொள்வதற்குச் சேது மன்னர் ஒரு நாணய மாற்றுச் சாலையையும் ஏற்படுத்தினார். இந்தக் கால கட்டத்தில் இந்த மன்னரிடம், பேஷ்குஷ் தொகையை மாதந்தோறும் பெற்றுக் கொள்ள ஆற்காடு நவாபு கர்னல் மார்ட்டின்ஸ் என்ற பரங்கியை இராமநாதபுரம் கோட்டையில் அவரது தனி அலுவலராக நியமித்திருந்தார். மன்னர் இளம் வயதினராக இருந்ததால் நிர்வாக அனுபவங்களைப் பெறுவதற்குத் தளபதி மார்ட்டின்ஸை நாடினார். அப்பொழுது ஆங்கிலக் கல்விப் புலமை பெற்றிருந்த முத்திருளப்ப பிள்ளை என்பவரை மன்னரது பிரதானியாக பணியாற்ற மார்டின்ஸ் பரிந்துரைத்தார். திருநெல்வேலி மாவட்டத்தில் மிக எளிய குடும்பத்தில் வறுமையில் வாடிய முத்திருளப்ப பிள்ளையின் தாயார் நெல்லை மாவட்டத்தை அடுத்திருந்த சேதுபதிச் சீமையில் உச்சி நத்தம் கிராமத்தில் உள்ள ரெட்டியார் வீட்டுப் பணியாளராக வேலை பார்த்து வந்தார். அந்த ரெட்டியார் முயற்சியில் இளைஞர் முத்திருளப்ப பிள்ளை ஆங்கில மொழியில் மிகுந்த புலமை பெற்றதுடன் பின்னர் சேது நாட்டுப் பிரதானியாக நியமிக்கப்பட்டார். மிகச் சிறந்த ராஜ தந்திரியாக விளங்கினார்.  சீர்திருத்தங்கள்:  இவரது நிர்வாகத்தின்போது இராமநாதபுரம் சீமையின் பெரும் பகுதிக்கும் பிரதானி ஒவ்வொரு கிராமத்திற்கும் நேரில் சென்று அங்குள்ள மண்வளம். நீர் வளம் ஆகியவைகளை ஆய்வு செய்து, அந்த நிலங்களுக்குரிய தீர்வையைப் பணமாக பெறும் முறையை ஏற்படுத்தினார் மற்றும் பராமரிப்பில்லாமல் பழுதுபட்டுப் போயுள்ள ஆலயங்களையும், மடங்களையும் செப்பனிடுவதற்காக அரசாங்கத்திற்குச் செலுத்தப்படுகின்ற தீர்வையில் ஒரு சிறு பகுதியை ஜாரி மகமை என்ற பெயரில் ஒரு பொதுநிதியம் ஒன்றையும் ஏற்படுத்தினார். இராமேஸ்வரம் திருக்கோயிலின் 3வது பிரகார முற்றுப்பெறும் தருவாயில் மிகச் சிறப்பாக அந்தத் திருப்பணியில் ஈடுபட்டதற்காக, அவரது திருஉருவத்தை கீழக்கோபுர வாசலில் நிறுவியுள்ளதை இன்னும் நாம் காணலாம். இதேபோல் இராமநாதபுரத்திற்கு அடுத்து சேதுமன்னர்கள் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்த திருமருதூர் (எ) நயினார் கோவில் ஆலயத்தையும் திருப்பணி செய்வதற்குச் சேதுமன்னர் இவரை நியமித்திருந்தார். அவரும் நாற்பது நாள்கள் நீடித்த அந்தத் திருப்பணியைச் சிறப்பாக முற்றுப்பெறச் செய்ததை அங்குள்ள கல்வெட்டு இன்னும் சாட்சியம் வழங்கிக் கொண்டிருக்கிறது.[2]  இந்தப் பிரதானியாரது நிர்வாகத்தில் உருப்பெற்றதுதான் இன்று மதுரை மாவட்டத்தைச் செழுமைப்படுத்திக் கொண்டிருக்கும் பெரியார் அனைத்திட்டம் ஆகும். சேது நாட்டில் 12 மாதங்களில் பெரும்பாலான பகுதி வறட்சி மிக்கதாக இருப்பதால் இந்தச் சீமையைத் தஞ்சைச் சீமைபோல் நீர்வளம் மிக்கதாகச் செய்யவேண்டும் என்று திட்டமிட்ட சேது மன்னருக்குப் பிரதானி இந்தத் திட்டத்தை வரைந்து கொடுத்தார். இதன்படி மதுரை மாவட்டத்தின் வருச நாட்டின் மலைப்பகுதியில் தோற்றம் பெறும் வைகை ஆறு சில பாறைகளின் இடர்ப்பாடுகளின் காரணமாக வைகையின் வெள்ளம் முழுவதும் கிழக்கு நோக்கி மதுரை வழியாக இராமநாதபுரம் சீமைக்கு வந்தடைவதற்குப் பதிலாக, மேற்கே திசைமாறிச் சென்று அரபிக் கடலில் வீணாகக் கலந்து வந்தது. அதைத் தடுத்து நிறுத்தி வைகை வெள்ளத்தை முழுமையாகச் சேதுநாட்டில் பயன்படுத்திக் கொள்வதுதான் இந்தத் திட்டத்தின் அடிப்படையாகும். ஆனால் காலச் சூழலில் சேதுபதி மன்னரும் சேது நாட்டு அரசராக நீடிக்கவில்லை. கி.பி. 1792-ல் முத்திருளப்ப பிள்ளையும் அவரின் பிரதானியாகப் பணியாற்ற முடியாத துரதிருஷ்ட நிலை. காலம் மாறியது. அதனையடுத்த 100 ஆண்டுகள் கழித்து அந்தப் பெரியார் அணைத்திட்டம் ஆங்கில ஆட்சியில் உருப்பெற்றது.  இந்த மன்னரது ஆட்சி விறுவிறுப்புடன் நடைபெறத் துவங்கியது. இராமநாதபுரத்தை அடுத்துள்ள திருப்புல்லாணியில் ஒரு சிறிய கோட்டை அமைத்து கிழக்குக் கடற்கரையோரப் பகுதியின் பாதுகாப்பைப் பலப்படுத்தினார். அப்பொழுது சேது நாட்டில் வணிகத்துறையில் ஈடுபட்டிருந்த டச்சுக் கிழக்கிந்தியக் கம்பெனியாருடன் நல்ல தொடர்புகளைக் கொண்டிருந்ததால் அவர்கள் மூலம் இராமநாதபுரத்திற்கு கிழக்கே பீரங்கி செய்யும் தொழிற்சாலை ஒன்றை நிறுவினார். இவ்விதம் ஆற்காடு நவாபுடனும் அவரது உதவியாட்களாகிய ஆங்கிலக் கும்பெனியாரையும் அடியோடு சேது மண்ணிலிருந்து அகற்றுவதற்கு நடவடிக்கைகள் எடுக்க முடிவு செய்தார். தளபதி மார்ட்டின்ஸ் ஆற்காட்டு நவாபிற்கும் கும்பெனி கவர்னருக்கும் இரகசிய அறிக்கைகளை அனுப்பி வந்தார்.  இதற்கிடையில் அப்பொழுது சிவகங்கைச் சீமையின் நிர்வாகத்தை இராணி வேலுநாச்சியாருக்குப் பிரதிநிதியாக நேரடியாகக் கவனித்து வந்த மருது சகோதரர்கள் சிவகங்கைக்கும் இராமநாதபுரம் சீமைக்கும் இடைப்பட்ட பகுதியில் நிகழ்ந்த எல்லைப் பிரச்சினைகளைப் பெரிதாக்கி இராமநாதபுரம் சீமைக் குடிமக்களுக்குப் பெருத்த நட்டத்தை ஏற்படுத்தி வந்தனர். மேலும் அப்பொழுது சிவகங்கைச் சீமைக்குச் சொந்தமாயிருந்த தொண்டித் துறைமுகத்தின் வழியாக இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் இராமநாதபுரம் சீமைக்குச் சொந்தமான திருவாடானைச் சுங்கச் சாவடி வழியாகச் சிவகங்கைச் சீமைக்குக் கடந்து செல்ல வேண்டிய நிலை இருந்தது. இராமநாதபுரம் மன்னருக்கு இந்த வகையில் செலுத்தப்பட வேண்டிய ரூ. 15,000/-ஐயும் மருது சேர்வைக்காரர்கள் செலுத்தாமல் அலைக்கழிவு செய்து வந்தனர். இதனால் கோபமுற்ற சேது மன்னர் திருநெல்வேலியிலிருந்து இராமநாதபுரம் சீமை, அருப்புக்கோட்டை, திருச்சுழி வழியாக பார்த்திபனூர் சுங்கச் சாவடியைக் கடந்து சிவகங்கை செல்லும் வரத்து வண்டிகள் அந்தச் சுங்கச் சாவடிக்கு வரி செலுத்தாமல் கிழக்கே, இராமநாதபுரம் வந்து வடக்கே சோழச் சீமைக்குச் செல்லுமாறு ஏற்பாடு செய்தார். இதனால் சிவகங்கைச் சீமைக்கு ஏற்பட்ட வருமான இழப்பை உணர்ந்த சிவகங்கைப் பிரதானிகள் வைகையாற்றிலிருந்து திருப்புவனம், திருப்பாச்சேத்தி வழியாக தெற்கே அபிராமம் முதலிய கண்மாய்களுக்குச் செல்லும் நீர்வரத்தைத் தடை செய்தனர். இதனால் கோபமுற்ற சேதுபதி மன்னர் அபிராமம் சென்று அந்தக் கண்மாய்க்கு வரும் கால்களின் தடைகளை நீக்கி, நீர்வரத்திற்கு ஏற்பாடு செய்தார். இதனை அடுத்து இரு சீமைகளுக்கும் இடையில் பகையுணர்வும் விரோதப்போக்கும் நீடித்து வந்தன. முடிவில் ஆனந்துரை அடுத்த பகுதியில் இரு சீமைப்படைகளும் நேருக்கு நேர் மோதின.[3] இதனையறிந்த கும்பெனிக் கலெக்டரும் நவாபும் இருதரப்பினருக்கும் அறிவுரைகள் வழங்கிப் போர் நடவடிக்கையை நிறுத்துமாறு கேட்டுக் கொண்டனர். நியாய உணர்வினால் உந்தப்பட்ட சேதுபதி மன்னர் போர் நிறுத்தத்திற்கு உடன்படாமல் போரை நீடித்து வந்தார்.  இருவருக்கும் சமரசம் செய்வதற்காக கலெக்டர் பவுனி இருதரப்பினரையும் தொண்டிக்கு அருகில் உள்ள முத்துராமலிங்க பட்டினத்துச் சத்திரத்தில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பினார். சிவகங்கைப் பிரதானிகள் ஏற்றுக் கொண்டனர். சேதுபதி மன்னர் சம்மனைப் புறக்கணித்து விசாரணைக்குச் செல்லவில்லை. இதனால் கும்பெனியாருக்கு மன்னர் மீது கோபம் ஏற்பட்டது.  இதற்கிடையில் கி.பி. 1792-ல் சேதுநாடு எங்கும் கடும் வறட்சி ஏற்பட்டது. இச்சூழ்நிலையை பயன்படுத்திக் கொண்டு கும்பெனியார் சேதுநாட்டில் தானியங்களை விற்பனை செய்வதற்கு முன் வந்தனர். விற்பனையாகும் தானியங்களுக்குச் சுங்க விலக்கு அளிக்குமாறும் கேட்டுக்கொண்டனர். இந்தக் கோரிக்கையையும் சேது மன்னர் புறக்கணித்து விட்டார். இச்சூழலில் கும்பெனியாரைச் சார்ந்து நடந்து கொள்ளுமாறு பிரதானி முத்திருளப்ப பிள்ளை, அடிக்கடி மன்னரை வற்புறுத்தி வந்தார். இதற்கு உடன்படா மன்னர் பிரதானியைப் பதவி நீக்கம் செய்தார். அடுத்து இராமநாதபுரம் சீமையில் உற்பத்தியாகும் கைத்தறித் துணிகள் அனைத்தையும் ஏகபோகமாக கும்பெனியாரே வாங்குதற்கும், கொள்முதல் செய்வதற்கும் மன்னரது அனுமதியைக் கோரினர். அப்போது செயல்பட்ட 650 தறிகளில் 150 தறிகளுக்கு மேலாக மன்னரது நேரடிப்பொறுப்பில் இயங்கி வந்ததாலும், இதனால் சேதுநாட்டிற்கு வருமான இழப்பு ஏற்படும் நிலை இருந்ததாலும் மன்னர் இந்தக் கோரிக்கையையும் மறுத்தளித்து விட்டார். கடைசியாக கும்பெனியார் மதுரை நெல்லைச் சீமைகளில் கொள்முதல் செய்த கைத்தறித் துணிச் சிப்பங்களை தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து கப்பலில் பாம்பன் கால்வாய் வழியாகச் சென்னைக்கு அனுப்பிக் கொண்டிருந்தனர். பாம்பன் துறைமுகத்தில் கும்பெனியார் அவர்களது கப்பல்களுக்கு முன்னுரிமையும் சுங்கச் சலுகையும் பெற முயன்றனர். இந்த முயற்சியையும், மன்னர் நிராகரித்து, வரிசை முறையை அமுல்படுத்தியதால் முன்னுரிமை வழங்க மறுத்தார்.  இவ்விதம் அப்பொழுது தமிழகத்தின் அரசியலில் வாய்ப்பும் வலிமையும் பெற்று வந்த கும்பெனியாரை அவமதிப்புக்குள்ளாக்கிய இந்த மன்னரைத் தீர்த்துக் கட்டுவது என கி.பி. 1794-ல் கும்பெனித் தலைமை முடிவு செய்தது. ஆனால் இந்த ஆண்டிலும் வறட்சி தொடர்ந்ததால் அவர்களது திட்டத்தை அடுத்த ஆண்டு தொடக்கத்திற்குத் தள்ளி வைத்தனர். கி.பி. 1795-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 8-ஆம் நாள் வைகறையில் பாளையங்கோட்டை, கயத்தாறு ஆகிய ஊர்களிலிருந்து வந்த கும்பெனியாரின் பெரும்படை இராமநாதபுரம் கோட்டைக்குள் புகுந்தது. கோட்டையின் பொறுப்பு தளபதி மார்ட்டின்சிடம் இருந்ததால், இந்தப் படை எவ்வித இடையூறும் இல்லாமல் அரண்மனையைச் சுற்றி வளைத்து இரண்டாவது முறையாக மன்னரைக் கைது செய்தது. சிறிதும் எதிர்பாராது நடந்த இந்த நிகழ்ச்சியினால் பெரிதும் ஏமாற்றமடைந்த மன்னர் வெள்ளையரது கட்டளைக்குப் பணிந்து செல்வதைத் தவிர வேறு வழியில்லை. அடுத்தநாள் பாதுகாப்புடன் மீண்டும் திருச்சிக் கோட்டைக்கு அனுப்பப்பட்டு அங்கு சிறை வைக்கப்பட்டார். இராமநாதபுரம் கோட்டைப் பொறுப்பிலிருந்த மார்ட்டின்சும் கலெக்டர் பவுனியும் இராமநாதபுரம் அரண்மனையைக் கொள்ளையிட்டனர்.  ஆங்கிலேய ஆட்சி கும்பெனியாருக்கும் முத்துராமலிங்க சேதுபதிக்கும் இடையில் பகையுணர்வு வளர்ந்து அவர் சிறையில் அடைக்கப்பட்டவுடன் அவரது தமக்கையான மங்களேஸ்வரி நாச்சியார் கும்பெனியாரிடம் சேதுநாட்டு வாரிசு தான் எனக் கூறி தனக்கு சேது நாட்டின் ஆட்சியுரிமையை வழங்குமாறு கேட்டுக் கொண்டார். இதனை வலியுறுத்துவதற்காகத் தனது கணவர் இராமசாமித் தேவருடன் சென்னை சென்று ஆற்காடு நவாபு, கும்பெனி கவர்னர் மற்றும் அவரது அலுவலர்கள் அனைவரையும் சந்தித்து தனது வேண்டுகோளை வலியுறுத்தியும் அதற்காகப் பெருந்தொகையைக் கையூட்டாக வழங்கி அரச பதவியைப் பெறப் பெரிதும் முயன்றார். கும்பெனித் தலைமை மங்களேஸ்வரி நாச்சியாரை சேதுபதியின் அடுத்த வாரிசாக ஏற்றுக் கொண்டபோதிலும் அவருக்கு அதிகார மாற்றம் செய்யாமல் சேதுநாட்டின் நிர்வாகத்தைக்கும்பெனியாரே எட்டு ஆண்டுகள் நடத்தி வந்தனர்.  1. ↑ (மில்டரி கண்சல்ஸ்டேசன்) military Consulstation  2. ↑ கமால் S.M. Dr. சேதுபதி மன்னர் கல்வெட்டுக்கள் - 2002  3. ↑ Military Consultation Vol. No:                                                      ii. இராமன் இல்லாத அயோத்தி   இதற்கிடையில் மன்னர் முத்துராமலிங்க சேதுபதியின் தளபதிகளில் மிகுந்த இராஜ விசுவாமுடைய சித்திரங்குடி மயிலப்பன் சேர்வைக்காரர் என்பவர் மன்னரைத் திருச்சிச் சிறையிலிருந்து தப்புவிப்பதற்கான இரகசிய முயற்சிகளில் ஈடுபட்டார். சித்திரங்குடி என்பது ஆப்பனூர் நாட்டிலுள்ள ஒரு சிறிய கிராமம். இந்த ஊர் எப்பொழுதுமே இராச விசுவாசத்திலும் பராம்பரிய வீர உணர்வுகளுக்கும் பேர் போன ஊர். கி.பி. 1772-ல் இராமநாதபுரம் கோட்டையைப் பிடித்த ஆற்காடு நவாபும் கும்பெனியாரும் சேதுநாட்டை 9 ஆண்டுகள் நிர்வாகம் செய்தபோது நிர்வாகத்திற்குப் பலவிதமான இடைஞ்சல்களை ஏற்படுத்தி அந்தப் பகுதிக்குள் அந்நியர் நுழையாதபடி செய்தனர் அந்த ஊர் மக்கள். அத்தகைய ஊரில், பிறந்தவர்தான் தளபதி மயிலப்பன் சேர்வைக்காரர். சேர்வைக்காரர் என்றால் அரச சேவையில் உள்ள தளபதி என்ற பொருளாகும். இவரது இயற்பெயரும் மயிலப்பன் என்பதல்ல. இவருக்குப் பல ஆண்டுகளுக்கு முன்னால் அந்தப் பகுதியில் பேரும் புகழும் படைத்து வாழ்ந்த மயிலப்பன் என்ற பெருமகன் பெயராலேயே இந்தப் பெயர் இவருக்கு வழங்கப்பட்டு வந்தது.  மயிலப்பனது முயற்சிகள் பலனளிக்காததால் திருச்சியிலிருந்து சேதுநாடு திரும்பியபின் முதுகளத்துரா பகுதி மக்களைத் திரட்டி ஆங்கிலேயருக்கு எதிராகப் போராட்டம் நடத்துவதற்கு ஏற்பாடு செய்தார். இவரது திட்டத்தைப் பின்பற்றிய மறக்குடி மக்கள் கி.பி. 1796இல் முன்பு சேதுபதி மன்னருக்கு வழங்கிய வரி இறைகளை ஆங்கிலக் கும்பெனியாருக்குக் கொடுக்க மறுத்தனர். அடுத்தபடியாக 1797ல் கும்பெனியார், குடிமக்களது நிலங்களைப் புதிய முறையில் நில அளவை செய்யும் முயற்சிகளுக்கு ஒத்துழைக்க மறுத்தனர். இத்தகைய கிளர்ச்சிப் போக்குகளை இராமநாதபுரம் சீமை கலெக்டரான காலின்ஸ் ஜாக்சன் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கினார். இதனால் சிறிது காலம் சோர்வுற்றிருந்த குடிமக்கள் மீண்டும் மயிலப்பன் சேர்வைக்காரரது போதனைகளினால் கும்பெனியாருக்கு எதிராகக் கிளர்ந்து எழுந்தனர்.  சித்திரங்குடி சேர்வைக்காரரின் புரட்சி 1799-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24-ந் தேதி வைகறைப் பொழுதில் மயிலப்பன் சேர்வைக்காரர் தலைமையிலான புரட்சிக்காரர்கள் முதுகளத்தூரிலுள்ள கும்பெனியார் கச்சேரியைத் தாக்கி, அங்கு காவலில் இருந்த கும்பெனிப் பணியாளர்களை விரட்டியடித்து விட்டு அவர்களது ஆயுதங்களை எடுத்தும் சென்றனர். அடுத்து அபிராமத்திற்குச் சென்று அங்குள்ள கச்சேரியையும் கைத்தறிக் கிட்டங்கியையும் தாக்கித் துணிகளைச் சூறை போட்டனர். இந்த நிகழ்ச்சிகளின் தொடர்ச்சியாக அவர்கள் கமுதிக்கும் சென்று கச்சேரியைத் தாக்கியதுடன் பெரிய நெற்களஞ்சியங்களையும் கொள்ளையிட்டனர்.  இந்தக் கிளர்ச்சியினால் முதுகளத்தூர், கமுதி சீமை மக்கள் ஒரு புதிய தெம்புடன் கிளர்ந்து எழுந்ததுடன் கும்பெனியாரைத் துரத்தி விட்டு மீண்டும் சேதுபதி மன்னரது ஆட்சியை ஏற்படுத்தி விடலாம் என நம்பினர். இதனால் அந்தப் பகுதியில் ஆங்காங்கு குடிமக்களிடமிருந்து தீர்வையாகப் பெற்றுச் சேமித்து வைத்திருந்த நெல் கொட்டாரங்கள் அனைத்தையும் மக்கள் கொள்ளையிட்டனர். தகவலறிந்த கலெக்டர் லூசிங்டன் அந்தப் பகுதி நிலவரத்தைத் தெரிந்து கொள்ள இயலாதவாறு செய்திப் போக்குவரத்துகளையும் துண்டித்து விட்டனர். காமன்கோட்டை வழியாக இராமநாதபுரத்திலிருந்து கர்னல் மார்ட்டின்ஸ் அழைத்துச் சென்ற போர் வீரர்களது அணியும் கமுதிக்குச் செல்ல முடியாமல் திரும்பிவிட்டது இதனால் மிகவும் கலவரமடைந்த இராமநாதபுரம் கலெக்டர் பாளையங்கோட்டைக்கு அவசரத் தபால்களை அனுப்பி அங்கிருந்து கும்பெனியார் அணிகள் முதுகளத்துர் பகுதிக்குப் புறப்பட்டு வருமாறு செய்தார். கும்பெனி அணிகளுக்கும். கிளர்ச்சிக்காரர்களுக்கும் கமுதி. கிடாத்திருக்கை, முதுகளத்தூர், கருமல் ஆகிய பகுதிகளில் நேரடியான மோதல்கள் ஏற்பட்டன. 42 நாள்கள் இந்தக் கிளர்ச்சியினால் முதுகளத்துர் கமுதிச் சீமைகள் கும்பெனி நிர்வாகத்திலிருந்து தனித்து நின்றதுடன் கும்பெனித் துருப்புக்களையும் எதிர்த்துப் போராடினார். இந்தக் கிளர்ச்சிகளின் கொடுமுடியாக நடந்த கமுதிக் கோட்டைச் சண்டையில் எதிர்பாரா நிலையில் எட்டையபுர வீரர்களும் சிவகங்கைச் சீமை வீரர்களும் கலந்து ஆங்கிலேயருக்கு உதவியதன் காரணமாக கிளர்ச்சிக் காரர்களுக்குக் கடுமையான சேதமும் தோல்வியும் ஏற்பட்டன. கமுதிக் கோட்டையிலிருந்து வடகிழக்கேயுள்ள கீழ்க்குளம் காடுகள் வரை கிளர்ச்சிக்காரர்களது சடலங்கள் சிதறிக் கிடந்தன. இந்தக் கிளர்ச்சியில் தீவிரப் பங்கு கொண்ட சிங்கன்செட்டி, ஷேக் இபுராஹிம் சாகிபு என்ற அவரது தோழர்கள் கொல்லப்பட்டனர்.  கிளர்ச்சிக்காரர்கள் கை ஓய்ந்ததால் அந்தப் பகுதியில் இயல்பு நிலையை ஏற்படுத்த கும்பெனியார் முயன்றனர். மயிலப்பன் சேர்வைக்காரரைத் தவிர அனைத்துக் கிளர்ச்சிக் காரர்களுக்கும் பொது மன்னிப்பு வழங்கினர். வேறு வழியில்லாமல் மயிலப்பன் சேர்வைக்காரர் மாறு வேடத்தில் சோழநாட்டிற்குச் சென்றார். எட்டு மாதங்கள் கழித்து மயிலப்பன் சேர்வைக்காரர் மறவர் சீமைக்குத் திரும்பினார். அதுவரை கும்பெனியாருக்கு உற்ற தோழர்களாக இருந்த சிவகங்கைப் பிரதானிகள் மருது சேர்வைக்காரர்கள் அப்பொழுது கும்பெனியாருக்கு எதிரான கிளர்ச்சியில் ஈடுபட்டிருந்ததை மயிலப்பன் உணர்ந்தார். அவர்களது வேண்டுகோளின்படி, அவர்களது அணியில் நின்று பாடுபட்டதுடன், பாஞ்சைப் பாளையக்காரர்கள், காடல்குடி, நாகலாபுரம், குளத்தூர் ஆகிய பாளையக்காரர்களது அந்நிய எதிர்ப்புக் கிளர்ச்சிகளுக்கு ஆதரவாகச் செயல்பட்டார். மயிலப்பன் சேர்வைக்காரரது நடவடிக்கைகளையும், அவர் மருது சகோதரர் அணியில் தீவிரமாக ஈடுபட்டதையும் நன்கு புரிந்துகொண்ட கலெக்டர் லூசிங்டன் மயிலப்பன் சேர்வைக்காரரைத் தம்மிடம் ஒப்படைக்கும்படி மருது சகோதரர்களுக்கு தாக்கீது அனுப்பினர். ஏற்கனவே கும்பெனியாரை இறுதியாக எதிர்ப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த மருது சகோதரர்கள் கலெக்டர் உத்திரவை ஒரு பொருட்டாக மதிக்கவில்லை.  மருது சகோதரர்களது இறுதி முயற்சியான காளையார் கோவில் போரில் 02-10-1801 ஆம் தேதி தோல்வியுற்றபின் 24-10-01 இல் தூக்கிலிடப்பட்டனர். அவர்களைச் சார்ந்திருந்த மக்கள் தலைவர்களில் பிரபலமான மீனங்குடி முத்துக்கருப்பத் தேவரையும், சித்திரங்குடி மயிலப்பன் சேர்வைக்காரரையும் பிடிப்பதற்கு தீவிரமான முயற்சிகளில் கும்பெனித் தலைமை இறங்கியது. முத்துக்கருப்பத் தேவர் கைது செய்யப்பட்டதால், தன்னந் தனியாக மயிலப்பன் சேர்வைக்காரர் முதுகளத்துர் கமுதிப் பகுதிகளில் தலைமறைவாகச் சுற்றித் திரிந்தார். அவர் காட்டிக்கொடுக்கப்பட்டு 6.8.1802 இல் அபிராமத்தில் துக்கிலிடப்பட்டார். இவ்விதம் சேதுபதி மன்னரை விடுவிப்பதற்காகச் செய்த முயற்சிகள் பலனளிக்கவில்லை.  இதையெல்லாம் அறிந்த சேதுபதி மன்னர் சென்னைக் கோட்டையி லிருந்தவாறு மிகவும் வேதனைப்பட்டுக் கொண்டிருந்தார். அதன் தொடர்ச்சியாக 23-01-1809 ஆம் தேதி இரவில் மன்னர் காலமானார்.                              iii. தன்னரசு நிலையில் தாழ்ந்த சேதுநாடு   இராமாயண காலம் தொட்டுஇ. தொடர்புள்ளதாகப் பெருமை பெற்றிருந்த சேதுபதி மன்னர்களது தன்னரசு 8.2.1795இல் ஆங்கிலக் கிழக்கிந்திய கம்பெனியாரால் கைப்பற்றப்பட்டு சேதுபதிச் சீமை என்ற தன்னரசு நிலையை இழந்தது. மறவர் சீமையின் மகுடபதிகளாக மட்டுமல்லாமல் தெய்வீகத் திருப்பணிகளுக்கும் தமிழ் வளர்ச்சிப் பணிக்கும் சமுதாயப் பணிகளுக்கும் ஊற்றுக் கண்ணாக விளங்கிய சேதுபதிகளின் ஆட்சி எதிர்பாராத வண்ணம் முற்றுப்புள்ளி பெற்றதால் அந்த மன்னர்களால் தொடக்கம் பெற்றுத் தொடர்ந்த திருப்பணிகள் பல தடைபெற்று நின்றன.  குறிப்பாக இராமேஸ்வரம் திருக்கோயிலில் வடக்கு தெற்கு வாயில்களில் கால்கோள் இடப்பெற்ற இராஜ கோபுரங்கள் முற்றுப்பெறாமல் நின்றுவிட்டன. திரு உத்திர கோசமங்கை திருக்கோயிலும் கிழக்குப் பகுதியின் இரண்டாவது எழுநிலை கோபுரமும் முற்றுப்பெறாமல் அரைகுறையாகக் காட்சியளித்தது மற்றும் அந்தக் கோயிலின் வடக்கு தெற்கு நுழைவாயில்களில் அமைக்கப்பட்ட ராஜ கோபுரங்களும் கால்கோள் இட்ட நிலையிலேயே நின்றுவிட்டன.  இன்னும் தெளிவாகச் சொல்லப் போனால் இராமேஸ்வரம் திருக்கோயில் போன்ற பெரிய சிவாலயங்களில் நடைபெற வேண்டிய அன்றாட பூஜனைகளையும் விழாக்களையும் தொடர முடியாமல் ஆலய நிர்வாகிகள் அவதிப்பட்டனர். இதற்கு எடுத்துக்காட்டாக கி.பி. 1772ல் இராமேஸ்வரம் திருக்கோயிலின் குருக்களும். நயினாக்களும் இராமேஸ்வரம் கோயில் ஆதின கர்த்தரான சேது இராமநாத பண்டாரத்திற்கு எழுதிக் கொடுத்த ஒப்புதல் செப்பேட்டைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். அந்த ஆண்டு ஜூன் மாதம் 3-ம் தேதி முத்து இராமலிங்க விஜய ரகுநாத சேதுபதி மன்னர் முதலில் ஆங்கிலேயர்களால் கைது செய்யப்பட்டு திருச்சிக் கோட்டையில் அடைக்கப்பட்டதால் இராமேஸ்வரம் திருக்கோயில் தொடர்ந்து 3 மாதங்கள் எவ்வித வழிபாடும் இன்றி மூடிக்கிடந்ததைக் குறிப்பிடலாம். திருக்கோயிலை நம்பி இருந்த பலவகைப்பட்ட பணியாளர்கள் குறிப்பாக அட்சகர்கள். ஸ்தானிகர்கள். பரிசாரர்கள், பல்லக்குத் துக்கிகள் அலங்காரப் பட்டர்கள், கைவித்தாளன், பண்டாரம், கோயில் பசுமடம் கணக்குக் காப்பாளன். பெரிய மேளம் என்ற நாதஸ்வரக் குழு, சின்ன மேளம் என்ற நாட்டியக்குழு போன்ற கோயில் பன்னியாளர்கள் அவர்களுக்குச் சேது மன்னர் வழங்கிய காணிகளும் சீவித மானியங்களும் பறிக்கப்பட்டுத் தங்களது வாழ்க்கைக்கு அவைகளையே நம்பியிருந்த அந்தப் பணியாளர்கள் அல்லல் பட்டனர்.  மற்றும் கோயில் விழாக்கள் மன்னரது நேரடியான கவனமும் பொருள் உதவியும் இல்லாமல் பொலிவிழந்த நிலையில் நடத்தப்பட்டன. நாதஸ்வரக் கலைஞர்கள் நாட்டியக் கலைஞர்கள். குழல் வீணை, மத்தளம் ஆகியவைகளைக் கையாளும் கலைஞர்களும் புராணப் பிரசங்கிகளும் தேவரடியார்கள் ஆதரவின்றித் தவித்தனர். இவ்விதம் மக்களைப் பல வகைகளிலும் இடர்ப்பாடு அடையச் செய்த அந்நியர் ஆட்சி தொடருவதற்குக் காலம் கை கொடுத்தது என்றால் அதனைத் தவிர்ப்பதற்காக எழுந்த மக்கள் கிளர்ச்சிகளும் ஆயுத பலத்தால் அடக்கி ஒடுக்கப்பட்ட பிறகு சேதுநாட்டிற்கு ஏற்பட்ட அவலத்தைக் காலத்தின் கட்டாயம் என்று அடிபணிந்து மக்கள் அடங்கிச் செல்வதைத் தவிர வேறுவழியில்லை.                  iv. சேது மன்னர்களது நிர்வாகம்   தெளிவான வரலாற்றுச் சான்றுகளுடன் சேது மன்னர்களது ஆட்சியின் மாட்சி பற்றி கி.பி. 1600 முதல் கி.பி. 1795 வரையான காலகட்டத்திற்குரிய செய்திகள் நமக்குக் கிடைத்துள்ளன. இவைகளிலிருந்து சேது மன்னர்களது நாட்டின் பரப்பு வடக்கே திருவாரூர் சீமையிலிருந்து தெற்கே திருநெல்வேலி சீமையின் வடபகுதி வரை அமைந்திருந்தது என்பதை அறிய முடிகிறது. கி.பி. 1645 - 1678 வரை அரசோச்சிய மிகச் சிறப்பான மன்னராக திருமலை ரெகுநாத சேதுபதி காணப்படுகிறார். ஆனால் அவரது நிர்வாக முறை பற்றிய செய்திகள் கிடைத்தில. கி.பி. 1713-க்கும் கி.பி. 1725க்கும் இடைப்பட்ட காலவழியில் சேதுபதி பீடத்திலிருந்த முத்து விஜய ரகுநாத சேதுபதி நிர்வாகத் துறையில் ஆற்றிய பணிகளை இராமநாதபுரம் சமஸ்தான வரலாறு தெரிவிக்கின்றது. நிர்வாக நலனுக்கு ஏற்றவாறு சேது நாட்டை இந்த மன்னர் 72 இராணுவப் பிரிவுகளாக அமைத்தார் என்பதும், குடிமக்களிடம் இருந்து வரிகளை வசூலிப்பதற்காகவும், வசூல் கணக்குகளைப் பராமரிக்கவும், மதுரைச் சீமையிலிருந்து வேளாளப் பெருமக்களை வரவழைத்துச் சேதுநாட்டில் கணக்கர்களாக நியமித்தார் என்பதும் தெரிய வருகிறது.[1] அவர்கள் நாட்டுக் கணக்கு என்று அழைக்கப்பட்டனர். ஆனால், நிர்வாகத்தைச் செம்மைப்படுத்திய மன்னர் முத்துராமலிங்க விஜயரகுநாத சேதுபதி என்பதுதான் உறுதியான செய்தியாக உள்ளது.  அறிவும், திறனுமிக்க இந்த மன்னரது அமைச்சர் முத்து இருளப்ப பிள்ளை (பிரதானி) ஊர்தோறும் சென்று குடிமக்களது நிலங்களின் தன்மை, நீராதாரம் ஆகியவைகளைக் கணக்கில் கொண்டு குடிகள் அவர்களது நிலத்திற்குச் செலுத்த வேண்டிய தீர்வையை நிர்ணயம் செய்தார். இதற்காக இவர் சேது நாட்டின் நிலத்தை நஞ்சை புஞ்சை, மானாவாரி, பொட்டல் என்று தரவாரியாகப் பிரிவு செய்தார். மற்றும், அப்பொழுது வழக்கில் இருந்த பண்டமாற்று முறைப்படி குடிகள் தங்களது தீர்வையை விளைப்பொருளாகச் செலுத்துவதற்குப் பதிலாக அவைகளை சேதுநாட்டு நாணயமாகச் செலுத்தலாம் என்ற முறையையும் ஏற்படுத்தினார். அப்பொழுது சேதுநாட்டில் மின்னல் பணம், சுழிப்பணம், காசு என்ற நாணயங்கள் வழக்கில் இருந்தன என்பதும் அவைகளைப் பொறிக்கக்கூடிய நாணயச் சாலைகள் இராமநாதபுரத்திலும், இராமேஸ் வரத்திலும் இருந்தன என்று தெரிகிறது. இந்த நிலங்களைக் குடிகள் அவர்களே உழுது, வித்திட்டுக்களை பறித்து, வேளாண்மை செய்து வந்தனர். அரசரின் அலுவலர்கள் அறுவடையின் போது களத்துமேட்டில் இருந்து அறுவடையான கதிரடிப்பைக் கண்காணித்து, மொத்தத்தில் கிடைக்கும் தானியத்தின் மதிப்பை அளவிட்டனர். இவருக்கு உதவியாக அளவன், பொலிதள்ளி என்ற உதவியாளர்கள் பணிபுரிந்தனர். மொத்த விளைச்சலில் குடிமக்களது செலவுகளையும், களத்துமேட்டில் அளந்து கொடுக்கப்படும் களத்துப் பிச்சை என்ற அன்பளிப்புத் தானிய அளவினையும் நீக்கிவிட்டு, எஞ்சியுள்ள மணிகளை அளவன் மூலம் அளந்து சமமாகப் பங்கிட்டு, ஒரு பகுதி மன்னருக்கும், மற்றொரு பகுதி சம்பந்தப்பட்ட குடிமகனுக்கும் வழங்கப்பட்டது. மன்னரது பங்காகப் பெறப்பட்ட தானியத்தை கிராமங்களுக்கிடையில் ஆங்காங்கு அமைக்கப்பட்டிருந்த ‘சேகரம் பட்டறை' என்ற கிடங்குகளில் சேகரித்து வைத்தனர்.  மற்றும், இந்த விளைச்சலுக்கான தீர்வையாகப் பெற்ற தானியங்களைத் தவிர கிராமக் குடிமக்களிடம் இருந்து கத்திப்பெட்டி வரி, சீதாரி வரி, நன்மாட்டு வரி, சாணார் வரி, வரைஒலை வரி, தறிக்கடமை என்ற வரி இனங்களும் குடிமக்களது தொழிலுக்கு ஏற்ற வகையில் வசூலிக்கப்பட்டு வந்தன. இவை தவிர ஆங்காங்கே சில்லறையாக விற்பனை செய்யப்படும் தானியங்களுக்கு கைஎடுப்பு, அள்ளுத்தீர்வை (ஒரு கையால் அள்ளுதல், இரண்டு கைகளாலும் அள்ளுதல்) என்ற வரிப்பாடுகளும் இருந்து வந்தது தெரிகிறது.  பெரும்பாலும், மழைப்பெருக்கினால் கிடைக்கும் நீரினைத் தேக்கங்களில் சேமித்து வைத்து அவைகளை முறையாக மடை அல்லது கலுங்கு வழியாகவும், வாய்க்கால்கள் மூலமாகவும் விளைநிலங்களுக்குக் கிடைக்குமாறு செய்யப்பட்டு வந்தது. முத்துராமலிங்க விஜயரகுநாத சேதுபதியின் ஆட்சிக்காலத்தில், (கி.பி. 1792-ல்) வைகை நதியிலிருந்து வரத்துக்கால்கள் மூலமாக அபிராமம் கண்மாய்க்கு வரப்பெறுகின்ற வெள்ளத்தைச் சிவகங்கைப் பிரதானிகள். தடை செய்தனர் என்ற செய்தியினை அறிந்த சேது மன்னர் தமது வீரர்களுடன் விரைந்து சென்று அபிராமம் கண்மாய்க்கு வருகின்ற கால்களின் அடைப்புக்களை அகற்றி நீர்ப்பாய்ச்சலுக்கு உதவினார் என்ற செய்தி வரலாற்றில் பதிவு பெற்றுள்ளது. இதில் இருந்து சேது மன்னர்கள் தமது நாட்டுக் குடிமக்களது விவசாயத் தொழிலில் நேரடியாக எவ்விதம் கவனம் செலுத்தினர் என்பதை அறிய முடிகிறது!  இந்த மன்னரது முன்னவர்கள் குடிகளது வேளாண்மைத் தொழிலுக்கு உதவுவதற்காகப் பல புதிய கண்மாய்களையும். நீர்வரத்துக்கால்களையும் அமைத்து உதவிய செய்திகள் பல உள்ளன. கூத்தன் சேதுபதி காலத்தில் வைகையாற்றின் நீரினை வறட்சி மிக்க பரமக்குடி, முதுகளத்தூர் பகுதிக்குக் கொண்டு செல்வதற்காக அமைக்கப்பட்ட வாய்க்கால் ஒன்று இன்றும் கூத்தன்கால் என்ற பெயருடன், பயன்பட்டு வருகின்றது. குண்டாற்று நீரினைக் கமுதிக்கு அருகிலிருந்து திசை திருப்பி முதுகளத்தூர் பகுதியின் கன்னி நிலங்களைக் கழனிகளாக மாற்றுவதற்கு முத்து விஜயரகுநாத சேதுபதி மன்னர் உதவியதையும், சுமார் 30 கல் நீளமான அந்தக் கால்வாய் இன்றும், ரெகுநாத காவேரி என்ற பெயரில் பயன்பட்டு வருகிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கவை.  இவ்விதம், ‘குடி உயர கோல் உயரும்’ என்ற முதுமொழிக்கு ஒப்ப குடிகளும் சேது மன்னரும் வளமையான காலத்தில் வாழ்ந்து வந்ததால் உள்நாட்டு வணிகம் தழைத்தது.  இவ்விதம் சேது மன்னர்களது அக்கரையினால் சேதுநாட்டின் வேளாண்மைத் தொழில் சிறந்து இருந்தது என்பதை அறிய முடிகிறது. இராமநாதபுரம் சமஸ்தான மெனியூவலின்படி வறட்சியும், பற்றாக்குறையும், சேது நாட்டுக் குடிமக்களை வாட்டி வந்த அந்தக் காலத்தில் அவர்கள் மிகச் சிறப்பாக வேளாண் தொழிலில் ஈடுபட்டு இருந்தனர் என்பதை அறிய வியப்பாக உள்ளது. ஏனெனில் சாதாரணமாக விளையக்கூடிய நெல் ரகங்களான உய்யக் கொண்டான், உருண்டைக் கார், போன்ற வகைகளுடன் மிகச்சிறந்த சம்பா நெல் ரகங்களும், சேதுபதி சீமையில் உற்பத்தி செய்யப்பட்டன என்பதைக் கீழே கண்ட பட்டியலின் மூலம் அறிந்து கொள்ளலாம்.[2]  சேதுபதி சீமையில் விளைந்த நெல் ரகங்கள் 1. . சம்பா  1. . சரபுலி சம்பா  1. . ஈர்க்கி சம்பா  1. . கெருடம் சம்பா  1. . சிறுமணியன்  1. . வரகுசம்பா 7. வெள்ளகோடி   8. தில்லைநாயகம்   9. வெள்ளை மிலகி   10. பாலுக்கினியம்   11. கவுனிசம்பா   12. கொம்பன் சம்பா   13. சிரகி சம்பா   14. மாப்பிள்ளை சம்பா   15. கல்மணவாரி   16. மானாவாரி   17. வெள்ளை மானாவாரி  நாட்டு நெல் 18. பணமுகாரி  19. முருங்கன்  20. நரியன்  21. வெள்ளைக் குருவை - வருடம் முழுவதும்  22. கருப்புக் குருவை -  23. மொட்டைக் குருவை -  24. செங்கனிக் குருவை -  சேதுநாட்டுக் கைத்தறித் துணியும், தானியங்களும், எதிர்க் கரையிலுள்ள இலங்கைக்கும், வடக்கே புதுவை மாநிலத்திற்கும் பிரெஞ்சு, டச்சு வணிகர்களால் எடுத்துச் செல்லப்பட்டன. மேலும் சேதுநாட்டின் முத்துக்கள், சங்குகள் தேவிபட்டினம் துறைமுகம் வழியாக வங்காளத்திற்கும் மற்ற வட மாநிலங்களுக்கும் அனுப்பப்பட்டு வந்தன. கேரளத்து மிளகும், தேங்காயும் சேரநாட்டில் பயன்படுத்தப்பட்டதுடன், கீழக்கரை வணிக வேந்தர் சீதக்காதி மரைக்காயரது கப்பல்கள் தொலைதுரத்திலுள்ள கம்போடியா, சுமத்திரா, மலேயா நாடுகளிலிருந்து, சந்தனம், செம்பு, அந்த நாட்டுத் துணிகள், கருவாய்ப்பட்டை, ஏலம், கிராம்பு ஆகிய பொருட்களைச் சேதுநாட்டு கீழக்கரைத் துறைமுகத்திற்குச் சுமந்து வந்து சேர்த்தனர். வள்ளல் சீதக்காதி மரைக்காயர் 1796-ல் சென்னைக் கோட்டை கவர்னருக்கு வரைந்த மடல் ஒன்றிலிருந்து மேலே சொன்ன பொருட்களைச் சந்தைப் படுத்துவதற்காக பார்வதிசேகர நல்லூர் என்ற பார்த்திபனூரில் பெரும் சந்தை ஒன்று கூடியது என்பது புலனாகின்றது.  இவ்விதம், சிறப்பான வேளாண்மையினாலும் வளமான கடல் வணிகத்தினாலும், சேது மன்னர்களது கருவூலம் நிரம்பியது. இதன் காரணமாக சேது மன்னர்கள் இராமேஸ்வரம் போன்ற ஊர்களில் கோவில் கட்டுமானப் பணிகளைச் சிறப்பாக இயற்றுவதற்கும், சேது மார்க்கத்திலும் பிற பகுதிகளிலும், அன்ன சத்திரங்களையும் திருமடங்களையும் அமைத்துப் பராமரிப்பதற்கும் எளிதாக இருந்தது என்றால் மிகையாகாது. சேது மன்னர்களது நிர்வாகத்தில் கி.பி. 18-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஆற்காட்டு நவாப்பின் தொடர்பு ஏற்பட்டதால் அமில்தார். மிட்டாதார். சம்பிரிதி என்ற வட்டார வட்ட அலுவலர்களும் நியமனம் பெற்றனர். அலுவலகங்களில் சிரஸ்த்ததார், பேஸ்க்கார், பொக்கிஷதார் என்ற அலுவலர்களும் நியமிக்கப்பட்டனர். பாரசீக மொழியில் சேது மன்னருக்கும், நவாப்பிற்கும். ஆங்கிலேயருக்கும் இடையில் கடிதப் போக்குவரத்துக்கள் கையாளப்பட்டன என்பதை கி.பி. 1795ஆம் ஆண்டு ஆவணம் ஒன்று தெரிவிக்கின்றது. மேலும், நிர்வாகத்தில் கிஸ்தி. பேஷ்குஷ், வஜா, ஜமாபந்தி, வாயிதா தாலூகா, கஸ்பா, மிக்டா, பசலி, கோஸ்பாரா போன்ற பாரசீகச் சொற்கள் பயன்படுத்தப்பட்டு வந்தன.  ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியாரது தலையீடு ஏற்படும் வரையில் சேது மன்னர்களது நிர்வாகம் சிறப்பாக நடைபெற்றது புலனாகின்றது. ஆங்கிலேயரது நிர்வாகத்தில் குடிமக்களுடனான தொடர்புகள் சேது மன்னர் காலங்களைப் போன்று நெருக்கமாக இல்லாவிட்டாலும், அவர்களது கடிதங்களிலும், பதிவேடுகளிலும், பாரசீகமொழிச் சொற்கள் தொடர்ந்து வந்துள்ளன.    1. ↑ Raja Ram Rao.T-Manual of Ramnad Samasthanam (1891) pg 236  2. ↑ Raja Ram Rao.T - Manual of Ramnad Samasthanam (1891) Page 48            இயல் - VIII i. சேதுபதி மன்னரது நடைமுறைகள்   பொதுவாகச் சேதுபதி மன்னர்கள் இராமநாதபுரம் அரண்மனையில் தங்கியிருக்கும் போது நாள்தோறும் காலையிலிருந்து மாலை வரை பல அலுவல்களில் ஈடுபட்டு வந்தனர். வைகறையில் எழுந்த பிறகு சில மங்கலப் பொருட்களைக் காண்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். அடுத்து ராஜேஸ்வரி அம்மன் கோயிலில் வழிபாட்டை முடித்துக் கொண்ட பிறகு சிறிது நேரம் நாதஸ்வர இசையை ரசிப்பதையும் வழக்கமாகக் கொண்டிருந்தனர். பின்னர் அரண்மனை தென்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த விளையாட்டு மேடையில் முளகு செட்டிகள் என்று அழைக்கப்பட்ட மல்லர்களின் மற்போரினைக் கண்டு களிப்பது உண்டு. சில மன்னர்கள் அங்கு குழுமியிருந்த சிறந்த வீரர்களுடன் வாள் பயிற்சியும் செய்து வந்தனர். மாளிகை திரும்பிய பின்னர் காலைக் கடன்களை முடித்து விட்டுச் சிறிது நேரம் அமர்ந்து வீணை போன்ற வாத்திய இசைகளைக் கேட்டு மகிழ்வதும் உண்டு. மன்னர் முத்து இராமலிங்க விஜய ரகுநாத சேதுபதி வயலின் இசையைக் கேட்பதற்காக மேல்நாட்டு கலைஞர் ஒருவரைப் பணியில் அமர்த்தி இருந்தார் என்று குறிப்பு ஒன்றில் காணப்படுகிறது. இந்த மன்னருக்கு அழகு மிக்க பொருள்களில் ஈடுபாடு இருந்ததால் மரத்தினால் பல பொருட்களைச் செய்வதற்கு மேல்நாட்டுத் தச்சர் ஒருவரைப் பணியில் அமர்த்தி இருந்தார் என்ற செய்தியும் கிடைத்துள்ளது.  இதனைப் போன்றே மன்னர் பாஸ்கர சேதுபதி காலத்தில் பராமரிக்கப்பட்டு வந்த அரண்மனை மிருகக் காட்சி சாலையைக் கண்காணிப்பதற்கும், மிருகங்களுக்குப் பயிற்சி அளிப்பதற்கும் ஒரு போர்த்துகீசியப் பரங்கியைக் காப்பாளராக நியமித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் இராமலிங்க விலாசம் அரண்மனையில் அமர்ந்து பிரதானி தளகர்த்தருடன் நாட்டு அரசியல் நிலை பற்றிக் கலந்து ஆலோசிப்பதை முறையாகக் கொண்டிருந்தனர். இந்தக் கலந்துரையாடல்களில் எட்டப்படும் கருத்துக்களை வரைவதற்காக ஆங்கில எழுத்தர் ஒருவரும் பாரசீக முன்சி ஒருவரும் நியமனம் பெற்றிருந்தனர் என்ற செய்தி முத்துராமலிங்க விஜய ரகுநாத சேதுபதி மன்னரது ஆவணம் ஒன்றில் காணப்படுகின்றது. இந்த அலுவல்கள் முடிந்தவுடன் இராமேஸ்வரம், திருப்புல்லாணி, திரு உத்திரகோசமங்கை, திருமருதூர் ஆகிய திருக்கோயில்களில் இருந்து தீர்த்தங்கள் கொண்டு வந்து மன்னருக்கு வழங்குவதற்காகச் சில பிராமணர்களும் நியமனம் பெற்றிருந்தனர். இந்த நிகழ்வுகளுக்குப் பிறகு சேது நாட்டின் பல பகுதிகளிலிருந்து மன்னரைச் சந்திப்பதற்காக வருகின்ற நாட்டுத் தலைவர்களையும், டச்சு நாட்டு, ஆங்கில நாட்டு அரசப் பிரதிநிதிகளையும் சந்தித்து உரையாடுவது சேது மன்னர்களது வழக்கமாக அமைந்து இருந்தன.  இந்தச் செய்திகளெல்லாம் இராமநாதபுரம் அரண்மனையில் பல ஆவணங்களிலும் சென்னையில் உள்ள தமிழ்நாட்டு ஆவணக் காப்பக ஆவணங்களிலும் காணப்படுகின்றன.                    ii. அரண்மனையும் ஆவணங்களும் இராமநாதபுரம் அரண்மனை மேலே விவரிக்கப்பட்ட வரலாற்றின் நாயகர்களான சேது மன்னர்களும் ஜமீன்தார்களும் தங்களது தலைமையிடமாகவும் இருப்பிடமாகவும் அமைந்திருந்தது இராமநாதபுரம் கோட்டைக்குள் அமைந்துள்ள அரண்மனையாகும்.  இராமநாதபுரம் கோட்டை முதலில் மண்ணால் அமைக்கப்பட்டு இருந்தது என்ற தொன்மையான செய்தி கி.பி. 12ஆம் நூற்றாண்டில் மதுரை மண்டலத்தின் மீது படையெடுத்து வந்த இலங்கைப் படையெடுப்பினைப் பற்றிய இலங்கை வரலாற்று நூலில் காணப்படுகிறது.[1] இந்தக் கோட்டை கி.பி. 1678 வரையான காலகட்டத்தில் போகலுரைத் தலைமையிடமாகக் கொண்டிருந்த சேது மன்னர்கள் சில காலம் இதனைப் பயன்படுத்தினர். இதற்கு ஆதரவாக இராமநாதபுரம் தென்மேற்கு மூலையில் கூத்தன் சேதுபதியினால் அமைக்கப்பட்ட கூரிச்சாத்தனார் ஆலயத்தையும் தளவாய் சேதுபதி என்ற இரண்டாம் சடைக்கன் சேதுபதி அமைத்த சொக்கநாத கோயிலையும் அரண்மனையின் மையப் பகுதி திருமலை ரெகுநாத சேதுபதி அமைத்த இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தையும் குறிப்பிடலாம். இந்த மண் கோட்டையையும் இதனுள் அமைந்திருந்த அரண்மனையையும் அகற்றிவிட்டு இராமநாதபுரம் கோட்டையையும் அரண்மனையையும் அமைத்தவர் ரெகுநாத கிழவன் சேதுபதி ஆவார். இந்தக் கற்கோட்டையைப் பின்னால் வந்த சேது மன்னர்களும் ஜமீன்தாரர்களும் பயன்படுத்தி வந்துள்ளனர். இவைகளை அமைக்க பெரிதும் உதவியவர் வள்ளல் சீதக்காதி மரைக்காயர் என்ற கீழக்கரை வணிக வேந்தர் ஆவார் என்ற செய்தி இராமநாதபுரம் மேனுவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.  இராமநாதபுரம் கோட்டை ஒரே ஒரு தரை வாயிலுடன் செவ்வக வடிவில் 27 அடி உயரமும் 5 அடி அகலமும் கொண்ட கற்சுவர்களால் அமைக்கப்பட்டது. இராமநாதபுரம் அரண்மனையில் சேது மன்னரும் அவரது அரச பிராட்டிகளும் தங்குவதற்கு ஏற்ப பல அறைகள் கொண்ட மண்டபங்களையும் சேது மன்னர் கொலு வீற்றிருப்பதற்கான அத்தாணி மண்டபத்தையும், ஆயுதச் சாலையையும் அமைத்ததுடன் இராமநாதபுரம் அரண்மனையின் அன்றாட அலுவல்கள் எவ்விதம் நடக்க வேண்டும் என்பதற்கான வரையறைகளையும் சீதக்காதி மரைக்காயர். மன்னருக்கு வகுத்துக் கொடுத்தார். மேலும் மன்னர் நீராடுவதற்கு என்று அத்தாணி மண்டபத்தின் வடபகுதியில் நீராடுவதற்கான நீச்சல் குளம் ஒன்றையும் அமைத்து இருந்தார். இராமநாதபுரம் நகருக்கான குடிநீர் தேக்கமான முகவையூரணியிலிருந்து இந்த நீச்சல் குளத்திற்கு நீர் வசதி பெறுவதற்கான ஏற்பாடுகளையும் செய்திருந்தார். ஜமீன்தார்களின் ஆட்சியின் பொழுது இந்த நீச்சல் குளம் பயனற்றதாகச் செய்யப்பட்டது. அண்மைக்காலம் வரை அந்தப் பகுதி பூப்பந்து விளையாடும் இடமாக இருந்து வந்தது. கி.பி. 1772-ல் ஜூன் மாதம் 3-ஆம் தேதி இராமநாதபுரம் அரண்மனையைக் கைப்பற்றிய ஆங்கில தளபதி ஜோசப் ஸ்மித் இந்த அரண்மனையின் அழகினைத் தமது அறிக்கையில் பதிவு செய்திருந்தார். அவரைப் போன்றே கி.பி. 1796-ல் இங்கு வருகைதந்த சென்னை தளபதி ஜெனரல் பேட்டர்சன் இராமநாதபுரம் அரண்மனையின் அமைப்பு பற்றிய முழு விவரங்களையும் தமது பயணக் குறிப்பில் வரைந்து வைத்துள்ளார்.[2][3]  ஜமீன்தார்களது ஆட்சியில் இந்த அரண்மனையின் நுழைவாயிலை ஒட்டிய இரு பகுதிகளிலும் சிற்சில மாற்றங்கள் மட்டும் செய்யப்பட்டன.  மன்னர் பாஸ்கர சேதுபதி அவர்கள் காலத்தில் இராமலிங்க விலாசம் அரண்மனையை அடுத்து வட பகுதியில் ஒரு சிறிய மிருகக்காட்சி சாலையையும் அமைத்துப் பொதுமக்கள் அதனைக் கண்டு களிக்கச் செய்யப்பட்டது. அந்த மிருகக் காட்சி சாலையில் மான்கள், புலி, மலையாடுகள் இருந்த விபரம் அவரது 1893-ஆம் ஆண்டு நாட்குறிப்பிலிருந்து தெரிய வருகிறது. இவரது மைந்தரான இராஜ ராஜேஸ்வர முத்து ராமலிங்க சேதுபதி இராமலிங்க விலாசத்தின் கிழக்கே உள்ள அரண்மனை மதிலை அகற்றி விட்டு ஒரு அழகிய புதிய நுழைவாயில் ஒன்றை அமைத்தார். இன்றும் அந்த வாயில் ‘போலீஸ் கேட்” என்ற பெயருடன் பயன்பட்டு வருகிறது. இந்த மன்னர் இராஜ ராஜேஸ்வரி ஆலயத்திற்கு மேற்கிலும் அந்தப்புரத்திற்கு கிழக்கிலும் இடைப்பட்ட இடத்தில் கல்யாண மஹால் என்ற புதிய கட்டிடத்தையும் அதற்கு எதிரே சரஸ்வதி மகால் என்ற நூலகக் கட்டிடத்தையும் அமைத்தார். இவைகளைத் தவிர இந்த அரண்மனைப் பகுதியில் ஜமீன்தாரர் ஆட்சியில் எந்த அமைப்புகளும் நிர்மாணிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  ஆவணங்கள் ஏறத்தாழ 12-ஆம் நூற்றாண்டு முதல் தொடர்ந்து வந்துள்ள சேது மன்னர்களது ஆட்சி பற்றிய அதிகாரப்பூர்வமான ஆவணங்கள் இல்லை என்றே சொல்லலாம். ஆதலால் கள்ளர் சீமை கானாட்டு திருமெய்யத்திலும், பின்னர் சாலை கிராமத்தை அடுத்த விரையாத கண்டனில் கி.பி. 16-ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதி வரை நீடித்த இந்த மன்னர்களது ஆட்சியினைப் பற்றிய ஆவணங்கள் ஏதும் கிடைக்கப் பெறவில்லை. கி.பி. 17-ஆம் நூற்றாண்டு முதல் 18-ஆம் நூற்றாண்டு வரை போகலூரிலும், இராமநாதபுரத்திலும் நிலைத்திருந்த சேது மன்னர்களது ஆட்சியைப் பற்றிய விவரங்களை அறிவதற்குக் கீழ்கண்ட ஆவணங்கள் மட்டும் பயனுள்ளவையாக அமைந்து விளங்குகின்றன.  1. . Old Historical Manuscripts by Taylor Vol II (1841) 2. . Manual of Madura Country by A. Nelson (1861) 3. . Manual of Ramnad Samasthanam by Raja Ram Rao (1891) 4. . இராமநாதபுரம் நிலமான்ய ஒலைக் கணக்கு (1810)  5. . Tamil Nadu Archives Records from 1772 AD 6. . Diary of General Patterson (1796) - London Museum 7. . இராமப் பையன் அம்மானை - தஞ்சை சரசுவதி மகால் பதிப்பு  8. . கான்சாயபு சண்டை - (நாட்டுப்புற இலக்கியம்)  9. . Records of outer East India Company (Calonial Archives the Hague) 10. Record of English East India Company 11. Topographical list of inscriptions 1906, Vol II by K.V. Rangacharya இவை தவிர கி.பி. 1604 முதல் 1792 வரை சேது மன்னர்கள் வழங்கிய சர்வமான்ய சாசனங்களான செப்பேடுகளும் கி.பி. 1622 முதல் 1898 வரையிலான கால அளவில் சேது மன்னர்கள் வெட்டுவித்த கல்வெட்டுகளும் ஆகும். இந்த ஆவணங்களில் சேது மன்னர்களது ஆட்சிக் காலத்தை அறுதியிட்டுத் தெரிவிக்கவில்லை. எடுத்துக்காட்டாக திருமலை ரெகுநாத சேதுபதியின் ஆட்சிக்காலம் கி.பி. 1674லும், கி.பி. 1678லும் நிறைவுபெற்றதாக சில ஆசிரியர்கள் குறிப்பிட்டு உள்ளனர். உண்மையில் அவரது ஆட்சிக்கால முடிவு கி.பி. 1676 ஆகும். மேலும் இந்த மன்னர் சேதுபதி பட்டம் சூட்டிக் கொண்டபோது கூத்தன் சேதுபதியின் மகன் தம்பித் தேவர்க்காக மதுரை மன்னர் திருமலை நாயக்கர் தலையிட்டுச் சேது நாட்டை மூன்று பிரிவுகளாகப் பிரிக்குமாறு வலியுறுத்தி வந்தார். இதன் காரணமாகப் பிரிவினை செய்யப்பட்ட சேது நாட்டில் காளையார் கோவில் பகுதியைத் தம்பித் தேவர் தலைமையிடமாகக் கொண்டு சில காலம் ஆட்சி செய்துள்ளார். இதனைப் போன்றே இன்னொரு பகுதியான அஞ்சுகோட்டை பகுதியை நாராயணத் தேவர் மகன் தனுக்காத்த தேவர் சில காலம் ஆட்சி செய்ததையும். மேலே கண்ட நூல்கள் குறிப்பிடத் தவறிவிட்டன.  இன்னொரு செய்தி, ரெகுநாத கிழவன் சேதுபதி கி.பி. 1710-ல் மரணமடைந்ததும் அவரது தங்கையின் மகனான திருவுடையாத் தேவர் என்பவர் சேதுபதிப் பட்டத்தினைப் பெற்றார் என அனைத்து நூல்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆனால் திருவுடையாத் தேவர் என்ற முத்து விஜய ரகுநாத சேதுபதி கி.பி. 1710-ல் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் அவரது தமையனார் முத்து வயிரவநாத சேதுபதி கி.பி. 1710-லேயே சேதுநாட்டின் ஆட்சி உரிமையைப் பெற்றிருந்தார் என்பதை அவரது கி.பி. 1710. கி.பி. 1712 ஆண்டைச் சேர்ந்த செப்பேடுகள் தெரிவிக்கின்றன. ஆதலால் முத்து விஜய ரகுநாத சேதுபதி கி.பி. 1713-ல் தான் சேது நாட்டின் மன்னராக முடிசூட்டிக் கொண்டார் என்பது தெளிவாகிறது. கி.பி. 1713-ல் இந்த மன்னர் வழங்கிய முதல் செப்பேடும் இதை உறுதி செய்கிறது. இந்த மன்னரது மரணம் பற்றிய சரியான ஆண்டு இந்த நூல்களில் காணப்படவில்லை. இதனைப் போன்றே கிழவன் சேதுபதியின் மகனான பவானி சங்கரத் தேவர் கி.பி. 1725-ல் இராமநாதபுரம் கோட்டையைப் பிடித்து கி.பி. 1727 வரை ஆட்சி செய்ததைப் பற்றிய செய்திகளும் இதுவரை வெளியிடப்படவில்லை. இந்த மன்னர் திருக்கோயில்களுக்கு வழங்கிய தானங்களில் கி.பி. 1727-ல் நயினார் கோயிலுக்கு வழங்கப்பெற்ற அண்டகுடித் தானம் பற்றிய கல்வெட்டு மட்டும்தான் கிடைத்துள்ளது. இவைகளை விட இன்னும் சிறப்பு வாய்ந்த தொன்மை ஆவணங்களைப் போர்த்துகீசியர் சேது மன்னர் கடிதப் போக்குவரத்து, யாழ்ப்பாணம், தூத்துக்குடி, கீழக்கரை ஆகிய ஊர்களில் நிலை கொண்டிருந்த டச்சுக் கிழக்கிந்தியக் கம்பெனியாரது உடன்படிக்கைகளும் கி.பி. 1772 - 1794 வரையான கால அளவில் ஆங்கிலக் கிழக்கிந்திய கம்பெனிக்கும் சேது மன்னருக்கும் இடையே நடைபெற்ற கடிதப் போக்குவரத்து ஆகியவை சேதுபதிச் சீமை வரலாற்றிற்கு மிகவும் இன்றியமையாதவை. அவைகளில் ஒன்று கூட நமக்குக் கிடைப்பதாக இல்லை. இராமநாத சமஸ்தான நிர்வாக அலுவலர்களது அசிரத்தையாலும், பொறுப்பற்ற தன்மையாலும் இவை முழுவதும் அழிந்து விட்டன.  இவைகளைப் போன்றே கிழவன் சேதுபதியின் மனைவியான காதலி நாச்சியார் இராமேஸ்வரம் திருக்கோயிலுக்கு வழங்கிய அறக்கொடை பற்றியும் மேலச்சீத்தை கிராம அறக்கொடை, தனுஷ்கோடி சத்திரத்திற்கு வழங்கிய களத்துர் அறக்கொடை. எம்மண்டலமுங் கொண்டான் என்ற ஊரில் அமைத்து இருந்த அன்னசத்திரம் பற்றியும் ராணி மங்களேசுவரி நாச்சியார் வழங்கிய அறக்கொடைகளைப் பற்றியும் விவரம் அளிக்கப்படவில்லை.  கி.பி. 1678 வரை ஆட்சி செய்த திருமலை ரெகுநாத சேதுபதி மன்னருக்கு வாரிசு இல்லை என மேலே கண்ட நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆனால் அந்த மன்னர் இராமேஸ்வரம் திருக்கோயில் கட்டி முடித்த இரண்டாவது பிரகாரத்தின் மேற்குப்புறத்தில் உள்ள சுவாமி சன்னதி பக்கத்தில் அவரும் அவரின் இளவலும் நிற்பதாக சிலை ஒன்று வடிக்கப்பட்டுள்ளது. இது அவரது மைந்தன் என நினைவுபடுத்துகிறது. இதனைப் போன்றே கி.பி. 1710-ல் கிழவன் ரெகுநாத சேதுபதி மன்னர் வாரிசு இல்லாமல் மரணம் அடைந்ததால் அவரது தமக்கை மகன் (திருஉத்திரகோச மங்கை கடம்பத்தேவர் மகன்) சேதுபதியாக அரியணை ஏறினார் என வரையப்பட்டுள்ளது. உண்மையில் இந்த மன்னருக்கு இரணசிங்கத்தேவன் என்ற ஒரு மகன் இருந்தான் என்பதும் அவன் சேதுநாட்டின் வடபகுதியான கல்வாசல் நாட்டின் அரசப் பிரதிநிதியாக அமர்ந்திருந்தார் என்பதைக் காட்டு பாவாசாகிபு பள்ளிவாசல் கல்வெட்டு தெரிவிக்கின்றது. இந்த விபரங்களை இராமநாதபுரம் மேனுவல் ஆசிரியர் கூட வரைவதற்குத் தவறிவிட்டார். கி.பி. 1803 முதல் 1812 வரை சேது நாட்டின் முதல் ஜமீன் தாரிணியாக பொறுப்பேற்றிருந்த இராணி மங்களேஸ்வரி நாச்சியாருக்கு ஆண் வாரிசு இல்லாததால் அண்ணாசாமி என்ற சிறுவனைச் சுவிகாரம் செய்துகொண்டார் என மேனுவல் குறிப்பிடுகிறது. இந்த இராணியார் சேசம்மாள் என்ற பெண்ணைச் சுவீகரித்திருந்தும் அவரது புண்ணியமாக திருப்புல்லாணி, அகத்தியர் கூட்டம், சீனிவாசப் பெருமான் ஆலயத்திற்கு நெடிய மாணிக்கம் என்ற கிராமத்தைச் சர்வமான்யமாக வழங்கிய செப்பேட்டின் வழி அறிய முடிகிறது.  இன்னொரு செய்தி இராமநாதபுரம் ஜமீன்தார் இராமசாமித்தேவர் கி.பி. 1730-ல் மரணமடைந்தார். அவரை அடுத்து ஜமீன் பொறுப்பு ஏற்றிருந்த இராணி முத்து வீராயி நாச்சியார் சிவசாமி சேதுபதி என்ற இளைஞரைச் சுவீகாரம் செய்துகொண்டு அவரை இராமநாத புரம் ஜமீன்தாராக அறிவித்தார். இந்த சேதுபதி மன்னர் மீது அட்டாவ தானம் சரவணப் பெருமாள் கவிராயர் ‘சேதுபதி விறலிவிடு துது’ என்ற சிற்றிலக்கியத்தைப் பாடியுள்ளார். இந்தச் செய்திகளைப் பற்றிய குறிப்புகள் எதுவும் இராமநாதபுரம் மேனுவலில் காணப்பட வில்லை.  சேதுபதி மன்னர்கள் ஒன்றிற்கு மேற்பட்ட மனைவிகளை மணந்து இருந்தனர். இதனை வலியுறுத்தும் வகையில் கூத்தன் சேதுபதியின் மகனான தம்பித் தேவருக்குச் சேதுபதி பட்டம் கிடைக்காததால் அவர் சேதுநாட்டில் குழப்பம் விளைவித்தார். அவர் மதுரை திருமலை நாயக்க மன்னரை இந்த விவகாரத்தில் தலையீடு செய்யுமாறு நிர்பந்தித்ததுடன் சேதுநாட்டை கி.பி. 1642-ல் மூன்று பகுதிகளாகப் பிரித்து மூன்று மன்னர்கள் (தம்பித்தேவர் உட்பட) ஆளும்படி செய்தார். ஆதலால் சேது மன்னர்கள் எந்த நாட்டுத் தலைவரது பெண்மக்களை மணந்து இருந்தனர் என்பதும், அவர்களது பெயர்கள் என்ன என்பதும் இந்த ஆவணங்களில் குறிக்கப்படவில்லை.  இத்தகைய சேது மன்னர்களது வரலாற்று நிகழ்ச்சிகளை விவரிப்பதற்கு இந்த ஆவணங்கள் தவறி விட்டதால் இந்த மன்னர்களது நெடிய வரலாற்றை முழுமையாக அறிந்து கொள்வதற்கு இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.    1. ↑ Paranavittna. Dr. S. Nicholson - Concise history of ceylon (1952)  2. ↑ Tamil Nadu Archives Military Consultation Vol 42-B 8-6. 1772, b-410.  3. ↑ London Prince of Wales Library - Diary of General Patterson (In Manuscript)                                                                iii. அரண்மனை நடைமுறைகள் சேது மன்னர்களது ஆட்சியில் இராமநாதபுரம் அரண்மனையில் சில நடைமுறைகள் தொடர்ந்து பின்பற்றப்பட்டிருப்பதைக் கீழ்க்கண்டவைகளில் இருந்து அறிந்து கொள்ள முடிகிறது.  1. சேது மன்னரது மனைவிகள் பலர் இருந்த போதிலும் அவர்களில் செம்பி நாட்டுப் பிரிவைச் சேர்ந்த மனைவிக்குப் பிறந்த ஆண் குழந்தை மட்டும் தான் மன்னரது வாரிசாக அரண்மனை முதியவர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டது.  2. இந்த மன்னர்களில் யாராவது வாரிசு இல்லாமல் இறந்தால் சேதுபதி பதவிக்கு அந்த மன்னரது உடன்பிறந்த தங்கை அல்லது தமக்கையின் மகன் மன்னராகத் தேர்வும் செய்யப் பெற்றதால் அவன் பதவியேற்றதும் அரசு ஆவணங்களில் இறந்து போன மன்னரை தமது தந்தையாக குறிப்பிடும் வழக்கமும் இருந்தது.  3. சேது மன்னர்கள் வழங்கிய தானசாசனங்கள் அனைத்திலும் தங்களது முன்னோரது ஆட்சி பீடமான விரையாத கண்டன் (இளையான்குடி வட்டம்) ஊரினைக் குறிப்பிடுவதற்கும் அங்கிருந்த கடைசி மன்னரான ஜெயதுங்க தேவரது வம்சத்தினர் என்பவையும் குறிப்பிடத் தவறுவதில்லை.  4. பொதுவாக சேது மன்னர்கள் காலைக் கடன்களை முடித்தவுடன் தமது ராணியுடன் அரண்மனை வளாகத்திலுள்ள இராஜராஜேஸ்வரி ஆலயத்தின் காலை வழிபாட்டில் கலந்து கொள்வது அவர்களது நியதியாக இருந்தது. கோட்டைக்கு வெளியே அல்லது வெளியூர்களுக்குச் சென்று திரும்பிய பொழுதும் அரண்மனைக்குள் நுழைந்தவுடன் அவர்கள் அம்மனைத் தரிசனம் செய்த பிறகுதான் அந்தப்புரத்துக்குச் செல்வதும் அவர்களது வழக்கமாக இருந்தது.  5. சேதுபதி மன்னர்கள் அரண்மனையில் இருக்கும் பொழுது பட்டுவேட்டியும் பட்டுச் சால்வையுமாகக் காட்சி அளித்தனர். கொலு மண்டபத்திற்குச் செல்லும் பொழுதும் வெளியூர்களுக்குப் பயணம் செய்யும் பொழுதும் பட்டாலான நீண்ட மேலங்கித் தலைப்பாகை அணிமணிகள், உடைவாள் ஆகியவைகளை அணிந்து செல்வர்.  6. அரண்மனையில் ஒய்வாக இருக்கும் பொழுது ஏதாவது இலக்கியச் சுவடி ஒன்றினைப் படிப்பதையும் தமிழ்ப் பண்டிதர்கள் அல்லது வடமொழி வித்தகர்கள் அவர்களிடமிருந்து சிறந்த ராஜநீதிகளைக் கேட்டு அறிவதும் அவர்களது வழக்கம். முத்து விஜய ரெகுநாத சேதுபதி முன்னர் பண்டிதர் ஒருவர் அமர்ந்து இராமாயண ஏடு ஒன்றினைப் பிடித்தவாறு மன்னருக்கு விளக்கம் சொல்லும் சித்திரம் ஒன்று இராமலிங்க விலாச அரண்மனைச் சுவரோவியங்களில் காணப்படுவது இங்கு குறிப்பிடத் தக்கது.  7. இராமநாதபுரம் அரண்மனை அத்தாணி மண்டபத்தில் வீற்றிருக்கும் பொழுது தான் குடிமக்களது குறைகளைக் கேட்டு அறியும் நடைமுறை இருந்து வந்தது. பிற சமயங்களில் மன்னரைத் தொடர்புகொள்ள வேண்டும் எனில் அவரது கார்வார் என்ற அலுவலரைத்தான் அணுக வேண்டும். அரண்மனையில் கீழ் நிலையில் சேவகர்கள் சோப்தார், ரிசல்தார், ஜமேதார் போன்ற பணியாளர்கள் அனைவருக்கும் அரண்மனையின் நிர்வாகத்திற்கும் கார்வார் மட்டுமே பொறுப்பானவர்.  8. இதனைப் போன்றே அரண்மனை அந்தப்புரத்தில் பெண்கள் பலர் பல்வேறு பணிகளில் ஈடுபட்டிருப்பவர்கள் அந்தப்புரத்தில் மன்னரையோ அல்லது மகாராணியையோ நேரடியாக தொடர்பு கொள்ளுதல் தடுக்கப்பட்டிருந்தது. மன்னர் அல்லது ராணிக்குத் தெரிவிக்க வேண்டிய செய்திகளை அவர்கள் தங்களது தலைவியாகிய தானாவதி என்ற பெண் மூலமாகத்தான் தெரிவிக்க வேண்டும் என்பது மரபு.  9. அரண்மனைக்கு வருகின்ற அரசு விருந்தாளிகளான தமிழ்ப் புலவர்கள், வடமொழிப் பண்டிதர்கள் பெரும் வணிகர்கள். பிற நாட்டு அலுவலர்கள் ஆகியோர் திரும்பிச் செல்லும்பொழுது மன்னரைச் சந்தித்து அரண்மனை மரியாதையைப் பெற்றுச் செல்லுதல் வேண்டும். அவர்களுக்குத் தேவையான வழிச் செலவுக்கான பணம், பட்டாடைகள் மற்றும் பொன் வெள்ளியிலான தட்டில் வைத்து வழங்கப்படும்.  10. இராமநாதபுரம் அரண்மனையின் பாதுகாப்பிற்காக பின்பற்றப்பட்ட முறை ‘பாரி’ எனப்படும். இந்த முறை தன்னரசு மன்னர்கள் காலத்திலிருந்து ஜமீன்தார்கள் காலம் வரை கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. அதாவது இராமநாதபுரம் கோட்டையின் மையப்பகுதியில் அமைந்துள்ள அரண்மனைப் பாதுகாப்பிற்கென இரண்டு தனிக்குழுக்கள் நியமிக்கப்பட்டிருந்தன. இந்தக் குழுவில் சில வீரர்களும் தீ வெட்டி தூக்கிச் செல்பவர்களும், தாரை தப்பட்டை ஆகியவைகளை அடித்து முழக்குபவர்களும் வாங்கா என அழைக்கப்படும் வளைந்த புனலை ஊதுபவர்களும் இருந்தனர். முதலாவது குழு சரியாக நடுநிசி நேரம் ஆனவுடன் தீ வெட்டிச் சுளுந்துகளை ஏந்திச் செல்பவர்கள் பின்னால் பறையடித்து முழக்குபவர்களும் அவர்களை அடுத்து ஆயுதம் தரித்த போர் வீரர்களும் இராமநாதபுரம் அரண்மனையைத் தெற்கு மேற்கு. வடக்கு ஆகிய பகுதிகளைச் சுற்றிக் கண்காணித்தவாறு இராமநாதபுரம் அரண்மனை வாசலை வந்தடைவர். இவர்கள் முதல் பாரி என்றழைக்கப்பட்டனர்.  இதே போன்று மற்றொரு குழுவும் நடுநிசி நேரத்திற்கு இரண்டு மூன்று நாழிகை கழித்து அரண்மனையைச் சுற்றிக் கண்காணித்து வருவர். இவர்கள் இரண்டாவது பாரி எனப்பட்டனர். நீண்ட அமைதியில் மூழ்கியிருக்கும இராமநாதபுரம் அரண்மனை முதலாவது இரண்டாவது பாரியினால் கலகலப்புப் பெறுவதுடன் கோட்டையிலுள்ள மக்கள் இரவு நேரத்தைத் தெரிந்து கொள்வதற்கு இந்த குழுக்களின் ஒசை பயனுள்ளதாக அமைந்திருந்தது.  11. கடிகாரம் இல்லாத முந்தைய காலத்தில் கோட்டையில் வாழும் மக்களுக்கு ஓரளவு நேரத்தைச் சரியாக அறிவிப்பதற்கு இராமநாதபுரம் அரண்மனை வாசலை அடுத்து "மணிப் பாறா" என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டு இருந்தது. இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் அரண்மனையின் கிழக்குப் பகுதியில் சிறு குழிகளைத் தோண்டி வைத்து அதில் வெடி மருந்தினை நிரப்பி வைப்பார்கள். நாள்தோறும் வைகறைப் பொழுதிலும் பகல் உச்சி வேளையிலும் இரவிலும் குழிகளுக்குத் தீ மூட்டி வெடிக்கச் செய்வர். பயங்கரமாக வெடி மருந்து வெடிக்கும் ஓசையை வைத்துக் கோட்டையில் உள்ள மக்கள் நாள்தோறும் மூன்று வேளையிலும் ஒரு வகையாக நேரத்தை அறிந்து கொள்வதற்கு ஏற்றதாக இருந்தது. பிற்காலத்தில் வெடிமருந்து வெடிப்பதை நிறுத்தி அரண்மனை முகப்பில் வெண்கலத் தட்டினை முழக்கி நேரத்தைத் தெரிவிக்கும் முறையும் இருந்து வந்தது. இந்த வெடி மருந்தினை நிரப்பி வெடிக்கச் செய்தவர்கள் வாணக்காரர்கள் என்று அழைக்கப்பட்டனர். அவர்களுக்கு என அரண்மனை வாசலை ஒட்டி தெற்குப் பகுதியில் குடியிருப்பு மனைகள் ஒதுக்கப்பட்டிருந்தன. அந்தப் பகுதி இன்றும் வாணக்காரர் தெரு என்று அழைக்கப்படுகிறது.  12. சேதுபதிகள் தன்னரசு மன்னர்களாக இருந்த காலத்தில் மன்னரது விருந்தாளியாக இராமநாதபுரம் வருகின்ற பெரிய மனிதர்களை மன்னரது பிரதானி இராமநாதபுரம் கோட்டை வாசலில் சந்தித்து வரவேற்பு அளிப்பதும், அவர்களைப் பின்னர் அரண்மனை ஆசாரவாசலுக்குச் சேதுபதி மன்னர் நேரில் சென்று வரவேற்கும் பழக்கமும் இருந்து வந்தது.                        iv.  இராமலிங்க விலாசம் அரண்மனை   இன்னல்களும் இடர்ப்பாடுகளும் சேதுபதிக் குடும்பத்தினருக்கும் பொது மக்களுக்கும் அந்நியரது ஆக்கிரமிப்பினால் ஏற்பட்ட பொழுதும் சேது நாட்டின் பழம்பெருமையையும் தன்னரசு நிலைமையினையும் காலமெல்லாம் நினைவூட்டும் எச்சமாக விளங்குவது இராமநாதபுரம் இராமலிங்க விலாசம் அரண்மனை ஒன்றுதான்.  இந்த மாளிகை இராமநாதபுரம் அரண்மனை வளாகத்தில் வடகிழக்குப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. போகலுரைத் தலைமை இடமாகக் கொண்டு ஆட்சி செய்த சடைக்கன் உடையான் சேதுபதி, கூத்தன் சேதுபதி, தளவாய் சேதுபதி என்ற இரண்டாவது சடைக்கன் சேதுபதி, ரெகுநாத திருமலை சேதுபதி, ரெகுநாத கிழவன் சேதுபதி ஆகியோர்கள் ஆட்சியில் மன்னரது பயன்பாட்டிற்கெனத் தனியாக அத்தாணி மண்டபம் எதுவும் போகலூரில் அமைக்கப்படவில்லை.  ரெகுநாத கிழவன் சேதுபதி மன்னருக்கும், கீழக்கரை வணிக வேந்தரான வள்ளல் சீதக்காதி என்ற செய்கு அப்துல்காதிர் மரைக்காயருக்கும் நெருங்கிய நட்பும் தொடர்பும் ஏற்பட்ட பொழுது சேதுபதி மன்னருக்கு எனத் தனியாக அத்தாணி மண்டபம் ஏற்படுத்தப்பட வேண்டிய அவசியத்தை மன்னருக்கு எடுத்துரைத்தார்.  இதன் காரணமாக நிலப்பரப்பிலும் வணிகத் தொடர்புகளிலும் விரிவும் பெருக்கமும் அடைந்த சேதுநாட்டின் தலைமையிடத்திற்குப் போகலூர் கிராமம் பொருத்தமாக இல்லை என்பதை மன்னர் உணர்ந்தார். சேது மன்னர்களது தலைமையிடமாக இராமநாதபுரம் மண்கோட்டை மாற்றம் பெற்றது. வள்ளல் சீதக்காதியின் அறிவுரைப்படி இராமநாதபுரம் மண் கோட்டையின் மண் சுவர்கள் அகற்றப்பட்டு செவ்வக வடிவிலான கல் சுவரினால் ஆன புதிய கோட்டை தோற்றம் பெற்றது. இதன் நடுநாயகமாக அத்தாணி மண்டபம் ஒன்றும் மன்னரது பயன்பாட்டிற்காக நிர்மாணிக்கப்பட்டது.  கிழக்கு மேற்காக 153 அடி நீளமும் 65 அகலமும் செவ்வக வடிவில் 12 அடி உயரமான மேடையில் சுமார் 14 அடி உயர மண்டபமாக இந்த அரண்மனை அமைந்துள்ளது. பெரும்பாலும் கி.பி. 1790 - 1793-க்கு இடைப்பட்ட காலத்தில் இந்த மாளிகை அமைக்கப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. இந்த மாளிகை ஏறத்தாழ ஒரு கோயிலின் அமைப்பிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளது. கருவறை, அர்த்த[1] மண்டபம், மகா மண்டபம் போன்ற அமைப்பில் இந்தக் கட்டுமானம் திட்டமிடப்பட்டுள்ளது.  கிழக்கு நோக்கியுள்ள இந்த மண்டபத்தின் 16 படிகளைக் கொண்ட நுழைவாயிலின் இருபுறமும் ஒரே மாதிரியான யாளியின் சிற்பங்கள் கருங்கல்லினால் அமைக்கப்பட்டுள்ளன. முன்புறம் உள்ள மகா மண்டபம் போன்ற விசாலமான மாளிகையின் இருபுறமும் நீண்டு உயர்ந்த 24 தூண்களைக் கொண்ட அமைப்பை அடுத்து அர்த்த மண்டபம் போன்ற இடைக்கட்டும் இந்த மண்டபத்தின் தளத்திலிருந்து நான்கடி உயரத்தில் 16 தூண்களுடன் அமைக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து கருவறை போன்ற விசாலமான அறை மன்னரது சொந்த உபயோகத்திற்காகக் கருங்கல்லினால் ஆன வாசலுடன் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அறையின் மேல் தளத்திலும் மற்றொரு அறையும் அதற்கு மேலே நிலாக்கால இரவுகளை மன்னரும், அரச பிராட்டியும் மகிழ்ச்சியுடன் கழிப்பதற்கான மேடை ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.  இராமலிங்க விலாசம் சுவரோவியங்கள் கி.பி. 1713-ல் சேது மன்னராக ஆட்சி பீடம் ஏறியவர் முத்து விஜய ரெகுநாத சேதுபதி ஆவார். இயல்பாகவே கலை உள்ளம் கொண்ட இந்த மன்னர் அவரது ஆட்சிக்காலத்தில் மேற்கொண்ட அரிய பணிகளில் இராமலிங்க விலாசம் அரண்மனையை வண்ண ஒவியங்களால் அலங்கரிக்கச் செய்தது குறிப்பிடத்தக்கது ஆகும். அரசியல், சமூக, கல்வித் துறைகளில் பல நூற்றாண்டுகளாகப் பின்னடைவு பெற்றிருந்த மறவர் சீமை மக்களுக்கு இந்த வண்ண ஒவியங்கள் மகத்தான கற்பனையையும், எழுச்சியையும் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக இந்த ஒவியங்களைச் சேதுபதி மன்னர் இராமலிங்க விலாசம் அரண்மனைச் சுவர்களிலும் தூண்களுக்கு இடையில் உள்ள வில் வளைவுகளிலும் தீட்டுமாறு செய்துள்ளார்.  மகா மண்டபம் போன்ற இந்த முன் மண்டபத்தில் நுழைந்தவுடன் இடதுபுறம் கிழக்குச் சுவற்றில் ஒரு போர்க்களக் காட்சி தீட்டப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மராத்தியப் படைகளுக்கும் சேதுபதி மன்னரது மறவர் படைகளுக்கும் இடையே அறந்தாங்கிக் கோட்டைக்கு வடக்கே நிகழ்ந்த போரின் காட்சியைச் சித்தரிப்பதாக இந்த ஓவியம் அமைந்துள்ளது. வலது புறம் கிழக்குச் சுவற்றில் முத்து விஜய ரெகுநாத சேதுபதியின் உருவமும் அதனை அடுத்து வடக்குச் சுவற்றில் வைணவக் கடவுளான பெருமாளின் பல கோலங்கள் தீட்டப்பட்டுள்ளன. இவைகளுக்கு எதிரே தெற்குச் சுவற்றில் சைவ சமயக் காட்சிகள் தீட்டப்பட்டுள்ளன. திருச்சி உச்சிப் .பிள்ளையார் ஆலயம், தாருகாவனத்தில் சிவபெருமான் பிக்ஷாடனராக ரிஷி பத்தினிகளுடன் உள்ள காட்சி மற்றும் அவரது ஊர்த்துவ நடனம். இந்தச் சித்திரங்கள் அனைத்தும் குறிப்பிட்ட வண்ணங்களினால் ஒரே காலத்தில் வரையப் பெற்றவை என்று தெரிய வருகிறது. தெற்குச் சுவற்றில் கிழக்குக் கோடியில் ஆற்காட்டு நவாபின் பவனி, அரண்மனைப் பணியாளர்கள் அன்பளிப்புத் தட்டுக்களை ஏந்திச்செல்வது. சேதுபதி மன்னர் தமது மடியில் பெண் குழந்தை ஒன்றை வைத்துக் கொண்டு ஆங்கிலேய துரை ஒருவரிடம் உரையாடிக் கொண்டிருப்பது ஆகிய காட்சி இந்த ஒவியங்களில் காணப்படுகிறது. வண்ணங்களும் இந்த ஓவிய உத்திகளும் காலத்தால் பிற்பட்டவை - பெரும்பாலும் 18-ம் நூற்றாண்டின் பிற்பகுதியைச் சார்ந்ததாகக் கருதப்படுகிறது.  மண்டபத்தின் இடைக்கட்டில் வடக்குச் சுவற்றிலும் தூண்களுக்கு இடையிலான வில் வளைவுகளிலும், வேட்டையாடும் காட்சி, மீன்கள் நிறைந்த தடாகம், படுத்திருக்கும் புலவர் ஒருவரது கால்களை வருடி ஒருவர் உபச்சாரம் செய்யும் காட்சி, இவைகளுக்கு மேலே இருபுறமும் அமைக்கப்பட்டுள்ள நீண்ட மாடத்தில் பல புராணக்காட்சிகள், கதை உருவங்களாக அமைக்கப்பட்டுள்ளன. மாளிகையின் மேற்குப்பகுதியில் கருவறை போல் அமைக்கப்பட்டுள்ள மன்னரது அறையின் வெளிப்புறத்திலும் உட்புறத்திலும் மேற்குச் சுவற்றிலும் கீழ்ப் பகுதிகளிலும் பாகவதக் கதைக் காட்சிகளும் இராமாயணக் காட்சிகளும் - இராமனது பிறப்பு முதல் சீதையின் திருமணம் வரையான காட்சிகளும் தீட்டப்பட்டுள்ளன. இந்த அறையின் வில் வளைவுகளில்,  1. இராமநாதபுரம் அரண்மனையில் உறங்கி எழுந்த அரச பிராட்டி மங்கலப் பொருள்களான கண்ணாடி, கிளி ஆகியவைகளைப் பார்க்கும் ஓவியம்  2. சேதுபதி மன்னர் அரண்மனைப் பெண்களுடன் வில்லைத் தாங்கி பறவைகள் வேட்டைக்குச் செல்லும் ஒவியம்  3. சேது நாட்டுப் பெண்கள் நீண்ட கழிகளுடன் காட்சியளிப்பது  4. சேதுபதி மன்னர் பெருமாளிடமிருந்து செங்கோல் பெறுவது  5. சேதுபதி மன்னர் முன் பண்டிதர் ஒருவர் அமர்ந்து இராமாயண விரிவுரை செய்வது  6. சேதுபதி மன்னரிடம் அளிப்பதற்காக மூன்று பரங்கிகள் அன்பளிப்புத் தட்டுக்களை ஏந்தி வருதல்  7. அரசவையில் நடன மங்கையர் நாட்டியம் ஆடுதல் இவை போன்ற கண்ணைக் கவரும் வண்ணங்கள் நிறைந்த ஒவியங்கள் பல இந்த அறையின் சுவர்களிலும் வில் வளைவுகளிலும் விதானங்களிலும் இடம் பெற்றுள்ளன. இந்த ஒவியங்கள் அனைத்தும் ஆந்திர நாட்டு ஓவியர்களால் வரையப்பட்டுள்ளன என்பதை அந்த ஒவியர்கள் கையாண்டுள்ள உத்திகள் தெரிவிக்கின்றன.  இந்த அறையின் மேல் வீடு மன்னரது பள்ளியறையாக அமைந்திருந்ததால் அந்த அறையின் கிழக்கு வடக்குச் சுவர்களில் மன்னர் மங்கையருடன் புனல் விளையாட்டில் ஈடுபட்டிருக்கும் ஒவியமும் பத்துப் பதினைந்து பெண்கள் யானை போன்ற அமைப்பில் சேர்ந்து காட்சியளிப்பது.  இந்த ஓவியங்கள் அனைத்தும் முத்து விஜய ரெகுநாத சேதுபதி மன்னரது ஆட்சிக் காலத்தில் (கி.பி. 1713 - 1725-ல்) உருப்பெற்றுள்ளன. சரியான காலம் அறியத் தக்கதாக இல்லை. அத்துடன் இந்த ஓவியங்கள் அனைத்தையும் ஒரு சேர ஆய்வு செய்யும்பொழுது அவை - மகா மண்டபத்தில் இடம் பெற்று இருப்பவை அனைத்தும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒரு குறிப்பிட்ட வகையான ஒவியர்களாலும் இடைக்கட்டிலும், அறையிலும் வரையப் பெற்றிருக்கும் ஓவியங்கள் மற்றொரு வகையான ஓவியர்களாலும் அந்த அறையின் மேல் வீட்டில் தீட்டப் பெற்றிருக்கும் கிளர்ச்சியூட்டும் ஓவியங்கள் பிறிதொரு வகை ஓவியர்களாலும் வரையப் பெற்றுள்ளன என்பது புலனாகிறது. ஒவியர்களும், ஓவியங்களும் எந்த வகையை, எந்தக் காலத்தைச் சார்ந்ததாக இருந்தாலும் இவை சேது நாட்டிற்குக் கிடைத்துள்ள சித்திரக் கருவூலமாகப் போற்றப்பட வேண்டியவையாகும். நமது நாடு முழுவதிலும் பல ஊர்களில் பல மன்னர்களின் மாளிகைகளில் இத்தகைய ஓவியங்கள் ஆங்காங்கு காணப்பட்டாலும் இராமலிங்க விலாசம் அரண்மனை ஒவியங்களைப் போல ஒரு சேர ஒரே மாளிகையில் ஒரு அங்குலம் சுவற்றைக் கூட இடைவெளி இல்லாமல் ஒவியங்கள் தீட்டப்பட்டிருப்பது. வேறு எங்கும் காணப்படாத அதிசயமாகும். ஆதலால் இந்த மாளிகை ஓவியங்களை அஜந்தா குகை ஒவியங்களுக்கு ஒப்பாகச் சொல்வதில் வியப்பு ஒன்றும் இல்லை.    1. ↑ Raja Ram Rao. T - Manual of Ramnad Samasthanam (1891) Page - 232.                                                        v. மூலைக் கொத்தளம்   சேது மன்னர்களது சிறப்பான தன்னரசு ஆட்சியினைக் காலமெல்லாம் தெரிவித்துக் கொண்டிருக்கும் மற்றொரு வரலாற்று எச்சம், இராமநாதபுரம் நகரின் தென்மேற்கே உள்ள மூலைக்கொத்தளம் ஆகும். இந்த அமைப்பு கிழவன் ரெகுநாத சேதுபதியின் ஆட்சிக்காலத்தில் மன்னரது உடன்பிறவாத சகோதரரும், மன்னரது பிரதிநிதியுமான வள்ளல் சீதக்காதி மரைக்காயரால் கி.பி. 1790-94-க்கும் இடையில் புதிதாக அமைக்கப்பட்ட இராமநாதபுரம் கற்கோட்டையின் தென்மேற்குப் பகுதி இது. அப்பொழுது இராமநாதபுரம் கற்கோட்டை செவ்வக வடிவில் கிழக்கு மேற்காக இரண்டு கல் சுற்றளவில் கிழக்கே ஒரே ஒரு கோட்டை வாசலுடன் அமைக்கப்பட்டது. இந்தக் கோட்டையின் சுவர்கள் 27 அடி உயரமும், ஐந்து அடி அகலமுமாக கொண்டு நிர்மாணிக்கப்பட்டன. இந்தக் கோட்டைச் சுவரின் மூன்று பக்கங்களிலும் 42 கொத்தளங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. எதிரிகள் கோட்டையினைத் தாக்கும் பொழுது கோட்டையின் பிற பகுதிகளிலிருந்தும் கோட்டைச் சுவற்றின் மேலிருந்து எதிரிகளைத் தாக்குவதற்காக கோட்டையின் உட்பகுதியில் கோட்டைச் சுவர் அருகே ஆங்காங்கு இத்தனைக் கொத்தளங்கள் அமைக்கப்பட்டன. இவைகளில் வேல், வில் , வாள், வளரி, ஈட்டி ஆகிய ஆயுதங்களுடன் பெரிய பெரிய அடுப்புக்களும் அமைக்கப்பட்டு அதில் ஈயத்தைக் காய்ச்சி எதிரிகள் மீது ஊற்றும் வழக்கமும் இருந்தது. இந்தக் கோட்டை அமைக்கப்பட்ட காலத்தில் வெடி மருந்தினைக் கொண்டு எதிரிகள் மீது தாக்குவதற்காக பீரங்கிகளும் ஆங்காங்கு கோட்டைச் சுவர் மீது நிறுத்தப்பட்டிருந்தன.  கி.பி. 1770-ஆம் ஆண்டு ஆங்கிலேயரது ஆவணம் ஒன்றில் இராமநாதபுரம் கோட்டை மதிலின் நான்குபுறமும் 44 பீரங்கிகள் நிறுத்தப்பட்டிருந்தன என்ற குறிப்புக் காணப்படுகின்றது.  மேலே கண்ட மூலக்கொத்தளத்திலும் இத்தகைய பீரங்கிகள் 9 நிறுத்தப்படுவதற்காக கட்டப்பட்ட அமைப்பு இன்றும் சிதையாமல் அப்படியே உள்ளது. இராமநாதபுரம் கோட்டை சந்தித்த மிகப்பெரும் போர்களான இராணி மங்கம்மாள் படைகளுக்கும். சேது மன்னர் படைகளுக்கும் நடைபெற்ற போர் (கி.பி. 1702). தஞ்சை மராத்திய படைகளுக்கும் சேது மன்னர் படைகளுக்கும் ஏற்பட்ட போர் (கி.பி. 1709). தஞ்சை மராத்திய மன்னர் துல்ஜாஜி கி.பி. 1771 ஏப்ரல். மே மாதங்களில் மேற்கொண்ட இராமநாதபுரம் கோட்டை முற்றுகைப்போர். ஆற்காடு நவாப் ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியார் கூட்டுப் பொறுப்பில் இராமநாதபுரம் கோட்டையைத் தாக்கிய போர் (கி.பி. 1772) இந்த நான்கு போர்களிலும் மூலைக்கொத்தளம் அமைப்பு எவ்விதமும் பாதிக்கப்படவில்லை.  ஆனால் ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியர் கி.பி. 1795-ல் சேதுபதி மன்னரைக் கைது செய்து, சேது நாட்டைத் தங்களது உடமையாக மாற்றிய பிறகும், சேது நாட்டிலும், சிவகங்கை, திருநெல்வேலிச் சீமைகளிலும் ஏற்பட்ட மக்கள் கிளர்ச்சிகளினால் ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனி மிகவும் பாதிப்பிற்கு உள்ளானது. இதனால் புரட்சிக்காரர்களது இருப்பிடமாக அமைந்து ஆங்கிலேயருக்கு எதிரான அரண்களாக விளங்கிய கோட்டைகள் அனைத்தையும் கி.பி. 1803 - 1804 ஆகிய வருடங்களில் இடித்துத் தகர்த்து விடுமாறு ஆங்கிலேயரது தலைமை உத்தரவிட்டது. இதன் விளைவாக இராமநாதபுரம் கோட்டையின் மதில்களும், கொத்தளங்களும், வாசலும் இடித்து அகற்றப்பட்டன. இந்த இடிபாடுகளிலிருந்து தப்பித்து இன்றும் இராமநாதபுரம் வரலாற்றினை உணர்த்தி வரும் சின்னமாக இந்த மூலைக் கொத்தளம் அமைந்து விளங்கி வருகிறது.          இயல் - IX  சேதுநாட்டில் ஜமீன்தார் ஆட்சிமுறை   ஜமீன்தாரி முறை என்பது தமிழகத்திற்கு மட்டுமல்ல. இந்திய நாட்டிற்கே புதுமையானது. இங்கிலாந்துப் பேரரசி எலிசபெத் ராணியாரிடம் பரிந்துரைக் கடிதம் பெற்று வந்த சர் தாமஸ் மன்ரோ என்பவர் இந்தியாவில் தங்களது ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியாரது வணிகத்தை நடத்துவதற்காக முகலாய மன்னர் ஜஹாங்கீரிடம் கி.பி. 16oo-இல் அனுமதி பெற்றார். குஜராத்திலும், வங்காளத்திலும் சேமிப்புக் கிடங்குகளை ஏற்படுத்தி வியாபாரம் செய்து வந்தனர். காலப்போக்கில் வங்காளத்தின் அதிபராய் இருந்த சிராஜ் உத் தெளலாவிற்கு எதிரிகளான மீர்காசிமுக்கு உதவிகள் செய்து வங்காளத்தில் காசிம் பஜார் போன்ற இடங்களை அன்பளிப்பாகப் பெற்றனர். அந்தப் பகுதியில் இருந்த குடிகளிடமிருந்து நேரிடையாக அரசிறைகளை வசூலிப்பதற்குப் பதிலாக இந்த ஜமீன்தாரி முறையினை முதன் முதலில் கம்பெனியின் கவர்னர் ஜெனரலாய் இருந்த கார்ன்வாலீஸ் அங்கு அறிமுகப்படுத்தினார்.  இந்தக் காலகட்டத்தில் ஆற்காட்டு நவாப் முகமது அலியின் கூலிப்படையாக அமைந்து, பாண்டிய நாட்டுப் பாளையக்காரர்களிடமிருந்தும், தஞ்சாவூர் மன்னரிடமிருந்தும் கப்பத் தொகையை வசூலிப்பதற்காகச் சென்னையில் உள்ள கிழக்கிந்தியக் கம்பெனியாரது படையணிகள் பயன்பட்டன என்பதை முன்னர் பார்த்தோம். இந்தப் படை அணிகளின் போர்ச்செலவுகளுக்கு வழங்கப்பட வேண்டிய தொகையினைச் சில பகுதிகளில் கிழக்கிந்தியக் கம்பெனியார் அவர்களே வசூலித்துக் கொள்ளும் உரிமையை ஆற்காடு நவாப் வழங்கி இருந்தார். குறிப்பாக நெல்லூர், செங்கல்பட்டு ஆகிய பகுதிகளிலும், பின்னர், திண்டுக்கல், மதுரை, திருநெல்வேலிச் சீமைகளிலும் வரிவசூல் செய்துகொள்ளும் உரிமையை ஆங்கிலேயர் பெற்றனர்.  கி.பி. 1790 முதல் கி.பி. 1801 வரை சிவகங்கைச் சீமையின் பிரதானிகளான மருது சேர்வைக்காரர்கள் ஆங்கிலேயருடன் முரண்பட்டு சிவகங்கைச் சீமை மக்களைத் திரட்டி கி.பி. 1800 - 1801ல் ஆங்கிலேயருக்கு எதிரான கிளர்ச்சியை முடுக்கி விட்டனர். இந்த சூழ்நிலையைச் சமாளிப்பதற்காகச் சென்னைக் கோட்டையில் இருந்த கும்பெனிக் கவர்னர், தளபதி அக்னியூ என்பவரைச் சிவகங்கைச் சீமைக்கு அனுப்பி வைத்தார். மருது சேர்வைக்காரருடன் மோதலை ஏற்படுத்தி வெற்றி கொள்வதற்கு முன்னர் புதிய திட்டம் ஒன்றைத் தளபதி அக்கினியூ நிறைவேற்றினார்.  மக்களிடையே மருது சேர்வைக்காரர்களுக்கு உள்ள பிடிப்பினை அகற்றுவதற்கும், சிவகங்கைச் சீமை மன்னரது வாரிசு ஒருவரை அரசு அங்கீகரிப்பதன் வழி எதிர் அணிகளிலிருந்து இராஜ விசுவாசிகளான மக்களைத் திரட்டுவது என்பது அக்னியூவின் திட்டமாகும். இந்தத் திட்டம் சரியாக நிறைவேற்றப்பட்டது.  இதற்காகக் கும்பெனிக் கவர்னர் ஜூலை 1801-ல் ஒரு பொது விளம்பரம் ஒன்றைச் சிவகங்கைச் சீமை மக்களிடையே பிரசித்தம் செய்தார். சிவகங்கைச் சீமை நிர்வாகத்தை இயக்கி வந்த மருது சேர்வைக்காரர்கள் சிவகங்கை அரசவழியினர் அல்லர் என்றும், அப்பொழுது சிவகங்கை மன்னராக இருந்த வேங்கன் பெரிய உடையாத் தேவர் சிவகங்கை சேர்வைக்காரர்களுக்குப் பயந்து அடங்கிச் செயல்படுகிறார் என்றும் ஆற்காட்டு நவாப்பின் அதிகாரம் பெற்ற பிரதிநிதிகள் ஆங்கிலேயர் என்றும், அந்த விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் சிவகங்கைச் சீமை மக்களைத் தவறான வழியில் விட்டுச் சென்று கொண்டிருக்கும் மருது சேர்வைக்காரரைப் பின்பற்றாமல் கிழக்கிந்தியக் கம்பெனியாருக்கு மக்கள் விசுவாசமாக நடந்து கொள்ள வேண்டும் என்றும், தவறினால் கடுமையான விளைவுகளைச் சந்திக்க வேண்டியதாக இருக்கும் என்றும், அந்த விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.  இந்த விளம்பரத்துடன் அமைந்துவிடாமல் தளபதி அக்னியூ புதுக்கோட்டை தொண்டைமானது உதவியுடன் அறந்தாங்கிக் காடுகளில் தலைமறைவு வாழ்க்கை நடத்தி வந்த சிவகங்கை மன்னரது வழியினரான படைமாத்துர் கெளரி வல்லப பெரிய உடையாத் தேவர் என்பவரைத் தேடிப்பிடித்து வந்து, சிவகங்கையை அடுத்த சோழபுரம் கிராமத்தில் 12.09.1801-ல் அவருக்குச் சிவகங்கை ஜமீன்தார் என்ற பட்டத்தினையும், கிழக்கிந்தியக் கம்பெனியார் வழங்கினர். தமிழகத்தில் முதன்முறையாக ஜமீன்தாரி முறையினை நடைமுறைப்படுத்துவதற்காக நியமிக்கப்பட்ட முதல் ஜமீன்தார் சிவகங்கை கெளரி வல்லப உடையாத் தேவர் ஆவார்.  இராமநாதபுரம் ஜமீந்தாரி:  இராமநாதபுரம் சீமையைப் பொறுத்தவரை மன்னர் முத்து ராமலிங்க சேதுபதி 08.02.1795-இல் பதவி நீக்கம் செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டதை முன்னரே குறிப்பிட்டுள்ளோம். கும்பெனியார் அவரது தமக்கையார் ராணி மங்களேஸ்வரி நாச்சியாரது உரிமையினை ஏற்றுக்கொண்டனரேயொழிய அவருக்கு இராமநாதபுரம் சீமையை ஆளும் உரிமையை வழங்கவில்லை. மாறாகக் கும்பெனியார் இராமநாதபுரம் சீமை நிர்வாகத்தைத் தமது கலெக்டர்கள் லாண்டன், பவுனி, ஜாக்சன், லூசிங்டன் ஆகியோர் மூலமாக கி.பி. 1803 வரை நடத்தி வந்தனர்.  ஆனால் மன்னரது இராஜ விசுவாசியான சித்திரங்குடி மயிலப்பன் சேர்வைக்காரரது கிளர்ச்சிகளின் காரணமாக கும்பெனியாருக்கு மிகுந்த இடையூறுகளும், இழப்புகளும் கி.பி. 1802 வரை ஏற்பட்டு வந்தது. மேலும் மேலும் அத்தகைய இழப்புகள் தொடர்வதைத் தவிர்க்க இராமநாதபுரம் சீமையில் ஒரு பாரம்பரிய ஆட்சிமுறையை அமுல் நடத்த வேண்டுமென அப்பொழுதைய கலெக்டர் லூசிங்டன் கும்பெனித் தலைமையை வற்புறுத்தி வந்தார்.[1]  கும்பெனித் தலைமையும் கலெக்டர் பரிந்துரையை ஏற்றுக்கொண்டு அன்றைய கும்பெனியாரது நடைமுறைகளின்படி இராமநாதபுரம் சீமையை ஜமீன்தாரியாக மாற்றி உத்திரவிட்டதுடன் முதல் ஜமீன்தாரினியாக மங்களேஸ்வரி நாச்சியாரை நியமனம் செய்தது.    1. ↑ Raja Ram Rao. T-Manual of Ramnad Samasthanam. 1891. Page-269                                          i. ராணி மங்களேஸ்வரி நாச்சியார்   கி.பி.(1803-1812)  கும்பெனியாருக்கு ஆண்டுதோறும் 3,20,000 ரூபாய் பேஷ்குஷ் தொகை செலுத்துவதாக ஒப்புக்கொண்டு 21.02.1803-ல் இராமநாதபுரம் ஜமீன்தாரினியாகப் பொறுப்பேற்றார் இராணி மங்களேஸ்வரி நாச்சியார்.[1] தொடர்ந்து இவரும் தமது முன்னோர்களைப்போல ஆன்மீகப் பணிகளில் மிகவும் அக்கறை கொண்டிருந்தார். திருஉத்திரகோசமங்கை, பள்ளிமடம், இராமநாதபுரம், நயினார் கோவில் ஆகிய ஆலயங்களுக்கு ஏராளமான நன்கொடை வழங்கினார். மதுரையில் உள்ள மதுரை ஆதீனத்தின் திருஞானசம்பந்த மடத்தின் சீரமைப்பிற்கும் மிகவும் உதவினார். தனது வளர்ப்பு மகள் சேசம்மாளின் பெயரில் திருப்புல்லாணியை அடுத்துள்ள அகத்தியர் குட்டத்தில் சீனிவாசப் பெருமாளுக்குச் சிறிய திருக்கோயில் ஒன்றை எடுத்துத் திருப்பணி செய்ததுடன் அக்கோயிலின் பராமரிப்பிற்காக நெடிய மாணிக்கம் என்ற ஊரையும் சர்வமான்யமாக வழங்கினார்.[2] மேலும் மதுரை வழியிலுள்ள போகலூரை அடுத்து பயணிகளுக்காக அன்னசத்திரம் ஒன்றையும் அமைத்தார். (சத்திரக்குடி எனத் தற்போது இந்த ஊர் வழங்கப்படுகிறது.) வேத விற்பன்னர்களுக்காகப் பல கிராமங்களைச் சர்வமான்யமாக வழங்கியதை மங்களேஸ்வரி நாச்சியாரின் 96 தர்மாசனங்கள் என சமஸ்தான ஆவணங்கள் தெரிவிக்கின்றன.  இவர் ஆட்சிக்கு வந்த அதே ஆண்டிலேயே இவரது கணவரான இராமசாமித் தேவர் காலமாகி விட்டார். அந்தக் காலகட்டத்தில் இங்கிலாந்திலிருந்து கொழும்பு வந்த ஜார்ஜ் வாலண்டினா பிரபு என்பவர் இராமேஸ்வரம் திருக்கோயிலைப் பார்வையிட்டு விட்டு, இராமநாதபுரம் ராணியைச் சந்தித்த விபரத்தை கி.பி. 1804-ல் வெளியிட்ட அவரது நூலில் குறிப்பிட்டுள்ளார்.[3] இவர், தன் கணவரின் மருமகனான அண்ணாசாமி என்பவரை கி.பி. 1807-இல் சுவீகாரப் புத்திரனாக ஏற்றுக் கொண்டார். அண்ணாசாமி மைனராக இருக்கும்போது ராணி மங்களேஸ்வரி நாச்சியார் கி.பி. 1812-இல் காலமானார்.    1. ↑ Raja Ram Rao.T- Manual of Ramnad Samasthanam (1891) Page-269.  2. ↑ கமால் S.M. Dr. சேதுபதி மன்னர் செப்பேடுகள் 1994). செப்பேடு எண்:  3. ↑ (Voyages and Travels to India and Ceylon-George Valanyine - Vol IP 140-148.)                        ii. அண்ணாசாமி சேதுபதி   (கி.பி. 1812-1815)  இராணி மங்களேஸ்வரி நாச்சியாருக்குப் பின், பதவிக்கு வந்த இவர் முத்து விஜயரகுநாத சேதுபதி என்ற பெயருடன் அழைக்கப்பட்டார். இவர் சிறு வயதினராக இருந்ததால், பிரதானி தியாகராஜ பிள்ளை நாட்டு நிர்வாகத்தைக் கவனித்து வந்தார். இவரது ஆட்சியில் குறிப்பிடத்தக்கவை ஏதுமில்லை. என்றாலும், பதவி நீக்கம் செய்யப்பட்ட முத்துராமலிங்க சேதுபதியின் ஒரே மகளான சிவகாமி நாச்சியார் இராமநாதபுரம் சீமையைத் தம்மிடம் ஒப்படைக்கும்படி கேட்டுக் கொண்டு மதுரையிலும் சென்னையிலுமாக வழக்குகளைத் தொடர்ந்தார். இந்த வழக்குகளின் தீர்ப்பு சிவகாமி நாச்சியாருக்குச் சாதகமாய் அமைந்ததால் இராமநாதபுரம் ஜமீன்தாரி அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் கும்பெனியாருக்குச் செலுத்த வேண்டிய பேஷ்குஷ் தொகையை வசூலித்து ஒழுங்காகச் செலுத்த முடியாததால் கும்பெனியார் ஜமீன்தாரியை கி.பி. 1815-ல் மீண்டும் அண்ணாசாமியிடம் ஒப்படைத்தனர். அவர் 1820-இல் இறப்பதற்கு முன்னால் தனது மைத்துனர் இராமசாமித் தேவரைச் சுவீகார புத்திரனாக நியமித்தார்.                                                iii. விஜயரகுநாத இராமசாமி சேதுபதி (கி.பி. 1814-30)  இராமநாதபுரம் ஜமீன்தார் ஆட்சியில் மூன்றாவது ஜமீன்தாராகப் பொறுப்பேற்றவர் அண்ணாசாமி சேதுபதியின் சுவீகாரப் புத்திரனான இராமசாமித் தேவர் என்பவர். இவரது ஆட்சிக்காலத்தில் இராமநாதபுரம் சமஸ்தானம் நடுவர் மன்ற நிர்வாகத்தில் இருந்தது. தொடர்ந்து 14 ஆண்டுகள் நீடித்த வாரிசு உரிமை வழக்கின் காரணமாக இராமநாதபுரம் சமஸ்தானம் முதன் முறையாக அதுவரை இல்லாத அளவிற்கு வறுமையில் இருந்து வந்தது. கிழக்கிந்தியக் கம்பெனியாரிடம் இருந்து மாதந்தோறும் அவர் பெற்று வந்த பராமரிப்புத் தொகையான ரூபாய் 100 எந்த வகையிலும் பொருத்தமற்றதாக இல்லை. யானையின் பசிக்கு கடலைப் பொரி ஈடாகாதல்லவா! பல தனவந்தர்களிடம் இவர் கடன் பெற்று வாழ்க்கை நடத்தியதில் ரூ. 96,000 வரையான கடனுக்குக் கடன்காரர்கள் அவர் மீது வழக்கு தாக்கல் செய்தனர்.  ஏற்கனவே இவர் இராமநாதபுரம் சமஸ்தானத்தைத் தம்மிடம் ஒப்படைக்குமாறு தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு இன்னொரு புறம் இதற்கிடையில் அவர் மரணமடைவதற்கு முன்னால் தமது மனைவி முத்து வீராயி நாச்சியாரின் சகோதரர் இராமசாமித் தேவரைத் தமது வாரிசாக நியமித்திருந்தார். இவருக்கு மங்களேஸ்வரி நாச்சியார், துரைராஜ நாச்சியார் என்ற இரு பெண் மக்கள் இருந்தனர். இவர் கி.பி. 1830-ல் இறப்பதற்கு முன்னர் தமது சகோதரியும் சுவீகாரத் தாயாருமான முத்து வீராயி நாச்சியாரைத் தமது வாரிசாக நியமித்தார். மைனர்களாக இருந்த அந்த இரண்டு பெண்களுக்குக் கார்டியனாகத் தனது தம்பி முத்துச்செல்லத் தேவரையும் நியமனம் செய்திருந்தார். இந்தச் சாசனத்தில் இராமநாதபுரம் ஜமீன்தாரியில், நிர்வாகப் பொறுப்பாளரான செய்யது இஸ்மாயில் சாகிப் என்பவர் கையெழுத்திட்டுள்ளார்.                                      iv. இராணி முத்து வீராயி நாச்சியார் மற்றும் v. ராணி சேது பர்வதவர்த்தனி நாச்சியார்   இராணி முத்து வீராயி நாச்சியாரது வேண்டுதலுக்கிணங்க மதுரைச் சீமை கலெக்டர் விவேஷிங் ஜமீன்தாரியை அவரிடம் ஒப்படைக்கப் பரிந்துரை செய்தார். அதனை ஏற்றுக்கொண்ட கம்பெனித் தலைமை இராமநாதபுரம், ஜமீன்தாரியை இராணி முத்து வீராயி நாச்சியாரிடம் ஒப்படைக்க உத்தரவிட்டது. இயல்பாகவே இராணியார் திறமையானவராகவும், அறிவுக்கூர்மையுடன் இருந்ததால் செய்யது இஸ்மாயில் சாகிபுடன் இணைந்து சமஸ்தான அலுவல்களைத் திறம்பட ஆற்றி வந்தார். பல ஆண்டுகளாகப் பற்றாக்குறையினால் அவதிப்பட்டு வந்த சமஸ்தானம் பலத்த நிதி வசதியுடன் திகழ்ந்தது. அடுத்து இறந்து போன இராமசாமி சேதுபதியின் பெண்மக்கள் மங்களேஸ்வரி நாச்சியாரும், அவரது தங்கை துரைராஜ நாச்சியாரும் அடுத்தடுத்து காலமானதால் மீண்டும் சமஸ்தான நிர்வாகத்திற்கு மிகப்பெரிய தலைவலி ஏற்பட்டது. இராமசாமித் தேவரது விதவையான பர்வதவர்த்தனி நாச்சியாரும் வேறு சிலரும் இராணி முத்து வீராயி நாச்சியாருக்கு எதிராகப் பல வழக்குகளைத் தொடர்ந்தனர். மேலும் எட்டையபுரம் பாளையக்காரர் இராமநாதபுரம் சமஸ்தானத்தின் தெற்கு எல்லையில் பல ஆக்கிரமிப்புகளைச் செய்து வந்தார். இவையனைத்தையும் இராணி முத்து வீராயி நாச்சியார் பொறுமையுடனும் மனத்திண்மையுடனும் சமஸ்தான மேனேஜர் செய்யது இஸ்மாயில் சாகிபின் தக்க ஆலோசனைகளைக் கொண்டு சமாளித்தார்.  இதற்கிடையில் இராமசாமி சேதுபதியின் பெண் மக்களுக்கு கார்டியனும், இராணி முத்து வீராயி நாச்சியாரின் சகோதரருமான முத்துச் செல்லத் தேவர் தானே இராமநாதபுரம் சமஸ்தானாதிபதியாகவும் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தர்மகர்த்தாவாகவும் தம்மைப் பிரகடனப் படுத்திக் கொண்டும் மதுரையில் உள்ள கலெக்டர் அலுவலக அலுவலர்களுக்குக் கையூட்டு வழங்கியும் இராமநாதபுரம் சமஸ்தானத்தின் நிதியினைப் பல வழிகளில் தவறாக அளித்து வந்தார். இப்பொழுது இராணி முத்து வீராயி நாச்சியாருக்கும் விதவை இராணியான பர்வதவர்த்தனிக்கும் உறவுகள் சீர் கெட்டன. இறுதியில் இராணியின் மாமியாரான முத்து வீராயி நாச்சியாரும் பர்வதவர்த்தனி நாச்சியாரும் சமரச உடன்பாட்டினைச் செய்துகொண்டனர். அதன்படி இராஜசிங்க மங்கலம் வட்டகையில் உள்ள பிடாரனேந்தல் பகுதிக்கு இராணி முத்து வீராயி நாச்சியாரைச் சப் டிவிசன் ஜமீன்தாரினியாகச் செய்யப்பட்டதுடன் இராமநாதபுரம் அரண்மனை வளாகத்தில் சர்வ சுதந்திரத்துடன் வசிப்பதற்கான உரிமையும் வழங்கப் பெற்று மாதந்தோறும் ரூ. 1000 மட்டும் இராமநாதபுரம் சமஸ்தானக் கருவூலத்திலிருந்து பெற்றுக் கொள்வதற்கும் இராணி பர்வதவர்த்தனி நாச்சியார் ஒப்புதல் அளித்தார். மேலும் ஏற்கனவே முத்து வீராயி நாச்சியார் சுவீகாரப் புத்திரனாக ஏற்றுக் கொண்டிருந்த சிவசாமி சேதுபதியை இராமநாதபுரம் பட்டத்திற்கு உரிமை கோருவது இல்லை என ராணி முத்து வீராயி நாச்சியார் இணக்கம் தெரிவித்தார். இது நடந்தது 29.3.1850-ல். இந்த உடன்பாட்டைச் செய்து கொள்வதற்கு முன்னர் இராணி பர்வதவர்த்தனி நாச்சியார் சிவஞானத்தேவரின் மகனும் புதுமடம் கிராமத்தில் உள்ள தனது தங்கை வீராயியின் மகனுமான முத்து இராமலிங்கத்தை 24.5.1847-ல் தனது வாரிசாக ஏற்றிருந்தார்.              vi. துரைராஜா (எ) முத்துராமலிங்க சேதுபதி   ஐந்து வயது பாலகரான இந்த முத்துராமலிங்கத்தை இராணி பர்வதவர்த்தனி நாச்சியார் தனது மகனாகவும். இராமநாதபுரம் சீமை மன்னராகவும் ஏற்றுக்கொண்ட பொழுதிலும், இராணியாரது உறவினர்களும், ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியாரும், அவரது நியமனத்தை அங்கீகரிக்கவில்லை. தங்களது ஒப்புதல் இல்லாமல் இந்தச் சிறுவனது சுவீகாரம் ஏற்றுக்கொள்ளப்பட்டு இருப்பதால் அதனை அவர்கள் ஆட்சேபணை செய்து பல வழக்குகளை மதுரை, சென்னை வழக்கு மன்றங்களில் தாக்கல் செய்தனர். இறுதியாக மன்னரது சார்பாக இங்கிலாந்து நாட்டு லண்டன்மாநகரப் பிரிவி கவுன்சில் அளித்த சாதகமான தீர்ப்பினைக் கொண்டு இளைஞர் முத்துராமலிங்கம் சேது நாட்டின் மன்னராக அங்கீகரிக்கப்பட்டார்.  இந்த மன்னர் இளமைக்காலத்தில் மிகவும் மந்தமாகவும், அரசியல் அலுவல்களில் சிறிதும் அக்கரை இல்லாமலும் இருந்து வந்தார். ஆனால் அதே சமயத்தில் இந்த இளைஞர் இயல் தமிழின் இலக்கண, இலக்கியங்களிலும், இசைத் தமிழின் இராகம், மேளம் ஆகியவைகளிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டு இருந்தார். அன்றைய தமிழ்ப்புலவர்கள் இவரை ‘நிமிசகவி’ என அழைத்தனர். நிமிட நேரத்தில் சிறந்த தமிழ்க் கவிதை ஒன்றை இலக்கண முறைப்படி இயற்றி முடிக்கும் தன்மை வாய்ந்த காரணத்தால், இவருக்கு இந்தப் பெயர் வழங்கப் பெற்றது.  முந்தைய சேது மன்னர்கள் இராமேஸ்வரம் இராமநாதசுவாமியிடம், பக்தியும் ஈடுபாடும் கொண்டிருந்தனர். மாறாக, இவர் குமரக்கடவுள் மீது குறையாத அன்பு கொண்டு முருகனைத் தவிர வேறு தெய்வம் இல்லை என வாதிட்டு வந்தார். இவர் இயற்றிய 7 சிற்றிலக்கியங்களில் மூன்று முருகனைப் பற்றியது ஆகும். 'வள்ளி மணமாலை’, ‘சரசசல்லாப மாலை’, ‘சடாக்கரப் பதிகம்’ என்பன அவை. இவரது பிற படைப்புக்கள் பாலபோதம், நீதிபோதம் என்பனவாகும். ஏறத்தாழ 1000 பாடல்கள் இவர் இயற்றியுள்ளார்.  அதுவரை வாழ்ந்த சேதுமன்னர்கள் புலவர்களது புதிய படைப்புக் களுக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்துச் சிறந்த தமிழ்ப்புரவலராக விளங்கி வந்தனர். இந்த மன்னரோ புரவலராக மட்டுமல்லாமல், தமிழ்ப் புலவராகவே அமைந்து விளங்கியது நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றது. மேலும் ஏராளமான தமிழ் இசைப்பாடல்களையும், பிறமொழிப் பாடல்களையும் இவரே இயற்றியுள்ளார். அவை, காயகப்பிரியா, ரசிகரஞ்சனம் என்ற இரு தொகுப்புக்களாக 1860-ல் அச்சில் வெளிவந்துள்ளன.  இன்னொரு குறிப்பிடத்தக்க செய்தி இந்தச் சிறந்த பெரும் புலவர், இசைமேதை, மறவர் சீமையின் பாரம்பரிய கலைகளான விற்போர், ஈட்டி எறிதல், வாள் சண்டை ஆகியவைகளிலும் மிகச்சிறப்பாக விளங்கினார் என்பது ஆகும். தமிழ்ப்புலவரும் வள்ளலுமான இவரது தமையனார் பொன்னுசாமித் தேவர் என்பவர் இம்மன்னரது அரசியல் நிர்வாகப் பிரச்சனைகளுக்கு உதவி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். முதலாவது முத்துராமலிங்க சேதுபதிக்கு வாய்த்த பிரதானி உச்சிநத்தம் முத்து இருளப்ப பிள்ளையைப் போன்று சேதுநாட்டின் ஆக்கப்பூர்வமான செயல் திட்டங்களுக்கு இவர் மிகவும் உதவினார். 19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இவரை ஒத்த அரசியல் அறிஞர் அப்பொழுது வேறு யாரும் இல்லை என்றே சொல்லலாம். இராமநாதபுரம் சமஸ்தானம் சம்பந்தப்பட்ட அனைத்துப் பிரச்சனைகளுக்கு எளிதாகத் தீர்வு கண்டதுடன் தனது தம்பியும், மன்னருமான முத்துராமலிங்க சேதுபதியின் அரசியல் முடிவு பற்றிய வழக்குகளை மதுரை, சென்னை நீதிமன்றங்களிலும் இறுதியாக இங்கிலாந்து நாட்டு இலண்டன் நகரப் பிரிவி கவுன்சில் மன்றத்திலும் சிறப்பாகப் பாடுபட்டு வெற்றி பெற்றார்.  இவர் ஒரு தமிழ் வள்ளல், சாகித்திய இசைப்புலவர், தமிழ்ப் புரவலர். யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலரைக் கொண்டு சைவ சாத்திரங்களை வெளியிட்டு உதவினார். அவரது சொந்த ஆக்கமான இசைப்பாடல்களைத் தொகுப்பாக அச்சிட்டு கி.பி. 1861-ல் வெளியிட்டார். பழனி மாம்பழக் கவிராயர் போன்ற சிறந்த தமிழ்ப் புலவர்களை ஆதரித்ததுடன், சேது புராணம் போன்ற இலக்கியங்களை சொந்தச் செலவில் அச்சிட்டு, தமிழ்ப் புலவர்களுக்கு இலவசமாக அனுப்பி வைத்தார். இதற்கெல்லாம் மேலாக தில்லையம்பூர் புலவர் சந்திர சேகர புலவரைக் கொண்டு தமிழகத்தின் பல பகுதிகளிலும் பாடப்பட்டு வந்த தனிப் பாடல்களைத் தொகுக்கச் செய்து தமிழில் முதன் முறையாகத் தனிப்பாடல் திரட்டு என்ற நூல் வெளியீட்டை அச்சில் கொணர்ந்தார். இவர், பாஸ்கர, தினகர் என்ற இரண்டு ஆண் மக்களையும். இராணி பானுமதி என்ற பெண் மகளையும் தமது வாரிசாக விட்டுத் தமது 32-வது வயதில் கி.பி. 1873-ல் காலமானார்.                                                                vii. மன்னர் பாஸ்கர சேதுபதி (1888-1903)   துரைராஜா (எ) முத்துராமலிங்க சேதுபதி இறக்கும்போது அவரது மூத்த மகன் பாஸ்கர சேதுபதி ஐந்து வயது பாலகனாக இருந்தார். பிரிட்டிஷ் துரைத்தனத்தார் இராமநாதபுரம் ஜமீன்தாரி நிர்வாகத்தை முழுமையாக ஏற்றுக் கொண்டனர். அத்துடன் இராஜ குடும்பத்தைப் பராமரித்து வந்ததுடன் பாஸ்கர சேதுபதிக்கும் அவரது தம்பி தினகர சேதுபதிக்கும் கல்வி புகட்டும் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டனர். அதற்காக அந்தச் சிறுவர்கள் இருவரையும் சென்னைக்கு அனுப்பி ஆங்கில ஆசான்கள். தாதிமார்கள், பணியாட்கள் ஆகியோரை அவர்களுக்கென நியமித்து முறையாகக் கல்வி பெறுவதற்கு ஏற்பாடு செய்தனர். கி.பி. 1888-ல் பாஸ்கர சேதுபதி சென்னை கிறுத்தவக் கல்லூரியிலிருந்து பட்டதாரியாக வெளி வந்தவுடன் இராமநாதபுரம் ஜமீன் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். இவரது 12 வருட நிர்வாகத்தில் பல கண்மாய்களும், நீர்ப்பாசன ஆதாரங்களையும் பழுது பார்க்க ஏற்பாடு செய்தார். பெரும்பாலும் சமஸ்தானத்தின் பல பகுதிகளுக்கும் சாலை வசதி இல்லாத அந்தக் காலத்தில் பல்லக்கிலே பயணம் செய்து மக்களது வாழ்க்கை நிலையையும், தேவைகளையும் அறிந்து வந்தார்.  இவர் சிறந்த சைவ சித்தாந்தியாக இருந்து வந்ததால் இராமநாதபுரம் சீமை சமஸ்தான கோவில்களில் ஆகம முறைப்படி வழிபாடுகளும் விழாக்களும் நடந்து வர ஏற்பாடு செய்தார்.  இந்த மன்னர் பொருள் வசதி குறைந்த ஜமீன்தார் அமைப்பு முறையிலே இயங்கி வந்தாலும் இவரது இதயம் அவரது முன்னோர்களைப் போன்று விசாலமானதாகவும் ஆன்மீகப் பணியில் பற்றுக் கொண்டதாகவும் அமைந்து இருந்தது. இவரது ஆட்சிக் காலத்தில் நொச்சிவயல் பிரம்மபுரீஸ்வரர் ஆலயம் புதிதாக நிர்மாணிக்கப்பட்டது ஆகும். இராமநாதபுரம் கோதண்டராம சுவாமி திருக்கோயில், மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில், இராமேஸ்வரம் இராமநாத சுவாமி திருக்கோயில், இராமநாதபுரம் இராஜேஸ்வரி அம்மன் ஆலயம் ஆகியன திருப்பணி செய்யப்பட்டன. மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்திலும், திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி ஆலயத்திலும், திருச்செந்தூர், பழனி, முருகன் ஆலயங்களிலும் சிதம்பரம் நடராஜர் ஆலயத்திலும், காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலிலும் உச்சி காலக் கட்டளைகளை ஏற்படுத்தினார். அவைகள் இன்றும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. சென்னை கபாலீஸ்வரர் கோயில் இறைவர் பவனி வருவதற்காகவும், காளையார் கோவில் காளைநாதர் கோவிலுக்கும் புதிய பல்லக்குகளைச் செய்து கொடுத்ததுடன் இராமேஸ்வரம் இராமநாதசுவாமி உலா வர வெள்ளித் தேர் ஒன்றினையும் செய்து வழங்கினார். இராமநாதபுரம் ராஜேஸ்வரி அம்மன் பயன்பாட்டிற்காகச் சிம்ம வாகனம் ஒன்றினை அமைத்து அதனை முழுதுமாக தங்கத் தகட்டினால் நிறைவு செய்து அகமகிழ்ந்தார். மேலும் ராஜேஸ்வரி அம்மன் கோயில் கோபுரத்தையும் பொன் தகடுகளால் வேய்ந்து உதவினார். இவரது காலத்தில் தான் இராமேஸ்வரம் திருக்கோயிலின் முதலாவது குட முழுக்கு 1.11.1902-ல் நடைபெற்றது.  இவைகளையெல்லாம் விஞ்சிய சாதனை ஒன்றையும் படைத்தார். அதாவது 14.9.1893-ஆம் நாள் அமெரிக்க நாட்டு சிக்காகோ நகரில் நடைபெற்ற அனைத்து உலக சமயப் பேரவைக்குச் சுவாமி விவேகானந்தரைத் தனது சொந்தச் செலவில் அனுப்பி வைத்து நமது நாட்டின் பழம் பெருமையினை உலகு அறியச் செய்ததாகும்.  இவரது பாடல்கள் ஆலவாய்ப் பதிகம், இராமேஸ்வரர் பதிகம். காமாட்சி அம்மன் பதிகம். இராஜேஸ்வரி பதிகம் ஆகியன மட்டும் கிடைத்துள்ளன. மேலும் 14.9.1901-ல் மதுரை மாநகரில் வள்ளல் பாண்டித்துரை தேவர் நான்காம் தமிழ்ச்சங்க நிறுவ அவருக்குத் தக்க துணையாக இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.  மேலும் இவர் ஒரு சிறந்த சைவ சித்தாந்தியாக இருந்து வந்ததால் இராமநாதபுரம் அரண்மனையில் இவரது முன்னோர்களால் பிரதிட்டை செய்து வழிபாடுகள் நடத்தப்பட்டு வந்த பூரீ ராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில் நடைபெற்று வந்த உயிர்ப் பலியினை இவரது மனம் பொறுத்துக்கொள்ள வில்லை. ஆதலால் அப்பொழுது கர்நாடக மாநிலத்தில் சிறப்புற்று விளங்கிய சிருங்கேரி மடாதிபதியான ஸ்ரீ நரசிம்ம பாரதி அவர்களை வரவழைத்து இராஜேஸ்வரி ஆலயத்தின் உயிர்ப்பலி வழிபாட்டினை நிறுத்துவதற்கு ஏற்பாடு செய்தார்.  அந்த ஆலயத்திற்கு வருகை தந்த சிருங்கேரி சுவாமிகள் புதிய சக்கரம் ஒன்றை கருவறையில் ஸ்தாபித்து, ஏனைய திருக்கோயில்களில் நடைபெறுவது போன்ற வாம பூஜையை அங்கும் கைக் கொள்ளுமாறு அர்ச்சகர்களுக்கு அறிவுறுத்தினார். அன்றிலிருந்து அந்த ஆலயத்தில் உயிர்ப்பலி கொடுப்பது நிறுத்தப்பட்டது.  சிருங்கேரி மடாதிபதிகள் மன்னர் பாஸ்கர சேதுபதியின் ஒய்வு மாளிகையான சங்கர விலாசத்தில் தங்கியிருந்த பொழுது நிகழ்ந்த மிகவும் முக்கியமான நிகழ்ச்சி, ஒன்றினை இங்கு குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும்.  வழக்கம் போல ஒரு நாள் முற்பகலில் மன்னர் பாஸ்கர சேதுபதி சுவாமிகளைச் சந்திப்பதற்காக அங்கு வந்தார். அப்பொழுது சுவாமிகள் தாம் இராமநாதபுரத்திற்கு வருகை தந்த பணி முடிவுற்றதால் ஊருக்கு பயணம் மேற்கொள்ள இருப்பதை தெரிவித்தார். அத்துடன் தமது பணிக்காக மன்னர் குரு தட்சணையாக எதனைக் கொடுக்க விரும்புகிறார் என வினவினார். உடனே மன்னர் நாம் அணிந்திருந்த அரச சின்னங்களை அழகிய தலைப்பாகையையும் உடை வாளையும் சுவாமிகளது திருவடிகளில் சமர்ப்பித்து, "இந்த சேது சமஸ்தானத்தை எனது குரு தட்சணையாக அருள் கூர்ந்து சுவாமிகள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.” என பணிவுடன் கேட்டுக்கொண்டார். சற்றும் எதிர்பாராத மன்னரது அந்த பதிலைக் கேட்ட சுவாமிகள் மிகவும் வியப்புக்குள்ளானார். ஒருவாறு நிலைமையை சமாளித்துக்கொண்டு, ‘இயல்பாகவும் வேடிக்கையாகவும் தான் குருதட்சணை கோரினேன் தங்களது அன்பும் ஆன்மீக உணர்வும் மிக்க இந்த தானத்தை நான் ஏற்றுக் கொண்டேன். ஆனால் அதனை தங்களது குமாரருக்கு நான் தானம் வழங்கிவிட்டேன்.” என்று சொல்லி மன்னரது அருகில் நின்று கொண்டிருந்த மன்னரது மகன் முத்து ராமலிங்கத்தின் தலையில் தலைப்பாகையை அணிவித்து இடையில் உடைவாளையும் அணிவித்தார். அப்பொழுது அங்கிருந்தவர்களுக்கு இந்த நிகழ்ச்சிகள் ஒரு அதிசய சாதனையாகத் தோன்றியது. இது நடத்து கி.பி. 1894ல்.  ஏற்கனவே இந்த மன்னருக்கு தமிழ்ப்பணியில் மிகுந்த ஈடுபாடு இருந்ததால் தமது அவைப்புலவர் மகா வித்துவான் இரா. இராகவ ஐயங்கார் சுவாமிகளை ஒரு பல்லக்கில் அமர வைத்து ஏனைய பல்லக்கு போகிகளுடன் தாமும் நின்று அந்தப் பல்லக்கை சுமந்து தாம் தமிழுக்கும் தமிழ்ப் புலவர்களுக்கும் கட்டுப்பட்டவர் என்பதை உலகறியச் செய்தார். மேலும் இந்த நிகழ்ச்சியினைக் குறிப்பிட்டு வரைந்து ஒரு பத்திரம் ஒன்றையும் மதுரை பதிவாளர் அலுவலத்தில் 4.11.1901ல் பதிவு செய்து கொடுத்தார். இந்தப் பத்திரத்தின்படி தமிழ் மொழியினை வளர்ப்பதற்கும் தமிழ்ப்புலவர்களைக் காப்பதற்கும் தாம் கடமைப்பட்டவர் என்பதை குறிப்பிட்டு இருப்பதுடன் அந்த அழகிய பல்லக்கை மகாவித்துவான் அவர்கள் இராமநாதபுரம் அரண்மனைக்கு வந்து செல்ல பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அதற்கான நிவந்தமாக ரூபாய் 360 இராமநாதபுரம் சமஸ்தான கருவூலத்திலிருந்து 6 மாதங்களுக்கு ஒருமுறை பெற்றுக் கொள்ளலாம் என்பதையும் அந்த ஆவணத்தில் பதிவு செய்துள்ளார்.  சிறந்த சொற்பொழி வாளராகவும், தமிழ்ப்புலவராகவும் வரையாது வழங்கும் வள்ளலாகவும் வாழ்ந்த இந்த மன்னர் கல்லிடைக்குறிச்சியில் உள்ள திருவாவடுதுறை மடத்திற்குச் சென்றிருந்தபோது 27.12.1903-இல் காலமானார். ஜமீன்தாரி ஆட்சி காலத்தில் இவருடைய ஆட்சிகாலமே பொற்காலமாகும்.                    viii. இராஜ இராஜேஸ்வர சேதுபதி (எ)  மூன்றாம் முத்துராமலிங்க சேதுபதி (1910-1929)   பாஸ்கர சேதுபதியின் மறைவின்போது அவரது மூத்த மகனான இராஜ இராஜேஸ்வரன் சிறுவயதினராய் இருந்ததால் தொடர்ந்து இராமநாதபுரம் ஜமீன்தாரி நிர்வாகம் கோர்ட் ஆப் வார்ட்சிடம் இருந்து வந்தது. இராஜ இராஜேஸ்வர சேதுபதி கல்வியிலும் நிர்வாகத்திலும் பயிற்சி பெற்றபின் 1910-ல் ஜமீன் பொறுப்பை ஏற்றுக்கொண்டு 1929-ல் இறக்கும்வரை ஜமீன்தாராக இருந்தார்.  இவர் நல்ல தமிழ்ப் புலமையும் ஆங்கில மொழிப் பேச்சாற்றலையும் உடையவராக இருந்தார். 1911-இல் மதுரைத் தமிழ்ச்சங்கத் தலைவராக தேர்வு செய்யப்பட்டு சிறந்த முறையில் சங்கத்தைச் செயல்படுத்தி வந்தார். சென்னை மாநில கவர்னரது பொறுப்பிலிருந்த சென்னை மாநில சட்ட மேலவையில் (தமிழ்நாடு, ஆந்திரம், கர்நாடகம், கேரளம் உட்பட்ட பெரிய தமிழ் மாநிலம்) ஜமீன்தார்களுக்கு ஒதுக்கப்பட்ட ஒரே இடத்தின் பிரதிநிதியாக இருந்தார். இவர் காலத்தோடு, ஆண்டுதோறும் நடக்கும் நவராத்திரி விழாவில் தமிழ்ப் புலவர்களை ஊக்குவித்து சன்மானமும் பொன்னாடை வழங்கும் பழக்கமும் நிறைவுக்கு வந்தது. இவர் ஆட்சியின் போது இரண்டாம் உலகப் போர் நடந்ததால், நேச நாடுகளை வலுப்படுத்துவதற்கு ஆதரவாக இராமநாதபுரம் சீமை மறவர்களை இராணுவ அணியில் சேருமாறு பிரச்சாரம் செய்ததுடன் பல இலட்சங்களை நன்கொடை அளித்து அதிலிருந்து இராம்நாட் என்று பெயர் சூட்டப்பெற்ற விமானம் ஒன்றை வாங்கி அரசுக்கு அன்பளிப்பாக வழங்கினார். இராமநாதபுரம் மாவட்ட நகராண்மைக் கழகத்தின் தலைவராக இவர் பல ஆண்டுகள் பணியாற்றினார். இவரது பணிக் காலத்தில் இன்றைய மானா மதுரை நகரை மானாமதுரை ரயில் சந்திப்புடன் இணைப்பதற்காக வைகை ஆற்றின் குறுக்கே மிகப் பெரிய பாலம் ஒன்றை கட்டுவித்தார். இராமேஸ்வரம் வரும் பயணிகள் தனுஷ்கோடி தீர்த்தக் கரையில் நீராடுவதற்காக இராமேஸ்வரத்திற்கும் தனுஷ்கோடிக்கும் இடையில் தர்மப் படகு சேவையைக் கடலில் தொடங்கி வைத்தார். மற்றும் திருப்புல்லாணி பெருமாளது திருத்தேர் (திருமலை ரெகுநாத சேதுபதியினால் வழங்கப் பெற்றது.) மிகவும் பழுதடைந்து விட்டதால் புதிய தேர் ஒன்றையும் செய்வித்து அந்த கோவிலுக்கு வழங்கினார். 1921-ல் திருச்சி நகரில் நடைபெற்ற பிராமணர் அல்லாதார் மாநாட்டிற்குத் தலைமை தாங்கினார் என்ற செய்தியும் உள்ளது. மதுரை மீனாட்சி சொக்கநாதர் திருக்கோயில் வடக்கு ராஜகோபுர திருப்பணிக்காக ரூபாய் ஒரு லட்சம் நன்கொடை வழங்கியதும் குறிப்பிடத்தக்கதாகும்.  மேலும் இந்த மன்னரது ஆட்சிக்காலத்தில் சமஸ்தான அவைப் புலவராகத் தொடர்ந்து பணியாற்றிய மகாவித்துவான் இரா. இராகவ ஐயங்கார் சுவாமிகளைத் தமது தந்தையைப் போல வாழ்க்கைக்காக இராமநாதபுரம் நொச்சிவயல் ஊரணி வீதியில் ஒரு வீடு ஒன்றை அமைத்துக் கொடுத்ததுடன் இராமநாதபுரத்திற்கு அருகில் உள்ள போகலூர் கிராமத்தில் ஆற்றுப் பாய்ச்சலில் சில விளைநிலங்களையும் வாங்கித் தானமாக வழங்கினார். இவரது தந்தையைப் போலவே இவரும் சிறந்த தமிழ்ப் புலவராகத் திகழ்ந்தார். நூற்றுக்கணக்கான தனிப்பாடல்களை எழுதியிருப்பதுடன் திருக்குறள் வெண்பா என்ற நூலினையும் இயற்றியுள்ளார்.                    ix. சண்முக ராஜேஸ்வர நாகநாத சேதுபதி   1944-ல் ஜமீன் பொறுப்பை ஏற்றுக்கொண்ட சண்முக ராஜேஸ்வர நாகநாத சேதுபதியின் ஆட்சிகாலம் ஜமீன் ஒழிப்புச் சட்டம் அமுலுக்குக் கொண்டு வந்த 1948-ஆம் வருடத்துடன் முடிவடைந்தது. தமிழக வரலாற்றில் இராமநாதபுரம் சமஸ்தானம் என்று மிகச் சிறப்பாக முந்தைய நூற்றாண்டுகளில் ஆட்சி செய்த சேதுபதி மன்னர்களது தன்னரசு வளமையிலும், பரப்பிலும் குறுகி புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம் எனப் பிரிவினை பெற்றுப் பின்னர் ஜமீன்தாரியாகி வரலாற்றிலிருந்து மறைந்துவிட்டது ஒரு சோக நிகழ்ச்சியாகும்.  இந்தக் கடைசி மன்னர் அரசியலிலும் ஈடுபட்டு இராமநாதபுரம் ஜில்லா போர்டு தலைவராகவும், பின்னர் 1952-லிருந்து 1967 வரை தொடர்ந்து தமிழ்நாடு சட்டமன்ற இராமநாதபுரம் தொகுதி உறுப்பினராகவும், 1952 - 57 வரை ராஜாஜி, காமராசர் ஆகியோர் அமைச்சரவைகளில் முறையே விளையாட்டுத் துறை, பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்து சிறப்பாகப் பணியாற்றினார். மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் தலைவராகவும், இராமேஸ்வரம் திருக்கோயில் அறங்காவலர் குழுத் தலைவராகவும், இறுதிவரை இருந்தார். இவர் இசைப்பிரியர். இவர் ஒரு விளையாட்டு வீரர். கிரிக்கெட், டென்னிஸ், குதிரை ஏற்றத்தில் கைதேர்ந்தவர். சென்னை பந்தயக் குதிரைக்காரர்களது சங்கத்தின் தலைவராகவும் பல ஆண்டுகள் பணிபுரிந்து வந்தார். இவர் 1967-ல் காலமானார். இவரது ஆட்சியில் இராமநாதபுரம் நகருக்கு மேற்கே 18 கல் தொலைவில் வைகை ஆற்றிலிருந்து இராமநாதபுரம் நகருக்குக் குடிநீர் குழாய் வசதிக்கு ஏற்பாடு செய்தார். இராமநாதபுரம் நகருக்கு தெற்கே திருப்புல்லாணி அருகிலும் வடக்கே இராஜசிங்கமங்கலம் அருகிலும் மேற்கே லாந்தை அருகிலும் தேசிய நெடுஞ்சாலைகளில் பெரிய பாலங்கள் அமைப்பதற்கு உதவினார். அவர் பயின்ற மதுரையில் உள்ள மதுரைக் கல்லூரியிலும் இராமநாதபுரம் மன்னர் மேல்நிலைப் பள்ளியிலும் பெரிய அறிவியல் கூடங்களை அமைக்கவும் உதவி செய்தார். இராமநாதபுரம் சேதுபதி அரசினர் கல்லூரி இவரது நன்கொடையில் அமைக்கப்பட்டது.                                    இயல் - X i. ஜமீன்தாரி முறையின் சுவடுகள்   தன்னரசு நிலையிலிருந்து தாழ்வு பெற்ற மறவர் சீமைக்கு ஆங்கில ஏகாதிபத்திய வாதிகள் அளித்த பரிசான ஜமீன்தாரி முறை சேது நாட்டு மக்களது அன்றாட வாழ்க்கையை மேலும் பாதித்தது என்றால் மிகையாகாது. வரலாற்றில் மிகச் சிறப்பாக இடம் பெற்றிருந்த கிரேக்க ரோமப் பேரரசுகள் அழிந்தபொழுது அன்றைய காலகட்டத்தில் அந்த நாட்டு மக்கள் அடைந்திராத அவலங்களை இந்த நாட்டு மக்கள் அனுபவித்தனர். இந்த நாட்டின் ஒரே ஒரு தொழிலாக விளங்கிய விவசாயம் பல ஆண்டுகளாகப் புறக்கணிக்கப்பட்டதால் இங்குள்ள குடிமக்கள் காலத்தே பெய்யும் பருவ மழைப் பெருக்கைப் பழுதடைந்துள்ள கண்மாய்களில் தேக்கி வைத்து விவசாயம் செய்ய முடியாமல் தவித்தனர். பண்டைய காலம் தொட்டு அரசுக்குச் செலுத்தி வந்த விளை பொருளின் மீதான ஆறில் ஒரு பகுதிக்குப் பதில் விவசாயியும் அரசும் சரிசமானமாக விளைச்சலைப் பங்கிட்டுக் கொள்ளும் முறை தொடர்ந்தது. உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்கு அரிசி மிஞ்சாது என்ற பழமொழி உண்மையாகி விட்டது. மிகுதியாக விளைந்த விளை பொருட்களைச் சந்தைப்படுத்துவதிலும் பல சிரமங்கள் தோன்றின. சாலைப் போக்கு வரத்து சிரமம் ஆற்காட்டு வெள்ளி ரூபாய், பரங்கியரது பக்கோடா பணம் ஆகியவைகளுக்கு ஈடாகச் சேது மன்னர்களது பழைய பொன், வெள்ளி நாணயங்களை மாற்றிக் கொள்ளும் வசதிகளும் ஆங்காங்கு ஏற்படவில்லை. மேலும் இந்த நாட்டின் மற்றொரு சிறந்த தொழிலான நெசவுத் தொழிலும் நசித்துப் போய் நெசவாளிகள் பட்டினியும் பசியுமாக வாடவேண்டிய சூழ்நிலை - சேது மன்னர்களது ஆட்சிக்காலத்தில் கைத்தொழிலுக்கு மட்டும் விதிக்கப்பட்ட தறிக்கடமை என்ற தீர்வைக்குப் பதிலாக நெசவாளிகள் தயாரித்த ஒவ்வொரு மடித் துணிக்கும் தனித்தனியாகப் பரங்கியருக்குச் செலுத்த வேண்டிய தீர்வையின் சுமை அதிகரித்து வந்தது.  இவை தவிர ஆங்காங்கு பழைய தமிழ்ப் புலவர்களது வழியினரால் நடத்தப்பட்டு வந்த திண்ணைப் பள்ளிக்கூடங்களுக்கு வேற்று நாட்டு அரசின் ஆதரவு இல்லாததால் அவைகளை மூடவேண்டிய கட்டாயச் சூழ்நிலை. இன்னும் மருத்துவ வசதி, சாலை வசதி போன்ற இன்றியமையாத உதவிகளையும் ஆங்கில அரசு செய்ய முன் வரவில்லை. அவர்களது ஒரே பணி விவசாய மக்களிடமிருந்து தீர்வையைச் சரிவர வசூலிப்பது மட்டும் குறிக்கோளாக இருந்தது. கி.பி. 1940, 45-ல் தேசிய இயக்கம் விறுவிறுப்பு அடைந்த நிலையில் இன்றைய தேசிய காங்கிரஸ் சென்னை மாகாணத்திலுள்ள ஜமீன்தாரி பகுதிகளில் வாழ்ந்து வருகின்ற விவசாயிகளது இடர்பாடுகளை ஆய்வு செய்வதற்கு ஆந்திர கேசரி பிரகாசம் பந்துலுவின் தலைமையில் ஒரு குழு ஏற்படுத்தப்பட்டது. அந்தக் குழுவின் ஒருமித்த முடிவுப்படி கி.பி. 1947-ல் இந்திய தேசிய காங்கிரஸினர் சென்னை மாநில ஆட்சியை முதன்முறையாக கைப்பற்றியவுடன் ஜமீன்தாரி ஒழிப்பு மசோதாவைச் சட்டமன்றத்தில் நிறைவேற்றினர்.  இந்தச் சட்டத்தின் மூலம் உழைப்பவருக்கு நில உரிமை வழங்கப்பட்டது. ஆனால் சேது மன்னர்கள் ஆட்சியில் வழங்கப்பட்ட பல சலுகைகள் குடிமக்களுக்கு எட்டாக் கனியாகவே இருந்தது. சமுதாயப் பணிகள், ஆன்மீகத் தொண்டுகள், தமிழ்மொழி வளர்ச்சி, நாட்டுப்புறக் கலைஞர்களது நலிவை நீக்கி அவர்களது கலைத்திறனை ஊக்குவித்தல் போன்ற இலக்குகள் இனிமேல் தான் எட்டப்பட வேண்டும்.                ii. சில முக்கிய நிகழ்வுகள்   இன்றைய இராமநாதபுரம் அரண்மனை கி.பி. 1690-95 முதல் சேது நாட்டு நிர்வாகத்திற்குச் சிறப்பிடமாக அமைந்து வந்துள்ளது. அங்கு நடந்த சில முக்கிய நிகழ்வுகளைக் கூட அறிந்து கொள்ளத்தக்க ஆவணங்கள் கிடைக்கவில்லை எனினும் பல துறைகளில் இருந்து சேகரிக்கப்பட்ட சில நிகழ்வுகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.  1. மதுரை கத்தோலிக்க திருச்சபையின் ஆவணங்களிலிருந்து தொகுக்கப்பட்டது. மதுரை திருச்சபையைச் சார்ந்த ஜான் டி பிரிட்டோ பாதிரியார் கி.பி. 1692-ல் ராஜ அவமதிப்புக் குற்றம் சாட்டப்பட்டு இராமலிங்க விலாசம் அரண்மனையில் விசாரிக்கப்பட்டதும் மன்னர் ரெகுநாத கிழவன் சேதுபதி மன்னரது இரகசிய ஆணையுடன் ஓரியூர் கோட்டைக்கு அனுப்பப்பட்டு 4.2.1893-ல் கொலை செய்யப்பட்டதும் ஆகும்.  2. முத்து விஜய ரெகுநாத சேதுபதியின் ஆட்சியில், தஞ்சை, மதுரை நாயக்க மன்னர்களைப் போன்று தெலுங்கு மொழியும் சேது மன்னரது ஆதரவுக்கு உரியதாக விளங்கியது. அரண்மனை வளாகத்தில் அமைக்கப் பெற்ற கலையரங்கில் ‘முத்து விஜய ரெகுநாத விஜயம்’ என்ற தெலுங்கு நாடகம் நடித்துக் காட்டப்பெற்று அந்த நிகழ்ச்சியில் கலைஞர்கள் மன்னரால் பாராட்டப் பெற்றனர்.  2.அ. முத்து விஜய ரகுநாத சேதுபதி ஆட்சியில் கிழவன் ரெகுநாத சேதுபதி அமைத்த கொலு மண்டபத்தின் அனைத்துச் சுவர்களும் துண்களுக்கு இடையிலுள்ள வில் வளைவுகளும் அழகும் கவர்ச்சியும் மிக்க வண்ண ஒவியங்களால் தீட்டப் பெற்றது.  2ஆ. இந்த மன்னரை இராமேஸ்வரம் தலயாத்திரை வந்து திரும்பிய மதுரை நாயக்க மன்னர் முத்து விஜய ரங்கசொக்க நாயக்கர் இந்த மண்டபத்தில் ரத்தினாபிஷேகம் செய்து பெருமைப்படுத்தினார். இந்த நிகழ்ச்சி பற்றிய ஓவியமும், கொலு மண்டப ஓவியங்களில் காணப்படுகிறது.  3. கி.பி. 1803 முதல் இராமநாதபுரம் ஜமீன்தாரியின் தலைவியாக இருந்த இராணி மங்களேஸ்வரி நாச்சியார் அவர்களது ஆட்சிக்காலத்தில் லண்டனிலிருந்து வந்த ஜார்ஜ் வாலன்டினா பிரபு என்பவர் இராணியாரைச் சந்தித்தார். இராணியாரைப் பற்றிய அவரது கருத்துக்களும் அவரது நூலில் குறிப்பிப்பட்டுள்ளது.  4. கி.பி. 1658 முதல் கொண்டாடப் பெற்ற நவராத்திரி விழா அரண்மனையில் கலை விழாவாக கி.பி. 1865 முதல் மன்னர் துரைராஜா முத்துராமலிங்க சேதுபதியினால் மாற்றப் பெற்றது. ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் முதல் ஒன்பது நாட்கள் தமிழ்ப் புலவர்களையும், வடமொழி வித்தகர்களையும், இசைக் கலைஞர்களையும், நாட்டிய நங்கைகளையும் வரவழைத்து அவர்களது கலைப் பயிற்சியையும் திறமையையும் சேது நாட்டு மக்கள் அறிந்து மகிழுமாறு அந்தக் கலை மேதைகள் சிறப்பாகக் கவுரவிக்கப்பட்டனர்.  5. இத்தகைய நிகழ்ச்சி மன்னர் பாஸ்கர சேதுபதி ஆட்சிக்காலத்திலும் தொடர்ந்து நடைபெற்றன. இந்த நிகழ்ச்சிகளின் போது தஞ்சை வைகை கிராமத்தைச் சேர்ந்த பாடகர் மகா வைத்தியநாத ஐயர் அவரது இளவல் இராமசாமி சிவன், பட்டணம் சுப்பிரமணிய ஐயர், திருக்கோடிக்கா கிருஷ்ணய்யர், குன்னக்குடி கிருஷ்ண ஐயர், புதுக்கோட்டை மாமுண்டியா பிள்ளை, மைசூர் சேசன்னா, டாக்டர். உ.வே. சாமிநாத ஐயர். பழனி மாம்பழக் கவிராயர், யாழ்ப்பாணம் சிவசம்பு கவிராயர், மகாவித்துவான் இரா. இராகவ ஐயங்கார் ஆகியோர் பாராட்டப்பட்டனர். 6. அமெரிக்க நாட்டு சிகாகோ நகரில் நடைபெற்ற அனைத்து உலக சமயப் பேரவையில் கலந்து கொண்டு இந்திய நாட்டிற்குப் பெருமையும் புகழும் தேடித் தந்த சுவாமி விவேகானந்தர் 4 ஆண்டுகளுக்குப் பிறகு தாயகம் திரும்பினார். இந்திய நாட்டில் 23-1-1897-ல் அவர் கரையிறங்கிய முதல் துறைமுக ஊர் பாம்பன் ஆகும். தமது பயணத்திற்குப் பொன்னும் பொருளும் வழங்கி வழிகோலிய மன்னர் பாஸ்கர சேதுபதிக்கு நன்றி தெரிவிப்பதற்காக சுவாமிகள் 25.1.1897-ல் பாம்பனிலிருந்து இராமநாதபுரத்திற்கு வருகை தந்தார். அவரை மன்னர் மிகுந்த அன்புடனும் மரியாதையுடனும் இராமலிங்க விலாசம் கொலு மண்டபத்தில் சிறப்பான தர்பார் ஒன்றில் வரவேற்று உபசரித்தார்.  7. இதனைப் போன்றே 1897-ல் சிருங்கேரி மடம் மடாதிபதி ஜகத்குரு நரசிம்ம பாரதி சுவாமிகளை மன்னர் அவர்கள் அரண்மனை கொலு மண்டபத்தில் சிறப்பான வரவேற்பு வழங்கி உபசரித்தார்.  8. சென்னை தாம்பரம் கிறித்துவ கல்லூரியின் தமிழ்ப் பேராசிரியரான பரிதி மாற் கலைஞர் என வழங்கப்பட்ட சூரிய நாராயண சாஸ்திரியின் ‘கலாவதி’ என்ற புதுமையான நாடகம் கி.பி. 1901-ல் மன்னர் பாஸ்கர சேதுபதியின் அவையில் நடித்துக் காட்டப்பெற்று அரங்கேற்றம் பெற்றதுடன் நாடகக் கலைஞர்களுக்கும் ஆசிரியருக்கும் பரிசுகள் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது.  9.1925-ல் இராமநாதபுரம் நகருக்கு வருகை தந்த ஆங்கில கவர்னர் கோஷன் துரையை மன்னர் மூன்றாவது முத்து இராமலிங்க சேதுபதி இராமலிங்க விலாசம் அரண்மனையில் மிகுந்த ஆடம்பரத்துடன் வரவேற்று விருந்தளித்தார்.  இந்த கொலு மண்டபத்தைச் சில காலம் கிழக்கிந்திய கம்பெனியின் கலெக்டர் ஜாக்சன் தமது கச்சேரியாகப் பயன்படுத்தி வந்தார். அவரது அழைப்பினை ஏற்றிருந்தும் பேட்டி காண வராத பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரர் வீரபாண்டிய கட்டபொம்மன் மூன்று மாதங்கள் கழித்து விசாரணைக்காக 14.9.1797ல் கலெக்டர் ஜாக்சன் முன்னர் ஆஜரானதும் இங்கு தான் கலெக்டரது கடுமையான சொற்களினால் மிகவும் பீதியடைந்த கட்டபொம்மன் நாயக்கர் இங்கிருந்து தப்பி ஓடினார். இதன் தொடர்ச்சியாக 15.10.1798-ல் கயத்தாறுவில் தூக்கிலிடப்பட்டார்.                                              இயல் - XI என்றும் நிலைத்து நிற்க   தமிழகத்தின் வரலாற்றில் மூவேந்தர்களுக்கும் பல்லவர்களுக்கும் அடுத்தபடியாகச் சிறந்த இடத்தைப் பெற்றிருப்பவர்கள் இராமநாதபுரம் சேதுபதிகள் ஆவர். இந்த மன்னர்கள் சமயத் துறையிலும், சமுதாயப் பணிகளிலும் தமிழ் வளர்ச்சியிலும் மகத்தான தொண்டினை ஆற்றி இருக்கின்றனர். குறிப்பாக 17,18,19 வது நூற்றாண்டுகளில் தமிழகத்தை அந்நியர்களான வடுகர்களும், மராட்டியர்களும், ஆற்காட்டு நவாப்பும் சீர்குலைத்து வந்த நிலையில் தெய்வ சிந்தனையுடன் மக்கள் நலத்தை மதித்துப் போற்றி வந்த இந்த மரபினரது செயல்கள் என்றும் மறக்க முடியாதவை.  கி.பி.11.12 ஆம் நூற்றாண்டுகளில் வரலாற்றை அலங்கரித்த சோழப் பேரரசு நிலைகுலைந்த பிறகு பிற்காலப் பாண்டியர்கள் வலுவிழந்து வளமையிழந்து ஒடுங்கியிருந்தனர். ஆனால் இந்தக் காலத்தில் தமிழகத்தின் சிறிய தன்னரசின் மன்னர்களான சேதுபதிகள் மிகச் சிறந்த சாதனைகளை இயற்றியுள்ளனர். திரு உத்திர கோசமங்கை, இராமேஸ்வரம், திருவாடானை, திருக்கோட்டியூர், திருப்புல்லாணி, காளையார்கோவில் ஆகிய ஊர்களில் விண்ணை அளாவிய இராஜ கோபுரங்களுடன் காட்சியளிக்கும் அந்தத் திருக்கோயில்களே அவர்களது தொண்டிற்குச் சாட்சியாக நின்று வருகின்றன.  இந்தத் திருக்கோயில்களில் நாள்தோறும் நடைபெறும் ஆறுகால, ஐந்து கால வழிபாடுகளுக்கும் ஆண்டு விழாக்கள் மற்றும் சிறப்புக் கட்டளைகள் ஆகியவற்றுக்கும் இந்த மன்னர்கள் வழங்கியுள்ள நூற்றுக்கணக்கான ஊர்களின் வருவாய்களிலிருந்து இன்னும் இந்தத் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனைப் போன்றே இந்த மன்னர்கள் திருமடங்களுக்கும் அன்ன சத்திரங்களுக்கும் பள்ளி வாசல்களுக்கும் தேவாலயங்களுக்கும் பல கிராமங்களைச் சர்வ மானியமாக வழங்கியுள்ளனர். ஆனால் இந்த அறக்கொடைகளைப் பற்றிய விவரங்களைத் தருகின்ற ஆவணங்கள் பல கிடைத்தில. என்றாலும் கடந்த இருபது ஆண்டுகளாகச் சேகரிக்கப்பட்ட இராமநாதபுரம் சமஸ்தான ஆவணங்கள், பதிவேடுகள், சென்னை தமிழ்நாடு ஆவணக்காப்பகத்தில் உள்ள பதிவேடுகள் மற்றும் சேதுபதி மன்னர் வழங்கிய செப்பேடுகள், ஒலை முறிகள், கல்வெட்டுக்கள் ஆகியவைகளில் இருந்து தொகுக்கப்பட்ட பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இதில் கண்டுள்ள அறக்கொடைகளைத் தவிர இன்னும் ஏராளமான அறக்கொடைகள் பற்றிய விவரங்களைக் காட்டுகின்ற ஆவணங்கள் பல இருந்து அழிந்து இருக்க வேண்டும். இந்த மன்னர்கள் சேது நாட்டு மக்களிடையே நல் உறவையும், தெய்வீகச் சிந்தனையையும் வளர்ப்பதில் தொண்டாற்றிய புலவர்கள், பண்டிதர்கள். அவதானிகள் மற்றும் மகா ஜனங்களுக்கும் இவர்கள் வழங்கிய சர்வமானியங்கள் - அகரப்பற்று. சதுர்வேதி மங்கலங்கள், ஜீவித காணிகள் ஆகியவைகள் பற்றிய அறக்கொடை விவரங்களுக்கான பட்டியலும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இவைகளில் சமண சமயத்தினரின் பள்ளிகளுக்கும் வழங்கிய பள்ளிச் சந்தம் என்ற வகை அறக்கொடை பற்றிய குறிப்புக்கள் கிடைத்த பொழுதிலும் அவைகளுக்கான ஆவணங்கள் கிடைக்கப்பெறாதது மிகவும் வருந்தத்தக்கது ஆகும். குறிப்பாகச் சேதுபதிச் சீமையில் சமணர்களின் குடியிருப்புக்கள் அரியாண்குண்டு. மெய்யன் பள்ளி, அச்சன்பள்ளி, அறப்போது, முகிழ்த்தகம். நாகணி, நாகன்வயல், நாகமங்கலம், சாத்தன்பள்ளி, காட்டுச்சந்தை, அன்னவாசல், அரியன் ஏந்தல், அனுமந்தக்குடி, குணபதி மங்கலம், மச்சூர் ஆகிய கிராமங்களில் அமைந்திருந்ததை ஆவணங்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆவணங்களிலிருந்து திருக்கோயில்களுக்கு என தொகுக்கப்பட்டுள்ள சேது மன்னர்களது அறக்கொடைகள் நீங்கலாக சேது சமஸ்தானத்தின் பதிவேடு ஒன்றின் படி 11 கட்டளைகளும் இணைப்பு ‘அ’ சமஸ்தானத்தைச் சேர்ந்த 59. திருக்கோயில்களுக்கு கோயில்கள் வாரியாக வழங்கப்பட்டுள்ள 311. அறக்கொடைகளின் பட்டியலும் இணைப்பாக ‘ஆ’ கொடுக்கப்பட்டுள்ளது. மற்றொரு இராமநாதபுரம் சமஸ்தானம் பதிவேட்டின் படி 28 அன்னசத்திரங்களுக்கு இந்த மன்னர்கள் வழங்கிய 61 அறக்கொடைகளின் பட்டியலும் இணைப்பாக ‘இ’ கொடுக்கப்பட்டுள்ளது. இந்த இணைப்புக்கள் அ ஆ இ களில் குறிப்பிடப்பட்டுள்ள அறக்கொடைகள் எந்தெந்த மன்னர்களால் எப்பொழுது வழங்கப்பட்டன என்பதற்கான விவரங்கள் கிடைக்கப் பெறவில்லை.        i. திருக்கோயில்கள்   சேதுபதி மன்னர்களது சீமையில் அமைந்துள்ள சைவ, வைணவ திருத்தலங்கள் மிகவும் புனிதமாக நூற்றாண்டு பலவாகப் போற்றப்பட்டு வருகின்றன. பாண்டிய நாட்டின் தேவாரப் பதிகம் பெற்ற 16 திருக்கோயில்களில் சேதுபதிச் சீமையில் இராமேஸ்வரம், திருவாடானை, காளையார் கோவில், திருப்புத்துார், திருக்கொடுங்குன்றம், திருச்சுழியல் என்ற 6 திருத்தலங்களும் வைணவ ஆச்சார்யர்களால் 108 திவ்ய ஸ்தலங்கள் எனப் போற்றப் படுபவைகளில் திருப்புல்லாணியும். திருக்கோட்டியூரும் இங்கு அமைந்துள்ளன. இவையல்லாது பக்தர்ரெல்லாம் பார் மேல் சிவபுரம் என்று ஏத்தப் பெறுகின்ற திரு உத்திரகோசமங்கையும் வைணவர்களால் குறிப்பாக மணவாள மாமுனிவரால் திருப்பணி செய்யப்பெற்ற கொத்தங்குளம் என்பன போன்ற வேறு சில கோயில்களும் சேது நாட்டின் அணிகலன்களாக திகழ்ந்துவருகின்றன.  இந்தத் திருக்கோயில்களுக்குச் சேது மன்னர்களால் அறக்கொடையாக வழங்கப்பட்ட சர்வமான்ய ஊர்களில் இருந்து ஆண்டு தோறும் சேதுபதி மன்னருக்கு வருகின்ற வருவாய்களான நஞ்சைத் தீர்வை, புஞ்சைத் தீர்வை, பழவரி, தறிக்கடமை, கத்திப் பெட்டி வரி, கீதாரி வரி, சாணார் வரி முதலியன அனைத்தும் அந்தந்தத் திருக்கோயில்களுக்குக் கிடைக்கத்தக்க வகையில் சேதுபதி மன்னர்கள் ஏற்பாடு செய்துள்ளனர். இவைகளைக் கொண்டு கோயில் நிர்வாகிகள் கோயில்களின் அன்றாட வழிபாடுகள், கட்டளைகள், ஆண்டுத் திருவிழாக்கள் மற்றும் சிறப்புக் கட்டளைகள் ஆகியவற்றை நிறைவேற்றி வந்தனர். இராமேஸ்வரம் திருக்கோயிலில் ஆண்டு தோறும் ஆவணித் திங்களில் ஆவணி மூலத் திருவிழாவும் மாசித் திங்களில் வசந்த விழாவும் நடைபெற்று வந்தன. திருப்புல்லாணி, திருக்கோயிலில் பங்குனி மாதத்தில் வசந்த விழாவும் திருமருதூர் நயினார் கோயிலில் வைகாசித் திருவிழாவும் பழனி வேலாயுத சாமி கோயிலில் தைபூசத் திருவிழாவும் மற்றும் பிற கோயில்களில் ஆண்டு முழுவதும் வெவ்வேறு மாதங்களில் பல விழாக்களும் நடைபெற்றுவந்தன. மேலும் திருப்புல்லாணித் திருக்கோயில் பெருமாளும் தாயாரும் விழாவின் போது எழுந்தருளி பவனி வருவதற்கு ஏற்ற பெரிய தேர் ஒன்றை அந்தத் திருக்கோயிலுக்கு வழங்கி முதலாவது தேரோட்டத்தையும் திருமலை ரெகுநாத சேதுபதி மன்னர் தொடக்கி வைத்தார். இராமேஸ்வரத்தில் நடைபெற்ற மாசித் திருவிழாவிற்கென முத்து விஜய ரகுநாத சேதுபதி மன்னர் புதிய தேர் ஒன்றை அன்பளிப்பாக வழங்கி அந்தத் தேரின் ஓட்டத்திற்கு முதலில் வடத்தையும் பிடித்துக் கொடுத்தார். அதே கோயிலில் இராமநாத சுவாமியும் அம்பாளும் நாள்தோறும் அர்த்த ஜாம பூஜை முடிந்தவுடன் பள்ளியறைக்குச் சென்று உறங்குவதற்கு 1600 வராகன் எடை நிறையில் ஓர் வெள்ளி ஊஞ்சலையும் இந்த மன்னர் செய்து வழங்கினார்.  சேதுபதிகளின் வரலாற்றில் மிகச் சிறந்த இடத்தைப் பெற்றுள்ள மன்னர் பாஸ்கர சேதுபதி அவர்கள் இராமநாதசுவாமி வெள்ளிக் கிழமை தோறும் இரவு நேரத்தில் பவனி வருவதற்காக, முழுவதும் வெள்ளியிலான தேர் ஒன்றினையும் செய்து வழங்கினார். இதே மன்னர் காளையார் கோவில், மயிலாப்பூர் ஆகிய திருக்கோயில்களில் விழாக்காலங்களில் சுவாமி எழுந்தருள்வதற்காக அழகிய பல்லக்குகளையும் செய்து வழங்கியுள்ளார். இவைகளைப் போன்று சேதுபதி மன்னர்கள் பல திருக்கோயில்களுக்குப் பல அழகிய வாகனங்களையும் செய்து வழங்கியுள்ளனர். மற்றும் இராமேஸ்வரம், திரு உத்திர கோசமங்கை, திருப்புல்லாணி ஆகிய திருக்கோயில்களில் நாள் தோறும் சிறப்பான நைவேத்தியங்கள் செய்து சுவாமிக்குப் படைப்பதற்கான சிறப்பு ஏற்பாடுகளையும் செய்து வந்துள்ளனர்.  மேலும் திருப்புல்லாணித் திருக்கோயிலின் கட்டுமானம் முழுவதையும் ரெகுநாத திருமலை சேதுபதி மன்னர் செய்துள்ளார். நாட்டரசன் கோட்டை கண்ணுடைய நாயகி அம்மன் திருக்கோயில் கொடி மண்டபத்தையும், காளையார் கோவில் காளைநாதர் சுவாமி திருக்கோயிலையும், மகா மண்டபத்தையும் ரெகுநாத கிழவன் சேதுபதி மன்னர் நிறைவேற்றி வைத்துள்ளார். இராமேஸ்வரத் திருக்கோயிலின் கட்டுமானம் முழுவதையும் கூத்தன் சேதுபதி, தளவாய் சேதுபதி, திருமலை ரெகுநாத சேதுபதி, முத்து விஜய ரகுநாத சேதுபதி ஆகிய மன்னர்கள் வழிவழியாக முதலாவது, இரண்டாவது, மூன்றாவது பிரகார அமைப்புக்களையும், கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்டபம், அணுக்க மண்டபம் ஆகியவற்றையும் அமைத்துத் தங்களது தெய்வ சிந்தனையையும் சமயப்பற்றையும் எடுத்துக் காட்டியுள்ளனர். இந்த மன்னர்கள் ஒவ்வொருவரும் திருக்கோயில்களுக்கு வழங்கிய சர்வ மானிய கிராமங்கள் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.   சேதுபதி மன்னர்களது அறக்கொடைகள் பட்டியல்  ஆவணப் பதிவேடுகளின்படி I உடையான் சடைக்கன் சேதுபதி  I திருக்கோயில்கள்    ----------------------- --------------------------- ------------------------       தானம் வழங்கப்பட்ட ஊர் தானம் வழங்கப்பட்ட அமைப்பு தானம் வழங்கப்பட்ட நாள்     ----------------------- --------------------------- ------------------------ 1. திருவாடனை ஆதிரெத்தினேஸ்வரர் கருப்பூர் - சகம் 1527 திருக்கோயில் (கி.பி.1605) விசு பங்குனி 15 அச்சங்குடி சகம் 1528 (கி.பி.1506) பிரபவ கார்த்திகை 13 2. இராமேஸ்வரம் திருக்கோயில் நாகனேந்தல் - சகம் 1538 (கி.பி.1615) தை 15 ரெட்டையூரணி, வில்லடி வாகை - சகம் 1538 (கி.பி.1615) தை 15 II கூத்தன் சேதுபதி  1. திருவாடானைத் திருக்கோயில் கீரமங்கலம் சகம் 1546 (கி.பி.1624) சித்தாட்டி பங்குனி 19  கீரணி சகம் 1546 (கி.பி.1624) குரோதன வைகாசி 22  கேசனி சகம் 154.5 (கி.பி.1623) ருத்ரோதரி சித்திரை 10  பில்லூர் சகம் 154.5 (கி.பி.1623) ருத்ரோதரி தை  III தளவாய் சேதுபதி  1. அரியநாயகி அம்மன் கோயில், திருவாடனை பிடாரனேந்தல் சகம் 1553 (கி.பி.1631) - சித்திரபானு தை 10  2. ஆண்டு கொண்ட ஈசுவரர் கோயில், திருத்தேர்வளை கொங்கமுத்தி - சகம் 1561 (கி.பி.1639) - வெகுதான்ய வைகாசி 20 தண்டலக்குடி - சகம் 1561 (கி.பி.1639) வெகுதான்ய வைகாசி 20  IV திருமலை சேதுபதி  1. திருஉத்திர கோச மங்கைத் திருக்கோயில்  கொல்லன்குளம் - சகம் 1573 (கி.பி.1651) நந்தன ஆடி  காடனேரி - சகம் 1573 (கி.பி.1651) நந்தன ஆடி  பன்னிக்குத்தி - சகம் 1573 (கி.பி.1651) நந்தன ஆடி  கழனியேந்தல் - சகம் 1573 (கி.பி.1651) நந்தன ஆடி  கள்ளிக்குளம் - சகம் 1573 (கி.பி.1651) நந்தன ஆடி  2. இராமேஸ்வரம் திருக்கோயில்  குமாரக் குறிச்சி - சகம் 1595 (கி.பி.1673) பிரமாதீச தை 15  கருமல் - சகம் 1595 (கி.பி.1673) பிரமாதீச தை 15  முகிழ்த்தகம் - சகம் 1570 (கி.பி.1647) சுபகிருது மாசி 10  நம்பு தாழை - சகம் 1604 (கி.பி.1682) துந்துபி ஆணி 15  3. திருவாடானைத் திருக்கோயில்  ஆதியாகுடி - சகம் 1568 (கி.பி.1646) வியசு தை  4. வழிவிட்ட ஐயனார் கோயில், கமுதி  ஆலங்குளம் - சகம் 1594 (கி.பி.1670) சாதாரண மாசி 30  அய்யனார் குளம் - சகம் 1594 (கி.பி.1670) சாதாரண மாசி 30  5. மந்திர நாத சாமி கோயில், திருப்பாலைக்குடி  ஆலங்குளம் - சகம் 1594 (கி.பி.167o) சாதாரண மாசி 30  6. வேதபுரீஸ்வரர் கோயில், பிடாரனேந்தல்  கோபாலனேந்தல் - சகம் 1568 (கி.பி.1648) வியவ ஆனி 11  காளையன் வயல் - சகம் 1568 (கி.பி.1648) வியவ ஆனி 11  7. பழம்பதி நாதர் கோயில், வெளிமுத்தி  வெளிமுத்தி 8. ஆவுடையார் கோயில்  வில்வனேரி புதுக்குடி 9. திருமேனி நாதர் ஆலயம், திருச்சுழி  காளையார் கரிசல்குளம் பிள்ளையார் நத்தம் நத்தக் குளம் பாண்டியன் குளம் முத்தானேந்தல் சிட்டலிக்குண்டு பழனிக்கு ஏந்தல் துளசிக்குளம் திருச்சுழியல் 10. வாழவந்த அம்மன் கோயில், அருப்புக்கோட்டை  வாகைக்குளம் 11. சொக்கநாதசாமி ஆலயம்  உடையார்புரம் மீனாட்சிபுரம் 12. சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், குன்றக்குடி  தாமரைக்குளம் திருப்பாலைப் பட்டி நெய்வாசல் நெடுங்குளம் கொக்கனேந்தல் பெரிய ஆலங்குளம் சின்ன ஆலங்குளம் 13. கமுதை, கருமேனி அம்மன் கோயில்  கமுதை - சகம் 1600 (கி.பி.1678) சித்தார்த்தி புரட்டாசி 5  14. உலகவிடங்கேஸ்வரர்கோவில் விளையாச்சிலை வீரகண்டன் பட்டி  15. அரசுநாராயணப் பெருமாள்கோயில், மேலையூர்  பெரியவராயவயல் சிறுவராயவயல் காட்டுக்குறிச்சி ஆலவயல் சகம் 1585, கி.பி.1663.  16. தாண்தோண்டீஸ்வரர் கோயில், சிவபுரிப்பட்டி  1. சாத்தனுர் சகம் 1590, கி.பி.1668  17. கூரிச்சாத்த சேவகப் பெருமாள் ஆலயம், சிங்கம் புணரி.  ஆலம் பட்டி சகம் 1590, கி.பி.1668.  18. சாஸ்தாகோயில், கண்ணங்காரங்குடி  கண்ணங்காரங்குடி சகம் 1591, கி.பி.1669  19. அழகிய மெய்யர் கோயில், திருமெய்யம்  புதுவயல் வலையன் வயல் சகம் 1591, கி.பி.1669  20. மீனாட்சி சொக்கனாதர் ஆலையம்,  பெருங்கரை சகம் 1597 கி.பி.1679.  21. தில்லை நடராஜர் பெருமான் ஆலையம், சிதம்பரம்  ஏங்கியம் - மறவணிஏந்தல்  V கிழவன் சேதுபதி  1. கூரிசாத்த ஐய்யனார் கோயில் - இராமநாதபுரம், தேவேந்திர நல்லூர்  சகம் 1600 (கி.பி.1679) சித்தார்த்தி தை 27  2. மாரியம்மன் கோயில், இராமநாதபுரம், அல்லிக்கண்மாய் சகம் 1621  (கி.பி.1700) விக்கிரம ஐப்பசி 3. சுப்பிரமணிய சுவாமி கோயில், முகவை, வாகைக்குளம் சகம் 1613  (கி.பி.1690) பிரமாதீச தை 13  4. குருசாமி கோயில், ஆன்ையூர், புளியன்குளம் சகம் 1609  (கி.பி.1687) பிரட்வ  5. சுந்தர பாண்டியன் கோயில், புதுர் நற்கணி சகம் 1600 (கி.பி.1678)  காளயுத்தி வையாசி 6. திருமேனிநாதர் கோயில், திருச்சுழி  நாடானிகுளம் சூச்சனேரி வடபாலை உடைச்சி ஏந்தல் கறுப்புக்கட்டி ஏந்தல் 7. இராமேஸ்வரம் திருக்கோயில், ஊரணங்குடி சகம் 1605 (கி.பி.1683)  ருத்ரோகாரி தை 15  8. சுந்தரரேஸ்வர சுவாமி கோயில் பூஜை, புத்துர் சகம் 1600 (கி.பி.1678)  காளயத்தி வைகாசி 9. செளமிய நாராயணப் பெருமாள் கோயில், திருக்கோட்டியூர்  கருங்காலி வயல் வளையன் வயல் சகம் 1601. கி.பி.1679  V1 முத்து விஜய ரெகுநாத சேதுபதி  1. இராமேஸ்வரம் திருக்கோயில்  வெண்ணத்துர் - சகம் 1639 (கி.பி.1714) ஜய சித்திரை  செம்மநாடு - சகம் 1636 (கி.பி.1714) ஜய சித்திரை  2. திருப்புல்லாணித் திருக்கோயில்  குதக்கோட்டை - சகம் 1635 (கி.பி.1713) விஜய சித்திரை  வண்ணான் குண்டு - சகம் 1635 (கி.பி.1713) விஜய சித்திரை  பத்திரா தரவை - சகம் 1635 (கி.பி.1713) விஜய சித்திரை  மேதலோடை - சகம் 1635 (கி.பி.1713) விஜய சித்திரை  தினைக்குளம் - சகம் 1635 (கி.பி.1713) விஜய சித்திரை  உத்தரவை - சகம் 1635 (கி.பி.1713) விஜய சித்திரை  களிமண்குண்டு சித்திரை - சகம் 1635 (கி.பி.1713) விஜய சித்திரை  பள்ளமோர்குளம் - சகம் 1635 (கி.பி.1713) விஜய சித்திரை  இலந்தைக் குளம் - சகம் 1635 (கி.பி.1713) விஜய சித்திரை  3. கோதண்ட ராமசுவாமி திருக்கோயில் இராமநாதபுரம்  காரேந்தல் - சகம் 1651 (கி.பி.1729) செளமிய தை  காக்கான் குடி - சகம் 1637 (கி.பி.1714) ஜய தை  பட்டாப்புல்லாணி - சகம் 1637 (கி.பி.1714) ஜய தை  4. சொக்கநாதர் சுவாமி கோயில், இராமநாதபுரம்  சின்ன கையகம் - சகம் 1646 (கி.பி.1774) குரோதன வைகாசி  5. சூரிய தேவர் கோயில், கூடலூர்  உசிலங்குளம் - சகம் 1634 (கி.பி.1712) நந்தன. தை 7  6. படிக்காசு வைத்தசாமி கோயில், கண்ணங்குடி  விசும்பூர் தாதன் வயல் 7. அம்பலவாணர்சுவாமி கோயில், முடுக்கன் குளம்  சிறுகுளம் மணலை ஏந்தல் கீழப் புதுப்பட்டி மேலப் புதுப்பட்டி 8. அகத்திஸ்வரர்கோயில் - தாஞ்ளுர், மேலவயல் சகம் 1640-கி.பி.1718   VII பவானி சங்கர சேதுபதி  1. திருமேனி நாதர் கோயில், திருச்சுழியல்  பனையூர் கண்டிபட்டி கீழகண்ட மங்கலம் காரேந்தல் 2. நாகநாதசுவாமி கோயில்  நயினார் கோயில், அண்டக்குளம் கி.பி.1726  VIII. குமார முத்து விஜயரகுநாத சேதுபதி  1. இராமேஸ்வரம் திருக்கோயில்  கொவ்வூர் - சகம் 1655 (கி.பி.1733) பிரமாதீச கார்த்திகை  2. திரு உத்திரகோசமங்கைத் திருக்கோயில்  திரானியேந்தல் - சகம் 1654 (கி.பி.1732) பரிதாபி மாசி 30  3. திருவாடானைத் திருக்கோயில்  வெளிமுத்துர் - சகம் 1657 (கி.பி.1735)ராட்சச தை  4. குமார சுவாமி கோயில்  பழஞ்சேரி - சகம் 1652 (கி.பி.1750) சாதாரண ஆவணி 8  பாண்டியன் வயல் - சகம் 1652 (கி.பி.1750) சாதாரண ஆவணி 8  5. சிவசுப்பிரமணிய சுவாமி ஆலயம், பெருவயல்  பெருவயல் - சகம் 1657 (கி.பி.1735) சித்தார்த்தி தை 3  கலையனூர் - சகம் 1657 (கி.பி.1735) சித்தார்த்தி தை 3  6. தண்டாயுதபாணி கோயில், பழனி  கொல்லனுர் - சகம் 1656 (கி.பி.1754) ஆனந்த கார்த்திகை 7. சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்  வெங்கலக் குறிச்சி - சகம் 1656 (கி.பி.1734) ஆனந்த கார்த்திகை  கருங்காலக்குறிச்சி - சகம் 1656 (கி.பி.1734) ஆனந்த கார்த்திகை  8. திருமேனிநாத சுவாமி கோயில், திருச்சுழியல்  குண்டுகுளம் புலிக்குறிச்சி கல்மடம் 9. பூலாங்கால் ஐயனார் பூஜை நைவேத்தியம்  பூலாங்கால் 10. கயிலாசநாத சுவாமி கோயில் வடகரை - சகம் 1623 (கி.பி.1701) விளம்பி பங்குனி  IX சிவகுமாரமுத்து விஜய ரகுநாத சேதுபதி  1. திரு உத்திரகோச மங்கை திருக்கோயில் பாளையாறு ஏந்தல் - சகம் 1664  (கி.பி.1742) துந்துடி வைகாசி  2. நயினார் கோயில்  புதுக்குளம் வாகைக்குளம் Xசெல்ல முத்து ரகுநாத சேதுபதி  1. இராமேஸ்வரம் திருக்கோயில் மாலங்குடி - சகம் 1682 (கி.பி.1760)  விக்கிரம தை 28  2. கலியாண சுந்தரேஸ்வரர் கோயில் - வீரசோழன்  சுந்தரத்தான் - சகம் 1672 (கி.பி.1750) பிரஜோர்பதி ஆடி 5  மேலப்புலியாடக்கோட்டை - சகம் 1672 (கி.பி.1750)  பிரஜோர்பதி ஆடி 5  பெரிய உடையனாபுரம் - சகம் 1672 (கி.பி.1750) பிரஜோர்பதி  ஆடி 5  சின்ன உடையனாபுரம் - சகம் 1672 (கி.பி.1750) பிரஜோர்பதி  ஆடி - 5  செங்கோட்டை, கோரக்குளம் - சகம் 1672 (கி.பி.1750)  பிரஜோர்பதி ஆடி 5  3. செல்லமுத்து ரெகுநாத கோயில்  கயிலாச நாதசுவாமி, வீரசோழன்  வீரசோழன் - சகம் 1675 (கி.பி.1751) பிரஜோர்பதி ஆடி 5  XI முத்து ராமலிங்க சேதுபதி  1. இராமேஸ்வரம் திருக்கோயில்  பள்ளன்குளம் நிலமழகிய மங்கலம் - சகம் 1684 (கி.பி.1764) தாரண ஆடி  2. திருப்புல்லாணி திருக்கோயில்  உப்பாணைக்குடி பில்வ தை நெல்லிப்பத்தி - சகம் 1690 (கி.பி.1768)  வித்தானுர் - சகம் 1705 (கி.பி.1785) கோப கிருது ஆடி  காராம்பல் - சகம் 1705 (கி.பி.1785) கோப கிருது ஆடி  பரந்தான - சகம் 1705 (கி.பி.1784) குரோதி ஆடி  3. நயினார் கோயில்  நாகலிங்கபுரம் சின்ன ஆணைக்குளம் 4. முத்து ராமலிங்கசுவாமி கோயில், இராமநாதபுரம்  சொக்கானை - சகம் 1703 (கி.பி.1781) பிலவ தை  மத்தியல் - சகம் 1703 (கி.பி.1781) பிலவ தை 5. சாமிநாதசாமி கோயில், இராமநாதபுரம்  ஆதியான் ஏந்தல் - சகம் 1688 (கி.பி.1766) வியவ  6. திலகேசுரர் ஆலயம், தேவிபட்டிணம்  கடம்பவன சமுத்திரம் - சகம்  7. சுந்தரேசுவரர் கோயில், கமுதி  சூரன்குடி - சகம் 1686 (கி.பி.1764) தாரண ஆவணி 26 :கொடிக்குளம் - சகம் 1686 (கி.பி.1764) தாரண ஆவணி 26  8. வரகுண பரமேஸ்வரன் ஆலயம், சாலைக்கிராமம்  சின்ன உடையான் ஆச்சியேந்தல் 9. மழவநாத சுவாமி ஆலயம், அனுமந்தக் குடி  வடக்கு செய்யான் ஏந்தல் 10. சிவநாதபாதமுடையார் கோயில், முத்துநாடு  ஆனையடி -  கேசணி -  11. நரசிம்ம பெருமாள் கோயில், கப்பலூர்  நயினாவயல் - சகம் 1695 (கி.பி.1783) கோபகிருது ஆவணி 10  12. திருமேனி நாதர் ஆலயம், திருச்சுழியல்  அக்கான் குத்தி கள்ளத்தி குளம் கலியான சுந்தரபுரம் தொண்டமான் குளம் துரிந்தாது குளம் 13. மீனாட்சி ஆலயம் - மதுரை  மொங்கனக்குறிச்சி - சகம் 1707 (கி.பி.1785) விசுவாவசு  சித்திரை 10  திணைக்குளம் தொட்டியர்குளம் கூவர் குளம் வெளியாடு குளம் சிறு வேப்பன் குளம் தொண்டமான் ஏந்தல் அனுப்பனேந்தல் குறிஞ்சா குளம் மேல ஒடைக் குளம் கீழ ஓடைக்குளம் கீழ கள்ளிக்குளம் பிளகளைக் குண்டு பளைகனேந்தல் வானியங்குடிகிராமம் 12.7.1806  14. அங்காளேஸ்வரி அம்மன், ஆத்தங்கரை  நாகாச்சி - சகம் 1703 (கி.பி.1781) பவ கார்த்தினை  15. நாக நாதசாமி ஆலயம், நயினார்கோயில்  ஆனையூர் - சகம் 1704 (கி.பி.1782) சுபகிருது ஆவணி 13  16. அய்யனார் கோயில்  காட்டுப் பரமக்குடி - சகம் 1707 (கி.பி.1785) விசுவாசு ஆனி 15  17. மகேசுவர சுவாமி கோயில், அக்கிரமேசி  காமன்கோட்டை - சகம் 1696 (கி.பி.1774) ஜெய. மாசி 17   XII இராணிமங்களேஸ்வரி நாச்சியார்  பூவில் இருந்த திருக்கண்ணுடைய ஐயனார் கோயில் பூலாங்குடி செப்பேடுகளின் படி திருக்கோயில்களுக்கு  I உடையான் சேதுபதி  1. இராமேஸ்வரம் திருக்கோயில்  மும்முடிச்சாத்தான் பாண்டியர் - சகம் 1529 (கி.பி 1607) பிரபவ கார்த்திகை 12  தியாகவன் சேரி வெங்கட்ட குறிச்சி கோந்தை கருங்குளம் கள்ளிக்குளம் வேலங்குளம் கருவேலங்குளம் - சகம் 1530 (கி.பி.1608) பிலவங்க ஆடி 10  பொட்டக்குளம் விடந்தை கண்ணன் பொதுவான் மூத்தான்சிறுகுளம் II கூத்தன் சேதுபதி  1. இராமேஸ்வரம் திருக்கோயில்  மருதங்க நல்லூர் - சகம் 1553 (கி.பி.1631) பிரஜோற்பதி தை 25 :சேதுகால்   III திருமலை ரெகுநாத சேதுபதி  1. திருப்பெருந்துறை திருக்கோயில் - சகம் 1575 (கி.பி.1653) ஜெய ஆனி 17  பெருங்காடு - சகம் 1586 (கி.பி.1664) கீலக தை  2. இராமேஸ்வரம் திருக்கோயில்  கட்டிசேரி கங்கனி தேர்போகி - சகம் 1582 (கி.பி.1660) சார்வரி மாசி  நாஞ்சிவயல் நாணகுடி 3. அட்டாலைச் சொக்கநாதர் ஆலயம், பெருங்கரை  கொத்தங்குளம் - சகம் 1592 (கி.பி.1670) சாதாரண மாசி  1. திருப்பெருந்துறை ஆவுடையப்பர் கோயில்  சிறுகானுர் பூதகுடி உள்கிடை ஏந்தல் - சகம் 1599 (கி.பி.1677) நள  மார்கழி சிவகாமி ஏந்தல் குன்னக்குடி ஏந்தல் 5. இராஜ மாரியம்மன் கோயில், இராமநாதபுரம்  அல்லிக்குளம் - சகம் 1581 (கி.பி.1659) விகாரி, ஐப்பசி  6. திரு உத்திரகோசமங்கை ஆலயம்  திருஉத்திரகோசமங்கை - சகம் 1600 (கி.பி.1678) காளயுக்தி வைகாசி   IV கிழவன் சேதுபதி  1. எழுவாபுரிஸ்வரர் ஆலயம்  புதுக்கோட்டை இடையன் வயல் - சகம் 1606 (கி.பி.1684) சித்தார்த்தி வைகாசி  கள்ளிக்குடி 2. இராமேஸ்வரம் இராமநாதர் சாமி ஆலயம்  இராமநாதமடை - சகம் 1609 (கி.பி.1687) பிரபவ  நல்லுக்குறிச்சி - சகம் 1613 (கி.பி.1691) பிரஜோர்பதி  3. திருப்புல்லாணித் தெய்வச்சிலைப் பெருமாள்  இராமானுஜனேரி காரைப்பற்று மோர்ப்பனை முருகக்கடி பற்று மனையேந்தல் கோவிந்தனேந்தல் சோனைக் குட்டம் காவேரி ஏந்தல் காரையடி ஏந்தல் வெள்ளாபற்று குதக்கோட்டை - சகம் 1610 (கி.பி.1688) விபவ  உத்தரவை மேதலோடை காலநத்தம் தினைக்குளம் தம்பிராட்டி ஏந்தல் இருல்லா வெண்குளம்  நல்லாங்குடி கடம்பங்குடி ஆதங்கொத்தங்குடி மாவிலங்கை கட்ட குளம் இலங்கை வழியேந்தல் V கிழவன் சேதுபதி மனைவி காதலி நாச்சியார்  1. இராமேஸ்வரம் திருக்கோயில்  மேலச்சீத்தை - சகம் 1615 (கி.பி.1693) பிலவங்க தை  VI முத்து விஜய ரகுநாத சேதுபதி  1. இராமேஸ்வரம் திருக்கோயில்  சேமனுர் விளத்துார் விரியானேந்தல் சின்னத்தொண்டி - சகம் 1636 (கி.பி.1714) ஜய சித்திரை  நரிக்குடி சோழியக்குடி சிறுத்தவயல் கொடிப்பங்கு VII குமாரமுத்து ரகுநாத சேதுபதி  1. பாலசுப்பிரமணிய சுவாமி கோயில்,இராமநாதபுரம்  கள்ளிக்கோட்டை - சகம் 1652 (கி.பி.1731) சாதாரண தை  2. இராமேஸ்வரம் திருக்கோயில்  குளத்தூர் - சகம் 1655 (கி.பி.1733) பிரமாதீச கார்த்திகை 10 3. பழநி வேலாயுத சாமி கோயில், பழநி  கொல்லனுர் - சகம் 1656 (கி.பி.1734) ஆனந்த கார்த்திகை  கங்கை கொண்டான் 4. திரு உத்திரகோசமங்கை ஆலயம்  தேரிருவேலி - சகம் 1664 (கி.பி.1742) துந்துபி வைகாசி  செப்பேட்டின் படி திருக்கோயில்களுக்கு  I திருமலை சேதுபதி  1. இராமேஸ்வரம் திருக்கோயில்  முகிழ்த்தகம் - சகம் 157o (கி.பி.1647) சர்வசித்து மாசி  பனிவயல் சூரனேம்பல் கீழச்சூரனேம்பல் மாவூரணி - சகம் 1579 (கி.பி.1657) விளம்பி  திருப்பந்தி மல்லன் ஊரணி பெரியனேந்தல் சென்னிலக்குடி கிராமம் - சகம் 1589 (கி.பி.1668) பிலவங்க  ஆனந்துர் - சகம் 1589 (கி.பி.1667) பிலவங்க வைகாசி  பாப்பாகுடியேந்தல் புளியங்குடி, கருமல் - சகம் 1595 (கி.பி.1673) பிரமாதீச தை  குமாரக்குறிச்சி 2. திருப்பெருந்துறைத் திருக்கோயில்  தச்சமல்லி - சகம் 1595 (கி.பி.1673) பிரமாதி வைகாசி  புல்லுகுடி - சகம் 1600 (கி.பி.1678) பிங்கல தை 5   II முத்து விஜய ரகுநாத சேதுபதி  1. கோதண்ட ராம சுவாமி கோயில் இராமநாதபுரம்  சாக்கான்குடி - சகம் 1637 (கி.பி.1715) ஜெயபட்டப்புல்லான்  2. திருவாரூர் தியாக ராஜ சுவாமி திருக்கோயில்  அன்னவாசல் - சகம் 164.5 (கி.பி.1724) குரோதன  III குமாரமுத்து விஜய ரகுநாத சேதுபதி  1. சுப்பிரமணியசுவாமி கோயில் - குளவயல்  பழையன் கால் - சகம் 1652 (கி.பி.1729). சாதாரண ஆணி 8 IV  IV சிவகுமார முத்து விஜய ரகுநாத சேதுபதி .  1. திரு உத்திரகோசமங்கை மங்கள நாத சுவாமி கோயில்  பாலையாறு ஏந்தல் - சகம் (கி.பி.1742) துந்துபி வைகாசி  V முத்துராமலிங்க சேதுபதி   1. முத்துராமலிங்க சுவாமி ஆலயம், இராமநாதபுரம்  சொக்கானை - சகம் 1703 (கி.பி.1781) பிலவ தை  மத்திவயல் 2. மழவநாதசுவாமி கோயில், அனுமந்தக்குடி  வடக்குச் செய்யானேந்தல் - சகம் 1705 (கி.பி.1783) சுபகிருது  மார்கழி 27  VI முத்து விஜய ரெகுநாத சேதுபதி தம்பி முத்து ரெகுநாத சேதுபதி  1. திருப்புல்லாணித் திருக்கோயில்  ஆதன் கொத்தங்குடி - சகம் 1667 (கி.பி.1729) செளமிய தை  ரெகுநாதபுரம் வண்ணான்குண்டு - சகம் 1651 (கி.பி.1730) செளமிய தை  தென்னம்பிள்ளை வலசை கீரிவலசை குத்துக்கல்வலசை  சேது மன்னர்கள் அறக்கொடையாக வழங்கிய நிலக்கொடைகளின் விவரம்  கல்வெட்டுக்களின்படி I. திருமலை ரெகுநாத சேதுபதி  திருக்கோயில்கள் 1. சொக்கநாதர் கோயில், கீழக்கரை - மாயாகுளம் சகம் கி.பி.1645.  2. உலகவிடங்கேஸ்வரர் கோயில் விரையாச்சிலை - வீரகண்டன்பட்டி கி.பி.1662.  3. லட்சுமி நாராயணப் பெருமாள் கோயில், மேலையூர்.  பெரியவராய வயல் சிறுவராய வயல் காட்டுக்குறிச்சி - சகம் 1585 (கி.பி.1662) கோபகிறிது.  ஆலவயல் உட்கடை பெரியவயல் 4. தான் தோன்றி ஈசுவரர் கோயில், சிவபுரிப்பட்டி  சாத்தனூர் சகம் 1590 (கி.பி.1668) கீலக வருஷம் ஆவணி  5. சேவுகப் பெருமாள் ஐயனார் ஆலயம், சிங்கம்புணரி.  ஆலம்பட்டி சகம் (1590) (கி.பி.1664) செளமிய  6. சாஸ்தா கோயில், கண்ணங்காரக்குடி  கண்ணங்காரக்குடி சகம் 1591 (கி.பி.1669) ராஷ்சத மாசி 5.  7. தில்லை நடராஜர் ஆலயம், மறவணி ஏந்தல்  8. லெட்சுமி நாராயணன் ஆலயம், திருமெய்யம்  புதுவயல் சகம் 1591 கி.பி.1669 செளமிய தை 1   II ரெகுநாத கிழவன் சேதுபதி  1. செளமிய நாராயணப் பெருமாள் கோயில், திருக்கோட்டியூர்  கருங்காலி வயல் சகம் 1601 (கி.பி.1679) சித்தார்த்தி கார்த்திகை 5  வளையன் வயல் சகம் 1601 (கி.பி.1679) சித்தார்த்தி கார்த்திகை 5  II முத்து விஜய ரெகுநாத சேதுபதி  1. அகத்தீஸ்வரர் கோயில், தாஞ்சூர்  காஞ்சிராவடி சகம் 1640 (கி.பி.1718) பிரஜோர்பதி ஐப்பசி 7  IV பவானி சங்கர சேதுபதி  1. நயினார் கோயில், நயினார் கோயில் - அண்டக்குளம்.  V குமார முத்து விஜய ரகுநாத சேதுபதி  1. சிவ சுப்பிரமணிய சுவாமி ஆலயம், பெருவயல்.  பெருவயல் கலையனுர் சகம் 1658 (கி.பி.1736) ராட்ஷச  2. இராமநாத சுவாமி கோயில், இராமேஸ்வரம்.  முத்து நாட்டின் நஞ்சை, புஞ்சை நிலங்கள்  சகம் 1659 (கி.பி.1737) ஐப்பசி 31.பிங்கள,  VI முத்துராமலிங்க விஜய ரகுநாத சேதுபதி  1. நயினார் கோயில், நயினார் கோயில்  காரடர்ந்தகுடி சகம் - குரோதி.  VII ராணி மங்களேஸ்வரி நாச்சியார்  1. பூவிருந்த ஐய்யனார் கோவில், பூலாங்குடி  பூலாங்குடி கி.பி.1806 சூலை 24 அட்சய ஆடி 1  2. சீனிவாசப் பெருமாள் ஆலையம் - அகத்தியர் கூட்டம் நெடியமாணிக்கம் - கி.பி.1806                      ii. திருமடங்கள்   காலங்கள் தோறும் மக்களின் உள்ளங்களில் சமயப் பற்றை வளர்ப்பதற்காகச் சேதுநாட்டின் பல திருமடங்கள் இயங்கி வந்ததை வரலாற்றில் காணுகின்றோம். அவைகளில் குறிப்பாகச் சைவ சமய பிரச்சாரத்திற்காகத் திருவாவடுதுறை ஆதினமும் வைணவக் கொள்கைகளை விளக்குவதற்காக நாங்குநேரி ஜீயர் சுவாமிகள் மடமும் இயங்கி வந்ததை, இன்றும் இயங்கி வருவதைக் காண்கின்றோம்.  மேலும் பல சிறிய மடங்கள் சேதுநாட்டில் இயங்கி வந்ததை ஆவணப் பதிவுகளில் பதிவு செய்யப் பெற்றுள்ளன. இந்தப் பதிவுகளின்படி அப்பொழுது 22 திருமடங்கள் இயங்கி வந்தன என்பது தெரிய வருகின்றது. இவைகளில் ஒரே ஒரு மடம் நீங்கலாக 20 திருமடங்கள் சைவ சமயத்தைச் சார்ந்தனவாக இருந்தன. பரமக்குடி வட்டத்திலுள்ள பண்டரி நாதர் மடம் என்ற அமைப்பு மட்டும் வைணவர்களால் நடத்தப்பட்டு வந்தது.  இந்தத் திருமடங்களில் பெரும்பாலும் வழிப் போக்கர்களுக்கும் பயணிகளுக்கும் நீரும் மோரும் இலவசமாக வழங்கப்பட்டு வந்தது. திருப்பெருந்துறையிலுள்ள திருவாவடுதுறை மடத்தில் நாள்தோறும் மகேசுவர பூஜை நடத்தப்பட்டுப் பக்தர்களுக்கு உணவு வழங்கப்பட்டு வந்தது. இந்த அறச்செயல்கள் என்றும் நிலைத்து நடைபெற வேண்டும் என்பதற்காகச் சேதுமன்னர்கள் இந்த 22 மடங்களுக்கு 41 ஊர்களை சர்வ மானியமாக தானம் வழங்கி இருந்தனர். அந்த மடங்களின் பெயர்களும் அவைகளுக்குத் தானமாக வழங்கப்பட்ட ஊர்களின் பெயர்களும் பட்டியலிட்டுக் கீழே கொடுக்கப்பட்டு உள்ளது.  ஆவணப் பதிவேடுகளின்படி   சேதுபதி மன்னர்கள் கொடைகளின் விவரம் வழங்கிய நிலக் கொடைகளின் விவரம் திருமடங்களுக்கு  --------------------- ----------------------- ------------------------       தானம் பெற்ற அமைப்பு தானம் வழங்கப்பட்ட ஊர் தானம் வழங்கப்பட்ட நாள்     --------------------- ----------------------- ------------------------   I. தளவாய் சேதுபதி  1. மாசிலாமணி பண்டார மடம், இராமேஸ்வரம்  புளியங்குடி சகம் 1553 (கி.பி.1631) பிரஜோர்பதி தை 15   II திருமலை சேதுபதி  1. ஆனைகுடி சகம் 1588 (கி.பி.1666) பிரபவ வையாசி 5  2. பண்டரிநாத மடம், சித்தனேந்தல்  3. திருவாவடுதுறை மடம், திருவாவடுதுறை  கங்கணிகட்டி சேரி சகம் 1582 (கி.பி.1660) சார்வரி மாசி 5  4. அன்னதான மடம், கமுதை  கமுதை சகம் (1592) கி.பி.1670 சாதாரண தை.  III கிழவன் சேதுபதி  1. திருவாவடுதுறை மடம்  திருப்பாலைக் கோட்டை சகம் 1611 (கி.பி.1689) பிரமோதுத கார்த்திகை  நாட்டு சேரி சகம் 1611 (கி.பி.1689) பிரமோதுத கார்த்திகை  2. பெருமாள் ஞானிகள் மடம் (தண்ணீர் பந்தல்)  பறையன்குளம் சகம் 1627 (கி.பி.1705) பார்த்திப ஆனி 1.  IV முத்து வயிரவநாத சேதுபதி  1. மூர்த்தி மடம் - அழகன்குளம்  பின்னாணியாரேந்தல் சகம் 1631 (கி.பி.1713) விகாரி வைகாசி  V முத்து விஜய ரகுநாத சேதுபதி  1. பண்டார மடம், உத்தரவை  பூவாணி சகம் 1639 (கி.பி.1718) வில9உ மாசி 25  VI சிவகுமார முத்து விஜய ரகுநாத சேதுபதி  1. காசி மடம் - தளிர் மருங்கூர் சகம் 1657 (கி.பி.1755) சித்தாட்டி  2. நமசிவாய ஐயர் மடம் - சூரங்கோட்டை சகம் 1664 (கி.பி.1742) துந்துபி வைகாசி ஆவணி 3.   VII செல்லமுத்து ரகுநாத சேதுபதி  1. சொக்கநாத மடம், செட்டியேந்தல்  கீழக்கோட்டை சகம் 1675 (கி.பி.1753) பூரீமுக ஆவணி 3  செட்டியேந்தல் சகம் 1675 (கி.பி.1753) பூரீமுக ஆவணி 3.  2. பாப்பாகுடி மடம் - தொருவளுர் சகம் 1681 (கி.பி.1759) வெகுதான்ய ஆவணி.  3. வாகைக்குளம் மடம்  வாகைக்குளம் சகம் 1673 (கி.பி.1751) பிரமானந்த சித்திரை 18.  VII முத்துராமலிங்க சேதுபதி  1. நாகாச்சி மடம், நாகாச்சி.  பரமனேந்தல் சகம் 1703 (கி.பி.1771) பிலவ தை 15.  2. முத்துராமலிங்கபுர மடம்  கழனிக்குடி சகம் 1685 (கி.பி.1763) கோபணு சித்திரை 10  பிரம்பு வயல் கரந்த வயல் பெரிய கரையான் சின்னக்கரையான் 3. திருவாவடுதுறை மடம், திருவாவடுதுறை  வல்லக்குளம் சகம் 1703 (கி.பி.1783) பிலவ மார்கழி 16.  4. திருவாரூர் மடம்  சூரியன் கோட்டை சகம் 1688 (கி.பி.1766) விய வைகாசி 1  5. தாமோதர பட்டின மடம்  மாடக்கோட்டை சகம் 1684 (கி.பி.1762) பரிதாகி வைகாசி 14  செப்பேடுகளின்படி திருமடங்களுக்கு  --------------------- ----------------------- ------------------------       தானம் பெற்ற அமைப்பு தானம் வழங்கப்பட்ட ஊர் தானம் வழங்கப்பட்ட நாள்     --------------------- ----------------------- ------------------------   I திருமலை சேதுபதி  1. அக்காள் மடம், இராமேஸ்வரம்.  மச்சூர் கி.பி.1645 சாதாரண  2. மாவூர் மடம்  மாவூர் கி.பி.1645 சாதாரண  1 கிழவன் சேதுபதி  1. முருகப்பன் மட தர்மம்  திருப்பொற் கோட்டை பகையணி - சகம் 1613 (கி.பி.1691) பிரஜோர்ப தை 15.  பிராந்தனி 11 செல்லமுத்து விஜய ரகுநாத சேதுபதி  1. திருவாவடுதுறை ஆதீனம்  நாட்டுச்சேரி சகம் 1674 (கி.பி.1752) ஆங்கீரச மார்கழி 20,  IV முத்துராமலிங்க சேதுபதி  1. இராமசாமி மடம்  பால்க்கரை கி.பி.1794 ஆங்கீரச மார்கழி20.  V முத்து விஜய ரெகுநாத சேதுபதி மன்னர்கள்  தனுக்கோடி இராமுத் தேவர் 1. சித்து ரெட்டியார் மடம், நத்தக் காடு.  வேப்பங்குளம் - சகம் 1678 (கி.பி.1756) ஆடி 8  I திருமலை ரெகுநாத சேதுபதி  1. திருவாவடுதுறை மடம்  நாஞ்சி வயல் நாணாக்குடி - சகம் 1582 (கி.பி.1670) சார்வாரி மாசி  2. பெருங்கரை தெய்வராயன் மடம்  கொத்தன்குளம் - சகம் 1592 (கி.பி.1671) சாதாரணராசி  II குமார முத்து விஜய ரகுநாத சேதுபதி  1. திருவாவடுதுறை மடம்  பிசிர்க்குடி - சகம் 1654 (கி.பி.1731) விரோதி கிருது ஆவணி 31  திருப்பக்கோட்டை - சகம் 1656 (கி.பி.1733) பிரமாதீச  கார்த்திகை 10  III செல்ல முத்து விஜய ரகுநாத சேதுபதி  1. சாருவனேந்தல் பள்ள மடம்  சாருவனேந்தல் - சகம் 1677 (கி.பி.1755) யுவ ஆடி 20  IV முத்துராமலிங்க சேதுபதி  1. திருவாவடுதுறை மடம்  வல்லைக்குளம் - சகம் 1703 (கி.பி.1782) பிலவதனுர்  2. மாசிலாமணி பண்டாரம்  கள்ளக்குடி மடப்புரம் - சகம் 1685 (கி.பி.1763) சுபானு சித்திரை 10                                    iii. அன்னசத்திரங்கள்   பாரக மடங்கலும் பசிப்பிணி அறுக எனத் தமது அமுத சுரபியைக் கொண்டு ஏழை எளியவர்களுக்கு மணிமேகலை அமுது படைத்ததாகத் தமிழ் இலக்கியங்கள் தெரிவிக்கின்றன. சேது மன்னர்களது ஆட்சியில் பசிப்பிணி நீங்கி மக்கள் அனைவரும் நிறைவுடன் வாழ்ந்ததாகத் தெரிய வருகின்றது. மேலும் சேது யாத்திரையாக இராமேஸ்வரம் வருகின்ற பயணிகளுக்குச் சேதுபதி மன்னர்கள் நாள் தோறும் அன்னம் படைத்ததைப் பல ஆவணங்கள் தெரிவிக்கின்றன. இராமேஸ்வரம் திருக்கோயில் கி.பி 7ஆம் நூற்றாண்டில் திருஞான சம்பந்தராலும் திருநாவுக்கரசு சுவாமிகளாலும் பதிகங்கள் பாடப்பெற்றுப் போற்றப்பட்டு வந்ததை இலக்கிய வரலாறு தெரிவிக்கின்றது. நமக்குக் கிடைத்துள்ள ஆவணங்களின் படி விந்திய மலைக்குத் தெற்கேயுள்ள மாநிலங்களில் இருந்து பயணிகள் சேதுயாத்திரையை மேற்கொண்டு வந்து சென்றனர் என்பது தெரிய வருகின்றது. அப்பொழுது வடக்கே இருந்து தெற்கேயும் மேற்கே இருந்து கிழக்கேயும், தெற்கே இருந்து வடகிழக்கேயுமாக மூன்று பாதைகள் இராமேஸ்வரத்திற்கு இருந்தன. போக்குவரத்து வசதியும் மக்கள் நடமாட்டமும் இல்லாத இந்தப் பாதைகளின் வழியே தலையில் ஒரு சிறிய துணி முடிச்சைச் சுமந்தவாறு கால் நடையாகவே வருகின்ற நூற்றுக் கணக்கான பயணிகளுக்குச் சேதுபதி மன்னர்கள் அந்த வழித்தடங்களில் அன்ன சத்திரங்கள் அமைத்துப் பயணிகளது களைப்பையும் பசிப் பிணியையும் நீக்கி உதவி வந்தனர். வடக்கே சோழ மண்டலத்தில் இருந்து கிழக்குக் கடற்கரையோரமாக இராமேஸ்வரம் வழித் தடத்திலும் நெல்லைச் சீமையின் வட பகுதியான வேம்பாறிலிருந்து சாயல் குடி, உத்திர கோசமங்கை. திருப்புல்லாணி வழியாகக் கிழக்கே செல்லுகின்ற வழித் தடத்திலும் அன்ன சத்திரங்கள் அமைத்து உதவிய பல மண்டபங்கள் இடிபாடுகளுடன் பரிதாபமாக இன்றும் காட்சியளிப்பவனாக இருக்கின்றன.  கி.பி.18ஆம் நூற்றாண்டு வரை இந்த வழித் தடங்களில் அமைக்கப்பட்ட ஒவ்வொரு பயணிக்கும் அன்ன சத்திரங்கள் நாள் தோறும் இருவேளை சோறு வழங்குவதற்காகச் சேதுபதி மன்னர்கள் பல ஊர்களை இறையிலியாக வழங்கியிருந்தனர். இவைகளைக் குறிக்கும் செப்பேடுகளிலிருந்து திரட்டப் பெற்ற செய்திகளின் படி 39 சத்திரங்களுக்கு எழுபத்தி ஏழு (77) ஊர்களைச் சேதுபதி மன்னர்கள் சர்வமானியமாக வழங்கியிருந்தது இப்பொழுது தெரிய வருகிறது. அவைகளின் தொகுப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.  ஆவணப் பதிவேடுகளின்படி III சேது மன்னர்கள் அறக்கொடையாக வழங்கிய நிலக் கொடைகளின் விவரம் அன்ன சத்திரங்களுக்கு  --------------------- ----------------------- ------------------------       தானம் பெற்ற அமைப்பு தானம் வழங்கப்பட்ட ஊர் தானம் வழங்கப்பட்ட நாள்     --------------------- ----------------------- ------------------------   I குமார முத்து விஜய ரகுநாத சேதுபதி  1. செல்ல பூபால சத்திரம், இராமநாதபுரம்  வெள்ள மரிச்சுக்கட்டி கொடிக்குளம் II செல்ல முத்து விஜய ரகுநாத சேதுபதி  1. திருப்புல்லாணி - வெள்ளையன் சேர்வை சத்திரம்  காஞ்சிரங்குடி சகம் 1678 (கி.பி.1756) தாது ஐப்பசி 17  III முத்து ராமலிங்க சேதுபதி  1. ஆத்தங்கரை சத்திரம்  நகரிகாத்தான் 2. பிள்ளை மடம் சத்திரம்  சாத்தக்கோன் வலசை 3. தோணித்துறை சத்திரம், மண்டபம்  அத்தியூத்து 4. கஜானா வெங்கட் ராவ் சத்திரம், திருப்புல்லாணி  5. கோதண்ட ராம சத்திரம்  பந்தப்பனேந்தல் கடுக்காய் வலசை சகம் 1707 (கி.பி.1785) விசுவாவசு பங்குனி 28, 6. புருசோத்தம் பண்டித சத்திரம் - திருப்புல்லாணி  கழுநீர்மங்கலம் சகம் 1703 (கி.பி.1783) பிலவதை  7. தனுஷ்கோடி சத்திரம்  ஆலங்குளம் -  போத்த நதி -  8. அலங்கானுார் சத்திரம்  கிழத்தி சேரி சகம் 1692 (கி.பி.1740) விரோதி ஆவணி 25,  9. தேவிப்பட்டினம் சத்திரம்  தென் பொதுவக்குடி அடந்தனக் கோட்டை - சகம் 1685 (கி.பி.1763) சுபானு  வைகாசி 10.  சிலுக்குவார்பட்டி 10. உப்பூர் சத்திரம்  சித்துர்வாடி 11. முத்துராமலிங்க பட்டினச் சத்திரம்  முத்துராமலிங்க பட்டினம் இளையாதான் வயல் காடன்குடி 12. முடுக்கன்குளம் சத்திரம், தோப்பூர்  தோப்பூர், களுவான்சேரி, மறக்குளம், ஆலங்குளம்,  சொக்கம்பட்டி, இலுப்பைக்குளம், பனைக்குளம், குறிஞ்சிக்குளம்.  13. வேலாயுத சத்திரம், பரமக்குடி  வேலாயுதபுரம் மிதிலைக்குளம் இலுப்பக்குளம்  கிளியனேந்தல் சிறுமிதிலைக்குளம் வலையனேந்தல் செப்பேடுகளின்படி அன்ன சத்திரங்களுக்கு  --------------------- ----------------------- ------------------------       தானம் பெற்ற அமைப்பு தானம் வழங்கப்பட்ட ஊர் தானம் வழங்கப்பட்ட நாள்     --------------------- ----------------------- ------------------------   I திருமலை சேதுபதி  1. பிடாரி சேரி சத்திரம், திருச்சுழி  II ராணி காதலி நாச்சியார்  1. தனுஷ்கோடி சத்திரம்  களத்துர் சகம் 1631 (கி.பி.1709) விரோதி கார்த்திகை  2. என் மணம் கொண்டான் சத்திரம்  III ரகுநாத கிழவன் சேதுபதி  1. புதுமடம் சத்திரம்  புதுமடம் கி.பி.(1710) வெகுதான்ய ஆனி 6  2. சூடியூர் சத்திரம்  கணபதி ஏந்தல் IV முத்துராமலிங்க சேதுபதி  1. சாமிநாத மணியக்காரன் சத்திரம், மண்டபம்  துரத்தியேந்தல் 2. நாகநாத சமுத்திரச் சத்திரம்  இராமநாத ஓடை -  3. கடுகுச் சந்தை சத்திரம்  கடுகுச் சந்தை 4. அலங்கானுர் சத்திரம்  கழுவன் சேரி - சகம் 1692 (கி.பி.1770)  அலங்கானுர் - சகம் 1692 (கி.பி.1770)  5. சாமிநாத மணியக்காரன் சத்திரம்  தெளிச்சாத்த நல்லூர் 6. முத்துராமலிங்க பட்டின சத்திரம்  வெட்டுக்குளம் முத்துராமலிங்க பட்டினம் பிரம்பு வயல் மருத வயல் 7. கோட்டைப்பட்டின சத்திரம்  கொடிக்குளம் 8. மல்லான் கிணறு சத்திரம், திருச்சுழி  அத்திக்குளம், வலயபட்டி  9. ராஜ கோபாலன் சத்திரம், இராமேசுவரம்  வயலூர் 10. முகுந்தரால் சத்திரம், தேவிப்பட்டினம்  தேவிபட்டினம், காரேந்தல், வென்குளம்  தனுஷ்கோடி சத்திரம், போத்தநதி  12. மலையாளம் சத்திரம், திருப்புல்லாணி  13. வேதாளை சத்திரம்  அனிச்சகுடி சகம் 1690 (கி.பி.1768) விரோதி ஆவணி 21.  Ꮩ சிவகுமார முத்து விஜய ரகுநாத சேதுபதி  1. பாம்பன் சத்திரம்  மானகுடி  காரானி வெள்ளரி ஓடை ஒரு திராநாடு தரவை சாம்பல் ஊரணி மாளன்குடி VI முத்து விஜய ரகுநாத சேதுபதி  1. அக்காள் மடம் சத்திரம்  தேவூர் 2. மேலக் கோபுர வாசல் சத்திரம், இராமேஸ்வரம்  சித்தார்கோட்டை 3. நந்த கோபாலன் சத்திரம், இராமேஸ்வரம்.  குமரியேந்தல் சகம் 1670 (கி.பி.1748)  4. நாகப்பன் செட்டி சத்திரம்  பெத்தனேந்தல் (கி.பி.1742)  5. சுந்தர தாஸ் சத்திரம், திருப்பாலைக்குடி  கோட்டையூர் கோட்டை திருப்பாலைக்குடி 6. தோணித்துறை சத்திரம், மண்டபம்.  அத்தியூத்து சகம் 1635 (கி.பி.1713)  VII திருமலை சேதுபதி  1. அம்பட்ட மடம் சத்திரம், இராமேஸ்வரம்.  அரிகுடி, கி.பி.1665.  VII மங்களேஸ்வரி நாச்சியார்  1. போகலூர் சத்திரம், சத்திரக்குடி  நீலக்கண்டி சந்திரம் அருவருடி IX முத்து வீராயி நாச்சியார்  1. முத்து வீராயி சத்திரம், இராமநாதபுரம்.  மஞ்ச்சுக்குளம் கடம்பூர் சிவாவயல் கீழப்பனையூர் 2. இதம்பாடல் சத்திரம்  X முதது வயிரவநாத சேதுபதி  1. அழகப் பாலச் சத்திரம்  ஆயக்குடி சகம் 1634 (கி.பி.1712) நந்தன. ஆஷாட  கந்தனாவூர் X குமாரமுத்து விஜய ரகுநாதசேதுபதி  இராமேஸ்வர சத்திரம் குளுவன்குடி சகம் 1659, கி.பி.1737                iv. பள்ளிவாசல்கள், தேவாலயங்கள்   சேதுபதிச் சீமையில் இந்து சமயத்தினருக்கு அடுத்ததாக சமண சமயமும், இஸ்லாமும், கிறித்தவமும் பரவியிருந்ததைப் பல ஏடுகளும் இலக்கியங்களும் தெரிவிக்கின்றன. குறிப்பாக இஸ்லாம் என்ற ஏகத்துவத்தைப் பறை சாற்றுகின்ற புதிய சமயம் கி.பி.7ஆம் நூற்றாண்டில் தோற்றம் பெற்றாலும் பாண்டிய நாட்டிலும் சேது நாட்டிலும் பரவலாக வளர்ந்துள்ளதை கி.பி.10,12ம் நூற்றாண்டு வரலாறு தெரிவிக்கின்றது. சேதுநாட்டில் இஸ்லாமியரது வருகை எப்பொழுது ஏற்பட்டது என்பதை அறுதியிட்டுச் சொல்லும் ஆவணம் எதுவும் கிடைக்கப்பெறவில்லை. கி.பி.12ம் நூற்றாண்டின் இறுதியில் அரபு நாட்டிலிருந்து சுல்தான் செய்யது இபுராஹிம் என்பவர் தமது தோழர்களுடன் பாண்டிய நாட்டில் முதலில் கொற்கையிலும் அடுத்து மதுரை, பெளத்திர மாணிக்கப் பட்டினத்திலும் தங்கியிருந்து இஸ்லாமியச் சமயப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு இருந்தார். இதன் காரணமாகச் சேதுநாட்டின் துறைமுக நகரங்களான கீழக்கரை, பெரிய பட்டினம், தேவிபட்டினம், தொண்டிப்பட்டினம், சுந்தர பாண்டியன் பட்டினம் ஆகிய ஊர்களில் இஸ்லாமியரது குடியேற்றங்கள் ஏற்பட்டன. இவர்கள் பெரும்பாலும் அரபு நாட்டில் இருந்து பாண்டிய நாட்டிற்குக் குதிரைகளைக் கொண்டு வந்து விற்பனை செய்யும் வணிகத்திலும், பின்னர் அரசு சேவையிலும் அமர்த்தப்பட்டுப் பணியாற்றி வந்தனர்.  நாளடைவில் இங்கு தங்கி வாழ்ந்த இஸ்லாமியப் பெருமக்கள் எதிர்க்கரையில் உள்ள இலங்கை நாட்டிலும் வடக்கே கரையோர நாடுகளான ஆந்திரம், வங்காளம் ஆகிய மாநிலங்களில் கடல் வாணிகத்தில் ஈடுபட்டனர். கி.பி.1502ல் தூத்துக்குடிக்கு வந்த போர்ச்சுகல் நாட்டுப் பரங்கியரால் இவர்களது உள்நாட்டு, வெளிநாட்டு வணிகத் தொடர்புகள் சீர் குலைந்தன. இதனால் இவர்களது வாணிகத் தொடர்புகள் நமது நாட்டின் மேற்குக் கரையான கேரளத்துடன் வளர்ச்சி பெற்றன. கீழக்கரை, வேதாளை ஆகிய ஊர்களின் பள்ளி வாசல்களில், அடக்கவிடங்களில் காணப்படும் கல்வெட்டுக்களில் கொல்லம் ஆண்டு பயன்படுத்தப் பட்டிருப்பது தெரிய வருகிறது. திருமலை சேதுபதி மன்னர் ஆட்சியில் கைத்தறி நெசவாளர்களாக இருந்த முஸ்லீம்கள் கிழவன் சேதுபதியின் ஆட்சியில் பரவலாக மீண்டும் கடலோரக் கடல் வணிகத்தில் ஈடுபட்டனர். அப்பொழுது சேதுபதி மன்னருக்கும் கீழக்கரை வள்ளல் சீதக்காதிக்கும் இடையே ஏற்பட்ட நெருக்கமான உறவுகள் இதற்குப் பெரிதும் உதவின.  இதனால் சேதுநாட்டில் மேற்கு நாடுகளான துருக்கி, அரேபியா, பாரசீகம் ஆகிய நாடுகளில் இருந்து பல இஸ்லாமியத் துறவிகள் இங்கு வந்து தங்கி அமைதியாக மக்கள் நலப் பணியிலும் சமயப் பிரச்சாரத்திலும் ஈடுபட்டனர். காலப்போக்கில் இவர்கள் இயற்கை எய்தி அடக்கம் பெற்ற புனித இடங்கள் மக்களால் பெரிதும் மரியாதையுடன் மதிக்கப் பெற்று வருகின்றன. இந்த இடங்களில் தூபதீபச் செலவுகளுக்கும் அன்னதானம் வழங்குவதற்காகவும் சமயப் பொறை மிகுந்த சேதுபதி மன்னர்கள் பல ஊர்களைத் தானமாக வழங்கியுள்ளனர். இப்பொழுது கிடைத்துள்ள ஆவணங்கள், செப்பேடுகள் வாயிலாகச் சேதுபதி மன்னர்கள் 10 புனித இடங்களுக்கு 13 ஊர்களை சர்வமானியமாக வழங்கி இருப்பது தெரிய வருகிறது. அந்தப் புனித இடங்களும் அவைகளுக்குத் தானமாக வழங்கப்பட்ட ஊர்களும் காலவாரியாகப் பட்டியலிட்டுக் கீழே கொடுக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் இஸ்லாமியரது தொழுகை வழிபாடு நடத்தப் பெறும் இஸ்லாமியப் புனிதர்களது அடக்கவிடங்கள் அரபு மொழியில் தர்ஹாக்கள் எனப்படும். ஆனால் இந்த அரபுச் சொல்லைப் பயன்படுத்த விரும்பாத தமிழர்கள் புனித அடக்கவிடங்களையும் பள்ளி வாசல்கள் என்றே குறிப்பிடுவது உலக வழக்கமாக உள்ளது.  சேது நாட்டின் மற்றொரு சிறுபான்மையினரான கிறித்துவர்கள் சமுதாய வாழ்வில் மிகவும் பிற்பட்டு 17,18ம் நூற்றாண்டுகளில் வாழத்தொடங்கினர்.  அவர்களது தேவாலயம் ஒன்று கிழக்குக் கடற்கரையில் முத்துப் பேட்டை கிராமத்தில் அமைந்துள்ளது. அதன் வழிபாட்டுச் செலவிற்காக முத்துராமலிங்க சேதுபதி மன்னர் முத்துப்பேட்டை, தெஞ்சியேந்தல் என்ற இரு ஊர்களைச் சர்வ மானியமாக வழங்கியதற்கான கல்வெட்டும் செட்பேடும் கிடைத்துள்ளன. அவைகளின் விவரம் இந்தப் பட்டியலின் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.  ஆவணப் பதிவேடுகளின்படி   சேதுபதி மன்னர்கள் அறக்கொடையாக வழங்கிய நிலக்கொடைகளின் விவரம் பள்ளி வாசல்களுக்கு  ---------------------------- ----------------------- ------------------------       தானம் வழங்கப்பெற்ற அமைப்பு தானம் வழங்கப்பட்ட ஊர் தானம் வழங்கப்பட்ட நாள்     ---------------------------- ----------------------- ------------------------   I திருமலை சேதுபதி  1 மீரா பள்ளி வாசல், குணங்குடி  குபைங்குடி சகம் 1595 (கி.பி.1673) பிராமாதீச கார்த்திகை 5  II குமார முத்து விஜய ரகுநாத சேதுபதி  சா பள்ளி வாசல், இராமநாதபுரம்,  கிழவனேரி சகம் 1656 (கி.பி.1744) ஆனந்த தை 1.  III சிவகுமார முத்து விஜய ரகுநாத சேதுபதி  1. ஆபில்காபில் தர்ஹா இராமேஸ்வரம்  புதுக்குளம் சகம் 1667 (கி.பி.1745) குரோதன வைகாசி 11.  2. சதக்கத்துல்லா அப்பா தர்ஹா, கீழக்கரை.  கீழத்தில்லையேந்தல் சகம் 1667 (கி.பி.1745) குரோதன வைகாசி 11.  3. மீராசா தர்ஹா, அனுமந்தக்குடி  அழியாபதி சகம் 1666 (கி.பி.1744) குரோதன வைகாசி குணபதி மங்கலம்  4. இபுராஹிம் சாகிபு பள்ளி, ஏர்வாடி  ஏர்வாடி சகம் 1666 (கி.பி.1744) துந்து.பி ஐப்பசி - மாயாகுளம்  IV கிழவன் சேதுபதி  1. காரேந்தல் பள்ளி வாசல்  திருச்சுழியல் - - -  2. பள்ளிவாசல் மானியம்  கொக்குளம் - - -  நாடாக்குளம் _  V முத்து விஜய ரகுநாத சேதுபதி  1. பள்ளி வாசல் பூலாங்கால்  பூலாங்கால் சகம் 1643 (கி.பி.1721) பிலவ தை 17.  கல்வெட்டுகளின் படி I கிழவன் சேதுபதி  1. காட்டுபாவா சாகிபு பள்ளி வாசல் Iஉத்தார நாட்டு அடுக்குளம் - சகம் கி.பி.1696 தாது அற்பசி 13 Iகாஞரங்குளம  கிறித்தவ தேவாலயங்களுக்கு ஆவணப் பதிவேடுகளின்படி  I முத்துராமலிங்க விஜய ரகுநாத சேதுபதி  முத்துப்பேட்டை - சகம் 1703 (கி.பி.1781) பிலவ கார்த்திகை 5 தெஞ்சியேந்தல்.                                                          v. தமிழ்ப் புலவர்கள்   தமிழ்ப் புலவர் பெருமக்களை ஆதரித்துப் போற்றி வந்த தமிழ் மன்னர்களைப் பற்றி இலக்கியங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் தமிழ்ச் சமுதாயத்தின் வடவரின் ஆதிக்கம் மிகுந்து தமிழ் மொழியையும் தமிழ்ப் புலவர்களையும் புறக்கணித்து வந்த அவல நிலை கி.பி.15.16ம் நூற்றாண்டுகளில் ஏற்பட்டது பிற மொழி ஆதிக்கம், செல்வாக்குப் பெறுவதற்கு அந்நியரது ஆட்சி உதவி புரிந்தது. தமிழ்ப் புலவர் பெருமக்கள் வறுமையாலும் வாழ்க்கைச் சிறுமையாலும் நலிந்து நைந்து வாடும் நிலை ஏற்பட்டது. இதனை மாற்றித் தமிழ் மொழியின் செல்வாக்கினை உயர்த்துவதற்கு சேதுபதி மன்னர்கள் தான் துணை நின்றனர்  கி.பி 17 ம் நூற்றாண்டில் இராமநாதபுரம் திருமலை ரெகுநாத சேதுபதியின் ஆட்சியில் மதுரை நாயக்கப் பேரரசுக்கு ஈடாக நிமிர்ந்து நிற்கும் நிலை ஏற்பட்டது. இந்த மன்னர் தமிழ்ப் புலவர்களைத் தமது அரசவைக்கு வரவழைத்து அவர்களுக்குப் பொன்னும் பொருளும் ஈந்து பேற்றினர். தமிழ்ப் புலவர்களும் பல புதிய இலக்கியப் படைப்புகளை இயற்றி தமிழன்னைக்கு அணிவித்து மகிழ்ந்தனர். இதனால் இந்த மன்னரைப் புலவர் ஒருவர்.”...பஞ்சாகப் பறக்கயிலே தேவேந்திர தாருவொத்தாய் ஜெயதுங்கனே’[1] என்றும் ‘பால்வாய்ப் பசுந்தமிழ் வாசம் பறந்த வையைக் கால்வாய்த்த கறந்தையர் கோன்’ என்றும் போற்றிப் பாடினர். இந்த மன்னர், நாணிக்கண் புதைத்தல் என்ற துறையில் புதுமையாக ‘ஒரு துறைக் கோவை’ என்ற இலக்கியத்தைப் படைத்த அமிர்த கவிராயருக்குப் பதினாயிரம் பொன் கொடுத்து அவரது சொந்த ஊரான பொன்னன் கால் என்ற ஊரினையும் முற்றுட்டாக வழங்கி மகிழ்ந்ததை வரலாறு தெரிவிக்கின்றது. இன்னொரு புலவரான மல்லை அழகிய சிற்றம்பலக் கவிராயருக்குத் தள சிங்க மாலை என்ற இலக்கியத்தைப் பாடியதற்காக மிதிலைப்பட்டி என்ற ஊரினை வழங்கி அங்கிருந்து இராமநாதபுரம் அரண்மனைக்கு வந்து செல்ல பல்லக்கு வசதியையும் ஏற்படுத்திக் கொடுத்தார். மற்றுமொரு புலவரான அனந்த கவிராயருக்கு மானுார் கலையூர் என்ற ஊரினை வழங்கி ஆதரித்ததும் தெரிய வருகிறது.  இந்த மன்னரது பின்னவரான கிழவன் ரெகுநாத சேதுபதி அழகிய சிற்றம்பலக் கவிராயரை ஆதரித்து மகிழ்ந்ததுடன் மருதூர் அந்தாதி பாடிய தலமலைகண்ட தேவரையும் போற்றி வந்தார் எனவும் தெரிகிறது. இந்த மன்னரையடுத்துச் சேதுபதிப் பட்டம் பெற்ற முத்து வயிரவநாத சேதுபதி மன்னர் சிறப்பாகக் கம்ப ராமாயணப் பிரசங்கம் செய்து மக்களை மகிழ்வித்து வந்த சர்க்கரைப் புலவருக்குக் கோடாகுடி, உளக்குடி என்ற இரு கிராமங்களை நிலக்கொடைகளாக வழங்கியதை அந்த மன்னரது செப்பேடுகள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த மன்னருக்குப் பிறகு சேது மன்னரான முத்து விஜய ரகுநாத சேதுபதி சக்கரைப் புலவரைப் போற்றிப் புரந்ததுடன் மதுரை சொக்கநாதப் புலவரையும் ஆதரித்துப் பாராட்டி வந்தார்.  இவ்விதம் சேதுபதி மன்னர்கள் கி.பி.19ம் நூற்றாண்டு வரை தமிழ்ப்புலவர்களை ஆதரித்து மகிழ்ந்ததையும் அதன் காரணமாகத் தமிழ் மொழிக்குப் பல புதிய படைப்புகள் கிடைக்குமாறு செய்தனர். தமிழ் மன்னர்கள் தமிழ்ப்புலவர்களுக்குப் பொன்னும் பொருளும் கொடுத்து ஆதரித்ததையும் தம்மோடு அருகே அமரச்செய்து அமுதுாட்டியதையும் சங்க இலக்கியங்கள் வாயிலாக அறிகின்றோம்.  ஆனால் இராமநாதபுரம் சேதுபதி மன்னர்களைப் போல தமிழ்ப் புலவர்களுக்கு ஊரும் பேரும் கொடுத்து ஆதரித்ததற்கு ஒப்பான நிகழ்ச்சி எதுவும் இல்லை என்பதை வரலாறு மூலம் அறிய முடிகிறது. நமக்குக் கிடைத்துள்ள ஆவணங்கள், செப்பேடுகளின்படி இந்த மன்னர்கள் 9 புலவர்களுக்கு 12 ஊர்களை இறையிலியாக வழங்கியதை மட்டும் அறியமுடிகிறது. அதன் விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.  சேதுநாட்டில் பிறந்து செந்தமிழுக்குப் புத்தம் புது அணிகலன்களான இலக்கியங்களைப் படைத்து இறவாப் புகழ் கொண்ட சேது நாட்டுப் புலவர்களது பட்டியல்கள் கொடுக்கப்பட்டுள்ளது.  சேது மன்னர்கள் அறக்கொடையாக வழங்கிய நிலக்கொடைகளின் பட்டியல்  செப்பேடுகளின் படி தமிழ்ப்புலவர்களுக்கு --------------------- ----------------------- ------------------------       தானம் பெற்ற அமைப்பு தானம் வழங்கப்பட்ட ஊர் தானம் வழங்கப்பட்ட நாள்     --------------------- ----------------------- ------------------------   I திருமலை சேதுபதி  1. பொன்னான்கால் அமுத கவிராயர்  பொன்னான்கால் கிராமம் (ஒருதுறைக் கோவை இலக்கியம் பாடியதற்காக) அழகிய  2. சிற்றம்பலக் கவிராயர்  மிதிலைப்பட்டி இராமநாதமடை 3. அனந்த கவிராயர்  கலையூர் மானுர் II ரெகுநாத கிழவன் சேதுபதி  1. தலமலைகண்ட தேவர் காரடர்ந்தகுடி  III முத்து வயிரவநாத சேதுபதி  1. மேலச்செல்வனுர் சர்க்கரைப்புலவர்  உளக்குடி கிராமம் கோடாகுடி, கொந்தலான் வயல் சகம் 1633 (கி.பி.1711) கர கார்த்திகை  IV முத்து விஜய ரகுநாத சேதுபதி  1. மதுரை நாவலர் சொக்கநாதப் புலவர் பணம் விடு துது, தேவை உலா பாடியதற்காக  V முத்துராமலிங்க விஜய ரகுநாத சேதுபதி  1. எம்னேஸ்வரம் மீர் ஜவ்வாது புலவர்  சுவாத்தன்  வண்ண வயல் 2. கமுதி மன்னா ரெட்டியார்  வடகரை, தென்கரை கிராமங்கள்  VI ராணி மங்களேஸ்வரி நாச்சியார்  1. கவிக்குஞ்சர பாரதியார்  பெருங்கரை (அழகர் குறவஞ்சி பாடியதற்காக)  2. சங்குப்புலவர்  ஊக்குடி - சகம் 1960 (கி.பி.1767) சர்வசித்து மாசி 16 3.  3.முத்தையா புலவர்  ஊரணிக் கோட்டை - சகம்    1. ↑ பெருந்தொகை - பாடல் எண் 1285 'மூவேந்தருமற்றுச் சங்கமும் போய்ப்பதின் மூன்றெட்டுக் கோவேந்தருமற்று மற்றொரு வேந்தன் கொடையுமற்றுப் பாவேந்தர் காற்றிலிலவம்பஞ் சாகப் பறக்கையிலே தேவேந்தர தாருவொத் தாய்ரகுநாத செயதுங்கனே."                                                        vi. தனியார்கள்   சேதுபதி மன்னர்கள் வள்ளல் தன்மைக்குக் கட்டியம் கூறுவதாக அமைந்திருப்பவை அவர்கள் தனியார்களுக்கு வழங்கியுள்ள ஏராளமான அறக்கொடைகள் ஆகும் நமக்குக் கிடைத்துள்ள ஆவணங்கள். செப்பேடுகளின் படி இத்தகைய அறக்கொடைகளைப் பெற்றவர்கள் 210 பேர் எனத் தெரியவருகிறது. இவர்கள் தானமாக பெற்ற ஊர்கள் 219 ஆகும். இத்தனை ஊர்களை இந்த மன்னர்கள் தானமாக வழங்கியிருப்பதன் நோக்கம் என்ன என்பதை நாம் ஆய்வு செய்ய வேண்டியிருக்கிறது. சேதுபதி மன்னர்களது பெருமையையும் ஆடம்பர வாழ்க்கையினையும் பறை சாற்றுவதற்காக வழங்கப்பட்டவையா இந்தக் அறக்கொடைகள்?  கல்வி வசதியும் மருத்துவ வசதியும் இல்லாத கி.பி.17,18 ஆம் நூற்றாண்டுகளில் சேது நாட்டு மக்களது இந்தக் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்காக இந்த மன்னர்கள் பெரிதும் முயன்று வந்தனர் என்பதும் தெரியவந்துள்ளது. எழுத்தாணி கொண்டு ஏட்டில் எழுதிப்படித்த அந்தக்காலத்தில் குடிமக்கள் சமயச் சிந்தனையையும் இலக்கிய ஈடுபாட்டினையும் பெறுவதற்காக இந்த மன்னர்கள் பல அவதானிகளையும், பண்டிதர்களையும் வித்வத் மகாஜனங்களையும். நாட்டுத் வைத்தியர்களையும் சேது நாட்டுக்கு வரவழைத்து நிலையாகத் தங்கித் தங்களது பணியினைத் தொடர்வதற்காகத்தான் இத்தனை அறக் கொடைகள். இந்து சமயம் சேது நாட்டின் அப்பொழுதைய பொதுச் சமயமாகக் கருதப்பட்டாலும் அந்தச் சமயங்களின் அடிப்படைக் கருத்துக் களை நடைமுறைகளை சாதாரண மக்கள் அறிந்து கொள்ளுவதற்கான வாய்ப்பே இல்லாத அவல நிலை சைவ சமயச் சாத்திரங்களிலும் தேவார, திருவாசக, திவ்வியப்பிரபந்தம் ஆகிய இலக்கியங்களிலும் தேர்ந்திருந்த பண்டிதர்களும் அவதானிகளும் இங்கு வரவழைக்கப்பட்டனர். இதைப் போன்றே பெரிய திருக்கோயில்களில் இசை, நாட்டியம், நட்டுவம், நாதஸ்வரம் ஆகிய தமிழ்க் கலைகளைப் பரப்புவதற்குக் கோயிலில் பணிபுரியும் ஊழியர்களை இசைக் குழுவினர். நாட்டிய நங்கைகள், நாதஸ்வரக் கலைஞர்கள் ஆகியோரும் ஊக்குவிக்கப்பட்டனர் என்பதை இந்த அறக்கொடைகள் மூலம் அறிந்து கொள்ளலாம்.  இத்தகைய அறிவுடை மக்கள் பெற்ற அறக்கொடைகளின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.  சேதுபதி மன்னர் அறக்கொடையாக வழங்கிய நிலக்கொடைகள் விவரம்  VI தனியார்கள்  --------------------- ----------------------- ------------------------       தானம் பெற்ற அமைப்பு தானம் வழங்கப்பட்ட ஊர் தானம் வழங்கப்பட்ட நாள்     --------------------- ----------------------- ------------------------   I தளவாய் சேதுபதி  1. இராமசாமி ஐயங்கார்  மேட்டுக்கைகளத்துர் - சகம் 1560 (கி.பி.1638) வெகுதானிய வைகாசி  2. திருவேங்கடம் ஐயர்  மேலகைக்குடி - சகம் 1562 (கி.பி.1640) தை  II திருமலை சேதுபதி (கி.பி.1647-74)  1. சுந்தரமையன், அப்பாசாமி  கயிலாச மங்கலம் - சகம் 1565 (கி.பி.1643) சாதாரண தை  2. கோபால ஐயன்  வலையன்குளம் - சகம் 1591 (கி.பி.1669) செளமிய தை  3. சேனையன், சுப்பையன்  மாவிலங்கை - சகம் 1565 (கி.பி.1641) பரிதாபி தை  4. ஜகநாதையன்  வாதவனேரி ஆரம்பக்கோட்டை - சகம் 1577 (கி.பி.1655) மன்மத 5. சீனிவாச ஐயன்  சிறுகுடி - சகம் 1575 (கி.பி.1653) ஜய-வைகாசி  6. அனந்தராம ஐயர்  அவதானி மதிப்பனேந்தல் - சகம் 1590 (கி.பி.1668) சாதாரண சித்திரை  7. வெங்கட கிருஷ்ணையன்  கிடாவெட்டியேந்தல் - சகம் 1574 (கி.பி.1652) நந்தன ஆடி  8. ரங்க ஐயன், கோபால ஐயன்  ஊறவயல் - சகம் 1585 (கி.பி.1663) சோட கிருது சித்திரை  9. வைகுந்த ராம ஐயன்  கடலூர் - சகம் 157o (கி.பி.1648) சர்வதாரி தை  10. வைத்தி ஐயன், சுப்பிரமணிய ஐயன்  உப்பூர் - சகம் 157o (கி.பி.1648) சர்வதாரி தை  11. சீனிவாச ராவ்  நெம்மேனி - சகம் 1588 (கி.பி.1666) பிராபவ ஆனி  12. கோபி ஐயர்  பில்லத்துர் - சகம் 1562 (கி.பி.1640) விக்கிரம வைகாசி  13. அழகிய நம்பி ஐயர்  வடவன் குளம் - சகம் 1581 (கி.பி.1659) விகாரி மாசி  14. செல்லம் ஐயர்  கள்ளியடியேந்தல் சொரியனேந்தல் - சகம் 1571 (கி.பி.1649) விரோதி பங்குனி :தெரிதுகோட்டை  15. சிங்காச்சாரி  பொட்டிதட்டி - சகம் 1580 (கி.பி.1650) விளம்பி தை  16. சுப்பிரமணியம்  பாண்டிக்கண்மாய் - சகம் 1595 (கி.பி.1673) பிரமாதீச தை  17. சிவகாமி குருக்கன்  வையனேந்தல் - சகம் 1591 (கி.பி.1669) செளமிய வைகாசி  18. ராமசாமி ஐயங்கார் - சாமிஐயங்கார்  சுத்தமல்லி - சகம் 1582 (கி.பி.1659) விகாரி மாசி  19. வைத்தியநாதன்  கப்பல்குடி - சகம் 1595 (கி.பி.1674) ஆனந்த ஆடி 20. சுப்பையன்  குன்னக்குடி - சகம் 1588 (கி.பி.1666) பிரபவ ஆடி  21. லெட்சுமண ஐயர்  நரிக்கன் ஏந்தல் - சகம் 1593 (கி.பி.1672) பரிதாய தை  22. சுப்பையன்  திருத்திலான் குடி - சகம் 1593 (கி.பி.1672) பரிதாபி தை  23. பத்மநாதையன்  தன்னன்.ஏந்தல் - சகம் 1590 (கி.பி.1668) கீலக மாசி  24. ராமசாமி ஐயன்  சின்ன வலையன் குளம் - சகம் 1585 (கி.பி.1663) கோபகிருது தை  25. சுப்பையன்  மணவாளன் வயல் 26. நாராயண தீட்சதர்  நாவலுர் - சகம் 1580 (கி.பி.1658) விளம்பி தை  21. பெருமாள் ஐயன்  பிள்ளையார் ஏந்தல் - சகம் 1579 (கி.பி.1657) துண்முகி ஆவணி  22. ராமசாமி  கீர்த்தி மங்கலம் - சகம் 1577 (கி.பி.1655) நலி வைகாசி  III கிழவன் சேதுபதி  l. அழகா ஐயன்  அச்சங்குடி - சகம் 1598 (கி.பி.1680) நள ஆடி  2. விட்டவையன்  சிவராமையன் வட்டகுடி_சகம் 1613 (கி.பி.1691) பிரஜோற்பதி தை  3. முத்துச் சாமி ஐயன்  பின்னியாரேந்தல் - சகம் 1631 (கி.பி.1709) விரோதி வைகாசி 4  4. நாராயண தீட்சிதர்  ஆண்டிச்சிகுளம் - சகம் 1617 (கி.பி.1693) பூரீமுக தை  5. முத்துச் சாமி ஐயன்  டிக்குளம் - சகம் 1611 (கி.பி.1689) சுக்கில பங்குனி  6. லிங்கம் ஐயன்  சேதுபுரம் - சகம் 1628 (கி.பி.1706) விபவ ஐப்பசி  7. வெங்கடாசலம் ஐயன்  கூவர் குளம்  கூரியேந்தல் - சகம் 1611 (கி.பி.1689) சுக்கில பங்குனி  8.கணபதி சுப்பையர்  கிட்டவண்ணன் குளம் - சகம் 1596 (கி.பி.1674) பிரமாதீச ஆடி  9. சுப்பையன்  புளியன்குளம் - சகம் 1611 (கி.பி.1689) சுக்கில பங்குனி  10. ஆதிரத்தின ஐயர்  வேலங்குளம் - சகம் 1599 (கி.பி.1677) மன்மத தை  11. வெங்கட்ட ராம ஐயர்  கோடானேந்தல் - சகம் 1613 (கி.பி.1691) பிரஜோர்பதி சித்திரை  12. சுப்பிரமணிய குருக்கள்  பள்ளன்குளம் - சகம் 1617 (கி.பி.1694) பவ தை  அழகர் ஆச்சாரி - சகம் 1623 (கி.பி.1701) விசு ஆடி  14. சீனிவாச ஐயங்கார்  மேலப்பனையூர் - சகம் 1617 (கி.பி.1694) பவ கார்த்திகை 15.  15. சுப்பிரமணிய குருக்கள்  சாமந்தவயல் - சகம் 1615 (கி.பி.1693) பூரீமுக ஆடி  16. முத்துச்சாமி  மெய்யப்பனேந்தல் - சகம் 1673 (கி.பி.1701) விசு தை  17. சுப்பையன்  பகையணி பிராந்தணி - சகம் 1614 (கி.பி.1692) ஆங்கீரச தை  18. வாசுதேவையன்  பூவனேந்தல் - சகம் 1617 (கி.பி.1694) பவ ஆடி  19. சுப்பையன்  மேலக்கோட்டை - சகம் 1617 (கி.பி.1694) பவ ஆடி  20. நாராயண தீட்சிதர்  ருத்திரப்பட்டி - சகம் 1610 (கி.பி.1688) விபவ வைகாசி  21. கூத்தையன்  கூத்தன் ஏந்தல் - சகம் 1609 (கி.பி.1687) பிரபவ ஆவணி  22. அழகர் ஐயன்  அரசன் ஏந்தல் - சகம் 1620 (கி.பி.1681) துர்மதி சித்தி தை  23. அப்பா தீட்சிதர்  வலையன் ஏந்தல் - சகம் 1620 (கி.பி.1700) விக்கிர தை 24. ரகுநாத குருக்கள்  பரபபளம்பட்டி சகம் 1595 (கி.பி.1674) பிரமாதீச் சித்திரை :சிறுகபையூர் மாந்திரீகம்  IV மன்னர் கிழவன் சேதுபதி மனைவி காதலி நாச்சியார்  1. வெங்கடேஸ்வர ஐயர்  களத்துர் - சகம் 1631 (கி.பி.1709) நள வைகாசி  2. நாராயண ஐயர்  பாப்பாகுடி உமையாண்டபுரம் - சகம் 1616 (கி.பி.1694) பவ தை :அபிஷேகபுரம்  3. பத்மனாபன்  கன்னாரேந்தல் - சகம் 1590 (கி.பி.1698) கில்க மாசி  V முத்து விஜய ரெகுநாத சேதுபதி  1. லெட்சுமண ஐயன், வெங்கடகிருஷ்ண ஐயன்  ஒருவானேந்தல் - சகம் 1635 (கி.பி.1713) விஜய தை  2. சுப்பையன், நாராயண தீட்சிதர்  சேரந்தை சகம் 1650 (கி.பி.1728) பரிதாபி சித்திரை .  3. அய்யாமுத்து ஐயங்கார்  புளியங்குளம் -  4. மணிவண்ண ஐயங்கார்  விரகடி ஏந்தல் 5. கோபாலையன்  கடையன் குளம் 6. அழகர் ஐயன்  வண்டல் - சகம் 1633 (கி.பி.1711) தை  7. கணபதி ஐயர்  வெங்க ஆத்தி வயல் - சகம் 1634 (கி.பி.1712) நந்தன் தை  8. ராமசாமி ஐயன்  மருதுர் அய்யனார் குளம் 9. நாராயண தீட்சிதர்  முட்டாத்தி ஏந்தல் - சகம் 164.5 (கி.பி.1723) கோப கிருது சித்திரை 10. அழகர் ஐயங்கார்  தீர்த்தக்குட்டம் - சகம் 1623 (கி.பி.1710) விரோதி கார்த்திகை  11. ரகுபதி ஐயங்கார்  காமினி- சகம் 1633 (கி.பி.1711) கர தை  12. ரங்க ராவ்  சுக்கிரனேரி - சகம் 1649 (கி.பி.1727) பிலபை தை  13. ஆவுடையப்பன்  பூக்குளம் - சகம் 1649 (கி.பி.1711) கர வைகாசி  14. ராமசாமி தீட்சிதர்  மாங்குடி - சகம் 1629 (கி.பி.1701) சர்வதாரி தை  15. சாமி சாஸ்திரி  குளத்துர் - சகம் 1639 (கி.பி.1717) கேவிளம்பி ஆடி  மணிகண்டி - சகம் 1639 (கி.பி.1717) கேவிளம்பி ஆடி  16. நாராயண ஐயர்  நாவல்குடி - சகம் 1641 (கி.பி.1719) விகாரி தை  17. சுப்பையா நயினார் (புரோகிதம்)  ரெகுநாதபுரம் - சகம் 1625 (கி.பி.1703) சுபானு, பங்குனி வீணை  18. கோபால ஐயர், ஆவுடையார் கோயில்  வியானுர் V குமார முத்து விஜய ரகுநாத சேதுபதி  1. ராமச்சந்திர சாஸ்திரி  கருங்குளம் - சகம் 1658 (கி.பி.1736) நள தை  2. சாமையன், சங்கரப்பையன்  கன்னார்ரேந்தல் - சகம் 1653 (கி.பி.1731) விரோதி வைகாசி  3. ஜகந்நாதையன்  கொட்டகுடி - சகம் 1665 (கி.பி.1743) ருத்ரோகாரி ஆடி 29  4. மீனாட்சி ஐயன்  உலகன்குளம் - சகம் 1654 (கி.பி.1732) விரோதி கிருது தை  5. ஜகந்நாத ஐயங்கார்  சூரியக்குட்டம் - சகம் 1655 (கி.பி.1733) பிரமாதீச கார்த்திகை  6. முத்து ஐயன்  சீனியேந்தல் - சகம் 1654 (கி.பி.1732) பரிதாபி வைகாசி 7. ராமராயன்  சோனைக்குட்டம் - சகம் 1655 (கி.பி.1733) ஆனந்த தை  8. பாப்பானேந்தல் சகம் 1652 (கி.பி.1730) சாதாரண தை  9. ராமநாத ஐயன்  சிததனேந்தல் சகம் 1652 (கி.பி.1750) சாதாரண தை  10. கோபாலையன்  பந்தப்பனேந்தல் - சகம் 1652 (கி.பி.1730) சாதாரண தை 11.  11. மெளன தீட்சிதர்  பகைவென்றி - சகம் 1652 (கி.பி.1730) சாதாரண வைகாசி  12. அன்னதீட்சிதர்  செவ்வூர் - சகம் 1655 (கி.பி.1733) பிரமாதி  13. நாராயண தீட்சிதர்  முட்டாத்தியேந்தல் - சகம் 164.5 (கி.பி.1723) கோபகிருது சித்திரை  14. பெருமாள் ஐயங்கார்  பொன்னக்கரை - சகம் 1655 (கி.பி.1733) பிரமாதி ஆடி  15. மங்களேசுவர குருக்கள்  பெரியகையகம் - சகம் 1650 (கி.பி.1728) சாதாரண ஆடி  16. அழகர் ஐயங்கார்  காவது கோட்டை பெரியானைக்குளம் - சகம் 1653 (கி.பி.1731) விரோதி கிருது  வைகாசி 19. காசி ஐயன்  மெய்யப்பனேந்தல் - சகம் 164.5 (கி.பி.1723) கிரோதி தை  20. முத்து திருவாய் அய்யர்  பிச்சக்குறிச்சி - சகம் 1656 (கி.பி.1734) ஆனந்த ஆவணி  21. நல்லமுத்துப்பிள்ளை  பொது ஏந்தல் - சகம் 1652 (கி.பி.1750) சாதாரண வைகாசி 16  22. பண்டிதர் (மருத்துவம்)  சக்கரக்கோட்டை - பெரிய மணியக்காரர்  குளத்தும் VII சிவகுமார முத்து விஜய ரகுநாத சேதுபதி  1. ஐயாசாமி ஐயர், திருப்புல்லாணி  பெரிய தாமரைக்குடி - சகம் 1670 (கி.பி.1748) விபவ வைகாசி 2. வெங்கட வரத ஐயங்கார்  பூத்தோண்டி - சகம் 1667 (கி.பி.1745) கெளதம் பங்குனி  3. ராமையன், சுப்பையன்  சித்தனேந்தல் - சகம் 1667 (கி.பி.1745) கெளதம் பங்குனி  4. சங்கையன், ராமையன்  மணக்குளம் - சகம் 1664 (கி.பி.1742) துந்துபி வைகாசி 5.  5. ராமசாமி ஐயங்கார் திருப்புல்லாணி  சாத்தாங்குளம் - சகம் 1664 (கி.பி.1742) துந்துபி தை 17  6. சிவகாமி முனிஸ்வர குருக்கள்  சின்ன கண்ணான் குளம் - சகம் 1664 (கி.பி.1742) துந்துபி ஆடி  7. வரதாச்சாரி  வெங்குளம் - சகம் 1666 (கி.பி.1744) துரோன  8. ஜகந்நாத ஐயங்கார்  சின்னபாலையார் ஏந்தல் - சகம் 1668 (கி.பி.1746) அட்சய ஆடி  9. ராமையன்  பெரியகண்ணங்குடி - சகம் 1664 (கி.பி.1742) துந்துபி ஆடி  10. வெங்கிட்ட சுப்பையன்  கொம்பூதி - சகம் 1663 (கி.பி.1741) துந்துபி மாசி  11. கூத்தன் ஐயன்  இடைச்சி ஊரணி - சகம் 1660 (கி.பி.1738) காளயுத்தி தை  12.சேஷய்யன், வெங்கடேஸ்வர ஐயன்  பொட்டக்குளம் - சகம் 1664 (கி.பி.1742) துந்துபி ஆடி  13. சீனிவாசக ஐயங்கார்  தாதனேந்தல் - சகம் 1689 (கி.பி.1739) சித்தார்த்தி தை  14. சுப்பையன் முத்துச்சாமி  செய்யாமங்கலம் - சகம் 1664 (கி.பி.1741) துர்மதி தை  15. நாரண ஐயன்  பத்தானேந்தல் - சகம் 1658 (கி.பி.1736) நள தை  16. சேசையன்  முத்தானேந்தல் - சகம் 1651 (கி.பி.1729) செளமிய தை  17. பெரிய ஐயன்  இராமநாத ஏந்தல் - சகம் 1652 (கி.பி.1750) சாதாரண தை 18. பெருமாள் ஐயர் (இன்னும் இருவர்)  பொட்டக்குளம் - சகம் 1664 (கி.பி.1742) துந்துபி  19. மங்களாபதி ஐயங்கார்  எருமைப்புரளி - சகம் 1668 (கி.பி.1746) குரோதன ஆனி  20. சேஷயன் ஐயங்கார்  பிடாரனேந்தல் - சகம் 1654 (கி.பி.1732) பரிதாபி புரட்டாசி  21. சுந்தரம் ஐயன்  பண்ணாரை ஏந்தல் - சகம் 1661 (கி.பி.1739) காளயுத்தி ஆடி  22. மெளனகுத்தி ஐயன்  வழிவயல் - சகம் 1664 (கி.பி.1742) துந்துபி வைகாசி  23. ஜகந்நாத ஐயன்  மாதவன் கோட்டை - சகம் 1670 (கி.பி.1747) விபவ ஆவணி  24. ராமையன்  கோணக்குட்டம் - சகம் 1656 (கி.பி.1734) ஆனந்த தை  25. பெரியாண்டி சேர்வைக்காரர்  பெருங்குளம் சகம் 26. மங்களேசுவர குருக்கள்  திருமாலுகந்தான் கோட்டை 27. சீனிப்புலவர், உய்யவந்த புலவர்  தேவூர் VII செல்ல முத்து ரகுநாத சேதுபதி  1. சீனிவாச வல்லபர்  மானங்காத்தான் - சகம் 1670 (கி.பி.1748) பரிதாபி வைகாசி  2. வெங்கடேசுவர அவதானி  கடம்பன் குளம் - சகம் 1680 (கி.பி.1758) பகுதான்ய தை  3. முத்து ஐயன் சொக்க ஐயன்  ஆபானேந்தல் - சகம் 1671 (கி.பி.1749) சுக்கில பங்குனி  4. சங்கர தீட்சிதர், தர்மசேவா சாஸ்திரி  காட்டுஎமனேசுவரம் - சகம் 1670 (கி.பி.1748) விபவ, மாசி  5. சுந்தர ஐயன்  காவனுர் - சகம் 1682 (கி.பி.176o) விக்கிரம ஆனி  6. வெங்கடபதி ஐயங்கார்  ஆவாரேந்தல் - சகம் 1673 (கி.பி.1751) பிரஜோர்பதி தை 7. சிவசங்கர குருக்கள்  புஷ்பவன குருக்கள் காணியேந்தல் - சகம் 1677 (கி.பி.1757) ஈஸ்வர தை  8. சீனிவாச ஐயங்கார்  கோராப்புளி - சகம் 1675 (கி.பி.1754) பவ தை  9. நாராயணராமசாமி  பிடையன் வயல் - சகம் 1675 (கி.பி.1753) ஸ்ரீமுக தை  10. அகிலாண்ட சாந்தி, த/பெ. கலியான சோதிடர்  விட்டிலான் ஏந்தல் - சகம் 1675 (கி.பி.1753) பூரீமுக தை  11. முத்துவீரன் ஆசாரி  சோழனுவந்தான் ஏந்தல் - சகம் 1679 (கி.பி.1757) ஈசுவர  வைகாசி 15  12. சிவகாமி, மங்களேஸ்வர குருக்கள்  அருங்குளம் கருக்காத்தி - சகம் 1682 (கி.பி.1760) விக்கிரம வைகாசி  IX முத்து ராமலிங்க சேதுபதி  1. ஆழ்வார் ஐயங்கார்  நரியனேந்தல் - சகம் 1715 (கி.பி.1793) பிரமாதீச ஐப்பசி  2. வெங்கி ஐயன்  முத்து வேங்கடன் - சகம் 1691 (கி.பி.1769) விரோதி தை 17  3. முத்து இராமலிங்க ஐயன்  மேலச்சீத்தை - சகம் 1694 (கி.பி.1768) சர்வதாரி தை  4. திருவேங்கட ஐயன்  அருங்குடி - சகம் 1709 (கி.பி.1787) பில்வங்க கார்த்திகை  5. வெங்கடேஸ்வர ஐயர்  முத்துரகுநாதபுரம் - சகம் 1714 (கி.பி.1792) பரிதாபி வைகாசி  6. ஆனந்த கிருஷ்ண ஐயங்கார்  அச்சங்குளம் - சகம் 1703 (கி.பி.1781) பிலவ கார்த்திகை  7. சாமி பெருமாள் ஐயன்  ஈராங்கால் - சகம் 1692 (கி.பி.1770) விககிருது தை 8. நாராயண ஐயர்  ராமசாமி ஐயர் 9. நரசிங்க ஐயர்  சுப்பராயபுரம் - சகம் 1689 (கி.பி.1767) சர்வகித்து மாசி  10. வெங்கிட சேத் ஐயன்  வல்லக்குளம் - சகம் 1692 (கி.பி.1770) விக்கிருது ஆடி  11. ராமசாமி ஐயன்  கொத்தமங்கலம் - சகம் 1704 (கி.பி.1782) கோபகிருது தை  12. வெங்கிட சுப்பிரமணியன்  சம்பை - சகம் 1689 (கி.பி.1767) சர்வகித்து ஆனி  13. சுப்பிரமணியம் கோபாலையர்  கீழ ஏந்தல் - சகம் 1704 (கி.பி.1782) கோபகிருது வைகாசி  14. வேதாபதி ஐயர், சீனிவாச ஐயர்  அனுமனேரி - சகம் 1702 (கி.பி.1780) பிலவங்க கார்த்திகை  15. ஆடிசிதம்பரம்  குவளைச் சாத்தன் - சகம் 1691 (கி.பி.1769) விரோதி தை  16. உச்சையன்  17. ஜகந்நாத ஐயங்கார்  மாவிலங்கை - சகம் 1705 (கி.பி.1783) சுபகிருது பங்குனி  18. சுந்தரம் ஐயர்  தீச்சேரி ஏந்தல் - சகம் 1684 (கி.பி.1762) சித்திரபானு கார்த்திகை  19. வெங்கட் ராமையன்  செம்பானாட்டி - சகம் 1684 (கி.பி.1762) சித்திரபானு தை  20. நாராயண ஐயர்  உடையன சமுத்திரம் - சகம் 1684 (கி.பி.1762) சித்திரபானு  ஆவணி 21. முத்துராமலிங்கம் ஐயர், ராமசாமி ஐயன்  குழுக்கள் கோட்டை - சகம் 1716 (கி.பி.1794) ஆனந்த ஆவணி 22. ராமசாமி வாத்தியார், மீனாட்சி சுந்தரம் பிள்ளை  (சித்தட்டு வயல், பிரம்புவயல்) - சகம் 1716 (கி.பி. 1794)  ஆனந்த ஆவணி 23. பழனியாயி  த/பெ.கலியான இராமசாமி  சாத்தனுர் - சகம் 1704 (கி.பி.1782) கோபகிருது தை  24. முத்தம்மா, நாகம்மா  க/பெ.சின்ன முத்து, செல்லத் தேவர்  நாடாகுடி புத்துர் - சகம் 1704 (கி.பி.1782) கோபகிருது தை கீழக்கோட்டை  25. பருவதம்மா  க/பெ.ராமசாமித் தேவர்  நிலையாம் பாண்டி - சகம் 1704 (கி.பி.1782) கோபகிருது தை  26. பவானி சங்கரத் தேவர்  விழிமார் - சகம் 1704 (கி.பி.1782) கோபகிருது தை (திருவா.வ)  27. முத்தையா புலவர்  ஊரணிக்கோட்டை - சகம் 1716 (கி.பி.1794) ஆனந்த கார்த்திகை  28. அலங்கார பட்டர்  பொட்டாம்பட்டி - சகம் 1707 (கி.பி.1785) விசுவாவசு சித்திரை 10  29. வெங்கிடகிருஷ்ணப்பர் - பேரையூர்  கொல்லன்குளம் -  கொண்டவாலி -  30. பாலகுருவா நாயக்கர்  திருவடியேந்தல் 31. கெங்கமடை  அஞ்சுகோட்டை - சகம் 1712 (கி.பி.1791) சாதாரண சித்திரை  32. திருச்சுழியல் தாசிநந்த கோபாலம்  மூணுடைப்பு - சகம் 1713 (கி.பி.1790) விரோத கிருது  வைகாசி 23 33. கீழப்பனையூர் - சகம் 1768 (கி.பி.1781) பிலவங்க வைகாசி 22  I கிழவன் ரெகுநாத சேதுபதி  1. செம்பனூர் - சகம் 1617 (கி.பி.1695)  2. சரசுவதி பண்டாரம்  கிடக்குழி 3. இராமநாதத் தேவர்  அஞ்சு ஏந்தல் - சகம் 1621 (கி.பி.1699)  4. நாராயண ஐயர்  அரசனேரி - சகம் 1621 (கி.பி.1699)  5. சீனிவாச ஐயங்கார்  பேச்சி ஏந்தல் - சகம் 1621 (கி.பி.1699)  6. ஆத்மநாத ஐயர்  சேமத்துர் - சகம் 1621 (கி.பி.1699) (பார்த்திபனுர்)  7. அழகிரி ஆசாரி  காளத்தி வயல் - சகம் 1607 (கி.பி.1685)  II முத்து விஜய ரகுநாத சேதுபதி  1. சுந்தரம் அய்யன், பாரதி ஐயன்  வேலன் குளம் - சகம் 1631 (கி.பி.1719)  2. வைத்தியலிங்க சாஸ்திரி  கோசுகுடி (அமராவதி) - சகம் 1631 (கி.பி.1719)  3. மீனாட்சி ஐயன்  சிவஞானபுரம் - சகம் 1630 (கி.பி.1718)  4. சங்கர ஐயன் (ஓலைப்பட்டயம்)  பொரிவயல் அம்பல வயல் - சகம் 1622 (கி.பி.1720)  5. ரகுநாத குருக்கள்  பால்குளம் - சகம் 164.5 (கி.பி.1723) கோபகிருது 6. வெங்கிட அவதானி  மெய்யனேந்தல் -  III. குமார முத்து ரகுநாத சேதுபதி  1. இளமையன், மாங்குண்டு, கோபலய்யன் புத்திரன்  சேரந்தை - சகம் 1654 (கி.பி.1732) பரிதாபி  2. சீனிவாச தாத்தய்யங்கார்  புல்லங்குடி - சகம் 1656 (கி.பி.1734)  3. ராமய்யன்  முதலூர் - சகம் 1658 (கி.பி.1737) நள தை  4. தெய்வசிகாமணி சோமயாகியாள் (ஓலைப்பட்டா)  பண்ருவயல் - சகம் 1661 (கி.பி.1739)  IV முத்துராமலிங்க சேதுபதி  1. சுப்பையன் முதலிய 10 பேர்கள்  அனுமனேரி - சகம் 1702 (கி.பி.1780) பிலவ  2. கிருஷ்ண ஐயங்கார்  செப்பேடு கொண்டான் - சகம் 1705 (கி.பி.1783) கோபகிருது  3. சங்கர குருக்கள் இராசசிங்க மங்கலம்  முடித்தனா வயல் - சகம் 1705 (கி.பி.1783) கோபகிருது  4. லோகநாத ஐயன்  சிங்கன் ஏந்தல் - சகம் 1680 (கி.பி.1758) விய தை 8  V தனுக்கோடி இராமநாத தேவர்  1. நாராயனையன்  நத்தக்காடு வேப்பங்குளம் - சகம் 1678 (கி.பி.1754) தாது ஆனி  செப்பேடுகளின் படி தனியார்களுக்கு  --------------------- ----------------------- ------------------------       தானம் பெற்ற அமைப்பு தானம் வழங்கப்பட்ட ஊர் தானம் வழங்கப்பட்ட நாள்     --------------------- ----------------------- ------------------------ I முத்து விஜய ரெகுநாத சேதுபதி  II சேத விற்பன்னர்கள்  கணபதி ஏந்தல் காக்குடி - சகம் 1640 (கி.பி.1719) விளம்பி புஷ்ய  1. சிவகுமார முத்து விஜய ரெகுநாத சேதுபதி  1. இராமைய்யன் (கலாநிதி கோணய்யன் மகன்)  முதலூர் - சகம் 1658 (கி.பி.1737) நல தை  2. மங்களளேசுவர குருக்கள்  கதையனேந்தல் - சகம் 1669 (கி.பி.1737) பிங்கல வைகாசி 3.  3. வெங்கட கிருஷ்ணய்யர்  தேர்போகி - சகம் 1669 (கி.பி.1747) பிரபவ மகா  III முத்து ராமலிங்க விஜய ரகுநாத சேதுபதி  1. மங்களேசுவர குருக்கள்  கருக்காத்தி கிராமம் - சகம் 1682 (கி.பி.1761) விக்ரம வைகாசி  2. வித்வத் மகாஜனங்கள்  சின்னநாட்டாண் பெரியநாட்டான் - சகம் 1684 (கி.பி.1762) சுக்கிரபானு அர்பசி  3. சந்திர சேகர அவதானி  அரியக்குடி - சகம் 1685 (கி.பி.1763) சோபானு பங்குனி  IV முத்துராமலிங்க சேதுபதி  1. சுப்பிரமணிய அய்யன்  குளப்பட்டி - சகம் 1704 (கி.பி.1782) சோபகிருது வைகாசி                          இணைப்பு - அ இராமநாதபுர சமஸ்தான ஆவணங்களின்படி கட்டளைகள்  1. சிதம்பரம் ஸ்ரீ சபாநாயகர் கடடளை  அரியகுடி 2. மதுரை  ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் உச்சிகால கட்டளை குருணைக்குளம் கொங்கணக்குறிச்சி மேட்டுத்தொட்டியங்குளம் - அருப்புக்கோட்டை  புளுவனைக்குண்டு பணிக்கனேந்தல் சிறுவேப்பங்குளம் தொண்டாரேந்தல் அனுப்பநேந்தல் கூவர்குளம் வெள்ளைகுணம் கீழுடைகுளம் மேலுடைகுளம் கீழக்கள்ளிக்குளம் அருப்புக்கோட்டை ஆபோடம்பட்டி திருச்சுழி - குருஞ்சாக்குளம்  3. வைத்தீஸ்வரன் கோவில், ஸ்ரீ வைத்தியநாத சுவாமி  கீ.கு.மங்கலம் - பகவதி மங்கலம் 4. அழகர் கோவில்  ஸ்ரீ சுந்தரராஜப் பெருமாள் - முத்துவயல்  6. திருச்செந்துர்  ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி கட்டளை வெங்குலக்குறிச்சி கருங்காலகுறிச்சி - முதுகளத்துார்  7. சென்னை மைலாப்பூர்  கபாலீஸ்வரர் கட்டளை சிக்கல் - எக்ககுடி  8. காஞ்சிபுரம் ஸ்ரீ ஏகாம்பரநாத சுவாமி கட்டளை  எக்ககுடி 9. திருப்பரங்குன்றம்  ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி கட்டளை தாமரைக்குளம் - திருச்சுழி  நெய்விளக்கு நெடுங்குளம் சொக்கனேந்தல் சின்னாலங்குளம் பெரியாலங்குளம் திம்மப்பட்டி 10. மதுரை  மீனாட்சி சுந்தரேஸ்வரன் அர்த்தஜாமக் கட்டளை பந்தநேந்தல் - அருப்புக்கோட்டை  அ. தொட்டியங்குளம்                                        இணைப்பு - ஆ VII இராமநாதபுர சமஸ்தான ஆவணங்களின்படி I திருக்கோயில்கள்  -------------------- ----------------------- ------------------------       தானம் பெற்ற கோயில் தானம் வழங்கப்பட்ட ஊர் தானம் வழங்கப்பட்ட நாள்     -------------------- ----------------------- ------------------------ 1.திருவாடானை ஆதிரத்தினேஸ்வரர் கோவில்  தானம் வழங்கப்பட்ட கிராமங்கள் திருவாடானை - திருவாடானை  கல்லூர் வழி முத்துர் சின்னக்கீர மங்கலம் இளமணி பெருஞ்சியூர் சேந்தனி நாகனி கோனேரி கோட்டை கொட்டாங்குடி கீழவண்டி சூச்சனி அத்தானிவயல் புதுக்குடி பெரிய கீர மங்கலம் ஆதியூர் கருப்பூர் கள்ளிக்குடி கீழவண்டி  கடம்பாகுடி கூத்தர் குடி இளையாங்குடி அச்சங்குடி திருவடிமிதியூர் மல்லிக்குடி கருங்காவயல் ஆண்டிவயல் கருமொழி தோப்பு 2. திருஉத்திரகோசமங்கை ஸ்ரீ மங்களநாதசுவாமி கோயில்  திருஉத்திரகோசமங்கை ஒமாதி பாட்டப்பத்து சீத்தை மடை (களரி உள் கடை)  இலந்தைக் குட்டம் காரைக்குட்டம் அழகப் பெருமானேந்தல் கொல்லங்குளம் பனைக்குளம் கணபதியேந்தல் ஒட்டகத்தி மல்லல் வேலங்குளம் புல்லந்தை மாணிக்கனேரி பனையடியேந்தல் வேனியாரேந்தல் கோனேரி  நல்லிருக்கை மாயாகுளம் நாகனேரி களக்குடி மூஞ்சான் சிருநங்கநேரி குடவேலி பூசெறி எழுவூர் ஆலங்குளம் புதுக்குளம் மங்களனாத சமுத்திரம் பெரிய ஏலை நங்கைப் புல்லான் கருவானேந்தல் - பரமக்குடி  தேரிருவேலி - சிக்கல்  கணக்கன் பொட்டல் பாலையாரேந்தல் - சிக்கல்  வித்தானுர் - இராமநாதபுரம்  காரம்பல் களனியாரேந்தல் - சிக்கல்  தூத்துக்குடி - முதுகளத்துார்  வென்னிவாய்க்கால் அடிரொட்டி பரந்தன் சூரங்குளம் - பரமக்குடி  கண்டுகொண்டான் மாணிக்கம்  போகலூர் காடனேரி பன்னிகுத்தி குமிழியேந்தல் தி.கள்ளிக்குளம்  உரத்துர் - கமுதி  அ. பொன்னக்கனேரி - பரமக்குடி  வள்ளக்குளம், புலவன்  குட்டம் அ. புதுக்குளம்  அ. தெய்வச்சிலை நல்லூர்  3. திருச்சுழி ஸ்ரீ திருமேனி நாதசுவாமி  திருச்சுழி - திருச்சுழி தேவடியா கரிசல்குளம்  வேட்பிலை சேரி ஆயடிபட்டி பாரைக்குளம் பி. தொட்டியங்குளம்  உள்கடை வசந்தன் உடையனாம்பட்டி ஸ்ரீ ராமனேந்தல் கொக்குளம் கம்பாணியேந்தல் சூச்சநேரி நாடாகுளம் வடபாலை கருப்புக்கட்டியேந்தல் உடச்சியேந்தல்  குண்டுகுளம் கல்லுமடம் - அருப்புக்கோட்டை  புலிக்குறிச்சி - திருச்சுழி  பனையூர் ஆண்டிபட்டி காரேந்தல் கீழக்கண்டமங்கலம் கல்லத்திகுளம் அஞ்சானைப்புளிகுத்தி கல்யாண சுந்தரபுரம் - அருப்புக்கோட்டை  தொண்டமாங்குளம் - திருச்சுழி  ஊரணிப்பட்டி தி. குஞ்சங்குளம் - அருப்புக்கோட்டை  பிள்ளையாரேந்தல் - திருச்சுழி  கோனப்பனேந்தல் பெருமானேந்தல் அ. பளிச்சியேந்தல்  அ. கிழவிக்குளம்  எ. சிட்டிலிகுண்டு  4. நயினார் கோவில் ஸ்ரீ நாகநாதசுவாமி  சின்னானைக்குளம் நாகலிங்கபுரம் வல்லம் புதுக்குளம் சிறுகுடி பல்லவராயனேந்தல் வாணியவல்லம் நாகனாத சமுத்திரம் என்ற நயினார் கோவில்  மேலேந்தல் தாளையடி கோட்டை அஞ்சாமடைக்காத்தான் மண்டகப்படி அ. மருதுார்  கார் அடர்ந்தகுடி தவளைக்குளம் கீழக்காச்சான் பகைவென்றி மெய்யானேந்தல் நிலம் 5. திருப்புல்லாணி  ஆதி ஜெகனாதசுவாமி திருப்புல்லாணி ஆனைகுடி தச்சகுளம் கதைக்குளம் கொடிக்குளம் உத்திரவை குதக்கோட்டை வண்ணான்குண்டு பத்திராதரவை தினைக்குளம் மேதலோடை களிமண்குண்டு செட்டியேந்தல் ஆதங் கொத்தங்குடி அனிகுருந்தன் நல்லாங்குடி கடம்பங்குடி பாரனூர்  மயிலூரணி மாரந்தை - முதுகளத்துர்  இலந்தை குளம் நாவல்கினியான் நெல்லுபத்தி பாம்பு விழுந்தான் காஞ்சிரங்குடி தோப்பு - இராமநாதபுரம்  6. பெருவயல்  ஸ்ரீ ரண்பலிமுருகன் பெருவயல் கலையனூர் சக்கரவாள நல்லூர் முதலூர் சதுர் வேதிமங்கலம் சாமிபட்டணம் - சாலைகிராமம்  வெண்ணத்துர் - இராஜ சிங்க மங்கலம்  கீழவசந்தன் - கண்ணங்குடி  மேலவசந்தன் பாம்பாட்டி - அருப்புக்கோட்டை  பாஞ்சார் 7. இராமநாதபுரம்  ஸ்ரீ சொக்கனாத சுவாமி, இராமநாதபுரம்  காவனூர் சி. வாகைக்களம்  சின்னகையகம் நாகாச்சி நரியிலா காடங்குளம் களத்தாவூர் நிலம் - இராமநாதபுரம் 8. இராமநாதபுரம்  ஸ்ரீ தோண்டராமசுவாமி, இராமநாதபுரம்  காரேந்தல் சாக்கான்குடி பட்டப்புள்ளான் - பரமக்குடி  9. பாலவனத்தம்  ஸ்ரீ கைலாசநாதசுவாமி கயிலாசபுரம் - அருப்புக்கோட்டை  குல்லூர் சந்தை வளுக்கலொட்டி கல்லுமார்பட்டி பச்சைக்குளம் 10. கண்ணங்குடி  ஸ்ரீ பசுபதீஸ்வரர் விசும்பூர் - கண்ணங்குடி  தாதனிவயல் தனிக்காத்தான் வயல் 11. பிடாரேந்தல்  ஸ்ரீ வேதபுரிஸ்வரர் சுவாமி வாடிநன்னியூர் அரியமுடிக்கோட்டை கோபாலனேந்தல் சாணான் வயல் பிடாரனேந்தல் நிலம் 12. இராஜசிங்க மங்கலம்  ஸ்ரீ கைலாசனாதர் அத்தானுர் - இராஜசிங்க மங்கலம்  ஆவதனேந்தல்  கயிலாச சமுத்திரம் சிலுக்கநேந்தல் அ. முடித்தனா வயல்  13. தீர்த்தாண்டதானம்  ஸ்ரீ சகலதீர்தமுடையார் மானவநகரி - திருவாடானை  ஸ்தானிகன்வயல் அணஞ்சாமங்கலம் புல்லக்கடம்பன் அழகன் வயல் இடயன் வயல் 14. திருப்பாலக்குடி  ஸ்ரீ மந்திர நாதசுவாமி கோவில் திருப்பாலக்குடி - இராஜசிங்கமங்கலம்  ஆலங்குளம் 15. இராமநாதபுரம்  ஸ்ரீ சுவாமி நாதசுவாமி அரியானேந்தல் - பரமக்குடி  16. திருமாலுந்தான் கோட்டை  ஸ்ரீ செஞ்சடை நாதசுவாமி திருமாலுகந்தான் கோட்டை - சாயல்குடி  அக்கிரா வெள்ளையாபுரம் அ. சவளைக்காரனேந்தல்  17. பள்ளிமடம்  ஸ்ரீ காளைநாதசுவாமி  காளையார் கரிசல்குளம் - அருப்புக்கோட்டை  பிள்ளையார் நத்தம் - திருச்சுழி  நத்தகுளம் முத்தானேந்தல் பரையனேந்தல் புது ஏந்தல் 18. தேவிபட்டினம்  ஸ்ரீ திலகேஸ்வரசுவாமி தேவிபட்டிணயம் - இராமநாதபுரம்  உகந்தான்குடி - இராஜசிங்கமங்கலம்  அ. கடம்பவன சமுத்திரம்  19. உப்பூர்  ஸ்ரீ வெயிலுகந்த விநாயகர் மயிலுரணி - இராஜசிங்கமங்கலம்  20. தரைக்குடி  ஸ்ரீ தரனிஸ்வரர் தரைக்குடி - கமுதி  த. கள்ளிக்குளம்  21. மாரியூர்  ஸ்ரீ பூவேந்தரநாதசுவாமி புதுக்குளம் மாரியூர் புதுக்குளம் மாரியூர் சாந்தண்டை பூந்தண்டை - சாயல்குடி  ஒப்பிலான் சூரநேரி கிடாக்குளம் ஒட்டுடங்குளம்  மடத்த குளம் வெள்ளக்குளம் அ. கொங்கனேந்தல்  அ. விளாத்திக்குட்டம்  அ. வெள்ளக்குளம்  அஞ்சத்தம்பல் - முதுகுளத்துர்  கண்டிலான் 22. பெருங்கருணை  ஸ்ரீ வரதராஜப் பெருமாள் சிருகுடி - பரமக்குடி  சின்ன வெச்சங்குடி பெரிய வெச்சங்குடி மங்கைச் சோனை சத்தக்காரனேந்தல் - கமுதி  23. முடுக்கன் குளம்  அம்பலவான சுவாமி கிருக்குளம் - திருச்சுழி  மணவையேந்தல் கீழப்புதுப்பட்டி அருப்புக்கோட்டை - மேலப்புதுப்பட்டி  24. முதுகளத்துர்  ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி மு. வாகைக்குளம் - முதுகளத்தூர்  25. இராமநாதபுரம்  ஸ்ரீ பாலசுப்பிரமணியசுவாமி, இராமநாதபுரம்  சித்துார் - இராமநாதபுரம்  வன்னிவயல் 26. சூரனுார்  ஸ்ரீ கைலாசநாதர் தேனுார் - திருச்சுழி  சிங்கனாபுரம் புதுக்குளம் ஊத்தாகுளம் பரையனைக் குத்தி மானங்காத்தான் கோவிலங்குளம் அல்லிக்குளம் சந்தனேந்தல் 27. திருப்புல்லாணி  அகஸ்தியர் தீர்த்தம் ஸ்ரீ பூரீனிவாசப் பெருமாள் நெடியமாணிக்கம் - பரமக்குடி  28. பாலையம்பட்டி  ஸ்ரீ வேணுகோபால்சாமி எரிய்யாங்குளம் 29. கமுதி ஸ்ரீமீனாஷி சுந்தரேஸ்வரர் கோயில் - கள்ளங்குடி - திருச்சுழி  நந்தரேஸ்வரன் - கொடிக்குளம் - கமுதி  30. ஸ்ரீ பாதாளஈஸ்வரர் - ப. வாகைக்குளம் - கமுதி  31. முத்து நாடு - ஆனையடி - கண்ணங்குடி  ஸ்ரீ சிவந்தபாதமுடையவர் 32. இராமநாதபுரம்  ஸ்ரீ மாரியம்மன் இராமநாதபுரம் - அல்லிக்குளம் 33. சாயல்குடி  ஸ்ரீ கைலாசநாதசுவாமி பெரிய சூரங்கோட்டை - சாயல்குடி  சின்ன சூரங்கோட்டை இலந்தை குளம் அ. உசிலங்குளம்  34. பந்தல் குடி  ஸ்ரீ கரியமால் அழகர் ஆண்டிப்பட்டி - அருப்புக்கோட்டை  35. சாலை கிராமம்  ஸ்ரீ வரகுண ஈஸ்வரா சின்னுடைச்சியேந்தல் - சாலை கிராமம்  36. வீரசோழன்  ஸ்ரீ கைலாச நாதசுவாமி திருச்சுழி - மேலபுலியாண்டார் கோட்டை  - கந்தரத்தான்  - சூரைக்குளம்  கமுதி - பெரிய உடையனாபுரம்  செங்கோட்டை வீரசோழன் உள்கடை நிலம் 37. புல்லுகுடி  ஸ்ரீ கைலாசநாதர் தண்டலக்குடி 38. ஆனையூர்  ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி 39. ஆத்தாங்கரை  ஸ்ரீ அம்பலவாணசுவாமி  கேசனி - கண்ணங்குடி  40. ஆலம்பாடி  ஸ்ரீ கரியமாணிக்கம் பெருமாள் பொன்னன் குறிச்சி - ஆலம்பாடி  41. கப்பலூர்  ஸ்ரீ நரசிங்கப்பெருமாள் கநயினாவயல் - கண்ணங்குடி  42. புத்துார்  ஸ்ரீ சுந்தரபாண்டீஸ்வரர் நற்கனி - பரமக்குடி  43. ஆக்களுர்  ஸ்ரீ கைலாசநாதர் ஆ. நயினாவயல் - திருவாடானை  44. விடத்தகுளம்  ஸ்ரீ மீனாஷிசுந்தரேஸ்வரர் மீனாதிபுரம் இடையன்வயல் 45.ஸ்ரீ அரியநாச்சி அம்மன்  ஆப்பனுளர் பிடாரியேந்தல் - முதுகளத்துர்  46. கிடாரம்  ஸ்ரீ உய்யவந்தம்மன் காரேந்தல் அளவன் குளம் - சிக்கல் 47. குளபதம்  ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி பளஞ்சிராய் பளயங்கால் - சிக்கல்  புளியங்குட்டம் 48. இராமநாதபுரம்  ஸ்ரீ கூரிச்சாத்த அய்யனார் தெய்வேந்திர நல்லூர் - பரமக்குடி  49. திருப்புனவாசல்  வீழிமார் - கண்ணங்குடி  50. கிடாரம்  ஸ்ரீ அழகிய விநாயகர் 51. ஆப்பலூர்  ஸ்ரீ சூரியவிநாயகர் ஆ. உசிலங்குளம் - முதுகளத்துர்  52. இராஜசிங்கமங்கலம்  கரியமாணிக்கப் பெருமாள் மாங்குளம் - கீ.கு.மங்கலம்  53. வீரசோழன்  ஸ்ரீ எரிச்சக்கரப் பெருமாள் கோவில் சொரியநேந்தல் - திருச்சுழி                    இணைப்பு - இ VII இராமநாதபுர சமஸ்தான ஆவணங்களின்படி அன்னசத்திரங்கள்  ---------------------------- --- ---------------------------       தானம் வழங்கப்பெற்ற அமைப்பு   தானம் வழங்கப்பெற்ற ஊர்கள்     ---------------------------- --- --------------------------- 1. இராமநாதபுரம்  செல்லபூபால சத்திரம் சிக்கல் - வெள்ளாமருச்சுக்கட்டி  பரமக்குடி - கொடிக்குளம்  இராமநாதபுரம் - கும்பரம்  - நயினாமரைக்கான்  - இருமேனி  - சின்ன ரெகுநாதபுரம்  2. தேவிபட்டினம் சத்திரம்  தொன்பொதுவத்குடி இராஜசிங்கமங்கலம் - அடந்தனகோட்டை  அருப்புக்கோட்டை - சிலுக்குவார் பட்டி  3. மண்டபம் சத்திரம்  இராமநாதபுரம் - துரத்தியேந்தல்  4. இராமேஸ்வரம்  மேலக்கோபுரவாசல் சத்திரம் சித்தார்கோட்டை 5. பிடாரிசேரி சத்திரம்  திருச்சுழி - சித்தநேந்தல் 6. தோப்பூர் சத்திரம்  அருப்புக்கோட்டை - தோப்பூர்  - கருவனைச்சேரி  திருச்சுழி - மு.இலுப்பக்குளம்  - குருஞ்சாக்குளம்  - பனைக்குளம்  ஆலங்குளம் சொக்கம்பட்டி 7. முத்துராமலிங்கபட்டணம்  சத்திரம் இராஜசிங்கமங்கலம் - வெட்டுக்குளம்  - முத்துராமலிங்கபட்டணம்  திருவாடானை - சின்னக்கரையான்  - பெரியகரையான்  - பிரம்பு வயல்  - மருதவயல்  8. முத்துக்குமாரப்பிள்ளை மடம்  சத்திரம் கண்ணங்குடி - கட்டவிளாகம்  - சேந்தனி  9. தங்கச்சி மடம்  திருவாடானை - புளியூர்  10. பாம்பன் சத்திரம்  - மானாக்குடி  - காரான்  - இருட்டுரணி  - வெள்ளரி,ஒடை  - தரவை  இராஜசிங்கமங்கலம் - மணக்குடி  11.இராஜகோபால சத்திரம்  - வயலூர்  12. தோணித்துறை சத்திரம்  -வலமாவூர்  -மேலவயல்  -தேர் போகி  - மண்டபம்  13. அலங்கானுர் சத்திரம்  பரமக்குடி - அலங்கானுர்  - கிரத்திசேரி  14. சிக்கல் சத்திரம்  முதுகளத்துர் - ஆலங்குளம்  15. கடுகுசந்தை சத்திரம்  சாயல் குடி - கடுகுசந்தை  16. பிள்ளைமடம் சத்திரம்  சாத்தக்கோன் வலசை 17. நாகநாத சமுத்திரம் சத்திரம்  இலந்தோடை 18. என்மனங்கொண்டான் சத்திரம்  என்மனங்கொண்டான் 19. இராமசாமி பிள்ளை மடச் சத்திரம்  கடுக்காய்வலசை 20. சாமிநாத மணியக்காரர் சத்திரம்  தெளிச்சாத்தநல்லூர் 21. உப்பூர் சத்திரம்  இராஜசிங்கமங்கலம் - சித்துர்வாடி  22. சேதுக்கு வாய்த்தான் சத்திரம்  தேளூர் 23. கோட்டைப்பட்டினம் சத்திரம்  கண்ணங்குடி - கொடிக்குளம்  24. போகலூர் சத்திரம்    சேதுபதி மன்னர்கள் வழங்கிய நிலக்கொடைகள் பற்றிய தொகுப்பு    +----------------------+--------------+-------------------+ | தானம் பெற்ற | தானம் பெற்ற | தானம் வழங்கப்பட்ட | | அமைப்புகளின் | அமைப்புகளின் | ஊர்களின் | | வகை | எண்ணிக்கை | எண்ணிக்கை | +----------------------+--------------+-------------------+ | 1. திருக்கோயில்கள் | 59 | 311 | +----------------------+--------------+-------------------+ | 2. திருமடங்கள் | 22 | 41 | +----------------------+--------------+-------------------+ | 3. அன்னசத்திரங்கள் | 28 | 77 | +----------------------+--------------+-------------------+ | 4. பள்ளிவாசல் | 10 | 13 | +----------------------+--------------+-------------------+ | ⁠ தேவாலயம் | 1 | 2 | +----------------------+--------------+-------------------+ | 5. தமிழ்ப் புலவர்கள் | 9 | 12 | +----------------------+--------------+-------------------+ | 6. தனியார்கள் | 210 | 219 | +----------------------+--------------+-------------------+ |   |   |   | +----------------------+--------------+-------------------+ |   | 352 | 643 | +----------------------+--------------+-------------------+ |   |   |   | +----------------------+--------------+-------------------+   இராமநாதபுர சமஸ்தானம் ஆவணங்களின்படி   +--------------+----+-----+ | திருக்கோயில் |   |   | +--------------+----+-----+ | இணைப்பு அ | 59 | 311 | +--------------+----+-----+ | இணைப்பு ஆ | 11 | 36 | | (கட்டளை) | | | +--------------+----+-----+ | இணைப்பு இ | 28 | 61 | | (சத்திரம்) | | | +--------------+----+-----+ |   |   |   | +--------------+----+-----+ | மொத்தம் | 98 | 408 | +--------------+----+-----+ |   |   |   | +--------------+----+-----+ நிலையாமையை நிரந்தர அணிகலனாகக் கொண்டது தான் இந்த உலகம் என்று வள்ளுவம் தெரிவிக்கிறது. மனித வாழ்க்கையில் மரணம் எப்பொழுது சம்பவிக்கும் என்பதை யாரும் அறிந்திலர் என்றாலும் மனிதன் இந்த உலகில் எத்தனையோ நூற்றாண்டுகள் வாழப்போவதாக நினைத்துப் பல செயல்களில் ஈடுபட்டு வருகின்றான்.  இதற்கு விதிவிலக்காகச் சேதுபதி மன்னர்கள் ‘அன்றறிவான் எண்ணாது அறஞ்செய்க” என்ற வள்ளுவத்தின்படி பல அரிய சாதனைகளை நிகழ்த்தி உள்ளனர். அவைகளின் ஒரு பிரிவான சமயப் பொறைக்கும் தமிழ் வளர்ச்சிக்கும் அவர்கள் அளித்துள்ள நன்கொடை பட்டியல்தான் முன்னர் கொடுக்கப்பட்டுள்ளது.  இத்தனை அறக்கொடைகளை வழங்கிய சேதுபதி மன்னர்களைப் பற்றிச் சிந்திக்கும் போது இவர்களுக்கு ஈடாகத் தமிழ்நாட்டில் வேறு எந்த அரச மரபினரும் இருந்தது இல்லை என்பதை வரலாறு தெரிவிக்கின்றது. காலமெல்லாம் இந்த தர்மங்கள் நிலைத்து நின்று மக்களுக்குப் பயன்பட வேண்டுமெனச் சிந்தித்துச் செயலாற்றிய இந்த அரச மரபினரை மனிதகுலம் என்றும் மறக்காது என்பது உறுதி.                    i. போகலூர் சேதுபதிகள்   []                           ii. இராமநாதபுரம் சேதுபதிகள் []                                   iii. ஜமின்தார் - சேதுபதி மன்னர்கள் கொடிவழி   இராணி மங்களேஸ்வரி நாச்சியார் (கிபி 1803 - 1812)  | (க.பெ)  இராமசாமித் தேவர் | சுவீகாரம் அண்ணாசாமி பாண்டியன் (கி.பி. 1812 - 1814)  (கி.பி. 1815 - 1820)  | இராணி சிவகாமி நாச்சியார் (கி.பி. 1814 - 15)  | க.பெ.  இராமசாமித் தேவர் | முத்துவிஜய ராமசாமித் தேவர் (கி.பி. 1820 - 30)  | மனைவி இராணிமுத்து வீராயி நாச்சியார் (.பி. 1830 - 41)  | பர்வதவர்த்தனி நாச்சியார் | துரைராஜா (எ) முத்துராமலிங்க சேதுபதி (கி.பி. 1841 - 73)  | இராஜா பாஸ்கர சேதுபதி (கி.பி. 1888 - 1903)  | இராஜேஸ்வர முத்துராமலிங்க சேதுபதி (கி.பி. 1910 - 28)  | சண்முக ராஜேஸ்வர நாதநாத சேதுபதி (கி.பி. 1928 – 1948)     பிற்சேர்க்கை i.சேதுபதி மன்னர் புலவர்கள் பட்டியல்   சேதுபதி மன்னர்களது பரிசுகளும் பாராட்டுகளும் பெற்ற தமிழ்ப் புலவர்கள் பட்டியல்.  1. திருமலை ரகுநாத சேதுபதி (கி.பி. 1645 - 1676)  1. அழகிய சிற்றம்பலக்கவிராயர் தளசிங்கமாலை - மிதிமலைப்பட்டி  2. அனந்த கவிராயர் - மானுர், கலையூர்  3. பெருங்கரை மதுர கவிராயர் - காக்கைகுளம்  4. சிற்றம்பலவையா - மருதுர்ப்புராணம்  5. அமிர்த கவிராயர் (பொன்னாங்குளம்) ஒரு துறைக்கோவை  பொன்னாங்கால் கிராமம் - சர்வமான்யம்  2. கிழவன் ரகுநாத சேதுபதி (கி.பி. 1678 - 1710)  1. தலமலைகண்ட தேவர் - திரு மருதூர் அந்தாதி - பல பரிசுகள்  2. கும்பன் கவிராயர் - தனிப்பாடல்கள் - பல்லக்கு மரியாதை  3.முத்து வைரவ சேதுபதி (கி.பி. 1710 - 1713)  1 பொன்நெட்டிமாலைச் சர்க்கரைட் புலவர் - உழக்குடி, கோடாகுடி (1711)  4. முத்து விஜய ரகுநாத சேதுபதி (கி.பி. 1715 - 1725)  1. பலபட்டடைச் சொக்கநாத புலவர் - தேவையுலா, பண விடு தூது   5. குமாரமுத்து விஜய ரகுநாத சேதுபதி (கி.பி. 1728 - 1735)  1. சர்க்கரை முத்துமுருகப் புலவர்-முத்திருளப்பபிள்ளை மீது உலா - :சிறுகம்பையூர், பாகனூர்  2. சீனிப்புலவர் - ஒரூர்  3. சாமிநாத தேசிகர் - திருவாடானைப் புராணம் - பல சிறப்புக்கள்  6. முத்துராமலிங்க சேதுபதி (கி.பி. 1762 - 1795)  1. சவ்வாதுப் புலவர் - தனிப்பாடல்கள் - சுவாத்தன், வண்ணவயல்  2. வெண்பாப்புலிக்கவிராயர் - செவ்வூர்  3. அட்டாவதானம் சரவணப் பெருமாள் கவிராயர் - இராமேசுவரம் :இராமலிங்கேசர் பேரில் பணவிடு தூது  4. இராமலிங்க ரெட்டியார் - மாடம்பூர்  5. விருகத அவதானியார் - நெட்டயனேந்தல்  6. வெங்கட கவி - முண்டுவார்கண்டன் (1768)  7. நாகலிங்கப்புலவர் - வேளானூரணி, கீழமுடிமன்னர் கோட்டை :தும்முசின்னபட்டி, மண்டபச் சாலை,  8. ஊருணிக் கோட்டை மாசிலாமணிப் புலவர் -  அனுமந்தக்குடி (1767)  9. கமுதி குமாரப்புலவர் - வருஷாசனம்  10. ஈசுவர அவதானியார் - புதுவயல் (1788)  11. இலட்சுமண பாரதியார் (கொங்குநாட்டு மடவளாகம்) - :தனிப்பாடல்கள் - வைரக்கடுக்கன் . ஒரு படி முத்து  7. முத்துராமலிங்க சேதுபதி I (கி.பி. 1851 - 1873)  1. சதாவதனம் சிறிய சரவணப்பெருமாள் கவிராயர்  சேதுபதி விறலிவிடு தூது 2. மாம்பழக் கவிச்சிங்க நாவலர் - தனிப்பாடல்கள் 3. பெருங்கரை கவிக்குஞ்சரபாரதி  4. அட்டாவதானம் கிருஷ்ணய்யங்கார் - நாலு மந்திரிகதை, :பஞ்சதந்திரம், வீரகுமார நாடகம், விடநிக்கிரக சிந்தாமணி,  5. முத்துசாமி அய்யங்கார்  6. சேஷகிரிராயர் - தனிப்பாடல்கள்  7. முத்து வீரப்பிள்ளை - தனிப்பாடல்கள்  8. கல்போது பிச்சுவையர் - திருவாடானை அந்தாதி  9. நமச்சிவாயக்கவிராயர் - தனிப்பாடல்கள், பல சிறப்புக்கள்  8. பாஸ்கர சேதுபதி (கி.பி. 1858 - 1903)  1. ரா. இராகவையங்கார் - ஒரு துறைக்கோவை  2. வேம்பத்துர் பிச்சுவையர் - தனிப்பாடல்கள்  3. திரு. நாராயணையங்கார் - திருப்புல்லாணிமாலை  4. நாகை சதாசிவம் பிள்ளை - தனிப்பாடல்கள் - பல சிறப்புக்கள்  5. பரிதிமாற் கலைஞர் பல நூல்கள் - பாஸ்கர சேதுபதி மன்னர் :உதவி - ‘தமிழப்பா மஞ்சரி’  6. உ.வே. சாமிநாதையர் - “தமிழப்பா மஞ்சரி’ - பொற்கிழியும் :பாராட்டுக்களும்  7. மு. இராமசாமிக்கவிராயர் (சேற்றுர்) - தனிப்பாடல்கள் - பல :பரிசுகள்  8. கந்தசாமிக்கவிராயர் (சிவகாசி) - தனிப்பாடல்கள் - பல :சிறப்புக்கள்  9. சபாபதி நாவலர் (யாழ்ப்பாணம்) - தனிப்பாடல்கள் - பொற்கிழி :பரிசு  10. சிவசம்புப்புலவர் (யாழ்ப்பாணம்) - கல்லாடசாரக் கலித்துறை - :பல பரிசுகள்  11. தி.துரைசாமி செட்டியார் (திரிசிரபுரம்) - பாஸ்கர சேதுபதிமேல் :அருட்பிரகாச அகவல் - பல பரிசுகள் 12. வேங்கடரமணதாசர் - தனிப்பாடல்கள் -  13. முத்துசாமிக்கோனார் (திருச்செங்கோடு) - தனிப்பாடல்கள் -  பொருளுதவி 14. கருத்தமுத்துப்பிள்ளை (எட்டயபுரம்) - திரு மருதூர் புராணம் -  பல பரிசுகள் 9. முத்துராமலிங்க சேதுபதி III (கி.பி.1911 - 1929)  1. திருஞான சம்பந்தக் கவிராயர் - தனிப்பாடல்கள்  2. மதுரகவி சுப்பையாபிள்ளை - தனிப்பாடல்கள்  3. முத்துவேலாயுதக்கவிராயர் (தம்பிபட்டி) - சீட்டுக்கவி - பல  சிறப்புக்கள் 4. நாகை சதாசிவம்பிள்ளை - தனிப்பாடல்கள் - பல சிறப்புக்கள்  5. மு.ரா. கந்தசாமிக்கவிராயர் (சேற்றுர்) - தனிப்பாடல்கள் -  தங்கத்தோடு பரிசு 6. என்.வி.சுந்தரராஜன் (மதுரை) - நன்றி கமழும் நறும்பாக் கலவை  பல பரிசுகள்  பிற்ச்சேர்க்கை - 2 இராமநாதபுரம் சேதுபதி மன்னர்கள், புவியரசர்களாக மட்டுமல்லாமல் கவியரசர்களாகத் திகழ்ந்து அவர்கள் இயற்றிய சிற்றிலக்கியங்கள் வருமாறு:    1. இரண்டாவது முத்து ராமலிங்க சேதுபதி (கி.பி. 1841 - 1873) இயற்றியவை  I. இலக்கியங்கள்  1. வள்ளிமண மாலை  2. நீதிபோத வெண்பா  3. சரசல்லாப மாலை  4, மரபார மாலை  5. பால போதம்  6. சடாக்கரசாரப்பதிகம்  7. முருகரனுபூதி  8. காயகப் பிரியா  9. ரஸிக ரஞ்சனம்  II. தனிப்பாடல்கள்  1. சிலேடைப் பாடல்கள் 30  2. விடுகதைப் பாடல்கள் 5  3. முருகன் துதிப்பாடல்கள் - 250  4. நடுவெழுத்தலங்காரப் பாடல்கள் - 7  5. வினாவிடைப் பாடல்கள் - 75  6. இராஜராஜேஸ்வரி அம்மன் பேரில் பாடிய பாடல்கள் - 7  7. தனிப்பாடல்கள் - 6  8. சமுத்திர வருணனைப் பாடல்கள் - 11  2. மன்னர் பாஸ்கர சேதுபதி (கி.பி.1868 - 1903) இயற்றியவை  1. திருவாலவாய்ப் பதிகம்  2. காமாட்சியம்மை பதிகம்  3. ராமநாதர் பதிகம்  3. மூன்றாம் முத்துராமலிங்க சேதுபதி (கி.பி. 1911 - 1929) இயற்றியவை  1. திருக்குறள் வெண்பா  2. தனிப்பாடல்கள் - 61  4. சேதுபதி அரச மரபினர் இயற்றியவை  I. மன்னர் பாஸ்கர சேதுபதியின் தாய்மாமனார் தங்கவேல்சாமித்  தேவரவர்கள் இயற்றியவை.  1. முருகன் துதிப்பாடல்கள்  II. வள்ளல் பொன்னுசாமித் தேவரவர்கள் (கி.பி. 1836 - 1872)  இயற்றியவை I. கீர்த்தனைகள்  II. தனிப்பாடல்கள் - 68  1. வினாவிடைப் பாடல்கள் - 19  2. சமுத்திர வருணனைப் பாடல்கள் - 12  3. இராஜ ராஜேஸ்வரி அம்மன் மீது பாடிய பாடல்கள் - 23  4. திருவாவடுதுறை மடாதிபதி அவர்களுக்கு எழுதிய கடிதப்  பாடல்கள் - 5  5. பல்வேறு சமயங்களில் பாடிய பாடல்கள் - 7  III. பாண்டித்துரைத் தேவர் (கி.பி. 1867 - 1911) இயற்றியவை  1. சிவஞானபுரம் முருகன் மீது காவடிச்சிந்து  2. சிவஞானசுவாமிகள் மீது இரட்டை மணி மாலை :3.இராஜராஜேஸ்வரி அம்மன் மீது பதிகம்  4. தனிப்பாடல்கள் - 16  பிற்சேர்க்கை - 3 சேதுபதி மன்னர்களாலும் அவர்தம் மரபினராலும் வழங்கிய பொருள் உதவியினால் வெளிவந்த நூல்கள்  1. இரண்டாம் முத்துராமலிங்க சேதுபதி  1.வேதாந்த சூளாமணி மூலமும் உரையும்  2. பாஸ்கர சேதுபதி  1. கூர்ம புராணம்  2. திருவிளையாடற் புராணம்  3. மெய்கண்ட சாத்திரம் மூலமும் உரையும்  4. வைத்திய சார சங்கிரகம் (இரண்டாம் பதிப்பு)  3. மூன்றாம் முத்துராமலிங்க சேதுபதி  1. நன்னூல் மூலமும் மயிலை நாதர் உரையும்  2. நன்னூல் மூலமும் சங்கர நமச்சிவாயர் உரையும்  3. பரிபாடல் மூலமும் உரையும்  4. ஐங்குறுநூறு உரையுடன்  5. பதிற்றுப்பத்து மூலமும் உரையும்  6. சீவகசிந்தாமணி மூலமும் உரையும்  7. தொல்காப்பியச் செய்யுள் நச்சினார்க்கினியர் உரையுடன்  8. அகநானூறு  9. மணிமிடைப் பவளம்  10.வஞ்சி மாநகர்  11. தொல்காப்பியப் பொருளதிகார ஆராய்ச்சி  12. தமிழ்ப்புலவர் சரித்திரம்  13. அகலிகை வெண்பா  14. புவனேந்திர காவியம்  4. சண்முக ராஜேஸ்வர நாகநாத சேதுபதி  1. தக்கயாகப் பரணி  2. நீதிபோத வெண்பா (இரண்டாம் பதிப்பு)  3. சமுத்திர வருணனை (இரண்டாம் பதிப்பு)   5. பொன்னுசாமித் தேவர்  1. ஸ்கந்த புராணக் கீர்த்தனை  2. திருகுகோவையார் உரையுடன்  3. சேது புராணம் உரையுடன்  4. திருக்குறள் பரிமேலழகர் உரையுடன்  5. இலக்கணக் கொத்து  6. இலக்கண விளக்கச் சூறாவளி  7. தருக்க சங்கிரகம்  8. தனிப்பாடல் திரட்டு  9. வைத்திய சார சங்கிரகம் (முதற் பதிப்பு)  6. பாண்டித்துரைத் தேவர்  1. பன்னுற்றிரட்டு  2. சைவ மஞ்சரி  3. அகப்பொருள் விளக்கம் உரையுடன்  4 திருவாலவாயுடையார் திருப்பணிமாலை  5 மதுரைத் தல வரலாறு  6 புறப் பொருள் வெண்பாமாலை உரையுடன்  7. மணிமேகலை  8 திருவிளையாடற்புராணம்  9. தேவாரத் தலமுறை பதிப்பு  10. சிவஞான சுவாமிகள் பிரபந்தத்திரட்டு  11. சிவசம்வாதவுரை மறுப்பு  12. தண்டியலங்காரம் உரையுடன்  13. அபிதான சிந்தாமணி  14. ஞானாமிர்தம்  15. வில்லிப்புத்துராரின் மகாபாரதம்  16. சாதக சந்திரிகை  17. பாண்டியம்                                  ii. பெயர்ச்சொற்கள் தொகுப்பு   இந்த நூலில் கொடுக்கப்பட்டுள்ள பெயர்ச்சொற்களின் தொகுப்பு - அகரவரிசையில்   அ   ---- ---------------------------- ----------------           பக்கம் 1 அக்காள் மடம் 56 2 அக்கினியூ 94 3 அதான ரகுநாதத் தேவர் 40 4 அபிராமம் 65, 68, 70, 73 5 அமுத கவிராயர் 38 6 அம்மைநாயக்கனூர் 33 7 அழகிய சிற்றம்பலக் கவிராயர் 38 8 அழகர் கோவில் 16 9 அண்ணாசாமி சேதுபதி 96 10 அண்டக்குடி 55     ---- ---------------------------- ----------------    ஆ --- --------------------- ----       1 ஆங்கிலேயர் 93 2 ஆரியச் சக்கரவர்த்தி 15 3 ஆனந்தூர் 66     --- --------------------- ----  இ --- ------------------ ----       1 இராமசாமி சேதுபதி 97 2 இராமநாதபுரம் 72     --- ------------------ ---- 3. இராமநாத சுவாமி - 35  4. இராமப்பையன் - 29  5. இராமேஸ்வரம் - 14, 22, 27, 72  6. இராஜசூரியத் தேவர் - 40  7. இராஜசூரிய மடை - 40  8. இராஜ சிங்க மங்கலம் - 46  9. இராஜேந்திர சோழன் - 14  10. இராஜராஜ சோழன் - 14  உ 1. உதயகிரி கோட்டை - 52  2. உடையான் சேதுபதி - 17  3. உடையாத் தேவர் - 14  எ எட்டையபுரம் - 32, 29  எம்மண்டலமுங் கொண்டான் - 42  எழுவன் கோட்டை - 45  க 1. கட்டையத் தேவர் - 55  2. கண்டி - 34  3. கமுதிக்கோட்டை - 52, 54, 68, 69  4. கயத்தாறு - 18  5. களத்துர் - 42  6. கள்ளர்சீமை - 41  7. கலியாணப்புலித் தேவர் - 23 8. கலையனுர் பெருவயல் - 56  9. காஞ்சிரங்குடி - 5Յ  10. காதலி நாச்சியார் - 23, 41, 42  11. கார்ன் வாலிஸ் - 93  12. காளையார் கோவில் - 62  13. கிடாத்திருக்கை - 69  14. கிழவன் ரெகுநாத சேதுபதி - 16, 41  15. கீழக்கரை - 36, 58  16. குமாரக் குறிச்சி - 69  17. குமாரமுத்து விஜய ரகுநாத சேதுபதி - 55  18. குலோத்துங்கசோழன் III - 15  19. குலோத்துங்க சோழநல்லுர் - 15  2O. குளுவன் குடி - 56  21. கூத்தன் கால் _ 24  22. கூத்தன் சேதுபதி - 23, 25  23. கோவா - 29  24. கைலாய மலை - 15  25. கெளரி வல்லப உடையாத்தேவர் - 9 /1  ச 1. சங்கர சோழன் உலா - 15  2. சசிவர்ணத் தேவர் - 55  3. சடைக்கன் - 23  4. சடைக்கன் சேதுபதி - 18. 19. 21  5. சடைக்கன் II - 28 6. சந்தா சாகிப் - 59  7. சமணர்கள் - 112  8. சாயல்குடி - 30  9. சிங்கன் செட்டி - Ꮾ9  10. சிவகங்கைச் சீமை - 56, 62  11. சிவந்து எழுந்த பல்லவராயர் - 42  12. சிவகுமார முத்துவிஜய  ரகுநாத சேதுபதி - 57  13. சின்னத்தம்பி மரைக்காயர் - 58  14. சீதக்காதி மரைக்காயர் - 48  15. சுப்பிரமணிய பாரதியார் - 13  16. சுவாமி விவேகானந்தர் - 102  17. செம்பி நாடு - 13  18. செல்லமுத்துத் தேவர் - 57  19. செயதுங்கத் தேவர் - 18  20. சேக் இபுராஹிம் சாகிபு - 69  21. சேது நாடு - 13, 17  22. சேது கால் - 26  23. சேதுராமநாத பண்டாரம் - 22, 23, 25  24. சேதுமார்க்கம் - 37, 76  25. சொக்கநாத நாயக்கர் - 46, 47  26. சோழபுரம் - 94  27. சையது முகம்மது புகாரி தர்ஹா - 36  த 1. தங்கச்சி மடம் - 56  2. தம்பித் தேவர் - 28, 29  3. தலமலைக் கண்ட தேவர் - 46  4. தருமபுரம் - 22  5. திருக்கோட்டியூர் - 36, 44  6. திருச்சிக்கோட்டை - 47, 62  7. திருத்தேர் வளை - 30  8. திருப்புல்லாணி - 36  9. திருப்பனந்தாள் - 32  10. திருமங்கையாழ்வார் - 32  11. திருமலை நாயக்க மன்னர் - 14, 29, 32  12. திருமலை ரெகுநாத சேதுபதி - 33  13. திருமெய்யம் அழகியார் - 36  14. திருமெய்யம் - 15, 36, 42, 80  15. திருமெய்யம் கோட்டை - 16  16. திரையத் தேவர் - 41  17. திருவாடானை - 23  18. திருவாவடுதுறை 22  19. துரைராஜா (எ)  முத்துராமலிங்க சேதுபதி - 99, 100  20. துல்ஜாஜி - 61  21. துத்துக்குடி - 18, 20, 58, 60  22. தென் காசி - 18  ந 1. நமனத் தொண்டை மான் - 41  2. நவராத்திரி விழா - 33  3. நாராயண காவேரி - 4  ப 1. பட்ட மங்கலம் - 21  2. பட்டுக் கோட்டைச் சீமை - 55, 56  3. பரமக்குடி - 53  4. பவானி சங்கரத் தேவர் - 54, 55  5. பாம்பன் - 66  6. பார்த்திபனுர் - 7Ꮾ  7. பாஸ்பர சேதுபதி - 79, 101  8. புளியங்குடி - 30  9. பெரியதாழை 21  10. பெரியார் அணைத்திட்டம் - 64  11. பொன்னன் கால் - 38  12. போகலூர் - 18, 20, 23  13. போர்த்துக் கீசியர் - 21  ம 1. மரீச்சி ஆசாரி - 18  2. மருதங்க நல்லூர் - 26  3. மருது சகோதரர்கள் - 65, 70, 94  4. மயிலப்பன் சேர்வைக்காரர் - 67, 68, 69, 7 O  5. மணப்பாடு - 21 6. மழவராய நாதர் கோவில் - 36  7. மாப்பிள்ளைத் தேவர் - 61. 62  8. மார்ட்டின்ஸ், தளபதி - 63  9. மானாமதுரை - 17  10. மிதிலைப்பட்டி - 38  11. முகம்மதலி - 59  12. முதலுர் - 24  13. முதுகளத்துர் - 68, 69  14. முத்துக்கிருஷ்ணப்ப நாயக்கர் - 20  15. முத்து ராஜக்கவிராயர் - 20  16. முத்து ராமலிங்க சேதுபதி - 16  17. முத்துராமலிங்க விஜய ரகுநாத சேதுபதி - 60  18. முத்து ராமலிங்க சேதுபதி III - 80  19. முத்து வயிரவநாத சேதுபதி - 50  20. முத்துவயிரியமுத்து ராமலிங்க சேதுபதி - 15, 16  21. முத்து வடுகநாத தேவர் - 62  22. முத்து விஜய ரகுநாத சேதுபதி - 51  23. முத்து விஜயன் சேர்வை - 27  24. முத்து வீராயி நாச்சியார் - 97, 98  25. முத்துத் திருவாயி நாச்சியார் - 60  26. முத்திருளப்ப பிள்ளை - 63  27. முத்துர் நாடு - 56  28. மேலச் சீத்தை - 42  ர 1. ராணி பர்வதவர்தினி நாச்சியார் - 98  2. ராணி மங்கம்மாள் - 47  3. ராணி மங்களேஸ்வரி நாச்சியார் - 67  4. ராணிவேலு நாச்சியார் - 62  5. ரெகுநாத காவேரி - 24, 54  6. ரெகுநாத குருக்கள் - 46  7. ரெகுநாதராய தொண்டைமான் - 41  வ 1. வன்னியத் தேவன் - 24  2. வானாதிராயர் - 16  3. விசய குமார பங்காரு திருமலை - 57  4. விசுவநாத நாயக்கர் - 18  5. விரையாத கண்டன் - 15, 18, 20, 82  6. வீரபாண்டியன் பட்டினம் - 21  7. வைரவன் சேர்வைக் காரர் - 56  8. வெள்ளையன் சேர்வைக்காரர் - 57  9. வேங்கன் பெரிய உடையாத் தேவர் - 94  10. வேதாளை - 17  11. வேம்பாறு - 21  [] சேதுபதி மன்னர் வரலாறு.pdf Dr.S.M. கமால்  21 - ஈசா பள்ளிவாசல் தெரு, இராமநாதபுரம் - 623 501  பிறந்த நாள்: 15-10-1928  பெற்றோர்: ஷேக்ஹூசைன் - காதர் அம்மாள்  B.A.; அமெரிக்கா தக்சான் பல்கலைக்கழகத்தின் “டாக்டர் பட்டம்”  இராமநாதபுரம் தமிழ்ச் சங்க நிறுவனர். 30 ஆண்டுகளாக பல இலக்கிய வரலாற்றுக் கருத்தாய்வரங்கங்களை நடத்தியவர். மதுரை நான்காம் தமிழ்ச்சங்கம் மற்றும் 12 இலக்கிய வரலாற்று அமைப்புகளின் செயற்குழு, பொதுக்குழு மாநிலக் குழுக்களின் ஆயுள் உறுப்பினர்.  நூலாசிரியர் 1.இராமநாதபுரம் மாவட்ட வரலாற்றுக் குறிப்புகள் (1984)  ★2. விடுதலைப் போரில் சேதுபதி மன்னர் (1987)  ★3. மாவீரர் மருது பாண்டியர் 1987)  4. முஸ்லீம்களும் தமிழகமும் 1990 - சென்னை சீதக்காதி அறக்கட்டளை பரிசு  5. மன்னர் பாஸ்கர சேதுபதி (1992)  ★6. சேதுபதி மன்னர் செப்பேடுகள் (1994)  ★7. சேதுபதியின் காதலி (1996)  ★ தமிழக அரசின் பரிசும், பாராட்டும் பெற்ற நூல்கள்  8. சீர்மிகு சிவகங்கைச் சீமை (1997)  9. சேதுபதி மன்னரும் ராஜ நர்த்தகியும் (1998)  10. திறமையின் திருஉருவம் ராஜா தினகர் 1999  11. செந்தமிழ் வள்ளல் சீதக்காதி (2000)  12. மறவர் சீமை மாவீரன் மயிலப்பன் (2001)  13. சேதுபதி மன்னர் கல்வெட்டுக்கள் (2002)  ★ பெற்ற விருதுகள் ★ "இமாம் சதக்கத்துல்லா அப்பா விருது- தமிழ்ப்பணிச்செம்மல்"- "சேது நாட்டு வரலாற்றுச் செம்மல் விருது - பாஸ்கர சேதுபதி விருது“ -“சேவாரத்னா விருது - தமிழ் மாமணி விருது" -“தேசிய ஒருமைப்பாட்டு நல்லிணக்க விருது - வள்ளல் சீதக்காதி விருது” - “பசும்பொன் விருது”