[] [cover image] கஸ்தூர்பா காந்தி - ஓர் பார்வை மைதிலி சிவராமன் FreeTamilEbooks.com NonCommercial-ShareAlike 4.0 International கஸ்தூர்பா காந்தி - ஓர் பார்வை 1. கஸ்தூர்பா காந்தி - ஓர் பார்வை 2. முன்னுரை 3. தென் ஆப்பிரிக்காவில் கஸ்தூர்பா 4. கஸ்தூர்பா காந்தி 5. கோச்ரப் ஆஸ்ரம அனுபவம் – தீண்டாமை 6. பூரி ஜகன்நாதர் கோவில் தரிசனம் இமாலயத் தவறு 7. தென்னாப்பிரிக்காவில் கஸ்தூரிபாயின் அரசியல் அரங்கேற்றம் 8. கஸ்தூரிபாவின் முதல் சிறைவாசம் 9. இந்திய சிறைகளில் கஸ்தூரிபா 10. ராஜ்கோட்டில் ட்ராம்பா தனிமை சிறையில் கஸ்தூர்பா 11. ராமபிரான் எப்போதும் உன்னுடன் இருக்கும்போது, உனக்கு தனிமையே இல்லை – காந்தி 12. Do or Die – செயலில் இறங்குவோம் அல்லது சாவோம் – காந்தி 13. கஸ்தூர்பாயின் இறுதி நாட்கள் 14. முந்தைய இரு இதழ்களில் 15. கதூர்பா காந்தி பூற்றி அருண் காந்தி 16. கதூர்பா காந்தி பற்றி டாக்டர் சுசீலா நயார் 17. காந்தியும் மகன் ஹரிலாலின் படிப்பும் 18. ஹரிலாலின் மதமாற்றம் 19. மகன் மோதிலால் கலப்பு திருமணத்திற்கு காந்தியின் மறுப்பு கஸ்தூர்பா காந்தி - ஓர் பார்வை கஸ்தூர்பா காந்தி - ஓர் பார்வை   மைதிலி சிவராமன்   தமிழாக்கம் -       மின்னூல் வெளியீடு : FreeTamilEbooks.com   நன்றி - மார்க்சிஸ்ட் மாத இதழ் http://marxist.tncpim.org   உரிமை : NonCommercial-ShareAlike 4.0 International கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.   மின்னூலாக்கம் - கலீல் ஜாகீர் - jskcse4@gmail.com   This book was produced using pandoc   பதிவிறக்கம் செய்ய - http://FreeTamilEbooks.com/ebooks/kasturbagandhi} முன்னுரை காந்தி – கஸ்தூர்பா வாழ்க்கையின் சில அடிப்படை விவரங்களை மிகச் சுருக்கமாக இங்கு நினைவுபடுத்திக் கொள்வது வரலாற்றில் பெரிதும் புறக்கணிக்கப்பட்ட கஸ்தூர்பாவின் சமூக, அரசியல் செயல்பாடுகள், சாதனைகள், குணாம்சங்கள், குறைபாடுகள், குடும்ப வாழ்க்கை, பழைமையிலிருந்து வெளியே வருவதற்கான முயற்சிகள், வெற்றி, தோல்விகள் ஆகியவற்றை புரிந்துகொள்ள பெரும் உதவியாகும். அவரை இக்கட்டுரையில் மையப்படுத்து வதற்குமுன் காந்தி, கஸ்தூர்பா குடும்பங்களை பற்றிய சில தகவல்களை பின்னணியாக இங்கு பார்ப்போம். மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியும் கஸ்தூர்பா கபாடியாவும் ஒரே ஆண்டில் -1869- குஜராத்தின் கடலோர ஊரான போர்பந்தரில் பிறந்தவர்கள். கஸ்தூர்பாவின் தந்தை கோகல்தாஸ் கபாடியா ஆப்பிரிக்க, அரேபிய மார்கெட்டுகளில் துணி, தானியம், பஞ்சு ஆகியவற்றில் வியாபாரம் செய்தவர். காந்தியின் தந்தை கரம்சந்த் காந்தி போர்பந்தர் ஆட்சியாளர் ராணாவிற்கு திவானாக செயல்பட்டவர். மோகன்தாசுக்கும் கஸ்தூர்பாவுக்கும் 7 வயதில் நிச்சயதார்த்தமும் 13 வயதில் திருமணமும் நடந்தது. காந்தியின் பேரனும் மோதிலால் காந்தியின் மகனுமான அருண் காந்தி – எல்லோருடைய கருத்துப்படி கஸ்தூர்பா அனைவரையும் தன்வயப்படுத்தும் பெண் ஆக இருந்தார் என்றும் அவள் புத்திசாலி, சுதந்திரமாக செயல் படுபவள்; பயமற்றவள்; மிகவும் அழகானவள் என்றும் தனது கஸ்தூர்பா-ஒரு வாழ்க்கை என்னும் நூலில் குறிப்பிடுகிறார். 13 வயது மாப்பிள்ளை மோகன்தாஸ் கணவன் என்ற முறையில் சமவயதான மனைவி மீது அதிகாரம் செலுத்தத் தயங்கவில்லை.! இந்த அதிகாரத்தின் ஒரு முக்கிய மற்றும் சிறந்த அம்சமாக மனைவிக்கு ரகசியமாக எழுதப்படிக்கக் கற்றுக்கொடுக்கத் துவங்கினார். ஆனால் 120 ஆண்டுகளுக்கு முன்பு மாப்பிள்ளை சிறுவன் மனைவி என்ற சிறுமிக்கு கல்வி கற்பிப்பது ஊரே சிரிக்கக்கூடியது அல்லது பயனற்றது என்று கருதக்கூடிய விஷயம். இரவு நேரத்தில் படுக்கையில் மட்டுமே இதை ஓரளவு செய்ய முடிந்தது. தம்பதிகளின் இளமையின் விளைவாக உடலுறவுகள் தான் பெரும்பாலும் நடந்தது என காந்தி தனது சுய சரிதையில் பிற்காலத்தில் எழுதினார்! தனக்கு கல்வி பயிற்சி தேவையில்லை எனக் கணவரிடம் கூறுவதற்கு பதிலாக கஸ்தூர்பா இரவு கற்றுக்கொண்டதை காலையில் எந்த முயற்சியும் இன்றி மறந்துவிடுவாராம்! இதனால் குடும்பப் பெரியவர்களிடம் பொய் சொல்லத் தேவையும் இல்லை. காந்தி தம்பதிகளுக்கு 15 -லிருந்து 31வயதுவரை ஐந்து மகன்கள் பிறந்து முதல் குழந்தை மட்டும் ஓரிரு நாட்களில் இறந்துவிட்டது. இதற்கிடையில் காந்தி லண்டன் சென்று பாரிஸ்டராகத் திரும்பினார். பின் தென் ஆப்பிரிக்காவில் வழக்கறிஞராகவும் சத்யாகிரக போராளியாகவும் இருந்து 1915-இல் இந்தியா திரும்பி மகாத்மாவாகி 1948-இல் கோரச்சாவிற்கு ஆளானார். காந்தியின் நூல்களும் அவரைப் பற்றி உலகெங்கும் எழுதப்பட்டவையும் எண்ணற்றவை. இந்நூல்களில் கஸ்தூர்பா விற்கு கொடுக்கப்பட்டுள்ள இடத்தைக் கண்டுபிடிக்க பூதக் கண்ணாடி தேவை. காந்தியின் சுயசரிதையில்கூட அவருடைய மனைவிக்கு இடஒதுக்கீடு 33 சதத்துக்கும் மிகக்குறைவே!! தென் ஆப்பிரிக்காவில் கஸ்தூர்பா இச்சிறு கட்டுரையின் அழுத்தம் கஸ்தூரிபா மீது இருக்க வேண்டும் என்பதே நோக்கம். (கஸ்தூர் என்பது அவர் பெயர். குஜராத்தியில் பா என்றால் தாய்) ஆனால் காந்தியின் ஆரசியல் தலைமை, தார்மீகக் கோட்பாடுகள், ஆன்மீகம் போன்ற பன்முகத்தன்மை வாய்ந்த பூதாகாரமான சர்வதேச தோற்றத்தின் நிழலில் நடமாடிய மனைவியின் வாழ்க்கை மீது காந்தியின் தாக்கம், அதை அவர் எதிர்கொண்ட விதம் போன்றவை பற்றி இன்னமும் ஆய்வுகளும் விவாதங்களும் தேவை. இக்கட்டுரையின் நோக்கம் மேற்கண்ட கேள்விகளுக்குள் மிக ஆழமாகப் போவதல்ல. அதே சமயம் கஸ்தூரிபாவின் சில தென்னாப்பிரிக்க, இந்திய, அரசியல், சமூக, பண்பாட்டு அனுபவங்கள்; மற்றும் கணவரின் சாகும் வரை உண்ணாவிரதங்கள், சத்தியாகிரகம், தனியாகவும், பெரும் திரளாகவும் மக்கள் முன்வந்து கைதாவது போன்ற அன்றைய புதிய போராட்ட வடிவங்களையும், பாகுபாடற்ற ஆஸ்ரம வாழ்வு போன்ற ஜனநாயக போக்குகளையும் அவர் எப்படி எதிர் கொண்டார்? மத பேதம், சாதீயம், தீண்டாமை போன்ற இந்துமத முள் வேலிகளிலிருந்து அவர் எந்த அளவுக்கு, எப்படி விடுபட்டார்? இவற்றை சுருக்கமாக அலசுவதே இங்கு சாத்தியம். காந்திக்கும் கஸ்தூர்பாவிற்கும் உதவியாளராக இருந்த ப்யாரேலால் நயார், அவரது சகோதரி, மருத்துவர் சுஷீலா நயார் எழுதிய காந்தியின் கண்ணாடியில் (In Gandhi’s Mirror) என்ற நூல் மற்றும் சுஷீலா நயாரின் படைப்பு கஸ்தூர்பா ஆகியவை இக்கட்டுரைக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. கஸ்தூர்பாவின் பேரன் அருண் காந்தி – மணிலால் காந்தியின் மகன் – கஸ்தூர்பா ஒரு வாழ்க்கை என்ற நூலை இந்தியாவில் 2000-இல் வெளியிட்டார். மகாத்மா காந்தி கொலை செய்யப்பட்ட 50வது ஆண்டின் நினைவாக. தென்னாப்பிரிக்காவில் பிறந்து வளர்ந்த இவர் தனது மனைவி சுனந்தாவுடன் அமெரிக்காவில் வன்முறைக்கு எதிரான எம்.கே. காந்தி ஸ்தாபனம் – டெனெசி (M.K.Institute for Nonviolence in Tennessee) என்பதை 1991-ல் நிறுவினார். காந்தியின் கைதி – காந்தியின் மகன் மணிலால்-இன் வாழ்க்கை என்ற மிக விரிவான, மிக ஆழமாக ஆய்வு செய்யப்பட்ட நூல், மணிலால் காந்தியின் பேத்தியும், தென் ஆப்பிரிக்க குடி மகளுமான உமா துபேலியா மெஸ்த்ரியால் 2005-இல் வெளியிடப்பட்டது. கஸ்தூரிபா பற்றி எழுதப்பட்ட நூல்களில் திருப்தி பெறாத சமூக அறிவியலாளர் ராமச்சந்திர குஹா, கஸ்தூரிபா பற்றி முறையான சரித்திரம் இதுவரை எழுதப்படவில்லை என்று குறைபட்டுக் கொண்டு தான் இதை சரி செய்யப்போவதாக சமீபத்தில் இந்து பத்திரிகையில் கிட்டத்தட்ட சவால் விட்டிருக்கிறார்! சவாலின் விளைவை எதிர் நோக்குவோம்!!. கஸ்தூர்பா காந்தி காந்தியின் மனைவி அவருக்கு அருகாமையில் உட்கார்ந்திருந்த தோல் சுருங்கிப்போன ஒரு சிறிய, பரிதாபமான உருவம். அவர் மிகவும் நோய் வாய்ப்பட்டிருந்தார் என்றும் வெகு நாட்களுக்குப் பின் அவர் மற்றவர்களோடு அமர்ந்து சாப்பிடுவது இதுதான் முதல் முறை என்றும் அறிந்தேன். நான் பார்த்த முகங்களிலேயே பக்தி, ஈடுபாடு, இரக்கம் ஆகியவை நிரம்பிய அவர் முகம்தான் மிக அழகாக இருந்தது. அவர் முகச் சுருக்கங்களில்கூட அவருடைய மென்மையான, எதையும் தாங்கும் ஆன்மா (gentle and enduring spirit) பிரகாசித்தது. 1940களில் மிகப் பிரபலமான Life magazine என்னும் பத்திரிகையின் எழுத்தாளர் வில்லியம் இ. பிஷ்ஷர் (William E.Fisher) கஸ்தூர்பாவின் சாவிற்கு மூன்றாண்டுகளுக்கு முன் காந்தியை சந்திக்க வந்தவர், எழுதியது. (அருண் காந்தி நூலிலிருந்து) The Story of my experiments with Truth – சத்தியத்தோடு எனது பரிசோதனைகள் பற்றிய கதை – என்ற காந்தியின் நூல் அவரை பற்றி ஏராளமான விஷயங்களைக் கூறுகிறது. ஆனால் அவர் மனைவியை பற்றி மிகக் குறைவாகவே உள்ளது. இந்நூல் எதேச்சையாக ஆனால் மிகத்தெளிவாக வெளிப்படுத்துவது இதுதான்: மோகன்தாஸ் பலவிதமான சத்திய சோதனைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது கஸ்தூர்பா அவற்றை அன்றாட வாழ்க்கையில் அனுபவித்துக்கொண்டிருந்தார், கஸ்தூர்பா சிறுவயதிலேயே பயத்தை அறியாதவர் என்கிறார் அருண் காந்தி. தன்னைப்போல் பயந்தாங் கொள்ளி அல்ல என்பதை பிற்காலத்தில் எழுதத் தயங்கவில்லை. சில எடுத்துக்காட்டுகள். நான் கோழையாக இருந்தேன் கொள்ளைக்காரர்கள், பிசாசுகள். பாம்புகள் பற்றியெல்லாம் நினைத்து பயந்து கொண்டிருந்தேன். இரவில் வெளியே போகவே மாட்டேன், இருட்டு எனக்கு உதறல் கொடுக்கும், இருட்டில் என்னால் தூங்கவே முடியாது. பேய்கள் ஒரு பக்கத்திலிருந்தும், திருடர்கள் ஒரு பக்கத்திலிருந்தும் வருவதாக கற்பனை செய்து கொள்வேன். ஆகவே, அறையில் வெளிச்சம் இல்லாமல் என்னால் தூங்கவே முடியாது. அவர் மேலும் எழுதியிருப்பதாவது: என் பக்கத்தில் இருக்கும் மனைவியிடம் – அவள் ஒன்றும் குழந்தையல்ல, வாலிபத்தின் வாயிலில் இருந்தாள் – என்னுடைய பீதிகளைப் பற்றி எப்படி சொல்ல முடியும்? என்னைவிட அவளுக்கு அதிக தைரியம் உண்டு என்று எனக்குத் தெரியும். ஆகவே, எனக்கு வெட்கம். அவளுக்கு பாம்புகள், பேய் பிசாசு பற்றி பயம் கிடையாது. இருளில் எங்கேயும் போக முடியும். இந்த துணிச்சல்தான் குஜராத்தி மொழி மட்டும் தெரிந்த, பிராமணர் அல்லாத, ஆனால், பிராமயணீயத்தை முழுமையாக நம்பி கடைபிடித்த கஸ்தூர்பா கடல் கடந்து புதிய நாடான தென் ஆப்பிரிக்காவிற்குச் சென்று தனது கணவரின் பரிசோதனை கூடங்களான டால்ஸ்டாய் பண்ணைக் குடியிருப்பு, பீனிக்ஸ் குடியிருப்பு ஆகியவற்றில் பலதரப்பு, பல சாதிகளை சார்ந்தவர்களோடு ஒன்றாக வாழச் செய்தது, பல பழைய முடநம்பிக்கைகளை தகர்த்தது. ஆனால், தென் ஆப்பிரிக்காவில் பெரிய அளவிற்கு மறந்து போன தீண்டாமை உணர்வு, இந்தியாவிற்கு திரும்பிய பின் அகமதாபாத் கோச்ரப் ஆஸ்ரமத்தில் ஒரு தாழ்த்தப்பட்ட தம்பதியோடு சேர்ந்து வாழவேண்டிய நிர்ப்பந்தம் உருவான போது, மீண்டும் அவர் மீது தொத்திக் கொண்டது. ஆனால், தன்னை திருத்திக்கொள்ள முயன்று வெற்றியும் கண்டார். காந்தியின் முட்கள் நிறைந்த பாதை- தீண்டாமை ஒழிப்பு நான் மிகவும் தைரியசாலிபோல் முகத்தை வைத்துக் கொண்டேன். உண்மையில் மிகவும் வெட்கத்தோடு வீட்டுக்கதவை மூடினேன். என்னை விட்டுவிட்டு என் மனைவியால் போக இயலாது என்றால் என்னாலும் அவளை விட்டு விட்டு போக முடியாது. எங்கள் இருவரிடையே ஏராளமான சச்சரவுகள் ஏற்பட்டுள்ளன. என் மனைவியின் நிகரற்ற சகிப்புத்தன்மையால் இறுதியில் சமாதானமே நிலைத்திருக்கிறது. எப்போதும் அவளே வெற்றி பெற்றிருக்கிறாள் – காந்தி. காந்தி வகுத்துக்கொண்ட பாதை அவருக்கு சுலபமானதல்ல. கஸ்தூர்பாவைப் போல 13 வயதிலிருந்து அவரோடு நடந்து வந்தவரின் கதியைப்பற்றி கேட்க வேண்டாம்! ஆனால், இது முட்கள் நிறைந்த பாதை எனப்பட்டது. தீண்டாமைப் பிரச்சனையில் தம்பதிகளின் முரண்பட்ட நிலையை இதில் பார்க்கலாம். மேல் குறிப்பிட்ட நிகழ்ச்சி காந்தி பற்றி மிகவும் பிரசித்தியானது என்றாலும் சாதி வெறி இன்றும் தலை விரித்தாடும் சூழலில் மீண்டும் நினைவுபடுத்திக்கொள்வது பயனுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் ஒருநாள் அவர்கள் வீட்டில் தங்கிய கிருத்துவ, தலித் விருந்தாளி ஒருவர் தனது கட்டிலின் கீழ் வைக்கப்பட்டிருந்த மலத்துக்கான மண் பாண்டத்தை கழுவி வைக்கவேண்டும் என்று தெரியாமல் போய்விடவே அப்பணியை முகத்தை சுளித்துக்கொண்டே செய்ய முற்பட்டார் கஸ்தூர்பா. அவர் கண்களில் நீர் வழிந்துகொண்டே வீட்டு வாசலை தாண்டும்போது காந்தி பார்த்துவிட்டார். அதன்பின் என்ன நடந்தது என்பதை சத்தியத்துடன் எனது பரிசோதனைகள் என்ற அவர் நூலில் பார்க்கலாம். அவள் பாண்டத்தை முனகிக்கொண்டே எடுத்துப் போனது மட்டும் என்னை திருப்திப்படுத்தவில்லை. அவள் அதை மகிழ்ச்சியோடு செய்யவேண்டும் என எதிர்பார்த்தேன். என் வீட்டில் இத்தகைய-நான்சென்ஸை அனுமதிக்கமாட்டேன் என உரத்த குரலில் கூறினேன். என் வார்த்தைகள் அம்பைப்போல் அவளை குத்தின. உங்கள் வீட்டை நீங்களே வைத்துக்கொண்டு என்னை இங்கிருந்து போக விடுங்கள் என்றார். பரிதாபம் என்பது என்னுள்ளே உலர்ந்துவிட்டது. அவள் கையை பிடித்து தர தர என இழுத்துச் சென்று அவளை வெளியே தள்ள வாசல் கதவை திறந்தேன். கண்ணீர் வெள்ளமாய் பெருக அவள் கேட்டாள், உங்களுக்கு வெட்கம் இல்லையா? உங்களையே மறந்து இப்படி நடந்து கொள்வதா? நான் எஙகே செல்ல முடியும்? இங்கு எனக்கு உதவ யார் இருக்கிறார்கள்? உங்கள் மனைவி என்பதால் உங்கள் அடியையும், உதையையும் நான் பொறுத்துக்கொள்ள வேண்டுமா? முறையாக நடந்துகொண்டு கதவை மூடுங்கள். நாம் இருவரும் இப்படி நடந்து கொள்வதை யாரும் பார்க்காமல் இருக்கட்டும். நான் மிகவும் தைரியசாலி போல் முகத்தை வைத்துக்கொண்டாலும் மிகவும் அவமானப்பட்டு கதவை மூடினேன். பல சண்டை சச்சரவுகள் நடந்தாலும் இறுதியில் சமாதானமே நிலவியது. என் மனைவியின் நிகரற்ற சகிப்புத்தன்மையால் அவளே இறுதியில் வெற்றி பெறுகிறாள். பின்னால் கஸ்தூர்பா இந்நிகழ்ச்சி பற்றி மகன் மோதிலாலிடம் கூறியபோது இந்த வேலை தன்னை மிகவும் புண்படுத்தியது என்றும் ஆயிரமாயிரம் தலை முறைகளாக இந்து மதத் தலைவர்கள் என்ன போதித்தார்களோ அதை தான் மகிழ்ச்சியோடு புறக்கணிக்க வேண்டும் என்று தன் கணவர் எதிர்பார்த்ததை கடுமையாக நிராகரித்ததாகக் கூறினார். இத்தகைய ஒரு சிறு சம்பவம் காரணமாக தனது மனைவியை ஒரு கண்காணாத ஊரிலிருந்து விரட்டுவதை தன்னால் புரிந்துகொள்ள இயலவில்லை; பிற்காலத்தில் கூட இது அதிசயமாகவே இருந்தது என்றார். இந்நிகழ்ச்சி புரிய வைத்த ஒரு விஷயம், காந்தி தன்னுடைய நம்பிக்கைகளை எவ்வளவு ஆழமான மிகப் பெரிய விஷயமாக பார்த்தார் என்பது. தனது கணவரின் விசித்திரமான புதிய கருத்துக்கள் பலவற்றை தன்னால் எற்றுக்கொள்ள முடியவில்லை என்றாலும் அவருடைய சிந்தனை போக்குகளை புரிந்துகொள்ள முழு முயற்சி செய்ததாகவும் எப்போது சாத்தியமோ அப்போது அவருடைய விருப்பத்திற்கு இணங்கிப் போவேன் என்றும் கூறினார். மணிலால் இந்நிகழ்ச்சியை மிகத் தெளிவாக நினைவில் வைத்திருந்ததற்குக் காரணம் அவர் தந்தையின் கட்டுப்பாட்டைவிட அவர் தாயின் உறுதியான, அன்பான வழிகாட்டுதலே என்கிறார் அருண் காந்தி. கோச்ரப் ஆஸ்ரம அனுபவம் – தீண்டாமை காந்தி தம்பதிகள் இந்தியாவிற்கு திரும்பியபின் அஹமதாபாத்தில் வசித்த சில செல்வந்தர்களின் நிதி உதவியோடு கோச்ராப் என்னும் இடத்தில் ஆஸ்ரமத்தை கட்டி 25 ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளோடு குடியேறினர். தென்னாப்பிரிக்காவில் பீனிக்ஸ் மற்றும் டால்ஸ்டாய் என்ற பெயரில் காந்தி உருவாக்கிய குடியிருப்பு களில் குடியிருப்புவாசிகள் ஏற்றுக்கொண்ட கடுமையான நிபந்தனைகள் இங்கும் ஏற்றுக்கொள்ளப்பட்டன. இந்தியாவின் நிலைமையை கருத்தில் கொண்டு விசேஷமாக விதிக்கப்பட்டவை: அன்னிய நாட்டுத் துணிகளை அணிந்து கொள்ளக்கூடாது; எதற்கும் பயப்படக்கூடாது (காலனி ஆட்சியின் அநீதிகளை எதிர்ப்பதற்கு துணிச்சல் தேவையானதால்); தாழ்த்தப்பட்ட மக்களை தீண்டப்படாதவர்களாக நடத்தக்கூடாது. சில மாதங்களுக்குப் பிறகு ஒரு தாழ்த்தப்பட்ட குடும்பமான பள்ளி ஆசிரியர் துதாப், மனைவி தானிபென் , சிறு மகள் லட்சுமி- அங்கு குடியேறினர். யாரையும் தீண்டப்படாதவர்களாக நடத்த மாட்டோம் என்று உறுதி எடுத்துக்கொண்ட ஆஸ்ரமவாசிகள் பலருக்கு – கஸ்தூர்பா உட்பட இது பெரும் பிரச்சினையை உருவாக்கியது. அக்குடும்பம் அங்கு வந்தது முதல் முறையாக உணவு அருந்தியபின் காந்தி தனது மகனை அழைத்து அவர்கள் தட்டுகளை கழுவும்படி கூறினார். இது ஆஸ்ரமவாசிகள் உட்பட அந்தப் பகுதி மக்களிடையே பெரும் ஆத்திரத்தை உருவாக்கியது. ஆசிரமத்திற்கு நிதி உதவியவர்கள் தங்கள் பங்கை திரும்பி பெற்றுக்கொண்டனர். இந்நிலையில் ஆஸ்ரமத்தை நடத்த நிதி இல்லை. ஆஸ்ரமத்தையே தீண்டப்படாதவர்கள் குடியிருப்பிற்கு மாற்றிவிடலாம் என்ற காந்தியின் ஆலோசனையும் நடை முறைக்கு கொண்டுவரப்பட வில்லை. அச்சமயம் குஜராத்தின் செல்வந்தர் அம்பலால் சாராபாய் நிதி அளித்து ஆஸ்ரமத்தை தொடர்ந்து நடத்த உதவினார். ஆனாலும் ஆஸ்ரமவாசிகள் தலித் தம்பதிகளை கீழ்த்தரமாகவே நடத்தினார்கள். இக் குடும்பத்தை ஏற்றுக்கொள்ள முடியாதவர்கள் ஆஸ்ரமத்தை எப்போது வேண்டுமானால் விட்டுச்செல்லலாம் என்று காந்தி பிரார்த்தனை போது அறிவித்தார். பலர் வெளி யேறினர். காந்தி இவர்களுக்கு அளித்த ஹரிஜன் என்ற பெயரை கஸ்தூர்பா மற்றும் காந்தியின் நெருங்கிய உறவினர் தம்பதி – மதன்லால் காந்தியும் மனைவியும்- கூட ஏற்கவில்லை. ஆஸ்ரமத்தை விட்டுச் சென்ற இத்தம்பதிகள் நெசவு கற்றுக்கொள்ள மதராஸ் சென்று, மனம் திருந்திய பின் திரும்பினராம். காந்தியோடு எந்த தொடர்பும் கொள்ளாமல் இச்சூழலில் கஸ்தூர்பா அமைதியாக தனது வேலையை பார்த்தார். தனது நடத்தையால் காந்தியின் மனது எவ்வளவு ஆழமாகக் காயப் பட்டிருக்கும் என்பதை கஸ்தூர்பா உணராமல் இல்லை. பல வருடங்கள் வெளிநாட்டில் வாழ்ந்ததால் தனது கண்ணோட்டம் விரிவடைந்திருக்கும் என்று காந்தி நம்பியிருப்பார் என்றும் இதனால், மற்றவர்களின் நடத்தையைவிட, தனது நடத்தையால் அவர் நொந்து போயிருப்பார் என்றும் உணர்ந்தார். இவ்விசயத்தில் மனைவியின் நடத்தையை வெறுத்த காந்தி, அவர்கள் இருவரும் பிரிந்து விட வேண்டும் என்று கூட வலியுறுத்தினராம். இந்த சச்சரவு ஆஸ்ரமவாசிகளை மிகவும் பாதித்தது. அங்கு வசித்து வந்த காந்தியின் மகன்கள் தந்தையின் நிலைபாட்டில் உறுதியாக நின்றார்கள், இறுதியில் கஸ்தூர்பா தனது கருத்தை மாற்றிக் கொண்டார் என்று, உமா மெஸ்த்ரி குறிப்பிட்டுள்ளார். கஸ்தூர்பாவின் உணர்வு எப்படி மாறியது என்பதற்கு காரணமாக சிறுமி லட்சுமியை குறிப்பிடுகிறார் அருண்காந்தி. தான் என்ன முடிவு எடுக்க வேண்டும் என்பதை காந்தி தீர்மானிப்பதை அவர் விரும்பவில்லை. தனது கேள்விகளுக்கு பதில் கிடைக்க ஆண்டவனையே நம்ப வேண்டும் என்ற முடிவுக்கு வந்தார் என்கிறார் அருண் காந்தி. ஒரு நாள் காலை அரிஜன தம்பதியின் பெண் லட்சுமி விளையாடிக்கொண்டிருப்பதை நீண்ட நேரம் கவனித்த கஸ்தூர்பா, இக்குழந்தை எவ்வளவு வசீகரமானது; எப்போதும் சிரித்த முகத்தோடு உள்ளது என்று நினைத்தார். கஸ்தூர்பாவின் நினைவு பின் நோக்கிசென்றது. தென்னாப் பிரிக்காவில் டால்ஸ்டாய் பண்ணைவாசிகள் சத்தியாகிரகிகள் என்பதால் சிறையில் இருந்தபோது அவர்களுடைய குழந்தைகள் தனது கவனிப்பிலும் அரவணைப்பிலும் இருந்ததும் அம்மா என்று அழைத்ததும் நினைவிற்கு வந்தது. அக்குழந்தைகளை போற்றி வளர்க்கும் அம்மாவாக நடந்துகொள்ள தனக்கு கற்றுக் கொடுத்ததாக அவர் எண்ணினார். அச் சமயம் அச்சிறார்களில் பலர் தாழ்த்தப்பட்டவர்களாக இருந்தாலும் அவர்களைத் தான் அன்று சாதி ரீதியாக பார்க்கவில்லை என்பதும் அவர் நினைவில் வந்தது. அவர் வேறு விதமாக நினைக்கத் துவங்கினார்.: டால்ஸ்டாய் பண்ணை குழந்தைகள் அனைவரும் ஆண்டவனின் குழந்தைகளாக இருந்ததால் துதாப், தானிபென் இருவரும் எப்போதும் இறைவனின் குழந்தைகள் தான். சிறுமி லட்சுமி நிச்சயமாக ஆண்டவனின் குழந்தைதான். அதோடு மட்டுமல்ல. தெய்வீக உண்மைகளை அளிக்கும் தூதர். மோகன்தாஸ் கூறியது சரிதான். நாம் ஒருவரை ஒருவர் நேசிக்க வேண்டும். ஏனென்றால் நாம் அனைவரும் ஆண்டவனின் குழந்தைகள்தான். பூரி ஜகன்நாதர் கோவில் தரிசனம் இமாலயத் தவறு வயோதிக காலத்தில் காந்தி தம்பதிகள் அனைத்து விஷயங்களிலும் ஒன்றுபட்ட கருத்தை கொண்டதாகவே தெரிந்தது என்றும் அதற்கு மாறுபட்ட சம்பவம் ஒன்று பற்றி காந்தியின் முட்கள் நிறைந்த பாதை-யிலிருந்து கஸ்தூரிபா விலகிய ஒன்றாக இதை அருண் காந்தி குறிப்பிடுகிறார். ஒரிசாவில் காந்தி பங்கேற்ற பொதுக்கூட்டத்திற்கு கஸ்தூரிபா, தென் ஆப்பிரிக்காவிலிருந்து வந்திருந்த மருமகள் சுசீலாகாந்தி (அருண் காந்தியின் தாய்), காந்தியின் உதவியாளார் மஹாதேவ தேசாயின் மனைவி துர்காபென் ஆகியோர் காலையில் ஊரை சுற்றிப்பார்க்கச் சென்றனர். இந்தியாவில் உள்ள நான்கு மிகப் புனிதமான கோவில்களில் ஒன்று எனப்பட்ட பூரி ஜகன்நாதர் கோவில் அங்கு இருந்ததால் கஸ்தூரிபாவும் துர்காபென்னும் மட்டும் சாமி தரிசனத்திற்கு உள்ளே சென்றனர். ஹரிஜனங்களை உள்ளே விடாத கோவில்களுக்கு எந்த சுய மரியாதையுள்ள இந்துவும் போகக்கூடாதென்ற காந்தியின் அறைகூவலை சுசீலா தன் மாமியாருக்கு நினைவுறுத்தியும் அவர் அதை பொருட்படுத்தவில்லை. எல்லா கோவில்களும் அனைத்து இந்துக்களுக்கும் திறந்திருக்க வேண்டும் என்ற தேசிய இயக்கத்தில் கலந்து கொண்டவர்தான் கஸ்தூர்பா என்றாலும் கோவில் வாசல்வரை வந்துவிட்டு சாமி தரிசனம் செய்யாமல் வரமுடியவில்லை. இளமையில் தான் வளர்க்கப்பட்ட தீவிர வழிபாட்டு சூழலை அவரால் எதிர்க்க முடியவில்லை. அன்று மாலை இச்செய்தியை கேட்ட காந்தியின் கோபம் உச்ச கட்டத்தை அடைந்தது. மஹாதேவதேசாயும் தனது மனைவிக்கு தீண்டாமை பற்றி சரியாக படிப்பித்திருந்தால் அவராவது கஸ்தூர்பாவை தடுத்திருப்பார் என்று காந்தி கூறியது தேசாயை தனது பணியிலிருந்து விலகும் அளவுக்கு உறுத்தியது. ஆனால் காந்தி அதை அனுமதிக்கவில்லை. சம்பந்தப்பட்ட நபர்கள் எல்லோரும் – சம்பந்தப்படாத நபர் காந்தி உட்பட – வழக்கமான மருந்தான உண்ணாவிரதத்தை மேற்கொண்டனர். இச்சம்பவத்தில் கஸ்தூர்பா இமாலயத் தவறு செய்ததாக அவர் மருமகள் சுசீலா கூறினாராம். தென்னாப்பிரிக்காவில் கஸ்தூரிபாயின் அரசியல் அரங்கேற்றம் காலப்போக்கில் காந்தியின் சத்தியாகிரக போராட்டத்தின் அவசியத்தை கஸ்தூர்பா உணர்ந்து கொண்ட பின்னும் அதில் தான் பங்கெடுக்கும் நாள் வரும் என்பதை உணர்ந்திருக்கமாட்டார். அப்படிப்பட்ட நாள் வந்ததோடல்லாமல் அதில் காந்தியின் வற்புறுத்தல் எதுவும் இல்லை! 1913 ஜனவரி மாதம் தென்னாப்பிரிக்காவில் பீனிக்ஸ்-இல் ஒரு நாள் மாலை காந்தி தம்பதிகள் சமையல் அறையில் பேசிக் கொண்டிருந்தனர். காந்தி வெட்டிக்கொடுத்த காய்கறிகளை கஸ்தூர்பா வறுத்து எடுத்து கொண்டிருக்கும்போது, நீ இன்னும் சிறிது காலத்தில் என்னுடைய மனைவி என்னும் அந்தஸ்தை இழந்துவிடுவாய் என்று தெரியுமா உனக்கு? என்று மிக சாவதானமாகக் கேட்டாராம்! அடுப்பில் இருந்த பண்டத்தை கிளறிக்கொண்டிருந்த கஸ்தூர்பா, அதை அப்படியே விட்டு விட்டு தன்னை முழித்துப் பார்த்த மனைவிக்கு மேலும் விளக்கினார் காந்தி: தென்னாப்பிரிக்க அதிபர் ஜெனரல் ஸ்மட்ஸ் தான் இப்படி பேசியிருக்கிறார். தற்சமயம் நீ எனது சட்டப்பூர்வமான மனைவி அல்ல; வைப்பாட்டியாம். கிருத்துவ சடங்குகள்படி மனம் செய்துகொண்டவர்கள்தான் அங்கீகரிக்கப்படுவார்களாம். அய்யய்யோ! இதற்கு நாம் செய்ய முடியும்? என்ற மனைவியின் பதற்றமான கேள்விக்கு கணவரின் அமைதியான பதில்: நீயும் மற்ற பெண்களும் போராட்டத்தில் இறங்கி சிறைக்கு போகவேண்டும். இதை கஸ்தூரிபா வேடிக்கையாக எடுத்துக்கொண்டபோது ஏன் பெண்கள் சிறைக்குப் போனால் என்ன? என்று காந்தி புராணங்களிலிருந்து பெண்களின் வீரத்திற்கு சான்றுகள் ஆளித்தாலும் கஸ்தூர்பாவின் கவலை தீரவில்லை. சிறை உணவை எப்படி சாப்பிடுவது? என்ற மனைவியின் கவலைக்கு, நீ பழங்கள் மட்டும் கேட்டு வாங்கி சாப்பிடலாம் என்ற கணவரின் பதில் மேலும் எரிச்சலூட்டியது. முதலில் எனக்கு சிறை செல்ல வழி சொன்னீர்கள். பின் உணவின்றி சாகச் சொல்கிறீர்கள். நீங்கள் எத்தகைய மனுஷன் என்று ஆத்திரத்தை கொட்டித் தீர்த்தார் கஸ்தூரிபா. காந்தியோ தனது வாதத்தை மாற்றிக்கொள்ளாமல் நீ சிறையில் மரணமடைந்தால் நான் உன்னை தெய்வமாக வழிபடுவேன் என்றார் விடாப்பிடியாக. இதை கேட்டு கஸ்தூர்பா வாய்விட்டு சிரித்து அப்போது நிச்சயம் சிறை செல்வேன் என்றாராம். இந்து திருமணங்கள் செல்லாது என்ற அரசின் நிலைபாடு தென் ஆப்பிரிக்கா முழுவதிலும் ஏழை, பணக்காரர் என்ற வேறுபாடில்லாமல் இந்துக்களிடையே பெரும் கொந்தளிப்பை உருவாக்கியது. இப்பிரச்சினையில் மிகுந்த ஆர்வம் காட்டிய பீனிக்ஸ் இந்துப் பெண்களை வன்முறையற்ற சத்தியாகிரகத்தில் ஈடுபடுத்த காந்தி முடிவெடுத்து அவர்களை தயார் செய்து கொண்டிருந்தபோது கஸ்தூர்பாவிடம் இது பற்றி பேசவில்லை. கஸ்தூரிபாவின் முதல் சிறைவாசம் செப்டெம்பர் 23, 1913. 16 குஜராத்தி பேசும் இந்தியர்கள். காந்தியின் 15 வயது மகன் ராம்தாஸ் உட்பாட12 ஆண்கள், கஸ்தூரிபா உட்பட 4 பெண்கள். இக்குழு பீனிக்ஸிலிருந்து ட்ரான்ஸ்வால் பயணித்த போது அதற்குத் தலைமை தாங்கியவர் கஸ்தூர்பா போராட்டத்தில் பங்கு கொள்ள வேண்டாமென்று முடிவெடுக்கப்பட்டவர்களில் ஒருவரான 13 வயதான தேவதாஸ் காந்திக்கு இந்தியன் ஒபினியன் பத்திரிகை வேலைகள், மற்றும் வீட்டில் விடப்பட்ட குழந்தைகளை பராமரிப்பது போன்ற பணிகள் ஒதுக்கப்பட்டன. துவக்கத்தில் பீனிக்ஸ்வாசிகளின் படையெடுப்பு பட்டியலில் தான் இல்லை என்று அறிந்த கஸ்தூரிபா கணவரை அழைத்து, நான் சிறை செல்ல தகுதியற்றவள் என்பதற்கு என்னிடம் என்ன குறைகள் உள்ளது? என்றார். எனக்கு உன்மீது எந்த சந்தேகமும் இல்லை. உன்னை நான் சிறைக்கு போகச்சொன்னால் நீ எனக்காக வேண்டி போகலாம். சிறையில் உடல் நலமின்றி போய்விட்டால் நான் உன்னை குறைகூற முடியாது. ஆனால், என்னால் என்னை மன்னிக்கவே முடியாது என்றார் காந்தி. கஸ்தூர்பா தன் நிலையிலேயே நின்று, சிறைக்கஷ்டங்களை உங்களாலும் என் மகன்களாலும் தாக்குப் பிடிக்க முடியும் என்றால் என்னால் மட்டும் ஏன் முடியாது? என்றார். நீ சற்று ஆழமாக சிந்தித்து முடிவெடு என்று கணவர் மீண்டும் வேண்டியபோது இதில் சிந்திப்பதற்கு ஒன்றுமில்லை. போராட்டத்தில் கலந்துகொள்ள நான் முழுமையாக தயாராகிவிட்டேன் என்ற பதிலே மனைவியிடமிருந்து கிடைத்தது. பீனிக்ஸ் குழுவின் போராட்டம் பரம ரகசியமாக வைக்கப் பட்டது. இச்சிறு சத்தியாகிரகப் படை பீனிக்ஸ் எல்லையை கடந்து நேடால் போக முயற்சி செய்தபோது தங்கள் பெயர், மற்ற அடையாளங்கள் எதையும் போலிசிடம் தர மறுத்தனர். உடனே அனைவரும் கைது செய்யப்பட்டு விசாரணைக்குப் பின் குற்றவாளிகள் என மூன்று மாத கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. அரசால் கைது செய்யப்பட்ட முதல் பெண் சத்யாகிரகிகள் என்ற பட்டத்தை இப்பெண்கள் பெற்றுவிட்டனர்! முதல் சிறை வாழ்வின் கடுமையான சூழலை சமாளிப்பாதற்கான மன உறுதியை இவ்விளம் பெண்கள் பெற கஸ்தூர்பா உதவினார். ஏராளமான துனிகளை துவைப்பது, தைப்பது போன்ற கடினமான சிறை வேலைகளை முடிப்பதற்கு அவர் ஊக்கமளித்தார். சிறையில் அளிக்கப்படும் அசைவ உணவை பெண்களால் உண்ண முடியாது என்று பலமுறை அவர் கேட்டுப் பார்த்தும் பயனில்லை. மாலையில் பஜனை பிரார்த்தனைகள நடத்தினார். இதே சமயம் காந்தியால் அமைக்கப்பட்ட டால்ஸ்டாய் பண்ணை பெண்களில் 11 பேர் அவருடைய ஆலோசனை பேரில் நேடாலில் நுழைய முயற்சித்தனர். ஆனால் ஏமாற்றமே மிச்சம். போலிஸ் அவர்களை கைது செய்ய மறுத்து பெண்கள் கிளர்ச்சியை பலவீனப்படுத்தியது. திட்டமிட்டபடி நேடால் சிறை பெண்களுக்கு டால்ஸ்டாய் பண்ணை பெண்களால் உதவமுடியவில்லை. அதே சமயம் நேடால் சிறை பெண்கள் நிலை மிகவும் மோசமாகிவிட்டது. அழுகிப்போன பண்டங்களே சைவ உணவாக கொடுக்கப்பட்டன. நாங்கள் பணம் கொடுக்கிறோம். வெளியிலிருந்து உணவு வாங்கிக் கொடுங்கள் என்று கேட்டதற்கு, இது உணவு விடுதியா, சிறைச்சாலையா? என்ற பதிலே கிடைத்தது. மூன்று மாதக் குழந்தையோடு கைது செய்யப்பட்ட இளம் தாய் ஒருவர், மருத்துவ பராமரிப்பின்மையால் சிறையிலிருந்து வெளிவந்தவுடன் இறந்தார். உடலை உருக்கும் காய்ச்சலில் பலர் சிகிச்சையின்றி தவித்தனர். தனது 44 வயதில் கஸ்தூர்பாவிற்குக் கிடைத்த சிறைவாசம் அவர் எதிர்பார்ப்பிற்கு மேலாக உடலையும் உள்ளத்தையும் உருக்கிற்று. தானும் தனது கணவர், மகன்கள் மோதிலால், ராம்தாஸ் ஆகியோரும் ஒரே சமயம் வெவ்வேறு சிறைகளில் இருப்பதை எண்ணி உருகினார். ஆனால் தான் சிறைபட்டது தவறு என்று மட்டும் நினைக்கவில்லை. பீனிக்ஸ்-இல் காந்தி-யின் பத்திரிகையை நடத்திவந்தவர்கள் கைதான பிறகு சிறுவன் தேவதாஸ் மற்றும் அங்கு விடப்பட்ட சிறுவர்களும் சேர்ந்து அப்பத்திரிகையின் ஒரு இதழை கொண்டு வந்தது வரலாற்று புகழ் பெற்றது! காந்தி மற்றும் பெண்கள் சிறிய விஷயத்திற்காக சிறை படுத்தப்பட்டது பிரிட்டிஷ் இந்திய அரசு மற்றும் லண்டன் அரசு ஆகியவற்றில் விவாதிக் கப்பட்டு தென் ஆப்பிரிக்க அரசு கடுமையாக சாடப் பட்டது. இச்சூழலில்தான் கைதிகள் விடுவிக்கப்பட்டனர். கஸ்தூர்பா சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டு வெளியே வந்ததை அருண் காந்தி வர்ணிக்கிறார்: கைதிகளை வெளியே விட்ட போது ஒரு மிகச் சிறிய, மெலிந்த, கவலை தோய்ந்த முகத்துடன் கூடிய ஒரு உருவம் முதலில் வெளிவந்த போது அவரை காந்தியும் மற்றவர்களும் மிக மென்மையான மரியாதையோடு வாழ்த்தி வரவேற்றனர். இதை பார்த்துக்கொண்டிருந்த பொது மக்கள் அவரை காந்தியின் தாயார் என்றே நினைத்தார்கள். காந்தியின் மகன்களுக்கும் இது மிக ஆச்சரியமாக இருந்ததாம். இந்த அனுபவத்திற்குப்பின் கஸ்தூர்பா மிகவும் நோய்வாய்ப்பட்டு இறந்துவிடலாம் என்ற நிலையில் இருந்தபோது காந்தி பீனிக்ஸ்-இல் ஒன்றரை மாதம் தங்கி பணிவிடை செய்து அவர் குணமானபின்தான் இந்தியர்களின் பல பிரச்சனைகளை அரசோடு விவாதிக்க டர்பன் சென்றார். இந்திய சிறைகளில் கஸ்தூரிபா வட்ட மேஜை மாநாடு (1931) பேச்சு வார்த்தைகள் லண்டனில் முறிந்துவிட்ட பிறகு நாட்டில் ஏற்பட்ட, அதிருப்தி, கோபம், எதிர்ப்புகளை அடக்க பிரிட்டிஷ் இந்திய அரசு சிவில் உரிமைகளை ரத்து செய்து, காட்டு தர்பாரை அவிழ்த்துவிட்டன. கைது செய்யப்பட்டவர்களில் கணிசமானவர்கள் பெண்கள் என்பது ஒரு ஆக்கப்பூர்வமான அம்சம். கஸ்தூர்பா மற்றும் ஆஸ்ரமத்துப் பெண்கள் பலரும் சிறையில் அடைக்கப்பட்டனர். அப்போது அவருக்கு வயது 62. தென் ஆப்பிரிக்கா சிறை வாசத்திற்கு 18 ஆண்டுகளுக்குப் பின் அவரது முதல் சிறை அனுபவம். ஆறு வார சிறை வாழ்விற்குப்பின் வெளி வந்து பூனாவில் யெரவாடா சிறைக்குச் சென்று பாபுவை பார்க்க வேண்டும் என்று தயாராகிக் கொண்டிருந்தவருக்கு ஒரு அதிர்ச்சி! சிறைவாசம் என்பது உரிமை மறுப்பு என்பதால் தனது பார்வையாளர்களை சந்திக்கப் போவதில்லை என்று காந்தி அறிக்கை விட்டார். அதே சமயம் தனது மகனுக்கு எழுதிய கடிதத்தில் “இது ‘பா’விற்குத்தான் மிக்க அதிர்ச்சியை அளிக்கும். ஆனால் அதிர்ச்சிகளைத் தாங்குவதற் கென்றே அல்லவா அவள் பிறந்திருக்கின்றாள். என்னோடு தொடர்பு உள்ளவர்கள் எல்லாம் இத்தொடர்பிற்காக ஒரு மிகப் பெரிய விலையை கொடுக்க வேண்டியிருக்கிறது. இதில் மிகப்பெரிய விலையைக் கொடுக்கவேண்டியது ‘பா’தான் என்று சொல்லலாம்” என்று குறிப்பிட்டுள்ளார். காந்தி சிறையில் இருந்தபடியால் சென்னையில் டிசம்பர் 3, 1932ல் தீண்டாமை ஒழிப்பு மாநாட்டை கஸ்தூரிபா திறந்து வைத்தார். பல பெண்களோடு சேர்ந்து உரிமை பிரசாரத்தை நடத்தினார். கோச்ராப் ஆஸ்ரமத்தில் 16 ஆண்டுகளுக்கு முன் தாழ்த்தப் பட்டவர்களை வெளியே அனுப்ப வேண்டும் என்று கோரிய கஸ்தூர்பா பின்னர், தீண்டாமை எதிர்ப்பு இயக்கத்தின் முன்னணியில் நின்றது வரவேற்புக்குரியது. இதற்கு அரசு அளித்த விளக்கம் சிவில் ஒத்துழையாமை இயக்கத்தில் அவர் தொடர்ந்து ஈடுபட்டது. சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டவுடன் மீண்டும் சிறைவாசம். இரண்டு ஆண்டுகளில் ஆறு முறை சிறைவாசம்.! ஆறாவது முறை சபர்மதி சிறையில் மற்ற சிறைவாசிகளிடமிருந்து அவர் தனிமைபடுத்தப்பட்டார். அவரை சந்திக்க யாருக்கும் உரிமை கிடையாது. வாரத்திற்கு ஒரு முறை கணவருக்கு கடிதம் எழுதலாம். அல்லது அவரிடமிருந்து கடிதத்தை பெறலாம். இந்த தனிமை சிறையை பற்றி அருண் காந்தி எழுதுகிறார்: “கஸ்தூரிபா தனது 64 வயதுவரை விழிப்பான நேரங்களில் தனியாகவே இருந்ததில்லை. இப்போதுதான் முதல் முறையாக தனியாக இருந்திருக்கிறார். ஆனால் விசித்திரமாக இந்தத் தனிமை அவருக்கு சங்கடத்தை அளிக்கவில்லை. இச் சிறைவாசத்தின் போது ஒரே வாரத்தில் அவருக்கு மூன்று பேரக்குழந்தைகள் பிறந்தது அவருடைய சோர்வை நீக்கி உற்சாகம் அளித்ததாம்!” ராஜ்கோட்டில் ‘ட்ராம்பா’ தனிமை சிறையில் கஸ்தூர்பா 1938-ல் – தனது 69 ஆவது வயதில் கஸ்தூர்பா தனிமை சிறையில் அடைக்கப்பட்டார். இச்சம்பவத்தின் பின்னணி சுவாரசியமானது. இச்சமயம் அரசாட்சியின் கீழ் இருந்த மைசூர், திருவிதாங்கோர், ஜதராபாத், ராஜ்கோட் போன்ற இடங்களில் சமஸ்தான ஆட்சியை எதிர்த்து மக்கள் கிளர்ச்சிகள் ஏற்பட்டன. காந்தி தம்பதிகள் முன்பு நன்கறிந்த, தங்கள் சொந்த ஊரான ராஜ்கோட்டின் திவானாக இருந்தவருடைய பேரன் தாகூர் என்பவரின் கொடுங்கோல் ஆட்சி எல்லையை மீறியது. கிளர்ச்சியின்போது சிறை வைக்கப்பட்ட மக்களை விடுவிக்கவும் அரசியல் சீர்திருத்தக் குழுவை உருவாக்கவும் முதலில் ஏற்றுக்கொண்ட தாக்கூர் பிறகு அதிலிருந்தும் பின் வாங்கி விட்டார். இருப்பினும் துவக்கத்தில் தாகூர் மீது வலுவான மக்கள் இயக்கத்தை திருப்பிவிட காந்தி விரும்பவில்லை. காரணம் தாகூரின் தாத்தா ராஜ்கோட்டில் ஆட்சி செய்தபோது காந்தியின் தந்தை அவருடைய திவானாக பணியாற்றினாராம். ஆகவே தாகூர் ஆட்சியில் மக்கள் உரிமைகள் பறிக்கப்பட்டதற்கு காரணம் அந்த சமஸ்தானத்தின் ஆங்கிலேய அரசியல் ஏஜன்ட்தான் என்ற நிலைபாட்டை துவக்கத்தில் எடுத்தார். அச்சமயம் சுதந்திர தினமாக நிர்ணயிக்கப்பட்ட ஜனவரி 1939-ல் ஒரு அடையாள பூர்வமான எதிப்பியக்கத்தை தொடர வல்லாபாய் படேல் எடுத்த முடிவை காந்தி ஏற்றார். இவற்றை சமரசபோக்காகத்தான் இன்று நாம் பார்க்க வேண்டியுள்ளது. இதே சமயம் தாகூர், ராஜ்காட்டின் பெண்களை மிகக் கேவலமாக நடத்துவதும் பலரை பாலியல் பலாத்காரம் செய்வதாகவும்; இதற்காகவே நகரத்திற்கு வெளியே (tramba) ட்ராம்பா என்ற கிராமத்தில் ஒரு கோடை கால பங்களா பயன்படுத்தப்படுவதாகவும் மக்களிடையே பரவலாக பேசப்பட்டது. இந்தக் கொடுமைகளை எதிர்த்து அவ்வூர் பெண்கள் தாங்களாகவே சத்தியாகிரகத்தில் பங்கேற்று கைதாயினர். முதலில் இந்த எதிர்ப்பு தாகூரை கொஞசமும் பாதித்ததாகத் தெரியவில்லை. மாறாக பெண்களை பயப்படுத்தி வீட்டிற்குள் அடைக்கும் வகையில் வல்லபாய் படேலின் இளம் மகள் மணிபென் சிறை வைக்கப்பட்டார். இச்செய்தியை அறிந்தவுடன் கஸ்தூரிபாய் இப்போராட்டம் அரசியல் உரிமைகளுக்காக மட்டுமல்ல; இது பெண்களின் மானப்பிரச்சினையாகிவிட்டது என அறிவித்து உடனே ராஜ்கோட் சென்று சத்தியாகிரகத்தில் பங்கேற்றார். அவரோடு அம்பலால் சாராபாயின் மகள் மிருதுல் சாராபாயும் ராஜ்கோட் சென்றுவிட்டார். இதையொட்டி காந்தி ஹரிஜன் பத்திரிகையில் (ஜனவரி 31, 39) எழுதியது: “என் மனைவிக்கும் எனக்கும் ஒரே வயதுதான். என்னால் சிறை வாழ்க்கையை தாக்குப்பிடிக்க முடிவது போல் அவளால் முடியாது. இருப்பினும் அவள் ராஜ்கோட்டிற்கு போவது என்று முடிவு செய்துவிட்டாள்.” தாகூரின் ஈனத்தனத்தின் சான்றாக இரண்டே நாட்களில் கஸ்தூர்பா சிறை படுத்தப்பட்டது எங்கே தெரியுமா? ட்ராம்பா பங்களாவில்! இவை குறித்த விவரங்கள் காந்திக்கு தெரியாவிட்டாலும் அவர் ஹரிஜனில் (பிப்ரவரி 6, 1939) எழுதியதின் சுருக்கம்: ” ராஜ்காட் போராட்டத்தில் என் மனைவி ஈடுபடுவார் என நான் நினைக்கவில்லை…..இந்திய வரை படத்தில் ராஜ்காட் முக்கியத்துவம் அற்ற இடம்தான். ஆனால் எனக்கும் என் மனைவிக்கும் ராஜ்கோட் அப்படிப்பட்டதல்ல. ராஜ்காட் இந்திய சுதந்திர போராட்டத்தில் ஒரு கட்டம் முன்னேறியது. இறுதியில் இப்போராட்டம் வெற்றி பெறும் போது கஸ்தூர்பாவிற்கும் அதில் பங்கு உண்டு. மிக்க வயதானவர்களும் உடல் தளர்ந்தவர்களும்கூட சத்தியாகிரக போராட்டத்தில் பங்கு கொள்ளலாம்; அவர்களுக்கு உறுதியான இருதயம் இருந்தால். ட்ராம்பா சிறையில் கஸ்தூரிபா தனிமையாக ஒரு வாரம் ஒரு இருட்டு அறையில் வைத்து பூட்டப்பட்டார்! காரணம்? யாருடனும் எந்த தொடர்பும் இன்றி இருட்டில் தன்னந்தனியாக விடப்பட்டால் பயந்து போராட் டத்தை விட்டுவிடுவார் என்ற நப்பாசை தாகூருக்கு. “காரணம் பட்டத்து இளவரசனுக்கு கஸ்தூர்பாவை பற்றி ஏதும் தெரியாது. அவருக்கு ஊசலாட்டமே கிடையாது; புகார்களும் செய்ய மாட்டார் என்று. இப்படிப்பட்ட கஷ்டங்களுக்கு பெயர்தானே சிறைவாசம் என்று ஆப்பிரிக்க சிறைகளிலிருந்து பிரிட்டிஷ் அரசின் இந்திய சிறைகள், சமஸ்தானங்களின் சிறைகள் என்று பல வகைகளையும் அனுபவித்து புரிந்து கொண்டவர். ஆனால், இதுதான் அவருடைய முதலாவது தனிமை சிறை. அதுவும் நகரத்திற்கு பல மைல்களுக்கு அப்பால் இருந்த இருண்ட சிறையில். இதையெல்லாம் புரிந்த கொள்ளாதவர் மட்டுமல்ல இளவரசர் தாகூர். இச்சிறை தண்டனையை ஒட்டி போர்பந்தர் தெருக்களில் மக்கள் எழுச்சியையும் அவர் சரியாக எடை போடவில்லை. ஆனால் மக்கள் கோபத்தை ஓரளவு தணிக்க தனி சிறைகளில் அடைக்கப்பட்ட மிருதுளா சாராபாய் (அம்பலால் சாராபாயின் மகள்) மற்றும் வல்லபாய் படேலின் மகள் மணிபென் படேல் இருவரும் கஸ்தூர்பாயின் சிறை தோழர்களாக இருக்க ஏற்பாடு செய்தார். ராமபிரான் எப்போதும் உன்னுடன் இருக்கும்போது, உனக்கு தனிமையே இல்லை – காந்தி தன் மனைவியின் தனிமை சிறைவாசத்தை பற்றி பின்னால் தெரிந்துகொண்ட காந்தி அவருக்கு எழுதிய கடிதத்தில், “தனிமையில் இருப்பது பற்றியும் உனக்கு நல்ல அனுபவம் ஏற்பட்டிருக்கிறது. ஆனால் நான் ஒன்றை மறந்துவிட்டேன். நீ எப்போது தனியாக இருந்திருக்கிறாய்? ஸ்ரீராமர் எப்போதும் உன்னுடனே இருந்திருக்கிறார் அல்லவா? அவர் உன்னோடு இருக்கும்போது மற்றவர்கள் இருக்கிறார்களா இல்லையா என்பது ஒரு பொருட்டே இல்லை” என்றிருந்தது. ராஜ்காட் போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ள விரும்பாத காந்தி இறுதியில் அங்கு செல்ல வேண்டியிருந்தது. காரணம் தனது மனைவி மற்றும் பல பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டதல்ல. மாறாக, ராஜ்காட்டில் கைதான மக்கள் மிக மோசமாக நடத்தப்படுகிறார்கள் என்ற செய்தியே. சமஸ்தான அரசு எந்த நிர்ப்பந்தத்திற்கும் அசையாததினால் சாகும் வரை உண்ணாவிரதம் என்ற தனது ராமபாணத்தை உபயோகித்தார். இது பற்றிய தகவலை இளவரசன் தாகூர், பிரிடிஷ் அரசின் வைஸ்ராய் ஆகியோருக்கு காந்தி அனுப்பி வைத்தார். இந்தியாவின் ஒரு மூலையில் துவங்கிய ஒரு சிறு சச்சரவு பூதாகரமான தேசீய அரசியல் பிரச்சினையாக மாறியது. உண்ணாவிரதம் குறித்து அவர் சிறையில் இருந்த கஸ்தூர்பாவிற்கு அனுப்பிய குறிப்பில், “இச் செய்தியை கேட்டபின் உன்னால் அமைதியாக இருக்க முடியாதென்றால் நான் இருக்கும் இடத்திற்கு நீ வரலாம்” என்றும் இதை அனுமதிக்குமாறு அரசு அதிகாரிகளை கேட்க வேண்டும் என்றும் கஸ்தூரிபா விரும்பினால் தான் அப்படியே கேட்பதாகவும் செய்தி அனுப்பி இருந்தார். காந்தியும் சிறைப்பட்டிருக்கிறார் என்று நினைத்த கஸ்தூர் பாவிற்கு அப்போதுதான் உண்ணாவிரதத்தை பற்றித் தெரிய வந்தது. அவருடைய உணர்வுகளை அருண் காந்தி விவரிக்கிறார், “பா அதிர்ச்சியடைந்தார். தனது மனைவி தன்னோடு இருப்பதை விரும்புவார் என்பதற்காக இக்கோரிக்கையை வைப்பது சத்யாகிரகத்தின் கோட்பாடுகளை மீறுகிறது என்று கருதினார். இந்த உண்ணாவிரதம் எவ்வளவு அபாயகரமானது என்றாலும் கூட இச் சூழலில்” நான் ஒருக்காலும் அங்கு வரமாட்டேன், அவரைப் பற்றிய செய்தி எனக்கு தினசரி கிடைத்தால் போதும். நான் இங்கு நிம்மதியாக இருப்பேன். இதற்கு முன் அவர் ஆளான பல்வேறு சோதனைகளிலும் அவரை பாதுகாத்த கடவுள் இப்போதும் அவரை பேணிக்காப்பார் என்றார். மூன்றாம் நாள் உண்ணா விரதத்திற்குப்பின் அரசு கஸ்தூர்பாவை விடுவித்து காந்தியின் இருப்பிடத்தில் கொண்டு விட்டது. சில நாட்களுக்கு முன் தனது இருப்பிடத்திற்கு வருகிறாயா என்று மனைவிக்கு எழுதிய காந்தி இப்போது கேட்ட முதல் கேள்வி-“நீ எப்படி இங்கு வந்தாய்?” கஸ்தூரிபாவின் பதில், “அரசு என்னை விடுவித்தது” “உன்னுடன் இருந்த மணிபென், மிருதுளா எங்கிருக்கிறார்கள் என்று கணவர் கேட்டவுடன் கஸ்தூர்பா அவ்விளம் பெண்கள் பற்றி கவலைப் படாமல் கனவனோடு இருக்கப்போகிறோம் என்ற ஆர்வத்தில் இங்கு வந்து விட்டதை உணர்ந்து, “இன்று மாலையே நான் அங்கு போய் அவர்களோடு இருப்பேன்” என்றார். உன்னை மீண்டும் கைது செய்ய போலீஸ் மறுத்துவிட்டால் என்ன செய்வாய்?” என்ற கணவரின் கேள்விக்கு, ” அரண்மனை வாயிலிலேயே இருப்பேன்” என்று பதிலளித்த கஸ்தூர்பா அன்று மாலையே மீண்டும் அங்கு சென்று அந்த இளம் சகோதரிகளோடு இரவைக் கழித்தாராம். மறுநாள் இருவரும் விடுவிக்கப்பட்டனர். சத்யாகிரஹிகளின் கோரிக்கைகளில் பலவற்றை ஏற்பதாகக் கூறியபின் உண்ணாவிரதம் முடிவுக்கு வந்தது. “Do or Die” – “செயலில் இறங்குவோம் அல்லது சாவோம்” – காந்தி இரண்டாம் உலக யுத்தத்தில் ஜப்பான் நுழைந்து தென் ஆசியாவில் ஒரு பெரும் அபாயம் (threat) ஏற்பட்டபோது பிரிட்டன் இந்திய மக்கள் தலைவர்களை கேட்காமல் இந்திய ராணுவத்தை யுத்தத்தில் ஈடுபடுத்தியது.உடனடியாக இந்தியாவிற்கு சுதந்திரம் அளிக்காவிட்டால் காந்தியின் தலைமையில் ஒத்துழையாமை இயக்கம் துவக்கப்படும் என அறிவிக்கப்படது. இது பற்றி முடிவெடுக்க ஏ.ஐ.சி.சி. பம்பாயில் கூடியபோது பொதுக் கூட்டத்தில் பேசிய காந்தி,”..ஒரு சிறிய மந்திரத்தை உங்களுக்கு நான் அளிக்கிறேன்..”Do or die” செயலில் இறங்குவோம் அல்லது சாவோம்” என்றார். மறுநாள் காலை காந்தி கைதானார். அன்று மாலை காந்தி சிவாஜி பூங்காவில் உறையாற்றுவதாக இருந்ததால் பூங்காவில் மக்கள் நிரம்பி வழிந்தனர். அவருக்கு பதிலாக யார் பேசுவது என்று தெரியாத, ஒருவரும் எதிர்பாராத நிலையில், “..கஸ்தூரிபா சன்னமான அதே சமயம் உறுதியான குரலில், ‘யாரும் மனம் தளர வேண்டாம். நான் பேசுகிறேன் என்றார்.’ அக்குழுவில் அதிர்ச்சி யான நிசப்தம் நிலவியது. அவர் பொதுக்கூட்டத்தில் பேசி யாரும் கேட்டதில்லை. அவர் எப்போதும் காந்தியின் மனைவி என்ற எந்த ஆரவாரமும் இல்லாமல் பலதரப்பட்ட பணிகளை அமைதியாக செய்துகொண்டிருந்தவர். அங்கிருந்தவர்களுக்கு அதிர்ச்சியும் ஆழ்ந்த கவலையும் ஏற்பட்டது. ‘இது மிகவும் அபாயகரமானது. உங்களால் இன்னொரு சிறை வாசத்தை தாங்க முடியாது’ என்றெல்லாம் வற்புறுத்தியும், கஸ்தூர்பா:’ சுத்த அபத்தம். நம் தேசமே சிறையில் அடைக்கப்படும்போது நான் மட்டும் வெளியே உட்கார்ந்திருப்பேன் என எதிர்பார்க்கிறீர்களா’? என தன் நிலைபாட்டை நியாயப்படுத்தி விட்டார். அப்போதுதான் நீண்ட காய்ச்சலிலிருந்து தேறி, காந்தியுடன் பம்பாய் வந்திருந்த கஸ்தூர்பா அவருடைய வெற்றிடத்தை நிரப்ப தன்னால் ஆனதை செய்யத்துவங்கினார். மக்களுக்கான தனது செய்தியை மிகச்சுருக்கமாக சொல்லி சுசீலா நய்யாரை எழுத வைத்தார். மறுநாள் கூட்டத்திற்கு கிளம்பிய கஸ்தூர்பாவிடம் “செய் அல்லது சாவு” என்றெழுதிய badge-ஐ அளித்தபோது “இம்மந்திரம் என் நெஞ்சில் பொறிக்கப்பட்டுள்ளபோது இதை நினைவுறுத்த எனக்கு ஒரு காகிதம் தேவையா?” என்று கேட்டாராம் அவர். வண்டியில் ஏறும்போது ஒரு இந்திய போலிஸ் அதிகாரி “அம்மா தயவு செய்து நீங்கள் கூட்டத்திற்குப் போக வேண்டாம். உங்களை கைது செய்யப்போகிறீர்கள்” என தன்னுடைய காக்கி உடுப்பின் நியதிகளை மீறி அவரை வேண்டிக் கொண்டபோதும் “தங்கள் மகன்களும் மகள்களும் பிரிடிஷ் அரசால் துன்புறுத்தப்படும்போது எந்தத்தாயால் வீட்டில் இருக்க முடியும்? என்று கேட்டு மோட்டர் வண்டியை நோக்கி ஒரு போர் வீரரை போல் நடந்ததாராம்! சிவாஜி பூங்காவில் காந்தியின் உரையைக் கேட்க மக்கள் நிரம்பி வழிந்தனர். ஆனாலும் காந்தி அங்கு உரையாற்றமாட்டார் என்பதைக் கேட்டு அவர்கள் இடிந்து போய்விடவில்லை. யாரும் சிறிதும் எதிர்பாராமல் கஸ்தூரிபா ஆற்றிய இரு நிமிட மிகச்சுருக்கமான உரை அமோகமான வரவேற்பை பெற்றதாக அருண் காந்தி எழுதியுள்ளார். கஸ்தூரிபாவின் கைது அரசினால் முன்னதாகவே திட்டமிடப் படாததால் அவருக்கான சிறை பற்றி முடிவெடுக்கவில்லை. அதனால் அவரையும் சுசிலா நயாரையும் விலை மாதர்கள் மற்றும் சிறு திருடர்களுக்குமான, இருட்டும் எருக்கமுமான ஒரு அறையில் அடைத்து வைத்தனர். சாக்கடையிலிருந்து வெளிவரும் கேஸ்-இன் நாற்றம் மூக்கை துளைத்தது. 72 வயது கஸ்தூரிபாவிற்கு இரவெல்லாம் வயிற்றுப் போக்கு. சிறை உணவிற்கு பதிலாக பழம் கேட்டு போராடியபின் மாலை இரு ஆப்பிள் பழம் மட்டும் கொடுக்கப்பட்டது. மறு நாள் அந்த ‘டன்ஜன்’ – இங்கு கொண்டுவரப்பட்ட ஒரு இளம் காங்கிரஸ் பெண் தன்னிடமிருந்த காசையெல்லாம் சிறைகாப்பாளரிடம் அளித்து கஸ்தூர்பாய்க்குத் தேவையான மருந்துகளை வாங்கிக் கொடுக்கும் படி வேண்டினாராம். இதற்குப்பின் பூனாவில் காந்தி சிறை வைக்கப்பட்டிருந்த ஆகாகான் அரண்மனைக்கு கஸ்தூரிபாவும் சுசீலா நயாரும் அனுப்பப்பட்டனர். காந்தி இங்குதான் இருக்கிறார் என்று அறிந்து மிக்க ஆர்வத்துடன் அவர் கணவரிடம் சென்றபோது அவர் கேட்ட முதல் கேள்வி, “உன்னை இங்கு அனுப்பவேண்டும் என்று நீ அதிகாரிகளிடம் கேட்டாயா?” என்பதே. “நிச்சயமாக இல்லை. நான் எந்த வேண்டுகோளையும் விடுக்கவில்லை. நாங்கள் எங்கே அனுப்பப்படுகிறோம் என்பதே எங்களுக்குத் தெரியாது.” உண்மையை அறிந்த பிறகுதான் காந்தியின் முகத்தில் புன்னகை தெரிந்ததாம்! கஸ்தூர்பாயின் இறுதி நாட்கள் சிறையில் கஸ்தூர்பா குஜராத்தி பத்திரிகைகளை படிப்பாராம். சிலசமயங்களில் அவர் சோர்வடைந்து கேட்பது,: “இந்த பிரம்மாண்டமான பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை எதிர்த்து பாபுஜி எப்படி வெற்றி பெற முடியும்?” ஒரு நாள் சுசீலா நயாரை கேட்டாராம்:”ஆண்டவன்கூட நமக்குத் எதிராகத்தான் இருக்கிறார். இல்லையென்றால் மஹாதேவ தேசாய் ஏன் சாக வேண்டும்? பிராமணர் ஒருவர் செத்தார் என்றால் அது மிக மோசமான முன் குறியாகும்.” இந்த சம்பாஷணையை கேட்ட காந்தி, “ஆமாம் மாஹாதேவின் சாவு பிரிட்டிஷ் அரசிற்கு ஒரு மோசமான அறிகுறிதான். ஆனால் நமக்கோ மஹாதேவின் சாவு என்பது சுதந்திரம் பெறுவதற்கு மிகத்தூய்மையான பலிபீடம் ஆகும்”. என்றார். தலித்துகள், தீண்டப்படாதவர்கள் என்ற ஆழ்ந்த நம்பிக்யிலிருந்து ருமளவு கஸ்தூர்பா விடுபட்டதாக வைத்துக்கொண்டால் கூட, சாதி முறைமையில் அவருக்கு ஆழமான நம்பிக்கை இருந்தது என்பதை மேற்கண்ட கருத்து நிரூபிக்கிறது. ஆகாகான் சிறையில் வீட்டு வேலைகள் செய்வது, படிப்பது ஆகியவற்றை தவிர பூப்பந்தாடுவது போன்றவைக்கு இடம் தயார் செய்ய சொல்லி இருந்தார் காந்தி. கஸ்தூரிபாவிற்கு கேரம் விளையாட்டு மிகவும் பிடித்தது. சிறை கண்காணிப்பாளர் உட்பட பலரோடு மிகவும் சுவாரசியமாக ஆடுவாராம். காந்தி தம்பதிகள் ஒன்றாக வைக்கப்பட்ட இச்சிறைவாசத்தின் போது கஸ்தூர்பா பலமுறை மார்வலியால் பாதிக்கப்பட்டார். ஒரு நாள் கஸ்தூரிபா அவரிடம் கேட்டது,” ஆங்கிலேயர்கள் இந்தியாவை விட்டு போகவேண்டும் என்று நீங்கள் ஏன் கேட்கிறீர்கள்? நம் நாடு மிகப் பெரியது. இங்கே நாம் அனைவரும் வாழலாமே.” இதற்கு காந்தியின் பதில், “ஆங்கிலேயர்கள் இந்நாட்டின் ஆட்சியாளர்கள் என்ற ரீதியில் தான் வெளியேற வேண்டும் என்கிறோம். அவர்கள் ஆட்சியாளர்கள் இல்லை என்ற நிலை ஏற்பட்டவுடன் அவர்களோடு நமக்கு எந்த பிரச்சினையும் இல்லை.” மனைவியின் மேற்கண்ட கேள்விக்கு உடனடி பதில் அளித்த கணவரால் அவரது அடுத்த கேள்விக்கும் உடனடியாக பதில் அளிக்க இயலவில்லை. “ஹரிலால் எங்கே இருக்கிறான்? அவனை நான் பார்க்க வேண்டும்” என்றார். உண்மையில் ஹரிலால் வெகு தொலைவில் இல்லை. சிறையில் தன் தாயின் உடல்நிலை சரியில்லை என்று கேள்விப்பட்டவுடன் பூனா வந்து சிறைக்குப் போனபோது குடிபோதையின் உச்சத்தில் இருந்ததால் அவரை உள்ளே விடவில்லை. மீண்டும் அவர் சிறைக்கு வந்தபோது காச நோயால் பீடிக்கப்பட்டு மிக மோசமாக காணப்பட்டார். தாய் மகன் சந்திப்பு மிகக் குறைவான நேரம்தான் என்றாலும் உள்ளத்தை உருக்குவதாக இருந்ததாம். ஹரிலால் தன்னை சந்திக்க ஒரு முறைதான் அனுமதி கொடுக்கப்படும் என்றறிந்த கஸ்தூரிபா தனது மற்ற இரு மகன்களுக்கும் அனுமதி கொடுப்பது போன்று ஹரிலாலுக்கும் வேண்டும் எனக் கோரினார். அனுமதி கொடுக்கப் பட்டது. ஆனால் ஹரிலால் யார் கண்ணிலும் படவில்லை. இரண்டு நாள் கழித்து சாராயவாடை, உடல் புழுதியோடு தள்ளாடிக் கொண்டும் முனகிக்கொண்டும் தன் அறைக்குள் போலிசால் அழைத்துவரப்பட்ட மகனைக் கண்டதும் கஸ்தூரிபா அதிர்ச்சி யடைந்து தலையில் அடித்துக்கொண்டு அழுதாராம். “ஹரிலால் அந்த அறையிலிருந்து, அரண்மனை சிறையிலிருந்து தன் தாயின் வாழ்க்கையிலிருந்து வெளியே தள்ளப்பட்டார்” என்கிறார் அருண் காந்தி. இந்நிகழ்ச்சி நடந்து ஐந்து நாட்களுக்குள் கஸ்தூர்பா காந்தியின் தோளில் சாய்ந்தபடியே மரணத்தை எதிர்கொண்டார். சிறை வளாகத்திலேயே நடந்த இறுதி சடங்கில் பகவத்கீதை, குரான், பைபிள், பார்சி மக்களின் மத நூல் ஆகியவற்றிலிருந்து சில பகுதிகள் படிக்கப்பட்டன. காந்தியின் 65 ஆண்டு கால வாழ்க்கை துணைவியின் உடல் நெருப்பால் பொசுக்கப்பட்டபோது அவர் கூறியது: என்னுள் இருந்த சிறந்த பாதி இறந்துவிட்டது. நான் இப்போது என்ன செய்யப் போகிறேன். முந்தைய இரு இதழ்களில் முந்தைய இரு இதழ்களில் கதூர்பா காந்தியின் சிறை அனுபவங்களை பார்த்தோம். ஆகாகான் சிறையில் அவர் காந்தியின் மீது சாயந்து கொண்டே இறந்ததோடு சென்ற இதழ் முடிவுற்றது. இந்த இறுதி பகுதியில் காந்தி குடும்ப விவகாரங்களில் தம்பதிகளின் நிலைபாட்டை பார்ப்போம். அதற்கு முன் உப்பு சத்தியாகிரகத்தில் (1930) கதூர்பா காந்தி பங்கு பற்றி குறிப்பிட்டாக வேண்டும். நாடெங்கும் திட்டமிட்டபடி மக்களால் வெறுக்கப்பட்ட பிரிட்டிஷ் அரசின் உப்பு சட்டத்தை மீறுவதற்கான போராட்டத்தில் காந்தி தலைமையில் 79 சத்தியாகிரஹிகள் சபர்மதி ஆரமத் திலிருந்து கிளம்பி 240 மைல்கள் தெற்குப்புறமாக நடந்து கடலை ஒட்டிய தண்டி கிராமத்தை நோக்கி புறப்பட்டனர். 240 மைல்கள் நடக்கவில்லை என்றாலும் வழி அனுப்பி வைத்தவர் கதூர்பா காந்தி. பங்கு கொண்டவர்களில் காந்தி குடும்பத்தில் அவரைத்தவிர மகன் மோதிலால், பேரன் (ஹரிலால் மகன்) இருந்தனர். நடைபயணம் நகர்ந்தபது காந்தியின் இடிமுழக்கம், நீங்கள் சாவதற்கு தயாராக இருக்க வேண்டும் என்பது. தென் ஆப்யீபரிக்காவிலிருந்து வந்திருந்த மோதிலால் மனைவி சுசிலா உட்பட பல பெண்கள் அழத் துவங்கியதை பார்த்த கதூர்பா காந்தி அணிவகுப்பின் முன்வைந்து நமது ஆண்கள் எல்லோரும் போர் வீரர்கள். நாம் இந்த வீரர்களின் மனைவிகள். நாம் ஆண்களுக்கு தைரியம் அளிக்க வேண்டும். நாம் நெஞ்சுரத்தோடு இருந்தால் தான் அவர்களும் அவ்வாறு இருப்பார்கள் என்று தனது சுருக்கமான ஆணித்தரமான வாழ்த்துரையை வழங்கினார். ஒவ்வொரு சத்தியாகிரகியின் நெற்றியில் வெற்றிச்சின்னமாக பொட்டு இட்டபின் பேரணி நகர்ந்தது. அப்போது கதூர்பா காந்திமறுமகள் சுசீலாவை பார்த்து, அழுது கொண்டிருக்கும் ஒரு தைரியமற்ற பெண்ணாகவே உன் கணவர் உன்னை நினைக்க வேண்டும் என்று விரும்புகிறாயா? என்றாராம். இதையேல்லாம், பார்த்துக் கொண்டிருந்த சுசீலா பின்னால் தன் குழந்தைகளிடம் கூறியதை மகன் அருண் காந்தி பதிவு செய்திருக்கிறார். அப்போது நான் பார்த்த பா மிக வித்தியாசமாகத் தெரிந்தார். அவர் வாழ்க்கையில் காண நேர்ந்த துன்ப துயரங்கள் அவர் முகத்தில் வருத்தம் தோய்ந்த ஆழ்ந்த சுருக்கங்களை விட்டுச் சென்றிருந்தன. ஆனால், இத்தனைக்கும் பிறகு அவருடைய வயதான, இனிய முகத்தில் அப்போது ஒரு பயமற்ற மன உறுதியும் பிரகாசமும் தெரிந்தது. பாசமே உரித்தான அந்தத்தாய் இப்போது ஒரு போரில் ஈடுபட்டு சத்தியாகிரக பேராளியாக காட்சி அளித்தார். உப்பு சத்தியாகிரகத்தில் மிக மோசமாக அடிபட்டு தலையில் எலும்பு முறிந்து நீண்டநாள் சிகிச்சைக்கும் சிறை வாழ்வுக்கும் ஆளானவர்களில் ஒருவர் மோதிலால். சிறையில் இருந்த இவரையும், இவர் தம்பி ராமதாசையும் பார்க்க கதூர்பா காந்தி, சுசீலாவும் போன போது, சுசீலாவின் முகம் வெளிறிப் போய்விட்டது. அதேசமயம் ஒரு சலனமும் இல்லாமல், பெரும் அசம்பாவிதம் ஒன்றும் நடக்காதது போல் தன் மகன்களோடு உறையாடிக் கொண்டிருந்த தனது மாமியரை பார்த்து வியக்கிறார். மேலும், மற்ற சிறைக்கைதிகளின் நிலை, அவர்கள் குடும்பங்களுக்கு சொல்ல வேண்டிய செய்தி ஆகியவற்றை கேட்டுத் தெரிந்து கொண்டார் கதூர்பா காந்தி. மேலும்,மேலும் ஆண்கள் கைது செய்யப்பட்டபோது, அஹிம்சா போராட்டத்தின் வெற்றி பெண்களையே முழுமையாக நம்பி இருக்கிறது என்ற என் கருத்து வலுவானது. நான் பெண்களையே நம்பியிருக்கிறேன் என்ற காந்தியின் குரல் சிறையிலிருந்து உரக்க ஒலித்துக்கொண்டிருந்தது. இவ்வேண்டுகோளுக்கு முதன்மை அளித்து, கதூர்பா காந்தி ஆரம பணிகளை மற்றவர்களுக்கு அளித்து விட்டு, ஊர் ஊராகச் சென்று சாராயக்கடைகளை மூடும் பணியில் ஈடுபட்டதோடு, ஆங்காங்கு சிறைக் கைதிகளையும் அவர்கள் குடும்பங்களையும் சந்தித்தார். பஞ்சாப் மாநிலத்தில் சிறையில் இருந்த மகன் தேவதா ஐ பார்க்கச் சென்ற போது, வண்டி ரயில் நிலையத்தில் நின்றதும், ஆயிரக்கணக்கான மக்கள் கொடிகளுடன் குவிந்து கோஷம் எழுப்பிக் கொண்டிருந்ததை பார்த்த கதூர்பா காந்தி தொண்டர் ஒருவரிடம் யாருக்கு வரவேற்பளிக்கப்படுகிறது என கேட்டவுடன் அவர், அம்மா, உங்களுக்குத்தான் என்றதும் அதிர்ச்சி அடைந்தாராம். வேறு வழியின்றி ஊர்வலத்தின் முன்னணியில் மிக்க கூச்சத்துடன் நடந்தாராம். இதற்கு முன்பு காந்திக்கு அளிக்கப்பட்ட பிரமாண்ட மான வரவேற்புகளில் அவருடன் முழுமையாக கலந்துவிட்ட துணைவியராக மரியாதை செய்யப்பட்ட போது, இக்கூச்சம் அவருக்கில்லாமல் இருந்திருக்கலாம். புழாரங்கள் மகாத்மாவிற்கே என்ற நம்பிக்கையில். இப்போது நிலமை மாறிவிட்டது. கதூர்பா காந்தி பூற்றி அருண் காந்தி அருண்காந்தி தன் பாட்டியின் வரலாற்றை எழுத தனக்கு உந்து கோலாக இருந்தது என்ன என்று வெளிப்படையாக குறிப்பிடுகிறார். ஒரு ஆலமரத்தின் கீழ் எதுவுமே வளர இயலாது என்று ஒரு கிழக்கு தேசத்தை சார்ந்த தத்துவஞானி ஒருவர் கூறினாராம். இது மனிதர்களுக்கும் பொருந்தும். காந்தியின் மதிப்பு, அந்தது ஆகியவை ஆலமரத்தினுடையதைவிட உயர்வானது. மற்றவர்களையெல்லாம் குள்ளமாகக் காட்டியது. எனது பாட்டி, தகப்பனார் மணிலால் ஆகிய இருவரும் காந்தியின் தத்துவம் மற்றும் அடையாளங்களை தங்களுடையதாக ஆக்கி கொண்டு அவரோடு ஒன்றிப்போய் விட்டனர். தந்தையின் விருப்பப்படி மணிலால் மட்டுமே தென் ஆப்பிரிக்காவில் வாழ்ந்து ஏழ்மையான வாழ்க்கை பாணியை ஏற்று, தனது தகப்பனார் 1893 ல் துவங்கிய அகிம்சை மூலம் சமூக, அரசியல் மாற்றத்திற்கான இயக்கத்தில் ஈடுபட்டார்… என் பாட்டியை பற்றி மோசமான ஒரு தோற்றம் வரலாற்றில் பதிந்து விடக்கூடாது என்பது இன்னூலின் நோக்கம். இந்திய சுதந்திர போராட்டத்திலும் காந்தி மஹாத்மா பட்டம் பெற்றதிலும் அவருக்கு ஒரு முக்கிய பங்கு இருந்தது. அவர் தனது வாழ்வில் செய்த தியாகங்கள் தன் கணவர் கூறியதற்காக அல்ல. இவை மிக நியாயமானவை என்று அவர் நம்பியதால் எதையும் ஒரு அடிமையை போல் பின்பற்றவில்லை. நம்பிக்கையோடுதான் பின்பற்றினார். சத்தியத்தோடு எனது பரிசோதனைகள் என்ற நூலில் காந்தி அஹிம்சையை பற்றி தான் தனது மனைவியிடமிருந்து கற்றுக்கொண்டதாக கூறுகிறார். கதூர்பா காந்தி எதற்கும் பணிந்து போகிறவரோ அல்லது எதற்கும் முந்திக்கொண்டு சண்டைக்கு போகிறவரோ இல்லை. அதே சமயம் தான் எது நியாயமானது, சரியானது என்று கருதுகிறாரோ அதை நிலை நிறுத்த தயாராக இருப்பவர். என் தாத்தாவின் நிலைபாடு தவறானது என்று நினைத்தால் அவர் உண்மையை அறிந்து கொள்ளச் செய்வார். இதுதான் அஹிம்சை தத்துவத்தின் உண்மையான சாறு (நளளநஉந) என்று காந்தி கருதினார் என்கிறார் அருண் காந்தி. கதூர்பா காந்தி பற்றி டாக்டர் சுசீலா நயார் டாக்டர் சுசீலா நயார் மாணவ நாட்களிலிருந்து விடுமுறைகளை காந்தி ஆரமததில் கழித்தவர். காந்தி குடும்பத்தினரை நன்கு அறிந்தவர். அவர் கருத்து: கதூர்பா காந்திக்கு தனக்கென்று ஒரு மனத்திட்பம், துணிவு, உரம் ஆகியவை உண்டு. தன்னுடைய ஆலோசனை அல்லது செயல்பாட்டை அவர் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றால் அவரை முதலில் நம்பும் படி செய்யவேண்டும் என்று காந்தி எண்ணினார். இதன் மூலம் தான் சத்தியாகிரகத்தின் ரகசியத்தை தான் தனது மனவியிடமிருந்து தான் கற்றுக் கொண்டதாகக் கூறுவர். ஆண்களை விட பெண்கள் தான் சிறந்த சத்தியாகிரகிகள்; காரணம் உலகெங்கும் பெண்கள் ஆண்களால் கஷ்டப்படுத்தப்பட்டிருக்கிறார்கள் என்பார். ஆணின் பொறுமையின் மையை தங்களது பொறுமையால் எதிர்திருக்கிறார்கள். பெண்கள் ஆயுதம் எடுத்து சண்டை போடாததால் ஆண்களின் கொடுமைகளை எதிர்க்கத் தனது துன்ப துயரங்களிலிருந்து ஆயுதத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டியிருந்தது. தியாகம் என்பது பெண்ணிற்கு இயல்பானது. தானாகவே வரக்கூடியது. இதன் மூலமாகத்தான் சத்தியாகிரகம் என்னும் ஆயுதத்தை அவள் உருவாக்கியுள்ளாள். மேற்கண்ட கருத்துக்கள் விவாதத்திற்கு உரியவை. தியாகம் என்பது பெண்களுக்கு எப்படி இயல்பானது? அவள் உடல் வலிமை ஆணைவிடக் குறைந்தது. இதனால் அவள் ஆணிடமிருந்து உடல், மனோ ரீதியான துன்பங்களை தாங்கிக் கொள்ள வேண்டியிருக்கிறது. இதை தியாகம் என்று கருதுவது சரியல்ல. மாற்று வழியில்லாமல், மேலும், கொடுமைகளைத் தவிர்க்க ஒரு பெண் விட்டுக்கொடுப்பது தியாகமாகுமா? இது ஒரு தற்காப்பு நடவடிக்கையே. இப்படி பல கருத்துக்கள் உள்ளன. சத்தியாகிரகம் என்னும் பெயர் காந்தியால் அறிமுகம் செய்யப்பட்டது. இதற்கு ஒரு எடுத்துக்காட்டை காந்தியின் சத்திய சோதனை எனும் நூலில் குடும்ப/வீட்டு சத்தியாகிரகம் என்ற உபதலைப்பில் கீழ் காணலாம். தான் பல மருத்துவ நூல்களில் படித்ததை மற்றவர்கள் மீது பரிசோதனை செய்வதில் அவருக்கு அலாதி இன்பமாம். தென் ஆப்பிரிக்காவில் கதூர்பா காந்திக்கு அறுவை சிகிச்சை செய்த பிறகு ரத்தப்போக்கு ஏற்பட்ட பின் காந்தியின் பரிகாரங்கள் எதுவும் பயனளிக்கவில்லை. ஆனால் காந்தி தனது சிகிச்சையை நிறுத்த வில்லை. உப்பு பருப்பு வகைகளை ஓராண்டு சாப்பிடக் கூடாதென்றார். கதூர்பா காந்திக்கு கணவரின் மருத்துவத்தில் எந்த நம்பிக்கையும் இல்லை. ஆகவே, இந்த கட்டுப்பாட்டை நீங்கள் முதலில் கடை பிடியுங்கள் என்று சவால் விட்டாராம். உடனே மிக்க மகிழ்ச்சியுடன் காந்தி ஓராண்டுக்கு இவற்றை விடுக்கொடுத்து விடுவதாக சத்தியம் செய்தாராம். கதூர்பா காந்தி பயந்து போய் நீங்கள் சொன்னது போல் நான் விட்டு விடுகிறேன். நீங்கள் இந்த உறுதி மொழியை திரும்பிப் பெற வேண்டும் என்று அழுதாராம். ஆனால் விடாப்பிடியாக காந்தி விரதத்தை மேற்கொண்டாராம். இந்த சிகிச்சை இதற்கு முன் அவர் எடுத்துக்கொண்டதல்ல. காந்திக்கு வேடிக்கையாக தோன்றிய இச்சம்பவத்தை தனது சத்திய சோதனை நூலில் குறிப்பிட வேண்டிய அவசியம் என்ன? இந்நிகழ்ச்சியை ஒரு சத்தியாகிரகமாக பார்த்த காந்தி இது என் வாழ்க்கையில் நினைவுகளில் மிக இனியது என்கிறார். சுசீலா மருத்துவ மாணவியாக இருந்த போது விடுமுறைகளை காந்தி ஆரமத்தில் கழிப்பாராம். அவர் நினைவுகள்: கதூர்பா காந்தி எல்லா ஆரமங்களிலும் ஒரு தாயாகவே இருந்தார். என்னால் என்ன செய்ய முடியுமோ அதை நான்தான் செய்வேன் என்று பிடிவாதமாக செய்வார். இருப்பிடம் குடிசையாக இருந்தாலும் அதை மிக சுத்தமாக வைத்திருப்பார். சமையல் அறையில் தனக்கு உதவுபவர்களை செமையாக வேலை வாங்குவார். ஆரமத்திற்கு வரும் விருந்தாளிகளை பராமரிப்பதில் அவருக்கு ஈடு இணை இல்லை. இந்திய பண்பாட்டில் சீதாராம், ராதா கிருஷ்ணா என்று மனைவிகளின் பெயர்கள்தான் முதலில் வருகிறது. ஆகவே நாம் பாபுவிற்கு முன் பா வை நினைப்பது தான் இயல்பு. தங்கள் கணவன் மார்களை தெய்வப் பிறவிகளாக ஆக்குவதில் ராமர், கிருஷ்ணன் ஆகியோரின் மனைவிமார்களுக்கு எந்த பங்கும் இல்லை. ஆனால், மோஹன்தாசை மஹாத்மா ஆக்குவதில் கதூர்பா காந்திக்கு ஒரு முக்கிய பங்கு இருந்தது. கதூர்பா காந்தி மேல்தட்டு குடும்பத்தில் பிறந்தவர். வசதியாக வாழ்ந்தவர். ஆனால், ஆப்பிரிக்காவில் காந்தி ஏழ்மையாக வாழ்வது என்று உறுதி எடுத்துக்கொண்ட போது கதூர்பா காந்தி அதை ஏற்றுக்கொண்டார். ஏற்றுக்கொள்ளாமல் என்ன செய்வது? அவருடைய சூழலில் கணவரை விட்டுப்போக முடியுமா? இந்தியாவில் அவர் பெற்றோர்களும் இறந்துவிட்டார் களே? என்பதும் நியாயமான கேள்வியே. ஒரு ஆணுக்கு தன்னுடைய சூழலை மாற்றிக்கொள்ள சுதந்திரம் உண்டு. அதற்கு மனைவியை கேட்க வேண்டியதில்லை. ஆனால் பெண்ணுக்கோ…? இந்த பழம் கோட்பாட்டி;ன படியே வளர்க்கப்பட்ட கதூர்பா காந்திதென் ஆப்பிரிக்காவிற்கு வந்த சில ஆண்டுகளில் ஆரம வாழ்க்கையை ஏற்று சாதி பாகுபாடு பார்க்காமல் பலரோடு சேர்ந்து எல்லா வேலைகளையும் பங்கிட்டுக்கொண்டு வாழ வேண்டி இருந்தது. காந்தியும் மகன் ஹரிலாலின் படிப்பும் கதூர்பா காந்தியின் வாழ்க்கையில் அவர் மிகவும் கவலைப்பட்டது அவர் மூத்த மகன் ஹரிலால் பற்றிதான். தனது தாய் இறந்த அன்றுகூட (1944) ஹரிலால் ஆகாகான் சிறைக்கு வரவில்லை. தந்தையின் சாம்பலை அலகாபாத்தில் கங்கயை;ல கரைக்கும் போதும் அவர் வரவில்லை. இதற்கு என்ன காரணம் என்பதை சுசீலா நய்யார் விவரிக்கிறார். காந்தியின் மூத்த மகன் ஹரிலாலின் வரலாறு உருக்கமானது. மஹாத்மாக்கள் சிறந்த தந்தைகளாக இருக்க இயலாது என்ற கருத்தைக் கூட இது உருவாக்கலாம். தனது தந்தை தனக்கு அநீதி இழைத்து விட்டார் என்ற உணர்வு ஹரிலாலிற்கு இளமையில் ஏற்பட்டுவிட்டது. தன்னுடைய தகப்பனாரைப்போல் தானும் வழக்கறிஞராக வேண்டும் என்று விரும்பினார்.மோதிலாலிற்கும் இதே ஆசை. ஆனால், இதற்கு இரு வித தடைகள் இருந்தன. காந்தி இதை விரும்பவில்லை. காந்தியக் கோட்பாடு மிக வித்தியாசமானது. சிறந்த குணாம்சங்களை வளர்த்துக்கொள்வது தான் கல்வியின் நோக்கம். ஒருவர் செய்ய வேண்டிய அன்றாட வேலைகளை புத்திசாலித்தனம், கவனம், ஈடுபாடு, உழைப்பு போன்றவைகளோடு செய்ய வேண்டும். தன்னை முதலிடத்தில் நிறுத்திக் கொள்ளாமல் பணிகள் எதையும் கீழ்த்தரமாக நினைக்காமல் அவற்றிற்கு முன் தனது உழைப்பிற்கு முக்கியத்துவம் அளித்து எதையும் கீழ்ததரமாக நினைக்காமல் அவற்றிகே முன்னுரிமை அளிக்க வேண்டும். தனது தேவைகள், ஆசைகள் ஆகியவற்றிற்கு முன் தனது உழைப்பிற்கு முக்கியத்துவம் அளித்து எதையும் தனது கண்ணியம், கவுரவம் ஆகியவற்றிற்கு கீழாகப் பார்க்கக்கூடாது. இரண்டாவது தடை வெளிநாடு சென்று படிப்பது அவசியமல்ல. பி.ஏ., பி.எல் போன்ற பட்டங்களில் தங்களுடைய தந்தைக்கு நம்பிக்கை இல்லை என்றால் கடன் வாங்கி இங்கிலாந்து சென்று ஏன் படித்தார்? என்ற கேள்வி அவர் மகன்களுக்கு நிச்சயம் எழுந்திருக்கும். தன் தந்தை வழக்கறிஞரானது போல் தானும் ஆவதற்கு உரிமையுண்டு என்று ஹரிலால் நம்பியதில் ஆச்சரியம் இல்லை. காந்தியின் நிலைபாட்டிற்கு மாறாக, தனது மகன்கள் முறைசார் கல்வியை பெற வேண்டும் என்பது தாய் கதூர்பா காந்தியின் ஆவல். தான் மட்டும் இந்தியாவில் இருந்து படிக்கப் போவதாக ஹரிலால் கூறியது கதூர்பா காந்தி மகிழ்வித்தது. ஒரு மகன் தனது கல்விக்கான உரிமையை நிலை நாட்டிக் கொள்வது மிகச் சரியானது என்றே நினைத்தார். குடும்பத்தினரும் நண்பர்களும ஹரிலாலை அறிவுஜீவி என பாராட்டினார். அப்போது தென் ஆப்பிரிக்க இந்தியர்களுக்கு பாதுகாப்பாக சட்ட நிபுணர்கள் தேவையாக இருந்தது. காந்தி இந்தியாவிற்கு வந்து தேசீய விடுதலை இயக்கத்தில் பங்கு கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வலுவடைந்து வந்ததால் அவரைத் தவிர வேறு இந்திய வழக்கறிஞரை தயார் செய்ய வேண்டியிருந்தது. இது பற்றிய விவரங்களை சுசீலா நய்யார் தனது நூலில் தருகிறார். லண்டனில் வசித்து வந்த பிரன்ஜீவன் மேதா என்பவர் காந்தியின் மகன்களில் ஒருவரை தான் லண்டனில் படிக்க வைப்பதாக கூறினார். அதை ஏற்றுக் கொண்ட காந்தி இந்த படிப்பிற்கு யார் மிகவும் தகுதி உள்ளவர்களோ அவரை தானே தேர்ந்தெடுப்பதாகக் கூறினார். இதற்கு மணிலால் மிகவும் தகுதியுள்ளவன் என்று நான் நினைத்தால் அவனை அனுப்புவேன் என்றார். அப்பேபாது கூட அவர் ஹரிலால் பற்றி ஒன்றும் சொல்லவில்லை. இறுதியில் தனது சகோதரியின் மகன் சகன்லாலை அனுப்பி வைத்தார். சகன்லால் உடல்நிலை மோசமாகி 6 மாதங்களில் திரும்பிவிட்டார். அடுத்து சொராப்ஜி என்பவர் அனுப்பப்பட்டார். இதற்கு காந்தி ஹரிலாலுக்கு அளித்த விளக்கம்: சொராப்ஜி பார்சிக்காரர். ஒரு இந்து, பார்சிக்காரரை வக்கீலாக்க ஊக்குவிக்க வேண்டும். ஆனால் உன்னுடைய நடவடிக்கையை பாராட்ட முடியவில்லை. இதற்கான நிதியும் திரட்டப்பட்டது. சொராப்ஜி அங்கேயே நோய்வாய்பட்டு இறந்துவிட்டார். ஆனால் இத்தேர்வு பரிட்சை எழுதியவர்களில் முதலிடம் பெற்றவர் மோதிலால். இங்கிலாந்துக்கு அனுப்பப்பட்டவரோ இரண்டாவது இடம் பெற்றவர். காரணம் தன் மகனுக்கு சலுகை காட்டியதாக யாரும் நினைக்கக் கூடாதென்ற காந்தியின் கவலையே. இருமுறைகளும் தனது தகுதியை தன் தந்தை மதிக்கவில்லை; மாறாக, அவர் தனது மகனையே அனுப்பிவிட்டார் என்று யாரும் பேசி தனக்கு இழுக்கு வரக்கூடாதென்ற கவலைதான் இதற்கு காரணம் என்று ஹரிலால் நினைத்தார். இது சரியான கணிப்புதான் என்கிறார் நூலாசிரியர் அருண்காந்தி. இதற்குப்பிறகு ஹரிலால் இந்தியா திரும்பினார். போகும்போது ஹரிலால் தனது தகப்பனார் பற்றி தன்னிடம் கூறியதுகதூர்பா காந்தி மனதிற்குள் மீண்டும் மீண்டும ஒலித்துக்கொண்டிருந்தது. அவருக்கு நாம் யார் பற்றியும் கவலை கிடையாது. கொஞ்சம் கூட கிடையாது. ஆனால் இத்தகைய விஷயங்களில் கதூர்பா காந்தி தலையிட்டு தன் மகனை இங்கிலாந்துக்கு அனுப்பி படிக்க வைக்க வாய்ப்பிருந்த போது அதை கட்டாயம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று சொன்னதாகத் தெரியவில்லை. காந்தி தனது மகனை ரயிலில் ஏற்றிவிடும் போது கூறியது : உன் தகப்பனார் உனக்கு தவறு செய்துவிட்டார் என்று நீ நினைத்தால் தயவு செய்து அவரை மன்னித்துவிடு. ஆனால் தனக்கு கல்வி வாய்ப்பை அளிக்க மறுத்த தந்தையை மகன் என்றும் மன்னிக்கவில்லை. ஹரிலாலின் மதமாற்றம் ஹரிலால் வேலையை இழந்து குடும்பத்தையும் பராமரிக்காத சூழலில் கெட்ட பெயரே வாங்கிக் கொண்டிருந்தார். 1936 ல் காந்தி தம்பதிகள் ரயில் பயணம் செய்து கொண்டிருந்தபோது நாக்பூர் டேஷனில் ரயில் நின்றது. வழக்கம் போல் மக்கள் கூடி மஹாத்மா காந்திக்கு ஜெய் என்று கோஷமிட்டனர். அப்போது ஒரு குரல் உரக்க ஒலித்தது. அன்னை கதூர்பா காந்திக்கு ஜெய் என்று. மிக்க வியப்போடு கதூர்பா காந்தி ஜன்னல் வழியாக பார்த்தபோது ஹரிலால் கிழிந்த துணிகளோடு வயதிகர் போல் காணப்பட்டார். ஜன்னல் அருகே வந்து அவரிடம் ஒரு ஆரஞ்சுப்பழத்தை நீட்டி, அம்மா, இதோ உங்களுக்கு என்னுடைய அன்பின் சின்னம் என்றார். பின் காந்தியை பார்த்து நீங்கள் மிகப் பெரிய மனுஷன் என்றால் அதற்கான முழு காரணமும் என் அம்மா தான் என்றார். ரயில் கிளம்பிய போதும் ஹரிலால் மீண்டும் எழுப்பிய கோஷம் கேட்டது. கதூர்பா காந்தியின் மனம் குழம்பிற்று. ஹரிலாலின் நடத்தையை எப்படி நியாயப்படுத்த முடியும்? மகனின் குடிப்பழக்கம், தன்னுடைய குழந்தைகளிடமிருந்தே பணம் வாங்குவது; தன் தகப்பனாரை தாக்கி பத்திரிக்கைகளில் எழுதுவது; சிறையில் அடைபடுவது. இத்தனைக்கும் பொட்டு வைத்தாற்போல் 1936ல் பம்பாய் முலீமாக மாறியது. இந்த மதமாற்றம் பணத்திற்காகவே என்றும் பரவலாக பேசப்பட்டது. மகனின் மதமாற்றம் பற்றிய வேதனையை பத்திரிக்கையில் தன் மகனுக்கு கதூர்பா காந்தி ஒரு கடிதமாக எழுதினார்…. நீ ஏன் உன்னுடைய மூதாதையர்களின் மதத்தை மாற்றிக்கொண்டாய்? எனக்கு பிடிக்கவில்லை என்றாலும் இது உன்னுடைய விவகாரம். ஆனால்நீ வெளியிட்டிருந்த அறிக்கையில் உன்னை நீ மேலும் மேம்படுத்திக்கொண்டு ஒரு ஒழுங்கான வாழ்க்கையை துவங்குவாய் என்று பார்த்ததும் எனக்குள் ரகசியமாக மகிழ்ச்சி அடைந்தேன். ஆனால் இந்த நம்பிக்கையும் இப்போது தூள் தூளாகிவிட்டது. உனக்கு மதம் பற்றி என்ன தெரியும்? நீ இந்த வழியிலேயே போனால் உன்னை யாரும் தீண்டமாட்டார்கள். தன் மகன் முலீம் அனாலும் பரவாயில்லை; அது அவனுடைய விவகாரம். இனிமேலாவது நல்ல பழக்க வழக்கங்கள் வந்தால் போதும் என்றகதூர்பா காந்தியின் பரந்த மனோபாவத்தை இது காட்டுகிறது. முலீம் ஆன பிறகும் ஹரிலாலின் வாழ்க்கை முறையில் எந்த மாற்றமும் இல்லையென்று தெரிந்தபோதுதான் அவர் விரக்தி அடைகிறார். இதே சமயம் ஹரிலாலின் மத மாற்றத்திற்கு காரணமானவர்களுககு கடிதம் இந்திய பத்திரிக்கைகளில் எழுதப்பட்டது. அதன் சில பகுதிகள்: …. ஹரிலாலிற்கு உள்ள மோசமான பழக்கங்களிலிருந்து அவனை வெளிக்கொண்டு வராமல் அவனுக்கு மௌல்வி பட்டம் எப்படி அளிக்கப்போகிறீர்கள்?… என் மகனை உங்கள் சகோதரனாக நினைத்தால் இப்படியெல்லாம் செய்யமாட்டீர்கள். என் மகனை ஏளன்ம் செய்ய வேண்டும் என்பதே உங்கள் விருப்பமானால் உங்களிடம் சொல்வதற்கு வேறு ஒன்றுமில்லை. ….ஆண்டவனின் பார்வையில் நீங்கள் செய்வது சரியில்லை. டாக்டர் சுசிலா நயாரின் நூலிலிருந்து: ஹரிலாலின் வாழ்க்கை மிகவும் சிறப்பானதாக அமையும் என்று எல்லோரும் எண்ணியபோது அது ஒரு சோக முடிவை தழுவியது. ஹரிலால் உருவான உருக்கமான நிகழ்வுகளுக்கு யார் பொறுப்பு? முன்னுக்கு வந்துகொண்டிருக்கும் ஒரு இளைஞனின் கனவுகளும் ஆசைகளும் நொறுங்கிவிட்டது. காந்தியடிகளின் வாழ்க்கையில் உருவான நிர்பந்தங்கள் என்னவாக இருந்தாலும் அவர் தன்னுடைய மனைவி மகன்களுக்கு ஒருதலைசார்பற்ற நியாயம் சொல்லவில்லை. தன் மனைவி சீதையின் உணர்வுகளை மதிக்காமல் அவளைப்பற்றி ஒரு வண்ணான் என்ன சென்னார் என்பதற்கு அதிகமுக்கியத்துவம் அளித்த ராமனைப்போல் காந்தி தனது மனைவி, மகன்களின் உணர்வுபூர்வமான தேவைகளையும் மற்றதையும்விட தனக்கு உண்மை எனத் தோன்றிய கோட்பாடுகளுக்கே அதிக மதிப்பளித்தார். தனது தந்தை முன்வைத்த மாற்றங்களை ஏற்றுக்கொள்ள இயலாத ஹரிலால் தனது வாழ்க்கையை தான் விரும்பிய ஒரு வரையறையில் கொண்டு வர முடியாமல் சேர்ந்துவிட்டார். காந்தியின் நான்கு மகன்களிலும் நன்கு திறமையானவர் ஹரிலால் என்று கூறலாம். தன்னுடைய திறமையை நிரூபிக்க அவருக்கு வாய்ப்பு கிட்டியிருந்தால் அவருடைய தகப்பனாரின் சாதனைகளைக்கூட அவர் எட்டியிருக்கலாம். அவருடைய வாழ்க்கையின் முடிவு ஒரு பெரும் சோக நிகழ்வுமட்டுமல்ல. மிகப்பெரிய தேசிய இழப்புமாகும். தன் தந்தை இறந்து ஆறு மாதங்களுக்குப்பின் ஹரிலால் இறந்துவிட்டார். மகன் மோதிலால் கலப்பு திருமணத்திற்கு காந்தியின் மறுப்பு தென்ஆப்பிரிக்காவில் காந்தி துவங்கிய இந்தியன் ஒப்பீனியன் எனும் பத்திரிக்கையை அவர் இந்தியாவிற்கு திரும்பிய பின் அவருடைய மகன் மோதிலால் நடத்தி வந்தார். தான் ஒரு இலாமியப்பெண்ணை மணக்க விரும்பியதாக மோதிலால் தகப்பனாருக்கு எழுதிய போது, அதை சற்று காட்டமாகவோ நிராகரித்து விட்டார் காந்தி. இதற்காக அவர் அளித்த சில காரணங்கள்: இத்திருமணத்தை நீ விரும்புவது உன் மதத்திற்கு எதிரானது. இது இரு வாள்களை ஒரே உறையில் போடுவதற்கு சமமாகும். உங்கள் குழந்தைகள் எந்த மதத்தை பின்பற்றுவார்கள்? அவர்கள் மீது யாருடைய தாக்கம் அதிகமாக இருக்கும். உன்னை மணப்பதற்காகவே பாத்திமா தனது மதத்தை விட்டு கொடுத்து விட்டால் தனது மதத்திற்கு எதிரக ஒரு பெரும் குற்றத்தை செய்தவராவார். அல்லது நீங்கள் இருவரும் மதநம்பிக்கைகளை கைவிட்டுவிடுவீர்களா? இந்து முலீம் நல்உறவிற்கு உங்கள் செயல் பேரதிர்ச்சியாக இருக்கும். இந்து -முலிம் பிரச்சனையை கலப்பு திருமணங்களால் தீர்க்க முடியாது. நீ எனது மகன் என்பதை மறக்கக்கூடாது. சமூகமும் இதை மறக்காது. இத்திருமணத்தின் மூலம் நீ உன் மக்களுக்கு சேவை புரிய முடியாது. இந்தியன் ஒப்பீனியன் பத்திரிக்கையை நடத்துவதற்கான தகுதியை நீ இழந்துவிடுவாய் என நான் கருதுகிறேன். உன் தாயின் சம்மதம் பற்றி நான் கேட்க முடியாது. அவள் கொடுக்க மாட்டாள். அவள் மனது வாழ்நாள் முழுவதும் புண்பட்டுவிடும். அவளிடம் இதுபற்றி பேச தைரியம் இல்லை. இறைவன் உனக்கு சரியான பாதையை காட்டட்டும். மோதிலாலின் செய்தி கதூர்பா காந்தியை எப்போதாவது சென்றடைந்ததா என்பது தெரியாது. ஆனால் அருண்காந்தி தனது பாட்டிக்கு தெரிந்திருந்தால் அவர் காந்தி எழுதியதைப்போல் அவ்வளவு மோசமாக பாதிக்கப்பட்டிருக்கமாட்டார் என்கிறார். பிரச்சனையை காந்தி மிகைப்படுத்தியதாகவே தெரிகிறது. ஆனால் காந்தி தனது மகனின் திருமணம் அவனது விவகாரம் என்று மட்டுமே பார்க்கவில்லை. இதை அன்றைய அரசியலோடும் அதில் தனது பங்கோடும் இணைத்துப் பார்க்கிறார். சுதந்திரப்போராட்டத்திற்கு அடிப்படையான இந்து – முலீம் ஒற்றுமையை பலப்படுத்தும் முயற்சியை இத்திருமணம் பலவீனப்படுத்தும் என்று அவர் நினைத்திருக்கலாம். அதில் உண்மையும் உண்டு. ஆனால் இத்திருமணம் உன் மதத்திற்கு எதிரானது என்று காந்தி கூறியதை ஏற்கமுடியாது. இது இந்து மதத்தை பிராமணியத்திற்கு சமமாக்கி அதற்குள் அடக்குகிறது. மேற்கண்டதை படிக்கும்போது, பலருக்கும் காந்தியின் பிராத்தனை கூட்டங்களில் பிரசித்தி பெற்ற ஒரு பாட்டு நினைவுக்கு வரும். ஈவர அல்லா தேரே நாம்: சப்கோ சன்மதி தே பகவான் இதன் பொருள்: ஆண்டவனின் பெயர் ஈவரன், அல்லா என்ற இரண்டுமே தான். கதூர்பா காந்தியின் இறுதி காலத்தில் அவருக்கு என்று ஒரு வீடு இல்லை என்பதுமட்டுமல்ல, தென்னாப்பிரிக்காவிலேயே தனிவீடு என்ற கருத்தை அவர் விடவேண்டி வந்தது. பிறகு ஆரமங்கள்தான் வீடு. பலரோடு கூடிவாழும் ஆரமும் இல்லை. காந்தி வார்த்தாவிற்கு அருகே ஒரு மண்குடிசையில் இருந்தார். அவரோடு இருக்கலாம் என்று எண்ணி அங்கு போனபோது காந்திக்கு தனிமையும் தியானமும் எவ்வளவு தேவையானது என்று புரிந்து கொண்டார். கதூர்பா காந்திக்கு தனிமை தேவையில்லை. தொடர்ந்து குடும்பத்திற்கும் நாட்டிற்கும் உழைப்பதையே விரும்பினார் என்கிறார் அருண் காந்தி. காந்தி தம்பதிகளிடையே பல முரண்பாடுகள் கோபதாபங்கள் இருந்ததற்கான சில ஆதாரங்கள் (துவக்கத்தில் குறிப்பிட்ட அவருடைய கொள்ளு பேத்தி உமா துபேலியாவின் 2005ம் ஆண்டு வெளிவந்த நூலில் உள்ளன. இவை நமக்கு அதிர்ச்சியை தந்தாலும் அவர்களுடைய பிரச்சனைகள் மல்கிய வாழ்க்கையில் இவற்றை சகஜமாகத்தான் பார்க்க வேண்டியிருக்கிறது.