[] 1. Cover 2. Table of contents மதம் அரசியல் வன்முறை இந்துத்வா   பூ.கொ.சரவணன்     மின்னூல் வெளியீடு : FreeTamilEbooks.com   உரிமை : CC-BY-SA-NC கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.   அட்டைப்படம் - லெனின் குருசாமி - guruleninn@gmail.com   மின்னூலாக்கம் - ஐஸ்வர்யா லெனின் - aishushanmugam09@gmail.com   This book was produced using pandoc   பதிவிறக்கம் செய்ய - http://FreeTamilEbooks.com/ebooks/hindutva மின்னூல் வெளியீட்டாளர்: http://freetamilebooks.com அட்டைப்படம்: லெனின் குருசாமி - guruleninn@gmail.com மின்னூலாக்கம்: ஐஸ்வர்யா லெனின் - aishushanmugam09@gmail.com மின்னூலாக்க செயற்திட்டம்: கணியம் அறக்கட்டளை - kaniyam.com/foundation Ebook Publisher: http://freetamilebooks.com Cover Image: Lenin Gurusamy - guruleninn@gmail.com Ebook Creation: Iswarya Lenin - aishushanmugam09@gmail.com Ebook Project: Kaniyam Foundation - kaniyam.com/foundation This Book was produced using LaTeX + Pandoc இந்து மத வரலாற்றை இந்துத்வவாதிகளிடம் இருந்து காப்பாற்றுவது எப்படி? மார்ச் 17, 2015 Wendy Doniger ‘ஏன் இந்துக்கள் அல்லாதவர்கள் இந்து மதத்தைப் பற்றி எழுத வேண்டும்’ என்கிற தலைப்பில் எழுதிய The Times of India கட்டுரை: வில்லியம் டால்ரிம்பிள் தலைமைப் பொறுப்பேற்று வழிநடத்திக்கொண்டிருந்த என்னுடைய லண்டன் உரையின் பொழுது என் மீது யாரோ ஒரு முட்டையை வீசினார்கள். ஆனால், சில முறை முயற்சித்தும் என் மீது சரியாக அவர்களால் முட்டையை எறிய முடியவில்லை. இந்தச் சம்பவத்தைத் தன்னுடைய இந்திய வரலாறு பற்றிய கட்டுரையில் விவரித்த டால்ரிம்பிள், "இந்தியாவுக்குள் இந்து வலதுசாரிகளால் கூட்டப்பட்ட கூட்டங்கள் அவ்வப்பொழுது கலைக்கண்காட்சிகள், நூலகங்கள், வெளியீட்டாளர்கள், திரைப்பட நிறுவனங்கள் ஆகியவற்றை அவர்களின் தேசபக்தியற்ற, இந்து எதிர்ப்பு செயல்பாடுகளுக்காகத் தாக்குவதாகச் சொல்லிக்கொண்டு செயல்படுவார்கள். தற்பொழுது இந்த மாதிரியான செயல்பாடுகள் உலகம் முழுக்க இருக்கும் கல்வி நிறுவனங்களிலும் பரவ ஆரம்பித்திருக்கிறது. உலகின் பெரிய அறிவுச்சமூகத்தில் அமெரிக்க அறிஞர்கள் ஒப்பீட்டளவில் பாதுகாப்பாக உள்ளார்கள். ஆனாலும், எங்களுக்கும் சிக்கல்கள் உள்ளன. அமெரிக்க அறிஞர்களான ஜெப்ரி க்ரிபால், பால் கோர்ட்ரைட், ஜிம் லேயின் ஆகியோரின் புத்தகங்கள் இந்தியாவில் தாக்கப்பட்ட பொழுது அவற்றின் இந்தியப் பிரதிகள் ஒடுக்கப்பட்டன. அமெரிக்காவிலும் இவர்களுக்குக் கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டன/ நான் முன்பெல்லாம் இந்து மதத்தைப் பற்றி உரையாற்றினால் அந்த உரையின் முடிவில் ஒரு மூத்த இந்து ஆண் (எப்பொழுதும் ஆண் தான்) எழுந்து, என்னைப் பெரிய அளவில் புகழ்ந்த பின்னர், ஒரு மினி-லெக்சரை நிகழ்த்துவார். பல சமயங்களில் கற்றறிந்த ஒன்றாகவும், சில சமயம் தலைப்புக்கு பொருந்துவதாகவும் அது அமைந்திருக்கும். அவை இந்த அமெரிக்கப் பெண்ணுக்கு தெரியாத விஷயங்கள் எனக்குத் தெரிந்திருக்கின்றன என்று காட்டும் பாணியில் இருக்கும். அதில் எந்தத் தவறும் இல்லை. தன்னுடைய இந்து மதத்தின் மீது தன்னுடைய அறிவும், ஆளுமையும் அதிகப்படியானது என்று அவர்கள் நிறுவ முயல்கிறார்கள். தங்களுடைய இந்து மதத்தை, இந்துக்களைத் தற்காத்துக்கொள்ள அவர்கள் முனைகிறார்கள். அவர் மதிக்கத்தக்க, ஆர்வம் தரும் ஒன்றை சேர்க்கிற பொழுது, உரைக்குப் பின்னரும் ரிசப்சனில் இருவரும் உரையாடிக்கொண்டு இருப்போம். சமயங்களில் அது வெறும் சடங்காகவே, தொடர்பில்லாத ஒரு உரையாடலாக இடத்தை அடைத்துக்கொள்ளும் ஒன்றாக அமைந்திருக்கும். சமீபத்திய குறிக்கீடுகள் இவற்றில் இருந்து மாறுபட்டு தீய நோக்கம் கொண்டவையாக உள்ளன. இணையத்தில் உள்ள நபர்கள் அந்த மூத்த ஆண்களைப் போலக் கற்றவர்கலகவோ, நாகரீகம் கொண்டவர்களாகவோ இருப்பதில்லை. அந்த மூத்தோரை இப்படி மிஸ் செய்வேன் என்று அப்பொழுது எண்ணியதில்லை. அவர்களில் சிலர் என்னுடைய உரைகளில் தென்படுகிற பொழுது சற்றே நிம்மதியாக இருக்கிறது. இந்து மதத்தைப் பற்றிய இந்துக்கள் அல்லாதவர்கள் எழுதும் புத்தகங்களை எதிர்க்கும் இந்துக்கள் மூன்று அடிப்படையான சிக்கல்களில் கவலை கொண்டு இருக்கிறார்கள்: 1. இந்து மதத்தைப் பற்றி இந்துக்கள் அல்லாதவர்களே பெரும்பாலும் எழுதுகிறார்கள் ; 2. இந்துக்கள் அல்லாதவர்கள், சமயங்களில் இந்துக்களும் கூடத் தவறான இந்து மதத்தைப் பற்றி எழுதுகிறார்கள்; 3. முக்கியமான அறிஞர்கள் (இந்துக்கள், இந்துக்கள் அல்லாதவர்கள்) ஆய்வுப் பார்வையிலேயே இந்து மதத்தைப் பற்றி எழுதுகிறார்களே அன்றி நம்பிக்கையின் பார்வையில் எழுதுவதில்லை. இந்த மூன்று சிக்கல்களும் பல சமயங்களில் தவறாகப் பூதாகரம் ஆக்கப்பட்டும், உண்மையான சிக்கலை மழுங்கடித்து, ஏற்கனவே குழம்பிய குட்டையை இன்னமும் குழப்புகிறது. ஒவ்வொரு சிக்கலாக இங்கே பேசுவோம். Non-Hindus rather than Hindus are writing about Hinduism. என் மீது முட்டை எறியப்பட்ட சம்பவத்துக்குப் பிறகு டார்லம்பில் இப்படிச் சொன்னார், “அந்த உரைக்குப் பிந்தையைக் கேள்வி நேரத்தில் முட்டை எறிபவனோடு வந்திருந்த குழு வென்டி டோனிங்கரை அவமானப்படுத்தும் வகையில் நடந்து கொண்டார்கள். தொடர்ந்து இந்து அல்லாத ஒருவர் தங்களுடைய மதத்தைப் பற்றிக் கருத்து சொல்ல தகுதியவற்றவர் என்பது அவர்களின் பார்வையாக இருந்தது.” இந்துக்கள் மட்டுமே இந்து மதத்தைப் பேச வேண்டும் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. கிறிஸ்துவர்களும், யூதர்களும் கிறிஸ்துவம், யூத மதம் ஆகியவற்றின் எழுத்துக்களைப் பெரும்பாலும் கட்டுப்படுத்துவதாக இவர்கள் வைக்கும் குற்றச்சாட்டின் தொடர்ச்சியாகத் தங்கள் மதத்தைப் பற்றிய கருத்துக்களைக் கட்டுப்படுத்த விரும்புகிறார்கள். (கிறிஸ்துவர்கள் மட்டுமே தங்கள் மதத்தைப் பற்றிய கருத்துக்களைக் கட்டுப்படுத்துகிறார்கள் என்பது உண்மையில்லை. பல நூற்றாண்டுகளாகப் பல்வேறு இந்துக்கள் குறிப்பாக ராம் மோகன் ராய், சுவாமி தயானந்தர் முதலியோர் கிறிஸ்துவத்தின் மீது தீவிரமான விமர்சனங்களை வைத்துள்ளார்கள். (அவற்றில் பெரும்பாலானவை உண்மையானவை.) இவர்களின் இந்தக் கவலையை நாம் கரிசனத்தோடு அது ஒரு அரசியல் கவலை என்று புரிந்துகொள்ள வேண்டும். […] முதல் எதிர்ப்புக்கு பதில்: இந்துக்கள் அல்லாதவரே இந்து மதத்தைப் பற்றி எழுதுகிறார்கள் என்பது உண்மையல்ல. இரு குழுக்களும் இந்தச் செயலில் ஈடுபட்டுள்ளன. இந்துக்கள் இந்து மதத்தைப் பற்றி Iபுத்தகங்கள் எழுதுவதில் பல்வேறு அனுகூலங்கள் உள்ளன. இந்துக்களுக்கு மட்டுமே தெரிந்த இந்து மதம் பற்றிய விஷயங்கள் இந்த நூல்களில் இடம்பெறும். என்னைப் போல இந்து மதத்தைப் பற்றிக் கற்பவர்களும், அதைக் கற்பிக்கும் இந்துக்கள் அல்லாதவர்கள் இந்து மதத்தின் பண்டைய மூலங்கள், இந்து மதத்தைப் பற்றி இந்துக்கள், இந்துக்கள் அல்லாதவர்கள் எழுதிய அற்புதமான நூல்களைப் படித்து எழுதவும், பாடம் நடத்தவும் செய்கிறோம். சில இந்துக்கள் இதற்கு எதிராக இந்துக்கள் அல்லாத அறிஞர்கள் எழுதிய நூல்கள் மட்டுமே மூடிய குழுவாக இயங்கும் பதிப்பாளர்கள், ஆசிரியர்கள் ஆதரிக்கிறார்கள். இவற்றை இந்து அறிஞர்கள் உடைக்க முடியாது என்று அவர்கள் சொல்லக்கூடும். அதில் ஒரளவுக்கு உண்மை கடந்த காலத்தில் இருந்தது என்றாலும், தற்பொழுது அது பெருமளவில் குறைந்துவிட்டது. மேலும், மேலும் அற்புதமான பல நூல்களை இந்து அறிஞர்கள் எழுதிக்கொண்டே இருக்கிறார்கள். அவற்றை நாடு முழுக்க வகுப்புகளில் பயன்படுத்தவும் செய்கிறோம். . சில இந்துக்கள் இந்தியாவில் பிறந்து அமெரிக்கா, ஐரோப்பா முதலிய நாடுகளில் தங்களுடைய கல்வியை முடித்து இந்திய ஆய்வுமுறைகள், மற்றநாட்டு ஆய்வுமுறைகள் இரண்டிலும் தேர்ச்சி பெறுகிறார்கள். இவர்கள் இரட்டை நோக்கு கொண்டவர்களாகத் திகழ்கிறார்கள். ஏ.கே.ராமானுஜன் வார்த்தைகளில் இந்த இந்தோ-அமெரிக்கர்கள் இந்திய, இந்தியர் அல்லாத அறிவுஜீவி உலகினில் வாழ்கிறார்கள். இரண்டு உலகங்களைச் சேர்ந்த அறிவு ஜீவிக்களாலும் நிச்சயம் எழுத முடியாத புத்தகங்களை இவர்கள் எழுதுகிறார்கள். இந்தியாவில் கருத்துரிமைக்கு ஏற்பட்டிருக்கும் ஆபத்தை ராமாயணம் பற்றி ஏ.கே.ராமனுஜன் எழுதிய முக்கியமான கட்டுரையைப் பாடப்புத்தகங்கள், ஆக்ஸ்போர்ட் தொகுப்பு ஆகியவற்றில் இருந்து நீக்க நடந்த முயற்சிகளும், அந்த எதிர்ப்புகள் ஆற்றல், வெற்றி ஆகியவற்றை மீறியும் அந்தக் கட்டுரை காப்பற்றப்பட்டது இந்திய ஜனநாயகம் உயிர்த்திருப்பதன் மீதான நம்பிக்கையின் அடையாளம். நாம் இந்த வகையான அறிஞர்களைப் புகழ்வதால் வெறுமனே இரு கலாசாரக் கல்வி கொண்ட இந்துக்கள் மட்டுமே நூல்களை எழுத வேண்டும் என்று அர்த்தப்படுத்திக்கொள்ளக் கூடாது. உள்ளிருந்து ஒரு விஷயத்தை அனுகுபவரின் எழுத்தில் உள்ள நியாயத்தை நான் நிச்சயம் மறுக்க மாட்டேன். ஆனால், அதனுடன் கூடுதலாக வேறு ஆக்கங்களும் எழவேண்டும் என்பேன். இந்துக்கள் தங்களின் மதத்தைப் பற்றி வெளிப்படுத்துவது கட்டாயமான அடிப்படை; அதே சமயம் அவர்களின் கருத்தை மட்டுமே ஏற்க வேண்டும் என்பது மதத்தைப் பற்றிய ஆய்வுப்பூர்வமான வாசிப்பின் அடிப்படைக்கூறுகளைச் சேதப்படுத்தும். இந்து மதத்தைப் பற்றி இந்து அல்லாதவர் எழுதும் நூலிலும் சாதகங்கள் உள்ளன. அவர்கள் இந்து மதத்தைப் பாரம்பரிய முறைகளில் இருந்து விலகி மார்க்ஸ், ப்ராய்ட், டெர்ரிடா, எட்வர்ட் செட் முதலியோர் பார்வையில் பார்க்க முனைகிறார்கள். இது பயன்மிக்க ஒரு இடைவெளியை சாதிக்கிறது. எந்த இந்துவும் முழுமையாக எல்லா வகையான இந்து மதங்களையும் தெரிந்திருக்கவோ, அவை அனைத்துக்கும் தானே பிரதிநிதியாகவோ திகழ முடியாது. இந்துக்களின் மதம் பற்றிய மாறுபட்ட அறிவு சார்ந்த ஆய்வு, புரிதல் ஆகியவற்றை இந்துக்கள் அல்லாத அறிஞர்கள் திறக்க முடியும். இவை இரண்டிலும் சாய்வான நிலைப்பாடுகள் நிச்சயம் உள்ளன. இரண்டு சாய்வான ஆய்வுகளும் ஒன்றுகொன்று ஏற்படுத்தும் தாக்கத்தைச் சரிசெய்து கொள்ளும். ஆனால், அடுத்தக் குற்றச்சாட்டு உள்ளது சில இந்துக்கள் அல்லாதவர்கள் (சமயங்களில் இந்துக்களும்) தவறான இந்து மதத்தைப் பற்றி எழுதுகிறார்கள். இந்துத்வவாதிகள் பேச மட்டும் விரும்பவில்லை. அவர்கள் தாங்கள் சொல்வதைக் கேட்க வைக்கவும் விரும்புகிறார்கள். இந்து மதத்தைப் பற்றிக் கேட்க விருப்பமில்லை என்பவர்களை அமைதிப்படுத்தவும் அவர்கள் இயங்குகிறார்கள். அமெரிக்கர்கள் (சில அமெரிக்க இந்துக்கள் உட்பட) தங்களின் மதத்தைப் பற்றிச் சொல்லும் குறிப்புகளைத் தங்கள் பார்வையில் இந்து மதத்தைத் தொடர்ந்து அவமதிக்க வெளியிடுவதாகக் கருதுகிறார்கள். ஆகவே, அவற்றை அவர்கள் தவிர்க்க செயல்படுகிறார்கள். அவர்கள் சொல்வதில் ஓரளவுக்கு நியாயம் இருக்கவே செய்கிறது. பல்வேறு அமெரிக்கக் கல்ட்கள் தங்களை இந்து மதத்தின் அடிப்படையில் ஆனவை என்று சொல்லிக்கொண்டு இந்து மதத்தை மலிவான ஒன்றாக, தவறான ஒன்றாகக் காட்டியுள்ளன. தங்களை இந்துக்கள் என்று அழைத்துக்கொள்ளும் இவை பெரும்பாலும் தாந்த்ரீக ரீதியிலானவை மட்டுமே. டேவிட் கார்டன் வைட்டின் வரிகளில். " இந்த அமெரிக்கர்கள் புது யுக தாந்த்ரீக செக்சை மிக மோசமான முறையில் இந்திய பாலியல் கூறுகள், பாலியல் கலைகள், மசாஜ் முறைகள், ஆயுர்வேதம், யோகா ஆகியவற்றை இணைத்து ஒரே பாரம்பரியமாகக் கட்டமைக்கிறார்கள்" . “ஆகவே, இடைக்காலத் தாந்த்ரீகம் புது யுக தாந்த்ரீகத்துக்கு அடிப்படை என்பது கைரேகைப் பதிவு எப்படி நவீன ஓவியத்துக்கு அடிப்படை என்பது எந்தளவுக்கு உண்மையோ அந்தளவுக்கு உண்மை” “கேளிக்கைக் கூடாரமாகத் திகழும் நவீன காலத் தாந்த்ரீகத்தை இந்தியாவைச் சேர்ந்த குருக்கள், பயிற்றுநர்கள் மேற்கின் அறிஞர்களிடம் இருந்து எடுத்துக்கொண்டு மேற்கைச் சேர்ந்த தாகம் மிகுந்த சீடர்களுக்குக் கிழக்கின் மாயங்களைக் காட்டுவதாகச் சொல்லி விற்கிறார்கள்.” என்று வைட் பொரிந்து தள்ளுகிறார். இந்த மாதிரியான சிதைக்கப்பட்ட பார்வையை ஏன் இந்துக்கள் எதிர்க்கிறார்கள் என்று புரிந்து கொள்ள முடிகிறது. பெரிய முரண் என்னவெனில் இந்தியாவே இந்தியாவைப் பற்றிய மேற்கின் தவறான பார்வைக்கான மூலமாக இருப்பது தான். இந்துத்வவாதிகள் சிருங்கார ரசம் இல்லாத இந்துமதத்தை வரலாற்றில் தேடி எடுக்கிறார்கள். அதற்கு ஆதாரமாக உபநிஷதங்களில் இருக்கும் சன்யாசம் பற்றிய குறிப்புகள், பதினோராம் நூற்றாண்டில் அபிநவகுப்தர் தாந்த்ரீகம் பற்றி அளித்த விளக்கம், விக்டோரியா ராணி காலத்தில் பதினோராம் நூற்றாண்டு இந்து மதம் மீது ஏற்பட்ட தாக்கங்கள் ஆகியவற்றைக் கொண்டு அவர்கள் இந்து மதத்தில் பாலியல் வேட்கைக்கு இடமில்லை என்று நிறுவ முயல்கிறார்கள். இந்துத்வவாதிகள் காமத்தை, பிராய்டை (அவரைக் காமம் பற்றி மட்டுமே பேசியவர் என்று தவறாக எண்ணிக்கொண்டு) எதிர்க்கிறார்கள். கூடவே காமசூத்திரம், இந்து மதத்தின் பாலியல் பக்கங்களை, அதனுடைய உணர்ச்சிகரமான பகுதிகளை எழுதும் என்னைப் போன்ற எண்ணற்ற அறிஞர்களை நிராகரிக்கிறார்கள். தங்களுடைய மதத்தில் இருக்கும் சிருங்கார ரசம் சார்ந்த கூறுகளை இந்துக்களே மறுதலிக்கிற அளவுக்குச் சிக்கலான உளவியல், வரலாற்றுக்காரணிகள் வளர்ந்துள்ளன. இது அவர்களின் நகைச்சுவை உணர்வை அற்றுப்போகச் செய்துள்ளது. சமஸ்க்ருத இலக்கியத்தில் இருக்கும் நகைச்சுவை, அங்கதம் ஆகியவற்றை ரசிக்காமல் அவற்றை இந்து மதத்தை அவமதிப்பதாகப் புறக்கணிக்கிறார்கள். இந்து மதத்தின் மகத்தான பண்பே தன்னுடைய கடவுள்களையே கேலி செய்யும் அதன் திறன் தான். அதனையே இவர்களின் செயல்களால் இழப்பது அவமானமான ஒன்றாகும். இரண்டாவது எதிர்ப்புக்குப் பதில்: இந்து மதத்தை ஒற்றையான, குறுகலான ( அதன் சிருங்கார ரசத்தை நீக்கிய ) மதமாக வாசிப்பது என்பது கிறிஸ்துவத்தைப் பற்றி ஒரு நூலை எழுதி அதில் எல்லாக் கிறிஸ்துவர்களும் டார்வின் சொன்னது தவறு என்று முழுமையாக நம்புகிறார்கள். இறைவன் ஏழே நாளில் உலகத்தைப் படைத்ததே உண்மை என்று அவர்கள் அனைவரும் நம்புகிறார்கள் என்பது போலத்தான். இந்த மாதிரியான தவறான இந்துமதத்தின் மீதான கருத்தியல் சாய்வு இந்துக்கள் அல்லாதவர்கள் மீதான இனவெறியை விட மோசமானது. இந்தக் கருத்தியல் சாய்வு சம்பந்தப்பட்ட அறிஞர் தங்கள் இனத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும் என்பதோடு தங்களின் கருத்தையே மீண்டும் ஓத வேண்டும் என்று விரும்புகிறது. இதனால் தான் பக்தி மிகுந்த இந்துவாகத் திகழ்ந்தாலும் ஆய்வுப் பார்வையை மாற்றிக்கொள்ளாமல் இயங்கும் இந்து மதத்தைச் சேர்ந்த அறிஞர்களையும் இந்துத்வவாதிகள் இனவெறியோடு செயல்படுவதாக நிராகரிக்கிறார்கள். மூன்றாவது எதிர்ப்பு: முக்கியமான அமெரிக்க அறிஞர்கள், இந்துக்கள் (அ) இந்துக்கள் அல்லாதவர்கள் அறிவுப்புலத்தில் இருந்தே இந்து மதத்தைப் பற்றி எழுதுகிறார்களே அன்றி நம்பிக்கை சார்ந்து இந்து மதம் பற்றி எழுதுவதில்லை: இது உண்மையே. அது நல்ல விஷயமும் கூட. ஒரு மதத்தைப் பற்றி எழுதக் கிளம்பி உள்ள ஒரு ஆசிரியர் அதனைப் பற்றி நேரிடையாகத் தெரிந்து கொள்வது தெளிவு பெறும் திட்டத்தின் அடிப்படையான, அவசியமான கூறை மீறுவதாகும். ஒரு மதத்தைப் பற்றி வேறொரு மதத்தில் நேரடி அனுபவமுள்ள ஒருவராகவும் எழுதக்கூடாது. ப்ரோட்டஸ்டன்ட் பார்வையில் இந்து மதத்தை எழுதுவதைச் செய்யக்கூடாது. இது வெகுகாலமாக நடந்து வந்துள்ளது. அதுவே இணையத்தில் இந்துக்களிடையே கடும் கோபத்தைக் கிளப்பியுள்ளது. இந்துவின் பார்வையில் இந்து மதத்தை எழுதக்கூடாது. இந்து மதத்தை ஆய்வுப்பார்வையில், அறிவுத்தளத்தில் நோக்கி எழுத வேண்டும். இந்து மதத்தின் பல்வேறு வகையான உருவங்கள் உயிர்த்து உள்ளன. உலகம் முழுக்க அவை பரவியுள்ளன. அவற்றில் வெகு சிலவே அறிஞர்களுக்குத் தெரிந்துள்ளன. சில பக்தர்களுக்கு மட்டுமே தெரிந்ததாக உள்ளது. இவை இரண்டும் அவ்வப்பொழுது சந்திக்கவும் செய்கின்றன. ஆனால், ஒரு அறிஞர் பக்தரும் கூட, ஆனால், எழுதுகிற பொழுது அறிஞர் என்கிற ஆடையை அணிந்துகொள்பவர் அவர். இந்துக்கள்-ஒரு மாற்று வரலாறு எனும் ஆசிரியரின் நூல் வலதுசாரிகள் எதிர்ப்பால் பென்குயின் நிறுவனத்தால் இந்தியாவில் இருந்து திரும்பப் பெறப்பட்டது. மூலம்: http://timesofindia.indiatimes.com/…/articlesh…/46571491.cms WENDY DONIGER Mircea Eliade Distinguished Service Professor of the History of Religions; also in the Department of South Asian Languages and Civilizations, the Committee on Social Thought, and the College தமிழில்: பூ.கொ.சரவணன் இந்தியா ஏன் இந்துத்வா தேசம் ஆகாது? மார்ச் 30, 2015 இந்துவாக இருப்பது: பாவி தன்னுடைய பாவங்களுக்கு வருந்துகிற போது அவனுக்குப் பரலோகத்தில் பேரானந்தம் கிடைப்பதாகக் கிறிஸ்துவப் பிரார்த்தனை செல்லும். விஷ்வ இந்து பரிஷத் அமைப்பை ஒரு கிறிஸ்துவ மதத்தின் பாவியோடு அழைப்பது அத்தனை சரியாக இருக்குமா என்று தெரியவில்லை, அதே சமயம் அவர்கள் தங்கள் பாவங்களுக்கு வருந்துகிறார்கள் என்பது நல்ல செய்தி. சனாதன தர்மத்தை விட்டுத் தலித்துகள் பிரிந்து இந்து மதத்தை விடச் சமத்துவம் கூடுதலாகக் கொண்டிருக்கிற மற்ற மதங்களுக்கு மாறுவதற்குத் தீண்டாமையின் சாபம் காரணம் என்று அவர்கள் இப்பொழுதாவது கண்டிருக்கிறார்கள். தாய் வீட்டில் கழிவுப் பொருளை போல நடத்துவார்கள் என்கிற நிலையில் ‘தாய் மதத்துக்குத் திரும்புங்கள்’ என்று அழைப்பதை ஏற்றுத் திரும்ப யார் விரும்புவார்கள். […] எத்தனையோ தலித்துகள் இந்து மதத்தை விட்டு நீங்கியதில் ஆச்சரியம் இல்லை. புதிரான ஒன்று எப்படி இத்தனை பேர் இங்கேயே தங்கினார்கள் என்பது தான். இந்து தேசியத்தின் நாயகர்களிடம் அடிப்படைப் புரிதலிலேயே தவறு இருக்கிறது. தொடர்ந்து இந்து மதம் மிகவும் சகிப்புத்தன்மை கொண்டது என்றும், மதச்சார்பின்மை அதன் முக்கியமான அங்கம் என்றும் சொல்லப்படுகிறது. அப்படியென்றால் மதச்சார்பற்ற இந்தியாவுக்கு முரணான இந்து இந்தியாவை முன்னிறுத்தக்கூடாது. சகிப்புத்தன்மை பல்வேறு ஒருவகையில் கற்பிதம் தான், அதே சமயம் அது உண்மைக்கு வெகுதூரத்தில் இல்லை. இந்து மதம் சகிப்புத்தன்மையோடு இருக்கலாம், இந்து சமூகம் சகிப்புத்தன்மை, சமத்துவம் அற்றதாக இருக்கிறது. அத்வைதத்தின் ஆழமான உட்பொருளை ரசிக்கலாம், ஆனால், சூத்திரர்கள், அதி-சூத்திரர்களின் மீது தொடர்ந்து தொடுக்கப்படும் அவமானங்களை எல்லாம் பிரபஞ்சத்துக்குப் பொதுவான பிரம்மத்தை அழுத்திச்சொல்லி சமரசப்படுத்த முயல்வதை எப்படி ஒருவர் ஏற்க முடியும்? இந்து சமூகம் தன்னுடைய பெரும்பான்மை மக்களை அவமானப்படுத்துகிறது. பகவத் கீதை இதே மாதிரியான முன்முடிவை இரண்டு உயர் வர்ணங்களின் குணங்களை உயர்த்திச்சொல்ல வைசியர்கள், சூத்திரர்களின் குணங்களை இழிவுபடுத்துகிறது. (அத்தியாயம் 18, ஸ்லோகம் 41-48). வேதங்கள், உபநிடதங்களின் ஆன்மிகம், மேன்மை எல்லாவற்றையும் தாண்டி தலித் ஆண்களை மனிதத்தன்மையற்று நடத்துகிறது இந்து சமூகம் என்பதும், அதைவிடத் தலித் பெண்களைப் பாலியல் பொருட்களைப் போல நடத்தினார்கள். சூத்திரர்களும் ஒன்றும் பெரிதாக மதிக்கப்படவில்லை. பகுஜன் எனப்படும் பெரும்பான்மைமக்கள் இந்து மதத்தில் நஷ்டப்பட்டவர்கள். இந்துத்வாவின் பெரும்பான்மை தத்துவங்களைப் பிரச்சாரம் செய்வது ஆதிக்கச் சாதியினர் அதிலும் குறிப்பாகப் பிராமணர்கள் அதனைச் செய்கிறார்கள். எப்படிப் பிராமணியத்தின் புராணக்கதைகளை, தத்துவங்களைப் பற்றி ஒடுக்கப்பட்ட சாதியினர் உணர்ந்தார்ர்கள் என்பது பற்றிய விவாதங்கள் இல்லை. தீவிரமான பிராமணிய எதிர்ப்புக் கருத்தாக்கத்தை உருவாக்கியவர் ஜோதிபாய் புலே. முனைவர். பாலசாகேப் அம்பேத்கர் பிராமணிய ஆன்மீகத்தின் வெளிவேஷங்களை வெளிச்சம் போட்டுக் காட்டினார். அவரின் பகத்கீதை பற்றிய விமர்சனத்தைப் படித்துப் பாருங்கள். ஒடுக்கப்பட்ட சாதியினருக்கு எப்படிப் பகவத் கீதை காட்சியளிக்கிறது என்று புலப்படும். அவர் ஜாதி, பிராமணியம் இரண்டுக்கு எதிராகவும் அயராது போராடினார். தன்னுடைய வாழ்நாளின் இறுதிக்கட்டத்தில் இந்துக்களைத் தங்களுடைய சமூகத்தின் இழிவுகளை உணரவைக்கும் தன்னுடைய முயற்சிகளை ஓய்ந்து போய்க் கைவிட்டு, தன்னுடைய மக்களைப் புத்த மதத்துக்குக் கொண்டு சேர்த்தார். […] மகாத்மா காந்தி இந்து சமூகத்தைத் தீண்டாமையின் தீமைகளைப் பற்றிப் புரிய வைக்கத் தன்னால் முடிந்த எல்லாவற்றையும் செய்தார். அவர் விடுதலைப் போருக்கான இந்து பெருந்திரளின் ஆதரவை தீண்டாமையைச் சார்ந்து அம்பேத்கர் விரும்பியது போல இந்து மதத்தைப் பிரித்து இழக்க விரும்பவில்லை. ஆனால், அவரால் வர்ணாசிரம இந்துக்களைத் தீண்டாமையை விடவைக்க முடியவில்லை. அவரின் ஹரிஜன சேவா திட்டத்துக்கு வாய்ப்பந்தல் போட்டுவிட்டு, சுரண்டல், அவமானத்தைத் தொடர்ந்தார்கள். இந்து சமூகம் சீர்திருந்தாமல், தன்னுடைய தவறுகளுக்கு வருந்தாமல் இருப்பதால் அறுபத்தி ஏழு ஆண்டுகள் கழித்தும் பட்டியல் ஜாதியினர், பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு தேவைப்படுகிறது. வட இந்தியாவை அறுநூறு ஆண்டுகள் ஆண்ட இஸ்லாமிய ஆட்சியாளர்கள் ஜாதி அமைப்பை அப்படியே இருக்க விட்டது இந்து சமூகத்தின் அதிர்ஷ்டம். அவர்கள் தீண்டத்தகாதவர்கள் எனக்கருதப்பட்ட மக்களை மதம் மாற்றினாலும் இந்து சமூகத்தின் ஜாதி அமைப்பை அவர்கள் ஆட்சிக்காலத்தில் அப்படியே விட்டுவிட்டார்கள். மதமாற்றத்தை விட மோசமான ஒன்றை ஆங்கிலேயர்கள் செய்தார்கள்.நவீனக் கல்வியை இலவசமாக ஜாதி வேற்றுமை இன்றித் தந்தார்கள். இரண்டு உயர் ஜாதிக்களின் ஆதிக்கத்தில் இருந்த இந்து சமூகத்தில் அது பெரும் புரட்சியானது. நவீன கல்வி, கருத்துக்களை ஆங்கிலேயர்கள் அறிமுகப்படுத்தவில்லையென்றால் ஷ்யாமாஜி கிருஷ்ண வர்மா எப்பொழுதும் சம்ஸ்க்ருத அறிஞர் ஆகியிருக்க முடியாது, காந்தி பாரிஸ்டர் ஆகியிருக்க முடியாது. கிறிஸ்துவத்தை விட இந்து சமூகத்துக்கு அதிகச் சவாலை கல்வியே தந்தது. தென்னிந்தியா இந்தப் புரட்சியால் பெரிய அளவில் பலன்பெற்றது. நீதிக்கட்சி துவங்க பிராமண எதிர்ப்பு இயக்கம், அதனைத்தொடர்ந்து அதனைத்தொடர்ந்து பெரியார் நடத்திய திராவிட இயக்கம் ஆகியவை தென்னகத்தை வட இந்தியாவை விடப் பெரியளவில் வேறுபடுத்தின. வடக்கு இன்னமும் பழமையில் முடங்கியிருக்கிறது. பீமாரு மாநிலங்கள் இன்னமும் இந்துத்வாவின் கோட்டைகளாக உள்ளன. மனித வள மேம்பாட்டுக் குறியீடுகளில் தென்னிந்தியா வட இந்தியாவை முந்திக்கொண்டு முத்திரை பதிக்கிறது. […] ஜாதி அமைப்பு இந்து அமைப்பை பிளவுபடுத்தி இருக்கிறது. விஷ்வ ஹிந்து பரிஷத் இந்து தேசத்தைக் கனவு காண்கிறது. ஆனால், இந்துவாக இருப்பது என்பதே பிரிந்தும், பிளவுபட்டும் இருப்பதுதான். இதுதான் வி,ஹெச்.பி. யிடம் இருந்து இந்தியாவைக் காக்கும். – Meghnad Desai, Baron Desai smile emoticon தமிழில்: பூ.கொ.சரவணன் பொது சிவில் சட்டம் தேவையா? மே 1,2015 முப்பது வருடங்களுக்கு முன்னர் உச்சநீதிமன்றம் தன்னுடைய புகழ்பெற்ற ஷா பானு வழக்குத் தீர்ப்பை வழங்கியது. ஒரு இஸ்லாமிய ஆண் தன்னுடைய மனைவியை விவாகரத்து செய்துவிட்டு அவளுக்கு ஜீவனாம்சம் தருவதை நிறுத்திக்கொண்டார். அந்தத் தைரியம் மிகுந்த பெண் நீதிக்காகத் தொடர்ந்து அயராமல் போராடி உச்சநீதிமன்ற வாசலை அடைந்தார். இறுதியாக ஏப்ரல் 23, 1985 அன்று ஐந்து நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்றம் மத்திய பிரதேச உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்தது. ஜீவனாம்சம் கோரிய ஷா பானுவுக்கு அவர் வாழ்க்கைக்குப் போதுமான நிதியை தரவேண்டும் என்று உத்தரவிட்டது. ஷா பானு வழக்கு இரு வகையான சட்டங்களுக்கு இடையே சிக்கலைக் கொண்டு வந்தது. குறிப்பிடப்பட்ட காலத்துக்குப் பிறகு பராமரிப்புத் தொகை எதையும் தரவேண்டியது இல்லை என்று முஸ்லீம் தனிச்சட்டம் குறிப்பாகப் பேசுகிறது. ஆனால், குற்ற நடைமுறை சட்டம் பிரிவு 125 போதுமான அளவு வருமான மூலம் உள்ள ஆண் திருமணம் செய்துகொண்ட பெண்ணைப் பிரிந்தாலும் அவருக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று பேசுகிறது. உச்சநீதிமன்றம் இந்த வழக்கில் CrPC சட்டப்பிரிவு 125 ஐ உச்சநீதிமன்றம் கருத்தில் கொண்டது. ஒரு மனதாகத் தரப்பட்ட இந்தத் தீர்ப்பில் இஸ்லாமிய தனிநபர் சட்டப்படி இஸ்லாமிய கணவன் தான் முடிவு செய்தால் தன்னுடைய மனைவியை நல்ல, மோசமான காரணங்களுக்காகவோ, காரணமே இல்லாமல் கைவிடலாம் என்பதை ஏற்க முடியாது. மேலும் குறிப்பிட்ட காலமான இதாத் காலத்தில் கொடுக்கும் பணம் எவ்வளவு குறைவாக இருந்தாலும் அது அதற்குப் பிறகு அப்பெண் தன்னுடைய உடல், ஆன்மாவை பராமரிக்க எதையும் அவன் தரவேண்டியதில்லை என்பதை எத்தனை கருணையற்ற ஒன்று?’ எனக்கேட்டார்கள் இப்படி அடிப்படைகளைத் தொட்ட பின்பு உச்சநீதிமன்றம் அரசமைப்பின் சட்டப்பிரிவு 44 பொதுச் சிவில் சட்டம் தேவை என்று கூறியிருந்தாலும் எந்தவொரு அதிகாரப்பூர்வ நடவடிக்கையும் அது சார்ந்து எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை என்று குறிப்பிட்டார்கள். நீதிமன்றம், ‘பொதுச் சிவில் சட்டம் முரண்பாடான தத்துவங்களைக் கொண்ட சட்டங்களுக்கு வெவ்வேறு வகையான நேர்மை கொண்டிருக்கும் பிரிவினைகளை நீக்கி தேச ஒற்றுமைக்கு வழிவகுக்கும்.’ அரசமைப்பின் சட்டப்பிரிவு 44 ஏன் ஒரு வெற்றுக்காகிதமாக ஆனது? பி.ஆர்.அம்பேத்கர் மற்றும் அரசமைப்பை உருவாக்கிய மற்றவர்கள் ஒரு காலத்தில் இந்த நாட்டில் பொதுச் சிவில் சட்டம் அமலுக்கு வரும் என்று நம்பினார்கள். இந்தியா ஒரு பொதுவான சிவில் சட்டத்தைக் கொண்டிருக்க முடியாத அளவுக்குப் பரந்து விரிந்த நாடு என்று சொல்லப்பட்ட பொழுது ஏற்கனவே பொதுவான கிரிமினல் சட்டத்தை நாடு கொண்டிருப்பதை அவர் சுட்டிக்காட்டினார்.தனிநபர் சட்டத்தை ‘நாடு சீர்திருத்தாவிட்டால்சமூகப் பிரச்சினைகளில் நாடு தேக்க நிலையை அடைந்துவிடும்’ என்று எச்சரித்தார் அதே சமயம் சட்ட அமைச்சராக அம்பேத்கரும், பிரதமராக நேருவும் ஒரே அடியாகப் பொதுச் சிவில் சட்டத்தைக் கொண்டு வருவது புத்திசாலித்தனமானது இல்லை என்று எண்ணினார்கள். முதலில் பெரும்பான்மை சமூகத்தின் தனிநபர் சட்டங்களை அவர்கள் சீர்திருத்த களமிறங்கினார்கள். இந்து ஆண், பெண் இருவரும் தங்களுக்கான இணையை ஜாதிகளைக் கடந்து தேர்வு செய்யும் உரிமை, கொடுமை, மனமொப்பமின்மை முதலிய சூழல்களில் விவாகரத்து பெறுவது, ஒரு இணைக்கு மேலே திருமணம் செய்து கொள்ள மறுப்பு என்று பல்வேறு சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன. வேறு சில சீர்திருத்தங்கள் பெண்களின் நிலையைக் குறிப்பாக உயர்த்துவதைக் குறிக்கோளாகக் கொண்டிருந்தன. ஆகவே, முதல் முறையாக விதவைகள், மகள்கள் ஆகியோருக்கு மகனைப் போலவே சொத்தில் சம பங்கு கணவன் இறக்கிற பொழுது வழங்கப்படுவதற்கு வழிவகைச் செய்யப்பட்டது. அம்பேத்கர், நேரு இந்துச் சட்டங்களைச் சீர்திருத்த முக்கியக் காரணம் பெரிய அளவில் தாராளவாத சிந்தனை கொண்ட இந்துக்கள் நிறையப் பேர் அவர்களை ஆதரித்தார்கள். இந்து மகாசபை, ஆர்.எஸ்.எஸ். முதலிய கடுமையான எதிர்ப்புகளைக் கொடுத்த அமைப்புகளை எதிர்கொள்ள அவர்கள் போதிய ஆற்றலும், எண்ணிக்கையும் கொண்டவர்களாக இருந்தார்கள். அப்படியும் இந்தச் சீர்திருத்தங்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற பத்து வருடங்கள் ஆகின. அவை சட்டங்களாக ஆனபிறகு சட்டத்துறை வல்லுனர் மார்க் கலான்டேர் அவற்றை, ‘முழுமையான, மகத்தான சீர்திருத்தம்’ எனவும், ‘சாஸ்திரங்கள் இந்து சட்டங்களின் மூலமாக இருந்ததை இவை எடுத்துக்கொண்டன’ என்றும் குறித்தார். அம்பேத்கர், நேரு இருவரும் காலப்போக்கில் இதே போன்ற தாராளவாத சிந்தனை கொண்ட சக்திகள் இஸ்லாமிய சமூகத்தில் இருந்து எழுந்து அவர்களின் சமூகத்தின் தனிநபர் சட்டங்களை நவீன காலப் பாலின சமத்துவத்தின் கோட்பாடுகளுக்கு ஏற்ப மாற்றியமைப்பார்கள் என்று நம்பினார்கள். ஆனால், சோககரமாக அப்படி எதுவும் நடைபெறவில்லை. ஆனால், 1985-ன் உச்சநீதிமன்ற தீர்ப்புப் பொதுச் சிவில் சட்டம் பற்றிய விவாதத்தை மீண்டும் துவங்கி வைத்தது. நவீன சிந்தனை கொண்டவராக அப்பொழுது அறியப்பட்ட ராஜீவ் காந்தி பிரதமராக இருந்த பொழுது அவரின் காங்கிரஸ் கட்சிக்கு மக்களவையில் நானூறு எம்.பி.க்கள் இருந்தார்கள். பிறகு ஏன் பொதுச் சிவில் சட்டத்தை எல்லாக் குடிமக்களுக்கும் பொதுவாக உச்சநீதிமன்றம் வழங்கிய வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு நிறைவேற்ற அவர் முனையவில்லை? உண்மையில் ராஜீவ் காந்தி ஷா பானு வழக்குத் தீர்ப்பு வந்ததும் முதலில் அதை வரவேற்கவே செய்தார். பழமைவாத இஸ்லாமியர்கள் உச்சநீதிமன்ற தீர்ப்பை நாடாளுமன்றத்தில் எதிர்த்த பொழுது அதற்கு அற்புதமாகப் பதிலைத் தந்ததே மத்திய அமைச்சரே ஆரிப் முகமது கான் என்கிற இஸ்லாமியர் தான். ஆனால், வெகு சீக்கிரமே பிரதமர் ஆரிப் முகமதுவின் கருத்தில் இருந்து தன்னை வேறுபட்ட பார்வை கொண்டவராகக் காட்டிக்கொள்ள வேண்டிய நிலை உண்டானது. அப்படி ஆரிப் முகமதை ஆதரித்தால் காங்கிரஸ் இஸ்லாமியர்களின் வாக்குகளை இழக்க வேண்டி வரும் என்கிற அச்சமே இப்படி ராஜீவை செயல்பட வைத்தது. தைரியமான, நேர்மையான முறையில் தன்னுடைய பெரும்பான்மையைப் பெண்களின் உரிமைகளைக் காக்கவும், அதிகரிக்கவும் பயன்படுத்தியிருக்க வேண்டிய ராஜீவ் காந்தி உச்ச நீதிமன்ற தீர்ப்பை செல்லாததாக்கும் சட்டத்தை நிறைவேற்ற பெரும்பான்மையைக் கோழைத்தனமாகப் பயன்படுத்திக்கொண்டார். முப்பது வருடங்களுக்குப் பிறகும் சட்டப்பிரிவு 44 வெற்றுக்காகிதமாகவே இருக்கிறது. இது தொடர்பான விவாதத்தை முன்னெடுக்க யாரேனும் முயல்கிற பொழுது ஆச்சரியப்படும் வகையில் சக்திகள் அணிதிரள்வதைக் காண இயலும். பாரதிய ஜனதா கட்சியின் கருத்தியல் முன்னோடிகள் இந்து தனிநபர் சட்டத்தில் சீர்திருத்தங்கள் வருவதை எதிர்த்ததற்கு (அவை பெண்களுக்கு மிகவும் அதிகமாக விடுதலை தருவதாக) தலைகீழாகப் பா.ஜ.க. பொதுச் சிவில் சட்டத்தை ஆதரிக்கிறது. நேருவின் பாதையில் நடப்பதாகச் சொல்லிக்கொள்ளும் காங்கிரஸ் பொதுச் சிவில் சட்டத்தைக் கொண்டுவருவதைக் கடுமையாக எதிர்க்கிறது. நேருவே ஒரு காலத்தில் பொதுச் சிவில் சட்டம் வரும் என்று நம்பினாலும் காங்கிரஸ் இப்படி நடந்து கொள்கிறது. காங்கிரஸ் கட்சியிடம் இதைவிட ஒன்றை தற்போதைக்கு எதிர்பார்த்துவிட முடியாது. ஆனால், உண்மையில் புரியாமல் இருப்பது பல முக்கியத் தாராளவாத சிந்தனையாளர்கள், பெண்கள் ஆகியோரும் பொதுச் சிவில் சட்டத்துக்கு ஆதரவாகக் குரல் கொடுக்காமல் ஒதுங்கிக்கொள்கிறார்கள். சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பது அடிப்படை உரிமை அல்லவா? பெண்ணியாவதிகளின் மைய செயல்திட்டத்தில் பெண்களைத் தரக்குறைவாக நடத்தும் சட்டங்களை எதிர்ப்பது (மதங்களின் தனிநபர் சட்டங்கள் செய்வது போன்ற சட்டங்கள் ) இருக்க வேண்டும் அல்லவா? பா.ஜ.க. ஆதரிக்கிறது என்பதற்காகவே அதை எதிர்க்க வேண்டுமா? ஷா பானு சர்ச்சைக்குப் பிறகு செயல்பாட்டாளர்-அறிஞர் வசுதா தாகம்வார் ஒரு சிறிய புத்தகத்தைப் ‘பொதுச் சிவில் சட்டத்தை நோக்கி’ என்கிற தலைப்பில் எழுதினார். அதை இந்திய சட்ட அமைப்பு வெளியிட்டது. அதை அனைவரும் படிக்க வேண்டும் என்று நான் பரிந்துரைக்கிறேன். அந்நூல் பொதுச் சிவில் சட்டம் தொடர்பான விவாதத்தில் அறிவார்ந்த, தத்துவார்த்த வாதங்களைப் பொதுச் சிவில் சட்டத்துக்கு ஆதரவாக, அற்புதமாக எடுத்து வைக்கிறது. பொதுச் சிவில் சட்டத்துக்கான இயக்கத்தின் நோக்கத்தில் பொதுத்தன்மையை நாடு முழுக்கக் கொண்டுவந்து தேச ஒற்றுமையை வேகப்படுத்த விரும்புவது இருக்கிறது. இந்துத்வா கருத்தியலில் நம்பிக்கை உள்ளவர்கள் சிறுபான்மையினரை தொடர்ந்து திருப்திப்படுத்தவே பொதுச் சிவில் சட்டம் வரவில்லை என்று தொடர்ந்து குற்றப்பத்திரிக்கை வாசிக்கிறார்கள். கேள்வி என்னவென்றால் தொடர்ச்சியாக மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசுகள் வலதுசாரி இந்துக்கள் சொல்வது போலத் தொடர்ந்து பராமரித்து வந்தது என்றால் ஏன் இன்னமும் அவர்கள் பரம ஏழைகளாக, வறுமை சூழந்தவர்களாக இருக்கிறார்கள்/ தாகம்வார் ‘சிறுபான்மையினர் பராமரிக்கப்படவில்லை, அவர்களின் போலியான, சுயநலம்மிக்கத் தலைவர்கள் வேண்டுமானால் நன்றாக இருக்கலாம்.’ என்று எழுதுகிறார். தாகம்வார், ‘இஸ்லாமிய சமூகம் ஒற்றைப்படையானது அல்ல’ என்பதை அழுத்திச் சொல்கிறார். ஷா பானு தீர்ப்பு வந்த பொழுது அதனை எண்ணற்ற இஸ்லாமிய அறிவுஜீவிகள், பெண்ணுரிமை செயல்பாட்டாளர்கள் ஆதரித்தார்கள். அந்தக் குரல்கள் ‘இஸ்லாம் உச்ச நீதிமன்ற தீர்ப்பால் ஆபத்தில் உள்ளது’ என்று பெருங்குரல் கொடுத்த அடிப்படைவாதிகளின் சத்தத்தில் ஒடுங்கிப் போனது. ஷபனா ஆஸ்மி இப்பொழுது எழுதிய, வரிகளான’நெடுங்காலமாகப் பெண்கள் தனிநபர் சட்டம் என்கிற போர்வையில் கொடுமைப்படுத்தப்பட்டும், நீதி மறுக்கப்பட்டும் துன்புறுத்தப்படுகிறார்கள்’என்பதை ஏற்றுக்கொள்வார்கள். இஸ்லாமின் சிறந்த வரலாற்று அறிஞரான A.A.A.பைஸின் வரிகளைத் தாகம்வார் குறிப்பிடுகிறார். பரிணாமம் என்பது மனிதச்சமூகத்தோடு உடன் இணைந்து. இறந்துபோனவை, உயிரற்றவை தவிர வேறு எதுவும் நிலையானது அல்ல/ சட்டங்கள் எப்பொழுதும் ஒரே மாதிரி நிச்சயம் இருக்க முடியாது. மனுவின் சட்டங்கள் தீண்டாமையை அங்கீகரித்தன. அந்தக் கொடிய நடைமுறையை இந்திய அரசியலமைப்புச் சட்ட்டம் நீக்கியது. அதே போல, குரான் பலதார திருமணத்தை ஆதரிக்கிறதா இல்லையா என்பது தேவையற்றது. நம் முன் உள்ள கேள்வி பாலின சமத்துவத்தில் நவீன பார்வையைக் கொண்ட சமூகம் இவற்றை ஏற்க வேண்டுமா என்பதுதான். பொதுச் சிவில் சட்டத்துக்கு ஆதரவாக முன்வைக்கப்படும் இன்னுமொரு வாதம் சட்டத்தெளிவு ஆகும். தாகம்வார் சுட்டிக்காட்டுவது போல, "இந்திய சட்டமைப்பு பல்வேறு வகையான சட்டங்களை உருவாக்கி ஒரு புறம் சட்டங்களைக் கொண்டு உரிமைகளைத் தந்துவிட்டு, இன்னொரு புறம் மதத்தைக் கொண்டு அதே உரிமைகளைப் பறித்துக்கொள்வதைச் செய்கிறது’ A சில பெண்ணியவாதிகள் பொதுச் சிவில் சட்டத்தை அது இந்து சட்டங்களைச் சிறுபான்மையினர் மீது திணிப்பதாகச் சொல்லி எதிர்க்கிறார்கள். இந்த வாதம் உண்மைக்குப் புறம்பானது. ஐம்பதுகளில் கொண்டுவரப்பட்ட இந்து தனிநபர் சட்டங்களையே தற்போது நீட்டிக்க வேண்டும் என்று ஒருவர் கேட்கவில்லை. சட்டங்கள் காலத்துக்கும் ஒரே மாதிரி இருப்பவை அல்ல. அந்தச் சட்டங்கள் சில வகைகளில் குறைபாடுகள் கொண்டதாகவும், முழுமையற்றதாகவும் உள்ளதை நாம் உணர்ந்துள்ளோம். அறுபது வருடங்கள் ஆன நிலையில் இந்தியாவின் மிகச்சிறந்த சட்டத் துறை நிபுணர்கள் ஒன்றாக அமர்ந்து பொதுச் சிவில் சட்டத்தை முதன்மையான தத்துவங்களின் அடிப்படையிலும், சிறந்த அறிவின் அடிப்படையிலும் சீர்திருத்த வேண்டும்.. பாஜக பொதுச் சிவில் சட்டத்தைக் கோருவதாலேயே பல தாராள சிந்தனை கொண்டவர்கள் அதை எதிர்ப்பதாகத் தெரிகிறது. இப்படிப்பட்ட தடாலடி எதிர்வினைகள் துரதிர்ஷ்ட வசமானது. சமூகப் பழக்கங்களான திருமணம், விவாகரத்து, வாரிசுரிமை, சொத்துரிமை, தத்தெடுத்தல் முதலியவற்றைப் பொதுவான சட்டங்களைக் கொண்டு நெறிப்படுத்துவது அவசியம். இதை உலகின் சிறந்த சட்ட நடைமுறைகள், பாலின சமத்துவப் பார்வை ஆகியவற்றின் அடிப்படையில் செய்ய வேண்டும். – Ramachandra Guha மூலம்: http://www.telegraphindia.com/…/jsp/opinion/story_15128.jsp… மதம், அரசியல், வன்முறை- இந்துத்வா! ஜனவரி 13,2016 ராம் புனியானி அவர்கள் தொகுத்த ‘religion,power and violence’ என்கிற நூலை வாசித்து முடித்தேன். இந்துத்வ அரசியல் தன்னை எவ்வாறு சமகாலத்தில் வெளிப்படுத்திக் கொள்கிறது என்பதைப் பல்வேறு கோணங்களில் ஆராயும் நூல் இது. சோவியத் ரஷ்யா இருந்தவரை அதனை எதிரியாகக் காட்டி அமெரிக்கா உலக அரசியலில் இயங்கியது. அதன் வீழ்ச்சிக்குப் பிறகு எண்ணெய் வளமிகுந்த நாடுகளில் தன்னுடைய ஆதிக்கத்தைத் தொடரவும், உலகில் தன்னுடைய இருப்பைஉறுதிப்படுத்திக்கொள்ளவும் வசதியாக அதற்கு ‘இஸ்லாம் மீதான போர்’ என்பது பயன்பட்டது. இஸ்லாம் மதமே வன்முறைமயமானது போன்ற வாதங்களும், இஸ்லாமில் இருப்பவர்கள் தீவிரவாதிகள் என்கிற பார்வையும் முன்வைக்கப்பட்ட சூழலில் இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள் அந்நியர்கள் அவர்கள் ஆதிக்க இனமான இந்துக்களுக்கு அடங்கியே நடக்க வேண்டும் என்று இந்துத்துவாவின் முழக்கம் இன்னமும் வலுப்பெற்றது. இந்து மதத்தைப் பொறுத்தவரை மைய சனாதன மதம் சாய்பாபாவை பார்ப்பனமயமாக்கியது, பழங்குடியினர் தெய்வமான பூரி ஜெகன்னாதரையும் தனதாக்கிக் கொண்டது. சிறு தெய்வங்களைப் பெருதெய்வங்களாகவோ, அல்லது காணடிக்கவோ செய்தது. பக்தி இயக்கம் வடமொழியின் ஆதிக்கத்தில் இருந்து விலக்கி பக்தியை மக்களின் மொழிகளான தமிழ், அவாதி, மராத்தி ஆகியவற்றில் பரப்பியது. பிராமணிய எதிர்ப்பும் அதன் பேசுபொருளானது. ஒரே தெய்வம் உண்டு என்று அவை முழங்கின; இஸ்லாமிலும் இந்தியாவைப் பொறுத்தவரை சூபிக்கள் இந்த மண்ணின் கலாசாரக் கூறுகளை உள்வாங்கி இஸ்லாமை பரப்பினார்கள். ஜாதி எதிர்ப்பு, தீண்டாமை அழிப்பு என்பவற்றை முன்னிறுத்தி பக்தி இயக்கங்கள் தோன்றினாலும் உயிர்க்கொலையின்மை, ஒரே கடவுள் மீதான நம்பிக்கை என்று தங்களை அறியாமலே அவை காலப்போக்கில் சனாதன தர்மத்தை வலுப்படுத்தின. நேருவிய சோசியலிசம் மக்களின் வறுமையைப் போக்க பெருமளவில் தவறிய நிலையில் அதற்கு மாற்றான பொருளாதார முறையைக் காங்கிரசோ, இடதுசாரிகளோ முன்வைக்கவில்லை. காங்கிரசில் இருந்த எஸ்.கே.பாட்டீல் அப்படியொரு யோசனையை முன்னெடுத்த போதும், அடுத்து வந்த தேர்தலில் அவர் தோற்றுப்போனதால் அது சாத்தியமாகாமல் நின்று போனது. இடதுசாரிகள் தங்களுக்கான அரசியல் தருணங்களைக் கோட்டை விட்டார்கள். மக்களின் உரிமைகள் பறிக்கப்பட்ட நெருக்கடி நிலை காலத்தில் அவர்கள் பெருமளவில் அரசுக்கு ஆதரவு தந்தார்கள், அல்லது மவுனம் சாதித்தார்கள். விடுதலை இந்தியாவின் மிகப்பெரிய தொழிலாளர் போராட்டமான ரயில்வே ஊழியர் போராட்டம் இடதுசாரிகள் நடத்தியதில்லை என்பதைக் குறிப்பிட வேண்டும், ஜனசங்கம் மட்டுமே மதக்கலவரங்களுக்குக் காரணம் என்று ஒற்றைப்படையாக முடித்துவிட முடியாது. பிவாண்டி, சூரத், பீகார் ஷெரிப் ஆகிய இடங்களில் நடைபெற்ற கலவரங்களில் காங்கிரஸ் அரசுகளின் கைங்கரியம் உண்டு என்பது தான் உண்மை. உச்சபட்சமாக இந்திராவின் படுகொலையின் பின்னர்ச் சீக்கியர்கள் மீது திட்டமிட்ட படுகொலைகள் நிகழ்த்தப்பட்டது. ஒரு மாற்றுப் பொருளாதாரத்தை முன்வைக்காதது, காங்கிரசின் போலி மதச்சார்பின்மை ஆகியவை இந்துத்துவ அரசியலை வளர்த்தெடுக்கக் களம் அமைத்துக் கொடுத்தன. இஸ்லாம் வாளால் தான் இந்தியாவில் பரவியது என்று வலதுசாரிகள் தொடர்ந்து சொல்கிறார்கள். இந்து ஆலயங்களை அவர்கள் மதக்காரணங்களுக்காக அழித்தார்கள் என்று மட்டுமே அழுத்திச் சொல்லும் அவர்கள் அதில் பெரும்பாலும் கொள்ளையிடும் எண்ணமும், அரசியல் காரணங்களும் முந்தியிருந்தன என்பதை மறைக்கிறார்கள். காஷ்மீரின் அரசன் ஹர்ஷர், பர்மர் அரசனான சுபவர்மன் ஆகியோர் எண்ணற்ற இந்து, சமண ஆலயங்களை அழித்தது சொல்லப்படுவதில்லை. சிவாஜியின் கப்பற்படையில் முக்கியத் தளபதிகளான தௌலத் கான், சித்தி மிஸ்ரி, அவரின் அயலுறவு செயலர் முல்லா ஹைதர் என்று பலரும் இஸ்லாமியர்கள் என்பது சொல்லப்படாது. இந்துக்கள் இஸ்லாமியர்களால் பெருமளவில் மதமாற்றப்பட்டார்கள் என்கிற வாதத்தை நிருபிக்கும் புள்ளிவிவரங்கள் இல்லை, மாறாக இஸ்லாமியர்களின் ஆட்சி என்று பொதுவாகச் சொல்லப்படும் சுல்தானிய, முகலாய ஆட்சிக்குப் பின்னரே வெள்ளையர் காலத்தில் தான் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை பெருகியது. தென்னகத்தில் இஸ்லாம் வியபாரத்தாலும், வடக்கில் சூபிக்களாலும் பெருமளவில் பரவியது. இஸ்லாம் ஒற்றைப்படையான மதம் என்றும், அதில் எந்தப் பன்முகத்தன்மையும் இல்லையென்று தொடர்ந்து சொல்லப்படுகிறது. உள்ளூர் அரேபிய (இஸ்லாமுக்கு முந்தைய) கலாசாரங்களான சுன்னத், பழங்குடியின மரபுகள் சேர்க்கப்பட்டன. பல்வேறு இடங்களில் தேவதைகள், தீய ஆவிகள் ஆகிய மைய இஸ்லாமின் நம்பிக்கைக்கு மாறான கூறுகள் அந்தந்த பகுதிகளில் இணைந்து கொண்டன. ஆங்கிலேயர் தங்களின் இனமே உயர்ந்தது என்கிற போக்கில் வாதங்களைக் கிறிஸ்துவ மிஷனரிக்கள் மூலம் வைத்த பொழுது அதை எதிர்க்க ஒற்றைப்படையான இந்து மதத்தை உயர்ஜாதி குறிப்பாகப் பார்ப்பன அறிவுஜீவிகள் முன்னிறுத்தினார்கள். ஜேம்ஸ் மில் வரையறுத்த மதங்களின் அடிப்படையில் வரலாற்றைப் பிரித்துப் பார்க்கும் போக்கை உள்வாங்கிக் கொண்டார்கள். பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பண்பாடுகள் நிராகரிப்புக்கு உள்ளாகின. இந்துமதம் என்பது ஒற்றைப்படையானதாகச் சமைக்கப்படும் வேலைகள் துவங்கின. சூபி பிரிவு பௌத்தம், வேதாந்தம், யோகம் ஆகியவற்றின் பண்புகளை உள்வாங்கிக் கொண்டது. கபீர் பந்தி எனும் கபீரின் பிரிவு இந்து-முஸ்லீம்களை ஒன்று சேர்த்தது. சூபி துறவிகளான பிர்களை வழிபடுவதும் ஏற்பட்டது. இஸ்மாயிலிஸ் எனும் இஸ்லாமின் பிரிவு இந்து மதத்தின் பல்வேறு கூறுகளைத் தனதாக்கி கொண்டது. அதன் கோஜா பிரிவு ஓம் என்பதற்கு இணையாக அலி என்பதைக் குறிப்பிட்டது. கல்கி அவதாரம் அரேபியாவில் தோன்றியது என்றும் அறிவித்தது. குரானை அதர்வ வேதத்தோடு ஒப்பிடுவதும், நபிகளை மகாதேவருடனும், அலியை விஷ்ணுவுடனும் ஒப்பிடுவதும் அந்தப் பிரிவின் வழக்கமாக இருந்தது. வங்கத்தில் சூபிக்களும், வைணவ பக்தி இயக்கத்தினரும் ஜாதியை எதிர்த்தார்கள். மலாதார் பாசு எனும் காயஸ்த வகுப்பை சேர்ந்த கவிஞரை பர்பக் எனும் சுல்தான் ஸ்ரீ கிருஷ்ணவிஜயா நூலை எழுத ஆதரித்தார். ஈட்டன் எனும் வரலாற்று அறிஞர் இஸ்லாம் கான் எனும் முகலாய ஆளுநர் வங்கத்து இந்துக்களை மதமாற்றுவதை அனுமதிக்கவில்லை என நிறுவுகிறார். சத்யா பிர், மானிக் பிர் முதலிய துறவிகள் இரண்டு மதத்தவராலும் வங்கத்தில் வழிபடப்படுகிறார்கள். சுந்தரவனக்காடுகளில் பான் பீபி எனும் தெய்வம் இஸ்லாமியர், இந்துக்கள் இருவருக்கும் உரியவர். இஸ்லாமியர்கள் அந்தத் தெய்வத்துக்கு மூலிகை கிரீடம், பின்னப்பட்ட முடி, கழுத்து சங்கிலி, குர்தா, பைஜாமாக்கள் அணிவிக்கிறார்கள். இந்துக்களின் இடத்தில் அவள் கிரீடம், பிற ஆபரணங்கள் அணிந்து காணப்படுகிறாள். வடக்கு வங்காளத்தில் இந்துக்கள், இஸ்லாமியர்கள் இருவரும் கங்கை மாதாவை மீன்பிடிக்கப் போகையில் வழிபடுகிறார்கள். தக்ஷிண ரே என்கிற வனதெய்வமும் இருவரின் பொது வழிபாட்டுக்கு உரியது. சௌதி அரேபியாவின் இஸ்லாமியர்களைப் போல் அல்லாமல் மணிப்புரி இஸ்லாமியர்கள் பெற்றோரின் உடன் பிறந்தவரின் மகன்/மகளை மணக்கும் வழக்கமில்லை, கேரளாவின் மாப்பிள்ளைமார்கள் மத்திய ஆசியாவின் இஸ்லாமியர்களைப் போல் இல்லாமல் தாய்வழி மரபையே பின்பற்றுகிறார்கள். ஆர்.எஸ்.எஸ்.-ம், விடுதலைப் போராட்டமும்: இந்திய விடுதலைப் போரில் பங்காற்றியதாக ஆர்.எஸ்.எஸ். அமைப்பு சொல்லிக்கொள்கிற வகையில் அது பெரிதாக எதனையும் செய்யவில்லை என்பதோடு, ஆங்கிலேயருக்கு ஆதரவான போக்கையே பெரும்பாலும் எடுத்துள்ளது என்பதும் கசப்பான உண்மை. ஹெட்கேவார் ஆர்.எஸ்.எஸ். தலைவராக விடுதலைப் போரில் பங்காற்றினார் என்று சொன்னாலும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை ஆரம்பிப்பதற்கு முன்னர் ஒத்துழையாமை போராட்டத்தில் பங்குகொண்ட அவர் காந்தியின் வழிகாட்டுதலுக்கு மாறாக வக்கீல் வைத்து வாதாடி சீக்கிரமே சிறையில் இருந்து விடுதலை ஆனார். […] உப்புச் சத்தியாகிரகத்தில் பங்குகொண்ட பொழுது அங்கே சிறைக்குள் போய் அமைப்புக்கு ஆள் திரட்டவே அவ்வாறு சிறை புகுந்ததாக அவர் எழுதியுள்ளார். மற்ற எந்தப் புள்ளியிலும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டதற்கான சுவடுகள் எதுவுமில்லை. காங்கிரஸ் கட்சியை முஸ்லீம்களைத் திருப்திப்படுத்த செயல்படுகிற ஹிந்துக்களுக்கு எதிரான கட்சி என்று குற்றஞ்சாட்டிய ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் இந்தப் பிரிவினையைத் தூண்டிவிட்டு குளிர் காய்ந்த ஆங்கிலேயரை எதுவுமே விமர்சிக்கவில்லை என்பதும், கிறிஸ்துவர்களாக, இஸ்லாமியர்களாக மாறிய இந்நாட்டு மக்களை அந்நியர்கள் என்று கூறிவிட்டு, அவர்களை விட அதிக அந்நியமும், அயோக்கியத்தனமும் மிகுந்த ஆங்கிலேயருக்குச் சலாம் போட்ட சரித்திரம் ஆர்.எஸ்.எஸ். எனும் அற்புத அமைப்பினுடையது. பட்டியல் ஜாதியினர், பெண்கள்,பழங்குடியினர் ஆகிய விளிம்புநிலை மக்கள் சார்ந்து ஆர்.எஸ்.எஸ். செயல்படும் விதம் இன்னொரு அதிர்ச்சி அத்தியாயம். பட்டியல் ஜாதியினரை அம்பேத்கர் நவீன மனு என்றும், இந்தியாவில் தோன்றிய புத்த மதத்தில் இணைந்தவர் என்று சொல்லியும் இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்முறையில் பயன்படுத்திக்கொள்கின்றனர். குஜராத் படுகொலைகளில் பழங்குடியினர், தலித்துகள் ஈடுபடுத்தப்பட்டது இதற்கு ஒரு ஆதாரம். ரக்ஷாபந்தன், ராமநவமி முதலிய விழாக்கள் தலித் குடியிருப்புகளில் கொண்டாடுவது, ஜெய் பீம் என்று சொல்லி பாடம் நடத்த ஆரம்பித்து இஸ்லாமிய வெறுப்பு பிரச்சாரத்தோடு முடிப்பது இவர்களின் பாணி. அது ஏன் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு நாக்பூரில் எழுந்தது என்கிற கேள்வி எழலாம். இதற்கு ஆய்வாளர் பிரளய் கானுங்கோ பதில் தருகிறார்,’ மகாராஷ்டிராவில் படித்த ஆதிக்கச் சாதியினரில் (பார்ப்பனர் என்று வாசிக்க) நான்கில் ஒருவர் இங்கேயே இருந்தார்கள். இங்கே இருந்து ஹிதவாதா, மகாராஷ்டிரா முதலிய இதழ்கள் வெளிவந்தன. பல கல்விநிலையங்கள் இருந்தன. இடைநிலை சாதியினர் எழுச்சி பெற்றதால் போன்ஸ்லே முதலிய அரசர்களிடம் உயர் பதவிகளில் இருந்த பிராமணர்கள் எப்படியேனும் தங்களின் இடத்தை மீட்க விரும்பினார்கள். அம்பேத்கர் தலைமையில் பட்டியல் ஜாதியினர் திரண்டதும் அவர்களின் செயல்வேகத்தை அதிகப்படுத்தியது’. பழங்குடியினரை கிறிஸ்துவ மத மாற்றத்தில் இருந்து தாய்மதத்தை நோக்கி திருப்பி வனாஞ்சல் என்கிற பெயரில் களம் புகுந்தன சங்க பரிவாரங்கள். ஜார்கண்டில் உள்ள பலமு மாவட்டத்தில் இருந்தே அயோத்தியின் கரசேவைக்கு அதிகபட்ச பழங்குடியினர் அனுப்பட்டார்கள் என்கிற செய்தியை வாசிக்கிற பொழுது காலாட்படையாக அப்பாவிகள் எப்படி வலைவிரித்துச் சிக்கவைக்கப்படுகிறார்கள் என்கிற வேதனையே ஏற்படுகிறது. […] பாரதமாதா, கவ்மாதா, கங்காமாதா என்று பல்வேறு அடையாளங்களைக் கொண்டு நிகழ்த்திய விழாக்கள் தந்த உந்துதலில் தான் பாஜக கரசேவையில் ஈடுபட்டது. மேலும், குஜராத் ஜில்லா பரிஷத் தேர்தலில் 27% இடங்களை மட்டுமே வென்றதால் தான் முஸ்லீம் மீதான கலவரம் கட்டவிழ்த்து விடப்பட்டது. இதன் விளைவாகக் குஜராத்தில் பெரும் வெற்றியை பாஜக பெற்றது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கிறிஸ்துவர் என்பதால் அதைக்கொண்டும் கிறிஸ்துவ வெளிநாட்டு சக்திகள் இந்தியாவைக் கைப்பற்ற முயல்கின்றன என்று பிரச்சாரம் செய்தன இந்துத்வா அமைப்புகள். பெண்களுக்கு எதிரான வன்முறையில் இந்து, இஸ்லாமிய மத அடிப்படைவாதிகள் சற்றும் சளைத்தவர்கள் இல்லை. அறுபதாயிரம் பெண்களைக் கும்ப மேளாவில் ஆண்கள் விட்டுவிட்டுப் போனது நடந்தது. முட்டா என்கிற பெயரில் தற்காலிக திருமணங்களை இஸ்லாமிய குருமார்கள் நடத்துகிறார்கள். சதி முறையை ஆதரிக்கும் உலக அமைப்பின் தலைமையகம் சிக்காகோவில் உள்ளது. பொதுச் சிவில் சட்டம் என்பதில் இஸ்லாமியப் பெண்களை இணைக்காமல் அவர்களுக்கான சமத்துவத்தை அடிப்படைவாதிகள் தொடர்ந்து மறுக்கிறார்கள். பர்தா அணியும் வழக்கமில்லாத காஷ்மீர் பெண்கள் அவற்றை அணியும்படி கட்டாயப்படுத்தப்பட்டார்கள். அதை மீறிய மூன்று பெண்களை ரஜுவ்ரி மாவட்டத்தில் சுட்டுக்கொண்டார்கள். லஷ்கர் இத் தொய்பா அமைப்புக் காஷ்மீரில் பெண்கள் வேலைக்குப் போகக்கூடாது என்று அறைகூவல் விடுத்தது. தலித்துகளுக்கு எதிரான பார்வையையே தன்னகத்தே இந்துத்வா கொண்டுள்ளது. அகிலப் பாரதிய வித்யா பரிஷத் எனும் பரிவார அமைப்பு குரு சபைகள் நாடாளுமன்ற ஜனநாயகத்தின் இடத்தைப் பெற வேண்டும், பிராமணிய சமூக அமைப்பு ஏற்பட வேண்டும், ஏழைகளுக்கு ஓட்டுரிமை கூடாது, மேல்தட்டினருக்கு மட்டுமே இடஒதுக்கீடு தரவேண்டும், சிறுபான்மையினர் இரண்டாம் தரக்குடிமக்களாக நடத்தப்பட வேண்டும் என்று பல்வேறு ‘அற்புதமான’ கனவுகளை முன்வைத்தது. திலகர் காலத்தில் இருந்து சித்பவன பிரமணர்கள் பெஷ்வாக்கள் காலத்தில் தலித்துகளைக் கழுத்தில் துடைப்பத்தோடு, சட்டியோடும் அலையவிட்ட கொடிய காலத்தை நோக்கி திருப்பவே பேராவல் கொண்டார்கள். தாங்களே உயர்ந்த இனம் என்கிற இனப்பெருமையை வேறு திலகர் முன்வைத்தார். பூரி சங்கர மடத்தின் மடாதிபதி, மீண்டும் இந்து மதத்துக்கு வந்த பழங்குடியினர், தலித்துகள் மலிவான விலையில் கோயில்களைக் கட்டி அங்கே வழிபட வேண்டும், மற்ற இந்துக்களோடு மண உறவு வைத்துக்கொள்ளக் கூடாது என்று அறிவுறுத்தினார். வளர்ச்சியைக் கொண்டுவருகிறோம் என்று பேசினாலும் அது யாருக்கான வளர்ச்சியாக இந்துத்வா கனவு காண்கிறது என்பதையும் கணக்கில் கொள்ளவேண்டும். தொடர்ந்து பொதுச் சிவில் சட்டம் குறித்துப் பேசும் பலரும் இஸ்லாமியர் இடையே நடக்கும் பலதார திருமணங்களைச் சுட்டிக்காட்டுகிறார்கள். அதைச் சரி செய்யவேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை என்கிற அதே சமயம் வேறு சில கவலைதரும் தகவல்களையும் கணக்கில் கொள்ளவேண்டி இருக்கிறது. இந்தியாவில் அதிக இருதார திருமணங்கள் இந்துக்களிடையே காணப்படுகிறது. இருதார திருமணங்கள் செய்த ஆண்கள் சரளா முட்கல், ப்ரியா பாலா முதலிய வழக்குகளில் ஹோமம், சப்தபடி முதலிய பிராமணிய திருமணச் சடங்குகளைச் செய்து திருமணம் செய்து கொள்ளாததால் அவர்களின் இரண்டாவது திருமணம் திருமணமே அல்ல என்று கச்சிதமாகக் கணவன்மார்களை நீதிமன்றம் விடுவித்தது. ஷா பானுவுக்கு ஜீவனாம்சம் தர கோர்ட் உத்தரவிட்டும் ராஜீவ் காந்தி இஸ்லாமிய சட்டத்தை மீண்டும் பழமைக்குக் கொண்டு செல்லும் வகையில் சட்டம் இயற்றினார். ஆனால், தற்போதைய தீர்ப்புகள் அந்தச் சட்டத்தை இஸ்லாமிய பெண்களுக்குச் சாதகமாகக் கோர்ட் பயன்படுத்துகிறது என்பதைத் தெளிவாக்குகிறது. இஸ்லாமியர்கள் கல்வி கற்பது என்றாலே நமக்கு மதராஸாக்கள் மட்டுமே நினைவுக்கு வருகின்றன. ஆனால், ஷா வாலியுல்லா, சையது அகமது கான், தியோபந்திக்கள், அலிகார் பல்கலைக் கழகம், ஜமியா மிலியா இஸ்லாமியா என்று பல்வேறு நபர்கள், அமைப்புகள் இஸ்லாமியர்களிடையே கல்வியைக் கொண்டு சேர்க்க பாடுபட்டார்கள். மக்கள்தொகை கணக்கெடுப்பு உள்ள முப்பதுக்கு முந்தைய காலத்தில் மெட்ராஸ், வங்காளம் ஆகிய பகுதிகளில் இந்துக்களை விட இஸ்லாமியர்கள் அதிகச் சதவிகிதத்தில் கல்வி பெற்றுள்ளது புலனாகிறது. காரன்வாலிஸ் நிரந்தர நில சீர்திருத்தம் கொண்டுவந்து பல இந்துக்களை ஜமீன்தார்கள் ஆக்கி இஸ்லாமியர்களை வேலை இழக்க செய்தார். பாரசீகம் பெற்றிருந்த அதிகாரப்பூர்வ இடம் ஆங்கிலத்துக்கு வழங்கப்பட்ட பின்பு பல இஸ்லாமியர்கள் பணி இழந்தார்கள். விடுதலைக்கு முன்னால் பல்வேறு நிதி வளம் மிக்க, கல்வி அறிவு பெற்ற இஸ்லாமியர்கள் பாகிஸ்தான் சென்று சேர்ந்ததும் நடந்தது. இங்கே இந்தியாவில் இயங்கிய இஸ்லாமிய கல்வி இயக்கங்கள் மேல்தட்டு இஸ்லாமியர்ளான அஷ்ரப்களையே பெருமளவில் குறிவைத்தது. இன்றைக்கு ஒரு வலுவான தலைமை, மத்திய வர்க்கம் இல்லாமல் இஸ்லாமியர்கள் கல்வியில் பெருமளவில் பின்தங்கியிருக்கிறார்கள். தனிகா சர்க்காரின் ஆய்வுகள் பெண்கள் எவ்வாறு பாபர் மசூதி இடிப்புக்குப் பின்னர்க் கலவரங்களில் மகாராஷ்டிரா, குஜராத் மாநிலங்களில் பெருமளவில் இந்துத்வ அமைப்பினரால் ஈடுபடுத்தப்பட்டனர் என்று காட்டுகிறது. அம்பேத்கரின் மண்ணான மகாராஷ்ட்ராவில் தலித் தலைவர்களே ஜீவன்சக்தி-பீம்சக்தி என்று சொல்லி இந்துத்துவ சக்திகளோடு கைகோர்த்துள்ளார்கள். பல்வேறு பேராசிரியர்கள் எழுதியிருக்கும் இந்த நூல் வெளிவந்து பத்தாண்டுகள் ஆனதால் சில பகுதிகள் தேவைப்படததாகத் தோன்றலாம். மற்றபடி முக்கியமான ஒரு தொகுப்பு. விலை: 380 SAGE PUBLICATIONS RELIGION,POWER AND VIOLENCE-Expression of politics in contemporary times Edited by: Ram Punyani பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு கடிதம்! ஜனவரி 13,2016 பிரதமர் நரேந்திர மோடிக்கு கவிஞர். உமாதேவியின் கடிதம்: அன்புள்ள பிரதமருக்கு, உங்களின் பெயரை முதன்முதலில் கேள்விப்பட்ட நாள் எதுவென்று எனக்கு நினைவில் இல்லை. நான் என் கிராமத்துக்கு அருகில் இருந்த கல்லூரியில் முதலாமாண்டு படித்துக்கொண்டிருந்த பொழுது குஜராத் கலவரங்கள் நடைபெற்ற 2002-ல் தான் உங்களின் பெயர் என் காதுகளில் முதலில் விழுந்தது. நான் தமிழ்நாட்டின் திருவண்ணாமலைக்கு அருகில் உள்ள அத்திப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த முப்பது வயது கவிஞர். நான் கவிதை என்னுடைய தொழில் என்று குறிப்பிடுவது பெயருக்காக அல்ல, அதையே நான் பெரும்பாலான நேரம் மேற்கொள்கிறேன். அதுவும் கடந்த சில மாதங்களாக நான் வீட்டில், வேலை எதுவுமில்லாமல் இதைத்தான் செய்து கொண்டிருக்கிறேன். எனினும், கடந்த ஆண்டு எனக்கு மறக்க முடியாத ஆண்டு. நான் தமிழ் இலக்கியத்தில் முனைவர் பட்டத்தை அப்பொழுது தான் பெற்றேன். அதற்கு முந்தைய ஆண்டில் மெட்ராஸ் திரைப்படத்தில் நான் எழுதிய பாடல்களுக்காக நான்கு விருதுகளைப் பெற்றேன். ரஜினிகாந்த் நடிக்கும் கபாலி திரைப்படத்தில் என்னுடைய பாடல்கள் பயன்படுத்தப்படலாம். […] என்னுடைய சொந்த கிராமம் திருவண்ணமலைக்குப் பக்கத்தில் உள்ளது, அங்கே ஒரு தலித் குடும்பத்தில் நான் பிறந்தேன். நான் என்னுடைய தலித் குடும்பம் என்பதை அழுத்திச் சொல்ல காரணம், என் பால்யம், பள்ளிக்காலம், கல்லூரி வாழ்க்கை என்று எப்பொழுதும் இந்த அடையாளம் என்னைவிட்டு நீங்கவேயில்லை. என்னுடைய குழந்தைப் பருவத்தில் இருந்து பிறரைப் போல ஒரு வேலை வாங்கவேண்டும் என்பது மட்டுமே என்னுடைய கனவாக இருக்கவில்லை. ஆதிக்க ஜாதியினர் அதிலும் குறிப்பாக வன்னியர்களின் கொடுமைகளில் இருந்து தப்பித்து விட வேண்டும் என்று நான் ஏங்கினேன். வன்னியர்கள் பாட்டாளி மக்கள் கட்சி என்கிற அரசியல் கட்சியின் கீழ் அணி திரண்டிருக்கிறார்கள். ஆமாம்! உங்களின் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அதே பாமக தான்! ஒவ்வொரு முறை கலவரங்களைத் தூண்டிவிடுகிற பொழுதும், அவர்கள் எங்களின் வீடுகளை முதலில் எரிப்பார்கள், அடுத்து எங்கள் கால்நடைகளைக் கொல்வார்கள். அடுத்து எங்களின் மிதிவண்டிகள், மோட்டார் சைக்கிள்கள். பதினைந்து வருடங்களுக்கு முன்பு பள்ளி முடிந்து வீட்டுக்குத் திரும்புகையில் வன்னியர்கள் இருக்கும் கிராமத்தை நான் கடக்க நேரிடுகிற பொழுது என் மீது அவர்கள் கற்களை வீசிய நினைவுகள் இப்பொழுது மனதில் அலையடிக்கின்றன. விடுதலை சிறுத்தைகள் கட்சி எனும் தலித் கட்சியின் தலைவரான தொல். திருமாவளவனின் கரங்களை எங்கள் கிராமத்துக்கு வந்த பொழுது நான் பற்றிக்கொண்ட தருணம் தோன்றுகிறது. அதுவே ஒரு அரசியல்வாதியுடனான என் முதல் சந்திப்பு. அவர் எங்களுக்கு அளவில்லாத நம்பிக்கையை ஊட்டினார். அந்தப் பகைமை அதோடு முடியவில்லை. உங்களுடைய கூட்டணிக் கட்சியினர் தருமபுரியில் எங்கள் மீது வன்முறையைப் பலமுறை நிகழ்த்தினார்கள். அதோடு நிற்காமல் என் ஊருக்கு அருகில் உள்ள விழுப்புரத்திலும் அவர்களின் அட்டூழியங்கள் தொடர்ந்தன. என்னுடைய குடும்பத்தில், ஏன் என்னுடைய ஊரிலேயே முதன்முதலாக முறையாகக் கல்லூரி சென்று கல்வி கற்ற பெண் நான் தான். எங்கள் ஊரிலிருந்து முதுகலைப் பட்டம் பெற்ற முதல் பெண்ணும் நானே. இப்பொழுது நான் முனைவர் பட்டமும் பெற்றுவிட்டேன். இத்தனை வெற்றிகளுக்கும் என் பெற்றோர் அதிலும் குறிப்பாக என் தந்தை குப்பன் போற்றுதலுக்கு உரியவர். அவர்தான் என்னைக் கல்விக்காக நகரத்துக்கும், சென்னைக்கும் அனுப்பி வைத்தார். என் கிராமத்தார் அவற்றை எதிர்த்த பொழுது கல்வியின் நோக்கம் பணம் சம்பாதிப்பது அல்ல, விடுதலையடைவதே என்று அவர் விளக்கினார். கல்வி, கடின உழைப்பால் நான் ஒரு வேலையைப் பெற்றுவிடுவேன் என்று அவர் நம்பினார். நான் மகிழ்வோடும், அவர் அனுபவித்த கொடுமைகளில் இருந்து விடுவிக்கப்பட்டவளாகவும் வாழவேண்டும் என்று மட்டுமே விரும்பினார். நான் ஏன் ஒரு வேலையின்றி இருக்கிறேன் என்று உங்களிடம் சொல்லப்போகிறேன். நான் உடைந்து போயிருக்கிறேன். இந்தியாவில் உங்களின் திறமையை விடத் திரவியமே ஒருவரைக் காப்பாற்றும் என்று இப்பொழுது உணர்ந்திருக்கிறேன். நான் தேசிய தகுதித் தேர்வில்( NET) 2006-ல் வெற்றிப் பெற்றேன். இதற்கிடையில் ஒரு அரசு உதவி பெறும் கல்லூரியில் நான் தமிழ் விரிவுரையாளராக நான்கு வருடங்கள் பணியாற்றினேன். இந்தாண்டு சென்னைப் பல்கலைக்கழகம் நிரந்தரப் பணிகளுக்கான தேடுதலில் ஈடுபட்ட பொழுது நான் நிராகரிக்கப்பட்டேன். அந்தப் பணிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் NET தேர்வில் வெற்றி பெற்றிருக்கவில்லை, முனைவர் பட்டமும் ஈட்டியிருக்கவில்லை, அவர்கள் தேவையான கற்பித்தல் அனுபவம் என்கிற தகுதியையும் பெற்றிருக்கவில்லை. பின்னர் ஏன் நான் தேர்ந்தெடுக்கப்படவில்லை? ஒரு பணியிடத்துக்கான விலை இருபது லட்சம் என்று என்னிடம் சொன்னார்கள். என்னுடைய எல்லாத் தகுதிகளைத் தாண்டி, நான் இட ஒதுக்கீட்டை அனுபவிக்கும் ஒரு பட்டியல் ஜாதி பறையர் இனப்பெண் என்பதால் எனக்கொரு வேலை மறுக்கப்பட்டது. இது கவலை தரும் விஷயமில்லையா? இந்தாண்டு எனக்குக் கொடுமையான ஒன்றாக இருக்கிறது. என்னுடைய இரண்டாம் கவிதை தொகுப்பு வெளிவந்திருக்கிறது. ஆனால், என்னுடைய தற்போதைய நிலையை நினைத்து, நினைத்து நான் உறக்கமற்றுத் தவிக்கிறேன். அரசியல்வாதிகளும், அரசும் மக்களுக்குச் சேவை செய்யவே இருக்கிறார்கள். ஆனால், மக்களை அரசியல்வாதிகள் கட்டுப்படுத்தித் தங்களின் அடிமையாக்குகிறார்கள். சென்னை வெள்ளத்தின் பொழுது அரசியல்வாதிகள் தங்களை முன்னிறுத்திக் கொள்ள எப்படி நிவாரணப் பொருட்களின் மீது ஸ்டிக்கர்களை ஒட்டினார்கள் என்று நீங்கள் வாசித்திருக்கலாம். .தேசிய அளவிலும் நிலைமை ஒன்றும் சுமுகமாக இல்லை. உங்களின் அரசாங்கம் நீங்கள் செய்வது சரியா, தவறா என்று தெளிவாகப் பேசும் எழுத்தாளர்கள், அறிவுஜீவிகளை மதிப்பதில்லை என்று உங்களின் முகத்துக்கு நேராகவே சொல்கிறேன். தங்களின் விருதுகளைத் திருப்பித் தருவது எத்தனை வலிமிகுந்த ஒன்றாக அவர்களுக்கு இருந்திருக்கும். தமிழகத்தில் பெருமாள் முருகன், இன்னபிற எழுத்தாளர்களுக்கு நடந்ததும் சற்றும் வேறுபட்டதில்லை. அவர்கள் ஜாதி அமைப்புகளால் துன்புறுத்தப்பட்ட பொழுது, மாநில அரசு மாட்சிமை பொருந்திய உங்களைப் போல மௌனமாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டு இருந்தது. ஆர்எஸ்எஸ், பாஜக, இந்து அமைப்புகளுக்கு மட்டும் தனியான கடவுள் ஒருவர் இல்லை என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். உங்கள் கட்சியினரும், அரசும் எழுத்தாளர்கள், அறிவுஜீவிகளுக்கு எந்த மரியாதையும் தரவில்லை என்று தெரிந்த பொழுது அவர்களுக்காக நீங்கள் பேசினீர்களா? நான் இன்னமும் அப்படிப்பட்ட ஒன்றை என்னுடைய பிரதமரிடம் இருந்து எதிர்பார்க்கலாம் என்று நம்புகிறேன். உங்களைத் தனிப்பட்ட முறையில் நான் சந்திக்க முடிந்தால் இவற்றைச் சொல்லியிருப்பேன்: தலித்துகளாகிய எங்களுக்குத் தரப்படும் இட ஒதுக்கீடு தற்போதைய பட்டியல் ஜாதியினர், பழங்குடியினரின் மக்கள் தொகைக்கு ஏற்ப மறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும். மக்கள் வாழ மேம்பட்ட உலகுக்காக, சமத்துவத்துக்காகப் பாடுபடும் எத்தனையோ ஆத்மாக்கள் இருக்கிறார்கள். இந்தச் சமத்துவத்துக்கான தூதர்களைக் கவுரவிக்கும் வகையில் அண்ணல் அம்பேத்கரின் பெயரால் ஒரு சர்வதேச விருது ஏற்படுத்தப்பட வேண்டும். நீங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு எழுத்தாளர்கள் மீது தாக்குதல்கள் அதிகரித்து இருப்பதைக் கவலையோடு காண்கிறேன். தேசிய ஒருமைப்பாடு, அரசமைப்பு சட்ட விழுமியங்கள் ஆகியவற்றைக் காக்க நீங்கள் என்ன செயதீர்கேல் என்பதற்கான ஆதாரத்தைக் கேட்பேன். எனினும்,அம்பேத்கருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நவம்பர் 26-ஐ அரசமைப்பு சட்ட நாளாக அறிவித்தற்கும், அம்பேத்கருக்கு 150 அடி சிலை வைக்க முடிவு செய்திருப்பதையும் நான் பாராட்டுகிறேன். மேலும், ஒரு பாலியல் வன்புணர்வு நகரத்தில் நடந்தால் பொதுமக்கள் பெரும் கொதிப்புக்கும், கோபத்துக்கும் உள்ளாவதை காண்கிறோம். கிராமங்களில் பாலியல் வன்புணர்வை அனுபவிப்பவர்களின் நிலை என்ன என்று கவலைப்பட்டிருக்கிறீர்களா? நகர வன்புணர்வு, கிராம வன்புணர்வு என்கிற பாகுபாடு இல்லாமல் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை எதிர்கொள்ளப் பொதுச் சட்டம் இயற்றப்பட வேண்டும். இப்படிப்பட்ட வழக்குகளை உணர்வுப்பூர்வமாக அணுகாமல், சமூகவியல் பார்வையில் அணுக உங்களை வேண்டிக்கொள்கிறேன். நான் மரணத் தண்டனையை எதிர்க்கிறேன், தண்டிப்பதை விட சீர்த்திருத்தம் மேலானது என நான் உளமார நம்புகிறேன். நாம் குற்றாவளிகளை மாற்றமுடியும் என்று உலகுக்கும் காட்டுவோம். கண்ணுக்குக் கண் என இயங்குவது இந்த நாட்டைக் குருடாக்கும் என நீங்கள் அறிவீர்கள் என நம்புகிறேன். அற்புதமான ஆண்டாக இவ்வருடம் உங்களுக்கு அமைய என் நெஞ்சார்ந்த வாழ்த்துகள். மூலம்: http://googleweblight.com/?lite_url=http%3A%2F%2Findianexpress.com%2Farticle%2Fopinion%2Fcolumns%2Fcasteism-in-india-new-year-postcard-6-a-mute-spectator-to-inequality%2F&ei=1BXfqjI7&lc=en-IN&s=1&m=609&ts=1452579014&sig=ALL1Aj5YkdR1HVsIbb_uIUoNtBq-GiS-hg தமிழில்: பூ.கொ.சரவணன் கூட்டணி கூத்துக்களின் வரலாறு! ஜனவரி 14,2016 இந்தியாவில் கூட்டணி அரசியல் என்கிற அறிமுக நூலை வாசித்து முடித்தேன். கூட்டணி ஆட்சிகள் மத்தியில் நிலையற்ற ஆட்சியைத் தருகின்றன என்றும், அவை நிர்வாகத்தைச் சீர்குலைக்கின்றன எனவும் வாதங்கள் வைக்கப்படுகின்றன. இந்த நூல் கூட்டணி அரசியலின் நீள,அகலங்களைத் தொட்டுக்காட்டுகிறது. விடுதலைக்கு முந்தைய காங்கிரஸ் கட்சி ஆரம்பத்தில் மேல்தட்டு, நடுத்தர வர்க்கத்தினரின் கட்சியாகவே இருந்தது. அதைவிட்டு ஏழைகள், சிறுபான்மையினர், ஒடுக்கப்பட்ட மக்கள் அன்னியப்பட்டு நிற்கிறார்கள் என்பதை உணர்ந்த காந்தி வானவில் கூட்டமைப்பை போலக் காங்கிரசை உருவாக்கினார். பலதரப்பட்டவர்கள் காங்கிரசில் இருந்தபடியே இயங்க முடியும் என்கிற சூழலை விடுதலைக்கு முந்தைய காங்கிரஸ் இயக்கம் ஏற்படுத்திக் கொடுத்து இருந்தது. காந்தி, நேரு ஆகியோர் தேசியம் என்கிற சொல்லாடலை அதிகமாகவோ, அழுத்தியோ சொல்லாமல் இருந்ததற்குக் காரணம் ஐரோப்பிய பாணியில் இந்தியா என்கிற தேசத்தை ஒற்றைப்படையான தேசியத்தைக் கொண்டு கட்டமைத்து விடமுடியாது என்கிற புரிதல் இருந்ததே ஆகும். இந்திய அரசியலமைப்பு சட்ட உருவாக்கத்திலும் பல்வேறு தரப்பினரின் விருப்பங்கள், கவலைகள், கோரிக்கைகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு இந்திய அரசமைப்புச் சட்டம் எழுந்தது.. கூட்டாட்சி என்பது வெறுமனே அதிகார அதிகரிப்பு என்பதை மட்டும் இலக்காகக் கொண்டு அமைகின்றனவா, அல்லது கருத்தியல் காரணங்களும் உண்டா என்று இந்திய அளவில் பார்த்தால் சிக்கலான ஒரு பதிலே கிடைக்கிறது. சோசியலிச பாதையில் சென்றதாகச் சொல்லிக்கொண்ட காங்கிரஸ் இடதுசாரிகளோடு தன்னை இணைத்துக் காட்டிக்கொண்டதில்லை என்பதையும், இந்துத்வா என்று கோஷமிட்டாலும் ஆட்சியமைக்கக் குறைந்தபட்ச செயல்திட்டத்தில் அதனைத் தள்ளிவைக்கப் பாஜக தயங்கியதில்லை என்பதையும் குறிப்பிட வேண்டும். இடதுசாரிகள் மட்டும் மேற்கு வங்கத்தில் மார்க்சியம் என்கிற கோட்பாட்டின் அடிப்படையில் இணைந்திருந்தார்கள் எனலாம். ராம் மனோகர் லோகியா தான் காங்கிரசுக்கு எதிரான பலரையும் இணைத்துக் கொள்ளும் கூட்டணியை அமைக்க அடித்தளமிட்டார். எப்படி இடதுசாரிகளான சோசியலிஸ்ட்கள், கம்யூனிஸ்ட்கள் ஆகியோரோடு ஜனசங்கத்தினர் இணைந்து பணியாற்ற முடியும் என்கிற வினா எழுப்பப்பட்ட பொழுது, ‘தீவிர இடதுசாரியான கிருஷ்ண மேனன், தீவிர வலதுசாரியான எஸ்.கே.பாட்டீல் ஆகிய இருவரும் ஒரே காங்கிரஸ் கட்சிக்குள் இருக்கின்ற பொழுது இது ஏன் சாத்தியப்படக்கூடாது?’ என்று அவர் வினவினார். லோகியாவின் முயற்சிகள் பலனைத் தந்தன. 67-க்கு பிந்தைய தேர்தல்கள் காங்கிரஸ் பல்வேறு மக்களின் விருப்பங்களைப் பெரும்பாலும் பிரதிபலிக்கும் கட்சி என்கிற இடத்தை இழந்து கொண்டிருந்தது என்பதைக் காட்டின. அந்தாண்டு மிகவும் மெல்லிய பெரும்பான்மையை மத்தியில் காங்கிரஸ் பெற்றது என்றாலும் ஒன்பது மாநிலங்களில் ஆட்சியை இழந்திருந்தது. தமிழகத்தைத் தவிர மற்ற மாநிலங்களில் இந்த ஆட்சிகள் நிலைக்கவில்லை என்பது தனிக்கதை. லோகியாவின் அடியொற்றி ஜெயபிரகாஷ் நாராயணன் ஆண் பெண் சமத்துவம், நிற, ஜாதி ரீதியான வேறுபாட்டை ஒழித்தல், அழிவைத் தரும் ஆயுதங்கள் எதிர்ப்பு, காலனியாதிக்கம்,. அந்நிய ஆட்சி எதிர்ப்பு முதலிய ஏழு கொள்கைகளைக் கொண்டு சப்தக்ரந்தி என்கிற பெயரில் தன்னுடைய செயல்திட்டத்தை முன்மொழிந்தார். நெருக்கடி நிலைக்குப் பின்னர்ப் பல்வேறு தரப்பினரும் இந்திரா எதிர்ப்பு என்கிற புள்ளியிலும், ஜனநாயக மீட்பு ஆகியவற்றுக்காகவும் ஜனதா கட்சியின் கீழ் ஒன்றுசேர்ந்தார்கள். ஆட்சி அமைத்த பிறகு, ஆர்.எஸ்.எஸ். ஜனதா கட்சி இரண்டிலும் உறுப்பினராக இருக்கக் கூடாது என்கிற சிக்கலில் ஆட்சியை மொரார்ஜி தேசாய் இழக்க நேரிட்டது. வி.பி.சிங் காலத்தில் ஒருபுறம் இடதுசாரிகள், இன்னொருபக்கம் பாஜக ஆகிய இருவரும் வெளியில் இருந்து ஆதரவு தர அவர் ஆட்சியமைத்தார். அடுத்துக் காங்கிரஸ் ஆதரவில் தேவகவுடா, குஜ்ரால் ஆகியோர் பிரதமர் ஆனார்கள். இந்த இரண்டு ஆட்சிகளும் காங்கிரசின் ஆதரவு விலக்கலால் கவிழ்ந்தன. பல்வேறு கட்சியினரை இணைத்துக் கொண்டு பாஜக தன்னுடைய தீவிர வலதுசாரி முகத்தைத் துறந்து தேர்தலை எதிர்கொண்டு வென்றது. அடுத்தத் தேர்தலில் யாருக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காமல் போனாலும் இடதுசாரிகளின் ‘மதவெறி சக்திகளை’ ஆட்சிக்கு வராமல் தடுக்கும் இலக்கால் காங்கிரஸ் ஆட்சிக்கட்டில் ஏறியது. அடுத்தத் தேர்தலில் காங்கிரஸ் அதன் கூட்டணியினர் குறிப்பிடத்தகுந்த வெற்றிப் பெற்றது நிகழ்ந்தது. 1967 தேர்தலில் தான் எண்ணற்ற கூட்டணி ஆட்சிகள் மாநில அளவில் சாத்தியமானது. தமிழகத்தில் மட்டும் திமுக அறுதிப் பெரும்பான்மை பெற்றதால் கூட்டணி ஆட்சி இங்கே ஏற்படவில்லை. முக்கியமான சில மாநிலங்களில் எப்படிக் கூட்டணி ஆட்சி இயங்கியது என்று காண்பது சுவையாக இருக்கக்கூடும். மேற்கு வங்கம்: மேற்கு வங்கத்தில் ஐக்கிய முன்னணி என்கிற பெயரில் சிபிஐ(எம்) கருத்தியல் ரீதியாக வேறுபட்டவர்களோடு கூட்டணி வைத்துக் கொண்டு ஆட்சியமைத்தார்கள். சிபிஐ, பார்வர்ட் ப்ளாக், புரட்சிகரச் சோசியலிச கட்சி ஆகியவற்றோடு காங்கிரஸ் கட்சியை விட்டு விளங்கி பங்ளா கட்சியைத் துவக்கிய எம்.எல்.ஏக்கள் என்று கலவையான கூட்டணியாக அந்த ஆட்சி இருந்தது. அஜோய் முகர்ஜி தலைமையிலான அரசு சிறப்பான நீர்ப்பாசனம், நிலப்பகிர்வு, கல்லூரிகளில் இடப்பெருக்கம், நீதிமன்ற தீர்ப்புகளை மதித்தல் என்று பல தளங்களில் சிறப்பாக இயங்கினாலும் எண்ணற்ற உட்கட்சி பூசல்களும், கூட்டணிப் பிளவுகளும் இருந்தன. கூட்டணியில் இருந்த காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் பிரிந்து போய்ப் பி.சி.கோஷ் காங்கிரஸ் ஆதரவோடு ஆட்சியமைத்தார். மூன்றே மாதத்தில் காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்த்தது. உத்திர பிரதேசம்: காங்கிரசின் வீழ்ச்சியைச் சோசியலிஸ்ட்கள், ஜனசங்கத்தினர் இங்கே பயன்படுத்திக்கொண்டனர். ஆனால், அறுதிப்பெரும்பான்மைக்கு இடதுசாரிகளின் ஆதரவு தேவைப்பட்டது. ஆரம்பத்தில் ஒத்துவராதே எனத் தயங்கினாலும் பீகாரில் இடதுசாரிகள், ஜனசங்கம் இணைந்து மகாமாயா பிரசாத் சிங்கை முதல்வர் ஆக்கியதைப் போல உத்திர பிரதேசத்தில் காலம் கனிந்தது. காங்கிரசை பிளவுபடுத்திக் கொண்டு ஜன் காங்கிரஸ் என்கிற கட்சியைத் துவங்கிய சரண் சிங் அதனோடு ஜனசங்கம், சம்யுக்தா சோசியலிச கட்சி, சுதந்திரா, இடதுசாரிகள், ஜனநாயக கட்சி, சுயேட்சைகள் என்று அனைவரையும் இணைத்து சம்யுக்தா வித்யாக் தளம் என்கிற பெயரில் கூட்டணி அமைத்தார். உத்திர பிரதேசத்தின் முதல் காங்கிரஸ் அல்லாத முதல்வர் ஆனார். கூட்டணி என்பதன் உண்மையான பொருள் இங்கேதான் வெளிப்பட்டது. பிற கட்சியினரையும் ஆட்சியில் இணைத்துக்கொண்டதோடு, அக்கட்சியின் தலைவர்களே யார் அமைச்சராக வேண்டும் என்று தேர்ந்தெடுக்கும் உரிமையையும் தந்தார். 19 அம்ச குறைந்தபட்ச செயல்திட்டத்தை அறிவித்தார்கள். நில வரியை நீக்குவது, அரசு உதவி பெறும் பள்ளிகளில் வேலை செய்யும் ஆசிரியர்களுக்கு அரசு ஆசிரியர்களுக்கு இணையான சம்பளம், உணவு தானியங்கள், நுகர்வுப் பொருட்கள் ஆகியவற்றின் விலையைக் கட்டுக்குள் வைத்திருப்பது என்று பட்டியல் நீண்டது. நில வரியை நீக்க வேண்டும் என்கிற லோகியாவின் அழுதத்தை நடைமுறை சாத்தியம் இல்லாதது என்று சரண் சிங் ஏற்க மறுத்தார். அதனோடு இந்துத்வா அரசியலை முன்னெடுப்பதாக ஜனசங்கத்தைக் கூட்டணியின் பிறகட்சியினர் விமர்சித்தார்கள். எல்லாமும் முட்டிக்கொண்டு சரண்சிங்கின் ஆட்சி சீக்கிரமே கவிழ்ந்தது.   மத்திய பிரதேசம்: மற்ற மாநிலங்களைப் போல இல்லாமல் மூன்று வெவ்வேறு வடிவங்களில் கூட்டணி ஆட்சிகள் ஏற்பட்டு ஐந்தாண்டை இங்கே நிறைவு செய்தன. முதல் இரண்டும் சம்யுக்தா வித்யாக் தளம் தலைமையிலும், மூன்றாவது காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியாக அமைந்தது. ஹரியானா: இடைநிலை சாதியினர் குறிப்பிடத்தகுந்த சக்தியாக மாறிவருகிறார்கள் என்பதன் அடையாளமாக ஹரியானாவின் அரசியல் போக்கு இருந்தது. பகத் தயாள் சர்மா, ராவ் பிரேந்திர சிங் என்கிற இரு கோஷ்டியாகக் காங்கிரஸ் பிரிந்து கிடந்தது. இருவரும் ஆதிக்க ஜாதியை சேர்ந்தவர்கள். சர்மா முதல்வராக ஆன அடுத்த நாளே தன்னுடைய ஆதரவாளர்கள் பலர் தோற்க அவரே காரணம் என்று கறுவிக்கொண்டு பதினான்கு எம்.எல்.ஏக்களோடு கட்சியைவிட்டு வெளியேறினார் பிரேந்திர சிங். ஆட்சி கவிழ்ந்து தேர்தல் வந்தது. […] காங்கிரஸ் கட்சியில் ஜாட் வகுப்பை சேர்ந்த பன்சி லால் சர்மாவுக்குப் பதிலாகக் கட்சியின் முகமாக முன்னிறுத்தப்பட்டார். பன்சி லால் ஆதரவோடு சர்மா காங்கிரஸ் தலைவராகவாது ஆகலாம் எனப் பார்த்தார். அதற்கும் வழியில்லை எனக் கைவிரித்தார் பன்சிலால். ஆதிக்க ஜாதியினர், இடைநிலை ஜாதியினர் இருவரையும் இணைத்துக் கூட்டணி அமைத்த பன்சிலால் முதல்வர் ஆனார். அவருக்கு ஜனசங்கம் வெளியில் இருந்து ஆதரவு தந்தது. கேரளா: கேரளாவில் முதல் தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியைக் கைப்பற்றியது. ஈழவர்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள், நாயர்கள் என்று நான்கு பிரிவினரும் குறிப்பிடத்தகுந்த வாக்குவங்கியோடு இருந்தார்கள். சிபிஐ, முஸ்லீம் லீக் ஆகியோரோடு கூட்டணி அமைத்து அறுபத்தி எழில் நம்பூதிர்பாட் ஆட்சி நடத்தினார். கூட்டுக் கலந்தாலோசனை குழு ஒன்று அமைக்கப்பட்டது. அதில் மார்க்சிஸ்ட் கட்சியின் விருப்பங்கள், பல்வேறு கட்சிகளின் விருப்பங்கள், சமூகக் குழுக்களின் விருப்பங்கள் மோதிக்கொள்ளச் சிக்கலானது.ஒரு பல்கலையை முஸ்லீம்கள் அதிகமுள்ள கோழிகோடில் முஸ்லீம் லீக் பெற்றதோடு, தனியான மாவட்டமாக முஸ்லீம்கள் அதிகமுள்ள மலப்புரத்தை பெற்றது. இதை அயோக்கியமான அரசியல் என்று சிபிஐ விமர்சித்தது. நிர்வாகம் என்பதில் கவனம் செலுத்த முடியாத அளவுக்குச் சீர்கேடும், சண்டையும் ஊழலும் பெருகிற்று. ஊழல்வாதிகளான அமைச்சர்களை நீக்க வேண்டும் என்று நம்பூதிரிபாட்டுக்கு அழுத்தம் தந்தது முஸ்லீம் லீக். ‘முடியாது, வேண்டுமென்றால் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்து கொள்ளுங்கள்!’ என நம்பூதிரிபாட் சொன்னதைச் செய்து காண்பித்தார்கள் எதிர்க்கட்சிகள். ஏழு கட்சிகளோடு கூட்டணி அமைத்து அடுத்தத் தேர்தலை அவர் சந்தித்தார் என்றாலும் ஏற்கனவே சிறப்பாக ஆட்சி செய்த வரலாற்றைக் கொண்டிருந்த உள்ளூர் காங்கிரஸ் கட்சி 111 இடங்களில் வென்று அசத்தியது. எண்பதுகளில் இருந்து காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சி இரண்டுமே முறைய ஐக்கிய ஜனநாயக முன்னணி, இடதுசாரி ஜனநாயக முன்னணி என்கிற பெயரில் கூட்டணிகள் அமைத்து தேர்தலை கேரளாவில் எதிர்கொண்டன. இன்னுமொரு முக்கியமான விஷயம் எண்பதுகளில் இருந்து மதவாத கட்சி என்று சொல்லி முஸ்லீம் லீகை தன்னுடைய கூட்டணியில் சேர்க்க மார்க்சிஸ்ட் கட்சி மறுத்துவிட்டது. இந்த 67-70 வரையிலான காலத்தில் இந்தியாவில் சுமார் எண்ணூறு எம்.எல்.ஏக்கள் கட்சித் தாவினார்கள். அவர்களில் 155 பேர் அமைச்சர்களாக ஆனார்கள் என்பது எப்படிப்பட்ட கொதிப்பான அரசியல் களமாக இக்காலம் இருந்தது என்பதைக் காட்டும். எப்படியேனும் பதவியில் இருக்கவேண்டும் என்று தாவிக்கொண்டே இருக்கும் ஆட்களைக் குறிக்க ‘ஆயா ராம், காயா ராம்’ என்கிற நையாண்டி சொல்லாடல் உண்டானது. மூன்றாவது அணி: பாஜகவின் அரசியல் பிரவேசத்துக்குப் பிறகு காங்கிரஸ், பாஜக அல்லாத கட்சிகள் இணைந்து அமைத்த மாற்று அணியை மூன்றாவது அணி என்று குறிக்கலாம். எண்பத்தி எட்டில் காங்கிரசுக்கு எதிரான கட்சிகள் தேசிய முன்னணி என்கிற பெயரில் ஒன்று சேர்ந்தன. இந்த முன்னணி மூன்று படிகளில் வளர்ச்சி அடைந்தது என்கிறார் பிபன் சந்திரா. முதல் கட்டத்தில் இடது, வலது என்று அல்லாமல் ‘சென்டர்’ வகையைச் சேர்ந்த காங்கிரஸ் அல்லாத மதச்சார்பற்ற கட்சிகள் கூட்டணிக்குள் வந்தன. அதற்குப் பிறகு இடதுசாரிகள் அல்லாத கட்சிகள் இணைத்துக்கொள்ளப்பட்டன. பாஜக, இடதுசாரிகளோடு தேர்தல் புரிந்துணர்வு ஏற்படுத்திக்கொண்டதோடு, பாஜகவோடு எண்பத்தி ஐந்து சதவிகித இடங்களில் நேரடிப் போட்டியை தேசிய முன்னணியினர் தவிர்த்தார்கள். அறுதிப் பெரும்பான்மை இல்லாமல் போனாலும் இடது, வலது என்று இருதரப்பின் ஆதரவோடு ஆட்சி அமைத்து, வாராவாரம் இருசாராரையும் சந்தித்து ஆட்சியை நடத்தினார் வி.பி.சிங். பாஜகவை தேசிய முன்னணிக்குள் கொண்டு வராதது, இடதுசாரிகள், பாஜக இரண்டையும் அமைச்சரவையில் சேர்க்காதது ஆகியன வி.பி.சிங் செய்த தவறுகள் என்று ஜார்ஜ் பெர்னாண்டஸ் பின்னாளில் தெரிவித்தார். தேவி லாலின் மகன் தேர்தல் முறைகேட்டில் ஈடுபட்டுப் பதவி துறக்க அவரும் ராஜினாமா செய்யவேண்டிய சூழல் ஏற்பட்டது. சந்திரசேகர் தனக்கு ஆட்சிக்கட்டில் வந்து சேராதா என ஏங்கினார். அத்வானியின் ரத யாத்திரை வி.பி.சிங்கின் ஆட்சியை முடித்துவைத்தது. வி.பி.சிங் கூட்டணியினர் யாரையும் கலந்தாலோசிக்காமல் மண்டல் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்தினார். அதற்குப் பின் வெவ்வேறு கணக்குகள் இருந்தன. ஆதிக்க ஜாதியினரே அதிகாரப் புள்ளிகளாக இருக்கும் காங்கிரஸ், பாஜக இரண்டும் மண்டல் கமிஷனை விரும்பாவிட்டாலும் அப்பட்டமாக எதிர்க்க மாட்டார்கள் என்று அவருக்குத் தெரியும். இந்துத்வா அரசியலை முன்னெடுத்து சொல்லும் அத்வானியை எதிர்கொள்வது, பிற்படுத்தப்பட்ட மக்களின் ஓட்டுக்களை அள்ளுவது, கிராமவாசிகள்-நகரவாசிகள் என்கிற அரசியலை கலவரமாக்க முயன்றுகொண்டிருந்த தேவிலாலின் திட்டத்தைப் பிசுபிசுக்க வைப்பது ஆகியவே அக்கணக்குகள். மேலும், ஆதிக்க ஜாதியினர் வசமிருக்கும் ஜனநாயக மையங்களின் கட்டுப்பாட்டை நகர்த்தும் பணியைச் செய்யும் காலம் வந்துவிட்டது என்றும் வி.பி.சிங்குக்குத் தெரியும். தேசிய அளவிலான எழுச்சி என்று சொல்லாவிட்டாலும் அது பல்வேறு இடங்களில் பல்வேறு வகைகளில் இடைநிலை ஜாதியினரை வலுப்படுத்தியதோடு ஆட்சிப்பீடம் நோக்கி செலுத்தியது. மேலும், தேசிய வளர்ச்சி கவுன்சில், அனைத்து மாநில கவுன்சில்கள் உருவாக்கப்பட்டுப் பலப்படுத்தப்பட்டன. ஆறு வருடத்துக்குப் பிறகு மீண்டும் எந்தக் கட்சிக்கும் அறுதிப்பெரும்பான்மை இல்லாத சூழலில் கூட்டாட்சி, மதச்சார்பின்மை, ஒடுக்கப்பட்டோர் நலன், பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றைக் குறிக்கோள்களாகக் கொண்டதாகச் சொல்லிக்கொண்ட ஐக்கிய முன்னணி ஆட்சிக்கு வந்தது. அதிகம் பிரபலமாக இல்லாத தேவ கவுடாவை பிரதமர் ஆக்கியது அக்கூட்டணி. காங்கிரசின் அழுத்தமும் காரணம். இடதுசாரிகள் பாஜக ஆட்சிக்கு வராமல் தடுக்கும் பொருட்டுப் பெரும்பாலும் எதிர்த்துவந்த காங்கிரசுடன் சேர்ந்து ஐக்கிய முன்னணிக்கு ஆதரவு தந்தார்கள். அடுத்தத் தேர்தலில் அதுவரை தன்னோடு கருத்தியல் ரீதியாக ஒத்துப்போன சிவசேனா முதலிய கட்சிகளோடு மட்டுமே கூட்டணி என்பதில் இருந்து இறங்கி வந்து திமுக, தெலுங்கு தேசம் முதலிய பல்வேறு கட்சிகளோடு கூட்டணி அமைத்த பாஜக அறுதிப் பெரும்பான்மையைப் பெற்றது. எந்தச் சிக்கலுமில்லாமல் ஆட்சி நடக்கத் தன்னுடைய தீவிர இந்துத்வ கொள்கைகளை அக்கட்சி ஓரமாக வைத்துவிட்டு ஒருங்கிணைப்பாளர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் உடன் ஒத்துழைத்து தேசிய ஜனநாயக கூட்டணி ஐந்தாண்டுகள் ஆட்சி செய்ய வழிகோலியது. குஜராத் படுகொலைகளுக்குப் பிறகு வந்த நாடாளுமன்ற தேர்தலில் ஆறு வருடங்களுக்கு முன்னர்ப் பஞ்ச்மாரியில் கூட்டணி அமைத்து ஆட்சியில் அமர்வது என்கிற பேச்சுக்கே இடமில்லை என்கிற தன்னுடைய தீர்மானத்தைத் தூக்கி வீசிவிட்டு கூட்டணி ஆட்சிக்கு தயார் என அறிவித்தது காங்கிரஸ். அதிமுக, காங்கிரஸ் பேச்சுவார்த்தை முறிந்து திமுகவோடு அது கைகோர்த்தது. ஆந்திராவில் முப்பதுக்கும் மேற்பட்ட இடங்கள் கிடைத்ததோடு, தமிழகத்தில் கிடைத்த முழு வெற்றி காங்கிரசை இடதுசாரிகளின் மதவெறி சக்தி எதிர்ப்புக் கொள்கையால் கிடைத்த ஆதரவு ஆட்சிக்கட்டில் ஏற்றியது. இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் இடதுசாரிகள் ஆதரவை விளக்கிக் கொள்ளக் காரணமானாலும், நல்ல ஒரு ஆட்சியைத் தருவதற்கு இடதுசாரிகளின் மேற்பார்வை, ஆலோசனைகள், வழிகாட்டுதல் ஆகியன பயன்பட்டன. அடுத்தத் தேர்தலில் தன்னுடைய பாரம்பரிய ஓட்டு வங்கியான நடுத்தர வர்க்கத்தினர், ஆதிக்க ஜாதியினர், நகர்ப்புற மக்கள் ஆகியோரிடம் தன்னுடைய செல்வாக்கை பாஜக காக்கத் தவறியது, ஏற்கனவே சிறப்பாக ஆட்சி செய்த ஐந்து வருடங்கள் ஆகியன காங்கிரசை மீண்டும் ஆட்சிக்கு கொண்டுவந்தன. இடதுசாரிகள் தான் பலத்த அடி வாங்கியிருந்தார்கள். கூட்டணி ஆட்சி தான் இனிமேல் இந்தியாவின் தலைவிதி என்று கருதப்பட்ட சூழலில் வளர்ச்சி, புது நம்பிக்கை, மிதவாத மதவாதம் ஆகியவற்றை இணைத்து மோடி தனிப்பெரும்பான்மையை முப்பது வருடங்கள் கழித்துப் பெற்றுக் காட்டினார். கூட்டணி அரசியல் இன்னமும் புரிபடாத புதிர்தான்! இந்தக் கூட்டணி ஆட்சிகள் முழுக்க இந்தியாவின் வளர்ச்சிக்கு எதிரானவை என்கிற வாதம் சரியல்ல. காங்கிரஸ் பல்வேறு மொழியினர், ஜாதியினர் ஆகியோரின் அச்சங்கள், தேவைகள் குறித்துப் பெரிதாகச் செவிமடுக்காத சூழலில் தான் பிராந்தியக் கட்சிகள் செல்வாக்கு பெற்றன. கூட்டாட்சி தத்துவம் இவற்றால் பெருமளவில் பலம் பெற்றது என்பதும், 356 சட்டப்பிரிவு கண்மூடித்தனமாகப் பயன்படுத்துவது குறைந்ததும், பிரிவினைவாதிகள் என்று அடையாளம் காட்டப்பட்டவர்கள் நிர்வாகத்தில் செம்மையாக ஈடுபடும் ஜனநாயக பரவலும் சாத்தியமானது என்பதிலேயே இந்தியா மாதிரியான பன்முகத்தன்மையும், வேறுபாடுகளும் நிரம்பிய நாட்டுக்கு கூட்டணி ஆட்சியின் அவசியத்தை, தேவையை உணரலாம். ஆசிரியர்: BIDYUT CHAKRABARTY OUP வெளியீடு விலை: 295 பக்கங்கள்: 214 இந்தியாவை எதிர்பார்த்தல்! பாகம் -1 ஜனவரி 20,2016 சேகர் குப்தா இந்தியாவின் குறிப்பிடத்தகுந்த பத்திரிக்கையாளர்களில் ஒருவர். இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழின் ஆசிரியராக பதினெட்டு வருடங்கள் கோலோச்சியவர். தீர்க்கமான இதழியலுக்கு பெயர் போன அவர் ‘NATIONAL INTEREST’ என்கிற பெயரில் ஒவ்வொரு சனிக்கிழமையும் பத்தி ஒன்றை தொடர்ந்து எழுதி வருகிறார். அதிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் மட்டும் ‘ANTICIPATING INDIA’ என்கிற பெயரில் தொகுக்கப்பட்டு இருக்கிறது. அந்தக் கட்டுரைகளின் சாரமாக இந்த நூல் அறிமுகம் அமையும். இரண்டு பகுதிகளாக அமையும் இந்த நூல் அறிமுகத்தின் முதல் பாகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்காலம், ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் எழுச்சி, முதல் ஆட்சிக்காலம் ஆகியவைக் குறித்து மட்டும் காண்போம். சேகர் குப்தாவின் முன்னுரையே ஒரு சுவாரசியமான நாவலை நினைவுபடுத்துகிறது. தான் மெத்த தெரிந்த மேதாவி என்கிற தொனியில் எழுதுபவர்களுக்கு நடுவே அரசியல்வாதிகளிடம் தான் கற்றுக்கொண்ட பாடங்களைக் கொண்டே தன்னுடைய முன்னுரையை அவர் துவங்குகிறார். இந்தியாவின் அரசியலின் போக்கை எப்படி ஒருவர் புரிந்துகொள்வது அல்லது விளக்குவது? ராஜீவின் ஊழல்மயமான காங்கிரசை ஆட்சியை விட்டு விலக்கி வைக்க இடதுசாரிகள், பாஜக இருவரும் வி.பி,சிங்குக்கு ஆதரவு தந்தார்கள். ஆனால், அதே இடதுசாரிகள் காங்கிரசுடன் கூட்டணி சேர்ந்து பாஜகவை ஆட்சியை விட்டு தள்ளி வைத்தார்கள். தேவகவுடா, குஜ்ரால் பிரதமர்கள் ஆவது இதனால் சாத்தியமானது. காங்கிரஸ் ஆட்சிக்கு வர இடதுசாரிகள் அடுத்து உதவினார்கள். அதே இடதுசாரிகள் அமெரிக்க அணு ஆயுத ஒப்பந்தம் நிறைவேறாமல் இருக்க பாஜகவுடன் கூட்டணி சேர்ந்தார்கள். தலைசுற்றும் இந்தியாவின் அரசியல் ஆடுகளத்தில் பார்வையாளனாக இருந்து ரசிப்பதே சிறந்தது. எதுவும், எப்பொழுதும் மாறும் என்கிற புரிதல் தேவை. பல்வேறு காரணிகள் தொடர்ந்து செயல்படுவதால் எது வேண்டுமானாலும் நடக்கும் என்கிற அதிர்ச்சி கொள்ளாத மனம் மட்டுமே தேவை. குமாரசாமி பாஜகவுடன் கூட்டணி சேர்ந்து முதல்வர் ஆனதை சந்தர்ப்பவாதம் இல்லையா? என ஆசிரியர் கேட்க, ‘என் தந்தை மத்தியில் பிரதமர் ஆகி மாநிலத்தில் ஆட்சியை, கட்சியை இழந்தார். மாநிலத்தில் பலமாக இருந்துகொண்டு தான் மத்தியை பற்றி கவலைகொள்ள வேண்டும்.’ என்று அவர் சொன்னபொழுது ஒரு புதிய பாடம் புலப்பட்டது. யார் ஜாதி பார்க்கிறார் என்று சொல்கிறவர்களுக்கும். இந்து மதத்தில் மட்டுமே ஜாதி உண்டு என்பவர்களுக்கும் இந்தியாவின் ஜனாதிபதியான கியானி ஜெயில் சிங்கின் கதை ஒன்று போதும். சேகர் குப்தாவிடம் பஞ்சாபின் முதல்வர்களாக ஜாட் ஜாதியை சேர்ந்த சீக்கியர்கள் மட்டுமே ஆகமுடியும், ராம்கார்ஹியா எனும் தச்சர் பிரிவை சேர்ந்த ஜெயில் சிங் இந்திராவால் பஞ்சாப் முதல்வர் ஆனார். ‘எனக்கு பின் நான் யாரும் ஜாட் பிரிவைத் தாண்டி பஞ்சாபின் முதல்வராக முடியும் என்று எண்ணவில்லை.’ என அவர் சொல்லி நாற்பது வருடங்கள் ஆகப்போகிறது. ஏழு பஞ்சாப் முதல்வர்கள் ஆட்சிக்கு வந்திருக்கிறார்கள். எல்லாரும் ஜாட் சமூகத்தினர் மட்டுமே. வாஜ்பேயி உடன் தான் மேற்கொண்ட முதல் சந்திப்பை விவரிக்கிற பொழுது அவர் எத்தகைய ஜனநாயக பண்பு கொண்டவர் என்பது புலப்படுகிறது. வடகிழக்கு பற்றி அங்கே பத்திரிக்கையாளராக களத்தில் பணியாற்றிய ஆசிரியரை பேசவிட்டு வாஜ்பேயி கேட்டதை, ‘எல்லாம் எனக்குத் தெரியும்!’ என்று சர்வாதிகார போக்கில் பேசிய ஆர்.ஆர்.எஸ். தலைவர் சுதர்சனுடன் ஒப்பிடுகிறார். நரசிம்ம ராவ் என்றாலே பாபர் மசூதி இடிப்புக்கு காரணமானவர் என்கிற பிம்பம் நம்முடைய மனதில் பதிந்துவிட்ட சூழலில் அவரின் வெவ்வேறு முக்கியமான பக்கங்களை சேகர் குப்தா முன்வைக்கிறார். நரசிம்ம ராவ் காலத்தில் இந்தியா அணுகுண்டு வெடிப்பை மேற்கொள்ள முயன்று அமெரிக்காவிடம் மாட்டிக்கொண்டதாக பரவலாக சொல்லப்படுகையில் சேகர் குப்தா அது அமெரிக்காவிடம் வேண்டுமென்றே மாட்டிக்கொண்டு, ‘இனிமேல் இவர்கள் செய்ய மாட்டார்கள்!’ என்கிற போலி நம்பிக்கையை விதைக்க முயன்ற ராவின் ராஜதந்திரம் என்று அடித்துச் சொல்கிறார். […] நரசிம்ம ராவ் அறுபதாண்டு பொதுவாழ்க்கையில் இருந்த நிலையில் இந்தியாவின் பிரதமரான பொழுது பாபர் மசூதி இடிப்பை அவரே வழிவிட்டு செய்தார் என்று நமக்கு சொல்லப்படுகிறது. அத்வானி, வாஜ்பேயி முதலிய பாஜக தலைவர்களை குற்றவாளிகள் என்று அறிவித்த லிபரான் கமிஷன் ராவை விடுவித்ததை ஆசிரியர் சுட்டிக்காட்டுகிறார்.   ‘தான் அதிகமாக அத்வானியை நம்பிவிட்டதாக’ ராவ் குப்தாவிடம் புலம்புகிறார். மேலும், ‘ஏன் ராணுவம் கரசேவகர்களை சுடச்சொல்லி உத்தரவிடவில்லை?’ என்று கேட்டதற்கு, ‘அவர்கள் ராம் ராம் என்று முணுமுணுத்துக்கொண்டு இருந்தார்கள். ராணுவத்தில் சிலரும் ராம், ராம் என்று முணுமுணுத்துக்கொண்டு அவர்கள் பக்கம் சேர்ந்துகொண்டு ராணுவத்தை தாக்கியிருந்தால் அதில் ஏற்பட்ட தீ நாட்டையே அழித்திருக்கும்!’ என்று ராவ் சொல்கிறார். மேலும், ராவ் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் பதியப்பட்டாலும் அவை அனைத்திலும் இருந்து அவர் விடுதலை பெற்றார். அதைக் குறித்து கேட்டதற்கு, தன்னுடன் இருந்தவர்கள் கொள்ளையடித்ததை தான் வேடிக்கை பார்த்ததை சூசகமாக, ‘நான் முட்டையைத் திருடினேன் என்றும், நான் கோழியைத் திருடினேன் என்றும் வெவ்வேறு சாரார் சண்டையிட்டுக் கொள்கிறார்கள். ஆனால், நான் திருடன் என்பதில் மட்டும் அவர்களுக்கு சந்தேகமில்லை!’ என்று சொல்லியிருக்கிறார். சீனாவுக்குப் பயணம் போய்விட்டு வந்த காங்கிரசின் தலைவர் சீதாராம் கேசரியிடம் ‘எப்படி இருந்தது சீனா?’ எனக் கேட்டதற்கு, ‘அவர் நம்மூர் பஸ் டிரைவர்கள் போலத்தான். இண்டிக்கேட்டரை இடது பக்கம் போட்டுவிட்டு, வலதுபக்கம் பொருளாதாரத்தில் போய்க்கொண்டே இருக்கிறார்கள்!’ என்றார். மாதவராவ் சிந்தியா இந்தியாவின் பிரதமர் ஆகக்கூடுமா என்கிற கேள்விக்கு, ‘ஒரு விமான விபத்துக்காக அவர் பதவியைத் துறந்தார். அதுவே அவசரமான செயல். அதற்கடுத்து அதைப் பயன்படுத்திக் கொண்டு நாடகமாடி இருக்க வேண்டும், அவர் ஒருவாரம் குடும்பத்தோடு சுற்றுலா போய்விட்டார். இவரெல்லாம் தேறமாட்டார்!’ என்றிருக்கிறார் சீதாராம் கேசரி. கருணாநிதியை ‘தங்களை பிரிவினைவாதி என்று சித்தரிப்பதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்’என்று கேட்ட பொழுது, ’நான் பிரிவினைவாதியாக சித்தரிக்கப்படவில்லை, நான் பிரிவினைவாதியாக இருந்தவன் தான்; இந்தியா மேற்கொண்ட 62, 65, 71 போர்கள் இந்தியக்குடியரசுக்கு வெளியே சிறிய தேசமாக இறையாண்மையோடு இருக்க முடியாது என்று உணர்ந்துகொண்டதன் விளைவே இது!’ என்று பதில் தந்திருக்கிறார். 12 ஆகஸ்ட் 1990 அன்று ருச்சிகா கிர்ஹோத்ரா என்கிற பதினான்கு வயது சிறுமி டென்னிஸ் விளையாட போன பொழுது ஹரியானா டென்னிஸ் சங்கத் தலைவரும், ஐ.பி.எஸ். அதிகாரியுமான ரத்தோர் அப்பெண்ணை மானபங்கபடுத்தி இருக்கிறான். அதை வெளிப்படையாக அப்பெண் சொன்னதும் முதல் தகவல் அறிக்கை கூட பதியப்படாமல் அவளின் சகோதரன் மீது ஆறு வாகனத் திருட்டு வழக்குகள் பதியப்பட்டது. (அனைத்திலும் அவர் விடுதலை செய்யப்பட்டார்.) அப்பெண்ணின் குடும்பமும், அவளும் கடும் அச்சுறுத்தலுக்கு ஆளாகி பதினேழு வயதில் அவள் தற்கொலை செய்துகொண்டாள். அந்த அதிகாரியின் மீது சுண்டு விரலைக் கூட பதிக்காத அரசின் செயல்பாட்டை கடுமையாக சேகர் குப்தா விமர்சிக்கிறார். ஐ.பி.எஸ் அதிகாரி கே.பி.எஸ்.கில் மீது மானபங்க வழக்கை ரூபன் தியோல் பஜாஜ் தொடர்ந்த பொழுது பொங்கிய போராளிகள் ஒரு நகர்ப்புறத்தை சேர்ந்த பெண்ணுக்கு குரல் கொடுக்காமல் போய் அவள் இறந்தாள் என்று மனசாட்சியை உலுக்குகிறார். பத்து வருடங்கள் கழித்து ரத்தோர் மீது சிபிஐ மானபங்கப்படுத்தியதற்காக மட்டும் வழக்கு பதிவு செய்து, இன்னுமொரு பத்து வருடங்கள் கழித்து சிறைத்தண்டனை பெற்றுக்கொடுத்தது. தற்கொலைக்கு தூண்டியது என்று எந்த வழக்கும் பதியப்படவில்லை. அசோம் கண பரிஷத் கல்லூரி மாணவர்களின் இயக்கமாக, அசாமிகளின் சுயாட்சிக்கான இயக்கமாக வங்காளிகளின் ஆதிக்கத்துக்கு எதிராக உருவானது. அரசின் அடக்குமுறைகளை வெற்றிகரமாக அவர்கள் எதிர்கொண்டார்கள். தேர்தல்களை புறக்கணித்தார்கள். ஊரடங்கு உத்தரவு என்பதை கேலிக்கு உள்ளாக்கினார்கள். ஆனால், அவர்கள் ஆட்சி செய்த ஐந்து வருடத்தில் ஊழல் மட்டுமே மூச்சானது. நிர்வாகம் என்கிற ஒன்றையே மறந்தார்கள். மாநிலக்கட்சிகளே சிறந்த உள்ளூர் நிர்வாகத்தை பெரும்பாலும் தந்துகொண்டிருக்கும் சூழலில் இப்படிப்பட்ட கட்சிகள் மரிப்பதும் நன்மைக்கே என்கிறார். உத்திர பிரதேசத்தை விடுதலைக்குப் பின்னால் பிரிக்க முயன்ற பொழுத, ஜி.பி.பந்த் அதை மறுத்து சொன்ன காரணம் வேடிக்கையானது, ‘கிழக்கில் ராமனின் பிறப்பிடமான அயோத்தியும், மேற்கில் கிருஷ்ணரின் மதுராவும் இருக்கிறது. எப்படி இதைப் பிரிப்பது?’. காங்கிரசின் அதிகார மையங்கள் அங்கிருந்தே பெரும்பாலும் வந்தார்கள், நேரு, இந்திரா ஆகியோரை முன்னிறுத்தி ஒட்டுமொத்த இடங்களையும் அள்ளிவிடவே காங்கிரஸ் இப்படி செயல்பட்டது. அங்கே ஓரளவுக்கு நொய்டா மட்டுமே வளர்ந்திருக்கிறது. காரணம், அங்கே தான் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் வசிக்கிறார்கள். கூடவே, டெல்லிக்கு அருகில் இருக்கின்றது அது. பூர்வாஞ்சல், ரோஹில்கன்ட்., பந்தல்கன்ட், அவாத் என்று பிரித்து தொலைத்தால் ஆவது அங்கே வளர்ச்சி ஓரளவுக்கு எட்டிப்பார்க்கும். மோடியை கோத்ரா கலவரங்கள் சார்ந்து குத்திக் கிழிக்கிறார், ‘ஐம்பது வயதில் இருக்கும் உங்களுக்கு ஒரு பேரன் இருக்கவேண்டும்.. அவன் குஜராத் கலவரங்களின் பொழுது நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் தாத்தா?’ என்று கேட்பதில் இருந்து உங்களின் பிரம்மச்சரியம் காத்திருக்கிறது. ‘கலவரங்களின் பொழுது காவல்துறை, அரசு செயல்பட்டது எனக்கு முழுத்திருப்தி, வன்முறை பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டதில் எனக்கு மகிழ்ச்சி.’ என்று நீங்கள் சொன்னதற்கும், ‘பழுத்த மரம் விழுந்தால் நிலம் அதிரத்தான் செய்யும்.’ என சீக்கிய படுகொலைகளின் பொழுது ராஜீவ் சொன்னதற்கும் என்ன வித்தியாசம்?’ எனக் கேள்வி எழுப்புகிறார். எண்பத்தி மூன்றாம் வருடம் அசாமின் நெல்லியில் பெரும்பாலும் இஸ்லாமியர்கள் உட்பட 3,300 அப்பாவி மக்கள் அவர்கள் வங்காளிகள் என்கிற ஒரே காரணத்துக்காக அசாம் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டார்கள். உட்பகுதியில் நடந்த அந்த படுகொலையை CRPF-ன் பாதி பிரிவை மட்டும் கொண்டு பெருமளவில் தடுத்த H.B,N.அப்பா என்கிற தலைமைக் காவலர் ‘ஐயோ நான் இன்னமும் முன்னரே வந்திருந்தால் இன்னம் சில ஆயிரம் பேரைக் காப்பாற்றியிருக்கலாமே!’ எனக்கண்ணீர் வடித்தார். வெறும் சப் இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு பெற்று வாழ்க்கை முடிந்த போன அவருக்கு இருந்த உறுத்தல் ஏன் மோடிக்கு இல்லை என்று கேட்கிறார் குப்தா. ‘ராஜதர்மத்தை இழந்துவிட்டார் மோடி’ என்று முழங்கிய வாஜ்பேயி மோடியை பதவியைவிட்டு நீக்கியிருக்க வேண்டும். அத்வானியின் அழுத்தத்துக்கு அடங்கி அவர் அதைச் செய்யவில்லை. அது சிறுபான்மையினரை அவருக்கு எதிராக திருப்பிவிட்டது என்கிறார் ஆசிரியர். […] சிலைகளைக் கொண்டு நடக்கும் அரசியலைக் கடுமையாக சாடுகிறார். சவார்க்கருக்கு படம் கூடாது என்று பொங்கிய காங்கிரஸ் ஏன் இந்திரா காலத்தில் அவருக்கு அஞ்சல் தலை வெளியிட்டது? பாஜகவின் பசு எதிர்ப்பு அரசியலுக்கு அச்சாரம் போட்டதே காங்கிரஸ் தான். காங்கிரஸ் இன்னமும் நேரு, காந்தியின் பெயரைச் சொல்லி ஓட்டு வாங்க பார்க்கிறது. எப்பொழுதோ இருந்ததாக நம்பப்படும் ராமர், கிருஷ்ணர் பெயரால் பாஜக ஒட்டுக் கேட்கிறது. மாயாவதி அம்பேத்கரின் பெயராலும், முலாயம் சிங் லோஹியாவின் பெயராலும்,. ஜெயலலிதா எம்ஜிஆரின் பெயராலும் ஆட்சியைப் பிடிக்க முனைகிறார்கள். எதிர்காலத்தை எப்படி கட்டமைப்போம் என்று சொல்லியோ, தொலைநோக்கை கொண்டோ, தங்களின் செயல்பாட்டை கொண்டோ ஓட்டுக் கேட்கும் தைரியம் ஏன் வரவில்லை என்று வினவுகிறார். குஜராத்திலும், காஷ்மீரிலும் முதுகெலும்போடு தேர்தல் நடத்திய ஜே.எம்.லிங்டோவை ‘ஜேம்ஸ் மைக்கேல்’ லிங்டோ என்று மதச்சாயம் பூசி அவதூறு செய்யப்பார்த்தார் மோடி. ஐந்தே தொகுதிகளில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை பயன்படுத்தி அதில் தன்னுடைய கட்சி தோற்றதால், ஓட்டு அளிப்பதை வாக்குச் சீட்டில் தான் செய்யவேண்டும் என்கிற பழைய வரியைக் கொண்டு தேர்தல் ஆணையத்தை மின்னணு வாக்கு இயந்திரம் பயன்படுத்தாமல் சிலகாலம் தடுத்தார் ராஜீவ். பி.ஜே.ராவ் எனும் தேர்தல் ஆணையர் லாலூவுக்கு அஞ்சாமல் தேர்தலை நேர்மையாக நடத்திக் காட்டினார். அவர் வாங்கிய சம்பளம் 12,000 ரூபாய்! சேசன் தேர்தல் ஆணையம் எவ்வளவு சிறப்பாக செயல்படமுடியும் என்று காட்டினாலும், அவரே பின்னர் ஜனாதிபதி பதவி, ராஜ்ய சபா சீட் ஆகியவற்றுக்கு ஆசைப்பட்டு வழிமாறிப் போனார். 2004 தேர்தலில் பாஜக தோற்றதற்கு காரணமாக விவசாயத்தை கண்டுகொள்ளாதது, அடித்தட்டு மக்களுக்கு எட்டு சதவிகித வளர்ச்சியே திருப்தி தந்துவிடும் என்று நம்பியது, குறைந்த வட்டி வீட்டுக்கடன்கள், மலிவான தொலைபேசி இணைப்புகள் நாட்டை நம் பக்கம் ஈர்க்கும் என்று தப்புக்கணக்கு போட்டார்கள் என்கிறார் குப்தா. அதேசமயம் வேறு சில வாதங்களை முன்வைக்கிறார்: ஏழைகள் காங்கிரசுக்கு ஓட்டுப் போட்டார்கள் என்றால் ஏன் ஒரிசாவில் மீண்டும் பாஜக கூட்டணி பெருவெற்றி பெற்றது? கிராமப்புற மக்கள் ஐடி புரட்சிக்கு எதிராக கிளர்ந்தார்கள் என்றால் ஏன் ஆந்திராவில் மட்டும் அப்படி ஆனது? கர்நாடகாவில் பாஜக நல்ல வெற்றியை ஈட்டியுள்ளதே? சீரற்ற ஆட்சி நிர்வாகம், சொரணையில்லாத அரசியல், கேவலமான வாழ்க்கை நிலை ஆகியவற்றால் மாற்றி ஓட்டுப் போட்டார்கள் என்றால் ஏன் லாலுவும், முலாயமும் தொகுதிகளை அள்ளினார்கள்? கிராமப்புறங்களில் தான் பாஜக தோற்றதாக ஒரு கதை சொல்லப்படுகிறது. உண்மையில் நகரங்களில் தான் அது துடைத்து எறியப்பட்டது. கிராமங்களில் முன்னர் இருந்த நிலையையே அது பெரும்பாலும் பெற்றது. நகர்ப்புற இடங்கள் அந்த கூட்டணிக்கு 51-ல் இருந்து 21 ஆக குறைந்தது. காங்கிரஸ் கூட்டணிக்கு 16-ல் இருந்து 35-ஆக உயர்ந்தது. தரகர், விவசாயி யாரேனும் ஒருவரை திருப்திப்படுத்தினால் போதும் என்கிற பார்வையே பாஜகவுக்கு இருந்தது. தரகர்,விவசாயி இருவரையும் திருப்திபடுத்துவதே சமச்சீரான வளர்ச்சி. அமர்த்தியா சென் ‘அடிப்படைக் கல்வியை பரவலாக்கி, பொது மருத்துவ நலச்சேவையை மக்களுக்கு சிறப்பாக வழங்கி, நிலச்சீர்திருத்தங்கள் நடந்து, குறுங்கடன்கள் சமூகத்தின் அடித்தட்டு மக்களுக்கு எளிமையாக, நியாயமாக கிடைத்திருந்தால் இப்படிப்பட்ட வளர்ச்சி ஏற்பட்டிருக்கும்.’ என்கிறார். இடதுசாரிகள் இந்திய-அமெரிக்க அணு ஒப்பந்தத்தின் பொழுது காங்கிரசுக்கு தங்களின் ஆதரவை விளக்கிக் கொண்டதை கடுமையாக சாடுகிறார் சேகர் குப்தா. இடதுசாரிகள் மத்திய அரசில் பங்கேற்ற பொழுது நிர்வகிக்கப்பட்ட விலை முறைமையை (APM) நீக்கியதையும், பொதுத் துறையில் அரசு பங்குகளை விற்கும் கமிட்டியை முதன்முதலில் அவர்கள் காலத்திலேயே துவங்கியதையும் சுட்டிக்காட்டுகிறார். மேலும், தேவ கவுடா ஆட்சியில் சிதம்பரம் சீர்திருத்தங்கள் நிறைந்த பட்ஜெட்டை தாக்கல் செய்த பொழுது அமைதி காத்தவர்கள், லாலு தனியார் துறையை ரயில்வே கண்டெயினர் துறையில் கொண்டு வந்த பொழுது எதிர்க்காதவர்கள், அதையே காங்கிரஸ் செய்தால் கத்தியிருப்பார்கள். BHEL பங்குகளில் பத்து சதவிகிதத்தை விற்க அரசு முனைந்த பொழுது எதிர்த்த இடதுசாரிகள் அதுவே NTPC எனும் இன்னொரு நவரத்னா நிறுவனத்தில் பங்குகளை விற்ற பொழுது அமைதி காத்தது ஏன் என்று துளைத்து எடுக்கிறார். அறுபது எம்பிக்களை வைத்து கொண்டு ஆட்சியை நிர்மாணிக்கும் போக்கு சர்வாதிகாரமானது என்று பாய்கிறார். நம்முடைய நகரங்கள் பெரும்பாலும் வளர்ச்சியிலும், திட்டமிடுதலிலும் பின்தங்கியிருப்பதை சுட்டிக்காட்டி அமெரிக்காவில் பல்வேறு முக்கியமான நகரங்கள் அந்தந்த மாநிலத்தின் தலைநகராக இல்லாததைப் போல இந்தியாவிலும் செய்யலாம் என்று ஆலோசனை தருகிறார். நடுத்தர வர்க்கம் மின்சாரம், சமையல் எரிவாயு, தண்ணீர் என்று அனைத்திலும் மானியத்தையும், தரத்தையும் இணைத்தே எதிர்பார்ப்பது மேலும், மேலும் நிதிப் பற்றாக்குறையை அதிகமாக்கவே செய்யும் என்று எச்சரிக்கையும் உண்டு. டெல்லியில் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் மெத்தனம் காட்டிய அரசின் போக்குக்கு பின்னால் இருக்கும் அரசியலை தோலுரிக்கிறார். ஒளிவுமறைவற்ற நில ஆவணங்கள், தெளிவான சொத்து வரிகள், சொத்து சார் சட்டங்களை சீர்திருத்தல் ஆகியவற்றை செய்யாமல் அரசுகள் காலம் கடத்துகின்றன. காரணம் இப்படிப்பட்ட சூழலில் அரசியல்வாதிகளையே மக்கள் நாடவேண்டி இருக்கும், தேவையானதை பெற்றுக்கொண்டு செய்வதை அவர்கள் செய்வார்கள். அதேபோல் ஓட்டுக்கள் பறிபோகும் என்கிற வாதத்தை பதினெட்டாயிரம் குடியிருப்புகள் ஆக்கிரமிப்புகள் என்று வைத்துக்கொண்டு ஒவ்வொன்றுக்கும் ஐந்து ஓட்டு என்றாலும் ஒரு லட்சம் ஓட்டைத் தொடாத பொழுது அஞ்சுவதற்கு ஒன்றுமில்லை. பலர் அரசின் நேர்மையான போக்குக்கு வாக்களிப்பார்கள் என்று உத்வேகம் தருகிறார். கல்வி அமைச்சரின் வீட்டின் முன்னால் கேந்திரிய வித்யாலயாவில் இடம் வேண்டி பலர் நிற்கும் காட்சியை கண்முன் ஓடவிட்டு, நாம் வருடத்துக்கு மிக மிக குறைவான மேற்படிப்பு முடித்த மருத்துவர்களையே உருவாக்குகிறோம். போதாது என்று கலைசார்ந்த கல்லூரியில் ஒரு தத்துவத்தை மட்டுமே சார்ந்து, புதிய சிந்தனைகளை வரவேற்காத போக்கு நிலவுவதையும் காணமுடிகிறது. தேவை மிக அதிகமாக இருக்க சத்தற்ற கல்வி நிறுவனங்களை, சீரழியும் நிலையில் கல்வியின் போக்கை வைத்திருப்பது இந்தியாவின் பெருங்கனவுகளுக்கு உகந்தது அல்ல என்பது அவரின் அச்சம்,. வடகிழக்கு பகுதி வேறுபட்ட பகுதி என்பதை உணர்ந்த நேரு அங்கே பரந்த அறிவைக் கொண்டிருந்த மானுடவியல் அறிஞர் வெர்ரியர் எல்வினை நம்பினார். அவரின் வழிகாட்டுதலில் இந்தியாவின் மைய நீரோட்டத்தோடு வேகமாக வடகிழக்கு மக்களை இணைக்காமல் பொறுமையாகவே அரசு இயங்கியது. இதை ‘மெதுவாக வேகப்படுத்தல்’ என்று நேரு அழைத்தார். இவை நல்ல நோக்கத்தோடு துவங்கப்பட்டாலும் ILPS முதலிய கட்டுப்பாடுகளின் மூலம் வளர்ச்சியை மழுங்கடித்து விட்டன. இந்திய பழங்குடியின ஆட்சிப் பணி தந்த தேர்ந்த அதிகாரிகள் போன்ற சிற்சில நன்மைகள் உண்டு,ஆனால். கிறிஸ்துவ மிஷனரிக்கள் பலமாக வேரூன்றிய பகுதிகளில் நவீன கல்வி, சிந்தனைகள் புகுந்தன. அப்படியிருந்தா மிசோரம், நாகலாந்து சிறப்பாக வளர்ச்சியடைந்தது. மற்ற பகுதிகள் குறிப்பாக அருணாசல பிரதேசம் பின்தங்கியது. சாலைகள், கட்டுமானம், வேலைவாய்ப்பு, வாழ்க்கை நலம் உயர்த்துதல் என்று நாம் போகவேண்டிய தூரம் பெரிது. இந்தியா முழுமையான ஜனநாயகம் இல்லை என்பதைப் போல பாகிஸ்தான் முழுமையான சர்வாதிகார நாடில்லை என்கிற சுவராசியமான வாதத்தை முன்வைக்கிறார். எப்படி இந்தியாவில் எல்லா அமைப்புகளும் முழுமையாக சிறப்பாக செயல்படுகிறது என்று சொல்லமுடியாதோ அது போல பாகிஸ்தானில் பத்திரிக்கைகளின் செயல்பாட்டை நிறுத்தவோ, நீதிமன்றங்கள் அவ்வப்பொழுது தங்களின் சுயாட்சி போக்கை காட்டவோ, மக்களுக்கு எல்லா உரிமைகளையும் மறுக்கும் சர்வாதிகாரமோ பாகிஸ்தானில் எப்பொழுதும் சாத்தியப்படவில்லை. இந்தியாவில் நிர்வாகம் சரியில்லை என்பதற்காக ராணுவத்திடம் ஆட்சியை கொடுக்கலாம் என்பவர்கள் பாகிஸ்தானையே பாடமாக எடுத்துக்கொள்ளலாம். ஆயுதங்களை மக்கள் கையில் கொடுத்தால் தீர்வு வந்துவிடும் என்பதை விட பயங்கரமான யோசனையும் இருக்க முடியாது. தென் ஆப்ரிக்காவில் அப்படி செய்ய முயன்று மக்கள் தனித்த தீவுகளாக வீட்டுக்குள்ளேயே பயத்தில் முடங்கிக் கிடப்பதே நடந்தது. உள்ளே இருந்தே மாற்றங்கள் நிகழ வேண்டும் என்பதே சரி. பெருத்த சிந்தனையாளர்கள், தொழில் முனைவோர், சமூக சேவகர்கள் தேர்தல் அரசியலில் குதிக்கிறார்கள். ஆனால். மக்கள் அவர்களுக்கு ஓட்டளிப்பதில்லை. அவர்களை உணர்ந்து கொள்ள மக்களுக்கு திறனில்லை என்கிற வாதத்தை எதிர்கொள்கிறார் சேகர் குப்தா. மக்களை நோக்கி வருவதாக சொல்லிக்கொள்ளும் இந்த போராளிகள் பல்வேறு குறைகள் இருந்தாலும் செயல்பட்டுக் கொண்டிருக்கும் கட்சி முறையை முற்றாக நிராகரிக்கிறார்கள். அதோடு நில்லாமல், அந்த கட்சிகள் பரவலாக இருக்கும் தேர்தல் முறையில் பங்கேற்று அந்த முறையையே மாற்றப் போவதாக வெற்றுக்கூச்சல்கள் போடுகிறார்கள். பலரையும் அனுசரித்து, தேர்தல் அரசியலை மதித்து,. கட்சி என்கிற கோட்பாட்டை முற்றும் ஒழித்து விடலாம் என்று கனவுகாணாமல் கள யதார்த்தம் உணரும் வரை விடிவில்லை. எப்படி ஊடுருவல்கள், மாவோயிஸ்ட்கள் ஆகியோரை சமாளிப்பது என்று சேகர் குப்தா முந்தைய எடுத்துக்காட்டுகளை சொல்கிறார். மிசோரமில் ஜனவரி பதிமூன்று அன்று நாற்பது வருடங்களுக்கு முன்னால் மிசோ போராளிகள் நுழைந்து ஒட்டுமொத்த போலீஸ் தலைமையகத்தை அழித்தார்கள். இந்திரா இன்னமும் கடுமையான ஜி.எஸ்.ரன்தாவாவை அனுப்பி வைத்தார்.மிசோரம் காவற்படையை பழங்குடியினரை கொண்டு அவர் உருவாக்கினார். கடும் பதிலடி தரப்பட்டது. இ.எஸ்..பார்த்தசாரதி எனும் கமிஷனர் அசாமில் கொல்லப்பட்டார். குறுக்கு வழியில் ஹிதேஸ்வர் சைக்கியாவை அசாம் முதல்வர் ஆக்கினார் இந்திரா. இரும்புக்கரத்தோடு சிறப்பான நிர்வாகத்தை அவர் சாத்தியப்படுத்தினார். இந்த இரண்டு தருணங்களின் உச்சத்தை ராஜீவ் அமைதி உடன்படிக்கையாக மாற்றிக்கொண்டார். இந்த போராட்டங்கள் ஆரம்பத்தில் எண்ணற்ற இழப்பை இருதரப்புக்கும் தருகிறது. போகப்போக அரசை எதிர்த்து போரிட முடியாது, அரசு வலிமையானது என்று அவர்கள் உணர நேரிடுகிறது. அதே சமயம், அரசு மாவோயிஸ்ட்கள் போர் செய்வது வீண் என்கிற உணர்வை உண்டாக்க களத்திலும். நிர்வாகத்திலும் மாற்றங்கள் செய்ய வேண்டும். அமைதியை தன் பக்கம் கையோங்கி இருக்கும் சூழலில் அரசு தரவேண்டும். இல்லையேல் அதை பலவீனத்தின் அடையாளமாக பல்வேறு சமயங்களில் காணக்கூடும். இந்தியா பொறுமையான அரசு என்று சப்பை கட்டு கட்டுகிறவர்கள், அறுபதில் நேரு நாகாக்களை வான்படையை கொண்டு தாக்கியதை மறக்கலாம். இந்திரா கருவூலத்தை மிசோக்கள் கைப்பற்ற முனைந்த பொழுது விமானத்தாக்குதல் நடத்த வைத்தார். படேல் ஹைதரபாத் மீது ராணுவத்தை ஏவிவிட்டு அதை ‘காவல்துறை செயல்பாடு’ என அழைத்தார். கோவா மீது முப்படைகளையும் அனுப்பினாலும் நேரு அதே பாணியில் ‘காவல்துறை நடவடிக்கை’ என்றே அழைத்தார். வலிய அரசுகள் தான் பிழைக்கும் என்கிறார் சேகர் குப்தா. […] கர்நாடக நீதிபதி சைலேந்திர குமார் தன்னுடைய சொத்துக்களை வெளியிட்ட நிலையில் அப்படிப்பட்ட ஒளிவுமறைவற்ற தன்மை ஏன் மற்ற நீதிபதிகளிடம் இல்லை என்று வினவுகிறார். எல்லாரின் நேர்மையை சோதிக்கும் நீதித்துறையும் அந்த கட்டத்துக்குள் வரவேண்டும் அல்லவா? அகமதி எனும் நீதிபதி யூனியன் கார்பைட் வழக்கு ஆண்டர்சன் தப்பிக்கும் வகையில் வலுவற்றது ஆக்கினார் என்கிற குற்றச்சாட்டை பொதுவெளியில் சட்ட அமைச்சர் மொய்லி வைத்தார். மேலும் சபர்வால் எனும் உச்சநீதிமன்ற நீதிபதியை மனித உரிமைகள் தலைவராக அவரைப்பற்றி செய்தித்தாள்களில் தவறான செய்திகள் அடிபட்டன என்று சொல்லி மத்திய அரசு ஒன்றரை வருடம் தலைவர் பதவியை காலியாக வைத்திருந்ததை சுட்டிக்காட்டி நீதித்துறையும், அரசும் மோதிக்கொள்வது தவறான எண்ணங்களை உண்டாக்கும் என்று எச்சரிக்கிறார். ANTICIPATING INDIA PAGES: 516 HARPER COLLINS SHEKHAR GUPTA PRICE: 799 மொழி அரசியல் பகுதி-5 மொழி அரசியல் இயக்கங்கள், உருது சார்ந்த உறுத்தல்கள் ஜனவரி 22,2016 மொழி அரசியல் இயக்கங்கள், உருது சார்ந்த உறுத்தல்கள் : மதம், மொழி என்பதைச் சார்ந்து அரசியல் அணியாகப் பல்வேறு குழுக்கள் திரள்கிறார்கள். இந்தியாவில் விடுதலைக்கு முந்தைய காலத்தில் மொழிச் சிக்கல்கள் இருந்தாலும் ஆங்கிலேய அரசு மதம் சார்ந்த அடையாளங்களைக் கொண்டே அதிகாரப் பிரிப்பை மேற்கொண்டதால் மத அரசியல் மொழி அரசியலை பின்னுக்குத் தள்ளியது. விடுதலைக்குப் பின்னால் நாற்பத்தி ஏழு வழக்கு மொழிகள், வட்டார வழக்குகள் எல்லாவாற்றையும் இணைத்து கரிபோலி என்கிற இந்தி வடிவத்தின் ஆதிக்கத்துக்குள் ஆட்படுத்தும் அரசியல் நடைபெற்றது. இந்த இந்தி சம்ஸ்கிருதமயமாக ஆக்கப்பட்டது. விடுதலைக்கு முன்னால் உருதை முன்னெடுக்கும் அரசியலை மேற்கு ஐக்கிய மாகாணத்தில் (தற்போதைய உத்திர பிரதேசம்) பலமாக வேரூன்றி இருந்த இஸ்லாமிய இயக்கமான தியோபந்த்தும், அதன் அரசியல்-கலாசார இயக்கமான ஜமாத்-இ-உலமா-இ-ஹிந்த் அமைப்பும் மேற்கொண்டன. எனினும், இவை இரண்டும் தேசிய இயக்கத்துக்கு ஆதரவு தெரிவிப்பவையாக, காங்கிரஸ் சார்பாக இருந்ததால் உருது மொழியைப் பிரிவினையோடு இணைப்பது முழுக்கச் சரியல்ல. பனராஸ் இந்து பல்கலையை உருவாக்கிய மதன் மோகன் மாளவியா ஹிந்தி சாஹித்திய சம்மேளனத்தை நிறுவினார். இந்து மதம், அதன் நூல்கள் ஆகியவற்றைப் பிரபலப்படுத்தும் நோக்கம் ஒருபுறம் என்றால், பாரசீகம்-அரேபிய மொழிகளால் அசுத்தமானதாக அவர்கள் கருதிய இந்தியை சம்ஸ்கிருதமயத்தின் மூலம் தூய்மைப்படுத்தினர். இந்தி-உருது சிக்கல் இந்து-முஸ்லீம் பிரச்சனையாக வடக்கில் கட்டமைக்கப்பட்டது. தெற்கில் நிலைமை வேறாக இருந்தது. மொழி அந்நியர்கள் என்று உருது மொழியை வடக்கில் சொன்ன பிராமணர்கள் தெற்கில் அந்நியர்கள் என்றும், அவர்களின் வடமொழி அன்னியம் என்றும் திராவிட இயக்கத்தால் வலியுறுத்தப்பட்டது. பார்ப்பனிய, சம்ஸ்கிருத கலாசாரம் அந்நியமானது என்று இங்கே அடையாளப்படுத்தப்பட்டது. வடநாட்டில் சுத்திகரிக்கப்பட்ட இந்தியைக் கொண்டு இந்து-முஸ்லீம் தொடர்பு கொள்ளலில் இருந்ததாகத் தூய்மைவாதிகள் சொல்லிக்கொண்ட தடையை வட்டார வழக்குகள், பிற பேசு மொழிகள் ஆகியவற்றை இணைத்து நிலைநிறுத்தப்பட்ட அதிகாரப்பூர்வ இந்தியின் மூலம் சரி செய்ய முயன்றார்கள். எனினும், இந்து-முஸ்லீம் வேற்றுமை இப்படிப்பட்ட முயற்சிகளால் அதிகப்படவே செய்தது. இதைவிட மோசமாக, இஸ்லாமியர்களின் மொழியாக மட்டுமல்லாமல் எண்ணற்ற இந்துக்களின் மொழியாகவும் இருந்த உருது மொழியைக் காலங்காலமாக உருது மொழியைப் பேசாத பிற பகுதி இஸ்லாமியர்கள் தங்களின் மொழி என்று மக்கள் தொகை கணக்கெடுப்பில் பதியும் காரியம் நிகழ்ந்தேறியது. உருது மொழியை இஸ்லாமியர்களோடு தொடர்பு படுத்தும் செயல் இப்படி உச்சத்தைக் கவலைக்குரிய வகையில் எட்டியது. ஒரு மொழியைப் பிடிக்கவில்லை என்றால் என்ன சிக்கல் என்று சிலர் கேட்கலாம். தமிழகத்தின் முதல்வராக இருந்த பக்தவத்சலம் இந்தி திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் நடைபெற்ற பொழுது பேசியது நகைமுரணாக இதற்குப் பதில் தரும், ‘ஒரு மொழியை ஒருவர் வெறுக்கிறேன் என்று சொன்னால் அதைப் பேசுகிறவர்களை வெறுப்பதாகவே பொருள். இது ஒரு மொழி, அதைப் பேசுபவர்கள் மீதான வெறுப்பை நாசூக்காக வெளிப்படுத்துவது ஆகும். அதிலும் இந்தியில் வளமை இல்லை என்று மறைமுகமாகக் கருதுவதன் வெளிப்பாடு இது.’ என்று அவர் சொன்னார். வடநாட்டின் மொழி இயக்கம் மதங்களைக் கொண்டு பிளவுபடுத்திய பொழுது, தெற்கில் நடைபெற்ற மொழி இயக்கம் தாங்கள் தமிழ் மொழி பேசுபவர்கள் என்று பெருமைகொண்ட எல்லா மதத்தவரையும் இணைத்துக் கொண்டு செயலாற்றும் அற்புதத்தை நிகழ்த்தியது. தெற்கில் அதிகாரத்தில் குறைந்த எண்ணிக்கையில் இருந்த பிராமணர்களைப் பிற்படுத்தப்பட்ட ஜாதியினர் சுலபமாக அந்த இடங்களை விட்டு நகர்த்தியதால், வடக்கைப் போல வன்முறைகள் எதுவும் அவர்கள் மீது நடக்கவில்லை. பால் பிராஸ் ஒரு மொழிக்காக மக்கள் தங்கள் உயிரைக் கொடுப்பார்கள் என்பதை தான் நம்பவில்லை என்று சொல்கிறார். எண்ணற்ற காரணிகள் இணைந்து அவற்றை மொழியின் பெயரால் எதிர்ப்பதே நடப்பதாக அவர் கருதுகிறார். மொழியியல் அறிஞரான அண்ணாமலை தமிழகத்தில் தாய்மொழிக்காக வேறு எதையும் எதிர்நோக்காமல் உயிரைவிட்ட எண்ணற்ற இளைஞர்களின் வாழ்க்கையைச் சொல்லி மொழிக்காக அப்படிப்பட்ட தியாகங்கள் நிகழ்வது சாத்தியம் என்று பதில் தருகிறார். சம்ஸ்கிருதத்தை மக்கள்தொகை கணக்கெடுப்பில் சொல்லப்படுவதைப் போல நிச்சயம் ஐம்பாதாயிரம் பேர் தாய்மொழியாகக் கொண்டிருக்கவில்லை. மேலும், அம்மொழியைத் தகவல் தொடர்புக்கு பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை இன்னமும் குறைவாகவே இருக்கும். எனினும், மேட்டுக்குடி இந்தியாவின் இந்து கலாசாரம், பண்பாடு, வரலாறு ஆகியவற்றின் அடையாளமாக அது திகழ்வதால் எட்டாவது அட்டவணையில் அதற்கு இடம் தரப்பட்டது. அதே போலப் பாகிஸ்தானை விட்டு இந்தியாவுக்கு இடம்பெயர்ந்த சிந்திக்கள் சிந்தி மொழியைப் பேசினார்கள். இவர்கள் வியாபாரத்தில் ஈடுபடுபவர்களாக, அதிகக் கல்வியறிவு கொண்டவர்களாக இருந்தார்கள். சிந்திக்கள் தங்களின் பிழைப்புக்கு இந்தி, ஆங்கிலம் கற்றாலும் தங்களுக்கு என்று தனியான ஒரு பகுதியை கேட்டுப் போராட்டம் செய்யாவிட்டாலும் எட்டாவது அட்டவணையில் ஒரு மொழியாகத் தங்கள் மொழியைச் சேர்க்க வேண்டும் என்று போராடினார்கள். அது தங்களைத் தனித்து அடையாளப்படுத்தும் ஒரு செயலாக அவர்கள் உணர்ந்தார்கள். அதனால் அரசுக்கு எந்தச் செலவும் இல்லை என்பது ஒருபுறம், இன்னொருபுறம் சிந்த் மாகாணத்தை இந்தியாவை விட்டுப் பிரித்தது தவறு என்பதைச் சூசகமாக உணர்த்தும் அரசியல் லாபம் இந்திய அரசுக்கு இருந்தது. மூன்றாவதாக மைதிலி மொழியை எட்டாவது பட்டியலில் சேர்க்க ஒரு காலத்தில் போராட்டம் நடந்து பிசுபிசுத்துப் போனது. ஆனால். பாஜக அரசு மத்தியில் ஆட்சிக்கு வந்த பொழுது பீகாரில் உள்ள பிராமணர்கள் பேசும் மொழியை மைதிலியை எந்த வேண்டுகோளும் இல்லாமலே எட்டாவது அட்டவணை மொழியாகச் சேர்த்தார்கள். பீகார், உத்திர பிரதேசத்தில் உருது மொழி சார்ந்து நடந்த அரசியல் காய் நகர்த்தல்கள் அடுத்தடுத்த பத்திகளில் இப்பொழுது காண்போம். […] இந்தியாவில் எட்டாவது பட்டியலில் மொழியாக உருது சேர்க்கப்பட்டு இருந்தாலும், அது பீகார், உத்திர பிரதேச பகுதிகளில் பரவலாகப் பேசப்பட்டாலும் அதை அந்தந்த மாநிலத்தின் அதிகாரப்பூர்வ மொழியாக அரசுகள் அறிவிக்கவில்லை. ஜனதா அரசின் ஆட்சி கவிழ்ந்த பிறகு வந்த பீகார், உத்திர பிரதேச சட்டமன்ற தேர்தலில் உருது மொழியை அதிகாரப்பூர்வ மொழியாக அறிவிப்பதாகக் காங்கிரஸ் (இ) வாக்குக் கொடுத்தது. இது குறித்துச் சமர்பிக்கப்பட்டு இருந்த குஜ்ரால் அறிக்கையைச் செயல்படுத்துவதாகக் கோடிட்டிருந்தது. இஸ்லாமியர்களின் ஓட்டுக்களைப் பெறப் போடப்பட்ட கணக்கு என்று சொல்லவேண்டியதில்லை. பீகாரில் ஜெகந்நாத் மிஷ்ரா முதல்வராக இருந்தார். மைதிலி பிரமாணரான அவர் தன்னுடைய ஜாதியினரை உருதை அதிகாரப்பூர்வ மொழியாக்குவதை எதிர்க்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டு மைதிலி மொழியினருக்குச் சலுகைகள் வழங்கி இரண்டு மாங்காய்களைப் பறித்தார். இதற்கு முன்னர் உருதை அதிகாரப்பூர்வ மொழியாக மாற்ற முயன்ற பொழுது ஜனசங்கம் பீகாரில் போர்க்கோலம் பூண்டது என்றாலும்,தற்போது பாஜக வேடிக்கை பார்த்தது. உருதை அதிகாரப்பூர்வ மொழியாக்க 67-ல் முயன்ற பொழுது 15௦ பேர் கலவரங்களில் இறந்தார்கள். உருதுக்கு எதிராகப் போராட்டங்கள் எண்பதில் ஓரளவுக்கு வெடித்த பொழுது பத்து பேர் இறந்தார்கள். அன்ஜூமன்-தாரீக்-இ-உருது அமைப்பு உருதை அதிகாரப்பூர்வ மொழியாக ஆக்குவதில் தீவிரமாக இயங்கியது. உத்திர பிரதேசத்தில் இப்படிப்பட்ட உருதை அதிகாரப்பூர்வ இரண்டாவது மொழியாக ஆக்கும் முயற்சி வெற்றிபெறவே இல்லை. எண்பத்தி ஒன்றின் டிசம்பர் மாதத்தில் தன்னுடைய கட்சி சகாக்கள், பிரதமர் ஆகியோரின் அனுமதியில்லாமல் உருதை வி.பி.சிங் அதிகாரப்பூர்வ மொழியாக ஆக்க முயன்று கடும் எதிர்ப்பை சம்பாதித்தார். அதிகாரப்பூர்வ என்கிற சொல்லை நீக்கி இரண்டாவது மொழி என்றாவது ஆக்கலாம் என்று முயன்றார். அவர் கொண்டுவந்த அவசரச்சட்டம் லக்னோ உயர்நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது. அடுத்து ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் முதல்வர் ஸ்ரீபதி மிஸ்ராவும் வி.பி.சிங் வழியில் இரண்டாவது மொழியாக மட்டும் உருது மொழியை மாற்ற அவசரச்சட்டம் கொண்டு வர கட்சிக்குள் எதிர்ப்பு கிளம்பியது. […] அதற்கு அடுத்து என்.டி.திவாரி முதல்வரானார். ராஜீவ் காந்தியின் இஸ்லாமியர்களைத் திருப்திப்படுத்தும் போக்குக்கு வலுசேர்க்க அவர் பழைய ஆயுதத்தைக் கையில் எடுத்தார். அவரும் அதே இரண்டாவது மொழி முயற்சியை மேற்கொண்டார். இந்தமுறை நிலைமை மோசமானது. உருதை ஆதரித்து ஒரு கல்லூரி மாணவர்களும், எதிர்த்து இன்னொரு கல்லூரி மாணவர்களும் பதவுன் நகரத்தில் ஊர்வலம் போய்ச் சந்தித்துக் கொள்ள அரசு கணக்கின்படி 26 பேர் இறந்து போனார்கள். இன்னமும் உருது அதிக மக்களால் பேசப்பட்டும் மாநில அரசால் அங்கீகரிக்கப்படாமல் உத்திர பிரதேசத்தில் இருக்கிறது. முலாயம் சிங் யாதவ் உத்திர பிரதேச முதல்வர் ஆனபொழுது விபி சிங்கின் ஜனதா அரசை மூன்று காரணங்களுக்காக வெறுப்பதாகச் சொன்னார். பாஜகவுடன் கூட்டணி சேர்ந்தது, ஆங்கிலத்தை ஆதரித்துச் செயல்பட்டது, தேர்வுகளில் பிற்படுத்தப்பட்ட ஜாதியினர் காப்பி அடித்துத் தேர்ச்சி பெறுவதற்கு எதிரான விபி சிங்கின் பார்வையே என்று அவர் சொன்னார். அவர் ‘அங்க்ரேஸி ஹட்டாவ்’ (ஆங்கிலமே வெளியேறு) என்கிற முழக்கத்தைத் தந்தார். ஆங்கிலம் ஆதிக்க சக்திகளின் மொழி என்றும், அது மாநிலத்தை விட்டு வெளியேறி அந்த இடத்தை இந்தி பெறவேண்டும் என்றும், வெவ்வேறு மாநில அரசுகள் தங்களுக்குள் தத்தமது மொழியில் தகவல் பரிமாறிக்கொள்ள வேண்டும் என்பது அவரின் பார்வை. லாலு இதற்கு மாறான பாதையைத் தேர்ந்தெடுத்தார். பிற்படுத்தப்பட்ட ஜாதியினர் ஆங்கிலம் கற்பதன் மூலமே முன்னேற முடியும் என்று அவர் ஆங்கிலம் கற்பித்தலை அரசுப் பள்ளிகளில் கட்டாயம் ஆக்கினார். அதைப் போல இஸ்லாமியர்களின் ஓட்டுக்களைப் பெற பாகல்பூரில் யாதவர்கள் இஸ்லாமியர்களைக் கலவரத்தில் கொன்றது போல இனிமேல் நடைபெறாது என்று உறுதி தந்தார். உருதும் அதன் இடத்தைப் பீகாரில் தொடர்ந்து பெற்றது. மைதிலி பிராமணர்களின் மொழியான மைதிலி அரசுப்பணிகளுக்குத் தேர்வு எழுதும் பட்டியலில் இருந்து லாலு அரசால் நீக்கப்பட்டது.   உருது மொழி உத்திர பிரதேசத்தில் தனக்குரிய இடத்தைப் பெறமுடியாமல் நிற்பது ஒரு முரண் என்றால், காஷ்மீரில் பெரும்பான்மை மக்களின் தாய்மொழியாக இல்லாத உருது அங்கே அதிகாரப்பூர்வ மொழியாக ஆதிக்கம் செலுத்துவது இன்னொரு கதை. காஷ்மீரில் மக்களால் பேசப்படும் மொழிகள் என்று கணக்கு போட்டால் காஷ்மீரி, டோக்ரி, கோஜ்ரி, மேற்கு பஹரி, இந்துஸ்தானி, பொத்வாரி, பால்ட்டி, லடாக்கி., ஷினா, புருஷாஸ்கி என்று பட்டியல் இறங்குவரிசையில் நீளும். இதில் காணப்படாத உருது தான் ஆனால் காஷ்மீர் அரசால் வளர்க்கப்படுகிறது. ஒரு வினோதமான அம்சம் என்னவென்றால் பஞ்சாபில் இந்துக்கள் பஞ்சாபியை மொழியைப் பேசிய பொழுதும், தாங்கள் இந்தி மொழி பேசுவதாகக் கணக்கெடுப்புகளில் கூறினார்கள். கர்நாடகா, கேரளா, ஆந்திராவில் முஸ்லீம்கள் உருது மொழியில் பேசுவதாகக் கணக்கை கூட்ட பொய் சொல்வது நடந்தது. காஷ்மீரிலோ இஸ்லாமியர்கள் தங்களுடைய தாய் மொழியான காஷ்மீரை நேர்மையோடு பதிவது நிகழ்கிறது. ஷேக் அப்துல்லா நாற்பத்தி நான்கில் காஷ்மிரி, பால்டி, டார்டி, டோக்ரி, பஞ்சாபி, பஹரி, லடாக்கி முதலிய மொழிகளைக் காஷ்மீரின் தேசிய மொழிகளாகவும், உருதுவை இணைப்பு மொழியாகவும் ஆட்சிக்கு வந்தால் மாற்றுவதாக அறிவித்தார். காஷ்மீரில் உயர்கல்வியில் காஷ்மீரி மொழிக்கு இடமில்லை. பாடப்புத்தகங்கள் கூடக் காஷ்மீரி மொழியில் கிடைப்பதில்லை. காஷ்மீரி மொழியிலோ, இன்னபிற சிறுபான்மை மொழிகளிலோ செய்தித்தாள்கள் வருவதும் அரிதான ஒன்றாகவே உள்ளது. காஷ்மீரி மொழி சாரதா வரிவடிவத்தில் எழுதப்படுவது, அதைக் காஷ்மீரி பண்டிட்கள் நாகரி வரிவடிவத்தில் எழுதுவார்கள். இரண்டு வரிவடிவங்களையும் காஷ்மீர் அரசுகள் கண்டுகொள்ளவில்லை. அதோடு, எல்லா முக்கியத் தகவல் தொடர்பும் இந்தி, ஆங்கிலம், உருது ஆகியவற்றிலேயே மேற்கொள்ளப்படுகின்றன. காஷ்மீரி மொழிக்கு மத்திய அரசு வழங்கும் நிதி குறைவாகவோ, செலவு செய்யப்படாமலோ இருக்கிறது. எட்டாம் வகுப்புவரை காஷ்மீரி மொழியைக் கட்டாயமாக்கும் முயற்சியும் ஓரளவுக்கே வெற்றி பெற்றுள்ளது. திபெத்திய மொழியின் கிளையான லடாக்கி மொழிக்கு வரிவடிவம் இருந்தும் லடாக் பகுதியில் உருது பயிற்றுமொழியாகத் திணிக்கப்பட்டது. திபெத்திய மொழியின் ஒரு பிரிவான பல்டி மொழியும் இந்தியாவின் வசமுள்ள காஷ்மீர், பாகிஸ்தான் வசமுள்ள காஷ்மீர் இரண்டு பக்கமும் உருது மொழியால் ஆதிக்கத்துக்கு உள்ளாகி காணாமல் போய்க்கொண்டு இருக்கிறது. பூன்ச், ரஜவுரி மாவட்டங்களில் நான்காம் வகுப்பு வரை கோஜ்ரி மொழி பயிற்றுவிக்கப்படுகிறது. பஹரி மொழிக்கும் காஷ்மீர் அரசுகள் சில சலுகைகளை வழங்குகின்றன. இந்தக் கொள்கையை வரிக்கூ எனும் பேராசிரியர் காஷ்மீரை இஸ்லாம் மயமாக்கும் வேலையே என்று கருதுகிறார். அரசியல் அறிவியல் அறிஞர் பால் பிராஸ் இதற்கு மாறாக வேலைவாய்ப்புகள் அருகியும், இந்தியாவில் இருந்தும் துண்டிக்கப்பட்டதாக உணரும் காஷ்மீரிக்களை மேலும் தகுதியுள்ளவர்கள் ஆக்கவும், இந்திய அரசுடனான தொடர்பு சுமுகமாக இருக்கவும் இந்த இந்தி, ஆங்கிலம், உருது எனும் மும்மொழிக்கொள்கை உதவுவதாகக் கருதுகிறார். மொழி அரசியல் பகுதி-6 கன்னட மொழி அரசியல் வரலாறு ஜனவரி 22,2016 கன்னட மொழி அரசியல் குறித்த ஜானகி நாயரின் கட்டுரை ‘LANGUAGE AND POLITICS IN INDIA’ நூலில் உள்ள கட்டுரைகளிலேயே முக்கியமானது எனலாம்., ஐம்பது பக்கங்களில் நீளும் அதன் சுருக்கத்தை இங்கே தந்தாலும், அதன் மூலத்தை முடிந்தவர்கள் வாசிக்கவும். புத்தாயிரம் வருடத்தின் ஜூலை 3௦ அன்று வீரப்பன் கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமாரை கடத்திய பொழுது நகரமே மூன்று நாட்களுக்கு மயான அமைதி கொண்டது. அவர் கடத்தப்பட்டு இருந்து நூற்றி எட்டு நாட்களும் பந்த்கள், உருளும் சேவைகள், பூஜைகள், கூட்டங்கள் தொடர்ந்து நடைபெற்றன. நகரத்தில் ஒரளவுக்கு வன்முறையும் இந்தக் காலத்தில் ஏற்பட்டது. சந்தனக் கடத்தல் வீரப்பன் தன்னுடைய கடத்தல் நாடகத்தில் கன்னட, தமிழ் தேசியங்களை எதிரெதிராக நிறுத்த முயன்றான் […]. நிலம், வேலைகள், நதிநீர் என்று பல்வேறு சிக்கல்களில் மோதிக் கொண்ட வரலாறை இருபது வருடங்களாகக் குறைந்தபட்சம் கொண்டிருந்த இம்மாநிலங்களுக்கு இடையே பகையை மேலும் வளர்க்கும் வகையில் அவனுடைய நிபந்தனைகள் இருந்தன. காவிரி நதிநீர் சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு, 91 நடந்த காவிரி கலவரங்களில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உரிய இழப்பீடு, தமிழை நிர்வாக மொழியாகப் பெங்களூரில் பயன்படுத்துவது, வள்ளுவர் சிலையை அந்நகரில் திறப்பது, சிறப்பு அதிரடிப் படையின் அட்டூழியங்களை விசாரிக்க அமைக்கப்பட்ட சதாசிவ கமிட்டியின் மீதான நீதிமன்றத் தடையை நீக்குவது ஆகியன அதில் அடங்கும். தோட்டத்தொழிலாளர்களுக்கு இரு மாநிலங்களும் 15௦ ரூபாய் குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும் என்கிற நிபந்தனையையும் அவன் வைத்தான். பெங்களூர் வாழ் தமிழர்கள் தங்களை வீரப்பனின் கோரிக்கைகளில் இருந்து விலகியவர்களாகக் காட்டிக்கொண்டார்கள். பெங்களூரில் உள்ள தமிழ் சங்கங்களின் வேண்டுகோளுக்குச் செவி மடுக்காத கர்நாடக அரசு தற்போது வீரப்பனின் நிபந்தனைகளை ஏற்க முனைவதை தமிழ் சங்க தலைவர் ஆர்.எஸ்.மாறன் விமர்சித்தார். அரசின் கட்டுப்பாட்டை விட்டு போய்விட்ட இந்த விஷயங்களில் அரசு மீண்டும் தன்னுடைய பிடியை கொண்டுவரவேண்டும் என்றும் அவர் கருத்து தெரிவித்தார். ராஜ்குமார் கடத்தப்பட்டது ஒட்டுமொத்த கன்னட மொழியின் பெருமையைக் கடத்தியதற்கு ஒப்பாகும் என்று பல கன்னட அமைப்புகள் கொதித்தன. கன்னட பெருமையும் , கன்னட மொழி அரசியலும் எந்தளவுக்கு ஆதிக்கம் செலுத்துகின்றன என்பதைக் குறித்து விரிவாகப் பேசவேண்டி இருக்கிறது. மைசூர் அரசு ஆங்கிலேய ஆளுகைக்குக் கட்டுப்பட்டு இருந்தாலும் தனித்தே ஆட்சி செய்துவந்தது. நவீன வசதிகளைத் தன்னுடைய ஆட்சிப் பகுதியில் அவ்வரசு கொண்டு வந்தது. எனினும், தங்களுடைய மைசூர் மாகாண தேசியத்தில் மொழிப்பற்று இல்லை என்று அல்லூர் வெங்கட் ராவ் முதலிய அறிஞர்கள் கருதினார்கள், கன்னட சாஹித்ய பரிஷத் அமைப்பு மைசூரின் பொருளாதார வளர்ச்சிக்காக விஸ்வேஸ்வரய்யா தலைமையில் நூறு வருடங்களுக்கு முன்னர் உருவாக்கப்பட்ட பொழுது அது கன்னட மொழி வளர்ச்சியிலும் கவனம் செலுத்த வேண்டும் என்று பி.எம்.ஸ்ரீ கேட்டுக்கொண்டார். கன்னடமே உயர்ந்த மொழி என்கிற கருத்து மைசூர் மாநிலத்தில் நிலவிய பொழுதும், கேரளாவை போல நூலக இயக்கங்களின் மூலமோ, கல்வி இயக்கங்களின் மூலமோ மக்களைத் தாய்மொழியில் பெருமளவில் படிக்க வைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை. முப்பதுகளில் கன்னட ஆசிரியரின் நிலைமை கவலைக்குரியதாகவே இருந்தது. ஆங்கிலமே அறிவியல், தொழில்நுட்பம்,, முதலாளிகள் அனைவருக்கும் உரிய மொழியாகப் பெருமளவில் இருந்தது கன்னட பற்றாளர்களைக் கவலைக்கு உள்ளாக்கியது. முப்பத்தி ஐந்தில் கன்னடத்தைப் பயிற்றுமொழியாக ஆக்கினாலும், உயர்நிலைப் பள்ளிகளில் சேர கன்னடம் தேவை என்கிற கட்டாய விதி அதே ஆண்டு நீக்கப்பட்டது. நித்தூர் ஸ்ரீனிவாச ராவ் முதலிய வெகுசில அறிவுஜீவிகள் தாய்மொழியில் பாடங்களைக் கற்பிக்க முயன்றார்கள். கர்நாடகாவை பொறுத்தவரை அறிவியல், தொழில்நுட்பம், பொருளாதாரம், ஐடி துறையில் ஆங்கிலமும், தொலைகாட்சி, சினிமாக்களில் இந்தி, தமிழ் ஆகியவை கலாசார ரீதியாகக் கோலோச்சுவது அம்மொழி மக்களைக் கடுப்பாக்கியது. எழுபதுகளில் வாட்டாள் நாகராஜ் தலைமையில் கன்னட சாலுவலி இயக்கத்தின் சார்பாகத் தமிழகத்தின் சில பகுதிகளைக் கர்நாடகத்தோடு இணைக்க வேண்டும் என்று போராட்டம் நிகழ்த்தியது. கடைகள், சினிமா கொட்டகைகள் தாக்கப்பட்டன. ஒரு தமிழகப் பேருந்து தாக்கப்பட்டது. கருணாநிதியின் கொடும்பாவி ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டது. லக்ஷ்மிபுரம், ஒக்கலிபுரம், மகதி சாலை முதலிய தமிழர்கள் வாழ்ந்த பகுதிகள் இந்த வன்முறையால் பாதிக்கப்பட்டன. மைசூரின் பன்மொழி கலாசாரம் இப்பொழுது சுமையாகக் காணப்பட்டது. […] அல்லூர் வெங்கட் ராவ் கர்நாடக விடுதலை இந்தியாவில் மாநிலமாக உருவான பொழுது, ‘கர்நாடகம் என்பது கன்னடத்தை விட விரிவானது…பிற வட்டார வழக்குகள், சிறுபான்மையின மொழிகளுக்கும் இங்கே இடமுண்டு. கன்னடமே ஆதிக்கம் நிறைந்தது என்றாலும் அறிவை எல்லாப் புறங்களில் இருந்தும் வரவேற்க வேண்டும்., ..;’ என்று அவர் பேசினார். இப்படிப்பட்ட ஆன்மீக தேசியத்தை விட்டுப் பயத்தை மையமாகக் கொண்ட சித்தானந்தா மூர்த்தி முதலியோர் முன்னிலைப்படுத்திய வெறுப்பைத் தூண்டும் தேசியம் முன்னணிக்கு வந்ததை டி.ஆர்.நாகராஜ் கவலையோடு குறிப்பிட்டார். இந்தச் சித்தானந்த மூர்த்தியின் மொழி அரசியலானது தமிழ் மொழி அரசியலின் அதே ஆண் தன்மையைத் தானும் கைக்கொண்டது. 91, 94 வருடங்களில் தமிழர்கள், இஸ்லாமியர்கள் மீது மொழி வெறியால் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. கன்னடத்தில் மராத்தி,. உருது, தெலுங்கு, தமிழ் மொழிகளைத் தாய்மொழியாகக் கொண்டவர்களின் பங்களிப்பு உண்டு என்பதை அவர்கள் வசதியாக மறந்தார்கள். சித்தானந்த மூர்த்தித் தன்னுடைய சொந்த அனுபவங்களில் இருந்தே இந்தப் பயம் சார்ந்த அரசியலை முன்னெடுப்பதாகச் சொன்னார். மேலும் பெங்களூரின் மக்கள் தொகையில் 35 சதவிகிதம் மட்டுமே கன்னடர்கள் இருப்பதைக் கவலையோடு சொன்னார். கொல்கத்தாவில் இருபது சதவிகித பீகாரிகள் இருப்பதையும், சென்னையில் பரவலான மலையாள, தெலுங்கு மொழின் பேசுபவர்கள் இருப்பதும் வங்க, தமிழ் மொழியின் ஆதிக்கத்தைத் தடுத்துவிடவில்லை என்பதை அவர் மறந்து போனார். மேலும் தாய்மொழி என்று தங்களின் மொழியைப் பதிவு செய்தாலும் தமிழர்கள், மராத்தியர்கள் ஆகியோரில் பலரும் கன்னட மொழியில் சரளமாகப் பேசும் திறன் கொண்டவர்கள் என்கிற உண்மையும் கணக்கில் கொள்ளப்படவில்லை. ‘கர்நாடக இதன் பெயர், கன்னடம் நம் மூச்சாகட்டும்’ என்கிற கோஷத்தோடு தான் கர்நாடக மாநிலம் உதயமானது. 65 % கன்னட மொழி பேசுபவர்களும், துளு, குடகு, தெலுங்கு, தமிழ், மராத்தி முதலிய மொழிகளைப் பேசும் சிறுபான்மையினரும் மாநிலத்தில் இருந்தார்கள். மொழி சார்ந்து நான்கு கிளர்ச்சிகள் கர்நாடகாவில் நடைபெற்றன. கோகக் கிளர்ச்சி (1982), காவிரி போராட்டம் (1991), உருது ஒளிபரப்பு எதிர்ப்புப் போராட்டம் (1994), ராஜ்குமார் கடத்தல் (2000) உண்டாக்கிய கலவரம் ஆகியனவே அவை. முதல் போராட்டம் ஹூப்ளி-தாராவத் பகுதியை மையமாகக் கொண்டு ஒட்டுமொத்த கர்நாடகத்தையும் ராஜ்குமாரின் ஆதரவால் தாக்கியது, இராண்டாவது காவிரி போராட்டம் காவிரி படுகையான தெற்கு கர்நாடகத்தில் துவங்கி பெங்களூர் வரை பரவியது, உருது ஒளிபரப்பு எதிர்ப்புப் போராட்டம் பெங்களூர், மைசூர் பகுதிகளில் மட்டுமே நடைபெற்றது. ராஜ்குமார் அபிமானிகள் சங்க தலைவர் ச.ரா. கோவிந்து கர்நாடகம் பலருக்குமான காஸ்மோபோலிடன் நகராக மாறி தங்களின் வாய்ப்புகள் பறிபோவதை தடுக்கப் பெங்களூரில் புதிய தொழிற்சாலைகள் எழுவது தடை செய்யப்பட வேண்டும் என்று கோரினார். கர்நாடக விமோசன ரங்கா முதலிய சிறிய அமைப்புகள் தனிக் கர்நாடக தேசம் என்றெல்லாம் கனவு கண்டன. அறுபதுகளில் பெங்களூரின் ராமோத்ஸ்வ விழாக்களில் தமிழ் பாடகர்கள் அதிகம் இடம்பெறுவதை மாற்றி அங்கே கன்னட பாடகர்கள் இடம்பெற வேண்டும் என்று ஆ.நா.கிருஷ்ண ராவ், மா.ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய கர்நாடக சம்யுக்தா ரங்கா அமைப்புக் கிளர்ச்சி செய்தது.63-ல் வெளிவந்த காஞ்சித் தலைவன் எனும் எம்ஜிஆர் திரைப்படம் கன்னட அரசனான மயூரவர்மனை அவமானப்படுத்துவதால் ஒட்டுமொத்த கன்னட தேசமே அவமானப்பட்டதாகச் சொல்லி அப்படம் திரையை விட்டு நீக்கப்பட்டது./ வாட்டாள் நாகராஜ் தமிழ் படங்களை வன்முறையைக் கொண்டேனும் நிறுத்துவேன் என்று மெஜஸ்டிக் பகுதியில் இருந்த திரையரங்குகளுக்கு எச்சரிக்கை விடுத்தார். […] தமிழர்கள் ஆகாசவாணி என்கிற சொல்லை எதிர்த்ததை தேசியத்துக்கு எதிரானது என்று கன்னட அறிஞர்கள் சிலர் கூறினார்கள். கன்னட மொழியில் வானொலியில் ப்ரைம் டைம் செய்தி வாசிக்கப்படவேண்டும் என்று கர்நாடக அதிமுகக் கோரிக்கை வைத்தது. இந்தியில் இருந்து மொழிமாற்றம் செய்யப்பட்ட தொடர்களை வேலைவாய்ப்புகளைக் குறைக்கிறது என்று எதிர்த்தார்களே அன்றி,, இந்தி எதிர்ப்பால் அதைக் கன்னடர்கள் செய்யவில்லை. தொண்ணூறுகளின் நடுவில் ராஜ்குமார் அபிமானிகள் சங்கம் ஆறு மாத காலத்துக்குக் கன்னட படங்களே திரையரங்குகளில் ஓட வேண்டும், ஒரு வருடத்துக்குப் பிற மொழி படங்களைத் தடை செய்யா வேண்டும், கன்னட படங்களுக்கு மட்டும் திரையரங்க வாடகையைக் குறைக்க வேண்டும் என்று கர்நாடக தயாரிப்பாளர், இயக்குனர் சங்கங்களை இணைத்துக் கொண்டு போராடியது. இந்த மற்ற மொழி திரைப்பட முடக்கம் தற்கொலைக்குச் சமம் என்று சொல்கிற அளவுக்குத் தொழிலை முடக்கியது. 76-ஆம் வருடத்தில் எல்லாத் திரையரங்குகளையும் மாநில அரசே எடுத்து நடத்தலாம் என்று பரிந்துரைக்கப்பட்டது. ஆறு மொழிகளில் படங்களைக் காட்டுகிறோம் என்று சொன்னாலும் அரசுத் தொலைக்காட்சி ப்ரைம் டைமில் கன்னட படங்களைக் காட்டவே செய்தது. பலர் இதனால் சேனல் மாற்றும் வேலையைச் செவ்வனே செய்தார்கள். கன்னடத்துவ அரசியலும், இந்துத்வ அரசியலும் பல்வேறு சமயங்களில் கைகோர்த்துக் கொண்டன என்றால் அது மிகையில்லை. 1994-ல் ப்ரைம் டைமில் உருது செய்தியை பத்தே நிமிடங்கள் ஒலிபரப்ப அரசு முடிவு செய்தது. எந்த இஸ்லாமிய அமைப்பும் இதற்காக எந்த வேண்டுகோளையும் வைக்கவில்லை. மேலும், இஸ்லாமியர்கள் மட்டுமே கர்நாடகாவில் உருது மொழி பேசுபவர்கள் இல்லை. சித்தானந்த மூர்த்தி ஆசீர்வாதத்தோடு உருது பேசும் இஸ்லாமியர்கள் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. இருபத்தி ஐந்து இஸ்லாமியர்கள் இறந்து போனார்கள். 1984-ல் நான்காவது, மூன்றாவது வகுப்பு அரசுப் பணிக்கு சேர கட்டாயக் கன்னடம் தேவையில்லை என்று ராமகிருஷ்ண ஹெக்டே அரசு முடிவு செய்த பொழுது அது உருது பேசும் மக்களுக்கு ஆதரவானது என்று கலவரங்கள் வெடித்தும் அந்த அரசு தன்னுடைய நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தது. எனினும், இந்த முறை அரசு விட்டுக்கொடுத்தது. 74-ல் தமிழகத்தில் தமிழக அரசு எண்பது சதவிகித வேலையிடங்களைத் தமிழர்களுக்கு ஒதுக்கிய பொழுது ஓரளவுக்கு மலையாளிகள் மீது நடந்த வன்முறை நீங்கலாகத் தமிழகம் மொழிச் சிறுபான்மையினர் மீது வன்முறையை மேற்கொண்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இஸ்லாமியர்கள் மீது இப்படித் தாக்குதல் என்றால் கிறிஸ்துவர்கள் மீதும் மொழிச்சாயம் பூசிக்கொண்டு தாக்குதல் நடைபெற்றது. ப்ரோட்டஸ்டன்ட் கிறிஸ்துவர்கள் கன்னட மொழியில் பூஜை நடத்தும் பாதிரியார்களை எல்லாச் சர்ச்சுகளிலும் நியமித்ததால் அவர்கள் சிக்கலில்லாமல் தப்பித்தார்கள். பெங்களூரில் உள்ள எண்பது சதவிகித கத்தோலிக்கக் கிறிஸ்துவர்கள் தமிழர்கள் என்பதால் அவர்கள் மீது மொழி வெறியால் வன்முறை கையாளப்பட்டது. கோகக் முதலிய மொழி அறிஞர்கள் கன்னட கத்தோலிக்கர்கள் மீது தமிழை இந்தச் சர்ச்சுகள் திணிப்பதாகக் குற்றஞ்சாட்டின. எண்பத்தி ஒன்றில் கிறிஸ்தரச் சங்கம் எனும் கன்னட சர்ச்சுகள் மட்டுமே இருக்க வேண்டும் என்று இயங்கிய அமைப்பு அருட்தந்தை ஆரோக்கியசாமி எனும் தமிழரை தாக்கியது. பெரும்பாலும் தமிழர்களே பிரியன்ட் சதுக்கச் சர்ச்சில் வழிபாட்டுக்கு வந்தாலும் கன்னடமே ஹை மாஸ் நிகழ்வில் பயன்படுத்தப்பட வேண்டும் எனச்]சொல்லி அந்தச் சர்ச் தாக்கப்பட்டது. கன்னட எழுத்தாளர்கள் இது மத, கலாசாரப் பிரச்சனையில்லை, இது மொழிப்பிரச்சனை என்றதோடு கன்னட மொழியில் தமிழ் பாடல்களை அச்சிட்டுத் தருவது மொழித் திணிப்பு என்று வாதிட்டார்கள். எண்பத்தி எட்டில் கன்னட, தமிழ், ஆங்கிலம் என்று மூன்று மொழியில் ஆராதனை செய்யப்படும் எனச் சர்ச் அறிவித்தும் ஈஸ்டர் பண்டிகை காலத்தில் தொடர்ந்து கன்னட மொழிப்பற்றாளர்கள் போராடுகிறார்கள். தற்போது ஆர்ச்பிஷப் கர்நாடகாவில் இருந்து மட்டுமே தேர்வு செய்யப்படுகிறார். எண்பத்தி ஒன்றில் INTUC அமைப்பு நடத்திய வேலை நிறுத்தத்தில் தமிழர்கள், மலையாளிகள் அரசு வேலையை விட்டு அனுப்பப்பட வேண்டும் என்று கடும் கோரிக்கைகள் எழுந்தன. அடுத்து கோகக் போராட்டங்கள் எல்லா இடத்திலும் கன்னட மொழி பயன்பாட்டை உருவாக்க அறிவுஜீவிகள் வட்டத்தில் முதலில் துவங்கினாலும், அதற்கு ராஜ்குமார் ஆதரவு தெரிவிக்க மக்கள் போராட்டமாக மாறியது. பொதுச்சொத்துக்கள் கடும் வன்முறையால் தாக்கப்பட்டன. சரோஜ் மகிஷி கமிட்டி அமைக்கப்பட்டுக் கடைநிலை அரசு வேலைகளில் முழுக்கக் கன்னடர்களே வேலைக்கு அமர்த்தப்பட வேண்டும் முதலிய அரசுப் பணிகளில் மண்ணின் மைந்தர்களுக்கு முன்னுரிமை என்கிற கருத்தாக்கத்தை அது செயல்படுத்த உதவியது. தமிழர்கள் மீது காவிரி நதிநீர் மன்ற ஆணையை கர்நாடக அமல்படுத்த தவறிய 91-ம் வருடம் நடைபெற்ற வன்முறைகள் குறித்து ஆராய்ந்த என்.டி.வெங்கடேஷ் கமிஷன் தரும் தகவல்கள் ஆச்சரியமூட்டலாம். மொழி சார்ந்த சிக்கல் என்று சொல்லப்பட்டாலும், இது நிலம் சார்ந்த சிக்கல் என்று அந்த அறிக்கை சுட்டுகிறது. தண்ணீர் சார்ந்த சண்டைகள், சச்சரவுகள் இருந்தாலும் பெங்களூரின் மேற்குப் பகுதியிலேயே கலவரங்கள் மிகுந்ததைக் காட்டி, அங்கே பல தமிழர்கள் சேரிப்பகுதிகளில் வாழ்வதையும், பல்வேறு ஆக்கிரமிப்புகள் இருப்பதும் நிலம் என்பது சட்டத்துக்குப் புறம்பாக ஆக்கிரமிக்கப்பட்டு இருப்பதையும் சுட்டிக்காட்டி தமிழர்கள் எந்தச் சூழலிலும் வாழ்ந்து தங்களின் வேலையைப் பறித்துக் கொள்வார்கள் என்கிற பார்வை அம்மக்களிடம் நிலவியதை கமிட்டி சுட்டுகிறது. அந்தக் கலவரங்களின் பொழுது போலீஸ் துப்பாக்கி சூட்டில் 17 தமிழர்கள், கலவரத்தில் 6 தமிழர்கள் இறந்தார்கள். மற்றபடி, 17 கோடி ரூபாய் அளவுக்குச் சொத்துக்கள் நாசப்படுத்தப்பட்டது இது பொருளாதாரத் தாக்குதல் என்பதை விளக்கும். தமிழகத்தில் இருந்து ஆதி திராவிடர்கள் பஞ்சம் பிழைக்கக் கர்நாடகம் நோக்கி வருவது ஜெர்ட்ரூட் வுட்ரபேவின் ஆய்வுகள் காட்டுகின்றன. பெங்களூரில் தெரு வண்டி வைத்தோ, வெவ்வேறு இடங்களில் வேலை பார்க்கவோ தங்களால் முடிவதாக அம்மக்கள் தெரிவிக்கிறார்கள். அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதியும், தந்தை பெரியாரும் கன்னட மண்ணில் தமிழர்கள் கன்னடர்களாகவே வாழ வேண்டும் என்று அறிவுறுத்தினார்கள். தமிழர்கள் தங்களின் கன்னடத் தொடர்பை மேலும் உறுதிப்படுத்த கெம்பகவுடா எனும் பெங்களூரு நகரை நிர்மாணித்தவர் வன்னியர் என்று குறிப்பிட்டார்கள். […] கோகக் போராட்டம் உச்சத்தில் இருந்த பொழுது அதைக் கடுமையாக விமர்சித்த டெக்கான் ஹெரால்ட் இதழின் ஆசிரியர் ஹரிகுமார்,‘கன்னடத்தின் முக்கியமான அறிவுஜீவிகள் பெரும்பாலும் மொழி அறிஞர்களாக இருப்பதால் மொழிகளின் பணி, அதிலும் குறிப்பாகக் கன்னடத்தின் தேவை அதீதமாக முன்னிறுத்தப்படுகிறது. மொழி சாராத அடையாளங்கள், வெளிப்பாட்டு முறைகள், சமூக, அரசியல் சக்திகள் கணக்கில் கொள்ளப்படாமலோ, அல்லது மொழிக்கு அடங்கியவையாகவோ காணப்படுகின்றன.’ என்று எழுதினார். ஹரிஜன் ஒடுக்குமுறை, தீண்டாமை, திருமணம், தொழிற்சங்க போராட்டங்கள் ஆகியவற்றில் மொழிக்குப் பங்கில்லாமல் போகிறது, அல்லது மொழி வேறொரு பணியை ஆற்றுகிறது என்று அவர் சுட்டிக்காட்டினார். எழுபத்தி மூன்றில் புசா போராட்டங்களின் பொழுது கவிஞர் சித்தலிங்கையா எனும் தலித்துக்கு ஆதரவாகத் தமிழ் தலித்துகள் செயல்பட்டதை இந்தக் கருத்தோடு ஒப்பிட்டுக்கொள்ளலாம். தற்போது சேவைத் துறை மயத்தால் பெங்களூர் நிரம்பிக் கொண்டிருக்கும் சூழலில் கர்நாடக விமோசன ரங்கா அரசின் மொழி முதலாளித்துவமே என்று உறுதிபடக் கருதுகிறது. ஆண்மையிழந்த மொழி என்று இந்தி போரட்டங்களின் பொழுது அமைதியாக இருந்த கன்னடர்களைத் தமிழர்கள் நகைத்து வளையல்களை அனுப்பி வைத்ததாக ஒரு கதை உண்டு. அதற்குப் பிந்தைய காலத்தில் கன்னட மொழியை வெறியும், ஆண்தன்மையும் கொண்ட மொழியாக அதன் பற்றாளர்கள் கட்டமைத்தார்கள். ராஜ்குமார் கோகக் போராட்டங்களில் கலந்து கொண்டாலும், இந்திராவை எதிர்த்துச் சிக்மகளூரில் நிற்க தேடப்பட்ட பொழுது தலைமறைவானார். ராமகிருஷ்ண ஹெக்டே அரசு கன்னடத்தைக் கட்டாயமாக 2,3,4ம் வகுப்புப் பணிகளில் சேர கற்க வேண்டியதில்லை என அறிவித்த பொழுது போராட்டங்கள் எழுந்த நிலையில் அதனை நியாயம் என்றாலும் தான் பங்குபெறப்போவதில்லை என்று ராஜ்குமார் அறிவித்தார். தெற்கு ரயில்வேயின் மையம் கர்நாடகாவில் வேண்டும் என்று அவர் பெயரால் வன்முறையான போராட்டங்கள் நடைபெற்ற பொழுது தனக்கும் ரசிகர் மன்றங்களுக்கும் தொடர்பில்லை என்று கும்பிடு போட்டார். முன்னாள் அமைச்சர் நாகப்பா வீரப்பனால் கடத்தப்பட்டு, கொலை செய்யப்பட்டுக் கண்டெடுக்கப்பட்ட சூழலில் தமிழ் சேனல்கள் நிறுத்தப்பட்டன, தமிழ் படங்கள் நிறுத்தப்பட்டன. மொழி, தண்ணீர், நிலம் என்று பல்வேறு சிக்கல்கள் இருமாநில உறவை பாதிக்கின்றன. ’சமூக நீதி அரசியல் குறித்த மீள்சிந்தனை – யோகேந்திர யாதவ் பிப்ரவரி 6, 2016 பிப்ரவரி 1, 2016 அன்று நடந்த பேராசிரியர் எம்.எஸ்.எஸ்.பாண்டியன் முதல் நினைவுச் சொற்பொழிவில் அரசியல் அறிவியல் அறிஞர் யோகேந்திர யாதவ் ‘சமூக நீதி அரசியல் குறித்த மீள்சிந்தனை’ என்கிற தலைப்பில் நிகழ்த்திய உரையின் மொழிபெயர்ப்பு இது. எனக்கும் எம்.எஸ்.எஸ்.பாண்டியன் அவர்களுக்கும் இடையே இருந்த உறவு தனித்துவமானது. அவர் மார்க்சியராகவும் , நான் லோஹியாவாதியாகவும் இருவேறுபட்ட அணுகுமுறையில் இயங்கினோம். இன்றைக்கு இரண்டுக்கும் இந்தத் தாராளமயமாக்கப்பட்ட சூழலில் பெரிய வேறுபாடுகளைக் கொண்டிருக்கா விட்டாலும் அப்பொழுது அவை தனித்த அணுகுமுறைகளாகவே இருந்தன. பின்னர் எங்களுக்குள் எப்படி ஒரு அற்புதமான பிணைப்பு உண்டானது என்றால் ஜாதியைக் குறித்துத் தொடர்ந்து நாங்கள் சிந்தித்து வந்தோம் என்பதனால் இருக்கலாம். ஜாதியை எதிர்கொள்வதில் அவர் எப்பொழுதும் விருப்பமுள்ளவராக இருந்தார். ஜாதி மட்டுமே கணக்கில் கொள்ளப்பட்டு அதனோடு இணைந்து பங்காற்றும் மற்ற கூறுகள் கவனம் பெறாத பொழுது அவற்றையும் கருத்தில் கொள்வதைப் பேராசிரியர். எம்.எஸ்.எஸ். பாண்டியன் தொடர்ந்து செய்தார். அவரின் எம்.ஜி.ஆர். குறித்த ‘The Image Trap’ நூல் எப்படிப் பிம்பம் உற்பத்தி செய்யப்பட்டு, அது உருமாற்றம் அடைகிறது என்பதைப் பிரமாதமாக விளக்கும் நூல். இப்பொழுது நரேந்திர மோடி வெற்றி பெற்றதையும் அந்த நூலைக் கொண்டு புரிந்து கொள்ள இயலும். […] NCERT பாடப்புத்தகத்தில் அம்பேத்கர் குறித்த கேலிச்சித்திரம் சார்ந்து எழுந்த சிக்கலை அடுத்து என்ன இறுதித் தீர்ப்பு எழுதுவது என முடிவு செய்துவிட்டு அமைக்கப்பட்ட குழுவில் பேராசிரியர். எம்.எஸ்.எஸ்.பாண்டியன் அவர்களும் உறுப்பினராக இருந்தார். அந்த விசாரணைக் குழுவில் வளைந்து கொடுக்கும் தன்மையற்ற பாண்டியனை ஏன் சேர்த்தார்கள் என்று புரியவில்லை. முறையான கேள்விகளை எங்களை நோக்கி அடுக்கிய பாண்டியன் அவர்கள் இறுதியில் மற்ற உறுப்பினர்களிடம் இருந்து மாறுபட்டு ஒரு மறுதலிப்புக் குறிப்பை எழுதினார். இந்தியாவில் அரசியலுக்கும், அறிவுபுலத்துக்கும் இடையே உள்ள உறவை குறித்து வருங்காலத்தில் வரலாறு எழுதப்படும் பொழுது பாண்டியன் அவர்களின் அந்தக் குறிப்பு அறிவுப் புலத்தின் கண்ணியத்தை மீட்டெடுக்கும் என்பதை என்னால் உறுதிபடக் கூறமுடியும் . சமூக நீதி என்பது உலகளவில் பரந்துப்பட்ட பொருளில் வழங்கப்படுகிறது என்றாலும் இந்தியாவில் பெரும்பாலும் அது ஜாதி சார்ந்த நீதியையே குறிக்கப் பயன்படுகின்றன. சமூக நீதிக்கான இயக்கங்கள் இட ஒதுக்கீட்டை குறிவைத்து இயங்கி இருக்கின்றன. சமூக நீதிக்கான செயல்திட்டங்கள் என்பதும் ஜாதி சார்ந்த ஒன்றாகவே இயங்குகின்றன. சமூக நீதி அரசியல் குறித்த மீள்சிந்தனை என்கிற இந்தத் தலைப்பை ரோஹித் வெமுலாவின் மரணத்தை ஒட்டி காண்பதன் அவசியத்தை நான் பேச விரும்புகிறேன். ரோஹித் வெமுலாவின் மரணத்தைத் தொடர்ந்து ஜாதி சார்ந்த அநீதி என்பது எவ்வளவு தீவிரமாக இயங்குகிறது என்பதைக் கண்டோம். ஜாதிக் கொடுமைகள் இன்றும் தொடர்வதைப் பலர் ஏற்றுக்கொள்ளவும் ஹைதராபாத் பல்கலையில் நடந்த நியாயமற்ற நிகழ்வுகள் வழிகோலின. இந்த நிகழ்ச்சி நமக்கு எதை நினைவுபடுத்துகிறது என்று யோசியுங்கள். நவீன அமைப்புகளில் ஜாதி எவ்வளவு ஆழமாகத் தன்னுடைய கொடுங்கரங்களைப் பரப்பியிருக்கிறது என்பதன் நினைவூட்டல் இந்த மரணம். ஜாதிக் கொடுமைகள் உச்சபட்சமாக உள்ள இடங்களில் பெரும்பாலும் ஜாதி சார்ந்த வன்முறைகள் குறித்த புகார்கள் பதியப்படுவதில்லை. எங்கு இந்த அணுகுமுறைக்கு எதிர்ப்பு கிளம்புகிறதோ, அங்கிருந்து தான் இந்த மாதிரியான விஷயங்கள் வெளிப்படுகின்றன. மற்ற பல்கலைக்கழகங்களில் இருந்து வேறுபட்ட துடிப்பு மிகுந்த மாணவர்களை ஹைதரபாத் பல்கலைக்கழகம் உருவாக்கியிருக்கிறது. ஜாதி சார்ந்த அநீதி இழைப்பு குறித்த நுண்ணிய, அதிகளவிலான புரிதல் இந்தப் பல்கலைக்கழக மாணவர்களுக்கு உள்ளது. […] ரோஹித் வெமுலாவின் மரணமும், அதற்கடுத்து நடந்த நிகழ்வுகளை நாம் கூர்ந்து கவனிக்க வேண்டும். பட்டியல் ஜாதியைச் சேர்ந்த ஒருவராக ரோஹித் வெமுலா இல்லை என நிறுவ முயன்றார்கள். அதனைச் சார்ந்து ஜாதி வன்முறைக்கான எல்லையாகப் பட்டியல் ஜாதி சான்றிதழை அவர்கள் நிர்ணயிக்கப் பார்த்தார்கள். ஒரு இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவரோ, பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்களோ ஜாதி வன்முறைக்கு ஆளாக மாட்டார்கள் என்றும் நம்பவைக்க முயன்றார்கள். முதலில் ரோஹித் வெமுலாவுக்கு நிகழ்ந்த அநியாயத்தை இல்லையென்று மறுத்தார்கள், அடுத்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ‘இந்தியா தன்னுடைய பெருமைமிகுந்த மகனை இழந்துவிட்டது’ என்று ஆழ்ந்த வருத்தம் தோன்ற கண்ணீர் வடித்தார். இவை இரண்டும் ஒரே சமயத்தில் நாடகம் போல இணைந்து நிகழ்த்தப்பட்டன. இப்படிப்பட்ட சம்பவங்கள் ஒரு வடிவத்தைக் கொண்டிருப்பதைக் காணலாம். முதலில் ஜாதி சார்ந்த வன்முறையே இல்லை என்று மறுப்பது, பின்னர் அந்த நிகழ்வையே களமாக்கி போராடுவது, அதற்குப் பின்னர் ஜாதி சார்ந்த வன்முறைகள் குறித்த நீண்ட அம்னீசியாவுக்குள் போவது வழக்கமாக இருக்கிறது. அப்படி இந்தமுறை நடக்கக் கூடாது என்றே நான் விரும்புகிறேன். அப்படி அம்னீசியாவுக்குள் சென்று விடும் சமூகம் என்கிற சோகமான தீர்ப்பை நான் முன்முடிவோடு எழுத விரும்பவில்லை. இருந்தாலும், கடந்தகாலம் எப்படியிருந்தது என நினைவூட்ட விரும்புகிறேன். ஆதிக்க ஜாதியினர் இட ஒதுக்கீட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றால் இட ஒதுக்கீட்டை சீர்திருத்துவது, மேம்படுத்துவது என்பது அதன் பொருளல்ல, இட ஒதுக்கீட்டை அறவே ஒழிக்க வேண்டும் என்பதையே அவர்கள் விரும்புகிறார்கள். சமூக நீதி தற்போது அடைந்திருக்கும் இடம் சமூக நீதி அரசியலின் தோல்வியைக் காட்டுகிறது. அறுபதுகளில் தெற்கில் எழுந்த சமூக நீதி இயக்கங்கள் எண்பதுகள், தொன்னூறுகளில் வடக்கிலும் பரவியது. மத்திய பிரதேசம் போன்ற ஆதிக்கச் சாதியினரே முதல்வரான மாநிலங்களில் தற்போது பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்கள் முதல்வராக ஆகமுடிகிறது. நரேந்திர மோடி தன்னுடைய அடையாளங்களில் ஒன்றாகத் தான் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர் என்பதை முன்வைப்பதையும் காணலாம். பிற்படுத்தப்பட்டோர் அரசியல் இந்தியாவில் ஓடிஸா, மேற்கு வங்கம், ராஜஸ்தான், பஞ்சாப் ஆகிய நான்கு மாநிலங்களைத் தவிர்த்து மற்ற பகுதிகளில் வெற்றியை அடைந்திருக்கிறது. மேற்கு வங்கத்தில் இடதுசாரிகளின் ஆட்சி என்பது முந்தைய பத்ரோலக் எனும் ஆதிக்க ஜாதியினரின் ஆட்சியின் நீட்சியாகவே இருக்கின்றது. கேரளாவில் ஏற்கனவே இருந்த வலுவான பிற்படுத்தப்பட்டோர் அரசியலை இடதுசாரிகள் தொடரவேண்டிய நிர்பந்தத்துக்கு ஆளானார்கள். மற்றபடி சமூக நீதி அரசியலில் இடதுசாரிகளின் பங்களிப்பு வெகு, வெகு குறைவு.  நாடாளுமன்றத்தில் பட்டியல் ஜாதியினர், பழங்குடியினர் ஆகியோருக்கு என்று ஒதுக்கப்பட்ட பாராளுமன்ற, சட்டசபை இடங்களுக்கான இட ஒதுக்கீட்டை நீட்டிப்பதை எந்த எதிர்ப்பும் இல்லாமல் எல்லாக் கட்சிகளும் செய்கின்றன. பட்டியல் ஜாதியினர், பழங்குடியினர் ஆகியோருக்கு எதிரான வன்முறை தடுப்பு மசோதா துளி எதிர்ப்பும் இல்லாமல் சட்டமாக நிறைவேறியது. இவ்வாறு பட்டியல் ஜாதியினர், பழங்குடியினர் பற்றி அரசியலில் எதிர்க்கருத்து வைக்கத் தயங்குகிற அளவுக்கு அவை புனிதப் பசுவாகச் சமூக நீதி அரசியலால் மாறியிருக்கின்றன. என்றாலும், சமூக நீதி அரசியல் என்பது ஒரு முட்டுச்சந்தை அடைந்து விட்டது என்று வருத்தத்தோடு பதிவு செய்கிறேன். பிற்படுத்தப்பட்டோர் சமூகநீதி அரசியல் மிகப் பெரிய வெற்றியைப் பெற்று, அதன் வழியான அரசியல் அதிகாரத்தை அடைந்து உள்ளது.ஆனால் அதன் இயக்கத்தளம் வெகுவாகச் சுருங்கி சுயசாதி நலன் என்ற அளவில் ஒடுங்கி விட்டது. சமூகத்தில் பெருமளவில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான நீதியை பெற்றுத்தர இந்த இயக்கங்கள் போராடி வெற்றி பெற்றன. அந்த வெற்றிக்கு அவர்களே பலியாகி விட்டார்கள். தெற்கில் மேல்தட்டினராக இருந்த பார்ப்பனர்களின் இடத்தைப் பார்ப்பனர் அல்லாதோர் கைப்பற்றினார்கள். வடக்கில் இப்படி ஆழமான வெற்றி பீகாரில் மட்டுமே ஓரளவுக்குச் சாத்தியமானது. தற்போது இந்தச் சமூக நீதி அரசியல் தேக்கமடைந்து விட்டது. இட ஒதுக்கீடு என்பது தற்போது விகிதாசாரத்தில் பெருமளவில் சுருங்கிவரும் பொதுத்துறையில் மட்டுமே வேலைவாய்ப்பை வழங்குகிறது. மேல் சாதியினர் , பிற்படுத்தப்பட்டோரில் மேல்தட்டினர், பட்டியலினத்தவரில் வளர்ச்சியை அடைந்துவிட்ட மேல்தட்டினர் ஆகியோருக்கு கீழே இதர பிற்படுத்தப்பட்டோரில் சேவை சாதியினரும் , கைவினைஞர் சாதியினரும் வைக்கப்பட வேண்டியவர்களாக இருக்கின்றனர். அவர்களுக்கு அடுத்தே ஒடுக்கப்பட்ட பட்டியல் வகுப்பைச் சேர்ந்த அடித்தட்டினர் வருவார்கள் என்று எனக்கு தோன்றுகிறது. இது குறித்து உறுதியான தரவுகள் என்னிடம் இல்லை. எனினும், இந்தக் கருத்தை உங்கள் முன் நான் சமர்ப்பிக்கிறேன். இதை அறிஞர்கள் ஆய்வு செய்து இதன் சரித்தன்மையை உறுதிப்படுத்தலாம். சமூகநீதி அரசியலின் போதாமையை/ தோல்வியை இந்த பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் வளர்ச்சியின்மை அடையாளப்படுத்துகிறது. கடந்த காலங்களில் ஜாதி பாகுபாடு இல்லவே இல்லை என்று நிராகரிக்கும் பாணி இருந்தது. தற்போது இருக்கிற ஒரே பாகுபாடு ஜாதி பாகுபாடு, அதனைத் தீர்க்கும் ஒரே வழிமுறை இட ஒதுக்கீடு என்று பெருமளவில் கருதப்படுகிறது. நாம் நான்கு முக்கியமான சமூகநீதி மறுக்கப்படும் தளங்களைக் கணக்கில் கொள்ளவேண்டும். ஜாதி, வர்க்கம், பாலினம், கிராம-நகரப் பாகுபாடு ஆகிய இந்நான்கும் இணைந்தே பாகுபாட்டை நிலைநிறுத்துகின்றன. இட ஒதுக்கீட்டை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்றாலே அதனைக் கண்மூடித்தனமாக எதிர்க்கிற செயலையே செய்கிறோம். நாம் பொருளாதார ரீதியாக மட்டுமே இட ஒதுக்கீடு தரவேண்டும் என்கிற அபத்தமான வாதத்தை நிராகரிக்கும் அதேசமயம், இட ஒதுக்கீட்டை மேலும் செம்மைப்படுத்த வேண்டிய தருணத்தில் நிற்கிறோம். […] இந்தத் தைரியமான அரசியலை முதலில் முன்னெடுப்பவர்கள் ஓரளவுக்கு ஓட்டுக்களை இழந்தாலும், பின்னர்ச் செல்வாக்கை மீட்பார்கள். அனைவருக்காகவும் பேசுவதைச் சமூக நீதிக் காவலர்கள் செய்ய வேண்டும். இந்தியாவின் பிரதமராக ஆசைப்படும் ஒடுக்கப்பட்ட பிரிவுகளைச் சேர்ந்த தலைவர்கள் எல்லாருக்குமான தலைவராக ஆசைப்படுவதேயில்லை. தெளிவான திட்டமிடல், பலதரப்பட்ட பிரிவினரையும் கருத்தில் கொண்டு தீர்வுகள் தருவது, உறுதியான நிலைப்பாடு ஆகியவை தேவைப்படுகின்றன. ஆதிக்க சக்திகள் என்று சொல்கிற கட்சிகளுக்கு மாற்று எனச் சொல்லிக்கொள்ளும் இவர்களின் தேர்தல் அறிக்கை, பொருளாதாரத் திட்டங்கள், கொள்கை முடிவுகள் எப்படி ஆதிக்க சக்திகளிடம் இருந்து மாறுபட்டு உள்ளன எனப் பார்த்தால் பெரிய வேறுபாடில்லை என்பதே முகத்தில் அறையும் உண்மை. முதலில் தன்னுடைய பிரிவினரின் முன்னேற்றத்துக்காக ஒடுக்கப்பட்ட பிரிவுகளின் தலைவர்கள் பாடுபடுவதன் நியாயம் நன்றாகப் புரிகிறது. அதேசமயம், நீடித்து மக்களின் மதிப்பை பெற அனைவருக்காகவும் இயங்கும் அரசியலை கைக்கொள்ள வேண்டும். ஜனநாயகமயமாக்கல் தங்களை வந்தடையவில்லை என்று சொல்லி களம் புகுந்த இக்கட்சிகளில் உட்கட்சி ஜனநாயகம் மிகவும் கவலைக்கிடமாக இருப்பதையும் கவனிக்க வேண்டும். பலகாலமாக மாநிலவாரியாக, சாதிவாரியாக, மொழிவாரியாகப் பிளவுபட்டு இயங்கிய இந்த ஒடுக்கப்பட்ட மக்களுக்கான சக்திகள் இணைந்து பணியாற்ற வேண்டும். அப்படி அவை ஒன்றுபட யோசிப்பதால் காங்கிரஸ் கடந்த காலங்களில் செயல்பட்டது போல ஆதிக்க ஜாதியினர், பிற்படுத்தப்பட்ட மக்களில் ஒரு பகுதி, பட்டியல் சாதியினரில் ஓரளவுக்கு ஆதரவு ஆகியவற்றைக் கொண்டு பாஜக ஆட்சியைப் பல இடங்களில் பிடிக்கிறது. ஒடுக்கப்பட்ட மக்களை நேரடியாக ஆதிக்க ஜாதி அரசியல் சக்திகள் தொடர்பு கொண்டு தங்களின் அரசியல் ஆதாயங்களுக்கு பயன்படுத்திக்கொள்கிறார்கள். ஒடுக்கப்பட்ட-பிற்படுத்தப்பட்டோர் கூட்டணி என்பதே தற்போது சாத்தியமற்றுப் போய் அவர்களுக்குள் பகைமை மட்டுமே நிலவுவது போன்ற சூழல் காணப்படுகிறது. எனவே, பிளவை சீர்செய்து ஒன்றுபட்டுப் பலதரப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அரசியலை பல தளங்களில் பேசவேண்டிய முக்கியமான கட்டம் இது. ரோஹித் வெமுலாவின் கடிதம் வித்தியாசமான, அழகான கடிதம். யாரையும் குறை சொல்ல ரோஹித் மறுக்கிறான். யார் முன்னும் தன்னைச் சிறியவனாக உணரவும், கடும் வன்மத்தை வெளிப்படுத்தவும் அவன் அக்கடிதத்தில் மறுக்கிறான். என்னை அழியா நம்பிக்கை கொண்டவன் என்று கூட நீங்கள் அழைக்கலாம், என்றாலும் இதனைச் சொல்கிறேன். ரோஹித் வெமுலாவின் மரணம் பலதரப்பட்ட மக்களை ஜாதி அநீதிக்கு எதிராக ஒன்று திரட்டியுள்ளது. இதுவரை இதனைப் பற்றி மூச்சு விடாதவர்களைப் பேச வைத்திருக்கிறது. பெரிய, ஆழமான, தொலைநோக்குக் கொண்ட சமூக நீதி அரசியலை முன்னெடுத்து அயராமல் செயல்படுவதே நாம் எம்.எஸ்.எஸ். பாண்டியன் அவர்களுக்குச் செலுத்தும் மகத்தான சமர்ப்பணம். ‘இப்பலாம் யாரு சார் ஜாதி பாக்குறா?’ பிப்ரவரி 8, 2016 இப்பலாம் யாரு சார் ஜாதி பாக்குறா?’ சமூகஊடகங்களின் வருகைக்குப் பிறகு முதல்முறையாக ஜாதி என்பது எண்ணற்ற மக்களால் விவாதிக்கப்படும் ஒன்றாக இப்பொழுது மாறியுள்ளது. ஜாதி, ஜாதி சார்ந்த அநீதிகள், சலுகைகள் குறித்துச் சூடான விவாதங்கள் Facebook, Twitter, Quora, Reddit, Instagram என்று எங்கும் நடக்கிறது. ஜாதி பற்றிய இந்த உரையாடல் ஒரு அறிவிற் சிறந்த ரோஹித் வெமுலா எனும் இளைஞனின் மரணத்துக்குப் பிறகே நடக்கிறது என்பது இதயத்தைப் பிசைகிறது. எனினும், இந்த உரையாடல் பல காலத்துக்கு முன்னரே நடைபெற்றிருக்க வேண்டும். நீங்கள் ஒடுக்கப்பட்ட ஜாதியை சேராத ஒருவர் என்றால் ஐந்து நிமிடம் ஒதுக்கி இந்தப் பதிவை படித்துவிட்டு இந்த விவாதங்களில் ஆழமாக இறங்குங்கள். ரெடி? 1. ஜாதியே இல்லை என்கிறீர்களா?: நீங்கள் ஜாதி சார்ந்த பாகுபாட்டை, வன்முறையை, தீண்டாமையைச் சந்திக்காவிட்டால் அப்படி எதுவும் சமூகத்தில் இல்லை என்று எளிமையாக எண்ணிக்கொள்ளக்கூடும். ஆனால், பல லட்சம் தலித்துகளுக்கு அது அன்றாடம் நடக்கின்ற ஒன்றாகும். எனவே. ‘ஜாதி எல்லாம் போன தலைமுறையோடு போச்சு!’ என்றோ, ‘இப்பலாம் யாருங்க ஜாதி பாக்குறா’ என்றோ குரல் எழுப்புவதற்கு முன்னால் கொஞ்சம் அந்தப் பாகுபாட்டைச் சந்தித்த தலித்துகளின் கதைகளைக் காது கொடுத்துக் கேளுங்கள். 2. ஜாதியை புரிந்து கொள்ளுங்கள்: ஜாதி சார்ந்த ஒடுக்குமுறைகள் குறித்து அறிய நீங்கள் முயலுங்கள்/ நம்முடைய பாடப்புத்தகங்கள் இவை குறித்துப் போதுமான அளவுக்குபேசுவதில்லை. ஏன் இடஒதுக்கீடு, கோட்டாமுறை தேவைப்படுகிறது என்று புரிந்துகொள்ள முயலுங்கள். ஏன் சில ஜாதிகளின் பெயர்கள் இப்பொழுதும் வசைச்சொல்லாக உபயோகிக்கப்படுகிறது என்றும், இந்த ஒடுக்கப்பட்ட ஜாதிகளைச் சேர்ந்தவர்கள் எப்படிப்பட்ட உளவியல் வன்முறைகளுக்கு ஆளாகிறார்கள் என்று அறிந்துகொள்ளுங்கள். அண்ணல் அம்பேத்கரின் Annihilation of Caste, சமீபத்தில் வெளிவந்த Hatred in the Belly நூல் ஆகியவற்றில் துவங்கலாம்.dalitdiscrimination.tumblr.com தளத்தை அவசியம் அவ்வப்பொழுது பாருங்கள். 3. உங்களுக்குக் கிடைத்திருக்கும் வாய்ப்புகளைப் புரிந்து கொள்ளுங்கள்: ஜாதி அமைப்புகள் தனிக்காட்டில் ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்காக மட்டும் இயங்கவில்லை. ஒருவர் அநியாயமாக ஒடுக்கப்படுகிறார் என்றால், அது உங்களைப் போன்ற தலித் அல்லாதவேறொருவருக்குப் பயனைத் தருகிறது என்று உணருங்கள். கல்வி, சொத்து ஆகியவற்றைத் தொடர்ந்து பெற்ற உங்களின் முன்னோர்களின் மூலம் உங்களுக்குச் சாதகமான சூழல் வந்து சேர்ந்திருக்கின்றது, வரலாறு நெடுக நீங்கள் அனுபவித்த இந்த அம்சங்கள் இன்றும் மிகக்கடுமையாகத் தலித்துகளுக்கு மறுக்கப்படுகின்றது. உங்களுக்கான வாய்ப்புகள் நீங்கள் ஒன்றை செய்ததாலோ, செய்யாததலோ வந்துவிடவில்லை. உங்களுக்குப் பரம்பரையாகத் தொடரும் வாய்ப்புகளும், தலித்துகளுக்கு வெகுகாலமாகத் தொடரும் ஒடுக்குமுறையும் தொடர்ந்து வந்து சேர்ந்திருக்கின்றன. நீங்கள் அதன் இருப்பை மாற்றமுடியாது என்றாலும், அப்படியொரு அநீதி இருப்பதை ஏற்றுக்கொள்ள நிச்சயம் முடியும். 4. உங்களைப் பற்றித் தனிப்பட்ட தாக்குதல் இல்லை: உங்களை யாரும் தனிப்பட்ட முறையில் குறை சொல்லவில்லை. நீங்கள் ஜாதிய மனப்பான்மை கொண்டவர் இல்லையென்றால், ஜாதி சார்ந்த முன்முடிவுகள் உங்களுக்கு இல்லையெனின், ஜாதியின் சிக்கலான செயல்பாட்டை நீங்கள் உணர்ந்திருக்கிறீர்கள் என்றால் நீங்கள் விதிவிலக்கு, பொதுவிதி அல்ல.#NotAllUpperCastes என்று சொல்லிக்கொள்வது இந்தபிரச்சனையில் இருந்து தேவையற்று திசைதிருப்பும் போக்காகும். ஒரு கார் ஒரு நபரை இடித்துக் கொல்கிறது என்கிற பொழுது நீங்களோ, மற்ற எல்லா ஓட்டுனர்களும் கொல்வதில்லை என்று நீங்கள் கதறுகிறீர்கள். காப்பாற்றப்பட்டிருக்க வேண்டிய ஒரு உயிரை உங்களுக்கு அனுதாபம் தேடும் மும்முரமான பணியில் சாகடித்து விட்டீர்கள் எனச் சொல்லலாம் […] 5. தலித் அடையாளம் உங்களைக் காயப்படுத்த அல்ல: தலித் அடையாளம் வெகுகாலமாக அவமானகரமாகப் பார்க்கப்பட்டு, படிப்படியாகப் பெருமையான ஒன்றாக மாறிவருகிறது. தலித் பெருமை உங்களைக் காயப்படுத்த பேசப்படவில்லை, அது எங்களின் நிலையை அடிக்கடிநினைவுபடுத்திக்கொள்ளப் பயன்படுகிறது மீண்டும் சொல்கிறேன், இது உங்களைப் பற்றி அல்ல, எங்களைப் பற்றியது. 6. நீங்கள் ஜாதியற்றவர் இல்லை: எரியும் நெருப்பில் பிறர் நடக்க, நீங்கள் மலர்மெத்தையின் மீது நடப்பதைப் போலதான் நான் ஜாதியே பார்ப்பதில்லை என்பதும். உங்களுடைய முன்னோர்களுக்குக் கல்வி மறுக்கப்படவில்லை, பல்கலைக்கழகங்கள் அவர்களின் கடைசிப் பெயருக்காகவோ, அவர்கள் உயிருடன் இருக்கிறார்கள் என்பதற்காகவோ கல்வி நிலையங்களை விட்டு தூக்கிஎ றியப்படவில்லை. பலலட்சம் தலித்துகள் இன்னமும் இப்படிப்பட்ட கொடிய யதார்த்தத்தோடு தான் வாழ்கிறார்கள். ஜாதியில்லை என்று நீங்கள் சொல்கிற அதே தருணத்தில் எண்ணற்றோர் அதே ஜாதி அடையாளத்துக்காகக் கொடும் அடக்குமுறை, வன்முறைகளைச் சந்திக்கிறார்கள். அந்த அடையாளத்தை அவர்கள் விட விரும்பினாலும் சமூகம் அனுமதிப்பதில்லை. முன்முடிவுகள் அவர்களைத் தொடர்ந்துவேட்டையாடி, வன்முறையால் மண்டியிட வைக்கிறது. உங்களின் ஜாதியும், எங்களின் ஜாதியும் உயிரோடுதான் இருக்கின்றன. அப்படியொன்று இல்லவே இல்லை என்பது பூனை கண்ணை மூடிக்கொண்டால் உலகம் இருள்வதைப் போலத்தான். 7. கருணையுள்ளவர் இல்லை நீங்கள் என உணருங்கள்: உங்களுக்கு இருக்கும் வாய்ப்புகள், தலித்துகள் மீதான அடக்குமுறைகளை அங்கீகரிப்பது என்பதால் நீங்கள் யாருக்கும் எந்த அனுகூலமும் செய்யவில்லை, ஜாதி பற்றிய உரையாடலில் நீங்கள் பங்கெடுக்கிறீர்கள் அவ்வளவுதான். பொதுநலனில் அக்கறையுள்ள., தேசபக்தரான ஒரு குடிமகனாக இந்தவரலாற்றைத் தெரிந்து கொள்வது உங்களுடைய கடமை. நீங்கள் தலித்துகளோடு ஜாதி சார்ந்த உரையாடல் நிகழ்த்துவதால் மட்டுமே அவர்கள் உங்களுக்கு நன்றியோடு இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள். ஜாதி பற்றிய சிக்கலான உரையாடலை புரிந்துகொள்வதால் நீங்கள் மேலானவர் என்று எண்ணுவதே ‘ஜாதியப்பார்வை’ தான். உங்களின் கருணையான அணுகுமுறையை விட எங்களைச் சமமாக நடத்துவதையே நாங்கள் விரும்புகிறோம். […] ஒரு செழிப்பான சூழலில் இருந்துகொண்டு ‘ஐயோ பாவம்’ என்று உச் கொட்டுவதும் உங்களுக்கான வாய்ப்புகளுக்கு ஒரு எடுத்துகாட்டு தான்/8. உங்கள் பிறப்பை குறை சொல்லவில்லை: ஆதிக்க ஜாதியினர் பெற்றிருக்கும் வாய்ப்புகள் குறித்துப் பேசுவது நிகழும் பொழுது, ‘நான் முடிவு செய்யமுடியாதஎன் பிறப்பை வைத்துக் குறை சொல்லாதீர்கள்.’ எனச் சொல்லாதீர்கள். உங்களின் பிறப்பை யாரும் குறை சொல்லவில்லை, எங்களுக்குக் கிடைக்காத பல கிடைத்திருக்கும் அதிர்ஷ்டசாலி நீங்கள் என்று சுட்டிக்காட்டுகிறோம். தற்போதைய உரையாடல் வாய்ப்புகள், முன்முடிவுகள் பற்றிய ஒன்று மட்டுமே அன்றி அது தனிப்பட்ட நபர்களைப் பற்றியது அல்ல 9. கோபத்தைக் கேள்வி கேட்கவும்: பகுத்தறிவான ஒரு கருத்து உங்கள் முன் வைக்கப்படுகின்ற பொழுது நீங்கள் தொடர்ந்து கொதித்துப் போகிறீர்கள் என்றால், இப்பொழுதாவது ‘ஏன்?’ எனக் கேட்டுக்கொள்ளுங்கள். உங்களைவிடக் கீழானவர் என்று நினைத்த ஒருவர் உங்களுக்குச் சமமாகப் பேசுவதால் அப்படி அருவருப்பு தோன்றுகிறதோ. குறிப்பு: இப்படித்தான் முன்முடிவும் காட்சியளிக்கும். எனினும், இந்த அர்த்தமுள்ள விவாதத்துக்கு நீங்கள் தயாராக இல்லை என்றால் மேற்சொன்ன எதுவும் உங்களுக்குப் பொருந்தாது. மேலும், உங்களை யாரும் பொருட்படுத்தவும் இல்லை. – Yashica Dutt […] மூலம்: http://www.huffingtonpost.in/yashica-dutt-/so-you-want-to-meaningful_b_9129308.html ஷூ பாலீஷ் போடச்சொன்ன பிரபஞ்சன், ஜெயலலிதாவை போற்றிய கருணாநிதி! பிப்ரவரி 12, 2016 கேள்விகள் என்கிற ஞாநி அவர்கள் மேற்கொண்ட நேர்காணல்களின் தொகுப்பு நூலை வாசித்து முடித்தேன். கமலில் துவங்கி அக்கினிபுத்திரன் வரை பதினாறு ஆளுமைகளின் பேட்டிகள் இதில் உண்டு. அசோகமித்திரன், சோ ஆகியோரிடம் இரு வேறு காலங்களில் எடுக்கப்பட்ட நான்கு நேர்காணல்களும் இந்நூலில் இருக்கின்றன. எண்பத்தி இரண்டில் துவங்கி இருபது வருட காலங்களில் எடுக்கப்பட்ட நேர்காணல்கள் என்பதால் பல்வேறு காலங்களைப் பதிவு செய்யும் ஆவணமாக நூல் தோன்றுகிறது.   பிறர் கவனிக்க வேண்டும் என்பதற்காக நாட்டியம் கற்க ஆரம்பித்த கமல், அதை பலரும் கவனிக்க மாட்டார்கள் என்று உணர்ந்ததும் இயக்குனராக முயற்சித்து பின்னர் நடிகராக தன்னுடைய பயணத்தைத் தொடர்கிறார். சினிமாவில் தொட்டு நடிக்க மாட்டேன், முத்தம் கொடுக்க மாட்டேன் என்பது தொழில் தர்மத்துக்கு எதிரானது என்று சொல்கிற கமல், தன்னுடைய உடம்பைக் காட்டி நடிப்பதை நியாயமே என்கிறார். ஒரு வகையான கவர்ச்சி ஆண், பெண் உடலின் மீது இருக்கிறது. இவற்றின் மீது நிறைய பிரமை இருக்கிறது. இவை உடைய எல்லாவற்றையும் காட்டுங்கள். ஒரு பெண்ணின் உடம்பை, முலைகளை காட்டுங்கள். அவள் நடந்து போவதை, ஏணியில் ஏறுவதை, ஆணைப் போல ஆபிஸ் போவதைக் காட்டுங்கள். அடுத்து அவளுக்கு மூளை இருப்பதை காட்டவேண்டும் என்கிறார் கமல்.   ஆத்திகர்கள் கடைசியாகக் கேட்பது, ‘சரி, நமக்கு மேலே ஒரு சக்தி இருக்கிறதா இல்லையா?’ என்பதுதான். நாத்திக நண்பன் சொன்னான், ’ இருந்து விட்டுப் போகட்டும். நான் அதை பூஜை செய்து கொண்டிருக்க முடியாது. மின்சாரமும் கண்ணுக்குத் தெரியாத பெரிய சக்திதான். ஆனால், நாம் விளக்கு கம்பத்தை எல்லாம் கும்பிடுவதில்லை.’ என்று நண்பன் சொன்னதை சொல்கிறார். ரஜ்னி கோத்தாரி எனும் புகழ்பெற்ற அரசியல் அறிவியல் அறிஞரிடம் மேற்கொள்ளப்பட்ட நேர்காணல் சுவையானது. காங்கிரசில் விடுதலைக்குப் பின்னர் அதிகாரத்தை கிராமப்புற பணக்காரர்களும், நடுத்தர விவசாயிகளும் பகிர்ந்து கொண்டார்கள். அது ஏழைகளுக்கான அரசில்லை என்பது உணரப்பட்ட பொழுது வெறுப்பு ஓட்டுக்களை மாற்று அணிகளுக்கு வழங்கத் துவங்கியது. ஆனால், இந்திரா ஏழைகளின் காவலராக தன்னைக் காட்டிக்கொண்டு அரசியலில் பொருளாதார பார்வையை முன்னிறுத்தினார். அவர் அதை பெரும்பாலும் ஓட்டு வாங்கும் கோஷமாக மட்டுமே மாற்றியதோடு, கட்சிக்குள் தனக்கு எதிராக இருக்கும் தலைவர்கள், குழுக்களை ஒழித்துக்கட்டினார். அதிகாரம் முழுவதும் அதிகாரிகள் வசம் போய்ச்சேர்ந்தது.   இந்திரா அதிகாரம் செலுத்தியவர் என்பது உண்மையில் இல்லை, அவருக்கு அதிகாரம் என்பதே இல்லாமல் போனதால் தான் தொடர்ந்து அதிகாரத்தை நிறுவ அவர் முயன்றார். குண்டுராவ்கள், அந்துலேக்கள் ஆகியோரின் ஆட்சியாகவே அவரின் ஊழல் ஆட்சி பரிணமித்தது. குண்டர்களை ஒருங்கிணைப்பதையே சஞ்சய் காந்தி செய்தார். மைய அரசியலில் ஈடுபடும் இடதுசாரிகளை இந்திரா அயலுறவு கொள்கையில் ரஷ்யாவுடன் இணைத்துக் கொண்டும், தேசிய இனங்களின் போராட்டத்தை எதிர்க்க அவர்களைத் தூண்டுவதன் மூலமும் சாதிக்கிறார் என்பதை கோத்தாரி சுட்டிக்காட்டுகிறார். […]   மேலும், நக்சலைட் முதலிய மக்கள் பிரச்சனைகளுக்காக போராடுபவர்களுக்கு ஆதரவு குரல் கொடுப்பதை இடதுசாரிகள் செய்யவில்லை. அமைச்சராக இல்லாத எம்பிக்கள், எம்.எல்ஏக்கள் ஒன்றுக்கும் லாயக்கில்லாதவர்களாக உள்ளார்கள். சுயாட்சியை பரவலாக்க வேண்டியது தற்போதைய தேவை என்கிறார். வன்முறை என்பது வழிமுறையாக இருக்க முடியாது, அது குறிப்பிட்ட கணத்தில் பதில் வன்முறையாக எழக்கூடும் என்று தன்னுடைய கருத்தை வெளிப்படுத்துகிறார்.   சரத் ஜோஷி, சரண் சிங் ஆகியோர் சொன்ன விவசாய சிக்கல்கள் உண்மையில் அவர்களின் குரலை பிரதிபலிக்கவில்லை. விவசாயிகளின் ஆதரவை முழுமையாக பெறுவது அரசியல் அதிகாரத்தை பெற உதவும் என்றும் பரிந்துரைக்கிறார் கோத்தாரி. இந்து மதத்தின் காவலன் என்று சொல்லிக்கொள்ளும் ஆர்.எஸ்.எஸ். செயல்பாடு மேற்கின் சர்ச் போலவே இருக்கிறது என்று கச்சிதமாக குறிப்பிடுகிறார் கோத்தாரி. தமிழகத்தில் இந்துத்வா பல்லைக் காண்பிக்க காரணம் நடுத்தர ஜாதிகளுக்கே திராவிட இயக்கம் பயனளித்தது. அதோடு பிராமணிய எதிர்ப்பு என்பதை அதீதமாக செய்து அதை பிராமண எதிர்ப்பாக மாற்றிவிட்டார்கள்.   கோமல் சுவாமிநாதன் சபாக்களால் நாடகங்கள் சீரழிகின்றன என்கிற தன்னுடைய ஆனந்த விகடன் அட்டைப்பட பேட்டியால் சபாக்கள் தன்னுடைய நாடகங்களை மேடையேற்ற அனுமதி மறுத்ததை சொல்கிறார். அதேசமயம், தமிழ் அடையாளத்தில் குறைகள் இருந்தாலும் அப்படியொன்று இருப்பதை மக்களுக்கு தேவர் மகன் போன்ற முயற்சிகளின் மூலம் காட்டவேண்டும், அதை விமர்சிப்பதை செய்வது இன்னமும் சாத்தியமாகும் என்கிறார். […]   வெறும் யாரும் வேலை தரவில்லை, தானும் வேலையை கேட்டுப் பெறும் சாமர்த்தியம் கொண்டிருக்கவில்லை என்று சொல்லும் அசோகமித்திரன், சாவி கணையாழியில் எழுதுவதை விடுத்தது தினமணிக் கதிரில் மட்டும் எழுதினால் வேலை தருவதாக சொன்னதை ஏற்க மறுத்ததை நினைவுகூர்கிறார். எழுத்தாளனின் அகங்காரம் தவிர்த்த எழுத்தே இருக்கவேண்டும், கதாபாத்திரமாக நான் வருவதற்கும், அகங்காரம் கொண்ட எழுத்தாக இருப்பதற்கும் வேறுபாடு உண்டு. க.நா.சு., தாஸ்தாவெஸ்கி முதலியோர் நான் என்பதை எழுத்தில் தவிர்த்தவர்கள். டால்ஸ்டாய், சுந்தரராமசாமி எழுத்தில் அதை தவிர்க்க முடியாதவர்கள் என்கிறார். கரைந்த நிழல்கள் கதையை ஐந்தாறு நாட்களில் வேறு மாதிரி நா.பாவின் அவசரத்துக்கு மாற்றி எழுதியதை நேர்மையாக ஒப்புக்கொள்கிறார். […]   அலங்காரமான நடையை விடுத்து, இயல்பாக சார்பில்லாமல் எழுதுவதே தன்னுடைய பாணி என்கிறார் அசோகமித்திரன். புதுமைப்பித்தன், ஜெயகாந்தன் ஆகியோரின் எழுத்துக்களின் மீது கூர்மையான விமர்சனத்தை முன்வைக்கிறார். புதுமைப்பித்தனின் கிண்டல் மனிதநேயம் சார்ந்தது அல்ல. ஜெயகாந்தனிடம் பொறுமையின்மை, எல்லாவற்றையும், எல்லாவற்றைப்பற்றியும் சொல்லிவிட வேண்டும் என்கிற வேகம் இருக்கிறது. கருத்து முக்கியமாகி பாத்திர வார்ப்பு, நிகழ்ச்சி சித்தரிப்பு பின்தங்கி விடுகின்றன. அவரின் பிற்கால எழுத்துக்கள் மேலும் சிறப்புடையவையாக தனக்கு பட்டதாக அசோகமித்திரன் சொல்கிறார்.   சா.கந்தசாமியின் ’தொலைந்து போனவர்கள்; உலக இலக்கியத்துக்கான நிகரான படைப்பு என்கிற அசோகமித்திரன் பிற தற்கால படைப்புகளை அப்படி ஏற்க மறுக்கிறார். காந்தி ஒரு பிற்போக்குவாதி, ஜாதியவாதி என்று சொல்பவர்கள் இருக்க அவர் எல்லோரையும் முன்னேற்ற வேண்டும் என்று எண்ணினார், அவரே தனக்குப் பிடித்த அரசியல்வாதி என்கிறார் அசோகமித்திரன். இங்கே இருக்கும் சாதிகள் எதோ ஒரு வகையில் இன்னொரு சாதிக்கு ஆதரவு தரும் என்கிறார் அசோகமித்திரன். ஒரு பிச்சைக்காரனை ஐம்பது பேர் போடா என்றாலும் ஒருவர் சோறு போடும் சிறப்பு மிகுந்தது நம்முடைய சமுதாயம் என்கிறார் அவர். இதை அவரின் நகைச்சுவை என்பதா இல்லை மனதரிசனம் என்பதா என்று தெரியவில்லை.   சிட்டி சுந்தரராஜன் திராவிட இயக்கம் தமிழ் வளர்ப்பில் மிக முக்கியமான பங்காற்றியதாக பதிவு செய்கிறார். அண்ணா, கலைஞர் ஆகியோர் நல்ல எழுத்துக்களை தந்தார்கள். மேலும், பராசக்தி படத்துக்குப் பிறகே தமிழில் உரையாடல் போக்கு மாறியது என்பதை செமினார் இதழில் பதிகிறார். ரா.பி.சேதுப்பிள்ளை, வையாப்புரிபிள்ளை முதலிய பிராமணர் அல்லாத சிறந்த தமிழறிஞர்களை மணிக்கொடி குழு கண்டுகொள்ளவில்லை என சிட்டி வாக்குமூலம் தருகிறார்.   புதுமைப்பித்தன் தழுவல் கதைகளை தன்னுடைய பெயரில் வெளியிட்டுக் கொண்டதில்லை. அப்படி வெளியிட்டது பதிப்பாளர்கள் தான் என்று நேர்மையாக சொல்கிறார். ஆனந்த விகடனில் இயங்கிய கல்கிக்கும், மணிக்கொடி குழுவினருக்கும் ஒத்துவராது என்பதை சொல்கிறார். அதனால் காந்திய வழியில் இயங்கிய மணிக்கொடி குழுவினர் தியாக பூமி படத்தை இருட்டடிப்பு செய்தார்கள். கல்கிக்கோ ஐம்பத்தி இரண்டாயிரம் பிரதிகள் ஆனந்த விகடன் விற்றாலும் ராஜாஜி முதலியவர்கள் மணிக்கொடியை படிப்பதும், தன்னுடைய பணிகள் கணக்கில் கொள்ளப்படாததும் வருத்தம் தந்தது. […]   கோவை ஞானி, அ.மார்க்ஸ் முதலியோர் தற்காலத்தில் தன்னை ஈர்த்த விமர்சகர்கள் என்று மனமார ஒப்புக்கொள்கிறார். தீவிரமாக வைதீகத்துக்கு எதிரான கருத்துக்கள் கொண்டவர் போல தோன்றும் அவர் ஆலய நுழைவை எதிர்த்த காஞ்சி சங்கராச்சாரியாரை பற்றி பரமாத்மா என்கிற நூலை ஆங்கிலத்தில் எழுதியதை குறித்து கேட்கப்படுகிறது. காந்தியிடம் முப்பதில் தான் ஒரு நிறுவனத்தின் தலைவராக எதுவும் இது சார்ந்து செய்வதற்கில்லை என்று கைவிரித்தது உண்மை என்றாலும், அவரை ஒரு புனிதராக அணுகாமல் மனிதராக இந்த நூலில் அணுகியிருப்பதாக சொல்கிறார்.     சோவின் நேர்முகம் எதற்கு இரண்டு என்று தோன்றுகிற அளவுக்கு தரமற்று இருந்தன. பெண்களுக்கு விடுதலை கிடைத்து விட்டது, அவர்களை யார் அடக்கி வைக்கிறார், ஆண்கள் சமையல் செய்வது தான் சமநீதியா, என்னை ஆணாதிக்கவாதி என்றே சொல்லிக்கொள்ளுங்கள். பெண்கள் விடுதலை பெறவேண்டும், ஆண்கள் அதை தடுக்கிறார்கள் என்பது சுத்த நான்சென்ஸ் என்று கடைந்து எடுத்த முட்டாள் போல பேசுகிறார். பாபர் மசூதி இடிப்பதைத் தூண்டிவிட்ட அத்வானியை, இந்து-முஸ்லீம் வெறுப்பை தீவிரமாக விதைத்த அவரை அவர் ரொம்ப நல்லவர், நான் சொல்லுறேன் கேட்டுக்கோங்க என்கிற பாணியில் உண்மைக்கு புறம்பாக, அயோக்கியமாக பேசுகிறார். சிவாஜியின் ஓவர் ஆக்டிங் கதையும், இவருக்கு தனியாக நடித்து காண்பித்ததும் இந்த நேர்முகத்தில் இருந்தே புகழ்பெற்று இருக்கவேண்டும் என்று நினைக்கிறேன். பந்தயம் கட்டி பத்திரிக்கை ஆரம்பித்தது, அதற்கு ஆனந்த விகடன் முழு ஆதரவு தந்தது என்று பல்வேறு கதைகளை சொல்கிறார். நாடகம் நடத்தி எந்த வருமானமும் பார்த்ததில்லை என்கிறார் சோ.   கலைஞர் கருணாநிதி குணா மொழிசார்ந்து முதலமைச்சராக இருந்தவர்களை நிராகரிப்பதை ஏற்க முடியாது என்று மொழி வெறிக்கு எதிராக பேசுகிறார். ஜெயலலிதாவிடம் பிடித்த விஷயம் என்று கேட்கிற பொழுது எப்பொழுதும் இருக்கும் நடிப்புத் திறன் என்கிறார். தமிழ்வழியில் கல்லூரிப் படிப்பை முழுக்க நடத்த முயன்ற பொழுது மாணவர்கள் கடும் எதிர்ப்பை கிளர்ச்சியின் மூலம் ஏற்படுத்தினார்கள். காமராஜரும் அதற்கு ஆதரவு தந்தார் என்பது அதிர்ச்சிகரமான செய்தி. ஏ.எல்.முதலியார் தலைமையில் ம.பொ.சி., குன்னக்குடி அடிகளார் ஆகியோர் கொண்ட குழு மாணவர்களின் முடிவுக்கே இதனைவிட வேண்டும் என்றதில் தமிழ் வழிக்கல்விக்கு முற்றும் போடப்பட்டது.   பழ நெடுமாறன் அவர்கள் இந்திய தேசியத்தில் இருந்து தமிழ் தேசியம் நோக்கிப் பயணித்த கதையை சுவைபட சொல்கிறார். இந்தித் திணிப்பு காலத்துக்கு பின்னர் அவர் அரசியலில் நுழையக்கூடும் என்று பச்சையப்பாவுக்கு பதிலாக அண்ணாமலை பல்கலைக்கு அனுப்பினால் அங்கும் அரசியலே செய்ய நேர்ந்தது. காமராஜர் மாணவர்களை வழக்கில் இருந்து விடுவிக்கிறார். அவரின் ஆசியோடு கட்சியில் இணைந்தார். எம்ஜிஆர் இந்திராவுடன் சேர்ந்துகொள்ளுமாறு பழ நெடுமாறனிடம் சொன்ன பொழுது, ‘நீங்கள் ஏன் திமுகவுடன் சேரக்கூடாது?’ என்று எதிர்க்கேள்வி கேட்டிருக்கிறார்.   தன்னுடைய தமிழர் தேசிய இயக்கத்தின் மூலம் காவிரிக்கு நதிநீர் மன்றத்தின் மூலம் தீர்வு, பெரியார் பிரச்சனை குறித்து கவனம் ஆகியவற்றை எண்பதுகளில் ஏற்படுத்தியுள்ளார். தனி ஈழத்தை விரும்பாவிட்டாலும் ஜி.பார்த்தசாரதி அனெக்ஸ்-சி எனும் பிரிவின் மூலம் கூட்டாட்சியை கிட்டத்தட்ட கொண்டுவரும் சூழலில் பதவியை விட்டு ராஜீவால் மாற்றப்பட்டார். அதனோடு நில்லாமல் வெங்கடேஸ்வரன் பத்திரிக்கையாளர் கூட்டத்தில் வெளியுறவு செயலாளர் பதவியை விடுமாறு ராஜீவ் செய்தார். […] இதனை எல்லாம் நேர்மையாக சொல்லும் பழ நெடுமாறன், ராஜீவ் காந்தி கொலையில் புலிகளுக்கு கையில்லை என்று அடித்து பேசுகிறார். அதனோடு நில்லாமல் புலிகள் ஆட்சிப்பகுதியில் மரண தண்டனை இருப்பதை சொல்லிவிட்டு, தமிழகத்தில் தூக்கு தண்டனை இருக்கக்கூடாது என்று முரண்பாடாக பேசுகிறார். வங்கத்தில் தனிதேசம் கேட்டு ஃபசூல் என்பவரும், விடுதலைக்குப் பின்னர் சுஹ்ரவர்த்தியும் மொழி சார்ந்து தனி நாட்டை கேட்டிருக்கும் வரலாற்றை பதிவு செய்கிறார். அறுபத்தி ஆறு வயதில் இதய நோய் அறுவை சிகிச்சைக்குப் பின்னர் ராஜ்குமாரை மீட்க பல மைல்கள் நடந்தே பேச்சு வார்த்தை நடத்தியதையும் இயல்பாக சொல்கிறார். ஜனநாயகத்தின் மீதும், வன்முறையை துறந்த பாதையையுமே விரும்புவதாக சொல்கிறார்.   பிரபஞ்சன் அவர்கள் பதின்ம வயதில் காதல் பூண்டு ஒரு பெண்ணுக்கு கடிதம் எழுதுகிறார். அவளின் மீதான தன்னுடைய உணர்வுகளை பாதி சொல்வதற்குள் நாற்பது பக்கங்களை கடிதம் தொட்டிருக்கிறது. அப்பாவின் கையில் அது மாட்டிய பொழுது நல்லவனவற்றை பற்றி எழுது என அவர் தந்த உற்சாகம் இவரை செலுத்துகிறது., மாயகோவ்ஸ்கி போல கவிதை எழுதுவதாக தன்னை தூண்டிவிட்டவரை பற்றி நகைச்சுவையோடு பகிர்ந்து கொள்கிறார்.   மண்டல் கமிஷன் அமல்படுத்தப்பட்ட பொழுது, ஷூ பாலீஷ் போட்டு ஆதிக்க ஜாதியினர் அந்த இட ஒதுக்கீடு வந்தால் தாங்கள் அதைத்தான் செய்ய வேண்டும் என்று போராடிய பொழுது, ‘இதுவரை ஒரே ஜாதி ஷூவுக்கு பாலீஷ் போட்டது. இப்பொழுது நீங்கள் போட்டால் என்ன? இரண்டாயிரம் வருடங்களாக அவர்கள் செய்ததை இப்பொழுது நீங்கள் செய்தால் என்ன ஷூ பாலீஷ் ஆகாதா?’ என்று சூடாக எழுதியிருக்கிறார். பங்கரப்பா காவிரி விஷயத்தில் தமிழகத்துக்கு துரோகம் செய்த பொழுது நூறு வண்டிகளில் எல்லையை அடைந்து போராடுவோம் என்ற பொழுது ராமதாசுக்கு தான் ஆதரவு தந்ததையும், பின்னர் அவரின் ஜாதி அரசியலால் அதனை விளக்கிக்கொண்டதையும் நேர்மையோடு பதிவு செய்கிறார். தமிழே தெரியாமல் பாலக்காட்டு பிராமணர், சிந்தி பெண் ஆகியோருக்கு மகனாக பிறந்த தன்னுடைய கதையை அஜித் இயல்பாக சொல்கிறார். கார் ரேஸ், கார்மென்ட் தொழில் என அனைத்திலும் தோல்வி அடைந்து கடன்கள் அடைக்க சினிமாவில் கிடைத்த வேடங்களில் நடித்துக் கொண்டிருந்ததை ஒப்புக்கொள்கிறார். அப்பா நீ ஒரு எஸ்கேப்பிஸ்ட் என உசுப்பேற்றியதால் படங்களைப் பார்த்து நடிக்க தன்னால் முடிந்தது என்கிற அஜீத் தமிழ் உச்சரிப்பை பள்ளிக்காலங்களில் கற்காமல் சினிமாவுக்காக கற்று மாறியதால் ஆரம்பத்தில் சிரமப்பட்டதையும் சொல்கிறார். ரசிகர் மன்றங்கள் இருந்தாலும் ரசிகர்கள் தங்களின் குடும்பத்தை கவனிக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறார். அன்னம் வெளியீடு பக்கங்கள்: 216 கன்னையா குமாரின் தேசத்துரோக பேச்சு! பிப்ரவரி 16, 2016 ஜவகர்லால் நேரு பல்கலையின் மாணவர் கூட்டமைப்பின் தலைவர் கன்னையா குமார், கடந்த வியாழனன்று அப்பல்கலையில் மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார். அடுத்த நாள் இந்தியாவுக்கு எதிரான கோஷங்கள் எழுப்பப்பட்ட கூட்டத்தில் கலந்து கொண்டதற்காக பிரிவினைக் குற்றத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட்டார். வியாழன்று அவர் நிகழ்த்திய உரையின் மொழியாக்கம் இது… "காவிகள்தான் இந்தியாவின் தேசியக்கொடியை எரித்தவர்கள். ஆங்கிலேயரிடம் மன்னிப்புக் கேட்ட சாவர்க்கரின் சீடர்கள் அவர்கள். ஹரியானாவில் கட்டார் தலைமையிலான பாஜக அரசு பகத் சிங் பெயரைத் தாங்கியிருந்த விமான நிலையத்திற்கு ஒரு சங்பரிவாரைச் சேர்ந்த நபரின் பெயரை சூட்டியுள்ளது. […] எங்களுக்குத் தேசபக்தி சான்றிதழை ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் தர வேண்டியதில்லை என்றே சொல்லுகிறேன். இவர்கள் நம்மைத் தேசியவாதிகள் என்று அங்கீகரிக்கத் தேவையில்லை. நாம் இந்த நாட்டைச் சேர்ந்தவர்கள். இந்தத் தேசத்தை மனதார நேசிக்கிறோம். இந்த நாட்டின் எண்பது சதவிகித ஏழைகளுக்காக நாம் போராடுகிறோம். இதுவே எங்களைப் பொறுத்தவரை தேசத்தை வழிபடுவது ஆகும். நாங்கள் அண்ணல் அம்பேத்கர் மீது முழுப் பற்று வைத்திருக்கிறோம். எங்களுக்கு அரசமைப்புச் சட்டத்தின் மீது அளவில்லாத நம்பிக்கையுள்ளது. இதை நாங்கள் சொல்வதன் அர்த்தம் அரசமைப்பை யார் எதிர்த்தாலும், அது சங்பரிவார்களாக இருந்தாலும் நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம். எங்களுக்கு இந்தியாவின் அரசமைப்புச்சட்டத்தில் மட்டுமே நம்பிக்கையுள்ளது. டெல்லியில் உள்ள ஆர்.எஸ்.எஸ்.தலைமையகமான ஜந்தேவாலனிலும், நாக்பூரிலும் சொல்லித்தரப்படும் மனுவின் சட்டத்தின் மீது எங்களுக்குத் துளியும் மதிப்பில்லை. இந்த தேசத்தின் சாதியமைப்பின் மீது எங்களுக்கு எந்தப் பற்றுமில்லை. சாதியமைப்பால் ஏற்பட்ட கடும் அநீதியை சீர்செய்வதற்கான நிவாரண நடவடிக்கைகள் குறித்து அரசமைப்பு சட்டமும், அண்ணல் அம்பேத்கரும் பேசுகிறார்கள். அதே அண்ணல் அம்பேத்கர் தூக்கு தண்டனையை நீக்க குரல் கொடுக்கிறார். அவரே கருத்துரிமை குறித்தும் பேசுகிறார். நம்முடைய அரசமைப்புச் சட்டத்தை, நம்முடைய உரிமையை உயர்த்திப்பிடிக்க நாம் விரும்புகிறோம். நமக்கு எதிராகத் தங்களின் ஊடக நண்பர்களோடு இணைந்துகொண்டு ABVP பொய் பிரச்சாரத்தை நிகழ்த்தி வருகிறது. நாம் கல்வி உதவித் தொகைக்காகப் போராடுவோம் என்று ABVP சொல்கிறது. ஸ்ம்ருதி இரானி கல்வி உதவித்தொகையை நிறுத்துவார். இவர்கள் போராடுவதாகச் சொல்வார்கள். நல்ல வேடிக்கை. இந்த அரசு உயர்கல்விக்கான நிதி ஒதுக்கீட்டை 17 சதவிகிதம் குறைத்துள்ளது. நமக்கு விடுதிகள் கடந்த நான்கு வருடங்களாகக் கட்டப்படவில்லை. WIFI இணைப்பு தரப்படவில்லை. BHEL நிறுவனம் நம்முடைய பயணத்துக்குப் பரிசளித்த பேருந்துக்குப் பெட்ரோல் போட கூடப் பல்கலை நிர்வாகத்திடம் காசில்லை. சினிமா சூப்பர் ஸ்டார் போல,  ‘நாங்கள் விடுதிகளைக் கட்டிக் கொடுப்போம், WIFI இணைப்புத் தருவோம், உதவித்தொகை கிடைப்பதை உறுதி செய்வோம்’ என்று ABVP-யினர் வாக்குறுதிகளை அள்ளி வீசுகிறார்கள். இவர்களின் உண்மையான சொரூபம்,  நாட்டின் அடிப்படை பிரச்னைகளைப் பற்றி விவாதிக்க அழைத்தால் அம்பலமாகி விடும். நாம் JNU மாணவர்களாகப் பெண்கள், தலித்துகள், பழங்குடியினர், சிறுபான்மையினர் ஆகியோரின் உரிமைகள் சார்ந்த பிரச்னைகளை எழுப்புகிறோம் என்பதைப் பெருமையோடு பதிவு செய்கிறேன். ஆகவேதான் அவர்களின் சுப்ரமணிய சாமி, இங்கே ஜிஹாதிகள் வாழ்வதாக, நாம் வன்முறையைப் பரப்புவதாகச் சொல்கிறார். JNU வின் சார்பாக நான் ஆர்.எஸ்.எஸ்.அமைப்பைச் சேர்ந்தவர்களை நோக்கி சவால் விடுகிறேன்.[…] வன்முறையைப் பற்றி நேருக்கு நேர் விவாதம் புரிவோம். வெறிபிடித்த ABVP கோஷங்கள் குறித்துக் கேள்விகள் கேட்போம். ரத்தத்தில் திலகமிட வேண்டும் என்றும், துப்பாக்கிக் குண்டுகளில் ஆரத்தி எடுப்போம் என்றும் ஏன் கோஷம் போடுகிறார்கள் என்று அவர்கள் பதில் சொல்லவேண்டும். யாருடைய ரத்தம் சிந்த அவர்கள் விரும்புகிறார்கள்? ஆங்கிலேயரோடு கைகோர்த்துக் கொண்டு விடுதலைப் போராட்ட வீரர்களைச் சுட்டார்கள், ஏழைகள் பசிக்கு சோறு கேட்ட பொழுது அவர்களைத் துப்பாக்கி குண்டுகளால் மவுனமாக்கினார்கள். பசியுற்ற்வர்கள் உரிமைகளைக் கேட்ட பொழுது ஆயுதங்களால் அவர்களை அமைதிப்படுத்த முயன்றார்கள். முஸ்லீம்கள் மீது அவர்கள் குண்டுகள் பாய்ந்தன. பெண்கள் சம உரிமை கேட்ட பொழுது துப்பாக்கிக் குண்டுகளால் சல்லடையாக்கினார்கள். ஐந்து விரல்களும் ஒன்றாக இருக்க முடியாது என்கிறார்கள். சீதையைப் பின்பற்றிப் பெண்கள் அக்னி பரீட்சை மேற்கொள்ள வேண்டும் என்று சொல்கிறார்கள். இந்த நாட்டின் ஜனநாயகம் எல்லாருக்கும் சம உரிமைகள் தருகிறது. மாணவன், தொழிலாளி, ஏழை. பணக்காரன், அம்பானி, அதானி எல்லாரும் சம உரிமை கொண்டவர்களே!. ‘பெண்களுக்குச் சமஉரிமை வேண்டும்’ என நாங்கள் குரல் கொடுத்தால், இந்திய கலாசாரத்தைச் சீரழிப்பதாகக் குற்றஞ்சாட்டுகிறார்கள் நாம் சுரண்டலின் கலாசாரத்தை, சாதியின் கலாசாரத்தை, மனுநீதி, பிராமணியம் ஆகியவற்றின் கலாசாரத்தை அழித்தொழிக்க விழைகிறோம். எது கலாசாரம் என்பது இன்னமும் உறுதியாக வரையறுக்கப்படவில்லை. மக்கள் ஜனநாயகத்தைப் பற்றிப் பேசினால், அவர்களுக்குக் கோபம் வருகிறது. அண்ணல் அம்பேத்கர், காரல் மார்க்ஸ் என இருவரையும் வணங்கி, அவர்களைப் பற்றிப் பேசுவது அவர்களை உசுப்பேற்றுகிறது. மக்கள் அஸ்பஹூல்லா கான் எனும் தீரமிகுந்த விடுதலைப் போராட்ட வீரரைப் பற்றிப் பேசினால் கொதிக்கிறார்கள். இவற்றைப் பொறுக்கமுடியாமல் சதி செய்கிறார்கள். அவர்கள் ஆங்கிலேயருக்குச் சேவகம் புரிந்த கீழானவர்கள். என் மீது அவதூறு வழக்கு பதியும்படி அவர்களுக்குச் சவால் விடுகிறேன். நாட்டை அடிமைப்படுத்திக் கொடுமை செய்த ஆங்கிலேயருடன் கூட்டுச் சேர்ந்த ஆர்.எஸ்.எஸ்., வரலாற்றை வசதியாக மறந்துவிட்டு, இப்பொழுது தேசபக்தி சான்றிதழ் விநியோகத்தில் ஈடுபடுகிறார்கள். என்னுடைய அலைபேசியை நீங்கள் பாருங்கள். என் தாய், தங்கையைப் பற்றி நாக்கூசும் வசைகளை வீசுகிறார்கள். எந்தப் பாரதத்தாயை பற்றி அவர்கள் பேசுகிறார்கள். அதில் என்னுடைய தாய்க்கு இடமில்லை என்றால் உங்களின் பாரத மாதா பற்றிய கருத்தாக்கம் எனக்கு ஏற்புடையது இல்லை. அங்கன்வாடியில் மாதம் மூவாயிரம் சம்பளத்துக்கு வேலை பார்த்து என்னுடைய குடும்பத்தைக் காப்பாற்றும் என்னுடைய அம்மாவை இவர்கள் வசைபாடுகிறார்கள். ஏழைகளின் தாய்களை, தலித் விவசாயிகளைப் பாரதத் தாயின் அங்கமாகப் பார்க்காததை நினைத்து அவமானப்படுகிறேன். நான் இந்தத் தேசத்தின் தந்தைமாரை, தாய்மார்களை, சகோதரிகளை, ஏழை விவசாயிகளை, தலித்துகளை, பழங்குடியினரை, தொழிலாளிகளைப் போற்றுவேன். அவர்களுக்குத் தைரியம் இருந்தால் ‘இன்குலாப் ஜிந்தாபாத்’ என்றோ, ‘பகத் சிங் ஜிந்தாபாத்’, ‘சுகதேவ் ஜிந்தாபாத்’, ‘அஸ்பஹூல்லா கான் ஜிந்தாபாத்’ ‘பாபாசாகேப் அம்பேத்கர் ஜிந்தாபாத்’ என்றோ முழங்க முடியுமா? என்று சவால் விடுகிறேன். அண்ணல் அம்பேத்கரின் 125-வது பிறந்த நாளை விமர்சையாகக் கொண்டாடும் நாடகத்தை அவர்கள் அரங்கேற்றுகிறார்கள். அவர்களுக்கு வீரம் இருந்தால்,  அம்பேத்கர் எழுப்பிய கேள்விகளை அவர்களும் எழுப்ப வேண்டும். இந்தியாவின் மிகப்பெரிய சிக்கல்களில் ஜாதி முக்கியமானது. ஜாதி அமைப்பைப் பற்றிப் பேசுங்கள், ஒவ்வொரு துறையிலும், தனியார் துறையிலும் இட ஒதுக்கீடு வேண்டும் என்று பேசுங்கள். இந்தக் கேள்விகளை நீங்கள் எழுப்பினால் உங்களுக்கு இந்தத் தேசத்தின் மீது பக்தி இருக்கிறது என நான் நம்புகிறேன். இந்தத் தேசம் அப்பொழுதும் எப்பொழுதும் உங்களுடையதாக ஆகாது. ஒரு தேசம் அதன் மக்களால் ஆனது, உங்களின் தேசத்தில் ஏழைகள், பசித்த மக்கள் ஆகியோருக்கு இடமில்லை. அப்படிப்பட்ட ஒன்று தேசமே இல்லை. நேற்று ஒரு தொலைக்காட்சி விவாதத்தில் மிக மோசமான காலத்தில் இருக்கிறோம் என்றேன். பாசிசம் நாட்டைப் பிடித்துக் கொண்டே வருகிறது. ஊடகமும் அதிலிருந்து தப்பிக்கப் போவதில்லை. ஊடகம் எப்படிப் பேசவேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் இருந்து கதைகள் அனுப்படுகின்றன. காங்கிரஸ் எமெர்ஜென்சி காலத்தில் செய்த அதே வேலையை இப்பொழுது இவர்கள் செய்கிறார்கள். சில ஊடக நண்பர்கள் நம்முடைய பல்கலைக் கழகம் மக்களின் வரிப்பணத்தில், மானியத்தில் இயங்குவதைச் சுட்டிக் காட்டினார்கள். அது உண்மையே. நான் ஒரே ஒரு கேள்வியை எழுப்ப விரும்புகிறேன்: ‘எதற்காகப் பல்கலைக் கழகங்கள்?’ ஒரு சமூகத்தின் கூட்டு மனசாட்சியைத் தயவு தாட்சண்யமில்லாமல் பகுப்பாய்வு செய்யப் பல்கலைக்கழகங்கள் அவசியமானவை. தங்களின் கடமையிலிருந்து பல்கலைகள் தவறினால் ஒரு தேசம் உயிர்த்திருக்காது. ஒரு தேசம் ஏழைகளுக்காக இயங்கவில்லை என்றால் அது பணக்காரர்களின் சுரண்டல், கொள்ளைக்கான வேட்டைக்காடாக மாறிவிடும். […] மக்களின் கலாச்சாரம், நம்பிக்கைகள், உரிமைகள் ஆகியவற்றை உள்வாங்காமல் ஒரு தேசம் உருவாக முடியாது. நாம் பகத் சிங்கின், அண்ணல் அம்பேத்கரின் கனவுகளுக்கு ஆதரவாக, உறுதியாக நிற்கிறோம். சம உரிமைக்காக, அனைவரும் தன்மானத்தோடு வாழ்வதற்கு ஆதரவாக நாம் நிற்கிறோம். இந்த உரிமைகளின் போராட்டத்துக்காக ரோஹித் வெமுலா உயிர்விட நேர்ந்தது. சங்கபரிவாரத்தினரிடம் நேராகச் சொல்கிறோம், ‘உங்கள் அரசால் அவமானம்!’. ரோஹித் வெமுலாவுக்கு என்னென்ன அநீதிகளைச் செய்தீர்களோ அது எதையும் JNU-வில் நீங்கள் செய்ய முடியாது. ரோஹித்தின் தியாகத்தை நாங்கள் மறக்கமாட்டோம். நாங்கள் கருத்துரிமைக்குத் தோள் கொடுப்போம். பாகிஸ்தான், வங்கதேசத்தை விடுத்து மற்ற எல்லா நாட்டு ஏழைகள், பாட்டாளிகள் ஆகியோரின் ஒற்றுமைக்கு அறைகூவல் விடுக்கிறோம். உலகின் மனிதநேயத்தை, இந்திய மனித நேயத்தை நாங்கள் துதிக்கிறோம். நாங்கள் மனிதத்துக்கு எதிரானவர்களை அடையாளம் காட்டியுள்ளோம். இதுவே நம் முன்னால் உள்ள மிகப்பெரிய பிரச்னை. சாதியத்தின் உண்மை முகத்தை, மனுவின் முகத்தை, பிராமணியம், முதலாளித்துவம் ஆகியவற்றுக்கு இடையே உள்ள உறவை வெளிப்படுத்தி உள்ளோம். இந்த அயோக்கியமான முகங்களைத் தோலுரிக்க வேண்டும். நாம் உண்மையான விடுதலையை அடையவேண்டும். அந்த விடுதலை அரசமைப்பு சட்டத்தின் மூலம், நாடாளுமன்றத்தின் மூலமே சாத்தியம். அதை நாம் அடைந்தே தீருவோம். நம்முடைய எல்லா முரண்பாடுகளைத் தாண்டி நம்முடைய கருத்துரிமையை, நம்முடைய அரசமைப்புச் சட்டத்தை, இந்தத் தேசத்தின் ஒற்றுமை, ஒருமைப்பாடு ஆகியவற்றைக் காக்க வேண்டும் நண்பர்களே என வேண்டிக் கொள்கிறேன். நம்முடைய தேசத்தைப் பிளவுபடுத்தும் இந்தச் சக்திகளை, தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் தரும் இவற்றுக்கு எதிராக அணிதிரண்டு நாம் உறுதியோடு போராடவேண்டும். என்னுடைய உரையை முடிக்கும் முன்னால் ஒரு இறுதி வினா. யார் இந்த கசாப்? யார் இந்த அப்சல் குரு? உடம்பை குண்டுகளால் நிறைத்துக் கொண்டு கொலைத்தொழில் புரியும் இவர்கள் யார்? இந்த கேள்விகளைப் பல்கலைகளில் எழுப்பாவிட்டால் பல்கலைகளின் இருப்பில் அர்த்தமில்லை. நீதியை, வன்முறையை நாம் வரையறுக்காவிட்டால், எப்படி வன்முறையை நாம் எதிர்கொள்வது. வன்முறை என்பது ஒருவரைக் கொல்வது மட்டுமில்லை, தலித்துகளுக்கு வழங்கப்பட்ட சட்ட ரீதியான உரிமைகளை மறுக்கும் JNU நிர்வாகம் நிகழ்த்துவதும் வன்முறையே ஆகும். இது நிறுவனமயமாக்கப்பட்ட வன்முறையாகும். நீதியைப்பற்றி அவர்கள் பேசுகிறார்கள். எது நீதி என்பதை யார் தீர்மானிப்பது. பிராமணியம் தலித்துகளைக் கோயில்களுக்குள் விடவில்லை. அதுவே அன்றைய நீதி. அதனை நாம் கேள்வி கேட்டோம். இன்றைக்கு ABVP, ஆர்.எஸ்.எஸ். ஆகியோரின் நீதி, சுதந்திரம் நம்மை உள்ளடக்கிய நீதி இல்லை என்பதால் அதனைக் கேள்வி கேட்கிறோம். ஒவ்வொரு மனிதனுக்கும் சட்ட ரீதியான உரிமைகள் உறுதி செய்யப்படும் பொழுது நாங்கள் உங்களின் விடுதலையை ஏற்கிறோம். எல்லாருக்கும் சம உரிமை வாய்க்கும் நாளில் அவர்களின் நீதியை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். நண்பர்களே இது ஒரு மோசமான சூழல். JNU மாணவர் கூட்டமைப்பு எப்பொழுதும் வன்முறையை, எந்த ஒரு தீவிரவாதியையும் , எந்தத் தீவிரவாத செயலையும் , எந்த இந்தியாவுக்கு எதிரான செயலையும் ஆதரித்தது இல்லை. பெயர் தெரியாதவர்களால் எழுப்பப்பட்ட ‘பாகிஸ்தான் வாழ்க!’ என்கிற கோஷத்தை நம்முடைய மாணவர் அமைப்புக் கடுமையாகக் கண்டிக்கிறது. நான் உங்களிடம் ஒன்றை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் நண்பரகளே. அது JNU நிர்வாகம் மற்றும் ABVP பற்றியதாகும். ABVP தற்போது எழுப்பிய கோஷங்களைக் கவனித்தீர்களா? அவர்கள் நம்மைக் ‘கம்யூனிஸ்ட் நாய்கள்’,’ அப்சல் குருவின் நாய்கள்‘, ’ஜிஹாதிகளின் பிள்ளைகள்’ என்று அழைக்கிறார்கள். நமக்கு அரசமைப்புச் சட்டம்,  குடிமகன் என்கிற உரிமையை உறுதியளித்திருக்கும்பொழுது நம்முடைய பெற்றோரை நாய்கள் என அழைப்பது நம்முடைய அரசமைப்பு சட்ட உரிமை மீதான தாக்குதல் இல்லையா? இதை ABVP – JNU நிர்வாகம் ஆகியோரிடம் கேட்க விரும்புகிறேன். […] JNU நிர்வாகம் யாருக்காக, யாருடன் இணைந்து கொண்டு, எதன் அடிப்படையில் இயங்குகிறது என்று அறிய விரும்புகிறோம். முதலில் கூட்டத்துக்கு அனுமதி தந்த பல்கலை நிர்வாகம்,  நாக்பூரில் இருந்து அழைப்பு வந்ததும் அலறி அடித்துக் கொண்டு அனுமதியை ரத்துச் செய்கிறது. முதலில் உதவித்தொகை அறிவித்துவிட்டு, பின்னர் அதனை ரத்துச் செய்வார்கள். இதுதான் ஆர்.எஸ்.எஸ்., ABVP நம் நாட்டை நடத்த விரும்பும் முறையாகும். ABVP ஆட்களைப் பற்றி ஒரு உண்மையைப் புரிந்துகொள்ளுங்கள். அவர்களுக்காக நான் கவலைகொள்கிறேன். FTII- ல் கஜேந்திர சவுகானை கொண்டுவந்ததைப் போல எல்லா நிறுவனங்களிலும் தங்களின் ஆட்களைக் கொண்டு நிரப்பலாம் என்று அவர்கள் குதிக்கிறார்கள். சவுகானை போன்றவர்கள் அதிகாரத்தில் இருந்தால் தங்களுக்கு எங்கும் வேலை கிடைக்கும் என்று கனவு காண்கிறார்கள். வேலை கிடைத்ததும் இந்தத் தேசபக்தி, பாரதமாதா ஆகியவற்றை அப்படியே மறந்துவிடுவார்கள். அவர்கள் எப்பொழுதும் மதிக்காத மூவர்ணக் கொடியை பற்றி என்ன சொல்வது? இப்படியே போனால் தங்களுடைய காவிக் கொடியை கூட அவர்கள் மறக்க நேரிடும். எப்படிப்பட்ட தேசபக்தியை அவர்கள் விரும்புகிறார்கள் என அறிய விரும்புகிறேன். தன்னுடைய தொழிலாளிகளிடம் ஒழுங்காக நடந்துகொள்ளாத முதலாளி, விவசாயக் கூலிகளை மரியாதையோடு நடத்தாத நிலச்சுவான்தார், அதிகச் சம்பளம் பெரும் ஊடக தலைமை அதிகாரி,  தன்னுடைய நிருபர்களுக்கு மிகக்குறைவான ஊதியத்தைத் தருவார் என்றால் இவையெல்லாம் எப்படித் தேசபக்தி ஆகும்? அவர்களின் தேசபக்தி இந்திய-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியோடு முடிவுற்று விடுகிறது. அதற்குப் பிறகு சாலையில் இறங்கி வம்பு செய்வார்கள். ஒரு டஜன் பழத்தை நாற்பது ரூபாய்க்கு விற்கும் ஏழையைக் கொள்ளையடிப்பதாகச் சொல்லி,  முப்பது ரூபாய்க்கு ஒரு டஜன் பழத்தைக் கேட்பார்கள். ‘நீங்கள்தான் உண்மையான கொள்ளையர்கள்’ என அந்த வியாபாரி சொன்னால், உடனே அந்த ஏழையைத் தேசத் துரோகி என்று அறிவித்து விடுவார்கள். வசதிகள், பணம் ஆகியவற்றோடு தேசபக்தி துவங்கி முடிந்துவிடுகிறது. உண்மையிலேயே தேசபக்திதான் இவர்களைச் செலுத்துகிறதா என்று கேட்டேன். ‘என்ன செய்வது தோழா..? ஏற்கனவே இரண்டு ஆண்டு ஆட்சி முடிந்துவிட்டது. இருக்கிற மூன்று வருடத்தில் என்னென்ன செய்ய முடியுமோ அவற்றைச் செய்துமுடிக்க வேண்டும்’ என்று சொல்கிறார்கள். நான் அவர்களைக் கேட்கிறேன். நாளைக்குத் தொடர்வண்டியில் நீங்கள் பயணிக்கிற பொழுது, ABVP ஐ சேர்ந்த நபர்கள் மாட்டுக் கறியை யாரேனும் வைத்திருக்கிறார்களா என்று சோதனை செய்கிறார்கள் என வைத்துக் கொள்வோம். அப்பொழுது நீங்கள் JNU-வை சேர்ந்தவர் எனத் தெரிந்ததும் உங்களைத் தேசத்துரோகி என்று சொல்லி வெட்டிப் போட்டால் என்னாகும்? இந்த ஆபத்தை நீங்கள் உணர்கிறீர்களா எனக் கவலையோடு கேட்கிறேன் அந்த ஆபத்தை உணர்ந்திருப்பதால்தான் #JNUShutdown கோஷத்தை எதிர்ப்பதாகச் சொல்கிறார்கள். தாங்கள் உருவாக்கிய பதற்றமான சூழலின் இறுதியில், தாங்கள் JNU-வில்தான் கல்வி கற்கவேண்டும் என்று உணர்கிறார்கள். அதனால் JNU-வின் சக தோழர்களே மார்ச்சில் தேர்தல் வருகிறது. அப்பொழுது ஓம் சின்னம் பொறிக்கப்பட்ட கொடிகளை ஏந்திக் கொண்டு ABVP ஆட்கள் ஓட்டுக் கேட்க வருவார்கள். அவர்களிடம் கேளுங்கள்: ‘நாங்கள் ஜிஹாதிகள், தீவிரவாதிகள், தேசத்துரோகிகள், எங்கள் ஓட்டுக்களைப் பெற்றால் நீங்களும் தேசத் துரோகிகள் ஆகிவிட மாட்டீர்களா?’ எனக் கேள்வி கேளுங்கள். அப்பொழுது அவர்கள்,  ‘உங்களில் சிலர் மட்டுமே அப்படிப்பட்டவர்கள்’ என்பார்கள். பின் ஏன் இதை மீடியாவிடம் அவர்கள் சொல்லக்கூடாது என்றும், அவர்களின் துணை வேந்தர், பதிவாளரும் ஏன் அதை ஊடகங்களிடம் சொல்லவில்லை என்றும் எதிர்கேள்வி கேளுங்கள். அவர்களிடம் அந்தச் சில நபர்களும், தாங்கள் ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ என்று கோஷம் போடவில்லை எனச் சொல்வதாகவும், அவர்கள் தீவிரவாதத்தை ஆதரிக்கவில்லை என்றும் தெளிவுப்படுத்துங்கள். அவர்கள்,  ‘ஏன் முதலில் கூட்டத்துக்கு அனுமதி தரப்பட்டு, பின்னர் அது மறுக்கப்பட்டு ஜனநயாக உரிமை மீது தாக்குதல் நடத்தப்பட்டது?’ என்றே கேட்கிறார்கள் எனத் தெரிவியுங்கள். ஒரு ஜனநாயக போராட்டம் நடைபெறுகிறது என்றால், அதில் உறுதியாக அந்தச் சிலபேர் நிற்பதாக அவர்களுக்குச் சொல்லுங்கள். அவர்களுக்கு இவை எதுவும், எப்பொழுதும் புரியப்போவதில்லை. ஆனால், குறுகிய கால அழைப்பில் இங்கே பெருமளவில் கூடிய நீங்கள் பிரச்னையைப் புரிந்து கொண்டுள்ளீர்கள் என நம்புகிறேன். நீங்கள் வளாகம் முழுக்கச் சென்று ABVP,  தேசத்தையும் JNU-வையும் பிளவுபடுத்துகிறது என மாணவர்களிடம் சொல்லுங்கள். அதை நடக்க விடமாட்டோம். ஜெய் பீம்! செவ்வணக்கம்! " குணங்களற்ற சர்வேஸ்வரன்- ஆதிசங்கரர்! மார்ச் 20, 2016 கண்கள் சொருக நடந்து போகையில் எதோ ஒன்று நெளிந்து கிடப்பதாகக் கண்ணில் படுகிறது. பாம்பென்று அலறுகிற நான் அதன் அருகில் சென்று காண்கிற பொழுது அது வெறும் கயிறு என்று புலப்படுகிறது. ஆத்மா என்பது மாயை, பிரம்மம் எனப்படும் இறைவன் மட்டுமே உண்மை. பிரம்மம், மற்றவை எல்லாம் மாயை என்று இறைவனும், நாமும் வேறல்ல என்பதன் மூலம் ஒற்றையான இறைவனை முன்மொழிந்தவர் சங்கரர். அவரின் தத்துவத்துக்கு அத்வைதம் எனப் பெயர். சங்கரர் பற்றிப் பல்வேறு கதைகள் வழங்கி வருகின்றன, எட்டு வயதுக்குள் வேதங்களைக் கற்றுத் தேர்ந்த அவர் அப்பொழுதே துறவறம் நோக்கி நகர்ந்தார். பல்வேறு வேத நூல்கள், வேதாந்தம் ஆகியவற்றைப் பற்றி அவர் பல்வேறு உரைகளை எழுதினார். தாயின் மரணத்தின் பொழுது இறுதிச் சடங்கு செய்ய அவர் வந்த பொழுது, சந்நியாசம் வாங்கிக் கொண்டு போனவர் தாய்க்கு சடங்கு செய்யக் கூடாது என்று ஊர் தடுத்தது. ஜெபங்கள், சடங்குகள் ஆகியவற்றுக்கு எதிரான அவரின் குரல் அந்தக் கணத்தில் இருந்து தான் எழும்ப ஆரம்பித்தது. வேதங்களை விரித்துப் பேச வந்த வேதாந்தங்கள் தான் உண்மையான இறைவனைப் பேசுகின்றன என்றவர் முன்மொழிந்தவர். வேதாந்தங்கள் பற்றிய தன்னுடைய ஆழமான, வசீகரிக்கும் உரைகளின் மூலம் சங்கரர் புதிய கோட்பாட்டை, எழுச்சியை இந்து மதம் என்கிற பல்வேறு நம்பிக்கைகளைக் கொண்ட ஒரு நம்பிக்கைக்கு உருவம் தந்தார். கடவுளின் இருப்பை நிராகரித்த பவுத்தர்களோடு உரையாடிக்கொண்டே அவர் பவுத்தத்தின் சங்கம் முதலிய கூறுகளை இந்து மதத்தில் வெற்றிகரமாக இணைத்துத் துவாரகை, பூரி, பத்ரிநாத், சிருங்கேரி ஆகிய இடங்களில் தன்னுடைய மடங்களை நிறுவினார். அவரின் காலத்தில் ஐரோப்பாவில் சார்லி மாக்னே சாக்சன், மூர், ஸ்லாவ் முதலிய பல்வேறு மக்களைக் கொன்று ரத்தக்கட்டிலின் மீது சிம்மாசனம் ஏறினான். இங்கோ சங்கரர் விவாதங்களின் மூலம் ஒரு மதத்தை நிர்மாணித்தார். சடங்குகளை நம்பாமல் தனக்குள் பிரதிபலித்துக் கொண்டு ஒரு மனிதன் வாழ்க்கையை நடத்த வேண்டும் என்றார் அவர். துறவறம், சந்நியாசம், அறிவுத் தேடல் ஆகியவை தேவை என்றும், தனக்குள் பிரதிபலிப்பதன் மூலம் ஒருவர் மாயையைக் கடந்து மோட்சத்தை அடையமுடியும் என்றும் அவர் சொன்னார். எனினும், சங்கரர் மோட்சம் என்பது பிராமணர்களுக்கு மட்டுமே சாத்தியம் என்று கருதினார். அவரின் எல்லையற்ற பரம்பொருள் என்கிற கருத்தாக்கத்தில் பிற ஜாதியினருக்கு இடமில்லாத அநீதி இருந்தது. வெண்டி டோனிங்கர், உலகம் என்பதே மாயை என்று எண்ணம் விதைத்தன் மூலம் சமூக அநீதிகள், வறுமை, அநீதிகள் ஆகியவற்றுக்கு எதிரான குரலை அழிப்பதை சங்கரரின் தத்துவம் செய்தது என்கிறார். ஆத்மாவும், பிரம்மனும் வேறு வேறில்லை என்கிறார் சங்கரர். ஆனால், நாம் வேறுபடாத, எல்லையற்ற பிரபஞ்சத்தின் அங்கம் என்றால் நாம் பிரபஞ்சத்தைப் பற்றி எப்படிப் பிரதிபலித்து மோட்சத்தை அடைய முடியும்? வேதம், வேதாந்தம், சங்கரரின் தத்துவம் ஆகியவையும் மாயை என்றால் இவற்றைக் கொண்டு எப்படி உண்மையைக் கண்டடைய முடியும்? எனினும், இந்தத் தேடல் ஒருவரை உண்மையை நோக்கி செலுத்தக்கூடும். சங்கரரின் கடவுள் வேறுபட்டவர். சுயநலம் கொண்ட, ஆணாதிக்கம் மிக்க ஆப்ரகாமிய கடவுள்களைப் போலவோ, அதிகச் சக்திகளைக் கொண்ட தனிப்பட்ட பண்புகளைக் கொண்ட வேதகாலக் கடவுள்களைப் போலவோ அல்லாமல் சங்கரரின் கடவுள் ‘நிர்குண பிரம்மன்’ என அவரால் அழைக்கப்பட்டார். அவர் குணங்கள் அற்ற இறைவன். இந்தியாவிற்கு வந்த ஆங்கிலேயர்கள் தங்களின் ஒரு இறைவன் கோட்பாடோடு சங்கரரின் கருத்துக்கள் ஒத்துப்போவதாக எண்ணினார்கள். அவரின் எண்ணத்தையே முழுமையான இந்து மதமாக அவர்கள் முன்னிறுத்தினார்கள். எனினும், சங்கரரின் இந்து மதம் பல்வேறு இந்து மதங்களில் ஒன்று அவ்வளவே! அவரின் எழுத்தும், நடையும் அழகாக, கிளர்ச்சி தருவதாகப் பல்வேறு இடங்களில் இருக்கிறது. எடுத்துக்காட்டாக ஒன்று: நான் நிலமில்லை, நீருமில்லை, நெருப்புமில்லை, காற்றுமில்லை. நான் உணர்வு கொண்ட உறுப்பும் அல்ல. நான் இவற்றின் தொகுப்பும் இல்லை. இவை அனைத்தும் மாறுபவை, இயற்கையில் நிலையற்றவை. .. நான் மேலேயும் இல்லை, கீழேயும் இல்லை, நான் உள்ளேயும் இல்லை, வெளியேயும் இல்லை. நான் நடுவிலும் இல்லை, அப்பாலும் இல்லை. நான் கிழக்கும் இல்லை, மேற்கும் இல்லை. நான் பிரிக்கமுடியாதவன், நான் ஒன்றானவன், வானைப் போல முழுமையாக எங்கும் நிறைந்தவன்! போஸ் தூக்கிலிடப்பட்டாரா? நேரு தான் இதற்கு காரணமா? மே 2, 2016 போஸ் மரணத்தில் நேருவுக்கு தொடர்பு இருப்பது போன்ற கருத்தை உண்டு செய்யும் ஒரு பேட்டி இன்றைய தமிழ் இந்துவில் வந்திருக்கிறது. https://twitter.com/PUKOSARAVANAN/status/727016224429760512 இந்தப் பேட்டிக்கு வரிக்கு வரி மறுப்பு சொல்லுகிற அளவுக்கு எக்கச்சக்க பிழைகள். / ஜப்பானில் இந்திய தேசிய ராணுவத்தை நேதாஜி உருவாக்கியிருந் தார். அந்த படை பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக போரிட்டு மணிப்பூர் வரை முன்னேறி கைப்பற்றியிருந்தது. இந்த சமயத்தில்தான் ஜப்பான் மீது அமெரிக்கா அணுகுண்டு வீசியது. இதனால் போரில் இருந்து ஜப்பான் பின்வாங்கியது./ போஸ் படைகள் மகத்தான வெற்றியை நோக்கி சென்றது அமெரிக்காவின் அணுகுண்டு வீச்சால் தடைபட்டது போன்ற தோற்றம் இந்த வரியில் ஏற்படுகிறது. இந்தியாவின் மிகச்சிறந்த ராணுவ வரலாற்று ஆசிரியரான Srinath Raghavanதன்னுடைய புதிய புத்தகத்தில் ஆசியாவில் ஜப்பான் தன்னுடைய மிகப்பெரிய தோல்வியை போஸால் சந்தித்தது என்று பதிவு செய்கிறார். நேதாஜி படைகளை முன்னின்று நடத்தும் திறமையற்றவர் எனக்கருதிய ஜப்பான் களத்தில் அவரைப் போரிட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டது என்பதை சுட்டிக்காட்டுகிறார் Sunil Khilnani. (http://www.bbc.co.uk/programmes/b072jfcz) மேலும் இம்பால் போர் நடைபெற்றது நாற்பத்தி நான்கில், அணுகுண்டு வீசப்பட்டது அதற்கு அடுத்த வருடம். பசும்பொன் தேவர் எப்படி இத்தனை ஆயிரம் பேரை அவ்வளவு தூரத்துக்கு பிரிட்டிஷ் கண்ணில் மண்ணைத் தூவி அனுப்பினார்? போர்க்காலத்தில் கப்பல் போக்குவரத்து தமிழகத்துக்கும், ஜப்பானுடன் போர் நடந்து கொண்டிருந்த பகுதிகளுக்கும் இல்லை என்று சுட்டிக்காட்டுகிறார் பி.ஏ.கிருஷ்ணன் இது இருக்கட்டும். /இந்திரா காந்தி ஆட்சியின்போது நேதாஜி உயிரோடு இருக்கிறாரா என்பதைக் கண்டறிய ‘கோஸ்லா’ விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. அந்த கமிஷனில் நேருவிடம் சுருக் கெழுத்தாளராக இருந்த ஷியாம்லால் ஜெயின் அளித்த வாக்குமூலத்தில் போஸ் அவர்களை நேரு காட்டிக்கொடுக்கிற வகையில் அட்லீக்கு கடிதம் ஒன்றை டிக்டேட் செய்ய, அதை தான் அடித்ததாக ஷியாம்லால் ஜெயின் சொல்கிறார். ஆசப் அலியோடு நேரு நடுவில் ஆசப் அலியின் இல்லத்தில் பேசியதாகவும் குறிப்பிடுகிறார். காண்க:http://www.dailypioneer.com/…/nehru-termed**ose-your-war-cr… அந்த கடிதத்தினை மோடி அரசு சமீபத்தில் வெளியிட்டுள்ளது. ஒவ்வொன்றாக எடுத்துக்கொள்வோம் கடிதம் டெல்லியில் இருந்து எழுதப்பட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆசப் அலியின் வீட்டில் இந்தக் கடிதம் தயாரிக்கப்பட்டதாகவும் ஷியாம்லால் ஜெயின் சொல்கிறார். முதலில் தேதி டிசம்பர் 26, 1946 அன்று இந்தக்கடிதம் ஆசப் அலி முன்னிலையில் அடிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. ஆசப் அலி அதற்கு முந்திய நாள் சென்னையில் காமராஜர் ராஜாஜி கோஷ்டி சிக்கலை தீர்க்கும் வேலையில் இருந்தார். கடிதம் அடிக்கப்பட்டதாக சொல்லப்படும் நாளில் அவர் மும்பையில் படேலை சந்தித்து உரையாடினார் என்கிறது இந்தியன் எக்ஸ்பிரஸ். அவர் அடுத்த நாள் தான் டெல்லிக்கு கிளம்பிச் செல்கிறார் என்பதும் செய்தித்தாள் செய்திகளின் மூலம் தெளிவாக புலப்படுகிறது. டெல்லியில் கடிதம் அடிக்கப்பட்ட நாளில் ஆசப் அலி இல்லை! சரி நேரு இருந்தால் கூட போதுமே. கதையை முடித்துவிடலாம் என்று கருதினால் அதற்கும் வழியில்லை. நேரு இந்தியா முழுக்க சுற்றுப்பயணத்தில் அப்பொழுது இருந்தார். கல்கத்தா, பாட்னா என்று பயணம் மேற்கொண்டிருந்த நேரு இருபத்தி ஆறு டிசம்பர் முதல் இருபத்தி ஒன்பது டிசம்பர் வரை அலகாபாத்தில் இருந்திருக்கிறார். மதன் மோகன் மாளவியாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் அனுப்பியிருக்கிறார். மகளுடன் இணைந்து ‘DISCOVERY OF INDIA’ நூலின் பிழை திருத்தும் பணியை டிசம்பர் 29 அன்று அலகாபாத்தில் மேற்கொண்டு இருக்கிறார். ஆக, அவர் டெல்லியில் இந்தக் கடிதம் எழுதப்பட்ட்ட காலத்தில் இருக்கவில்லை. ஆதாரங்களுக்கு காண்க: https://raattai.wordpress.com/…/nehru-was-in-allahabad-fro…/ கோஸ்லா கமிட்டியின் முன்னால் இந்த வாக்குமூலத்தை ஷியாம்லால் ஜெயின் வழங்கியதாக சொல்லப்படுகிறது. ஆனால், கோஸ்லா கமிட்டியின் இறுதியின் அறிக்கையில் இந்தக் கடிதம் பற்றிய சிறுகுறிப்பு கூட இல்லை. இந்த வாக்குமூலம் தரப்பட்டதாக சொல்லப்படும் முதல் கதை போஸின் உறவினர் பிரதீப் போஸ் வாஜ்பேயிக்கு 1998-ல் எழுதிய கடிதத்தில் தான் முதன்முதலில் இடம்பெறுகிறது. அதை வாஜ்பேயி அவர்கள் கண்டுகொள்ளவில்லை என்பதை ஏன் என்று யோசித்துக் கொள்ளலாம்.http://www.telegraphindia.com/116…/…/nation/story_65592.jsp… இந்த ஷியாம்லால் குறிப்பிடும் கடிதத்தில் சோவியத் ரஷ்யா வெறும் ரஷ்யா என்று தற்கால வழக்கில் இருக்கிறது. அதேபோல நேதாஜியை போர்க்குற்றவாளியாக ஆங்கிலேய அரசு அறிவிக்கவில்லை. அவரை போர்க்குற்றவாளி என்று இந்தக்கடிதம் பிழையாக குறிப்பிடுகிறது. அதேபோல எல்லா கடிதங்களிலும் இருக்கும் நேருவின் கையெழுத்து இந்தக் கடிதத்தில் இல்லை. இதற்குப் பிறகு வாய்மொழிக் கதைகளாக வழங்கப்படும் சிலவற்றை கட்டுரை சொல்லிச்செல்கிறது. அவற்றுக்கு ஆதாரங்கள் எழுபது வருடங்களாக கிட்டவில்லையா என்ன? இறுதியாக ரஷ்யாவில் வைத்து ஸ்டாலின் போசை கொடுமைப்படுத்தினார் என்று உண்மையை மட்டுமே பேசும் சுப்ரமணிய சுவாமி சொன்னதை ஆதாரமாக சுட்டுகிறது கட்டுரை. ரஷ்யாவுக்குள் போஸ் நுழைந்திருக்கிறாரா என்று அறிய இந்திய அரசு கேட்ட கேள்விக்கு ‘அவர் இங்கே நுழையவில்லை.’ என்று சோவியத் அரசு பதில் தந்திருக்கிறது.http://www.ndtv.com/…/netajis-death-grandnephew-releases-se… மேலும் நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சகம் போஸ் குறித்து ரஷ்ய அரசு எந்த ஆவணங்களையும் வைத்திருக்கவில்லை என்று கையை விரித்துவிட்டது. போஸ் மரணத்தில் நேருவுக்கு தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை. இந்த ஒரே ஒரு கடிதமும் போலியானது என்று வரலாற்று ஆசிரியர்கள் உறுதி செய்கிறார்கள். தரவுகளும் இது புனையப்பட்ட கடிதம் என்பதை நிறுவுகிறது. ஜப்பான் இந்த வருட இறுதியில் தன்னிடம் இருக்கும் இரண்டு கோப்புகளை வெளியிடுகிறது. மேலும் மூன்றுநாடுகளிடம் இந்திய அரசு கோப்புகளை வெளியிடச்சொல்லி கேட்டிருக்கிறது. அதுவரை போஸ் விஷயத்தில் நேரு தவறிழைக்காத மனிதர் என்று உறுதிபடச்சொல்லலாம். முக்குலத்தோர் ஓட்டுக்களை வாங்கும் முனைப்பில் இருக்கும் ஒரு சங்கத்தலைவரின் பேட்டியின் கருத்துக்களை ஒருமுறை சரிபார்த்துவிட்டு பதிப்பித்து இருக்கலாம் Tamil The Hindu புனிதங்களைப் பொசுக்கியவர்: புகழ்பெற்ற அரசியல் அறிஞர் பார்வையில் பெரியார்! திசெம்பர் 24, 2016 பேராசிரியர் சுனில் கில்னானி இந்தியாவின் முன்னணி அரசியல் அறிஞர். அவருடைய, ‘IDEA OF INDIA’ நூல் இந்தியாவைப் புரிந்துகொள்ள மிகச்சிறந்த நூல் என்று உலகம் முழுக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. இங்கிலாந்தின் தொன்மை மிகுந்த கிங்ஸ் கல்லூரியில் பேராசிரியராக உள்ளார். அவருடைய, ‘INCARNATIONS: INDIA IN FIFTY LIVES’ நூலில்… தந்தை பெரியார் குறித்து இடம்பெற்ற ‘SNIPER OF THE SACRED COWS’ கட்டுரை ஆசிரியரின் அனுமதி பெற்று மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது:  இந்தியாவில் வாழும் அனைத்துப் பெண்களையும் தனியாகப் பிரித்து ஒரு தேசத்தை நாம் கட்டமைப்பதாக வைத்துக்கொள்வோம். இதை, ‘இந்தியப் பெண்கள் குடியரசு’ என்போம். இந்த நாட்டில், 60 கோடி பேர் இருப்பார்கள். ஆண்களால் மோசமாக ஆளப்படும் இந்தியாவுக்கு அடுத்த, பெரிய தேசமாக அது திகழும். அந்தத் தேசத்தின் மனிதவள வளர்ச்சிக் குறியீடானது மியான்மர், ருவாண்டா முதலிய நாடுகளுக்கு இடையே மோசமான இடத்தைப் பெறும். அந்தத் தேசத்தில் பள்ளிக்குச் செல்லும் சராசரி வருடங்கள் அதிர்ச்சி தரும் அளவாக 3.2 வருடங்கள் என்கிற அளவிலேயே இருக்கும். இது, ஆப்ரிக்கத் தேசமான மொசாம்பிக்கின் மோசமான கல்விநிலையோடு போட்டியிடும் நாடாகக் காட்சியளிக்கும். தனிநபர் வருமானத்தை, விலைவாசி ஏற்றத்தை கணக்கில்கொண்டு கணக்கிட்டால்… இந்த இந்தியப் பெண்கள் நாட்டின் வருமானம், ஐவரி கோஸ்ட், பப்புவா நியூ கினியா முதலிய நாடுகளுக்கு இடையே தள்ளாடும். கடந்த 15வருடங்களில் இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி மூன்று மடங்கு பெருகியும் பெண்களின் நிலை இவ்வளவு அவலத்துக்கு உரியதாக இருக்கிறது. இந்தியப் பெண்களின் அளப்பரிய ஆற்றலை இந்த அளவுக்கு அடக்கி ஒடுக்காத நாடுகளின் எடுத்துக்காட்டுக்கு எங்கேயோ வெளிநாட்டைத் தேடவேண்டியதில்லை. வடக்கில் உள்ள மாநிலங்களைவிடத் தெற்கில் உள்ள மாநிலங்களில்… ஐ.நா சபையின் மனிதவளக் குறியீடு, பெண்களுக்கான அன்றாடச் சுதந்திரம் ஆகியவை மேம்பட்டே உள்ளன. எடுத்துக்காட்டாக, வடக்கில் பெரும்பாலான பெண்களுக்கு 18 வயதுக்குள் திருமணம் முடிக்கப்படுகிறது. தெற்கில் உள்ள சில மாநிலங்களில் 18 வயதுக்கு முன் திருமணம் செய்துவைக்கப்படும் பெண்களின் எண்ணிக்கை 15 சதவிகிதம் குறைவாக உள்ளது. இதைப்போலவே பெண்களின் கல்வியறிவு, வேலை செய்யும் பெண்களின் எண்ணிக்கை ஆகியவற்றில் வடக்கைவிடத் தெற்கு வெகுவாக மேம்பட்டிருப்பதைக் காணமுடியும். (வடக்கில் வேலைக்குச் செல்லும் பெண்கள் 36 சதவிகிதம், தெற்கில், கிட்டத்தட்ட 50 சதவிகிதம்.) இத்தகைய முக்கியமான பொருளாதார, சமூக வேறுபாடுகளுக்குக் காரணமாக, மையமாக அமைவது என ‘வடக்கு – தெற்கு வேறுபாடு’ என நாம் கருதலாம். இப்படிப்பட்ட வியப்பைத் தரும் வேறுபாட்டுக்குப் பின்னால்… ஆரம்பப் பள்ளிப் படிப்பைக்கூட முடிக்காத பெரியார் ஈ.வெ.ரா-வின் பங்களிப்பு மகத்தானதாக இருக்கிறது. பெரியார், இந்தியா முழுக்கப் பார்ப்பன எதிர்ப்புச் செயல்பாட்டாளராக, பகுத்தறிவாளராக, கேட்டார் பிணிக்கும் தகைமை கொண்ட சொற்பொழிவாளராக அறியப்பட்டார். காந்தியின் காங்கிரஸ் இயக்கத்தில் இணைந்த பெரியார், பின்னர் வாழ்நாள் முழுக்கக் காந்தியை எதிர்ப்பவராக மாறினார். அடக்குமுறைகளுக்கு அஞ்சாத, பிம்பங்களை, மூடநம்பிக்கைகளை விடாமல் தகர்ப்பவராக அவர் இயங்கினார். 1920-களில் பெரியார் திராவிடச் சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கினார். அவரின் தொண்டர்கள் ஈ.வெ.ரா-வை, ‘பெரியார்’ என அழைத்தனர். மகத்தான மனிதர் எனப் பொருள் தரும் அந்தப் பட்டம், ‘மகத்தான ஆத்மா’ எனப் பொருள் தரும், ‘மகாத்மா’ எனும் காந்தியின் பட்டத்தைத் தாக்கும் நோக்கத்தோடு, ஈ.வெ.ரா-வுக்கு வழங்கி வந்தது. எப்போதும் தேர்தல்களில் நிற்கவில்லை என்றாலும், நவீன தமிழ் அரசியலில் தன்னுடைய ஆழமான முத்திரையைப் பெரியார் பதித்திருக்கிறார். அவரின் இயக்கத்தை அடியொற்றி வந்த கட்சிகளே தமிழகத்தை அரை நூற்றாண்டு காலமாக ஆள்கின்றன. தேசிய அளவில், தமிழ் மொழியைத் தூக்கிப் பிடித்து, இந்தி திணிப்பை எதிர்த்த அவரின் அரசியலின் நீட்சியாக விடுதலைக்குப் பிந்தைய இந்தியாவின் மொழிப்பன்மையைக் காக்கும் சட்டங்கள் அமைந்தன. சாதி குறித்த அவரின் பார்வை, இந்திய விடுதலைக்குப் பிந்தைய காலத்தில் இடஒதுக்கீட்டுக்கான சட்டத் திருத்தத்துக்கு உகந்த சூழலை ஏற்படுத்திக் கொடுத்தது. தன்னுடைய சமகால அரசியல் தலைவர்களில் இருந்து வேறுபட்டு, பெண் விடுதலைக்கான குரலை ஆணாதிக்கத்தின் எந்தச் சுவடும் இல்லாமல்… அவர், கம்பீரமாக எழுப்பினார். பெண்களின் எழுச்சியை அடக்கி ஒடுக்கும் இந்தியக் குடும்பங்களின் ஆணாதிக்கப் போக்கைக் கடுமையாக அவர் சாடினார். பெரியார், ஆண்களின் கால்களுக்குக் கீழே கிடந்து தன்னையே தியாகம் செய்யும் பெண்களைக் கற்புக்கரசிகளாகக் கொண்டாடும் வடமொழிக் காப்பியங்களின் முட்டாள்தனத்தைச் சாடினார். பெண் கல்வி, காதல் திருமணங்கள், திருமண உறவு பொருந்தி வராவிட்டால் விவாகரத்து, பெண்களின் சொத்துரிமை எனப் பலவற்றுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்தார். எல்லாவற்றுக்கும் மேலாகப் பெண் தன்னுடைய அக வாழ்க்கை, குழந்தை பெறுதல் ஆகியவற்றில் சுயமாக இயங்க வேண்டும் என வலியுறுத்தினார். ‘ஆண்மை அழியவேண்டும்’ என முழங்கிய கட்டுரையில், இப்படி எழுதினார்: ‘எங்காவது, பூனைகளால் எலிகளுக்கு விடுதலை உண்டாகுமா; எங்காவது, நரிகளால் கோழிகளுக்கு விடுதலை உண்டாகுமா; எங்காவது, முதலாளிகளால் தொழிலாளிகளுக்கு விடுதலை உண்டாகுமா; எங்காவது, வெள்ளைக்காரர்களால் இந்தியர்களுக்குச் செல்வம் பெருகுமா; எங்காவது, பார்ப்பனர்களால் பார்ப்பனர் அல்லாதவர்களுக்குச் சமத்துவம் கிடைக்குமா என்பதை யோசித்தால்… இதன் உண்மை விளங்கும். அப்படி ஒருக்கால், ஏதாவது ஒரு சமயம்… மேற்படி விஷயங்களில் விடுதலை உண்டாகிவிட்டாலும்கூட ஆண்களால் பெண்களுக்கு விடுதலை கிடைக்கவே கிடைக்காது என்பதை மாத்திரம் உறுதியாய் நம்பலாம்’. பெரியார் இயங்கிய பகுதியின் கலாசாரப் பின்புலம், வடக்கைவிட மேம்பட்டதாகப் பெண்கள் சார்ந்து இருந்தது. எண்ணற்ற வீர மங்கைகள், சக்திமிகுந்த பெண் தெய்வங்கள், குறைந்த இனப்பெருக்க அளவு, சில சமூகங்களில் நிலவிய குடும்பக் கட்டுப்பாட்டுக் கலாசாரம் என வடக்கைவிடச் சாதகமான சூழல் தமிழகத்தில் நிலவியது. இவை வடக்கும், தெற்குமான வேறுபாட்டில் முக்கியப் பங்காற்றின எனலாம். என்றாலும், பெரியார் என்கிற முரட்டுத்தனம் மிக்கச் சிலை உடைப்பாளரை, குத்திக் கிழிக்கும் நாவன்மை கொண்டவரை, தகிக்கும் அறிவு கொண்டவரைப் பற்றி மென்மேலும் வாசிக்கையில், என் மனதில் ஒரு கேள்வி சூழ்கிறது. இந்தியாவின் பிற பகுதிகளில் பெரியாரைப் போன்ற தலைவர்கள் எழுந்திருந்தால்… அதே நாட்டில் பெண்களின் நிலைமை இன்னமும் மேம்பட்டதாக இருந்திருக்குமே என்கிற ஆதங்கமே அது. ‘கடவுள் இல்லை… கடவுள் இல்லை… கடவுள் இல்லவே இல்லை! கடவுளைக் கற்பித்தவன் முட்டாள்… கடவுளை பரப்பியவன் அயோக்கியன்… கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி!’ – என்கிற வரிகளோடு தன்னுடைய சுயமரியாதை கூட்டங்களைத் தொடங்குவதைப் பெரியார் வழக்கமாகக் கொண்டிருந்தார். பெரியார் கருஞ்சட்டையில், அடங்காத வெண்தாடியோடு, தூய வெண் மண்டை சுரப்போடு காட்சியளிக்கும் காணொளியைக் காண்கிறேன். அதில், அவருக்கு அருகில்… ஒரு சிறிய நாய் அமர்ந்திருக்கிறது. பிராமணர்கள், நாயை தூய்மையற்ற ஒன்றாகக் கருதுவார்கள். அவர்களை விரட்டுவதற்காக… பெரியார், நாய் ஒன்றை அருகில் வைத்திருப்பதைப்போல எனக்குத் தோன்றுகிறது. பெரியார் எல்லையில்லாத ஆற்றலைப் பல தளங்களில் கொண்டவராகத் திகழ்ந்தார் என்றாலும், அவர் விளங்கிக்கொள்ள முடியாத, குழப்பும் மொழியில் மக்களிடம் உரையாடியவர் இல்லை. எவையெல்லாம் பகுத்தறிவுக்கு எதிரானது என அவர் நம்பிய அனைத்தையும் அவர் கடுமையாகச் சாடினார். சாதி, மதம் என எதுவும் அவரின் தாக்குதலில் இருந்து தப்பவில்லை. பெரியார், காந்திக்குப் பிறகு 10 வருடங்கள் கழித்துப் பிறந்தார். அவர், ஆடை உற்பத்திக்கு பெயர் பெற்ற கோவை மாவட்டத்தின் ஈரோட்டில் வளர்ந்தார். அவரின் சாதி… விவசாயிகள், வியாபாரிகள் நிரம்பிய இடைநிலை சாதியாகும். செல்வவளம் மிகுந்த வியாபாரியான அப்பாவின் அரவணைப்பில் வளர்ந்த பெரியார்…. நல்ல வீடு, கூப்பிட்ட குரலுக்கு ஓடிவரும் வேலைக்காரர்கள் என்று செழிப்பான சூழலில் வளர்ந்ததால், இளம்வயதில் பெரிதாக அவமானங்களை எதிர்கொள்ளவில்லை. என்றாலும், அவர் சற்றே புரட்சிகர மனப்பான்மை கொண்டவராக அப்போதே திகழ்ந்தார். தனக்கு வடமொழி சொல்லித்தர அப்பாவால் நியமிக்கப்பட்ட சாதுக்கள், பிராமணக் குருக்கள் ஆகியோரை அவர் கேள்விகளால் துளைத்து எடுப்பார். பெரியாரின் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாமல் வீட்டுக்கு வருவதையே அவர்கள் நிறுத்திக்கொண்டார்கள். அவர்களின் போதனைகள் பெரியாரை ஈர்க்கவில்லை. எனினும், ஓர் இந்துவாகப் புண்ணியத்தலமாகக் கருதப்பட்ட காசிக்கு அவர் யாத்திரை போனார். 30 வயதை நோக்கி நடைபோட்டுக் கொண்டிருந்த பெரியாருக்கு தெளிவையும், திறப்பையும் தரும் காசியின் நிகழ்வுகள் அமைந்தன. அங்கு நடந்தவை குறித்து அவர் அடிக்கடி எழுதவும், பேசவும் செய்தார். தன்னுடைய தந்தை, பிராமணர்களுக்கு என்று நடத்திய பிரமாண்ட விருந்தை எதிர்த்ததால் ஏற்பட்ட பிணக்கில்… அவர் காசிக்குப் போனார். பணம் பிடுங்கும் காசியின் புரோகிதர்களின் போக்கும், பிராமணர் அல்லாதவர் மீது அவர்களுக்கு இருந்த வெறுப்பும் அவரைக் கடும் கோபத்துக்கு ஆளாக்கின. பெரியாரின் சாதியின் காரணமாகக் காசியின் எந்த மடத்திலும் அவருக்கு ஒரு வாய்ச் சோறுகூடக் கிடைக்கவில்லை. பிதிர்க்கடனுக்கு இடப்பட்ட உணவு இலைகளை வழித்துத் தின்னும் கொடிய நிலைக்கு அவர் காசியில் ஆளானார். அந்த அனுபவம், பரவலாக நம்பப்படுவதற்கு மாறாக… உடனே பெரியாரை மாற்றிவிடவில்லை. பிராமணர்கள் மீது தீப்பொறிபோல ஒரு தனிப்பட்ட கோபத்தை, அது பெரியாரின் மனதில் விதைத்தது. தென்னிந்தியா குறித்துச் சிறப்பான ஆய்வுகளை மேற்கொண்ட கேம்பிரிட்ஜ் பேராசிரியரான டேவிட் வாஷ்ப்ரூக் ஒன்றை கவனப்படுத்துகிறார். 1880-களில் இருந்தே சென்னையின் ஆளுமைகள்… இந்து மத நம்பிக்கைகளை நவீனம், அறிவியல் பார்வையோடு இணைக்க முடியுமா என்று தொடர்ந்து விவாதித்தனர். அன்னிபெசன்ட்டின் தியாசபிகல் இயக்கம், அதற்கான வாய்ப்பை வழங்கியது; கிறிஸ்தவ மிஷனரிக்களின் மதமாற்ற முயற்சிகளைத் தர்க்கரீதியாக அது எதிர்கொண்டது; பிராமணிய இந்து மதத்துக்கு அறிவியல் விளக்கத்தை அந்த இயக்கம் தந்தது; இது, தெற்கின் ஆதிக்க சாதி ஆட்களுக்குக் கடவுள் காட்டிய வழியாகத் தோன்றியது; தங்களுடைய சாதி, மத நம்பிக்கைகளை நவீனப்போர்வையில் மறைத்துக்கொள்ள வசதியான வாய்ப்பாக அன்னிபெசன்டின் இயக்கம் அமைந்தது. ஆதிக்கச் சாதியைச் சேராத பெரியாருக்குக் காப்பாற்றிக்கொள்ள எந்தச் சாதிப் பெருமையும் இல்லை. ஆகவே, முன்முடிவுகள் இல்லாமல் பகுத்தறிவோடு இயங்கினார். ‘எனக்குக் கடவுளோடு எந்தத் தகராறும் இல்லை. அவரை நான் நேரில் பார்த்ததுகூட இல்லை எனப் பெரியார், எள்ளல் ததும்பப் பேசுவார்’ என்கிறார் தமிழகத்தின் மிக முக்கியமான பண்பாட்டு வரலாற்று ஆசிரியரான ஆ.இரா.வேங்கடாசலபதி. பெரியாரின் வாழ்க்கை வரலாற்று நூல் ஒன்றை தற்போது சலபதி எழுதிக்கொண்டிருக்கிறார். பெரியார் தொடர்ந்து பகுத்தறிவோடு இயங்குவதற்கு அவரின் பொருளாதாரச் சூழலும் உதவியது. மகாவீரர், புத்தர் போலப் பெரியாரும் பிராமணியத்தைக் கடுமையாக எதிர்த்தார். அவர்களைப்போலப் பெரியாரும் செல்வவளம் மிகுந்த குடும்பத்தில் இருந்தே எழுந்தார். பெரியாரும் புத்தர், மகாவீரரைப்போல மேல் சாதி அடுக்கில் இருந்து எழுந்து மக்களைப் பிளவுபடுத்தும் இந்தியாவின் பழைமையான சாதி அமைப்பைச் சாடினார். பெரியாரைப்போலப் பிராமணர்களை, அவர் காலத்தில் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த யாரேனும் சாடியிருந்தால் ஆதிக்கச் சாதியினர் கொன்றிருப்பார்கள். 1920 – 1930-களில் பெரியார் தெருக்களில் இறங்கி, எதிர்க்குரல் எழுப்பும் தலைவராக இருக்கவில்லை; காசியில் இருந்து திரும்பியதும் விடுதலைப் போராட்ட அலையில் அவர் ஈர்க்கப்படவும் இல்லை. மாறாக, திருமணம் செய்து குடும்பஸ்தரான பெரியார், கோவைப் பகுதியில் மிகப்பெரிய வர்த்தக நிறுவனங்களில் ஒன்றாக, தன்னுடைய குடும்பத் தொழிலை… தன்னுடைய தொழில் திறமையால் மாற்றிக் காட்டினார். நிர்வாகத் திறமைக்குப் பெயர் பெற்றிருந்த பெரியார், 1918-ல் ஈரோடு மாநகராட்சியின் தலைவராகச் சிறப்பாகச் செயலாற்றினார். இந்தியாவில் சமூகரீதியாக மிகவும் முன்னேறிய பகுதிகளில் கேரளாவின் கோட்டயம் மாவட்டம் முதன்மையானதாகும். கல்வியறிவு 90 சதவிகிதத்தைத் தாண்டிய மாவட்டமாக அது உள்ளது; புகையிலை அற்ற மாவட்டமாகத் தன்னைச் சில ஆண்டுகளுக்கு முன்னால் அறிவித்துக் கொண்டது. இந்த மாவட்டத்தின் வைக்கம் எனும் நகரில், சாலைகள் சந்திக்கும் பகுதியின் மத்தியில்… மரத்தூண்களால் ஆன ஒரு சிவன் கோயில் உள்ளது. இதை நம்பூதிரி பிராமணர்கள் கட்டுப்படுத்தி வந்தார்கள். இந்தச் சாலைகளே, 40 நெருங்கிக் கொண்டிருந்த பெரியாரை அரசியலை நோக்கி செலுத்தியது. பல நூறு ஆண்டுகளாகத் தீண்டத்தகாதோர் எனக் கருதிய மக்கள், ஒடுக்கப்பட்ட சாதியினர் ஆகியோரை மகாதேவா ஆலயத்துக்குள்ளும், அதைச் சுற்றியிருக்கும் சாலைகளிலும் நுழையவிடாமல் நம்பூதிரிகள் தடுத்தார்கள். 1920-களில், ‘எல்லாக் கோயில்களையும் அனைத்து இந்துக்களுக்கும் திறந்துவிட வேண்டும்’ என்று திருவிதாங்கூர் சமஸ்தான மன்னரிடம் ஒடுக்கப்பட்ட சாதியினர் போராடினார்கள். தங்களின் கோரிக்கை ஏற்கப்படாவிட்டால் கிறிஸ்தவ – இஸ்லாம் மதங்களுக்கு மாறிவிடுவதாக அவர்கள் அச்சுறுத்தினர். இந்தப் போராட்டங்களின் குவிமையமாக வைக்கம் ஆலயம் மாறியது. 1924-ல் இந்தப் போராட்டத்தை நோக்கி காந்தி ஈர்க்கப்பட்டார். முதன்முறையாகத் தீண்டாமைக்கு எதிரான முழுமையான பொதுக் கிளர்ச்சியைக் காந்தி வைக்கத்திலேயே தொடங்கினார். இதே காலத்தில் காங்கிரஸ் கட்சியில் பிராமணர் அல்லாத தலைவர்களின் எண்ணிக்கை மிகக்குறைவாக இருந்தது. காங்கிரஸ், பிராமணர்கள் கட்சி என்கிற வாதத்தை எதிர்கொள்ள…. பிராமணர் அல்லாத தலைவர்களை அந்தக் கட்சி தேடிக்கொண்டு இருந்தது. செல்வவளம் மிகுந்த, நம்பிக்கை, சாமர்த்தியம் கைவரப்பெற்ற பெரியாரை வைக்கம் போராட்டத்துக்கு முன்னால்… காங்கிரஸ் கட்சியில் இணைத்தார்கள் அந்தக் கட்சியின் தலைவர்கள். வைக்கம் போராட்டத்தை வழிநடத்த பிராமணர் அல்லாத ஒரு தலைவர் தேவைப்பட்டார். பெரியார், ‘வைக்கம் வீரர்’ ஆனார். பெரியார், தேசிய அரசியலில் நம்பிக்கையோடு களம் புகுந்தார். தன்னைப்போலவே இடைநிலை சாதியான காந்தி காங்கிரஸ் கட்சியினைக் கட்டுப்படுத்தும் பிராமணர்களை எதிர்க்கும் தன்னுடைய திட்டத்தில் கைகோப்பார் என பெரியார் நம்பினார். விடுதலையுணர்வும், சமத்துவமும் இணைந்த போராட்டமாகக் காங்கிரஸின் போராட்டம் மாறும் என்று அவர் கனவு கண்டார். பழைமை மிகுந்திருந்த கேரளா முழுக்கப் பயணம் செய்த பெரியார், ‘கோயில் தெருக்களை மட்டும் இப்போதைக்குத் திறந்தால் போதும்’ எனும் காந்தியின் கருத்தை ஏற்க மறுத்தார். போராட்டக்காரர்களின் கோரிக்கையான கோயில் கதவுகளை அனைவருக்கும் திறந்துவிட வேண்டும் என்பதை அவர் தீவிரமாக ஆதரித்தார். கோயில்களில் வழிபடுபவர்கள் மூடர்கள் என்று சொன்னாலும் அவர்களின் சமத்துவ உரிமைக்காகப் பெரியார் குரல் கொடுத்தார். பெரியார் சிறைப்பட்டு இருந்தபோது, நம்பூதிரிகளோடு காந்தி மென்மையாகச் சமரசம் பேசினார். ஒடுக்கப்பட்ட சாதியினர், ‘தங்களின் கர்ம வினைப் பயனை அனுபவிக்கிறார்கள். ஆகவே, அவர்களைக் கோயிலுக்குள் விட வேண்டாம்’ என்று ஒரு நம்பூதிரி சொன்னபோது, ‘கடவுளின் இடத்தை எடுத்துக்கொண்டு அவர்களுக்குத் தண்டனை தர நாம் யார்’ என காந்தி வினவினார். 1925-ல் ஒரு சமரசத்துக்குத் திருவிதாங்கூர் மகாராணி ஒப்பினார். கோயிலைச் சுற்றியிருக்கும் சில சாலைகள் ஒடுக்கப்பட்ட சாதியினருக்குத் திறக்கப்படும். அதே சமயம், கோயில் வளாகம், உட்பிரகாரம் ஆகியவற்றுக்குள் அவர்களுக்கு அனுமதி இல்லை என்பதே அது. கோயில் நுழையும் கனவு ஒடுக்கப்பட்ட மக்களுக்கு 1936-ல்தான் கிட்டியது. காங்கிரஸ் கட்சிக்கு வைக்கம், சத்தியாக்கிரகம் மாதிரி போராட்டம் ஆனது. பழைமையின் கதவுகளைக் கட்டுடைத்த போராட்டம் அது எனக் காங்கிரஸ் மகிழ்ந்தது. மேல்மட்டத்தில் மக்களை மோசம் செய்யும் பணி அது என்பது பெரியாரின் கருத்து. காந்தி ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமையை விட்டுகொடுத்துவிட்டார் என பெரியார் கருதினார். அடுத்த இரண்டு வருடங்களில்… தன்னுடைய வாழ்நாள் எதிரியாக மாறப்போகும் காந்தி, காங்கிரஸ் ஆகியவற்றை விட்டு விலகினார். குடும்பப் பணத்தைக் கொண்டு சுயமரியாதை இயக்கத்தைத் திராவிட மொழிகள் பேசப்படும் தெற்குப் பகுதியில் தொடங்கினார். அவரின் கொள்கைகள், செயல்கள் பெரும்பாலும் காந்திக்கு முற்றிலும் மாறுபட்டதாக இருந்தது. காந்தியும், அவரின் தொண்டர்களும் வெள்ளை உடையை அணிந்தார்கள் என்றால்… பெரியார், தன்னுடைய தொண்டர்களைக் கருஞ்சட்டை அணியச் செய்தார்; காந்தி, தன்னுடைய தொண்டர்களின் மத நம்பிக்கைகளைக் கருத்தில்கொண்டே பேசினார்; பெரியார், தன்னுடைய பேச்சை கேட்பவர்களை முட்டாள் என்று அழைத்தார்; அவர்களின் நம்பிக்கைகள், சாதிச் சடங்குகள் ஆகியவற்றை அவமானப்படுத்தினார்; அந்த மக்களின் கடவுள், சிலைகள் ஆகியவற்றைச் செருப்பால் அடிப்பதாக மிரட்டினார். காந்தி, ஒரு தேசிய இயக்கத்துக்குக் கனவு கண்டார் என்றால்… பெரியார், தனித் திராவிட நாட்டைத் தனது இலக்காகக் கொண்டார். சுயமாக எழும் எண்ணற்ற தலைவர்களைப்போலப் பெரியாரின் கருத்தாக்கங்களுக்கான வேர்களைத் தேடுவது வீணானது. பெரியாரின் கடிதங்கள், குறிப்புகள் ஆகியவற்றோடு பல ஆண்டுகளைச் செலவிட்ட பேராசிரியர் ஆ.இரா.வேங்கடாசலபதி, பெரியார் தன்னுடைய சொந்த கருத்துக்கள் அல்லாதவற்றைக் குறிப்புகளோடு வெளியிட்டதைக் கவனப்படுத்துகிறார். ‘பெரும்பாலான கருத்துக்கள் பெரியாரின் அசலான சிந்தனைகள்’ என்கிறார், அவர். பெண்ணுரிமையில் தீவிரத்தன்மை கொண்டவராக இருக்க… ஒரு புத்தகமே பெரியாருக்கு தூண்டுகோலாக அமைந்தது. 1927–ல் வெளிவந்த, புத்தகம் ஒன்றால் பெரியாரின் சிந்தனை செதுக்கப்பட்டது. காந்தியும், காங்கிரஸ் கட்சியும் வெறுத்த கேத்தரின் மேயோவின், ‘மாதர் இந்தியா’ நூல் அது. அந்த நூல் எப்படி இந்திய வாழ்க்கை முறை, குறிப்பாக இந்து பாரம்பர்யம் பெண்களைச் சுரண்டுகிறது என மேயோ விளக்கினார். மேயோ, தன்னுடைய மறுப்பு எழுப்ப முடியாத வாதத்துக்கு ஆதரவாகக் குழந்தைத் திருமண எண்ணிக்கை, பாலியல் வியாதிகள், விதவைகள் நடத்தப்படும் விதம், 14 வயதுக்கு முன்னால் திருமணம் செய்வதை நியாயப்படுத்தும் பெண்ணின் பெற்றோர் எனப் பலவற்றைக் குறித்து அவர் பதிவுசெய்தார். சமூகச் சீர்திருத்தத்தைச் சில காங்கிரஸ் தலைவர்கள் வேகமாக முன்னெடுத்தபோது மெதுவாகப் பயணிக்கலாம் எனச் சில தலைவர்கள் கருதினார்கள். மேயோ, பிரிட்டிஷ் உளவுத்துறைக்கு வேலை பார்த்தார் என்று இப்போதுதான் தெரியும். பெண்களைக் கண்ணியமாகக் காக்கும் மதம் இந்து மதம் என்று காங்கிரஸ் தலைவர்கள் மேயோவின் புத்தகத்தைத் துச்சமாகக் கருதினார்கள். பெரியார், ‘மதர் இந்தியா’ நூலின் கருத்துகளை வேறு விதமாக அணுகினார்; பெரியார், இந்து மதத்தின் மீதான இத்தகைய தாக்குதலில் ஆனந்தமடைந்தார்; அதே சமயம், ஐரோப்பாவில் எழுந்த பெண்ணிய இயக்கங்களைக் குறித்துக் கவனமாக பெரியார் தெரிந்துகொண்டார். அதன் விளைவாக, பல்வேறு சமூகப் பிரச்னைகள் குறித்த அவரின் புரிதல் விரிவடைந்தது. 1920-களில் இருந்தே சுய மரியாதை இயக்கத்தின் பரப்புரையில் இந்தியப் பெண்களின் உரிமைகள் முக்கியமான இடத்தைப் பெற்றன. ஒளிவு மறைவில்லாத, வெற்று அலங்காரங்கள் அற்ற, கொந்தளிப்பை பெருக்கெடுக்கச் செய்யும் தன்னுடைய உரைகளாலும், ‘விடுதலை’ இதழ் எழுத்துகளாலும் பெண்ணுரிமையைப் பெரியார் உயர்த்திப் பிடித்தார்.   நூற்றாண்டுகளாக வழங்கிவந்த தமிழ் நாட்டுப்புறப் பாடல்களில், சமயங்களில் பெண்கள் ஆண்களின் ஏவலுக்கு இயங்கும் அடிமைகளாக, அவர்களின் குழந்தைகளை வளர்க்கும் ஆயாக்களாக மட்டும் தாங்கள் பார்க்கப்படுவதை எதிர்த்துப் பாடினார்கள். மணமான பெண்கள், கைம்பெண்கள் ஆகியோருக்குச் சொத்தில் உரிமையில்லாத கொடுமையைப் பல்வேறு பாடல்கள் பதிகின்றன. (காளைபோல மகன் ஒருத்தன் கருப்பையில பூத்திருக்கலாம்… கண்மணியே, கட்டிவெச்ச சொத்தெல்லாம் கலையாம வந்திருக்கும், மதுரை மன்றத்தில நியாயம்தானே கிடைச்சிருக்கும் கண்மணியே). இத்தகைய மோசமான அடக்குமுறைகளின் பின்னணியில் ஓரளவுக்குத் திருமணத்துக்குப் பங்கிருப்பதைப் பெரியார் கண்டார்; திருமணங்கள் பெண்களை அடிமைப்படுத்தும் அயோக்கியமான வேலையைச் செய்வதை அவர் சாடினார்; ஒரே சாதியின் மூத்தோர்களிடையே நிகழும் அன்புக்கு இடமில்லாத பண்டமாற்று என இவற்றைப் பார்த்தார். இந்தத் திருமணங்களில் பெண்களின் (பெரும்பாலும் பெண் குழந்தைகள்) கருத்து, கனவுகளுக்கு இடமில்லை. பெரியாரின் அசரவைக்கும், போலிப் பூச்சுகள் இல்லாத மேடைப்பேச்சு அவரின் இயக்கத்தை நடுத்தர வர்க்கத்தைத் தாண்டி அடித்தட்டு மக்களிடமும் கொண்டுபோய்ச் சேர்த்தது. நடுத்தர வர்க்கம் அவரின் பகுத்தறிவுக் கொள்கைகளை எளிதில் உள்வாங்கியிருக்கும். எனினும், பெரியார் அடித்தட்டு மக்களை நோக்கி தன்னுடைய அரசியலை கவனப்படுத்தினார். தமிழகத்தில் 1928 அல்லது 1929-ல் தொடங்கி… பெரியாரின் ஆசியோடு ஊரகப் பெண்கள், ஆண்கள் செய்த கலப்புத் திருமணங்கள் பெரும்பாலும் சுயமரியாதை திருமணங்களாகின. இந்தத் திருமணங்கள் ஐயர் இல்லாமல், வடமொழி மந்திரங்கள் இல்லாமல் நடந்தேறின. பல நாட்கள் நடக்கும், அயர்ச்சியைத் தரும் பாரம்பர்ய திருமணங்களைப்போல அல்லாமல் விரைவாக, எளிமையாகப் பெரியாரின் வழிகாட்டுதலில் இந்தத் திருமணங்கள் நடைபெற்றன. தேவையில்லாமல் திருமணம் என்கிற சடங்குக்கு வாரியிறைக்கும் பணத்தைத் தம்பதிகளுக்குப் பிறக்கப்போகும் குழந்தைகளின் கல்விக்குச் செலவு செய்யலாம் என பெரியார் வலியுறுத்தினார். அதே சமயம், இந்தச் சுயமரியாதை திருமணங்கள், கணவன் – மனைவி இடையேயான கலவி என்பது வெறும் பிள்ளைப்பேறுக்காக மட்டுமே எனப் போலியாகப் பேசவில்லை. அதிகாரப்பூர்வமாகச் சுயமரியாதை இயக்கத்துக்கு ஐந்து குறிக்கோள்கள் இருந்தன: கடவுள் ஒழிய வேண்டும்; மதம் ஒழியவேண்டும்; காந்தி ஒழியவேண்டும்; காங்கிரஸ் ஒழியவேண்டும்; பார்ப்பான் ஒழியவேண்டும். ஆணாதிக்கத்தை ஒழிப்பது இரண்டாம்பட்சமாக ஆரம்பகாலத்தில் இருந்தது. காலப்போக்கில், மணப்பெண் – மணமகன் இருவரின் சமத்துவமும் வெளிப்படையாக அங்கீகரிக்கப்பட்ட சுயமரியாதை திருமணங்கள் அந்த இயக்கத்தின் அடையாளங்கள் ஆகின. பிராமணர்கள் நடத்திய குடும்பச் சடங்குகளின் மீது கட்டமைக்கப்பட்டு இருந்த இந்து மதச் சமூகத்தின் அடித்தளத்தை இவை அசைத்துப் பார்த்தன. இந்தத் திருமணங்கள் பெரியாரின் கொள்கைகளைக் கிராமங்கள்தோறும் பரப்பின; விளக்கின. இவருடைய பகுத்தறிவு விவாதங்கள், ஆண் – பெண் இடையே ஒளிவுமறைவற்ற உரையாடல்கள் ஆகியவற்றுக்கும் உதவின. பெரியாரின் பார்வையில் சாதியை நிலைநிறுத்தும், ஏற்பாட்டுத் திருமணங்கள் பெண்களிடையே நிலவும் பரவலான கல்வியறிவு இன்மையைப் பலப்படுத்தி, நீடிக்கச் செய்தன. அறியாத அயலாரிடம் பெண்ணைத் திருமணம் செய்துவைத்த பெரியவர்கள்… தங்களுடைய பெண் முட்டாளாக, உதவாக்கரைகளாக இருப்பதில் கவனமாக இருந்தார்கள் என்பதை பெரியார் சுட்டிக்காட்டினார். இதற்கு மாறாகப் பெண்கள் கல்வியிலும், விளையாட்டிலும் தேர்ச்சிப் பெறவேண்டும் என அவர் முழங்கினார். ‘மணப்பந்தல்களில் பெண்களை அடைக்காமல்… மைதானங்களில் அவர்களை இயங்கவிட வேண்டும்’ என்றார். பெண்கள் வளர்ந்த பின்பு, தங்களுக்குப் பிடித்தமான ஆணைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும்; அதேபோல, தாங்கள் எப்போது குழந்தை பெறவேண்டும் என்பதைத் தாங்களே முடிவு செய்ய வேண்டும் என்று பெரியார் அறைகூவல் விடுத்தார். பெரியார் விடுத்த அறைகூவல்… இன்றைக்கு இருக்கும் கருத்தடை, குடும்பக் கட்டுப்பாடு பிரசாரங்கள் போன்றது அல்ல. அவர்… பெண்கள், ஆண்களின் விடுதலை சார்ந்து பேசினார். பாலியல் வாழ்க்கை, வாழ்வின் பிற அங்கங்களில் ஆணும், பெண்ணும் தங்களுக்கான விடுதலைவெளியை கொண்டிருக்க வேண்டும் என்கிற நோக்கத்தோடு அவர் இயங்கினார். தமிழ்ப் பத்திரிகைகள், ஒழுக்கக்கேட்டை வளர்ப்பதற்காகப் பெரியாரைச் சாடின. பெரியார், ஒரு திருமணத்தில் பேசியபோது, அசராமல் இப்படிப் பதில் தந்தார்: ‘மனைவி, கணவனை மதிக்க வேண்டும் என்றால்… ஏன் கணவன், மனைவியை மதிக்கக் கூடாது? மனைவிதான் புகுந்த வீட்டின் உறவுகளை மதிக்க வேண்டுமென்றால்… ஏன் மனைவி வீட்டு உறவுகளை, கணவன் மதிக்கக் கூடாது? மனைவி, கணவனுக்குச் செய்வதை… கணவன், மனைவிக்குத் திருப்பிச் செய்ய முடியாது என்றால்… பெண் என்பவள் வீட்டு வேலைக்கும், உடல் சுகத்துக்கும் மட்டுமே ஆனவள் என்று ஆகவில்லையா? இப்படிப்பட்ட திருமணங்கள் நாட்டில் அரை நொடிகூட நீடித்திருக்க அனுமதிக்கக் கூடாது’. 1920-களில் சோவியத் ரஷ்யாவில் நிகழ்ந்த சமூகச் சோதனைகளில் பெரியார் ஆர்வம்கொண்டார். 1931-ல் ஐரோப்பாவுக்கு பெரியார் பயணம் செய்தார். அங்கே, ஒரு வருடகாலம் செலவழித்த பெரியார்… மைய அரசியலைவிட்டு அப்போது விலகியிருந்தார். பெரியார், பெர்லினில் உள்ள நிர்வாண கிளப்களில் ஆனந்தமாக நேரத்தைச் செலவழித்தார். தன்னுடைய அதிகாரப்பூர்வ வாழ்க்கை வரலாற்றில் அந்தப் படங்கள் இடம்பெற வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். ஆனால், அது ஏற்கப்படவில்லை. ஐரோப்பிய பயணத்துக்குப் பின்னர், பெரியார்… அறிவியல், தொழில்நுட்பம், கருத்தடை ஆகியவை இந்தியர்களின் முன்னேற்றத்துக்குத் தேவை என்கிற தன்னுடைய நிலைப்பாட்டில் மேலும் உறுதிபூண்டார். சோவியத் அரசின் விவாகரத்துச் சார்ந்த சட்டங்கள், குழந்தைகளுக்கு அரசு தரும் நிதியுதவி ஆகியவை எப்படிக் குடும்பத்தின் பண்பை மாற்றுகின்றன; அவை, எப்படிக் குடும்பத்தின் மீதான சார்பைக் குறைக்கின்றன என்பனவற்றைப் பற்றிக் குறிப்பாக ஆர்வம் கொண்டார். தொழிலாளர்களுக்கு நிறுவனத்தில் பங்கு தரும் திட்டங்கள், கூட்டு நிறுவனங்கள் முதலிய சோவியத் பொருளாதாரக் கருத்தாக்கங்களால் பெரியார் ஈர்க்கப்பட்டார். தன்னுடைய குடும்பத் தொழில்களில் அவற்றை அமல்படுத்தினார். தொழிலாளிகளுக்குச் சம்பளம் தருவதற்குப் பதிலாக லாபத்தில் பெரியார் பங்கு தந்தார். அரசியல் பதவிகளுக்கு ஆசைப்படாமல் சமூகத்தின் மனப்போக்கை மாற்றி, பொதுப் புத்தியை செழுமைப்படுத்தும் முயற்சிகளில் பெரியார் தன்னுடைய வாழ்நாள் எதிரியான காந்தியை பின்பற்றினார். 1948-ல் பெரியார், தன்னைவிட மிகவும் இளையவரான மணியம்மையைத் திருமணம் செய்துகொண்டபோது… அவரின் தொண்டர்கள் படை பெருமளவில் குறைந்தது. சில சுயமரியாதை இயக்கத்தினர், பெரியாரின் திருமணத்தைச் சுற்றி ஒரு சூழ்ச்சியைக் கட்டமைத்து, திராவிடர் கழகத்துக்கு மாற்றாக… தி.மு.க-வை ஏற்படுத்தினார்கள். பின்… அதிலிருந்து பிரிந்து, அ.தி.மு.க உருவானது. இந்த இரண்டு கட்சிகளும் அரை நூற்றாண்டு காலம் தமிழக அரசியலில் கோலோச்சுகிறது. எனினும், பெரியார் விடுதலைக்குப் பிந்தைய இந்தியத் தேர்தல் அரசியலில் குறிப்பிடத்தகுந்த செல்வாக்கைச் செலுத்தினார். பல ஆண்டுகளுக்கு வேட்பாளர்களுக்கு நட்சத்திர பரப்புரையாளராக அவரே திகழ்ந்தார். அவரின் வெகுமக்கள் ஈர்ப்பு… அவரை, ‘கிங்மேக்கராக’ வைத்திருந்தது. ஆகவே, அரசின் மீதும், சட்ட உருவாக்கத்திலும் குறிப்பிடத்தகுந்த செல்வாக்கை அவர் எந்தப் பொறுப்புமின்றிச் செலுத்த முடிந்தது அவருக்கு ஏற்றதாக இருந்தது. டாக்டர் அம்பேத்கரைப்போலப் பிராமணியம் மீதான தன்னுடைய விமர்சனத்தை இந்தியா முழுமைக்கும் உரியதாகப் பெரியார் முன்வைக்கவில்லை. மாறாக, அவரின் அரசியல் திராவிடப் பண்பாட்டில் ஊறியதாக இருந்தது. தமிழ்ப் பண்பாட்டில் அவரின் கருத்துக்கள் பரவ ஆரம்பித்த பின்பு… புனிதங்களைப் பொசுக்கிய பெரியாரே, புனிதப் பசுவாக மாற்றப்பட்டுவிட்டார். பெரியாரை, 20 வருடங்களுக்கு முன் ஓரங்கட்டப் பார்த்த அரசியல்வாதிகளே, அதற்குப் பின்னால்… வேறு வகையில் நடந்துகொண்டார்கள். பெரியார் 1973-ல் மரணமடைந்தார். பேராசிரியர் டேவிட் வாஷ்ப்ரூக், ‘பெரியாரின் வழித்தோன்றல்கள் என்று தங்களை அழைத்துக்கொள்ளும் அரசியல்வாதிகள் அவர் வெறுக்கக்கூடிய செயல்களையே மேற்கொள்கிறார்கள்’ என்கிறார். தெற்கில், பெண்களின் முன்னேற்றத்துக்காகப் பாடுபட்ட பெரியாருக்கு, அவரின் பங்களிப்பை மிஞ்சிய புகழ்மாலை சூட்டப்படுவதாக விமர்சிக்கிறார்கள், மக்களியல் அறிஞர்கள் மற்றும் அறிவியல் – மருத்துவ வரலாற்று ஆசிரியர்கள். அவர்களின் கவலை நியாயமான ஒன்றே ஆகும். தென்னிந்தியப் பெண்களின் உடல்நலம், மேம்பட்ட வாழ்க்கை ஆகியவை பெரியார் பிறப்பதற்கு முன்பே நிலவிய காரணிகளின் பங்களிப்பாலும் எழுந்தது என்பதை மறுப்பதற்கில்லை. அதேசமயம், உலகப் போர்களுக்கு இடைப்பட்ட காலத்தில்… தமிழகத்தில், பெண்கள் ஈன்றெடுத்த குழந்தைகளின் விகிதம் குறிப்பிடத்தகுந்த அளவு குறைந்திருந்ததை தரவுகள் காட்டுகின்றன. இதற்குப் பெரியாரின் களப்பணியும், குடும்பக் கட்டுப்பாடு சார்ந்த பரப்புரையும் முக்கியப் பங்காற்றின என உறுதியாகச் சொல்லலாம். வேறு எந்தப் பங்களிப்பையும் அவர் தரவில்லை என்று விமர்சகர்கள் சொன்னாலும், பெரியார் மக்களைப் புரட்சிகரமான கருத்துகளால் எதிர்கொண்டு, அவர்களின் மனப்போக்கை மாற்றினார். 50 வருடங்களாகப் பெருமளவு மக்கள் செல்வாக்கை நகர் மற்றும் கிராமப் புறங்களில் பெற்ற பெரியாரின் செயல்பாட்டுக்கும், பெண்களின் முன்னேற்றத்துக்கும் தொடர்பே இல்லை என்று வாதிடுவோருக்கு பெரியாரின் வார்த்தையிலேயே பதில் சொல்லலாம். ‘வெங்காயம்!’ தமிழகத்தில் பெண்களின் சமூக வளர்ச்சி தேக்கமடைந்துவிட்டதாகத் தெரிகிறது. அதன் மகத்தான கடந்தகாலச் சாதனைகளைத் தாண்டி தற்போது தொய்வைச் சந்தித்திருக்கிறது. காலங்காலமாக ஏழ்மையில் உழன்ற வட கிழக்கு மாநிலமான சிக்கிம், கடந்த மக்கள்தொகைக் கணக்கெடுப்பில், பெண்கள் கல்வியறிவில் தமிழகத்தைக் முந்தியிருக்கிறது. 2007 முதல் ஆண்களைவிடப் பெண்கள் அதிகளவில் பள்ளியில் சேர்க்கப்படுகிறார்கள். ஆண் – பெண் வேறுபாடு குறைவது, பள்ளிக்குச் செல்லும் ஆண் – பெண் விகிதாச்சாரம் மேம்படுவது ஆகியவற்றுக்குப் பல்வேறு காரணங்கள் உண்டு. எனினும், அவற்றில் முக்கியமானது நீடித்த, ஓய்வில்லாத, தீரா வேட்கை கொண்ட பரப்புரைகளும் ஆகும். பெண்ணுரிமைகளுக்காக இயங்குபவர்கள் தேர்தல்கள் வருகிறபோது மட்டும் உரிமை முரசம் கொட்டாமல் தொடர்ந்து பெரியார்போல மக்களிடம் பரப்புரை செய்ய வேண்டும். நீடித்த உரையாடல், பரப்புரை உடனே வெற்றியைத் தராது என்றாலும்… அது. காலப்போக்கில் இந்தியப் பெண்கள் குடியரசில் மாற்றத்தை நிச்சயம் ஏற்படுத்தும்.’’ தமிழில்: பூ.கொ.சரவணன் (நன்றி: விகடன்) ‘ராமச்சந்திர குஹா’வின் ’Democrats and Dissenters’ கட்டுரைத் தொகுப்பு அறிமுகம் -1 ஏப்ரல் 24, 2017 ராமச்சந்திர குஹாவுக்குத் தனிப்பட்ட அறிமுகம் தேவையில்லை. அவரின் ‘Democrats and Dissenters’ கட்டுரைத் தொகுப்பை வாசித்து முடித்தேன். வாரத்துக்கு அவரின் இரண்டு கட்டுரைகளைக் குறைந்தபட்சம் படித்துவிடுவதாலும், ஏற்கனவே வெளிவந்த நூலின் கருத்துக்களின் நீட்சியாகச் சில கட்டுரைகள் அமைவதாலும் நூல் சற்றே சலிப்பைத் தந்தது. எனினும், நூல் சுவையான வாசிப்பு அனுபவமாக நிறைய இடங்களில் இருந்தது. இரு பகுதிகளாக நூல் அறிமுகம் அமையும். முதல் பாகத்தில் அரசியல் சார்ந்த கட்டுரைகளின் தொகுப்பும், இரண்டாவது பகுதியில் ஆளுமைகள் குறித்த அறிமுகங்களும் இடம்பெறும். […] காங்கிரஸ் பேரியக்கத்துக்கு அஞ்சலி: காங்கிரஸ் இயக்கம் காந்தியின் வருகைக்கு முன்னரே இந்தியா முழுக்க இருந்து ஆளுமைகளைத் தனதாக்கி கொண்டது. அதே சமயம் நகரங்களில் அது இயங்கியது. ஆங்கிலமே அதன் அலுவல் மொழியாக இருந்தது. காந்தி காங்கிரசில் ஏழைகள், விவசாயிகள், தொழிலாளர்கள் ஆகியோரை இணைத்தார். கட்சியின் அலுவல்கள் உள்ளூர் மொழிகளில் நிகழ்த்தப்பட்டன. மூன்றாவதாகப் பெண்களுக்கான உரிமைகள், தீண்டாமை ஒழிப்பு, இந்து-முஸ்லீம் ஒற்றுமை ஆகியவற்றுக்குப் பாடுபட்டார். இதன் மூலம் கட்சி காயஸ்தர்கள், பனியாக்கள், பிரமணர்கள் ஆகியோருக்கு மட்டுமே ஆன கட்சி என்கிற அவப்பெயரை துடைக்க முயன்றார். இரண்டாம் கட்டத் தலைவர்கள் பலரை உருவாக்கினார். காந்தி மூன்றாவது இலக்கில் பெருமளவில் வெற்றியை பெற முடியவில்லை. விடுதலைக்குப் பிந்தைய காங்கிரஸ் அறுபதுகள் வரை நம்பிக்கையை, பொருளாதார வளர்ச்சியைக் கொண்டு தேசத்தை இணைக்க முயன்றது. வெறுப்பினால் ஒரு புதிய தேசத்தை அது எழுப்ப முனையவில்லை. மதச்சார்பின்மை, சகல குடிமக்களுக்கும் சம உரிமைகள் ஆகியவற்றை அது முழக்கமாகக் கொண்டிருந்தது. ஊடகம், நீதித்துறை, தேர்தல் ஆணையம் ஆகியவை சுயமாக, வலிமை மிக்கவையாக மாறுவதை நேருவின் காலம் உறுதி செய்தது. நேருவுக்குப் பிந்தைய இந்திராவின் காலத்தில் நாகலாந்து, மிசோரம் பகுதிகளில் கிளர்ச்சிகள் எழுந்தன. தமிழகம் இந்தி திணிப்பில் குமைந்து கொண்டிருந்தது. நக்சலைட் இயக்கம் உருப்பெற்று இருந்தது. பொருளாதாரம் பெருமளவு அடிவாங்கி இருந்தது. இரண்டு போர்களின் காயங்களில் இருந்து இந்தியா மீண்டிருக்கவில்லை. அறுபத்தி ஏழு தேர்தல்களில் கேரளா, தமிழகம், வங்கம், ஒரிசாவில் ஆட்சி பறிப் போயிருந்தது. பீகார், உத்திர பிரதேசம், மத்திய பிரதேசம் மாநிலங்களில் கட்சி தாவி காங்கிரஸ் ஆட்சிக்கு உலை வைக்கப்பட்டது. இந்திராவை ஊமை பொம்மையாகக் கருதி பதவிக்குக் கொண்டு வந்த சிண்டிகேட் வேறு தலைக்கு மேலே கத்தி போல இருந்தது. இப்படிப்பட்ட சூழலில் இந்திரா அதிகாரத்தை மையப்படுத்திக் கொண்டார். கட்சியைப் பிளந்து தனக்குத் தலைவணங்கி, துதிபாடுபவர்களை வளர்த்தார்கள். காஷ்மீரி பண்டிட்கள் நான்கு பேரை கொண்டு தன்னுடைய ஆட்சி அதிகாரத்தின் மிக முக்கியமான முடிவுகளை எடுத்தார். எல்லாவற்றுக்கும் மேலே அவசரநிலையின் மூலம் ஜனநாயகத்தைக் கல்லறைக்கு அனுப்பினார். அவரின் படுகொலைக்குப் பிறகு காங்கிரஸ் மீண்டு எழுவது போலத் தோன்றினாலும் அடுத்து வந்த தேர்தலில் நாற்பது சதவிகித அளவு வாக்குகளைப் பெற்றது. சமீபத்திய தேர்தலில் அது 20% க்கும் கீழே போய்விட்டது. காங்கிரஸ் மீண்டு எழுவதற்குப் வாய்ப்பே இல்லை என்கிறார் ராமச்சந்திர குஹா. அது படிப்படியாக மரணத்தைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது என்கிற அவர் நேரு குடும்பத்தை விட்டு அது விலக வேண்டும் என்று எப்பொழுதும் சொல்வதை மீண்டும் சொல்கிறார். எனினும், காங்கிரஸ் கட்சி எப்படி அதனுடைய அஸ்தமனத்துக்குப் பின்னர் நினைவுகூரப்பட வேண்டும்? இந்திய விடுதலை காலத்தில் காங்கிரஸ் பல்வேறு மத, மொழிக்குழுக்களை உள்ளடக்கி, பல கட்சிகள் பங்குகொள்ளும் தேர்தல் ஜனநாயகத்தை, மதசார்பின்மையைச் சாதித்தது. வயது வந்த எல்லாருக்கும் வாக்குரிமை தந்தது. ஜாதி, பாலின பாகுபாடுகளைப் போக்க ஆரம்பக் காலத்தில் பெருமளவில் முயன்றது. இதை மதச்சிறுபான்மையினருக்கு சம உரிமைகள், இடம் தராமல் இரண்டாம் தர குடிமக்களாக நடத்த வேண்டும் என்ற இந்துத்வவாதிகள், சர்வாதிகார போக்குக் கொண்ட ஆட்சியை நிறுவ பார்த்த இடதுசாரிகள், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உரிமைகள் தரக்கூடாது என்று இயங்கிய பிராமணியர்கள், பெண்களுக்கு உரிமைகளை மறுத்த இந்து, இஸ்லாமிய, கிறிஸ்துவ அடிப்படைவாதிகளுக்கு நடுவே இவற்றை முன்னெடுத்தார்கள். இந்தத் தேசம் முன்னைவிட ஒன்றுபட்டதாக, வன்முறை குறைந்ததாக அவர்கள் காலத்தில் மாறியது. சமூகத்தின் ஆணாதிக்கப் போக்கு குறைவதிலும், சகிப்பின்மை அறுபதுகள் வரை இருந்த காங்கிரசால் மட்டுப்படுவது நிகழ்ந்தது. சமூகத்தின் சமத்துவமின்மை, கட்டுப்பாடுகள் குறைந்தது. இவற்றைக் காங்கிரஸ் தன்னுடைய குறைகளோடு சாதித்தது. இவ்வாறே நினைவுக்கூரப்பட வேண்டும் என்கிறார். கருத்துரிமைக்கு எதிரான எட்டு ஆபத்துகள்: காந்தியின் ‘இந்து சுயராஜ்யம்’ நூல் வெளிவந்த பொழுதே அதை ஆங்கிலேய அரசு இந்தியாவில் தடை செய்தது. அப்பொழுது காந்தி, ‘ஒருவர் சிந்திக்கவும், தன்னுடைய கருத்துக்களை வெளிப்படுத்தவும் முழு உரிமை உண்டு. அவர் வன்முறையைப் பயன்படுத்தாதவரை அவரின் கருத்தை வெளிப்படுத்த உரிமை உண்டு.’ என்று எழுதினார். வன்முறையைத் தூண்டிவிடவும் கூடாது என்று சேர்த்துக் கொள்ளலாம் என்கிறார் குஹா. […] இந்தியாவில் கருத்துரிமைக்குப் பெரும் சவாலாக ஆங்கிலேயர் கால IPC சட்டங்களான 153, 153A, 295, 295A , 499, 500, 505 ஆகியவை திகழ்கின்றன, எல்லாவற்றுக்கும் மேலாகக் காந்தி ஆங்கிலேயர் சட்டம் என்கிற பெயரில் செய்யும் வன்புணர்வு என்று வர்ணித்த 124A கருத்துரிமையைப் பெருமளவில் கட்டுப்படுத்துகிறது என்று சுட்டிக்காட்டுகிறார். விடுதலைக்குப் பின்னால் இடது, வலது இரண்டும் இந்திய அரசுக்கு எதிராக வன்முறை வழியைக் கைக்கொண்ட பொழுது இந்துத்துவ இதழான Organiser, இடதுசாரி இதழான Crossroads ஆகியவை தடை செய்யப்பட்டன. பிரிவினை, அகதிகள் சிக்கல், காஷ்மீர் பிரச்சனை ஆகியவற்றில் வன்முறையைத் தூண்டும் பேச்சுகளுக்கு அரசு பயந்து முதலாவது சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்தது. இதற்கு நேரு, அம்பேத்கர் மீது கருத்துரிமையைக் கட்டுப்படுத்துகிற கடுமையான செயலை செய்தார்கள் என்கிறார் குஹா. ஒரு வரலாற்று ஆசிரியராக அவர் சறுக்கும் இடம் அது. முதலாவது சட்டத்திருத்தத்தில் மதவாதத்தை எதிர்கொள்ளப் பேச்சுரிமையைக் கட்டுப்பாடுகளைக் கொண்டுவந்தாலும், அதில் கருத்துரிமைக்கு வலு சேர்க்கும் செயல்பாட்டையும் இருவரும் செய்தார்கள். மேலும், முதலாவது சட்டதிருத்தத்துக்கு முன்னே பேச்சுரிமைக்குக் கட்டுப்பாடுகள் இருந்தது. எப்படி என்று விரிவாகத் தெரிந்து கொள்ள இந்தக் கட்டுரையை வாசியுங்கள்: https://indconlawphil.wordpress.com/…/on-reasonable-restri…/ இந்தியாவில் நீதித்துறை மிகவும் மெத்தனமாக இயங்குவதும், நீண்டு கொண்டே போகும் வழக்குகளும் கருத்துரிமைக்குச் சவாலாக அமைகின்றன என்கிறார் குஹா. அடையாள அரசியலும் கருத்துரிமைக்கு ஆபத்தாக இருக்கிறது; Satanic Verses எனும் சல்மான் ரூஷ்டியின் நூலை வாசிக்காமல், ஈரானுக்கு முன்னால் முந்திக்கொண்டு ராஜீவ் காந்தி அரசு தடை செய்தது. சிவாஜியின் பிறப்பு பற்றிய பல்வேறு கதைகளைத் தொகுத்த லென் அவர்களின் நூல் வராமல் இந்துத்வவாதிகள் பார்த்துக் கொண்டார்கள். மேற்கு வங்க இடதுசாரி அரசு தஸ்லீமா நஸ்ரினின் நாவலை தடை செய்தது. கருத்துரிமையை நீதிமன்றங்கள் காக்க முயன்றாலும் காவல் துறை கைகட்டி நிற்பதும் நிகழ்கிறது. சட்டம், ஒழுங்கு முக்கியம் என்று சொல்லியபடி கருத்துரிமையைக் காவு கொடுப்பது நிகழ்கிறது. ஹுசைன்-தோஷி இருவரும் இணைந்து ஓவிய கண்காட்சி நிகழ்த்திய பொழுது அது முழுவதும் தாக்கப்படுவதைக் காவல்துறை வேடிக்கை பார்த்தது. சிவாஜி குறித்த லேனின் புத்தகத்திற்கு உயர்நீதிமன்றம் அனுமதி கொடுத்ததும் காவல் துறை பதிப்பகத்துக்குப் பாதுகாப்பு தர மறுத்துவிட்டது. அரசியல்வாதிகள் எப்படிக் கருத்துரிமைக்கு எதிராக இருக்கிறார்கள் என்று முன்னரே சுட்டிக்காட்டப்பட்டது. குஜராத்தில் சாயஜிராவ் பல்கலையை இந்துத்வர்கள் தாக்கிய பொழுது அப்பொழுதைய மோடி அரசு வேடிக்கை பார்க்கவே செய்தது. இந்தியாவின் மிகச்சிறந்த கலை சார்ந்த படைப்பகம் அழிக்கப்பட்டது. தமிழகத்தில் பெருமாள் முருகனின் கருத்துரிமைக்கு அதிமுக, திமுக இரண்டுமே ஆதரவுக்கரம் நீட்டவில்லை என்று குஹா சுட்டிக்காட்டுகிறார். அரசாங்க விளம்பரங்களை நம்பிக்கொண்டு இருக்கும் ஊடகங்கள் மறந்தும் எதிர்க்குரல் எழுப்புவது இல்லை. ஊடகத்தினர் எதோ ஒரு கருத்தால் காயப்பட்டதாகச் சொல்லிக்கொண்டு தாக்க கிளம்பும் குண்டர்கள் குழு தங்களுக்குத் தகவலை தெரிவித்ததும் அதைக் காவல்துறைக்குத் தெரியப்படுத்தாமல் பிரேக்கிங் நியூஸ், exclusive என்று கல்லா கட்டுவதைக் கவனப்படுத்துகிறார். தாராளமயம் காலத்திற்கு முன்பு பல்வேறு இதழ்களில் தனியாகச் சுற்றுசூழலுக்கு என்று நிருபர்கள் இருந்தார்கள். அவர்களின் பொருளாதாரப் பாய்ச்சலின் பொழுது வீட்டுக்கு அனுப்பப்பட்டார்கள். விளம்பரம் தரும் நிறுவனங்கள் சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் பொழுது கண்டும், காணாமல் ஊடகங்கள் இருக்கின்றன. கார்ப்பரேட் நிறுவனங்களால் பல்வேறு ஊடக நிறுவனங்கள் நடத்தப்படுகின்றன. அதுவும் வெகுசில நிறுவனங்கள் பெரும்பான்மை ஊடகத்தைக் கட்டுப்படுத்துவது நிகழ்கிறது. மேலும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு எதிராக இதழ்கள் எழுதினால் டாட்டா நிறுவனம் செய்தது போல விளம்பரத்தை நிறுத்துவது நிகழ்கிறது. அரசியல் சார்புநிலைகள் எடுத்துக்கொண்டு படைப்பாளிகள் கருத்துரிமை சார்ந்தும் சார்புநிலைகள் குரல் கொடுப்பதும் கருத்துரிமைக்கு ஆபத்தாக அமைகிறது என்று சுட்டுகிறார் குஹா. எங்கே போனது ஆழமான அரசியல் உரையாடல்?: இந்தியாவின் அரசியலில் மிக முக்கியமான பங்களிப்பை வழங்கிக் கொண்டு இருந்த ஜெயபிரகாஷ் நாராயணன் விடுதலைக்குப் பிந்தைய காலத்தில் தேர்தல் அரசியலை விடுத்துச் சேவைகளில் ஈடுபட்டு வந்தார். எனினும் இரண்டாவது பொதுத் தேர்தல் காலத்தில் நேருவுக்கு எழுதிய கடிதத்தில், ‘ஒரு கட்சித்தலைவராகச் செயல்படுவதை விட தேசிய தலைவராகச் செயல்பட வேண்டும். எதிர்க்கட்சிகளை வளர்ப்பதில் கவனம் செலுத்த வேண்டும். இங்கிலாந்தில் இடதுசாரியான தனக்கு லேபர் கட்சியை நெருக்கமானது என்றாலும், அக்கட்சி ஆட்சிக்கு வந்தால் கன்சர்வேடிவ் கட்சி வலிமை பெறவே விரும்புவேன். ஒரு கட்சி சகல அதிகாரத்தையும் பெறுவதை விட, விரும்பத்தகாத எதிர்கட்சிகள் கொஞ்சம் கூடுதல் வலிமை பெறுவது தவறில்லை. நாடாளுமன்ற முறை தோற்றுவிட்டது. வேறு வகையான அரசியல் முறைகள் குறித்து யோசிக்க வேண்டும்’ என்றெல்லாம் குறிப்பிட்டார். நேரு போர்க்காலங்களில் இப்படிப்பட்ட பொதுவான அரசுகள் சாத்தியம் என்றாலும், வெவ்வேறு இலக்குகள்,தொலைநோக்குகள் கொண்டவர்கள் இணைந்து செயல்படுவது சமூக, அரசியல், பொருளாதாரத் தளங்களில், அயலுறவில் உகந்ததாக இருக்காது என்றார். தேர்தலில் நிற்பது, கருத்துக்களைப் பரப்புவதன் மூலம் மக்களின் மனதை மாற்றுவது முதலிய முறைகளை மற்ற கட்சிகள் செய்ய எந்தத் தடையும் விதிக்கப்படவில்லை. நாடாளுமன்றத்தில் 150 எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இருக்கையில் இன்னமும் வலிமைப்படுத்துவதை எப்படித் தான் செய்ய முடியும் என்று புரியவில்லை நேரு எழுதினார். அப்படி எதிர்க்கட்சிகளைப் பாதுகாத்து, பராமரித்து வளர்க்க முனைந்தால் அது ஏமாற்று வேலையாகவே இருக்கும். நாடாளுமன்ற முறை பல்வேறு தோல்விகளால் ஆனது. எனினும் இருப்பதில் அதுவே சிறந்த முறை என்று நேரு பதில் தந்ததோடு மாற்று முறையைப் பரிந்துரைக்கும்படி ஜெபியிடம் கேட்டார். அவர் ’ Plea for the Reconstruction of the Indian Polity’ என்கிற கட்டுரையில் இன்றைய பஞ்சாயத்து ஆட்சிமுறைக்கான விதையை ஊன்றினார். […] இப்படிப்பட்ட தேர்ந்த உரையாடல்கள் இந்திய அரசியலில் பல்வேறு தளங்களில் அப்பொழுது நிகழ்ந்தது. ராஜ ராம் மோகன் ராய், கிறிஸ்துவ மிஷனரிகள் இந்து மதம் தன்னைப் புதுப்பித்துக் கொள்ளுமா என உரையாடினார்கள். மேற்கை பற்றிய பார்வை எப்படி இருக்க வேண்டும் என்று தாகூர், காந்தி உரையாடினார்கள். ஜாதியை எப்படி அற, அரசியல் தளங்களில் எதிர்கொள்வது என்று காந்தி, அம்பேத்கர் உரையாடினார்கள். இந்துக்கள், முஸ்லீம்கள் ஒரு தேசமாக இணைந்து இருக்க முடியுமா என்று காந்தி, ஜின்னா பேசினார்கள். பொருளாதாரத்தைக் கட்டமைப்பதில் முதலாளிகளின் பங்கு என்ன என்று நேரு, ராஜாஜியும், அடிமைப்படுத்தியவர்களின் மொழியான ஆங்கிலத்துக்கு இந்தியாவில் என்ன இடம் என்று ராஜாஜி, லோகியாவும் உரையாடினார்கள். இப்படிப்பட்ட உரையாடல்கள் இல்லாமல் இன்றைய அரசியல் இருக்கிறது. சீனா, பாகிஸ்தானை புரிந்து கொள்வது: சீனாவில் மாண்டரின் மொழியும் ஹன் இனமும் ஆதிக்கம் செலுத்துகின்றன. அங்கே திபெத்திய மொழியோ, யூகுர் மொழியோ கவனத்தில் கொள்ளப்படுவதில்லை. அரசில் இணைந்து பணியாற்ற சீன மொழியைக் கற்பது கட்டாயம். காலனியம், ஜப்பானிய தாக்குதல், கம்யூனிச புரட்சி ஆகியவற்றால் நாட்டைப் பிணைக்க மொழியைச் சீனா பயன்படுத்துகிறது. தாய்மொழியில் கற்பிக்க வேண்டும் என்று குரல் கொடுத்தால் போலீஸ் வந்து நிற்கும். சீனாவில் பெண்கள் இந்தியாவை விட மேம்பட்ட நிலையில் நடத்தப்படுகிறார்கள். இந்தியாவில் வேலை செய்யும் பெண்களின் சதவிகிதம் 30%, சீனாவில் 70%. இந்தியாவில் 25 வயது நிறைந்த பெண்களில் பள்ளிக்கல்வியை முழுமையாக முடித்தவர்கள் 27% சீனாவில் 54%. நாடாளுமன்றத்தில் இந்தியாவில் பெண்களின் பங்கு 12% அங்கே 21%. இங்கே பிரசவத்தின் பொழுது மரணிக்கும் தாய்மார்களின் எண்ணிக்கை 37/1 லட்சம், 174/1 லட்சம். இந்தியா சீனாவுக்குப் போட்டி என்று பலவற்றில் தன்னைக் கருதிக் கொள்கிறது. பெண்கள் விஷயத்தில் அதைக்கருத்தில் கொள்ளலாம். பழங்குடியினர் குறித்த குஹாவின் கட்டுரை பெருமளவில் இந்த உரையில் அடங்கி இருக்கிறது: https://saravananagathan.wordpress.com/…/%E0%AE%AA%E0%AE%B…/ பாகிஸ்தான் தன்னுடைய அரசியல் தலைவர்களில் ஊக்கம் தேட முடியாமல், அக்பர், பாபர் என்று பெருமை கொள்கிறது. அதற்கு மாறாக இந்தியாவில் எண்ணற்ற அரசியல் தலைவர்கள் உத்வேகம் தருவதற்குக் கடந்த காலங்களில் இருக்கிறார்கள். லாகூர் நகரத்தில் இந்து, சீக்கிய, இஸ்லாமிய, பார்சி கலாசாரங்கள் இணைந்து இருந்தாலும் லாகூர் குறித்த நூல்களில் இஸ்லாமிய முகத்துக்கு மட்டுமே கவனம் தரப்படுகிறது. இப்படிப்பட்ட ஒற்றைப்படையான வரலாற்று எழுதியல் இந்தியாவிலும் நிகழலாம் என்கிறார் குஹா. பாகிஸ்தான் என்கிற தேசம் குறித்த முழக்கத்தை முதன்முதலில் மின்டோ பார்க்கில் ஜின்னா வைத்தார். அங்கே ஒரு கோபுரத்தை கட்ட மக்கள் நிதி தராமல் போகவே திரைப்பட நுழைவுச்சீட்டு, குதிரைப்பந்தய நுழைவுச்சீட்டு ஆகியவற்றின் மீது வரி போட்டு அதைப் பாகிஸ்தானிய அரசு கட்டியது. வன்முறையை எப்படிப் போராட்டக்குழுக்கள் கைக்கொள்வைது?: . தேர்தல், பல கட்சி ஆட்சிமுறை, வலுவான நீதித்துறை, வாழ, பணி செய்ய, சொத்து சேர்க்க குடிமக்களுக்கு உரிமை ஆகியவை எந்தளவுக்கு ஒரு ஜனநாயகத்தில் கிடைக்கின்றன என்பதைப் பொறுத்தே அது எவ்வளவு வலிமையான அரசு என்று அறிய முடியும். இவற்றோடு பல்வேறு மதங்கள் இணைந்து இருப்பது, தங்களுடைய மொழியில் சிந்திப்பது, எழுதுவது, பேசுவது, விரும்பியதை உண்பது, உடுத்துவது, விரும்பியவரை மணத்தல் ஆகிய அனைத்தும் ஒரு நாட்டில் சகலருக்கும் கிடைக்கிறதா என்று பல்வேறு கேள்விகள் உண்டு. காஷ்மீரில் தேர்தல்கள் பெரும்பாலும் நேர்மையாக நடத்தப்பட்டதில்லை. ஒடுக்குமுறைகள் மிகுந்தே இருந்திருக்கிறது. இலங்கையில் தமிழர்கள் அதிகாரத்தை விட்டு திட்டமிட்டு விலக்கப்பட்டதோடு, தமிழ் மொழி இரண்டாம்பட்சமான இடத்தைப் பெற்றது. திட்டமிட்ட படுகொலைகள் வன்முறை பாதைக்குத் திருப்பியது. காஷ்மீரிலும் ஒட்டுமொத்த நம்பிக்கையும் போய் ஆயுத போராட்டங்கள் எழுந்தன. இலங்கையில் 2009-ல் போர் முடிந்து பல்வேறு இழப்புகளுக்குப் பிறகு நாடு அமைதிக்குத் திரும்பியிருக்கிறது. எனினும், அங்கே பூரண உரிமைகளோ, நிம்மதியான வாழ்க்கையோ இன்னமும் சாத்தியமாக இல்லை. காஷ்மீர் எரிந்து கொண்டு இருக்கிறது. இதில் வன்முறையின் பங்கு என்ன? வன்முறை எதிர்க்கிற அரசு, அதிகாரிகள், மக்கள், தன் குழுவில் வேறு மதம், மொழியைச் சார்ந்தவர்கள், அரசியல் ரீதியாகத் தன்னோடு முரண்படும் தன்னுடைய குழுவினர் ஆகியோர் மீது நிகழ்த்தப்படுகிறது. முதல் இரண்டுக்கு ஓரளவுக்கு நியாயம் கற்பித்தாலும், இறுதி மூன்று ஏற்புடையது இல்லை. அப்பாவி மக்களைக் கொல்வது ஏற்புடையது அல்ல. விடுதலைப்புலிகள் அதை இலங்கையில் செய்தார்கள். காஷ்மீர் போராளிகள் மும்பை, டெல்லி ஆகிய இடங்களில் குடிமக்களைக் கொன்றார்கள். விடுதலைப்புலிகள் இஸ்லாமியர்களைத் தமிழர்களாக இருந்தும் கொன்றார்கள். காஷ்மீர் போராளிகள் காஷ்மீரி பண்டிட்கள் இரண்டு லட்சம் பேரை வெளியேற்றினார்கள். எந்த ஜனநாயகம், பன்மைத்தன்மைக்குப் போராடுகிறார்களோ அதைத் தங்களின் சகாக்களுக்கு மறுப்பதோடு அவர்களைக் கொல்லவும் செய்திருக்கிறார்கள். வன்முறையை எப்படித்தான் கையாள்வது? ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் வெகுமக்கள் மீது எப்பொழுதும் ஆயுதம் ஏந்தி போரிட்டது இல்லை. இந்தியாவில் அமைதியாகத் தனிநாடு கேட்ட திராவிட இயக்கம் பின்னர்த் திமுகவால் தேர்தல் அரசியலில் கலந்து மத்திய அரசிலும் பங்கு பெற்றது. மாநில அளவில் ஆட்சி செய்யவும் செய்தது. மிசோரம் மாநிலத்தில் மிசோ தேசிய முன்னணி ஆயுத கிளர்ச்சியை விடுத்து முழுமையான மன்னிப்பு பெற்றுத் தேர்தலில் நின்றது. வெற்றி பெற்று ஆட்சியில் இருந்ததோடு எதிர்க்கட்சியாகவும் அமர்ந்தது. அரசுகள் ஜனநாயக அமைப்புகளை வலிமைபப்டுத்த வேண்டும், நேர்மையான தேர்தல்களை நடத்த வேண்டும். சிறுபான்மையினரின் மொழி, கலாசாரம் ஆகியவற்றை மதிக்க வேண்டும், சட்டங்கள், கொள்கைகளில் சிறுபான்மையினர் கருத்தை கணக்கில் கொள்ள வேண்டும். மாநில சுயாட்சியை வழங்குவதோடு வேலை, சுகாதாரம், பள்ளிகள் ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும். ராணுவங்கள் செய்த மனித உரிமை மீறல்கள் குறித்துத் தனிப்பட்ட நேர்மையான விசாரணைகள் நிகழ்த்தி தண்டனை தரவேண்டும் என்கிறா குஹா. Democrats and Dissenters Ramachandra Guha Allen Lane Publishers பக்கங்கள்: 310 விலை: 699 கருப்பு வெள்ளை புகைப்படங்கள் காட்டும் வரலாறு! மே 13, 2017 ரகு ராய் இந்தியாவின் முக்கியமான புகைப்படக் கலைஞர்களில் ஒருவர். அறுபதுகளில் பொறியியல் வல்லுனராக வேலை பார்க்கும் வாய்ப்பை உதறிவிட்டுப் புகைப்படக் கலைஞராக வாழ்பவர். அவரின் லென்ஸ் வழியாக விடுதலைக்குப் பிந்தைய இந்தியாவைப் பார்க்கிற அனுபவம் எப்படிப்பட்டதாக இருக்கும்? அரிய ஆவணமாக அவரின் புகைப்படங்கள் திகழ்ந்திருப்பதை ‘Picturing Time’ நூல் புலப்படுத்துகிறது. ஒரு நெகிழ்வான பயணத்தின் சில கணங்கள் இங்கே […] […] நூலின் உள் முகப்பில் ஒரு மணல் புயல் வீசுகிற புகைப்படம் இருக்கிறது. ராஜஸ்தானில் நலத்திட்டங்களுக்கு எக்கச்சக்க நிதியை மத்திய அரசு ஒதுக்குகிறது. மாநில முதல்வர் வாரி சுருட்டுகிறார். என்ன ஆனது என்று களத்துக்கே சென்று விசாரிக்க இந்திரா காந்தி ராஜஸ்தான் வருகிறார். ஜனாதிபதி ஜெயில் சிங் இறந்து விட்டார் என்கிற செய்தி வருகிறது. இந்திராவின் ஹெலிகாப்டர் கிளம்புகிறது. அப்பொழுது எழும் மணல் புயல் மக்களின் கண்களில் தூவப்படுகிறது. காலங்களைக் கடந்தும் புகைப்படம் அரசியல், ஊழல், மக்கள் இடையே உள்ள உறவை பறைசாற்றுகிறது இல்லையா?   […] ஒரு போர் எளிய மக்களை என்னவெல்லாம் செய்கிறது? இந்த வங்கப்போரின் ஒற்றைப் புகைப்படும் கலங்கடிக்கும் […] இந்திராவை ‘ஊமை பொம்மை’ என்று ஆரம்பத்தில் கருதியவர்கள் எல்லாம் அசந்து போகும் அளவுக்கு அசுரப் பாய்ச்சல் காட்டினார். எவ்வளவோ பத்திகள் சொல்ல முடியாத அவரின் ஆதிக்கத்தை இந்தப் புகைப்படம் சொல்லிவிடுகிறது. […] இந்திராவின் ஆட்சியை எதிர்த்து முழங்கிய ஜெயபிரகாஷ் நாராயண் மீது பாயும் லத்தியை ரகு ராயின் கேமிரா உறைய வைத்த பொழுது […] அவசர நிலைக்குப் பிந்தைய தேர்தல் முடிவுகளுக்கு முந்தைய தினம் எடுக்கப்பட்ட படம். சஞ்சய்யின் கட்டாயக் குடும்பக் கட்டுப்பாட்டு திட்டத்தின் வாசகமான, ‘நாம் இருவர், நமக்கு இருவர்’ சுவரில் எழுதப்பட்டு இருக்கிறது. இந்திராவின் சுவரொட்டியை குப்பை அள்ளுபவர் அள்ளிக்கொண்டு போகிறார். ஒரு தலைவியின் வீழ்ச்சியின் ஆவணம் அது […] இந்தியாவின் முதலாவது ஐந்து நட்சத்திர பீல்டு மார்ஷலாக மானெக்ஷா உயர்த்தப்படும் கணத்தில் ஜனாதிபதி மீசையை முறுக்கி விளையாடுகிறார் […] அன்னை தெரசாவின் சேவை மிகுந்த, எளியவருக்கு இரங்கும் வாழ்க்கையைக் கடத்தும் புகைப்படம் நம்முடைய பாரம்பரிய சின்னங்களை எப்படிச் சிதைக்கிறோம் என்பதை உத்திர பிரதேசத்தின் இமாம்பராவை கொண்டு கவனப்படுத்துகிறார் ரகு ராய் போபால் விஷ வாயு விபத்தை ரகு ராயின் புகைப்படங்கள் அதன் வலி, இழப்பு, கண்ணீர், அநீதி, கொடூரம் ஆகியவற்றோடு உலகத்தின் முன் நிறுத்தின. குறிப்பாக இந்தக் குழந்தையின் புகைப்படம் போபால் அநீதியின் கருப்பு-வெள்ளை சாட்சியாக இன்னமும் இருக்கிறது   பாபர் மசூதி இடிப்புக்கு முந்தைய தினம் அயோத்தி எத்தகைய அமைதி பூமியாக இருந்தது என்கிற காட்சி மதவாதம் எப்படிக் குலைத்துப் போடுகிறது என வலியை தருகிறது […]   காங்கிரஸ் குறித்த மிகக்கூர்மையான அங்கதம் இந்த புகைப்படத்தில் இருக்கிறது புகைப்படங்கள் காப்புரிமை: ரகு ராய் ALEPH PUBLICATIONS RAGHU RAI PICTURING TIME விலை: 1500 ரூபாய் பக்கங்கள்: 192 அம்பேத்கர் – கடவுள்களை அழித்து ஒழித்தவர் – 1 மே 13, 2017 பேராசிரியர் பிரதாப் பானு மேத்தா இந்தியாவின் முதன்மையான அரசியல் அறிவியல் அறிஞர்களில் ஒருவர். ப்ரின்ஸ்டனில் முனைவர் பட்டம் பெற்ற அவர் ஹார்வர்ட், ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகங்களில் பேராசிரியராக பணியாற்றினார். தற்போது Centre For Policy Research மையத்தின் தலைவராக உள்ளார். ஆழமான பார்வைகளுக்கும், கூர்மையான கருத்துக்களுக்கும் பெயர் பெற்ற அவரின் ‘Ambedkar-Slayer of All Gods’ கட்டுரை அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழாக்கம் செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது: #அம்பேத்கர் அதிகாரம்-ஜனநாயகம், பொருளாதார வளம்-வன்முறை, இந்து மதம்-பாரம்பரியம், தேசியம்-நீதி, எல்லாவற்றுக்கும் மேலாக மெய்யியல் என்கிற பெயரில் நிகழ்த்தப்படும் நேர்மையற்ற, அபத்தமான சொற்பொழிவுகள் ஆகியவை குறித்த நம்முடைய பிரமைகளைக் கடுமையாகக் கேள்விக்கு உட்படுத்துகிறார். அம்பேத்கர் நம்மை நாமே பார்த்துக்கொள்ள அஞ்சுகிற கண்ணாடியாகச் சுட்டெரிக்கிறார். அவரின் இருப்பு நம்முடைய மோசமான மனசாட்சி, இறைநம்பிக்கை குறித்த உறுத்தலை தந்துகொண்டே இருக்கிறது.# தலைவர்களின் பிறந்தநாள்கள், வரலாற்று நிகழ்வுகளை நினைவுகூறும் நாட்கள் போன்றவை அப்போதைய நிலைமையை உணர்ந்து கொள்ளவும், வெற்றி, தோல்விகளைச் சீர்தூக்கிப் பார்க்கவும் வாய்க்கும் தருணங்களாகவே பெரும்பாலும் திகழ்கின்றன. இப்படிப்பட்ட அளவுகோல்கள், வெற்றி-தோல்விகளுக்குள் அண்ணல் அம்பேத்கரை அடக்க முயல்வது முந்திரிக்கொட்டைத்தனமானதும், முட்டாள்தனமானதும் ஆகும். மகத்தான தலைவர்கள் பலரைப் பொறுத்தவரை, ஒரு பண்பாட்டின் தர அளவுகோல்கள் லட்சியங்கள் ஆகியவற்றுக்கு ஏற்ப அவர்கள் எந்த அளவுக்கு வாழ்ந்தார்கள் என்றே நாம் அவர்களைச் சீர்தூக்கிப் பார்க்கிறோம். அண்ணல் அம்பேத்கரைப் பொறுத்தவரை இது தலைகீழான ஒன்று. ஒட்டுமொத்த பண்பாடே தன்னை மதிப்பிட்டுப்பார்த்துக்கொள்ள வேண்டிய அளவுகோல் அவரே. நம்முடைய ஆதர்சங்களால் அவரை எடை போட முடியாது. அம்பேத்கர் எனும் ஆளுமையின் ஆதர்சங்களால் தான் நம்மை நாமே மதிப்பிட்டுப் பார்க்க வேண்டும். அம்பேத்கருடன் உறவாடுவதென்பது அவரை மதிப்பிடுவதென்பதல்ல, நம்மை மதிப்பிட்டுக்கொள்வதும், நாம் ஏன் இன்னமும் அவரின் நீதிக்கான அறைகூவலை, பகுத்தறிவுக்கான வாதத்தை, அமைப்புகள் குறித்த ஆழமான கற்பனைகளைப் பற்றிக்கொள்ளவும், முகத்துக்கு நேராக எதிர்கொள்ளவும் மறுக்கிறோம் என்பதைப் புரிந்துகொள்வதும் ஆகும்.? அம்பேத்கர், நம்மை நாமே பார்த்துக்கொள்ள அஞ்சுகிற கண்ணாடி. அவரின் இருப்பு நம்முடைய மோசமான மனசாட்சியையும்,மோசமான நம்பிக்கைகளையும் பற்றி நமக்குத் தொடர்ந்து நினைவுறுத்துகிறது. அம்பேத்கர் குறித்து எழுதுவது மிகவும் கடினம்; இதற்குப் பல காரணங்கள் உண்டு. அறிவுத்துறையைச் சேர்ந்தவர்கள் அம்பேத்கர் குறித்துப் போதுமான அளவில் பங்களிப்பு செய்யவில்லை என்பது வருத்தம் தரும் உண்மையாகும். தன்னைக் குறித்த ஒரு நல்ல வாழ்க்கை வரலாறுக்காக அம்பேத்கர் இன்னும் காத்துக் கொண்டிருக்கிறார். மராத்தி மொழியில் மேற்கொள்ளப்பட்ட ஒரு சில முயற்சிகளைத் தவிர்த்து செறிந்த விளக்கங்கள் கொண்ட, அதிகாரப்பூர்வ அம்பேத்கர் படைப்புகள் இன்னமும் கனவாகவே உள்ளது. அவருடைய கடிதங்கள் இங்கும் அங்குமாகச் சிதறியும் தேடிக் கண்டுபிடிப்பதற்கு வெவ்வேறு அளவில் சிரமம் கொண்டதாக இருப்பதோடு, வெவ்வேறு வகையான அமைப்பு ரீதியான உரிமைப்போர்களில் சிக்கிக்கொண்டிருக்கின்றன.. அவருடைய 125-வது பிறந்தநாளுக்குச் செய்யப்படும் மிக மிக அவசியமாக மேற்கொள்ள வேண்டிய ஒரு பணி உண்டென்றால், அது அவரின் படைப்புகள், கட்டுரைகள், கடிதங்கள் ஆகிய அனைத்தையும் முழுமையாக, கச்சிதமாகத் தொகுப்பதே ஆகும். அவருடைய எல்லாப் படைப்புகளிலும் நீங்கள் மூழ்கி முத்தெடுத்தாலும் காந்தி, நேருவை நெருக்கமாக உணர்வதைப் போல அம்பேத்கர் என்கிற ஆளுமையை நீங்கள் கண்டுணர முடியாது. அறிவுத்துறை சார்ந்த ஆய்வுகள், அதிகாரபீடங்கள், பலத்த சமூக ஆதரவு, சமகால நினைவலைகள் காந்தி, நேரு குறித்த அறிவுத்துறை ரீதியான கட்டமைப்பை உறுதிசெய்வதற்கு வழிகோலின. அந்த அளவுக்குக் கண்டுகொள்ளப்படாமல் இருக்கும் அண்ணல் அம்பேத்கர் அலட்சியத் திரை தாண்டி பிரகாசிக்க வேண்டியவராக இருக்கிறார். […] அம்பேத்கரை ஓரங்கட்டப் பார்க்கும் எந்த முயற்சியும் சுடர்விட்டு எரியும் அவரின் அரசியல், அற ஆற்றலை அணைத்து விட முடியாது. அவர் காலத்தின் தலைவர்களில் அவர் மட்டுமே இன்று பல கோடி மக்களிடையே மதரீதியிலான முக்கியத்துவத்தைவிட மேலான முக்கியத்துவத்தைப் பெற்றிருக்கிறார். தலித் காலனிகளின் வழிப்பாதைகளில் அவர் கடவுளாக்கப்பட்டு, சிலைவைக்கப்பட்டு நினைவுகூரப்படுகிறார். சாதாரண அரசியல் தலைவர்களை மக்கள் கொண்டாடுவதோடு அதனை ஒப்பிட முடியாது. அவரைப் பற்றிய நினைவுகூரல் கடந்த காலங்களின் மதப் புரட்சிகளை ஒத்திருக்கிறது. ‘ஜெய் ஸ்ரீராம்’ என்பதைவிட அதிக வல்லமை கொண்ட சக்தியாக ‘ஜெய் பீம்’ எனும் தலித் இயக்க வழிபாட்டுத் தன்மைகொண்ட ‘அம்பேத்கர் வணக்க முழக்கம்’ திகழ்கிறது. அம்பேத்கர் இனி வெறும் தலைவர் இல்லை. அவர் தீர்க்கதரிசி, மீட்பர். தீர்க்கதரிசிகள் குறித்து எழுதுவது மிகவும் கடினம். அதற்கு ஒன்றுக்கொன்று நேரெதிரான இரு முரண்பாடான காரணங்கள் உண்டு. அம்பேத்கர் கண்மூடித்தனமான வழிபாடு, துதிபாடல் ஆகியவற்றைக் குறித்து எச்சரித்தார். அதைக் கருத்தில் கொண்டால் அவரை ஆதர்சமாகக் கொண்ட மக்களோடு விவாதத்தில் ஈடுபடவே முடியாது.. அவர்களைப் பொறுத்தவரை அம்பேத்கர், கருத்தாடல் நிகழ்த்துவதற்கானவர் என்பதைவிட ஒரு பீடமாகக் கருதப்படுபவர். அம்பேத்கர் குறித்து எழுதுபவர்களை ஒரு சந்தேகக் கண்ணோடு காண்பது நிகழ்கிறது. தலித் அல்லாதோர் அவரைப் பற்றித் தாங்கள் ஏன் எழுத வேண்டும் என்கிற மனதளவிலான விலக்கலை மேற்கொண்டிருக்கிறார்கள். பல்லாண்டுகளாக நமக்கு அசௌகரியமான உணர்வைக் கொடுத்துக்கொண்டிருந்த ஆளுமையாகத் திகழும் அவரைக் கண்டுகொள்ளாமல் தவிர்த்தோம். ஒரு பெருந்தலைவரை ஓரங்கட்ட சமூகம் முயன்றாலும், அவர் அதைத் தாண்டி வெல்லும் அவரது பரிவாரத்தில் இணைந்துகொள்ள முயல்கிறது. அம்பேத்கரை பயன்படுத்திக் கொள்வது கொள்ளும் முயற்சிகள் அவரை வசப்படுத்தி, கட்டுப்படுத்தும் முயற்சி என்றும் ஐயத்தோடு நோக்கப்படுகிறது. அம்பேத்கரைக் கடவுள் போல ஆக்குவது அவரின் புரட்சிகரமான கருத்துக்களை எதிர்கொள்ளாமல் தவிர்ப்பதற்கான எளிமையான, செய்கையே. அம்பேத்கரை பாஜக அபகரித்துக்கொள்வதற்கான முயற்சிகளில் இது வெளிப்படையாகத் தெரிகிறது. காங்கிரஸ் அவரை ஓரங்கட்டியதும், பாஜக அவரை அரசியல் லாபங்களுக்காகப் பயன்படுத்திக் கொள்ள முயல்வது நமக்குப் பலவற்றைச் சொல்லாமல் சொல்கின்றன. குறைந்தபட்சம் இப்பொழுதாவது அவர் குறித்து அதிகம் பேசுகிறார்கள். இப்படிப்பட்ட பெயரளவிலான போற்றுதல்கள் அவை பெரிதளவில் பயன் தராது என்பதை உணர்த்துவதோடு நின்றுவிடவில்லை. அம்பேத்கர் முன் நாம் தலைகுனிந்து வணங்கி நிற்பதன் மூலம் அவர் நம்முடைய ஆன்மாவைக் குத்திக் கிழிப்பதில் இலிருந்து தப்பிக்க எண்ணுகிறோம். […] பிரதமர் நரேந்திர மோடி அண்ணல் அம்பேத்கர் நினைவகத்துக்கான அடிக்கல் நாட்டும் விழாவில் அம்பேத்கரை தலித்துகளின் தலைவர் என்பதைத் தாண்டிக் காண வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். இது உண்மை என்பதில் ஐயமில்லை.நீதி, ஜனநாயகம் குறித்துக் கவலை கொள்ளும் யாரும் அம்பேத்கரின் அறிவாற்றலால் நிச்சயம் பயன்பெறுவார்கள். அதே சமயம் அம்பேத்கர் வெறும் தலித் தலைவர் அல்ல என்பது வெற்று முழக்கமாக இருக்கக் கூடாது. அம்பேத்கர் ஏன் நம் எல்லாருக்குமான தலைவர் என்கிற ஆழமான கேள்வியை எழுப்பிக்கொள்ளும் திறப்பாக இந்த முழக்கம் அமையவேண்டும். அம்பேத்கர் பல்வேறு உலகளாவிய பொதுஉண்மைகளைப் பேசினார். தன்னை யாரேனும் உரிமை கொண்டாட வேண்டும் என்றால் அதற்கு அவர்கள் தங்களைத் தகுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதில் அவர் தெளிவாக இருந்தார். என்றைக்குத் தலித் விடுதலையைச் சாதிக்கிறோமோ அன்றே அம்பேத்கரை உரிமை கொண்டாடுவதற்கு நாம் தகுதியானவர்களாக ஆவோம் அம்பேத்கர் தலித்துகளுக்கு மட்டுமல்ல, எங்களுக்கும் தலைவர் என்கிறோம் என்றால் அவரின் அறைகூவல்களுக்கு நேர்மையானவர்களாக, அவர் வைத்திருக்கக் கூடிய தேர்வுகளைத் திடமாக எதிர்கொள்பவர்களாக இருக்க வேண்டும். அம்பேத்கரை தலித் தலைவர் என்கிற முகம் மட்டுமே கொண்டவரில்லை என்பதன் மூலம் அவரின் புரட்சிக்குரலை மழுங்கடிப்பது சத்தமில்லாமல் சாதிக்கப்படுகிறது எனத் தலித்துகள் அஞ்சுவது பல சமயங்களில் நியாயமாகவே உள்ளது. அநீதிக்கு எதிராக அண்ணல் அம்பேத்கர் காட்டும் குத்திக் கிழிக்கும், தயவு தாட்சண்யமற்ற கோபத்தை மழுங்கடிப்பதன் மூலம் அம்பேத்கரோடு இணக்கமாகத் தலித் அல்லாதோர் உணர்கிறார்கள். அவரின் ஆங்கில எழுத்துக்களை விட மராத்தி மொழியில் இந்தக் கோபம் கூடுதலாகக் கொப்பளிக்கிறது. அவர் வாழ்நாள் முழுக்க அநீதியை அம்பலப்படுத்துவதை அயராமல் செய்தார். ஒரு செயல்நோக்கமோ, தேசமோ, அதிகாரமோ, கலாச்சாரமோ, செல்வமோ அநீதியைச் சற்று மூடி மறைக்க முயன்றாலும் அவற்றை ஏற்றுக்கொண்டு, அவற்றுக்கு அர்ப்பணிப்போடு இருக்க முடியவே முடியாது என்பதில் அம்பேத்கர் தெளிவாக இருந்தார். அருண் ஷோரி முதலிய விமர்சகர்கள் அம்பேத்கர் தேசியவாதி இல்லை என்கிறார்கள். ‘நீதியின் அடித்தளத்தின் மீது எழுப்பப்படாத ஒரு தேசம் தேசமே அல்ல’ என்றதில் அம்பேத்கரின் ஆளுமை பிரமிக்க வைக்கிறது. அவர், கிட்டத்தட்ட எல்லாச் சித்தாந்தங்களும் தலித்துகள் ஒடுக்கப்படுவதை மூடி மறைக்கும் சூழ்ச்சிகளாக நிகழ்ந்ததைக் கண்டு கொதித்தார். சித்தாந்தங்களின் நுண்மையான விவாதங்கள் எனும் பனிமூட்டத்தில், தலித் அடக்குமுறை எனும் உள்ளார்ந்த உணர்வு மூடி மறைக்கப்படுகிறது என்பதை அவர் புலப்படுத்தினார். தலித்துகள் மீது கட்டவிழ்த்து விடப்படும் மூர்க்கமான வன்முறை, தந்திரமான ஒடுக்குமுறை, தினசரி அவமானங்கள் ஆகியவற்றை நாம் கண்கொண்டு பார்ப்பதே இல்லை. தலித்கள் மீதான வன்முறைகளை அப்படி நடப்பதாக முழுமையாக யாரும் ஒப்புக்கொண்டதே இல்லை. அப்படியே ஒப்புக்கொண்டாலும், அந்த ஒப்புதல் வாக்குமூலத்தின் முக்கியத்துவத்தைப் பொய் வேடத்தாலும், தற்காப்புத் தொனியின் மூலமும் இருட்டடிப்பு செய்துவிடுவதை அவர் சுட்டிக்காட்டினார். காந்தியை கடுமையாகத் தாக்கிய அம்பேத்கர் அதைவிடக் கூடுதலான கடுமையோடு நேருவை நோக்கி முக்கியமான விமர்சனத்தை இப்படி வைத்தார்: இந்திய சமூகத்தின் மையமாக உள்ள இந்த வன்முறையின் இருப்பை நேரு ஒப்புக்கொள்ள மறுக்கிறார். ’நேருவை பாருங்கள். அமெரிக்காவை உருவாக்கிய தலைவர்களில் ஒருவரான ஜெபர்சனின் விடுதலை அறிவிப்பில் அவர் உத்வேகம் பெறுவதாகப் பெருமிதம் கொள்கிறார். இந்தியாவில் உள்ள ஆறு கோடி தீண்டப்படாத மக்களின் நிலை குறித்து எப்போதாவது சஞ்சலமோ, அவமானமோ நேரு அடைந்திருக்கிறாரா? அவரின் எழுதுகோலிலிருந்து ஊற்றெடுக்கும் இலக்கிய வெள்ளத்தில் எங்கேனும் அவர்கள் பற்றிய குறிப்புகள் இருக்கின்றனவா?‘. அம்பேத்கர் தலித் அல்லாத மக்களை நோக்கித் தொடர்ந்து ஒரு குற்றச்சாட்டை முன்வைக்கிறார். ’தாங்கள் எப்படிப்பட்ட அநீதியை மேற்கொண்டிருக்கிறோம் என்று அவர்கள் உணர்வதே இல்லை!’. இன்றுவரை நாமும் உணர்ந்ததாகத் தெரியவில்லை. […] அம்பேத்கரின் கோபத்தில் பழிவாங்கும் சாயல் எங்கும் இல்லாததால் அது ஆக்கப்பூர்வமானதாகத் திகழ்கிறது. அது கூர்மையான இலக்குக் கொண்ட சமூக விமர்சனமாகவே எப்பொழுதும் திகழ்கிறது. பழிக்குப் பழி எனப் பேசாத அம்பேத்கரின் பண்பை கொண்டே அவரின் புரட்சிகரமான முகத்தை மழுங்கச் செய்யும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இரண்டு சிக்கல்கள் எழுகின்றன. முதலாவது இறுதி இலக்கு, அதற்கான வழிமுறை ஆகியவற்றுக்கு இடையே உள்ள தொடர்பு குறித்த அம்பேத்கரின் ஆழமான அலசல். இது குறித்து விரிவாகப் பின்னர்க் காண்போம். சாதி, அமைப்பு ரீதியாக அடக்குமுறையை மேற்கொண்டு சமூகத்தில் தலித்துகளைத் தொடர்ந்து அடிமைப்படுத்துவதன் மீது நமக்கு எழவேண்டிய நியாயமான கோபத்தை, அம்பேத்கரிடம் பழிவாங்கும் உணர்ச்சி இல்லாததைக் கொண்டு தணித்துக் கொள்கிறோம் என்று தலித்துகள் குற்றஞ்சாட்டுவது சரியே ஆகும். காந்தியுடன் அம்பேத்கர் மேற்கொண்ட உரையாடல்களில் ‘தலித் விடுதலை என்பது தலித்துகளை அதிகாரம் மிக்கவர்களாக மாற்றுவதற்குக் குறைவானது.’ என்கிற கருத்தாக்கத்தால் காயப்பட்டார். தலித்துகள் மீதான அடக்குமுறையை ஆதிக்கச் சாதியினரின் பிரச்சினையாகக் காந்தி புரிந்துகொள்ள முயன்றது ஒருவகையில் தலித் அதிகாரத்தை மறுதலிக்கும் தந்திரமே. காந்தி-அம்பேத்கர் விவாதத்துக்குள் போவதற்கு இது தருணமில்லை. (இந்தத் தலைப்பில் மேலும் ஆர்வம் கொண்டவர்கள் காண்க: டி.ஆர்.நாகராஜின் சிறந்த நூல்: The Flaming Feet and Other Essays: The Dalit Movement in India தமிழில் : ‘தீப்பற்றிய பாதங்கள்’ மொழிபெயர்ப்பு: ராமாநுஜம்)). அம்பேத்கர் தலித்துகள் பேசாமடந்தைகளாக அநீதிகளை வாங்கிக்கொள்பவர்களாக இருக்க மாட்டார்கள் என அழுத்தி சொன்னது, எந்த அளவுக்குத் தலித்துகள் ஒடுக்கப்படுகிறார்கள் என்பதை நாம் மறப்பதற்கு வசதியாக உள்ளது. அரசமைப்பு சட்டத்துக்கு உட்பட்டு அரசியல் செய்ய வேண்டும் என்று அம்பேத்கர் வலியுறுத்தியதைக் கொண்டு, அரசமைப்புரீதியான மேலோட்டமான சலுகைகள் மட்டுமே தலித் விடுதலை என்கிற கயமையை மேற்கொள்கிறோம். நீங்கள் மனசாட்சி உள்ளவராக இருந்தால், அம்பேத்கரின் எழுத்துக்கள் உங்களை அதிர்ச்சியடைய வைக்கும், பேச்சற்றவர்களாக வெட்கித் தலைகுனிய வைக்கும். அம்பேத்கரை தங்களுக்குரியவராக அபகரிக்க முயலும் விந்தையான ரசவாதத்தின் மூலம், அசௌகரியமான உணர்வை ஏற்படுத்த வேண்டிய அம்பேத்கர் கதகதப்பைத் தருபவராக மாற்றப்பட்டுள்ளார். அவர் புனிதராகக் கொண்டாடப்பட வேண்டியவர் என்று,வரும்போது எல்லோரும் ஒருமித்த கருத்துடையவர்களாக இருக்கிறார்கள். உண்மையில், இந்தியாவின் ஆன்மாவின் மீது நடக்கும் மிக முக்கியமான அடிப்படையான மோதல்களின் மையமாக அவரே உள்ளார். அம்பேத்கர் – கடவுள்களை அழித்து ஒழித்தவர் – 2 மே 14, 2017 பேராசிரியர் பிரதாப் பானு மேத்தா இந்தியாவின் முதன்மையான அரசியல் அறிவியல் அறிஞர்களில் ஒருவர். ப்ரின்ஸ்டனில் முனைவர் பட்டம் பெற்ற அவர் ஹார்வர்ட், ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகங்களில் பேராசிரியராக பணியாற்றினார். தற்போது Centre For Policy Research மையத்தின் தலைவராக உள்ளார். ஆழமான பார்வைகளுக்கும், கூர்மையான கருத்துக்களுக்கும் பெயர் பெற்ற அவரின் ‘Ambedkar-Slayer of All Gods’ கட்டுரையின் இரண்டாவது பகுதி இது: அம்பேத்கர் – கடவுள்களை அழித்து ஒழித்தவர் – 1 அம்பேத்கர் பல்வேறு தளங்களில் உங்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்துகிறார். அதிரவைக்கிறார். அவர் தலைமுறையின் எல்லாத் தலைவர்களில் அம்பேத்கருக்கு இருந்த தெளிவு ஒப்புமை இல்லாத புத்துணர்வோடு திகழ்கிறது. தரவுகள், தர்க்கம் ஆகியவற்றை அடுக்குவதில் மதிநுட்பம் மிகுந்தவராக, ஈடிணை இல்லாதவராக அவர் திகழ்கிறார். நேருவை போல அவர் தன்னுடைய வாதங்களில் எப்போதும் உணர்ச்சிவசப்படுபவராக இல்லை. அவரின் முனைவர் பட்ட ஆய்வுகளிலும் இது புலப்படுகிறது. அசரவைக்கும் அளவுக்குப் பொருளாதார ஆய்வுகள் மேற்கொண்ட அவர், சட்டம் ஆக்குபவராகப் பம்பாய் சட்டசபையிலும், அரசியல் நிர்ணய சபையிலும் செயல்பட்ட அம்பேத்கர் அங்கேயும் இப்படிப்பட்ட பிரமிக்க வைக்கும் அறிவுபூர்வமான வாதங்களை முன்வைத்தார். அவரின் புலமை, பேரறிவு, அடுக்கும் மேற்கோள்கள் ஒப்பிட முடியாதவை. அவரின் ஓயாத தர்க்கம், முழுமையான தெளிவுக்கு ‘Thoughts on Pakistan’ நூலை வாசித்துப் பாருங்கள். இன்று வரை பாகிஸ்தான் குறித்த மிக மிகத் தெளிவான, சமரசங்கள் செய்து கொள்ளாத பார்வையை அந்நூல் வாரி வழங்குகிறது. இந்த நூலின் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளை, தங்களுக்கு வசதியாக உள்ளவற்றை மட்டும் இந்துத்துவர்கள், பாகிஸ்தான் ஆதரவாளர்கள் மேற்கோள் காட்டுவது வழக்கமாக உள்ளது. எனினும், அந்நூல் இரு தரப்பின் தர்க்கத்திலும் உள்ள கோளாறுகள், அபத்தங்களை அம்பலப்படுத்துகிறது. நம்முடைய போலித்தனங்களை அம்பேத்கர் தொடர்ந்து புலப்படுத்திக் கொண்டே இருப்பதால் அவர் அசௌகரியம் ஏற்படுத்துபவராக உள்ளார். அவர் எப்போதும் அநீதியின் உண்மை முகத்தை நமக்கு நினைவுறுத்தியபடியே இருந்தார் என்ற மேலோட்டமான அர்த்தத்தில் நான் சொல்லவில்லை. நாம் பின்பற்றும் எந்தச் சித்தாந்தத்தையும் எடுத்துக்கொண்டு, அதனை எப்படி நாம் முழுமையாகப் பின்பற்றுவதில்லை என்று புலப்படுத்தி நம்மைச் சங்கடப்பட வைக்கிறார் என்பதே நான் சொல்வதன் அர்த்தம். […] அம்பேத்கர் காந்தி மீது வைக்கும் மிக முக்கியமான குற்றச்சாட்டு அவர் தலித்துகளுக்கு நியாயம் செய்யத் தவறிவிட்டார் என்பது மட்டுமல்ல. அம்பேத்கரின் பார்வையில் தலித்துகளின் கோரிக்கைகளை மழுங்கடிக்கும் அறமற்ற செயல்களுக்குத் துணை போகும் கருவியாக அகிம்சையைக் காந்தி பயன்படுத்தினார். ஆழமாக நோக்கினால் அகிம்சையின் கொள்கைக்குக் காந்தி நியாயம் செய்யத் தவறிவிட்டார். காந்தியின் செயல்பாட்டு முறைகளின் மையமாக நம்பமுடியாத உளவியல் ரீதியான கட்டாயப்படுத்தல் இருந்தது. இந்தக் கட்டாயப்படுத்துதல் என்பது கணிசமாக உள்முகம்நோக்கி, ஒருவரின் ஆன்மாவை நோக்கித் திருப்பப்படுவது என்று சொல்லும் அதீத தைரியமும் காந்திக்கு இருந்தது. இந்தக் குற்றச்சாட்டில் கொஞ்சம் உண்மை உண்டு என்று காந்தி நிச்சயம் ஒத்துக்கொண்டிருப்பார். அரசமைப்புக் கலாச்சாரத்தில் சத்தியாகிரகம் என்பது ஒருவர் தான் உண்மை என்று நம்புவதன் மீது சுயமோகம் கொண்டு, சமூகத்தின் பல்வேறு கருத்துநிலைகளை அங்கீகரிக்க மறுக்கும் வன்முறை என்பது கவனத்தில் கொள்ள வேண்டிய குற்றச்சாட்டாகும். அநீதி ஏற்படும்போது அரசமைப்பு சட்ட முறைகளில் நம்பிக்கை கொண்டு செயல்பட வேண்டும் என்கிற அம்பேத்கரின் எண்ணம், காந்தியின் அகிம்சை என்ற கருத்தாக்கத்துக்கு இணையாகப் புரட்சிகரமாகக் கருதப்பட வேண்டியது. மிக ஆழமான அடக்குமுறையைத் துப்புரவாகத் துடைத்து எறியும் வன்முறையின் மூலம் எதிர்கொள்ளலாம் என்று அறைகூவல் விடுக்காமல் இருப்பதற்குச் செறிவான, வேறு வகையான தைரியம் தேவைப்படுகிறது. பல்வேறு வகைகளில், காந்தியை விட இந்தியாவை அதிகமாக அகிம்சையோடு பிணைத்தவர் அண்ணல் அம்பேத்கரே ஆவார். தலித்துகளை அரசமைப்புச் சட்ட முறைகளின் படி இயங்க வேண்டும் என்று ஒப்புவித்ததன் மூலம் அவர் அதை நிகழ்த்தினார். இது தங்களின் கைகளைக் கட்டிப்போட்டிருப்பதாகச் சில தலித் புரட்சியாளர்கள் முணுமுணுக்கிற அளவுக்குத் தாக்கம் செலுத்தியுள்ளது. நேருவின் மீது மிகக் கடுமையான குற்றச்சாட்டை அம்பேத்கர் முன்வைக்கிறார். அவரின் ‘கண்டடைந்த இந்தியா’ நூலில் அநீதியின் மீது ஒரு வகையான திரை சத்தமில்லாமல் போர்த்தப்படுவதாக அம்பேத்கர் சுட்டிக்காட்டுகிறார். பிராமணியத்தைத் தூக்கிப் பிடிப்பவராக நேரு திகழ்ந்தார் என்று அம்பேத்கர் அடிக்கடி குற்றஞ்சாட்டுகிறார். சமூகத்தின் மீது பொருளாதார வளம் எப்படிப்பட்ட ஆழமான மாற்றங்களை உருவாக்கும் தாக்கங்களைச் செலுத்தும் என்பதை உணர்ந்த வெகு சில தலைவர்களில் ஒருவராக அம்பேத்கர் திகழ்ந்தார். துறவு என்பது ஆதிக்கச் சாதியினருக்கு அர்த்தமுள்ள செயல்பாடாக இருந்தாலும், எதுவுமே இல்லாமல் அல்லலுற்று வாழும் ஒடுக்கப்பட்ட மக்களை அப்படித் துறவு உணர்வோடு செயல்படச் சொல்வது மிக மோசமான நையாண்டி என்று கருதியதால்தான் அம்பேத்கரால் அப்படி இருக்க முடிந்தது. இந்தியாவை நவீனமயப்படுத்த முயன்ற அனைவரும் கருத்தில் கொள்ளத் தவறிய பொருளாதார வளம் பற்றிய மிக முக்கியமான, தனித்த அம்பேத்கரின் சமூகவியல் பார்வையாலே இது சாத்தியமானது. […] அம்பேத்கரின் மிக முக்கியமான கட்டுரைகளில் ஒன்று, பெர்ட்ரண்ட் ரஸ்ஸலின் Reconstruction of Society கட்டுரையை அவர் விமர்சித்து எழுதிய மறுப்புக்கு கட்டுரை. நிலச்சுவான்தார் குடும்பத்தில் இருந்து வந்த ரஸ்ஸல் பணத்தின் மீதான மோகத்தை, சலிப்பூட்டும் விதத்தில் விமர்சிப்பதை அம்பேத்கர் கடிந்துகொண்டார்.. "ரஸ்ஸல் ‘பணத்தின் மீதான மோகத்தின் தீமைகள்’ என்று காலங்காலமாகச் சொல்லப்பட்டதைத் திரும்பிச் சொன்னதன் மூலம் தன்னுடைய தரப்பின் வரலாற்று மதிப்புக்கு எந்த விதமான தத்துவார்த்தரீதியிலான அழுத்தத்தையும் கூட்டவில்லை… பணத்தின் தேவையைக் கருத்தில் கொண்டு ஆய்வு செய்யாமல் பணத்தின் மீதான மோகத்தை ரஸ்ஸல் விமர்சிப்பதால் இந்தத் தவறான கருத்தாக்கம் ஏற்பட்டுள்ளது. தெளிவான அறிவு கொண்டவர், மனத்தளவில் பணத்தின் மீது மோகம் கொள்ள மாட்டார் என்று வாதிடலாம். பணத்தின் மீதான காதல் ஏதோ ஒன்றுக்கான ஆசையிலிருந்தே கிளைக்கிறது …அந்த ஆசைப்படும் பொருளுக்கான தேவையைப் பொறுத்தே பணத்தின் மீதான மோகம் நன்மையைத் தருமா, அவமானத்தைத் தருமா என்பதைச் சொல்ல முடியும்…பணத்திற்கான மோகத்தின் மூலம் ஏற்படும் தேடல் கூடப் பல்வேறு வகையான குணங்களை ஏற்படுத்தக்கூடும்.’ என்று அவர் எழுதினார். பணத்துக்கும் பல்வேறு வகை, குணங்களுக்கும் இடையிலான கூட்டணி உள்ளது, அப்படிக் கூட்டணி இல்லாததால் பல விஷயங்கள் இல்லாமல் போய் முற்றிலும் ஒரே மாதிரியாக இருப்பது நிகழ்கிறது என்பது அம்பேத்கரின் வாதம். இந்த வாதம் ஆழமில்லாத அறவியல்வாதமானது பேராசை குறித்து மேற்கொள்ளும் ஆய்வுகளை விட ஏற்புடையதாக உள்ளது. ஆகவேதான் அம்பேத்கர் நம்மைச் சங்கடப்படுத்துகிறார். காந்தியை விட அரசியலமைப்புச் சட்ட தர்க்கத்தை அகிம்சையோடு அம்பேத்கர் சிறப்பாக இணைக்கிறார், நவீனத்துவத்தைப் பன்மைத்தன்மையோடு உள்ள தொடர்போடு நேருவை விடச் சிறப்பாக ஒருங்கிணைக்கிறார் ; அவரின் வரலாற்றுப் பிரக்ஞையை இருள் அடர்ந்த, தீமை மிகுந்த வெளிகளை ஆய்வுசெய்வது நோக்கி யாரைக் காட்டிலும் தீவிரமாக அவர் செலுத்துகிறார் இப்படி ஆய்வு செய்ததன் மூலம் நம் நம்பிக்கைகளுக்கு ஏற்ப நாம் கொண்டிருந்த சார்புகளின் போதாமைகளை அவர் அம்பலப்படுத்தினார். நேருவின் நம்பிக்கை – பகுதி 2 ஜீன் 30,2017 […] நேருவின் நம்பிக்கை-சுனில் கில்னானி இந்தியாவின் சிந்தனையாளர்கள், அரசியல் தலைவர்கள் முதலானோர் 19-ம் நூற்றாண்டின் இறுதியிலிருந்தே ஓர் அடிப்படையான சவாலை எதிர்கொள்ளவேண்டியிருந்தது. நவீன காலங்களில் இந்தியர்களை இணைப்பது எப்படி? அவர்கள் அனைவருக்கும் ஏற்புடைய, ஒப்பான அறங்கள், கடமைகள் ஆகியவற்றை எப்படிக் கண்டடைவது… அதன்மூலம் இந்தியர்களுக்கான பொதுவாழ்க்கையை எப்படி வரையறுப்பது ஆகியவையே அவர்கள் முன்னால் சவால்களாக எழுந்து நின்றன. இந்தச் சவால்கள் நம்முடைய அறிவியக்க, அரசியல் வரலாற்றின் ஆழமான, பரந்துவிரிந்த தேடல்களாக இருந்தன. எனினும், இந்தியர்களை ஒரு பொதுவான அடையாளத்துக்குள் ஒன்றுசேர்க்கும் தேசியத்தின் கதைக்குள் இந்தச் சவால்மிகுந்த முயற்சிகள் அடங்கிவிட்டன. ஆங்கிலேய ஆதிக்கத்துக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்த தேசியத்தின் தேடல், முற்றுப்புள்ளியை நெருங்கியதும், வேறுசில கேள்விகள் நம்மைத் தொல்லைப்படுத்த ஆரம்பித்தன. அரசியல் வாழ்க்கை எனப்படும் பொதுவாழ்க்கையை எப்படி உருவாக்குவது, எப்படி அறம் சார்ந்த அரசியல் வாழ்க்கையைத் தோற்றுவிப்பது, எப்படி அதை நிலைநிறுத்துவது என்கிற அடிப்படையான, இயல்பான கேள்விகள் எழும்பின. இந்தக் கேள்விகளின் வரலாற்றை நாம் மீண்டும் கட்டியெழுப்பவேண்டியுள்ளது. நாம் தாகூர், காந்தி, நேரு ஆகியோரின் சுயவிமர்சனங்களில், அவர்கள் தங்களுக்குள் மேற்கொண்ட பெரும் விவாதங்களில், ஒரு நவீன அறநெறிக்கான தேடலைக் காண முடிகிறது. (இந்தப் பட்டியலில் எண்ணற்ற தலைவர்களின் கருத்துகளைச் சேர்த்துப் பேச முடியும். நான் எடுத்துக்கொண்ட தலைப்புக்கு இவர்கள் மூவரும் முக்கியமானவர்கள் என்பதால், அவர்களின் கருத்துகளை மட்டும் கணக்கில் எடுத்துக்கொள்கிறேன்.) ஓர் அரசாங்கத்தின் குடிமக்களாகப் பொதுவாழ்க்கைக்கும், அரசியல் வாழ்க்கைக்கும் இந்தியர்கள் ஒப்புக்கொடுக்கப்பட்ட, தள்ளப்பட்ட சூழ்நிலையில், அவர்கள் இந்தத் தேடல்களை மேற்கொண்டார்கள்; இந்த அரசியலோடு தொடர்புடைய பொதுவாழ்க்கைக்கான கொள்கைகள், நடைமுறைகள் ஆகியவற்றைக் கண்டறிய முயன்றார்கள்; பொதுவாழ்வில் பகுத்தறிவுக்கான ஒரு மரபை அவர்கள் உருவாக்கினார்கள்; இந்த மரபில் அறநெறிகள், ஒழுக்கங்களுக்கான ஓர் அறிவுவெளியை உருவாக்கினார்கள். இப்படிப்பட்ட அறங்கள், ஒழுக்கங்களால் உண்டாகும் அரசியல் தேர்வுகள்குறித்து விவாதித்தார்கள்; மறு ஆய்வு செய்தார்கள்; முடிவெடுத்தார்கள். இந்த விவாதங்களின் மிகச்சிறந்த தருணங்களில் இதன் தேசியம், தேசியவாத சிந்தனையின் குறுகிய எல்லைகளைக் கடந்தன. இப்படிப்பட்ட சிறப்புவாய்ந்த விவாதங்களை ஏன் நினைவுகூர வேண்டும்? அவர்களின் அறிவார்ந்த லட்சியங்கள், குறுகிய மனப்பான்மையோடு மட்டும் இந்திய தேசியத்தையோ, அதன் அடையாளத்தையோ அணுகவில்லை என்பதைப் புலப்படுத்துவது அவசியமாகிறது. அவர்கள் பெருங்கேள்விகளை எழுப்பினார்கள்; அந்தக் கேள்விகளுக்கு லட்சியவாதம் மிக்க பதில்களை எதிர்பார்த்தார்கள். அறநெறி சார்ந்த கேள்விகளை எழுப்பிக்கொண்டபோது, அவர்கள் ‘ஓர் இந்தியன் என்ன செய்ய வேண்டும்’ என்றோ, ‘ஓர் இந்துவோ, முஸ்லிமோ என்ன செய்ய வேண்டும்’ என்றோ கேள்விகள் எழுப்பவில்லை. ஓர் அறநெறிமிக்க மனிதன் என்ன செய்ய வேண்டும்… அறத் திறன்மிக்க ஒரு மனிதன், எதைச் செய்வது சரியாக இருக்கும் முதலிய கேள்விகளை அடுக்கினார்கள். இப்படிப்பட்ட உலகப் பார்வையைக் கொண்டிருந்தாலும், தாங்களும், தங்கள் சகாக்களும் காலனிய ஆட்சியால் அடிமைப்பட்டிருக்கிறோம் என்கிற சூழலையும், பழைமைவாதம் மக்களைப் பிடித்திருக்கிறது என்கிற நெருக்கடியான நிலைமையையும் உணர்ந்திருந்தார்கள். இதனால், அவர்களின் மகத்தான கனவுகளைச் செயல்படுத்துவது எளிமையான ஒன்றாக இருக்கவில்லை. இப்படிப்பட்ட இடர்ப்பாடுகள் இருந்தாலும், அவர்கள் விசாலமான கண்ணோட்டங்களை நோக்கிய தேடலை நிறுத்திவிடவில்லை. தற்கால அரசியல், அறம் சார்ந்த சிந்தனைகளில் மகத்தான பெருங்கனவுகளும், உடனடித் தேவைகளும் பிரித்தே கையாளப்படுகின்றன. இவர்களோ, உலகத்துக்கான லட்சியங்களை, தாங்கள் வாழும் தனித்துவமான சூழல்களோடு இணைத்துக்கொண்டு எப்படி இயங்குவது எனத் தொடர்ந்து போராடினார்கள். தாகூர், காந்தி, நேரு வெவ்வேறு வகையான, வேறுபட்ட கருத்துகளைக்கொண்டிருந்தார்கள் என்பதையோ, அவர்கள் அடிக்கடி முரண்பட்டார்கள் என்பதையோ மறுக்கவில்லை. அதே சமயம், இந்திய வரலாற்றில் இந்தியர்களுக்கும், இந்தியாவுக்கும் நவீன அறநெறிகளை அவர்கள் ஒருங்கே அறிமுகப்படுத்த முயன்றார்கள். ஓர் அறம் சார்ந்த, முழுமையான வாழ்க்கையை நவீன காலத்தில் […]எப்படி வாழ்வது… அறநெறிக்கும், தனிநபர் அடையாளத்துக்கும் என்ன தொடர்பு… அறநெறிசார்ந்த எப்படிப்பட்ட பொதுவிதிகளை ஏற்பது… பொதுமக்களின் செயல்பாட்டுக்கான அற வடிவங்களை உருவாக்க எதை நாடுவது… அந்த அற வடிவங்களை எங்கே தேடுவது… நவீன அரசியலின் அமைப்பான அரசு, எப்படி அறநெறிப் பாதையிலிருந்து விலகாமல் அறக் கனவுகளை எட்டுவது என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார்கள். அந்தத் தேடல்களை நோக்கித் தங்களுடைய அறிவாற்றலைச் செலவிட்டார்கள். இப்படிப்பட்ட பொதுவான சவால்கள், இக்கட்டுகள் நோக்கித் தங்களுடைய பார்வையைச் செலுத்தினார்கள். காந்தி, தாகூர், நேரு ஆகிய மூவரும், இந்தியாவில் அரசியல் எப்படி மேலும்மேலும் முக்கியத்துவம் பெறப்போகிறது என்பதையும், பொதுவாழ்க்கையில் வலிமையான ஊடகமாக அது எப்படி மாறப்போகிறது என்பதையும் உணர்ந்தார்கள். அரசியலில் தொடர்ந்து தலையிடுவதையும் செயல்படுவதையும் இவர்கள் மூவரும் மேற்கொண்டார்கள். எனினும் அரசியல், மக்களின் வாழ்க்கையில் நீக்கமற கலக்கும்போது, பொதுவாழ்வு ஊழல்மயமாகும் என்பதை அறிந்திருந்தார்கள். அரசியல் வெறும் சொத்துக் குவிக்கிற கேவலமான தேடலாக மாறக்கூடும் என்பதையும், அது பேரழிவைத்தரும் விளைவுகளை உண்டாக்கும் என்பதையும் உணர்ந்தே இருந்தார்கள். மதம் பொதுவாழ்வைவிட்டு விலகிக்கொண்டிருந்த மேற்கிலும், பல்வேறு வகையான மத நம்பிக்கைகள்மிக்க இந்தியாவிலும் எந்த ஒரு குறிப்பிட்ட மதமோ, நம்பிக்கை முறையோ அனைவரும் ஏற்கும்படியாக இருக்காது என்கிற புரிதல் அவர்களுக்கிருந்தது. பல்வேறு நம்பிக்கைகள்கொண்ட எல்லாரும் ஒரே அறநெறியைப் பகிர்ந்துகொள்ள மாட்டார்கள் என்பதையும் இவர்கள் உணர்ந்திருந்தார்கள். மதத்தின் தாக்கம் குறைவதாலோ, பல்வேறு மதங்களை மக்கள் பின்பற்றுவதாலோ, ஒரு பொதுவான, அனைவரும் ஏற்கும் மத நம்பிக்கை சாத்தியமில்லை. மதம், தன்னுடைய மரபான சிந்தனைகளோடு அனைவருக்கும் உகந்ததாகத் தன்னை அறிவித்துக்கொள்ள முடியாது. அறம் சார்ந்த நம்பிக்கைகள் சார்புத்தன்மை கொண்டதாக இருந்தது. இதனால், தொடர்ந்து மோதல்கள் ஏற்பட்டுக்கொண்டே இருந்தன. அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய, புதுமைமிக்க அறவழக்கங்கள், பொறுப்புகளைக் கண்டுபிடிக்கவேண்டியிருந்தது. இதை நியாயமாகவும், அனைவருடனும் உரையாடுவதன் மூலமே சாதிக்க முடியும். இப்படி உரையாடுவதன்மூலம் அனைவரும் ஏற்கக்கூடியவை எவை… பலதரப்பும் பொருந்திப்போகும் அற அர்ப்பணிப்புகள்  எவை… இவற்றை எப்படி மேலும் விரிவுபடுத்துவது ஆகியவைகுறித்த தெளிவு, இப்படிப்பட்ட விவாதங்களால் மட்டுமே சாத்தியம். இதுவரை நான், தாகூர், காந்தி, நேரு ஆகியோருக்கு இடையே ஒற்றுமைகள் இருப்பதாகக் கருதிக்கொண்டு பேசினேன். இதன்மூலம் அவர்கள் அனைவரையும் ஒரே பொதுப் பகுத்தறிவு மரபின் அங்கமாகக் காட்டினேன். இப்போது அவர்கள், எப்படித் தங்களுக்குள் முரண்பட்டார்கள் என விளக்கப்போகிறேன். இதன்மூலம், நேருவின் நம்பிக்கை எப்படித் தனித்துவமானது என்கிற புரிதல் ஏற்படலாம். தாகூர், காந்தி மற்ற இந்தியர்களிடமிருந்து ஒரு முக்கியமான புள்ளியில் மாறுபடுகிறார்கள்; மதத்தை, அதன் மரபான பார்வையில் அப்படியே ஏற்றுக்கொண்டால், அது அனைவரும் ஏற்கக்கூடிய நம்பிக்கைக்கோ, அறநெறிக்கோ அடிப்படையாக அமையமுடியாது என உணர்ந்திருந்தார்கள். இதனால், காந்தி மீண்டும் மீண்டும் மத மரபுகளைப் பெருமளவில் போராடித் தகர்த்தார். அவற்றைத் தன்னுடைய தொடர் முயற்சிகளால் மறுகட்டமைப்புச் செய்தார். இதனால் ஏற்பட்ட அற உணர்வை மரபான இந்து மதத்தின் பார்வையில் புரிந்துகொள்ள முடியாது. தன்னுடைய தேடலை இஸ்லாம், கிறிஸ்துவம், இந்து மதத்தின் நாட்டார் வடிவங்கள் நோக்கிச் செலுத்தியதன்மூலம், அவைகுறித்து திறந்தமனதோடு அணுகியதன்மூலம் தன்னுடைய தனித்துவமான அறநெறிப் பாதையைக் காந்தி உருவாக்கினார். அவரின் நம்பிக்கை, மற்ற மத நம்பிக்கைகளைப் பெருமளவில் மரியாதையோடு அணுகி, இவற்றையும் தாண்டிப் பயணித்தது. தாகூர், பக்தி மிகுந்த பழைமைவாதியின் மதமாகவும் அல்லாமல், ஓர் ஆன்மிகவாதியின் மதமாகவும் அல்லாமல் ‘கவிஞனின் மதம்’ ஒன்றைத் தோற்றுவித்தார். இது, மத மரபுகளின் உள்ளேயும், வெளியேயும் பயணித்துத் தனித்துவமான ஆன்மிக நம்பிக்கையை உருவாக்க முயன்றது. இந்த மதத்தை, ‘மனிதனின் மதம்’ எனத் தாகூர் அழைத்தார். இது, மனிதாபிமானத்தை நம்புவதாக, மனிதனின் ஆற்றல்களின் மீது நம்பிக்கைவைப்பதாக இருந்தது. அதேபோல அனைத்தையும் கடந்த கலையின், அழகியலின் ஆற்றலை நம்புவதாக இருந்தது. பகுத்தறிவின் ஆற்றல் என்ன, அதை எந்த அளவுக்கு மதிப்பது, அதன் தேவை என்னவென்பது குறித்து காந்தியும், தாகூரும் மோதிக்கொண்டார்கள். இந்த மோதல், பீகார் நிலநடுக்கத்தில் (1934) தெளிவாக வெளிப்படுகிறது. காந்தி, ‘பீகார் நிலநடுக்கத்தைத் தீண்டாமை என்கிற பாவத்தைத் தொடர்ந்து பின்பற்றியதற்காக, மக்களுக்கு இறைவன் கொடுத்த தண்டனை’ என நாட்டு மக்களிடம் விளக்கம்கொடுத்தார். ‘இதைப் பெருந்தவறு’ எனத் தாகூர் கருதினார். இறைவன் நல்லவர், சமூகம் தீய செயல்களில் ஈடுபடும்போது ,அவர் தண்டிப்பவர், என நம்பிக்கொண்டு காலம்காலமாக நடக்கும் இந்த விவாதத்தின்போது தாகூர் இப்படி எழுதினார்: ‘தங்களைப் போன்ற சக மனிதர்களிடம் இருந்து வெகுதூரம் தள்ளி நிற்பவர்களை இன்னமும் கடுமையாகக் கண்டிக்க வேண்டும். இந்த நிலநடுக்கத்தில், அப்பாவி குழந்தைகளும், தீண்டப்படாத சமூகத்தைச் சேர்ந்த மக்களும் மடிந்திருக்கிறார்கள். ஒரு நாகரிகம் மிகுந்த மனிதன் இப்படிக் கண்மூடித்தனமாக விளக்கங்கள் தரமாட்டான்.’ மதத்தின் பெயரில், இறைவன் என்கிற சக்தி மக்களைக் கொல்லும் பயங்கரவாதத்தை மேற்கொள்ளலாம் என்கிற அங்கீகாரத்தைக் காந்தியின் பார்வை தருவதைத் தாகூர் கண்டார். இயற்கையாக நடைபெறும் நிகழ்வுகளை விளக்க பகுத்தறிவும், அறிவியலுமே பிரதானம் எனத் தாகூர் கருதினார். காந்தியைவிட,  தாகூர் பகுத்தறிவுக்குக் கூடுதல் முக்கியத்துவம் தந்தார். அதேசமயம் காந்தி, மரபுகளை… பகுத்தறிவை கூர்மையான ஆய்வுக்கும், விமர்சனத்துக்கும் தொடர்ந்து உட்படுத்தினார் என்பதையும் நினைவில்கொள்ள வேண்டும். பகுத்தறிவை மதிப்போடு அணுகியவகையில் தாகூர், காந்தியைவிட நேருவுக்கே நெருங்கியவராகத் தோன்றுகிறார். தாகூர் இறந்து சிலகாலம் கழித்து அகமது நகர் சிறையில் இருந்து கிருஷ்ண கிருபாளினிக்கு நேரு எழுதிய கடிதத்தில், ‘காந்தி, தாகூரைப்போல வேறு யாரும் முரண்பட முடியாது’ என எழுதினார். அதேசமயம், அவர்கள் இருவரும் ‘ஒரே ஊற்றின் ஞானம், சிந்தனை, கலாசாரம் ஆகியவற்றில் இருந்து உத்வேகம் பெற்றார்கள்’ என்றும் நேரு பதிவுசெய்தார். தனிப்பட்ட அளவில் தாகூரைவிட காந்தியிடமே நேரு கூடுதல் பிணைப்பு, நெருக்கம்கொண்டிருந்தார். நேருவுக்குக் காந்தி தந்தையைவிட மேலானவர். ஒருவகையில், காந்தி நேருவின் வாடகைத் தாய் போன்றவர். ஆனால், அறிவுரீதியாக இந்த நெருக்கம் தலைகீழானது. ‘ஆன்மிகரீதியாக நான் குருதேவுடன் (தாகூருடன்) நெருக்கமாக உணர்கிறேன்’ என்றார் நேரு. தாகூர் இறந்த செய்தியைக் கேள்விப்பட்டதும் நேரு, ‘அவரின் வாழ்க்கை மீதான காதலை, எல்லாவற்றிலும் அழகைக் கண்டுணர்வதைக் காதலித்தேன். நான் அவரை வழிபடுபவன்’ என எழுதினார். […] அறிவியலின்​, அறிவியல் சார்ந்த தேடல்களின் எல்லைகளைத் தாகூர் கூர்மையாக உணர்ந்திருந்தார். அறிவியல் எண்களிலும், புள்ளிவிபரங்களிலும் கேள்விகளை அணுகுவதையும், அதன் தர்க்கம் நிகழலாம், நிகழாமலும் போகலாம் என்று நிகழ்தகவாக (probabilistic) இருப்பதையும் அவர் கண்டார். அறம்சார்ந்த கேள்விகள் இப்படி, அப்படி என்று தள்ளாடுகிற பதில்களை ஏற்காது, அவை துல்லியமாக இருக்க வேண்டும் என்று தாகூர் உணர்ந்திருந்தார். நேருவைப் பொறுத்தவரை, அறம்சார்ந்த வாழ்க்கை தொடர் பயணம். பகுத்தறிவின் துணையோடு அதனைத் தொடர்ந்து சோதனைக்கும், மறு ஆய்வுக்கும் உட்படுத்திக்கொண்டே இருக்க வேண்டும். பேராசிரியர் சுனில் கில்னானி, இந்தியாவின் முன்னணி அரசியல் அறிஞர். அவருடைய, ‘IDEA OF INDIA’ நூல் இந்தியாவைப் புரிந்துகொள்ள மிகச் சிறந்த நூல் என்று உலகம் முழுக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. இங்கிலாந்தின் தொன்மைமிகுந்த கிங்ஸ் கல்லூரியில் பேராசிரியராக உள்ளார். அவர், தீன்மூர்த்தி பவனில் 2002-ல் நிகழ்த்திய ‘நேருவின் நம்பிக்கை’ எனும் உரை மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு, நேருவின் நினைவு தினத்தை ஒட்டி வெளியிடப்படுகிறது. நேருவின் நம்பிக்கை-பகுதி 3 ஜீலை 1,2017 […] நேருவின் நம்பிக்கை-சுனில் கில்னானி  பகுத்தறிவுக்கு பல்வேறு பக்கங்கள் உண்டு என்பதை நேரு உணர்ந்து இருந்தார். மனித வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களை பகுத்தறிவு சூழ்ந்து இருக்கிறது என்றும் அவர் அறிந்திருந்தார். எனினும், தன் வாழ்நாள் முழுக்க பகுத்தறிவையே நேரு சார்ந்திருந்தார். பகுத்தறிவின் போதாமைகள் குறித்து அவர் எப்போதும் கவலைப்பட்டார். பகுத்தறிவைக் கொண்டு இயங்கும் அறிவியல், அரசியல், சமூக செயல்பாடுகள் எப்படி அறத்தோடு இயங்குவது என்கிற புரிதல் இல்லாமல் செயல்படும்போது அவற்றின் அடித்தளம் அசைகின்றன. அறிவியல் தேடலின் எல்லைகளை யாரும் கட்டுப்படுத்த முடியாது. எனினும், நிஜத்தில் அறிவியலுக்கு எல்லைகள் இருந்தன. அறிவியலுக்கு “எது இறுதி நோக்கம் என்பது குறித்த புரிதல் இல்லை. அதற்கு எது வாழ்க்கையின் அவசரமான நோக்கம் என்கிற புரிதல்கூட இல்லை. வாழ்க்கையின் நோக்கம் என்ன என்று அறிவியல் நமக்கு சொல்லித்தரவே இல்லை. அறிவியலை முன்னேற அனுமதித்தால் அதன் அசுரப்பாய்ச்சலுக்கு முடிவே இல்லை. ஆனால், அறிவியல் கூர்மையான ஆய்வுப்பார்வை எல்லா சமயங்களிலும் உதவாது. அந்த ஆய்வுப்பார்வை பலதரப்பட்ட மானுட அனுபவங்கள் அனைத்துக்கும் பொருந்தாது. அறிவியலால் நம்மைச் சூழ்ந்திருக்கும் அளக்க முடியாத பெருங்கடல்களை கடந்துவிட முடியாது. ஒரு குறிப்பிட்ட எல்லைக்குப் பிறகு பகுத்தறிவு என நாம் அழைக்கும் அறிவால் பயணிக்க முடியாது” என்று நேரு எழுதினார். (கண்டடைந்த இந்தியா, பக்கம் 452). அறிவியல் “நீதிநெறி சார்ந்த ஒழுங்கு, அறம் சார்ந்த பார்வையை கொண்டிருக்காமல், கண்டுகொள்ளாமல் இருக்கும் என்றால் அதிகார குவிப்பு நிகழும். மேலும், பிறரை அடக்கி ஆள வெறி கொண்டிருக்கும் மோசமான, சுயநலமிக்க மனிதர்களின் கையில் அறிவியல் மிக ஆபத்தான அழிவுக் கருவியாக மாறும். இதனால், அதன் மகத்தான சாதனைகள் மண்ணோடு, மண்ணாக போகும்” என்று நேரு சரியான பார்வையைக் கொண்டிருந்தார்.(கண்டடைந்த இந்தியா பக்கம்:16). […]அரசியல் பகுத்தறிவுக்கும், அதிகாரக் கனவுகளை அடைவதற்கான தேடலுக்கும் இடையே மூழ்கிப்போகும் வாழ்க்கை, தன்னைத் தானே அழித்துக் கொள்ளும் சக்தி வாய்ந்தது. அதிகாரக் கனவுகளை நோக்கிய இந்தப் பயணம் தன் தலையில் தானே மண் அள்ளிப் போட்டுக் கொள்ளக் கூடியது. இந்தத் தேடலில் அது ஊழல்மயமாகும் ஆபத்துகள் அதிகம். 1937-ல் ‘சாணக்கியா’ என்கிற புனைபெயரில் ‘மாடர்ன் ரீவியூ’ இதழில் ஒரு கட்டுரையை நேரு எழுதினார். மக்களின் தலைவராக கோலோச்சிக் கொண்டிருந்த நேரு, தன்னுடைய அரசியல் கனவுகளை, தானே கடுமையாக விமர்சித்துக் கொண்ட கட்டுரை அது. அக்கட்டுரையை வேறு யாரும் தன்னை விமர்சிக்கக் கூடாது என்பதற்காகவும், தனக்கு மேலும் புகழ் தேடிக் கொள்வதற்காகவும், நேரு எழுதிக்கொண்ட கட்டுரை எனக் கருத இடமுண்டு. எனினும், அரசியல் வாழ்க்கையில் ஓயாமல் இயங்கிக்கொண்டிருந்த ஒரு அரசியல்வாதி, தன்னைத்தானே சீர்தூக்கிப் பார்த்து விமர்சித்துக் கொள்ளும் அரிய தருணம் அது. ‘சாணக்கியா’ மக்கள் திரளின் பேராதரவை அள்ள முடிகிற நேருவின் திறன், அவரின் அரசியல் சாதுர்யம் குறித்து எழுதினார். அதற்குப் பிறகு, நேருவுக்கு ஒரு தெளிவான இலக்கு, உற்சாகம், பெருமிதம், நிர்வாகத்திறன், கடுமை எல்லாவற்றுக்கும் மேலாக மக்களின் பேரன்பு ஆகியவை வாய்த்திருக்கின்றன. மேலும், அவருக்கு மற்றவர்களை சகித்துக் கொள்ளும் பண்பு இல்லை. பலவீனமானவர்களை, செயல்திறன் குறைந்தவர்களைக் கேவலமாகப் பார்க்கும் குணமும் நேருவுக்கு உள்ளது. இவை அவரை சர்வாதிகாரியாகக் காலப்போக்கில் மாற்றிவிடக்கூடும். எப்படியேனும் காரியத்தை முடித்து விடவேண்டும் என்று வேட்கைகொண்டு அலைகிறார் நேரு. தனக்கு பிடிக்காதவற்றைத் துடைத்து, அழித்துவிட்டுப் புதியவற்றைக் கட்டியெழுப்பும் வேட்கை மிகுந்திருக்கும் நபராக நேரு திகழ்கிறார். அவரால் அன்னநடை போட்டபடி நகரும் ஜனநாயகத்தின்   நடைமுறைகளை நீண்ட காலத்துக்குத் தாங்கிக்கொள்ள முடியும் என்று தோன்றவில்லை…நேரு தன்னை சீஸரைப் போன்று  சர்வவல்லமை மிக்க சர்வாதிகாரியாகக் கனவு காண்கிறார் என்று சந்தேகிக்கலாம். நேரு தனக்கு அதிகாரத்தின் மீது ஆசை இருப்பதையும், அதிகாரத்தின் கருவிகளை, அரசியல் பகுத்தறிவைக் கையாளும் திறன் தனக்கு இருப்பதையும் உணர்ந்திருந்தார். மேலே குறிப்பிட்ட கட்டுரையிலும், பிரதமரான பின்னும் அதிகார வேட்கையின் ஆபத்துகள் பற்றி, தான் கொண்டிருக்கும் அச்சத்தையும், அரசியல் செயல்படும் விதங்களைக் குறித்து, தான் கொண்டிருக்கும் வெறுப்பையும் வெளிப்படுத்திக் கொண்டே இருந்தார். அது ‘நான் அற உணர்வு மிக்கவன்’ என்று காட்டிக்கொள்ளும் ஒரு நாடகம் அல்ல; அவை அரசியலை வாழ்க்கையாகக் கொண்டதால் நேருவுக்கு ஏற்பட்ட அறம்சார்ந்த பதற்றத்தின் வெளிப்பாடு. அரசியலில் தனிப்பட்ட நபராக, கட்சியில், மாநில அளவில் தான் பெறுகிற வெற்றிகள் தலைக்கேறும் ஆபத்தை நேரு உணர்ந்திருந்தார். கண்டடைந்த இந்தியா நூலில் நேரு, “இன்றைக்குப் பொருளாதார, அரசியல் உலகில் அதிகாரத்திற்காக அலைகிறார்கள். அதிகாரம் கிட்டியதும் அறம் என்பது அரிதாகி விடுகிறது… அதிகாரத்திற்கு என்று போதாமைகள் உண்டு. அதிகாரம் தன்னைத் தானே பின்னோக்கி இழுத்துக் கொள்கிறது”, என்று எழுதினார் (பக்கம் 495). ஒரு அரசியல்வாதியின் உண்மையான வெற்றி அதிகாரத்தைக் கைப்பற்றுவதில் மட்டுமில்லை; அதை எப்படி அறவழியில் செலுத்துவது என்பதில்தான் அது அடங்கி இருக்கிறது. அதை சாதிக்காவிட்டால் அரசியல் வெற்றி அறத்தின் தோல்வியாகி விடும். […]நேருவுக்குப் பகுத்தறிவின் போதாமைகள் புரிந்திருந்தாலும், அவர் அதைக் கைவிடவில்லை. அதற்குப் பதிலாக, நேரு பகுத்தறிவின் எல்லைகளை விரிவுபடுத்தினார். அறம் சார்ந்த பிரச்னைகளை அவர் பகுத்தறிவைக் கொண்டு அணுகினார். பகுத்தறிவைப் பயன்படுத்தும் அணுகுமுறையை அவர், ‘அறிவின் செயல்பாடுகள்’ எழுத்துகளின் மூலம் நடைமுறையில் அமல்படுத்தினார். அக வாழ்க்கையில் நேருவுக்கு ஏதோ ஒரு நம்பிக்கை, பாதுகாப்பு தேவைப்பட்டது. தன்னுடைய வாழ்க்கையின் பத்தாண்டுகளை சிறைச்சாலைகளில் செலவிட்ட ஒருவருக்கு மனதளவிலும், உளவியல் ரீதியாகவும் ஏதோ ஒரு நம்பிக்கை நிச்சயம் தேவைப்படும். 1930-களில்டேராடூன், அல்மோரா சிறைகளில் அடைக்கப்பட்டு இருந்த நேரு, மனச்சிதைவுக்கு அடிக்கடி ஆளானார். அவருடைய மனைவி தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டிருந்தார். அவரும் நோயுற்று இருந்தார். துயரம் மிகுந்த அந்தக் காலங்களில், நேருவின் மனைவி மதப்பற்று மிக்கவராக மாறினார். நேருவின் மகள் வேறெங்கோ படித்துக் கொண்டிருந்தார். அம்மாவோ பக்கவாதத்தால் படுத்த படுக்கையாக இருந்தார். கடந்த காலங்களில் நேருவுக்கு உற்ற பாதுகாவலனாக இருந்த அப்பா மோதிலால் நேரு, உயிரோடு இல்லை. உண்ணாவிரதம், சட்டத்தை ரத்து செய்தது என்று இயங்கிக்கொண்டு இருந்த காந்தியின் செயல்முறைகள் அவருக்குக் கடும் கோபத்தைக் கிளப்பின. காங்கிரஸ் தலைமை மீது கடுமையான விமர்சனங்கள் நேருவுக்கு இருந்தன. அவருடைய தனிமையும், எதுவும் செய்ய முடியாத வெம்மையும் முழுமையடைந்து விட்டதாக அவருக்குத் தோன்றியது. தன்னுடைய நாட்குறிப்பில் நேரு, “நான் முன் எப்போதும் இல்லாத அளவுக்குத் தனிமையாக உணர்கிறேன். என் அப்பா, ஆசை ஆசையாகக் கட்டிய வீடு இடிந்துக் கொண்டிருக்கிறது… இதுவரை என்னைத் தாங்கிக் கொண்டிருந்த தோள்களை இழந்து கொண்டே இருக்கிறேன்” என எழுதினார். 1930-களில் அகமதுநகர் கோட்டையில் வெகுகாலம் சிறைத்தண்டனையை அனுபவிக்க நேரிட்டபோதும் நேரு நம்பிக்கை இழந்தவராக உணர்ந்தார். ஐரோப்பாவில் குண்டுகள் விழுந்து கொண்டிருந்தன. விடுதலைப் போராட்டம், சட்ட மறுப்பு இயக்கம் ஆகியவை புதைகுழியில் சிக்கிக்கொண்டதாகத் தோன்றியது. அவரின் குடும்ப வாழ்க்கை சிக்கலாகிக் கொண்டிருந்தது. நேருவால் ஆற்றாமையை மறைக்க முடியவில்லை. “இப்படித்தான் வாழ்க்கை போய்க் கொண்டிருக்கிறது என உறுதியாக தெரியும் போது, சந்தேகம் குடிபுகுந்து விடுகிறது” என எழுதினார் (கண்டடைந்த இந்தியா பக்கம்:7). இப்படிப்பட்ட அகவாழ்க்கை, உளவியல் சிக்கல்கள் மிகுந்த காலங்களிலும் நேரு மத நம்பிக்கை கொண்டவராக மாறவில்லை. “நான் உனக்குத் தலைவணங்க மாட்டேன்” என்று மதத்தின் முன் அடிபணிய மறுத்து, நேரு நிமிர்ந்து நின்றார். வாழ்வின் துயரங்களை மறக்க எழுத்துப்பணியில் அவர்தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். 1930-களில் தன்னைத் தானே சுய பரிசோதனை செய்துகொள்ளும் வகையில், சுயசரிதையை எழுதினார். 1940-களில் கண்டடைந்த இந்தியா நூலை எழுதி முடித்தார். […]நேரு மனதளவில் திக்கற்று நிற்கையில், சந்தேகம் சூழ்கையில், குழப்பங்கள் திகைக்க வைக்கையில் தன்னுடைய குழப்பங்களைத் தெளிவாக வெளிப்படுத்தினார். அதன்மூலம் அவர் தெளிவடைந்தார். பல வருடங்கள் நேரு குழப்பங்களில் இருந்து தன்னை விடுவித்துக்கொள்ளக் கடிதங்கள், கட்டுரைகள், நாட்குறிப்புகளைத் தொடர்ந்து எழுதினார். பிற்காலத்தில், அவருக்கு நிற்கக்கூட நேரமில்லாமல் போனபோது அவர் மேடைகளில் பேசுவது, முதலமைச்சர்களுக்குக் கடிதம் எழுதுவது ஆகியவற்றின் மூலம் தன்னுடைய சிந்தனைகளை வெளிப்படுத்தினார். நேருவும், காந்தியும் பக்கம் பக்கமாகப் பேசினார்கள், எழுதினார்கள். இதற்கு என்ன காரணம் என்று தேடினால் தங்களுடைய கருத்துக்களைத் தொடர்ந்து விளக்கவும், அந்தக் கருத்துக்களின் பின்னுள்ள தர்க்கத்தை மக்களுக்குப் புலப்படுத்தவும் அவர்கள் தொடர்ந்து முயன்றார்கள் என்று புரியும். நேருவின் எழுத்துகளும், பேச்சுகளும் அவர் தொடர்ந்து அகவாழ்விலும், பொதுவாழ்விலும் பகுத்தறிவோடு இயங்கியதற்கான சாட்சியங்கள். இந்தியாவின் பொதுவாழ்க்கையில், பகுத்தறிவை தாகூர், நேரு, காந்தி என்கிற மூன்று ஆளுமைகளும் கட்டமைத்தார்கள். இவர்கள் அனைவரும் மிகச்சிறந்த கடித எழுத்தாளர்கள் என்பது ஒன்றும் எதேச்சையானது இல்லை. இவர்கள் தொடர்ந்து உரையாடலிலும், விவாதங்களிலும் ஈடுபட்டார்கள். தாகூர், காந்தி ஆகியோரின் மரணத்துக்குப் பிறகு நேருவோடு உரையாடி அவரின் மையமான நம்பிக்கைகளுக்குச் சவால் விடக்கூடிய சிறந்த ஆளுமைகள், அறிவுஜீவிகள் இல்லாமல் போனது சோகமான ஒன்று. பேராசிரியர் சுனில் கில்னானி, இந்தியாவின் முன்னணி அரசியல் அறிஞர். அவருடைய, ‘IDEA OF INDIA’ நூல் இந்தியாவைப் புரிந்துகொள்ள மிகச்சிறந்த நூல் என்று உலகம் முழுக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. இங்கிலாந்தின் தொன்மை மிகுந்த கிங்ஸ் கல்லூரியில் பேராசிரியராக உள்ளார். தீன்மூர்த்தி பவனில் அவர், 2002-ல் நிகழ்த்திய ‘நேருவின் நம்பிக்கை’ எனும் உரை மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு நேருவின் நினைவுதினத்தை ஒட்டி வெளியிடப்படுகிறது. நேருவின் நம்பிக்கை பகுதி-4 ஜூலை 2, 2017 […]பகுத்தறிவை பயன்படுத்திக் குறிப்பிட்ட சில செயல்களைச் செய்து முடிப்பது எளிமையான காரியம். அதே சமயம், ஒருவரின் அற நம்பிக்கைகளைப் பகுத்தறிவை கொண்டு எடை போடுவது சவாலான ஒன்று. எப்படிப்பட்ட அறக்கொள்கைகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதற்கு விடாமுயற்சி தேவைப்படும். இதை நேருவின் வாழ்க்கை தெளிவாகப் படம்பிடித்துக் காட்டுகிறது. காந்தி அகிம்சையைத் தன் வாழ்நாள் முழுக்கக் கடைபிடித்ததை எடுத்துக் கொள்வோம். அகிம்சை தான் உலகத்தின் உன்னதமான கொள்கையா? நவீன காலத்தில் அரசாங்கங்களின் வன்முறையின் வடிவமாகத் திகழும் சிறைச்சாலைக்குள் நேரு அடைக்கப்பட்டிருந்தார். சிறைக்கம்பிகளுக்குப் பின்னால் இருந்தபடி ‘இந்தச் சிறைச்சாலையில் தான் ஒரு அரசாங்கத்தின் அடிப்படை குணம் என்ன என்று எனக்குத் தெளிவாகப் புரிகிறது. அது வன்முறை, கட்டாயப்படுத்துதல், ஆள்பவர்களின் வன்முறை ஆகியவையே ஆகும்.’ என்று எழுதினார் நேரு. இப்படிப்பட்ட மன உளைச்சல் தரும் வேளையில் காந்தியின் அகிம்சையை நேரு ஆய்வு செய்தார். காந்தியை போல அகிம்சையில் நேரு அளவு கடந்த நம்பிக்கை கொண்டிருக்கவில்லை. அகிம்சையில் காந்தி அளவுக்குப் பற்றில்லாத தன்னைப் போன்றவர்களை அதிர்ஷ்டம் இல்லாதவர்கள் என்றார் நேரு. “நான் தொடர்ந்து சந்தேகங்களால் அலைக்கழிக்கப்படுகிறேன்… எப்போதும் பயன்படும் ஒரு தத்துவம் இருக்கக்கூடாதா? அந்தத் தத்துவம் தனிமனிதனின் அறத்தை காக்க வேண்டும். அதே சமயம் சமூகத்திற்கும் பயன்படுகிற ஒன்றாகவும் அது இருக்க வேண்டும் என்று மனம் ஏங்கித் தவிக்கிறது.”(சுயசரிதை, பக்கம் 538). அகிம்சை அரசியலில் வேலைக்கு ஆகுமா? ஒரு அரசியல்வாதியின் வாழ்க்கை தொடர்ந்து வன்முறை, வன்முறையின் கருவிகளோடு பயணித்துக் கொண்டே இருக்கிறது. “வன்முறையே நவீன அரசுகள், சமூக அமைப்புகளை இயங்க வைக்கும் ரத்தமாக இருக்கிறது…அரசுகள் கருணையின் சாயலின்றி அடிப்படையில் வன்முறையையே நம்பியே இருக்கின்றன.”, அரசுகள் நேரடியாக வன்முறையைப் பயன்படுத்துகின்றன. அது மட்டுமில்லாமல் மறைமுகமாக, நாசூக்காக, ‘வன்முறையைக் கல்வி, பத்திரிகை ஆகியவற்றின் மூலம் மறைமுகமாக, நேரடியாகப் பரப்புரை செய்கின்றன. மதத்தைக் கொண்டும், வறுமை, பஞ்சம் ஆகியவற்றைக் காரணம் காட்டியும் வன்முறையை அரசுகள் நியாயப்படுத்துகின்றன’ என்று நேரு எழுதினார். (சுயசரிதை, பக்கம் 541). ஜெர்மானிய அமெரிக்க ஆன்மீகவாதியான ரெயின்ஹோல்ட் நீபுரின் கருத்துக்களின் தாக்கம் தெரிகிற ஒரு பத்தியில் நேரு இப்படி எழுதினார். “பகுத்தறிவின் வளர்ச்சியோ, மதப்பார்வையின் எழுச்சியோ, அற உணர்வின் பெருக்கமோ எதுவுமே வன்முறையை நாடுகிற மனப்பான்மையைக் கட்டுப்படுத்துவதாகத் தெரியவில்லை.” என்று புலம்பினார் (சுயசரிதை பக்கம்: 542). […] அரசே வன்முறையைப் பயன்படுத்தும் நிலையில் அதை எப்படி எதிர்கொள்வது? அரசை எதிர்க்கும் நேருவைப் போன்றவர்கள் வன்முறையை எப்படிக் கையாள்வது? நாளை இந்தியர்கள் ஆட்சிக்கு வந்தால் நாம் எப்படி அதிகாரத்தைப் பயன்படுத்துவோம் என்று கவலைப்படுவதா? இல்லை கண்மூடித்தனமான நம்பிக்கையோடு வன்முறை பாதையில் எப்போதும் பயணிக்கக் கூடாது என்று உறுதியோடு காந்தியின் வழியில் பயணிப்பதா? நேருவுக்கு இப்படிப் பல்வேறு கேள்விகள் குடைந்து எடுத்தன. எப்படி அதிகாரத்தை அறத்தோடு பயன்படுத்துவது என்கிற கேள்வியோடு நேரு மல்லுகட்டி கொண்டிருந்தார். (இந்தக் கவலை நேருவுக்கு அவர் வாழ்நாள் முழுக்க இருந்து கொண்டே இருந்தது.) ‘நேரு உங்களுடைய வாழ்க்கையின் மிகப்பெரிய சவால் எது?’ என்று ஆண்ட்ரே மால்ராக்ஸ் கேட்டார். ‘ஒரு நியாயமான சமூகத்தை நியாயமான வழியில் கட்டி எழுப்புவது.’ என்றார் நேரு. (இதைவிட நேரு துல்லியமாக, ‘ஒரு நியாயமான அரசை நியாயமான வழியில் கட்டி எழுப்புவது.’ என்று சொல்லியிருக்கலாம்.) ஒரு தனிமனிதனுக்கு எது அறமாக இருக்கிறதோ, அதை அரசியல், சமூகச் செயல்பாட்டுக்கான கொள்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா? அது ஒரு பெருங்கூட்டத்தை வழிநடத்த முடியுமா? காந்தி முடியும் என்று நம்பினார். நீபுர் அது சாத்தியமில்லை என்று எண்ணினார். நேரு நீபுர் சொன்னதே சரி என்று பெருமளவில் ஒத்துப்போனார். தனிமனிதனின் அறத்துக்கும், ஒரு பெருங்கூட்டத்தின் அறத்துக்கும் இடைவெளிகள் உண்டு என்று நீபுர் போல நேருவும் கருதினார். ஆகவே, தனிமனித அறம் அப்படியே முழுக்க முழுக்கப் பெருங்கூட்டத்துக்கும் பொருந்தும் என்று எண்ணக்கூடாது. இதுவரை நீபுர் சொன்னதோடு ஒத்துப்போன நேரு, இதற்குப் பிறகு காந்தியின் பக்கம் சாய்கிறார். ‘ஒரு இலக்கை எப்படி அடைகிறோம் என்பதும் முக்கியம். எது நடைமுறைக்கு உகந்தது என்று பார்ப்பதோடு நில்லாமல், எது அறம் என்றும் பார்க்கவேண்டும். மோசமான, அறமற்ற வழிமுறைகள் இறுதியிலும் பெரும்பாலும் தோல்வியைத் தருகின்றன. இல்லையென்றால், அவை புதிதாகப் பெரிய பிரச்சினைகளை உருவாக்கி விடுகின்றன. ஒரு மனிதன் எப்படிப்பட்ட பாதையில் பயணிக்கிறான் என்பதைக் கொண்டே அவனை உண்மையாக எடை போடவேண்டும். அதைவிட்டுவிட்டு அவன் தன்னுடைய இலக்கை அடைந்ததைக் கொண்டு மட்டும் அவனைச் சீர்தூக்கி பார்க்கக் கூடாது… பயணிக்கிற பாதையும், அடைய வேண்டிய இலக்கும் பிரித்துப் பார்க்க கூடாதவை. இரண்டுமே முக்கியம்.’ (சுயசரிதை பக்கம்: 549). காந்தி தன்னுடைய அறநெறிக்கு அடிப்படையாகக் கொண்டிருந்த அகிம்சையைக் கூட நேரு அப்படியே ஏற்கவில்லை. அதைப் பகுத்தறிவோடு அணுக வேண்டும் என்று நேரு கருதினார். அகிம்சையைக் கேள்வி கேட்க கூடாத கொள்கையாகவோ, மத நம்பிக்கையாகவோ நேரு பார்க்க மறுத்தார். அதைத் தொடர்ந்து அறிவுப்பூர்வமாக மீளாய்வு செய்து, அதை வெவ்வேறு எடுத்துக்காட்டுகளோடு ஒப்பிட்டு பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று நேரு வலியுறுத்தினார். […] தன்னைத் தொடர்ந்து சுய விமர்சனம் செய்து கொண்டிருந்த நேருவின் விழிப்புணர்வைப் புரிந்து கொள்வது முக்கியமானது. நேரு எப்படித் தனக்கான அறப்பொறுப்புகளை முடிவு செய்யப் போராடிக்கொண்டே இருந்தார் என இதுவே உணர்த்தும். எப்படி எதிரிகளைக் கையாள்வது என்கிற கவலைதருகிற கேள்வி நேருவுக்கு எழுந்தது. அது குறித்துக் காந்தியும், நேருவும் முப்பதுகளில் உரையாடிக் கொண்டார்கள். அந்தக் காலத்தில் தான் காந்தி தீண்டாமைக்கு எதிராக இயங்கிக் கொண்டிருந்தார். காந்திக்குப் பழமைவாதிகளான சனாதனிகள் பலர் எதிரிகளாக மாறினார்கள். காந்தியை தொடர்ந்து வசைபாடும் விஷமம் மிகுந்த பரப்புரைகளை மேற்கொண்டார்கள். இப்படிப்பட்ட நிலையில் நேரு 1933-ல் காந்திக்குக் கடிதம் எழுதினார். தன்னுடைய எதிரியின் முரண்பாடான கருத்துக்களைச் சகித்துக் கொள்ளும் பொறுமை மக்களுக்கு இல்லாமல் இருப்பதை நேரு சுட்டிக்காட்டினார். அந்தக் கடிதத்தில் இன்னொரு சுவையான உண்மையை நேரு வெளிப்படுத்தினார். நேருவும் சமயங்களில் எதிர்த்தரப்பின் கருத்துக்களைப் பொறுத்துக்கொள்ள முடியாதவராக இருந்தார் என்பதே அந்த உண்மை. “ஒருவர் கடுமையாக அழுத்தம் கொடுக்கும் பொழுது எல்லாச் சகிப்புணர்வும் காணாமல் போய்விடுகிறது. சனாதனிகள் உங்களைக் கடுமையாக வெறுப்பதற்கு என்ன காரணம்? நீங்கள் அவர்களுக்குக் கடும் அழுத்தத்தைத் தருவதன் அடையாளமே அது.” என்று நேரு எழுதினார். மேலும், “நான், சாப்ரூ ஆகியோர் எங்களுடைய மதச் சகிப்புத்தன்மை எப்படி உயர்ந்தது என்று பெருமையாகப் பேசிக்கொண்டே பீடுநடை போடுவோம். ஆனால், எங்களுக்கு என்று பெரிதாக மத நம்பிக்கை என்று எதுவுமில்லை… எங்கள் மனதுக்கு நெருக்கமான ஏதேனும் ஒரு விஷயத்தைக் குறித்து நீங்கள் பேசுங்கள். அப்போது எங்களுடைய சுயரூபம் தெரியும். நாங்கள் சகிப்புத்தன்மை துளிகூட இல்லாதவர்கள் என்று புரிந்துவிடும். சில விஷயங்களில் உங்களை விடப் பொறுமை இல்லாதவர் யார் இருக்கிறார்? உண்மையில் சகிப்புத்தன்மை என்பதே அரிதிலும் அரிதாகத்தான் தென்படுகிறது. சகிப்புத்தன்மை என்கிற பெயரில் அலட்சியமே நிலவுகிறது. நாம் எதை மதிக்கவில்லையோ, அவற்றைக் கொண்டு நாம் மற்றவர்களைச் சகித்துக்கொள்வதாகக் காட்டிக்கொள்கிறோம்.” என்று நேரு எழுதினார். இந்த மேற்கோளின் மூலம் நேரு தன்னுடைய அற லட்சியங்களைத் தொடர்ந்து பரிசோதித்துக் கொண்டே இருந்தார் என்பது தெளிவாகிறது. எப்போதெல்லாம் தான் தடுமாறுவதாக நேரு உணர்ந்தாரோ அப்போதெல்லாம் அதனை நேர்மையாக ஒப்புக்கொண்டார். அறக்கொள்கைகள் உலகத்தில் இருந்தே தோன்ற வேண்டும். அவை உலகத்தோடு தொடர்புடையதாகவும் இருக்க வேண்டும். நடைமுறைத் தேவைகளை உணர்ந்த பகுத்தறிவாகவும் அறப்பகுத்தறிவு இருக்க வேண்டும். அறப்பகுத்தறிவு வெறுமனே புரியாத கொள்கைகளைக் கண்டுபிடிப்பது மட்டும் அல்ல. அனுபவங்கள், வரலாறு ஆகியவற்றைத் தொடர்ந்து மனதுக்குள் அசை போட்டு, எடை போடுகிற தெளிவான முயற்சி அது. “இன்றைய தேவைகள் தங்களுக்கு ஏற்றவாறு புதிய அறங்களை உருவாக்க நம்மைக் கட்டாயப்படுத்தும். நாம் இந்த ஆன்மாவின் நெருக்கடிகளில் இருந்து வெளிவர விரும்பினால், உண்மையான ஆன்மீக இலட்சியங்கள் எது என்று உணர விரும்பினால் என்ன செய்ய வேண்டும்? நம் கண் முன்னால் நிற்கும் பிரச்சினைகளைத் திறந்த மனதோடும், தைரியமாகவும் எதிர்கொள்ள வேண்டும். மதத்தின் மூடநம்பிக்கைகளில் மூழ்கிப் போய்விடக் கூடாது.” என்று நேரு தன்னுடைய சுயசரிதையில் எழுதினார். (பக்கம் 550). இன்னும் பட்டவர்த்தனமாகச் சொல்ல வேண்டும் என்றால் நேருவின் வாழ்க்கையை ஒரு அறிவு சார்ந்த செயல்திட்டம் எனலாம். அந்த வாழ்வில் அவர் பகுத்தறிவின் கருவிகளை, அறப்பகுத்தறிவோடு இணைக்கவும், அவற்றுக்குள் சமரசத்தை ஏற்படுத்தவும் முயன்றார். நேரு தன்னுடைய மனசாட்சியின் குரலுக்கு முற்றிலும் நேர்மாறாகக் கொள்கை முடிவுகள், அரசியல் செயல்பாடுகள் ஆகியவற்றில் செயல்பட்ட தருணங்கள் உண்டு. ஒரு செயலில் இறங்குவதற்கு முன்பு உரையாடுவது, பகுத்தறிவால் அச்செயலின் பல்வேறு கோணங்களை ஆய்வு செய்வது ஆகியவற்றில் ஈடுபட்டார். அதற்குப் பின்பே அவர் செயல்பட்டார். இதற்கு அனைவரும் நன்கறிந்த, நமக்குப் பாடமாகத் திகழும் மொழிவாரி மாநில உருவாக்கமே எடுத்துக்காட்டு. ஐம்பதுகளில் இருந்தே மொழிவாரி மாநிலங்கள் வேண்டும் என்றும், இந்திய குடியரசின் பல்வேறு மாநிலங்களை மறுசீரமைப்புச் செய்ய வேண்டும் என்றும் எண்ணற்ற கோரிக்கைகள் எழுந்தன. நேரு தன்னுடைய ஆரம்பக் கால அரசியல் வாழ்க்கையில் மொழிவாரி மாநிலங்களை ஆதரித்தவர். பிரிவினைக்குப் பிறகு இந்தியாவை மொழிவாரியாகப் பிரித்தால் இந்தியாவின் மாநிலங்களுக்குள் மோதல்கள் ஏற்பட்டு, நாடு பிளவுபடும் என அஞ்சினார். ஆரம்பகட்ட அரசியலமைப்பு சட்ட உருவாக்க விவாதங்களில் அழுத்தமாக நாட்டின் ஒற்றுமையே முக்கியம் என நேரு பதிவு செய்தார். ஆனால், அடுத்தடுத்த வருடங்களில் போராட்டங்கள் (சமயங்களில் வன்முறை போராட்டங்கள்) வாதங்கள் ஆகியவை நேருவின் பார்வையை மாற்றின. நேரு இந்த விஷயத்தில் தொடர்ந்து காலதாமதப்படுத்துபவராக, மழுப்புவராக இருந்தார் என்று சாடப்படுகிறார். பொதுமக்களின் உணர்ச்சி மிகுந்த கோரிக்கைகளுக்கு உடனே செவிமடுக்காமலும், இழுத்தடிக்கவும் செய்தார் நேரு. இதனால் போராடுபவர்களைத் தங்களுடைய நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்த வைத்ததோடு, படிப்படியாகக் கோரிக்கைகளை மறு ஆய்வு செய்யவும் வழிகோலினார். இப்படிப்பட்ட செயல்பாடுகளின் மூலம் அவர் இந்திய குடியரசை வலிமைப்படுத்தியதோடு, அதன் ஆயுளை நீட்டிக்கவும் செய்தார். தாகூர், காந்தியை போல அல்லாமல் நேரு நாட்டை ஆளும் பொறுப்பைச் சுமந்தார். ஒரு நாட்டின் தலைமைப் பொறுப்பு அதிகாரத்தை ஓரிடத்தில் அமைப்புரீதியாகக் குவித்து வைக்கிறது. நவீனகாலங்களில் பகுத்தறிவை உன்னதமான செயல்களுக்குப் பயன்படுத்தும் வாய்ப்பை தருகிற மிகமுக்கியமான பொறுப்பு அது. இப்படிப்பட்ட அதிகாரத்தோடு எண்ணற்ற தேர்வுகள், பொறுப்புகளும் நேருவை வந்து சேர்ந்தன. இது எப்போதும் ஒரு எதிரியை கூடவே வைத்திருப்பதைப் போன்றது. அர்னால்ட் டோய்ன்பீ குறிப்பிடுவதைப் போல, “தன்னுடைய லட்சியங்களுக்காகப் பிறரை சிறையில் அடைப்பதை விடத் தன்னுடைய லட்சியங்களுக்காகத் தானே சிறைச்சாலையை முத்தமிடுவது ஆசீர்வதிக்கப்பட்ட ஒன்று. நேரு இரு வகையான அனுபவங்களுக்கும் சொந்தக்காரர்.” அதிகாரம் கட்டற்ற கண்மூடித்தனத்தோடு இயங்குகிறது என வலியோடு நேரு உணர்ந்தார். அதிகாரத்தை நியாயமான காரியங்களுக்குப் பயன்படுத்த வேண்டும் என்கிற தாகம் குறையாமல் நேரு இயங்கினார். அந்த உயரிய லட்சியத்திற்காக சமூகத்தின் அறநெறிக்கான தேடலைப் பகுத்தறிவை கொண்டு மேற்கொண்டார். இந்த அறநெறிக்கான வழிகாட்டுதலைப் பெறுவதற்கு மற்றவர்கள் மதநூல்களை நாடியிருப்பார்கள். நேரு அப்படிச் செய்யவில்லை. பலதரப்பட்ட, தீவிரமான மத நம்பிக்கைகளைக் கொண்ட மக்கள் வாழும் ஒரு நாட்டில் நவீன அரசு எப்படிப்பட்ட பண்புகளோடு இருக்கும் என்கிற நேருவின் புரிதலே இதற்குக் காரணம். அவருக்கு இருந்த அசரவைக்கும் வரலாற்று அறிவோடு, அவரின் சொந்த அனுபவங்களும் கைகொடுத்தது. ஒரு அரசாங்கம் எப்படி இயங்கும் என்பதை வெகு அருகில் இருந்து பார்த்தவர் நேரு. ஒரு சிறைக்கைதியாக எப்படி மூடநம்பிக்கை அலைக்கழிக்கும் என்றும் நேருவுக்குத் தெரியும். அரசியல் அதிகாரம் எப்படித் தான் விரும்பியபடியெல்லாம் இயங்கும் என்றும் நேருவுக்கு நன்றாகத் தெரியும். ஒரு ஆட்சியாளன் எப்படிப்பட்ட அதிகாரத்தைத் தன்னுடைய குடிகள் மீது செலுத்த முடியும் என்பதை நேரு ஆங்கிலேய ஆட்சியின் கீழ் வாழ நேர்ந்ததால் நன்கு அறிந்திருந்தார். இந்தியா மேலும் மேலும் ஜனநாயகமயமாகி வருகிறது. அரசியல் செயல்பாடுகள் பலரையும் இணைத்துக் கொண்டு பயணிக்கின்றன. ஆகவே, இந்தியாவின் ஜனநாயக அமைப்புகள், அரசு ஆகியவை மத நம்பிக்கையை இன்னமும் நெருக்கமாகப் பற்றிக்கொள்ள வேண்டும் என்கிற வாதங்கள் பல தளங்களில், வெவ்வேறு வடிவங்களில் கேட்கின்றன. ஐரோப்பியாவில் வரலாற்று அனுபவங்களில் இருந்து இரண்டு அடிப்படையான அரசியல் பாடங்களை நாம் படிக்க வேண்டியிருக்கிறது. மத நம்பிக்கையின் அடிப்படையில் ஒரு அரசின் பண்பை வரையறுக்க முயல்வதில் ஒரு பேராபத்து இருக்கிறது. அரசுக்கு ஒரு மத அடையாளத்தை அது தந்துவிடுகிறது. இரண்டாவதாக, சில அவசர காலங்களைத் தவிர்த்து மற்ற காலங்களில் பொது மக்கள் தங்களுடைய அதிகாரங்களைச் சில அரசியல்வாதிகளின் கையில் ஒப்படைக்க முடியாது. அதைப் போலவே மதத்தை நம்பியும் குடிமக்கள் தங்களுடைய அதிகாரங்களை ஒப்படைப்பது ஆபத்தான ஒன்று. தொடர்ந்து வெவ்வேறு ஜனநாயக அமைப்புகளின் மூலம் அரசியல் அதிகாரம் என்பது பொறுப்பு மிக்கதாக, நியாயமான முறையில் செயல்படுவதாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அதற்குப் பதிலாக அரசுகளை மத நம்பிக்கை கொண்டதாக மாற்றுவது முன்னேற்றத்துக்கு வழிவகுக்காது. இந்த இரண்டு பாடங்களுக்கும் இடையே நெருங்கிய உறவு இருக்கிறது. ஜனநாயகம், மத நம்பிக்கையை அடிப்படையாகக் கொள்ளாத அரசு ஆகியவை உலகம் முழுக்கப் பெரும்புயலில் சிக்கிக் கொண்ட படகுகள் போல அல்லாடுகின்றன. ஐரோப்பாவின் அரசியல் அனுபவத்தில் இருந்து பாடம் படித்த மிகச் சில இந்திய அறிவுஜீவிகளில் நேரு ஒருவர். அவர் இந்த இரண்டு முக்கியமான பாடங்களைக் கற்றுக் கொண்டார்: ஒரு நவீன அரசுக்கு அரசியல் ஏற்பை தருகிற ஒரே அளவுகோல் ஜனநாயகம் மட்டுமே. ஒரு நவீன அரசை மதத்தோடு தொடர்புபடுத்தினால் அதன் பின்விளைவுகள் பயங்கரமாக இருக்கும். நேரு ஐரோப்பிய, இந்திய வரலாறுகளை வாசித்து உணர்ந்தவர் என்பதால் அவரால் ஒரு ஒற்றுமையைக் காண முடிந்தது. இந்தியாவை ஆண்ட மிகப்பெரிய அரசுகள் எப்படி அதிகாரத்தையும், மதத்தையும் கையாண்டன என அவர் ஆராய்ந்து பார்த்தார். இந்த அரசுகள் எல்லாம் சமூகத்தின் மத நம்பிக்கைகளை முடிந்தவரை அரசியல் அதிகாரத்தில் இருந்து தள்ளியே வைத்திருந்தன. சமயங்களில் மதம் அரசியலில் தலையிட்டாலும், அதை அரசுகள் மட்டுப்படுத்தவே முயன்றன என நேரு உணர்ந்து கொண்டார். பேராசிரியர் சுனில் கில்னானி, இந்தியாவின் முன்னணி அரசியல் அறிஞர். அவருடைய, ‘IDEA OF INDIA’ நூல் இந்தியாவைப் புரிந்துகொள்ள மிகச்சிறந்த நூல் என்று உலகம் முழுக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. இங்கிலாந்தின் தொன்மை மிகுந்த கிங்ஸ் கல்லூரியில் பேராசிரியராக உள்ளார். தீன்மூர்த்திப் பவனில் அவர், 2002-ல் நிகழ்த்திய ‘நேருவின் நம்பிக்கை’ எனும் உரை மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு நேருவின் நினைவுதினத்தை ஒட்டி வெளியிடப்படுகிறது. நேருவின் நம்பிக்கை – பகுதி-5 ஜூலை 3, 2017 […] நேருவின் நம்பிக்கை-சுனில் கில்னானி நேரு மதநம்பிக்கை இல்லாத அரசியல்வாதியாக இருந்தாலும் ஆழமான அறவுணர்வு மிக்கவர். மதத்தை நாடி அதன்மூலம் ஓர் அறத்தை உருவாக்க அவர் முயலவில்லை. அதிகாரத்தைப் பயன்படுத்த வேண்டிய கட்டாயங்களுக்கு ஆளானாலும் நேரு மதத்தை நாடாமல் அறநெறியை உருவாக்க முயன்றார். நேரு அறத்தின்மீது கொண்டிருந்த நம்பிக்கையும், தன்னுடைய கொள்கைகளைக் கைவிடாத குணமுமே அவரின் அரசியல் செயல்பாடுகளை உறுதியாகத் தாங்கிக்கொண்டன. […] இன்றைய இந்திய அரசியல் சூழலில் ஒரு முரண்பாடு பரவலாகக் காணக் கிடைக்கிறது. ஏராளமான அரசியல்வாதிகள் ‘நாங்கள் மதநம்பிக்கை உள்ளவர்கள்’ என்று பெருமிதத்தோடு அறிவித்துக்கொள்கிறார்கள். எனினும், இவர்களிடம் ஆழமான அறவுணர்வு கொண்ட பண்புநலனோ, அறப்போராட்டங்கள் குறித்த புரிதலோ, தங்களுடையச் செயல்கள், கொள்கைகள், முடிவுகள் குறித்த சுயவிமர்சனமோ கிட்டத்தட்ட இல்லவே இல்லை எனலாம். அரசியலில் வெல்வது, அதிகாரத்தைக் கைப்பற்றுவதோடு வேலை முடிந்தது என்பது அவர்களின் பார்வையாக இருக்கக் கூடும். இது முழுக்கமுழுக்கத் தங்களுடைய காரியங்களைச் சாதித்துக்கொள்ள மத நம்பிக்கை, பகுத்தறிவு ஆகியவற்றைப் பயன்படுத்துகிற செயலாகும். […]மதத்தை வெறும் நம்பிக்கையாக மட்டும் காட்டிக்கொண்டு, அதன் அறவுணர்வைத் தட்டிக்கழிப்பது நடக்கிறது. இது மதம், நம்பிக்கை ஆகியவற்றில் ஏற்பட்டிருக்கும் ஆழமான, அதிரவைக்கும் மாற்றங்களுக்கு அறிகுறியாகும். 19-ம் நூற்றாண்டின் இறுதியில் தத்துவ அறிஞர்கள், அறிவுஜீவிகள் காலப்போக்கில் மதம்சார்ந்த விஷயங்கள் தனிநபர் வாழ்க்கையோடு சம்பந்தப்பட்ட ஒன்றாக மாறும் என்று உறுதியாக நம்பினார்கள். வருங்காலத்தில் மதம் என்பது வீட்டோடு முடிந்துவிடும் என்று அவர்கள் தப்புக்கணக்குப் போட்டார்கள். அதற்குத் தலைகீழான ஒன்றே நடந்தது. தற்கால மதமும், நம்பிக்கையும் தனிமனிதர்களின் ஆழமானச் சிந்தனைகள், வாழ்க்கைப் போராட்டங்கள் சார்ந்தவையாக இல்லை. அவை, பொது வாழ்க்கையின் மோதல்கள், குழப்பங்களோடு தொடர்புடையவையாக உள்ளன. மதம் தனக்குள்ளேயே தீவிரமாகத் தொல்லைப்படுத்துகிற கேள்விகளை முன்பு எழுப்பிக்கொண்டது. அதன்மூலம் அறங்களை, நீதிநெறிகளை உருவாக்கியது. அந்தக் காலம் எல்லாம் மலையேறிவிட்டது. இப்போது எல்லாம் அரசியலில் தனக்கான இடத்தைப் பிடிப்பதற்கு மதம் தேவைப்படுகிறது. பொது வாழ்க்கையில் வெல்வதற்கு எவ்வளவு தூரம் மதம் தேவைப்படும், மதத்தை எந்தளவு தங்களின் சுயலாபத்துக்காகப் பயன்படுத்தலாம் என யோசிக்கவுமே மதம் பயன்படுத்தப்படுகிறது. அரசியலில் மதத்துக்கான இடம்குறித்த நேருவின் புரிதல் முக்கியமானது. அவர் ஏன் அரசியலையும், மதத்தையும் பிரித்தேவைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார் என உணர்ந்துகொள்வது அவசியமானது. வருங்காலத்தில் மதச்சார்பின்மை நாட்டுக்கு நல்லது செய்யும் என்று கண்மூடித்தனமாக நேரு நம்பவில்லை. இந்திய வரலாற்றில் மதச்சார்பின்மை என்பது தவிர்க்க முடியாத சக்தி என்கிற பொன்னுலகக் கனவுகள் எல்லாம் நேருவுக்கு இல்லை. பொருளாதார முன்னேற்றத்தின்மூலம் மதத்தின் சாயலே இல்லாத அரசியலைச் சாதிக்க முடியும் என்று நேரு நம்பவில்லை. அடிப்படைவாத சக்திகளே மதத்தை அரசியலில் கலக்கின்றன; அவையே, தங்களின் தேவைகளுக்கு மதத்தைப் பயன்படுத்திக்கொள்கின்றன என்கிற புரிதல் நேருவுக்கு 1930-களில் இருந்தது. அந்தப் பார்வை மார்க்ஸியத்தின் தாக்கத்தால் ஏற்பட்டது. எனினும், இதே பார்வையை அவர் தன் வாழ்நாளின் கடைசி இருபது வருடங்களில் கொண்டிருக்கவில்லை. நேரு வரலாற்றில் இருந்து பாடம் கற்றுக்கொள்கிற திறமை மிகுந்தவராக இருந்தார். மதம் என்பது இந்தியச் சமூகத்தில் இருந்து பிரிக்க முடியாத சக்தியாக இருக்கிறது என்பதைக் காந்தியும், தாகூரும், மெளலானா அபுல் கலாம் ஆசாத்தும், ராஜாஜியும் உணர்ந்திருந்தார்கள். அவர்களுடன் உரையாடிய, இணைந்து இயங்கிய நேருவும் அதனைப் புரிந்துகொண்டார். சமூகத்தை மதம் எப்படியெல்லாம் ஆட்டிப்படைக்கிறது என்பது கண்முன்னே காணும் தருணமாகப் பிரிவினை மாறியது. அரசு, மதம் ஆகியவை குறித்து நேரு எப்படிப்பட்ட பார்வையைக் கொண்டிருந்தார்? காலப்போக்கில் மதம் அரசியலைவிட்டு நடையைக் கட்டும் என்றோ, அதன் தேவை மங்கிவிடும் என்றோ கண்மூடித்தனமாக நேரு நம்பவில்லை. மதம் அரசியலை எப்படி ஆட்டிப்படைக்கிறது என்பதைக் கடந்தகால வரலாற்றின் மூலம் நேரு உணர்ந்துகொண்டார். […] நவீன காலத்தில் மக்களின் வாழ்க்கையை முன்னேற்றும் கருவியாகப் பகுத்தறிவை மாற்றக்கூடிய பேராற்றல் பொருந்திய அமைப்பாக அரசு இருக்கிறது. அந்த அரசோடு மதம் கலக்கிறபோது பேராபத்துகள் ஏற்படும் என்று நேரு உணர்ந்திருந்தார். அது ஐரோப்பா, இந்தியாவில் மதம் அரசியலை என்ன பாடுபடுத்தியது என்கிற அனுபவங்களின் அடிப்படையிலான ஒன்று. நாம் உலக வரலாற்றை ஒரு பருந்துப் பார்வை பார்ப்போம். பால்கன் தீபகற்பத்தில் பல்வேறு நாடுகள் அவை இருந்த சுவடே இல்லாமல் சிதைந்துபோயின. அரேபிய தேசியம் வீழ்ந்துகொண்டிருப்பதை அதன் இடிபாடுகளின் இடையே நின்றபடி காண்கிறோம். அதேசமயம், மலையுச்சியின் விளிம்பில் நின்றபடி அதல பாதாளத்துக்குள் விழுந்துவிடாமல் தன்னைக் காத்துக்கொள்ளப் போராடும் நபரைப்போல இந்தோனேசியா போன்ற தேசங்கள் தங்களுடைய தேச ஒற்றுமையைக் காப்பாற்ற முயன்றுகொண்டிருக்கின்றன. இப்படிப்பட்டச் சவாலான காலத்தில்தான் நேரு மதம் அல்லாத நம்பிக்கையின் மீது ஒரு தேசத்தைக் கட்டமைக்க வேண்டும் எனக் கண்ட கனவின் வலிமையை நாம் உணர்வது மிகவும் அவசியமாகிறது. மதம் உறுதியாகத் தன்னுடைய இடத்தை விட்டுக்கொடுக்காமல் இருக்கிற காலத்தில், அது நீக்கமற எங்கும் நிறைந்திருக்கும் இந்தப் புதிய நூற்றாண்டில் நாம் ஏன் நேருவின் நம்பிக்கையைப் பற்றிக் கவலைகொள்ள வேண்டும் என்கிற நியாயமான கேள்வி எழலாம். இப்படிப்பட்ட காலத்தில்தான் நம்பிக்கை சார்ந்த நேருவின் கருத்துகளின் வலிமையைக் குறைத்து மதிப்பிடுவதை, நிராகரிப்பதை நாம் செய்யக் கூடாது. மதத்தின் மீது பல்வேறு தேசியங்கள் உறுதிபெற்று இருக்கும் காலத்தில், நேருவின் நம்பிக்கை சார்ந்த கருத்துகளின் இன்றைய தேவையை, முக்கியத்துவத்தை உணர்வது இன்னமும் அவசியமாகிறது. மதம் சாராத நம்பிக்கையே ஒரு தேசத்தைக் கட்டமைப்பதற்கு ஏற்றது என்கிற நேருவின் பார்வை முழுக்கமுழுக்கச் சரியானதாகும். ஒவ்வொரு புதிய தலைமுறையும், போன தலைமுறையை இழிவாகப் பார்க்கிற போக்கு உண்டு. இளம் தலைமுறை ‘போன தலைமுறைக்கு என்ன தெரியும்’ என்று எள்ளி நகையாடி தங்களுடைய காரியங்களைச் சாதித்துக்கொள்வது இயல்பாக நடக்கிற ஒன்றுதான். கடந்த தலைமுறைகளைவிட எண்ணற்ற விஷயங்களை நம் தலைமுறை நன்கு புரிந்துகொள்ளவும், தெரிந்துகொள்ளவும் வாய்ப்பு இருக்கிறது என்பது உண்மையே. நேருவைவிட நாம் சிறப்பாக இயங்கக்கூடிய பல்வேறு விஷயங்கள் இருக்கின்றன. நேருவின் பொருளாதார முடிவுகளை நாம் ஏற்க மறுக்கலாம். அவரின் அயலுறவுக்கொள்கையை நிராகரிக்கலாம். ஆனால், மதம் குறித்து நேரு கொண்டிருந்த பார்வை இன்றைக்கும் தேவைப்படுகிறது. நம் காலத்தின் அரசியல்வாதிகள், மேதைகள் மதம் குறித்துக் கொண்டிருக்கும் புரிதலைவிட, நேருவின் புரிதல் மேலான ஒன்று. நேருவின் ஆளுமையும் பாணிகளும் நமக்கு உவப்பானதாக இல்லாமல் இருக்கலாம். நமக்கு நேருவின் மீது விமர்சனங்கள், வெறுப்புகள் ஆகியவை இருக்கவே கூடாது என்பதில்லை. அவற்றை நேருவின் சில கருத்துகள், புரிதல்கள் ஏன் இன்றைக்கும் தேவைப்படுகிறது என்பதிலிருந்து பிரித்துப் பார்க்க வேண்டியது அவசியம்.. நம்முடைய கடந்தகாலத் தலைமுறையின் சில அனுபவங்கள், புரிதல்களுக்கு நாம் அடிப்படையில் கடமைப்பட்டிருக்கிறோம் என்பதை நினைவில்கொள்ள வேண்டும். நமக்கு நேருவின் வாழ்க்கையைத் தெரிந்துகொள்வதன் தேவை என்ன? அதைத் தெரிந்துகொள்வதால் நமக்கு என்ன கிடைக்கும்? அது, அவர் எப்படி அதிகாரத்தைக் கைப்பற்றினார் என்பதில் இல்லை. அவர் எப்படிச் செல்வ வளம் மிகுந்த குடும்பத்தில் பிறந்து நாட்டுக்காகப் பாடுபட்டார் என்பதை அறிவதிலும் இல்லை. அவர் அறிவுத்தளத்திலும், அரசியலிலும் எப்படிப்பட்ட புரிதலோடு இருந்தார் என்பதை உணர்வது நமக்குத் தேவைப்படுகிறது. தன்னுடைய புரிதலை எப்படிச் சிறப்பாக இந்தியாவில் அவர் நடைமுறைப்படுத்தினார் என்று உணர்வது இந்தியா மற்றும் இந்தியர்களின் கடமை. ஐரோப்பாவில் மதம் எப்படிப் பெருங்கேடுகளை விளைவித்தது என்கிற பாடத்தை, வரலாற்றை வாசித்து நேரு புரிந்துகொண்டார். அது, இந்தியாவுக்கும் எப்படிப் பொருந்திப்போகிறது என உணர்ந்துகொண்டார். மதத்தை அரசியலில் இருந்து பிரித்துவைக்கும் மகத்தான சாதனையை அவர் இந்தியாவில் நிகழ்த்தினார். அது, இன்றும் தொடர்கிறது. மதத்தை அரசியலைவிட்டுத் தள்ளிவைப்பது இன்றைக்கும், என்றைக்கும் கட்டாயமாகத் தேவைப்படுகிறது. எப்படி அறத்தோடு காலத்துக்கும் இருக்க வேண்டும் என்பதற்கான முன்மாதிரியாகக் காந்தி திகழலாம். அவரின் மகத்தான திறமைகள் அனைத்தும் வழிமுறைகள் சார்ந்தது. எப்படி நவீன அரசின் இருப்பையும், இந்தியாவில் பெரிய வனம்போலப் பரவிக்கிடக்கும் மத நம்பிக்கைகளையும் இணைத்துக்கொண்டு பயணிப்பது என்கிற மைய கேள்விக்குக் காந்தியிடம் பதில் இல்லை. காந்தியின் அறநெறி மனித சக்திக்கு அப்பாற்பட்ட அவரின் மனோதிடத்தைச் சார்ந்தது. அந்த மனோதிடத்தைச் சாதிக்கக் காந்தியே களத்தில் இருக்க வேண்டியிருந்தது; தன்னுடைய செயல்பாடுகள் குறித்துக் காந்தியே விளக்க வேண்டியதும் இருந்தது. காந்தியைப் போலத் தன்னுடைய வாழ்க்கையை ஒரு மகத்தான அறச்சாதனையாக நேரு வாழவில்லை. நேரு பகுத்தறிவோடு யோசிக்கிற ஒரு பாரம்பர்யத்தை விட்டுச் சென்றிருக்கிறார். அவரின் அறிவார்ந்த புரிதல்கள், அரசியல் தெளிவு ஆகியவற்றுக்கு இன்றும் தேவை இருக்கிறது. அவற்றை மீட்டெடுப்பதன் மூலமே இந்தியா என்கிற கனவைக் காப்பாற்ற முடியும். இந்தியாவில், அரசியல் தொழிலாகிவிட்டது; தங்களுடைய சொந்தலாபங்களுக்காக அரசியலைக் கருவியாகப் பயன்படுத்துகிறார்கள். […]இதனால் அரசியல் தொடர்ந்து தன்னுடைய தரத்தை இழந்துகொண்டேயிருக்கிறது. அரசியலை உடனடித் தேவைகளுக்காக அரசியல்வாதிகள் பயன்படுத்திக்கொள்கிறார்கள். இது, அரசியலை இன்னமும் மோசமாக்குகிறது; இந்திய அரசியல் அனுபவங்கள், அரசியல் தன்னைத்தானே தரம் தாழ்த்திக்கொள்ளத் தயங்குவது இல்லை என்பதை உணர்த்துகிறது. நவீன அரசியல், தொழிலாக மாறிய பின்பு… அது தன்னைத்தானே உயர்த்திக்கொள்ள முயலப்போவது இல்லை. அரசியல்வாதிகள், அறிவுஜீவிகள் சில லட்சியங்கள், இலக்குகளுக்காகத் தொடர்ந்து அயராது உழைப்பதாகப் பாவனை செய்கிறார்கள். அவற்றுக்கு உண்மையாக இருக்கிறோமா என்று அவர்கள் தங்களைத் தாங்களே சுய பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். அப்படிச் செய்யாதவரை அரசியலின் வீழ்ச்சி தொடர்ந்துகொண்டே இருக்கும். இந்தியா மென்பொருள் துறையில் அசத்துகிறது. இந்தியாவின் அறிவுஜீவிகள் கலைத்துறை, இயற்கை அறிவியல் ஆகியவற்றில் சாதிக்கிறார்கள். இலக்கியம், வர்த்தகம் ஆகியவற்றிலும் பெருஞ்சாதனைகள் புரிகிறோம். ஆனால், நம்முடைய அரசியல்வாதிகள் தரந்தாழ்ந்தவர்களாக இருக்கிறார்கள்; அவர்கள் தேர்தலில் எப்படி வெல்வது எனத் தெளிவாக உணர்ந்திருக்கிறார்கள். ஆனால், அறம் சார்ந்து தங்களுடைய அறிவை பயன்படுத்துவது இல்லை. அரசியல்வாதிகள் தங்களுக்கு ஓட்டுப் போடுகிறவர்களைத் திருப்திபடுத்த வேண்டிய கட்டாயத்திலும், அவர்களின் மோசமான கோரிக்கைகளை ஏற்கவேண்டிய நெருக்கடியிலும் இருப்பதாகச் சொல்லிக்கொள்கிறார்கள். ஆனால், ஏராளமான இந்தியக் குடிமக்கள் பகுத்தறிவோடு யோசிக்கிறார்கள். நாம் அடைய வேண்டிய இலக்கு மட்டுமல்ல, அதற்கான பாதையும் முக்கியம் என்று கருதுகிற அறிவுமிகுந்த இந்தியர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே இருக்கிறது. அரசியல்வாதிகள், இந்த எண்ணிக்கை குறைந்துகொண்டிருக்கிறது என நம்மை நம்பவைக்க முயல்கிறார்கள். அது உண்மையில்லை. இப்படி அரசியல் இருக்க வேண்டும் என்று அவசியமில்லை என்பதை நினைவுபடுத்துகிறேன். நம்முடைய வரலாறு, அரசியல் வாழ்க்கையை எப்படி அறத்தோடும், பகுத்தறிவோடும், முழுமையான நம்பிக்கையோடும் வாழ முடியும் என உணர்த்துகிறது. பேராசிரியர் சுனில் கில்னானி, இந்தியாவின் முன்னணி அரசியல் அறிஞர். அவருடைய, ‘IDEA OF INDIA’ நூல் இந்தியாவைப் புரிந்துகொள்ள மிகச்சிறந்த நூல் என்று உலகம் முழுக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. இங்கிலாந்தின் தொன்மை மிகுந்த கிங்ஸ் கல்லூரியில் பேராசிரியராக உள்ளார். தீன்மூர்த்திப் பவனில் அவர், 2002-ல் நிகழ்த்திய ‘நேருவின் நம்பிக்கை’ எனும் உரை மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு நேருவின் நினைவுதினத்தை ஒட்டி வெளியிடப்படுகிறது. FREETAMILEBOOKS.COM மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்: மின்புத்தகங்களைப் படிப்பதற்கென்றே கையிலேயே வைத்துக் கொள்ளக்கூடிய பல கருவிகள் தற்போது சந்தையில் வந்துவிட்டன. Kindle, Nook, Android Tablets போன்றவை இவற்றில் பெரும்பங்கு வகிக்கின்றன. இத்தகைய கருவிகளின் மதிப்பு தற்போது 4000 முதல் 6000 ரூபாய் வரை குறைந்துள்ளன. எனவே பெரும்பான்மையான மக்கள் தற்போது இதனை வாங்கி வருகின்றனர். ஆங்கிலத்திலுள்ள மின்புத்தகங்கள்: ஆங்கிலத்தில் லட்சக்கணக்கான மின்புத்தகங்கள் தற்போது கிடைக்கப் பெறுகின்றன. அவை PDF, EPUB, MOBI, AZW3. போன்ற வடிவங்களில் இருப்பதால், அவற்றை மேற்கூறிய கருவிகளைக் கொண்டு நாம் படித்துவிடலாம். தமிழிலுள்ள மின்புத்தகங்கள்: தமிழில் சமீபத்திய புத்தகங்களெல்லாம் நமக்கு மின்புத்தகங்களாக கிடைக்கப்பெறுவதில்லை. ProjectMadurai.com எனும் குழு தமிழில் மின்புத்தகங்களை வெளியிடுவதற்கான ஒர் உன்னத சேவையில் ஈடுபட்டுள்ளது. இந்தக் குழு இதுவரை வழங்கியுள்ள தமிழ் மின்புத்தகங்கள் அனைத்தும் PublicDomain-ல் உள்ளன. ஆனால் இவை மிகவும் பழைய புத்தகங்கள். சமீபத்திய புத்தகங்கள் ஏதும் இங்கு கிடைக்கப்பெறுவதில்லை. சமீபத்திய புத்தகங்களை தமிழில் பெறுவது எப்படி? அமேசான் கிண்டில் கருவியில் தமிழ் ஆதரவு தந்த பிறகு, தமிழ் மின்னூல்கள் அங்கே விற்பனைக்குக் கிடைக்கின்றன. ஆனால் அவற்றை நாம் பதிவிறக்க இயலாது. வேறு யாருக்கும் பகிர இயலாது. சமீபகாலமாக பல்வேறு எழுத்தாளர்களும், பதிவர்களும், சமீபத்திய நிகழ்வுகளைப் பற்றிய விவரங்களைத் தமிழில் எழுதத் தொடங்கியுள்ளனர். அவை இலக்கியம், விளையாட்டு, கலாச்சாரம், உணவு, சினிமா, அரசியல், புகைப்படக்கலை, வணிகம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு தலைப்புகளின் கீழ் அமைகின்றன. நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகச் சேர்த்து தமிழ் மின்புத்தகங்களை உருவாக்க உள்ளோம். அவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள் Creative Commons எனும் உரிமத்தின் கீழ் வெளியிடப்படும். இவ்வாறு வெளியிடுவதன் மூலம் அந்தப் புத்தகத்தை எழுதிய மூல ஆசிரியருக்கான உரிமைகள் சட்டரீதியாகப் பாதுகாக்கப்படுகின்றன. அதே நேரத்தில் அந்த மின்புத்தகங்களை யார் வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும், இலவசமாக வழங்கலாம். எனவே தமிழ் படிக்கும் வாசகர்கள் ஆயிரக்கணக்கில் சமீபத்திய தமிழ் மின்புத்தகங்களை இலவசமாகவே பெற்றுக் கொள்ள முடியும். தமிழிலிருக்கும் எந்த வலைப்பதிவிலிருந்து வேண்டுமானாலும் பதிவுகளை எடுக்கலாமா? கூடாது. ஒவ்வொரு வலைப்பதிவும் அதற்கென்றே ஒருசில அனுமதிகளைப் பெற்றிருக்கும். ஒரு வலைப்பதிவின் ஆசிரியர் அவரது பதிப்புகளை “யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்” என்று குறிப்பிட்டிருந்தால் மட்டுமே அதனை நாம் பயன்படுத்த முடியும். அதாவது “Creative Commons” எனும் உரிமத்தின் கீழ் வரும் பதிப்புகளை மட்டுமே நாம் பயன்படுத்த முடியும். அப்படி இல்லாமல் “All Rights Reserved” எனும் உரிமத்தின் கீழ் இருக்கும் பதிப்புகளை நம்மால் பயன்படுத்த முடியாது. வேண்டுமானால் “All Rights Reserved” என்று விளங்கும் வலைப்பதிவுகளைக் கொண்டிருக்கும் ஆசிரியருக்கு அவரது பதிப்புகளை “Creative Commons” உரிமத்தின் கீழ் வெளியிடக்கோரி நாம் நமது வேண்டுகோளைத் தெரிவிக்கலாம். மேலும் அவரது படைப்புகள் அனைத்தும் அவருடைய பெயரின் கீழே தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் நாம் அளிக்க வேண்டும். பொதுவாக புதுப்புது பதிவுகளை  உருவாக்குவோருக்கு அவர்களது பதிவுகள்  நிறைய வாசகர்களைச் சென்றடைய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். நாம் அவர்களது படைப்புகளை எடுத்து இலவச மின்புத்தகங்களாக வழங்குவதற்கு  நமக்கு அவர்கள் அனுமதியளித்தால், உண்மையாகவே அவர்களது படைப்புகள் பெரும்பான்மையான மக்களைச் சென்றடையும். வாசகர்களுக்கும் நிறைய புத்தகங்கள் படிப்பதற்குக் கிடைக்கும் வாசகர்கள் ஆசிரியர்களின் வலைப்பதிவு முகவரிகளில் கூட அவர்களுடைய படைப்புகளை தேடிக் கண்டுபிடித்து படிக்கலாம். ஆனால் நாங்கள் வாசகர்களின் சிரமத்தைக் குறைக்கும் வண்ணம் ஆசிரியர்களின் சிதறிய வலைப்பதிவுகளை ஒன்றாக இணைத்து ஒரு முழு மின்புத்தகங்களாக உருவாக்கும் வேலையைச் செய்கிறோம். மேலும் அவ்வாறு உருவாக்கப்பட்ட புத்தகங்களை “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்”-க்கு ஏற்ற வண்ணம் வடிவமைக்கும் வேலையையும் செய்கிறோம். FREETAMILEBOOKS.COM இந்த வலைத்தளத்தில்தான் பின்வரும் வடிவமைப்பில் மின்புத்தகங்கள் காணப்படும். PDF for desktop, PDF for 6” devices, EPUB, AZW3, ODT இந்த வலைதளத்திலிருந்து யார் வேண்டுமானாலும் மின்புத்தகங்களை இலவசமாகப் பதிவிறக்கம்(download) செய்து கொள்ளலாம். அவ்வாறு பதிவிறக்கம்(download) செய்யப்பட்ட புத்தகங்களை யாருக்கு வேண்டுமானாலும் இலவசமாக வழங்கலாம். இதில் நீங்கள் பங்களிக்க விரும்புகிறீர்களா?  நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் தமிழில் எழுதப்பட்டிருக்கும் வலைப்பதிவுகளிலிருந்து பதிவுகளை எடுத்து, அவற்றை LibreOffice/MS Office போன்ற wordprocessor-ல் போட்டு ஓர் எளிய மின்புத்தகமாக மாற்றி எங்களுக்கு அனுப்பவும். அவ்வளவுதான்! மேலும் சில பங்களிப்புகள் பின்வருமாறு: 1. ஒருசில பதிவர்கள்/எழுத்தாளர்களுக்கு அவர்களது படைப்புகளை “Creative Commons” உரிமத்தின்கீழ் வெளியிடக்கோரி மின்னஞ்சல் அனுப்புதல் 2. தன்னார்வலர்களால் அனுப்பப்பட்ட மின்புத்தகங்களின் உரிமைகளையும் தரத்தையும் பரிசோதித்தல் 3. சோதனைகள் முடிந்து அனுமதி வழங்கப்பட்ட தரமான மின்புத்தகங்களை நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்தல் விருப்பமுள்ளவர்கள் freetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.  இந்தத் திட்டத்தின் மூலம் பணம் சம்பாதிப்பவர்கள் யார்? யாருமில்லை. இந்த வலைத்தளம் முழுக்க முழுக்க தன்னார்வலர்களால் செயல்படுகின்ற ஒரு வலைத்தளம் ஆகும். இதன் ஒரே நோக்கம் என்னவெனில் தமிழில் நிறைய மின்புத்தகங்களை உருவாக்குவதும், அவற்றை இலவசமாக பயனர்களுக்கு வழங்குவதுமே ஆகும். மேலும் இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள், ebook reader ஏற்றுக்கொள்ளும் வடிவமைப்பில் அமையும். இத்திட்டத்தால் பதிப்புகளை எழுதிக்கொடுக்கும் ஆசிரியர்/பதிவருக்கு என்ன லாபம்? ஆசிரியர்/பதிவர்கள் இத்திட்டத்தின் மூலம் எந்தவிதமான தொகையும் பெறப்போவதில்லை. ஏனெனில், அவர்கள் புதிதாக இதற்கென்று எந்தஒரு பதிவையும்  எழுதித்தரப்போவதில்லை. ஏற்கனவே அவர்கள் எழுதி வெளியிட்டிருக்கும் பதிவுகளை எடுத்துத்தான் நாம் மின்புத்தகமாக வெளியிடப்போகிறோம். அதாவது அவரவர்களின் வலைதளத்தில் இந்தப் பதிவுகள் அனைத்தும் இலவசமாகவே கிடைக்கப்பெற்றாலும், அவற்றையெல்லாம் ஒன்றாகத் தொகுத்து ebook reader போன்ற கருவிகளில் படிக்கும் விதத்தில் மாற்றித் தரும் வேலையை இந்தத் திட்டம் செய்கிறது. தற்போது மக்கள் பெரிய அளவில் tablets மற்றும் ebook readers போன்ற கருவிகளை நாடிச் செல்வதால் அவர்களை நெருங்குவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். நகல் எடுப்பதை அனுமதிக்கும் வலைதளங்கள் ஏதேனும் தமிழில் உள்ளதா? உள்ளது. பின்வரும் தமிழில் உள்ள வலைதளங்கள் நகல் எடுப்பதினை அனுமதிக்கின்றன. 1. http://www.vinavu.com 2. http://www.badriseshadri.in  3. http://maattru.com  4. http://www.kaniyam.com  5. http://blog.ravidreams.net  எவ்வாறு ஒர் எழுத்தாளரிடம் CREATIVE COMMONS உரிமத்தின் கீழ் அவரது படைப்புகளை வெளியிடுமாறு கூறுவது? இதற்கு பின்வருமாறு ஒரு மின்னஞ்சலை அனுப்ப வேண்டும். துவக்கம் உங்களது வலைத்தளம் அருமை (வலைதளத்தின் பெயர்). தற்போது படிப்பதற்கு உபயோகப்படும் கருவிகளாக Mobiles மற்றும் பல்வேறு கையிருப்புக் கருவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது. இந்நிலையில் நாங்கள் http://www.FreeTamilEbooks.com எனும் வலைதளத்தில், பல்வேறு தமிழ் மின்புத்தகங்களை வெவ்வேறு துறைகளின் கீழ் சேகரிப்பதற்கான ஒரு புதிய திட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.  இங்கு சேகரிக்கப்படும் மின்புத்தகங்கள் பல்வேறு கணிணிக் கருவிகளான Desktop,ebook readers like kindl, nook, mobiles, tablets with android, iOS போன்றவற்றில் படிக்கும் வண்ணம் அமையும். அதாவது இத்தகைய கருவிகள் support செய்யும் odt, pdf, ebub, azw போன்ற வடிவமைப்பில் புத்தகங்கள் அமையும். இதற்காக நாங்கள் உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை பெற விரும்புகிறோம். இதன் மூலம் உங்களது பதிவுகள் உலகளவில் இருக்கும் வாசகர்களின் கருவிகளை நேரடியாகச் சென்றடையும். எனவே உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை  பிரதியெடுப்பதற்கும் அவற்றை மின்புத்தகங்களாக மாற்றுவதற்கும் உங்களது அனுமதியை வேண்டுகிறோம். இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்களில் கண்டிப்பாக ஆசிரியராக உங்களின் பெயரும் மற்றும் உங்களது வலைதள முகவரியும் இடம்பெறும். மேலும் இவை “Creative Commons” உரிமத்தின் கீழ் மட்டும்தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் அளிக்கிறோம். http://creativecommons.org/licenses/  நீங்கள் எங்களை பின்வரும் முகவரிகளில் தொடர்பு கொள்ளலாம். e-mail : FREETAMILEBOOKSTEAM@GMAIL.COM  FB : https://www.facebook.com/FreeTamilEbooks  G plus: https://plus.google.com/communities/108817760492177970948    நன்றி. முடிவு மேற்கூறியவாறு ஒரு மின்னஞ்சலை உங்களுக்குத் தெரிந்த அனைத்து எழுத்தாளர்களுக்கும் அனுப்பி அவர்களிடமிருந்து அனுமதியைப் பெறுங்கள். முடிந்தால் அவர்களையும் “Creative Commons License”-ஐ அவர்களுடைய வலைதளத்தில் பயன்படுத்தச் சொல்லுங்கள். கடைசியாக அவர்கள் உங்களுக்கு அனுமதி அளித்து அனுப்பியிருக்கும் மின்னஞ்சலைFREETAMILEBOOKSTEAM@GMAIL.COM எனும் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.  ஓர் எழுத்தாளர் உங்களது உங்களது வேண்டுகோளை மறுக்கும் பட்சத்தில் என்ன செய்வது? அவர்களையும் அவர்களது படைப்புகளையும் அப்படியே விட்டுவிட வேண்டும். ஒருசிலருக்கு அவர்களுடைய சொந்த முயற்சியில் மின்புத்தகம் தயாரிக்கும் எண்ணம்கூட இருக்கும். ஆகவே அவர்களை நாம் மீண்டும் மீண்டும் தொந்தரவு செய்யக் கூடாது. அவர்களை அப்படியே விட்டுவிட்டு அடுத்தடுத்த எழுத்தாளர்களை நோக்கி நமது முயற்சியைத் தொடர வேண்டும்.   மின்புத்தகங்கள் எவ்வாறு அமைய வேண்டும்? ஒவ்வொருவரது வலைத்தளத்திலும் குறைந்தபட்சம் நூற்றுக்கணக்கில் பதிவுகள் காணப்படும். அவை வகைப்படுத்தப்பட்டோ அல்லது வகைப்படுத்தப் படாமலோ இருக்கும்.  நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகத் திரட்டி ஒரு பொதுவான தலைப்பின்கீழ் வகைப்படுத்தி மின்புத்தகங்களாகத் தயாரிக்கலாம். அவ்வாறு வகைப்படுத்தப்படும் மின்புத்தகங்களை பகுதி-I பகுதி-II என்றும் கூட தனித்தனியே பிரித்துக் கொடுக்கலாம்.  தவிர்க்க வேண்டியவைகள் யாவை? இனம், பாலியல் மற்றும் வன்முறை போன்றவற்றைத் தூண்டும் வகையான பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டும்.  எங்களைத் தொடர்பு கொள்வது எப்படி? நீங்கள் பின்வரும் முகவரிகளில் எங்களைத் தொடர்பு கொள்ளலாம்.  - EMAIL : FREETAMILEBOOKSTEAM@GMAIL.COM   - Facebook: https://www.facebook.com/FreeTamilEbooks   - Google Plus: https://plus.google.com/communities/108817760492177970948   இத்திட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் யார்? குழு – http://freetamilebooks.com/meet-the-team/    SUPPORTED BY கணியம் அறக்கட்டளை http://kaniyam.com/foundation     கணியம் அறக்கட்டளை []   தொலை நோக்கு – Vision தமிழ் மொழி மற்றும் இனக்குழுக்கள் சார்ந்த மெய்நிகர்வளங்கள், கருவிகள் மற்றும் அறிவுத்தொகுதிகள், அனைவருக்கும்  கட்டற்ற அணுக்கத்தில் கிடைக்கும் சூழல் பணி இலக்கு  – Mission அறிவியல் மற்றும் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு ஒப்ப, தமிழ் மொழியின் பயன்பாடு வளர்வதை உறுதிப்படுத்துவதும், அனைத்து அறிவுத் தொகுதிகளும், வளங்களும் கட்டற்ற அணுக்கத்தில் அனைவருக்கும் கிடைக்கச்செய்தலும்.   தற்போதைய செயல்கள் - கணியம் மின்னிதழ் – http://kaniyam.com - கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் இலவச தமிழ் மின்னூல்கள் – http://FreeTamilEbooks.com   கட்டற்ற மென்பொருட்கள் - உரை ஒலி மாற்றி –  Text to Speech - எழுத்துணரி – Optical Character Recognition - விக்கிமூலத்துக்கான எழுத்துணரி - மின்னூல்கள் கிண்டில் கருவிக்கு அனுப்புதல் – Send2Kindle - விக்கிப்பீடியாவிற்கான சிறு கருவிகள் - மின்னூல்கள் உருவாக்கும் கருவி - உரை ஒலி மாற்றி – இணைய செயலி - சங்க இலக்கியம் – ஆன்டிராய்டு செயலி - FreeTamilEbooks – ஆன்டிராய்டு செயலி - FreeTamilEbooks – ஐஒஎஸ் செயலி - WikisourceEbooksReportஇந்திய மொழிகளுக்ககான விக்கிமூலம் மின்னூல்கள் பதிவிறக்கப் பட்டியல் - FreeTamilEbooks.com – Download counter மின்னூல்கள் பதிவிறக்கப் பட்டியல்   அடுத்த திட்டங்கள்/மென்பொருட்கள்   - விக்கி மூலத்தில் உள்ள மின்னூல்களை பகுதிநேர/முழு நேரப் பணியாளர்கள் மூலம் விரைந்து பிழை திருத்துதல் - முழு நேர நிரலரை பணியமர்த்தி பல்வேறு கட்டற்ற மென்பொருட்கள் உருவாக்குதல் - தமிழ் NLP க்கான பயிற்சிப் பட்டறைகள் நடத்துதல் - கணியம் வாசகர் வட்டம் உருவாக்குதல் - கட்டற்ற மென்பொருட்கள், கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் வளங்களை உருவாக்குபவர்களைக் கண்டறிந்து ஊக்குவித்தல் - கணியம் இதழில் அதிக பங்களிப்பாளர்களை உருவாக்குதல், பயிற்சி அளித்தல் - மின்னூலாக்கத்துக்கு ஒரு இணையதள செயலி - எழுத்துணரிக்கு ஒரு இணையதள செயலி - தமிழ் ஒலியோடைகள் உருவாக்கி வெளியிடுதல் - http://OpenStreetMap.org ல் உள்ள இடம், தெரு, ஊர் பெயர்களை தமிழாக்கம் செய்தல் - தமிழ்நாடு முழுவதையும் http://OpenStreetMap.org ல் வரைதல் - குழந்தைக் கதைகளை ஒலி வடிவில் வழங்குதல் - http://Ta.wiktionary.org ஐ ஒழுங்குபடுத்தி API க்கு தோதாக மாற்றுதல் - http://Ta.wiktionary.org க்காக ஒலிப்பதிவு செய்யும் செயலி உருவாக்குதல் - தமிழ் எழுத்துப் பிழைத்திருத்தி உருவாக்குதல் - தமிழ் வேர்ச்சொல் காணும் கருவி உருவாக்குதல் - எல்லா http://FreeTamilEbooks.com மின்னூல்களையும் Google Play Books, GoodReads.com ல் ஏற்றுதல் - தமிழ் தட்டச்சு கற்க இணைய செயலி உருவாக்குதல் - தமிழ் எழுதவும் படிக்கவும் கற்ற இணைய செயலி உருவாக்குதல் ( aamozish.com/Course_preface போல)   மேற்கண்ட திட்டங்கள், மென்பொருட்களை உருவாக்கி செயல்படுத்த உங்கள் அனைவரின் ஆதரவும் தேவை. உங்களால் எவ்வாறேனும் பங்களிக்க இயலும் எனில் உங்கள் விவரங்களை  kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.   வெளிப்படைத்தன்மை கணியம் அறக்கட்டளையின் செயல்கள், திட்டங்கள், மென்பொருட்கள் யாவும் அனைவருக்கும் பொதுவானதாகவும், 100% வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கும்.இந்த இணைப்பில் செயல்களையும், இந்த இணைப்பில் மாத அறிக்கை, வரவு செலவு விவரங்களுடனும் காணலாம். கணியம் அறக்கட்டளையில் உருவாக்கப்படும் மென்பொருட்கள் யாவும் கட்டற்ற மென்பொருட்களாக மூல நிரலுடன், GNU GPL, Apache, BSD, MIT, Mozilla ஆகிய உரிமைகளில் ஒன்றாக வெளியிடப்படும். உருவாக்கப்படும் பிற வளங்கள், புகைப்படங்கள், ஒலிக்கோப்புகள், காணொளிகள், மின்னூல்கள், கட்டுரைகள் யாவும் யாவரும் பகிரும், பயன்படுத்தும் வகையில் கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் இருக்கும். நன்கொடை உங்கள் நன்கொடைகள் தமிழுக்கான கட்டற்ற வளங்களை உருவாக்கும் செயல்களை சிறந்த வகையில் விரைந்து செய்ய ஊக்குவிக்கும். பின்வரும் வங்கிக் கணக்கில் உங்கள் நன்கொடைகளை அனுப்பி, உடனே விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.  Kaniyam Foundation Account Number : 606 1010 100 502 79 Union Bank Of India West Tambaram, Chennai IFSC – UBIN0560618 Account Type : Current Account   UPI செயலிகளுக்கான QR Code []   குறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும். Note: Sometimes UPI does not work properly, in that case kindly use Account number and IFSC code for internet banking.