[] 1. Cover 2. Table of contents மக்கள் சட்டம்   மக்கள் சட்டம்   mail@makkal-sattam.org   மின்னூல் வெளியீடு : FreeTamilEbooks.com   உரிமை : CC0 கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.   அட்டைப்படம் - லெனின் குருசாமி - guruleninn@gmail.com   மின்னூலாக்கம் - ஐஸ்வர்யா லெனின் - aishushanmugam09@gmail.com   This book was produced using pandoc   பதிவிறக்கம் செய்ய - http://FreeTamilEbooks.com/ebooks/makkal_sattam_1 மின்னூல் வெளியீட்டாளர்: http://freetamilebooks.com அட்டைப்படம்: லெனின் குருசாமி - guruleninn@gmail.com மின்னூலாக்கம்: ஐஸ்வர்யா லெனின் - aishushanmugam09@gmail.com மின்னூலாக்க செயற்திட்டம்: கணியம் அறக்கட்டளை - kaniyam.com/foundation Ebook Publisher: http://freetamilebooks.com Cover Image: Lenin Gurusamy - guruleninn@gmail.com Ebook Creation: Iswarya Lenin - aishushanmugam09@gmail.com Ebook Project: Kaniyam Foundation - kaniyam.com/foundation This Book was produced using LaTeX + Pandoc சித்ரவதையால் அமையாது சட்டம்-ஒழுங்கு! MONDAY, JULY 2, 2007 (ஜூன் 26 – சித்ரவதையால் பாதிக்கப்பட்டோருக்கான ஐ.நா. ஆதரவு தினம்) […] “இந்தியாவின் காவல்துறையினருக்கு, குற்றங்கள் குறித்த சாட்சிகளையும், சான்றுகளையும் தேடி அலைவதைவிட – நிழலில் சுகமாக அமர்ந்து கொண்டு அவர்களிடம் அகப்பட்ட எளியமக்களின் கண்களில் மிளகாய்ப்பொடியை தூவுவதே மகிழ்ச்சி அளிக்கிறது”. -சர் ஜேம்ஸ் ஸ்டீஃபன், குற்றவியல் சட்ட வரலாறு(1883) என்ற புத்தகத்தில்… 1991ம் ஆண்டின் அக்டோபர் மாதத்தின் புழுக்கம் மிகுந்த ஒரு நாள். மதுரை மாவட்ட குற்றவியல் அமர்வு நீதிமன்ற வளாகம். விருதுநகர் அருகில் வாய்ப்பூட்டாம்பட்டி கிராமத்தை சேர்ந்த பாண்டியம்மாள் என்ற பெண்ணை கொலை செய்ததாக அவரது கணவர் வேலுச்சாமி ஒப்புக்கொண்டதாக கூறப்பட்ட வழக்கின் தீர்ப்புநாளான அன்று, நீதிமன்றம் வழக்கத்திற்கு அதிகமான பரபரப்புடன் இருந்தது. “ஸ்காட்லாந்து யார்டு காவல்துறைக்கு இணையாக புலனாய்வில் புகழ் பெற்ற தமிழ்நாடு காவல்துறை”யினர் மேற்கொண்ட விசாரணையில், குடும்பத் தகராறு காரணமாக பாண்டியம்மாளை அவரது கணவர் வேலுச்சாமியும், அவரது இரு நண்பர்களும் சேர்ந்து கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டு, பாண்டியம்மாளின் சடலம் கைப்பற்றப்பட்டதாக கூறப்பட்டது. நீதிமன்றம் கூடியவுடன் புலனாய்வு இதழ் ஒன்றின் சார்பில், அந்த வழக்கு தொடர்பான ஒரு முக்கிய சாட்சியை முன்னிலைப் படுத்த அனுமதி கோரப்பட்டது. அதையடுத்து நீதிமன்றத்திற்கு வந்த அந்த முக்கிய சாட்சியை பார்த்து ஒட்டுமொத்த நீதிமன்றமும் அதிர்ச்சியில் உறைந்தது. நீதிமன்றத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கிய அந்த முக்கிய சாட்சி கொலையானதாக கூறப்பட்ட பாண்டியம்மாளேதான்! சிறிய மனவருத்தம் காரணமாக கணவரிடம் சொல்லாமல் பாண்டியம்மாள் உறவினர் வீட்டுக்கு சென்ற நேரத்தில், ஊர்க்குளத்தில் ஒரு பெண்ணின் சடலம் மிதந்துள்ளது. யாரோ சிலருக்கு எழுந்த சந்தேகம் காவல்துறையையும் பற்றிக்கொள்ள, பாண்டியம்மாளின் கணவர் வேலுச்சாமி கைது செய்யப்பட்டு தமிழக காவல் துறையினரின் “விசேஷ” கவனிப்பில் அனைத்து “உண்மை”களையும் “கக்கினார்”. இதையடுத்து தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு நாளன்றுதான் கொல்லப்பட்டதாக கூறப்பட்ட பாண்டியம்மாளே நீதிமன்றத்தில் நேரில் தோன்றினார். காவல்துறையின் சித்ரவதை தாங்காமல், தான் செய்யாத குற்றத்தை ஒப்புக் கொண்டதாக பாண்டியம்மாளின் கணவர் வேலுச்சாமி கூறினார். ஒருவேளை தீர்ப்பு நாளன்று பாண்டியம்மாள் வந்திருக்காவிட்டால், வேலுச்சாமியின் கதி…? இது ஏதோ விதிவிலக்காக நடக்கும் நிகழ்ச்சியல்ல ! காவல் நிலையங்களில் வழக்கமாக நடக்கும் நிகழ்ச்சிதான். பாண்டியம்மாளின் கணவருக்கு இருந்த அதிர்ஷ்டம் அனைவருக்கும் இருப்பதில்லை என்பதுதான் துயரமான தகவல். இதேபோல அண்மையில் நடந்த மற்றொரு சம்பவத்தைப் பார்க்கலாம். ராமனாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே உள்ள உப்புக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் சுஜாதா. கடந்த 6-4-97 அன்று இவர் காணாமல் போனதாக புகார் எழுந்தது. […] புலனாய்வு புலிகளான நமது காவல்துறை அப்போது நடத்திய விசாரணையில் அதே ஊரைச் சேர்ந்த கார்மேகம் என்பவருடன் மேலும் இருவர் சேர்ந்து, சுஜாதாவை பாலியல் வன்புணர்ச்சிக்குப்பின் கொலை செய்து, சடலத்தை எரித்தது ’கண்டுபிடிக்க’ப்பட்டது. இந்த வழக்கு மதுரையில் உள்ள 3வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருந்த நிலையில் கடந்த 11-10-2006 அன்று, பாலியல் வன்புணர்ச்சிக்கு பின் கொல்லப்பட்டு எரிக்கப்பட்டதாக கூறப்பட்ட சுஜாதா, நீதிமன்றத்தில் நேரில் தோன்றி தான் இன்னும் உயிரோடு இருப்பதாகவும், தான் எந்தவிதமான வன்முறையாலும் பாதிக்கப்படவில்லை என்றும் சாட்சியம் அளித்தார். மாண்டதாக கூறப்பட்ட பெண் உயிரோடு மீண்டு வந்ததில் அனைவருக்கும் மகிழ்ச்சிதான்! ஆனால் காவல்துறையின் சித்ரவதை கொடுமைக்கு உட்பட்டு செய்யாத கொலையை - செய்ததாக ஒப்புக்கொண்டு காவல்துறையினர் தொடர்ந்த பொய்வழக்கில் சிக்கி 10 ஆண்டுகளாக வாழ்வை தொலைத்து நிற்கும் கார்மேகத்திற்கு, அவர் இழந்த வாழ்க்கை மீண்டும் வருமா? அவரை சித்ரவதை செய்து நீதிமன்றத்தில் பொய்சாட்சி சொல்லத்தூண்டிய காவல்துறை அதிகாரிகளை யார் தண்டிப்பது? சித்ரவதை – ஒரு உலகளாவிய பிரசினை மனித வரலாற்றில் தனியுடைமை பொருளாதாரமும், அது சார்ந்த கலாசாரமும் உருவான நாளிலிருந்து சித்ரவதைகளும் பல்வேறு காரணங்களுக்காக, பல்வேறு வடிவில் நடைமுறையில் இருந்து வருகிறது. இதற்கு வரலாற்றில் ஏராளமான சான்றுகள் உள்ளன. இரண்டாம் உலகப்போரே மனித உரிமைகள் குறித்த கவனத்தை ஒரு வடிவமாக்கி ஐக்கிய நாடுகள் அவை மூலம் 1948ம் ஆண்டில் அனைத்துலக மனித உரிமை பிரகடனத்தை ஏற்படுத்தியது. அதன் 5ம் பிரிவு, “யாரும் யாரையும் சித்ரவதை செய்யக்கூடாது; கொடூரமாக, மனித தன்மையற்று, கேவலமாக நடத்தக்கூடாது; கொடூரமான, மனித தன்மையற்ற, கேவலமான தண்டனைக்கு உட்படுத்தக்கூடாது” என்று கூறுகிறது. இதையடுத்து, 1987ம் ஆண்டு ஜூன் 26ம் தேதி முதல் ஐ.நா. சபையின் சித்ரவதைக்கு எதிரான உடன்படிக்கை அமலுக்கு வந்தது. சித்ரவதை என்ற சொல்லுக்கான பொருள், அந்த உடன்படிக்கையில் வரையறை செய்யப்பட்டது. அதன்படி, “ஒரு நபரிடமிருந்தோ அல்லது மூன்றாவது நபரிடமிருந்தோ, ஏதேனும் ஒரு தகவலையோ அல்லது ஒப்புதல் வாக்குமூலத்தையோ பெறுவதற்காக, உடலின் மீதோ அல்லது உளவியல் ரீதியாகவோ கடும் வலியை அல்லது கொடிய துன்பத்தை உண்டாக்கும் நடவடிக்கையே சித்ரவதையாகும்”. இதைத்தொடர்ந்து ஐ.நா. அவை சார்பில் சித்ரவதையை தடுக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆனால் வழக்கம்போல அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் இந்த முயற்சிகளை முறியடித்து வருகின்றன. மனித உரிமைகளின் பாதுகாவலனாக தம்மை காட்டிக்கொள்ளும் அமெரிக்கா, ஆப்கனின் அபு கிரைப், கியூபா அருகே உள்ள குவான்டனமோ தீவு ஆகிய இடங்களில் உள்ள சிறைக்கூடங்களில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளின் நிலையே, மனித உரிமை கோட்பாடு மீது அமெரிக்க அரசு வைத்துள்ள நம்பிக்கை(!)யை பறைசாற்றுகிறது. பல்வேறு உலக நாடுகளும், சித்ரவதை தொடர்பான அம்சங்களில் அமெரிக்காவையே பின்பற்றுகின்றன. அமெரிக்காவில் அந்நாட்டு குடிமகனுக்கு தேவையான முழு பாதுகாப்பும் வழங்கப்படுகிறது. (அமெரிக்க குடிமகனுக்கு இந்தியா போன்ற நாடுகளிலும் முழுமையான பாதுகாப்பு வழங்கப்படுகிறது. ஆனால் அமெரிக்க குடிமகனுக்கு வழங்கப்படும் பாதுகாப்பில் நூறில் ஒரு பங்காவது இந்தியாவில், இந்திய மக்களுக்கு வழங்கப்படுகிறதா? என்பது கேள்விக்குறியே!) […] இந்தியாவில் சித்ரவதைஇந்தியாவிலும் சித்ரவதையின் வரலாறு மிகவும் பழமையானதே! மனுநீதி நூலில் ஏராளமான சித்ரவதை முறைகள் விவரிக்கப்பட்டுள்ளன. மேலும் இந்து மதத்திற்கு சவாலாக விளங்கிய புத்த, சமணர்கள் சித்ரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாகவும் வரலாறு கூறுகிறது. தற்போதைய நிலையில், காவல்துறையினரின் விசாரணை என்பது, விசாரணைக்கு உட்படுபவரை சித்ரவதை செய்யும் ஒன்றாகவே உள்ளது. இதை சட்டம் அனுமதிப்பதாகவே, நீதிபதிகள் உட்பட பலரும் (தவறாக) நினைக்கின்றனர். அண்மையில் கட்சி தொடங்கி, சட்டமன்ற உறுப்பினராகவும் ஆகியுள்ள பிரபல நடிகர், கல்லூரி பேராசிரியராக நடிக்கும் (புரட்சிகரமான) படம் ஒன்றில், “பொதுமக்களை அடிக்கும் அதிகாரம்” காவல்துறைக்கு வழங்கப்பட்டுள்ளதாக நாயகனே வசனம் பேசுவார். போலி என்கவுன்டர்களை நியாயப்படுத்தி புகழும் திரைப்படங்களும் வந்து கொண்டுள்ளன. மனைவி பெயரில் எழுதும் பிரபல “விஞ்ஞானி” எழுத்தாளரோ, பொய்பேசுவதை கண்டறியும் கருவியை(Lie Detector)ப் பற்றிய கேள்விக்கு பதில் அளிக்கும்போது, அந்த கேள்விக்கு தொடர்பே இல்லாமல் இந்தியா போன்ற நாடுகளுக்கு காவல்துறையின் வழக்கமான சித்ரவதை முறையே பொருத்தமானது என்று பிரகடனம் செய்திருப்பார். இந்த பிரகடனத்திற்கு ஏற்ற நகைச்சுவை கார்ட்டூன் ஒன்றை வரலாற்று ஆர்வம் கொண்டவரான எழுத்தாளர் –கம்- கார்ட்டூனிஸ்ட் படம் வரைந்து விளக்கியிருப்பார். மற்ற செய்தி வெளியீடுகளும் காவல் நிலைய சித்ரவதைகளை இயல்பான ஒன்றாகவே சித்தரிக்கின்றன. இவ்வாறு தமிழகத்தின் கலை, இலக்கிய வடிவங்கள் மூலமாக சித்ரவதையை நியாயப்படுத்தும் போக்கு உளவியல் ரீதியாக உருவாக்கப்படுகிறது. ஆனால், குற்றவியல் நடைமுறை சட்டத்தின் பிரிவு 46(2), காவல்துறை அதிகாரி ஒருவர் கைது செய்ய முயற்சி செய்யும்போது, கைது செய்யப்பட வேண்டிய நபர், அதை தடுத்தாலோ, தப்பியோட முயற்சித்தாலோ அதனை தடுப்பதற்கு தேவையான அளவில் பலப்பிரயோகம் செய்யலாம் என்று கூறுகிறது. ஒரு கைதி தப்பியோடும் நிலையில்கூட, மரணதண்டனை அல்லது ஆயுள்தண்டனைக்குரிய குற்றம் சாட்டப்பட்டவரை தவிர மற்ற கைதிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் அதிகாரம் காவல்துறையினருக்கு கிடையாது. கைது செய்யப்பட்ட ஒருநபரை எந்த ஒரு வகையிலும் சித்ரவதை செய்ய இந்திய சட்டத்தின் எந்த ஒரு பிரிவும் யாருக்கும் அனுமதி வழங்கவில்லை. ஆனால் உலகம் முழுவதும் நடைபெறுவதுபோல இந்தியாவிலும் ஒரு நபருக்கு எதிரான அல்லது அவருக்கு தெரிந்து-சொல்ல விரும்பாத தகவல்களைப் பெறுவதற்காக பெரும்பாலான நேரங்களில் சித்ரவதை நடைபெறுகிறது. ஆனால் சட்டம் இவ்வாறான சித்ரவதைகளை எதிர்க்கவே செய்கிறது. இந்திய அரசமைப்பு சட்டத்தின் உறுப்பு 20(3), குற்றம் சாட்டப்பட்ட எவரையும், அவருக்கு எதிராக சாட்சியம் அளிக்குமாறு கட்டாயப்படுத்தக் கூடாது என்று கூறுகிறது. அதாவது, தன்னுடைய சொந்த விருப்பத்திற்கு மாறாக ஒரு குற்றம் சாட்டப்பட்டவர் ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கத் தேவையில்லை. குற்றவியல் விசாரணைமுறைச் சட்டத்தின் பிரிவு 163(1), காவல் அதிகாரியோ, அரசாங்கத்தில் உள்ள வேறெவருமோ, குற்றம் சாட்டப்பட்டவரிடம் தூண்டுதல், மிரட்டுதல் அல்லது வாக்கு கொடுத்தல் மூலமாக ஒப்புதல் வாக்குமூலம் பெற முயற்சி செய்யக்கூடாது என்று கூறுகிறது. இந்திய சாட்சிய சட்டத்தின் பிரிவு 25, ஒரு காவல் அதிகாரியிடம் கொடுக்கப்படும் ஒப்புதல் வாக்குமூலம் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக பயன்படுத்த முடியாது என்று திட்டவட்டமாக கூறுகிறது. அதேபோல காவல்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஒருவர் கொடுக்கும் ஒப்புதல் வாக்குமூலத்தையும் ஏற்க முடியாது என்று பிரிவு 26 கூறுகிறது. ஆனால், ஒரு குற்றவியல் நடுவர் முன் குற்றம் சாட்டப்பட்டவர் கொடுக்கும் வாக்குமூலத்தை சட்டம் ஏற்றுக்கொள்கிறது. ஏனெனில் குற்றவியல் நடுவர் முன் கொடுக்கப்படும் ஒப்புதல் வாக்குமூலம், சுதந்திரமாகவும்-அச்சுறுத்தல் இன்றியும் கொடுக்கப்படுவதாக சட்டம் கருதுகிறது. காவல்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு நபர், குற்றவியல் நடுவரிடம் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தபின் மீண்டும் காவல்துறையின் கட்டுப்பாட்டில் செல்லவேண்டிய அந்நபர், அச்சுறுத்தல் இன்றி சுதந்திரமாக வாக்குமூலம் கொடுக்கமுடியுமா? என்ற நியாயமான கேள்விக்கு பதில் சொல்ல யாருமில்லை. இதேபோல கைது செய்யப்பட்ட நபர், காவல்துறை அதிகாரியிடம் கொடுக்கும் ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் பொருள்கள் ஏதேனும் கண்டுபிடிக்கப்பட்டால் அப்பொருளை சாட்சியமாக ஏற்கும் அளவிற்கு ஒப்புதல் வாக்குமூலம் செல்லும் தன்மை பெறுகிறது. எனவே கைது செய்யப்பட்டவரிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில் கைப்பற்றப்பட்டதாக ஒரு ஆயுதத்தையோ அல்லது வேறு எந்த பொருளையோ காவல்துறையினர் நீதிமன்றத்திடம் ஒப்படைத்துவிட்டால் ஏறத்தாழ முழு ஒப்புதல் வாக்குமூலமும் செல்லுந்தன்மை பெற்றுவிடுகிறது. அந்தப்பொருள் போலியானது என்றோ, காவல்துறையினரே ஏற்பாடு செய்தது என்றோ வாதிடும் குற்றம் சாட்டப்பட்டவர், அதை நிரூபிக்க வேண்டிய பொறுப்பையும் ஏற்கிறார். சட்டத்தில் உள்ள இந்த அம்சங்கள் காவல்துறையினருக்கு மிகவும் வசதியான ஒன்றாகிவிடுகிறது. காவல்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஒருவரை சட்டம் அனுமதி வழங்காத அனைத்து சித்ரவதை முறைகளையும் பயன்படுத்தி தங்கள் வழிக்கு கொண்டு வந்து, தாங்கள் விரும்பியதுபோல், குற்றவியல் நடுவரிடம் ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கும்படி செய்யமுடிகிறது. இந்த கட்டுரையின் துவக்கத்தில் உள்ளதைப்போல உயிரோடு இருப்பவர்களை கொன்றதாக, அவர்களுடைய உறவினர்களையே நீதிமன்றத்தில் ஒப்புக்கொள்ள வைக்கவும் முடிகிறது. சித்ரவதை முறைகள் தாலிபன் தீவிரவாதிகள் என்று சந்தேகத்தின்பேரில் கைது செய்யப் பட்டவர்களுக்கு ஆப்கனின் அபுகிரைப் சிறையிலும், கியூபா அருகே உள்ள குவான்டனமோ சிறையிலும் நடந்த சித்ரவதை கொடுமைகளை பலரும் அறிந்திருக்கக்கூடும். அதற்கு சற்றும் குறைவில்லாத சித்ரவதைகள் இந்தியாவிலுள்ள காவல் நிலையங்களிலும், சிறைக்கூடங்களிலும் நடப்பது எத்தனை பேருக்கு தெரியும் என்பது கேள்விக்குறியே! குறிப்பாக சந்தனமர கடத்தலில் ஈடுபட்ட வீரப்பனை பிடிப்பதற்காக சென்ற தமிழக-கர்னாடக கூட்டு அதிரடிப்படையினர் மலைவாழ் மக்களை சித்ரவதை செய்வதற்காக “ஒர்க்-ஷாப்” என்ற பெயரில் ஒரு சித்ரவதைக்கான (R & D) ஆய்வுக்கூடமே நடத்தி வந்ததை, மத்திய அரசு நியமித்த நீதிபதி சதாசிவா விசாரணை ஆணையமே அம்பலப்படுத்தியது. மலைப்பகுதி மக்களை மாதக்கணக்கில் எந்தவிதமான ஆவணங்களும் இன்றி அடைத்து வைப்பது, மனிதக் கேடயமாக பயன்படுத்துவது, உடலில் மின்சாரம் பாய்ச்சுவது, பல்வேறு முறைகளிலான சித்ரவதைகளை செய்வது, பெண்களை பாலியல் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்குவது, இத்தகைய நடவடிக்கைகள் மூலம் உடல் நலிவடைவோரை வீரப்பனின் கூட்டாளிகள் எனக்கூறி படுகொலை செய்வது என அத்துமீறலையே அன்றாட வாழ்வாக கொண்டு அதிரடிப்படையினர் வாழ்ந்துள்ளனர். […] வீரப்பன் யானைத்தந்தங்களையும், சந்தன மரங்களையும் யார் மூலம், யாருக்காக கடத்தினான்? இதில் பயனடைந்த அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் யார்? என்பது வெளி உலகிற்கு தெரிந்துவிடக் கூடாது என்பதற்காகவே சர்ச்சைக்கிடமான முறையில் வீரப்பனை தீர்த்துக் கட்டியதற்காக அதிரடிப்படை வீரர்(!)களுக்கு பரிசுகளும், பாராட்டும் வழங்கப்பட்டன. […] சந்தன மரக்கடத்தல் வீரப்பனை பிடிக்கச் செல்வதாக கூறி, மலைவாழ் மக்களின் வாழ்வை சூறையாடிய அதிரடிப்படை குற்றவாளிகளுக்கு மனிதர்கள் உருவாக்கிய சட்டம் தண்டனை வழங்கத் தவறிவிட்டாலும், “எய்ட்ஸ்” நோய் மூலம் இயற்கை தண்டனை வழங்கி வருவதாக தெரிகிறது. இதையடுத்து “என்கவுன்டர்” என்ற “போலி மோதல் கொலை”களும் தற்போது அதிகரித்து வருகிறது. தற்போதைய அரசியல்-சமூக சூழ்நிலையில் அரசியல்வாதிகளும், காவல்துறை அதிகாரிகளும் சிறு குற்றங்களில் ஈடுபடுவோரை தங்களது சுயலாபத்திற்காக தொடர் குற்றங்களில் ஈடுபடத் தூண்டுகின்றனர் என்பதே உண்மை. இவ்வாறு அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் ஆதரவுடன் உருவாகும் சமூகவிரோதிகள், அரசியல்வாதிகள்/ அதிகாரிகளின் கட்டுப்பாட்டிலிருந்து விலகும்போது போலி என்கவுன்டர்களில் தீர்த்துக் கட்டப்படுகின்றனர். ஆனால் அந்த சமூக விரோதிகளை உருவாக்கி, வளர்த்துவிட்டு பலன் அனுபவித்த அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் தப்பிவிடுகின்றனர். இவற்றோடு காவல்துறை அதிகாரிகளே, ரவுடிக் கூட்டங்களின் கூலிப்படையினராக செயல்பட்டதாக மும்பையின் பிரபல “என்கவுன்டர் ஹீரோ” தயா நாயக் விவகாரத்திலும், அரசியல்வாதிகளின் கூலிப்படையினராக செயல்பட்டதாக குஜராத் மாநில டி ஐ ஜி வன்சாரா வழக்கிலும் புகார் கூறப்பட்டது. இந்த வழக்கில் தமிழகத்தை சேர்ந்த ராஜ்குமார் பாண்டியன் மீதும் புகார் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இத்தகைய அனைத்து என்கவுன்டர் வழக்குகளையும் சட்டப்படி கொலை வழக்காக பதிவு செய்து விசாரிக்க வேண்டும். ஆனால் வருவாய் கோட்டாட்சியர் என்ற நீதித்துறை சாராத அரசு அலுவலர் விசாரணையோடு இந்த வழக்குகள் திட்டமிட்டு மூடப்படுகின்றன. இது தவிர நீதிமன்றங்களின் அனுமதியோடும் சில சித்ரவதைகள் நடைபெறுகின்றன. கைதிகளிடம் நடத்தப்படும் உண்மையறியும் சோதனையே அது. அறிவியலின் பெயரால் இத்தகைய சித்ரவதைகள் மேற்கொள்ளப் படுகின்றன. உண்மை அறியும் சோதனை என்ற பெயரில் மூன்று வித சோதனைகள் நடைபெறுகின்றன. 1. பாலிகிராஃப் அல்லது லை டிடக்டர் டெஸ்ட். ஒரு நபரின் ரத்த அழுத்தம், நாடித்துடிப்பு, மூச்சுவிடும் கால அளவு ஆகியவற்றில் ஏற்படும் மாற்றங்களை பதிவு செய்யும் கருவி மூலம் அந்த நபர் உண்மை பேசுகிறாரா என்பதை கண்டறிவதாக கூறப்படுகிறது. விசாரணைக்கு உட்படும் நபரின் உடலில் மருத்துவர்கள் பயன்படுத்தும் ஈ.சி.ஜி. கருவி போன்ற கருவி இணைக்கப்படும். பின் அவரிடம் சாதாரண கேள்விகள் கேட்கப்பட்டு அப்போது அவரது உடல் இயல்பு பதிவு செய்யப்படுகிறது. பின்னர் குறிப்பிட்ட குற்ற செயல் குறித்த கேள்விகள் கேட்கப்பட்டு அப்போது அவரது உடல் இயல்பு பதிவு செய்யப்படுகிறது. இந்த இரு பதிவுகளுக்கும் இடையே வித்தியாசம் இருந்தால் அந்த நபர் பொய் பேசுவதாக கருதப்படுகிறது. 2. பிரைன் மேப்பிங் அல்லது பிரைன் பிங்கர் பிரிண்டிங் டெஸ்ட் மூளை அதிர்வுகளை பதிவு செய்யும் கருவியை ஒரு நபரின் தலையில் பொருத்தி, குற்ற சம்பவம் தொடர்பான படங்களை அந்த நபரிடம் காட்டும் போது, அவருடைய மூளை அதிர்வுகளை பதிவு செய்வதன்மூலம் அந்த சம்பவம் குறித்து அவர் உண்மைகளை கூறுகிறாரா என்று கண்டறியப்படுவதாக கூறப்படுகிறது. 3. மயக்க மருந்து அல்லது உண்மைத் திரவம் சோடியம் பென்டதால் போன்ற சர்ச்சைக்குரிய திரவ மருந்துகளை, விசாரணைக்கு உட்படுபவரின் நரம்புகளில் செலுத்தி, அந்த நபரை அரைத்தூக்க நிலைக்கு ஆட்படுத்தி விசாரிக்கும் முறை. பேச்சை கட்டுப்படுத்தும் மூளை பாகத்தை முடக்கிவைப்பதன் மூலம் குறிப்பிட்ட நபர் மறைக்க முயலும் உண்மைகளை கண்டறிந்து விட முடியும் என்று காவல்துறையினரும், அத்துறையில் பணியாற்றும் உளவியல் நிபுணர்களும் கூறுகின்றனர். இந்த அனைத்து முறைகளிலும் சோதனை நடத்தும்போது உளவியல் நிபுணர் ஒருவரும் உடனிருப்பது வழக்கம். இதன் மூலம் அந்த சோதனை அறிவியல் பூர்வமான சோதனை என்று நிறுவப்படுகிறது. ஆனால் இந்த சோதனைகள் அறிவியல் பூர்வமானது அல்ல என்ற குரலும் எழுகிறது. அமெரிக்க உளவியல் மருத்துவ இதழில்(American Journal of Psychiatry) கடந்த 1954ம் ஆண்டில் மயக்க மருந்துகள் மூலம் உண்மை அறிதலும், சட்டமும் (Narcoanalysis and Crinimal Law) என்ற தலைப்பில் கட்டுரை ஒன்று வெளியானது. அதில், மயக்க மருந்தின் ஆதிக்கத்தில் உள்ள நபர், உண்மையான தகவல்களை வெளியிட மறுப்பதோ/ உண்மையல்லாத தகவல்களை வெளியிடுவதோ/ செய்யாத குற்றங்களை ஒப்புக்கொள்வதோ சாத்தியம்தான் என்று கூறப்பட்டுள்ளது. மயக்க மருந்துகள் மூலம் உண்மை அறியும் முறையின்படி பெறப்படும் குற்ற ஒப்புதல் வாக்குமூலங்களின் மதிப்பு கேள்விக்குறியதே என்றும் அந்த கட்டுரையில் கூறப்பட்டுள்ளது. குற்ற விசாரணையின்போது நடைபெறும், மயக்க மருந்துகள் மூலம் உண்மை அறியும் சோதனைகளில் மருத்துவர்கள் பங்கெடுப்பது ’மருத்துவ தொழில் நெறிமுறை’களுக்கு எதிரானது; எனவே மருத்துவர்கள் இதுபோன்ற சோதனைகளில் பங்கேற்பதை தவிர்க்க வேண்டும் என்றும் அந்த கட்டுரை குறிப்பிடுகிறது. இதுபோன்ற உண்மை அறியும் சோதனைகளுக்கு ஆதரவாக அமெரிக்க உளவியல் மருத்துவ இதழில்(American Journal of Psychiatry) இதுவரை எந்த கட்டுரையும் வெளியாகவில்லை என்பது சிறப்புச் செய்தி. சோதனைக்கு உட்படுபவருக்கு என்ன பின்விளைவுகள் ஏற்படும் என்று தெரியாத நிலையில், அறிவியல்பூர்வமாக உறுதி செய்யப்படாத ஒரு பரிசோதனை முறையை, குற்றம் செய்ததாக சந்தேகப்படும் ஒரு நபரின் உடலில்-அவரது உடன்பாடு இல்லாமல் மேற்கொள்வதை, அச்சோதனை அது நீதிமன்ற அனுமதியுடன் நடைபெற்றாலும், சித்ரவதை என்றே கருதவேண்டும். […] இத்தகைய சித்ரவதையில் உயிர்காக்கும் மருத்துவர்கள் நேரடியாகவோ, மறைமுகமாகவோ பங்கேற்பது தொழில் நெறிமுறைகளுக்கு எதிரானது என்று ஐக்கிய நாடுகள் அவை கூறுகிறது. இந்திய மருத்துவ கவுன்சிலும் இதை பின்பற்றி 2002ம் ஆண்டு கொண்டுவந்த, மருத்துவ தொழில் நெறிமுறை (Indian Medical Council[Professional conduct, etiquettes and ethics] Regulations ,2002) யில், “மனித உரிமைகளுக்கு எதிரான விதத்தில், ஒரு நபரை சித்ரவதை செய்வதற்கு உதவியாகவோ, உடந்தையாகவோ மருத்துவர்கள் இருக்கக் கூடாது; ஒரு நபருக்கு உடல்ரீதியாகவோ, உளரீதியாகவோ பாதிப்பை ஏற்படுத்துவதில் மருத்துவர்கள் பங்கேற்கக் கூடாது; தனி நபர்களோ, ஏதேனும் துறையினரோ யாருக்கேனும் எந்தவித சித்ரவதையை தூண்டினாலும், மருத்துவர்கள் பங்கேற்கவோ, அந்த நிகழ்வை திட்டமிட்டு மறைக்கவோ கூடாது” என்று திட்டவட்டமாக கூறப்பட்டுள்ளது. ஆனால் நாட்டில் பரவலாக காவல்துறையினர் நடத்தும் உண்மை அறியும் சோதனைகளில் மருத்துவர்கள் பங்கேற்பதும், பின் தேசப்பற்றோடு அந்த சோதனையில் கலந்து கொண்டதை செய்தி தொலைக்காட்சிகளில் கலந்து கொண்டு விலாவாரியாக அலசுவதும் நமக்கு ஒரு செய்தியை கூறுகிறது: அந்த மருத்துவர்களுக்கு ‘அறிவியல்’ முழுமையாக தெரியவில்லை! “அறவியல்” சுத்தமாக தெரியவில்லை!! இவ்வாறான விசாரணைகளில் சிக்குவோரை செய்தி நிறுவனங்கள் சித்தரிக்கும் விதம், சம்பந்தப்பட்டோருக்கு மட்டும் அல்லாமல் அவர்களது சுற்றத்தினர் அனைவருக்குமான உச்சக்கட்ட சித்ரவதையாகும். சித்ரவதையின் பாதிப்புகள் ஒரு நபர் மீது ஏவப்படும் சித்ரவதை அந்நபருக்கு உடலியல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் பலத்த பாதிப்புகளை ஏற்படுத்தும். காவல்துறை அதிகாரிகள், குற்றம் சாட்டப்பட்டவர்களை சித்ரவதை செய்யும்போது அதன் அடையாளங்கள் வெளியே தெரியாத வகையில் சித்ரவதை செய்யும் கலையில் கைதேர்ந்து வருகின்றனர். இதன் காரணமாக வெளியே தெரியும் காயங்கள் மிகவும் குறைவாக இருந்தாலும், உள்காயங்கள் மிக அதிக அளவில் ஏற்படுத்தும் வகையிலும், நிரந்தர ஊனங்களை உருவாக்கும் வகையில் திட்டமிட்டு சித்ரவதை மேற்கொள்ளப் படுகிறது. இவை பல்வேறு விதமான உடற்கோளாறுகளை ஏற்படுத்துகின்றன. இந்த வகையான சித்ரவதைக்கு ஆட்படுபவர்கள் உள்ளாகும் மனநல பிரசினைகள் அளவிட முடியாதவை. மனவலிவற்றோர் தற்கொலைக்கு முயற்சித்தலும், மனவலிவு உடையோர் சித்ரவதை குறித்த அச்சம் நீங்கி நிரந்தர குற்ற வாழ்வுக்கு தயாராதலுமே சித்ரவதையின் விளைவுகளாக உள்ளன. இவ்வாறு நிரந்தர குற்றவாழ்வுக்கு தயாராகுபவர்களை அரசியல்வாதிகளும், காவல்துறை அதிகாரிகளும் தேவையான அளவிற்கு பயன்படுத்தியபின் அவர்களை, என்கவுன்டர் என்ற போலிமோதல்களில் சுட்டு படுகொலை செய்வது, சித்ரவதையின் உச்சகட்டமாக அமைகிறது. தீர்வுகள் மேலை நாடுகளில் உள்ளதுபோல, தவறிழைக்கும் காவல்துறை அதிகாரிகள் மீது பாதிக்கப்பட்டவர்கள் தனிப்பட்ட முறையில் வழக்கு தொடுக்க வழி செய்யும் சட்டம் இயற்ற வேண்டும். அறிவியல் முறையிலான புலனாய்வு மற்றும் மனித உரிமைகள் குறித்த முறையான கல்வியை காவல் மற்றும் நீதித்துறையினருக்கு புகட்ட வேண்டும். நீதித்துறை ஒரு சுயேட்சையான அமைப்பு என்பதையும், காவல்துறை செய்யும் அனைத்து செயல்களையும் நீதித்துறை அங்கீகரிக்க அவசியமில்லை; நீதிமன்றம் நிறைவடையும் வகையில் பணியாற்றுமாறு காவல்துறைக்கு உத்தரவிட தங்களுக்கு அதிகாரம் உண்டு என்பதை நீதித்துறையினர் உணரச் செய்யவேண்டும். ‘காவல்துறை விமர்சனத்திற்கு அப்பாற்பட்டது’ என்ற நிலையை மாற்றி, பொதுமக்களின் வரிப்பணத்தில் ஊதியம் பெறும் காவல்துறையினர் பொதுமக்களுக்கு பதில் சொல்ல கடமைப்பட்டவர்கள் என்ற நிலையை ஏற்படுத்தவேண்டும். இதற்காக பொதுமக்களின் பங்கேற்புடன் கூடிய காவல்துறை கண்காணிப்பு குழு(Centre for Police Accountability)க்களை அமைக்க வேண்டும். இதற்கேற்ற வகையில் குற்றவியல் சட்டங்களில் மாற்றங்களை கொண்டுவர வேண்டும். சர்வதேச அளவில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப நாட்டின் பாதுகாப்பு, பொருளாதாரம் தொடர்பான சட்டங்களில் மாற்றங்களை மத்திய அரசு கொண்டுவருகிறது. ஆனால், சித்ரவதையை தடை செய்வதற்காக ஐ.நா. அவையில் 1987ம் ஆண்டு ஜூன் 26ம் தேதி கொண்டுவரப்பட்ட “சித்ரவதைக்கு எதிரான உடன்படிக்கை”(Convention Against Torture)யில் கையெழுத்திடாமலே கடந்த 20 ஆண்டுகாலமாக இருந்து வருகிறது. இந்நிலை மாறி மனித உரிமைகள் தொடர்பான அனைத்து பன்னாட்டு சட்டங்களையும் இந்திய அரசு அங்கீகரித்து அமல் நடத்தவேண்டும். இது அனைத்திற்கும் மேலாக மனித உரிமைகள் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்த வேண்டும். குறிப்பாக சொந்த பிரசினைக்காக மட்டும் அல்லாமல், நியாயமான பொதுப்பிரசினையை தீர்க்கவும் பொதுமக்கள் திரண்டுவரும் வகையில் பொதுக்கருத்துகளை உருவாக்க வேண்டும். இதற்கேற்ற வகையில் மனித உரிமைப் பார்வையிலான அரசமைப்பு சட்டக்கல்வி, அனைத்து கல்வித் திட்டங்களிலும் கட்டாயமாக இடம் பெற வேண்டும். அப்போதுதான் விலங்குகளிடம் கூட இல்லாத, சொந்த இன உயிரிகளையே சித்ரவதை செய்யும் கொடிய வழக்கத்தை மனிதன் கைவிட்டு முழுமை பெற்ற மனிதனாக வாழ முடியும். -சுந்தரராஜன் (sundar@LawyerSundar.net) மாறும் சட்டங்களும், விவசாயிகளின் பறிபோகும் உரிமைகளும்…! (பகுதி-1) MONDAY, JULY 2, 2007 […] மான்சான்டோ (Man Santo) என்ற பன்னாட்டு விதை உற்பத்தி நிறுவனம், பெர்சி ஷ்மெய்சர் என்ற கனடா நாட்டு விவசாயி மீது கடந்த 1998ம் ஆண்டு ஒரு வழக்கு தொடர்ந்தது. அந்த நிறுவனம் காப்புரிமை பெற்றிருந்த ரவுண்டப் ரெடி கனோலா என்ற மரபணு கொண்ட தானியங்களை விவசாயி பெர்சி ஷ்மெய்சர், சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. தாம் விரும்பி அவ்வாறு செய்யவில்லை என்றும், அருகே உள்ள வயலில் நடவு செய்யப்பட்டிருந்த பயிர்களில் இருந்து காற்று மூலமோ, பூச்சிகள் மூலமோ அந்த மரபணு தமது வயலில் ஊடுருவி இருக்கலாம் என்றும் பெர்சி ஷ்மெய்சர் பதில் அளித்தார். மேலும் தமது நிலத்தில் அனுமதி பெறாமல், அத்துமீறி ஊடுருவிய மான்சான்டோ நிறுவனம்தான் குற்றவாளி என்றும், தமது நிலத்தில் உள்ள பயிர்கள் மீது மரபணு தாக்குதல் நடத்திய குற்றத்திற்காக அந்த நிறுவனம் தமக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அவர் பதில் மனு தாக்கல் செய்தார். ஆனால் அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது. கனடா நாட்டின் நவீன காப்புரிமை சட்டங்களின் அடிப்படையில் மான் சான்டோ நிறுவனத்தின் காப்புரிமையை மீறிய விவசாயி பெர்சி ஷ்மெய்சர், அந்த நிறுவனத்திற்கு பலகோடி டாலர் இழப்பீடு வழங்கவேண்டும் என்று கனடா நாட்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. மான் சான்டோ நிறுவனம், உலகின் பல நாடுகளிலும், அந்த நாட்டு விவசாயிகளுக்கு எதிரான பலநூறு வழக்குகளை தொடுத்து பல நூறு கோடி டாலர்களை அபராதமாக பெற்றுள்ளது. மான் சான்டோ (Man Santo), பாயர் (Bayer), டு பாண்ட் (Du Pont) போன்ற பன்னாட்டு நிறுவனங்களின் இத்தகைய நடவடிக்கைகள் கனடா போன்ற முன்னேறிய நாடுகளோடு முடிந்து விடுவதில்லை. ஆப்பிரிக்கா, இந்தியா போன்ற ஏழை நாடுகளிலும் பரவியுள்ளது. இந்தியாவில் இயற்கை விவசாயம் மட்டுமே செய்து வரும் விவசாயி ஒருவர், இத்தகைய பிரசினைகள் தம்மை பாதிக்காது என்று அமைதியாக இருந்து விட முடியாது. கனடா நாட்டு விவசாயி பெர்சி ஷ்மெய்சர்-ஐப்போல நம் நாட்டு இயற்கை விவசாயிகளும் அவர்கள் செய்யாத தவறுக்கு (நிறுவனங்களின் அத்துமீறலுக்கு) தண்டனை அனுபவிக்கும் நிலை உருவாகி வருகிறது. இந்தியாவின் பிரபல வேளாண்மை விஞ்ஞானி என்று அறியப்படுபவரும், இந்திய அரசின் வேளாண்மை கொள்கை குறித்த முக்கிய ஆலோசகருமான எம். எஸ். சுவாமிநாதன் உட்பட மரபணு மாற்ற தொழில் நுட்பத்தின் ஆதரவாளர்கள் அனைவரும் இந்த விவகாரத்தில் மவுனம் சாதிக்கின்றனர். இந்திய சட்டங்கள் அனைத்தும் உலக வங்கியின் கட்டளைக்கேற்ப மாற்றப்படும் இன்றைய சூழலில் நமது விவசாயிகளும் விதைத்திருடர்களாக சித்தரிக்கப்பட்டு சிறையில் அடைக்கப் படுவார்கள். வணிகம் மற்றும் வரிக்கட்டணம் குறித்த பொது ஒப்பந்தமான காட்(GATT)டின் பரிணாம வளர்ச்சியான உலக வர்த்தக நிறுவன(WTO)த்தின் செயல்பாடுகள் இந்தியாவில் தொடர அனுமதிக்கப்பட்டால், இதுபோன்ற செய்திகளை வெகு விரைவில் நாமும் படிக்க நேரிடும். […] WTO எனப்படும் உலக வர்த்தக நிறுவனத்தில் இந்தியா உறுப்பு நாடானதன் தொடர்ச்சியாக அந்த அமைப்பு ஏற்படுத்தும் அனைத்து ஒப்பந்தங்களையும் கட்டாயமாக ஏற்றாக வேண்டிய அவல நிலையில் இந்தியா உள்ளது. இவ்வாறு உலக வர்த்தக நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட அறிவுச் சொத்துரிமை குறித்த TRIPS ஒப்பந்தத்தில் இந்தியா கையொப்பமிட்டதை தொடர்ந்து, அறிவு சொத்துரிமை தொடர்பாக ஏற்கனவே உள்ள சட்டங்களில் பல திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் பல புதிய சட்டங்களும் இயற்றப்பட்டு வருகின்றன. இதன் விளைவாக இந்தியாவின் விவசாயம், வர்த்தகம், மருத்துவம் உள்ளிட்ட துறைகள் பல்வேறு மாற்றங்களை சந்தித்து வருகிறது. இவற்றில் குறிப்பாக வேளாண்மைத்துறை மற்றும் விவசாயிகளின் வாழ்நிலையில் மாற்றங்களை ஏற்படுத்தும் சட்டங்களைப்பற்றி சுருக்கமாக பார்ப்போம்… -மு. வெற்றிச்செல்வன் (vetri@lawyer.com) கிரெடிட் கார்டு - ஒரு அரசியல் பார்வை MONDAY, JULY 2, 2007 […] நாடுகளை அடிமைப்படுத்த தற்போது அணு ஆயுதங்களோ, ராணுவப்படைகளோ தேவை இல்லை. அடிமைப்படுத்த வேண்டிய நாட்டின் மக்களை உளவியல் ரீதியாக, கலாச்சார பண்பாட்டு ரீதியாக, பொருளாதார ரீதியாக அடிமைப்படுத்தி்னாலே போதுமானது. உதாரணமாக, இங்கிலாந்திடம் அடிமைகளாக இருந்த சுமார் 16 நாடுகள் மட்டுமே விளையாடும் கிரிக்கெட்டில் “உலகக் கோப்பை” போட்டி நடத்தி அடிமை மனோபாவத்தை வளர்த்தெடுக்கலாம். “அழகிப்போட்டி” என்ற பெயரில் ஆபாச கூத்துகளை நடத்தி பெண்களை பாலியல் சின்னங்களாக வெளிப் படுத்தலாம். அறிவியல் கண்டுபிடிப்புகளான கம்ப்யூட்டர், தொலைக்காட்சி உள்ளிட்ட கருவிகள் மூலம் பகுத்தறிவுக்கு எதிரான அனைத்து அம்சங்களையும் பரப்பலாம். இவற்றின் மூலம் எந்த நாட்டு மக்களையும், அவர்களின் கலாச்சார, பண்பாட்டு அம்சங்களுக்கு எதிராக சிந்திக்க, செயல்பட வைக்க முடியும். இதன் தொடர்ச்சியாக அந்நாட்டின் பொருளாதாரத்தையும் சுரண்டி அந்நாட்டை சீர்குலைக்க முடியும். இந்த செயல்திட்டத்தின் அடிப்படையில்தான் நுகர்வு கலாசாரம் இந்தியா போன்ற நாடுகளின் மீது திட்டமிட்டு திணிக்கப் படுகிறது. நமக்கு தேவையோ/ இல்லையோ, விளம்பரம் செய்யப்படும் அனைத்து பொருட்களையும் வாங்கி குவிக்க வேண்டும் என்ற கருத்து உளவியல் ரீதியாக நம்மீது திணிக்கப் படுகிறது. […] நமது இன்றைய வருமானம், இந்த தேவைகளுக்கு ஈடுகொடுப்பதாக இல்லாவிட்டாலும், கடன் பெற்றாவது அந்த பொருட்களை வாங்கி அனுபவிக்க வேண்டும் என்ற வெறி நம்முள் எழுப்பப் படுகிறது. இதற்கான கடனும் பர்சனல் லோன், கிரெடிட் கார்டு என்பது போன்ற கவர்ச்சியான பெயர்களில் நம்மிடம் திணிக்கப் படுகிறது. விவசாயிகளோ, சிறு வியாபாரிகளோ தங்கள் வாழ்க்கைக்கு அடித்தளமாக அமையும் தொழிற்கடன்களை கேட்டால் விரட்டியடிக்கும் வங்கிகள், ஊதாரித்தனமான செலவுகளுக்கு பல்வேறு பெயர்களில் கடன்களை வாரிவாரி வழங்குகின்றன. எனவே நியாயமான காரணங்களுக்கு பணம் தேவைப்படும் பலரும் நியாயமான வட்டியில் கடன் கிடைக்காத நிலையில், அநியாய வட்டி என்று தெரிந்தும் இத்தகைய பகல் கொள்ளைக்காரர்களின் பிடியில் சிக்க நேரிடுகிறது. நேர்மையாக வாழ்ந்து வரும்/வாழ விரும்பும் எந்த ஒரு நபரும் இத்தகைய மாய (கடன்) வலையில் சிக்காத வரையில் தங்கள் நேர்மையை காப்பாற்றிக் கொள்ள முடியும். ஆனால், எந்த காரணத்திற்காகவோ இந்த கடன் பொறியில் சிக்கிவிட்டால் அவர் விரும்பினாலும் நேர்மையுடன் வாழ முடியாது. இதற்கு காரணம், இந்த கடனுக்கு வங்கிகள் விதிக்கும் அநியாய வட்டியே காரணமாகும். வட்டியே அதிகம் என்ற நிலையில், இந்தக் கடன் தவணையை உரிய காலத்தில் கட்டத்தவறும் பொது மக்களுக்கு விதிக்கப்படும் அபராதங்களை, பகல் கொள்ளை என்ற வார்த்தையில் கூட அடக்க முடியாது. இந்த விவகாரத்தில் அரசு என்ன கடமை ஆற்றுகிறது என்று பார்த்தால், வங்கிகள் அடிக்கும் கொள்ளைக்கும் 4 சதவீத சேவை வரி விதித்து, மத்திய அரசு தனது இறையாண்மையை பாதுகாத்துக் கொள்கிறது.இவ்வாறு அரசு அங்கீகாரத்துடன் மக்களை கொள்ளை அடிக்கும் வங்கிகள், மக்களிடம் கடன் வசூல் நடத்தும் விதம், வெள்ளையர் காலத்தில் நடந்த வரி வசூலே மேல் என்று கூறத்தக்க விதத்தில் உள்ளது. வங்கிகளை கட்டுப்படுத்தும் அதிகாரம் கொண்ட ரிசர்வ் வங்கியோ கிரெடிட் கார்டு வணிகத்தில் வங்கிகள் செய்யும் அனைத்து முறைகேடுகளையும் கண்டறிந்து, அவற்றை தவிர்க்கக் கூடிய விதிமுறைகளையும் வகுத்துவிட்டு, அவற்றை நடைமுறைப் படுத்துவதோ, கண்காணிப்பதோ தனது வேலையில்லை என்று ஒதுங்கி விடுகிறது. எனவே, இந்த விவகாரங்களை கையாள வேண்டிய பொறுப்பு மக்களிடமே உள்ளது. அதற்கு முன்னதாக அந்த கிரெடிட் கார்டு வணிகத்தின் பின்னுள்ள பொருளாதார அரசியல் விவகாரங்களைப் புரிந்து கொள்ள வேண்டும். இந்தியாவில் பல வங்கிகள் கிரெடிட் கார்டு வணிகத்தில் ஈடுபட்டாலும். இந்த வணிகத்திற்கான மூலதன நிதி அமெரிக்கா போன்ற நாடுகளின் முதலீடாகவே உள்ளது. எனவே, இந்த முதலீட்டிற்கான (அநியாய) வட்டியும் அந்த நாடுகளுக்கே செல்கிறது. மேலும், கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி பொதுமக்கள் வாங்கிக் குவிக்கும் பெரும்பாலான பொருட்களும் அந்நிய நாட்டுப் பொருட்களே!உலகமயம்! தனியார் மயம்! தாராள மயம்! என்ற பெயரில் உள்ளூர் கோலி சோடாவிலிருந்து, தொலைக்காட்சி/கம்ப்யூட்டர் வரையிலான அனைத்து உயர்நுட்ப தொழில்களையும் இழுத்து மூடிவிட்டு அந்நிய தயாரிப்புகளே இந்திய சந்தையில் விற்கப்படும் நிலையில், கிரெடிட் கார்டு மூலமாவும் அந்நிய தயாரிப்புகளே நமது தலையில் கட்டப்படுகிறது என்பதை சொல்லத் தேவையில்லை. இதற்கேற்ற வகையிலேயே, செய்தி மற்றும் பொழுதுபோக்கு ஊடகங்களும் இந்திய மூளைகளை முடமாக்கி, இந்திய மக்களையே நுகர்வுப் பொறிகளாக்கி அந்நிய நாட்டு நிறுவனங்களுக்கு விற்பனை செய்கின்றன. உலக வங்கி என்ற பெயரில் வளரும் நாடுகளின் அரசுகளை கொள்ளையடிக்கும் சக்திகளே, அந்நாட்டு மக்களையும் கொள்ளையடிக்கவே இதுபோன்ற நூதன, மோசடித் திட்டங்களை வகுக்கின்றன. போலிப்பகட்டற்ற எளிமையான வாழ்க்கை, யதாரத்த நிலையை புரிந்து கொள்ளும் மனப்பக்குவம், எதையும் தெளிந்தறியும் அறிவியல் மனப்பான்மை உள்ளிட்ட மனநிலையை பெறுவதே இத்தகைய சமூக, பண்பாட்டு, கலாசார, பொருளியல் தாக்குதல்களிலிருந்து நம்மை தற்காத்துக் கொள்ள உதவும் அம்சங்களாகும். அதன் மூலமே சுயசிந்தனை, உண்மையான பகுத்தறிவு, சமூக நோக்கு உள்ளிட்ட குணாதிசயங்களை நாம் பெற முடியும். நம்மை அடிமைப் படுத்தும் சமூக, பண்பாட்டு, கலாசார, பொருளியல் சீரழிவுகளுக்கான நுழைவுச் சீட்டே இந்த “கிரெடிட் கார்டு” என்பதை புரிந்து கொள்வதே இத்தகைய பிரசினைகளை தவிர்க்கும் வழியாகும்.இந்த புரிதல் மூலமாகத்தான் கிரெடிட் கார்டை நமது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதா? அல்லது கிரெடிட் கார்டின் கட்டுப்பாட்டில் நாம் வாழ்வதா? என்ற கேள்விக்கு விடை காண முடியும். இது தனிநபர் பிரசினை அல்ல என்பதையும், இந்த விவகாரம் இந்திய இறையாண்மைக்கே சவால் விடுவதையும் புரிந்து கொண்டால்தான் இந்த மாயவலையை அறுத்தெரியும் பாதை அமைக்க முடியும். நன்றி: உண்மை ஏப்ரல் 16-30, 2007 -சுந்தரராஜன் sundar@LawyerSundar.net) கிரெடிட் கார்டு - வெளியார் நடத்தும் மோசடிகள்! (வீடியோ காட்சிகளுடன்) MONDAY, JULY 2, 2007 கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி கிரெடிட் கார்டு வழங்கும் நிறுவனம் மட்டுமல்ல, வேறுபலரும் நம்மை கொள்ளையடித்து வருகின்றனர்.PHISHING மற்றும் SKIMMING ஆகிய பெயர்களில் இந்தக் கொள்ளைகள் நடைபெறுகின்றன. PHISHING என்பது வங்கிகளின் இணையதளத்தை போன்ற போலிதளங்கள் மூலமும், SKIMMING என்பது கிரெடிட் கார்டையே சட்ட விரோதமாக நகலெடுத்தும் மோசடி செய்வதாகும். இணையம் மூலமாக வங்கிப்பணிகளை மேற்கொள்வோரே PHISHING என்ற முறைகேட்டால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். வங்கிகளில் கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டு வைத்துள்ளவர்களுக்கு, ஒரு (மர்ம) மின்னஞ்சல் வரும். அதில், அந்த நுகர்வோருக்கு பரிசு விழுந்துள்ளதாகவும் அதைப் பெற்றுக்கொள்ள, மின்னஞ்சலின் கீழே உள்ள இணைப்பை கிளிக் செய்யவேண்டும் என்று கூறப்பட்டிருக்கும். அந்த இணைப்பில் வங்கியின் இணையதளத்தைப் போன்ற ஒரு போலி இணையதளம் இருக்கும். அந்த இணையதளத்தில் உங்கள் கணக்கு எண், அதன் PIN நம்பர் உள்ளிட்ட விவரங்கள் கேட்கப்பட்டிருக்கும். அந்த விவரங்களை நீங்கள் அளித்துவிட்டால், உங்கள் கணக்கில் உள்ள அனைத்து தொகையும் “அபேஸ்” ஆகிவிடும். அடுத்தவர் பணம் மீது பேராசை கொண்ட வாடிக்கையாளர்களே இதுபோன்ற மோசடிகளில் சிக்குவதாக வங்கிகள் தரப்பில் கூறப்படுகிறது. ஆனால், அவ்வாறு பேராசை கொண்ட வாடிக்கையாளர்களின் மின்னஞ்சல் முகவரிகள் எவ்வாறு மோசடிக்காரர்களுக்கு தெரிந்தது? என்ற கேள்விக்கு விடை கிடைக்காது. வாடிக்கையாளர்களின் மின்னஞ்சல் முகவரிகள் மோசடிக்காரர்களுக்கு கிடைத்ததில் வங்கி அதிகாரிகளின் பங்கு என்ன? என்ற கேள்விக்கும் பதில் இல்லை. இது எப்படி இருப்பினும், வங்கியின் இணையதளத்திற்குள் லாக்-இன் செய்ய தேடுபொறிகள் மூலம் நேரடியாகத்தான் செல்லவேண்டும். இதுபோன்ற மெயில்களில் உள்ள இணைப்பு மூலமாக திறக்கும் இணைய தளங்கள் போலியானவை என்பதை புரி்ந்து கொள்ள வேண்டும். SKIMMING என்ற பெயரில் கிரெடிட் கார்டையே நகலெடுக்கும் மோசடி மிகவும் நூதனமானது. கிரெடிட் அல்லது டெபிட் கார்டின் பின்புறமுள்ள கருப்பு நிற காந்தப்பட்டையில்தான் வாடிக்கையாளரின் அனைத்து ரகசிய விவரங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த ரகசிய விவரங்களை நகலெடுக்கும் வெளிநாட்டுக்கருவிகள் சுமார் 19,000 ஆயிரம் ரூபாய் விலையில் கிடைக்கிறது. […] அமெரிக்காவில் கிடைக்கும் இந்த கருவிகளை ஆன்லைன் மூலமாக யார் வேண்டுமானாலும் வாங்க முடியும். இந்த கருவியை பயன்படுத்தி ஒரு கிரெடிட் கார்டின் ரகசிய தகவல்களை கவர்ந்தபின், ஒரு கம்ப்யூட்டருடன் அக்கருவியை இணைத்து குறிப்பிட்ட கிரெடிட் கார்டின் அனைத்து தகவல்களையும் அறிய முடியும். பின்னர் இந்த தகவல்களை வெற்று கார்டுகளில் பொருத்தி ஏடிஎம்மில் பணம் எடுக்கவோ, கடைகளில் பொருட்கள் வாங்கவோ முடியும். இதற்கான வீடியோ காட்சியை காண கீழுள்ள இணைப்பை கிளிக் செய்யவும். http://www.youtube.com/watch?v=sexUus0igWs இவ்வாறு வாடிக்கையாளர் ஒருவரின் ரகசிய விவரங்களையும் திருட்டுத்தனமாக தெரிந்து கொண்டவர்கள், வாடிக்கையாளரின் கணக்கில் உள்ள அனைத்து தொகையையும் மோசடியாக கவர்ந்து விடுகின்றனர். […] இது போன்ற மோசடிகள் தற்போது இந்தியாவிலும் அதிகரித்து வருகிறது. கடந்த சில மாதங்கள் முன்பு இத்தகைய மோசடியில் ஈடுபட்ட 4 இளைஞர்கள் மும்பையில் கைது செய்யப்பட்டனர். […] எனினும் இதுபோன்ற செய்திகள் வெளிவராமல் தடுப்பதில் வங்கிகள் ஆர்வம் காட்டுகின்றன. இதுபோன்ற செய்திகள் வெளியானால் கிரெடிட் கார்டு விற்பனையும். கிரெடிட் கார்டை பயன்படுத்தி நடைபெறும் வணிகமும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகும் என்பதால் இதுபோன்ற செய்திகள் புறக்கணிக்கப் படுகின்றன. ஆக, வாடிக்கையாளர் நலனைவிட, வர்த்தகமும் (கொள்ளை) லாபமுமே கிரெடிட் கார்டு வழங்கும் நிறுவனங்களின் முதன்மை நோக்கமாக உள்ளதை அனைவரும் அறியலாம். எனவே, கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்கள் வங்கிகளிடம் மட்டும் ஜாக்கிரதையாக இருந்தால் போதாது; கிரெடிட் கார்டை பயன்படுத்தும் அனைத்து தருணங்களிலும், அனைத்து நபர்களிடமும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குறிப்பாக உங்கள் கண்பார்வையிலேயே கிரெடிட் கார்டுகள் இருக்கும்படி பார்த்துக் கொள்வதே பாதுகாப்பானது. -சுந்தரராஜன் (sundararajan@lawyer.com) கிரெடிட் கார்டு குறித்த நுகர்வோர் பாதுகாப்பு தகவல்களுக்கு http://www.creditcardwatch.org/ என்ற இணைய தளத்தைப் பார்க்கவும். மாறும் சட்டங்களும், பறிபோகும் விவசாயிகளின் உரிமைகளும்…! (பகுதி-2) TUESDAY, JULY 3, 2007 காப்புரிமை சட்டம் (PATENT ACT) […] இந்தியாவின் காப்புரிமை சட்ட வரலாறு 1856ம் ஆண்டில் தொடங்குகிறது. இந்தியாவில் அன்றைய ஆட்சியாளர்களான ஆங்கிலேயர்கள் தங்கள் வர்த்தக நலன்களை பாதுகாக்க இந்த சட்டத்தை அறிமுகப்படுத்தினர். இந்த சட்டம் 1859, 1872, 1883 ஆண்டுகளில் பல மாற்றங்களை சந்தித்துள்ளது. இந்த மாற்றங்களை உள்ளடக்கிய ஒரு சட்டம் 1911ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. இந்தியா சுதந்திரம் அடைந்து சுமார் 22 ஆண்டுகளுக்கு பிறகு தற்போதைய காப்புரிமை சட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. ஒரு பொருளையோ, அதன் பயன்பாட்டையோ முதன்முறையாக கண்டறியும் ஒருவர், உரிய அதிகார அமைப்புகளிடம் பதிவு செய்து பெறும் உரிமை, காப்புரிமை எனப்படுகிறது. இவ்வாறு காப்புரிமை பெற்ற அப்பொருளை பதிவு செய்தவர் மட்டுமே தயாரித்து விற்பனை செய்ய முடியும். அவரைத்தவிர வேறு யாரும் அப்பொருளை 20 ஆண்டுகளுக்கு உற்பத்தி செய்வதை இந்த சட்டம் தடை செய்கிறது. பழைய சட்டத்தின்படி, விவசாயம் மற்றும் மருத்துவத்துறை தொடர்பான கண்டுபிடிப்புகளுக்கு இந்த சட்டத்தின்கீழ் 7 ஆண்டுகள்வரை மட்டுமே காப்புரிமை வழங்கப்பட்டது. மேலும், இந்த சட்டத்தின்கீழ் விவசாயம் மற்றும் மருத்துவத்துறை சார்ந்த புதிய பொருட்களை கண்டுபிடிப்பவர்கள், அப்பொருளை தயாரிக்கும் முறையை (மட்டுமே) PROCESS PATENT என்ற பெயரில் காப்புரிமை பதிவு செய்யலாம். இவ்வாறு காப்புரிமை பெற்ற ஒரு பொருளை வேறு ஒருவர், அதே முறையில் தயாரிக்க முடியாது. ஆனால், அதே பொருளை வேறு முறைகளில் தயாரித்து விற்பதையோ, பயன்படுத்துவதையோ யாரும் தடுக்க முடியாது. இந்த முறையின் கீழ் விலை உயர்ந்த வெளிநாட்டு மருந்துப்பொருள் ஒன்றை உள்நாட்டு மருந்து தயாரிப்பாளர்கள் வேறு முறைகளில் தயாரித்து குறைந்த விலையில் விற்பனை செய்யும் வாய்ப்பு முன்னர் இருந்தது. ஆனால், உலக வர்த்தக நிறுவனத்தின் ஒரு பகுதியான TRIPS ஒப்பந்தத்தில் இந்தியா கையொப்பம் இட்டதைத் தொடர்ந்து தற்போது PROCESS PATENT என்ற பொருள் தயாரிப்பு முறையோடு கூடுதலாக PRODUCT PATENT என்ற பெயரில் பொருளுக்கே காப்புரிமை வழங்கும் முறை அமலுக்கு வந்துள்ளது. இந்த புதிய முறையின் கீழ் காப்புரிமை பதிவு பெற்ற மருந்து அல்லது விதை போன்ற ஒரு பொருளை காப்புரிமை பெறாத மற்றவர்கள் வேறெந்த முறையிலும் தயாரிப்பது தடை செய்யப்படுகிறது. இதனால் மருந்து அல்லது விதைப்பொருட்களுக்கு காப்புரிமை பெற்றவர்களே விலை நிர்ணயம் செய்யும் உரிமை பெறுகின்றனர். மேலும், இயற்கையாக தோன்றும் தாவரங்கள் மற்றும் விலங்குகளுக்கு காப்புரிமை வழங்கத் தேவையில்லை என TRIPS ஒப்பந்தம் கூறுகிறது. ஆனாலும் இயற்கையில் அமையாத/ மனித முயற்சிகளால் மேற்கொள்ளப்படும் உயிரியல் சாராத முறை (NON-BIOLOGICAL) மற்றும், நுண்ணுயி்ர் முறை (MICRO-BIOLOGICAL) மூலம் இயற்கை பண்புகள் மாற்றி அமைக்கப்பட்ட தாவரம் உள்ளிட்ட உயிரினங்களுக்கு காப்புரிமை வழங்கவேண்டும் என்று அந்த ஒப்பந்தம் வலியுறுத்துகிறது. […] இதன்படி இந்தியாவும் தனது காப்புரிமை சட்டத்தை மாற்றி அமைத்துள்ளது. உயிரியல் அற்ற முறை (NON-BIOLOGICAL) என்பது மறைமுகமாக GENETICALLY MODIFIED ORGANISM எனப்படும் மரபணு மாற்றப்பயிர்களுக்கு காப்புரிமை வழங்கவே உதவுகிறது. மேலும் TRIPS ஒப்பந்தத்தின்படி காப்புரிமை பதிவு செய்யப்பட்ட பயிர்களை 20 வருட காலத்திற்கு வேறு யாரும் உற்பத்தி செய்யவோ, விற்பனை செய்யவோ இச்சட்டம் தடை விதிக்கிறது. (TRIPS ஒப்பந்தத்திற்கு முன் இது 7 வருடமாக இருந்தது) இந்தியாவின் காப்புரிமை சட்டத்தின்கீழ் நேரடியாக தாவரம், விதைகள், பயிர்வகைகள், அவை இயற்கையாக விளையும் முறை போன்றவற்றிற்கு காப்புரிமை வழங்குவதில்லை. தாவரத்தின் இயற்கையான போக்கில் அமையாமல், மனித செயல்பாடுகள் மூலம் ஏற்படும் மாற்றங்களை NON-ESSENTIAL BIOLOGICAL PROCESS என்று வகைப்படுத்துகின்றனர். இது போன்ற செய்முறைகளுக்கு காப்புரிமை பெற முடியும். ஆக GMO போன்ற மரபணு மாற்றப்பட்ட பயிர்களுக்கு காப்புரிமை பெற உதவுகிறது. அடுத்தப்படியாக TRIPS ஒப்பந்தம், தாவரங்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறையையும் காப்புரிமை பெறத்தக்கதாக கூறியுள்ளது. இதன்படி நமது காப்புரிமை சட்டத்திலும் 2002ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட மாற்றத்தின்படி தாவரங்களுக்கான சிகிச்சை முறைகளுக்கும் காப்புரிமை வழங்கப்படுகிறது. இதன் மூலம் தாவரங்களுக்கு மட்டுமல்ல, அவற்றிற்கான மருந்துகள், அதை பயன்படுத்தும் முறை, உபகரணங்கள், இயந்திரங்கள் ஆகிய அனைத்துக்கும் காப்புரிமை பெற முடியும். பசுமைப்புரட்சி என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்ட பல தாவரங்களும் பூச்சிகளை எதிர்கொள்ளும் திறன் அற்றவையாக இருந்தன. எனவே பூச்சிக்கொல்லி மருந்துகள், விவசாயிகளின் கூடுதல் சுமையாக இருந்தன. இதற்கு மாறாக பூச்சிகளை கொல்லும் திறன் பெற்றதாக கூறப்படும் பாக்டீரியம் துரெஞ்ஜெரிஸ் (BACTERIUM THURENGERIUS) என்ற நச்சுப்பொருளை தாவரத்தின் மரபணுவில் செலுத்தும் முறை அறிமுகப்படுத்தப் பட்டது. Bt என்று பரவலாக அழைக்கப்படும் இந்த முறை பருத்தியில் அறிமுகம் செய்யப்பட்டு தற்போது கத்தரிக்காய், பருத்தி, அரிசி உட்பட பல்வேறு பெயர்களில் இந்த உயிரிதொழில் நுட்பம் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. நவீன சட்டங்களின் கீழ் இந்த பயிர்கள் அனைத்தும் காப்புரிமை பதிவு செய்யப்பட்டுள்ளன. தற்போதைய நிலையில் இந்தியாவில் மான் சான்டோ, பாயர், மஹிகோ உள்ளிட்ட நிறுவனங்களே இத்தகைய காப்புரிமைகளை பதிவு செய்துள்ளன. இத்தகைய நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் இந்திய விவசாயம் சென்றுவிடாமல் கட்டாய உரிமைப்பதிவு (COMPULSORY LICENSING) முறை பாதுகாக்கும் என்று அரசுத்தரப்பில் கூறப்படுகிறது. இம்முறை மூலமாக, காப்புரிமை பெறப்பட்ட ஒரு பொருள் போதிய அளவில் மக்களுக்கு கிடைக்காமல் இருக்கும்போதோ, அல்லது அதிக விலைக்கு விற்கப்பட்டாலோ – மக்களின் நலன் கருதி – அதே பொருளை உற்பத்தி செய்யும் உரிமை, வேறு எவருக்கேனும் வழங்கப்படும். இதன் மூலமாக ஒரு பொருள் ஒருவரிடமே இருப்பதை கட்டுப்படுத்த முடியும் என்றும், இதனால் இத்தகைய பயிர்கள் தனியார் சிலரின் ஏகபோக கட்டுப்பாட்டில் செல்வதை தடுக்கமுடியும் என்றும் அரசுத்தரப்பில் கூறப்படுகிறது. ஆனால், காப்புரிமை சட்டத்தின்படி காப்புரிமை பெற்ற ஒரு பொருளை தயாரிக்க விரும்பி COMPULSORY LICENSING பெறும் ஒரு நபர், காப்புரிமை பெற்றவருக்கு இழப்பீடு வழங்க வேண்டும். அந்த இழப்பீட்டுத் தொகையை காப்புரிமை பெற்றவரே நிர்ணயம் செய்வார். எனவே அப்பொருளை தயாரித்து விற்பனை செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்குமோ அத்தொகையையே COMPULSORY LICENSING க்கான இழப்பீடாக கேட்பார்கள் என்பதை உண்மை. எனவே இந்த COMPULSORY LICENSING முறை விவசாயிகளுக்கோ, பொதுமக்களுக்கோ பயன்படாது என்பதே உண்மை. ஒரு பயிர் வகைக்கான காப்புரிமை பதிவு செய்யப்பட்ட உடனே அந்த பொருளுக்கான COMPULSORY LICENSING வழங்கலாம் என்றிருந்த நிலை TRIPS-க்கு பின் மாறியுள்ளது. இதன்படி காப்புரிமை பதிவு செய்து 3 ஆண்டுகள் கழிந்த பின்னரே COMPULSORY LICENSING வழங்கப்படும். இந்த 3 ஆண்டுக்காலத்தில் காப்புரிமை பெற்ற நிறுவனம் வைத்ததுதான் சட்டம். சொல்வதுதான் விலை. இவற்றை எதிர்த்து யாரும் கேள்வி கேட்க முடியாது. TRIPS ஒப்பந்தத்தின் கீழ் காப்புரிமை சட்டம் அடைந்துள்ள மாற்றத்தின் பயனாக GMO போன்ற பயிர்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களே அதிக லாபம் பெறமுடியும். இது போன்ற பயி்ர்கள் மலட்டுத்தன்மை மிக்கதாக இருப்பதால் ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகள் தங்கள் விதைப்பயிர் தேவைக்கு காப்புரிமை பெற்ற நிறுவனங்களையே சார்ந்திருக்கும் அவல நிலை ஏற்படும். மேலும் காப்புரிமை காலகட்டம் முடிந்த பின்னரும் இதுபோன்ற பயிர்கள் பொது உபயோகத்திற்கு மீண்டும் வராமல் தடுப்பதற்கு அந்த காப்புரிமை சட்டத்தின்படியே பல வழிமுறைகள் உள்ளன. காப்புரிமை பெற்ற ஒரு பொருளை வேறு முறையில் தயாரித்து மலிவு விலையில் அளிக்கும் GENERIC MANUFACTURERS-களுக்கு பழைய காப்புரிமை சட்டம் பாதுகாப்பு அளித்தது. ஆனால் புதிய சட்டதிருத்தங்கள் இந்த விவசாயிகளுக்கு பயிர்வகைகள், உரங்கள், ரசாயன உரங்கள் கிடைப்பதை தடுத்து நிறுத்தக் கூடும். இயற்கையில் விளையும் தாவரங்களை, மனித முயற்சி மூலம் குறுக்கீடு செய்து மரபணுவை மாற்றியமைக்கும் தாவரங்கள் அனைத்தும் மனிதர்களுக்கும், விலங்கினங்களுக்கும் நன்மையே செய்யும் என்று எதிர்பார்க்க முடியாது. இவை மனிதனின் கட்டுப்பாட்டிலிருந்து விடுபட்டு தீமைகளும் செய்யலாம். மரபணு மாற்றப்பட்ட உணவுகளை உட்கொண்டவர்களுக்கு தோல் நோய்கள், ஆண்மை-பெண்மை குறைபடுதல் உட்பட பல்வேறு நோய்கள் ஏற்படுவதாக செய்திகள் வருகின்றன. இவற்றை வேளாண் வி்ஞ்ஞானிகளும் ஏற்றுக்கொள்கின்றனர். […] எதிர்காலத்தில் இந்த மரபணு மாற்ற பயிர்கள், என்னென்ன தீய விளைவுகளை கொண்டுவரும் என்பதற்கோ, அவற்றை தடுக்க என்ன வழி என்பதற்கோ யாரிடமும் பதில் இல்லை. இத்தகைய குறைபாடுள்ள உணவுப்பொருட்களை உற்பத்தி செய்பவர்கள் மீது உணவுப்பொருட்கள் கலப்பட தடைச்சட்டம், நுகர்வோர் பாதுகாப்பு சட்டம், குற்றவியல் சட்டம், தீங்கியல் சட்டம் உள்ளிட்ட சட்டங்களின் மூலம் வழக்கு தொடரவும், பிரசினைக்கு தீர்வு காணவும் வழி இருந்தது. ஆனால் TRIPS ஒப்பந்தம் இந்திய குடிமக்களுக்கான இந்த உரிமைகளை பெருமளவில் குறைக்கின்றது. TRIPS ஒப்பந்தப்படி இத்தகைய பிரசினைகளை ஏற்படுத்தும் தாவரங்களின் பதிவுகளை ரத்து செய்ய மட்டுமே முடியும். பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு கோர முடியாது. காப்புரிமை போன்ற அறிவுச்சொத்துரிமை சட்டங்கள் விதைகளை தனிநபரின் உரிமையாக வாழ்நாள் முழுவதும் வைத்திருக்க வழி காட்டுகிறது. குறிப்பிட்ட காலத்திற்கு பின் காப்புரிமை பதிவுபெற்ற எந்த பொருளும், எந்த தடையுமின்றி பொதுமக்கள் உபயோகத்திற்கு வந்துவிட வேண்டும் என்பதை அந்த சட்டத்தின் அடிப்படை விதி. இருப்பினும் புதிதாக திருத்தம் செய்யப்பட்டுள்ள காப்புரிமை சட்டம் சில பின் வழிகளின் மூலம் காப்புரிமை பெற்ற பொருள், ஒரு தனி நபரின் கட்டுப்பாட்டிலேயே தொடர்வதற்கு உதவுகிறது. எந்த ஒரு கண்டுபிடிப்பையும் அதன் தொழில் நுட்பரீதியாக மேம்படுத்தியிருந்தாலோ, அல்லது பொருளாதார முக்கியத்துவம் ஏற்பட்டிருந்தாலோ அந்த கண்டுபிடிப்பிற்கு மீண்டும் காப்புரிமை பெறலாம். எனவே GMO போன்ற மரபணு மாற்றப்பட்ட தாவரப்பொருட்களின் காப்புரிமையை, பன்னாட்டு நிறுவனங்கள் எளிதில் நீடித்துக் கொண்டே போகக்கூடும். -மு. வெற்றிச்செல்வன் (vetri@lawyer.com) மாறும் சட்டங்களும், விவசாயிகளின் பறிபோகும் உரிமைகளும்…!(பகுதி 3) WEDNESDAY, JULY 4, 2007 மரபணு தொழில்நுட்பத்திற்கான அங்கீகரிப்பு குழு (Genetic Engineering Approval Committee) மரபணு மாற்றப்பட்ட பயிர்களை கண்காணிக்கவும் அவற்றை முறைப்படுத்தவும் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சரவைக்கு கீழ் இயங்கும் ஒரு அமைப்பே, மரபணு தொழில்நுட்பத்திற்கான அங்கீகரிப்பு குழு(GEAC). இந்தக்குழு, மரபணு மாற்றப்பட்ட பயிர்களை சோதித்து அனுமதி அளித்தபின்பே அவற்றை சந்தையில் விற்க முடியும். சோதனை முறையாக நான்கு ஆண்டுகள் மரபணு மாற்றப்பட்ட பயிர்வகைகள் பயிரிடப்பட்டு அதன் விளைவுகளை ஆராய்ந்து இக்குழு அவற்றுக்கு அனுமதி அளிக்க வேண்டும். இதுபோன்ற சோதனைகளை தனியார் நிலங்களில் மேற்கொள்ளலாம் என்ற நிலை இந்தியாவில் உள்ளது. ஆனால், அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் பல ஐரோப்பிய யூனியன் நாடுகளில் மரபணு மாற்ற சோதனைகளை சாதாரண விவசாய நிலங்களில் சோதனை அடிப்படையில் பயிரிடுவது தடை செய்யப்பட்டுள்ளது. ஆய்வுப்பணிக்கென ஒதுக்கப்பட்ட நிலங்களில் மட்டுமே இத்தகைய பரிசோதனைகளை நடத்தமுடியும். […] இந்தியாவிலோ, நில உரிமையாளருக்கும், விவசாயிக்குமகூட தெரியாமல் மரபணு மாற்றப்பயிர்கள் சோதனை அடிப்படையில் பயிரிடப்படுகின்றன. அமெரிக்கா போன்ற நாடுகளில் சோதனைக்கூட எலி, முயலை வைத்து நடைபெறும் பரிசோதனைகள், இந்தியாவி்ல் மனிதர்களை வைத்து நடைபெறுகின்றன, அதுவும் அரசின் அனுமதியோடு. மரபணு மாற்றப்பட்ட பயிர்களை முறைப்படுத்துவதில் ஐரோப்பிய யூனியன் பல கடுமையான சட்டங்களை இயற்றியுள்ளது. பல ஐரோப்பிய நாடுகளில் மரபணு மாற்றப்பட்ட பயிர்களை, அவற்றை தயாரிக்கும் நிறுவனத்தின் நிலங்களிலேயே சோதனை செய்யவேண்டும் என்ற முறை பின்பற்றப்படுகிறது. மேலும், மரபணு மாற்றப்பட்ட உணவு வகைகளை மக்களுக்கு விற்பனை செய்யும்போது மரபணு மாற்றப்பட்டது என்ற முத்திரையை (LABELLING) கட்டாயம் இடவேண்டும் என்று அந்நாட்டு சட்டம் வலியுறுத்துகிறது. இதன்மூலம் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் குறித்த முழுவிபரங்களையும் அறிந்து கொள்ளும் பொதுமக்கள், தங்களுக்குத் தேவையான உணவினை தாங்களே தேர்ந்தெடுத்துக் கொள்ளும் உரிமையை ஐரோப்பிய நாடுகள் வழங்கியுள்ளன. இதுபோன்ற உரிமை இந்தியாவில் வழங்கப்பட வில்லை என்பது வேதனைக்குரிய செய்தியாகும். மரபணு மாற்றப்பட்ட பயிர்களை உலக வர்த்தக நிறுவனம் ஆதரிப்பதால் இவற்றை தடைசெய்வது உறுப்பு நாடுகளுக்கு இயலாத காரியம். மரபணு மாற்றப்பட்ட உணவினால் மனிதர்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாகக் கூறி அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட உணவு வகைகளுக்கு கடந்த 1999ம் ஆண்டு ஐரோப்பிய நாடுகள் தடை விதித்தன. இதை எதிர்த்து அமெரிக்கா, உலக வர்த்தக கழகத்தில் முறையீடு செய்தது. இந்த முறையீட்டை விசாரித்த உலக வர்ததக கழகம், ஐரோப்பாவின் தடை நடவடிக்கைகள் உலக வர்ததக கழக நெறிமுறைகளுக்கு எதிரானது என்று கூறி தடையை நீக்குமாறு உத்தரவிட்டது. அமெரிக்காவில் உற்பத்தியான மரபணு மாற்றப்பயி்ர்களை தடை செய்ய ஐரோப்பிய நாடுகளாலேயே முடியவில்லை என்றபோது இந்தியா போன்ற ஏழை நாடுகளின் நிலையை சொல்லத் தேவையில்லை. தாவர வகைகள் பாதுகாப்பு மற்றும் உழவர்களின் உரிமைக்கான சட்டம் (PROTECTION FOR PLANT VARIETIES AND FARMERS RIGHTS ACT) 2001 இச்சட்டத்தின் பெயரிலேயே கூறப்பட்டுள்ளதைப்போல தாவரவகைகளையும், உழவர்களின் உரிமைகளையும் பாதுகாக்க வேண்டும் என்று கூறி இந்த சட்டம் கொண்டு வரப்பட்டது. தாவரங்களுக்கு அவற்றின் இயல்பான தன்மையில் காப்புரிமை வழங்க முடியாத சூழ்நிலையில் அந்த தாவரங்களை பதிவு செய்வதற்காக கொண்டுவரப்பட்ட இந்த சட்டம், ஏறக்குறைய காப்புரிமை சட்டத்தின் மறு வடிவமாகவே உள்ளது. இந்த சட்டத்தின் கீழ் ஒரு தாவரத்தை பதிவு செய்ய, அத்தாவரம் முன்பே தெரிந்த எந்த ஒரு தாவரத்தின் குணாதிசயங்களையும் பெற்றிருக்கக் கூடாது. ஒரே ஒரு மாறுபட்ட குணாதிசயத்தை அந்த தாவரம் பெற்றிருந்தாலும் இந்த சட்டத்தின் கீழ் அந்த தாவரத்தை பதிவு செய்ய முடியும். முன்பே தெரிந்த ஒரு பயி்ர் வகையின் மூலக்கூறை அறிவியல் வளர்ச்சியின் மூலம் சிறிது மாற்றம் செய்தாலே அதை இச்சட்டத்தின் கீழ் பதிவு செய்து அந்த தாவரத்தை தனி உடைமை ஆக்கிக்கொள்ளலாம். இந்த சட்டத்தின் கீழ் ஒரு தாவரவகையை பதிவு செய்து கொண்டால் 15 ஆண்டுகாலம் அவரே அதற்கு முழு உரிமை பெறுகிறார். அவற்றின் உற்பத்தி, விற்பனை போன்றவை அந்த உரிமையில் அடங்கும். காப்புரிமை சட்டம் போலவே இந்த சட்டத்தின் கீழும் COMPULSORY LICENSING முறை உள்ளது. ஆனால் இந்த சட்டம் விதைகளை வணிக நோக்கில் உற்பத்தி செய்யும் BREEDER எனப்படும் உற்பத்தியாளர்களுக்கே அதிக பாதுகாப்பு அளிக்கிறது. காப்புரிமை சட்டத்தைப்போலவே இந்த சட்டத்திலும் தாவரம் பதிவு செய்யப்பட்டு 3 ஆண்டுகளுக்கு பிறகே COMPULSORY LICENSING-ல் பதிவு அனுமதிக்கப்படுகிறது. மேலும் PLANT BREEDER விரும்பினால் இந்த சட்டத்தின் கீழ் கூடுதலாக 12 மாத அவகாசம் பெற்றுக்கொள்ளலாம். காப்புரிமை சட்டத்தில் உள்ளது போலவே COMPULSORY LICENSING பெறுபவர் தாவரத்தை பதிவு செய்தவருக்கு அளி்க்க வேண்டிய இழப்பீட்டுத் தொகையை காப்புரிமை பெற்றவரே நிர்ணயம் செய்வார். -மு. வெற்றிச்செல்வன் (vetri@lawyer.com) கொலை செய்வதற்கு அதிகாரம் இல்லை! FRIDAY, JULY 6, 2007 “இந்திய காவல்துறையினருக்கு, குற்றங்கள் குறித்த சாட்சிகளையும், சான்றுகளையும் தேடி அலைவதைவிட – நிழலில் சுகமாக அமர்ந்து கொண்டு அவர்களிடம் அகப்பட்ட எளியமக்களின் கண்களில் மிளகாய்ப்பொடியை தூவுவதே மகிழ்ச்சி அளிக்கிறது” என்று சர் ஜேம்ஸ் ஸ்டீஃபன் என்பவர் கடந்த 1883ம் ஆண்டில் எழுதிய “குற்றவியல் சட்ட வரலாறு” என்ற புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது. சுமார் 125 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட இந்த நிலையில் ஏதேனும் வரவேற்கத்தக்க மாற்றம் ஏற்பட்டுள்ளதா என்று பார்த்தால், நிலைமை மிக மோசமாக பின்னடைந்துள்ளதாகவே தெரிகிறது. மிளகாய்ப்பொடியை தூவியாவது விசாரிப்பதைவிட போலிமோதல்களில் சுட்டுக்கொல்வதே எளிது என்று தற்போதைய காவல்துறை முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. சுட்டுக் கொலை செய்யப் பட்டவர்களிடம் விசாரணை நடத்தியிருந்தால் நாட்டின் உயர்மட்ட பதவியில் இருப்பவர்களும்கூட சிக்கலாம் என்ற நிலையில் இந்த என்கவுன்டர் கொலைகள் நடப்பதையே, சந்தனக்கடத்தல் வீரப்பன் படுகொலை உள்ளிட்ட பல்வேறு போலிஎன்கவுன்டர் கொலைகளும் நிரூபிக்கின்றன. இந்நிலையில், ஐ.நா. அவையில் சித்ரவதைக்கு எதிரான உடன்படிக்கை நிறைவேற்றப்பட்ட தினமான ஜூன் 26ம் நாள் “சித்ரவதையால் பாதிக்கப்பட்டோருக்கான ஆதரவு தினமா”க மனித உரிமை அமைப்புகளின் தேசிய கூட்டமைப்பு சார்பில் மும்பை நகரில் கருத்தரங்கு நடைபெற்றது. […] மும்பை உய்ர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி ஹாஸ்பெட் சுரேஷ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் நாட்டின் பல பகுதிகளிலுமிருந்து மனித உரிமை ஆர்வலர்களும், மனித உரிமை மீறல்களில் பாதிக்கப்பட்டவர்களும், அவர்களின் குடும்பத்தினரும் கலந்து கொண்டனர். கொலை செய்வதற்கு அதிகாரம் இல்லை! பயங்கரவாதிகள், கூலிப்படையினர், கிரிமினல் குற்றவாளிகள் ஆகிய யாரையும் கொலை செய்வதற்கு இந்தியாவில் எந்த ஒரு சட்டமும் காவல்துறையினருக்கோ, ராணுவத்துக்கோ, வேறு எவருக்குமோ அதிகாரம் அளிக்கவில்லை என்று தமது உரையை தொடங்கிய நீதிபதி ஹாஸ்பெட் சுரேஷ், தடா-பொடா போன்ற சர்ச்சைக்குரிய சட்டங்களில் கூட இத்தகைய கொலைகள் அனுமதிக்கப்படவில்லை என்று குறிப்பிட்டார். காவல்துறையினர் நடத்தும் (போலி) என்கவுன்டர் கொலைகளை கொலை வழக்காகவே பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்திய நீதிபதி சுரேஷ், எந்த சட்டத்தின் கீழும் இந்த நடைமுறையிலிருந்து காவல்துறைக்கு விலக்களிக்கப்படவில்லை என்று சுட்டிக்காட்டினார். இத்தகைய என்கவுன்டர்களில் அதிக அளவில் சிறுபான்மை மதத்தினரும். தலித் மக்களுமே கொல்லப்படுகின்றனர் என்று அவர் வருத்தம் தெரிவித்தார். எனினும் காவல்துறையினரும், பத்திரிகை-செய்தித் துறையினரும் என்கவுன்டர் கொலைகளை நியாயப்படுத்த முயற்சிப்பதற்கு அவர் கண்டனம் தெரிவித்தார். இத்தகைய முறைகேடுகளை கொள்கையளவில் கண்டிக்கும் நீதிமன்றங்களே, உண்மை அறியும் சோதனை என்ற பெயரில் – இந்திய குடிமகனுக்கு அரசியல் சட்டம் வழங்கும் அடிப்படை உரிமைகளை வழங்க மறுக்கின்றன என்று அவர் குற்றம் சாட்டினார். ஐக்கிய நாடுகள் சபை கடந்த 1984ம் ஆண்டு நிறைவேற்றிய சித்ரவதைக்கு எதிரான உடன்படிக்கையை ஏற்று அமல் படுத்தவேண்டும் என்று மத்திய அரசை, பொறுப்புள்ள குடிமக்கள் அனைவரும் வற்புறுத்துவதே, இத்தகைய பிரசினைகளை அகற்றும் வழியாகும் என்றும் நீதிபதி ஹாஸ்பெட் சுரேஷ் தெரிவித்தார். அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக பேராசிரியர் அர்ஷி கான், நாட்டில் ஒற்றுமையாக வாழும் இந்து-முஸ்லிம் மக்களிடையே பிளவை ஏற்படுத்துவதற்கான உளவியல் ரீதியான பணியில் காவல்துறை-ராணுவம் போன்ற அரசு அமைப்புகளும், செய்தி ஊடகங்களும் ஈடுபட்டு வருவதாக குற்றம் சாட்டினார். கடந்த 1970ம் ஆண்டுவாக்கில் நாட்டின் சில பகுதிகளில் தொடங்கிய என்கவுன்டர் கலாசாரம், தற்போது நாடு முழுவதும் பரவி வருவதை அவர் சுட்டிக்காட்டினார். காஷ்மீர் பகுதியில் சுமார் 10 ஆயிரம் பேரும், பஞ்சாபில் சுமார் 2 ஆயிரத்து 500 பேரும் கொல்லப்பட்டுள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார். டெல்லி பல்கலைக்கழக பேராசிரியர் சம்சுல் இஸ்லாம் பேசும்போது, இது போன்ற மனித உரிமை மீறல்களில் பாதிக்கப்படும் மதச்சிறுபான்மையினர், தலித் மக்கள் ஆகியோர் ஒன்றுபட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். தனித்து செயல்படுவதும், பரந்த மனப்பான்மையற்று இருப்பதும் அனைவரது எதிர்காலத்துக்கும் ஆபத்தாக விளையும் என்று அவர் எச்சரித்தார். கொல்லப்பட்டவர்களின் பட்டியல் தயாரிக்க வேண்டும் அனைத்திந்திய கிறிஸ்தவ காங்கிரஸின் பொதுச்செயலாளர் டாக்டர் ஜான் தயாள், அனைத்திந்திய அளவில் காவல்துறை, ராணுவம் மற்றும் துணை ராணுவப்படையினரால் படுகொலை செய்யப்பட்டவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். பெங்களூருவைச் சேர்ந்த பேராசிரியர் நகரி பாபையா, முன்னாள் பிரதமர் வாஜ்பாய், குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி போன்றவர்களை கொலை சதித்திட்டம் தீட்டியதாக கூறி சிலர் என்கவுன்டரில் கொல்லப்பட்டனர். ஆனால் அந்த சதித்திட்டத்திற்கான ஆதாரங்கள் எதுவும் கொடுக்கப்படவில்லை என்று சுட்டிக்காட்டினார். மனித உரிமைகளுக்கு எதிரான மனுதர்மவாதிகள் இந்துக்களுக்கும், மனித குலத்திற்கும் எதிரானவர்கள் என்று கூறிய அவர், இந்துத்துவ சக்திகள் அரசு, காவல்துறை, ராணுவம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் ஊடுருவி வருவதாக தெரிவித்தார். அரசோடு முரண்பட்ட கொள்கைகளை கொண்டவர்களை என்கவுன்டரில் கொலை செய்வது அதிகரித்து வருவதாக கூறிய பேராசிரியர் பாபையா, இந்திய அரசியல் சட்டத்தில் கூறப்பட்ட கருத்துரிமை உள்ளிட்ட அனைத்து உரிமைளும் கேள்விக்குறியாவதை கோடிட்டு காட்டினார். ஆந்திர பிரதேச சிவில் உரிமைக்கழகத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் சுரேஷ் பேசுகையில், நாடாளுமன்ற அரசியலின் செயல்பாடுகள் தோல்வி அடையும்போது நக்ஸல்பாரிகள் கேள்வி எழுப்புகின்றனர். அந்த கேள்விகளுக்கு சரியான பதில் இல்லாதபோது கேள்வி எழுப்புபவர்கள் என்கவுன்டர்களில் படுகொலை செய்யப் படுகின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டார். என்கவுன்டர் கொலைகளை இந்திய தண்டனை சட்டம் பிரிவின் 302ன் படி கொலை வழக்காக பதிவு செய்ய வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவு, ஆந்திர பிரதேச சிவில் உரிமைக்கழகத்தால் பெறப்பட்டது என்று சுட்டிக்காட்டிய வழக்கறிஞர் சுரேஷ், ஆனால் அந்த உத்தரவை அரசோ, காவல்துறையோ இதுவரை மதிக்கவில்லை என்றும் குற்றம் சாட்டினார். தமிழ்நாட்டில் மனித உரிமை மீறல்கள் ! […] தமிழ்நாடு மக்கள் உரிமை கூட்டமைப்பின் தலைவர் புதுவை கோ. சுகுமாரன், தமிழகத்தில் நடந்த என்கவுன்டர் படுகொலைகளை பட்டியலிட்டார். இந்த என்கவுன்டர் கொலைகளை முறைப்படி கொலை வழக்காக பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவுகளையும், தேசிய மனித உரிமை ஆணையத்தின் வழிகாட்டு நெறிமுறைகளையும் அனைத்து ஆட்சியாளர்களும் திட்டமிட்டு புறக்கணிப்பதை சுட்டிக்காட்டினார். மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் சந்தன கடத்தல் வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி பேசும் போது, வீரப்பனை போன்றவர்களை உருவாக்குவதில் அரசியல்வாதிகளே பெரும் பங்கு வகிப்பதாக கூறினார். எனினும் அந்த அரசியல்வாதிகள் எந்த விசாரணைக்கும் உட்படாமல் தப்பிவிடுவதாகவும் அவர் வருத்தம் தெரிவித்தார். […] என்கவுன்டர் கொலைகளை செயல்படுத்துவதில் கட்சிபேதம் இன்றி அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றுபட்டு நிற்பதாக அவர் குற்றம் சாட்டினார். அரசு மற்றும் காவல்துறையினரின் முறைகேடுகளை தட்டிக் கேட்பவர்களும், சிறுபான்மை மற்றும் தலித் மக்களும் இந்த முறைகேடுகளுக்கு அதிக அளவில் என்கவுன்டர் கொலைகளுக்கு பலியாவதாக வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி குறிப்பிட்டார். முத்துலட்சுமியைத் தொடர்ந்து அகமதாபாத்தில் என்கவுன்டரில் கொல்லப்பட்ட பிரானேஷ் குமார் என்ற ஜாவேத்-இன் ஜாவேத்தின் மனைவி சஜிதா, பெங்களூரு காவல்துறையால் படுகொலை செய்யப்பட்ட அப்துல் ரவூஃப்-இன் மனைவி நூரி ஆகியோர் பர்தா உடைக்குள்ளிருந்தவாறை மனித உரிமை மீறல்களுக்கு எதிரான குரல் எழுப்பினர். பிரானேஷ் குமார் என்ற ஜாவேத்-இன் தந்தை கோபிநாத பிள்ளை, மங்களூர் காவல்துறையால் படுகொலை செய்யப்பட்ட சுதீரின் தாய் பிலோமினா ஆகியோர் தங்கள் மகன்களின் வாழ்க்கையை காவல்துறை சட்டவிரோதமாக சூறையாடியதை உருக்கமாக எடுத்துரைத்தனர். தீர்மானங்கள் நிகழ்ச்சியின் நிறைவில் தேசிய மற்றும் மாநில மனித உரிமை ஆணையங்களை வலுப்படுத்தும் சட்டங்களை இயற்ற வேண்டும்; காவல் துறையினர் மற்றும் படையினர் நடத்தும் என்கவுன்டர் படுகொலைகளுக்கு முடிவு கட்ட வேண்டும்; அதற்கேற்ற வகையில் இந்திய தண்டனை சட்டம் உள்ளிட்ட சட்டங்களை மாற்றியமைக்க வேண்டும்; காவல்துறை மற்றும் ஆயுதப்படையினரால் என்கவுன்டரில் கொல்லப்பட்டவர்களின் பட்டியலை தேசிய அளவில் தயாரித்து வெளியிட வேண்டும்; அவ்வாறு கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினரின் மறுவாழ்வுக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும்; ஐக்கிய நாடுகள் சபை கடந்த 1984ம் ஆண்டு நிறைவேற்றிய சித்ரவதைக்கு எதிரான உடன்படிக்கையை ஏற்று அமல் படுத்தவேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிகழ்ச்சியின் முடிவில் மனித உரிமை அமைப்புகளின் தேசிய கூட்டமைப்பின் செயலாளர்களில் ஒருவரான அக்னி சுப்ரமணியம் நன்றி கூறினார். அடுத்தது என்ன? இந்த கட்டுரையின் துவக்கத்தில் கூறப்பட்டுள்ளவாறு, குற்றங்கள் குறித்த சாட்சிகளையும், சான்றுகளையும் தேடி அலைவதைவிட – நிழலில் சுகமாக அமர்ந்து கொண்டு காவலர்களிடம் அகப்பட்ட எளியமக்களின் கண்களில் மிளகாய்ப்பொடியை தூவுகின்றனர் என்று சுமார் 125 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட கருத்தில் எந்தவிதமான முன்னேற்றமும் இல்லை என்பதை விட, நிலைமை மிகவும் மோசமாக பின்னடைந்துள்ளது என்று தெரிகிறது. இந்நிலையை மாற்றும் பொறுப்பு நீதித்துறை, காவல்துறை, அரசியல் – சமூகத் தலைவர்களைவிட வேறொரு தரப்பினருக்கே அதிகம் உள்ளது. அந்த தரப்பினர் வேறு யாருமல்ல. இதை படிக்கும் நீங்கள்தான். இந்திய அரசியல் சட்டம், சர்வதேச மனித உரிமை சட்டங்கள் குறித்த குறைந்த பட்ச அறிவும், தெளிவும் பெறுவதோடு – அதை அனைவருக்கும் பரப்பி சமூக அநீதிகள் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்துவதே மனித குல விடுதலைக்கு உடனடித் தேவையாகும். -சுந்தரராஜன் (sundar@LawyerSundar.net) கிரெடிட் கார்டு - கடன் வசூல் என்ற பெயரில் அராஜகமா? THURSDAY, JULY 12, 2007 கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்களிடம் கடன் வசூல் முகவர்கள் பல தவறான செயல்களில் ஈடுபடுவதாக புகார்கள் அதிகரித்து வருகின்றன. அதை எதிர்கொள்ள சில குறிப்புகள்… கிரெடிட் கார்டு மூலமோ அல்லது வேறெந்த வகையிலோ கடன் வாங்குவதும், வாங்கிய கடனை திருப்பி செலுத்தாத நிலை என்பது கிரிமினல் குற்றம் அல்ல ! (கடனுக்கு விதிக்கப்படும் அநியாய வட்டியும், பலவித கூடுதல் கட்டணங்களுமே, நேர்மையான பலரும் கடனை திரும்ப செலுத்த முடியாமல் போகும் நிலையை ஏற்படுத்துகிறது) […] நீங்கள் கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி போன்ற குற்றங்களில் ஈடுபட்டால் மட்டுமே நீதிமன்ற உத்தரவு இல்லாமல் உங்களை கைது செய்ய முடியும். கட்டத்தவறிய கடனுக்காக எந்த விதமான நீதிமன்ற விசாரணையும் இல்லாமல் உங்களை யாரும் கைது செய்ய முடியாது. நீதிமன்ற விசாரணைக்கு உங்களுக்கு முறையான அழைப்பு வரும். உங்கள் தரப்பு வாதத்தை எடுத்துக்கூற உங்களுக்கு போதுமான அவகாசம் வழங்கப்படும். கடன் வசூல் நடவடிக்கை அனைத்தும் சிவில் சட்ட வழிமுறைகளின்படியே நடைபெற வேண்டும். எனவே காவல்துறையினருக்கு இதில் எந்த தொடர்பும் இல்லை. குண்டர்கள் மூலம் மிரட்டுதல், வீடு மற்றும் தொழில்புரியும் இடங்களில் வாடிக்கையாளரை இழிவு செய்யும் நோக்கில் பேசுதல், நடத்தல் ஆகிய அனைத்தும் சட்டப்படி தவறானவை. […] அதிகாலை நேரங்களிலும், இரவு நேரங்களிலும் கடன் வசூல் பணிகளை செய்வது சட்டப்படி தடை செய்யப்பட்டுள்ளது. பெண்களின் கண்ணியம் குறையும் வகையில் நடக்கும் வசூல் முகவர்களை (குண்டர்களை) ஜாமீனில் வெளிவரமுடியாத சட்டப்பிரிவுகளின் கீழ் சிறையில் அடைக்க முடியும். காவல் நிலையம், கமிஷனர் அலுவலகம், மத்திய குற்றப்புலனாய்வு பிரிவு (CCB) ஆகிய இடங்களிலிருந்து போன் பேசுவதாக கூறினால் நம்பாதீர்கள். அவர்களுக்கு வேறு முக்கிய வேலைகள் இருக்கின்றன. அவர்கள் அவ்வாறு உங்களை தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ள மாட்டார்கள். (அவ்வாறு செய்தால் அது சட்டப்படி தவறு) கடன் வசூல் செய்வதற்காக வழக்கறிஞர்கள் யாரும் உங்கள் வீடு தேடி வரமாட்டார்கள். தொலைபேசி மூலமாகவும் பேசமாட்டார்கள். அவ்வாறு கூறுபவர்கள் அனைவரும் பொய் பேசுகின்றனர் என்பதை புரிந்து கொள்ளுங்கள். […] கிரெடிட் கார்டு பிரசினைக்காகவோ, அல்லது வேறு எந்த கடன் பிரசினைக்காகவோ உங்களை யாராவது இழிவாக பேசினாலோ, மிரட்டினாலோ, வேறெந்த வகையிலாவது தொந்தரவு செய்தாலோ உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் செய்யுங்கள். அந்தப்புகாரில் வசூல் முகவர்கள் மற்றும் வங்கி அதிகாரிகளையும் சேருங்கள். வங்கி அதிகாரிகள் நேரில் வராவிட்டாலும், அவர்களின் உத்தரவின்படிதான் வசூல் முகவர்கள் செயல் படுகின்றனர். எனவே வசூல் முகவர்(குண்டர்)களின் செயல்களுக்கு வங்கி அதிகாரிகளும் பொறுப்பாவர். காவல் நிலையத்தில் உங்கள் புகாரை பதிவு செய்து விசாரிக்க மறுத்தால், காவல்துறை ஆணையர் போன்ற உயரதிகாரிகளிடம் புகார் செய்யுங்கள். அப்போதும் புகார் பதிவு செய்யப்படவில்லை என்றால் அப்பகுதியில் உள்ள குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உங்கள் புகாரை பதிவு செய்யவும், உங்களை தற்காத்துக் கொள்ளவும் முடியும். நீங்கள் அரசு அல்லது அரசு சார் துறைகளில் பணியாற்றுபவர் என்றால், அலுவல் நேரத்தில் உங்கள் பணிக்கு இடையூறு விளைவிப்பது சட்டப்படி குற்றம். எனவே உடனடியாக காவல்துறையில் புகார் அளியுங்கள். மிரட்டல், அச்சுறுத்தல், அவமானப்படுத்துதல் மூலம் உங்களிடமிருந்து பணம் வசூல் செய்யமுடியாது என்பதை வசூல் முகவர்களுக்கு உணர்த்துங்கள். சட்டரீதியான நடவடிக்கைகளை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக கடன் வசூலுக்கு வரும் குண்டர்களிடம் உறுதிபட தெரிவியுங்கள். கடன் வசூல் முகவர்களிடம் எந்த ஆவணங்களிலும் கையெழுத்திட வேண்டிய அவசியம் இல்லை. அவ்வாறு நீங்கள் கையெழுத்திட்டாலும் அது சட்டப்படி செல்லுபடி ஆகாது. […] கடன் வசூல் குண்டர்களால் உங்கள் உயிருக்கோ, உடைமைக்கோ ஆபத்து நேரும் காலத்தில், உங்களை தற்காத்துக் கொள்ளும் உரிமை சட்டப்படி உங்களுக்கு உள்ளது. அதற்காக நீங்கள் (தற்காப்பு) தாக்குதலிலும் ஈடுபடலாம். -சுந்தரராஜன் (sundararajan@lawyer.com) மாறும் சட்டங்களும், விவசாயிகளின் பறிபோகும் உரிமைகளும் - பகுதி 4 FRIDAY, JULY 20, 2007 விதைச்சட்டம் (SEED ACT) 1966 விதைகளை பதிவு செய்வதற்காக 1966ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட விதைச்சட்டம் TRIPS ஒப்பந்தத்திற்கு பின்பு பல மாற்றங்கள் அடைந்து நாடாளுமன்றத்தின் அனுமதிக்காக SEED BILL 2004 என்ற பெயரில் காத்திருக்கிறது. புதிதாக மாற்றம் பெற்றுள்ள இந்த விதைச்சட்டம் விவசாயிகளுக்கு எதிரான பல அம்சங்களை கொண்டுள்ளது. இச்சட்டத்தின் கீழ் விதைகளை பதிவு செய்தவர் மட்டுமே அந்த விதைகளை விற்பனை செய்ய முடியும். விவசாயிகளுக்கு இச்சட்டம் விதைகளை பாதுகாக்கவும், மறுபயிர் செய்யவும் அவற்றை விற்கவும் அனுமதி அளித்திருந்தாலும் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்த கட்டுப்பாட்டின்படி விவசாயிகள் தங்கள் விதைகளை வணிகப்பெயரிட்டு விற்க முடியாது. அப்படி விற்கவேண்டும் என்றால் அவர்களும் தங்களுடைய விதைகளை இச்சட்டத்தின் கீழ் பதிவு செய்திருக்கவேண்டும். நாட்டின் பல பகுதிகளிலும் பரிசோதனை அடிப்படையில் பயிரிடப்பட்டு நிரூபிக்கப்பட்ட விதைகளை மட்டுமே இச்சட்டத்தின் கீழ்பதிவு செய்யமுடியும். இந்த நிபந்தனை ஒரு சாதாரண விவசாயிக்கு எந்த விதத்திலும் பயனற்றது என்பதும் மிகப்பெரிய வணிக நிறுவனங்களே இதன்மூலம் பயனடைய முடியும் என்பதையும் விளக்க வேண்டியதில்லை. மற்ற அறிவுச்சொத்துடைமை சட்டங்களைவிட கொடியதாக விதைச்சட்டம் உள்ளது. ஏனெனில் இச்சட்டத்தின் கீழ் ஒருவர் விதைகளை பதிவு செய்ய அந்த விதையின் மூலக்கரு எங்கிருந்து பெறப்பட்டது என்பதை தெரிவிக்க தேவையில்லை. இதன்மூலம் நம்முடைய பாரம்பரியமிக்க விதைகள் சில தனியார்களின் உடைமையாக மாறக்கூடும். விவசாயிகளின் பாரம்பரிய விதைகளுக்கு இச்சட்டத்தின் கீழ் வேறு யாரும் பதிவு செய்ய முடியாது என்று கூறப்பட்டிருந்தாலும், ஒரு பயிரின் மூலத்தை தெரிவிக்க தேவையில்லை என்னும் விதியின் மூலம் நம்முடைய பாரம்பரிய விதைகள் பறிபோவதற்கு இச்சட்டம் உதவி செய்கிறது. […] மற்ற அறிவுச்சொத்துடைமை சட்டங்களைப்போல விதைச்சட்டம் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே உரிமையை அளிப்பதில்லை. இச்சட்டத்தின் கீழ் பதிவு செய்த ஒருவர் மீண்டும், மீண்டும் பதிவு செய்து கொண்டு விதைகளை நிரந்தரமாக தமது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள முடியும். மேலும் இந்த சட்டம், விதை கண்காணிப்பாளருக்கு ஏற்கனவே இருந்ததைவிட அதிகப்படியான அதிகாரங்களை வழங்குகிறது.தற்போதைய சட்டத்தின்படி விதை கண்காணிப்பாளர் எந்தவிதமான முன்னறிவிப்பும் இன்றி அவர் சந்தேகம் கொள்ளும் எந்த ஒரு இடத்தையும், எந்த நேரத்திலும் சோதனை இடலாம். அங்கு காப்புரிமை மற்றும் விதைச்சட்டங்களின் கீழ் உரிய பதிவு பெறாமல் சேமித்து வைத்துள்ள விதைகளை கைப்பற்றுவதோடு, அவற்றை பாதுகாத்து வைத்துள்ள விவசாயியை கைது செய்யும் அதிகாரமும் படைத்துள்ளார். லஞ்சம், ஊழல் இவற்றையே முதன்மைப்பணியாக கொண்டு இயங்கும் இந்திய அதிகார வர்க்கம், பணபலம் படைத்த விதை தயாரிப்பு நிறுவனங்களிடம் சரணடைந்து, விவசாயிகளுக்கு எதிராகவே செயல்படும் என்பதையும் கூறத்தேவையில்லை. -மு. வெற்றிச்செல்வன் (vetri@lawyer.com) வணிக நிறுவனங்களின் அறிவுச்சொத்துரிமையும்…, குடிமக்களின் அடிப்படை வாழ்வுரிமையும்…! SUNDAY, JULY 22, 2007 நாம் பயன்படுத்தும் வார்த்தைகளை மிகவும் கவனமாக கையாள வேண்டும் என்று பெரியவர்கள் கூறுவதுண்டு. நமது வாழ்க்கையிலும் அனுபவ பூர்வமாக இதை உணர்ந்திருப்போம். காவல்நிலையம், நீதிமன்றம் போன்ற இடங்களில் தவறான வார்த்தைகளை பயன்படுத்தினால் விரும்பத்தகாத விளைவுகள் ஏற்படும் என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஆனால், நடைமுறையில் உள்ள சாதாரண சொற்களை பயன்படுத்தினால்கூட, அது சட்டத்தின்முன் குற்றச்செயலாக கருதப்படும் நிலை வந்து கொண்டிருக்கிறது. உதாரணமாக, சர்க்கரை இல்லாத என்பதை ‘சுகர்-ப்ரீ’ (SUGAR FREE) என்று நாம் கூறுவண்டு. ‘சுகர்-ப்ரீ’யாக ஒரு காப்பி கொண்டு வா! என்று இனி நீங்கள் இதுபோல் ’ப்ரீ’யாக பேசமுடியாது. ஏனெனில் நமக்கெல்லாம் நன்கு அறிமுகமான பால்பொருள் நிறுவனமான ’அமுல்’ தயாரிக்கும் ஐஸ்கிரீமிற்கு, ‘ப்ரோலைஃப் சுகர்-ப்ரீ’ (PROLIFE SUGAR FREE) என்ற பெயரில் உள்ள ‘சுகர்-ப்ரீ’ என்ற சொற்களை பயன்படுத்துவதற்கு டெல்லி உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இது என்ன கலாட்டா? என்று ஆச்சரியப்படாதீர்கள்! […] புதிதாக அமல்படுத்தப்படும் அறிவுசார் சொத்துரிமை சட்டங்களின்படிதான் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. சர்க்கரை நோயாளிகளுக்கான செயற்கை இனிப்பான்கள தயாரிக்கும் ஜைடஸ் காடிலா (ZYDUS CADILA) என்ற நிறுவனம், அதன் தயாரிப்புகளை ‘சுகர்-ப்ரீ’ என்ற பெயரில் விற்பன செய்து வருகிறது. மக்கள் சாதாரணமாக உபயோகிக்கும் சொற்களை வணிகப்பெயராக பயன்படுத்தி வந்த அந்த நிறுவனம், கடந்த 1988ம் ஆண்டு முதல் அந்த சொல்லை தான் பயன்படுத்தி வருவதாகவும், எனவே ‘சுகர்-ப்ரீ’ என்ற சொற்களை தமது டிரேட் மார்க்-ஆக பதிவு செய்து தரவேண்டும் என்று மனு செய்துள்ளது. இந்த மனு பரிசீலனையில் உள்ளது. […] இந்நிலையில், அமுல் நிறுவனத்தின் புதிய தயாரிப்பான ‘ப்ரோலைஃப் சுகர்-ப்ரீ’ ஐஸ்கிரீம் கடந்த ஜனவரி மாதம் 22ம் தேதி சந்தைக்கு வந்தது. இதையடுத்து ஜைடஸ் காடிலா நிறுவனம், டெல்லி உயர்நீதிமன்றத்தில் கடந்த ஏப்ரல் 2ம் தேதி மனு ஒன்றை தாக்கல் செய்தது. இந்த மனுவில், ‘சுகர்-ப்ரீ’ என்ற சொற்களை தாம் கடந்த 1988ம் ஆண்டு முதல் வணிகப்பெயராக பயன்படுத்தி வருவதாகவும், அந்த சொற்களுக்கு டிரேட் மார்க் பதிவு கோரி மனு செய்துள்ளதாகவும் அந்த நிறுவனம் கூறியுள்ளது. இந்த நிலையில் அமுல் நிறுவனத்தின் புதிய தயாரிப்புக்கு ‘ப்ரோலைஃப் சுகர்-ப்ரீ’ என்று பெயர் வைப்பதால், தமது பொருளின் நற்பெயருக்கு இழப்பு ஏற்படுவதாகவும் இதனை ஈடு செய்ய, அமுல் நிறுவனம் 25 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கவேண்டும் என்றும் அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது. மேலும் அமுல் நிறுவனம், ‘சுகர்-ப்ரீ’ என்ற பெயரில் எந்த பொருட்களையும் விற்பனை செய்ய நிரந்தர தடை விதிக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி சிஸ்டானி, அமுல் நிறுவனம் தரப்பில் வழக்கறிஞர் யாரும் ஆஜர் ஆகாத நிலையிலேயே வழக்கை விசாரித்து, இந்த மனுவில் கேட்கப்பட்டுள்ளதைப்போல தடை வழங்காவிட்டால் ஜைடஸ் காடிலா நிறுவனத்திற்கு பெரும் இழப்பு ஏற்படும் என்ற வாதத்தில் தாம் திருப்தி அடைவதாக கூறி, அமுல் நிறுவனம் மே 3ம் தேதிவரை ‘சுகர்-ப்ரீ’ என்ற சொற்களை பயன்படுத்த இடைக்கால தடை விதித்துள்ளார். காப்பிரைட் சட்டம் உட்பட, காப்புரிமை சட்டங்களில் மக்கள் பொதுவாக பயன்படுத்தும் சொற்களையோ, ஒரு பொருளின் இயல்பை குறிக்கும் சொற்களையோ பதிவு செய்யமுடியாது. அப்படிப் பார்த்தால் ‘சுகர்-ப்ரீ’ என்ற சொல்லும் உலகம் முழுவதும் சாதாரணமாக பயன்படுத்தும் சொல்தான். இந்த சொல்லை அமுல் நிறுவனம் பயன்படுத்தியதால் தமக்கு ஏற்பட்ட இழப்புக்கு 25 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று கேட்டுள்ள ஜைடஸ் காடிலா நிறுவனம், பல ஆண்டுகாலமாக மக்கள் மிகச்சாதாரணமாக பயன்படுத்தி வரும் ‘சுகர்-ப்ரீ’ என்ற சொற்களை யார்,யாருக்கு எவ்வளவு இழப்பீடு கொடுத்து உரிமையாக்கி கொண்டது என்ற கேள்விக்கு பதில் இல்லை. இந்த வழக்கின் முடிவு எப்படி வேண்டுமானாலும் ஆகலாம். ஆனால் மாறிவரும் சட்டங்களின் நிலைக்கு இது ஒரு எளிமையான எடுத்துக்காட்டு. இந்த நிலை நீடித்தால் எதிர்காலத்தில் நாம் வாழ்வின் பல முனைகளிலும் பாதிக்கப்படுவோம். குறிப்பாக உணவு மற்றும் மருத்துவம் உள்ளிட்ட அடிப்பட தேவைகளை ஈடு செய்வது மிகக்கடினம் ஆகிவிடும். உதாரணமாக, கனடா நாட்டின் விவசாயி பெர்சி ஷ்மேய்சர் என்பவரின் அனுபவத்தை பார்க்கலாம். இயற்கை விவசாயியான அவரது நிலத்தில் உள்நாட்டு பயிர்வகைகளை பயிரிட்டிருந்தார். அருகே உள்ள மற்றொரு விவசாயியோ மான் சான்டோ என்ற புகழ்பெற்ற நிறுவனத்தின் மரபணு மாற்றப்பட்ட பயிர்வகைகளை பயிரிட்டிருந்தார். அந்த நிலத்தில் விளைந்திருந்த பயிர்களில் இருந்த மகரந்த தூள்கள் காற்றின் மூலமாகவும், பூச்சிகளின் மூலமாகவும் பெர்சி ஷ்மேய்சரின் நிலத்தில் பயிரிட்டிருந்த பயிர்களிலும் ஊடுருவி இருந்தது. இயற்கை வேளாண்மை செய்து […] வரும் தனது நிலத்தில் மரபணு மாற்றக்கூறுகள் என்ற மாசு படிவது குறித்து கவலை கொண்ட பெர்சி ஷ்மேய்சர், இதனை எவ்வாறு எதிர்கொள்வது என்று ஆலோசித்து கொண்டு இருந்தார். அப்போது, அவருக்கு மான் சான்டோ நிறுவனத்தில் இருந்து, அந்த நிறுவனம் காப்புரிமை பதிவு செய்திருந்த மரபணுமாற்றக் கூறுகளை உரிய அனுமதியின்றி பதுக்கி வைத்துள்ளதாக குற்றம் சாட்டி சட்டரீதியான நோட்டிஸ் வந்தது. தாம் எந்த தவறும் செய்யவில்லை என்றும், மான்சான்டோ நிறுவனம்தான் தன் நிலத்தில் அத்துமீறி, மாற்றப்பட்ட மரபணு கூறுகளை பரப்பி மாசுபடுத்திவிட்டதாக பெர்சி ஷ்மேய்சர் பதில் அளித்தார். […] ஆனால் அவரது வாதம் மறுக்கப்பட்டு, அறிவுசார் சொத்துரிமை சட்டங்களின் கீழ் விவசாயி பெர்சி ஷ்மேய்சர் குற்றவாளி என்றும், மான்சான்டோ நிறுவனத்திற்கு அவர் இழப்பீடு அளிக்க வேண்டும் என்றும் தீர்ப்பளிக்கப்பட்டது. அந்நாட்டு உச்சநீதிமன்ற மேல்முறையீட்டிலும் விவசாயி பெர்சி ஷ்மேய்சர் தவறிழைத்ததாக உறுதி செய்யப்பட்டது. மேலும் விவரங்களுக்கு: http://www.percyschmeiser.com/ […] பெர்சி ஷ்மேய்சர் மனித குலமேம்பாட்டிற்காக சிறந்த முறையில் செயல்பட்டதற்காக கடந்த 2000ம் ஆண்டில் மகாத்மா காந்தி விருது வாங்கியவர் என்பது கூடுதல் செய்தி…! உலகமயமாக்கல் காரணமாக, அறிவுசார் சொத்துரிமை சட்டங்கள் இந்தியாவிலும் அறிமுகப்படுத்தப் படுகின்றன. இந்த சட்டங்கள் முழுமையாக அமல் செய்யப்படும்போது, இந்திய விவசாயிகளுக்கும் ‘திருட்டுப்பட்டம்’ கிடைக்கும். அதை சட்டமும் அங்கீகரிக்கும். இது விவசாயிகள் மட்டும் சார்ந்த பிரசினை அல்ல என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இதேபோல மருத்துவத்துறையிலும், அறிவு சார் சொத்துரிமை சட்டங்கள் பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். உதாரணத்திற்கு தமிழகத்தில் நடைபெற்றுவரும் வழக்கு ஒன்றையே பார்க்கலாம். ஸ்விட்சர்லாந்தை சேர்ந்த ‘நோவார்டிஸ்’ என்ற மருந்து தயாரிப்பு நிறுவனம் ரத்தப்புற்று நோய்க்கான மருந்தை தயாரித்து விற்பனை செய்கிறது. ‘இமாடினிப் மெஸிலேட்’ என்ற பெயருடய மருந்துப்பொருளை ‘க்ளிவெக்’ என்ற வணிகப்பெயரில் தயாரித்து அந்த நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. அதே மருந்தை வேறு பெயர்களில், வேறு பல நிறுவனங்களும் தயாரித்து விற்பனை செய்து வருகின்றன. […] இந்த நிலையில் ‘க்ளிவெக்’ என்ற பெயரில் விற்கப்படும் மருந்து பொருளுக்கு காப்புரிமை கேட்டு ‘நோவார்டிஸ்’ நிறுவனம் மத்திய அரசிடம் மனு செய்தது. அவ்வாறு காப்புரிமை அளிக்கப்பட்டால், ‘இமாடினிப் மெஸிலேட்’ என்ற மருந்தை வேறு யாரும் எந்த பெயரிலும் தயாரிக்கவோ, விற்பனை செய்யவோ முடியாது. எனவே அம்மருந்திற்கு அதை தயாரிக்கும் உரிமை பெற்ற நிறுவனம் வைத்ததுதான் விலை. ரத்தப்புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள், ஒரு நாளுக்கு 4 மாத்திரைகள் எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த மருந்தின் தற்போதைய விலை சுமார் 50 ரூபாய். காப்புரிமை பதிவு செய்யப்பட்ட நாடுகளில் இம்மருந்தின் விலை சுமார் 1000 ரூபாய். எனவே இந்தியாவில் இந்த மருந்துக்கு காப்புரிமை வழங்கப்பட்டால், ரத்தப்புற்று நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் நாள் ஒன்றுக்கு 4 ஆயிரம் ரூபாயை மருந்துக்கு செலவழிக்க வேண்டும். இதுவரை இந்த மருந்துக்கு இந்தியாவில் காப்புரிமை வழங்கப்படவில்ல. நாளை என்ன நடக்கும் என்பது தெரியாது. இந்த மருந்துக்கு காப்புரிமை வழங்கப்பட்டால் அனைத்து மருந்து தயாரிப்பாளர்களும், தங்கள் தயாரிப்புகளுக்கு காப்புரிமை கோருவார்கள் என்பதில் சந்தேகமில்லை. இவ்வாறு அனைத்து மருந்துகளுக்கும் காப்புரிமை கொடுக்கப்பட்டால் மருத்துவம் என்பதே பெரும்பாலான மக்களுக்கு எட்டாக்கனியாகி விடும். இவை அனைத்தும் சட்டத்தின் பெயரால் நடபெறுகின்றன! உலகையே குலுக்கிய சுனாமி பேரலை இந்தியாவின் பெரும்பகுதியை சூறையாடிய டிசம்பர் 26, 2004 அன்று ஒட்டு மொத்த இந்தியாவும் சோகத்தில் ஆழ்ந்திருந்தது. ஆனால் சோகமயமான அன்றய தினத்தில் காப்புரிமை சட்டதிருத்த மசோதாவில் குடியரசுத்தலைவர் சத்தமின்றி கையொப்பம் இட்டார். அந்த திருத்தம் அனைத்தும் மக்களுக்கு எதிரானதாகவும், பெரும் வணிக நிறுவனங்களுக்கு ஆதரவாகவுமே இருந்தது என்பதை கூறத்தேவையில்லை. சமூக அநீதிகளிலிருந்து சட்டத்தின் துணை கொண்டு மக்களை காப்பது வழக்கறிஞர்களின் முதன்மை பணி என்பதே பொதுக்கருத்து. ஆனால், உலகமயமாக்கல் மற்றும் அறிவுசார் சொத்துரிமை போன்ற பெயர்களில் அமலுக்கு வரும் இதுபோன்ற மக்கள் விரோத சட்டங்களிலிருந்து மக்களை எவ்வாறு காப்பாற்றுவது என்பதே மக்கள் சார்ந்த வழக்கறிஞர்களின் கவலையாக உள்ளது. -சுந்தரராஜன் (sundararajan@lawyer.com) பன்னாட்டு நிறுவனங்களிடம் கேள்விக்குறியாகும் இந்தியாவின் இறையாண்மை ! WEDNESDAY, JULY 25, 2007 நாட்டில் நிலவும் வறுமை, வேலையின்மை, பஞ்சம் உள்ளிட்ட பிரசினைகளை தீர்க்கப்போவதாகக்கூறி இன்றைய பிரதமரும், அன்றைய நிதியமைச்சருமான மன்மோகன் சிங்கால் பொருளாதார சீர்திருத்தம் என்ற பெயரில் உலகமயம்-தனியார்மயம்-தாராளமயம் ஆகிய கொள்கைகள் அறிமுகப்படுத்தப் பட்டன. நாடாளுமன்றம் – சட்ட மன்றத்தில் பெண்களுக்கு இடஒதுக்கீடு போன்ற விவகாரங்களில் வருடக்கணக்கில் விவாதம் (மட்டுமே) நடத்திவரும் நமது அரசியல்வாதிகள், நாடாளுமன்றத்திலோ, வேறு எந்த அவையிலோ எந்த விதமான விவாதமும் நடத்தாமல் உலக வர்த்த கழகத்தில் இந்தியாவை உறுப்பு நாடாக பதிவு செய்தனர். உண்மையில் மக்கள் பிரதிநிதிகள் என்று சொல்லிக்கொள்ளும் எம்.பி.க்களுக்கே தெரியாமல், அதிகாரிகளே இதற்கான (டங்கல்) ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இதற்கான அனுமதியை அளித்தவர் அன்றைய நிதியமைச்சர் மன்மோகன் சிங். […] இந்த கொள்கைகளுக்கு அன்று எதிர்ப்புகளும் இருந்தன. ஆனாலும் இதிலிருந்து விலகினால் பொருளாதார ரீதியாக பேரழிவுகள் ஏற்படும் என்றும், நாட்கள் செல்லச்செல்ல இந்த புதிய பொருளாதார கொள்கைகள் நல்ல பலன்களை கொடுக்கும் என்றும் மன்மோகன் சிங், சிதம்பரம் வகையறாக்கள் சமாதானம் கூறினர். […] இதையடுத்து தமிழகம் உட்பட நாடு முழுவதும் பொருளாதார சீர்திருத்தம் அமல்படுத்தப்பட்டது. வர்த்தகம் சார்ந்த ஏற்றுமதி-இறக்குமதி, வரிச்சட்டங்கள், வங்கிச்சட்டங்கள் உள்ளிட்ட பல சட்டங்கள் படிப்படியாக மாற்றியமைக்கப்பட்டன. அறிவுச்சொத்துரிமை சட்டங்களில் தலைகீழ் மாற்றங்கள் ஏற்பட்டன. அறிவுச்சொத்துரிமை சட்டங்களில் உள்ள மக்கள் சார்பு அம்சங்கள் அனைத்தும் நீக்கப்பட்டு, பன்னாட்டு வர்த்தக நிறுவனங்களுக்கு ஆதரவான அம்சங்கள் அமல்படுத்தப்பட்டன. இவை இந்தியர்களின் விவசாயம், தொழில், மருத்துவம் உள்ளிட்ட அம்சங்களில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளன. மருத்துவம் என்பது சேவை என்ற நிலை மாறி தொழிலாக ஆக்கப்பட்டுள்ளது. எந்தத் தொழிலும் கொள்ளை லாபம் ஈட்டுவதையே இலக்காக கொண்ட பன்னாட்டு மருந்து நிறுவனங்கள் இந்தியாவில் ஆக்கிரமித்ததால் இந்தியர்களின் நல்வாழ்வே கேள்விக்குறியாகி உள்ளது. இந்த நிலையை புரிந்து கொள்ள ஒரு உதாரணத்தை பார்க்கலாம். சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த நோவார்டிஸ் என்ற பன்னாட்டு மருந்து தயாரிப்பு நிறுவனம், ரத்தப்புற்று நோய்க்கான இமாடினிப் மெஸிலேட் என்ற மருந்தை கிளிவெக் (GLIVEC, GLEEVEC) என்ற வணிகப்பெயரில் தயாரித்து வருகிறது. […] இம்மருந்தை தயாரித்து விற்பனை செய்வதற்கான பிரத்யேக சந்தை உரிமை (EXCLUSIVE MARKETING RIGHT)யை காப்புரிமை சட்டம் மூலம் இந்த நிறுவனம் கடந்த 2003-ம் ஆண்டு பெற்றது. ஆனால் இம்மருந்தை வேறு செய்முறைகளில், வேறு பெயர்களில் சில நிறுவனங்கள் தயாரித்து குறைந்த விலைக்கு விற்பனை செய்தன. இதை தடை செய்யக்கோரி சென்னை மற்றும் மும்பை ஆகிய உயர்நீதிமன்றங்களில் நோவார்டிஸ் வழக்கு தொடர்ந்தது. அன்று வழக்கறிஞராக பணியாற்றிய மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம், அந்த நிறுவனம் சார்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து, நோவார்டிஸ் நிறுவனத்தை தவிர வேறு யாரும் அந்த மருந்தை தயாரித்து விற்பனை செய்யக்கூடாது என்ற தடை உத்தரவை பெற்றார். ஆனால் மும்பை உயர்நீதிமன்றம் இதே வழக்கை வேறு கோணத்தில் பார்த்தது. பொதுமக்களுக்கு குறைந்த விலையில் மருந்து கிடைப்பதை தடை செய்யும் பிரத்யேக சந்தை உரிமை, இந்திய அரசியல் சட்டத்திற்கே எதிரானது என்று கூறி மும்பை உயர்நீதிமன்றம் அந்த மனுவை தள்ளுபடி செய்தது. இந்த இரு தீர்ப்புகளும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு வழக்கு நிலுவையில் உள்ளது. இதற்கிடையில், பிரத்யேக சந்தை உரிமைக்கு அடுத்த கட்டமான காப்புரிமையை இந்த மருந்துக்கு வழங்கவேண்டும் என்று நோவார்டிஸ் நிறுவனம், சென்னையிலுள்ள காப்புரிமை கட்டுபாட்டாளரிடம் மனு செய்தது. ஆனால் இந்தியாவிலுள்ள காப்புரிமை சட்டவிதிகளின்படி இந்த மருந்துக்கு காப்புரிமை வழங்க முடியாது என்று கூறி இம்மனு தள்ளுபடி செய்யப்பட்டது. […] இந்த முடிவை எதிர்த்து நோவார்டிஸ் நிறுவனம் மேல் முறையீடு செய்துள்ளது. இவ்வழக்கின் விசாரணை நடந்து வருகிறது. இந்த மேல் முறையீட்டில் அந்த நிறுவனம் வெற்றி பெற்றால் பின் விளைவுகள் மிகவும் மோசமாக இருக்கும். தற்போதைய நிலையில் பல நிறுவனங்கள் ரத்தப்புற்று நோய்க்கான இமாடினிப் மெஸிலேட் மருந்தை தயாரித்து விற்பனை செய்வதால் இம்மருந்து சுமார் 50 ரூபாய் விலையில கிடைக்கிறது. ஒரு நோயாளி ஒரு நாளைக்கு நான்கு மாத்திரைகள் சாப்பிட வேண்டும். நோவார்டிஸ் நிறுவனத்திற்கு காப்புரிமை வழங்கப்பட்டுவிட்டால் மற்ற நிறுவனங்கள் அம்மருந்தை தயாரிக்க முடியாது. அனைத்து ரத்தப்புற்று நோயாளிகளும் மருந்திற்கு அந்த நிறுவனத்தை மட்டுமே நம்பியிருக்க வேண்டும். காப்புரிமை பெற்ற மற்ற நாடுகளில் நோவார்டிஸ் நிறுவனம் அம்மருந்திற்கு இந்திய மதிப்பில் ஆயிரம் ரூபாய் விலை நிர்ணயம் செய்துள்ளது. அதே விலைக்கு மருந்து வாங்க ஒரு நோயாளிக்கு மாதம் ஒன்றுக்கு சுமார் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் தேவைப்படும். இது எத்தனை இந்தியர்களுக்கு சாத்தியம் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். நோவார்டிஸ் நிறுவனத்தின் இமாடினிப் மெஸிலேட் மருந்திற்கு காப்புரிமை வழங்கப்பட்டால் அதை பின்பற்றி காப்புரிமை கேட்பதற்கு ஏற்கனவே சுமார் 9,000 மனுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. எனவே மருத்துவம் என்பதே இந்தியர்களுக்கு எட்டாக்கனியாகிவிடும். எனவே இந்த வழக்கை நோவார்டிஸ் நிறுவனம் திரும்பப்பெறவேண்டும் என்று வலியுறுத்தி சென்னை உட்பட உலகின் பல பகுதிகளிலும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. […] இந்திய மக்களைப்பற்றி இந்திய அரசுக்கும், அமைச்சர்களுக்கும், அதிகாரிகளுக்குமே அக்கறை இல்லாதபோது, கொள்ளை லாபமே இலக்காகக் கொண்ட நோவார்டிஸ் நிறுவனம் வழக்கை திரும்ப பெறவேண்டும் என்று எதிர்பார்ப்பது மூடத்தனம். மருத்துவம், கல்வி, சட்டம், பொறியியல் உள்ளிட்ட தொழிற்கல்வி பெற்றவர்கள் கனவிலும் நினைக்கமுடியாத ஊதியம் இவர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்திய பொருளாதாரமே இவர்களை நம்பி உள்ளதாகவும் கூறப்படுகிறது. … பெருநகரங்கள் மட்டுமல்லாது சிறுநகரங்களையும் ஆக்கிரமிக்கும் இந்த தொழில் நிறுவனங்கள், இன்றைய இளைஞர்களின் கனவு உலகமாக விரிகிறது. பச்சைப்பசேலென்று இருக்கும் அவரைப்பந்தலைப்போல கவர்ச்சிகரமாக இருக்கும் இந்த துறையின் உள்ளே பார்த்தால் தூண்கள் அனைத்தும் இற்றுப்போய் இருக்கின்றன. இந்தத்துறையில் பணியாற்றும் இளைஞர்கள் அனைவரும், ஆங்கிலம் கற்றிருந்தாலும், அபரிமிதமான ஊதியம் பெற்றாலும், பொது அறிவில் சற்று பின் தங்கியே உள்ளனர். குறிப்பாக தங்கள் உரிமைகள் குறித்த விழிப்புணர்வு இவர்களிடம் அறவே இல்லை என்று கூறலாம். இவர்களின் இந்த நிலையை பயன்படுத்தி அரசுத்துறை அமைப்புகளும், பிற தனியார் அமைப்புகளும் இவர்களை சுரண்டி கொழுக்கின்றன. இந்திய அரசியலமைப்பு சட்டம், ஒரு குடிமகனுக்கு சமூக, பொருளாதார, கலாசாரம் தொடர்பான பல்வேறு உரிமைகளை உறுதி செய்துள்ளது (படிக்காத பாமர மக்கள் பெருவாரியானவர்களுக்கு இவ்வுரிமைகள் கிடைக்கவில்லை என்பது வேறு கதை). ஆனால், மெத்தப்படித்து ஆங்கில கல்வி பெற்ற காரணத்தாலேயே வேலைவாய்ப்பையும் பெற்ற BPO பணியாளர்களுக்கு இந்த உரிமைகள் கிடைக்கிறதா? என்று பார்த்தால், “இல்லை!” என்ற பதிலே நமக்கு கிடைக்கக்கூடும் ஒரு குற்றச்சாட்டு தொடர்பாக, போதிய விளக்கம் பெறாமல் அல்லது போதிய அவகாசம் கொடுக்காமல் ஒருவரை தண்டிப்பதோ, பணியிருந்து நீக்குவதோ இயற்கை நீதிக்கு (NATURAL JUSTICE) எதிரானது. ஆனால் அனைத்து BPO-களிலும் தாரகமந்திரமாக இருப்பது HIRE AND FIRE என்னும் கொள்கையே. BPO நிறுவனங்களில் பணியில் சேர, ஒருவர் தன்னுடைய ஒட்டுமொத்த உரிமைகளையும் பறித்துக்கொள்ளும் ஒப்பந்தத்தில் கையெழுத்து இடவேண்டியிருக்கிறது. இந்த ஒப்பந்தம் சட்டத்திற்கு முன் செல்லுமா என்ற கேள்வி எழுப்பப்படாமலே பலரும் இந்த ஒப்பந்த சரத்துகளுக்கு பலியாகின்றனர். ஒப்பந்தம் காலம் முடியும் முன்பே, ஒரு பணியாளர் அப்பணியிலிருந்து விலகினால் அதற்கான அபராதம் நிர்ணயிக்கப்பட்டு அது காசோலையாக பெறப்படுகிறது. இந்த உளவியல் ரீதியான மிரட்டல் காரணமாகவே பலர் பணியிட உரிமை மீறல்களை வெளியில் சொல்வதில்லை. (அந்த காசோலையை சட்டரீதியாக பயன்படுத்த முடியாது என்பது பலருக்கும் தெரிவதில்லை) “8 மணி நேரம் மட்டுமே வேலை” என்ற உரிமையை போராடி பெற்ற அமெரிக்கர்களின் பணிகளை செய்வதற்கு, நமது இந்திய இளைஞர்கள் 12 முதல் 14 மணி நேரம் வரை உழைக்கின்றனர். எப்பொழுதும் நோட்டமிடுகின்ற கேமிராவின் தீவிர கண்காணிப்பிலேயே இவர்கள் பணியாற்ற வேண்டியுள்ளது. இதுவும் கூட ஒருவித மனித உரிமை மீறலே. மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் பாதிக்கின்ற வகையிலேயே இவர்கள் பணியாற்றும் சூழல் உள்ளது. குடும்ப உறவுகளுக்கு போதிய நேரம் ஒதுக்காமை, உடல்நலம் குறித்த கவனமின்னம போன்றவற்றை இதற்கு உதாரணமாக கூறலாம். இதன் விளைவுகளை மருத்துவர்களும், உளவியல் நிபுணர்களும், வழக்கறிஞர்களுமே அறுவடை செய்கின்றனர். செல்ல பிராணிகளுக்கு அணிவிக்கின்ற கழுத்துபட்டி போல இவர்களும் தங்கள் முழு ஜாதகமே அடங்கிய அட்டையை அணிகின்றனர். ஒவ்வொருமுறை இவர்கள் அலுவலகதிற்கு உள்ளே/வெளியே செல்ல இந்த அட்டையை பயன்படுத்த வேண்டும். அதாவது இவர்கள் பணியாற்றும் ஒவ்வொரு மணித்துளியும் கணக்கிடப்படுகின்றன. ஆனால் ஊதியமாக இவர்களுக்கு வழங்கப்படுவது லாபத்தில் மிக சொற்பமான தொகை மட்டுமே. அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள சங்கம் அமைப்பதற்கான உரிமை இவர்களுக்கு வழங்க படுவதில்லை. முக்கியமாக, தொழிலாளர் நலச்சட்டங்கள் வழங்கியுள்ள பலவிதமான உரிமைகள் இவர்களுக்கு மறுக்கப்படுகின்றன. ஒரே விதமான வேலையை செய்பவர்களுக்கு ஒரே அளவிலான ஊதியம் (EQUAL PAY FOR EQUAL WORK) வழங்கப்பட வேண்டும் என்னும் சட்டம் இங்கு செல்லுபடி ஆவதில்லை. BPO- களில் பணியாற்றும் பெண்களின் நிலை இன்னும் சோகம் நிறைந்தது. பணிபுரியும் இடங்களில் பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் தொடர்கதையாகவே உள்ளது. பாலியல் தொந்தரவு குறித்த புகார்களை பதிவு செய்வதற்கான அமைப்பை அனைத்து தொழிலகங்களிலும் அமைக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்றம் இயற்றிய சட்டம் பலபெண்களுக்கும் தெரியாமலே உள்ளது. மகப்பேறுக்கால விடுமுறை, பணிபுரியும் இடங்களில் குழந்தை பராமரிப்பு வசதிகள் என பெண்களுக்கான சிறப்பு உரிமைகளை எந்த BPO நிறுவனமும் வழங்குவதில்லை. இந்தியர்கள் தற்போது மிகஅதிகமாக ஈடுபடும் BPO துறையில் கவனம் செலுத்த சீனா போன்ற நாடுகள் ஆர்வம் காட்டி வருகின்றன. அமெரிக்காவின் அடுத்த அதிபர் தேர்தலுக்காக போட்டியிடுகின்ற அந்நாட்டின் முக்கிய இரண்டு அரசியல் கட்சிகளும், அவுட்சோர்சிங் மூலம் உள்ளூர் அமெரிக்கர்களின் வேலை பறிபோவதை தடுக்க சட்டம் இயற்றப்படும் என வாக்குறுதி கொடுத்துள்ளன. இந்த நிலையில் இந்திய BPO நிறுவனங்களில் பணிபுரியும் இளைஞர்களின் எதிர்காலம் என்பது கேள்விக்குறிதான். இந்த வேலை வாய்ப்பு பறிபோனால் இந்த இளைஞர்கள் உடல் ரீதியாகவும், உள்ள ரீதியாகவும் பாதிக்கப்படுவார்கள் என்பதில் சந்தேகமில்லை. இது சமூகத்தில் குற்றத்தின் அளவை அதிகரிக்கக்கூடும் என்பதை சமூகவியல் உண்மை. என்ன செய்யப் போகிறோம்? -மு. வெற்றிச்செல்வன் (Vetri@lawyer.com) இந்திய உச்ச நீதிமன்றமும், நார்வே நாட்டு நீலப்பெண்ணும்…! TUESDAY, SEPTEMBER 18, 2007 குஜராத் மாநிலம் பாவ்நகரில் உள்ள அலாங் கப்பல் உடைக்கும் தளத்தில் கடந்த ஓராண்டு காலமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள “புளூ லேடி” என்ற கப்பலை உடைக்க உச்ச நீதிமன்றம் கடந்த செப்டம்பர் 11ம் தேதி அனுமதி வழங்கியுள்ளது. […] உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஏனிந்த அதிர்ச்சி? சுற்றுச்சூழல் குறித்த வழக்குகளில் உச்சநீதி மன்றமும், ஏனைய நீதிமன்றங்களும் இரட்டை அளவுகோலை கையாள்வதை யாரும் உணரமுடியும். பொதுவான தீர்ப்புகளில் மிகவும் முற்போக்கான தீர்ப்புகளையும், கருத்துகளையும் முன்வைக்கும் இந்த நீதிமன்றங்கள் – குறிப்பான பிரசினை குறித்த தீர்ப்புகளில் மிகவும் பிற்போக்கான தீர்ப்புகளை வழங்குவதை பார்க்கலாம். பாதிக்கப்படும் பொதுமக்களின் வாழ்க்கையைவிட சட்டத்தின் மூலக்கூறுகளில் ஆழ்ந்த விவாதம் நடத்தும் இந்த நீதிமன்றங்கள், பொதுவாக பாதிக்கப்படும் மக்களுக்கு எதிரான தீர்ப்புகளையே வழங்குகின்றன. இப்படிப்பட்ட ஒரு தீர்ப்பாகதான் இந்த தீர்ப்பும் உள்ளது என்பதில் மாற்றுக் கருத்து இருக்க வாய்ப்பில்லை. எனவே இந்த தீர்ப்பைக்கண்டு அதிர்ச்சி அடைய நியாயமில்லை. எனினும் இவ்வளவு போராட்டங்களுக்கும், முயற்சிகளுக்கும் பிறகும் நீதிமன்றங்களின் போக்கில் மாற்றமில்லை என்பதை உணரும்போது அதிர்ச்சியாகத்தான் உள்ளது. நீலப்பெண்ணின் வரலாறு..! எஸ்எஸ் பிரான்ஸ் என்ற பெயருடன் 1960ம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்ட இந்த கப்பல் 316 மீட்டர் நீளமும், 46ஆயிரம் டன் எடையும் கொண்டது இதில் 11 அடுக்கு தளங்கள் உள்ளன. […] டைட்டானிக் திரைப்படத்தில் காட்டப்பட்டதைப்போல ஒரு ஆடம்பர கப்பலுக்கு உரிய அனைத்து வசதிகளும் கொண்ட இந்த கப்பல் 1960 மே 11ம் தேதியன்று போப் (ஆண்டவர்) நான்டெஸ்-ன் ஆசியுடன் வெள்ளோட்டத்தை ஆரம்பித்தது. […] […] […] தொடர்ந்து ஆட்சி பொறுப்பில் இருப்பவர்கள், சினிமா தாரகைகள் உள்ளிட்டோருக்கான உல்லாச தலமாக விளங்கிய இந்தக்கப்பலில் கிறிஸ்துமஸின்போது பயணிப்பது ஆசிர்வதிக்கப்பட்ட ஒன்றாகவும் விளங்கியது. […] உலகின் மிகப்பெரிய பயணிகள் கப்பலாக விளங்கி எஸ்எஸ் பிரான்ஸ்-இன் இயக்கத்தை 1972ம் ஆண்டுடன் நிறுத்திக் கொள்வது என்று பிரான்ஸ் அரசு முடிவு செய்தது. […] சுமார் 8 ஆண்டுகள் ஓய்வெடுத்த இந்த கப்பலை 1980ம் ஆண்டில் நார்வே நாட்டின் கப்பல் நிறுவனம் ஒன்று விலைக்கு வாங்கி சுமார் 8 கோடி அமெரிக்க டாலர்கள் மதிப்பில் செப்பனிட்டு எஸ்எஸ் நார்வே என்று பெயரை மாற்றி இயக்கியது. […] 2003 மே 25ம் தேதி இந்த கப்பலின் கொதிகலன் வெடித்ததில் ஏழுபேர் கொல்லப்பட்டனர். 17 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்தில் சேதம் அடைந்த கொதிகலனை சீரமைக்க முடியாது என்பதால் இந்த கப்பலை தொடர்ந்து இயக்குவதில்லை என்று நார்வே நாட்டு கப்பல் நிறுவனம் 2004 மார்ச் 23ம் தேதி அறிவித்தது. பேசல் ஒப்பந்தம் (BASEL CONVENTION) இதற்கிடையில் 1989ம் ஆண்டு ஸ்விட்சர்லாந்து நாட்டின் பேசல் (BASEL) நகரில் ஐநா சபையின் சுற்றுச்சூழல் திட்டத்தின் கீழ் பன்னாட்டு விவாதம் ஒன்று நடைபெற்றது. வளர்ச்சி அடைந்த நாடுகளின் நச்சுக்கழிவுகளை வளர்ச்சி அடையாத நாடுகளில் கொட்டுவதை தவிர்ப்பதற்கான இந்த விவாதத்தில் கப்பல் உடைப்பு தொழில் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது. பயன்படுத்தியபின் ஒதுக்கப்படும் கப்பலில் உள்ள கதிரியக்கம் உருவாக்கும் பொருட்கள், அஸ்பெஸ்டாஸ் உள்ளிட்ட நச்சுப்பொருட்களை அகற்றிய பிறகே இந்த கப்பல்களை உடைக்கும் தளத்திற்கு அனுப்ப வேண்டும் என்று அனைத்து நாடுகளும் 1992ம் ஆண்டில் ஒப்புக்கொண்ட இந்த ஒப்பந்தம் பேசல் ஒப்பந்தம் என்று பன்னாட்டு சட்டமாக அங்கீகரிக்கப் படுகிறது. (எனினும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள பெரியண்ணன் அமெரிக்கா, வழக்கம் போல இந்த சட்டத்தையும் இதுவரை ஒத்தேற்று அங்கீகரித்து அமல் (RATIFICATION) செய்யவில்லை என்பது வழக்கம்போல தனிக்கதை!) எஸ்எஸ் நார்வே கப்பலிலும் ஏராளமான (சுமார் 1240 மெட்ரிக் டன்) அஸ்பெஸ்டாஸ் இருப்பதால், அந்த கப்பல் நின்று கொண்டு இருந்த ஜெர்மன் கடற்கரையிலிருந்து அந்த கப்பலை வெளியே எடுப்பது கடினமாக இருந்தது. இந்நிலையில் அந்த கப்பலை ஆசியாவிற்கு கொண்டு சென்ற செப்பனிட்டபின், ஆஸ்திரேலியாவில் இயக்க இருப்பதாக கப்பல் உரிமையாளர்கள் உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து அந்த கப்பல் ஜெர்மன் கடற்கரையை விட்டுவிலக அனுமதி அளிக்கப்பட்டது. இதற்கிடையில் இந்த கப்பல் அமெரிக்க கப்பல் உடைக்கும் நிறுவனம் ஒன்றிற்கு விற்பனை செய்யப்பட்டது. கடந்த 2006ம் ஆண்டு, இந்த கப்பல் லைபீரியா நாட்டு நிறுவனம் ஒன்றிடம் கைமாறி “புளூ லேடி” என்று புதிய பெயர் வைக்கப்பட்டது. இந்த புளூ லேடி தற்போது ஹரியானா கப்பல் உடைப்பு நிறுவனம் என்ற தனியார் நிறுவனத்திடம் வந்து சேர்ந்துள்ளது. […] இந்த கப்பலை ஏற்க பங்களாதேஷ் அரசு அனுமதி மறுத்து விட்டதால் இந்த கப்பல் தற்போது, குஜராத் மாநிலம் அலாங் கப்பல் உடைக்கும் துறைமுகத்தில் நிறுத்தப் பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தின் “மனிதாபிமானம்”..! இதற்கிடையில் சுற்றுச்சூழல் ஆர்வலரான கோபால் கிருஷ்ணா என்பவர், இந்த கப்பலை இந்திய கடல் எல்லைக்குள் நிறுத்துவதற்கு அனுமதிக்கக்கூடாது என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். […] இந்த கப்பலில் உள்ள சுமார் 1240 மெட்ரிக் டன் அளவுள்ள அஸ்பெஸ்டாஸ் புற்றுநோயை தூண்டக்கூடியது என்றும், இந்த கப்பலில் உள்ள பாலி குளோரினேட்டட் பைபினல்ஸ் (POLYCHLORINATED BIPHENYLES) மனிதனின் மூளை உட்பட நரம்பு மண்டலத்தை பாதிக்கக்கூடியது என்றும் அவர் வழக்கில் சுட்டிக் காட்டியுள்ளார். http://2.bp.blogspot.com/_uoThQQ9bO64/Ru-I-E7k7ZI/AAAAAAAAAcA/D1I96dmrU4M/s400/New.04 இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் அரிஜித் பசாயத், சி.கே. தாக்குர் ஆகியோர், “மனிதாபிமான அடிப்படை”யில் இந்த கப்பல் குஜராத் மாநில அலாங் கப்பல் உடைப்பு துறைமுகத்தில் நிற்க அனுமதி அளித்து உத்தரவிட்டனர். மேலும் இந்த கப்பலை ஆய்வு செய்து அறிக்கை அளிக்குமாறு கப்பல் உடைப்புக்கான தொழில்நுட்ப வல்லுனர் குழுவிற்கு உத்தரவு அளித்தார். மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சக செயலாளர் பிரதிப்தோ கோஷ் தலைமையிலான இக்குழுவில் தமிழகத்தைச் சேர்ந்த ராஜகோபாலன், சென்னை ஐஐடி-யின் பேராசிரியர் வி. அனந்த சுப்ரமணியன் உட்பட 12 வல்லுனர்கள் இடம் பெற்றனர். இவர்கள் அனைவரும் அரசுப்பணியாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வல்லுனர்கள் குழு, கடந்த 2006 ஆகஸ்ட் 2ம் தேதியன்று தனது அறிக்கையை அளித்தது. எதிர்பார்த்தபடியே இந்த கப்பலை உடைப்பதால் எந்த அழிவும் ஏற்படாது என்று அறிக்கை கூறுகிறது. இந்த அறிக்கையின் அடிப்படையில் கடந்த செப்டம்பர் 11ம் தேதி உச்சநீதிமன்ற நீதிபதிகள் அரிஜித் பசாயத், எஸ்.ஹெச்.கபாடியா ஆகியோர் புளூ லேடி கப்பலை உடைக்க எந்த தடையுமில்லை என்று தீர்ப்பளித்துள்ளனர். உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு சுற்றுச்சூழல் ஆர்வலர்களை (ஏற்கனவே நாம் பார்த்தபடி) பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஏன் இந்த அதிர்ச்சி? என்று பார்ப்பதற்கு முன், கப்பல் உடைக்கும் தளங்கள் எவ்வாறு இயங்குகின்றன? என்பதை பார்த்துவிடலாம். கப்பல் உடைக்கும் தொழில்…!!!??? கப்பல் கட்டுவதை தொழிலாகக் கூறலாம். ஆனால் கப்பலை உடைப்பது தொழிலாகுமா? என்ற கேள்வி எழலாம். உடைக்கப்படும் கப்பலில் சுமார் 95% தரமான இரும்பு கிடைக்கிறது. இதை சேகரிப்பதுதான் தொழில் என்னும்போது இதன் முக்கியத்துவம் புரியும். மிகச்சிறிய ஒரு கப்பலே சுமாராக 10 ஆயிரம் டன் எடை உள்ளதாக இருக்கும். இந்த கப்பலில் உள்ள சுமார் 500 கிலோ கழிவுப்பொருட்களை கழித்துவிட்டால் மீதமுள்ள 9 ஆயிரத்து 500 கிலோ இரும்பு சேகரிக்கப்படுகிறது. […] […] […] (முதல் படத்தி்ல் எந்தவித பாதுகாப்பும் இல்லாமல் கப்பலை உடைப்பவர் இந்திய தொழிலாளி. மற்ற புகைப்படங்களில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் கப்பல் உடைப்பு தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் மற்ற நாட்டுத் தொழிலாளிகள்) நாட்டில் உள்ள அனைத்து கப்பல் உடைக்கும் தளங்களும் அரசியல் செல்வாக்கு உள்ள தொழில் அதிபர்களால் நிர்வகிக்கப் படுகிறது. இப்பகுதியில் பணியாற்றும் காவல்துறையும், கூலிப்படைகளும் கரம் கோர்த்து செயல்படுகின்றன. எனவே சட்டத்தின் ஆட்சி என்பது இப்பகுதிகளில் வேறு அர்த்தம் பெறுகிறது. அதாவது அப்பகுதியில் உள்ள தொழிலதிபர்கள் வைத்ததுதான் சட்டம் என்றாகி விடுகிறது. http://3.bp.blogspot.com/_uoThQQ9bO64/Ru-IOU7k7YI/AAAAAAAAAb4/QI0yzcrTnik/s400/0.00.215.002.04 குஜராத் மாநிலத்தின் அலாங் கப்பல் உடைக்கும் துறைமுகத்தில் கடந்த 2000ம் ஆண்டில் சுமார் 40 ஆயிரம் தொழிலாளர்கள் இருந்ததாக கணக்கிடப்பட்டுள்ளது. இவர்களின் குடும்பத்தினர் கணக்கில் எடுக்கப்படவில்லை. இந்த மக்கள் தொகை இன்றைய நிலையில் மேலும் 40% அதிகரித்திருக்கலாம். லாபம் சிலருக்கு; நஷ்டம் அனைவருக்கும்..! கப்பல் உடைக்கும் பணியில் கல்வி-அறிவில்லாத ஆண் மற்றும் பெண் தொழிலாளர்களே பெருமளவில் பணியாற்றுகின்றனர். இவர்களில் ஆண்களுக்கு 100 ரூபாய் வரையிலும், பெண்களுக்கு 60 ரூபாய் வரையிலும் தினக்கூலி வழங்கப்படுகிறது. http://4.bp.blogspot.com/_uoThQQ9bO64/Ru-Hck7k7WI/AAAAAAAAAbo/YcPOkmdoLXM/s400/2.98.445.002.01 […] இந்த தொழிலாளர்களைப் பொறுத்தவரையில் கப்பல் உடைப்பது என்பது ஒரு தொழில். உடைந்த கப்பலில் உள்ள உருப்படியான பொருட்களை வேறு பயன்பாடுகளுக்கும், உருப்படியல்லாத பொருட்களை மறு உருவாக்கத்திற்கோ அல்லது வேறு பயன்பாட்டுக்கோ அனுப்பப்படுவது மட்டுமே தெரியும். […] உடைக்கப்படும் கப்பலில் இருக்கும் உலோகங்கள் என்னென்ன? என்பதோ; மற்ற வேதிப்பொருட்கள் என்னென்ன? என்பதோ; அவற்றில் எந்தெந்த பொருட்கள் நச்சுத்தன்மை வாய்ந்தவை? என்பதோ; அந்த நச்சுப்பொருட்கள் தொழிலாளர்களுக்கு என்னென்ன நோயை கொண்டு வரும்? என்பதோ அவர்களுக்கு தெரியாது. […] ஒரு கப்பலின் 95% உயர் தர இரும்பினால் செய்யப்பட்டது. மீதமுள்ள 5%த்தில் இரும்பு அல்லாத உலோகங்கள், வண்ணப்பூச்சுகள், மின் பொருட்கள், ஒயர்கள், இதர கட்டுமான பொருட்கள் அடங்கும். இந்த 5% மற்ற பொருட்களை நீக்கிவிட்டு மீதமுள்ள 95% சதவீதப்பொருட்களை சேகரிப்பதுதான் இந்த தொழிலின் அடிப்படை. புள்ளிவிவரக்கணக்கில் 5% என்பது குறைவாக தெரியலாம். ஆனால் புளூ லேடியின் மொத்த எடை சுமார் 45 ஆயிரம் டன் எடை எனக்கொள்ளும்போது, கழிவுகள் சுமார் 2250 டன் என்பதை மறந்துவிட முடியாது. […] இந்த கழிவுகளில் அஸ்பெஸ்டாஸ், தாமிர ஆக்ஸைடு, துத்தநாக குரோமேட், பாதரசம், ஆர்சனிக், TBT (tributyl tin), TBTO (tributyl tin oxide), TBTCl (tributyl tin chloride) உள்ளிட்ட நச்சு வேதிப்பொருட்களும் அடக்கம். இந்த பொருட்களை எந்த விதமான பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் வெறுங்கையால் கையாளும் தொழிலாளர்களுக்கு புற்றுநோய், ஆஸ்துமா, இதயம் மற்றும் சிறுநீரக கோளாறுகள், பாலுறுப்புகளின் செயல்திறன் குறைதல் உட்பட பல்வேறு நோய்கள் தாக்குகின்றன. […] கப்பல் உடைக்கும் பணி கடற்கரைப்பகுதிகளில் நடைபெறுவதால் இந்த நச்சு ரசாயனங்களின் உபயத்தால் கடற்கரை நீர் மாசுபட்டு நீர்வாழ் உயிரிகளும், அவற்றை உட்கொள்ளும் மனிதர்களும் பாதிக்கப்படுகின்றனர். பெயிண்ட் போன்ற வண்ணப்பூச்சுகளை அகற்றுவதற்காக அவை எரிக்கப்படுகின்றன.அப்போது காற்று மாசுபடுகிறது. இது அப்பகுதியில் உயிர்வாழும் அனைத்து உயிர்களையும் நேரடியாக பாதிக்கும். கப்பல் உடைப்புத் தொழிலில் முன்பொரு காலத்தில் இங்கிலாந்து, தாய்வான், ஸ்பெயின், மெக்ஸிகோ, பிரேசில் ஆகிய நாடுகள் முன்னிலை வகித்தன. ஆனால் மேற்கூறப்பட்ட சீர்கேடுகளை உணர்ந்த அந்த நாடுகள் தற்போது கப்பல் உடைக்கும் தொழிலை ஆசிய நாடுகளின் தலையில் கட்டிவிட்டுள்ளன. […] தற்போது ஆண்டு ஒன்றுக்கு சுமாராக 700 கப்பல்கள் உடைக்கப் படுகின்றன. அவற்றில் 70 சதவீதம், அதாவது சுமார் 500 கப்பல்கள் இந்தியாவில் உடைக்கப்படுகின்றன. மீதம் உள்ள கப்பல்களை, பாகிஸ்தான், வங்காளதேசம், சீனா ஆகிய நாடுகள் பங்கிட்டுக் கொள்கின்றன. உலக வங்கியின் புண்ணியத்தில் இந்த புனிதத்தொழிலில் தற்போது வியட்நாம், இந்தோனேஷியா ஆகிய நாடுகளும் தள்ளப்படுகின்றன. கேட்கப்படாத கேள்விகள்…! இது போன்ற வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றங்கள் மக்களுக்கு தேவையற்ற பல விவகாரங்களை மிகவும் ஆழமாக விவாதிக்கின்றன. ஆனால், மக்களின் வாழ்வுரிமையை பறிக்கக்கூடிய பல அம்சங்களை பரிசீலிக்கவே தவறிவிடுகின்றன. குறிப்பாக இந்திய அரசியல் சட்டம், அதன் குடிமக்களுக்கு வழங்கும் பல்வேறு அடிப்படை உரிமைகள் இப்பகுதி வாழ் மக்களுக்கு சட்டபூர்வமாக மறுக்கப்படுகின்றன. முதலாளிக்கு மட்டும் மனிதாபிமானம் காட்டும் நீதிமன்றங்கள், இந்நாட்டின் பெரும்பான்மை மக்களை மனிதர்களாகவே கருதவில்லை. ஏனென்றால், இந்த தொழிலில் ஈடுபடும் முதலாளிகள், இந்த தொழிலை கண்காணிக்கும் அரசு அமைப்புகளின் நிர்வாகிகள், அதிகாரிகள், இந்த வழக்கை விசாரிக்கும் நீதிபதிகள் ஆகிய யாரும் – இந்த தொழிலால் சீரழியும் பகுதிகளில் வாழப்போவதில்லை. இது சட்டம் மட்டுமே சார்ந்த விவகாரம் இல்லை. என்ன செய்யப் போகிறோம்? -சுந்தரராஜன் (sundararajan@lawyer.com) (புகைப்படங்கள் அனைத்தும் கிரீன்பீஸ், விக்கிபீடியா உள்ளிட்ட இணையங்களிலிருந்து எடுக்கப்பட்டவை) மண்ணிலிருந்து ’பிரித்தெடுக்க’ப்படுகிறார்கள் மக்கள் THURSDAY, SEPTEMBER 27, 2007 அரேபியாவைப் போல அத்தனை வறண்ட பூமியல்ல சாத்தான்குளம்! தேரிக்காட்டில் நூற்றாண்டுகளாக முருங்கையும், தென்னையும், முந்திரியும் விளைந்து வருகின்றன. பிரச்சினைகளின்றி வாழ்க்கையை நடத்த அரேபியாவின் ஒட்டகங்களைப் போல அவை இன்றுவரை உதவியும் வந்திருக்கின்றன. இருந்தாலும், இன்றைய தேரிக்காட்டு மக்கள் அரேபியாவின் மூதாதைகளைப் போல அத்தனை ஏழைகளல்லர்! 1908 ஆம் ஆண்டு அரேபியாவில் பெட்ரோல் இருப்பது கண்டறியப்பட்டது. சாத்தான் குளத்தைப் போலவே அந்தக் கண்டுபிடிப்பை அம்மக்கள் முதலில் கண்டு கொள்ளவில்லைதான். 1930-களில் இருந்து வெளிநாட்டு நிறுவனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக பெட்ரோல் கிணறுகளைத் தோண்ட படையெடுத்தபோது மக்கள் சுதாரித்துக் கொண்டார்கள். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு உலகப் பொருளாதாரத்தையே தீர்மாணிக்கும் அளவிற்கு அரேபியாவின் பெட்ரோல் வளம் வளர்ந்தது. உலக வல்லரசுகள் இன்றுவரை இந்தப் பகுதியில் உள்ள நாடுகளைத் தம் ஆளுமையின் கீழ் வைத்துக்கொள்ள தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. ஈராக்கை ஆக்கிரமித்து அந்நாட்டின் மக்களை அமெரிக்க அரசு இன்றளவும் துவம்சம் செய்து வருவது அங்கிருக்கும் பெட்ரோல் வளத்திற்காகத்தான் என்பதை பிறந்த குழந்தையும் அறியும். பாலைக் காட்டிலும் வெண்மை நிறம் கொண்டது டைட்டானியம். இந்தத் கனிமத்தை 1791 ஆம் ஆண்டில் மனித இனம் முதன்முதலாக அறிந்து கொண்டது. 1795 ஆம் ஆண்டில் இதற்கு “டைட்டானியம்” என்ற பெயரை அது சூட்டியது. எனினும் அதனை சுத்தமான உலோகமாக மாற்றக் கற்றுக் கொண்டது என்னவோ 1910 ஆம் ஆண்டில்தான்! இல்மனைட் மற்றும் ரூட்டைல் என்ற கனம் கூடிய கனிமங்களில் இருந்து டைட்டானியத்தைப் பிரித்தெடுக்கும் வழிமுறைகள் இதன் பின்னரே கண்டறியப் பட்டன. 1946 ஆம் ஆண்டு வரையிலுமே டைட்டானியத்தை பரிசோதனைக் கூடங்களால் மட்டுமே உருவாக்க முடிந்தது. அந்த வருடத்தில்தான் டைட்டானிய உலோகத்தினை பெரிய அளவில் உருவாக்க முடியும் என்பதைக் “கிரால்” என்பவர் கண்டு பிடித்தார். அவரால் முன்மொழியப்பட்ட அந்த முறை இன்றுவரை கையாளப்பட்டு வருகிறது. ஆங்கிலேய அரசினருக்குக் கீழிருந்த “இந்திய நிலவியல் துறை”க்குத் தென்னிந்தியாவின் “தேரி”யிலும், கடற்கரைகளில் உள்ள “கருமணலிலும்” இல்மனைட், ரூட்டைல், மோனசைட் போன்ற “கனத்த” கனிமங்கள் இருப்பது தெரிந்து தான் இருந்தது. இருப்பினும் அன்றைய உலக சந்தையில் அவற்றிற்கு மதிப்பில்லை. எனவே இந்தக் கனிமங்களை வெள்ளையர்கள் கொள்ளையடிக்காமல் நம்மிடமே விட்டுச் சென்று விட்டார்கள். மற்ற உலோகங்களைக் காட்டிலும் டைட்டானியம் எடை குறைந்தது. அதே நேரத்தில் எஃக்கைக் காட்டிலும் உறுதி மிக்கது. எந்த உலோகத்துடனும் எளிதில் சேரும் சிறந்த தன்மையையும் கொண்டது. இந்தத் தன்மைகள் சோவியத் ஒன்றியத்தின் விஞ்ஞானிகளைக் கவர்ந்திழுத்தன. தம் நீர்மூழ்கிக் கப்பல்களில் இந்த உலோகத்தினை அவர்கள் பெரிதளவில் உபயோகப்படுத்தத் தொடங்கினர். இதுவே டைட்டானியத்தின் புகழை 1950–60-களில் எட்டுத்திக்கும் பரவச் செய்ததது. சோவியத் விஞ்ஞானிகளின் போக்கைக் “கன்னம்” வைத்து அறிந்து கொண்ட அமெரிக்க அரசு துடித்துதான் போனது. இருப்பினும் உடனடியாக சுதாரித்தும் கொண்டது. டைட்டானிய உலோகத்தை “இராணுவ ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த உலோகம்” என்று அறிவித்து, அதனை சேமித்து வைக்கும் பணியில் உடனடியாக ஈடுபடத் தொடங்கியது. தான் உருவாக்கும் போர் விமானங்களில் மிக அதிக அளவில் டைட்டானிய உலோகத்தினை உபயோகிப்பது என்ற முடிவை எடுத்தது. மேற்கூறிய தன்மைகளே டைட்டானியக் கனிமத்தின் தீராப் புகழுக்குக் காரணம். என்றாலும் கூட, இன்றைய தேதியில் மனித இனத்தை அதன் அப்பழுக்கற்ற வெண்மை நிறமே அதிகம் கவர்ந்திழுத்திருக்கிறது. உலகில் உற்பத்தி செய்யப்படும் டைட்டானியக் கனிமத்தில் 95% இந்த வெண்மை நிறத்திற்காகத்தான் உபயோகப்படுத்தப்படுகிறது என்றால் மிகையில்லை! டைட்டானியம் கனிமம் இல்லையேல் வெள்ளை பெயிண்ட்,, வெள்ளைக் காகிதம், (அ.இ.அ.தி.மு.க-வால் கண்டுபிடிக்கப்பட்டு பிறகு தமிழ்நாடு அரசியல்வாதிகள் அனைவரையும் தொற்றிக் கொண்ட “அரசியல்வாதி வெள்ளை யூனிபார்ம்” தைக்கத் தேவையான) வெள்ளைத் துணி, வெள்ளை பிளாஸ்டிக், பற்பசை, சலவைப் பவுடர், சூயிங்கம் போன்றவை இல்லை என்று சொல்லும் அளவுக்கு அதன் வெண்மை நம்முடன் இரண்டறக் கலந்து போயிருக்கிறது. இந்தக் கவர்ச்சியே ரத்தன் டாட்டாவை சாத்தான்குளத் தேரியை நோக்கிப் பாய்ந்தோடி வரச் செய்தது. குட்டம், நவ்வலடி கடற்கரை மணலிலும், சாத்தான் குனத்தின் தேரிக் காட்டிலும் மேற்கூறிய கனிமங்கள் பெரிதளவில் உள்ளன என்பதை 1980-களில் இருந்து கல்லூரி ஆய்வாளர்கள் பலரால் செய்யப்பட்ட ஆய்வுகள் தெரிவித்தன. 1989 ஆம் ஆண்டில் இருந்து திருநெல்வேலி மாவட்டத்தின் திசையன்விளை நகரத்தில் வி.வி.மினரல்ஸ் என்றொரு நிறுவனம் இயங்கத் தொடங்கியது. குட்டம், நவ்வலடிப் பகுதிகளில் கடற்கரைக் கருமணலுக்காக எப்பேற்பட்ட இழி செயலையும் செய்ய அது துணிந்தது. கடலை அம்மையாக வணங்கும் மீனவ மக்கள் அந்த நிறுவனத்தின் கொடூர லாபப் பசியின் துவம்சத்திற்கு உள்ளாக்கப்பட்டார்கள். அரசியல் செல்வாக்கு வி.வி.மினரல்ஸ் நிறுவனத்திடம் இருந்தமையால் ஏழை மீனவர்களால் அநீதியைத் தின்பதைத் தவிர வேறொன்றையும் செய்ய முடியவில்லை. நிறுவனத்தின் அடாவடி ஆட்டம் இன்று ஆண்டொன்றுக்கு 1 லட்சத்து 20 ஆயிரம் டன் இல்மனைட் கனிமத்தை உற்பத்தி செய்யும் “மதிப்பு மிக்க” நிறுவனமாக அதை “உயர்த்தியிருக்கிறது!” 1998 ஆம் ஆண்டில் இந்தியக் “கனிம மணல்” தொழிலில் உலக முதலாளிகள் எவரும் ஈடுபடலாம் என்று மத்திய அரசு அறிவித்த போதுதான் டாட்டாவுக்குத் தூக்கிவாரிப் போட்டது. டூ பாண்ட் போன்ற பகாசுர டைட்டானிய வெள்ளை நிறுவனங்கள் வருவதற்கு முன்பு தான் முந்திக் கொள்ள வேண்டும் என்று உடனடியாக நினைத்தார் ரத்தன் டாட்டா. 2000 ஆம் ஆண்டில் தேரி மணலைத் தோண்டுவதற்கான அப்ளிக்கேஷனை தமிழ்நாடு அரசுக்கு அனுப்பினார். இருப்பினும் இரண்டு வருடங்களுக்குப் பிறகே அவருக்கு பதில் கிடைத்தது. சாத்தான்குளத்தை சுற்றியுள்ள 19,768 ஏக்கர் (80 சதுர கிலோ மீட்டர்) தேரி நிலத்தில் உள்ள மணலைத் தோண்டுவதற்கும், மணலில் உள்ள கனிமங்களைப் பிரித்தெடுப்பதற்கும், பிரித்தெடுத்த கனிமங்களைக் கூடுதல் மதிப்புள்ள பொருட்களாக மாற்றுவதற்குமான “உத்தேச” உரிமத்திற்கு அவர் விண்ணப்பித்திருந்தார். இருப்பினும் 2002 ஆம் ஆண்டு ஜீன் 27 ஆம் தேதியன்று இதில் சுமார் 25%-ஆன 5000 ஏக்கர் நிலத்திற்கான “உத்தேச உரிமத்தை” வழங்கவே தமிழ்நாடு அரசு முன்வந்திருந்தது. வேறு வழியின்றி இந்த உரிமத்திற்கான ஒப்பந்தத்தில் ரத்தன் கையெழுத்திட்டார். கவலை வெகு நேரம் நீடிக்கவில்லை. தேரியின் சிவந்த நிறம் ரத்தனை சிலிர்க்க வைத்தது. மும்பையின் குளிரூட்டப்பட்ட அலுவலகங்களால் கொடுக்க முடியாத பேரானந்தத்தை சாத்தான்குளத்துத் தேரியின் வறண்ட காற்று அவருக்கு அளித்தது. உப்பு முதல் புல்டோசர் வரை முக்கித் திணறி வெள்ளைக்கார ஆட்சியில் இருந்து உற்பத்தி செய்து ஈட்டிய லாபத்தை சில வருடங்களுக்குள்ளேயே இந்தத் தேரியிலிருந்து கறந்துவிட முடியும் என்ற கனவுகள் அவரை ஆக்கிரமிக்கத் தொடங்கின. சுட்டுவிரல் ஆட்டத்தில் அனைத்தும் நடந்தேறின. இந்திய அணுசக்தித் துறையைத் துவங்கிய டாக்டர்.ஹோமி பாபாவை 1944 ஆம் ஆண்டில் இந்தியப் பிரமுகராக உருவாக்கியதே ரத்தனின் தாத்தா சர்.தோராப்ஜி டாட்டா அவர்களின் அறக்கட்டளைதான் அல்லவா? தேரியைப் பரிசோதிக்கத் தேவையான அணுசக்தித் துறையின் “சான்றிதழ்” கிடைப்பதில் இம்மியும் சிரமமிருக்கவில்லை. காடுகள் மற்றும் சுற்றுச் சூழல் அமைச்சகத்தின் அனுமதியும் உடனடியாகக் கிடைத்தது. தேரியின் வளத்தைப் பரிசோதிக்க உலக நிபுணர்கள் ஓடோடி வந்தார்கள். பின்லாந்து நாட்டின் ஒளட்டோகும்பு, அமெரிக்காவின் பின்காக் -ஆலன்-ஹோல்ட், இந்தியாவின் எல்&டி நிறுவனங்களில் இருந்து வந்த அந்த வெள்ளை நிபுணர்கள் இரவு பகல் பாராது தம் பரிசோதனைகளை நடத்தினர். கிடைக்கும் கனிமங்களை இனம் வாரியாகப் பிரிப்பதற்கும், மதிப்பு கூட்டுவதற்கும் தேவையான திட்டங்களைத் தீட்ட ஆஸ்திரேலிய நாட்டின் ஜிஞீவிமி, இந்தியாவின் தஸ்தூர்கோ நிறுவனங்களை ரத்தன் கேட்டுக் கொண்டார். தேரியின் பரிசோதனைக்காக செலவிட்ட 15 கோடி ரூபாய் மன நிறைவை அளிப்பதாக அமைந்தது. நிம்மதியில் பெருமூச்சு விட்டார் ரத்தன். ஆடு புலி ஆட்டம் 2006 மார்ச் மாதம் அனைத்து பரிசோதனைகளும், திட்டங்களும் நிறைவடைந்தன. தண்ணீர் மட்டும்தான் பிரச்சினை. நாள் ஒன்றுக்கு சுமார் 546 லட்சம் லிட்டர் நல்ல தண்ணீர் தேவை என்றார்கள் நிபுணர்கள். தாமிரபரணியில் இருந்து எடுத்துக் கொள்ளலாம் என்பது முந்தைய திட்டம். குடிநீருக்கே மக்கள் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் இன்றைய சூழ்நிலையில் மணல் குவாரிக்குத் தண்ணீரைக் கொடுக்க எந்த அரசுதான் முன்வரும்? வேறு வழியின்றி குலசேகரப் பட்டணத்தில் இதற்காக “கடல் நீர் உப்பகற்றி ஆலை” ஒன்றை நிறுவுவது என்று முடிவானது. உப்பகற்றி ஆலையோடு சேர்த்து 30 மெகாவாட் திறனுள்ள மின் நிலையம் ஒன்றையும் அமைத்தால் உப்பகற்றி ஆலைக்கு ஆகும் செலவு குறையும். மேலும் திட்டத்திற்குத் தேவையான மின்சாரத்தையும் குறைந்த விலையில் பெற்றிட முடியும் என்று ஆலோசனை கூறப்பட்டது. இவ்வாலைகளை நிறுவுவதற்காக குலசேகரப் பட்டணத்தில் சுமார் 213 ஏக்கர் நிலம் கையகப்படுத்த வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது. இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில்தான் 2007 ஜீன் மாதம் பழைய ஒப்பந்தத்தை தமிழக அரசு மீண்டும் புதுப்பித்தது. ஜீன் 28 ஆம் தேதியன்று இந்தப் புதிய ஒப்பந்தத்தில் டாட்டாவும், தமிழக அரசும் கையெழுத்திட்டன. இதன்படி டாட்டாவின் திட்டத்திற்காக முதல் முதலில் கோரப்பட்ட 19,768 ஏக்கர் (80 சதுர கிலோ மீட்டர்) நிலத்தில் (கிட்டத்தட்ட) சரி பாதியான 9828.78 ஏக்கர் தேரிக் காட்டை தமிழக அரசே கையகப் படுத்திக் கொடுக்கும் என்று முடிவானது. இதைத் தொடர்ந்து அரசியல் கட்சிகள் திட்டத்தை எதிர்த்துக் குரல் கொடுத்தன. இவ்வெதிர்ப்பின் காரணம் நிலத்தைக் கையகப்படுத்தும் பணியில் இருந்து தமிழ்நாடு அரசு பின்வாங்கியது. நிலத்தை டாட்டா நிறுவனமே பட்டாதாரர்களிடம் இருந்து வாங்கிக் கொள்ள வேண்டும் என்று கூறியது. “ஏக்கருக்கு 50 ஆயிரம் ரூபாய்தான் கொடுக்க முடியும். வறண்ட தரிசு நிலமான தேரிக்கு இதுவே அதிகம்”, என்றது டாட்டா நிறுவனம். கூடுதல் விலையைக் கொடுக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகள் கோரிக்கை வைத்தன. அமைச்சர் ஒருவரின் தலைமையில் பகுதியைப் பாரிவையிட்டு ஆய்வறிக்கை தயார் செய்ய குழு ஒன்று அமைக்கப்பட்டது. ஏக்கருக்கு ஒரு லட்சத்து 16 ஆயிரம் வரை கொடுக்கலாம் என்று அந்தக் குழு பரிந்துரை செய்தது. திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்று சில அரசியல் கட்சிகள் கோரிக்கை வைத்தன. அதற்கான பணம் தன்னிடம் இல்லை என்று அந்தக் கோரிக்கைக்கு மறுப்பு தெரிவித்தது தமிழ்நாடு அரசு. “எப்படிப்பட்ட சூழ்நிலையையும் தாங்கள் சந்திக்கத் தயார். திட்டத்தை விட்டு விலகுவது என்ற பேச்சுக்கு இடமேயில்லை” என்ற அதிரடி அறிக்கையை டாட்டா நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டிருக்கிறது. டைட்டானிய ஆலை வந்தால் நிலத்தை விற்பவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று கலைஞர் திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருக்கிறார். திட்டத்தை எதிர்க்கும் அரசியல் கட்சிகள் எல்லாவற்றையும் தேரிக்காட்டை நோக்கி செல்லும் காவடிக் கூட்டம் என்றும் கிண்டலடித்திருக்கிறார். தமிழக அரசும் திட்டத்தின் நன்மைகளை விளக்கி அனைத்துப் பத்திரிகைகளிலும் விளம்பரம் செய்திருக்கிறது. தமிழக அரசுக்கும், கலைஞருக்கும் திட்டம் குறித்து முழுமையாகத் தெரியுமா என்ற சந்தேகத்தை எழுப்பவே அவர்களின் மேற்கூறிய நடவடிக்கைகள் இன்றளவும் உதவியிருக்கின்றன. திட்டத்தின் உண்மை நிலவரத்தை முதல்வரிடம் விளக்கும் பொறுப்பு டிட்கோ அதிகாரிகளுடையது. அவர்கள் அப்பணியை சரிவரச் செய்யவில்லை போலும். அவர்களின் அரை வேக்காட்டுப் பேச்சை நம்பித்தான் கலைஞர் திட்டம் குறித்துத் தவறான கருத்துக்களை அளித்துக் கொண்டிருக்கிறாரோ?இல்லை ‘’வேறு’’ எதுவும் காரணமோ? தெரியவில்லை. இப்படிப்பட்ட குழப்பமான சூழ்நிலையில் திட்டம் குறித்து தெளிவாக விளங்கிக் கொள்வது அவசியமாகிறது. திட்டத்தினால் ஏற்படும் பாதிப்புகள் இந்தத் திட்டத்தினால் மூன்று மக்கள் குழுக்கள் பாதிப்புக்குள்ளாவார்கள். இரண்டுவகை நிலப்பகுதிகளும், அவற்றில் வாழும் உயிரினங்களும் பாதிப்புக்குள்ளாக வாய்ப்பிருக்கிறது. 1. திட்டத்திற்காக நிலத்தை விற்கப் போகும் மக்கள் 1. திட்டத்திற்குத் தேவையான மின்சாரத்தை வழங்கும் மின் நிலையத்தையும், நல்ல நீரைக் கடல் நீரில் இருந்து பிரித்தெடுக்கும் ஆலையையும் ஏற்றுக் கொள்ளவிருக்கும் குல சேகரப்பட்டணம் மற்றும் அதைச் சுற்றியிருக்கும் கிராம மக்களும், மீனவர்களும் 2. திட்டம் வரவிருக்கிற “சாத்தான் குளத் தேரி”யை சுற்றி 20 கிலோ மீட்டர் தூரத்திற்குள் அமைந்துள்ள கிராமங்களில் வசிக்கும் மக்கள் 3. சாத்தான்குளம் தேரியைச் சுற்றியுள்ள நிலப் பகுதி 4. குலசேகரப்பட்டணத்தை அடுத்துள்ள கடற்கரையும், கடலும், அவற்றில் வாழும் உயிரினங்களும். ஆலையில் இருந்து வெளியேறும் இரும்பு குளோரைடு மற்றும் அமிலக் கழிவுகள் சுற்றியுள்ள நிலத்தையும், நிலத்தடி நீரையும் பாழ்படுத்த வாய்ப்பிருக்கிறது. ஆலையில் பிரித்தெடுக்கப்படும் ஜிர்க்கான் கனிமம் கதிரியக்கத் தன்மையைக் கொண்டிருப்பதால் ஆலையை சுற்றி 20 கிலோ மீட்டர் தூரத்திற்குள் வாழும் மக்களுக்கும், உயிரினங்களுக்கும் மரபணு நோய்களும், பல்வேறு வகைப் புற்றுநோய்களும் (கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மணவாளக்குறிச்சியைச் சுற்றி வாழும் மக்களைப் போல) உருவாக வாய்ப்பிருக்கிறது. குலசேகரப் பட்டணம் மற்றும் அதை அடுத்துள்ள மணப்பாடு போன்ற கிராமங்களில் உள்ள மீனவர்களின் வாவ்வாதாரங்களும் கடல் நீர் உப்பகற்றி ஆலையின் இயக்கத்தாலும், மின் நிலையத்தின் செயல்பாட்டாலும் பாதிப்புக்குள்ளாக வாய்ப்பிருக்கிறது. இப்பாதிப்புகள் குறித்து நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டியது உடனடி அவசியம். இதற்கான முதல் கட்ட நடவடிக்கையாக இந்தத் திட்டத்திற்காக டாட்டா நிறுவனம் மேற்கொண்ட அனைத்து ஆய்வறிக்கைகளையும் மக்கள் முன் வைத்து விவாதிக்க வேண்டியது அவசியமாகிறது. திட்டத்திற்கான “சுற்றுச் சூழல் தாக்கீட்டு அறிக்கை”யையும், “சுற்றுச்சூழல் பாதுகாப்புத் திட்ட அறிக்கை”யையும் புது தில்லியைச் சேர்ந்த “மின்-மெக்” என்ற நிறுவனம் செய்திருப்பதாக திட்ட அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள். இவ்வறிக்கைகளை உடனடியாக வெளியிட தமிழ்நாடு அரசு ஆவன செய்ய வேண்டும். அதுபோல பின்லாந்து நாட்டின் ஒளட்டோகும்பு, அமெரிக்காவின் பின்காக்-ஆலன்-ஹோல்ட், ஆகிய நிறுவனங்களும், ஆஸ்திரேலிய நாட்டின் TZMI, நிறுவனமும் திட்டம் குறித்து முன்வைத்த அனைத்து தொழில்நுட்ப அறிக்கைகளையும் உடனடியாக வெளியிட தமிழ்நாடு அரசு உத்தரவிட வேண்டும். இவ்வறிக்கைகளின் அடிப்படையில்தான் இப்பகுதி மக்களும், உயிரினங்களும் எதிர்நோக்க வாய்ப்புள்ள பிரச்சினைகளைத் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும். மிக முக்கியமான இவ்வறிக்கைகளை டாட்டா நிறுவனம் இன்றுவரை வெளியிடாதது ஏன்? டாட்டாவின் இந்தக் கயமைத் தனத்தைத் தமிழ்நாடு அரசு தட்டிக் கேட்காமல் இருப்பதை எப்படிப் புரிந்து கொள்ள? தென்மாவட்ட மக்களுக்கான வேலைவாய்ப்பு என்றும், நாட்டின் வளர்ச்சி என்றும் கூறிக்கொண்டு இத்திட்டம் பற்றி ஒன்றுமே தெரியாமல், அதைத் தவிர்த்து ‘எல்லாம் தெரிந்து’ அறிக்கை விடும் அரசியல் தலைவர்களிலிருந்து திட்டத்திற்கான நிலம் திருநெல்வேலிக்கு தெற்கே இருக்கிறதா?, நாகர்கோவிலுக்குத் தெற்கே இருக்கிறதா? என்பதுகூடத் தெரியாமல் குளிர்பதனம் செய்யப்பட்ட அறைகளில் இருந்து அறிக்கை விடும் அறிவு ஜீவிகள் வரை அனைவரும் யோசிக்க வேண்டும். எவ்வளவு கஷ்டமான சூழ்நிலையிலும், ஒருவனை அவன் காலம் காலமாக வாழ்ந்த இடத்திலிருந்து அகதியாக அவனை இன்னொரு இடத்துக்கு துரத்துவது கொடுமையானது. ஆனால், அதைச் செய்வதற்கு தற்பொழுது அனைவரும் ஒன்று திரண்டிருக்கின்றனர். அவர்கள் அனைவரும் இந்தப் பகுதியை ஏதோ பாலைவனம் போலவும் இவர்கள் அதை மிதமிஞ்சிய வளர்ச்சிப் பகுதியாக மாற்ற டாடாவின் டைட்டானியம் ஆலை உதவும் என்று காரணம் கூறிக் கொண்டிருக்கிறனர். திட்டத்தில் இருந்து டாட்டாவிற்குக் கிடைக்கப் போகும் லாபம் மிகப் பெரியது. 2005-06 ஆம் வருடத்தில் டாட்டா குழுமத்தின் ஒட்டுமொத்த வர்த்தகமே 97 ஆயிரம் கோடி ரூபாய்தான். ஆனால் சாத்தான்குளத் தேரியின் டைட்டானியத் திட்டமோ அதைக் காட்டிலும் பன்மடங்கு லாபத்தைக் கொடுக்க வல்லது. ஆனால், அதற்காக தமிழ் மக்கள் கொடுக்கும் விலையோ மிகவும் அதிகம். இன்னொரு சிலப்பதிகாரமோ? “என் தலையின் மீது நீங்கள் துப்பாக்கியையே வைத்தாலும்பயத்தில் தலையை அசைத்துடுவேன் என்று கனவு காணவேண்டாம்” என்று நான் பலமுறை கூறியுள்ளேன் -ரத்தன் டாட்டா, மேற்கு வங்காளம், சிங்கூர் பிரச்சனையை ஒட்டி கூறியது "எதிர்ப்புகளைக் கண்டு அஞ்சமாட்டோம். டைட்டானியம் ஆலை அமைப்பதில் உறுதியாக இருக்கிறோம். -டாடா நிறுவன மேலாளர் முத்துராமன்15.8.07 “யார் என்ன சொன்னாலும் டைட்டானியம் ஆலை அமைப்பதைத் தடுக்க முடியாது. டைட்டானியம் ஆலை அமைவது உறுதி” -தமிழக அமைச்சர் ஆற்காடு வீரசாமி28.9.07 தினத்தந்தி. திட்டம் குறித்த தகவல்களை “ஒளித்து” வைத்திருப்பதன் மூலம் 5 லட்சம் கோடி ரூபாய் வருமானத்தைக் கொடுக்கப்போகும் நிலத்தை வெறும் 50 கோடி ரூபாய்க்கு விலை பேசி முடிக்க டாட்டா முயற்சி செய்கிறது. தமிழ்நாடு அரசோ செங்கோலைப் பிடித்து நீதியை வழங்கத் தயங்கிறது. “கள்வனுக்கே” பரிந்து பேசவும் அது துணிந்திருக்கிறது. தொன்மை வாய்ந்த இந்தத் தமிழ் மண்ணின் மனதில் “இது இன்னொரு கொலைக்களத் காண்டமோ?” என்ற பேரச்சத்தை உருவாக்கியிருக்கிறது. வாழ்வாதாரத்தை இழந்து துடித்திட்ட கண்ணகியை நினைவுபடுத்துகின்றனர், சாத்தான்குளத் தேரியின் மைந்தர்கள்! மீண்டும் ஒரு முறை சிலம்பின் அவல முடிவை நாம் சந்தித்துதான் ஆக வேண்டுமா?. -அசுரன்-மருத்துவர் இரமேஷ்-கு.காமராஜ் நன்றி: […] செப்டம்பர், 2007 இந்த விவகாரம் குறித்து மேலும் தகவலுக்கு பார்க்கவும்: www.tatatitanium.blogspot.com, www.tatatitanium.wordpress.com ’விதை’யின் பிடியில் உலகம் (இனி பேரழிவு ஆயுதங்கள் தேவை இல்லை; விதைகளே போதுமானவை!) SUNDAY, SEPTEMBER 30, 2007 மகாராட்டிர மாநிலம் யோவத்மல் மாவட்டத்தின் சீங்காபூர் கிராமத்திலிருந்து கடந்த ஆண்டு, இந்திய குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமர் அலுவலகத்துக்கு மிகவும் விசித்திரமான ஓர் அழைப்பு அனுப்பப்பட்டது. இவர்கள் இருவரையும் அந்த கிராமத்தில் நடைபெற இருந்த விழாவை தொடங்கி வைக்க வருமாறு, அனைத்து கிராம மக்களும் ஒன்றிணைந்து வேண்டுகோள் விடுத்திருந்தனர். விவசாயம் பொய்த்துப் போன சூழலில், கடன்களைக் கட்ட இயலாமல், தங்கள் பசியைப் போக்க கதியற்று அந்த கிராமத்தினர் அனைவரும் தங்களுடைய சிறுநீரகத்தை விற்க முன்வந்தனர். அந்த விழாவை தொடங்கி வைக்கத்தான் அப்துல் கலாம் மற்றும் மன்மோகன் சிங் ஆகியோரை சிறப்பு அழைப்பாளர்களாக அவர்கள் அழைத்திருந்தனர். அந்த அழைப்பு புது தில்லியை சென்றடைந்த நேரம், அடுத்த ஆண்டு கொண்டாடவிருக்கும் 60ஆவது சுதந்திரநாள் கொண்டாட்டங்கள் குறித்த ஆலோசனைக் கூட்டம் பிரதமர் அலுவலகத்தில் நிகழ்ந்து கொண்டிருந்தது. மகாராட்டிர மாநிலம் வார்தா மாவட்டத்து டோர்லி கிராமத்தின் மரங்களிலும், ஊர் எல்லையிலும் பரவலாக அறிவிப்புகள் : ‘கிராமம் விற்பனைக்கு உள்ளது’. அடுத்த கிராமமான ஷவானி ரேகிலாப்பூரில் மொத்த கிராமமும் தங்களை கூட்டுத் தற்கொலை செய்து கொள்ள அனுமதிக்குமாறு மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை அனுப்பியிருந்தது. பஞ்சாபில் உள்ள மல்சீங்வாலா கிராமத்தினர் வங்கிகளுக்கு அளிக்க வேண்டிய மொத்த தொகை ரூபாய் அய்ந்து கோடி. கந்து வட்டிக்காரர்களுக்கு அளிக்க வேண்டிய ரூபாய் 2.5 கோடி. இதைக் கட்ட முடியாத அந்த பஞ்சாயத்து ஒன்று கூடி, கிராமத்தின் மொத்த 1800 ஏக்கரையும் ஏலம் மூலம் விற்க ஆயத்தமானது. கர்நாடகாவுக்கு அருகில் உள்ள ஆந்திரத்தின் வழியில் தற்கொலை விகிதத்தில் உயர்வு காணப்படுகிறது. இரு மாநிலங்களும் கணினி மென்பொருள் தொழில் நோக்கி சாய்வு கண்டிருப்பதால், அவற்றின் கண்களுக்கு இந்த சாவுகள் ஒரு பொருட்டே அல்ல. நாட்டின் மொத்த மக்கள் தொகையில், 65 சதவிகிதம் பேர் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள்தான் இந்த நூறு கோடி மக்களின் பசியைப் போக்குபவர்கள். பசியைப் போக்கும் நடவடிக்கையில் கடந்த பத்தாண்டுகளில் 1,50,000 விவசாயிகள் பூச்சிக் கொல்லி அருந்தி தங்களை மாய்த்துக் கொண்டனர். இருப்பினும் எந்தப் பாடமும் கற்காத நம் அரசுகள், பன்னாட்டு நிறுவனங்களுக்குத் தொண்டாற்றுவதில் அதிதீவிரமாக செயல்படுகின்றன. 1985 இல் கிடைத்த விலையில் பெரிய மாற்றம் எதுவும் விளைபொருட்களுக்கு கிடைத்திடவில்லை. ஆனால், இடு பொருட்களின் விலை 34 மடங்கு உயர்ந்துள்ளது. அமெரிக்கா மற்றும் அய்ரோப்பாவில் விவசாயிகளுக்கு அந்த அரசுகள் மானியத்தை வழங்கியிருக்கின்றன. ஆனால், அந்த நாடுகளிலிருந்து இந்தியா நோக்கி வரும் பரிந்துரைகள் ‘மானியங்கள் கூடாது’ என உத்தரவிடுகின்றன. பசுமைப் புரட்சியின் பெயரால் ரசாயனக் கழிவுகளை கடந்த 40 ஆண்டுகளாக நம் பூமியில் கொட்டி, மொத்த நிலத்தின் வளத்தையும் பாழடித்து விட்டார்கள். நுண்ணுயிர்கள் எல்லாம் அழிந்து, மண் செத்துக் கிடக்கிறது. செத்த மண்ணுடன் உரையாடும் விவசாயியும் சாகிறான். 1986 இல் ‘பம்பர்ஸ் சட்டத்திருத்தம்’ (Bumper’s Amendment) அமெரிக்காவில் கொண்டு வரப்பட்டது. அந்த சட்டத்தின்படி, உலக அளவில் நடக்கும் விவசாயம் தொடர்புடைய ஆய்வுகளுக்கு, அது வரையிலும் வழங்கப்பட்ட அமெரிக்க நிதியுதவியை நிறுத்த வழிவகுக்கும் சட்டம் அது. விவசாய நூல்களைப் பதிப்பித்தல், மாநாடுகள் நடத்துதல் என ஏராளமான நடவடிக்கைகள் உலகெங்கிலும் பாதி வழியில் திசை அறியாது நின்றன. இவை அமெரிக்க உயிரியல் தொழில்நுட்ப நிறுவனங்களின் வளர்ச்சியைத் தடுத்திடும் என்பது அவர்களது வாதம். இந்த சட்டத்திற்குப் பிறகு, அமெரிக்காவை சேர்ந்த 20 நிறுவனங்கள் மட்டுமே உலகளவில் இத்துறையில் கோலோச்ச வழி செய்தது. உலகின் மூன்றில் ஒரு பங்கு கச்சா எண்ணெயை தன் வசப்படுத்திய பிறகு, தற்பொழுது அமெரிக்காவின் மொத்த பார்வையும் உணவு சந்தையை நோக்கி திசை திரும்பி உள்ளது. உலகத்தின் பசியைப் போக்க கிளம்பிய புதிய தேவதூதராக காட்சியளிக்கிறார் ஜார்ஜ் புஷ். பசியைப் போக்கும் அருமருந்துடன் அவர் உலகை வலம் வரத் தொடங்கி விட்டார். அவரது கைகளில் மரபீனி மாற்றம்(GENETIC ENGINEERING) செய்யப்பட்ட விதைகள் உள்ளன. இந்த ’விதை’களில்தான் உலகின் பசியை, வறுமையைப் போக்கும் மந்திரம் பொதிந்துள்ளதாக அவர் கூறுகிறார். ஆயுத நிறுவனங்களைத் தொடர்ந்து ஜார்ஜ் புஷ் அலுவலகத்தில் அதிக செல்வாக்கு செலுத்துபவை, உயிரியல் தொழில்நுட்ப நிறுவனங்கள்தான். இந்த நிறுவனங்கள் உலகின் பல நாடுகளில் நுழைய முடியாமல் தவிக்கின்றன. அய்ரோப்பா அடுத்த அய்ந்தாண்டுகளுக்கு தங்கள் திசை பக்கம் வரக் கூடாது என அறிவித்துவிட்டது. இந்த அறிவிப்பால் அமெரிக்க நிறுவனங்கள் கதிகலங்கியுள்ளன. அமெரிக்க அரசின் தொழில் பிரதிநிதி ரோபர்ட் சோலிக், இந்தத் தடை அமெரிக்கப் பொருளாதார வளர்ச்சியை பாதிக்கும் என்றும், உயிரியல் தொழில்நுட்ப வளர்ச்சியை பாதிக்கிறது என்றும், இறுதியாக அய்ரோப்பாவின் இந்தத் தடை உலகில் பட்டினியை அதிகரிக்கும் என்றும் மிரட்டுகிறார். உலகின் மொத்த விதைகளையும் இந்த நிறுவனங்கள் திருடி தங்கள் வசம் வைத்துள்ளன. இதில் இந்தியாவிலிருந்து மட்டும் 1,50,000 நிலைத்திணை வகைகள், அமெரிக்க உயிரியல் ஆய்வுக் கூடங்களில் உள்ளன. அமெரிக்க அரசின் விவசாய அமைச்சகமும், உயிரியல் தொழில்நுட்ப வல்லுநர்களும் ஏராளமான இந்தியத் தொண்டு நிறுவனங்களைப் பணியில் அமர்த்தினர். கடந்த அய்ந்தாண்டுகளாக இந்தியா முழுவதிலும் இந்த 1,50,000 செடி வகைகள் குறித்த மரபான அறிவை சேகரித்து வருகிறார்கள். இந்த திட்டங்களுக்காக பல பன்னாட்டு நிறுவனங்கள் கோடிக்கணக்கான தொகையை ஒதுக்கி வருகின்றன. அதில் குறிப்பாக ‘போர்டு’ நிறுவனம் விதைகள் பற்றிய தகவல்களை இரு தலைப்புகளில் சேகரித்து வருகிறது. 1. ‘பயோடெக்’ சார்ந்த அறிவியல் தகவல்கள் 1. வாய்மொழி வரலாற்றில் இருக்கும் தகவல்களை, நாட்டுப்புறவியல் சார்ந்த ஆய்வுகளின் மூலம் பெறுவது. எனவே, உங்கள் கிராமங்களை நோக்கி வரும் ஆய்வாளர்களிடம், ‘யாருக்காக இந்த ஆய்வை செய்கிறீர்கள்?’ என்ற கேள்வியை முதலில் எழுப்புங்கள். இந்த 1,50,000 நிலைத்திணை வகைகளை அமெரிக்காவிற்கு கள்ளக் கடத்தல் செய்தவர்கள், இந்தியாவின் உயர் பதவிகளில் சொகுசாய் வாழ்ந்து வருகிறார்கள். அடிமைகள் இருக்கும் வரை ஏகாதிபத்தியம் செழித்தோங்கும் என்பதில் அய்யமில்லை. கலிபோர்னியாவின் சேக்ரமென்டோ டவுன் டவுனில் சூன் 23-25, 2007இல் ஒரு மாநாடு நடைபெற்றது. அமெரிக்க விவசாயத் துறை செயலர் ஆன் வெனேமன் விடுத்த அழைப்பின் பெயரில், 180 நாடுகளை சேர்ந்த விவசாய அமைச்சர்கள் இதில் பங்கேற்றனர். மரபீனி மாற்றம் செய்யப்பட்ட விதைகள் தரும் நன்மைகள், லாபங்கள் குறித்த விவாதங்கள் இங்கு நடைபெற்றன. உலகின் பட்டினியை, பசியைப் போக்க தவம் செய்து வரும் அமெரிக்க பன்னாட்டு நிறுவனங்களுக்கு நீங்கள் ஒத்துழைக்க மறுத்தால், அரசியல் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அவர் எச்சரித்தார். இந்த நிறுவனங்கள் உற்பத்தி செய்து வைத்துள்ள மரபீனி மாற்றம் செய்யப்பட்ட உணவுப் பொருட்களை ஒட்டுமொத்தமாக எல்லா நாடுகளும் அனுமதிக்கவில்லை. எனவே, ஆத்திரத்தில் அலையும் இந்த நிறுவனங்கள் தற்காலிக இடைவெளிகளை கண்டுபிடித்துள்ளன. பட்டினியால் வாடும் பல ஆப்பிரிக்க நாடுகளுக்கு உணவு உதவி அளிக்கப் போவதாகக் கூறி, இந்த விலை போகாத சரக்கை ஏற்றுமதி செய்கிறார்கள். அய்.நா. உலக உணவுக் கழகம், செஞ்சிலுவை சங்கம் என அனைத்து நிறுவனங்களும் இனி தங்கள் திட்டங்களுக்கு, உயிரியல் தொழில் நிறுவனங்களிடமிருந்து தான் கொள்முதல் செய்ய வேண்டும் என கட்டளையிட்டுள்ளனர். ஆப்பிரிக்க நாடுகளில் நடைமுறையில் உள்ள மதிய உணவுத் திட்டங்களில் இனி மரபீனி மாற்று உணவுகள்தான் வழங்கப்படும். தன் சொந்த தேசம் உண்ண மறுக்கும் தானியங்களை, மற்றவர்கள் மீது திணிப்பது உலகின் மிகப் பெரிய மனித உரிமை மீறல். அப்படி எந்த தேசமும் இனி இந்த நிறுவனங்களை அனுமதிக்க மறுத்தால் ஈராக், ஆப்கானிஸ்தான் கதிதான். பேரழிவு ஆயுதங்கள் அல்ல; விதைகளே போதுமானவை. இவை போக புதிய மரபீனி மாற்று விளை பொருட்கள் அங்காடியை ‘ராக்பெல்லர் பவுன்டேஷன்’ மற்றும் மேடிசன் நிறுவனம் தொடங்கியுள்ளது. எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட நாடுகளில் இவர்கள் தங்கள் புதிய வியாபாரத்தை தொடங்குவார்கள். எய்ட்ஸ் நோயால் ஏராளமான ஆப்பிரிக்க நாடுகளில் கிராமப்புற ஆண்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. விவசாயக் கூலிகளின் பற்றாக்குறையை போக்கும் அந்த நாடுகளை, மரபீனி மாற்றம் செய்யப்பட்ட விதைகளைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்துகிறார்கள். இந்த விதைகளைப் பயன்படுத்தினால் அதிக பூச்சிக் கொல்லி அடிக்க வேண்டியதில்லை, வேலை குறைவு என கதை அளந்து வருகிறார்கள். இவர்களின் இந்த ‘பி.டி.’ ரக விதையை பயன்படுத்திதான் விதர்பா, ஆந்திரப் பகுதி விவசாயிகள் பூச்சிக்கொல்லி தெளித்து, தெளித்து இறுதியில் கடன்களை சமாளிக்க முடியாமல் மிச்ச மீதி பூச்சிக்கொல்லியை தாங்களே குடித்து மாண்டனர். மேடிசன் நிறுவனத்தின் அடுத்த இலக்கு இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், தாய்லாந்து மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகள். இவர்களின் வேலை புள்ளி விவரங்களைத் தயாரிப்பது, பஞ்சங்களை ஏற்படுத்துவது (யோக்கியன் வரான் சொம்பை எடுத்து உள்ள வை). அமெரிக்க உயிரியல் தொழில்நுட்ப நிறுவனங்களின் தொடர்ந்த அழுத்தம் காரணமாக, இந்தியா தனது கதவுகளை அகலத் திறந்துள்ளது. இந்தியாவில் 100க்கும் மேற்பட்ட இடங்களில் மரபீனி மாற்று விதைகளை ஆய்வு நோக்கில் பயிரிட அனுமதி அளித்துள்ளனர். எராளமான காய்கறி, எண்ணெய் வித்துக்கள் என உணவு வகை ஆய்வுகள் நடக்கின்றன. ஆனால், இந்த ஆய்வுகள் முறைப்படி நிகழ்த்தப்படுவதில்லை. இந்திய தட்பவெப்ப சூழலுக்கு இவை உகந்ததா? நம் மண்ணில் இவை விளையுமா? என்பது போன்ற நூற்றுக்கணக்கான கேள்விகள் நம்முன் விடையின்றி நிற்கும்போது, நம் விஞ்ஞானிகள் மற்றும் அரசு செயலர்கள் இந்த விதைகளுக்கு நற்சான்றிதழ் வழங்கி வருகின்றனர். இதில் சமீபத்திய வேடிக்கை உயிரியல் தொழில் நுட்பத் துறையின் செயலர், ஜி.எம். உருளைக்கிழங்கில் 40 சதவிகிதம் புரதச்சத்து இருப்பதாக பேட்டியளித்தார். மறு நாள் அது 2.5 சதவிகிதம்தான் என ஆய்வு நிறுவனம் அறிவித்தது. இது போல் இனி எல்லா மரபீனி மாற்றம் செய்யப்பட்ட விதைகள் குறித்த கட்டுக் கதைகளும் மடை திறந்த வெள்ளமாய் வரும். குடிமைச் சமூகமே எச்சரிக்கை! இந்த ஆய்வுகள் நிகழ்த்தப்பட்ட எல்லா இடங்களிலும் நடந்த முறைகேடுகள் தற்பொழுது வெளிவருகின்றன. இந்த ஆய்வுக்காக குத்தகைக்கு எடுக்கப்பட்ட வயல்களில், அந்த வயலின் உரிமையாளர்களிடம் என்ன ஆய்வு நிகழ்த்தப்படுகிறது என தெரிவிக்கப்படுவதில்லை. அண்டை வயல் உரிமையாளர்களிடம் இந்தத் தகவல்கள் பரிமாறப்படவில்லை. அந்த மாநில அரசுகளிடம் அனுமதி பெறுவதில்லை. மரபீனி தொடர்புடைய இந்த ஆய்வுகளை கண்காணிக்க சுற்றுப்புறச் சூழல் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மரபீனி தொழில்நுட்ப அனுமதி குழு உருவாக்கப்பட்டுள்ளது (Genitic Engineering Approoval Committee- GEAC). இக்குழுவின் அனுமதியின்றி எந்த ஆய்வும் நிகழாது. இக்குழுவிற்கு விண்ணப்பிக்கும் முன்பே பஞ்சாயத்துக்களில் அனுமதி பெற வேண்டும். கிராம பஞ்சாயத்துகள் இனி இந்த அதிகாரத்தை செம்மையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். கோக்கோகோலா நிறுவனத்தை பிளாச்சிமடாவிலிருந்து விரட்டியடித்ததில் அந்த பஞ்சாயத்தின் பங்கு குறிப்பிடத்தக்கது. தமிழகத்தின் எல்லையோரத்தில் கேரளாவுக்குள் அமைந்துள்ள கிராமம் பிளாச்சிமடா. அங்கு கோக்கோ கோலா ஆலை பல ஆண்டுகளாக இயங்கி வந்தது. பிளாச்சிமடா மக்களும் அந்த பஞ்சாயத்தும் விழித்துக் கொண்ட பிறகு, அந்தப் பன்னாட்டு நிறுவனத்தால் ஆலை நடவடிக்கைகளை தொடர இயலவில்லை. இந்திய அளவிலான ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்கள் மற்றும் உலகமயமாக்கல் எதிர்ப்பாளர்கள், முன்னணித் தலைவர்கள் பலரும் பிளாச்சிமடாவுக்கு கடந்த அய்ந்து ஆண்டுகளாக நடந்து வந்த மக்கள் இயக்கத்திற்கு வலு சேர்த்தாலும், பிளாச்சிமடா பஞ்சாயத்து அந்த ஆலையை ரத்து செய்த முடிவுதான் இந்தப் போராட்டத்தின் மிகப் பெரிய பலம். உச்ச நீதிமன்றம்கூட பஞ்சாயத்தின் தீர்மானத்தை மாற்ற முடியாமல் திணறியதைக் காண முடிந்தது. இதுபோலவே கங்கைகொண்டானில் சிவகங்கையிலிருந்து விரட்டப்பட்ட கோக் நிறுவனத்தை நிறுவ முயன்றபோதும், அங்கு பல்வேறு மக்கள் இயக்கங்கள் களமிறங்கிப் போராடினர். இதில் பங்கேற்ற பஞ்சாயத்து தலைவர் மர்மமான முறையில் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது. இனி இத்தகைய ஆய்வுகளுக்காக எந்த பஞ்சாயத்திலும் உயிரியல் தொழில்நுட்ப நிறுவனம் அனுமதி கோரினால், உடனடியாக கிராம அவை கூட்டப்பட வேண்டும். அதில் இந்த விதைகள் குறித்த ஆபத்துகள், தீமைகள் குறித்து விவாதங்கள் நடைபெற வேண்டும். அந்த விதிமுறைகள், எச்சரிக்கைகளைத் தெரிந்து கொண்டு, ஆய்வு நடக்கும் காலங்களில் அண்டைய வயல்கள் பாதிக்கப்படாமல் பாதுகாக்கலாம். மரபீனி மாற்றம் செய்ய நடைபெற்ற பயிற்சிகள் குறித்த வழக்கு ஒன்றில் உச்ச நீதிமன்றம் மிகத் தெளிவாகக் கூறியுள்ளது. சம்பந்தப்பட்ட விஞ்ஞானிதான் இத்தகு ஆய்வுகளை நிகழ்த்த வேண்டும். இந்த வயலில் இருந்து 200 மீட்டர் தூரத்துக்குள் இதே பயிரின் மரபான ரகம் பயிரிடப்பட்டிருக்கக் கூடாது. எனவே, இந்திய பஞ்சாயத்துகள் விழிப்போடு இருந்தால், நம் எதிர்காலத் தலைமுறையையே சீரழிக்கக் கூடிய நிறுவனங்களை கால் பதிக்க விடாமல் விரட்டியடிக்க முடியும். தினமும் 32 கோடி பேர் பசியுடன் படுக்கைக்குச் செல்லும் நாடு இது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 6.5 கோடி டன் உணவு தானியங்கள் உபரி கையிருப்பாக இருந்த தேசமிது. ஒரிசாவின் காலாஹந்தி பகுதி மக்கள் தங்கள் கண் முன்னால் அரசு கிடங்குகளில் அரிசி அழுகி நாற்றமெடுப்பதை காண்கிறார்கள். ஓராண்டில் ஆறு மாதத்திற்கு ஒரு நேரம் மட்டுமே உண்ணுகிறார்கள். 6.5 கோடி டன் உபரி உணவு தானியங்களால் இந்தியாவின் பசியை, பட்டினியைப் போக்க இயலாதபொழுது -மரபீனி மாற்று தானியங்கள் மட்டும் எப்படி உலக மக்களின் பசியைப் போக்கும்? உயிர்க்கொல்லிகள் பூமிப்பந்தின் மேல் சில அங்குல அளவே படிந்துள்ள ‘மேல் மண்’ (Top Soil) தான் நாகரிகங்கள் தோன்ற அடிப்படையாக இருந்து வந்துள்ளது. இந்த மேல் மண் உருவாக பூமியின் பரிணாமத்தில் பூகோள ரீதியான பல அம்சங்கள் துணை புரிந்துள்ளன. இயற்கையான அரிமானத்தின் அளவை புதிய மண் உருவாவது மிஞ்சும்பொழுதுதான் மேல் மண் உருவாகிறது. இந்த மேல் மண்தான் பூமியில் உள்ள அத்துணை தாவரங்களையும், மரங்களையும் தன் சிசுவாய் வளர்த்தது. இதற்கு கைமாறாக இந்தச் செடிகளும், மரங்களும் மண் அரிமானத்தை தடுத்து உதவுகின்றன. மனித நடவடிக்கைகள், இந்த ஆயிரம் ஆண்டு பந்தத்தை சீர்குலைத்து விட்டன. உலக சாகுபடி நிலத்தில் முக்கால் பங்கு ’மேல் மண்’ணை இழந்து விட்டது. கண்மூடித்தனமான ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகள் இந்த கதி ஏற்பட மூலகாரணமாகும். உலகத்தை மீண்டும் நுண்ணுயிர்களுடன் கூடிய சத்தானதாக மாற்ற, வட்டார அளவிலான ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. ஆனால், இவை எதற்கும் அரசு உதவி என்பது கிஞ்சித்தும் இல்லை. -அ. முத்துக்கிருஷ்ணன் நன்றி: […] செப்டம்பர் 2007 கிரெடிட் கார்டு - தகவல் உரிமைச் சட்டம் - அரசின் பதில் SATURDAY, OCTOBER 6, 2007 தமிழ்நாடு அரசின் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பாக கடந்த ஆகஸ்ட் 29ம் தேதியன்று சென்னை எழும்பூர், ஓட்டல் மெரீனா டவர்ஸ்-ல், “வங்கிக்கடன் அட்டையால் நுகர்வோருக்கு பலனா? அல்லது சுமையா?” என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி குறித்து தகவல் உரிமைச்சட்டத்தின்கீழ் சில தகவல்களை கேட்டு மனு அளிக்கப்பட்டது. அந்த கேள்விகளும், அதற்கு அத்தறையின் தகவல் வழங்கும் அலுவலர் திருவாளர் சி. கோதண்டன் அளித்த பதில்களும். … கேள்வி 1. இந்த நிகழ்ச்சி குறித்து நாளிதழ்களில் விளம்பரம் செய்யப்பட்டதா? ஆம் எனில் எந்த பத்திரிகைகளில் விளம்பரம் செய்யப்பட்டது? (இலவசமாக “இன்றைய நிகழ்ச்சி” பகுதியில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்புகள் தவிர) பதில்: இந்த நிகழ்ச்சி குறித்து நாளிதழ்களில் விளம்பரம் செய்யப்படவில்லை. … கேள்வி 2. இந்த நிகழ்ச்சிக்கு செலவழிக்கப்பட்ட மொத்தத்தொகை எவ்வளவு? பதில்: இந்த நிகழ்ச்சிக்கு செலவிடப்பட்ட தொகை ரூ.72,388/- ஆகும். … கேள்வி 3. சென்னையில் அரசுக்கு சொந்தமான அரங்குகளும், மாநகராட்சிக்கு சொந்தமான அரங்குகளும் பல இருக்கும் நிலையில், தனியார் ஓட்டல் ஒன்றில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது ஏன்? பதில்: இந்த துறை மூலம் நுகர்வோர் நலன் தொடர்பாக நடத்தப்படும் கருத்தரங்குகளின் பொருளினை பொறுத்து கூட்ட அரங்கு தேர்ந்தெடுக்கப்படுகிறது. இதற்கு முன்பு இந்த துறையால் நடத்தப்பட்ட, ரியல் எஸ்டேட் தொடர்பான கருத்தரங்கு சேவை வழங்குபவர் அரசுத்துறை மற்றும் தனியாளர்கள் என்ற முறையில் அரசுக்கு சொந்தமான அண்ணா மேலாண்மை பயிற்சி நிலையத்திலும், மருந்துகள் விற்பனை தொடர்பான கருத்தரங்கு சமூக சேவை நிறுவனத்தின் அரங்கான ஆஷா நிவாஸிலும் நடத்தப்பட்டது. கடன் அட்டைகள் தொடர்பான கருத்தரங்கினை பொறுத்த மட்டில் சேவை வழங்குபவர்கள் அரசுடைமை/ தனியார் / பன்னாட்டு வங்கிகளைச் சேர்ந்த உயர் அலுவலர்கள் என்ற முறையிலும் கடன் அட்டையைப் பயன்படுத்தும் நுகர்வோர்கள் சமூகத்தில் நடுத்தர மற்றும் மேல்நிலை வாழ்க்கைத்தரத்தில் உள்ள நிலையிலும் இக்கருத்தரங்கினை தனியார் ஓட்டலில் நடத்த தீர்மானிக்கப்பட்டது. … கேள்வி 4. கிரெடிட் கார்டு வணிகத்தை நெறிப்படுத்துவது தொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கி கடந்த 2007 ஜூலை மாதத்தில் மேம்படுத்தப்பட்ட முதன்மை சுற்றறிக்கை வெளியிட்டுள்ள நிலையில், தங்கள் நிகழ்ச்சியில் 2005ம் வருடத்திய (பழைய) சுற்றறிக்கையை வழங்கியது ஏன்? பதில்: இத்துறை வாயிலாக கருத்தரங்கின்போது வழங்கப்பட்ட விவரங்கள் இந்திய ரிசர்வ் வங்கியின் இணையதளத்தில் இருந்தும் இத்துறையில் பதிவு செய்துள்ள தன்னார்வ நுகர்வோர் அமைப்புகள் வாயிலாகவும் பெற்று தொகுத்து வழங்கப்பட்டன. அதில் கூடுதல் விவரங்கள் மற்றும் நுகர்வோர்க்கான தெளிவுரைகள் வழங்கவே இந்த கருத்தரங்கிற்கு ரிசர்வ் வங்கியின் ஆம்புட்ஸ்மேன் அலுவலர் சிறப்பு அழைக்கப்பட்டிருந்தார். அவர் வாயிலாக ரிசர்வ் வங்கியின் தற்போதைய நெறிமுறைகள் அனைத்தும் தெளிவாக விளக்கப்பட்டன. … கேள்வி 5. கருத்தரங்கம் முடிவடைந்த பின் அரங்கில் விவாதிக்கப்பட்ட அம்சங்களிலிருந்தே தீர்மானங்கள் நிறைவேற்றப்படுவது வழக்கம். ஆனால் தாங்கள் நடத்திய நிகழ்ச்சியில் தீர்மானங்கள், நிகழ்ச்சி தொடங்கப்படுவதற்கு முன்பாகவே வழங்கப்பட்டது. இது எவ்வாறு சாத்தியமானது? பதில்: தமிழகத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ நுகர்வோர் அமைப்புகளிடமிருந்து பெறப்பட்ட ஆலோசனைகள் / புகார்கள் தொகுக்கப்பட்டு கருத்தரங்கில் விவாதிக்க தொகுக்கப்பட்டன. மனுதாரர் கூறியவாறு தீர்மானங்கள் எதுவும் வழங்கப்படவில்லை. கருத்தரங்கின் இறுதி நிகழ்வாக இத்துறையின் இணை ஆணையாளர் வாயிலாக கருத்தரங்கின் ஆலோசனைகள் தொகுத்து வழங்கப்பட்டன. … கேள்வி 6. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் மொத்தம் எத்தனை பேர்? அவர்களில் உங்கள் துறை பணியாளர்கள் எத்தனை பேர்? வங்கிகளின் பிரதிநிதிகள் எத்தனை பேர்? நுகர்வோர் அமைப்பு நிர்வாகிகள் எத்தனை பேர்? பொதுமக்கள் எத்தனை பேர்? பதில்: நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் நுகர்வோர் அமைப்பை சேர்ந்தவர்கள்—60 பேர் வங்கியை சேர்ந்தவர்கள்—12 பேர் இத்துறையைச் சேர்ந்த உயர் அலுவலர்கள் மற்றும் கருத்தரங்கு தொடர்பாக பணிபுரிந்த பணியாளர்கள்—14 பேர் இத்துறை மற்றும் இதர அரசுதுறைகளை சார்ந்த கடன் அட்டை உபயோகிப்பாளர்கள், பிற நலசஙக பொறுப்பாளர்கள் & பத்திரிகையில் “இன்றைய நிகழ்ச்சி” வாயிலாக அறிந்து வருகை புரிந்த பொதுமக்கள்—59 பேர் பத்திரிகை & தொலைக்காட்சி ஊடகப்பணியாளர்கள்—10 பேர் மொத்தம் — 155 பேர் … கேள்வி 7. இந்த நிகழ்ச்சியின் விளைவாக ஏற்பட்ட பயன் என்ன? இந்த நிகழ்ச்சி குறித்து இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நுகர்வோர் அமைப்பு பிரதிநிதிகளிடமும் பொதுமக்களிடமும் கருத்து கேட்கப்பட்டதா? ஆமெனில் பெரும்பான்மையானோர் என்ன கருத்து தெரிவித்தனர்? இல்லை எனில் ஏன் அவ்வாறு கருத்து கேட்கப்படவில்லை? பதில்: இக்கருத்தரங்கு குறித்த விவரம் முன்னமே தமிழகத்தில் செயல்பட்டு வரும் அனைத்து தன்னார்வ நுகர்வோர் அமைப்புகளுக்கும் தெரிவிக்கப்பட்டு அவர்களது கருத்துகள் / புகார்கள் மற்றும் ஆலோசனைகள் பெற்று தொகுக்கப்பட்டு கருத்தரங்கில் விவாதிக்க கொடுக்கப்பட்டன. இவ்விவரங்கள் சம்பந்தப்பட்ட சேவைகள் வழங்கும் வங்கிகளின் அலுவலர்கள், ரிசர்வ் வங்கியின் அலுவலர் மற்றும் கூடியிருந்த அனைத்து நபர்களுக்கும் வழங்கப்பட்டன. மேலும் ஒவ்வொரு அமர்விலும் கடன் அட்டை உபயோகிப்பவர்கள் தங்களது சந்தேகங்களை தீர்த்துக்கொள்ள போதிய வாய்ப்புகள் வழங்கப்பட்டது. இந்த கருத்தரங்கின் தொடர்ச்சியாக ரிசர்வ் வங்கி வாயிலாக கூடுதல் நெறிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகள் கொண்டுவர தக்க பரிந்துரைகள் இத்துறை வாயிலாக அனுப்பப்படுகின்றன. … கேள்வி 8. இந்த கிரெடிட் கார்டுகளால் ஏற்படும் பிரசினை குறித்து தங்கள் துறை சார்பில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் என்ன? எதிர்கால திட்டம் என்ன? பதில்: இத்துறை கடன் அட்டைகள் சேவை உட்பட பொதுமக்கள் “நுகர்வோர்” என்ற முறையில் பெறும் அனைத்து சேவைகளிலும் நேர்மையற்ற வணிக முறைகளில் சிக்கி அல்லல் அடையாத வண்ணம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்குடன் கருத்தரங்குகள் நடத்தி வருகிறது. இத்தகைய கருத்தரங்குகளுக்கான பொருட்கள் நுகர்வோர் அமைப்புகளின் பிரதிநிதிகள் வழங்கும் கருத்துகளின் அடிப்படையில்தான் முடிவு செய்யபடுகின்றன. மேற்படி கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்ட தீர்மானங்களை ரிசர்வ் வங்கி வாயிலாக ஆணைகளாக பெறத்தக்க பிரேரணைகள் அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. … இந்த பதில்கள் மேலும் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. அவற்றையும் அடுத்த மனுவில் கேட்கவிருக்கிறோம். இந்த நடவடிக்கை உங்கள் கருத்துகளையும், உங்களுக்கு தோன்றும் கேள்விகளையும் எழுதினால் அவற்றையும் அடுத்த மனுவில் சேர்க்க முடியும். அடுத்த சுற்று ஆட்டத்துக்கு நாங்க ரெடி! நீங்க ரெடியா? கிரெடிட் கார்டை பாதுகாப்பாக பயன்படுத்த சில ஆலோசனைகள்… MONDAY, OCTOBER 8, 2007 அன்பார்ந்த நண்பர்களே. தீபாவளிப் பண்டிகை நெருங்கிவிட்டது. ஒருநாள் கொண்டாட்டத்திற்காக கிரெடிட் கார்டை கவனமில்லாமல் கையாண்டால் அது பல நாட்களுக்கு பிரசினைகளை ஏற்படுத்தக்கூடும். எனவே, கிரெடிட் கார்டை பாதுகாப்பாக பயன்படுத்த சில ஆலோசனைகள்… 1. கிரெடிட் கார்டு என்பது உங்கள் பர்சை உடனடியாக காலி செய்யாவிட்டாலும், உரியகாலத்தில் அளவுக்கதிகமான கட்டணத்தோடு காலி செய்யும். எனவே உங்கள் கிரெடிட் கார்டை கவனமாக பாதுகாக்க/கையாள வேண்டும். 1. கிரெடிட் கார்டுக்கான விண்ணப்பத்தை நிரப்பும்போது, அதை நீங்களே நிரப்புங்கள். தேவையானபோது மட்டும் விற்பனை பிரதிநிதியின் உதவியை நாடுங்கள். நிரப்பப்பட்ட விண்ணப்பத்தை நகல் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். அதைத்தொடர்ந்து கிரெடிட் கார்டுக்காக தனியே ஒருஃபைல் போட்டு கிரெடிட் கார்டு தொடர்பாக பில்கள் உட்பட அனைத்து கடிதத்தொடர்புகளையும், நீங்கள் கிரெடிட் கார்டு மூலம் பெற்ற பொருள் மற்றும் சேவை குறித்து அஞ்சல் மூலம் வரும் விளம்பரங்களையும் சேமித்து வையுங்கள். 1. கிரெடிட் கார்டு விண்ணப்பத்தின் பின்புறத்தில் அச்சிடப்பட்டுள்ள மற்றும் கிரெடிட் கார்டுடன் வழங்கப்படும் விதிமுறைகளை பொறுமையுடன், முழுமையாக படியுங்கள். விளக்கம் தேவைப்பட்டால் வாடிக்கையாளர் சேவை மையத்தை அணுகி விளக்கம் பெற தயங்காதீர்கள். 1. புதிய கிரெடிட் கார்டு வாங்கும்போது இயன்றவரை புகைப்பட கிரெடிட் கார்டை வாங்குங்கள். இதற்காக கூடுதலாக மிகச்சொற்பமான தொகையே வசூலிக்கப்படுகிறது. கிரெடிட் கார்டை பெற்றுக்கொண்ட உடனே மறக்காமல் பின்புறத்தில் கையெழுத்திட வேண்டும். இவை, உங்கள் கார்டை மற்றவர்கள் உபயோகிப்பதை (ஓரளவு) தடுக்கும். 1. கிரெடிட் கார்டு தொலைந்துபோனால் புகார் கொடுக்க வேண்டிய வங்கியின் புகார் பிரிவு எண்ணை எப்போதும் கையில் (தனியே) வைத்திருக்க மறந்து விடாதீர்கள். அதோடு கிரெடிட் கார்டின் எண்ணையும் குறித்து வைத்திருங்கள். கிரெடிட் கார்டு தொலைந்து விட்டதாக தோன்றினால் உடனடியாக வங்கிக்கு புகார் செய்யுங்கள். மேலும் தொலைபேசி மூலம் புகார் தெரிவித்ததற்கான பதிவெண் வழங்கப்பட்டால் அதையும் குறிப்பிட்டு எழுத்து மூலமான புகாரையும் பதிவு செய்யுங்கள். அதற்கான நகல்களையும் அத்தாட்சிகளையும் ஃபைலில் சேர்க்கவும். 1. கிரெடிட் கார்டை பயன்படுத்தி பொருட்கள் வாங்கும்போது அவசியம் தேவையான பொருட்களை மட்டுமே வாங்குங்கள். சபலங்களுக்கு இடம் கொடுத்து தேவையற்ற பொருட்களை வாங்கி குவிக்காதீர்கள். ஏனெனில் அதற்கும் நீங்கள்தான் (மிகக்கூடுதலான வட்டியுடன்) பணம் செலுத்த வேண்டும். 1. ஒவ்வொரு பில்லையும் முழுமையாக சோதனை செய்யுங்கள். நீங்கள் பயன்படுத்திய தொகை மட்டும்தான் பில்லில் சேர்க்கப்பட்டுள்ளதா என்பதை கவனமாக கண்காணியுங்கள்.? தவறுகள் இருந்தால் வங்கி நிர்வாகத்திற்கு உடனடியாக புகார் செய்யுங்கள். 1. தவறான பில் குறித்து உரிய காலத்தில் தெரிவித்தால் மட்டுமே வங்கிகள், அந்த தவறுகளை களைகின்றன. காலம் தாழ்த்தி செய்யப்படும் புகார்களை வங்கிகள் ஏற்க மறுக்கின்றன. 1. புதிதாக பொருள் வாங்கியிருந்தால், அதற்கான தொகை மட்டுமே அதற்கடுத்த மாத பில்லில் இடம் பெற வேண்டும். அதற்கான வட்டி முதல் மாதத்தில் கணக்கிடக்கூடாது. அவ்வாறு வட்டி முதல் மாதத்திலேயே சேர்க்கப் பட்டிருந்தால் உடனடியாக வங்கி நிர்வாகத்திற்கு புகார் செய்யுங்கள். 1. உங்கள் அனுமதியின்றியே பலவகையான இன்சூரன்ஸ் திட்டங்களை வாடிக்கையாளர் தலையில் கட்டுவதை வங்கிகள் வழக்கமாக்கி வருகின்றன. எனவே நீங்கள் அனுமதிக்காத எந்த தொகையையும், அது எவ்வளவு சிறிய தொகையாக இருந்தாலும் உடனடியாக வங்கிக்கு தொடர்பு கொண்டு தெளிவு பெறுங்கள். தேவையற்ற கட்டணங்களை தவிருங்கள். 1. மாதாந்திர பில் தொகையை செலுத்தும்போது இயன்றவரை முழு தொகையையும் செலுத்துங்கள். முடியாவிட்டால் கூடியவரை அதிகபட்ச தொகையை செலுத்துங்கள். 1. குறைந்தபட்ச தவணைத்தொகை என்ற வலையில் சிக்குவதை தவிர்த்திடுங்கள். அவ்வாறு கட்டும் தொகையின் பெரும்பகுதி வட்டி மற்றும் இதர கட்டணங்களுக்கே நேர் செய்யப்படுவதால் கடன்தொகை குறைவதில்லை என்பதை உணருங்கள். 1. எந்த பிரசினை தொடர்பாகவும் வங்கி அதிகாரிகளிடம் தொலைபேசி மூலமாக மட்டும் புகார் செய்தால் போதாது. ஏனெனில் யாரிடம் புகார் செய்தீர்கள் என்பதையோ, புகாரை பதிவு செய்தவர் அதன்மீது என்ன நடவடிக்கை எடுத்தார் என்பதையோ கண்டுபிடிக்க முடியாது. எனவே வங்கிக்கு எழுத்து மூலமான புகாரை பதிவு அஞ்சலில் அனுப்புங்கள். அஞ்சல் பெட்டி எண் கொண்ட முகவரிக்கு பதிவு அஞ்சலோ, கூரியர் மூலமான தபாலோ அனுப்ப முடியாது. எனவே கிரெடிட் கார்டு வாங்கும்போதே சரியான, முழுமையான முகவரியை கேட்டு வாங்கிக் கொள்ளுங்கள். 1. ஏற்கனவே உள்ள கிரெடிட் கார்டின் அடிப்படையில், வேறு வங்கியில் புதிய கார்டு பெற முயற்சிப்பவர்கள், பழைய கார்டின் முதல் பக்க நகலை மட்டும் கொடுத்தால் போதுமானது. இரு பக்க நகலையும் கொடுத்தால் அவற்றில் உள்ள கார்டு எண் மற்றும் பாதுகாப்பு எண்ணை பயன்படுத்தி, பழைய கார்டில் உள்ள கடன் அனுமதி தொகையை (available balance) வேறு யாரேனும், இணையம் மூலமாகவோ அல்லது வேறு முறைகளிலோ முறைகேடாக பயன்படுத்தும் அபாயம் உள்ளது. 1. புதிய கார்டு வாங்கும்போது உண்மையான ஆவணங்களை கொடுத்து கிரெடிட் கார்டு வாங்குங்கள். விற்பனை பிரதிநிதிகளை முழுமையாக நம்பாதீர்கள். அவர்கள் கூடுதலான கிரெடிட் கார்டை விற்று அதிக ஊக்கத்தொகை பெறுவதற்காக போலியான ஆவணங்கள் மூலம் கிரெடிட் கார்டை பெற்றுத்தரக்கூடும். பிரசினை வந்தால் அவர்கள் தப்பிவிடுவார்கள். போலி ஆவணம் கொடுத்து வங்கியை ஏமாற்றியதற்காக சட்டரீதியான நடவடிக்கையை நீங்கள் எதிர்கொள்ள நேரிடும். 1. உங்கள் சம்பளம் ஏதேனும் வங்கி மூலம் வழங்கப்பட்டால், அந்த வங்கியின் கிரெடிட் கார்டு வாங்குவதை தவிர்த்து விடுங்கள். ஏனெனில் உங்களுக்கும், வங்கிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டால், (தவறு வங்கியின் பக்கம் இருந்தாலும்கூட) உங்கள் சம்மதம் இன்றியே, உங்கள் சம்பள பணத்தை வங்கிகள் “ஸ்வாகா” செய்து விடும் அபாயம் உள்ளது. 1. தவிர்க்கமுடியாத காரணங்களால் கிரெடிட் கார்டு கடன் தவணை கட்டத்தவறும்போது வசூல் குண்டர்கள் உங்களை மிரட்டினால் காவல் நிலையத்தையோ, வழக்கறிஞரையோ அணுகுங்கள். 1. கிரெடிட் கார்டு நிறுவனங்களுக்கு எதிரான உங்கள் உரிமைகளை பாதுகாக்க இந்த விவகாரங்களை கையாளும் நுகர்வோர் பாதுகாப்பு அமைப்புகளை கண்டறிந்து வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இந்த அமைப்புகளை அறிமுகப்படுத்துங்கள். 1. கிரெடிட் கார்டு வழங்கும் நிறுவனங்கள், வாடிக்கையாளர்களிடம் நடந்து கொள்ள வேண்டிய நெறிமுறைகள் குறித்து மத்திய ரிசர்வ் வங்கி மற்றும் இந்திய வங்கிகள் சங்கம் ஆகிய அமைப்புகள் திட்டவட்டமான விதிமுறைகளை வகுத்துள்ளன. அவற்றில் கூறப்பட்டுள்ளபடி உங்கள் உரிமைகள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்து கொள்ளுங்கள். 1. உங்கள் உரிமைகள் மீறப்பட்டால் உடனடியாக வங்கிக்கும், இந்திய அரசால் நியமிக்கப்பட்டுள்ள வங்கி குறைதீர்ப்பு அதிகாரிக்கும் புகார் செய்யுங்கள். அதோடு உங்கள் குறைகளை இந்த வலைப்பூவிலோ அல்லது www.creditcardwatch.org என்ற இணைய தளத்திலோ பதிவு செய்யுங்கள். அது தவறிழைக்கும் வங்கிகளை அம்பலப்படுத்துவதற்கும் மற்ற வாடிக்கையாளர்கள் விழிப்படைவதற்கும் உதவும். (கிரெடிட் கார்டு குறித்த நுகர்வோர் தரப்பு தகவல்களுக்கும், ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளுக்கும் www.creditcardwatch.org என்ற இணையதளத்தை பார்க்கவும்) -மக்கள் சட்டம் குழு பாலைவனமாகும் தேரிக்காடும் கலைஞர் மறந்த திருக்குறளும் THURSDAY, OCTOBER 11, 2007 30,000 பேருக்கு வேலை வழங்கும் நிலத்தை எடுத்துக் கொண்டு 2,000 பேருக்கு வேலை தரும் டாடாவின் பெருந்தன்மையைத் தேரிக்காட்டு மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. அவர்கள் இந்தப் பெருந்தன்மையால் எரிச்சலடைந்துள்ளனர். அவர்களின் கோபத்தில் நியாயம் இருக்கிறது. இந்தச் சிவந்த மண் பூமியை நம்பித்தான் இங்கே உள்ள முழு மக்கள்தொகையும் வாழ்ந்துவருகிறது. டாடா நிறுவனத்தினர் 15,000 ஏக்கர் நிலத்தை வாங்கப்போகிறார்கள். அவர்கள் வாங்கப்போகும் நிலத்தில் வீடுகள், சாலைகள், கல்லறைகள், மாதா கோவில்கள், மசூதிகள், கோவில்கள், பள்ளிகள், விவசாய நிலம் என்று அனைத்தும் அடக்கம். டாடா நிறுவனத்தினர் இந்த நிலத்தின் மேலிருக்கும் அனைத்தையும் அகற்றிவிட்டுத் தோண்டி எடுக்கப்போகிறார்கள். 30 ஆண்டுகள் கழித்து என்ன மிச்சமிருக்கும்? இந்தப் பூமி வளமான விவசாய பூமி. முருங்கை, கொய்யா, மா, முந்திரி போன்ற பணப்பயிர்கள் செழித்து வளர்ந்துள்ள பூமி. நிலமற்ற மக்கள் விவசாய வேலைகளில் கிடைக்கும் கூலியில்தான் வாழ்கிறார்கள். அதுமட்டுமல்ல, வானுயர வளர்ந்துள்ள பனை மரக்காடுகள் செழித்துள்ள பூமி. பனை மரத்தைக் கர்ப்பக விருட்சம் என்றும் சொல்வார்கள். அதன் அனைத்து பாகங்களும் மனிதர்களுக்கு வாழ்வளிக்கும். இந்த மரங்களை நம்பி இங்கே நாடார் சமூகம் வாழ்ந்துவருகிறது. அவர்கள் மிக மோசமான வாழ்க்கை நடத்துகின்றனர். மரம் ஏறுதல், பதநீர் இறக்குதல், கருப்பட்டி, பனை ஓலை-மட்டைகளைப் பதப்படுத்துதல், கூடை அல்லது பாய் முடைதல் என்று இவர்களின் குடும்பமும் வாழ்க்கையும் பனையைச் சுற்றியே இருக்கிறது. டாடாவின் சுரங்கத் தொழிலில் இவர்களில் எத்தனை பேருக்கு வேலை கிடைக்கும்? அதற்கான சிறப்புத் தகுதிகள் என்ன இருக்கிறது இவர்களிடம்? இவர்கள் வாழ்க்கை என்னவாகும்? தேரிக்காடு: நீர்வனமா? பாலைவனமா? கருணாநிதி தேரிக்காடுகளைப் பாலைவனம், பயனற்ற பொட்டல் காடு என்கிறார். எப்படியாவது டாடாவின் டைட்டானியம் டை ஆக்சைடு தொழிலகத்தை நிறுவிவிட வேண்டும் என்ற அவசரத்தில் அவர் பேசுகிறார். ஆனால், தேரிகள் அதாவது மணற்குன்றுகள் மழை நீரைத் தேக்கிவைக்கும் இயற்கை அணைகள். பெய்யும் மழையைச் சேகரித்து அவை ஆண்டு முழுவதும் கொஞ்சம் கொஞ்சமாக வெளியேற்றுகின்றன. தேரிகள் இல்லை என்றால் நீரில்லை. நீரின்றி அமையாது உலகு என்ற வள்ளுவர் கூற்றைத் தமிழறிஞர் கலைஞர் மறந்திருக்க வாய்ப்பில்லை. மழை மறைவுப் பிரதேசத்தில் அமைந்திருக்கும் தேரிகளின் முக்கியத்துவத்தை உணர்ந்திருக்கும் தமிழக அரசு பல கோடிகள் செலவழித்து முந்திரிக்காடுகளை வளர்த்துக் காற்றால் ஏற்படும் மண் அரிப்பைத் தடுத்துத் தேரிகளைக் காப்பாற்றும் வேலையைச் செய்து வந்திருக்கிறது. தஞ்சபுரம் கிணறு 40 அடியில் நல்ல நீரைக் கொண்டுள்ளது. குட்டம் என்னும் கிராமத்தின் 1,500 குடும்பங்களுக்குத் தேவையான நீரை ஆண்டு முழுவதும் தந்துகொண்டிருக்கிறது. டாடாவால் கொள்முதல் செய்யப்படும் நிலங்களில் 50 அடிகள்வரை ஆழங்கொண்ட மணற்குன்றுகள் இருக்கின்றன என்று உள்ளூர்வாசிகள் சொல்கிறார்கள். ஆற்று மணலையே அடியாழம்வரை தோண்டிப் பாறாங்கற்களைக் கண்டுபிடிக்கும் மணற்கொள்ளையரைத் தமிழகம் பார்த்திருக்கிறது. டாடா 50 அடிவரை தோண்டினார் என்றால் தேரிக்காடு, நீர்வனம் என்ற இன்றைய நிலையிலிருந்து உண்மையிலேயே பாலை வனம் ஆகிவிடும். டாடாவின் திட்டந்தான் என்ன? டைட்டானியம் அடங்கிய இல்லுமினேட் என்னும் தாதுப்பொருளை ஆண்டுக்கு 5,00,000 டன் தோண்டி எடுத்து, 1,00,000 டன் டைட்டானியம் டை ஆக்சைடு தயார் செய்வதுதான் டாடாவின் திட்டம். 2,500 கோடி ரூபாய் மூலதனத்தில் தொடங்கப்படும் இத் திட்டம் 15,000 ஏக்கர் பரப்பைத் தோண்டும். இது ஏறக்குறைய 60 ச.கி.மீ பரப்பாகும். மதுரை நகரின் பரப்பைவிடப் பெரியதாகும். இந்த மாபெரும் திட்டத்தின் விவரம் எதனையும் தமிழக அரசு இதுவரை தரவில்லை. டாடாவும் வழக்கம்போல அது பற்றியெல்லாம் கவலைப்படவில்லை. இந்தத் திட்டத்தின் சுற்றுச்சூழல் தாக்கம் என்ன என்பது பற்றியோ உற்பத்தி நடக்கும் முறை பற்றியோ எந்த முறையான தகவலும் கிடைக்கவில்லை. என்ன நடக்கும் என்பதைத் தெரிந்துகொள்ளும் உரிமை மக்களுக்கு உண்டு என்பதை யாரும் கண்டுகொள்ளவில்லை. டைட்டானியம் என்றால் என்ன? டைட்டானியம் வலுமிக்க உலோகம் ஆகும். ஆனால், அதன் எடை மிகவும் குறைவு. டைட்டானியம் அடங்கிய மூலப்பொருள்கள் புவிப்பரப்பில் பெருமளவு இருக்கின்றன. ஆனால், வணிக ரீதியாக எடுக்கப்படக்கூடிய மூலப்பொருள்கள் ருட்டைல் (Rutile) என்னும் வடிவிலும் இல்லுமினேட் (Ilmenite) என்னும் வடிவிலும் கிடைக்கின்றன. ருட்டைல் வடிவத்தில் கிடைக்கும் டைட்டானிம் டை ஆக்சைடு மிகவும் சுத்தமானது. ஆனால், அது அரிதாகத்தான் கிடைக்கிறது. டைட்டானியத்திற்கும் அதன் டை ஆக்சைடுக்கும் பெரிய அளவான சந்தை காத்திருக்கிறது. அதன் வலு மற்றும் குறைவான எடை, அதுமட்டுமல்லாமல் அரிப்பை எதிர்க்கும் தன்மையின் காரணமாக இராணுவ ஆயுதத் தொழிலிலும் விண்வெளித் தொழிலிலும் வானூர்தித் தொழிலிலும் தொழிலகக் கட்டுமானங்களிலும் அது பெருமளவு பயனாகிறது. டைட்டானியம் டை ஆக்சைடு மின்னலடிக்கும் வெண்மை நிறம்கொண்டது. இதனால் வண்ணங்களைத் தயாரிக்கும் தொழிற்சாலைகள் இதனைப் பெருமளவு பயன்படுத்துகின்றன. இது விஷத்தன்மை அற்றதுங்கூட. அதனால், மாவு, தூய வெண்மையான உயர்தரச் சர்க்கரை, இனிப்புகள், பற்பசை, அழகு சாதனப் பொருள்கள் போன்றவற்றில் வெண்மை வண்ணம் ஊட்டுவதற்குப் பயன்படுத்தப்படுகிறது. சொல்லப்படாத செய்திகள் டாடா எந்த உற்பத்தி முறையைப் பயன்படுத்தப்போகிறார் என்பது தெரியவில்லை. ஆனால், உலகெங்கும் உள்ள டைட்டானியம் உற்பத்திமுறைகளைப் பார்க்கும்போது, டாடா என்ன செய்வார் என்று ஊகிக்கமுடிகிறது. கிடைக்கும் தகவல்களை வைத்துப் பார்க்கும்போது, இல்லுமினேட்டில் இருந்து டைட்டானியம் டை ஆக்சைடு தயார்செய்து அதனை உள்ளூர் மற்றும் அயல்நாட்டுச் சந்தைக்கு டாடா அனுப்பப்போகிறார் எனத் தெரிகிறது. இல்லுமினேட் அடங்கிய கடற்கரை மணலை அள்ளியெடுத்து வேதியியல் முறையின் மூலம் மிக உயர்ந்த சுத்தமுள்ள டைட்டானியம் டை ஆக்சைடைப் பிரித்தெடுப்பதுதான் டாடாவின் திட்டம். இதன் சுற்றுச்சூழல் தாக்கத்தை மதிப்பிட வேண்டுமென்றால் தோண்டியெடுக்கும் முறை பற்றியும் உள்ளூர் உயிர்ச் சூழல் மற்றும் புவியியல் தன்மைகளையும் ஆழமாகப் படிக்க வேண்டும். ஆனால், இந்த இரண்டைப் பற்றியும் போதுமான தகவல்கள் இல்லை. இருந்தபோதும் டைட்டானியம் டை ஆக்சைடு தொழில் பொதுவாக எவ்வாறு நிகழ்த்தப்படுகிறது என்ற விவரங்களை வைத்துக்கொண்டு இந்தக் கட்டுரை எழுதப்படுகிறது. தோரியம் என்ற பூதம் என்னவாகும்? இந்தத் தாதுப்பொருளை எடுக்கும்போது தோரியம் போன்ற கதிரியக்கத் தனிமமும் கிடைக்கும். அணுசக்தி தொடர்பான துறைகளில் தனியார் நுழைவது பற்றிய அதிருப்திக் குரல்கள் ஆங்காங்கே கேட்கத் தொடங்கியுள்ளன. டாடாவின் வரலாற்றையும் அணுசக்தித் துறையில் அவர்கள் காட்டும் ஆர்வத்தையும் கவனிக்கும் எவரும் கவலைகொள்வார்கள். தோரியம் போன்ற அணுசக்தி மற்றும் ஆயுத முக்கியத்துவம் உள்ள தாதுப் பொருள்கள் கிடைக்கும் நிலத்தைத் தனியாருக்குத் தாரை வார்ப்பது நீண்டகால நோக்கில் கவலைக்குரியதாகும். சுரங்கமும் அதன் தாக்கமும்: குறையுள்ள குழந்தை, துரத்தும் புற்றுநோய் கேரளா மற்றும் தமிழகக் கடற்கரையில் இல்லுமினேட், ருட்டைல், ஜிர்கான் என்று மூன்று தாதுப்பொருள்கள் பொதுவாகக் கிடைக்கின்றன. பல தொழில் நிறுவனங்கள் கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் கடற்கரை மணலை அள்ளியெடுத்துத் தொழில்செய்து வருகின்றன. தோரியம் உள்ளிட்ட கதிரியக்கத் தனிமங்களைப் பிரித்தெடுக்கும் தொழில் கொல்லம் மாவட்டத்தில் பரவலான ஆரோக்கியக் குறைவை ஏற்படுத்தியுள்ளது. குறையுள்ள குழந்தைகள் பிறப்பது, கூடுதல் புற்றுநோய்த் தாக்குதல் முதலியவற்றுக்கான அபாயங்கள் பரவலாக இருக்கின்றன. டைட்டானியம், டைட்டானியம் ஆக்சைடு என்ற அதன் ஆக்சைடு வடிவத்தில் இரும்பு மற்றும் யுரேனியம், தோரியம் போன்ற கதிரியக்கத் தனிமங்களுடன் கிடைக்கிறது. இயற்கையான அமைப்பை நாம் தொந்தரவு செய்யாத வரையில் கதிரியக்கத் தனிமங்களின் நிலைத்தன்மை பாதிக்கப்படாதவரையில் அவை அபாயகரமான கதிரியக்கத்தை வெளிப்படுத்துவதில்லை. தோண்டி எடுத்து அவற்றைப் பிரித்தெடுத்துச் சுத்தம்செய்யும்போது, அவை கதிரியக்கத்தை வெளிப்படுத்துகின்றன. அதன் காரணமாகத் தொழிலாளர்களும் அருகாமை மக்களும் புற்று நோய் மற்றும் குறையுள்ள குழந்தைப் பிறப்புகளுக்கு ஆளாகிறார்கள். நிர்வாணமாகும் பூமி டைட்டானியம் வழக்கமாக ’நிர்வாணச் சுரங்க முறை’யில் எடுக்கப்படுகிறது. அதாவது புவிப் பரப்பின்மீதுள்ள அனைத்துத் தாவரங்களும் அழித்தொழிக்கப்பட்டு, பூமியை நிர்வாணமாக்கி, தாதுக்களைத் தோண்டியெடுக்கிறார்கள். மேல் மண்ணை அகற்றி வைத்துவிடுவார்கள். தாதுப்பொருள் அடங்கிய கீழ் மண் எவ்வளவு ஆழம்வரை கிடைக்கிறதோ அதனை எடுத்து முதல் கட்டச் சுத்திகரிப்புக்கு அனுப்புவார்கள். தூத்துக்குடியில் வெளி வரும் செய்தித்தாள்கள் 6 மீட்டர் முதல் 20 மீட்டர்வரை தோண்டப்படும் எனச் செய்தி வெளியிட்டுள்ளன. நமது அரசியல்வாதிகள் மற்றும் கட்டுப்பாட்டு அமைப்புகளின் பணப்பசியையும் டாடாவின் பணபலத்தையும் பார்க்கும் எவரும் ஆழம் பற்றிய எந்தக் கணக்கும் செல்லுபடியாகாது என்பதைப் புரிந்துகொள்வார்கள். பணம் பாதாளம் வரைக்கும் பாயும் என்பது உண்மையாகும். நிர்வாணச் சுரங்கம் உள்ளூர்ச் சுற்றுச்சூழல்மீது நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தும். ஆழமாகத் தோண்டுவது நிலத்தடி நீர்வளத்தைப் பாதிக்காது என்றாலும், நிலத்தடியை ஒட்டிய ஆழக்குறைவான நீர்வளமும் ஓடைகளும் வடிகால்களும் குளங்களும் மறைந்துபோக நீர்வளம் குறைய ஆரம்பிக்கும். நிலத்தடியில் 50 மீட்டரில் கடும்பாறைகள் இருக்கின்றன என்று உள்ளூர் விவசாயிகள் தெரிவிக்கின்றனர். கடற்பஞ்சு போல நீரை உறிஞ்சி வைத்துக்கொள்ளும் மணலை அகற்றுவது அப்பகுதியின் நீர்ச்சமநிலையைப் பாதிக்கும். இந்தப் பகுதியின் நிலத்தடி நீர்வளம் தேரிகளையே நம்பியுள்ளது. நிலத்தின் மீதுள்ள தாவரங்கள் அகற்றப்படும்போது, வெப்பம் நேரடியாகப் பூமியைத் தாக்கும். அருகாமைக் கடலிலிருந்து வரும் குளிர்ந்த காற்று வெப்பமடையும். இதன் காரணமாக உள்ளூர் மழையின் அளவும் தன்மையும் முறையும் மாற்றமடையும். அனைத்தையும்விட மிக முக்கியமானது, கடல் அருகாமையில் இருப்பதால் நிலத்தடியில் கடல் நீர் புகுவதே. இதனால் குடிப்பதற்கும் வாழ்வதற்குமான நீர் அரிய பொருளாகிவிடும். நிர் வாணச் சுரங்கத்தால் எழும் தூசு அருகாமைத் தாவரங்களில் படிந்து ஒளிச்சேர்க்கையைத் தடுத்து, இருக்கும் பசுமையையும் சாகடிக்கும். தாதுக்களைச் சுத்தம் செய்தல் தாதுப்பொருள்களுயும் தேவையற்ற மணலும் புவியீர்ப்பு விசையைப் பயன்படுத்திப் பிரிக்கப்படுகிறது. பெருமளவு நீருள்ள தொட்டியில் தோண்டியெடுக்கப்பட்ட மணல் கொட்டிக் கலக்கப்படும்போது, கனமான தனிமங்களான ஜிர்கான், இல்லுமினேட், மோனோ சைட், ரூட்டைல் போன்றவை கீழே தங்கிவிட லேசான மணல் மேல்பகுதியில் மிதக்கிறது. அந்தத் தேவையற்ற மணல் வெளியேற்றப்படுகிறது. டைட்டானியம் டை ஆக்சைடு உற்பத்தி வணிகத் தேவைக்கான டைட்டானியம் டை ஆக்சைடு உற்பத்தி இரண்டு வழிகளில் நடைபெறக்கூடும். ஒன்று சல்பேட் முறை, மற்றது குளோரைடு முறை. இந்த இரண்டு முறைகளுமே கடும் மாசுபாட்டை ஏற்படுத்தக்கூடியவை. விவசாயத்தையும் மீன் வளத்தையும் அழிக்கக் கூடியவை. இந்த முறைகளில் மிக அபாய கரமானது சல்பேட் முறையாகும். இந்த இரண்டு முறைகளில் குளோரைடு முறையையே டாடாக்கள் பயன்படுத்துவார்கள் என்று தெரிகிறது. இந்த முறையில் குளோரைடு மற்றும் ஆக்சிஜன் நிரப்பி இல்லுமினேட் எரிக்கப்பட்டு டைட்டானியம் டெட்ரா குளோரைடு என்ற வாயு பெறப்படும். இதனை வடித்தெடுத்து ஆக்சிஜனோடு இணைத்து எரிக்கும்போது, டைட்டானியம் டை ஆக்சைடு கிடைக்கும். அதோடு சேர்ந்து குளோரின் வாயுவும் உற்பத்தியாகும். உற்பத்தியில் மீண்டும் மீண்டும் குளோரின் பயன்படுத்தப்படும் என்றாலும் வாயுக் கசிவு ஏற்படுவது தவிர்க்க முடியாதது. நிலம், நீர், காற்றில் குளோரின் கலப்பது தவிர்க்க முடியாதது. இந்த உற்பத்தி முறையில் வெளியேறும் மற்ற முக்கியப் பொருள்கள்: ஹைட்ரஜன் குளோரைடு, ஹைட்ரோ குளோரிக் அமிலம், குளோரின் வாயு, அமிலத் தன்மையுள்ள சகதி, சல்பர் டை ஆக்சைடு, கார்பன் டை ஆக்சைடு, கன உலோகங்கள் நிறைந்த திடக்கழிவுகள், அமிலத் தன்மையுள்ள திரவக் கழிவுகள் மற்றும் காற்றில் மிதக்கும் திடப்பொருள் துகள்கள். டைட்டானியம் டை ஆக்சைடு உற்பத்தியில் வெளியாகும் கழிவுகளில் அலுமினியம், ஆண்டிமணி, ஈயம், மோலிப்டனும் போன்றவை மிகக்குறைந்த அளவில் இருக்கும். இந்த உலோகங்கள் காற்றில் மிதக்கும் தூசுக்களிலும் இருக்கும். இந்த மிகக்குறைந்த அளவே போதுமான அபாயத்தை விளைவிக்கும். இவை நுரையீரலில் மிகக்குறைந்த அளவு நுழைந்தால்கூட, நீண்ட காலப்போக்கில், சரிசெய்ய முடியாத இழப்புகளை ஏற்படுத்தக்கூடியவை. சல்பர் டை ஆக்சைடு உள்ளூர் அளவில் கடும் பாதிப்பை ஏற்படுத்தும். அது அந்தப் பகுதியில் அமில மழையை ஏற்படுத்தும். வெளியேறும் திடக்கழிவுகள் நிலத்தையும் நீரையும் கடலையும் நஞ்சாக்கும். இந்த முறையில் இரும்பு குளோரைடும் உற்பத்தியாகும். இதனை முறையாகப் பாதுகாத்து வைக்கவில்லை என்றால், அது சுற்றுச்சூழலில் கலந்துவிடும். கேரளாவில் சவரா என்னும் ஊரில் கேரளா மினரல் & மெட்டல் என்னும் நிறுவனம் டைட்டானியம் ஆலையை நடத்தி வருகிறது. அந்த ஆலையிலிருந்து வெளியேறிய கழிவுகள் நிலத்தடி நீரை மாசுபடுத்திவிட்டன என்று உச்ச நீதி மன்றக் கண்காணிப்புக் குழு 2004இல் குற்றஞ்சாட்டியது. தற்போது அந்த ஆலையைச் சுற்றியுள்ள ஊர்களிலுள்ள மக்கள் ஆலை கொண்டுவந்து அளிக்கும் நீரை நம்பியே வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். குளோரைடு முறையில் டைட்டானியம் டை ஆக்சைடு உற்பத்தி செய்யப்படும்போது, 76 கிலோ சல்பர் டை ஆக்சைடும் 1 டன் திடக் கழிவுகளும் 2.7 கிலோ திரவக் கழிவுகளும் உற்பத்தியாகும். மிகுந்த கவனத்திற்குரியது குளோரைடு முறையின் மூலம் டைஆக்சினும் (dioxins) ஃபுரானும் (furans) உற்பத்தியாகும் என்பதே. குளோரைடு முறை இந்த விஷ வாயுக்களையும் உற்பத்தி செய்யும் என்று ஐக்கிய நாட்டுச் சபையின் சுற்றுச்சூழல் திட்டம் கூறுகிறது. அறிவியலுக்குத் தெரிய வந்த மிகக்கொடூரமான நச்சுத் தன்மைகொண்ட 100 வேதிப்பொருள்களின் பட்டியலில் இந்த இரண்டு பொருள்களும் இடம்பிடித்துள்ளன. இவை புற்றுநோயை உண்டாக்குவதோடு குறைபாடுகளுள்ள குழந்தைகள் பிறப்பதற்கும் காரணமாகின்றன. மிகக் குறைந்த அளவு டைஆக்சின் உடலில் நுழைந்தால்கூட அது உடலின் நோய் எதிர்ப்புத் தன்மையை ஒழித்துக்கட்டிவிடுகிறது. இதன் காரணமாக இப் பொருளை வேதியல் எய்ட்ஸ் என்று கூறுகின்றனர். வைரசுக்குப் பதிலாக டைஆக்சினும் ஃபுரானும் உடலின் நோய் எதிர்ப்புச்சக்தியை ஒழித்து மனிதர்களை மரணத்தின் பிடிக்குள் தள்ளுகின்றன. டைட்டானிய உற்பத்தியின் ஆபத்தும் எதிர்ப்புப் போராட்டங்களும் வழக்கமான ஆலை மாசுபாடுகளுக்கு அப்பால் அபாயகரமான கழிவுகளின் தாக்குதலுக்கும் மக்கள் ஆட்பட வேண்டியிருக்கும். டைட்டானியம் டெட்ரா குளோரைடு ஒரு பிரச்சினைக்குரிய வாயுவாகும். அது நீருடன் கடுமையான வினையாற்றி ஹைட்ரஜன் குளோரைடு வாயுவை உருவாக்கும். ஹைட்ரஜன் குளோரைடு தரையைத் தழுவியபடியே பயணித்துப் பெரிய பகுதிக்குப் பரவும். அது பரவும் இடம் முழுவதும் மரணம் பரவும். எத்தனை சிறப்பாகப் பராமரிக்கப்படும் ஆலையிலும் விபத்து ஏற்படுவது இயற்கை என்பதால் இதுபோன்ற விபத்துகள் ஏற்படாது என்று 100 சதம் உத்திரவாதம் தர முடியாது. 2006 ஆகஸ்ட்டில் சீனாவின் ஜிங்சூ மாகாணத்தில் டைட்டானியம் ஆலை நானி ஆற்றில் 3000 டன் சுத்தி கரிக்கப்படாத கழிவை வெளியேற்றிய குற்றத்திற்காக மூடப்பட்டது. அந்தக் கழிவு ஆற்றைக் கொன்று போட்டது. ஆற்றங்கரையில் உள்ள ஊர்மக்கள் அனை வரும் பாதிக்கப்பட்டனர். 1999இல் இங்கிலாந்தின் டைட்டானிய உற்பத்தி ஆலை ஒன்றில் விபத்து ஏற்பட்டது. குழாய் உடைந்ததால் 8 ஆயிரம் டன் திரவக் கழிவு வெளியேறியது. அதில் 37 டன் அடர்த்தியான ஹைடிரோ குளோரிக் அமிலமும் அடக்கம். விளைவாக 17 ஏக்கர் நிலம் பயனற்றுப்போனது. அமெரிக்காவின் தெற்கு ஜார்ஜியாவில் பழங்குடியினர் பகுதியில் டூபாண்ட் நிறுவனம் டைட்டானியம் தோண்டியெடுக்க 1999இல் முயற்சி செய்தது. ஆனால், பழங்குடி மக்களின் போராட்டத்தின் காரணமாக விரட்டியடிக்கப்பட்டது. நிலத்தடி நீர் கெட்டுப்போனது மற்றும் குறைந்துபோனது என்று காரணம் காட்டி மத்திய வியட்னாமின் கிராம மக்கள் 2006இல் டைட்டானியம் தோண்டியெடுப்பதை வலுக்கட்டாயமாகத் தடுத்து நிறுத்தினர். கென்யாவின் கடற்கரைப் பகுதியான க்வாலேவில் பழங்குடியினர் டைட்டானிய உற்பத்தியின் பாகசுரக் கம்பெனியான டியோமினுடன் (Tiomin) விடாப்பிடியான யுத்தம் நடத்திவருகின்றனர். தங்களது மூதாதையர் நிலத்தைத் தோண்டவிடமாட்டோம் என்று அவர்கள் போராடுகின்றனர். எது பெரியது? எந்த முறையைப் பயன்படுத்துகிறார்கள் என்பது முக்கியமல்ல. ஏனென்றால் அனைத்து முறைகளும் ஆபத்தானவை. அவை சுற்றுச்சூழலையும் மனிதர்களின் நல்வாழ்வையும் பாதிக்கும். அரசியல் கட்சிகள் அனைத்தும் இந்த டைட்டானியத் தொழிற்சாலை பற்றிய முக்கிய விவரங்களைப் பார்க்கத் தவறுகின்றன. நிலத்தை யார் வாங்குகிறார்கள் அரசா? டாடாவா? என்பதோ, தொழிலை யார் நடத்துகிறார்கள் அரசா? டாடாவா? என்பதோ முக்கியமல்ல. யார் தோண்டினாலும் டைட்டானியம் 30 ஆண்டுகளில் தீர்ந்துபோகும். டாடா உலகப் பணக்காரர்களில் மிக முக்கியமான இடத்தைப் பிடித்துவிடுவார். அதே சமயம் அந்தப் பகுதியின் நீரும் தீர்ந்துபோயிருக்கும். எது பெரியது? எது முக்கியம்? டைட்டானியமா? நீரா? எவர் முக்கியமானவர்? டாடாவா? மக்களா? டைட்டானியம் இன்றி வாழ்ந்திருக்கிறோம். ஆனால், நீரின்றி அமையாது உலகு. -நித்தியானந்த் ஜெயராமன் தமிழ்ப் பல்கலைக் கழகம் - சித்த மருத்துவக் கல்வி - தகவல் உரிமை சட்டத்தின்கீழ் மேல் முறையீடு TUESDAY, OCTOBER 16, 2007 தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில், அஞ்சல் வழியில் சித்தமருத்துவம் கற்றுத்தருவதாக வந்த விளம்பரத்தை அடுத்து நாம் மேற்கொண்ட விசாரணையில், இந்திய மருத்துவத்திற்கான மத்திய குழு உள்ளிட்ட அதிகார அமைப்புகளிடம் இருந்து எந்தவிதமான அனுமதியும் பெறாமல் பணம் பண்ணும் நோக்கத்தில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரிந்தது. இதையடுத்து இந்த கோர்ஸுக்கு தடைவிதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதற்கிடையில் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் சித்த மருத்துவத்துறையில் ஆய்வு முனைவர்(Ph D), ஆய்வு நிறைஞர்(M Phil) ஆகிய ஆய்வுப் படிப்புகளும் வழங்கப்படுவதாக தெரியவந்தது. ஆனால் இந்தப் பட்டங்களை இந்திய மருத்துவத்திற்கான மருத்துவக்குழுவோ, டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகமோ அங்கிகரிக்க வில்லை என்பதும் தெரியவந்தது. எனவே இந்த பட்டங்களின் அந்தஸ்து குறித்து சில தகவல்களை தகவல் உரிமைச்சட்டத்தின் கீழ் கடந்த 05-09-2007 அன்று கேட்டோம். இம்மனுவைப் பெற்றுக்கொண்ட தமிழ்ப் பல்கலைக்கழக பதிவாளர் முனைவர். க. பாஸ்கரன் அவர்கள் பதில் அனுப்பி உள்ளார். அதில் தமிழ்ப் பல்கலைக்கழகம் அஞ்சல் வழியில் நடத்தும் சித்த மருத்துவ பட்டய படிப்பை எதிர்த்து நாம் வழக்கு தொடர்ந்துள்ள நிலையில் நாம் கேட்டுள்ள விவரங்களை தெரிவிக்க முடியவில்லை எனக்கூறியுள்ளார். மேலும் மேல்முறையீடு செய்ய விரும்பினால் துணைவேந்தரிடம் மேல் முறையீடு செய்யலாம் என்றும் நல் வாய்ப்பொன்றை வழங்கி உள்ளார். எனவே நாம் மேல்முறையீட்டு மனுவை அனுப்பி உள்ளோம். அதன் நகல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 16-09-2007 சென்னை அனுப்புனர், பி. சுந்தரராஜன், வழக்கறிஞர், 1-P, பாண்டு கிளிக்ஸ் பிளாஸா, 330/168, தம்பு செட்டி தெரு, சென்னை-600 001. பெறுனர், துணை வேந்தர், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் - 613 010. ஐயா, பொருள்: தகவல் உரிமைச் சட்டம் பிரிவு 19ன் கீழான மேல் முறையீட்டு மனு கடந்த 05-09-2007 அன்று, தங்கள் பல்கலைக்கழகத்தின் சித்த மருத்துவத்துறையில் வழங்கப்படும் ஆய்வு முனைவர்(Ph D), ஆய்வு நிறைஞர் (M Phil) ஆகிய பட்டங்கள் குறித்த கீழ்க்கண்ட தகவல்களை வழங்குமாறு பொதுத்தகவல் அதிகாரியான பதிவாளருக்கு மனு அனுப்பினேன். அக்கேள்விகள் கீழ் வருமாறு: 1. தங்கள் பல்கலைக்கழகத்தின் சித்தமருத்துவத்துறையில் சித்தமருத்துவம் படித்த முழுநேரப் பேராசிரியர்கள் எத்தனை பேர் பணிபுரிகின்றனர்? . 1. தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் இதுவரை எத்தனை பேர், சித்தமருத்துவ துறையில் ஆய்வு முனைவர்(Ph D) மற்றும் ஆய்வு நிறைஞர்(M Phil) பட்டம் பெற்றுள்ளனர்? இந்தப் பட்டங்களுக்காக தற்போதைய நிலையில் எத்தனை மாணவர்கள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்? . 1. தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் சித்தமருத்துவத்துறையில் வழங்கப்பட்ட ஆய்வு முனைவர் (Ph D) மற்றும் ஆய்வு நிறைஞர் (M Phil) பட்டங்களை இந்திய மருத்துவத்திற்கான மத்தியக் குழு (CENTRAL COUNCIL FOR INDIAN MEDICINE) அங்கீகரித்துள்ளதா? ஆம் எனில் எந்த அடிப்படையில் அங்கீகரித்துள்ளது? இல்லையெனில் எந்த அடிப்படையில் அங்கீகாரம் மறுக்கப்பட்டது? . 1. தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் ஆய்வு முனைவர் (Ph D) மற்றும் ஆய்வு நிறைஞர் (M Phil) பட்டம் பெற்றவர்களை சித்தமருத்துவ விரிவுரையாளர்களாக –அல்லது- பேராசிரியர்களாக தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் அங்கீகரித்துள்ளதா? ஆம் எனில் தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் ஆய்வு முனைவர் (Ph D) மற்றும் ஆய்வு நிறைஞர் (M Phil) பட்டம் பெற்றவர்கள் எத்தனை பேர் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் சித்தமருத்துவ விரிவுரையாளர்களாக –அல்லது- பேராசிரியர்களாக பணி நியமனம் பெற்றுள்ளனர்? . 1. தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் ஆய்வு முனைவர் (Ph D) மற்றும் ஆய்வு நிறைஞர் (M Phil) பட்டம் பெற்றவர்களை சித்தமருத்துவ விரிவுரையாளர்களாக –அல்லது- பேராசிரியர்களாக தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் அங்கீகரிக்கவில்லை எனில் அங்கீகாரம் பெற என்ன முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது? . இந்த மனுவைப் பெற்றுக் கொண்ட தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் பொதுத்தகவல் அதிகாரியும், பதிவாளருமான முனைவர் க.பாஸ்கரன் பதில் கடிதம் அனுப்பி உள்ளார். . அதில், 2007-08ஆம் கல்வி ஆண்டில் தமிழ்ப் பல்கலைக் கழகத் தொலைநிலைக்கல்வி இயக்கக வழி, சித்த மருத்துவப் பட்டயக் கல்வி பயிற்றுவிப்பதற்கு எதிராகத் தாங்கள் சென்னை, உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நிலுவையிள்ள நிலையில், கேட்கப் பட்டுள்ள விவரங்களைத் தெரிவிக்க முடியவில்லை என்று தெரிவித்துள்ளார். சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கு அஞ்சல் வழியில் வழங்கப்படும் சித்த மருத்துவப் பட்டயக்கல்வி குறித்ததே. அந்த வழக்கில் தங்கள் பல்கலைக்கழகத்தில் அஞ்சல் வழி அல்லாத முறைகளில் வழங்கப்படும் ஆய்வு முனைவர்(Ph D), ஆய்வு நிறைஞர் (M Phil) ஆகிய பட்டங்கள் குறித்து இதுவரை எந்த கேள்வியும் எழுப்பப்படவில்லை. இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த 2007 அக்டோபர் முதல் தேதி அன்று விசாரணைக்கு வந்தபோது தங்கள் பல்கலைக்கழகம் சார்பில் வழக்கறிஞர்கள் சார்பில் யாரும் ஆஜராகவில்லை. இந்நிலையில் வழக்கில் எந்த தொடர்பும் இல்லாத அம்சம் குறித்த - தகவல் உரிமைச் சட்டம் பிரிவு 8ன் படி தகவல் அளிக்க விலக்கு அளிக்கப்பட்ட அம்சங்களில் சேர்க்கப்படாத தகவலை அளிக்க மறுப்பது, தகவல் உரிமைச் சட்டம் பிரிவு 20ன் கீழ் தண்டனைக்கு உரியது. எனவே, மேலேக் கோரப்பட்ட தகவல்களை உரியகாலத்தில் வழங்கும்படி கேட்டுக்கொள்கிறேன். இந்த தகவல் கோரலுக்கான கட்டணம் ரூ.10/= (பத்து ரூபாய் மட்டும்) நீதிமன்ற கட்டண வில்லையாக செலுத்தப்பட்டுள்ளது. நன்றி. தங்கள் உண்மையுள்ள, . (பி. சுந்தரராஜன்) . இந்த மனுவிற்கு வரும் பதிலும் மக்கள் சட்டம் வலைப்பூவில் பதிவாக இடம் பெறும். மக்கள் சட்டம் வலைப்பூவின் இதுபோன்ற சமூக செயல்பாடுகள் குறித்து உங்கள் கருத்துகளை தெரிவியுங்கள். நீங்களும் தேவைப்படும் இடங்களில் தகவல் உரிமை சட்டத்தை பயன்படுத்தி அதிகாரிகளின் தூக்கத்தை கலையுங்கள். -மக்கள் சட்டம் குழு நீதித்துறையின் விடுமுறைக்கால கொண்டாட்டம்…! சாமானிய மக்களுக்கோ திண்டாட்டம்…! THURSDAY, OCTOBER 18, 2007 அக்டோபர் 15 முதல் 19ம் தேதி வரை சென்னை உயர்நீதிமன்றத்திற்கும் மற்ற உரிமையியல் நீதிமன்றங்களுக்கும் தசரா பண்டிகைக்கால விடுமுறை. தசரா பண்டிகைக்கும் நீதித்துறையினருக்கும் என்ன தொடர்பு என்கிறீர்களா? விடுமுறைகள் அறிவிப்பதில் இந்திய நீதிமன்றங்கள் கல்வி நிலையங்களுடன் போட்டியிடுகின்றன என்று துணிந்து கூறலாம். தாமதித்து வழங்கப்படும் நீதி மறுக்கப்படும் நீதிக்கு சமம் என்ற வசனம் திரைப்படங்களிலும், மேடை நாடகங்களிலும் பலமுறை உச்சரிக்கப்பட்டாலும் உரியவர்களின் காதுகளில் அந்த வசனம் சரிவர விழுவதில்லை. இந்தியாவின் உச்ச நீதிமன்றம் உட்பட நாட்டின் அனைத்து நீதிமன்றங்களிலும் பல நீதிபதி பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன என்பதும், அந்த நீதிமன்றங்களில் கோடிக்கணக்கான வழக்குகள் விசாரணைக்காக காத்திருப்பதும் அனைவரும் அறிந்த செய்தியே. இந்த நிலையில் நாட்டின் முக்கிய நீதிமன்றங்களின் செயல்பாடு மிகுந்த அச்சத்தை அளிப்பதாகவே உள்ளது. உதாரணமாக, 2007ம் ஆண்டில் உச்ச நீதிமன்றத்திற்கு கோடை விடுமுறை 49 நாட்கள்; தசரா பண்டிகை விடுமுறை 8 நாட்கள்; தீபாவளி பண்டிகை விடுமுறை 8 நாட்கள்; கிறிஸ்துமஸ் பண்டிகை விடுமுறை 16 நாட்கள்; இதோடு வார விடுமுறைகளயும் சேர்த்தால் சுமார் 137 நாட்கள் விடுமுறை. அதாவது சுமார் நான்கரை மாதங்கள் இந்தியாவின் உச்சநீதி மன்றம் இழுத்து மூடப்படுகிறது. தமிழ்நாட்டின் உயர்நீதிமன்றத்திற்கு கோடை விடுமுறை 37 நாட்கள். தீபாவளி பண்டிகை விடுமுறை 9 நாட்கள். கிறிஸ்துமஸ் பண்டிகை விடுமுறை 11 நாட்கள். இதோடு வார விடுமுறைகளயும் சேர்த்தால் சுமார் 145 நாட்கள் (5மாதங்கள்) விடுமுறை. அதாவது சென்னை உயர்நீதிமன்றம், இந்த ஆண்டின்12 மாதங்களில் சுமார் ஏழு மாதங்களும் 10 நாட்களும் மட்டுமே பணியாற்றுகிறது. பல்வேறு காரணங்களுக்காக வழக்கறிஞர்கள் மேற்கொள்ளும் நீதிமன்ற புறக்கணிப்புகள் தனிக்கணக்கு. வாரம் முழுவதும் பணியாற்றும் பணியாளர்களுக்கு வார இறுதி நாளன்று ஓய்வு தேவை என்பதை யாரும் மறுக்க முடியாது. ஆனால் மதம் சார்ந்த பண்டிகைகளுக்காக வாரக்கணக்கிலும், கோடை விடுமுறை என்ற பெயரில் மாதக்கணக்கிலும் நீதிமன்றங்களுக்கு விடுமுறை விடும் அரசை மக்கள் நல அரசாகவும் கருத முடியாது. . மக்களின் அடிப்படை மனித உரிமைகளை பறிக்கும் அனைத்து அமைப்புகளும் எந்த விடுமுறையுமின்றி, எந்நேரமும் பணியாற்றி வருகையில், மனித உரிமைகளை பாதுகாக்க வேண்டிய நீதித்துறை, நீண்ட விடுமுறைகளை அனுமதிப்பது அப்பட்டமான மனித உரிமை மீறலே! மதசார்பற்ற அரசின் நீதித்துறை, மதம் சார்ந்த மக்களின் வழிபாட்டு உரிமைகளுக்கும் மதிப்பளிக்க வேண்டும். ஆனால் அதற்கு மற்றவர்களின் உரிமைகளை விலையாக கொடுக்கும் நிலை இருக்கக்கூடாது. எனவே பண்டிகைக் கால நீண்ட விடுமுறைகள் குறித்த மறுபரிசீலனை அவசியம். கோடை விடுமுறை என்பதே, இந்தியா சுதந்திரம் பெற்றதை அங்கீகரிக்காத போக்காக படுகிறது. ஏனெனில் கோடை விடுமுறை ஆங்கிலேயர் காலத்தில் ஆரம்பித்த நடைமுறை. இந்தியா அடிமை தேசமாக இருந்தபோது, இந்தியர்களுக்கான நீதி என்பது அடிமை-இந்தியர்கள் மீது காட்டப்படும் கருணையாக இருந்தது. குளிர் தேசமான இங்கிலாந்தில் பிறந்து, வளர்ந்த ஆங்கிலேய நீதிபதிகளுக்கு இந்தியாவின் கோடை வெப்பம் ஒத்துவராததால் அவர்கள் சொந்த நாடான இங்கிலாந்து செல்வதற்காக நீதிமன்றங்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டது. மின்விசிறிகூட இல்லாத அந்த காலத்தில் ஆங்கிலேயர்கள் கோடையில் விடுமுறை அனுபவித்ததை புரிந்து கொள்ள முடிகிறது. . ஆனால், இந்தியாவிலேயே பிறந்து, இந்நாட்டின் வெப்பத்திலேயே வளர்ந்து, குளிர்பதனம் (Air Condition) செய்யப்பட்ட நீதிமன்றங்களில் அமர்ந்து நீதிபரிபாலனம் செய்யும் தற்கால நீதியரசர்(!)களுக்கு கோடை விடுமுறை என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை. குளிர்பதன வசதி செய்யப்படாத பல விசாரணை மற்றும் கீழ்நிலை நீதிமன்றங்கள் கோடை காலத்திலும் பணியாற்றுகின்றன என்பது குறிப்பிட வேண்டிய முக்கிய செய்தி. நம் நாட்டில் கற்றுத்தேர்ந்த வழக்கறிஞர்களுக்கோ, நீதியியல் அறிஞர்களுக்கோ பஞ்சமில்லை. ஆனால் அவர்கள் செயல்படுவதற்கான வாய்ப்புகள் மிகக்குறைவு. சமூகத்தின் உயர்நிலையில் உள்ள ஆதிக்க சக்திகளே நீதித்துறையையும் ஆக்கிரமித்துள்ளதால், சாமானிய மக்களின் பிரசினைகள், நாட்டின் உச்சத்தில் உள்ள தலைவர்களை சென்றடைவதில்லை. . மக்களின் அடிப்படை உரிமைகளை பாதுகாப்பதற்குதான் நீதிமன்றங்கள் இயங்குகின்றன என்பது உண்மையானால் அவை காலை, மாலை என இரு அமர்வுகளாக (ஷிப்ட் முறையில்) கூடுதல் நீதிபதிகள் மற்றும் பணியாளர்களுடன் இயங்கவேண்டும். வழக்குகளை தீர்ப்பதற்கான கால அவகாசம் நிர்ணயிக்கப்பட வேண்டும். வழக்குகளை உரிய காலத்தில் தீர்க்காத நிலையில். அதனால் வழக்கு தொடுக்கும் பொதுமக்கள் அடையும் இழப்புகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். மக்கள் எந்த நாளிலும், எந்த நேரத்திலும் நீதிமன்றத்தை அணுகி, நீதிபெற முடியும் என்ற நிலை வந்தால்தான் நாட்டில் ‘சட்டத்தின் ஆட்சி’ நடப்பதாக பொருள் கொள்ள முடியும். கோடை விடுமுறை உள்ளிட்ட அசாதாரண விடுப்புகளை கோரும் நீதித்துறை அதிகாரிகளுக்கு சம்பளம் இல்லாத விடுப்பு அளிக்கலாம். மூத்த வழக்கறிஞர்கள் பலரும் இது போன்ற நீண்ட விடுமுறைகள் தேவை என்றே கருத்து தெரிவிக்கக்கூடும். மூளை உழைப்பாளிகளான தங்களுக்கு இது போன்ற கட்டாய விடுமுறைகள் மட்டுமே ஓய்வு அளிப்பதாக அவர்கள் கூறக்கூடும். . ஆனால் அடுத்த தலைமுறை வழக்கறிஞர்கள் உருவாவதை விரும்பாத, பேராசை படைத்த மூத்த வழக்கறிஞர்கள் மட்டுமே இத்தகைய வாதத்தை முன்வைப்பார்கள் என்பதை அனைவரும் அறிவர். உண்மையாகவே மக்களுக்கு பாடுபடும் எந்த ஒரு வழக்கறிஞரும் எந்த நேரத்திலும் மக்களுக்கு உதவி செய்ய தயாராகவே இருப்பர் என்பதை கூறத்தேவையில்லை. -சுந்தரராஜன் (sundararajan@lawyer.com) . பின்குறிப்பு: இந்த பதிவிற்கு மறுமொழி எழுதுவதால் நீதிமன்ற அவதூறு சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்க முடியாது. எனவே உங்கள் கருத்துகளை தைரியமாக பதிவு செய்யலாம். வங்கிக்கடன் வசூலிப்பில் அத்துமீறல் THURSDAY, NOVEMBER 22, 2007 வங்கிகளின் செயல்பாடுகள் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு சட்டதிட்டங்கள் மட்டுமல்லாமல், காலம்காலமாக மதிக்கப்படும் மரபுகளும் உள்ளன. இதனை BANKING LAW AND PRACTICE என்பார்கள். ரிசர்வ் வங்கியும் அவ்வப்போது தேவையான வரைமுறைகளை வகுத்துக் கொடுப்பதோடு, பல்வேறு வழிகாட்டுதல்களையும், ஆலோசனைகளையும் வழங்கி வருகிறது. இந்நிலையில் கடன் வசூப்புக்கு குண்டர்களைப் பயன்படுத்துகின்றன என்ற குற்றச்சாட்டு வங்கிகள் மீது சமீபகாலத்தில் அதிகரித்துள்ளது. ஆரம்பத்தில் இந்த அவலம் இங்கொன்றும் அங்கொன்றுமாக சில தனியார் வங்கிகளில் தொடங்கியது. ஆனால், கடந்த மூன்று, நான்கு ஆண்டுகளில் இந்த வசூல் கலாசாரம் தொற்றுநோய் போல் வேகமாகப் பரவி வருகிறது. கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான தவணை தவறினால், வீட்டுக்கதவைத் தட்டுவதற்கு “தனியாள்கள்” நியமிக்கும் போக்கு வங்கிகளுக்கு அழகல்ல. இந்தக் கடன் வசூலிப்பு ஏஜெண்ட்களின் அராஜகத்தால் பல குடும்பங்கள் நிம்மதி இழந்துள்ளன. எப்படியாவது கடனை வசூலித்துக் கொடுக்க வேண்டியது இந்த ஏஜெண்ட்களின் வேலை. இவர்களால் ஏற்படும் துன்பத்தையும், அவமானத்தையும் பொறுத்துக்கொள்ள முடியாமல் தற்கொலைக்குத் தள்ளப்பட்டவர்கள் பலர். பல தனியார் வங்கிகளுக்கு எதிராக, பல் வேறு மாநில நீதிமன்றங்களும், உச்ச நீதிமன்றமும் கடுமையாகக் கண்டனம் தெரிவித்துள்ளன. எனினும் நிலைமை மாறவில்லை. கவலைக்குரிய இந்த நிலை எப்படி ஏற்பட்டது? கடந்த காலங்களில், வங்கிக்கடன் வழங்குவதற்கு சில வரைமுறைகள் கடைப்பிடிக்கப் பட்டன. பெரும்பாலும் தேவை அடிப்படையிலும் ஏதேனும் ஒருவகை செக்யூரிட்டியின்’ பேரிலும்தான் வங்கிகள் தனிநபர் கடன்கள் வழங்கி வந்தன. கடன் கோருபவர்களுக்கு, அக் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான நிதி ஆதாரம் மற்றும் வருமானம் உள்ளதா என்பதைப் பரிசீலித்த பின்னரே வங்கிகளில் கடன் தருவார்கள். ஆனல் 1990களின் தொடக்கத்தில் அறிமுகமான பொருளாதார தாராளமயமாக்கல் மற்றும் அதே காலகட்டத்தில் தோன்றிய, அதீத நுகர்வோர் கலாசாரத்தின் விளைவாக, வங்கிகள் அதிலும் குறிப்பாக புதிய தலைமுறை தனியார் வங்கிகள், வெளிநாட்டு வங்கிகள் மற்றும் வங்கிசாரா நிதி நிறுவனங்கள் ஆகியவற்றின் போக்கில் ஒரு பெரும் மாற்றம் ஏற்பட்டது. புதிதாக உருவான நுகர்வோர் கலாசாரத்தை லாபம் ஈட்டுவதற்கான ஓர் அரிய வாய்ப்பாக வங்கிகள் கருதின. இதன் பயனாக, வாகனக் கடன், தனிநபர் கடன், நுகர்பொருள் வாங்குவதற் காக கடன் மற்றும் கடன் அட்டைகள் என விதவிதமான கடன்களை வங்கிகள் தாராளமாக வாடிக்கையாளர்களுக்கு வழங்கத் தொடங்கின. முன்பு, கடன் விண்ணப்பங்களை மிகவும் கவனமாகப் பரிசீலிப்பதை கடமையாகக் கருதிய வங்கிகள் இப்போது அப்படிச் செய்வதில்லை. மாறாக, "கடன் வாங்கலியோ, கடன்!’’ என்று கூவிக் கூவிக் கடன் கொடுக்கத் தொடங்கின. தொலைபேசிகளில் தொடர்பு கொண்டு, வாடிக்கையாளர்களுக்கு வலை விரித்தன. இந்நிலையில், வங்கிகளுக்குத் தேவையெல்லாம் கையெழுத்திட்ட, பூர்த்தி செய்யப்படாத காசோலைகள் மட்டுமே! காரணம், மேலே குறிப்பிட்ட வசூல் முறையை நம்பித்தான் கோடிக்கணக்கான ரூபாயைக் கடனாக இந்தத் தனியார் வங்கிகள் வழங்கி வருகின்றன. இப்படி, லாப நோக்கினால் உந்தப்பட்ட வங்கிகள், கடன் வழங்குவதில் காட்டிய அதீத ஆர்வம், கடன் விண்ணப்பங்களைப் பரிசீலிப்பதில் ஏற்பட்ட அலட்சியப்போக்கு ஒரு புறம் என்றால், இன்னொருபுறம், கடன் தொகையை வசூலிப்பதற்கு வெளியாட்களை நியமித்தன. தாங்களே மேற்கொள்ள வேண்டிய பணியை, வங்கிக்குத் தொடர்பில்லாத ஆட்களை அல்லது நிறுவனத்தை ஒப்பந்த அடிப்படையில் நியமித்தன. அவர்கள் முறைகேடான வழிமுறைகளை கையாளுவதால் வங்கிக்கு அவப்பெயர் ஏற்படுமே என்ற கவலை ஏனோ ஏற்பட வில்லை. நீதிமன்றங்களை அணுகினால் காலதாமதம் ஏற்படுகிறது என்பது உண்மை. ஆனால், இதைக் காரணம் காட்டி, வங்கிகள் சட்டத்தை தங்கள் கையில் எடுத்துக்கொள்வதை எந்த ஒரு நாகரிக சமுதாயமும் அனுமதிக்காது. நல்லவேளையாக, இதுவரை அமைதி காத்துவந்த பாரத ரிசர்வ் வங்கி, இப்போது தன் மவுனத்தைக் கலைத்துள்ளது. கடந்தமாத இறுதியில், "நிதி மற்றும் கடன்கொள்கை‘’யை அறிவித்த ரிசர்வ் வங்கி கவர்னர் ஒய்.வி. ரெட்டி, "வங்கிகள் தங்கள் கடன்தொகையை வசூலிப்பதற்கு, ஏஜெண்ட்களை நியமித்து, வன்முறையைப் பயன்படுத்துவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்’’ என்று எச்சரித் துள்ளார். காலம் கடந்து வந்திருந்தாலும், இந்த அறிவிப்பு ஆறுதல் அளிக்கக்கூடியது. இது தொடர்பான விரிவான வழிமுறைகள் அடங்கிய வரைவு சுற்றறிக்கையையும் ரிசர்வ் வங்கி அண்மையில் வெளியிட்டுள்ளது. ரிசர்வ் வங்கி இதற்கான தொடர் நடவடிக் கையை தாமதமின்றி மேற்கொண்டு, வங்கிகளின் இத்தகாத செயலை உடனடியாகத் தடுத்து நிறுத்தும் என்று நிச்சயமாக நம்பலாம். இதற்கிடையே உச்ச நீதிமன்றம் ஒரு யோச னையைத் தெரிவித்துள்ளது. வசூல் ஏஜெண்ட்களின் அராஜகம் மற்றும் அத்துமீறிய செயல்களுக்கு அவர்களை நியமித்த வங்கிகளே பொறுப்பு ஏற்க வேண்டும் என்ற வகையில் விதிகள் மாற்றி அமைக்கப்பட வேண்டும் என்பதே அது. உச்ச நீதிமன்றத்தின் யோசனை செயல்படுத்தப்படுமேயானால், வங்கிகள் எச்சரிக்கை உணர்வோடு செயல்படுவார்கள் என்பதில் ஐயமில்லை. ரிசர்வ் வங்கி கவர்னரின் எச்சரிக்கையை அடுத்து, பாரத ஸ்டேட் வங்கி தனது கடன் தொகையை வசூல் செய்வதற்காக, 3,000 மார்க்கெட்டிங் மற்றும் சிறப்பு வசூல் அதிகாரிகளை வங்கி அலுவலர்களாக நியமிக்கத் திட்டமிட்டுள்ளது. இந்த அலுவலர்கள் வங்கியின் விதிமுறைகளுக்கு உட்பட்டு மென்மையான முறையில் கடன்தொகையை வசூலிக்க முற்படுவார்கள் என்றும் பாரத ஸ்டேட் வங்கி தெரிவிக்கிறது. இதைத் தொடர்ந்து, இதர வங்கிகளும் இந்த அணுகுமுறையை மேற்கொள்ள வேண்டும். இத்தருணத்தில், மற்றொரு விஷயத்தையும் குறிப்பிட வேண்டும். வீட்டுக்கடன் வாங்கும் வாடிக்கையாளர்கள், கடன் தொகையைத் தவணை முறையில், அசல் மற்றும் வட்டியைத் திருப்பிச் செலுத்துகிறார்கள். வங்கிகள் மற்றும் வீட்டுக்கடன் வழங்கும் நிதி அமைப்புகள், வட்டிவீதத்தையும் கடனுக்கு மாதம்தோறும் கட்ட வேண்டிய தவணைத் தொகையையும் தங்கள் போக்கில் மாற்றுகின்றன என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. இதில் வெளிப்படையான நடைமுறை இல்லாததால், வாடிக்கையாளர்கள் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகிறார்கள். இதுதவிர, வீட்டுக்கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு நிர்ணயிக்கப்பட்ட காலம் முடிவதற்கு முன்பே கடன் தொகையை முழுவதுமாக வட்டியுடன் திருப்பிச் செலுத்துவதற்கு வாடிக்கையாளர்கள் விரும்பினால், அதற்கென ஒரு தனிக்கட்டணத்தை வங்கிகள் வசூக்கின்றன. ஆக, தவணையை கட்ட தாமதம் ஏற்பட்டாலும் தண்டனை; முன்கூட்டியே கடனைத் திருப்பிச் செலுத்தினாலும் தண்டனையா? இப்படி கூடுதல் கட்டணம் வசூப்பது நியாயமாகாது. இது உடனடியாக நிறுத்தப் பட வேண்டும் என்று ரிசர்வ் வங்கி கவர்னர் அறிவித்துள்ளார். இதுவும் விரைந்து அமல் படுத்தப்பட வேண்டும். சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் தேவையான வங்கிச் சேவை அளிக்கவும், நாட்டின் பொருளாதார மேம்பாட்டுக்காகவும் செயல்பட வேண்டிய வங்கிகள், வணிக ரீதியிலும் செயல்படுவது புரிந்துகொள்ளக் கூடியதே. ஆனால், தனியார் லேவாதேவிக்காரர்களைப்போல் வங்கிகள் செயல்படுவதை ஒருபோதும் ஏற்க முடியாது. […] -எஸ். கோபாலகிருஷ்ணன் (கட்டுரையாளர்: சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவின் முன்னாள் துணைப் பொது மேலாளர்) இந்திய அரசியலமைப்புச் சட்டம் - ஒரு மோசடியா? SUNDAY, NOVEMBER 25, 2007 அம்பேத்கார் தலைமையிலான இந்திய அரசியல் அமைப்புச் சட்ட வரைவுக்குழு அதன் பணியை முடித்து நாடாளுமன்றத்திடம் சட்ட வரைவை ஒப்படைத்த நாள் நவம்பர் 26, 1949. இந்த நாள் ஆண்டுதோறும் இந்தியாவிற்கான சட்ட நாளாக நினைவுகூறப்படுகிறது. அம்பேத்கார் தலைமையிலான குழு எழுதிய இந்திய அரசியல் சட்டத்தை பலரும் புகழ்ந்து கொண்டிருந்த நிலையில், “இந்திய அரசியலமைப்புச் சட்டம்” என்பது மாற்றப்பட கூடாத வேதப்புத்தகம் அல்ல. குடி மக்களின் தேவைகளுக்கு ஏற்ப மாற்றத்திற்குரியதே என்பதை உணர்த்தி, தாழ்த்தப்பட்ட-பிற்படுத்தப்பட்ட மக்களின் இடஒதுக்கீடுக்கு வழிவகுக்கும் வகையில் இந்திய அரசியல் சட்டத்தில் முதல் சட்டதிருத்தத்திற்கும் வழி வகுத்தவர் தோழர் பெரியார். பெரியாரின் தோழரான திருச்சி வே. ஆனைமுத்து அவர்கள், “இந்திய அரசியலமைப்புச் சட்டம் - ஒரு மோசடி” என்ற தலைப்பில் ஒரு புத்தகமே எழுதி வெளியிட்டார். அந்த புத்தகத்தில் அவர் எழுப்பியுள்ள பல விவகாரங்களுக்கு இன்னும் பதில் அளிக்க முடியாத நிலையே உள்ளது. இதைத்தொடர்ந்து இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. ஆனால் இவற்றில் மக்களுக்கு தேவையான வகையில் கொண்டுவரப்பட்ட திருத்தங்கள் மிகக்குறைவே. ஆட்சியில் இருப்பவர்களின் வசதிக்கும். அதிகாரத்தை ஒரிடத்தில் குவிப்பதற்குமே இந்திய அரசியலமைப்பு சட்டம் பலமுறை திருத்தப்பட்டுள்ளது. இத்தகைய நடவடிக்கைகளின் நடுவே, இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் முக்கிய அம்சங்களாக அம்பேத்கார் முன்வைத்த பல கொள்கைகள் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளன. அந்த கொள்கைகளுக்கு எதிரான திசையிலேயே அனைத்து அரசு அமைப்புகளும் செயல்பட்டு வருகின்றன. குறிப்பாக, இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் பகுதி-4, அரசு கொள்கைகளுக்கு வழிகாட்டும் கோட்பாடுகள் (DIRECTIVE PRINCIPLES TO STATE POLICY) என்ற பிரிவின்கீழ் பல முக்கிய அம்சங்கள் வலியுறுத்தப்பட்டுள்ளன. அவையாவன… 38.மக்களின் நலமேம்பாட்டிற்காக அரசு சமூக ஒழுங்கைப் பாதுகாத்தல்: 1. பொதுமக்களின் நலன் மற்றும் சமூக மேம்பாட்டிற்காகவும் பாதுகாப்பிற்காகவும், அரசு, நீதி, சமூகம், பொருளாதாரம் மற்றும் அரசியல் விவகாரங்கள் அனைத்தையும் ஒழுங்குபடுத்த வேண்டும். தேசிய வாழ்வில் உள்ள எல்லா அமைப்புகளிலும் அவற்றைத்தெளிவு படுத்த வேண்டும். 1. அரசு, பொருளாதார ஏற்றதாழ்வுகள் மற்றும் தனிப்பட்டவர்களுக்கிடையில், தனிப்பட்ட குழுக்களுக்கிடையில் காணப்படும் ஏற்றத்தாழ்வுகளை குறைத்தல். 39.சில கொள்கைகளை அரசு பின்பற்றுதல் வேண்டும்: அரசு குறிப்பாக- (அ) குடிமக்கள், ஆண்-பெண் பேதமின்றிச் சரிசமமாக வாழ்வதற்குத் தேவையான வசதிகளைப் பெறுவதற்கும்; (ஆ) உற்பத்தியாகும் பொருள்கள் அனைத்தும் சமுதாயத்தின் பொதுநலன் கருதி அனைவருக்கும் கிடைப்பதற்காக அவற்றின் உரிமை – கட்டுப்பாடு பொதுவாக பகிர்ந்தளிக்கப்படுவதற்கும்; (இ) செல்வமும், உற்பத்தியும் பொதுத்தீங்கின்றி, தேக்கமடைவதைத் தவிர்க்கும் பொருளாதார அமைப்பை செயல்படுத்துவதற்கும்; (ஈ) ஆண், பெண் இருபாலாருக்கும் இணையான வேலைக்கு, இணையான ஊதியம் அளிப்பதற்கும்; (உ) வேலையாட்களின் உடல்நலத்தையும், திறத்தையும், ஆண், பெண், சிறு குழந்தைகள் ஆகியோரை தவறாக பயன்படுத்தாமல் இருப்பதற்கும், மற்றும் குடிமக்களைத் தமது வயதுக்கும் திறனுக்கும் பொருத்தமில்லாத ஒரு வேலைக்குப் பொருளாதார தேவையின் பொருட்டு தள்ளப்படாது தடுப்பதற்கும்; (ஊ) குழந்தைகள் சுதந்திரமான நிலையில் கண்ணியத்தோடும் நல்வாழ்வுடனும் வளர்வதற்கும், அப்படி வாழ்வதற்கான வசதிகளையும், வாய்ப்புகளையும் அளிப்பதற்கும், குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் சுரண்டப்படுவதினின்றும் பாதுகாப்பதற்கும், ஒழுக்கம் மற்றும் பொருளாதாரம் காரணமாக நிராதரவாக விடப்படாமல் காப்பதற்கும் தமது கொள்கையை தேர்வு செய்ய வேண்டும். 40.கிராம ஊராட்சி அமைப்புகள்: கிராம ஊராட்சிகளை அமைக்கவும், அவை தன்னாட்சி பெற்று செயல்பட தேவையான அதிகாரங்களை வழங்க வேண்டும். 41.சில தறுவாய்களில் வேலை, கல்வி, பொது உதவிக்கான உரிமை: வேலை, கல்வி உரிமையின் பொருட்டு, வேலையில்லாதபோது, முதிய வயதினர், நோயுற்றோர், தொழில் புரிய இயலாதோர் மற்றும் தேவையற்ற வறுமையில் வாடுவோர் ஆகியோரை பாதுகாக்கும் வகையில் அரசு கொள்கைகளை வகுக்க வேண்டும். 42.நியாயமானதும், மனிதத்தன்மையோடு கூடியதுமான தொழில் மற்றும் மகப்பேறு நிவாரணங்களுக்கான வகையங்கள்: நியாயமானதும் மனிதத்தன்மையோடு கூடியதுமான தொழில் மற்றும் மகப்பேறு நிவாரணங்களைப் பாதுகாப்பதன் பொருட்டு, அரசு வகையங்களை உருவாக்க வேண்டும். 43.வேலையாட்களுக்கான வாழ்வூதியமும் இன்ன பிறவும்: வேளாண்மை, தொழிற்சாலை மற்றும் வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள அனைத்துத் தொழிலாளர்களுக்கும் வாழ்வூதியம், நாகரிகமான வாழ்க்கைத்தரத்திற்கு உறுதியளிக்கும் வகையிலான தொழில்கள், போதுமான ஓய்வு, சமூக மற்றும் பண்பாட்டுக்கான வாய்ப்பு ஆகியன கிடைப்பதற்கு உரிய முயற்சிகளைத் தகுந்த சட்டத்தின் வாயிலாகவும் அல்லது பொருளாதார அமைப்புகள் மூலமாகவும் அல்லது வேறு ஏதேனும் வகையிலும் அரசு உறுதிப்படுத்த வேண்டும். 43அ. தொழிற்சாலைகளில் நிர்வாகத்தில் தொழிலாளர் பங்கேற்றல்: தொழிற்சாலைகளை நடத்தும் அமைப்புகள் அல்லது நிறுவனங்கள் அல்லது நிர்வாகங்களின் நிர்வாகப்பணியில், தொழிலாளர்கள் பங்கு கொள்ளும் வகையில், அரசு தகுந்த சட்டத்தின் மூலம் அல்லது வேறு ஏதேனும்வகையில் நடவடிக்கை எடுத்தல் வேண்டும். 44.குடிமக்களுக்கு ஒரே மாதிரியான உரிமையியல் சட்டம். குடிமக்களுக்கு இந்திய நிலவரை முழுவதும் ஒரே மாதிரியான உரிமையியல் சட்டத்திற்கு அரசு முயற்சித்தல் வேண்டும். 45.ஆறு வயதுக்கு உட்பட்ட இளங்குழந்தைகளைப் பாதுகாப்பதும் கல்வி அளிப்பதும்: ஆறு வயது நிறைவடைகின்றவரையில் அனைத்து இளங்குழந்தைகளையும் பாதுகாக்கவும் அவர்களுக்குக் கல்வி அளிக்கவும் அரசு முயற்சிக்க வேண்டும். 46.பட்டியல் மரபினர், பட்டியல் பழங்குடி மரபினர் மற்றும் வேறு பலவீனப்பிரிவினர்களின் கல்வி மற்றும் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துதல்: பலவீனப் பிரிவு மக்களிடையே பொருளாதார மற்றும் கல்வி முன்னேற்றத்திற்கு அரசு சிறப்பாகக் கவனம் செலுத்த வேண்டும். அதிலும் குறிப்பாகப் பட்டியல் மரபினர் மற்றும் பட்டியல் பழங்குடி மரபினரின் பொருளாதார மற்றும் கல்வி முன்னேற்றத்திற்கு அரசு சிறப்பாகக் கவனம் செலுத்துவது மிகவும் அவசியமானதாகும். மற்றும் அவர்களை சமூக அநீதியினின்றும், அனைத்து வித சுரண்டல்களிலிருந்தும் பாதுகாத்தல் வேண்டும். 47.ஊட்டச்சத்து, வாழ்க்கைத்தரம், உடல்நல மேம்பாட்டை உயர்த்துவதற்கான அரசின் கடமை: ஊட்டச்சத்தை மேம்படுத்துவதையும், மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதையும் உடல்நலத்தை உயர்த்துவதையும் அரசு தமது கடமையாக கொள்ளவேண்டும். அதிலும் குறிப்பாக போதையூட்டும் மதுபானங்கள், போதைமருந்துகள் ஆகியன மருந்துக்காக பயன்படுத்துவதைத் தவிர வேறுவிதமாக பயன்படுத்துவதை தவிர்க்கும் வகையில் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். 48.வேளாண்மை மற்றும் கால்நடை பராமரிப்புக்கான அமைப்பு: வேளாண்மை மற்றும் கால்நடை பராமரிப்புக்கு நவீன அறிவியல் முறைகளைப் புகுத்துவதற்கு முயற்சி மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக உயர்ரகக் கால்நடைகளைப் பாதுகாப்பதற்கும், மேம்படுத்துவற்கும் பசுக்கள், கன்றுகள் மற்ற பால்தரும் விலங்குகள் வறட்சியுள்ள கால்நடைகள் ஆகியவற்றைக் கொல்வதைத் தடுப்பதற்கும் வேண்டிய முயற்சிகளை அரசு எடுத்தல் வேண்டும். 48அ. சுற்றுச்சூழலை பாதுகாத்தலும், மேம்படுத்தலும் மற்றும் வனங்கள் வனவிலங்குகளை பாதுகாத்தலும்: நாட்டின் சுற்றுச்சூழலை, அரசு பாதுகாக்கவும், மேம்படுத்தவும் வேண்டும். மற்றும் நாட்டின் வனங்கள், வனவிலங்குகளை பாதுகாத்தல் வேண்டும். 49.தேசிய முக்கியத்துவமுள்ள நினைவுச்சின்னம், இடங்கள், பொருள்களைப் பாதுகாத்தல்: தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது என்று அறிவிக்கப்பட்ட நினைவுச்சின்னம், அல்லது இடம் அல்லது கலைப்பொருட்கள் அல்லது வரலாற்றுச்சின்னங்களைச் சூழ்நிலைக்கு ஏற்ற வகையில் சிதைப்பது, நீக்குவது, முடிவு செய்வது அல்லது ஏற்றுமதி செய்வதினின்று பாதுகாப்பது ஆகியவை அரசின் கடமை. 50.நிர்வாகத்தினின்று நீதித்துறையைத் தனியே பிரித்தல்: அரசின் பொதுப்பணியிலிருந்து நீதித்துறையைத் தனியாகப் பிரிப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ….என்பன உள்ளிட்ட மக்கள் நல அம்சங்கள் அரசின் கொள்கைகளுக்கு வழிகாட்டும் நெறிமுறைகளாக இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் பிரிவு 37, “இந்தப்பகுதியில் காணப்படும் கொள்கைகள் அனைத்தும் நாட்டின் ஆட்சிமுறைக்கு அடிப்படையானவைகள்; இந்த கொள்கைகளின் அடிப்படையில் சட்டங்களை இயற்றுவது அரசின் கடமை” என்று கூறப்பட்டிருந்தாலும், “இந்த அம்சங்களை நீதிமன்றத்தின் மூலம் அமல்படுத்த முடியாது” என்றும் கூறப்பட்டுள்ளது. அதாவது, இந்த அம்சங்களை நிறைவேற்றுமாறு உத்தரவிடக்கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முடியாது. இந்திய அரசியலமைப்பு சட்டம் இயற்றப்பட்டபோது சுதந்திர இந்தியாவின் வயது இரண்டுதான். அந்த நிலையிலேயே மக்களுக்கான அனைத்து உரிமைகளையும் கோரி வழக்குகள் தொடரப்பட்டால் நிர்வாகம் ஸ்தம்பித்துவிடக்கூடும் என்ற நிலையில் இந்த பிரிவு 37 எழுதப்பட்டது. காலப்போக்கில் அரசுக்கு வழிகாட்டும் நெறிமுறைகளில் சொல்லப்பட்ட அம்சங்களை உள்ளடக்கிய சட்டங்களை இந்திய ஆட்சியாளர்கள் நிறைவேற்றி விடுவார்கள் என்ற நல்லெண்ணத்தின் அடிப்படையில் இந்த சட்டப்பிரிவு உருவாக்கப்பட்டது. ஆனால் சுதந்திரம் பெற்று 60 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையிலும் இந்த அம்சங்கள் நிறைவேற்றப்படவில்லை என்பதோடு இந்த அம்சங்களுக்கு எதிரானதும், மக்கள் விரோத தன்மை கொண்டதுமான பல சட்டங்கள் அமல்படுத்தப்படுகின்றன. இந்நிலையில் அரசியல் சட்டத்தின் பிரிவு 37 நீடிப்பது மக்களுக்கு எதிரானது. இந்தியாவில் உள்ள சட்டங்களில் அரசியலமைப்பு சட்டமே மேலானது; இந்த அரசியலமைப்பு சட்டத்தின் கொள்கைகளுக்கு எதிரான சட்டங்கள் செல்லாது என அறிவிக்க வேண்டியதே உச்ச நீதிமன்றம் உள்ளடக்கிய நீதித்துறையின் முதன்மை பணியாகும். ஆனால் இன்றைய நிலையில் உலகமயம்; தனியார்மயம்; தாராளமயம் என்ற அடிப்படையில் இயங்கும் அரசு அமைப்புகள் உலக வர்த்தக கழக நிபந்தனைகளின்படி இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் கொள்கைகளுக்கு நேரெதிரான பல சட்டங்களை அமல்படுத்தி வருகிறது. புதிய பொருளாதாரக்கொள்கை இந்தியர்களின் வாழ்வை மருத்துவத்துறையில் மட்டுமல்ல, விவசாயம், தொழில் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் தலைகீழாக மாற்றி வருகிறது. மக்களின் அடிப்படை தேவைகளான கல்வி, மருத்துவம், உணவுப்பொருள் உற்பத்தி மற்றும் வினியோகம் உள்ளிட்ட அனைத்தும் தனியார்மயமாக்கப்படுகிறது. மதுபான விற்பனை, மணல் விற்பனை போன்ற தேவையற்ற துறைகளில் அரசு ஈடுபடுகிறது. தொழிலாளர் நலன் காக்கும் சட்டங்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டங்கள் அனைத்தும் செயலற்றுப்போகும் வகையில் நடைமுறைகள் மாற்றியமைக்கப்படுகின்றன. அனைத்துத்துறை பணியாளர்களும் எந்தவிதமான சமூக பாதுகாப்புமின்றி நிராதரவான நிலையில் உள்ளனர். இந்த நிலை காரணமாக முதியவர்கள் மற்றும் நோயாளிகள் வீட்டில் இருந்து விரட்டப்படும் நிலை உருவாகி வருகிறது. கல்வி தனியார் மயமாக்கப்பட்டதைத் தொடர்ந்து, அதிக விலை கொடுத்தே உயர்கல்வி பெற முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. எதைச்செய்தாவது பொருள் ஈட்டுவதே பிழைக்கும் வழி என்ற நிலை ஏற்பட்டுள்ளதால் மாட்டிக்கொள்ளாமல் தவறு செய்பவன் சாமர்த்தியசாலி என்ற கருத்தாக்கம் மக்களிடம் ஏற்பட்டுள்ளது. பெரிய தவறுகளை செய்பவர்கள், அரசியல் தலைவர்களாகவும், சிறிய தவறுகளை செய்பவர்கள் குற்றவாளிகளாகவும் மாறும் நிலை உருவாகியுள்ளது. இதன் காரணமாக சமூகத்தில் யாருக்குமே எந்தவிதமான பாதுகாப்பும் இல்லாத நிலை நிலவுகிறது. இதெல்லாம் இப்போதுதான் தெரியுமா? அப்போதே எச்சரித்திருக்கலாமே என்ற கேள்வி எழலாம். அப்போதும் இதுபோன்ற விமர்சனங்கள் எழுந்தன. உலக வர்த்தக கழகத்தின் முன்னோடியான காட் (General Agreement on Trade and Tariff) ஒப்பந்தத்தை வரைந்த டங்கல் என்பவரின் பரிந்துரைகளை முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதிகள் டி.ஏ.தேசாய், சின்னப்ப ரெட்டி, வி.ஆர். கிருஷ்ணய்யர், தில்லி உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ராஜிந்தர் சச்சார் ஆகியோர் பரிசீலித்தனர். பின்னர் அவர்கள் அளித்த அறிக்கை மிக முக்கியமானது.“சந்தைக்கு இணக்கமான பொருளாதாரம், தாராளமயமாக்கல், உலகப்பொருளாதாரத்துடன் இணைத்தல், பெருமளவு அன்னிய முதலீட்டுடன் கூடிய தனியார் மயமாக்கல் முதலியன இந்திய தொழில்களின் வளர்ச்சி, இந்திய அரசியல் சட்ட விதிகள் 14, 19, 21-ன் கீழான அடிப்படை உரிமைகளுக்கு எதிரானவை ஆகும்.” “இந்திய அரசியல் சட்டம் அதிகாரங்களை பகிர்ந்தளிக்கிறது. மாநிலங்களுக்கென சில அதிகாரங்கள் அளிக்கப்பட்டுள்ளன. அரசியல் சட்டவிதி 13, 14-ன் கீழ் மத்திய அரசுக்குக் கிடைக்கும் அதிகாரத்தின் அடிப்படையில் காட் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதன் மூலம் இந்த கூட்டாட்சி முறைக்கு முற்றுப்புள்ளி வைக்க மத்திய அரசுக்கு அதிகாரம் எதுவும் இல்லை” என்று அந்த அறிக்கையில் தெள்ளத்தெளிவாக கூறப்பட்டுள்ளது. ஆனால் இந்த விமரிசனம் விழ வேண்டியவர்களின் காதுகளில் இன்று வரை விழவில்லை. எனவே மக்கள் எக்கேடு கெட்டாலென்ன? என்ற போக்கிலேயே அனைத்து அரசு அமைப்புகளும் இயங்குகின்றன. மாநில சுயாட்சி குறித்து உரத்து முழங்கிய கட்சித்தலைவர்கள்கூட பில்கேட்ஸூக்கும், அவரது உள்நாட்டு எடுபிடிகளுக்கும் காவடி தூக்கும் அவலநிலை நிலவுகிறது. இதற்குத்தானா இந்தியா சுதந்திரம் பெற்றது? அப்படியானால் “இந்திய அரசியல் அமைப்பு சட்டம்” உண்மையிலேயே ஒரு மோசடிதானா? இந்த கேள்விகளுக்கான பதில் அரசியல்வாதிகளிடமும், ஆட்சிப்பொறுப்பில் உள்ளவர்களிடமும், சட்டத்துறை சார்ந்தவர்களிடம் மட்டுமே இல்லை. இந்தியாவில் உருவாகும் அனைத்து சட்டங்களும், பொது மக்களாகிய நாம் வாக்களித்து தேர்ந்தெடுக்கும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மூலம்தான் நிறைவேற்றப்படுகிறது. எனவே நல்ல சட்டங்களோ, கெட்ட சட்டங்களோ - அவை உருவாவதில் நமது பங்கும் இருக்கிறது. என்ன செய்யப்போகிறோம்? -சுந்தரராஜன் (sundararajan@lawyer.com) சிபில்(CIBIL) என்ற சிலந்தி வலை! THURSDAY, NOVEMBER 29, 2007 கிரெடிட் கார்டு உள்ளிட்ட வங்கிக்கடன் சேவையை பயன்படுத்தும் அனைவரும் அவசியம் அறிந்திருக்க வேண்டிய ஒரு அமைப்பு Credit Information Bureau of India Limited என்ற சிபில் அமைப்பாகும். இந்த அமைப்பின் முக்கிய பணி கடன்பெறும் நுகர்வோரின் நேர்மையை அளவிட்டு அதை புள்ளிவிவரமாக வழங்குவதே. இதன்மூலம் ஆபத்து குறைந்த கடன்களை வழங்கமுடியும் என்று வங்கிகள் கருதுகின்றன. அதாவது வாங்கிய கடனை திரும்ப கட்டும் பழக்கம் உடைய நல்ல வாடிக்கையாளர்களை பெறுவதே இந்த அமைப்பின் நோக்கம். அனைத்து வாடிக்கையாளர்களின் பெயர், பிறந்த தேதி, அடையாளத்திற்காக வழங்கப்படும் வாக்காளர் அடையாள அட்டை – பாஸ்போர்ட் – ஓட்டுனர் உரிமம் – ரேஷன் கார்ட் – பான் கார்டு போன்றவற்றின் எண்களும் இந்த தகவல் கிடங்கில் சேமிக்கப்படுகின்றன. எனவே வாங்கிய கடனை திரும்ப செலுத்தாத வாடிக்கையாளர்கள் இந்த பட்டியலில் சிக்குவது உறுதி. இவ்வாறு சிக்கும் ஒரு வாடிக்கையாளர் பிறகு வேறெந்த வங்கியிலோ, நிதி நிறுவனத்திலோ கடன் பெற முடியாது. இது உலகத்தின் பல பகுதிகளிலும் பின்பற்றப்படும் ஒரு நடைமுறைதான். அமெரிக்கா போன்ற முன்னேறிய(தாகக் கூறப்படும்) நாடுகளில், கடன் வரலாறு சிறப்பாக உள்ள வாடிக்கையாளர்களுக்கு மிகக்குறைந்த வட்டியில் கடன் அளிக்கப்படுகிறது. நல்ல திட்டம்தானா? ஒரு வெளிப்படையான பார்வையில் இந்த திட்டம் மிகவும் நல்ல திட்டமாக தோன்றும். ஆனால் இந்தியாவில் இந்த அமைப்பின் செயல்பாடுகள் இந்த திட்டத்தின் நோக்கத்தை சிதைப்பவையாக உள்ளன. கடன் தகவல் மையம் அமைக்கும் திட்டத்தை இந்தியாவில் அமல்படுத்த 1972ம் ஆண்டு முதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டாலும், 2000ம் ஆண்டில்தான் சிபில் அமைப்பு முழு வடிவத்திற்கு வந்தது. இந்த சிபில் நிறுவனத்தை முறைப்படுத்தும் நோக்கில் நாடாளுமன்றத்தில் 2004ம் ஆண்டில் விவாதம் நடந்தது. வாடிக்கையாளர்களின் நலன்களைப்புறக்கணித்து, வங்கிகளின் நலன்களை மட்டுமே பாதுகாக்கும் சட்டமான, கடன் தகவல் நிறுவனங்கள் (ஒழுங்குபடுத்தும்) சட்டம், 2005 (The Credit Information Companies (Regulation) Act, 2005) மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தினார். அந்த விவாதத்தில் மிகச்சில உறுப்பினர்களே கலந்து கொண்டனர். தமிழ்நாட்டைச் சேர்ந்த எந்த ஒரு உறுப்பினரும் இந்த விவாதத்தில் கலந்துகொண்டதாக தெரியவில்லை. இந்த சட்டம் நிறைவேற்றப்படுவதற்கு சுமார் 5 ஆண்டுகள் முன்பாகவே துவங்கப்பட்ட சிபில்(www.cibil.com) நிறுவனத்தில் இன்றைய நிலையில், டிரான்ஸ்யூனியன் இன்டர்நேஷனல் இன்க், டன் & பிராட்ஸ்ட்ரீட் தகவல் சேவை என்ற நிறுவனங்களின் தொழில் நுட்ப பங்கேற்புடன், ஸ்டான்டர்ட் சார்ட்டர்ட் பாங்க், ஐசிஐசிஐ(ICICI), ஹெச்டிஎஃப்சி(HDFC), ஹெச்எஸ்பிசி(HSBC), சிட்டி பாங்க், ஜிஈ(GE) போன்ற தனியார்/வெளிநாட்டு நிறுவனங்களும், ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, இந்தியன் ஓவர்சீஸ் பாங்க், பஞ்சாப் நேஷனல் பாங்க், யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா, சென்டிரல் பாங்க் ஆஃப் இந்தியா, பாங்க் ஆஃப் பரோடா போன்ற தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளும், சுந்தரம் ஃபைனான்ஸ் போன்ற வங்கியல்லாத தனியார் நிதி நிறுவனங்களும் பங்கு பெற்றுள்ளன. நடைமுறை என்ன? சிபில் அமைப்பில் உள்ள அனைத்து வங்கி மற்றும் வங்கியல்லாத நிதிநிறுவனங்களும் தங்கள் வாடிக்கையாளர்களைப் பற்றிய தகவல்களை இந்த தகவல் கிடங்கில் சேமிக்கின்றன. ஒரு வாடிக்கையாளர் எந்த ஒரு வங்கியிலோ அல்லது நிதிநிறுவனத்திலோ கடன் வாங்கிவிட்டு உரிய முறையில் திரும்ப செலுத்தாவிட்டால் அந்த விபரமும் சிபில் அமைப்பில் உறுப்பினராக உள்ள வங்கிகளுக்கு வழங்கப்படும். கடன் கொடுக்கும் வங்கிகள் வாடிக்கையாளரிடம் பெறும் அனைத்து தகவல்களும், பெயர், பிறந்த தேதி, அடையாளத்திற்காக வழங்கப்படும் வாக்காளர் அடையாள அட்டை – பாஸ்போர்ட் – ஓட்டுனர் உரிமம் – ரேஷன் கார்ட் – பான் கார்டு போன்றவற்றின் எண்களும் இந்த தகவல் கிடங்கில் சேமிக்கப்படுகிறது. பின் இந்த வாடிக்கையாளரின் நம்பகத்தன்மையும் ஒரு புள்ளிவிவரமாக பதிவு செய்யப்படுகிறது. ஒரு வாடிக்கையாளர் ஏதோ ஒரு நிறுவனத்தில் கடன் பெற்று திரும்ப செலுத்தாவிட்டால் அவரது பெயர், மோசமான வாடிக்கையாளர் பட்டியலில் வைக்கப்படுகிறது. எந்த ஒரு நபருக்கும் புதிதாக கடன் வழங்கும் நிறுவனம், கடனுக்கான விண்ணப்பத்தை பெற்றவுடன் அந்த உத்தேச வாடிக்கையாளர் குறித்த தகவலை சிபில் அமைப்புக்கு தெரிவிக்க வேண்டும். அந்த வாடிக்கையாளர் வேறு ஏதேனும் நிறுவனத்தில் கடன் வாங்கி திரும்ப செலுத்தியிராவிட்டால் அவரது பெயர் மோசமான வாடிக்கையாளர் பட்டியலில் இருப்பது தெரியவரும். பிறகு அவர் வங்கிக்கடன் என்பதையே மறந்து விட வேண்டியதுதான். நியாயம்தானே! இதிலென்ன தவறு? என்ற கேள்வி எழலாம். விசாரணை இன்றியே தண்டனை! வங்கிகள் நியாயமாக கொள்ளும் நிலையில்தான் இந்த நடவடிக்கையும் நியாயமாக அமையும். ஆனால் இந்தியாவில் இயங்கும் எந்த தனியார்/வெளிநாட்டு வங்கியும் நியாயமாக நடப்பது இல்லை. ரிசர்வ் வங்கியின் உத்தரவுகளை இவை பொருட்படுத்துவதே இல்லை. குறிப்பாக, கடன் பெறும் வாடிக்கையாளரின் திரும்ப செலுத்தும் தன்மையை சோதித்தல், கணக்குகளை வெளிப்படையாக பராமரித்தல், வாடிக்கையாளரின் புகார்களை விசாரிக்க தனி அமைப்பை நிறுவுதல் ஆகிய முக்கிய கோட்பாடுகளை இதுவரை எந்த தனியார்/வெளிநாட்டு வங்கியும் நடைமுறைப்படுத்தியதாக தெரியவில்லை. இந்த நிலையில் வங்கிக்கும், வாடிக்கையாளருக்கும் ஏற்படும் பிணக்குகளை விசாரிக்கவே ஆள் இல்லாத நிலையில் விசாரணை இன்றியே வாடிக்கையாளர் குற்றவாளியாக தீர்மானிக்கப்படுகிறார். அவரது தரப்பு விளக்கத்தை கேட்க யாரும் இல்லாத நிலையில் வழக்கின் தரப்பினரில் ஒருவரான வங்கியே நீதிபதியாகி தீர்ப்பும் வழங்கி தண்டித்து விடுகிறது. வழக்கு தரப்பினரே நீதிபதியாகி, மற்றொரு தரப்பினரை விசாரிக்காமலே தீர்ப்பு அளிப்பது என்பது இயற்கை நீதிக்கு எதிரானது. ஆனால் இந்த சட்ட விரோத செயலை, சட்டம் படித்த நிதியமைச்சர் ப.சிதம்பரம் முதல் அனைத்து அரசு தலைவர்களும் ஆசிர்வதித்து அனுமதிக்கின்றனர். ஏட்டு சுரைக்காய்கள்! அதேபோல, கடன் தகவல் நிறுவனங்கள் (ஒழுங்குபடுத்தும்) சட்டம், 2005 (The Credit Information Companies (Regulation) Act, 2005) கீழும் ஒரு வாடிக்கையாளர், அவரது கடன் நம்பகத்தகவலை(Credit Worthiness) அவர் கடன்கோரும் வங்கிமூலம் பெறமுடியும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் எந்த வங்கியிலும் இதற்கான வசதி இருப்பதாக தெரியவில்லை. சிபில் ஒரு தனியார் அமைப்பு என்பதால் தகவல் அறியும் உரிமைச் சட்டம் அங்கே செல்லுபடியாகாது. எனவே வங்கிகள் என்ன அநியாய வட்டி மற்றும் கட்டணங்கள் விதித்தாலும், எதிர் கேள்வி கேட்காமல் கட்டும் வாடிக்கையாளர் நல்ல வாடிக்கையாளராகவும், கேள்வி கேட்பவர்கள் மோசமான வாடிக்கையாளராகவும் சித்தரிக்கப்படுகின்றனர். ஒரு வாடிக்கையாளரைப்பற்றி தவறான தகவல் கொடுத்தால், பாதிக்கப்படும் வாடிக்கையாளருக்கு இழப்பீடு வழங்க செய்யும் விதத்திலும், கடன் தகவல் மையங்கள் தவறிழைத்தது உறுதியானால் ஒரு கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்கவும் மேற்கூறிய சட்டத்தில் இடம் உள்ளது. ஆனால் வாடிக்கையாளர்களின் கடன் நம்பகத்தகவலை வங்கிகள் தவிர வேறு யாரும் பெற முடியாத நிலையில் இந்த சட்டம் வெறும் ஏட்டு சுரைக்காய்தான். சமையலுக்கு உதவாது. கிரெடிட் கார்டு வணிக நெறிமுறைகள் குறித்து ரிசர்வ் வங்கி பிறப்பித்த உத்தரவுகள் நடைமுறைப்படுத்தப்படுகிறதா? என்பதைக்கூட கண்காணிக்காத ரிசர்வ் வங்கி, சிபில் அமைப்பை கட்டுப்படுத்தும் என்று நம்புவது ஒரு மூடநம்பிக்கையே. நுகர்வோர் பாதுகாப்பு கருத்தியல் நிறைந்த வளர்ந்த நாடுகளில் கடன் தகவல் மையங்கள் சிறந்த முறையில் பணியாற்றலாம். ஆனால் நுகர்வோரின் நலனில் மயிரளவுகூட அக்கறை செலுத்தாத வணிக நிறுவனங்களும், அரசு அமைப்புகளும் கோலோச்சும் இந்தியாவில், நுகர்வோர் விழிப்புணர்வு மிகக்குறைந்த அளவே உள்ள இந்தியாவில் - சிபில் போன்ற கடன் தகவல் மையங்கள் மக்களை சுரண்டும் அமைப்புகளாகவே விளங்குகின்றன. என்ன செய்யப் போகிறோம்? மூளையை மழுங்கடிக்கும் திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், கவர்ச்சி அரசியல், பரபரப்பூட்டும் ஊடகங்கள் இவற்றின் ஆதிக்கத்தை தகர்த்து, உணர்வு பூர்வமான அணுகுமுறையை விடுத்து; அறிவுபூர்வமான விமர்சன அணுகுமுறையை மேற்கொள்வதே இந்த சமூக அநீதிகளை – அவலங்களை மாற்றும் வழியாகும். Awareness is Better: Action is Best! -சுந்தரராஜன் (sundararajan@lawyer.com) பிளாக்(Blog) மூலமாக மதத்தை விமரிசனம் செய்ததாக சட்ட மாணவர் கைது! SATURDAY, DECEMBER 1, 2007 கடவுளும் மதங்களும் விமரிசனத்திற்கு அப்பாற்பட்ட அம்சங்களாகவே உலகின் பெரும் பகுதியில் உள்ளன. மதங்களின் பெயரால் பல்வேறு சமூக அவலங்கள் அரங்கேற்றப்பட்டாலும், அந்த அவலங்களால் பெரும்பான்மை பாதிக்கப்பட்டாலும், அந்த மதங்களையும், அவை சார்ந்த கடவுள்களையும் விமர்சனம் செய்வது கண்டனத்திற்குரியதாகவே கருதப்படுகிறது. மூடத்தனங்களை தோலுரிக்கும் அனைவரும், மக்களின் மத நம்பிக்கைகளை புண்படுத்துவதாக புகார்கள் கூறப்படுகின்றன. இதற்கு எந்த நாடும், எந்த மதமும் விதிவிலக்காக அமையவில்லை. எகிப்து நாட்டில் கரீம் சுலைமான் அமீர் என்ற 23 வயதுடைய சட்ட மாணவர், […] இஸ்லாம் மதத்தையும், நாட்டின் அதிபரையும், அந்நாட்டின் அல்-அஸார் மதத்தலைவர்களையும் அவரது பிளாக்குகள் (http://karam903.blogspot.com/, மூலமாக விமர்சனம் செய்தார் என்ற குற்றச்சாட்டின் கீழ் கைது கடந்த 2005ம் ஆண்டு அக்டோபர் மாதம் கைது செய்யப்பட்டார். (அவரது வீடியோ பேட்டி: ஆனால் அவரது பிளாக்கின் ஆங்கில மொழிபெயர்ப்பை படித்தால், மதத்தின் பெயரால் மேற்கொள்ளப்படும் தேவையற்ற போர்களுக்கு எதிராகவும், பெண் விடுதலைக்கு ஆதரவாகவும் எழுதிய மனித உரிமை ஆர்வலராகவே அவர் செயல்பட்டு வந்துள்ளது தெரிகிறது. சுமார் இரண்டு மாதங்கள் தனிமை சிறையில் அடைக்கப்பட்ட அவர் மீதான மேற்கூறிய குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதாக கூறி அவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அலெக்ஸாண்டிரியா மாகாணத்தில் உள்ள போர்க் அல்-அராப் சிறையில் அவர் அடைக்கப் பட்டுள்ளார். […] அவரது கருத்துகளுக்காக அவரை சிறையில் அடைக்கக்கூடாது என்றும், அவரை விடுவிக்க வேண்டும் என்றும் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கருத்துரிமையை பறிக்கும் இது போன்ற சம்பவங்கள் இஸ்லாமிய நாடுகளில் மட்டுமே நடைபெறுவதாக ஒரு தவறான பிரச்சாரமும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பழமை வாய்ந்த மதங்களுள் ஒன்றான கிறிஸ்தவ மதமும் பகுத்தறிவுக்கு எதிரானதாகவே விளங்கியுள்ளது. மதங்களை விமர்சித்தவர்களை அதிகார பலத்தால் மண்டியிட வைப்பதும், அதற்கு மறுப்பவர்களை விஷம் கொடுத்து கொல்வதுமே அம்மதத்தின் வரலாறாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்து மதமும் இதற்கு விதிவிலக்கல்ல. வேதகால இந்தியாவில் சார்வாகம் மற்றும் லோகாயதவாதம் என்ற பெயரில் நாத்திகம் பேசப்பட்டுள்ளது. எனினும் அதற்கான ஆதாரங்கள் திட்டமிட்டு அழிக்கப்பட்டுள்ளன; அவ்வாறு பேசியவர்கள் கதி என்ன ஆனது என்று தெரியவில்லை. துளசிதாசர் மற்றும் வால்மீகி ஆகியோர் எழுதிய ராமாயணத்தில் “ஜாபாலி” என்ற நாத்திக அமைச்சர் ராமனின் பல தவறுகளை சுட்டிக்காட்டுவதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் கம்ப ராமாயணத்திலோ சூத்திரனான சம்பூகன் பெயர் மட்டுமல்ல; நாத்திகனான ஜாபாலியின் பெயரும் திட்டமிட்டு மறைக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் சித்தர்களின் சிந்தனை மரபென்பது மக்களின் மூடத்தனங்களை அகற்றும் பகுத்தறிவு மரபாகவே பெருமளவில் உள்ளது. எனினும் ஆதிக்க சக்திகளை கலங்கடித்த இந்த இலக்கியங்கள் பெருமளவில் அழிக்கப்பட்டுள்ளன. இந்த மரபில் வந்த தோழர் பெரியாரின் போராட்ட வாழ்வு நாம் அறிந்ததுதான்.அவரது சீடர்கள் என்று கூறிக்கொள்வோரின் ஆட்சியிலும் இலக்கியம் என்ற பெயரில் மாணவர்களின் மூளையில் திணிக்கப்படுவது ஆன்மிக கருத்துகளே. அதற்கு மாற்றாக உள்ள இலக்கியங்கள் திட்டமிட்டு புறக்கணிக்கப்படுகின்றன. பாடப்புத்தகங்களில், பெரியாரேகூட பெண் விடுதலைப் போராளியாக வருகிறாரே தவிர கடவுள் மறுப்பாளராக காட்டப்படுவதில்லை. இந்திய அரசியல் அமைப்பில் இந்திய குடி மக்களுக்காக விதிக்கப்பட்ட அடிப்படை கடமைகளில் "சமயம், மொழி, பிராந்தியம் அல்லது குறுகிய பிரிவுகளைத்தாண்டி வந்து, இந்திய மக்களிடையே சகோதரத்துவத்தையும் ஒன்றுபட்ட உணர்வையும் உண்டாக்கவும்; பெண்களின் கண்ணியத்தைக் களங்கப்படுத்தும் பழக்க வழக்கங்களைத் தவிர்க்கவும்…" “அறிவியல் ரீதியான அணுகுமுறை, மனிதாபிமானம் மற்றும் ஆராய்வு ஊக்கம், சீர்திருத்தம் ஆகியவற்றை வளர்ப்பதற்கும், காப்பதற்கும்…” “-ஆவன புரிவதை ஒவ்வொரு குடிமகனும் தனது கடமையாக எடுத்துக்கொள்ள வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் இந்தக்கடமையை யாராவது செய்யப்போனால் மக்களின் மத உணர்வுகளை புண்படுத்துவதாகக்கூறி குற்றவியல் சட்டம் உங்களைத் தடுக்கும். மதத்தின் பெயரால் செய்யப்படும் எந்த அராஜகத்தையும் விமர்சிக்கக்கூட பெரும்பாலானோர் முன்வருவதில்லை. அவர்களில் பெரியாரின் சீடர்களும், இடதுசாரிகளும் அடக்கம். […] […] உதாரணமாக கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை தொடர்ந்து குஜராத்தில் நடைபெற்ற அரசு ஆதரவுடன் நடைபெற்ற பயங்கரவாதத்தை சொல்லலாம். […] அந்த சம்பவத்திற்கு எதிராக தமிழகத்தில் மக்கள் மட்டுமே கொந்தளித்தனர். அரசியல் தலைவர்கள் சிலர் அந்த சம்பவத்தை ரசித்தனர். மற்ற சிலர் மவுனம் காத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக “தெஹல்கா” பத்திரிகை அண்மையில் மேற்கொண்ட புலனாய்வு இந்திய பத்திரிகை வரலாற்றில் புதிய முத்திரை பதித்தது.ஆனால் சமூகத்தில் அது எதிரொலித்ததா? என்பது மிகப்பெரிய கேள்விக்குறி. […] சில ஊடகங்களைத்தவிர மற்ற ஊடகங்கள் கள்ள மவுனம் சாதித்தன. அரசியல்வாதிகள் அதையும் அரசியலாக்க முயற்சித்தனர். நீதிமன்றங்களோ தங்கள் “கற்றறிந்த” தலைகளை மண்ணுக்குள் புதைத்துக்கொண்டன. ஆக மொத்தத்தில் மிகப்பெரும் சான்றாதாரங்கள் யாருக்கும் பயனின்றி போகும் நிலை. இஸ்லாம் மதம் இந்தியாவில் சிறுபான்மையாக இருப்பதால் இதுபோன்ற பேரழிவுகளை செய்ய வாய்ப்பில்லை.ஆனால் அம்மதத்தை விமர்சிக்கும் தஸ்லீமா நஸ் ரீன் போன்றவர்களை தாக்கி அம்மத தீவிரவாதிகள் நிறைவு காண்கின்றனர். இது போன்ற சந்தர்ப்பங்களில் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்கப்படுகிறதா? என்று பார்த்தால் மிகப்பெரிய ஏமாற்றமே கிடைக்கும். […] வழக்கு தொடுப்பதிலிருந்து நீதிமன்றம் வரை பெரும்பாலான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியவர்கள் மதம் சார்ந்தவர்களாகவே இருப்பதால் மதரீதியான குற்றங்களில் ஈடுபடுவோர் சுலபத்தில் தண்டிக்கப்படுவதில்லை. ஆக, கருத்துரிமை என்பது ஆதிக்கத்தில் உள்ளவர்களுக்கு இணக்கமான கருத்து உள்ளவர்களுக்கே என்பதே உண்மை நிலை. இந்த நிலை நீடித்தால் இன்று எகிப்தின் சட்டமாணவர் கரீம் சுலைமான் அமீர்-க்கு ஏற்பட்ட நிலை நாளை தமிழ் பிளாக்கர்களுக்கும் ஏற்படாது என்பதற்கு உத்தரவாதமில்லை. ஏனெனில் தமிழச்சியின் பிளாக்கில் எழுதப்பட்ட கருத்தை ஏற்கமுடியாமல் அந்த பிளாக்கையே களவாடி அழித்தவர்கள்தான் இந்தியாவின் அதிகார பீடங்களிலும் வீற்றிருக்கின்றனர். என்ன செய்யப்போகிறோம்? -சுந்தரராஜன் (sundararajan@lawyer.com) இந்தியாவில் இயங்கும் தனியார் வங்கிகளை கட்டுப்படு்த்தும் அதிகாரம் எனக்கு இல்லை – ப. சிதம்பரம் (மறைமுக) ஒப்புதல் TUESDAY, DECEMBER 4, 2007 வங்கிகளின் கடன் வசூல் போக்கு குறித்து இந்திய ரிசர்வ் வங்கி திடீர் கரிசனம் காட்டியுள்ளது. வாடிக்கையாளர்களிடம் கடன்வசூல் செய்யும்போது சட்டப்படி நடந்து கொள்ளவேண்டும் என்று சில தினங்களுக்கு முன் அவ்வங்கி உபதேசம் செய்துள்ளது. […] நன்றி: தினமலர் 30-11-07 இந்த உபதேசம் ஊடகங்களிலும் மிக உரத்து விவாதிக்கப்பட்டது. எனினும் இந்த விவகாரம் குறித்து இந்திய ரிசர்வ் வங்கி கடந்த 2006 நவம்பர் மாதம் வெளியிட்ட சுற்றறிக்கை “வங்கிப்பணிகளை அவுட்சோர்ஸிங் செய்வது மற்றும் இடர் மேலாண்மை குறித்த விதிமுறைகள்” (, இந்த விவகாரம் குறித்து மிகவிரிவான விதிமுறைகளை வகுத்துள்ளது. இதேபோல “வங்கிகளின் கிரெடிட் கார்டு செயல்பாடுகள் குறித்த முதன்மை சுற்றறிக்கை” ( யும் வாடிக்கையாளர்களின் நலன்களை பாதுகாக்கும் பட்டயமாக உள்ளது. ஆனால் இந்த விதிமுறைகள் முறைப்படி பின்பற்றப்படுகிறதா என்பதை கண்காணிக்கும் பணியை மட்டும் ஏனோ இந்திய ரிசர்வ் வங்கி மேற்கொள்ளவில்லை. இந்நிலையில்தான் மேற்கூறப்பட்ட விதிமுறைகளில் கூறப்பட்டுள்ள விவரங்களையே மற்றுமொரு வடிவில் வழங்கியுள்ளது. “வங்கிகளின் கடன்வசூல் முகவர்கள் – வரைவு விதிமுறைகள்” ( என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ள விதிமுறைகளில், 1. கடன் வசூல் நடவடிக்கைகளில் உரிய கவனம், 2. வசூல் முகவர்கள் குறிப்பிட்ட தொலைபேசி எண்களில் இருந்து மட்டுமே பேசவேண்டும், 3. கடன் வசூல் நடைமுறையில் உள்ள குறைகள் குறித்து புகார் தெரிவிக்க உரிய அமைப்பு ஏற்படுத்த வேண்டும், 4. கடன் வசூல் முகவர்களுக்கு நுகர்வோர் உரிமைகள் குறித்து பயிற்சி அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட சில வழிகாட்டு நெறிமுறைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த வரைவு விதிமுறைகள் மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த வரைவு விதிமுறைகள் குறித்து பொதுமக்கள் தங்கள் கருத்துகளை டிசம்பர் மாதத்திற்குள் தெரிவிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ள “வங்கிப்பணிகளை அவுட்சோர்ஸிங் செய்வது மற்றும் இடர் மேலாண்மை குறித்த விதிமுறைகள்” மற்றும் “வங்கிகளின் கிரெடிட் கார்டு செயல்பாடுகள் குறித்த முதன்மை சுற்றறிக்கை” ஆகியவற்றை முறைப்படி செயல்படுத்தி இருந்தாலே கிரெடிட் கார்டு செயல்பாடுகளில் பல பிரசினைகளுக்கு தீர்வு கண்டிருக்க முடியும். ஆனால் அவற்றை நடைமுறைப்படுத்த எந்த முயற்சியும் மேற்கொள்ளாமல் புதிய அறிவிப்புகளை வெளியிட்டு மக்களை ஏமாற்றுகிறது இந்திய ரிசர்வ் வங்கி. பத்திரிகைகளும் இதை புரிந்து கொள்ளாமல் கிரெடிட் கார்டு பிரசினைக்கு முடிவு கட்டப்பட்டுவிட்டது போல பம்மாத்து செய்கின்றன. இந்நிலையில் கடந்த 03-12-07 அன்று நாடாளுமன்றத்தில் பேமென்ட் செட்டில்மென்ட் சிஸ்டம் பில் 2007 குறித்த விவாதங்களுக்கு பதில் அளித்து பேசிய மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம், கடன் வசூல் அராஜகத்தில் தனியார் வங்கிகளே பெருமளவில் ஈடுபடுவதாக தெரிவித்துள்ளார். […] நன்றி: தினத்தந்தி 04-12-07 மேலும் அரசுடைமை வங்கிகள் இத்தகைய நாகரிகமற்ற செயல்களில் ஈடுபட்டால் அந்த வங்கியின் மேலாளர் அடுத்த நாளே வீட்டுக்கு அனுப்பப்படுவார் என்றும் வீரவசனம் பேசியுள்ளார். எனவே உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தனியார் வங்கிகள், நிதி அமைச்சரின் கட்டுப்பாட்டில் இல்லை என்பது உறுதியாகிறது. மாபெரும் பொருளாதார மேதையான சிதம்பரத்தின் பேச்சு நமக்கு சில கேள்விகளை எழுப்புகிறது. 1. தனியார் வங்கிகள் இந்திய ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் இயங்குகிறதா? இல்லையா? 1. ஆம் எனில் இந்த வங்கிகளை கட்டு்ப்படுத்த ரிசர்வ் வங்கி மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன? இல்லையெனில் ரிசர்வ் வங்கி என்ற ஒரு அமைப்பு எதற்காக? 1. இந்திய ரிசர்வ் வங்கியை கட்டுப்படுத்தும் பொறுப்பு மத்திய நிதி அமைச்சகத்திற்கு உள்ளதா? இல்லையா? 1. ஆம் எனில் இந்திய வங்கி நுகர்வோர்களை பாதுகாக்க மத்திய நிதிஅமைச்சகம் மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன? இல்லை எனில் மத்திய நிதி அமைச்சகம் என்ற அமைப்பு எதற்காக? 1. மத்திய நிதி அமைச்சகத்தையும், இந்திய ரிசர்வ் வங்கியையும், இந்தியாவில் வணிகம் செய்யும் தனியார் வங்கிகளையும் கட்டுப்படுத்தும் அதிகாரம் மத்திய நிதி அமைச்சருக்கு இருக்கிறதா? 1. ஆம் எனில் மேற்கண்ட விவகாரங்களுக்காக மத்திய நிதி அமைச்சர் மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன? இல்லை எனில் மத்திய நிதி அமைச்சர் என்ற பதவி யாருடைய நலன்களுக்காக செயல்படுகிறது? -சுந்தரராஜன் (sundararajan@lawyer.com) ஐசிஐசிஐ வங்கியில் கணக்கு வைத்துள்ளீர்களா? உஷார்! உஷார்!! MONDAY, DECEMBER 17, 2007 பல்வேறு வங்கிகளும், தற்போது வாடிக்கையாளர்களுக்கு நேரடி சேவை வழங்குவதை தவிர்த்து வருகின்றன. HDFC உள்ளிட்ட பல்வேறு வங்கிகளில் வாங்கிய கடனை பணமாக திரும்ப செலுத்தினால், அவற்றை ஏற்க தனிக்கட்டணம் வசூலிக்கின்றனர். இணைய வழியிலோ, செக் மூலமாகவோ பணத்தை செலுத்த வேண்டுமாம். செக் மூலம் செலுத்தினால் அதற்கு ரசீது பெறும் வசதி பல இடங்களில் இருப்பதில்லை. இதைப்பயன்படுத்தி வங்கிகள், வேண்டுமென்றே தாமதமாக செக்கை கலெக்சனுக்கு அனுப்பி வாடிக்கையாளர்களிடம் தாமத கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் பெருகி வருகின்றன. இதேபோல இணையவழி வங்கிப்பணிகளை மேற்கொள்ளும் வாடிக்கையாளர்களிடம் PHISING அல்லது SPOOF என்ற பெயரிலான போலி இணையதளம் மூலமான மோசடிகள் பெருகி வருகின்றன. இத்தகைய போலி இணையதளங்களில் இருந்து குறிப்பிட்ட வங்கியின் வாடிக்கையாளருக்கு மட்டும் மின்னஞ்சல் வருகிறதாக கூறப்படுகிறது. அவற்றில் கீழ்க்கண்ட ஏதோ ஒரு வாக்கியமும் இடம்பெறுகிறது. Alerts !!! Upgrade And Secure Your Online Account Immediately. Urgent Security Warning ICICI Online Banking Account Security Upgrade […] மிகவும் அவசரமாக பதில் அளிக்கவேண்டும் என்று கூறும் இந்த மெயிலில் உள்ள இணைப்பு வேறொரு போலி இணையதளத்திற்கு இட்டுச்செல்லும். அங்கு வாடிக்கையாளரின் கணக்கு எண், கிரெடிட் கார்டு எண், டெபிட் கார்டு எண், Login ID, Password போன்றவற்றை கேட்பார்கள். […] மேலே கேட்கப்பட்ட விவரங்களை கொடுத்துவிட்டால் உங்கள் கதி அதோ கதிதான். உங்கள் கணக்கில் உள்ள அனைத்து தொகையும் களவாடப்படும். சரி. பொய்யான இணையதளத்தை கண்டுபிடிப்பது எப்படி? இணையதளத்தின் கீழ்ப்பகுதியில் உள்ள டூல்பாரில் ஒரு பூட்டு சின்னம் இருக்கும். பெரும்பாலான போலி இணையதளங்களில் இந்த பூட்டு சின்னம் இருக்காது. . […] அடுத்ததாக நாம் பார்க்க வேண்டியது இணையதளத்தின பாதுகாப்பு. வலைதளத்தினை பற்றி. [ secured website ]. சாதாரணமாக அனைத்து இணையதளங்களும் “http” என்று தொடங்கும். ஆனால் வங்கி போன்ற பாதுகாப்பான இணையதளங்களில் லாக் இன் செய்யும்போது அது, “https” என்று மாறிவிடும். (s=secured) […] ஆனால் போலி இணையதளங்களில் லாக் இன் செய்தாலும் அது “http” என்று மட்டுமே இருக்கும். மேலும் இணையதளத்தின் கீழ்புறமுள்ள டூல்பாரில் பூட்டு சின்னமும் இருக்காது. […] போலி இணையதளங்களை கண்டுபிடிக்க இவை தற்போதைய வழிமுறைகளே. இவற்றையும் மீறி போலி இணையதளங்கள் உருவாகலாம். இத்தகைய மோசடிகளிலிருந்து தப்பிக்க சந்தேகப்படும்படியான மின்னஞ்சல்களை குப்பைத்தொட்டி(Recycle bin)க்கு அனுப்புவதை சரியான வழியாகும். தேவை என்றால் நமது வங்கியின் இணையதளத்திற்கும் நாமாகவே சென்று லாக் இன் செய்யவேண்டும். மெயிலோடு வரும் இணைப்புகளை கட்டாயமாக தவிர்க்க வேண்டும். . இத்தகைய போலி வங்கி இணையதளங்களை இணைக்கும் மெயில்கள், குறிப்பிட்ட வங்கிகளில் கணக்கு வைத்துள்ளவர்களுக்கு மட்டுமே வருகின்றன. மற்றவர்களுக்கு வருவதில்லை. அப்படியானால் வங்கி வாடிக்கையாளர்களின் மின்னஞ்சல் முகவரிகள் எப்படி மோசடிப்பேர்வழிகளுக்கு கிடைத்தது என்று யோசிப்பது மிக முக்கியமான அம்சமாகும். -மக்கள் சட்டம் குழு (இது போன்ற உங்கள் அனுபவங்களை, அறிந்த விவரங்களை பின்னூட்டத்திலோ, தனி அஞ்சலிலோ அனுப்பி வைத்தால் அவையும் பதிவாக இணைக்கப்பட்டு விழி்ப்புணர்வு ஏற்படுத்த பயன்படும்) மனித உரிமைப் போராளி அசுரன் மறைந்தார்! SATURDAY, DECEMBER 22, 2007 (முக்கிய அறிவிப்பு: இவர் போர்ப்பறை பிளாக் அசுரன் அல்ல. போர்ப்பறை அசுரன் நீண்டநாள் வாழ்ந்து மக்கள் பணியாற்ற வாழ்த்துகள்) … சுற்றுச்சூழல் ஆர்வலரும், மனித உரிமைப் போராளியும், இடதுசாரி சிந்தனையாளருமான தோழர் அசுரன் 21-12-2007 (வெள்ளி) அன்று மாலை 5 மணி அளவில் மறைந்தார். […] கன்னியாகுமரி மாவட்டத்தில் பிறந்த ராம்குமார் என்ற இயற்பெயருடைய இவர், கம்யூட்டர் துறையில் கல்வி கற்றிருந்தாலும் சமூகத்தின் மீதுள்ள அக்கறை காரணமாகவும், சுற்றுச்சூழல், மனித உரிமைகள் குறித்த விழி்ப்புணர்வை வளர்க்க வேண்டும் என்ற ஆவல் காரணமாகவும் எழுத்தாளராக உருவெடுத்தார். . திண்டுக்கல்லில் இருந்து வெளியாகும் “புதிய கல்வி” என்ற சுற்றுச்சூழல் இதழின் இணை ஆசிரியராக பணியாற்றிய இவருக்கு கடந்த சில ஆண்டுகள் முன்புதான் திருமணம் நடந்தது. இவருக்கு மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். கடந்த சில நாட்களாக சிறுநீரகங்கள் செயலிழந்த நிலையில், நாகர்கோவில் ராஜேந்திரா சித்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். அந்த நிலையிலும் திண்ணை இணைய இதழ், சமூக விழிப்புணர்வு போன்ற இதழ்களி்ல் எழுதி வந்தார். பின்பு நோய் முற்றிய நிலையில் திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இடதுசாரி சிந்தனையாளர் என்ற அடிப்படையில் ஒத்த கருத்துள்ள அனைவரையும் அரவணைத்து செல்லும் இயல்புள்ள இவர், எதிர்க்கருத்துள்ளவர்களுடன் கூர்மையான விவாதங்களை மேற்கொண்டார். இவரது விவாதங்களில் சூடுபறந்தாலும் உரையாடல்கள் மிகவும் இனிமையாகவே இருந்தன. பன்னாட்டு ஏகபோகங்களுக்கு எதிரான மாற்று அறிவியல், வேளாண்மை, மருத்துவம் ஆகியவற்றை பரிந்துரை செய்வதில் முனைந்து நின்ற இவர் அண்மையில் “புதிய தென்றல்” என்ற சிற்றிதழையும் கொண்டுவந்தார். உலக அளவில், மனித உரிமை - சுற்றுச்சூழல் குறித்த புதிய சட்டங்களையும், செய்திகளையும் தெரிந்து கொள்வதிலும் அதை மற்றவர்களுக்கு தெரிய செய்வதிலும் மட்டற்ற ஆர்வம் காட்டியவர். அதைபோல செல்ஃபோன் மூலமான எஸ்எம்எஸ் சேவையையும்கூட சமூக மாற்றத்திற்கான ஆயுதமாக மாற்றியவர். இடதுசாரி சிந்தனையாளர் என்றபோதிலும், நாடாளுமன்ற இடதுசாரிகளைப்போல அணுசக்தி விவகாரத்தில் அமைதியாக இராமல் அணுசக்தி எதிர்ப்பாளராக தம்மை அடையாளம் காட்டிக்கொண்டவர். குறிப்பாக கூடங்குளம், கல்பாக்கம் அணுஉலைகளுக்கு எதிராக மருத்துவர்கள் ரமேஷ், புகழேந்தி ஆகியோரோடு இணைந்து செயல்பட்டவர். அவரது எழுத்தையும், செயல்பாடுகளையும் பார்ப்பவர்கள் யாரும், அவர் உயிருக்கு கடுமையாக போராடிக்கொண்டே இத்தகைய செயல்களில் ஈடுபட்டார் என்பதை உணர்ந்திருக்க முடியாது. தவணை முறையில் மரணத்தை சந்தித்தாலும், உயிருடன் இருக்கப்போவது எத்தனை மணித்துளிகள் என்பது தெரியாத நிலையிலும், மனிதாபிமானம்-மனித குல விடுதலை என்பதையே இறுதி இலக்காக கொண்டு கடைசிவரை வாழ்ந்த தோழர் அசுரனின் குரல் இனி ஒலிக்காது. அவரது குரலை தொடர்ந்து ஒலிக்கச்செய்வதே அவருக்கு நாம் செலுத்தும் அஞ்சலியாக இருக்கும். -மக்கள் சட்டம் குழு மறைந்த தோழர் அசுரன் அவர்களின் சமூக அக்கறை கொண்ட எழுத்தின் ஒரு சிறிய பகுதியை படிக்க: http://www.keetru.com/puthiyathendral/index.php http://www.thinnai.com/?module=archives&op=searchauth&search_string=+அசுரன் குற்றவாளிக்கு ஜாமீன் உண்டு! விசாரணை கைதிக்கு ஜாமீன் கிடையாது! -உச்ச நீதிமன்ற விந்தை தீர்ப்புகள். TUESDAY, DECEMBER 25, 2007 சத்திஸ்கர் மாநில அரசால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள டாக்டர் பினாயக் சென் (Dr. Binayak Sen) என்பவரை ஜாமீனில் விடுவதற்கு உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. டாக்டர் பினாயக் சென் ஏன் கைது செய்யப்பட்டுள்ளார்? யாருடைய சிறுநீரகத்தையாவது திருடியிருப்பாரா? கவனக்குறைவாக சிகிச்சை அளித்து யாருடைய மரணத்திற்காவது காரணமாக இருந்திருப்பாரா? கொள்ளை லாப வெறியோடு தனியார் மருத்துவமனை நடத்தினாரா? தேவையற்ற பரிசோதனைகளை செய்யவைத்து மக்களை சுரண்டினாரா? மருந்து வியாபாரிகளோடு கள்ள உறவு வைத்து தேவையற்ற மருந்துகளை மக்களிடம் திணித்தாரா? அல்லது தன்னிடம் வரும் நோயாளிகளை மிரட்டி ஆபாசப்படம் எடுத்து இணைய தளம் மூலம் வணிகம் செய்தாரா? டாக்டர் பினாயக் சென் ஏன் கைது செய்யப்பட்டுள்ளார்? அவரை ஜாமீனில் விடுவதற்கு உச்சநீதிமன்றம் ஏன் மறுப்பு தெரிவிக்க வேண்டும்? யார் இந்த பினாயக் சென்? தமிழ்நாட்டில் “வ”(VA) என்ற ஒலிக்கப்படும் எழுத்து மேற்கு வங்கத்தில் “ப”(BA) என்று ஒலிக்கப்படுகிறது. இந்த அடிப்படையில் “டாக்டர் பினாயக் சென்”-ஐ தமிழ்ப்படுத்தினால் “விநாயக் சென்” ஆகிவிடும். […] இந்த டாக்டர் விநாயக் சென், தமிழ்நாட்டிலுள்ள வேலூர் கிறித்துவ மருத்துவ கல்லூரியில் MBBS மற்றும் MD ஆகிய படிப்புகளை மிகச்சிறப்பாக படித்துத் தேறியவர். பின்னர் 1976 முதல் 1978ம் ஆண்டுவரை புதுதில்லி, ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் சமூக மருத்துவத்துறையில் ஆசிரியராக பணியாற்றியவர். பிறகு சமூக-பொருளாதார தளத்தில் பின் தங்கிய மக்களுக்கு நேரடியாக பணியாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் அப்பணியை உதறிவிட்டு(பல தனியார் மருத்துவமனை அழைப்புகளையும் புறக்கணித்துவிட்டு) கூலித்தொழிலாளிகள் மற்றும் ஆதிவாசி மக்கள் வாழும் பகுதியில் சென்று மருத்துவ சேவை செய்ய ஆரம்பித்தார். வறுமை நிலையில் உள்ள மக்களின் நோய் அகற்ற, அவர் படித்த நவீன மருத்துவம் முழுமையாக பயன்படாத நிலையில், பாரம்பரிய மருத்துவமுறைகளையும் பயன்படுத்திய அவர், சுகாதாரமான வாழ்வும் - ஊட்டச்சத்துமே நோயற்ற வாழ்வுக்கு சரியான வழி என்பதை உணர்ந்து கொண்டார். ஆனால் மத்திய, மாநில அரசுகள் சார்பில் மக்களின் நல்வாழ்வுக்கு ஒதுக்கப்படும் நிதி அனைத்தும் அரசியல்வாதிகள்-அதிகாரிகள்-மருந்து மற்றும் மருத்துவ சேவை வியாபாரிகளின் கூட்டணிக் கொள்ளை காரணமாக மக்களுக்கு பயன்படாமல் போவதைக் கண்டு மனம் கொதித்தார். மேலும், சமூகத்தில் நிலவும் சுரண்டல் அமைப்பில் ஆதிவாசிகள் மற்றும் தலித் மக்களின் வளங்கள் சூறையாடப்பட்டு, அம்மக்கள் அகதிகளாக விரட்டப்படுவதை கண்டு கொதித்து எழுந்தார். […] ஆரோக்கியமும், நல்வாழ்வும் அடிப்படை மனித உரிமைகள் என்பதை உணர்ந்து கொண்ட டாக்டர் வினாயக் சென், மக்கள் சிவில் உரிமைக் கழக(Peoples’ Union for Civil Liberties)த்துடன் இணைந்து செயல்படத் தொடங்கினார். (தமிழகம் போலல்லாது, சில மாநிலங்களில் அந்த அமைப்பு சாமானிய மக்களுக்காக உண்மையிலேயே செயலாற்றி வருகிறது) பின்னர் அந்த அமைப்பின் தேசியத்துணைத் தலைவராகவும், சத்திஸ்கர் மாநில செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆதிவாசிகள் மற்றும் தலித் மக்களின் நலன்களை அரசு அமைப்புகள் புறக்கணித்தபோது, அம்மக்கள் மாவோயிஸ இயக்கங்களில் சேர்ந்தனர். மாவோயிஸ இயக்கப்பணியாளர்களை அரசுப்படையினரும், அரசின் ஆதரவு பெற்ற சல்வா ஜுடும் என்ற ஆதிக்க சக்திகளின் கூலிப்படையினரும் வேட்டையாடுவதைக்கண்டு மனம் பொறுக்காத அவர், உண்மை கண்டறியும் குழுக்களை அமைத்து அரசு மற்றும் அரசு ஆதரவு பெற்ற கூலிப்படையினரின் அராஜகங்களை அம்பலப்படுத்தினார். […] அதேநேரத்தில் அடித்தள மக்களின் நல்வாழ்வைப்பேண சமூக மருத்துவத்துறையிலும் பல சாதனைகளைப் படைத்தார். இதைப் பாராட்டும்விதமாக வேலூர் சிஎம்சி மருத்துவக்கல்லூரி, அதன் முன்னாள் மாணவர்களுக்கு வழங்கும் “பால் ஹாரிசன்” என்ற பெருமை மிக்க விருதை கடந்த 2004ம் ஆண்டில் டாக்டர் வினாயக் சென்னுக்கு வழங்கி கவுரவித்தது. இந்நிலையில்தான், கடந்த 2007 மே மாதம் 17ம் தேதி சத்திஷ்கர் மாநிலம் பிலாஸ்பூரில் டாக்டர் விநாயக் சென் கைது செய்யப்பட்டார். பணிநிமித்தமாக கொல்கத்தா சென்றிருந்த அவரை, தலைமறைவாகி விட்டார் என்று காவல்துறையினர் பிரச்சாரம் செய்ததால் தாமாகவே காவல் நிலையம் சென்ற அவரை காவல்துறையினர் கைது செய்தனர். மாவோயிஸ்ட் தீவிரவாதிகளுக்கு உதவி செய்ததாக அவர் மீது, சத்திஸ்கர் சிறப்பு பொதுப்பாதுகாப்பு சட்டம் (Chhattisgarh Special Public Security Act, 2006) மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டம் (Unlawful Activities (Prevention) Act, 2004) ஆகிய சட்டங்களின்படி கைது செய்துள்ளதாக சத்திஸ்கர் மாநில அரசு கூறுகிறது. ராய்ப்பூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நாராயண் சன்யால் என்ற கைதி எழுதிய கடிதங்களை, மாவோயிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்த பியூஷ் குஹா என்பவருக்கு டாக்டர் விநாயக் சென் சட்டவிரோதமாக கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தற்போது கைது செய்யப்பட்டுள்ள பியூஷ் குஹா கொடுத்த ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் இந்த கைது நடைபெற்றுள்ளதாகவும் அரசுத்தரப்பில் கூறப்படுகிறது. ஆனால் தம்மை சித்ரவதை செய்து வெற்றுத்தாள்களில் காவல் மற்றும் சிறைத்துறையினர் கையொப்பம் பெற்றதாக பியூஷ் குஹா நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார். சிறையில் உள்ள நாராயண் சன்யால், சிறைத்துறை அதிகாரிகளின் அனுமதியுடன் டாக்டர் விநாயக் சென்னுக்கு எழுதிய கடிதத்தை அவருக்கு எதிரான சான்றாக காட்டுகிறது அம்மாநில அரசு. அந்த கடிதத்தில் டாக்டர் விநாயக் சென்-ஐ “தோழர்” என்று நாராயண் சன்யால் அழைத்துள்ளாராம். இது ஒன்றே போதுமாம், டாக்டர் விநாயக் சென்-னும் மாவோயிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்தவர்தான் என்று கூறுவதற்கு. ஆனால், நாராயண் சன்யாலை சிறைத்துறை அதிகாரிகளின் அனுமதியுடன் பலமுறை பார்த்துள்ள டாக்டர் விநாயக் சென், சிறையில் கைதிகளின் அவல நிலையை அம்பலப்படுத்தி வெளியிட்டுள்ள அறிக்கைகள் குறித்து அரசுத்தரப்பில் விளக்கம் ஏதுமில்லை. சத்திஸ்கர் மாநில அரசின் இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் இதுவரை பத்திரிகைகளில் வெளிவந்ததுதான். அவர் கைது செய்யப்பட்டு ஆறு மாதங்களுக்கு மேலாகியும் அவர் மீது நீதிமன்றத்தில் முறைப்படி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை. ஆனால் அவரை ஜாமீனில் விடுவிக்குமாறு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தாலோ, அரசு அதிகாரிகள் வழக்கம் போல தாமதப்படுத்தும் தந்திரங்களை கையாண்டு வருகின்றனர். இதன் உச்சகட்டம் மனித உரிமைகள் தினமாக அனுசரிக்கப்படும் டிசம்பர் 10ம் தேதி, நாட்டின் கடைசி நியாயஸ்தலமாக கருதப்படும் உச்சநீதிமன்றத்திலும் நடந்தேறியது. நீதியரசர்கள் அஷோக் பான், டி.கே. ஜெயின் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற விசாரணையில் டாக்டர் விநாயக் சென் சார்பில் பிரபல வழக்கறிஞர் ராஜீவ் தவான் வாதாடினார். அப்போது டாக்டர் விநாயக் சென் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஆதாரமற்றவை என்றும், எனவே அவர் மீது இதுவரை குற்றப்பத்திரிகைகூட தாக்கல் செய்யப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். டாக்டர் விநாயக் சென்னின் வீட்டில் கைப்பற்றப்பட்ட கம்ப்யூட்டரில் காவல்துறையினர் “கதை விட்டதை”ப்போல எந்த விவகாரமும் காணப்படவில்லை என்று ஆந்திர மாநில குற்றப்புலனாய்வு அதிகாரிகள் கூறியதையும் அவர் சுட்டிக்காட்டினார். இந்த வாதம் அனைத்தையும் கேட்ட நீதியரசர்கள், “இந்த வாதங்கள் அனைத்தும் விசாரணை நீதிமன்றத்தில் கூற வேண்டியது” என்று கூறினர். அதற்கு பதில் அளித்த வழக்கறிஞர் ராஜீவ் தவான், “விசாரணை நீதிமன்றத்தில் குற்றச்சாட்டே பதிவு செய்யாத நிலையில் இருப்பதால்தான் உச்சநீதிமன்றம் வர நேர்ந்தது” என்று எடுத்துரைத்தார். ஆனால் அவரது வாதத்தை ஏற்க முடியாது என்று தள்ளுபடி செய்த நீதியரசர்கள், டாக்டர் விநாயக் சென்-னை ஜாமீனில் விடமுடியாது என்று தீர்ப்பளித்தனர். டாக்டர் விநாயக் சென்னுக்கு ஜாமீன் அளிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்த நாள், டிசம்பர் 10, 2007. மனித உரிமைகள் தினமாக உலகெங்கும் அனுசரிக்கப்படும் ஒரு தினத்தில்தான் மனிதஉரிமைக்காக போராடிய ஒருவருக்கான நீதி மறுக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் பிரபல ஹிந்தி திரைப்பட நடிகர் சஞ்சய் தத்-துக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியதையும் ஒப்பு நோக்கலாம். […] மும்பையில் கடந்த 1993 ஆண்டு நடைபெற்ற தொடர்குண்டு வெடிப்பு சம்பவத்தில் 257 பேர் கொல்லப்பட்டதாக அரசு புள்ளிவிவரம் கூறுகிறது. இந்த வழக்கில் சஞ்சய் தத் உட்பட சுமார் 100 பேர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதாகக்கூறி சஞ்சய் தத்துக்கு 6 ஆண்டு சிறை தண்டனை விதித்து தடா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அந்த தண்டனையை வழங்கிய நீதிபதி, நடிகர் சஞ்சய் தத் 100 ஆண்டுகள் வாழ்ந்து பல திரைப்பட சாதனைகளை படைப்பார் என்றும், அவரது ஆயுளில் 6 வருடங்களை மட்டுமே தாம் பறிப்பதாகவும் மிகுந்த கவலையுடனும், அக்கறையுடனும் கூறினார். இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீட்டு செய்துள்ள நிலையில் நடிகர் சஞ்சய் தத் உள்ளிட்ட சிலருக்கு ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. […] உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன், நீதிபதிகள் ஆர்.வி. ரவீந்திரன், ஜே.எம்.பஞ்ச்சால் ஆகியோர் அடங்கிய முதன்மை பெஞ்ச் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. ஆக அரசியல் பின்புலமும், பிரபலமும் இருந்தால் உச்சநீதிமன்றம் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டவருக்குக்கூட ஜாமீன் வழங்கும். ஆனால் இதுபோன்ற உயர்மட்ட தொடர்புகள் இல்லாத சாதாரண டாக்டர் விநாயக் சென் போன்றவர்கள் மீது குற்றப்பத்திரிகையே தாக்கல் செய்யப்படாவிட்டாலும் அவர்களுக்கு ஜாமீன் வழங்க வழியில்லை. சட்டத்தின் முன் அனைவரும் சமமாம். நம்புவோம்! -சுந்தரராஜன் (sundararajan@lawyer.com) டாக்டர் விநாயக் சென்-ஐ விடுவிக்க கோரும் மனுவிற்கு: http://www.freebinayaksen.org/ http://www.savebinayak.ukaid.org.uk/ http://www.binayaksensupport.blogspot.com/ FREETAMILEBOOKS.COM மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்: மின்புத்தகங்களைப் படிப்பதற்கென்றே கையிலேயே வைத்துக் கொள்ளக்கூடிய பல கருவிகள் தற்போது சந்தையில் வந்துவிட்டன. Kindle, Nook, Android Tablets போன்றவை இவற்றில் பெரும்பங்கு வகிக்கின்றன. இத்தகைய கருவிகளின் மதிப்பு தற்போது 4000 முதல் 6000 ரூபாய் வரை குறைந்துள்ளன. எனவே பெரும்பான்மையான மக்கள் தற்போது இதனை வாங்கி வருகின்றனர். ஆங்கிலத்திலுள்ள மின்புத்தகங்கள்: ஆங்கிலத்தில் லட்சக்கணக்கான மின்புத்தகங்கள் தற்போது கிடைக்கப் பெறுகின்றன. அவை PDF, EPUB, MOBI, AZW3. போன்ற வடிவங்களில் இருப்பதால், அவற்றை மேற்கூறிய கருவிகளைக் கொண்டு நாம் படித்துவிடலாம். தமிழிலுள்ள மின்புத்தகங்கள்: தமிழில் சமீபத்திய புத்தகங்களெல்லாம் நமக்கு மின்புத்தகங்களாக கிடைக்கப்பெறுவதில்லை. ProjectMadurai.com எனும் குழு தமிழில் மின்புத்தகங்களை வெளியிடுவதற்கான ஒர் உன்னத சேவையில் ஈடுபட்டுள்ளது. இந்தக் குழு இதுவரை வழங்கியுள்ள தமிழ் மின்புத்தகங்கள் அனைத்தும் PublicDomain-ல் உள்ளன. ஆனால் இவை மிகவும் பழைய புத்தகங்கள். சமீபத்திய புத்தகங்கள் ஏதும் இங்கு கிடைக்கப்பெறுவதில்லை. சமீபத்திய புத்தகங்களை தமிழில் பெறுவது எப்படி? அமேசான் கிண்டில் கருவியில் தமிழ் ஆதரவு தந்த பிறகு, தமிழ் மின்னூல்கள் அங்கே விற்பனைக்குக் கிடைக்கின்றன. ஆனால் அவற்றை நாம் பதிவிறக்க இயலாது. வேறு யாருக்கும் பகிர இயலாது. சமீபகாலமாக பல்வேறு எழுத்தாளர்களும், பதிவர்களும், சமீபத்திய நிகழ்வுகளைப் பற்றிய விவரங்களைத் தமிழில் எழுதத் தொடங்கியுள்ளனர். அவை இலக்கியம், விளையாட்டு, கலாச்சாரம், உணவு, சினிமா, அரசியல், புகைப்படக்கலை, வணிகம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு தலைப்புகளின் கீழ் அமைகின்றன. நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகச் சேர்த்து தமிழ் மின்புத்தகங்களை உருவாக்க உள்ளோம். அவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள் Creative Commons எனும் உரிமத்தின் கீழ் வெளியிடப்படும். இவ்வாறு வெளியிடுவதன் மூலம் அந்தப் புத்தகத்தை எழுதிய மூல ஆசிரியருக்கான உரிமைகள் சட்டரீதியாகப் பாதுகாக்கப்படுகின்றன. அதே நேரத்தில் அந்த மின்புத்தகங்களை யார் வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும், இலவசமாக வழங்கலாம். எனவே தமிழ் படிக்கும் வாசகர்கள் ஆயிரக்கணக்கில் சமீபத்திய தமிழ் மின்புத்தகங்களை இலவசமாகவே பெற்றுக் கொள்ள முடியும். தமிழிலிருக்கும் எந்த வலைப்பதிவிலிருந்து வேண்டுமானாலும் பதிவுகளை எடுக்கலாமா? கூடாது. ஒவ்வொரு வலைப்பதிவும் அதற்கென்றே ஒருசில அனுமதிகளைப் பெற்றிருக்கும். ஒரு வலைப்பதிவின் ஆசிரியர் அவரது பதிப்புகளை “யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்” என்று குறிப்பிட்டிருந்தால் மட்டுமே அதனை நாம் பயன்படுத்த முடியும். அதாவது “Creative Commons” எனும் உரிமத்தின் கீழ் வரும் பதிப்புகளை மட்டுமே நாம் பயன்படுத்த முடியும். அப்படி இல்லாமல் “All Rights Reserved” எனும் உரிமத்தின் கீழ் இருக்கும் பதிப்புகளை நம்மால் பயன்படுத்த முடியாது. வேண்டுமானால் “All Rights Reserved” என்று விளங்கும் வலைப்பதிவுகளைக் கொண்டிருக்கும் ஆசிரியருக்கு அவரது பதிப்புகளை “Creative Commons” உரிமத்தின் கீழ் வெளியிடக்கோரி நாம் நமது வேண்டுகோளைத் தெரிவிக்கலாம். மேலும் அவரது படைப்புகள் அனைத்தும் அவருடைய பெயரின் கீழே தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் நாம் அளிக்க வேண்டும். பொதுவாக புதுப்புது பதிவுகளை  உருவாக்குவோருக்கு அவர்களது பதிவுகள்  நிறைய வாசகர்களைச் சென்றடைய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். நாம் அவர்களது படைப்புகளை எடுத்து இலவச மின்புத்தகங்களாக வழங்குவதற்கு  நமக்கு அவர்கள் அனுமதியளித்தால், உண்மையாகவே அவர்களது படைப்புகள் பெரும்பான்மையான மக்களைச் சென்றடையும். வாசகர்களுக்கும் நிறைய புத்தகங்கள் படிப்பதற்குக் கிடைக்கும் வாசகர்கள் ஆசிரியர்களின் வலைப்பதிவு முகவரிகளில் கூட அவர்களுடைய படைப்புகளை தேடிக் கண்டுபிடித்து படிக்கலாம். ஆனால் நாங்கள் வாசகர்களின் சிரமத்தைக் குறைக்கும் வண்ணம் ஆசிரியர்களின் சிதறிய வலைப்பதிவுகளை ஒன்றாக இணைத்து ஒரு முழு மின்புத்தகங்களாக உருவாக்கும் வேலையைச் செய்கிறோம். மேலும் அவ்வாறு உருவாக்கப்பட்ட புத்தகங்களை “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்”-க்கு ஏற்ற வண்ணம் வடிவமைக்கும் வேலையையும் செய்கிறோம். FREETAMILEBOOKS.COM இந்த வலைத்தளத்தில்தான் பின்வரும் வடிவமைப்பில் மின்புத்தகங்கள் காணப்படும். PDF for desktop, PDF for 6" devices, EPUB, AZW3, ODT இந்த வலைதளத்திலிருந்து யார் வேண்டுமானாலும் மின்புத்தகங்களை இலவசமாகப் பதிவிறக்கம்(download) செய்து கொள்ளலாம். அவ்வாறு பதிவிறக்கம்(download) செய்யப்பட்ட புத்தகங்களை யாருக்கு வேண்டுமானாலும் இலவசமாக வழங்கலாம். இதில் நீங்கள் பங்களிக்க விரும்புகிறீர்களா?  நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் தமிழில் எழுதப்பட்டிருக்கும் வலைப்பதிவுகளிலிருந்து பதிவுகளை எடுத்து, அவற்றை LibreOffice/MS Office போன்ற wordprocessor-ல் போட்டு ஓர் எளிய மின்புத்தகமாக மாற்றி எங்களுக்கு அனுப்பவும். அவ்வளவுதான்! மேலும் சில பங்களிப்புகள் பின்வருமாறு: 1. ஒருசில பதிவர்கள்/எழுத்தாளர்களுக்கு அவர்களது படைப்புகளை “Creative Commons” உரிமத்தின்கீழ் வெளியிடக்கோரி மின்னஞ்சல் அனுப்புதல் 1. தன்னார்வலர்களால் அனுப்பப்பட்ட மின்புத்தகங்களின் உரிமைகளையும் தரத்தையும் பரிசோதித்தல் 1. சோதனைகள் முடிந்து அனுமதி வழங்கப்பட்ட தரமான மின்புத்தகங்களை நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்தல் விருப்பமுள்ளவர்கள் freetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.  இந்தத் திட்டத்தின் மூலம் பணம் சம்பாதிப்பவர்கள் யார்? யாருமில்லை. இந்த வலைத்தளம் முழுக்க முழுக்க தன்னார்வலர்களால் செயல்படுகின்ற ஒரு வலைத்தளம் ஆகும். இதன் ஒரே நோக்கம் என்னவெனில் தமிழில் நிறைய மின்புத்தகங்களை உருவாக்குவதும், அவற்றை இலவசமாக பயனர்களுக்கு வழங்குவதுமே ஆகும். மேலும் இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள், ebook reader ஏற்றுக்கொள்ளும் வடிவமைப்பில் அமையும். இத்திட்டத்தால் பதிப்புகளை எழுதிக்கொடுக்கும் ஆசிரியர்/பதிவருக்கு என்ன லாபம்? ஆசிரியர்/பதிவர்கள் இத்திட்டத்தின் மூலம் எந்தவிதமான தொகையும் பெறப்போவதில்லை. ஏனெனில், அவர்கள் புதிதாக இதற்கென்று எந்தஒரு பதிவையும்  எழுதித்தரப்போவதில்லை. ஏற்கனவே அவர்கள் எழுதி வெளியிட்டிருக்கும் பதிவுகளை எடுத்துத்தான் நாம் மின்புத்தகமாக வெளியிடப்போகிறோம். அதாவது அவரவர்களின் வலைதளத்தில் இந்தப் பதிவுகள் அனைத்தும் இலவசமாகவே கிடைக்கப்பெற்றாலும், அவற்றையெல்லாம் ஒன்றாகத் தொகுத்து ebook reader போன்ற கருவிகளில் படிக்கும் விதத்தில் மாற்றித் தரும் வேலையை இந்தத் திட்டம் செய்கிறது. தற்போது மக்கள் பெரிய அளவில் tablets மற்றும் ebook readers போன்ற கருவிகளை நாடிச் செல்வதால் அவர்களை நெருங்குவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். நகல் எடுப்பதை அனுமதிக்கும் வலைதளங்கள் ஏதேனும் தமிழில் உள்ளதா? உள்ளது. பின்வரும் தமிழில் உள்ள வலைதளங்கள் நகல் எடுப்பதினை அனுமதிக்கின்றன. 1. http://www.vinavu.com 1. http://www.badriseshadri.in  1. http://maattru.com  1. http://www.kaniyam.com  1. http://blog.ravidreams.net  எவ்வாறு ஒர் எழுத்தாளரிடம் CREATIVE COMMONS உரிமத்தின் கீழ் அவரது படைப்புகளை வெளியிடுமாறு கூறுவது? இதற்கு பின்வருமாறு ஒரு மின்னஞ்சலை அனுப்ப வேண்டும். துவக்கம் உங்களது வலைத்தளம் அருமை (வலைதளத்தின் பெயர்). தற்போது படிப்பதற்கு உபயோகப்படும் கருவிகளாக Mobiles மற்றும் பல்வேறு கையிருப்புக் கருவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது. இந்நிலையில் நாங்கள் http://www.FreeTamilEbooks.com எனும் வலைதளத்தில், பல்வேறு தமிழ் மின்புத்தகங்களை வெவ்வேறு துறைகளின் கீழ் சேகரிப்பதற்கான ஒரு புதிய திட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.  இங்கு சேகரிக்கப்படும் மின்புத்தகங்கள் பல்வேறு கணிணிக் கருவிகளான Desktop,ebook readers like kindl, nook, mobiles, tablets with android, iOS போன்றவற்றில் படிக்கும் வண்ணம் அமையும். அதாவது இத்தகைய கருவிகள் support செய்யும் odt, pdf, ebub, azw போன்ற வடிவமைப்பில் புத்தகங்கள் அமையும். இதற்காக நாங்கள் உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை பெற விரும்புகிறோம். இதன் மூலம் உங்களது பதிவுகள் உலகளவில் இருக்கும் வாசகர்களின் கருவிகளை நேரடியாகச் சென்றடையும். எனவே உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை  பிரதியெடுப்பதற்கும் அவற்றை மின்புத்தகங்களாக மாற்றுவதற்கும் உங்களது அனுமதியை வேண்டுகிறோம். இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்களில் கண்டிப்பாக ஆசிரியராக உங்களின் பெயரும் மற்றும் உங்களது வலைதள முகவரியும் இடம்பெறும். மேலும் இவை “Creative Commons” உரிமத்தின் கீழ் மட்டும்தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் அளிக்கிறோம். http://creativecommons.org/licenses/  நீங்கள் எங்களை பின்வரும் முகவரிகளில் தொடர்பு கொள்ளலாம். e-mail : FREETAMILEBOOKSTEAM@GMAIL.COM  FB : https://www.facebook.com/FreeTamilEbooks  G plus: https://plus.google.com/communities/108817760492177970948    நன்றி. முடிவு மேற்கூறியவாறு ஒரு மின்னஞ்சலை உங்களுக்குத் தெரிந்த அனைத்து எழுத்தாளர்களுக்கும் அனுப்பி அவர்களிடமிருந்து அனுமதியைப் பெறுங்கள். முடிந்தால் அவர்களையும் “Creative Commons License”-ஐ அவர்களுடைய வலைதளத்தில் பயன்படுத்தச் சொல்லுங்கள். கடைசியாக அவர்கள் உங்களுக்கு அனுமதி அளித்து அனுப்பியிருக்கும் மின்னஞ்சலைFREETAMILEBOOKSTEAM@GMAIL.COM எனும் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.  ஓர் எழுத்தாளர் உங்களது உங்களது வேண்டுகோளை மறுக்கும் பட்சத்தில் என்ன செய்வது? அவர்களையும் அவர்களது படைப்புகளையும் அப்படியே விட்டுவிட வேண்டும். ஒருசிலருக்கு அவர்களுடைய சொந்த முயற்சியில் மின்புத்தகம் தயாரிக்கும் எண்ணம்கூட இருக்கும். ஆகவே அவர்களை நாம் மீண்டும் மீண்டும் தொந்தரவு செய்யக் கூடாது. அவர்களை அப்படியே விட்டுவிட்டு அடுத்தடுத்த எழுத்தாளர்களை நோக்கி நமது முயற்சியைத் தொடர வேண்டும்.   மின்புத்தகங்கள் எவ்வாறு அமைய வேண்டும்? ஒவ்வொருவரது வலைத்தளத்திலும் குறைந்தபட்சம் நூற்றுக்கணக்கில் பதிவுகள் காணப்படும். அவை வகைப்படுத்தப்பட்டோ அல்லது வகைப்படுத்தப் படாமலோ இருக்கும்.  நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகத் திரட்டி ஒரு பொதுவான தலைப்பின்கீழ் வகைப்படுத்தி மின்புத்தகங்களாகத் தயாரிக்கலாம். அவ்வாறு வகைப்படுத்தப்படும் மின்புத்தகங்களை பகுதி-I பகுதி-II என்றும் கூட தனித்தனியே பிரித்துக் கொடுக்கலாம்.  தவிர்க்க வேண்டியவைகள் யாவை? இனம், பாலியல் மற்றும் வன்முறை போன்றவற்றைத் தூண்டும் வகையான பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டும்.  எங்களைத் தொடர்பு கொள்வது எப்படி? நீங்கள் பின்வரும் முகவரிகளில் எங்களைத் தொடர்பு கொள்ளலாம்.  - EMAIL : FREETAMILEBOOKSTEAM@GMAIL.COM   - Facebook: https://www.facebook.com/FreeTamilEbooks   - Google Plus: https://plus.google.com/communities/108817760492177970948   இத்திட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் யார்? குழு – http://freetamilebooks.com/meet-the-team/    SUPPORTED BY கணியம் அறக்கட்டளை http://kaniyam.com/foundation     கணியம் அறக்கட்டளை []   தொலை நோக்கு – Vision தமிழ் மொழி மற்றும் இனக்குழுக்கள் சார்ந்த மெய்நிகர்வளங்கள், கருவிகள் மற்றும் அறிவுத்தொகுதிகள், அனைவருக்கும்  கட்டற்ற அணுக்கத்தில் கிடைக்கும் சூழல் பணி இலக்கு  – Mission அறிவியல் மற்றும் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு ஒப்ப, தமிழ் மொழியின் பயன்பாடு வளர்வதை உறுதிப்படுத்துவதும், அனைத்து அறிவுத் தொகுதிகளும், வளங்களும் கட்டற்ற அணுக்கத்தில் அனைவருக்கும் கிடைக்கச்செய்தலும்.   தற்போதைய செயல்கள் - கணியம் மின்னிதழ் – http://kaniyam.com - கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் இலவச தமிழ் மின்னூல்கள் – http://FreeTamilEbooks.com   கட்டற்ற மென்பொருட்கள் - உரை ஒலி மாற்றி –  Text to Speech - எழுத்துணரி – Optical Character Recognition - விக்கிமூலத்துக்கான எழுத்துணரி - மின்னூல்கள் கிண்டில் கருவிக்கு அனுப்புதல் – Send2Kindle - விக்கிப்பீடியாவிற்கான சிறு கருவிகள் - மின்னூல்கள் உருவாக்கும் கருவி - உரை ஒலி மாற்றி – இணைய செயலி - சங்க இலக்கியம் – ஆன்டிராய்டு செயலி - FreeTamilEbooks – ஆன்டிராய்டு செயலி - FreeTamilEbooks – ஐஒஎஸ் செயலி - WikisourceEbooksReportஇந்திய மொழிகளுக்ககான விக்கிமூலம் மின்னூல்கள் பதிவிறக்கப் பட்டியல் - FreeTamilEbooks.com – Download counter மின்னூல்கள் பதிவிறக்கப் பட்டியல்   அடுத்த திட்டங்கள்/மென்பொருட்கள்   - விக்கி மூலத்தில் உள்ள மின்னூல்களை பகுதிநேர/முழு நேரப் பணியாளர்கள் மூலம் விரைந்து பிழை திருத்துதல் - முழு நேர நிரலரை பணியமர்த்தி பல்வேறு கட்டற்ற மென்பொருட்கள் உருவாக்குதல் - தமிழ் NLP க்கான பயிற்சிப் பட்டறைகள் நடத்துதல் - கணியம் வாசகர் வட்டம் உருவாக்குதல் - கட்டற்ற மென்பொருட்கள், கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் வளங்களை உருவாக்குபவர்களைக் கண்டறிந்து ஊக்குவித்தல் - கணியம் இதழில் அதிக பங்களிப்பாளர்களை உருவாக்குதல், பயிற்சி அளித்தல் - மின்னூலாக்கத்துக்கு ஒரு இணையதள செயலி - எழுத்துணரிக்கு ஒரு இணையதள செயலி - தமிழ் ஒலியோடைகள் உருவாக்கி வெளியிடுதல் - http://OpenStreetMap.org ல் உள்ள இடம், தெரு, ஊர் பெயர்களை தமிழாக்கம் செய்தல் - தமிழ்நாடு முழுவதையும் http://OpenStreetMap.org ல் வரைதல் - குழந்தைக் கதைகளை ஒலி வடிவில் வழங்குதல் - http://Ta.wiktionary.org ஐ ஒழுங்குபடுத்தி API க்கு தோதாக மாற்றுதல் - http://Ta.wiktionary.org க்காக ஒலிப்பதிவு செய்யும் செயலி உருவாக்குதல் - தமிழ் எழுத்துப் பிழைத்திருத்தி உருவாக்குதல் - தமிழ் வேர்ச்சொல் காணும் கருவி உருவாக்குதல் - எல்லா http://FreeTamilEbooks.com மின்னூல்களையும் Google Play Books, GoodReads.com ல் ஏற்றுதல் - தமிழ் தட்டச்சு கற்க இணைய செயலி உருவாக்குதல் - தமிழ் எழுதவும் படிக்கவும் கற்ற இணைய செயலி உருவாக்குதல் ( aamozish.com/Course_preface போல)   மேற்கண்ட திட்டங்கள், மென்பொருட்களை உருவாக்கி செயல்படுத்த உங்கள் அனைவரின் ஆதரவும் தேவை. உங்களால் எவ்வாறேனும் பங்களிக்க இயலும் எனில் உங்கள் விவரங்களை  kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.   வெளிப்படைத்தன்மை கணியம் அறக்கட்டளையின் செயல்கள், திட்டங்கள், மென்பொருட்கள் யாவும் அனைவருக்கும் பொதுவானதாகவும், 100% வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கும்.இந்த இணைப்பில் செயல்களையும், இந்த இணைப்பில் மாத அறிக்கை, வரவு செலவு விவரங்களுடனும் காணலாம். கணியம் அறக்கட்டளையில் உருவாக்கப்படும் மென்பொருட்கள் யாவும் கட்டற்ற மென்பொருட்களாக மூல நிரலுடன், GNU GPL, Apache, BSD, MIT, Mozilla ஆகிய உரிமைகளில் ஒன்றாக வெளியிடப்படும். உருவாக்கப்படும் பிற வளங்கள், புகைப்படங்கள், ஒலிக்கோப்புகள், காணொளிகள், மின்னூல்கள், கட்டுரைகள் யாவும் யாவரும் பகிரும், பயன்படுத்தும் வகையில் கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் இருக்கும். நன்கொடை உங்கள் நன்கொடைகள் தமிழுக்கான கட்டற்ற வளங்களை உருவாக்கும் செயல்களை சிறந்த வகையில் விரைந்து செய்ய ஊக்குவிக்கும். பின்வரும் வங்கிக் கணக்கில் உங்கள் நன்கொடைகளை அனுப்பி, உடனே விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.  Kaniyam Foundation Account Number : 606 1010 100 502 79 Union Bank Of India West Tambaram, Chennai IFSC – UBIN0560618 Account Type : Current Account   UPI செயலிகளுக்கான QR Code []   குறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும். Note: Sometimes UPI does not work properly, in that case kindly use Account number and IFSC code for internet banking.   FREETAMILEBOOKS.COM மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்: மின்புத்தகங்களைப் படிப்பதற்கென்றே கையிலேயே வைத்துக் கொள்ளக்கூடிய பல கருவிகள் தற்போது சந்தையில் வந்துவிட்டன. Kindle, Nook, Android Tablets போன்றவை இவற்றில் பெரும்பங்கு வகிக்கின்றன. இத்தகைய கருவிகளின் மதிப்பு தற்போது 4000 முதல் 6000 ரூபாய் வரை குறைந்துள்ளன. எனவே பெரும்பான்மையான மக்கள் தற்போது இதனை வாங்கி வருகின்றனர். ஆங்கிலத்திலுள்ள மின்புத்தகங்கள்: ஆங்கிலத்தில் லட்சக்கணக்கான மின்புத்தகங்கள் தற்போது கிடைக்கப் பெறுகின்றன. அவை PDF, EPUB, MOBI, AZW3. போன்ற வடிவங்களில் இருப்பதால், அவற்றை மேற்கூறிய கருவிகளைக் கொண்டு நாம் படித்துவிடலாம். தமிழிலுள்ள மின்புத்தகங்கள்: தமிழில் சமீபத்திய புத்தகங்களெல்லாம் நமக்கு மின்புத்தகங்களாக கிடைக்கப்பெறுவதில்லை. ProjectMadurai.com எனும் குழு தமிழில் மின்புத்தகங்களை வெளியிடுவதற்கான ஒர் உன்னத சேவையில் ஈடுபட்டுள்ளது. இந்தக் குழு இதுவரை வழங்கியுள்ள தமிழ் மின்புத்தகங்கள் அனைத்தும் PublicDomain-ல் உள்ளன. ஆனால் இவை மிகவும் பழைய புத்தகங்கள். சமீபத்திய புத்தகங்கள் ஏதும் இங்கு கிடைக்கப்பெறுவதில்லை. சமீபத்திய புத்தகங்களை தமிழில் பெறுவது எப்படி? அமேசான் கிண்டில் கருவியில் தமிழ் ஆதரவு தந்த பிறகு, தமிழ் மின்னூல்கள் அங்கே விற்பனைக்குக் கிடைக்கின்றன. ஆனால் அவற்றை நாம் பதிவிறக்க இயலாது. வேறு யாருக்கும் பகிர இயலாது. சமீபகாலமாக பல்வேறு எழுத்தாளர்களும், பதிவர்களும், சமீபத்திய நிகழ்வுகளைப் பற்றிய விவரங்களைத் தமிழில் எழுதத் தொடங்கியுள்ளனர். அவை இலக்கியம், விளையாட்டு, கலாச்சாரம், உணவு, சினிமா, அரசியல், புகைப்படக்கலை, வணிகம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு தலைப்புகளின் கீழ் அமைகின்றன. நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகச் சேர்த்து தமிழ் மின்புத்தகங்களை உருவாக்க உள்ளோம். அவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள் Creative Commons எனும் உரிமத்தின் கீழ் வெளியிடப்படும். இவ்வாறு வெளியிடுவதன் மூலம் அந்தப் புத்தகத்தை எழுதிய மூல ஆசிரியருக்கான உரிமைகள் சட்டரீதியாகப் பாதுகாக்கப்படுகின்றன. அதே நேரத்தில் அந்த மின்புத்தகங்களை யார் வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும், இலவசமாக வழங்கலாம். எனவே தமிழ் படிக்கும் வாசகர்கள் ஆயிரக்கணக்கில் சமீபத்திய தமிழ் மின்புத்தகங்களை இலவசமாகவே பெற்றுக் கொள்ள முடியும். தமிழிலிருக்கும் எந்த வலைப்பதிவிலிருந்து வேண்டுமானாலும் பதிவுகளை எடுக்கலாமா? கூடாது. ஒவ்வொரு வலைப்பதிவும் அதற்கென்றே ஒருசில அனுமதிகளைப் பெற்றிருக்கும். ஒரு வலைப்பதிவின் ஆசிரியர் அவரது பதிப்புகளை “யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்” என்று குறிப்பிட்டிருந்தால் மட்டுமே அதனை நாம் பயன்படுத்த முடியும். அதாவது “Creative Commons” எனும் உரிமத்தின் கீழ் வரும் பதிப்புகளை மட்டுமே நாம் பயன்படுத்த முடியும். அப்படி இல்லாமல் “All Rights Reserved” எனும் உரிமத்தின் கீழ் இருக்கும் பதிப்புகளை நம்மால் பயன்படுத்த முடியாது. வேண்டுமானால் “All Rights Reserved” என்று விளங்கும் வலைப்பதிவுகளைக் கொண்டிருக்கும் ஆசிரியருக்கு அவரது பதிப்புகளை “Creative Commons” உரிமத்தின் கீழ் வெளியிடக்கோரி நாம் நமது வேண்டுகோளைத் தெரிவிக்கலாம். மேலும் அவரது படைப்புகள் அனைத்தும் அவருடைய பெயரின் கீழே தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் நாம் அளிக்க வேண்டும். பொதுவாக புதுப்புது பதிவுகளை  உருவாக்குவோருக்கு அவர்களது பதிவுகள்  நிறைய வாசகர்களைச் சென்றடைய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். நாம் அவர்களது படைப்புகளை எடுத்து இலவச மின்புத்தகங்களாக வழங்குவதற்கு  நமக்கு அவர்கள் அனுமதியளித்தால், உண்மையாகவே அவர்களது படைப்புகள் பெரும்பான்மையான மக்களைச் சென்றடையும். வாசகர்களுக்கும் நிறைய புத்தகங்கள் படிப்பதற்குக் கிடைக்கும் வாசகர்கள் ஆசிரியர்களின் வலைப்பதிவு முகவரிகளில் கூட அவர்களுடைய படைப்புகளை தேடிக் கண்டுபிடித்து படிக்கலாம். ஆனால் நாங்கள் வாசகர்களின் சிரமத்தைக் குறைக்கும் வண்ணம் ஆசிரியர்களின் சிதறிய வலைப்பதிவுகளை ஒன்றாக இணைத்து ஒரு முழு மின்புத்தகங்களாக உருவாக்கும் வேலையைச் செய்கிறோம். மேலும் அவ்வாறு உருவாக்கப்பட்ட புத்தகங்களை “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்”-க்கு ஏற்ற வண்ணம் வடிவமைக்கும் வேலையையும் செய்கிறோம். FREETAMILEBOOKS.COM இந்த வலைத்தளத்தில்தான் பின்வரும் வடிவமைப்பில் மின்புத்தகங்கள் காணப்படும். PDF for desktop, PDF for 6” devices, EPUB, AZW3, ODT இந்த வலைதளத்திலிருந்து யார் வேண்டுமானாலும் மின்புத்தகங்களை இலவசமாகப் பதிவிறக்கம்(download) செய்து கொள்ளலாம். அவ்வாறு பதிவிறக்கம்(download) செய்யப்பட்ட புத்தகங்களை யாருக்கு வேண்டுமானாலும் இலவசமாக வழங்கலாம். இதில் நீங்கள் பங்களிக்க விரும்புகிறீர்களா?  நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் தமிழில் எழுதப்பட்டிருக்கும் வலைப்பதிவுகளிலிருந்து பதிவுகளை எடுத்து, அவற்றை LibreOffice/MS Office போன்ற wordprocessor-ல் போட்டு ஓர் எளிய மின்புத்தகமாக மாற்றி எங்களுக்கு அனுப்பவும். அவ்வளவுதான்! மேலும் சில பங்களிப்புகள் பின்வருமாறு: 1. ஒருசில பதிவர்கள்/எழுத்தாளர்களுக்கு அவர்களது படைப்புகளை “Creative Commons” உரிமத்தின்கீழ் வெளியிடக்கோரி மின்னஞ்சல் அனுப்புதல் 2. தன்னார்வலர்களால் அனுப்பப்பட்ட மின்புத்தகங்களின் உரிமைகளையும் தரத்தையும் பரிசோதித்தல் 3. சோதனைகள் முடிந்து அனுமதி வழங்கப்பட்ட தரமான மின்புத்தகங்களை நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்தல் விருப்பமுள்ளவர்கள் freetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.  இந்தத் திட்டத்தின் மூலம் பணம் சம்பாதிப்பவர்கள் யார்? யாருமில்லை. இந்த வலைத்தளம் முழுக்க முழுக்க தன்னார்வலர்களால் செயல்படுகின்ற ஒரு வலைத்தளம் ஆகும். இதன் ஒரே நோக்கம் என்னவெனில் தமிழில் நிறைய மின்புத்தகங்களை உருவாக்குவதும், அவற்றை இலவசமாக பயனர்களுக்கு வழங்குவதுமே ஆகும். மேலும் இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள், ebook reader ஏற்றுக்கொள்ளும் வடிவமைப்பில் அமையும். இத்திட்டத்தால் பதிப்புகளை எழுதிக்கொடுக்கும் ஆசிரியர்/பதிவருக்கு என்ன லாபம்? ஆசிரியர்/பதிவர்கள் இத்திட்டத்தின் மூலம் எந்தவிதமான தொகையும் பெறப்போவதில்லை. ஏனெனில், அவர்கள் புதிதாக இதற்கென்று எந்தஒரு பதிவையும்  எழுதித்தரப்போவதில்லை. ஏற்கனவே அவர்கள் எழுதி வெளியிட்டிருக்கும் பதிவுகளை எடுத்துத்தான் நாம் மின்புத்தகமாக வெளியிடப்போகிறோம். அதாவது அவரவர்களின் வலைதளத்தில் இந்தப் பதிவுகள் அனைத்தும் இலவசமாகவே கிடைக்கப்பெற்றாலும், அவற்றையெல்லாம் ஒன்றாகத் தொகுத்து ebook reader போன்ற கருவிகளில் படிக்கும் விதத்தில் மாற்றித் தரும் வேலையை இந்தத் திட்டம் செய்கிறது. தற்போது மக்கள் பெரிய அளவில் tablets மற்றும் ebook readers போன்ற கருவிகளை நாடிச் செல்வதால் அவர்களை நெருங்குவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். நகல் எடுப்பதை அனுமதிக்கும் வலைதளங்கள் ஏதேனும் தமிழில் உள்ளதா? உள்ளது. பின்வரும் தமிழில் உள்ள வலைதளங்கள் நகல் எடுப்பதினை அனுமதிக்கின்றன. 1. http://www.vinavu.com 2. http://www.badriseshadri.in  3. http://maattru.com  4. http://www.kaniyam.com  5. http://blog.ravidreams.net  எவ்வாறு ஒர் எழுத்தாளரிடம் CREATIVE COMMONS உரிமத்தின் கீழ் அவரது படைப்புகளை வெளியிடுமாறு கூறுவது? இதற்கு பின்வருமாறு ஒரு மின்னஞ்சலை அனுப்ப வேண்டும். துவக்கம் உங்களது வலைத்தளம் அருமை (வலைதளத்தின் பெயர்). தற்போது படிப்பதற்கு உபயோகப்படும் கருவிகளாக Mobiles மற்றும் பல்வேறு கையிருப்புக் கருவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது. இந்நிலையில் நாங்கள் http://www.FreeTamilEbooks.com எனும் வலைதளத்தில், பல்வேறு தமிழ் மின்புத்தகங்களை வெவ்வேறு துறைகளின் கீழ் சேகரிப்பதற்கான ஒரு புதிய திட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.  இங்கு சேகரிக்கப்படும் மின்புத்தகங்கள் பல்வேறு கணிணிக் கருவிகளான Desktop,ebook readers like kindl, nook, mobiles, tablets with android, iOS போன்றவற்றில் படிக்கும் வண்ணம் அமையும். அதாவது இத்தகைய கருவிகள் support செய்யும் odt, pdf, ebub, azw போன்ற வடிவமைப்பில் புத்தகங்கள் அமையும். இதற்காக நாங்கள் உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை பெற விரும்புகிறோம். இதன் மூலம் உங்களது பதிவுகள் உலகளவில் இருக்கும் வாசகர்களின் கருவிகளை நேரடியாகச் சென்றடையும். எனவே உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை  பிரதியெடுப்பதற்கும் அவற்றை மின்புத்தகங்களாக மாற்றுவதற்கும் உங்களது அனுமதியை வேண்டுகிறோம். இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்களில் கண்டிப்பாக ஆசிரியராக உங்களின் பெயரும் மற்றும் உங்களது வலைதள முகவரியும் இடம்பெறும். மேலும் இவை “Creative Commons” உரிமத்தின் கீழ் மட்டும்தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் அளிக்கிறோம். http://creativecommons.org/licenses/  நீங்கள் எங்களை பின்வரும் முகவரிகளில் தொடர்பு கொள்ளலாம். e-mail : FREETAMILEBOOKSTEAM@GMAIL.COM  FB : https://www.facebook.com/FreeTamilEbooks  G plus: https://plus.google.com/communities/108817760492177970948    நன்றி. முடிவு மேற்கூறியவாறு ஒரு மின்னஞ்சலை உங்களுக்குத் தெரிந்த அனைத்து எழுத்தாளர்களுக்கும் அனுப்பி அவர்களிடமிருந்து அனுமதியைப் பெறுங்கள். முடிந்தால் அவர்களையும் “Creative Commons License”-ஐ அவர்களுடைய வலைதளத்தில் பயன்படுத்தச் சொல்லுங்கள். கடைசியாக அவர்கள் உங்களுக்கு அனுமதி அளித்து அனுப்பியிருக்கும் மின்னஞ்சலைFREETAMILEBOOKSTEAM@GMAIL.COM எனும் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.  ஓர் எழுத்தாளர் உங்களது உங்களது வேண்டுகோளை மறுக்கும் பட்சத்தில் என்ன செய்வது? அவர்களையும் அவர்களது படைப்புகளையும் அப்படியே விட்டுவிட வேண்டும். ஒருசிலருக்கு அவர்களுடைய சொந்த முயற்சியில் மின்புத்தகம் தயாரிக்கும் எண்ணம்கூட இருக்கும். ஆகவே அவர்களை நாம் மீண்டும் மீண்டும் தொந்தரவு செய்யக் கூடாது. அவர்களை அப்படியே விட்டுவிட்டு அடுத்தடுத்த எழுத்தாளர்களை நோக்கி நமது முயற்சியைத் தொடர வேண்டும்.   மின்புத்தகங்கள் எவ்வாறு அமைய வேண்டும்? ஒவ்வொருவரது வலைத்தளத்திலும் குறைந்தபட்சம் நூற்றுக்கணக்கில் பதிவுகள் காணப்படும். அவை வகைப்படுத்தப்பட்டோ அல்லது வகைப்படுத்தப் படாமலோ இருக்கும்.  நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகத் திரட்டி ஒரு பொதுவான தலைப்பின்கீழ் வகைப்படுத்தி மின்புத்தகங்களாகத் தயாரிக்கலாம். அவ்வாறு வகைப்படுத்தப்படும் மின்புத்தகங்களை பகுதி-I பகுதி-II என்றும் கூட தனித்தனியே பிரித்துக் கொடுக்கலாம்.  தவிர்க்க வேண்டியவைகள் யாவை? இனம், பாலியல் மற்றும் வன்முறை போன்றவற்றைத் தூண்டும் வகையான பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டும்.  எங்களைத் தொடர்பு கொள்வது எப்படி? நீங்கள் பின்வரும் முகவரிகளில் எங்களைத் தொடர்பு கொள்ளலாம்.  - EMAIL : FREETAMILEBOOKSTEAM@GMAIL.COM   - Facebook: https://www.facebook.com/FreeTamilEbooks   - Google Plus: https://plus.google.com/communities/108817760492177970948   இத்திட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் யார்? குழு – http://freetamilebooks.com/meet-the-team/    SUPPORTED BY கணியம் அறக்கட்டளை http://kaniyam.com/foundation     கணியம் அறக்கட்டளை []   தொலை நோக்கு – Vision தமிழ் மொழி மற்றும் இனக்குழுக்கள் சார்ந்த மெய்நிகர்வளங்கள், கருவிகள் மற்றும் அறிவுத்தொகுதிகள், அனைவருக்கும்  கட்டற்ற அணுக்கத்தில் கிடைக்கும் சூழல் பணி இலக்கு  – Mission அறிவியல் மற்றும் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு ஒப்ப, தமிழ் மொழியின் பயன்பாடு வளர்வதை உறுதிப்படுத்துவதும், அனைத்து அறிவுத் தொகுதிகளும், வளங்களும் கட்டற்ற அணுக்கத்தில் அனைவருக்கும் கிடைக்கச்செய்தலும்.   தற்போதைய செயல்கள் - கணியம் மின்னிதழ் – http://kaniyam.com - கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் இலவச தமிழ் மின்னூல்கள் – http://FreeTamilEbooks.com   கட்டற்ற மென்பொருட்கள் - உரை ஒலி மாற்றி –  Text to Speech - எழுத்துணரி – Optical Character Recognition - விக்கிமூலத்துக்கான எழுத்துணரி - மின்னூல்கள் கிண்டில் கருவிக்கு அனுப்புதல் – Send2Kindle - விக்கிப்பீடியாவிற்கான சிறு கருவிகள் - மின்னூல்கள் உருவாக்கும் கருவி - உரை ஒலி மாற்றி – இணைய செயலி - சங்க இலக்கியம் – ஆன்டிராய்டு செயலி - FreeTamilEbooks – ஆன்டிராய்டு செயலி - FreeTamilEbooks – ஐஒஎஸ் செயலி - WikisourceEbooksReportஇந்திய மொழிகளுக்ககான விக்கிமூலம் மின்னூல்கள் பதிவிறக்கப் பட்டியல் - FreeTamilEbooks.com – Download counter மின்னூல்கள் பதிவிறக்கப் பட்டியல்   அடுத்த திட்டங்கள்/மென்பொருட்கள்   - விக்கி மூலத்தில் உள்ள மின்னூல்களை பகுதிநேர/முழு நேரப் பணியாளர்கள் மூலம் விரைந்து பிழை திருத்துதல் - முழு நேர நிரலரை பணியமர்த்தி பல்வேறு கட்டற்ற மென்பொருட்கள் உருவாக்குதல் - தமிழ் NLP க்கான பயிற்சிப் பட்டறைகள் நடத்துதல் - கணியம் வாசகர் வட்டம் உருவாக்குதல் - கட்டற்ற மென்பொருட்கள், கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் வளங்களை உருவாக்குபவர்களைக் கண்டறிந்து ஊக்குவித்தல் - கணியம் இதழில் அதிக பங்களிப்பாளர்களை உருவாக்குதல், பயிற்சி அளித்தல் - மின்னூலாக்கத்துக்கு ஒரு இணையதள செயலி - எழுத்துணரிக்கு ஒரு இணையதள செயலி - தமிழ் ஒலியோடைகள் உருவாக்கி வெளியிடுதல் - http://OpenStreetMap.org ல் உள்ள இடம், தெரு, ஊர் பெயர்களை தமிழாக்கம் செய்தல் - தமிழ்நாடு முழுவதையும் http://OpenStreetMap.org ல் வரைதல் - குழந்தைக் கதைகளை ஒலி வடிவில் வழங்குதல் - http://Ta.wiktionary.org ஐ ஒழுங்குபடுத்தி API க்கு தோதாக மாற்றுதல் - http://Ta.wiktionary.org க்காக ஒலிப்பதிவு செய்யும் செயலி உருவாக்குதல் - தமிழ் எழுத்துப் பிழைத்திருத்தி உருவாக்குதல் - தமிழ் வேர்ச்சொல் காணும் கருவி உருவாக்குதல் - எல்லா http://FreeTamilEbooks.com மின்னூல்களையும் Google Play Books, GoodReads.com ல் ஏற்றுதல் - தமிழ் தட்டச்சு கற்க இணைய செயலி உருவாக்குதல் - தமிழ் எழுதவும் படிக்கவும் கற்ற இணைய செயலி உருவாக்குதல் ( aamozish.com/Course_preface போல)   மேற்கண்ட திட்டங்கள், மென்பொருட்களை உருவாக்கி செயல்படுத்த உங்கள் அனைவரின் ஆதரவும் தேவை. உங்களால் எவ்வாறேனும் பங்களிக்க இயலும் எனில் உங்கள் விவரங்களை  kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.   வெளிப்படைத்தன்மை கணியம் அறக்கட்டளையின் செயல்கள், திட்டங்கள், மென்பொருட்கள் யாவும் அனைவருக்கும் பொதுவானதாகவும், 100% வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கும்.இந்த இணைப்பில் செயல்களையும், இந்த இணைப்பில் மாத அறிக்கை, வரவு செலவு விவரங்களுடனும் காணலாம். கணியம் அறக்கட்டளையில் உருவாக்கப்படும் மென்பொருட்கள் யாவும் கட்டற்ற மென்பொருட்களாக மூல நிரலுடன், GNU GPL, Apache, BSD, MIT, Mozilla ஆகிய உரிமைகளில் ஒன்றாக வெளியிடப்படும். உருவாக்கப்படும் பிற வளங்கள், புகைப்படங்கள், ஒலிக்கோப்புகள், காணொளிகள், மின்னூல்கள், கட்டுரைகள் யாவும் யாவரும் பகிரும், பயன்படுத்தும் வகையில் கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் இருக்கும். நன்கொடை உங்கள் நன்கொடைகள் தமிழுக்கான கட்டற்ற வளங்களை உருவாக்கும் செயல்களை சிறந்த வகையில் விரைந்து செய்ய ஊக்குவிக்கும். பின்வரும் வங்கிக் கணக்கில் உங்கள் நன்கொடைகளை அனுப்பி, உடனே விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.  Kaniyam Foundation Account Number : 606 1010 100 502 79 Union Bank Of India West Tambaram, Chennai IFSC – UBIN0560618 Account Type : Current Account   UPI செயலிகளுக்கான QR Code []   குறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும். Note: Sometimes UPI does not work properly, in that case kindly use Account number and IFSC code for internet banking.