[] 1. Cover 2. Table of contents ஆழ்வார்களின் பெருமை   ஷக்திப்ரபா   prabha2talk2@yahoo.com   மின்னூல் வெளியீடு : FreeTamilEbooks.com   உரிமை : CC-BY-SA-NC கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.   அட்டைப்படம் - லெனின் குருசாமி - guruleninn@gmail.com   மின்னூலாக்கம் - ஐஸ்வர்யா லெனின் - aishushanmugam09@gmail.com   This book was produced using pandoc   பதிவிறக்கம் செய்ய - http://FreeTamilEbooks.com/ebooks/aazhvargalin_perumai மின்னூல் வெளியீட்டாளர்: http://freetamilebooks.com அட்டைப்படம்: லெனின் குருசாமி - guruleninn@gmail.com மின்னூலாக்கம்: ஐஸ்வர்யா லெனின் - aishushanmugam09@gmail.com மின்னூலாக்க செயற்திட்டம்: கணியம் அறக்கட்டளை - kaniyam.com/foundation Ebook Publisher: http://freetamilebooks.com Cover Image: Lenin Gurusamy - guruleninn@gmail.com Ebook Creation: Iswarya Lenin - aishushanmugam09@gmail.com Ebook Project: Kaniyam Foundation - kaniyam.com/foundation This Book was produced using LaTeX + Pandoc முன்னுரை திருமாலிடம் தீரா பக்திகொண்டு, அவரையே துதி செய்து, வைணவத் தூண்களாய்த் திகழுபவர்கள் பன்னிரு ஆழ்வார்கள். ஆழ்வார் பெருமக்கள் நித்யசூரிகளின் அவதாரங்களாகக் கருதப்படுகின்றனர். எம்பெருமானை நினைந்து, கண்ணீர் உகுத்து காதல் மேலிட்டு, பக்தியின் பால் உருகும் பல பக்தர்கள் இருந்தாலும், பன்னிரு ஆழ்வார்களும் அவர்களின் திவ்யப்ரபந்தமும் தமிழ்கூறும் வைணவ சிறப்புக்கும், பக்திக்கும் எடுத்துக்காட்டாய் விளங்குவன. அவற்றை நமக்காகத் தேடி வழங்கியருளிய நாதமுனிகளையும் நினைவுகூர்ந்து, அவருக்கு நன்றி செலுத்த கடமைப் பட்டிருக்கிறோம். ஆன்மவிசாரத்தில், இறைவனின் ஈடுபாட்டில், பரப்பிரம்மத்தில் திளைத்து ஆழ்ந்திருப்பவர்க்ளே ‘ஆழ்வார்கள்’ என்று பொருள் கொள்ளலாம். எம்பெருமான் நினைவிலே ஆழ்ந்து லௌகீகங்களை நாடாதவர்கள். 1. பொய்கையாழ்வார் 2. பூதத்தாழ்வார் 3. பேயாழ்வார் 4. திருமழிசையாழ்வார் 5. நம்மாழ்வார் 6. குலசேகராழ்வார் 7. மதுரகவியாழ்வார் 8. பெரியாழ்வார் 9. ஸ்ரீஆண்டாள் 10. தொண்டரடிப் பொடியாழ்வார் 11. திருப்பாணாழ்வார் 12. திருமங்கையாழ்வார் எனும் பன்னிருவர் ஆழ்வார்களாகக் கொண்டாடப் படுகிறர்கள். வைணவ நூல்களும், பக்திநெறியும் தழைத்தோங்க பெரிதும் காரணமானவர்கள். இவர்கள் எழுதிய நூல்களை ‘தமிழ்வேதம்’ என்று குறிப்பிடுவதுண்டு. ஆழ்வார்களுக்குள் ஐந்து ஆழ்வார்கள் ‘அயோநிஜர்களாக’ அவதரித்தவர்கள். அதாவது, பெண்ணின் கர்ப்பத்தில் ஜனிக்காமல், சின்னஞ்சிறு குழந்தைகளாக பொய்கையிலும், மலர்களிலும் அவதரித்து, கண்டெடுக்கப் பெற்றவர்கள். அயோநிஜர்களான முதல் மூன்று ஆழ்வார்களும் த்வாபர யுகத்தவர்கள் (குறைந்தது 5000 வருடங்களுக்கு முந்தையவர்கள்) எனத் தகவல்கள் கூறுகின்றன. இந்நூல் ஆழ்வார்களை அறிமுகம் செய்து வைக்கிறது. அவர்கள் சரிதத்தை சுருக்கமாக எடுத்துரைக்கிறது. இந்த நூல் பண்டிதர்களுக்கானதல்ல. ஆழ்வார்களைப் பற்றி தெரிந்து கொள்ளும் ஆர்வம் இருக்கும் புதியவர்களுக்கு இந்த எளியநூல், வழிகாட்டியாக பயன்படுமேயானால், இறைவன் ஆசியாலும், ஆழ்வார்கள் அருளாலும் நூலாக்கியதன் நோக்கம் நிறைவுற்றதாக மகிழ்வேன். இனி ஆழ்வார்களைப் பற்றிப் பேசுவோம். அவர்கள் நமக்குச் செய்த உபகாரத்தை எண்ணிப் போற்றுவோம். நன்றி பல. அன்புடன், ஷக்திப்ரபா முதல் மூவர் பொய்கையாழ்வார் பன்னிருவரில் முதலாமவர். காஞ்சிபுரத்தில் திருவேக்கா எனும் ஊரில் சொன்னவண்ணம் செய்த பெருமாள் கோவில் பொய்கையில் அவதரித்ததால்  காரணப்பெயர் பெற்றார். அந்தாதியாக பல பாடல்கள் பெருமாள் பேரில் பாடியுள்ளார். அவை நாலாயிரம் திவ்யப்ரபந்தத்தில் ’முதல் திருவந்தாதி’யாக விளங்குகிறது. பொய்கையாரின் பிறப்பு ஏழாம் நூற்றாண்டு நிகழ்ந்துள்ளது. பன்னிருவரில் முதன்மையானவராக அடையாளம் காட்டப்படுகிறார். காஞ்சியிலுள்ள திருவெக்காவில் பொய்கையில் அவதரித்ததால் பொய்கை என்றே அழைக்கபட்டார். பெருமானின் பாஞ்சஜன்யத்தின் அம்சமாக கருதப்படுகிறார்.  நூறு பாடல்கள் கொண்ட ‘முதல் திருவந்தாதி’ எனும் தொகுப்பு அந்தாதியாக பாடப்பட்ட தனிச்சிறப்பை பெற்றது  பொய்கையாழ்வார் இறைவனை புலன்களைக் கொண்டு துதிக்கிறார்.  *காது என்றும் பெருமானின் புகழை கேட்க பிரியப்படுகின்றன. *கண்கள் அவனையே மட்டுமே காண விழைகின்றன, *நாசி அவனுக்கு இட்ட துளசியை மட்டும் நுகர துடிக்கின்றன, *கால்கள் அவன் குடிகொண்டுள்ள தலத்திற்க்கே செல்ல விரும்புகிறது. *நாவானது இறையின் பெயரை மட்டுமே பாடி மகிழ விழைகிறது, என்று புலன்கள் அனைத்தும் இறை சேவைக்கே உள்ளதென துதிக்கிறார்.  ஐம்பூதங்களின் வடிவாகவும், மெய்ஞானமாகவும், அறமாகவும் ஞானத்தின் வேள்வியாகவும் பரம்பொருளை உணர்ந்து போற்றுகிறார்.  “புத்தியால் சிந்தியாது ஓதி உருவெண்ணும்  அந்தியால் - ஆம்பயன் அங்கென்?” என்று வலியுறுத்துகிறார்.  அதாவது சிந்தனையால், ஆழ்ந்த நோக்குடன் உள்முகமாய் பெருமாளை துதி செய்து உருவேற்றுவதை விடுத்து,  மந்திரத்தால் உருவேற்றி சந்தியாவந்தனம் முதலிய சடங்குகளைச் செய்வதால் என்ன பயன்?! என்று சடங்கு சம்பிரதாயங்களுக்கு முன்னுரிமை வழங்க மறுத்து, மனத்தால் இறைவனை நினைக்கும் குணத்தை முன்னிறுத்துகிறார். திருக்கோவிலூரில், பொய்கையாழ்வார் பெருமாளின் தரிசனம் பெற்றது உன்னத நிகழ்வாகும். பக்தவத்ஸலனான விஷ்ணு, தம் அடியவர்க்கு அருளும் பொருட்டு, நிகழ்த்திய திருவிளையாடல் பெரும் நெகிழ்ச்சிக்குரிய சம்பவமாக குறிக்கப்பட்டுள்ளது.  க்ஷேத்திரங்கள் பல தரிசித்து கொண்டே வந்து திருக்கோவிலூர் வந்தடைகிறார் பொய்கையாழ்வார். திருக்கோவிலூரில் உலகளந்த பெருமானாய் விஷ்ணு கோவில் கொண்டுள்ளார். பெருக்கெடுத்தோடும் தென்பண்ணை ஆற்றைக் கண்டதும் பெருமானின் பாற்கடலுடன் ஒப்பிட்டார் ஆழ்வார். பெருமாளின் திருவுருவம் நினைந்து பக்திப் பெருக்கெடுக்க உருகுகிறார். உடனே பச்சைமாமலை போல் மேனியுடன் மணிமாலைகள் அணிந்த மார்புடன் எழிலே உருவான திருமாலை தரிசிக்கிறார். பரவசத்தில் உருகி, நேரம் கடப்பதை அறியாமல் அங்கேயே நின்று விடுகிறார்.  தன் இயல்புக்கு திரும்பிய ஆழ்வார், இரவாகிப் போனதை உணர்கிறார். பலத்த காற்றும் பெருமழையும் சூழ, அருகே தென்பட்ட ஆசிரமத்துக்கு செல்கிறார். மிருகண்டு முனிவரால் அமைக்கப்பட்டிருந்த அவ்வாசிரமத்தில் யாரும் தென்படவில்லை.   ஒருவருக்கு படுக்க இடம் அளவெடுத்தாற்ப் போல் இருந்தமையால், களைப்பாறி சற்றே ஓய்வெடுக்க முற்பட்டார். அங்கே திருமாலின் திருவுளப்படி, பூதத்தாழ்வாரும் வந்து சேர்ந்தார். மழைக்கு ஒதுங்க இடம் வேண்டி, ஆசிரமக்  கதவைத் பூதத்தாழ்வார் தட்டுகிறார்.  இருவருக்கு உட்கார இடமிருப்பதால், இருவருமாக அமர்ந்தபடி பரந்தாமன் பாடல்களில் லயித்திருந்தனர்.  மீண்டும் கதவு தட்டப்பட்டு, பேயாழ்வாரும் அங்கு வந்து இணைகிறார். மூவருக்கு நிற்க மட்டுமே இடம்.  ஒருவரை ஒருவர் இனம் கண்டு கொள்ள முடியாத காரிருள். மூப்பெரும் ஆழ்வார்களை ஒருங்கே இணைத்த இறைவன், தம் திருவிளையாடலைத் தொடர்ந்தார்.  நிற்க தாராளமாய் இடமிருந்தும், மூவரும் நெருசலுக்கு உட்பட, தம்முடன் இன்னும் ஒரு நபர் இருப்பதை உணர்ந்தனர். மூன்று பேர் மட்டுமே நிற்க முடிந்த இடத்தில் எப்படியோ நான்காமவரும்  இருக்கக் கண்டனர். மின்னலொளியில், நான்காம் நபரின் திருமுகம்.. திவ்யமான பேரழகுடன் விளங்கியதைக் கண்டனர். உடனே இறைவனை உணர்ந்து பாடல்கள் பல பாடி துதித்தனர்.  பொய்கையாழ்வார் பாடல் தம்முடன் தங்கியிருந்த இறைவனைக் காண,  இருள் விலகி, கதிரவனின் வெளிச்சம் வேண்டி, பொய்கை ஆழ்வார் இவ்வுலகை திருவிளக்க்காகவும், ஆழ்கடலை நெய்யாகவும், கதிரவனின் ஒளியை திரி கொண்ட தீபமாக பாவித்து வையம் தகளியா வார்கடலே நெய்யாக வெய்ய கதிரோன் விளக்காகச் - செய்ய சுடராழியான் அடிக்கே சூட்டினேன் சொல்மாலை இடராழி நீங்குகவே என்று எனப் பாடி துதித்தார். (இருளை நம் அறியாமை மற்றும் பந்த பாசத்திற்கும், சுடரை முக்திக்கும் பக்திக்கும் ஒப்பிட்டு விளக்கலாம்.) பொய்கை ஆழ்வார் அந்தாதி வடிவில் பாடிய நூறு பாசுரங்களில் திருவரங்கத்து பெருமானைக் குறித்தும் பாடியுள்ளார். அரங்கனுக்கும் ஆழ்வாருக்கும் உள்ள தொடர்பு இன்று நேற்றல்ல. கர்ப்பகாலம் தொட்டே இருந்திருக்கிறது. அதற்கு முன்பும் இருந்திருக்கிறது. தாயின் கர்ப்பத்தில் தோன்றிய சான்றுகள் இல்லாத பொய்கையில் பிறந்தவருக்கு ஏது கர்ப்ப காலம்?! கர்ப்பகாலம் என்பது காலத்தின் முன்னோடியாக படைத்தலுக்கு முன் இருந்த ஒடுக்க காலத்தை குறிப்பிட்டிருக்கிறார் போலும். ஒன்றும் மறந்தறியேன் ஓதநீர்வண்ணனைநான் இன்றுமறப்பனோ ஏழைகாள் –அன்று கருவரங்கத்துள் கிடந்து கைதொழுதேன் கணடேன் திருவரங்கமேயான் திசை  என்கிறது ஆழ்வார் பாசுரம். ஒன்றுமே மறக்கவில்லை. எப்பொழுதும் அவர் மறக்கவில்லை என்ற உறுதிகூறுகிறார். கர்ப்பகாலம் தொட்டே இருந்த சம்பந்தம். காலத்தின் சக்கர சுழற்சிக்கும் அப்பாற்பட்டு நிற்கும் உறவு. என்னால் இந்த அழகனை எப்படி மறக்க முடியும்! எப்படிப் பட்ட அழகனை? ஓத நீர்வண்ணன்- ஆழியில் வெள்ளப் பெருக்கெடுக்க ஏற்படும் குளிர்வண்ணம் கொண்டவனை ஒரு போதும் மறந்து அறியேன். கர்ப்பத்தில் இருக்கும் காலத்தேயே மறந்தறியாதவன், இன்று மறப்பேனோ!  அன்று தொட்டே கைதொழுதேன், கண்டேன். திருவரங்கத்து உறை கொண்டிருக்கும் அவனை நோக்கி கை கூப்பித் தொழுதேன். திருவரங்கத்தில் சயனத் திருக்கோலத்தில் ஆழிமேல் பள்ளி கொண்ட பெருமானை, கருவரங்கத்து உள்ளே ஏறக்குறைய அதே போல் சயனித்த நிலையில் கைகூப்பி நின்று, பக்தன், தன்னை குழந்தையாக பாவித்து பாடுவது பாசுரத்தின் அழகு. ॐ ॐ ॐ ॐ ॐ ॐ ॐ ॐ ॐ பூதத்தாழ்வார் அயோனிஜர்களான முதல் மூன்று ஆழ்வார்களுள், இரண்டாம் ஆழ்வாராக போற்றப்படுபவர் பூதத்தாழ்வார். அவிட்ட நட்சட்திரத்தில், பல்லவ ராஜ்ஜியத்தின் பகுதியான மாமல்லபுரத்தில் பிறந்த பூதத்தாழ்வார், கௌமோதகி என்னும் (Gha)கதையின் பிறப்பம்சமாக வணங்கப்படுகிறார். தலசயனப் பெருமாள் கோவிலின் அருகில் குருக்கத்தி என்னும் மாதவி மலரில் அவதரித்ததாக சான்றுகள் கூறுகின்றன. கடல்மல்லை என்று குறிப்பிடப்படும் தொண்டைநாட்டு நகரம் இவரது அவதாரப் பெருமையை சுமந்துரைக்கிறது.  நாராயண ஸ்மரணயைத் தவிர பிறிதொன்றினை அறியார். நொடிப்பொழுதும் திருமாலின் பக்தியில் உருகினார். திருமாலை வணங்கியவனுக்கு மண்ணுக இன்பமும் விண்ணுலக பதவிகளும் ஒரு பொருட்டல்ல என்றுரைத்தார். சிறந்த பக்திக்கு ஆழ்வார்கள் வாழ்வே சான்று. கடுகளவேனும் அப்படியொரு பக்தி நமக்கும் சித்திக்குமாயின் பிறப்பின் பயனெய்தினோம். முதல் மூன்று ஆழ்வார்களும் ஒரே காலத்தவர். ஒருவரை ஒருவர் பாராமலே, திருக்கோவிலூரில் ஒன்றாகப் இறைவனின் வடிவழகைக் கண்டு பாடல்கள் பாடி, முறையே திருவந்தாதிகளாக அருளிச் சென்றனர்.  பூதத்தாழ்வார் அருளிய இரண்டாம் திருவந்தாதி, நூறு பாடல்களைக் கொண்டது. திருக்கோவிலூரில் எம்பெருமான் அழகில் மயங்கி பக்திப் பெருக்கில் வெளிப்படுகிறது. பொய்கை ஆழ்வாரைத் தொடர்ந்து, இவரது பாசுரத்தில் அன்பே தகளிய ஆர்வமே நெய்யாக இன்புருகு சிந்தை இடுதிரியா – நன்புருகி ஞானச் சுடர் விளக்கேற்றினேன் நாரணற்கு ஞானத் தமிழ் புரிந்த நான்   எனப் பாடிப் போற்றுகிறார். அன்பதனை அகல் விளக்காக்கினால் போதவில்லை போலும். அன்பை அகழியாக்கிவிடுகிறார். பெரும் அன்பை அகழியில் வழியவிட்டு இறைவன் பால் உள்ள ஆர்வத்தையே நெய்யாய் உருக்கி, அவர்பால் இன்புற்று உருகும் அறிவை-சிந்தையை, திரியாக்கி, ஞானம் எனும் சுடர் விளக்கை நாரணனுக்கு ஞானத்தமிழின் துணை கொண்டு ஏற்றுகிறார். பற்றற்று திகழ்ந்தவருக்கு ஹரியன்றி எதுவுமில்லை. உலகத்தோரெல்லாம் உய்யும் வழியினை பல பாடல்களில் கூறியுள்ளார். ஹரியைத் தவிர இன்னொன்றை நாடாத ஒருமுக சிந்தை கொண்டவர். நனவிலும் கனவிலும் பரந்தாமனே. அதனாலே நாச்சியார் ஆண்டாளைப் போல திருமேனியை கனவிலும் காணும் ஆழ்வார், கண்டேன் திருமேனி யான் கனவில்; ஆங்கு அவன் கைக் கண்டேன் கனலும் சுடர் ஆழி; - கண்டேன் உறு நோய் வினை இரண்டும் ஓட்டு வித்து, பின்னும், மறு நோய் செறுவான் வலி. என்கிறார். கனவில் திருமேனியின் பொலிவு கண்டார். அவர் கைகள் கண்டார், அதில் மின்னும் ஆழி கண்டார். இத்தனை கண்ட பின் பாபமோ புண்ணியமோ வருத்துமோ! புண்ணிய பாபமும், ஜன்ம ருசி வாசனைகளும் அகன்றன என்கிறார். கனவின் காட்சியில் இத்தனை நலம் நல்கக் கூடியவனின் பெருமையைக் கண்டாராம். பித்தம் தெளியாமல் உழலும் நம் மேல் கருணை கொண்டு, நமை நல்வழிப்படுத்தும் அறிவுரைகளைக் கூறுகிறார். பின்னல் அரு நரகம் சேராமல், பேதுறுவீர்! முன்னால் வணங்க முயல்மினோ - பல் நூல் அளந்தானைக் கார்க்கடல் சூழ் ஞாலத்தை எல்லாம் அளந்தான் - அவன் சேவடி. அவன் சேவடியை இறுகப் பற்றுங்கள். யாரை? மறைகளும், அறவழிகாட்டும் சாஸ்திரங்களை உரைக்கும் நூல்களும் அறுதியிட்டுக் கூறும் ஆபத்சகாயனும், கடல் சூழும் உலகெலாம் அளந்த உலகளந்த திருமூர்த்தியான ஸ்ரீமன் நாராயணின் சேவடியை பற்றுங்கள் என்கிறார். எதற்கு? மூப்பு எய்தி உடல் உகுத்த பின்னர், நரகத்தில் விழாமல் இருப்பதற்கு, இப்போதிருந்தே அவன் திருவடியை பற்றியிருக்கும்படி வழிகாட்டுகிறார். ॐ ॐ ॐ ॐ ॐ ॐ ॐ ॐ ॐ பேயாழ்வார் திருமயிலை கிணற்றில் சிவந்த அல்லிமலரில், மஹாவிஷ்ணுவின் நந்தகம் என்ற வாளின் அம்சமாக தோன்றியவர். திவ்யப்பிரபந்த பாடல்களில் ‘மூன்றாம் திருவந்தாதி’ இவரது புகழ் கூறும். சிவனும் ஹரியும் ஒன்றென இவர் தரிசித்ததாக கூற்று. சைவ வைணவ ஒற்றுமைக்கு வித்திட்ட பெரும்பங்கும் இவருக்கு உண்டு. தாழ்சடையுடையவனே என்று எம்பெருமானார் சிவனாரை திருஞான சம்பந்தர் பாடியுள்ளபடியே பேயாழ்வாரும் தாழ்சடை என்று குறிப்பிடுகிறார். தாழ்சடையுடைய சிவனாரும், நீள் முடிகொண்ட ஸ்ரீ விஷ்ணுவும், ஒரு மழு தாங்கிய ஈசனும், சக்கரத்தை கையிலேந்திய பரந்தாமனும், அரவை கழுத்தில் சூடிக்கொண்ட சங்கரனும், பொற்கயிற்றை தரித்த நாராயணனும், அருவிகள் சூழ்ந்த எழில்மிகு திருமலை மேல், ஆழ்வாருக்கு ஒருங்கே தோன்றி சங்கர-நாராயணராக, ஹரி-ஹரனாக ஓர்வடிவம் தாங்கி இசைந்து நின்ற காட்சி கண்டு உருகி நிற்கிறார். “தாழ்சடையும் நீண்முடியும் ஒண்மழுவும் சக்கரமும் சூழரவும் பொன்னாணும் தோன்றுமால்- சூழும் திரண்டருவி பாயும் திருமலைமேல் எந்தைக்கு, இரண்டுருவு மொன்றாய் இசைந்து” (மூன்றாம் திருவந்தாதி பாசுரம்) இறைவன்பாற் கொண்ட பக்தியால் தமை மறந்த நிலையில் இருந்தார். கண்களை உருட்டி அழுதும் சிரித்தும் பிதற்றியும்(உலகத்தோர் பார்வைக்கு), ஆடியும் பாடியும் மகிழ்ந்திருந்ததனால் பேயாழ்வார் என்று அழைக்கப்பட்டார். தன்னை நாயகியாகவும் பெருமாளை நாயகனாகவும் நினைந்துருகி பாசுரம் பாடி ப்ரேமை-பக்தியினைக் கொண்டாடியுள்ளார். “திருகண்டேன் பொன்மேனி கண்டேன்” எனும் பாசுரத்தில் தாயாரையே முதலில் கண்டதாக அவரையே திரு என்று விளிக்கிறார். திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன் திகழும் அருக்கன் அணிநிறமும் கண்டேன் - செருக்கிளரும் பொன்னாழி கண்டேன் புரிசங்கம் கைக்கண்டேன் என்னாழி வண்ணன்பால் இன்று பொன்மேனியும், அதில் திகழும் சூரிய தேஜஸும், ஒளியும், யுத்தம் முழங்குமிடத்தில் சீறியெழும் சங்கும், சக்கரமுமாக கடல்வண்ணனை சேவித்தார். திவ்ய தரிசனத்தில் அவருக்கு முன்னே தெரிந்தது திரு என்ற தாயாரின் திருவெழில் தான். தாயார் கருணையே ஆழ்வாரை முதலில் ஆட்கொண்டது. முதலாழ்வார்களின் சந்திப்பு நிகழ்வு: எம்பெருமானின் பாஞ்சசன்யம், (Gha)கதை, மற்றும் வாளின் அம்சமாக அவதரித்த முதன் மூவரின் பெருமையை உலகறியச் செய்ய திருவுள்ளம் கொண்ட ஜகன்னாதன், ஒரே இடத்தில் மூவரையும் சந்திக்க்ச் செய்து விளையாடல் புரிந்தார். தனித்தனியே அரங்கனைப் பாடிக் கொண்டிருந்த மூவரும், திருக்கோவிலூர் பெருமாளை சேவித்து மகிழ்ந்திருந்த வேளை, பல நூற்றாண்டுகளுக்கும் அழியாமல் பேசப்படும் பெருமைவாய்ந்த நிகழ்வொன்றை நடந்திக் காட்டினார். முப்பெரும் ஆழ்வார்களுக்கும் அதுவரை ஒருவரை ஒருவர் கண்டதில்லை. திருநாளொன்றில் பொய்கை ஆழ்வார் திருக்கோவிலூர் பெருமாளை தரிசித்துச் செல்கையில் பெருமழை பிடித்துக் கொண்டது. நல்ல மழைக்காலம். திருக்கோவிலூரில் தென்பட்ட ஆசிரமத்தின் குடிலில் அடைக்கலம் புகுந்தார் பொய்கையாழ்வார். . ஒருவர் படுத்துறங்கும் அளவே இடமிருந்தது. படுத்திருந்தவரிடம் சற்றைக்கெல்லாம், மழைக்கு ஒதுங்க இடம் வேண்டி பூதத்தாழ்வாரும் வந்து சேர்ந்தார். முகமன் கூறி வரவேற்று இடமளித்தார் பொய்கையார். ஒருவர் படுக்கவோ அல்லது இருவர் அமரவோ இடமிருந்த இடைகழியில் இருவரும் அமர்ந்திருந்து பெருமாளை நினைந்திருந்தனர். அடுத்த சில நிமிடங்களில் பேயாழ்வாரும் அங்கே அடைக்கலம் நாடி வந்த்தும், மனமுவந்து இருவரும் அவருக்கு இடமளித்தனர். மூவர் இறுக்கிக் கொண்டு நிற்க மட்டுமே போதுமான இடமிருந்தது. பெருமாளின் திவ்ய நாமத்தையும் பெருமைகளையும் நினைந்துருகி நின்றிருந்தனர். பொழுது சாய்ந்து, மழையால் பெரும் இருள் சூழ்ந்தது. மழையோ இன்னும் வலுக்கத் துவங்கியது. ஒருவரின் முகம் இன்னொருவருக்குத் தெரியவில்லை. திடீரென நாலாவதாக இன்னொருவர் அதே திண்ணையில் தங்கியிருந்து நெருக்குவது போன்ற உணர்வு மூவருக்கும் ஏற்பட்டது. தங்களுடன் யாரோ இன்னொருவரும் சேர்ந்திருக்கிறார் என்று மூவருக்கும் ஐயம் தோன்றியது. திருவிளக்கு ஏந்தி வந்திருப்பது யாரென்று காணும் வழியும் இல்லை. மெய்ஞானம் நிரம்பப்பெற்ற ஞானிகளாயிற்றே மூவரும்! ஆதனால், முதலாமவர் உலகத்தை அகல்விளக்காக்கி, கடலை நெய்யாக்கி கதிரவனின் ஒளிவிளக்கேற்றினார். இரண்டாமவர் அன்பை அகலாக்கி, கொண்ட ஆர்வத்தை எண்ணையாக்கி, தமது ஒருமுக சிந்தையால் ஞானமெனும் சுடர் விளக்கேற்றினார். மூவருக்கும் அங்கே பெருமாள் தனது திவ்ய தரிசனம் தந்தார். வந்திருப்பது இறையென்று அறிந்தனர். மூன்றமவரோ திருகண்டு, பொன்மேனி கண்டதை பாடியுருகினார். அச்சிறு ரேழியில் நாலாமவராக இறைவன் நெருக்கி நின்று இவர்களுக்கு காட்சி தந்தருளினார். இறைவனுக்கு அவ்விடத்திலேயே மூவரும் பாமாலை சூட்டி மகிழ்ந்தனர். அப்படித் தான் பிறந்தன முதல் மூன்று பாசுரங்கள். முதலாழ்வார்கள் மூவருக்கும் திருப்பிரசாதமாக இந்த நிகழ்வு அமைந்தது. பின்னர் தனித்தனியே பல திருத்தலங்களுக்கும் சென்று பெருமாளை தரிசித்து, முதலாம் இரண்டாம் மூன்றாம் திருவந்தாதிகளை மாலைகளாகத் தொடுத்து, பலகாலம் இறைவனைத் துதிபாடி மகிழ்ந்தனர். ॐ ॐ ॐ ॐ ॐ ॐ ॐ ॐ ॐ[]{#_திருமழிசை_ஆழ்வார் .anchor} திருமழிசை ஆழ்வார் ஸ்ரீமன் நாராயணனின் சுதர்சன சக்கரத்தின் அவதாரமாக கொண்டாடப்படுகிறார் திருமழிசை ஆழ்வார். பார்கவ முனிவருக்கும் கனகாங்கி என்ற தேவமங்கைக்கும் பிறந்த சிசு, அங்கங்களின்றி, பிண்டமாகப் பிறந்த வேதனையில் அதனை துறந்தனர். குழந்தையை மூங்கில் புதரில் வைத்துவிட்டு இறைவன் திருச்சித்தம் ஈதெனவே தேற்றிக் கொண்டனர். பெருமாளின் திருவுள்ளத்தை யாரே அறிவார்! குழந்தையைத் துறந்து சென்ற பிறகு, அங்கே பெரும் அதிசயம் ஒன்று நிகழ்ந்தது. இறைவன் திருவருளால், அக்குழந்தை கைகால்கள், அங்கங்கள் வரப்பெற்று, திவ்யத்துவம் வாய்ந்த குழந்தையாக உருவாகி மின்னியது. உருபெற்ற குழந்தை தன் தாய் தந்தையரைத் தேடி பெரும் குரலெடுத்து அழுதது. அவ்வழியே வேலை நிமித்தமாக சென்ற திருவாளன் என்பவர் இந்த திவ்ய குழந்தையை கண்டெடுத்து, அளவிலா மகிழ்ச்சியுடன் வீடு செல்கிறார். அவர் மனைவி பங்கஜவல்லி உச்சிமுகர்ந்து பிள்ளையை அள்ளி அணைக்கிறார். தாய்மையின் பெருமை பூரிக்க அவருக்கு பால் சுரக்கிறது. மேலும் விந்தைகள் தொடர்ந்த வண்ணம் இருந்தன. குழந்தைக்கு பால் புகட்டினால் உட்கொள்ள மறுத்தது. பாலுண்ண மறுத்ததும் மேனி துவளாது ஆரோக்கியமாக வளர்ந்து வந்தார் நம் திருமழிசை ஆழ்வார். இவரது பெருமை அக்கம் பக்கத்து ஊர்களிலெல்லாம் பரவியது. அதிசய குழந்தை, தெய்வக் குழந்தை என்று கொண்டாடப்பட்டார். அச்செய்தி அறிந்த முதிய வேளாளர் தம்பதியினர் அன்பின் மிகுதியால், அன்றாடம் குழந்தைக்கு பாலமுதளிக்க விரும்பினர். அதுவரை பால் உண்ணாத ஆழ்வார், இத்தம்பதியர் அளித்த பாலை விருப்பத்துடன் உண்டார். குழந்தை பால் உண்பதைக் கண்டு திருவாளன் தம்பதியினரும் மிகுந்த ஆனந்தம் அடைந்தனர். அன்புடன் அளித்த பாலமுதை உண்டவர், அத்தம்பதிக்கு தக்க கைமாறு செய்ய எண்ணினார். அவருக்கு அளித்த பாலின் மீதத்தை தம்பதியர் அருந்துபடி செய்தார். பாலையருந்திய தம்பதியர் முதுமை நீங்கி இளமை பெற்றனர். பாலை அருந்திய பெண்மணிக்கு பிள்ளை பேறு உண்டாயிற்று. அவர்கள் பிள்ளையை கனிக்கண்ணன் என்று பெயரிட்டு வளர்த்தனர். சிறிது வருடங்களில் கனிக்கண்ணன் ஆழ்வாரின் சீடரானார். ஆன்மீக தாகம் கொண்டு பல மதங்களையும் அதன் வழிமுறைகளை, நெறிமுறைகளை அலசி ஆராய்ந்த பின் சைவத்தை தழுவியிருந்தார் திருமழிசை ஆழ்வார். முதன் மூவரில் ஒருவரான பேயாழ்வாரை தரிசனம் செய்த பாக்கியத்துடன், அவரிடம் திருமந்திர உபதேசம் பெற்ற பின், வைணவம் தழுவினார். காஞ்சியில் தனது ஆசிரமத்தில் பணிசெய்து வந்த மூதாட்டிக்கு இளமை அருளினார். அவளை மணந்த பல்லவ மன்னன், தனக்கும் இளமை வேண்டுமென ஆழ்வாரின் சீடரான கனிக்கண்ணனிடம் கோரிக்கை வைக்க, அதனை மறுத்ததால் வெகுண்ட மன்ன்ன், கனிக்கண்ணனை ஊரை விட்டு ஒதுக்கி வைக்க ஆணையிட்டார். சீடனில்லா ஊரில் தாமும் இருக்கவேண்டாமென அவருடன் புறப்பட்டார் ஆழ்வார். கூடவே அங்கு பள்ளி கொண்ட பெருமாளை நாகப்பாயைச் சுருட்டி தங்களுடன் வரப் பணித்தார். “கணிகண்ணன் போகின்றான் காமரு பூங்கச்சி மணிவண்ணா! நீ கிடக்க வேண்டா - துணிவுடைய செந்நாப் புலவன்யான் செல்கின்றேன் நீயுமுன்றன் பைந்நாகப் பாய் சுருட்டிக் கொள்!!” என்றாராம். உடனே பெருமாளும் சரியென்றே தலையசைத்து உடன்புறப்பட்டதாக சரித்திரம். பெருமாள் புறப்பட்டதும், ஸ்ரீதேவியாரும் புறப்பட்டு விட, நகரம் வளமிழந்து இருள் சூழ்ந்தது. தவறிழைத்ததற்கு மன்னனும் மிக வருந்தி இருவரையும் அழைக்கவே, கூடவே பெருமாளையும் தம்முடன் மீண்டும் அழைத்து வந்தார் வீட்டார் திருமழிசை ஆழ்வார். “கணிகண்ணன் போக்கொழிந்தான் காமரு பூங்கச்சி மணிவண்ணா! நீ கிடக்க வேண்டும் - துணிவுடைய செந்நாப் புலவனும் போக்கொழிந்தேன் நீயுமுன்றன் பைந்நாகப் பாய் படுத்துக் கொள்!!!”. என்றதும் இவர்களுடன் பெருமாளும் காஞ்சியில் எழுந்தருளினார். ஆழ்வார் பெருமாளிடம் செலுத்திய அன்பின் ஆழமும் ஆதிக்கமும் தான் என்னே! எவ்வளவு அன்பு மாறா பக்தி பரந்தாமனிடம் கொண்டிருந்தால், பெருமாள் ஆழ்வார் சொன்னபடியெல்லாம் கேட்டிருப்பார்! அழ்வார் சொன்ன வண்ணம் பெருமாள் செய்ததால், ‘சொன்ன-வண்ணம் செய்த-பெருமாள்’ என்று வழங்கப்படலானார். கனிக்கண்ணனும், ஆழ்வாரும், பெருமாளும் ஒரு இரவு தங்கியிருந்த இடம் ’ஒர் இரவு இருக்கை’யாகி பின்னர் ஓரிக்கையானது. இவர் எழுதிய நான்முகன் திருவந்தாதி மற்றும் திருச்சந்த விருத்தம் திவ்யபிரபந்தத்தில் இடம்பெற்றுள்ள முத்துக்கள். வைணவத்தை தழுவிய பின், திருமழிசை ஆழ்வார் பெருமாளை ஒருவரையே உயர்த்திப் பிடித்தார். “இனி அறிந்தேன் ஈசற்கும் நான்முகற்கும் தெய்வம் இனி அறிந்தேன் எம் பெருமான் உன்னை இனி அறிந்தேன் காரணன் நீ கற்றவை நீ கற்பவை நீ நல் கிரிசை நாரணன் நீ நன்கு அறிந்தேன் நான்” சிவனுக்கும் பிரம்மனுக்கும் தெய்வம் யார் என்று அறிந்து தெளிந்தேன் என்கிறார். உன்னைப் பற்றி உணர்ந்ததால், நீயே உலகத்தின் முழுமுதல் பொருள் , நீயே காரணன் என்று அறிந்தேன். கற்றவையும், இனியும் கற்கப் போகிற எல்லாமும் நாரணன் என்றே அறிந்தேன் என்று உயர்த்திக் கொண்டாடுகிறார். பலகாலம் பெருமாளைக் கொண்டாடி திருத்தலங்கள் பலவற்றைப் பாடிக் கொண்டாடி, சிறப்பானதொரு பிறப்பை நீண்டு வாழ்ந்திருந்து, பின்னர் பெருமாள் திருவடி சேர்ந்தார். ॐ ॐ ॐ ॐ ॐ ॐ ॐ ॐ ॐ நம்மாழ்வார் வைணவப் பெருமக்கள் பெரிதும் கொண்டாடும் ஆழ்வார்களுள் ஒருவரும், அனைவராலும் பிரியத்துடன் நம்மாழ்வார் என்றழைக்கப்படும் இவரது இயற்பெயர் மாறன். வம்சா வழியில் சிற்றரசு மரபினரான பொற்காரியாருக்கும், சேர இளவரசியான உடையநங்கைக்கும் மகனாக திரு அவதாரம் செய்தார். பிறந்த குழந்தைகளுக்கு உச்சந்தலையில் சடம் என்ற காற்று பட்டவுடன் ஜன்மாந்திர நினைவுகள், தொடர்புகள் அனைத்தும் மறந்து போகும். சடம் என்ற காற்று தலையைத் தீண்டுவதாலேயே முதன்முதல் பிறந்த பச்சிளம் பிள்ளைகள் அழுவதாக சொல்லுவதுண்டு. பிறக்கும் க்ஷணத்திலேயே இக்காற்றை வலிமையுடன் வெற்றி கண்டு ‘சடகோபன்’ என்ற பெயர் பெற்றார். பாலுண்ணாமல் இயற்கை உந்துதல்கள் ஏதுமின்றி ஞானத்துடன் ஒளிர்ந்தார். இவர் தோன்றிய இடம் திருக்குருகூர். காரியார் மற்றும் உடைய நங்கைக்கு திருமகனாய் அவதரித்தத இவர் ‘விஷ்வக்சேனரின்’ அம்சம் என்பது பக்தர்கள் நம்பிக்கை. பதினாறு ஆண்டுகள் திருக்குருகூர் புளியமரத்தின் அடியில் அருந்தவம் புரிந்தவண்ணம் இருந்தார். ராமாவதாரத்தின் இறுதிகட்டத்தின் போது ராமனின் சொல்லை செயல்படுத்தாததால் இலக்குவனின் அம்சம் புளியமரமாக தோன்றியதென்றும், அதன் பொருட்டே நம்மாழ்வாராக ராமனே தரிசனம் அளித்து சாபம் நீக்கினார் என்றும் வரலாறு உண்டு. மதுரகவியாழ்வார் இவரது அன்புக்குரிய சீடர். மதுரகவியாழ்வார் யாத்திரை செய்தபோது தென்திசையிலிருந்து புறப்பட்ட பேரொளியைத் தேடி, இறுதியில் அது நம்மாழ்வாரின் ஞானஒளி என்று தெளிந்தார். நம்மாழ்வாரை ஞானத் தவத்திலிருந்து எழுப்ப கல்லை கீழெறிந்தார். அது எழுப்பிய ஒலியால் தவத்திலிருந்து விழித்தார் நம்மாழ்வார். “செத்தது வயிற்றில் சிறியது தோன்றின் எத்தை தின்று எங்கே கிடக்கும்” என்று மதுரகவியாழ்வார் கேட்கிறார். அதுவரை பேசாதவர் நம்மாழ்வார், முதன் முறையாய் திருவாய் மலர்ந்து “அத்தைத் தின்று அங்கே கிடக்கும்” என்று பதிலுறைத்தார். நம்மாழ்வாரில் தாம் தேடிய குருவைக் கண்டார் மதுரகவியாழ்வார். செத்தது என்பது ஜட உடலைக் குறிக்கும். அவ்வுடலில் சூலுற்று பிறக்கும் ஜீவன் சிறியது. அந்த ஜீவனாகப் பட்டது எதை உண்டு (எதனால் இங்கு ஜீவிக்கிறது என்பது பொருள்) எங்கே இருக்கும், என்பதை கேள்வியாக்கியவருக்கு,… “அத்தைத் தின்று அங்கே கிடக்கும்” என்று பதிலுறுத்தார். அதை (அத்தை) என்பது அவரவர் செய்த வினையைக் குறிக்கும். வினையை உண்டு வினைப்பயனாய் பிறந்து, அது தீரும் வரை அவரவர் பிறந்து உழன்று அந்தந்த உலகில் (அங்கே கிடக்கும்) இருப்பர் என்பது பொருள். முப்பத்தியைந்து பிராயங்களே மண்ணில் வாழ்ந்தார் எனினும், பக்தர்கள் உய்யும் பொருட்டு அவர் பாடிய பாடல்கள் ஏராளம். ஆச்சாரியர் நம்மாழ்வார் பாடப்பாட மதுரகவியார் அதை எழுத்தில் வடிக்கிறார். திருப்பேர் நகரில் ஆழ்வார் முக்தி எய்தினார் என்பது நம்பிக்கை. நம்மாழ்வாரால் கடைசியாக பாடப்பட்ட பெருமாள் இவரே. திருவாய்மொழியால் பெருமாளைப் பாடி சதாசர்வ காலமும் பரந்தாமனையே சிந்தையில் சுமந்தவரை பெருமாள் ஸ்ரீவைகுண்டம் அழைத்துச் சென்றார் என்று வைணவ நூல்கள் கூறுகின்றன. கலியுகத்தில் அதுவரை எவரும் நேரே ஸ்ரீவைகுண்ட பரம்பதத்தை அடைந்தாரில்லை. இவருக்காக முதன் முறை கலியுகத்தில் பரமபதவாசல் திறக்கப்பட்டது. ஆழ்வார் பெருமான், பாமரர்களான நம்மீது பெருங்கருணை கொண்டு, ‘பக்தர்கள் பெருமாள்மேல் பற்றுகொண்டு செலுத்தும் பக்திக்கு இணங்கி பரமபத வாசலை திறக்க வேண்டும்’ என்று வைகுந்தவாசனிடம் விண்ணப்பிக்க, அதற்கு இணங்கிய மாதவன், மார்கழி சுக்லபட்ச ஏகாதசியில் சொர்கவாசல் திறக்கும்படி அருளினார். அதனைத் தொடர்ந்து இன்றும் ‘வைகுண்ட ஏகாதசி’ பெருவிழா அனைத்து பெருமாள் கோவில்களிலும், குறிப்பாக ஸ்ரீரங்கத்தில் பெரும் வைபவமாக நம்பிக்கையுடன் அனுசரிக்கப் பட்டு, ஆன்மீக பெருமக்களால் சிறப்பாக கொண்டாடப் படுகிறது. நம்மாழ்வார், திருவாய்மொழி, திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவிருத்தம் என்ற நூல்களைப் பாடியுள்ளார். திவ்யப் பிரபந்த்த் தொகுப்பில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட (1296) பாடல்கள் இவருடையதே ஆகும். மிகப்பெரிய தத்துவங்களை எளிமையாக்கி நமக்கு ஊட்டியிருக்கிறார். சான்றுக்கு :: ஆணல்லன்; பெண்ணல்லன்; அல்லா அலியுமல்லன் காணலும் ஆகான்; உளன்அல்லன்; இல்லை அல்லன் பேணுங்கால் பேணும் உருவாகும்; அல்லனுமாம் பரம்பொருள் ஆண் என்றும் பெண் என்றும் கொள்ளுதற்கு இல்லை. அவன் அலியும் அல்ல. அவனைக் காணபதற்கும் இயலாது. பெரும் சூட்சுமமாக இயங்குபவனை உள்ளவன் என்று சொல்லிவிட முடியாது, அவனை இல்லை என்று மறுத்துக் கூறவும் ஆகாது. அவன் திருச்சித்தம் இணங்கும் போது உருவம் கொண்டு தோன்றுவான். தோன்றாமலும் இருப்பான். இப்படியொரு தத்துவத்தை எளியதமிழில் கூறுபவரை ‘நம்முடைய ஆழ்வார்’ என்று உணர்ந்து ‘நம்மாழ்வார்’ என்று பிரியத்துடன் போற்றிக் கொண்டாடுவதே நமக்குப் பெருமை! ॐ ॐ ॐ ॐ ॐ ॐ ॐ ॐ ॐ குலசேகர ஆழ்வார் ஒவ்வொரு ஆழ்வாரும் வெவ்வேறு தனித்துவத்துடன் விளங்கினாலும் நாராயண பக்தி ஒன்றே அனைவரையும் ஓரிழையில் இழைத்து ஆழ்வார்கள் என்ற மாலையில் பூக்களாக திகழச் செய்கிறது. குலசேகர ஆழ்வார், கேரளாவிலுள்ள கருவூரில் (கொல்லிநகர்) ஸ்ரீராமனின் அவதார நட்சத்திரமான புனர்பூசத்தில் அவதரித்தார். கௌஸ்துப மணியின் திருவம்சமாக கொண்டாடப்படுகிறார். வாழ்ந்த காலம் எட்டாம் நூற்றாண்டு என நூலேடுகள் உரைக்கின்றன. புனர்பூச நட்சத்திரத்தில் பிறந்து முறையே ராமபக்தியே தம் பிறப்பின் இலக்காக வாழ்ந்தவர். சங்ககால சேரர், சந்திர குலத்து அரச வம்சத்தவர். சிறந்த முறையில் நீதி வழுவாமல் ஆட்சி செலுத்தி தமது எல்லையையும் விரிவு படுத்தியவர். பகவானிடம் பக்தி கொண்டு, அவன் அடியார்களிடமும் அளவிலா பணிவு கொண்டு, உதவிகள் புரிந்து வந்தார். நாட்களும் வருடங்களும் உருண்டோட, இகவாழ்வில் கட்டுண்டு பகவானை முழுவதுமாக நினைக்க முடியவில்லை என்ற ஏக்கம் அவருக்கு மேலிட்டது. ராமகாதை எங்கு நடந்தாலும் அங்கு சென்று, கதைகேட்டு மகிழ்ந்தார். அதில் வரும் ஒவ்வொரு சம்பவங்களையும் ஆழ்மனதில் உள்வாங்கி, பக்தி மேலிட சம்பவம் நடந்த யுகத்திற்கே சென்று, ராமவதாரக் கதைகளின் ரசத்தில் திளைத்து தமையே மறந்தார். ராமக்கதையின் பாத்திரமாகவே தனை உணர்ந்தார். பெருமாள் திருமொழியில், கொங்குமலிகருங்குழலாள் கௌசலைதன்குலமதலாய் தங்குபெரும்புகழ்ச்சனகன் திருமருகா! தாசரதீ கங்கையிலும் தீர்த்தமலி கணபுரத்தென்கருமணியே எங்கள் குலத்தின்னமுதே இராகவனே! தாலேலோ. என்று தாயாகவே தனயனைத் தாலாட்டுகிறார். சுகந்த கூந்தலையுடைய கோசலையின் குலக்கொழுந்தை, ஜனகன் மருமகனை, தசரதன் புத்திரனை, கங்கையை விட புனித நீர் தீர்த்தங்கள் நிறைந்த கண்ணபுரத்தில் எழுந்தருளும் எங்கள் குலத்து அமுதே என்று ராகவனை கோசலையாகவே மாறித் தாலாட்டுகிறார். இராமன் தனியே அரக்கர்களுடன் போரிட்ட கதையை கேட்டதும் எம்பிரானுக்கு என்ன நேருமோ என்று கலக்கம் கொண்டு தம் படையனைத்தையும் திரட்டி கடற்கரையில் முற்றுகையிட்டு “ராட்சசர்கள் எங்கே எங்கே” என்று முழக்கமிட்டு, ராமனுக்கு உதவி செய்ய நின்ற வேளையில், ஸ்ரீராமபிரான் சீதாதேவி, லக்ஷ்மணன் சஹிதம் குலசேகர ஆழ்வாருக்கு காட்சியளித்து ஆட்கொண்டதாகவும் வரலாறு. சுற்றுசூழல் மறந்து ராமனிடம் ஈடுபாடு கொண்டிருந்ததால், அவரது ஆட்சியில் பின்னடைவு ஏற்படுமோ என்று அமைச்சர்கள் அஞ்சத் துவங்கினர். இடையறா பக்தியில் தமை இழந்தவரை, இம்மைக்கு இட்டு வர அமைச்சர்கள் திட்டம் தீட்டினர். பெருமாள் பக்தர் மேல் திருட்டுப் பழியை சுமத்தினால், மன்னரும் சுதாரிப்பார் என்று எண்ணியது தவறாகிப் போனது. குலசேகரத்தாழ்வாரோ, தானும் பாகவதன் என்பதால் தனக்கே அப்பழி சேரட்டும் என்றுரைத்து பக்தர்களின் பேரில் களங்கமில்லை என்பதை நிரூபிக்க, விஷப்பாம்புள்ள குடத்தில் தமது கையை அரவு தீண்டுதற்கு அளித்தார். பாம்பு அவரைத் தீண்டாமலிருந்து ஆழ்வாரின் களங்கமற்ற பக்திக்கு பெருமை சேர்த்தது. மக்கள் அரசரின் உயர்ந்த பக்தியை உணர்ந்தேத்தினர். இச்சம்பவங்களால் படிப்படியே அரச போகத்தையும், லௌகீக வாழ்வையும் வெறுத்து துறவு பூண்டார். அவரது மகள் அரங்கன் மேல் பெரிதும் பக்தியும் காதலும் கொண்டு திகழ்ந்து, ரங்கனையே மணமுடிக்க எண்ணியிருந்தார். குலசேகரவல்லி என்று பெயரிட்டு தம் மகளையும் அரங்கனுக்கே மணமுடித்தார். பெரியாழ்வாரைப் போல ரங்கநாத ஸ்வாமிக்கு பெண் கொடுத்தவர். இன்றும் திருவரங்கத்துக் கோவிலில், அரங்கனுடன் குலசேகர மன்னரின் மகளாகப் பிறந்த குலசேகரவல்லியும் சேவை சாதிக்கிறார். ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாளுக்கு முன்னமே ரங்கனை மணமுடித்தவர் குலசேகரவல்லி. பெருமாளுக்கு தாசன் என்றதால் இவரையும் ‘குலசேகர பெருமாள்’ என்று அழைக்கலாயினர். இவர் எழுதிய பிரபந்த மொழியும் ‘பெருமாள் திருமொழி’ என்றாயிற்று. தமிழ் மொழி மட்டுமின்றி வடமொழியும் நன்கு அறிந்தவர். வட மொழியில் ‘முகுந்தமாலை’ என்ற நூல் இவரால் இயற்றப்பட்டது. “அப்போதைக்கிப்போதே சொல்லிவைத்தேன்” என்று நமக்காகவே பாடிவைத்த பெரியாழ்வாரைப் போலவே, இவரும் முகுந்தமாலையில் மரணத்தருவாயில் உடலும் மனமும் தளர்ந்த நிலையில் உன்னை சிந்தை நிறுத்த இயலுமோ என்றஞ்சி இப்போதே சரணடைகிறேன் என்கிறார். க்ருஷ்ண! த்வதீய-பதபங்கஜ-பஞ்ஜராந்த- மத்யைவ மே விஶது மாநஸ-ராஜஹம்ஸ꞉ | ப்ராண-ப்ரயாண-ஸமயே கபவாத-பித்தை꞉ கண்டா- வரோதந-விதௌ ஸ்மரணம் குதஸ் தே || ஒருவேளை உடல் உகுத்து, ப்ராணன் வெளியேறும் நெரம், கபம், வாதம் பித்தம் அடைத்து, குரலிழந்து, நினைக்கும் ஸ்மரணையின்றி இறைவனை நினைக்காது போய்விட்டால் என்ன செய்வது என்றஞ்சி, தனது மனம் எனும் ராஜஹம்சம் உடனுக்குடன் அப்போதே திருமால் திருவடி சேரட்டும் என்றுரைக்கிறார். ஒரு ஹம்சப் பறவையானது எப்படி நீரை விடுத்து பாலுண்ணுமோ அப்படிப் பட்ட ராஜஹம்சம் அவரது மனம். லௌகீகத்தை விடுத்து பரம்பதத்தை நாடும் தெளிந்த மனம். ’படியாய் கிடந்து உன் பவளவாய்க் காண்பேனே" என்று பெருமாளின் படியாகவே கிடக்க விரும்பிய இவரை ஏத்தி, ஸ்ரீவிஷ்ணு கோவில்களில் பெருமாள் கர்பக்கிரகத்துக்கு உள் செல்லும் படியை இவரது பெயரால் “குலசேகரன் படி” என்று அழைக்க்கப்படுவதன் மூலம் இவர் பெருமையை உணரலாம். பல புனித்த்தலங்களுக்கு சென்று பெருமாள் புகழ் பாடியவர், மன்னார் கோவிலில் வைகுந்தனுக்கு பணி செய்தபடி, இறுதி காலங்களில் அங்கேயே தங்கி, முக்தி அடைந்தார். ॐ ॐ ॐ ॐ ॐ ॐ ॐ ॐ ॐ மதுரகவியாழ்வார் பாண்டிய நாட்டின் திருக்கோளூரில் ஒன்பதாம் நூற்றாண்டு பிறந்தவர் மதுரகவியார். நம்மாழ்வாருக்கு முன் பிறந்தவர். அவர் பரம்பதம் அடைந்த பின்னரும் வாழ்ந்தவர். செவிக்கும் உள்ளத்துக்கும் இனிக்கும் கவிதைகள் படைத்தமையால் காரணப்பெயராக மதுரகவி என்றழைக்கபட்டார். கருடனின் அம்சமாக அவதரித்த மதுரகவியாழ்வார், வடமொழிப் புலமையும் கைவரப் பெற்றிருந்தார். உலக விஷயங்களில் நாட்டமில்லாதவராகவும், நாராயண பக்தி கொண்டவராகவும் சிறுவயது முதல் திகழ்ந்தார். வட நாட்டு யாத்திரைக்கு சென்றவரை பேரொளி ஒன்று ஈர்த்தது. ஒளியின் திசையை கண்டுணர்ந்து அதனைத் தொடர்ந்தவர் நம்மாழ்வாரை அடைந்தார். தமது ஆறாத் தாகத்தை கேள்வியாக்கினார். நம்மாழ்வாரின் திருவாய் மொழிந்த விடையே பெருந்திருப்தி அளித்து நம்மாழ்வாரை குருவாக ஏற்கப்பணித்தது. தத்துவங்கள் யோக ரகசியங்கள் அனைத்தும் குருவிடம் கற்றுத்தெளிந்தார். “கண்ணி நுண் சிறுத்தாம்பு” என்ற பதிகத்தை தம் குருவுக்கு பாமாலையாக்கினார். அதில் பதினொரு பாசுரங்கள் உள்ளன. இவை திவ்யப் ப்ரபந்தத்தில் இடம் பெற்றுள்ளன. நம்மாழ்வாரின் முதன்மை சீடராக திகழ்ந்து அவர் புகழ்பரப்பினார். குருவின் மீது கொள்ளும் பெரும் பக்திக்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்தார். திருவாய்மொழியை நெறிப்படுத்தினார். குருவுக்கு செய்யும் சேவையில் இறைவனைக் கண்டார். நம்மாழ்வார் பக்தியில் ஆழ்ந்து பெருமாளின் குணங்களை இயம்பும் போதே, மதுரகவியாழ்வார் அதை ஒலைப்படுத்தியவர் என்பதால் நம்மாழ்வார் பாசுரங்களை ஓலைப்படுத்திய பெருமையும் மதுரகவியாழ்வாரையே சாரும். பரவசத்தில் நம்மாழ்வார் அவ்வப்போது மயக்கமடைந்து விடுவார். மதுரகவியாழ்வார் அவர் மயகத்தை தெளிவித்து திருச்சேவை புரிவார். மதுரகவியாழ்வாரின் பாசுரங்களில் குருவை உயர்த்திப் போற்றும் பாசுரங்களை உணர்ந்து மகிழலாம். அவரது குருவான நம்மாழ்வரையே தெய்வமெனக் கருதி போற்றிவந்தார். பாசுரங்களால் குருவைத் துதித்தே இம்மையில் உய்ந்து மறுமையில் பரமனடி பற்றினார். நம்மாழ்வார் பரமபதத்திற்கு செல்லப் போவதை அறிந்தவர் பரிதவிக்கிறார். பிரிவை எண்ணி தவிக்கிறார். நம்மாழ்வாருடன் தானும் புறப்பட்டுப் போக தீர்மானிக்கிறார். ஆனால் குருவானவர் சீடருக்கு புவியில் இன்னும் கடமை இருப்பதை உணர்த்தியதும், நம்மாழ்வாரின் சிலைத் திருமேனியை தனக்கு தந்தருளுமாறு விண்ணப்பிக்கிறார் மதுரகவியாழ்வார். நம்மாழ்வாரும் தாமிரபரணி நீரைக் காய்ச்சினால் தமது திருமேனி கிடைக்கப்பெறும் எனக் கூறியருள்கிறார். நீரைக் காய்ச்சியதும் முதலில் ராமானுஜரின் திருமேனி வெளிப்பட்டது. ராமானுஜர் அப்போது அவதரித்திருக்கவில்லை ஆதலால் அடையாளம் தெரியாத மதுரகவியாழ்வார் சிலைத்திருமேனி நம்மாழ்வாரைப் போல் இல்லையே என்று ஐயம் தெரிவித்தார். எதிர்காலத்தில் வைணவத்தை தழைக்கச் செய்யும் ராமானுஜர் என வருங்காலத்தின் ஆச்சாரியத் திருமேனியை அறிமுகப் படுத்தி, மறுபடியும் நீரைக் காய்ச்சும்படி பணித்தார். நீர் காய்ச்சியதும் இம்முரை நம்மாழ்வார் திருமேனி வெளிப்பட்டது. சிலைத் திருமேனியில் தனது சக்தியை செலுத்திய பின் விண்ணுலகம் சென்றார். திருமேனியை ’ஆழ்வார் திருநகரி’யில் பிரதிஷ்டை செய்து, குருவின் பெருமையை உலகறியச் செய்தார் மதுரகவியார். அவரது பெருமைகளையும் அருமைகளையும் பாடிக்கொண்டே இருந்தார். சங்கப்பலகையில் ஏற்றாமல் நம்மாழ்வார் பெருமைகளை பாடக்கூடாது என்று சங்கப் புலவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ‘நம்மாழ்வாரை உயர்த்திப் பிடிப்பது சிறப்பன்று- அவரும் பக்தரே அன்றி பகவான் அல்ல’ என்று ஆட்சேபித்தனர். அவர்களின் செருக்கை, நம்மாழ்வார் பாடிய “கண்ணன் கழலிணை நண்ணும் மனமுடையீர்” என்ற பாசுரத்தின் முதலடியைக் கொண்டே வீழ்த்தினார். நம்மாழ்வரின் அருளுடன், கண்ணன் கழலிணை நண்ணும் மனமுடையீர் என்னும் திருநாமம் திண்ணம் நாரணமே! என்ற நம்மாழ்வாரின் பாசுரத்தை பலகையில் ஏற்றினார். கண்ணனின் கழலிணைகளின் மேல் பற்று கொண்டவர்கள் அவன் திருநாமத்தையே உச்சரித்தவாறு இருந்தால், திருநாம்ம் பக்தர்களை திருமால் இருப்பிடத்திற்கே இட்டு சென்று விடும் என்ற பொருள் பட எழுதிய நம்மாழ்வார் பாசுரத்தை. பலகை ஏற்றுக்கொள்ள, புலவர்களும் நம்மாழ்வாரின் பெருமையையும், மதுரகவியாழ்வாரின் பக்தியையும் உணர்ந்து, அதுமுதற்கொண்டு அவர்களும் நம்மாழ்வார் பெருமைகளை பாடியும் இயற்றியும் பரிகாரம் தேடினர். ‘கண்ணிநுண் சிறுத்தாம்பு’ என்ற பதிகம் மதுரகவியாழ்வாரால் பாடப்பட்டது. பதினொரு பாடல்கள் கொண்ட இப்பதிகம் நம்மாழ்வாரை ஏத்திப் பாடுகிறது. அப்பதிகத்தில் வரும் அடுத்த பாடல், நாவினால் நவிற்று இன்பமெய்தினேன் மேவினேன் அவன் பொன்னடி மெய்ம்மையே தேவுமற்றறியேன் குருகூர் நம்பி பாவின் இன்னிசை பாடித் திரிவனே நாவால் ஸ்தோத்திரம் செய்து இன்புற்றேன், அவன் பொன்னடி பற்றியே மேன்மையடைந்தேன். வேறு தெய்வமும் அறியேன் என் குருவாகிய குருகூர் நம்பி (நம்மாழ்வார்) இயம்பிய பாவின் இன்னிசையைப் பாடித் திரிவேன் என்கிறார். ஆச்சார்ய பக்திக்கு எடுத்துக்காட்டாக விளங்கியவர் மதுரகவியாழ்வார். குருவின் பெருமையை இன்னும் சில காலங்கள் போற்றிப் பாடிக்கொண்டே , பிறவிப்பயன் எய்தி, இறுதியில் ஆச்சார்யரான நம்மாழ்வார் திருவடிகளை அடைந்தார். ॐ ॐ ॐ ॐ ॐ ॐ ॐ ॐ ॐ பெரியாழ்வார் மல்லிநாடு என்றழைக்கப்பட்ட ஸ்ரீவல்லிப்புத்தூரில், முகுந்தபட்டருக்கும் பதுமவல்லிக்கும் பிறந்தவர் பெரியாழ்வார். இவரது இயற்பெயர் விஷ்ணுசித்தர். பெருமாளுக்கு சேவை செய்வதை சிறுவயது முதல் தலையாய நோக்கமாகக் கொண்டு வளர்ந்தார். ஸ்ரீவல்லிப்புத்தூரில் கோவில் கொண்டுள்ள வடபத்ரசாயிக்கு அன்றலர்ந்த நறுமலர்கள் சேகரித்து, பூமாலையாக்கி பக்தியுடன் சூட்டுவதை பெரும்பணியென்று ஏற்றிருந்தார் விஷ்ணுசித்தர். ஒரு முறை மதுரையை ஆண்ட மன்னவன் வல்லபத் தேவன் நகர் வலம் வரும் வழியில் திண்ணையிலிருந்த ஒரு வேதியரை தமக்கு நல்வார்த்தை சொல்லுமாறு பணித்தார். வேதியர், இரவுக்கு பகலிலும், முதுமைக்கு இளமையிலும், மறுமைக்கு இம்மையிலும் நிதி திரட்டவேண்டும் என்று திருவாய் மொழிந்தார். அவர் பகன்றதன் உட்பொருளை அமைச்சரிடம் கேட்டார் மன்னர். மன்னரின் இச்சந்தேகத்தை தீர்க்கும் வண்ணம் சான்றோர்கள் விளக்கம் தரட்டுமென எண்ணி, தக்க பதில் தருபவர்களுக்கு பொற்கிழி பரிசு என்றும் அறிவிக்கச் செய்தார் அமைச்சர். பெரியாழ்வார் இதுபற்றியெல்லாம் ஏதும் தெரியாமல் இறைப்பணி ஒன்றையே குறியெனக் கொண்டிருப்பவர். அவர் பெருமையை உலகம் உள்ளவரை உணரச் செய்யும் சித்தம் கொண்ட பரந்தாமன், பெரியாழ்வார் கனவில் தோன்றி. மன்னரின் சந்தேகத்தை தீர்க்கப் பணிக்கிறார். பெரியாழ்வாருக்கோ மிகுந்த தயக்கம். ‘சான்றோன் எனக் கூறும் அறிவுத் திறன் ஏதும் பெற்றவன் இல்லையே, நான் மிகுந்த எளியவன், என்னால் எப்படி முடியும்!’ என்று தயங்கினார். அதுபற்றிய கவலை அவருக்கு வேண்டாமன எடுத்துரைத்து சென்று வென்று வருமாறு ஆணையிடுகிறார் இறைவன். இறைவனின் ஆணையை சிரமேற்கொண்டு, மன்னனை அணுகிய விஷ்ணு சித்தர், பரத்திலுருக்கும் முதல்வன், ஸ்ரீ நாராயணனே என்று மேற்கோள் காட்டி வாதம் செய்து நிரூபித்தார். மேலே தோரணத்தில் கட்டப்பட்டிருந்த பொற்கிழி தானே இறங்கியதை கண்டு மன்னரும், மற்றவரும் வியக்க, இது இறைவன் திருவிளையாடல் என்றுணர்ந்த மன்னர் பெரியாழ்வாரையும் அவர் பெருமையையும் உணர்ந்து, பொற்கிழியை அவருக்கே பரிசளித்தார். பெரிதும் மகிழ்ந்த மன்னன் ‘பட்டர்பிரான்’ என்று பட்டம் சூட்டி யானையின் அம்பாரியின் மேலேற்றி நகர் முழுவதும் விஷ்ணுசித்தர் புகழையும் பெருமையையும் பாடியபடி வலம் வரச்செய்தான். கொள்ளையழகுடன் அமைந்த இக்காட்சியைக் காண சிவனாரும், இந்திராதி தேவர்களும் புடை சூழ வைகுந்தத்திலிருந்து பெருமாள், பிரட்டியுடன், கருடன் மீதமர்ந்து விஷ்ணுசித்தருக்கு காட்சியளித்தார். எம்பெருமான் அழகைக் கண்டு அவர் மேல் திருஷ்டிபட்டு விடுமோ என்றஞ்சினார். பெற்றவருக்கே உரிய பாசமும் அன்பும் மிகுதியாக, பெருமாளுக்கு திருப்பல்லாண்டு பாடி துதித்த்தார். பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பலகோடி நூறாயிரம் மல்லாண்ட திண் தோள் மணிவண்ணா! உன் சேவடி செவ்வி திருக்காப்பு . மல்லர்களை உன் தோள் வலிமையால் வென்ற மணிவண்ணனே, பலப்பல கோடி வருடங்கள், கோடி நூறாயிரம் வருடங்கள், தாமரையொத்த சிவந்த அழகிய உன் திருவடிகளுக்கு பாதுகாப்பு என்று நெகிழ்ந்துருகினார். பன்னிரெண்டு பாடல்களைக் கொண்ட இப்பாசுரங்கள் திருப்பல்லாண்டு என்று வழங்கப்பட்டு நாலாயிரப் பிரபந்தத்தில் இடம் பெற்றுள்ளது. பெற்றோருக்குரிய பிரியத்துடன், எங்கே எம்பெருமாளுக்கு கண்பட்டு விடுமோ என்று திருபல்லாண்டு பாடி வாழ்த்தியமையால், ஆழ்வார்களில் எல்லாம் பெரியோன் ஆகவே பெரியாழ்வார் என்று பெருமாளின் திருவாயால் அன்புடன் அழைக்கப்பட்டு, அதுவே ஆழ்வாரின் திருப்பெயராகிப் போனது. மன்னர் மரியாதையுடன் அளித்த பொற்கிழி, பொன் முதலிய செல்வத்தை கோவிலின் திருப்பணிக்கே அற்பணித்து மாலுக்கு சேவை செய்யும் சேவையை தொடர்ந்த வண்ணம் எளிய வாழ்வு வாழ்ந்தார். கண்ணன் மேல் தனிப்பெரும் காதல் கொண்டு அவன் பிறப்பு வளர்ப்பு நிகழ்வுகளை பெரியாழ்வார் திருமொழி என்ற பாசுரமாலைகள் ஆக்கினார். திவ்யப் பிரபந்தத்தில் இவர் பாடிய நானூற்றி அறுபத்தியொரு பாசுரங்கள் (திருப்பல்லாண்டு உட்பட) இடம் பெற்றுள்ளன. பெரியாழ்வார் பெற்றேடுத்த பெண்பிள்ளாய் என்று அன்புடன் அழைக்கப்படும் ஸ்ரீஆண்டாளும் பெரியாழ்வார் வாழ்வில் வரப்பிரசாதமாக திகழ்ந்தார். பெண்பிள்ளை வளர்ந்து அரங்கனையே மண முடிப்பேன் என்றதால் இப்படி நிகழவும் வாய்ப்பிருக்குமா என்று சற்றே கவலை கொண்டார். பின்னர் ஆண்டாளை பெருமாளுக்கு தாரை வார்த்துக் கொடுத்து அவரை மருமகனாக்கிக் கொண்டார். மறுமைக்கு இம்மையில் சேர்க்கவேண்டும் என்பதைப் பொல, ஆரோக்கியமாக இருக்கும் போதே பெருமாள் திருவடி பற்றியிருக்கிறேன், என் உடலை விட்டு உயிர் பிரியும் தருவாயில் உன்னை நினைக்கும் உடல்வலிமையும் மனத்தெளிவும் இருக்குமொ அறியேன் என்று பொருள் படுமாறு எய்ப்பு என்னை வந்து நலியும் போது அங்கு ஏதும் நான் உன்னை நினைக்க மாட்டேன்! அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன் அரங்கத்து அரவணைப் பள்ளியானே! என்று முன்னமே சொல்லிவைத்து, உயிர் பிரியும் தருவாயில் அரங்கனை வந்து தம்மை காக்கு வேண்டும் என்று வேண்டி நிற்கிறார். பெரியாழ்வார் தமது இறுதி காலத்தில் திருமாலிருஞ்சோலையில் முக்தி பெற்றதாக வரலாறு. பெருமாளுக்கும் பெருமாட்டிக்கும் தந்தையாகி, பல்லாண்டு பாடி, பூமாதேவியின் அம்சமான கோதையை வளர்த்து அரங்கனையே மருமகனாக்கிய பெரியாழ்வார் திருவடிகளைப் போற்றி வணங்குவோம். ॐ ॐ ॐ ॐ ॐ ॐ ॐ ॐ ॐ[]{#_ஆண்டாள் .anchor} ஆண்டாள் ஆண்டாளைப் பற்றி சிறு-குறிப்பு வரைதலும் சாத்தியமா? அவள் பெருமைகளை பேசவும் எமக்குத் திறன் போதுமோ! ஸ்ரீவல்லிப்புத்தூர் பெரியாழ்வாரால் கண்டெடுக்கப்பட்ட ரத்தினம் அவள். இறைவனால் பிரசாதமாக வழங்கப்பட்ட திருக்குழந்தை என்று தோன்றியதாலோ என்னவோ பெரியாழ்வார் தனது உதிரத்திலும் ஆன்மாவிலும் பெருக்கெடுத்தோடும் பக்தியை ஆண்டாளுக்கும் போதித்து வளர்த்தார். நாள்தோறும் பெருமாளுக்கு நறுமலர்கள் கொய்து, அதனை மாலையாகக் கோர்த்து, பெருமாளுக்கு சமர்ப்பிப்பதை அன்புச் சேவையாக செய்து வந்தவர் பெரியாழ்வார். ஒரு திருநாளன்று நந்தவனத்துக்கு சென்ற போது, மானிட உருவெடுத்து பெருமாளை பக்திசெய்து அடையும் நல்வழியை உலகத்தோருக்கு உணர்த்தும் பொருட்டு, துளசிச் செடியடியில் குழந்தையாக பூமாதேவி பிராட்டியாரே அவதரித்திருந்தார். ஆடிப்பூரத்தன்று சின்னஞ்சிறு குழந்தையாக துளசிச் செடியின் அடியில், கண்டெடுக்கப்பட்ட குழந்தையை, இறைவன் தனக்களித்த வரமாகக் கருதிய பெரியாழ்வார், பூங்குழந்தையவளை கோதையென்று பெயரிட்டு சிராட்டி வளர்த்தார். பாலுடன், தேனுடன், தினம் உண்ணும் அமுதுடன் ஸ்ரீ ஹரியின் நாமமும் புகட்டினார். நல்பக்தி கொண்ட திருக்குழந்தை, எம்பெருமானையே தன் உற்ற தோழனாகக் கொண்டாடினாள். தன்னையே மாயவனின் மனையாளாக பாவித்து, அவன் சூடும் மாலையை தான் சூடினால் பேரெழில் கூடிவிடுமோ என நினைத்து, இறைவனுக்கு பெரியாழ்வார் தொடுத்து வைத்திருந்த மாலையை தன் கழுத்துக்கு சூடி அழகு பார்த்தாள். இதனை கண்ணுற்ற ஆழ்வார் பதறினார். பக்திக்குக் களங்கமெனத் துடித்துக் கதறினார். சிறு பேதையின் தவறை மன்னித்து அருளும்படி எம்பெருமானிடம் வேண்டி வேறு மாலை தொடுத்தார். கோதையின் காதலை ஏற்ற கண்ணனோ அவள் சூடிய மாலை அல்லாது வேறு மாலை தனக்கு வேண்டாமென கனவில் வந்து ஓதினான். எளிய பக்திக்கு இறைவன் இரங்கியதை எண்ணியெண்ணி நெகிழ்ந்தார் பெரியாழ்வார். பூதேவியான ஆண்டாளின் பிறப்புரிமை அல்லவா பரந்தாமன்! முதலில் அவள் சூடி பின்னர் இறைவனுக்கு மாலை சூட்டியதால், அன்று முதல் ‘சூடிக்கொடுத்த சுடர்கொடி’ என்றறியப்பட்டாள். ஆண்டவனையே ஆண்டுவிட்டதால் ‘ஆண்டாள்’ என்பது எவ்வளவு பொருத்தம் ! பாவை நோன்பிருந்து, திருப்பாவை பாடினாள். பிராட்டியாரின் நோக்கமே மானிடம் உய்யவேண்டும் என்ற எண்ணாமல்லவா! தன்னுடைய வயதையொத்த தோழியரை பாவை நோன்பு நோற்க அழைக்கும் பாசுரங்கள் தேனினும் இனியவை. தோழிகளை கோபியர்களென எண்ணி அழைக்கிறாள். விரதமிருந்து, கண்ணனை தரிசித்து, வேண்டுவன பெற்று நோன்பு நோற்றதன் பலன் பெறுகிறார்கள். மார்கழி முப்பது நாளும் பாடப்படும் திருப்பாவை இன்றும் பெரிய வைபவமாகவே பக்தர்கள் வீடுகளில் பாடப்பட்டு வருகிறது. திருப்பாவை பாடல்களின் உட்பொருள் உறங்கியிருக்கும் ஜீவனை எழுப்பி, பரமனடியை பற்றச் செய்வதேயாகும். நாச்சியார் திருமொழியில் அமைந்த பாடல்கள் நாயக-நாயகி பாவத்தில் பக்திசெய்து, இறைவனை சென்றடையலாம் என்று நமக்குணர்த்தும் முன்னோடி. ஒவ்வொன்றும் அரங்கனின் பிரிவு எவ்வாறெல்லாம் அவளை வருத்துகிறது என்று எடுத்துரைக்கும் பாடல்கள். ஆண்டாள் அருளிய திருப்பாவையையும் நாச்சியார் திருமொழியைப் பற்றியும் அறியாத ஸ்ரீக்ருஷ்ண பக்தர்களைக் காண்பது அரிது. ஆயர் குலத்து கோபிகையாகவே தன்னை வரித்து ஆண்டாள் உருகியதை செவியுற்ற பெருமானும் உருகாதிருப்பானோ! ஆண்டாளுக்கு தக்க பருவம் வந்த பொழுது, கண்ணனையே திருமணம் கொள்ளும் எண்ணத்தில் தளராதிருப்பதை அறிந்த பெரியாழ்வார் கலக்கமுற்றார். அவர் கனவில் தோன்றிய கண்ணன், ஸ்ரீரங்கத்துக்கு ஆண்டாளை திருமணக்கோலத்தில் அழைத்து வர பணித்தான். திருமணக்கோலத்தில் அரங்கன் கருவறைக்குள் புகுந்தவள் அவனுள் ஒன்றெனக் கலந்தாள் என்ற கண்டவர்கள் சான்றுரைக்கின்றனர் . திருமால் அடி பற்றுவதையும் அவனையே மணமுடிப்பதையும் தவிர வேறு சிந்தனை இல்லாதவள். அதையே நனவிலும் கனவிலும் கண்டவள். மணமுடிப்பதாக ஆண்டாள் கண்ட கனவினை நாச்சியார் திருமொழியில் தோழியிடம் கூறுகிறாள்… வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து நாரண நம்பி நடக்கின்றான் என்று எதிர் பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும் தோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழீ நான் மத்தளம் கொட்டவ ரிசங்கம் நின்றூத முத்துடைத் தாமநி ரைதாழ்ந்த பந்தற்கீழ் மைத்துனன் நம்பிம துசூதன் வந்துஎன்னைக் கைத்தலம் பற்றக் கனாக்கண்டேன் தோழீ நான் பூதேவியார் கனவு கண்டதாக தோழிக்கு உரைத்தது போலவே மதுசூதனன் அவள் கைத்தலம் பற்றி தன்னுடனே அழைத்துச் சென்று விட்டான். ஆண்டவனை ஆண்ட பிராட்டியார் நம் மனதையும் ஆண்டாள் அன்றோ! பூதேவியார் ஆண்டாள் நாச்சியார் திருவடி பற்றியே மாதவனை இடையறாது நினைந்து பக்திகொண்டு உய்வோம். ॐ ॐ ॐ ॐ ॐ ॐ ॐ ॐ ॐ தொண்டரடிப்பொடியாழ்வார் ஸ்ரீவிஷ்ணு அலங்காரப் பிரியன் அல்லவா! மாலை தொடுத்து சேவித்திருப்போருக்கு மாலவனின் மனதில் தனியிடமுண்டு. விப்ர நாரயணர் எனும் பக்தரும் அப்படியொரு இடத்தை தக்க வைத்துக் கொண்டிருந்தவர். வேத விசாரதர் எனும் விஷ்ணு பக்தருக்கு மகனாகப் பிறந்தார். பலகலைகள் கற்று விற்பன்னாராகத் திகழ்ந்தார். வித்யாகர்வம் இன்றி அகந்தையற்று பணிவுடனும் திகழ்ந்தார். அனைவரையும் சம நோக்குடன் காணும் தெளிவும் ஞானமும் பெற்றிருந்தார். சோழ நாட்டுத் திருமண்டங்குடியில் எட்டாம் நூற்றாண்டு பிறந்த இவரை வனமாலையின் அம்சத் தோன்றலாக போற்றுகின்றனர். ஸ்ரீமன் நாராயணனே பரத்தத்துவம், அவரைத் தொழுதிருப்பதே உயர்வுக்கு வழி என்று உபதேசிக்கப்பட்ட பிறகு, பிரம்மச்சர்யத்தை உகந்தேற்றார். எம்பெருமான் வீற்றிருக்கும் திவ்ய ஸ்தலங்களுக்கு யாத்திரை மேற்கொள்ள வேண்டும் என்று தீர்மானம் செய்தவர், எந்த திருத்தலத்திலிருந்து புறப்படுவது என்ற தீவிர யோசனைகுப் பிறகு ஸ்ரீரங்கத்தை தேர்ந்தெடுத்தார். ஸ்ரீரங்கநாதனை கண்ணாறக் கண்டவர், பிறிதொன்றும் வேண்டாத நிலையில் பெருமானிடமே தம் மனதை பறிகொடுத்தார். பச்சை மாமலை போல் மேனி பவளவாய்க் கமலச் செங்கண் அச்சுதா அமரர் ஏறே ஆயர்தம் கொழுந்தே என்னும் இச்சுவை தவிர யான் போய் இந்திர லோகம் ஆளும் அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகருளானேன் என்றே அவர் திருமேனியை, அழகை, பெருமையை உணர்ந்து நெகிழ்ந்துருகுகிறார். அவனது பசுந்திருமேனியும், பவளச் செவ்வாயும், கமல மலர் போன்ற காது வரை நீண்ட கண்களும் கவர்ந்திழுக்கின்றன. இப்பேர்ப்பட்ட அச்சுதனை, அமரர்கள் தலைவனை, ஆய்ர்குலத்துக் கொழுந்தை, அரங்கத்து நாயகனை, புகழ்ந்து பாடும் சுவையை விட்டு, தனக்கு இந்திர லோகத்தை ஆளும் பெரிய பதவிகளும் புகழும் வெண்டாம் என்று புறந்தள்ளும் தெளிந்த நோக்கு உடைய பாசுரம். ஊரிலேன் காணியில்லை உறவு மற்றொருவர் இல்லை பாரினின் பாத மூலம் பற்றினேன் பரமமூர்த்தி எனக்கென்று ஊரும் உறவும் உன்னை அல்லாது வேறொரு செல்வமும் புகலுமில்லை, உன் பாதம் பற்றினேன் என்று சரண் புகுந்தவர், ரங்கநாதனைப் போற்றி கொண்டு, வேறொரு ஊர் செல்லாது, வேறு திவ்ய தேசங்களை நாடாது, ரங்கன் ஒருவனுக்கே பாமாலையும் பூமாலையும் கோர்த்தார். இதனாலேயே இவரை ‘பத்தினி ஆழ்வார்’ என்று அன்போடு அழைத்தனர். ரங்கனுக்கு பூமாலைகள் சூட்ட நந்தவனம் அமைத்து புத்தம்புது நறுமலர்களை அன்றாடம் சேகரித்து வண்ண மாலைகள் தொடுத்து ஸ்ரீரங்கநாதரையே வழிபட்டு வந்தார். இறைவனை பாடித் துதிப்பதே தம் பணி, என்றிருந்தவருக்கு. திருமாலைத் தவிர வேறொன்றை மனம் நாடாது என்றுரைத்தவருக்கு, விதி வசத்தால் மதியிழக்கும் நிலைமை ஏற்பட்டது. உறையூர் அரச சபையில் ஆடிப்பாடும் தேவதாசி சகோதரிகள், ஒரு முறை ஸ்ரீரங்கம் வழியே திரும்பிச் செல்லும் போது விப்ரநாராயணரின் எழில் மிகு நந்தவனத்தையும், அவரது நேர்த்தியையும் கண்டு மெய் மறந்தனர். இரு சகோதரிகளில் இளையவளான தேவதேவி திருமால் ஒன்றைத் தவிர பிறரை கண்ணெடுத்தும் பாராத விப்ர நாராயணரின் மனவலிமையை கண்டு வியந்தாள். அவரது மனதை தனது வசம் திருப்பி, தன்னிடம் லயிக்க செய்யும் எண்ணமும் ஆவலும் தேவதேவிக்கு மேலிட்டது. பெருமாளுக்கு தொண்டு புரியும் பக்தையைப் போல் தனது தோற்றத்தை மாற்றிக் கொண்டு மெல்ல மெல்ல அவரது குடிலுக்குள் நுழைந்து விப்ரநாராயணரின் சேவையில் பங்கேற்றாள். காலம் செல்லச் செல்ல அவரது மனதிலும் அசையா இடம் பிடித்தாள். அழகிய ஆடலரசியிடம் தன் மனதை பறிகொடுத்தார் விப்ரநாராயணர், முழுவதுமாகத் தன் வசமிழந்து அவள் அன்புக்கு அடிமையாகிப் போனார். அவளுக்கே தனது செல்வம் முழுவதையும் செலவிட்டார். ஒரு கட்டத்தில், பக்தி, தெளிவு, மதிநுட்பம், அறிவு போன்ற அழியா செல்வத்தோடு, அழியும் பொருட் செல்வத்தையும் இழந்தார். தேவதேவி அவரை விட்டுப் பிரிந்ததை தாள இயலாதவர், அவளை சந்திக்க தாசி வீடு சென்றார். பொருள் ஏதும் தராமல் தமது மகளை சந்திக்க இயலாது என்று தேவதேவியின் தாயார் உரைத்ததும், தம்மிடம் ஏதுமில்லை என்று பரிதவித்தார். துக்கம் தாளவில்லை. சிற்றின்பத்தில் நாட்டம் திரும்பும் பொழுது தம்மை இழந்து விடும் பக்தர்களை, ஆட்கொள்ளும் தயாளனல்லவா அரங்கன்! இழந்த விவேகத்தை மீட்டருளும் பொருட்டு, லீலை புரிந்தான். விப்ர நாராயணர் அனுப்பிய செவகன் என்று தம்மை அறிமுகப்படுத்திக் கொண்டு தேவதேவியின் தாயாரிடம் பொற்கிண்ணம் ஒன்றைக் கொடுத்தான். பொழுது விடிந்த்தும், அரங்கன் கோவில் அர்ச்சகர்கள், ஆலயத்தில் புழங்கி வந்த பொற்கிண்ணத்தை சன்னதியில் காணவில்லை என முறையிட, தேவதேவியின் தாயாரிடம் கிண்ணம் சிக்கியது. தேவதேவியின் தாயார் நடந்ததைக் கூறியதும், அரங்கன் சொத்தான பொற்கிண்ணத்தை களவாடியவர் விப்ரநாரயணரே என்ற பெரும்பழி ஏற்று தண்டனை பெற இருந்தார் விப்ரநாராயணர். அவர் குற்றமற்றவர் என்று மன்னர் கனவில் எம்பெருமானாரே உண்மையுரைத்து, அடியவர் பெருமையை உலகறியச் செய்து காத்தருளினார். மன்னரும் மற்றவரும் அவர் பெருமையை உணர்ந்து நெடிது வீழ்ந்து வணங்கினர். ஊனக்கண் மறைந்து ஞானக்கண் தோன்றியதும், அரங்கனை பாடித் துதிப்பதல்லாது வேறு சிந்தனை இன்றி எஞ்சிய காலத்தை அபரீமிதமான பக்தியில் கழித்தார். உள்ளம் உயரும்போது பணிவும் செர்ந்து விடுகிறது. அதுபோலவே ஆழ்வாரும், தொண்டர்தம் பாதம் பட்ட துகளை புனிதமெனக் கருதி சிரசிலும் நெற்றியிலும் தரித்துக் கொள்வார் . தொண்டர்தம் அடிப்பொடியை வணங்கியவர் என்பதால் தொண்டரடிப்பொடியாழ்வார் என்று உலகமே கொண்டாடியது. இறையருளால் நீண்ட பெருவாழ்வு வாழ்ந்து, அரங்கனைப் பாடித் துதித்து, ஆயுள் முடியுங்கால் வைகுந்தம் சென்றடைந்தார். ‘திருமாலை’ மற்றும் ‘திருப்பள்ளியெழுச்சி’ இவரது படைப்புகளாகும். அரங்கன் மீது தொண்டரடிப்பொடியாழ்வார் பாடிய திருப்பள்ளி எழுச்சியே இன்றும் அனைத்து வைணவ ஆலயங்களிலும் பாடப்பட்டு வருகிறது. தொண்டரடிப்பொடியாழ்வாரின் பாதம் பற்றுவோம். ॐ ॐ ॐ ॐ ॐ ॐ ॐ ॐ ॐ திருப்பாணாழ்வார் குலவேற்றுமைகளும் அதனால் பிறரை சிறுமைப்படுத்தும் இழிச்செயல்களும் காலம் தோறும் தொடர்ந்த வண்ணம் உள்ளது. ஆழ்வார்கள் காலமும் இதற்கு விதி விலக்கல்ல. பாணர் குலத்தோர் இசை வல்லுனர்களாக பெயர் பெற்றிருந்தனர். பாண் எனும் கருவியை இசைப்பவர்கள் பாணர்கள். இவர்கள் கடவுளர்களையும், அரசர்களையும் பாடி மகிழ்விப்பவர்கள். பிற்காலங்களில் பாணர் குலம் தீண்டுதற்கு ஆகாத குலமென்று தள்ளி வைக்கப்பட்டது. திருப்பாணாழ்வார் பாணர் குலத்தில் பிறந்து, உறையூர் அருகிலுள்ள திருக்கோழி கிராமத்தில் வாழ்ந்தார். விஷ்ணுவின் ஸ்ரீவத்ஸத்தின் அம்சமாகப் பிறந்தவர். பெருமாள் மேல் பக்தி பூண்டு இசையால் அவருக்கு ஆராதனை செய்து மகிழ்வார். உலக இன்பங்களை நாடாது இறைவனையே நாடும் மனம் படைத்தவராகத் திகழ்ந்தார். இறைவனைப் பற்றி அவர் பாடும் பண் பார்ப்போர் கேட்போர் நெஞ்சத்தைக் கொள்ளை கொண்டு பக்தியில் லயிக்கச் செய்தது. காவிரிபாயும் திருத்தலமாம் திருவரங்கத்தில் கரைக்கு மறுபுறம் நின்று பாண் இசைப்பார். காவிரி கரை தாண்டி இக்கரைக்கு வர பாணர் குலத்தவருக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. ஏன் என்ற கேள்வி எழுப்பாமல் விதிக்கப் பட்டிருக்கும் கட்டுப்பாடுகளை மதித்து நடந்தார். சாஸ்திர சம்பிரதாயங்களில் உயர்ந்த அர்த்தமிருக்கும் என்று ஆழமாக நம்பினார். பாணர் குலத்தவர் கரை தாண்டுவதில்லை என்பதை மனதில் கொண்டு காவிரிக்கு அக்கரையிலிருந்தே கோவிலை நொக்கி தேமதுரப் பாடல்கள் இசைத்து திருவரங்கத்துப் பெருமாளை மகிழ்வித்து வந்தார். தமை மறந்த நிலையில் அரங்கன் அழகைப் பாடி நின்றவருக்கு உலகமே மறந்து போகும். ஒரு சமயம், ரங்கநாதனுக்குத் திருமஞ்சனம் செய்ய காவிரி நீர் சுமந்து வந்த லோக சாரங்கர் என்ற கோவில் பட்டரின் வழியை மறைத்தபடி நின்றிருந்தார் பாணாழ்வார். தமை மறந்து பாணிசைத்து உருகி நிற்பவரை தீண்டாது அபிஷேக நீர் எடுத்து செல்ல வேண்டுமே என்று தயங்கி, பின்னர் பலமுறை விலகும் படி கேட்டுக்கொண்டும் விலகாததால், பட்டர் செய்வதறியாது திகைத்தார். வெகுண்டார். திருமஞ்சனம் செய்ய நீர் கொண்டு போகும் வேளையில் பாணரைத் தீண்டினால் சுத்தமும் ஆச்சாரமும் போய்விடுக்கூடும் என்று கருதி அவர் விலக்குவதற்காக கல் எறிந்தார். அந்தக் கல் பாணரின் தலையில் பட்டு குருதி வழிந்தது. அதை கவனியாது அர்ச்சகர் அரங்கனுக்கு அபிஷேகம் செய்யப் புறப்பட்டார். பாணரின் உயர்ந்த உள்ளத்தையும் பக்தியின் மேன்மையும் உலகுக்கு உணர்த்த எண்ணினார் திருவரங்கநாதர். திருமஞ்சனம் செய்ய ஆலயத்துள் நுழைந்தவர் திடுக்கிட்டார். அரங்கநாதன் சிலைத் திருமேனியிலிருந்து குருதி கொட்டிக் கொண்டிருந்தது. எந்த இடத்தில் பாணருக்கு கல்லெறிந்ததால் குருதி வழிந்ததோ, அதே இடத்தில் சிலா மூர்த்தியிலிருந்து குருதி வழிந்துக் கொண்டிருந்தது. செய்வதறியாது கண்ணீர் பெருக்கினார் பட்டர். தாம் இழைத்தது பெரிய குற்றமோ என்று வருந்திய பட்டரின் கனவில் அன்றிரவு பெருமாள் தோன்றி பாணரின் உயர்வை உணர்த்தும் பொருட்டு, பாணாழ்வாரை, அர்ச்சகர் தமது தோளில் சுமந்து திருக்கோவிலுள் வரும்படி ஆணையிட்டார். மறுநாள் காலையில் ஓடோடி வந்து, நடந்ததைக் கூறி, கனவினை எடுத்துரைத்து, ஆழ்வாரை சுமந்து செல்ல அனுமதிக்கும்படி பாணரிடம் வேண்டினார். தாம் குலத்தால் தாழ்ந்தவர் என்றும், அது முறையல்ல என்றும் என்று வாதிட்ட பாணரை வலுக்கட்டாயமாக தோளில் சுமந்து சென்றார் பட்டர். கோவிலுள் நுழைந்தவர் தன்னிலை மறந்தார். எப்பேர்பட்ட பேறு என்று உள்ளம் நெகிழ்ந்தார். மாலவனின் எழில் கண்டு பிரமிக்கிறார். அரங்கன் அங்க அழகை விவரித்து பாடல்கள் பொழிந்த வண்ணமிருந்தன. திருப்பாதம் தொடங்கி, ஆடை, மார்பு, கழுத்தழகு, வாயழகு, கண்கள், முழுமேனி அழகு என்று ஒவ்வொரு அங்கமாக அழகை வர்ணிக்கும் இவரது பத்து பாசுரங்களும் ‘அமலனாதிபிரான்’ என்றழைக்கப்பட்டு திவ்யப்பிரபந்ததில் சேர்க்கப்ப்ட்ட முத்துக்கள். பத்தாம் பாசுரமாக, கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணெய் உண்டவாயன் என் உள்ளம் கவர்ந்தானை அண்டர்கோன் அணி அரங்கன் என் அமுதினை கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாதே! என்றார். மேக வண்ணனை, வெண்ணை உண்ட கண்ணனை, உள்ளம் கவர் கள்வனை, அரங்கனை, அமுதைப் போன்றவனை கண்ட கண்கள் பிறவொன்றை காணுமோ? காணாது! என்றவாறே பெருமாள் திருமேனியுடன் ஐக்கியமானார். ஆண்டாளைப் போலவே ஸ்தூல உடலுடன் பெருமாளுடன் ஐக்கியமானதாக சரிதம். திருப்பாணாழ்வார் திருவடிகளைப் பற்றி உய்வோம். ॐ ॐ ॐ ॐ ॐ ॐ ॐ ॐ ॐ திருமங்கையாழ்வார் சீர்காழியிலுள்ள திருக்குரையலூரில் பிறந்தவர் திருமங்கையாழ்வார். இவரது இயற்பெயர் நீலன். சோழ மன்னனின் படைத்தலைவனாக விளங்கிய நீலன், வீரத்திலும் தீரத்திலும் பெரிதும் போற்றபட்டு சோழமன்ன்னால் அரசனாக்கப்பட்டார். சோழப்பேரரசன் திருமங்கை எனும் நாட்டை, நீலன் என்ற படைத்தலைவனுக்கு பரிசளித்து அவனை குறு-நில மன்னனாக்கினான். அரசன் எப்படி ஆழ்வாரானார்? ஒழுக்கத்திலும் உயர்விலும் சிறந்த ஒருவரை மேலும் மேன்மையான பாதைக்கு மாற்றி அழைத்துச் செல்ல தக்க குணமுள்ள மாதரசியாலே முடியும். திருமங்கை மன்னன் குமுதவல்லி என்ற பெண்ணின் மேல் காதல் கொண்டு திருமணம் புரிந்த பின், அவள் பின்பற்றும் வைணவ நெறியை தானும் பின்பற்றலானான். ஆயிரம் பக்தர்களுக்கு அன்னமிடுவது, கோவில் திருப்பணிக்கு கொடை வழங்குவது என்று எளிமையாகத் தான் தொடங்கினார். சிறிது சிறிதாக மன்னனை பெருமாளிடம், பித்து வைக்கும் அளவுக்கு குமுதவல்லியால் மாற்ற முடிந்தது. போரும் வீரமும், புறமுதுகிட்டு ஓடாத தீரமும் கொண்டு திகழ்ந்த திருமங்கை மன்னன், திருமாலுக்குத் தொண்டு செய்யும் ஆழ்வாராகவே மாறிப்பொனார். சிந்தனையெல்லாம் அரங்கன் தொண்டிலேயே தங்கி விட்டது. அரங்கன் திருப்பணிகளில் ஈடுபட்டு செல்வம் அனைத்தும் இழந்தார். அதனால் சோழ மன்னருக்கு வரி செலுத்த முடியாமல் போயிற்று. சினந்த சோழமன்னன், திருமங்கையாழ்வாரை அழைத்து, கப்பம் கட்டுவதை தவிர்ப்பது முறையல்ல என்றும், கப்பம் கட்டும் வரை திருமங்கை நாடு தரப் படமாட்டாது என்றும் கூறி ஆழ்வாரை சிறை வைத்தான். காஞ்சிப் பெருமாள் ஆழ்வார் கனவில் தோன்றி, காஞ்சிக்கு வரும்படி கட்டளையிட்டு, பணமுடைக்கு தாம் உதவுவதாக வாக்களித்தார். காஞ்சியில் புதையலாக பெரும் நிதி கிடைத்தது. அதில் மன்னருக்கு கப்பம் கட்டிவிட்டு மிச்சத்தை திருப்பணிக்கென்று ஒதுக்கி வைத்தார். பெருமாளே ஆசீர்வத்தித்த திருமங்கை மன்னனின் உயர்வை உணர்ந்த சோழ மன்னனோ, தக்க மரியாதை செய்து, கப்பம் கட்டிய பணத்தை திருமபக் கொடுத்து, திருப்பணிக்கே செலவிடும்படி வேண்டினார். படைத்தலைவனாகவும், மன்னனாகவும் வாழ்ந்த போது எத்தனை இன்னுயிர்கள் தன்னால் பறிக்கப்பட்டது என்பதை எண்ணியும், இத்தனை காலம் பக்தி செய்யாது வீணே பொழுதைக் கழித்தேனே என்றெண்ணியும் வருந்தியவர், திவ்ய தேசங்களுக்கு சென்று இறைவன் புகழ்பாடி பிராயச்சித்தம் தேடினார். திருவரங்க ஆலயத்துக்கு சுவரெழுப்பும் ஆவல் கொண்டார். நாளுக்கு நாள் அவரிடம் இருந்த செல்வம் நலிவுற்றது. திருப்பணிகள் பலவும் செல்வம் இழந்தமையால் ஆலயச்சுவர் எழுப்பும் பணி நின்று போனது. மெல்ல மெல்ல செல்வாக்கு இழந்தார். செல்வந்தர் எவரும் ஆழ்வாருக்கு உதவ முன்வரவில்லை. யாதொரு வழியும் அறியாத திகைத்தார். பலவாறான யோசனைக்குப் பிறகு, செல்வந்தர்களின் பணத்தை அபகரித்தாவது திருப்பணிகளைத் தொடர வெண்டும் என்று முடிவெடுத்தார். கள்வனாகி பணத்தை கொள்ளையடித்தார். கூட்டாளிகளுடன் சேர்த்து, செல்வந்தர்களிடம் மிரட்டிப் பணம் பறிக்கும் வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்டார். அவ்வாறு கிடைத்த பொன்னையும் பொருளையும் ஒட்டுமொத்தமாக தொண்டுக்கே பயன் படுத்தினார். லக்ஷ்மீ சமேதராக திருமால், திருமணக் கூட்டம் புடைசூழ, மணக்கோலத்தில், வழிபறி நடக்கும் இடத்தில் தோன்றி, பொருளத்தனையும் கொள்ளை கொடுத்து, தனது லீலையைத் துவங்கினார். மணமகன் வேடத்தில் ஆட்கொள்ள வந்த பெருமாளின் கால் விரலில் இருந்த அணிகலனை ஆழ்வாரால் எடுக்கவே முடியவில்லை. பலமுறை முயன்று தோற்ற பின்பு, அதைவிடுத்து மற்ற செல்வங்களைத் திரட்டினார். திவ்யத் தம்பதிகளை மிரட்டி உருட்டி களவாடிய பொருளை, பெரிய மூட்டையாக கட்டினார் ஆழ்வார். களவாடியவருக்கு, அப்பொருளை நகர்த்திச் செல்ல முடியவில்லை. பெருமூட்டை கனத்தது. பலம் அத்தனையும் உபயோகித்தும் தோற்றுப் போனார். கூட்டாளிகள் பலர் முயன்றும், களவாடிய மூட்டையை நகர்த்த முடியவில்லை. பெருமாள் அதற்கு மேலும் சோதிக்காமல், கருணை கொண்டு திவ்ய திருக்காட்சி கொடுத்து, ஆழ்வாருக்கு அஷ்டாக்ஷர மந்திரத்தை உபதேசம் செய்து, அவர் அறியாமை நீங்கச் செய்தார். நெடுஞ்சாண்கிடையாக விழுந்து நெகிழ்ந்த திருமங்கையாழ்வார் அது முதல் இறைவனைப் பாடுவதையே குறிக்கோளாக்கினார். ஒருசமயம் ஆழ்வாரின் புகழ் கேட்டு திருஞானசம்பந்தரின் சீடர்கள், ஆழ்வாரை சம்மந்தருடன் வாதத்திற்கு அழைத்தனர். ஆழ்வார், “ஒரு குறளாய் இரு நிலம் வேண்டி மூவடி மண் தாங்கியவா” என்ற பாசுரம் பாட, ஞானசம்பந்தர் மிகவும் மகிழ்ந்து “நாலுகவிப் பெருமாள்” என்ற விருதுக்கு நீர் பொருத்தமானவர் என்று வாழ்த்திச் சென்றார். அரங்கன் ஆலயத்துக்கு விமானம், மதில், கோபுரம் மண்டபம் என்று எழுப்பும் பெரும்பணியை ஏற்றார். தேவையான செல்வத்தை நாகப்பட்டணத்தின் புத்தர் சிலையை தமது பாடலின் இனிமையால் உருக்கி, அதனால் பெற்ற பொன்னைக் கொண்டு திருப்பணிகள் தொடர்ந்தார். ஸ்ரீரங்கத்தில் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்வில், பெருமாளைத் துதித்து ‘திருநெடுந்தாண்டகம்’ பாடினார். முப்பது பாசுரங்கள் கொண்ட நெடுந்தாண்டகத்தை கேட்டு இளகிய திருமால், ஆழ்வாருக்கு வரம் அருளினார். விரும்பியதைக் கேட்டுப் பெறலாம் என்றதும், ஆழ்வார், ‘மார்கழி தோறும் வைகுண்ட ஏகாதசி தொடங்கி பத்து நாட்கள் ராப்பத்து பொழுதில் நம்மாழ்வார் பாடிய திருவாய்மொழியை கேட்டு அருளும்படி’ வேண்டி நின்றார். அதற்கு இணங்கிய பெருமாள் பகல்பத்து நேரத்தில் வடமொழி ஸ்தோத்திரங்களும், ராப்பத்து நேரத்தில் ஆழ்வார் பாசுரங்களும் இசைக்க மனமுவந்து அருளினார். பெருமாளின் தோளுக்கு இனியானை (பல்லக்கு) கேட்டுப் பெற்று உடனே நம்மாழ்வார் நின்றருளும் ஆழ்வார் திருநகரிக்குச் சென்று திருமேனியை உரிய மரியாதையோடு திருவரங்கம் அழைத்து வந்தார். வழியெங்கும் வைணவ பக்தர்கள் வாழ்த்து பாட, வைகுந்த ஏகாதசிக்கு ஒரு நாள் முன்னர் ஸ்ரீரங்கம் வந்து சேர்ந்தார். ஏகாதசி தொடங்கி ராப்பத்து பகல்பத்து கொண்டாட்டங்கள் ஆனந்தமாக கொண்டாடப் பட்டது. உற்சவம் முடிந்த பிறகு நம்மாழ்வாரை மீண்டும் ஆழ்வார் திருநகரியில் தக்க மரியாதையோடு எழுந்தருளப் பண்ணினார். இன்றளவும் மார்கழி மாத ஏகாதசி தொடங்கி, இந்த உற்சவம் பெருவிழாவாக வைணவக் கோவில்களிலும் குறிப்பாக திருவரங்கத்திலும் கொண்டாடப் படுகிறது. பெருமாளைப் ஆயிரக்கணங்கான பாசுரங்கள் கொண்டு புகழ்ந்தேத்தியதோடல்லாமல், அவரது அடியவர்களான ஆழ்வார்களையும் கொண்டாடப் பண்ணியவர் திருமங்கையாழ்வார். திருமங்கையாழ்வார் ’பெரிய திருமொழி, ’திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம், சிறிய திருமடல், பெரிய திருமடல், திருவெழுக்கூற்றிருக்கை உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாசுரங்களை ஆறு வகை பிரபந்தங்களாக அருளியுள்ளார். அதிக அளவில் திவ்ய தேசங்களை தரிசித்து மங்களசாசனம் செய்த ஆழ்வார் திருமங்கையாழ்வார். பிறவிப் பெருங்கடலை நீந்தி அக்கரை செல்ல பெருமாள் திருவடியை சிக்கெனவே பற்றி இனி ஒரு பிறவி வேண்டாம் என இறைஞ்சுகிறார். மறுபடியும் பிறக்க நேருமோ என்றஞ்சும் பாசுரங்கள் பெரிய திருமொழியில் காணக்கிடைக்கிறது. மாற்றமுள வாகிலும் சொல்லுவன், மக்கள் தோற்றக் குழிதோற்று விப்பாய்கொ லென்றின்னம், ஆற்றங் கரைவாழ் மரம்போல அஞ்சுகின்றேன், நாற்றஞ் சுவையூ றொலியா கியநம்பீ மீண்டும் எனைக் கருவில் தோற்றுவிப்பாயோ என்று அஞ்சுகிறேன். ஆற்றங்கரையில் வாழும் மரம் காற்றில் இப்படியும் அப்படியும் பரிதவிப்பது போல் பரிதவிக்கிறேன். இருதலைக்கொள்ளி எறும்பு போல உள்ளம் அஞ்சுகிறது, என்றெல்லாம் உவமைகளைச் சொல்லி பிறவிப் பிணியை களையும்படி பெரிய திருமொழியில் இறைவனை மன்றாடுகிறார். இறுதி காலத்தில் துணைவியார் குமுதவல்லியுடன் நெடுநாள் வாழ்ந்திருந்து, திருக்குருங்குடியில் இறைவனை நாடி வைகுண்டம் புகுந்தார். வீரனாகவும், சிறந்த மன்னனாகவும், பக்தராகவும், பாவலராகவும், அனைத்துக்கும் மேலாக ஆழ்வாராகவும் மகுடம் சூட்டப்பட்ட திருமங்கையாழ்வாரின் பாதம் பணிந்தேத்துவோம் ॐ ॐ ॐ ॐ ॐ ॐ ॐ ॐ ॐ ஆழ்வார்களின் சரிதங்கள் ஓயாமல் அரங்கனை நினைவூட்டுகின்றன. நமக்கெல்லாம் இறுதி இலக்கு எது என்று எடுத்துரைத்த வண்ணமிருக்கின்றன. அவர்கள் பாசுரங்கள் ஒவ்வொன்றும் பாடங்களாகின்றன. தமிழ் வேதமாகி சிகரத்தில் நிற்கின்றன. இலக்கணமாக வாழ்ந்த பனிரெண்டு ஆழ்வார்களை நிதம் தொழுது நற்கதி அடைவோமாக. FREETAMILEBOOKS.COM மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்: மின்புத்தகங்களைப் படிப்பதற்கென்றே கையிலேயே வைத்துக் கொள்ளக்கூடிய பல கருவிகள் தற்போது சந்தையில் வந்துவிட்டன. Kindle, Nook, Android Tablets போன்றவை இவற்றில் பெரும்பங்கு வகிக்கின்றன. இத்தகைய கருவிகளின் மதிப்பு தற்போது 4000 முதல் 6000 ரூபாய் வரை குறைந்துள்ளன. எனவே பெரும்பான்மையான மக்கள் தற்போது இதனை வாங்கி வருகின்றனர். ஆங்கிலத்திலுள்ள மின்புத்தகங்கள்: ஆங்கிலத்தில் லட்சக்கணக்கான மின்புத்தகங்கள் தற்போது கிடைக்கப் பெறுகின்றன. அவை PDF, EPUB, MOBI, AZW3. போன்ற வடிவங்களில் இருப்பதால், அவற்றை மேற்கூறிய கருவிகளைக் கொண்டு நாம் படித்துவிடலாம். தமிழிலுள்ள மின்புத்தகங்கள்: தமிழில் சமீபத்திய புத்தகங்களெல்லாம் நமக்கு மின்புத்தகங்களாக கிடைக்கப்பெறுவதில்லை. ProjectMadurai.com எனும் குழு தமிழில் மின்புத்தகங்களை வெளியிடுவதற்கான ஒர் உன்னத சேவையில் ஈடுபட்டுள்ளது. இந்தக் குழு இதுவரை வழங்கியுள்ள தமிழ் மின்புத்தகங்கள் அனைத்தும் PublicDomain-ல் உள்ளன. ஆனால் இவை மிகவும் பழைய புத்தகங்கள். சமீபத்திய புத்தகங்கள் ஏதும் இங்கு கிடைக்கப்பெறுவதில்லை. சமீபத்திய புத்தகங்களை தமிழில் பெறுவது எப்படி? அமேசான் கிண்டில் கருவியில் தமிழ் ஆதரவு தந்த பிறகு, தமிழ் மின்னூல்கள் அங்கே விற்பனைக்குக் கிடைக்கின்றன. ஆனால் அவற்றை நாம் பதிவிறக்க இயலாது. வேறு யாருக்கும் பகிர இயலாது. சமீபகாலமாக பல்வேறு எழுத்தாளர்களும், பதிவர்களும், சமீபத்திய நிகழ்வுகளைப் பற்றிய விவரங்களைத் தமிழில் எழுதத் தொடங்கியுள்ளனர். அவை இலக்கியம், விளையாட்டு, கலாச்சாரம், உணவு, சினிமா, அரசியல், புகைப்படக்கலை, வணிகம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு தலைப்புகளின் கீழ் அமைகின்றன. நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகச் சேர்த்து தமிழ் மின்புத்தகங்களை உருவாக்க உள்ளோம். அவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள் Creative Commons எனும் உரிமத்தின் கீழ் வெளியிடப்படும். இவ்வாறு வெளியிடுவதன் மூலம் அந்தப் புத்தகத்தை எழுதிய மூல ஆசிரியருக்கான உரிமைகள் சட்டரீதியாகப் பாதுகாக்கப்படுகின்றன. அதே நேரத்தில் அந்த மின்புத்தகங்களை யார் வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும், இலவசமாக வழங்கலாம். எனவே தமிழ் படிக்கும் வாசகர்கள் ஆயிரக்கணக்கில் சமீபத்திய தமிழ் மின்புத்தகங்களை இலவசமாகவே பெற்றுக் கொள்ள முடியும். தமிழிலிருக்கும் எந்த வலைப்பதிவிலிருந்து வேண்டுமானாலும் பதிவுகளை எடுக்கலாமா? கூடாது. ஒவ்வொரு வலைப்பதிவும் அதற்கென்றே ஒருசில அனுமதிகளைப் பெற்றிருக்கும். ஒரு வலைப்பதிவின் ஆசிரியர் அவரது பதிப்புகளை “யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்” என்று குறிப்பிட்டிருந்தால் மட்டுமே அதனை நாம் பயன்படுத்த முடியும். அதாவது “Creative Commons” எனும் உரிமத்தின் கீழ் வரும் பதிப்புகளை மட்டுமே நாம் பயன்படுத்த முடியும். அப்படி இல்லாமல் “All Rights Reserved” எனும் உரிமத்தின் கீழ் இருக்கும் பதிப்புகளை நம்மால் பயன்படுத்த முடியாது. வேண்டுமானால் “All Rights Reserved” என்று விளங்கும் வலைப்பதிவுகளைக் கொண்டிருக்கும் ஆசிரியருக்கு அவரது பதிப்புகளை “Creative Commons” உரிமத்தின் கீழ் வெளியிடக்கோரி நாம் நமது வேண்டுகோளைத் தெரிவிக்கலாம். மேலும் அவரது படைப்புகள் அனைத்தும் அவருடைய பெயரின் கீழே தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் நாம் அளிக்க வேண்டும். பொதுவாக புதுப்புது பதிவுகளை  உருவாக்குவோருக்கு அவர்களது பதிவுகள்  நிறைய வாசகர்களைச் சென்றடைய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். நாம் அவர்களது படைப்புகளை எடுத்து இலவச மின்புத்தகங்களாக வழங்குவதற்கு  நமக்கு அவர்கள் அனுமதியளித்தால், உண்மையாகவே அவர்களது படைப்புகள் பெரும்பான்மையான மக்களைச் சென்றடையும். வாசகர்களுக்கும் நிறைய புத்தகங்கள் படிப்பதற்குக் கிடைக்கும் வாசகர்கள் ஆசிரியர்களின் வலைப்பதிவு முகவரிகளில் கூட அவர்களுடைய படைப்புகளை தேடிக் கண்டுபிடித்து படிக்கலாம். ஆனால் நாங்கள் வாசகர்களின் சிரமத்தைக் குறைக்கும் வண்ணம் ஆசிரியர்களின் சிதறிய வலைப்பதிவுகளை ஒன்றாக இணைத்து ஒரு முழு மின்புத்தகங்களாக உருவாக்கும் வேலையைச் செய்கிறோம். மேலும் அவ்வாறு உருவாக்கப்பட்ட புத்தகங்களை “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்”-க்கு ஏற்ற வண்ணம் வடிவமைக்கும் வேலையையும் செய்கிறோம். FREETAMILEBOOKS.COM இந்த வலைத்தளத்தில்தான் பின்வரும் வடிவமைப்பில் மின்புத்தகங்கள் காணப்படும். PDF for desktop, PDF for 6” devices, EPUB, AZW3, ODT இந்த வலைதளத்திலிருந்து யார் வேண்டுமானாலும் மின்புத்தகங்களை இலவசமாகப் பதிவிறக்கம்(download) செய்து கொள்ளலாம். அவ்வாறு பதிவிறக்கம்(download) செய்யப்பட்ட புத்தகங்களை யாருக்கு வேண்டுமானாலும் இலவசமாக வழங்கலாம். இதில் நீங்கள் பங்களிக்க விரும்புகிறீர்களா?  நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் தமிழில் எழுதப்பட்டிருக்கும் வலைப்பதிவுகளிலிருந்து பதிவுகளை எடுத்து, அவற்றை LibreOffice/MS Office போன்ற wordprocessor-ல் போட்டு ஓர் எளிய மின்புத்தகமாக மாற்றி எங்களுக்கு அனுப்பவும். அவ்வளவுதான்! மேலும் சில பங்களிப்புகள் பின்வருமாறு: 1. ஒருசில பதிவர்கள்/எழுத்தாளர்களுக்கு அவர்களது படைப்புகளை “Creative Commons” உரிமத்தின்கீழ் வெளியிடக்கோரி மின்னஞ்சல் அனுப்புதல் 2. தன்னார்வலர்களால் அனுப்பப்பட்ட மின்புத்தகங்களின் உரிமைகளையும் தரத்தையும் பரிசோதித்தல் 3. சோதனைகள் முடிந்து அனுமதி வழங்கப்பட்ட தரமான மின்புத்தகங்களை நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்தல் விருப்பமுள்ளவர்கள் freetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.  இந்தத் திட்டத்தின் மூலம் பணம் சம்பாதிப்பவர்கள் யார்? யாருமில்லை. இந்த வலைத்தளம் முழுக்க முழுக்க தன்னார்வலர்களால் செயல்படுகின்ற ஒரு வலைத்தளம் ஆகும். இதன் ஒரே நோக்கம் என்னவெனில் தமிழில் நிறைய மின்புத்தகங்களை உருவாக்குவதும், அவற்றை இலவசமாக பயனர்களுக்கு வழங்குவதுமே ஆகும். மேலும் இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள், ebook reader ஏற்றுக்கொள்ளும் வடிவமைப்பில் அமையும். இத்திட்டத்தால் பதிப்புகளை எழுதிக்கொடுக்கும் ஆசிரியர்/பதிவருக்கு என்ன லாபம்? ஆசிரியர்/பதிவர்கள் இத்திட்டத்தின் மூலம் எந்தவிதமான தொகையும் பெறப்போவதில்லை. ஏனெனில், அவர்கள் புதிதாக இதற்கென்று எந்தஒரு பதிவையும்  எழுதித்தரப்போவதில்லை. ஏற்கனவே அவர்கள் எழுதி வெளியிட்டிருக்கும் பதிவுகளை எடுத்துத்தான் நாம் மின்புத்தகமாக வெளியிடப்போகிறோம். அதாவது அவரவர்களின் வலைதளத்தில் இந்தப் பதிவுகள் அனைத்தும் இலவசமாகவே கிடைக்கப்பெற்றாலும், அவற்றையெல்லாம் ஒன்றாகத் தொகுத்து ebook reader போன்ற கருவிகளில் படிக்கும் விதத்தில் மாற்றித் தரும் வேலையை இந்தத் திட்டம் செய்கிறது. தற்போது மக்கள் பெரிய அளவில் tablets மற்றும் ebook readers போன்ற கருவிகளை நாடிச் செல்வதால் அவர்களை நெருங்குவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். நகல் எடுப்பதை அனுமதிக்கும் வலைதளங்கள் ஏதேனும் தமிழில் உள்ளதா? உள்ளது. பின்வரும் தமிழில் உள்ள வலைதளங்கள் நகல் எடுப்பதினை அனுமதிக்கின்றன. 1. http://www.vinavu.com 2. http://www.badriseshadri.in  3. http://maattru.com  4. http://www.kaniyam.com  5. http://blog.ravidreams.net  எவ்வாறு ஒர் எழுத்தாளரிடம் CREATIVE COMMONS உரிமத்தின் கீழ் அவரது படைப்புகளை வெளியிடுமாறு கூறுவது? இதற்கு பின்வருமாறு ஒரு மின்னஞ்சலை அனுப்ப வேண்டும். துவக்கம் உங்களது வலைத்தளம் அருமை (வலைதளத்தின் பெயர்). தற்போது படிப்பதற்கு உபயோகப்படும் கருவிகளாக Mobiles மற்றும் பல்வேறு கையிருப்புக் கருவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது. இந்நிலையில் நாங்கள் http://www.FreeTamilEbooks.com எனும் வலைதளத்தில், பல்வேறு தமிழ் மின்புத்தகங்களை வெவ்வேறு துறைகளின் கீழ் சேகரிப்பதற்கான ஒரு புதிய திட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.  இங்கு சேகரிக்கப்படும் மின்புத்தகங்கள் பல்வேறு கணிணிக் கருவிகளான Desktop,ebook readers like kindl, nook, mobiles, tablets with android, iOS போன்றவற்றில் படிக்கும் வண்ணம் அமையும். அதாவது இத்தகைய கருவிகள் support செய்யும் odt, pdf, ebub, azw போன்ற வடிவமைப்பில் புத்தகங்கள் அமையும். இதற்காக நாங்கள் உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை பெற விரும்புகிறோம். இதன் மூலம் உங்களது பதிவுகள் உலகளவில் இருக்கும் வாசகர்களின் கருவிகளை நேரடியாகச் சென்றடையும். எனவே உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை  பிரதியெடுப்பதற்கும் அவற்றை மின்புத்தகங்களாக மாற்றுவதற்கும் உங்களது அனுமதியை வேண்டுகிறோம். இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்களில் கண்டிப்பாக ஆசிரியராக உங்களின் பெயரும் மற்றும் உங்களது வலைதள முகவரியும் இடம்பெறும். மேலும் இவை “Creative Commons” உரிமத்தின் கீழ் மட்டும்தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் அளிக்கிறோம். http://creativecommons.org/licenses/  நீங்கள் எங்களை பின்வரும் முகவரிகளில் தொடர்பு கொள்ளலாம். e-mail : FREETAMILEBOOKSTEAM@GMAIL.COM  FB : https://www.facebook.com/FreeTamilEbooks  G plus: https://plus.google.com/communities/108817760492177970948    நன்றி. முடிவு மேற்கூறியவாறு ஒரு மின்னஞ்சலை உங்களுக்குத் தெரிந்த அனைத்து எழுத்தாளர்களுக்கும் அனுப்பி அவர்களிடமிருந்து அனுமதியைப் பெறுங்கள். முடிந்தால் அவர்களையும் “Creative Commons License”-ஐ அவர்களுடைய வலைதளத்தில் பயன்படுத்தச் சொல்லுங்கள். கடைசியாக அவர்கள் உங்களுக்கு அனுமதி அளித்து அனுப்பியிருக்கும் மின்னஞ்சலைFREETAMILEBOOKSTEAM@GMAIL.COM எனும் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.  ஓர் எழுத்தாளர் உங்களது உங்களது வேண்டுகோளை மறுக்கும் பட்சத்தில் என்ன செய்வது? அவர்களையும் அவர்களது படைப்புகளையும் அப்படியே விட்டுவிட வேண்டும். ஒருசிலருக்கு அவர்களுடைய சொந்த முயற்சியில் மின்புத்தகம் தயாரிக்கும் எண்ணம்கூட இருக்கும். ஆகவே அவர்களை நாம் மீண்டும் மீண்டும் தொந்தரவு செய்யக் கூடாது. அவர்களை அப்படியே விட்டுவிட்டு அடுத்தடுத்த எழுத்தாளர்களை நோக்கி நமது முயற்சியைத் தொடர வேண்டும்.   மின்புத்தகங்கள் எவ்வாறு அமைய வேண்டும்? ஒவ்வொருவரது வலைத்தளத்திலும் குறைந்தபட்சம் நூற்றுக்கணக்கில் பதிவுகள் காணப்படும். அவை வகைப்படுத்தப்பட்டோ அல்லது வகைப்படுத்தப் படாமலோ இருக்கும்.  நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகத் திரட்டி ஒரு பொதுவான தலைப்பின்கீழ் வகைப்படுத்தி மின்புத்தகங்களாகத் தயாரிக்கலாம். அவ்வாறு வகைப்படுத்தப்படும் மின்புத்தகங்களை பகுதி-I பகுதி-II என்றும் கூட தனித்தனியே பிரித்துக் கொடுக்கலாம்.  தவிர்க்க வேண்டியவைகள் யாவை? இனம், பாலியல் மற்றும் வன்முறை போன்றவற்றைத் தூண்டும் வகையான பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டும்.  எங்களைத் தொடர்பு கொள்வது எப்படி? நீங்கள் பின்வரும் முகவரிகளில் எங்களைத் தொடர்பு கொள்ளலாம்.  - EMAIL : FREETAMILEBOOKSTEAM@GMAIL.COM   - Facebook: https://www.facebook.com/FreeTamilEbooks   - Google Plus: https://plus.google.com/communities/108817760492177970948   இத்திட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் யார்? குழு – http://freetamilebooks.com/meet-the-team/    SUPPORTED BY கணியம் அறக்கட்டளை http://kaniyam.com/foundation     கணியம் அறக்கட்டளை []   தொலை நோக்கு – Vision தமிழ் மொழி மற்றும் இனக்குழுக்கள் சார்ந்த மெய்நிகர்வளங்கள், கருவிகள் மற்றும் அறிவுத்தொகுதிகள், அனைவருக்கும்  கட்டற்ற அணுக்கத்தில் கிடைக்கும் சூழல் பணி இலக்கு  – Mission அறிவியல் மற்றும் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு ஒப்ப, தமிழ் மொழியின் பயன்பாடு வளர்வதை உறுதிப்படுத்துவதும், அனைத்து அறிவுத் தொகுதிகளும், வளங்களும் கட்டற்ற அணுக்கத்தில் அனைவருக்கும் கிடைக்கச்செய்தலும்.   தற்போதைய செயல்கள் - கணியம் மின்னிதழ் – http://kaniyam.com - கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் இலவச தமிழ் மின்னூல்கள் – http://FreeTamilEbooks.com   கட்டற்ற மென்பொருட்கள் - உரை ஒலி மாற்றி –  Text to Speech - எழுத்துணரி – Optical Character Recognition - விக்கிமூலத்துக்கான எழுத்துணரி - மின்னூல்கள் கிண்டில் கருவிக்கு அனுப்புதல் – Send2Kindle - விக்கிப்பீடியாவிற்கான சிறு கருவிகள் - மின்னூல்கள் உருவாக்கும் கருவி - உரை ஒலி மாற்றி – இணைய செயலி - சங்க இலக்கியம் – ஆன்டிராய்டு செயலி - FreeTamilEbooks – ஆன்டிராய்டு செயலி - FreeTamilEbooks – ஐஒஎஸ் செயலி - WikisourceEbooksReportஇந்திய மொழிகளுக்ககான விக்கிமூலம் மின்னூல்கள் பதிவிறக்கப் பட்டியல் - FreeTamilEbooks.com – Download counter மின்னூல்கள் பதிவிறக்கப் பட்டியல்   அடுத்த திட்டங்கள்/மென்பொருட்கள்   - விக்கி மூலத்தில் உள்ள மின்னூல்களை பகுதிநேர/முழு நேரப் பணியாளர்கள் மூலம் விரைந்து பிழை திருத்துதல் - முழு நேர நிரலரை பணியமர்த்தி பல்வேறு கட்டற்ற மென்பொருட்கள் உருவாக்குதல் - தமிழ் NLP க்கான பயிற்சிப் பட்டறைகள் நடத்துதல் - கணியம் வாசகர் வட்டம் உருவாக்குதல் - கட்டற்ற மென்பொருட்கள், கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் வளங்களை உருவாக்குபவர்களைக் கண்டறிந்து ஊக்குவித்தல் - கணியம் இதழில் அதிக பங்களிப்பாளர்களை உருவாக்குதல், பயிற்சி அளித்தல் - மின்னூலாக்கத்துக்கு ஒரு இணையதள செயலி - எழுத்துணரிக்கு ஒரு இணையதள செயலி - தமிழ் ஒலியோடைகள் உருவாக்கி வெளியிடுதல் - http://OpenStreetMap.org ல் உள்ள இடம், தெரு, ஊர் பெயர்களை தமிழாக்கம் செய்தல் - தமிழ்நாடு முழுவதையும் http://OpenStreetMap.org ல் வரைதல் - குழந்தைக் கதைகளை ஒலி வடிவில் வழங்குதல் - http://Ta.wiktionary.org ஐ ஒழுங்குபடுத்தி API க்கு தோதாக மாற்றுதல் - http://Ta.wiktionary.org க்காக ஒலிப்பதிவு செய்யும் செயலி உருவாக்குதல் - தமிழ் எழுத்துப் பிழைத்திருத்தி உருவாக்குதல் - தமிழ் வேர்ச்சொல் காணும் கருவி உருவாக்குதல் - எல்லா http://FreeTamilEbooks.com மின்னூல்களையும் Google Play Books, GoodReads.com ல் ஏற்றுதல் - தமிழ் தட்டச்சு கற்க இணைய செயலி உருவாக்குதல் - தமிழ் எழுதவும் படிக்கவும் கற்ற இணைய செயலி உருவாக்குதல் ( aamozish.com/Course_preface போல)   மேற்கண்ட திட்டங்கள், மென்பொருட்களை உருவாக்கி செயல்படுத்த உங்கள் அனைவரின் ஆதரவும் தேவை. உங்களால் எவ்வாறேனும் பங்களிக்க இயலும் எனில் உங்கள் விவரங்களை  kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.   வெளிப்படைத்தன்மை கணியம் அறக்கட்டளையின் செயல்கள், திட்டங்கள், மென்பொருட்கள் யாவும் அனைவருக்கும் பொதுவானதாகவும், 100% வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கும்.இந்த இணைப்பில் செயல்களையும், இந்த இணைப்பில் மாத அறிக்கை, வரவு செலவு விவரங்களுடனும் காணலாம். கணியம் அறக்கட்டளையில் உருவாக்கப்படும் மென்பொருட்கள் யாவும் கட்டற்ற மென்பொருட்களாக மூல நிரலுடன், GNU GPL, Apache, BSD, MIT, Mozilla ஆகிய உரிமைகளில் ஒன்றாக வெளியிடப்படும். உருவாக்கப்படும் பிற வளங்கள், புகைப்படங்கள், ஒலிக்கோப்புகள், காணொளிகள், மின்னூல்கள், கட்டுரைகள் யாவும் யாவரும் பகிரும், பயன்படுத்தும் வகையில் கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் இருக்கும். நன்கொடை உங்கள் நன்கொடைகள் தமிழுக்கான கட்டற்ற வளங்களை உருவாக்கும் செயல்களை சிறந்த வகையில் விரைந்து செய்ய ஊக்குவிக்கும். பின்வரும் வங்கிக் கணக்கில் உங்கள் நன்கொடைகளை அனுப்பி, உடனே விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.  Kaniyam Foundation Account Number : 606 1010 100 502 79 Union Bank Of India West Tambaram, Chennai IFSC – UBIN0560618 Account Type : Current Account   UPI செயலிகளுக்கான QR Code []   குறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும். Note: Sometimes UPI does not work properly, in that case kindly use Account number and IFSC code for internet banking.