[] 1. Cover 2. Table of contents அரம்பை   ஷோபாசக்தி   shobasakthi@hotmail.com   மின்னூல் வெளியீடு : FreeTamilEbooks.com   உரிமை : CC-BY-SA-NC கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.   அட்டைப்படம் - லெனின் குருசாமி - guruleninn@gmail.com   மின்னூலாக்கம் - ஐஸ்வர்யா லெனின் - aishushanmugam09@gmail.com   This book was produced using pandoc   பதிவிறக்கம் செய்ய - http://FreeTamilEbooks.com/ebooks/arambai மின்னூல் வெளியீட்டாளர்: http://freetamilebooks.com அட்டைப்படம்: லெனின் குருசாமி - guruleninn@gmail.com மின்னூலாக்கம்: ஐஸ்வர்யா லெனின் - aishushanmugam09@gmail.com மின்னூலாக்க செயற்திட்டம்: கணியம் அறக்கட்டளை - kaniyam.com/foundation Ebook Publisher: http://freetamilebooks.com Cover Image: Lenin Gurusamy - guruleninn@gmail.com Ebook Creation: Iswarya Lenin - aishushanmugam09@gmail.com Ebook Project: Kaniyam Foundation - kaniyam.com/foundation This Book was produced using LaTeX + Pandoc ராணி மஹால் அப்போது நேரம் அதிகாலை அய்ந்து மணியாகிவிட்டது. வசந்தகாலம் பிறந்திருந்தது என்றாலும், ‘செய்ன்’ நதியிலிருந்து எழுந்துவந்த ஈரலிப்பான காற்றில் குளிரிருந்தது. நதிக்கரையோரமிருந்த ஒற்றையடிப் பாதையில் அன்னராணி நடந்துவந்தார். கடந்த முப்பத்தெட்டு வருடங்களாக ஒருநாள் தவறாமல், அவர் இந்தப் பாதையில் நடக்கிறார். அன்னராணி ஒற்றையடிப் பாதையின் முடிவிலிருந்த சிறிய தார் வீதியில் ஏறி, உயரமான முன் ’கேட்’டைத் திறந்துகொண்டு சிறிய புல்வெளியைத் தாண்டி நடந்தார். புல்வெளியில் அலங்கார மின் விளக்குகள் பிரகாசித்துக்கொண்டிருந்தன. அவரின் எதிரே கம்பீரமாக ராணி மஹால் நின்றிருந்தது. ‘மந்த் லா ஜொலி’ என்ற இந்தச் சிற்றூர் புகழான வரலாற்றுப் பின்னணிகொண்டது. பிரஞ்சு அரசன் இரண்டாம் பிலிப், இந்த ஊரில் தான் போரில் மடிந்தான். இரண்டு தளங்களும் ஆறு அறைகளும் கொண்ட இந்த வீட்டை, அன்னராணியின் கணவர் மரியநாயகம் நீண்டகாலத்துக்கு முன்பு வாங்கினார். வீட்டின் முகப்பில் பதித்திருந்த ‘பெல்லா வில்லா’ என்ற கற்பலகையை நீக்கிவிட்டு, தனது மனைவியின் பெயரால் ‘ராணி மஹால்’ என்ற பெயர்ப் பலகையை இங்கே பதித்தார். அப்போது அன்னராணிக்கு வயது முப்பத்துமூன்று. இப்போது வயது எழுபத்தொன்று. மரியநாயகத்துக்கு அன்னராணியை விட நான்கு வயது அதிகம். ராணி மஹாலுக்குச் செல்வதற்கு உயரமான நான்கு அலங்காரப் படிகளுண்டு. அந்தப் படிகளில் ஏறி, வாசற்கதவுக்கு அருகே வந்தபோதுதான், தன்னிடம் வீட்டுச் சாவி இல்லை என்பது அன்னராணிக்கு ஞாபகம் வந்தது. அவரிடம் எப்போதுமே அந்தச் சாவி இருந்ததில்லை. அன்னராணியின் கணவர் மரியநாயகமே சாவியை வைத்திருப்பார். அந்தச் சாவி, இப்போது மரியநாயகத்தின் குளிர் மேலங்கியின் பைக்குள் இருக்கும். அன்னராணி ஆயாசமாக வாசற்படியில் குந்திக்கொண்டார். ஒரு நிமிடம் ஆறிவிட்டு, எழுந்து சாவியைத் தேடிப் புறப்பட்டார். இப்போது அன்னராணி சற்று வேகமாகவே நதிக்கரையோர ஒற்றையடிப் பாதையால் நடந்தார். நதிக்கரையிலிருந்த தோரண மின் விளக்குகளின் வெளிச்சமும் புலரியும் கலந்து ‘செய்ன்’ நதி நீரில் வனப்புக் காட்டின. ஒற்றையடிப் பாதை முடியும் இடத்தில், காட்டுப் பகுதி ஆரம்பமாகியது. இந்தப் பாதுகாக்கப்படும் காட்டுப் பகுதிக்குள் நடைப் பயிற்சி செய்வதற்கு வளைவுப் பாதைகளிருந்தன. காலை ஆறுமணிக்குப் பின்புதான், மக்கள் இங்கே நடைப் பயிற்சிக்காக வருவார்கள். ஆனால், மரியநாயகம் நாள் தவறாமல் காலை நான்கரை மணிக்கு இங்கே நடைப் பயிற்சி செய்ய வந்துவிடுவார். காட்டுப் பகுதிக்குள் நுழைந்து வளைவுப் பாதையால் அன்னராணி முன்னோக்கி நடந்தார். அடர்ந்த மரங்களுக்கு நடுவாக முதலாவது சூரியக் கதிர் நுழைந்துகொண்டிருந்தது. நடைப் பயிற்சிக்கு நடுவே, மரியநாயகம் எப்போதும் உட்காரும் மர இருக்கையை நோக்கி அன்னராணி நடந்தார். மர இருக்கையின் முன்னே, பாதையில் மரியநாயகத்தின் சடலம் கிடந்தது. மரியநாயகத்தின் முகத்தில், தலையில், கைகளில் இரத்தம் உறைந்துகிடந்தது. மூக்குக் கண்ணாடி சரிபாதியாக உடைந்து தெறித்துத் தரையில் கிடந்தது. மரியநாயகத்தின் நெற்றி நடுவாகப் பிளந்து, அங்கே முட்டையின் மஞ்சள் கருபோல எதுவோ அசிங்கமாக வடிந்திருந்தது. அதைப் பார்த்ததும் அன்னராணி கண்களை மூடிக்கொண்டார். பின்பு அன்னராணி, தனது முகத்தைச் சூரியக் கதிரை நோக்கித் திருப்பி மேலே பார்த்தவாறே, தனது கணவனின் சடலத்துக்கு அருகே மண்டியிட்டு உட்கார்ந்து, கணவன் அணிந்திருந்த செந்நிற மேலங்கியைத் தனது கையால் மெதுவாகத் தடவினார். அன்னராணியின் விரல்கள் மேலங்கியின் பைக்குள் திணிக்கப்பட்டிருந்த, சாவிக்கொத்தை உணர்ந்ததும், சாவிக்கொத்தை எடுத்துக்கொண்டு திரும்பி ராணி மஹாலை நோக்கி நடந்தார். இப்போது அவருக்கு நான்கு படிகளையும் ஏறுவது சிரமமாகயிருந்தது. ஒவ்வொரு படியிலும் மெதுவாகக் கால்களை வைத்து ஏறினார். கையிலிருந்த சாவிக்கொத்தில் பத்துப் பதினைந்து சாவிகளிருந்தன. அதில் எந்தச் சாவி, வாசற்கதவுக்கான சாவி என்று அவருக்குக் குழப்பமாகயிருந்தது. ஒவ்வொரு சாவியாக மெதுமெதுவாகப் போட்டுக் கதவைத் திறக்க முயற்சித்தார். ஆறாவதோ ஏழாவதோ சாவி கதவைத் திறந்தது. வீட்டுக்குள் நுழைந்ததும், விளக்குகளைப் போட்டுவிட்டுக் குளியலறைக்குள் நுழைந்தார். உடைகளைக் களைந்து, கைகளையும் கால்களையும் முகத்தையும் கழுவிக்கொண்டார். படுக்கையறைக்குள் நுழைந்து, அலமாரியைத் திறந்து நீல நிறத்திலான சேலையை எடுத்து உடுத்திக்கொண்டார். மரியநாயகத்திற்கு இவர் சேலையணிவது பிடிக்காது. அய்ரோப்பிய பாணியிலேயே உடை அணியுமாறு வற்புறுத்துவார். தலையில் கொண்டை போட்டுவிட்டு, முகத்திற்கும் கைகளுக்கும் கிரீம் தடவிக்கொண்டார். கறுப்பு நிறக் குளிர் மேலங்கியை எடுத்துச் சேலைக்கு மேலாக அணிந்துகொண்டார். வீட்டு வாசற்கதவைப் பூட்டிவிட்டு, சாவிக்கொத்தை மேலங்கிப் பைக்குள் பத்திரமாக வைத்துக்கொண்டு, அன்னராணி தெருவில் இறங்கி நடக்கத் தொடங்கினார். இந்தத் தெருவில் பஸ் போக்குவரத்து ஏழு மணிக்கு மேல்தான் ஆரம்பிக்கும். தெருவே ஆளரவமற்று அமைதியாகக் கிடந்தது. தெரு முடக்கிலிருந்த ‘பேக்கரி’ மட்டுமே திறந்திருந்தது. பேக்கரியைத் தாண்டியதும், இடது பக்கமா வலது பக்கமா திரும்ப வேண்டும் என அன்னராணி சற்றுக் குழம்பினார். நின்று நிதானமாக யோசித்துவிட்டு, மகனின் வீடு வலது புறத்திலேயே இருக்க வேண்டும் எனத் தீர்மானித்தவராக, அந்தப் பக்கமாகத் திரும்பி நடந்தார். அன்னராணியின் மகன் பிலிப்பின் வீடு அங்கிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில், ஊரின் மையத்திலிருந்தது. அன்னராணி நடக்க நடக்கப் பாதை நீண்டுகொண்டேயிருந்தது. தன்னால் மகனின் வீட்டுக்குப் போய்ச் சேர முடியுமா என்ற சந்தேகமே அவருக்கு வந்துவிட்டது. மகனின் வீடு தீயணைப்புப் படைக் கட்டடத்துக்கும், மக்டொனால்ட் கடைக்கும் நடுவேயிருக்கும் உயரமான பச்சை நிறக் கட்டடத்திலிருந்தது மட்டுமே அவருக்குத் தெளிவாக ஞாபகமிருக்கிறது. தெருவோரத்தில் அவ்வப்போது நின்று, மதிற்சுவர்களில் சிறிது சாய்ந்துகொண்டார். கால்களுக்குள்ளால் குளிர் ஏறிக்கொண்டேயிருந்தது. காலுறை அணியாமல், வெறும் காலில் செருப்பு அணிந்துகொண்ட முட்டாள்தனத்தையிட்டு அவரது வாய் உச்சுக்கொட்டியது. அன்னராணி மெல்ல மெல்ல நடந்து போய், மகனின் வீட்டை அடையாளம் கண்டு, அழைப்பு மணியை அழுத்தும்போது ஏழு மணியாகியிருந்தது. தூக்கக் கலக்கத்தில் கதவைத் திறந்த பிலிப் வாயைப் பிளந்தான். “மம்மி என்ன இந்த நேரத்தில…எனக்கு போன் அடிச்சிருக்கலாமே…” அன்னராணி, மகனை அணைத்து, அவனது இரு கன்னங்களிலும் முத்தமிட்டுவிட்டு, வரவேற்பறையிலிருந்த விசாலமான நாற்காலியில் சாய்ந்து உட்கார்ந்துகொண்டார். “மம்மி…பப்பாவும் வாறேரே? உங்களத் தனிய ஒருக்காலும் விடமாட்டாரே…” அன்னராணி தலையை மேலும் கீழுமாக அசைத்துக்கொண்டே “ரோஸா எங்க தம்பி?” என்று மருமகளைத் தேடினார். பிலிப், கண்களை விரல்களால் தேய்த்துக்கொண்டே கொட்டாவி விட்டான். “அவவுக்கு நைட் டியூட்டி” என்று சொல்லிக்கொண்டே சுவர்க் கடிகாரத்தைப் பார்த்தான். “அரை மணித்தியாலத்தில வந்திருவா.” “சரி..நீ போய்ப் படு! நான் இதில இருக்கிறன்” பிலிப் தலையைச் சொறிந்துகொண்டே படுக்கையறைக்குள் நுழைந்தான். பிலிப்பின் நடவடிக்கைகள்தான் சோம்பேறித்தனமாக இருக்குமே தவிர, அவன் மிகுந்த மதி நுட்பமுள்ளவன். சிறந்த மாணவன் எனப் பள்ளியிலும் பல்கலைக்கழகத்திலும் பெயர் வாங்கியவன். ஆனால், அன்னராணியின் மூத்த மகன் கென்னடி, இவனுக்கு எதிர்மாறாவன். ஒரு நிமிடம் ஓரிடத்தில் இருக்கமாட்டான். படிப்பிலும் அவன் சிறந்தவனாக இருக்கவில்லை. இரண்டாவது மகன் பிலிப் போல, கென்னடி பிரான்ஸிலேயே பிறந்தவனல்ல. அவன் இலங்கையில் பிறந்து ஆறு வயதில், அன்னராணியுடன் பிரான்ஸுக்கு வந்தவன். அன்னராணி, நாற்காலியில் இன்னும் சற்றுச் சாய்ந்து உட்கார்ந்துகொண்டார். கண்களில் தூக்கம் அழுத்துவதை உணர்ந்தார். ஆனால், தூங்கக் கூடாது என்பதில் அவர் தெளிவாகயிருந்தார். பிலிப்பின் வீட்டுத் தொலைபேசியோ, அவனின் கைபேசியோ ஒலிக்கும் சத்தம் கேட்கிறதா என ஒரு காதைத் திறந்து வைத்திருந்தார். அடுத்த காதை வாசற்கதவில் வைத்திருந்தார். கண்களை லேசாக மூடிக்கொண்டார். கென்னடி ‘அம்மா’ என்று அவரைக் கூப்பிட்டான். ‘பப்பா’ என அரற்றினான். அன்னராணி சருகுபோல அந்தச் சொகுசு நாற்காலியில் ஒட்டிக்கொண்டார். 2 அன்னராணிக்கு சற்றுத் தாமதமாக, இருபத்தாறு வயதில்தான் திருமணம் நடந்தது. 1975 -ல் இருபத்தாறு வயதுவரை ஒரு பெண் கல்யாணம் செய்யாமலிருப்பது கிராமத்தில் அசாதாரண விசயம்தான். முழுக் கிராமமுமே அந்தப் பெண்ணுக்கு மாப்பிள்ளை பார்க்கும் முயற்சியில் இறங்கிவிடுவார்கள். அந்தோனியார் கோயில் மூப்பர் இன்னாசிமுத்துவுக்கும், அருளம்மாவுக்கும் இரண்டு குழந்தைகள். மூத்தவனான தியோகு, தன்னுடைய இருபதாவது வயதிலே, பாலைதீவுத் திருவிழாவுக்குப் படகில் போகும்போது, கடலில் மூழ்கி இறந்துவிட்டான். அவனுக்கு மூன்று வயது இளையவள் அன்னராணி. அன்னராணி தென்னை மரம்போல நெடுநெடுவென்ற உயரம். உயரத்திற்கு ஏற்ற பூரிப்பான உடம்பு. ஒருவித எலுமிச்சைப்பழ நிறம் அன்னராணிக்குக் கிடைத்திருக்கிறது. அடர்ந்த சுருட்டையான கூந்தலை வாரி முடிய ஒருநாள் வேண்டும். அந்தக் கிராமம் இப்படியொரு அழகியையும் அடக்கமான குமர்ப்பெண்ணையும் அதுவரை பார்த்ததில்லை எனக் கிராமத்திலே பேசிக்கொள்வார்கள். எல்லா வீடுகளிலும் அன்னராணியை உதாரணம் காட்டியே பெண் பிள்ளைகள் வளர்க்கப்படுவார்கள். கிராமத்திலிருந்த பள்ளிக்கூடத்தில் எட்டாவது வரை அன்னராணி படித்தாள். அதற்கு மேல் படிப்பதென்றால் வெளியூருக்குப் போகவேண்டும். அப்படிப் பெண்களைத் தனியாக வெளியூருக்கு அனுப்பும் வழக்கம் அப்போது கிராமத்திலில்லை. அன்னராணியும் மேலே படிக்க வேண்டுமென்று கேட்கவில்லை. படிப்பில் அவளுக்குப் பெரிய ஆர்வமுமில்லை. ஏதாவது புத்தகம் வாசிப்பதென்றாலே அவளுக்குத் தலையிடிக்கும். சமையல் செய்வதிலும், விதவிதமாகச் சாப்பிடுவதிலும் அவளுக்குப் பெருத்த ஆர்வம். வீட்டு வளவுக்குள் இருந்த நெல்லி, கொய்யா, ஜம்பு, மாமரங்கள் என ஒவ்வொரு மரமாகத் தேடிச் சென்று எப்போதும் வாயைச் சப்பியபடியே இருப்பாள். பனங்கிழங்கு சாப்பிட உட்கார்ந்தால், இருபது கிழங்குகள் சாப்பிட்டுவிட்டுத்தான் எழுந்திருப்பாள். சட்டிப் பனை காய்க்கும் பருவம் தொடங்கிவிட்டால், ஒவ்வொரு நாளும் ஒரு பனம் பழம் சுட்டுத் தின்னாமல் இருக்கமாட்டாள். செவ்வாய்க்கிழமை அந்தோனியார் கோயிலுக்கும், ஞாயிற்றுக்கிழமை சஞ்சுவானியார் கோயிலில் நிகழும் பூசைக்கும் செல்வதற்குத்தான், அன்னராணி வீட்டை விட்டு வெளியே வருவாள். அன்னராணி எப்போதும் கணுக்கால்வரை பாவாடை அணிந்துகொள்வாள். முழுக்கைச் சட்டைதான் அணிவாள். கரையில் கறுப்பு நிற லேஸ் வைத்துத் தைத்த வெள்ளை நிறத் துப்பட்டியைத்தான் தலையில் போட்டுக்கொள்வாள். தாய்க்கும் தகப்பனுக்கும் வால் பிடித்துக்கொண்டே, குனிந்த தலை நிமிராமல் கோயிலுக்குப் போவாள். அவள் வயதொத்த பக்கத்து வீட்டுப் பெண்களுடன் வேலியில் நின்று மணிக்கணக்காகக் கதைப்பதும் முடிந்துவிட்டது. அயல் பெண்களெல்லாம் கல்யாணம் முடித்துவிட்டார்கள். அவர்களுக்குப் பேசுவதற்கு நேரமில்லை. எப்போதாவது பேசிக்கொண்டிருக்கும் போது, அயல் பெண்ணின் கணவன் அந்தப் பக்கமாக வந்தால், அன்னராணி விறுவிறுவென்று வேலியிலிருந்து திரும்பி வீட்டுக்குள் புகுந்துகொள்வாள். இன்னாசிமுத்து குடும்பத்துக்கு தோட்டம், துரவு, வயல் என்றிருந்ததால் காசு பணத்துக்குப் பஞ்சமில்லை. இருந்தாலும் இருபத்தாறு வயதுவரை அன்னராணிக்கு மாப்பிள்ளை அமையாமலேயே இருந்தது. கிராமத்திலே பெண்களைக் கலைத்துக்கொண்டு திரியும் காவாலிப் பொடியன்கள் அன்னராணி வீட்டுப் பக்கமே வருவதில்லை. அன்னராணி நெருங்க முடியாதவள் என்பதுபோல பொடியன்களிடையே பேச்சிருந்தது. அன்னராணியின் நெடுநெடுவென்ற உயரத்தால் தான் அவளுக்கு மாப்பிள்ளை அமையவில்லை எனத் தாயார் அருளம்மா கவலைப்பட்டுவார். “எங்கிட வம்சத்திலேயே இல்லாத மாதிரி அன்னம் ஒரு உலாந்தாச் சாங்கத்தில பிறந்திருக்கிறாள்” என்பார். அன்னராணிக்கு கயிறடிக்கப் பிடிக்கும். ‘ஸ்கிப்பிங்’ கயிறு எதுவும் கடைகளுக்கு வராத காலமது. வேலி வரியும் கயிற்றை அளவாக வெட்டி, இரட்டைப் பட்டாக முறுக்கி வைத்துக்கொண்டுதான், கிராமத்துப் பெண்கள் ஸ்கிப்பிங் செய்வார்கள். அது அப்போது பெண்களின் விளையாட்டாக மட்டுமேயிருந்தது. ஒருநாள் முற்றத்தில் நின்று ஸ்கிப்பிங் செய்து, அன்னராணி மணல் புழுதியைக் கிளப்பிக்கொண்டிருந்த போதுதான்; இளவாலை மாமி, படலையைத் திறந்துகொண்டு உள்ளே நுழைந்தார். இளவாலை மாமி, இன்னாசிமுத்துவுக்கு சகோதரி முறை. அவர் எப்போதாவது இன்னாசிமுத்துவின் வீட்டுக்கு வந்தாரென்றால் நகை அடகு, கைமாற்று, கோயில் காரியம் என்று ஏதாவது விசயமிருக்கும். இம்முறை அவர் அன்னராணிக்கு ஒரு சம்மந்தம் கொண்டு வந்தார். “கோதாரி துரையப்பாவின்ர மூத்தவன், உங்களுக்கு அவையள் சுவக்கீன் பெரியப்புவின்ர வழியில சொந்தம்தானே. பேராதனைப் பட்டதாரி. கொழும்பில வெளிநாட்டுக் கொம்பனியில உத்தியோகம். தேப்பனை மாதிரியில்ல. குடிவெறி வெத்தில சிகரெட் ஒண்டுமில்ல. உங்களட்ட உள்ளதெல்லாம் பொடிச்சிக்குத்தானே…இப்ப இந்த வீட்டையும் வளவையும் எழுதிவிடுங்கோவன். பொடியனுக்கு தங்கச்சிமார் ரெண்டு இருக்கு..அவையளுக்கு டொனேசனா ஆளுக்குப் பத்தாயிரம். கோதாரியற்ற கையில ரொக்கமா இருபத்தையாயிரம். நீங்கள் பொடிச்சிக்கு முப்பது பவுனுக்கு குறைய நகை போடமாட்டியள்.” மரியநாயகமும் சொந்தக்காரர்களும் இளவாலையிலிருந்து, கார் பிடித்துப் பெண் பார்க்க வந்தார்கள். வீட்டின் கூடத்தில் நாற்காலி போட்டு அன்னராணியை உட்கார வைத்திருந்தார்கள். அன்னராணி ஓர் அரசி போல கம்பீரமாக நாற்காலியில் அமர்ந்திருந்தாள். மரியநாயகம், அன்னராணியை விட ஒரு ‘இஞ்சி’ உயரம் குறைவு என்பதுபோல, அன்னராணியின் தாயாருக்குத் தோன்றியது. குசினிக்குள் வந்த இன்னாசிமுத்தரிடம் “கட்டையோ நெட்டையோ பறையாமல் கட்டிக் குடுத்திருவம்..இனியும் வைச்சிருக்க ஏலாது” என்று மெல்லிய குரலில் சொன்னார். அப்படியொரு கலாதியான கல்யாணத்தை அந்தக் கிராமம் அதுவரை கண்டதில்லை. மூன்று நாட்கள் கொண்டாட்டம். முதல்நாள் காலை ஆறுமணிக்கு முற்றத்துப் பனைமரத்தில் இரண்டு லவுட் ஸ்பீக்கர்களை கிழக்காகவும் மேற்காகவும் கட்டிவிட்டு, முதற் பாடலாக “கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் இயேசு தேடுங்கள் கிடைக்குமென்றார்” ஒலித்தபோது, முழுக் கிராமமுமே கல்யாணத்துக்குத் தயாராகிவிட்டது. மரியநாயகத்துக்கு பிஷப் சொந்தக்காரர். எனவே பிஷப்பே நேரடியாகத் தேவாலயத்துக்கு வந்து, மரியநாயகத்துக்கும் அன்னராணிக்கும் கைப்பிடித்து வைத்தார். கல்யாணத்திற்குப் பின்பு, மரியநாயகம் அன்னராணியின் வீட்டிலேயே குடியேறிக்கொண்டான். இப்போது அந்த வீடு அவனது பெயரில் இருந்தது. அன்னராணியின் தாயும் தகப்பனும் மருமகனை மரியாதையால் குளிப்பாட்டினார்கள். மரியநாயகம், பிஷப்பின் சொந்தக்காரன் என்பதால் அந்த மரியாதை நாளுக்குநாள் பெருகிக்கொண்டேயிருந்தது. கொழும்பில், வெள்ளிக்கிழமை மாலை அலுவலக வேலை முடிய இரயில் பிடித்து, சனிக்கிழமை அதிகாலையில் மரியநாயகம், அன்னராணி வீட்டுக்கு வந்துவிடுவான். ஞாயிறு இரவு மறுபடியும் கொழும்புக்கு இரயில் பிடிப்பான். கொழும்புப் பழக்கவழக்கமுள்ளவன் என்பதால், அந்தக் கிராமத்திலேயே மரியநாயகம் வித்தியாசமாகத் தோன்றினான். அன்னராணி வீட்டுக்கு பற்பசை, பிரஷ் கூட அவனால்தான் அறிமுகமாயின. மருமகன் காலையில் வாய் நுரைக்கப் பல் துலக்குவதை ஓரக்கண்ணால் பார்ப்பதில் இன்னாசிமுத்தருக்கு ஒரு பெருமை என்றே சொல்லலாம். இன்னொரு பக்கம் அருளம்மா, மருமகனுக்கு முட்டைக் கோப்பி தயாரிப்பதில் கண்ணும் கருத்துமாயிருப்பார். மரியநாயகம் காலையிலும் மாலையிலும் கிராமத்துக் கடற்கரைக்கு உலாவப் போவான். அந்தக் கிராமத்தில், மலம் கழிப்பதற்கு மட்டும்தான் மக்கள் கடற்கரைக்குப் போவதுண்டு. எனவே கடற்கரையின் தாழம்புதர்கள் மறைவில் மரியநாயகம் ஒவ்வொருநாளும் நடந்து திரிவதை மக்கள் சந்தேகத்தோடு பார்த்ததில் தவறொன்றுமில்லை. “மூப்பற்ற மருமோன் ஒரு போக்கு” என்று அவர்கள் பேசிக்கொண்டார்கள். அன்னராணி குடும்பத்துக்கே மரியநாயகத்தின் போக்குப் பிடிபடவில்லை. காலையும் மாலையும் கடற்கரையில் சும்மா நடந்து திரிந்தால் என்னதான் அர்த்தம்? இதில் இன்னொரு பிரச்சினை என்னவென்றால், மரியநாயகம் கடற்கரைக்கு உலாவப் போகும்போது, அன்னராணியையும் தன்னுடன் கூடவே வருமாறு வற்புறுத்தினான். அன்னராணிக்கு இது பிடிக்கவேயில்லை. அவளுக்கு வீட்டைவிட்டு வெளியே போவதென்றாலே பெரிய அரியண்டமாக இருக்கும். தலையைக் குனிந்துகொண்டே தெருவிலும் வெளியிலும் நடப்பதைக் காட்டிலும், வீட்டுக்குள்ளேயே சுதந்திரமாக இருந்துவிடலாம் என்றுதான் அவள் எண்ணுவதுண்டு. மரியநாயகத்தோடு அவள் கடற்கரையில் நடக்கும்போது, ஒருதடவை தாழம்புதர்களிடையே இருந்து யாரோ கேலியாகக் கூச்சலிடுவது போலிருந்தது. மரியநாயகம் தன்பாட்டுக்கு வேகமாக நடந்துகொண்டிருந்தான். அன்னராணி தான் ஆயிரம் தடவைகள் பின்னால் திரும்பிப் திரும்பிப் பார்த்துக்கொண்டே நடந்தாள். யாழ்ப்பாண நகரத்துக்கு சினிமா பார்க்கவும் மரியநாயகம் போவதுண்டு. ஆங்கிலப் படங்கள் மட்டுமே பார்ப்பான். அன்னராணியையும் கட்டாயப்படுத்தித் தன்னோடு அழைத்துச் செல்வான். ஆங்கிலப் படங்கள் காண்பிக்கப்படும் தியேட்டர்களில் பெண்களே இருக்கமாட்டார்கள். மொத்த அரங்கிலும் அன்னராணி மட்டுமே பெண்ணாக இருப்பாள். திரையில் வரும் உருவங்கள் அரைகுறை ஆடையிலோ, எப்போதாவது நிர்வாணமாகவோ தோன்றும்போது, அன்னராணிக்கு உடல் முழுவதும் நடுங்கத் தொடங்கிவிடும். திரையரங்கில் பல தலைகள் தன்னையே பார்ப்பதாக அவள் உணர்வாள். மரியநாயகமோ திரைப்படத்தில் ஆழ்ந்துவிடுவான். திரும்பி வரும்போது, படத்தைப் பற்றி அன்னராணியுடன் பேசுவான். அப்போது அன்னராணிக்குக் கூட ‘இவரொரு போக்கு’ என்று தோன்றத்தான் செய்யும். கல்யாணம் நடந்த மூன்றாவது மாதத்திலேயே கென்னடி, அன்னராணியின் வயிற்றில் கருவாகிவிட்டான். ஆறாவது மாதத்தில், தான் வெளிநாடு போகப் போவதாக மரியநாயகம் சொன்னான். அவன் வேலை செய்த நிறுவனமே அவனைப் பின்லாந்து நாட்டுக்கு மேற்படிப்புக்கு அனுப்புகிறதாம். இரண்டு வருடப் படிப்பு, ஆறு மாதங்களுக்கு ஒருமுறை விடுமுறையில் வருவேன் எனச் சொல்லிவிட்டு மரியநாயகம் பின்லாந்துக்குப் போய்விட்டான். ஆனால், அவன் ஒருபோதும் திரும்பி வரவேயில்லை. முதல் ஆறுமாதங்களுக்கு அவனிடமிருந்து, அன்னராணிக்குக் கடிதங்கள் வந்துகொண்டிருந்தன. பின்பு அதுவும் நின்றுபோயிற்று. கைக்குழந்தையையும் வைத்துக்கொண்டு, அன்னராணி பரிதவித்துக்கொண்டிருந்தாள். மரியநாயகத்தின் பெற்றோருக்கும் கடிதங்கள் வருவதில்லை. ஒரு வருடத்திற்குப் பிறகு மரியநாயகத்தின் கடிதம் பிரான்ஸிலிருந்து வந்தது. பின்லாந்து நாடு மரியநாயகத்துக்கு ஒத்துவரவில்லையாம். கடும் குளிரான துருவப் பகுதியில் தனிமையில் இருக்க முடியாமல் பிரான்ஸுக்குப் போய்விட்டானாம். அங்கே அவனுக்கு நண்பர்கள் இருக்கிறார்களாம். அவர்களோடு சேர்ந்து தொழில் தொடங்கப்போகிறானாம். விரைவிலேயே அன்னராணியையும் பிரான்ஸுக்கு அழைத்துக்கொள்வதாக எழுதியிருந்தான். குழந்தை கென்னடியின் நலத்தை விசாரித்தும் ஒரு வார்த்தை எழுதியிருந்தான். காணாமற்போன கணவனிடமிருந்து, கடிதம் வந்திருக்கிறது என அன்னராணி சந்தோஷப்பட்டதை விட, தன்னையும் அவன் வெளிநாட்டுக்கு அழைக்கிறான் என்ற பதற்றமே அவளிடம் அதிகமாகயிருந்தது. இன்னாசிமுத்து இந்தச் செய்தியை இரகசியமாகவே வைத்திருக்குமாறு அன்னராணியிடம் சொன்னார். மகளும் பேரப்பிள்ளையும் வெளிநாடு போகப் போகிறார்கள் என ஊரார்கள் அறிந்தால், கண்ணூறு பட்டுப் பயணம் தடங்கலாகிவிடும் என அவர் சொன்னார். ஆனால், மரியநாயகம் உடனடியாக அன்னராணியை அழைத்துக்கொண்டு விடவில்லை. கடிதமும் பணமும் ஒழுங்காக அனுப்பினானே தவிர, அன்னராணியை அழைத்துக்கொள்ள முயற்சி எடுப்பதாகத் தெரியவில்லை. அன்னராணியும் தன்னை அழைத்துக்கொள்ளுமாறு கேட்கவுமில்லை. அவள் இப்போது குழந்தை கென்னடியோடு சேர்ந்து ஸ்கிப்பிங் விளையாடத் தொடங்கிவிட்டாள். கென்னடிக்கு ஆறு வயதான போதுதான், அவர்கள் பிரான்ஸ் வந்து சேர்ந்தார்கள். 3 அப்போது, பாரிஸ் நகரத்தில் ஓர் அடுக்குமாடிக் குடியிருப்பில்தான் அவர்கள் இருந்தார்கள். மரியநாயகம் ஒரு சுத்திகரிப்பு நிறுவனத்தை நடத்திக்கொண்டிருந்தார். இருபத்தைந்து தமிழர்கள் அவரிடம் வேலை செய்தார்கள். பொருட்காட்சி மண்டபங்களிலும், சந்தைகளிலும் சுத்திகரிப்பு ஒப்பந்தங்களைப் பெற்று மரியநாயகம் பரபரப்பாகத் தொழில் செய்துகொண்டிருந்தார். ஓய்வு நேரங்களில் அன்னராணியையும் குழந்தையையும் அழைத்துக்கொண்டு நண்பர்களது வீடுகளுக்குப் போனார். அல்லது நண்பர்கள் இவரது வீட்டுக்கு வந்தார்கள். இப்போது மரியநாயகம் நிறைவாக மது அருந்துகிறார். அவர் குடிக்காத நாளில்லை. அதுபற்றி அன்னராணிக்கு ஒரு பிரச்சினையுமில்லை. சொல்லப்போனால், படுக்கையில் மரியநாயகத்தின் மீது வீசும் மதுவின் நெடி அன்னராணிக்குப் பிடித்துத்தானிருந்தது. இன்னாசிமுத்துவும் காலையும் மாலையும் கள் குடிப்பவர்தான். அன்னராணி சிறியவளாக இருந்தபோது, அவளுக்கும் ஒரு சிரட்டையில் சிறிது கள் வார்த்துக் கொடுப்பார். “ஒரு பனைக் கள்ளு உடம்புக்கு நல்லது பிள்ள” என்பார். பனங்கள்ளின் புளிப்பான தித்திப்பு அன்னராணிக்குப் பிடித்திருந்தது. அன்னராணி பெரியபிள்ளையாகும் வரை, அவ்வப்போது ஒரு சிரட்டைக் கள் குடித்துக்கொண்டுதானிருந்தார். ஆனால், மரியநாயகம் எப்போதும் தன்னையும் குழந்தையையும் வெளியே அழைத்துப்போவது, அல்லது நண்பர்களை வீட்டுக்கு அழைத்து வருவதாக இருந்ததை அன்னராணியால் ஒத்துக்கொள்ள முடியவில்லை. எப்போதும் சீவிச் சிங்காரித்துக்கொண்டு இருப்பதையும், வீட்டுக்கு வருபவர்களுக்குப் பல்லைக் காட்டிக்கொண்டு வரவேற்பதையும் அன்னராணி வெறுத்தார். அதேபோல, மரியநாயகத்தின் நண்பர்களின் வீடுகளுக்குப் போகவும் அவர் விரும்பவில்லை. அந்த நண்பர்கள் கூட்டத்தில், அப்போது மரியநாயகம் மட்டுமே திருமணமானவராக இருந்தார். அந்தக் கூட்டத்துக்கு நடுவே ஒரேயொரு பெண்ணாக, ஆறு வயதுக் குழந்தையையும் வைத்துக்கொண்டு அன்னராணி அல்லாடிக்கொண்டிருந்தார். எப்போதும் கழுவித் துடைத்த முகமாகவும், ஒப்பனை செய்துகொண்டும், நல்ல ஆடைகளை அணிந்துகொண்டும் இருக்க வேண்டுமென்று, அன்னராணிக்கு இடைவிடாமல் மரியநாயகம் அறிவுறுத்தியபடியே இருந்தார். அதைச் செய்ய அன்னராணி சுணங்கினால் ‘தீவாள்’ என்று கண்டிக்கவும் செய்தார். ஆனால், அன்னராணியில் காட்டிய அக்கறையில் சிறு துளியைக் கூட மரியநாயகம் குழந்தை கென்னடி மேல் காட்டினாரில்லை. அந்தக் குழந்தையும் தகப்பனோடு சேர்வதுமில்லை. அன்னராணியிடம் எரிந்து விழுவதிலும் அதிகமாகக் குழந்தை மீது மரியநாயகம் எரிந்து விழுந்தார். குழந்தையும் துடியாட்டமான குழந்தைதான். அடிக்கடி தந்தையிடம் ஏச்சும் பேச்சும் வாங்கினான். இன்னொரு குழந்தையைப் பெற்றுக்கொள்வதற்குக் கூட மரியநாயகம் மறுத்துவிட்டார். அன்னராணியின் முலைகளைப் பிசைந்துகொண்டே “இன்னொரு பிள்ளப் பெத்தால் உன்ர உடம்பு நொந்துபோகும் அன்னம்” என்றார். மரியநாயகத்துக்குத் தன்னுடைய வெற்றிகரமான சுத்திகரிப்பு நிறுவனம், வைத்திருந்த ஆடம்பரக் கார் போன்றவற்றில் தாளாத பெருமையிருந்தது. அதுபோலவே பெண்சாதியையும் வைத்துக்கொண்டு ஊராருக்குப் பெருமை காட்டுவதிலேயே கணவர் ஆர்வமாகயிருக்கிறார் என்பது போலத்தான் அன்னராணிக்குத் தோன்றியது. அன்னராணி பிரான்ஸு க்கு வந்த இரண்டு வருடங்களின் பின்பு, இந்த ராணி மஹாலை மரியநாயகம் வாங்கினார். பாரிஸ் நகரத்திலிருந்து சற்றுத் தொலைவாக வந்துவிட்டதால், இனியாவது சற்று அமைதியும் தனிமையும் கிட்டும் என்றுதான் அன்னராணி நினைத்தார். ஆனால், திடீர் திடீரென்று அன்னராணியையும் குழந்தையையும் அழைத்துக்கொண்டு மரியநாயகம் காரில் நண்பர்களின் வீடுகளுக்குப் புறப்பட்டுவிடுவார். அல்லது நண்பர்கள் ராணி மஹாலுக்கு வருவார்கள். குடியும் பாட்டும் கூத்துமாக வீடு அலறும். இந்த ஆர்ப்பாட்டங்களையெல்லாம் அன்னராணியால் சகித்துக்கொள்ள முடியாமலிருந்தது. அன்னராணியின் தாயும் தந்தையும் ஒருவர் பின் ஒருவராக இறந்தபோது கூட, அன்னராணியை ஊருக்கு அனுப்பிவைக்க மரியநாயகம் சம்மதிக்கவில்லை. ‘இப்போது இலங்கையில் கடுமையாகச் சண்டை நடக்கிறது’ என்று சொல்லிவிட்டார். மரியநாயகத்துக்கு மனைவியை அடிக்கும் பழக்கம் அறவே கிடையாது. ஆனால், அன்னராணியை அவமதிக்காமல் அவருக்குப் பேசவே தெரியாது. அன்னராணியின் இளமையும் பொலிவும் குறையக் குறைய, இந்தச் சீண்டல் பேச்சுகளும் அவமதிப்பும் அதிகரித்துக்கொண்டே வந்தன. மரியநாயகம் குழந்தை கென்னடியைக் கூட எப்போதும் நொட்டை சொல்லி ஏசிக்கொண்டேயிருப்பார். ஆனாலும் அவர் குடிவிருந்துக்குப் போனாலோ, ஏதாவது நிகழ்ச்சிகளுக்குப் போனாலோ அன்னராணியை அழைத்துக்கொண்டே போவார். கடை கண்ணிகளுக்குக் கூட அன்னராணியைத் தனியே அனுப்பமாட்டார். குழந்தையைப் பள்ளிக்கூடத்துக்கு அழைத்துச் செல்லவும், அழைத்து வரவும், சம்பளத்துக்கு ஓர் ஆபிரிக்க ஆயாவைப் பிடித்தார். தேவாலயத்தில் ஞாயிற்றுக் கிழமைப் பூசைக்கோ நத்தார், ஈஸ்டருக்கோ மரியநாயகம் கூட வராமல் அன்னராணியால் தனியே செல்லவே முடியாது. மரியநாயகம் ஏதாவது தொழிற் பிரச்சினையில் சிக்கிக்கொண்டால், அந்த ஞாயிறு அன்னராணிக்குப் பலிப்பூசை கிடையாது. ராணி மஹால் வரவர முழுநேர விசாரணைக் கூடமாக மாறிக்கொண்டிருந்தது. ஓயாமல் ஏசிக்கொண்டிருக்கும் மரியநாயகத்தின் வார்த்தைகளின் வெம்மையில் அன்னராணியின் காதுகள் தீய்ந்துபோயின. இரவு முழுப் போதையேறியவுடன்; அன்னராணியின் பழக்கவழக்கம் சரியில்லை, தன்னை மதித்து நடக்கவில்லை, குழந்தை சரியாகப் படிக்கவில்லை என்று ஏதாவதொரு காரணத்தைக் கண்டுபிடித்து மரியநாயகம் மனைவியையும் குழந்தையையும் நிறுத்தாமல் திட்டிக்கொண்டேயிருப்பார். ராணி மஹாலின் விசாலமான கூடத்தின் நட்ட நடுவாக நாற்காலியில் உட்கார்ந்துகொண்டு “பொறுத்தல் கேளு அன்னம்” என்பார். தன்னுடைய தந்தை இன்னாசிமுத்துவிடம், தாயார் அருளம்மா ஓரிருமுறை பொறுத்தல் கேட்டதைச் சிறுமியாக இருந்தபோது அன்னராணி கண்டிருக்கிறார். ஆனால், மரியநாயகமோ ஒவ்வொரு நாளும் பொறுத்தல் கேட்கச் சொன்னார். நாற்காலியில் உட்கார்ந்திருக்கும் மரியநாயகத்தின் பக்கவாட்டில் நின்றவாறே, அன்னராணி தான் செய்த பாவங்களைச் சொல்லி மரியநாயகத்திடம் மன்னிப்புக் கேட்க வேண்டும். அப்போதெல்லாம் அன்னராணி தான் செய்த பாவங்களையும் குற்றங்களையும் கண்டுபிடிக்க மிகச் சிரமப்படுவார். ஒவ்வொரு நாளும் ஏதாவது புதுப் பாவங்களைச் சொல்லி, அன்னராணி தன்னிடம் மன்னிப்புக் கேட்ட வேண்டுமென்று மரியநாயகம் எதிர்பார்த்தார். அப்படிப் பாவங்களைக் கண்டுபிடிக்க முடியாமல் அன்னராணி திணறியபோது, தாயையும் குழந்தையையும் ராணி மஹாலுக்கு வெளியே தள்ளி, மரியநாயகம் எல்லா வாசற்கதவுகளையும் மூடிவிடுவார். எத்தனையோ இரவுகள், தாயும் பிள்ளையுமாகக் குளிரில் நடுங்கிக்கொண்டு, அலங்கார வாசற்படிகளில் உட்கார்ந்திருப்பார்கள். காலை நான்கரை மணிக்கு, நடைப் பயிற்சிக்குப் போகும்போதுதான் மரியநாயகம் மறுபடியும் வாசற்கதவைத் திறப்பார். குழந்தையைத் தூக்கிச் சென்று, படுக்கையில் கிடத்திவிட்டு, அன்னராணி கணவருடன் நடைப் பயிற்சிக்குப் போக வேண்டும். அன்னராணி இல்லாமல் மரியநாயகம் நடைப் பயிற்சிக்குப் போகமாட்டார். மாலையானதுமே, அன்னராணி இரண்டு கம்பளிப் போர்வைகளையும் தண்ணீர்ப் போத்தல்களையும் அலங்கார வாசற்படிகளுக்கு அடியில் மறைத்து வைத்துவிடுவார். இரவில் வெளியே துரத்தப்பட்டதும் அந்தப் போர்வைகளால் தன்னையும் குழந்தையையும் மூடிக்கொண்டு, குழந்தையை மடியில் தூங்க வைப்பார். தந்தை வீட்டில் இல்லாத நேரங்களில், குழந்தை கென்னடி கூடத்தின் நடுவேயிருந்த உயரமான நாற்காலியின் பக்கவாட்டில் நின்றுகொண்டிருப்பான். பின்பு வெளியே போய் வாசற்படியில் குந்திக்கொள்வான். திடீரெனக் காணாமற்போவான். அன்னராணி வீட்டின் ஒவ்வொரு அறையாகத் தேடித்தேடி அவனைக் கண்டுபிடிப்பார். கென்னடிக்குப் பதினான்கு வயதாக மூன்று நாட்கள் இருந்தபோதுதான், அவன் இறந்துபோனான். அன்று இரவு, மரியநாயகம் மெல்லிய குரலில் அன்னராணியைத் திட்டியவாறே, பொறுத்தல் கேட்க அழைத்தபோது கென்னடி ஓடிப்போய் எங்கேயோ ஒளிந்துகொண்டான். மரியநாயகம் வீடு முழுவதும் தேடியும் கென்னடியைக் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆத்திரத்தோடு அன்னராணியை ராணி மஹாலுக்கு வெளியே தள்ளிக் கதவுகளை மூடிக்கொண்டார். அன்னராணி வாசற்படியில் உட்கார்ந்தவாறே, தனது காதுகளை வாசற்கதவில் வைத்திருந்தார். அதிகாலை மூன்று மணிக்கு அந்த வாசற்கதவை மரியநாயகம் திறந்தார். அன்னராணி உள்ளே போய்ப் பார்த்தபோது, சமையலறை உத்திரத்தில் கட்டப்பட்டிருந்த ஸ்கிப்பிங் கயிற்றில் கென்னடி சடலமாகத் தொங்கிக்கொண்டிருந்தான். “என்ன பாவம் செய்துபோட்டு இவன் தூக்கில தொங்கியிருக்கிறான்” என்று கேட்டுத் தனது நெற்றியில் உள்ளங்கையால் ஓங்கி அறைந்துகொண்டார் மரியநாயகம். கென்னடியின் மரணத்துக்குப் பின்பு, மரியநாயகம் கொஞ்சம் அடங்கித்தான் போனார். காவல்துறை மரியநாயகத்தையும் அன்னராணியையும் துருவித் துருவி விசாரித்தது. தற்கொலைதான் என்பதற்கான உறுதியான அடையாளங்களைச் சமையலறையில் கென்னடி விட்டுவிட்டுத்தான் போயிருந்தான். அடுத்த வருடமே அன்னராணியை மரியநாயகம் மறுபடியும் கர்ப்பவதியாக்கினார். பொறுத்தல் கேட்க அழைப்பதும், வீட்டுக்கு வெளியே தள்ளிக் கதவை மூடுவதும் முற்றாக நின்று போயிற்று. இரண்டாவது குழந்தை பிலிப்போடு மரியநாயகம் பாசமாகத்தான் நடந்துகொண்டார். தன்னுடைய இருபதாவது வயதில் பிரஞ்சுப் பெண்ணான ரோஸாவை, ராணி மஹாலுக்கு அழைத்துவந்து, காதலி என பிலிப் அறிமுகப்படுத்தி வைத்தபோது, மரியநாயகம் வாயெல்லாம் பல்லாக ரோஸாவை வரவேற்று, அவளது கன்னங்களில் முத்தமிட்டார். அன்னராணியையும் அழைத்துக்கொண்டு ரோஸாவின் வீட்டுக்குப் போய், ரோஸாவின் பெற்றோரோடு விருந்து கொண்டாடினார். ரோஸா அவ்வப்போது ராணி மஹாலுக்கு வந்து கொஞ்ச நேரம் காத்திருந்து, பிலிப்பை அழைத்துக்கொண்டு போவாள். அப்போதெல்லாம் மரியநாயகம் முகமெல்லாம் பூரித்துப்போய், ரோஸாவிடம் தொணதொணவென்று பிரஞ்சு மொழியில் பேசியவாறேயிருப்பார். அன்னராணி ரோஸாவுக்குக் குடிக்கவோ சாப்பிடவோ ஏதாவது கொடுப்பதோடு அங்கிருந்து விலகிப் போய்விடுவார். ரோஸாவிடம் பேசுவதற்கு அன்னராணிக்கு பிரஞ்சு மொழியும் தெரியாது. ரோஸாவும் அப்படியொன்றும் கலகலப்பாகப் பழகும் பெண்ணில்லை. எப்போது பார்த்தாலும் மெலிதாகப் புன்னகைத்தபடி பதுமை போலிருப்பாள். அதிகமாகப் பேச மாட்டாள். இரண்டு வருடங்களுக்கு முன்பு, ரோஸாவின் அப்பார்ட்மென்டுக்கே பிலிப் குடி போய்விட்டான். அதற்குப் பின்பு இரண்டோ மூன்று தடவைகள்தான் ரோஸா, ராணி மஹாலுக்கு வந்திருக்கிறாள். பிலிப், ராணி மஹாலிலிருந்து போன பின்பாக, அந்தப் பென்னம் பெரிய வீடு அமைதியில் மூழ்கிக் கிடந்தது. மரியநாயகம் தொழிலிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டார். எப்போதாவது ஒருமுறைதான் நண்பர்களைப் பார்க்க வெளியே போவார். அப்போதும் அன்னராணி திருத்தமாகச் சீவிச் சிங்காரித்துக்கொண்டு, கூடவே போக வேண்டும். இப்போது தனித் தனி அறைகளில் தூங்கிக்கொள்ளலாமா என ஒருமுறை அன்னராணி மரியநாயகத்திடம் மெதுவாகக் கேட்டார். அன்னராணி விரும்பும், ஏங்கும் அந்தத் தனிமை எழுபது வயதுக்குப் பிறகாவது தனக்குக் கிடைத்துவிடும் என அவர் எதிர்பார்த்தார். ஆனால், மரியநாயகம் அதற்குச் சம்மதிக்கவில்லை. தன்னுடைய எழுபத்தைந்து வயதிலும் அன்னராணி இல்லாமல் அவர் ஒருநாளும் படுக்கையில் இருந்ததில்லை. அன்னராணி இல்லாமல் வெளியே செல்வதுமில்லை. அன்னராணி தயங்கினால் எப்போதும் போலவே எரிச்சலான வார்த்தைகளைக் கொட்டி, மரியநாயகம் அவமதித்தார். மரியநாயகம் இறக்கும்போது, தன்னையும் கூடவே அழைத்துச் சென்று விடுவார் என்று அன்னராணி உறுதியாக நம்பியிருந்தார். 4 பிலிப் தனது அறைக்குள் தூங்கச் சென்ற சில நிமிடங்களிலேயே, அவனுடைய குரல் கலவரமாகக் குழம்பி ஒலிப்பது, நாற்காலியில் சாய்ந்திருந்த அன்னராணியின் காதில் விழுந்தது. பிலிப் இடது கையில் அலைபேசியை வைத்துக்கொண்டு, முகத்தில் பதற்றத்துடன் மெதுவாக நடந்துவந்து, நாற்காலியில் சாய்ந்திருந்த அன்னராணியின் தோள்களை வலது கையால் அணைத்துக்கொண்டு, வார்த்தைகளைத் தடுமாற்றமாக உச்சரித்தான்: “மம்மி…நீங்க பதட்டப்படக் கூடாது. ஒரு மெசேஜ் வந்திருக்கு…உண்மையோ தெரியாது. பொலிஸ் இப்ப எனக்கு போன் பண்ணினது…பப்பா செத்துக் கிடக்கிறாராம்…” அதற்கு மேல் பேச முடியாமல், பிலிப் வாயை மூடிக்கோண்டு விம்மி அழத் தொடங்கிவிட்டான். அவனது கண்ணீர் அன்னராணியின் முகத்தில் விழுந்தது. அன்னராணி, பிலிப்பின் கையை வருடியபடியே சொன்னார். “பிலிப்..நீ கொஞ்சம் அமைதியா இரு..ரோஸா வரட்டும்” “இல்ல மம்மி. பொலிஸ் என்ன உடன வரச் சொல்லியிருக்கு.. நான் உங்களையும் கூட்டிக்கொண்டு வாறன் எண்டு சொன்னனான்..மெல்லமா எழும்பி வாங்கோ போவம்..” “போகலாம் பிலிப்… நீ கொஞ்ச நேரம் உந்தக் கதிரையில இரு. ரோஸா வரட்டும்” என்று சொல்லிவிட்டு, அன்னராணி நாற்காலியில் இன்னும் நன்றாகச் சாய்ந்து கண்களை மூடிக்கொண்டார். இன்று காலை நான்கரை மணிக்கு, மரியநாயகம் நடைப் பயிற்சிக்குக் கிளம்பும்போது, எப்போதும் போலவே அன்னராணியையும் கூடவே அழைத்துச் சென்றார். இப்போதெல்லாம் அவர்கள் பேசிக்கொள்வது மிக அரிது. அப்படியே பேசினாலும் மரியநாயகமே பேசுவார். அவரது ஒவ்வொரு வார்த்தையும் அன்னராணி மீது அவமானத்தை மட்டுமே பூசும். காட்டுக்குள் ஒரு சுற்று நடந்துவிட்டு, எப்போதுமே உட்காரும் மர இருக்கையில் இருவரும் அமர்ந்துகொண்டார்கள். மரியநாயகம் தனது கைத்தடியை நிலத்தில் ஊன்றி, அதில் இரு கைகளையும் வைத்துக்கொண்டு, முதுகை வளைத்துத் தனது அரைவாசி உடற்பாரத்தைக் கைத்தடியில் நிறுத்தியிருந்தார். அந்தக் கைத்தடியை பழமைவாய்ந்த அரிய பொருட்களை விற்கும் சந்தையில் சென்ற வாரம்தான் வாங்கியிருந்தார். உறுதியான மரத்தில் செதுக்கப்பட்டிருந்த அந்தக் கைத்தடியின் பிடியிலும் அடியிலும் பித்தளையாலும் வெள்ளியாலும் பூண்கள் போடப்பட்டிருந்தன. மரியநாயகம் அன்னராணிக்குக் கேட்பதுபோல மெதுவாக முணுமுணுத்தார்: “பின்னேரம் நாங்கள் இராசேந்திரத்தின்ர வீட்டுக்குப் போகவேணும்…அவன்ர எழுவதாவது பிறந்தநாள். போகாட்டிக் குறையாப் போயிடும்” அன்னராணியும் பதிலுக்கு மெதுவாக முணுமுணுத்தார்: “எனக்கு உடம்பு ஏலாமக் கிடக்கு…நான் வரயில்ல” “ஏன் உமக்கு உடம்புக்கு என்ன? சாமானில அரிப்பா?” அன்னராணி எதுவும் பேசாமல் தூரத்தே பார்த்தவாறு கைகளைக் கட்டிக்கொண்டிருந்தார். இப்படியான ஏச்சுப் பேச்சுகள் அவரைக் கோபப்படுத்துவதில்லை. ஆனால், அவமானம் பல வருடங்களாக அவரைத் தின்று தேய்த்துக்கொண்டிருக்கிறது. தென்னை போல வளர்ந்திருந்த அந்தத் ‘தீவாள்’ இப்போது முதுகு கூனியும் தசை வற்றியும் தோல்கள் சுருங்கியும், பாவைக் கூத்தில் காட்டப்படும் ஆட்டுத்தோல் சித்திரம் போலக் கிழிந்திருக்கிறார். மரியநாயகம் சற்றுநேரம் அசையாமல் அப்படியே உட்கார்ந்திருந்தார். பின்பு பிரஞ்சு மொழியில் என்னவோ உரக்கச் சொன்னவாறே, கைத்தடியைத் தூக்கிச் சற்றுத் தூரத்தே விட்டெறிந்தார். அவரது வாயில் எச்சில் தெறித்தது. அன்னராணி அமைதியாக உட்கார்ந்திருந்தார். மெதுவாக எழுந்த மரியநாயகம், தனது வலது சுட்டுவிரலால், தரையில் கிடந்த கைத்தடியைக் காட்டினார். மூக்குக் கண்ணாடியைக் கழற்றித் தனது மார்பில் தேய்த்துவிட்டு, மறுபடியும் அணிந்துகொண்டு, அன்னராணியைப் பார்த்தார். அன்னராணி மெதுவாக எழுந்து நடந்துபோய், மெல்லக் குனிந்து கைத்தடியை எடுத்துக்கொண்டு, கணவனிடம் கொடுக்க வந்தார். அப்போது மரியநாயகத்தின் வாய் முணுமுணுத்தது: “நீயும் உன்ர மூத்த மகனைப் போல தொங்க வேண்டியதுதானே…” கைத்தடியைக் கொடுக்க வந்த அன்னராணி அப்படியே நின்றார். வெறுமனே நாற்பத்தைந்து கிலோ எடை மட்டுமேயுள்ள அவரது வற்றிய உடம்புக்குள் இரத்தம் ஓடாமலேயே நின்றுபோவதை உணர்ந்தார். அவரது கைகள் விறைத்துக்கொண்டு வந்தன. கால்கள் முன்னே போயின. கண்களை விரித்து மரியநாயகத்தின் முகத்தைப் பார்த்தவாறே, கைத்தடியை விசிறி மரியநாயகத்தின் முகத்தில் அடித்தார். சப்பென மூக்குக் கண்ணாடி உடையும் சத்தம் கேட்டது. “நான் என்ன பாவம் செய்தனான்? என்னை ஏன் அடிக்கிறாய்?” என்று நிதானமாகக் கேட்டார் மரியநாயகம். நெற்றியை இடது கையால் பொத்திப் பிடித்தபடி, வலது கையை நீட்டிக் கைத்தடியை அன்னராணியிடமிருந்து பிடுங்கிக்கொள்ள மரியநாயகம் முயன்றபோது, அன்னராணி மறுபடியும் கைத்தடியை விசிறி மரியநாயகத்தின் கையில் அடித்தார். மரியநாயகம் ஏதோ பேச முயன்றபோது, அன்னராணி கைத்தடியால் மரியநாயகத்தின் உச்சந்தலையில் அடித்தார். பிலிப், அன்னராணியின் தோளை வருடிக் கொடுத்தவாறு “மம்மி… நான் போய் என்னெண்டு பார்க்கிறன்…பப்பாவின்ர உடம்பு காட்டுக்க கிடக்குதாம்” என்றான். “பிலிப்! நீ இப்ப போக ஏலாது…ரோஸா வந்ததும் நான் சொல்றத நீ தான் அவவுக்குப் பிரஞ்சில சொல்ல வேணும்!” “என்ன சொல்ல வேணும் மம்மி…என்னட்டச் சொல்லுங்கவன்..” தனது தோளிலிருந்த பிலிப்பின் கையை வருடிவிட்டு, அன்னராணி நாற்காலியில் இன்னும் நன்றாகச் சாய்ந்துகொண்டே சொன்னார்: “இல்ல மகன்…உனக்கு விளங்காது!” வாசற்கதவுக்கு வெளியே காலடிச் சத்தம் கேட்டது. அப்போது தாயும் மகனும் சுவரிலிருந்த கடிகாரத்தைப் பார்த்தார்கள். (மணல்வீடு – மார்ச் 2021) அரம்பை நான் மாலையில் வீடு திரும்பும்போது, என்னுடைய குதிரை வண்டிக்குக் குறுக்கே சென்ற குடிகாரர்கள் இருவரை வண்டிச் சாரதி சவுக்கால் அடித்துவிட்டான். “இறைவனால் கட்டப்பட்ட இலண்டன் நகரம் இப்போது குடிகாரர்களதும் போக்கிரிகளதும் சத்திரமாகிவிட்டது” எனச் சலிப்பாகச் சொல்லிக்கொண்டே, இரட்டைக் குதிரைகளை அவன் விரட்டினான். விடிந்தால் 26-ம் தேதி ஜூலை 1833. பிரிட்டிஷ் சாம்ராஜியத்தின் வரலாற்றில் மிக முக்கியமான நாள். எங்களது காலனிய நாடுகளில் அடிமை முறையை ஒழிப்பதற்கான மூன்றாவது சட்டவாக்க வரைவு நாடாளுமன்றக் கீழவையான பொதுச்சபையில் விவாதத்திற்கு வரயிருக்கிறது. இம்முறை இந்தச் சட்டம், நாடாளுமன்றத்தின் இரு அவைகளினதும் ஒப்புதலோடு நிறைவேறுவதற்கு எல்லா வாய்ப்புகளுமுள்ளன. ஆனால், இலங்கைத் தீவு, செயின்ட் ஹெலினா தீவு மற்றும் கிழக்கிந்தியக் கம்பெனியின் கட்டுப்பாட்டுக்குள் உள்ள நிலப்பகுதிகளில் இந்தச் சட்டத்திற்கு விலக்கு வேண்டும் என்ற குரல்கள் நாடாளுமன்றத்தின் மேலவையான, பிரபுக்கள் அவையில் பலமாக உள்ளன. குறிப்பாக இலங்கைத் தீவிலும் ஹெலினா தீவிலுமுள்ள ஆயிரக்கணக்கான அடிமைகள் விடுதலைக்குப் பக்குவமடையாதவர்கள் என்ற கருத்து மேலவைப் பிரபுக்களிடமிருக்கிறது. இந்த விவாதத்தில், சேர்.வில்மெட் நோர்மென் ஆகிய என்னுடைய ஆதரவு எந்தப் பக்கம் இருக்கப் போகிறது? என்னுடைய மனைவி எஸ்மெரெல்டாவுக்குக் கூட நான் இதுபற்றி எதுவும் இதுவரை சொல்லவில்லை. பொதுச்சபையில் என்னுடைய கை எந்தப் பக்கமாக உயரப்போகிறது என்பதை அவளும் நாளைக்குத்தான் தெரிந்துகொள்ள வேண்டும். ஸ்பெயினின் நாட்டுப்புறக் குயவக் குடியில் பிறந்தவளான அவளுக்கு என்னுடைய முடிவு உணர்ச்சிப் பெருக்கை ஏற்படுத்தக்கூடும். எனக்கே இப்போது அப்படித்தானிருக்கிறது. இந்த விஷயத்தில், என்னுடைய குரலை முக்கியமானதாகவே பலரும் கருதுகிறார்கள். அடிமைமுறை ஒழிப்புக்கு ஆதரவான சங்கத்தினர், பத்திரிகைகள், கிழக்கிந்தியக் கம்பெனியினர் எல்லோருமே என்னைக் கவனித்துக்கொண்டிருக்கிறார்கள். அதற்கு இரண்டு காரணங்களுள்ளன. பொதுச்சபை உறுப்பினர்களிலேயே வயதில் குறைந்தவன் நான்தான். எனக்கு இப்போது 28 வயதுதான் ஆகிறது. என்னுடைய இருபதாவது வயதுவரை நான் இலங்கைத் தீவில் வாழ்ந்ததும் இன்னொரு காரணம். பிரபுக்கள் அவையிலிருப்பவர்கள் இலங்கைத் தீவை, வரைபடத்தில் கூடச் சரியாகப் பார்த்திருக்க மாட்டார்கள். இலங்கைத் தீவின் நில ஆவண வரைபடத்தை, முதன் முதலில் திருத்தமாக வரைந்தவர் என் தந்தை சேர். வில்மெட் பெரிய பிரெக்மன் தான். ஒல்லாந்தரை இலங்கையிலிருந்து அகற்றிய பிறகு, ஊர்காவற்துறைப் பட்டினம், யாழ்ப்பாணப் பட்டினம், மன்னார் பட்டினம், கொழும்பு, திருகோணமலை, மட்டக்களப்பு, மாத்தறை ஆகிய கரையோரப் பிரதேசங்களெல்லாம் ஆறு வருடங்களாகக் கிழக்கிந்தியக் கம்பெனியாலேயே ஆளப்பட்டன. 1802 ஆவது வருஷம் இந்தப் பகுதிகளில் கம்பெனியாரின் அதிகாரம் நீக்கப்பட்டு, பிரித்தானிய முடிசார் அதிகாரத்தின் கீழ் இந்தப் பகுதிகள் வந்தன. 1815 ஆவது வருஷம் கண்டி ராஜ்ஜியம் எங்களது கைகளில் வீழ்ந்து, முழு இலங்கைத் தீவும் மூன்றாவது ஜோர்ச் சக்கரவர்த்தியின் ஆட்சிக்குள் வந்தது. அப்போது எனக்குப் பத்து வயது. அதற்குச் சில மாதங்களுக்கு முன்பாகத்தான், எனது தந்தையின் உத்தியோகம் நிமித்தமாக எங்களது குடும்பம் மெட்ராஸிலிருந்து நீங்கி, இலங்கைத் தீவின் ஊர்காவற்துறைப் பட்டினத்தில் குடியேறியது. ஊர்காவற்துறைப் பட்டினத்தில் முதன் முதலாக அமைக்கப்பட்ட ’பொலிஸ் கோர்ட்’டில் நீதிபதியாகப் பணியாற்றவே என் தந்தை வில்மெட் பெரிய பிரெக்மன் பிரபு இங்கே அனுப்பட்டார். அதுவரை மெட்ராஸில் கிழக்கிந்தியக் கம்பெனியில் காணி வரி அதிகாரியாகவே தந்தை கடமையாற்றினார். கப்பலில் வரும்போதுதான், என் தந்தை பிரிட்டிஷ் தண்டனைச் சட்டக் கோவையைப் படித்துக்கொண்டு வந்தார். எங்களது குடும்பம் சற்றே பெரியது. எனக்குக் கீழே நான்கு தங்கைகளிருந்தார்கள். எனது தாயார் மிகவும் ஊக்கமான பெண்மணி. கையில் தவிட்டைக் கொடுத்தாலும், அதை ஊதி ஊதியே பொன்னாக மாற்றத் தெரிந்தவர். மிகவும் கஞ்சத்தனமுடையவர். பெற்ற குழந்தைகள் சாப்பிடும் ரொட்டிக்கும் வெண்ணைக்கும் கூடக் கணக்குப் பார்ப்பவர். தந்தையோ மிதமிஞ்சிக் குடிப்பவர். காலையில் எழுந்தவுடனேயே மதுவருந்திவிடுவார். ஊர்காவற்துறைப் பட்டினத்துக்கு தானே அரசன் என்பது அவரது நினைப்பாகயிருந்தது. அது ஒருவகையில் உண்மைதான். அந்தச் சிறு பட்டினத்தில், தேவாலயத்தை ஒட்டியிருந்த பங்களாவில் நாங்கள் குடியேறினோம். சிறிய துறைமுகத்தாலும், கடற்கோட்டையாலும் அந்தப் பட்டினம் புகழ் பெற்றிருந்தது. மாலுமிகளும், மீனவர்களும், புகையிலைக் கமக்காரர்களும் நிரம்பிய அந்தப் பட்டினத்தில்; திருடர்களுக்கும், போக்கிரிகளுக்கும், பிச்சைக்கார நாடோடிகளுக்கும் கூடக் குறைவில்லை. தென் இந்தியாவிலிருந்து குடியானவர்கள் பஞ்சம் பிழைக்க இந்தப் பட்டினத்தை நாடி வந்துகொண்டிருந்தார்கள். பட்டினத்தில் ஒவ்வொரு நாளும் குற்றங்கள் பெருகிக்கொண்டேயிருந்தன. எனது தந்தை ஓய்வு ஒழிச்சலில்லாமல் தண்டனைகளை வழங்கிக்கொண்டேயிருந்தார். அப்போது, வரி வசூலிக்கும் பொறுப்பும் என் தந்தையின் வசமே இருந்தது. வரி செலுத்தாவிட்டாலும் கடுமையான ஒறுப்புகள் உள்ளன. நாங்கள் தங்கியிருந்த பங்களாவின் ஒருபகுதி ‘பொலிஸ் கோர்ட்’ ஆக்கப்பட்டிருந்தது. ஒவ்வொருநாள் காலையிலும் பங்களாவின் அகன்ற வராந்தாவில், தந்தையின் நீதி பரிபாலன தர்பார் தொடங்கிவிடும். அதையெல்லாம் பார்த்த பின்புதான், நான் தேவாலயத்தில் ஸ்ராட்டென் பாதிரியாரிடம் படிக்கச் செல்வேன். காலையில் என் தந்தையின் தர்பாரில் கண்ட காட்சிகளை, நான் பாதிரியாரிடம் லத்தீன் மொழியில் விவரித்துச் சொல்லவேண்டும் என்பது பாதிரியாரின் கட்டளை. பாதிரியார் கண்களை மூடியவாறே அவற்றைக் கேட்டுக்கொண்டிருப்பார். அதற்குப் பின்பு, பூமிசாஸ்திரம், லத்தீன், கணக்கு ஆகிய பாடங்களை மதியம் வரை பாதிரியாரிடம் வாசிப்பேன். மதியம் நான் பங்களாவுக்குத் திரும்பி வரும்போது, பங்களா முற்றத்தில் உச்சி வெயிலின் கீழே குற்றவாளிகள் முழந்தாள்களில் நின்றிருப்பார்கள். பெண்களும் சிறுவர்களும் கூட அவ்வாறு கொதிக்கும் மணலில் நிறுத்தப்பட்டிருப்பார்கள். இந்த ஊர் மக்களுக்கு வரி செலுத்துவது என்றாலே என்னவென்று தெரியாமலிருந்தது. ராயனுக்கு உரியதை ராயனுக்கும் தேவனுக்குரியதைத் தேவனுக்கும் செலுத்துவதை இவர்கள் அறியாமலேயே இருந்தார்கள். என் தந்தை சவுக்கால் அதை அவர்களுக்குக் கற்பித்துக்கொண்டிருந்தார். புகையிலை பயிரிட்டால் வரியுண்டு. மீன்பிடித்தாலும் வரியுண்டு. தென்னைமரம் காய்த்தாலும் காய்க்காவிட்டாலும் வருடத்துக்கு இரண்டு பணம் வரி செலுத்த வேண்டும். முயல், உடும்பு உட்பட எதை வேட்டையாடினாலும் வரியுண்டு. திருமணம், மரணம் போன்ற சடங்குகளுக்கும் வரியுண்டு. நகைகள் அணிந்தால் வரியுண்டு. இந்தத் தீவில் மக்கள் சோழிகளால் செய்த மாலைகளையும், ஆமையோட்டில் செய்யப்பட்ட ஆபரணங்களையும் அணிகிறார்கள். ஆனால், அவற்றுக்கு வரி செலுத்த மறுக்கிறார்கள். யாழ்ப்பாணப் பட்டினத்திலும், பருத்தித்துறைப் பட்டினத்திலும் முடியாட்சிக்கு வரி கொடுக்காமல் கலகம் செய்கிறார்கள். ஆனால், என் தந்தையிடம் அது பலிக்கவில்லை. தந்தைக்கு மாதத்திற்கு முந்நூறு றிக்ஸ் டொலர்கள் ஊதியம். அந்தப் பணத்தை, வரியாகவும் தண்டப்பணமாகவும் பத்தாயிரமாகப் பெருக்கி, மூன்றாவது ஜோர்ச் சக்கரவர்த்திக்கு என் தந்தை விசுவாசமாகச் செலுத்தினார். தென்னைமரத்திற்கு இரண்டு பணம் வரி என்று சொன்னேன். அதேபோல, அடிமைச் சான்றிதழ் ஒன்றை வழங்க, என் தந்தை மூன்று பணம் அறவிட்டார். தப்பியோடிய ஒரு கோவிய அடிமையை வன்னியில் வைத்துப் பிடித்துக் கொண்டுவந்து என் தந்தையின் முன்னே நிறுத்தினார்கள். அந்த அடிமையின் முதுகில் உடைமையாளரின் ‘கனகசபை இளைய சேதுகாவலர் முதலி’ என்ற நீண்ட பெயர் குறி சுடப்பட்டது. அந்த அடிமை எலும்பும் தோலுமாகயிருந்தான். காய்ச்சிய சூட்டுக்கோல் அவனது எலும்பில்தான் எழுதியிருக்கும். அவன் அழுத குரல் தேவாலயம் வரை கேட்டதாம். நான் அந்த அடிமையைப் பற்றிச் சொல்லிக்கொண்டிருந்த போது “பணியாத மனிதன் கடவுளின் இடதுபுறம் ஒதுக்கப்படுவான், அவனைக் கடவுள் ஏறெடுத்துப் பார்க்கவும் மாட்டார், தூய்மைப்படுத்தவும் மாட்டார்” எனச் சொல்லிக்கொண்டே ஸ்ராட்டென் பாதிரியார் தனது மார்பில் விரலால் குறியிட்டுவிட்டு, என் நெற்றியிலும் குறியிட்டார். இந்தப் பட்டினத்தின் மக்கள், ஆணும் பெண்ணுமாகப் பலதார மணங்களைச் சர்வசாதாரணமாகச் செய்கிறார்கள். அவர்களது குழந்தைகளோ சவலைக் குழந்தைகளாக காலையிலிருந்து மாலைவரை ஆடாமல் அசையாமல் மணலில் உட்கார்ந்திருக்கிறார்கள். இல்லாவிட்டால் மலம் கழிப்பது போன்ற நிலையில் குந்தியிருந்து பனம்பழங்களைச் சப்புகிறார்கள். அநேகமான பெண்களும் ஆண்களும் இடுப்புக்கு மேலே துணிகளை அணிவதில்லை. சிறியதொரு ஒழுக்கக்கேட்டைக் கூட என் தந்தை பொறுத்துக்கொள்ள மாட்டார். அவர் வழங்கும் கடுமையான தண்டனைகளைப் பார்க்கும்போது, ஓரளவு தைரியசாலியான என் மனதே கொஞ்சம் கலங்கிப்போகும். கைகால்களை அடித்து முறிப்பது, நூற்றுக்கணக்கான கசையடிகளைக் கொடுப்பது, தலையில் பாரமான கல்லை வைத்து முள்ளில் முழங்காலால் நடக்கவைப்பது, குதிக்கால் நரம்பை அறுத்துவிடுவது என்றெல்லாம் தண்டனைகள் அமையும். பத்து மைல்கள் தூரத்தைக் கடக்க நான்கு மணிநேரங்களை எடுத்துக்கொண்ட சோம்பேறியான ஓர் அஞ்சல்காரனுக்கு, என் தந்தை இருபது கசையடிகளை வழங்கினார். கொலைக் குற்றவாளிகளும், தேசாதிபதியின் ஆட்சியை மானங்கெடுத்திப் பேசுவோரும் கடற்கோட்டைக்கு அனுப்பப்பட்டு, அங்கே தூக்கிலிடப்பட்டார்கள். ஊர்காவற்துறைப் பட்டினத்திலிருந்தும், சுற்றியுள்ள சிறிய தீவுகளிலிருந்தும் போக்கிரிகளையும் சோம்பேறிகளையும் நாடோடிகளையும் திருடர்களையும் என் தந்தை கடுமையாகத் தண்டித்துத் துரத்திவிட்டார். சில குற்றவாளிகள் என் தந்தையின் கைகளுக்குத் தப்பிப்போய், கண்டி ராஜ்ஜியத்தில் ஒளிந்துகொண்டார்கள். பிரிட்டிஷ் ஆட்சிப் பகுதிக்குள் குற்றம் புரிந்தவர்கள் எல்லையைத் தாண்டிச் சென்று கண்டியரிடம் தஞ்சம் புகுவது மட்டுமல்லாமல், கண்டி அரசனும் கலகக்காரர்களையும் கொள்ளையர்களையும் பிரிட்டிஷ் ஆட்சிப் பரப்புக்குள் அனுப்புவித்துத் தீராத உபத்திரவம் செய்துகொண்டிருந்தான். அப்போது கண்டி ராஜா ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கனின் நாட்கள், தேசாதிபதி ரொபெர்ட் பிரவுண்றிக் பிரபுவாலும் குடியேற்ற மந்திரியாராலும் எண்ணப்பட்டுக்கொண்டிருந்தன. திருடர்களே இல்லாத ஜெருசலேமாக, ஊர்காவற்துறைப் பட்டினத்தை மாற்றிவிட என் தந்தை கடுமையான நடவடிக்கைகளை எடுத்தார். ஒரு மாங்காயைத் திருடினால் கூட, திருடியவனின் முழங்கை உலக்கையால் அடித்து முறிக்கப்பட்டது. தேங்காயைத் திருடினால் முழங்கால் முறிக்கப்பட்டது. ஆனால், மகரசிங்கம் என்று அறியப்பட்ட பெயர் பெற்ற திருடன் மட்டும் என் தந்தையிடம் சிக்காமலேயே இருந்தான். இந்தப் பகுதிகளில் எங்காவது மாடுகள் திருடப்பட்டால், அது அந்தக் கள்வனின் வேலையாகவே இருந்தது. மகரசிங்கம் என்ற அந்தத் திருடனைப் பிடித்துத் தலைகீழாகக் கட்டித் தோலை உரித்துவிட்டு, கீழே நெருப்பு மூட்டிவிடப் போவதாக என் தந்தை சொல்லிக்கொண்டிருந்தார். நான் அந்தச் செய்தியை ஸ்ராட்டென் பாதிரியாரிடம் சொன்னேன். அவர் அதைக் கண்களை மூடியவாறே கேட்டுக்கொண்டிருந்தார். II “மகரசிங்கம்! எக்காரணம் கொண்டும் வங்களாப் பறங்கியிடம் நீ சிக்கிவிடக் கூடாது, உன்னை மாடாகக் கட்டித் தோலாக உரிக்கப்போவதாக அவன் பறைகிறானாம்” என்று குறிஞ்சன் என்னிடம் சிரித்தவாறே சொன்னான். உண்மையில் நான் மாடு பிடித்ததே கிடையாது. பறங்கிச் சிப்பாய்கள் திருடித் தின்னும் மாட்டுக் கன்றுகளின் கணக்கையெல்லாம் என் தலையில் சுமத்திவிட, வங்களாப் புதுப் பறங்கி திட்டமிடுகிறான். எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்தே நான் திருடுகிறேன். எனது தந்தையும் திருடுவார். அதற்காகச் சனங்கள் எங்களை மரியாதைக் குறைவாக நடத்தியதே கிடையாது. திருடிக் கொண்டுவரும் பொருட்களை சிலவேளைகளில் சொந்தபந்தங்களுடன் நான் பகிர்ந்துகொள்வதுமுண்டு. என்னுடைய தீவிலிருந்து கிளம்பிப்போய், ஊர்காவற்துறைப் பட்டினத்திலோ யாழ்ப்பாணப் பட்டினத்திலோதான் திருடுவேன். ஏதாவது துண்டு துணுக்குப் பொன் எப்போதாவது கிடைத்தால், அதை சாவகர்சேரியிலிருந்து வரும் மலையாள யாவாரி கோயிலான் வாங்கிக்கொள்வான். நல்லூர் இராசவாசல் முதலியாரின் ஆசைநாயகி நவரத்தினம்மாளிடம் பஞ்சலோகங்களாலான, நாட்டியம் ஆடும் ஓர் அம்மையின் சிலை இருப்பதாகவும், அச்சிலைக்கு ‘அரம்பை’ சிலையெனப் பெயரெனவும் மலையாளத்தான் சொன்னான். அந்தச் சிலையை எப்படியாவது திருடித் தன்னிடம் தருமாறும், கூலியாக முப்பது பணம் கொடுப்பதாகவும் அவன் சொல்லியிருந்தான். ஓரிரவில் நான் நவரத்தினம்மாளின் வீட்டுக்குள் இறங்கித் தேடியபோது, அந்தச் சிலை கிடைக்கவில்லை. வெள்ளிச் சரிகை இழைக்கப்பட்ட பச்சை நிறச் சேலையொன்றுதான் அங்கிருந்து எடுத்து வரக்கூடியதாக இருந்தது. அந்தச் சேலையை விற்பதற்காக, வேலணை வள்ளியப்பச் செட்டியைத் தேடிப் போனேன். நான் அய்யனார் துறையில் இறங்கி நடக்கும்போது, தலைப்பாகைகள் அணிந்த உயரமான இருவர் என்னைப் பின்தொடரத் தொடங்கினார்கள். அவர்கள் இராசவாசல் முதலியாரின் ஆட்கள் என்றுதான் நினைத்தேன். அருகிலிருந்த பனங்கூடலுக்குள் நுழைந்து, மடியில் வரிந்து வைத்திருந்த சரிகைச் சேலையை, ஒரு பட்டுப்போன பனைமரப் பொந்துக்குள் மறைத்துவைத்துவிட்டு, எதிர்த்திசையால் பனங்கூடலுக்குள் நடந்துகொண்டிருந்தேன். எங்கிருந்தோ ஒரு நாய் ஓசையில்லாமல் என் மீது பாய்ந்து, என் கழுத்தைக் கவ்விக்கொண்டது. நாயின் பாரம் தாங்காமல் நான் மல்லாக்கப் பறிய விழுந்தேன். அந்த நாய் ஒரு குதிரையளவு இருந்தது. மறைந்திருந்த சிப்பாய்கள் என்னைப் பிடித்துக்கொண்டுபோய் வங்களா புதுப் பறங்கியின் முன் நிறுத்தினார்கள். நான் எதையெல்லாம் திருடினேன், எதையெல்லாம் திருடவில்லை எனப் பொன்னியம்மனின் பெயரால் சத்தியம் செய்வதற்குத் தயாராகவே நான் நின்றிருந்தேன். பொன்னியாச்சியின் பெயரால் நாங்கள் யாரும் பொய் சொல்லவே மாட்டோம். ஆனால், அந்தப் பறங்கி என்னிடம் எதுவுமே கேட்க முயலவில்லை. அவனின் குதிரை வண்டியுடன் நான் பத்து முழ நீள் கயிற்றில் பிணைக்கப்பட்டேன். அவனுடைய குதிரை வண்டி துறைமுகத்தை நோக்கிச் செல்ல, நான் பின்னாலேயே ஓட வேண்டியிருந்தது. வழியெல்லாம் இரண்டு சிப்பாய்கள் குதிரைச் சவுக்கால் என்னை அடித்தபடியே குதிரைகளில் வந்துகொண்டிருந்தார்கள். துறைமுகத்தின் நுழைவாயிலுக்கு முன்னால், கடற்கரை மணலில் குழியொன்றைத் தோண்டுமாறு சிப்பாய்கள் எனக்கு உத்தரவிட்டார்கள். நான் மண்வெட்டியால் குழியைத் தோண்டிக்கொண்டிருக்கும் போதே, என்னை அவ்வப்போது சவுக்கால் அடித்துக்கொண்டிருந்தார்கள். என் தேகம் முழுவதும் இரத்தம் வடிந்துகொண்டிருந்தது. நெற்றியில் வடிந்த இரத்தம் பிசுபிசுத்து கண் இமைகளை ஒட்ட வைத்தது. இவர்கள் என்னை உயிரோடு புதைக்கப் போகிறார்கள். அதற்கு முன்பாக, பொன்னியாச்சியின் பெயரால் நான் சத்தியம் செய்துவிட வேண்டும் என நினைத்துக்கொண்டே குழியை வெட்டி முடித்தேன். வெட்டப்பட்ட குழிக்குள் என்னை நிர்வாணமாக நிற்கவைத்து மண்ணால் மூடினார்கள். என் கழுத்துவரைதான் மண்ணால் மூடப்பட்டது. தலை வெளியே தெரிந்தது. அப்போதும் தலையில் சவுக்கால் அடித்துக்கொண்டேயிருந்தார்கள். வங்களா புதுப் பறங்கி மெதுவாக நடந்து வந்து, என் தலையில் காறி உமிழ்ந்தான். அந்தக் கணத்தில் நான் பொன்னாச்சியின் பெயரால் எனக்குள் சத்தியம் செய்துகொண்டேன். நான் இங்கிருந்து சீவனோடு மீண்டால், இந்த வங்களாப் பறங்கியைப் பழி தீர்ப்பேன். நான்கு பகலும் இரவும் நான் அப்படியே புதைத்து வைக்கப்பட்டிருந்தேன். நாளுக்கு ஒரு தடவை சிரட்டையில் குரக்கன் கஞ்சி வைக்கப்பட்டது. நாயை விடக் கேவலமாக நான் அதை நக்கிக் குடிக்க வேண்டியிருந்தது. துறைமுகத்துக்குப் போவோரும் வருவோரும் நின்று என்னைப் பார்த்துவிட்டுப் போனார்கள். குறிஞ்சன் கூட்டத்தோடு கூட்டமாக நின்று என்னைப் பார்த்துவிட்டுப் போனான். என் ஆத்தை இதைக் கேள்விப்பட்டால் எப்படியெல்லாம் மருகிப்போவாள் என்பதை நினைக்கும்போது, என் கண்கள் இருண்டு என்னை மயக்கம் அழுத்தப் பார்க்கும். உடலெல்லாம் மரத்துப் பிணமாகிவிட்டேன். நாவும் கண்களும் மட்டும் அசைந்துகொண்டேயிருந்தன. எனது மூளை பிசகத் தொடங்கிற்று. காதுகளுக்குள் பூச்சிகள் புகுந்து, இரைந்துகொண்டே என் வயிற்றுக்குள் பறப்பதை உணர்ந்தேன். என்னைப் பார்ப்பவர்களையும், எனக்கு மாறி மாறிக் காவலுக்கு நின்ற சிப்பாய்களையும் வசையால் ஏசத் தொடங்கினேன். அப்போதெல்லாம் என் முகத்தில் சவுக்கு எழுதியது. உண்மையில் அப்போது எனக்கு அந்த அடி தேவைப்பட்டது. வலியே என்னை நனவோடு வைத்திருந்தது. இல்லாவிட்டால் செத்த மாடு போல மணலுக்குள் புதைந்திருப்பேன். என் தலையைக் கொத்தித் தின்றுவிடுவதற்காக, பறவைகள் என் தலைக்கு மேலேயே சுற்றிக்கொண்டிருந்தன. நான் கண்களை மூடினால் பறவைகள் தலையைத் தின்றுபோடும். அவ்வப்போது ஏதாவது ஒரு பறவை சர்ரெனக் குத்திட்டு இறங்கி என்னைக் கொத்த முயன்றது. அப்போதெல்லாம் நான் என்னையறியாமலேயே விநோதமாகக் கூச்சலிட்டேன். நான்காம் நாளில், சிப்பாய்கள் மணலைக் கிளறி, என்னைத் தூக்கி வெளியே எடுத்தபோது, என்னால் நிற்கவே முடியவில்லை. அங்கேயே என்னைப் போட்டுவிட்டு அவர்கள் போய்விட்டார்கள். அடுத்தகணமே குறிஞ்சன் ஓலமிட்டுக்கொண்டே ஓடி வந்தான். அவன் நான்கு நாட்களாக எங்கேயும் போகாமல், இங்கேயே மறைந்து இருந்திருக்கிறான். என் அருகே தரையில் உட்கார்ந்து, கடற்கரை மணலை வாரித் தனது தலையில் போட்டபடியே குறிஞ்சன் புலம்பி அழுதான். எனது முழுப் பலத்தையும் திரட்டி, கையை ஓங்கி அவனது கன்னத்தில் ஓர் அறை கொடுத்துவிட்டு, நாவைச் சுழற்றி முனகினேன். “அய்யோ மகரசிங்கம்! நீ ஒரு பறவையைப் போல கரைகிறாய்” எனச் சொல்லிக் குறிஞ்சன் குழறி அழுதான். நான் ஆகாசத்தைப் பார்த்தபோது, பறவைகள் சிறகுகளை விரித்தவாறு அசையாமல் காத்துக்கொண்டிருந்தன. அடுத்த பவுர்ணமி நாளில் பழி தீர்க்க முடிவு செய்தோம். பவுர்ணமி பொன்னியம்மனுக்கு வாலாயமான நாள். முன்னிரவில் பொன்னியம்மனுக்கு விளக்கு ஏற்றிவிட்டு, அம்மனின் முன்னால் பச்சைப் பாக்குகளை வைத்து அனுமதி கேட்டோம். அம்மனின் வாக்கு சாதகமாய் உருண்டதும், என்னுடைய தீவிலிருந்து குறிஞ்சனும் நானும் கிளம்பி, பரவைக் கடலுக்குள்ளால் நடந்தோம். அப்போது கோடை காலமென்பதால் இடுப்புவரைதான் கடலிருந்தது. இறாத்தலடியில் நிலத்தில் ஏறி, அங்கிருந்து ஓட்டமும் நடையுமாக ஊர்காவற்துறைப் பட்டினத்துக்கு வந்து சேர்ந்தோம். குறிஞ்சன் கடந்த வாரம் முழுவதும் அந்தப் பக்கமாகச் சுற்றி, இரவு பகலாக உளவு பார்த்து வைத்திருந்தான். நம்மால் வங்களாவுக்குள் நுழையவே முடியாது. வங்காளவைச் சுற்றி நாய்களும் சிப்பாய்களும் இரவு பகலாகக் காவல் காக்கிறார்கள். வங்களாப் பறங்கியைக் கொல்வதற்கு நாங்கள் ஒரு திட்டம் வைத்திருந்தோம். வங்களாவுக்குப் பின்புறமாக, இருநூறு பாகம் தூரத்திலிருந்த கிணற்றுக்கு அருகே, தென்னங்கிடுகுகளால் மறைப்பு அமைக்கப்பட்ட கக்கூஸ் அறை இருந்தது. அந்த அறைக்கும் வங்களாவுக்கும் நடுவில் பனைகளும் தென்னைகளும் காடாக வளர்ந்திருந்தன. விடிவதற்கு முன்பே, வங்களாப் பறங்கி கையில் விளக்கை ஏந்தியவாறே, தனியாக அந்த அறைக்கு வருகிறான் என்று குறிஞ்சன் சொன்னான். பறங்கியை அங்கே வைத்து இருளில் மடக்கிப்போட்டு, அவனைக் குத்தினால் தானுண்டு. அதல்லாமல் வேறெந்த வழியிலும் பறங்கியை நம்மால் நெருங்கவே முடியாது. முன்னொருமுறை மலாய் கூலிச் சிப்பாய் ஒருவன் சாராய வெறியிலிருந்தபோது, அவனிடம் திருடிய, பித்தளைக் கைப்பிடி கொண்ட அருமையான கத்தி என்னிடமிருந்தது. ஒன்றரைச் சாண் நீளமுள்ள அந்தக் கத்தி இருபுறங்களிலும் கூர்மையானது. அந்தக் கத்தியை வங்களாப் பறங்கியின் நெஞ்சில் இறக்குவேன். தன்னைக் கொல்வது யாரென அந்தப் பறங்கி தெரிந்துகொண்டுதான் சாக வேண்டும். நாங்கள் வங்களாவுக்குப் பின்னாலிருந்த பனங்கூடலுக்குள் நுழையும் போது, வேதக் கோயிலைக் கடக்க வேண்டியிருந்தது. அப்போது கோயிலுக்கு முன்னால் பொட்டுப் போல நெருப்பு அலைந்துகொண்டிருந்தது. நாங்கள் கொஞ்சம் நெருங்கி, பூரணை வெளிச்சத்தில் பார்த்தபோது, வேதச் சுவாமி சுருட்டுப் பிடித்துக்கொண்டே குறுக்கும் நெடுக்குமாக இருளில் நிழல் போல நடந்துகொண்டிருந்தான். அப்போது நடுச் சாமத்திற்கு மேலேயேயிருக்கும். கக்கூஸ் அறைக்குப் பக்கவாட்டில் சடைத்துக் கிடந்த, மருதாணிப் புதர்களுக்குள் நானும் குறிஞ்சனும் பதுங்கிக்கொண்டோம். பறங்கியின் சாவு என் கையில் சந்திர வெளிச்சத்தில் மினுங்கிக்கொண்டிருந்தது. ஆனால், பறங்கி வருவதாகயில்லை. அப்போது முதலாவது பறவை கத்தியது. “இன்னும் கொஞ்ச நேரத்தில் விடிந்துவிடும், நாம் இப்போது போய்விட்டு அடுத்த பவுர்ணமிக்கு வருவோம்” என்றான் குறிஞ்சன். பறங்கிக்கு இன்னும் முப்பது நாட்களை பொன்னியம்மன் பிச்சை போட்டிருக்கிறாள் என்றவாறு நான் நினைத்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பத் தயாரானபோது, கைவிளக்கு வெளிச்சம் எங்களை நோக்கி வந்தது. நான் கத்தியை இறுகப் பிடித்துக்கொண்டேன். நான் ஒரு கொலையைச் செய்வேன் எனச் சில நாட்களுக்கு முன்புவரை நித்திரையிலும் நினைத்திருந்ததில்லை. ஆனால், இந்தப் பறங்கி, பொன்னி அம்மனின் பெயரால் செய்யப்படும் சத்தியத்தைக் கேட்க மறுப்பவன். என்மீது நாறும் இவனது எச்சிலை, இவனது இரத்தத்தாலேயே கழுவுவேன். விளக்கு வெளிச்சம் எங்களை நெருங்கியபோது, ஓங்கிய கத்தியோடு புதர் மறைவிலிருந்து பாய்ந்தேன். என்மீது பாய்ந்த குதிரையளவு நாயை விட, இரட்டிப்பு வேகத்துடன் பாய்ந்தேன். விளக்கோடு வந்த உருவம் திடுக்கிட்டு அப்படியே ஆடாமல் அசையாமல் நின்றது. குறிஞ்சன் அந்த உருவத்துக்குப் பின்புறமாகப் பாய்ந்து, அந்த உருவத்தின் வாயைத் தனது உள்ளங்கையால் பொத்திப் பிடித்துக்கொண்டான். அந்த உருவமோ சிறு எதிர்ப்பும் காட்டாமல் நின்றிருந்தது. அதனுடைய கையிலிருந்த விளக்கு மட்டும் இலேசாக நடுங்கிக்கொண்டிருந்தது. வங்களாப் புதுப் பறங்கி எனது முகத்தைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஓங்கிப் பிடித்த கத்தியோடு, கால்களை விரித்து வலுவாக மணலில் ஊன்றிக்கொண்டு நானும் அசையாமல் நின்றிருந்தேன். அந்த உருவம் மெதுவாக விளக்கை என் முகத்துக்கு உயர்த்தியது. அப்போதுதான் எனக்கும் அந்த உருவத்தின் முகம் புலப்பட்டது. தோள்வரை பொன்னிற முடியுடனிருந்த அந்த உருவம், நான் தேடி வந்த வங்களாப் பறங்கியல்ல. இடுப்பில் மட்டும் சிறு துணியணிந்து நின்றிருந்த அந்த உருவத்தின் பச்சை நிறக் கண்கள் என்னை அச்சத்தோடு பார்த்தன. நான் வலது கையால் கத்தியை அந்த உருவத்தின் கழுத்தில் வைத்தவாறே, இடது கையால் அந்த உருவத்தின் இடுப்பிலிருந்த துணியைப் பிடுங்கி, அந்த உருவத்தின் வாயில் திணித்துவிட்டு, கைவிளக்கை ஊதி அணைத்தேன். நாங்கள் சிறைப் பிடித்திருப்பது பறங்கியின் பத்து வயது மகனை என்று குறிஞ்சன் அடையாளம் சொன்னான். விடிந்துகொண்டே வருகிறது. வங்களாவில் நாய்கள் குரைக்கும் சத்தமும் கேட்கிறது. பறங்கிச் சிறுவனை இழுத்துக்கொண்டு பனங்கூடலுக்குள் மறைந்தோம். இப்போது பணயத்தை என்னுடைய தீவுக்கு அழைத்துக்கொண்டு போக முடியாது. வழியில் நிச்சயமாக யாருடைய பார்வையிலாவது பட்டுவிடுவோம். மகனைக் காணவில்லை என்பதை அறிந்தவுடன் வங்களாப் பறங்கி பைத்தியமாகிவிடுவான். அவனது நாய்களும் பைத்தியங்களாகிவிடும். அவை எங்களைத் தேடி இந்த நிலம் முழுவதும் திரியும். பறங்கியின் மகனின் வாசனை, தடமாக எங்களைக் காட்டிக்கொடுக்கும். கடலைக் கடப்பதே புத்தியான வழி. “இங்கிருந்து தம்பாட்டிக்குப் போய்விட்டால், கரையில் கிடக்கும் ஏதாவதொரு வத்தையைத் தள்ளிக்கொண்டு பரவைக் கடலைத் தாண்டி, களபூமியில் இருக்கும் எனது அக்காவிடம் போய்விடலாம்” என்று குறிஞ்சன் யோசனை சொன்னான். வேறெதையும் யோசிப்பதற்கு நேரமில்லை. முற்றாக விடிந்து, வெளிச்சம் பரவுவதற்குள் நாங்கள் இந்தச் சிறுவனை மறைத்துவிட வேண்டும். பனங்கூடல்களிடையே பதுங்கி ஓட்டமும் நடையுமாகப் போனோம். எனது தலையில் சுற்றியிருந்த துணியை அவிழ்த்து, சிறுவனின் கைகளைக் கட்டியிருந்தேன். சிறுவன் இன்னும் அதிர்ச்சியிலிருந்து போதம் தெளியவில்லை. தூக்கத்தில் ஏதோ கனவு வந்திருப்பதாகத்தான் அவன் நினைக்கிறான் போலிருக்கிறது. சிறுவனின் கையில் கட்டப்பட்டிருந்த துணியைப் பற்றி இழுத்தவாறே குறிஞ்சன் முன்னால் போக, நான் சிறுவனுக்குப் பின்னாக நடந்தேன். காணாமற்போன தனது மகனுக்காக, எத்தனை பேர்களை வங்களாப் பறங்கி பழிவாங்குவானோ தெரியாது. எத்தனை உயிர்களைப் பதில் பணயமாகப் பிடிப்பானோ தெரியாது. இந்தச் சிறுவனின் தடமே தெரியாமல் நான் மறைத்துவிட வேண்டும். அது வங்களாப் பறங்கியைக் குழப்பிப்போடும், வாழ்க்கை முழுவதும் அவனைத் தீராத் துன்பத்தில் வீழ்த்தும். ஆனால், இந்தப் பொன்னிறத் தோலையும் பச்சைக் கண்களையும் நான் எங்கேதான் மறைத்துவைப்பது? எத்தனை நாள்தான் மறைக்க முடியும்? எரிந்துகொண்டிருக்கும் விளக்கைப் பன்னாடையால் மூடுவது நடக்கக் கூடிய காரியமா? களபூமிக்கு நாங்கள் போய்ச் சேர்ந்தபோது விடிந்துவிட்டது. சிறுவனின் வாயிலிருந்த துணியை உருவி, அவனது இடுப்பில் கட்டிவிட்டோம். துணியை உருவியதும் அந்தச் சிறுவன் திக்கித் திணறியவாறு பேசினான். அப்போது குறிஞ்சன் இளித்துக்கொண்டே சொன்னான்: “பறவையைப் போல கத்துகிறான் பறங்கி!” குறிஞ்சனின் அக்காக் கிழவி கைம்பெண். தனியாகத்தான் அங்கே சீவித்துக்கொண்டிருந்தாள். தப்புத்தண்ணிக்குள் குறுநண்டும் மட்டியும் அமர்த்தி வயிற்றைக் கழுவிக்கொண்டிருந்தாள். எங்களைத் திடீரெனப் பார்த்ததும், அவளுக்கு என்ன ஏதென்று புரியவில்லை. நாங்கள் கடலிலிருந்து ஏதோவொரு அதிசய உயிரினத்தைப் பிடித்து வந்திருப்பதாகவே அவள் நினைத்தாள். நாங்கள் சிறுவனைக் குடிசைக்குள் உட்காரவைத்து, இறால் பிடிக்கும் பிரம்புக் கூடையால் மூடிவிட்டோம். அவன் அந்தக் கூடைக்குள்ளிருந்து, பறவையைப் போல கீச்சுக் கீச்சென்று அவ்வப்போது சத்தமெழுப்பினான். நீரைத் தவிர வேறெதையும் அருந்தாமலிருந்தான். நாங்கள் பறங்கிச் சிறுவனை இங்கே கொண்டு வந்ததை, பொன்னியம்மனும் பனங்காடுகளும் எவரின் கண்களிலும் காட்டிக் கொடுக்கவில்லை. குறிஞ்சனின் அக்காவின் குடிசை, மணற்திட்டிகளுக்கு நடுவே பள்ளத்தில் தனியே இருந்தது. மணற்திட்டிகள் உயரமான கோட்டைச் சுவர்களைப் போல அந்தக் குடிசையைப் பாதுகாத்தன. உச்சிப் பொழுதானபோது, அந்தச் சிறுவன் இழுத்து இழுத்து மூச்சுவிடுவது போலிருந்தது. “தேவனுக்கு வெப்பம் தாங்க முடியவில்லைப் போலிருக்கிறது” எனச் சொல்லிவிட்டு, கிழவி கூடையைத் திறந்துவிட்டாள். அந்தச் சிறுவன் எழுந்து நடந்துவந்து குடிசைக்கு வெளியே பார்த்தான். குடிசை முற்றத்தில் புங்கை மரமொன்று சடைத்து நின்றது. அவன் நடந்துபோய் அந்த மரத்தின் வேரில் உட்கார்ந்துகொண்டான். நான் இப்போதுதான் அந்தப் பறங்கிச் சிறுவனை நிதானித்துப் பார்க்கிறேன். உடலும் தோள்களில் விழுந்த முடியும் பொன்னிறம். வயதில் சிறியவனானாலும் நல்ல வளர்த்தி. மெல்லிய தேகம். அவனது சருமம் உடும்பின் இறைச்சிபோல மினுங்கிக்கொண்டிருந்தது. பச்சை நிறக் கண்கள் கிறங்கியிருந்தன. உதடுகள் இரத்தச் சிவப்பு. சிறிய இடுப்பு. ஒடுங்கிய பாதங்கள். அக்காக் கிழவி ‘தேவன்’ என இவனைச் சொன்னபோது, என் மனதில் ஓர் எண்ணம் தோன்றியது. நான் குறிஞ்சனை ஒரு செய்தியோடு மலையாளத்தானிடம் அனுப்பிவைத்தேன். ‘கையில் அரம்பை உண்டு’ என்ற செய்தியைத் தவிர வேறெதுவும் மலையாளத்தானிடம் பேசக் கூடாது எனக் குறிஞ்சனிடம் வழிக்குவழி சொல்லி அனுப்பினேன். உச்சிவெயில் இறங்க, பறங்கிச் சிறுவன் பசியைப் பொறுக்க முடியால் கொடுத்ததை எல்லாம் தின்றான். அதன் பின்பு மர நிழலிலேயே உறங்கினான். அவன் இங்கிருந்து தப்பி ஓடுவதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை. பொத்திப் பொத்தி இவனை வளர்த்திருக்கிறார்கள். கரையில் ஒதுங்கிய வெண்சங்கு போல அசையாமல் கிடந்தான். அடுத்தநாள் இரவே, மலையாளத்தான் என்னைத் தேடி வந்துவிட்டான். “எங்கே அந்தச் சிலை?” எனப் பரபரத்தான். நான் அவனைக் குடிசைக்குள் அழைத்துச் சென்று, விளக்கு வெளிச்சத்தில் பறங்கிச் சிறுவனைக் காண்பித்தேன். அந்தச் சுடரின் ஒளியில் சிறுவனின் முகம் பஞ்சலோகச் சிலை போலத்தான் ஒளிர்ந்தது. மலையாளத்தான் மயங்கி விழாத குறைதான். அந்த இரவில், கிழவியின் குடிசை முற்றத்தில் நானும் குறிஞ்சனும் மலையாளத்தானுமாக உட்கார்ந்திருந்து நீண்ட நேரமாக ஆலோசித்தோம். சிறுவனை கண்டி ராஜ்ஜியத்துக்குக் கொண்டுபோய், அடிமையாக கொழுத்த பணத்துக்கு விற்றுவிடலாம் என்று மலையாளத்தான் ஆலோசனை சொன்னான். அது நல்ல யோசனைதான். ஆனால், இங்கிருந்து சிறுவனை எப்படி கண்டிவரை கொண்டு போவது? ஒளியை எப்படி மறைத்து எடுத்துச் செல்வது? “நாங்கள் மலைநாடு வரை போகத் தேவையில்லை. வன்னியில் ‘கப்பாச்சி’ கிராமத்தைக் கடந்துவிட்டால், கண்டி ராஜ்ஜியத்தின் எல்லை வந்துவிடும். எல்லைப்புறத்திலேயே விற்றுவிடலாம்” என்றான் மலையாளத்தான். கிடைக்கும் பணத்தில் தனக்குப் பாதி, எனக்கும் குறிஞ்சனுக்கும் பாதி என்றான். “எல்லாச் சாலைகளிலும் பறங்கிகள் காவல் போட்டிருப்பார்களே, கப்பாச்சி வரை சரக்கை எப்படிக் கொண்டு போவது? கடல் வழியாகப் போக முடியுமா?” என்று கேட்டேன். “அது என்னுடைய பொறுப்பு” என்றான் மலையாளத்தான். அவன் வானத்தால் கூடப் பறப்பான். III புஸ்ஸவல்ல கெலிகொட என்பது எனது பெயரானாலும் ‘ரட்ட மகாத்யோ’ என்றே என்னைச் சனங்கள் அழைத்தார்கள். வன்னி – கண்டி ராஜ்ஜிய எல்லையிலுள்ள இந்தப் பெரிய கிராமத்துக்கும், சுற்றியுள்ள எட்டுப் பத்துக் கிராமங்களுக்கும், என்னுடைய அறுபது வயதுவரை நானே பெரிய திஸாவையின் உதவி அதிகாரியாக இருந்தேன். வயது மூப்பால்தான் என்னுடைய பதவியை பெரிய திஸாவ ரத்துச் செய்தான். நான் கண்டிப் பிரதானிகளுக்கு எழுதிப்போட்டும், பதவி எனக்குத் திரும்பக் கிடைக்கவேயில்லை. என்னுடைய பதவி கழற்றப்பட்டதும், நான் வாயில் இரத்தினமுள்ள செத்த பாம்பு ஆகிவிட்டேன். என்னுடைய பதவிக் காலம் முழுவதும், நான் மக்களிடம் கொஞ்சம் கண்டிப்பாகவே நடந்துகொண்டேன். அதனாலேயே எனக்கு வம்ச விருத்தி இல்லையென்று என் காதுபடவே சிலர் பழித்ததுண்டு. சென்ற வருடம்தான் என்னுடைய இரண்டு மனைவிகளும் ஒருவர் பின் ஒருவராக இறந்துபோனார்கள். என் வீட்டின் எல்லா அறைகளிலும் செல்வம் பரவிக்கிடந்தாலும், அதைக் கட்டியாள ஒரு பெண்ணில்லை. ஞாபகக் குறைபாடுள்ள இந்த முதியவனிடம் வேலைக்காரர்கள் முடிந்தவரை திருடிக்கொண்டிருக்கிறார்கள். இந்த வீட்டுக்குத் தகுதியான ஒரு ராணியைக் கொண்டுவர வேண்டும் என நான் எண்ணிக்கொண்டிருந்த போதுதான், எனக்கு அந்தச் செய்தி கிடைத்தது. மலபார் வியாபாரி ஒருவன், தேவதை போன்ற கன்னிப் பெண்ணொருத்தியை, அடிமையாக விற்பதற்காக இங்கே கொண்டுவந்திருக்கிறானாம். இங்கே நல்ல விலை அமையாவிட்டால், மதவாச்சிக்கோ அனுராதபுரத்துக்கோ கன்னியைக் கொண்டு போய்விடுவானாம். இன்று ஓரிரவு மட்டும்தான் வியாபாரி இந்தக் கிராமத்தில் இருப்பானாம். மலபார் வியாபாரி, நெலும் விகாரைக்கு முன்னால் ஒரு சிறிய சந்தையையே கூட்டிவிட்டான். மக்கள் தீப்பந்தங்களை ஏந்தியவாறு, கன்னியைப் பார்க்கக் கூடியிருந்தார்கள். அந்தப் பெண்ணின் வசீகரத்தைப் பார்த்துச் சனங்கள் பேச்சிழந்து நின்றபோது, நான் அங்கே போய்ச் சேர்ந்தேன். தரையில் சாயப் பாய் விரிக்கப்பட்டு, அதிலே அந்தப் பெண் உட்கார வைக்கப்பட்டிருந்தாள். அவளுக்கு இருபுறமும் கருகருவென்ற தமிழர்கள் இருவர் காவலாளிகளைப் போல நின்றிருந்தார்கள். இருளுக்குள் அவர்களது பற்களும் முட்டைக் கண்களும் மட்டுமே தெரிந்தன. மலபார் வியாபாரி ஒரு கல்லில் அமர்ந்திருந்து புகையிலை கசக்கிக்கொண்டிருந்தான். நான் அந்தப் பெண்ணை நெருங்கிச் சென்று பார்த்தேன். ஒரு தமிழன் பெண்ணின் முகத்தை நிமிர்த்தி, தீபத்தின் வெளிச்சத்தில் பிடித்தான். பொன்னால் வார்க்கப்பட்ட தேவகன்னிகை என் முன்னிருந்தாள் என்பதைத் தவிர என்னிடம் அதை விபரிக்கச் சொற்கள் கிடையாது. அவளது தலையையும் முகத்தையும் உள்ளங்கைகளையும் ஒடுங்கிய பாதங்களையும் தவிர, மற்றப் பாகங்கள் அனைத்தையும் ஒரு பச்சை நிறச் சேலை மூடியிருந்தது. சேலையில் இழைக்கப்பட்டிருந்த வெள்ளிச் சரிகைகள், அந்தப் பெண்ணில் விண்மீன்கள் போல ஒளிர்ந்துகொண்டிருந்தன. பெண்ணின் விலை அறுநூறு லறின்கள் என்று மலபார் வியாபாரி உறுதியாகச் சொல்லிவிட்டான். இந்தக் கிராமத்தில் அவ்வளவு பணம் யாரிடமும் இருக்காது என்ற ஏளனம் அவனது புகையிலை அதக்கும் வாயிலிருந்தது. “வரவேண்டும் ரட்ட மகாத்யோ… இவள் உங்களுக்கானவள்” என வியாபாரி சொன்னபோது, அங்கே கூடி நின்ற மக்களிடமிருந்து “ஆம்…ஆம்” என ஆர்ப்பரிப்பு எழுந்தது. என் பதவியோடு சேர்த்துக் காணாமற்போயிருந்த என் கவுரவம், இந்தப் பெண் மூலம் எனக்குத் திரும்பக் கிடைத்துவிடும் போலிருந்தது. திடீரென வியாபாரி எழுந்து தமிழில் ஏதோ சொல்ல, பெண்ணுக்கு அருகில் நின்றிருந்த ஒரு தமிழன் பெண்ணை எழுந்திருக்குமாறு சைகை காட்ட, அடுத்த தமிழன் பாயைச் சுருட்டத் தொடங்கினான். “செல்வச் சீமானும், ஆயிரம் அடிமைகளை வைத்திருக்கவும் தகுதியுள்ளவருமான ரட்ட மகாத்யோவே இந்த பச்சைக் கண் அழகியைக் கொள்ளாவிட்டால், நான் என்னதான் செய்வது! இந்த அரம்பைக்கு கொடுத்துவைத்தது அவ்வளவுதான். மலைநாட்டில் யாராவது முரட்டு திஸாவையிடம் இவள் அடிமையாகி வாழ்க்கை முழுவதும் துன்பப்படப் போகிறாள். ரட்ட மகாத்யோவுக்கு வேண்டுமானால், இவளின் துணியை முழுவதுமாக அவிழ்த்துக் காட்டட்டுமா? அப்போதாவது உங்களது தயாள மனம் இரங்குமா?” என அந்த வியாபாரி என்னைப் பார்த்துக் கேட்டான். எனது கவுரவ கெதறவுக்கு வரப் போகும் பெண்ணை, இந்த இழிசனங்கள் முன்னே துணியவிழ்ப்பதா என்ன! மலபார் வியாபாரியிடம் பேரம் பேசவும் என் கவுரவம் இடம் கொடுக்கவில்லை. உண்மையில் இந்தத் தேவகன்னிகை ஆறாயிரம் பொன்னுக்கும் மதிப்பானவளே. சில வெளிநாட்டு அடிமைகள் கண்டி மலைநாட்டில் இருப்பதாகக் கேள்விப்பட்டுள்ளேன். ஆனால், இந்தப் பிரதேசத்திலே இதுவரை திஸாவை கூட இப்படியொருத்தியை வைத்திருந்தது கிடையாது. தொலைந்துபோன கவுரவம் தேடி வந்து, என் முன்னே தெய்வச்சிலையாக நிற்கிறது. நான் அந்த இடத்திலேயே வியாபாரத்தை முடித்துவிட்டு, மாட்டுவண்டியில் ஏறி அமர்ந்துகொண்டேன். எனது வண்டிக்குப் பின்னே, தமிழர்கள் அடிமையை நடத்திக் கூட்டிக்கொண்டு வந்தார்கள். கிராம அதிகாரியை அழைத்துவர ஆள் அனுப்பினேன். அவன் என் வீட்டுக்கு வாயைப் பிளந்துகொண்டு வந்தான். “ரட்ட மகாத்யோ புத்தரின் கருணையால் எப்போதுமே ஆசீர்வதிக்கப்பட்டவர்” என்றான். அடிமைச் சான்றிதழ் எழுதிக் கொடுத்தவிட்டு, அரை லொறின் நாணயம் வாங்கிக்கொண்டு போனான். பணத்துக்காக மலபார்காரன் துடித்துக்கொண்டு நின்றான். இந்தக் கறாரான வியாபாரக் குணம்தான், நாட்டின் கால்வாசி கறுவாத் தோட்டங்களும், முக்கால்வாசிக் கள்ளுக்கடைகளும் இவர்களது கையில் வரக் காரணமாகயிருக்கிறது. அறுநூறு லொறின்களை பெற்றுக்கொண்ட மறுகணமே, மலபார் வியாபாரியும் தமிழர்களும் அவசர அவசரமாகப் புறப்பட்டுவிட்டார்கள். புறப்படும்போது, அந்த வியாபாரி என் காதருகே வந்து இரகசியமாகச் சொன்னான்: “ரட்ட மகாத்யோ பெரிய மனது பண்ணி இரண்டு நாட்களுக்குப் பொறுமை காக்க வேண்டும், அவளுக்கு மாதவிலக்கு ஏற்பட்டுள்ளது. அவள் இப்போது உங்களுக்கு உரித்தான நிலம். நிதானமாக உழுது விளைவித்துக்கொள்ளுங்கள்.” அப்போது வீட்டில் முதிய வேலைக்காரன் திமிது மட்டுமே இருந்தான். திமிது அந்தத் தேவகன்னிகையை அழைத்துக்கொண்டு வீட்டின் பின்புறத் தாழ்வாரத்துக்குப் போனான். காலையில் நான் துயிலெழும் போது, வேலைக்காரி சீவாலி என் காலருகிலேயே உட்கார்ந்திருந்தாள். நான் எழுந்ததும், அவள் தனது வாயைக் கையால் பொத்தியவாறே “மோசம் போய்விட்டீர்கள் ரட்ட மகாத்யோ” என்று இரகசியக் குரலில் சொன்னாள். மலபார் வியாபாரியும் தமிழர்களும் இப்போது எல்லையைக் கடந்து வன்னிக்குள் புகுந்திருப்பார்கள். ரட்ட மகாத்யோ தன்னுடைய தள்ளாத வயதில், ஒரு பறங்கிப் பையனை, பெண் என நம்பி வாங்கி ஏமாந்திருக்கிறான் எனத் தெரிந்தால், இந்தக் கண்டி ராஜ்ஜியமே ஊளையிட்டுச் சிரிக்காதா? இதைப் போலொரு அவமானம் எனக்கு எப்போதும் ஏற்பட்டதில்லையே! ஒரு நாயை ஆட்டுத் தோல் போர்த்திச் சந்தையில் விற்ற கதையை வேடிக்கையாகச் சொல்வார்கள். இப்போது நானே பரிகாசத்துக்குரியவனாக ஆகிவிட்டேனே. நான் ஏமாந்தது யாருக்குமே தெரியக் கூடாது! இரவுதான் அவசரப்பட்டு மதியீனமாக நடந்துகொண்டேன். பகலிலும் அதைச் செய்யக் கூடாது. நான் நிதானமாக யோசித்தேன். ஊர் மக்களின் வாயிலிருந்து எப்படித் தப்பிப்பது என மண்டையைப் போட்டுக் குழப்பினேன். கடைசியில் ஒரு முடிவுக்கு வந்தேன். நான் வாங்கிய அடிமை தேவகன்னிகையாகவே இருக்கட்டும். அந்தத் தேவகன்னிகை ஆண் என்ற உண்மை இந்த வேலைக்காரியோடும் என்னோடும் மட்டுமே இருக்கட்டும். அந்தக் கணத்திலிருந்து, இந்த வேலைக்காரி சீவாலியைத் தவிர, மற்றைய வேலைக்காரர்கள் அனைவரையும் வீட்டு வேலைக்கு வரவேண்டாம் எனச் சொல்லிவிட்டேன். அவர்களை வயலில் வேலை செய்யுமாறு உத்தரவிட்டேன். இந்தப் பறங்கிப் பையன் என்னை ஆச்சரியப்படுத்திக்கொண்டேயிருந்தான். மிகவும் பணிவாக இருந்ததோடு மட்டுமல்லாமல், சிங்களச் சொற்களையும் விரைவிலேயே பேசத் தொடங்கினான். என்னுடைய அழகிய அடிமையைப் பார்ப்பதற்காக, தூரத்து ஊர்களிலிருந்தெல்லாம் மக்கள் வந்தபோது, வேலைக்காரி சீவாலி சிங்கள முறையில் அவனுக்குச் சேலை அணிவித்து, பூக்களால் அலங்கரித்துவிட்டாள். அந்தச் சிறுவனின் நடையும் அசைவும் அசல் பெண்ணைப் போலவேயிருந்தன. அவன் இப்போது சிரிக்கக் கூடத் தொடங்கிவிட்டான். தேவகன்னிகையின் சிரிப்பது. இந்த நாடகத்தை அதிக நாட்களுக்கு நடத்த முடியாது. பையனின் ஆணுறுப்பை அறுத்துவிட்டால் என்னவென்று கூட நான் யோசித்தேன். கண்டி அரண்மனையில் இப்படியாகக் காயடிக்கப்பட்ட அடிமைச் சிறுவர்கள் உள்ளார்கள் எனக் கேள்விப்பட்டிருந்தேன். காயடிக்கும் மனிதன் ஒருவனை நான் இரகசியமாகத் தேடிக்கொண்டிருந்த போதுதான், கண்டி அரசன் காட்டுக் கொடிகளால் பிணைக்கப்பட்டு, பறங்கிப் படையால் சிறைப்பிடிக்கப்பட்டான் என்ற சேதி வந்தது. பறங்கிப் படைகள் வன்னி எல்லையைத் தாண்டி, கண்டி ராஜ்ஜியத்துக்குள் இரவோடு இரவாகப் புகுந்துவிட்டன. காலையில் என் வீட்டின் முன்னால் வந்து நின்ற குதிரையில், ஏழடி உயரப் பறங்கி துப்பாக்கியோடு அமர்ந்திருந்தான். அவன் துப்பாக்கியை என் மார்புக்குக் குறி வைத்தபடியே “வில்மெட் நோர்மென்” என்று அலறியபோது, பறங்கிச் சிறுவன் வீட்டுக்குள்ளிருந்து வெளிப்பட்டு, தேவகன்னிகை போல நடந்துவந்து, என்னருகே தலையைக் குனிந்தவாறு நின்றான். IV என் கணவர் சேர். வில்மெட் நோர்மன், இரவு ஏழு மணியளவில் ‘எஸ்மெரெல்டா’ என்று என்னை அழைத்துக்கொண்டு வீட்டுக்குள் நுழைந்தபோதே, அவரது மனநிலை உற்சாகம் குன்றியிருக்கிறது என்பதைத் தெரிந்துகொண்டேன். அவரது கையில் ‘த ஸ்டாண்டர்ட்’ மாலைப் பத்திரிகை சுருட்டப்பட்டிருந்தது. பத்திரிகையை மேசையில் போட்டுவிட்டு, எதுவும் பேசாமலேயே மாடிக்குச் சென்றுவிட்டார். நான் குழந்தைகளைத் தூங்கவைக்கும் முயற்சியிலிருந்தேன். எட்டு மணிக்கு, கணவர் உணவருந்தக் கீழே வருவார். சமையற்காரி இப்போதே உணவு மேசையைத் தயார் செய்யத் தொடங்கிவிட்டாள். மூன்றாண்டுகளுக்கு முன்பான இளவேனிற் காலத்தில் எங்களது காதல் திருமணம் நடந்தது. சாதாரண குடிப் பின்னணியிலிருந்து வந்த என்னை மருமகளாக்கிக்கொள்ள கணவரின் குடும்பம் சம்மதிக்கவேயில்லை. என் கணவர் என்னிடம் கொண்ட அசைக்க முடியாத காதலாலும் இரக்கத்தாலுமே எங்களின் திருமணம் நடந்து முடிந்தது. திருமணமான அடுத்த மாதமே என் கணவருக்கு ‘சேர்’ பட்டம் வழங்கப்பட்டது. பினாங்குத் தீவில், அய்ந்து வருடங்கள் பிரிட்டிஷ் முடியாட்சிக்கு ஆற்றிய பணிகளுக்காகவே, இந்தப் பட்டம் இளம் வயதிலேயே என் கணவரை வந்தடைந்தது. இவர் இங்கிலாந்து திரும்பி, கிறிஸ்தவ அரசியல் மன்றத்தில் செயற்படத் தொடங்கிய போதுதான் என்னைச் சந்தித்தார். அன்றிலிருந்து என்னுடைய வாழ்க்கை ஆசீர்வதிக்கப்பட்டதாகவே அமைந்துவிட்டது. கணவரால் வயிற்றில் கனியாகிய இரண்டு குழந்தைச் செல்வங்களும் எனக்கு நித்தமும் அற்புதங்களைக் காட்டிக்கொண்டிருக்கிறார்கள். என் கணவர் தன்னைக் குறித்த எந்தச் செய்தியையும் என்னிடம் மறைத்ததில்லை. அவருடைய வாழ்வின் ஒவ்வொரு நாளையும் நான் அறிந்திருக்கிறேன். அவர் எவ்வளவுக்கு உண்மையானவரோ, இனிமையானவரோ அந்தளவுக்கு அடக்கமான குணமுடையவரும் கூட. வேலைக்காரர்களிடமோ, குதிரை வண்டிச் சாரதியிடமோ அவர் கடிந்து பேசி நான் பார்த்ததில்லை. நான் அவர் முன்னே மண்டியிடவோ, பணிவான சொற்களைப் பேசவோ அவர் என்னை அனுமதித்ததே கிடையாது. “ஆண் மண்ணால் படைக்கப்பட்டவன், பெண் எலும்பால் படைக்கப்பட்டவள்” என்பார். குழந்தைகள் உறங்கியதும், நான் மாலைப் பத்திரிகையை விரித்தேன். முதற் பக்கத்திலேயே நாடாளுமன்றத் தீர்மானம் குறித்த செய்தியிருந்தது. நான் குறிப்பிட்ட ஒரு பகுதியைத் திரும்பத் திரும்பப் படித்தேன். என்னால் அதை அவ்வளவு இலகுவாக நம்ப முடியவில்லை. இலங்கைத் தீவில் அடிமைமுறையைத் தொடர வேண்டும் என நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியிருந்தது. என் கணவர் சேர்.வில்மெட் நோர்மென் அடிமை முறைக்கு ஆதரவாக வாக்களித்திருந்தார். எட்டு மணியாகியும் என் கணவர் கீழே வராமல் மாடியிலேயே இருந்ததால், நான் மாடிக்குச் சென்றேன். அவரிடம் பேச வேண்டிய சொற்களை என் மனதில் உருப்போட்டவாறே போனேன். சொற்களை மினுக்கி முத்துகளைப் போல அவர் முன்னே வைப்பேன். அவர் உடைகளைக் கூட மாற்றாமல், படுக்கையில் சாய்ந்து உட்கார்ந்திருந்தார். என்னைப் பார்த்ததும் அடக்கமான புன்னகையை வெளிப்படுத்தினார். “பத்திரிகையில் செய்தி படித்தேன். வெற்றி பெற்ற என் பிரபுவுக்கு வாழ்த்துகள்” என்று நானும் அடக்கமான குரலில் சொன்னேன். என் கணவர் கண்களை இமைக்காமல் என்னையே பார்த்துக்கொண்டிருந்தார். பின்பு மெதுவாகச் சொன்னார்: “துன்ப ஞாபகங்களின் வழியாகவோ அல்லது இன்ப ஞாபகங்களின் வழியாகவோ நாங்கள் பால்ய காலத்தைச் சென்றடையலாம்…ஆனால், சென்றடையும் அந்தக் காலம் எப்போதும் இனிமையானதாகவே இருக்கிறது இல்லையா எஸ்மெரெல்டா!” நான் கண்களை உயர்த்தி, படுக்கையறை மாடத்தில் வைக்கப்பட்டிருந்த பஞ்சலோகங்களாலான நடன மங்கை சிலையைப் பார்த்தேன். (‘ஏகலைவன்’ சனவரி 2021 இதழில் வெளியானது) அம்மணப் பூங்கா தவபாலன் என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட அந்த மனிதரின் முகத்தைப் பார்த்தபோது, எனது கண்கள் தாமாகவே திடுமென இறுக மூடிக்கொண்டன. ஏதோவொரு கிரேக்கப் புராணக் கதையில் வரும் உருவமொன்றுதான் என் ஞாபகத்தில் மின்னலாயிற்று. நான் அச்சத்துடனோ அல்லது தயக்கத்துடனோ கண்களைத் திறந்தபோது, தவபாலன் முன்போலவே தனது தலையையும் முகத்தையும் மறைத்திருந்தார். அவரது விழிகள் மட்டும் தணல் போலத் தகித்துக்கொண்டிருந்தன. அப்போது அந்தப் பூங்காவின் மேற்குப் பகுதியிலிருந்த இடிந்த கோபுரத்திலிருந்து மூன்று தடவைகள் மணியொலித்தது. எனக்கு இந்த நகரம் முற்றிலும் புதிது. பிரான்ஸின் எல்லை நாடான இந்த நாட்டுக்கு நான் பல தடவைகள் வந்திருக்கிறேன் என்றாலும், இன்று அதிகாலையில்தான்; முதற்தடவையாக இந்தப் பழமை வாய்ந்த நகரத்துக்கு வந்தேன். நெடுந்தீவில் பிறந்து, தன்னுடைய எழுபத்தைந்தாவது வயதில் இங்கே வந்து, எண்பத்தாறாவது வயதில் காலமாகிவிட்ட, பெரியப்பாவின் இறுதிச் சடங்குகளில் கலந்துகொள்வதற்காக வந்திருக்கிறேன். பெரியப்பாவின் சாவு நிறைவான சாவு. அவருக்கு ஆறு பிள்ளைகள். எல்லோருமே இந்த நாட்டில்தான் வாழ்கிறார்கள். பதினேழு பேரக் குழந்தைகளும், ஆறேழு பூட்டக் குழந்தைகளும் தீப்பந்தம் பிடித்துச் சூழ நிற்க, ‘ஒருமடமாது’ பாடல் முழங்க, கிரியை செய்வதற்காக இலண்டனிலிருந்து ஸ்பெசல் குருக்கள் வந்து, சகல மரியாதைகளுடனும்தான் பெரியப்பா எரிக்கும் மின் இயந்திரத்துக்குள் அனுப்பப்பட்டார். மொட்டை போட்டிருந்த பெரியப்பாவின் நான்கு ஆண்மக்களும் மண்டபத்தின் நான்கு வாசல்களிலும் ஆளுக்கொருவராக நின்றுகொண்டு, வந்தவர்களுக்குக் கை கொடுத்து வரவேற்பதாகவும், உடனேயே கைகளைத் திரவத்தால் சுத்திகரிப்பதாகவுமிருந்தார்கள் இந்தக் கொரோனா காலத்தில் அல்லாமல் வேறொரு காலத்தில் பெரியப்பா இறந்திருந்தால், இதைவிடப் பத்து மடங்கு ஆரவாரமாக இந்தச் சடங்கைப் பிள்ளைகள் நடத்தியிருப்பார்கள். இந்தப் பெருந்தொற்றுக் காலத்தில் கூட முந்நூறுக்கும் குறையாத சனங்கள் மயானத்துக்கு வந்திருந்தார்கள். அந்த நகரத்தில் தமிழ்ச் சனங்கள் பத்தாயிரத்துக்கும் அதிகமாகவே இருப்பதாகப் பேசிக்கொண்டார்கள். பிற்பகல் இரண்டு மணியளவில் சடங்குகள் முடிந்ததும், நெருங்கியவர்களிடம் சொல்லிக்கொண்டு நான் புறப்பட்டேன். அன்றிரவு எனக்குப் பாரிஸ் திரும்புவதற்கான இரயில் இருந்தது. நடுவிலிருக்கும் நேரத்தை ’அலக்ஸாண்ட்ரா பூங்கா’வில் செலவிட நான் தீர்மானித்திருந்தேன். அந்தப் பூங்கா இரயில் நிலையத்திலிருந்து, பத்து நிமிட நடை தூரத்திலேயேயிருந்தது. நான் மயானத்திலிருந்து புறப்பட்டபோது, எனது மைத்துனர் முறையானவர் ஏற்பாடு செய்துவிட்ட இளைஞனொருவன் என்னைத் தனது வண்டியில் அழைத்துச் சென்றான். அவன் என்னிடம் “எத்தனை மணிக்கு இரயில்?” எனக் கேட்டபோது, “அதற்கு நிறைய நேரமிருக்கிறது, நீங்கள் என்னை அலக்ஸாண்ட்ரா பூங்காவில் இறக்கிவிட்டால் போதுமானது” என்றேன். அந்த இளைஞனோ, அப்படியொரு பூங்காவே இந்த நகரத்தில் கிடையாது என்று சொல்லிவிட்டான். நான் எனது அலைபேசியில் தேடி, பூங்காவின் படங்களை இளைஞனிடம் காண்பித்தேன். “ஓ! அம்மணப் பூங்காவா!” என்று சொல்லிவிட்டு, அவன் வண்டியின் வேகத்தை அதிகரித்தான். இங்குள்ள தமிழர்கள் அந்தப் பூங்காவை ‘அம்மணப் பூங்கா’ என்றுதான் அழைப்பார்களாம். பதினைந்து நிமிடங்களுக்குள் பூங்காவின் முன்னால் என்னை அந்த இளைஞன் இறக்கிவிட்டான். அவனுக்கு நன்றி சொல்லிவிட்டு, எனது பையைத் தூக்கிக்கொண்டு பூங்காவை நோக்கிச் சென்றேன். அந்தப் பைக்குள் எனது புகைப்படக் கருவியும், சிறிய ஸ்டாண்டும், லென்ஸுகளுமிருந்தன. இந்தப் பூங்காவைப் பார்க்க வேண்டுமென்பது என்னுடைய பலநாள் ஆசையாகயிருந்தது. பெரியப்பாவால் அது இப்போது நிறைவேறிற்று. சிலநூறு வருடங்களுக்கு முன்பு, இந்த நகரமும் சுற்றியுள்ள கிராமங்களும் சேர்ந்து தனி நாடாகயிருந்தது. அய்ரோப்பாவின் மிகப் பழமையான நாடுகளில் இதுவுமொன்று. பதினேழாம் நூற்றாண்டில் ராணி அலக்ஸாண்ட்ராவால் இந்தப் பூங்கா அமைக்கப்பட்டது. அந்த ராணி சிற்பக்கலையில் தீராக் காதலுடையவர். ராணியே ஒரு சிற்பிதான். இந்தப் பூங்காவில் அவர் முப்பது சிலைகளை அமைத்திருந்தார். இரண்டு உலகப் போர்களுக்குப் பின்பு பன்னிரண்டு முழுமையான சிலைகளும், பதினைந்து சிதைந்துபோன சிலைகளும் எஞ்சியுள்ளன. மூன்று சிலைகள் விமானக் குண்டுவீச்சில் முற்றாக அழிந்துவிட்டன. பூங்காவின் மேற்கு மூலையிலுள்ள மணிக்கூண்டுக் கோபுரமும் இரண்டாம் உலகப் போரில் குண்டுவீச்சுக்கு உள்ளாகிப் பாதி சிதைந்துபோயிருக்கிறது. இந்தப் பூங்கா கலைக் கோயிலாக மட்டுமல்லாமல், போர் நினைவுச் சின்னமாகவும் பராமரிக்கப்படுகிறது. பூங்காவின் நுழைவாசலில் யாருமில்லை. அறிவிப்புப் பலகையில் பூங்கா மூடப்படும் நேரம் மாலை ஆறுமணி என்றிருந்தது. எனக்குப் போதிய நேரமிருக்கிறது. செப்ரம்பர் மாதம் என்பதால் சூரிய வெளிச்சம் ஆறு மணிவரையிருக்கும். உண்மையில் அந்தப் பூங்கா நான் எதிர்பார்த்ததை விட மிகப் பெரிதாகயிருந்தது. ஆனால், ஆள் நடமாட்டம் சற்றுக் குறைவாகயிருந்தது. சிலைகளிருந்த பகுதி பூங்காவின் மையத்திலிருந்தது. நுழைவாயிலில் இருந்து பார்த்தபோதே, சிலைகள் பூஞ்செடிகளுக்கு மேலால் தெரிந்தன. நறுமணம் ஒவ்வொரு புல்லிலும் நுரைத்துக்கொண்டிருந்தது. முகக் கவசத்தைத் தாடைக்கு இறக்கிவிட்டு, நறுமணத்தை நெஞ்சுக்குள் நிறைத்துக்கொண்டேன். அந்தச் சிலைகளுக்கு நடுவில் நான் நின்றபோது, ஏதோ புராண காலத்தில் நிற்பதுபோலவே உணர்ந்தேன். ஆறடி உயரமுள்ள பீடத்திலிருந்த ஒவ்வொரு சிலையும், பத்தடி உயரத்துக்குக் குறையாமலிருந்தது. ஆண், பெண், குழந்தைகள் எனக் கற்களில் சித்திரிக்கப்பட்டிருந்தார்கள். எல்லாச் சிலைகளும் நிர்வாணத்தின் பல்வேறு நிலைகளில் வடிவமைக்கப்பட்டிருந்தன. மனித உடலின் அழகுக்கு ஒப்பாக வேறொரு உயிரினத்தின் அழகு இருக்கவே முடியாது என்பதை அந்தச் சிலைகள் சொல்லின. ஒவ்வொரு சிலையும் என்னையே பார்ப்பது போலவும், அழைப்பது போலவுமே உணர்ந்தேன். ஒரு பெண் குந்தியிருந்தவாறே குழந்தையைப் பெற்றெடுப்பதாக ஓர் உயரச் சிலையிருந்தது. அந்தச் சிலைக்கு வலது பக்கமாக, பத்துப் பதினைந்தடிகள் தூரத்தில் அமைக்கப்பட்டிருந்த கல்லாலான நீண்ட இருக்கையில், உயிருடன் ஒருவர் உட்கார்ந்திருப்பதைக் கவனித்தேன். அந்த உருவம் முழுவதுமாக ஆடைகளால் மூடப்பட்டிருந்தது. தலையிலிருந்த தொப்பி கவிழ்ந்திருந்து நெற்றியையும் மறைத்தது. முகத்திலிருந்த கறுப்புநிறத் துணி கண்கள் வரை ஏறியிருந்தது. அந்தக் கண்கள் என்னையே பார்த்துக்கொண்டிருந்தன. நான் எனது தாடையில் கிடந்த முகக் கவசத்தை மூக்குக்கு மேலாக ஏற்றிவிட்டுக்கொண்டு, ஒவ்வொரு சிலையையும் படம் பிடிப்பதில் மூழ்கிவிட்டேன். நடுவில் சில பார்வையாளர்கள் வருவதாகவும், சிலைகளைப் பார்த்துப் பரவசமாகிக் கூச்சலிடுவதாகவும், படம் பிடித்துக்கொள்வதாகவும், போவதாகவுமிருந்தார்கள். ஆனால், கல்லிருக்கையில் அமர்ந்திருந்தவர் மட்டும் அப்படியே சிலைகளோடு சிலைபோல அசையாமலிருந்தார். அந்தக் கல்லிருக்கையை நான் கடந்தபோது, அதில் அமர்ந்திருந்தவரை ஓரக்கண்ணால் பார்த்து ’குட் ஈவினிங்" என்றேன். பதிலுக்கு அந்த மனிதர் “நான்தான் தவபாலன்” என்றார். நான் அந்த மனிதரை நோக்கித் திரும்பி “தவபாலனா? எனக்கு யாரென்று தெரியவில்லையே” என்றேன். அந்த மனிதர் தனது தலையிலிருந்த தொப்பியை இடது கையால் மெதுவாக எடுத்துத் தனது மடியில் வைத்துக்கொண்டார். அவரது கை மிக மெதுவாகவே தடுமாற்றத்துடன் இயங்கியது. பின்பு அதே கையால் மெதுவாக முகத்திலிருந்த துணியையும் விலக்கினார். எனது கண்கள் சடுதியில் மூடிக்கொண்டன. நெஞ்சுக்குள்ளிருந்த நறுமணம் தீய்ந்து புகையாக என் வாயால் வெளியேற, ‘ஈங்’ என்ற ஏங்கல் என் தொண்டைக் குழியில் எழுந்து வீழ்ந்தது. அந்த மனிதரின் தலையில் முடியே இல்லை. உச்சந்தலையில் தோல்கள் சுருண்டு சிறிய கொம்புகள் போலத் தோற்றமளித்தன. காதுகள் இருக்கவேண்டிய இடத்தில் தசைக்கோளங்கள் தொங்கிக்கொண்டிருந்தன. நெற்றியில் கறுப்புத் தோலின் நடுவே சிலந்திவலை போல வெள்ளை படர்ந்திருந்தது. அந்த மனிதரின் முகத்தில் மூக்கே இல்லை. துவாரங்கள் மட்டுமே இரண்டு புளியங்கொட்டைகள் போலிருந்தன. கன்னச் சதைகள் பாசி போல எலும்பில் ஒட்டிக் கிடந்தன. வாய்க்குக் கீழே அவரின் முகம் முடிந்துவிடுகிறது. தாடையே இல்லை. “என்னைத் தெரியாதா?” என்று அந்த மனிதர் மீண்டும் கேட்டார். “இல்லை, நான் பிரான்ஸிலிருந்து வந்திருக்கிறேன்.” “அப்படியா! நல்லது. நான் இந்தப் பூங்காவுக்கு ஒவ்வொரு நாளும் வருவேன். இங்கிருக்கும் ஒவ்வொரு சிலைக்கும் என்னைத் தெரியும். இந்தப் பூங்காவைப் பற்றி நீங்கள் அறியாத விஷயமொன்றை நான் சொல்லட்டுமா?” என்று கேட்டார் தவபாலன். அந்த நீண்ட கல்லிருக்கையின் நடுவில் அமர்ந்திருந்த தவபாலன், மெதுவாக வலது மூலைக்கு நகர்ந்தார். நான் போய் இடது மூலையில் உட்கார்ந்துகொண்டேன். 2 நீங்கள் ஒரு சிலையைச் சுற்றிப் படம் பிடிக்கும் நேரத்திற்குள் என்னைப் பற்றிச் சொல்லிவிடலாம். இந்த நகரத்தில் என்னைத் தெரியாதவர்களே இல்லை. தமிழர்களைப் பற்றி மட்டும் நான் சொல்லவில்லை. வெள்ளையர்களுக்கும் என்னைத் தெரியும். 1984-ம் ஆண்டு எந்த விசயத்தால் முக்கியத்துவம் பெறுகிறது என்று எனக்குத் தெரியவில்லை. அந்த வருடத்தின் பெயரால் ஒரு புத்தகம் இருப்பது மட்டுமே எனக்குத் தெரியும். என்னுடைய நண்பன் கபிலன் அந்தப் புத்தகத்தை வைத்திருந்தான். அவன் நீண்டகாலமாக வெலிகடச் சிறையிலிருக்கிறான். அந்த வருடம்தான் நான் பிறந்தேன். அடுத்த வருடமே கொழும்புக்கு மிளகாய் மூடைகள் கொண்டு சென்ற அப்பா காணாமல் போய்விட்டார். கைக்குழந்தையான என்னையும் தூக்கிக்கொண்டு, அம்மா இராணுவ முகாம்களிலும், சிறைச்சாலைகளிலும் அப்பாவைத் தேடியலைந்தார். அப்பா என்னவானார் என யாருக்கும் தெரியவில்லை. அப்பா திரும்பி வரவேயில்லை. எங்களுக்கு வட்டக்கச்சியில் பெரிய விவசாய நிலமிருந்தது. அம்மாவே விவசாயத்தைக் கவனிக்கத் தொடங்கினார். சாரம் கட்டி, சேர்ட் போட்டிருக்கும் பெண்ணை நீங்கள் கண்டிருப்பீர்களோ தெரியாது. எனது அம்மாவுக்கு உழவு இயந்திரம் ஓட்டக்கூடத் தெரியும். கூலியாட்களை வைத்து விவசாய வேலைகளை அம்மா கவனித்தாலும், அவரும் சாரத்தைக் கட்டிக்கொண்டு நிலத்தில் இறங்கி எல்லா வேலைகளையும் பார்ப்பார். அவரது கையாலேயே கூலியாட்களுக்கு உணவும் தேநீரும் தயாரித்துக் கொடுப்பார். ஆனால், அவர் ஒருபோதும் என்னைத் தோட்டத்திற்குள் இறங்க விட்டதேயில்லை. “படிப்பது மட்டுமே உன்னுடைய வேலை” என்று கண்டிப்பாகச் சொல்லிவிடுவார். நானும் அம்மா சொல்வதைக் கேட்டு நடக்கக் கூடிய பிள்ளைதான். அப்படிச் சொல்வதைக் காட்டிலும், எனக்குச் சுயமாக ஒன்றுமே செய்யத் தெரியாது என்று சொல்வதே சரியாகயிருக்கும். அன்றன்றைக்கு என்ன உடையணிய வேண்டும் என்பதைக் கூட நான் அம்மாவிடம் தான் கேட்பேன். பள்ளிக்கூடத்தைத் தவிர வேறெங்குமே அம்மா இல்லாமல் நான் தனியாகச் சென்றதேயில்லை. “சுமதி…நீ தவபாலனை சுயபுத்தியில்லாத பிள்ளையாக வளர்த்திருக்கிறாய்” என்று மாமா கூட, அம்மாவிடம் அடிக்கடி சொல்வார். பஞ்சாட்சரம் மாமா, அம்மாவின் மூத்த அண்ணன். கொழும்பில் ஆட்டுப்பட்டித் தெருவில் கிட்டங்கி வைத்து மொத்த வியாபாரம் செய்துகொண்டிருந்தார். எங்களது நிலத்தில் விளையும் பொருட்களை அவர்தான் வாங்கிக்கொள்வார். அவரது குடும்பம் கொழும்பிலேயே இருந்தது. எனக்குப் பதினாறு வயதான போது, என்னை அதற்கு மேலும் வன்னியில் வைத்திருக்க அம்மா விரும்பவில்லை. மாமாவின் பொறுப்பில் என்னைக் கொழும்புக்கு அனுப்பிவிட்டார். அதற்குப் பின்பு, இன்றைக்குவரை நான் வட்டக்கச்சிக்குத் திரும்பவேயில்லை. மாமாவின் வீட்டிலிருந்து படித்துத்தான், உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்தேன். அங்கிருந்துதான் பல்கலைக் கழகத்துக்குப் போய்வந்தேன். யுத்தம் ஓரளவு தணிந்திருந்த காலங்களில், மூன்று மாதங்களுக்கு ஒரு தடவை அம்மா கொழும்புக்கு வந்து என்னைப் பார்த்துப் போவார். யுத்தம் உக்கிரமாக நடந்த காலங்களில் கூட ஆண்டுக்கு ஒருமுறையாவது அம்மா எப்படியும் கொழும்புக்கு வந்துவிடுவார். ஆனால், இரண்டே நாட்களில் திரும்பவும் வன்னிக்குப் போய்விடுவார். “அங்கே தோட்ட வேலைகள் நடுவில் நிற்கின்றன தவம்” எனச் சொல்லி, என்னை முத்தமிட்டு விடைபெறுவார். பல்கலைக்கழகத்தில் இரண்டாமாண்டில் நான் படித்துக்கொண்டிருந்த போதுதான், என்னுடன் படித்துக்கொண்டிருந்த கபிலனை புலனாய்வுத்துறையினர் கைது செய்தார்கள். கொழும்பில் கார்க் குண்டுவெடிப்பு நடத்தி, விமானப் படைத் தளபதியைக் கொலை செய்தவர்களது குழுவில் கபிலனும் இருக்கிறான் எனக் காவல்துறை சொன்னது. இதை நீங்கள் நம்புவீர்களா என்று தெரியவில்லை…கபிலனிடம் எனது தொலைபேசி எண்ணும் முகவரியும் இருந்ததாலேயே நானும் கைது செய்யப்பட்டேன். அவற்றை 1984 என்ற புத்தகத்தின் முதற் பக்கத்தில் அவன் எழுதி வைத்திருந்தான். என்னை விசாரணை செய்தபோது, அந்தப் புத்தகம் புலனாய்வு அதிகாரியின் மேசையிலிருந்தது. அந்தப் புத்தகத்தைப் பற்றித்தான் அதிகாரி நிறையக் கேட்டார். எனக்குத்தான் அதைப் பற்றி எதுவும் தெரியாதே. என்னைக் கொஞ்ச நேரம் விசாரித்தவுடனேயே, அந்த அதிகாரிக்கு நானொரு ‘சோத்து மாடு’ என்பது புரிந்திருக்கும். “குண்டு வைக்கும் வேலையையெல்லாம், உன்னை நம்பி யாருமே கொடுக்கமாட்டார்கள்” என்று அந்த அதிகாரி சொல்லிவிட்டு, என் கன்னத்தில் ஓங்கி ஓர் அறைவிட்டார். இருபத்தியிரண்டாவது வயதில்தான் நான் முதன் முதலாக, என் தேகத்தில் ஒரு அடியைப் பெற்றுக்கொள்கிறேன். அந்த அதிகாரியின் கை மரக்கட்டை மாதிரியானது. கொஞ்ச நேரத்திற்கு எனது கண்கள் இருண்டேயிருந்தன. என்னிடமிருந்து எந்தத் துப்பும் தேறப் போவதில்லை என்பது அந்த அதிகாரிக்குத் தெளிவாகத் தெரிந்துவிட்டது. அவர் தேவையில்லாமல் தன்னுடைய நேரத்தையும் சக்தியையும் வீணாக்கி என்னைக் கைது செய்திருக்கிறார். தன்னுடைய தவறுக்கு, அந்த அதிகாரி என்மீதுதான் கோபப்பட்டார். 1984 என்ற அந்தப் புத்தகத்தை என் வாய்க்குள் திணித்து, அந்தப் புத்தகத்தை முழுவதுமாகச் சாப்பிட வேண்டுமென எனக்குக் கட்டளையிட்டார். எனக்குப் பக்கத்தில் ஒரு வாளியில் தண்ணீர் வைக்கப்பட்டது. ஒவ்வொரு பக்கமாகக் கிழித்துத் தண்ணீரில் நனைத்து, முழுப் புத்தகத்தையும் நான் சாப்பிட்டு முடித்தேன். அருமந்த நேரத்தைச் செலவு செய்து பிடித்துவந்த என்னை வெளியே விட்டுவிட அந்த அதிகாரிக்கு மனமில்லை. என்னைப் பார்த்துத் தலையை இடமும் வலமுமாக அசைத்து, கால்களால் நிலத்தில் தாளமிட்டவாறே “எதிர்காலத்தில் நீ குண்டு வைக்கலாம்” என்றார். ஒரு பத்து வருடங்களுக்காவது என்னைச் சிறையில் வைத்துவிட அவர் திட்டம் போட்டார். பஞ்சாட்சரம் மாமா சும்மாயிருக்கவில்லை. தன்னுடைய எல்லா வியாபாரத் தொடர்புகளையும் உபயோகித்தும் பணத்தை வாரியிறைத்தும், புலனாய்வுத்துறையினரிடமிருந்து என்னை ஒருவாறு மீட்டுவிட்டார். அதற்குப் பின்பு ஒரு நிமிடம் கூட என்னைத் தன்னுடைய வீட்டில் வைத்திருக்க மாமா தயாராகயில்லை. யுத்தம் உக்கிரமாக நடந்துகொண்டிருந்ததால், அம்மாவோ கொழும்புக்கு வர முடியாமல் வன்னிக்குள் அடைபட்டிருந்தார். மாமா தொலைபேசியில் அம்மாவிடம் பேசியபோது, அம்மா எங்களது விவசாய நிலத்தை, மாமாவின் பெயரில் எழுதி வைப்பதாக வாக்குறுதி கொடுத்தார். மாமா இருபத்தைந்து இலட்சம் ரூபாய்களுக்கு மேல் செலவு செய்து, என்னை இந்த நாட்டுக்கு அனுப்பிவைத்தார். பஞ்சாட்சரம் மாமியின் தம்பி முறையான, மாயவரின் தொலைபேசி எண்ணை நான் மனப்பாடம் செய்து வைத்திருந்தேன். அவரைத் தொடர்புகொண்டு, இந்த நகரத்துக்கு வந்து சேர்ந்தேன். மாயவரின் வீட்டில் எனக்கொரு அறை கொடுத்தார்கள். வாடகை, அது இதுவென்ற பேச்செல்லாம் இருக்கவில்லை. என்னுடைய அம்மா மீது மாயவருக்கு நல்ல மதிப்பிருந்தது. மாயவரின் மனைவியும், அவர்களது பதினேழு வயதுப் பெண்ணான நதிராவும் என்மீது மிகவும் கரிசனையாக இருந்தார்கள். இந்த நாட்டுக்கு வந்தும் நான் மாறவில்லை. ஒவ்வொரு சின்ன விசயத்துக்கும், அம்மாவுக்குத் தொலைபேசி செய்து ஆலோசனை கேட்பேன். ஒவ்வொரு நாளும் அம்மாவிடம் பேசுவேன். “தவம்…உனக்கு இருபத்துமூன்று வயதாகிறது, நீ சுயமாக முடிவு எடுத்துப் பழக வேண்டும் அப்பன்” என்று அம்மா சொல்லாத நாளில்லை. இங்கே என்னுடைய அகதி விண்ணப்பத்தைச் சீக்கிரமே விசாரணைக்கு எடுத்துக்கொண்டுவிட்டார்கள். ‘இலங்கையில் இப்போதும் யுத்தம் நடக்கிறதா என்ன’ என்ற தோரணையிலேயே விசாரணை அதிகாரி கேள்விகளைக் கேட்டார். “இராணுவம் உங்களை எப்படியெல்லாம் சித்திரவதை செய்தார்கள்?” என விசாரணை அதிகாரி கேட்டபோது, “1984 என்ற புத்தகத்தை என்னை முழுவதுமாகச் சாப்பிட வைத்தார்கள்” என்றேன். “அந்தப் புத்தகம் எத்தனை பக்கங்கள் இருக்கும்?” என அதிகாரி கேட்டபோது “ஆயிரம் பக்கங்கள் இருக்கும்” என்றேன். அந்த அதிகாரி என்னைப் பார்த்து “எனக்கு மிகவும் பிடித்தமானது அந்தப் புத்தகம். ஆனால், அந்தப் புத்தகம் 328 பக்கங்கள்தானே…” என்று சொல்லிவிட்டு என் கண்களையே பார்த்தார். “ஒவ்வொரு நாட்டைப் பொறுத்துப் பக்கங்கள் கூடிக் குறையலாம்” என்று பதிலளித்தேன். அந்தப் பதில் அதிகாரிக்கு ஏற்புடையது என்றுதான் நினைக்கிறேன். அவர் என்னை அகதியாக அங்கீகரித்துவிட்டார். மாயவரின் உதவியால், ஒரு வாரப் பத்திரிகை நிறுவனத்தின் இயந்திரப் பகுதியில் எனக்கு வேலை கிடைத்தது. அது இரவு வேலை என்பதால், பகலில் மொழி படிக்கும் வகுப்புக்குச் சென்றேன். சீக்கிரத்திலேயே மொழி எனக்குப் பிடிபட்டது. ஆங்கிலத்தைச் சற்றுப் பிழையாகப் பேசினால், அதுதான் இந்த மொழி. அம்மாவுக்கு நான் ஒருபோதுமே பணம் அனுப்பியதில்லை. கேட்ட போதெல்லாம் “எனக்குப் பணம் காசு வேண்டாம் தவம்…நீ பத்திரமாக இருந்தால் போதும். மாயவர் குடும்பத்தை அனுசரித்து நட. அவர்களுடனேயே இரு” என்றார் அம்மா. அவர் சொன்னபடியே இரண்டு வருடங்கள் இருந்தேன். எனக்குத் திருமணம் செய்துவைக்க வேண்டும் என்ற ஆசை அம்மாவைப் பிடித்துக்கொண்டது. அதைப் பற்றி என்னிடம் சாடைமாடையாகக் கதைத்தார். மாயவரின் பெண்ணான நதிராவும் இருபது வயதை நெருங்கியிருந்தாள். அவளையே எனக்குப் பேசி முடிக்க வேண்டுமென்பது அம்மாவின் விருப்பம். 2009-ம் ஆண்டு தொடக்கத்தில் வன்னியில் சண்டை கடுமையாகியபோது, அம்மாவுடனான என்னுடைய தொடர்புகள் அறுந்துபோயின. தொலைபேசியில் அம்மாவைத் தொடர்புகொள்ள முடியாமலிருந்தது. ஒவ்வொரு நாளும் பஞ்சாட்சரம் மாமாவைத் தொலைபேசியில் அழைத்து, அம்மாவைப் பற்றி விசாரிப்பேன். அம்மா இப்போது இராமநாதபுரத்தில் இருக்கிறார், இப்போது விசுவமடுவில் இருக்கிறார் என அவ்வப்போது மாமாவிடமிருந்து தகவல்கள் கிடைத்தன. ஆனால், அம்மாவுடன் பேச முடியவில்லை. கடைசியில் ஏப்ரல் மாதத்தில் மாயவரின் வீட்டுக்கு மாமா தொலைபேசியில் அழைத்தார். மாயவர் குழறி அழுதவாறே என்னிடம் தகவல் சொன்னார். அம்மா, உழவு இயந்திரத்தில் வீட்டுப் பொருட்களையும், சில அயலவர்களையும் ஏற்றிக்கொண்டு, சில மாதங்களாகத் தொடர்ச்சியாக இடம் பெயர்ந்தவாறே இருந்திருக்கிறார். மூன்று நாட்களுக்கு முன்பு, வீதியில் சென்றுகொண்டிருந்த உழவு இயந்திரத்தின் மீது விமானக் குண்டுவீச்சு நடந்திருக்கிறது. உழவு இயந்திரத்தைச் செலுத்திக்கொண்டிருந்த அம்மா, சாரதி இருக்கையில் இருந்தவாறே ஒரே விநாடியில் முழுவதுமாக எரிந்து போயிருக்கிறார். நதிரா என்னருகே வந்து, எனது தோளை அணைத்துக்கொண்டாள். நீங்கள் நம்புவீர்களோ தெரியாது…எனது கண்களிலிருந்து ஒரு சொட்டு நீர் கூட விழவில்லை. ‘அம்மா இனி இல்லை! இனி நான்தான் சுயமாக முடிவுகளை எடுக்கவேண்டும்’ என்ற சிந்தனைதான் எனக்குத் திரும்பத் திரும்ப வந்து என் மண்டையை அடைத்துப்போட்டது. நான்கு நாட்கள் நான் எனது அறையிலிருந்து வெளியே வரவேயில்லை. மாயவர் குடும்பம் என்னைத் தேற்றுவதற்கு வழி தெரியாமல் தவித்தார்கள். பலர் மாயவர் வீட்டுக்கு வந்து துக்கம் விசாரித்துப் போனார்கள். நான் அறையைவிட்டு வெளியே வரவேயில்லை. ஒரு வாரத்திற்குப் பிறகு வேலைக்குப் போனேன். பத்திரிகையின் முதன்மை ஆசிரியரான அண்ட்ரியாஸ் ஸ்வாட், இயந்திரப் பிரிவுக்கு வந்து என்னிடம் துக்கம் விசாரித்தார். ஆனால், அவருக்கும் இலங்கையில் ஒரு யுத்தம் நடந்துகொண்டிருப்பதே தெரியாமலிருந்தது. அதற்காக அவர் வருந்தத்தான் செய்தார் என்றாலும், எனக்குள் எழுந்த கோபத்தை என்னால் அடக்க முடியவில்லை. “உங்களது நாட்டில் நடப்பவை குறித்துச் சரியான செய்திகள் எங்களுக்குக் கிடைப்பதில்லை” என்றார் அண்ட்ரியாஸ் ஸ்வாட். மே மாதம் தொடங்கியபோது, வன்னியில் யுத்தம் உச்சமடைந்தது. ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் கொல்லப்படுவதாக அய்க்கிய நாடுகள் சபை ஒருவழியாக ஒப்புக்கொண்டது. அய்ரோப்பிய ஊடகங்களும் போனால் போகிறதென்று, இலங்கைக்காகச் சில விநாடிகளைச் செலவழித்தார்கள். நான் வேலைக்குப் போவதை நிறுத்தியிருந்தேன். இந்த நகரத்தில், ஒவ்வொரு நாட்களும் ஆயிரக்கணக்கில் தமிழ் மக்கள் கூடி ஆர்ப்பாட்டங்களை நடத்தினார்கள். அய்ரோப்பிய யூனியனும், அய்.நா.சபையும் முன்வந்து இலங்கையில் நடக்கும் இனப் படுகொலையைத் தடுத்து நிறுத்த வேண்டும் எனக் கோரிக்கை வைத்துப் பல போராட்டங்கள் நடந்தன. மாயவர் இந்தப் போராட்டங்களை ஒருங்கிணைப்பதில் முக்கியமானவராகயிருந்தார். அவரது குடும்பத்துடன் ஒவ்வொரு நாளும் புறப்பட்டுச் சென்று, நானும் போராட்டங்களில் கலந்துகொள்வேன். நாளுக்கு நாள் போராட்டம் வலுத்துக்கொண்டே வந்தது. ஏழாயிரம், எட்டாயிரம் என்ற எண்ணிக்கையில் தமிழ்ச் சனங்கள் தெருவில் இறங்கிய போது, இந்தச் சிறிய நகரம் சற்றுத் தடுமாறியது. இந்த நாட்டின் பல்வேறு நகரங்களிலும் தமிழர்கள் தெருவில் இறங்கினார்கள். எங்களுடைய குரல் கேட்கப்படும் என்றுதான் நினைத்தேன். ஆனால், எங்களது கோரிக்கையை இந்த நாடோ, இந்த நகரத்தின் முதல்வரோ காது கொடுத்துக் கேட்பதாகயில்லை. மாறாக அவர்கள் போராட்டக்காரர்கள் மீது கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்தார்கள். போராட்டம் நடத்துவதற்கு அனுமதி வழங்க மறுத்தார்கள். வன்னியிலோ சாவு அதிகரித்துக்கொண்டேயிருந்தது. இதற்குள் போராட்டம் செய்தவர்களுக்குள்ளும் சில பிளவுகள் ஏற்பட்டன. போராட்டத்தில் அந்தக் கொடியை ஏற்ற வேண்டும், கூடாது, இந்தத் தலைவரின் படம் வைக்க வேண்டும், வேண்டாம் என்றெல்லாம் பிரச்சினைகள் வலுத்தன. போராட்டத்துக்கு வருபவர்களின் தொகையும் மெல்ல மெல்லக் குறைந்துகொண்டே வந்தது. ஆனால், நானும் மாயவர் குடும்பமும் தொடர்ந்தும் போராட்டத்துக்குப் போய்க்கொண்டிருந்தோம். எங்களுக்குத் தெருக்களிலும் சதுக்கங்களிலும் போராட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்ட போது, நாங்கள் இந்தப் பூங்காவில் கூடி ஆர்ப்பாட்டங்களை நடத்தினோம். பூங்காவில் நாங்கள் கூடுவதை அரசாங்கத்தால் உடனடியாகத் தடுக்க முடியவில்லை. ஆனால், பூங்கா முழுவதும் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். இரண்டு போராட்டக்காரர்களுக்கு நடுவே ஒரு பொலிஸ்காரன் நின்றான். கண்ணீர் புகைக் குண்டுகள், தண்ணீர் பீச்சிக் கூட்டத்தைக் கலைக்கும் வண்டிகள் எல்லாம் பூங்காவுக்குள் கொண்டுவரப்பட்டன. வரும் சனிக்கிழமை தொடக்கம் ஒரு மாதத்திற்கு பூங்கா மூடப்படும் என்று நகரசபை அறிவித்தது. இப்போது நான் செய்யப் போவதைக் குறித்து ஆலோசனை கேட்க அம்மா இல்லை. என் வாழ்க்கையில் நானாகச் சிந்தித்து, சுயமாக முதற்தடவையாக ஒரு முடிவடுத்தேன். அன்று மே மாதம் பதினான்காம் தேதி வியாழக்கிழமை. காலை பத்தரை மணியளவில் பூங்காவில் முப்பது போராட்டக்காரர்கள் கூடியிருந்தோம். மதியத்திற்கு மேல்தான் நிறையப் பேர் வருவார்கள். மாலை வேளையில் எப்படியும் ஆயிரத்துக்கும் குறையாத மக்களிருப்பார்கள். இந்தச் சிலைகளின் கீழே கூடிநின்று இருவர் மூவராகப் பேசிக்கொண்டிருந்தார்கள். மாயவர் குடும்பம், இங்கே…குழந்தை பெறும் பெண்ணின் சிலையருகே நின்றுகொண்டிருந்தது. நான், இதோ நீங்கள் உட்கார்ந்திருக்கும் இடத்தில் அமர்ந்திருந்தேன். ஒவ்வொரு சிலையைச் சுற்றியும் பத்துப் பொலிஸ்காரர்கள் நின்றிருந்தார்கள். சரியாகப் பதினொரு மணிக்கு, நான் அதோ…அந்த மையத்தில் போய் நின்றுகொண்டேன். எனது கையில் கறுப்புநிறத்தில் வெந்நீர் குடுவையிருந்தது. அந்தக் குடுவைக்குள் ஒரு லீட்டர் பெட்ரோலை நான் நிறைத்து வைத்திருந்தேன். கையில் லைட்டரைத் தயாராக மறைத்து வைத்துக்கொண்டே, குடுவையைத் திறந்து எனது தலையிலிருந்து இடுப்புவரை பெட்ரோலை வேகமாக விசிறிவிட்டு, எனது தலையில் தீ வைத்துக்கொண்டேன். அம்மாவை நினைத்துக் கண்களை மூடிக்கொண்டு அசையாமல் நின்றேன். சனங்கள் கூக்குரலிடுவதும், காவல்துறையினர் சத்தமெழுப்புவதும் காதில் கேட்டது. சில விநாடிகளிலேயே அந்தக் குரல்கள் தேய்ந்தன. அப்போது எனது உடல் வேதனைப்பட்டது எனச் சொல்ல முடியாது. உறைபனி நிலைக்குள் நான் போவதாகத்தான் உணர்ந்தேன். ஆனால், என்னையறியாமலேயே எனது கால்கள் ஓடத் தொடங்கின. என்மீது தண்ணீர் பாய்ச்சப்படுவதை என் கால்கள்தான் முதலில் உணர்ந்தன. இரண்டு மாதங்கள் நான் மருத்துவமனையில் இருந்தேன். இந்த நகரத்திலிருக்கும் தமிழ் மக்களில் முக்கால்வாசிப் பேர்களாவது மருத்துவமனைக்கு வந்து என்னைப் பார்த்துச் சென்றார்கள். வெள்ளைக்காரர்கள் கைகளில் பூங்கொத்துகளோடு வந்து என்னைப் பார்த்தார்கள். மருத்துவமனை அறை எப்போதும் பூக்களால் நிரம்பியேயிருந்தது. நான் வேலை செய்த பத்திரிகை நிறுவனத்தின் முதன்மை ஆசிரியர் அண்ட்ரியாஸ் ஸ்வாட் என்னை வந்து பார்த்தார். அந்த வாரம் வெளியான இதழை என்னிடம் காட்டினார். அட்டையில், நான் எரிந்துகொண்டிருக்கும் படம் பிரசுரிக்கப்பட்டிருந்தது. உள்ளே நான்கு பக்கங்களில் ‘இலங்கை எரிகிறது’ என்ற தலைப்பில் விரிவாக எழுதப்பட்டிருந்தது. ஆசிரியர் அந்த இதழை எனது தலைமாட்டில் வைத்துவிட்டு, எனது கண்களையே பார்த்துக்கொண்டு நின்றார். “இப்போதுதான் எங்களுக்குச் சரியான செய்தி கிடைத்திருக்கிறது” என்று அண்ட்ரியாஸ் ஸ்வாட் சொன்னபோது, அவரது சதுர வடிவ முகம் கோணிக்கொண்டு, அவரது கன்ன மடிப்புகளுக்குள் நீர் வழிந்தது. எனது உடம்பில் பெரும்பகுதி தீயால் கருகிவிட்டது. வலது கையில் எலும்பே எரிந்து, இந்தக் கை செயலற்றுப் போய்விட்டது. என்னை முதன் முதலாகக் கண்ணாடியில் பார்த்தபோது, அம்மாவைத்தான் நினைத்துக்கொண்டேன். அம்மாவும் இப்படித்தானே எரிந்திருப்பார். முதலில் சில வாரங்கள் சக்கர நாற்காலியில்தான் நடமாடினேன். ஒருநாள் மாயவர் என்னிடம் தயங்கித் தயங்கிப் பேச்சை ஆரம்பித்தார். சக்கர நாற்காலியோடு நடமாடுவதற்குத் தனது வீடு வசதியாக இருக்காது என்றும், நல்லதொரு இடத்தை எனக்குத் தேடித் தருவதாகவும் சொன்னார். அம்மா, மாயவர் குடும்பத்தை விட்டுப் போகக் கூடாது என எனக்குச் சொல்லியிருந்தார். ஆனால், கரிக்கட்டையாக மாறியிருக்கும் என்னை வைத்திருப்பது அவர்களுக்கும் துன்பம்தானே. மாயவரின் உதவியுடன் ஊனமுற்றவர்களுக்கான அரசாங்க விடுதியில் இடம் பிடித்துக்கொண்டேன். அதுவும் வசதியான இடம்தான். ஊனமுற்றவர்களுக்கான உதவிப் பணமும் மாதாமாதம் எனக்குக் கிடைக்கிறது. சில மாதங்களிலேயே நதிராவுக்குக் கல்யாணம் நடந்ததாகக் கேள்விப்பட்டேன். எனக்கு அழைப்புக் கூட அவர்கள் கொடுக்கவில்லை. மெல்ல மெல்ல எல்லோரும் என்னை மறந்துவிட்டார்கள். சனங்களுக்கு என்மேல் அன்போ, அனுதாபமோ இல்லையென்று சொல்ல மாட்டேன். ஆனால், அவர்கள் எப்போதுமே என்னையே கவனித்துக்கொண்டிருக்க முடியுமா என்ன! மருத்துவமனைக்கு வந்தார்கள், பூக்கள் கொடுத்தார்கள், போய்விட்டார்கள். அதுவே பெரிய விசயமில்லையா. ஆனால், சிலர் வேறுவிதமாகப் பேசிக்கொள்கிறார்கள் எனவும் கேள்விப்பட்டேன். நதிராவை எனக்குக் கட்டித் தரமாட்டேனென்று மாயவர் சொல்லிவிட்டதாலேயே நான் என்னைக் கொளுத்திக்கொண்டேன் எனச் சிலர் பேசினார்கள். கடன் தொல்லை, மனநிலை சரியில்லாதவன் என்றுகூடச் சிலர் பேசிக்கொள்வதாக அறிந்தேன். ஏதோவொரு அமைப்பு எனது மூளையைக் கழுவிக் கொளுத்திக்கொள்ள வைத்தது என்று சில இணையத்தளங்களில் எழுதினார்கள். என்னால் என்ன செய்ய முடியும் சொல்லுங்கள்! உடம்பு வலுவாக இருந்தால் கூட இவர்களோடு சண்டைக்குப் போக முடியும். நானோ கரிக்கட்டை. அம்மா உயிரோடு இருக்கும்போது எனக்குக் கல்யாணம் செய்துவைக்க ஆசைப்பட்டார். எனக்கு இப்போது முப்பத்தாறு வயதாகிறது. அருகிலிருந்து பேசவாவது ஒருவர் வேண்டும்தானே. சிலநேரங்களில் ஊருக்குத் திரும்பிப் போய்விடலாமா என்றும் நினைப்பேன். அங்கே எனக்கென யாராவது இருப்பார்களல்லவா! ஆனால், நான் என்னைக் கொளுத்திக்கொண்ட செய்தி, அப்போது பத்திரிகைகளில் வந்திருந்ததால், இலங்கை அரசாங்கத்திடம் என்னைப் பற்றிய விபரங்கள் இருக்கும் என்கிறார் பஞ்சாட்சரம் மாமா. அதுதான் அச்சமாகயிருக்கிறது. என்னால் பேச முடிகிறதே தவிர, தாடை எலும்புகள் சிதைந்திருப்பதால் ஒரு துண்டு பாணுக்கு அதிகமாக மென்று சாப்பிட என்னால் முடியாது. ஆயிரம் பக்கப் புத்தகத்தை நான் எப்படிச் சாப்பிட முடியும்! என்னுடைய முகத்தைப் பார்த்துப் பேசுவது எவருக்குமே சிரமமானது என்பது எனக்கு நன்றாகவே தெரியும். நீங்கள் கூட எனது முகத்தைப் பார்த்தவுடனேயே உங்களது கண்களை மூடிக்கொண்டீர்களல்லவா! ஒவ்வொரு நாளும் இந்தப் பூங்காவில் வந்து உட்கார்ந்துகொள்கிறேன். உங்களைப் போலவே எவ்வளவோ தூரங்களிலிருந்து, எத்தனையோ நாடுகளிலிருந்து விதவிதமான மக்கள் வந்து இந்தச் சிலைகளைப் பார்த்துச் செல்கிறார்கள். நான் அவர்களைப் பார்த்துக்கொண்டிருப்பேன். அவர்களில் சிலர் என்னுடைய அம்மாவைப் போல இருக்கிறார்கள், சிலர் நதிராவைப் போல இருக்கிறார்கள், சிலர் கபிலனைப் போல இருக்கிறார்கள். என்னுடைய அதிர்ஷ்டம், இன்று பேசுவதற்கு நீங்கள் கிடைத்தீர்கள். 3 தவபாலன் அதிகமாகப் பேசிவிட்டதால், அவருக்கு மூச்சிரைத்தது. அவர் பேசும்போது கீழ் வாயை அசைக்காமலேயே பேச வேண்டுமாம். அதை அசைத்தால் பேச்சுக் குழம்பி ஒலிக்குமாம். தவபாலன் தனது காலடியில் வைத்திருந்த வெந்நீர் குடுவையை எடுத்து, முகத்தை மூடியிருந்த துணிக்குள் நுழைத்து, தலையை மெதுவாகப் பின்னே சாய்த்து நீண்ட நேரமாக மெது மெதுவாக வெந்நீர் குடித்தார். நான் அங்கிருந்த நிர்வாணச் சிலைகளின் மீது பார்வையை அலைய விட்டுக்கொண்டிருந்தேன். இந்த மனிதர், அன்று இங்கேயே எரிந்து சாம்பலாகியிருந்தால், தமிழ் மக்கள் இந்தப் பூங்காவை ‘அம்மணப் பூங்கா’ என அழைக்கும் பழக்கம் அப்போதே ஒழிந்திருக்கும் என்று நினைத்துக்கொண்டேன். காலம் -சனவரி 2021 இதழில் வெளியாகியது. மூமின் இன்று அதிகாலையில், முஹமெட் அஸ்லம் வீட்டிலிருந்து புறப்பட்டபோது, அவனது பெயர் நாகநாதன் முருகவேள் துலீப் என்றுதான் இருந்தது. ஒரு மணிநேரத்துக்கு முன்புதான் அவன் பெயரை மாற்றியிருந்தான். பள்ளிவாசலிலிருந்து அவன் வெளியே வந்தபோது, பள்ளிவாசலுக்கு எதிரே நிரந்தரமாக நிறுத்தப்பட்டிருக்கும் காவல்துறையினரின் இரண்டு வாகனங்களுக்குள்ளும், பொலிஸ்காரர்கள் கைகளில் நவீனரகத் துப்பாக்கிகளுடன் அமர்ந்திருந்தார்கள். அந்த சிறிய பள்ளிவாசல், பாரிஸின் புறநகரான ’லு ரன்ஸி’யில் சற்று ஒதுக்குப்புறமான இடத்தில் அமைந்திருந்தது. பள்ளிவாசலைச் சுற்றி அரைக் கிலோ மீட்டருக்கு வெறும் புற்தரைதான். பள்ளிவாசலை குடியிருப்போடு இணைக்கும் சிறு தெருவில் அஸ்லம் நடந்துகொண்டிருந்தபோது, நீண்ட அங்கிகளும் தலையில் தொழுகைத் தொப்பிகளும் அணிந்து எதிரே வந்த இரண்டு முதியவர்களுக்கு “அஸ்ஸலாமு அலைக்கும்” எனக் கண்கள் பளிச்சிட சலாம் சொன்னான். புற்தரையைக் கடந்ததும் சிறிய கடைத் தொகுதியும், அதற்கப்பால் ‘சித்தே’ எனச் சொல்லப்படும் நெருக்கமான அடுக்குமாடிக் குடியிருப்புகளுமிருந்தன. அங்கேதான் அஸ்லமின் வீடிருந்தது. இப்போது அஸ்லமின் கால்களில் வேகம் அதிகமாயிற்று. இங்கேதான் அஸ்லம் பிறந்து வளர்ந்தான். ஆனால், இன்று எல்லாமே அவனுக்குப் புதிதாகத் தோன்றின. எப்போதும் இல்லாததுபோல இந்த தெருவும் சூழலும் மாலைப் பொழுதால் சிவந்து கிடந்த வானமும், அதன் நடுவே மறைந்தும் ஒளிர்ந்தும் விளையாடிக்கொண்டிருந்த பிறையும் அவனுக்கு மனதில் பெருத்த அமைதியைக் கொடுத்தன. இவ்வளவுக்கும் அந்த கடைத்தெருவும் குடியிருப்பும் எப்போதும் போலவே கீயா மாயாவென்று ஒரே சந்தடிச் சத்தமாகத்தானிருந்தது. இந்த குடியிருப்பிலிருக்கும் பதினாறு அடுக்குமாடிக் கட்டடங்களிலும் முந்நூறு குடும்பங்களுக்குக் குறையாமல் வசித்தார்கள். வெளிநாடுகளிலிருந்து வந்த குடியேற்றத் தொழிலாளர்களின் பரம்பரையும், அகதிகளாகக் குடியேறியவர்களின் குடும்பங்களுமே இங்கே நிறைந்திருந்தன. ஒட்டுமொத்தக் குடியிருப்பிலும் ஒன்றோயிரண்டோ வெள்ளைக் குடும்பங்கள் மட்டுமே எப்போதுமிருந்தன. அந்த வெள்ளையர்களும் கிழக்கு அய்ரோப்பாவிலிருந்து வந்த பஞ்சப்பட்ட குடியேறிகளாகவே இருப்பார்கள். அஸ்லமின் தந்தை முருகவேளும், தாயார் தாட்சாயினியும் இந்தக் குடியிருப்புக்கு அகதிகளாக வந்து சேர்ந்து, இரண்டு வருடங்கள் கழித்துத்தான் அஸ்லம் மூத்த குழந்தையாகப் பிறந்தான். அடுத்தடுத்த வருடங்களில் இரு பெண் குழந்தைகள் பிறந்தார்கள். முருகவேள், பிள்ளைகள் மூவருக்கும் பிரஞ்சு தேசத்தின் புகழ்பெற்ற மலர்களையே பெயர்களாக வைத்திருந்தார். மூத்தவனுக்குப் பெயர் துலீப். பெண் குழந்தைகளுக்கு மிமோஸா, டொறின் எனப் பெயர்கள். முருகவேள் தனது மனைவியை ‘துலிப் மம்மோ’ என்றும், தாட்சாயினி தனது கணவரை ‘துலீப் பப்பா’ என்றும்தான் ஆசையாசையாக அழைத்துக்கொள்வார்கள். துலீப் என்ற அந்தப் பெயரை நிரந்தரமாக மாற்றிவிட்டுத்தான், இப்போது அஸ்லம் வீட்டுக்குப் போய்க்கொண்டிருக்கிறான். அவன் இஸ்லாம் மார்க்கத்தைத் தழுவிக்கொண்ட செய்தியை இன்னும் சற்றுநேரத்தில் வீட்டில் சொல்லத்தான் போகிறான். அஸ்லம் என்ற பெயரும் ஏப்பை சாப்பைப் பெயர் கிடையாது. அந்தப் பெயருக்கு ‘பாதுகாக்கப்படுபவன்’ என்று அர்த்தம். அஸ்லமுக்கு இருபது வயதாகிறது. ஆறடி உயரமும் தொண்ணூறு கிலோ பாரமுமாக அவனது உடல் செழிப்பாக வளர்ந்திருக்கிறது. சில மாதங்களாக வளர்ந்திருக்கும் இளம் தாடி அவனது முகத்திற்கு வயதுக்கு மீறிய முதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறது. தந்தையிடமிருந்து சுருட்டைத் தலைமுடியும், தாயிடமிருந்து வெள்ளை வெளேரென்ற நிறமும் அவனுக்குக் கிடைத்திருக்கின்றன. இந்தக் குரல்தான் யாரிடமிருந்து கிடைத்தது என்று தெரியவில்லை. கரகரவென்று ஒரு கனத்த குரல் அஸ்லமுக்கு வாய்த்திருக்கிறது. அவன் பேசும் தொனியும் முரட்டுத்தனமாகவேயிருக்கும். ‘சாப்பிட்டீர்களா’ என்று துலீப் கேட்கும்போது, கத்தியால் குத்த வருவது போலவே துலீப்பின் உடல் மொழி இருக்குமென அவனது கூட்டாளி மதுசன் சொல்வான். இந்த இரண்டு கூட்டாளிகளும் பதினேழு வயதிலேயே சிறைக்குப் போய் வந்தவர்கள். அந்த குடியிருப்புப் பகுதியில் நான்கைந்து தமிழ்க் குடும்பங்கள் இருந்தன என்றாலும், சந்தையிலோ தெருவிலோ காணும்போது ஆளையாள் மெலிதாகத் தலையசைப்பதோடு அவர்களது உறவு முடிந்துவிடும். ஒருவரின் வீட்டுக்கு அடுத்தவர் போய் வருகிற பழக்கமெல்லாம் கிடையாது. ஆனால், குழந்தைகளால் அப்படியிருக்க முடியாதல்லவா. தங்களையொத்த தோற்றத்துடன், தாங்கள் பேசும் மொழியையும் பேசும் குழந்தைகளுடன் அவர்களுக்கு இயல்பாகவே நட்பு உருவாகிவிடுகிறது. அப்படித்தான் துலீப்புக்கும் மதுசனுக்கும் மழலையர் பள்ளியிலேயே நட்பு உருவாகிவிட்டது. எப்போதும் இருவரும் சேர்ந்துதான் திரிவார்கள். ஆனால், மதுசன் நன்றாகப் படிக்கக்கூடிய மாணவன். துலீப்புக்கோ பாடப் புத்தகத்தைப் பார்த்தாலே தூக்கம் தூக்கமாக வந்தது. படிப்பு அவனது மண்டையில் ஏறாததற்கு அவன் என்ன செய்வான்! மாறாக அவனது இரண்டு தங்கைகளும் படிப்பில் சூரப் புலிகளாக இருந்தார்கள். இதற்கும் ஒரு காரணத்தை துலீப் யோசித்துக் கண்டுபிடித்து வைத்திருக்கிறான். துலீப்பின் பெற்றோருக்கு இன்றுவரை பிரஞ்சு மொழி சரிவரப் பேசத் தெரியாது. வீட்டில் தமிழையே கேட்டும் பேசியும் வளர்ந்ததால், அவனுக்குத் தமிழ் நன்றாகப் பேச வந்தது. ஆனால், அவன் நான்கு வயதில் பாடசாலையில் சேர்க்கப்படும்போது, பிரஞ்சில் ஒரு வார்த்தை கூட அவனுக்குத் தெரிந்திருக்கவில்லை. அவனுடைய சக மாணவர்கள் பிரஞ்சில் சரளமாகப் பேசிக்கொண்டிருந்தபோது, இவன் எதுவும் புரியாமல் பயந்துபோயிருந்தான். மதுசனோடுதான் அவன் பேசத் தொடங்கினான். பாடசாலை முடிந்து வீட்டுக்கு வந்தால் துலீப்புக்கு பிரஞ்சு பேச ஆளில்லை. அவனது சகோதரிகள் பாடசாலைக்குப் போகத் தொடங்கியபோது, அவர்களோடு பிரஞ்சு மொழி பேச துலீப் தயாராக இருந்தான். ஆனால், அவனின் சகோதரிகளுக்குத் தமிழ் சரியாகப் பேச வராது. இரவை ‘இருட்டு’ என்பார்கள். நேற்று என்பதை ‘அன்னிக்கு’ என்பார்கள். பன்னிரண்டு வருடங்கள் பாடசாலையில் படித்ததைவிட, சிறுவர்களுக்கான சிறையில் மூன்று மாதங்கள் இருந்தபோது துலீப் கற்றுக்கொண்டவை அதிகம் என்றே சொல்லலாம். அவன் சிறையிலிருந்து வீட்டுக்குத் திரும்பியபோது கூட முருகவேள் எதுவும் கடிந்து பேசவில்லை. “ஏன் மகன் இப்பிடிச் செய்தாய்?” என்று கேட்டு அவர் கண் கலங்க மட்டுமே செய்தார். துலீப்பும் மதுசனும் பாரிஸ் நகரத்துக்கு தமிழ் சினிமா பார்க்கச் சென்றுவிட்டு, இரவு இரயிலில் திரும்பிவரும்போது, ஒரு பிரஞ்சுக்காரனோடு ஏற்பட்ட தகராறால் அவனைக் கடுமையாகத் தாக்கி விட்டார்கள். இவர்கள் இருவரது கைகளிலும் ஆளுக்கொரு பியர் போத்தலிருந்தது. மதுசன் பியர் போத்தலாலேயே பிரஞ்சுக்காரனின் தலையில் அடித்து இரத்தக் காயம் உண்டாக்கிவிட்டான். இரயிலில் இருந்த பயணிகள் சங்கிலியைப் பிடித்து இழுத்து இரயிலை நிறுத்திவிட்டார்கள். இருவரையும் காவற்துறையினர் கைது செய்ய வந்தபோது, காவற்துறையினரோடும் இவர்கள் சண்டை போட்டார்கள். இவர்கள் பார்த்துவிட்டு வந்த திரைப்படத்திலும் அப்படி நாலைந்து காட்சிகளிருந்தன. பையன்கள் சிறையிலிருந்து திரும்பிய பின்பு, மதுசனின் குடும்பம் அந்த குடியிருப்பிலிருந்தே வெளியேறிவிட்டது. துலீப், கல்லூரிக்குத் திரும்பவும் போகவேயில்லை. ஒவ்வொரு நாளும் பிற்பகல் இரண்டு மணிவரை அவன் மாடு போலத் தூங்கினான். எழுந்து சாப்பிட்டுவிட்டு வெளியே புறப்படுவான். சாப்பாட்டு மேசையில் அவனுக்காக ஒவ்வொரு நாளும் பத்து ஈரோக்களை வைத்துவிட்டு முருகவேள் போயிருப்பார். அந்தப் பணத்தை எடுத்துக்கொண்டு வெளியே போனால், அதிகாலையில்தான் துலீப் வீட்டுக்குத் திரும்பிவருவான். முருகவேளும் தாட்சாயினியும் முடிந்தவரை அவனுக்குப் பொறுமையாகப் புத்திமதி சொல்லிப் பார்த்தார்கள். “உங்களுக்கு ஒன்றுமே தெரியாது” என்பதுதான் எப்போதுமே துலீப்பின் பதிலாகயிருக்கும். அதையும் பிரஞ்சு மொழியில்தான் சொல்வான். தந்தையோ தாயோ தப்பித் தவறி அவனை ‘மூட் அவுட்’ ஆக்கிவிட்டால், தனது தங்கைகளைப் பிடித்துவைத்து அடித்தான். மூத்த தங்கை, காவற்துறையை அழைக்கப் போவதாக ஒருமுறை மிரட்டினாள். இரண்டு அடிகள் சேர்த்துக்கொடுத்தான். இந்தத் தலைப்பிள்ளை என்னவாகும் என்பதுவே முருகவேளினதும் தாட்சாயினியினதும் நித்திய கவலையாகப் போய்விட்டது. அவனுக்கு ஒரு வழிகாட்டவும் அவர்களுக்குத் தெரியவில்லை. இந்த அந்நிய நாட்டில் யாரிடம் போய்த்தான் உதவி கேட்பது. சொந்த பந்தமென்று அவர்களுக்கு இந்த நாட்டில் யாருமே கிடையாது. பல வருடங்களாக முருகவேள், ஒரு காய்கறிக் கிட்டங்கியில் வாகனச் சாரதியாக வேலை செய்கிறார். அவரே பெட்டிகளையும் மூடைகளையும் ஏற்றியும் இறக்கியும் அடுக்கியும் வைக்கும் கடுமையான வேலை. அதிகாலையில் வேலைக்குக் கிளம்பிப் போனால், மாலை நான்கு மணிக்குத்தான் வீடு திரும்புவார். சில நாட்களில் இரவு பத்துமணி கூட ஆகும். அவர் திரும்பிவரும்போது, தெருவிலோ அல்லது அடுக்குமாடிக் குடியிருப்பின் கீழுள்ள பொது முற்றத்திலோ துலீப்பைக் காண்பார். தோழர்கள் புடைசூழ அவன் நின்றிருப்பான். அரபுக்கள், ஆபிரிக்கர், சீனர் என எல்லா இனத்திலும் துலீப்புக்குக் கூட்டாளிகள் இருந்தார்கள். அஸ்லம், தனது தலையிலிருந்த தொழுகைத் தொப்பியைக் கழற்றி மேலங்கியின் பைக்குள் வைத்துக்கொண்டான். அவன் குடியிருப்பு முற்றத்துக்குள் நுழைந்தபோது, அங்கே அவனது கூட்டாளிகள் ரம்ஸியும் ஜாபரும் பாம்போவும் நின்றிருந்தார்கள். அவர்கள் அவனைப் பேச அழைத்தார்கள். வீட்டுக்குப் போய்விட்டு வருவதாக அவர்களிடம் சொல்லிவிட்டு, குடியிருப்பின் கதவைத் திறந்துகொண்டு உள்ளே நுழைந்தான். லிஃப்டுக்கு அருகே பெரிய கூட்டமே நின்றிருந்தது. அங்கிருந்து விலகி மாடிப் படிகளில் விரைவாக ஏறிச் சென்றான். பன்னிரண்டாவது மாடியில் அவனது வீடிருந்தது. 2 வீட்டுக்குள் நுழைந்து மேலங்கியைக் கழற்ற முன்பே, அவனைச் சாப்பிட வருமாறு தாட்சாயினி அழைத்தார். அவன் இந்த நேரத்தில் வீடு திரும்பியிருந்தது அவருக்கு ஆச்சரியமாகயிருந்தது. முருகவேள் சமையலறையில் பாத்திரங்களைக் கழுவிக்கொண்டிருந்தார். தங்கைகள் அவர்களது அறையிலிருந்தார்கள். அஸ்லம் தங்கைகளது அறைக் கதவைத் தட்டிவிட்டு நின்றான். மூத்தவள் கதவைத் திறந்து, தமையனைக் கொஞ்சம் பயத்துடனேயே பார்த்தாள். “டொறினையும் அழைத்துக்கொண்டு வா..கொஞ்சம் பேச வேண்டும்” என்று பிரஞ்சு மொழியில் சொல்லிவிட்டு, அஸ்லம் சமையலறை வாசலில் போய் நின்றுகொண்டான். முருகவேள் அவனைப் பார்த்து “என்ன மகன் சாப்பிடல்லையா?” என்றார். “கொஞ்சம் கதைக்க வேணும் பப்பா” என்றான் அஸ்லம். இவன் சாதாரணமாக இப்படியெல்லாம் பேசக் கூப்பிட மாட்டான். இவன் முருகவேளோடு பேசியே பல மாதங்களிருக்கும். பாதி மகிழ்ச்சியும் பாதி குழப்பமுமாகக் கைகளைக் கழுவித் துடைத்துக்கொண்டே முருகவேள், மகன் பேசுவதைக் கேட்கத் தயாரானார். தாட்சாயினி கண்களை விரித்துக்கொண்டு நின்றார். இரண்டு பெண் பிள்ளைகளும் அஸ்லமுக்குப் பின்னால் வந்து நின்றுகொண்டார்கள். எல்லோரையும் ஒருமுறை பார்த்துவிட்டு, அஸ்லம் நிதானமாகச் சொன்னான்: “இப்ப என்ர பெயர் முஹமெட் அஸ்லம். நான் முஸ்லிமா மாறிட்டன்”. அஸ்லமுக்குப் பின்னால் நின்ற இளைய தங்கை பாய்ந்து அவனுக்கு முன்னால் வந்தாள். அவளுக்குத் தமிழ் அவ்வளவாகப் புரியாது. எனவே அவளுக்காக மறுபடியும் ஒருமுறை பிரஞ்சு மொழியிலும் அஸ்லம் சொன்னான். “நான் முஸுல்மோன் ஆகிவிட்டேன்” முருகவேள் தலையை மேலும் கீழும் ஆட்டிக்கொண்டார். அவரது பற்கள் அவரது கீழுதட்டைக் கவ்விக்கொண்டன. சமையலறை வாசலை நோக்கி அவர் மெதுவாக வந்தார். வாசலை அடைத்துக்கொண்டு நின்ற அஸ்லம் மெல்ல விலகி வழிவிட்டான். அவனைக் கடந்து போன முருகவேள் சாப்பாட்டு மேசையைச் சுற்றியிருந்த நாற்காலிகளில் ஒன்றில் அமர்ந்துகொண்டார். மற்றவர்களையும் உட்காரச் சொன்னார். எல்லோரும் அவரவர் இடங்களில் உட்கார்ந்துகொண்டார்கள். “என்ன மகன் இது? இது வேணாம்” என்று சொன்னபோது முருகவேளின் கண்கள் மேசையை நோக்கித் தாழ்ந்திருந்தன. தாட்சாயினி நாற்காலியில் சிலை போல அமர்ந்திருந்தார். அவர் உயிரோடு இருக்கிறார் என்பதே அவரது கண்ணிமைகள் அடித்துக்கொள்வதால் தான் தெரிகிறது. சகோதரிகள் இருவருக்கும் உண்மையில் உதடுகளில் வேடிக்கையான புன்னகை அரும்பி எந்த நேரத்திலும் நழுவி மேசையில் விழத் தயாராகயிருந்தன. அஸ்லம் அமர்ந்திருந்தவாறே ஒவ்வொருவராகப் பார்த்தான். சகோதரிகளின் கண்களைப் பார்த்தபோது, அவனது உதடுகளிலும் புன்னகை துளிர்த்தது. முருகவேளின் கண்கள் கலங்கிவிட்டன. அதைப் பார்த்துத் தாட்சாயினியும் மூக்கை உறிஞ்சிக்கொண்டார். முருகவேள் இப்போது அஸ்லமைப் பார்த்துக்கொண்டே மெதுவாக ஆரம்பித்தார்: “மகன்…உனக்கு நாங்க என்ன குறை வைச்சிருக்கிறம் சொல்லு…நீ ஒரு வேலைக்கு கீலைக்குப் போய் நல்லா வரவேணும், அதவிட வேறொண்டும் நாங்கள் கேக்கல…” “ஜாபர் வேலை செய்யிற மரக் கடையில வேலை இருக்கு. திங்கக்கிழமை என்னை கூட்டிக்கொண்டு போவான்…” இதைச் சொன்னபோது அஸ்லமின் கண்கள் ஒருமுறை மூடித் திறந்தன. “ஜாபர் ஆரு?” “என்ர ஃபிரண்ட், அல்ஜீரியன் பொடியன்” “அவனா உன்னை முஸ்லீமா மாறச் சொன்னது?” “ஏன் எனக்குப் புத்தியில்லையா? இது கடவுளின்ர அழைப்பு!” இப்போது முருகவேள் எழுந்து நின்றார். அவரது உடல் நடுங்கிக்கொண்டிருந்தது. “மகன் நீ எங்கிட குடும்பத்தப் பற்றி யோசிக்க வேணாமா? உனக்கு தங்கச்சிமாரும் இருக்கெல்லா..” தான் முஸ்லீமாகியதற்கும் தங்கச்சிமாருக்கும் என்ன தொடர்பு என்று அஸ்லமுக்கு விளங்கவேயில்லை. இப்போது தந்தையோடு வாதம் செய்து பிரச்சினையைப் பெரிதாக்கவும் அவன் விரும்பவில்லை. தனது குடும்பத்தையும் இஸ்லாத்துக்கு அழைத்துச் செல்வதும் அவனது நோக்கமில்லை. அது சாத்தியம் என்று அவனுக்குத் தோன்றவும் தோன்றாது. அப்பாவுக்கும் அம்மாவுக்கும் எந்தக் கடவுள் நம்பிக்கையும் இருந்ததை அவன் பார்த்ததில்லை. வீட்டில் சமயச் சடங்குகள் எதுவுமே நடந்ததில்லை. ஒரு சாமி படம்கூட வீட்டில் கிடையாது. முருகவேள் இப்போது நடந்துவந்து மகனுக்குப் பின்னால் நின்று கொண்டார். “மகன் இந்த நாட்டில முஸ்லீமா நீ எப்பிடி இருப்பாய்? பொலிஸ் உனக்கு முன்னுக்கும் பின்னுக்கும் திரியும்… நாளைக்குப் பின்ன அரசாங்கத்தில ஒரு வேலை எடுக்க ஏலுமோ? முகமது, பாத்திமா எண்டெல்லாம் பேர் இருந்தாலே சிம்பிள் வேலைகூடக் கிடைக்காது… நீ ஒரு வீடு வாடகைக்கு எடுக்கிறது எண்டால் கூட பிரச்சினைதானே…” ‘அரசாங்கத்தையும் பொலிஸையும் விட, இறைவனே கோடி மடங்கு பெரியவனும் அதிகாரமுள்ளவனும்’ என்று சொல்லத்தான் அஸ்லம் யோசித்தான். ஆனால், இப்போது எது பேசினாலும் இவர்களுக்குப் புரியாது என நினைத்துக்கொண்டே அமைதியாக இருந்துவிட்டான். இப்போது தாட்சாயினி வாயைத் திறந்தார். “பப்பா சொல்லுறத கேளுங்கவன் மகன்.. உங்கிட நல்லதுக்குத்தானே சொல்லுறார்.” அஸ்லம் சடாரென எழுந்துகொண்டே சொன்னான்: “என்ன பிரச்சினை வந்தாலும் அல்லாஹ் பாதுகாப்பாயிருப்பான்” சொல்லி முடித்ததும், மேலங்கியை எடுத்துக் கொழுவிக்கொண்டே, கதவைத் திறந்து வெளியே போய்விட்டான். அவன் மாடிப் படிகளில் குட்டி யானைபோலத் துள்ளி இறங்கும் சத்தம் வீட்டுக்குள் கேட்டது. முருகவேளும் தாட்சாயினியும் ஆளையாள் பார்த்துக்கொண்டு என்ன பேசுவதெனத் தெரியாமல் நின்றிருந்தார்கள். முருகவேள் ஏதோ யோசனை வந்தவராக விறுவிறுவென்று நடந்துபோய், வீட்டுக்குள் நுழையும் கதவை உட்புறமாகத் தாழிட்டார். பின்பு, மெதுவாக மகனின் அறைக்குள் நுழைந்தார். சில வருடங்களாகவே அவர் இந்த அறைக்குள் வந்ததில்லை. அவர் எதிர்பார்த்தது போல அந்த அறை ஒழுங்கற்று இருக்கவில்லை. படுக்கை விரிப்புகள் அழகாக மடித்து வைக்கப்பட்டிருந்தன. அறைப் பொருட்கள் அவற்றுக்குரிய இடங்களில் ஒழுங்காகயிருந்தன. மேசையில் ஒன்றிரண்டு பிரஞ்சு மொழிப் புத்தகங்கள் கிடந்தன. அலுமாரியைத் திறந்து பார்த்தார். உடைகள் ஒழுங்காக மடிக்கப்பட்டு அடுக்கப்பட்டிருந்தன. இவற்றையெல்லாம் சிறையில் கற்றுக்கொண்டதாக மகன் ஒருமுறை தாட்சாயினியிடம் சொல்லிக்கொண்டிருந்தது முருகவேளின் ஞாபகத்திற்கு வந்தது. அவர் தேடி வந்தது மகனின் பாஸ்போர்டை. அவர் எத்தனையோ சம்பவங்களைக் கேள்விப்பட்டிருக்கிறார். முஸ்லிமாக மாறிய பிரஞ்சு இளைஞர்கள், லிபியாவுக்கோ சிரியாவுக்கோ போய் சண்டையில் ஈடுபடுவதாகப் பேசிக்கொள்கிறார்கள். பகல் இரண்டு மணிவரை தூங்கும் தன்னுடைய மகன் அப்படியெல்லாம் போகக் கூடியவன் என்று அவர் நம்பவில்லை. ஆனாலும், அவரது மனது அதைப் பற்றியும் யோசிக்கத்தான் செய்தது. மேசையின் வலது பக்க இழுப்பறையைத் திறந்து பார்த்தார். உள்ளே பிரஞ்சு மொழியில் ‘திருக்குர் ஆன்’ நூல் இருந்தது. அதற்குக் கீழே, அழகிய பூ வேலைப்பாடுகளைக் கொண்ட மூன்று தொழுகைத் தொப்பிகள் இருந்தன. உள்ளங்கை அளவேயிருந்த புத்தகத்தை எடுத்து விரித்துப் பார்த்தார். அந்தப் புத்தகம் அரபு மொழியில் எழுதப்பட்டிருந்தது. புத்தகத்தின் பக்கங்களில் மஞ்சள் நிறத்தால் கோடுகள் போடப்பட்டிருந்தன. நண்பர்களின் சேர்க்கையால், மகன் ஏதோ விளையாட்டுத்தனமாக இஸ்லாத்தில் சேர்ந்துவிட்டான் என்றுதான் முருகவேள் இப்போதுவரை நினைத்துக்கொண்டிருந்தார். ஆனால், அவன் முன்கூட்டியே திட்டமிட்டு நிதானமாகத்தான் செயற்படுகிறான் என இப்போது ஊகித்தார். அவரது கைகள் நடுங்கத் தொடங்கின. அந்த இழுப்பறையில் மகனின் பாஸ்போர்ட் இருக்கவில்லை. கடந்த சில மாதங்களாக மகனின் முகத்தில் தாடி வளர்வதற்கான காரணமும் இப்போதுதான் அவருக்கு உறைத்தது. மேசையின் இடதுபக்க இழுப்பறையைத் திறந்து பார்த்தார். அங்கே சில ஆவணங்களோடு, மகனின் பாஸ்போர்டும் இருந்தது. பாஸ்போர்டை மெதுவாக எடுத்து ஒவ்வொரு பக்கமாகப் புரட்டிப் பார்த்தார். பாஸ்போர்டை எரித்துவிடலாமா என்ற யோசனை கூட மனதில் வந்தது. எதற்கும் சற்றுப் பொறுத்துப் பார்க்கலாம் என முடிவெடுத்தார். பாஸ்போர்டை எடுத்த இடத்திலேயே வைத்துவிட்டு இழுப்பறையை மெதுவாக மூடினார். அவர்கள் எல்லோரும் தூங்கும்வரை, அஸ்லம் வீடு திரும்பவில்லை. 3 அதிகாலையில் எழுந்து, முருகவேள் குளியலறைக்குச் சென்றபோது, வழமைக்கு மாறாகக் குளியலறைக்குள் விளக்கு எரிந்துகொண்டிருந்தது. ‘உள்ளே யார்?’ எனக் கேட்கலாம் என அவர் வாயைத் திறந்தபோது, குளியலறைக் கதவைத் திறந்துகொண்டு அஸ்லம் வெளியே வந்தான். எங்கேயோ கிளம்புவதற்குத் தயாராக, திருத்தமாக ஆடைகள் அணிந்திருந்தான். முருகவேளுக்கு மனதில் பாஸ்போர்ட் ஞாபகம்தான் வந்தது. “எங்க மகன் வெள்ளணக் காலையிலேயே?” “பள்ளிவாசலுக்கு” என ஒற்றைச் சொல்லில் பதிலளித்துவிட்டு அஸ்லம் வெளியே சென்றான். முருகவேளுக்கு மறுபடியும் கைகள் நடுங்கத் தொடங்கிவிட்டன. சமையலறைக்குள் சென்றவர், தண்ணீர் குழாயைத் திறந்து மடமடவென நீரை விழுங்கினார். நிமிர்ந்து ஜன்னல் வழியாக வெளியே பார்த்தார். இன்னும் இருள் பிரியவில்லை. சாலை விளக்குகளுக்குக் கீழே தன்னுடைய மகன் நடந்துபோவதை அவர் பார்த்தார். மகன் பள்ளிவாசல் இருக்கும் திசையில்தான் நடந்துகொண்டிருந்தான். இங்கிருந்து பார்த்தால் தூரத்தே புற்தரையின் நடுவில் பள்ளிவாசலின் விளக்குகள் தெரியும். முருகவேள் அந்த விளக்குகளையே பார்த்துக்கொண்டு நெடுநேரம் நின்றார். தாட்சாயினி வந்து அவரைத் தொடும் வரை, அவர் மனது அவர் வசத்திலில்லை. 4 முருகவேள், மாலையில் வேலை முடிந்து வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்தபோது, இன்றைக்கு எப்படியாவது மகனிடம் பேசி, அவனது மனதை மாற்றிவிட வேண்டும் என்ற தீர்மானகரமான எண்ணம் அவருக்கிருந்தது. மகன் செல்லும் பள்ளிவாசலில் எப்போதுமே பிரச்சினைகள் நடந்துகொண்டிருக்கும். ஒருமுறை பள்ளிவாசலுக்குள் பொலிஸார் கண்ணீர்ப் புகைக்குண்டுகளைக் கூட வீசினார்கள். சென்ற மாதம் பள்ளிவாசலுக்குள் நுழைந்த ஆயுதப்படையினர், சிலரைக் கைது செய்துகொண்டு போனார்கள் என்றும் கேள்விப்பட்டிருந்தார். அந்தப் பள்ளிவாசலை நிரந்தரமாகவே மூடிவிட நகரசபை கடுமையாக முயன்றுகொண்டிருந்தது. இப்படியான நாட்களில் அந்தக் குடியிருப்பே அமளிதுமளிப்படும். சந்தையில் வியாபாரிகள் ஆர்ப்பாட்டம் செய்து அரபு மொழியில் முழங்குவார்கள். இரவில் திடீர் திடீரென வெடிச் சத்தங்கள் கேட்கும். தெருவில் நிற்கும் வண்டிகளும் குப்பைத் தொட்டிகளும் தீ வைத்துக் கொளுத்தப்படும். சில வருடங்களுக்கு முன்பு இந்தப் பகுதியில், அரசாங்கம் நான்கு நாட்களுக்கு ஊரடங்குச் சட்டம் கூடப் போட்டது. இரண்டாவது உலகப் போருக்குப் பின்னால் இந்த ஊரில் அப்போதுதான் மறுபடியும் ஊரடங்குச் சட்டம் போடப்பட்டிருக்கிறது என மூத்த மகள் முருகவேளிடம் சொன்னாள். முருகவேள் வீட்டுக்குள் நுழையும்போது, வீடு மரண அமைதியாகயிருந்தது. பெண் பிள்ளைகள் இருவரும் இன்னும் பாடசாலையிலிருந்து திரும்பவில்லை. தாட்சாயினி உணவு மேசைக்கு முன்னால் அமர்ந்திருந்தார். அவரருகே இருந்த நாற்காலியில் மகனின் மேலங்கி கொழுவப்பட்டிருந்தது. ‘மகன் இருக்கிறானா?’ என்று மனைவியிடம் முருகவேள் சைகையிலேயே கேட்டார். தாட்சாயினி மகனின் அறையை நோக்கி முகத்தை அசைத்தார். முருகவேள் கைகால் கழுவி, உடை மாற்றிக்கொண்டு வந்து உணவு மேசையில் அமர்ந்தார். அவர் காலையில் வேலைக்குச் செல்லும்போது, உணவு மேசையில் வைத்துவிட்டுச் சென்ற பத்து ஈரோ பணம் அப்படியே இருந்தது. தாட்சாயினி தேநீர்க் குவளையையும் மூன்று கோப்பைகளையும் எடுத்துவந்து மேசையில் வைத்துவிட்டு, கணவனின் எதிரே அமர்ந்தார். முருகவேள் மூன்று கோப்பைகளிலும் தேநீர் நிறைத்து முடித்ததும், தாட்சாயினி " மகன் தேத்தண்ணி குடிக்க வாங்க" என்று குரல் கொடுத்தார். அஸ்லமின் கையில் அந்தச் சிறிய அரபுப் புத்தகமிருந்தது. அவன் தந்தைக்கு அருகே அமர்ந்துகொண்டு, தேநீர் கோப்பையை எடுத்து உறிஞ்சத் தொடங்கினான். அவனது மற்றைய கை புத்தகத்தை விரித்து வைத்திருந்தது. படித்துக்கொண்டே தேநீரை வேகவேகமாகக் குடித்தான். அவன் குடித்து முடிக்கும் வரை அமைதியாகயிருந்த முருகவேள், மகனின் முகத்தைப் பார்த்துக்கொண்டே கேட்டார்: "மகனுக்கு ஏன் இந்த எண்ணம் வந்தது…ஏன் இந்த புதுக் கோலம்? அஸ்லம் கையிலிருந்த புத்தகத்தை மேசையில் வைத்துவிட்டு, தந்தையையும் தாயையும் கனிவாகப் பார்த்தான். “இது திடீரெண்டு எடுத்த முடிவில்ல..ஆறு மாசமாய் நான் இஸ்லாத்தைப் படிச்சுக்கொண்டிருக்கிறன்.” “மகன் எங்க போயாம் படிச்சது?” தாட்சாயினி கேட்டாள். “எல்லா இடத்துக்கும் போனன். முதலில ரம்ஸியோட சேர்ந்து சும்மாதான் பள்ளிவாசலுக்குப் போனன். அந்த இடமும் ஆட்களும் அவையள் சொல்லுற விசயங்களும் எனக்குப் பிடிச்சிருக்கு…” முருகவேள் சற்று நேரம் தலையைக் குனிந்துகொண்டிருந்தார். பின்பு, தேநீரின் கடைசி மிடறை உறிஞ்சிவிட்டுச் சொன்னார்: “மகன் அப்பிடி உன்ர எண்ணத்துக்கு நீ நடக்க ஏலாது. உன்னைப் பெத்து வளர்த்தவயள் சொல்லுறதயும் நீ கேக்கத்தான் வேணும். இந்த குடும்பத்துக்கு சமயமில்ல, கடவுளில்ல.” அஸ்லம் எழுந்துநின்று கையில் புத்தகத்தை எடுத்துக்கொண்டான். அவனுக்கு எப்போதும் வரும் சுள்ளென்ற கோபம், அவனின் வாய்க்குள் வந்து முட்டிக்கொண்டு நின்றது. அவன் வாய் தானாகவே திறந்தது. “நீங்கள் காஃபிர்களா இருக்கிறீங்க எண்டதால, என்னாலேயும் அப்பிடி இருக்க ஏலாது.” முருகவேளின் இடது கை மேசையைச் சடுதியில் முன்னே தள்ள, அவர் எழுந்த வேகத்திலேயே வலது கையால் மகனின் கன்னத்தில் ஓங்கி ஓர் அறைவிட்டார். பல வருடங்களாகப் பாரம் ஏற்றியும் இறக்கியும் உரமேறிய அந்தக் கை முகத்தில் பட்டபோது, அஸ்லம் பொறி கலங்கிப்போனான். அவனது கையிலிருந்து புத்தகம் தானாகவே கீழே நழுவியது. அஸ்லம் தனது தாயாரைப் பார்த்தபோது, தாட்சாயினி நாற்காலியில் அசையாமல் உட்கார்ந்திருந்தார். முருகவேள் யாரையும் ஏறெடுத்தும் பார்க்காமல், படுக்கை அறைக்குள் போய்க் கட்டிலில் சாய்ந்துகொண்டார். வீட்டிலிருந்து வெளியே போகும் கதவு திறக்கப்பட்ட சத்தமும், அது அறைந்து மூடப்படும் சத்தமும் கேட்டன. தாட்சாயினி படுக்கை அறைக்குள் நுழைந்தபோது, வெள்ளை வெளேரென்ற அவரது முகம் சிவந்திருந்தது. கண்கள் துடித்துக்கொண்டிருந்தன. தாட்சாயினி அச்சப்படும்போது அவரது கண்ணிமைகள் சம்பந்தா சம்பந்தமில்லாமல் கோணால் மாணாலாக வெட்டித் திறக்கும். தாட்சாயினி மெல்ல வந்து முருகவேளின் அருகில் அமர்ந்துகொண்டு, முருகவேளின் கண்களைப் பார்த்துச் சொன்னார்: “நீங்க ஒண்டும் பேச வேணாம் துலீப் பப்பா.. நம்மிட மகனிட நசீபு இதுதான் எண்டா அப்புடியே நடக்கட்டும். ஆகாசத்தையும் பூமியையும் உண்டாக்கிறதுக்கு மொதலே எல்லாத்தையும் அல்லாஹ் முடிவு செஞ்சிட்டானுன்டு நீங்கானே சொல்வீங்க.” 5 “வானங்களையும் பூமிகளையும் படைப்பதற்கு ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எல்லா விதிகளையும் அல்லாஹ் தீர்மானித்து விட்டான்” என்று இக்பாலின் வாப்பா மீரான் சொல்வார். இதை மீரான் இவ்வாறு தொடர்ச்சியாகச் சொல்லமாட்டார். நிரம்பிய குடிபோதையில் இருக்கும் போது மட்டுமே, அவர் இக்பாலை தூக்கி மடியில் வைத்துக்கொண்டு, இதைத் துண்டு துண்டாகக் கோர்வையில்லாமல் சொல்வார். திரும்பத் திரும்பச் சொல்வார். அப்போது இக்பாலின் குடும்பம் வவுனியாவில் குடியிருந்தது. இக்பாலின் தந்தை லொறிச் சாரதியாக இருந்தார். அவர் லொறி ஓட்டச் சென்றால், நான்கு நாட்களுக்கு வீட்டுக்குத் திரும்ப மாட்டார். திரும்பி வரும்போது, கொழும்பில் வாங்கிய பழக் கூடைகளுடனும் நிரம்பிய போதையிலும்தான் வருவார். மீரான், தான் ஓட்டும் லொறியை அவ்வப்போது வீட்டுக்கும் கொண்டுவருவார். அந்த லொறியில்தான் இக்பால் வண்டி ஓட்டிப் பழகிக்கொண்டான். பதினைந்து வயதிலேயே அவனுக்கு வண்டி ஓட்டத் தெரிந்திருந்தது. அந்த வயதில்தான் மீரானையும் அவன் நிரந்தரமாகப் புதைத்தான். இருபத்து மூன்று வயதிலே, தாயையும் தனக்கு இளைய சகோதரர்களையும் விட்டுவிட்டு, சாரதி வேலை செய்ய இக்பால் குவைத்துக்குப் புறப்பட்டுச் சென்றான். குவைத்தில் பெரும் செல்வந்த வீட்டில்தான் சாரதி உத்தியோகம். ஆனால், வண்டி ஓட்டுவது மட்டுமே வேலையல்ல. வீட்டைச் சுத்தம் செய்வது, முதலாளியின் அலுவலகத்தைச் சுத்தம் செய்வது, கடை கண்ணிக்குப் போய் வருவது என நாள் முழுவதும் அவனுக்கு வேலை ஏவப்பட்டது. முதலாளி அதிகம் பேசும் பழக்கமில்லாதவன். பேசினால் இக்பாலின் முதுகில் சற்றே ஓங்கி அறைந்து பேசும் பழக்கமுள்ளவன். அந்த வீட்டில் முதலாளியின் மனைவியும் வயதுக்கு வந்த இரண்டு பெண் பிள்ளைகளுமிருந்தார்கள். அவர்கள் யாருக்குமே மரியாதையாக ஒரு வார்த்தை பேசத் தெரியாமலிருந்தது. வேலைக்குப் போன புதிதில் இக்பாலுக்கு அரபு மொழி புரியாது என்பதால் பிரச்சினை இருக்கவில்லை. இக்பாலுக்கு அரபு மொழி மெதுவாகப் பிடிபட்டபோது, அவனால் அங்கே இருக்க முடியவில்லை. ஆனால், இக்பாலின் பாஸ்போர்ட் முதலாளியின் கையிலிருந்தது. ஊருக்குத் திரும்பிப் போகும் போதுதான், முதலாளி அதைக் கொடுப்பானாம். இரண்டு வருடங்கள் கழித்துத்தான் விடுமுறை கொடுப்பதைப் பற்றி யோசிக்கவே முடியும் என்று முதலாளி சொல்லிவிட்டான். ஏஜெண்ட் சொல்லி அனுப்பிய சம்பளத்தில் பாதிக்கும் குறைவாகத்தான் முதலாளி கொடுத்தான். கொஞ்சம் பிரயாசைப்பட்டால் இலங்கையிலேயே இந்தப் பணத்தைச் சம்பாதித்துவிடலாம் என்று இக்பாலுக்குத் தோன்றியது. இங்கிருந்து எப்படிக் கிளம்புவது என்பதுவே அவனது முழு நேரச் சிந்தனையாகயிருந்தது. அந்த வீட்டில் கத்தாமாவாக இருந்தவளும் இலங்கையைச் சேர்ந்தவள்தான். மூதூர் பக்கத்தில் ஏதோவொரு சிறிய கிராமத்தைச் சேர்ந்தவள். பெயர் சுமைரா. அவளோடு ஓரிரு வார்த்தைகள் பேசுவதற்கு எப்போதாவது இக்பாலுக்கு வாய்ப்புக் கிடைக்கும். சுமைராவோடு பேசிய போதுதான், இந்த முதலாளி இரண்டு வருடங்களல்ல, மூன்று வருடங்களானாலும் ஊருக்குத் திருப்பி அனுப்பமாட்டான் என்பது இக்பாலுக்குத் தெரிய வந்தது. சுமைரா தன்னுடைய இருபத்தோராவது வயதில், ஒரு வயதுக் குழந்தையைக் கணவனுடன் விட்டுவிட்டு, இங்கே பணிப்பெண் வேலைக்காக வந்திருக்கிறாள். சம்பளத்தை மூன்று மாதங்களுக்கு ஒரு தடவை கணவனின் வங்கிக் கணக்குக்கு முதலாளி அனுப்பிவிடுகிறான். மூன்று வருடங்களாகியும் சுமைராவைத் திருப்பி அனுப்பமாட்டேன் என்கிறானாம். அந்த வீட்டில் சுமைராவுக்குத் தூங்குவதற்கு நான்கு மணிநேரங்கள் கூடக் கிடைப்பதில்லை. இடையிடையே முதலாளியம்மா அவளை அடிப்பதும் உண்டு என்று சொன்னாள் சுமைரா. ஒருநாள் சுமைராவுடன் இக்பால் பேசிக்கொண்டிருப்பதை முதலாளி கண்டுவிட்டான். இம்முறை உண்மையாகவே இக்பாலின் முதுகில் வலுவான குத்தொன்று விட்டான் முதலாளி. ஒருநாள் காலையில், சுமைரா வீட்டுக்குள்ளிருந்து கத்திக் குழறி அழும் சத்தத்தை இக்பால் கேட்டான். இக்பாலால் என்னதான் செய்ய முடியும். அவன் காரை இன்னும் அழுத்தி அழுத்தித் துடைத்துக்கொண்டு, காதுகளைக் கூர்மைப்படுத்திக் கேட்டான். சுமைரா தமிழில் ஏதோ சொல்லிச் சொல்லிக் கத்துகிறாள். ஆனால், அவள் என்ன சொல்கிறாள் என்பது இவனுக்கு முழுவதுமாகப் புரியவில்லை. அப்போது முதலாளி கையில் ஒரு கடிதத்தோடு வெளியே வந்தான். இக்பாலைப் பார்த்து “தாள் ஹின” என்று வெறுப்போடு கத்தினான். இக்பால் அருகே சென்றதும், கடிதத்தை அவனிடம் கொடுத்துவிட்டு “இதில் என்ன இழவு எழுதியிருக்கிறது என்று படித்துச் சொல் சவ்வாக்” என்றான் முதலாளி. அந்தக் கடிதம் தமிழில் எழுதப்பட்டிருந்தது. சுமைராவின் சிநேகிதி யாரோ மூதூரிலிருந்து எழுதியிருக்கிறாள். சாம வேளையில் கிராமத்துக்குள் பாய்ந்த தமிழ் இயக்கம், முஸ்லீம்களின் குடியிருப்புகளை எரித்துவிட்டதாகவும், சுமைராவின் கணவனும் குழந்தையும் எரிந்து சாம்பலாகிவிட்டார்கள் என்றும் அந்தக் கடிதத்திலிருந்தது. கடிதத்தில் இருந்ததை இக்பால் திணறித் திணறி அரபியில் மொழிபெயர்த்து முதலாளியிடம் சொன்னான். அதைக் கேட்டதும் முதலாளி அப்படியே சக்கப்பணிய தரையில் உட்கார்ந்துவிட்டான். பின்பு அவன் கையை உயர்த்த, கையைப் பற்றி இக்பால் முதலாளியைத் தூக்கிவிட்டான். முதலாளி இக்பாலிடம் கடிதத்தை வாங்கிக்கொண்டு வீட்டுக்குள்ளே சென்றான். சற்று நேரம் கழித்து, முதலாளியின் மனைவி இக்பாலை அழைத்து “நீ அவளுக்கு ஏதாவது ஆறுதல் சொல்லு” என்றாள். இக்பால் கால்கள் நடுங்க வீட்டுக்குள்ளே சென்றான். சுமைரா ஒரு மூலைக்குள்ளே ஒடுங்கிப்போய்த் தரையில் உட்கார்ந்திருந்தாள். இவனைக் கண்டதும் வெறித்துப் பார்த்தாள். என்ன பேசுவது என்று தெரியாமல் “ராத்தா ஊருக்குப் போகப் போறீங்களா?” என்று இக்பால் கேட்டான். சுமைராவின் கண்கள் கீழே தாழ்ந்தன. அவள் தலையைப் பின்பக்கமாகச் சுவரில் மடாரென மோதிக்கொண்டு சொன்னாள்: “போய் என்னத்தச் செய்ய?” “என்ன சொல்கிறாள் அவள்?” என்று முதலாளி சற்றுப் பயந்த தொனியில் இக்பாலுக்கு பின்னால் நின்று கிசுகிசுத்தான். சுமைரா சொன்னதை இக்பால் அரபியில் சொன்னபோது, “தய்யுப்” என்று முணுமுணுத்தான் முதலாளி. அதற்கு ‘நல்லது’ என அர்த்தம். பின்வந்த நாட்களில் சுமைராவே அவ்வப்போது வலிய வந்து இக்பாலோடு பேசினாள். அவள் இவனிலும் ஒரு வயது மூத்தவள். இவர்கள் பேசுவதைக் கண்டாலும் இப்போது முதலாளி பெரிதாக எதுவும் சொல்வதில்லை. அதிருப்தியாகத் தலைமை மட்டும் அசைத்துக்கொள்வான். யூலை மாதத்தில், முதலாளியின் குடும்பம் ஒரு மாதகால விடுமுறையைப் பிரான்ஸ் நாட்டில் கழிக்க முடிவெடுத்தபோது, தங்களுக்குப் பணி செய்ய இக்பாலையும் சுமைராவையும் கூடவே அழைத்துச் சென்றார்கள். விமானத்தில் முதலாளி குடும்பம் முதல் வகுப்பிலும், இக்பாலும் சுமைராவும் சாதாரண வகுப்பிலும் பயணம் செய்தார்கள். இவர்கள் இருவருக்கும் அருகருகேதான் இருக்கைகள். ஏழு மணிநேர விமானப் பயணத்திலும், அதிகமாகப் பேசிக்கொண்டார்கள் என்று சொல்ல முடியாது. இவனுடைய குடும்பத்தைப் பற்றித்தான் சுமைரா அதிகமும் விசாரித்தாள். அவளின் குடும்பத்தைப் பற்றிக் கேட்பதற்கு எதுவுமே மிஞ்சியிருக்கவில்லை. குவைத்தில் விமானத்தில் ஏறும்போது, முதலாளி பாரம்பரிய அரபு உடையணிந்திருந்தான். அவனது மனைவியும் இரு பெண்களும் எப்போதும் போலவே ‘அபாயா’ அணிந்து முகத்தை மூடித் திரையிட்டிருந்தார்கள். ஆனால், அந்த குடும்பம் பிரான்ஸின் நீஸ் நகர விமான நிலையத்தில் இறங்கும்போது, முற்றாக வேறு மாதிரியாக இருந்ததைக் கண்டு இக்பால் கண்களை விரித்து, உடனடியாகவே முகத்தைத் தாழ்த்திக்கொண்டான். முதலாளி அரைக் காற்சட்டையும் அரைக் கைச் சட்டையும் அணிந்திருந்தான். அவனின் மனைவி குட்டைக் கவுனுக்கு மாறியிருந்தாள். இரு பெண் பிள்ளைகளும் ஜீன்சும் ரீ சேர்ட்டுமாக உற்சாகத்தில் குதித்துக்கொண்டிருந்தார்கள். விமான நிலையத்தை விட்டு வெளியேறுவதற்கு முன்பே, மறக்காமல் இக்பாலினதும் சுமைராவினதும் பாஸ்போர்டுகளை வாங்கி, முதலாளி தனது கைப்பையில் வைத்துக்கொண்டான். கடற்கரையோரமாக ஒரு பெரிய ஆடம்பர வில்லாவை முதலாளி வாடகைக்குப் பிடித்திருந்தான். விமான நிலையத்தின் வாசலிலே பென்னம் பெரிய சொகுசு வண்டி, வெள்ளைக்காரச் சாரதியுடன் முதலாளி குடும்பத்துக்காகக் காத்திருந்தது. இன்னொரு வண்டியில் பெட்டிகளும் சாமான்களும் இக்பாலும் சுமைராவும் ஏற்றப்பட்டு, கடற்கரை வில்லாவுக்குக் கொண்டு செல்லப்பட்டார்கள். அங்கே சுமைராவுக்குத்தான் நிறைய வேலைகளிருந்தன. காலை உணவையும் இரவு உணவையும் அவள் தயாரிக்க வேண்டும். வீட்டையும் படுக்கைகளையும் சுத்தம் செய்ய வேண்டும். துணிகளை இயந்திரத்தில் துவைத்து, உலர வைத்துப் பெட்டி போட்டுத் தேய்க்க வேண்டும் என ஏகப்பட்ட வேலைகள். ஒவ்வொரு நாளும், முதலாளி குடும்பத்தினர் நள்ளிரவுக்குப் பிறகே வில்லாவுக்குத் திரும்பினார்கள். திரும்பியவுடன் இன்னொருமுறை உணவருந்துவார்கள். சுமைரா விழித்திருந்து பரிமாறிவிட்டு, பாத்திர பண்டங்களைக் கழுவிவைத்துவிட்டே தூங்கச் செல்ல வேண்டும். குவைத்தில் நான்கு மணிநேரமாவது தூங்கியவளுக்கு, இங்கே இரண்டு மணிநேரம் கூடத் தூங்க முடியாமலிருந்தது. இக்பாலுக்கு இங்கே அதிக வேலையில்லை. குவைத்தில் அதிகாலையிலேயே எழுந்து தொழுகைக்குச் செல்லும் முதலாளி, இங்கே காலை எட்டு மணிக்குத்தான் எழுந்திருப்பான். முதலாளி கடற்கரையில் நடைபோடச் செல்லும்போது, முதலாளியின் புகையிலை, புகைக்கும் குழாய் அடங்கிய சித்திரப் பெட்டியைக் காவியவாறு இக்பால் முதலாளியுடனேயே போக வேண்டும். முதலாளிக்கு என்னதான் பருத்த தொந்தியென்றாலும், அவன் கால்களை அகல அகலமாக வைத்து அதி வேகமாக மூச்சிரைக்க நடப்பான். இக்பால் ஓட்டமும் நடையுமாகத்தான் பின்னால் போவான். நள்ளிரவுக்குப் பின்னால் வில்லாவுக்குத் திரும்பும்போது, முதலாளி போதையில் உளறிக்கொண்டுதான் வருவான். அப்போது அவன் இக்பாலின் முதுகில் தட்டும் விசையிலிருந்து, அன்று சூதாட்ட விடுதியில் முதலாளி கொஞ்சப் பணத்தை இழந்தானா, நிறையப் பணத்தை இழந்தானா என்பதை இக்பால் புரிந்துகொள்வான். காலையில் முதலாளி குடும்பம் புறப்பட்டுச் சென்றதும், சமையலுக்கும் பிற தேவைகளுக்கும் வேண்டிய பொருட்களை சுமைரா சொல்லச் சொல்ல, இக்பால் தாளில் எழுதிக்கொண்டு கடைத் தெருவுக்குச் சென்று பொருட்களை வாங்கிக்கொண்டு வருவான். திரும்பி வந்ததும் கணக்கு எழுதி வைப்பான். முதலாளி அவனிடம் கொடுத்து வைத்திருக்கும் பணத்திலுள்ள மீதிக்கும் கணக்குக்கும் பொருந்திப் போகிறதா என்று பார்ப்பான். அதற்குப் பின்பு அவனுக்குப் பெரிதாக வேலையில்லை. நள்ளிரவில் முதலாளியின் வண்டி வரும்போது, முன் வாசற் கதவைத் திறந்துவிடுவான். முதலாளி குடும்பம் வீட்டுக்குள் சென்ற பின்பு, வீட்டுக்குப் பின்னாலிருக்கும் குப்பைத் தொட்டியைத் தள்ளிச் சென்று தெருவில் விடுவான். கதவை மூடிவிட்டுத் தூங்கச் செல்வான். இவனுக்கான படுக்கை அறை வில்லாவிற்குப் பின்னால் தனியாக இருந்தது. வேலைக்காரர்களுக்கான அந்த அறை, வவுனியாவிலுள்ள இவனது வீட்டைப்போல நான்கு மடங்கு பெரிதாகயிருந்தது. அதிகாலையிலேயே எழுந்து, வெற்றுக் குப்பைத் தொட்டியை இழுத்துவந்து வீட்டுக்குப் பின்னால் மறைத்து வைப்பான். அவர்கள் நீஸ் நகரத்துக்கு வந்து ஒரு வாரம் கழிந்திருந்தபோது, வழமை போலவே இக்பால் கடைத் தெருவுக்குப் புறப்பட்டான். இன்றைக்கு ஒரு புதிய வழியால் கடைத் தெருவை நோக்கிச் செல்லலாம் என அவன் நினைத்தான். இவன் இப்படியாக ஊரைப் பார்த்தால்தான் உண்டு. கடைத் தெருவின் மத்தியிலுள்ள தேவாலயத்தின் கோபுரம் இங்கிருந்து பார்க்கும் போதே தெரிந்தது. எந்த வழியால் போனாலும், அந்தக் கோபுரத்தில் ஒரு கண்ணை வைத்திருந்தால் கடைத் தெருவை அடைந்துவிடலாம் என்று இக்பால் கணக்குப் போட்டான். புதிய வழி நினைத்ததுபோல சுலபமாக இருக்கவில்லை. எங்கெல்லாமோ சுற்றிச் சுழன்று அது அவனை அழைத்து வந்தது. ஒருவழியாகக் கடைத் தெருவை நெருங்கியபோது, வீதியோரத்தில் அடக்கமாகயிருந்த ஒரு சிறிய உணவகத்தை கண்டதும் இக்பால் அப்படியே நின்றான். கண்ணாடிப் பெட்டிக்குள் கடலை வடைகள் அழகாக அடுக்கப்பட்டிருந்தன. நிமிர்ந்து கடையின் பெயர்ப் பலகையைப் பார்த்தான். ‘காந்தி கபே’ என்றிருந்தது. உள்ளே நுழைந்தான். கதவைத் திறந்ததுமே தமிழ் சினிமாப் பாட்டு மெல்லிதாகக் கேட்டது. அந்த உணவகத்தில் நான்கு குட்டி மேசைகள் மட்டுமேயிருந்தன. கடைக்காரியைத் தவிர வேறு யாரும் அங்கில்லை. கடைக்காரிக்கு அய்ம்பது வயதிருக்கும். பாவாடை, சட்டை போட்டிருந்தார். வாயில் வெற்றிலையை மென்றுகொண்டே “வாங்கோ..இருங்கோ தம்பி” என்றார். வடையும் சம்பலும் மட்டுமல்லாமல், கடைக்காரி தயாரித்துக் கொடுத்த பால் தேநீரும் அமுதமாகயிருந்தது. “தம்பி ஒரு வாய் வெத்தில போடுறீங்களோ…” என்று கேட்டார் கடைக்காரி. அன்றிலிருந்து ஒவ்வொரு நாள் காலையிலும் அந்த உணவகத்துக்குப் போய், ஒரு தேநீர் குடிப்பது இக்பாலுக்கு வழக்கமாகியது. கடைக்காரிக்கு ஆட்களைப் பேசத் தூண்டிவிடும் வல்லமையிருந்தது. இவன் தன்னுடைய முதலாளியோடு இங்கு வந்திருப்பதாகவும், இரண்டு வாரங்களில் குவைத்துக்குத் திரும்பப் போவதாகவும் சொன்ன போது, இப்படியே பிரான்ஸிலேயே இருந்துவிடுமாறு கடைக்காரி இக்பாலுக்கு ஆலோசனை கொடுத்தார். அதற்கான வழியையும் அவரே சொன்னார். கடைக்காரி சொன்ன வழியைப் பற்றியே, இக்பால் சில நாட்களாகத் தீவிரமாக யோசித்துக்கொண்டிருந்தான். குவைத்தில் பத்து வருடங்களில் சம்பாதிப்பதை, பிரான்ஸில் ஒரே வருடத்தில் சம்பாதிக்கலாம் என்கிறார் கடைக்காரி. இந்த நாட்டிலேயே நிரந்தர விசாவையும் சுலபமாகப் பெற்றுவிடலாமாம். குவைத் கபீலும் குடும்பமும் இவனது பாஸ்போர்டையும் பிடுங்கி வைத்துக்கொண்டு, அடிமைத்தனம் செய்கிறார்கள். சுமைரா சொல்வதை வைத்துப் பார்த்தால், அவர்களிடமிருந்து விடுதலையே இல்லைப் போலத்தானிருந்தது. இப்படிக் குவைத்தில் வந்து மாட்டிக்கொண்ட பல பேரை அவனுக்குத் தெரியும். கடைக்காரி பலருக்கு வழிகாட்டிய அனுபவசாலியாகத் தெரிந்தார். இந்த நகரத்துக்கு அருகிலிருக்கும், இத்தாலி நாட்டிலிருந்து கிளம்பி, பிரான்ஸ் எல்லையைத் திருட்டுத்தனமாகக் கடந்து, இந்த நகரத்துக்கு வெறும் கையாக வந்து சேர்ந்த பலருக்கும் அவர் வழிகாட்டியதாகச் சொன்னார். கடைக்காரி சொல்வது சரி போலத்தான் இக்பாலுக்கும் பட்டது. ஆனால், முதலாளி இவனது பாஸ்போர்டை பூதம் போலக் காத்து வைத்திருக்கிறானே. அதை இவன் கடைக்காரியிடம் சொன்னபோது, “தம்பி நீங்கள் விசா எடுத்து சட்டப்படி வந்ததால இஞ்ச அகதியாப் பதிய ஏலாது. அதை மறவுங்கோ. தமிழ்ப் பெயரில டொக்குமென்ட்ஸ் எடுத்துத்தர ஆளிருக்கு. என்ன ஒரு அய்நூறு ஃப்ராங் கேப்பார்”. இவனுடைய மூன்று மாதச் சம்பளப் பணம் முதலாளியிடமிருக்கிறது. அதை இப்போது வாங்க முடியாது. ஆனால், கடையில் பொருட்கள் வாங்கவென முதலாளி கொடுத்த பணம் அவனிடமிருக்கிறது. கணக்குப் பார்த்தால் அது அவனுடைய மூன்று மாதச் சம்பளத்துக்கும் குறைவுதான். படைத்தவன் மேல் பாரத்தைப் போட்டுவிட்டு, குவைத் முதலாளியிடமிருந்து தப்பிச் செல்ல இக்பால் முடிவெடுத்தான். இந்த நகரத்திலிருந்து தொள்ளாயிரம் கிலோ மீட்டர் தொலைவிலிருக்கும் பாரிஸ் நகரத்துக்குச் சென்று விட்டால், நீரில் போட்ட சீனியாகக் கரைந்துவிடலாம் என்றார் கடைக்காரி. அங்கே வேலை கிடைப்பது ஒன்றும் கடினமில்லையாம். காலையில் முதலாளி குடும்பம் பத்து மணியளவில் வெளியே போனது. இங்கிருந்து இரயில் நிலையம் இருபது நிமிட நடை தூரத்திலிருந்தது. பாரிஸ் செல்லும் பன்னிரண்டு மணி இரயிலைப் பிடித்தால், எட்டு மணிநேரத்தில் பாரிஸில் இறங்கலாம் எனக் கடைக்காரி தெளிவாகச் சொல்லியிருந்தார். தான் தப்பிப் போவதைப் பற்றி, சுமைராவிடம் சொல்லவே கூடாது என்றுதான் இக்பால் முதலில் நினைத்திருந்தான். இவன் தப்பிச் சென்றது தெரிய வந்தவுடன் சுமைராவுக்கு அடி நிச்சயம். மொத்தக் கோபத்தையும் அவள் மீதுதான் காட்டுவர்கள். ஆதலால் சுமைராவிடம் சொல்லிக்கொள்ளாமல் போகவும் அவனால் முடியவில்லை. பாதி உண்மையையாவது சுமைராவிடம் சொல்லிவிடுவது என்ற முடிவுடன் பதினொரு மணியளவில் சமையலறைக்குள் நுழைந்தான். சுமைரா மும்முரமாகச் சுத்தம் செய்துகொண்டிருந்தாள். “ராத்தா…நான் இத்தாலிக்கு ஓடிப் போகப் போறேன்”. சுமைரா அவனை வெறித்துப் பார்த்தாள். அவளது வலது கை எழுந்து அவளது மார்பைத் தொட்டது. அவளது வாய் மெதுவாகத் திறந்து கேட்டது: “நான்?” 6 இக்பாலும் சுமைராவும் பாரிஸ் இரயில் நிலையத்தில் இறங்கி, கால்போன போக்கில் சிறிது தூரம் நடந்து ஒரு தங்கும் விடுதியைக் கண்டுபிடித்தார்கள். “ரெண்டு ரூமா எடுக்க வேணும்?” என்று இக்பால் கேட்டபோது “நம்மட்ட அம்பட்டுக் காசில்லையே…” என்றாள் சுமைரா. அடுத்த நாள் காலையில், இருவரும் நீஸ் நகரத்துக் கடைக்காரி கொடுத்திருந்த முகவரிக்குப் புறப்பட்டார்கள். தலையில் முக்காடு இல்லாத சுமைரா இன்னும் இளமையாகத் தோன்றினாள். அவர்கள் தங்கியிருந்த விடுதியில் விசாரித்தபோது, மெத்ரோ நிலையத்துக்கு வழி சொன்னார்கள். மெத்ரோ நிலையத்தில் அங்குமிங்குமாக இலங்கைச் சாயல் முகங்கள் தெரிந்தன. இவர்களுக்குப் பெரிய நிம்மதியாகயிருந்தது. இவர்கள் மெத்ரோவுக்குள் ஏறியபோது, உள்ளேயும் ஒரு நடுத்தர வயது இலங்கை முகம் தெரிந்தது. எதற்கும் இருக்கட்டுமென்று அந்த மனிதரின் எதிரில் காலியாகயிருந்த இருக்கைகளில் இருவரும் உட்கார்ந்துகொண்டார்கள். இவர்களைப் பார்த்ததும் அந்த மனிதர் தலையசைத்துப் புன்னகைத்தார். டிப்டொப்பாக கோட் -சூட் அணிந்திருந்தார். அவரது கையில் தமிழ்ப் பத்திரிகையொன்று சுருட்டி வைக்கப்பட்டிருந்ததை இக்பால் கவனித்தான். உடனேயே தனது கையிலிருந்து முகவரிச் சீட்டை அவரிடம் நீட்டியவாறே கேட்டான்: “அண்ணன் இந்த இடத்துக்கு எப்பிடிப் போறது?” அந்த மனிதர் துண்டுச் சீட்டை வாங்கிப் பார்த்துவிட்டு “இதிலயிருந்து மூண்டாவது ஸ்டேசனில இறங்குங்கோ” என்றார். முகவரிச் சீட்டைத் திருப்பிக் கொடுத்துவிட்டுக் கேட்டார்: “எவ்விடம் ஊரில?” “நான் வவுனியா அண்ணன், இவ மூதூர்” “மூதுரோ… அந்தப் பக்கம்தானே இப்ப கடுமையான பிரச்சினையாக் கிடக்கு…எளிய சோனகங்கள் தமிழ் ஆக்கள வெட்டித் தள்ளுறாங்கள்… தங்கச்சி உங்கிட குடும்பம் பத்திரமாயிருக்கோ?” அந்த மனிதர் சுமைராவைப் பார்த்தபோது, சுமைரா அவரைப் பார்த்து மெல்லிதாகப் புன்னகை செய்தாள். அதைக் கண்டபோது, இக்பாலுக்குத் தேகம் நடுங்கத் தொடங்கிவிட்டது. நெஞ்சுக் கூட்டுக்குள் ‘சுபஹானல்லாஹ்’ என்ற முணுமுணுப்பு எழுந்தது. இக்பால் வாயை இறுக மூடிக்கொண்டான். அந்த மனிதர் அடுத்த நிறுத்தத்தில் இறங்கிப் போய்விட்டார். மூன்றாவது நிறுத்தத்தில் இறங்கி, இருவரும் வெளியே வந்தார்கள். அந்தப் பகுதி முழுவதும் தமிழ்ச் சனங்களால் நிறைந்திருந்தது. திரும்பிய பக்கமெல்லாம் தமிழ்க் கடைகளும், உணவகங்களும், விடுதலைப் புலிகளின் சுவரொட்டிகளும் நிறைந்திருந்தன. இக்பால் சுமைராவின் முகத்தைப் பார்த்தான். அவளது கண்ணிமைகள் வெட்டி வெட்டித் திறந்துகொண்டிருந்தன. அவள் இக்பாலின் கையை அழுத்திப் பிடித்துக்கொண்டாள். நீஸ் கடைக்காரி குறித்துக் கொடுத்திருந்த இடத்திலிருந்த தனபாலன், இவர்கள் இருவரையும் அகதிகளாகப் பதிவு செய்யும் வேலைகளுக்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டார். நீஸ் கடைக்காரி சொல்லியிருந்த தொகைக்கு நான்கு மடங்கு அதிகமாகவே தனபாலன் பணம் கேட்டார். ஆனால், பணத்தைத் தவணைமுறையில் கொடுத்தால் போதுமானதென ஒரு சலுகையும் கொடுத்தார். வேலை தேடுவதற்கான வழியையும் அவரே இக்பாலுக்குச் சொல்லிக்கொடுத்தார். அரை மணிநேரத்திற்குள்ளாகவே தனபாலனின் கைத்திறமையால் தயாரிக்கப்பட்டு, இவர்களுக்கு வழங்கப்பட்ட புதிய பிறப்புச் சான்றிதழ்களில், இக்பாலுடைய பெயர் நாகநாதன் முருகவேள் என்றும், சுமைராவின் பெயர் செல்வராசா தாட்சாயினி என்றுமிருந்தன. இருவருக்கும் ஒரு திருமணச் சான்றிதழையும் தனபாலனே தயாரித்துக் கொடுத்தார். “குடும்பம் எண்டால் விசா லேசா எடுக்கலாம்” என்று தனபாலன் புன்னகைத்தார். இவர்கள் இருவரும் இலங்கையிலிருந்து வந்த தமிழ் அகதிகளென்றும், இலங்கை இராணுவத்தால் தேடப்படுபவர்கள் என்றும் வரலாறு எழுதி, அகதி விண்ணப்பத்தைத் தயாரித்தார் தனபாலன். இதற்கு இரண்டு வருடங்கள் கழித்து, துலீப் பிறந்தபோது, தங்களுடைய அடையாளங்களை முழுவதுமாக அழித்துவிடுவது என முருகவேள் தம்பதி முடிவெடுத்தார்கள். 7 கட்டிலில் சாய்ந்திருந்த இக்பாலுக்கு அருகே உட்கார்ந்திருந்த சுமைரா, கணவனின் கையைப் பிடித்துக்கொண்டார். “துலீப் பப்பா, எண்டக்கிம் நீங்க ஆரையும் கை நீட்டி அடிச்சதில்ல…” என்று சுமைரா முணுமுணுத்தார். இக்பால் மெதுவே சுமைராவின் கையை விலக்கினார். கட்டிலிலிருந்து துள்ளியெழுந்து விரைந்து போய் மகனின் அறைக்குள் நுழைந்தார். மேசையின் இழுப்பறைகளைத் திறந்து பார்த்துவிட்டு மூடினார். நள்ளிரவில் மறுபடியும் ஒருமுறை மகனின் அறைக்குப் போய்ப் பார்த்தார். அங்கே யாருமில்லை. மூன்று மணியளவிலும் போய்ப் பார்த்தார். மகன் வீடு திரும்பியிருக்கவில்லை. ஓசையில்லாமல் மேசையின் இழுப்பறைகளைத் திறந்து பார்த்து மூடினார். அதிகாலையில் எழுந்து குளியலறைக்குச் சென்றபோது, அங்கே மகன் இருக்கலாம் என இக்பால் நினைத்தார். ஆனால், குளியலறை இருளாகயிருந்தது. குளித்துவிட்டு, மறுபடியும் மகனின் அறைக்குள் போய்ப் பார்த்தார். யாருமில்லை. சமையலறைக்குள் நுழைந்து விளக்கைப் போடாமலேயே, குழாயில் தண்ணீர் பிடித்துக் குடித்தார். சமையலறை ஜன்னல் வழியே பள்ளிவாசல் இருந்த திசையைப் பார்த்தார். அந்தத் திசையில் நெருப்பு உயரே எரிவதைக் கண்டதும் பதறிப் போனார். கண்ணை வெட்டிப் பார்த்தபோது, பள்ளிவாசலின் விளக்குகள் தெரிந்தன. இப்போது நெருப்பு மறுபடியும் எரிவதைப் போலிருந்தது. அவரால் எதையும் சரியாகப் பார்க்க முடியவில்லை. மறுபடியும் மகனின் அறைக்குள் நுழைந்து வெளியே வந்தார். ஓசை எழுப்பாமல் வாசற் கதவைத் திறந்துகொண்டு வெளியே போனார். அவர் புற்தரையை நெருங்கியபோது பள்ளிவாசல் விளக்குகள் எரிந்துகொண்டிருந்தன. மேலங்கியின் பைக்குள் கையை விட்டு, தொழுகைத் தொப்பியை எடுத்துத் தலையில் அணிந்துகொண்டார். (நீலம் – டிசம்பர் 2020) யானைக் கதை து, லைடன் தீவுக்கு ஒரு மைல் தூரத்தில் வைத்து, கடற்படையினரின் விசைப் படகொன்று இவர்களை நோக்கி வந்திருக்கிறது. அந்தப் படகு இவர்களைத் துரத்திக்கொண்டுதான் வருகிறது என்பது உறுதியானவுடனேயே, வெள்ளைச் சந்திரன் ரிவோல்வரையும் சயனைட் குப்பியையும் கடலுக்குள் வீசிவிட்டுக் கைகளை உயர்த்திக்கொண்டே தோணிக்குள் எழுந்து நின்றுவிட்டாராம். செல்வதி தோணியைக் கைவிட்டுவிட்டுக் கடலுக்குள் குதித்து முழ்கிவிட்டான். நான் ‘வித்ரோ’ ஜேம்ஸுக்காகக் காத்திருந்தேன். வெல்ஸன் தீவுக்கு ஆளனுப்பி விசாரித்தபோது, அங்கே அவர் போயிருக்கவில்லை என்பது தெரியவந்தது. ஜேம்ஸிடமிருந்து ஏதாவது செய்தி வரும் என லைடன் தீவிலேயே சுற்றிக்கொண்டிருந்தேன். மூன்று நாட்களின் பின்பு அந்தச் செய்தி வந்தது. பருத்தியடைப்புக் கரையில் ஒரு பிரேதம் அடைந்திருப்பதாக மக்கள் பேசிக்கொண்டார்கள். உப்பு நீருக்குள் ஊறிப்போய், ஊதிப் பெருத்திருந்த அந்த பிரேதம், ஒரு யானையைப் போல கடற்கரையில் கிடக்கிறது எனச் சொன்னார்கள். நான் அந்தப் பிரேதத்தைப் பார்க்க விரும்பவில்லை. பேராசிரியர் கியோம் வேர்னோ தனது உடலை நேராக்கிக்கொண்டு அண்ணாந்து பார்த்தார். மூக்குக் கண்ணாடியைக் கழற்றிச் சட்டைப் பைக்குள் வைத்துக்கொண்டே “உண்மைதான்… ஒரு யானையை நீங்கள் ஞாபகத்தில் வைத்திருப்பதற்கு, யானையைப் பார்த்திருக்க வேண்டியதில்லை” என்றார். அவரது முகத்தில் அந்தப் புன்னகை அப்படியேயிருந்தது. (வல்லினம் – ஜனவரி 2021) யாப்பாணச் சாமி ‘குவலயத்தின் விழிபோன்ற யாழ்ப்பாணத்தான், பாவியரைக் கரையேற்றும் ஞானத் தோணி’ என்றெல்லாம் சுப்ரமணிய பாரதியார் போற்றிப் பாடிய, அருளம்பலம் சுவாமியைப் பற்றியதல்ல இந்தக் கதை. வேறொரு யாப்பாணச் சாமியைப் பற்றியே உங்களுக்குச் சொல்லவிருக்கிறேன். பாரதியார் புதுச்சேரியில் சந்தித்த அருளம்பலம் சுவாமி வாயைத் திறந்து பேசாத மௌனகுரு. இந்த யாப்பாணச் சாமி முற்றிலும் வேறு. என்னுடைய அம்மாவுக்கு, நான் இன்னும் கல்யாணம் செய்யாமலிருப்பது தீராக் கவலை. பெற்ற மனம் பதைக்காமலிருக்காது. அம்மா, யாப்பாணச் சாமியைத் தரிசித்து என்னுடைய எதிர்காலம் குறித்துக் கேட்டிருக்கிறார். இன்றைய தேதிக்கு யாழ்ப்பாண மக்கள் அதிகமாகக் கூடும் இடமென்றால், அது இந்தச் சாமியாரின் மடம்தானாம். அரையில் ஒரு சாண் கச்சை மட்டுமே தரித்திருக்கும் யாப்பாணச் சாமியார் சமைத்த உணவையும், தோல் உரிக்கப்பட்ட பழங்களையும் தவிர வேறெதையும் காணிக்கையாகப் பெற்றுக்கொள்வதில்லை. யாப்பாணச் சாமியிடம் எனது அம்மா “இன்ன இன்ன மாதிரி, என்னுடைய மகன் பிரான்ஸில இருக்கிறான், வயது வட்டுக்குள்ள போயும் இன்னும் கலியாணம் கட்டாமலிருக்கிறான்” என்று சொல்லிப் பரிகாரம் கேட்டபோது, யாப்பாணச் சாமி “உன்ர மகன் என்ன வேலை பார்க்கிறான்?” என்று கேட்டிருக்கிறார். அம்மா கொஞ்சம் பெருமையுடனேயே “அவன் பெரிய எழுத்தாளன் சாமி, இங்கிலிசில எல்லாம் புத்தகம் வந்திருக்கு” என்றிருக்கிறார். அவ்வளவுதான், சாமி பதறிப் போய்க் கூச்சலிட்டிருக்கிறார். “அடியே வேசை கெடுத்தாயடி குடிய…என்ர எளிய தோற, தூமச்சீல, உனக்கு புள்ள வளர்க்கத் தெரியாதோடி, அந்தச் சுண்ணிய எழுதுறது, இலக்கியம் ஊம்புறது எல்லாத்தையும் விட்டுப் போட்டு ஒழுங்கா வேலை வெட்டிக்குப் போகச் சொல்லு! அப்பதான் அவனுக்கு ஒரு பண்பான வேசையோ அன்பான தாசியோ கிடைப்பாள்.” இந்த யாப்பாணச் சாமியாரால், ஒரு வருடத்துக்கு முன்பு இலண்டன் நகரமே பட்டபாடு கொஞ்ச நஞ்சமல்ல. பல்கலைக்கழகங்கள், ஆராய்ச்சியாளர்கள், எழுத்தாளர்கள், தமிழின உணர்வாளர்கள், ஸ்கொட்லாண்ட் யார்ட் பொலிஸார், இலங்கைத் தூதரகம் எல்லோருடைய கவனத்திலும் யாப்பாணச் சாமியாரே இருந்தார். பிரச்சினைக்கான மூல காரணம் எனப் பார்த்தால், அது பார்பரா பிரிக்மென் என்ற ஐரிஸ் பெண்மணி எழுதிய ‘Bad Word God’ என்ற புத்தகமாகவேயிருக்கும். அந்தப் புத்தகம், யாப்பாணச் சுவாமியின் வரலாற்றைச் சொல்லும் சிறிய புத்தகம். அய்ம்பது வயதான பார்பரா, யுத்த காலத்தில் மனித நேயப் பணியாளராக இலங்கையில் சில வருடங்கள் பணியாற்றிய போது, யாப்பாணச் சாமியால் கவரப்பட்டுள்ளார். யாப்பாணச் சாமியின் ‘அருட்காதலி’ என்றே இவர் தன்னை அழைத்துக்கொள்கிறார். இந்தப் பிரச்சினையில் சம்பந்தப்பட்ட இன்னொருவரான ஆசிரியர் சதாசிவம், இலண்டனில் ‘யாழ்ப்பாணச் சுவாமி சத் சங்கம்’ என்றொரு சிறிய அமைப்பை உருவாக்கி நடத்திவருபவர். ஆசிரியர் சதாசிவம் மூலம், யாப்பாணச் சாமி குறித்து நான் தெரிந்துகொண்ட தகவல்களை ஒழிவுமறைவில்லாமல், பச்சையாகவே உங்கள் முன் வைத்துவிடுகிறேன். 2 யாப்பாணச் சாமியாரின் இயற்பெயர் நாகேஸ்வரன். ஈழத்துச் சிதம்பரம் என்றழைக்கப்படும் காரைதீவில் 1960-ம் வருடம் பிறந்தவர். இளமையில் கடுமையான துடியாட்டக்காரனாகவே அவர் இருந்தார். அவருடைய வீடிருந்த நிலம் இலங்கைக் கடற்படையால் ஆக்கிரமிக்கப்பட்ட பின்பாக, அவரது குடும்பம் யாழ்ப்பாண நகரத்துக்குக் குடி பெயர்ந்தது. அங்கேதான் நாகேஸ்வரனுக்கு போராட்ட இயக்கமொன்றுடன் தொடர்பு ஏற்பட்டு, 1983 தீபாவளியன்று, ஆயுதப் பயிற்சி பெறுவதற்காக நாகேஸ்வரன் இந்தியாவுக்குச் சென்றுவிட்டார். ஆனால், நாகேஸ்வரன் எதிர்பார்த்திருந்தது போல ஆயுதப் பயிற்சி முகாமும் இயக்க வாழ்வும் இருக்கவில்லை. இயக்கத் தலைமைகள் கடுமையான சர்வாதிகாரிகளாக இருந்தார்கள். பயிற்சி முகாமில் எந்தவித ஜனநாயக நடைமுறைகளும் இருக்கவில்லை. நாகேஸ்வரனால் இதையெல்லாம் பொறுத்துக்கொண்டிருக்க முடியவில்லை. “முகாம் நடவடிக்கைகள் சரியாக இல்லை, மாறுதல்கள் வேண்டும்” என்று இரண்டு வார்த்தைகள்தான் பேசினார். இதற்காகவே அவரைக் கைது செய்து, இயக்கத்தின் இரகசியச் சித்திரவதை முகாமுக்கு அனுப்பிவிட்டார்கள். மாற்று இயக்கத்தின் உளவாளியென்றும், தலைமையை மாற்ற வேண்டுமென்று கிளர்ச்சி செய்கிறாரென்றும் அவர்மீது குற்றம் சுமத்தப்பட்டது. அந்தக் கொடிய சித்திரவதை முகாம் ‘நாமக்கல்’ பகுதியில் இருந்தது என்கிறார் யாப்பாணச் சாமி. அந்த முகாமுக்குக் கொண்டுவரப்பட்டவர்களைச் சித்திரவதை செய்து விசாரித்துவிட்டு, கொலை செய்து தோப்பில் புதைத்துவிடுவார்களாம். நாகேஸ்வரனும் தான் கொலை செய்யப்படும் நாளுக்காகக் காத்திருந்தார். அந்த இயக்கத்தின் தலைவர், அப்போது தூய தமிழில் பேசுவதில் பற்றுக்கொண்டிருந்ததால், அந்த இயக்கத்தின் உயர்மட்ட உறுப்பினர்களும் தூய தமிழையே பயின்றுகொண்டிருந்தார்கள். அந்தச் சித்திரவதை முகாமில் பலரும் தூய தமிழையே பேசினார்கள். சித்திரவதைக் கருவிகளுக்கும் தூய தமிழ்ப் பெயர்களையே வைத்திருந்தார்கள். அலவாங்கு என்பதற்கு ‘நெட்டிரும்பு’ என்றும் வெல்டிங்குக்கு ‘ஒட்டிரும்பு’ என்றும் சொல்வார்கள். நாகேஸ்வரனையும் தூய தமிழிலேயே விசாரித்தார்கள். பல கேள்விகளுக்கு நாகேஸ்வரன் பதிலளிக்க முடியாமல் தவித்ததற்குத் தூய தமிழே காரணமாகயிருந்தது. கேட்கப்படும் கேள்வியில் பாதி வார்த்தைகள் அவருக்குப் புரியவேயில்லை. "குமுகாயம், உழன்றி, அட்டில், துமுக்கி என்றெல்லாம் பேசி அவர்கள் நாகேஸ்வரனைச் சித்திரவதை செய்தார்கள். ஒரு குடிசையில் நாகேஸ்வரனை தனிமையில் அடைத்து வைத்திருந்தார்கள். நாகேஸ்வரனுக்கு இரவுக் காவலாக நியமிக்கப்பட்டிருந்தவனுக்கு பதினாறு வயதுதான் இருக்கும். அந்த முகாமிலேயே அவன் மட்டும்தான் தூய தமிழ் பேச மாட்டான். அவனுக்கு ஏனோ நாகேஸ்வரன் மீது இரக்கம் வந்திருக்கிறது. ஒரு நடுச்சாமத்தில், கையில் ஒரு மண்வெட்டிப் பிடியை எடுத்துக்கொண்டு போய், அந்தச் சிறுவன் அதனால் அடித்தே நாகேஸ்வரனை விசாரித்தான். இந்தச் சிறுவனின் கேள்விகள் தெள்ளத் தெளிவாகப் புரிந்ததால், நாகேஸ்வரன் சரியாகப் பதிலளித்து விசாரணைக்கு ஒத்துழைக்கலானார். நாகேஸ்வரன் குற்றமற்றவர் என்பது அந்தச் சிறுவனுக்குப் புரிந்திருக்க வேண்டும். நாகேஸ்வரனின் கை, கால் கட்டுகளை அவிழ்த்துவிட்டு "டேய் புண்டையாண்டி, இயக்கத்துக்கு ஓக்கலாமெண்டு நினைக்காத. எங்கேயாவது ஓடிப்போ’ என்று அந்தச் சிறுவன் சொல்லிவிட்டான். அப்போது நாகேஸ்வரனின் இடுப்பில் கிழிந்துபோன சாரம் மட்டும்தான் இருந்தது. எப்படியோ அங்கிருந்து கால்போன போக்கில் ஓடி, நெடுஞ்சாலைக்குப் போய், ஒரு லொறியில் நாகேஸ்வரன் இரந்து பரந்து ஏறிக்கொண்டுவிட்டார். அந்த லொறி திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலுக்குப் பொருட்களைக் கொண்டுசென்ற லொறி. திருவண்ணாமலை பரதேசிகளின் ஊராகயிருந்தது. பரதேசிகளோடு பரதேசியாய் நாகேஸ்வரனும் கலந்துவிட்டார். அவரை விடுவித்த சிறுவன் பேசிய தூசண வார்த்தைகளே அவரது உயிரைக் காப்பாற்றிய அருட் சொற்கள் என்று அவருக்குத் திடீரெனத் தோன்றியபோது, அவர் கிரிவலப் பாதையில் நிருதி லிங்கத்திலிருந்து இந்திர லிங்கத்துக்குப் பின்னோக்கி நடந்துகொண்டிருந்தார். அந்தச் சிறுவன் இறைச் சொரூபம் என்றே அவர் நம்பினார். எல்லாக் கெட்ட வார்த்தைகளும் பிறப்புக்கும் அன்புக்கும் இன்பத்துக்கும் இரக்கத்துக்குமான மனத் திறப்பு வார்த்தைகளென அவர் உணர்ந்தார். தூசணச் சொற்களைப் போல இயல்பாகவும் உண்மையாகவும் உள்ளத்திலிருந்து பிறக்கும் ஒலிகள் வேறில்லை. மற்றைய சொற்கள் எல்லாமே பாசாங்கானவை, நிலையற்று மாறக்கூடியவை. இதை உணர்ந்ததும் அவர் தூசண வார்த்தைகளாலேயே உரையாடத் தொடங்கினார். பிச்சை வாங்கி உண்டும், கண்ட இடத்தில் உறங்கியும், விழித்திருந்த நேரமெல்லாம் தன்னையொத்த பரதேசிகளிடம் வாதம் செய்துகொண்டுமிருந்தார் நாகேஸ்வரன். என்னதான் மற்றப் பரதேசிகள் உலக அனுபவம் பெற்றிருந்தாலும், நாகேஸ்வரன் போல அவர்கள் மரணத்தின் வாசலுக்குச் சென்று மீண்டவர்கள் அல்லவே. அங்கிருந்த சாமியார்களில் துப்பாக்கியால் சுடத் தெரிந்தவரும் இவர்தான். கண்முன்னே பல கொலைகளைக் கண்டவரும் இவர்தான். எனவே நாகேஸ்வரனின் வாதிலும் பேச்சிலும் அனுபவப் பொருள் மிகுந்திருந்தது. தூசண வார்த்தைகளால் அவர் தர்க்கிப்பதில் ஓர் உண்மைத்தன்மையிருந்தது. இவரைப் பற்றிக் கேள்விப்பட்ட விசிறிச் சாமியார், இவரை அழைத்து வருமாறு ஒரு சீடரை அனுப்பியிருக்கிறார். அதைக் கேட்டுப் புன்னகைத்த நாகேஸ்வரன், நாலைந்து கெட்ட வார்த்தைகளைச் சொல்லிவிட்டு “சாக்கிரத்தில் சாக்கிரம் எச்சில் பூ காணிக்கை” என்று சொல்லிச் சீடரை அனுப்பிவிவிட்டார். கடைசியில் விசிறிச் சாமியாரே வந்து நாகேஸ்வரனைப் பார்த்தார். விசிறிச் சாமியாரே ‘யாப்பாணச் சாமி’ என முதலில் அழைத்தவர். இந்திய அமைதிப் படை இலங்கைக்கு வந்த காலத்தில், திடீரென யாப்பாணச் சாமியாரும் இலங்கையில் தோன்றினார். அவர் கடலால் வந்தாரா, ஆகாசத்தால் வந்தாரா என எவருமறியார். யாப்பாணச் சாமியாரின் இடையில் ஓர் அழுக்குக் கச்சை மட்டுமேயிருந்தது. உடலில் எந்த மதச் சின்னங்களும் கிடையாது. வற்றிப் போன கறுத்த மேனியில் சடை முடியும், ஒட்டிய மார்போடு தாடியும் காடு பற்றிக் கிடந்தது. அவரது கண்கள் எப்போதுமே கிறங்கியிருந்தன. இலங்கை முழுவதும் அவர் நடந்தே திரிந்தார். கடைசியாக யாழ்ப்பாணம் முற்றவெளியில், முனியப்பர் கோயில் மண்டபத்தில் தங்கிக்கொண்டார். பகல் முழுவதும் யாழ்ப்பாணக் கடைத் தெருவில் விறு விறுவென நடந்துகொண்டிருப்பார். அவர் யார், எங்கிருந்து வந்திருக்கிறார் என யாருக்கும் தெரியவில்லை. ஆனால், பெற்ற தாய்க்கு மகனைத் தெரியாமல் போய்விடுமா என்ன! சாமியைத் தரிசிக்க வந்த தாயார், அது தனது மகன் நாகேஸ்வரனே என்று கண்டுகொண்டார். சாமியாரும் தாயாரின் தலையில் கை வைத்து “உமக்கு குறையொன்றுமில்லை வேசையாரே! ஒழிந்த காரியம்!” என்று ஆசிர்வதித்து அனுப்பிவிட்டார். யாழ்ப்பாணத்துச் சனங்களுக்கு அக்காலத்தில் ஏகப்பட்ட பிரச்சினைகள். இலங்கை இராணுவம், இந்திய இராணுவம், தமிழ் இயக்கங்கள், போர் விமானங்கள், எறிகணைகள் என்றெல்லாம் அவர்கள் துக்கப்பட்டுக்கொண்டிருந்தார்கள். அவர்களின் சார்பாகப் பேச யாருமேயில்லை. அவர்களுக்குக்குப் பற்றிக்கொள்ளவும் ஏதுமில்லை. வராமல் வந்த யாப்பாணச் சாமியைச் சனங்கள் பேசும் தெய்வமாகவே பார்த்தார்கள். தெய்வத்தின் குரலில் அவர்கள் குற்றமோ குறையோ கண்டுபிடிக்கத் தயாராகயில்லை. யாப்பாணச் சாமி மட்டுமே, அந்தக் காலத்தில் எவரிடமும் துணிந்து பேசும் வல்லமையைக் கொண்டிருந்தார். ஆர்மி, இயக்கம் என்றெல்லாம் பாகுபாடு காட்டாமல் எல்லோரையுமே கெட்ட வார்த்தைகளில் ஆசிர்வதித்துப் புத்தி சொன்னார். ’யுத்தம் வேண்டாமடா புண்டை மக்களே" என அவர் சொல்லாத நாளில்லை. ஆனால், பகுத்தறிவுவாதிகள் எல்லா இடங்களிலும் இருப்பது போலவே இயக்கத்திலுமிருந்தார்கள், இராணுவத்திலுமிருந்தார்கள். அவர்களால் எத்தனையோ தடவைகள் யாப்பாணச் சாமிக்கு துன்பம் உண்டாகியிருக்கிறது. அவரை யாராவது பிடித்துச் சென்றால், அடுத்தநாளே வேறொரு இடத்தில் சாமி தோன்றினார். சாமியார் எத்தகைய சிறையையும் உடைத்துக்கொண்டு வெளியே வரக் கூடியவர் என்று மக்கள் பேசிக்கொண்டார்கள். முனியப்பர் கோயிலில் எறிகணை விழுந்தபோது, சாமி படுத்திருந்த பகுதியே முற்றாக இடிந்து விழுந்துவிட்டது. ஆனால், சாமியார் அடுத்தநாளே முல்லைத்தீவுக் கடற்கரையில் காட்சியளித்தார். ஒரே நேரத்தில் பல இடங்களில் சாமி காட்சியளித்ததற்கு, உறுதியான சாட்சியங்கள் உண்டென்று எழுதியிருக்கிறார் பார்பரா பிரிக்மென். பார்பரா, சாமியாரை முதன் முதலில் சந்தித்தது ஆனையிறவில். அப்போது பார்பரா ஓரளவு தமிழ் பேசக் கற்றிருந்தார். நீண்ட காலமாக கீழைத்தேய சித்தர் மரபில் அக்கறை கொண்டிருந்த பார்பரா, முதற் சந்திப்பிலேயே யாப்பாணச் சாமியின் வசமாகிவிட்டார். ஆனையிறவு உப்பள வெளியில் யாப்பாணச் சாமியார் தன்னுடன் ஒரேயொரு தடவை உடலுறவு கொண்டதாகவும், அப்போது பார்பரா மேலே பார்த்தபோது போர் விமானங்கள் சுற்றிக்கொண்டிருந்ததாகவும், கீழே பார்த்தபோது உப்பு, கரியாக மாறியிருந்தது என்றும் எழுதியிருக்கிறார் பார்பரா பிரிக்மென். யாப்பாண சாமி, துறவிக்கு முன்னே வேந்தனும் துரும்பு என்பதை நிரூபணம் செய்தவர். மதங்களை கள்ள ஓழில் பிறந்த வம்புத் தத்துவங்கள் என்றவர். பரமகுருவை சடங்குகள் மூலம் அல்லாமல் சத்திய வார்த்தைகள் மூலமே நெருங்க முடியுமென்றவர். ‘கு’ என்றால் ஆன்மா, ‘ரு’ என்றால் சிதைவு. ‘குரு’ என்பவன் ஆன்மாவைச் சிதைப்பவன் என்றவர். பெண்களுடைய கையிலேயே நாட்டின் நிர்வாகமும் ஆட்சியும் இருக்க வேண்டுமென்றவர். ஒருநாள், சாமி யாழ்ப்பாணத்திலிருந்து காணாமற்போனார். அவர் திரும்பி வருவார், எப்போதும் போலவே திடீரெனக் காட்சியளிப்பார் என யாழ்ப்பாண மக்கள் காத்திருக்கிறார்கள். 3 பார்பரா பிரிக்மென், யாப்பாணச் சாமியைக் குறித்து எழுதிய ‘Bad Word God’ புத்தகத்தை, இலண்டனிலுள்ள சுமாரான ஒரு பதிப்பகம்தான் வெளியிட்டது. ஆனாலும் எப்படியோ அந்தப் புத்தகம், திரைப்பட இயக்குனர் பென்னி ஸெனாபுடைய பார்வைக்கு வந்துவிட்டது. யாப்பாணச் சாமியாரின் புகைப்படங்களுடன் அச்சிடப்பட்டிருந்த அந்தச் சிறிய புத்தகத்தைப் படித்தபோது, பென்னி ஸெனாபு பரவசத்தின் உச்சத்துக்கே போய் “இதோ இன்னொரு ஜரதுஷ்ட்ரா” என்று கூச்சலிட்டார். பென்னி ஸெனாபுக்கு நாற்பது வயதாகிறது. சோமாலியா நாட்டைச் சேர்ந்தவர். உள்நாட்டு யுத்தத்திலிருந்து தப்பித்து, சரக்குக் கப்பலில் திருட்டுத்தனமாகப் பசியும் பட்டினியுமாகப் பயணித்து, அவர் இங்கிலாந்தின் ‘போர்ட்லான்ட்’ துறைமுகத்துக்கு வந்து சேரும்போது, அவருக்குப் பத்தொன்பது வயதுதான். இரவில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வேலை பார்த்துக்கொண்டே, பகலில் அவர் கல்வியைத் தொடர்ந்தார். இங்கிலாந்து தேசியத் திரைப்படக் கல்லூரியில் சேர்ந்து, திரைப்பட இயக்குனராகப் பயின்று, பென்னி ஸெனாபு பட்டம் பெறும்போது, அவருக்கு வயது முப்பத்தொன்று. நான்கு வருடங்கள் உதவி இயக்குனராகவும், இணை இயக்குனராகவும் பல்வேறு மூத்த திரைப்பட இயக்குனர்களிடம் வேலை செய்த பென்னி, தன்னுடைய முப்பத்தாறாவது வயதில் முதல் படத்துக்கான திரைக்கதையை எழுதி முடித்தார். படத்திற்குப் பெயர் ‘Sweet Pirates’. சோமாலியக் கடற்கொள்ளையர்களைப் பற்றிய கதையது. அந்தக் கதையை எடுத்துக்கொண்டு, பென்னி ஏறி இறங்காத திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்கள் அய்ரோப்பாவிலேயே இல்லை. அமெரிக்காவில் கூட முயற்சி செய்து பார்த்தார். திரைக்கதை ஒழுங்கற்று இருப்பதாகப் பாதி நிறுவனங்களும், திரைக்கதை புரியவில்லை எனப் பாதி நிறுவனங்களும் முகத்திலடித்தது போல சொல்லிவிட்டார்கள். பென்னி ஸெனாபுவின் கதை சொல்லும் பாணி ‘Postdadaism’ வகையைச் சேர்ந்தது. துண்டு துண்டாகக் கோர்வையில்லாமல் கதை போகும். ஆனால் கதையின் சரடில் ஒரு தீர்க்கமான அரசியல் நிலைப்பாடிருக்கும். கடைசியாக, பெர்லினில் செயற்படும் ஒரு சுயாதீன திரைப்படக் கழகத்தின் ஆதரவு பென்னிக்குக் கிடைத்தது. மிகச் சிறிய பட்ஜெட்டில்தான் ‘Sweet Pirates’ திரைப்படத்தை பென்னி உருவாக்கினார். சிறிய படப்பிடிப்புக் குழுவினருடனும், ஆறு ஆங்கில நடிகர்களுடனும் சோமாலியாவுக்குச் சென்ற பென்னி, அங்கே மற்றைய நடிகர்களைத் தேர்வு செய்துகொண்டார். இருபத்தெட்டு நாட்களில் படப்பிடிப்பை முடித்துக்கொண்டு இலண்டன் திரும்பிவிட்டார். சோமாலியாவில் நிலவும் வறுமையால், எப்படிச் சிறுவர்கள் கடற்கொள்ளையர்களால் கவரப்பட்டு அவர்களுடன் இணைந்துகொள்கிறார்கள் என்பதுதான் திரைப்படத்தின் அடிப்படைக் கதை. ஆனால், பென்னி அத்தோடு நிறுத்திக்கொள்வாரா என்ன! அய்ரோப்பியர்களே வரலாற்றின் முதன்மையான கடற்கொள்ளையர்கள் என்பதையும் படத்தில் துண்டு துண்டாகப் புகுத்திவிட்டார். ‘Sweet Pirates’ திரைப்படத்தை அய்ரோப்பியப் பத்திரிகைகள் முற்றிலும் நிராகரித்துவிட்டன. ‘இயக்குனர் பென்னி வரலாற்றைத் துண்டு துண்டாகப் புரிந்து வைத்திருக்கிறார்’ என்று அவர்கள் எழுதினார்கள். காலனியம் என்பது வரலாற்றின் வளர்ச்சிப் போக்கில் தவிர்த்திருக்க முடியாதது என்றார்கள். தங்களது கருத்துக்கு ஆதரவாக, கார்ல் மார்க்ஸை சில இடதுசாரிப் பத்திரிகைகள் அழைத்திருந்தன. மறுபுறத்தில், சோமாலியாக் கடற்கொள்ளைச் சமூகத்திடமிருந்து பென்னிக்குக் கொலை மிரட்டலே வந்தது. தங்களது தொழில் இரகசியங்களை வெள்ளையர்களுக்குக் காட்டிக்கொடுத்த ‘கறுப்புத் துரோகி’ என அவர்கள் பென்னி ஸெனாபுவைச் சொன்னார்கள். அந்த பெர்லின் திரைப்படக் கழகத்தின் முயற்சியால், சில திரைப்பட விழாக்களில் படம் திரையிடப்பட்டது. நுட்பமான இரசிகர்களால் படம் ஓரளவு பாராட்டப்பட்டாலும், போட்ட பணம் திரும்பக் கிடைக்கவில்லை. பென்னி, தன்னுடைய முப்பத்தெட்டாவது வயதில், இரண்டாவது திரைப்படமான Zarathustra-வை எடுத்தார். இந்தப் படத்தை ஓர் இங்கிலாந்து நிறுவனம் பெரும் பொருட் செலவில் தயாரித்தது. பண்டைய பாரசீகத்தில் தோன்றிய ‘சரத்துஸ்தர்’ எனும் ஞானியின் வரலாறே கதை. வரலாற்றில் முன்னும் பின்னுமாகச் செல்லும் கதையில் இயேசுக் கிறிஸ்து, புத்தர், முகமது நபிகள் எல்லோரும் சாதாரண மனிதர்களாகவே வந்து போகிறார்கள். அந்த வருடம் எந்த ஈரானியப் படமும் சர்வதேசத் திரைப்பட விழாக்களுக்கு வந்து சேரவில்லை எனத் திரைப்பட விழா இயக்குனர்கள் கவலைப்பட்டதைத் காட்டிலும், ஈரான் அரசே அதிகமும் கவலையடைந்திருந்தது. ஈரான் வரலாற்றுடன் தொடர்புடைய பென்னியின் திரைப்படம் வெளியாகியதும், அந்த கவலையிலிருந்து மீண்டு உற்சாகமடைந்த ஈரான் அரசு, உடனடியாகவே தன்னுடைய நாட்டில் அந்தப் படத்திற்குத் தடை விதித்தது. எக்காலத்திலும் ஈரானுக்குள் பென்னி ஸெனாபு நுழையக் கூடாது என்ற தடையும் விதிக்கப்பட்டது. அந்தத் திரைப்படம் உண்மையிலேயே மிகச் சிறந்த படம்தான். பென்னியின் முழுக் கலை மேதைமையும் திரைப்படத்தில் வெளிப்பட்டிருந்தது. வணிக ரீதியில் படம் பெரிய வெற்றியடையவில்லை என்றாலும், மிகச் சிறந்த இயக்குனர் என்ற பெயரை அந்தப் படம் பென்னிக்குப் பெற்றுக் கொடுத்தது. ஓர் ஆங்கிலப் பத்திரிகை பென்னியை ‘கறுப்பு ஸ்டான்லி குப்ரிக்’ என்றெழுதியது. பதிலுக்கு பென்னி ‘Fuck off’ என்று சொல்லிவிட்டார். பார்பரா ப்ரீக்மென் எழுதிய யாப்பாணச் சாமியின் வரலாற்றைப் படித்தவுடன், தன்னுடைய அடுத்த படம் ‘Bad Word God’ என்று பென்னி முடிவு செய்துவிட்டார். உடனேயே அவர் பார்பராவைச் சந்தித்துப் பேசினார். பார்பரா மூலமாக ‘இலண்டன் யாழ்ப்பாண சுவாமிகள் சத் சங்கம்’ என்ற அமைப்பின் நிறுவனரான சதாசிவம் ஆசிரியரைச் சந்தித்தார். சதாசிவத்துடன் பேசப் பேச பென்னி ஸெனாபுவின் மனதில் திரைப்படம் விரிந்துகொண்டேயிருந்தது. பென்னி இப்படித்தான் வரைவு எழுதினார்: இலங்கையில் நடைபெற்ற யுத்தம், அதற்கும் ஏகாதிபத்திய அரசுகளுக்குமுள்ள கள்ள உறவு, வன்முறையில் நாட்டம் கொண்ட இலங்கை அரசு, எதிர்விளைவாகத் தோன்றிய ஆயுத இயக்கங்கள், யாப்பாணச் சாமி எனும் சித்தர், யுத்தத்துக்கு எதிரான அவரது குரல், அதிகாரங்ளை எள்ளிநகையாடிய அவரது உரையாடல்கள், சமூகத்தால் அசுத்தமானவை எனச் சொல்லப்படும் வார்த்தைகளைப் புனிதமாக்கிக் கவிழ்த்துப் போட்டது, மறைந்து திரியும் சித்தனின் படிமம். இவற்றை நினைக்க நினைக்க, கலையின் உன்மத்த நிலைக்கே பென்னி போய்விட்டார். பார்பராவின் புத்தகத்தில் இல்லாத ஒரேயொரு விடயத்தை மட்டுமே பென்னி திரைக்கதையில் சேர்த்துக்கொண்டார். படத்தின் இறுதிக்காட்சியில் குண்டுகளால் துளைக்கப்பட்ட யாப்பாணச் சாமியின் உடல் கடலில் மிதந்து செல்கிறது. Zarathustra படத்திற்குப் பின்பு, பெரிய பெரிய தயாரிப்பு நிறுவனங்கள் எல்லாமே பென்னியின் அடுத்த படத்தைத் தயாரிக்க ஆர்வமாகயிருந்தன. ஆனால் அந்த நிறுவனங்களின் வணிக நிர்ப்பந்தங்களுக்கு உட்படாமல், சுதந்திரமாகவே இந்தப் படத்தை இயக்க பென்னி விரும்பினார். இந்தப் படத்திற்கு ஒருபகுதி நிதியளிக்க ‘பிரித்தானிய தேசியத் தொலைக்காட்சி நிறுவனம்’ முன்வந்தது. ஆனால் அந்தத் தொகை படத்தின் பட்ஜெட்டில் பத்து விழுக்காடு கூட வராது. மிகுதிப் பணத்தைத் தன்னுடைய நண்பர்களிடமிருந்து கடனாக பென்னி திரட்டிக்கொண்டார். ‘இலண்டன் யாழ்ப்பாண சுவாமி சத் சங்கம்’ தன்னுடைய சிறிய பங்களிப்பாக 5001 பவுண்டுகளை இயக்குனர் பென்னிக்கு வழங்கியது. இந்தத் திரைப்படத்தால், யாப்பாணச் சாமியின் மகிமை உலகமெங்கும் பரவிவிடும் என்று சதாசிவம் நினைத்ததால், தன்னுடைய முழுமையான பங்களிப்பை இயக்குனர் பென்னிக்கு வழங்கினார். பென்னி எழுதிய திரைப்படப் பிரதியில் அறுபது வீதத்திற்கு மேற்பட்டவை தமிழில் பேசப்பட வேண்டிய வார்த்தைகள். ஆங்கிலத்தில் எழுதப்பட்ட அந்த வார்த்தைகளைத் தமிழில் மொழிபெயர்க்கும் பொறுப்பை ஆசிரியர் சதாசிவமே ஏற்றுக்கொண்டார். இதை யாப்பாணச் சாமிக்குச் செய்யும் பெரும் தொண்டாகவே அவர் கருதினார். வேலைக்கு மூன்று மாதங்கள் லீவு போட்டுவிட்டு, வசனங்களை மொழிபெயர்ப்புச் செய்து முடித்தார். அடுத்த கட்டமாக நடிகர்கள் தேடும் படலம் தொடங்கியது. இந்தத் திரைப்படத்தில் முற்றிலும் புதிய முகங்களையே நடிக்க வைக்க வேண்டுமென்பதில் பென்னி உறுதியாகயிருந்தார். யாப்பாணச் சாமியார் மட்டுமே படத்தில் முதன்மைப் பாத்திரம். மற்றைய தமிழ் – சிங்களப் பாத்திரங்கள் எல்லாமே உதிரிகள். அந்த உதிரிப் பாத்திரங்களை இலங்கைக்குப் போய்க் கண்டுபிடித்துவிடலாம் என பென்னி முடிவு செய்தார். பார்பராவாக நடிப்பதற்கு உதவி இயக்குனர் எலிசா தயாராகயிருந்தாள். ஆனால் சாமியார் பாத்திரத்திற்கு ஒரு தேர்ந்த நடிகர் தேவை. இருபது வயதிலிருந்து நாற்பது வயதுவரையான பாத்திரத்தை ஏற்று நடிக்க வேண்டும். அதிகம் பேசாத பாத்திரம். எனவே உடல்மொழிக்குப் பெரும் பங்கிருந்தது. யாப்பாணச் சாமியாரின் தோற்றத்திற்குப் பொருந்தக்கூடிய ஓர் இலங்கைத் தமிழ் நடிகரை, அய்ரோப்பா முழுவதும் பென்னி சல்லடை போட்டுத் தேடினார். நடிப்புக் கல்லூரிகளில் ஒரு தமிழ் மாணவன் கூடக் கிடையாது. பென்னியுடனேயே அலைந்துகொண்டிருந்த சதாசிவம் “எங்களுடைய மக்கள் நடிப்புக் கல்லூரிக்குப் பிள்ளைகளை அனுப்புவதில்லை, எல்லாமே டொக்டர், இஞ்சினியர் படிப்புத்தான்” என்று நிலைமை புரியாமல் கொஞ்சம் பெருமையாகவே சொன்னார். பாரிஸில் ஒரு நடிப்புப் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த ஒரேயொரு தமிழ் மாணவனுக்குத் தமிழும் தெரியாது, ஆங்கிலமும் தெரியாது. தவிரவும் அந்தப் பையன் நூறு கிலோ எடையிலிருந்தான். எலும்பும் தோலுமான யாப்பாணச் சாமிக்கு அவன் பொருந்தான். அய்ரோப்பாவில் 20 -30 வயதுக்குட்பட்ட இளைஞர்களால் நடத்தப்படும் தமிழ் மேடை நாடகக் குழுக்களிலிருந்து ஒரு நடிகரைக் கண்டுபிடித்துவிடலாம் என பென்னி நம்பினார். ஆனால் அப்படியொரு தமிழ் இளைஞர் நாடகக் குழுவே முழு அய்ரோப்பாவிலும் கிடையாது என பென்னி அறிந்தபோது, அவருக்கு இது புரியவேயில்லை. சதாசிவமோ “கூத்தாடுவதும் குண்டி நெளிப்பதுவும் ஆத்தாதவன் செயல் என்றொரு பழமொழி தமிழில் இருக்கிறது” என்று சொல்லி, பென்னியை மேலும் குழப்பத்துக்குள் தள்ளினார். வேறு வழியில்லாமல் அடுத்த கட்ட சமரசத்துக்கு இறங்கிய பென்னி, ஒரு காஸ்டிங் ஏஜென்ஸி மூலம் ’தமிழ் பேசத் தெரிந்த நடிகர் தேவை" என்று விளம்பரம் கொடுத்தார். அய்ந்தாறு பேர்தான் விண்ணப்பித்திருந்தார்கள். “இந்த விளம்பரங்களை எங்களுடைய சனங்கள் கவனிக்கமாட்டார்கள்” எனச் சொல்லி, கூடவேயிருந்து சதாசிவம் இயக்குனரை எரிச்சலூட்டிக்கொண்டிருந்தார். விண்ணப்பித்திருந்தவர்களில் நேசன் என்ற முப்பது வயது இளைஞனை பென்னிக்குப் பிடித்திருந்தது. அய்ந்து வருடங்களுக்கு முன்புதான், இலங்கையிலிருந்து அவன் லண்டனுக்கு வந்திருந்ததால், யாழ்ப்பாணத் தமிழை நேசன் அச்சு அசலாகப் பேசினான். நேர்முகத் தேர்வு செய்தபோது, நேசனின் நடிப்பும் பென்னிக்கு ஓரளவு திருப்தியாகவேயிருந்தது. சில நடிப்புப் பயிற்சிகளின் மூலம் அவனைத் தயார் செய்துவிடலாம் என நம்பிக்கைகொண்டார். படப்பிடிப்புக்காக இலங்கைக்குச் செல்வதற்கான நாளும் குறிக்கப்பட்டது. நாற்பத்தைந்து நாட்கள் படப்பிடிப்புக்கு மட்டுமே இலங்கை அரசால் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. அதைப் பெறுவதற்கே பல இடங்களில் இலஞ்சம் தள்ள வேண்டியிருந்தது. தயாரிப்பு நிர்வாகிகள் முன்தயாரிப்புகளுக்காக இலங்கைக்குப் புறப்பட்டுச் சென்றுவிட்டார்கள். பென்னி, ஒரு நாளைக்கு எட்டு மணிநேரம் என்ற அளவில் நேசனுக்கு நடிப்புப் பயிற்சி அளித்துக்கொண்டிருந்தார். படப்பிடிப்புக் குழு இலங்கைக்குப் புறப்படுவதற்கு இரண்டு நாட்கள் முன்னதாக, நேசன் காணாமற் போய்விட்டான். பென்னியும் சதாசிவமும் மாறிமாறி நேசனுக்குத் தொலைபேசி செய்தும் பதிலில்லை. என்ன செய்வதென்று இவர்கள் திகைத்து நின்றிருந்தபோது, நேசனிடமிருந்து சதாசிவத்துக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. சதாசிவம் கிட்டத்தட்ட அழுதேவிட்டார். “தம்பி நேசன்…நாளண்டைக்கு நாங்கள் சிலோனுக்குப் போகோணும், நீர் திடீரெண்டு மிஸ்ஸிங்” “ஓம் ஐயா…ஒரு சின்னப் பிரச்சினை” “என்ன பிரச்சினை, உமக்கு இலங்கைப் பாஸ்போர்ட்தானே..விசாப் பிரச்சினை இல்லையே” “இது வேற பிரச்சினை ஐயா…படத்தில செக்ஸ் சீன் ஒண்டு இருக்கெல்லே. சாமியாரும் அந்த வெள்ளைக்கார மனிசியும் ஆனையிறவில உடுப்பில்லாமல் செய்யிற மாதிரி…அந்தக் கட்டத்தை நான் நடிக்கக் கூடாது எண்டு நான் விரும்பியிருக்கிற பிள்ளை சொல்லுது…இன்னும் மூண்டு மாதத்தில எங்களுக்குக் கலியாணம்” “தம்பி…பின்ன நீ நடிக்கத்தானே போறாய்..உண்மையாவே செய்யப் போறாய்…படம்தானே” “ஐயா உங்களுக்குப் படம், எனக்கு இது வாழ்க்கை. மன்னிச்சுக்கொள்ளுங்கோ. வணக்கம்.” சதாசிவம் அடித்துப் பிடித்துக்கொண்டு பென்னியிடம் ஓடிப் போய் விஷயத்தைச் சொன்னபோது, பென்னி இடிந்து போய்விட்டார். இலங்கைக்குக் கிளம்ப இன்னும் முப்பது மணிநேரம் தானுள்ளது. இந்த இடைவெளியில் இன்னொரு நடிகனைக் கண்டு பிடிப்பது நடக்கக்கூடிய காரியமா என்ன! பென்னி கண்களை இறுக மூடியவாறு யோசித்துக்கொண்டேயிருந்தார். அவரது மூளைக்குள் யாப்பாணச் சாமியாரின் வாடிய முகமும் கிறங்கிய கண்களும் வந்து போய்க்கொண்டேயிருந்தன. அந்த முகத்தைத் தான் நேரில் பார்த்திருப்பது போல அவருக்குத் திடீரெனத் தோன்றலாயிற்று. தனது பருத்த உள்ளங்கையால் படபடவெனத் தனது நெற்றியில் அடித்துக்கொண்டார். தான் காணும் முகம் ஓம்கார் பூஷன் என்பவனின் முகமே என்பது திடீரென அவருக்கு உறைத்தது. ஓம்கார் பூஷன் ஒரு மராட்டியன். இலண்டனில் ஒரு சிறிய நாடகக் குழுவில் நடிப்பவன். இரண்டு மூன்று தடவைகள் பென்னியைச் சந்தித்து நடிக்க வாய்ப்புக் கேட்டிருக்கிறான். அவனின் முகமும் உருவமும் யாழ்பாணச் சாமியைப் போலவேயிருக்கும். நிறமும் அட்டைக் கறுப்புத்தான். பென்னி தொலைபேசியில் ஓம்காரை அழைத்த எட்டாவது நிமிடத்தில், அவன் பென்னியின் அலுவலகத்திலிருந்தான். ஓம்காரிடம் அந்த ஆனையிறவுக் காட்சியைக் கொடுத்து, நடித்துக் காட்டுமாறு கேட்டார் பென்னி. அந்தக் காட்சி எழுதப்பட்டிருந்த தாளை வாங்கிப் படித்தபோது; அதில் சாமி, பார்பரா என இரண்டு பாத்திரங்களிருந்தன. இதில் எந்தப் பாத்திரத்தை பென்னி நடித்துக்காட்டச் சொல்கிறார் என்றெல்லாம் ஓம்கார் யோசிக்கவேயில்லை. சடசடவென மாறி மாறிச் சாமியாரின் பாத்திரத்தையும், பார்பராவின் பாத்திரத்தையும் ஒருசேர ஓம்கார் நடித்துக்காட்டினான். ஓரமாக நின்று பார்த்துக்கொண்டிருந்த சதாசிவம் உணர்ச்சி மிகுதியால் கண்ணீர் உகுத்தார். அர்த்தநாரீஸ்வரரின் ஆனந்தத் தாண்டவத்தைப் பார்ப்பது போலிருந்தது அவருக்கு. இவன்தான் தான் தேடிக்கொண்டிருந்த நடிகன் என்பது பென்னிக்குப் புரிந்துவிட்டது. இலங்கைக்கு விமானத்தில் பறந்துகொண்டிருக்கும் போது, பென்னிக்கு அருகில்தான் சதாசிவம் உட்கார்ந்திருந்தார். ஏதோ யோசித்துக்கொண்டிருந்த பென்னி, திடீரென சதாசிவத்தின் தோளைத் தட்டி “இந்த ஓம்காரைவிட, அந்தத் தமிழ்ப் பையன் நேசன் சிறப்பான தேர்வு என நீங்கள் நினைக்கவில்லையா?” என்று கேட்டார். பதிலாக சதாசிவம் இவ்வாறு சொன்னார்: “ஸீ மிஸ்டர் பென்னி, பாரதியார் என்றொரு மகாகவி எங்களிடமிருந்தார். தான் அறிந்த மொழிகளில் தமிழைப் போல சிறந்த மொழி இல்லையென்றார். ஆனால் அவரது வாழ்க்கையைப் படமாக எடுத்தபோது, பாரதியாரின் பாத்திரத்தில் ஒரு மராட்டிக்காரன்தான் நடித்தான். தமிழ்க் கவிஞனின் வேடத்திலேயே மராத்திக்காரன் நடிக்கும்போது, தமிழ் சித்தனின் வேடத்தில் நடிக்கமாட்டானா!” புன்னகையுடன் பென்னி, சதாசிவத்தின் தோளைத் தட்டினார். அந்த உற்சாகத்திலேயே கடகடவென நாற்பது நாட்களுக்குள் யாழ்ப்பாணத்தில் படப்பிடிப்பை முடித்துக்கொண்டு, குழுவினருடன் இலண்டன் திரும்பினார். எடிட்டிங், மிக்ஸிங் வேலையெல்லாவற்றையும் இரவு பகலாக உட்கார்ந்து மேற்பார்வை பார்த்து, இரண்டு மாதங்களுக்குள் முடித்துவிட்டார். படத்தை எந்த உலகத் திரைப்பட விழாவில் ‘பிரீமியர்’ செய்யலாம் என பென்னி யோசித்துக்கொண்டிருந்த போதுதான், சதாசிவம் ஒரு வேண்டுகோளை முன்வைத்தார். “ஸீ மிஸ்டர் பென்னி! வருகிற வெள்ளிக்கிழமை, எங்களது சத் சங்கத்தில் இந்தப் படத்தைத் திரையிட வேண்டுமென்று உங்களைத் தயவாகக் கேட்கிறேன். யாப்பாணச் சாமியின் அடியார்களும், சில தமிழ்ப் பத்திரிகையாளர்களும், தமிழ் புத்திஜீவிகளும் இந்தப் படத்தைக் காண்பதற்கு ஆவலாகயிருக்கிறார்கள்.” சதாசிவத்தைப் பார்த்துப் புன்னகைத்த பென்னி “இது உங்களின் படம், உங்களின் வாழ்வு. நான் வெறும் கருவிதான். நிச்சயமாகத் திரையிடுவோம்!” என்றார். வெள்ளிக்கிழமை மாலை, இலண்டன் யாழ்ப்பாண சுவாமிகள் சத் சங்க மண்டபத்தில், புரஜெக்டர் வைத்து, சிறப்பு அழைப்பாளர்களுக்குப் படம் திரையிடப்பட்ட சில மணி நேரங்களுக்குள்ளேயே, இயக்குனர் பென்னி ஸெனாபு குறித்த குற்றச்சாட்டுகள் இணையத்தில் வரிசைகட்டித் தோன்ற ஆரம்பித்தன. படத்தில் தமிழ்மொழி கொச்சையாக உச்சரிக்கப்படுகிறது, முதன்மைப் பாத்திரத்தில் ஈழத் தமிழ் நடிகர் அல்லாமல் யாரோ மராத்திக்காரர் நடிக்க வைக்கப்பட்டிருக்கிறார், படப்பிடிப்புக்குப் போயிருந்தபோது, இனப்படுகொலை இலங்கை அரசின் அமைச்சரை இயக்குனர் பென்னி ஸெனாபு சந்தித்திருக்கிறார் என்றெல்லாம் கண்டனங்கள் எழுதப்பட்டன. சதாசிவம்தான் இந்தக் குற்றச்சாட்டுகளை பென்னியின் காதுக்குக் கொண்டுவந்தார். இயக்குனர் பென்னி இத்தகைய கண்டனங்களுக்கு அஞ்சக் கூடியவரல்ல. அவர் கடற்கொள்ளையர்களின் மிரட்டலிலிருந்து, ஈரான் அரசின் தடையிலிருந்து, வெள்ளைப் பத்திரிகையாளர்களின் நிறவெறி வரை சந்தித்த பழுத்த பழம். அஞ்சவில்லையே தவிர, அவர் மனமார வருத்தப்படத்தான் செய்தார். தனக்கு அந்நியமான ஒரு நிலத்தை, மொழியை, கலாசாரத்தை, அங்கே நடந்த போரை அவர் தன்னால் முடிந்தளவு உண்மைத்தன்மையோடு படமாக்கியிருக்கிறார். ஆனால் சம்பந்தப்பட்ட சமூகமே படத்தை எதிர்த்தால், அவர் எங்கேயோ தவறிழைத்திருக்கிறார் என்றே பொருள் என்பதாகத்தான் பென்னி நினைத்தார். படத்தின் மீது அதிருப்திகொண்டவர்களைச் சந்தித்து உரையாடி, ஒரு நல்ல தீர்வுகாண விரும்புவதாக அவர் சதாசிவத்திடம் சொன்னார். சத் சங்கத்திலேயே அந்தக் கலந்துரையாடலுக்கு நாள் குறிக்கப்பட்டது. கலந்துரையாடலைத் தொடக்கி வைத்துப் பேசிய பென்னி, தனக்குத் தமிழ் மொழி தெரியாததற்கு வருந்துவதாகக் குறிப்பிட்டார். படத்தில் பேசப்படும் தமிழ் உரையாடல்களில் தவறிருந்தால், அவற்றைச் சரி செய்துகொள்வதாகவும் உறுதியளித்தார். “அதில் பல இடங்களில் பேசப்படுவது தமிழே கிடையாதே” என்று ஒருவர் குரலெழுப்பினார். பென்னி சங்கடத்துடன் சதாசிவத்தைப் பார்த்துக்கொண்டே “மதிப்புக்குரிய ஆசிரியர் சதாசிவம் தான் தமிழ் உரையாடல்களை எழுதியவர்” என்றார். சதாசிவத்துக்கு தெருவில் சீலை உரிந்து விழுந்தது போலிருந்தது. அந்தக் காலத்திலேயே தமிழ் பண்டிதர் சோதனை பாஸ் பண்ணியவர் அவர். தமிழ் உரையாடல்களை இலக்கண சுத்தமாக எழுதியிருந்தார். படப்பிடிப்பில் ஓம்கார் அவற்றைப் பேசியபோது, சரி போலத்தான் சதாசிவத்துக்கும் பட்டது. ஆனால் திரையில் பெரிய சத்தமாகக் கேட்டால் அங்கங்கே குழம்பிக் கேட்கிறது. சதாசிவம் கையைப் பிசைந்துகொண்டே அமைதியாக உட்கார்ந்திருந்தார். “பொதுமக்களுக்குத் திரையிடுவதற்கு முன்பாக நாங்கள் வசனங்களைச் சரி செய்து விடுகிறோம்” என்று பென்னி மறுபடியும் வாக்குறுதி கொடுத்துவிட்டு, “உங்களுக்குள் டப்பிங் பேசி அனுபவப்பட்ட யாராவது இருந்தால் கூட எங்களுக்கு உதவலாம்” எனச் சொல்லிப் புன்னகைத்து ஒரு சுமூகநிலையை ஏற்படுத்த முயற்சித்தார். “தமிழைப் பிழையாகப் பேசினாலும் பரவாயில்லை, தமிழ் என்று சிங்களத்தைப் பேசுகிறார்கள்…” என்று ஒருவர் குற்றம்சாட்டினார். இதைக் கேட்டு மிரண்டு போன பென்னி, பரிதாபமாக சதாசிவத்தைப் பார்த்தார். சதாசிவம் ஈனமான குரலில் “அப்படி இருக்க வாய்ப்பில்லையே…என்ன வசனம்?” எனக் கேட்டார். “முயங்க… முயங்க என்று பல இடங்களில் வருகிறது…” என்றார் குற்றம் சாட்டியவர். சதாசிவத்துக்குப் பிரச்சினை புரிந்துவிட்டது. ஆங்கில வசனத்தில் Fuck Fuck Fuck என்று பக்கத்துக்குப் பக்கம் எழுதி வைத்திருந்தார் பென்னி. அதைத் தூய தமிழில் ‘முயங்க… முயங்க…முயங்க’ என்று சதாசிவம் எழுதியிருந்தார். சதாசிவம் குற்றம் சாட்டியவரைப் பார்த்து “அது தமிழ் தானுங்கோ” என்றார். அதற்குக் குற்றம்சாட்டியவர் " எனக்கு யாழ்ப்பாண, மட்டக்கிளப்பு, கொழும்பு எல்லாத் தமிழும் தெரியும். இப்பிடியொரு புதினமான தமிழ நான் கேள்விப்பட்டதில்ல" என்று அதிருப்தியுடன் சொன்னார். “சாமியார் பாத்திரத்தில் ஏன் ஈழத் தமிழரை நடிக்க வைக்கவில்லை?” என்று அடுத்த கேள்வி கோபத்துடன் முன்வைக்கப்பட்டது. பென்னிக்குக் கண்களில் கண்ணீரே வந்துவிடும் போலிருந்தது. தனது பருத்த கைகளை மார்போடு கட்டியவாறு “முயற்சித்தேன்..என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை” என்றார். “ஹோ” என்ற அதிருப்திச் சத்தம் மண்டபத்தில் எழுந்தது. அதைத் தொடர்ந்து “நீங்கள் இன்னும் தீவிரமாகத் தேடியிருக்க வேண்டும்” என்றொரு குரல் கேட்டது. “மிஸ்டர் பென்னி ஸெனாபு! நீங்கள் கொழும்பில் இலங்கை அமைச்சரைச் சந்தித்தது ஏன்?” ஒரு இளைஞன் கேள்வி எழுப்பினான். “படப்பிடிப்புக்கு அனுமதி வாங்க அவர்களைத் தான் சந்திக்க வேண்டும். வேறு வழியில்லை. இந்தக் கதையை நான் இங்கிலாந்தில் எடுக்க முடியாதல்லவா என் நண்பரே. நான் மட்டுமல்ல, நிறைய வெளிநாட்டுக்காரர்கள் இலங்கையில் படப்பிடிப்பில் ஈடுபடுகிறார்கள். தவிர இலங்கையர்களும் படம் தயாரிக்கிறார்கள். எல்லோருமே அரசாங்கத்திடம் அனுமதி வாங்கத்தான் வேண்டியிருக்கிறது.” “படத்தில் சாமியாரை அடிக்கும் காட்சியை அனுமதிக்க முடியாது. அது எங்களது உணர்வுகளைப் புண்படுத்தும்”என்றார் ஒருவர். “சித்திரவதை முகாமில் சாமி அடிக்கப்படுவதுதானே சாமியின் வாழ்வில் திருப்புமுனையாகிறது…அந்தக் காட்சி இல்லாமல் எப்படி?” என்று கேட்டார் பென்னி. “அது எங்களுக்கும் தெரியும். நான் சொல்வது பாலசாமியை அடிப்பது பற்றி…” படத்தின் முற்பகுதியில், பத்து வயதுச் சிறுவனான நாகேஸ்வரன் கிரிக்கெட் விளையாடுவான். ‘போய்ப் பாடத்தைப் படி’ எனத் தாயார் சிறுவனின் முதுகில் ஒரு அடி போடுவார். “கிரிக்கெட் அடிக்கிறவனப் பற்றிப் படமெடுத்தாலும் இவையிட மனம் புண்படுது, கிரிக்கட் அடிக்கிறவனை அடிச்சாலும் இவையிட மனம் புண்படுது” என்று சதாசிவம் மனதுக்குள் நினைத்துக்கொண்டார். ஒரு பெண்மணி எழுந்து சுற்றுமுற்றும் ஒரு தடவை பார்த்துவிட்டு, ஒரு நீண்ட உரையைத் தொடக்கினார்: “இந்தப் படத்தில் தமிழ் கொச்சையாகப் பேசப்படுவது சாதாரண பிரச்சினையல்ல. இது மொழி அரசியல். காலங்காலமாக ஒடுக்கப்படும் ஓர் இனத்தை நீங்கள் மேலும் ஒடுக்குகிறீர்கள். யாப்பாணச் சாமி எங்களது கலாசாரத்தில் மிக முக்கியமானவர். உங்களுக்குப் பக்தி இயக்கம் பற்றித் தெரிந்திருக்காது. வடமொழி ஆதிக்கத்துக்கு எதிராக எழுந்த இயக்கமது. முப்பத்தைந்து நாயன்மார் எங்களது மொழியில் உள்ளார்கள். யாப்பாணச் சாமி முப்பத்தாறாவது நாயன்மாராகக் கொள்ளக் கூடியவர்…” இப்படியாக அந்தப் பெண்மணி பேசிக்கொண்டே போனார். சதாசிவம் எதுவும் பேசக் கூடாது என்றுதான் அமைதியாக உட்கார்ந்திருந்தார். ஆனால் தரித்திரம் பிடித்த அவரது நாக்குச் சும்மாயிருக்கவில்லை. அந்தப் பெண்மணியை இடைமறித்து “முப்பத்தைந்து அல்ல…அறுபத்துமூன்று நாயன்மார்” என்றார். அதற்கு அந்தப் பெண்மணி “நாயன்மார் நம்பர்ஸ ஆளுக்காள் கூட்டிக் குறைச்சுச் சொல்லுகினம். கொன்சர்வேட்டிவ் எஸ்டிமேட் முப்பத்தைஞ்சுதான்” எனச் சொல்லிவிட்டுப் பேசிக்கொண்டே போனார். சதாசிவம் துக்கத்தோடு “பிறந்தநாள் தொட்டு எழுபது வருசமா அறுபத்துமூண்டு நாயன்மாரைத்தான் நான் கும்புடுறன்” என முணுமுணுத்துக்கொண்டார். என்னவென்பது போல பென்னி, சதாசிவத்தைப் பார்த்த போது “லுக் ஹியர் மிஸ்டர் பென்னி” என அடுத்த குரல் கம்பீரமாக ஒலித்தது. “படத்தின் இறுதியில் யாப்பாணச் சாமியின் உடல் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் காட்டப்படுகிறது. சாமியைச் சுட்டது யார்?” சற்று நேரம் யோசித்த பென்னி “எனக்குத் தெரியாது” என்றார். “ஹோ…” என்ற அதிருப்திச் சத்தம் மண்டபத்தில் முன்னிலும் சத்தமாக எழுந்தது. “கேளுங்கள் பென்னி ஸெனாபு! படைப்புச் சுதந்திரம் என்ற பேரில் நீங்கள் உங்கள் இஷ்டப்படி படம் எடுக்க முடியாது! தட்டிக் கேட்க ஆளில்லையென்று நினைத்துவிட்டீர்களா என்ன? யாப்பாணச் சாமி திரும்பவும் வருவார் என்பது எங்களின் நம்பிக்கை. நாங்கள் உங்களது படத்தைப் பகிஷ்கரிக்கிறோம்!” என்ற அந்தக் குரல் உணர்ச்சியில் நடுங்கிக்கொண்டிருந்தது. அத்தோடு அந்தக் கலந்துரையாடல் முடிந்தது. புத்திஜீவிகள் குழு, திரைப்பட விழாக்களுக்கு மெயில் அனுப்பித் தங்களது அதிருப்தியை வெளியிட்டது. பிரித்தானியாவில் வாழும் மூன்று இலட்சம் ஈழத் தமிழ் மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்பட்டு விட்டதாகக் கண்டனங்கள் எழுந்தன. அந்தப் படத்திற்கு ‘பிரித்தானிய தேசியத் தொலைக்காட்சி நிறுவனம்’ வழங்கிய உதவிப் பணத்தைத் திரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை பிரபல ஆங்கில நாளிதழ்களில் புத்திஜீவிகள் குழுவால் வெளியிடப்பட்டது. எல்லாவற்றிலும் உச்சக்கட்டமாக ‘இந்தப் படத்தை எடுத்ததற்காக இயக்குனர் பென்னி ஸெனாபு பொது மன்னிப்புக் கேட்க வேண்டும்’ என்ற கோரிக்கை வைக்கப்பட்டபோது, பென்னி முற்றிலும் பொறுமையிழந்து போய்விட்டார். தன்னைத் தனது அறைக்குள் வைத்துப் பூட்டிக்கொண்டார். சோமாலியப் பழங்குடியான ‘இயிபிர்’ வீரத்திற்கும் சண்டைக்கும் பேர் போனது. போரில் சரணடைவது என்ற பேச்சே அவர்களிடம் கிடையாது. அந்த மரபில் வந்தவரான பென்னி ஸெனாபு தன்னைக் கட்டுப்படுத்திக்கொள்ள வழி தெரியாமல் துடித்துக்கொண்டிருந்தார். கோபத்தின் உச்சத்தில் தன்னுடைய ஆடைகளைக் கிழித்துத் தன்னை நிர்வாணமாக்கிக்கொண்டார். ஆறரையடி உயரமான பென்னி, தன்னுடைய பருத்த உடலை இந்த நிலத்தில் பொருத்தி வைக்க முடியாமல் அறைக்குள் தாவித் தாவிக் குதித்துக்கொண்டிருந்தார். பின்பு, தன்னுடைய நீண்ட கைகளை அகல விரித்துக்கொண்டு, முதுகை வளைத்து, ஒரு மூர்க்கமான விலங்கு போல பதுங்கிப் பதுங்கி அறைக்குள் சுற்றிச் சுற்றி நடந்தார். அவரது மூச்சுக் காற்று அனலாகத் தகித்துக்கொண்டிருந்தது. கண்கள் கிறங்கிப்போயின. அப்போது யாப்பாணச் சாமியின் “சாக்கிரத்தில் சாக்கிரம் எச்சில் பூ காணிக்கை” என்ற வாக்கியம் அவருக்கு ஞாபகம் வந்தது. அந்த வார்த்தைகளையே மறுபடி மறுபடி அவர் முணுமுணுக்கலானார். இயக்குனர் பென்னி ஸெனாபு திடீரென இங்கிலாந்திலிருந்து மறைந்துபோனது, கொஞ்ச நாட்களுக்குச் செய்தியாக இருந்தது. சும்மா பேருக்குத் தேடிவிட்டு ’ஒழிந்தது தொல்லை" எனக் காவற்துறையும் கோப்பை மூடிவிட்டது. எல்லாவற்றையும் அறிந்து வைத்திருந்த ஒரேயொரு நபர் சதாசிவம் மட்டுமே. இங்கிலாந்தில் மறைந்துபோன பென்னி ஸெனாபு, எப்படி ஒருநாள் திடீரென யாழ்ப்பாணத்தில் தோன்றினார், எப்படி அரையில் கச்சை தரித்துச் சாமியாரானார், தாங்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த யாப்பாணச் சாமி வேறொரு ரூபத்தில் திரும்பி வந்திருக்கிறார் என மக்கள் பரவசத்துடன் அவரை ஏற்றுக்கொண்டு வணங்குவதின் உளவியல் என்ன? என்ற கேள்விகளை விட, எனக்கு வேறொரு முக்கியமான கேள்வி இருந்தது. நான் அம்மாவிடம் தொலைபேசியில் கேட்டேன்: “அம்மா..அந்தச் சாமியார் தமிழ் எப்பிடிக் கதைக்கிறார்…அவர் கதைக்கிறது உங்களுக்கு விளங்குதே?” “ஏன்? அவற்றை தமிழுக்கு என்ன குறை? சாமி அப்பிடியே ஆற்றொழுக்காத் தூசணம் கொட்டுறார். உன்ர அப்பாவால கூடி அப்பிடித் தூசணம் சொல்ல ஏலாது. சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கமல்லோ தம்பி” என்றார் அம்மா. பிரபஞ்ச நூல் இந்தக் கதையைத் தனது இரகசியக் குரலைக் கலையவிடாது, தகரத்தில் மெல்லிய ஆணி முனையால் கிறுக்குவது போன்ற கூசிய தொனியில் ஏற்ற இறக்கங்களின்றி சித்திரைலிங்கம் என்முன்னே சொல்லத் தொடங்கினான். நடுநடுவே கதையை நிறுத்தி அதே இரகசியக் குரலில் என்னிடம் சந்தேகங்களும் கேட்டான். நான் 2012-ல் சித்திரைலிங்கத்தை சென்னை புத்தகச் சந்தையில் கடைசியாகப் பார்த்தது. மனைவி பிள்ளைகளுடன் ‘க்ரியா புத்தகக் கடை’க்குள் நின்றுகொண்டிருந்தான். கையில் ’கிரியாவின் தற்காலத் தமிழ் அகராதி’ வைத்திருந்தான். என்னைக் கண்டதும் முதல் வார்த்தையாக “மச்சான் நீ இந்த அகராதியில் ஏதோ பிழை இருக்கிறது என்று எழுதியிருந்தாய். அதுதான் வாங்கிச் சரி பார்க்கப் போகிறேன்” என்றான். அன்றிரவே அவுஸ்ரேலியா திரும்பும் அவசரத்திலிருந்தான். க்ரியாவில் அந்தச் சந்திப்பு நிகழ்ந்து ஏழு வருடங்கள் கழித்து, 2019 புதுவருடம் பிறந்த நள்ளிரவில் சிட்னியின் புறநகர்ப் பகுதியான செவன் ஹில்ஸிலுள்ள சித்திரைலிங்கத்தின் வீட்டில் நாங்கள் மறுபடியும் சந்தித்துக்கொண்டோம். ஒரு நாடகத்தில் நடிப்பதற்காக நான் பிரான்ஸிலிருந்து கிளம்பிப்போய் அப்போது சில மாதங்கள் சிட்னியில் தங்கியிருந்தேன். நள்ளிரவில் புது வருடம் பிறந்து ஆளுக்காள் வாழ்த்துச் சொல்லிக் கொண்டாடியதும் சித்திரைலிங்கத்தின் மனைவி வானதியும் குழந்தைகளும் படுக்கைக்குப் போய்விட, நானும் சித்திரைலிங்கமும் வீட்டின் பின்புறம் ரசனையுடன் அமைக்கப்பட்டிருந்த தோட்டத்தில் தனியாக நாற்காலிகளில் அமர்ந்தோம். ஜனவரி மாத இரவில் கூட சிட்னியில் வெப்பக் காற்றடிக்கிறது. வானம் முப்பரிமாண ஓவியமொன்றுபோல நட்சத்திரங்களை நெருக்கிமாக அடுக்கி வைத்திருக்கிறது. இந்தக் காலத்தில் பிரான்ஸில் வானம் பனிப் பாளமாகத் தரைக்கு இறங்கிவரும். சித்திரைலிங்கத்திற்கு மது அருந்தும் பழக்கமில்லை. எனக்காக மதுவும் சிகரெட்டுகளும் வாங்கி வைத்திருந்தான். சித்திரைலிங்கத்தின் வீட்டை மூன்றடுக்கு மாளிகை என்றுதான் சொல்ல வேண்டும். அவன் வைத்திருக்கும் காரும் அப்படியானதுதான். நியூ சவுத் வேல்ஸ் மாநில அரசு நிர்வாகத்தின் கணினித் துறையில் உயர்ந்த பதவியிலிருந்தான். ஆனால் அய்ம்பது வயதான அவன் எழுபது வயதுத் தோற்றத்திலிருந்தான். ஆள் முப்பது கிலோதான் தேறுவான். ஆடை அணியும் முறைகூடக் கிழவர்களைப் போலயிருந்தது. தலையில் ஒரு மயிர் கிடையாது. முன்வாய்ப் பற்கள் நான்கு விழுந்து பொய்ப்பற்கள் கட்டியிருப்பதாகச் சொன்னான். எனது நீண்ட தலைமுடியைத் தனது கைகளால் தடவிப்பார்த்து ஆராய்ந்து, உண்மையான முடியா இல்லை நாடகத்திற்காக வைத்த டோப்பாவா எனக் கேட்டான். பகடி விட்டாலும் சரி மகிழ்ச்சியாக இருந்தாலும் சரி பயந்தாலும் சரி முகத்தை ஒரே மாதிரியாகத்தான் சீரியஸாகச் சித்திரைலிங்கம் வைத்திருப்பான். இந்தக் கதையைச் சொல்வதற்கு முன்பு எப்படிக் கதையை ஆரம்பிப்பது எனத் தெரியாமல் சித்திரைலிங்கம் தட்டுத் தடுமாறித் தேவையில்லாதது எல்லாம் பேசிக்கொண்டிருந்தான். பின்பு, தனது கைத்தொலைபேசியை அணைத்து வைத்துவிட்டு, தோட்டத்திற்குள் நுழையும் வீட்டின் பின்புறக் கதவுகளை வெளிப்பக்கமாகத் தாழிட்டுவிட்டு, நாற்காலியை நகர்த்தி எனக்கருகே போட்டுக்கொண்டு இந்தக் கதையைச் சொல்ல ஆரம்பித்தான். கதை ஒரு புத்தகத்தைப் பற்றியது. 2 சித்திரையில் பிறந்ததால்தான் எனக்கு சித்திரைலிங்கம் என்று அழகான பெயர். நாஞ்சில் நாடனின் ‘எட்டுத் திக்கும் மதயானை’ நாவலில் பூலிங்கம் என்றொரு பெயர் உண்டு. அது இன்னும் திறமான பெயர். இங்கே என்னுடய அலுவலகத்தில் வெள்ளைக்காரர்கள் என்னை ‘சித்’ என்று அவர்களின் வசதிக்குச் சுருக்கிக் கூப்பிடுவதை நான் ஏற்றுக்கொள்வதில்லை. இதனாலேயே அலுவலகத்தில் நாலைந்து பிரச்சினைகள் வந்திருக்கின்றன. வில்லியம் ஷேக்ஸ்பியர் என்றும் கப்ரியல் கார்ஸியா மார்குவெஸ் என்றும் நாங்கள் உச்சரிக்கிறோம்தானே. இவர்களின் நாக்குகளிற்கு மட்டும் சித்திரைலிங்கம் என உச்சரிப்பதில் என்ன பிரச்சினை! 1985-ம் ஆண்டு சித்திரைமாதம் எனக்குப் பதினாறு வயது முடிந்திருந்தது. என்னுடைய பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக என்னுடைய கிராமத்திலிருந்து நான்கு நண்பர்களை அழைத்துக்கொண்டு யாழ்ப்பாண நகரத்துக்குப் போனேன். எங்கள் அய்வரில் மூத்தவனுக்குப் பத்தொன்பது வயது. இளையவனுக்குப் பதினைந்து வயது. எங்களில் யாருக்கும் குடிக்கும் பழக்கம் இல்லை . மூத்தவன் மட்டும் இரகசியமாகச் சிகரெட் குடிப்பான். மத்தியானம் பரடைஸ் ஹோட்டலில் புரியாணி சாப்பிட்டுவிட்டு, அதற்கும் மேலாக லிங்கம் கூல் ஃபாரில் சர்பத் குடித்துவிட்டு, வின்ஸர் தியேட்டரில் மதியக் காட்சிப் படத்துக்குப் போனோம். சிவாஜியும் அம்பிகாவும் நடித்தது…‘காலம் மாறலாம் நம் காதல் மாறுமா’ என்றொரு பாட்டு இருக்கிறது..என்ன படம் அது? “வாழ்க்கை..” அதேதான்..படம் முடிந்தவுடன் நடந்து பண்ணைப் பாலத்துக்கு வந்தோம். ஊர் திரும்ப பஸ்சுக்கு காசு இருந்ததுதான். என்றாலும் மண் அள்ளவரும் ட்ராக்டர்களில் தொற்றிக்கொண்டு ஊர் திரும்புவதில்தான் எங்களுக்கு மகிழ்ச்சி. யாழ்ப்பாணத்திலிருந்து ஒரு நாளைக்கு அய்ம்பது ட்ராக்டர்களாவது எங்கள் கிராமத்திற்கு மண் அள்ள வரும். அந்த ட்ராக்டர் சாரதிகளும் எங்களிற்குப் பழக்கமானவர்களாகவே இருப்பார்கள். அந்தச் சாரதிகளில் மோட்டாண்டி எங்களுக்கு நெருங்கிய பழக்கம். எங்களைக் கண்டால் தானாகவே ட்ராக்டரின் வேகத்தைச் சற்றே குறைப்பார் . ஓடும் ட்ராக்டரில் நாங்கள் தொற்றி ஏறிப் பெட்டிக்குள் குதிப்போம். அன்றும் அதுதான் நடந்தது. பண்ணைப் பாலத்தால் மோட்டாண்டியின் ட்ராக்டர் எங்களை ஏற்றிக்கொண்டு கிராமத்தை நோக்கிப் பறக்கலாயிற்று. நாங்கள் சினிமா நடிகர்களிற்கு மட்டுமல்லாமல் ட்ராக்டர் சாரதிகளிற்கும் தீவிர ரசிகர்களாயிருந்த பருவமது. மோட்டாண்டி சிவந்த மேனியும் சுருட்டைத் தலையும் கொண்ட கவர்ச்சிகரமான மனிதர். அவர் எப்போதும் கட்டும் பற்றிக் சாரத்தை முழங்கால்வரை வழித்துவிட்டுக்கொண்டு வாயில் ‘த்ரிரோஸ்’ சிகரெட்டையும் வைத்துக்கொண்டு அசுர வேகத்தில் அவர் ட்ராக்டர் ஓட்டுவது தொங்கலாயிருக்கும். அவர் ட்ராக்டரைத் தாறுமாறாக ஓட்டும் வேகத்தால்தான் அவருக்கு மோட்டாண்டி என்ற பெயர் கிடைத்திருக்கவேண்டும். ட்ராக்டரின் வெற்றுப் பெட்டி பண்ணைப் பாலத்தில் துாக்கித் துாக்கிப் போடும். அந்தப் பெட்டிக்குள் ‘பலன்ஸ்’ பண்ணி நிற்பது எங்களின் சாகசமாக இருக்கும். யாழ்ப்பாணத்திலிருந்து பண்ணை பிரதான வீதியின் வழியாக மூன்று கட்டைகள் துாரம் ஓடினால் எங்கள் கிராமம் வந்துவிடும். வீதியிலிருந்து ஒரு கட்டைத் துாரத்தில்தான் தெற்குப் புறமாகக் குடிமனைகள் இருந்தன. பிரதான வீதியருகில் குடிமனைகள் கிடையாது. வெறும் தரவை நிலத்திற்குள்ளால் அந்த வீதி செல்லும். வீதியில் குட்டி வழிப் பிள்ளையார் கோயிலும் அதற்குச் சற்றுத் தள்ளி, ஒருமாதம் முன்பாகப் புதிதாக முளைத்த ஒரு தேநீர் கடையுமிருந்ததன. அந்தக் கடையை நல்லூர் பக்கத்திலிருந்து வந்த ஒரு நடுத்தர வயதுத் தம்பதிகள் நடத்தி வந்தனர். அந்தக் கடைக்காரரின் சரியான பெயர் என்னவென்று தெரியவில்லை. அந்தக் கடைக்கு ‘பப்பன் கடை’ என்று கிராமத்தவர்கள் பெயரிட்டிருந்தார்கள். கடைகாரரை ‘பப்பன்’ என்றுதான் கூப்பிடுவோம். அப்போதெல்லாம் எனது கிராமத்து மக்கள் தேநீர் கடைகளுக்குப் போவதில்லை. யாழ்ப்பாணச் சந்தைக்குப் போனால் கூட கடைகண்ணியில் பச்சைத் தண்ணீர் கூடக் குடிக்காமல் வீட்டுக்குத் திரும்பிவந்துதான் தொண்டையை நனைப்பார்கள். பப்பன் கடை வரும்வரை எங்கள் கிராமத்தில் தேநீர் கடையே இருக்கவில்லை. எங்களை மாதிரி நட்டாமுட்டி பொடியன்கள் மட்டுமே பப்பன் கடைக்கு போய் கல்லுப் போன்ற வாய்ப்பன் சாப்பிட்டுத் தேநீர் குடிப்போம். மற்றப்படிக்கு அந்த வழியால் போகும் லொறி, ட்ராக்டர் சாரதிகள் அங்கே சிலவேளைகளில் தேநீர் குடிப்பார்கள். பப்பன் கடையில் ஒரு சுடுதண்ணீர்ப் பானையும் நாலைந்து கிளாசுகளும் இருக்கும். ஒரு தட்டில் சுட்ட வாய்ப்பன்கள். மற்றபடிக்கு நாலைந்து யானைச் சோடாக்கள், பீடி சிகரெட் இவ்வளவும்தான் அந்தக் கடை. நான்கு பக்கங்களிலும் கிடுகுகளால் மறைக்கப்பட்டு பனையோலையால் கூரை வேயப்பட்ட அந்தக் கடை இருந்த இடம் அரசாங்கக் காணிதான். பிரதான வீதியோரமாக இருந்த உவர்நில அரசாங்கக் காணிகளை அப்போது யார் வேண்டுமானாலும் பிடித்துக் குடிசை போட்டுக்கொள்ளலாம். இப்போது அந்த இடத்தில் இந்தியாக்காரர்கள் வந்து அதிகாரிகளுக்குக் காசுகொடுத்து உறுதி முடித்து ஓர் ‘இன்டர்நஷனல் ஸ்கூல்’ கட்டிக்கொண்டிருக்கிறார்கள். அய்ம்பது பரப்பில் சுற்றிவர மதில் எழுப்பிவிட்டார்கள். ஊருக்குச் சென்றபோது பார்த்தேன். பப்பன், தனது கடையை மாலை ஆறுமணிக்கு அடைத்துவிடுவார். கடையில் பெயருக்குத்தான் தேநீர் வியாபாரம் நடப்பதாகவும் இரவுகளில் அந்தக் கடைக்குள் விபச்சாரத் தொழில் நடப்பதாகவும் ஊருக்குள் சிலர் பேசிக்கொண்டார்கள். பொழுதுபட்ட பிறகு யாழ்ப்பாணத்திலிருந்து அந்தக் கடைக்கு ஒரு மஞ்சள் நிறப் பெண் வருவதாகவும் அவள் வந்த பின்பாக யாழ்ப்பாணத்திலிருந்து பஸ்ஸிலோ மோட்டார் சைக்கிளிலோ வாடிக்கையாளர்கள் வந்து இறங்குவதாகவும் பேச்சிருந்தது. எங்கள் கிராமத்தில் இந்த விபச்சாரப் பிரச்சினை கனகாலமாக இருந்து வந்தது. அப்போது யாழ்ப்பாண பஸ்நிலையத்தில் நிற்கும் விபச்சாரிகளை வாடிக்கையாளர்கள் அழைத்துக்கொண்டு போக யாழ்ப்பாண நகரத்தில் லொட்ஜ்கள் கிடைப்பது லேசான விசயமில்லை. முழு யாழ்ப்பாண நகரத்திலுமே இரண்டோ மூன்றோ லொட்ஜ்கள்தான் இருந்தன. அதனால் வாடிக்கையாளர்களை அழைத்துக்கொண்டு விபச்சாரிகள் பஸ் பிடித்து எங்கள் ஊர் பிரதான வீதியில் இறங்கிவிடுவார்கள். பிரதான வீதியின் வடக்குப்புறமாகப் பரவைக்கு கடலையொட்டி கன்னாவும் நொச்சியும் பற்றைகளாக வளர்ந்துகிடக்கும். அந்தப் பற்றைகளிற்குள் புகுத்து அவர்கள் மறைந்துகொள்வார்கள். எங்களிலும் மூத்த எங்களது கிராமத்து இளைஞர்களின் கண்களில் அவர்கள் எப்போதாவது சிக்கினால், இளைஞர்கள் அவர்களை நன்றாக அடித்து உதைத்துத் துரத்திவிடுவார்கள். இதையொரு சமூகசேவையாக அந்த இளைஞர்கள் ஊருக்குள் பெருமையாகச் சொல்லிக்கொள்வார்கள். இதெல்லாம் அன்றுவரை நான் கேள்விப்பட்டிருந்த விசயங்கள்தானே தவிர, என் வாழ்வில் நான் ஒரேயொரு விபச்சாரியைக் கூட அதுவரை நேரில் பார்த்திருக்கவில்லை. ஆனால் ஒரு விபச்சாரி எப்படியிருப்பாள் என்று எனக்கொரு கணக்கிருந்தது. நான் வாசித்த கதைகளிலிருந்து அந்தச் சித்திரத்தை நான் கலவையாக உருவாக்கி வைத்திருந்தேன். அழகான பெண் ஒருத்தி விபச்சாரத்திற்கு வா என ஒரு அய்யரை ஆசைகாட்டிக் கூப்பிட்டு நளினமாகப் பேசிக் காசையும் வாங்கிக்கொண்டு, கும்பிட்டுவிட்டு வருகிறேன் என வேதக் கோயிலிற்குள் நுழைந்து மறைந்துவிடுவாளே, கதைக்கு தட்சணை எனப் பெயர்.. யார் அந்தக் கதையை எழுதியது? “அலெக்ஸ் பாரதி..” ஆம்! என்னவொரு எழுத்தாளர் அவர்!! பெரிதாகக் கவனம் பெறாமலேயே போய்விட்டார். நீங்கள் இரண்டுபேரும் வேதக்காரர்கள் என்பதாலோ என்னவோ உங்களுடைய கதை எழுதும் முறையில் ஓர் ஒற்றுமையிருக்கிறது. நாங்கள் வந்த ட்ராக்டர் பப்பனின் தேநீர் கடையை நெருங்கியபோது எங்களிற்கு எதிரே, தேநீர்க் கடைக்குச் சற்றுத் துாரத்தில் நின்றிருந்த யாழ்ப்பாண நகரத்திலிருந்து வந்த பஸ்ஸிலிருந்து இறங்கி, தலையில் சேலையால் முக்காடிட்டுத் தலையைக் குனிந்தவாறு ஒரு பெண் பப்பன் கடையை நோக்கி விறுவிறுவென நடந்தார். பஸ் உறுமிக்கொண்டு மீண்டும் புறப்பட்டபோது அந்தப் பெண் சற்றே திரும்பிப் பார்த்து தன்னுடைய கையால் காதொன்றைப் பொத்திக்கொண்டார். அவரது தோளில் ஒரு கறுப்புநிறக் கைப்பை தொங்கியது. அலெக்ஸ் பாரதியின் கதையில் வரும் விபச்சாரியின் தோளிலும் ஒரு கறுப்புநிறக் கைப்பை தொங்கும். அவர் எங்கள் ட்ராக்டரைக் கடந்துபோனதும் ட்ராக்டர் சாரதி மோட்டாண்டி சிரித்துக்கொண்டே தலையைத் திருப்பி எங்களைப் பார்த்துச் சொன்னார்: “தம்பியவை..சோடாமூடி போகிறது.” கதையை இடைநிறுத்திய சித்திரைலிங்கம் என்னிடம், “அந்தக் காலத்தில் யாழ்ப்பாண இளைஞர்களிடையே எந்தச் சொல் அதிகமும் பிரபலம் சொல் பார்ப்ப்போம்?” என்று கேட்டான். இதில் யோசிப்பதற்கு என்ன இருக்கிறது! எனவே நான் உடனேயே, “தமிழீழம் என்ற சொல்தான்” என்றேன். சித்திரைலிங்கம் எப்போதும்போலவே தனது முகத்தைச் சீரியஸாக வைத்துக்கொண்டு இல்லை என்பதுபோல தலையாட்டி என்னை மறுத்துவிட்டுக் கதையைத் தொடர்ந்தான்: ‘தமிழீழம்’ என்ற சொல்லைக் காட்டிலும் ‘சோடாமூடி’ என்ற சொல்தான் அப்போது யாழ்ப்பாண இளைஞர்களிடையே அதிகமும் பிரபலம். தமிழீழம் என்ற சொல்லைக் கேள்விப்படாதவன் யாழ்ப்பாணத்தில் இருந்திருக்கலாம். ஆனால் சோடாமூடி என்ற சொல்லைத் தெரிந்திராதவன் எவனுமில்லை. விபச்சாரம் செய்யும் பெண்களை அப்போது யாழ்ப்பாணத்தில் ‘சோடாமூடி’ எனச் சொல்வார்கள். இந்தப் பெயருக்கான காரணம் யாருக்கும் சரிவரத் தெரியவில்லை. ஒரு முறை திறந்தால் மறுபடியும் மூட முடியாது என்பதால் சோடாமூடியென்று பெயர் எனச் சிலர் சொன்னார்கள். ஒருவன் இருட்டுக்குள் ஒரு விபச்சாரியோடு உறவு கொண்டுவிட்டுச் சில்லறை நாணயங்கள் எனச் சொல்லிச் சில சோடாமூடிகளைக் கொடுத்து ஏமாற்றிவிட்டுச் சென்றதால் அந்தப் பெயர் வந்தது எனச் சிலர் சொன்னார்கள். யாழ்ப்பாண பஸ்நிலையத்தில் ஆதியில் நின்ற விபச்சாரிக்கு சோடாமூடியென்ற பட்டம் என்பதால் அதுவே எல்லா யாழ்ப்பாண விபச்சாரிகளிற்கும் அடையாளப் பெயராகத் தொடர்ந்தது என்றும் சிலர் சொன்னார்கள். ட்ராக்டர் ஓடிக்கொண்டிருக்கும்போதே நாங்கள் அய்வரும் ஆளுக்கொரு பக்கமாக பெட்டியிலிருந்து குதித்து வீதியோர மணற் திட்டுகளில் விழுந்தோம். எங்களில் மூத்தவன்தான் கதையை ஆரம்பித்தான். “கேள் சித்திரைலிங்கம்! ஊருக்குள் வந்து வேசையாடிவிட்டுப் போவதை நாங்கள் அனுமதிக்க முடியாது.” அதுவொரு தெந்தெட்டான காலம் என்றுதான் சொல்லவேண்டும். இராணுவத்தை இயக்கங்கள் முகாம்களிற்குள் முடக்கிவிட்டிருந்தார்கள். பொலிஸ் நிலையங்களை இயக்கக்காரர்கள் தாக்கி அழிக்கத் தொடங்கிய பின்பு பொலிஸ் நிர்வாகம் ஊருக்குள் கிடையாது. பதிலுக்குப் பல இயக்கங்களும் இருந்து பொலிஸ் வேலையைச் செய்தாலும் எங்களுடைய சின்னஞ் சிறிய கிராமத்திற்குள் இயக்கங்களின் நடமாட்டம் அதிகமிருப்பதில்லை. இதனால் எங்களது கிராமத்தில் நாங்கள் நான்கு பேர்கள் சேர்ந்தால் எதையும் செய்யக்கூடிய ஒரு நிலையிருந்தது. கல்லுாரிகளில் படிக்கின்ற பொடியன்கள் என்று கிராமத்திற்குள் எங்களுக்குக் கொஞ்சம் மரியாதையுமிருந்தது. எங்களிலும் மூத்த இளைஞர்களில் சிலர் இந்தியாவிற்கு இயக்கப் பயிற்சிக்குப் போனதாலும் மற்றவர்கள் சவூதிக்கும் ஜெர்மனிக்கும் புறப்பட்டுப் போய்விட்டதாலும் விடலைகளான எங்களுடைய கைகளில்தான் கிராமமிருந்தது. நல்லது கெட்டது எல்லாவற்றிற்கும் நாங்கள்தான் முன்னே நின்றோம். அராலிச் சந்தியையும் யாழ்ப்பாண நகரத்தையும் இணைக்கும் பிரதான வீதிதான் எங்கள் கிராமத்திற்குள்ளால் நீள்கிறது. அந்த வீதியால் போகும் வாகனங்கள், வீதியைக் கடக்கும் ஓர் ஆட்டை மாட்டைத் தப்பித் தவறி மோதிவிட்டால் நாங்கள்தான் பஞ்சாயத்து செய்வோம். எங்களுக்கு இயக்கத் தொடர்புகள் இருப்பது போன்றவொரு தோற்றத்தையும் ஊருக்குள் உருவாக்கி வைத்திருந்தோம். எப்போதாவது ஊருக்குள் இயக்கங்கள் வந்தால் நாங்கள்தான் முன்னின்று கூடமாட உதவிகள் செய்வோம். அப்போதெல்லாம் என்ன பெரிய உதவி..கூட்டங்கள் வைக்க இடம் தேடிக்கொடுப்பது, உணவுப் பார்சல்கள் பெற்றுக்கொடுப்பது அவ்வளவுதான். சில முன் இரவுகளில் பிரதான வீதியோரத்தில் பனை மரங்களிற்குப் பின்னால் மறைந்து நிற்போம். பனைமட்டை அல்லது தடியை உரப் பையால் சுற்றி வைத்திருந்து துவக்குப் போல பாவனை செய்வோம். வீதியால் தனியாக ஏதாவது வாகனம் வரும்போது பனைமர மறைவிலிருந்து திடீரென ஆளுக்கொரு திசையில் வீதியில் குதிப்போம். வாகனங்களை நிறுத்தச் சொல்லி ‘செக்’ செய்வோம். பின்பு பனங்காட்டிற்குள் மறைந்துபோவோம் . இயக்கம் போல பாவனை செய்வது எங்களுக்கொரு ‘த்ரில்’ விளையாட்டு. வாகனத்தில் வருபவர்கள் எங்களை இயக்கம் என நினைத்து வியப்பும் மிரட்சியும் பணிவுமாக எங்களைப் பார்ப்பதில் எங்களுக்கொரு போதை. நான் விபச்சாரி ஒருத்தியை அதுவரை பார்த்திருக்காதது போலவே வாகனக்காரர்களிலும் பலர் இயக்கப் பொடியன்களை அதுவரை கண்டிருக்கமாட்டார்கள். சில சமயங்களில் வீதியில் தனியாக வரும் மோட்டார் சைக்கிள்களைக் கடத்தி அரை மணிநேரம் காத்திருக்குமாறு மோட்டார் சைக்கிளில் வந்தவர்களிடம் சொல்லிவிட்டு ஏதோ தாக்குதலுக்குப் போகின்றவர்கள் போன்ற தோரணையில் எங்களில் மூவர் மோட்டார் சைக்கிளில் ஏறிப் பறக்க, மிச்சப் பேர்கள் மோட்டார் சைக்கிளில் வந்தவரை பனைங்கூடலிற்குள் அழைத்துச் சென்று தடுத்து வைத்து ஏதாவது ‘அட்டாக்’ கதை சொல்லித் தாக்காட்டிக்கொண்டிருப்பார்கள். சொன்னமாதிரியே அரைமணி நேரத்தில் திரும்பவும் மோட்டார் சைக்கிளை ஒப்படைத்துவிடுவோம். மோட்டார் சைக்கிள் ஓட்ட அந்த வயதில் யாருக்குத்தான் ஆசையிருக்காது! இப்போது, பப்பன் கடைக்குள் நடக்கும் விபச்சாரத்தை ஒழிப்பதென நாங்கள் தீர்மானித்தோம். பப்பன் கடைக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தி, அந்த மஞ்சள் நிற விபச்சாரியை அங்கிருந்து துரத்திவிடுவதாக முடிவு செய்தோம். வழமைபோலவே அன்றைக்கான புனைபெயர்களை நாங்கள் எங்களுக்குச் சூடிக்கொண்டோம். இயக்கப் பாணியில் தாக்குதலொன்றுக்குச் செல்லும்போது எங்களிற்குள் ஆளையாள் சொந்தப் பெயரில் அழைத்துக்கொள்வது எங்களது வழக்கமில்லை. எங்களில் மூத்தவன் எப்போதும் தனக்கு முஸ்லீம் பெயர்களைத்தான் வைத்துக்கொள்வான். அரபுப் பெயர்களில் அவனுக்கு ஒரு மோகமிருந்தது. பப்பன் கடைத் தாக்குதலுக்காக அவன் தனக்கு வைத்துக்கொண்ட பெயர் அலாவுதீன். நான் என் பெயரைச் சற்றே மாற்றி வைத்தியலிங்கம் என வைத்துக்கொண்டேன். எனக்கு அப்படியான பெயர்களில் ஓர் ஈர்ப்பு. மற்ற மூவரும் பிரசாத், ரோம், எஸ்ஸெல்லார் எனப் பெயர்களை வைத்துக்கொண்டார்கள். நேரம் அப்போது மாலை ஆறு மணியிருக்கும். நாங்கள் அய்வரும் சட்டைக் கைகளை மடித்துவிட்டுக்கொண்டு ஒருவர் பின் ஒருவராகப் பப்பன் கடையை நோக்கி வேகமாக நடந்தோம். இந்த நேரத்திலெல்லாம் இந்தப் பிரதான வீதிப் பகுதி பெரிதாக ஆள் நடமாட்டம் இல்லாமற்தான் கிடக்கும். கிராம மக்கள் பஸ் ஏறுவதற்கு மட்டும்தான் பிரதான வீதிக்கு வருவார்கள். மாலை ஆறுமணிக்குப் பிறகு யாரும் கிராமத்திலிருந்து வெளியே கிளம்பமாட்டார்கள். எப்போதாவது வரும் பஸ்ஸிலிருந்து நகரத்தில் வேலை முடிந்துவரும் ஓரிருவர் பிரதான வீதியில் இறங்கிக் குடிமனைக்குள் போனால்தானுண்டு. நாங்கள் பப்பன் கடையைச் சுற்றிவளைத்து உள்ளே பாய்ந்தபோது, பப்பனின் கடை அடைக்கப்பட்டு ஓர் ஆள் குனிந்து நுழையுமளவிற்கு வாசற் தட்டி திறந்திருந்தது. முதலில் அந்தத் தட்டியைத்தான் பிடுங்கி எறிந்தோம். கடைக்கு உள்ளே பப்பன் அடுப்பில் வேலையாக இருந்தார். தரையில் சாயவோலைப் பாயில் அமர்ந்து பப்பனின் மனைவியும் சற்று முன்னே பஸ்ஸிலிருந்து இறங்கிவந்த பெண்ணும் வெற்றிலை சப்பிக்கொண்டிருந்தார்கள். முன்னால் போன அலாவுதீன் தடாலடியாக அந்தப் பெண்ணுக்கு கன்னத்தில் அறைந்த அறையின் வேகத்தில் அந்தப் பெண்ணின் வாயிலிருந்த வெற்றிலைச் சாறு அலாவுதீனின் டிஸ்கோ சேர்ட் முழுவதும் தெறித்தது. அந்தப் பெண் திகைத்துப்போய் தனது கன்னங்களை இரண்டு கைகளாலும் பொத்திக்கொண்டு எழுந்து நின்றார். கடைசியாக நான் ஒரு விபச்சாரியை என் கண்களால் கண்டுவிட்டேன். அந்தப் பெண், கிராமத்தவர்கள் பறைந்த மாதிரி மஞ்சள் நிறப் பெண்ணல்ல. பொதுநிறமான பெண்தான். ஆனால் முகத்தில் மஞ்சளை அப்பிப் பூசிக் கழுவியது பளீரெனத் தெரிந்தது. எங்களது கிராமத்தில் அப்போது முகத்துக்கு மஞ்சள் பூசும் பழக்கமே இருந்ததில்லை. அந்தப் பெண்ணின் அகன்ற நெற்றியில் விபூதித் தீற்றலும் அதன் கீழே கறுப்பு நிறத்தில் திலகமுமிருந்தன. அந்தப் பெண்ணின் உயரம் சாதாரணமாக இலங்கையில் காணமுடியாத உயரம். கிட்டத்தட்ட ஆறடி இருப்பார். சற்றே மெலிந்த தோற்றம். பரட்டையான சுருள் முடி , நாடியில் எம்.ஜி.ஆருக்கு இருப்பது போலவொரு வெட்டு. அவர் கட்டியிருந்த ஊதா நிறச் சேலை அவரது கால்களை முழுவதுமாக மறைக்க இயலாமல் பாதங்களிற்கு ஓரடி மேலே நின்றது. வயது முப்பதிலிருந்து முப்பத்தைந்துக்குள் இருக்கலாம். ஒரு பக்கக் காதுத் துவாரத்திற்குள் பஞ்சு வைத்திருந்தார். கறுப்பு நிறம் ஊறிய அந்தப் பஞ்சு அருவருப்பாயிருந்தது. ஆனால் வெற்றிலைச் சாறால் கனிந்திருந்த அவரது மெல்லிய உதடுகளின் வசீகரத்தை என் வாழ்க்கை முழுவதும் என்னால் மறக்க முடியாது என்றுதான் நினைக்கிறேன். அதை மறப்பதானால் சத்திமுத்தப் பாணரின் ‘பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன பவளக் கூர்வாய்ச் செங்கால் நாராய்’ என்ற வார்த்தைகள் ஒருபோதும் என் நினைவில் வராமலிருக்க வேண்டும். நாங்கள் பப்பன் கடையை நாசம் செய்தோம். தேநீர் பானையைத் துாக்கி வீதியில் வீசினோம். மூன்றே நிமிடங்களில் நாங்கள் அய்வரும் சேர்ந்து பப்பன் கடையைச் செத்தை வேறு கூரை வேறாகப் பிரித்துப் போட்டுவிட்டோம். பப்பனுக்கும் கன்னத்தில் சில அறைகளும் புட்டத்தில் காலால் சில உதைகளும் விழுந்தன. “இது என்ன வேசையாடுவதற்கான ஊரென்று நினைத்தாயா?” “அய்யோ தம்பிமார் நான் அப்படிச் செய்வேனா..இது என்னுடைய தங்கச்சி, என்னைப் பார்த்துவிட்டுப் போக வந்திருக்கிறாள்.” பிரசாத் சொன்னான், “நாங்கள் இவளை விசாரிக்க வேண்டும்!” அப்போதுதான் பப்பனுக்கும் அந்தப் பெண்ணுக்கும் நாங்கள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்ற அச்சம் ஏற்பட்டிருக்க வேண்டும். யார் இயக்கம் யார் இயக்கமில்லை எனக் கண்டுபிடிக்க முடியாத காலமல்லவா அது. பப்பன் நடுங்கத் தொடங்கினார். பப்பனின் மனைவி எங்களின் கால்களில் விழுந்து மன்றாடத் தொடங்கினார். அந்தப் மஞ்சள் நிறப் பெண்ணோ இப்போது திகைப்பிலிருந்து நீங்கி எங்களைச் சாதாரணமாகப் பார்த்தார். எங்களை இயக்கம் என அவர் நம்பியதால் ஒருவேளை அவர் பாதுகாப்பாக உணர்ந்திருக்கலாம். நாங்கள் பப்பன் கடைக்குள் நுழையும்வரை, அந்தப் பெண்ணை அடித்து மறுபடியும் யாழ்ப்பாணத்திற்குத் துரத்திவிடுவதே எங்களது திட்டமாயிருந்தது. ஆனால் இப்போது பிரசாத் அந்தப் பெண்ணை விசாரிக்க வேண்டும் எனச் சொன்னவுடன் அதையும் செய்துவிடலாம் என எங்களிற்குத் தோன்றியது. நாங்கள் அந்தப் பெண்ணை எங்களுடன் வரச் சொன்னோம். அந்தப் பெண் கொஞ்சம் தயங்கியபோது எஸ்ஸெல்லார் காலைத் துாக்கி அந்தப் பெண்ணின் வயிற்றில் எத்தினான். அந்தப் பெண் ‘அம்மோய்’ என முனகிக்கொண்டு வயிற்றைக் கைகளால் பொத்திக்கொண்டு தரையில் உட்கார்ந்தார். பின்புறமிருந்து அவரது முதுகில் ஒரு மிதி விழுந்தது. அந்தப் பெண் எதுவும் பேசாமல் எழுந்து தனது கறுப்பு நிறக் கைப்பையையும் எடுத்துக்கொண்டு எங்களுடன் வரத் தயாரானார். நாங்கள் மஞ்சள் நிறப் பெண்ணை அழைத்துக்கொண்டு அருகிலிருந்த பனங்காட்டிற்குள் நுழைந்தோம். எங்களில் சின்னவனான ரோம் என்று பெயர் வைத்துக்கொண்டவனை, யாராவது வருகிறார்களா என எல்லாப் பக்கமும் சுற்றிப் பார் என ‘சென்ரி’யாகப் போட்டுவிட்டு, அந்தப் பெண்மீதான புலன் விசாரணையைத் தொடங்கினோம். அந்தப் பெண் எந்த ஒளிவு மறைவுமின்றி, தனது பிள்ளைகளிற்குச் சாப்பாடு கொடுப்பதற்காக விபச்சாரம் செய்வதாகச் சொன்னார். கதைப் புத்தகங்களில் வரும் எல்லா விபச்சாரிகளும் இதைத்தானே சொல்கிறார்கள் என நினைத்துக்கொண்டேன். ’பொன்னகரம்’ கதை ஞாபகம் வருகிறதல்லவா உனக்கு..எங்களது விசாரணை தொடரலாயிற்று. “அடையாள அட்டையை காட்டு..” “இல்லை..தொலைந்து போய்விட்டது.” “எந்த ஊர்?” “கோணாந்தோட்டம்..” “ஒரு ஆளுக்கு எவ்வளவு வாங்குவாய்?” “இருபத்தைந்து ரூபாய்..சில நேரம் முப்பது ரூபாய்..” “புருஷன் இல்லையா?” “மன்னாரில் கருவாடு காயப்போடும் வேலைக்கு போனவர் காணாமற் போய்விட்டார்.” “பிள்ளைகள் ?” “மூன்று பிள்ளைகள். மூத்தவனிற்கு அய்ந்து வயது, கடைசிக்கு இரண்டு வயது” மற்றைய மூன்றுபேரும் கடகடவென மாறி மாறிக் கேள்விகள் கேட்டு விசாரணை நடத்த நான் மட்டும் சும்மா நிற்பது எனக்குக் கூச்சமாயிருந்தது. நான் மஞ்சள் நிறப் பெண்ணின் கன்னத்தில் ஓர் அறை கொடுத்துவிட்டு அவரது கைப்பையைப் பறித்துக்கொண்டேன். நான் இழுத்த வேகத்தில் கைப்பையின் பட்டை கிழிந்து பை கையோடு வந்துவிட்டது. அந்தக் கைப்பையைத் திறந்து பார்த்தேன். உள்ளே ஒரு கைக்குட்டை, சில சில்லறை நாணயங்கள், ஒரு பொட்டலத்தில் மஞ்சள் கிழங்குத் துண்டுகள், சீப்பு, பழுப்பேறிய ஒரு வெள்ளைத் துணித்துண்டு இவற்றுடன் ஒரு புத்தகமும் இருந்தது. நான் அந்தத் துணியைத் தொட்டுவிட்டாமல் கவனமாகப் புத்தகத்தை விரல்களால் துாக்கியெடுத்துப் பிரித்துப் பார்த்தேன். அந்தப் புத்தகம் பிரபஞ்சன் எழுதிய ‘ஒரு ஊரில் இரண்டு மனிதர்கள்’ என்ற சிறுகதைத் தொகுப்பு. எனக்கு அப்போது கதைப் புத்தகங்கள் படிப்பதில் ஒரு வெறியேயிருந்தது. ஊரில் நல்ல புத்தகங்கள் கிடைப்பது குறைவு. எங்களது கிராமசபை நுாலகத்திலிருந்த இருநுாறு புத்தகங்களையும் படித்து முடித்துவிட்டிருந்தேன். தமிழ்வாணன், சுஜாதா, ஜெகசிற்பியன், ஜி.நேசன், செங்கை ஆழியான் எனப் படித்திருந்தேன். புதுமைப்பித்தனின் ஒரு சிறுகதைத் தொகுப்புக் கூட அப்போதே படித்திருந்தேன். ஆனால் பிரபஞ்சன் என்ற பெயரை இப்போதுதான் முதன் முதலாகப் பார்க்கிறேன். நான் அந்தப் புத்தகத்தை என்னிடமே வைத்துக்கொண்டு கைப்பையை அந்தப் பெண் முன்னால் துாக்கி வீசினேன். அந்தப் பெண் குனிந்து கைப்பையை எடுத்துக்கொண்டு என் கையிலிருந்த புத்தகத்தையே பார்த்துக்கொண்டு நின்றார். அவரது மெல்லிய உதடுகள் குவிந்திருந்தன. “வேசையாடுவதற்கு எதற்குப் புத்தகம்?” எனக் குரலை உயர்த்தி உறுக்கிக் கேட்டேன். “அரைவாசிப் புஸ்தகம்தான் படித்திருக்கிறேன்…” என்று அந்தப் பெண் சொன்னார். அப்போது அவர் புன்னகைப்பது போலத்தான் எனக்குத் தோன்றியது. அந்தப் புத்தகத்தாலேயே நான் அந்தப் பெண்ணின் கன்னத்தில் அடித்தேன். அந்தப் புத்தகத்தை அந்தப் பெண்ணிடமிருந்து எடுத்துக்கொள்வதென நான் புத்தகத்தைப் பார்த்தபோதே முடிவு செய்திருந்தேன். இப்போது எங்களில் மூத்தவனான அலாவுதீன், அந்தப் பெண்ணுக்கு அறிவுரைகள் சொல்லத் தொடங்கினான். ஒழுக்கமாக வாழ்ந்து கூலி வேலை செய்தாவது பிள்ளைகளைக் காப்பாற்றச் சொன்னான். அதன் பின்பு அந்தப் பெண்ணிற்கு, விபச்சாரம் செய்ததற்காகத் தண்டனை வழங்கலானோம். எங்களில் ஒருவன் கையில் காய்ந்த பனைமட்டையுடன் தயாரானான். அவன் “சேலையைத் துாக்கிப் பிடி” எனச் சொல்ல, அந்தப் பெண் “அடிக்காதீர்கள்” என முனகியவாறே தனது சேலையை உள்பாவாடையோடு சேர்த்து முழங்கால்கள்வரை துாக்கினார். “இன்னும் துாக்கு” என்று சொல்லி அந்தப் பெண்ணின் பிடரியில் ஒரு தட்டுத் தட்டினான் அலாவுதீன். இப்போது மஞ்சள் நிறப்பெண் இடுப்புவரை துாக்கினார். அந்தப் பெண் உள்ளாடை எதுவும் அணிந்திருக்கவில்லை. அவரது இடுப்பில் இருந்த கறுப்புக் கயிறு அரைஞாண்கொடி மஞ்சள் படிந்து அழுக்கு மஞ்சள் கயிறாயிருந்தது. அதன் கீழே காய்ந்து வற்றிப்போயிருந்த அவரது புட்டங்களில் அடர்த்தியாகத் தேமல் படர்ந்திருந்தது. அந்தத் தேமல் மீது நான்கு பனைமட்டை அடிகள் விழுந்தன. ஒவ்வொரு அடிக்கும் முனகிக்கொண்டே அந்தப் பெண் கால் விரல்களில் எழுந்து நின்றார். அவரது கைகள் ஒவ்வொரு அடிக்குப் பின்பாகவும் பின் பகுதியைத் தேய்த்துவிட்டுக்கொண்டன. அவர் வாயில் ‘ஸ்ஸ்ஸ்…’ என்ற மெல்லிய ஊளை வலியோடு எழுந்தது. தண்டனை முடிந்ததும், இனிமேலும் ஊருக்குள் இருக்காமல் பஸ்ஸைப் பிடித்து உடனடியாக யாழ்ப்பாணம் போகுமாறு அந்தப் பெண்ணிடம் சொல்லிவிட்டு நாங்கள் கிளம்பினோம். அந்தப் பெண் என்னைப் பார்த்து ‘புஸ்தகம்’ என்றார். ‘ஓடு’ எனச் சொல்லி இன்னுமொரு உதை கிடைத்தது மஞ்சள் நிறப் பெண்ணுக்கு. நான் வீட்டுக்கு வந்ததும் எனது அறைக்குள் போய் கட்டிலில் படுத்துக்கொண்டு பிரபஞ்சனின் புத்தகத்தை விரித்துப் படிக்கத் தொடங்கினேன். புத்தகத்தில் மனம் செல்வதாக இல்லை. புத்தகத்தின் பக்கங்களில் அந்தப் பெண்ணின் இடுப்பிலிருந்த மஞ்சள் அரைஞாண்கொடி நாடாப்புழுப்போல நெளியலாயிற்று. நான் என் வாழ்க்கையில் முதன் முதலாகப் பார்த்த வயது வந்த பெண்ணின் நிர்வாணம் அதுதான். கட்டிலில் எழுந்து உட்கார்ந்து அந்தப் புத்தகத்தில் துாமைத் துணியின் வீச்சம் வருகிறதா என மறுபடியும் மறுபடியும் முகர்ந்து பார்த்தேன். இரவுணவைச் சாப்பிட்டுவிட்டு மீண்டும் பிரபஞ்சனின் புத்தகத்தைப் படிக்கத் தொடங்கினேன். மெதுமெதுவாகப் புத்தகம் என்னைத் தன்னுள் உள்வாங்கத் தொடங்கியது. மூன்றாவது கதையைப் படித்து முடிக்கும் தறுவாயில் என் அறையின் ஜன்னலில் ரோம் தோன்றினான். வெளியே வந்தபோது ஒழுங்கைக்குள் அலாவுதீன் நின்றான். ‘அந்த விபச்சாரி ஊரைவிட்டுப் போய்விட்டாளா எனப் பார்க்கப் போகிறோம் வருகிறாயா?’ என்றார்கள். வீட்டுக்குள் அப்பா சாய்மனைக் கட்டிலில் இருந்து பிபிஸி தமிழ் செய்தியறிக்கை கேட்டுக்கொண்டிருந்தார். அம்மாவிடம், நாடகம் பழகப் போகிறோம் எனச் சொல்லிவிட்டுக் கிளம்பினேன். ‘நாளைக்குக் கல்லுாரி இருக்கிறதல்லவா..சீக்கிரமாக வந்துவிடு’ என்றார் அம்மா. மற்றைய இருவரின் வீடுகளிற்கும் போய் அவர்களையும் கூட்டிக்கொண்டு போனோம். அவர்களின் வீட்டிலும் அதே நாடகம் பழகும் பொய்தான். இந்தப் பொய் எப்போதும் செல்லுபடியாகக் கூடிய பொய். ஏனென்றால் நாங்கள் உண்மையிலேயே வருடத்திற்கு இரண்டு நாடகங்களாவது கிராமக் கோயில் திருவிழாக்களில் அரகேற்றிவிடுவோம். பிரசாத் நாடகத்தை எழுதுவான். அலாவுதீனுக்கு எல்லா நாடகத்திலும் கதாநாயகன் வேடம். கதாநாயகி பாத்திரம் எப்போதும் எனக்குத்தான். உனக்குத் தெரியுமா? நான் அவுஸ்ரேலியா வந்த புதிதில் தமிழ்ச் சங்க விழாவில் சந்திரமதிக்கு நடித்திருக்கிறேன். அப்போது நேரம் இரவு பத்துக்குக் கிட்டமுட்டயிருக்கும். நாங்கள் ஊர்மனையைத் தாண்டி, வயல்வெளிகளையும் பனங்கூடல்களையும் கடந்து பிரதான வீதியில் ஏறினோம். வீதி அமைதியாகக் கிடந்தது. அப்போது இரவு நேரங்களில் பண்ணை வீதியால் வரும் வாகனங்களின் மீது கோட்டையிலிருந்த இராணுவத்தினர் இடைக்கிடை சுடுவதுண்டு. அதனால் பத்து மணிக்குப் பிறகு அந்த ரோட்டில் போக்குவரத்தே இருக்காது. நாங்கள் பப்பனின் கடையைப் பதுங்கிப் பதுங்கி நெருங்கியபோது உள்ளே பேச்சுக் குரல்கள் கேட்டன. அது எனக்கு மகிழச்சியைக் கொடுத்தது உண்மை. நாங்கள் பிய்த்துப் போட்டுவிட்ட வந்த பப்பன் கடையின் செத்தைகள் இப்போது மறுபடியும் நிமிர்த்தி வைக்கப்பட்டிருந்தன. வெளியிலிருந்து செத்தைத் துவாரம் வழியாகப் பார்த்தபோது கூரையில்லாத அந்த அடைப்புக்குள் குப்பி விளக்கு வெளிச்சத்தில் பப்பனும் அவரது மனைவியும் தரையில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் அருகே சாயவோலைப் பாயில் அந்த மஞ்சள் நிறப் பெண் படுத்திருந்தார். நாங்கள் இருளில் நின்றுகொண்டு “அந்தப் பட்ட வேசையை வெளியே அனுப்பு” எனக் குரல் கொடுத்தோம். பப்பன் விளக்கைக் கையிலெடுத்துக்கொண்டு வெளியே வந்தார். “அதுதானே அவளைத் தாறுமாறாக அடித்துவிட்டீர்கள் இனியென்ன தம்பிமார்?” இப்போதும் பப்பனின் குரலில் பணிவு இருந்தாலும் அந்தக் குரலில் ஓர் எரிச்சலும் இழையோடுவது போலிருந்தது. “அவளை ஏன் இன்னும் இங்கே வைத்திருக்கிறாய்?” “அனுப்பத்தான் பார்த்தேன்..ஆனால் பஸ் ஒன்றும் வரவில்லை. காலையில் முதல் பஸ்ஸில் அவள் போய்விடுவாள் தம்பி.” அந்த மஞ்சள் நிறப் பெண் சத்தம் கேட்டுத் துாக்கத்திலிருந்து எழுந்திருந்தார். குப்பி விளக்கின் ஒளியில் அவரது நிழல் செத்தையில் ஆடியது. அவரை நாங்கள் மீண்டும் விசாரிக்க வேண்டும் என்றோம். இப்போது பப்பனுக்கு நாங்கள் இயக்கப்பொடியன்கள் இல்லை என்பது தெளிவாகவே தெரிந்திருக்கும். ஆனாலும் நாங்கள் ஊர்ப் பொடியன்கள். வந்தான் வரத்தானான அவர் எங்களை எதுவும் செய்துவிட முடியாது என்பதும் அவருக்குத் தெரியும். என்றாலும் அவர் அந்தப் பெண்ணை எங்களோடு இரவில் அனுப்ப முடியாதென்றும் எதுவானாலும் காலையில் வந்து பேசிக்கொள்ளலாம் என்றும் சொன்னார். நாங்கள் பப்பனை மண்ணில் தள்ளிக் கால்களால் உதைப்பதைப் பார்த்ததும் அந்த மஞ்சள் நிறப் பெண் எங்களோடு வரத் தயாரானார். இவ்வளவு பிரச்சினையிலும் பப்பனின் மனைவி வாய் திறந்து ஒரு வார்த்தை பேசவில்லை. ஆனால் எங்களை எரித்துவிடுவதுபோல பார்த்துக்கொண்டிருந்தார். அந்த மஞ்சள் நிறப் பெண்ணோடு நிலா வெளிச்சத்தில் நாங்கள் பிரதான வீதியால் நடந்தோம். இப்போது எஸ்ஸெல்லார் ஒரு வில்லுக்கத்தி கொண்டுவந்திருந்தான். அதை அந்தப் பெண்ணினது கழுத்தில் வைத்து அவரை முன்னே நடத்தினான். கத்தியை உணர்ந்ததும் அந்தப் பெண் “எனக்குத் தலையை மொட்டை வழிக்கத்தானே போகிறீர்கள்?” என்று கேட்டார். பனங்காட்டுக்கு நடுவே அந்தப் பெண்ணை உட்கார வைத்துவிட்டு நாங்கள் அய்வரும் சுற்றி உட்கார்ந்துகொண்டோம். ஜெயமோகன் எழுதும் மகாபாரதம் தொடர் படிக்கிறாயா என்ன? நீ படிக்கமாட்டாய்! எங்களில் யார் அந்தப் பெண்ணை முதலில் தொட்டது என்பதை அந்த இருளுக்குள் அனுமானிக்க முடியவில்லை. ஆனால் எங்கள் எல்லோரது கைகளும் ஒரே நேரத்தில் அந்தப் பெண்ணின் உடலின் பாகங்களைப் பிசைந்துகொண்டிருந்தன. இப்போது அந்தப் பெண்ணைத் தவிர நாங்கள் யாருமே பேசவில்லை. அந்தப் பெண் மட்டுமே பேசினார். ‘என்னை விட்டுவிடுவீர்கள் இல்லையா..’ எனத் திரும்பத் திரும்பக் கேட்டார். அந்தப் பெண்ணின் மார்பில் நான் முகத்தைத் தேய்த்தபோது அவர் என் தலையைத் தடவிக் கொடுத்தது போலத்தானிருந்தது. ‘உங்களுடைய பெயர் என்ன? என்று மஞ்சள் நிறப் பெண் என்னிடம் கேட்டார். நான் ’வைத்தியலிங்கம்’ எனக் கிசுகிசுத்தபோது அந்தப் பெண்ணின் மார்பு ஒருமுறை குலுங்கியது. அந்தப் பெண் மூத்திரம் பெய்து விட்டு வருகிறேன் என்றார். இங்கேயே பெய் என்றோம். இவ்வளவு ஆட்கள் இருந்தால் எனக்கு மூத்திரம் வராது என்றார் அந்தப் பெண். நால்வர் விலகிச் செல்ல ஒருவன் மட்டும் அந்தப் பெண்ணுடன் நின்றான். அய்ந்து நிமிடத்துக்குப் பிறகு அவன் அடுத்தவனைக் கூப்பிட்டான். இப்படியாகப் பத்துத் தடவைகள் நிகழ்ந்தன. நான் அந்தப் பெண்ணின் மீது இயங்கியபோது அவரது மெல்லிய வசீகர உதடுகளில் முத்தமிட முயன்றேன். அந்தப் பெண் உதடுகளை உள்பக்கமாக மடித்து வாயை இறுக மூடிக்கொண்டிருப்பது தெரிந்தது. நான் அவரது வாயில் முத்தமிட முயன்றபோது அவர் முகத்தை அங்குமிங்குமாக அசைத்தவாறிருந்தார். நான் அவரின் வாய்க்குள் எனது ஆட்காட்டி விரலை வைத்து அவரது வாயைத் திறக்க முயன்றேன். வாயைத் திறந்து மஞ்சள் நிறப் பெண் மெல்லிய குரலில் கேட்டார்: “நான் இன்னும் அந்தப் புஸ்தகத்தைப் படித்து முடிக்கவில்லை திருப்பித் தருகிறீர்களா தம்பி..” காலையில் அப்பாவின் மோட்டார் சைக்கிளில் அவரோடு ஏறி கல்லுாரிக்குச் சென்றுவிட்டேன். பாடப் புத்தகங்களோடு பிரபஞ்சனின் நுாலையும் எடுத்துப் போயிருந்தேன். ஆனால் அந்தப் புத்தகத்தின் ஒரு பந்தியைக் கூட என்னால் மனமூன்றிப் படிக்க முடியாமலிருந்தது. முழுவதுமாக, கடந்த இரவு நடந்தவை பற்றிய யோசனைதான் எனக்கு. நடந்த விசயம் ஊருக்குள் தெரியவருமா? பிரச்சினை இயக்கங்கள் வரை போகுமா? ஏதாவதொரு இயக்கம் எங்கள் அய்வரையும் வரிசையாக மின்கம்பங்களில் கட்டி, கழுத்தில் ‘கற்பழிப்புக் குற்றவாளிகள்’ என அட்டை எழுதிப்போட்டு நெற்றியில் சுடுமா என்றெல்லாம் மண்டை ஓடிவெளித்தது. நாங்கள் மஞ்சள் நிறப் பெண்ணை பலாத்காரம் செய்யவில்லை என்றுதான் என் மூளை சொல்லியது. அந்தப் பெண் எங்களுக்கு எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லையே. அந்தப் பெண்ணை அனுப்பும்போது அய்ந்துபேரும் கையிலிருந்த காசுகளைப் போட்டுக் கிட்டத்தட்ட நுாறு ரூபாய்கள் அந்தப் பெண்ணிடம் கொடுத்திருந்தோம். நடந்தது காசுக்கு விபச்சாரம். விபச்சாரம் செய்தவர்கள் இயக்கத்திடம் போனால் முதலில் அவர்களுக்குத்தான் பிரச்சினை. எனவே அவர்கள் இயக்கத்திடம் போக வாய்ப்பில்லை. எங்களைப் பற்றி ஊருக்குள் பப்பன் சொன்னாலும், சனங்கள் நாங்கள் சொல்வதைத்தான் நம்புவார்கள். தவிரவும் பப்பன் தனது கடைக்குள் வைத்து விபச்சாரம் நடத்துவதாக ஏற்கனவே ஊருக்குள் பேச்சிருந்ததால் பப்பனின் பேச்சு ஊருக்குள் எடுபடாது. நாங்கள் செய்ததற்குச் சாட்சிகளும் கிடையாது. நாங்கள் அய்ந்துபேரும் எங்களது வாய்களை இறுக மூடிக்கொண்டிருந்தால் அதுவே போதுமானது. அதற்குப் பின்பு சரியாக முப்பத்து நான்கு வருடங்கள் எங்களது வாய்கள் மூடியிருந்தன. இப்போதுதான் முதன்முதலாக உன் முன்னேதான் வாயைத் திறந்து நான் அது பற்றிப் பேசுகிறேன். அந்த இரவு நிகழ்ந்து ஆறுமாதத்திலெல்லாம் நாங்கள் குடும்பத்தோடு கொழும்புக்குப் போய் அங்கிருந்து அவுஸ்ரேலியா வந்துவிட்டோம். மற்றைய நான்கு பேரில் ஒருவன் கனடா போய்விட்டான். காலப்போக்கில் மற்றைய மூவரும் ஒருவர் பின் ஒருவராக அய்ரோப்பா போய்விட்டார்கள். உலகத்தின் எந்த மூலையிலிருந்தாலும் நண்பர்கள் அய்ந்துபேரிடமும் எப்போதும் தொடர்பும் உறவுமிருக்கிறது. நாங்கள் அய்வரும் ஒருமுறை ஜெர்மனியில் குடும்பங்களோடு சந்தித்துக்கொள்ளவும் வாய்ப்புக் கிடைத்தது. ஆளையாள் தனியாகவும் சந்தித்திருக்கிறோம். சந்திக்கும்போதெல்லாம் பழைய கதைகளைப் பற்றி நாங்கள் பேசி மாளாது. ஊரில் நடந்த ஒவ்வொரு சிறு சம்பவத்தையும் மனதில் ஞாபகம் வைத்துப் பேசிச் சிரிப்போம். சிறுவயதில் நாங்கள் செய்த நன்மை தீமைகள் எல்லாவற்றையும் பற்றிப் பேசிக்கொள்வோம். ஆளையாள் கேலி செய்வோம் . ஆனால் ஒரேயொரு முறைகூட நாங்கள் அந்த இரவு குறித்தோ, அந்த மஞ்சள் நிறப் பெண் குறித்தோ சாடைமாடையாகக் கூட எங்களிற்குள் பேசிக்கொண்டதே கிடையாது. அன்றைய இரவில் நடந்த சம்பவம் என் மனதின் ஒரு மூலையில் அவ்வப்போது நெருடிக்கொண்டிருந்தாலும் அது என்னை எப்போதும் பெரிதாகத் தொந்தரவுபடுத்தியதில்லை என்றுதான் சொல்வேன். ஆனால் நான் பிரபஞ்சனைச் சந்தித்த இரவில் எல்லாம் மாறிப் போயிற்று. இரண்டு வருடங்களிற்கு முன்பு, ஜனவரி விடுமுறையில் மனைவியையும் பிள்ளைகளையும் கூட்டிச்சென்று யாழ்ப்பாணத்தில் விட்டுவிட்டு நான் நான்குநாள் பயணமாகச் சென்னை புத்தகச் சந்தைக்குப் போனேன். கே.கே. நகரில்தான் தங்கியிருந்தேன். மூன்றாவது நாள் இரவில் கே.கே.நகரின் பொன்னம்பலம் சாலையிலுள்ள வீதியோரத் தேநீர்க் கடையொன்றில் தேநீர் சொல்லிவிட்டு நின்றுகொண்டிருந்தபோது, முப்பத்துநான்கு வருடங்களிற்கு முன்பு என் கையில் கிடைத்த புத்தகத்தின் பின்னட்டையிலிருந்த உருவம் என்னை நோக்கிச் சடுதியில் வருவதை உணர்ந்து உறைந்துபோய்விட்டேன். நீலநிறத்தில் ஜிப்பாவும் வெள்ளை நிறத்தில் காற்சட்டையும் அணிந்திருந்த பிரபஞ்சன் அங்குமிங்குமாகப் பராக்குப் பார்த்தவாறு நடந்து வருவதைக் கண்டேன். அவரிடம் போய்ப் பேசலாமா வேண்டாமா என்ற சிறு மனப் போராட்டத்தில் நான் இருந்தபோது, அவரது பார்வை என்னில் விழுவது போலிருந்தது. அந்தப் பார்வை என்னை அவரிடம் அழைத்துக்கொண்டது. அவர் முன்னே போய் என் நெஞ்சில் கைவைத்துத் தலைசாய்த்து வணக்கம் சொன்னேன். முகம் மலர்ந்து சிரித்தார். “உங்களுடைய எல்லா நுால்களையும் படித்திருக்கிறேன்..ஒரு தேநீர் சாப்பிடலாமா?” என்றேன். “சாப்பிடலாமே” என்றார் பிரபஞ்சன் . அடுத்து என்ன பேசுவதென்று தெரியவில்லை. மஞ்சள் நிறப் பெண் என் தலையை உலுக்கத் தொடங்கியிருந்தார். எச்சிலை விழுங்கியவாறு ‘வானம் வசப்படும்’ நாவலின் சிறப்புகளைச் சொல்லத் தொடங்கினேன். தேநீர் கோப்பையை வைத்திருந்த என் கை நடுங்கிக்கொண்டிருந்தது. பிரபஞ்சன் சட்டென என் கையைப் பிடித்தார். “உங்களைப் பற்றிச் சொல்லுங்கள்..” என்று மறுபடியும் சிரித்தார். அவரில் கமழ்ந்த நறுமணம் என்னை மூழ்கடித்தது. அதிக நேரம் நாங்கள் பேசவில்லை. அவர் ரசித்துத் தேநீரைப் பருகி, அதன் பின்பு ஒரு சிகரெட்டை அவர் மெதுமெதுவாகப் புகைத்து முடிக்கும்வரைதான் பேசினோம். அது முதற் சந்திப்பு என்ற மாதிரியில்லாமல் வெகுநாளைய நண்பன் ஒருவனோடு பேசுவதுபோல பிரபஞ்சன் பேசிக்கொண்டிருந்தார். என் முன்னே பிரபஞ்சன் வெளிச்சச் சொரூபம் போல ஒளிர்ந்துகொண்டிருந்தார். அவர் முன்னே என்ன பேசுவது என்று தெரியாமல் குழம்பிப்போய் “எனக்கும் உங்களுக்கும் ஒரு தொடர்புள்ளது, எனது பெயர் சித்திரைலிங்கம் உங்களது இயற்பெயர் வைத்தியலிங்கம்” என்றெல்லாம் உளறிக்கொட்டினேன். வைத்தியலிங்கம் என்று உச்சரிக்கும்போதே நான் மஞ்சள் நிறப் பெண்ணிடம் ‘என் பெயர் வைத்தியலிங்கம்’ எனச் சொல்லிவைத்தது என் மூளையில் தைக்க அங்கே துவாரம் ஏற்பட்டு அது பெரிதாகலாயிற்று.. பேச்சின் போக்கில் பிரபஞ்சன் “உண்மையிலேயே வாழ்க்கை என்பது எனக்கு எழுத்துத்தான் சித்திரைலிங்கம், ஆனால் அந்த வாழ்க்கைக்கு அர்த்தமுள்ளதா என்பதுதானே தவிர்க்க முடியாத நம்முடைய வாழ்நாள் கேள்வியாகவுமிருக்கிறது இல்லையா…” என்று சொல்லிப் பேசிக்கொண்டே போனார். ஆனால் என்னால் அவரது பேச்சைத் தொடர்ந்து செல்ல முடியவில்லை. என் மூளைத் துவாரத்தில் மஞ்சள் நிறப் பெண் புகுந்துகொண்டு என்னை வதைக்கத் தொடங்கினார். 3 முப்பது கிலோ புத்தகப் பொதியுடன் விமானத்தில் கொழும்புக்குத் திரும்பிக்கொண்டிருக்கும்போது என் மனம் முழுவதும் மஞ்சள் நிறப் பெண்ணே நிறைந்திருந்தார். என் கண்களில் கண்ணீர் வருவதுபோல உணர்ந்து கண்களைத் தொட்டுப் பார்த்தேன். அங்கே கண்ணீர் இல்லை. கண்ணீரை வரவழைக்க முயன்றேன் என்றுதான் சொல்ல வேண்டும். கொழும்புவரை அது வரவேயில்லை. யாழ்ப்பாணம் போனதும் மனதில் ஒரு யோசனை தோன்றியது. அந்த மஞ்சள் நிறப் பெண்ணுக்கு இப்போது மிஞ்சி மிஞ்சிப் போனாலும் எழுபது வயதுதானிருக்கும். அவரைத் தேடிக் கண்டுபிடித்தாலென்ன என்று யோசித்தேன். தேடிக் கண்டுபிடித்து என்ன செய்யப் போகிறேன்? பணம் கொடுக்கப் போகிறேனா? தெரியாது! ஆனால் அவரைக் கண்டு பிடிக்க வேண்டும் என்ற எண்ணமே என் மனம் முழுவதும் நிறைந்து என்னை அலைக்கழித்தது. ஆனால் அதற்கு வாய்ப்பே இல்லை என்று என் அறிவு சொல்லிற்று. அந்த மஞ்சள் நிறப் பெண்ணின் பெயர்கூட எனக்குத் தெரியாது. அந்தப் பெண்ணிடம் அவரது பெயரை நாங்கள் கேட்டதாக எனக்கு ஞாபகம் இல்லை. மற்றைய நான்கு பேருக்கும் போன் செய்து விசாரிக்கலாமா என்றுகூட எனக்குத் தோன்றியது. நிம்மதியாக இருக்கும் அவர்களையும் இந்த வதை வளையத்திற்குள் இழுத்து வரவேண்டாம் என நினைத்து அந்த யோசனையைக் கைவிட்டேன். அந்தப் பெண் சொல்லிய ஊரின் பெயர் ஞாபகமிருக்கிறது. மச்சானின் மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு கோணாந்தோட்டத்துக்குப் புறப்பட்டேன். முப்பது வருடங்களிற்கு முன்பு கோணாந்தோட்டம் ஒரு சேரி போலதான் இருந்தது. இப்போது அது மாறி யாழ்ப்பாண டவுனின் ஒரு பகுதியாகிவிட்டது. இந்தச் சன நெரிசலுக்குள், பெயர் தெரியாத மஞ்சள் நிறப் பெண்ணை நான் எங்கே கண்டுபிடிப்பது? அவரை எதிரே பார்த்தால் கூட என்னால் அடையாளம் காணமுடியுமா என்ன! இன்று இரவு உன்னை அழைத்துவர நான் செவன் ஹில்ஸ் ரயில் நிலையத்திற்கு வந்தபோது நீ என்னையே அடையாளம் கண்டுபிடிக்கவில்லையே. ஏழு வருடங்களிற்குள் என்னில் இத்தனை தோற்ற மாற்றமென்றால், இத்தனை வருடங்களில் மஞ்சள் நிறப் பெண்ணின் தோற்றம் எவ்வளவு மாறியிருக்கும்! நான் மோட்டார் சைக்கிளில் கோணாந்தோட்டத்தைச் சுற்றிவரும்போது ஓர் இடத்தில் ஒரு நினைவுக் கல்லைக் கண்டேன். 1993-ம் வருடம் அந்த இடத்தில் சந்தை இருந்ததாகவும் சந்தையின் மீது விமானத் தாக்குதல் நடந்து அய்ம்பத்தேழு பேர்கள் கொல்லப்பட்டதாகவும் அந்த நினைவுக் கல்லில் குறித்திருந்தது. மஞ்சள் நிறப் பெண்ணும் அந்தக் குண்டு வீச்சில் இறந்திருக்கக் கூடும் என நினைத்துக்கொண்டேன். உண்மையில் அப்போது எனது மனம் ஏனோ அமைதி அடையலாயிற்று. ஒருமுறை நினைவுக்கல்லை உற்றுப் பார்த்து மெதுவாகத் தலை சாய்த்துவிட்டுக் கிளம்பினேன். நான் அவுஸ்ரேலியா திரும்பியதன் பின்னாக மஞ்சள் நிறப் பெண் மெதுமெதுவாக என் மனதிலிருந்து விலகிப் போய்விட்டார். இப்போது, ஒரு மாதம் முன்பாக ஒரு வெள்ளிக்கிழமை மாலையில், இங்கே ’மே ஹில்ஸி’ல் இருக்கும் முருகன் கோயிலுக்கு என் மனைவியை காரில் அழைத்துச் சென்று இறக்கிவிட்டு வீடு திரும்பினேன். ஒவ்வொரு வெள்ளிக்கிழமை மாலையிலும் முருகன் கோயிலுக்கு அவள் தவறாமல் போவாள். இரவு எட்டு மணிக்கு மறுபடியும் அவளை அழைத்துவர வேண்டும். அன்றைக்குத் திரும்பிவந்து கட்டிலில் படுத்துக்கிடந்து வாசிக்கத் தொடங்கியவன் அப்படியே கண்ணயர்ந்து துாங்கிவிட்டேன். எட்டுப் பதினைந்துக்கு மகள் தொலைபேசியோடு மேலே படியேறி வந்து என்னை எழுப்பினாள். மனைவிதான் அழைத்திருந்தாள். “கண்ணயர்ந்துவிட்டேன்..இதோ கிளம்பி வருகிறேன் அல்லது ஊபர் எடுத்து வா” என்றேன். “வேண்டாம், எனக்குத் தெரிந்தவர்கள் இங்கே இருக்கிறார்கள், அவர்கள் காரில் அழைத்துவந்து விடுவார்கள்” என்றாள். சரியென்று சொல்லிவிட்டுக் கீழே சென்று இரவுச் சமையலை ஆரம்பித்தேன். வாசல் கதவைத் திறந்துகொண்டு மனைவி வரும் ஓசை கேட்கவும் வரவேற்பறைக்குப் போனேன். மனைவியுடன் ஓர் இளைஞனும் ஒரு தடிமனான பெண்மணியும் உள்ளே வந்தார்கள். வந்தவர்களை உட்கார வைத்துவிட்டு அவர்களை எனக்கு என் மனைவி அறிமுகப்படுத்தலானாள். அந்தப் பெண்மணியின் பெயர் செல்வம் அன்ரியாம். முருகன் கோயிலுக்கு அவரும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் வருவதால் என் மனைவிக்குச் சிநேகிதமாம். கூட வந்திருப்பது அவரின் இளைய மகனாம். ’ரோயல் அவுஸ்ரேலியன் நேவி’யில் வேலையிலிருக்கிறானாம். என் மனைவி சொல்லாவிட்டால் கூட நான் அதைக் கண்டுபிடித்திருப்பேன் என்றுதான் நினைக்கிறேன். அந்த இளைஞன் நடக்கும் தோரணையிலும் உட்கார்ந்திருக்கும் கம்பீரத்திலும் அந்த மிடுக்கு இருந்தது. மனைவி, விருந்தாளிகளுக்குத் தேநீர் தயாரிக்கக் குசினிக்குள் போய்விட, நான் விருந்தாளிகள் முன் உட்கார்ந்து என்ன பேசுவதென்று யோசித்துக்கொண்டிருந்தேன். செல்வம் என்ற அந்தப் பெண்மணி என்னிடம் ஏதோ கேட்டபோதுதான் நான் அவரின் முகத்தைக் கவனித்தேன். அவரது நாடியில் எம்.ஜி.ஆருக்கு இருப்பதுபோல ஒரு வெட்டு இருந்தது. அது எனக்குத் தெரிந்த முகம் போல இருந்தது. என் இரத்தம் அப்போது தண்ணீராக மாறியது. அந்தப் பெண்மணியை மேலும் கீழுமாகப் பார்த்தேன். தளதளவென்று செழிப்பான தேகம். சற்றே வெளிறிய நிறம். முன்னந்தலையில் முடி செறிவில்லாமலிருக்க முக்கால் நெற்றி மறையுமாறு குங்குமம் வைத்திருந்தார் . முதுகைக் கூனிக்கொண்டு உட்கார்ந்திருந்தார். நீல நிறத்தில் வெள்ளிச் சரிகையிழைத்த சேலை அணிந்திருந்தார். பளீரிட்ட மூக்குத்திக்குக் கீழே அவரது உதடுகள் சுருங்கிப்போயிருந்தன. இவர்தானா அந்த மஞ்சள் நிறப் பெண்? அவர்கள் பதினைந்து நிமிடங்கள் என் வீட்டில் இருந்திருப்பார்கள். வேலை, கப்பலில் வந்த அகதிகள்,கோயில், விஜய் சேதுபதியின் நடிப்பு போன்ற வழமையான பேச்சுகள்தான் பேசிக்கொண்டோம். தேநீர் குடித்துவிட்டு அவர்கள் போய்விட்டார்கள். நான் சமையலை விட்டுவிட்டு என்னுடைய அறைக்குள் போய் இருந்துகொண்டேன். என்ன முட்டாள்தனமான எண்ணமிது? இந்தப் பெண்மணிதான் மஞ்சள் நிறப் பெண் என்று எப்படிச் சொல்ல முடியும்? ஆனால் அந்த முகம் எனக்குத் தெரிந்த முகம்போல ஏன் தோன்றுகிறது? அந்தப் பெண்மணியைப் பற்றி மேலும் விபரங்கள் என் மனைவிக்குத் தெரிந்திருக்குமா? நான் மனநோய் பிடித்தவன் போலாகிவிட்டேன். என் ஒவ்வொரு ரோமக்கால்களிலும் வதை புகுந்துகொள்ளலாயிற்று. அடுத்தநாள் பேச்சுவாக்கில் என் மனைவியிடம் “நேற்று வந்தாரே செல்வம் அன்ரி.. எங்கே இருக்கிறார், எப்போது அவுஸ்ரேலியாவுக்கு வந்தாராம்?” எனக் கேட்டேன். "அவர் வந்து கன காலமிருக்கும், பிள்ளைகள் இங்கேதான் படித்தவர்களாம்,‘ரோஸ் பே’யில் அவர்களுடைய வீடிருக்கிறதாம்.." என்றாள் மனைவி. சிட்னியில் செல்வந்தர்கள் வசிக்கக் கூடிய கடற்கரையோரப் பகுதி ’ரோஸ் பே’. அதற்குப் பின்பு நான் இரண்டு தடவைகள் ‘ரோஸ் பே’க்குப் போனேன் . ஏனென்று தெரியாது. அதுதான் சொன்னேனே மனநோய் பிடித்தவனாகிவிட்டேன் என்று. ’ரோஸ் பே’ தெருக்களில் காரைச் சுற்றிச் சுற்றி ஓட்டிக்கொண்டிருந்தேன். அடுத்த வெள்ளிக்கிழமை மனைவியை அழைத்துக்கொண்டு முருகன் கோயிலுக்குப் போனபோது நானும் கோயிலுக்கு உள்ளே நுழைந்தேன். கூடியிருந்த முகங்களை ஒவ்வொன்றாகக் கவனித்துப் பார்த்தேன். அங்கே செல்வம் என்ற அந்தப் பெண்மணி இல்லை. சென்ற டிசம்பர் 21-ம் தேதி ஒரு வெள்ளிக்கிழமை. அன்று மாலையில் எனக்குச் சாவு குறித்த தகவல் கிடைத்தது. சற்றே தணிந்திருந்த என் மனநோய் நெருப்புப் போல என்னில் பற்றிப் படரலாயிற்று. கிறிஸ்துமஸ் விடுமுறை முடிந்ததும் மனநோய் மருத்துவரிடம் போயே ஆகவேண்டும் என மனதிற்குள் தீர்மானம் செய்துகொண்டேன். மனைவியை முருகன் கோயிலுக்கு அழைத்துச் செல்கையில் கதையோடு கதையாக “செல்வம் அன்ரி இன்றைக்கு வருவாரா?” எனக் கேட்டேன். “அன்ரி மாடிப்படியில் காலிடறி விழுந்து நடக்க முடியாமல் இருக்கிறாராம்” என்றாள் மனைவி. பின்பு, அவள் எப்போதும் செய்வதுபோலவே தலையை மில்லி மீட்டரளவு இடமும் வலமுமாக அசைத்துக்கொண்டே நாவால் இரண்டுதரம் ‘ச் ச்’ என ஒலி எழுப்பிவிட்டு “அன்ரியைப் போய்ப் பாரக்க வேண்டும்” என்றாள். நான் அமைதியாகக் காரைச் செலுத்திக்கொண்டிருந்தேன். கோயிலில் அவளை இறக்கிவிடும்போது “கிறிஸ்துமஸ் நாளன்று அன்ரியைப் போய்ப் பார்க்கலாம்” என்றேன். கிறிஸ்துமஸ் அன்று காலையிலேயே நானும் மனைவியுமாகப் பலகாரங்கள் தயாரித்தோம். மாலையில் குழந்தைகளைப் பார்த்துக்கொள்ள ’ப்ளாக் டவுனி’லிருந்து என்னுடைய தங்கை வந்து சேர்ந்ததும், பலகாரங்களைப் ப்ளாஸ்டிக் பாத்திரங்களில் போட்டு எடுத்துக்கொண்டு மனைவி தயாரானாள். நான் முதல்நாள் இரவே என்னுடைய புத்தக அலுமாரியிலிருந்து பிரபஞ்சனின் நான்கு புத்தகங்களை எடுத்துப் பொதிசெய்து வண்ணத் தாளால் மூடி ஒட்டி வைத்திருந்தேன். நான் யார் வீட்டுக்குப் போனாலும் புத்தகங்களையே பரிசாகக் கொடுப்பதால் என் மனைவிக்கு எல்லாமே வழமைபோலத்தான் தோன்றியிருக்கும். ’ரோஸ் பே’யை நாங்கள் சென்றடையும் போது மாலை ஏழு மணியிருக்கும். ஒரு சிறிய குன்றில் அந்த அழகிய வீடு தனித்திருந்தது. வீட்டின் பின்புறமாகக் கடலில் விழுந்துகொண்டிருந்த சூரியனின் இறுதி வெளிச்சம் அந்த வீட்டையும் தோட்டத்தையும் பாதி இருளாயும் பாதி ஒளியாயும் துலங்கச் செய்த காட்சி அபோரிஜினல் பழங்குடிகள் வரைந்த சித்திரம் போலிருந்தது. எங்களை எதிர்பார்த்து செல்வம் அன்ரி வரவேற்பு அறையில் இருந்தார். இளைய மகனும் அவனுடைய வெள்ளைக்கார மனைவியும் இரண்டு குழந்தைகளும் அங்கிருந்தார்கள். நான் உள்ளே நுழைந்ததுமே அந்த வீட்டின் வரவேற்பறையைக் கவனமாகப் பார்த்தேன். ஒரு புத்தகத்தைக் கூட அங்கே காணவில்லை. தனியாகப் புத்தக அறை இருக்குமோ என்னவோ! அல்லது நான்தான் என் மனநோயின் பிரகாரம் புத்தகங்களைச் சுமந்து வந்திருக்கிறேனா? செல்வம் அன்ரி வசதியான நாற்காலி ஒன்றில் உட்கார்ந்திருந்தார். சிவப்பு நிறத்தில் நீண்ட கவுன் அணிந்திருந்தார். அவர் அருகே ஊன்றுகோல் ஒன்று சுவரோடு சாத்திவைக்கப்பட்டிருந்தது. அவர் அங்கும் இங்கும் உடலைத் திருப்பும்போது அவரது முகம் கோணிக்கொண்டது. வலியால் அவதிப்படுகிறார். நான் அவரை நோக்கி நடந்துபோனேன். கையிலிருந்த புத்தகப் பொதி உண்மையிலே பிணக் கனம்தான் கனத்தது. “நத்தார் வாழ்த்துகள் அன்ரி” என்று சொல்லி அந்தப் பொதியை அவரின் கைகளில் கொடுத்துவிட்டு அவரின் அருகிலிருந்த நாற்காலியில் உட்கார்ந்துகொண்டேன். அந்தப் பெண்மணி அந்தச் சிறிய பொதியைப் பிரிக்கவே சிரமப்படுவது தெரிந்தது. கீழுதட்டைப் பற்களால் கடித்தவாறு அந்தப் பொதியைப் பிரித்தார். உள்ளேயிருந்த புத்தகங்களை ஒவ்வொன்றாக எடுத்துப் பார்த்தவரின் கண்கள் ஒரு கணம் அசையாமல் நின்றன. கண்கள் மீண்டும் அசைந்தபோது முகத்தில் சட்டெனத் தோன்றிய ஒரு வெட்கத்தோடு அவர், ஒரு புத்தகத்தின் பின்னட்டையில் செம்மஞ்சள் வண்ண ஜிப்பாவும் கறுப்புக் குளிர் கண்ணாடியும் அணிந்து அச்சாகியிருந்த பிரபஞ்சனை பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன பவளக் கூர்வாயால் முத்தமிட்டார். நான்கு நாட்கள் தாமதமாக, இன்று பிரபஞ்சன் இறந்திருந்தால் அவரது வாழ்நாள் கேள்விக்கு விடை கண்டுபிடித்திருப்பார் என நான் அப்போது நினைத்துக்கொண்டேன். சித்திரைலிங்கம் கதையைச் சொல்லி முடித்துவிட்டுத் தனது கண்களைக் கைகளால் அழுந்தத் தேய்த்துவிட்டான். பின்பு, “இப்போதும் பார் என் கண்களில் நீரே வரவில்லை” என்று சொல்லிவிட்டு என்னைப் பார்த்து “உனக்கு எப்போதாவது கண்ணீரோ அல்லது எனக்கு வந்ததுபோல மனவருத்தமோ, வதையோ வந்திருக்கிறதா?” எனக் கேட்டான். நான் எதுவும் சொல்லாமல் அவனையே பார்த்துக்கொண்டிருந்தேன். சித்திரைலிங்கம் எப்போதும் போல சீரியஸாகத் தனது முகத்தை வைத்துக்கொண்டே என் கண்களைப் பார்த்துச் சொன்னான்: “நீ பிரான்ஸை அவுஸ்ரேலியாவாக்கி, உன்னுடைய பெயரை சித்திரைலிங்கம் என்றாக்கி கதையொன்று எழுதி அதைத் தணித்துக்கொள்வாய்!” (‘காலம்’ ஜூன் 2019 இதழில் கதை வெளியாகியது) அந்திக் கிறிஸ்து 1. கவர்னர் தூக்கத்தில் இருந்தபோது இரவேடு இரவாக அவருடைய பதவி நாட்டின் அதிபரால் பறிக்கப்பட்டிருந்தது. 2. இரவு படுக்கையில் நெடுநேரம் அமர்ந்திருந்து மிதமிஞ்சி மது அருந்தியவாறே, வானொலியில் வெளியாகிக்கொண்டிருந்த அதிபர் தேர்தல் முடிவுகளை கேட்டுக்கொண்டிருந்த கவர்னர் பிலாத்து, ஏமாற்றத்துடனும் சோர்வுடனும் மதுபோதையும் சேர அப்படியே கண்களைச் சொருகிக்கொண்டு தன்னையறியாமலேயே உறங்கிவிட்டிருந்தார். 3. இப்போது அதிபர் தேர்தலில் முன்னைய அதிபரே மறுபடியும் வென்றிருக்கிறார். வெற்றிபெற்றவருடைய எதிர் அணி வேட்பாளரிற்கு கவர்னர் பிலாத்து தன்னுடைய ஆதரவை வலுவாகவும் வெளிப்படையாகவும் வழங்கியிருந்தார். மாறாக, கவர்னருடைய மனைவி இப்போது வெற்றி பெற்றவருக்கு ஆதரவாக மேடை மேடையாகப் பலத்த பிரச்சாரம் செய்திருந்தார். 4. ஆழ்ந்த தூக்கத்திலிருந்த பிலாத்து சத்தம் கேட்டுச் சிரமப்பட்டுக் கண் விழித்தபோது தன்னருகே வைத்திருந்த வானொலிப் பெட்டியைக் காணாமல் சிறிது குழம்பிப்போனார். கைக்கடிகாரத்தைப் பார்த்தபோது நேரம் அதிகாலை மூன்று மணி பன்னிரெண்டு நிமிடமாகயிருந்தது. 5. அந்தச் சத்தம் மறுபடியும் கேட்டது. சத்தம் எங்கிருந்து வருகிறது எனப் பிலாத்து கவனித்தார். அந்தச் சத்தம் சமையலறையிலிருந்துதான் வருவது போலிருந்தது. சமையலறையிலிருந்து ஒரு நறுமணமும் எழுகிறது. 6. பிலாத்து மெதுவாக எழுந்து ஓசையெழுப்பால் நடந்துபோய் படுக்கையறைக் கதவைத் திறந்தபோது, இதுவரை இருண்டு கிடந்த அந்த வீட்டின் கூடத்தினதும் மாடத்தினதும் விறாந்தைகளினதும் அனைத்து விளக்குகளும் பளீரென எரியலாயின். வீடு முழுவதும் இராணுவ வீரர்கள் ஆயுதங்களுடன் நிறைந்திருந்தனர். 7. பிலாத்து உணவு அருந்தும் மேசையில் நான்கு இராணுவ வீரர்கள் உட்கார்ந்து விஸ்கி குடித்துக்கொண்டிருந்தனர். அந்த விஸ்கியை அவர்கள் அவருடைய மதுபான அலமாரியிலிருந்து எடுத்திருக்கிறார்கள். வீடு முழுவதும் சிகரெட் புகை நிறைந்து நின்றது. வரவேற்பறை ஸோபாக்களில் சிலர் உறங்கிக்கொண்டிருந்தனர். வீட்டிலிருந்து வெளியேறும் எல்லா வாசல்களினதும் கதவுகளை இறுக மூடிவிட்டு அங்கே துப்பாக்கிகளுடன் இராணுவ வீரர்கள் நின்றிருந்தனர். 8. பிலாத்து அவர்களைப் பார்த்து மெதுவாகக் கேட்டார் " இந்த நள்ளிரவில் தூங்காமல் என் வீட்டில் நீங்கள் என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள்?" 9. குடித்துக்கொண்டிருந்த ஓர் இராணுவ அதிகாரி எழுந்துநின்று உரக்கச் சொன்னான்: “அதிபரின் வெற்றியைக் கொண்டாடிக்கொண்டிருக்கிறோம் சேர்”. 10. அப்போது சமையலறையிலிருந்து ஓர் இளம் இராணுவ வீரன் அப்போதுதான் அவன் சமைத்த பாற்சோற்றை சுடச்சுட ஒரு வெள்ளிக் கிண்ணத்தில் எடுத்துவந்து பிலாத்துவின் முன்னால் நீட்டிப் போலிப் பணிவுடன் சொன்னான்: “நமது அதிபரின் வெற்றியைக் கொண்டாடச் சிறிது பாற்சோறு சாப்பிடுங்கள் அய்யா.” 2 அதிகாரம் 1. கவர்னர் பதவி பறிக்கப்பட்டு, கடுமையான இருபத்துநான்கு மணிநேர இராணுவக் காவலோடு பிலாத்து வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டு ஒரு வாரம் ஆகிப்போயிற்று. 2. அவரது கைத்தொலைபேசிகள் பறிக்கப்பட்டு, வீட்டுத் தொலைபேசி இணைப்பும் துண்டிக்கப்பட்டிருந்தது. கணினி, தொலைக்காட்சி இணைப்புகளும் துண்டிக்கப்பட்டிருந்தன. அவரது வானொலிப் பெட்டியைக் காணவில்லை. கடிதங்களோ பத்திரிகைகளோ அவருக்குக் கிடைக்காமல் தடுக்கப்பட்டிருந்தன. 3. மதுவகைகளும் சிகரெட்டுகளும் பாலும் சமையற்பொருட்களும் அவருக்கு ஒவ்வொருநாளும் தாராளமாக வழங்கப்பட்டன. பிலாத்து சமையலறை அடுப்பையே பற்ற வைத்தாரில்லை. நாள் முழுவதும் அவர் மதுவைக் குடித்துக்கொண்டிருந்தார். பசித்தபோது பாண் துண்டங்களை பாற்கட்டிகளுடன் சேர்த்து விழுங்கினார். 4. அவரைக் காவல் செய்த இராணுவ வீரர்களுடன் பேச்சுக் கொடுத்துப் பார்த்தார். அப்படியாவது வெளியே நடக்கும் செய்திகளை தெரிந்துகொள்ள முயற்சித்துப் பார்த்தார். இராணுவ வீரர்கள் போலிப் பணிவுகாட்டி அவருடன் பேசினார்கள். ஆனால் அவர் கேட்கும் எந்தக் கேள்விக்கும் அவர்கள் தொடர்பற்ற பதில்களைத் தாராளமாக வழங்கினார்கள். அது ஒரு தொலைக்காட்சி விளையாட்டு நிகழ்ச்சி போல நித்தமும் நடந்தது. 5. பிலாத்து இராணுவ வீரன் ஒருவனிடம் " அதிபர் நாட்டில்தான் இருக்கிறாரா?" எனக் கேட்டால் அவன் உத்தாரமாக " சேர்.. உங்கள் மனைவியை நான் ஏப்ரல் கார்னிவலில் பார்த்திருக்கிறேன், அவரது குண்டிப் பாகம் மிகப் பெரிதானது" என்றான். 6. இரவுகளில் பிலாத்து சமையலறையில் உட்கார்ந்து குடித்துக்கொண்டே சமையலறையில் கிழக்குப் பக்கமாக நோக்கியிருந்த பெரிய சாளரம் வழியே வானத்தை வெறித்துப் பார்த்தவாறிருந்தார். வானம் எப்போதும் இருண்டே கிடந்தது. ஒரு நட்சத்திரத்தைக் கூட அவரால் ஒருநாளுமே காணமுடியவில்லை. என்றைக்கு வானில் ஒரு நட்சத்திரத்தை தான் காண்கிறாரோ அன்றைக்கு நாட்டில் ஒரு மாறுதல் நடக்கும், தனக்கு விடுதலை கிடைக்கும் எனக் குழந்தைத்தனமாகப் பிலாத்து தனக்குத் தானே சொல்லிக்கொள்ளலானார். 7. அவரைப் போன்ற கையறு நிலையிலிருப்பவர்கள் இவ்வாறு கற்பனைக் கணக்குகளை இடையறாது போட்டுக்கொண்டேதான் இருப்பார்கள். பிரஞ்சு கயானா தீவாந்திரத் தனிமைச் சிறையில் வருடக்கணக்காக பட்டாம்பூச்சி அடைக்கப்பட்டிருந்தபோது இப்படியாகத்தானே கற்பனைக் கணக்குகளைப் போட்டுத் தன்னைத் தானே நம்பிக்கையூட்டியவாறிருந்தான். 3 அதிகாரம் 1. எட்டாம் நாள் பிலாத்து நண்பகலிற்கு மேலேதான் படுக்கையிலிருந்து எழுந்தார். பல் கூடத் துலக்காமல் நேரே சமையலறைக்குச் சென்று தென்னஞ் சாராயப் போத்தலைத் திறந்து ஒரு பெரிய கண்ணாடிக் கோப்பையை அவர் நிறைத்துக்கொண்டிருக்கும்போது சமையலறை வாசலில் ஓர் இராணுவ வீரன் தோன்றினான். 2. " சேர் உங்களிற்கு வடக்குத் திசையிலிருந்து ஒரு கடிதம் வந்திருக்கிறது." 3. அந்த இராணுவ வீரன் ஒருவிதமான எள்ளல் சிரிப்புடன் நடந்துவந்து பிலாத்துவின் முன்னாலிருந்த மேசையில் வெள்ளை உறையிடப்பட்டிருந்த அந்தக் கடிதத்தை வைத்தான். 4. பிலாத்து அந்தக் கடித உறையைக் கையிலெடுத்து ஆர்வத்துடன் புரட்டிப் பார்த்தார். கடித உறை பிரிக்கப்பட்டிருந்தது. 5. அந்தக் கடித உறையில் கவர்னர் பிலாத்து எனவும் அவரது முகவரியும் பழைய ‘டைப் ரைட்டர்’ இயந்திரத்தால் ஆங்கிலத்தில் தட்டச்சுச் செய்யப்பட்டிருந்தன. அனுப்புனர் பகுதியில் மரியா என்ற பெயரும் முகவரியுமிருந்தன. 6. எட்டு நாட்களிற்குப் பிறகு பிலாத்துவிற்கு வாசிக்க ஒன்று கிடைத்திருக்கிறது. அவர் ஒருவித ஆர்வம் மேலிட அந்தக் கடிதத்தை எடுத்துக்கொண்டும் தனது மூக்குக் கண்ணாடியைத் தேடிக்கொண்டும் தனது படுக்கையறைக்குள் நுழைந்தார். 4 அதிகாரம் 1. என் காதல் கவர்னருக்கு, 2. உங்களது காதலி மரியா ஈர இதழ் முத்தங்கள் ஆயிரம் கோடியுடன் எழுதிக்கொள்வது. 3. நீங்கள் என்னை அறியமாட்டீர்கள். ஆனால் உங்களிற்கு எனது ஒரே மகன் கிறிஸ்துவைக் கண்டிப்பாக ஞாபகமிருக்கும். 4. என் பிலாத்துவே! கொஞ்சக் காலங்களாகவே என் ஆன்மா உங்களைச் சுற்றியே மிதக்கிறது. என் இதயம் ஒரு கண்ணாடிக் கோப்பையென்றால், உங்கள் மீது நான் கொண்ட இச்சை திராட்சை ரசம்போல அதில் தளும்பி நுரைக்கிறது. 5. என் கவர்னரே! என் சரீரம் உங்கள் வலிய கைகள் பட்டு உயிர்க்க வேண்டும். சில வருடங்களாகவே காமத்தை அறியாமல் கால்களிடையே ரோமம் மண்டி மூடிக்கிடக்கும் என் உயிர்ப் பூவை நீங்களே மலர வைக்க வல்லமையுள்ளவர். 6. காமத்தில் நீங்கள் இதுவரை அறிந்திராத இருள் முடுக்குகளில் நான் தீபம். 7. உங்களது பெலமான கால்களின் கீழே என் தலைக்கேசம் பட்டுப் பாதவிரிப்பு. 8. உங்கள் பற்களிற்கு என் முலைக் காம்புகள் மயில் முட்டைகள். உங்கள் நாக்கு ஸம்ஸம் நீரின் மச்சம். என் நாக்கு அசையும் யோனி. 9. கவர்னரே உங்களின் ஆண்மை என்னைக் கிரணம் போல கவ்வட்டும். 10. உங்கள் விந்து என் கருஞ்சுனையில் ஒளியெழுப்பிப் பரவும் பாதரசச் சிதறல்கள். அவை உடைந்து என் உதரத்தின் கனியாகட்டும். 11. தங்களிற்காக ஒவ்வொரு முன்னிரவிலும் என் வீட்டின் பின்புறமிருக்கும் தோட்டக் குடிலின் வைக்கோல் படுக்கையில் நிர்வாணத்தை அணிந்தும் வேட்கைப் பூக்களை விரல்களில் சூடியும் காத்திருக்கிறேன் கவர்னரே! 12. என் இடது முலை இஞ்சி வாசம். வலது முலை எலுமிச்சை வாசம். என் பெண்மை போதிமரத் தைல மணம். 13. இந்த நறுமணங்களால் என்னை அறிவீர்கள். 14. வரும்போது மறக்காமல் முகமூடி அணிந்து வாருங்கள். 15. நீர் உப்பின் வாசம். நான் அதனால் உம்மை அறிவேன். 5 அதிகாரம் 1. மரியாவிற்குப் பதினெட்டு வயதானபோது அவரிற்கு ஜோஸப்போடு விவாக ஒப்பந்தம் நிறைவேறிற்று. 2. அப்போது ஜோஸப்பிற்கு முப்பது வயதாக இருந்தது. 3. ஆயிரத்து தொளாயிரத்து எண்பத்து மூன்றாம் வருடம் ஜுன் மாதத்தில் தலைநகரத்தில் இனவாரிக் கணக்கெடுப்பு நடந்தது. ஜுலை மாதத்தில் தலைநகரத்தில் சனங்களை அவர்கள் தேடித் தேடிக் கொன்றபோது மரியா நிறைமாதக் கர்ப்பிணியாக இருந்தார். 4. நகரம் எரிந்துகொண்டிருந்த இரவில், ஜோசப் தனது கைகளில் மரியாவை ஏந்தியவாறு அகதி முகாமை நோக்கி இருளில் பதுங்கி நடந்தார். 5. அந்த நள்ளிரவில்தான் குழந்தை கிறிஸ்து அகதி முகாமில் பிறந்தான். 6. அரசு நீர்ப்பாசனத் துறையில் நிபுணத்துவப் பொறியியலாளராக இருந்த ஜோசப் அந்த இரவு முழுவதும் ஒரு கண் உறங்காமல் யோசித்தவாறிருந்தார். அவர் கொலைகாரர்களின் கைகளிற்குத் தனது மனைவியையும் குழந்தையையும் எக்காலத்திலும் ஒப்புவிக்காமல் இருப்பதற்காக நாட்டை விட்டு வெளியேற அப்போது முடிவெடுத்தார். 7. நீண்ட நாட்களாகவே அவரிற்கு பாலைவன நாடொன்றிலிருந்து உத்தியோகத்திற்கு அழைப்பு வந்துகொண்டிருந்தது. இப்போது அந்த அழைப்பை ஏற்பதென அவர் முடிவு செய்தார். 8. ஒரு சாதாரண தொலைபேசி அழைப்பின் பின்னான பத்தாவது நிமிடத்தில் பாலைவன நாட்டின் தூதரகத்தின் வண்டி காவற்துறையின் பாதுகாப்புடன் அகதி முகாம் வாசலிற்கு வந்து நிற்கலாயிற்று. 6 அதிகாரம் 1. கட்டிய துணியுடனும் குழந்தை கிறிஸ்துவுடனும் தான் ஜோஸப் குடும்பம் பாலைவனம் போயிற்று. 2. ஜோசப்பின் அலுவலகத்திலேயே மரியா ஆங்கிலத் தட்டச்சுப் பணியாளராக வேலையில் சேர்ந்தார். 3. அங்கே அவர்கள் காலப்போகில் ஓர் அழகிய மலை வீட்டையும் கனித் தோட்டத்தையும் உண்டாக்கிக் கொண்டார்கள். 4. கிறிஸ்துவிற்கு முப்பது வயதானபோது எல்லைப்புறத்தில் பயணித்த ஜோசப்பின் அலுவலக வண்டி குண்டுவீச்சிற்குள் சிக்கி ஜோசப் சிதறி இறந்துபோனார். பாலைவனத்தின் மலைவீட்டின் பின்னாக இருந்த கனித் தோட்டத்தில் ஜோசப்பின் தசைத்துண்டங்களைப் புதைத்த போது மரியாவின் கண்களில் வடிந்த நீரை கிறிஸ்து தனது கைகளால் துடைத்துவிட்டு “அம்மா அழாதே.. என் நேரம் வந்துவிட்டது” என்றான். 5. கிறிஸ்து பன்னிரெண்டு வயதிற்குப் பிறகு பள்ளிக்கூடத்திற்குப் போகவேயில்லை. அவனைக் கட்டுப்படுத்த ஜோசப்பும் மரியாவும் எடுத்த முயற்சிகள் தொடராகப் தோற்றுப்போயின. 6. பதினாறு வயதில் முதற்தடவையாக கிறிஸ்து சிறைக்குப் போனான். அதன்பின்பு அவன் அடிக்கடி காணாமற் போய்க்கொண்டிருந்தான். அவனை மறுபடியும் மரியா சிறைச்சாலைகளில் கண்டுபிடித்தார். 7. கிறிஸ்து எப்போதும் தோளில் ஒரு துணிப் பையை மாட்டியிருப்பான். அந்தப் பை நிறைய அவன் எறிவதற்கு வாகான கற்களை வைத்திருப்பான். 8. தந்தையைப் புதைத்த புதைகுழியின் மீது ஓர் இரவில் கிறிஸ்து கைகளில் கற்களை வைத்துக்கொண்டு சுற்றிச் சுற்றி நடந்துகொண்டிருப்பதை மரியா கண்டபோது கிறிஸ்துவைத் தொலைவாக அழைத்துச் செல்ல முடிவெடுத்தார். 9. மரியாவிற்கு தாய்நாட்டிற்கு திரும்பவே விருப்பமாயிருந்தது. அங்கே அப்போது போர் முடிந்து சமாதானம் அறிவிக்கப்பட்டிருந்தது. 10. முப்பது வருடங்களாகத் தேடிய செல்வத்துடனும் கிறிஸ்துவுடனும் மரியா புறப்படலானார். 11. அவர் தனது பிரியத்திற்குரிய பழைய ஆங்கிலத் தட்டச்சுப் பொறியையும் தன்னுடன் எடுத்துச் சென்றார். 7 அதிகாரம் 1. அந்தச் சிறிய கடலோரப் பட்டினத்தின் புராதனக் கற்கோட்டைக்கு அண்டையிலான தோட்டத்துடன் கூடிய பெரிய வீட்டில் மரியாவும் கிறிஸ்துவும் குடியேறினார்கள். 2. மரியா தோட்டத்தில் மலர்களையும் கனிகளையும் விளைவித்தார். மற்றைய நேரங்களில் தனது தட்டச்சுப் பொறியோடு இருந்தார். 3. நிறையச் சனங்கள் யுத்தத்தில் காணாமற்போனவர்களைத் தேடி விண்ணப்பங்களைத் தயாரித்து நாட்டின் தலைவருக்கும் அதிகாரிகளிற்கும் செஞ்சிலுவைச் சங்கத்திற்கும் அனுப்பிவைப்பதற்காக மரியாவைத் தேடி வந்தனர். 4. மரியா ஆங்கிலத்தில் அந்த மனுக்களைத் தயாரித்துத் தட்டச்சுச் செய்து அவர்களிற்குக் கொடுத்ததுடன் சில சமயங்களில் மனு தயாரிக்க வந்தவர்களிற்குத் தபால் செலவீனங்களிற்குப் பணமும் கொடுத்தார். 5. கிறிஸ்து எப்போதும்போல சுற்றித் திரிந்துகொண்டிருந்தான். சூரியன் விழும் நேரங்களில் கடற்கரையில் அவன் தனது கைகளை வேகமாக வீசியவாறே நடந்து செல்வதைப் பார்க்கும்போது அவன் கடலின் மீதே நடந்து செல்வதுபோல மரியாவுக்குத் தோன்றும். 8 அதிகாரம் 1. கிறிஸ்துவுக்கு முப்பத்து மூன்று வயதாகிற்று. 2. சற்றே குள்ளமான தோற்றமுடையவனாக இருந்தபோதிலும் அவன் உரமான கை கால்களையும் அகன்ற தோள்களையும் கொண்ட பலசாலியாக இருந்தான். 3. அவன் பேசும் மொழியைச் சனங்கள் அறியாதிருந்தார்கள். 4. அக்காலத்தில் அந்தப் பட்டினத்துக் கவர்னர் மாளிகையின் முன்னாகப் பீடத்தை உண்டாக்கி அதிலே போர் வெற்றிச் சின்னமாக ஓர் எட்டடிச் சிலையை வைக்க ஏற்பாடாயிற்று. 5. போரில் வெற்றி பெற்ற இராணுவ வீரன் ஒருவன் துப்பாக்கியைத் தூக்கிப் பிடித்தபடி நிற்கும் அந்தச் சிலை அயல்நாட்டில் கலை நுணுக்கத்தோடு செய்யப்பட்டு கவர்னர் மாளிகையின் முன்னே உயர்ந்த பீடத்தில் நிறுத்தப்பட்டது. 6. வெள்ளிக்கிழமையன்று காலையில் அந்தச் சிலையைக் கவர்னர் பிலாத் து திறந்து வைப்பதாகயிருந்தது. 7. வெள்ளிக்கிழமை விடிந்தபோது கவர்னர் மாளிகையின் முன்னாலிருந்த பீடம் உடைக்கப்பட்டிருந்தது. 8. வெற்றிச் சின்னச் சிலை பெயர்த்தெடுக்கப்பட்டுக் காணாமற்போயிருந்தது. 9. கவர்னர் மீதான அதிருப்தியிலிருந்த அரசு அதிபர், சில நாட்களிற்கு முன்னாகக் கவர்னர் மாளிகையின் இரவுக் காவலை நீக்கியிருந்தார். 9 அதிகாரம் 1. கவர்னர் மாளிகைக்கு வந்த படையினர் சிலையின் உடைக்கப்பட்ட பீடத்தருகே ஒரு துணிப்பையைக் கண்டு பிடித்து வெடிகுண்டுத் தடுப்புப் பிரிவினருக்குத் தகவல் கொடுத்தனர். 2. அவர்கள் வந்து துணிப்பையைத் திறந்தபோது உள்ளே சரளைக் கற்களைக் கண்டனர். 3. படையினரிடம் மோப்பம் அறியும் ஓநாய் ஒன்றிருந்தது. அது மெலிதாக ஊளையிட்டவாறே வெற்றிச் சின்னம் பெயர்த்தெடுக்கப்பட்ட இடத்திலிருந்து ஓடத் தொடங்கியது. படையினர் ஓநாயைத் தொடர்ந்து சென்றபோது அந்த ஓநாய் மரியாவின் வீட்டை நோக்கிச் சென்றது. 4. படையினர் மரியாவிடம் விசாரித்தபோது மரியா சிலையை ஒப்படைத்து விடுவதாகவும் அங்கே தீங்கொன்றும் விளைவிக்க வேண்டாமென்றும் படையினரிடம் கேட்டுக்கொண்டார். 5. படையினர் மரியாவின் பின்னே செல்ல மரியா வீட்டின் பின்புறமுள்ள தோட்டத்திற்குச் சென்றார். 6. அங்கே ஒரு புதைகுழி மீது கையில் சரளைக் கற்களோடு கிறிஸ்து உட்கார்ந்திருந்தான். 7. படையினர் துப்பாக்கிகளை கிறிஸ்துவை நோக்கி நீட்டிப்பிடித்தவாறு, கற்களைக் கீழே போட்டுவிட்டுக் கைகளைத் தூக்கியவாறே எழுந்துநிற்குமாறு கிறிஸ்துவுக்குக் கட்டளையிட்டார்கள். கிறிஸ்து அசையாமல் இருந்தபோது மரியா அந்நிய பாஷையில் சத்தமிட்டவாறே ஓடிச் சென்று கிறிஸ்துவின் கன்னத்தில் முத்தமிட்டார். 8. அப்போது மரியாவின் பிடரிமீது பலத்த ஒரு துப்பாக்கி அடிவிழ மரியா மயங்கி கிறிஸ்துவின் கால்கள் மீது சரிந்தார். 10 அதிகாரம் 1. தனி ஒருவனாக அந்த வெற்றிச்சின்னச் சிலையை கிறிஸ்து பெயர்த்து எடுத்துவந்து தோட்டத்தில் குழி தோண்டிப் புதைத்து வைத்ததைப் படையினர் முதலில் நம்ப மறுத்தார்கள். 2. ஆனால் நான்கு படைவீரர்களாகச் சேர்ந்து அந்த வெற்றிச்சின்னத்தைத் தூக்கிக் கிறிஸ்துவின் தோளில் வைத்தபோது அவன் அதைத் தூக்கிக்கொண்டு நடந்தான். 3. நகரத் தெருக்களால் அவர்கள் கிறிஸ்துவை ஊர்வலம் விட்டார்கள். 4. அச்சத்துடனும் இரக்கத்துடனும் நகர மக்கள் பார்த்து நிற்க கிறிஸ்து வெற்றிச்சின்னச் சிலையைச் சுமந்துகொண்டு நடந்தான். 5. அவர்கள் கிறிஸ்துவை கவர்னர் மாளிகைக்குப் பிலாத்துவிடம் அழைத்து வந்தார்கள். 11 அதிகாரம் 1. கவர்னர் மாளிகைக்குப் பின்புற வீதியிலிருந்த தேவாலாயத்திற்குள் நுழைந்து திருட முயன்ற பெயர் போன கள்வன் பரபாஸை பிடித்துவைத்திருந்த மக்கள் கவர்னர் மாளிகைக்கு முன்னே கூடிநின்ற படையினரிடம் அவனை ஒப்படைத்தார்கள். 2. படையினர் பரபாஸை நகர மக்கள் பார்க்கும்வண்ணம் வெற்றிச்சின்னம் பெயர்க்கப்பட்ட பீடத்தின் அருகே முழந்தாளில் நிறுத்திவைத்தார்கள். 3. வெற்றிச்சின்னத்தைச் சுமந்தவாறு வந்த கிறிஸ்து அதை இறக்கிவைத்த பிறகு கிறிஸ்துவையும் பரபாஸுக்கு அருகில் முழந்தாளில் படையினர் நிறுத்திவைத்தார்கள். 4. படையினரோடு நின்றுகொண்டிருந்த மதகுரு கூச்சலிட்டபடியே ஓடிவந்து கிறிஸ்துவின் கன்னத்தில் ஓங்கி அறைந்தபோது கிறிஸ்து முதலாம்முறை முகங் குப்புற விழுந்தான். 5. மதகுரு கிறிஸ்துவின் நீண்ட தலைமுடியைப் பற்றி இழுத்துத் துாக்கிக் கிறிஸ்துவை மறுபடியும் முழந்தாளில் நிறுத்தினார். 6. சுடுமணலில் முழந்தாளில் நிறுத்தப்பட்டிருக்கும் இருவரையும் பார்க்க மக்கள் தள்ளுமுள்ளுப் பட்டுக்கொண்டிருந்தபோது அங்கே கவர்னர் பிலாத்து விசாரணைக்காக வந்து சேர்ந்தார். 12 அதிகாரம் 1 விசாரணையை முடித்துக்கொண்ட பிலாத்து, மதகுருவிடமும் படையினரிடம் கிறிஸ்துவைச் சுட்டிக்காட்டி " இவன் கொஞ்சம் மனநிலை சரியில்லாதவனாக இருக்கிறான்..இவனை விட்டுவிடலாமா" எனக் கேட்டார். 2. மதகுரு ‘முடியவே முடியாது’ என்பதுபோல தலையை ஆட்டிக்கொண்டார். 3. அப்போது ஒரு படைவீரன் முழந்தாளிலிருந்த கிறிஸ்துவின் முதுகில் காலால் ஓங்கி உதைந்தான். 4. கிறிஸ்து இரண்டாம்முறை முகங் குப்புற விழுந்தான். 5. “வேண்டுமென்றால் இந்தக் கள்வனை விடுவியுங்கள் கவர்னரே” என்றார் மதகுரு. 6. அப்போது பிலாத்து “உங்கள் விருப்பம்போல் செய்துகொள்ளுங்கள்” என முணுமுணுத்தார். பின்னர் அவர் பரபாஸை நோக்கி அவனை எழுந்திருக்குமாறு கையைக் காட்டினார். அவன் எழுந்ததும் அவனைப் போகச் சொன்னார். 7. பரபாஸை தடுப்பார் யாருமில்லை. எல்லோருடைய கவனமும் கிறிஸ்துவிலேயே குவிந்திருந்தது. 8. பரபாஸ் கூட்டத்தோடு கூட்டமாக நின்று இப்போது கிறிஸ்துவைப் பார்த்தான். 9. கிறிஸ்துவின் முகத்திலிருந்து இரத்தம் வடிந்து சுடுமணலில் விழுந்தது. 10. கிறிஸ்து கூடிநின்ற மக்களை ஒருமுறை கூர்ந்து கவனித்தான். 11. அவனின் உதடுகள் “லாமா சபக்தானி” என முணுமுணுத்துக்கொண்டன. 13 அதிகாரம் 1. அழுது அரற்றிக்கொண்டு மரியா, கவர்னர் மாளிகைக்குச் சென்றபோது அந்தியாகயிருந்தது. 2. அங்கே பீடம் திருத்தப்பட்டு வெற்றிச் சின்னம் நட்டு வைக்கப்பட்டிருப்பதை அவர் கண்டார். 3. கவர்னர் மாளிகை உள்ளே மரியாவை நுழையவிடாமல் காவலர்கள் தடுத்துப்போட்டனர். 4. வெற்றிச் சின்னத்தின் கீழே ஓநாய் சுற்றிச் சுற்றி நடந்து மணலை முகர்ந்தவாறிருந்தது. 5. மரியா கடற்கரையை நோக்கி ஓடிச் சென்றார். 6. தன் மகன் கடலின் மேல் நடந்துவரக் கூடும் என்ற நம்பிக்கையில் அங்கேயே நின்றிருந்தார். 7. அப்போது கடற்கரைப் புதர்களிடையே இருந்து ஒரு நீண்ட வெள்ளைச் சர்ப்பம் வெளியே வந்து மரியாவின் முன்னே தலையைத் தூக்கியது.அதன் உடல் முழுவதும் சிவந்த மண் ஒட்டிக்கொண்டிருந்தது. 8. மரியா சர்ப்பத்தையே பார்த்தவாறிருந்தார். பின்னர் “பொய்” என்றார். 14 அதிகாரம் 1. நான்கு வருடங்களாகப் பகல் வேளைகளில் மரியா தொடர்ந்து தனது தட்டச்சு இயந்திரத்தில் மனுக்களைத் தயாரித்து வந்தார். 2. காணாமற்போன தனது மகனைக் கண்டபிடித்துத் தருமாறு கோரும் அம்மனுக்களை நாட்டின் அரசுத் தலைவருக்கும் கவர்னர் மாளிகைக்கும் பல்வேறு மனிதவுரிமை அமைப்புகளிற்கும் அவர் அனுப்பிவைத்தார். 3. மரியாவைப் போலவே பிள்ளைகளைக் காணாமற்போகக் கொடுத்த பல்லாயிரம் பெண்கள் சேர்ந்து அமைத்திருந்த சங்கத்தில் மரியாவும் சேர்ந்துகொண்டார். 4. அந்தச் சங்கத்தினர் தங்களது குழந்தைகளையும் உறவுகளையும் தேடி வீதிகளில் மெழுகுவர்த்திகளை வைத்துக்கொண்டு நின்றனர். 5. தங்களது உறவுகளுடைய புகைப்படங்களை மார்புகளில் ஏந்திப் பிடித்தவாறே நீண்ட ஊர்வலங்களை நடத்தினர். 6. காணாமற்போனார் குறித்து விசாரிக்க நாட்டு அதிபரால் அமைக்கப்பட்ட ஆணைக்குழுவின் முன்னே தனது பழைய தட்டச்சு இயந்திரத்துடன் உட்கார்ந்து மரியா சாட்சியம் அளித்தார். 7. தனது சாட்சியத்தை அவர் சொல்லிக்கொண்டிருக்கும்போதே அந்தச் சாட்சிய வார்த்தைகளை அவர் தட்டச்சும் செய்துகொண்டிருந்தார். 8. தன்னுடைய மகனைக் கண்டுபிடித்துவிடலாம் என்பதில் அவருக்குச் சந்தேகம் ஒன்றும் இருக்கவில்லை. 15 அதிகாரம் 1. காணாமற்போனவர்களைத் தேடும் தாய்மார்கள் கவர்னர் மாளிகையின் முன்னே, வீதியில் காலவரையற்ற உண்ணாவிரதமொன்றைத் தொடக்கினார்கள். 2. அந்த உண்ணாவிரதப் போராளிகளை ஒன்றிணைப்பவராக மரியா இருந்தார். 3. அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒலிபெருக்கியில் தெருவில் உட்கார்ந்திருந்து மரியா பேசிக்கொண்டிருக்கையிலேயே தனது மடியிலிருந்த தட்டச்சுப் பொறியில் தட்டச்சுச் செய்தவாறேயிருந்தார். 4. உண்ணாவிரதம் ஆரம்பித்த மூன்றாம் நாளில் கவர்னர் பிலாத்து உண்ணாவிரதிகளிடம் வந்தார். 5. அப்போது மரியா எழுந்து நின்று ஆங்கிலத்தில் உரக்கச் சத்தமிட்டார். 6. “மேன்மை தங்கிய கவர்னரே! என் குழந்தையை என்னிடம் தந்துவிடுங்கள்!” 7. பிலாத்து மரியாவை உணர்சியற்ற கண்களால் பார்த்தார். பின்னர் ஒருமுறை தனது இடுங்கிய கண்களை மூடித்திறந்துவிட்டு உண்ணாவிரதிகள் முன்னிலையில் பேசலானார் 8. “காணாமற்போனவர்கள் இத்தனை வருடங்களிற்குப் பிறகும் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை. நாட்டின் எந்தச் சிறைச்சாலைகளிலும் அவர்களைக் குறித்த பதிவுகளில்லை. எனவே உங்களைப் பார்த்து இந்த முடிவில்லாத போராட்டத்தைக் கைவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். உங்களிற்கு இழப்பீட்டுத் தொகை வழங்குமாறு நான் அரசாங்கத்திற்குப் பரிந்துரை செய்யவிருக்கிறேன்.” 9. கவர்னர் பிலாத்து இப்படிச் சொன்னதுதான் தாமதம் உண்ணாவிரதிகளிடையே பெரும் கூக்குரலும் பற்கடிப்புகளும் ஆத்திரப் பேச்சுகளும் எழுந்தன. 10. கவர்னரைப் பாதுகாவலர்கள் பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர். 16 அதிகாரம் 1. “எங்களிற்கு இழப்பீடு வேண்டாம் எங்கள் குழந்தைகளே வேண்டும்” என்ற முழக்கம் உண்ணாவிரதிகளிடையே எழுந்துகொண்டிருந்தது. 2. மரியா தனது தட்டச்சு இயந்திரத்தை உறையிட்டு மூடிவிட்டு உச்சிவெயில் தகிக்கும் வானத்தையே பார்த்துக்கொண்டிருந்தார். அவர் தனது கண்களை ஒளிக்குக் கூசிப்போகாதவாறு விரித்துவைத்துக் கண்மணிகளை உருட்டிக்கொண்டிருந்தார். 3. அப்போது அவரது மார்பிலே பால் சுரப்பதை அவர் உணர்ந்தார். 4. சுடும் தார் வீதியில் மரியா உட்கார்ந்தவாறே அப்படியே மடிந்து விழுந்தார். 5. மரியாவைச் சுற்றி தொலைக்காட்சிக் கமராக்கள் படம் பிடித்துக்கொண்டிருந்தன. 6. மாலை ஆகிற்று. வீதியில் மெல்லக் கைகளை ஊன்றி எழுந்திருந்த மரியாவின் முன்னால் தொலைக்காட்சிகளின் ஒலிவாங்கிகள் நீட்டப்பட்டபோது அவர் தனது தட்டச்சு இயந்திரத்தை உறையிலிருந்து வெளியே எடுத்தார். 7. வீதியில் கால்களை விரித்து உட்கார்ந்தவாறே தனது புடவையைத் தொடைகள்வரை வழித்துவிட்டுக்கொண்டார். 8. தனது தொடைகளிற்கிடையே தட்டச்சு இயந்திரத்தை வைத்துவிட்டு வலது கை சுட்டுவிரலால் ஓங்கி ஒங்கி அவர் ஒவ்வொரு எழுத்தாகத் தட்டினார். 9. “எனது போராட்டம் முடிந்துவிட்டது.” 17 அதிகாரம் 1. அதன்பின்பு மரியா வெளியே எங்கேயும் போகாமல் தனது வீட்டிற்குள்ளேயே அடைந்து கிடைந்தார். 2. சிலவேளைகளில் தோட்டத்திற்குள் சென்று சரளைக் கற்களைத் தேடித் தேடிப் பொறுக்கி அவற்றைக் கொண்டுவந்து தனது படுக்கையில் நிறைத்தார். 3. அந்தக் கற்களிடையே அவர் படுக்கலானார். 4. ஒரு நாள் அவர் கற்களிற்கிடையே படுத்திருக்கையில் கற்களுக்குள்ளிருந்து நீண்ட வெள்ளைச் சர்ப்பம் வெளிப்பட்டது. அது மரியாவின் மீது ஊர்ந்து அவர் முகத்திற்கு வந்தது. 5. அந்தச் சர்ப்பத்திடம் மரியா குரல் மெல்லிய குரலில் “உண்மை” என்றார். பின் அந்தப் பாம்பைத் தழுவிக்கொண்டு அரற்றலானார். பாம்பு தன்மீது நெடுநாளாக ஒட்டிக்கொண்டிருந்த சிவந்த மண்ணை மரியா மீது துடித்து உதிர்த்துப் போட்டது. 6.திடீர் திடீரென அவர் அறியாத பாஷையொன்றில் கத்திக் கூச்சலிடுகிறார் என அக்கம் பக்கத்தில் சொன்னார்கள். 7. ஒருநாள் காலையில் அவர் தபால் நிலையத்திற்கு தனது தட்டச்சு இயந்திரத்தைக் கைகளில் சுமந்தவாறே செல்வதை மக்கள் கண்டார்கள். 18 அதிகாரம் 1. பிலாத்துவுக்கு வந்திருந்த இரண்டாவது கடிதத்தைத் தனது படுக்கையில் சாய்ந்திருந்தவாறே அவர் படிக்கலானார். 2. என் கவர்னரே! 3. என்னை ஏமாற்றிவிடாதீர்கள். 4. உங்களிற்காக நிர்வாணத்தை அணிந்து ஒவ்வொரு இரவும் நான் என் தோட்டத்துக் குடிலில் வைக்கோல் படுக்கையில் தகித்திருக்கிறேன். என் உடற்சூடில் வைக்கோல்கள் கருகும் வாசனை உங்களை எட்டவில்லையா? 5. அய்ம்பத்தொரு வயதான பெண்ணென்றா என்னைத் தள்ளிவிடுகிறீர்கள்! 6. என் மாம்சம் இப்போதும் இளங் கன்றின் இறைச்சிதான் என் கண்ணாளரே. 7. ஒருமுறை என் உடலைப் ஸ்பரிசிக்க வாருங்கள். 8. என் நாவால் உங்கள் ரோமக்கால்களில் நான் நீர் வார்ப்பேன் 9. உங்கள் உடற் சூட்டில் நான் அடைகாத்துக் குஞ்சு பொரிப்பேன் 10. என் குழந்தையை எனக்குத் தாருங்கள் கவர்னரே! 19 அதிகாரம் 1. பிலாத்து வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு நாற்பதாவது நாளாகிற்று. 2. இப்போதெல்லாம் அதிகாலையிலேயே பிலாத்து எழுந்து மரியாவின் கடிதத்திற்காக நடுங்கும் கைகளுடன் காத்திருக்கலானார். 3. இதுவரை எட்டுக் கடிதங்கள் மரியாவிடமிருந்து கவர்னருக்குக் கிடைத்திருக்கின்றன. 4. ஆனால் மரியாள் எழுதியிருந்ததன்படிக்கு மரியா ஒவ்வொரு நாளுமே கவர்னருக்குக் கடிதம் அனுப்புவதாகவே தெரிந்தது. 5. பிலாத்துவைக் காவலில் வைத்திருப்பவர்கள் அவற்றில் எட்டுக் கடிதங்களை மட்டுமே, அதுவும் கடிதங்களைப் பிரித்துப் படித்துவிட்டு எள்ளல் சிரிப்புடனும் போலிப் பணிவுடனும் பிலாத்துவிடம் கையளிக்கிறார்கள். 6. அவர்கள் இந்தக் கடிதங்களை பிலாத்துவிற்கான தண்டனை ஓலைகளாகக் கருதியிருக்க வேண்டும். 7. ஆனால் பிலாத்துவுடைய வாழ்க்கையில் இப்போது ஒரேயொரு பிடிமானம் மரியாவின் காதல் கடிதங்கள்தான். அவர் அந்தக் கடிதங்களை நாள் முழுவதும் திரும்பத் திரும்பப் படித்துக்கொண்டேயிருந்தார். 8. அந்தக் கடிதங்கள் அவருக்கு ஏனோ நம்பிக்கையை ஊட்டியவாறேயிருந்தன. 9. இரவுகளில் பிலாத்து அந்தக் கடிதங்களால் தனது கண்களை மறைத்துக்கொள்வார். பின் சிறிது சிறிதாகக் கடிதத்தை கண்களின் கீழே இறக்கி கிழக்குச் சாரளத்திற்கு வெளியே வானத்தில் நட்சத்திரம் தெரிகிறதா எனப் பார்ப்பார். 10. இதுவரை ஒரு நட்சத்திரத்தைக் கூடப் பிலாத்து கண்டாரில்லை. மரியாவின் ஒவ்வொரு கடிதமும் அவருக்கு மனப்பாடமாயிருந்து. 20 அதிகாரம் 1. கவர்னரின் படுக்கையறைக்கு எதிரே அவரது மனைவியின் படுக்கையறை இருந்தது. 2. பல வருடங்களாகவே இருவரும் தனித் தனியேதான் உறங்கினார்கள். அவரது மனைவி வீட்டைவிட்டு வெளியேறி இப்போது ஆறு மாதங்களிருக்கும். 3. ஒரு குழந்தையைக் கொடுக்க பிலாத்துவிடம் ஆண்மைச் சத்து இல்லாமலிருக்கிறது என மனைவி தொடுத்த விவாகரத்து வழக்கு நீதிமன்றில் இருக்கிறது. 4. பிலாத்துவின் ஆண்மைக் குறைவு குறித்து அவரது மனைவி பகிரங்கமாவே தேர்தல் கூட்டங்களில் நையாண்டி பண்ணியிருந்தார். 5. பிலாத்துவின் மனைவியின் படுக்கையறை மிக அழகானதும் ஆடம்பரமானதுமாக இருந்தது. 6. ருஷ்யச் சக்கரவர்த்தி மகா ஜாரின் காலத்து அகன்ற கட்டிலும் பிரஞ்சுத் தளபாடங்களும் பெல்ஜியம் நிலைக் கண்ணாடிகளும் ஈரானியக் கம்பளங்களும் சீனத்துப் பட்டுத் திரைச் சீலைகளும் அங்கிருந்தன. 7. பிலாத்து தனது இடுப்புத் தோற் பட்டியால் அவரது மனைவியை அந்தப் படுக்கையில் போட்டு அடித்த அன்றுதான் மனைவி வீட்டைவிட்டு வெளியேறியிருந்தார். அந்தப் பெண் உதிர்த்த இரத்தம் அந்த அகன்ற படுக்கையின் வெண்பட்டுத் துணிகளில் திட்டுத் திட்டாகப் படிந்திருந்தன. 8. இப்போது மரியாவின் கடிதங்களால் அந்தப் படுக்கையை பிலாத்து நிறைத்திருக்கிறார். அந்தக் கடிதங்களின் மீது நிர்வாணமாக அவர் குப்புறப் படுத்துக்கொள்கிறார். 9. மரியா எப்படியாக இருப்பார் எனத் தனது மனதிற்குள் பிலாத்து சித்திரங்களைத் தீட்டிக் கற்பனை செய்துகொள்கிறார். 10. அவருடைய கற்பனையில் தலையிலும் மார்பிலும் பூக்களைச் சூடிக்கொண்டு கடற்கரையில் தனிமையில் உட்கார்ந்திருக்கும் குவேனியின் சித்திரம் தெரிகிறது. 21 அதிகாரம் 1. அன்றைய இரவில் கள்வன் பரபாஸ் கடற்கரையில் பதுங்கிப் பதுங்கி நடந்துகொண்டிருந்தான். 2. அவனது கையில் பனை நார்களால் பின்னப்பட்ட கூடையிருந்தது. அவன் களங்கண்ணி வலைகளிலிருந்து திருடும் பெரிய இறால்களை அந்தக் கூடையில் போட்டுத்தான் எப்போதும் எடுத்துப்போவான். 3. பரபாஸ் தனது ஆடைகளைக் களைந்து கடற்கரையில் வைத்துவிட்டு நிர்வாணமாகக் கடலிற்குள் இறங்கி பனை நார் கூடையை இடுப்பில் வரிந்து கட்டிக்கொண்டு முரல் மீன்போல களங்கண்ணி வலைக் கூட்டத்தை நோக்கி நீந்திச் செல்லலானான். 4. கடலில் பாய்ச்சப்பட்டிருந்த களங்கண்ணி வலைகளை அவன் நெருங்கியபோது அங்கே இருளில் களங்கண்ணிக் கம்புகளைப் பிடித்தவாறே ஆட்கள் கடலில் பதுங்கியிருப்பது தெரிந்தது. 5. அந்த ஆட்கள் கள்வனைப் பிடிக்கக் காத்திருக்கிறார்கள். 6. பரபாஸ் சடுதியில் திரும்பி கரையை நோக்கி வேகமாக நீந்தத் தொடங்கினான். அவன் பின்னே அவனைத் துரத்தி வருபவர்களின் கூச்சல் கேட்டது. 7. பரபாஸ் கரையேறிய இடம் அவன் ஆடைகளைக் களைந்து வைத்த இடமல்ல. ஆடைகளைத் தேட இது தருணமல்ல. அவனைத் துரத்தி வருபவர்கள் அவனை நெருங்கிக்கொண்டிருக்கிறார்கள். 8. பரபாஸ் நிர்வாணமாக, இடுப்பில் கட்டப்பட்டிருந்த பனை நார் கூடையுடன் துரத்தி வருபவர்களின் கைகளிற்குத் தப்பி இருளிற்குள் ஓடி மறைந்துபோனான். 22 அதிகாரம் 1. இருளில் ஓடிக்கொண்டிருந்த பரபாஸ் எதிரே ஒரு மதிற் சுவரைக் கண்டதும் ஒரே தாவாக அந்த மதிற் சுவரைத் தாண்டிக் குதித்தான். 2. அவன் குதித்த இடம் ஒரு கனித் தோட்டமாகயிருந்தது. 3. பரபாஸ் ஒரு மரத்தின் பின்னே பதுங்கிநின்று அவதானித்தபோது சற்றுத் தூரத்தே பொட்டு வெளிச்சத்தைக் கண்டான். மெதுவாக அந்த வெளிச்சத்தை நோக்கி ஓசையெழாமல் நடந்து போனான். 4. அந்த வெளிச்சம் ஒரு குடிலுக்குள் இருந்து வருகிறது. பரபாஸ் குடிலை நெருங்கி உள்ளே பார்த்தபோது அங்கே ஒரு வாசனை மெழுகுவர்த்தி ஏற்றிவைக்கப்பட்டிருந்தது. அதன் அருகே தரையில் வைக்கோல் படுக்கையில் ஒரு பெண் நிர்வாணமாகக் கண்களை மூடிப் படுத்திருந்தார். 5. பரபாஸ் ஒருகணம்தான் தயங்கினான். மறுகணம் இடுப்பிலிருந்த பனைநார் கூடையை எடுத்துத் தனது தலைவழியே கவிழ்த்துத் தனது முகத்தை மூடிக்கொண்டான். 6. பனை நார்களின் நீக்கல்களிற்கூடாக அவனது கண்களால் பார்க்க முடிந்தது. 7. அவன் ஓசைப்படாமல் அந்தப் பெண்ணை நெருங்கி அவரது வாயைப் பொத்திவிடத் தனது உரமான நீண்ட வலது கையை வீசிய போது அந்தப் பெண்ணின் மெல்லிய இடது கரம் சட்டென நீண்டு அவன் வீசிய வலது கையைப் பற்றியிழுத்தது. 8. மரியா கண்களைத் திறந்து உதடுகளிற்குள் முணுமுணுத்தார்: " உங்கள் வாசத்தால் உங்களை அறிவேன்!" 9. மரியா பேசியது பரபாஸிற்குப் புரியாததால் அவன் திகைத்து நின்றுவிட்டு மெதுவாகத் தனது தலையிலிருந்த கூடையைக் கழற்ற முயன்றபோது மரியா பரபாஸின் கையைப் பிடித்துத் தடுத்து “வேண்டாம் கவர்னரே முகமூடி இருக்கட்டும்” என்றார். 10. பரபாஸ் தலையில் கூடையோடு அப்படியே மரியாவிற்கு அருகில் உட்கார்ந்தான். 23 அதிகாரம் 1. மரியா மெதுவாகப் பரபாஸைப் படுக்கையில் சாய்த்தார். 2. முதலில் அவனது கால் விரல்களைத் தனது நாவால் சுத்தப்படுத்தினார். 3. பின்பு அவன் மீது முலைகளால் ஊர்ந்துசென்று குத்திட்டு நின்ற அவனது ஆணுறுப்பின் மீது தனது கால்களை விரித்து உட்கார்ந்து கொண்டு தனது கைகளை மேலே குடிலின் கூரையை நோக்கி உயர்த்திக்கொண்டார். 4. மரியா தனது கண்களை மூடியவாறே தனது இடுப்பை அசைத்து மேலும் கீழுமாக இயங்கினார். 5. அது ஒரு பெரிய பறவைக் குஞ்சு பறக்க எத்தனிப்பதைப் போலிருந்தது. 6. பின்பு மரியா பரபாஸைத் தழுவியவாறே அவனிற்குக் கீழாக வந்தார். 7. பரபாஸ் தலையில் பனை நார் கூடையுடன் அப்படியே கால்களில் குத்திட்டு உட்கார்ந்து மரியாவின் இடுப்பைத் தூக்கித் தனது உள்ளங்கைகளில் வைத்துக்கொண்டு முயங்கினான். 8. மரியா கண்களை மூடிக்கொண்டு தனது கால்களால் பரபாஸினது இடுப்பைக் கவ்விக்கொண்டார். 9. பரபாஸ் எழுந்து வெளியே சென்றபோது மரியா மெதுவாகச் சொன்னார் “நாளை முன்னிரவில் காத்திருப்பேன் என் கவர்னரே!” 24 அதிகாரம் 1. பரபாஸ் தனது கூட்டாளிகளிகளோடு கள் அருந்திக்கொண்டிருந்தபோது மரியாவைப் பற்றிச் சொன்னான். 2. நான் இப்படியொரு போகத்தை இதுவரை அனுபவித்ததில்லை. 3. அவள் பேசியது எதுவுமே எனக்குப் புரியவில்லை. அவள் எனது தலையிலிருந்து பனைநார் கூடையையும் கழற்றவே விடவில்லை. அதுவும் எனென்று தெரியவில்லை. 4. இரவு நடந்தது கனவா என்றுகூட எனக்குத் தோன்றுகிறது. 5. பரபாஸின் கூட்டாளி ஒருவன் கண்களைச் சுழற்றியவாறே " எனக்கும் கனவு காணப் பிடிக்கும்" என்றான். 25 அதிகாரம் 1. அன்றைய இரவு பரபாஸின் கூட்டாளி தலையில் பனைநார் கூடையைக் கவிழ்த்தவாறே நிர்வாணமாக மரியாவின் குடிலினுள் நுழைந்தான். 2. " வாருங்கள் கவர்னரே" என அழைத்த மரியா தனது நாவால் அவனது பாதங்களைச் சுத்தம் செய்ய ஆரம்பித்தார். 3. இப்படியாகப் பன்னிரெண்டு நாட்கள் பரபாஸின் பன்னிரெண்டு கூட்டாளிகள் மரியாவிடம் போய் வந்தனர். 4. அந்தப் பன்னிரெண்டு கூட்டாளிகள் வழியே மரியா குறித்த செய்தி நகரத்தில் விரைவாகப் பரவிற்று. 5. மரியா விபச்சாரம் செய்கிறார் எனச் சனங்கள் கொந்தளித்து அவரின் வீட்டிற்குத் திரண்டு வந்தபோது மரியா வீட்டின் கதவுகளை அடைத்துக்கொண்டு உள்ளேயிருந்தார். 6. சனங்கள் அந்தக் கனித் தோட்டத்தின் குடிலை எரித்துப்போட்டார்கள். 7. அப்போது சன்னலைத் திறந்த மரியா, சனங்களை நோக்கித் தான் சேகரித்து வைத்திருந்த கற்களை வீசத் தொடங்கினார். 8. முதற் கல்லே மரியாவிடம் கலகம் செய்த ஒருவனின் மண்டையை உடைத்துப்போட்டது. 26 அதிகாரம் 1. காவலர்கள் மரியாவைத் தம்மோடு அழைத்துப்போயினர். மரியா தனது பழைய தட்டச்சு இயந்திரத்தையும் தன்னோடு கொண்டுபோனார். 2. காவல் நிலைய அதிகாரி கேட்ட கேள்விகளிற்கு எந்தப் பதிலையும் சொல்லாது மரியா தட்டச்சு செய்தவாறேயிருந்தார். 3. அதிகாரி மரியாவை பெரிய மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார். 4. வைத்தியர் முன்னால் உட்கார்ந்து மரியா தட்டச்சுச் செய்து தாளை உருவி வைத்தியர் முன்னால் மேசையில் வைத்தார். 5. அந்தத் தாளில் ‘நான் கர்ப்பவதியாக இருக்கிறேன்’ எனத் தட்டச்சுச் செய்யப்பட்டிருந்தது. 6. வைத்தியர் மரியாவைப் பரிசோதனை செய்துவிட்டு அவரை மனநோய் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார். 27 அதிகாரம் 1. சில நாட்களிற்குப் பிறகு மரியாவிடமிருந்து பிலாத்துக்கு கடிதம் வந்தது. 2. இம்முறை அந்தக் கடிதத்தை பெரும் கேலிக் கூச்சலுடன் காவலுக்கிருந்த இராணுவத்தினர் படித்துவிட்டு ஆளுக்காள் கைமாற்றிக்கொண்டிருந்தனர். 3. அவர்களிடையே சிறு குழந்தைபோல ஓடி ஓடி அந்தக் கடிதத்தைத் தன்னிடம் கொடுத்துவிடுமாறு பிலாத்து கெஞ்சித் திரிந்தார். 4. கடைசியாக அந்தக் கடிதம் ஓர் இராணுவ அதிகாரியின் கைக்குப் போனபோது அவன் கடிதத்தையும் பிலாத்துவையும் மாறி மாறிப் பார்த்தவாறே கடிதத்தைப் படித்து முடித்துவிட்டு அதைத் தனது இருக்கையில் குண்டியின் கீழ் வைத்துகொண்டு , தன்னிடம் மரியாவின் கடிதத்தை இரந்துநிற்கும் பிலாத்துவிடம் “இல்லை சேர்..இந்தக் கடிதம் உங்களிற்கானதில்லை” என்றான். 5. பிலாத்து சிறிது நேரம் அங்கேயே நின்று பார்த்துவிட்டு திரும்பித் தனது மனைவியின் படுக்கையறைக்கு வேகமாக ஓடிச் சென்றார். 28 அதிகாரம் 1.அங்கே மதுபானப் போத்தல் வந்த காகித அட்டைப் பெட்டியில் அவரே வெட்டித் தயாரித்து வைத்திருந்த முகமூடி படுக்கையில் கிடந்தது. 2. பிலாத்துஅந்த முகமூடியை எடுத்துத் தனது முகத்தில் மாட்டியவாறே அந்த இராணுவ அதிகாரி முன்பு வந்து நின்றார். 3. “இப்போது தெளிவாகிறது..இந்தக் கடிதத்திற்குரிய நபர் நீங்கள்தான் அய்யா” எனச் சொல்லிக்கொண்டே அந்த இராணுவ அதிகாரி கடிதத்தை எடுத்து பிலாத்துவிடம் கொடுத்தான். 4. பிலாத்து நடுங்கும் கையால் கடிதத்தை வாங்கிக்கொண்டு மனைவியின் படுக்கையறையை நோக்கி ஓடிப் போனார். 5. முகமூடிக்கு மேலாக மூக்குக் கண்டியை மாட்டிக்கொண்டு அவர் கடிதத்தை வாசிக்கத் தொடங்கினார். 29 அதிகாரம் 1. மேன்மை மிக்க கவர்னரே! 2. நான் இப்போது கர்ப்பவதியாக உள்ளேன். 3. என் வயிற்றின் கனியை நன்றாகப் பராமரிப்பதற்காக என்னை மருத்துவமனையில் வைத்திருக்கிறார்கள். 4. என் கனித்தோட்டத்தின் நடுவே என் குடிலின் வைக்கோல் சாம்பல் படுக்கையில்தான் நான் என் குழந்தையைப் பெற்றெடுக்க விரும்புகிறேன். 5. என்னிடமிருந்து நீங்கள் பறித்த குழந்தையை என்னிடம் நீங்கள் திருப்பித் தருவது நீதியாகயிருந்தது . 6. அது நிறைவேறிற்று. 30 அதிகாரம் 1. அன்றைய இரவில் பிலாத்து கிழக்குச் சாளரத்தின் வழியே வெளியே பார்த்தபோது அடிவானத்திலிருந்து ஒரு வால் நட்சத்திரம் எழுவதைக் கண்டார். அந்த நட்சத்திரம் வடக்குத் திசை நோக்கி நகர்ந்துகொண்டிருந்தது. 2. பிலாத்து அடுப்பைப் பற்ற வைத்து அதன் மேல் பாத்திரத்தை வைத்தார். 3. இராணுவத்தினர் ஒருவர் இருவராக வந்து சமையலறைக்குள் எட்டிப் பார்த்துவிட்டுக் கேலி பேசிக்கொண்டு சென்றனர். 4. பிலாத்து, சமையலானதும் பாற்சோற்றை ஒரு வெள்ளித் தட்டில் கொட்டினார். 5. தனக்கு மகன் உண்டாகியிருக்கும் நற்செய்தியை அவர் இராணுவ வீரர்களிற்குப் பாற்சோறு வழங்கிக் கொண்டாடப் போகிறார். 6. பிலாத்து பாற்சோறால் நிறைந்த வெள்ளித் தட்டோடு சமையலறையிலிருந்து வெளியே வந்தபோது அந்த வீட்டில் யாரும் இருக்கவில்லை. 7. எல்லா வாசல்களும் திறந்து கிடந்தன. காயா ஒன்பது வயதுச் சிறுமியும் பாரிஸின் புறநகரான சார்ஸலின் ‘அனத்தலே பிரான்ஸ்’ பள்ளி மாணவியும் எனது உற்ற தோழன் திருச்செல்வத்தின் ஒரே மகளுமான செல்வி. காயா கொல்லப்பட்டதற்குச் சில நாட்களிற்கு முன்னதாக நடந்த ஒரு சம்பவமே ‘காயா’ என்ற இந்தக் கதையை நான் எழுதுவதற்குக் காரணமாகிறது. முதலில் காயாவின் அப்பா திருச்செல்வத்தைக் குறித்துச் சொல்லிவிடுகிறேன். நானும் திருச்செல்வமும் ஒரே கிராமத்தில் ஒரே நாளில் ஒரே மாதத்தில் 1967-ம் வருடம் பிறந்தவர்கள். முதலாம் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்புவரை ஒன்றாகவே படித்தவர்கள். பத்தாவது வகுப்பு இறுதிப் பரீட்சை எழுதியதன் பின்பாக நான் படிப்பைத் தொடரவில்லை. திருச்செல்வம் அதற்குப் பின்பு யாழ்ப்பாணம் சென்று படித்துப் பேரதனைப் பல்கலைக்கழத்திற்கும் தேர்வாகினான். பள்ளிக்காலங்களில் நானும் திருச்செல்வமும் அப்படியொரு கூட்டாளிகள். இரண்டுபேரும் எப்போதுமே சோடி போட்டுத்தான் திரிவோம். நாங்கள் இரண்டுபேருமே கிராமத்திற்குள்ளும் பள்ளிக்கூடத்திலும் பெரிய குழப்படிகாரர்களாகயிருந்தோம். ஆனால் நான் கொஞ்சம் பயந்தாங்கொள்ளிதான். திருச்செல்வம் முரடன். பேசிக்கொண்டிருக்கும்போதே ஓங்கி அடித்துவிடுவான். பல நிற ’வயர்’களால் தானே பின்னிய பட்டியை இடுப்பில் எப்போதுமே கட்டியிருப்பான். என்னோடு யாராவது பையன்கள் சண்டை வலித்தால் அவர்களைத் திருச்செல்வம் ’வயர்’ப் பட்டியால் அடித்து மூஞ்சி முதுகெல்லாம் பிய்த்துவிடுவான். அப்போது எங்களிற்கு பதின்மூன்று அல்லது பதினான்கு வயது இருக்கும். பள்ளிக்கூட மண்டபத்தில் போயிருந்து சேர்ந்து படிக்கப்போகிறோம் என வீடுகளில் சொல்லிவிட்டு இரவுகளில் கிளம்பிவிடுவோம். இருட்டின் போர்வைக்குள் கிராமத்தின் மணல்மேடுகளில் ஏறுவதும் வயல்வெளிகளிலே நடந்து திரிவதும் வாய்த்தால் யாருடைய தென்னைகளிலாவது ஏறிக் களவாக இளநீர் பறித்து அதைக் கல்லால் குத்தி உடைத்துத் திறக்கப்பண்ணிப் பருகுவதுமாகத் திரிந்துகொண்டிருந்தோம். இரவுகளில் இலக்கற்றுப் பேசியவாறு திரிவதில் அப்படியொரு விறுவிறுப்பு எங்களிற்கு. எங்களது கிராம அபிவிருத்திச் சபையில் ஒரு சிறிய நூலகமிருந்தது. அந்த நூலகத்தில் நூலகராக திருச்செல்வத்தின் அக்கா இருந்தார். அந்த நூலகத்திற்கு நூற்களை தெரிவு செய்து வாங்கிய புண்ணியவான் யாரென்று தெரியவில்லை. ஜெயகாந்தன், நா. பார்த்தசாரதி, அகிலன், ஜி.நேசன் என்றெல்லாம் நான் அங்குதான் படிக்கத்தொடங்கினேன். ‘வால்காவிலிருந்து கங்கைவரை’ நூல் அப்போது என்னை வெகுவாக ஈர்த்ததற்கு அந்நூலில் வரும் மெலிதான பாலுறவுச் சித்திரிப்புகளே காரணமாகயிருந்தன. அந்த நூலகத்தில் தமிழ்வாணன் எழுதிய சில பாலுறவு விளக்க நூல்களுமிருந்தன. ‘உடலுறவில் மனைவியை மகிழ்விப்பது எப்படி?’, ‘இல்லற இன்ப விளக்கம்’ போன்ற தலைப்புகளில் அந்த நூல்களிருந்தன. நூலகத்திற்கு வரும் சிலர் அந்தவகை நூல்களை இரவலாக எடுத்துப் போவதை ஓரக்கண்ணால் கவனித்திருக்கிறேன். ஒருநாள் திருச்செல்வத்தின் அக்காவின் மேசையிலேயே அப்படியான நூலொன்று விரித்தபடியிருப்பதை நான் பார்த்தேன். திருச்செல்வம் அந்தவகை நூல்களில் இரண்டை நூலகத்திலிருந்து திருடிக்கொண்டே வந்துவிட்டான். கடற்கரையில் தாழம்புதர்களிடையே உட்கார்ந்து நானும் திருச்செல்வமும் அந்த இரண்டு புத்தகங்களையும் அவசர அவசரமாகப் படித்து முடித்த பின்பாகத் திருச்செல்வம் மறுபடியும் அந்தப் புத்தகங்களை யாருக்கும் தெரியாமல் நூலக அலுமாரியில் வைத்துவிட்டான். கிராமத்திற்கு ஒதுக்கமாகக் கடற்கரையில் அன்னை வேளாங்கன்னி கோயில் உள்ளது. இரவு வேளையில் அந்தக் கோயில் மண்டபத்தில் நானும் திருச்செல்வமும் படுத்துக் கிடந்தபோதுதான் இருவரும் முதன்முதலாகச் சுய இன்பம் செய்வதில் ஈடுபட்டோம். முதல் தடவை விந்து வெளியேறிய அந்த அனுபவம் இப்போதும் அரளிப் பூ மணத்துடனும் ஈரப்பசையுடனும் என் நெஞ்சிலுள்ளது. உண்மையில் அதுவொரு அச்சமூட்டும் கிறுகிறுப்பாகவே அப்போது இருந்தது. அடுத்த மூன்று நாட்களிற்கு விந்துவின் மணம் என் உடலிலிருந்தது. சிலநேரங்களில் வாந்தி வருவதுபோலவுமிருந்தது. அன்னை வேளாங்கன்னி கோயிலில் படுத்துக்கிடந்து சுய இன்பம் செய்ததால் கடவுள் என்னைத் தண்டிக்கிறாரோ என்றுகூடப் பயந்தேன். சில நாட்களிலேயே மெதுமெதுவாக அச்சம் தணிந்து போயிற்று. இரவுகள் வருவதே சுய இன்பம் செய்து திளைப்பதற்காகவே என ஆகிப் போயிற்று எனக்கு. நான் இயக்கத்தின் பயிற்சி முகாமிலிருந்த காலங்களில் இரவுக் காவல் கடமையிலிருக்கும்போது சுய இன்பம் செய்வதுண்டு. இயக்கத்தில் சுய இன்பம் செய்யக்கூடாது என நானறியக் கட்டுப்பாடுகள் ஏதுமில்லை. அப்போது எங்களது இயக்கத்தில் இயக்க உறுப்பினர்கள் காதலிக்கவோ கல்யாணம் செய்யவோ தடையிருந்தது. தனிநாடு கிடைக்கும்வரை சுய இன்பத்தைத் தவிர வேறு என்னதான் வழி. காவல் கடமையிலிருந்து சுய இன்பம் செய்யும்போது உச்சம் நிகழும் தருணத்தில் எதிரி நுழைந்துவிட்டால் உடனடியாக நான் துப்பாக்கியை எடுப்பேனா என்பது சந்தேகம்தான் என நான் அடிக்கடி எனக்குள் சொல்லிக்கொள்வதுண்டு. சுய இன்பத்தில் உச்சம் நிகழும் தருணம் அப்படியொரு மயக்க அனுபவத்தை எனக்குக் கொடுத்தது. அடி வயிற்றில் தீ கனன்று கடக்கும். உடல் அப்படியே காற்றாக மாறி மாயமாக அலையும். உச்சி மண்டையில் குளிர்ந்த அருவி உடைந்து கடகடவெனக் கொட்டும். எனது கிராமமும் அடங்கிய ஏரியாவிற்குப் பொறுப்பாளராக நான் இயக்கத்தால் நியமிக்கப்பட்டபோது எனக்கு இருபது வயது. திருச்செல்வம் பல்கலைக்கழகத்தில் முதல் வருடம் படித்துக்கொண்டிந்தவன் விடுமுறைக்கு கிராமத்திற்கு வந்திருந்தான். கிட்டத்தட்ட மூன்று வருடங்களிற்குப் பிறகு நான் அவனைச் சந்திக்கிறேன். திருச்செல்வம் ஆளே மாறிப்போயிருந்தான். நவீனரக உடைகள், காலிலே சப்பாத்துகள், கண்களிலே மெல்லிய சட்டகங்களாலான கண்ணாடியோடிருந்தான். சிங்களவர்கள் போல மீசையை  மழித்திருந்தான். வார்த்தைகளை அளந்து அளந்து நிதானமாகப் பேசினான். நான் ஒரு இரண்டு நிமிடங்கள் போராட்டத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி அவனிடம் பேசினேன். புன்னகையுடன் கண்களைச் சுருக்கியவாறு கேட்டுக்கொண்டிருந்தான். நான் புறப்படும்போது “வைச்சிரு” என நூறு ரூபாய் தாளொன்றை என் சட்டைப் பைக்குள் திணித்தான். எனக்கு அப்போது அது தேவையாக இருந்தது. அந்தப் பணத்தில் ‘மரணத்துள் வாழ்வோம்’ கவிதைத் தொகுப்பை வாங்கினேன். இப்போது எங்களது கிராம நூலகத்தில் திருச்செல்வத்தின் அக்காவிற்குப் பதிலாக மாயோள் என்ற விநோதமான பெயரைக்கொண்ட ஒரு வெளியூர் இளம்பெண் நூலகராகப் பணியாற்றிக்கொண்டிருந்தாள். அவள் புளியங்கூடலிலிருந்து பஸ்ஸில் வேலைக்கு வந்துபோய்க்கொண்டிருந்தாள். ஒருநாள் காலையில் அந்தப் பெண் தனது தந்தையையும் அழைத்துக்கொண்டு நான் பொறுப்பாயிருந்த முகாமிற்கு வந்தாள். திருச்செல்வம் நூலகத்திற்கு அடிக்கடி போவானாம். அவனது கண்கள் விஷமத்தனமானவை என்றும் அவனுடைய பேச்சுகள் எப்போதுமே பாலியல் சீண்டலானவை என்றும் அந்தப் பெண் சொன்னாள். நேற்று நூலகத்தில் மாயோள் தனியாக இருந்தபோது அங்கே திருச்செல்வம் போயிருந்தானாம். அவள் நாற்காலியில் உட்கார்ந்திருந்தபோது புத்தக அலுமாரியில் ஏதோ தேடுவதாகப் பாவனை செய்துகொண்டிருந்த அவன் அவளை அருகே வருமாறு அழைத்தானாம். இந்தப் பெண் போகவில்லை. வெறித்தனமான பார்வையுடன் வேகமாக இந்தப் பெண்ணை நோக்கி திருச்செல்வம் வந்தபோது இவள் பயத்துடன் எழுந்து நிற்கவும் திருச்செல்வம் கெட்ட கெட்ட வார்த்தைகளால் இந்தப் பெண்ணைத் திட்டி மிரட்டிவிட்டுப் போனானாம். நான் அந்தப் பெண்ணின் கண்களைப் பார்த்தேன். அவளது கண்களில் அச்சமிருக்கவில்லை, ஆனால் கடும் சினமிருந்தது. அவளது முழு முகமும் கோபத்தால் கொப்பளித்துக்கொண்டிருந்தது. நான் திருச்செல்வத்தை விசாரித்துவிட்டு நடவடிக்கை எடுக்கிறேன் என மாயோளிடம் சொன்னேன். என்ன நடவடிக்கை என எனக்குத் தெரிய வேண்டும் என என்னை அச்சுறுத்தும் தொனியில் மாயோள் சொன்னாள். அவர்களை நான் போகலாம் எனச் சொன்னபோது அவளது தந்தை கவனிக்காத கணப்பொழுதில் மாயோள் எனது மேசையில் ஒரு துண்டுச்சீட்டை வைத்துவிட்டு என்னைப் பார்த்தாள். அவர்கள் போனதும் நான் அந்தத் துண்டுச் சீட்டை எடுத்துப் பார்த்தேன். அந்தச் சீட்டில் ஆங்கிலத்தில் ஒருவரி எழுதப்பட்டிருந்தது. அது என்னவென்று தெரியவில்லை. முகாம் பொடியன்களிலும் யாருக்கும் ஆங்கிலம் வாசிக்கத் தெரியாது. அந்தச் சீட்டை சட்டைப்பைக்குள் போட்டுக்கொண்டு மோட்டார் சைக்கிளில் திருச்செல்வம் வீட்டை நோக்கிப் போனேன். திருச்செல்வம் அவர்களது வீட்டுப் படலையருகே நின்றிருந்தான். “என்ன திரு படலையடியில நிக்கிறாய்?” என்று கேட்டேன் “உன்ர மோட்ட சைக்கிள் சத்தம் கேட்டுது அதுதான் வந்தனான்” என்றான். அவனது குரலில் பதற்றமிருந்தது. நான் வருவேன் என்று எதிர்பார்த்து நிற்கிறான். “திரு… இதை ஒருக்கா படிச்சு என்னெண்டு சொல்லு” என ஆங்கிலத்தில் எழுதப்பட்ட துண்டுச் சீட்டை அவனிடம் கொடுத்தேன். மெதுவாக அந்தச் சீட்டை வாங்கிய திருச்செல்வம் சீட்டில் எழுதப்பட்டிருந்த வரியைப் படித்ததும், கண்கள் திடீரெனச் சிவந்துபோக அமைதியாக நின்றான். தனது மூக்கை வேகவேகமாக உறிஞ்சிக்கொண்டான். “என்ன மச்சான் உனக்கும் இங்கிலிஷ் தெரியாதா?” என்றேன். தெரியும் என்பதுபோல மெதுவாகத் தலையசைத்தான் “அப்ப சொல்லு” திருச்செல்வம் மறுபடியும் ஒருமுறை துண்டுச் சீட்டைப் பார்த்துவிட்டுச் சொன்னான்: “அவன் எனது மார்பைப் பிடித்துக் கசக்கிவிட்டுப் போனான்” அவனது தலை நிலத்தை நோக்கிக் குனிந்தபோது அதை வானத்தைப் பார்க்க வைக்குமாறு ஓங்கியொரு அறை கொடுத்தேன். திருச்செல்வம் தனது கன்னத்தைக் கையால் பொத்தியவாறு “ப்ளீஸ் மச்சான்” என முணுமுணுத்தான். நான் அவனை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு முகாமிற்குப் போனேன். முகாமின் ஓர் அறை சிறையாக மாற்றப்பட்டிருந்தது. சிறைக்குள் ஏற்கனவே நான்கு திருடர்களைப் பிடித்து வைத்திருந்தோம். முகாமின் முற்றத்தில் திருச்செல்வத்தை நிற்க வைத்துவிட்டு அந்த நான்கு திருடர்களையும் முற்றத்திற்கு அழைத்துவருமாறு பொடியளிடம் சொன்னேன். திருடர்கள் வெடவெடுத்து நடுங்கியபடியே வரிசையாக வெளியே வந்தார்கள். முற்றத்திற்கு அழைத்தாலே பச்சைப் பனைமட்டை அடி என்பது அவர்களிற்குப் பழக்கமாயிருந்தது. அந்தத் திருடர்களிடம் நான் திருச்செல்வத்தைக் காட்டிச் சொன்னேன்: “இவர் என்ர கூட்டாளி திருச்செல்வம். என்னோடதான் படிச்சவர். நான் நாட்டுக்காக இயக்கத்துக்கு வர இவர் எஞ்சினியருக்குப் படிக்க யூனிவர்சிட்டிக்குப் போனவர். அங்க என்ன படிச்சாரெண்டா பொட்டையளின்ர பாச்சியப் பிடிக்கத்தான் படிச்சிருக்கிறார்…” திருச்செல்வம் எனது முகத்தையே பார்த்துக்கொண்டு நின்றான். அவனுடைய மனதில் வன்மம் நுழைகிறாதாக்கும் என நினைத்துக்கொண்டேன். முகத்தைத் திருப்பிக்கொண்டு திருடர்களைப் பார்த்து “ஆள் மாறி ஆள் இவன்ர கன்னத்தில அடிச்சுக்கொண்டே இருக்கவேணும். சத்தம் எனக்குக் கேட்டுக்கொண்டேயிருக்க வேணும்” என்றேன். திருடர்கள் தங்களது பலத்தையெல்லாம் திரட்டி திருச்செல்வத்தை அறையத் தொடங்கினார்கள். சற்றுநேரத்திலேயே திருச்செல்வத்தின் முகம் அழுகிய ஈரப்பலாக்காய் போல ஆகிவிட்டது. அவனை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு நூலகத்திற்குப் போனேன். அங்கே மாயோளும் அவளது தந்தையுமிருந்தார்கள். திருச்செல்வத்தை மாயோளிடம் மன்னிப்புக் கேட்கச் சொன்னேன். திருச்செல்வம் என்ன சொல்வதெனத் தெரியாமல் தடுமாறினான். “இங்கிலிஸில மன்னிப்புக் கேள்..என்ர கூட்டாளி இங்கிலிஸ் பேசுறது எனக்குப் பெருமைதானே” என்றேன். திருச்செல்வத்தை மீண்டும் மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு போய் அவனது வீட்டுப் படலையடியில் இறக்கிவிட்டேன். நான் கிளம்பியபோது திருச்செல்வம் எனது தோளைத் தொட்டு “மச்சான் நான் செய்தது பெரிய பிழை” என்றான்.   2   நான் பிரான்சுக்கு வரும்போது திருச்செல்வத்தின் தொலைபேசி எண் எழுதியிருந்த துண்டுச்சீட்டு மட்டுமே என்னிடமிருந்தது. ரஷ்யாவில் இருந்து தரை வழியாகப் பல நாட்களாக, பல எல்லைகளைக் கடந்துவந்த பயணத்தில் நான் இலங்கையிலிருந்து எடுத்து வந்த பயணப் பையை என்னோடு எடுத்துவர எல்லை கடத்துபவர்கள் அனுமதிக்கவில்லை. மூன்று சோடி உடுப்புகளும் ஒரு ஆங்கில – தமிழ் லிப்கோ அகராதியும் வைத்திருந்த அந்தப் பையைத் தூக்கி அவர்கள் ஆற்றிற்குள் வீசி எறிந்துவிட்டுத்தான் என்னைச் சிறு ரப்பர் படகில் ஏற்றி ஆற்றைக் கடக்க வைத்தார்கள். ஓர் உறைபனி அதிகாலையில், பாரிஸின் இருளிற்குள் என்னைக் கடத்திக் கூட்டிவந்தவர்களின் கார் ஒரு பொதுத் தொலைபேசிக் கூண்டருகே என்னை இறக்கிவிட்டுச் சென்றது. பொதுத் தொலைபேசியில் அழைப்பதற்குச் சில ‘ப்ராங்’ நாணயக் குற்றிகளைத் தந்திருந்தார்கள். நான் திருச்செல்வத்தைத் தொலைபேசியில் அழைத்தேன். அடுத்த அரைமணி நேரத்தில் திருச்செல்வம் கையில் ஒரு பெரிய குளிரங்கியோடு என்னைத் தேடி வந்துவிட்டான். “முதலில ஜக்கெட்டைப் போடு மச்சான்” எனக் குளிரங்கியை என்னிடம் தந்துவிட்டு என்னைக் கட்டிப்பிடித்துக்கொண்டான். நாங்கள் சந்தித்த அந்த நாள் எங்கள் இருவரது முப்பதாவது பிறந்தநாளாக இருந்தது. அவனது வீடு அன்றுமாலை எனக்கான வரவேற்புக் கொண்டாட்டமாகவும் இரட்டைப் பிறந்தநாள் விழாவாகவும் அமளிதுமளிப்பட்டது. அப்போது பாரிஸில் தமிழர்களது வாழ்க்கை கொஞ்சம் சிக்கல்பிக்கலாயிருந்தது. செல்வம் அண்ணர் எழுதிய ‘எழுதித்தீராப் பக்கங்கள்’ பாரிஸ் வாழ்க்கை நினைவுச் சித்திர நூலிலுள்ள அளவுக்கு இல்லாவிட்டாலும் பிரச்சினைகள் இருக்கத்தான் செய்தன. ஒரு சிறிய அறைக்குள் நால்வர் அய்வராக இருந்துகொண்டு விசா, வேலைப் பிரச்சினைகளோடு போராடிக்கொண்டிருந்த காலமது. ஆனால் திருச்செல்வத்திற்கு அவனது படிப்புக் கைகொடுத்திருந்தது. ஓரளவு நல்ல வேலையும் திருப்தியான சம்பளமும் அவனுக்குக் கிடைத்தன. ஓர் அழகிய சிறிய வீட்டில் தனியாகத்தான் இருந்தான். அவனுக்குப் பவானியுடன் கல்யாணம் ஆகும்வரை நான் அவனுடன்தான் இருந்தேன். என்மீதான நேசமும் அன்பும் அவனுக்கு அப்படியே மாறாமலிருந்தன. மிகப் பொறுப்புள்ள மனிதனாக மாறியிருந்தான். கொஞ்சம் பணம் சேர்க்கவேண்டும், அழகான மனைவியும் குழந்தைகளும் வேண்டும் என்பது மட்டுமே அவனது கனவுகளாகயிருந்தன. “இலக்கியம் படி திரு..” என்பேன். படித்தால் தூக்கம் வருகிறது என்பான். என்னுடைய கதைகளை மட்டும் படித்து படித்துக் கெக்கடமிட்டுச் சிரிப்பான். ஏனெனில் நான் பெரும்பாலும் என்னுடைய கதைகளில் என் கிராமத்து மனிதர்களைத்தான் சற்று மாறிச்சாறிப் பதிவு செய்கிறேன். என்னுடைய கதைகளில் வரும் அநேக பாத்திரங்களும் அநேக சம்பவங்களும் அவனுக்கும் தெரிந்தவையாகவே இருக்கும். அவன் கதையைப் படித்தபின்பு அந்த மனிதர்களைக் குறித்தும் சம்பவங்களைக் குறித்தும் நாங்களிருவரும் நனவிடை தோய்வோம். ஆனால் ஊரில் இருக்கும்போது, மாயோள் என்ற பெண்ணின் மார்பை அவன் பிடித்ததற்காக நான் அவனைத் தண்டித்தது குறித்து ஒருநாள் கூட நாங்கள் சாடைமாடையாகக் கூடப் பேசிக்கொண்டதில்லை. அவனுக்கும் பவானிக்கும் திருமணமாகி எட்டு வருடங்கள்வரை குழந்தை இல்லை. திருகோணமலையில் ஒரு மந்திரவாதி குழந்தைப் பாக்கியம் பெற்றுக்கொடுக்கிறாராம் எனக் கேள்விப்பட்டு திருச்செல்வமும் பவானியும் இலங்கைக்குப் போய் வந்தார்கள். மந்திரவாதி பவானியைத் தனியாக அழைத்துச் சென்று தன்னிடம் தனியாக மூன்றுநாட்கள் பூஜையில் அமர வேண்டும் என்றும் பவானியினது அந்தரங்க உறுப்பிலிருந்து ‘குவியம்’ எடுத்துப் பூஜை செய்ய வேண்டும் என்றும் சொன்னாராம். பதறியடித்துக்கொண்டு வெளியே ஓடிவந்து பவானி இதைத் திருச்செல்வத்திடம் சொல்லவும் திருச்செல்வம் மந்திரவாதியை அடிக்கப்போய்விட்டானாம். மந்திரவாதி பேய்களை திருச்செல்வத்தின் மீது ஏவிவிடுவதாகவும் பவானியின் வயிற்றை நிரந்தரமாகவே திறக்காமல் பண்ணிவிடப்போவதாகவும் சொன்னாராம். இதை என்னிடம் திருச்செல்வம் சொன்னபோது அதை மையமாக வைத்து ‘குவியம்’ என்ற தலைப்பில் ஒரு சிறுகதையை எழுதினேன். பெயர்களை மாற்றியும் பிரான்ஸைக் கனடாவாக மாற்றியும் கதையை எழுதியிருந்தேன். அந்தக் கதையின்படி மனைவி குவியம் எடுக்கச் சம்மதித்துவிடுகிறாள். குழந்தையைத் தவிர அவளிற்கு வேறெதுவும் ஒரு பொருட்டேயல்ல. அந்தக் கதை எக்ஸிலிலோ அம்மாவிலோ பிரசுரமானது. அந்தக் கதையைப் படித்துவிட்டு திருச்செல்வம் பவானியைக் கூப்பிட்டு அந்தக் கதையைப் படிக்கச் சொன்னான். கடைசியில் அவனது நாற்பதாவது வயதில், பவானியின் வயிறு திறந்து காயா பிறந்தாள். அப்போது நான் பாரிஸ் நகர வாழ்க்கை பிடிக்காமல் நோர்வேக்குச் சென்றுவிட்டேன். நோர்வே வாழ்க்கையும் பிடிக்காமல் நான் திரும்பப் பாரிஸ் வந்தபோது காயாவுக்கு ஒன்பது வயதாகியிருந்தது. வாரத்தில் நான்கு நாட்களாவது மாலையில் நான் திருச்செல்வத்தின் வீட்டிற்குப் போவேன். கொஞ்சம் மதுவருந்திக்கொண்டும் பேசிக்கொண்டும் திருச்செல்வம் சமைப்பான். பவானி பத்து மணிக்குத்தான் வேலை முடிந்து வருவாள். பவானிக்கு எனக்கு ஒரு கல்யாணம் பண்ணிவைக்க வேண்டுமென்று ஆசை. “வயசு போச்செண்டு நினைக்காதேயுங்கோ..ஊருக்குப் போய் ஒரு விதவைப் பிள்ளையை கல்யாணம் செய்துகொண்டு வாங்க..அதுகளுக்கும் உதவியாயிருக்கும்” என்று ஒருமுறை பவானி சொன்னபோது நான் புன்னகைத்தபடி சும்மாயிருந்தேன். “நீங்கள் எல்லாம் எழுதுற கதையிலதான் புரட்சி..” என்றாள் பவானி. நான் அதற்கும் புன்னகைத்தேன். குழந்தை காயா நல்ல கறுப்பு நிறம். உயரமாகவும் ஒல்லியாகவுமிருப்பாள். சுருள் சுருளாக முடி. முன்வாய்ப் பற்கள் இரண்டு சற்றே முன்தள்ளியிருக்கும். பற்களிற்கு க்ளிப் போட்டிருந்தாள். அவள் எப்போதும் திருச்செல்வத்தோடு ஒட்டிக்கொண்டேயிருப்பாள். திருச்செல்வத்தை அந்தப் பக்கம் இந்தப் பக்கம் நகரவிடமாட்டாள். தாய்க்காரி வேலையிலிருந்து திரும்பிவரும்வரை தூங்கவும்மாட்டாள். இளமையில் திருச்செல்வம் இருந்ததுபோலவே காயாவும் கொஞ்சம் துடியாட்டமாகவே இருந்தாள். அன்று நான் திருச்செல்வம் வீட்டுச் சமையலறை மேசை முன்னால் அமர்ந்திருந்தேன். என் முன்னால் ஒரு க்ளாஸ் விஸ்கி இருந்தது. திருச்செல்வம் கையில் விஸ்கிக் க்ளாஸோடு சட்டியில் பன்றி இறைச்சித் துண்டங்களைப் பொரித்துக்கொண்டிருந்தான். எனக்கு அன்று உடம்பு சரியில்லாததுபோல இருந்தது. உடல் அளவுக்கு அதிகமாகக் குளிர்ந்துகொண்டிருந்தது. விஸ்கியை குடிக்கலாமா வேண்டாமா என நான் யோசித்துக்கொண்டிருக்கும்போது காயா “உங்களுக்கு பிரான்ஸே படிக்கத் தெரியுமா” என்ற கேள்வியோடு என்னிடம் வந்தாள். நான் ‘ஆம்’ என்றதும் எனக்கும் மேசைக்கும் நடுவாகத் தனது மெல்லிய உடலை நுழைத்துவந்து எனது மடியில் ஏறி உட்கார்ந்தவாறே கையிலிருந்த புத்தகத்தை விரித்து எனக்கு கதை வாசித்துக்காட்ட ஆரம்பித்துவிட்டாள். குட்டி இளவரசி குறித்த கதையது. காயாவின் முதுகு என் மார்பில் சாய்ந்திருந்தது. அவளது பிடரியில் வழிந்த சுருட்டை முடி என் கழுத்தில் படர்ந்திருந்தது. அவள் தனது குச்சிக் கால்களை எனது தொடைகளின் இருபுறங்களிலும் போட்டபடி உடலையும் தலையையும் அசைத்து அசைத்து உரக்க ராகம் போட்டு வாசித்தபடியிருந்தாள். “Et elle pensait combien il etait étranger de se trouver à un certain moment sous le soleil…” அப்போது எனது உடல் மேலும் குளிரத் தொடங்கியது. எனது கால்கள் மெல்ல நடுங்குவதை உணர்ந்தேன். வயிற்றின் அடியில் குறுகுறுக்கத் தொடங்கியது. கண்களைச் சடாரென மூடித்திறந்தேன். காயா எனது மடியில் ஆடியவாறு வாசிப்பில் லயித்திருந்தாள். எனக்கு என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. எனது உடல் மாறிக்கொண்டே வருவது தெரிகிறது. “எனக்கு கால் நோகுது” எனச் சொல்லிக்கொண்டே சட்டெனக் காயாவின் இடுப்பில் கைகொடுத்து அவளைச் சடுதியில் தூக்கி என் மடியிலிருந்து கீழே இறக்கும்போது எனக்கு விந்து வெளியாவதை உணர்ந்தேன். நான் காயாவை அவசரமாகத் தூக்கி இறக்குவதைப் பார்த்துக்கொண்டிருந்த திருச்செல்வத்திடம் முகத்தைச் சுழித்துக்கொண்டே “காலில ஏதோ பிரச்சினை” என்றேன். “இந்தக் குளிருக்கு கால் குறண்டும்..விஸ்கியைக் குடி” என்றான் திருச்செல்வம். இப்போது காயா திருச்செல்வத்திற்கு அருகே போய் நின்று புத்தகத்தை வாசித்துக்கொண்டிருந்தாள். நான் அவளது பின்புறத்தைக் கடைக்கண்ணால் பார்த்தேன். அங்கே ஏதாவது ஈரம் பட்டிருக்கிறதா எனக் கவனித்தேன். எதையும் அனுமானிக்க முடியவில்லை. அப்படியே குனிந்து எனது மடியைப் பார்த்தேன். ஒரு துளியாகக் காற்சட்டையில் ஈரம் துளிர்த்திருந்தது. எழுந்து தலையைக் குனிந்தவாறே குளியலறைக்குள் நுழைந்தேன். எனக்குத் தலையைச் சுற்றிக்கொண்டு வந்தது. உடம்பு முழுவதும் அந்தக் குளிரிலும் வியர்த்துக்கொட்டியது. காற்சட்டையை அவிழ்த்துப் பார்த்தேன். தொடையிடுக்கில் விந்து படிந்திருக்கிறது. உள்ளாடை நனைந்துபோயிருந்தது. தண்ணீரைத் திறந்து தொடையிடுக்கைக் கழுவினேன். மறுபடியும் காற்சட்டையை அணிந்துகொண்டு சமையலறை வாசற்படிக்குச் சென்று உடலைச் சுவரில் முடிந்தளவுக்கு மறைத்துக்கொண்டு தலையை மட்டும் உள்ளே நீட்டி எனக்கு உடம்பு சுகமில்லை என்று திருச்செல்வத்திடம் சொன்னேன். “சாப்பிட்டிட்டு போ” என்றான் திருச்செல்வம். "வேணாம்’ என்றுவிட்டு நான் வெளியேறினேன். காயா உரத்துக் கதை படித்துக்கொண்டிருந்தாள். நான் கதவைத் திறந்துகொண்டு தெருவுக்கு இறங்கி நடந்தபோது தூரத்தே பவானி நடந்து வருவது தெரிந்தது. சடாரெனத் திரும்பி எதிர்ப்புறமாக நடந்தேன். அப்படியே நடந்துகொண்டேயிருந்தேன். எனது மூளை வெட்டப்பட்ட ஆட்டு மூளைபோல உறைத்திருப்பதை உணர்ந்தேன். நான் சிறுமிகளைப் புணர்வதாக ஒரு போதும் நான் நினைத்துக்கூடப் பார்த்ததில்லை. சொல்லப்போனால் எனக்குள் காமம் இப்போது மங்கிக்கொண்டிருக்கிறது. பெண் உடல் முன்புபோல இப்போது என்னை ஈர்ப்பது குறைவு. அந்தக் குறைபாடுதான் சிறுமிகள் மீதான காமமாக எனக்குத் தெரியாமலேயே என்னுள் புகுந்திருக்கிறதோ எனத் திடீரென என் மரத்துப்போன மூளை கேட்கப் படாரென என் கன்னத்தில் ஓங்கி அறைந்துகொண்டேன். தலையைக் கவிழ்ந்து என் எச்சிலை என் மார்பில் பலமுறை உமிழ்ந்துகொண்டேன். என்னுடைய இளம் வயதில் எனக்கு வாரத்திற்கு மூன்று தடவைகளாவது தூக்கத்தில் விந்து வெளியாகும். முப்பத்தைந்து வயதைக் கடந்த பின்பு அது நடப்பதில்லை. என்னை ஆட்டிப் படைத்த காமம் என்னைக் கடந்துபோனதாகத்தான் நான் நினைத்துக்கொண்டிருந்தேன். மகாத்மா காந்திக்கே எழுபது வயதில் தூக்கத்தில் விந்து வெளியேறியிருக்கும்போது நாற்பத்தொன்பது வயதில் நீ காமத்தைக் கடந்திருப்பதாக நினைத்திருப்பது அடிமுட்டாள்தனமானது என எனது மரத்துப்போன மூளை சொன்னது. அப்படியே நடந்துபோய் ஆற்றுக்குள் இறங்கி மூழ்கிவிடலாம் போலிருந்தது. மகள் காயா என் மனம் முழுவதும் துண்டு துண்டாகக் குட்டிக் குட்டி அரூபங்களாகவும் ஒலியாகவும் என்னை வதைக்கலானாள். அதன் பின்பு நான் திருச்செல்வத்தின் வீட்டிற்குப் போகவில்லை. இது நிகழ்ந்த ஆறாவது நாள் நான் காயாவைப் பிரேதமாகத்தான் பார்த்தேன். காலையில் பள்ளிக்கூடத்திற்கு நடந்து சென்றுகொண்டிருந்த காயாவை கட்டுப்பாட்டை இழந்து நடைபாதைக்கு ஏறிய கார் கொன்று போட்டுவிட்டு நிற்காமல் தப்பித்து ஓடியது. காயா வெண்ணிற நீண்ட அங்கியும் வெண்ணிறப் பட்டுக் கையுறைகளும் அணிவிக்கப்பட்டு தேவதைபோல மலர்ப்படுக்கையில் கிடத்தப்பட்டிருந்தாள். வெட்கத்தை விட்டுச் சொல்வதானால் அந்த வெண்ணிற உடையில் எனது விந்தின் வாசனை வருகிறதா என என் மரத்துப்போன மூளை அச்சத்துடன் தேடியது. காயாவை அடக்கம் செய்ததன் பின்பாக நான் ஒவ்வொருநாள் மாலையும் திருச்செல்வம் வீட்டிற்குப் போனேன். திருச்செல்வம் தளர்ந்து போயிருந்தாலும் மூர்க்கம் கொண்டிருந்தான். காயாவைக் கொன்றவனை அடையாளம் தெரிந்தால் அவனைத் தனது கையாலேயே கொன்றுவிடப் போவதாகச் சொன்னான். திடீர் திடீரெனத் தேம்பி அழுதான். ஒருநாள் “அந்தத் திருகோணமலை மந்திரவாதி உண்மையில பேய்களை ஏவி விட்டிருப்பானா மச்சான்?’ எனக் குழந்தையைப் போல என்னிடம் கேட்டான். இன்னொருமுறை”மச்சான் நான் அந்த லைபிரரிப் பொட்டைக்குச் செய்த பாவம்தானோ இது" என்று அழுதான். அந்த நாட்களில் நான் உயிரோடு செத்துக்கொண்டிருந்தேன். என் ஆண்குறியை அறுத்துப்போடலாமா என்றுகூட யோசித்தேன். என் கையால் ஆண்குறியை அழுத்திக் கசக்கிப் பிசைந்து இப்போது இல்லாமல் அன்று மட்டும் ஏன் அப்படியானது என யோசித்தேன். எங்கோ ஓரிடத்தில் உன்னிடம் அப்போது காமம் ஒளிந்திருந்தது என என் மரத்துப்போன மூளை சொல்லியது. இல்லவே இல்லை என என் இருதயம் சொல்லிற்று. முப்பது வருடங்களிற்குப் பின்பாக நான் மீண்டும் என் மார்பில் சிலுவை குறி இட்டுக்கொண்டேன். கடற்கரை அன்னை வேளாங்கன்னியை நினைத்துக்கொண்டேன். காயா இறந்த இருபதாவது நாள் நான் திருச்செல்வம் வீட்டிற்குப் போயிருந்தேன். பவானி வேலைக்குச் சென்றிருந்தாள். திருச்செல்வம் இப்போது கொஞ்சம் தேறியிருப்பது போலயிருந்தது. சமையலறை மேசையில் இரண்டு க்ளாஸ்களை வைத்து விஸ்கியை ஊற்றினான். பின்பு காயாவுடைய ஓர் அழகிய நிழற்படத்தைக் கொண்டுவந்து என் முன்னே மேசையில் வைத்துவிட்டு " இதை எடுத்துக்கொண்டு போ!" என்றான். பின்பு “காயாவைப் பற்றி எழுது மச்சான்” என்றான். காயாவின் 31 -வது நினைவு தினத்துக்கு நான் அஞ்சலிக் கவிதையொன்றை எழுதிக் காயாவின் அந்த நிழற்படத்துடன் பத்திரிகைகளில் வெளியிட வேண்டும் என்று திருச்செல்வம் என்னைக் கேட்டுக்கொண்ட அந்தத் தருணத்தில் நான் எதைப் பற்றியும் யோசியாது கடகடவென நடந்த அனைத்து உண்மைகளையும் ஒளிவு மறைவில்லாமல் அவன் முன்னே வைத்தேன். அப்போது எனக்கு வெட்கமே வரவில்லை. நான் விடுதலையாகிக்கொண்டிருக்கும் உணர்வே என்னோடிருந்தது. நான் சொன்னவற்றை எங்கோ பார்த்தவாறு திருச்செல்வம் கேட்டுக்கொண்டிருந்தான். பின்பு தனது தலையைக் கவிழ்ந்துகொண்டு " நீ வேணுமெண்டு செய்யேலத்தானே" என்று மெல்லிய குரலில் சொன்னான். நான் அவனது கைகளைப் பற்றிக்கொண்டேன். தனது கைகளை என்னிடமிருந்து விடுவித்துக்கொண்டவன் " சிலவேளை காயா இப்ப உயிரோட இருந்தா நான் வேற மாதிரி யோசிச்சிருப்பன்" என்று முணுமுணுத்தான். பின்பு விஸ்கிக் கோப்பையை எடுத்து என்னிடம் தந்துவிட்டுத் தனது கோப்பையை உயர்த்தி “காயாவின் ஆன்ம சாந்திக்காக” என்றான்.   3   ‘காயா’ என்ற மேற்கண்ட கதையை எழுதி முடிக்கும்வரை நான் திருச்செல்வத்தின் வீட்டிற்குப் போகவில்லை. காயாவின் இறுதிச் சடங்கு நிகழ்ந்த அன்று அவனை இடுகாட்டில் பார்த்ததுதான் கடைசி. காயா இறந்த இருபதாம் நாள் மாலை நான் திருச்செல்வம் வீட்டு அழைப்பு மணியை அழுத்தினேன். கதவைத் திறந்தவன் “எங்க போனாய் இத்தின நாளா ?” எனக் கேட்டான். “கதை எழுதிக்கொண்டிருந்தன்” என்றேன். அவன் என்னை ஆழமாகப் பார்த்தான். “வா” என்று சொல்லிவிட்டு உள்ளே போனான். நானும் அவனும் எதிர் எதிராக அமர்ந்திருந்தோம். நான் எடுத்துச்சென்றிருந்த தாள்களை மேசையில் அவன் முன்னே ஒழுங்குபடுத்தி வைத்துவிட்டு " நான் எழுதின கதை..நீ படிக்கவேணும் திரு" என்றேன். அவன் தலையைக் குனிந்துகொண்டே “நான் இப்ப படிக்கிற மனநிலையிலயா இருக்கிறன் மச்சான்” என்றான். “இது காயாவைப் பற்றிய கதை..நீ கண்டிப்பாகப் படிக்கவேணும்” என்றேன். சடாரெனத் தலை நிமிர்த்தியவன் மேசையில் இருந்த தாள்களை வாரியெடுத்துக் கண்கள் ஒளிரப் படிக்கத் தொடங்கினான். நான் அவனது கண்களைப் பார்த்தவாறே காத்திருக்கலானேன். அவன் எந்த இடத்தில் படிப்பதை நிறுத்துகிறானோ அந்த இடத்தில் ‘காயா’ என்ற இந்தக் கதை முடிவுறும். (காலம் – 50வது இதழில் வெளியாகியது) மிக உள்ளக விசாரணை ஃப்ரான்ஸ் காஃப்காவினது புகழ்பெற்ற நாவலொன்றுக்கும் இந்தச் சிறுகதைக்கும் ஓர் ஒற்றுமையும் ஒரு வேற்றுமையுமுள்ளன. அவரது நாவலின் தலைப்பு ‘விசாரணை’. இந்தக் கதையின் தலைப்பு ‘மிக உள்ளக விசாரணை’. வேற்றுமை என்னவென்றால், காஃப்காவினது நாயகனுக்கு ஒரு கவுரவமான பெயர் கிடையாதெனினும் அவனை ‘K’ என்ற ஓர் எழுத்தாலாவது காஃப்கா குறித்துக்காட்டினார். நம்முடைய நாயகனுக்கு அதற்குக் கூட வக்கில்லை. இப்போது நாங்கள் நேரடியாகவே கதைக்குச் சென்றுவிடலாம். எண்பத்தைந்து மனித மண்டையோடுகளும் குவியலாக மனித எச்சங்களும் அகழ்ந்தெடுக்கப்பட்ட, இருபத்தைந்து வருடங்களிற்கு முந்தைய மனிதப் புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டதிலிருந்து இந்தக் கதை திடீரெனத் தொடங்குகின்றது. யாழ்ப்பாணப் பட்டினத்திலிருந்து மண்கும்பான் கிராமம் நான்கு கட்டைகள் தொலைவிலிருக்கிறது. அங்கேதான் தீவுப் பகுதிக்கான பிரதான குடிநீர் வழங்கல் மையமிருக்கிறது. சென்ற வருடம் மார்ச் மாதத்தில் அந்த மையத்திலிருந்து நிலத்திற்குக் கீழாகக் குழாய்களைப் பதித்து, புங்குடுதீவுக்கு குடிநீர் வழங்கும் திட்டத்திற்கான பணிகள் ஆரம்பமாயின. மண்கும்பானிலிருந்து இரண்டு கட்டைகள் தூரம்வரை குழாய்கள் பதிப்பதற்காகப் பூமியை அகழ்வது பெரிய கடினமான காரியமில்லை. மண்கும்பான் மணல் ஈரப் பசையுள்ள பூப்போன்ற குறுமணல். தண்ணீரை வெட்டுவதுபோல நிலத்தை வெட்டிவிடலாம். ஆனால் இரண்டு கட்டைகளிற்கு அப்பால், பூமி களிமண்ணும் ஊரியும் கலந்து கெட்டிப்பட்ட நிலமாகிவிடும். பூமியை அகழ்வதும் குழாய்களைப் பதிப்பதும் கொஞ்சம் சிரமமான காரியமே. அந்தக் கடின நிலம் தொடங்கும் கிராமத்திற்கு ஊரிப்புலம் என்று பெயர். ஊரிப்புலத்தில் குடிநீர் வழங்கல் வடிகால் சபை ஊழியர்கள் நவீனரக இராட்சத இயந்திரங்களைப் போட்டுப் பூமியை ஆழக் கிண்டியபோது எண்பத்தைந்து மனித மண்டையோடுகளும் எச்சங்களுமிருந்த சாவுக்குழியைக் கண்டுபிடித்தார்கள். உடனடியாகவே ஊறாத்துறையிலிருந்து காவற்துறை வந்து புதைகுழியைச் சுற்றி அரணமைத்து நின்றுகொண்டது. பொதுமக்களோ ஊடகங்களோ புதைகுழிக்கு அருகில் அனுமதிக்கப்படவில்லை. காவற்துறையின் தடுப்பை மீறிச் செல்ல முயன்ற தமிழ் நாடாளுமன்ற உறுப்பினரொருவரை காவற்துறை இளநிலை அதிகாரியொருவன் நெஞ்சில் கை வைத்துத் தள்ளிவிட்டது அங்கே பெரியதொரு தள்ளுமுள்ளையும் உருவாக்கிவிட்டிருந்தது. புதைகுழி குறித்த தகவல் வெளியே பரவியதும் புதைகுழியை நோக்கித் தூரப் பிரதேசங்களிலிருந்தெல்லாம் ஓடிவந்த பொதுமக்கள் மீது அன்று மாலை காவற்துறையால் ஒரு சிறிய தடியடிப்பிரயோகம் நடைபெற்றதாகச் செய்திகள் வெளியாகியிருந்தன. காவற்துறையால் கண்ணும் கருத்துமாகப் பாதுகாக்கப்பட்ட அந்தப் புதைகுழிக்கு, அடுத்தநாள் காலையில் யாழ்ப்பாண மாவட்ட நீதிபதி, சட்டநிபுண வைத்தியர், தொல்பொருள் ஆய்வுப் பணிப்பாளர், தொல்பொருள் அகழ்வுப் பொறுப்பாதிகாரி மற்றும் உயர் காவற்துறை அதிகாரிகள் வந்து சேர்ந்து ஆய்வுகளை நடத்தினார்கள். எட்டு மாத ஆய்வுகளிற்கு பின்பும் அந்த மண்டையோடுகள் யாருடையவையென்றோ, அந்த மனிதப் புதைகுழியை உண்டாக்கியவர்கள் யார் என்பதையோ இந்தக் குழுவினரால் கண்டுபிடிக்கவே முடியவில்லை. காணாமற்போனவர்களைத் தேடும் சங்கங்களைச் சேர்ந்தவர்கள் ‘இது இராணுவம் உண்டாக்கிய புதைகுழியாக இருக்கலாம்’ எனத் தெரிவித்தார்கள். இன்னும் சில அமைப்புகள் ‘இது விடுதலைப் புலிகளால் உண்டாக்கப்பட்ட புதைகுழியாக இருக்கலாம்’ என்றார்கள். ஆனால் இரண்டு தரப்புகள் சொன்னதற்குமே ஆதாரங்களோ கண்கண்ட சாட்சியங்களோ கிடையாது. ஒரு மண்டையோட்டில் கூட துப்பாக்கிக் குண்டு துளைத்த தடயமோ, வெட்டுப்பட்ட தடயமோ இருக்கவில்லை. புதைகுழிக்குள் ஒரு துப்பாக்கிக் குண்டுகூடக் கண்டுபிடிக்கப்படவில்லை. எனவே யாழ்ப்பாண மாவட்ட நீதிமன்றத்தில் அந்த விசாரணை அப்படியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதியும் பணி ஓய்வுபெற்றுச் சென்றுவிட்டார். இந்த வருடத்தின் தொடக்கத்தில் கனகசபை தியாகராம் என்றொருவர் யாழ்ப்பாண நீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்தார். தியாகராம், மனிதப் புதைகுழி கண்டுபிடிக்கப்பட்ட ஊரிப்புலம் கிராமத்தைச் சேர்ந்தவர். யுத்தத்தால் அந்தக் கிராமமே அழிக்கப்பட்ட பின்பு புலம்பெயர்ந்து பிரான்ஸில் வாழ்பவர். ஊரிப்புலத்தில் மனிதப் புதைகுழி கண்டுபிடிக்கப்பட்ட செய்தியை அறிந்து பிரான்ஸிலிருந்து இலங்கைக்கு வந்திருந்தார். கண்டுபிடிக்கப்பட்ட புதைகுழிக்கு அருகாக ஒரு கிணறு நில மட்டத்தோடு மண்ணால் மூடப்பட்டு இருப்பதாகவும் அந்தக் கிணற்றிலும் மனிதர்கள் புதைக்கப்பட்டிருக்கலாம் என்றும் அந்தக் கிணற்றையும் தோண்டிப் பார்க்கவேண்டும் என்பதாகவும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அவரது மனு இருந்தது. தியாகராமின் மூன்று சகோதர்கள் பல வருடங்களுக்கு முன்பாக ஒரேநாளில் காணாமற்போயிருந்தனர். யாழ்ப்பாண நீதிமன்ற நீதிபதிகளான M.J.நல்லைநாதன், எரங்க கந்தேவத்த ஆகிய இருவர் முன்னும் அந்த மனு விசாரணைக்கு வந்தபோது நீதிபதிகள் மனுவை ஏற்றுக்கொண்டார்கள். அந்தக் கிணற்றைத் தோண்டிப் பார்க்க உத்தரவிட்டார்கள். ஆனால் வேலை நடக்கவில்லை. கிணற்றைத் தோண்டும் வேலைகள் ஏன் தாமதப்படுகின்றன என இன்னொரு மனுவை தியாகராம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, குறிப்பிட்ட கிணறு ஊரிப்புலம் கிராம முன்னேற்றச் சங்கத்தால் கட்டப்பட்ட சங்கக் கிணறு எனவும் அந்தக் கிணற்றைத் தோண்டுவதற்கு கிராம முன்னேற்றச் சங்கத்தின் அனுமதி வேண்டுமெனவும் அந்த அனுமதியைப் பெறுவதற்கு கிராம முன்னேற்றச் சங்கத்தின் நிர்வாகத்தைக் கண்டுபிடிக்க முடியாமல் இருக்கிறதெனவும் காவற்துறை நீதிமன்றத்தில் விளக்கமளித்தது. நீதிபதிகள் காவற்துறையினரின் சமாதானத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. கிராம முன்னேற்றச் சங்கத்தின் அனுமதியில்லாமலேயே கிணற்றைத் தோண்டுவதற்கு நீதிமன்றம் சிறப்பு அனுமதி தருவதாகவும் உடனேயே வேலைகளை ஆரம்பிக்கும்படியும் நீதிபதிகள் காவற்துறைக்கு உத்தரவிட்டனர். அதற்குப் பின்பும் வேலை நடக்காததால் தியாகராம் தனது மூன்றாவது மனுவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். ‘மழைக் காலமென்பதால் வேலையைத் தொடங்க முடியவில்லை’ எனக் காவற்துறை நீதிமன்றத்தில் தெரிவித்தது. வேலையை ஆரம்பிப்பதற்கு ஏப்ரல் மாத்தில் ஒரு நாள் குறிக்கப்பட்டது. குறித்த நாளில் சட்ட நிபுண வைத்தியர் திடீர் விடுமுறையில் சென்றிருந்ததால் வேலை நடைபெறவில்லை. தியாகராம் சலிக்காமல் மறுபடியும் ஒரு மனுவைத் தாக்கல் செய்தார். இந்தமுறை உண்மையிலேயே கடுப்பான நீதிபதிகள், சம்மந்தப்பட்ட பதின்மூன்று திணைக்களங்களின் அதிகாரிகளையும் அடுத்தநாளே நீதிமன்றிற்கு அழைத்து, மே 15-ம் தேதி கண்டிப்பாகத் தங்களது முன்னிலையில் அந்தக் கிணற்றைத் தோண்டியே ஆகவேண்டுமென உத்தரவிட்டார்கள். நீதிபதிகள் கிணற்றைத் தோண்ட குறித்த நாளுக்கு இரண்டு நாட்கள் முன்னதாக, யாழ்ப்பாணத்தில் ஒரு விடுதியில் தங்கியிருந்த தியாகராம் இரகசியப் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டார். இந்தக் கிணறு தோண்டும் விஷயமாக அவர் யாழ்ப்பாணப் பத்திரிகையாளர் மன்றத்தில் கலந்துகொண்டு சில வார்த்தைகளைப் பேசியது பொலிஸாரால் பெரிய குற்றமாகக் கருதப்பட்டது. சட்டப்படி இப்போது பிரஞ்சுப் பிரஜையான தியாகராம் இலங்கை அரசியல் விவகாரங்கள் குறித்து ஊடகங்களில் பேசுவது சட்டவிரோதம் எனச் சொல்லப்பட்டு அவர் உடனடியாக பிரான்ஸுக்கு நாடுகடத்தப்பட்டார். இந்தச் செய்தி பெரியளவில் யாராலும் கண்டுகொள்ளப்படவில்லை. கவிஞர்.வ.ஐ.ச.ஜெயபாலன் மட்டுமே முகப்புத்தகத்தில் கருத்துத் தெரிவித்திருந்தார். ‘தியாகராம் போலவே என்னையும் இலங்கை அரசு கைதுசெய்து நாடு கடத்தியது. வசந்த காலமொன்றில் எங்கள் மண்ணின் புதைகுழிகளிற்குள்ளிருந்து சூரியப் பூக்கள் மலர்ந்து என்னை வரவேற்கும்’ என்று அவர் நன்நம்பிக்கை தொனிக்க எழுதியிருந்தார். மே 15-ம் தேதி காலையில், நீதிபதிகள் நல்லைநாதனும் எரங்க கந்தேவத்தவும் ஒரே வண்டியில் யாழ்ப்பாணத்திலிருந்து பண்ணைப் பாலம் வழியாக ஊரிப்புலம் நோக்கிப் புறப்பட்டார்கள். இருவரும் தங்களது பணியைத் தாங்கள் சட்டப்படியும் சரியாகவும் செய்கிறோம் என்ற உணர்வில் ஊறிப்போயிருந்தார்கள். கந்தேவத்த ஒரு சமயத்தில் தன் அருகேயிருந்த நல்லைநாதனின் கையைப் பற்றி மென்மையாக அழுத்தினர். இந்த சமிக்ஞைக்கு ‘நாங்கள் யாருக்கும் அஞ்சாமல் நீதியின் பக்கமிருப்போம், தைரியமாகயிரும்!’ என்பது அர்த்தப்பாடாகும். பருத்தித்துறை பச்சைத் தமிழரான நல்லைநாதனும், உயன புறான் அப்பு பரம்பரையில் வந்த சிங்களவரான கந்தேவத்தவும் நெடுநாளைய நெருங்கிய நண்பர்கள். கொழும்பு சட்டக் கல்லூரியில் ஒன்றாகவே பயின்று, கொழும்பு நீதிமன்றொன்றில் ஒன்றாகவே வழக்கறிஞர்களாகத் தொழில் செய்தவர்கள். நீதிபதிகளாக ஒரே நாளில் நியமிக்கப்பட்டவர்கள். நல்லைநாதன் எவ்வளவு திறமாகச் சிங்களம் பேசுவரோ அதேபோல கந்தேவத்தவும் திறமாகத் தமிழ் பேசுவார். நல்லைநாதன் யாழ்ப்பாணத்திற்கு பணி மாற்றலாகி வந்த ஒரே மாதத்தில் கந்தேவத்தவும் யாழ்ப்பாண நீதிமன்றத்திற்கு வந்து சேர்ந்தார். நீதிபதிகள் வந்த வண்டி பண்ணைப் பாலத்தை நீங்கி ஓடி மண்கும்பான் வழியாக ஊரிப்புலத்திற்குள் நுழைந்தது. ஏறக்குறைய நாற்பது வருடங்களிற்குப் பின்பாக நல்லைநாதன் ஊரிப்புலத்துக்கு வருகிறார். அவர் வந்துபோனபோது திறமையான ஓவியனால் வரையப்பட்ட நெய்தல் நிலச் சித்திரம் போல கிடந்த ஊரிப்புலம், இப்போது வெறும் பனங்காடாகக் கிடந்தது. மனிதர்கள் அங்கே ஒருகாலத்தில் வசித்தார்கள் என்பதற்கு இப்போதிருக்கும் ஒரே அடையாளம் அங்கு கடற்கரையையொட்டி இடிந்து கிடந்த குட்டைச் சுவருடைய சிறிய வைரவர் கோயில்தான். அந்தக் கோயிலுக்கு மண்கும்பானிலிருந்து யாரோ வந்து ஒவ்வொருநாளும் விளக்கேற்றிச் சென்றார்கள். மனிதப் புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டு காவற்துறையினரும் இராணுவத்தினரும் இரவு பகலாக இந்த இடத்தையே சுற்றத் தொடங்கிய பின்பு வைரவருக்கு விளக்கேற்றவும் யாரும் வரவில்லை. ஊரிப்புலத்திற்கு தான் வந்துசென்ற நினைவுகளை கண்களை நெற்றிக்குள் சொருகிக்கொண்டு நல்லைநாதன் கந்தேவத்தவுக்குச் சொல்லலானார். அவர் யாழ்ப்பாணத்தில் படித்துக்கொண்டிருந்தபோது தனது நண்பர்களுடன் அடிக்கடி வெள்ளைக் கடற்கரைக்கு நீராட வருவதுண்டு. வெள்ளைக் கடற்கரைக்கு ஊரிப்புலத்தைத் தாண்டித்தான் சென்றாக வேண்டும். ஊரிப்புலம் மூன்று பக்கமும் அடர் பனங்காடுகளாலும் தெற்குப் பக்கத்தில் கடலாலும் சூழப்பட்டு நடுவில் தனித்துக் கிடந்த சின்னஞ் சிறிய கிராமம். ஊரிப்புலத்தில் கிடைக்கும் பனங்கள்ளு, கூவில் கள்ளைவிடத் திறமானது எனப் பெயர் பெற்றிருந்தது. வெள்ளைக் கடற்கரைக்கு வரும்போதெல்லாம் நல்லைநாதனும் நண்பர்களும் ஊரிப்புலத்திற்கு வந்து கள்ளருந்திச் செல்வதுண்டு. நல்லைநாதன் இளம் வயதிலே நோஞ்சானாக இருந்ததால் உடம்பு தேறுவதற்காக, மருந்துபோல தனிப் பனைக் கள்ளை சாடையாகப் பாவிப்பதுண்டு. நல்லைநாதன் வண்டியை விட்டிறங்கி அங்கிருந்த பனைமரங்களை மெதுவாக அண்ணாந்து பார்த்தார். காய்ந்த காவோலைகளும் உக்கிப்போன மட்டைகளுமாக அந்த மரங்களிருந்தன. கண்ணுக்கு எட்டிய தூரம்வரை மனித நடமாட்டமில்லை. ஒட்டுமொத்தக் கிராமமே சிதறி இடம்பெயர்ந்து அது கைவிடப்பட்ட நிலமாகியிருந்தது. சென்ற வருடம் புதைகுழி தோண்டியபோது ஏற்பட்ட குழப்பங்களைக் கணக்கிலெடுத்து இந்தமுறை காவற்துறை அதிஉயர் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தது. அவர்களிற்குத் தெரியாமல் ஒரு நாய் கூட உள்ளே நுழைய வழியில்லை. ஊரிப்புலத்திற்குள் ஊடகவியலாளர்களோ பொதுமக்களோ நுழைவதை, கிணற்றைத் தோண்டுவதற்கு இரண்டு நாட்களிற்கு முன்னதாகவே காவற்துறை முற்றாகத் தடைசெய்திருந்தது. நீதிபதிகளும் அதிகாரிகளும் அமர்வதற்காக, தோண்டப்படயிருந்த கிணற்றுக்கு அருகே சிறிய கூடாரம் அமைக்கப்பட்டு உள்ளே மேசை நாற்காலிகளும் போடப்பட்டிருந்தன. கிணற்றைத் தோண்டுவதற்கான உத்தரவை நீதிபதிகள் பிறப்பித்ததும் பணியாளர்கள் துரிதமாக இயந்திரங்களை முடுக்கிவிட்டு வேலையில் இறங்கினார்கள். அதுவொரு கட்டுக் கிணறு. கிணற்றின் மேலாக நில மட்டத்திலிருந்து மூன்றடி உயரத்திற்கு அறுகோணவடிவில் தடித்த கட்டுச்சுவர் அங்கே இருந்திருக்க வேண்டும் என நீதிபதிகளோடு வந்திருந்த நிபுணர்கள் ஊகம் தெரிவித்தார்கள். அந்தச் சுவர்கள் இடிக்கப்பட்டுக் கிணற்றுக்குள் தள்ளப்பட்டிருக்க வேண்டும். அதற்கு மேலே ஊரி கலந்த களிமண்ணைப் போட்டுக் கிணத்தை நிலமட்டத்திற்கு மூடியிருக்கிறார்கள். இயந்திரங்கள் துரிதமாக கிணற்றை நிரவியிருந்த ஊரியையும் களிமண்ணையும் வெட்டியள்ளி அகற்றிப்போட்டன. “உள்ளே ஏதாவது கிடைக்கும் என நீர் நம்புகிறீரா?” எனக் கந்தேவத்த மூக்குக் கண்ணாடியைச் சுத்தம் செய்துகொண்டிருந்த நல்லைநாதனிடம் மெல்லிய குரலில் கேட்டார். சற்று யோசித்த நல்லைநாதன் “இந்த ஊர் கிடக்கும் கோலத்தைப் பார்த்தால் மொத்த ஊருமே இந்தக் கிணற்றிற்குள்தான் கிடக்கிறது என்றுதான் எனக்குப் படுகிறது” என்றார். கந்தேவத்த மெதுவாகக் கையை நீட்டி நல்லைநாதனின் கையைப் பற்றி மென்மையாக அழுத்தினார். அவரது முகம் இருண்டிருந்தது. பின்பு ’ தீர்க்கமுடியாத இன்னுமொரு வழக்கு நமக்காக இந்தக் கிணற்றிற்குள் காத்திருக்கிறதா…’ எனத் தனக்குள் முணுமுணுத்துக்கொண்டார். நிபுணர்கள் அதுவொரு ஆழமற்ற கிணறு என்று முதலே ஊகம் தெரிவித்திருந்தது சரியானதே. இருபது அடிகளிற்குக் கீழே இடிபாடுகளிற்குள் இடைவெளி தெரிந்தது. இடித்துத் தள்ளப்பட்டிருந்த கிணற்றின் கட்டுச் சுவர் பாளம் பாளமாக ஒன்றின் மீது ஒன்றாகச் செருகிக்கிடந்தன. பாளங்களை இயந்திரங்கள் தூக்கி வெளியே எறிந்தபோது கீழே நீர்மட்டம் தெரிந்தது. கிணற்றின் உட்புறச் சுவரில் பாசிபடிந்து அவற்றிடையே சிலவகை நீர்த்தாவரங்கள் வளர்ந்திருந்தன. இயந்திரம் ஒரு பெரிய சீமெந்துப் பாளத்தைத் தூக்கியபோது கிணற்றின் உள்ளே வித்தியாசமாக ஏதோ கிடப்பது தெரியலாயிற்று. நல்லைநாதனும் கந்தேவத்தவும் உடனடியாகத் தோண்டும் வேலையை நிறுத்தச் சொன்னார்கள். கிணற்றினுள்ளே மேலிருந்து தடித்த கயிறுகள் இறக்கப்பட, திடகாத்திரமான இரண்டுபேர் அந்தக் கயிறுகளிலே உள்ளே இறங்கிச் சென்றார்கள். அவர்கள் கயிற்றில் தொங்கியவாறே ஆழத்திலிருந்து அச்சத்துடனும் வியப்புடனும் கூச்சலிட்டார்கள்: " இங்கே ஒரு மனிதன் உயிரோடு இருக்கிறான்." இதைக் கேட்டதும் நீதிபதிகளின் உணர்வு என்ன, வைத்திய சட்ட நிபுணர்களின் எதிர்வினை என்ன, தொல்பொருள் ஆய்வுப் பணிப்பாளரின் ஊகம் என்ன, காவற்துறையினரிடையே எழுந்த சலசலப்புகள் தானென்ன போன்றவற்றை விபரிப்பது இந்தச் சிறிய கதைக்கு முக்கியமல்ல என்பதால் கதையின் முதற்பாதியை நாங்கள் இங்கேயே நிறுத்திவிட்டு கதையின் மறுபாதிக்குச் செல்வோம். 2   நான்கு வலுவான கயிறுகளில் நீளமும் அகலமுமான பலகையைக் கட்டிக் கிணற்றுக்குள் இறக்கி உள்ளேயிருந்த மனிதனை மேலே தூக்கி எடுத்தபோது செக்கலாகி ஊரிப்புலத்தில் இருள் கவியத் தொடங்கிற்று. கிணற்றுக்கு அருகே நீதிபதிகளது கூடாரத்திற்குள் அந்த மனிதன் ஒரு ரப்பர் தடுக்கில் படுக்க வைக்கப்பட்டிருந்தான். அந்த மனிதனைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள், அந்த மனிதன் ஓரளவு ஆரோக்கியமாகவே இருக்கிறான் என வியப்புடன் நீதிபதிகளிற்கு அறிவித்தனர். நல்லைநாதன் மெதுவாக கந்தேவத்தவின் கையைப் பற்றி மென்மையாக அழுத்தினார். பின்பு அவர் ஒரு பொலிஸ்காரனை அழைத்து, தூரத்தே தெரிந்த வைரவர் கோயிலில் விளக்கேற்றிவிட்டு வருமாறு பணித்தார். எதுவும் பேசாமல் கடற்கரையை நோக்கி இருளையே பார்த்துக்கொண்டிருந்தார். அங்கே ஒரு சிறு சுடர் தோன்றியதும் ஆழமான பெருமூச்சொன்றை வெளியேற்றினார். அந்தக் கூடாரத்துக்கு வெளியே காவற்துறை நெருக்கியடித்துக்கொண்டு சுவர்போல வளையமாக நின்றது. மருத்துவர்கள், தொல்லியல் நிபுணர்கள் போன்றவர்கள் கூடாரத்திற்கு வெளியே நாற்காலிகளில் அமர்ந்துகொண்டு புகைபிடிக்கத் தொடங்கினார்கள். கூடாரத்திற்குள் ஏற்றப்பட்டிருந்த ஒரேயொரு விளக்கின் கீழே நாற்காலிகளில் நீதிபதிகள் இருவரும் அமர்ந்திருந்தார்கள். உயிரோடு கண்டுபிடிக்கப்பட்ட அந்த மனிதன் இப்போது மெதுவாக எழுந்து உட்கார்ந்தான். நிர்வாணமாயிருந்த அவனது தேகத்தை ஒரு புதிய வெண்ணிறப் போர்வையால் மருத்துவர்கள் மூடிவிட்டிருந்தார்கள். அவன் ஆழமாக மூச்சுகளை உள்ளிழுத்து பெரும் சத்தத்துடன் வெளியேற்றிக்கொண்டிருந்தான். ரோமங்களால் சடைத்துக் கிடந்த அவனது கரிய முகத்திலிருந்த கண்கள் அந்தக் குறைந்த வெளிச்சத்தில் வாத்து முட்டைகளைப் போல உருண்டுகொண்டிருந்தன. தாங்கள் யார், அங்கே என்ன நடக்கிறது என்பதை நீதிபதிகள் விரிவாக அந்த மனிதனுக்கு விளங்கப்படுத்திவிட்டு அந்த மனிதன் குறித்த தங்களது நீதி விசாரணையை மெல்லத் தொடக்கினார்கள். “முதலில், உம்முடைய பெயரென்ன?” “தெரியவில்லை அய்யா.” “உமக்குப் பெயரில்லையா?” “பெயரில்லாமல் எப்படி இருந்திருக்கமுடியும்? பலகாலமாக யாரும் என்னைக் கூப்பிடவில்லை என்பதால் எனது பெயரை நான் மறந்து போய்விட்டேன். எவ்வளவு கடுமையாக யோசித்தாலும் எனது பெயர் ஞாபகத்திற்கு வரமாட்டேன் என்கிறது.” “உமது பெற்றோர்கள்?” “அம்மாவுடைய பெயர் அன்னம், அய்யாவுடைய பெயர் செல்லையா. என்னுடன் கூடப் பிறந்தது நான்கு சகோதரிகளும் அய்ந்து சகோதரர்களும். அவர்களை நான் எப்போதுமே நினைத்துக்கொண்டிருப்பதால் அவர்களில் ஒருவருடைய பெயரைக் கூட நான் மறக்கவில்லை.” “எவ்வளவு காலமாக நீர் இந்தக் கிணற்றிற்குள் இருக்கிறீர்?” “தெரியவில்லை அய்யா?” “எப்போது இந்தக் கிணற்றுக்குள் வந்தீர் என்பது ஞாபகமுள்ளதா?” “தெளிவாக ஞாபகமிருக்கிறது. 1990 -ம் ஆண்டு, ஆவணி 22-ம் தேதி, சனிக்கிழமை. அன்று என்னுடைய இருபத்துநான்காவது பிறந்தநாள். முதல்நாள் மாலையிலேயே எனது கடைசித் தங்கை வெள்ளைக் கடதாசி மட்டையில் தானே வரைந்து தயாரித்த பிறந்தநாள் வாழ்த்து அட்டையை எனக்குக் கொடுத்திருந்தாள். அன்றிரவு, அதாவது வெள்ளிக்கிழமை இரவு நான் வைரவர் கோயிலில் விளக்கேற்றியபோதுதான் என்னைக் கெட்டகாலம் சூழ்ந்துகொண்டது. நான் வெளியே இருக்கும்வரை நான்தான் வைரவர் கோயிலிற்கு தினமும் மாலையில் விளக்கு வைப்பேன். பரம்பரை பரம்பரையாக எங்களது குடும்பம்தான் வைரவருக்கு விளக்கேற்றி வருகிறது. என்னுடைய பூட்டனார் முருகேசுதான் வைரவர் கோயிலை உண்டாக்கி வைத்தது.” “இதெல்லாம் உமக்கு ஞாபகமிருக்கிறது..உம்முடைய பெயர்தான் உமக்கு ஞாபகம் இல்லையோ?” “அய்யா..நான் உங்களுக்குப் பதில் சொல்லிக்கொண்டிருக்கும் போதே எனது பெயரை ஞாபகம் கொள்ள முயற்சித்துக்கொண்டுதானிருக்கிறேன்.” நீதிபதிகளிற்கு தேநீர் வந்தது. அந்த மனிதனுக்குத் தேநீர் கொடுக்கப்பட்டபோது உதடுகளைக் குவித்துப் பெரும் சத்தமெழுப்பி ஊதி ஊதி அவன் தேநீரைக் குடிக்கலானான். மறுபடியும் நீதிபதிகள் ஆரம்பித்தார்கள். “உம்மைப் பற்றியும் நீர் எப்படி இந்தக் கிணற்றுக்குள் வந்தீர் என்பதையும் எங்களிற்கு விபரமாகத் தெரிவியும். அதற்கு முன்பு முழுவதுமாகத் தேநீரைக் குடித்துவிடும்.” அந்த மனிதன் மீதமிருந்த தேநீரோடு கோப்பையைக் கீழே மணலில் வைத்துவிட்டு தனது கதையைச் சொல்லத் தொடங்கினான். உண்மையிலேயே அவனது கதை பெரிதாகச் சுவாரஸ்யமில்லை. கேட்டுக் கேட்டுச் சலித்துப்போன கதைதான். ஆனால் ஒரு சாட்சியம் என்றவகையில் அவனது கதை நீதிபதிகளிற்கும் நமக்கும் மிக முக்கியமானதாக இருக்கிறது : "ஒரு ஈ தன்னுடைய பெயரை மறந்துவிட்டது எனச் சின்ன வயதில் ஒரு உபகதை படித்திருக்கிறேன். அதுபோலிருக்கிறது என்னுடைய கதை. நான் இந்தக் கிராமத்தை விட்டு அதிகம் வெளியே போனதில்லை. வெளியே போய் வருமளவிற்கு நாட்டு நிலைமைகளும் இருக்கவில்லை. பத்தாவது வகுப்பு வரை படித்திருக்கிறேன். இரண்டு தடவைகள் பத்தாவது வகுப்புப் பரீட்சை எழுதியும் எட்டுப் பாடங்களிலும் தோற்றுவிட்டேன். என்னை முழு முட்டாளென எனது தங்கைகளும் முழுச் சோம்பேறியென்று எனது அய்யாவும் ஏசுவார்கள். ‘அவனொரு போக்கு’ என்று அம்மா சொல்வார். எனக்கும் வேலை செய்வதிலோ, காசு பணம் தேடுவதிலோ நாட்டமே இருக்கவில்லை. ஆனால் சின்ன வயதிலிருந்தே கடவுள் பக்தியும் சமூக சேவை செய்யவேண்டுமென்ற ஈடுபாடும் எனக்கு அதிகமாகவே உண்டு. இது பரவணிப் பழக்கமாக இருக்கலாம். எனது பேரனார் கதிர்காமு பொதுக்காரியங்களில் அதிகமும் ஈடுபாடுள்ளவராக இருந்தாராம். அவரது முயற்சியால்தான் வெள்ளைக் கடற்கரைக்குச் செல்லும் கிறவல் வீதி அமைக்கப்பட்டதென்றும் சொல்வார்கள். அதற்கு முன்பு ஊரிப்புலத்திற்கு சாலை வசதியே இருந்ததில்லையாம். ஊரிப்புலத்திற்குள் ’திருவள்ளுவர் வாசகசாலை’யை நான்தான் முன்னின்று உருவாக்கினேன். அது ஓர் ஓலைக் குடிசை என்றாலும், ஒரேயொரு தினப்பத்திரிகை மட்டுமே அங்க போடப்பட்டாலும், அந்த வாசகசாலை இளைஞர்கள் சந்தித்துப் பேச ஒரு மையமாக இருந்தது. இந்திய இராணுவத்தின் காலத்தில் சண்டை தொடங்கிய மூன்று மாதங்களிற்கு தீவுப் பகுதிக்கு எந்த உணவுப் பொருட்களுமே வரவில்லை. எனது தலைமையில் வாசகசாலை இளைஞர்கள்தான் ஊருக்குப் பொதுவாக கஞ்சி காய்ச்சிச் சனங்களிற்கு ஊற்றினோம். பாடசாலை விளையாட்டுப் போட்டி, வைரவர் கோயில் வேள்வித் திருவிழா, சிரமதானங்கள் எல்லாவற்றையும் நாங்கள் முன்னின்று நடத்தினோம். சண்டை தொடங்கியதன் பின்பாக கிழமைக்கு ஒரு சவமாவது ஊரிப்புலம் கடற்கரையில் அடையும். அந்தச் சடலங்கள் பலநாட்களாக உப்பு நீரிலே ஊறிக்கிடந்து கரைக்கு வருவதால் ஊதியும் வெளுத்துப்போயும் கிடக்கும். சில சடலங்களிலே வெடிபட்ட காயங்களுமிருக்கும். கடற்கரையில் மிகப்பெரிய பலூன்கள் போல அந்தச் சடலங்கள் அடைந்து கிடக்கும். தொட்டால் தசை தொட்டவரின் கையோடு பிய்ந்துவரும். அந்தச் சடலம் தமிழனுடையதா சிங்களவனுடையதா, இந்தியாக்காரனுடையதா என்றெல்லாம் யாருக்கும் தெரியாது. அந்தச் சடலங்களை அடக்கம் செய்யவும் யாரும் வரமாட்டார்கள். ‘திருவள்ளுவர் வாசகசாலை’ இளைஞர்கள்தான் அந்தச் சடலங்களை தூக்கி எடுத்துக் கடற்கரையில் குழி வெட்டிப் புதைப்போம். எங்களது ஊரிலிருந்து எண்பத்துநான்காம் ஆண்டு, இரண்டு இளைஞர்கள் ஒரு இயக்கத்திற்குப் போனார்கள். மாரிகாலத்தில் ஒருநாள் இதோ இந்தக் கிணற்றுக்குள் அவர்களது சடலங்கள் கிடந்தன. அது தற்கொலையா அல்லது கொலையா என யாருக்கும் தெரியாது. ஆனால் அதற்குப் பிறகு எங்களது கிராமத்திலிருந்து யாரும் இயக்கங்களிற்குப் போனது கிடையாது. இந்தப் பக்கத்தில் இயக்கங்களின் நடமாட்டமும் பெரிதாகக் கிடையாது. இராணுவத்தைப் பற்றிக் கேட்டீர்களென்றால் 1990 ஆவணி மாதம்வரை அவர்கள் ஊரிப்புலத்திற்குள் வந்ததில்லை. நூறு குடிசைவீடுகளுள்ள உக்குட்டிக் கிராமம்தானே இது! ஆவணி மாதம் இருபத்தோராம் தேதி அதிகாலையில் தீவுப்பகுதி முழுவதும் இராணுவம் இறங்கிவிட்டது. ஒரு சிறிய எதிர்ப்புமில்லாமல் அவர்கள் எல்லாத் திசைகளாலும் முன்னேறிக்கொண்டிருக்கிறார்கள் என்ற செய்தி கிடைத்தது. எந்தப் பக்கத்தாலும் ஓடித் தப்ப வழியில்லை. சனங்கள் எல்லோரும் வீடுகளை விட்டு ஓடிப்போய் பொதுக் கட்டடங்களில் ஒன்றாகக் கூடியிருந்தார்கள். ஊரிப்புலம் முழுவதும் ஊரைக் காலிசெய்துகொண்டு வெள்ளைக் கடற்கரைக்குப் போனோம். அங்கே குருபாபா சியாரம் பெரிய பள்ளிவாசல் இருக்கிறதல்லவா…அங்கே எல்லோரும் கூடியிருந்தோம். இராணுவம் அங்கே வருமென எதிர்பார்த்துக்கொண்டிருந்தோம். ஆனால் பள்ளிவாசல் மீது இராணுவம் தாக்குதல் நடத்தாதென நாங்கள் நம்பிக்கையுடனிருந்தோம். பள்ளிவாசலுக்குப் பொறுப்பான பெரியவர்களும் அப்படித்தான் சொன்னார்கள். மதியமாகியும் இராணுவம் அந்தப் பக்கம் வருவதற்கான அறிகுறியே தெரியவில்லை. இராணுவம் எங்கே நிற்கிறது என்று தெரிந்துகொள்ளவும் வசதிகள் இல்லை. பள்ளிவாசல் பெரியவர்களின் ஏற்பாட்டில் எங்களெல்லோருக்கும் மதிய உணவு பெரிய பெரிய கிடாரங்களில் சமைக்கப்பட்டது. அங்கு வைத்துத்தான் எனது கடைசித் தங்கை எனக்கு பிறந்தநாள் வாழ்த்து அட்டையை வரைந்து கொடுத்தாள். பிறந்தநாள் வாழ்த்துச் சொல்லுமளவுக்கு மாலை நேரத்துக்குள்ளேயே நிலைமை சகஜமாகிவிட்டது. இந்த இரவு பள்ளிவாசலிலேயே படுத்துவிட்டு காலையிலே ஊருக்குத் திரும்பிவிடலாம் எனச் சனங்கள் கதைத்துக்கொண்டார்கள். சூரியன் விழுந்து செக்கலாகத் தொடங்கிவிட்டது. பள்ளிவாசலில் மஃரிப் தொழுகைக்காகப் பாங்கு சொல்லத் தொடங்கினார்கள். அதைக் கேட்டதிலிருந்து, என்னுடைய வைரவர் இன்று விளக்கில்லாமல் இருக்கிறாரே என்ற ஏக்கம் என்னை வாட்டத் தொடங்கியது. ஊரிப்புலத்தின் காவல் தெய்வம் வெள்ளிக்கிழமை அதுவுமாக விளக்கில்லாமல் இருப்பது ஊருக்கே கேடாகலாம் என்ற எண்ணம் தோன்றியதும் நான் யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் மெதுவாக அங்கிருந்து அகன்று கடற்கரை வழியாக ஊரிப்புலத்தை நோக்கி நடக்கத் தொடங்கினேன். கடற்கரை நீளத்திற்கும் தாழையும் ஈச்சையும் பற்றைக் காடாக அடர்ந்திருப்பதால் அவற்றிடையே புகுந்து பதுங்கிப் பதுங்கிக் கவனமாகத்தான் நடந்தேன். தூரத்தில் இராணுவத்தின் நடமாட்டம் தெரிகிறதா எனப் பார்த்துப் பார்த்துத்தான் நடந்தேன். முற்றாக இருள் சூழ்ந்திருந்தபோது ஊரிப்புலத்திற்குள் நுழைந்து எனது வீட்டை அடைந்தேன். எண்ணெய்ப் போத்தலையும் தீப்பெட்டியையும் எடுத்துக்கொண்டு வைரவர் கோயிலை நோக்கி நடந்தேன். ஒரு அசுமாத்தமுமில்லை. கடலுக்குள் இறங்கிக் கை கால்களைக் கழுவிக்கொண்டு, வைரவர் சூலத்தின் முன்னாக விளக்கை ஏற்றினேன். ஒரு குட்டிச் சுவரும் சிறிய பீடமும் ஒற்றைச் சூலமும் கொண்ட அந்தக் கோயிலில் ஏற்றி வைக்கப்பட்ட ஒற்றைத் திரி ஒளியில் ஊரிப்புலமே பிரகாசிப்பதுபோல தோன்றியது. மனதிற்குள் பெரிய நிம்மதி வந்தது. அப்போதுதான் இராணுவத்தினர்களை நான் கண்டேன். இருளுக்குள் ஒளிந்திருந்த அவர்கள் ஓசைப்படாமல் வந்து வெளிச்சத்தில் நின்றார்கள். என்னுடைய கைகள் உடனேயே கயிற்றால் முதுகுப்புறமாகக் கட்டப்பட்டன. என்னை அவர்கள் நடத்திவந்து இந்தக் கிணற்றுக்கு அருகாகத் தரையில் உட்கார வைத்தார்கள். அடி ஆய்க்கினைகள் எதுவுமில்லை. நான் இங்கிருந்து பார்த்தபோது வைரவர் கோயிலில் சுடர் தெரிந்தது. என்னைச் சுற்றிவர மனித உருவங்களின் நடமாட்டங்களும் சலசலப்புகளும் கேட்டுக்கொண்டேயிருந்தன. என்ன நடக்கிறதென இருளுக்குள் கூர்ந்து பார்த்தேன். அந்த நிலம் முழுவதும் இராணுவத்தினர் இருப்பதாகத் தோன்றியது. ஒரு ஆமிக்காரன் என்னிடம் வந்து தண்ணீர் வேண்டுமா எனக் கேட்டான். ஆமென்றேன். இதே கிணற்றில் நீர் அள்ளி என் மீது ஊற்றினான். நான் ஒரு மீனைப்போல நீரைப் பருகினேன். படுத்துக்கொள்ளச் சொன்னான். கைகள் பின்புறமாகக் கட்டப்பட்டிருந்ததால் மல்லாந்தோ குப்புறவே படுக்க வழியிருக்கவில்லை. ஒருக்களித்துப் படுத்துக்கொண்டேன். அங்கிருந்து தப்பிச் செல்ல வழியிருக்கிறதா எனக் கவனித்தேன். வாய்ப்பே இல்லை. எல்லாப் பக்கங்களிலும் நடமாடும் சத்தமும் சிங்களத்தில் பேசுவதும் கேட்டது. தூரத்தே மெதுவாகக் கேட்ட வாகனங்களின் இரைச்சல் வர வரப் பெரிதாகியது. கண்களை மூடிப் படுத்துக்கொண்டேன். கண்களை மூடியதும், சட்டென என் உடல் பிரகாசிப்பதாக எனக்குத் தோன்றியது. நான் மெல்லிய ஒளியாக என்னைக் கற்பனை செய்துகொண்டேன். நான் வைரவருக்குக் கொண்டுவந்த நெருப்புத்துளி என் இருதயத்தில் பற்றிச் சுடர்வதாகவே உணர்ந்தேன். அந்த மனத் தைரியத்தோடுதான் இரவைக் கழித்தேன். விடிந்தபோதுதான் ஊரிப்புலம் முழுவதுமே இராணுவத்தினரால் இரவோடு இரவாக நிரப்பப்பட்டிருந்தது தெரிந்தது. மெதுவாக எழுந்து தரையில் உட்கார்ந்துகொண்டு சுற்றிவரப் பார்வையை ஓட்டினேன். என்னைப் போலவே முதுகுப்புறமாகக் கைகள் கட்டப்பட்டிருந்த பல மனிதர்கள் அங்கு உட்கார்ந்தும் படுத்துமிருப்பதைப் பார்த்தேன். நான் தனியாக இராணுவத்திடம் சிக்கவில்லை எனத் தெரிந்ததும் ஒருவகையான ஆறுதல் மனதைப் பற்றிக்கொண்டது. பிடித்துவரப்பட்ட எங்களைச் சுற்றிவர ஆயுதங்களுடன் இராணுவத்தினர் நின்றார்களே தவிர அவர்கள் எங்களிற்கு எந்தத் தொல்லையும் தரவில்லை. குறையென்றால் நாள் முழுவதும் எங்களுக்கு அவர்கள் உணவோ நீரோ கொடுக்காததைச் சொல்லலாம். இராணுவத்தினர் பகல் முழுவதும் மண்டைதீவு, மண்கும்பான், அல்லைப்பிட்டி, வேலணைப் பக்கங்களிலிருந்து மனிதர்களைப் பிடித்து சிறிய சிறிய குழுக்களாக நடத்திக் கூட்டிவந்தனர். எல்லா மனிதர்களது கைகளும் முதுகுப்புறங்களில் பிணைக்கப்பட்டிருந்தன. உச்சிப் பொழுதில் எனது அண்ணன்கள் இருவரும் இன்னும் சிலரும் பிடித்துவரப்பட்டார்கள். அவர்களிடையே பள்ளிவாசல் பெரியவர்களுமிருந்தார்கள். நாங்கள் எங்களுக்கிடையே மெதுவாகப் பேசிக்கொண்டோம். நாங்கள் பேசுவதை இராணுவத்தினர் தடுத்தார்களில்லை. எங்களை விசாரித்துவிட்டு விடுதலை செய்துவிடுவார்கள் எனச் சிலர் சொன்னார்கள். எல்லோரையும் கப்பலில் ஏற்றி ‘பூசா’ தடுப்புமுகாமுக்கு அனுப்பயிருக்கிறார்கள் எனச் சிலர் சொன்னார்கள். எங்களை பெரிய அதிகாரி பார்வையிட இருப்பதாகச் சொல்லி, எங்களை ஒன்பது வரிசைகளில் முன்பின்னாக இராணுவத்தினர் உட்கார வைத்தார்கள். நாங்கள் எல்லாமாக எண்பத்தாறு கைதிகள் அங்கேயிருந்தோம். பெரிய அதிகாரி வந்து எங்களைப் பார்த்தார். அவரது முகத்தில் எந்த உணர்வுமேயில்லை. ஒரு நிமிடம்தான் எங்களைப் பார்த்திருப்பார். பின்பு திரும்பி கடற்கரைப் பக்கமாக நடந்துபோனார். சற்று நேரத்தில் எங்களை நோக்கி இரு பாரிய இயந்திரங்களை இராணுவத்தினர் ஓட்டிவருவதைக் கண்டேன். எங்களுக்குச் சற்றுத் தூரத்தில் அவை ஊரியும் களிமண்ணுமான நிலத்தை அகழ்ந்து ஒரு பெரிய குழியொன்றை உண்டாக்கத் தொடங்கின. தூசிப் படலம் பனை வட்டுகளிற்கு மேலாக எழுந்தது. இயந்திரங்களின் இரைச்சல் காதுகளை அடைக்கப்பண்ணிற்று. டீசல் எரியும் வாசனையும் புகையும் வெறும் வயிற்றைக் குமட்டிற்று. என்ன நடக்கயிருக்கிறது என எங்கள் எல்லோருக்குமே புரிந்துபோயிற்று. வெளிச்சம் பூமிக்குள் குத்தென இறங்கிக்கொண்டிருந்தது. செக்கல் பொழுதை வைத்துப் பார்த்தால் அப்போது மாலை ஆறுமணிக்கு முன்பின்னாக இருக்கலாம். எங்களுக்கு முன்னே திருத்தமான விசாலமான சவக்குழி உருவாகியிருந்தது. இராணுவத்தினர் எங்கள் எண்பத்தாறுபேரையும் எழுப்பி வரிசைகட்டி நிற்க வைத்தார்கள். அந்த வரிசையை நடந்து சென்று சவக்குழிக்குள் இறங்கச் சொன்னார்கள். யாரிடமிருந்தும் ஒரு எதிர்ப்புக் குரலோ மறுப்போ எழுவதாகயில்லை. அழுகின்ற ஓசைகள் கேட்கின்றனவா எனக் காதைக் கூர்மைப்படுத்திக் கேட்டேன். கடலின் இரைச்சல் மட்டுமே கேட்கிறது. வரிசை மெதுவாகச் சவக் குழிக்குள் இறங்கிக்கொண்டிருக்கிறது. என் அண்ணன்கள் இருவரும் முன்பின்னாகக் குழிக்குள் இறங்குவதை நான் கண்டேன். அவர்கள் இருவருமே என்னைத் திரும்பிப் பார்த்தவாறே குழிக்குள் இறங்கினார்கள். வரிசையில் எனக்குப் பின்னால் வந்துகொண்டிருந்த பள்ளிவாசல் பெரியவர் அப்போது ராகம் போட்டு முணுமுணுக்கத் தொடங்கினார். நிச்சயமாக அது அவரது இறுதித்தொழுகைக் குரல்தான். நான் அந்தக் குரலையே காதைத் தீட்டி உன்னிப்பாகக் கவனித்தேன். அவரது குரல் சிறிது சிறிதாக உயர்ந்துகொண்டே வருவதுபோலத் தோன்றியது. எனது கால்கள் சடுதியில் வரிசையிலிருந்து விலகி அசையாமல் நின்றன. என்னைக் கடந்து அந்தப் பெரியவர் முன்னே நகர்ந்தார். அவரது குரல் தொழுதுகொண்டேயிருந்தது. வரிசையிலிருந்து விலகிநின்ற என்னை நோக்கி ஓர் இராணுவவீரன் வேகமாக நடந்துவந்தான். அவனது கண்கள் எனது கண்களை உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தன. நல்ல உயரமும் சுருட்டை முடியுமாக இருந்த அவன் ஒரு சாயலில் எனது சின்ன அண்ணன் போலவேயிருந்தான். அவன் என்னருகே வந்ததும் நான் சொன்னேன்: “வைரவருக்கு விளக்கு வைத்துவிட்டு வந்துவிடுகிறேன்..” நான் சொன்னது அவனுக்கு விளங்கவில்லை எனத் தெரிந்தது. நான் வைரவர் கோயிலை நோக்கி நடக்கத் தொடங்கினேன். என்னை அவன் தடுக்கவில்லை. நான் மெதுவாக நடந்து இந்தக் கிணற்றருகே வந்தேன். விளக்கு வைப்பதற்கு முன்னதாக முகம், கைகால்களைச் சுத்தப்படுத்த வேண்டும். கிணற்றுக் கட்டில் சில இராணுவவீரர்கள் உட்கார்ந்திருந்தார்கள். நான் அவர்களிடம் சொன்னேன்: “கொஞ்ச நேரம் எனது கைகளை அவிழ்த்துவிடுங்கள். நான் வைரவருக்கு விளக்கு வைத்துவிட்டு வந்துவிடுகிறேன்..” ஓர் இராணுவவீரன் எனது தலையைப் பற்றிப் பிடித்தான். இன்னொருவன் எனது கால்களைப் பிடித்தான். அப்படியே என்னைத் தூக்கிக் கிணற்றுக்குள் போட்டார்கள். நான் தட்டுத்தடுமாறி எழுந்து நின்றேன். கிணற்றுக்குள் எனது முழங்கால்கள் வரைதான் தண்ணீரிருந்தது. கிணற்றின் இருளுக்குள் மறைந்து ஓரமாக ஒதுங்கி நின்றுகொண்டு வெளியே துப்பாக்கிகள் வெடிக்கும் சத்தங்கள் கேட்கின்றனவா எனக் கவனித்தேன். வெடிச் சத்தங்கள் ஏதும் கேட்கவில்லை. இயந்திரங்கள் உறுமிக்கொண்டு முன்னும் பின்னுமாக நகரும் இரைச்சல்தான் கேட்டுக்கொண்டேயிருந்தது. பின்பு அந்த இரைச்சல் சத்தம் எனக்கு மிக அருகிலேயே கேட்டது. பூமி மெல்ல நடுங்கியது. கிணற்றின் கட்டுச் சுவர் இடிக்கப்பட்டு கிணற்றுக்குள் பாளம் பாளமாக இறங்கலாயிற்று." நல்லைநாதன் மெதுவாக கந்தேவத்தவின் கையைப் பற்றி மென்மையாக இரு தடவைகள் அழுத்தினார். வெண்ணிறப் போர்வையால் போர்த்தப்பட்டிருந்த மனிதன் கோப்பையிலிருந்த மிகுதித் தேநீரை மெதுவாகக் குடிக்கத் தொடங்கினான். நல்லைநாதனும் கந்தேவத்தவும் கிட்டத்தட்ட ஒருமணிநேரம் தங்களிற்குள் மெதுவான குரலில் விவாதித்தார்கள். பின்பு கூடாரத்திற்கு வெளியே சென்று சட்ட வைத்திய நிபுணரிடமும் காவற்துறை அதிகாரிகளிடமும் ஆலோசனை செய்தார்கள். அவர்கள் மறுபடியும் கூடாரத்திற்குள் நுழைந்தபோது அந்த மனிதனின் வாத்து முட்டைக் கண்கள் முன்னிலும் மினுங்கிப் பிரகாசிப்பதைக் கண்டார்கள். “இந்த மனிதனின் உயிர் அவனது கண்களிலிருக்கிறது” என்றார் கந்தேவத்த. நீதிபதிகள் இருவரும் மறுபடியும் ஆசனங்களில் அமர்ந்துகொண்டார்கள். “நீர் உம்முடைய பெயரைக் கண்டுபிடித்து விட்டீரா?” “இன்னும் இல்லை அய்யா.” “நீர் இவ்வளவு காலமும் மூடப்பட்ட கிணற்றுக்குள் உயிரோடு இருந்தீர் என்பது பெரிய அதிசயமாயிருக்கிறது.” “அங்கே நிலத்தோடு கொஞ்சத் தண்ணீர் எப்படியிருக்கிறதோ, தாவரங்களும் தவளைகளும் புழுபூச்சிகளும் எப்படியிருக்கின்றனவோ அப்படித்தான் நானும் இருந்தேன். அதிசயமாக எதுவுமில்லை.” நீதிபதிகள் சற்று மவுனமாகயிருந்துவிட்டு மீண்டும் பேசத் தொடங்கினார்கள்: “நாட்டில் சண்டை முடிந்து சரியாக ஏழு வருடங்களாகின்றன. சண்டை நடந்த காலம் முழுவதும் பல்லாயிரக்கணக்கில் மனிதர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். பல மனிதப் புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. எல்லாப் பக்கங்களிலும் தவறிழைக்கப்பட்டிருக்கிறது. நீரே சொன்னதுபோல தமிழரா, சிங்களவரா அல்லது இந்தியரா என்பது தெரியாத மனித எச்சங்கள் தோண்டியெடுக்கப்பட்டுள்ளன. இதையெல்லாம் கடந்துதான் நமது நாட்டில் இப்போது சமாதானம் ஏற்பட்டுள்ளது. இது பகை மறப்புக் காலம்.” மற்றைய நீதிபதி தொடரலானார்: "கண்டுபிடிக்கப்படும் இந்தப் புதைகுழிகள் குறித்து சர்வதேசத்தின் முன்னிலையில் விசாரணைகள் தேவையென அந்நிய நாடுகள் எப்போதுமே எங்களை நெருக்குகின்றன. ஆனால் நாங்களோ உள்ளக விசாரணைகளே போதுமென்கிறோம். உள்ளக விசாரணைகளைத் தொடங்கியும் விட்டோம். அந்த விசாரணையின் பகுதியாகத்தான் இந்தக் கிணற்றை அகழ்ந்து உம்மைக் கண்டுபிடித்தோம். நீர் எங்கள் முன்னே வழங்கிய சாட்சியத்தை நாங்கள் முழுமையாகவே ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் உமது சாட்சியத்தால் இந்த நாட்டிற்கும் நாட்டு மக்களிற்கும் என்ன பயன்? ஆறிய புண்ணைக் குத்திக் கிழித்து ஆராய்வது போலுள்ளது உமது சாட்சியம். காயங்களைத் தோண்டிக்கொண்டிருந்தால் புண் எப்படி ஆறும்? உம்முடைய சாட்சியம் பகையைத்தான் வளர்க்குமேயொழிய சமாதானத்தையல்ல." மற்றைய நீதிபதி முடிவாகச் சொன்னார்: “நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிக்கும் எந்த முயற்சியையும் நாங்கள் அனுமதிக்கமாட்டோம். இந்தச் சமாதானத்தை நாங்கள் எதற்காகவும் இழக்கத் தயாரில்லை. நீர் சமூக அக்கறை கொண்டவரென்றும்  ஜனங்களிற்குச் சேவை செய்வதில் ஆர்வமுமுடையவர் என்றும் சொன்னீர். ஆகவே இந்த நாட்டின் பொறுப்புணர்வு மிக்க நற்பிரஜை நீர் என்றே கருதுகின்றோம். சமாதானத்தைக் காப்பாற்றுவது உம்முடைய கடைமை!” நீதிபதிகள் விசாரணை முடிந்ததன் அடையாளமாக எழுந்து நின்றார்கள். பக்குவமாக வெளியே தூக்கி எடுக்கப்பட்டது போலவே, அந்த மனிதன் பக்குவமாக மீண்டும் கிணற்றிற்குள் இறக்கப்பட்டு கிணறு மறுபடியும் மூடப்பட்டது. கனகசபை தியாகராமின் மனு நீதிபதிகளால் தள்ளுபடி செய்யப்பட்டது. இரண்டு நீதிபதிகளும் சோர்வுடனும் மனப்பாரத்துடனும் அங்கிருந்து புறப்பட்டார்கள். வண்டி இருவரையும் ஏற்றிக்கொண்டு கிளம்பியபோது ஒரு நிமிடம் வண்டியை நிறுத்தச் சொன்ன நல்லைநாதன் அங்கிருந்த காவற்துறை அதிகாரி ஒருவரைத் தன்னருகே அழைத்து ஓர் உத்தரவை வழங்கினார்: “ஊரிப்புலம் வைரவருக்கு நாள் தவறாது விளக்கேற்றி வைக்கவேண்டும்.” கந்தேவத்த அப்போது நல்லைநாதனின் கையைப் பற்றி மென்மையாக அழுத்தினார். (‘சிலேட்’ அக்டோபர் 2016 இதழில் வெளியாகியது) மாதா இந்த நாட்டில் அப்போது கடுமையான பனிக்காலமாகயிருந்தது. வெண்பனி விழுந்து தரையில் ஓரடி உயரத்திற்குப் பூப்போல குவிந்து கிடந்தது. அம்மா தூய பனிக்குள் தனது கால்களை மிக மெதுவாகவும் எச்சரிக்கையாகவும் எடுத்து வைத்து வீதியின் ஓரமாக ஒரு முதிய வெண்ணிற வாத்துப் போல அசைந்து நடந்துவருவதை தனது காருக்குள் இருந்தவாறே குற்றவாளி கவனித்துக்கொண்டிருந்தான். அப்போது மழை தூறத் தொடங்கிற்று. அம்மா தனது இரு கைகளையும் பக்கவாட்டில் ஆட்டியும் அசைத்தும் தனது உடலைச் சமன் செய்தவாறே வந்தார். முகத்தை வானத்தை நோக்கி அண்ணாந்து முகத்தில் மழைத் துளிகளை வாங்கிக்கொண்டார். அப்போது பனியில் சறுக்கிக் கீழே முழந்தாள் மடிய விழுந்தார். அம்மா சட்டெனத் தனது வலது கையைத் தரையிலே ஊன்றிக்கொண்டதால் முகம் அடிபடக் கீழே விழுவதிலிருந்து தப்பித்துக்கொண்டார். ஒருவாறு சமாளித்துக்கொண்டு அம்மா எழுந்திருந்து தன்னை யாராவது கவனிக்கிறார்களா என வெட்கச் சிரிப்புடன் சுற்றுமுற்றும் பார்த்தார். வீதியில் யாருமில்லை. சேலையைக் கணுக்கால் வரை தூக்கி ஏதாவது அடிபட்டிருக்கிறதா என அம்மா குனிந்து பார்த்தார். குற்றவாளி காருக்குள் இருந்து அம்மாவையே பார்த்துக்கொண்டிருந்தான். அம்மா தூய பனியை கைநிறைய அள்ளி, பந்துபோல் உருட்டிவிட்டு அதை நுனி நாக்கால் ஒருமுறை நக்கிப் பார்த்துவிட்டு அதை வீதியில் எறிந்து அந்த உருண்டை சிதறுவதைப் பார்த்துப் புன்னகைத்தார். அம்மா பனியோடு விளையாடியபடியே வீட்டை நோக்கி நடந்தார். வீதியோரத்தில் எதிர்வரிசையில் வரிசையாக நிறுத்தப்பட்டிருந்த கார்களில் ஒன்றிற்குள் குற்றவாளி மறைந்திருந்து அம்மாவையே கவனித்துக்கொண்டிருந்தான். அம்மாவின் பெயர் மனோன்மணி. ஆனால் அவரை எல்லோரும் ‘புஷ்பம் மிஸி’ என்றுதான் அழைப்பார்கள். யாழ்ப்பாணப் பெரியாஸ்பத்திரியில் பிரசவ விடுதிக்குத் தலைமைத் தாதியாக அம்மா இருந்தார். அம்மா தேவதையைப் போல கருணையும் அன்பும் கொண்டவர் என அங்கே பெயர் வாங்கியிருந்தார். அம்மா அய்ந்தடி பத்து அங்குலம் உயரமுள்ளவர். எப்போதுமே நிமிர்ந்து கம்பீரமாக நடப்பார். சுத்தம் குறித்து அதீத கவனம். எப்போதும் தனது கைளையும் கால்களையும் கழுவியவாறேயிருப்பார். அவரது சருமத்தில் உரோமமோ மறுக்களோ இருக்காது. வீட்டிலிருக்கும்போது கூட மிகத் தூய்மையான ஆடைகளையே அணிந்திருப்பார். வீட்டுத் தரையையும் கதவுகளையும் சன்னல் கண்ணாடிகளையும் நாள் தவறாமல் சுத்தமாகத் துடைத்து வைப்பார். அம்மா தனது அய்ம்பதாவது வயதில் தாதிச் சேவையிலிருந்து ஓய்வு பெற்றார். அவர் ஓய்வுபெற்றதற்கு அடுத்தநாள்தான் மாபெரும் யாழ்ப்பாண இடப்பெயர்வு நடந்தது. அப்பா, அம்மாவைத் தனது மோட்டார் சைக்கிளில் உட்காரவைத்துக்கொண்டு ஒரேயொரு பெட்டியோடு யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேறினார். இயக்கம் விரைவிலேயே மீண்டும் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிவிடும், தாங்கள் வீட்டிற்குத் திரும்பி வரலாம் என்று அப்பா நம்பியிருந்தார். அந்த இடப்பெயர்வு நடப்பதற்கு ஒரு வருடம் முன்பாகத்தான் அவர்களது ஒரே மகனை அவர்கள் இந்த நாட்டிற்கு அனுப்பிவைத்திருந்தார்கள். அம்மாவும் அப்பாவும் கொடிகாமம் போனார்கள். அங்கேயிருந்த அப்பாவின் தங்கை வீட்டில் தங்கினார்கள். அப்பா கடுமையான கோபக்காரர். இராசரட்ணம் மாஸ்டர் என்றால் ஊருக்குள் மரியாதையும் அதைவிடப் பயமுமிருந்தது. தலைமை ஆசிரியராகயிருந்து ஓய்வு பெற்றபின்பு சிற்றூர் அவையில் தலைவராகயிருந்தவர். கொஞ்ச நாட்களில் இராணுவம் கொடிகாமத்தையும் பிடித்தது. இராணுவம் அம்மாவையும் அப்பாவையும் அவர்களது ஊருக்கே திருப்பி விரட்டிவிட்டது. பின்னால், அம்மாவும் அப்பாவும் ஊரில்தான் இருந்தார்கள். மகன் இந்த நாட்டுக்கு வருமாறு எத்தனையோ தடவைகள் அழைத்தும் அப்பா இங்கே வருவதற்கு மறுத்துவிட்டார். எங்கள் இரண்டு பேருக்கும் போதுமான அளவு ஓய்வூதியப் பணம் கிடைக்கிறது, நாங்கள் எதற்கு அகதிகள் போல அந்நிய நாட்டில் சீவிக்கவேண்டும் என்பது அவருடைய வாதம். அம்மாவுக்கு மகனுடன் வந்து இருப்பதற்குத்தான் விருப்பமாயிருந்தது. அதற்காக அவர் பதினெட்டு வருடங்கள் அப்பாவை இடைவிடாமல் மன்றாடிக்கொண்டிருந்தார். அம்மாவின் அறுபத்தெட்டாவது வயதில்தான் அப்பாவுக்கு மனம் கொஞ்சம் இரங்கிற்று. சரி மகனுடன் போய் கொஞ்ச நாட்களிற்கு இருப்போம் என்றார். சென்ற வருடத்தின் பனிக்காலத்தில் அம்மாவும் அப்பாவும் இந்த நாட்டிற்கு வந்தார்கள். பேரனுக்கு ஏழு வயதாகியிருந்தது. பேரன் அவர்களது மகனின் சாயலில் இல்லாமல் அப்பாவின் சாயலிலேயே இருந்தான். அப்பாவுக்கு பேரன்மீது அப்படி ஓர் ஈர்ப்பு. இப்போது, ஊருக்குத் திரும்பிப் போகலாம் என அம்மா ஒருவேளை கேட்டாலும் அப்பா சம்மதியார். ஊரில் இருக்கும் வீட்டையும் காணி பூமிகளையும் அப்பாவின் தங்கையின் மகன் கவனித்துக்கொண்டிருக்கிறான். அப்பாவையும் அம்மாவையும் மகனும் மருமகளும் தெய்வங்கள் போல நடத்தினார்கள். மகன் விமானப் பராமரிப்புப் பொறியியலாளராக வேலை செய்கிறான். மருமகள் அம்மாவைப் போலவே மருத்துவத் தாதி. அந்த ஒரு காரணத்திற்காகவே அவளைக் கல்யாணம் செய்ததாக மகன் சொல்வான். அமைதியான மிகச் சிறிய பட்டினத்தில் அவர்களின் வீடு இருந்தது. அழகிய மாடிவீடு. வீட்டைச் சூழவரத் தோட்டம். வீட்டின் பின்புறம் சிற்றாறு ஒன்று ஓடிக்கொண்டிருந்தது. அடிவளவுக் கதவைத் திறந்தால் அந்த ஆற்றில் காலை நனைக்கலாம். அம்மாவுக்கும் அப்பாவுக்கும் கீழ்த்தளத்திலேயே விசாலமான அழகிய படுக்கையறையிருந்தது. அம்மாவுக்கென இருபது தமிழ் ‘சனல்கள்’ இணைக்கப்பட்ட பெரிய தொலைக்காட்சி. அம்மாவின் பகல் பொழுதுகள் தொலைக்காட்சியில் தமிழ் நாடகத் தொடர்களைப் பார்ப்பதிலேயே கழியும். அப்பா எப்போதும் படிப்பறையில் புத்தகங்களிற்குள் மூழ்கியிருப்பார். அவர் பண்டைய ஈழத் தமிழரது பக்தி மரபு குறித்து ஆய்வு நூலொன்றை எழுதும் முயற்சியிலிருக்கிறார். அப்பா, வெள்ளிக்கிழமை காலைகளில் மட்டும் பேருந்தில் நீண்டதொரு பயணம் செய்து தலைநகரத்திலுள்ள அம்மன் கோயிலுக்குப் போவார். மதியமளவில் திரும்பி வரும்போது அந்தக் கிழமைக்கான மளிகைப் பொருட்களையும் இலங்கைக் காய்கறிகளையும் வாங்கி வருவார். மகனும் மருமகளும் பேரனும் பெரும்பாலும் இந்த நாட்டு உணவு வகைகளையே விரும்பிச் சாப்பிடுவார்கள். மருமகள் வெள்ளிக்கிழமைகளில் மட்டும் சைவ உணவு சாப்பிடுவாள். மகனும் மருமகளும் தங்களிற்குள் இந்த நாட்டு மொழியில்தான் பேசிக்கொள்வார்கள். பேரனுக்கோ தமிழ் துண்டறத் தெரியாது. “நீங்கள் புருசனும் பெண்சாதியும் தமிழில் பேசிக்கொண்டால்தானே பேரனும் தமிழ் பேசுவான்” என்பார் அப்பா. அந்த நேரத்தில் மட்டும் மகனும் மருமகளும் தமிழில் பேசிக்கொள்வார்கள். மகனும் மருமகளும் காலை ஏழு மணிக்கே ஆளுக்கொரு காரில் வேலைக்குப் புறப்பட்டுச் சென்றுவிடுவார்கள். பேரனைப் பராமரிக்கவும் பள்ளிக்கூடத்தில் கொண்டுபோய் விடவும் அழைத்து வரவும் முன்பொரு ஆபிரிக்கன் ஆயா இருந்தார். அம்மா வந்ததன் பின்பாக, அம்மா மகனோடு சண்டை போட்டு அந்த ஆயாவை வேலையால் நிறுத்திவிட்டு அம்மாவே அந்தப் பணிகளை ஏற்றுக்கொண்டார். இப்போது பேரனைப் பள்ளிக்கூடத்திற்கு அழைத்துச்சென்று விட்டுவிட்டுத்தான் அம்மா திரும்பி வருகிறார். பதினொன்றரை மணிக்குச் சென்று பேரனைத் திரும்ப அழைத்து வர வேண்டும். மற்றைய நாட்களில் அந்த நேரத்தில் அம்மா சமையலைக் கவனிக்க அப்பாதான் போய் பேரனைக் கூட்டிக்கொண்டு வருவார். இன்று வெள்ளிக்கிழமை என்பதால் காலையிலேயே அவரும் புறப்பட்டுக் கோயிலுக்குப் போய்விட்டார். பாடசாலை விடுமுறைக்காலங்களில் பேரனையும் அழைத்துக்கொண்டு அப்பாவுடன் அம்மாவும் கோயிலுக்குப் போவதுண்டு. பேரன் இந்த நாட்டில் பிறந்து வளர்ந்த பிள்ளையென்றாலும் அவனுக்கு இலங்கை ‘யானை மார்க் சோடா’ என்றால் பைத்தியம். கோயிலுக்கு அழைத்துச் செல்லும் நாட்களில் பேரனுக்கு இரண்டு போத்தல் யானைச் சோடாக்கள் நிச்சயமுண்டு. பனங்கொட்டையைக் கொண்டுபோய் சந்திரமண்டலத்தில் போட்டாலும் வடலி முளைக்கும் என்பார் அப்பா. அம்மா வீட்டுக் கதவைத் திறந்து உள்ளே போவதைக் குற்றவாளி பார்த்துக்கொண்டிருந்தான். இப்போது மழை சற்றே வலுக்கலாயிற்று. குற்றவாளி காருக்குளிருந்து இறங்கி குடையை விரித்து, குடையால் தனது முகத்தை மறைத்தவாறு வேகமாக நடந்து சென்று அம்மாவின் வீட்டின் முன்னின்று குடையை வாசலில் வைத்தான். மழை அவனைச் சற்று நனைத்தது. பின்பு குற்றவாளி தனது இடது கையால் அழைப்பு மணியை அழுத்தினான். அவனது வலது கையில் சிறிய ப்ளாஸ்டிக் பையிருந்தது. அந்த நேரத்தில் யார் வந்திருப்பார்கள் என அம்மா ஆச்சரியப்பட்டார். எப்போதும் கதவில் பொருத்தப்பட்டிருக்கும் குமிழ் கண்ணாடி வழியாக வெளியே பார்த்துவிட்டுத்தான் கதவைத் திறக்கவேண்டும் என மருமகள் சொல்லியிருந்தாள். ஆனால் அம்மா அதைப் பெரும்பாலும் கடைப்பிடிப்பதில்லை. ஆனால் இன்று அம்மா அந்தக் கண்ணாடிக் குமிழ் வழியே வெளியே பார்த்தபோது முப்பத்தைந்து வயதுகள் மதிக்கத்தக்க சற்று உயரம் குறைந்த சிவந்த நிறமுடைய இளைஞன் மழையில் நனைந்த கோலத்தில் நிற்பதைக் கண்டார். அவன் தமிழ் இளைஞனாகத் தெரிந்தான். அம்மா உடனேயே கதவைத் திறந்தார். குற்றவாளி ஈரமாகிவிட்ட தனது அடர்த்தியான சுருட்டைத் தலைமுடியை கையால் துவட்டியவாறே அம்மாவைப் பார்த்துப் புன்னகைத்துவிட்டு மகனின் பெயரைச் சொல்லி அவர் இருக்கிறாரா எனக் கேட்டான். “நீங்கள் யார் தம்பி?” என அம்மா கேட்டார். “என்னுடைய பெயர் கபிலன், உங்களது மகனின் சிநேகிதன், எனக்குத் திருமணம் நடக்கயிருக்கிறது. அவருக்கு அழைப்பிதழ் கொடுக்க வந்தேன்” என்றான் குற்றவாளி. “மழைக்குள் நிற்காதீர்கள்..உள்ளே வாருங்கள்” எனக் கதவை அகலத் திறந்தார் அம்மா. குற்றவாளி தனது காலணிகளை கழற்றிவிட்டுத் தயக்கத்துடன் உள்ளே நுழைந்தான். அம்மா கதவை மூடினார். " மகன்..இல்லையா அம்மா?" “இல்லைத் தம்பி..வேலைக்குப் போய்விட்டார்.. நீங்கள் இருங்கள்..” அம்மா உள் அறைக்குப்போய் வெண்ணிறத் துண்டொன்றை எடுத்துவந்து தலையைத் துவட்டுமாறு குற்றவாளியிடம் கொடுத்தார். அப்போது குற்றவாளி தனது கைத் தொலைபேசியைக் காதில் வைத்திருந்தான். “அம்மா மகனின் எண்ணுக்கு அழைத்தேன், அவர் எடுக்கிறார் இல்லையே” அம்மா சிரித்தார். “அவர் இப்பிடித்தான், வேலையில் இருக்கும்போதோ, வாகனம் ஓட்டும்போதோ தொலைபேசியை அநேகமாக எடுக்கமாட்டார். ஆனால் திரும்பக் கூப்பிடுவார். நீங்கள் கொஞ்சம் இருங்கள் நான் உங்களிற்கு கோப்பி எடுத்துவருகிறேன்” என்று சொல்லிவிட்டு அம்மா சமையலறைக்குள்ளே போனார். குற்றவாளி இங்கிருந்தவாறே அம்மாவின் ஒவ்வொரு அசைவையும் நுணுக்கமாக் கவனித்தான். குற்றவாளி கிட்டத்தட்ட ஒரு மாதம் அந்த வீட்டைக் கண்காணித்திருந்தான். மகனும் மருமகளும் வேலைக்குப் போகும் நேரம், வெள்ளிக்கிழமை காலைகளில் அப்பா தவறாமல் கோயிலுக்குப் போவது, அன்றைய தினங்களில் காலை முழுவதும் அம்மா மட்டுமே தனியே வீட்டில் இருப்பது என எல்லாவற்றையும் அவன் அறிந்து வைத்திருந்தான். இப்போது உட்கார்ந்தபடியே வீட்டின் உட்புறத்தை மிகக் கவனமாகக் கவனித்தான். அம்மா கோப்பியைக் கொண்டுவந்து குற்றவாளிக்குக் கொடுத்துவிட்டு அவனுக்கு எதிராக அமர்ந்துகொண்டார். குற்றவாளி கோப்பியை வாங்கி ஒரு மிடறு குடித்துவிட்டு கோப்பையை மேசையில் வைத்துவிட்டு எழுந்தான். “அம்மா நான் திருமண அழைப்பிதழை உங்களிடம் தருகிறேன். நீங்கள் மகனிடம் கொடுத்துவிடுங்கள். கண்டிப்பாக நீங்கள் எல்லோரும் எனது கல்யாணத்திற்கு வரவேண்டும்” என்று சொல்லியவாறியே அம்மாவின் அருகில் வந்து கையிலிருந்த ப்ளாஸ்டிக் பையைத் திறந்தான். அம்மா எழுந்து நின்று அழைப்பிதழைப் பெறுவதற்காக இரண்டு கைகளையும் நீட்டினார். குற்றவாளி ப்ளாஸ்டிக் பையிலிருந்து பளபளக்கும் நீண்ட கத்தியொன்றை எடுத்து அம்மாவின் முகத்துக்கு நேரே நீட்டினான். அம்மா திடுக்கிட்டுப்போய் “என்ன தம்பி” என்றார். “பேசாமல் நாற்காலியில் உட்கார்” என்றான் குற்றவாளி. அம்மாவின் உதடுகள் ஒட்டிக்கொண்டன. அவரது கண்களிலிருந்து பொசுக்கென்று கண்ணீர் தெறித்தது. அவரது தேகம் நடுங்கியது. குற்றவாளி மெல்லிய குரலில் ஆனால் கடுமையான தொனியில் சொன்னான் " எடியே கிழட்டு வேசை, சொல்வது விளங்கவில்லையா, வாயை மூடிக்கொண்டு அசையாமல் இந்த இடத்திலேயே இருக்கவேண்டும். அசைந்தாயோ உன்னுடைய புண்டையில் கத்தியைச் சொருகுவேன்". அம்மா அப்படியே ரப்பர் பொம்மை போல மடிந்து நாற்காலியில் உட்கார்ந்தார். அவர் தனது கைகளால் முகத்தை மூடியபடியே விசும்பத் தொடங்கினார். குற்றவாளி கத்தியின் முனையால் அம்மாவின் உச்சந்தலையில் மெல்லத் தட்டியவாறே சொன்னான்: “மூச்சும் காட்டக்கூடாது! அலுமாரிச் சாவிகளெல்லாம் எங்கே?” அம்மா அழுதுகொண்டே சொன்னார்: “நீங்கள் என்னுடைய மகனின் சிநேகிதன் என்பதால்தானே வீட்டுக்குள் விட்டேன்” குற்றவாளி தனது கையைச் சுழற்றி அம்மாவின் கன்னத்தில் பலமாக அறைந்தான். அம்மா கத்தக் கூட முடியாதவராக நடுங்கினார். “சாவிகள் எங்கே?” அம்மா எதிரிலிருந்த பெரிய மேசையைச் சுட்டிக் காட்டினார். அந்த மேசையில் சின்னதும் பெரிதுமாகப் பல இழுப்பறைகள் இருந்தன. குற்றவாளி அந்த மேசையின் அருகே குனிந்து மண்டியிட்டிருந்து மிக நிதானமாக ஒவ்வொரு இழுப்பறையாக ஆராய்ந்தான். குற்றவாளியின் முதுகை அம்மா பார்த்துக்கொண்டிருந்தார். அவன் எந்தக் கணத்திலும் தனது பார்வையை அம்மாவிடம் திருப்பலாம். அவனுக்கும் அம்மாவுக்கும் இடையே ஆறடி தூரம் மட்டுமேயிருந்தது. அம்மாவுக்கு அருகிலிருந்த ஒரு பீடத்தில் இரண்டடி உயரத்தில் தில்லையில் கூத்திடும் நடராஜரின் வெண்கலச் சிலையிருந்தது. அம்மாவுக்கு மிகவும் பிடித்தமான சிலை. அந்தச் சிலையையும் குற்றவாளி எடுத்துப் போய்விடுவான் என அம்மா நினைத்துக்கொண்டிருந்தபோதே அம்மாவின் வலதுகால் இரண்டி தூரத்தை ஒரேயடியாகப் பாய இரு கைகளும் சுழன்று நடராஜர் சிலையைத் தூக்க இடதுகால் மறுபடியும் இரண்டி முன்னே பாய, மண்டியிட்டிருந்து இழுப்பறைகளிற்குள் தேடிக்கொண்டிருந்த குற்றவாளி சத்தம் கேட்டுச் சடாரெனத் திரும்ப அவனது நடு நெற்றியில் நடராஜர் ‘டங்’ என மோதினார். குற்றவாளி ஒரு விலங்கைப்போல உறுமிக்கொண்டே தனது நெற்றியை இடது கையால் பிடித்துக்கொண்டான். அவனது நெற்றியிலிருந்து இரத்தம் வடிந்தது. அவனது வாய் பாலியல் வசவுகளைச் சொல்லியபடியேயிருந்தது. அம்மா முகத்தில் அச்சமும் கோபமும் தெறிக்க அவனை வெறித்துப் பார்த்தார். அவரது கைகளிலே நடராஜர் இருந்தார். “போ வெளியே” என்று அம்மா கத்தினார். அவன் மெதுவாக நடந்துசென்று அங்கிருந்த நிலைக்கண்ணாடியில் தனது முகத்தைப் பார்த்தான். பொட்டு வைத்தது போல அவனது நெற்றியில் பிளவிருந்தது. அதிலிருந்து வடிந்த இரத்தம் அவனது கன்னமோடி அடர்த்தியான மீசையில் படிந்துகொண்டிருந்தது. அவன் மெதுவாக நடந்து அம்மாவிடம் வந்து " சிவபெருமான் எனக்கு நெற்றிக் கண்ணைத் திறந்திருக்கிறார்" என்றான். அம்மா எதுவும் பேசாமல் தொலைபேசி அருகே சென்று இடது கையால் நடராஜரைத் தனது மார்போடு சேர்த்து அணைத்தவாறே வலது கையால் ரிஸீவரை எடுத்துக் காதில் வைத்துக்கொண்டு தோளை உயர்த்தி ரிஸீவரைக் காதோடு அணைத்துக்கொண்டு எண்களை அழுத்தத் தொடங்கினார். அப்போது குற்றவாளிக்கும் அம்மாவுக்கும் நடுவில் பதினைந்து அடிகள் தூரமிருக்கும். அந்தத் தூரத்தை ஓநாய்போல குற்றவாளி ஒரே தாவாகத் தாவிக் கடந்து அம்மாவை வன்மத்துடன் கீழே தள்ளிவிட்டான். அம்மா குப்புறக் கீழே விழுந்தார். அவர் நடராஜர் சிலையைத் தன்னிடமிருந்து விலக விடவில்லை. குற்றவாளி அம்மாவை மல்லாக்கப் புரட்டிப் போட்டுவிட்டு அவரருகே குனிந்திருந்து அவரது முகத்தைப் பார்த்தான். அம்மாவின் கண்கள் வெறித்திருந்தன. ‘உன்னால் முடிந்ததைச் செய்துபார்’ என்ற ஏளனம் அந்தக் கண்களில் தெரிவதாகக் குற்றவாளி உணர்ந்தான். அவன் பற்களை இறுகக் கடித்துக்கொண்டு உதடுகளுக்குள் ஏதோ முணுமுணுத்தவாறே அம்மாவின் முகத்தில் ஓங்கி அறைந்தான். அம்மாவின் மூளை பளீரிட்டு அணைந்தது. அம்மாவின் கைகளிலிருந்து நடராஜார் வழுவிப் போனார். அம்மா மயங்கிப்போனார். குற்றவாளி அம்மாவை உலுக்கினான். அம்மா விறைத்த சவமாகக் கிடந்தார். அம்மாவின் சேலை மார்பிலிருந்து விலகிக்கிடந்தது. ரவிக்கை வலது பக்கத் தோளிலிருந்து சற்று விலகியிருக்க அந்த இடத்தில் அம்மாவின் மாசற்ற சருமத்திற்கு நடுவே பிரேஸியரின் கறுப்பு நிறப் பட்டை தெரிந்தது. குற்றவாளி மெதுவாகக் குனிந்து அந்தப் பட்டையை முகர்ந்தான். பின்பு அம்மாவின் முகத்தை முகர்ந்தான். அம்மாவில் தூய பனியின் குளிர்ச்சியை குற்றவாளி உணர்ந்தான். 2 பதினொன்றரை மணிக்குப் பேரனைப் பாடசாலையிலிருந்து அழைத்துச் செல்ல யாரும் வராததால் பாடசாலையிலிருந்து மருமகளைத் தொலைபேசியில் அழைத்தார்கள். பதறிப்போன மருமகள் வீட்டு எண்ணிற்குத் தொலைபேசியில் அழைத்தபோது யாரும் தொலைபேசியை எடுக்கவில்லை. மருமகள் உடனே தனது காரை எடுத்துக்கொண்டு விரைந்தாள். அவள் பாடசாலைக்குச் சென்றுகூடப் பார்க்காமல் முதலில் வீட்டிற்கே போனாள். கதவு மூடிக் கிடந்தது மருமகளிற்கு சற்று நிம்மதியைக் கொடுத்தது. அவள் தன்னிடமிருந்த சாவியால் கதவைத் திறந்துகொண்டு உள்ளே போனபோது, நடுக் கூடத்தில் அம்மா ஆடைகள் விலகிய நிலையில் அரை நிர்வாணமாக அசைவற்றுக் கிடந்தார். மருமகள் கூச்சலிட்டபடியே ஓடிச் சென்று முதலில் அம்மாவின் ஆடைகளைச் சரிப்படுத்தினாள். அதற்குப் பின்பு அம்மாவின் கையைப் பிடித்துப் பார்த்தாள். அம்மாவிற்கு உயிர் இருந்தது. மருமகள் அம்புலன்ஸை தொலைபேசியில் அழைத்தாள். அய்ந்து நிமிடங்களில் சைரன்களின் கூட்டு ஒலியால் அந்தச் சிறு பட்டினத்தையே அதிரச் செய்தவாறு அம்புலன்ஸும் காவற்துறையினரும் வந்து சேர்ந்தார்கள். மருத்துவமனையில் அம்மாவைச் சேர்த்துவிட்டு மருமகள் காத்துக்கொண்டிருக்கையில் மகன் வந்து சேர்ந்தான். சற்று நேரத்தில் மருத்துவர் இருவரையும் தனது அறைக்கு அழைத்துச் சென்று உட்காரவைத்துவிட்டுச் சொன்னார்: “ஒன்றும் பயமில்லை. ஆனால் ஒரு கடுமையான குற்றம் நிகழ்ந்திருக்கிறது. அந்த அம்மா பாலியல் வல்லுறவு செய்யப்பட்டுள்ளார்.” மருத்துவர் சொல்லிவிட்டு உதடுகளை மடித்துக்கொண்டு அவர்களைப் பார்த்தார். மகன் நாற்காலியிலிருந்து மெதுவாக எழுந்தான். நடந்துபோய் அந்த அறையின் கதவினருகே நின்று மருத்துவரைப் பார்த்தான். அவனின் பார்வை மருத்துவரை அறையிலிருந்து வெளியேற அனுமதிக்க மாட்டேன் என்பது போலிருந்தது. மகன் மூச்சுவிடச் சிரமப்படுபவன்போல் உடலைக் குலுக்கிக்கொண்டான். மருமகள் எழுந்துபோய் அவனது கைகளைப் பிடித்தபோது அவன் வெடித்து வாயைக் கைகளால் பொத்தியவாறு அழுதான். அம்மா கொடுத்த பால் அவன் கண்களில் நீராக வழிந்தது. அவனைத் தேற்றுவதற்கு மருத்துவர் படாத பாடுபட்டார். மருமகள் தனது கரங்களை ஒன்றுடன் ஒன்று கோர்த்து தனது கணவனைப் பார்த்துக் கும்பிடுவது போல உயர்த்தினாள். அவளது கைகள் கிடுகிடுவென நடுங்கிக்கொண்டிருந்தன. " அம்புலன்ஸில் வரும்போதே மாமிக்குச் சாடையாக மயக்கம் தெளிந்தது. நான் என்ன நடந்தது மாமி என்று கேட்டதற்கு, ‘கள்ளன் வந்து என்னை அடித்துவிட்டான் நான் மயங்கிப்போனேன்’ என்று சொல்லிவிட்டு மறுபடியும் மாமி மயக்கமாகிவிட்டார்" என்றாள் மருமகள். மருத்துவர் தலையை ஆட்டிக்கொண்டார். “அவரது உடலைப் பரிசோதித்துப் பார்த்ததில் அவர் மயக்கமாகயிருந்த நிலையில்தான் வல்லுறவு செய்யப்பட்டிருக்க வேண்டும் எனத் தெரிகிறது” என்றார் மருத்துவர். இப்போது மகன் தனது கண்களை அழுந்தத் துடைத்துவிட்டுக்கொண்டான். அவன் மருத்துவரைப் பார்த்து, அம்மா வல்லுறவு செய்யப்பட்ட விசயம் அம்மாவுக்கோ அப்பாவுக்கோ எக்காரணம் கொண்டும் தெரியக் கூடாது என்று கேட்டுக்கொண்டான். “ஆனால் இது காவற்துறை தொடர்புள்ள விடயாமாயிற்றே, எப்படி மறைக்க முடியும்?” என்று மருத்துவர் கேட்டார். “அவர்களிடமிருந்தும் மறைத்துவிடலாம்” என்றாள் மருமகள். மகன் அவளைப் பிடித்துத் தூரத் தள்ளிவிட்டான். “இல்லை..இந்தக் கொடூரத்தைச் செய்தவனைத் தண்டிக்க வேண்டும். அவன் எக்காரணம் கொண்டும் தண்டனையிலிருந்து தப்பிக்கக் கூடாது.” “அப்படியென்றால் இந்த விசயத்தை மாமியிடமிருந்தோ மாமாவிடமிருந்தோ எப்படி மறைக்க முடியும்?” “முடியும்..நான் காவற்துறை அதிகாரிகளிடம் பேசுகிறேன். இந்த விசயம் தெரிந்தால் என் அம்மா தற்கொலை செய்துகொள்வார் என்ற உண்மையை நான் அவர்களிற்குச் சொல்லி அவர்களிடம் இரந்து நிற்பேன். அவர்கள் எனது அம்மாவைக் காப்பாற்றுவார்கள்” என்று அழுதுகொண்டே மகன் சொன்னான். காவற்துறை அலுவலகத்தில் உயரதிகாரியோடு மகனுக்கு ஒரு சந்திப்பு ஏற்பாடாகியது. அந்த அமைதியான பட்டினத்தில் நடந்த அந்தக் கொடூரமான குற்றம் குறித்து அதிகாரி கடுமையான கோபத்திலும் வருத்தத்திலுமிருந்தார். எனினும் அவர் மகனோடு ஆதரவாகப் பேசி அவனது கோரிக்கையைக் கவனமாகக் கேட்டார். “திருவாளர் சஜிதரன், உங்களது வேதனையையும் மனவுணர்வையும் நான் முழுமையாகப் புரிந்துகொள்கிறேன். அதை மதிக்கிறேன். சட்டத்திற்கு விரோதமில்லாத எந்த உதவியையும் நான் உங்களிற்குச் செய்யக் கடமைப்பட்டிருக்கிறேன். இந்த விடயத்தை உங்களது பெற்றோர்களிடமிருந்து மறைத்துவிட சட்டத்தில் கூட வாய்ப்பிருப்பதாகவே நான் கருதுகிறேன். நான் இது குறித்துப் பேச நீதிபதியிடம் உங்களை அழைத்துப்போவேன். எங்கள் எல்லோரது முழுச் சக்தியைச் செலவு செய்து இந்த விசயத்தை உங்களது பெற்றோரிடமிருந்து மறைக்க முயற்சிப்போம். உங்களது பெற்றோர்களிற்கு இந்த நாட்டு மொழி தெரியாமலிருப்பதும் ஒருவகையில் எங்களுக்கு உதவி செய்யும். பாலியல் வல்லுறவுக் குற்றம் நிகழ்ந்ததற்கான வலுவான மருத்துவ அறிக்கை ஆதாரங்கள் இருப்பதால் குற்றவாளி தப்பிக்க முடியாது. இது எங்களுக்குக் கொஞ்சம் விநோதமானதும் சிக்கலானதுமான வழக்குத்தான். எனினும் சட்டத்தை மனிதாபிமானம் வென்றதாகச் சில பதிவுகள் எங்களது துறையிலுமுண்டு. எங்களால் முடிந்த எல்லா உதவிகளையும் நாங்கள் உங்களிற்குச் செய்வோம்” என்றார் காவற்துறை அதிகாரி. மகன் கைகுலுக்கக் கைகளை நீட்டியபோது அதிகாரியும் தனது கைகளை நீட்ட அதிகாரியின் கரத்தைப் பற்றி அதில் குனிந்து மகன் முத்தமிட்டான். அவனது கண்ணீர் அந்த அதிகாரியின் கையைக் கழுவிற்று. 3 அம்மா நான்கு நாட்கள் மட்டுமே மருத்துவமனையிலிருந்தார். அவரது உடலிலிருந்த வீக்கங்கள் வற்றிவிட்டன. வலது கண்ணுக்குக் கீழே மட்டும் சருமம் கொஞ்சம் கறுத்திருந்தது. அவர் பழையபடி கலகலப்பாகச் சிரித்த முகத்துடன் வீட்டை வளைய வரத் தொடங்கினார். அம்மா விரைவிலேயே தேறியதால் அப்பாவுக்கும் மகிழ்ச்சி. அந்தச் சம்பவம் நடந்தபோது குற்றவாளியால் அதிகம் பொருட்களைத் திருட முடியாது போயிற்று. நகைகளும் பெறுமதியான பத்திரங்களும் வங்கிப் பெட்டகத்தில் பாதுகாப்பாகயிருந்தன. இரண்டு மடிக்கணினிகளையும் வெறும் சில்லறைச் சாமான்களையும் மட்டுமே குற்றவாளியால் எடுத்துப்போக முடிந்திருக்கிறது. எடுத்துப் போன வங்கி அட்டைகளை வைத்தும் அவனால் ஒன்றும் செய்ய முடியாது. அந்தக் குற்றவாளி, மகன் குடிக்கும் உயர்ரக விஸ்கிப் போத்தல் ஒன்றையும் திருடிச் சென்றிருந்தான். கூட்டிக் கழித்துப் பார்த்தால் மகனின் ஒரு மாதச் சம்பளத்தில் பாதிக்கும் குறைவான மதிப்புள்ள பொருட்களே மொத்தமாகத் திருடப்பட்டிருந்தன. ஆனால் அந்தச் சம்பவத்திற்குப் பின்னாக மகன் எப்போது பார்த்தாலும் இருண்ட முகத்தோடு இருந்தது அம்மாவையும் அப்பாவையும் வருத்தியது. மகன் அதிகமாகக் குடித்தான். அப்பாவுக்கு முன்னால் ஒருநாளும் குடியாதவன் அவர் இருப்பதையும் சட்டை செய்யாமல் குடித்து வெறித்தான். வேலைக்கும் ஒழுங்காகப் போகாமல் அடிக்கடி படுக்கையிலேயே கிடந்தான். அம்மாவோடும் அப்பாவோடும் ஒன்றிரண்டு வார்த்தைகளிற்கு மேல் அவன் பேசுவதில்லை. அம்மா ஆனமட்டும் மகனைத் தேற்றப் பார்த்தார். தனக்கு இப்போது உடல் முழுமையாகத் தேறிவிட்டதென்றும் திருடனுக்குத் தானும் செம்மையான அடி கொடுத்தாரென்றும் அம்மா சிரித்தவாறே சொன்னார். “இதுவொரு சிறிய விபத்து, அவ்வளவும்தானே.. அதற்கு எதற்கு நீ இப்படிக் கவலைப்படுகிறாய்?” என்று மகனின் நாடியைத் தடவி விட்டவாறே அம்மா கேட்டார். மகன் அம்மாவின் கண்களை நேருக்கு நேராகச் சந்திக்க அஞ்சினான். “அம்மா உங்களிற்கு நிகழ்ந்திருக்கும் கொடுமையை நீங்கள் அறிய நேர்ந்தால் நீங்கள் செத்தே போய்விடுவீர்கள்” என அவன் மனதுக்குள் அழுதான். மருமகள் இப்போது வெள்ளிக்கிழமைகளில் சைவ உணவு சாப்பிடுவதில்லை. அதை மகன் கவனித்தான். அம்மா பேரனோடு விளையாடியபடியே வழமைபோலவே அவனைப் பாடசாலைக்கு அழைத்துச் சென்றார். அப்பாவுக்குச் சுவையாகச் சமைத்துப் போட்டார். எப்போதும் போலவே வீடு வாசலையும் தோட்டத்தையும் மிகத் தூய்மையாக வைத்திருந்தார். அப்பா தனது ஆய்வு நூலை எழுதி முடிப்பதில் முழுக் கவனத்தையும் செலுத்தினார். மகன் ஒவ்வொரு நாள் மாலையிலும் காவற்துறை அதிகாரியைச் சந்தித்து குற்றவாளியைக் கைது செய்துவிட்டீர்களா என விசாரித்துக்கொண்டேயிருந்தான். ஒருநாள் அதிகாலையில் படுக்கையிலிருந்தபோது மருமகள் தனது கணவனின் மார்பைத் தடவி விட்டபடியே அவனிடம் தயக்கத்துடன் பேசினாள். “நான் ஒன்று சொன்னால் நீங்கள் தவறாக நினைக்கக் கூடாது” “ம்” “உங்களைப் பார்த்தால் என்னால் சகிக்க முடியவில்லை. சரியாகச் சாப்பிடுகிறீர்களில்லை, தூங்குவதில்லை, ஆடைகளைக் கூடச் சரியாக நீங்கள் அணிவதில்லை. நான் புரிந்துகொள்கிறேன்…அம்மாவைப் பார்க்கும் போதெல்லாம் நீங்கள் நிலைகுலைந்து போய்விடுகிறீர்கள். கொஞ்ச நாட்களிற்கு அம்மாவையும் அப்பாவையும் இலங்கைக்கு அனுப்பிவைத்தால் என்ன?” மருமகளின் கன்னத்தில் சடாரென ஓர் அறை விழுந்தது. அந்த அதிகாலை வேளையில் வெறி பிடித்தவன் போல வண்டியை எடுத்துக்கொண்டு மகன் காவல் நிலையத்தை நோக்கி படுவேகமாகச் சென்றான். அவன் காவற்துறை மீது வசவுகளைச் சொல்லிக்கொண்டே வண்டியைச் செலுத்தினான். மகன் காவல் நிலையத்தை அடைவதற்கு நூறு மீற்றர்கள் முன்பாக உறைபனியில் சறுக்கி வண்டி கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மரத்தில் மோதிக் கவிழ்ந்தது. மகன் உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடக்கிறான் என்ற செய்தி வந்தபோது அம்மா மயங்கி விழுந்தார். மருமகள் வீறிட்டுக் கத்தினாள். அப்பா தாளாத துயரத்துடனும் பதற்றத்துடனும் மயங்கி விழுந்துகிடக்கும் அம்மாவைப் பார்ப்பதா அல்லது சுவரோடு தலையை மோதிக்கொண்டு அலறும் மருமகளைப் பார்ப்பதா அல்லது படுக்கையிலிருந்துகொண்டே தேம்பியழும் பேரனைப் பார்ப்பதா எனத் தவித்துப் போனர். எனினும் இனி நடக்கவேண்டிய காரியங்களைச் செய்வதற்கு மருமகளையே முதலில் தேற்ற வேண்டும் என்பது அவரது புத்திக்குத் தெரிந்தது. அவர் மருமகளை அணைத்துக்கொண்டு அவளை ஆறுதல்படுத்த முயன்றார். அப்போதுதான் மருமகளின் வாயிலிருந்து அந்த வார்த்தைகள் அவளை அறியாமலேயே உருண்டு வந்தன: " அய்யோ மாமா.. மாமி ‘ரேப்’ செய்யப்பட்ட நாளிலிருந்தே உங்களது மகன் நிதானமில்லாமல்தான் கிடக்கிறார்.. நான் பாவி அவருடைய மனம் நோகக் கதைத்து அவரைச் சாவுவரை துரத்திவிட்டேனே!" 3 ஒருமாத தீவிர சிகிச்சைக்குப் பின்பு மகன் ஓரளவு தேறி வீட்டுக்குத் திரும்பினான். முன்னிலும் இப்போது அவன் நிதானம் இழந்திருந்தான். எப்போதும் அழுக்கான ஆடைகளையே அணிந்திருந்தான். சவரம் கூடச் செய்வதில்லை. ஆனால் நாள் தவறாமல் காவற்துறை அதிகாரியைத் தொலைபேசியில் அழைத்து “குற்றவாளியை ஏன் இன்னும் கைது செய்யவில்லை?” எனச் சண்டை போட்டான். தனது அம்மா பாலியல் வல்லுறவு செய்யப்பட்ட சம்பவம் தனது மனைவியின் வாயிலிருந்து தனது தந்தைக்குத் தெரிந்திருப்பதை அவன் அறியாமலேயேயிருந்தான். மகன் வீட்டுக்கு வந்ததும் அம்மா பழையபடி உற்சாகமான நிலைக்கு மெல்ல மெல்லத் திரும்பினார். ஆனால் இப்போது அப்பா, அம்மாவுடனோ மகனுடனோ மருமகளுடனோ எதுவும் பேசுவதில்லை. ஏதாவது கேட்டால் ஆம், இல்லை என்பதற்கு மேல் ஒரு சொல் அவரது வாயிலிருந்து வராது. வெள்ளிக்கிழமைகளில் கோயிலுக்குப் போவதுமில்லை. அப்பா இப்போது புத்தகங்கள் படிப்பதில்லை. எப்போதும் வீட்டிற்குப் பின்னாலிருக்கும் ஆற்றங்கரையிலேயே இருக்கிறார். இருட்டானதற்குப் பின்பும் அங்கேயே அசையாமல் இருப்பார். யாராவது போய் வீட்டிற்குக் கூட்டிவருவார்கள். மகன் தேறிவருகிறான், கவலைப்படாதீர்கள், உங்களது புத்தகத்தை எழுதி முடியுங்கள், கோயிலுக்குப் போய்வருவோம் வாருங்கள்.. என்றெல்லாம் சொல்லி அப்பாவைச் சமாதானப்படுத்த அம்மா முயன்றுகொண்டிருந்தார். ஆனால் அப்பா ஆற்றங்கரையிலேயே இருந்தார். ஒருநாள் இரவு ஒன்பது மணிக்கு அப்பா படுக்கைக்குப் போனார். பத்துமணிபோல அம்மா வந்து பார்த்தபோது அப்பா கண்களை மூடிக்கிடந்தார். அம்மா, அப்பாவின் நெற்றியைத் தடவிக்கொடுத்துவிட்டு அருகில் படுத்துக்கொண்டார். இரவு திடீரென அம்மா தூக்கத்திலிருந்து விழித்தபோது அருகில் அப்பா இல்லாததைப் பார்த்தார். அம்மா மெல்ல எழுந்துபோய் கதவைப் பிடித்துக்கொண்டு வெளியே பார்த்தார். அப்பாவின் படிப்பறையில் விளக்கு எரிந்துகொண்டிருந்தது. ஒரு புன்னகை ஓடி அம்மாவின் முகத்தில் உறைந்தது. " சந்நிதியானே" எனச் சொல்லிக்கொண்டே அம்மா திரும்பவும் வந்து கட்டிலில் படுத்துக்கொண்டார். அசதி அவரது கண்களை அமுக்கிற்று. அதிகாலையில் அம்மா விழித்தபோதும் அப்பா அருகிலில்லை. அம்மா எழுந்து நடந்துபோய் படிப்பறையைப் பார்த்தார். அங்கே இன்னும் விளக்கு எரிந்துகொண்டிருந்தது. அம்மா பல் துலக்கி, முகம் கழுவிவிட்டு கோப்பி தயாரித்து எடுத்துக்கொண்டு சென்று படிப்பறையின் கதவைத் தள்ளித் திறந்தார். அங்கே அப்பா இல்லை. அம்மா வீடு முழுவதும் அப்பாவைத் தேடிப் பார்த்துவிட்டுப் போய், மகனின் அறைக் கதவைத் தட்டினார். மருமகள் கதவைத் திறந்தபோது, " இன்று வெள்ளிக்கிழமையா?" என்று அம்மா கேட்டார். அன்று சனிக்கிழமை. குளிரின் அளவு மைனஸ் ஏழு டிகிரி. வீட்டுக்குப் பின்னாலுள்ள ஆற்றங்கரையில்தான் அப்பாவின் உடல் விறைத்துப் போய்க்கிடந்தது. கொலையோ தற்கொலையோ அல்ல. குளிரில் உடல் விறைத்து மரணம். அந்த வீட்டில் அழுவதற்குக் கூட யாருக்கும் சக்தியிருக்கவில்லை. அப்பாவின் உடலை மயானத்தில் எரியூட்டவிருந்த தருணத்தில் மருமகள் அம்மாவை அணைத்துக்கொண்டு " அழுதுவிடுங்கள் மாமி, எல்லாவற்றையும் அழுது தீருங்கள்" என்றாள். அந்த வீடு ஒளியற்றுக் கிடந்தது. அம்மா எப்போதும் போல வீட்டைச் சுத்தப்படுத்திக்கொண்டிருந்தார். மகனையும் மருமகளையும் ஆறுதல் சொல்லித் தேற்றிக்கொண்டேயிருந்தார். அப்பாவும் இல்லாத இடத்தில் தாய்க்குத் தாயாகவும் தகப்பனுக்குத் தகப்பனாகவும் அவர்களிற்குத் தான் இருக்கவேண்டும் என்ற பொறுப்புணர்வு அம்மாவிடம் மிகுந்திருந்தது. எப்போதும் போல பேரனுடன் விளையாடியவாறே அவனைப் பாடசாலைக்கு அழைத்துச் சென்றார். பேரன் இப்போது கொஞ்சம் தமிழ் பேசப் பழகியிருந்தான். அப்பா இறந்த பதினாறாவது நாள் காவற்துறை அதிகாரியிடமிருந்து மகனுக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. வீட்டைக் கொள்ளையடித்து, அம்மாவைப் பாலியல் வல்லுறவு செய்ததாகத் தாங்கள் சந்தேகிக்கும் ஒரு நபரைக் கைதுசெய்துவிட்டதாக அந்த அதிகாரி சொன்னார். அந்தச் செய்தியைக் கேட்டதும் மகனுக்கு இன்னும் வெறி அதிகமாகியது. “நான் அந்த நாயைப் பார்க்க வேண்டும்” என்று மகன் தொலைபேசியில் கூச்சலிட்டது அந்த வீடு முழுவதும் கேட்டது. “இந்த வீடு பேய் வீடாக மாறிக்கொண்டிருக்கிறது” என மருமகள் தனக்குள் முணுமுணுத்துக்கொண்டாள். கடந்த சில நாட்களாகவே விவாகரத்து குறித்த எண்ணம் அவளை அலைக்கழித்துக்கொண்டிருந்தது. காவலதிகாரி ஓர் அடையாள அணிவகுப்புக்கு ஏற்பாடு செய்தார். அந்த நாள் குளிர்காலத்தின் இறுதி நாளாகயிருந்தது. மகன், அம்மாவிடம் எந்த விபரமும் சொல்லாமல் " அம்மா நாங்கள் எல்லோரும் வெளியில் போய்விட்டு வருவோம்" என்று முணுமுணுத்தான். அம்மாவின் முகம் மகிழ்ச்சியால் பொங்கிற்று. எத்தனையோ நாட்களிற்குப் பிறகு அவர்கள் குடும்பத்தோடு வெளியே கிளம்புகிறார்கள். அம்மா எப்போதும் போல தூய ஆடைகளை அணிந்து உற்சாகத்துடன் தயாரானர். வண்டியை மருமகள் ஓட்டினாள். அவளுக்கு அருகில் மகன் வெறிபிடித்தவன் போலயிருந்தான். பின் இருக்கையில் அம்மா பேரனோடு விளையாடிக்கொண்டிருந்தார். அடையாள அணிவகுப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இடத்தில் வண்டி நிறுத்தப்பட்டது. மகன் எதுவும் பேசாமல் மவுனமாயிருக்க மருமகள்தான் அம்மாவுக்கு எல்லாவற்றையும் விளங்கப்படுத்தினாள். திருடனைப் பிடித்துவிட்டாகவும் அவனை அம்மா அடையாளம் காட்டவேண்டும் என்றும் அவள் சொல்லச் சொல்ல அம்மா அவள் சொல்வதைக் கூர்ந்து கவனித்துக்கொண்டிருந்தார். அம்மா அந்தக் குற்றவாளியை நினைத்துக்கொண்டார். அவனின் கண்கள் உடனடியாகவே அவரது ஞாபகத்தில் வந்தன. சில நொடிகளிலேயே அவனது மொத்த உருவமும் தெளிவாக அவருக்கு ஞாபகத்தில் வந்தது. ஆனால் அம்மா நினைத்திருந்ததுபோல அடையாள அணிவகுப்பில் அவரால் இலகுவாக குற்றவாளியை அடையாளம் காணமுடியவில்லை. கண்ணாடியால் தடுக்கப்பட்ட ஓர் அறைக்கு வெளியே அம்மாவும் காவற்துறை அதிகாரிகளும் நின்றிருந்தார்கள். கண்ணாடித் தடுப்புக்கு அந்தப் பக்கம் இலங்கைத் தமிழர்கள் நான்கு பேர்கள் அருகருகாக நிறுத்தப்பட்டிருந்தார்கள். அவர்களில் ஒருவன்தான் சந்தேக நபர். மற்றவர்கள் டம்மி நபர்கள். அம்மா கண்ணாடித் தடுப்புக்குள்ளால் உற்றுப் பார்த்தார். அந்த நான்கு பேர்களிடையே குற்றவாளி இல்லாதது போலத்தானிருந்தது. அம்மாவின் முகபாவனையைக் கவனித்த தலைமைப் புலனாய்வு அதிகாரி, அந்த நால்வரையும் பக்கவாட்டில் திரும்பி நிற்குமாறு சைகை செய்தார். அம்மாவால் குற்றவாளியை அடையாளம் காணமுடியவில்லை. அதிகாரி மறுபடியும் நால்வரையும் பழைய நிலையில் திரும்பி நிற்குமாறு சைகை செய்தார். அம்மா கொஞ்சம் யோசித்துவிட்டு அந்த நால்வரும் கண்ணாடித் தடுப்பை இன்னும் நெருங்கி வரவேண்டும் என்பது போல அதிகாரியிடம் சைகை செய்தார். அந்த நால்வரும் இப்போது கண்ணாடித் தடுப்புக்கு மிக அருகே வந்தார்கள். இப்போது அவர்களிற்கும் அம்மாவுக்கும் இடையில் ஓரடி தூரமேயிருந்தது. அந்த நால்வர் வரிசையில் மூன்றாவதாக இருந்தவனின் தலைமுடி மிகக் குட்டையாக வெட்டப்பட்டிருந்தது. அவனது முகம் மழுங்கச் சிரைக்கப்பட்டிருந்தது. அவனது நடு நெற்றியில் அம்மா நடராஜர் சிலையால் தாக்கியதால் உண்டான வடு இருந்தது. அவனது கண்கள் கண்ணாடித் தடுப்பை ஊடுருவி அம்மாவை அருவருப்போடு பார்த்தன. அம்மாவால் அந்தப் பார்வையை எப்படி மறக்கமுடியும். தரையில் ஓரடி உயரத்திற்குத் தூய பனி கொட்டியிருந்த, மழை பெய்துகொண்டிருந்த அந்த வெள்ளிக்கிழமை காலையில் குற்றவாளி அம்மா மீது தனது உடற் பாரம் முழுவதையும் கிடத்தித் தனது இரண்டு கைகளாலும் அம்மாவது கால்களை விரித்துப் பிடித்தபடி தனது முகத்திலிருந்து வடிந்த இரத்தமும் கழுத்திலிருந்து வடிந்த வியர்வையும் அம்மாவின் முகத்தில் சிந்த அம்மாவைப் புணர்ந்துகொண்டிருந்தபோது அம்மாவுக்கு மயக்கம் தெளிந்துவந்தது. அவர் அந்தக் குற்றவாளியிடம் நான்கு சொற்கள் பேசினார். அப்போது அந்தக் குற்றவாளி அம்மாவின் கண்களை அருவருப்புடன் பார்த்தவாறே அம்மாவின் இடது காலைப் பற்றியிருந்த தனது கையை வேகமாக எடுத்து அம்மாவின் முகத்தில் அறைந்தான். அருவருப்பைக் கொப்பளித்த அவனது கண்களைப் பார்த்தவாறே அம்மா மீண்டும் மயங்கிப்போனார். மயங்குவதற்கு முன்பாக அம்மா குற்றவாளியிடம் இந்தச் சொற்களைச் சொல்லியிருந்தார்: " நான் உனது அம்மா மாதிரியல்லவா" தலைமைப் புலனாய்வு அதிகாரி ஓரடி முன்னால் வந்து தனக்கு அருகில் நின்று தன்னையே ஆர்வத்துடன் கவனிப்பதை அம்மா உணர்ந்தார். உடனேயே அம்மாவினது கண்கள் குற்றவாளியிடமிருந்து விடுபட்டு நான்காவது நபரிடம் சென்றன. பிறகு, அம்மா அதிகாரியிடம் ஆங்கிலத்தில் சொன்னார்: " இவர்களிடையே அந்தக் குற்றவாளி இல்லை". (‘காலம்’ டிசம்பர் 2014- இதழில் வெளியான கதை) கண்டி வீரன் சிலோனில் முன்னொரு காலத்தில் கண்டி வீரன் என்றொருவன் இருந்தான். அவனுக்கு ஒரு தமிழ் விடுதலை இயக்கம் மரணதண்டனையைத் தீர்ப்பளித்ததாம். பின்னொரு சந்தர்ப்பத்தில் அந்த மரணதண்டனையை அந்த இயக்கம் விலக்கியும் கொண்டதாம். கண்டி வீரனின் சரித்திரம் பற்றி இதற்கு மேல் எனக்கு எதுவும் தெரியாது. ஆனால் இத்தகைய சம்பவம் எங்களது போராட்ட வரலாற்றில் வெகு அபூர்வமாகவே நிகழ்ந்த ஒன்று. இயக்கங்களின் கைகளில் சிக்கியவர்கள் மீண்டதான நிகழ்வுகள் வெகு அரிதே. குறிப்பாக மரணதண்டனை விதிக்கப்பட்ட பின்பாக அத்தண்டனை விலக்கிக்கொள்ளப்பட்ட நிகழ்வு இது ஒன்றுதான். நான் கண்டி வீரனைப் பற்றிக் கேள்விப்பட்ட நாளிலிருந்தே இது எப்படி நடந்திருக்கக் கூடும் என யோசித்து வந்திருக்கிறேன். கண்டி வீரனின் கதையை எழுத வேண்டும் என்பதில் நான் வெகு ஆர்வமாயிருந்தேன். ஆனால் இது எவ்வாறு நிகழ்ந்திருக்கும் என என்னால் கற்பனையே செய்ய முடியவில்லை. அண்மையில் நான் லியோ டால்ஸ்டாய் எழுதிய ஒரு சிறுகதையைப் படித்தேன். ’யானையைக் கட்டி யாரால் தீனி போட முடியும்" என்றொரு நீளமான தலைப்போடு அந்தக் கதையை ஆக்கூர் அனந்தாச்சாரியார் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். அந்தக் கதை அய்ரோப்பாவில் 1897-ல் நடந்த கதை. ஆனால் அந்தக் கதை போலத்தான் 1984-ல் சிலோனில் நடந்த கண்டி வீரனின் கதையும் இருந்திருக்க முடியும் என எனக்குத் திடீரெனத் தோன்றியது. வேறெப்படித்தான் கண்டி வீரன் சாவிலிருந்து தப்பித்திருக்க முடியும் சொல்லுங்கள்! எனவே நான் ஆசிரியர் டால்ஸ்டாயின் அந்தக் கதையை வாங்கி அதற்குள் கண்டி வீரனின் சரித்திரத்தைப் புகுத்திச் சொல்வதற்கு நீங்கள் என்னை அனுமதிக்க வேண்டும் சிலோனில் 1984 காலப் பகுதியில் பெரிதும் சிறிதுமாக முப்பத்தேழு தமிழ் ஆயுதப் போராட்ட இயக்கங்கள் இருந்ததாக ஒரு கணக்கு. அந்த முப்பத்தேழு இயக்கங்களிலும் ஆகச் சிறிய குட்டி இயக்கத்திற்குப் பெயர் ‘சோசலிஸத் தமிழீழப் புரட்சிகர இயக்கம்’ ( ஆர்.ஓ.எஸ்.ரி.ஈ). சுருக்கமாக ‘ரோஸ்டி’ என அவர்கள் தங்களை அழைத்துக்கொண்டார்கள். அந்த இயக்கத்தில் ஆறு உறுப்பினர்கள் மட்டுமே இருந்தார்கள். எல்லோருக்கும் இருபதிலிருந்து முப்பது வயதுகளிற்குள்தானிருக்கும். அந்த இயக்கத்தின் புரட்சிகர நிறைவேற்று மத்திய குழுவில் அந்த ஆறுபேருமே இருந்தார்கள். ரோஸ்டி இயக்கம் ஒரு தீவிர இடதுசாரி இயக்கமாகத் தன்னைச் சொல்லிக்கொண்டது. தொழிலாளர்களையும் விவசாயிகளையும் திரட்டி தொடர்ச்சியான கெரில்லாத் தாக்குதல்களை இலங்கை இராணுவத்திற்கு எதிராக நடத்தி சோசலிஸத் தமிழ் ஈழ நாட்டை அமைப்பதே அவர்களது அரசியல் வேலைத்திட்டம். அந்தக் காலத்தில் பல ஈழத் தமிழ் இயக்கங்களிற்கு இந்திய அரசு இராணுவப் பயிற்சி கொடுத்து வந்தது. எம்.ஜி.ஆரும் கருணாநிதியும் போட்டி போட்டுக்கொண்டு இயக்கங்களிற்கு நிதி வழங்கினார்கள். ஆனால் ரோஸ்டி இயக்கம் இந்தியாவைச் சார்ந்து இருக்கக் கூடாது எனக் கொள்கை முடிவு எடுத்திருந்தது. மற்றைய இயக்கங்களைப் போல தமிழகத்தைப் பின்தளமாக உபயோகிக்கக் கூடாது என்றும் ஈழ நிலத்திலிருந்தே தங்களது இயக்கத்தை வளர்த்தெடுக்க வேண்டும் என்றும் அவர்கள் ஒவ்வொரு மாதமும் மத்திய குழுவில் தீர்மானம் போடுவார்கள். என்னதான் ஆறுபேர்களை மட்டுமே கொண்ட குட்டி இயக்கமானாலும், தமிழீழத்திற்காகச் சரியான பாதையில் போராடும் சித்தாந்தப் பலமுள்ள இயக்கம் தமது ரோஸ்டி இயக்கம் மட்டுமே என்பதில் அவர்களிற்கு பலத்த நம்பிக்கையிருந்தது. மற்றைய இயக்கங்களிற்கு சளைக்காத வகையில் ரோஸ்டி இயக்கமும் அவ்வப்போது அறைகூவல் அறிக்கைகளை வெளியிட்டு வந்தது. மற்றைய இயக்கங்களை சித்தாந்த விவாதத்திற்கும் அழைத்தது. மற்றைய இயக்கங்கள் நடத்தும் இராணுவத் தாக்குதல்கள் தோல்வியுற்றால் அவை இராணுவரீதியாக எவ்வாறு தோல்வியாக அமைந்தன என ரோஸ்டி இயக்கம் ஆராய்ச்சி செய்து துண்டுப் பிரசுரம் வெளியிட்டது. துண்டுப் பிரசுரத்தின் கடைசியில் ‘புரட்சிகர ரோஸ்டி இயக்கத்தின் மக்கள் படை, இராணுவத் தாக்குதல்களைத் தொடங்கும்போது அது வெற்றிகரமான இராணுவச் சாதனைகளைச் செய்யும்’ என்றும் மறக்காமல் குறிப்பிடுவார்கள். ஆனாலும் மக்களது ஆதரவு துப்பரவாக ரோஸ்டி இயக்கத்தினருக்குக் கிடைக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். ரோஸ்டி இயக்கத்தினர் சாப்பாட்டிற்குக் கூடக் கஸ்டப்பட்டார்கள். யாழ் நகரத்திலிருந்து எட்டுக் கிலோமீற்றர்கள் தொலைவிலுள்ள ஒரு சிற்றூரில் ரோஸ்டி இயக்கத்தினர் முகாமிட்டிருந்தனர். உயர்ந்த மதில்களால் சூழப்பட்ட பாழடைந்த பெரிய கல்வீடொன்றுதான் முகாம். அந்த வீட்டின் சொந்தக்காரர்கள் அமெரிக்காவில் இருந்தார்கள். எனவே எந்தவிதக் குற்றவுணர்வுமின்றி அந்த வீட்டை ரோஸ்டி இயக்கத்தினர் கையகப்படுத்திக்கொண்டார்கள். அந்த ஊரில் ஒரு சிறிய கடைவீதியும் நான்கு பெட்டிக் கடைகளுமிருந்தன. சனங்கள் எப்போது பார்த்தாலும் அந்தக் கடைத் தெருவில் கூடிநின்று அரசியல் பேசிக்கொண்டிருந்தார்கள். அங்கேயிருந்த கடைகளில் ரோஸ்டி இயக்கம் வரி வசூலித்தது. வியாபாரிகள் பல இயக்கங்களுக்கும் வரி செலுத்த வேண்டியிருந்ததால் ரோஸ்டி இயக்கத்தினருக்கு மிகக் குறைவான பங்கே கிடைத்தது என்றுதான் சொல்ல வேண்டும். எனினும் அவர்கள் அரைப் பட்டினி கிடந்தும், ஒருவருக்கு ஒருநாளைக்கு நான்கு சிகரட்டுகள் மட்டுமே என்ற சுய கட்டுப்பாட்டை விதித்துக்கொண்டும் கடைத்தெருவில் கிடைக்கும் இரண்டு ரூபா, அய்ந்து ரூபா வரிகளிலிருந்து சிறுகச் சிறுகச் சேமித்து வந்தார்கள். அந்தப் பணத்தில் ஒரு புரட்சிகர அரசியல் பத்திரிகையைத் தொடங்குவது அவர்களது திட்டமாயிருந்தது. அந்த வகையில் இப்போது ரோஸ்டி இயக்கத்தினரிடம் இரண்டாயிரம் ரூபாய்கள் சேமிப்பு இருந்தது. ஒருநாள் மாலையில் அவர்கள் கடைத்தெருவில் வரி வசூலித்துக்கொண்டிருக்கையில் சனங்கள் கையும் களவுமாக மாட்டிக்கொண்ட ஒரு திருடனைப் பிடித்துவைத்து உதைப்பதைக் கண்டார்கள். அந்தத் திருடன் உயரமான, வாட்டசாட்டமான தோற்றத்தைக் கொண்டவன். பனைமரத்தைப் போல நிறமுடையவன். அவனுக்கு முழிக் கண்கள். அவை சிவந்திருந்தன. வெள்ளைச் சாரமும் ஊதா நிறத்தில் சட்டையும் அணிந்திருந்தான். எவ்வளவுதான் அடித்தாலும் அந்தத் திருடன் அசையாமலும் ஒரு சொல் பேசாமலும் நின்றிருந்தான். ரோஸ்டி இயக்கத்தினர் தலையிட்டு அந்தத் திருடனை மக்களிடமிருந்து விடுவித்தனர். அவனது சட்டையைக் கழற்றி அதனால் அவனது கண்களைக் கட்டினர். ஒரு கடையில் சணற்கயிறு வாங்கி அதனால் அவனது கைகளைப் பின்புறமாகக் கட்டினர். உண்மையில் அந்தக் கடைத்தெரு மக்கள் அன்றுதான் ரோஸ்டி இயக்கத்தினர் ஒரு நடவடிக்கையில் ஈடுபடுவதை முதற் தடவையாகக் கண்டனர். இதனால் ரோஸ்டி இயக்கத்தினருக்கு சனங்களிடம் சற்றுச் செல்வாக்கு உயர்ந்திருப்பது அடுத்தநாள் வரி வசூலிக்கச் சென்றபோது தெரிந்தது. ரோஸ்டி இயக்கத்தினர் மேலதிக விசாரணைகளிற்காக அந்தத் திருடனை வீதியால் நடத்தி தங்களது முகாமை நோக்கி அழைத்துச் சென்றனர். அப்போது பெரிய இயக்கம் பச்சை நிற வண்டியில் அங்கு வந்தது. அந்த இயக்கத்தின் பொறுப்பாளன் “என்ன பிரச்சின?” என்று கேட்டான். அதற்கு ரோஸ்டி இயக்கத்தில் ஒருவன் “தோழர் இந்த பிரச்சினைய நாங்க பொறுப்பெடுத்திருக்கிறம், நாங்கள் பார்த்துக்கொள்ளுறம்” என்று விறைப்பாகச் சொன்னான். முகாமுக்கு அழைத்து வரப்பட்டதும் மத்திய குழுவுக்கு மத்தியில் தரையில் திருடன் உட்கார வைக்கப்பட்டான். அவனிடம் கேள்வி மேல் கேள்வி கேட்டு விசாரணை நடத்தப்பட்டது. முழு விசாரணையும் குறிப்பேட்டில் பதிவு செய்யப்பட்டது. அந்தத் திருடன் கண்டியைச் சேர்ந்தவன் என்பது தெரிய வந்தது. அவனுடைய பெயர் காந்திராஜன். ரோஸ்டி இயக்கத்தினருக்கு முதலில் அந்தப் பெயரே பிடிக்கவில்லை. எனவே அவர்கள் அந்தத் திருடனை அவனது ஊர்ப் பெயரைக் குறிப்பிட்டு ‘கண்டி’ என்று அழைத்தார்கள். அவ்வாறே விசாரணைக் குறிப்பேட்டிலும் பதிவு செய்தார்கள். கடைத் தெருவில் அவ்வளவு அடி வாங்கியும் வாயே திறவாத காந்திராஜன் இங்கே மத்திய குழு முன்னிலையில் தாராளமாகப் பேசினான். அவனுக்கு ரோஸ்டி இயக்கத்தினரின் கட்டுப்பாடும் நாகரிகமான விசாரணை நடைமுறைகளும் பிடித்திருந்தன. அவனைச் சூழவரயிருந்து அவனது கதைகளை ரோஸ்டி இயக்கத்தினர் வாய் பிளந்தவாறு கேட்டுக்கொண்டிருந்தனர். சிவகங்கைச் சீமையிலிருந்து சிலோனுக்குப் பஞ்சம் பிழைக்க வந்தவர்களின் வம்சாவழியில் கண்டியிலுள்ள ஒரு தோட்டத்தில் பிறந்த காந்திராஜன், தனது பத்து வயதில் யாழ்ப்பாணத்தில் ஒரு வீட்டுக்கு வேலைக்காரனாகக் கொண்டுவரப்பட்டான். இதிலொரு ஆச்சரியம் என்னவென்றால் அவனை வேலைக்கு வைத்திருந்த வீட்டுக்காரர்களும் அவனைக் ‘கண்டி’ என்றே அழைத்தார்களாம். காந்திராஜன் தனது பதினைந்தாவது வயதில் எசமானி அம்மாவின் மண்டையில் கல்லைத் தூக்கிப் போட்டுவிட்டு கொஞ்சப் பணத்தையும் திருடிக்கொண்டு கண்டிக்கு ஓடியதிலிருந்து அவனது குற்ற வரலாறு ஆரம்பிக்கிறது. அதற்குப் பிறகு அவன் கொழும்பு, காலி, வவுனியா என்று போகாத ஊரில்லை. செய்யாத குழப்படியில்லை. போடாத சண்டையில்லை. படுக்காத பரத்தையரில்லை. பொலிஸிடம் வாங்காத அடியில்லை.போகாத மறியல் வீடு இல்லை. கடைசியாக அவன், கண்டியிலிருந்த சில்லறைப் போதைப்பொருள் வியாபாரியான குடு பாஸிடம் அடியாளாக இருந்திருக்கிறான். கண்டி ரயில் நிலையத்திற்குப் பின்புறம் போதைப்பொருள் சில்லறை விற்பனை நடக்கும்போது அங்கே அவன் நின்றிருப்பான். பொலிஸ் வருகிறதா, போதைப் பொருள் தடுப்பு நார்க்கொட்டிக் பிரிவினர் மாறுவேடத்தில் அங்கு நடமாடுகிறார்களா என்பதைக் கண்காணிப்பதுதான் அவனது வேலை. குடு பாஸின் ஆட்களிற்கும் இன்னொரு போதைப் பொருள் வியாபாரியான சிவம் நானாவின் ஆட்களிற்கும் இடையில் மோதல் எற்படும் போதெல்லாம் குடு பாஸின் தரப்பில் முதல் ஆளாக அடிதடியில் காந்திராஜன்தான் குதிப்பான். ஒரே அடியில் ஒருவனைச் சாய்க்கும் அளவுக்கு அவனுக்கு உடல் வலிமையிருந்தது. கண்டியிலும் ஒரு சிறிய புரட்சிகரக் கட்சியிருந்தது. அந்தக் கட்சிக்கு ஒரு சிறிய யூனியனுமிருந்தது. அந்த யூனியனுக்கு லீடராக ரணசிறி என்பவன் இருந்தான். அவனைச் சற்று மிரட்டி வைக்குமாறு குடு பாஸிடம் தனபாலசிங்கம் முதலாளி சொல்ல, யூனியன் லீடரை மிரட்டுவதற்கு குடு பாஸ் காந்திராஜனை அனுப்பிவைத்தான். காந்திராஜனும் தட்டத் தனியனாக யூனியன் லீடரின் வீட்டுக்குப் போய் கொன்று விடுவதாக மிரட்டிவிட்டு வந்தான். அப்படி அவன் கொலை மிரட்டல் விடுத்ததற்குப் பல சாட்சிகளுமிருந்தன. இரண்டாம் நாள் இரவே கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட யூனியன் லீடர் ரணசிறியின் உடல் தெருவில் கிடந்தது. யூனியன் லீடரைத் தான் கொல்லவில்லை என்று குடு பாஸிடம் காந்திராஜன் எவ்வளவோ சொல்லிப் பார்த்தான். குடு பாஸ் கெட்ட கெட்ட வார்த்தைகளால் காந்திராஜனைத் திட்டினான். பின்பு குடு பாஸ் தலைமறைவாகிவிட்டான். காவற்துறை காந்திராஜனைத் தீவிரமாகத் தேடத் தொடங்கியது. காந்திராஜன் யாழ்ப்பாணத்திற்கு ஓடி வந்துவிட்டான். யாழ்ப்பாணத்தில் இலங்கைக் காவற்துறையின் அதிகாரம் செல்லாது. காவற்துறை இயக்கங்களிற்குப் பயந்து யாழ்ப்பாணத்திலிருந்த காவல் நிலையங்களை மூடிக்கொண்டிருந்த காலமது. மிகச்சில இடங்களில் மட்டும் புலனாய்வுத்துறை அதிகாரிகளின் நடமாட்டம் இருந்தது. அவர்களும் அவ்வப்போது இயக்கங்களால் சுட்டுக் கொல்லப்பட்டுக்கொண்டிருந்தார்கள். இப்போது காந்திராஜன் யாழ்ப்பாணத்தில் சிறு சிறு திருட்டுகள் செய்து காலத்தை ஓட்டிக்கொண்டிருக்கிறானாம். காந்திராஜனின் ஒப்புதல் வாக்குமூலம் முழுவதையும் ரோஸ்டி இயக்கத்தினர் எழுத்தெழுத்தாகப் பதிவு செய்துகொண்டனர். அந்த முகாம் வீடிருந்த காணிக்குள் பின்பக்க மதிற் சுவரையொட்டி தனியாக ஓர் அறை இருந்தது. வேலைக்காரர்கள் தங்குவதற்காக அந்த அறை கட்டப்பட்டிருக்கலாம். அந்த அறைக்குள் காந்திராஜனைச் சிறைவைத்து அறைக்கு வெளியே காவலுக்காக தனது ஓர் உறுப்பினரையும் ரோஸ்டி இயக்கம் நிறுத்தி வைத்துவிட்டு, அந்த இரவில் ரோஸ்டி இயக்கத்தின் மிகுதி அய்ந்து பேர்களும் காந்திராஜனின் ஒப்புதல் வாக்குமூலத்தை ஆராய்ந்து விவாதித்தார்கள். வன்முறை, திருட்டு, அடிதடி, கட்டற்ற பாலுறவுகள், போதைப்பொருள் வியாபாரம், திட்டமிட்ட கொலை எனப் பல குற்றங்கள் காந்திராஜனுக்கு எதிராகவே இருந்தன. அவனொரு லும்பன் – சமுகவிரோதி என்பதில் ரோஸ்டி இயக்கத்தினருக்குச் சந்தேகமே இருக்கவில்லை. எனவே அன்றிருந்த இயக்க வழமைகளின்படி ரோஸ்டி இயக்கம் காந்திராஜனுக்கு மரணதண்டனையைத் தீர்ப்பளித்தது. அவனை கடைத் தெருவிலுள்ள விளக்குக் கம்பத்தில் கட்டி வைத்துச் சுட்டுக்கொல்வதாக முடிவெடுக்கப்பட்டது. இந்தத் தீர்ப்பை அவர்கள் காந்திராஜனுக்குச் சொன்னபோது அவன் " இது ஞாயமில்லைங்க சாமி, செய்யாத கொலைக்கு தண்டனை கொடுக்கலாமுங்களா" எனக் கேட்டான். எனினும் அவனுக்கு மரணதண்டனை வழங்கும் ரோஸ்டி இயக்கத்தின் முடிவில் மறுபரிசீலனைக்கு இடமே இருக்கவில்லை. பொதுவாக அவர்கள் ஒரு முடிவை எடுப்பதற்கு முன்பு தீர அலசி ஆராய்வார்கள். முடிவை எடுத்துவிட்டால் அந்த முடிவில் உறுதியாக இருப்பார்கள். ஆனால் மரணதண்டனையை நிறைவேற்றுவதில் ஒரு சிக்கலிருந்தது. காந்திராஜனைச் சுட்டுக் கொல்வதற்கு ரோஸ்டி இயக்கத்தினரிடம் துப்பாக்கியே இல்லை. எனவே ஆயுதப் புழக்கமுள்ள இன்னொரு இயக்கத்திடம் உதவி கேட்பதென்று அவர்கள் தீர்மானித்தார்கள். அவர்கள் அந்த இயக்கத்திடம் ஒரு துப்பாக்கியை ஒருநாள் வாடகையாகவும் அதற்கான இரண்டு சன்னங்களை விலையாகவும் பெறுவதற்கு எவ்வளவு செலவாகும் எனக் கேட்டு ஆளனுப்பினார்கள். அதற்கு மற்ற இயக்கமோ துப்பாக்கியை வாடகைக்குத் தர முடியாதென்றும் வேண்டுமானால் துப்பாக்கியோடு தங்களது தேர்ச்சி பெற்ற உறுப்பினர் ஒருவர் வந்து கச்சிதமாகக் காரியத்தை முடித்து வைப்பாரென்றும் அதற்கான கட்டணமாகப் பத்தாயிரம் ரூபாய்களைத் தாங்கள் அறவிடுவார்களென்றும் சொல்லி அனுப்பினார்கள். இதைக் கேட்டதும் ரோஸ்டி இயக்கத்தினர் அதிர்ந்து போய்விட்டனர். இந்தக் கண்டிக் கொலைகாரனுக்காக நாங்கள் பத்தாயிரம் ரூபாய் செலவு செய்வதா? முதலில் பத்தாயிரம் ரூபா நம்மிடம் எங்கேயிருக்கிறது? குறைந்த செலவில் காரியத்தை முடிக்க முடியாதா என்றெல்லாம் அவர்கள் புலம்பிக்கொண்டே விவாதித்தனர். தாங்கள் முதலில் உதவி கேட்டு அணுகிய இயக்கம் ஒரு முதலாளித்துவச் சிந்தனையுள்ள இயக்கம் என்பதால்தான் அவர்கள் அதிகமாகப் பணம் கேட்பதோடு, பொதுவாகவே ரோஸ்டி இயக்கத்தை அவர்கள் மதிப்பதுமில்லை என்றெல்லாம் ரோஸ்டி இயக்கத்தினர் பேசிக்கொண்டார்கள். எனவே இடதுசாரிச் சித்தனையுள்ள ஓர் இயக்கத்திடம் நாம் உதவி கேட்கலாம். அவர்களிடம் நமது பேச்சுக்கு மதிப்பிருக்கும் என்று ரோஸ்டியின் மத்திய குழு தீர்மானித்தது. அதன்படி அவர்கள் ஆயுதப் புழக்கமுள்ள இடதுசாரி இயக்கமொன்றிடம் உதவி கேட்டார்கள். குறிப்பிட்ட இடதுசாரி இயக்கம் துப்பாக்கியோடு தோழர் ஒருவரை அனுப்பிவைப்பதென்றால் அய்ந்தாயிரம் ரூபாய்கள் செலவாகுமென்று சொன்னார்கள். தனியே துப்பாக்கியை மட்டும் வாடகைக்குக் கொடுப்பதென்றால் வாடகை மூவாயிரம், வைப்புப் பணம் ஆறாயிரம் என்றார்கள். அதுவும் ரோஸ்டி இயக்கத்தினருக்குக் கட்டுப்படியாகாது. நமது மோசமான பொருளாதாரச் சூழ்நிலையில் இந்தக் கண்டிக் கொலைகாரனுக்காக நாங்கள் இவ்வளவு பணம் செலவு செய்வதா? அவ்வளவு பணமிருந்தால் நாங்கள் தங்கமாக நமது பத்திரிகையை ஆரம்பிக்கலாமே என்றவாறெல்லாம் அவர்கள் சிந்தித்தார்கள். எவ்வாறு தங்களிற்குக் கட்டுப்படியாகும் வண்ணம் குறைந்த செலவில் மரணதண்டனையை நிறைவேற்றலாம் என அவர்கள் மறுபடியும் நுணுக்கமாக ஆராய்ந்தார்கள். இந்தத் துப்பாக்கி எடுப்புச் சாய்ப்பில்லாமல் வேறு வழியில் மரணதண்டனையை நிறைவேற்றினால் என்னவென்று அவர்கள் யோசனை செய்தார்கள். கத்தியால் வெட்டிக் கொல்லலாமா? என்றொரு யோசனையை ஒருவன் முன்வைத்தபோது அது மனிதாபிமானமற்ற காட்டுமிராண்டி கால வழமை என மத்திய குழுவில் பெரும்பான்மை ஆட்சேபித்தது. கைதியை அடித்தே கொல்வதற்கு இயக்க உறுப்பினர்கள் யாருக்கும் மனத் தைரியமில்லை என்பதைவிட அடித்தால் சாகுமளவிற்கு காந்திராஜன் பலவீனனாகத் தெரியவில்லை. அவன் உருக்கைப் போன்ற உடல்வாகு கொண்டவன். நஞ்சூட்டிக் கொல்லலாம் என்ற யோசனையும் மத்திய குழுவின் பெரும்பான்மையால் நிராகரிக்கப்பட்டது. அது சதிகாரர்களின் பாணி. ஒரு புரட்சிகர இயக்கம் ஒருபோதும் அதைச் செய்யலாகாது. கடைசியில், நாமே சொந்தமாக இரண்டாம் கையோ ஓட்டை ஒடிசலோ ஒரு மலிவு விலைத் துப்பாக்கியை வாங்கி வந்து அதனால் காந்திராஜனின் கதையை முடித்துவிடுவது என்று மத்திய குழு உறுதியான முடிவுக்கு வந்தது. விசாரித்துப் பார்த்ததில் என்னதான் பண்டாரவன்னியன் காலத்துப் பழைய துப்பாக்கியாக இருந்தாலும் நான்காயிரம் ரூபாய்களுக்குக் குறைய விலைக்குக் கிடைக்காது என்பது தெரிந்தது. அவ்வளவு பணத்திற்கு ரோஸ்டி இயக்கத்தினர் எங்கே போவார்கள்! அந்தச் சிறிய கடைத்தெருவில் வாங்கும் வரியைப் பட்டினியாகக் கிடந்து அப்படியே சேர்த்து வைத்தாலும் நான்காயிரம் ரூபாய்களைச் சேர்க்க இரண்டு வருடங்களாகுமே. அதுவரை இந்தக் கண்டிக் கொலைகாரனைக் கட்டி அவிழ்க்க முடியுமா. சிறை வைக்கப்படும் கைதிக்கு மூன்று வேளை உணவும் இரண்டுவேளை தேநீரும் வழங்க வேண்டுமென்பது ரோஸ்டி இயக்கத்தின் சட்ட விதிகளிலொன்று. கிழமைக்கு ஒருமுறை எண்ணைக் குளிப்புமுண்டு. கைதிக்கு நாளொன்றுக்கு நான்கு சிகரெட்டுகள் முதலில் வழங்கப்பட்டன. பின்பு கைதியின் கோரிக்கையை ஏற்று சிகரெட்டுகளிற்குப் பதிலாக ஒரு கட்டு பீடிகள் நாள்தோறும் கைதிக்கு வழங்கப்பட்டன. முகாமில் சமைக்கப்படும் உணவு, காந்திராஜன் சிறைவைக்கப்பட்டிருந்த அறைக்கு நேரம் தவறாமல் போய்க்கொண்டிருந்தது. இந்த ஒரு மாதத்திற்குள் உட்கார்ந்த இடத்திலிருந்தே நன்றாக மூன்று வேளையும் சாப்பிட்டதில் காந்திராஜன் ஒரு சுற்றுப் பெருத்தேவிட்டான். அவனது மேனியில் ஒருவகையான மினுமினுப்பும் வந்தது. அவன் சுகமாகத் தூங்கிக் கழித்தும் தூங்காத நேரங்களில் ஆனந்தமாகப் புகை பிடித்துக்கொண்டும் குஷாலாக இருந்தான். ஒரு மாத முடிவில் மத்திய குழு கணக்கு வழக்குப் பார்த்தபோது கைதியைப் பராமரிக்க மட்டும் ஆயிரத்துச் சொச்சம் ரூபாய்கள் செலவாகியிருப்பது தெரியவர மத்திய குழு கதிகலங்கிப் போய்விட்டது. இந்த இழப்பை எப்படி ஈடுகட்டுவதென்றும், எப்படி மிகக் குறைந்த செலவில் கைதியைப் பராமரிப்பதென்றும் அவர்கள் மீண்டும் மண்டையைப் போட்டுக் குழப்பிக்கொண்டார்கள். எங்கேயிருந்தோ வந்த கண்டிக் கொலைகாரன் நமது மக்களின் வரிப்பணத்தைச் சாப்பிட்டுக் கொழுப்பதா என்று மத்திய குழு குமுறியது. பேசாமல் கைதியை விடுதலை செய்துவிடலாமென்று கூட யோசித்தார்கள். ஆனால் சமூகவிரோதி ஒருவன்மீது விதிக்கப்பட்ட மரணதண்டனையை தகுந்த காரணமில்லாமல் விலக்கிக்கொள்வது கொள்கைப் பிறழ்வு என்றபடியால் மத்திய குழு கொஞ்சம் தயங்கியது. அப்போது ஓர் உறுப்பினன் ஒரு நல்ல ஆலோசனையை முன்மொழிந்தான். “இப்ப, நாங்கள் ஆள் மாறி ஆள் இரவு பகலாக் கைதிக்கு காவல் நிக்கிறம். இனி அவனுக்கு காவல் போடத் தேவையில்ல” " காவல் இல்லாட்டி அவன் தப்பி ஓடிப் போயிருவானே" “ஓடிப் போகட்டும்! அதோட எங்களப் பிடிச்ச சனியன் துலையட்டும்..அவன் ஓடினால் எங்களுக்கு என்ன நட்டம்? இயக்கத்துக்கு செலவு மிச்சம்தானே.” அடுத்த நாளிலிருந்து காந்திராஜனின் அறைக்கு முன்னால் போடப்பட்டிருந்த காவல் விலக்கப்பட்டிருந்தது. கதவும் திறந்து விடப்பட்டிருந்தது. சாப்பாட்டு நேரமாகியும் சாப்பாடு வராததால் காந்திராஜன் சத்தம் போட்டுக் கூப்பிட்டான். யாரும் வருவதாகத் தெரியவில்லை. காந்திராஜனுக்குப் பசி பொறுக்க முடியவில்லை. அவன், சிறைவைக்கப்பட்டிருந்த அறையிலிருந்து மெதுவாக வெளியே வந்து சுற்று முற்றும் பார்த்துவிட்டு முகாமுக்கு நடந்துபோய் உணவு கேட்டான். உணவு கிடைத்ததும் அதை எடுத்துக்கொண்டு வந்து மீண்டும் சிறை அறைக்குள் புகுந்து சாப்பிட்டுவிட்டுப் படுத்துக்கொண்டான். அடுத்துவந்த நாட்களில் இந்நிகழ்ச்சி தவறாமல் நிகழ்ந்தது. மூன்று வேளையும் முகாமுக்குப் போய் சாப்பாட்டையும் தேனீரையும் பீடிக் கட்டுகளையும் பெற்றுக்கொண்டு கைதி மறுபடியும் வந்து சிறைக்குள் புகுந்துகொண்டு சுகமாகக் காலத்தைக் கழித்தான். அவனுக்குத் தப்பித்துச் செல்லும் நோக்கமே இருப்பதாகத் தெரியவில்லை. “இந்தச் சனியனை எத்தனை நாள்தான் கட்டிக்கொண்டு மாரடிப்பது” என மத்திய குழுவிற்குள் அபிப்பிராய பேதங்கள் கிளம்பலாயின. காவலை விலக்கிக்கொள்ள ஆலோசனை சொன்ன உறுப்பினனே இம்முறையும் இந்தப் பிரச்சினையைக் கையாளும் பொறுப்பை ஏற்றுக்கொண்டான். “நாங்கள் அவனாய் ஓடிப்போவானெண்டு பார்த்துக்கொண்டிருந்தால் அது நடவாது, என்னமும் தந்திரம் செய்துதான் அவனைக் கிளப்ப வேணும்” என்றான் அவன். அவன் சும்மா பராக்குப் பார்ப்பது போல கைதி சிறைவைக்கப்பட்டிருந்த அறையை நோக்கிச் சென்றான். அறைக்குள் சம்மணம் கட்டி வசதியாக உட்கார்ந்திருந்து கைதி இன்பமாக பீடி புகைத்துக்கொண்டிருந்தான். ரோஸ்டி உறுப்பினன் வருவதைக் கண்டதும் கைதி புகைத்துக்கொண்டிருந்த பீடியை தரையில் தேய்த்து அணைத்து, துண்டு பீடியைக் காதுக்குள் செருகிவிட்டு மரியாதை நிமித்தம் எழுந்து நின்றுகொண்டான். வந்தவன் கைதியிடம் மெதுவாகப் பேச்சுக் கொடுத்தான். “என்னடாப்பா உன்ர முகம் இண்டைக்கு சரியா வாடிக் கிடக்கு, பொஞ்சாதி பிள்ளையள நினைக்கிறாய் போல” “அதுங்க கெடக்குது சாமி கழுதைங்க” “என்னடாப்பா இப்பிடிச் சொல்லுறாய் ..உன்னைக் காணாமல் அதுகள் தவிச்சுப் போய்க் கிடக்குங்கள்” " நா அங்கிட்டு இருந்தேன்னா அதுங்களுக்கு செரமம் தான் பாருங்க..இப்பதான் அதுங்க நிம்மதியா கெடக்குங்க" “எனக்கென்னவோ உன்னைப் பார்க்க பெரிய பாவமாக் கிடக்கு..நீ இப்பிடிச் சொன்னாலும் உன்ர உள் மனதில பொஞ்சாதி பிள்ளையளப் பார்க்க வேணுமெண்டு ஆசை கிடக்கும்தானே. இப்பதான் இஞ்ச உனக்கு காவல் ஒண்டும் இல்லையே. நீ வேணுமெண்டால் ஓடிப் போ. பஸ்சுக்கு காசு வேணுமெண்டால் நான் தாறன். எங்கிட தோழர்மார் உன்னைத் தேடாமல் நான் சொல்லிச் சமாளிக்கிறன்.” எழுந்து நின்ற கைதி மறுபடியும் சம்மணம் போட்டு சிறை அறையின் நடுவாக உட்கார்ந்துகொண்டான். பின்பு அவன் பீடியைப் பற்ற வைத்துக்கொண்டு பேசினான். “அது தப்புங்க சாமி.. என்னைய நீங்க எவ்வளவு நம்பியிருந்தா காவலை எடுத்திருப்பீங்க. நான் துரோகஞ் செய்யலாங்களா.” “இதுல ஒரு துரோகமுமில்ல கண்டி, நீ ஓடினால் நாங்கள் கவலைப்படமாட்டம்” “நா எங்கிட்டு சாமி ஓடிப்போவ முடியும்? நீங்க நமக்கு தூக்குத் தண்டன கொடுத்திருக்கீங்கன்னு ஊரு ஒலகம் பூராவும் தெரிஞ்சுபோச்சு. இனி யாரு எனக்கு வேல கொடுப்பாங்க? நான் எப்பிடி பொழைப்பேன் சொல்லுங்க?” ரோஸ்டி உறுப்பினனுக்கு வெறுத்துப் போய்விட்டது. அவன் திரும்பி நடந்தான். அப்போது கைதி கூப்பிட்டுச் சொன்னான்: “சாமி காம்பரா கதவ மூடிட்டுப் போயிடுங்க” கைதிக்கு அங்கிருந்து வெளியேறும் எண்ணம் கிடையவே கிடையாது என்பது மத்திய குழுவுக்குத் தெளிவாகிவிட்டது. அவர்கள் மீண்டும் தங்களது மண்டைகளைக் கசக்கிப் பிழிந்து ஒரு முடிவுக்கு வந்தார்கள். எப்பாடு பட்டாவது எவன் தலையை அடகு வைத்தாவது உடனடியாக ஒரு துப்பாக்கியை வாங்கி அதனால் கைதிக்கு மரணதண்டனையை நிறைவேற்றிவிட்டுத்தான் மறுவேலை பார்ப்பது என்பதுதான் அந்த முடிவு. அந்தக் காலத்தில் இயக்கங்கள் பரவலாக வங்கிக் கொள்ளைகளை நடத்திவந்தன. எனவே ரோஸ்டி இயக்கமும் ஒரு வங்கியைக் கொள்ளையிட்டு கொள்ளைப் பணத்தில் முதல் வேலையாக துப்பாக்கி ஒன்று வாங்கி கைதியைப் போட்டுத் தள்ளிவிடுவது என்று முடிவு செய்தது. கொள்ளையிடுவதற்காக ஒரு சிறிய கிராமிய வங்கி இலக்குவைக்கப்பட்டு திட்டங்கள் செம்மையாக வகுக்கப்பட்டன. திட்ட வரைபடங்கள் தயாரிக்கப்பட்டன. அந்தக் கிராமிய வங்கியில் ஒரேயொரு காவலாளி மட்டுமே இருக்கிறான். காலை பத்துமணிக்கு முன்பு அந்த வங்கியிலும் அந்த வங்கியிருக்கும் தெருவிலும் பெரிதாக ஆள்நடமாட்டம் இருக்காது. அந்த வங்கியின் கம்பிக் கதவு எப்போதும் மூடப்பட்டுத்தானிருக்கும். கம்பிக் கதவுக்குப் பின்னால் நீண்ட கழியொன்றை கையில் வைத்துக்கொண்டு காவலாளி நின்றிருப்பான். அவன் வங்கிக்கு வருபவர்களை விசாரித்துவிட்டு கதவைத் திறந்து ஒருவரை மட்டும் உள்ளே அனுமதித்துவிட்டு மறுபடியும் கதவை மூடிக்கொள்வான். உள்ளே போனவர் திரும்பிய பிறகுதான் அடுத்தவரை வங்கிக்குள் நுழைய காவலாளி அனுமதிப்பான். ரோஸ்டி இயக்கத்தினர் சிவில் உடைகள் அணிந்த புலனாய்வுத் துறையினர் என்ற தோரணையில் காலை ஒன்பது மணிக்கு ஒரு காரில் அந்த வங்கிக்குச் செல்ல வேண்டும். ‘வங்கியில் வேலை செய்பவர்களில் ஒருவர் பயங்கரவாதச் சந்தேகநபர், அவரைக் கைது செய்ய வந்திருக்கிறோம்’ என்று சொல்லி வங்கிக்குள் நுழைந்து கொள்ளையடிக்க வேண்டும். இதுதான் திட்டம். ஆனால் இந்தத் திட்டத்திலிருந்த பிரதான குறைபாடு என்னவெனில் புலனாய்வு அதிகாரியென்றால் சிங்களத்தில் வங்கிக் காவலாளியிடம் பேசினால்தான் காவலாளி ஏமாறுவான். ஆனால் ரோஸ்டி இயக்க உறுப்பினர்கள் யாருக்குமே சிங்களம் பேசத் தெரியாது. மத்திய குழு ஒருநாள் முழுவதும் கடுமையாக விவாதித்த பின்பு தங்களது கொள்ளைத் திட்டத்தில் ஒருவனாக கைதி காந்திராஜனையும் சேர்த்துக்கொள்ள முடிவெடுத்தது. ஏனெனில் காந்திராஜனுக்கு சுத்த சிங்களம் பேசத் தெரியும். தவிரவும் அவனது உயரத்தையும் உடற்கட்டையும் பார்க்கும் எவருக்கும் அவனைப் புலனாய்வு அதிகாரி என நம்புவதில் பிரச்சினையிருக்காது. அவனது தோற்றப் பொலிவுக்கு முன்னால், பசியாலும் பஞ்சத்தாலும் அடிபட்டிருக்கும் ரோஸ்டி இயக்க உறுப்பினர்கள் ஏப்ப சாப்பைகளாகவே தெரிந்தனர். சம்பவம் நடத்தப்பட்ட அன்று ஒரு வாடகைக் காரைக் கடத்திக்கொண்டு ரோஸ்டி இயக்கத்தினர் அந்தக் கிராமிய வங்கிக்குச் சென்றனர். மிடுக்கான உடையணிந்திருந்த காந்திராஜன் முன்னே செல்ல மூன்று ரோஸ்டி உறுப்பினர்கள் பின்னால் சென்றார்கள். ஒருவன் காரிலேயே சாரதி இருக்கையில் தயாராக உட்கார்ந்திருந்தான். காந்திராஜன் தனது வாழ்நாளில் எத்தனை விசாரணைகளையும் விசாரணை அதிகாரிகளையும் பார்த்திருப்பான்! எனவே அவன் கச்சிதமாக ஒரு பெரிய புலனாய்வு அதிகாரியைப் போல பிசிறில்லாமல் பாவனை செய்தான். வங்கியை நெருங்கும்போதுதான் தெரிந்தது, அந்த வங்கிக் காவலாளி துப்பாக்கி வைத்திருக்கிறான். காந்திராஜனுக்குப் பின்னால் சென்ற ரோஸ்டி உறுப்பினர்கள் தடுமாறினார்கள். அவர்களது கால்கள் பின்னிக்கொண்டன. திரும்பி ஓடிவிடலாமா என்பது போல ஆளை ஆள் பார்த்து முழித்தார்கள். அவர்கள் அந்த வங்கியைக் குறித்து சேகரித்து வைத்திருந்த தரவுகள் துல்லியமானவைதான். அங்கிருந்த காவலாளி நேற்றுவரை துப்பாக்கியில்லாமல் கையில் வெறும் கழிதான் வைத்திருந்தான். ஆனால் வடபகுதியில் வங்கிக் கொள்ளைகள் அதிகமும் நடப்பதால் அரசாங்கம் நேற்று முதல் கிராமிய வங்கிக் காவலாளிகளிற்கும் ஒப்புக்கு ஒரு பழைய ‘ரிப்பீட்டர்’ துப்பாக்கியை வழங்கியிருந்தது அவர்களிற்கு எப்படித் தெரியும். ஆனால் காந்திராஜன் துப்பாக்கியைப் பார்த்த பின்பும் கம்பீரமாக முன்னே நடந்து போனான். அவன் காவலாளி முன்னால் போய்நின்று தனது வலது கையை தனது மார்பு வரை விசுக்கென உயர்த்திய மாத்திரத்திலேயே காவலாளி பதறிப்போய் சல்யூட் செய்தான். காவற்துறை உயரதிகாரிகள் தங்களிலும் கீழான அதிகாரிகளிற்கு காந்திராஜன் செய்ததுபோலத்தான் கையை மார்புவரை மட்டுமே உயர்த்தி சல்யூட் அடிப்பதுபோல அரைகுறையாகப் பாவனை செய்வார்கள். காந்திராஜன் சிங்களத்தில் அதிகாரமாக இரண்டு வார்த்தைகள் பேசியதுமே கம்பிக் கதவு அகலத் திறந்தது. உள்ளே நுழைந்ததுமே, காந்திராஜன் இடது கையால் காவலாளியின் துப்பாக்கியைப் பற்றிப் பிடித்து இழுத்தவாறே வலது கையால் காவலாளியின் கன்னத்தில் ஓங்கி ஓர் அறை கொடுத்தான். காவலாளி தலைசுற்றி மயங்கி விழுந்தான். காந்திராஜன் கைகளில் ஏந்திய துப்பாக்கியுடன் ரோஸ்டி இயக்கத்தினரை உள்ளே வருமாறு அழைத்தான். அவர்கள் குடுகுடுவென்று ஓடி வந்தார்கள். காந்திராஜன் தலைமைதாங்கி துப்பாக்கியை நீட்டியபடியே முன்னே செல்ல ரோஸ்டி உறுப்பினர்கள் பின்னால் போனார்கள். அந்த வங்கியில் ஒரு மயிருமில்லை. துழாவித் தேடிப் பார்த்ததில் நூறு ரூபாய் சொச்சம் மட்டுமே சில்லறையாகச் சிக்கியது. அந்தச் சில்லறைகளைப் பொறுக்கிக்கொண்டு ரோஸ்டி இயக்கம் காரில் தப்பிச் சென்றது. காரின் முன்னிருக்கையில் காந்திராஜன் துப்பாக்கியோடு கம்பீரமாக இருந்தான். ஆள் நடமாட்டமில்லாத கடற்கரையோரமாக வண்டியைக் கைவிட்டுவிட்டு அங்கிருந்து நடந்துபோய் முகாமை அடைந்தார்கள். முகாமுக்குப் போனதும் காந்திராஜன் துப்பாக்கியோடு போய் தனது சிறை அறைக்குள் புகுந்துகொண்டான். பார்த்துக்கொண்டிருந்த ரோஸ்டி இயக்கத்தினருக்கு பகீரென்றது. துப்பாக்கியைக் கவர்ந்து வந்தது காந்திராஜனின் முழு முயற்சியே ஆகும். அதில் ரோஸ்டி இயக்கத்தினருக்கு எந்தப் பங்கும் கிடையாது என்ற உண்மை அவர்களைச் சுட்டது. சொல்லப்போனால் துப்பாக்கியைப் பார்த்ததுமே ரோஸ்டி இயக்கத்தினர் திரும்பி ஓட நினைத்ததுதான் உண்மை. எனவே நியாயப்படி அந்தத் துப்பாக்கிக்கு உரித்துள்ளவன் காந்திராஜன்தான். ஆனால் அந்தச் சமூகவிரோதியின் கையில் துப்பாக்கியிருப்பது சமூகத்திற்கு ஆபத்தானது என ரோஸ்டி இயக்கம் நினைத்தது. தவிரவும் அவனுடைய கையில் துப்பாக்கி இருக்கும்போது இவர்கள் எப்படி நிம்மதியாகத் தூங்க முடியும். நித்திரைப் பாயில் வைத்தே வரிசையாகச் சோலியை முடித்துவிடமாட்டான் என்பது என்ன நிச்சயம். தவிரவும் இப்போது ரோஸ்டி இயக்கத்தினருக்கு அவசரமாக அந்தத் துப்பாக்கி தேவையாகவுமிருந்தது. அந்தத் துப்பாக்கியால்தான் அவர்கள் காந்திராஜனுக்கு மரணதண்டனையை நிறைவேற்ற வேண்டிய நிலையிலிருந்தார்கள். எனவே அந்தத் துப்பாக்கியை காந்திராஜனிடமிருந்து பறிமுதல் செய்வதென மத்திய குழு முடிவெடுத்தது. மத்திய குழுவின் ஆறுபேர்களும் சேர்ந்து எதற்கும் தயாரான நிலையில் சிறை அறையை நோக்கிச் சென்றார்கள். அவர்கள் அங்கே சென்றபோது காந்திராஜன் தரையில் குந்தி உட்கார்ந்துகொண்டு துப்பாக்கியைப் பாகம் பாகமாகப் பிரித்து தரையில் வைத்திருந்தான். " இது மிச்சம் பழைய தோக்கு சாமி. வேலைக்காவாது. கொஞ்சம் எண்ணய கிண்ணய போட்டு ரிப்பேர் பண்ணாத்தான் எதுனாச்சும் செய்யலாம்" " என்ன கண்டி, உனக்கு துவக்கெல்லாம் கழட்டிப் பூட்டத் தெரியுமே?" “ஆ தெரியுங்க சாமி. கூட்டாளிமாரோட வேட்டைக்கு போயிருக்கேன்” மத்திய குழு அமைதியாகத் திரும்பி முகாமுக்கு வந்தது. அந்தத் துப்பாக்கி தரையில் அக்குவேறு சுக்குநூறாகக் கிடந்த கோலத்தைப் பார்த்ததுமே அதைவைத்துச் சுட முடியும் என்ற நம்பிக்கையை மத்திய குழு முற்றிலும் இழந்துவிட்டது. அன்று விடிய விடிய மத்திய குழு நித்திரையில்லாமல் ஆலோசனைக் கூட்டத்தை நடத்திக்கொண்டிருந்தபோது, அதிகாலை நான்கு மணிக்கு மற்றொரு இயக்கத்தால் சுற்றி வளைக்கப்பட்டது. அந்த மற்றைய இயக்கம் ஒரு பெரிய இயக்கம். அந்த இயக்கத்திற்கு தங்களைத் தவிர வேறுயாரும் செயற்படுவது பிடிக்கவே பிடிக்காது. அப்படிச் செயற்படும் இயக்கங்களை தருணம் பார்த்துத் தாக்கி அழிக்க அது திட்டம் போட்டிருந்தது. ரோஸ்டி இயக்கம் ஒரு வங்கியைக் கொள்ளையிட்டதை அந்தப் பெரிய இயக்கத்தால் தாங்கிக்கொள்வே முடியவில்லை. எனவே ரோஸ்டி இயக்கத்தினரை தடைசெய்துவிடுவது என்ற முடிவோடு அவர்கள் ரோஸ்டி இயக்கத்தினரின் முகாமுக்கு வந்திருந்தார்கள். ரோஸ்டி இயக்கத்தினரின் ‘பலம்’ குறித்து அவர்களிற்குத் தெரிந்திருந்ததால் வெறும் நான்கு பேர்கள் மட்டுமே வந்திருந்தார்கள். அவர்களில் இருவர் நவீனரகத் துப்பாக்கிகளை வைத்திருந்தார்கள். அந்த நிலையில்கூட ரோஸ்டி இயக்கத்தினர் பெரிய இயக்கத்தோடு பேச்சுவார்த்தைக்குத் தயாராகத்தான் இருந்தார்கள். ஆனால் பெரிய இயக்கத்தின் பாணியே வேறு. அவர்கள் ரோஸ்டி இயக்க மத்திய குழுவின் ஆடைகளைக் களைந்து அவர்களை வெறும் உள்ளாடைகளோடு சுவரோரமாக முழந்தாள்களில் நிறுத்தி வைத்திருந்தார்கள். தூஷணத்தால் மட்டுமே அவர்கள் ரோஸ்டி இயக்கத்தினரோடு பேசினார்கள். ஒரு ரோஸ்டி உறுப்பினனுக்கு கன்னத்தில் அடியும் விழுந்தது. அப்போது அந்த உறுப்பினன் வலியால் அலறியது அந்த ஊருக்கே கேட்டது. கடைசியாக ரோஸ்டி இயக்கத்தின் மத்திய குழு ஒருமித்த குரலில் ஒன்றைச் சொன்னது: “அண்ணே, எங்களத் தடை செய்யுறதெண்டா தடை செய்யுங்கோ, இப்பிடி மரியாதை கெடுத்தாதேயுங்கோ” இதைக் கேட்டதும் பெரிய இயக்கத்தினர் விழுந்து விழுந்து சிரித்தார்கள். அவர்களிற்கும் இவர்களைப் பார்த்தால் கொஞ்சம் பரிதாபமாகத்தான் இருந்தது. அப்போது இடிமுழக்கம் போல அடுத்தடுத்து இரண்டு சத்தங்கள் அந்த வீட்டை அதிரச் செய்தன. துப்பாக்கிகளை வைத்திருந்த பெரிய இயக்கத்தின் இரண்டு உறுப்பினர்களிற்கும் அடுத்தடுத்து நடு நெற்றியில் வெடி விழுந்தது. அவர்கள் மல்லாக்க விழுந்தார்கள். எங்கிருந்து சூடு வருகிறதென்று தெரியாததால் பெரிய இயக்கத்தின் அடுத்த இரண்டு உறுப்பினர்களும் மின்னலாக இருளிற்குள் மறைந்தார்கள். அவர்களது பயிற்சி அப்படியானது. வீட்டிற்கு வெளியே இருளுக்குள்ளிருந்து சன்னலுக்குள்ளால் குறிபார்த்துச் சுட்ட காந்திராஜன் நீட்டிய துப்பாக்கியுடன் வீட்டுக்குள் நுழைந்தான். இன்னும் சில நிமிடங்களிலேயே பெரிய இயக்கம் வந்து இந்த வீட்டை வேரோடும் வேரடி மண்ணோடும் அழித்துவிடும் என்பது ரோஸ்டி இயக்கத்தினருக்குத் தெரிந்திருந்தது. இந்த நாட்டின் எந்த மூலைக்குச் சென்று ஒளிந்துகொண்டாலும் பெரிய இயக்கம் தேடிப் பிடித்து அவர்களை அழித்தொழித்துவிடும். காந்திராஜன், ரோஸ்டி இயக்கத்தினரை உடைகளை அணியச் சொன்னான். அவர்கள் மறுபேச்சுப் பேசாமல் அவனது சொற்களிற்குக் கீழ்ப்படிந்தனர். கையில் ஏந்திய துப்பாக்கியுடன் அவர்களை அழைத்துக்கொண்டு வீட்டின் பின்புற வழியால் காந்திராஜன் வெளியேறினான். தோட்ட வெளிகளிற்குள்ளால் அவர்கள் புகுந்து ஓடி ஒரு மீனவக் கிராமத்தைச் சென்றடையும்போது நிலம் வெளிக்கத் தொடங்கியிருந்தது. காந்திராஜன் தோளில் தொங்கவிடப்பட்டிருந்த துப்பாக்கியோடு சென்று மீனவர்களிடம் உதவி கேட்டான். தாங்கள் போராளி இயக்கமெனவும் அவசரமாகத் தங்களிற்கு விசைப்படகு தேவையாயிருக்கிறது என்றும் சொன்னான். மீனவர்கள் உற்சாகத்துடன் உதவ முன் வந்தார்கள். உடனடியாக ஓட்டி தயாரானான். அய்ம்பத்தைந்து குதிரை வலுவுடைய இரண்டு இயந்திரங்களோடு விசைப்படகும் தயாரானது. ரோஸ்டி இயக்கத்து மத்திய குழுவையும் காந்திராஜனையும் சுமந்துகொண்டு படகு வேகமாகக் கரையிலிருந்து மறைந்தது. கரை கண்ணுக்கு மறைந்த பின்புதான் ரோஸ்டி இயக்கத்தினருக்கு நெஞ்சுக்குள் கொஞ்சம் தண்ணி வந்தது. விசைப்படகு அலைகளில் குதித்துக் குதித்துப் போய்க்கொண்டிருந்தது. கடல் நீர் விசிறியடித்ததில் எல்லோருமே நனைந்திருந்தார்கள். ஈரமாகியிருந்த பீடியொன்றைப் பற்ற வைக்கும் முயற்சில் காந்திராஜன் முனைப்பாயிருந்தபோது ரோஸ்டி இயக்கத்தின் உறுப்பினர்களில் ஒருவன் காந்திராஜனிடம் " கண்டி, இப்ப நாங்கள் எங்க போய்க்கொண்டிருக்கிறம்?" என்று கேட்டான். “சிவகெங்க பக்கம் போயிடலாங்க சாமி. அங்கிட்டு நம்ம சொந்தகாரங்க கொள்ளப்பேரு கெடக்காங்க. ஒண்ணும் பெரச்சனயில்ல” என்றான் காந்திராஜன். (இம்மாத ‘அம்ருதா’ இதழில் வெளியாகியது.) வாழ்க பிரபாகரன் வாழ்க பிடல் கஸ்ட்ரோ வாழ்க ரோகண விஜே வீர வாழ்க சீமான் வாழ்க சே குவேரா வாழ்க உருத்திரகுமாரன் வாழ்க லெனின் வாழ்க நிரஞ்சினி வாழ்க! பரிஸில பஸ்டில் கோட்டையிருந்த இடத்திலயிருந்துதான் எப்பயும் மேதின ஊர்வலம் தொடங்குறது. எத்தின நாட்டுச் சனங்கள், எத்தின கட்சிகள், எத்தினை கொடிகள், எத்தினையெத்தினை கோசங்கள். குர்டிஸ்காரர், பலஸ்தின்காரர், கொங்கோகாரர், மெக்சிகோகாரர், திபேத்காரர், தமிழர், சிங்களவர் எண்டு எத்தினை முகங்கள். இடைக்கிட அடிதடியும் வாறதுதான். பொலிஸோடும் வாறது, எங்கிட ஆக்களுக்குள்ளயும் வாறது. நான் இருவது வரியமா ஒவ்வொரு மேதின ஊர்வலத்துக்கும் வாறது. ஒரு வரியமும் தப்பினதில்லை. பத்துரோன் லேசில லீவு தரமாட்டான். அண்டைக்கு வேலை செய்தா டபுள் சம்பளம் வேற. ஆனால் நான் வாறதுதான். சனங்களோட சேர்ந்து மார்ச் செய்யிறதும் கோசம் போடுறதும் ஒரு சந்தோசம். நிரஞ்சினியும் நானும் கன ஊர்வலங்களில ஆளையாள் பார்த்துக்கொண்டு மார்ச் பண்ணிப் போயிருக்கிறம். தமிழ் ஆக்களுக்குள்ள முந்தி எல்.ரீ.ரீ.ஈ. மட்டும்தான் ஊர்வலம் நடத்துறது. பத்தாயிரம் பதினைஞ்சாயிரம் சனங்கள் வரும். சிவப்பு மஞ்சள் கொடியளை உயர்த்திப் பிடிச்சுக்கொண்டு தேனிசை செல்லப்பாவின்ர பாட்டுகளையும் போட்டுக்கொண்டு தலைவற்ற படத்தையும் பிடிச்சுக்கொண்டு எல்லாரும் மார்ச் பண்ணிப் போகயிக்க தன்னால ஒரு உசார் வரும் எனக்கு. இந்த வருசம் தமிழாக்கள் அஞ்சாறு பிரிவா மேதின ஊர்வலம் செய்யினம். நான் எல்லாற்ற ஊர்வலத்துக்கேயும் போய் ரெண்டு கோசம் போட்டுட்டுத்தான் வருவன். எனக்கு அவையள் இவையளெண்டு கிடையாது. ஆர் எங்கிட சனத்தோட நிக்கினமோ நான் அவையளோட. இந்தமுறை தமிழாக்களுக்கு இடையில புதுசா ஒரு குழுவும் ஊர்வலம் நடத்திச்சு. கையில் கோசம் எழுதின மட்டையளோட ஒரு முப்பது பேர் இருப்பினம். நான் அவையளோடையும் கொஞ்சநேரம் மார்ச் பண்ணிக்கொண்டு போனன். இஞ்சால புலிப் பொடியளின்ர ஊர்வலத்தில் கன இளம்பொடியள் எண்டால் இவையிட குறூப்பில் எல்லாம் கிழடு கட்டையள்தான். கொஞ்சம் சந்தேகத்தோடதான் என்னைப் பார்த்தினம். என்னைப் பார்க்கிற எல்லாரும் கொஞ்சம் சந்தேகமாத்தான் என்னைப் பார்க்கிறவை. எதையும் ஒளிவு மறைவில்லாமல் கதைச்சுப் பேசினா எங்கிட ஆக்களுக்கு உடன சந்தேகம் வந்திரும். ஏதோ கதைவிட்டுக் கதை புடுங்கப்போறன் எண்டு நினைச்சுக்கொள்ளுதுகள். இவை ஆக்கள் அவ்ளளவு உசார் காணாது. கோசம் எழுதின மட்டையெண்டா தலைக்கு மேலயெல்லோ தூக்கிப்பிடிச்சுக்கொண்டு உசார மார்ச் வேணும். இவையள் என்னண்டால் கமக்கட்டுக்க வைக்குறதும் கீழ பிடிக்கிறதும் இடக்கிட சாட்டுக்கு மேல பிடிக்கிறதுமா மட்டையள சுருக்குக் குடை மாதிரித்தான் பாவிக்கினம். அப்ப நான் அவையிட்ட “அண்ணே எனக்குமொரு மட்டைதாங்கோ கையில வைச்சிருக்க” எண்டு கேட்டன். அப்பயும் அவையளுக்குக் கொஞ்சம் அய்மிச்சம்தான். “ஜனநாயகம் வாழ்க” எண்டு எழுதியிருந்த மட்டையொண்ட தந்தினம். வேறெதும் மட்டை இல்லையோ எண்டு கேட்டன். அவையள் திரும்பயும் என்னை சந்தேகத்தோட பார்த்தினம். “இல்ல அண்ணையவை இராணுவத்தை வெளியேற்று, ராஜபக்சவை விசாரணை செய், சுயநிர்ணய உரிமையை அங்கீகரி” எண்டு எழுதின மட்டையள் ஒண்டும் இல்லையோ எண்டு கேட்டன். அதுக்கு அவையள் “நீங்கள் சொன்ன விசயமெல்லாம் ‘ஜனநாயகம் வாழ்க’ எண்டதுக்குள்ள அடங்குதுதானே” எண்டு சொல்லிச்சினம். அவையள் சொல்லுறது சரிதான். நாங்கள் எதுக்கு மற்றவனை ஒழிய அழியவெண்டு சொல்லவேணும். நல்ல விசயத்தை வாழ்க எண்டுவம். அதுக்குள்ள கெட்டதுகள் ஒழிக எண்டதும் அடங்குதுதானே. எங்களுக்கு எதுக்கு வெஞ்சொல்! நல்லதை மட்டும் சொல்லுவமே. ஜனநாயகம் வாழ்க! அங்க புலிப்பொடியளின்ர ஊர்வலத்தில பறையடிக்கிற சத்தம் இஞ்ச கேக்குது. எனக்குப் பன்ரெண்டு பதின்மூண்டு வயசிருக்கையிக்க எங்கிட ஊரில ஒரு ஊர்வலம் நடந்துது. அதுவும் பறைமோளம் அடிச்சுக்கொண்டுதான் நடந்தது. என்ர அண்ணன்மார் நாலுபேரும்தான் முன்னுக்கு நிண்டு மோளமடிச்சவை. எங்கிட ஏரியாச் சனங்கள் முழுக்க ஊர்வலமாப் பறையடிச்சுக்கொண்டு போய் வங்களாவடிச் சந்தியில போட்டு பறைமோளங்களைக் கோடாலியால கொத்தி பன்னாடையள மேல போட்டு எரிச்சம். இனிச் செத்தவீடுகளுக்கு பறையடிக்கிறதில்லை எண்டு முடிவெடுத்தம். பிந்தி, எங்களுக்கு நித்திய பஞ்சமும் பட்டினியும்தான். குடிமை வேல பார்க்கப் போகமாட்டம் எண்டு சொன்னதால வெள்ளாமாக்கள் தங்கிட தோட்டத்துக்குள்ள வேலைக்குக் கால் வைக்கக்கூடாது எண்டு சொல்லிப் போட்டினம். என்ர மாமா சின்னவனுக்கு வங்களாவடிச் சந்தியில வைச்சு வெள்ளாமாக்கள் கையையும் வெட்டிப்போட்டாங்கள். கயிட்டத்தைப் பொறுக்க ஏலாமல் திரும்பயும் மோளம் அடிக்கத்தான் போகவேண்டியிருந்தது. ஆனால் என்ர அண்ணன்மார் குடிமை செய்யப் போகயில்லை. முதலில ஆசையண்ணன்தான் வட்டிக்கு காசு வேண்டிக்கொண்டு சவூதிக்குப் போனவன். அதுக்குப் பிறகுதான் நாங்கள் கொஞ்சம் நிமிர்ந்தது. ஆசையண்ணனைத் தொட்டுப் பெரியண்ணனும் சீனியண்ணனும் சவூதிக்குப் போனவை. வெள்ளாமாக்களுக்கு எங்கிட குடும்பத்தில புண்ணில புளிபத்தின கோவம். அவையள் எங்கள ‘சவூதிப் பறையர்’ எண்டுதான் சொல்லுறவை. நான் யவ்னா சென்றல் கொலிஜில படிச்சுக்கொண்டிருந்த காலம் நாட்டுப் பிரச்சினை முளாசி எரிஞ்ச காலம். பள்ளிக்கூடம் ஒழுங்கா நடக்காது. இடைக்கிட கோட்டையிலயிருந்து ஷெல்லும் பள்ளிக்கூடத்துக்க வந்து விழும். ஒரு நாளைக்கு ஒரு இயக்கம் ஊர்வலம் நடத்தும். அரசாங்கத்தோட பேச்சுவார்த்தை கேட்டு ஒரு இயக்கம் ஊர்வலம் நடத்தினா பேச்சுவார்த்தை வேண்டாமெண்டு ஒரு இயக்கம் ஊர்வலம் நடத்தும். கம்பஸ் பொடியனக் கடத்திப் போட்டாங்களெண்டு ஒரு இயக்கம் ஊர்வலம் நடத்தினா மற்ற இயக்கம் நாங்கள் கடத்தயில்ல எண்டு ஊர்வலம் நடத்தும். நான் எல்லா ஊர்வலத்துக்கும் போவன். கருத்து வேறுபாடுகள் இண்டைக்கிருக்கும் நாளைக்குப் போகும். ஆனால் சனங்களோட சேர்ந்து கையைப் பிடிச்சுக்கொண்டு நடக்கயிக்க ஒரு பலம். பலாலி இந்தியன் அமைதிப்படை ஆமிக் காம்புக்கு முன்னுக்கு நாங்கள் நடத்தின ஊர்வலம்தான் மறக்க ஏலாத ஊர்வலம். மருதனாமடச் சந்தியிலயிருந்துதான் ஊர்வலம் தொடங்கினது. ஒரு இருவதாயிரம் முப்பதாயிரம் சனமிருக்கும். நாங்கள் யவ்னா சென்றல் கொலிஜ் பொடியள்தான் முன்வரிசை. நான் ஒரு கோசத்தை நானா இயற்றிக் கத்தினன். " நேருவின் பேரன் தமிழனுக்கு எதிரி" என்னோட நிண்ட பொடியளும் சேர்ந்து கத்த ஊர்வலம் அதிர்ந்துது. இயக்கம்தான் ஊர்வலத்தை ஒழுங்குபடுத்தி நடத்தினது. அப்ப பிரசாத் அண்ணைதான் அரசியல் பொறுப்பாளர். அவர் எங்களுக்குப் பக்கத்தில வந்து பார்த்துப்போட்டு என்ர கையைப் பிடிச்சு இழுத்துக்கொண்டுபோய் ஒரு வேனுக்கு மேல ஏத்திப்போட்டு கையில மைக்கத் தந்திற்று முதுகில தட்டினார். நான் வெள்ளைச் சேட்டும் வெள்ளை லோங்சும் போட்டுக்கொண்டு வேனில நிண்டு மைக்கில கோசம் போட்ட படம் ஈழநாடு பேப்பரில வந்தது. நான் மைக்கில உரத்துக் கத்தினன்: “ஆயிரம் உண்டிங்கு சாதி எனில், அன்னியர் வந்து புகல் என்ன நீதி” நான் கோசம் போட்டுக்கொண்டுருக்கயிக்க இந்தியன் ஆமி, அவனொரு மைக்கில எதிர் கோசமெண்டு போட்டான். அஞ்சு நிமிசத்தில் எல்லாரும் இஞ்சையிருந்து கலைஞ்சு போகாட்டி சுடுவம் எண்டாங்கள். நாங்கள் இஞ்ச நிண்டு கோசம் போட்டுக்கொண்டிருந்த அதே நேரத்தில ரவுணுக்குள்ள இந்தியன் ஆமிக்கும் இயக்கத்துக்கும் சண்டை துவங்கிற்று. எல்லாரும் கலைஞ்சு ஓடினம். நான் ரவுணுக்க வாறன் ரவுணுக்குள்ளால ஷெல் அறம்புறமாப் பறக்குது. இந்தியன் ஆமியோ? ஷெல் அடிக்கிறாங்களோ எண்டு சனங்கள் கன்னத்தில கைவைச்சு ஷொக்காகி நிண்டுகொண்டிருக்க ஷொக்கத் தெளியச் செய்யுறமாதிரி நாலு பக்கத்தாலும் பொம்பரால கொண்டு வந்து கொட்டினாங்கள். எனக்கு மைக் தந்த பிரசாத் அண்ணையும் பிறகு சண்டையில வீரச்சாவாகிப் போனார். அதுக்கும் ஒரு ஊர்வலம் வைச்சனாங்கள். நான் வெளிநாட்டுக்கு வந்த ஒரு மாசத்திலேயே சனங்களையும் ஊர்வலத்தையும் தேடிக் கண்டுபிடிச்சுப் போயிட்டன். நான் இஞ்ச பிரான்சுக்கு வாறதுக்கு முந்தி ஜெர்மனிக்குத்தான் வந்தனான். பிராங்போர்ட்டில ஸ்டட் அடிச்சு விட்டவங்கள். அந்த முறை பிராங்போர்ட்டில எல்.ரி.ரி.ஈ. பெரியவொரு மேதின ஊர்வலத்தை நடத்திச்சினம். இஞ்ச ஊர்வலம் நடக்குது கொழும்பில தாக்குதல் வெற்றி எண்டு செய்தி வருகுது. ஊர்வலத்தில அப்பிடியொரு உற்சாகம். கோஷம் அதிருது. தலைவற்ற படத்தை முன்னால உயர்த்திப் பிடிச்சபடி ஊர்வலம் மார்ச் பண்ணுது. ஊர்வலத்தின்ர முன்வரிசையில பரதநாட்டியம், கோலாட்டம், சிலம்பாட்டம், பொய்கால் குதிரையாட்டம், பறை எல்லாம் போகுது. நான் முன்னுக்குப் போய் பறை அடிக்கிற பொடியனுக்குப் பக்கத்தில நிண்டன். அந்தப் பொடியன் கறுத்தக் களிசானும் கறுத்தச் சேட்டும் போட்டு தலையில சிவப்புநிறத் துண்டு கட்டியிருந்தான். அவனுக்குப் பறையைச் சரியாப் பிடிக்கவே தெரியேல்ல. டமார் டொமொலெண்டு கொல்லன் பட்டறையில இரும்படிச்ச மாதிரி அடிக்கிறான். பறை அழுகுது. ஆனால் பொடியன்ர கண்ணும் மூக்கும் மட்டும் பல பாவங்கள் காட்டுது. எங்கேயோ அரையுங் குறையுமாப் பழகியிருக்கிறான். “எங்க பழகினது” எண்டு கேட்டன். “நாங்கள் டுசில்டோர்ப் கேணல் கிட்டு கலைக் குழு” எண்டான். “அண்ண இத தாண்ணே” எண்டு கேட்டன். அவனுக்கெண்டால் தர விருப்பமில்லப் போலதான் கிடந்தது. என்னைப் பார்த்துக் கண்ணை ஆட்டி ஆட்டி இடுப்பை ஆட்டிக்கொண்டு பேந்தும் பறையை அடிச்சான். பறை அழுகுது. எனக்குக் கொதிதான் வந்துது. “விடண்ணை உத” எண்டு ஒத்திப் பறிக்குமாப்போலதான் பறையை அவனட்டியிருந்து வேண்டினன். வைத்தி அப்பு சொல்லித் தந்த தாளம் நெஞ்சியிலியிருந்து அப்பிடியே கைக்குள்ள இறங்கிச்சுது. தன்னங் தரணங் அறுவுது தன்னங் தரணங் அறுவுது டுண் டுண் டுண் டுண்.. தரணங் தரணங் அறுவுது.. பறைச் சத்தம் கிண் கிண்ணெண்டு ஊர்வலத்துக்குள்ள பரவிச்சுது. அப்பிடியே ஊர்வலம் முழுக்க என்னைத்தான் திரும்பிப் பார்த்துது. என்னை அப்பிடியே ஒரு திறந்த வேனில் ஏத்திவிட்டிச்சினம். வேன் போய்க்கொண்டிருக்கு. பறை அதிருது. முழு டொச்காரரச் சனங்களின்ர பார்வையும் எனக்கு மேலதான். நான் கணக்குப் பார்த்து நிப்பாட்டுற இடத்தில ஊர்வலத்தின்ர கோசம் வானத்தப் பிரிக்குது “வீ வோன்ட் தமிழீழம்” அடுத்த கிழமை மூண்டு அய்ரோப்பா தமிழ்ப் பேப்பருகளின்ர முதல் பக்கத்தில நான் வேனில நிண்டு பறையடிச்சுக்கொண்டிருக்க என்னைச் சுத்திப் பொடியள் ஆடிக்கொண்டிருக்கிற படம் வந்துது. நான் பறையடிச்சுக்கொண்டு நிக்கயிக்கதான் கோலாட்டக் குழுவில மஞ்சள் பாவாடையும் சிவப்புத் தாவணியும் கட்டிக்கொண்டு ஆடிக்கொண்டிருந்த நிரஞ்சினியை முதல் முதலாய்ப் பார்த்தன். எனக்கு அப்ப இருவத்திமூண்டு வயசு. நிரஞ்சினிக்கு பதினேழு வயசு. நிரஞ்சினி நல்ல கறுப்பி. நெடுநெடுவெண்டு உயரம். சரியான மெல்லிசு. முன்பல்லு ரெண்டு எப்பன் மிதப்பு. அவளின்ர மூக்கில கிடந்த மூக்குத்தி அவளின்ர கறுப்பு முகத்தில நட்சத்திரம் மாதிரி மினுங்கிச்சுது. பிறகு கன ஊர்வலங்கள், கலை விழாக்கள், மாவீரர் நாள் எண்டு நான் நிரஞ்சினியைப் பார்த்தன். தேப்பன், தாய், தம்பியோட வருவாள். அவள்தான் முதல் என்ர ரெலிபோன் நம்பர் கேட்டவள். எல்லாம் கைச் சிக்னல்தான். ஒரு துண்டுப் பேப்பரில எழுதி ஆரும் பார்க்காத நேரம் அவளின்ர மடியில போட்டன். அப்ப ‘செல்’ போன் இல்லாத காலங்கள். அவள்தான் நானிருந்த காம்புக்கு போன் அடிப்பாள். நாங்கள் காதலிச்சம். மணித்தியாலக் கணக்காப் போன் கதைச்சம். அவளுக்கு ஒரு நாளைக்கு கூட என்னைப் பார்க்காம இருக்க ஏலாது. அவள் படிச்ச கொலேஜுக்கு நான் போவன். அங்கயிருந்த புல்வெளியில இருந்துகொண்டு நேரம் போறது தெரியாமக் கதைப்பம். ஒருநாள் நிரஞ்சினி என்னை அவளின்ர வெள்ளைக்கார சிநேகிதப் பெட்டையின்ர ரூமுக்குக் கூட்டிக்கொண்டு போனாள். சிநேகிதக்காரப் பெட்டை எங்கள் ரெண்டு பேரையும் தனிய ரூமில விட்டிட்டு வெளியில போயிற்றாள். அண்டைக்கு நானும் நிரஞ்சினியும் ஒருத்தரை ஒருத்தர் புத்தியாலயும் சரீரத்தாலயும் அறிஞ்சுகொண்டம். நிரஞ்சினி அடுத்த மேதின ஊர்வலத்துக்கு முதலே செத்துப்போனாள். அவள் செத்ததுக்குப் பிறகு எனக்கு ஜெர்மனியில் இருக்க விருப்பமில்லாமல்தான் நான் பிரான்சுக்கு வந்தனான். நிரஞ்சினி பன்ரெண்டு வயசில ஜெர்மனிக்கு வந்தவள். தேப்பனுக்குப் பெயர் தவபாலன். வடமராச்சி ஆக்கள். பிராங்போர்ட்டில தமிழ்ப்பட வீடியோ கசற்றுகள், தமிழ் புத்தகம் பேப்பர்கள், உடுபுடவைகள் விக்கிற கடை வைச்சிருந்தவர். அந்தக் கடைக்குப் பேரே ‘நிரஞ்சினி தமிழ்க் கடை’ தான். நிரஞ்சினியின்ர தாயும் அந்தக் கடையில் நிக்கிறவ. நிரஞ்சினிக்கு அப்ப பத்து வயசில ஒரு தம்பியிருந்தவன். நிரஞ்சினி கொஞ்சம் துணிஞ்ச பெட்டை. எனக்கோ விசாவே கிடைக்கயில்ல. வேலையுமில்ல. அவள்தான் எனக்கு தைரியம் சொல்லுவாள். இடக்கிடை, நான் வேணாமெண்டு சொன்னாலும் காசும் தருவாள். நான் பாடுற பாட்டுக்களெண்டால் அவளுக்கு உசிர். போன் அடிச்சுப் போட்டு பாடுங்கோ பாடுங்கோ எண்டு கேப்பாள். வைத்தி அப்புவின்ர பாட்டொண்டிருக்கு: கஞ்சி குடி மறந்தேன் காலத்தைத் தான் மறந்தேன் வெற்றிலைத் தீன் மறந்தேன் – இந்த வெள்ளாம் பொடிச்சியால பொட்டிட்ட நெற்றிக்கும் உன் பூவண்ணச் சட்டைக்கும் கட்டுண்டு நின்று கலங்குதடி என் மனது. ரெலிபோன் பில்லாலதான் எங்கிட காதல் பிடிபட்டது. தேப்பனும் தாயும் கடையிலயிருக்க வீட்டிலயிருந்து நிரஞ்சினி என்னோட போன் கதைச்சுக்கொண்டேயிருப்பாள். போன் பில்லப் பார்த்திட்டுத் தேப்பன் கேட்க நிரஞ்சினி ஒண்டையும் ஒளியாமல் இன்ன இன்ன மாதிரி நான் அவரைத்தான் கலியாணம் கட்டப்போறன் எண்டு சொல்லிப்போட்டாள். தேப்பன் தன்ர கூட்டாளிமார் ரெண்டு பேரையும் கூட்டிக்கொண்டு என்னைத் தேடிக் காம்புக்கு வந்திற்றார். என்ன விசயம் எண்டு விசாரிச்சார். நானும் நிரஞ்சினிய லவ் பண்ணிறதாச் சொன்னன். சடாரெண்டு என்ர காதைப் பொத்தி அடிச்சார். ஸ்ரோங்கான அடிதான். அப்பிடியே தலை ஒருக்காச் சுத்தி வந்துது. இன்னொரு அடி அடிச்சிருந்தேரெண்டால் செத்துப்போயிருப்பன். நான் திருப்பி அடிக்கயில்ல. என்னயிருந்தாலும் நிரஞ்சினியின்ர தேப்பனல்லே. காதல் வாழ்க! அதுக்குப் பிறகு நிரஞ்சினிக்குக் காவல் போட்டிச்சினம். கொலேஜ் வாசலில தாய்க்காரி காரோட காவல் நிண்டா. வீட்டிலயிருந்த ரெலிபோனும் கட். தமிழ்ப்பட கசெற் விக்கிற முதலாளியெல்லே, தமிழ்ப் படத்தில வாற எல்லா வேலையும் செய்தார். தன்ர மானம் போயிருமெண்டு கண்ணீர் விட்டு அழுது நிரஞ்சினியின்ர காலில விழுந்து கும்பிட்டிருக்கிறார். நிரஞ்சினி அவையளுக்கு என்னவாவது பிராக்குக் காட்டிப்போட்டு உச்சிக்கொண்டு என்னட்ட வருவாள். கலியாணத்தைக் கட்டலாமெண்டால் அவளுக்கு வயசும் காணாது, எனக்கு விசாவுமில்லை. நாங்கள் வேற நாட்டுக்கு ஓடிப் போயிரலாம் எண்டு நிரஞ்சினி சொன்னாள். அவள் துணிஞ்ச கட்டை. நான்தான் அதெல்லாம் வேணாமெண்டன். நீர் உறுதியா நில்லும் அப்பா, அம்மாவின்ர மனம் மாறுமெண்டன். அப்பா ஓமெண்டாலும் அம்மா ஒருக்காலும் ஒம்படமாட்டா எண்ட நிரஞ்சினி என்னைக் கட்டிப் பிடிச்சுக்கொண்டு அழுதாள். அவளுக்கு தகப்பனுத் தாயுமாச் சேர்ந்து பெல்டால அடிச்சதாம். அவளின்ர முதுகில அடிபட்டுக் கண்டிப் போய்கிடந்த இடத்தைக் காட்டினாள். ஒருநாள் நிரஞ்சினி காணாமல்போனாள், என்னட்ட காம்புக்கு வந்திற்று போனவள் வீட்ட போய்ச் சேரயில்லை. விடியப்புறம் நாலு மணிக்கு தேப்பன் என்னைத் தேடி வந்தார். என்ர கையப் பிடிச்சு அழுதுகொண்டு “தம்பி நாங்கள் உமக்கே அவவைச் செய்து வைக்கிறம் என்ர பிள்ளையைக் கண்ணில காட்டும்” எண்டு குளறினார். நிரஞ்சினியை நான்தான் கடைசியாச் சந்திச்ச ஆள் எண்டதால என்னைப் பொலிஸ்காரரும் விசாரிச்சினம். நிரஞ்சினியை ஆளுக்கொரு பக்கமாத் தேடினம். மூண்டாம் நாள் நான் மனம் கேளாமல் நிரஞ்சினியின்ர வீட்ட கூடப் போனன். போய் கோலிங் பெல் அடிக்கக் கதவைத் திறந்திச்சினம். அந்த வீடு முழுக்கச் சனங்கள். “இவன்தான் ஆள்” எண்டு அப்பா அந்தச் சனங்களுக்குச் சொல்ல, நிரஞ்சினியின்ர அம்மா ஓடிவந்து என்ர முகத்தில காறித் துப்பினா. நான் நிரஞ்சினிக்காகப் பேசாமல் அசையாமல் நிண்டன். முகத்தைக் கூடத் துடைக்கையில்ல. நிரஞ்சினியின்ர அம்மா எங்கயிருந்தோ ஒரு தும்புத்தடியை எடுத்துக் கொண்டுவந்து என்ர தலையில ஓங்கி அடிச்சா. தும்புத்தடி முறிஞ்சுபோச்சுது. நான் அவவிட்ட “எனக்கு நிரஞ்சினியின்ர படம் ஒண்டு வேணும்” எண்டு சொன்னன். ஆறு நாளைக்குப் பிறகு பிராங்போர்ட்டிலயிருந்து நாப்பது கிலோமீற்றர் துலையிலயிருந்த பெரிய காட்டுக்குள்ள நிரஞ்சினியின்ர எலும்புத்துண்டுகளையும் சாம்பலையும் பொலிஸ்காரர் கண்டுபிடிச்சாங்கள். அந்த நேரம் ஜெர்மனியில நியோ நாஸி குழுக்கள் பெரிய அநியாயங்களச் செய்துகொண்டிருந்தாங்கள். அந்த நேரம்தான் ஒரு வியட்நாம் குடும்பத்த வீட்டோட சேர்த்து நாஸிகள் கொழுத்தியிருந்தவங்கள். நிரஞ்சினியோட கூடப் படிச்சுக்கொண்டிருந்த ஸ்ருடண்ட்ஸ்தான் இந்தப் பிரச்சினையை தீவிரமாக் கையில எடுத்தாங்கள். நியோ நாஸிகள் கூடுற கோப்பிக் கடையொண்டு அடிச்சு நொருக்கப்பட்டுது. தமிழ் ரேடியோக்கள், தமிழ் பேப்பர்கள் எல்லாம் நாஸிகளைக் கடுமையாக் கண்டிச்சு எழுதிச்சினம். நாஸிகளுக்கு எதிரா பிராங்போர்ட்டே கலங்குறமாதிரி தமிழ் அமைப்புகள் ஒரு ஊர்வலத்தை ஒழுங்கு செய்திச்சினம். ரெண்டாயிரம் சனங்களிருக்கும். நிரஞ்சினியின்ர அயலட்ட வெள்ளைக்காரச் சனங்களும் ஊர்வலத்துக்கு வந்திருந்தவை. நான் ஊர்வலத்துக்கு முன்னால மார்ச் பண்ணிக்கொண்டு போனன். இனவெறிக்கு எதிராக் கோசம் போட்டுக்கொண்டு ஊர்வலம் போச்சுது. எனக்குப் பின்னால நிரஞ்சினியின்ர குடும்பம் கையில நிரஞ்சினியின்ர படங்களை வைச்சுக்கொண்டு நடந்து வந்துது. கடைசியில, நிரஞ்சினியைக் கொலை செய்தது ஆர் எண்டதைப் பொலிஸ் கண்டுபிடிச்சுது. நிரஞ்சினியின்ர உடம்ப காட்டுக்குள்ள வைச்சு எரிக்கேக்க சைவ சமயக் கிரியைகளைச் செய்து சைவ முறைப்படிதான் எரிச்சிருக்கிறாங்கள். அதை வைச்சுதான் குற்றவாளியள கண்டுபிடிச்சாங்கள். நிரஞ்சினியின்ர கொலைக் கேஸில நான்தான் முக்கியமான சாட்சி. கன ஜெர்மனிப் பேப்பர்கள் இந்தக் கொலை பற்றி எழுதிச்சினம். ஆனால், மகள் சாதி மாறிக் காதலிச்சதால தேப்பனும் தாயும் அடிச்சதால படாத இடத்தில பட்டு மகள் செத்துப்போக தகப்பனும் தாயுமா மகளின்ர உடம்பைக் கொண்டுபோய் காட்டுக்குள்ள போட்டு எரிச்சதெண்டு ஒரு தமிழ்ப் பேப்பரும் நியூஸ் எழுதவுமில்ல, ஒரு தமிழ் ரேடியோ செய்தி சொல்லயுமில்ல. கன தமிழ்ச் சனம் நாஸிகள்தான் நிரஞ்சினியை எரிச்சதா இப்பயும் நினைச்சுக்கொண்டிருப்பினம். ஆனால் உண்மையில அந்தப் பேப்பருகளையும் ரேடியோவையும் குறைசொல்லுறதால என்ன வரப்போகுது. அதைப் பற்றிக் கதைச்சு ஆருக்கு என்ன லாபம். ஆரையும் அழிய ஒழிய எண்டு முனியிறதால நிரஞ்சினிதான் சாம்பலிலயிருந்து உயிர்த்து வரப்போறாளா? ஒண்டு மட்டும் சொல்லலாம்… ஜனநாயகம் வாழ்க! இதுக்குள்ள நாஸிப் பிரச்சினை, அகதிப் பிரச்சினை, தலைமுறைப் பிரச்சினை, இனப் பிரச்சினை, சாதிப் பிரச்சினை எல்லாம் அடங்குதுதானே. (செப்டம்பர் 2015 – ஆக்காட்டி) எழுச்சி சரவணை கிழக்கைப் பிறப்பிடமாகவும் பாரிஸை வதிவிடமாகவும் கொண்ட ஆழ்வார் தருமலிங்கத்திற்கு இந்தப் புரட்டாதி வந்தால் சரியாக நாற்பத்தேழு வயது. இரு சக்கர வாகனங்களை உற்பத்தி செய்யும் பிரான்ஸின் புகழ்பெற்ற தொழிற்சாலையொன்றில் கடைநிலைத் தொழிலாளியாகப் பணி செய்கிறார். பிரான்ஸுக்கு வந்து பதின்மூன்று வருடங்களாகின்றன. பிறந்து வளர்ந்ததற்கு இதுவரை அவர் விமானத்தில் ஏறியதில்லை. பதினைந்து வருடங்களிற்கு முன்பு தருமலிங்கத்திற்கும் காரைநகர் தங்கோடையைச் சேர்ந்த அசோகமலருக்கும் பொன்னாலை வரதராஜப்பெருமாள் கோயிலில் கல்யாணம் நடந்தது. அந்தக் காலத்திலேயே அய்ந்து இலட்சம் ரூபாய்கள் ரொக்கமும் முப்பது பவுண் நகையும் வீடு வளவும் சீதனமாக தருமலிங்கத்திற்குக் கொடுக்கப்பட்டது. இவ்வளவுக்கும் தருமலிங்கம் படித்து உத்தியோகத்திலிருந்த மாப்பிள்ளை அல்ல. ஆனால் திறமான கமக்காரன். இரண்டாயிரம் கன்று புகையிலைத் தோட்டத்தை தனியாகச் செய்யும் கடின உழைப்பாளி. முக்கியமாக குடிவெறி, புகைத்தல் எதுவுமில்லாத மாப்பிள்ளை. அசலான பக்திமான். இலந்தையடிப் பிள்ளையார் கோயில் தொண்டர் படையின் தலைமைத் தொண்டன். தோட்டம் அதைவிட்டால் பிள்ளையார் கோயில் தொண்டும் தேவாரமும் என்று கிடந்தவர். இயக்கங்களிற்கு எதிருமில்லை சப்போர்ட்டுமில்லை. ஆனால் அமிர்தலிங்கத்தைப் போல ஒரு தலைவன் கிடைக்கமாட்டான் என்பதுதான் அவரது உள்ளார்ந்த அரசியல் கொள்கை. காரைநகரில் சீதனமாகக் கிடைத்த வீடு வளவு கடற்படையின் ஆக்கிரமிப்புக்குள் இருந்தது. விரைவில் கடற்படையினர் வெளியேறிவிடுவார்கள் என மாமனார் சமாதானம் சொல்லியிருந்தார். தருமலிங்கத்திற்கு அதைப் பற்றிப் பெரிய கவலை கிடையாது. ஓர் ஆதனம் மேலதிகமாக இருக்கிறது என்றளவில் அவருக்குத் திருப்திதான். கல்யாணம் நடந்து இரண்டு வருடங்களாகியும் தருமலிங்கம் – அசோகமலர் தம்பதியினருக்கு குழந்தை பிறக்கவில்லை. மெதுமெதுவாக அவரை மலட்டு தருமலிங்கம் என ஊருக்குள் அழைக்கத் தொடங்கினார்கள். ஊர் முழுவதும் தருமலிங்கத்தை மலடன் என்று சொன்னால் தருமலிங்கத்தின் தாய்க்காரி மட்டும் அசோகமலரை மலடி என்று கரித்துக்கொட்டத் தொடங்கினார். எப்போது பார்த்தாலும் குத்தல் கதைகளை அந்த மனுசி பேசிக்கொண்டேயிருந்தார். அப்போதெல்லாம் அசோகமலர் கண்ணீர் விட்டு அழுவார். ஆனால் அவர் ஒருபோதும் தருமலிங்கத்தின் மனம் நோக ஒரு சொல் பேசியதுமில்லை, நடந்துகொண்டதுமில்லை. எல்லாவற்றையும் தருமலிங்கம் மவுனமாகக் கவனித்துக்கொண்டுதானிருந்தார். அவரது உள்ளம் ஆழ்ந்த துயரத்திலும் அடக்கிவைக்கப்பட்டிருந்த ஆத்திரத்திலும் நொதித்துக்கொண்டிருக்கலாயிற்று. அதிகாலையில் தோட்டத்திற்கு தண்ணீர் இறைக்கிற விசயத்தில்தான் பக்கத்துத் தோட்டக்காரன் கிளியனோடு தருமலிங்கத்திற்கு வாக்குவாதம் வந்தது. பிரச்சினை பேச்சுவார்த்தையாக இருக்கும்போதே கிளியன் ‘மலட்டுச் சொத்தா ஆருக்கும் போகப்போற தறைதானே’ என்றொரு வசனத்தைப் பாவித்து தருமலிங்கத்தை ஏளனம் செய்தான். அந்தச் சொல்லைக் கேட்டதும் இவ்வளவு நாளாக அடக்கி வைத்திருந்த கோபம், ஊரவர்கள் மீதுள்ள கோபம், தனது தாய்மீது உள்ள கோபம், தன் மீதேயுள்ள கோபம் எல்லாமாகச் சேர்ந்த பெருங் கோபம் அந்த அதிகாலையில் தருமலிங்கத்தின் ஆன்மாவைப் பிசக்கிற்று. அவர் தன்னை ஒரு நிலைக்குக் கொண்டுவர முயன்றுகொண்டிருந்தபோது அவரது கண்கள் கண்ணீரைக் கொப்பளித்தன. அதே நேரத்தில் அவரது கண்கள் இருண்டு போயின. அவரது வலுவான கைகள் கையிலிருந்த மண்வெட்டியைத் தூக்கியெறிந்து தலைகீழாக ஏந்திப் பிடித்தன. குனிந்து மண்வெட்டியின் வலுவான பிடியை கிளியனின் முழங்காலை நோக்கி வீசினார். “அய்யோ மச்சான்” என்று அலறியவாறே கிளியன் கால்களைப் பிடித்தவாறு நிலத்தில் குந்திவிட்டான். தருமலிங்கம் திரும்பியும் பாராமல் விறுவிறுவென தோட்டத்திற்குள் புகுந்து தண்ணீர் மாறத் தொடங்கினார். காலை எட்டு மணியளவில் இரண்டு இராணுவீரர்களைக் கூட்டிக்கொண்டு கிளியன், தருமலிங்கத்தின் தோட்டத்துக்கு வந்தான். அப்போது அந்தப் பகுதி முழுவதும் இராணுவத்தினர் சொரியலாக இருந்தார்கள். முதுகில் துப்பாக்கியைக் கொழுவிக்கொண்டு சைக்கிளில் உல்லாசமாகத் திரிந்தார்கள். கைவிடப்பட்ட வீடுகளிலிருந்த கதவுகளையும் சன்னல்களையும் கழற்றி எடுத்து விற்றார்கள். மாலை வேளைகளில் கள்ளைக் குடித்துவிட்டு பைலாப் பாடல்களைப் பாடினார்கள். இரவு நேரங்களில் குமர்ப் பிள்ளைகள் இருக்கும் வீடுகளிற்குள் பாய்ந்து ஓடினார்கள். ஊருக்குள் ஏதாவது பிரச்சினையென்றால் அவர்களே நாட்டாமை செய்து தண்டனைகளை வழங்கினார்கள். இராணுவத்தினர் இருவருக்கும் அந்தக் காலைவேளையிலேயே மிகுந்த போதையாயிருந்தது. சரவணைக் கிராமத்தில் காலை ஆறுமணியளவில் பனைகளிலிருந்து கள் இறக்குவார்கள் என்றால் காலை அய்ந்து மணிக்கே இராணுவ வீரர்கள் பனைகளின் கீழே வந்து குந்திக்கொள்வார்கள். சிலர் இரவிலே தாங்களாகவே பனையிலேறி முட்டியை அவிழ்த்து திருட்டுத்தனமாகக் கள் குடிப்பதுமுண்டு. யாரிடம் போய் இந்தத் திருட்டை முறையிட முடியும்? அந்தப் பகுதிக்குப் பொறுப்பான பெரிய இராணுவத் தளபதியே கடற்கரைக் காணிகளைத் தனது சொந்தக்காரர்களின் பெயருக்கு கள்ள உறுதி முடித்துக்கொண்டிருந்தது சனங்களிற்குத் தெரியும். தருமலிங்கம் இராணுவத்தினரைப் பார்த்ததும் கொஞ்சம் திடுக்கிட்டார் என்றாலும் பெரிதாகப் பயப்படவில்லை. வந்த வீரர்கள் இருவரும் அவருக்கு ஓரளவு பழக்கமானவர்கள்தான். ஒருவனுடைய பெயர் உதய், மற்றவனுடைய பெயர் பெர்னாண்டோ. அந்த இருவரும் எப்போதும் ஒன்றாகவே திரிவார்கள். அடிக்கடி தருமலிங்கத்தின் தென்னங்காணிக்கு வந்து இளநீர் கேட்பார்கள். அவர்களே மரத்தில் ஏறி இளநீரைப் பறித்துக்கொண்டு தருமலிங்கத்திற்கு ஒரு சல்யூட் செய்துவிட்டுப் போவார்கள். இப்போது மண்வெட்டியைக் கீழே போட்டுவிட்டு தருமலிங்கம் மெதுவாகப் புன்னகைத்தவாறு கிளியனைப் பார்த்தார். அந்தப் பார்வையைக் கிளியனால் தாங்க முடியவில்லை. “மச்சான் நீ என்னில கை வைச்சது பிழை” என்று சொல்லிவிட்டு அவன் கால்களை நொண்டிக்கொண்டு அங்குமிங்குமாக நடந்தான். உயரமான இராணுவவீரனான பெர்னாண்டோ கேட்டான் “அய்யா, திலீபனுக்கு சப்போர்ட்டா? கிளி சொல்றது” தருமலிங்கத்திற்கு எல்லாம் விளங்கிவிட்டது. அவரே மறந்துவிட்ட சம்பவமது. நல்லூரிலே திலீபன் உண்ணாவிரதமிருந்து இறந்தபோது அந்தக் கிராமத்திலே ஒரு சிறு சம்பவம் நடந்திருந்தது. அப்போது தருமலிங்கத்திற்கு இருபது வயது. இப்போதை விட அப்போது அவர் மிகப் பெரிய பக்திமான். அப்போதும் அவர் இயக்கத்திற்கு சப்போர்ட்டுமில்லை, எதிருமில்லை. ஆனால் பன்னிரெண்டு நாட்கள் பட்டினி கிடந்து, அதுவும் நல்லூர் முருகக் கடவுளின் முற்றத்திலேயே திலீபன் இறந்தது அவரை மிகவும் வருத்திப்போட்டது. ஒரு மதிய நேரத்தில் ஒலிபெருக்கிகள் கட்டப்பட்ட இயக்கத்தின் வாகனம் திலீபனின் மரணத்தை அறிவித்தபடி செல்வது தோட்டத்திற்குள் நின்ற தருமலிங்கத்திற்குக் கேட்டது. அப்போது கூட அவருக்குப் பெரிய துயர் ஏற்படவில்லை. வாகனம் சென்ற கையோடு பல குரல்கள் வீறிட்டு அலறுவது தருமலிங்கத்திற்குக் கேட்டது. பள்ளிக்கூடப் பக்கமிருந்துதான் அந்த அலறல் கேட்டது. தோட்டத்தில் போட்டது போட்டபடி கிடக்க வேலியைப் பாய்ந்து பள்ளிக்கூடத்தை நோக்கி தருமலிங்கம் ஓடினார். அங்கே பள்ளிக்கூடத்திற்கு முன்னால் வீதியில் திலீபனின் படத்திற்கு விளக்கேற்றி வைக்கப்பட்டிருந்தது. ஆசிரியைகளும் மாணவிகளுமாகக் கூடிநின்று கதறி அழுதுகொண்டிருந்தார்கள். ஊரில் எந்தச் சாவீடு என்றாலும் முன்னுக்கு நின்று ஒப்புச் சொல்லி மாரடித்து அழும் பிள்ளைமுத்து கிழவி நிலத்திலிருந்து ஓரடி உயரத்திற்குத் துள்ளித் துள்ளி மார்பில் இரு கைகளாலும் படார் படார் என அறைந்துகொண்டு ஒப்புச் சொல்லி அழுதார். அந்தக் காட்சி தருமலிங்கத்தை என்னவோ செய்தது. வீட்டுக்குப் போனவர் பித்துப் பிடித்தவர் போலயிருந்தார். தாய்க்காரி சாப்பிடச் சொல்லியும் அன்று முழுவதும் அவரது பல்லில் பச்சைத் தண்ணீரும் படவில்லை. இரவு முழுவதும் உறங்காதிருந்தார். அதிகாலையில் தென்னங்காணிக்குக்குப் போனவர் இளந் தென்னங்கன்று ஒன்றை முழுவதுமாகத் தோண்டி எடுத்துக்கொண்டு புளியங்கூடல் சந்திவரை தெருவால் இழுத்துக்கொண்டுபோனார். தோளில் மண்வெட்டி தொங்கவிடப்பட்டிருந்தது. அப்போது இந்திய அமைதிப் படையினரது வண்டியென்று இவரைக் கடந்துபோனது. சண்டை தொடங்குவதற்கு இன்னும் காலம் இருந்தது. புளியங்கூடல் சந்தியில் ஆள் நடமாட்டமில்லை. கடைகள் ஏதும் திறக்கப்பட்டிருக்கவில்லை. இரண்டு தெருக்கள் சந்திக்கும் அந்தச் சந்தியின் நட்ட நடுவே மண்வெட்டியால் வேகவேகமாக் கொத்தி ஒரு குழியை உண்டாக்கி அந்தக் குழிக்குள் தென்னங்கன்றை நட்டுவிட்டு அதற்குக் கீழே சம்மணம் போட்டு வடக்கு நோக்கி தருமலிங்கம் வீதியில் உட்கார்ந்துகொண்டார். சற்று நேரம் செல்ல அவரைச் சுற்றிச் சிறிய கூட்டம் கூடிவிட்டது. அவரோ யாருடனும் ஒரு வார்த்தை பேசவில்லை. தருமலிங்கத்திற்கு விசராக்கிவிட்டது என்ற செய்தி தாய்க்காரியை எட்டியபோது தாய்க்காரி தெரு முழுவதும் விழுந்து புரண்டு அழுதவாறே ஓடிவந்தார். தாயுடனும் தருமலிங்கம் ஒரு வார்த்தை பேசவில்லை. சற்று நேரத்தில் இயக்கம் வாகனத்தில் அங்கே வந்தபோதுதான் தருமலிங்கம் வாயைத் திறந்தார்: “திலீபன் அண்ணனே போன பிறகு நான் எதுக்கு இருக்கவேணும்” இயக்கப் பொறுப்பாளருக்குக் கண்களில் கண்ணீர் வந்துவிட்டது. அவர் உதடுகளை மடித்துக் கடித்தபடியே உத்தரவுகளைப் பிறப்பித்தார். எண்ணி முப்பதே நிமிடங்களிற்குள் தருமலிங்கத்திற்கும் தென்னங்கன்றிற்கும் மேலோக ஒரு சிறிய தறப்பாள் பந்தல் உருவானது. அருகிலிருந்த தந்திக் கம்பத்தில் இரண்டு ஒலிபெருக்கிகள் கட்டப்பட்டு சோக இசை ஒலிபரப்பப்பட்டது. தருமலிங்கம் படுப்பதற்கு புதிய பாயும் தலையணைகளும் போர்வைகளும் தருவிக்கப்பட்டன. யாரோ ஒருவர் மின்விசிறியொன்றை எடுத்து வந்து தருமலிங்கத்தின் தலைமாட்டிற்குள் வைத்தார். இந்தக் கதையை எழுதிக்கொண்டிருப்பவர் உட்பட நான்கு இளைஞர்கள் தருமலிங்கத்தைச் சுற்றி அமர்ந்து அவருடன் உண்ணாவிரதத்தைத் தொடர்ந்தார்கள். தருமலிங்கத்தின் தாயார் அழுதுகொண்டேயிருந்தார். மாலையில் தருமலிங்கம் சற்று வாடிப் போயிருந்தார். நேற்று மதியத்திலிருந்து அவர் தண்ணீர் கூட அருந்தவில்லை. இரவு எட்டு மணியளவில் அவர் பாயில் சுருண்டு படுத்துக்கொண்டார். ஒன்பது மணியளவில் யாழ்ப்பாணத்திலிருந்து இயக்க வாகனம் ஒன்று வந்தது. அவர்கள் பந்தலுக்குள் வந்து, உண்ணாவிரதப் போராட்டங்களை முடித்துக்கொள்ள தலைமை முடிவெடுத்திருக்கிறது என்று சொன்னார்கள். அவர்கள் வரும்போது கையோடு பழரசம் கொண்டு வந்திருந்தார்கள். ஆனால் தருமலிங்கம் உண்ணாவிரதத்தைக் கைவிட மறுத்துவிட்டார். “திலீபன் அண்ணாவே போயிட்டார்” என அவரது உதடுகள் முணுமுணுத்தன. அவருக்குக் கட்டாயமாகப் பழரசம் புகட்டும் முயற்சி நடந்தபோது அவர் பழரசத்தை புகட்டியவனின் முகத்திலேயே துப்பினார். இயக்கப் பொடியன்கள் தருமலிங்கத்தை பாயோடு சேர்த்து அப்படியே அலாக்காகத் தூக்கி வாகனத்திற்குள் வைத்து யாழ்ப்பாணப் பெரியாஸ்பத்திரிக்குக் கொண்டுபோய்ச் சேர்த்தார்கள். விடிந்தபோது தருமலிங்கம் அலங்கமலங்க முழிக்கத்தான் செய்தார். கடந்த இரண்டு நாட்களாகத் தன்னை இயக்கிய சக்தி எதுவென்று அவருக்கே தெரியாமலிருந்தது. “அம்மாவைக் கவலைப்படுத்திவிட்டேனே” என்ற வருத்தம் மட்டுமே அவருடன் நெடுநாட்களிருந்தன. தருமலிங்கத்தின் போராட்டத்தை சனங்கள் ஒரு மாதம் கூட ஞாபகம் வைத்திருக்கவில்லை. ஏனெனில் இதைவிட ஆயிரம் மடங்கு பெரிய பெரிய போராட்டங்களும் போரும் சாவுகளும் அடுத்தமாதமே வந்துவிட்டன. ஆனால் தருமலிங்கத்தின் கல்யாணப் பேச்சுக்கால் நடந்துகொண்டிருந்தபோது சனங்களுக்கு அந்தச் சம்பவம் ஞாபகம் வரத்தான் செய்தது. ’தருமலிங்கம் நல்ல பொடியன், சோலி சுறட்டு ஒண்டுமில்லை, ஆனால் இடைக்கிட ஆளுக்கு கிறுதி மாதிரி வாறது.. அந்த நேரத்தில அவன் என்ன செய்யிறானெண்டு அவனுக்கே விளங்கிறதில்லை" என்று சனங்கள் பேசிக்கொண்டார்கள். ஊருக்குள் பெண் கிடைக்காததால் காரைநகர் வரை போய் பெண் எடுக்கவேண்டியிருந்தது. அதற்குப் பிறகு இப்போது கிளியனுக்கு அந்தச் சம்பவம் குறித்த ஞாபகம் வந்து இராணுவ வீர்களிடம் சொல்லிக் கொடுத்திருக்கிறான். தருமலிங்கத்தின் தோட்டத்திற்குள் இராணுவ வீரர்கள் நிற்பதை பக்கத்துத் தோட்டக்காரர்கள் எட்டயிருந்து கவனித்துக்கொண்டிருந்தார்கள். இராணுவ வீரர்களிற்கு முன்னால் எதுவும் பேசாமல் தருமலிங்கம் மவுனமாக நின்று தலையைக் குனிந்து நிலத்தைப் பார்த்தவாறேயிருந்தார். காலையில் திருப்புகழும் மாலையில் திருமந்திரமும் உச்சரிக்கும் அந்த வாயில் எந்தக் காலத்தில் பொய் வந்தது! பெர்னாண்டோ என்ற இராணுவீரன் தருமலிங்கத்தின் பின்புறமாக வந்து அவரது இரண்டு கைகளையும் பின்னால் இழுத்து முறுக்கிப் பிடித்துக்கொண்டான். அப்போது தருமலிங்கத்தின் முகம் தானாகவே வானத்தைப் பார்த்து நிமிர்ந்தது. உதய் என்ற இராணுவீரன் தருமலிங்கத்தின் முன்னால் வந்து நின்று அவரது முகத்தில் காறி உமிழ்ந்தான். தருமலிங்கம் மறுபடியும் பூமியை நோக்கித் தலையைக் குனிந்தபோது அவரது தோள்பட்டைகளில் சுள்ளென வலி கிளம்பிற்று. அவரது முகத்திலிருந்து இராணுவ வீரனின் எச்சில் கோடாகப் பூமிக்கு வழிந்தது. உதய் தனது ஏ.கே.47 துப்பாக்கியை எடுத்து உயரே தூக்கிப்போட்டு தலைகீழாக ஏந்திக்கொண்டான். ஏந்திய வேகத்திலேயே துப்பாக்கியின் பின்புறத்தை தருமலிங்கத்தின் கொட்டைகளை நோக்கிச் செலுத்தினான். அப்போது பின்னாலிருந்து கைகளைப் முறுக்கிப் பிடித்துக்கொண்டிருந்த பெர்னாண்டோ அவரைக் கீழ்நோக்கி இழுத்து மல்லாத்தினான். தருமலிங்கத்திற்கு கிறுதி மாதிரி வந்தது. அவர் கண்விழித்தபோது அந்தத் தோட்ட வெளிக்குள் ஒரு குஞ்சு குருமானும் இல்லை. கொட்டைகள் இரண்டும் உயிர்போக வலித்தன. மெதுவாக எழுந்து உட்கார்ந்து சாரத்தை விலக்கிப் பார்த்தார். இரண்டு கொட்டைகளும் பெரிய கறுத்தக் கொழும்பான் மாம்பழங்கள் போல கனிந்து வீங்கியிருந்தன. ஆண்குறி சிறுத்துப்போய் ஒரு நாவற்பழம் போல உடலில் ஒட்டிக்கொண்டிருந்தது. அதன் முனையில் ஒரு துளி இரத்தம் கசிந்திருந்தது. தருமலிங்கம் மெதுவாக எழுந்து வீட்டை நோக்கி கால்களை அகட்டி அகட்டி வைத்து மெல்ல நடந்தார். அவர் பாதிவழியில் போய்க்கொண்டிருக்கும்போது எதிரே அசோகமலர் தன்னை நோக்கி அழுதுகொண்டே ஓடிவருவதைக் கண்டார். அன்று இரவு அவர் சுவரில் சாய்ந்து இருந்துகொண்டே அசோகமலரிடம் சொன்னார்: “இல்ல, இந்த இடம் சரியில்ல, இந்த இடம் என்னைப் போ போ எண்டுது. நான் போகப் போறன்.” “எங்கையப்பா போகப் போறீயள்?” “இல்லை மலர்..இந்த இடம் என்னைப் போ..போ..எண்டு சொல்லுது.. இனி ஒரு நிமிசமும் நான் இஞ்சை இருக்கக்கூடாது” அடுத்த மாதம் நீர்கொழும்பிலிருந்து அறுபது ஆட்களை ஏற்றிக்கொண்டு இத்தாலிக்குக் கிளம்பிய மீன்பிடிப் படகில் தருமலிங்கமும் இருந்தார். இரண்டு மாதக் கடற் பயணத்திற்குப் பின்பு இத்தாலிக்கு போய் அங்கிருந்து ரயிலில் பிரான்ஸ{க்கு வந்து சேர்ந்தார். அவர் ரயிலிலிருந்து பாரிஸ் கார் து லியோன் ரயில் நிலையத்தில் இறங்கியதுமே தன்னை அழைத்துப் போக வந்திருந்த அசோகமலரின் தம்பியிடம் சொன்ன முதல் வார்த்தைகள்: “சரியாயிருக்கு, தம்பி இந்த இடத்தில எல்லாம் சரியாயிருக்கு..அமைப்பா இருக்கு” 2 பாரிஸில் விசா இல்லாமல் வாழ்வதென்றால் சும்மாவா! தருமலிங்கம் ஆள் அரைவாசியாகிப் போனார். அசோகமலரின் தம்பியின் வீட்டுக்குப் பின்னாலிருந்த சிறிய ஸ்டோர் ரூமை ஒருமாதிரியாகச் சரிப்பண்ணி வசிக்கும் அறையாக்கி தருமலிங்கத்திற்குக் கொடுத்திருந்தார்கள். வேலைக்குப் போகிறாரோ இல்லையோ மாதம் பிறந்தால் கண்டிப்பாக வாடகைக் காசை எண்ணி வைக்கவேண்டும். தருமலிங்கம் கடுமையான உழைப்பாளி ஆயிற்றே. கிடைக்கும் வேலைகளை எல்லாம் மாடுபோல முறிந்து செய்தார். சமையலறைகளில் தோட்டங்களில் கட்டடங்கள் கட்டுமிடத்தில் சந்தையில் அச்சகத்தில் தமிழ்க் கடையில் எனப் பலபட்டறை வேலைகளையும் செய்தார். மாதம் தவறாமல் அசோகமலருக்கு பணம் அனுப்பினார். தனக்கு விசா விரைவில் கிடைத்துவிடுமெனவும் அது கிடைத்தவுடன் அசோகமலரையும் பிரான்ஸுக்குக் கூப்பிட்டுவிடுவாரென்றும் கடிதங்கள் எழுதினார். ஒவ்வொரு இலந்தையடிப் பிள்ளையார் கோயில் திருவிழாவுக்கும் மறக்காமல் நன்கொடையாக இருபத்தைந்தாயிரம் ரூபாய்கள் அனுப்பினார். ஆனால் பிரான்ஸுக்கு வந்த பன்னிரெண்டாவது வருடம்தான், தருமலிங்கத்தின் நாற்பத்தாறாவது வயதில் அவருக்கு விசா கிடைத்தது. அவருக்கு விசா கிடைத்ததும் அவர் நேரே இந்தக் கதைசொல்லியிடம்தான் வந்தார். பாரிஸில் அவருக்கு ஒரே நண்பன் இந்தக் கதைசொல்லிதான். தன்னுடைய சிரமங்களையும் மனவுளைச்சல்களையும் மனைவியைப் பிரிந்திருக்கும் வேதனையையும் குழந்தையில்லாத குறையையும் அவர் எந்த ஒளிவு மறைவுமில்லாமல் வார்த்தை வார்த்தையாகத் துயரமும் சுயபச்சாதாபமும் சொட்ட இந்தக் கதைசொல்லியிடம்தான் பகிர்ந்துகொள்வார். இந்தக் கதைசொல்லியின் வழிகாட்டலில்தான் ஒரு தனியார் வேலைவாய்ப்பு நிறுவனத்தின் மூலம் பாரிஸின் புறநகர் ஒன்றிலிருந்த இருசக்கர வாகனத் தயாரிப்பு தொழிற்சாலையில் தருமலிங்கத்திற்கு கடைநிலைத் தொழிலாளியாக வேலை கிடைத்தது. ஆணிகள் நட்டுகள் பொறுக்கிக் கழுவித் துடைக்கும் வேலைதான். அந்த வேலையில் அவர் மகிழ்ச்சியாகவே இருந்தார். பிரஞ்சு மொழியை ஓரளவு பேசவும் கற்றுக்கொண்டார். இவருக்கு விசா கிடைத்ததற்காக செல்வச் சந்நிதி கோயிலில் அசோகமலர் அன்னதானம் வழங்கினார். அசோகமலரை பிரான்ஸஸுக்கு அழைப்பதற்கான வேலைகளில் தருமலிங்கம் மும்முரமாக இறங்கினார். தருமலிங்கத்திற்கு நாற்பத்தேழு வயதில் புத்திர பாக்கியம் இருக்கிறது என லாச்சப்பலில் முகாமிட்டிருக்கும் ஆந்திரா சாத்திரி அடித்துச் சொல்லியிருந்தான். ஆனால் பிரஞ்சுச் சட்டங்களின்படி அசோகமலர் பிரான்ஸ் வந்து சேர இரண்டு வருடங்கள் எடுக்கும். ஊருப்பட்ட பேப்பர் வேலைகளும் தூதரகச் சடங்குகளும் நடுவில் இருந்தன. தான் பிரான்ஸ் வருவது ஒருபுறமிருக்கட்டும், அதற்கு நடுவில் தன்னையொருமுறை வந்து பார்த்துப் போகுமாறு அடிக்கடி அசோகமலர் தொலைபேசியில் அழுதுகொண்டிருந்தார். ஒவ்வொருமுறை தொலைபேசிப் பேச்சை முடிக்கும்போதும் ’என்ர ராசா" என அசோகமலர் ஓர் ஆழமான துயரப் பெருமூச்சை விட்டது தருமலிங்கத்தை வதைத்துக்கொண்டேயிருந்தது. தொழிற்சாலையில் தருமலிங்கம் இரண்டு மாதங்கள் விடுப்பு எடுத்துக்கொண்டார். ஆனால் எக்காரணம் கொண்டும் இலங்கை மண்ணை மிதிக்க அவர் விரும்பவில்லை. இலங்கையைப் பற்றிய நினைப்பு வரும்போதெல்லாம் அவரது கை தானாகவே அவரது உள்ளாடையை விலக்கும். தருமலிங்கம் தனது கொட்டைகளைப் பார்க்கும்போது அவருக்கு அழுகிய கறுத்தக் கொழும்பான் மாம்பழங்களே நினைவுக்கு வரும். இலங்கையை நினைத்தால் அந்த மாங்காய் வடிவத்தீவு அவரது கொட்டைகள் போலவேயிருக்கும் சித்திரமே அவரது மனதில் எழுந்தது. அப்போது அசோகமலர் பிரஞ்சுத் தூதரகத்தில் அலுவல்கள் காரணமாக கொழும்பில் இருந்தார். அவரை சென்னைக்கு வரச்சொல்லிவிட்டு தருமலிங்கமும் சென்னைக்குப் புறப்பட்டார். தருமலிங்கமும் அசோகமலரும் தங்குவதற்கு இரண்டு மாதங்களுக்கு வாடகைக்கு ஒரு வீட்டை நுங்கம்பாக்கத்தில் இந்தக் கதைசொல்லிதான் ஏற்பாடு செய்து கொடுத்தார். தருமலிங்கத்திற்கு இதுதான் முதலாவது விமானப் பயணம். நான்கு மணிநேரங்கள் முன்பாகவே பாரிஸ் விமான நிலையத்திற்குப் போய்விட்டார். அதிகம் பொருட்களை தன்னுடன் எடுத்துச் சொல்லவில்லை. பாரிஸில் கிடைக்கும் அத்தனை பொருட்களும் இப்போது இந்தியாவிலேயே மலிவு விலையில் கிடைக்கின்றன என இந்தக் கதைசொல்லி அவருக்குச் சொல்லியிருந்தார். அசோகமலருக்கு சில தின்பண்டங்களும் ஒன்றிரண்டு ஆடைகளும் ஏழெட்டு ஓடிக்கொலோன் போத்தல்களும் தாய்க்காரிக்குக் கொடுத்துவிட ஒரு சுவெட்டரும் மட்டுமே தருமலிங்கம் எடுத்துச் சென்றிருந்தார். விமானநிலையத்தில் கொஞ்சம் பதற்றமாகத்தான் இருந்தார். அவர்கள் பாஸ்போர்டையும் தருமலிங்கத்தையும் மாறிமாறி உற்றுப் பார்த்ததிலேயே அவருக்குப் பாதிச் சீவன் போய்விட்டது. ஒருமாதிரியாகத் தட்டுத்தடுமாறி குடியகல்வுச் சடங்குகளை முடிந்துக்கொண்டு நிம்மதிப் பெருமுச்சு விட்டுக்கொண்டு புறப்பட்டால் அடுத்ததாக, எடுத்துச்செல்லும் பொருட்களை பரிசோதனை செய்யும் சடங்கு. இவரது கண்முன்னேயே ஓடிக்கொலோன் போத்தல்கள் குப்பைத் தொட்டிக்குள் வீசப்பட்டன. தின்பண்டங்களிலும் அரைவாசி குப்பைத் தொட்டிக்குள் போனது. தருமலிங்கம் செய்வதறியாது தடுமாற்றத்துடன் குப்பைத் தொட்டியையே பார்த்துக்கொண்டிருந்தார். அதற்குள் இன்னும் சில பொருட்களும் விழத்தான் செய்தன. அவரது சுமையை அவர்கள் சரி அரைவாசியாகக் குறைத்துவிட்டிருந்தார்கள். அவரது ஜக்கெட்டையும் சப்பாத்துகளையும் பெல்டையும் கழற்றி பரிசோதனை இயந்திரத்திற்குள் வைக்கச் சொன்னார்கள். அவர்கள் சொன்னது புரிந்தாலும், தனக்குத்தான் ஏதோ பிழையாக விளங்குகிறது என்றுதான் தருமலிங்கம் முதலில் நினைத்தார். பிறகு பார்த்தபோதுதான் அவருக்கு முன்னால் வரிசையில் நின்றவர்கள் வெறுங்கால்களோடு இடுப்புக் காற்சட்டைகளைக் கைகளால் பற்றிப் பிடித்தவாறு அரைநிர்வாணக் கோலத்தில் முன்னே நகர்ந்துகொண்டிருப்பதைப் பார்த்தார். இடதுகையால் இடுப்புக் காற்சட்டையைக் கீழே விழாமல் பற்றிப் பிடித்தவாறு பரிசோதனை மேடையில் சிதறிக்கிடந்த தனது பொருட்களை வலதுகையால் மறுபடியும் சேகரித்துப் பெட்டிக்குள் திணித்துப் பெட்டியை மூடுவதற்குள் தருமலிங்கத்திற்கு வியர்த்து வழிந்தது. சாடையாகக் கிறுதி வருமாப்போலவும் கிடந்தது. ஒருமாதிரிச் சமாளித்துக்கொண்டு புறப்பட்டால் அடுத்தது உடற்பரிசோதனை. ஓர் இயந்திர வளைவுக்குள்ளால் புகுந்து வரச் சொன்னார்கள். அந்த வளைவுக்கு அருகில் ஆறரையடி உயரமான ஒருவன் விறைப்பாக நின்றிருந்தான். அவனது கையில் கறுப்பு நிறத்தில் நீளமான ஒரு பொருள் இருந்தது. அவன் அந்தப் பொருளைத் தூக்கி தருமலிங்கத்தின் முகத்துக்கு நேராகக் காட்டி ‘வா’ எனச் சைகை செய்தான். தர்மலிங்கம் சின்ன வயதில் முனியப்பர் கோயிலடியில் ‘ஜெமினி சேர்க்கஸ்’ பார்த்திருக்கிறார். அந்தக் காட்சிதான் இப்போது அவருக்கு ஞாபகம் வந்தது. அவர் அந்த வளைவுக்குள்ளால் புகுந்து கடந்தபோது அந்த வளைவு “கீக்கீகிக்கீ” என அலறியது. மறுபடியும் அவரை அந்த வளைவுக்குள்ளால் புகுந்து வரச் சொன்னார்கள். மறுபடியும் இயந்திரம் சத்தம் எழுப்பியது. மறுபடியும் வளைவுக்குள் போகச் சொன்னார்கள். இந்தமுறை இயந்திரம் வேறுவிதமான சத்தம் ஒன்றை எழுப்பியது. தருமலிங்கத்தை ஒரு வட்டத்திற்குள் நிற்கச் சொல்லிக் கட்டளை பிறந்தது. இரண்டு கால்களையும் விரித்து அகட்டி வைக்கச் சொன்னார்கள். கைகளை மேலே உயர்த்துமாறு சொன்னார்கள். பதற்றத்தில் தருமலிங்கத்தின் உடம்பு இன்னும் வியர்த்துக்கொட்டி வேகமாக நடுங்கியது. இது அவர்களிற்கு இன்னும் சந்தேகத்தைக் கிளப்பியிருக்கவேண்டும். ஆறரையடி உயரமான அதிகாரி விறைப்பான முகத்துடன் முதலில் தருமலிங்கத்தின் கைகளைத் தடவிச் சோதனையிட்டான். மார்பு, வயிறு எல்லாவற்றையும் அழுத்தித் தடவினான். முதுகையும் குண்டிப் பகுதியையும் ஏதோ ரொட்டிக்கு மாவு பிசைவது போன்ற தோரணையில் அமுக்கி எடுத்தான். அவரது கால்களைக் கீழிருந்து மேலாக அழுத்தித் தடவினான். தொடைக்கு மேற்பகுதியில் அவன் தனது கைகளை அளைந்து நகர்த்தியபோது தருமலிங்கத்தின் கொட்டைகளை அவனது விரலொன்று சட்டெனத் தீண்டுவது போலிருந்தது. தருமலிங்கம் துடித்துப்போனார். அவருக்கு தனது தோட்டத்தில் இளநீர் வாங்கிக் குடித்து உடல் வளர்த்த இராணுவீரன் கொடுத்த அடி மறுபடியும் ஞாபகத்திற்கு வந்தது. “என்ர கொட்டையைத் தொட இவன் ஆரு” என்ற கோபம் அவருக்குள் உன்னியது. ஆனால் ஆறரையடி உயர அதிகாரி இவரது கொட்டைகளையோ ஆண்குறியையோ தொட்டிருக்கவில்லை. அவற்றைத் தொடாமலேயே மயிரிழைத் தூரத்தில் விரல்களை வைத்துச் சோதனை செய்யும் முறைக்கு அதிகாரிகள் பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறார்கள். சோதனையின் இறுதியில் அவர்கள் தருமலிங்கத்தை போவதற்கு அனுமதித்தார்கள். தருமலிங்கத்திற்கோ கோபத்தால் உடல் நடுங்கியது. அவருக்குக் கிறுதி வரும் போலிருந்தது. அப்படியே திரும்பிப் போய்விடலாமோ என்றுகூட யோசித்தார். சென்னையில் அசோகமலர் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார் என்ற ஒரேயொரு சிந்தனை மட்டுமே அன்று அவரைப் பயணம் போக வைத்தது. துபாய் விமான நிலையத்தில் இறங்கி சென்னை செல்லும் விமானத்திற்கு மாற வேண்டியிருந்தது. துபாய் விமான நிலையத்திலும் இப்படியொரு மானக்கேடு ஏற்படுமென்று தருமலிங்கம் கருதியிருக்கவேயில்லை. வரிசையில் நிற்கும்போதே “அங்க சோதிச்சுத்தானே விட்டவங்கள்..நடுவில வானத்தில் வைச்சு என்ன பிரகண்டத்த எடுத்து ஒராள் மறைச்சுக் கொண்டு வர ஏலும்” என்று தனக்குள் முணுமுணுத்தார். ஒன்றுக்கு இரண்டு அரபிகள் அவரது உடலை பாதாதிகேசம் தடவினார்கள். இந்த முறையும் தனது கொட்டைகளை அவர்கள் தீண்டியதுபோலத்தான் தருமலிங்கத்திற்குப்பட்டது. தருமலிங்கம் கைகளை உயர்த்தியவாறு நின்றுகொண்டேயிருந்தார். விரித்துவைத்திருந்த அவரது கால்கள் கோபத்தால் நடுங்கிக்கொண்டிருந்தன. சென்னை விமான நிலையத்தில் இறங்கியதும்தான் தருமலிங்கம் ஒரு நிலைக்கு வந்தார். என்றாலும் இங்கேயும் கொட்டையைத் தடவுவார்களா என்றொரு சந்தேகம் அவருக்கு இருக்கத்தான் செய்தது. நல்ல காலத்திற்கு அப்படி எதுவும் நடக்கவில்லை. தனது பெட்டிகளை எடுத்துக்கொண்டு அவர் விமான நிலையக் கதவிற்குள்ளால் வெளியேறி வெளியே ஓரடி எடுத்து வைக்கும்போதே எதிரே கூட்டத்திடையே அசோகமலர் கைகளை அசைத்தவாறு வெட்கப் புன்னகையுடன் நிற்பதைக் கண்டார். அவர் அடுத்த அடியை எடுத்துவைக்க முயன்றபோது பின்னாலிருந்து ஒருகை அவரது தோளைப் பற்றிப் பின்னால் மறுபடியும் விமான நிலையத்திற்குள் இழுத்தது. தருமலிங்கம் பின்னால் இழுபட்டுக்கொண்டே முகத்தை மட்டும் முன்னாலே நீட்டி அசோகமலரை வைத்தகண் வாங்காது பார்த்தார். அசோகமலரின் முகம் பீதியில் உறைந்துகொண்டிருந்தது. தருமலிங்கத்தை தனியறைக்குள் கூட்டிச்சென்று ஆடைகளைக் கழற்றி உள்ளாடையுடன் நிறுத்திப் பரிசோதனை செய்தார்கள்;. அவர்மீது அவர்களிற்கு ஏதோ விசேட சந்தேகமாம். சோதனை மகா முரட்டுத்தனமாக இருந்தது. இம்முறை அவர்களது வெள்ளை உறை அணிந்த கைகள் நிச்சயமாகவே தருமலிங்கத்தின் கொட்டைகளையும் ஆண்குறியையும் தீண்டின. தருமலிங்கத்தின் வாயிலிருந்து வெப்பத்துடன் அந்தச் சொற்கள் அப்போது உரக்க வந்தன: “தமிழனுக்கு தமிழனே உப்பிடி செய்யக்கூடாது” 3 சென்னையில் நாட்கள் அற்புதமாகக் கழிந்தன. அசோகமலருக்கு கொள்ளை மகிழ்ச்சியும் உற்சாகமும். அவர்கள் இருவருக்குமே கோயில் குளம் பார்க்கும் எண்ணமோ ரங்கநாதன் தெருவில் ஷொப்பிங் செய்யும் எண்ணமோ அறவேயில்லை. காலையில் அருகிலிருக்கும் கடைத்தெருவுக்கு இருவருமாகச் சோடிபோட்டுச் சென்று மீன், நண்டு , இறைச்சி என்று வாங்கிவந்து சமைப்பார்கள். வெள்ளிக்கிழமைகளில் மட்டும் மரக்கறி. இரவு மொட்டை மாடியிலிருந்து கடலை கச்சான் சாப்பிட்டவாறே நீளக் கதைத்துக்கொண்டிருந்தார்கள். தருமலிங்கம் கதைக்கும்போது இடையிடையே பிரஞ்சு மொழிச் சொற்களும் கலந்து வருவதை அசோகமலர் ஆசைஆசையாக ரசித்தார். “நீங்கள் இப்பிடி பிரான்ஸ் கதைச்சால் எனக்கு என்னெண்டு விளங்குமாம்..” என்று சிணுங்கவும் செய்தார். இரவுகளில் ஆசைதீரப் புணர்ந்தார்கள். அசோகமலர் பூரித்துப்போயிருந்தார். தருமலிங்கத்திற்கு இளமை மீண்டுவந்து கூத்திட்டது. புணர்ச்சியின்போது அசோகமலர் எல்லாநிலைகளிலும் புன்னகைத்துக்கொண்டேயிருந்தார். தருமலிங்கத்திற்கு பெருமை பிடிபடாமல் கிடந்தது. ஒருநாள் காலையில் அசோகமலர் அவருக்குக் கொடுத்த முட்டைக் கோப்பியைக் குடித்துவிட்டு எழுந்துநின்று கைகளைக் காற்றில் சுழற்றி இரண்டு பலமான குத்துகள் விட்டார். ஒருகுத்து உதய்க்கு, அடுத்த குத்து பெர்னாண்டோவுக்கு. மகிழ்ச்சி என்பது அந்த நான்கு சுவர்களிற்குள் அவர்களிற்கு இருந்தது. ஒருநாள் மாலையில் இருவரும் திரைப்படம் பார்க்கலாம் என முடிவு செய்தார்கள். அமைந்தகரையில் ஒரு பென்னம் பெரிய வணிக வளாகத்திலிருந்த திரையரங்கிற்குச் சென்றார்கள். நுழைவுச் சீட்டுகளை வாங்கிக்கொண்டு திரையரங்கிற்குள் நுழைவதற்காக வரிசையில் நின்றுகொண்டிருந்த தருணத்தில்தான் தருமலிங்கம் அதைக் கண்டார். திரையரங்க வாசலிலே ஆட்களைப் பரிசோதனை செய்யும் வளைவு இயந்திரம் நிறுத்தப்பட்டிருந்தது. அதன் இருபுறத்திலும் விறைப்பாக இரண்டு காவலாளிகள் நின்றிருந்தனர். “மலர் கொஞ்சம் அத்தோம் பண்ணும்” என்று தர்மலிங்கம் மனைவியின் கைகளைப் பிடித்து இழுத்தார். இருவரும் வரிசையிலிருந்து விலகினார்கள். தருமலிங்கம் கவனித்தபோது இரண்டு காவலாளிகளும் ஒருவரது சட்டைப்பையிலிருந்த சிகரெட் பெட்டி, லைட்டர் எல்லாவற்றையும் வாங்கி ஒரு பக்கத்தில் போடுவது தெரிந்தது. அடுத்துப் போனவரின் வாயிலிருந்த சுயிங்கத்தை அங்கேயிருந்த குப்பைத்தொட்டியில் உமிழுமாறு காவலாளி சொன்னான். அதன் பிறகு தலையிலிருந்து கால்வரை தடவிப் பார்த்தார்கள். “இஞ்சேரும் மலர் எனக்கு வயித்துக்க குத்துது” என்று தருமலிங்கம் சொன்னார். இருவரும் படம் பார்க்காமலேயே திரும்பி வீட்டுக்கு வந்தார்கள். வீட்டுக்குள் கால் வைத்த நொடியில் தருமலிங்கத்தின் வயிற்றுவலி சரியாகிவிட்டது. அதற்குப் பிறகு தருமலிங்கம் வீட்டைவிட்டு வெளியே போவதேயில்லை. கேட்டால் “இந்தத் தூசியும் புழுதியும் எனக்கு ஒத்துக்கொள்ளுதில்ல மலர்” என்றார். தருமலிங்கம் பிரான்சுக்குத் திரும்பவேண்டிய நாளுக்கு இரண்டு நாட்களிற்கு முன்புதான் அசோகமலர் அவரது கைகளைப் பிடித்து உள்ளங்கைகளை எடுத்து அவற்றுக்குள் தனது முகத்தைப் புதைத்துக் கண்ணீர் மல்கியபடியே தான் கர்ப்பம் தரித்திருப்பதாகச் சொன்னார். தருமலிங்கத்தால் மகிழ்ச்சியைத் தாங்க முடியவில்லை. தலைக்கு மேல் கைகளைக் குவித்து “பிள்ளையாரப்பா” என்று கூவினார். பிறகு அசோகமலரிடம் சொன்னார்: “சிறப்பாயிருக்கு..எல்லாம் கலாதியாயிருக்கு. எல்லாம் சரியாயிருக்கு” அடுத்தநாள் அசோகமலர் கொழும்புக்குப் புறப்படவேண்டும். மனைவியைப் பத்திரமாக அனுப்பிவைத்துவிட்டு அதற்கு அடுத்தநாள் தருமலிங்கம் பிரான்ஸ{க்குப் புறப்பட்டார். சென்னை விமான நிலையம்வரை உற்சாகமாயிருந்தவர் விமான நிலையத்தைக் கண்டதுமே சற்று நிலைகுலைந்தார். ஆனால் இம்முறை பதற்றத்திற்கு மேலாக ஆத்திரமே அவரிடமிருந்தது. சென்னையிலும் சரி துபாயிலும் சரி மீண்டும் அதேபோன்ற கடுமையான சோதனைகள்தான். கொட்டைகளைத் தடவுவதுபோல வந்து போக்குக்காட்டி அவர்களது விரல்கள் விலகியபோதெல்லாம் தருமலிங்கம் ஆத்திரத்திலும் அவமானத்திலும் துடித்துப்போனார். பாரிஸ் விமானநிலையத்தில் அவருக்குக் கிறுதியே வந்துவிட்டது. விமானத்தில் ஏறப் போகப் போகும்போது சோதனை செய்தீர்கள் சரி.. விமானத்திலிருந்து இறங்கிப் வரும்போதும் சோதனை செய்யவந்தால் எப்படி? ஒரு சுங்க இலாகா அதிகாரி “மிஸியூ…மிஸியூ” என்று கூப்பிடக் கூப்பிடக் காது கேளாதவர்போல பெட்டிகள் வைக்கப்பட்டிருந்த தள்ளுவண்டியைத் தள்ளிக்கொண்டு தருமலிங்கம் வேகமாக நடந்தார். அந்த அதிகாரி பின்னால் வருகிறானா என தருமலிங்கம் சற்றுத் திரும்பிப் பார்த்தபோது அந்த அதிகாரி இவருக்குப் பின்னால் வராமல் வேறொரு பயணியைச் சோதனை செய்துகொண்டிருந்தான். தலையை ஆட்டியவறே கால்களை எட்டப் போட்டு ஆங்காரமாகத் தள்ளுவண்டியைத் தள்ளிக்கொண்டு போன தருமலிங்கம் அடுத்த இரண்டாவது நிமிடத்தில் சிவில் உடையணிந்திருந்த இரண்டு சுங்க இலாகா அதிகாரிகளால் மடக்கிப் பிடிக்கப்பட்டார். ’சவப்பா நோ!" என்று தருமலிங்கம் போட்ட கூச்சலில் விமான நிலையமே திரும்பிப் பார்த்தது. அணுஅணுவாகச் சோதனை போடுவது என்பார்களே அதுதான் நடந்தது. தருமலிங்கத்தின் உடல் முழுவதும் அவர்களது கையுறைகள் அணிந்த கரங்கள் ஊர்ந்தன. தருமலிங்கத்தை படுக்கவைத்து எக்ஸ்–ரேயும் எடுத்துப் பார்த்தார்கள். கிட்டத்தட்ட நான்கு மணிநேர விசாரணை. சுங்க அதிகாரி கூப்பிட்டபோது எதற்கு தருமலிங்கம் ஓட வேண்டும் என்பதுதான் விசாரணையின் மையம். அவர்களால் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை. தருமலிங்கம் அந்த அலுவலகத்தை விட்டு வெளியே வரும்போது சோதித்த அதிகாரிகளில் ஒருவன் அவருடன் கைகுலுக்க வந்தான். தருமலிங்கம் கையைக் கொடுக்காமல் அவனை முறைத்துப் பார்த்தார். “அடுத்த தடவை இங்கே வரும்போது சோதனைக்கு அழைத்தால் தயவுசெய்து ஒத்துழையுங்கள், ஒத்துழைத்தால் இப்படியான காலவிரயங்களை நாங்கள் தவிர்த்துக்கொள்ளலாம்” என்று அதிகாரி சொல்லிச் சொன்ன வாய் மூடமுன்பே தருமலிங்கத்தின் கையிலிருந்த பெட்டி பறந்துபோய் விமான நிலையத் தரையில் விழுந்து வாய் பிளக்க அதற்குள்ளிருந்த திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா, திருநீறு, சந்தனம், ஆயுர்வேத எண்ணெய் எனப் பல சரக்குகள் தரை முழுவதும் சிதறின. தருமலிங்கம் தனது கால்களை ஒருசேர வைத்துக்கொண்டு இடுப்பில் இரு கைகளையும் ஊன்றிக்கொண்டு கழுத்தை முன்னே நீட்டி அந்த அதிகாரியைப் பார்த்துத் தமிழில் கத்தினார்: “அடுத்தமுறை ஏன் வரச்சொல்லுறாய்? இந்தமுறை மரியாதை கெடுத்தினது போதாதோ?” 4 பயணக் களைப்பு தருமலிங்கத்தை படுக்கையில் அமுக்கினாலும் விமான நிலையத்தில் ஏற்பட்ட ஆற்றாமையால் அவருக்கு ஒருகண் நித்திரையும் வரவில்லை. பிள்ளைத்தாச்சியான மனைவியைத் தனியே விட்டுவிட்டு வந்த கவலை வேறு அவரை உருக்கியது. காலையில் அய்ந்து மணிக்கு எழுந்து தொழிற்சாலைக்கு வேலைக்குப் போகவேண்டும். எனவே கட்டாயப்படுத்தி தூக்கத்தை வரவழைக்க முயற்சித்தார். ஒரு மணிநேரம் தூங்கியிருப்பார். அலாரம் அடித்தது. குளித்துவிட்டு நெற்றி நிறையத் திருநீறைப் பூசிக்கொண்டு தொழிற்சாலைக்குக் கிளம்பினார். ஒரு மணிநேரம் ரயிலில் பயணம் செய்து தொழிற்சாலையை அடைந்தார். இரண்டு மாதங்களிற்குப் பின்பு வேலைக்கு வருகிறார். தொழிற்சாலை வளவுக்குள் காலடி எடுத்து வைக்கும்போதே அவருக்குள்ளிருந்த உழைப்பாளி உற்சாகமாக விழித்துக்கொண்டான். உயர்ந்திருந்த தொழிற்சாலைக் கட்டடம் காலைச் சூரியனின் ஒளியில் மின்னியது. அந்தத் தொழிற்சாலையின் முன்பக்கம் முழுவதும் கண்ணாடிகளால் இழைக்கப்பட்டிருந்தது. தொழிற்சாலையின் பிரதான வாசலை நெருங்கியவர் அங்கே சில தொழிலாளர்கள் கும்பலாக நிற்பதைக் கண்டார். வழமையாக இப்படி யாரும் இந்த நேரத்தில் கூடி நிற்பதில்லை. ஏதும் விபத்தோ என்ற எண்ணத்தில் கால்களை எட்டிப்போட்டவர் வாசலை நெருங்கியதும் அப்படியே நின்று ஒரு கையை மார்பில் கட்டிக்கொண்டு அடுத்த கையால் வாயை மூடிக்கொண்டு அசையாமல் நின்றார். அவரது கண்கள் வாசலையே வெறித்துப் பார்த்தன. அங்கே மனிதர்களைப் பரிசோதனை செய்யும் ஓர் இயந்திர வளைவு இருந்தது. அதனருகே தொழிற்சாலைக்குப் புதியவனான பிரஞ்சு இளைஞன் ஒருவன் காவலதிகாரிக்கான சீருடையும் சப்பாத்துகளும் தொப்பியும் அணிந்து புன்னகையோடு கம்பீரமாக நின்றிருந்தான். தருமலிங்கம் விடுமுறையில் போகும்போது அந்த இடத்தில் இந்த இயந்திரமுமில்லை, இந்த இளைஞனுமில்லை. அந்த வாசல் ஓவென்று திறந்து கிடக்கும். இது புதிய ஏற்பாடு. தொழிலாளிகள் இந்த இயந்திரத்திற்குள் புகுந்து கடந்த பின்பு, காவலதிகாரியான இளைஞன் அவர்களின் உடலைத் தடவிப் பரிசோதித்து ஒவ்வொருவராகத் தொழிற்சாலைக்குள் அனுமதித்தான். திடீரென தருமலிங்கம் ஓடத் தொடங்கினார். அவர் தொழிற்சாலையை விலாப்பக்கமாகச் சுற்றி வேகமாகப் பின்புறத்தைச் சென்றடைந்தார். மாலையில் வேலை முடிந்து தொழிலாளர்கள் வெளியேறும் வழி பின்புறமேயிருந்தது. தருமலிங்கம் எதிர்பார்த்தது போலவே அந்த வழியிலும் பரிசோதனை செய்யும் ஓர் இயந்திர வளைவு இருந்தது. தருமலிங்கம் மெதுவாக நடந்து தொழிற்சாலையின் முன்புற வாசலுக்கு வந்தார். இப்போதே வேலை தொடங்குவதற்கு இரண்டு நிமிடங்கள் தாமதமாகயிருந்தன. தருமலிங்கம் சோர்வு மேலிடப் படிகளில் ஏறி வாசலுக்குச் சென்றார். காவலதிகாரியான இளைஞனிடம் வணக்கம் சொல்லிட்டு தனது தொழிற்சாலை அடையாள அட்டையை எடுத்துக் காட்டினார். அந்த இளைஞனும் புன்னகையுடன் பதில் வணக்கம் சொல்லிவிட்டு இவரைப் பரிசோதிப்பதற்குத் தயாராக நின்றான். தருமலிங்கம் அந்த இயந்திர வளைவிற்குள் நுழையாமல் திடீரென அதைச் சுற்றிக்கொண்டு தொழிற்சாலைக்குள் நுழைய முற்பட்டபோது அந்த இளைஞன் தனது வலுவான கைகளை நீட்டி அவரைத் தடுத்தான். தருமலிங்கம் அவனை முறைத்துப் பார்த்துவிட்டு வேறு வழியில்லாமல் அந்த இயந்திரத்திற்குள் நுழைந்து வந்தார். இப்போது அந்த இளைஞன் தனது வெண்ணிறக் கையுறைகளைச் சரிசெய்துகொண்டு தருமலிங்கத்தின் உடலைச் சோதனை செய்வதற்குத் தயாராகிப் புன்னகையுடன் தருமலிங்கத்தை நெருங்கினான். தருமலிங்கத்திற்கு அந்தத் தருணத்தில் கிறுதி வந்தது. தனது தலையைப் பின்னால் சாய்த்துக்கொண்டு இடது கையால் தனது கொட்டைகளை ‘கவர்’ பண்ணிக்கொண்டு வலது கையைச் சுழற்றி அந்த இளைஞனின் கைகளை வலுவுடன் தட்டிவிட்டார். அப்போது சடுதியில் தொழிற்சாலை முழுவதும் அலாரங்கள் ஒலிக்க ஆரம்பித்தன. தொழிற்சாலையின் பிரதான கதவு டபாரெனத் தானே இறுக மூடிக்கொண்டது. நாலாபுறமிருந்தும் காவலாளிகள் பிரதான வாயிலை நோக்கி ஓடிவந்தார்கள். தருமலிங்கத்தை முன்வைத்து அங்கேயொரு மினி பஞ்சாயத்துக் கூடியது. தருமலிங்கம் தனது உடலில் கைவைக்க யாருக்கும் அதிகாரமில்லை என விடாப்பிடியாக நின்றார். தொழிற்சாலை முகாமையாளரோ அப்படிப் பரிசோதனை செய்வது பொதுவிதியென்றும் தன்னைக் கூட அப்படிப் பரிசோதனை செய்துதான் உள்ளே அனுப்புகிறார்கள் என்றும் சொல்லிவிட்டு தனது பாரமான உடம்பைத் தூக்கிக்கொண்டு கைககளை உயர்த்தியபடியே அந்த இயந்திர வளைவுக்குள் இருமுறை புகுந்தோடி வந்து காவலதிகாரி முன்பாகக் கைகளை உயர்த்தியபடியே மூச்சுவாங்க நின்று ஒரு சிறிய ஆற்றுகையை நிகழ்த்தி தருமலிங்கத்திற்கு பிரச்சினையைப் புரியவைக்க முயன்றார். தொழிற்சங்கப் பிரதிநிதியும் தருமலிங்கத்தை சமாதானப்படுத்த முயன்றார். “இங்கே பார் தருமலிங்கம்..உலகம் முழுவதும் பாதுகாப்புப் பிரச்சினைகள் இருக்த்தான் செய்கிறது..உதாரணமாக அல் கொய்தா..” என்று அவர் முடிக்க முதலே தருமலிங்கம் “என்னைப் பார்த்தால் அல் கொய்தா மாதிரியாகவா இருக்கிறது?” என்று கேட்டார். தொழிற்சங்கப் பிரதிநிதி உலக அரசியலைக் கரைத்துக் குடித்தவர். அவர் அமைதியான புன்னகையுடன் “ஏன் தோழர், இலங்கைத் தமிழர்கள் கூட குண்டு வைப்பதில் தேர்ந்தவர்கள்தானே” என்றார். தருமலிங்கம் அப்படியே வாசற்படியில் உட்கார்ந்தார். பிறகு எழுந்து நடந்து அந்த இயந்திர வளைவிற்குள் நுழைந்து அந்தக் காவலதிகாரி இளைஞனின் முன்னால்போய் கால்களை அகற்றி நின்றுகொண்டு கைகளை உயரே தூக்கினார். அப்போது தருமலிங்கத்தை ஊக்குவிக்கும் முகமாக முகாமையாளார் மெல்லத் தனது கைகளைத் தட்டிப் பாராட்டினார். காவலதிகாரி இளைஞன் மிகப் பொறுமையாக தருமலிங்கத்தின் உடலைத் தடவிப் பரிசோதித்தான். இவனும் தனது கொட்டைகளைத் தடவியதாகவே தருமலிங்கம் உணர்ந்தார். அன்று முழுவதும் அவருக்கு வேலையே ஓடவில்லை. இரவு சரியாகத் தூக்கமும் வரவில்லை. இரவு முழுவதும் கையால் தனது கொட்டைகளை வருடிக் கொடுத்தவாறே படுக்கையில் கிடந்தார். ஆனால் விடிகாலையில் அவரின் மனதில் ஒரு தெளிவு மின்னிச் சென்றது. அவர் படுக்கையிலிருந்து எழுந்து உட்கார்ந்துகொண்டு தனது கைகளைப் பக்கவாட்டில் நீட்டி பறப்பது போல அவற்றை மேலும் கீழும் அசைத்துக்கொண்டு சொன்னார்: “எல்லாத்துக்கும் வழியிருக்கு! சிறப்பாயிருக்கு. மலருக்கு வயித்தில சிங்கக்குட்டி இருக்கு..எல்லாம் சரியாயிருக்கு, எல்லாம் ஒரு அமைப்பாயிருக்கு”. அடுத்தநாள் காலையில் முதல் ஆளாகத் தருமலிங்கம் தொழிற்சாலையில் நின்றார். அவர் மெல்லிய துணியில் தொளதொளப்பான காற்சட்டை ஒன்றை அணிந்திருந்தார். மிடுக்காக நடந்து சோதனை இயந்திர வளைவிற்குள் நுழைந்து காவலதிகாரியான இளைஞனின் முன்னால் போய்நின்று தனது கால்களை அகற்றி வைத்துக் கைகளை உயர்த்தினார். காவலதிகாரி தனது கையுறைகளைச் சரி செய்துகொண்டு மிக மெதுவாக அவரது கால்களைத் தடவிக்கொண்டே நிமிர்ந்து மேலே வந்தபோது காவலதிகாரியின் விரல்கள் நடுங்குவதைத் தருமலிங்கம் கவனித்தார். அவர் அன்று திட்டமிட்டே ஜட்டி அணிந்து வரவில்லை. அவரது விறைத்துநின்ற ஆண்குறி நீண்டு அந்த இளைஞனின் கைகளில் சடுதியில் தவழ்ந்தது. அவன் சடாரெனத் தனது கைகளை இழுத்துக்கொண்டான். தருமலிங்கத்தை தொழிற்சாலையின் உள்ளே போகுமாறு சொன்னான். மாலையில் வேலை முடிந்து வெளியேறியபோது அந்தக் காவலதிகாரி வெளியேறும் வழியில் இருந்தான். அவனிடம் போய் நின்று தருமலிங்கம் கைகளை உயரத்தினார். அவனது கைகள் நடுங்குவதை தருமலிங்கம் கொடுப்புக்குள் முகிழ்த்த சிரிப்புடன் கவனித்தார். அவனது கைகள் அவரது தொடைக்குக் கிட்டவாக வரும்போது தருமலிங்கம் தனது இடுப்பைச் சடாரென முன்னே தள்ளினார். படாரெனத் தனது முகத்தைப் பின்னுக்கு இழுத்த இளைஞன் தருமலிங்கத்தைப் போகுமாறு சொன்னான். அடுத்தநாள் தருமலிங்கம் வேலைக்குப் போனபோது அந்தக் காவலதிகாரி இளைஞன் வேறுபக்கம் தனது பார்வையைச் செலுத்தினான். தருமலிங்கம் அவனுக்கு முன்னால் போய்நின்று தனது இடுப்பை முன்நகர்த்திக் காட்டினார். அந்த இளைஞன் “உள்ளே போங்கள்” என மெதுவாக முணுமுணுத்தான். தருமலிங்கம் இரவில் பேரிச்சம்பழம், பாதாம்பருப்பு போன்றவற்றை மட்டுமே சாப்பிட்டார். தொழிற்சாலைக்குள் நுழைவதற்கு முன்பும் வெளியேறுவதற்கு முன்பும் கொங்கோ தேசத்திலிருந்து இறக்குமதியாகும் கோலா விதைகளை வாயில் போட்டு மென்றார். அந்த விதைகள் ஆணுறுப்பின் விறைப்பை நீண்டநேரம் பாதுகாக்கும் சக்தி கொண்டவை. தருமலிங்கத்தால் தனது இரகசியக் கற்பனைகள் மூலம் நினைத்த மாத்திரத்தில் தனது ஆண்குறியை எழுச்சி கொள்ள வைக்க முடியும். அவ்வாறு எழுச்சிக்கொள்ள வைப்பதற்கு அவர் மனதில் ஒன்றிரண்டு பெண்களை நினைத்துக்கொள்வார். எக்காரணம் கொண்டும் அந்த நேரத்தில் அவர் அசோகமலரை நினைப்பதில்லை. தெருவில் காணும் பெண்கள், உறவினர்கள், நடிகைகள் என யாரையும் அவர் அப்போது நினைக்கமாட்டார். குறிப்பிட்ட சில உலக நாட்டு பிரதம மந்திரிகளையும் ஜனாதிபதிகளையுமே நினைத்துக்கொள்வார். சிறுவயதிலிருந்தே அதுதான் அவரது வழக்கம். இந்த விசயத்தை அவர் ஒருநாள் பகடியோடு பகடியாக வாய்தவறி இந்தக் கதைசொல்லியிடம் சொல்லியிருக்கிறார். ஒரு தொழிலாளியை காவலதிகாரி தொடர்ந்தும் உடல் பரிசோதனை செய்யாமல் தொழிற்சாலையின் உள்ளே அனுமதிப்பதையும் வெளியேற அனுமதிப்பையும் கண்காணிப்புக் கமெராவில் கவனித்த பாதுகாப்பு உயர் அதிகாரிகள் அந்தக் காவலதிகாரிமீது ஒரு விசாரணையை ஏற்படுத்தினார்கள். அந்த இளம் அதிகாரி கைகளைப் பிசைந்தவாறே, தருமலிங்கம் ஜட்டி போடாமல் தொழிற்சாலைக்கு வருவதாலும் எப்போதுமே அவரது ஆண்குறி விறைத்துக்கொண்டு நீண்டிருப்பதாலும் தன்னால் அவரைத் தொட்டுப் பரிசோதனை செய்ய முடியவில்லை என்று தயக்கத்துடன் சொன்னான். தருமலிங்கத்தை முகாமையாளர் கூப்பிட்டு விசாரித்தபோது தருமலிங்கம் “ஜட்டி போடாமிலிருப்பது தனிமனித உரிமை சார்ந்த விசயம், இதில் தொழிற்சாலை நிர்வாகம் தலையிட முடியாது” என்றார். இந்த விசயத்தில் தொழிற்சங்கம் தருமலிங்கத்தின் பிறப்புரிமையைக் காப்பாற்ற முன்வந்தது. முகாமையாளரால் பதில் பேசமுடியவில்லை. ஏனெனில் பணியிடத்தில் சீருடைகள், சப்பாத்துகள், தலைக்கவசங்கள் அணிய வேண்டும் என விதிகளிருந்தனவே தவிர ஜட்டி அணிந்திருக்க வேண்டும் என்று எந்த விதிகளும் இருக்கவில்லை. எனவே முகாமையாளர் காவலதிகாரியை மாற்றுவது என முடிவு செய்தார். பிரஞ்சு இளைஞனின் இடத்திற்கு ஒரு போலந்து நாட்டு முதியவர் நியமிக்கப்பட்டார். அடுத்த வருடம் ஓய்வூதியம் பெறவேண்டியவர் அந்தக் கிழவர். அந்தக் கிழவருக்குப் பல மொழிகள் தெரியும். கிழவர் ஒரு முடிவோடு இருந்தார். தருமலிங்கம் ஜட்டியென்ன காற்சட்டையே இல்லாமல் வந்தாலும் தடவிப் பரிசோதனை செய்வதென்ற முடிவோடுதான் அவர் இருந்தார். ஆனால் அடுத்தநாள் தருமலிங்கம் வேலைக்கு வரும்போது அவருக்கு முன்பே முப்பது வரையான தொழிலாளர்கள் உடல் பரிசோதனைக்காக வரிசையில் நின்றிருந்தார்கள். அவ்வளவு பேரும் வாட்டசாட்டமான அரபுத் தொழிலாளர்கள். இந்த உடல் பரிசோதனைகளால் பிரான்ஸில் அதிகம் பாதிக்கப்பட்டதும் அவமதிக்கப்பட்டதும் அவர்கள்தான். நேற்று தொழிற்சாலையில் நடந்த தருமலிங்கம் மீதான விசாரணை அவர்களிடம் ஒரு புதிய எழுச்சியை உருவாக்கியிருந்தது. அவர்கள் அவ்வளவு பேரும் ஜட்டி அணியாமல் வந்திருந்தார்கள். போலந்துக் கிழவர் அயர்ந்துபோனார். எத்தனை ஆண்குறிகளைத்தான் அவரால் தடவமுடியும். அவர் கைகளைக் கட்டிக்கொண்டு சும்மா நிற்க தருமலிங்கம் ஓர் இதழோரப் புன்னகையுடன் அந்தக் கிழவரைக் கடந்து தொழிற்சாலைக்குள் நுழைந்தார். அந்தத் தொழிற்சாலையில் வேலை செய்தவர்களில் அரைவாசிப் பேர் ஆபிரிக்கர்கள். அரபுக்களும் தருமலிங்கமும் சோதனையிடப்படாமல் உள்ளே போவதையும் தங்களை மட்டும் காவலதிகாரி சோதனையிடுவதையும் அவர்கள் இன அவமானமாகவே கருதினார்கள். அடுத்த நாளிலிருந்து அவர்களும் ஜட்டி அணியாமல் வரத் தொடங்கினார்கள். காவலதிகாரியாக இருந்த போலந்துக் கிழவர் எல்லா மொழிகளிலும் கடவுளைத் திட்டியவாறு மருத்துவ விடுப்பில் போய்விட்டார். அந்தத் தொழிற்சாலையில் உடற் பரிசோதனை செய்யும் வேலைக்கு வந்தவர்கள் ஒரே நாளில் அலறியடித்துக்கொண்டு சொல்லாமல் கொள்ளாமல் வேலையை விட்டு ஓடினார்கள். கடைசியாக ஒரு நோஞ்சான் கிழவர்தான் அரைகுறையாக அந்த வேலையில் நின்றுபிடித்தார். அவருக்குப் பார்வைக் குறைபாடிருந்தது. காதும் சரிவரக் கேட்காது. தொழிற்சாலை நிர்வாகம் திகைத்து நின்றது. இது நிர்வாகத்தின் கௌரவப் பிரச்சினை. முன்னூறு பேர்கள் வேலை செய்யும் அந்தத் தொழிற்சாலையில் நிர்வாகிகளான பத்துப் பேர்கள் மட்டுமே ஜட்டி அணிந்து வந்தார்கள். காலையில் அவர்களை மட்டுமே அந்த நோஞ்சான் காவலதிகாரி சம்பிரதாயமாக உடற்பரிசோதனை செய்வார். மற்ற நேரங்களில் அவர் கைகளைக் கட்டிக்கொண்டு ஓர் ஓரமாக நாற்காலியில் அமர்ந்துகொள்வார்.. தொழிலாளர்களின் இந்த எழுச்சிச் செய்தி மெல்ல மெல்ல மற்றத் தொழிற்சாலைகளிற்கும் பரவியபோது மற்றைய தொழிற்சாலைகளின் தொழிலாளிகளும் ஜட்டி அணியாமல் வேலைக்குச் செல்ல ஆரம்பித்தார்கள். இந்த எழுச்சிச் செய்தியை 1960-களில் அமெரிக்காவில் பெண்கள் முன்னெடுத்த பிரேசியர் அணியாத இயக்கத்தோடு ஒப்பிட்டு பத்திரிகைகள் எழுதின. நிர்வாண சங்கத்தினர் பாரிஸ் தொழிலாளர்களிற்குத் தங்களது வாழ்த்துச் செய்தியை அனுப்பி வைத்தனர். பாரிஸ் விமான நிலையத்தில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பு ஒன்றின்படி அந்த விமான நிலையத்தால் பயணிக்கும் ஆண்களில் முப்பத்தியிரண்டு சதவீதத்தினரும் பெண்களில் முப்பத்துநான்கு சதவீதத்தினரும் உள்ளாடைகள் அணியாமல் பயணிப்பதாகத் தெரியவந்தது. நாடாளுமன்றத்தில் உரையாற்றிய உள்துறை அமைச்சர் “தீவிரவாதத்திலிருந்து எமது மக்களைக் காப்பாற்றுவதா அல்லது உள்ளாடைகள் அணியாமல் இருக்கும் அவர்களது தனிமனித சுதந்திரத்தைக் காப்பாற்றுவதா” என்று சினத்துடன் கேட்டார். கத்தோலிக்க திருச்சபை “தொழிலாளர்களின் செயல் காட்டுமிராண்டித்தனம்” என அறிக்கை வெளியிட்டது. அதற்கு எதிர்வினையாக அனார்க்கிஸ சங்கத்தார் " போர் சேவகர்கள் இயேசுக் கிறீஸ்துவின் வஸ்திரங்களை அவர்களிற்குள் சீட்டுப்போட்டுப் பகிர்ந்துகொண்டபோது இயேசுவின் வஸ்திரங்களிடையே ஜட்டி இருந்ததில்லை" என்றொரு அறிக்கையை வெளியிட்டனர். முதலாளிகள் சங்கத்தினர் பல ஆலோசனைக் கூட்டங்களை நடத்திக் கலந்தாலோசித்தனர். தொழிலாளர்களின் இத்தகைய ஒன்றிணைவு உடனடியாகப் பொருளுற்பத்தியில் – அதாவது உள்ளாடைகள் உற்பத்தி செய்யும் தொழிலைத் தவிர– பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தாது என்றும் ஆனால் தொழிலாளர்களின் இத்தகைய ஒன்றிணைவு மேலும் பல உரிமைக் கோரிக்கைகளைக் காலப் போக்கில் அவர்கள் கிளப்ப அடிப்படையாயிருக்கும் என்றும் அவர்கள் அபிப்பிராயப்பட்டனர். எனவே இந்த உடற் பரிசோதனை முறைக்கு வேறொரு சிறப்பான நுட்பமான வழியைக் கண்டுபிடிக்கும்வரை தொழிற்சாலைகளில் நிறுவப்பட்டிருக்கும் உடற் பரிசோதனை இயந்திர வளைவுகளையும் காவலதிகாரிகளையும் தற்காலிகமாக நீக்கிக்கொள்வதென்று அவர்கள் தீர்மானித்தனர். திங்கள்கிழமை முதல் அவற்றை நீக்குவதாக தொழிற்சங்கங்களிற்கு முதலாளிகள் சங்கத்தால் கடிதம் எழுதப்பட்டது. திங்கள் அதிகாலையில் முதல் ஆளாகத் தருமலிங்கம் தொழிற்சாலைக்கு வந்தார். வாசலில் பரிசோதனை இயந்திர வளைவு இருந்த தடம் கூட இல்லை. காவலதிகாரியுமில்லை. தொழிற்சாலையின் கதவு அகலத் திறந்து கிடந்தது. வாசற்படிகளில் சில புறாக்கள் நின்றிருந்தன. தருமலிங்கம் புறாக்களிடம் சொன்னார்: “எல்லாம் வெளிச்சிருக்கு..எல்லாம் சரியாயிருக்கு” தருமலிங்கம் தொழிற்சாலையின் வாசற்படியில் ஏறிக்கொண்டிருந்தபோது அவரது கைபேசி ஒலித்தது. அவர் உற்சாகத்துடன் கைபேசியை எடுத்துப் பேசினார். மறுமுனையில் அசோகமலரின் குரல் துயரத்துடன் ஒலித்தது. அசோகமலர் மகப்பேறு மருத்தவரிடம் உடற்பரிசோதனைக்காகப் போயிருந்தாராம். கரு எதுவும் வயிற்றில் இல்லையாம். பேசி முடித்துவிட்டு அசோகமலர் “என்ர ராசா” என்றொரு ஆழமான பெருமூச்சைத் துயரத்துடன் வெளியிட்டார். தருமலிங்கம் சத்தமில்லாமல் வாசற்படிகளிலிருந்து இறங்கினார். அப்படியே தொழிற்சாலை வளவிலிருந்து வெளியேறினார். அதற்குப் பின்பு அவர் அந்தத் தொழிற்சாலைப் பக்கம் காணப்படவேயில்லை. (‘ஆக்காட்டி’ செப்டம்பர் இதழில் வெளியானது) தங்கரேகை புனிதவதி ரீச்சருக்குக் காதுகள் கொஞ்சம் மந்தம் எனச் சொல்லி ஆரம்பித்தான் கதைசொல்லி. புனிதவதியைத் தேடி வந்திருந்த விடுதலைப் புலிகள் சொன்னது அவருக்குச் சரியாகக் கேட்கவில்லை. எனினும் வந்திருந்த இருவரையும் பார்த்து ‘வாருங்கள்’ என்பதுபோலத் தலையாட்டிச் சிரித்தவாறே அவர்களை வரவேற்றுவிட்டு, முற்றத்தில் இருந்த இரண்டு ப்ளாஸ்டிக் நாற்காலிகளைக் காட்டி வந்தவர்களை உட்காரச் சொன்னார் புனிதவதி. வந்தவர்கள் புனிதவதி ரீச்சரை உட்காருமாறு சொல்ல, எதுவும் பேசாமல் புனிதவதி தலையை ஆட்டிவிட்டு முற்றத்து மண்ணில் மெல்ல உட்கார்ந்துகொண்டார். புலிகள் நாற்காலியில் உட்காரத் தயங்கி நின்றார்கள். அவர்களில் ஒருவன் புனிதவதியை நாற்காலியில் உட்காருமாறு கையைக் காட்டி மறுபடியும் சொன்னான். அவனது சைகையை ஓரளவு புரிந்துகொண்ட புனிதவதி “பரவாயில்லை நான் பணிய இருக்கிறேன், அதுதான் எனக்கு வசதி” என்று சொல்லியவாறே இரு கால்களையும் முற்றத்து மணலில் நீட்டிக்கொண்டார். பித்த வெடிப்பால் அவரது பாதங்களில் தோல் தாறுமாறாக உரிந்திருந்தது. யுத்தம் உக்கிரமாக நடந்துகொண்டிருந்தது. இராணுவத்துக்கும் புலிகளுக்கும் நடுவே எல்லைக் கோடுகள் அடிக்கடி நகர்ந்துகொண்டிருந்தன. வடக்கும் தெற்குமாக மாறி மாறி நகர்ந்துகொண்டிருந்த எல்லைகளில் இப்போது வடக்குப் பக்கத்திலிருக்கும் கடைசிக் கிராமம் இதுதான். இந்தக் கிராமத்திற்கு அப்பால் ஓங்கிய வன்னிக்காடும் காட்டிற்குள் கைவிடப்பட்ட சிறு குடியிருப்புகளும் மட்டுமே கிடந்தன. அந்தக் காட்டில் புலிகள் காவலரண்களை அமைத்து எல்லையைக் காவல் செய்தார்கள். அந்த எல்லைக்கு அப்பால் சூன்யப் பிரதேசமிருந்தது. அதற்கும் அப்பால் இராணுவத்தின் எல்லைக்கோடும் காவலரண்களும், அங்கிருந்து சில கிலோமீற்றர்கள் தொலைவில் வவுனியா நகரமுமிருந்தன. இரண்டு எல்லைக்கோடுகளிலிருந்தும் எதிரிகளின் பகுதிகளை நோக்கி எப்போதும் துப்பாக்கிச் சூடுகளும் அவ்வப்போது எறிகணை வீச்சுகளும் பரிமாறிக்கொள்ளப்பட்டன. அங்கே வெடிக்கும் குண்டுகளின் ஓசை இங்கே கிராமத்தில் கேட்கும். அந்தச் சத்தங்களால்தான் புனிதவதி ரீச்சருக்குக் காதுகள் மந்தமாகிவிட்டன என அவரது ஒன்றுவிட்ட தம்பி வேலும் மயிலும் சொல்லிக்கொள்வதுண்டு. ஆனால் புனிவதிக்கு முப்பது வயதுக்கு முன்பாகவே காதுகள் மந்தமாகிவிட்டன. அதை வெளியில் காட்டிக்கொள்ளாமல் ஓய்வு பெறும்வரை அவர் அந்தக் கிராமத்தின் பள்ளிக்கூடத்தில் பணியாற்றியிருந்தார். புலிகள் வீடு வீடாகச் சென்று போராட்டத்திற்குப் பங்களிப்பாக தங்கம் கேட்டுக்கொண்டிருந்தார்கள். முதலில் தன்மையாகத்தான் கேட்பார்கள். தங்கம் பெயராது எனத் தெரிந்தால் பேச்சு வன்மையாகும். அதற்கும் பலனில்லாவிட்டால் எது வேண்டுமானாலும் நடக்கும். புலிகளின் மனவோட்டத்தைப் புரிந்துகொள்வது கிட்டத்தட்ட முடியாத காரியம். இந்தக் கதைசொல்லியால் கற்பனையில் கூட அதைப் புரிந்துகொள்ள முடிவதில்லை. புலிகள் ஒரு படிவத்தை நிரப்பித் தருமாறு புனிதவதி ரீச்சரிடம் கொடுத்தார்கள். புனிதவதிக்கு அதைப் படிக்க மூக்குக் கண்ணாடி தேவைப்பட்டது. அவர் மீண்டும் சிரமப்பட்டுக் கைகளை மணலில் ஊன்றி எழுந்து தனது குடிசை வீட்டிற்குள் மெதுவாக நடந்துசென்று மூக்குக் கண்ணாடியை எடுத்துக்கொண்டு வெளியே வந்து மறுபடியும் மணலில் உட்கார்ந்து படிவத்தையும் பேனாவையும் எடுத்து மடியில் வைத்துக்கொண்டார். அந்தப் படிவம் நிரப்புவதற்கு எளிதானதுதான். பெயர், வயது, உறவுகள், முகவரி என்று கேள்விகளிருந்தன. அதைக் கடகடவென்று புனிதவதி நிரப்பினார். வயது அறுபத்தொன்பது, விதவை, ஒரே மகன் பிரான்ஸில் இருக்கிறான், அவனது முகவரி தெரியாது என்ற விபரங்களை நிரப்பிய புனிதவதி படிவத்தில் கடைசியாக இருந்த கேள்வியான ‘கொடுக்கும் தங்கத்தின் அளவு’ என்ற கேள்விக்கு நேரே ‘பொருந்தாது’ என எழுதிக் கையொப்பமிட்டுக் கொடுத்துவிட்டு, “தம்பிமார் தேத்தண்ணீர் குடிக்கிறீர்களா.. சீனி இல்லை, தோடம்பழ இனிப்புத்தான் இருக்கிறது” என்றார். வந்திருந்தவர்களும் களைத்துத்தானிருந்தார்கள். அவர்களிற்கும் ஒரு தேநீர் தேவைப்பட்டது. சற்றுத் தயங்கி “அதற்கென்ன குடிக்கலாம் அம்மா” என்றொருவன் மெதுவாகச் சொன்னான். அது புனிதவதியின் காதில் விழாததால் அவர் மணலிலேயே உட்கார்ந்திருந்தார். அவர்கள் போவதற்காக அவர் காத்திருந்தார். அவர் பஸ் பிடித்து பெரிய ஆஸ்பத்திரிக்குப் போக வேண்டியிருந்தது. இன்று அவருக்குத் தலைமை மருத்துவரோடு சந்திப்பு இருக்கின்றது. படிவத்தில் புனிதவதி ரீச்சர் ‘பொருந்தாது’ என எழுதியிருந்தது வந்திருந்தவர்களைக் குழப்பிவிட்டது. அதற்கு என்ன அர்த்தம் எனத் தெரியாமல் யோசித்துக்கொண்டிருந்தார்கள். புனிதவதியோ ஏதும் பேசாமல் வந்திருந்தவர்களின் முகங்களையே பார்த்துக்கொண்டிருந்தார். இப்போது ஒருவன் “அம்மா நீங்கள் போராட்டத்திற்கு பங்களிப்புச் செய்யத்தானே வேண்டும்” என்றான். புனிதவதி மெதுவாகத் தலையாட்டிச் சிரித்தார். எதுவும் சொல்லவில்லை. வந்ததிலிருந்தே புனிதவதி தேவைக்கு அதிகமாகச் சத்தம்போட்டுப் பேசிக்கொண்டிருப்பதையும் அவரது கண்கள் தங்களது முகங்களையே இடைவிடாமல் பார்த்துக்கொண்டிருப்பதையும் அப்போதுதான் ஒருவன் உணர்ந்துகொண்டான். பொதுவாக காது மந்தமானவர்கள் தான் இப்படி நடந்துகொள்வார்கள் என்பது அவனுக்குத் தெரியும். அவன் நாற்காலியிருந்து எழுந்து புனிதவதி ரீச்சருக்கு அருகே வந்து உரத்து , ஆனால் பணிவாகச் சொன்னான்: “அம்மா நீங்கள் போராட்டத்திற்கு பங்களிப்புச் செய்யத்தானே வேண்டும் ..” இப்போது புனிதவதிக்கு அவனது கேள்வி விளங்கியது. அவர் சத்தமாக அவனுக்குப் பதில் சொன்னார்: “இந்த வயதில் என்னால் பயிற்சிக்கு வரமுடியாது தம்பி” கிழவி நக்கல் பண்ணுகிறது என வந்திருந்தவர்கள் நினைத்திருக்கக் கூடும். எனினும் பொறுமையாகவே அவர்கள் தொடர்ந்தும் பேசினார்கள். “உங்களைப் பயிற்சிக்கு வரச்சொல்லிக் கேட்டவில்லை அம்மா. பவுண் சேர்க்க வந்திருக்கிறோம்.” “என்னிடம் எங்கே தம்பி பவுண் இருக்கிறது.. இதோ காதில் கிடப்பது கூட ரோல்கோல்ட் தான்.” இதைப் போல எத்தனை வீடுகளையும் எத்தனை கிழவிகளையும் புலிகள் பார்த்திருப்பார்கள். எனவே அவர்கள் இன்னும் பொறுமையை இழக்காமலேயேயிருந்தார்கள் “உங்களது குடும்பம் இதுவரை போராட்டத்திற்கு எந்தப் பங்களிப்புமே வழங்கவில்லை. இது கடைசிச் சண்டை , நீங்கள் கட்டாயம் பவுண் தரத்தான் வேண்டும் அம்மா.” “தம்பி கடைசிச் சண்டை என்றால் அது கடைசியில்தான் வர வேண்டும். நீங்கள் முதலிலிருந்தே கடைசிச் சண்டையென்றே சொல்லிக்கொண்டிருக்கிறீர்கள்..ஆனால் என்னிடம் பவுண் இல்லை.” கிழவி அழுத்தக்காரி என்பது வந்திருந்தவர்களிற்கு விளங்கிவிட்டது. இப்போது அவர்களது முகத்தில் புன்னகை மறைந்து விநோதமான ஒரு பாவம் எழுந்தது. அவர்களது கண்கள் வெறித்துப் பார்க்கத் தொடங்கின. அவர்களது குரல்கள் இருமடங்காக உயர்ந்தன. “நாங்கள் உங்களுக்காகத்தானே சண்டைபிடித்துச் சாகிறோம். நாங்கள் சாவது உங்களுக்கு விளையாட்டாக இருக்கிறதா? நாங்கள் சயனைட் சாப்பிடுவது ஐஸ்கிரீம் சாப்பிடுவதாக உங்களுக்குத் தெரிகிறதா? எல்லையைக் காப்பாற்றுவதில் எத்தனை இளம் குருத்துகள் வீரச் சாவடைந்துவிட்டார்கள். சாகப் போகிற வயதிலே பவுணை வைத்திருந்து என்ன செய்யப் போகிறீர்கள்?” புனிதவதி ரீச்சரின் காதுகளில் உள்ள பிரச்சினை என்னவென்றால் சாதாரணமாகப் பேசினாலும் அவருக்கு விளங்காது, குரலை அதி உச்சமாக உயர்த்திப் பேசினாலும் அவருக்குக் கேட்காது. இரண்டுக்கும் நடுவில் தெந்தெட்டாகப் பேசினால்தான் அவருக்கு விளங்கும். அவரது தம்பி வேலும் மயிலுக்கும் மட்டும்தான் அப்படி நுணுக்கமாக புனிதவதிக்கு கேட்கக்கூடிய வகையில் பேசத் தெரியும். வந்திருந்தவர்கள் ஏதோ இரைகிறார்கள் என்பது மட்டும் புனிதவதிக்குத் தெரிந்தது. அது தனக்கு விளங்காததும் நல்லதே என்பது போலிருந்தது அவரது முகபாவம். அவரது தடித்த உதடுகள் இலேசாகப் புன்னகைத்துக்கொண்டேயிருந்தன. இந்தச் சிரிப்பு வந்திருந்தவர்களை மேலும் சினமூட்டக் கூடியதே. தங்களைக் கிழவி அலட்சியப்படுத்துகிறார் என்பது அவர்களிற்கு நன்றாகவே தெரிந்தது. ஆனால் இதுபோல எத்தனை அலட்சியங்களை அவர்கள் கதறக் கதற உடைத்துப்போட்டிருப்பார்கள். வந்திருந்தவர்கள் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்தார்கள். மற்றவனும் எழுந்து அந்தப் படிவத்தோடு வந்து புனிதவதிக்கு அருகில் குந்திக்கொண்டான். அவன் குனிந்தபோது அவனது சயனைட் மாலை புனிதவதியின் முகத்துக்கு நேரே ஆடியது. அவன் இப்போது தனது முகத்தில் கடுமையுமில்லாத இனிமையுமில்லாத ஆனால் உறுதியான பாவனையை வரவழைத்துக்கொண்டான். அவன் படிவத்தை புனிதவதியின் முன்னே நீட்டி, பிரான்ஸிலிருக்கும் அவரது மகனின் முகவரியை எழுதச் சொன்னான். அது அவருக்குத் தெளிவாகக் கேட்டது. மகன் குறித்து யாராவது முணுமுணுத்தால் கூட அவருக்குத் தெளிவாகக் கேட்டுவிடுகிறது. செவிப்புலன் வைத்தியர் கூட ஒருமுறை, புனிதவதி ரீச்சருக்கு காதுகள் நன்றாகத்தானிருக்கின்றன, அவரது மனதில்தான் ஏதோ பிரச்சினை எனச் சொல்லியிருந்தார். “எனக்கு மகனின் முகவரி தெரியாது” என்றார் புனிதவதி. வந்திருந்தவன் தனது கையிலிருந்த படிவத்தைத் தரையில் வீசியடித்தான். அது புனிதவதியின் கால்களுக்கிடையே விழுந்தது. புனிதவதி அதையெடுத்து கண்களில் ஒற்றிக்கொண்டார். ‘சரஸ்வதி’ என அவரது தடித்த உதடுகள் முணுமுணுத்தன. அந்தப் படிவத்தை மறுபடியும் அவர் பார்த்தார். மகனின் முகவரி உண்மையாகவே அவருக்குத் தெரியாதிருந்தது. புனிதவதியின் மகன் அமுதனுக்கு ஒரு வயதாக இருக்கும்போதே புனிதவதியின் கணவர் இறந்துபோயிருந்தார். மெக்கானிக்காக வேலை செய்த அவர் பெருங் குடிகாரர். நித்தமும் போதையில் வந்து புனிதவதியை மாடு போல அடிப்பார். புருசன் செவிட்டில் அடித்து அடித்துத்தான் தனது காதுகள் மந்தமாகிவிட்டன எனப் புனிதவதி நினைத்துக்கொண்டிருக்கிறார். கிடைத்த சொற்ப சம்பளத்தில்தான் அமுதனை புனிதவதி படிக்கவைத்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் வரை அனுப்பிவைத்தார். படிப்பு முடிந்ததும் மகனை நாட்டில் வைத்திருக்க புனிதவதி விரும்பவில்லை. இருந்த சிறிய கல்வீட்டையும் காணியையும் தனது தம்பி வேலும் மயிலுவுக்கும் விற்றுவிட்டுத்தான் அமுதனை அவர் பிரான்ஸுக்கு அனுப்பிவைத்தார். இப்போது அவர் வேலும் மயிலும் கொடுத்த சிறிய காணித்துண்டொன்றில் குடிசை போட்டு வாழ்கிறார். ஓய்வூதியப் பணம் வருவதால் ராங்கியான சீவியம்தான். யாரிடமும் எதையும் புனிதவதி எதிர்ப்பார்ப்பதில்லை. வெளிநாட்டிலிருந்த மகனிடம் கூட தனக்குப் பணம் அனுப்பக்கூடாது எனச் சொல்லியிருந்தார். அமுதன் பிரான்ஸுக்குப் போன புதிதில் சற்றுச் சிரமப்பட்டான், ஆனாலும் மொழியைப் படித்துச் சீக்கிரமாகவே அவன் முன்னேறிவிட்டான் என்று கேள்விப்பட்டது புனிதவதிக்கு பெரிய நிம்மதி. அவனுக்கு மனைவியை மல்லாவியில் கண்டுபிடித்து அந்தப் பெண்ணை கொழும்புவரை அழைத்துப் போய் புனிதவதிதான் விமானம் ஏற்றிவிட்டார். வேலும் மயிலும் புனிதவதியுடன் உதவிக்குப் போயிருந்தான். அமுதன் பிரான்ஸிலே தொலைபேசி அட்டைகளை விற்பனை செய்யும் நிறுவனத்தை நடத்திவருவதாகக் கடிதம் வந்தது. நிறுவனத்திற்கு புனிதவதியின் பெயரைத்தான் வைத்திருந்தானாம். திடீரென அவனுடனான தொடர்புகள் அறுந்துபோயின. கடந்த அய்ந்து வருடங்களாக அவனது குடும்பம் எங்கிருக்கிறது என்று யாருக்குமே தெரியவில்லை. வேலும் மயிலும் வவுனியாவுக்குப் போயிருந்தபோது பிரான்ஸில் இருக்கும் சொந்தக்காரன் ஒருவனை தொலைபேசியில் அழைத்து “அமுதன் இருக்கும் இடம் தெரியுமா ?” எனக் கேட்டான். மறுமுனையில் “தெரிந்தால் நான் போய் அவனை வெட்டியிருப்பேனே” என்று பதில் சொல்லிவிட்டுத்தான் “நீங்கள் யார் கதைக்கிறது” என்ற கேள்வி வந்தது. அமுதன் சீட்டுப் பிடிக்கும் தொழிலும் செய்திருக்கிறான். பாரிஸிலே அவனுக்கு ‘பவுண்சீட்டு அமுதன்’ என்றுதான் பெயர். காசுக்குப் பதிலாக மாதந்தோறும் தங்கம் கட்டும் இந்தச் சீட்டு பிரான்ஸிலே தமிழர்களிடையே பிரபலம். கடைசியில் கிட்டத்தட்ட ஆயிரம் பவுண்களோடு அமுதன் குடும்பத்தோடு தலைமறைவாகி விட்டானாம் என்ற செய்தியோடு வேலும் மயிலும் கிராமத்திற்குத் திரும்பினான். அவன் புனிதவதியிடம் இந்தச் செய்தியைச் சொன்னபோது அவர் அமைதியாக, தனக்குக் காதுகளில் கடுமையான இரைச்சலாகயிருக்கிறது என்றார். அந்தப் படிவத்தை புனிதவதியிடமிருந்து திரும்பவும் வாங்கியவன் எழுந்து நின்றான். குரலை உயர்த்தி " பெற்ற தாய்க்குப் பிள்ளையின் முகவரி தெரியாதா?" எனக் கேட்டான். புனிதவதி அவனது கண்களைப் பார்த்தவாறே ‘இல்லை’ எனத் தலையசைத்தார். இப்போது அவனின் கண்களிலே சிரிப்புக் கொப்பளித்தது. “உங்களுக்குத் தெரியாமலிருக்கலாம். ஆனால் உங்களது மகனை எந்த நாட்டிலிருந்தாலும் கண்டுபிடிப்பதற்கான கட்டமைப்புகள் எங்களிடம் உள்ளன. நாங்கள் அவரிடம் பங்களிப்பைப் பெற்றுக்கொள்கிறோம். இருபத்தைந்து வருடங்களாக பங்களிப்புச் செய்யாமல் அவர் இருக்கிறார். ஒரு நாளைக்கு ஒரு யூரோ என்று கணக்குப் போட்டாலும் 9125 யூரோக்கள் வருகின்றன. நாங்கள் அவரிடம் வாங்கிக்கொள்கிறோம், நன்றி அம்மா” என்று சொல்லிவிட்டு அவர்கள் படலையைப் பார்த்து நடக்கத் தொடங்கினார்கள். புனிதவதி ஒரு நிமிடம் மவுனமாகயிருந்தார். பின்பு அவர் சத்தம் போட்டு அவர்களை அழைத்தார். எதிர்பார்த்திருந்ததுதான் இது என்ற தோரணையில் அவர்கள் மெதுநடைபோட்டுத் திரும்பி வந்தார்கள். புனிதவதி மெதுவாக எழுந்து குடிசைக்குள் சென்று திரும்பிவரும்போது கையில் தங்கச் சங்கிலி ஒன்றோடு வந்தார். வந்திருந்தவர்களில் சிவந்த நிறத்துடனும் ஒல்லியான உடல்வாகுடனும் மீசையில்லாத முகத்திலே வட்ட வடிவிலானான மூக்குக்கண்ணாடி அணிருந்திருந்தவனுமான பதினேழு அல்லது பதினெட்டு வயதுகள் மதிக்கத்தக்கவனைப் பார்த்து புனிதவதி அவனது பெயரைக் கேட்டார். அவன் தனது அடையாள அட்டையை எடுத்துக் காட்டினான். அவனது பெயர் ‘கல்கி’ என்றிருந்தது. புனிதவதி ரீச்சர் அவனின் தலையைத் தடவிக்கொடுத்துவிட்டு “தம்பி உங்களுக்கு பெரிய எழுத்தாளர் ஒருவருடைய பெயர்” என்றார். அவன் உணர்ச்சியற்ற முகத்தோடு நின்றிருந்தான். “இது நான்கு பவுண் சங்கிலி, என்னுடைய செத்த வீட்டுச் செலவுக்காக நான் பொத்திப் பொத்தி வைத்திருந்தது. நான் செத்துப்போனால் எனக்குச் சடங்கு செய்து எரிக்கவேண்டியது உன்னுடைய பொறுப்பு கல்கி” என்று சொல்லிவிட்டு புனிதவதி ரீச்சர் அந்த நான்கு பவுண் சங்கிலியை கல்கியின் கையில் வைத்தார். ஒருகணம் வாங்கும் கையினது தயக்கத்தை புனிதவதி உணர்ந்துகொண்டார். “நீங்கள் தமிழீழத்தைப் பார்த்துவிட்டுத்தான் சாவீர்கள் அம்மா”எனக் கல்கி புன்னகைத்தான். பின்பு ‘உங்களது கையாலே தேநீர் குடித்துவிட்டுத்தான் போவோம்’ எனச் சொல்லிவிட்டு நாற்காலிகளில் இருவரும் அமர்ந்துகொண்டார்கள். அவர்கள் கைகளில் தோடம்பழ இனிப்பை வைத்து நக்கிக்கொண்டே தேநீர் குடித்துக்கொண்டிருக்கையில் பின்பக்கத்து வேலியை ஒரே தாவாகத் தாவிக்கொண்டு வேலும் மயிலும் அங்கே வந்தான். நேற்று வேலும் மயிலுவின் மனைவியைச் சந்தையில் வைத்து மடக்கியவர்கள் அவளிடம் மூன்று பவுண்கள் பெறுவதாகக் கையெழுத்து வாங்கியிருந்தார்கள். அதைக் கொடுப்பதற்கு தவணை கேட்கலாம் என வேலும் மயிலும் யோசித்துக்கொண்டே மணலில் குந்திக்கொண்டு ஒரு குறை பீடியைப் பற்றவைத்தான். அவனைச் சற்று நேரம் பார்த்துக்கொண்டிருந்த புனிதவதி கல்கியைக் காட்டி உரத்த குரலில் “இந்தத் தம்பி என்னுடைய செத்தவீட்டை நடத்துவதற்குப் பொறுப்பெடுத்திருக்கிறார்.. வேலும் மயிலும் உனக்கு இனிப் பொறுப்பில்லை” என்றார். தலைமை மருத்துவர் வருவதற்கு மதியத்திற்கு மேல் ஆகிவிட்டது. புனிதவதியும் வேலும் மயிலுவும் ஆஸ்பத்திரி விறாந்தையிலேயே குந்தியிருந்தார்கள். மிதிவெடியில் சிக்கிக் கால் சிதைந்துபோயிருந்த சீருடை அணிந்திருந்த ஒருவனை புலிகள் தூக்கிக்கொண்டு ஓடிவருவதை புனிதவதி பார்த்தார். அவர் கண்களை மூடிக்கொண்டார். அவரது தடித்த உதடுகள் ‘அம்மாளாச்சி’ என முணுமுணுத்தன. புனிதவதிக்கு வயிற்றில் கட்டி இருப்பது உறுதியாகிவிட்டதென்றும் அதை உடனடியாக அகற்றாவிட்டால் உயிருக்கு ஆபத்து என்றும் தலைமை மருத்துவர் சொன்னார். சிக்கலான அந்த அறுவைச் சிகிச்சையைச் செய்வதற்கு இங்கு வசதியில்லை என்றும் கொழும்புக்குப் போய்த்தான் அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டுமென்றும் அவர் சொன்னார். திரும்பிவரும்போது வேலும் மயிலுவிடம் புனிதவதி “நான் செத்துக்கொண்டிருக்கின்றேனா” எனக் கேட்டார். அவன் ஒரு பெருமூச்சை மட்டும் வெளியிட்டான். அறுவைச் சிகிச்சைக்கு நான்கு இலட்சம் ரூபாய்கள்வரை செலவாகலாம் எனத் தலைமை வைத்தியர் சொல்லியிருந்தார். வீட்டுக்கு வந்ததும் முற்றத்து மணலில் சக்கப்பணிய இருந்துகொண்டு கால்களை நீட்டியவாறே புனிதவதி ரீச்சர் சொன்னார்: " நான் இப்படியே செத்துப் போகிறேன்..எனது செத்தவீட்டுச் சடங்கை இயக்கம் செய்து முடிக்கும்" வேலும் மயிலும் கடுமையாக யோசித்தான். வவுனியா நகருக்குப் போய் பிரான்ஸுக்கு தெரிந்தவர்களிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு எப்படியாவது மருமகன் அமுதனைக் கண்டுபிடித்து, தாயார் கடுமையான நோய்வாய்ப்பட்டிருப்பதைத் தெரிவித்து அவனைக் கொழும்புக்கு வரச் சொல்வதென்றும் வர முடியாவிட்டால் நான்கு இலட்சம் ரூபாய்களாவது அனுப்பிவைக்கும்படி கேட்பதென்றும் அவன் முடிவெடுத்தான். ஆனால் அதிலும் ஒரு பெரிய சிக்கல் இருந்தது. எல்லைக் கோட்டைத் தாண்டி வவுனியா நகருக்குப் போவதென்றால் புலிகளிடம் ‘பாஸ்’ பெறவேண்டும். யாராவது ஒருவரைப் புலிகளிடம் பிணையாக வைத்துவிட்டுத்தான் ‘பாஸ்’ பெற வேண்டியிருக்கும். வேலும் மயிலுவுக்கு ‘பாஸ்’ கிடைக்கும் எனச் சொல்வதற்கில்லை. ஏனெனில் அவன் புலிகளுக்குக் கொடுப்பதாக உறுதியளித்திருந்த மூன்று பவுண்களை இன்னும் செலுத்தவில்லை. தவிரவும் வேறுயாரையும் தனக்குப் பணயமாக வைப்பதும் அவனுக்குப் பிடிக்கவில்லை. வேலும் மயிலுக்கு வன்னிக் காடுகள் தண்ணிபட்டபாடு. எனவே அவன் இரகசியமாக எல்லைக்கோட்டைக் கடப்பதென்று முடிவெடுத்தான். என்னதான் அவன் அசல் வன்னியான் என்றாலும் ஒவ்வொரு நாளும் நகர்ந்துகொண்டிருக்கும் எல்லைக்கோடுகள் அவனைக் குழப்பிவிடக் கூடியவையே. வேலும் மயிலுவின் நெருங்கிய கூட்டாளி பரமேஸ்வரன் இந்த விசயத்தில் தேர்ச்சியானவன். அவன் இரகசியமாக எல்லைக் கோடுகளைக் கடந்து ஆட்களைக் கூட்டிச்செல்பவன். இந்த வியாபாரத்தில் அவன் கொஞ்சம் செழிப்பாக இருந்தான். புலிகள் பவுண் சேர்த்தபோது அவன் அய்ந்து பவுண்களைக் கொடுத்திருந்தான். இந்தப் பரதேசியிடம் அய்ந்து பவுண்கள் இருந்தது புலிகளை உறுத்தியிருக்க வேண்டும். இந்தக் கதை நடந்து முடிந்த சிலநாட்களிலேயே அவனைப் புலிகள் பொறிவைத்துப் பிடித்துவிட்டார்கள் என்றான் கதைசொல்லி. பரமேஸ்வரன் எல்லைக்கோடு நிலவரத்தையும் அது எப்படியெல்லாம் மாறும் என்பதையும் வேலும் மயிலுவுக்கு மணலில் படம் வரைந்துகாட்டி விளக்கியதன் பின்பாக, வவுனியா புறப்படுவதை தனது மனைவிக்கு மட்டும் சொல்லிவிட்டு உடுத்த உடுப்புடன் வேலும் மயிலும் தெற்கே புறப்பட்டான். உடைகளைக் கைகளில் வைத்திருந்து புலிகளிடம் மாட்டிக்கொண்டால் நேரடியாக ’பங்கரு’க்குத்தான் அனுப்பப்படுவான். வெறும் கையுடன் மாட்டிக்கொண்டாலும் கூட ஏதாவது தகுந்த காரணம் சொல்லியாக வேண்டும். அந்தக் காரணத்தை இப்போதே யோசித்து வைத்திருந்தாலும் பிரயோசனமில்லை. எந்த இடத்தில், இரவிலா பகலிலா, எத்தனை மணிக்கு பிடிபடுகிறான் என்பதைப் பொறுத்து அப்போதுதான் உடனடியாகக் காரணத்தை உருவாக்கிக்கொள்ள வேண்டும். பிரான்ஸ் தொலைபேசி இலக்கங்கள் மூன்றை மனப்பாடம் செய்துகொண்டான். பரமேஸ்வரன் சொன்னது சரியாகவே இருந்தது. வேலும் மயிலும் தொம்பன் குளத்திற்கு வந்து சேரும்போது தொம்பன் குளத்திலிருந்து இரண்டாவது கட்டை தொலைவில் எல்லைக்கோடு வடக்கு – தெற்கிலிருந்து விலகி கிழக்கு – மேற்காக ஒரு கிலோ மீற்றர் தூரத்திற்கு மாறியிருக்கும் எனப் பரமேஸ்வரன் கணித்துச் சொல்லியிருந்தான். மாறாக, அந்த எல்லைக்கோடு தெற்கு நோக்கி முன்னகரும் என அந்த நேரத்தில் தராகி சிவராம் தலைகீழாகக் கணித்து எழுதியிருந்ததும் இந்தக் கதைசொல்லிக்கு ஞாபகத்தில் இருக்கிறது. ஒரு கிலோ மீற்றர் நீளத்திற்கு கிழக்கு எல்லைக்கோட்டில் புலிகளது காவல் நிலைகள். மேற்கே அதேயளவு நீளத்திற்கு ஆர்மிக்காரர்களது காவல் நிலைகள். இடையில் அய்நூறு மீற்றர்கள் சூன்யப் பிரதேசம். இரவு இந்தச் சூன்யப் பிரதேசத்திற்குள் நுழைந்து வேலும் மயிலும் தெற்கு நோக்கி ஓடவேண்டும். அடர்ந்த காடு அவனுக்குத் தைரியத்தைக் கொடுத்தது. காட்டிற்குள் நுழைந்துவிட்டால் அவன் காடாகவே மாறிவிடுவான் என அவன் தனக்குத்தானே சொல்லிக்கொண்டான். தான் பிறந்து தவழ்ந்த வன்னிக்காடு தன்னைக் கைவிடாது என அவன் மனதார நம்பினான். பரமேஸ்வரன், எல்லையைக் கடப்பதில் ஒரு நுட்பமான அறிவுரையை வேலும் மயிலுவுக்கும் வழங்கியிருந்தான். ஒருபோதும் இரு எல்லைக் கோடுகளுக்கும் மத்தியாகச் செல்லக்கூடாது. நடுவாகச் சென்றால் இரு தரப்பினது நோக்கு எல்லைக்குள்ளும் நாமிருப்போம். இருதரப்புத் துப்பாக்கிச் சூட்டையும் சந்திக்க நேரிடும். ஏதாவது ஒரு பக்கமாக ஒண்டிச் சென்றால் மற்றைய தரப்பினது பார்வையிலிருந்தும் துப்பாக்கிச் சூட்டிலிருந்தும் நாம் தப்பித்துக்கொள்ளலாம். இந்த வழியில் அய்ம்பது விழுக்காடுகள்ஆபத்துக் குறைவு. எனவே புலிகளது பக்கத்தைத் தவிர்த்து இராணுவத்தின் பக்கத்தாலேயே செல்லுமாறு பரமேஸ்வரன் அறிவுரை சொல்லியிருந்தான். ஆர்மிக்காரன் கண்டுகொண்டு சுட்டாலும் இலக்குத் தவற வாய்ப்பிருக்கிறது. ஆனால் புலிகளது பக்கத்தால் சென்றால் அவர்கள் இலக்குத் தவறாமல் சுட்டுச் சாய்ப்பார்கள் என்பது பரமேஸ்வரனின் அனுபவ அறிவு. அன்றிரவு எல்லைக் கோடுகளில் ஒரு சிறிய துப்பாக்கிச் சத்தம் கூடக் கேட்டிருக்கவில்லை. காட்டின் மைந்தனைக் காடு கைவிடவில்லை. விடிவதற்கு முன்பாகவே இரண்டு எல்லைக்கோடுகளையும் வேலும் மயிலும் தாண்டி விட்டான். காலைச் சாப்பாட்டிற்கு வவுனியா நகருக்குப் போய்விடலாம். இராணுவத்தின் எல்லைக்கோட்டுக்கு இரண்டு கிலோமீற்றர்கள் தொலைவிலிருந்த முதற்கிராமத்தின் பிள்ளையார் கோயில் கிணற்றில் தண்ணீர் அள்ளி முகத்தைக் கழுவிவிட்டு விநாயகனை மனதாரக் கும்பிட்டுவிட்டு நெற்றி நிறைய விபூதியைப் பூசிக்கொண்டு கோயில் வாசற்படிக்கட்டில் களைப்புத்தீர வேலும் மயிலும் உட்கார்ந்துகொண்டான். அந்தக் கோயிலுக்கு வெகுதூரத்திலேயே வீடுகளிருந்தன. கோயில் சுற்றுவட்டாரத்திலே ஆள் நடமாட்டமேயில்லை. கோயிலின் சிறுமண்டபத்திற்குள் இரண்டு ஆடுகள் படுத்திருந்தன. பிரான்ஸுக்குப் பேசவேண்டிய தொலைபேசி இலக்கங்களை ஒருமுறை வாய்விட்டுச் சொல்லிச் சரிபார்த்துக்கொண்டான். மருமகனிடம் பணம் கேட்கும் போது இரண்டு பவுண்களிற்கான பணத்தையும் சேர்த்துக் கேட்டுப் பார்த்துவிடலாம் என்று முடிவு செய்தான். புலிகளிற்கு தருவதாக ஒப்புக்கொண்ட மூன்று பவுண்களில் இரண்டு பவுண்களைக் கொடுத்தாற் கூடக் கொஞ்சம் நிம்மதியாக இருக்கலாம் என்று நினைத்துக்கொண்டான். அப்போது கோயிலுக்குப் பின்புறமிருந்து தோன்றிய ஓர் உயரமான மனிதன் விறைப்பாக நடந்து வந்து இவனுக்கு அருகில் அமர்ந்துகொண்டான். அந்த மனிதனுக்கு இருபது வயதுகள் இருக்கலாம். ஆள் கிட்டத்தட்ட ஆறரை அடிகள் உயரம் இருப்பான் என வேலும் மயிலுவுக்கும் தோன்றியது. இவ்வளவு உயரமான மனிதனை வேலும் மயிலும் தனது வாழ்நாளில் கண்டதில்லை. அந்த மனிதன் அணிந்திருந்த கறுப்புநிற நீளக் காற்சட்டை அவனது முழங்கால்களிற்கு சற்றுக் கீழேவரைதான் அவனது கால்களை மறைத்திருந்தது. அவனது நீளமான கால்கள் ஒரு முழத்திற்குச் சேறால் பூசப்பட்டிருந்தன. அவன் தலையில் முண்டாசு கட்டியிருந்தான். அவனது உடல் வற்றிப்போயிருந்தது. முகம் வீங்கிக்கிடந்தது. தன்னையே வேலும் மயிலும் கவனிப்பதை உணர்ந்த அந்த மனிதன் சற்றுத் திரும்பி உட்கார்ந்த போது வேலும் மயிலும் அந்த மனிதனின் முதுகில் வரிவரியாக இரத்தம் கட்டியிருப்பதைப் பார்த்தான். யாரோ அவனைத் தாறுமாறாகச் சவுக்காலோ தடியாலோ இரக்கமில்லாமல் அடித்திருக்கிறார்கள். முதுகில் திட்டுத் திட்டாய் இரத்தம் காய்ந்திருந்தது. வேலும் மயிலுவுக்கு அந்த மனிதனிடம் இரக்கம் பிறந்தாலும் எதுவும் பேசாமல் எழுந்து நின்றான். யாரும் யாரிடமும் இரக்கம் காட்டத்தக்கதான நிலையில் நாட்டு நிலவரம் இல்லை. ஒருவர் மீது மற்றொருவருக்குச் சந்தேகம் மட்டுமே நிலவிய காலமது என்றான் கதைசொல்லி. வேலும் மயிலும் மறுபடியும் பிள்ளையாரைக் கும்பிட்டுவிட்டு அங்கிருந்து கிளம்பினான். அப்போது அந்த முதுகில் அடிபட்ட காயங்களுடைய, கால்களில் சேறு பூசியிருந்த மனிதன் தனது முழங்கால்களில் தலையைச் சாய்த்து மெதுவாக அழுதுகொண்டிருந்தான். அந்த மனிதனின் பெயர் பமு. வவுனியா நகரத்திற்குச் சற்றுத் தொலைவிலுள்ள சிறியதொரு சிங்களக் கிராமமான மைத்ரிபுரவைச் சேர்ந்தவன் அவன். அவனை அவனது கிராமத்தில் ‘மோடயா’ பமு என்று அழைப்பார்கள். அவன் பிறவியிலேயே புத்தி மழுங்கியவனாக இருந்தான். அதனாலே அவன் பாடசாலைக்குச் சென்றதில்லை. நண்டும் சிண்டுமாக ஏழு பிள்ளைகளிருந்த அந்த விறகுவெட்டியின் குடிசையிலே பமு வேண்டாத பிள்ளையாகவே இருந்தான். அவன் யானை மாதிரி தீனி தின்னக்கூடியவன். மாடு மாதிரி வேலை செய்யக் கூடியவன். ஆனால் அவனால் திருத்தமாக ஒரு வேலையைச் செய்ய முடிவதில்லை. அரை மணிநேரத்தில் செய்து முடிக்கக் கூடிய வேலையை ஒருநாள் முழுவதும் உடலில் வியர்வை ஆறாக ஓட ஓடச் செய்வான். அப்படியும் அந்தவேலை திருத்தமாக இருக்காது. பமுவை அவனது தீராத வயிற்றுப் பசி துரத்திக்கொண்டேயிருந்தது. காடுகள் அவனுக்குப் பழக்கமானவை. அவன் தின்று தீர்த்ததால் காடே வெறுமையாகாப் போயிற்று என்று விறகுவெட்டியான அவனது தந்தை சலிப்புடன் சொல்லிக்கொள்வதுண்டு. பமு காலையில் எழுந்ததும் வேலை கேட்டபடியே கிராமம் முழுவதையும் சுற்றிவருவான். அன்றைய காலை உணவு கிடைத்தால் போதுமென்றிருக்கும். மதியம் இன்னொரு வீட்டில் வேலை கேட்பான். இரவு கையில் விளக்குடன் குளத்தில் நண்டு பிடிக்கப் போய்விடுவான். அவன் மீன்களையும் நண்டுகளையும் சமைக்காமல் பச்சையாக உண்பதற்குப் பழகியிருந்தான். சில நாட்களுக்கு முன்புவரை, கிராமத்தில் கோப்ரல் கமகே கட்டிக்கொண்டிருந்த மாடி வீட்டில் அவனுக்குத் தொடர்ச்சியாக வேலை கிடைத்துக்கொண்டிருந்தது. கோப்ரலின் மனைவி பமுவுக்குச் சலித்துக்கொள்ளாமல் பாற்சோறிட்டாள். புதுமனைப் புகுவிழாவின்போது பமுவுக்கு புதிய கறுப்புநிற நீளக்காற்சட்டையும் வெள்ளைச் சட்டையும் கிடைத்தன. அந்த நீளக் காற்சட்டை அவனது முழங்கால்களுக்கு சற்று கீழே வரையான பகுதியையே மறைத்தது. கோப்ரல் கமகே அமைதியான, நகைச்சுவை உணர்வுடைய மனிதர். வடக்கு யுத்தமுனையில் அவர் படுகாயமடைந்து பிழைத்து வந்திருந்தார். அவரது கால்கள் இரண்டும் முழங்கால்களுக்குக் கீழே நீக்கப்பட்டிருந்தன. கோப்ரல் சக்கர நாற்காலியில் உட்கார்ந்து எப்போதும் ஏதாவது ஒரு வேலையைச் செய்துகொண்டிருப்பார். அவருக்கு அரசாங்கம் வழங்கிய நிவாரணப் பணத்தோடு அவரது மனைவியின் நகைகளை விற்றுத் திரட்டிய பணத்தையும் வைத்து இந்த அழகிய மாடிவீட்டை கோப்ரல் கட்டி முடித்திருக்கிறார். கோப்ரல் அன்று மாலையில் உற்சாகமான மனநிலையிலிருந்தார். வழக்கத்தைவிடச் சற்று அதிகமாகக் குடித்திருந்தார். அப்போதுதான் பமு அந்தக் கேள்வியை அவரிடம் கேட்டான். " நீங்கள் ஒரு சாதாரண கோப்ரல். இவ்வளவு பெரிய வீட்டைக் கட்ட உங்களுக்கு எங்கிருந்து பணம் கிடைத்தது?" கோப்ரல் ஒருமுறை உரக்கச் சிரித்துவிட்டு “பமு உன்னிடம் ஒரு ரகசியம் சொல்கிறேன் யாரிடமும் சொல்லிவிட மாட்டாயே” என்றார். பமு கோப்ரலின் தலையில் தனது கையை வைத்து “யாரிடமும் சொல்ல மாட்டேன்” என்று குரலைத் தாழ்த்திக்கொண்டான். அவனது உற்சாகம் கோப்ரலின் உற்சாகத்தை மேலும் அதிகரிக்கவே அவர் தனது குரலை இன்னும் தாழ்த்திக்கொண்டே " புலிகள் தமிழர்களிடம் தங்கம் திரட்டுவது உனக்குத் தெரியுமா?" எனக் கேட்டார். பமு வியப்படைந்தவன்போல தனது கண்களை விரித்து “தெரியாது கோப்ரல்” என்றான். “ஆமாம் பமு.. புலிகளிடம் இப்போது ஆயுதங்கள் தீர்ந்துவிட்டன. வெளிநாட்டிலிருந்து அவர்களிற்கு ஆயுதம் வரும் வழிகளையெல்லாம் நாங்கள் அடைத்துவிட்டோம்” என்றார் கோப்ரல். பமு தலையை உற்சாகமாக ஆட்டிக்கொண்டான். கோப்ரல் மதுக்கிண்ணத்தை எடுத்து ஒரு மிடறு பருகிவிட்டுச் சொன்னார்: “இப்போது புலிகளிடம் துப்பாக்கிகள் இருந்தாலும் அவற்றிற்கான தோட்டாக்கள் அவர்களிடமில்லை. அவர்களே சொந்தமாகத் தோட்டாக்களை உற்பத்தி செய்யத் தொடங்கினார்கள். முதலில் செம்பிலிருந்தும் பிறகு ஈயத்திலிருநதும் பிறகு அலுமனியத்திலிருந்தும் பிறகு இரும்பிலிருந்தும் பிறகு வெள்ளியிலிருந்தும் அவர்கள் தோட்டாக்களை உற்பத்தி செய்தார்கள்.” “மெய்யாகவா! அது எப்படி உங்களிற்குத் தெரியும் கோப்ரல்?” கோப்ரல் கெக்கடமிட்டுச் சிரித்துவிட்டுச் சொன்னார்: “அந்தத் தோட்டாக்களை அவர்கள் எங்களிடம்தானே அனுப்பி வைத்தார்கள்.” “அது உண்மைதான்” என முணுமுணுத்தவாறே பமு தலையை ஆட்டிக்கொண்டான். " கடைசியில் எல்லாவித உலோகங்களும் தீர்ந்துபோன நிலையில்தான் அவர்கள் மக்களிடம் தங்கம் சேர்க்கத் தொடங்கினார்கள். அந்தத் தங்கத்தை உருக்கி அவர்கள் துப்பாக்கிகளிற்கான தோட்டாக்களைச் செய்தார்கள். சண்டையின்போது அந்தத் தங்கத் தோட்டாக்களில் எட்டுத் தோட்டாக்கள் எனது கால்களிலே பாய்ந்து அங்கேயே இருந்துவிட்டன. அந்தத் தங்கத் தோட்டாக்களை விற்றுத்தான் இந்த வீட்டைக் கட்டினேன்" என்று சொல்லிவிட்டு கோப்ரல் தனது முகத்தில் இரகசியமும் உறுதியும் கலந்த பாவனையை வரவழைத்துக்கொண்டார். “அதுவா விசயம்” எனச் சடுதியில் கூவிய பமு தனது நீண்ட மெல்லிய கைகளால் தனது வாயை முடியவாறே நிலத்தில் பொத்தென அமர்ந்துகொண்டான். அடுத்தநாள் காலையில், கிராமத்திலிருந்து பமு சொல்லாமற் கொள்ளாமற் காணாமற்போனான். இராணுவத்தில் சேருவதென்ற உறுதியான முடிவுடன் அவன் வவுனியா நகரத்திலிருந்த தலைமை இராணுவ அலுவலகத்திற்கு நேராகப் போனான். அங்கே காவலரணில் இருந்தவர்கள் இவனை உள்ளே அனுமதிக்க மறுத்தார்கள். “எதற்காக இராணுவத்தில் சேரப் போகிறாய்” என்று ஒரு சிப்பாய் இவனைப் பார்த்துக் கேட்க பமு எதுவும் சொல்லாமல் நின்றிருந்தான். இரகசியத்தைக் காப்பதாக அவன் கோப்ரலின் தலையில் கை வைத்தல்லவா சத்தியம் செய்திருந்தான். இவன் சற்றுப் புத்தி மழுங்கியவன் என்பது காவலரணிலிருந்த சிப்பாய்களிற்கு விளங்கிவிட்டது. “உனக்கு மரம் ஏறத் தெரியுமா’” என ஒரு சிப்பாய் கேட்க, தெரியும் என பமு தலையை ஆட்டினான். “அதோ அந்தத் தென்னைமரத்தில் ஏறி நல்லதாக இளநீர் பறித்துப்போடு, உன் திறமையையும் பார்த்துவிடலாம்” என்றான் சிப்பாய். “இதோ” என்று சொல்லிவிட்டு பமு தென்னைமரத்தை நோக்கி ஓடினான். தென்னைமரம் என்னவோ குட்டையானதுதான். பமுவைப்போல இரண்டு மடங்கு உயரம்தானிருக்கும். ஆனால் அதில் ஏறிப் பத்துக் காய்களைப் பறித்துவிட்டு இறங்குவத்கு பமுவுக்கு ஒருமணிநேரம் பிடித்தது. சிப்பாய்கள் இளநீர் குடித்து முடிந்ததும் வெற்று இளநீர் கோம்பைகளை பமுவை நோக்கி எறிந்தார்கள். பமு சிப்பாய்களை முறைத்துப் பார்த்தான். ஒரு சிப்பாய், “இங்கே ஆட்கள் தேவையில்லை , எல்லையில்தான் சண்டை நடக்கிறது அங்கே ஓடு” எனக் கூச்சலிட்டவாறே தனது கையிலிருந்த இளநீர் வெற்றுக் கோம்பையை பமுவை நோக்கி வீசினான். இலக்குத் தப்பால் கோம்பை பமுவின் முழுங்காலைத் தாக்கியது. பமு கூச்சலிட்டவாறே காலைப் பிடித்துக்கொண்டான். மேலும் கோம்பைகள் பமுவை நோக்கிவர, பமு காலை நொண்டியடித்தவாறே ஓடத் தொடங்கினான். ஒரு கோம்பை அவனது முதுகில் விழுந்தது. ஒரு கையால் காலைப் பிடித்தாவாறும் மறுகையால் முதுகைப் பிடித்தவாறும் ஒரு விநோதமான பிராணிபோல பமு துள்ளித் துள்ளி ஓடிக்கொண்டிருந்தான். அவனுக்கு எதிரே வீதியில் இராணுவப் பிரிவொன்று அணிநடை போட்டவாறே மிடுக்காக வந்துகொண்டிருந்தது. அன்று மாலையில் எல்லையிலிருந்த இராணுவக் காவலரண் ஒன்றில் பமு உட்கார வைக்கப்பட்டிருந்தான். அவனது முன்னுக்குப் பின்னான பேச்சுகள் இராணுவத்தினருக்குச் சந்தேகங்களைக் கிளப்பியவாறேயிருந்தன. இராணுவத்தில் சேருவதற்கு எதற்கு எல்லைக்கு வரவேண்டும் என அவர்கள் கேட்டார்கள். தலைமை முகாமில் அப்படித்தான் சொன்னார்கள் என்றான் பமு. காவலரணிலிருந்து தலைமை முகாமுக்குத் தொடர்புகொண்டு கேட்ட இராணுத்தினருக்கு, பமுவை அடித்துத் துரத்துமாறு உத்தரவு கிடைத்தது. முதலில் அவனிடம் தன்மையாக எடுத்துச்சொல்லி அவனைத் திரும்பவும் கிராமத்திற்கே போய்விடுமாறுதான் இராணுத்தினர் சொன்னார்கள். ஆனால், கிராமத்திற்குச் திரும்பிச் செல்வதென்றால் இராணுவ வீரனாகத்தான் செல்வேன் என்று பமு சொல்லிவிட்டான். அந்த நேரம் பார்த்து புலிகளின் பக்கத்திலிருந்து துப்பாக்கிகள் வெடிக்கும் சத்தம் கேட்டது. இராணுவச் சிப்பாய்கள் மணல்மூடைகளிற்குப் பின்னால் பதுங்கிக்கொண்டு பமுவின் கைகளையும் பக்கத்திற்கு ஒருவராகப் பிடித்து பமுவைக் கீழே இழுத்தார்கள். பமு நிமிர்ந்து நின்று தலையை ஒரு சிலிர்ப்புச் சிலிர்த்துக்கொண்டு தனது இரு கைகளையும் உதறிக்கொண்டான். இரண்டு சிப்பாய்களும் மூலைக்கு ஒருவராய் விழுந்தார்கள். பமு காவல் அரணிலிருந்து பாய்ந்து முன்னோக்கி ஓடினான். அடுத்த நூறு மீற்றர்கள் தூரத்தில் மரங்களிடையே பதுங்கியிருந்த இராணுவத்தினரிடம் பமு வசமாக மாட்டிக்கொண்டான். அன்று இரவு முழுவதும் அவர்கள் இராணுவக் காவலரணில் வைத்து பமுவை உருட்டி விளையாடினார்கள். ஒரு சிப்பாய் தனது இடுப்புப் பட்டியால் அது பிய்ந்துபோகும்வரை பமுவின் முதுகில் அடித்தான். காலையில் அவர்கள் பமுவை விரட்டி விட்டார்கள். பமு சட்டையைக் கைகளில் எடுத்தவாறு அழுதுகொண்டே போனான். அப்போது ஒரு சிப்பாய் “ஏய் பமு! யாழ்ப்பாணத்தில் தான் இராணுவத்துக்கு ஆட்கள் தேவை” என்றான். அதைக் கேட்டதும் பமுவின் அழுகை கொஞ்சம் குறைந்தது. அவனுக்குச் சற்று உற்சாகம் கூட ஏற்பட்டது. அவன் யோசித்தவாறே நடந்துகொண்டிருந்தான். இராணுவத்தில் எப்படியாவது சேர்ந்துவிடுவது என அவன் தனக்குள்ளேயே உறுதி எடுத்துக்கொண்டான். கையிலிருந்த சட்டையைத் தலையில் முண்டாசாகச் சுற்றிக்கொண்டான். கைகளை விறைப்பாக வைத்துக்கொண்டு ஒரு நிமிடம் நின்றான். பிறகு ஒரு காலை முன்னே வைத்து ‘வம’ எனச் சொன்னான். பிறகு அடுத்த காலை முன்னே வைத்து ’தக்குன’என்றான். வம – தக்குன, வம – தக்குன, வம – தக்குன எனச் சொல்லிக்கொண்டே அவன் வேகமாக நடந்து கொண்டிருந்தான். பிள்ளையார் கோயிலுக்கு வந்து சேரும்வரை அவன் தனது இராணுவ நடையை நிறுத்தவில்லை. காலை பத்துமணிக்கு வவுனியா தொலைத்தொடர்பு நிலையமொன்றிலிருந்து பிரான்ஸுக்கு முதலாவது தொலைபேசி அழைப்பை வேலும் மயிலும் செய்தான். அவன் அழைத்துப் பேசிய மூவருக்குமே புனிதவதி ரீச்சரின் மகனைக் குறித்து எந்தத் தகவலும் தெரியவில்லை. ஆனால் மூவருமே அவனைத் திட்டினார்கள். புனிதவதி உயிருக்கு ஆபத்தான நோயிலிருக்கிறார் என வேலும் மயிலும் சொன்னபோது ‘சிவன் சொத்து மட்டுமல்ல ஊர்ச் சொத்தும் குலநாசம்’ என்று பிரான்ஸிலிருந்து பதில் கிடைத்தது. இனி அழைப்பதற்கு இலக்கமுமில்லை, அழைக்கப் பணமும் இல்லை. வேலும் மயிலுவின் கையில் நூறு ரூபாய் சொச்சம் மட்டுமே எஞ்சியிருந்தது. மதியம் சைவக்கடையில் சாப்பிட்டுவிட்டு நேரத்தைப் போக்குவதற்காகத் திரைப்படம் பார்க்கப் போனான். அவன் கடைசியாகப் படம் பார்த்து இருபது வருடங்களிருக்கும். திரைப்படம் முடிந்ததும், இப்போது புறப்பட்டால் எட்டுமணியளவில் பிள்ளையார் கோயிலுக்குப் போய்ச் சேர்ந்துவிட முடியும் என வேலும் மயிலும் கணக்குப்போட்டான். பிள்ளையார் கோயிலில் கொஞ்சம் உறங்கிவிட்டு, நடுச் சாமத்தில் காட்டுக்குள் நுழைந்து எல்லைக் கோட்டைக் கடக்கலாம் என முடிவு செய்தான். இரவு சாப்பிடுவதற்காக ’சிந்தாமணி பேக்கரி’யில் ஒரு றாத்தல் பாணும் அருகிலிருந்த சிறிய கடையில் நான்கு பச்சை மிளகாய்களும் ஒரு பீடிக்கட்டும் வாங்கி ஒரு பையில் வைத்துக்கொண்டே வவுனியா நகரிலிருந்து அவன் புறப்பட்டான். பிள்ளையார் கோயிலில் யாரோ விளக்கேற்றி வைத்துவிட்டுப் போயிருப்பது தெரிந்தது. வேலும் மயிலும் கவனமாக சுற்றுப்புறத்தை நோட்டம்விட்டவாறே கோயிலுக்கு வந்தான். கோயிலின் சிறிய மண்டபத்தில், காலையில் பார்த்தவன் சுவரில் சாய்ந்து உட்கார்ந்திருப்பது மங்கலாகத் தெரிந்தது. இப்போது அவன் அழவில்லை. சற்று நேரம் யோசித்துவிட்டு வேலும் மயிலும் எதிர்ப்புறச் சுவரில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டான். எதிரிலிருப்பவனின் கண்கள் மண்டபத்தின் நடுவாகத் தொங்கிக்கொண்டிருந்த விளக்கையே பார்த்துக் கொண்டிருப்பதையும் அவனது கால்கள் தாளகதியில் தரையைத் தட்டிக்கொண்டிருப்பதையும் வேலும் மயிலும் கவனித்தான். வேலும் மயிலுவுக்குப் பசி எடுத்தது. முதல் நாள் இரவு முழுவதும் தூங்காததால் சோர்வு கண்களை அமுக்கியது. வேலும் மயிலும் தான் சாய்ந்திருந்த சுவரிலிருந்து நகர்ந்து மண்டபத்தின் நடுவாக உட்கார்ந்துகொண்டான். அவனது தலைக்கு மேலே விளக்கின் சுடர் தங்கம் போல ஒளிர்ந்தது. அவன் எதிரிலிருந்தவனை ‘தம்பி’ எனக் கூப்பிட்டு தன்னருகே வருமாறு சைகை செய்தான். அந்த உயரமானவன் எழுந்திருக்காமல் கைகளையும் கால்களையும் அசைத்துக் குண்டியை நிலத்தில் தேய்த்தவாறே முன்னே நகர்ந்துவந்து வேலும் மயிலுவுக்கும் முன்னால் இருந்தான். பையிலிருந்த ஒரு றாத்தல் பாணை எடுத்து சரிபாதியாகப் பிய்த்து ஒரு துண்டை எதிரிலிருந்தவனிடம் கொடுத்த வேலும் மயிலும் பையைத் துளாவி நான்கு பச்சை மிளகாய்களையும் எடுத்து இரண்டு மிளகாய்களை அவனிடம் கொடுத்தான். இருவரும் எதுவுமே பேசிக்கொள்ளாமல் அமைதியாகச் சாப்பிட்டார்கள். உயரமானவன் பச்சை மிளகாயைக் கடிக்கும் போதெல்லாம் ஸ்.. ஸ்ஸ்.. எனச் சத்தம் எழுப்பினான். ‘பச்சை மிளகாய் சாப்பிட்டுப் பழக்கமில்லை போல’ என்று வேலும் மயிலும் நினைத்துக்கொண்டான். சாப்பிட்டு முடிந்ததும் வேலும் மயிலும் தனது சுவர் ஓரமாகப் போய் இருந்துகொண்டான். உயரமானவனும் உட்கார்ந்திருந்த நிலையிலேயே பின்நகர்ந்து தனது சுவர் ஓரமாக உட்கார்ந்துகொண்டான். வேலும் மயிலும் சுவர் ஓரமாகப் படுத்துக்கொண்டான். மற்றவனும் தனது சுவர் ஓரமாகப் படுத்துக்கொண்டான். நடுச் சாமத்தில் எழுந்திருந்து அங்கிருந்து போவது என்ற திட்டத்துடன் வேலும் மயிலும் கண்களை மூடிக்கொண்டான். சற்று நேரத்திலேயே மற்றவன் எழுப்பும் குறட்டைச் சத்தம் இவனுக்குக் கேட்டது. வேலும் மயிலும் நிம்மதியுடன் கால்களைத் தளர்வாக்கி ஆட்டிக்கொண்டான். நடுச் சாமத்துக்குச் சற்று முன்னதாகவே கண்விழித்த வேலும் மயிலும் எதிர்ச் சுவரைப் பார்த்தபோது அங்கே உறங்கிக்கொண்டிருந்த உயரமானவனைக் காணவில்லை. வேலும் மயிலும் இருளில் தட்டுத் தடுமாறிப் போய்க் கிணற்றில் தண்ணீர் அள்ளி முகத்தைக் கழுவிவிட்டு, கோயிலுக்குள் வந்து தொங்கிக்கொண்டிருந்த சங்குக்குள் கையைவிட்டு கை நிறைய விபூதியை அள்ளி நெற்றியில் பூசிக்கொண்டு பிள்ளையாரைக் கும்பிட்டுவிட்டு வெளியே வந்து நின்றான். இருளுக்குக் கண்கள் பழகியதும் காட்டை நோக்கி நடக்கத் தொடங்கினான். காட்டுக்குள் நுழைந்து மரங்களோடு மரங்களாக வேலும் மயிலும் நடந்துகொண்டிருந்தான். ஏதோ ஒரு மாற்றத்தை அவனால் உணர்ந்துகொள்ள முடிந்ததெனினும் அதை அவனால் விளங்கிக்கொள்ள முடியவில்லை. காடு வெளிச்சமாக இருப்பதாக அவனுக்குத் தோன்றியது. ஏதோ சரியில்லை…திரும்பிப் போய்விடலாமா என அவன் நினைத்தபோது எதிரிலிருந்த மரம் ஓசையில்லாமல் அவன் கழுத்தை நோக்கிப் பாரமான கத்தியை வீசியது. வேலும் மயிலுவின் தலை இரண்டடி தள்ளிப்போய் விழ அவனது முண்டம் அனிச்சையில் கைகளைக் குப்பியவாறே காட்டின் மடியில் வீழ்ந்தது. அன்று மாலை எல்லைக்கோடு மாறியிருந்ததை அறியாமலேயே வேலும் மயிலும் செத்துப் போனான். அடுத்தநாள் காலையில் புனிதவதி ரீச்சரின் வீட்டுப் பக்கமிருந்து புழுதியைக் கிழித்துக்கொண்டு வேகமாக கறுப்புநிற ‘பிக்கப்’ வண்டி வந்தது. அந்த வண்டிக்குப் பின்பாக சில இளைஞர்கள் சைக்கிள்களிலும் சிறுவர்கள் வெறுங் கால்களுடன் ஓடியும் வந்துகொண்டிருந்தார்கள். அந்த வண்டியின் கூரை மீது, வட்ட வடிவத்தில் மூக்குக் கண்ணாடி அணிந்திருந்த கல்கி இறுகிப்போன முகத்துடன் கால்களை அகலவிரித்துப் போட்டவாறு உட்கார்ந்திருந்தான். அந்த வண்டிக்குள் பிரேதம் இருந்தது. சந்தையடியில் அந்த வண்டி நிறுத்தப்பட்டபோது, கல்கி கூரையிலிருந்து ஒரே தாவாகக் கீழே தாவி வண்டியின் பின்புறம் சென்று பிரேதத்தை முடியிருந்த படங்கை இழுத்து ஓரத்தில் போட்டான். சந்தையிலிருந்த சனங்கள் அந்த வண்டியைச் சூழ்ந்துகொண்டார்கள். சந்தையிலிருந்த வேலும் மயிலுவின் மனைவி சனங்கள் ஓடுவதைப் பார்த்தாள். அவர்கள் ‘பிரேதம்’ எனக் கூச்சலிட்டபோது அவளது நெஞ்சு திடுக்குற்றது. அவள் போட்டது போட்டபடியிருக்க எழுந்து அந்த வண்டியை நோக்கி ஓடினாள். வண்டியின் அருகில் நின்றிருந்த கல்கி ,சனங்களை ஒழுங்குபடுத்தி வரிசையில் விட்டுக்கொண்டிருந்தான். வேலும் மயிலுவின் மனைவி அந்த வண்டிக்குள் எட்டிப் பார்த்தபோது பிரேதத்தைக் கண்டாள். இலங்கை இராணுத்தின் தொப்பியை அந்தப் பிரேதம் அணிந்திருந்தது. இலங்கை இராணுவத்தின் சீருடைச் சட்டையை அந்தப் பிரேதம் அணிந்திருந்தது. இலங்கை இராணுவத்தின் தடித்த இடுப்புப் பட்டியை அந்தப் பிரேதம் அணிந்திருந்தது. இலங்கை இராணுவத்தின் சீருடையான பச்சைநிற நீளக் காற்சட்டையை அந்தப் பிரேதம் அணிந்திருந்தது. அந்தப் பச்சைநிற நீளக் காற்சட்டை பிரேதத்தின் முழங்கால்களிற்கு சற்றுக் கீழேவரைதான் பிரேதத்தின் கால்களை மறைத்திருந்தது. இவ்வாறாக ’சிந்தாமணி பேக்கரி’யில் வாங்கிய ஒரு றாத்தல் பாணில் அரை றாத்தல் பாண் தங்கரேகைக்கு அந்தப் பக்கம் இருந்தது, அரை றாத்தல் பாண் தங்கரேகைக்கு இந்தப் பக்கம் இருந்தது என்று சொல்லி முடித்தான் கதைசொல்லி. ‘உரையாடல்’ இலக்கிய இதழில் வெளியானது. (Jan – March 2014) FREETAMILEBOOKS.COM மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்: மின்புத்தகங்களைப் படிப்பதற்கென்றே கையிலேயே வைத்துக் கொள்ளக்கூடிய பல கருவிகள் தற்போது சந்தையில் வந்துவிட்டன. Kindle, Nook, Android Tablets போன்றவை இவற்றில் பெரும்பங்கு வகிக்கின்றன. இத்தகைய கருவிகளின் மதிப்பு தற்போது 4000 முதல் 6000 ரூபாய் வரை குறைந்துள்ளன. எனவே பெரும்பான்மையான மக்கள் தற்போது இதனை வாங்கி வருகின்றனர். ஆங்கிலத்திலுள்ள மின்புத்தகங்கள்: ஆங்கிலத்தில் லட்சக்கணக்கான மின்புத்தகங்கள் தற்போது கிடைக்கப் பெறுகின்றன. அவை PDF, EPUB, MOBI, AZW3. போன்ற வடிவங்களில் இருப்பதால், அவற்றை மேற்கூறிய கருவிகளைக் கொண்டு நாம் படித்துவிடலாம். தமிழிலுள்ள மின்புத்தகங்கள்: தமிழில் சமீபத்திய புத்தகங்களெல்லாம் நமக்கு மின்புத்தகங்களாக கிடைக்கப்பெறுவதில்லை. ProjectMadurai.com எனும் குழு தமிழில் மின்புத்தகங்களை வெளியிடுவதற்கான ஒர் உன்னத சேவையில் ஈடுபட்டுள்ளது. இந்தக் குழு இதுவரை வழங்கியுள்ள தமிழ் மின்புத்தகங்கள் அனைத்தும் PublicDomain-ல் உள்ளன. ஆனால் இவை மிகவும் பழைய புத்தகங்கள். சமீபத்திய புத்தகங்கள் ஏதும் இங்கு கிடைக்கப்பெறுவதில்லை. சமீபத்திய புத்தகங்களை தமிழில் பெறுவது எப்படி? அமேசான் கிண்டில் கருவியில் தமிழ் ஆதரவு தந்த பிறகு, தமிழ் மின்னூல்கள் அங்கே விற்பனைக்குக் கிடைக்கின்றன. ஆனால் அவற்றை நாம் பதிவிறக்க இயலாது. வேறு யாருக்கும் பகிர இயலாது. சமீபகாலமாக பல்வேறு எழுத்தாளர்களும், பதிவர்களும், சமீபத்திய நிகழ்வுகளைப் பற்றிய விவரங்களைத் தமிழில் எழுதத் தொடங்கியுள்ளனர். அவை இலக்கியம், விளையாட்டு, கலாச்சாரம், உணவு, சினிமா, அரசியல், புகைப்படக்கலை, வணிகம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு தலைப்புகளின் கீழ் அமைகின்றன. நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகச் சேர்த்து தமிழ் மின்புத்தகங்களை உருவாக்க உள்ளோம். அவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள் Creative Commons எனும் உரிமத்தின் கீழ் வெளியிடப்படும். இவ்வாறு வெளியிடுவதன் மூலம் அந்தப் புத்தகத்தை எழுதிய மூல ஆசிரியருக்கான உரிமைகள் சட்டரீதியாகப் பாதுகாக்கப்படுகின்றன. அதே நேரத்தில் அந்த மின்புத்தகங்களை யார் வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும், இலவசமாக வழங்கலாம். எனவே தமிழ் படிக்கும் வாசகர்கள் ஆயிரக்கணக்கில் சமீபத்திய தமிழ் மின்புத்தகங்களை இலவசமாகவே பெற்றுக் கொள்ள முடியும். தமிழிலிருக்கும் எந்த வலைப்பதிவிலிருந்து வேண்டுமானாலும் பதிவுகளை எடுக்கலாமா? கூடாது. ஒவ்வொரு வலைப்பதிவும் அதற்கென்றே ஒருசில அனுமதிகளைப் பெற்றிருக்கும். ஒரு வலைப்பதிவின் ஆசிரியர் அவரது பதிப்புகளை “யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்” என்று குறிப்பிட்டிருந்தால் மட்டுமே அதனை நாம் பயன்படுத்த முடியும். அதாவது “Creative Commons” எனும் உரிமத்தின் கீழ் வரும் பதிப்புகளை மட்டுமே நாம் பயன்படுத்த முடியும். அப்படி இல்லாமல் “All Rights Reserved” எனும் உரிமத்தின் கீழ் இருக்கும் பதிப்புகளை நம்மால் பயன்படுத்த முடியாது. வேண்டுமானால் “All Rights Reserved” என்று விளங்கும் வலைப்பதிவுகளைக் கொண்டிருக்கும் ஆசிரியருக்கு அவரது பதிப்புகளை “Creative Commons” உரிமத்தின் கீழ் வெளியிடக்கோரி நாம் நமது வேண்டுகோளைத் தெரிவிக்கலாம். மேலும் அவரது படைப்புகள் அனைத்தும் அவருடைய பெயரின் கீழே தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் நாம் அளிக்க வேண்டும். பொதுவாக புதுப்புது பதிவுகளை  உருவாக்குவோருக்கு அவர்களது பதிவுகள்  நிறைய வாசகர்களைச் சென்றடைய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். நாம் அவர்களது படைப்புகளை எடுத்து இலவச மின்புத்தகங்களாக வழங்குவதற்கு  நமக்கு அவர்கள் அனுமதியளித்தால், உண்மையாகவே அவர்களது படைப்புகள் பெரும்பான்மையான மக்களைச் சென்றடையும். வாசகர்களுக்கும் நிறைய புத்தகங்கள் படிப்பதற்குக் கிடைக்கும் வாசகர்கள் ஆசிரியர்களின் வலைப்பதிவு முகவரிகளில் கூட அவர்களுடைய படைப்புகளை தேடிக் கண்டுபிடித்து படிக்கலாம். ஆனால் நாங்கள் வாசகர்களின் சிரமத்தைக் குறைக்கும் வண்ணம் ஆசிரியர்களின் சிதறிய வலைப்பதிவுகளை ஒன்றாக இணைத்து ஒரு முழு மின்புத்தகங்களாக உருவாக்கும் வேலையைச் செய்கிறோம். மேலும் அவ்வாறு உருவாக்கப்பட்ட புத்தகங்களை “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்”-க்கு ஏற்ற வண்ணம் வடிவமைக்கும் வேலையையும் செய்கிறோம். FREETAMILEBOOKS.COM இந்த வலைத்தளத்தில்தான் பின்வரும் வடிவமைப்பில் மின்புத்தகங்கள் காணப்படும். PDF for desktop, PDF for 6” devices, EPUB, AZW3, ODT இந்த வலைதளத்திலிருந்து யார் வேண்டுமானாலும் மின்புத்தகங்களை இலவசமாகப் பதிவிறக்கம்(download) செய்து கொள்ளலாம். அவ்வாறு பதிவிறக்கம்(download) செய்யப்பட்ட புத்தகங்களை யாருக்கு வேண்டுமானாலும் இலவசமாக வழங்கலாம். இதில் நீங்கள் பங்களிக்க விரும்புகிறீர்களா?  நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் தமிழில் எழுதப்பட்டிருக்கும் வலைப்பதிவுகளிலிருந்து பதிவுகளை எடுத்து, அவற்றை LibreOffice/MS Office போன்ற wordprocessor-ல் போட்டு ஓர் எளிய மின்புத்தகமாக மாற்றி எங்களுக்கு அனுப்பவும். அவ்வளவுதான்! மேலும் சில பங்களிப்புகள் பின்வருமாறு: 1. ஒருசில பதிவர்கள்/எழுத்தாளர்களுக்கு அவர்களது படைப்புகளை “Creative Commons” உரிமத்தின்கீழ் வெளியிடக்கோரி மின்னஞ்சல் அனுப்புதல் 2. தன்னார்வலர்களால் அனுப்பப்பட்ட மின்புத்தகங்களின் உரிமைகளையும் தரத்தையும் பரிசோதித்தல் 3. சோதனைகள் முடிந்து அனுமதி வழங்கப்பட்ட தரமான மின்புத்தகங்களை நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்தல் விருப்பமுள்ளவர்கள் freetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.  இந்தத் திட்டத்தின் மூலம் பணம் சம்பாதிப்பவர்கள் யார்? யாருமில்லை. இந்த வலைத்தளம் முழுக்க முழுக்க தன்னார்வலர்களால் செயல்படுகின்ற ஒரு வலைத்தளம் ஆகும். இதன் ஒரே நோக்கம் என்னவெனில் தமிழில் நிறைய மின்புத்தகங்களை உருவாக்குவதும், அவற்றை இலவசமாக பயனர்களுக்கு வழங்குவதுமே ஆகும். மேலும் இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள், ebook reader ஏற்றுக்கொள்ளும் வடிவமைப்பில் அமையும். இத்திட்டத்தால் பதிப்புகளை எழுதிக்கொடுக்கும் ஆசிரியர்/பதிவருக்கு என்ன லாபம்? ஆசிரியர்/பதிவர்கள் இத்திட்டத்தின் மூலம் எந்தவிதமான தொகையும் பெறப்போவதில்லை. ஏனெனில், அவர்கள் புதிதாக இதற்கென்று எந்தஒரு பதிவையும்  எழுதித்தரப்போவதில்லை. ஏற்கனவே அவர்கள் எழுதி வெளியிட்டிருக்கும் பதிவுகளை எடுத்துத்தான் நாம் மின்புத்தகமாக வெளியிடப்போகிறோம். அதாவது அவரவர்களின் வலைதளத்தில் இந்தப் பதிவுகள் அனைத்தும் இலவசமாகவே கிடைக்கப்பெற்றாலும், அவற்றையெல்லாம் ஒன்றாகத் தொகுத்து ebook reader போன்ற கருவிகளில் படிக்கும் விதத்தில் மாற்றித் தரும் வேலையை இந்தத் திட்டம் செய்கிறது. தற்போது மக்கள் பெரிய அளவில் tablets மற்றும் ebook readers போன்ற கருவிகளை நாடிச் செல்வதால் அவர்களை நெருங்குவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். நகல் எடுப்பதை அனுமதிக்கும் வலைதளங்கள் ஏதேனும் தமிழில் உள்ளதா? உள்ளது. பின்வரும் தமிழில் உள்ள வலைதளங்கள் நகல் எடுப்பதினை அனுமதிக்கின்றன. 1. http://www.vinavu.com 2. http://www.badriseshadri.in  3. http://maattru.com  4. http://www.kaniyam.com  5. http://blog.ravidreams.net  எவ்வாறு ஒர் எழுத்தாளரிடம் CREATIVE COMMONS உரிமத்தின் கீழ் அவரது படைப்புகளை வெளியிடுமாறு கூறுவது? இதற்கு பின்வருமாறு ஒரு மின்னஞ்சலை அனுப்ப வேண்டும். துவக்கம் உங்களது வலைத்தளம் அருமை (வலைதளத்தின் பெயர்). தற்போது படிப்பதற்கு உபயோகப்படும் கருவிகளாக Mobiles மற்றும் பல்வேறு கையிருப்புக் கருவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது. இந்நிலையில் நாங்கள் http://www.FreeTamilEbooks.com எனும் வலைதளத்தில், பல்வேறு தமிழ் மின்புத்தகங்களை வெவ்வேறு துறைகளின் கீழ் சேகரிப்பதற்கான ஒரு புதிய திட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.  இங்கு சேகரிக்கப்படும் மின்புத்தகங்கள் பல்வேறு கணிணிக் கருவிகளான Desktop,ebook readers like kindl, nook, mobiles, tablets with android, iOS போன்றவற்றில் படிக்கும் வண்ணம் அமையும். அதாவது இத்தகைய கருவிகள் support செய்யும் odt, pdf, ebub, azw போன்ற வடிவமைப்பில் புத்தகங்கள் அமையும். இதற்காக நாங்கள் உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை பெற விரும்புகிறோம். இதன் மூலம் உங்களது பதிவுகள் உலகளவில் இருக்கும் வாசகர்களின் கருவிகளை நேரடியாகச் சென்றடையும். எனவே உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை  பிரதியெடுப்பதற்கும் அவற்றை மின்புத்தகங்களாக மாற்றுவதற்கும் உங்களது அனுமதியை வேண்டுகிறோம். இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்களில் கண்டிப்பாக ஆசிரியராக உங்களின் பெயரும் மற்றும் உங்களது வலைதள முகவரியும் இடம்பெறும். மேலும் இவை “Creative Commons” உரிமத்தின் கீழ் மட்டும்தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் அளிக்கிறோம். http://creativecommons.org/licenses/  நீங்கள் எங்களை பின்வரும் முகவரிகளில் தொடர்பு கொள்ளலாம். e-mail : FREETAMILEBOOKSTEAM@GMAIL.COM  FB : https://www.facebook.com/FreeTamilEbooks  G plus: https://plus.google.com/communities/108817760492177970948    நன்றி. முடிவு மேற்கூறியவாறு ஒரு மின்னஞ்சலை உங்களுக்குத் தெரிந்த அனைத்து எழுத்தாளர்களுக்கும் அனுப்பி அவர்களிடமிருந்து அனுமதியைப் பெறுங்கள். முடிந்தால் அவர்களையும் “Creative Commons License”-ஐ அவர்களுடைய வலைதளத்தில் பயன்படுத்தச் சொல்லுங்கள். கடைசியாக அவர்கள் உங்களுக்கு அனுமதி அளித்து அனுப்பியிருக்கும் மின்னஞ்சலைFREETAMILEBOOKSTEAM@GMAIL.COM எனும் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.  ஓர் எழுத்தாளர் உங்களது உங்களது வேண்டுகோளை மறுக்கும் பட்சத்தில் என்ன செய்வது? அவர்களையும் அவர்களது படைப்புகளையும் அப்படியே விட்டுவிட வேண்டும். ஒருசிலருக்கு அவர்களுடைய சொந்த முயற்சியில் மின்புத்தகம் தயாரிக்கும் எண்ணம்கூட இருக்கும். ஆகவே அவர்களை நாம் மீண்டும் மீண்டும் தொந்தரவு செய்யக் கூடாது. அவர்களை அப்படியே விட்டுவிட்டு அடுத்தடுத்த எழுத்தாளர்களை நோக்கி நமது முயற்சியைத் தொடர வேண்டும்.   மின்புத்தகங்கள் எவ்வாறு அமைய வேண்டும்? ஒவ்வொருவரது வலைத்தளத்திலும் குறைந்தபட்சம் நூற்றுக்கணக்கில் பதிவுகள் காணப்படும். அவை வகைப்படுத்தப்பட்டோ அல்லது வகைப்படுத்தப் படாமலோ இருக்கும்.  நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகத் திரட்டி ஒரு பொதுவான தலைப்பின்கீழ் வகைப்படுத்தி மின்புத்தகங்களாகத் தயாரிக்கலாம். அவ்வாறு வகைப்படுத்தப்படும் மின்புத்தகங்களை பகுதி-I பகுதி-II என்றும் கூட தனித்தனியே பிரித்துக் கொடுக்கலாம்.  தவிர்க்க வேண்டியவைகள் யாவை? இனம், பாலியல் மற்றும் வன்முறை போன்றவற்றைத் தூண்டும் வகையான பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டும்.  எங்களைத் தொடர்பு கொள்வது எப்படி? நீங்கள் பின்வரும் முகவரிகளில் எங்களைத் தொடர்பு கொள்ளலாம்.  - EMAIL : FREETAMILEBOOKSTEAM@GMAIL.COM   - Facebook: https://www.facebook.com/FreeTamilEbooks   - Google Plus: https://plus.google.com/communities/108817760492177970948   இத்திட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் யார்? குழு – http://freetamilebooks.com/meet-the-team/    SUPPORTED BY கணியம் அறக்கட்டளை http://kaniyam.com/foundation     கணியம் அறக்கட்டளை []   தொலை நோக்கு – Vision தமிழ் மொழி மற்றும் இனக்குழுக்கள் சார்ந்த மெய்நிகர்வளங்கள், கருவிகள் மற்றும் அறிவுத்தொகுதிகள், அனைவருக்கும்  கட்டற்ற அணுக்கத்தில் கிடைக்கும் சூழல் பணி இலக்கு  – Mission அறிவியல் மற்றும் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு ஒப்ப, தமிழ் மொழியின் பயன்பாடு வளர்வதை உறுதிப்படுத்துவதும், அனைத்து அறிவுத் தொகுதிகளும், வளங்களும் கட்டற்ற அணுக்கத்தில் அனைவருக்கும் கிடைக்கச்செய்தலும்.   தற்போதைய செயல்கள் - கணியம் மின்னிதழ் – http://kaniyam.com - கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் இலவச தமிழ் மின்னூல்கள் – http://FreeTamilEbooks.com   கட்டற்ற மென்பொருட்கள் - உரை ஒலி மாற்றி –  Text to Speech - எழுத்துணரி – Optical Character Recognition - விக்கிமூலத்துக்கான எழுத்துணரி - மின்னூல்கள் கிண்டில் கருவிக்கு அனுப்புதல் – Send2Kindle - விக்கிப்பீடியாவிற்கான சிறு கருவிகள் - மின்னூல்கள் உருவாக்கும் கருவி - உரை ஒலி மாற்றி – இணைய செயலி - சங்க இலக்கியம் – ஆன்டிராய்டு செயலி - FreeTamilEbooks – ஆன்டிராய்டு செயலி - FreeTamilEbooks – ஐஒஎஸ் செயலி - WikisourceEbooksReportஇந்திய மொழிகளுக்ககான விக்கிமூலம் மின்னூல்கள் பதிவிறக்கப் பட்டியல் - FreeTamilEbooks.com – Download counter மின்னூல்கள் பதிவிறக்கப் பட்டியல்   அடுத்த திட்டங்கள்/மென்பொருட்கள்   - விக்கி மூலத்தில் உள்ள மின்னூல்களை பகுதிநேர/முழு நேரப் பணியாளர்கள் மூலம் விரைந்து பிழை திருத்துதல் - முழு நேர நிரலரை பணியமர்த்தி பல்வேறு கட்டற்ற மென்பொருட்கள் உருவாக்குதல் - தமிழ் NLP க்கான பயிற்சிப் பட்டறைகள் நடத்துதல் - கணியம் வாசகர் வட்டம் உருவாக்குதல் - கட்டற்ற மென்பொருட்கள், கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் வளங்களை உருவாக்குபவர்களைக் கண்டறிந்து ஊக்குவித்தல் - கணியம் இதழில் அதிக பங்களிப்பாளர்களை உருவாக்குதல், பயிற்சி அளித்தல் - மின்னூலாக்கத்துக்கு ஒரு இணையதள செயலி - எழுத்துணரிக்கு ஒரு இணையதள செயலி - தமிழ் ஒலியோடைகள் உருவாக்கி வெளியிடுதல் - http://OpenStreetMap.org ல் உள்ள இடம், தெரு, ஊர் பெயர்களை தமிழாக்கம் செய்தல் - தமிழ்நாடு முழுவதையும் http://OpenStreetMap.org ல் வரைதல் - குழந்தைக் கதைகளை ஒலி வடிவில் வழங்குதல் - http://Ta.wiktionary.org ஐ ஒழுங்குபடுத்தி API க்கு தோதாக மாற்றுதல் - http://Ta.wiktionary.org க்காக ஒலிப்பதிவு செய்யும் செயலி உருவாக்குதல் - தமிழ் எழுத்துப் பிழைத்திருத்தி உருவாக்குதல் - தமிழ் வேர்ச்சொல் காணும் கருவி உருவாக்குதல் - எல்லா http://FreeTamilEbooks.com மின்னூல்களையும் Google Play Books, GoodReads.com ல் ஏற்றுதல் - தமிழ் தட்டச்சு கற்க இணைய செயலி உருவாக்குதல் - தமிழ் எழுதவும் படிக்கவும் கற்ற இணைய செயலி உருவாக்குதல் ( aamozish.com/Course_preface போல)   மேற்கண்ட திட்டங்கள், மென்பொருட்களை உருவாக்கி செயல்படுத்த உங்கள் அனைவரின் ஆதரவும் தேவை. உங்களால் எவ்வாறேனும் பங்களிக்க இயலும் எனில் உங்கள் விவரங்களை  kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.   வெளிப்படைத்தன்மை கணியம் அறக்கட்டளையின் செயல்கள், திட்டங்கள், மென்பொருட்கள் யாவும் அனைவருக்கும் பொதுவானதாகவும், 100% வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கும்.இந்த இணைப்பில் செயல்களையும், இந்த இணைப்பில் மாத அறிக்கை, வரவு செலவு விவரங்களுடனும் காணலாம். கணியம் அறக்கட்டளையில் உருவாக்கப்படும் மென்பொருட்கள் யாவும் கட்டற்ற மென்பொருட்களாக மூல நிரலுடன், GNU GPL, Apache, BSD, MIT, Mozilla ஆகிய உரிமைகளில் ஒன்றாக வெளியிடப்படும். உருவாக்கப்படும் பிற வளங்கள், புகைப்படங்கள், ஒலிக்கோப்புகள், காணொளிகள், மின்னூல்கள், கட்டுரைகள் யாவும் யாவரும் பகிரும், பயன்படுத்தும் வகையில் கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் இருக்கும். நன்கொடை உங்கள் நன்கொடைகள் தமிழுக்கான கட்டற்ற வளங்களை உருவாக்கும் செயல்களை சிறந்த வகையில் விரைந்து செய்ய ஊக்குவிக்கும். பின்வரும் வங்கிக் கணக்கில் உங்கள் நன்கொடைகளை அனுப்பி, உடனே விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.  Kaniyam Foundation Account Number : 606 1010 100 502 79 Union Bank Of India West Tambaram, Chennai IFSC – UBIN0560618 Account Type : Current Account   UPI செயலிகளுக்கான QR Code []   குறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும். Note: Sometimes UPI does not work properly, in that case kindly use Account number and IFSC code for internet banking.