[] ஶ்ரீராமனின் பாதையில் ஒரு சிறு பயணம் கீதா சாம்பசிவம் மின்னூல் வெளியீடு : http://FreeTamilEbooks.com சென்னை ஶ்ரீராமனின் பாதையில் ஒரு சிறு பயணம் Copyright © 2014 by Creative Commons Attribution 4.0 International License.​. This book was produced using PressBooks.com. Contents - 1. ஶ்ரீராமனின் பாதையில் ஒரு சிறு பயணம் - 2. ஶ்ரீராமனின் பாதையில் நாங்களும்! - 3. அயோத்தியை நோக்கி! - 4. அயோத்தியை நோக்கி! சரயு நதிக்கரையில்! - 5. அயோத்தியை நோக்கி! தொடர்ச்சி - 6. அயோத்தியை நோக்கி! பணமூட்டையுடன் நாங்கள்! :)))) - 7. அயோத்தியை நோக்கி! குப்தார்காட்டிலும், நந்திகிராமத்திலும்! - 8. நந்திகிராமத்தின் காட்சிகளைக் காண வேண்டாமா? - 9. அயோத்தி முடிவு! நந்திகிராமம்--தொடர்ச்சி! - 10. ஶ்ரீராமனின் பாதையில்! அவரைக் காணோமே! - 11. ஶ்ரீராமனின் பாதையில் -- சித்திரவதையுடன் சித்திரகூடப் பயணம்! - 12. சித்திரவதையுடன் சித்திரகூடத்தில் -- தொடர்ச்சி! - 13. சதி அநுசுயா ஆசிரமம் -- சித்திரகூடம் தொடர்ச்சி! - 14. சித்திரவதையுடன் சித்திரகூடத்தில் -- தொடர்ச்சி குப்தகோதாவரி - 15. சித்திரவதையுடன் சித்திர கூடத்தில் --தொடர்ச்சி! - 16. சித்திரகூடத்திலிருந்து கான்பூரை நோக்கி! சங்கடங்கள் தீர்ந்தனவா? - 17. கான்பூரில் ஒரு இரவு! - 18. வால்மீகி ஆசிரமத்தில்! - 19. வால்மீகி ஆசிரமத்திலிருந்து கங்கைக்கரைக்கு! - 20. லக்னோ னு பேர் வைச்சால் லக்கும் நோ தானா? :) - 21. நைமிசாரண்யத்தில் ஒரு நாள் பகுதி 1 - 22. நைமிசாரண்யத்தில் ஒரு நாள் பகுதி 2 - 23. நைமிசாரண்யம் -- அநுமன் கடியில் - 24. நைமிசாரண்யத்தில் ஓர் நாள் பகுதி 3 - Free Tamil Ebooks - எங்களைப் பற்றி [pressbooks.com] 1 ஶ்ரீராமனின் பாதையில் ஒரு சிறு பயணம் [Cover Image] பயணம் என்பது அனைவருக்கும் பிடித்தமானது.  அதிலும் நம் நாட்டில் புனிதப் பயணம் இன்றைய நவீன கால கட்டத்தில் மிக எளிதாகி விட்டது.  நாங்கள் பல புனிதப் பயணங்கள் செய்தாலும் அந்தப் பயணங்களில் எல்லாம் அயோத்தி செல்ல முடியவில்லை.  ஆகவே இம்முறை திட்டமிட்டு ஶ்ரீராமன் சென்ற பாதையில் செல்ல வேண்டும் என முடிவெடுத்தோம்.  ஆனாலும் எங்களால் மற்ற இடங்களுக்குச் செல்ல முடியவில்லை.  ஆகவே அயோத்தியில் இருந்து சித்ரகூடம் வந்து பின்னர் அங்கிருந்து வால்மீகி ஆசிரமம், நைமிசாரணியம் போன்ற இடங்களைச் சென்று பார்த்துத் திரும்பினோம்.  இந்தப் பயணத்தில் நாங்கள் பட்ட கஷ்டங்களை உள்ளது உள்ளபடி விவரித்திருக்கிறேன்.  இனி செல்பவர்கள் இந்தத் தவறைச் செய்யாமல் இருக்கலாம் என்னும் எண்ணம் தான் காரணம்.  வாருங்கள், நீங்களும் எங்களுடன் வந்து அயோத்தி, சித்ரகூடம், நைமிசாரணியம் ஆகிய இடங்களைப் பாருங்கள்.   அட்டைப் படம்  – ஜெகதீஸ்வரன் நடராஜன் – sagotharan.jagadeeswaran@gmail.com ஆசிரியர் : கீதா சாம்பசிவம் உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம். உரிமை :  Creative Commons Attribution 4.0 International License.​ வெளியீடு : FreeTamilEbooks.com மின்னூலாக்கம் – இராஜேஸ்வரி – sraji.me@gmail.com     2 ஶ்ரீராமனின் பாதையில் நாங்களும்! [] பல வருடங்களாக அயோத்தி செல்ல ஆசை. 98 ஆம் ஆண்டில் காசிக்கு யாத்திரை சென்ற சமயம் அங்கே எங்கள் பயண ஏற்பாடுகளைக் கவனித்த புரோகிதர் அயோத்திக்கு அனுப்பி வைப்பதாகச் சொன்னார். ஆனால் அப்போ என் கணவரோட விடுமுறை தினங்கள் முடியும் நேரம் ஆகிவிட்டதாலும் திரும்பிச் சென்னைக்குச் செல்ல முன்பதிவு செய்த நாள் நெருங்கியதாலும் அப்போப் போக முடியவில்லை. அதன் பின்னர் பலமுறை முயற்சித்தும் செல்ல முடியவில்லை. அதன் பின்னர் பல வருடங்கள் கழித்து ட்ராவல் டைம்ஸ் ஏற்பாட்டின் மூலம் நாசிக், பஞ்சவடி, போன்ற இடங்கள் சென்ற போதும் இதே பாரத் தர்ஷன் மூலம் அயோத்யாவுக்கும் ஏற்பாடு செய்யுங்கள் என நாங்களே அவர்களைக் கேட்டிருந்தோம். அது போல் ஒரு திட்டமும் ஏற்பாடு செய்திருந்தனர். ஆனால் அதிலேயும் கலந்து கொள்ள முடியவில்லை. ஏதேதோ பிரச்னைகள். இடையில் இரண்டு முறைகள் யு.எஸ். பயணம். கோயிலில் கும்பாபிஷேஹ ஏற்பாடுகள் என இருந்ததோடு வீட்டிலும் சொந்தப் பிரச்னைகள். அப்படி நாங்கள் செல்ல நினைத்த இடங்களில் ஶ்ரீராம ஜன்மபூமி மட்டுமில்லை. அங்கிருந்து ஶ்ரீராமன் தன் தம்பி லக்ஷ்மணன், மனைவி ஜானகியுடன் பயணித்த சித்ரகூடமும், சீதையின் கடைசி நாட்கள் கழிந்த வால்மீகி ஆசிரமும் ஆகும்.   பொதுவாக இது போன்ற இடங்களுக்குச் செல்வது குழுவாகச் செல்வதே வசதி. முக்கியமாய்ச் சாப்பாடு மூன்று வேளையும் கிடைக்கும். செல்லுமிடத்துக்கு வேண்டிய வாகன வசதிகள் அவர்கள் பொறுப்பில் இருக்கும். செலவு குறையும். ஒரே ஒரு கஷ்டம் என்னவென்றால் தங்குமிடம். அவங்க பொதுவாக எல்லாருக்கும் சேர்த்து ஒரு கல்யாணச் சத்திரமோ, டார்மிட்டரி எனப்படும் படுக்கும் வசதி கொண்ட கூடங்களோ ஏற்பாடு செய்வார்கள். கேட்டுக் கொண்டால் அறை வசதி செய்து கொடுக்கலாம். ஆனால் அதிலும் ஒரு அறைக்கு மூன்றிலிருந்து நான்கு பேர் இருப்பார்கள். இது ரொம்பவே நுணுக்கமான விஷயம். சரியாக வருமா என்றெல்லாம் யோசித்து ஒன்றிரண்டு குழுவோடு போக முடிவு செய்து பணம் கட்டும் நேரம் ஏதேனும் ஒரு காரணத்தினால் அதை ஒதுக்கும்படி ஆகி விட்டது. இப்போ இதைக் குறித்துப் பலரிடமும் பேசிப் பார்த்ததிலும், மற்ற பல காரணங்களினாலும் தனியாகவே போகலாம் என முடிவு செய்து அதற்கான தகவல்களைச் சேகரித்துக் கொண்டோம். வேளுக்குடி அவர்களின் ஶ்ரீராமனின் பாதையில் தொடரை நன்கு கவனித்துச் செல்ல வேண்டிய இடங்களை உறுதி செய்து கொண்டோம். அதன்படி நடந்ததா என்றால் இல்லை தான்.  ஆனால் எப்படிச் சென்றாலும் சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடியாக ரயிலில் பயண வசதி இல்லை. லக்னோவிற்கு ரயில் இருப்பதாகச் சொல்கின்றனர். மூன்று நாட்கள் பயணம். முன்னெல்லாம் போயிருக்கோம் தான். ஆனால் இப்போ முடியுமா? அப்போது தான் எங்கள் நெருங்கிய நண்பரும், நாங்கள் மானசிகமாய் குருவாக நினைப்பவருமான திரு காழியூரர் விமானப் பயணத்தை சிபாரிசு செய்தார். கட்டணம்??? ஏ.சி.க்கும் இதுக்கும் அப்படி ஒண்ணும் பெரிய அளவு வித்தியாசம் இல்லை. ஆனால் விமானப் பயணக் கட்டணம் பேரம் செய்து குறைச்சலாக வரும்போது பதிவு செய்யணும். விமானப் பயணக் கட்டணம் குறைவாக வரும் நாளாகப் பார்த்துக் கொண்டே இருந்தோம். நாங்கள் செல்ல வேண்டிய தினத்தை முடிவு செய்தோம். விமானப் பயணக் கட்டணம் ஓரளவு குறைச்சலாய்க் கிடைக்கிறது என்பது தெரிந்ததும், இங்குள்ள ஏஜென்ட் மூலம் இருப்பதிலேயே குறைவான விமானக் கட்டணம் உள்ள இன்டிகோவைத் தேர்ந்தெடுத்து டிக்கெட்டெல்லாம் வாங்கிட்டோம். விஜயதசமி கழிந்த அக்டோபர் பதினாறாம் நாள் சென்னையிலிருந்து லக்னோ செல்ல விமான டிக்கெட் தயார். சென்னைக்குச் செல்லத் திருச்சியிலிருந்து பல்லவனில் விஜயதசமி அன்று செல்லவும் டிக்கெட் வாங்கியாச்சு. சென்னை சென்று உறவினர் வீட்டில் தங்கி அங்கிருந்து விமான நிலையம் சென்று லக்னோ செல்லத் திட்டம். சென்னையில் இரு தினங்கள் நல்லபடியாக முடிந்து லக்னோ செல்லவும் சென்னை விமான நிலையம் கிளம்பிவிட்டோம். இந்த விமானம் நேரடியாக லக்னோ செல்லாதாம். டெல்லி சென்று அங்கிருந்து வேறு விமானம் மாற வேண்டுமாம். அது வேறேயா! கடவுளே! இதிலே என்ன வேடிக்கைன்னா, ஹைதராபாத், பெங்களூருக்கு நேரடி விமான சேவை இருக்கிறது. சென்னைக்கு மட்டும் கிடையாதாம். என்ன அநியாயம்! 3 அயோத்தியை நோக்கி! இப்போதெல்லாம் உள்நாட்டு விமான சேவையில் உணவு கொடுப்பதில்லை. உணவு வண்டி வரும். ஆனால் அதுக்கு நாம் தனியாக விலை கொடுத்து வாங்க வேண்டும். ஒரு டீ 75 ரூக்குக் கொடுக்கிறாங்க. காஃபி என்றால் 90 ரூ, டிபன், காபி சேர்த்து வாங்கினால் ஒருத்தருக்குக் குறைந்தது 250 ரூ ஆகிறது. ஆகையால் நாங்க தங்கி இருந்த உறவினர் வீட்டிலேயே சொல்லிக் கையில் இட்லி,, புளியோதரை, காஃபி போன்றவை வாங்கிக் கொண்டோம். விமான நிலையம் வந்து செக்யூரிடி செக்கப் எல்லாம் முடிந்து விமானத்தில் ஏறி உட்கார்ந்து காலை ஆகாரம் மட்டும் காஃபியோடு சாப்பிட்டோம். டெல்லி வந்ததும், லக்னோ போக விமானம் அடுத்த கட்டிடத்தில் உள்ள டெர்மினலில் இருந்து கிளம்பும் என்ற செய்தியைப் பெற்றுக் கொண்டு, அந்தக் கட்டிடத்தில் இருந்து வெளியே வந்து பக்கத்துக் கட்டிடம் விரைந்தோம். அங்கே செக்யூரிடி செக்கிங் முடித்துக் கொண்டுவிமானம் கிளம்பும் வாயிலுக்குச் செல்ல நேரம் இருந்தமையால் சற்று உட்கார்ந்து ஆசுவாசப் படுத்திக் கொண்டு பின்னர் விமானத்துக்குக் கிளம்பினோம். விமானத்தில் ஏறி உட்கார்ந்து விமானம் கிளம்பியது தான் தெரியும். சரியாக உட்கார்ந்து கொள்வதற்குள்ளாக விமானம் தரை இறங்க ஆரம்பித்துவிட்டது. லக்னோவுக்கு ஒரு மணி நேரத்துக்கும் குறைவாகப் பயண நேரம். விமானத்திலிருந்து வெளியே வந்து சாமான்களைப் பெற்றுக் கொண்டு விமான நிலைய வாயிலுக்கு வந்தால் எங்கே போவது, எங்கே தங்குவது என ஒன்றும் புரியவில்லை. சற்று நேரம் முழி, முழினு முழிச்சோம். அங்கே இருந்த உ.பி. சுற்றுலா மையம் அலுவலகத்திற்குச் சென்று பார்த்தோம். யாரையும் காணோம். அக்கம்பக்கம் விசாரிக்கலாம்னால் கூட யாருமே இல்லை. அந்தப் பக்கமாக வந்த செக்யூரிடியை விசாரித்தோம். அலுவலர் எப்போவானும் வருவார்னு தெரிஞ்சது. என்ன செய்யலாம்னு யோசித்துவிட்டு லக்னோவில் முதல்லே தங்கி இடம் பார்த்துக் கொண்டு பின்னர் முடிவு செய்யலாம்னு நினைத்துக் கொண்டு போன புளி சாதத்தைச் சாப்பிட்டுவிட்டு, ப்ரி-பெய்ட் ஆட்டோ(நல்லவேளையா விமான நிலையத்தின் உள்ளேயே இருக்கு) கேட்டு, அவங்களே ஆலம்பாக் என்னும் இடம் சென்றால் தங்க நல்ல ஹோட்டல்கள் கிடைக்கும்னு சொல்லி ஒரு காரை புக் செய்து கொடுத்து அனுப்பி வைச்சாங்க. அந்தக் காரும் வந்து எங்களை ஒரு ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றது. அங்கே போனால் தங்க அறை இருக்கு. ஆனால் வாடகை!!! அம்மாடியோவ்! விமானக் கட்டணத்தை விடவும் அதிகம். ஏ.சி. அறை வேண்டாம்னு சொல்லிப் பார்த்தோம். ஏ.சி. தான் கொடுப்போம்னு பிடிவாதம். சரினு அங்கேருந்து கிளம்பி வேறே ஹோட்டல் பார்த்துக் கொண்டு போகையில் நம்மவருக்குத் திடீர்னு ஒரு யோசனை! நேரே அயோத்யா போயிட்டால் என்ன? எப்படி? இந்தக் காரிலேயே! கட்டுப்படி ஆகுமா? இப்போக் கும்பகோணம் எல்லாம் போகலையா? இந்த ஊரிலே எல்லாம் பஸ்ஸிலே ஏறிப் போக முடியாது! தமிழ்நாடா? இல்லை கர்நாடகாவா? கேட்டுப் பாருங்க. கேட்டோம். அந்த டிரைவருக்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியம் அவரோட முதலாளி கிட்டே ஃபோனில் பேசினார். அவர் சரினு சொல்லி ரேட்டையும் ஃபிக்ஸ் பண்ணிக் கொண்டோம். அங்கிருந்து அயோத்யா கிளம்பிட்டோம். லக்னோ உ.பி.யின் தலைநகரம். என்றாலும் சாலைப் பராமரிப்பு என்பதே இல்லை. அந்தச் சாலையில் மேடு, பள்ளங்களில் காரில் பயணிக்கையிலேயே சிறிது நேரத்திலேயே முதுகு வலி ஆரம்பம். தகர டப்பாவைப் போன்ற ஒரு பேருந்து அயோத்யாவுக்குச் சென்று கொண்டிருந்தது. அந்தப் பேருந்தில் போனால் இரவு பத்து மணிக்கு அயோத்யா போய்ச் சேரலாம் என டிரைவர் சொன்னார். அயோத்யாவிலே தங்குமிடம் கிடைக்குமா? சாப்பாடு வசதி எல்லாம் எப்படியோ தெரியலையே! பெரிய ஊரா, சின்ன ஊரா? எதுவுமே புரியலை. மணி மாலை நான்காகிக் கொண்டிருந்தது. கிழக்குப் பகுதி என்பதால் கொஞ்சம் கொஞ்சமாக இருட்ட ஆரம்பித்தது. சுற்று வட்டாரங்களிலோ, ஹைவேஸ் எனப்பட்ட அந்தச் சாலையிலோ விளக்கு என்றால் என்ன என்று கேட்கும் வண்ணம் ஒரு மெழுகு வர்த்தி விளக்குக் கூடக் கிடையாது. எந்தக் கிராமங்களிலும் மின் வசதி என்பதே இல்லை. ஆனால் எல்லாக் கிராமங்களிலும் உள்ள சின்ன மண் குடிசைகளில் கூடக் குறைந்தது ஒரு பசுவும், எருமையுமாவது இருந்தது. கால்நடைச் செல்வங்களை அங்கே கண்டாற்போல் இங்கே தமிழ்நாட்டில் காணமுடிவதில்லை. அதோடு அங்கே இன்னமும் பச்சைப் பசும்புற்களையே மாடுகள் சாப்பிடுவதோடு வயல்களிலும் இயற்கை உரமே ஆங்காங்கே மலை போல் குவித்து வைத்துப் போட்டு வருகிறார்கள். பல இடங்களில் மாடுகள் உழுவதையும் பார்த்தேன். படம் எடுக்கலாமேனு கேட்பீங்க. அப்போ இருந்த டென்ஷன் மட்டுமில்லாமல், வண்டி குதித்துக் குதித்துப் போனதால் காமிரா நழுவிவிடுமோனும் பயம். இவ்வளவு வசதிக் குறைவு இருந்தும் மக்கள் அதைப் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை. 4 அயோத்தியை நோக்கி! சரயு நதிக்கரையில்! சாலைகள் எல்லாம் நம்ம தமிழ்நாட்டின் பிரபலமான மவுன்ட்ரோடையும், நூறடிச் சாலையையும் விட அகலமானது. அப்படி இருக்கையிலேயே பராமரிப்பு இல்லாமல் மோசமான நிலைமை. அதுவும் சுங்கச் சாவடி அருகே மிக மட்டமான சர்வீஸ் ரோடு. நாங்க அந்த சர்வீஸ் ரோடில் போயிருக்கணும். ஆனால் ஓட்டுநர் பாலத்தின் மீது போனார். சரி, வடக்கே போய்த் திரும்பணுமோனு நினைச்சோம். சற்று நேரத்தில் ஒரு பெரிய ஆற்றுப் பாலம். கங்கை என்றார் ஓட்டுநர். அங்கே எப்படி கங்கை வந்தது? பூகோள ரீதியாக வாய்ப்பே இல்லையே எனத் தோன்றினாலும் திக்குத் திசை புரியாமல் என்னத்தை சொல்வது? பாலம் தாண்டியும் அயோத்தி வந்தபாடில்லை. லக்னோவில் இருந்து இரண்டரை மணி நேரம் என்றார்கள். இப்போ மூன்று மணி நேரம் ஆகிவிட்டது. ஓட்டுநரை வண்டியை நிறுத்திவிட்டு அக்கம்பக்கம் விசாரிக்கச் சொன்னோம். அரை மனதாக அவர் இறங்கிப் போய் விசாரித்து வந்தார். பின்னர் சற்றுத் தூரம் சென்று வலப்பக்கமாகத் திரும்பினார். வண்டி தென் கிழக்கே சென்றது. சரியான பாதையில் செல்லவில்லை என்பதையும் ஓட்டுநர் தவறாகச் சென்று விட்டதையும் புரிந்து கொண்டாலும் அவரிடம் ஒன்றும் சொல்லவில்லை. கடைசியில் அந்த நதி சரயுதான் என்றும், சரயுநதிப்பாலம் எனவும் புரிந்தது. இருட்டி விட்டதால் பெயர்ப்பலகையும் கண்ணில் படவில்லை. அரைமணியில் ஊர் வந்துவிட்டது. ஆனாலும் இருட்டு அப்பி இருந்தது. எங்கேயும் தெரு விளக்குகளே இல்லை. இதுவே நம்ம தமிழ்நாடு என்றால் இம்மாதிரி பிரசித்தி பெற்ற ஒரு முக்கியமான இடத்தை இருளில் மூழ்க அடிப்பார்களா என்றும் தோன்றியது. அந்த இருட்டிலும் எங்கள் வண்டியைப் பார்த்த சிலர், “ஜெய் சியாராம்!” என கோஷமிட்டனர். நாங்களும் “ஜெய் சீதா ராம்” என பதிலுக்கு கோஷமிட்டோம். அங்கிருந்த ஒருவரிடம் நல்ல தங்குமிடம் பற்றி விசாரித்ததில் அவர் தானே வந்து வழிகாட்டுவதாகச் சொல்லித் தன்னுடன் வந்த ஒரு சிறுவரை வண்டியில் ஏற்றினார். ஓட்டுநருக்குச் சம்மதமில்லை. அவர் தன் வண்டி முதலாளி மூலம் யாரோ வழிகாட்டியின் பெயரை வாங்கி வைத்திருந்ததால் அவரிடம் தான் செல்வேன் எனப் பிடிவாதம் பிடித்தார். எங்கள் வண்டியைத் தொடர்ந்து வந்த அந்த ஆள் கடைத்தெருவுக்கு ஓட்டச் சொல்லி அங்கிருந்த ஒரு ஆளைக் காட்டினார். இவர் தான் நீங்கள் தேடி வந்த வழிகாட்டி என்றார். ஓட்டுநருக்கு அப்போதும் நம்பிக்கை இல்லை. ஆனால் அந்த வழிகாட்டி அந்தச் சிறுவனை இறக்கிவிட்டு வண்டியில் ஏறி உட்கார்ந்து வரும் வழியெல்லாம் விளம்பரம் செய்திருந்த ராம்ப்ரஸ்த் என்னும் ஹோட்டலுக்கு ஓட்டும்படி கூறினார். வண்டியும் அங்கே சென்றது. பாதையெல்லாம் குண்டும், குழியும். மழை வேறு விட்டு விட்டுப் பெய்ததால் சேறு, சகதி. எங்கெங்கு காணினும் குடிசைகள், மண் குடிசைகள். மேலே தார்பாலின் மட்டும் போடப்பட்ட தாற்காலிக வீடுகள். அங்கேயும் ஆடு, மாடுகள். எல்லாவற்றையும் தாண்டி சரயு நதியின் தென் கரையில் அமைந்திருந்த ராம்ப்ரஸ்த் ஓட்டலுக்குச் சென்றது. சாமான்களை இறக்காமல் உள்ளே சென்று அங்கே ரிசப்ஷனில் இருந்த நபரிடம் பேசினோம். முதலில் அறையைக் காட்டுகிறேன் என்று சொல்லிவிட்டு அறையைக் காட்டினார். அறை வசதியாக இருந்தது. வாடகை அவர் அதிகம் சொல்ல, நாங்கள் மறுக்க, பேரம் நடந்து கடைசியில் ஏ.சி. வேண்டாம்னு சொன்னதாலே ஏ.சி. இல்லா அறை வாடகைக்கு ஒத்துக் கொண்டார். அப்போத் தான் கண்டிப்புக் காட்டினாரே ஒழிய மிகவும் பணிவாகவும், அன்பாகவும், மரியாதையாகவும் கடைசி வரை இருந்தார். வட மாநிலங்களில் ஹோட்டலில் அறை எடுத்தால் நாம் முதல்நாள் மாலை ஆறு மணி, இரவு பத்து மணி, நள்ளிரவு பனிரண்டு மணி, காலை இரண்டு மணி, மூன்று மணி என்று போய் அறை எடுத்தாலே மறுநாள் மதியம் பனிரண்டு மணியோடு ஒரு நாள் கணக்குப் பண்ணி முடிந்து விடும். நண்பகல் பனிரண்டுக்குப் பின்னர் மறுநாள் கணக்கு வைத்துக் கொள்வார்கள். அதோடு அறை வாடகையை முன்னாலேயே கொடுத்துவிட வேண்டும். தமிழ்நாடு, கர்நாடகம் போல இன்று மதியம் மூன்று மணிக்கு வந்தால் நாளை மதியம் மூன்று மணி வரை என்ற கணக்குக் கிடையாது. அதோடு இங்கே அட்வான்ஸ் என நூறு ரூபாய் கொடுத்தால் கூட வாங்கிக் கொண்டு கடைசியில் பில் செட்டில் செய்தால் போதும். ஆனால் வட மாநிலங்களில் இன்றைய தினம் மதியம் பனிரண்டு மணிக்கு நாம் கொடுத்த அட்வான்ஸ் முடிந்து நாம் ஒரு மணி நேரம் கூடத் தங்கினாலும் அடுத்த ஒரு நாள் கட்டணத்தைக் கொடுக்க வேண்டும். நாம் அந்த நாள் தங்குவதெனில் அந்த நாளுக்குரிய கட்டணத்தையும் அன்றே மாலைக்குள் வாங்கிக் கொண்டு விடுவார்கள். ஆகவே நாங்கள் இரண்டு நாட்கள் தங்கப் போவதாக முன் கூட்டியே சொல்லிவிட்டு இரண்டு நாள் வாடகையில் கொஞ்சம் போல் நிறுத்திக் கொண்டு மற்றதை முன்பணமாகச் செலுத்தினோம். கீழேயே உணவகம் இருப்பதால் அங்கே போய் ஆர்டர் செய்தால் சூடாக உணவும் கிடைக்கும். மற்றபடி பால், காபி, டீ என எல்லாமும் கிடைக்கும். ரூம் செர்விசும் உண்டு என்றார்கள். . [] சரயு நதிக்கரையில். இங்கே அவ்வளவு ஆழமோ, வேகமோ இல்லை. அயோத்தி நகர் இதன் கரையில் அமைந்துள்ளது. [] படகில் ஏறும் மக்கள். ஓரளவுக்கு சுத்தமாக இருந்தாலும் ஹரித்வார் கங்கையின் படித்துறையைப் போல் அவ்வளவு சுத்தம் என்று சொல்ல முடியவில்லை. நம் மக்கள் எங்கே சென்றாலும் துணி, ப்ளாஸ்டிக் பைகள், வளையல்கள், மாலைகள், சாப்பாட்டுப் பொட்டலங்கள் எனப் போட்டுவிடுவார்களே! [:(] நாங்கள் டிரைவரை செட்டில் செய்து அனுப்பிவிட்டு அறைக்கு வந்து சாமான்களை வைத்து விட்டுக் கை, கால் கழுவிக் கொண்டு மணி ஏழேகால் ஆகிவிட்டபடியால் கீழே போய் ஒரேயடியாக இரவு உணவை முடித்துக்கொள்ள நினைத்தோம். அதுக்குள்ளே வழிகாட்டி நபர் ஒரு ஆட்டோக்காரரையும் அழைத்து வந்து மறுநாள் செல்லவேண்டிய பயணத்திட்டத்தைக் கேட்டார். அவரைக் காலை வந்து பார்க்கும்படி சொல்லிவிட்டு நாங்கள் கீழே சென்று உணவருந்தினோம். அருமையான உணவு. தந்தூர் ரொட்டியும் ஆலு மட்டரும் சொல்லி இருந்தோம். தந்தூர் ரொட்டி நல்ல பெரிதாக, மிருதுவாக மிக அருமையாக இருந்தது. சப்ஜியில் காரமும் அதிகம் இல்லை. மசாலாப் பொருட்களோ, வெங்காயம், பூண்டோ இல்லாமலேயே அருமையாக இருந்தது. அதற்குப் பின்னர் பாலோ, லஸ்ஸியோ சாப்பிட்டிருக்கலாம். மதியம் முழுவதும் காஃபி, டீ சாப்பிடவில்லையே என காஃபி ஆர்டர் செய்தோம். அதுதான் நாங்க செய்த தப்பு. என் கணவர் மு.ஜா. மு. அண்ணாவாகத் தனக்குக் காஃபி வேண்டாம் என அறிவிப்புச் செய்துவிட்டார். கொண்டு வந்த காஃபியில் இருவரும் பாதிப்பாதி என முடிவு செய்து இரண்டு கப் கொண்டு வரச் சொல்லி அவருக்குப் பாதி கொடுத்தேன். அதுவே இன்ஸ்டன்ட் காஃபி. அதையும் சரியாகப் போடவில்லை. பால் காயவில்லை. அதோடு காபியில் இன்ஸ்டன்ட் போட்டுக் கலந்ததும் மறுபடி மேலே மோரில் சாட் மசாலா தூவுவது போல இன்ஸ்டன்ட் பவுடரைப் போட்டுக் கொடுக்கிறார்கள். நல்ல உணவு சாப்பிட்டதுக்கு திருஷ்டியாக அமைந்தது என நினைத்துக் கொண்டே சாப்பிட்டுவிட்டு பில்லைக்கொடுத்துவிட்டுக் காலை ஆறு மணிக்கு அறைக்குத் தேநீர் கொண்டுவரச் சொல்லிவிட்டு அறைக்குத் திரும்பி வந்து உடனடியாகப் படுத்து விட்டோம். உறவினர், பையர், பெண் எல்லாரிடமிருந்தும் அலைபேசி அழைப்புக்கள் வரப் பேசிவிட்டு ஒன்பது மணிக்கு மேல் தூங்கி விட்டோம். மறுநாள் காலை எழுந்து நான் மட்டும் அறையிலேயே குளித்துவிட்டேன். அதுக்குள்ளே வழிகாட்டி வந்து பார்த்துவிட்டு நாங்கள் எழுந்திருக்கவில்லை எனச் சென்று விட்டதாக ரிசப்ஷனில் சொல்லவே அவரை அலைபேசியில் ஆட்டோவுடன் வரும்படி அழைத்தோம். சரயு நதியில் குளித்து அன்று பித்ரு தர்ப்பணம் செய்ய நினைத்திருந்தார் என் கணவர். அதற்கேற்றாற்போல் அன்று துலாமாசப் பிறப்பும் கூட. ஆகவே சரயு நதிக்குச் செல்லத் தயாரானோம். அயோத்தியை நோக்கி! [] சரயு நதிக்கரையில் துலாமாசத் தர்ப்பணம் முடித்துக் கொண்டு அங்கிருந்த ஒரு பண்டிட் மூலம் கோதான சங்கல்பம் செய்து கொண்டு அவருக்கு தக்ஷிணையும் கொடுத்தோம். பின்னர் அங்கிருந்து கிளம்பி அயோத்தி நகரில் ஶ்ரீராமன் சம்பந்தப்பட்ட முக்கிய இடங்களைப் பார்க்கச் சென்றோம். மேலே காணப்படுவது ஶ்ரீராம் தர்பார் என்னும் சின்னஞ்சிறு கோயிலின் நுழைவாயில். நாம் சந்நிதி என்பதை அங்கே தர்பார் என்கின்றனர். [] ஶ்ரீராமர், தன் குடும்பத்தோடு. வெளிச்சமும் அதிகம் அதோடு விளக்குகள் வேறே என்பதால் படம் தெளிவாக வரவில்லை. அடுத்துக் காண்பது சீதா கி ரசோயி என்னும் சீதையின் அந்தப் புரச் சமையலறை. அங்கே ஒரு சந்நியாசி இருந்தார். அவருக்கு எதுவும் சொல்லத் தெரியவில்லை; அல்லது பேச மாட்டார் என எண்ணுகிறோம். ஆனால் இங்கெல்லாம் நாங்க இரண்டு பேரும் கோயிலை நிர்வகிப்பவர்களும் தான் இருந்தார்கள். வேறே சுற்றுலாப் பயணிகளைப் பார்க்க முடியவில்லை. [] மஞ்சள் உடை உடுத்தி இருப்பவர் தான் சந்நியாசி. [] சமையல் பாத்திரங்கள். இப்போ இதிலே சமைக்கிறாங்களானு தெரிஞ்சுக்க ஆவல். ஆனால் சொல்ல யாரும் இல்லை. வழிகாட்டிக்கும் இது பத்தித் தெரியலை. [:(] [] வரவங்க சாப்பிடறதுக்கு அடுக்கி வைச்சிருந்த இலைக்கட்டுகள். இங்கே கொஞ்சம் வெளிச்சம் கம்மி என்பதால் ஓரளவுக்குப் படம் வந்திருக்குனு நினைக்கிறேன். அடுத்து கனக பவனம் போகலாம். ஆஞ்சநேயரைப் பார்க்கலாம். நாளைக்கு. சரியா?   5 அயோத்தியை நோக்கி! தொடர்ச்சி []சீதா கி ரசோயியில் பார்த்த குருமார்களின் படத்துக்கு எதிரே வைக்கப்பட்டிருந்த கதை மனதைக் கவர்ந்தது. ஒரு விஷயம் முக்கியமாச் சொல்லணும். இங்கெல்லாம் செல்வதற்கு எல்லா இடங்களுக்கும் ஆட்டோ வராது. ஆட்டோ ஒரு குறிப்பிட்ட இடத்திற்குச் சென்று அங்கேயே நிறுத்தப்படும். அதுக்கப்புறமாக் குறைந்தது அரைகிலோ மீட்டரிலிருந்து ஒரு கிலோமீட்டர் வரை நடந்தே செல்ல வேண்டி இருக்கும். நிறைய நடை. ஆட்டோவோ! அதை ஆட்டோனு எல்லாம் சொல்ல முடியாது. டில்லியில் இருக்கிறவங்களுக்கு பட்பட்டினு ஒண்ணு பழக்கமாகி இருக்கும். இந்த ஆட்டோவுக்கும், பட்பட்டிக்கும் இடைப்பட்டது இது. ஒரே சத்தம். இதிலே ஆட்டோ ஓட்டுநர்கள் பாட்டு வேறே போட்டுடுவாங்க. தெருவில் பின்னால் வண்டி வந்தாலோ, எதிரே வண்டி வந்தாலோ கண்கள் தான் கவனம் வைச்சுக்கணும். ஆனால் இந்த ஆட்டோக்கள் போடும் சப்தத்தில் முன்னாலும் பின்னாலும் வர வண்டிங்க தானாவே ஒதுங்கிடும்னு வைச்சுக்குங்க. [:P]இந்த அழகிலே டிரைவருக்கு இருபக்கமும் இரண்டு பேர் உட்கார, உள்ளே மெயின் சீட்டில் எதிரும்புதிருமாக நாலும், நாலும் எட்டுப்பேர் உட்கார்ந்துக்கறாங்க. இதைத் தவிரப் பின் சீட்டில் எதிரும் புதிருமாக ஆறுபேர் உட்கார்ந்துக்கறாங்க. கிட்டத்தட்டச் சென்னையில் டாடா டாக்சி என்ற பெயரில் ஓடும் வண்டியைப் போல் இருக்கை வசதி. ஆனால் ஆட்டோ போல் அமைப்பு. ஆட்டோக்சினு சொல்லலாமோ! இது முழுதும் நமக்கு மட்டும் வேண்டும்னா வண்டி ஓட்டுநரிடம் இதுக்காக சம்பிரதாயமான பேச்சு வார்த்தையில் பேசி முடிக்கணும். ஹிஹிஹி, இந்த ட்ரிப்பில் நாங்க ரொம்ப ரசிச்சது இது. ஆட்டோக்காரரைக் கூப்பிட்டு நீங்க வரீங்களானு நாம கேட்டதுமே, அவங்க நம்ம கிட்டே உங்களுக்கு மட்டும் தனியா வர முடியாது. மத்த சவாரிங்களும் வருவாங்கனு சொல்லுவாங்க. அதுக்கு நாம் “இதை நாங்க ரிசர்வ்” செய்துக்கறோம்னு சொல்லணும். ரிசர்வ் கூடக் கிடையாது. ரிஜர்வ்! :))) அப்போ ஓட்டுநர், தோ போலியே ந பாபு னு சொல்லுவார். மறுபடி நாம ரிஜர்வ் என்பதை உறுதி செய்யணும். அதுக்கப்புறமா இந்த வண்டியிலே நாம் ஏறிக்கலாம்னும், வேறே யாரையும் ஓட்டுநர் ஏத்த மாட்டார்னும் தெரிஞ்சுக்கலாம். :)) இதை வந்த அன்னிக்குக் காரிலே வந்ததாலே கவனிச்சு வைச்சுக்கலை. அப்புறமாத் தான் புரிஞ்சது. ஏற்கெனவே சாலைகள் மோசம். இதிலே இந்த வண்டிப் பிரயாணம் வேறே. வண்டி குலுக்கின குலுக்கல்லே என்னோட வயிறு உதரவிதானத்துக்கு மேலே வந்திருக்குமோனு சந்தேகம். இன்னும் போகலை! சாப்பாடெல்லாம் சாப்பிட்டுட்டுப் போனா அவ்வளவு தான். நல்ல வேளையா நாங்க காலம்பர குடிச்ச ஒரே ஒரு டீயோட கிளம்பி இருந்தோம். சரயு நதிக்கரையிலிருந்து ராம் தர்பார், சீதாகி ரசோயி பார்த்துட்டு, கோசலை, சுமித்திரை ஆகியோரின் அந்தப்புரங்களையும் பார்த்தோம். பின்னர் தசரதர் புத்திர காமேஷ்டி யாகம் செய்த இடத்தை தரிசித்தோம். படங்கள் கீழே. அதன் பின்னர் ஶ்ரீராம ஜென்ம பூமி பார்க்க வேண்டி ஆட்டோவில் கிளம்பினோம். ஶ்ரீராம ஜென்ம பூமியைக் காலை பதினோரு மணிக்குள் தான் பார்க்க முடியும். அதன் பின்னர் பகல் இரண்டு மணிக்குத் தான் திறப்பார்கள். நாங்கள் சென்ற சமயம் பதினெட்டாம் தேதி அங்கே ஏதோ கிளர்ச்சி என்பதால் அன்று காலை பதினோரு மணிக்கே ராமஜென்மபூமி செல்லும் சாலைகளை மூடப்போவதாகச் சொல்லிக் கொண்டிருந்தார்கள். ஆகவே ஆட்டோ ஓட்டுநரும், வழிகாட்டியும் எங்களை தாக சாந்தி செய்து கொள்ளக் கூட விடவில்லை. இதை முடிச்சுட்டு அப்புறமா எங்கே வேணாலும் போய்க்குங்க என்று சொல்லிவிட்டார்கள். ஆட்டோ ராம ஜென்ம பூமி நோக்கிச் சென்றது. அதோடு இல்லாமல் ஶ்ரீராமன் பட்டாபிஷேஹம் செய்து கொண்டப்போ அவருடன் வந்த வாநர சேனைகள் எல்லாம் அயோத்தி சுற்று வட்டாரங்களிலேயே தங்கிட்டாங்க போல! எங்கெங்கு காணினும் வாநரங்களடா! கையிலே எதுவும் கொண்டு போக முடியாது. நாம் கொண்டு போகும் எந்தப் பொருளையும் ஆட்டோவில் (செருப்பைக் கூட) விட்டுட்டுப் பார்த்துக்கோப்பானு சொல்லிட்டுப் போக முடியாது. அவங்களே மறுத்துடறாங்க. வாநரங்கள் சர்வ சகஜமா உலவிட்டு இருக்குங்க. யாரையும் ஒண்ணும் பண்ணலைனாக் கூடக் கையிலே எதையும் எடுத்துட்டுப்போக யோசிக்க வேண்டி இருக்கு. [] அங்குள்ள பிரபலமான ஆஞ்சநேயர் கோயிலின் ஆஞ்சநேயர். [] ராமர், சீதை, லக்ஷ்மணனோடும் ஆஞ்சநேயனோடும் [] எல்லா இடங்களிலும் ஶ்ரீராமர் இப்படியே காணப்படுவதால் எது எங்கே எடுத்ததுனு கொஞ்சம் புரியாமல் போகிறது. :)))) [] இது சகல பரிவாரஃங்களோடு இருப்பதாகச் சொல்கின்றனர். கீழே சின்னச் சின்னதாக மற்ற மூர்த்தங்கள். [] புத்ர காமேஷ்டி யாகம் நடந்த இடத்தில் உள்ள சந்நிதி. இங்கே குழந்தை இல்லாதவர்கள் வந்து வேண்டிக் கொண்டு ஆண்டு முழுவதுக்கும் பாயசம் நிவேதனம் செய்ய 200 ரூ வசூலிக்கின்றனர். குழந்தை பிறந்ததும், இங்கே கொண்டு வந்து பிரார்த்தனையை மணி கட்டி நிறைவேற்றுகின்றனர். மணிகள் கட்டியது படம் சரியாக வரலை. பிரதிபலிப்பு அதிகமாப் போயிருக்கு. டெலீட் செய்துட்டேன். [:(] [] அரசக் கோலத்தில் தசரதன் அமர்ந்திருக்க, ரிஷ்ய சிருங்கர், வசிஷ்டர், கெளதமர், விஸ்வாமித்திரர் போன்ற முனிவர்கள் சூழ நடத்தப்பட்ட புத்ர காமேஷ்டி யாகத்தில் பாயசக் கிண்ணத்தோடு வரும் புருஷன் படத்துக்கு நடுவே சிவப்பு உடையில்.   6 அயோத்தியை நோக்கி! பணமூட்டையுடன் நாங்கள்! :)))) ராம ஜன்மபூமி செல்லும் வழியில் கட்டவிருக்கும் ராமர் கோயிலின் மாதிரியையும் கட்டிக் கொண்டிருக்கும் இடத்தையும் காணலாம். அதைப் படம் எடுக்க முடியவில்லை. அங்கிருந்து ஆட்டோவில் கொஞ்சம் பயணித்து ஶ்ரீராமஜன்ம பூமிக்குச் செல்லும் பாதையை அடைந்தோம். ஆட்டோ நிறுத்தப்பட்ட இடத்திலிருந்து கிட்டத்தட்ட இரண்டு கிலோ மீட்டருக்கும் மேல் நடந்து சென்று வரிசையில் நிற்பதற்கான வாயிலை அடைய வேண்டும். அதற்கு முன்னர் நாம் கையில் கொண்டு போகும் சாமான்களை வைக்கும் லாக்கர் உள்ளது. அங்கே சென்றோம். ஶ்ரீராம ஜன்மபூமியைப் படம் எடுக்கக் கூடாது. மொபைல்களும் அங்கே பயன்படுத்தக் கூடாது. கைப்பைகளோ, அல்லது ப்ளாஸ்டிக் பைகளோ, துணிப்பைகளோ எதுவும் எடுத்துச் செல்லக் கூடாது. வெறும் கையோடு தான் செல்ல வேண்டும். ஆகவே என்னோட கைப்பையை லாக்கர் வைத்திருக்கும் இளைஞரிடம் கொடுத்தேன். அதிலுள்ள பணங்கள், நகைகள் இருந்தால் எடுக்கச் சொன்னார். நகைகள் ஏதும் கிடையாது. பணத்தை எடுத்தால் எங்கே வைச்சுக்கறது! அங்கே பணமாக வைத்திருக்க வேண்டும். ஏனெனில் தங்குமிடத்துக்கு அன்றைய வாடகையை அன்றே கொடுத்தாக வேண்டும். இன்று மதியம் பனிரண்டு மணி மேல் அரை மணி நேரம் தங்கினாலும் ஒரு நாள் வாடகையைக் கொடுத்தாக வேண்டும். மேலும் ஏடிஎம் எங்கே இருக்குனு தேட வேண்டி இருக்கும். அதெல்லாம் யோசித்துப் பணமாகவும் இருந்தது. சரி சின்ன பர்ஸில் வைக்கலாம் என சின்ன பர்ஸை எடுத்தேன். அருகிலிருந்த பாதுகாப்புக் காவலர் அதையும் மறுத்தார். அதுவும் எடுத்துச் செல்லக் கூடாது என்றார். என் கணவரோ வேட்டி கட்டிக் கொண்டு வந்திருக்கார். பான்ட் போட்டிருந்தால் பான்ட் பாக்கெட்டில் வைக்கலாம். என்ன செய்வது? அதுக்குள்ளாகப் பையைத் திரும்பக் கொடுத்த லாக்கர் இளைஞன், “நிறையச் சில்லறை இருக்கு, அதையும் எடுங்க“, னு சொன்னார். கைப்பையே கனம் தாங்காத அளவுக்கு கிட்டத்தட்ட முந்நூறு ரூபாய்க்குச் சில்லறை வைத்திருந்தோம். ஆங்காங்கே தேநீருக்கு, காபி, பழங்கள் வாங்கினால் சில்லறை இல்லாமல் சிரமப் படும் எனப் பத்து ரூபாய்க் காசிலிருந்து எட்டணா வரை சில்லறை இருந்தது. எல்லாவற்றையும் காலி செய்தேன். அதுக்குள்ளே மேல்துண்டை எடுத்தார் நம்மவர். அதிலே கொண்டு போன ரூபாய்களையும் போட்டுச் சில்லறையையும் போட்டோம். ஒரு மூட்டையாகக் கட்டினோம். கொஞ்ச நேரம் அவர் தூக்கிக் கொண்டு வந்தார். வழியெல்லாம் கிட்டத்தட்டப் பத்து இடங்களில் பாதுகாப்புச் சோதனை. அவங்களைப் போல் ஐந்து மடங்கு நம் வாநரர்களின் பாதுகாப்பு. பாதுகாப்புக் காவலர்கள் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் சரளமாகப் பதில் சொல்ல முடிந்தது. ஆகையால் பண மூட்டையோடு செல்ல எங்களை அநுமதித்ததோடு அவங்களோட கவலையையும் தெரிவிச்சு, என் புடைவைத் தலைப்பில் வைத்து மறைத்துக் கொண்டு குரங்குகளிடமிருந்து பாதுகாப்பாகச் செல்லும்படியும் கூறினார்கள். சுற்றிச் சுற்றிச் சுற்றி வழி சென்று கொண்டே இருந்தது. ஆங்காங்கே பாதுகாப்புச் சோதனை! அதே கேள்விகள், அதே பதில்கள்! கிட்டத்தட்ட மீண்டும் ஒரு இரண்டு கிலோ மீட்டர் அந்த வரிசைக்கான சுற்றுவழியில் சுற்றிச் சுற்றிச் சென்றதும் திடீர்னு “இதோ ராமஜென்மபூமி” என்று காட்டி வணங்கச் சொல்கின்றனர். ஶ்ரீராமர் குழந்தை வடிவில் மிகச் சிறிய உருவத்தில் காணப்படுகிறார். சுற்றிலும் ராணுவப்பாதுகாப்பு. ராஜா அல்லவா? மெய்க்காவலர்கள் புடைசூழக் காவலில் இருக்கக் காண முடிகிறது. ஒரு பண்டிட் அங்கே சுற்றிலும் காவலர்கள் புடை சூழ அமர்ந்திருக்கிறார். “போலோ, ஶ்ரீராம்லாலா கி ஜெய் !” என்ற கோஷம் எங்கும் எழுந்தது. ஆம் இங்குள்ள ஶ்ரீராமரைக் குழந்தை என்பதால் “ராம்லாலா” என அழைக்கின்றனர். பளிங்கினால் செய்த சிலையில் தங்கத்தால் கோட்டிங் செய்திருப்பதாகச் சொல்கின்றனர். ஶ்ரீராமர் விக்ரஹம் இருக்கும் இடத்துக்கும் நாம் தரிசனம் செய்யும் இடத்துக்கும் குறைந்த பக்ஷமாக ஐம்பது அல்லது அறுபது அடிக்கு மேலேயே இருக்கும். ஈட்டி மரத்தால் செய்யப்பட்ட பல்லக்கில் வைத்திருப்பதாகவும் சொல்கின்றனர். சற்று நின்று தரிசிக்கலாம். ஒண்ணும் சொல்வதில்லை என்றாலும் அடுத்தடுத்து மக்கள் வந்து கொண்டிருப்பதால் இரண்டு நிமிடத்துக்கு மேல் நிற்க முடிவதில்லை. விநயமாகவே நகரச் சொல்லி வேண்டுகோள் விடுக்கின்றனர். மீண்டும் அதே நாலு கிலோ மீட்டர் தூர நடை. அதன் பின்னர் ஶ்ரீராமரின் உலோக விக்ரஹங்கள் சில வாங்கிக் கொண்டு அங்கே காத்திருந்த வழிகாட்டியுடன் அறையை நோக்கித் திரும்பினோம். அதற்குள்ளாக மணி பதினொன்றுக்கும் மேல் ஆகிவிட்டதால் ஶ்ரீராமஜென்ம பூமியையும் மூடி விட்டார்கள். இனி மதியம் இரண்டு மணிக்குத் தான் திறப்பார்கள். அதோடு அங்கே மறுநாள் ஏதோ கிளர்ச்சிக்கு ஏற்பாடுகள் நடைபெறுவதாக ஏற்கெனவே தொலைக்காட்சிச் செய்திகள் மூலம் தெரிந்து கொண்டிருந்தோம். அதை உறுதிப் படுத்துவதைப் போல் அயோத்திக்குள் வரும் வழிகளை மூடிக் கொண்டிருந்தனர். அதனால் தான் எங்கள் வழிகாட்டியும் எங்களை அவசரப் படுத்திக் காலைத் தேநீருக்குப் பின்னர் எதுவும் உண்ணக் கூட அநுமதிக்காமல் எல்லாவற்றையும் காட்டிவிட்டார். :)))) அறைக்கு வந்து நேரே உணவு எடுத்துக் கொண்டு சற்று ஓய்வு எடுத்துக்கலாம் என்று போனோம். ஆட்டோக்காரர் மதியம் பார்க்க வேண்டியவைக்குத் தனியாகப் பணம் கொடுக்க வேண்டும் என்று பேரம் பேசினார். அவை எல்லாம் அயோத்தியிலிருந்து 25, 30 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளவை. ஒன்று ஶ்ரீராமன் சரயு நதியில் மறைந்த இடம் குப்தார் காட் என்னும் இடம். இன்னொன்று நந்திகிராமம், 27 தீர்த்தங்களைக் கொண்டு வந்த இடம் ஒன்று , மணி பர்வதம் என்றொரு இடம். எங்களால் மணி பர்வதம் ஏற முடியாது என்று சொல்லிக் குறைச்சுக்கச் சொன்னோம். அவர் கூட்டித் தான் போவேன் என்றும் அங்கே போனப்புறம் ஏறுவதோ, ஏறாமல் இருப்பதோ எங்கள் இஷ்டம் என்றும் கறாராகச் சொல்லிவிட்டார். ஆட்டோக்காரரையும் அனுப்பிட்டுச் சாப்பிட்டு ஓய்வு எடுத்துக் கொண்டு மதியம் கிளம்பத் தயாரானோம். 7 அயோத்தியை நோக்கி! குப்தார்காட்டிலும், நந்திகிராமத்திலும்! சிறிது நேரம் ஓய்வெடுக்கும் போதே ஆட்டோக்காரர் வந்து கூப்பிடுவதாக ரிசப்ஷனிலிருந்து தொலைபேசி அழைப்பு வர, உடனடியாகக் கிளம்பினோம். சாலை சரியாக இல்லாததாலும், விரைவில் இருட்டி விடுவதாலும் செல்ல வேண்டிய இடங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு திக்கிலே சுமார் 25 கிலோ மீட்டர் தூரத்தில் இருப்பதாலும் சீக்கிரம் சென்றால் தான் மாலை ஏழுக்குள் வர இயலும் என ஆட்டோ ஓட்டுநர் கூறக் கிளம்பிவிட்டோம். முதலில் சென்றது குப்தார்காட் என்னும் சரயு நதி தீரம். ஶ்ரீராமர் எந்தச் சூழ்நிலையில் சரயுவில் மூழ்கி மறைய நேர்ந்தது என்பதை ராமாயணம் படித்தவர்கள் , முக்கியமாய் உத்தரகாண்டம் படித்தவர்களுக்குத் தெரிந்திருக்கலாம் . ஶ்ரீராமன் பூமிக்கு வந்த காரணம் முடிந்துவிட்டதாகவும் இனி வைகுந்தம் திரும்பவேண்டும் எனவும் காலதேவன் வந்து சொல்ல அப்போது தான் தன்னை உணர்ந்த ஶ்ரீராமன் வைகுந்தம் செல்லத் தயாராகி சரயு நதியில் மூழ்கி ஜலசமாதி அடைகிறார் . அந்த இடம் தான் குப்தார்காட் என அழைக்கப்படுகிறது . [] அயோத்திக்கு மேற்கே உள்ள சரயு தீரத்தில் ஶ்ரீராமர் சரயுவில் மூழ்கியதாகச் சொல்லப்படுகிறது. ஹிந்தியில் “குப்த்” என்றால் மறைவாக, ரகசியமாக என்றெல்லாம் பொருள்படும். இங்கே தான் ராமர் மறைந்தார் என்பதால் குப்தார்காட் என இதை அழைக்கின்றனர். இங்கே நதிக்கரையில் ஒரு கோயிலும் இருக்கிறது. இது தான் மதராசி மந்திர், அம்பாஜி மந்திர் என்றெல்லாம் அழைக்கப்படும் கோயில் என அறிந்தேன். ஆனால் நாங்கள் சென்ற நேரம் மணி மூன்று. கோயிலை நான்கு மணிக்கு மேல் தான் திறப்பார்களாம். வெளியில் இருந்தே சில சந்நிதிகளை மட்டும் தரிசித்தோம். அவை கீழே. சிவன் சந்நிதி மட்டும் பார்க்க முடிந்தது. [] அதற்குள்ளாக ஆட்டோக்காரர் அழைப்பு மேல் அழைப்பு விடுத்துவிட்டார். அயோத்தியின் நிலைமை அப்படி உள்ளது. எந்த நேரம் எந்த வழியை மூடுவாங்க, அல்லது திறப்பாங்கனு சொல்ல முடியாது. அதோடு இன்னும் பார்க்க வேண்டிய இடங்கள் வேறே உள்ளன. அவற்றுக்கு வெவ்வேறு திக்கில் செல்ல வேண்டும். இதுக்கே கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் பயணம் செய்து வந்திருந்தோம். [] வழியெங்கும் நெல் வயல்கள். கரும்புத் தோட்டங்கள். செழுமை பொங்கின. இவ்வளவு நீர், நில வசதி இருந்தும் நாடு ஏன் முன்னேறவே இல்லை என்ற கேள்வியும் மனதைத் துளைத்தது. ஆங்காங்கே வயல்களில் வரப்போரமாகவோ அல்லது சாலைகளின் ஓரமாக வயல் கரையிலோ இயற்கை உரங்கள் மலை போல் குவிந்து கிடந்தன. எங்கேயும் செயற்கையான உரத்தையே பார்க்க முடியவில்லை. ஒவ்வொரு வீட்டிலும் அது குடிசையாக இருந்தாலும் குறைந்தது நான்கு பசுக்கள் இருந்தன. [] குப்தார்காட்டின் படகுத் துறை. காலை பார்த்த இடத்திலும் படகுத்துறை இருந்தது. அங்கே ஆழம், வேகம் குறைவு. இங்கே ஆழம் நாற்பது அடிக்கும் மேல் என்றார்கள். வேகமோ வேகம். அதான் ராமர் இதைத் தேர்ந்தெடுத்தாரோனு நினைத்தேன். கால்நடைப் பராமரிப்பும் சரி, வளர்ப்பும் சரி அமோகமாக இருப்பதும் தெரிந்தது. பசுக்கள் மேயப் புல்வெளியும் ஏராளம். ஆகவே எந்தப் பசுவும் சினிமா போஸ்டரையோ, ப்ளாஸ்டிக் பைகளையோ சாப்பிட்டும் பார்க்கலை. இதை இங்கே ஶ்ரீரங்கத்திலும் பார்க்கலாம். பசுக்களுக்கு மாட்டுச் சொந்தக்காரர் அறியாமல் நாமாக ஏதேனும் உணவைக் கொடுத்துவிட முடியாது. கொடுத்தால் அகத்திக்கீரை மட்டும் கொடுக்கலாம். பாழாய்ப் போனதெல்லாம் பசுவன் வயித்திலே என்ற பழமொழி இங்கே எடுபடாது. ஏன் நீ சாப்பிடேன், என்று திருப்புவார்கள். இது மாட்டின் நன்மைக்கே என்றாலும் முதலில் ரொம்ப ஆச்சரியமாக இருந்தது. பின்னர் பழகி விட்டது. [] குப்தார் காட்டிலிருந்து நாங்கள் சென்றது நந்திகிராமம். இங்கே தான் ஶ்ரீராமன் வருவதற்கு ராவண வதம்முடிந்து வருவதற்கு நேரம் ஆனது என்பதால் இனி அவன் வருவானோ மாட்டானோ என்ற சந்தேகத்தில் பரதன் தீக்குளிக்க இருந்ததும், அப்போது அநுமன் தூதுவனாக வந்து பரதனைக் காத்ததும் நடந்தது. இங்கே அநுமனும், பரதனும் ஆலிங்கனம் செய்து கொள்ளும் சிற்பம் ஒன்றும், அநுமன் சந்நிதியும் உண்டு. பரதன் தவம் இருந்த குகையில் இப்போது ஶ்ரீராமன், பரிவாரங்களோடு கோயில் கொண்டிருக்கிறார். இந்தக் கோயிலின் அருகேயே இன்னொரு பழமையான கோயில் அது தான் உண்மையான பரதன் குகை என்று சொல்கிறது. இதைக் கண்டறிந்ததும் விக்கிரமாதித்த அரசன் என்றும் சொல்கிறது. இரண்டையுமே சென்று பார்த்தோம். இரண்டாவது கோயிலில் கீழுள்ள குகைக்குச் செல்ல முடியவில்லை. அநுமதி கொடுப்பதில்லை என்றனர். சிலர் அநுமதி கொடுப்பவர் வரவில்லை என்றனர். ஆக மொத்தம் பார்க்க முடியவில்லை.   8 நந்திகிராமத்தின் காட்சிகளைக் காண வேண்டாமா? [] நந்திகிராமத்தில் முதலில் சென்ற பரத்குண்ட் என்னும் இடம். இந்தக் குளத்து நீரைக் குளிக்கவோ, குடிக்கவோ மற்ற எதற்கும் பயன்படுத்துவதில்லை. மேலும் இங்கே பித்ரு காரியங்கள் செய்ய உகந்ததாகவும் சொல்லப்படுகிறது. நாங்கள் சென்றபோது மாலை நான்கு மணி ஆகிவிட்டபடியால் எதுவும் செய்யவில்லை. தமிழ்நாட்டில் சென்னை, திருவல்லிக்கேணியிலிருந்து வந்திருந்த ஒரு குழுவினரை இங்கே சந்தித்தோம். கிட்டத்தட்டப் பதினைந்து, இருபது ஆண், பெண்கள் வந்திருந்தனர். [] பரதனை ஆஞ்சநேயர் சந்தித்து ஶ்ரீராமர் வருகிறார் என்ற தகவலை அளித்த இந்த இடம் பரத்-அநுமன் மிலன் மந்திர் என அழைக்கப்படுகிறது. முற்றிலும் இயற்கையான சூழலில் அமைந்துள்ளது. உள்ளே ஶ்ரீராமர் சந்நிதிக்கு இடப்பக்கமாகக் கீழே சென்றால் பரதன் இருந்த குகையும், பரதனும் ஆஞ்சநேயனும் சந்தித்து ஒருவரை ஒருவர் கட்டிக் கொண்டு மகிழ்ந்ததைக் காட்டும் சிற்பத்தையும், ராமர் பாதுகையையும் காணலாம். [] பரதனும் ஆஞ்சநேயனும் ஒருவரை கட்டி அணைத்த வண்ணம் காட்சி அளிக்கின்றனர். [] காட்டில் ஶ்ரீராமன் தவம் இருந்தான் எனில் நாட்டிலேயே தவம் இருந்த பரதன். [] ஆஞ்சநேயர் தனி சந்நிதியில் [] ஆஞ்சநேயருக்கு மேலே சுவத்திலே நம்மாளு இருந்தாரா, கொஞ்சம் தூரக்க இருந்தாலும் விடலை! பிடிச்சுட்டேன். [] [] லவ, குசர்களின் பாணத்தால் காயமடைந்த ஹநுமான் இங்கே வந்து வீழ்ந்ததாகச் சொல்லப்படுகிறது. [] விக்கிரமாதித்தனைக் குறித்த விளக்கத்தைக் கொடுக்கும் அறிவிப்புப் பலகை. 9 அயோத்தி முடிவு! நந்திகிராமம்--தொடர்ச்சி! பரதன் இருந்த குகையே இன்னொன்று விக்கிரமாதித்தனால் கண்டுபிடிக்கப்பட்டது என்ற அறிவிப்பைச் சென்ற பதிவில் பார்த்தோம். அதுவும் தற்போதைய “பரத் -ஹநுமான் மிலன் மந்திருக்கு அருகேயே உள்ளது. அங்கே சுமார் 27 தீர்த்தங்கள் உள்ளதொரு தீர்த்தஸ்தானம் இருக்கிறது. தற்சமயம் அதைச் சுற்றிக் கிணறு போல் கட்டியுள்ளனர். பரதனின் குகைக்கான அறிவிப்புப் பார்க்கலாம். ஆனால் உள்ளே செல்ல விடுவதில்லை. [] தவக்கோலத்தில் பரதன். இங்கே தன் மனைவியுடன் காணப்படுகிறான். [] பரதன் மனைவி மாண்டவி [] மன்னனுக்குத் தேவையான ஆலோசனைகளை வழங்கும் வண்ணம் நந்திகிராமத்திலேயே தங்கிய குலகுருவான வசிஷ்டர் [] பரதன் தவமிருந்த குகை குறித்தும் 27 தீர்த்தங்களைக் குறித்துமான அறிவிப்பு [] பரதன் பூஜித்ததாய்ச் சொல்லப்படும் ராமர் பாதுகை. எழுத்தால் எழுதி இருக்கேன். ஆனால் மங்கலாகத் தெரிகிறது. [:(] [] இக்ஷ்வாகு குலத்தவர் வழிபட்ட சிவன் சந்நிதி. இது புதுசாய்த் தான் இருக்கு. ஆனால் முன்னர் லிங்கம் இருந்ததாய்ச் சொல்லப்படுகிறது. [] தீர்த்தக் கிணறு. இங்கே கோயிலை நிர்வகிக்கும் சந்நியாசி(பெரும்பாலான கோயில்களை சந்நியாசிகளே நிர்வகிக்கின்றனர்.) அன்று பலருக்கு அன்னதானம் செய்து கொண்டிருந்தார். அதைப் படம் எடுக்கவில்லை. ஆனாலும் அன்னதானத்துக்கு எங்களால் ஆன தொகையைக் கொடுத்தோம். இம்மாதிரி நிறைய சந்நியாசிகளால் நிர்வகிக்கப்படும் கோயில்கள் அயோத்தியில் நிறைய இருக்கிறது. வசூலும் நிறையவே கேட்கின்றனர். இதில் நிறையவே கவனம் தேவை. இதற்கடுத்துத் தான் மணிபர்பத் போனோம். அங்கே பழைய பெளத்த ஸ்தூபம் மேலே இருக்கிறதாய்ச் சொன்னார்கள். செல்லும்போதே மணி ஐந்து ஆகிவிட்டது. அதோடு மேலே ஏறவும் கூடாது என மருத்துவர்கள் கட்டளை. முன்னோர்கள் வேறே மலை ஏறும் வழியில் கூட்டம் கூட்டமாய்க் காத்திருந்தனர். ஆட்டோவிலோ எதையும் வைத்துவிட்டுப்போகக் கூடாது என்று அன்புக் கட்டளை. காமிராவை வெளியே எடுக்க விடாமல் முன்னோர்கள் படுத்தல். தேநீர் குடிக்கக் கடைக்கு வெளியே அமர்ந்தால் கூடவே அவங்களும்! அயோத்தி நகரை மேலிருந்து பார்க்கலாம் என்றும் சொன்னார்கள். எனினும் ஆவலை அடக்கிக் கொண்டோம். இதுவும் முற்றிலும் ராணுவப் பாதுகாப்போடு காணப்பட்டது. சற்று நேரம் அந்த இயற்கையான சூழலில் அமர்ந்திருந்து தேநீர் அருந்திவிட்டுப் பின்னர் அங்கிருந்து கிளம்பி, நாங்கள் தங்கி இருந்த விடுதிக்குக் கிளம்பினோம். அங்கிருந்து இரண்டு மணி நேரத்துக்கும் மேல் ஆயிற்று. அதுவும் வழியை அடைத்திருந்ததால் சுற்றிச் சுற்றி நகருக்குள் வரவே அரை மணிக்கும் மேலாயிற்று. அங்கிருந்து விடுதிக்கு வந்து சற்று ஓய்வு எடுத்துக் கொண்டு விடுதிக் காப்பாளரிடம் மறுநாள் கான்பூர் செல்ல வண்டி கிடைக்குமா என்று கேட்டோம். அவரும் கேட்டுவிட்டுக் கான்பூர் செல்ல வண்டியின் விலையைக் கிட்டத்தட்டக் கூறினார். எங்கள் பிரயாணத்திட்டத்தில் அயோத்தியிலிருந்து கான்பூர் சென்று அங்கே இருந்து அருகிலுள்ள பிட்டூர் என்னும் ஊரிலுள்ள வால்மீகி ஆசிரமத்தைக் காண்பது. பின்னர் கான்பூரிலிருந்து கிளம்பும் சித்ரகூட் எக்ஸ்ப்ரஸில் சித்திரகூடம் செல்வது என இருந்தது. ஆனால் கான்பூர் செல்ல லக்நோவைத் தாண்டித் தான் செல்லவேண்டும் என்றும் பணம் அதிகம் ஆகும் என்றும் சொல்ல பயணத்திட்டம் மாறியது. அயோத்தியிலிருந்து மீண்டும் லக்நோவே சென்று அங்கிருந்து கிளம்பும் சித்திரகூட் எக்ஸ்பிரசில் சித்திரகூடம் செல்லலாம் என முடிவு செய்யப்பட்டது. விளைவுகள் எப்படி இருக்கும் என அப்போது தெரியாது. விடுதிக் காப்பாளரிடம் மறுநாள் லக்னோ செல்ல வண்டிக்கு ஏற்பாடு செய்யச் சொல்லிவிட்டு அன்றைய தினம் நன்றாய்க் கழிந்த திருப்தியுடன் மறுநாளைக் குறித்த கவலை ஏதுமில்லாமல் படுத்துத் தூங்கினோம். மறுநாள் விடிந்தது. 10 ஶ்ரீராமனின் பாதையில்! அவரைக் காணோமே! காலை எழுந்ததும் குளித்து முடித்துத் தயாராகிக் காலை உணவு எடுக்காமல் நேரே ப்ரஞ்ச் சாப்பிடலாம்னு முடிவெடுத்து விடுதிக் காப்பாளரிடம் வண்டி பற்றிக் கேட்டோம். அவரும் லக்னோ செல்ல நாங்க சொன்ன தொகைக்கு ஒத்துக் கொண்டு ஒருத்தர் வரேன்னு சொல்லி இருப்பதாய்ச் சொன்னார். சரினு நாங்களும் அக்கம்பக்கம் கொஞ்சம் பார்த்து வரலாம்னு போயிட்டு வந்தோம். திரும்பி வந்தால் பசிக்கிறாப்போல் இருக்கவே கீழே போய் வெறும் ப்ரெட் டோஸ்டும், தேநீரும் சாப்பிட்டுவிட்டு சாப்பாடு எப்போத் தயாராகும்னு கேட்டுக் கொண்டு திரும்பினோம். கிளம்பத் தயாராக பொருட்களை எல்லாம் எடுத்து வைத்தோம். துணி துவைக்க நிறைய இருந்தது. சித்ரகூடம் போய்த் தான் தோய்க்கணும். பதினொன்றரைக்கு மீண்டும் கீழே போய் உணவு எடுத்துக் கொண்டோம். சரியாய்ப் பனிரண்டுக்கு வண்டியும் வர, விடுதி ஆட்கள் உதவி செய்ய லக்னோ நோக்கிக் கிளம்பினோம். விடுதியின் கவனிப்புக்கும், உதவிகளுக்கும் நன்றி சொல்லி ஆட்களுக்கும் தாராளாமாய் டிப்ஸ் அளித்து விட்டு சந்தோஷமாய்க் கிளம்பினோம். டிரைவர் இளைஞன். இன்னும் சொன்னால் சிறுவன் என்றே சொல்லலாம். ஆனாலும் அபாரமாக வண்டி ஓட்டினார். அவர் வீட்டில் ஆயிரம் வருஷத்துப் பழைய ஶ்ரீராமர் சிற்பங்கள் இருப்பதாகச் சொல்லி அங்கே அழைத்துச் சென்றார். வீடு தான் என்றாலும் கோயில் போன்ற அமைப்பில் இருந்தது. அங்கிருந்தவர் அன்றைய வழிபாடு முடிந்து கதவு சார்த்திவிட்டதால் இனி மாலை மூன்று மணிக்கு மேல் தான் பார்க்கலாம்னு சொல்லிட்டார். கொஞ்சம் ஏமாற்றமே. லக்னோவுக்கு இரண்டரையிலிருந்து மூன்றுக்குள் வந்துவிட்டோம். நேரே முன் பதிவு செய்யும் இடம் போய் அன்றைய சித்ரகூட் எக்ஸ்பிரஸில் முன் பதிவுக்குக் கேட்டால் இங்கே டிக்கெட் மட்டும் தான். ரயிலில் டிடி யிடம் கேட்டு முன்பதிவு செய்து கொள்ளவும்னு சொல்லிட்டாங்க. சரினு டிக்கெட்டை வாங்கிண்டு உள்ளே போனால் ரயில் எங்கே வரும்னு தெரியலை. அங்கே இங்கே அலைந்து விசாரித்தால்,”அது சோட்டி லைன்! அந்த ஸ்டேஷனுக்குப் போங்க!” னு சொல்லிட்டாங்க. அப்போ மீட்டர் கார்டிலா வண்டி ஓடுது? சந்தேகம். சோட்டி லைன் ஸ்டேஷன் எங்கேனு கேட்டுண்டு போனோமா! வந்தது வினை! எல்லா ஆட்டோக்காரங்க, ரிக்‌ஷாகாரங்க எல்லாம் சூழ்ந்து கொண்டு, ‘எந்த வண்டி‘னு கேட்கவே சரி, விபரமானும் தெரிஞ்சுக்கலாம்னு சொன்னோம். உடனே ஒருத்தர் மாத்தி ஒருத்தர் ரயிலுக்கு நேரமாச்சாக்கும். உங்களால் போய்ப் பிடிக்க முடியாது; நாங்க கொண்டு விடறோம்னு கையிலே இருந்து பெட்டிகளைப் பிடுங்காத குறை. சமாளித்துக் கொண்டு நடந்தோம். ஒரு போர்ட்டரிடம் கேட்கலாம் என்றால் ஒருத்தருமே கண்ணில் படலை. எல்லாரும் ஒளிஞ்சுண்டாங்க போல! அதற்குள்ளாகக் கொஞ்சம் தள்ளி நின்றிருந்த ஒரு ஆட்டோ ஓட்டி மெதுவாக எங்களிடம் வந்து எதிரே இருக்கும் கட்டிடத்தைக் காட்டி, அங்கே இருந்து தான் சித்ரகூட் எக்ஸ்பிரஸ் கிளம்பும், ரயிலுக்கு நேரமிருக்கு, மெதுவாகவே போங்கனு சொன்னார். அடக் கடவுளே! எப்படி எல்லாம் ஏமாத்த நினைக்கிறாங்கனு நினைச்சு அவருக்கு நன்றி சொல்லிட்டுக் கொஞ்சம் மெதுவாவே போக ஆரம்பிச்சோம். கணவர் முன்னாலே போக நான் பின்னால் போய்க் கொண்டிருந்தேனா! ஒரு இடத்தில் நடைமேடை ஒன்றைக் கடக்கணும். அப்போ அவர் இறங்கிட்டார். கையில் பெட்டியை வைத்துக் கொண்டு என்னால் இறங்க முடியலை. ஒரு மாதிரி சமாளித்துக் கொண்டு இறங்கினேன். அதுக்குள்ளாக அவர் இன்னும் தூரமாகப் போயாச்சு. என்னை ஒரு ஆள் தொடர்ந்து வந்தான்! “மேடம், மேடம்,” என்றான். திரும்பிப் பார்த்தேன். “உங்க பர்ஸ் அங்கே விழுந்துடுச்சு. எடுத்து வைச்சிருக்காங்க. வாங்க, வாங்கித் தரேன்!” என்றான். எல்லாம் ஹிந்தியிலே தான். நான் எப்போவுமே கையிலே பர்செல்லாம் வைச்சுக்க மாட்டேன். கைப்பை தான். அதிலேயே குடித்தனமெல்லாம் பண்ணிடுவேன். சின்ன பர்ஸ் அவர் தான் வைச்சுப்பார். அதையும் அவர் மறந்து வைச்சுடறார் என்றே இம்மாதிரியான நேரங்களில் நான் வாங்கி என் கைப்பையின் உள்ள்ள்ள்ள்ள்ளே போட்டுடுவேன். ஆகவே நிச்சயமாய்ப் பர்ஸ் விழவில்லை. என்றாலும் நான் எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் நடந்தவாறே, “நீயே எடுத்துக்கோ!” என்று சொல்லிவிட்டேன். அதுக்குள்ளாகக் கணவருக்கு நான் வரேனானு சந்தேகம் வந்து திரும்பிப் பார்த்து அங்கிருந்தே என்னனு கேட்க, நானும் ஒண்ணும் இல்லைனு சொன்னேன். வந்த ஆளும் தன்னோட வேலை இங்கே ஆகாதுனு புரிஞ்சுண்டு திரும்பினான். அந்த ஸ்டேஷனுக்குப் போய் எந்த நடைமேடைனு பார்த்துட்டு அங்கே போகிறதுக்குள்ளே எனக்கு அவசரமாக இயற்கையின் அழைப்பு வர அவரிடம் கைப்பையைக் கொடுத்து பத்திரமா வைச்சுக்கச் சொல்லிட்டு பயணிகள் தங்கும் அறைக்குப் போய்ப் பார்த்தா சுத்தம்! ஒண்ணுமே இல்லை. அங்கே இருந்தவங்க கிட்டேக் கேட்டால் தெரியாதுனு சொல்றாங்க. ஆஹா, கொடுத்து வைச்சவங்கப்பா! இயற்கை அழைப்புக் கூட இல்லாதவங்களா இருக்காங்களேனு நினைச்சு வெளியே வந்து அங்கே இங்கே மோதி ஒரு வழியாக் கண்டுபிடிச்சுப் போனால்! ஆஹா, கட்டணக் கழிப்பறையாம். பணம் கொடுக்கணும். வெறும் கையை வீசிண்டு போனால்?? திரும்ப அவரை விட்ட இடத்திலே தேடி அவர் கிட்டே பணத்தோடு அர்ச்சனையும் வாங்கிக் கட்டிண்டு மறுபடி கழிவறை போய்ட்டுத் திரும்பி வரேன். சாமான் எல்லாம் பப்பரப்பேனு கீழே வைச்சிருக்கு. சாமான் மட்டும் இருந்தால் பரவாயில்லையே! எடுத்துட்டுப் போக வசதியா என்னோட கைப்பையும் அங்கே வைச்சிருக்கு. ஆனால் அவரைக் காணோம்! கடவுளே! இந்தக் கைப்பையில் தானே திரும்பிப் போக டிக்கெட்டிலே இருந்து எல்லா கஜானாவும் இருக்கு. இதை இங்கே இப்படி அநாதையா விட்டுட்டு அவர் எங்கே போனார்? 11 ஶ்ரீராமனின் பாதையில் -- சித்திரவதையுடன் சித்திரகூடப் பயணம்! என் வாழ்நாளில் அவ்வளவு வேகமாக என்னிக்காவது ஓடி இருப்பேனா? சந்தேகமே! “தங்க மங்கை” பிடி. உஷா கூட தோத்திருப்பார். அவ்வளவு வேகமாய் ஓடி முதலில் கைப்பையை எடுத்துக் கொண்டு சுற்றும் முற்றும் பார்த்தேன். எல்லாரும் அவரவர் வேலையிலே கவனமாக இருந்தார்கள். ஆனால் அவர்? கைப்பையை எடுத்துக் கொண்டு சுற்றி வந்தப்போ எதிரே இருந்த கான்டீனில் தெரிஞ்ச முகமாத் தெரியவே, சாமானை விட்டுத் தள்ளியும் போகாமல் அங்கே இருந்தே உற்றுப் பார்த்தேன். அதுக்குள்ளாக அந்த முகமும் என்னைப் பார்த்து, “இரு, வரேன்!” என்று ஜாடை காட்டியது. சீ, எனக்கிருந்த குழப்பத்தில் அந்த முகம் என் கணவருக்குச் சொந்தம் என்று புத்தியில் உறைக்கவே ஒரு நிமிடம் ஆயிற்று. உடனே வந்தது பாருங்க ஒரு கோபம். சாமான் எங்கே இருக்கு? அப்படியே போட்டுட்டு அங்கே போய் என்ன செய்யறார்? வரட்டும், இரண்டு கையாலேயும் பார்த்துடுவோம். சற்று நேரத்தில் கையில் தண்ணீர் பாட்டிலுடன் வந்து சேர்ந்தார். “எங்கே போனீங்க?” “தண்ணியே இல்லை! வாங்கப் போனேன்!” “அது சரி, என்னோட ஹான்ட் பாக் எங்கே?” “ஹான்ட் பாகா?” திரு திரு திரு திரு! நான், “க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், உங்களை நம்பிப் பையைக் கொடுத்துட்டுப் போனா வீசி எறிஞ்சுட்டுப் போயிருக்கீங்க!” குற்றம் சாட்டியாச்சு. அவருக்குத் தன்னிடம் ஹான்ட் பாக் இருந்ததோ, அதைக் கீழே இறக்கியதோ எதுவுமே மனதில் படவில்லை. ஹான்ட் பாகும் வெயிட்டாக இருந்ததால் எல்லா சாமான்களையும் இறக்கி வைச்சாப்போல் வைச்சுட்டேன் என்றார். முறைச்ச நான் “இனி ஹான்ட்பாகை உங்க கையிலே கொடுக்கவே போறதில்லை. நானே வைச்சுக்கறேன்.”என்று அவசரச் சட்டத்தை உடனடியாக நிறைவேற்றி விட்டு, “எந்த நடைமேடை?” என்று கேட்டேன். ஆறாவது நடைமேடையாம். அங்கே போனோம். இந்த மாதிரி ஒரு கூட்டத்தை என் ஜன்மத்தில் பார்த்தது இல்லை. அதோடு நடைமேடை அந்தக் கால எழும்பூர் நடைமேடையை ஒத்திருந்தது. அருகே கார், வண்டிகள் வந்து நிற்கும் பாதை. அங்கே நடை மேடையின் ஒரு ஆரம்பத்திலிருந்து இன்னொரு பக்க முடிவையும் தாண்டி பெட்டி, படுக்கையோடு வரிசையாக ஆட்கள் அமர்ந்திருந்தனர். படம் எடுக்க முடியவில்லை. காமிராவை உள்ளே வைச்சுட்டேன். செல்லைக் “கு” ரங்கார் கேட்டுட்டு இருந்தார். அந்தக் கூட்டத்தைப் பார்த்ததுமே வயிற்றைக் கலக்கியது. முன் பதிவும் இல்லாமல் எப்படி ஏறப் போறோம்? சிறிது நேரத்தில் பின்னால் வரிசை கட்டி நின்றவர்கள் இரவு ஒன்பது மணிக்கு லக்னோவிலிருந்து மும்பை செல்லும் வண்டிக்குக் காத்திருந்தவர்கள்(முன் பதிவில்லாமல் ஏறுவதற்கு) என்பது புரிந்தாலும் இந்த நடைமேடையில் எக்கச் சக்கக் கூட்டம். அதோடு உட்கார எங்கேயும் பெஞ்சோ, உட்காரும் மேடைகளோ இல்லை. நிற்க வேண்டி வந்தது. சும்மாவே வீங்கிக்கும் என்னோட கால் நிற்க ஆரம்பிச்சதும் தள்ளாட ஆரம்பிச்சது. ஏற்கெனவே முதல் நாள் அலைச்சல் வேறே. போர்ட்டர் ஒருத்தர் வண்டியில் சாமான்களைக் கொண்டு வந்து இறக்கிவிட்டு அந்த வண்டியிலேயே உட்கார அவரிடம் கேட்டுக் கொண்டு நானும் போய் உட்கார்ந்தேன். ஐந்தரைக்கு வண்டி வந்தது. லக்னோவிலிருந்து தான் கிளம்புகிறது. ஆனால் சித்ரகூடம் வரை மட்டும் சென்று கொண்டிருந்த வண்டியை ஜபல்பூர் வரைக்கும் நீட்டித்திருப்பதால் கூட்டம் தாங்கவில்லை. பொதுப்பெட்டியில் ஏறக் கும்பல். அந்தக் கும்பலில் என்னால் ஏறவே முடியவில்லை. அவர் மட்டும் இரண்டு பைகளை வைத்துக் கொண்டு எப்படியோ ஏறிவிட்டார். அங்கே எனக்கும், அவருக்கும் அந்தப் பையை வைத்து உட்கார இடம் போட்டுவிட்டு, என்னை அழைக்க வந்தார். சரினு நானும் சாமான்களை ஏற்றிவிட்டு, ஏறப் பார்த்தால் ஏற விடாமல் தள்ளு, முள்ளு. கீழே விழ இருந்தேன். தள்ளிவிட்டு எல்லாரும் அவரவர் காரியத்தில் கண்ணாக ஏற ஆரம்பிக்கின்றனர். அவர் எப்படியோ முண்டி அடிச்சுண்டு வந்து என்னிடம் இருந்து சாமானை வாங்கிக் கொண்டு உள்ளே வைத்துவிட்டு என்னையும் அழைத்துச் சென்றார். ஒடுங்கிய வண்ணம் உட்கார இடம் கிடைச்சது. உட்கார்ந்தோம். சாதாரணமாக ஸ்லீப்பர் க்ளாஸ் எனில் மூன்று பேர் உட்காரும் இடம். ஆறு பேர் அமர்ந்திருந்தோம். மேலும், மேலும் ஜனங்கள் வந்து கொண்டிருந்தனர். ஒரே குட்கா வாசனை, சிகரெட், பீடி வாசனை. சொகுசாய்ப் பயணம் செய்து பழக்கப்பட்டுப் போன உடம்பும், மனமும் பலமாக ஆக்ஷேபிக்க, அதை அடக்கத் தெரியாமல் அழுகையும், கோபமும் முட்டிக் கொண்டு வந்தது. இத்தனைக்கும் நடுவில் யார் ஏறினாங்க, யார் ஏறலைனு கவலையே இல்லாமல் வண்டி கிளம்பி வேகம் எடுத்தது. ஒவ்வொரு ஸ்டேஷனாக நின்று நின்று போச்சு. ஒவ்வொன்றிலும் பதினைந்து பேர் இறங்கினால் முப்பது பேர் ஏறினார்கள். மேலும் நெரிசல். பாத்ரூம் போகக் கூட வழியில்லை. கான்பூரில் சாப்பிட ஏதேனும் வாங்கலாம் என்றால் தண்ணீர் பாட்டில் கூட வாங்க முடியலை. வண்டிக்குள்ளேயே சமோசா கொண்டு வந்ததை அவர் மட்டும் வாங்கிக் கொண்டார். அவருக்கு மாத்திரை சாப்பிட ஏதேனும் உணவு எடுத்துக் கொண்டாகணுமே! வேறே வழியில்லை. மதியம் பனிரண்டு மணிக்குச் சாப்பிட்ட தவா ரொட்டியெல்லாம் ஜீரணம் ஆகிவிட்டது. வயிறு கூவியது. தேநீர் வாங்கிக் கொடுத்தார். பத்து ரூபாய் வாங்கிக் கொண்டு தேநீர்ப் பாத்திரத்தைக் கழுவிய நீரைக் கொடுத்தார் அந்தத் தேநீர் விற்பவர். என்ன இருந்தாலும், என்ன அவசரம்னாலும் ராஜஸ்தான், குஜராத்தில் இந்தத் தேநீர் விஷயத்தில் ஏமாத்தவே மாட்டாங்க. வண்டியோட ஓடி வந்து கொடுப்பாங்க என்பதோடு நல்ல தேநீராகவும் கிடைக்கும். அடுத்து மஹாராஷ்ட்ரா! இந்த மூணு மாநிலத்தையும் விட்டால் மற்ற எங்கேயும் நல்ல தேநீரே கிடைக்காது(தமிழ்நாடு உட்பட). வாங்கியதை அப்படியே கொட்டினேன். தண்ணீர் குடிக்கவும் பயம். நம்பர் ஒன் வந்தால் போக வழியில்லை. மணி ஏழுக்கு மேல் ஆகவும் ஏறினவங்க அப்படி அப்படியே படுக்க ஆரம்பிச்சாங்க. கழிவறை போகணும்னா அவங்க மேலே ஏறிக் குதிச்சுத் தான் போகணும். அவ்வளவு ஏன்? இறங்கணும்னாக் கூடக் கஷ்டம். ஒரு ஸ்டேஷன் முன்னாடியே போய் வாசல் கிட்டே நின்னுக்கணும். கீழே காலை எல்லாம் வைச்சுக்கவே முடியலை. காலடியில் மனிதர்கள் உட்கார்ந்திருந்தார்கள். மேலே சாமான்கள் வைக்கும் இடத்திலும் காலைத் தொங்கப் போட்ட வண்ணம் அமர்ந்திருந்தனர். இத்தனைக்கும் மேல் ஒவ்வொருத்தரும் கொண்டு வந்த சாமான்கள் வேறே! இரவு பத்தேகாலுக்குச் சித்ரகூடம் போகும் னு சொன்ன வண்டி நள்ளிரவு தாண்டி ஒரு மணி ஆகியும் போகலை. அதுக்குள்ளே வண்டியில் வந்த இரண்டு பண்டிட்கள் எங்களுக்குச் சிநேகமாக அவங்க சித்ரகூடத்தில் இறங்குவதால் எங்களுக்கு உதவி செய்வதாகவும் சொன்னார்கள். அதே போல் நட்ட நடு இரவில் இரண்டரை மணிக்கு வண்டி சித்ரகூடத்தை அடைந்ததும், எங்களையும் இறக்கி சாமான்களையும் இறக்கி ஒரு ஆட்டோ பார்த்து அமர்த்தி, போக வேண்டிய ஹோட்டலையும் சொல்லி அனுப்பி வைத்தார்கள். இது வரை எல்லாம் நல்லாவே நடந்தது. ஆனால் போன இடத்தில் அந்த ஹோட்டலில் இடம் கிடைச்சதா? ம்ஹ்ஹும், ஹோட்டலில் அழைப்பு மணியை அழுத்த, அழுத்த யாருமே வந்து திறக்கவே இல்லை. ஆட்டோக்காரருக்கு அந்த இரவில் மீண்டும் ரயில்வே ஸ்டேஷன் செல்ல அழைப்பு மேல் அழைப்பு வருது. ஆனால் நாங்களோ சாமான்களோடு வண்டியில். அவருக்கோ போயாகணும்! மறுபடி வேறே ஹோட்டலைத் தேடி ஆட்டோ சென்றது! நல்ல ஹோட்டலாகக் கிடைத்திருக்கக் கூடாதோ! சித்ரகூடம் பாதி நகரம் உத்தரப் பிரதேசத்திலும், பாதி நகரம் மத்தியப் பிரதேசத்திலும் உள்ளது. உத்தரப் பிரதேசப்பகுதி இருண்டு கிடக்க,மத்தியப் பிரதேசப் பகுதி வெளிச்சத்தில் இருந்தது. உத்தரப் பிரதேசப் பகுதி தாண்டினதுமே நல்ல வெளிச்சம் இருக்கு. அதாவது மின் விநியோகம் சிறப்பாகச் செய்யப்பட்டிருந்தது. ஆனாலும் எங்களால் ஹோட்டல்களைக் கண்டு பிடிக்க முடியவில்லை. முதலில் சொன்ன ஹோட்டலில் இருந்து கிட்டத்தட்ட அரை கிலோ மீட்டர் போயிருப்போமோ என்னமோ! ஒரே ஒரு ஹோட்டல் திறந்திருந்தது. படிகள் ஏறிப் போகணும். ஆனால் நானும் வந்து அறையைப்பார்க்கணும்னு எங்க இரண்டு பேருக்குமிடையே பேசப்படாத ஒரு ஒப்பந்தம். ஆகவே வேறே வழியில்லாமல் இறங்கினேன். இந்த ஆட்டோக்களே தனிப்பட்ட முறையில் இருக்கின்றன. உயரக் காலைத் தூக்கி வைச்சு ஏறணும். மடிக்க முடியாத முழங்காலோடு ஏறவும், இறங்கவும் கஷ்டம். ஹோட்டலுக்கு வேறே பத்துப் படிகள் ஏறணும். ஏறி அங்கே போய் அங்கே இருந்தவிடுதிக் காப்பாளரை எழுப்பினோம். முதலில் அறை இல்லைனு சொன்னவர், என்னைப் பார்த்ததும் இரவு தங்கிப் படுத்துக்க இடம் வேணும்னா தரேன்னு சொன்னார். அது ஏதானும் அறையிலிருக்கும்னு நினைச்சால், கடவுளே, அங்கேயே ஒரு ஒதுக்குப்புறமான ஹாலில் கிட்டத்தட்டப் பத்துப் பேர் படுத்து உறங்கினார்கள். அவங்களைக் கொஞ்சம் ஒதுங்கச் சொல்லிட்டு நமக்கு இடம் கொடுப்பாங்களாம். இதெல்லாம் சரிப்பட்டு வராதுனு திரும்ப நினைச்சோம். அதுக்குள்ளே எங்க முகத்தைப் பார்த்த அந்த நபர், “இதெல்லாம் ராயல் குடும்பம் போலிருக்கு“னு நினைச்சிருப்பார் போல! உங்களுக்கெல்லாம் சரியா வராதும்மானு சொல்லிட்டு, தேவி பகவதி ஹோட்டல் என்னும் பெயரை ஆட்டோக்காரரிடம் சொல்லி, வழியையும் சொல்லி அங்கே கட்டாயம் அறை கிடைக்கும் என்றும், ரொம்ப ரொம்ப வசதியாய் இருக்கும்னு சொன்னார். ஆஹானு மகிழ்ந்து போய் ஆட்டோவில் மறுபடி ஏறினோம். கிட்டத்தட்ட ஒரு கிலோ மீட்டருக்கும் மேலே போனதும் அந்த தேவி பகவதி ஹோட்டல் வந்தது. ஆட்டோ அறிவிப்புப் பலகையைப் பார்த்ததும் நின்றது. நின்றது ஒரு மேடான இடம். அங்கிருந்து இறங்கிப் பள்ளத்தில் போய் மலைச்சாரலில் இன்னும் பள்ளத்தில் கொஞ்ச தூரத்தில் ஒரு கட்டிடம் கட்டிக் கொண்டிருந்தார்கள். அது தான் தேவி பகவதி ஹோட்டல். பகவானே! இப்போத் தானே கட்டிட்டு இருக்காங்க. அதோடு போற பாதையே சரியில்லையே! இங்கே எப்படிப் போறது? நான் வரமாட்டேன்னு அடம் பிடிக்க, அந்த ஹோட்டல் கதவு திறந்து விளக்குப் போடப்பட்டது. ஆட்டோக்காரரும் அவருடைய உதவியாளும் போய்ப் பேசினாங்க. அறை இருப்பதாகச் சொல்லி இருக்காங்க. ஆகவே ஆட்டோக்காரர், பிரச்னை தீர்ந்ததுனு நிம்மதியா சாமானைத் தூக்க ஆரம்பிச்சார். நான் ஆக்ஷேபிக்க, என் கணவரோ இந்த நேரத்தில் வேறே எங்கே போய்த் தேடுவோம், பேசாமல் வா, என்று அதட்ட அரை மனசாப் போனேன். அங்கே மாடியில் (லிஃப்டெல்லாம் இல்லை) படிகள். ஒவ்வொன்றுக்கும் குறைந்தது முக்காலடி இருக்கும். [:(]படி ஏறிப் போனதும் கடைசியில் இருந்த அறை ஒன்றைக் காட்டினார். பத்துக்குப் பத்து அறைக்குள்ளேயே குளியல், கழிவறை போக மீதம் இருந்த இடத்தில் கட்டிலைப் போட்டு அழுக்கான படுக்கை. அதிலே எப்படிப் படுக்கிறது? அதுக்குள்ளே ஆட்டோக்காரங்க சாமானைக் கொண்டு அங்கே வைச்சாச்சு. அந்த விடுதிக் காப்பாளர்னு சொல்லக் கூடிய ஒரு நபர் (இளைஞன்) அங்கே வந்தார். வாடகை 450 ரூ என்றார். இந்த அறைக்கா? என நான் கேட்க, இப்போ இந்த வாடகை, நவம்பரில் ஆயிரம் ரூபாய் வாங்குவோம்னு சொன்னார். அந்த ஹோட்டலில் கீழ்த்தளம் மிகப் பெரிய ஒரு கூடம் (கிட்டத்தட்ட நூறு பேர் சாப்பிடலாம்) ஒன்றோடும், அதைத் தாண்டி சமையலறை, வெளியே கழிவறை, தண்ணீர்க் குழாய்கள் என்றும் ஹாலில் நுழையும் இடத்துக்கு அருகிருந்து மாடிப்படிகளோடும் காணப்பட்டது. மாடியில் ஒரு தளம் தான் கட்டி முடிஞ்சிருந்தது. இரண்டாம் தளம் கட்டிக் கொண்டிருக்கிறார்கள். முழுதும் கட்டி முடிச்சதும், கீழே சாப்பாடும், மேலே தங்குமிடமாகவும் இருக்குமாம். அதெல்லாம் சரி, இப்போ சாப்பாடுக்கு என்ன செய்யறது? முக்கியமாக் காலைத் தேநீர் கிடைக்குமானு கேட்டதுக்கு அதெல்லாம் ஒண்ணும் கிடையாதுனு சொல்லிட்டார் அந்த வாலிபர். கடவுளே! எங்கே போய்க் குடிக்கிறதுனா? நீங்க போய்ப் பாருங்க ஏதேனும் டீக்கடை இருந்தால் குடிச்சுக்கலாம்னு பதில் வருது. சாப்பாடும் அப்படியேனு சொல்லிட்டார். இங்கே இன்னும் இரண்டு நாள் தங்கணுமா? மாடி ஏறி, ஏறி இறங்கி ரோடுக்குப் போய், அங்கிருந்து ஆட்டோ ஏதும் கிடைச்சால் கடைத்தெருக்குப் போய் அப்புறமாத் தான் சாப்பிட ஏதானும் கிடைக்கும். இங்கே நீங்க போட்டுத் தர மாட்டீங்களா, குறைந்த பக்ஷம் தேநீர் மட்டும் என்று கேட்டதுக்குப் பிடிவாதமாக அந்த இளைஞர் மறுத்துவிட்டார். விதியேனு ஒருத்தரை பார்த்து விழித்த வண்ணம் விளக்கை அணைச்சுட்டுப் படுத்தோம். இதுக்குள்ளாக மணி நாலு ஆகி இருந்தது. எங்கே இருந்து தூங்க? ஶ்ரீராமர் சித்திரகூடம் வந்து கஷ்டப்பட்டாரோ இல்லையோ, தெரியலை, நாம் கஷ்டப்படறோம். இங்கேருந்து எப்போத் திரும்பிப் போறது? திடீர்னு எனக்குக் கவலை வர, நாளைக்கு மதியம் ரயிலிலேயே திரும்பிடலாம்னு சொல்ல, லக்னோவோ, கான்பூரோ போய் இருந்தாலும் அங்கே எல்லாம் பார்க்க இரண்டு நாளைக்குள் தான் ஆகும். நம்ம டிக்கெட் புதன் கிழமைக்குத் தான் அதுவரை அங்கே சும்மா உட்கார முடியுமானு அவர் திரும்பக் கேட்க இரண்டு பேருக்கும் விடியும் வரை விவாதம். விடிஞ்சதும், பல் தேய்த்து விட்டுக் கீழே இறங்கினோம். அருகில் டீக்கடை இருக்கானு கேட்டுக் கொண்டே போய்க் கொஞ்ச தூரத்தில் தென்பட்ட ஒரு டீக்கடையில் தேநீர் குடிச்சோம். சகிக்கவில்லை. திரும்பி ஹோட்டலுக்கு வந்து துணி துவைக்க முடியுமானு கேட்டதுக்கு! அப்பாடா, அந்த இளைஞன் தோய்த்து உலர்த்தக் கொடி கூடக் கட்டி இருக்கோம். உங்க அறைக்கு வெளியே உள்ள தாழ்வாரத்தில் பாருங்கனு உதவியாக ஒரு வார்த்தை சொல்ல, நான் என் துணி, அவர் துணினு எல்லாத்தையும் தோய்த்து உலர்த்திப் பின் குளித்தேன். நல்லவேளையா( என்னனு எங்களுக்கே தெரியலை) வெந்நீர் ஒரு பக்கெட் கொடுத்தான். ஆனால் அது வெந்நீர்னு சத்தியம் பண்ணணும். பரவாயில்லைனு அதிலே நான் மட்டும் குளிச்சேன். இரண்டு பேரும் டிபன் எங்கேயானும் சாப்பிட்டுட்டுச் சுத்திப் பார்க்கக் கிளம்பினோம். வெளியே வந்து ரோடில் நின்று ஒவ்வொரு ஆட்டோவாகக் கூப்பிட்டோம். 12 சித்திரவதையுடன் சித்திரகூடத்தில் -- தொடர்ச்சி! அந்த ஆட்டோக்கள் எல்லாமே ஷேர் ஆட்டோக்கள் தான். நாங்க அதிலே போய்க் கடைத்தெருவிலே இறங்கிக்கலாம்னு தெரியாம ஒவ்வொருத்தரையாக் கூப்பிட்டோம். கடைசியிலே ஒருத்தர் கடைத்தெருப்பக்கம் போன ஒரு ஆட்டோவை நிறுத்தி எங்களுக்கு ஏற்பாடு பண்ணிப் பேசிக்கொள்ளச் சொன்னார். என் கணவர் சர்க்கரை நோய்க்காக மாத்திரைகள் சாப்பிடணும்ங்கறதாலே முதல்லே நாங்க காலை உணவு எடுத்துக்க வேண்டி ஒரு ஹோட்டலுக்குக்கூட்டிப் போகச் சொன்னோம். அங்கிருந்து சித்திரகூடத்தின் சார் தாம் என அழைக்கப்படும் நான்கு இடங்களுக்கும் கூட்டிச் செல்லச் சொன்னோம். சித்திரகூடத்து மலையடிவாரத்தையே கிரி வலமும் வருகின்றனர். அதைப் பரிக்ரமா என்று சொல்கிறார்கள். நாங்கள் இருந்த பகுதியும் சித்திரகூடத்தில் சுற்றிப்பார்க்க வேண்டிய இடங்களும் மத்தியப் பிரதேசப் பகுதியில் இருந்தன. சார்தாமில் முதலில் அனுமான் தாரா என்னும் மலை. 600 படிகளுக்கு மேல் ஏறிப் போய் அனுமனைப் பார்க்கணும். துளசி தாசர் இங்கே தான் ராம் சரித மானஸ் எழுதினதாகவும் சொல்கிறார்கள். ஆனால் எங்களைப் பார்த்ததுமே அனைவரும் அனுமான் தாராவுக்கு நீங்க போக முடியாது. மலைப்படிகள். ஏறுவதும் கஷ்டம்; இறங்குவதும் கஷ்டம் என்று சொல்லிவிட்டார்கள். சரினு மத்த மூணு இடங்களுக்கு ஆட்டோக்காரரிடம் பேசினோம். வழக்கம் போல் “ரிஜர்வ்ட்” என்று கேட்டு ஆட்டோவை அவங்க சட்டப்படி எங்களுக்கு மட்டுமே பேசிக் கொண்டோம். ஆட்டோக்காரப் பையருக்கு 20 வயதுக்குள் தான் இருக்கும். எல்லா இடமும் கூட்டிப் போய் விட்டு மதியம் சாப்பாட்டுக்கும் ஹோட்டலுக்குப் போய்ப் பின்னர் அங்கிருந்து மறுநாள் கிளம்புவதற்கு ரயிலில் முன்பதிவு செய்யணும்னு அதையும் கேட்டுக் கொண்டோம். எல்லாவற்றுக்கும் அழைத்துச் செல்வதாய்ச் சொன்னார் அந்தப் பையர். நாங்களும் நம்பியதால் வேறு யாரிடமும் இதைப் பத்திக் கேட்கவே இல்லை. அவர் அழைத்துச் சென்ற ஹோட்டலில் காலை ஆகாரம் எடுத்துக் கொண்டோம். நான் வழக்கம் போல் சாப்பிடப் படுத்த, அவரோ, சாப்பிட்டால் தான் எல்லாத்தையும் பார்க்கத் தெம்பு வரும். ஒழுங்கா சாப்பிடுனு மிரட்ட, நாஷ்டா தட்டில் சூடான ஜிலேபிகளோடு பூரி, சப்ஜி, தயிர், ஊறுகாய் இத்தனையும் வர, ஜிலேபிகளைப் பார்த்த பரவசத்தில் நானும் நாஷ்டானு கூவ. நாஷ்டாவும் வந்தது. சாப்பிட்டுவிட்டுக் காஃபி இங்கே சாப்பிட்டுப் பார்க்கலாம்னு காஃபி ஆர்டர் பண்ணினோம். சகிக்காத காஃபி வர, அவர் எனக்கு உபசாரம் பண்ண, நான் அவருக்கு உபசாரம் பண்ண கொடுத்த காசுக்குக் காஃபியைக் கொட்டாமல் (பின்னே? காலம்பர காஃபி, டீ கிடைக்காமல் தவிச்ச தவிப்பு பாடம் கத்துக் கொடுத்துடுச்சே) குடிச்சு வைச்சுட்டு ஆட்டோவில் ஏறினோம். அப்போவானும் ஹோட்டல்காரரிடம் சார்தாமுக்கு ஆட்டோவுக்கு எவ்வளவு கொடுக்கணும், நாலும் ஒரே ஆட்டோவில் பேசிய பணத்துக்குத் தானே போகணும்னு எல்லாம் கேட்டிருக்கணும். என்னமோ ஒரு அலுப்பு, சலிப்பு. இங்கெல்லாம் ஏமாத்த மாட்டாங்க அப்படினு ஒரு நினைப்பு. ஆட்டோவில் ஏறிக் கொண்டு டிக்கெட் பார்க்கப்போனால் அந்த ஏஜென்ட் கடையைத் திறக்கவே இல்லை. முதலில் அனுமான் தாரா தான் இல்லையே; அடுத்து என்னனு பார்த்தால் சதி அநசூயா ஆசிரமம். அங்கே செல்லும் வழியில் ஒரு கோயிலையும், ஒரு பாறையையும் காட்டினார்கள். அங்கே தான் ஶ்ரீராமரும், சீதையும் தனித்திருந்தபோது காகாசுரன் வந்து சீதையைத் தொந்திரவு செய்த இடமாம். அங்கே ஒரு கோயிலும் இருக்கிறது இப்போது. பாறையில் சிந்தூரப் பொடிகளைத் தூவி ஒரு பண்டிட் உட்கார்ந்து காசு பண்ணிக் கொண்டிருக்கிறார். கொஞ்சம் மேலே ஏறிப் போகணும். போனோம். [pandit] இந்தப் பாறை தான், ஶ்ரீராமர், சீதை அமர்ந்திருந்ததாகச் சொல்லப்படுகிறது. சாய்ந்தாற்போல் உட்கார்ந்திருப்பவர் தான் பண்டிட். பின்னால் தெரிவது மந்தாகினி நதி. [pandit1] [] மந்தாகினி நதிக்கரையில் அமர்ந்திருக்கும் ஒரு தொழிலாளி. 13 சதி அநுசுயா ஆசிரமம் -- சித்திரகூடம் தொடர்ச்சி! [] அநசூயா ஆசிரமம் குறித்த அறிவிப்புப் பலகை [] ஜெய் பஜ்ரங்க் பலி, செல்லும் வழியில் காணப்பட்ட ஆஞ்சநேயர் வடிவம். தரையோடு தரையாக புடைப்புச் சிற்பமாகக் காணப்படுகிறார். [] அநசூயா, அத்ரிக்கு மகனாய்ப் பிறந்த தத்தாத்ரேயர் பிறந்த இடம். மற்றப் படங்கள் சரியாக வரலை. ஆகையால் பகிரவில்லை. [:(] 14 சித்திரவதையுடன் சித்திரகூடத்தில் -- தொடர்ச்சி குப்தகோதாவரி சார்தாமில் பார்க்கவேண்டிய முதல் இடமான ஹநுமான் தாரா தான் போகாதீங்கனு சொல்லிட்டாங்க. அடுத்து சதி அநுசுயா ஆசிரமம் பார்த்தாச்சு. அங்கேயும் மலை ஏற்றம் உண்டு. தவிர்த்தோம். வேறே வழியே இல்லை. அடுத்தடுத்து அலைச்சல்கள். கோயில்கள் படியே நிறைய ஏறணும், இறங்கணும். அவையே பூமியிலிருந்து உயரமாக ஐம்பது, அறுபது படிகளோடு இருந்தன. இதிலே மலையும் ஏறினால் நேரமும் ஆகும். உடம்பும் முடியாமல் போயிடும். அஹோபிலம் நவ நரசிம்மர் பார்த்தப்போக் கூட (2010 ஆம் ஆண்டு ஜனவரியில் ) கஷ்டப்படலை. அதிலே மலைகளும் ஏறியாகணும். பிடிக்க ஒண்ணும் இருக்காது. மலைப்பாறையிலே ஏறித் தாண்டி மேலே ஏறினு எல்லாம் போகணும். ஒரு பக்கம் தண்ணீர் வந்து கொண்டிருக்கும். பாறையிலிருந்து தொங்கும் சங்கிலிகளைப் பிடித்த வண்ணம் தாண்டிப் போகணும். எல்லா வித்தைகளும் பண்ணியாச்சு. இப்போ இப்படிக் கஷ்டப்படுத்திக்க வேண்டாம்னு அரை மனசோடத் தான் முடிவு செய்தோம். சதி அநசூயா ஆசிரமத்துக்கு அடுத்து குப்த கோதாவரி. இங்கே இரண்டு குகைகள் இருக்கின்றன. இங்கே ஶ்ரீராமர், சீதை, லக்ஷ்மணர் ஆகிய மூவரும் பதினோரு ஆண்டுகள் வசித்ததாய்ச் சொல்கின்றனர். குகைக்குள் போகும் முன்னர் செருப்பை எல்லாம் கழட்டி வைச்சுட்டுப் போகணும். நுழைவுச் சீட்டு உண்டு. இரண்டு குகைக்கும் சேர்த்து எடுக்கணும். முதல் குகைக்குள் [] போகப் படிகள் சில ஏறணும். இந்தப் படிகளில் ஏறி மேலே சென்று மறுபடி மலைப்பாதையில் சரிவில் இறங்கி முதல் குகைக்குப் போகணும். மேலே ஏறியதுமே அங்கே சில பண்டாக்கள் அமர்ந்து கொண்டு ஒரு இலைத் தட்டில் குங்குமம், மஞ்சள், ஒரு செம்பருத்திப் பூ போன்றவற்றை வைத்து அம்மாதிரிப் பல தட்டுக்களை வைத்து ஒரு தட்டு இருபது ரூபாய் என விற்பனை செய்தனர். அதை வாங்கிக் கொண்டு தான் போக வேண்டும் என்றும், இல்லைனால் ஶ்ரீராமர், சீதையின் அருள், கருணை, ஆசிகள் கிடைக்காது என வற்புறுத்திக் கொண்டிருந்தனர். நாங்க பொதுவாகவே இம்மாதிரியான பிரபலக் கோயில்களுக்குச் செல்கையில் எதுவுமே வாங்காமல் தான் போவோம். வாங்கிப் போனால் அதை சுவாமிக்குச் சார்த்துவதில்லை என்பதோடு தூக்கி ஒரு பக்கமாகப் போட்டு விடுகிறார்கள். வாங்காமல் சென்றோம். உடனே என்னைக் கன்னாபின்னாவெனத் திட்டினார் அந்த ஆசாமி. கையில் ஒரு சின்னக் கோலை வைத்துக் கொண்டு எல்லாருடைய உச்சந்தலையிலும் தட்டி அதை வலுக்கட்டாயமாகக் கைகளில் திணித்துக் கொண்டிருந்தனர். அதைப் படம் எடுக்க முடியாமல் கூட்டம் வேறு நெரிசல். இந்தக் கூட்டத்தின் நெரிசலின் மகத்துவம் உள்ளே இறங்குகையில் தான் புரிந்தது. வரவும், போகவும் ஒரே வழி. மிகக் குறுகல். ஒருவர் தான் உள்ளே நுழையலாம். அதுவும் கஷ்டப்பட்டு. அந்த வழியிலேயே எல்லாருக்கும் உள்ளே செல்லவும் அவசரம், வெளியே வரவும் அவசரம். [] கொஞ்சம் கஷ்டப்பட்டே படம் எடுத்தேன். இங்கே யாரும் இல்லாததால் எடுக்க முடிந்தது. ஆனால் படம் எடுக்க நின்று ஃபோகஸ் செய்யல்லாம் அவகாசம் இல்லை. எடுக்கையிலேயே ஒரு தன்னார்வலர் கத்த ஆரம்பிச்சுட்டார். ஃபோட்டோ எடுக்கக் கூடாதுனு. முன் அனுமதி வாங்கி இருக்கணும் போல. டிக்கெட் கொடுக்கும் இடத்தில் ஒண்ணும் சொல்லலை. இன்னொரு படம் அவசரமாக எடுத்தேன். அங்கே உள்ளே பாறைகளின் வடிவங்கள் ஆச்சரியப்படும் விதத்தில் இருந்தன. அதைப் படம் எடுத்தேன். அதுக்குள்ளே மீண்டும் கத்தவே பிடுங்கி எல்லாத்தையும் அழிச்சுடப் போறாங்கனு கணவர் பயந்தார். ஆகவே நிறுத்திட்டேன். அரை மனசாக. [] உள்ளே நுழைந்ததும் பாறைகளின் விசித்திரமயமான அமைப்பு மேலுள்ள படத்தில். உள்ளே நுழைந்ததும் கொஞ்சம் விசாலமான மண்டபமும், அதிலே ஒரு சந்நிதியும் இருக்கிறது. எல்லா சந்நிதிகளிலும் ஶ்ரீராமர், சீதை, லக்ஷ்மணன், அநுமன் ஆகியோர் தான். அங்கே படம் எடுக்க அநுமதி கிடைக்கலை என்பதோடு கூட்டமும் அதிகமாக இருந்தது. அங்கே தரிசனம் முடிச்சு வெளியேறும் வழியில் வெளிவந்தோம். இந்த குகையில் தளம் கொஞ்சம் சுமாராக இருந்தது. ஆகவே செருப்பில்லாமல் நடக்கையில் அதிகம் கஷ்டம் தெரியலை. மறுபடி அடுத்த குகைக்குச் செல்லணும். வெளியே வந்து மறுபடி வேறு வாசல் வழியாகப் படிகள் கீழே இறங்கி அடுத்த குகைக்குச் சென்றோம். இது நீளமாகவும் வளைந்து வளைந்தும் சென்றதோடு நீரும் எங்கிருந்தோ வந்து கொண்டிருந்தது. அனுமான் தாராவில் உற்பத்தியாகும் தண்ணீர்னு சொல்றாங்க. கோதாவரி மறைந்திருப்பதாயும் சொல்கின்றனர். முதல் குகையிலும் இந்த குகையிலும் கோதாவரி அம்மனுக்கு சந்நிதி இருக்கிறது. இங்கே ராமனும், சீதையும் சிம்மாசனம் போன்றதொரு பாறையில் அமர்ந்திருப்பார்களாம். எதிரே இன்னொரு சிறிய பாறை. அதில் லக்ஷ்மணன் அமர்ந்திருப்பானாம். இந்தப் பாறைகளில் இப்போது மிகச் சிறிய அரை அடியே இருக்கும் ஶ்ரீராமர், சீதை, லக்ஷ்மணன் அனுமனோடு இருக்கும் சிலைகள் வைக்கப்பட்டு பாறைகளுக்கு இரு பக்கமும் இரு பண்டிட்கள் அமர்ந்து வழிபாடு நடத்துகின்றனர். விளக்குகள் எல்லாம் போட்டு வெளிச்சம் கொடுத்திருந்தாலும் அடர்ந்த காட்டின் உள்ளே இருக்கும் பாறைக்குகை. உயரம் அதிகம் இல்லை. அவற்றைக் குனிந்து கடக்கும்போது உயரமான என் கணவர் ரொம்ப சிரமப் பட்டார். கீழே சலசலத்து ஓடும் தண்ணீர் வேறே. இம்மாதிரிப் பல இடங்களில் கடக்கணும். அதோடு கீழே பாறைகள் வேறே ஆங்காங்கே முண்டும், முடிச்சுமாக நீட்டிக் கொண்டும், உருண்டையாகவும், சில இடங்களில் உயரமாகவும் இருக்கின்றன. முன்னும், பின்னும் ஆட்கள் வேறே. ஒவ்வொருத்தராய்த் தான் போக முடியும். உடம்பை வளைக்க முடிந்தால் தான் நல்லது. அவ்வளவு குறுகலான வழி. எங்கே மேடு, எங்கே பள்ளம்னு புரியறதில்லை. காலில் கூர்மையான கற்கள் குத்துகின்றன. சரினு கொஞ்சம் நகர்ந்தால் அங்கே உயரமான பாறையாக இருக்கும்; இல்லைனா பள்ளமாக இருக்கும். சில இடங்களில் தண்ணீரின் ஆழம்அவருக்கே முழங்காலுக்கு வந்துவிட்டது. அப்போ எனக்கு இடுப்புக்கும் மேல்னு புரிஞ்சுக்கோங்க. இதைக் குறித்து ஏற்கெனவே அறிந்து வைத்திருந்ததால் அவர் கிளம்புகையிலேயே பெர்முடாஸ் போட்டுக் கொண்டு வந்துவிட்டார். புடைவை எல்லாம் நனைந்து போய் நடக்க சிரமப்பட்டதோடு இல்லாமல் பாறைகளும் குத்தின. இங்கே பார்த்து நம் மக்கள் குனிந்து குளிக்க ஆரம்பிப்பதும், தண்ணீரைக் குடித்துத் துப்புவதுமாக அமர்க்களம் பண்ண ஆரம்பிக்கிறாங்க. உதவிக்குத் தன்னார்வலர்கள் தான்னு நினைக்கிறேன். அவங்க ஒண்ணும் சொல்றதில்லை. படம் எடுக்கிறதை மட்டும் ஏன் தடுக்கறாங்கனு புரியலை. இதை முழுசும் பார்த்து முடிக்க எங்களுக்கு ஒரு மணி நேரத்துக்கும் மேலே ஆச்சு. நாங்க வெளியே வரச்சே எங்கே எங்களைக் காணோமேனு நினைச்சார் போல ஆட்டோ பையர். தேடிட்டு வந்திருந்தார். அடுத்து என்னனு கேட்டதுக்கு, பரத் கூப்(பரதன் குகை) என்று என்னிடம் சொன்னார். அப்போ என் கணவர் ஒரு இடத்தைத் தாண்ட சிரமப் படவே அவரிடம் சென்று உதவி செய்தார். என் கணவர் அவரிடம் சாப்பிட்டுவிட்டு பரதன் குகை பார்க்கலாம் என்றும், அதோடு டிக்கெட் முன்பதிவுக்கு வேறே போகணும்னும் சொல்லி இருக்கார். என்னிடம் பரதன் குகை பார்க்கணும்னு சொன்ன அந்த ஆட்டோக்காரருக்கு என்ன தோணித்தோ அவரிடம் பரதன் குகை பார்க்கிறதுன்னா தனியாப் பணம் நானூறு ரூபாய் கொடுக்கணும். இதோட சேர்ந்தது இல்லை. அது ரொம்ப தூரம்னு சொல்லி இருக்கார். உண்மையில் ஒவ்வொண்ணும் தூரம் தான் இல்லைனு சொல்லலை. ஒவ்வொண்ணும் போறதுக்கே ஒரு மணி நேரத்துக்கும் மேலே ஆகிடுது. நாங்க காலை பத்து மணிக்கே கிளம்பியதில் அப்போ கிட்டத்தட்ட மதியம் மூணு மணி ஆகி இருந்தது. ஆகவே சர்க்கரை நோயாளியான அவருக்குப் பசி வந்திருக்கு. சாப்பிட்டுட்டுப் போகலாம்னு சொல்லி இருக்கார். மீண்டும் நகருக்குள் வந்தால் மறுபடி காட்டுப் பகுதிக்குப் போகணுமேனு அந்த ஆட்டோ ஓட்டுநருக்குத் தோணித்தோ என்னமோ. இம்மாதிரி சொல்லி இருக்கார். குப்த கோதாவரி, மேலும் சில படங்கள்! [] மேலே உள்ளது இரண்டாவது குகை போல் இருக்கிறது. அங்கே தான் தண்ணீர் வந்து கொண்டே இருக்கும். [] இந்தப் படங்கள் மின் தமிழ்க் குழும சிநேகிதி பார்வதி பகிர்ந்தவை. அவர் அநுமதியுடன் இங்கே வெளியிடுகிறேன். அவரும் குப்த கோதாவரி சென்றிருக்கிறார். ஆனால் காலை ஏழு மணிக்கே போனதால் கூட்டம் இல்லையாம். படமும் எடுக்க முடிந்தது எனச் சொல்லி இருக்கிறார். [] இந்தப்படங்கள் அனைத்தும் இரண்டாவது குகையில் எடுத்தவை . 15 சித்திரவதையுடன் சித்திர கூடத்தில் --தொடர்ச்சி! ஆனால் நான்கும் சேர்ந்து தான் ஒரு டிரிப் என்பதை என்னமோ நானும் வற்புறுத்தவில்லை. சாதாரணமாக நான் எங்கே போனாலும் இம்மாதிரி விஷயங்களில் முன்னெச்சரிக்கையா இருக்கிறதோடு கூடியவரை சண்டையும் நான் தான் போடுவேன். எளிதில் விட்டுக் கொடுக்க மாட்டேன். அன்னிக்கு என்னமோ எனக்கும் ஆகிவிட்டது. சாப்பிட அழைத்துச் செல்லும் முன்னர் அந்தப் பையரிடம் சாப்பாடு ஆன பின்னால் பரதன் குகை பார்க்கலாமானு கேட்டதுக்கு அதுக்குத் தனியாப் பணம் கொடுக்கணும்னு என்னிடமும் சொன்னார். திரும்பும் வழியில் ஆட்டோவை எங்களுக்கு மட்டும்னு பேசி இருப்பதை லக்ஷியம் செய்யாமல் எல்லாரையும் ஏற்றிக் கொள்ளவும் ஆரம்பித்து விட்ட்டார். என்னால் முடிந்தவரை ஆக்ஷேபங்களைத் தெரிவித்தேன். என்றாலும் அது நிற்கவில்லை. அதோடு நாங்க டிக்கெட் முன்பதிவுக்குப் போனோம். மறுநாள் கான்பூர் செல்லும் சித்ரகூட் எக்ஸ்ப்ரஸில் முன்பதிவு செய்யச் சென்றோம். அங்கே நான் லக்னோ செல்லணும்னு சொல்ல, கான்பூர் தான் செல்லணும்னு அவர் சொல்ல முன்பதிவு செய்யும் ஏஜென்ட் கைகளைக் கட்டிக் கொண்டு உட்கார, சிறிது நேரம் ஒரே குழப்பம். லக்னோ செல்வதானால் நாங்க வந்த அதே ரயில் ஜபல்பூரிலிருந்து திரும்பி சித்ரகூடத்துக்கு நடு இரவு இரண்டு மணிக்கு வருது. அதைப் பிடிக்கணும். கான்பூர் போறதானால் மதியம் இரண்டு மணிக்கு இங்கிருந்தே கிளம்புது. கான்பூருக்கு எட்டு மணிக்கெல்லாம் போயிடும். அதிலே போகலாம். என்று அவர் சொல்ல, நான் நடு இரவில் லக்னோ செல்லும் சித்ரகூட் எக்ஸ்பிரஸில் ஏ.சி. முன் பதிவு செய்துட்டுப் போகலாம்னு சொன்னேன். ஆனால் என் கணவரோ கான்பூருக்கு இங்கிருந்து கிளம்பும் வண்டி எல்லாமே பொதுப்பெட்டி தான். சுலபமா இடம் கிடைக்கும். கஷ்டப்பட வேண்டாம். வரச்சே இருக்கும் கஷ்டம் இருக்காதுனு எல்லாம் சொல்லி என்னை ஒரு மாதிரி சம்மதிக்க வைத்தார். கடைசியில் முன் பதிவே செய்யலை. பின்னர் சாப்பிட அழைத்துச் செல்லச் சொன்னோம். போகும்போது அந்த ஆட்டோக்காரரிடம் மறுநாள் இரண்டு மணிக்கு வண்டி என்றும் ரயில்வே ஸ்டேஷனில் கொண்டு விட வருவாயா என்றும் கேட்டதற்கு உருப்படியாக ஒரு விஷயத்தை அந்த ஆட்டோப் பையர் கூறினார். அவர் மத்தியப் பிரதேச வாசி என்றும் அவர் ஆட்டோ மத்தியப் பிரதேச எல்லையில் மட்டுமே ஓட்டணும்னும், ரயில்வே ஸ்டேஷன் உத்திரப் பிரதேசப் பகுதியில் இருப்பதால் அங்கிருக்கும் ஆட்டோக்காரங்க தான் அழைத்துச் செல்ல முடியும்னு சொன்னார். அவங்க இங்கே வரலாமானு கேட்டதுக்கு ரயில்வே ஸ்டேஷன், பஸ் ஸ்டான்டுனு அவங்க அழைத்துச் செல்லவும், அங்கிருந்து இங்கே கொண்டு விடவும் செய்வார்கள். மற்றபடி இங்கே உள்ளே செல்ல நாங்க மட்டும். அவங்க வர முடியாது என்றார். விசித்திரமான இந்தச் செய்தியைக் கேட்டு உள்ளூரக்கொஞ்சம் பயமும் வந்தது. உ.பி. ஆட்டோ நாம கிளம்பும் நேரம் தங்கி இருக்கும் ஹோட்டல் பக்கமா வரணும். வந்தால் தான் கிடைக்கும். இல்லைனா என்ன செய்யறது? வயித்தை இப்போவே கலக்க ஆரம்பிக்கக் கணவரிடம் என் கவலையைப் பகிர, அவரோ இந்த ஆட்டோ ஒண்ணையே பிடிச்சு உ.பி. எல்லை வரை போயிட்டு அங்கிருந்து உபி ஆட்டோ பிடிச்சுக்கலாம், ஒண்ணும் கஷ்டமில்லைனு சொன்னார். ஹோட்டலில் நான் சாப்பாடு வேண்டாம்னு சொல்லிட்டேன். வெளியே போனாலே மதியச் சாப்பாடைக் கூடுமானவரை தவிர்ப்பேன். கல்யாணங்கள்னு போனாலும் ஒரு வேளை காலை ஆகாரம் சாப்பிட்டுடுவேன். மதியம் சாப்பிட மாட்டேன். இரவு ரொம்ப லேசான உணவு மட்டும் எடுத்துப்பேன். ஹோட்டல் ஊழியரிடம் லஸ்ஸி கேட்டதுக்கு தயிர் இல்லைனும் கொஞ்சம் போல் மோர் இருக்கிறதாகவும் சொல்லிட்டு அதைக் கொண்டு வந்து கொடுத்தார். காலாநமக், ஜீரகத் தூள், பெருங்காயம், உப்பு எல்லாம் போட்டு வாய்க்கு ருசியான மோர். அந்த ஹோட்டலிலேயே மேலே தங்குமிடம். நல்ல அறைகளாகவே தெரிந்தன. முதல்நாள் இரவு இந்த வழியாவே போயிருந்தும் நமக்குத் தெரியலையேனு நினைச்சுண்டேன். அப்போக் கூட அந்த ஹோட்டல்காரங்க கிட்டே சார்தாம் பார்க்க எவ்வளவு பணம். ஆட்டோக்காரர் பரதன் குகைக்குத் தனியாக் கேட்கிறாரே னு கேட்டுத் தெரிஞ்சுக்கத் தோணலை. சாப்பிட்டு முடிஞ்சதும் ஆட்டோக்காரர் ஹோட்டல் அறைக்கு முன்னால் கொண்டு விட்டு விட்டார். மீண்டும் பரதன் குகை பார்க்கணும்னு நாங்க சொல்ல, அதுக்கு நானூறு ரூபாய்னு சொல்லிட்டு போகறதா இருந்தாக் கூப்பிடுங்க வரேன்னு சொல்லிட்டுப் போயே போய்விட்டார். ( பேசின முழுத் தொகையையும் வாங்கிக் கொண்டுதான்) . உடல் களைப்பா, மன அலுப்பா, என்னனு சொல்ல முடியாமல், முதல்நாள் இரவு முழுதும் விழித்திருந்தது வேறே, எல்லாம் சேர்ந்து உடல் தள்ளாட , துணிகள் துவைத்தது வேறே எனக்கு அலுப்பு! ஹோட்டல் அறைக்கு மெதுவா மேலே ஏறி (கிட்டத்தட்ட ஒன்றரை அடி உயரத்தில் முப்பது/நாற்பது படிகள்) வந்து சேர்ந்தோம். ஓய்வு எடுத்துக் கொண்டோம். மாலை தேநீர் குடிக்கணும்னா கூட அந்த முப்பது, நாற்பது படிகள் இறங்கி வெளியே வந்து மலைச்சரிவிலிருந்து மேலே ஏறி சாலைக்குச் சென்று ஆட்டோ பிடிச்சுப் போகணும். ஒண்ணுமே வேண்டாம் சாமி! னு உட்கார்ந்து விட்டோம். உடம்பெல்லாம் ஜுரம் வரும் போல் வலி. அப்போது அறைக்கதவை யாரோ தட்டினார்கள். கதவைத் திறந்தால் இந்த அருமையான, அழகான ஹோட்டலை எங்களுக்கு அறிமுகம் செய்த நபர் அங்கே நின்றிருந்தார். கூடவே அந்த அழகான ஹோட்டலின் காப்பாளர் பையரும் நின்றிருந்தார். வந்தவர், “நீங்க ஏன் இன்னும் இங்கே தங்கி இருக்கீங்க? அறை வாடகை கொடுக்கலையாமே?” எனக் கடுமையாகக் கேட்டார். எங்களுக்குத் தூக்கி வாரிப் போட்டது. அறைக்குள் நுழைந்ததுமே 450 ரூ அறை வாடகைனு சொன்னதுக்கு 500 ரூ கொடுத்திருக்கோமே. மிச்சம் கூட இன்னும் வாங்கிக்கலைனு சொல்ல, அது மதியம் பனிரண்டு மணியோடு முடிஞ்சுடுத்து. இப்போ மாலை மணி ஐந்து ஆகிவிட்டது. இந்த நாளுக்கான வாடகையைக் கொடுக்காமல் நீங்க தங்க முடியாதுனு சொல்ல, இவ்வளவு தானா விஷயம்னு இன்னொரு ஐநூறு ரூபாயை எடுத்துக் கொடுத்து நாளை மதியம் பனிரண்டு மணிக்குக் கிளம்புகிறோம். அது வரை இருக்கலாமானு உறுதி செய்து கொண்டோம். கடைசியில் அந்த ஹோட்டலும் நாங்க இரண்டாவதாய்ப் பார்த்த ஹோட்டலும் ஒரே நபரால் நடத்தப்படுகிறதாம். படுக்க மட்டுமே இடம்னு சொன்ன ஹோட்டலில் காப்பாளாராக இருப்பவர் தான் தன் முதலாளியின் இந்த ஹோட்டலுக்கு எங்களை அனுப்பி வைத்திருக்கிறார். இதை எல்லாம் தெரிந்து கொண்டு நாங்க இங்கே தேநீருக்குப் படும் கஷ்டத்தையும், சாப்பாட்டுக்கு இறங்கிப் போக வேண்டியதன் சிரமத்தையும் ஒரு பாட்டம் சொல்லி அழுதோம். அந்த மனிதர் உண்மையாகவே நல்ல மனிதர். உபகார சிந்தையுள்ளவர். ஆகவே அந்த ஹோட்டலில் காப்பாளப் பையரைக் கோவித்தார். முடியாதவங்க, அதிலும் வயசானவங்க இவங்களை இப்படி நினைக்க விடலாமா? னு கேட்டுட்டு, எங்களிடம் எது வேணும்னாலும் இந்தப் பையரிடம் சொல்லுங்க, செய்து கொடுப்பார்னு சொல்ல, நாங்க யோசித்தோம். ஆனால் அவர் விடலை. அந்தப் பையரிடம், எனக்கு இவங்க கிட்டே இருந்து இனி எந்தவிதமான புகாரும் வரக்கூடாது. அவங்க இருவரும் நாளை மதியம் பனிரண்டு மணிக்குக் கிளம்பும் வரை கூட இருந்து ஆட்டோ பிடிச்சு அனுப்பும் வரை உன் பொறுப்புனு கண்டிப்பாய்ச் சொல்ல அவரும் தலையை ஆட்டினார். எங்களிடமும் எந்தக் கவலையும் படாதீங்க. இவன் எல்லாம் செய்து கொடுப்பான். என்று சொன்னார். அவ்வளவில் எங்களுக்கும் மனம் கொஞ்சம் சாந்தி அடைந்து, அன்றிரவுக்கு உணவு வாங்கிக் கொடுப்பாரா என்றும் கேட்டோம். உணவுப் பார்சல் வாங்கி வந்து கொடுப்பார்னு சொல்ல நாங்க ஆறு தவா ரொட்டியும் ஒரு மிக்சட் வெஜெடபிளும் வாங்கித் தரச் சொன்னோம். சரினு தலையை ஆட்டிட்டுப் போனாங்க. எங்க பணமே அவங்ககிட்டே இருந்ததாலே உணவுக்குனு பணம் கொடுக்கலை. அவங்களும் கேட்கலை. சற்று நேரத்தில் மீண்டும் அறைக்கதவு தட்டப்பட, கதவைத் திறந்தேன். ஐம்பது மில்லி கூடப் பிடிக்காத ஒரு தம்ளரில் தேநீர். அந்த விடுதிக்காப்பாளரோடு முன்னர் எங்களிடம் பேசிச் சமாதானம் செய்த நபரும் வந்திருந்தார். தேநீரை எடுத்துக்க சொன்னாங்க. இந்த மட்டும் கிடைச்சதேனு நினைச்சு எடுத்துக் கொண்டோம். மீண்டும் சரியா ஏழரைக்குள்ளாக உங்களுக்குச் சாப்பாடு கொண்டு வருவார்னு உறுதியளித்துவிட்டுப் போனார். நல்லவேளையாகப் பழங்கள் நிறைய வாங்கி வைச்சிருந்தோம். அதிலிருந்து ஒரு ஆப்பிளும், வாழைப்பழமும் எடுத்துக் கொண்டேன். முதல்நாள் அயோத்தியிலிருந்து கிளம்புகையில் உணவு சாப்பிட்டது தான். சித்திரகூடத்தில் காலை ஆகாரமும் நான் ஒழுங்காய்ச் சாப்பிடலை. அங்கே சுத்தினது, சில இடங்களில் ஏறி இறங்கியது, குகைக்குள் சென்றதுனு உடம்பு அசதியும், பசியும் மிதமிஞ்சிப் போயிருந்தது. ஏழரை மணிக்குக் காத்திருந்தேன். ஏழரை ஆகியும் ஒண்ணுமே வரவில்லை. கணவர் வெளியே சென்று பார்த்தப்போ அந்தத் தளத்தில் காலியாய்க் கிடந்த மற்ற அறைகளுக்குப் புது நபர்கள் வந்திருப்பதாகவும், அவங்களோடு பேசிக் கொண்டிருப்பதாகவும், இன்னும் பத்து நிமிஷத்தில் போய் வாங்கி வருவதாய்ச் சொன்னதாகவும் சொன்னார். சரினு காத்திருந்தோம். எட்டரை மணியும் ஆகிவிட்டது. அந்த ஆள் போனதாய்த் தெரியலை. கீழே போய்ப் பார்த்தார். அந்த நபர் கிளம்பவே இல்லைனு தெரிஞ்சது. சும்மாத் தான் இருந்திருக்கார். ஆனால் சாப்பாடு வாங்கப் போகலை. இவரும் சும்மாச் சும்மாச் சொல்லக் கூடாதுனு பார்த்துட்டு வந்துட்டார். ஒன்பதும் ஆயிற்று. ஒன்பதரையும் ஆயிற்று. இப்போ அவருக்கும் பசி தாங்க முடியாமல் போக மீண்டும் கீழே போனார். அந்த நபர் அப்போது தான் யாருடனோ வண்டியில் கிளம்பிக் கொண்டிருந்திருக்கிறார். சரி எப்படியும் அரை மணியில் வந்துடுவார்னு நினைச்சால் பத்தரைக்கும் வரவே இல்லை; உடனே எங்களிடம் ஏற்கெனவே கொடுத்திருந்த கைபேசி எண்ணுக்குத் தொடர்பு கொண்டோம். அந்த விடுதிக்காப்பாளப் பையர்னு நினைச்சால் வேறே யாரோ எடுத்துப் பேசினாங்க. என்ன விஷயம்னு கேட்டு, நாங்க சொன்னதும், கவனிக்கிறேன்னு சொல்லிட்டு வைச்சுட்டார். சற்று நேரத்திற்கெல்லாம் கிட்டத்தட்டப் பதினோரு மணி ஆகையில் அந்த நபர் அவசரம் அவசரமாக வந்தார். அதற்குள்ளாக என் கணவர் மீண்டும் வந்துட்டாரானு பார்க்கப் போக அவரிடம். ஏன் முதலாளிக்குத் தொலைபேசினீங்கனு கேட்டிருக்கார். நாங்க அப்போது தான் பேசினது முதலாளினு தெரிஞ்சுண்டோம். அதைச் சொன்னதும், ஒண்ணும் சொல்லாமல் வாங்கி வந்த சாப்பாடைக் கொடுத்துட்டுப் போக இருந்தவரிடம், சும்மா இருக்காமல் நம்மவர் காலை தேநீர் வேணும், சாயந்திரம் கொடுத்தது போல் இரண்டு கப் கொடு, எவ்வளவு பைசா கொடுக்கணும்னு கேட்டுட்டு,சாயந்திரம் கொடுத்ததுக்கும் சேர்த்துப் பணம் கொடுத்தார். காலை ஆறரை மணிக்குத் தரச் சொன்னதுக்கு அந்த நபரும் சம்மதித்தார். உணவுப் பார்சலைப் பிரித்தால், அதைக் கொண்டு வந்திருந்த ப்ளாஸ்டிக் பையே மிகவும் மட்டரகமானதாக இருந்தது எனில் உள்ளிருந்து ஒரே நாற்றம். நாங்க கேட்டது ஆறு தவா ரொட்டியும், ஒரே ஒரு சப்ஜியும் மட்டுமே. இதிலோ பத்து ரொட்டிகளுக்கு மேல் இருந்ததோடு ஏதோ தால், சப்ஜினு வேறே இருந்தது. தெரு ஓர டாபாவில் வாங்கி இருக்கார் போல. நல்ல ஹோட்டல்களில் வாங்கி இருந்திருந்தால் அலுமினியம் ஃபாயில் டப்பாக்களில் போட்டு, அதையும் ஒரு அழகான அட்டைப்பெட்டியில் வைத்துக் கொடுத்திருப்பாங்க. இது எங்கே எப்படிச் செய்ததோ! அதோடு இது ஒருவருக்கு மட்டுமே ஆன உணவு. ஏனெனில் இங்கே சாப்பாடு ஐம்பது ரூபாய்க்குப் பத்து ரொட்டிகள் தராங்க. சாதம் வேண்டாம்னா கூட இரண்டு ரொட்டி. ஆகவே ஒருத்தருக்கான உணவைத் தான் வாங்கி இருக்கார். இது கட்டாயம் நூறு ரூபாயும் இருக்காது. அந்த உணவை அப்படியே கட்டி அங்கே இருந்த குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு, கையில் இருந்த சில பிஸ்கட்களையும், இன்னும் கொஞ்சம் பழமும் சாப்பிட்டுவிட்டு தண்ணீரைக் குடித்துவிட்டுப் படுத்தோம். 16 சித்திரகூடத்திலிருந்து கான்பூரை நோக்கி! சங்கடங்கள் தீர்ந்தனவா? மறுநாள் காலை ஐந்து மணிக்கே எழுந்துவிட்டாலும், (உண்மையில் விழித்தது நாலரை மணி) ஆறரை மணிக்குத் தேநீர் கேட்டிருந்ததால் அது வரை பொறுத்திருந்தோம். எனக்கோ பசியிலும், சரியான உறக்கமில்லாமலும் ஒரு மாதிரி மயக்கமாகவே இருந்தது. எப்போடா ஆறரை ஆகும்னு காத்திருந்து நாமே கீழே போகலாம்னு அறையைப் பூட்டிக் கொண்டு கிளம்பினோம். படியில் இறங்கப் போகும் சமயம் அந்தக் காப்பாளர் பையர் எங்களை அழைத்துக் கொண்டே வந்தார். திரும்பிப் பார்த்தால் இரண்டாவது தளத்தில் வேலை நடந்து கொண்டிருந்த இடத்திற்கு நீர் விட்டுக் கொண்டிருந்திருக்கிறார். எங்களைப் பார்த்து, “தேநீர் தானே? கீழே போங்க, இதோ இந்த வேலையை முடிச்சுட்டு, தண்ணீர்த் தொட்டியை நிரப்பிட்டு வரேன்.” என்றார். அப்பாடா, உயிர் வந்ததுனு இருவரும் கீழே சென்றோம். வேறொருத்தரும் அங்கே இன்னொரு கட்டிலில் படுத்திருந்தார். சற்று நேரத்துக்கெல்லாம் மேலிருந்து அந்தப் பையர் வந்தார். கொல்லைப்பக்கம் என்று சொல்லக் கூடிய இடத்துக்குச் சென்று குழாயடியில் ஏதோ செய்துவிட்டு ஒரு சாஸ்பானில் நீர் நிரப்பி வந்தார். தேநீருக்குத் தான் என நினைத்தோம். சற்று நேரம் அப்படியும், இப்படியுமாகப் போய்க் கொண்டிருந்தார். படுத்திருந்த ஆளோடு ஏதோ பேசிக் கொண்டிருந்தார். நாங்க அங்கே போட்டிருந்த தொலைக்காட்சியில் ஒரு கண்ணும், தேநீர் வருதானு இன்னொரு கண்ணுமாக உட்கார்ந்திருந்தோம். திடீர்னு என் பக்கம் வந்து, “பானி கரம் ஹோ கயா!” என்றார். தேநீருக்குத் தான் என நினைத்து, நான் “அச்சா!” என்றேன். ஐந்து நிமிஷத்துக்கெல்லாம் அரை வாளித் தண்ணீரை (வெந்நீர்) கொண்டு வந்து என் முன்னே வைக்க, என்ன இது? என்று கேட்டேன். “ஆப் கோ நஹானே கே லியே பானி!” என்றார். என்ன இது, குளிக்க வெந்நீரை அதுக்குள்ளே கொண்டு வந்துட்டாரேனு நினைச்சு, “ஏன் இவ்வளவு சீக்கிரமாக் கொண்டு வந்தீங்க?” னு கேட்க, “கரம் ஹோ கயா ந!” என்றார். நானும் சரி தொலையட்டும்னு நினைச்சு மாடியில் அறை வாசலில் கொண்டு போய் வைக்கச் சொன்னேன். அந்த இரண்டடி உயரப் படியில் நானோ, அவரோ அந்த வாளி வெந்நீரைத் தூக்கிக் கொண்டு ஏற முடியாது. அரை மனதாகக் கொண்டு போய் வைத்தார். இன்னும் கொஞ்சம் நேரம் போனது. மணி ஏழரையும் ஆகி ஏழே முக்காலும் ஆனது. தேநீர்னு எழுதித் தான் பார்க்கணும் போலனு நினைச்சேன். அதுக்குள்ளே அந்த நபர் மீண்டும் என் கிட்டே வந்து, “பானி டன்டா ஹோகயா ஹோகா! ஆப் ஜாகர் நஹா லீஜியே!” என்றார். உடனே நம்மவர் “தேநீரைக் கொடுத்தால் நாங்க போயிடறோம். இங்கே ஏன் உட்காரப் போறோம்?” என்றார். அந்த நபர், “சாய், சாய், வாய் குச் பி நஹி! தூத் கோ பில்லி பி கர் கயி!” என்று சாவகாசமாகச் சொன்னார். இரண்டு பேருக்கும் தூக்கி வாரிப் போட இதை முன்னாலேயே சொல்வதற்கென்ன? என்று கேட்டோம். அதுக்கு பதிலே வரலை. இப்போப் போய்ப் பால் வாங்கணும். அதுக்குக் கடைத்தெருவுக்குத் தான் போகணும்; என்னாலே இப்போப் போக முடியாதுனு கறாராகக் கூற, நாங்க பக்கத்து வீட்டிலே இரண்டு, மூணு பசு மாடு இருக்கு. நாங்க போய்ப் பால் வாங்கி வரோம், தேநீர் தயாரித்துக் கொடுங்கனு கேட்டதுக்கு, அவங்க பால் எல்லாம் வெளியே கொடுக்க மாட்டாங்க. நீங்க வாங்கி வந்தாலும் என்னால் போட முடியாது.” அப்படினு சொல்ல இரண்டு பேருக்குமே கண்ணீர் நிஜம்மாவே வந்துவிட்டது. பேசாமல் மாடி ஏறினோம். அறை வாசலில் வைத்திருந்த அரை வாளி வெந்நீரில்(பேர்தான் வெந்நீர்) அவசரமாய்க் குளித்தேன்னு பேர் பண்ணினேன். அப்புறமா அவரும் குளித்துவிட்டு வந்தார். இரண்டு பேரும் மறுபடி கீழிறங்கி நேற்றுப்போன திசைக்கு எதிர்த் திசையில் ஏதேனும் தேநீர்க்கடை இருந்தால் குடிச்சுட்டு அப்படியே காலை ஆகாரமும் கிடைக்குமானு பார்க்கலாம்னு முடிவு பண்ணினோம். ரயில்வே ஸ்டேஷன் போக ஆட்டோவுக்கு இந்த நபரை நம்பினால் நாம் ரயிலைப் பிடிக்க முடியாது. அது ராத்திரி இரண்டு மணி வண்டியாய் இருந்தாலும் என எனக்குத் தோன்ற அவரிடம் சொன்னேன். அவரும் ஆமோதித்தார். இருவரும் கீழே இறங்கி நேற்றுச் சென்ற திசைக்கு எதிர்த் திசையில் போனால் அங்கே ஒரு உள்ளூர்ப் பேருந்து நிலையம், அதை ஒட்டி ட்ராவலர்ஸ் பங்களா எல்லாமும் இருந்தன. கடவுளே, இந்த ட்ராவலர்ஸ் பங்களாவுக்குக் கூட வந்திருக்கலாமே! னு நினைச்சோம். அங்கே இருந்த ஒரு டீக்கடையில் நாஷ்தாவும் கிடைக்கும்னு அறிவிப்புப் பலகை இருந்தது. நாங்க தேநீர் தான் கேட்டோம். அவ்வளவு சீக்கிரம் காலை ஆகாரம் சாப்பிட வேண்டாம்; கிளம்பும் முன்னர் சாப்பிட்டுக்கலாம். வழியில் சாப்பிட ஏதேனும் வாங்கி வைச்சுக்கலாம்னு முடிவு பண்ணினோம். ஏனெனில் பனிரண்டு மணிக்குள்ளாக அறையைக் காலி செய்யணும். அதோடு முதல்நாள் கொடுத்த பணம் முடிகிறது. பத்து நிமிஷம் கூடப் போனால் கூடக் கறாராக ஒரு நாள் வாடகையை வசூலிப்பார்கள். அந்தத் தேநீர்க்கடையில் நாங்க வாங்கின தேநீருக்குப் பதினாறு ரூபாய் சார்ஜ் பண்ணிட்டாங்க. தூக்கி வாரிப் போட்டது. குடிச்ச தேநீரை என்ன செய்ய முடியும்? முதல்லேயே தேநீரின் விலையைக் கேட்டிருக்கணும். எல்லா இடங்களிலும் ஐந்து ரூபாய் தான் ஒரு கப் (சின்னது) நாங்க ஒருத்தருக்கு இரண்டு கப் கேட்டிருந்தோம். ஆகவே நாலு கப் இருபது ரூபாய் தான் என நினைத்தால் 32 ரூ. கொடுக்க வேண்டி வந்தது. கொடுத்துவிட்டு நாஷ்தா பற்றி விசாரிக்காமல் நடையைக் கட்டினோம். ஹோட்டலில் நுழைந்ததுமே விடுதிக்காப்பாளரிடம், நாங்க பனிரண்டு மணிக்குக் காலி பண்ணப் போவதாகவும், ஆட்டோ நாங்களே பார்த்துக்கறோம்னும் சொல்லிட்டு மேலே போய் சாமான்களை எல்லாம் ஒழுங்கு செய்து கட்டி வைத்துவிட்டுப் பத்து மணி வரை பொழுது போக்கிவிட்டு மீண்டும் கீழே வந்தோம். நேற்றுச் சென்ற கடைத்தெருவில் போய்க் காலை ஆகாரம் சாப்பிடலாம்னு கிளம்பினோம். முதல்நாள் எங்களை அழைத்துச் சென்ற ஆட்டோக்காரர் இன்று சவாரியுடன் போய்க் கொண்டிருந்தவர் எங்களைப் பார்த்ததும் நிறுத்தி இரண்டு மணி நேரத்துக்குள்ளாக பரதன் குகையைக் காட்டிவிட்டுக் கொண்டு விடுவதாகவும் நானூறு ரூபாய் கொடுக்குமாறும் மீண்டும் கேட்டார். அவர் ஏமாத்துகிறார் என்பது நன்கு புரிந்தது. கிளம்பும் சமயம் தகராறு வேண்டாம்னு நாங்க பார்க்கலைனு சொல்லிட்டோம். காலை ஆகாரம் சாப்பிட கடைத்தெருப்பக்கம் சென்ற ஒரு ஷேர் ஆட்டோவில் சென்றோம். எவ்வளவுனு கேட்டுக்காமல் ஒருத்தருக்கு ஐந்து ரூபாய் தான் கொடுத்தோம். ஆட்டோக்காரர் பேசாமல் வாங்கிக் கொண்டு சென்றுவிட்டார். முதல்நாள் ஏமாந்தது நன்கு புரிய வந்தது. அந்த ஹோட்டலில் தான் முதல்நாள் மதியம் சாப்பாடு சாப்பிட்டிருந்தோம் ஆகவே அங்கேயே சென்று நான் சாதா பரோட்டா இரண்டும், அவர் ஆலு பரோட்டாவும் சாப்பிட்டார். இங்கேயும் காலை ஆகாரத்தில் இனிப்புக் கட்டாயம் உண்டு. மில்க் கேக் கொடுத்தாங்க. அதைத் தவிர ஒரு சப்ஜி, தயிர், ஊறுகாய். சாப்பிட்டுவிட்டுத் தேநீர் குடித்தோம். பெரிய கப்பில் தேநீர் . பத்து ரூபாய் தான். காலை ஆகாரம் ஐம்பது ரூபாய் தான். அந்த ஹோட்டல்காரர் முதல்நாள் நான் சாப்பிடாததையும் மோர் வாங்கிக் குடித்ததையும் நினைவு வைத்துக் கொண்டு பேசினார். நாங்க சார்தாம் செல்ல எத்தனை ரூபாய் கொடுக்கணும்னு அப்போதான் (உணர்ச்சியே அப்போத் தான் வந்ததோ?) கேட்டோம். சார்தாம் ஹனுமான் தாரா, அநசூயா ஆசிரமம், குப்த கோதாவரி, பரதன் குகை நாலும் செல்ல ஐநூறு ரூபாய் என்றும் ஹனுமான் தாரா உங்களால் போக முடியாது மற்ற மூன்று இடங்களுக்கு நானூறு ரூபாயில் ஏற்பாடு செய்து தருவதாகவும் சொல்ல, பணம் ஏமாந்தது குறித்தும், மீண்டும் ஏமாற்ற நினைத்தது குறித்தும் மனம் அடித்துக் கொண்டது. அவரிடம் நாங்க போயிட்டு வந்தாச்சுனு சொல்லிட்டு(பின்னே, ஏமாந்தோம்னு சொல்ல முடியுமா) சற்று நேரம் பேசிவிட்டுக் கிளம்பினோம். ஹோட்டலுக்குப் போய் மாடியில் அறைக்கு வந்தோம். மணி அதற்குள்ளாகப் பதினொன்று ஆகி இருக்க,என் கணவர் கிளம்பிடலாம். இங்கேயும் உட்கார்ந்து தான் இருக்கப் போறோம். ஸ்டேஷன் போயே உட்காரலாம். என்றார். ஆகவே பெட்டிகளைத் தூக்கிக் கொண்டு மெல்லக் கீழே இறங்கினோம். இறங்குகையில் அந்த விடுதிக்காப்பாளர் மாடித் தளத்தில் வேலை செய்து கொண்டிருந்த மேஸ்திரியிடம் பேசிக் கொண்டிருந்தார். நான் மிச்சப் பணமும், தேநீருக்குக் கொடுத்த பணமும் வரணுமேனு அவரிடம் சொல்ல, அவர் மிச்சப் பணத்தை விட்டுடு. ஆட்டோக்காரன் கிட்டே நூற்றுக் கணக்கில் ஏமாந்தாச்சு. டீக்குக் கொடுத்ததை மட்டும் கேட்டு வாங்கறேன்னு அதைக் கேட்டு வாங்கினார். அப்போவும் நடந்ததுக்கு ஒரு வார்த்தை மன்னிப்போ, வருத்தமோ காட்டிக்காமல் கிண்டலாகச் சிரித்தபடியே இருந்தார். ஹோட்டலை விட்டு வெளியே வந்து சரிவில் இறங்கி, மீண்டும் மேலேறிச் சாலைக்கு வந்தோம். ஆட்டோவுக்குக் காத்திருந்தோம். ஒரு ஆட்டோ முழுதும் சவாரியோடு போனது. எங்க சாமான்களைப் பார்த்ததுமே நிறுத்தவில்லை. வைக்க இடம் இல்லை. அடுத்து ஒன்று காலியாக வர, அதை நிறுத்தி, நாங்க ஸ்டேஷன் செல்லணும்னு சொல்லிக் கேட்டோம். நல்லவேளையாக அது ரயில்வே ஸ்டேஷன் செல்லும் ஆட்டோ தான். அந்த ஆட்டோ ஓட்டி நாங்க மட்டும் தனியாப் போகணும்னா 200 ரூபாய் கொடுக்கணும்னு சொல்லி, “ரிஜர்வ்?” னு கேட்க, நாங்களும் ரிஜர்வ்னு சொல்லி அங்கீகாரம் செய்துவிட்டு வண்டியில் ஏறினோம். சாமான்களை ஆட்டோ டிரைவர் வைத்து உதவினார். சிறிது தூரத்தில் சில போலீஸ்காரர்கள் ஆட்டோவில் ஏறி டிரைவருக்கு இருபுறமும் அமர்ந்து கொண்டனர். [] மேலும் யாரும் தொந்திரவு செய்யாமல் இருக்கவே ஶ்ரீராமன் அனுப்பி வைச்சிருப்பான்னு பேசிக் கொண்டோம். இருவருமே ஸ்டேஷன் பக்கம் ட்யூட்டியில் போறவங்க. ஆகையால் டிரைவரும் மறுப்புச் சொல்லலை. நாங்களும் மறுப்புச் சொல்லலை. [] இந்த ஆட்டோ டிரைவர் நல்லவராக இருந்ததோடு ஸ்டேஷன் வாசலில் இறக்கிவிட்டு சாமான்களையும் எடுத்துக் கொடுத்து உதவினார். ஸ்டேஷன் போய் டிக்கெட் வாங்கிக் கொண்டு ரயிலுக்குக் காத்திருந்தோம். 17 கான்பூரில் ஒரு இரவு! கான்பூர் வண்டி இரண்டே காலுக்குத் தான் வந்தது. அதுவரை ஸ்டேஷனில் உட்கார்ந்திருந்தோம். பொழுது போகலையேனு கஷ்டமே இல்லை. நம்ம முன்னோர்கள் விளையாடுவதைப் பார்த்துக் கொண்டே பொழுது கழிந்து விட்டது. குடும்ப சமேதராக அனைத்து முன்னோர்களும் கூடி இருந்து களித்ததோடு அல்லாமல் எங்களையும் மகிழ்வித்தனர். கையிலே எது இருந்தாலும் அவங்க கிட்டேக் கொடுத்துடணும். ஒரு குரங்கார் எதுக்கோ மனைவியைக் கோவிச்சுண்டார். அப்போப் பார்த்து ஒருத்தர் வாழைப்பழத்தைச் சாப்பிட வேண்டி உரிக்க, அதன் வாசம் தெரிந்த அந்தக் குரங்கார், பழத்தைப் பிடுங்க. அவரிடமிருந்து அவர் மனைவியார் தட்டிப் பறித்தார். இப்போ மனைவியிடம் கோவிக்கவில்லை. :)))) கீழே சித்திரக்கூடம் ரயில் நிலையத்தில் அமர்ந்திருக்கையில் நம் முன்னோர்கள் விளையாடுவதைப் படம் எடுக்க முயன்றேன். காமிராவை அவங்க கேட்பாங்கனு தோணினதாலே, கையிலிருந்த செல்லிலேயே அவங்களுக்குத் தெரியாமல் சுட்டது இது. [] இரண்டு பேரும் கணவன், மனைவினு பார்த்ததுமே புரிஞ்சது. பெரியவரா இருக்கிறவர் தான் ஐயா. அவர் பயணி ஒருத்தரிடமிருந்து தட்டிப் பறித்த வாழைப்பழத்தை சின்னவங்களா இருக்கிற அம்மா தட்டிப் பறித்துப் போய்ச் சாப்பிட்டு விட்டார். ஆனாலும் ஐயா அதைப் பொருட்படுத்தாமல் அம்மா திரும்ப வந்ததும் கொஞ்ச ஆரம்பிச்சுட்டார். இந்தப் படம் ஒருத்தர் கையிலிருந்த பஜ்ஜி, போண்டாவைத் தட்டிப் பறித்தப்போ எடுத்தது. சுதாரிச்சுக்கறதுக்குள்ளே சாப்பிட்டுட்டாங்க. ஆனால் அவங்களைப் படம் எடுக்கிறோம்னு புரிஞ்சுக்கறாங்க. அதனால் கவனமா இருக்க வேண்டி இருக்கு! :))) வண்டி வந்ததும் எங்களுக்கு எதிரேயே நின்ற பெட்டியில் முதலில் ரங்க்ஸ் ஏறி உட்கார இடம் ரிஜர்வ் செய்தார். அதுக்குள்ளே நான் பெட்டிகளைத் தூக்கி ஒவ்வொன்றாக மேலே ஏற்ற முயல கூட இருந்தவர்களும் உதவ சாமான்களை வைத்துவிட்டு நாங்க சைடிலே இருக்கும் எதிரும் புதிருமான இருக்கையில் அமர்ந்தோம். லக்னோவில் ஏறிய அளவுக்குக் கூட்டம் இல்லைனாலும், கூட்டம் இருந்தது. ஆனால் ஏறி, இறங்கக் கஷ்டப்படவில்லை. ஸ்டேஷன் வாசலிலேயே ஒரு கடையில் ரங்க்ஸுக்குச் சாப்பிட உணவும், தேநீரும் (ப்ளாஸ்க் கொண்டு போயிருந்தோம்) வாங்கி வைத்திருந்தோம். வண்டியில் ஏறினதும் அதைச் சாப்பிட்டோம். பின்னே? வெளியிலே எடுத்தால் “கு“ரங்காருக்குத் தானே போய்ச் சேரும்! :)))) கான்பூருக்கு ஏழே முக்காலுக்குப்போகணும். ஏழு மணிக்குக் கான்பூரில் இருந்து சிறிது தூரமே இருந்த ஒரு லோகல் ஸ்டேஷனில் வண்டியை நிறுத்திட்டாங்க. ப்ளாட்ஃபார்ம் காலி இல்லையாம். கிட்டத்தட்ட ஒரு மணி நேரக் காத்திருப்புக்குப் பின்னர் வண்டி கான்பூர் சென்றது. நாங்க ஏறின பெட்டியிலிருந்து கீழே இறங்குகையில் நடைமேடை இல்லை. கொஞ்சம் சிரமப் பட்டுத் தான் இறங்க வேண்டி இருந்தது. ரயில்வேயில் அறை கிடைக்குமானு விசாரிச்சால் டார்மிட்டரி தான் இருக்குனு சொல்லிட்டாங்க. அதுக்குள்ளே ஒரு ஆட்டோப் பையர் நான் நல்ல ஹோட்டலாக் கூட்டிப் போறேன்னு சாமான்களைத் தூக்கிக் கொண்டு செல்ல, நாங்களும் பின் தொடர்ந்தோம். உண்மையிலேயே நல்ல பையர் தான். நல்ல ஹோட்டலாகப் பார்த்து ஆட்டோவைக் கொண்டு நிறுத்தினார். அறையும் இருந்தது. ஆனால் இங்கேயும் மாடி! லிஃப்ட் கிடையாது. இவ்வளவு வாடகை வாங்கிக்கறீங்க ? ஒரு லிஃப்ட் போடக் கூடாதானு கேட்டுட்டு அறைக்கு மேலே ஏறினோம். சாமான்களை ஹோட்டலில் வேலை செய்யும் கேர்டேக்கர் எடுத்து வந்தார். அறையில் கொண்டு வைத்துவிட்டு சாப்பிடறீங்களா? என்ன வேணும்னு விசாரித்தார். அது என்னமோ தெரியலை. எங்களுக்கும் அவருக்கும் முதல் பார்வையிலேயே ஒத்துப் போய்விட்டது. நாங்களும் நாலு தவா ரொட்டியும், சப்ஜியும், மோரும் வேண்டும் னு சொன்னோம். அரை மணியில் சுடச் சுடச் சாப்பாடு ரெடி! வேறு ஏதும் வேணுமானு கேட்டார். காலையில் அறையைக் காலி செய்வதால் காலை ஆகாரத்தைச் சீக்கிரமே கொடுக்கச் சொன்னோம். காலைத் தேநீர் அவங்களே ஆறு மணிக்குக் கொடுத்துடுவாங்களாம். சாப்பிட்டுவிட்டுத் தொலைபேசியில் அழைத்த மகளோடு பேசிவிட்டுப் படுத்துத் தூங்கினோம். மறுநாள் காலை பாட் டீ வந்தது. தேநீர்னா அதான் தேநீர். சுவையான தேநீர். முதல்நாள் இரவு உணவும் சுவையாகவே இருந்தது. ஏழரை மணிக்குக் காலை ஆகாரமும் கொண்டு வந்துவிட்டார். நாங்க அங்கிருந்து பிட்டூர் வால்மீகி ஆசிரமம் போயிட்டுப் பின்னர் நேரே லக்னோ செல்லவேண்டும் என்பதைச் சொல்லி வண்டி ஏற்பாடு செய்யச் சொன்னோம். அவரும் ஒரு ஆளை அனுப்பி வைத்தார். அவரோடு வெகுநேரம் பேரம் பேசிக் கடைசியில் கிலோமீட்டருக்கு எட்டு ரூபாய்க்கு அவரும் அரைமனதாக, நாங்களும் கூட இருக்கேனு அரை மனதாக ஒத்துக் கொண்டோம். ஒன்பதரைக்கு வண்டியைக் கொண்டு வரச் சொல்லிவிட்டோம். வால்மீகி ஆசிரமத்திலிருந்து ஹோட்டலுக்குத் திரும்பி வந்துட்டுக் கிளம்பினால் பனிரண்டு மணி ஆகிடும். ஆகையால் நேரே லக்னோ போயிட்டால் அங்கே போய்ச் சாப்பிட்டுக்கலாம்னு முடிவெடுத்தோம். இங்கே காலை ஆகாரமாக சாதா பரோட்டாவும், சப்ஜி, தயிர், ஊறுகாயோடு கொடுத்தாங்க. மீண்டும் ஒரு தேநீர் சாப்பிட்டுவிட்டு ஒன்பதரைக்கு வால்மீகி ஆசிரமம் கிளம்பினோம். 18 வால்மீகி ஆசிரமத்தில்! கான்பூரில் இருந்து கிட்டத்தட்டப் பதினைந்து மைல் தொலைவில் பிட்டூர் உள்ளது. இது ஒரு காலத்தில் பேஷ்வாக்களால் ஆட்சி செய்யப்பட்டது. இந்திய சுதந்திரப் போரில் முக்கியப் பங்கு வகித்த ஊர் ஆகும். 1857 இன் பிரசித்தி பெற்ற கலகமும் இங்கே தான் ஆரம்பிக்கப்பட்டதாய்ச் சொல்லுகின்றனர். ராணி லக்ஷ்மி பாய் என்னும் ஜான்சி ராணிக்கும் இது தான் பிறந்த ஊர் என்கின்றனர். ஆங்கிலேய ஆட்சிக்காலத்தில் பேஷ்வாவாக இருந்த பாஜிராவ் 2 என்பவர் பேஷ்வாக்களில் கடைசி பேஷ்வா. ஆங்கிலேயரால் கான்பூரை விட்டு வெளியேற்றப்பட்டார். பிட்டூர் ஒரு காலத்தில் கான்பூரையே சேர்ந்திருந்தாலும் முக்கிய அரண்மனையிலிருந்து வெளியேறிய பேஷ்வா பிட்டூரைத் தன் இருப்பிடமாகக் கொண்டார். நாளடைவில் அவருடைய தத்துப்புத்திரன் நானா சாஹேபிற்கும் இதுவே தலைநகராயிற்று. எனினும் விரைவில் பிரிட்டிஷ் காரர்கள் இங்கே முற்றுகை இட்டு மாளிகையையும் பல கோவில்களையும் தரைமட்டம் ஆக்கினார்கள். இது சரித்திரம் சொல்லும் கதை. ஆனால் ராமாயண காலத்திலேயே இந்த ஊர் இருந்ததாகவும், அப்போது வேறு பெயரில் இருந்திருக்கலாம் என்றும் கூறுகின்றனர். அதற்கு ஆதாரங்களாக இப்போது இருப்பவையே வால்மீகி ஆசிரமம், லவ, குசர்கள் பிறந்த இடம். அஸ்வமேத யாகத்தின் போது போர் புரிய வந்த ஹனுமனை லவ, குசர்கள் கட்டியது. மேலும் சீதை பூமியில் விழுந்து மறைந்த இடம் ஆகியன இந்த ஆசிரமத்திலேயே உள்ளது. மேலும் ஶ்ரீராமாநுஜர் இங்கே வந்து சென்றிருக்கலாம் என்பதற்கு அடையாளமாக ஒரு ஸ்தம்பமும் இந்த ஆசிரமத்தில் காணப்படுகிறது. இது குறித்து அங்கு யாருக்கும் சரியாகச் சொல்லத் தெரியவில்லை. ஆசிரமத்திலிருந்து சற்றுத் தொலைவில் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்குள்ளாக கங்கை ஓடுகிறாள். கங்கைக்கரையின் மேற்கே அமைந்திருக்கும் இந்த ஊரில் கங்கைக்கரையில் காணப்படும் பிரம்மவர்த்த காட் என்னும் படித்துறையில் தான் பிரம்மா படைப்புத் தொழிலை ஆரம்பிக்கும் முன்னர் கங்கையில் குளித்துவிட்டு வழிபாடுகள் செய்ததாகச் சொல்கின்றனர். அவர் பாதச் சுவடுகள் எனப்படும் பாதுகைகள் அங்கே காணப்படுகின்றன. இவற்றைத் தனி சந்நிதியாக அமைத்து வழிபடுகின்றனர். கங்கையில் நீர் வரத்து அதிகம் இருக்கையில் இவை மறைந்துவிடுமாம். நாங்கள் சென்றபோது புது வெள்ளம் வடிய ஆரம்பித்த நேரம். ஆகையால் பார்க்க முடிந்தது. அவத ராஜாவின் மந்திரியால் நிர்மாணிக்கப்பட்ட சிவன் கோயிலும் இருக்கிறது. துருவன் ஒற்றைக்காலில் நின்று தவம் செய்து என்றென்றும் ஒளிரும் துருவ நக்ஷத்திரப்பதவி பெற்றதும் இந்த கங்கைக்கரையில் தான் எனப்படுகிறது. நாம் பிட்டூர்க்கு வரும் வழியிலேயே பிட்டூர் சாலையிலேயே சித்திதாம் ஆசிரமம் என்னும் ஆசிரமம் காணப்படுகிறது. சுதான்ஷுஜி மஹாராஜ் என்பவரால் நிர்மாணிக்கப்பட்ட விஷ்வ ஷாந்தி மிஷனால் ஏற்படுத்தப்பட்ட இந்த ஆசிரமும் பெரிதாக இருக்கிறது. மிகப்பெரிய வளாகம். அங்கே கைலை மலையைச் செயற்கையாக நிர்மாணித்திருப்பதாய்க் கூறுகின்றனர். ஆனால் நாங்கள் செல்லவில்லை. நேரப் பற்றாக்குறை தான் காரணம். இதைத் தவிரவும் ஶ்ரீராமன், ஜானகிக்குக் கோயில், லவ, குசர்களுக்குக் கோயில் என்று கோயில்கள் ஆசிரமம் என உள்ளன. வால்மீகி ஆசிரமத்தின் அழகும், மெளனமும், அமைதியும், அங்கே சென்றதுமே ஏற்பட்ட நிம்மதி உணர்ச்சியும் வார்த்தையில் வடிக்க முடியாதது. படங்கள் தனிப்பதிவில். வால்மீகி ஆசிரமத்தில்—படப்பதிவு 1! [] அறிவிப்புப் பலகை. இந்த அறிவிப்புப் பலகையில் உள்ள வாசகங்கள் கீழ்க்கண்டவாறு: புராதன காலத்தில் ப்ரஹ்மவர்த்தம் என்ற பெயரில் அழைக்கப்பட்ட இந்த ஊரில் தான் மஹரிஷி வால்மிகி அவர்கள் ராமாயண மஹாகாவ்யத்தை எழுதினதாகச் சொல்லப்படுகிறது. அவருடைய ஆசிரமும் இங்கேயே அமைந்திருந்ததாகவும் சொல்லப்படுகிறது. மேலும் ஶ்ரீராமனால் கைவிடப்பட்ட அவருடைய பத்தினி சீதா தேவிக்கு வால்மீகி இங்கே தான் அடைக்கலம் கொடுத்தார். சீதையின் இரு புத்திரர்களான லவனுக்கும், குசனுக்கும் இங்கே தான் வித்யாரம்பம் நடந்ததோடு இங்கேயே அனைத்துக் கலைகளையும் கற்றுத் தேர்ந்தனர். அவர்கள் இருவரும் இந்த க்ஷேத்திரத்தில் தான் ஶ்ரீராமனுடைய அஷ்வமேத யாகக் குதிரையைப் பிடித்து அடக்கினார்கள். இங்கே தான் மஹரிஷி வால்மீகியின் மூலம் தந்தை மற்றும் புத்திரர்களுடைய முதல் சந்திப்பு நடந்தது. இங்கே இருக்கும் வால்மீகி கோயிலின் ஜீர்ணோத்தாரணம் பேஷ்வா பாஜிராவ் 2 மூலமாக 19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் நடைபெற்றது. கோயிலின் கர்பகிருஹத்தில் கறுப்புக் கல்லால் ஆன ஒரு சிவலிங்கமும் மத்தியகாலத்தைச் சேர்ந்த ஹரிஹரனின் பிரதிமையும் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. பேஷ்வா காலத்தில் அமைக்கப்பட்ட இங்குள்ள தீபஸ்தம்பமும் காண்பதற்கு அரிய ஒன்று. உத்தரப்பிரதேச மாநில தொல்பொருள் துறை, லக்னோ. [] நுழை வாயில். இதைத் தாண்டி வரும் சின்னத்தோட்டத்துக்குப் பின்னர் மேலே ஏறும் படிகள். [] இந்தப் படிகளில் மேலேறிச் செல்லவேண்டும். [] உள்ளே காணப்பட்ட அறிவிப்புப் பலகை. இந்த அறிவிப்புப் பலகையில் எழுதப்பட்டவை கீழே: ஆசிரமத்தின் உள்ளே உள்ள மேற்கண்ட அறிவிப்புப் பலகையில் எழுதப்பட்டுள்ள வாசகங்கள். ஶ்ரீராமசந்திர மூர்த்தியின் ஆக்ஞையின்படி ஶ்ரீலக்ஷ்மணன் சீதையை இங்கே தான் விட்டுச் சென்றான். இந்த ஆசிரமத்தின் உள்ளே தான் சீதா மாதாவின் குடிசை இருந்தது. இங்கே தான் லவனும், குசனும் பிறந்தனர். ஶ்ரீராமரின் அஷ்வமேத யக்ஞத்திற்காக விடப்பட்ட அஷ்வக் குதிரையை இந்த க்ஷேத்திரத்தில் தான் லவனும், குசனும் பிடித்து வைத்தனர். இங்கே தான் சீதை அருகே இருக்கையிலேயே ஹநுமானை லவனும் குசனும் பிடித்துக் கட்டிப் போட்டு ஆசிரமத்துக்குள் கொண்டு வந்தனர். உள்ளே உள்ள கோயிலில் சீதாதேவி, லவன், குசன், மேலும் புராதனமான தக்ஷிணமுக ஆஞ்சநேயரின் சந்நிதிகள் அமைந்துள்ளன. புராதன சித்த பீடம், ஜீர்ணோத்தாரணம் ஆன வருடம் 1999 ஆம் ஆண்டு. வால்மீகி ஆசிரமத்தில் —படப்பதிவு 2 [] வால்மீகிக்கு ஞானம் கிடைத்த இடம் இதுவெனவும், இங்கே தான் ராமாயணத்தை எழுதினார் எனவும் குறிக்கும் அறிவிப்புப் பலகை மேலே. கீழே காணப்படுவது சுவற்றில் கிறுக்குவது, எச்சில் துப்புவது போன்றவை செய்யக் கூடாது என்று எச்சரிக்கை. வால்மீகி சந்நிதிக்கு எதிரிலுள்ள மண்டபத்தில் காணப்பட்ட பழங்கால மணி கீழே [] பேஷ்வாவால் அமைக்கப்பட்ட தீபஸ்தம்பம் [] இங்கே இருக்கும் இந்தத் தூணில் தான் ராம அபய ப்ரதானம் என்னும் ஸ்லோகம் எழுதப்பட்டிருப்பதோடு ஶ்ரீராமாநுஜரின் பெயரும் குறிப்பிடப் பட்டுள்ளது. என்ன காரணம்னு யாருக்கும் சொல்லத் தெரியவில்லை. [:(] [] தூணின் இன்னொரு பக்கம் [] இங்கே எழுதப்பட்டிருப்பது ஆபதா மபஹர்த்தாரம் ஸ்லோகம். [] [] சீதையைப் போன்ற பிரதிமையைச் செய்து அருகே இருக்கும் கோலத்தில் ராம, லக்ஷ்மண, பரத, சத்ருக்னர்கள். இந்தச் சிற்பம் சீதை பாதாளத்தில் பிரவேசித்ததாய்ச் சொல்லப்படும் பள்ளத்துக்குப் பின்னால் உள்ள ஒரு தூணில் செய்துக்கப்பட்டுள்ளது. அனைவரும் சீதை பூமியில் மறைவதைப் பார்த்த வண்ணம் இருப்பதாய்ச் செதுக்கி இருக்கிறார்கள். [] சிற்பம் செதுக்கி இருக்கும் தூண் 19 வால்மீகி ஆசிரமத்திலிருந்து கங்கைக்கரைக்கு! வால்மீகி ஆசிரமத்தில் பார்க்கவேண்டியவை எல்லாம் பார்த்து முடிந்ததும் அங்கிருந்து கங்கைக்கரையில் உள்ள பிரம்மவர்த்த காட் என்னும் படித்துறைக்குச் செல்லச் சொன்னோம் வண்டி ஓட்டியிடம். பாதை குறுகல் தான். எல்லா வடநாட்டுத் தெருக்களும் கங்கைக்கரைக்குச் செல்லும் பாதை இப்படித் தான் உள்ளது. ஆனாலும் வண்டியில் செல்லலாம். என்றாலும் வண்டி ஓட்டிக்கு அரை மனசு தான். நாங்க வற்புறுத்தவே வண்டியை ஓட்டிச் சென்றார். கரைக்குச் சிறிதே தூரத்தில் இந்த வண்டி போகாது இறங்கி நடந்து செல்லுங்கனு சொல்லவே அங்கிருந்த மக்கள் இதைவிடப் பெரிய வண்டியான இனோவா, டவேரா எல்லாம் உள்ளே போயிருக்கு; உங்க வண்டி இன்டிகா தானே இது போகும் போங்கனு வற்புறுத்தி உள்ளே அனுப்பிச்சாங்க. ஒருவழியா கங்கைக்கரைக்குக் கொண்டு விட்டார். இந்தக் கரையில் தான் முதலில் பிரம்மா பூமிக்கு வந்து முதல் மநுவை சிருஷ்டி செய்து சிருஷ்டியை ஆரம்பித்ததாய்ச் சொல்கின்றனர். முதல் மநுவின் கோயில் லக்நோவுக்கு அருகிலுள்ள நைமிசாரண்யத்தில் இருக்கிறது. அடுத்து அங்கே தான் செல்லப் போக்றோம். இங்கே பிரம்மா வந்து கால் பதித்ததுக்கு அடையாளமாக மரத்தால் ஆன பாதுகைகள் இருக்கின்றன. அதை ஒரு தனிக் குண்டத்தில் கங்கைக்கரையிலேயே சந்நிதி போல் கட்டி வைத்திருக்கின்றனர். இங்கே வந்து கங்கைக்கரையில் குளித்துவிட்டு பிரம்மாவுக்கு வழிபாடு செய்வதை மிகவும் விசேஷமாகச் சொல்கின்றனர். [] கங்கை [] இன்னொரு தோற்றம் [] கீழே ரிஷபம் இருக்கிறது தெரியுதா? இடப்பக்கம் அம்பிகை [] மற்றும் சில வடிவங்கள் [] பிரம்மாவின் பாதச் சுவடுகள், ஒரு படிக்கட்டில் இது இருக்கிறது. இந்தப்படிக்கட்டு கங்கை ஓடிக் கொண்டிருக்கும் இடத்திலிருந்து முப்பது, நாற்பது படிகள் மேலே உள்ளது, வெள்ளக் காலத்தில் கங்கை இதை முழுக அடித்துவிடுவாள் என்கிறார்கள். [] இன்னொரு தோற்றம். இங்கேயும் பண்டிட்கள் வசூல் மன்னர்களாக இருக்கின்றனர். [] இது தான் துருவன் சந்நிதியாக இருக்கணும், அங்கே வழிகாட்டிகள் கிடைக்கலை. அதனால் சரியாகச் சொல்ல ஆட்கள் இல்லை. 20 லக்னோ னு பேர் வைச்சால் லக்கும் நோ தானா? :) கங்கைக்கரையில் பார்க்க வேண்டியவற்றைப் பார்த்துவிட்டு அங்கிருந்து லக்னோ போக வேண்டிக் கிளம்பினோம். கான்பூருக்குள் நுழைந்து தான் செல்ல வேண்டும். ஆகவே மறுபடியும் போன வழியிலேயே கொஞ்ச தூரம் சென்று பின்னரே லக்னோ செல்லும் வழியைப் பிடிக்க வேண்டி இருந்தது. கான்பூரில் ஒரு இடத்தில் அருமையான லஸ்ஸி வாங்கிச் சாப்பிட்டோம். 20 ரூபாய்க்கு மிக அருமையான லஸ்ஸி. வண்டியில் ஏ.சி. போடச் சொன்னால் டிரைவர் கை ஏசி ஸ்விட்சில் அரை நிமிஷம் நிற்கும். போட்ட பின்னர் அடுத்த அரை நிமிஷத்திலேயே அதை அணைத்துவிடுவார். ஜன்னல் கதவுகளோ சார்த்தியாச்சு ஏசினு நினைச்சு. அவரானால் கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்துக்கு இந்த விளையாட்டையே விளையாடினார். சொல்லிச் சொல்லி அலுத்துப் போய்ப் பின்னர் ஏசியே வேண்டாம்னு அறிவிப்புச் செய்துவிட்டு ஜன்னல் கதவுகளைத் திறந்து கொண்டோம். பின் மாலையில் குளிர் எட்டிப் பார்க்க ஆரம்பித்திருந்தாலும் அப்போது வெயில் தாக்கியது. ஆனால் இவரோ ஏசி போட மனமில்லாமல் இருக்கிறாரே! பேசினது என்னமோ ஏசி வண்டினு தான்! [:(] ஒரு வழியா மதியம் ஒரு மணிக்கெல்லாம் லக்னோ வந்துவிட்டோம். லக்னோ ஏர்போர்ட்டுக்கு அருகேயே தங்குமிடம் பார்க்க வேண்டி வண்டியை மெதுவாக விடச் சொன்னோம். டிரினிடி ஸ்டார் ஹோட்டல் அருகே திரும்பிய ஒரு தெருவில் மெயின் ரோடின் மற்றொரு பகுதியில் ஒரு ஹோட்டல் கண்ணுக்குத் தென்பட்டது. அங்கே இறங்கிப் போய் விசாரிக்கலாம்னு நம்மவர் கிளம்பினார். இந்த ஹோட்டலும் மாடியில் தான்! லிஃப்ட் கிடையாது. தெருவில் இருந்து மாடி ஏறி மேலே செல்ல வேண்டும். சென்றவர் வர நேரம் ஆகவே நானும் மாடி ஏறினேன். இரண்டு அறை காலி. வாடகை ஆயிரத்துக்கும் மேலே சொன்னார். சாப்பாடு கிடைக்கும்னு சொன்னார். அலுப்பிலும், சலிப்பிலும் இருந்த நாங்கள் சரினு ஒத்துக் கொண்டு ஒரு அறையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டோம். அதுக்குள்ளே டிரைவரும் மேலே வரவே ஹோட்டல் பையர்களைக் கூட அனுப்பி சாமான்களை எடுத்துவரச் செய்தோம். அறையில் சாமான்களை வைத்துவிட்டு டிரைவர் பணத்துக்கு நிற்க, ஹோட்டல் பையர்களிடம் நான் நாலு தவா ரொட்டியும், மிக்சட் காய்களும், இரண்டு லஸ்ஸியும் வேணும்னு சொன்னேன். அதுக்குள்ளே இங்கே தகராறு. டிரைவர் போட்ட கணக்கும், நாங்க போட்ட கணக்கும் ஒன்றுக்கொன்று இடிக்க, இருவருக்கும் வாக்குவாதம். டிரைவர் டவேரா வண்டி ரேட்டில் போட்டு இருக்க, இவரோ இன்டிகா அதுவும் நான் ஏசி ரேட்டுக்குப் போட இருவருக்கும் ஒத்துவராமல் ஹோட்டல் ரிசப்ஷனில் இருந்து ஆட்கள் எல்லாம் வந்துட்டாங்க. எவ்வளவோ எல்லாரும் எடுத்துச் சொல்லியும் கூட ஐநூறு ரூபாய் தருவதாக கணவர் சொல்லியும் டிரைவர் ஒத்துக்கொள்ளவில்லை. தான் சொன்னது தான் எனப் பிடிவாதமாக நிற்க, ஒருவழியாய் அவர் கேட்ட தொகையைக் கொடுத்து அவரை அனுப்பி வைச்சார் கணவர். சாப்பாடு என்ன ஆச்சுனு அவர் என்னைக் கேட்க, நான் “சொல்லி அனுப்பி இருக்கேன்,” என்று சொன்னேன். இரண்டரை மணி வாக்கில் ஒரு சின்ன ப்ளாஸ்டிக் தட்டில் நாலு ரொட்டி, ஒவ்வொன்றும் உள்ளங்கை அகலம் தான் ஒரு அலுமினியம் ஃபாயில் பேப்பரில் சுத்தி ஒரு பையர் கொண்டு வந்து கொடுத்தார். “இது என்ன?(யே க்யா ஹை?) உங்களுக்குச் சாப்பாடு!” (கானா ஆப் கே லியே) நாங்க தவா ரொட்டி கேட்டிருந்தோமே! ( ஹம்னே தவா ரொட்டி மாங்தே தே) அதான் இது! (வோ ஹி ஹை!) எத்தனை பேருக்கு? (கித்னே லோகோங்கோ?) நாலு ரொட்டி கொடுத்தாங்க!( சார் ரோட்டி தியா தா) சரி, இன்னொரு ப்ளேட் இல்லையா? ஏன்?( அச்சா, தூஸ்ரா ப்ளேட் நஹி தியா! க்யோ?) இன்னொரு ப்ளேட்டா? (தூஸ்ரா ப்ளேட்?!!!!!!!!!!!!!!!!!!!) இத்தனை ஆச்சரியப்பட்டார் அந்தப் பையர் இன்னொரு ப்ளேட் கேட்டதுக்கு! சரி, காய் ஏதும் இல்லையா? ஊறுகாய்? (சப்ஜி குச் நஹி தியா? அசார் பி நஹி!) என்ன காயா, ஊறுகாயா? (க்யா? சப்ஜி? அசார்?) இந்த உலகத்திலேயே முதல்முறையாக ரொட்டிக்குக் காய் அல்லது ஊறுகாய் கேட்ட முதல் மனிதர்கள் நாங்க தான் என்பது போல் அந்தப் பையர் விசித்திரமாய் எங்களைப் பார்த்தார். போய் இன்னொரு தட்டும் சப்ஜியும் கொண்டு வா!(ஜாகே ஏக் ப்ளேட் அவுர் சப்ஜி லாவோ!) அரை மனதாகக் கிளம்பிச் சென்றான். தலையில் அடித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தோம். இதுக்குள்ளாக மணி மூணும் ஆகிவிட்டது. லஸ்ஸியை இன்னொருத்தர் கொண்டு வந்து கொடுத்தார். ரிசப்ஷனில் இருந்து சாப்பாடு வந்துடுச்சானு கேட்டு தொலைபேச, நாங்க விஷயத்தைச் சொல்ல அவங்க சொல்லி இருப்பாங்க போல, முன்னர் ரொட்டி கொண்டு வந்து கொடுத்த அதே பையர் மீண்டும் வந்து, “ஆப் கா சப்ஜி பனா ரஹா ஹை! அபி மத் காவோ!” னு சொல்லி, சப்ஜி பண்ணிட்டு இருக்காங்க, சாப்பிடாதீங்கனு சொல்லிட்டுப் போனார். அந்த உள்ளங்கை அளவு ரொட்டி எங்களுக்கு ஒரு வாய்க்குக் கூடப் போதாது. ஆனால் வேறு வழியில்லாமல் இன்னொரு அரை மணிக்கும் மேல் காத்திருப்புக்குப் பின்னர் சப்ஜி ஒரு சின்னக் கிண்ணத்தில் வந்தது. சாப்பாடின் விலை என்ன என்று பார்த்தால் ஒரு ரொட்டி பனிரண்டு ரூபாய் என்றும் ஒரு சப்ஜி 110 ரூபாய் என்றும் போட்டிருந்தது. வயிற்றெரிச்சல்! அரை வாய்க்குக் கூட வராத சாப்பாடு கிட்டத்தட்ட 200 ரூபாய்! [:(] ஒரு வழியாய்ச் சாப்பிட்டு முடித்து ரிசப்ஷனுக்குப் போய் மறுநாள் நைமிசாரண்யம் போக வண்டிக்கு ஏற்பாடு பண்ணும்படியும், அன்று மாலை கொஞ்சம் கடைத்தெருவுக்குப் போக வேண்டி இருப்பதால் அதுக்கு ஆட்டோ வேண்டும் என்றும் கேட்டோம். ஆட்டோ ஹோட்டலிலேயே கிடைக்கும் என்றும் சொன்னதோடு ஒரு மணி நேரத்துக்கு நூறு ரூபாய் என்றும் சொன்னார்கள். அந்த ஒரு மணி நேரத்துக்குள் நாம் போய்ச் சேர வேண்டிய இடம் போக முடியுமானு தெரியலை! [:(]ஆனால் வேறு வழி இல்லை. சரினு ஒத்துக் கொண்டோம். அதுக்குள்ளே கார்க்காரரும் வர வண்டிக்குப் பேசினோம். சின்ன வண்டி கிடைக்காதுனு சொல்லிப் பெரிய வண்டி தான் கிடைக்கும்னு சொல்ல, எப்படியானும் சின்ன வண்டியையே ஏற்பாடு செய்து அனுப்பச் சொல்லிட்டு ஆட்டோ வர கடைக்குக் கிளம்பினோம். கடைத்தெருவில் அரைமணி நேரத்தில் வேலை முடிய ஆட்டோக்காரர் ஊரைச் சுத்திக்காட்டவா? மாயாவதி செய்த யானைச் சிலைகளைக் காட்டவானு கேட்க, எதுவும் வேண்டாம் ஆளை விட்டால் போதும்னு சொல்லிட்டு ஹோட்டலுக்கு வந்தோம். மத்தியானச் சாப்பாடு சரியில்லாததால் இரவுக்குச் சாப்பிட வேண்டி ஹோட்டலிலேயே தந்தூர் ரொட்டிக்கும் சப்ஜிக்கும் சொன்னோம். வெளியே இருந்து வந்ததும் ஏழு மணிக்குச் சொன்னது வர இரவு ஒன்பதரை ஆகிவிட்டது. அதுவும் தந்தூர் ரொட்டி ஒரு பக்கம் காந்திப் போய் இருக்க அந்தக் காந்தலைப் பிய்த்துப் போட்டுவிட்டுக் கொடுத்திருக்காங்க. ரொட்டியில் சத்தே இல்லை. சொல்லப் போனால் ஒண்ணுமே இல்லை. இரு பக்க மடிப்பான ரொட்டியில் காந்தல் பாகம் போக மெலிதாக ஒருபக்க ரொட்டியைக் கற்பனை செய்துக்கோங்க. அதான் அன்றைய இரவு உணவு. சாதாரணமாகத் தந்தூர் ரொட்டி மிகப் பெரிதாக இருக்கும். ஒரு ரொட்டியை இரண்டு பாதியாகவே கொடுப்பாங்க. ஒரு பாதியே ஒரு சப்பாத்தி அளவுப் பெரிதாக இருக்கும். ஒருத்தருக்கு இரண்டு தந்தூர் ரொட்டியே அதிகம். ஆனால் இங்கேயோ நேர்மாறாக இருந்தது. நல்லவேளையா ஏசி போட்டாங்க. ஏசி கன்ட்ரோல் ஸ்விட்சை அணைக்கலை. இரவு நல்லாத் தூங்கினோம். காலை எழுந்து தேநீருக்குச் சொல்ல வேண்டி ரிசப்ஷனுக்குக் கூப்பிட்டதில் பாட் டீ இருக்குனு சொல்லவே இவர் பாட் டீனா நாலு கப் இருக்கும் அது போதும் இரு வேளைக்குனு அதை ஆர்டர் பண்ணினார். காலை ஆறரை மணிக்குக் கொடுத்த ஆர்டர் ஏழரைக்கு வந்தது. அப்போவும் ஒரே ஒரு டீ கப் மட்டும் தான் எடுத்து வந்தார் அதே பையர். இன்னொரு கப் வேண்டாமானு கேட்டால் மீண்டும் அதே விசித்திரமான பார்வை. பொதுவா பாட் காஃபி, பாட் டீ வாங்கினால் ஒரு பாட் டிகாக்‌ஷன், ஒரு பாட் பால், சர்க்கரைக் கிண்ணம், ஸ்பூன்கள் இரண்டு, நாலு கப் கொடுப்பாங்க. நாங்க அப்படித் தான் பார்த்திருக்கோம். இந்த மாதிரி ஒரு பாட் டீக்கு ஒரே ஒரு கப்பைக் கொண்டு வந்து பார்த்ததே இல்லை. அதுவும் பஞ்சாபி ஹோட்டலில்! மறுபடி தலையில் அடித்துக் கொண்டு இன்னொரு கப் கொண்டு வரச் சொல்லிட்டு டீயைக் குடித்தால் சரியா இரண்டே இரண்டு கப் தான் இருக்கு! இதிலும் ஏமாற்றல்! [:(] எல்லாம் முடிச்சுக் குளிச்சு முடிச்சு நைமிசாரண்யம் கிளம்பினோம். இங்கே காலை ஆகாரம் வைத்துக் கொண்டால் இன்னிக்குக் கிளம்ப முடியாது. அவ்வளவு நேரம் பண்ணுவாங்கனு வெளியே சாப்பிட்டுக்க முடிவு செய்து கிளம்பினோம். ரிசப்ஷனில் ஆள் மாறி இருந்தார். அவர் எங்களை விசாரித்துவிட்டு அன்றைய வாடகையைக் கேட்க அதைக் கொடுத்துட்டு, கீழே வண்டி வந்திருக்கிறதாச் சொல்லவும் கீழே இறங்கினோம். பெரிய வண்டி தான் வந்திருந்தது. [:(]ஆனால் கூடவே ஏற்பாடு செய்தவரும் வந்து சின்ன வண்டி கிடைக்கலைனும், சின்ன வண்டித் தொகையே கொடுக்குமாறும் சொல்லிவிட்டு டிரைவரை அறிமுகம் செய்துவிட்டுக் கிளம்ப சரினு நாங்களும் வண்டியில் ஏறி நைமிசாரண்யத்துக்குக் கிளம்பினோம்.   21 நைமிசாரண்யத்தில் ஒரு நாள் பகுதி 1 “வாணிலாமுறுவல் சிறு நுதல் பெருந்தோள் மாதரார் வன முலைப்பயனே பேணினேன், அதனைப் பிழையெனக் கருதிப் பேதையேன் பிறவி நோயறுப்பான், ஏணிலேனிருந்தேனெண்ணினேனெண்ணி இளையவர்க் கலவியிந்திறத்தை நாணினேன், வந்துன் திருவடியடைந்தேன் நைமிசாரணியத்துளெந்தாய் சிலம்படியுருவிற்கரு நெடுங்கண்ணார் திறத்தனாயறத்தயேமறந்து புலம்படிந்துண்ணும் போகமே பெருக்கிப் போக்கினேன் பொழுதினைவாளா, அலம்புரி தடக்கையாயனேமாயா, வானவர்க்கரசனே., வானோர் நலம்புரிந்திறைஞ்சுன் திருவடியடைந்தேன் நைமிசாரணியத்துளெந்தாய்.” திருமங்கை ஆழ்வார் பெரிய திருமொழி. திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட 108 திவ்ய தேசங்களில் ஒன்று நைமிசாரண்யம். நாங்கள் லக்னோ சென்ற மறுநாள் காலை கிளம்பினோம். லக்னோவில் இருந்து கிட்டத்தட்ட நூறு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது நைமிசாரண்யம். இது கிட்டத்தட்ட காடு எனலாம். காட்டையே இங்கு கடவுளாக வழிபடுகின்றனர். இங்கே பெருமாளின் சக்கரம் உருண்டு வந்து காட்டில் தவம் செய்யச் சிறந்த இடத்தைக் காட்டியதாகத் தல வரலாறு கூறுகிறது. [] சக்ரதீர்த்தம் செல்லும் வழி [] எவ்வித இடைஞ்சலும் இன்றித் தவம் செய்யச் சிறந்த இடத்தை முனிவர்கள் திருமாலிடம் இறைஞ்ச அவர் தன் சக்ராயுதத்தை உருட்டி விட அது வந்து இங்கே நின்றது என்கிறது தலவரலாறு. பெருமாளால் காட்டப்பட்ட இந்த இடத்தையே பெருமாளாகக் கருதி வழிபடுகின்றனர். இந்தச் சக்கரம் நின்ற இடத்தில் தற்போது ஒரு தீர்த்தம் உள்ளது. இதைச் சக்ரதீர்த்தம் என்று அழைக்கின்றனர். [] இங்கே பார்க்க வேண்டிய இடத்தில் சக்ர தீர்த்தம், ஹநுமான் காடி, ஜானகி குண்டம், லலிதா தேவி மந்திர், ததீசி குண்டம், ஸ்வயாம்புவ மநு வந்த இடம், சூத முனிவர் பாரதம் சொன்ன இடம், சுகர் பாகவதம் சொன்ன இடம் எனப் பல இடங்கள் இருக்கின்றன. இவற்றில் நாங்கள் பார்த்தவற்றை இங்கே பகிர்ந்து கொள்கிறேன். மேலே காண்பது சக்ரதீர்த்தம். இங்கே இறைவன் ஶ்ரீஹரி என்னும் திருநாமத்தோடும், இறைவி ஶ்ரீஹரிலக்ஷ்மி என்னும் திரு நாமத்தோடும் காடு வடிவில் காட்சி தருகின்றனர். விமானம் ஶ்ரீஹரிவிமானம் என்கின்றனர். ஆழ்வார்கள் காலத்தில் வழிபட்ட சிலைகள் இப்போது காணப்படவில்லை. [:(] வால்மீகி எழுதிய ராமாயணக் காவியத்தை லவ, குசர்கள் இங்கே தான் அரங்கேற்றம் செய்ததாகவும் செவிவழிச் செய்திகள் கூறுகின்றன. இந்த ஊர் கோமதி நதிக்கரையில் உள்ளது. கோமதி நதியை ஆதி கங்கை என்று அழைக்கின்றனர். கோமுகி என்றும் சொல்கின்றனர். 22 நைமிசாரண்யத்தில் ஒரு நாள் பகுதி 2 மஹாவிஷ்ணுவின் சொரூபம் காடு ரூபமாகவும் வழிபடப் படுகிறது. நைமிசாரண்யமும் அப்படியே மஹாவிஷ்ணு ரூபமாகவே வழிபடப் படுகிறது. இந்தக் காட்டில் கிட்டத்தட்ட 60,000 ரிஷி முனிவர்கள் வாழ்ந்து தவம் செய்து வந்ததாகச் சொல்லப்படுகிறது. லக்னோவில் இருந்து கிட்டத்தட்ட ஐம்பது மைல் தூரத்தில் உள்ள இந்த ஊர் நைமிசார், நேமிசால் என்றெல்லாம் வழக்குமொழியில் அழைக்கப்படுகிறது. நிம்ஹார் எனவும் அழைக்கின்றனர். கோமதி நதிக்கரையில் இடது பக்கக் கரையில் அமைந்துள்ள இந்த ஊருக்குத் திருமங்கை ஆழ்வாரைத் தவிர, ஆதி சங்கரரும் வந்ததாய்ச் சொல்கின்றனர். சூர்தாசர் இங்கே வசித்து வந்ததாயும் சொல்கின்றனர். நைமிசாரண்யம் என்பது இருவகைகளில் உச்சரிக்கப்படுவதால் அதற்கேற்ப அதன் பொருளும் மாறுபடுகிறது. நைமிஸ் அல்லது நைமிஷ் என அழைக்கப்படுகையில் பரம சிவனை வழிபட்ட பின்னர் பிரம்மாவின் மனோமயச் சக்கரம் உருண்டு உருண்டு வந்து இங்கே நின்றதாகவும், ரிஷி, முனிவர்கள் அதைத் தொடர்ந்து வந்து இந்த இடமே தவம் செய்யச் சிறந்த இடம் எனத் தேர்ந்தெடுத்ததாகவும் கூறுகின்றனர். சூரியனை விட ஒளி பெற்றுப் பிரகாசித்த அந்தச் சக்கரம் இங்கே வந்து நின்று பல தீர்த்தங்களையும் உண்டாக்கியதாயும் சொல்கின்றனர். இன்னொரு கூற்றின்படி தனவஸ் என்பவனின் படைகள் மொத்தமும் ஒரு நிமிஷத்தில் இங்கே அழிக்கப்பட்டதால் நிமிஷாரண்யம் என்பது நைமிசாரண்யம் என ஆயிற்று என்றும் கூறுகின்றனர். மஹாவிஷ்ணுவின் சக்கரம் வந்து நின்ற இடம் என்பதையும் முன்னர் பார்த்தோம். இங்கே முக்கியமான தீர்த்தம் சக்ரதீர்த்தம் தான் என்பதையும் பார்த்தோம். அதோடு ஶ்ரீலலிதை என்னும் மஹாதிரிபுரசுந்தரிக்கு இங்கே ஒரு சக்தி பீடமும் உள்ளது. லலிதா சஹஸ்ரநாமாவளிகள் வசினி தேவதைகளால் தோன்றிய இடம் எனச் சக்ரதீர்த்தக்கரையைக் குறிப்பிடுகின்றனர். இப்படி அநேகச் சிறப்பு வாய்ந்த இந்த இடத்திலேயே வ்யாசகதி என்னும் வியாசரின் இருப்பிடம், சுகர் மற்றும் சூத முனிவர்கள் முறையே பாகவதமும், பாரதமும் ப்ரவசனம் செய்த இடம் என இருக்கின்றன. அதோடு அஹி ராவணன், மஹி ராவணன் என்னும் இரு அசுரர்களை ஶ்ரீராமரும், லக்ஷ்மணரும் வதம் செய்யப் போகையில் அவர்கள் ஶ்ரீராம, லக்ஷ்மணர்களைப் பாதாளத்துக்குக் கொண்டு சென்றதாகவும் ஆஞ்சநேயர் அசுரர்களைக் கொன்று ஶ்ரீராம, லக்ஷ்மணர்களைத் தோளில் தூக்கி வந்தார் எனவும் சொல்கின்றனர். ராமாயணம், மஹாபாரதம் ஆகிய இரு காலகட்டத்திலும் நைமிசாரண்யம் இடம் பெற்றிருப்பதாகவும் தெரிய வருகிறது.ஸ்வாயாம்புவ மனு பிரம்மாவின் உதவியுடன் மனித குலத்தை ஆரம்பித்து வைத்த இடமாகவும் கூறப்படுகிறது. இப்படிப் பல சிறப்புகள் நிறைந்த இந்த இடம் உண்மையிலேயே பார்க்க வேண்டிய ஒன்றாகும். நைமிசாரண்யத்தில் ஒரு நாள்– படப்பதிவு! [] சக்கரதீர்த்தத்தைச் சுற்றி இருந்த சில சந்நிதிகளின் படங்களை இப்போது காணலாம். மேலே காணப்படும் இவர் அநேகமாய் வால்மீகியாவோ, வியாசராவோ இருக்கணும். அங்கே பெயர்ப்பலகை காணப்படவில்லை. விசாரிக்கவும் யாரும் கிடைக்கலை. [:)] [] இது சொல்லவே வேண்டாம், ஶ்ரீராமர் தன் தம்பி லக்ஷ்மணன், சீதையுடன். [] நம்ம ஆஞ்சி தான். கதையைத் தூக்கிக் கொண்டு காட்சி அளிக்கிறார். வலக்கரத்தில் மலைனு நினைக்கிறேன். [] பார்வதி, பரமேஷ்வரரும் , கணேஷ் ஜியும். [:)] [] பைரவர், சூரிய நாராயணன், பத்ரகரணி துர்கா தேவி [] சக்கரதீர்த்தத்தைச் சுற்றிய மேலும் சில சந்நிதிகள். மஹா காளர் சந்நிதி [] கெளரி அம்மன் சந்நிதி [] சிவலிங்கம் அருகே அபிஷேஹத்துக்கான நீர். நாமே ஊற்றி அபிஷேஹம் செய்யலாம்.. படங்களும் விபரங்களும் தொடரும். :)))) சக்ரதீர்த்தத்தில் இருந்து வியாசர் இருந்ததாய்ச் சொல்லப்படும் வியாச கடி சென்றோம். [] இங்கே தான் வியாசர் வேதங்களை ஆறு சாஸ்திரங்களாகவும், பதினெட்டுப் புராணங்களையும், ஶ்ரீமத் பகவத் கீதையைத் தொகுத்ததாகவும், சொல்கின்றனர். இங்கே தாம் மஹாபாரதம், ஶ்ரீமத் பாகவதம், சத்யநாராயணர் கதை ஆகியவையும் தொகுப்பட்டதாய்க் கூறுகின்றனர். ஆனால் பத்ரிநாத்திலிருந்து இன்னும் சற்று மேலே சுமார் 3 கிலோ மீட்டருக்குள் உள்ள மானா என்னும் உயரமான சிறிய எல்லைக் கிராமத்திலும் இதே கதையைச் சொல்கின்றனர். இதில் விசேஷம் என்னவெனில் மானாவில் தான் சரஸ்வதி நதியைப் பார்க்க முடியும். வியாசர் குகையும், பிள்ளையாருக்கெனத் தனியான குகையும் அங்கே உண்டு. கிட்டத்தட்ட 3,500 மீட்டர் உயரத்தில் உலகின் உயரமான டீக்கடையும் அங்கே இருக்கு. பீமன் பாலம் என்னும் பாலம் வழியாகவே பஞ்ச பாண்டவர்கள் மேலுலகம் சென்றார்கள் என்கின்றனர். அந்தப் பாலமும் இன்னமும் இருக்கிறது. அதற்கருகே தான் சரஸ்வதி நதியைக் காண முடியும். அந்த வெள்ளத்தில் தான் இப்போது நம் காலத்தில் ஸ்வாமி ஶ்ரீஹரிதாஸ் மஹராஜ் ஜலசமாதி அடைந்ததாய்ச் சொல்லப்படுகிறது. ஒரு சிலர் கங்கையில் என்கிறார்கள். [] வியாசருக்கு உதவின பிள்ளையார். தன்னுடைய புத்திரன் ஆன சுகருக்கு ஶ்ரீமத் பாகவதம் குறித்த விளக்கங்களை அளித்ததாகவும் [] சொல்லப்படுகிறது. சுகருக்கும் தனியாக ஒரு ஆசிரமம் உள்ளது. மேலே காண்பது சூத முனிவர் நைமிசாரண்யத்து முனிவர்களுக்கு ஶ்ரீமத் பாகவதத்தைக் கூறிய இடம் எனப்படுகிறது. [] ஶ்ரீமத் பாகவதம் கதை முதலில் சொல்லப்பட்ட இடம் எனப்படுகிறது. [] உலக க்ஷேமத்துக்காக வேண்டி ஓம் நமோ பகவதே வாசுதேவாய என்னும் மந்திரத்தை இங்கே அமர்ந்து சொல்லச் சொல்லி வரும் பக்தர்களை வேண்டிக் கொண்டு வைத்திருக்கும் அறிவிப்பு. [] ஸ்வாயாம்புவ மனு முதன் முதல் தோன்றிய இடம்னு ஒரு இடத்தில் சிலைகள் வைத்திருக்கின்றனர்.   23 நைமிசாரண்யம் -- அநுமன் கடியில் நைமிசாரண்யத்தில் ஒவ்வொரு இடமாகப் பார்த்துவிட்டுக் கடைசியில் லலிதா தேவி கோயிலைப் பார்க்க இருந்தோம். அதற்கு முன்னால் நாங்கள் சென்ற இடம் அனுமன் கடி என்னும் இடம். சித்ரகூடத்தில் அனுமான் தாராவை மலை ஏறிப் பார்க்க முடியவில்லையே என்ற வருத்தம் எங்களுக்கு நிறையவே இருந்தது. [] அந்த வருத்தம் இங்கே அறுபது, எழுபது படிகள் மேலே ஏறி அனுமான் கடியில் அனுமனைத் தரிசிக்கையில் கொஞ்சம் தீர்ந்தது என்பதே உண்மை. [] [] பாதாளத்தில் இருந்து அநுமன் மேலே வருவதால் மிகப் பெரிய உருவம். அதை முழுவதும் எடுக்க முடியலை. ஓரளவுக்குக் கீழ்ப் பாதியும், மேல் பாதியுமாக எடுத்தேன். என்றாலும் முழுவதும் வரவில்லை. [:(] [] அதே அநுமனைக் கொஞ்சம் தள்ளி நின்று எடுக்க முயன்றேன். கீழ்ப்பாகம் வரலை. [:(]ஏணி மேல் ஏறித்தான் அபிஷேஹம், அலங்காரம் எல்லாமும். [:)] [] இங்கே ஶ்ரீராமனையும், லக்ஷ்மணனையும் அஹிராவணன், மஹி ராவணன் இருவரிடமிருந்தும் காத்து அனுமன் அழைத்து வந்த இடமாகச் சொல்லப்படுகிறது. இருவரையும் தன் தோள்களில் சுமந்து கொண்டு அசுரன் அஹிராவணன் பாதாளத்திற்குச் சென்றுவிட்டானாம். இருவரையும் அனுமன் பாதாளம் சென்று அஹிராவணனைக் கொன்று மீட்டு வந்த போது அனுமனின் மகன் மகரத்வஜன் அனுமனின் பாதையை மாற்றிச் செல்லும்படி சொல்ல, அப்போது அனுமன் அவர்களோடு வந்து சேர்ந்த இடம் நைமிசாரண்யம் எனப்படுகிறது. [] இங்கே அனுமனின் பிள்ளையாகக் கருதப்படும் மகரத்வஜனுக்கு ஒரு சந்நிதி இருக்கிறது. அதைத் தவிரவும் பல சந்நிதிகள் இருக்கின்றன. [] நம்ம நண்பர்! இவர் இல்லாத இடமே இல்லை. :))) நாங்கள் சென்ற சமயம் அங்கே பல சாதுக்களுக்கு ஆந்திராவில் இருந்து வந்திருந்த ஒரு தெலுங்குக் குடும்பம் அன்னதானம் அளித்துக் கொண்டிருந்தது. அன்னதானம் என்றால் சும்மா சாதாரணச் சாப்பாடு எல்லாம் இல்லை. பூரி சப்ஜி, பாயசம், கோதுமை லட்டு, சாதம், தால் போன்ற முழுச் சாப்பாடு. எல்லாரும் பந்தியில் அமர்ந்து கொண்டிருக்க அவர்களே பரிமாறினார்கள். படம் எடுக்கவில்லை. ஏனெனில் பெண்கள் அதிகமாய் இருந்ததால் அவங்க படங்கள் எடுப்பதை விரும்ப மாட்டார்கள் என்று எடுக்கவில்லை. 24 நைமிசாரண்யத்தில் ஓர் நாள் பகுதி 3 பிரமசாரியான ஆஞ்சநேயனுக்கு மகனா எனத் திகைப்பு வரலாம். ராம–ராவண யுத்தத்தின் போது ராவணனின் நண்பன் ஆன மயில் ராவணன், விபீஷணனைப் போல் உருமாறி ராம லக்ஷ்மணர்களைப் பாதாளத்திற்குக் கடத்திச் செல்கிறான். அவர்களை மீட்டு வரப் பாதாளம் சென்ற அநுமனை அங்கிருந்த ஓர் இளைஞன் தடுத்து நிறுத்திச் சற்றும் அயர்வில்லாமல் அநுமனோடு போரிடவே அனுமனுக்கு ஆச்சரியம் மிகுந்தது. அந்த இளைஞனை யார் என விசாரிக்க அவன் சொன்ன பதிலில் அதிர்ச்சி அடைந்தார் அனுமன். தான் அனுமனுக்கும் சுவர்ச்சலா தேவிக்கும் பிறந்த பிள்ளை என்றும், அனுமனின் பிள்ளை என்பதால் தன்னிடம் வீரம் மிகுந்திருப்பதாகவும் கூறவே தன் பிரமசரியத்துக்கு விரோதமாய்ப் பேசும் அந்த இளைஞனிடம் கோபமும் வந்தது அனுமனுக்கு. தான் தான் அந்த அனுமன் என்பதைத் தெரிவித்துவிட்டு பூரண பிரமசாரியான தனக்கு அவன் எப்படிப் பிள்ளையாக முடியும் என்று கேட்கிறார். தன் தாய் சுவர்ச்சலா தேவியை அந்த இளைஞன் அழைக்க அங்கே வந்த சுவர்ச்சலா தேவி அனுமனைக் கண்டதுமே பணிந்து வணங்கினாள். அனுமனிடம், தான் மகர வடிவில் கடலில் நீந்திக் கொண்டிருந்ததாகவும், இலங்கையில் அநுமன் வாலில் தீ மூட்டியபோது அதை அணைக்க அனுமன் கடல் நீரில் வாலை நனைத்தபோது அவர் உடலின் வியர்வை கடலில் விழுந்ததாகவும், அந்த நீரைத் தான் விழுங்கியதால் தன் வயிற்றில் தோன்றியவனே இந்தக் குமாரன் என்றும் கூறினாள். மேலும் மயில் ராவணன் தன் மாயா சக்தியால் மகரத்வஜனை மயக்கித் தன் பிடியில் வைத்திருப்பதையும் தெரிவித்தாள். அனுமனும் மயில் ராவணனின் அரண்மனைக்குள் புகுந்து அவனை அடியோடு அழித்துத் தன் மகனையும் மயக்கத்திலிருந்து மீட்டு அங்கே அரசனாக்குகிறார். சிவ சக்தி ஐக்கியமின்றிப் பிறந்த விநாயகரையும், முருகனையும் போலவே சிவ சொரூபமான அனுமனுக்கும், அம்பிகை சொரூபமான சுவர்ச்சலா தேவிக்கும் பிறந்தவன் தான் மகரத்வஜன். [] அங்கிருந்து லலிதா தேவி கோயிலுக்குச் சென்றோம். இது ஒரு சக்தி பீடம் என்கின்றனர். நைமிசாரண்யத்தில் வந்து விழுந்த மனோமய சக்கரத்தை லலிதா தேவி தான் நிறுத்தினதாகவும் சொல்கின்றனர். மஹிஷாசுரனை வதைத்த பின்னர் தேவாதி தேவர்களுக்கு தரிசனம் கொடுத்த இடமாகவும் சொல்கின்றனர். [] தேவியின் சக்தி பீடம், கீழே சந்நிதிக்கு இருபக்கமும் அமர்ந்திருந்த பண்டிட்கள். அதிசயமாக இவர்கள் பணம் வசூலிக்கவே இல்லை. நல்லா தரிசனம் பண்ண உதவி செய்தாங்க. [] தேவி லிங்கதாரிணி என அழைக்கப்படுகிறாள். அதோடு இல்லாமல் ததீசி முனிவர் இந்திரனுக்கு வஜ்ராயுதம் செய்வதற்குத் தன் முதுகெலும்பைக் கொடுத்ததும் நைமிசாரண்யத்திலே என்பதும் தெரிய வருகிறது. திருமங்கை ஆழ்வார் இந்த திவ்ய தேசத்தைப் பாடி இருப்பது குறித்து ஏற்கெனவே பார்த்தோம். அதைத் தவிரவும் இங்கே அஹோபில மடமும் ராமாநுஜ கூடமும் இங்கே மடங்கள் அமைத்திருக்கின்றன. ராவணனைக் கொன்ற பாவம் தீர ஶ்ரீராமன் இங்கே வந்து தீர்த்தத்தில் நீராடியதாகவும் சொல்கின்றனர். ஒவ்வொரு அமாவாசையும் இங்கே சிறப்பாகக் கருதப்படுகிறது. லலிதா தேவி கோயிலே முக்கியமானதாகவும் கருதப்படுகிறது. அதோடு இல்லாமல் ஸ்வாயாம்புவ மனு தவம் செய்கையில் ஶ்ரீமந்நாராயணனே தனக்கு மும்முறை மகனாகப் பிறக்கவேண்டும் என வரம் கேட்டதாகவும். அவ்வாறே ஸ்வாயாம்புவ மநு தசரதனாகவும், வசுதேவராகவும் பிறந்து முறையே ஶ்ரீராமரும், ஶ்ரீகிருஷ்ணரும் அவருக்குப் பிள்ளையாகப் பிறந்ததும் நைமிசாரண்யத்தில் செய்த தவத்தையே முன் வைத்துச் சொல்கின்றனர். மேலும் துளசிதாசரை வால்மீகியின் மறு அவதாரம் எனச் சொல்லும் வட இந்திய மக்கள் ஶ்ரீராமனின் அவதாரமாக ஒர்ச்சா என்னும் இடத்தை ஆண்ட மன்னன் ஒருவனைக் கூறுகின்றனர். இவரே கலியுகத்தில் ஶ்ரீராமனுடைய மூன்றாம் அவதாரம் எனப்படுகிறது. ஆனால் இத்தனை வளங்கள் இருந்தும் சிறு பிள்ளைகள், பள்ளியில் படிக்கும் வயதில் உள்ளவர்கள் அங்கே வரும் சுற்றுலாப் பயணிகளைத் தொந்திரவு செய்து பிச்சை கேட்பது மனதுக்குக் கஷ்டமாக இருக்கிறது. இன்னும் சொல்லப் போனால் நல்ல நிலையில் இருப்பவர்கள் கூடப் பிச்சை கேட்கின்றனர். அதோடு எல்லா இடங்களிலும் யாகங்களும், யக்ஞங்களும் நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றன. அதற்கான பண வசூல் வேறே குறைந்த பக்ஷம் ஐந்தாயிரம் ரூபாயில் ஆரம்பிக்கிறது. பேரம் பேசினால் ஐநூறுக்கு வரலாம். ஆனால் அவர்கள் பேசும் முறை சரியில்லை. இதைச் செய்யவில்லை என்றால் உன் குடும்பம் அப்படிக் கஷ்டப்படும்; இப்படிக் கஷ்டப்படும் என்று சாமானிய மக்களைப் பயமுறுத்துவதோடு நாம் வேண்டாம் என விலகிப்போனால், “நீ என்ன தீர்த்த யாத்திரை செய்யறே? தீர்த்த யாத்திரையின் பலனே உனக்குக் கிடைக்கப் போவதில்லை! பணத்தை வைச்சு என்ன செய்யப் போறே? போகும்போது கொண்டு போகப் போகிறாயா?” என்றெல்லாம் பேசுகின்றனர். அதே பணத்துக்குத் தானே அவர்களும் நம்மைக் கேட்கின்றனர் என்பதை வசதியாக மறந்துவிடுகின்றனர். அதோடு நினைத்த மாத்திரத்தில் ஆயிரக்கணக்காக ஒவ்வொரு இடத்திலும் தானம் செய்யுமளவுக்குப் பணம் வேண்டுமெனில் குறைந்தது நாம் இரண்டு லக்ஷமாவது கொண்டு போகவேண்டும். எங்கே! :)))) எல்லா இடங்களையும் பார்த்துக் கொண்டு நைமிசாரண்யத்தில் இருந்து லக்னோ திரும்ப மாலை ஐந்து மணி ஆகிவிட்டது. நாங்க தங்கி இருந்த லாட்ஜின் சாப்பாட்டுக் கொடுமையை நினைத்துக் கொண்டு நாங்க வரும்போதே வெளியில் இருந்து டோக்ளா, கசோடி என வாங்கி வந்துவிட்டோம். பின்னர் அந்த லாட்ஜுக்கு அருகே இருந்த ஒரு சின்ன ஹோட்டலுக்குச் சென்று மறுநாள் காலை ஆகாரம் கிடைக்குமா என விசாரித்தோம். ஆலு பரோட்டா கிடைக்கும் எனச் சொல்லவே மறுநாள் காலை பத்து மணிக்கு வருவதாய்ச் சொல்லிவிட்டு வந்தோம். மறுநாள் விமான நிலையம் செல்ல வேண்டி வண்டிக்கு ஹோட்டல்காரர்களிடமே சொல்லிவிட்டுக் காலை பத்து மணி சுமாருக்கு பக்கத்து ஹோட்டலுக்குச் சென்று ஆலு பரோட்டாவும், லஸ்ஸியும் சாப்பிட்டோம். பின்னர் ஹோட்டலில் இருந்து அவங்க ஏற்பாடு செய்திருந்த ஆட்டோவில் பயணித்து லக்னோ விமான நிலையம் வந்து சேர்ந்தோம். பாதுகாப்பு அதிகாரிகள் சோதனையின் போது நான் சோதனை முடிந்து வெளியே வந்துவிட்டேன். ஆனால் என் கைப்பை சோதனையிலிருந்து வெளியே வரவில்லை. என்னடா இது சோதனைனு நினைச்சால் அங்கே இருந்த ஒரு மலையாளக் காவல் அதிகாரிப் பெண்மணி என்னிடம் அரைகுறைத் தமிழில் கைப்பையில் நிறையச் சில்லறை இருப்பதால் எல்லாத்தையும் எடுக்கும்படி சொன்னார். சரிதான் இங்கேயும் சில்லறைப் பிரச்னையானு நினைச்சு எல்லாத்தையும் கையில் வைத்திருந்த துண்டில் கொட்டிக் கொண்டேன். பின்னர் அவங்க முன்னாடியே சாவி, விமான டிக்கெட், ரயில் டிக்கெட் போன்றவற்றைக் காட்ட அவங்க மறுபடியும் கைப்பையை ஸ்கான் செய்து என்னிடம் கொடுத்தார்கள். இதுக்குள்ளாக அந்த மலையாள அதிகாரியும் நானும் சிநேகிதமாகிவிட அவங்க என்னை எங்கே போயிட்டு வரீங்க னு விசாரிக்க நானும் சொன்னேன். அயோத்தியா, இங்கே ட்யூட்டி இருக்கிறச்சேயே நானும் போயிட்டு வந்துடறேன்னு சொல்லி அவங்க எல்லா விபரமும் கேட்டுக் கொண்டு எனக்குப் பிரியாவடை சே விடை கொடுத்து அனுப்பி வைச்சாங்க. மேலே விமானம் ஏறும் நடை மேடைக்கு வந்ததும் இருவரும் பணத்தைப் பத்திக் கவலைப்படாமல் ஆளுக்கு 90 ரூ கொடுத்து இரண்டு காஃபி வாங்கிக் குடித்து எங்கள் சந்தோஷத்தை வெளிப்படுத்திக் கொண்டோம். லக்னோவில் இருந்து டெல்லிக்கு விரைவில் வந்த விமானத்திலிருந்து இறங்கி முன்னே சென்றது போல் டெல்லி விமான நிலையத்தில் மற்றொரு பகுதிக்குச் சென்று சென்னை செல்லும் விமானத்திற்குச் சென்றோம். இங்கே பாதுகாப்புச் சோதனையில் அவ்வளவு கெடுபிடி இல்லை. விரைவில் முடித்துக் கொண்டு பின்னர் எந்த வாயில் வழி எனக் கேட்டுக் கொண்டு அங்கிருந்து பேருந்தில் பயணம் செய்து விமானத்திற்குச் சென்றோம். விமானம் மாலை ஏழரைக்குச் சென்னையில் தரை இறங்கியது. அங்கிருந்து ஒரு கால் டாக்சி வைத்துக் கொண்டு சென்னை எழும்பூர் வந்து சேர்ந்தோம். எதிரே உள்ள சங்கீதா ஓட்டல் வாசலில் டிரைவர் இறக்கிவிட்டு விட்டுப் பெட்டிகளையும் உள்ளே வைத்துவிட்டுச் சென்றார். எங்கள் வண்டி இரவு பத்தேமுக்காலுக்குத் தான் என்பதால் நிம்மதியாக உட்கார்ந்து சங்கீதாவில் இரண்டு தோசையும், சூடான காஃபியும் சாப்பிட்டுவிட்டு நடைமேடையில் காத்திருந்த வண்டியில் ஏறி உட்கார்ந்து ஶ்ரீரங்கம் காலை வரப்போவதை எதிர்பார்த்துப் படுத்தோம். கடைசியிலே அந்த சங்கீதாவிலே தோசை சாப்பிட்டது தான் எல்லாத்திலேயும் க்ளாசிக்! 1 Free Tamil Ebooks - எங்களைப் பற்றி மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்: மின்புத்தகங்களைப் படிப்பதற்கென்றே கையிலேயே வைத்துக் கொள்ளக்கூடிய பல கருவிகள் தற்போது சந்தையில் வந்துவிட்டன. Kindle, Nook, Android Tablets போன்றவை இவற்றில் பெரும்பங்கு வகிக்கின்றன. இத்தகைய கருவிகளின் மதிப்பு தற்போது 4000 முதல் 6000 ரூபாய் வரை குறைந்துள்ளன. எனவே பெரும்பான்மையான மக்கள் தற்போது இதனை வாங்கி வருகின்றனர். ஆங்கிலத்திலுள்ள மின்புத்தகங்கள்: ஆங்கிலத்தில் லட்சக்கணக்கான மின்புத்தகங்கள் தற்போது கிடைக்கப் பெறுகின்றன. அவை PDF, EPUB, MOBI, AZW3. போன்ற வடிவங்களில் இருப்பதால், அவற்றை மேற்கூறிய கருவிகளைக் கொண்டு நாம் படித்துவிடலாம். தமிழிலுள்ள மின்புத்தகங்கள்: தமிழில் சமீபத்திய புத்தகங்களெல்லாம் நமக்கு மின்புத்தகங்களாக கிடைக்கப்பெறுவதில்லை. ProjectMadurai.com எனும் குழு தமிழில் மின்புத்தகங்களை வெளியிடுவதற்கான ஒர் உன்னத சேவையில் ஈடுபட்டுள்ளது. இந்தக் குழு இதுவரை வழங்கியுள்ள தமிழ் மின்புத்தகங்கள் அனைத்தும் PublicDomain-ல் உள்ளன. ஆனால் இவை மிகவும் பழைய புத்தகங்கள். சமீபத்திய புத்தகங்கள் ஏதும் இங்கு கிடைக்கப்பெறுவதில்லை. எனவே ஒரு தமிழ் வாசகர் மேற்கூறிய “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகளை” வாங்கும்போது, அவரால் எந்த ஒரு தமிழ் புத்தகத்தையும் இலவசமாகப் பெற முடியாது. சமீபத்திய புத்தகங்களை தமிழில் பெறுவது எப்படி? சமீபகாலமாக பல்வேறு எழுத்தாளர்களும், பதிவர்களும், சமீபத்திய நிகழ்வுகளைப் பற்றிய விவரங்களைத் தமிழில் எழுதத் தொடங்கியுள்ளனர். அவை இலக்கியம், விளையாட்டு, கலாச்சாரம், உணவு, சினிமா, அரசியல், புகைப்படக்கலை, வணிகம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு தலைப்புகளின் கீழ் அமைகின்றன. நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகச் சேர்த்து தமிழ் மின்புத்தகங்களை உருவாக்க உள்ளோம். அவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள் Creative Commons எனும் உரிமத்தின் கீழ் வெளியிடப்படும். இவ்வாறு வெளியிடுவதன் மூலம் அந்தப் புத்தகத்தை எழுதிய மூல ஆசிரியருக்கான உரிமைகள் சட்டரீதியாகப் பாதுகாக்கப்படுகின்றன. அதே நேரத்தில் அந்த மின்புத்தகங்களை யார் வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும், இலவசமாக வழங்கலாம். எனவே தமிழ் படிக்கும் வாசகர்கள் ஆயிரக்கணக்கில் சமீபத்திய தமிழ் மின்புத்தகங்களை இலவசமாகவே பெற்றுக் கொள்ள முடியும். தமிழிலிருக்கும் எந்த வலைப்பதிவிலிருந்து வேண்டுமானாலும் பதிவுகளை எடுக்கலாமா? கூடாது. ஒவ்வொரு வலைப்பதிவும் அதற்கென்றே ஒருசில அனுமதிகளைப் பெற்றிருக்கும். ஒரு வலைப்பதிவின் ஆசிரியர் அவரது பதிப்புகளை “யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்” என்று குறிப்பிட்டிருந்தால் மட்டுமே அதனை நாம் பயன்படுத்த முடியும். அதாவது “Creative Commons” எனும் உரிமத்தின் கீழ் வரும் பதிப்புகளை மட்டுமே நாம் பயன்படுத்த முடியும். அப்படி இல்லாமல் “All Rights Reserved” எனும் உரிமத்தின் கீழ் இருக்கும் பதிப்புகளை நம்மால் பயன்படுத்த முடியாது. வேண்டுமானால் “All Rights Reserved” என்று விளங்கும் வலைப்பதிவுகளைக் கொண்டிருக்கும் ஆசிரியருக்கு அவரது பதிப்புகளை “Creative Commons” உரிமத்தின் கீழ் வெளியிடக்கோரி நாம் நமது வேண்டுகோளைத் தெரிவிக்கலாம். மேலும் அவரது படைப்புகள் அனைத்தும் அவருடைய பெயரின் கீழே தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் நாம் அளிக்க வேண்டும். பொதுவாக புதுப்புது பதிவுகளை  உருவாக்குவோருக்கு அவர்களது பதிவுகள்  நிறைய வாசகர்களைச் சென்றடைய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். நாம் அவர்களது படைப்புகளை எடுத்து இலவச மின்புத்தகங்களாக வழங்குவதற்கு  நமக்கு அவர்கள் அனுமதியளித்தால், உண்மையாகவே அவர்களது படைப்புகள் பெரும்பான்மையான மக்களைச் சென்றடையும். வாசகர்களுக்கும் நிறைய புத்தகங்கள் படிப்பதற்குக் கிடைக்கும் வாசகர்கள் ஆசிரியர்களின் வலைப்பதிவு முகவரிகளில் கூட அவர்களுடைய படைப்புகளை தேடிக் கண்டுபிடித்து படிக்கலாம். ஆனால் நாங்கள் வாசகர்களின் சிரமத்தைக் குறைக்கும் வண்ணம் ஆசிரியர்களின் சிதறிய வலைப்பதிவுகளை ஒன்றாக இணைத்து ஒரு முழு மின்புத்தகங்களாக உருவாக்கும் வேலையைச் செய்கிறோம். மேலும் அவ்வாறு உருவாக்கப்பட்ட புத்தகங்களை “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்”-க்கு ஏற்ற வண்ணம் வடிவமைக்கும் வேலையையும் செய்கிறோம். FreeTamilEbooks.com இந்த வலைத்தளத்தில்தான் பின்வரும் வடிவமைப்பில் மின்புத்தகங்கள் காணப்படும். PDF for desktop, PDF for 6” devices, EPUB, AZW3, ODT இந்த வலைதளத்திலிருந்து யார் வேண்டுமானாலும் மின்புத்தகங்களை இலவசமாகப் பதிவிறக்கம்(download) செய்து கொள்ளலாம். அவ்வாறு பதிவிறக்கம்(download) செய்யப்பட்ட புத்தகங்களை யாருக்கு வேண்டுமானாலும் இலவசமாக வழங்கலாம். இதில் நீங்கள் பங்களிக்க விரும்புகிறீர்களா? நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் தமிழில் எழுதப்பட்டிருக்கும் வலைப்பதிவுகளிலிருந்து பதிவுகளை எடுத்து, அவற்றை LibreOffice/MS Office போன்ற wordprocessor-ல் போட்டு ஓர் எளிய மின்புத்தகமாக மாற்றி எங்களுக்கு அனுப்பவும். அவ்வளவுதான்! மேலும் சில பங்களிப்புகள் பின்வருமாறு: 1. ஒருசில பதிவர்கள்/எழுத்தாளர்களுக்கு அவர்களது படைப்புகளை “Creative Commons” உரிமத்தின்கீழ் வெளியிடக்கோரி மின்னஞ்சல் அனுப்புதல் 2. தன்னார்வலர்களால் அனுப்பப்பட்ட மின்புத்தகங்களின் உரிமைகளையும் தரத்தையும் பரிசோதித்தல் 3. சோதனைகள் முடிந்து அனுமதி வழங்கப்பட்ட தரமான மின்புத்தகங்களை நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்தல் விருப்பமுள்ளவர்கள் freetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும். இந்தத் திட்டத்தின் மூலம் பணம் சம்பாதிப்பவர்கள் யார்? யாருமில்லை. இந்த வலைத்தளம் முழுக்க முழுக்க தன்னார்வலர்களால் செயல்படுகின்ற ஒரு வலைத்தளம் ஆகும். இதன் ஒரே நோக்கம் என்னவெனில் தமிழில் நிறைய மின்புத்தகங்களை உருவாக்குவதும், அவற்றை இலவசமாக பயனர்களுக்கு வழங்குவதுமே ஆகும். மேலும் இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள், ebook reader ஏற்றுக்கொள்ளும் வடிவமைப்பில் அமையும். இத்திட்டத்தால் பதிப்புகளை எழுதிக்கொடுக்கும் ஆசிரியர்/பதிவருக்கு என்ன லாபம்? ஆசிரியர்/பதிவர்கள் இத்திட்டத்தின் மூலம் எந்தவிதமான தொகையும் பெறப்போவதில்லை. ஏனெனில், அவர்கள் புதிதாக இதற்கென்று எந்தஒரு பதிவையும்  எழுதித்தரப்போவதில்லை. ஏற்கனவே அவர்கள் எழுதி வெளியிட்டிருக்கும் பதிவுகளை எடுத்துத்தான் நாம் மின்புத்தகமாக வெளியிடப்போகிறோம். அதாவது அவரவர்களின் வலைதளத்தில் இந்தப் பதிவுகள் அனைத்தும் இலவசமாகவே கிடைக்கப்பெற்றாலும், அவற்றையெல்லாம் ஒன்றாகத் தொகுத்து ebook reader போன்ற கருவிகளில் படிக்கும் விதத்தில் மாற்றித் தரும் வேலையை இந்தத் திட்டம் செய்கிறது. தற்போது மக்கள் பெரிய அளவில் tablets மற்றும் ebook readers போன்ற கருவிகளை நாடிச் செல்வதால் அவர்களை நெருங்குவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். நகல் எடுப்பதை அனுமதிக்கும் வலைதளங்கள் ஏதேனும் தமிழில் உள்ளதா? உள்ளது. பின்வரும் தமிழில் உள்ள வலைதளங்கள் நகல் எடுப்பதினை அனுமதிக்கின்றன. 1. www.vinavu.com 2. www.badriseshadri.in 3. http://maattru.com 4. kaniyam.com 5. blog.ravidreams.net எவ்வாறு ஒர் எழுத்தாளரிடம் Creative Commons உரிமத்தின் கீழ் அவரது படைப்புகளை வெளியிடுமாறு கூறுவது? இதற்கு பின்வருமாறு ஒரு மின்னஞ்சலை அனுப்ப வேண்டும். <துவக்கம்> உங்களது வலைத்தளம் அருமை [வலைதளத்தின் பெயர்]. தற்போது படிப்பதற்கு உபயோகப்படும் கருவிகளாக Mobiles மற்றும் பல்வேறு கையிருப்புக் கருவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது. இந்நிலையில் நாங்கள் http://www.FreeTamilEbooks.com எனும் வலைதளத்தில், பல்வேறு தமிழ் மின்புத்தகங்களை வெவ்வேறு துறைகளின் கீழ் சேகரிப்பதற்கான ஒரு புதிய திட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இங்கு சேகரிக்கப்படும் மின்புத்தகங்கள் பல்வேறு கணிணிக் கருவிகளான Desktop,ebook readers like kindl, nook, mobiles, tablets with android, iOS போன்றவற்றில் படிக்கும் வண்ணம் அமையும். அதாவது இத்தகைய கருவிகள் support செய்யும் odt, pdf, ebub, azw போன்ற வடிவமைப்பில் புத்தகங்கள் அமையும். இதற்காக நாங்கள் உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை பெற விரும்புகிறோம். இதன் மூலம் உங்களது பதிவுகள் உலகளவில் இருக்கும் வாசகர்களின் கருவிகளை நேரடியாகச் சென்றடையும். எனவே உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை  பிரதியெடுப்பதற்கும் அவற்றை மின்புத்தகங்களாக மாற்றுவதற்கும் உங்களது அனுமதியை வேண்டுகிறோம். இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்களில் கண்டிப்பாக ஆசிரியராக உங்களின் பெயரும் மற்றும் உங்களது வலைதள முகவரியும் இடம்பெறும். மேலும் இவை “Creative Commons” உரிமத்தின் கீழ் மட்டும்தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் அளிக்கிறோம். http://creativecommons.org/licenses/ நீங்கள் எங்களை பின்வரும் முகவரிகளில் தொடர்பு கொள்ளலாம். e-mail : freetamilebooksteam@gmail.com  FB : https://www.facebook.com/FreeTamilEbooks G +: https://plus.google.com/communities/108817760492177970948   நன்றி. மேற்கூறியவாறு ஒரு மின்னஞ்சலை உங்களுக்குத் தெரிந்த அனைத்து எழுத்தாளர்களுக்கும் அனுப்பி அவர்களிடமிருந்து அனுமதியைப் பெறுங்கள். முடிந்தால் அவர்களையும் “Creative Commons License”-ஐ அவர்களுடைய வலைதளத்தில் பயன்படுத்தச் சொல்லுங்கள். கடைசியாக அவர்கள் உங்களுக்கு அனுமதி அளித்து அனுப்பியிருக்கும் மின்னஞ்சலைfreetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு அனுப்பி வையுங்கள். ஓர் எழுத்தாளர் உங்களது உங்களது வேண்டுகோளை மறுக்கும் பட்சத்தில் என்ன செய்வது ? அவர்களையும் அவர்களது படைப்புகளையும் அப்படியே விட்டுவிட வேண்டும். ஒருசிலருக்கு அவர்களுடைய சொந்த முயற்சியில் மின்புத்தகம் தயாரிக்கும் எண்ணம்கூட இருக்கும். ஆகவே அவர்களை நாம் மீண்டும் மீண்டும் தொந்தரவு செய்யக் கூடாது. அவர்களை அப்படியே விட்டுவிட்டு அடுத்தடுத்த எழுத்தாளர்களை நோக்கி நமது முயற்சியைத் தொடர வேண்டும். மின்புத்தகங்கள் எவ்வாறு அமைய வேண்டும்? ஒவ்வொருவரது வலைத்தளத்திலும் குறைந்தபட்சம் நூற்றுக்கணக்கில் பதிவுகள் காணப்படும். அவை வகைப்படுத்தப்பட்டோ அல்லது வகைப்படுத்தப் படாமலோ இருக்கும். நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகத் திரட்டி ஒரு பொதுவான தலைப்பின்கீழ் வகைப்படுத்தி மின்புத்தகங்களாகத் தயாரிக்கலாம். அவ்வாறு வகைப்படுத்தப்படும் மின்புத்தகங்களை பகுதி-I பகுதி-II என்றும் கூட தனித்தனியே பிரித்துக் கொடுக்கலாம். தவிர்க்க வேண்டியவைகள் யாவை? இனம், பாலியல் மற்றும் வன்முறை போன்றவற்றைத் தூண்டும் வகையான பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டும். எங்களைத் தொடர்பு கொள்வது எப்படி? நீங்கள் பின்வரும் முகவரிகளில் எங்களைத் தொடர்பு கொள்ளலாம். - email : freetamilebooksteam@gmail.com - Facebook: https://www.facebook.com/FreeTamilEbooks - Google Plus: https://plus.google.com/communities/108817760492177970948 இத்திட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் யார்? - Shrinivasan tshrinivasan@gmail.com - Alagunambi Welkin alagunambiwelkin@fsftn.org - Arun arun@fsftn.org -  இரவி Supported by - Free Software Foundation TamilNadu, www.fsftn.org - Yavarukkum Software Foundation http://www.yavarkkum.org/