[] []                                                                               வேர்களை இழக்காதீர்                                                                      பெ .கோபாலன்  நூல் :  வேர்களை இழக்காதீர் ஆசிரியர் : பெ .கோபாலன் மின்னஞ்சல்  :  gopalakrishnan.pgk@gmail.com    மின்னூலாக்கம் : த . தனசேகர் மின்னஞ்சல் : tkdhanasekar@gmail.com வெளியிடு : FreeTamilEbooks.com உரிமை: Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International  License. உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம். பொருளடக்கம் முன்னுரை 6  கடவுளும் பகுத்தலும். 11  புலனும் நுண்ணிய அறிதலும். 14  ஒளியும் ஒலியும். 18  திசையும் பொழுதும். 19  பூவும் பூதமும். 20  காற்றும் காலியும். 22  உட்காருதலும் அமர்தலும். 24  செல்வமும் அதன் நகர்வும். 26  அனுமதியும் அளவீடும். 27  சுவடியும் அழுத்தமும். 28  பர மக்களும் பார் போற்றும் தமிழும் 29  ஓகரம் உகரமாக திரிவது சரியான தமிழ் அல்ல 31    செந்தமிழே! உயிரே! நறுந்தேனே! செயலினை மூச்சினை உனக்களித்தேனே! நைந்தா யெனில்நைந்து போகுமென் வாழ்வு நன்னிலை உனக்கெனில் எனக்குந் தானே! - பாரதி தாசன்               முன்னுரை   உலகம் உருண்டோடும் வேகத்தில் முன்னோக்கியப் பயணம் பல கண்டுபிடிப்புகளைக் கொண்டு உருளுகிறது. உலகத்தில் ஒவ்வொரு உயிரும் தனக்கென ஒரு உயிர்க்கணையை கொண்டு தோன்றி வாழ்ந்து மறைந்துபோகிறது. அது தன் வாழ்நாளில் தன் உயிர்க்கணைகளுக்கிடையில் பெற்ற அனுபவங்களை மரபணுவின் ஊடாக அடுத்த தலைமுறைக்குக்  கொடுத்துவிட்டுச் செல்கிறது. ஆனால் மனிதன், மனிதப் பயன்பாட்டை முக்கிய கருதுகோளாய் கொண்டு அவ்வுயிர் கணைகளை வெட்டி எரிந்து கொண்டிருக்கிறான். பறவைகளும், விலங்குகளும் வாழ்விடம் இழக்கின்றது. ஒருகட்டத்தில் அது இருந்த சுவடுகளை மட்டும் விட்டுவிட்டு அந்த இனம் முற்றிலும் அழிந்துவிடுகிறது. மனிதன் பொருளாதாரம் என்கிற ஒற்றை புள்ளியில் நின்று கொண்டு எல்லாவற்றையும் ஓடும் மேகமாய் பார்க்கிறசூழலில் இருக்கிறான். உலகம் எவ்வாறு உயிர்க்கணைகள் கொண்டு உருளுகிறதோ அவ்வாறே தமிழும் அவ்வுயிர்க் கணைகளோடுப் பின்னிப்பிணைந்து இருக்கிறது மற்றும் அந்த உயிர்க்கணைகளின் செயல்பாடுகளை சொற்களாய் கொண்டு நிற்கிறது என்பதை நின்று நிதானித்து ஏன் எதற்கு என்று எண்ணிப்பார்க்காமல் தமிழர்களாகிய நாமும் அப்படித்தான் நகர்ந்து கொண்டிருக்கிறோம். ஒரு மொழியில் அறிவியல் கருத்துக்கள் விளக்கப்பட்டிருக்கலாம் அது இயல்பு ஆனால் அந்த மொழியில் உள்ள சொற்கள் அறிவியல் கருத்தை உணர்த்துமானால் அந்த மொழியின் வளமை எத்தகையது என்பதைச் சிந்திக்கவேண்டும். அது எவ்வாறு வளம் சேர்க்கும் என்பதையும்  உணரவேண்டும்.   எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்ற நிலை மாறி. கல்வியில் முற்றிலும் ஆங்கிலம் ஆட்சிகொள்ளச்செய்கிறது. கல்வி நிறுவனம் நடத்தும் கல்வியாளர்கள் ஆங்கிலம் தேவை என்று அழுத்திச் சொல்கிறார்கள் வீட்டிலும் ஆங்கிலம் சொல்லிக்கொடுங்கள் என்று பெற்றோரிடமும் வாழைப்பழ ஊசிபோல் விதைக்கிறார்கள். இதனால் தமிழ் புழங்கும் நேரம் வெகுவாக குறைந்து கொண்டிருக்கிறது. எது அதிக புழக்கத்தில் இருக்கிறதோ அதுவே மனித நினைவில் இருக்கும் என்பதை உணரவேண்டும். நினைவில் இருந்தால்தான் ஆராய்ச்சிகளை எளிமையா செய்ய உதவும் என்பதையும்  உணரவேண்டும். இன்றளவும் தமிழ் பற்றியும் தமிழ் நிலம் பற்றியும்மான ஆராய்ச்சிகள் சொற்ப அளவிலே நிகழ்ந்திருக்கிறது. வேற்று மொழி கற்றல் தேவைதான் ஆனால் அது வீட்டில் பேச மற்றும் சொல்லிக்கொடுக்கும் அளவிற்கு அது தேவை இல்லை. எந்த வசதியும் இல்லாத கல்விக்கூடங்கள் வெறுமனே ஆங்கிலத்தை மட்டும் கருவியாக எய்து இந்த பிழைப்பை செய்கிறாரார்கள் என்பதை புரியாமல் நாமும் அதை கேட்டு பொருளாதாரதத்தை மட்டும் கருத்தில் கொண்டு பன்னெடுங்காலம் வளர்ந்து வந்த மரபுகளை வழக்கொழியச்  செய்துவிடுகிறோம். அதனால்  நடைமுறைகளில் உள்ள அறிவியல் உண்மைகளை உணராமல் இருக்கிறோம். அதனாலேயே புதிய கண்டுபிடிப்புகளுக்கு வித்திடாமல் நம்மில் பலர் மற்றவர் கண்டுபிடிப்புகளைப்  பயன்படுத்த மட்டுமே செய்கிறோம். தாய்மொழிக் கல்வியின் வழியாகத்தான் நடைமுறையில் உள்ள அறிவியல் செயல்பாடுகளை எளிதில் அறியமுடியும் என்பதை உணராமல் இருக்கிறோம். இதைத்தான் யுனெஸ்கோ அமைப்பு தாய்மொழிக்கல்வியின் அவசியத்தை உணர்த்தும் அளவிற்கு ஆய்வு அறிக்கைகள் வெளியிடுகிறது. இதை    உணர்த்த வேண்டியது தமிழரின் கடமையாக எண்ணி நான் படித்த, கேட்ட மற்றும் அறிந்த ஒரு சில சொற்களை விளக்க முயற்சி செய்துள்ளேன். இயற்கையில் உள்ள ஒலிகளை கேட்டு அதன் மூலமாக சொற்கள் உருவாகியிருக்கின்றனர் இவை அடிப்படை சொற்கள். நாகரீகம் வளர வளர தேவைக்கேற்ப புதிய புதிய சொற்களை உருவாக்கிக்கொண்டனர். அதற்கு ஒற்றை ஒலிகள், இரட்டை ஒலிகள், குட்டை ஒலிகள் மற்றும் நீண்ட ஒலிகள் பயன்பட்டன. கா கா  என்று கத்தியதால் காகா என்கிறோம். மா என்றதால் மாடு என்றோம். குர் என்றதால் குரங்கு என்றோம். மே என்றதால் மேசம்(ஆடு) என்றோம். கிகி என்றதால் கிளி என்றோம் கூ என்றதால் குயில் என்றோம். சர சர என்றதால் காய்ந்த இலைகளை சருகு என்றோம். இவ்வாறு படிநிலைகள் கொண்டு வளர்ந்தது இந்த மொழி.   சான்றாக அ, ஆ என்பது வாய் திறக்கும் பொழுது எழுப்பும் ஓலி. இவை குட்டை மற்றும் நீண்ட ஒற்றை ஒலிகள். சல சல , மட மட என்பவை இரட்டை ஒலிகள் அல்லது  இரட்டைக்கிளவிகள். இவை  புற வெளியில் இருந்து வருபவை. சல சல என்பது நீர் செல்லும் பொழுது எழுப்பும் ஒலி. மட மட என்பது மரம் ஓடியும் பொழுது எழுப்பும் ஒலி. இரட்டை கிளவிகள் மிக சிறப்பாக சொல் உருவாக்கத்தில் பயன்பட்டிருக்கிறது. சான்றாக கிளு கிளு(கிளுகிளுப்பையின் ஒலி) என்பது இன்பத்தையும் துன்பத்தையும் குறிக்கும் சொல். இதில் இருந்துதான் கிளுகிளுப்பை, கிளர்ச்சி என்கிற சொல் உருவாகிறது. கிளர்ச்சி நிலையில் இன்பமும் அது அதிகமாகிவிட்டால் துன்பமும் இருக்கும். இந்த கிளர்ச்சி என்பது அறிவியலில் முக்கியமாக பயன்படுத்தும் சொல்.   சங்கொடு தாரை காளந் தழங்கொலி முழங்கு பேரி வெங்குரற் பம்பை கண்டை வியன்றுடி திமிலைதட்டி பொங்கொலிச் சின்ன மெல்லாம்பொருபடை    மிடைந்தபொற்பின் மங்குல்வான் கிளர்ச்சி நாண மருங்கெழுந் தியம்பி  மல்க  - பெரியபுராணம்     வான் ஒலிகளின் கிளர்ச்சி பற்றி பதிவு. நெடுங்காலமாக இந்த சொல்  அதே பொருளில் வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல் கிளு என்கிற மூல வேர்ச்சொல்லில் இருந்து கிளி , கிளறு , கீறு , கோரு , கோடு என்கிற சொற்களெல்லாம் உருவாகியது. கோடு என்கிற சொல்தான் ஒலி வரிவடிவம் பெறுவதற்கு அடிப்படை. இன்றளவும் பொருந்தல் அகழ்வாய்வில் கோடுகளைக்கொண்ட வரிவடிவங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அதன் காலம் கி.மு 5 ஆம் நூற்றாண்டு என்று கணக்கிடப்பட்டுள்ளது. தமிழிக்கு முந்தய குறியீட்டு  வரிவடிவமாக இருக்கலாம் என்று அறியப்படுகிறது.  இவ்வாறாக சொற்கள் அதன் மரபில் அறிவியல் வேர்களை கொண்டுஉள்ளது அது மற்ற மொழி கலப்பில்லாமல் காத்தோமானால் அதன் அறிவியலை எளிதில் புரிந்துகொள்ளலாம். அடுத்ததலைமுறைக்கு உரணத்தி புதிய கண்டுபிடிப்புகளுக்கு வித்திடலாம்.     வேகம் தடு, விவேகம் கொள் விடை தேடு, விதை நீயே உன்னில் புறப்படட்டும் புரட்சிக்கருத்துக்கள் உலகம் மாற்றம் பெறும் உன்விரல் நுனியே இவுலகம்   தமிழா! யுனெஸ்கோ என்கிற உலக அமைப்பு தாய்மொழி வழி  கல்வியைப் பற்றி ஆராய்ச்சி செய்து அதன் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.   உணர்வின் முதல் ஓசை. வலியின் முதல் ஒலி. வயுற்றுப்பசி நீக்கிய மொழி. வேண்டியதைப்பெற வாய்திறந்த மொழி. வேற்றுமொழிப் பேசுதலில் முன்னிடையூறு இம்மொழி. பள்ளிக்குச் செல்லாமல் பெற்ற மொழி. கல்வி கல்லாமல் கற்ற மொழி. காலம் முடியும் வரை உனைநீங்கா மொழி.   தொப்புள் கொடி உறவு என்பார்கள். அதை தாயத்தில் அடைத்துவைப்பது தமிழர்களின் நடைமுறை வழக்கம். அது ஸ்டெம்ப்செல் தெரப்பியாக நம் ஊடே வந்தபிறகும் விழித்துக்கொள்ளவில்லை என்றால் தமிழரின் குருதி கடலோடு கலந்த மழை நீரைப்போல் பொதுவாகிப்போகும்.   தவறுகள் திருத்தப்பட வேண்டும் என்பது எனது எண்ணம். முதல் முயற்சியில் தவறுகள் இருப்பது என்பது வழக்கம்  தவறுகளை தயங்காமல் சொல்லலாம். (gopalakrishnan.pgk@gmail.com)    கடவுளும் பகுத்தலும்.   முதலில் கடவுள் நினைவு கூறல் இலக்கிய வழக்கம் அதனாலே நானும் கடவுளில் இருந்து துவங்குகிறேன். கடவுள் என்றால் தெய்வம் என்கிற சிந்தனையை விட்டு வேறு சிந்திப்பதில்லை நாம். “கடவுள் என்றால் பேரண்டத்திலுள்ள அனைத்துப் பொருள்களையும், உயிர்களையும் கடந்தவராகவும் (கட) அதே நேரத்தில் எல்லாவற்றிலுமுள்ளே(உள்) இருப்பராகவும் உள்ளவர் என்று பொருள்.”  என்கிறது மதங்கள். தெய்வத்தோடு சேர்த்து மூளையை மழுங்கடித்து செயல் உணராமல்  வீழ்ச்சி அடையச்செய்துவிட்டது  நம்மை. தெய்வத்தை குறிக்க பல சொற்கள் இருக்கின்றன தெய்வம், இறைவன், ஆதவன் வள்ளுவன் குறிப்பிட்டதுபோல் ஆதி பகவன். இவ்வாறு இருக்கையில் கடவுளை அதோடு சேர்த்து வழக்கமாகியதால் பொருள் உணரப்படாமல் போயிற்று. கடவுள் என்றால் உள் கடந்து பார்த்தல். எப்பொருளாயினும் எவ்வுயிராயினும் பகுத்து அதன் உள்ளே சென்று அதன் செயல்பாடு அறிதல். கல் கொண்டுதான் எல்லாவற்றையும் கில்லின்னான். கில்/கிள்  என்றால் தோண்டுதல் அல்லது கிழித்தல். தோண்டி அறியும்பொழுது கல் ஒன்றோடு ஒன்று நெருங்கி கட கட என்றது. உள் கடந்தான். உள் கடந்து அறிவதற்கு உதவியாய் இருந்த புறக்கருவி கல். முதலில் உணவுக்காக. பின் அறிவை பெறுவதற்காக. அதனாலேயே இன்றளவும் அறிதலை கல் மற்றும் கல்வி என்று வழங்கிக்கொண்டிருக்கின்றோம்.  இன்றளவும் அறிவியல் நுண்ணோக்கி கொண்டு உள் கடந்து நுண்ணிய  செல்களின், அணுக்களின் செயல்பாடு அறிவதை உணர்த்துகிறது. ஆனால் இந்த சொல் உருவான காலம் எவரும் அறியாதது. கடவுள் என்றால் உருவாக்குபவன் என்ற மற்றொரு  பொருளும் உண்டு. உள் கடந்து அறியாவிட்டால் எவ்வாறு புதிய ஒன்றை உருவாக்கமுடியும். மனிதனுக்கு பயனுள்ள புதிய ஒன்றை உருவாக்குவதுதானே அறிவியல். கடவுள்வேறு, இறைவன்வேறு மற்றும் தெய்வம்வேறு மூன்றும் ஒரே பொருளை குறிக்கும் சொல் அல்ல.   கடவுள் என்பதை பகுத்துப்பார்த்தல் என்று பார்க்கிறோம். இறைவன் என்றால் இறவாதவன் பிறவாதவன் என்று பொருளுரைக்கிறது மீனாட்சியம்மை குறம். ஆனால் தெய்வம் என்பவன் பிறப்பவன் இறப்பவன் என்று பொருளுரைக்கிறது பிள்ளைத்தமிழ். ஆனால் மூன்றையும் ஒன்றாக பொருத்தி அதன் ஊடாக இருக்கும் அறிவியலை மறைகிறோம் நாம்.     திருவள்ளுவர் ஒரு இடத்தில கூட கடவுள் என்கிற சொல்லை பயன்படுத்தவில்லை அதை தெய்வத்தோடு சேர்த்து ஒப்பிடவில்லை. சங்க இலக்கிய காலத்தில் கிபி மூன்றாம் நூற்றாண்டில் இருந்து ஆறாம் நூற்றாண்டுவரை இருண்டகாலம் என அறியப்படுகிறது. ஏனென்றால் இந்தக்காலகட்டத்திற்கான இலக்கியங்கள் பெறப்படவில்லை. பிறகு கிபி ஆறாம் நூற்றாண்டில் இருந்து இருபதாம் நூற்றாண்டுவரை பக்தி இலக்கியங்கள்தான் பெரிதும் எழுதப்பெற்றுக்கின்றன என்று தமிழ் அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள். மேல் குறிப்பிட்டதுபோல் நடைமுறை அறிவியலை மதங்கள் ஆன்மீகப்பின்னணி கொண்டு மாற்றியமைத்ததுபோல் தோன்றுகிறது. போருக்குச்சென்று உயிர் நீத்தவர் சொர்கத்திற்கு செல்வான் என்கிற வழக்கு. கோவிலுக்கு சென்றால் சொர்கத்திற்கு செல்வான் என்று மாறும் அளவிற்கு பக்தி இலக்கியங்கள் உருப்பெற்றுருக்கின்றன. சான்றாக தேர் இழுத்தல் என்பது பற்றி அறிஞர்களின் கருத்து என்னவென்றால். போர் முடிந்தபின் போர்க்களத்தில் நடந்தவற்றை மக்களுக்குப் பறைசாற்ற. வீதிகளில் தேர் நகர்வும் பறை அடித்தலும் நடனம் புரிதலும். இன்று நடக்கும் ராணுவ அணிவகுப்புபோல் நடக்கும். அதன் அடையாளம்தான் இன்றைய கோவில்களில் இருக்கும் தேர் இழுக்கும் வழக்கம். கோ என்றால் அரசன். தேவன் என்றாலும் அரசன். கோ இருக்கும் இல்லம் கோவில். புர என்றால் உயர்ந்த என்று பொருள். அரசன் இருக்கும் இல்லத்தின் மேல்பகுதி கோபுரம் எனப்பட்டது. இப்படி அரசர் காலங்களில் நடைபெற்ற நிகழ்வுகள் எல்லாம் அடையாளப்படுத்த தெய்வம் சார்ந்ததாக மாற்றப்பட்டுள்ளது.  ஆசீவகம், பௌத்தம் மற்றும் சமணம்  போன்ற மதங்கள் தெய்வம் சார்ந்த கொள்கைகளை எதிர்த்து தர்க்க முறையில் விவாதித்து  நூல்கள் படைத்து எல்லாம் மறையும் அளவிற்கு பக்திஇலக்கியங்கள் அறிவியலை ஆன்மீக மேற்கோள் கொண்டு விளக்குகிறது. இப்படித்தான் சைவமும் வைணவமும்  இந்துவாக மாறி நிற்கிறது. இந்த நாத்திக மதங்கள் படைத்த வாழ்வியல் நெறிநூல்கள் எல்லாம் மிக அறிய பயன்களை நமக்கு தந்திருக்கிறது. தொல்காப்பியமும்  திருக்குறளும் நாத்திக மதமான சமண மதத்தவர்கள் கொடுத்தக்கொடை என்கிறார்கள் தமிழறிஞர்கள். ஆனால் அவர்கள் அந்த மதக்கொள்கைகளை சொல்லவில்லை வாழ்வியலை சொன்னார்கள். அந்த வாழ்வியல் கருத்துக்கள் அனைத்தும் அறிவியல் வேர்களை கொண்டது.   புலனும் நுண்ணிய அறிதலும்.   அறிதலுக்கு அடிப்படை மெய்க்கருவி புலன்கள். புலம் என்றால் புலப்படுத்தல். புலப்படுத்தல் என்றால் நுண்ணிய அறிதல். நுண்ணிய அறிதலுக்கு துணைபுரியும் கருவிகளாகிய உடலுறுப்புகள் புலன்கள். அறிதல் என்றால் நுண்ணியது. ஒளி , ஒலி(ஓசை) , நாற்றம் , சுவை மற்றும் படு(ஊறு) உணர்வுகளை புலப்படுதல் என்பதால் புலன் என்றெனப்பட்டது. நாவையும் நாசியையும் கொண்டு ஓசை எழுப்பியதால் ஒலியில் இருந்து மொழி பிறந்தது. ஓசையினை செவி கொண்டு கேட்டு மாத்தலால்(அளத்தலால்) இலக்கணம் பிறந்தது. இலக்கணம் வகுத்தால் இலக்கியம் பிறந்தது. இலக்கியம் பிறந்ததால் நீண்டு நின்றது இன்றுவரை. இதே புலன் அறிவை அடிப்படையாகக்கொண்டுதான் தொல்காப்பியர் தொல்காப்பியத்தில் உயிர்களை வகைபாடு செய்கிறார். இந்த சான்று பலமுறை விவாதிக்கப்பட்டு இருந்தாலும்  இந்த சான்று புலன் அறிவுக்கு சரியான சான்று என்பதாலே மற்றும் இச்சான்று இல்லாமல் புலன் பற்றி பேச இயலாது என்பதாலே  இவற்றை குறிப்பிடுகிறேன். ஒன்று அறிவதுவே உற்று அறிவதுவே; இரண்டு அறிவதுவே அதனொடு நாவே; மூன்று அறிவதுவே அவற்றொடு மூக்கே; நான்கு அறிவதுவே அவற்றொடு கண்ணே; ஐந்து அறிவதுவே அவற்றொடு செவியே; ஆறு அறிவதுவே அவற்றொடு மனனே;- நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே ஓரறிவு என்பது உடம்பினால் அறிவது அதாவது தொடுஉணர்வு. ஈரறிவு என்பது தொடுஉணர்வோடு நாவினைக்கொண்டு சுவை  அறிவது மூன்றறிவு என்பது தொடு , சுவை உணர்வோடு மூக்கினை கொண்டு நாற்றம் அறிவது. நான்கறிவு  என்பது தொடு, சுவை, நாற்றம் உணர்வோடு கண்ணை கொண்டு கண்டு அறிவது. ஐந்தறிவு என்பது தொடு , சுவை, நாற்றம் , கண்டறிவதோடு செவி கொண்டு கேட்டு அறிவது. ஆறறிவு என்பது  தொடு , சுவை, நாற்றம் , கண்டு, கேட்டு அறிவதோடு, தொட்டு , சுவைத்து , நுகர்ந்து , கண்டு , கேட்டு அறிந்தவை எல்லாம் சரியானதுதானா என்று அளவிட்டு பகுத்து பார்க்கும் மனம் என்கிற அறிவு என்பது பொருள்.   இந்த புலன்  வகையினை மட்டும் கூறவில்லை அதோடு அதற்கான விலங்குகளையும் குறிப்பிட்டுருக்கிறார். புல்லும் மரனும் ஓர் அறிவினவே; பிறவும் உளவே, அக் கிளைப் பிறப்பே. ஓரறிவுயிராமாறு புல்லும் மரமும் என்று சொல்லப்பட்ட இருவகை உடம்பினாலறியும்; அக்கிளைப்பிறப்பு பிறவும் உள்ளன என்கிறார். நந்தும் முரளும் ஈர் அறிவினவே; பிறவும் உளவே, அக் கிளைப் பிறப்பே.   ஈரறிவுயிராவன நந்தும், முரளுமென்று சொல்லுவ; பிறவுமுள ஈரறிவுயிரென்றவாறு. நந்து என்றதனால் சங்கு, நத்தை, அலகு, நொள்ளை என்பன கொள்க. முரள் என்றதனால் இப்பி, கிளஞ்சில், எரல் என்பன கொள்க. சிதலும் எறும்பும் மூ அறிவினவே; பிறவும் உளவே, அக் கிளைப் பிறப்பே.   சிதலும்(கறையான்), எறும்பும், மூவறிவின; அக்கிளைப் பிறப்பு பிறவு முள என்றவாறு. பிற ஆவன அட்டை முதலாயின.  வண்டும் தும்பியும் நான்கு அறிவினவே; பிறவும் உளவே, அக் கிளைப் பிறப்பே. வண்டும், தும்பி(தேனீ)யுமென நாலறிவையுடைய; அக்கிளைப் பிறப்பு பிறவு முள. பிறவு மென்றதனான் ஞிமிறு, சுரும்பென்பன கொள்க.  மாவும் மாக்களும் ஐஅறிவினவே; பிறவும் உளவே, அக் கிளைப் பிறப்பே.   நாற்கால் விலங்கும் புள்ளும் ஐயறிவுடைய ;அக்கிளைப் பிறப்பு பிறவும் உள. பிற ஆவன தவழ்வனவற்றுள் பாம்பு முதலாயினவும் நீருள் வாழ்வனவற்றுள் மீனும் முதலையும் ஆமையும் முதலாயினவுங் கொள்ளப்படும்.     மக்கள்தாமே ஆறு அறிவு உயிரே; பிறவும் உளவே, அக் கிளைப் பிறப்பே. மக்கள் ஆறறிவுயிரெனப்படுவர்; அக்கிளைப் பிறப்பு பிறவுமுள. பிறவாவது தேவர்,அசுரர் , இயக்கர் முதலாயினோர். புலன்கள் கொண்டு மழையை அறியும் நுண்ணுணர்வை விலங்குகளும் நாமும் அறிகிறோம் என்று முக்கூடற்பள்ளு விவரிக்கிறது. ஆற்று வெள்ளம் நாளை வரத் தோற்றுதே குறி - மலை யாளமின்னல் ஈழமின்னல் சூழ மின்னுதே நேற்றும் இன்றும் கொம்பு சுற்றிக் காற்று அடிக்குதே - கேணி நீர்ப்படு சொறித் தவளை கூப்பிடுகுதே சேற்று நண்டு சேற்றில் வளை ஏற்று அடைக்குதே - மழை தேடி ஒருகோடி வானம் பாடி யாடுதே பாட்டின் அறிவியல். நாளைய தினம் ஆற்றிலே வெள்ளம் வர இருப்பதற்குரிய அறிகுறிகள் தென்படுகின்றன. தென்மேற்குத் திசையிலே மலையாள மின்னல் மின்னிக் கொண்டுள்ளது. தென் கிழக்குத் திசையிலே ஈழத்து மின்னல் மின்னிக் கொண்டுள்ளது. நேற்றும் இன்றும் மரக்கொம்புகளைச் சுற்றியவாறு காற்று அடிக்கிறது. கிணற்றிலே உள்ள சொறித்தவளைகள் கூப்பாடு போடுகின்றன. நண்டுகள் தம் வளைகளுள் மழை நீர் புகுந்து விடாதபடி வாயில்களைச் சேற்றினால் அடைக்கின்றன. மழை நீரைத் தேடிக் கோடி வானம்பாடிகள் அங்கும் இங்கும் பறக்கின்றன. இவ்வாறாக மழை வருவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. இதில் விளங்குங்கள் தங்களது நுண்ணறிவினை புலன்கள் கொண்டறிந்து மழையில் இருந்து பாதுகாத்து கொள்ளும். இவ்வாறு மழையின் வரவினை விலங்குகளை கருவியாக கொண்டு புலனறிவை சரியாக பயன்படுத்திருக்கிறார்கள் என்பதை பதிவிட்டிருக்கிறார்கள். அன்று நடைமுறையில் நடந்தவற்றை வைத்துதான் அதன் செல்பாடுகளை அறிந்தார்கள். அந்த செயல்பாடுகளை வைத்துதான் சொற்களை உருவாக்கினார்கள். அவை அனைத்தும் அறிவியல் வேர்களை கொண்டது.   ஒளியும் ஒலியும்.   மின்னலை பார்க்கும்பொழுது வெளிச்சமும் சத்தமும் ஓரிடத்தில் இருந்து வருகிறது. அதனாலேயே ஒரே மாதிரி பெயர் வழங்கப்படுகிறது. வேறுபாடுகளை அறிந்திருப்பதால் வரி(எழுத்து) வடிவத்தில் வேறுபடுத்தி காட்டப்பட்டுள்ளது. வெளிச்சத்திற்கு ஒளி என்றும் சத்தத்திற்கு ஒலி என்றும்.  ஒ என்றாலும் ஓல் என்றாலும் ஒக்க கிடக்கிறது அதாவது பொருந்தி இருக்கிறது என்று பொருள். ஓல் என்பதும் ஒள் என்பதும் ஒன்றே. ஒள் என்றால் ஒளி எனப்பட்டது.  வெளிச்சமும் (வெளியில் இருந்து வருவதால் வெளிச்சம்) சத்தமும் ஒன்றாய் ஓரிடத்தில் இருந்து வருவதாலும் இரு மேகங்கள் ஒன்றாய் பொருந்தி(நெருங்கி) உருவாவதாலும்  ஒளி/லி என வழங்கப்படுகிறது.  இரண்டுக்கும் பல ஒப்புமை மற்றும் வேற்றுமை  பண்புகள் உண்டு. ஊடுருவல் சிதறல் போன்ற பண்புகளில் ஒற்றுமை உண்டு. தொடங்கிய இடத்தில இருந்து கடக்கும் வேகத்தில் வேற்றுமை  உண்டு. அதேபோல் கண்ணுக்கு புலப்படுவதிலும் வேற்றுமை உண்டு.  சுர் என்று சுடுவதால் சூரியன் என்று வழங்கப்பட்டது. சுர் என்பது சுரன் ஆகி சூரன் என்று வழங்கப்பட்டு பின்பு சூரியன் ஆகா மருவி வழங்கப்படுகிறது.  எழுந்து செல்வதால் எல், எல்லி என வழங்கப்படுகிறது.  தக தக என்று சூரியன் இருந்ததால் தணல் எனப்பட்டது. தணல் (வெப்பம்) காற்றுடன் கலந்து வீசியதால் கணல் எனப்பட்டது. இரண்டு கற்களை நெருக்கியதால்(பொருத்தியதால்) உருவான ஒளி என்பதால் நெருப்பு எனப்பட்டது.   நெல் என்பது நெரு என்றாகி நெருப்பு என்றாகியது. நெல் நெருப்பு போன்று நிறத்தில் இருந்தால் அந்தப்பெயர் வழங்கப்படுகிறது.  உரு மணி நேரத்தில் வெளியே செல்லாதே என்பது ஊர் வழக்கம். உரு என்றால் உருகுதல். உருகுதல் என்றால் வெப்பத்தால் இளகுதல். உலோகமே இளகும் அளவிலான வெப்பம் வீசும் நேரம் என்பதால் அது உடலில் பாதிப்புகள் ஏற்படுத்தும் என்று செல்லாதே என்றார்கள்.  திசையும் பொழுதும்.   சூரியன் தக தக என்று திகழ்ந்ததால்.  திகழ் எனப்பட்டது. திகழ் என்றால் ஒளி என்று பொருள் திகழ் என்பது திகதி ஆனது. இப்போது தேதி என்று வழங்கப்படுகிறது.  ஒளி கீழிருந்து எழும்பியதால் கீழை திசை எனப்பட்டது. அது கீழ்க்கு என்றாகி கிழக்கு என்று வழங்கப்படுகிறது இப்போது. மேல் எழும்பி மறைந்ததால் மேலை திசை எனப்பட்டது அது மேல்கு என்றாகி மேற்கு எனவழங்கப்படுகிறது.  ஒளி கீழ் இருந்ததால் காலை பொழுது  எனப்பட்டது. மத்தியில்(உச்சி) இருந்ததால் மத்தியாமம். யாமம் என்றால் பொழுது என்று பொருள். மேல் எழுந்து சென்றதால் மாலை பொழுது எனப்பட்டது.  சாய்ந்து இருந்ததால் சாயும் காலம்(சாயங்காலம்)  எனப்பட்டது. முற்றிலும் இரங்கியதால் (இர என்றால் தாழ்தல்/சாய்தல்) இரவு எனப்பட்டது.  பகு , பகல் இரண்டும் பகுத்தலை குறிக்கிறது. பகல் என்றால் அரை நாள் என்று  பொருள். அகல் போன்ற வெளிச்சமுள்ள அரைநாள்  பகல் என வழங்கப்பட்டது.    பூவும் பூதமும்.   பூ என்றால் மலர் என்றுபொருள். மலர்தல் என்றால் விரிதல் என்று பொருள். பூ என்பது அடிப்படை வேர்ச்சொல். பூவிலிருந்துதான் பூமி, பூதம் , பூண்டு போன்ற சொற்கள் தோன்றின. இது ஒரு அடிப்படை ஒலி. ஊதும்போழுது பூ … என்றுதான் ஒலிக்கும். அவ்வாறு ஊதும்போழுது எதிரே இருக்கும் காற்று நாலாபுறமும் விரிந்தோடும். இந்த விரிதல் பண்பினாலே பூ மலரெனப்பட்டது.  பூதம் என்ற சொல் அண்டவெளியை குறித்து. அண்டவெளி ஐந்து பண்புகளால் கட்டமைக்கப்பட்டுள்ளது. நிலம் (பூமி) , நீர், தீ , காற்று, வானம். இவையே பூதம் எனப்படுகிறது. இந்த ஐந்தும் விரிதல் பண்புடையது அதனாலே இவை பூதம் எனப்பட்டது.  பூமி விரிவடைகிறது. கண்டத்தட்டு விலகுதலே இதற்கு சான்று. உட்கருக்குள் ஏற்படும் வெப்ப விளைவின் காரணமாக எரிமலைகள் வெடிக்கிறது அதானால் புவியில் விரிசல் ஏற்படுகிறது இவ்வாறே கண்டத்தட்டும் விலகுகிறது.  நீரும் விரிவடைகிறது இதற்கு ஆவியாதல் சான்று. ஆவியாகும்பொழுது இந்த நீர் சிறு சிறு துளிகளாக பிரிந்துதான் மேல்சென்று மேகம் உருவாகிறது.  காற்று விரிவடைகிறது காற்று வெப்பமடையும்பொழுது இலேசாகுகிறது இதுவே விரிவடைவதற்கான சான்று.  நெருப்பு விரிவடையும் பண்பு உடையதால்தான் அதை களனுக்குள் அடைத்து வைக்கும்பொழுது அதிக அழுத்தத்தை உருவாக்கி வெடித்து வெளிவருகிறது.  வெளி(அண்டம்) விரிவடைகிறது என்பது இருபதாம் நூற்றாண்டு கருத்து. இதை பூதம் என்கிற சொல் சரியாக வழங்குகிறது. சூரியக்குடும்பத்தில் கோள்களின் சுற்றுவட்டப்பாதையில்  மாற்றங்கள் நிகழ்வது இந்த விரிதல் பண்பினாலே நிகழ்கிறது. இந்த பரந்து விரிந்த வெளியையே புடவி எனப்பட்டது. சான்றாக பெண்கள் கட்டும் நீளமான ஆடைக்கு புடவை என வழங்கப்படுகிறது.   இந்த வெளியை புறம் என்று அழைத்தோம் புறம் என்றால் உயர்ந்த என்று பொருள். அதனாலேயே புறத்தில் செல்பவற்றை எல்லாம் நாம் பறந்தன என்கிறோம் இதன் மூலமாகத்தான் பறவை என்றும் பருந்து என்றும் வழங்குகிறோம்.   பூண்டு அதன் வேர்ப்பகுதியில் அதிக செறிவான சத்துக்களைஏற்றி(பூட்டி) விரிவடைந்து உருவாகிறது. இந்தப்பண்பினால் அனைத்து காய்களையும் பூண்டு எனலாம்.  காய் என்பது தீ பண்பை குறிக்கும். நீர் காய்ச்சுதல். உடல் காய்ச்சல் என்பது வெப்பமடைவதை குறிக்கிறது. அதனாலே காய்கள் வளர்ச்சியுறுகிறது பருத்து விரிகிறது.  இந்த அண்டவெளியில் எல்லாமே குறுகி சிறுத்து பெருத்து விரிந்து பின்பு குறுகுகிறது. இது சுழற்சிமுறையில் நடக்கிறது.   காற்றும் காலியும்.   கால் -> காலி. கால் என்றால் நடக்க உதவும் கால் என்றும் . காலி என்றால் ஒன்றும் இல்லை என்றும் மட்டுமே சிந்திக்கிறோம். கால் காலி என்ற இரு சொற்களும் வேறு பொருளில் வழங்கப்பட்டதால் அதன் அறிவியல் பொருளும் விளங்காமல் போயிற்று.  புட்டி(குடுவை) காலியாக இருக்கிறது என்றால் ஒன்றும் இல்லை  என்றுதான் பொருள் வழங்கினோம் நாம். ஆனால் இன்றைய அறிவியல் கூறுவது காலியாக என்றால் இயல்பில் அது காலி இல்லை அங்கே காற்று இருக்கிறது என்று ஆய்வில் உணர்த்துகிறது. ஆனால் பண்டைய தமிழில் கால் என்றால் காற்று என்று பொருள் காலியாக இருக்கிறது என்றால் காற்று இருக்கிறது என்று மிகச்சரியாக பொருளுணர்த்துகிறது தமிழ். இன்றைய ஆய்வில் உணர்ந்த செயலை ஒற்றைச்சொல்லில் சரியாக உணர்த்துமென்றால் அது மிகவும் வியப்பாக இருக்கிறது.   தமிழில் இருந்து பிரிந்த தெலுகு, கன்னடம் மற்றும் மலையாளம் மொழிகளில் இன்றளவும் காலி என்றால் காற்று என்று பொருள் வழங்குகிறது. சிலப்பதிகாரத்தில் காலதர் என்ற சொல்லுண்டு . இதற்கு பொருள் என்னவென்றால் காற்று செல்லும் வழி (ஜன்னல்).   இன்றைய அறிவியல் உணர்த்தும் பண்புகளை அன்றாடம் பயன்படுத்தும் சொல்லில். இது ஆய்வு செய்யாமலோ அதன் பண்பு புரியாமலோ வைக்கப்பட்டதாக தெரியவில்லை. இந்த சொல்லை காலப்போக்கில் வேறு பொருளில் வழங்கியதால் எவ்வளவு பெரிய அறிவியல் செயல்பாட்டை அறியாமல் இருந்திருக்கிறோம். நாம் எளிதில் கண்டுபிடிக்கவேண்டிய கண்டுபிடிப்புகளை வேறு நாட்டவர் கண்டுபிடிக்க வேடிக்கை பார்க்கிறோம். இந்த சொல்லின் பொருள் உணர்ந்து இந்த கண்டுபிடிப்பை நாம் வழங்கியிருந்தோம் என்றால் நாம் எவ்வளவு வளம் பெற்றுஇருப்போம். காலன் என்கிற சொல்லுண்டு காலன் என்றால் உயிரை எடுப்பவன் என்று பொருள். உயிரின் அடிப்படையாகிய காற்றை முற்றிலும் நிறுத்துவதால் இந்தப்பெயர் கொண்டு வழங்கப்படுகிறது.  காளி என்பது பாலைவன தெய்வம்  என்று தமிழ் இலக்கியங்கள் கூறுகின்றன. பாலைவனம் காலியாகத்தான் இருக்கும். பாலைவனத்தில் மணலும் சூறாவளி காற்றும் மட்டுமே அதிகம். இந்த ஒற்றுமை இயல்பாக நடந்ததுபோல் தெரியவில்லை. காலி என்றால் கருமை என்று பொருள் உரைக்கிறார்கள் அதனாலேயே காளியை கறுப்பு உருவமாக வழங்குகிறோம்.  கருந்துளைகளைப்பற்றி இன்றைய அறிவியல் பேசத்  தொடங்கியிருக்கிறது. கருமையும் காற்றும் ஒன்றென்பதால் கருந்துளைகளின் ஊடாக காற்று பெருமளவில் சுழன்று கொண்டிருக்கலாம் அதுவே உயிர் உருவாக்கத்திற்கு அடிப்படையாக இருக்கலாம் இது  ஆய்வு செய்யப்படவேண்டியது.    உட்காருதலும் அமர்தலும்.   உட்கார் என்றால் நமக்கு நினைவுக்கு வருவது நாற்காலியிலோ தரையிலோ அமர்வதுதான் அதைத்தாண்டி வேறு சிந்திப்பதில்லை. உடலினுள் ஆர். ஆர் என்றால் இயக்கத்தை வழிப்படுத்துதல் . உள் ஆர் என்றால்   உள் உறுப்புகளின் இயக்கத்தை வழிப்படுத்துதல். தாறுமாறாக இயங்கிக்கொண்டிருக்கும் உடல் அணுக்களின் இயக்கத்தை வழிப்படுத்துதல்.  ஆறு என்றால் தாறுமாறாக ஓடிக்கொண்டிருந்த அருவி நீர் ஒரு வழிப்பட்டு  ஓடுவது.  ஆற்றுப்படை என்றால் வழிப்படுத்துதல் முருகாற்றுப்படை முருகனை நோக்கிய பயணத்தின் வழிப்படுத்துதலை சொல்வது.    உட்கார் என்றால் அமர் என்கிற பொருளுண்டு. விளக்கை அமர்த்து என்பது நடைமுறை. விளக்கின் இயக்கத்தை நிறுத்து என்று பொருள்படும்.. அதேபோல் அமரர் என்கிற சொல்லும் உண்டு இது இறந்தவர்களை குறிக்கும் சொல். ஒருமனிதரின் உடல் இயக்கங்கள் முற்றிலும் இல்லாது போவதால் இந்தச்சொல்லில் வழங்கப்படுகிறது. ஆகையால் ஆர் என்றால் இயக்கம் குறைத்தல். அமர் என்றால் இயக்கம் முற்றிலும் அற்றுப்போதல். உட்காரையும் அமர்த்தலையும் ஒரே பொருளில் வழங்குவது தவறு.  உட்கார் என்றால் குந்து என்று ஊர்களில் வழங்குவதும் உண்டு. குந்து என்றால் குறைந்து என்று பொருள். நீட்டுதல் குறைத்தல். எழுந்து நிற்கும் பொழுது நீண்டு இருப்போம். உட்காரும்பொழுது குறைந்து இருப்போம். குந்து மருவி குறைந்து என்றாகி இருக்கிறது. புற செயல்பாடுகளை வைத்து இந்தச்சொல்லை பயன்படுத்துகிறோம். ஆனால் உட்கார் அவ்வாறு இல்லை அது ஆழ்ந்து உள் உறுப்புகளின் செயல்பாடு  அறிந்து உருவாக்கிய சொல்லாக தெரிகிறது.  வேகமாக ஓடும்பொழுதோ, நடக்கும்பொழுதோ உள் உறுப்புகளின் இயக்கம் அதிகமாவதை காண முடியும் அதனால் உடலின் வெப்பம் அதிகரித்து வியர்வை துளைகளில் வெளியேறுவதை காண்கிறோம்.  வெப்பம் அதிகமாக இருந்தால் ஆரவைக்கிறோம். கொதிநிலையில் அணுக்களின் இயக்கம் அதிகமா இருக்கும். ஆரும் பொழுது அவ்வியக்கம் குறைகிறது அதேபோல் உட்காரும்பொழுது உள் உறுப்புகளின் இயக்கம் இயல்பாகவே குறைகிறது. குறைந்து சாதாரண நிலைக்கு மாறுகிறது அதனால் வியர்வை நின்று விடுகிறது. இதை சரியாக உணர்த்துகிறது இந்த சொல்.    கொதிநிலையில் அணுக்கள் கிளர்ந்து இருக்கும் புற செயற்ப்பாடு அவற்றை பாதிக்காது. அதுவே அதிக சூட்டில் அணுக்கள் அழிவுறுவதும் நடந்தேறும். அதனாலே படபட நிலையில் நம்மால் எதையும் சரியாக செய்ய முடிவதில்லை. சரியாக கவனத்தில் கொள்ளமுடிவதில்லை.   ஆனால் ஆர்ந்த நிலையில் எந்தவொரு செயலை செய்யும் பொழுது அது ஆழ் மனதில் பதியும் வண்ணம் நடந்தேறுகிறது. புற செயல்பாடுகளை உள்வாங்கி அதை பதியச்செய்யவும் செய்கிறது அணுக்கள். இதையே உள்ளார்ந்து செய் மற்றும் படிக்கும்போது உள்ளார்ந்து படி என்று உரைத்தார்கள் நமது முதியவர்கள்.  வெப்ப விளைவுகளை உடல் என்னும் கருவி கொண்டு எளிதில் உணரமுடியும் அதைவைத்து புதிய கண்டுபிடிப்புகளை செய்ய இயலும்.      செல்வமும் அதன் நகர்வும்.   செல்வம் என்றால் சொத்து அது அடுத்த தலைமுறைக்கும் வேண்டும் என்று ஓடி ஓடி உழைக்கிறோம் அதை சேர்க்கிறோம் ஒன்றை மறந்து, எச்செல்வம் எத்தகையதாயினும் அது அழிந்தோ மற்றவரிடமோ செல்லும் என்பதை உணர்த்துகிறது. செல் + அம்     சல் -> செல் என்றால் நகர்தல் ஒருவரிடம் இருந்து மற்றவரிடம் செல்வது. அம் என்றால் பெரிய மதிப்புமிக்க என்று பொருள். பெரிய மதிப்பு மிக்க பொருளாகிய சொத்துக்கள் வேறு ஒருவரிடம் போய்ச்சேரும். செல்வத்துக்கெல்லாம் செல்வம் செவிச்செல்வம் என்பது வள்ளுவன் கூற்று இதுவும் அழிந்து போகும். சல்  என்பது வேர்ச்சொல். சல் என்கிற சொல்லில் இருந்து பல வேர்ச்சொற்கள் உருவாகின சல சல -> நீர் நகரும் ஒலி  , செல் -> நகர்வை குறிக்கிறது , சீல் சலம் -> நீரை குறிக்கிறது. இவ்வாறாக ஒவ்வொரு சொல்லும் அதன் செயல்பாடை சரியாக உணர்த்துகிறது. செல்வம் நிலை இல்லாதது என்பதை சரியாக உணர்த்துகிறது தமிழ்.   அனுமதியும்  அளவீடும்.   அனுமதி என்றால் நாம் சிந்திப்பது என்ன? அனுமதி என்றால் எதையும் செய்ய விடுவது அல்லது உள்ளே வரச்சொல்வது என்று தான் சிந்திப்போம் அதை தாண்டி வேறு சிந்திப்பதில்லை.   அனு என்றால் சிறிய என்று பொருள். மதி என்றால் அளவிடு என்று பொருள். அனுமதி என்பது சிறிய அளவீடு என்று பொருள். ஒருவரை அனுமதிக்கும் பொழுது நல்லவரா கெட்டவரா அல்லது உள்ளே விடலாமா வேண்டாமா என்கிற அளவீடுகள் இயல்பாகவே நமக்குள் நடக்கிறது.  இந்த நுண்ணிய செயல்பாடு அறிந்து இந்த சொல் உருவாக்கப்பட்டிருக்கிறது. மதி என்கிற சொல் மா என்கிற வேர்ச்சொல்லில் இருந்து உருவானது. மா என்பது நில அளவைக்குறிக்கும். மா வில் இருந்துதான் ஓசையை அளக்கக்கூடிய மாத்திரை உருவானது.  மதி என்று முடியும் சொற்கள் பல அவை அனைத்துமே அளவை குறிக்கும். நிம்மதி , சம்மதி , வெகுமதி , ஏற்றுமதி மற்றும்  இறக்குமதி. அணு என்பது மூன்று சுழி ‘ணு’ கொண்டு வழங்கப்படுகிறது ஆனால் இந்த அனுமதி என்கிறசொல் இரண்டு சுழி ‘னு’ இப்படி இருக்க அனு எப்படி சிறிய என்கிற பொருள்படும் என்கிற கேள்வி இயல்பாக எழலாம். சொல்லின் பொருள் உணர்த்த ஒலிவடிவம்தான் முதன்மையானது. அது வரிவடிவம் பெரும்பொழுது மாறுபாடுகளை குறிப்பதற்காக எழுத்து முறைகளை மாற்றி அமைத்திருக்கிறார்கள். சான்றாக நுனை அல்லது முனை இருசொற்களும் ஒரே பொருளை குறிக்கிறது. அரி அல்லது அறி இந்த இரண்டுமே பகுத்தல் என்கிற கருப்பொருளை கொண்டுள்ளது. இவ்வாறாக ஒரு சிறு எழுத்து மாறுபாட்டால் சொல்லின் கருப்பொருள் மாறுவதில்லை.   சுவடியும் அழுத்தமும்.   சுவடி என்பது அடையாளத்தை குறிக்கும் சொல். அது ஒரு ஆவணம். தலைமுறைகளை தாண்டி நிற்கும் மிகப்பெரிய அடையாளம். வடு என்பது புண் வந்த தடம். புண் வந்து செல்களின்மீது அழுத்தம் ஏற்பட்டு அதன் ஊடாக வந்த தடம்.   அதேபோல் சுவடு என்பது பாதம் பதிந்த இடம் பாதத்தால் அழுத்தப்பட்ட இடம். இது ஒரு அடையாளம். நாம் தமிழகத்தில் நிறைய தொல்லியல் தடங்களை பார்க்கமுடிகிறது.   அதேபோன்று சுவடியும் ஆணி கொண்டு ஓலையின் மீது ஒரு அழுத்தம் கொடுத்து எழுதப்பட்டதே. எவ்வாறு சுவடு பல தலைமுறைகள் தாண்டி அறிவை வழங்கும் பெரிய அடையாளமோ அதேபோன்று சுவடியும் இருக்கிறது.           பர மக்களும் பார் போற்றும் தமிழும்   தமிழ் சிந்தனையாளர் பேரவை வெளியிட்ட Cameroonians Speak Tamil காணொளியில் ஒரு முதியவர் தர பர்பரா இதற்கு தரை வரவர என்று காஞ்சு போச்சு என்று விளக்கம் கொடுக்கப்பட்டுலுள்ளது. வர வர என்பதை விட பரபர என்பதே சரியானது. அந்த முதியவர் சரியாக தமிழ் பேசுகிறார். அது ஆகச்சிறந்த தமிழ்ச் சொல். உழைக்கும் மக்களல்லவா அதனால்தான் மிகச்சரியான தமிழில் பேசுகிறார்கள். படித்தவனே திரிபடைந்த தமிழில் பேசுகிறான். திரிபடைத்தல் தொண்மையை இழக்கச்செய்யும். பர இது சம்ஸ்கிருத சொல் அல்ல. தலை காஞ்சு இருந்தால் அது பரட்டை  காஞ்ச கருத்த உடலை கொண்டவர்கள் பர மக்கள்.  பர(தேச skt) மக்கள் பர(தேசி skt).  நெருப்பில்  காயவைத்து இசைத்த கருவி பறை.  நன்றாக வெய்யில் அடிக்கும் இடமே பரம். பர மக்களின் தேசம் பர(தேசம் skt ). (பாரதம் என்று திரிந்து உள்ளது) பரம் என்றால் மேலிடம் என்று பொருள். (எ. கா.) அகிற்புகை . . . பரங்கொடு போகி (இரகு. நகர. 4). Oxforddicionaries.com என்கிற அகரமுதலில்  பர என்கிற சொல்லுக்கு பெரும் பரப்பளவைக் கொண்டிருத்தல். ‘இமயம்முதல் குமரிவரை பரந்திருக்கும் இந்தியா’. என்று பொருளுரைக்கின்றது. பரதேசம்  செல்கிறேன் என்று சொல்வார்கள் இது காய்ந்த நிலத்திற்கு செல்கிறேன் என்று பொருள். பரம நிலத்தின் மீனவன் பரதவர்.  இந்த பரம மக்கள் பாமர மக்களாக மாற்றப்பட்டுள்ளனர். இந்த பரம நிலத்தின் ஆதி பகவன் பரமன்.  காய்ந்த நிலம் என்பதால் சரியான நீர் மேலாண்மை செய்யப்பட்டது. சோளம், கம்பு , வரகு , குதிரைவாலி ,கொள்ளு போன்ற சிறுதானிய பயிர்கள் பயிரிடப்பட்டன. இதை  குறைவான நீரில் விளைய வைக்கமுடியும். காய்ந்த நிலம் என்பதால் பஞ்சம் அடிக்கடி நிகழ்கிறது அதனை சமாளிக்கத்தான் உணவை மதிப்புக்கூட்டி பயன்படுத்தினோம். வத்தல் , வடகம் , உப்புக்கண்டம், கருவாடு. இந்த மதிப்புக்கூட்டுத்தான் உலகத்தின் மிகச்சிறந்த மதிப்புக்கூட்டல். எந்தவொரு வேதிப்பொருளும் சேர்க்காமல் உணவை நம்மால் ஆறு அல்லது ஏழு மாதங்களுக்கு பயன்படுத்தமுடிகிறது. இதே போல் இம்மக்கள் பேசும் மொழியில் பல திரிபுகள். உழைக்கும் மக்களலே மிகச்சரியான தமிழில் பேசுகிறார்கள். படித்தவனே திரிபடைந்த தமிழில் பேசுகிறான்.   ஓகரம் உகரமாக திரிவது சரியான தமிழ் அல்ல   ஓகரம் உகரமாக திரிந்து இருக்கிறது. இந்த ஆய்வுக்கு தூண்டியவர் மிகுமதிப்புடைய முனைவர்  கு.வே.பாலசுப்பிரமணியன்.  ஓர் என்பது ஊரக திரிந்து இருக்கிறது. ஓர் என்றால் ஓர்ந்து(கூடி) இருத்தல்.  ஒரவு என்பது உரவு என்று  திரிந்து இருக்கிறது. ஒத்து இருத்தல் ஒரவு.  ஒரசு என்பது உரசு (உராய்தல்) என்று  திரிந்து இருக்கிறது. இரண்டு பொருள் ஒன்று சேரும்பொழுதுதான் ஓராய்வு உண்டாகும்.  ஒத்து என்பது உத்து (உற்று) என்று திரிந்து இருக்கிறது. கிட்டே நெருங்கி அதை ஓட்டிப்பார்.  ஒடமை என்பது உடமை என்று திரிந்து உள்ளது. ஒருவரை சேர்ந்த பொருள்கள்.  ஒலகம் என்பது உலகமாக திரிந்து இருக்கிறது. பல்லுயிர் கூறுகளை கொண்ட சேர்க்கையே ஒலகம்.  ஆச்சு(தும்மல்) -> மூச்சு. = ஆச்சு + மூக்கு. மூக்கின் செயல் மோத்தல். இது முகர்தல் என்று திரிந்து இருக்கிறது.  ஆகையால்  ஓகரம் உகரமாக திரிவது சரியான தமிழ் அல்ல இது தொண்மையை இழக்கச்செய்யும். ஓகரம் ஓகரமாக இருப்பதே தொண்மையை காக்கச்செய்யும். எல்லாச்சொல்லும் அதன் பொருளையும் அதன் மரபையும் அறிவியலையும் உணர்த்திக்கொண்டுதான் இருக்கிறது இதையே தொல்கப்பியம் சொல்லுகிறது   எல்லா சொல்லும் பொருள் குறித்தனவே நாம்தான் உள்ளார்ந்து படிக்கவேண்டும் அதன் அறிவியல் உணரவேண்டும்.           இந்தத்  தொகுப்பைச் செய்ய உதவியவர்களுக்கு நன்றி நன்றி - புலவர் இரா.இளங்குமரனார் - முனைவர்  கு.வே.பாலசுப்பிரமணியன். - முனைவர் கு. ஞானசம்பந்தன் - முனைவர் மு. இளங்கோவன். - முனைவர் பாண்டியன் தமிழ் சிந்தனையாளர் பேரவை - சொல்லாய்வறிஞர் ப. அருளி - முனைவர் கு. அரசேந்திரன். - முனைவர் கோ. ஞானச்செல்வன் - முனைவர் வீ.அரசு. - திரு திருமாவளவன் மலேசியத் தமிழ் நெறிக் கழகம் - இரா. திருச்செல்வனார் மலேசியத் தமிழ் நெறிக் கழகம்  - மொழிஞாயிறு தேவநேய பாவானர்