[] வெள்ளை அடிமைகள் ஜோதிஜி. திருப்பூர் மின்னூல் வெளியீடு : http://FreeTamilEbooks.com சென்னை வெள்ளை அடிமைகள் Copyright © 2014 by Creative Commons Attribution-Non Commercial-No Derives 3.0 Un ported License. This book was produced using PressBooks.com. 1 வரைபடம் [] [] (இந்திய சுதந்திரத்திற்கு முன்பு உள்ள வரைபடம்) [] (இந்தியா மொழிவாரி மாநிலங்களாக பிரிக்கப்பட்ட பின்பு) Contents - வரைபடம் - வெள்ளை அடிமைகள் - உரிமை - என் பார்வையில்……… - பகுதி ஒன்று - 1. கிராம பொருளாதாரம் -- அழிந்த கதை - 2. வாழ்ந்து கெட்டவர்களின் சரித்திரம் - 3. பிழைப்புத்தேடிச் சென்று பிழையாய் மாறியவர்கள் - 4. திரைகடலோடியும் திரவியம் தேடிய கதைகள் - 5. நான் வெளிநாட்டு தமிழன் -- கதையின் தொடக்கம் - 6. பண்ணையடிமைகள் - 7. தீண்டத்தகாதவர்கள்--மேட் இன் இந்தியா - பகுதி இரண்டு - 8. புள்ளி ராஜாக்கள் ஆளும் இந்தியா - 9. பூலோக சொர்க்கம் -- அமெரிக்கா - 10. நதி நீர் - கனவுத் திட்டமா? - 11. ஆட்டம் முடிந்தே போய் விடுமா? - 12. நன்றி - 13. இந்தியா -- பணக்காரர்களின் உலகம் - 14. கொள்ளையனே வெளியேறு - 15. சீனா -- மாயவலையும் மந்திர வேலைகளும் - 16. தற்கொலை தந்தை - 17. வெள்ளைத் தோல் சிந்தனைகள் மாறுமா? - Free Tamil Ebooks - எங்களைப் பற்றி 2 வெள்ளை அடிமைகள் []   வெள்ளை அடிமைகள் ஜோதிஜி திருப்பூர் மின்னஞ்சல் – powerjothig@yahoo.com வகை – வரலாறு வெளியீடு : த.ஸ்ரீனிவாசன் http://FreeTamilEbooks.com மின்னஞ்சல் – tsrinivasan@gmail.com எல்லாக் கருத்துக்களும் நூல் ஆசிரியருடையவையே. உரிமை Creative Commons License 3 உரிமை This eBooks is licensed under a Creative Commons Attribution-Non Commercial-No Derives 3.0 Un ported License http://creativecommons.org/licenses/by-nc-nd/3.0/deed.en_US You are free to: Share — copy and redistribute the material in any medium or format The licensor cannot revoke these freedoms as long as you follow the license terms. Under the following terms: Attribution — you must give appropriate credit, provide a link to the license, and indicate if changes were made. You may do so in any reasonable manner, but not in any way that suggests the licensor endorses you or your use. Non Commercial — you may not use the material for commercial purposes. http://deviyar-illam.blogspot.in/ No Derivatives — If you remix, transform, or build upon the material, you may not distribute the modified material. No additional restrictions — You may not apply legal terms or technological measures that legally restrict others from doing anything the license permits. At the end of the book, add the contents from the page 4 என் பார்வையில்……… என் நாடு இந்தியா. நான் இந்தியன் என்று சொல்லிக்கொண்டு இந்த மின் நூலை வாசிக்கத் தயாராகும் உங்களிடம் சில கேள்விகள். இந்தியாவைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரைக்கும் உள்ள மொத்த இந்திய நிலபரப்பு குறித்து உங்களுக்கு ஏதும் தெரியுமா? இங்குள்ள மொழிகள், பலதரப்பட்ட கலாச்சாரம் குறித்து உங்களுக்கு முழுமையான புரிதல் உண்டா? இந்தியாவின் கிழக்கு மேற்காக, தெற்கு வடக்காக பயணப்பட்டதுண்டா? குறைந்தபட்சம் பள்ளிக்கூடங்களில் மனப்பாடம் செய்வதற்காக படித்த இந்திய சரித்திரத்திற்கு அப்பாற்பட்டு புத்தகங்கள் வாயிலாக இந்த நாட்டைப் பற்றி புரிந்து கொள்ள முயற்சித்ததுண்டா? 90 சதவிகித இந்திய மக்கள் நிச்சயம் இல்லை என்றே சொல்லக்கூடும். இது தான் உண்மை. இப்போது மட்டுமல்ல? இங்கு வாழ்ந்து விட்டு மறைந்த, வாழ்ந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு தலைமுறையுமே இந்தியாவை முழுமையாக புரிந்து கொள்ளாத, உணர்ந்து கொள்ளாத இந்தியனாகவே வாழ்ந்து மறைகின்றனர். உலகில் உள்ள மற்ற நாடுகளை விட ஆதி காலம் தொட்டு பண்பாட்டு கலாச்சாரத்தின் உச்சமும், ஆச்சரியமும் அதிசயமும் அதிகம் நிறைந்துள்ள இந்த நாட்டைப் பற்றி பலமுறை யோசித்துள்ளேன். குறிப்பாக தமிழர்களின் வரலாற்றை அதிகம் படித்துள்ளேன். இந்த வாசிப்பு இடைவிடாத பயணம் போல இன்று வரையிலும் போய்க் கொண்டேயிருக்கின்றது. இன்னமும் முழுமையடைந்தபாடில்லை. நான் படித்த புத்தகங்கள் வாயிலாக உணர்ந்தவற்றை வலைபதிவில் ஒவ்வொரு சமயத்திலும் எழுதியவற்றை இங்கே தொகுத்துள்ளேன். நான் இன்று வரையிலும் டெல்லி சென்றதில்லை. இருபது வயதிற்கு பின்பு தான் சென்னையைப் பார்த்தேன். இந்தியாவின் சில பெருநகரங்களில் குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே தொழில் முறை பயணமாக பயணித்துள்ளேன். காரணம் தமிழ்நாட்டிற்குள் நான் பயணிக்க வேண்டிய இடங்களே பாதிக்கும் மேற்பட்டு உள்ளது. இன்று வரையிலும் பத்திரிக்கைகள் தரும் செய்திகள் என் மனதில் இருக்கும் இந்தியாவின் உருவமும் அதன் பிரம்மாண்டமும். வாசிப்பு அனுபவம் இல்லாதவர்கள் கடைசி வரைக்கும் வசிக்கும் இடம் இந்தியா என்ற எண்ணத்தில் காலம் முழுக்க வாழ்ந்து முடித்து விடுகின்றனர். நவீன வசதிகள் உருவாகாத காலங்களில் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பயணிக்க வாய்ப்பு இல்லாமல் வாழ்ந்த மக்களைப் போல தற்பொழுது வசதிகளும் வாய்ப்பும் இருந்தும் அன்றாட அடிப்படைக் கடமைகளில் இருந்து விடுபட முடியாமல் தவிக்கும் சாதாரண நடுத்தரவர்க்க வாழ்க்கை வாழ்பவனின் சார்பாளனின் நானும் ஒருவன். இது தான் இந்த நாட்டின் பலமும் பலவீனமும். கன்யாகுமரியில் வாழ்பவருக்கு காஷ்மீர் குறித்து எதுவும் தெரியாது. காஷ்மீரில் வாழ்பவருக்கும் கன்யாகுமரி மக்களின் வாழ்க்கை குறித்து சொன்னாலும் புரியாது. இவர்கள் இருவருக்கும் வட கிழக்கு மாநிலங்களான திரிபுரா, மணிப்பூர் குறித்து முழுமையாகவே புரியாது. ஆனாலும் இந்தியாவில் 28 மாநிலங்கள் (தற்போது ஆந்திராவில் உருவாகப்போகும் தெலுங்கானாவைச் சேர்த்தால் 29) மற்றும் 7 யூனியன் பிரதேசங்கள் சேர்த்து கற்பனையில் கூட நினைத்தே பார்க்க முடியாத பிரம்மாண்ட தோற்றம் கொண்ட இந்தியாவை இந்த மின் நூல் வாயிலாக கழுகுப் பார்வை பார்த்துள்ளேன். இந்த இடத்தில் நீங்கள் மற்றொன்றையும் மனதில் வைத்திருக்க வேண்டும். இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்பு பாகிஸ்தான், தற்போதுள்ள வங்க தேசம் என்று மொத்தமாக ஆங்கிலேயர்களின் ஆளுமையில் இருந்தது. கொஞ்சம் கற்பனையில் கொண்டு வந்து பாருங்கள்? இத்தனை பெரிய நிலப்பரப்பை ஆங்கிலேயர்கள் எப்படி ஆண்டு இருப்பார்கள்? நான் படித்த பலதரப்பட்ட புத்தகங்கள் மூலம் உணர்ந்த தமிழர்கள், இந்தியா என்பதனையும் கடந்த பத்தாண்டுகளில் காங்கிரஸ் அரசாங்கம் பொறுப்புக்கு வந்த பிறகு இந்தியாவில் உருவான மாறுதல்களையும் ஒரே நேர்கோட்டில் யோசித்துப் பார்த்த போது ஒரு உண்மை தெரிந்தது. அன்று ஆங்கிலேயர்களுக்கு அடிமையாக இருந்தோம். இன்று பொருளாதார சீர்திருத்தங்கள் என்ற பெயரில் மன்மோகன் சிங் இந்திய நாட்டை மீண்டுமொரு அடிமை நாடாக மாற்ற முயற்சித்து வெற்றி கண்டிருப்பதையும் உணர்ந்து கொள்ள முடிந்தது. நாம் என்றுமே வெள்ளையருக்கு அடிமைகளே. இந்த மின் நூலில் சிலவற்றைப் பற்றி மட்டுமே பேசியுள்ளேன். வரலாறு என்பதன் உண்மையான அர்த்தம் “வந்த பாதை” என்பதே ஆகும். ஆனால் நாம் வந்த பாதையைப் பற்றி யோசிப்பதே இல்லை. எப்பொழுதும் எதிர்காலத்தைப் பற்றியே அதிகம் யோசிக்கின்றோம். ஆள்பவர்களும் “கனவு காணுங்கள்” என்று நம்மை உற்சாகப்படுத்துவதில் தான் கவனமாக இருக்கின்றார்கள். 2009 ஜுலை முதல் கடந்த நாலரை வருடங்களாக தேவியர் இல்லம் வலைப்பதிவில் எழுதிய முக்கியமான கட்டுரைகளை மின் நூலாக மாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில், இது எனது இரண்டாவது மின் நூலாகும். முதல் மின் நூல் “ஈழம் – வந்தார்கள் வென்றார்கள்” வெளியிட்ட இரண்டு வாரத்தில் 1400க்கும் மேற்பட்டவர்கள் தரவிறக்கம் செய்து மகத்தான ஆச்சரியத்தையும் ஆதரவையும் தந்த காரணத்தால் இந்த மின் நூலையும் உருவாக்கும் எண்ணம் உருவானது. வாசிக்கும் உங்களுக்கு என் நன்றி. இதை நீங்கள் வாசிக்கும் பொழுது சுட்டிக்காட்டியுள்ள சம்பவங்கள், நிகழ்வுகள் நடந்த காலகட்டத்தையும் மனதில் இருத்திக் கொள்ளவும். ஒவ்வொரு சமயத்திலும் வலை பதிவில் எழுதிய கட்டுரை என்பதால் காலமாற்றத்தை கணக்கில் கொள்ளவும். இதை படித்து முடித்து விட்டு இது குறித்து தேடுதல் மனம் கொண்டு உங்களால் மேற்கொண்டு பலதரப்பட்ட இந்தியாவின் வரலாற்று சம்பவங்களை நீங்கள் தேடிப்படிக்க வேண்டும் என்பதே என் நோக்கம். இதனை குறிப்புகளாக எடுத்துக் கொள்ளுங்கள். இந்தியா என்பது விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டு வளர்ந்த நாடென்பதால் அது சார்ந்த படங்களை இந்த மின் நூல் முழுக்க அங்கங்கே கொடுத்துள்ளேன். இந்த மின் நூல் முக்கியமானதாக நீங்க கருதினால் உங்கள் நட்பு வட்டத்தில் இதனை பகிர்ந்து கொள்ளுங்கள். பலருக்கும் சென்று சேர உதவுங்கள். உங்கள் நேரம் கருதி எளிமையாக குறிப்பிட்ட விசயங்களைப் பற்றி மட்டுமே எழுதியுள்ளேன். நன்றி. நட்புடன் ஜோதிஜி. திருப்பூர் தேவியர் இல்லம். 29.01.2014 மின் அஞ்சல் முகவரி – powerjothig@yahoo.com வலை பதிவு முகவரி – http://deviyar-illam.blogspot.in/ [pressbooks.com] 1 பகுதி ஒன்று 1 கிராம பொருளாதாரம் -- அழிந்த கதை [] []   2003 டிசம்பர் 14 அமெரிக்க படைகளிடம் மறைந்த ஈராக் அதிபர் சதாம் பிடிபட்ட தினம். அமெரிக்கா ஈராக் மேல் படையெடுத்துச் சதாம்ஹுசேனை எலிப் பொந்துக்குள் இருந்து தூக்கிய காட்சியைத் தொலைக்காட்சியில் நீங்கள் பார்த்து இருக்கக் கூடும். அதன் பிறகு என்ன நடந்தது? ஒரு பொம்மை அரசு உருவானது. அமெரிக்காவின் கார்ப்ரேட் கணவான்கள் அத்தனை பேர்களும் உள்ளே நுழைந்தார்கள். அத்தனை ஒப்பந்தங்களும் உள்ளே வந்து இறங்கத் தொடங்கும். போரினால் பாதிக்கப்பட்ட நாட்டைப் புதிதாக நிர்மாணம் செய்கின்றோம் என்று தொடங்குவார்கள். இறுதியாக நாட்டில் உள்ள அத்தனை வளங்களையும் சூறையாடி படையெடுப்பில் பங்கெடுத்த நாடுகள் பங்கு போட்டுக் கொண்டு செயல்படுவதை பார்த்துக் கொண்டு தானே இருந்தோம். இதே தான் இந்தியாவில் 18 ஆம் நூற்றாண்டில் பிரிட்டனும் செய்தது. ஆனால் இது போன்ற அப்பட்டமான நடவடிக்கைகளில் இறங்காமல் சுற்றி வளைத்து இந்தியாவின் கழுத்தை நெறித்தார்கள். படிப்படியாக இறுக்கினார்கள். இந்தியாவின் கிராம பொருளாதாரத்தைச் சிதைத்து மக்களை வறுமையில் உழலவைத்து வாழ்க்கையின் ஓரத்திற்கே விரட்டி அடித்தனர். வேறு வழியே தெரியாத மக்களும் அடிமையாக வாழ பலநாடுகளுக்கும் புலம் பெயரத் தொடங்கினார்கள். இதில் ஒரு மகத்தான ஆச்சரியம் என்னவென்றால் தொடக்கத்தில் இந்தியாவின் உள்ளே வந்த வெள்ளையர்கள் எவரும் பிரிட்டன் அரச வம்சத்தை இங்கே நிலைபெறச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் வந்தவர்கள் அல்ல. வந்தவர்கள் அத்தனை பேர்களும் வியாபாரிகளே. [] அதிக லாபம். மேலும் லாபம் என்ற நோக்கத்தில் தங்களது வியாபாரத்தில் மட்டும் கவனம் செலுத்தினார்கள். காலம் செய்த கோலம் இத்தனை பெரிய இந்திய நாடு தானாகவே வெள்ளையர்களிடம் அடகு வைத்தது போல் மாறிப் போனது. இந்தியாவில் ஒவ்வொரு காலகட்டத்திலும் வந்து போன படையெடுப்புகளுக்கும், பிரிட்டன் நாட்டில் இருந்து வெள்ளையர்களுக்கும் பெரிய வேறுபாடு உண்டு என்பதை நாம் மறந்து விடக்கூடாது. நோக்கத்தில் ஒரு வேறுபாடு இருந்தது. மொகலாயர்கள் இங்கே மக்களிடமிருந்து வசூலித்த பணமெல்லாம் இந்தியாவிற்குள் தான் சுற்றி வந்தது. ஆனால் வெள்ளையர்களுக்கு இங்கேயுள்ள பணம் தங்களது நாட்டுக்குச் செல்ல வேண்டிய அவசியமாக இருந்தது. முதலில் வியாபாரம் அதன் மூலம் ஆதிக்கம் கடைசியில் சுரண்டல். கச்சாப்பொருட்களைத் தாங்களே மொத்தமாக வாங்கித் தேவைப்படும் இடங்களுக்கு வினியோகம் செய்வது. இடைத்தரகர்கள் எந்த இடத்திலும் இல்லாமல் எல்லா இடங்களிலும் தாங்களே இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்படத் தொடங்கினர். குனிய வைத்துக் கொண்டே குத்துவது. அதைத்தான் கடைசிவரைக்கும் இந்தியாவில் செய்தார்கள். இது போன்ற படிப்படியான சுரண்டல்களின் மூலம் இந்தியாவின் உயிர்நாடியான கிராமப் பொருளாதாரத்தை எவரால் காப்பாற்ற முடியும்? அப்போது வெள்ளையர்கள் கொண்டு வந்த பல திட்டங்கள் வெளியேயிருந்து பார்ப்பதற்குக் கவர்ச்சிகரமாகவே இருந்தது. ஆனால் உள்ளே நுழைந்து பார்த்தால் பீதியைத் தரும். பல கோடி மக்களுக்குச் சோறு போட்டுக் கொண்டிருந்த கைராட்டினத்தை உடைத்தார்கள். ஓடிக் கொண்டிருந்த தறியை நிறுத்த வைத்தார்கள். பிரிட்டனிலும், மற்ற ஐரோப்பிய தேசங்களிலும் இருந்த கைத்தறி ஆடைகளை நிறுத்தினார்கள். மொத்தத்தில் இந்திய பொருளாதாரத்தில் புழுதிக் காற்றுச் சூறாவளியாக அடித்தது. [] (இந்த கணக்கு தற்போது இந்திய அரசாங்கம் கைத்தறி தொழிலுக்கு கொடுத்துக் கொண்டிருக்கும் மரியாதை) இங்கிலாந்து பருத்தி விளையும் நாடான இந்தியாவிற்குள் பருத்தி துணிகளை இறக்குமதி செய்து ஜவுளி பொருளாதாரத்தையே திக்குமுக்காட வைத்தது. 1812 ஆம் ஆண்டு முதல் 1836 ஆம் ஆண்டு வரைக்கும் பிரிட்டனில் இருந்து இந்தியாவிற்கு அனுப்பப்பட்ட துணிகள் 5200 மடங்கு அதிகமாகியது. 1838ல் இங்கிலாந்திலிருந்து இந்தியாவிற்குள் வந்த மல் மல் என்னும் நைஸ் ரகத் துணி பத்து லட்ச கஜம் தான். ஆனால் அந்தத் துணியை நெய்வதில் பிரசித்தி பெற்றிருந்த டாக்காவின் மக்கள் தொகை ஒன்னரை லட்சத்திலிருந்து இருபதாயிரம் என்ற எண்ணிக்கைக்குக் குறைந்து விட்டது என்றால் மனதிற்குள் கணக்குப் போட்டுக் கொள்ளவும். இந்தியப் பொருளாதாரத்தின் அடித்தளமே குடிசைத் தொழிலே ஆகும். கையால் நூற்பதும், நெய்வதும், கையாலே நிலத்தை உழுவதுமாகவே இருந்தது. இதன் மூலமே ஒவ்வொரு இந்திய குடும்பமும் தன்னிறைவு பெற்றிருந்தது. இங்கிலாந்தின் லங்காஷயர் நகரம் இந்திய நூற்பாலைகளை, நெசவாளர்களை ஒட்டு மொத்தமாக நடுத் தெருவுக்குக் கொண்டு வந்து நிறுத்தியது. வெள்ளையர்கள் விரும்பிய பொருளாதார மாற்றங்களை மிக எளிதில் கொண்டு வந்து சரித்திர புகழ்பெற்ற இந்திய நாட்டைத் தரித்திரமாக மாற்றுவதில் வெற்றி கண்டனர். வெற்றியடைந்த வெள்ளையர்கள் வேகமாகப் பொருளாதார ரீதியாக மேலேறத் தொடங்கினர். தோல்வியைக் கண்ட இந்திய கிராமத்து மக்கள் அத்தனை பேர்களும் வேறு வழியே தெரியாமல் அடிமைகளாக மாறத் தொடங்கினர். இதன் காரணமாக வாழ்ந்தாக வேண்டும் என்ற கட்டாயத்தில் பல்வேறு நாடுகளுக்குப் புலம் பெயரத் தொடங்கினர். ஆனால் ஒரே நாளில் வெள்ளையர்கள் இந்த வெற்றியை அடைந்துவிடவில்லை. இவர்களின் படிக்கட்டுக்கள் ஒவ்வொன்றுக்குப் பின்னாலும் நமக்கு ஓராயிரம் சரித்திரம் தரும் பாடங்களும் படிப்பினைகளும் உள்ளது. இந்தியாவில் இருந்த முகலாயர்களின் பிரதேசத் தளபதிகள் முகலாய மத்திய ஆட்சியைத் துடைத்தொழித்தனர். இந்தத் தளபதிகளை மராட்டியர்கள் அடக்கி ஒடுக்கினர். மராட்டியர்களை ஆப்கானியர் அழித்து முடித்தனர். இவர்கள் ஒருவருக்கொருவர் அடித்துக் கொண்டு சாக வெள்ளையர்களுக்குத் தங்கள் செயல்பாடுகளுக்கு எவ்வித பிரச்சனைகளும் வராமல் இருந்தது. அவர்கள் அடுத்தடுத்த படிகளுக்கு விரைந்தனர். அந்திய படையெடுப்பாளர்கள் இப்படி என்றால் இந்தியாவிற்குள் இருந்தவர்கள் ஜாதியால், மதத்தால் பல்வேறு விதமாகச் சிதறிக் கிடந்தார்கள். இதன் காரணமாக வெள்ளையர்கள் எந்தச் செலவுமில்லாமல் பிரித்தாளும் சூழ்ச்சியைப் பயன்படுத்தி இவர்களை வைத்தே தங்கள் காரியத்தைச் சாதித்துக் கொண்டார்கள். இது போன்ற வழிகளில் சாதித்தவர்கள் இன்றைய நிலையில் வளர்ச்சியடைந்த நாடுகளாக உள்ளது. தொடக்கம் முதல் சண்டையிட்டு தங்களின் பலத்தைப் புரிந்து கொள்ள முடியாதவர்கள் இன்று வரைக்கும் நவீன அடிமைகளாகவே இருக்கிறார்கள். பல் வேறு நாடுகளுக்கும் தங்கள் மூளையை அடகு வைக்க அடிமைகளாகப் போய்க் கொண்டிருக்கிறார்கள். []   2 வாழ்ந்து கெட்டவர்களின் சரித்திரம் சென்ற அத்தியாயத்தில் தமிழர்கள் பிழைப்புக்காகப் புலம் பெயர்ந்து அடிமையாக மாறிய அவலத்தைப் பார்த்தோம். இந்தியாவில் கல்கத்தா முதல் எல்லா மாநிலங்களில் இருந்தும் பல இடங்களுக்குப் புலம் பெயர்ந்தார்கள். முக்கியக் காரணம் வறுமை. ஆனாலும் முன்பின் கேள்விபட்டிராத நாடுகளுக்கு ஆட்டு மந்தைகள் போலவே அழைத்துச் செல்லப்பட்ட அத்தனை பேர்களுமே தமிழர்களாகத்தான் இருந்தார்கள். இப்போது இயல்பாகவே ஒரு கேள்வி நம்முன் எழ வேண்டும். எல்லா வசதிகளும் இங்கு இருந்தது. மன்னர்கள் ஆண்ட நாடிது. கங்கை கொண்டான், கடாராம் கொண்டான் என்று இன்று வரைக்கும் பல மன்னர்களின் புகழ்பாடும் சரித்திர குறிப்புகளும் அவர்களின் பெருமையைப் பறைசாற்றுகின்றது. ஏனிந்த அவலம் உருவானது? அபரிமிதமான மனித சக்திகளும், மற்ற நிலவள, நீர்வள ஆதாரங்களும் இருந்த போதிலும் ஏன் இந்தியாவில் குறிப்பாகத் தமிழர்கள் தங்களின் வாழ்க்கைகாக அடிமையாக மாறினார்கள்? சற்று பின்னோக்கி பார்த்து விட்டு வந்து விடலாம். இன்றைய காலகட்டத்தில் பெட்ரோல் என்ற வஸ்துவுக்காகவும், இன்னபிற தங்களின் சுயலாபத்துக்காவும் அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பா நாடுகள் எந்த அளவுக்குக் கீழ்தரமாக இறங்கி, வலிமை குறைந்த நாடுகளின் மேல் தங்கள் அரசியல் அதிகாரத்தைச் செலுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பதை நாம் கண்கூடாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். [] இதே வேலையைத்தான் பிரிட்டன் அரசாங்கம் அப்போது இந்தியாவில் தொடங்கி வைத்தது. எப்படித் தொடங்கினார்கள் என்பதைப் பார்த்து விட்டு நகரும் போது நமக்கு இந்த அடிமைகள் எப்படி உருவானார்கள் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடியும். ஆரியர், யவனர், சகர், கூர்ஜரர், ஜாட், ஆபிரர், ஹுணர்கள், அராபியர், துருக்கியர் முதல் பின்னால் வந்த எத்தனையோ சிறு சிறு இனங்கள் கால மாற்றத்தில் இந்தியாவிற்குள் வந்தனர். ஒவ்வொருவரும் உள்ளே வந்ததும் முடிந்தவரைக்கும் தங்களது காலணியை உருவாக்கிய போதிலும் அடுத்து வந்தவர்களிடம் ஆட்சியைப் பறிகொடுத்து விட்டு நடையைக் கட்டத்தொடங்கினர். ஆட்சி பறிபோனதும் தங்களை ஒரு இனமாகக் கருதிக் கொண்டு உள்ளே வாழ்ந்து கொண்டிருந்த மக்களுடன் இரண்டறக் கலந்துவிட்டனர். இந்தியா என்பது எப்போதும் போலவே அகண்ட தேசமாகவே இருந்தது. உள்நாட்டுப் போர்கள் முதல் வெளிநாட்டில் இருந்து வந்து யுத்தம் தொடுக்கும் அந்நிய படையெடுப்பாளர்கள் வரைக்கும் ஒவ்வொன்றையும் சந்தித்துக் கொண்டேயிருந்தாலும் அடிப்படை கிராம அமைப்பில் எந்த மாற்றமும் நடந்து விடவில்லை. இங்குப் பசி, பட்டினி, பஞ்சம், புயல் என்று தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் இயற்கை சீற்றங்களுக்கும் பஞ்சமில்லை. மக்களும் பல சமயங்களில் பஞ்சை பராரி போலவே தங்களது வாழ்க்கையை நடத்திக் கொண்டு “இதுவும் கடந்து போகும்” என்பதாகத்தான் வாழ்ந்து கொண்டிருந்தனர். இயற்கை மற்றும் செயற்கை காரணங்களினால் எத்தனை பிரச்சனைகள் இந்தியாவைத் தாக்கிக் கொண்டிருந்தாலும் 19 ஆம் நூற்றாண்டு வரைக்கும் இந்தியாவின் உள்கட்டமைப்புக் கலாச்சாரத்தைப் பெரிய அளவுக்குச் உருவான எந்த மாற்றங்களும் சிதைத்து விடவில்லை என்பதும் உண்மையே. [] ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்னால் இருந்து சுற்றிக் கொண்டே கைராட்டினமும், கைத்தறியும் தொடந்து ஓடிக் கொண்டேதான் இருந்தது. இயக்குவதற்குத் தேவைப்படும் மனித சக்திகளுக்கும் பஞ்சமில்லை. பழைய காலத்தில் ஃபினிஷியன், கிரேக்க, ரோமனிய, அரேபிய வியாபாரிகளின் மூலம் இந்தியத் துணிகளையும், மற்ற உபயோகப் பொருட்களையும் ஐரோப்பா வாங்கிக் கொண்டு விலையுயர்ந்த ரத்தினங்களையும், பல்வேறு விதமான கனிமப் பொருட்களையும் இங்கே கொண்டு வந்து கொடுத்துக் கொண்டிருந்தனர். எல்லாமே பண்டமாற்று முறையில் நடந்த கொண்டிருந்தது. தங்கத்தின் மீதிருக்கும் ஆசை இன்று நேற்றல்ல ஆதிகாலம் தொட்டே இருந்தது. மன்னர்கள் முதல் வேத புரோகிதர்கள் வரை ஒவ்வொருவருக்கும் இருந்த இந்த ஆசைகளே பலரையும் இங்கே வரவழைத்தது. இந்தியாவிற்குள் வந்திறங்கும் ஒவ்வொரு வணிகர்களின் நோக்கமும் பண்டமாற்று முறை மூலம் நல்லபடியாகத்தான் போய்க் கொண்டிருந்தது. ஆனால் நம்ம பிரிட்டன் மக்கள் கெட்டிக்காரர்கள் தானே? வைத்தார்கள் ஒரு பெரிய ஆப்பு. ஒவ்வொரு இடமாகக் கைவைத்து கலகலக்க வைப்பதை விட மொத்தமாக ஒரே இடத்தில் கைவைத்தால் போதும் என்ற முடிவுக்கு வந்தனர். அதைத்தான் செயல்படுத்த தொடங்கினர். இதைப்பற்றியும் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ளச் சில ஆதார சரித்திர குறிப்புகள் இருக்கிறது. 1853 ஜுன் மாதன் 25ல் நியூயார்க் ட்ரிப்யூன் பத்திரிக்கையில் ஒரு கட்டுரை வெளியானது. ஏறக்குறைய இந்தியாவின் சுதந்திர போராட்டத்திற்கு வித்திட்ட சிப்பாய்கள் கலகம் நடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்னாலே வெளிவந்தது. கட்டுரையின் தலைப்பு ” இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி ” என்ற பெயரில் வெளிவந்தது. அதில் வந்துள்ள கட்டுரை பல உண்மைகளை வெளிச்சம் போட்டுக் காட்டியது. கட்டுரையில் என்ன இருந்தது என்பதைக் கடைசியில் பார்க்கலாம். முதலில் நமது இந்தியாவில் இருந்த சமூக அமைப்பு எப்படியிருந்தது என்பதைப் பார்த்து விடலாம்.   ஒரு கிராமம் என்பது பூகோள ரீதியில் நூறு ஏக்கர் முதல் ஆயிரத்திற்கும் மேற்றபட்ட ஏக்கர்களைக் கொண்டதாக இருந்தது. இதில் விவசாய நிலங்களும், தரிசு நிலங்களும் இருந்தது. ஏறக்குறைய இது போன்ற சிறுசிறு கிராமங்களை உள்ளடக்கிய பகுதிகளைக் கொண்டதாக ஒரு சிறுநகரம் உருவாகியிருந்தது. ஒரு கிராமத்தின் நிர்வாக அமைப்பினை கிராம முன்சீப் கவனித்தார். இவரே கிராமத்தின் அத்தனை பிரச்சனைகளையும் கவனித்தார். மேலும் கிராமத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தையும் தனிப்பட்ட முறையில் பழகி வைத்திருப்பதன் காரணமாக இவருக்கு நிர்வாகம் செய்வதில் எந்தப் பிரச்சனையும் உருவானதில்லை. உடனடி தீர்வுகள் மூலம் ஒவ்வொரு கிராமத்தின் அமைதியும் நிலைநாட்டப்பட்டது. முறைப்படியான வரிவசூல் முதல் தனிப்பட்ட விரோதங்களை நீக்குவது முதல் இந்தக் கிராம முன்சீப் சிறப்பாகவே செயல்பட்டனர். கிராமத்தில் உள்ள கணக்குபிள்ளைகளைக் கர்ணம் என்று அழைக்கப்பட்டனர். இவரே அந்தக் கிராமத்தில் இருக்கும் மொத்த வயல்களின் நீளம் அகலம் போன்ற கணக்கு வழக்குகளைக் கையாண்டு கொண்டிருப்பவர். இது தவிரக் கிராமத்திற்கென்று இருக்கும் வெட்டியான்கள் தனிப்பட்ட முறையில் உள்ளே நடக்கும் சங்கதிகளை உளவு பார்த்து கிராம முன்சீப்பிடம் கொண்டு வந்து சேர்த்துக் கொண்டிருந்தனர். இது தவிரத் தோட்டி என்பவன் தனியாக உண்டு. இவன் இரண்டு கிராமங்களுக்கும் இடையே உள்ளே எல்லைகள் முதல் வயல்களுக்குப் பாதுகாப்பு வரைக்கும் போன்ற மற்ற விசயங்களுக்கு ஆதாரமாக இருந்து தனது பணியைச் சிறப்பாகச் செயல்படுத்திக் கொண்டிருந்தான். இரண்டு கிராமங்களுக்கிடையே எல்லைப் பிரச்சனை மற்றும் நீர் சம்மந்தமான பிரச்சனைகள் உருவானால் இவனே சாட்சியாகச் செயல்பட்டுக் கொண்டிருந்தான். ஏரிகளை, நீர்நிலைகளைக் காவல் காப்பதும் இவனின் கடமையாகும். ஒவ்வொருவரின் வயல்களுக்கும் நீரை பங்கீட்டு அளிப்பது முதல் கண்மாய்ப் பாதுகாப்பது வரைக்கும் இவனின் பொறுப்பாகும். பிராமணன் மொத்த கிராமத்து மக்களுக்குப் பூஜை செய்பவன். கிராம ஆசிரியர்கள் பிள்ளைகளுக்கு மணலில் எழுத்துக்களை எழுதி கற்றுக் கொடுப்பவர். ஊருக்குள் இருக்கும் ஜோதிடர் கிராமத்து மக்களுக்குச் சகுனங்களைத் தெரிவிப்பவர். மொத்ததில் ஒவ்வொரு கிராமத்திலும் வாழ்ந்து கொண்டிருந்த மக்களுக்கு வெளியே என்ன நடக்கின்றது என்பது குறித்துக் கவலைப்பட்டுக் கொள்வதில்லை. அந்நிய படையெடுப்பா, மன்னரா, குறுநில மன்னரா என்பது போன்ற தேவையில்லாத விசயங்களில் கவனம் செலுத்துவதும் இல்லை அது குறித்து அலட்டிக் கொள்வதும் இல்லை. “ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எங்களுக்குக் கவலையில்லை”என்பது போலவே அவரவர் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தனர். இடையில் வரும் பஞ்சம், வறுமை, கொடிய நோய்கள் என்று ஒவ்வொன்றாகக் கிராமத்தை தாக்கிவிட்டு ஏராளமாக மனித உயிர்களைக் காவு வாங்கிய போதில் அடிப்படை கிராம மக்களின் சிந்தனைகளில் எந்த மாற்றமும் உருவாகவில்லை. கட்டுக்கோப்பு என்பதாகத்தான் வாழ்ந்து கொண்டிருந்தனர். மேல்மட்ட அளவில் உள்ளவர்கள் அடித்துக் கொண்டு செத்தனரே தவிர அது போன்ற எந்த விசயங்கள் கிராமத்திற்குள் வருவதுமில்லை. கிராமத்தின் உள்ளே வாழ்ந்து கொண்டிருந்தவர்களுக்கு எந்தத் தாக்கத்தையும் உருவாக்கவுமில்லை. ஆங்கிலேயர்கள் உள்ளே வந்து ஒவ்வொரு பகுதியை சுற்றிப் பார்த்த போது தான் இந்த அருமை பெருமைகளைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்த தொடங்கினர். இப்போது மேலே சொன்ன கட்டுரையில் சொல்லப்பட்டிருந்த முக்கியச் சராம்சத்தைப் பார்த்துவிடலாம். “இந்தச் சிறய அசைவற்ற சமுதாய அமைப்பு இப்பொழுது பெரும் பகுதி அழிந்து விட்டது. அல்லது அழிந்து கொண்டிருக்கிறது. ஆனால் இதற்குக் காரணம் பிரிட்டனின் வரி வசூலைக் காட்டிலும், பிரிட்டிஷ் சிப்பாய்களை விடவும் பிரிட்டிஷாரின் நீராவி இஞ்சினும், சுதந்திர வணிகக் கொள்கையுமேயாகும்” என்று நியூயார்க் ட்ரிப்யூன் பத்திரிக்கையில் கட்டுரையாக வந்தது. இது போன்ற ஒரு அமைப்பில் வாழ்ந்து கொண்டிருந்த கிராமத்து மக்களை ஒரே நாளில் அடிமையாக்கி விட முடியுமா? கிராமத்து அடித்தள விசயங்களில் கைவைக்காமல் சுற்றிலும் உள்ள விசயங்களில் கவனம் செலுத்தினர். மெதுமெதுவாக இந்தச் சமூக அமைப்பை குளறுபடியாக்கி தெளிந்த குளத்தைச் சேறாக மாற்றத் தொடங்கினர். [] 3 பிழைப்புத்தேடிச் சென்று பிழையாய் மாறியவர்கள் 1830 ஆம் ஆண்டு . பாண்டிச்சேரி., பிரான்ஸ் நாட்டுக்குச் சொந்தமான பகுதியாக இருந்தது. அடிமைமுறை ஒழிக்கப்பபடும் முன்பே பிரான்சு அரசு இந்தியர்களைத் தங்கள் நாடுகளுக்கு அழைத்துச் சென்று கொண்டு இருந்தது, ஒவ்வொரு வருடமும். பாண்டிச்சேரியிலிருந்து ஏராளமானவர்கள் சென்று கொண்டேயிருந்தனர். பாண்டிச்சேரிக்கு அருகே இருந்த தமிழ்நாட்டின் பிறபகுதிகளில் இருந்தும் தரகர்கள் மூலம் ஆள் திரட்டி அழைத்துச் சென்றனர். முதலில் பாண்டிச்சேரிக்கு அழைத்துச் சென்று அதன் பிறகு தாங்கள் விரும்பும் நாடுகளுக்கு அனுப்பிக்கொண்டிருந்தனர். பெரும்பாலும் முறையற்ற வழியில் தான் இது நடந்து கொண்டிருந்தது. 1839 ஆம் ஆண்டு இந்திய அரசு பாண்டிச்சேரி வழியாக இந்தியர்கள் வெளியேறுவதைத் தடுக்கச் சட்டதிட்டங்கள் கொண்டு வந்த போதிலும் நிறுத்த முடியவில்லை. வினாஸ் என்ற பிரஞ்சுக்காரன் முதன் முதலாகத் தென் ஆற்காடு மாவட்டங்களின் உள்ள விவசாயக் கூலிகளை ஒன்று திரட்டி மொரிசீயஸ் நாட்டுக்கு அனுப்பி வைக்க இந்திய அரசு ஈடுபட்ட தரகரையும் பிரஞ்சுகாரரையும் சட்டத்திற்குப் புறம்பான செயல் என்று சொல்லி சிறையில் தள்ளியது. பிரான்ஸ் நாட்டுக்கு அருகேயிருந்த பிரஞ்சுக் காலனியான ரீயூனியன் தீவுக்குச் சென்னை மாநிலத்தில் இருந்து தமிழர்கள் கொண்டு செல்லப்பட்டனர். [] தொடக்கத்தில் நீக்ரோ அடிமைகள் பட்ட கஷ்டஙகளைப் போல ரீயூனியன் தீவுக்குச் சென்ற படிப்பறிவற்ற தமிழர்கள் அவதிப்பட்டனர். ஆனால் 1861 ஆம் ஆண்டுப் பிரிட்டன் அரசாங்கம் பிரான்ஸ் நாட்டுடன் ஒப்பந்தம் செய்து கொள்ள முறைப்படியாகத் தமிழர்கள் பிரான்ஸ நாட்டின் ஆளுமையில் இருந்த ரீயூனியன், மார்டினிக், குவாடலு போன்ற நாடுகளுக்குச் செல்லத் துவங்கினர். ஆனால் பிரெஞ்சுகாரர்கள் விதிமுறைகளைப் பற்றி அதிகமாக அலட்டிக் கொள்ளவில்லை. ஒவ்வொரு கிராமத்தில் இருந்தும் தரகர்கள் மூலம் ஆள் திரட்டப்படும். மொத்தமாக ஒரு இடத்திற்கு அழைத்து வரப்படுவார்கள். கொண்டு வந்து சேர்த்த கூலியாட்களை மொத்தமாக ஒன்று திரட்டி அவர்களைச் சுற்றி நான்கு புறமும் கயிற்றால் கட்டி விலங்குகளை மந்தை போல் தெருவில் அழைத்துச் சென்று கப்பலில் ஏற்றினர். ரீ யூனியன் 64 மைல்கள் நீளமும் இதில் பாதியளவு அகலமுமாக நீள்வட்ட பரப்பில் உள்ள ஒரு தீவு. ஆப்ரிக்கா கண்டத்தின் தென் கிழக்காக மடகாஸ்கரிலிருந்து 640 கீமீ கிழக்கேயும், மொரீசியஸ்க்கு 104 கீமீ தெற்கேயும் உள்ள தீவு. தான் ரீயூனியன். ஒரு எரிமலை வெடித்துச் சிதறிய அமைப்பால் உருவானது இந்தத் தீவு. இத்தீவினை 1646 ஆம் ஆண்டுப் பிரெஞ்ச மாலுமிகள் கண்டுபிடித்துப் பூர்பன் தீவு என் பெயரிட்டார். 1665 முதல் குடியேற்றங்களைத் தொடங்கிய பிரெஞ்சுகாரர்கள் ஆப்ரிக்க நீக்ரோ அடிமைகளைக் கொண்டு வந்தனர். 1789 ஆம் ஆண்டுப் பிரெஞ்சுப் புரட்சிக்குப் பினனால் இத்தீவு ரீயூனியன் என்ற பெயர் பெற்றது. 1810 இல் இதனைக் கைப்ப்ற்றிய பிரிட்டன் மீண்டும் 4 ஆண்டுகள் கழித்துப் பிரான்ஸிடம் கொடுத்தது. [] அன்று முதல் இத்தீவு பிரான்சின் குடியேற்ற நாடாகவே விளங்குகிறது. ரீ யூனியனின் மையப்பகுதி எரிமலை. அதனைச் சுற்றியுள்ள கடற்கரையோரச் சமவெளியில் தான் விவசாயம் செய்ய முடியும்.. செயின்ட் செடனிஸ் துறைமுகமே இத்தீவின் தலைநகர். அடிமை முறை ஒழிக்கப்பட்ட பின் உருவான கூலியாட்கள் தட்டுப்பாட்டினனைப் போக்குவதற்குப் பாண்டிச்சேரியில் இருந்து இங்கே ஆட்கள் பல்வேறு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டனர். 1830 ஆம் ஆண்டு ஜோசப் அர்கண்டு என்ற வணிகர் தமிழ்நாட்டில் இருந்து 130 கைவினைஞர்களை ரீ யூனியன் தீவுக்குக் கொண்டு போயிருந்தார். இங்குள்ள தட்ப வெட்ப நிலைக்குத் தமிழர்களே பொருத்தமாக இருந்தனர். ஆனால் இங்குப் பண்ணையடிமை முறைகளை விடக் கேவலமாக இருக்கச் சென்ற தமிழர்களின் பாதிக்கும் மேற்பட்டவர்கள் இறந்து போயினர். 1882 முதல் இந்திய அரசு தமிழர்கள் ரீயூனியனுக்குச் செல்வதைத் தடை போட்டது. பிரெஞ்சு கயானா தென் அமெக்கக் கண்டத்தின் வடமேற்கில் பிரிட்டீஷ், டச்சுக் கயானாக்களக்கு அடுத்ததாக அமைந்துள்ளது. கேயேன் என்றும் அழைக்கப்படும் இந்தக் குடியேற்ற நாட்டின் பெரும் பகுதி சதுப்பு நிலமேயாகும். கடற்கரையோரமாக இருந்த பகுதிகள் மட்டும் விவசாயத் தொழில் நடைபெற்றது. தேவையான உணவுப் பொருட்களுக்குப் பற்றாக்குறை நிலவுயது. பிரேசில் அமெரிக்க ஐக்கிய நாடுகளிலிருந்து பெருங் குற்றவாளிகள் நாடு கடத்தப்பட்டு இங்கே அனுப்பப்பட்டனர்.. இவ்வாறு வந்த 6000 பேரைப் பயன்படுத்திப் பெரும் பண்ணைகள் துவங்கப்ட்டன. இந்தியாவில் இருந்து கொண்டு செல்லப்பட்டவர்களுக்குச் சரியான வேலை இல்லாத காரணத்தால் ஆபத்து நிறைந்த தங்கச் சுரங்கங்களுக்கு அனுப்பப்பட்டனர். சதுப்பு நில பள்ளத்தாக்கில் முழங்கால் அளவு சேற்றில் நெடுந்தூரம் நடந்து சென்றே அச்சுரங்கங்களை அடைய வேண்டும். நாள் முழுக்கச் சேற்று மண்ணை அள்ளி வந்து தங்கத்துகள்களை வடிகட்டிப் எடுப்பதே தமிழர்களின் முக்கியப் பணியாகும். ஒப்பந்தக் கூலிகளாகக் கொண்டு செல்லப்பட்டவர்களுக்கு உயிருக்குப் பாதுகாப்பு இல்லாத காரணத்தால் 1862 ஆம் ஆண்டு இந்திய அரசு இங்கே செல்வதையும் தடை செய்தது. மத்திய அமெரிக்காவின் கரிபியன் கடலில் அமைந்துள்ள மார்டினிக் ஒரு தீவாக இருந்தது. இதனருகில் குவாடலுப் தீவு உள்ளது. 1635 ஆம் ஆண்டுப் பிரெஞ்சுக்காரர் வசம் வந்து பல முறை பிரட்டீஷார் ஆதிக்கத்திற்கு உட்பட்டு இறுதியில் பிரெஞ்சுக்காரர் வசம் வந்தது. 1814 ஆம் அடிமைமுறை ரத்துச் செய்யப்பட்ட பின்னர் இத்தீவில் தமிழர்களே ஒப்பந்தக்கூலிகளாகக் குடியேறினர். ரீயூனியன் தீவுக்கு ஆள் பிடித்த பிரெஞ்சு குடிபெயர் முகவர் கேப்டன் பிளாங்க் என்பவே இங்கும் ஆட்களை அனுப்பியவன். தலைக்கு 250 பிராங்குகள் தரகுத் தொகையைப் பெற்றுக்கொண்டு 4000 பேர்களை 6 ஆண்டுகளில் குடியேறச் செய்தான். முதல் கூலிக்கப்பல் 1853 மே 6 ஆம் நாள் காரைக்காலில் இருந்து சென்றது. இந்தக் கூலிக்கப்பல் 318 பேருடன் சென்றது. இங்குப் பரவிய காலரா நோயினால் 25 சதவிகித மக்கள் இறந்து போனதால் 1884 ஆம் ஆண்டோடு இதுவும் நிறுத்தப்பட்டது. குவாடலூப் தீவில் 1876 ஆம் ஆண்டு முதல் குடியேற்றம் நடக்கத் தொடங்கியது. நிலப்பரப்பில் பாதிப் பகுதி உயரமான மலைத் தொடர்கள் ஆக்ரமித்து இருந்தது. எரிமலைக்குழம்பு உறைந்து வேளாண்மைக்கு வளம் சேர்க்கும் இங்கேயிருந்த 95000 ஹெக்டர் நிலப்பரப்பில் கருப்புக் காப்பிக் கோககோ, பருத்தி போன்றவை சாகுபடி செய்யப்பட்டது. 1854 முதல் 1861 பிரிட்டிஷ் பிரான்சு ஒப்பந்தம் ஏற்பட்ட பின்பு தமிழர்களே குடியேற்றப்பட்டனர். 1874 முதல் பாண்டிச்சேரி வழியாகத் தமிழர்கள் கொண்டு செல்லப்பட்டனர். பிறகு கல்கத்தாவிலிருந்தும் ஒப்பந்தக்கூலிகளைக் கொண்டு வரப்பட்டனர். ஆப்ரிக்கக் கண்டத்தின் தென்கிழக்கில் அமைந்துள்ளது மடகாஸ்கர் தீவு. பெரும் நிலப்பரப்பைக் கொண்டது. 1901 ஆம் ஆண்டு மாதம் ரூபாய் 12 இலவச உடை உணவு தங்குமிடம் என்று ஒரு குடிபெயர்வு முகவர் ஏமாற்றி 735 பேர்களை முதல் முதலாக அனுப்பி வைத்தார். மடகாஸ்கருக்கு குடிபெயர அனுமதி இல்லாத போதும் கூட. சென்னை துறைமுகத்தில் இருந்து அஸ்ரப் என்னும் கப்பல் வழியாக மடகாஸ்காரில் உள்ள தமத்தவே நகருக்கு அவர்கள் அனுப்பப்பட்டனர். அங்கிருந்து தன்னுவரி என்று இடத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுப் பாறைகளை உடைத்து இரயில் பாதை அமைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இரண்டு ஆண்டுகள் பாடுபட்ட தமிழர்கள் ஊதியமின்றிச் சரியான வசதிகள் இன்றி 700 பேர்கள் இறந்து போனர். மீதியுள்ளர்வர்கள் அங்கிருந்து தப்பி மஞ்சுகா என்னும் இடத்தை அடைந்தனர். வழியெங்கும் பிச்சை எடுத்து அலைந்து திரிந்து கொண்டிருந்தவர்களுக்கு மீண்டும் கல் உடைக்கும் பணியே கிடைத்தது. அங்கிருந்து கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள ஜான்சிபார் பகுதிக்கு நாட்டுப்படகு மூலம் உயிரை கையில் பிடித்துக் கொண்டு சென்றடைந்தனர். அங்கிருந்த பிரிட்டீஷ் தூதுவர் துணை கொண்டு பம்பாய் வந்தடைந்தனர். அவர்களின் கண்ணீர் கதைகள் ஒவ்வொன்றும் கல்வெட்டு போலவே தமிழர்களின் அவல வாழ்க்கையை நமக்கு நினைவு படுத்தக்கூடியது. [] இன்று காலம் மாறியுள்ளது. நவீன விஞ்ஞானம் எத்தனையோ மாறுதல்களை நமக்கு வழங்கியுள்ளது. ஆனால் புலம் பெயர்ந்த தமிழர்களின் முன்னேற்ற வாழ்வினைப் போலவே முட்டுச்சந்துக்குள் சிக்கிய தமிழினத்தின் எண்ணிக்கையம் அதிகமாகிக் கொண்டே தான் இருக்கிறது. [] 4 திரைகடலோடியும் திரவியம் தேடிய கதைகள் 1858 இல் இந்திய ஆட்சி பிரிட்டீஷ் பாராளுமன்றத்தின் நேரடி ஆட்சிக்கு வந்த பின்னர் இந்தியர் குடிபெயர்வு வேகமாக நடக்கத் தொடங்கியது. பிரிட்டீஷ் ஆளுமைக்குள் இருந்த பகுதிகளில் இருந்தவர்களைப் பிரிட்டன் அரசாங்கம் மற்ற நாடுகளுக்குக் கூலிகளாக அனுப்ப விரும்பவில்லை. முடிந்தவரைக்கும் தங்கள் காலணிகளாக இருந்து தேர்ந்தெடுத்துத் தங்களுக்குத் தேவைப்படும் பகுதிகளுக்கு அனுப்பிக் கொண்டிருந்தனர். குறிப்பாக இந்தியாவிலிருந்து அருகேயிருந்த சிலோனுக்கு, மலேசிய குடியரசுக்கு அதிகமானோர் ஒப்பந்தக்கூலிகளாக அனுப்பப்பட்டனர். வெவ்வேறு தூர கண்டங்களில் இருந்த குடியேற்றங்களுக்கு இங்குள்ளவர்களைப் பிரிட்டீஷ் அரசாங்கம் அனுப்ப மறுத்தது, இதற்கும் வேறொரு முக்கியக் காரணம் ஒன்றுண்டு. அங்குள்ள பாதுகாப்பு மற்றும் வசதி குறைபாடுகளே முக்கியக் காரணமாக இருந்தது. குறிப்பாகப் பிரெஞ்சு நாட்டின் கட்டுப்பாட்டிலிருந்த ரீயூனியன் தீவுக்குச் சென்ற தமிழர்களில் பெரும்பாலோனார் இறந்துபோயினர். ஆனால் பிரான்சு நெதர்லாந்து, டென்மார்க் அரசின் கட்டிப்பாட்டின் கீழ் இருந்த பிரதேசங்களின் பின்னால் உருவான் உடன்பாட்டின் அடிப்படையில் இங்குள்ளவர்களைப் பிரிட்டன் அரசாங்கம் செல்ல அனுமதி கொடுத்தது. 1860 ஆம் ஆண்டுப் பிரிட்டன் அரசு பிரான்சு அரசுடனும் அதனைத் தொடர்ந்து டென்மார்க், நெதர்லாந்துடனும் உடன்படிக்கை ஏற்பட்டு 1861 ல் அனைத்து பிரெஞ்சு குடியேற்றங்களுக்கும் குடிபெயர்வோர் நலம் காக்க அங்கங்கே அலுவலகமும், பிரிட்டீஷ் தூதர்களும் நியமிக்கப்பட்டனர். குடிபெயர்தலுக்கான ஆட்களை மூன்று விதங்களில் தேர்ந்தெடுக்கப்பட்டனர். []   ஒப்பந்தக்கூலி முறை, கங்காணி மற்றும் மேஸ்திரி முறை, இதன்படி ஒவ்வொரு கிராமத்திலிருந்து ஆட்களைச் சேகரித்தனர். ஆமாம் உண்மையிலேயே பொருட்களைச் சேகரிப்பது போலவே நடந்து கொண்டனர். அதற்கும் காரணங்கள் உண்டு. தொத்தல், வத்தல், உழைக்க முடியாத வலுவில்லாதவர்களைத் திருப்பி அனுப்பி விடுவர். இறுதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை மூளைச்சலவை செய்யத் தனிநபர்கள் இதற்கென்று இருப்பார்கள். பெரும்பாலும் நல்ல சம்பளம், சாப்பாடு மற்றும் தங்குமிடம் இலவசம் என்பதோடு சென்று வரக்கூடிய கப்பல் பயணக்கட்டணமும் இலவசம் என்று பலவிதமான ஆசை வார்த்தைகளால் ஆட்கள் சேகரிக்கப்பட்டது.. [] ஓப்பந்தக்கூலி மூலம் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் செல்லும் இடங்களில் முழுமையாக ஐந்து ஆண்டுகள் பணியாற்ற வேண்டும். முதலில் சேர்ந்த வேலையிலிருந்து வேறு வேலைக்கு மாற்றிக் கொள்ள முடியாது. மனைவி மக்களையும் அழைத்துச் செல்லலாம். ஐந்து ஆண்டுக் காலம் முடிந்தவுடன் ஒப்பந்தத்தைப் புதுபித்துக் கொள்ளலாம். விரும்பாவிட்டால் சொந்த நாட்டுக்கே திரும்பி விடலாம். ஆனால் கங்காணி முறையென்பது பெரும்பாலும் சிலோனுக்கு அங்குள்ள காபி தேயிலைத் தோட்டங்களில் பணிபுரிய ஆட்களைத் தேர்ந்தெடுக்கப் பயன்பட்டது ஏற்கனவே அங்கே தோட்டத்தில் பல வருடங்கள் பணிபுரிந்தவர்கள் இங்கே கங்காணிகளாக இருந்தனர். கங்காணி முறையில் தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கான ஒப்பந்தங்கள் செல்லும் இடங்களிலேயே உருவாக்கப்பட்டது. பெரும்பாலும் இதன் மூலம் இடைத்தரகர்களாக இருந்தவர்களே பயன்பெற்றனர். இங்கேயிருந்து தேர்ந்தெடுத்து சென்றவர்களுக்கு அங்கே சென்ற பிறகே அது வாழும் நரகம் என்பதை உணர்ந்து கொண்டனர். ஆனால் எக்காரணம் கொண்டும் திரும்பி வர முடியாது. அதற்கென்று அங்கங்கே ஆப்பு அடித்து வைத்திருந்தனர். வேலை செய்தே ஆக வேண்டும். இல்லாவிட்டால் தற்கொலை செய்து கொண்டு மேலோகம் சென்று விட வேண்டியதுதான். பிரிட்டன் அரசாங்கம் பிரெஞ்சு நாட்டுடன் ஒப்பந்தம் செய்து கொண்டவுடன் தமிழ்நாட்டில் ஆங்காங்கே குடிபெயர்வு முகவர் மையங்கள் உருவாக்கப்பட்டது. இது முதல் முதலாகச் சென்னையிலும், பாண்டிச்சேரியிலும் திறக்கப்பட்டது. சென்னை மாகாணத்தில் இணைந்திருந்த தெலுங்கு மக்கள் பெரும்பாலும் பர்மா, அசாம் பகுதிகளுக்குச் செல்ல அதிக ஆர்வம் காட்டியதால் பெரும்பாலான பிரெஞ்சு குடியேற்ற நாடுகளுக்குக் குடிபெயர்ந்தவர்கள் தமிழர்களாகவே இருந்தனர். 1861 ஆம் ஆண்டுப் பிரிட்டீஷ் பிரெஞ்சு ஒப்பந்தத்தின்படி ஒவ்வொரு வருடமும் 12000 பேர்களைப் பிரெஞ்சுகாரர்கள் கொண்டு செல்ல முயற்சித்தாலும் அடுத்த ஐந்து வருடங்களும் ஏறக்குறைய பாதி அளவுக்குத்தான் ஆட்களைத் திரட்ட முடிந்தது,. இதன் தொடர்ச்சியாக வலுக்கட்டாயமாக, ஏமாற்றி அழைத்துச் செல்லுதலும் நடைபெறத் தொடங்கியது. குடிபெயர்வோர் தங்கிச் செல்ல துறைமுக நகரங்களில் கூலி முகாம் இருந்தன. இதனை டெப்போ என்றழைக்கப்பட்டது. ஒவ்வொரு பகுதியிலும் இருந்து கொண்டு வரப்படுவர்களை இங்கே தான் தங்க வைக்கப்படுவார்கள். அவர்களைக் கொண்டு செல்லும் கப்பல்கள் தாமதமாக வரும் போது பல சமயங்கள் ஒரு வாரங்கள் முதல் பத்து நாடகள் வரைக்கும் இங்கே தான் தங்கியிருக்க வேண்டும். இதுவும் ஒரு வகையில் வாழப்போகும் நரக வாழ்க்கைக்குத் தேவைப்படும் ஒரு பயிற்சி களமாகவே இருந்தது. இங்கே கொண்டு வரப்படுவர்களைக் கடல் பயணத்திற்கு ஏற்றபடி இவர்கள் உடல் நலன் இருக்கிறதா என்பது தொடங்கி உடல் வலு, வேறு எந்தத் தொற்று நோயும் இருக்கிறதா என்பது வரைக்கும் இங்கு இதற்கென்று இருக்கும் மருத்துவர்களால் சோதிக்கப்படும். இதில் தகுதியின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் மட்டுமே கடல் பயணத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். தொடக்கத்தில் பிரிட்டீஷ் ஆளுமையில் இருந்த பகுதிகளில் செல்பவர்களின் மூன்றில் ஒரு பங்கு பெண்கள் இருப்பதாக உருவாக்கப்பட்டது. காரணம் செல்லும் இடங்களில் பெண்கள் இல்லாத காரணத்தினால் பல பிரச்சனைகள் உருவாகத் தொடங்கியது. பல அல்லோகல்லமாய் வினோத செயல்பாடுகள் உருவாகியது. இதற்காகவே பெண்கள் இத்தனை சதவிகிதம் இருக்க வேண்டும் என்ற சட்டத்தைக் கொண்டு வந்தனர். [] ஆனால் கிராமங்களில் இருந்த ஆணாதிக்க வாழ்க்கை முறையில் பெண்களைத் திரட்டுவது கடினமாக இருந்தது. இதற்கும் தரகர்கள் அடுத்தப் பைபாஸ் வழியைக் கண்டுபிடித்தனர். வெவ்வேறு பிரச்சனையில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் பெண்கள் தாங்களே முன்வந்து இது போன்ற டெப்போவுக்கு வரத் துவங்கினர். ஏற்கனவே வந்த ஆண்களுக்கு இந்தப் பெண்களை மனைவியாக மாற்றிச் சான்றிதழ் தயார் செய்து அனுப்பினர். இதற்குப் பெயர் “டெப்போ திருமணம்” என்றழைக்கப்பட்டது. ஒரு டெப்போ எப்படி இருக்க வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்ட சட்டதிட்டங்கள் பெயருக்கென்றே தான் இருந்தது. சிறைச் சாலையை விடக் கொடுமையாக இருந்தது. இங்கேயே சுகாதாரக் கேட்டினால் பலரும் இறந்து விடுவதும் வாடிக்கையாக இருந்தது. 1859 ஆம் ஆண்டுச் சென்னையில் ராயபுரம் பகுதியில் இருந்து மொரீசியஸ் நாட்டுக்கு அழைத்துச் செல்லும் டெப்போ தான் மிகப் பெரிதாக இருந்தது. இங்கேயிருந்து மாதமொன்றுக்கு 3500 பேர்கள் சென்றுகொண்டிருந்தனர். இராயப்பேட்டை சாலையில் இருந்த மற்றொரு டெப்போவிலிருந்து டிரினிடாட் நாட்டுக்குச் செல்பவர்கள் சென்று கொண்டிருந்தனர். இந்த டெப்போ ஒரு இஸ்லாமியருக்குச் சொந்தமான இடம். அடர்ந்த மரங்களும், புதர்களும் நிறைந்த காடு போல இருந்த காரணத்தால் நரிகளும் பாம்புகளும் சர்வசாதாரணமாக இருந்தன. பிரெஞ்சு காலணி நாடுகளுக்குச் செல்பவர்களுக்காகவே சென்னையில் தண்டையார்பேட்டையில் 1863 ஆம் ஆண்டுத் தொடங்கப்பட்டது. இது மொரீசியஸ் டெப்போ இருந்த தண்டையார்பேட்டை நெடுஞ்சாலைக்கு அருகே 2 கிலோ மீட்டர் தொலைவிலும் துறைமுகத்திலிருந்து அரைக் கிலோமீட்டர் தொலைவிலும் மூன்று கூரைக் கொட்டகைகள் மூலம் உருவாக்கப்பட்டது. 1864 ஆம் ஆண்டு மட்டும் இதே டெப்போவில் மட்டும் இருந்து கிளம்பிய 1780 பேர்களும் தமிழ்நாட்டில் இருந்து சென்றவர்களே. இவற்றைத் தவிர நாகபட்டிணத்தில் இருந்த டெப்போக்கள் மூலம் சென்றவர்கள் பெரும்பாலும் சிங்கப்பூர், மலேசியா, பினாங்கு பகுதிகளுக்குச் சென்றவர்களே அதிகம். இந்திய பெருங்கடல் இந்திய எல்லைகளிலிருந்து தென்மேற்காக 4000 கீமீ தொலைவில் மொரிசீயஸ் அமைந்துள்ளது. ஆப்ரிக்கக் கண்டத்தின் அருகில் உள்ள 2100 ச கீ மீ பரப்பளவு கொண்ட குடியேற்றம் இது. இந்தியாவிற்குச் செல்லக் கடல் வழியின் நுழைவாயிலாகக் கருத்ப்பட்ட இந்த நிலத் திட்டினை முதலில் கண்டவர்கள் போர்த்துக்கீசிய மாலூமிகள். 1498 இல் வாஸ்கோடகாமா இத்தீவினைக் கடந்த பீன்னரே அரபிக்கடலில் பயணம் செய்து கோழிக் கோட்டை அடைந்தார். 1598 இல் டச்சுக்காரர்கள் மொரீசியஸை ஆக்கிரமித்துக் கொண்டனர். அப்போது ஒரு குடியேற்றத்ததை அங்கே அவர்களால் உருவாக்க முடியவில்லை. 1715 இல் பிரெஞ்சுக் காரர்கள் இத்தீவினை கைப்பற்றினர். ஸாபர்தனாய் முதலாவது ஆளுநராக 1735ல் பொறுப்பேற்றார். அவர் பாண்டிச்சேரியில் இருந்து முதல் முறையாக 169 தமிழர்களைக் கொண்டு சென்று குடியேற்றினார். கட்டிடம் கட்டுபவர்களையும், தச்சுத் தொழிலில் இருந்தவர்களையும் கொண்டு சென்றவர் தொடர்ந்து ஆயிரக்கணக்கான தமிழர்களைக் கொண்டு போய்ச் சேர்த்தார். 1810 இல் இத்தீவு பிரிட்டீஷார் கைவசம் வந்த போது 45000 தமிழர்கள் வாழ்ந்து கொண்டிருந்தனர். ஓரளவுக்குப் பொருளீட்டியவர்கள் சொந்த நாட்டுக்கு திரும்பி வந்து விடப் பிரிட்டீஷ் அரசாங்கம் அதையும் தடுக்க அடுத்த ஏற்பாடு செய்தது. வருகின்ற கூலியாட்கள் தங்களது சொந்த ஊருக்கே குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு சென்று விடுவதைப் பார்த்த மொரீசஸ் ல் இருந்து தங்களது நாட்டுக்கு திரும்பி செல்வதற்காக வழங்கப்பட்டுக் கொண்டிருந்த இலவச கப்பல் பயணச் சீட்டை ரத்து செய்தது. பிரிட்டன் அடிமை ஒழிப்பு முறையைக் கொண்டு வருவதற்கு முன்பே இங்குக் குடியேற்றம் தொடங்கி விட்டது. தமிழர்களைத் தொடர்ந்து இங்கு ஆந்திரரும், பீகாரிகளும், வங்காளிகளும், சோடா நாகவுரி மலை நாட்டவரும் குடியேறினர். கல்கத்தா சென்னை போன்ற துறைமுகங்களில் இருந்து போர்ட் லூயி துறைமுகத்தைச் சென்றடைய 45 முதல் 60 நாட்கள் பயணம் செய்ய வேண்டியிருந்தது. ஆனால் நவீன விஞ்ஞான வளர்ச்சியின் காரணமாகச் சிறிய ரக மற்றும் விரைவு கப்பல்கள் தோன்ற 1865 ஆம் ஆண்டு முதல் பயண நாட்கள் 35 தினமாகக் குறைந்தது. . மொரீசஸில் 1839 முதல் 1910 வரையிலும் இந்தக் குடியேற்றங்கள் தங்கு தடையின்றி நடந்தது. அளவுக்கு அதிகமான ஒப்பந்த கூலிகளாகத் தமிழர்கள் கொண்டு செல்லப்பட்ட இனி இங்கு வேலை வாய்ப்பு இல்லை என்றதும் குடிபெயர்வுகள் நிறுத்தப்பட்டது. இதே ஆண்டில் மொரீசஸில் 13 636 கூலியாட்களை 46 கப்பல்களில் கொண்டு சென்றனர். அக்காலத்தில் மொரீசியஸில் கடுமையான உணவுப் பஞ்சம் உருவாக ஏற்கனவே அங்கிருந்தவர்களுக்கு வேலையில்லாமல் போய்விட்டது. இந்திய துறைமுகங்களில் மொரீசியஸ்க்கு செல்வதற்காகக் காத்துக் கொண்டிருந்தவர்கள் வசதியற்ற கொட்டடிகளில் தங்க வைக்கப்பட்டனர். 60 பேர்கள் காலரா நோயினால் பாதிக்கப்பட்டனர். ஏறக்குறைய இன்று உலகம் முழுக்க வாழ்ந்து கொண்டிருககும் அத்தனை தமிழர்களும் ஆறு தலைமுறைக்கு முன்னால் வாழ்ந்த தங்களின் மூதாதையர்களுக்கு ரொம்பவே நன்றிகடன் பட்டிருக்க வேண்டும். அவர்களின் ரத்தம் தோய்நத உழைப்பு அந்த நாட்டை வளர்த்தது. கூடவே இன்று வாழ்ந்து கொண்டிருக்கும் அவர்களின் தலைமுறைகளும் அனுபவித்துக் கொண்டிருக்கும் அத்தனை நவீன வசதிகளுக்கும் இவர்களே காரணம் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். ஒரு வேளை இவர்கள் அப்போதே இறந்து போயிருந்தால்? அல்லது அன்று இவர்கள் வெளிநாடு செல்லாமல் இருந்திருந்தால்? இன்று பலநாடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கும் தலைமுறைகளும் தமிழநாட்டுக்குள் ஏதோவொரு மூலையில் தான் வாழ்ந்திருக்க முடியும். [] 5 நான் வெளிநாட்டு தமிழன் -- கதையின் தொடக்கம் பிரிட்டீஷ் ஆட்சியின் போது அயல்நாடுகளுக்குக் குடிபெயர்தல் என்பது தமிழகமெங்கும் பிரபல்யமாக இருந்தது. ஒவ்வொரு கிராமங்களிலும் இருந்து வெளிநாடுகளுக்குச் செல்லத் துவங்கினர். சிலர் குறிப்பிட்ட காலம் பொருளீட்டி திரும்பி வந்து சமூக அந்தஸ்தில் உயர்ந்து இருந்தனர். இவர்களின் வீடுகளை வாழ்ந்த நாடுகளின் அடிப்படையில் ரங்கூன் வீடு, சிலோன் வீடு, பர்மா வீடு என்று பெயரிட்டு அழைத்தனர். இவர்களின் பொருளாதார வளர்ச்சியைக் கண்டு பலருக்கும் அயல்நாடுகளுக்குச் செல்ல வேண்டும் என்ற எண்ணம் உருவாகத் தொடங்கியது. இதற்கான அடிப்படைக் காரணங்களையும் வெள்ளை அரசாங்கமே மறைமுகமாக உருவாக்கியது. இங்கு வாழ முடியாதவர்களும், வாழ வழியில்லாதவர்களுக்கும் இருந்தே ஒரே வாய்ப்பு இது போலப் பல நாடுகளுக்குச் செல்லுதலே ஆகும். ஐரோப்பிய நாடுகளில் தொழில் புரட்சி உருவாக ஒவ்வொரு நாடுகளும் போட்டி போட்டுக் கொண்டு வளர்ச்சியடையத் தொடங்கின. இதற்காகவே காலணி பகுதிகளைக் கைப்பற்றி, அங்கிருந்த மூலப் பொருட்களைக் கைப்பற்றுவது வரை தங்களுக்கான தொழில் கூடங்களை உருவாக்கத் தொடங்கினர். [] எல்லாநிலைகளிலும் தங்களுக்கான ஆதார வேர்களை உலகம் முழுக்கப் பரப்பத் தொடங்கினர். வெள்ளையர்கள் தாங்கள் கைப்பற்றிய நிலப்பகுதிகளை வளமாக்க அடிமைகளாகக் கொண்டு வந்த கருப்பின மக்களைப் பயன்படுத்திக் கொண்டனர். ஆனால் 1833 ஆம் ஆண்டுப் பிரிட்டன் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தின் மூலம் அடிமை வணிகம் தடைசெய்யப்பட ஏற்கனவே பணியாற்றிக் கொண்டிருந்த அடிமைகள் விடுவிக்கப்பட்டனர். விடுவிக்கப்பட்ட அடிமைகள் மீண்டும் அந்த வாழ்க்கையை வாழத் தயாராய் இல்லை. இந்த இக்கட்டான தருணத்தில் தான் இங்கிலாந்து அரசாங்கம் தங்கள் ஆளுமையில் இருக்கும் காலணி நாடுகளில் இருக்கும் மக்களை ஒப்பந்த கூலிகளாகத் தேவைப்படும் நாடுகளுக்கு வரவழைக்கத் தொடங்கினர். வெள்ளை அரசாங்கத்தின் எந்தத் திட்டமென்றாலும் நீண்ட காலம் பயன் அளிக்கக்கூடியதாக இருக்கும் எனபது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இந்த நோக்கத்தில் தான் இந்தியாவில் பல மறைமுகத் திட்டங்களைப் பிரிட்டன் அரசாங்கம் நிறைவேற்றத் தொடங்கியது. இந்தியா என்பது பிரிட்டன் பொருட்களை மட்டும் இறக்குமதி செய்யப்படும் நாடாக மாற்றப்பட்டது, இங்குள்ள எந்தப் பொருட்களையும் ஏற்றுமதி செய்ய முடியாது. இதன் காரணமாகவே இங்குள்ள தொழில்கள் நசிவுறத் தொடங்கின. சிறு தொழில்களை நம்பி வாழ்ந்து கொண்டிருந்தவர்கள் தெருவுக்கு வரத் தொடங்கினர். இதன் தொடர்ச்சியாக ஆங்கிலேய அரசாங்கம் போட்ட நிலவரிக் கொள்கையும் விவசாயத்தை மட்டும் நம்பி வாழ்ந்தவர்களையும் பாதிக்கத் தொடங்கியது. அதிகமாக விளையும் நிலங்களுக்கு வரியை அதிகமாக்கினர். விளைபொருட்களைப் பொறுத்து மூன்றில் ஒரு பங்கை வரியாக அதையும் பணமாகச் செலுத்த வேண்டும் என்ற புதிய சட்டத்தைக் கொண்டு வந்தனர். விளையாத நிலங்களுக்கும் வரி என்ற பெயரில் அடாவடி வசூல் செய்தமைக்கு முக்கியக் காரணம் செயற்கையான பஞ்சத்தை உருவாக்கினர். வெள்ளையர்கள் உருவாக்கிய பஞ்சத்திற்கான திட்டமிடுதல் நன்றாக வேலை செய்யத் தொடங்கியது. வட்டிக்கு வாங்கி வரியாகக் கட்டியவர்கள் ஒரு அளவுக்கு மேல் செயல்படமுடியாமல் முடங்கிப் போகத் தொடங்கினர். அடிமை சட்டத்தை நீக்குதலை நிறைவேற்றிய வெள்ளையர் அரசாங்கம் 1861 ல் இந்திய குற்றவியல் சட்ட திட்டத்தை அறிமுகம் செய்தது. அடிமைகளை வைத்திருப்பவர்கள் மேல் கடும் தண்டனை என்று அறிவிக்கப் பண்ணையடிமைகளாக இருந்தவர்கள் சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கத் தொடங்கினர். ஆனால் பண்ணையடிமைகள் சுவாசித்த சுதந்திரக் காற்றே குறிப்பிட்ட காலக் கட்டத்திற்குள் அவர்களின் மூச்சை நிறுத்தவும் வைத்தது. காரணம் ஆண்டில் 6 மாத காலமே விவசாயப் பணிகள் இருக்கும். வறட்சி காலங்களில் எந்தப் பணியும் இருக்காது. வறட்சி காலங்களில் ஆதரித்த நிலபிரபுகளும் இப்போது சீந்துவார் இல்லாமல் போகப் பண்ணையடிமைகளுக்கு இருண்ட வாழ்க்கை அறிமுகமாகத் தொடங்கியது. பண்ணையடிமைகளுக்கு உருவான பாதகச் சூழ்நிலையைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டவர்கள் வெள்ளையர்கள். வெள்ளையர்கள் தாங்கள் உருவாக்க நினைத்த காபி, தேயிலைத் தோட்டங்களுக்கு அனுப்பத் தொடங்கினர். 1917 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசு அறிக்கையின்படி பள்ளர், பறையர்,அருந்ததியர், படையாட்சி ஆகிய ஓடுக்கப்பட்ட இனத்தினரே அதிக அளவில் புலம் பெயரத் தொடங்கினர். [] இதன் தொடர்ச்சியாக மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளான குடநாடு, கூர்க், மைசூர், நீலகிரி, ஆனைமலை போன்ற பகுதிகளில் உருவாக்கப்பட்ட தோட்டங்களிலும் நிலமற்ற ஏழை மக்களைக் கூலியாக மாற்றிக் குடியமர்த்தத் தொடங்கினர். சென்னை வழியாக ஸ்ரீலங்கா, பர்மா, சிங்கப்பூர், தென் ஆப்ரிக்கா, மொரிசியஸ், ரீயூனியன் மேற்கிந்திய குடியேற்றங்களைக் கர்மசிரத்தையாக நடந்தேறத் தொடங்கியது. 1876 ல் உருவான தாது பஞ்சம் தமிழ்நாட்டைப் புரட்டிப் போட்டது. பல்வேறு சாதியினரும் வெளியேறத் தொடங்கினர். 1875 ஆம் ஆண்டுக்கு முன்னால் வருடத்திற்கு ஏறக்குறைய ஒரு லட்சம் மக்கள் வெளியேறத் தொடங்கினர். ஆனால் இருபதாம் ஆண்டு முடிவதற்குள் ஒவ்வொரு ஆண்டும் 2,50,000 பேர்கள் புலம் பெயரத் தொடங்கினர். 19 ஆம் நூற்றாண்டின் முதல் பகுதியில் தான் அதிக அளவு மக்கள் பல நாடுகளுக்குச் செல்லத் தொடங்கினர். காரணம் இதே காலகட்டத்தில் தான் கிழக்கிந்திய கம்பெனியின் கைககளில் தமிழ்நாடு வந்தது இவர்கள் கட்டுப்பாட்டில் இருந்த மிட்டா, மிராசு, ஜமீன்தார்கள்கள் கட்டுப்பாட்டில் உள்ள பண்ணையடிமைகளை ஆங்கிலேர்கள் ஒப்பந்தக்கூலிகளாக அயல்நாடுகளுக்கு அனுப்பத் தொடங்கினர். ஜாவா, சுமத்ரா போன்ற அடர்ந்த காட்டுப் பகுதிகளை வளமான கரும்பு வயல்களாக மாற்றியவர்களில் பெரும்பான்மையினர் தமிழர்களே. தமிழர்கள் சென்ற நாடுகள் ஒவ்வொன்றும் வளம் கொழிக்கத் தொடங்கியது. ஆனால் சென்ற இடங்களிலும் எந்த அடிப்படை உரிமைகளும் கிடைக்கப் பெறாமல் அவதிப்பட்டவர்களும் தமிழர்களே. வெள்ளையர்கள் தமிழர்களைத் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள காலணி நாடுகளுக்கு அனுப்ப முக்கியக் காரணங்களில் சில இருந்தது. மாறுபட்ட சீதோஷ்ண நிலைகளிலும் கடுமையாக உழைக்கக் கூடியவர்கள், எதற்கும் எதிர்ப்பு காட்ட துணியாதவர்கள், பல காலம் அடிமைகளாகவே வாழ்ந்தவர்கள் போன்ற காரணங்களே முக்கியமானதாக இருந்தது. இந்தியாவில் வடக்கே நாக்பூர் முதல் தெற்கே கன்யாகுமரி வரையிலும் உள்ள லட்சக்கணக்கான கிராம மக்களைப் பிரிட்டீஷ் அரசாங்கம் ஒப்பந்தக்கூலிகளாக அயல்நாடுகளுக்கு அனுப்பி வைத்தனர். 1820 ஆம் ஆண்டுக்குப் பிறகு அடுத்த ஐம்பது ஆண்டுகளில் மக்கள் தொகை அபரிமிதமாகப் பெருகத் தொடங்கியது. ஆனால் இணையாக உணவு உற்பத்தி பெருகவில்லை. பற்றாக்குறையும், விலையேற்றமும் அடித்தட்டு மக்களை வெகுவாகப் பாதிக்கத் தொடங்கியது. வறுமையாலும், நீக்க முடியாத நோய்களாலும் வாடத் தொடங்கினர். அடுத்தடுத்து வந்த பஞ்சமும், தட்டுப்பாடுகளும் ஒவ்வொருவரையும் புலம் பெயர வைத்துக் கொண்டிருந்தது. ஓடுக்கப்பட்ட மக்கள் ஊருக்குள் நடமாட முடியாது. பொதுக் கிணற்றைப் பயன்படுத்த முடியாது. சொந்த நிலம் வாங்க முடியாது. கல்வி கற்க முடியாது. எல்லாவற்றிலும் தடை என்று உருவாக்கப்பட்ட காரணமே அவர்களை எந்தப் பக்கமும் நகர முடியாத அளவிற்கு நரக வாழ்க்கையை அறிமுகப்படுத்தியது. சாதி அடிப்படையிலே ஒவ்வொருவரும் தங்கள் தொழிலை பார்க்கவேண்டியதாக இருந்து. நாவிதர், ஒட்டர், கல்தச்சர், ஆசாரி, குயவர், கொல்லர், கம்மாளர், வேளாளர் என்று அவரவர் பணியால் மட்டுமே அவர்களின் ஜாதி முன்னிலைப்படுத்தப்பட்டு அந்தத் தொழில் மட்டுமே பார்க்கும்படி நிர்ப்பந்தப்படுத்தப்பட்டனர். வெள்ளையர்களால் உருவாக்கப்பட்டுக் கொண்டிருந்த சாலை வசதிகளும், பிற வசதிகளுமாய் அருகே இருந்த துறைமுகங்களுக்கும், சிறு நகரங்களும் ஒவ்வொருவரையும் நகர வைத்துக் கொண்டிருந்தது. மதுரை, திருநெல்வேலியைச் சுற்றிலும் வாழ்ந்து கொண்டிருந்த மக்கள் மண்டபம், தூத்துக்குடி வழியாக இலங்கைக்குச் செல்லத் தொடங்கினர். இதைப் போலவே தென் ஆற்காடு, செங்கல்பட்டு, தஞ்சாவூர் மக்கள் நாகபட்டிணம் வழியாக மற்றும் சென்னை வழியாக வெளியேறத் தொடங்கினர். விவசாயப் பணிகள் இல்லாத மார்ச் முதல் ஜுலை மாதங்கள் வரை மற்ற நாடுகளில் பணிபுரிந்து உள்ளே வந்த ஓடுக்கப்பட்ட இன மக்களின் வசதி வாய்ப்புகளைப் பார்த்து மற்றவர்களும் பொருளீட்டும் ஆசை உந்தித்தள்ள அவரவரும் விருப்பம் போலப் பல நாடுகளுக்கும் நகரத் தொடங்கினர். ஆனால் பல ஆண்டுகளாகத் தாங்கள் வாழ்ந்து கொண்டிருந்த வாழ்க்கையில் இருந்து மீள முடியாத சிந்தனைகளில் இருந்த மக்களைக் கூலிகளை அயல்நாடுகளுக்கு அனுப்பும் கங்காணிகள் ஆசை வார்த்தைகள் கூறி அனுப்பி வைத்தனர். தங்குமிடம், சாப்பாடு இலவசம். குறிப்பிட்ட காலத்திற்குள் பெரும் பொருளீட்ட முடியும் என்பது போன்ற பல சாகச வார்த்தைகளைக் கூறி வளமாக வாழ இந்த வாய்ப்பு என்று சொல்லி அனுப்பி வைத்தனர். பல்லாயிரக்கணக்கான தொலைவில் உள்ள அமெரிக்காவின் கரீபியன் தீவுகளுகளுக்கும், ஆப்ரிக்கா பகுதிகளுக்கும், ஆஸ்திரேலியாவுக்கு அருகில் உள்ள பிஜி தீவுக்கூட்டங்களுக்கும், மலேசியா, சிங்கப்பூர், ஸ்ரீலங்கா போன்ற நாடுகளுக்குக் கூலிகளாக அனுப்பி வைக்கப்பட்டனர். சிலர் மட்டும் குறிப்பிட்ட காலகட்டத்தில் பொருளீட்டி தாயகத்திற்குத் திரும்பி வந்தனர். பெரும்பாலோனார் அங்கேயே தங்கள் வாழ்க்கையை வாழத் துவங்கினர். பிரிட்டீஷ் ஆட்சியில் போது தமிழர்கள் பெருமளவில் குடியேறியது சிங்கப்பூரில் தான். ஆங்கிலேயர்களின் இந்தக் குடியேற்ற நாட்டை “ஸ்ட்ரெய்ட்ஸ் செட்டில்மெண்ட்ஸ்” என்றழைக்கப்பட்டது. 1815 ஆம் ஆண்டு ஸ்ரீலங்காவிற்குத் தோட்டத் தொழிலாளர்களை அனுப்பி வைக்கத் தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் முயற்சித்த போது அது தோல்வியில் தான் முடிந்தது. அதன் பிறகே ஆட்களைத் திரட்டும் தரகர்களின் மூலம் பிரிட்டிஷ் அரசாங்கம் செயல்படுத்தத் தொடங்கியது. 1828 ஆம் ஆண்டு ஸ்ரீலங்காவில் உள்ள தோட்டங்களில் பணிபுரிய முதல் முறையாக 150 கூலிகள் ஓப்பந்த அடிப்படையில் அனுப்பி வைக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து அங்கு உருவாக்கப்பட்ட காபி தோட்டங்களுக்கு 1939 முதல் எண்ணிக்கை பெருகத் தொடங்கியது. சர்க்கரைத்தீவு என்றழைக்கப்பட்ட மொரீசியசுக்கு 1819 ஆம் ஆண்டு முதல் இந்தியர் போகத் தொடங்கினர். ஆனால் தோட்டத்தில் பணிபுரிய ஒப்பந்தக் கூலிகளாக 1834 ஆம் ஆண்டு முதல் தான் பெருவாரியாகக் கல்கத்தா துறைமுகத்தின் வழியாகச் செல்லத் தொடங்கினர். இந்த ஆண்டு மட்டும் 7000 பேர்கள் சென்றுள்ளனர். இதனைத் தொடர்ந்து 1838 ல் இரு கப்பல்களில் 400 பேர்கள் பிரிட்டீஷ் கயானாவிற்கும், 1844 ல் டிரினிடாட், 1845 ல் ஜமாய்கா போன்ற நாடுகளுக்கும் செல்வது தொடர்ச்சியாக நடக்கத் தொடங்கியது. ஆறு மாதங்களுக்குரிய ஊதிய முன்பணம், உடைகள், உணவு என்பதற்காக ஒவ்வொரு ஒப்பந்தகூலிக்கும் 10 பவுண்டுகள் செலவிடப்பட்டது. ஆப்ரிக்காவில் இருந்த அடிமைகள் கொண்டுவரப்பட்ட அவலத்தைப் போலவே இந்த ஒப்பந்தக்கூலிகளும் நடத்தப்பட்டது. இந்தக் கொடூர வாழ்க்கையில் உயிர் இழந்தவர்களும், தப்பி வர முயன்ற போது சிறையில் அடைக்கப்பட்டு வாழ்க்கையைத் தொலைத்தவர்களும் அநேகம் பேர்கள். 1837 ஆம் ஆண்டுக் குடிபெயர்வுச் சட்டம் அமுலுக்கு வந்தாலும் பிழைப்புக்காகச் சென்றவர்களின் அவல வாழ்க்கை மட்டும் முடிவுக்கு வந்தபாடில்லை. கல்வியறிவற்ற அடித்தட்டு மக்களுக்குத் தாங்கள் செல்லும் நாடுகளின் பூகோள அறிவோ, செல்லக்கூடிய நாட்டின் தூரம் குறித்தோ எந்த அறிவும் இல்லாமல் ஆசை வார்த்தையின் அடிப்படையில் நகர்ந்து சென்று அல்லல்பட்டர்வர்களில் அநேகம் பேர்கள்.தமிழர்களே. தமிழ்நாட்டுக்குள் தாங்கள் வாழ்ந்து கொண்டிருந்த இழிநிலையை மாற்றிக் கொள்ள வாய்ப்பாகப் புலம் பெயர்தலை கருதிக் கொண்டனர். ஆனால் காலம் அவர்களைப் பண்ணையடிமையில் இருந்து இழிமக்கள் என்ற தகுதியை உருவாக்கி அவ்வாறே தென் ஆப்ரிக்காவில் குடியேறிய மக்களை வெள்ளையர் அரசாங்கம் அரசாங்க ஆவணத்திலும் இடம் பிடிக்க வைத்தது. உள்ளூரில் பண்ணையடிமைகளாக வாழ்ந்து கொண்டிருந்தவர்களுக்கு இப்போது வேறொரு பெயர் உருவானது. கூலி என்றே அழைக்கத் தொடங்கினர். பெயர் மட்டும் தான் மாறியதே தவிர இவர்களின் அவல வாழ்க்கை மாறவில்லை. இவர்களின் சமூக அந்தஸ்த்து உயரவில்லை. தென்னாப்பிரிக்காவில் கூலிகளை சுவாமி என்றே அழைத்தனர். இந்து மதத்தில் கடவுளைக் குறிப்பிடும் இந்தச் சொல் இழிசொல்லாக மாறியது. இங்கிருந்து செல்லும் ஒவ்வொரு தமிழரின் பெயரும் முனுசாமி, மாரிச்சாமி, பழனிச்சாமி என்று சாமியில் முடிய இந்தப் பெயரையே பயன்படுத்த துவங்கினர். மொத்தத்தில் வெள்ளையர்கள் தமிழர்களை ஒட்டு மொத்தமாக சுவாமி என்றே அழைத்தனர். வெள்ளையர்களின் ஆட்சியில் தமிழ்நாட்டில் சென்னை மாநிலமென்பது மிகப் பெரிதாக இருந்தது. இப்போதுள்ள கேரளாவின் மலபார் மாவட்டம் வரைக்கும் ஒன்றாக இருந்தது. இதற்குள் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், உருது, ஆகிய மொழி பேசுவோர்கள் இருந்தாலும் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழ்ந்த பகுதிகளில் இருந்து தான் அதிகப் புலம் பெயர்தல் நடக்கத் தொடங்கியது. சென்னை துறைமுகத்தின் வழியாகப் புலம் பெயர்ந்தோர் பெரும்போலோனார் தமிழர்களே. அக்காலத்தில் மலையாளிகள் புலம் பெயர்வதில் அதிக அக்கறை காட்டவில்லை. தெலுங்கு மக்கள் அஸ்ஸாமில் உள்ள தேயிலை தோட்டங்களுக்கும், பர்மாவிற்கும் கொண்டு செல்லப்பட்டனர். இலங்கையில் உள்ள தோட்டத்தில் பணிபுரிய தேவைப்படும் ஒப்பந்தக்கூலிகளை முறைப்படுத்தப்பட்ட சட்டத்தின் படி உருவாக்க முதல்முறையாகத் திருச்சியில் 1904 ஆம் ஆண்டுச் சிலோன் தொழிலாளர் ஆணையம் என்ற பெயரில் உருவாக்கப்பட்டது. வெள்ளையர்கள் முக்கியப் பதவியிலும், தோட்டத்தின் சார்பாளர்களுக்கிடையே இங்குள்ளவர்கள் பணியாளர்களாகவும் இருந்தனர். இந்த ஆணையத்திற்கு முதல் முறையாகப் பொறுப்புக்கு வந்த நார்மன் ரோசல் என்பவ்ர் கங்காணி முறையில் ஆள்திரட்டும் புனிதப்பணியைத் துவங்கினார். சென்னை மாநில அரசின் உத்தரவின்படி அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் இவர்களுக்கு உதவி புரிந்தது. இந்தக் காங்காணிகளுக்குப் பெரிதான முன் அனுபவம் தேவையில்லை. என்னவொன்று இவர்கள் ஏற்கனவே இலங்கையில் ஏதோவொரு தோட்டத்தில் பணிபுரிந்தவர்களாக இருப்பார்கள். இவர்களைக் கங்காணி என்ற பெயரில் ஆள் திரட்ட (ஆள் பிடிக்க) ஏற்பாடு செய்யப்பட்டது. தமிழ்நாட்டிற்குள் வந்து சேரும் கங்காணிகளுக்குத் தேவைப்படும் செலவுத் தொகையையும் இவர்களின் அடையாளத் தகடுகளும் ஆணையத்தில் இருந்து பெற்றுக் கொள்வர். இவர்கள் ஒரு குழுவாக ஆட்களைச் சேர்த்த பிறககு தட்டப்பாறைக்கோ மண்பத்திற்கோ அழைத்துச் செல்வர். நாள்பட இந்தத் தொழிலாளர் ஆணையம் தமிழ்நாட்டின் மற்றப் பகுதிகளுக்கும் பரவத் தொடங்கியது. தமிழ்நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் உருவாக்கப்பட்ட இந்த ஆணையத்தில் கங்காணிகள் உதவியின்றி நேரிடையாக வந்து சேர வசதிகளையும் உருவாக்கப்பட்டது. மண்டபம் முகாமிற்குக் கொண்டு வரப்பட்டு இங்கிருந்து தனுஷ்கோடி அல்லது தலைமன்னாருக்கு அழைத்துச் சென்று இறுதியாக இலங்கைக்குள் கொண்டு சேர்த்தனர். இடையிலே எவரும் தப்ப முடியாத அளவிற்குக் கெடுபிடியாக இதற்கென்று பயிற்சியில் இருக்கும் காவல்ர்கள் இருந்தனர். 1917 ஆம் ஆண்டு இலங்கை தோட்டங்களில் பணிபுரிந்தவர்களின் சம்பளம் ஆணுக்கு 8 முதல் 10 சென்ட். பெண்களுக்கு 4 முதல் 6 சென்ட் வரைக்கும் வழங்கப்பட்டது. சிறுவர்களுக்கு 3முதல் 5 சென்ட் வரைக்கும் கொடுக்கப்பட்டது. [] 1886/87 வறட்சி வருடங்களில் சேலம் பகுதிகளில் வாழ்ந்த மக்கள் நடைபயணமாகத் திருச்சியில் இருந்த சிலோன் தொழிலாளர் ஆணையத்திற்குச் சென்று தங்களைக் குடிபெயர பதிவு செய்து கொண்டனர். முறைப்படி பதிவு செய்யாமல் கள்ளத்தோணி மூலம் சென்றவர்கள் இதை விடப் பல மடங்கு அதிகம். 1931 ஆம் ஆண்டு இலங்கையில் இருந்த இந்திய வம்சாளி மக்களின் எண்ணிக்கை பத்து லட்சமாகும். 6 பண்ணையடிமைகள் சென்ற அத்தியாயத்தில் பண்ணை அடிமைகள் என்றொரு பெயர் வந்தது நினைவில் இருக்கலாம். யாரிவர்கள்? [] தமிழ்நாட்டில் வாழ்ந்த அடிமைகளின் மற்றொரு பெயர். இந்தியா கிராம பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டிருந்த காரணத்தால் நாம் பார்க்கப் போகும் தமிழ்நாட்டில் வாழ்ந்த அடிமைகள் பெரும்பாலும் வயல்களைச் சார்ந்த வேலைகளில் தான் இருந்தார்கள். ஒவ்வொரு நிலப்பிரபுக்கும் ஏராளமான நிலங்கள் இருந்தது. தமிழ்நாட்டில் தீண்டாமை என்பது எப்படி ஒரு முக்கியக் காரணியாக இருந்ததோ அதைப் போலவே அவரவர் சார்ந்த பொருளாதார ஏற்றத்தாழ்வுகளும் இதில் முக்கியப் பங்கு வகித்தன. நிலப்பிரபுகளில் பிராமணர், பிள்ளை, முதலியார், செட்டியார், நாயுடு, படையாச்சி, தேவர் என்ற பல இனங்களும் இருந்தது. இவர்களைப் போலவே பண்ணையடிமைகளிலும் இதே போன்ற பல ஜாதிகளில் இருந்து வந்தவர்களும் இருந்தனர். நம் ஜாதிக்காரன் என்பதற்காக இந்தப் பண்ணையடிமைகளுக்குச் சிறப்பான சலுகைகள் எதுவுமில்லை. எல்லாநிலையிலும் மொத்தத்தில் பொருளாதாரமே முக்கியக் காரணமாக இருந்தது. பண்ணையடிமைகள் தாங்கள் சார்ந்திருந்த நிலப்பிரபுகளை என்னங்க சாமி, என்னங்க ஆண்டை, என்னங்க எசமான் என்று அழைத்தனர். இவ்வாறு அழைப்பதும் கூட ஒவ்வொரு ஜாதிக்கும் ஒவ்வொரு விதமாக இருந்தது. குறிப்பாக அவர்வர் சமூக அந்தஸ்து பொறுத்து இருந்தது. []   ஒரு பண்ணையடிமையின் ஒரு நாள் வாழ்க்கையென்பது எப்படியிருந்தது என்பதைப் பார்க்கலாம். அதிகாலையில் கோழி கூவுவதற்கு முன்பு ஒரு கொம்பு ஓலி ஊருக்குள் இருந்து கேட்கும். ஊரின் ஓதுக்குப் புறத்தில் உள்ள சேரிப்பகுதிகளில் உள்ள குடிசைகளில் உள்ளவர்கள் அவசரமாக எழுந்து வழியில் பார்க்கும் ஓடைகளில் முகத்தைக் கழுவி கொண்டு நிலங்களுக்கு வந்து சேர்ந்து விட வேண்டும். ஆண்கள் உடுத்தியிருக்கும் ஆடையென்பது வெறும் கோவணமே மட்டுமே. குளிர்காலம் என்றால் மேலே போர்த்திக் கொள்ளப் பழைய சாக்குப்பைகளைக் கொண்டு உடம்பை போர்த்திக் கொள்ள வேண்டும். பெண்கள் உடையென்பது ஓட்டுப் போட்ட கந்தலாடையினால் ஆன ஒரு சேலை. அதுவும் முழங்காலுக்கு மேல் கட்டியிருக்க வேண்டும். அவரவர் பணிபுரியும் நிலத்திற்குள் இறங்கி வேலையைத் தொடங்கியவுடன் ஓ…… வென்று கத்த வேண்டும். இவர்கள் எழுப்பும் இந்த ஒலியை வைத்துத் தூரத்தில் இருந்து இவர்களைக் கவனித்துக் கொண்டிருப்பவர்களுக்கு வேலையைத் தொடங்கி விட்டார்கள் என்று தெரிந்து கொள்வார்கள். சூரியன் உதயமாவதற்குள் இவர்களின் வேலைகள் முழு வீச்சில் தொடங்கியிருக்க வேண்டும். முதல் கொம்பு ஒலி ஒலிக்கும் போது ஆண்கள் வயலுக்குள் வந்து இருப்பதைப் போல இரண்டாவது கொம்பு ஒலி ஒலிக்கும் போது பெண்கள் வேலைக்கு வந்து விட வேண்டும். பெண்கள் வரும் போது தனக்கும் தன் கணவருக்கும் உண்டான சாப்பாட்டை எடுத்து வருவாள். ஒரு சிறிய மண்பானை. அந்தப் பானைக்குள் இருக்கும் கஞ்சி, மூடுச்சு போட்டு கட்டி வைக்கப்பட்டுள்ள உப்பும் பச்சை மிளகாயும் இருக்கும். பானையை அருகே மண்ணுக்குள் புதைத்து வைத்து விட்டு வயலுக்குள் இறங்கி வேலையைத் தொடங்கி விடுவார்கள். சூரியன் உச்சிக்கு வரும் போது சாப்பாட்டுக்கான நேரம். மறுபடியும் வயலுக்குள் இறங்கினால் சூரியன் மறைந்து நன்றாக இருள் வந்த பிறகே வயலை விட்டு வெளியே வர முடியும். வேலை முடியாத போது வயலுக்குள் நடுவே கம்பு கட்டப்பட்டு அதில் அரிக்கேன் விளக்கு ஏற்றப்பட்டு அந்த வெளிச்சத்தில் மீதியுள்ள வேலையை முடித்து விட வேண்டும். இந்த வயல் வேலையைப் போலவே மற்ற ஒவ்வொரு வேலைக்கும் இரவு வரைக்கும் நீடீக்கும். இந்தப் பண்ணை அடிமைகளைக் கவனிக்கத் தனியாக ஒரு படை உண்டு. அவர்களுக்கு மணியக்காரன், ஏஜெண்ட், தலையாரி போன்றவர்கள் உண்டு. வயல்வேலை முடியும் வரைக்கும் இவர்களும் வீட்டுக்குச் சென்றுவிட முடியாது. மதிய சாப்பாட்டு நேரத்திற்கு மட்டுமே வீட்டுக்கு சென்று வர முடியும். பண்ணையடிமைகள் வேலை முடிந்ததும் மணியக்காரனை பின்தொடர்ந்து அவர்களின் நிலப்பிரபு வீட்டுக்குச் செல்ல வேண்டும். குறிப்பிட்ட இடத்தில் தூரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருப்பார்கள். நிலப்பிரபு முன்னால் கைகட்டி நிற்க வேண்டும். ஆண்களுக்குச் சம்பளமாக 2 படி நெல்லும், பெண்களுக்கு மூன்று நாள் வேலைக்கு மூன்றேகால் லிட்டர் நெல் ( ஒரு மரக்கா) வழங்கப்படும். இவர்கள் இந்த நெல்லை அவித்து, அரிசியாக மாற்றிக் கஞ்சி தயாரிப்பதற்குள் இரவு 11 மணி ஆகிவிடும். ஆண்கள் வரும் வழியில் ஓடையில் பிடித்து வரும் நண்டு, நத்தை மூலம் உருவாக்கப்படும் திரவத்துடன் சேர்த்து இரவு சாப்பாட்டை முடித்து மறுநாள் அதிகாலைக்குள் வயலுக்குள் சென்று விட வேண்டும். இவர்களின் குழந்தைகள் ஏதோவொரு மூலையில் பசி மயக்கத்தில் கிடக்க எழுப்பி ஊட்டி அந்தத் தரையில் படுத்துறங்க ஒரு நாள் முடிந்து அடுத்த நாள் பயணம் தொடங்கும்.. பண்ணையடிமைகளின் குழந்தைகள் ஆணாகயிருந்தாலும் பெண்ணாகயிருந்தாலும் எட்டு வயது வரைக்கும் ஆடையின்றித் தான் திரிந்து கொண்டிருக்கும்.. பகல் முழுக்கப் புழுதியில் விளையாடி விட்டுப் பெற்றோர்கள் வருவதற்குள் ஏதோவொரு மூலையில் முடங்கித் தூங்கிக் கொண்டிருக்கும். நடு இரவில் கஞ்சிக்காக எழுப்பும் போது பார்த்தால் மறு நாள் நடு இரவில் தான் மறுபடியும் பார்க்க முடியும். பண்ணையடிமைகள் தங்கள் குழந்தைகளுக்குப் பத்து வயதானதும் தங்களது எஜமானர்களிடம் கொண்டு போய்ச் சேர்த்து விட வேண்டும். எத்தனை மகன்கள் மகள்கள் இருந்தாலும் அத்தனை பேர்களையும் அவர்களிடம் தான் கொண்டு போய் விட வேண்டும். பிள்ளைகள் மாடு மேய்ப்பது, கன்றுக்குட்டிகளைப் பராமரிப்பது, செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றுவது என்று ஏதோவொரு வேலை இருந்து கொண்டேயிருக்கும். 14 வயது தொடங்கும் போது வயல்களில் கொண்டு போய் விட்டு விடுவார்கள். ஒவ்வொரு பண்ணையடிமைகளும் ஏறத்தாழ ஒவ்வொரு நாளும் 14 மணி நேரம் உழைக்க வேண்டும். பண்ணையடிமைகளின் குழந்தைகள் பள்ளிக்கு செல்ல முடியாது. தலைமுறை தலைமுறையாகக் கல்வி வாசனையே இல்லாமல் நிரப்பிரபுகள் பள்ளிக்கு அனுப்பக்கூடாது என்று கட்டளையிட்டு விடுவார்கள். பண்ணையடிமைகளில் உள்ள தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு நாவிதர் சவரம் செய்யமாட்டார். இந்த மக்கள் இதற்கென்று உடைந்த பாட்டிலின் பகுதியை மண்ணுக்குள் புதைத்து வைத்திருப்பார்கள். சில நாட்கள் கழித்து அந்தக் கூர்மையை வைத்து ஒருவருக்கொருவர் சவரம் செய்து கொள்வதுண்டு. பண்ணை அடிமைகள் தங்கள் வீடுகளில் வளர்த்த மரங்களில் விளையும் பொருட்களை முதல் முறையாகப் பண்ணை வீட்டுக்கு கொடுத்த பிறகே தாங்கள் அனுபவிக்க முடியும். தாங்கள் வைத்திருக்கும் மாடு கன்று போட்டால் அந்தக் கன்றை பண்ணை வீட்டுக்கு கொடுக்க வேண்டும். அதற்காக ஒரு வேட்டியும் புடவையும் பண்ணையடிமைக்குக் கொடுக்கப்படும். ஒவ்வொரு பொங்கலுக்கும் ஆணுக்கும் பெண்ணுக்கும் சேர்த்து 2 படி நெல் கொடுப்பார்கள். பண்ணை அடிமைகளுக்கு நோய் வந்தால் இவர்களுக்கு வைத்தியம் பார்ப்பவர்களின் பெயர் வள்ளுவ பண்டாரம் என்றழைக்கப்படும் நாட்டு வைத்தியர்கள். இவர்களும் மேல் ஜாதி வர்க்கத்தைச் சேர்ந்தவர்களே. பண்ணையடிமைகள் தூரத்தில் நின்று கொண்டு தங்கள் நோய்கள் குறித்துச் சொல்ல வேண்டும். அவர் அய்யனார் முனி பயமுத்துகிறது என்று சொல்லிவிட்டு ஒரு கொத்து விபூதியை தருவார். அதை வாங்கி வாயில் போட்டுக் கொள்வார்கள். இதற்குக் கூலியாகப் பண்ணையடிமைகள் ஒரு மரக்கால் நெல்லை வைத்தியருக்கு கொடுக்க வேண்டும். பண்ணையடிமைகள் திருமணம் செய்து கொள்ள வேண்டுமென்றால் நிலப்பிரபுகளிடம் முறைப்படி அனுமதி வாங்க வேண்டும். கல்யாணச் செலவுக்குக் கல்யாண சிவந்த பணம் என்ற பெயரில் பண்ணையடிமைகள் நிலப்பிரபுகளிடம் முன் பணம் கேட்பார்கள். நிலப்பிரபுகள் ஒரு மூட்டை நெல் அல்லது முப்பது ரூபாய் கொடுத்து ஒரு பிராமிஸரி நோட்டு மூலம் எழுதி வாங்கிக் கொள்வார். பிறக்கப் போகும் குழந்தைகளும் இந்தப் பண்ணையிலே வேலை செய்யப்பட வேண்டும் என்பது எழுதப்படாத சட்டமாகும். சில கிராமங்களில் புதுப்பெண் தனது முதலிரவை நிரப்பிரபுவோடு கழிக்க வேண்டும் என்ற நிலையும் இருந்தது. தாழ்த்தப்பட்டவர்களுக்கு வணங்க கோவில் என்ற அமைப்புத் தனியாக இருக்காது. திருவிழக்காலங்களில் வேப்பமரம், உதியமரத்தின் கீழ் ஒரு கல்லை வைத்து அதற்கு முன்னால் ஒரு சட்டியில் கள்ளையும், கருவாடையும் வைத்து வணங்குவார்கள். பொதுவான திருவிழக்களில் நடக்கும் தெய்வ வழிபாடுகளைத் தூரத்தில் நின்றே வணங்க வேண்டும். இங்கு இவர்களுக்குக் கடைசியாகக் கொடுக்கப்படும் கறிச் சாப்பாட்டை இலைவைத்துக் கட்டப்பட்ட மூட்டையைச் சுமந்து சென்று தங்கள் பகுதிக்குள் கொண்டு வந்து உருண்டை பிடித்து ஒவ்வொருவருக்கும் கொடுத்து சாப்பிட வேண்டும். இதிலும் பள்ளர், பறையர் என்ற பிரிவுகள் உண்டு. இருவரும் தனித்தனியாகத் தான் செயல்படுவார்கள். பண்ணையடிமைகள் இறந்து விட்டால் சவ அடக்கத்திற்குத் தேவைப்படும் பணத்தையும் நிலப்பிரபுவிடம் முன்பணமாகப் பெற்று அதற்குத் தனியாகப் பிராமசரி நோட்டு எழுதிக் கொடுக்க வேண்டும். சவ அடக்கத்தின் போது நெருக்கமான உறவினர்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும். மற்றவர்கள் வேலைக்கு வந்து விட வேண்டும். பண்ணையடிமைகளின் குடிசை என்பது மூன்று அடி உயர்த்திற்கு மன்னால் பூச்சப்பட்டதாகும்.. வாசலின் உள்ளே நுழைய தனது உடம்மை முழுமையாகக் குனிந்தால் தான் செல்ல முடியும். கிராமங்களில் இரவில் நாடகங்கள் நடக்கும். இது போன்ற சமயங்களில் நாடகத்தின் முன்பாக முதல் வரிசையில் மேல்சாதியினரும், அடுத்ததாகப் பிற்பட்ட வகுப்பினரும் அமர்ந்திருப்பார்கள். கடைசியாகத் தாழ்த்தப்பட்டவர்கள் இருப்பார்கள். ஒவ்வொரு பகுதிக்கும் வைக்கோல் பிரியை தடுப்பாகப் போட்டிருப்பார்கள். தாழ்த்தப்பட்டவர்கள் எழுந்து நின்று விடக்கூடாது. ஒரு வேளை எழுந்து நின்று பார்த்தால் பலத்த அடி கிடைக்கும். இதற்குப் பயந்து கொண்டே தாழ்த்தப்பட்டவர்கள் இது போன்ற நிகழ்ச்சிகளுக்கு வருவதில்லை. இதற்கு மேலாக அதிகாலையில் வயலில் இறங்கியிருக்க வேண்டும். எந்தக் காரணமும் சொல்லமுடியாது. இல்லாவிட்டால் அதற்குத் தனியான தண்டனை காத்திருக்கும். ஒவ்வொரு நாளும் இரவில் நிலப்பிரகளின் வீட்டில் பண்ணையடிமைகள் நின்று அன்று செய்த வேலைகளைப் பற்றிச் சொல்ல வேண்டும். இவர்களைக் கண்காணிக்கும் தலையாரிகள் அன்று நடந்த ஒவ்வொரு நிகழ்ச்சியையும் பற்றி ஒப்பித்துக் கொண்டு வருவார். யார் தாமதமாக வந்தார்கள்? யார் எதிர்த்துப் பேசினார்கள்? போன்ற எல்லாவற்றையும் சொல்லிமுடித்தவுடன் மறுநாள் சம்மந்தப்பட்ட பண்ணையடிமை நிரப்பிரபு வீட்டுக்கு வந்து விட வேண்டும். சம்மந்தப்பட்ட நபர் பறையராக இருந்தால் பள்ளரைக் கொண்டும், பள்ளராக இருந்தால் பறையரைக் கொண்டும் மாட்டுத் தொழுவத்தில் உள்ள கம்பில் கட்டச் சொல்வார்கள். சட்டையால் அடிப்பது தொடங்கும். இந்தச் சாட்டை என்பது புளிய விளாரால் உருவாக்கப்பட்டதாகும். ஐந்து பிரிசாட்டை என்று பெயர். ஐந்து பிரியையும் முறுக்கேற்றி வைத்திருப்பார்கள். அத்துடன் முணையில் ஒரு கூழாங்கல்லையும் சேர்த்து கட்டியிருப்பார்கள். ஒவ்வொரு முறையும் அடித்துச் சாட்டையை இழுக்கும் போது அந்தக் கல்பட்டு தோல் பிய்ந்து ரம்பம் போல அறுத்து ரத்தம் பீறிட்டுக் கொண்டு வரும். இத்தனை அடி என்று கணக்கில்லை. அடிப்பவனின் கை சோர்ந்து போகும் வரைக்கும் அடிக்க வேண்டும். தொடர்ந்து தலையாரி அடிப்பான். தலையாரியும் சரியாக அடிக்காவிட்டால் நிலப்பிரபு சாட்டையை வாங்கி அந்தத் தலையாரியை பலங்கொண்ட மட்டும் அடித்து முடித்துத் தொடர்ச்சியாக அந்தப் பண்ணையடிமை பலங்கெண்ட வரைக்கும் அதே சாட்டையால் போட்டுத் தாக்குவான். அடி வாங்குபவன் கத்தக்கூடாது என்பதற்காகவும், முகத்தில் துப்பி விடக்கூடும் என்பதற்காகவும் வாயில் துணியை வைத்து கட்டியிருப்பார்கள். அடித்து முடித்ததும், அடிவாங்கியவனை வைக்கோலின் மேல் சாக்கு போட்டு படுக்க வைத்திருப்பார்கள். அடிவாங்கியவனுக்குப் பண்ணை வீட்டு ரசம் சோறு கொடுக்கப்படும். அந்த உருண்டையைத் தீயில் காட்டி காயத்துக்கு மருத்தாகப் போட்டுக் கொள்ள வேண்டும். வேறு எவரும் உதவக்கூடாது. பண்ணையடிமைகளை மகா கேவலமாக நடத்திய வகையில் தஞ்சை மாவட்டத்திற்குத் தனியான இடமுண்டு. அது தான் சாணிப்பால் குடிப்பது என்ற தண்டனையாகும். மாட்டுச் சாணத்தை மண்குடத்திலிட்டு தண்ணீரை ஊற்றி கரைப்பார்கள். பின்பு அதைத் துணியால் வடிகட்டி வடிகட்டப்பட்ட நீரை தண்டனை விதிக்கப்பட்ட பண்ணையடிமை குடித்தே தீர வேண்டும். குடிக்க மறுத்தால் சவுக்கடி கொடுத்து குடிக்க வைப்பார்கள். பல சமயம் இரண்டும் ஒரே சமயத்தில் நிறைவேற்றப்படும். இது போன்ற வாழ முடியாத சூழ்நிலையினால் தான் தமிழகத்தில் இருந்து மேற்கித்திய நாடுகளுக்குத் தமிழர்கள் புலம் பெயர்தல் நடந்தேறத் தொடங்கியது. [] [] 7 தீண்டத்தகாதவர்கள்--மேட் இன் இந்தியா மேலைநாடுகளில் இருந்த அடிமை முறைகளுக்கும், இந்தியாவில் குறிப்பாகத் தமிழகத்தில் இருந்த அடிமை தனத்திற்கும் முக்கியமான வேறுபாடு ஒன்று உண்டு. ஆப்பிரிக்கா நாடுகளில் இருந்து கொண்டு வரப்பட்ட கருப்பின மக்களை வெள்ளையர்கள் உழைப்பிற்காகப் பயன்படுத்திக் கொண்டனர். [] தங்களின் வேலைக்காக அவர்களைக் கொடூரமாக நடத்தினர். ஆனால் அவர்களைத் தீண்டத்தகாதவர்களாக நடத்தவில்லை. ஆனால் தமிழகத்தில் இருந்த அடிமைகள் இந்தத் தீண்டா அடிமையாகக் காலம் முழுக்க இருந்தனர். உழைப்பையும் உறிஞ்சிக் கொண்டு கேவலமாகவே நடத்தினார்கள். அவர்கள் பார்த்தால், பழகினால், தொட்டால் தீட்டு என்பதாகக் குறிப்பிட்ட இனங்களையே ஒதுக்கி வைத்திருந்ததும் இங்கே தான் இருந்தது. தமிழர்களின் தொன்மை வரலாற்றை நமக்குக் காட்டும் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல்,பாலை என்பதாகட்டும் பின்னால் வந்த சங்க காலமாக இருந்தாலும் நாம் இவற்றின் மூலம் உண்ர்ந்து கொள்வது மேற்கித்திய நாடுகளைப் போல இங்கே எந்தத் தொழில் வளமும் மிகப் பெரிய மாற்றங்களை உருவாக்கவில்லை. அதற்கான எந்த ஏற்பாடுகளும் இங்கே இல்லை. ஏதென்ஸ் நகரில் இருந்த குடிமக்களின் எண்ணிக்கை நாற்பதாயிரம் பேர்கள். ஆனால் இவர்களிடம் இருந்த அடிமைகளின் எண்ணிக்கை எண்பதாயிரம் பேர்கள். ரோம், கிரேக்க நாடுகளைப் போலத் தமிழ்நாட்டில் அடிமைகளாக வாழ்ந்தவர்கள் எந்தத் தொழிற்சாலைகளிலும் பணிபுரியவில்லை. விவசாயம் சார்ந்த பணிகளையே பார்த்தனர். மேலும் சங்க காலப் பாடல்களில் நாம் காணும் ஏற்றுமதி பொருட்களான மிளகு, அகில், சந்தனம், முத்து, பவளம் போன்றவைகள் சேகரிக்கப்பட்ட பொருட்களே அன்றி உருவாக்கப்பட்ட பொருட்கள் அல்ல. இதன் காரணமாகவே அடிமைகளாக இருந்தவர்கள் கோவில்களில், வீடுகளில், மற்றும் விவசாயப் பண்னை ஆட்களாக இருந்தனர். முதல் ஒன்பது நூற்றாண்டுகளில் நிலவிய அடிமைத்தனத்தைச் சோழர்களின் ஆட்சி காலத்தில் கிடைக்கப் பெற்ற கல்வெட்டுகளில் மூலம் நாம் அதிகம் உணர்ந்து கொள்ள முடிகின்றது. இதே காலகட்டத்தில் நிலவுடைமை வளர்ச்சியடைந்து அடிமைகளின் உழைப்பு அதிக அளவு உறிஞ்சப்பட்டு இருக்கிறது. [] இதே காலகட்டத்தில் பிரமாணர்களும், வேளாளர்களின் வாழ்க்கை வளர்ச்சியடைந்து நிலத்தை வைத்து ஆதிக்கம் செலுத்தும் அமைப்பும் உருவானது. இதுவே தான் பிராமணர், பிராமண அல்லாதோர் என்று பிரிவாகப் பிரிந்தது. தூய்மை என்ற சொல்லும் தீட்டு என்பதும் உருவாகி சமூகத்தைப் பிளவு படுத்தியிருந்து. இதன் மூலமாகத்தான் தமிழகத்தில் பறையர்,பள்ளர், சக்கிலியர் போன்ற குறிப்பிட்ட இனம் சார்ந்த மக்கள் தாங்கள் மட்டுமல்லாது தங்களின் வாரிசுகளையும் இந்த அடிமைதனத்திற்குள் வைத்திருக்க வேண்டியதாகி விட்டது.. ஒருவன் தீண்டாத் தகாத ஜாதியில் பிறந்தவனாக இருந்தால் அவன் மட்டுமல்ல அவன் வாரிசுகளும் இதே அடிமைத்தனத்தில் தான் இருந்தாக வேண்டும். தீண்டத்தகாதவர்கள் அனுபவிக்க வேண்டிய அத்தனை துன்பங்களையும் வாரிசுகளும் அனுபவித்தே ஆக வேண்டும். இதில் எந்த மாற்றமும் இருப்பதில்லை. இதிலும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது ஒன்று உண்டு. எந்த அடிமைகளும் குறிப்பிட்ட தொழில் சார்ந்த நுணுக்கங்களைக் கற்றுக் கொள்ள முடியாதபடி இறுக்கமான வரையறைக்குள் வைத்திருந்த காரணத்தால் கடைசி வரைக்கும் வெறும் உழைப்பை கொடுக்கும் உயிருள்ள எந்திரமாகவே வாழ முடிந்துள்ளது. மேற்கத்திய நாடுகளில் இருந்த அடிமைகள் என்பவர்கள் சொத்துக்குச் சமமானவர்கள். இதற்கென்று சிறப்புச் சட்டங்கள் கூட இருந்தது. ரோமபுரியில் உள்ள அடிமைகள் சதுப்புநிலங்களிலோ, தொற்று நோய் பரவக்கூடிய இடங்களிலோ பணிபுரிய வைக்கக்கூடாது என்று உடைமையாளர்களுக்கு அறிவுரை கூறப்பட்டிருந்தது. ஆனால் தீண்டாமை என்ற வடிவில் வேலை வாங்கிய தமிழகத்தில் இது போன்ற எதுவும் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதைவிட மகா கேவலமாகத்தான் நடத்தப்பட்டனர். தமிழக மன்னர்களின் ஆட்சியில் ஒவ்வொரு செயல்பாடுகளுக்குப் பின்னாலும் சமயம் சார்ந்த விசயங்களே முக்கிய இடத்தைப் பிடித்து இருந்தன. இதன் காரணமாகவே கடவுளின் அடிமைகள் என்பதாக மாற்றி எந்த வகையிலும் எழுந்திருக்க முடியாத அளவில் வலைபின்னலுக்குள் இந்த அடிமை அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்தப்பட்டு வந்து கொண்டிருந்தது. கோவில்களில், கோவில்களுக்குத் தானமாக வழங்கப்பட்ட நிலங்களில், கோவிலைச் சார்ந்த மடங்கள் இதனைத் தொடர்ந்து நிலங்களை அதிக அளவில் வைத்திருந்த நிலவுடைமையாளர்கள் என்று ஒவ்வொரு அடிமைகளுக்கும் உண்டான வேலையென்பது நிலத்தில் தொடங்கி அவன் உழைத்து ஓடாகி உயிர் பிரிந்து அந்த நிலத்திற்குள்ளே அடக்குவது வரைக்கும் வேறு எந்தத் தொழிலையையும் கற்றுக் கொள்ள வாய்ப்பில்லை. இதன் காரணமாகவே அடிமைகள் அதிக அளவு தேவையில்லாமல் குறுகிய வட்டத்திற்குள்ளேயே இருக்கும்படி ஆனது. இவர்களைத் தான் பண்ணையடிமை என்றனர். ஆங்கிலேயர்கள் ஆட்சிக்கு வந்து முறைப்படி சட்டமியற்றி இந்த அடிமைத்தனத்தை ஒழிக்கும் வரைக்கும் சகல இடங்களிலும் பரவியிருந்து. ஆங்கிலேயர்கள் மூலம் ஒப்பந்தக்கூலி முறை அறிமுகமான போதிலும் ஜாதியின் பெயரால் அடிமைத்தனம் என்பது வெவ்வேறு வழியில் தொடர்ந்து கொண்டே தான் இருந்தது. இந்து சமூதாயத்தின் அடிப்படையே சாதியாகும்.. 1918 ஆம் ஆண்டுக் கணக்குப்படி இந்தியாவில் 5106 சாதிகள் இருந்தது. அதுவே தான் இன்று நகர்ந்து நகர்ந்து “சாதிவாரியாகப் பட்டியல் எடுத்தால் தான் ஆச்சு” என்று நம் அரசியல் வியாதிகள் அடம் பிடிக்கும் வரைக்கும் வளர்ந்துள்ளது. ஒருவர் மதம் மாறினாலும் அவர்களின் மூலக்கூறு மட்டும் மாறுவதில்லை. இந்துவில் தான் கொடுமை என்றால் தற்போது முஸ்லீம், கிறிஸ்துவம் வரைக்கும் பிசாசு போலவே தொடர்ந்து வந்து தலித் கிறிஸ்துவர்கள் என்பது வரைக்கும் முடிவில்லாமல் போய்க் கொண்டேயிருக்கிறது. ஒவ்வொரு காலகட்டத்திலும் எவரால் ஆதாயமோ அவர்களுக்கு ஒரு தனி ஒதுக்கீடு. அதற்கு மேலும் ஒரு உள் ஒதுக்கீடு. ஆக மொத்தத்தில் உருவாக்க வேண்டிய பிரிவினைகளை ஆட்சியாளர்களும் உருவாக்குகிறார்கள். மக்களும் அதையே தான் விரும்புகிறார்கள். பின்னால் வரப்போகும் சம்பவங்களில் நாம் பார்க்கவேண்டிய இந்தச் சாதி மூலக்கூற்றை இப்போது பஞ்சாயத்தில் நிறுத்தி ஒரு தீர்ப்பை வாங்கிவிடுவோம். நான் இந்து என்று சொல்பவர்களில் எத்தனை பேர்களுக்கு இதன் முழுமையான அர்த்தம் தெரியும்? முஸ்லீம் என்றால் ஒரே வார்த்தையில் அல்லா என்றும் கிறிஸ்துவர் ஏசு என்றும் நகர்ந்துவிட முடியும். ஆனால் இந்து மதத்திற்கு? தொடக்கத்தில் இந்தச் சாதியை தெய்வீகமானது என்பதாகப் பரப்பப்பட்டது. அதற்குப் பின்னால் இருந்தது முழுக்க முழுக்கத் திட்டமிடப்பட்ட அயோக்கியத்தனம். ஹிந்துத்துவம் என்பது இங்கே வாழ்ந்து கொண்டுருந்த பூர்வகுடிகளான திராவிட மக்களிடம் இருந்து பிடுங்கப்பட்டது. இந்தோ -ஐரோப்பாவிலிருந்து வந்த பெருங் கூட்டத்தினரால் இங்குக் கொண்டு வரப்பட்டது. இந்தக் கூட்டத்தில் உள்ள ஞானிகள்,,முனிவர்கள்,சந்நியாசிகள் போன்றவர்கள் தங்களது வேதங்களைச் சிந்து நதிக்கரையில் இயற்றினார்கள். இது கிறிஸ்து பிறப்பதற்கு முன்பு பல நூற்றாண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்தது. முகமது நபியின் இஸ்லாம் என்கிற நம்பிக்கை கிறிஸ்துவத்திற்குப் பின்னால் வந்த ஒன்றாகும். இந்திய ஜனத்தொகையில் 85 சதவிகிதம் இந்துக்கள். ஆனால் இந்துக்கள் நம்பும் வேதாந்தம் என்பது வேதங்களைப் பற்றிய அறிவு, ஆராய்ச்சி, விரிவாக்கம், உணர்தல் போன்றவற்றை ஒவ்வொரு இந்துக்களுமே அறிந்து இருப்பார்களா என்பது ட்ரில்லியன் டாலர் கேள்வி? மொத்தத்தில் வேதம் என்பதன் தொடக்கம் முடிவு எவருக்குமே தெரியாது. இது குறிப்பிட்ட மக்களின் ஆதிக்கத்தில் வாழையடி வாழையாகக் கொண்டு வரப்பட்டது. குரு சிஷ்யன் என்ற போர்வையில், ஏடுகளில், பேச்சில், மந்திரம் போலவே இதன் ரகஸ்யம் காக்கப்பட்டது. தெய்வத்திடம் ஒவ்வொருவரும் ஏகாந்த சிந்தனைகளில் உரையாடி உருவாக்கப்பட்ட இந்த வேதத்திற்கும் சாமன்ய மக்களின் வாழ்க்கை முறைக்கும் வெகு தூரம். இதுவே தான் இன்று ஒவ்வொரு மனிதனையும் ஒன்று சேரவிடாமல் வெகு தூரமாகப் பிரித்து வைத்தும் உள்ளது. தொடக்கத்தில் பலவிதமான நம்பிக்கையை மக்களிடம் விதைத்தார்கள். இதனையே உண்மையென்று நம்பிக்கொண்டு அடித்துக் கொண்டு இன்றுவரையிலும் செத்துக் கொணடும் இருக்கிறார்கள்.. நாம் பள்ளிக்கூடப் பாடங்களில் இந்து மதத்தில் நான்கு வேதங்கள் உள்ளது என்று படித்துருப்போம். ஆனால் அந்த நான்கு வேதங்கள் எதைப்பற்றிச் சொல்லியிருக்கிறது என்பதையும் பார்த்துவிட்டு நகர்ந்துவிடலாம். ரிக் வேதம் என்பது உலகத்தைப்பற்றிய சூழ்நிலைகள், இயற்கை, நம்மைச் சுற்றியுள்ள விசயங்களைப்பற்றிப் பேசுவது யஜுர் வேதம் சடங்குகள்,பலிகள்,வேள்விகள் இவற்றைச் செய்யும் முறை. இதில் உள்ள மந்திரங்களைப் பற்றி விரிவாக விளக்குவது. சாமவேதம் சங்கீதம், பாடும் முறை, பயிலும் முறை, அடிப்படை விசயங்கள் அதர்வண வேதம் மந்திரங்கள், சூன்யம், தந்திரவேலைகள், ஏவல் போன்றவற்றைப் பேசுவது. இந்த நான்கிலும் கிளைநதிகள் உண்டு. இந்த ஒவ்வொன்றிலும் மந்திர சம்ஹிதை, பிரமாணம், ஆரண்யகா, உபநிஷித் என்று நான்காகப் பிரிகின்றது. ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட ரிஷியினால், ஞானிகளால் உருவாக்கப்பட்டது. அவர் தன்னுடைய சீடர்களுக்கு மட்டும் சொல்லிக் கொடுக்கப் பயின்ற ஒவ்வொருவரும் இதை மக்களிடம் கொண்டு வந்து சேர்த்தார்கள். இதிலிருந்து தொடங்கியது தான் பிரும்மாவின் தலையிலிருந்து தோன்றியவர்கள் பிராமணர்கள், தோள் பட்டையிலிருந்து உருவானவர்கள் சத்திரியர்கள் என்று கூறப்படும் ஆட்சியாளர்கள் மற்றும் படைவீரர்கள். தொடையிலிருந்து வந்தவர்கள் சூத்திரர்கள் என்று சொல்லப்படும் தொழிலாளகள், கைவினைஞர்கள். பாதங்களில் மற்றும் பாதங்களின் அடியிலிருந்து தோன்றியவர்கள் பஞ்சமர்கள். இந்தப் பிரிவுகளில் இருந்து தோன்றியது தான் இன்று நாம் பார்க்கும் கணக்குவழக்கற்ற ஜாதிகள். ஒன்றிலிருந்து ஒன்று பிரிந்து நான் அவனைவிட உயர்ந்தவன், இவன் என்னை விடத் தாழ்ந்தவன் என்று அவரவர் நோக்கப்படி கான்சர் கிருமி போலப் பல்கி பெருகிவிட்டது. இந்த இடத்தில் ஒரு ஆச்சரியம் என்னவென்றால் இதில் முதல் இடத்தில் வருபவர்கள் பிராமணர்கள் என்று ஒரு சொல்லில் முடித்துவிட்டார்கள். ஆனால் இந்தப் பிராமணர்கள் இந்தியாவில் எத்தனை விதமாக உள்ளனர் தெரியுமா? பிராமணன் என்றால் நீ எந்தப் பிராமணன்? ஜலபுஷ்பம் என்று கூறி மீன் சாப்பிடும் வங்காளி பிராமணனா? காலில் shoe போட்டுக் கொண்டு கோட்டு சட்டையுடன் பூசை செய்கிற கங்கோத்திரி பிராமணனா? கையில் உருளை போன்ற ஒன்றை வைத்துக் கொண்டு அதைத் சுழற்றி பூசை செய்யும் பூடான் பிராமணனா? கேரளத்து நம்பூதிரியா? ஆந்திர சாஸ்திரியா? ராவ்ஜீயா? சதுர்வேதியா? தமிழ்நாட்டு பிராமணரா? அதிலும் அய்யரா? அய்யங்காரா? இதுவே செட்டியார் என்ற மூல சொல்லில் இருந்து பல கிளைநதிகள் பிரிகின்றது. தேவர்கள் என்றால் இன்று முக்குலத்தோர் என்று அழைக்கப்படுகிறது. அதிலும் கள்ளர், மறவர், அகமுடையர் என்று பிரிகின்றது. கள்ளர் சாதிக்குள் பல பிரிவுகள் உண்டு. இதைப்போலவே இந்தியாவில் உள்ள ஒவ்வொரு ஜாதிக்குள் ஏராளமான பிரிவுகள். அந்தப் பிரிவுகளுக்குள் கூட வர்ணம், கோத்திரம் போன்ற சொல்லில் இன்னும் கூடத் தனித்தனியாகப் பிரிகின்றது. இது தவிர ஒவ்வொரு தொழிலுக்கும் ஒவ்வொரு சாதி. பல்லாக்குகளைச் செய்தவன் பல்கிவாலா. இனிப்புகளைச் செய்தவன் மிட்டாய்வாலா. பல்லாக்கை தூக்குபவன் போயி என்கிற கீழ் சாதி. ஒவ்வொரு சாதிக்குள் நுணுக்கமான வரையறை உண்டு இரும்பை உருக்குபவன் ஒரு சாதி. இரும்பைக் கொண்டு பொருள்களைச் செய்பவன் வேறொரு சாதி. அந்தச் சாதியில் பிறந்தவன் அடுத்தச் சாதி மக்களைத் திருமணம் செய்யக்கூடாது. கடைசி வரைக்கும் ஒரு எல்லையை விட்டு தாண்ட முடியாத அளவிற்கு மிகத் தந்திரமாக உருவாக்கப்பட்ட வலைபின்னல். விரித்தவர்கள் போய் விட்டார்கள். அதிலிருந்து விடுபட மனமில்லாமல் நாம் மட்டும் உழன்று கொண்டு இருக்கிறோம். இந்து மத வேதங்களை உருவாக்கிய முனிவர்களைப் பற்றி நாம் பேசிக் கொண்டு போனால் நமக்கு முனி பிடித்துவிடும் அளவிற்குத் தலை சுத்திவிடும். ஆனால் மொத்த விசயத்தையும் ஒரு குடுவைக்குள் அடக்கிவிடலாம். ” உலகில் நீ காணும் அத்தனையும் மாயை. ஆத்மா என்பது பிரம்மம். இவற்றைப் புரிந்து கொள்ள மனிதனால் முடியாது. உலகில் உள்ள அத்தனை பந்தங்களையும் துறக்கவேண்டும். உன்னுடைய பற்றுதல் அத்தனையையும் துறந்த பிறகே உனக்கு மோட்சம் கிடைக்கும். குணம், குணக்கேடு, எல்லாவற்றையும் அறிய வேண்டும் போன்ற எண்ணத்தை விட்ட பிறகு எஞ்சி நிற்பது எதுவோ அதுவே தான் ஆண்டவன்.” இப்போது புரியுமே? இந்திய வரலாற்றில் ஞானிகளும் ரிஷிகளும் தோன்ற மேலைநாட்டில் விஞ்ஞானிகளும் சமூகச் சீர்சிருத்தவாதிகளும் தோன்றிய கதையை ஓரளவுக்கு உணர்ந்து கொள்ள முடியும் தானே? மக்கள் ஒருபுறம் அவரவர் சாதிகளைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு தங்களுக்குள் தாங்களே பிளவு பட்டு நின்றார்கள். ஆண்டுக் கொண்டிருந்த மன்னர்கள், சுல்தான்கள், நவாபுகள், பாளையக்காரர்கள், மிராசுகள் போன்றோர்கள் அடுத்தவனை எப்படி அழிக்கலாம் என்று மறுபுறம் யோசிக்க உள்ளே வந்த ஆங்கிலேயர்களுக்கு எல்லாவிதங்களிலும் வாய்ப்புகள் தானாகவே கனிந்து நின்றது. இது தான் ஆங்கிலேயர்களுக்கு இம்மாம் பெரிய அகண்ட பாரத நாட்டை ஆள்வதற்குப் பல விதங்களிலும் உதவியது. [] 2 பகுதி இரண்டு [] 8 புள்ளி ராஜாக்கள் ஆளும் இந்தியா புள்ளிராஜா விளம்பரம் உங்களுக்குத் தெரியும் தானே? அவர் எய்ட்ஸ்க்கு சுட்டிக்காட்டப்பட்ட ராஜா. ஆனால் மற்றொரு புள்ளி ராஜா தான் இந்தியாவைக் காத்துக் கொண்டிருப்பதாகச் சொல்கிறார்கள். இவரை வைத்து தான் இந்தியாவின் தொழில் துறை வளர்கின்றது என்று நம்முடைய பொருளாதார மேதைகள் படம் காட்டிக் கொண்டிருக்கிறார்கள். இந்தப் புள்ளிராஜா வாழுமிடம் பங்குச்சந்தை. இந்தப் புள்ளிராஜாவை, சென்செக்ஸ், நிப்டீ, பிஎஸ்இ. என வேறு சில பெயர்களிலும் அழைக்கப்படுகிறது. நாட்டுக்கு நாடு இந்தப் பெயர் சொற்கள் மட்டும் சற்று மாறிக் கொண்டேயிருக்கிறது. இந்தச் சொற்களை, வார்த்தைகளைச் சொல்லித்தான், இதோ பார் குதிக்குது. அதோ பார் செங்குத்தாக ஏறி விட்டது. என்று படித்த புத்திசாலிகள் நமக்குப் பாடம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இதே போலப் பலரும் தினந்தோறும் சொல்லிக் கொண்டிருப்பதை டீ குடிக்கக் காசில்லாதவன், காதில் வாங்க நேரமில்லாமல் பொழைக்கிற வழியைத் தேடி ஓடிக்கொண்டிருக்கிறான். நம்மை ஆண்டுக் கொண்டிருப்பவர்களுக்கு மற்ற எல்லாவற்றையும் விட, பங்கு சந்தை குறியீடு மட்டுமே முக்கியம். இதை வைத்துக் கொண்டே இந்தியா வளர்கிறது ஒளிர்கின்றது என்று கலர் கலராக நம் காதில், இன்று வரை பூச்சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். உலகளவில் செயற்படும் அத்தனை பங்குச்சந்தை குறியீடுகளுமே ஒரு உத்தேச கணக்கு மட்டுமே. உத்தேசம் தான் இந்தத் துறையில் முக்கியக் குறியீடு. ஆனால் பங்கு சந்தையில் பட்டியலிட்ப்பட்ட ஒரு நிறுவனத்தின் உண்மை நிலவரம் என்பது அந்த நிறுவனத்தில் முதலீடு செய்யும் எவருக்கும் முழுமையாகத் தெரியாது. [] மூன்று மாதத்திற்கு ஒரு முறை நிறுவன தணிக்கையாளர் மந்திரிக்கும் தாயத்து கயிறு மூலமே அந்தந்த நிறுவன பங்குகள் ஆட்டம் காட்டிக் கொண்டிருக்கிறது. இதன் மூலம் தான் நாம் பல மந்திர வித்தைகளைப் பார்த்துக் கொண்டிருக்கின்றோம். ஒவ்வொரு நிறுவனத்தின் உண்மையான நிலவரமே ஆண்டு இறுதியில் தான் தெரியும்? பத்திரிக்கையில் நிறுவனங்கள் குறித்த விளம்பரங்கள் மூலம் பலரையும் பணத்தைக் கொண்டு போய் முதலீடு செய்ய வைக்கின்றது. ஏமாறவும் வைத்துக் கொண்டிருக்கிறது. ஏறக்குறைய இந்தியாவின் நிஜ வளர்ச்சி யாருக்குத்தான் தெரியும்? இங்கே மூதலீட்டை கொட்டியுள்ள பத்து பன்னாட்டு நிறுவனங்கள் மனம் வைத்தால் போதும். ஒரே நாளில், அல்லது ஒரே இரவில் இந்தியாவைப் போண்டியாக்கி விடமுடியும். இது தான் எதார்த்தமான உண்மை. ஆனால் இந்தியாவில் அவ்வாறு நடக்க வாய்பில்லை என்கிற வரைக்கும் சந்தோஷம் என்றாலும் மற்றொன்றையம் இபபோது பார்க்கலாம். உலகத்திற்கு வழிகாட்டியாக இருக்கும் இந்திய மக்களாட்சியைப் போல நம்முடைய உள்நாட்டுப் பொருளாதாரம் மட்டும் நம்மைக் காப்பாற்றி விடாதா? வெளிநாட்டு முதலீடுகள் இருந்தால் மட்டும் தான் நாம் பிழைக்க முடியமா? காலங்கடந்து போன போதிலும் நிச்சயம் முடியும். வாய்ப்பு அநேக வழிகளில் இருக்கிறது. அப்படியானால் வேறென்ன பிரச்சனை?. இதற்கு ஒற்றை வரியில் பதில் சொல்லிவிட முடியாது. ஆதலால் சற்று விரிவாகவே பார்க்கலாம்.. இந்தியாவின் ஆன்மா கிராமங்களில் இருக்கிறது என்று காந்தி சொன்னார் என்ற பழைய பஞ்சாங்கத்தையெல்லாம் இப்போது பார்க்க வேண்டிய அவசியமில்லை. காரணம்; மேற்கு வங்காளத்தில் தோழர்களின் கடந்து போன ஆட்சியில் நடந்த நந்திகிராம துப்பாக்கி சூட்டை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர்களில் கோபால கிருஷ்ண காந்தியும் ஒருவர். [] அவர் தான் நம்முடைய காந்திஜியின் பேரன். அப்போது அவர் தான் கவர்னராக இருந்தார். அவரென்ன..? காந்தியே இப்போது அரசியல் தலைவராக இருந்தாலும் கூட இதே நிலைமை தான். காரணம் தற்கால அரசியல் வல்லமையின் முக்கியத்துவம் கொள்கை அல்ல. கொள்ளை. கவனியுங்கள் கொள்கை அல்ல.. எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இந்தியாவின் விவசாயத் துறைக்கு மட்டும் ஏன் இத்தனை ஓரவஞ்சனை செய்கிறார்கள்? இந்தியாவின் மக்கள் தொகை தற்போது 121 கோடி. 2000 ஆம் ஆண்டில் 100 கோடி இருந்த மக்கள் தொகை இப்போது இந்த அளவுக்கு வளர்ந்துள்ளது. நாம் உத்தேச கணக்காக 115 கோடி மக்களை எடுத்துக் கொள்வோம். ஒரு ஆளுக்கு ஒரு நாளைக்கு அரைக் கிலோ உணவு தானியம் என்பதைக் கணக்கில் எடுத்துக் கொண்டாலும் நமக்கு 210 மில்லியன் டன் தேவைப்படும். ஆனால் இப்போது உள்ள சூழ்நிலையில் 180 மில்லியன் டன் கணக்கிற்கே ததிங்கிணந்தோம் போட்டுக் கொண்டிருக்கிறோம். அப்படியென்றால் நம் தலைவர்கள் இதைப் பற்றி என்ன சொல்கிறார்கள்?. எவராலும் குறை சொல்ல முடியாத அப்பழுக்கற்ற தியாகச் செம்மல், நம்முடைய விவசாய அமைச்சர் சரத்பவார் தன்னுடைய மாநிலமான விதர்பா பகுதியில் விவசாயிகள் இறந்த போது உதிர்த்த தத்துவம் “குடித்துவிட்டு சாகின்றவர்கள் எல்லோரையும் குடியானவர்கள் வரிசையில் சேர்க்க முடியாது” என்றார்.. இவருக்கு ஒரு படி மேலே ஜவுளித்துறை அமைச்சர் சங்கர்சிங் வகேலா வேறொரு வகையில் தனது கருத்தை பதிவு செய்தார். .”குஜராத் விவசாயிகள் புகையிலையை வாயில் போடுகிறார்கள். ஒரு நிமிடத்தில் குதம்பி துப்பி விட்டு வயலில் இறங்கி அடுத்த வேலையைப் பார்க்கப் போய்விடுகிறார்கள். ஆனால் விதர்பா விவசாயிகளான நீங்களோ புகையிலையோடு முழுக்கக் குடித்தனம் நடத்திவிட்டு முழுச் சோம்பேறியாக மாறி விடுகின்றீர்கள். அப்புறம் கடன் வராமல் கௌரவமா வரும்?” எனக் கேள்வியெழுப்பினார். சரி இவர்கள் தான் புரியாமல் பேசுகின்றார்கள் என்று வைத்துக் கொள்வோம். காரணம் இவர்களுக்கு கடைசி வரைக்கும் குளு குளு அறையில் இருந்தேஅனுபவப்பட்டவர்கள். []   ஆனால் முதல் முறையாக மன்மோகன் சிங் பிரதமராக வந்து காங்கிரஸ் ஆட்சியில் நிதியமைச்சராக இருந்த நம்ம ப. சிதம்பரம் திருவாசகம் போல் நச்சென ஒரு வாசகம் சொன்னார். “விவசாயிகள் வீட்டுல சனி வக்கிரமெடுத்து உட்கார்ந்து ஒன்பது வருசம் ஆகிவிட்டது. அதை ஒரே நாள்ல விரட்ட நான் ஒன்றும் அனுமன் இல்லையே” என்றார். ஆக மொத்தம் நம்மை ஆள்பவர்களுக்கு விவசாயிகள் என்றாலே வேண்டாத பொருட்களைப் பார்ப்பது போலவே இருக்கிறது. இந்தியர்களின் கனவான 2020 வல்லரசு என்ற நோக்கத்திற்கு இடையூறாக இருப்பவர்களே இந்த விவசாயிகள் தான். “ஏன் இன்னமும் 60 சதவிகித மக்கள் இந்த விவசாயத்தை நம்பி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். மாற்றுத் தொழிலில் இறங்கிவிட வேண்டியது தானே”. இது நான் சொன்னதில்லை. மன்மோகன் சிங் அலுவலகத்தில் உள்ள ஒரு பொருளாதார மேதை சொன்னது. ரகுராம் ராஜன் என்பவரைத் தெரியுமா? 2013 ஆம் ஆண்டு இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநராக வந்தவர். இவர் தான் நம்முடைய பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு நிதி ஆலோசகராவும் இருந்தார். சிகாகோ வர்த்தகப் பள்ளியில் பொருளாதாரப் பேராசியராகவும் இருக்கிறார். இவர் தான் இந்தியாவில் விவசாயம் செய்ய மிகக் குறைவான சதவிகித மக்கள் இருந்தாலே போதுமானது. நவீன தொழில் நுட்பங்கள் மூலம் நாம் சாத்தியப்படுத்த முடியும் என்கிறார். ஆனால் நம்முடைய பாரதப் பிரதமர் மன்மோகன் சிங் மட்டும் எப்போது தீர்க்கதரிசியாய் யோசிக்கக் கூடியவர். ‘இப்போதைய வருத்தத்தை விட எதிர்காலச் சந்தோஷங்களைப் பாருங்க…’ என்று அவரால் மட்டும் தான் சொல்ல முடிகின்றது. நல்ல விசயங்களைப் படிப்படியாகச் செய்து கொண்டிருக்கிறார். இதன் காரணமாகக் கடந்த பத்தாண்டுகளில் ஏறக்குறைய 9 கோடி மக்கள் நகர்ப்புறங்களுக்குக் கிராமத்தை விட்டு பல்வேறு காரணங்களால் குடியேறியுள்ளார்கள். ஆனால் இத்தனை சிரமத்திலும் இருண்டு போய்க் கொண்டுருக்கின்ற விவசாயிகளின் வாழ்க்கை நிலை பற்றி, இரண்டு பேர்கள் பொட்டில் அறைந்தது போலக் கொட்டித் தீர்த்தார்கள். ஒருவர் கமல்நாத் மற்றொருவர் முரசொலி மாறன். ஜெனிவாவில் நடந்த மாநாட்டில் கமல்நாத் பேசிய போது “மற்ற நாடுகளில் விவசாய மானியத்தை நிறுத்த சொல்லும் அமெரிக்க ஐரோப்பிய நாடுகள் தங்கள் நாட்டு விவசாயிக்கு கொடுக்கும் மானியத்தை நிறுத்தும் வரை ஒரு நெல் மணியைக் கூட இறக்குமதிக்கு அனுமதிக்க மாட்டோம்.” இதையே முரசொலி மாறன் “வயிறு வேறு வாணிபம் வேறு. வாணிபத்துக்காக மானியத்தில் விளைந்து குவியும் பணக்கார நாட்டு விஷ தானியங்களை இந்தியாவுக்குள் அனுமதிக்க முடியாது. வளர்ந்த நாடுகள் தங்கள் விவசாயத்துக்குக் கொட்டிக் கொடுக்கும் மானியத்தை நிறுத்தாதவரை விவசாயத்தை உலக வர்த்தக அமைப்பில் சேர்க்க முடியாது” தோகாவில் நடந்த உலக வர்த்தக மாநாட்டில் சிங்கம் போலத்தான் கர்ஜித்தார். ஆனால் என்ன ஆச்சு? பன்னாட்டு நிறுவனங்களுக்குச் சிங்கமாவது புலியாவது? கத்துவது உங்க வேலை. கறப்பது எங்க வேலையென்று அவர்கள் பணியை இடைவிடாது செய்து கொண்டே தான் இருக்கிறார்கள். சில நாடுகளில் போராடி உள்ளே நுழைகின்றார்கள். ஆனால் இந்தியா போன்ற நாடுகளில் அத்தனை சட்டதிட்டங்களையும் செல்லாக்காசாக்கி விட்டு செல்வாக்கோடு வலம் வருகிறார்கள். ஒரு சின்ன உதாரணத்தைப் பார்த்து விடலாம். இன்று விவசாயிகள் மத்தியில் அலற வைத்துக் கொண்டிருக்கும் பி.டி ரகப் பருத்தி வகை (BI- BACILLUS THURINGIENSIS) விவசாயத்தில் ஈடுபட்டுருக்கும் அத்தனை பேருக்கும் தெரிந்த ஒன்று தான். இது உள்ளே வந்த கதையைப் பார்க்கலாம் திமுகவின் மூலம் மத்திய அமைச்சர் பெற்ற ஸ்பெக்ட்ரம் ஊழல் ராஜாவின் கீழ் இருந்த துறைகளில் வனம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்ற துறைகளும் இருந்தது. ராஜாவின் கீழ் வந்த துறையில் இருந்த முக்கியமானது சுற்றுப்புற துறை. GEAC – Genetic Engineering Approval Committee. மரபியல் சார்ந்த தொழில் நுட்பத்தின் கீழ் மாற்றப்பட்ட விதைகளுக்கு இந்தத் துறை அனுமதி கொடுத்தால் தான் உள்ளே வர முடியும். ஆனால் இந்தப் பி.டி பருத்தி விதை விவகாரம் இவர் பார்வைக்குப் போனதா இல்லையா என்பது தெரியவில்லை. ஆனால் இந்த விதைக்குச் சொந்தமான நிறுவனம் எப்படி அனுமதி வாங்கினார்கள் தெரியுமா? Science and Technology துறையின் கீழ் வரும் RCGM (Review Committee on Genetic Manipulation) மூலம் மேலோட்டமான அனுமதி பெற்ற போது வயல் வரைக்கும் இந்த விதைகள் வந்து விட்டது. இது குறித்து இரண்டு விதமான கருத்துக்கள் உள்ளது. ஒன்றும் பிரச்சனையில்லை என்பதாகவும், இல்லை பருத்தி இலைகளை உண்ணும் மாடெல்லாம் செத்துப் போய்விட்டது என்றும் முரணான தகவல்கள் உண்டு. இந்தச் சர்ச்சைகள் முடிவே இல்லாமல் போய்க் கொண்டேயிருக்கிறது. ஆனால் இறந்த விலங்கினங்களை ஆராய்ச்சிக்கூடம் வரைக்கும் கொண்டு போய் இன்று வரைக்கும் உண்மையான அறிக்கை வெளியே வந்தபாடில்லை. பி.டி பருத்தியை இந்தியாவில் அறிமுகப்படுத்திய மன்சாண்டோவின் மேலாண் இயக்குனர் டி.வி.ஜெகதீசப் ஒரு பயமுறுத்தும் உண்மையைத் ‘தெஹல்கா’ இதழில் அம்பலமாக்கியிருக்கிறார். “பல களைக்கொல்லிகள் எனது தலைமையில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டன. அவற்றில் எல்லாம் கம்பெனி தரப்பில் என்ன தகவல்கள் கொடுக்கப்பட்டதோ அவை அப்படியே ஏற்கப்பட்டு அனுமதிகள் தரப்பட்டன. இந்திய அரசு அமைப்புக்களிடம் அந்தத் தகவல்களைப் பரிசோதிக்கும் வசதியோ, சக்தியோ கிடையாது. கம்பெனிகளின் தகவல்களை நம்பி அனுமதிகள் தரப்படும்போது, அந்தத் தகவல்களையே தங்களுக்குச் சாதகமானதாக அவை தயார் செய்து விடுகின்றன” என்கிறார். மொத்தத்தில் இந்திய வயல்கள் பன்னாட்டு நிறுவனங்களுக்குப் பரிசோதனைக் கூடங்கள். நம்முடைய விவசாயிகள் ஆராய்ச்சிக்கான பொருட்கள். அதெல்லாம் சரி? மாறிவரும் யுகத்தில் மரபணு மாற்றம் மூலம் எத்தனை பெரிய லாபங்களை விவசாயத்தில் பெற முடியும்? ஏன் எதிர்க்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவரா நீங்கள்? இந்த மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளுக்குப் பின்னால் உள்ள சர்வதேச அரசியலை புரிந்து கொள்ளப் பார்க்கலாம். அப்போது தான் வளர்ந்த நாடுகள் வளரும் நாடுகளைப் புழுவைப் போலப் பார்க்கப்படுவதைப் புரிந்து கொள்ள முடியும் 9 பூலோக சொர்க்கம் -- அமெரிக்கா அதிகளவிலான மக்கள் “பூலோக சொர்க்கம்” என அமெரிக்காவைச் சொல்கிறார்கள். படித்த மற்றும் படிக்காத மக்களுக்குக் கூட இன்று வரை அமெரிக்கா என்றால் ஒரு ஏக்கப்பார்வை இருக்கத்தான் செய்கிறது. இந்தியாவில் மட்டுமல்ல, ஆசிய நாடுகளில் கல்லூரியில் படித்துக் கொண்டிருப்பவர்களுக்கும் அவரவர் விழிகளில் இந்த அமெரிக்கக் கிறக்கம் உருவாவது இயற்கையே. [] அமெரிக்கா போய்விட்டால் நிச்சயம் நம்மால் பிழைத்துக் கொள்ளலாம் என்ற நோக்கத்தில் தான் இருக்கிறார்கள். இன்றைய உலகில் வணிக ரீதியான அத்தனை மேற்படிப்புகளும் மேலைநாட்டு கலாச்சாரத்தின் அடிப்படையிலேயே இருக்கிறது. இன்று ஆங்கிலம் தெரிந்தால் அகிலத்தையும் ஆள முடியும் என உறுதிப்படுத்தப்பட்டாகி விட்டது. காரணம் நம்முடைய இன்றைய வாழ்க்கை தனிமனிதனின் பொருளாதார நிலைப்பாட்டினை அடிப்படையாக வைத்தே முடிவு செய்யப்படுகின்றது. ஆப்ரிக்க, ஆசிய நாடுகளில் வாழ்ந்து கொண்டிருப்பவர்களுக்கு வளர்ச்சியடைந்த நாடுகளைப் பார்க்கும் பார்வையென்பது அங்கங்கே டாலர்கள் அங்குள்ள மரங்களில் காய்த்துத் தொங்குவதாகத் தான் ஏக்கப்பார்வை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அங்கேயும் திருவாளர் ஓட்டடையாண்டிகளும் உண்டு என்பது வெகுஜனத்திற்குத் தெரிவதில்லை. பணக்காரர்களின் கடன்கள் அத்தனை சீக்கிரம் வெளியே தெரியாது. இதுவே தான் நாடுகளுக்கும். உலகத்திற்கே நாட்டாமையாக இருக்கும் அமெரிக்கா தான் இன்று மிக மிகப்பெரிய கடனாளி நாடு. பிறகெப்படி இன்னமும் சட்டாம் பிள்ளையாக இருக்கிறார்கள்? ஊரில் அடித்து உலையில் போடும் உள்ளூர் சண்டியர்களைப் போலவே உலகத்தையே அடித்துத் தன் வாயில் போட்டு மென்று கொண்டிருப்பதால் இன்னமும் அமெரிக்கா என்றால் ஆ…..வென்று பார்க்க வைத்துக் கொண்டிருக்கிறது. தனக்குத் தேவைப்படும் எரிபொருளுக்காகப் பெட்ரோல் வளம் அதிகமுள்ள இஸ்லாமிய நாடுகளை ஒருபுறமும், உணவுப் பொருட்களுக்காக இயற்கை வள ஏழை நாடுகளை மறுபுறமும் வைத்துக் கொண்டு இன்னமும் பஞ்சாயத்துகாரனாகவே வாழ்ந்து கொண்டிருக்கும் அமெரிக்காவின் ராஜதந்திர அரசியல் அது. இதன் அடிப்படையில் தான் இன்று வரையிலும் அமெரிக்கா பல நாடுகளையும் படுத்தி எடுத்திக் கொண்டிருக்கிறார்கள். தங்கள் ஆதிக்கத்தை ஒத்துக் கொள்ள மறுக்கும் சதாம் உசேன், கடாபி போன்றவர்களைப் போட்டுத் தள்ளிவிட்டால் அந்தப் பிரச்சனைகளும் முடிவுக்கு வந்து விடுகின்றது. ஒரு பொம்மையைத் தூக்கி உட்கார வைத்துவிட்டால் காலம் முழுக்க அந்த நாடு அமெரிக்காவுக்கு எழுதிக் கொடுக்கப்படாத அடிமையாக இருந்து விடுகின்றது. பொம்மைகள் பிடிக்கா விட்டால், அல்லது தங்கள் விளையாட்டிற்குப் பொருத்தமாக இல்லாவிட்டால் தூக்கி எறிந்தும் விடலாம். இன்று ஆப்கானிஸ்தான் அதிபராக இருப்பவர் யார் தெரியுமா? அமெரிக்காவின் யூனோகால் எண்ணெய் நிறுவனத்தில் அதிகாரியாக இருந்த கர்சாய் தானே. இது போலத்தான் ஒவ்வொரு நாட்டிலும் அமெரிக்கா உருவாக்கிய பொம்மைகள் ஆட்சி செலுத்திக் கொண்டிருக்கிறார்கள். மற்ற நாடுகளும் நமக்கேன் வம்பு என்று அமைதிகாத்து விடச் சண்டியரின் சண்டித்தனம் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டேதான் இருக்கிறது. இந்தச் சண்டியருக்கு வால்பிடிக்கப் பிரிட்டன், கனடா முதல் ஐரோப்பிய நாடுகள் பலவும் தயாராக இருக்க எவருக்குத் தைரியம் வரும்? ஆனால் இந்தியாவில் ஆண்டுக் கொண்டிருக்கும் மன்மோகன் சிங்கோ ஐரோப்பிய பொருளாதாரம் மோசமானால் இந்தியாவிற்கு அதிகக் கவலையளிக்கும் என்று அக்கறை காட்டுகின்றார். [] இந்தியா உதவி செய்யத் தயாராக இருக்கிறது என்று அறிக்கை விடுகிறார். அமெரிக்காவில் பணிபுரிந்த மன்மோகன் சிங்கிற்குத் தான் மட்டும் அடிமையாக இருக்க விருப்பமில்லாமல், மொத்த நாட்டையும் இருக்கச் செய்ய வேண்டும் என்ற நோக்கம் கூடக் காரணமாக இருக்கலாம். அவருடைய எண்ணத்தில், அது பொருளாதாரச் சீர்சிருத்தம்; ஆனால் புடலங்காய் கூட வாங்க முடியாத அளவுக்குக் கஷ்டப்பட்டே ஆக வேண்டிய துர்பாக்கிய சூழ்நிலை இந்தியாவில். அமெரிக்காவின் உண்மையான முகத்தை முந்தைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் அரசாங்கத்தில் இருந்த பாதுகாப்புத் துறை செயலாளர் டோனல்ட் ரம்ஸ்ஃபீல்ட் “அமெரிக்கர்கள் அவர்களின் வாழ்க்கை முறையைத் தொடர வேண்டியதன் அவசியத்தை இவ்வுலகம் புரிந்து கொள்ள வைப்பதே பயங்கரவாத எதிர்ப்புப் போரில் தன் கடமையாகச் செயல்படுத்தப்படுகின்றது’ என்பதை உலகத்திற்குத் தெளிவாகப் புரியவைத்தார். சதாம் ஹுசேனிடமிருந்து குவைத்தை மீட்க 1991 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பன்னாட்டு படைகளின் துணை கொண்டு ஈராக் மேல் அமெரிக்கா போர் தொடுத்தது. அதனைத் தொடர்ந்து போர் முடிவுக்கு வந்த போதிலும், பல ஆண்டுகள் ஈராக் மீது பொருளாதாரத் தடை என்ற பெயரில் நடந்த அக்கிரமத்தை இந்த உலகமே அமைதியாய் வேடிக்கை பார்த்தது. இந்தக் காலகட்டத்தில் ஈராக்கில் உள்ள ஐந்து இலட்சம் குழந்தைகள் அடிப்படை மருத்துவ வசதிகள் கிடைக்கப்பெறாமல் மடிந்தனர். அப்போது அமெரிக்காவுக்கான ஐ.நா சபை தூதர் மேடலின் ஆல்பிரைட் சொன்ன கருத்து வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டிய ஒன்று. “அது ஒரு கடினமான முடிவுதான். இருந்தாலும் அடைந்த லாபத்தை எண்ணும்போது கொடுத்தவிலை சரியானது தான் என்று நினைக்கின்றோம்.” அமெரிக்காவை எத்தனை குறைகள் சொன்னாலும் ஒரு வகையில் நாம் பாராட்டியே ஆக வேண்டும். ஆமாம்! நான் இப்படித்தான். அதுக்கு என்னங்றே இப்போ? என்கிற தெனாவெட்டு இருக்கும். அது அமெரிக்காவின் அதிபராக இருந்தாலும் சரி செனட்டராக இருந்தாலும் சரி, காலம் காலமாக இப்படித்தான் அவர்களது அராஜக அரசியல் நடந்து கொண்டிருக்கிறது. அமெரிக்காவுக்கு வெளியே உள்ள நாடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு நாட்டு மக்களுக்கும் அவர்களுக்கான கலாச்சாரப் பண்பாட்டு வாழ்க்கை முறை இருக்கிறது என்பதை அமெரிக்கா ஏற்றுக் கொள்வதே இல்லை. இது தான் உச்சக்கட்ட கொடுமையான விசயம். இதைத்தான் ஜார்ஜ் புஷ், சீன இந்திய நடுத்தரவர்க்க வாங்கும் சக்தியினால் உலகில் உணவுப்பஞ்சம் ஏற்படுகின்றது என்றார். ஆனால் அமெரிக்கர்களின் வாழ்க்கை முறையில், அவர்களின் அத்தியாவசிய தேவைகளைப் போலவே அழிச்சாட்டியம் செய்து உணவுப் பொருட்களை வீணாக்கிக் கொண்டிருப்பதையும் இப்போது நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.   [] 2002 ஆம் ஆண்டு முதலே உலகளவில் விலைவாசிகள் ஏறத் தொடங்கியிருந்தாலும் இந்தியாவில் 2005 ஆம் ஆண்டுக்குப் பிறகு தான் அதிக அளவில் விலைவாசி உச்சத்தை நோக்கி சென்றது. இதற்கு எரிபொருள் விலையேற்றமே முக்கியக் காரணமாக இருந்தது. அமெரிக்காவிலும், ஐரோப்பிய நாடுகளில் தங்களின் எரிபொருள் தேவைக்காகப் பயோ எரிபொருளை உருவாக்கத் தொடங்கினர். அதாவது உணவுப் பொருட்களைப் பயன்படுத்தி எரிபொருளை தயாரிக்கத் தொடங்கினர். சோயா, சர்க்கரை, பாமாயில், மக்காச் சோளம், மற்ற எண்ணெய் வித்துகளுடன் சூரியகாந்தி எண்ணெய் கூட இதற்காக பயன்படுத்தப்பட்டது. இதற்கு மானியமும் வழங்கப்படுவதால் இன்று வரைக்கும் உணவுப் பொருட்களை அமெரிக்கா எரிபொருளாகப் பயன்படுத்துவது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது. இதன் காரணமாக உலகத்திற்குத் தேவைப்படும் உணவின் அளவிற்குப் பற்றாக்குறை ஏற்படுகின்றது. இதன் பாதிப்பு 3 சதவிகிதம் என்கிறது அமெரிக்கா. ஆனால் உண்மையான நிலவரம் என்பது வேறு. மக்காச்சோள விலையில் 70 சதவிகிதமும், சோயா பீன்சின் விலை உயர்வில் 40 சதவிகிதமும் உயர்ந்துள்ளது என்கிறது உலக வங்கியின் ஆய்வறிக்கை. இந்த அறிக்கை வெளியான பிறகு தான் ஜார்ஜ் புஷ் திசை திருப்பும் பொருட்டுத் தான் மேலே சொன்ன திருவாசகத்தை ஒப்புவித்தார். ஆனால் அமெரிக்கர்களின் வாழ்க்கை முறைக்கும் இந்தியர்களின் வாழ்க்கை முறைக்கும் உள்ள வித்யாசங்களை நாம் பார்த்தாலே மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்யாசங்கள் எனப் புரிந்து கொள்ள முடியும். சராசரியாக ஒரு அமெரிக்கன் ஒரு வருடத்திற்கு உண்ணும் இறைச்சியின் அளவு 126.6 கிலோ. ஆனால் இந்தியனோ 5.3 கிலோ. உணவு தானியங்களைப் பொறுத்தவரையில் ஒரு இந்தியனின் அளவு 175.1 கிலோ. ஆனால் அமெரிக்கன் உண்ணும் அளவு 953 கிலோ. இது சராசரி கணக்காகப் புள்ளிவிபரங்கள் சொன்னாலும் இந்தியாவில் அங்கன்வாடிகள் மூலமாக 44 சதவிகித மக்கள் அடிப்படை ஊட்டச்சத்துக்கே இன்று வரை அல்லாடிக்கொண்டு தான் இருக்கிறார்கள். இப்போது புரியுமே? இந்தப் பூவுலகில் ஒவ்வொரு அமெரிக்கனும் பூ போலவே வாழப்பிறந்தவர்கள். அவர்கள் நல்வாழ்க்கைக்காக உலகில் உள்ள அத்தனை நாடுகளும் தங்களை அர்ப்பணிக்க ஜென்மம் எடுத்தவர்கள். இவர்கள் இந்த அளவுக்கு ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கக் காரணமாக இருப்பது மூன்று நிறுவனங்கள். உலகவங்கி, பன்னாட்டு நிதியம், சர்வதேச வர்த்தக நிறுவனம். இந்த மூன்றின் செயல்பாடுகளுமே அமெரிக்காவின் விருப்படியே நடந்து கொண்டிருக்கிறது. இவை மூன்றுமே அமெரிக்காவின் ஆளுமையில் உள்ள அமைப்பு. இவற்றில் எடுக்கப்படும் முடிவுகள் ஒவ்வொன்றுமே ரகசியமாகத்தான் எடுக்கப்படுகின்றது. ஒவ்வொரு ரகசியத்தின் பின்னாலும் அமெரிக்காவின் நலனே மேலாங்கி நிற்கிறது. இவற்றை நிர்வகிப்பவர்களின் நியமனங்களும் ரகசியமாகத்தான் இருக்கிறது. ஒவ்வொரு முடிவும் உலகில் உள்ள நாடுகளைப் பாதித்துக் கொண்டேயிருக்கிறது. இதன் காரணமாகவே உலக வர்த்தக அமைப்பில் உள்ள 149 நாடுகளில் 105 நாடுகள் உணவு இறக்குமதியை நம்பியே வாழ்ந்து கொண்டிருக்கிறது. தொடக்கத்தில் அன்னை இந்திரா காந்தி இந்தியாவில் அறிமுகப்படுத்திய உணவு உற்பத்தியில் தன்னிறைவு என்ற நோக்கத்தை மறந்து இன்றைய மன்மோகன் சிங் அரசாங்கம் ஏற்றுமதியில் உணவு உற்பத்தி என்ற பாதையில் பீடு நடை போட்டுக் கொண்டிருக்கிறது. இது இந்தியாவின் வளர்ச்சியின் அறிகுறி தானே என்கிறீர்களா? அப்படியென்றால் தன்னிறைவு அடைந்த உணவுப் பொருட்களின் விலை மலிவாக இருக்க இருக்க வேண்டுமே? ஆனால் மாதத்திற்கு மாதம் இந்தியாவின் விலைவாசி உயர்வு நடுத்தரவர்க்கத்தையே நடுத்தெருவுக்குத் தான் கொண்டு வந்து கொண்டிருக்கிறது. இது தான் இன்றைய இந்தியாவின் பொருளாதார மேதைகள் உருவாக்கிக் கொண்டிருக்கும் வளமான இந்தியா. காரணம் யுக பேர வர்த்தகம். இன்று உலகம் முழுக்க யுக பேர வர்த்தக அமைப்பு (ஆன் லைன் வர்த்தகம்) சக்கைபோடு போட்டுக் கொண்டிருக்கிறது. இந்த யுகபேர வர்த்தகம் 2002 ல் .77 ட்ரில்லியன் (ஒரு ட்ரில்லியனுக்கு 12 பூஜ்யங்கள்) என்கிற அளவுக்குத்தான் இருந்தது. ஆனால் இன்றைய வளர்ச்சியில் 8 ட்ரில்லியன் அளவுக்கு என்ற பிரமாண்டத்தைத் தொட்டுள்ளது. எதிர்காலத்தில் அந்நியச் செலவாணி நம் கையிருப்பில் இருந்தாலும் ஒவ்வொரு நாடுகளும் உணவுப் பொருட்களைப் பதுக்கி வைத்திருக்கும் உலக வர்த்தக நிறுவனங்களைத் தான் சார்ந்து இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகலாம். அப்போது அவர்கள் வைத்ததே சட்டம். காரணம் அமெரிக்காவின் வால்ஸ்ட்ரீட் வர்த்தகர்கள் நடத்தும் ராஜ்ய பரிபாலனங்களில் பாலுக்கும் மோருக்கும் அலைந்து, பச்சை தண்ணீரைக் கூடக் காசு கொடுத்தால் தான் வாங்கிக் குடிக்க முடியும் என்ற நிலை உருவானாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இப்போது எங்கே சென்றாலும் கைக்குழந்தை போலத் தண்ணீர் பாட்டிலையும் சேர்த்து தூக்கி செல்லும் நடுத்தர வர்க்கத்தைப் போல எதிர்காலத்தில் கிராமத்து மக்களும் செல்லக் கூடிய வாய்ப்பு அதிகம். காரணம் பயோ முறையில் விவசாயம் செய்கின்றோம் என்று ஏதோவொரு நிறுவனம் மொத்த நிலங்களையும் ஆக்ரமித்து இருக்கக்கூடும். ஆழ்குழாய் கிணறுகள் மூலம் எடுக்கப்படும் அளவுக்கு அதிகமான தண்ணீர் அந்தப் பகுதியை விரைவில் வறட்சியாக மாற்றிவிடும். வாழக்கூடிய மக்கள் நீர் ஆதாரத்திற்கு எங்கே செல்வார்கள்? தண்ணீரும் விலைபேசித்தான வாங்கும் சூழ்நிலை உருவாகும். ஒவ்வொருவரும் எதிர்காலத்தில் ஆக்ஸிஜன் சிலிண்டரையும் முதுகில் கட்டிக்கொண்டு செல்ல வேண்டிய நிலை உருவானாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. காரணம் நம்மைச்சுற்றிலும் உள்ள உலகம் தொழிற்சாலைகளுக்கு மட்டும் முக்கியவத்தும் கொடுத்துக் கொண்டிருக்கிறது. விலைநிலங்களை அரசாங்கம் துணை நகரம், புதிய பொருளாதார மண்டலம் என்று விருப்பப்படி மாற்றிக் கொண்டு இருக்கிறது. இந்தியாவைப் படிப்படியாக விலைபேசும் பன்னாட்டு நிறுவனங்கள் ஒவ்வொரு பகுதியாகக் கபளீகரம் செய்ய, இதந்த நிலை தான் எதிர்காலத்தில் உருவாகும். ஆனால் இந்த நேரத்தில் மற்றொன்றையும் நாம் பார்க்க வேண்டும். எந்த நாட்டுக்கும் இல்லாத அளவுக்கு, நம் நாட்டுக்கு இந்தப் பன்னாட்டு நிறுவனங்கள் அவர்களின் கோடிக்கணக்கான மூதலீடுகளைக் கொட்டி, நம்முடைய அந்நியச் செலவாணி கையிருப்பை வளர்க்கின்றார்கள். உள்ளூர் வேலை வாய்ப்புகளையும் பெருக்குகின்றார்கள். படித்தவர்களுக்கு வெளிநாடுக்கு வேலை தேடி செல்ல வேண்டிய அவசியமில்லாமல் இருக்கின்றதே? அவர்களைப் போய் நாம் ஏன் குறை சொல்ல வேண்டும் என்று சொல்ல வருகிறீர்களா? ஓரிஸாவில் (இப்போது ஓடிஷா) உள்ள புயலைக் கிளப்பிக் கொண்டிருக்கும் ஒரு நிறுவனத்தைப் பற்றி மட்டும் இப்போது பார்த்து விடலாம். அப்போது புரியம்? பன்னாட்டு நிறுவனங்கள் இந்திய மக்களை வாழ்விக்க வந்தவர்களா? அல்லது வாழ்வு அழித்து, பாடைகள் தயார் செய்ய வந்த நிறுவனங்களா என்று? 10 நதி நீர் - கனவுத் திட்டமா? இந்தியாவில் மனித வளம், இயற்கை வளம் என்று எல்லாமே உள்ளது. ஏன் நம் கையை வெளிநாட்டிடம் ஏந்த வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் நீங்கள் முதலில் உங்களை மாற்றிக் கொண்டே ஆக வேண்டும். இல்லாவிட்டால் நீங்கள் உலகம் தெரியாதவன் என்று முத்திரை குத்தப்படுவீர்கள். [] காரணம் இது கணினி யுகம். இப்போது ஒவ்வொரு வினாடியும் அதிகபட்ச நேரமாக மனித வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருக்கின்றது. அதற்குள் எத்தனையோ நடந்து முடிந்து விடும் வாய்ப்புள்ள விஞ்ஞான உலகம் இது. இந்தியாவில் தனிப்பட்ட மனிதர்களின் வளர்ச்சி முதல் தரமான நிறுவனங்கள் என்பது வரைக்கும் மேல் நாட்டில் உள்ள ஏதோ ஒருவரால் (அ) ஒரு நிறுவனத்தால் சான்றிதழ் வழங்க முடிந்தால் மட்டுமே இன்றைய சூழ்நிலையில் உங்களால் சர்வதேச சமூகத்தில் போட்டியிட முடியும். இதைத்தான் இந்தியாவில் உள்ள இப்போதைய ஆட்சியாளர்கள் தெளிவாகப் புரிந்து வைத்துள்ளார்கள். நம் வளத்தைப் பலத்தை நம்மால் புரிந்து கொள்ள முடியாது. உலகளவில் எத்தனையோ மாறுதல் உருவாகிவிட்டது. அத்தனை தொழில்நுட்பங்களும் நமக்கு வந்து சேர நாளாகும். தொழில் நுட்பத்தைக் கொண்டு வருவதைவிடத் தொழில்நுட்பத்தைத் தங்கள் கையில் வைத்திருக்கும் பன்னாட்டு நிறுவனங்களே இந்தியாவிற்குள் வந்து விட்டாலே போதுமானது தானே. இதைத்தான் “பொம்மை பிரதமர்” என வர்ணிக்கப்படும் மன்மோகன் ஆட்சிக்கு வந்தது முதல் செயலில் காட்டிக் கொண்டிருக்கிறார். இதற்கு மேலும் தான் வகித்துக் கொண்டிருக்கும் பிரதமர் பதவிக்குச் சோனியா மகன் ராகுல் பொருத்தமானவர் என்ற சான்றிதழ் வேறு கொடுத்துள்ளார். இந்தியாவின் பிரதமர் பதவியென்பது அந்த அளவுக்கு மலிவானதாக இருக்கிறது?. மன்மோகன் சிங் சொன்ன எதிர்காலத் தலைவர் தமிழகத்திற்கு வந்த போது சொன்ன வார்த்தைகள் “தேசிய நதி இணைப்பு என்பது பேரழிவாகும்” என்பது. ஆனால் இந்தியாவில் வீணாகக் கடலில் கடக்கும் நீர் ஆண்டுக்கு ஆண்டு அதிகமாகிக் கொண்டேயிருக்கிறது. இதற்கு மேல் அவ்வப்போது உருவாக்கும் இயற்கை சீற்றங்களினால் பல கோடி சொத்துக்களுடன் மக்களும் அழிந்து போய்க் கொண்டிருப்பதும் வாடிக்கையாக இருக்கிறது. முண்டாசு கவிஞன் பாரதி ” வங்கத்தில் ஓடி வரும் நீரின் மிகையால் மையத்து நாடுகளில் பயிர் செய்வோம்” என்று விபரம் புரியாமல் எழுதி வைத்து விட்டு சென்று விட்டார் என்று நினைத்துக் கொள்கின்றார்களோ..? இப்போதுள்ள நடைமுறையில் அது சாத்தியம் தானா? இங்குள்ள அரசியல்வாதிகளுக்கு எல்லாமே அரசியல். அது மக்களுக்கு முக்கியமானதா? முக்கியமற்றதா என்பது கூடத் தேவையில்லாதது. எதைச் சொன்னால் உடனடி கவனம் பெறும் என்பதிலேயே குறியாக இருக்கிறார்கள். முதலில் ராகுல் சொன்ன தேசிய பேரிழிவைப் பற்றிப் பார்க்கலாம். காவிரியையும் கங்கையையும் இணைத்து விட்டால் போதும் என்று முதன் முதலில் இதற்குப் பிள்ளையார் சுழி போட்டவர் ஆங்கிலேயரான சர் ஆர்தர் காட்டன். இந்தத் திட்டத்தைப் பிரிட்டன் இந்தியாவை ஆண்டுக் கொண்டிருந்த போது செயல்படுத்த முயற்சித்தார். இவர் ஒரு பொறியாளர்.. இந்தத் திட்டத்தின் மூலம் நதியின் ஊடே போக்குவரத்தை உருவாக்க முடியும் என்று நம்பினார். ஆனால் இதைவிட ரயில் போக்குவரத்து மூலம் மிக எளிது என்று மாற்றுத் திட்டத்தில் கவனம் செலுத்த இவரின் நதி போக்குவரத்துக் கனவு, தொடக்க நிலையிலேயே வற்றிவிட்டது. தொடக்கத்தில் பல இடங்களில் கால்வாய் தோண்டும் பணியும் கூட நடந்தது. காலப்போக்கில் அது துர்ந்து போனது தான் மிச்சம். இதைத்தான் அப்போது “கால்வாய் மாலை” என்று மக்கள் நக்கலாக அழைத்தார்கள். ஆனால் இவர் உருவாக்கிய இந்தத் திட்டத்திற்குப் பிரச்சனை மலைவடிவத்தில் இருந்தது. அது தான் இந்தியாவிற்கு அரணாக இருக்கும் இமயமலை. இதுவொரு முக்கியப் பிரச்சனை. இவ்வளவு பெரிய உயரத்தை தாண்டி மறுபக்கம் தண்ணீரை கொண்டு வர வேண்டும். ஏறக்குறைய 1400 அடி உயரம். இதன் மூலம் 50 000 கன அடி நீரை கொண்டு வர வேண்டும். இதற்காகத் தேவைப்படும் மின்சாரம் முதல் மற்றத் திட்ட மதிப்பீடுகளைப் பற்றிப் பிறகு பேசுவோம். கங்கை காவிரி இணைப்புக்கு அசாம் மாநிலத்தில் 200 கிலோ மீட்டர் தூரம், மேற்கு வங்கத்தில் 50 கிலோ மீட்டர் தூரம், மத்திய பிரதேசத்தில் 1000 கிலோ மீட்டர் தூரம், மகாராஷ்டிரத்தில் 500 கிலோ மீடடர் தூரம், ஆந்திர பிரதேசத்தில் 750 கிலோ மீட்டர், கடைசியாகத் தமிழகத்தில் 550 கிலோ மீட்டர் என்று மொத்தமாக 3750 கிலோ மீட்டர் தொலைவுக்குக் கால்வாய்கள் தோண்டப்பட வேண்டும். இதன் மூலம் கங்கை, நர்மதை, கோதாவரி, கிருஷ்ணா, காவேரி நதிகளை ஒரே அணியில் கொண்டு வந்து நிறுத்த முடியும். ஏற்கனவே உச்சநீதி மன்றம் ஒரு வழக்கின் அடிப்படையில் இந்த நதி நீர் இணைப்பை போர்க்கால நடவடிக்கையாகக் கவனம் செலுத்தி அதன் திட்ட அறிக்கையைத் தெரிவிக்க வேண்டும் என்று சொல்லியிருந்தது. ஆனால் மத்திய அரசாங்கம் வெளியிட்ட ஒன்பதாவது ஐந்தாண்டு திட்ட அறிக்கையில் இந்த நதிநீர் இணைப்பு பற்றி ஒன்றுமே சொல்லப்படவில்லை. 1999ல் மத்திய அரசாங்கத்தின் சார்பாக “நீர் ஆதாரங்கள் தேசிய ஓருங்கிணைப்பு வளர்ச்சித் திட்ட தேசிய ஆணையம்” ஒரு அறிக்கையை வெளியிட்டது. இதில் கூட இந்த நதி நீர் இணைப்பு பற்றி ஒன்றும் கருத்தும் தெரிவிக்கவில்லை. காரணம் ஆட்சிக்கு வரும் எந்த அரசாங்கத்திற்கும் இந்தத் திட்டத்தில் கைவைத்தால் என்ன விளைவுகள் உருவாகும் என்பதை நன்கு புரிந்தே வைத்திருப்பார்கள். [] ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொரு கொள்கைகள். அதிலும் பல மாநிலங்களில் கூட்டணி கட்சிகளால் உருவாக்கப்பட்ட மாநில அரசாங்கம் இருக்கும் போது இந்தத் திட்டத்தை அத்தனை சுலபமாக நிறைவேற்றி விட முடியுமா? அவரவர் அரசியல் கொள்கையின்படி வித்யாச கொள்கைகள். அவை அனைத்தும் அலங்கார வார்த்தைகளால் பூசி மெழுகப்பட்ட இனவாத கொள்கைகள். இன்று தேசிய கட்சியாக நம் கண்களுக்குத் தெரிவது ஒன்று காங்கிரஸ். மற்றொன்று பாரதிய ஜனதா கட்சி. ஆனால் இவர்களின் கொள்கை ஓரே இந்தியா, ஒரே கொள்கை. ஆனால் நாம் பார்த்துக் கொண்டிருக்கும் நடைமுறை எதார்த்தம் எப்படி இருக்கிறது? இவர்கள் ஆளும் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு கொள்கையை ஏன் கடைபிடிக்கின்றார்கள்? அது தான் அரசியல். இந்தியா முழுக்கக் காங்கிரஸ் கட்சி என்று ஒற்றைச் சாளரத்தில் செயல்பட்டுக் கொண்டிருந்தாலும் காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகளை நாம் அறிந்ததே. நமக்கு அருகே இருக்கும் கேரளாவில், காங்கிரஸின் கொள்கைகள் வேறு. அதே போலக் கர்நாடகாவில் வேறு கொள்கைகள். காரணம் அவரவர்கள் பிழைக்கின்ற வழியைப் பார்க்க வேண்டும். இல்லாவிட்டால் டெபாஸிட் கூட அந்தந்த மாநிலங்களில் கிடைக்காது அல்லவா? ஆண்டுவிட்டு போன ஒவ்வொரு அரசியல்வாதிகளும் ஒவ்வொரு காலகட்டத்திலும் வினையைப் போட்டு விட்டுச் சென்றார்கள். இன்று நாம் அறுவடை செய்து கொண்டிருக்கிறோம். இதற்கு மேலும் அந்தந்த மாநிலத்தில் உள்ள மாநில கட்சிகளில் உள்ள குளறுபடிகள் என்பதை நாம் தனியாகப் பார்க்க வேண்டும். உதாரணமாகப் பீகாருக்குத் தங்களுக்குக் கங்கை நதி திட்டத்திலிருந்து நீர் கிடைப்பதில்லை என்ற ஆதங்கம் உண்டு. இன்று வரையிலும் “இந்திய – வங்க” தேச ஒப்பந்தத்தை மேற்கு வங்காளம் ஆர்வம் செலுவத்தில்லை. காரணம் அவர்கள் கொல்கத்தா துறைமுக வளர்ச்சியில் தான் அதிக ஆர்வம் செலுத்தி வளர்க்க விரும்புகிறார்கள். மொத்தத்தில் இன்றைய சூழ்நிலையில் எந்த வட மாநிலங்களும் இந்தியாவின் தெற்கு பகுதிகளுக்குக் கங்கை நீரை அனுப்ப ஆர்வம் காட்டுவதே இல்லை என்பதே நிதர்சனமாகும். “நீர் ஆதாரங்கள் ஒருங்கிணைப்பு வளர்ச்சித் திட்ட தேசிய ஆணையம்” திட்டமிடுதலின் படி இந்த நதி நீர் இணைப்புக்கு பத்தாவது ஐந்தாண்டு காலத் திட்டத்தில் 70 ஆயிரம் கோடி ரூபாய். இதுவே பதினோராவது ஐந்தாண்டு திட்ட காலத்தில் நிறைவேற்றும் பட்சத்தில் 1 லட்சத்து 10 ஆயிரம் கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள நதிகளை இணைப்பிற்காக உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ள தொகை 5 லட்சத்து 60 ஆயிரம் கோடி. புள்ளிவிபரங்களைப் படிக்கும் போதே மலைப்பாக இருக்கிறதா? இந்தியாவில் உள்ள நதி அமைப்புகளை இரண்டு விதமாகப் பிரிக்கலாம். இந்திய துணைக்கண்டத்தின் வடக்கே உள்ள நதிகளை “இமயமலைப்பகுதி” என்றும் தெற்கே உள்ள பகுதிகளை ” தீபகற்ப பகுதி ” அல்லது ” தென்னிந்திய பகுதி” என்றும் பிரிக்கிறார்கள். சரி, கங்கை காவேரி இணைப்பில் தான் இத்தனை நடைமுறை சிக்கல்கள் இருக்கிறதென்று வைத்துக் கொள்வோம். தென்னக நதிகள் இணைப்பு என்ன ஆயிற்று? அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா இன்று வரையிலும் தமிழ்நாட்டுக்கு பெப்பே காட்டிக்கொண்டு இருக்கிறார்கள். உபரி நீரை கடலில் கலந்து போகுமே தவிர உங்களுக்குத் தர மாட்டோம் என்று ஒவ்வொரு மாநில அரசியல்வாதிகளும் இந்த நதிகளை வைத்து அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள். முதலில் இந்த மாநில அரசுகளைக் குறை சொல்வதை விட நமது அரசியல் சட்டத்தை இன்று வரையிலும் திருத்த மனமில்லாமல் வைத்திருக்கும் நம் தலைவர்களைத் தான் குற்றம் சொல்ல வேண்டும். காரணம் மாநிலங்களில் ஓடும் நதிகள் மற்றும் மாநிலங்களுக்கு இடையே ஓடும் நதிகளின் ஒருங்கிணைந்த மேம்பாடு, நதிநீர் ஒதுக்கீடு, நீர் உரிமைகள் முதலிய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் பலவிதமான சட்டப் பிரச்சினகைள் உள்ளது. அரசமைப்புச் சட்டத்தின் தற்போதைய விதிகளின்படி, நீர் என்பது மாநில அரசு சம்மந்தப்பட்ட விவகாரமாக இருக்கிறது. எனவே அரசமைப்புச் சட்டத்தைத் திருத்தி அதன் மூலம் நீர் என்ற பொருளை மத்திய அல்லது பொதுப் பட்டியலில் கொண்டுவந்து அதன் பின்னர் நீர் வளத்தை ஒருங்கிணைத்துச் சிக்கனமாகப் பயன்படுத்த ஒரு தனிச் சட்டம் இயற்றப்பட வேண்டும். இப்படிச் செய்தால் மட்டுமே மாநில அரசாங்கம் மத்திய அரசாங்கத்தின் சொல்லைக் கேட்டு நடப்பார்கள். ஆனால் நீதி மன்ற ஆணைகளையே துச்சமாக மதிப்பவர்களை எப்படி மாற்ற முடியும்? பெரும்பான்மை பலத்துடன் மத்திய அரசாங்கத்தில் வந்தமரும் கட்சிகளுக்கும் அக்கறையில்லை. இதற்கு மேலும் இப்போது சுயமாகச் செயல்பட முடியாத நிலையில் இருக்கும் மன்மோகன்சிங் தலைமையில் இருக்கும் மத்திய அரசாங்கத்தில் அரசியலமைப்பு மாறுதல் என்பது நாம் நினைத்துப் பார்க்கக்கூடியதா? சரி, கங்கை காவேரி இணைப்புக்கு ஆயிரம் பிரச்சனைகள் இருக்கிறது. இந்தத் திட்டத்திற்கான சாத்தியப்படாத நிதி ஆதாரம் முதல் சுற்றுப்புறம் மாசு வரைக்கும் நம் முன்னே ஏராளமான பிரச்சனைகள் இருக்கிறது. ஆனால் இதே போலவே லட்சம் பிரச்சனைகளை வைத்துக் கொண்டு நம் அருகே இருக்கும் பங்காளி ஒருவர் எப்படி வேகமாக நம்மைக் காட்டிலும் முன்னேறிக் கொண்டு இருக்கிறாரே? நாம் பத்து வருடங்களில் கட்டக்கூடிய பாலத்தினைப் பத்து மாதங்களில் முடித்து வெள்ளோட்டம் விட்டு வெற்றிக் கொடி நாட்டி விடுகின்றாரே? உலகமெங்கும் அவரின் விலைமலிவு பொருட்கள் தானே சக்கைப் போடு போட்டுக் கொண்டிருக்கிறது. நம்மைப் போலவே ஜனத்தொகையும் அதிகம் தானே? அவர்களின் ஜனத்தொகையும் எதிர்காலத்தில் உணவுக்காக உலக நாடுகளிடம் தட்டு ஏந்தப் போகின்றதா? வாய்ப்புகள் குறைவு. நம்ப முடியவில்லையா? நமக்கு அரணாக மலைப்பை தந்து கொண்டிருக்கின்ற இந்த இமயமலையை அணுக்கதிர் மூலம் பிளந்து தனக்குத் தேவையான தண்ணீரை கொண்டு செல்ல முயற்சித்துக் கொண்டிருப்பது உங்களுக்குத் தெரியுமா? அவர் தான் திருவாளர் சீனா? [] 11 ஆட்டம் முடிந்தே போய் விடுமா? 2020 ஆம் ஆண்டு. இந்தியா உலகளவில் வல்லரசாக மாறிவிடும் என்று சொல்லி நம் தலைவர்கள் நம்மைக் கனவு காண வைத்துக் கொண்டிருக்கிறார்கள் அரைவயிற்று கஞ்சியை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருப்பவர்களும் கனவு இந்தியாவில் மூழ்கி திளைத்துக் கொண்டிருக்கிறார்கள். [] அத்துடன் ஒவ்வொருவரும் கனவு காணுங்கள் என்று நமது விஞ்ஞானி அப்துல் கலாம் கூடச் செல்லும் இடங்களிலெல்லாம் நம்பிக்கையளித்துக் கொண்டிருக்கிறார். இந்தக் கனவு பற்றி விதவிதமான கோஷங்கள் வேறு அங்கங்கே ஒலித்துக கொண்டிருக்கின்றது. எதைப்பற்றிக் கனவு காண்பது? ஒரு நாடு வல்லரசாக இருப்பது முக்கியமா? குடிமக்களுக்கு நல்லரசாக இருப்பது அவசியமா? இந்தியா கடந்து வந்த பாதையைப் பார்த்தாலே போதுமானது. காரணம் அமெரிக்காவில் உள்ள வாஷிங்டனில் உள்ள “பன்னாட்டு உணவு கோட்டுபாடு ஆராய்ச்சிக் கழகம்” ஒரு அபாயச் சங்கை ஊதியிருக்கிறது. ஆனால் வல்லரசு குறித்த கனவில் எவரும் அதைப் பற்றிக் கவலைப்படத் தயாராய் இல்லை. “வந்த காலத்தை விட இந்தியா இனி வரப்போகும் அடுத்த 20 ஆண்டுகளில் தான் உணவுக்காகப் போராடப்போகின்றது ” என்று சொல்லியிருக்கிறார்கள். இதற்கு மேலும் விலைவாசி உயர்வு மற்றும் ஏழை பணக்காரனுக்கும் இடையே உள்ள மிகப் பெரிய இடைவெளியின் காரணமாகச் சராசரி மனிதர்களால் உணவுப் பொருட்களை வாங்கி உண்ண முடியுமா என்ற அவலம் விரைவில் உருவாகப் போகின்றது என்கிறார்கள். ஏன்? கடந்த 8வது ஐந்தாண்டு திட்டத்தில் வேளாண் வளர்ச்சி விகிதம் 4.7 சதவிகிதமாக இருந்தது. இதுவே 9வது ஐந்தாண்டு திட்டத்தில் 2.1 சதவிகிதமாகக் குறைந்து இப்போது 10வது ஐந்தாண்டு திட்டத்தில் 1.8 சதவிகிதமாகக் கழுதை தேய்ந்து கட்டெறும்பாக மாறியுள்ளது. [] இப்போது அந்நிய மூதலீட்டை எவர் எதிர்த்தாலும் உள்ளே கொண்டு வந்தே தீருவேன் என்று சூளுரைத்துள்ள மன்மோகன் சிங் இந்தச் சமயத்தில் வேறொன்றையும் சுட்டிக்காட்டியுள்ளார். அந்நிய நிறுவனங்கள் உள்ளே வரும் போது நமது விவசாயப் பொருட்களுக்கு உரிய விலை கிடைக்கும் என்பதோடு, அவர்கள் உருவாக்கும் நவீன தொழில் நுட்ப குளிர்பதன கிடங்கால் எந்தப் பொருளும் வீணாகாது. உணவுப் பொருட்களுக்குத் தட்டுப்பாடும் வராது என்கிறார். ஆனால் 60 வருட மக்களாட்சியில் இந்தியாவில் ஆண்ட தலைவர்களால் உள்ளூர் தானியங்களைப் பாதுகாக்க ஏற்பாடு செய்ய முடியவில்லை. அந்நிய நிறுவனங்கள் தான் வரவேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்களே? இதை விட நமக்கு என்ன பெருமை வேண்டும். வீணாகும் உணவுதானியப் பொருட்களைப்பற்றி இதே மன்மோகன் சிங் சொன்ன வார்த்தைகளுக்கு ஏற்கனவே உச்சநீதி மன்றம் குட்டு வைத்ததை நாம் அணைவரும் அறிந்த போதிலும் இந்த அறிவிலிகள் சொல்வதை எதிர்க்க முடியாத எதிர்க்கட்சிகள் அவரவர் அரசியல் நிலைப்பாட்டை வைத்துக் கொண்டு கும்மி தட்டிக் கொண்டிருக்கிறார்கள். நாமும் நமது நிலத்திற்கு உண்டான மரியாதையையும் கொடுக்க வில்லை. அந்த நிலமும் நாம் விரும்பும் மகசூலையும் தருவதில்லை. உருப்படியான ஒட்டு ரக விதைகளை நாம் உருவாக்காத காரணத்தால் ஒரு ஹெக்டேருக்கு 4700 கிலோ மகசூல் கோதுமை கொடுத்துக் கொண்டிருந்த விளைநிலங்கள் இன்றைய காலகட்டத்தில் 4000 கிலோ கொடுத்துக் கொண்டிருக்கிறது. இதைப் போலவே அரிசி முதல் அத்தனை பயிர்களும் நமக்குப் பயம் காட்டிக் கொண்டிருக்கிறது. சமையல் எண்ணெய் மட்டும் கடந்த ஆண்டில் 30 000 கோடி ரூபாய்க்கு வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்து இருக்கிறோம். பாமாயில் என்றால் ஒரு காலத்தில் மூக்கை பொத்திக் கொண்டு கடலை எண்ணெய் பக்கம் ஓடினோம். ஆனால் இன்று கடுகு எண்ணெய் வரைக்கும் வந்துவிட்டது. சுத்திகரிக்கப்பட்டது என்ற இந்த ஒரு வார்த்தை தான் இன்று நுகர்வு கலாச்சாரத்தையே தலைகீழாக மாற்றியுள்ளது. தண்ணீர் முதல் எண்ணெய் வரைக்கும் சுத்திகரித்து உண்டபோதிலும் புதுப்புது நோய்கள் நம்மைச் சுத்திக்கொண்டேதான் இருக்கு. உணவு பழக்க மாறுபாட்டினால் இன்று இந்தியாவில் தான் அதிக அளவு சர்க்கரை வியாதி நோயாளிகள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இன்றைய சூழ்நிலையில் ஒவ்வொரு விவசாயிகளும் வேறு வாய்ப்பு கிடைத்தால் நிலத்தை அப்படியே போட்டு விட்டு ஓடத் தயாராக இருக்கிறார்கள். காரணம் இடைத்தரகர்கள் உண்டு கொழுக்க எத்தனை நாட்களுக்குத் தான் “உழுதவன் கணக்கு பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாது” என்ற பழமொழியைச் சொல்லிக் கொண்டே இருக்க முடியும். வளர்ந்து கொண்டிருக்கும் இளைய சமூதாயமும் விவசாயமென்பது வேலையத்த வெட்டிப் பய பொழப்பு என்கிற ரீதியில் தகவல் தொழில் நுட்ப துறையில் கண்ணும் கருத்துமாக இருப்பதால் கண் விற்றுச் சித்திரம் வாங்க ஆவலாய் பறந்து கொண்டிருக்கின்றோம். இன்று இந்தியாவில் ஏறக்குறைய 47 சதவிகித நடுத்தர விவசாயிகளும், 70 சதவிகித குறு விவசாயிகளும் இருக்கிறார்கள். எந்த விவசாயிகளாவது வங்கியில் சென்றால் உடனடியாகக் கடன் கிடைத்து விடுமா? ஆனால் சாராயச் சாம்ராஜ்ய சக்ரவர்த்தி விஜய் மல்லையாவுக்குப் பிரச்சனை என்றவுடன் அரசாங்கமே அலறுகின்றது. இதைவிட மற்றொரு கொடுமையும் உண்டு. இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள மண்வளத்திற்கும் அரசாங்க அறிக்கைகளுக்கும் பெரிய முரண்பாடுகள் உள்ளதால் எந்த மாநில விவசாயிகளுக்கு எந்த அளவுக்குக் கடன் கொடுக்க வேண்டும் என்ற திட்ட அறிக்கையிலேயே ஆயிரம் குளறுபடிகள். பஞ்சாப்பில் இருக்கும் விவசாயிகளுக்கு வெண்ணெய். தமிழ்நாட்டில் இருக்கும் விவசாயிகளுக்குச் சுண்ணாம்பு என்கிற ரீதியில் தான் இந்திய விவசாய அமைச்சகத்தின் செயல்பாடுகளும் இருக்கிறது. ஆனால் மத்திய அரசாங்கம் கொண்டு வந்த அற்புதமான திட்டமான “தேசிய ஊரக வேலை வாய்ப்பு ” திட்டத்தின் மூலம் கொஞ்சம் ஆர்வமிருந்த விவசாய மக்களையும் அக்மார்க் சோம்பேறியாக மாற்றிவிட்டது. வேலை எதுவும் செய்யாமலே தினந்தோறும் கூலி என்கிற நிலைக்கு இந்த “தேசிய வேலை வாய்ப்புத் திட்டம்” மக்களை மாற்றியுள்ளது. உலக வங்கி கடன் சுமை இந்தியாவிற்கு அழுத்த உள் நாட்டில் சோம்பேறிகளும் அதிகமாகி விட்டார்கள். நமக்குத் தேவைப்படும் பொருட்களை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்ய நம்மை ஆளக்கூடிய கணவான்கள் காத்திருக்கிறார்களே? உள்ளூரில் விளையும் கோதுமைக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்த மத்திய அரசாங்கம் தரம் குறைந்த ஆஸ்திரேலியா கோதுமைக்கு ரூபாய் 1600 கொடுத்து இறக்குமதி செய்த கொடுமையெல்லாம் உங்களுக்குத் தெரியுமா? அரசாங்கத்தின் இறக்குமதி கொள்கை என்பது மக்களுக்காக அல்ல. இடையில் இருப்பவர்கள் உண்டு கொழுக்க மட்டுமே. இவை விட நமக்கு வேறென்ன வேண்டும்? ஐக்கிய நாட்டு மக்கள் தொகை நிதி அமைப்பு அறிக்கையின்படி 2050 ஆம் ஆண்டு உலகில் சீனாவும், இந்தியாவும் மிகப் பெரிய ஜனத்தொகை கொண்ட நாடாக விளங்கும் என்கிறார்கள்.. சீனாவின் மக்கள் தொகை 141 கோடியாகவும், இந்திய ஜனத்தொகை 161 கோடியாகவும் இருக்கும் என்று கணக்கிட்டு இருக்கிறார்கள். இதில் கூட நாம் தான் முதல் இடத்தில் இருக்கிறோம். ஆனால் நமக்கான உணவு பற்றாக்குறையை எப்படிச் சமாளிக்கப் போகின்றோம்? சீனாவும், இந்தியாவும் உணவுக்காக உலக நாடுகளில் கையேந்த தொடங்கினால் இப்பொழுதே பசியினால் இறந்து கொண்டிருக்கும் ஆப்பிரிக்கா நாடுகளின் எதிர்கால நிலைமை என்னவாகும் என்பதை யோசித்துப் பார்த்து இருக்கிறோமா? கடந்த 50 ஆண்டுகளில் வேளாண் இடு பொருட்களின் விலை 100 மடங்கு அதிகமாகி உள்ளது. ஆனால் உற்பத்தி செய்யும் வேளாண்மை பொருட்களின் விலை பத்து மடங்கு தான் அதிகமாகியுள்ளது. எவருக்குக் காலம் முழுக்க விவசாயியாக இருக்க மனம் வரும்.? ஒரு ரியல் எஸ்டேட் தொழில் செய்பவன் ஐந்து வருடங்களில் மகா கோடீஸ்வராக மாற ஐம்பது ஏக்கர் வைத்திருக்கும் ஒரு விவசாயி காலம் முழுக்கக் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்க வேண்டிய சூழ்நிலையில் தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றான். வல்லரசு என்ற வார்த்தையை நாம் தவறாகப் புரிந்து கொண்டிருக்கின்றோம். நம்முடைய சுய தேவைகளைப் பூர்த்திச் செய்ய வக்கில்லாமல் ஆயுத பெருக்கத்தில், அணு ஆயுத வளர்ச்சியில், அந்நிய மூதலீட்டிலும் கவனம் செலுத்தும் ஆட்சியாளர்கள் நமக்கு விட்டுச் செல்லப் போவது என்ன தெரியுமா? ஒரு நூற்றாண்டுக்கு முன்னால் நம் முன்னோர்கள் அனுபவித்த பசி, பட்டினி, பஞ்சத்தைத் தான் சந்திக்கப் போகின்றோம். ஆனால் அந்நிய நிறுவனங்களுக்காக உழைத்துக் கொண்டிருப்பவர்களின சந்ததிகள் ஏதோவொரு நாட்டில் சேர்த்து வைத்த சொத்துக்களைச் சொத்தைப்பல்லாகி விழும் வரைக்கும் அனுபவித்துச் சகல சந்தோஷங்களுடன் வாழ்ந்து கொண்டிருப்பார்கள். “உலகமயம் என்பது ஏழை மூன்றாவது நாடுகள் மீது தொடுக்கப்பட்ட யுத்தம். ஆயுதங்களை வைத்து தான் ஒரு நாட்டை அடிமையாக்க வேண்டும் என்பதில்லை. கத்தியின்றி ரத்தமின்றி ஆடை மாற்றம், உணவு மாற்றம் என்று கலாச்சாரத்தைச் சிதைதாலே போதும். ஒரு நாடு நாசமாகப் போய்விடும். உங்களுக்கு எதிரி யாரென்றே தெரியாது. யாரை எதிர்த்துப் போராடுவீரக்ள். அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தம் மட்டும் போட்டு விட்டால் அதோட முடிந்து போகும் உங்க ஆட்டம்.” இப்படி நமக்குச் சாபம் கொடுத்திருப்பது யார் தெரியுமா? ரம்சே கிளார்க் என்னும் அமெரிக்க வக்கீல். மோனிகா லெவன்ஸ்கிட்ட தன்னோட திறமையைக்காட்டிய முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளிண்ட்னை நீதி மன்றத்தில் வைத்து புரட்டி எடுத்த மனித உரிமை வக்கில். [] இப்போது ஒரு கேள்வி வர வேண்டுமே? அரசாங்கம் கொடுக்கும் இலவசம் மற்றும் மானியத்தை நிறுத்தினாலே நம் நாடு விரைவில் முன்னேறிவிடும் என்று சொல்பவர்களா நீங்கள்? [] 12 நன்றி   வாசித்த உங்களுக்கு மிக்க நன்றி. உங்கள் கருத்துக்களை தெரிவிக்க மின் அஞ்சல் ஜோதிஜி திருப்பூர் ( powerjothig@yahoo.com ) []   [] 13 இந்தியா -- பணக்காரர்களின் உலகம் இந்தியாவில் ஏறக்குறைய 70 சதவிகித மக்கள் நேரிடையாகவும் மறைமுகமாகவும், இந்த விவசாயம் சார்ந்த தொழிலை நம்பித்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஒரு ஏக்கர் வைத்து கஷ்ட ஜீவனம் நடத்துபவர்கள் முதல் மிகப் பெரிய நிலச்சுவான்தார்கள் வரைக்கும் இதில் அடக்கம். இந்த இடத்தில் தான் நம்ம மரியாதைக்குரிய திருவாளர் பன்னாட்டு முதலாளிகள் உள்ளே வருகிறார்கள். அரசாங்கத்தின் பார்வையில் பன்னாட்டு நிறுவனங்கள் என்பவர்கள் இந்தியர்களை உயர்விக்க வந்த உத்தமர்கள். [] இவர்களுக்கு வக்காலத்து வாங்கிக் கொண்டு தான் நமது அரசாங்கமும் வேறு விதமாகச் சொல்லி வருகின்றது. சிறு குறு விவசாயிகள் தங்கள் விவசாயத் தொழிலை விட்டு வேறு தொழிலுக்குச் சென்று விடலாம். காரணம் கார்ப்ரேட் ரீதியாக இந்திய விவசாயத் தொழிலை மாற்றினால் மட்டுமே லாபகரமாக இருக்கும். நம்மிடம் இருக்கும் அடிப்படை வசதிகளை விட வெளிநாட்டுத் தொழில் நுட்பமும், அந்த மேதைகளுமே இப்போதைக்கு இந்தியாவுக்கு முக்கியமானது. நம் விவசாயத்தை அவர்கள் செழிப்பாக வைத்திருப்பார்கள் என்கிறார்கள். கோவணத்துணி போலக் கக்கத்தில் வைத்துக் காலம் முழுக்க வாழ்ந்து கொண்டிருக்கும் விவசாயிடம் போய் உன் நிலத்தைத் தந்து விடு என்று கேட்டால் உதைக்க வரமாட்டானா? சுற்றி வளைத்து அவனையே அந்த நிலங்களை விற்க வைத்து விட்டால்? அதைத்தான் நமது ஆட்சியாளர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். இந்த உணவு சார்ந்த தொழிலில் உலகளவில் 17 பன்னாட்டு நிறுவனங்கள் முக்கிய இடத்தை வகிக்கின்றார்கள். இவர்களுக்காக மட்டுமே உலகத்தின் உள்ள ஒவ்வொரு நாட்டின் தலைவிதிகளும் மாற்றி எழுதப்பட்டுக் கொண்டு வருகின்றன. இதை நேரிடையாகச் சொல்லமுடியுமா? அமெரிக்காவில் உள்ள US AGENCY FOR INTERNATIONAL DEVLOPMENT தெளிவாகத் தனது அறிக்கையின் மூலம் நமக்குப் புரியவைக்கின்றது. இதைத்தான் யூ.எஸ் எய்ட் என்றழைக்கின்றார்கள்.   இதன் நிர்வாக இயக்குநர் ராஜீவ் ஷா ‘உணவுத்துறையில் பொதுத்துறையுடன் தனியார் துறையும் சேர்ந்து செயலாக்கம் செய்யும் அளவுக்கு அரசாங்கங்கள் செயல்பட வேண்டும்’ என்கிறார். இதைத்தான் தாவோஸ் மாநாட்டிலும் உலக நாடுகளுக்குப் புரியவைத்தார் ஒரு தனியார் நிறுவனம் விவசாயத்தில் ஈடுபடும் போது அந்த நாட்டின் பசியைப் பார்ப்பார்களா? இல்லை அவர்களுக்கு உலகம் முழுக்க விலை போகும் வாய்ப்புகளைப் பார்ப்பார்களா? முழுக்க முழுக்க ஏற்றுமதியில் தானே கவனம் இருக்கும். இதற்காகத்தான் நம்முடைய மத்திய அரசாங்கம் வேறொரு திட்டத்தைச் செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. அதற்கு மற்றொரு பெயர் “சிறப்புப் பொருளாதார மண்டலம்.” நகரங்களின் வளர்ச்சியில் அக்கறை செலுத்தும் ஒவ்வொரு ஆட்சியாளர்களுக்கும் இந்தச் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் தான் பல வகையிலும் உதவிக்கொண்டிருக்கிறது. [] இதைத் தான் இன்று ஒவ்வொரு மாநில அரசாங்கமும் வேதவாக்காகச் செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. இறுதியில் உனது நிலத்தைத் தருகிறாயா? இல்லை விரட்டவா? என்பதாக ஒவ்வொரு மாநிலத்திலும் இந்தச் சி.பொ.ம ஆண்டுக்கு ஆண்டுப் பெருகிக் கொண்டேயிருக்கிறது. ஒரு காலத்தில் இந்தியாவில் தேசிய வருமானம் GDP (GROSS DOMESTIC PRODUCT) 55 சதவிகிதமாக இருந்தது. ஆனால் இப்போது கழுதை தேய்ந்து கட்டறும்பாகி இப்போது 2011 செப்டம்பர் மாத கணக்குப்படி ஏறக்குறைய 7 சதவிகித அளவுக்கு வந்துள்ளது. ஏன் தொழில் வளர்ச்சி ரீதியில் நாம் முன்னேறிக் கொண்டு தானே இருக்கிறோம். ஏன் இன்னும் நம்மால் வளர்ச்சியை எட்ட முடியவில்லை? கிராமத்தில் சொல்லும் பழமொழியான தும்பை விட்டு வாலைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருப்பது தான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. எதில் கவனம் செலுத்த வேண்டுமோ? அதைப் பற்றிக் கவனமே செலுத்த விரும்பாமல் தொழிற்சாலைகளின் வளர்ச்சியைத் தான் நாட்டின் வளர்ச்சியாகக் கருதிக் கொள்வதால் ஆண்டுக்கு ஆண்டுத் தனி நபர்களின் வருமானம் குறைந்து இந்தியாவில் பணக்காரர்களின் எண்ணிக்கை வருடத்திற்கு வருடம் எகிறிக் கொண்டே இருக்கிறது. உண்மை தான். பணம் ஒரு சாரரிடம் மட்டும் குவிந்து கொண்டேயிருக்கிறது. மாறி வரும் பொருளாதாரத்தில் இன்று உலகம் முழுக்க ஒரு கிராமமாகச் சுருங்கி விட்டது. எல்லாச் சூழ்நிலைகளிலும், வளர்ந்து கொண்டிருக்கும் நாடுகள் வளர்ச்சி அடைந்த நாடுகளை விட்டு விலகி நின்றுவிட முடியாது. இதைக் கருத்தில் கொண்டே 1991 ல் ஆட்சிக்கு வந்த நரசிம்மராவ் கொண்டு வந்தது தான் இந்தச் சந்தைப் பொருளாதாரம். எப்போதும் போல, நம்முடைய செங்கொடி தோழர்கள் டங்கல், காட் ஓப்பந்தம் மூலம் நாட்டை அந்நியருக்கு தாரை வார்த்து விடும் என்று போராடிவிட்டு ஒதுங்கி விட, சந்தைப் பொருளாதாரம் ஜம்மென்று இந்தியாவில் ராஜநடை போட தொடங்கியது. இந்த இடத்தில் ஒரு மகத்தான் ஆச்சரியம் என்னவென்றால் எவர்கள் உள்ளே வரக்கூடாது என்று செங்கொடி தோழர்கள் போராடினார்களோ அந்தச் செங்கொடி தோழர்கள் ஆண்ட மேற்கு வங்காளத்தில் தான் விவசாயிகளை அவர்கள் இடங்களை விட்டு அப்புறப்படுத்த துப்பாக்கி சூடும் நடத்த வேண்டியதாக இருந்தது. பொருளாதார மாற்றத்தின் தொடக்கத்தில் நல்லதே நடக்கத் தொடங்கியது. எருதுகளின் உதவியோடு உழுது கொண்டிருந்த விவசாயிகளின் பழமைவாத சிந்தனைகள் படிப்படியாக விலக ஆரம்பித்தது. [] ஆனால் அடிப்படை சிந்தனைகளே இன்று மாறி அடிவருடி சிந்தனைகள் மட்டுமே இருக்கும் அளவுக்கு அரசியல்வாதிகள் தின்று கொழுக்க ஆரம்பித்தனர். இடைத்தரகர்கள் மட்டுமே வாழ முடிந்தது. யுகபேரம் வளர்ந்து இனி நம்மால் வாழவே முடியாது என்கிற அளவுக்கு ஒவ்வொரு விவசாயிகளையும் நடுத்தெருவுக்குக் கொண்டு வந்து நிறுத்தத் தொடங்கியது. சந்தைப்பொருளாதாரம் இந்தியாவில் அறிமுகமாகி 20 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. ஏராளமான தொழில் நுட்ப வளர்ச்சியைக் கண்டுள்ளோம். வீட்டுக்கு வீடு தொலைக்காட்சி முதல் அலைபேசியின் மூலம் இன்று உலகத்தைக் கைகளுக்கே கொண்டு வந்து விட்டோம். ஆனால் அடுத்த வீடு அந்நிய வீடாகிப் போய் விட்டது. குறுகிய மனப்பான்மையே முக்கியக் குறிக்கோளாக மாறிவிட்டது. இதுவே வளர்ந்து வளர்த்து பேராசையின் உலகமாக மாற்றியுள்ளது. பணமே பிரதானமாகி ஒவ்வொருவர் மனத்திற்குள்ளும் ஆயிரம் விஷவிதைகள் வளர்ந்து காட்டுப்புதர் போலவே மண்டிவிட்டது. தொடர்ச்சியாக இதன் விதைகளை வளர்த்துக் கொண்டிருக்கிறோம். வளர்ச்சிக்கும் வீக்கத்துக்கும் உள்ள வித்யாசம் தெரியாத உலகில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். ஒரு குழந்தைக்கும் மற்றொரு குழந்தைக்கும் இடைவெளி விடுங்க என்பதைப் போலவே சமூக வாழ்க்கையில் நமது அரசாங்க கொள்கைகளின் மூலம் வேறொரு இடைவெளியை வெற்றிகரமாக உருவாக்கிக் கொண்டிருக்கின்றது. அது தான் ஏழை மற்றும் பரம ஏழை. இதைப் போலவே பணக்காரன் மிகப் பெரிய பணக்காரன். ஆனால் நம் கண்களுக்குத் தெரிவதெல்லாம் இந்தியாவில் நடுத்தர வர்க்கம் உயர்ந்து விட்டது. வாங்கும் சக்தி படைத்த சந்தையில் இந்தியா முக்கியமான இடத்தில் உள்ளது என்பது மட்டுமே. [] உலக நாடுகளும் இதன் அடிப்படையில் இங்கே படையெடு எடுத்து வந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் இங்கே வெம்பிக் கொண்டிருப்பவர்களின் எண்ணிக்கை குறித்து எவருக்கும் அக்கறையில்லை. அர்ஜுன் சென்குப்தா கமிட்டியின் அறிக்கையின் படி, இந்தியாவில் 77 சதவிகிதத்தினர் ஒரு நாளைக்கு 20 ரூபாய்க்கும் குறைவாக வாழுகின்றனர். என்.சி.சக்சேனா கமிட்டியின் அறிக்கையின் படி, இந்தியாவில் 50 சதவிகிதத்தினர் வறுமைக் கோட்டின் கீழே வாழுகின்றனர். ஆனால் தற்போது மன்மோகன் சிங் அரசாங்கத்தின் கணக்குப்படி ரூபாய் 32 தின வருமானமாக இருப்பவர்கள் மட்டுமே வறுமைக் கோட்டுக்குள் இருப்பவர்கள். தெருவோரக் கடையில் ஒரு தேநீரின் விலை ஆறு ரூபாய். ஆனால் ஒரு பாட்டிலின் தண்ணீரின் விலை 15 ரூபாய். இது தான் இப்போது இந்தியா பெற்றுள்ள உண்மையான வளர்ச்சி. இந்தியாவின் 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, 35.5 % வங்கி சேவையைப் பயன்படுத்தியுள்ளார்கள். 35.1 % வானொலி வைத்துள்ளனர் 31.6 % தொலைக் காட்சி வைத்துள்ளார்கள், 9.1 % தொலைபேசி வைத்துள்ளனர் 43.7 % சைக்கிள் வைத்துள்ளனர் 11.7 % ஸ்கூட்டர் அல்லது மோட்டார் சைக்கிள் வைத்துள்ளனர் 2.5 % கார் வைத்துள்ளனர், 34.5 % இவற்றில் எதுவுமே இல்லாமல் இருக்கின்றனர். அடுத்து வந்த பத்து வருடங்களின் எதுவுமே இல்லாமல் வாழ்ந்து கொண்டிருப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகி இன்னும் பெருகிக் கொண்டேயிருக்கிறது. 101 பருத்தி, கரும்பு விவசாயத்தை நம்பியவர்கள் அத்தனை பேர்களும் நட்டாத்தில் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். விவசாய அமைச்சர் சரத்பவார் தென் ஆப்ரிக்காவில் நடந்த கிரிக்கெட்டில் இந்தியா தோற்றத்திற்குக் கவலைப்பட்டுக் கொண்டு உருப்படியான பயிற்சியாளர்கள் தேவை என்று கவலைப்பட்ட கதையை நாம் படித்தது தானே?. அரசே ஒப்புக் கொண்ட புள்ளி விபரங்களின் படி, 1997 முதல் 2007 வரையிலான காலத்தில் மட்டும் 2 லட்சம் விவசாயிகள் வறுமை காரணமாகத் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். உலகச் சுகாதார நிறுவனத்தின் புள்ளி விபரத்தின் படி, இந்தியாவில் ஊட்டச் சத்து குறைபாடு உள்ள குழந்தைகளின் எண்ணிக்கை ஆப்பிரிக்கக் கண்டத்தை விட அதிகமாக இருக்கிறது. இந்தியாவில் உள்ள பணக்காரர்களை எடுத்துக் கொண்டால், 2007ம் ஆண்டு உள்ள கணக்கின் படி, இந்தியாவில் உள்ள கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து இருபத்து மூன்றாயிரம். இந்த எண்ணிக்கை ஆண்டுதோறும் வளர்ந்து கொண்டே இருக்கிறது. 14 கொள்ளையனே வெளியேறு போராட்ட குணத்திற்கும், போரட்டத்திற்கும் பெயர் பெற்றவர்கள் ஓரிஸ்ஸா மக்கள். தொடக்கம் முதலே விளைநிலத்தை ஆக்கிரமிக்கும் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் முடிந்தவரைக்கும் எதிர்த்தே வந்துள்ளார்கள். ஆனால் 2000 ஆம் ஆண்டு முதல் ஒரிஸ்ஸா பூமி இடுப்பு ஒடிந்த பூமியாக மாறிக் கொண்டிருக்கிறது. இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களை விடப் பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஒரிஸ்ஸா மேல் தனிக்கவனம் உண்டு. இதைப் போலவே வடகிழக்கு மாநிலங்களிலும் உண்டு. காரணம் அங்கே உள்ள இயற்கைச் செல்வங்கள். நிலக்கரிச் சுரங்கங்கள், மற்றும் உலோகக் கனிமங்களும் அதிக அளவில் கொட்டிக் கிடப்பதே முக்கியக் காரணமாக உள்ளது. []   கண்களுக்கு எட்டிய வரையிலும் நீண்டதாக இருக்கும் விவசாய நிலங்களும் அதனைச் சார்ந்துள்ள துறைமுக வசதிகளும் இருப்பதால் பல பன்னாட்டு நிறுவனங்களின் கழுகுப் பார்வையில் இந்த ஓரிஸ்ஸாவே முக்கிய இடத்தில் உள்ளது. இதன் காரணமாகவே ஒவ்வொரு பன்னாட்டு நிறுவனமும் நாங்கள் இங்கே தொழில் தொடங்க ஆசைப்படுகின்றோம் என்று உள்ளே வரத் தொடங்கினார்கள். இதன் வழியில் உள்ளே வந்தவர்கள் தான் தென் கொரியாவின் ஸ்டீல் உற்பத்தி நிறுவனமான பொஹாங் ஸ்டீல் நிறுவனம் (POSCO ) இந்த நிறுவனம் இங்கே வருவதை எதிர்த்து ஒரிஸ்ஸாவில் உள்ள ஜகத்சிங்பூரில் 30 000 கிராம மக்களும் மற்றும் இதனைச் சுற்றியுள்ள பல கிராமங்களில் வாழந்து கொண்டிருப்பவர்களும் போராட்ட களத்தில் இறங்கியுள்ளனர். இந்த நிறுவனம் இங்கே மூதலீடு செய்வதாக வாக்களித்த தொகை எவ்வளவு தெரியுமா? 52,000 கோடி. 2005 ஜுன் மாதம் 22 ஆம் தேதி ஓரிஸ்ஸா அரசும் போஸ்கோ நிறுவனமும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. ஆறாயிரம் ஏக்கர் பரப்பளவில் ஆண்டுத் தோறும் 120 டன் ஸ்டீல் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட தொழிற்சாலை நிறுவுவது தொடர்பான ஒப்பந்தம் உருவானது. இந்த நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இங்கே சுற்றியுள்ள நிலக்கரி சுரங்கங்கள் அணைத்தும் வந்துவிடும். இந்த நிறுவனத்தோடு ஓரிஸ்ஸா அரசு முப்பது ஆண்டுகள் என்ற நோக்கில் இந்த ஒப்பந்தத்தைப் போட்டுள்ளது. தேவைப்பட்டால் மேலும் இருபது ஆண்டுகள் நீடித்துக் கொள்ளலாம். [] இது இயல்பான நடைமுறைதானே என்கிறீர்களா? இனிமேல் தான் நாம் சந்தோஷப்படவேண்டிய பல விசயங்கள் உள்ளது. இங்குள்ள நிலங்களில் உள்ள கனிம வளங்களான குரோமியம், மங்கனீஷ் போன்ற தாது பொருட்களை மிகக் குறைந்த விலைக்கு ஒரிஸ்ஸா அரசாங்கம் இந்த நிறுவனத்திற்கு வழங்க வேண்டும். இந்த நிறுவனத்திற்கு ஆண்டுதோறும் 6000 லட்சம் டன் இரும்புத்தாது அரசாங்கம் வழங்க வேண்டும். அதுவும் ஒரு டன் ரூபாய் 2000 முதல் 2600 விலையில் கொடுக்க வேண்டும். இது போதாதென்று தொழிற்சாலைக்கான மானியம் என்ற வகையில் டன்னுக்கு 400 ரூபாய் அரசு வழங்கவேண்டும். இந்த வகையில் மட்டும் நிறுவனத்திற்கு 96,000 கோடி ரூபாய் லாபமாகக் கிடைக்கும். இந்த நிறுவனம் உற்பத்தி செய்யும் பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்குப் பாரதீப் பகுதியில் துறைமுகம் அமைத்துக் கொள்வதற்கு அரசாங்கம் அனுமதி தந்துள்ளது. ஏறக்குறைய இந்தத் துறைமுகமே ஒரு தனியார் நிறுவனத்தின் கட்டுப்பாட்டுக்கு வந்து விடும். இந்திய கடல்சார் பகுதியில் ஒரு தனியார் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கினால் எதிர்காலத்தில் என்னவெல்லாம் குளறுபடிகள் உருவாகும் என்பது குறித்து உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்திடம் கேட்டால் போதும்.. ‘மாவோயிஸ்ட்களுக்கு எந்தக் காலத்திலும் வன்முறை என்பது தீர்வாகாது..’ என இன்று வரைக்கும் அவர் அறிவுரை சொல்லிக் கொண்டிருக்கிறார். துறைமுகம் எளிதில் அமைத்து விடமுடியுமா? இந்தத் துறைமுகத்திற்குத் தேவைப்படும் சாலை போக்குவரத்து முதல் மற்றும் ரயில், மின்சார வசதிகள் வரைக்கும் அரசாங்கமே செய்து தரவேண்டும். சரி தொழிற்சாலை அமைத்தாகிவிட்டது. நிர்வாக அலுவலகம் வேண்டுமே? அதற்கும் சில ஏக்கரை தலைநகர் புவனேஷ்வரில் அரசாங்கம் இலவசமாகக் கொடுக்க வேண்டும். பஞ்சாயத்து இத்துடன் முடியவில்லை. இன்னமும் அனுமன் வால் போலவே இருக்கிறது. இந்த நிறுவன கட்டுமானத்திற்கு மகாநதியில் இருந்து வருடந்தோறும் 12,000 முதல் 15,000 கோடி லிட்டர் நீரை எடுத்துக்கொள்ளும். இதன் காரணமாக அருகில் உள்ள கட்டக்கிலும் இதனைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படுவது தவிர்க்க முடியாததே. மாநில அரசாங்கம் கொடுத்துள்ள சலுகைகளைப் போலவே மத்திய அரசாங்கமும் பல சலுகைகளை வழங்கி உள்ளது. இந்திய தொழிற்சாலைச் சட்டங்கள், இது போன்ற பன்னாட்டு நிறுவனங்களிடம் செல்லுபடியாகாது. சரி. இத்தனை பிரச்சனைகள் இருக்கிறதே? இந்த நிறுவனத்தினால் இந்தியாவிற்கு எந்தந்த வகையில் லாபம் என்பதையும் பார்த்து விடலாம். ஒப்பந்தம் போடப்பட்டுள்ள முப்பது ஆண்டுகளில் வரி வகையில் 22,500 கோடி மாநில அரசாங்கத்திற்கும்,89,000 கோடி ரூபாய் மத்திய அரசாங்கத்திற்கும் கிடைக்கும். அதாவது முப்பது ஆண்டுகளில் மத்திய மாநில அரசாங்கத்திற்கு வரிகளாக 1,11,500 கோடி ரூபாய் கிடைக்கும். சுருக்கமாகத் சொல்லப்போனால் மத்திய மாநில அரசுகளுக்கு ஆண்டுக்குச் சராசரியாக 3,700 கோடி ரூபாய் கிடைக்கும். ஆனால் இரும்புத்தாதுவுக்கு அரசாங்கம் கொடுக்கும் மானியம் மட்டுமே இதை விடப் பல மடங்கு அதிகம். அரசாங்கத்தின் கூற்றுப்படி இந்த நிறுவனத்திற்குக் கொடுக்கப்பட்ட நிலங்கள் ஒன்றுக்கும் உதவாத நிலங்கள் என்று அறிக்கை சொல்கின்றது. ஆனால் உண்மை நிலவரமென்பது இந்த நிலங்கள் நன்றாக விளையக்கூடியது மட்டுமல்லாது விலை அதிகம் போகக்கூடிய இடங்களாகும். இந்த நிறுவனத்திற்காக உருவாகப்போகும் பாரதீப் துறைமுகப்பகுதியில் மீன்பிடித்து வாழக்கூடிய 30 000 மீனவர்களின் வாழ்க்கையும் அதோகதியாகிவிடும் என்று சொல்லித் தெரியவேண்டியதில்லை. இந்த ஜகத்சிங்பூரில் உள்ள விவசாய நிலங்களுக்கு வேறொரு வகையில் சிறப்புண்டு. நெல், வெற்றிலை, தென்னை, முந்திரி, பாக்கு போன்ற விவசாயத்தின் மூலம் இந்தப் பகுதியில் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களுக்கு வருடந்தோறும் ஏதோவொரு வேலை இருந்து கொண்டே இருக்கும். இதேபகுதியில் உள்ள ஜடாதரி பகுதியில் மீன்பிடித்தல் தொழிலும் நடந்து கொண்டேயிருக்கும். சாதகபாதக அம்சங்களைப் பார்த்தாகிவிட்டது. இப்போது மற்றொன்றையும் நாம் பார்கக வேண்டும். எந்த நாட்டிலும் ஒரு அரசாங்கம் நினைத்தால் என்ன வேண்டுமென்றாலும் செய்ய முடியும் தானே? மக்கள் கிளர்ச்சி என்பது கடைசித் தான். அதற்குள் சாம, பேத, தான, தண்டம் அத்தனையும் கையில் எடுத்து முடிந்தவரைக்கும் அடக்கப் பார்த்தாலும் கடைசியில் சில நாடுகளில் மட்டுமே ஆட்சி மாற்றம் நடக்கின்றது. ஆட்சியில் வருபவர்கள் மாறுவார்களே தவிரப் பன்னாட்டு நிறுவனங்களுக்காக உருவாக்கப்படும் நலன்கள் மாற்றப்படுவதில்லை. இது தான் எதார்த்தம். குண்டர் படைகள் ஒரு பக்கம். அரசாங்கத்தின் கெடுபிடிகள் மறுபக்கம் என இன்று ஒரிஸ்ஸா யுத்தபூமியாக மாறிக் கொண்டிருக்கிறது. உச்சகட்டமாக அரசாங்கம் இந்தப் பகுதிகளில் செயல்பட்டுக்கொண்டிருக்கும் ரேசன் கடைகளில் வழங்கப்பட்டுக் கொண்டிருந்த பொருட்களையே நிறுத்தும் அளவுக்குத் தங்கள் விசுவாசங்களைப் பன்னாட்டு நிறுவன முதலாளிகளுக்குக் காட்டிக் கொண்டிருக்கிறார்கள். பன்னாட்டு நிறுவன முதலாளிகளிடம் வாங்கித்தின்ற எலும்புத்துண்டுகளைக் கடித்துக் கடித்து வாயில் ரத்தம் வந்த போதிலும் விசுவாசம் மட்டும் இன்று வரையிலும் குறைந்தபாடில்லை. [] ஆனால் இன்று வரையிலும் போராடிக்கொண்டிருக்கும் இந்தப் பகுதி மக்களைப் பற்றி எந்த இந்திய ஊடகமும் கண்டு கொள்ளவில்லை என்பது தான் இதில் உள்ள சிறப்பம்சம். இப்போது நீங்கள் ஒன்றை நன்றாக நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் செங்கல்பட்டு, ஸ்ரீபெரும்புதூர் போன்ற பகுதிகளுக்கு அருகே செயல்பட்டுக் கொண்டிருக்கும் பன்னாட்டு நிறுவனங்கள் முதல் ஹரியானா வரைக்கும் உள்ள அத்தனை நிறுவனங்கள் வரைக்கும் ஒரு விசயத்தில் கெட்டியாக இருப்பதைக் கூர்ந்து கவனித்தால் நம்மால் சரியாகப் புரிந்து கொள்ளமுடியும். ஒரு ஆலைக்குத் தேவைப்படும் நிலத்தைப் போல நூறு மடங்கு இடத்தையும் வளைத்து வைத்துக் கொள்கிறார்கள். காரணம் நில மதிப்புக்காக. இதன் காரணமாகச் சுற்றியுள்ள மக்கள் அப்புறப்படுத்தப்படுகிறார்கள். அங்குள்ள விலைநிலங்கள் மாறிவிடுகின்றது. இது தவிர அந்த ஆலையின் காரணமாக வெளியேறும் நச்சு வாயுக்கள் மூதல் கழிவு நீர் வரைக்கும் சுற்றியுள்ள அத்தனை பகுதிகளில் உள்ள நிலங்களின் தன்மைகளையும் மாற்றி விடுகின்றது. ஏறக்குறைய அந்தத் தொழிற்சாலையை நம்பியே அங்கே வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் வாழ வேண்டிய கட்டாயச் சூழ்நிலை இயல்பாகவே உருவாகி விடுகின்றது. இது தான உண்மை. இதைத்தான் உலகமே ஒரு கிராமமாகச் சுருங்கி விட்டது என்கிறார்களோ..?. இதைக் கொண்டாடுங்கள் என்று மேலைநாட்டுச் சமூகம் நமக்கு அறிவுரை தருகிறது. உள்ளுர் கிராமங்கள் படிப்படியாக அழிந்து கொண்டிருக்கிறது. கிராமத்துக்குத் தண்ணீர் ஆதாரங்கள் தரும் கண்மாய், ஏரிக்களும் படிப்படியாகத் தூர்த்துப் பட்டா போட்டு விற்றுக் கொண்டிருக்கின்றோம். நாம் பன்னாட்டு நிறுவனங்களை, நம்மை ஆண்டுக் கொண்டிருக்கும் அரசியல்வாதிகளை எத்தனை குறைகள் சொல்கின்றோமோ அந்த அளவுக்கு நமக்குள் இருக்கும் வியாதிகளையம் நாம் கண்டு கொள்ள வேண்டும். மாநிலத்திற்கு மாநிலம் நீருக்காகக் குடுமிபிடி சண்டையே நடந்து கொண்டிருக்கிறது. மழையும் பொய்த்துப் போனது. கடலில் கலந்தாலும் பரவாயில்லை. ஆனால் உனக்குத் தரமாட்டோம் என்கிற மாநில அரசாங்க கொள்கைகளும் பிடிவாதங்களும் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டிருக்கிறதே? நதி நீர் பிரச்சனையிலே விவசாயம் அழிந்து கொண்டிருக்கிறதே? அதுக்கு என்ன தான் தீர்வு? கங்கை காவேரி இணைப்புச் சாத்தியம் தானா? 15 சீனா -- மாயவலையும் மந்திர வேலைகளும் 1995 ஆம் ஆண்டு. பெய்ஜிங்கில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் இரண்டு சீன விஞ்ஞானிகள் ஒரு ஆய்வுக்கட்டுரையைச் சமர்பித்தனர்.அதைத் தொடர்ந்து பல கட்டங்களாக இந்த ஆய்வுக்கட்டுரை சீனாவில் உள்ள பல துறைகளுக்குச் சென்றது. ஒவ்வொரு துறையைச் சார்ந்தவர்களும் அந்தக் கட்டுரையில் உள்ள சாத்தியக்கூற்றை ஆராய்ந்தனர். [] கடைசியாக “முடியும்” என்றும் நாம் செயலில் இறங்கலாம் என்று சீன அரசாங்கம் பச்சை கொடி காட்டியது. இன்று உலகின் கண்களுக்கு மண்ணைத்தூவி விட்டு, அந்தத் திட்டத்தின் வேலைதான் விரைவாக நடந்து கொண்டிருக்கிறது. ஆமாம். சீனா தனது ஆதிக்கத்தில் உள்ள திபெத்தில் ஓடிவரும் சேங்போ என்றழைக்கப்படும் பிரம்மபுத்ரா நதியின் குறுக்கே அணை ஒன்றை கட்டிக் கொண்டிருக்கிறது. எந்த விளம்பரமும் இல்லாமல் வீண் விவாதங்கள் இல்லாமல் பணிகள் தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நாட்டின் வளர்ச்சிக்கும் சில துறைகள் முக்கியப் பங்கு வகிக்கின்றது. நிதி, விவசாயத்துறை, தொழிற்துறை. ஆனால் இந்த மூன்றும் நிலையாக இருக்க உள்நாட்டில் சட்டம் ஒழுங்கு முக்கியமாக இருக்க வேண்டும். அதற்கு உள்துறை முக்கியப் பங்காற்றுகின்றது. இவற்றையெல்லாம் விட அதி முக்கியமானது வெளியுறவுத்துறை. இந்தியாவின் நிதித்துறையைக் கையில் வைத்திருக்கும் பிராணாப் முகர்ஜியைப் பற்றிச் சொல்லவே தேவையில்லை. (தற்பொழுது இந்திய ஜனாதிபதியாக உள்ளார்) காலஞ்சென்ற பிரமோத் மகாஜன் எப்படித் தன்னை நான் அம்பானிக்கு பிறக்காத மகன் என்று சொல்லியிருந்தாரோ அதனைப் போலவே இன்றைய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜிக்கும் நாட்டை விட நாட்டை ஆண்டுக் கொண்டிருக்கும் கார்ப்பரேட் கனவான்களே முக்கியமானவர்கள். நிதித்துறை குளறுபடிகளைக் கவனிப்பதை விட எப்படிப் பிரதமர் பதவியைக் கைப்பற்றுவது என்பதில் தான் அதிகக் கவனமாக இருக்கிறார். எங்கே மன்மோகன் சிங்கிற்கு அடுத்துப் ப.சிதம்பரம் வந்து விடுவாரோ என்று அவரால் முடிந்த அத்தனை வேலையைச் செய்து கொண்டிருந்த போதிலும் சோனியா ஆதரவில்லாத காரணத்தால் ஒவ்வொருமுறையும் தோற்றுக் கொண்டேயிருக்கிறார். [] கடந்த தேர்தலில் தமிழ்நாட்டில் உள்ள சிவகங்கை தொகுதியில் தோற்ற போதிலும் குளறுபடிகள் செய்து குறுக்குவழியில் சென்ற ப.சிதம்பரத்திற்கு உள்துறை அமைச்சர் பதவியென்பது வேப்பங்காய்ப் போன்றது. அவர் எதிர்பார்த்திருந்தது நிதித்துறையே. (தற்பொழுது ப.சிதம்பரம் நினைத்தபடியே நிதித்துறை கைப்பற்றி விட்டார்) ஆனாலும் வேண்டா வெறுப்பாகவே காலம் தள்ளிக் கொண்டிருக்கிறார். காங்கிரஸின் முதல் ஐந்தாண்டு காலத்தில் ப.சிதம்பரம் நிதியமைச்சராகப் பதவியில் இருந்து ஆசியாவின் சிறந்த நிதியமைச்சர் என்ற பெரும்புகழை அடைந்தார். அத்துடன் உள்நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களைப் பஞ்சம் பிழைக்க வைத்ததில் முக்கியப் பங்காற்றினார். இப்போது கூடப் பாகிஸ்தானிடம், மாவோஸிட்களிடம் கெஞ்சிக் கொண்டிருக்கிறார். [] அடுத்துத் தியாகச் செம்மல் சரத்பவார். இவர் பெயர் சொன்னாலே போதும். தரம் எளிதில் விளங்கும். அடுத்து 50 ஆண்டுகள் கழித்துக் கூட வரக்கூடிய விவசாயிகள் மறக்க முடியாத நபர். ஆனால் இவர்களுக்கு அப்பாற்பட்டு ஒரு திறமைசாலி தான் நம்முடைய வெளியுறவுத்துறை அமைச்சர் கர்நாடகாவைச் சேர்ந்த எஸ்.எம். கிருஷ்ணா. வெளியுறவுத்துறை என்றால் என்ன? என்று கேட்கக்கூடிய அதிபுத்திசாலி. அதிகாரிகள் எழுதிக் கொடுக்கும் அறிக்கையைக் கூட மாற்றிப் படித்துச் சிறிது கூட வெட்கப்படாமல் இந்தியாவின் அயலுறவுக் கொள்கையை அற்புதமாகக் கையாண்டு கொண்டிருக்கிறார். இதைவிட இந்தியாவிற்கு என்ன பெருமை வேண்டும். இவர்களைத் தேர்ந்தெடுத்த சோனியாவிற்குத் தான் நாம் நன்றி சொல்ல வேண்டும். இந்தக் கிருஷ்ணா தான நாம் சீனாவைப் பார்த்துப் பயம் கொள்ளத் தேவையில்லை பாப்பா என்று பாடம் நடத்திக் கொண்டிருக்கிறார். ஆனால் சீனாவின் தொழிற் புரட்சி, உள்கட்டமைப்பு வளர்ச்சி கற்பனைக்கு எட்டாத வகையில் முன்னேறிக் கொண்டிருக்கிறது. இத்துடன் விவசாயத்துறையும் கூட. உடனடி திட்டங்கள், அடுத்து வரும் திட்டங்கள், நீண்ட காலத் திட்டங்கள் என்று மூன்று விதமாகப் பிரித்து ஒவ்வொன்றையும் உடனடியாகப் போர்க்கால நடவடிக்கையாகச் சீன ஆட்சியாளர்கள். செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்தியாவிற்கு எதிர்காலத்தில் வரக்கூடிய உணவுப் பஞ்சம் எப்படிச் சவாலைத் தரப்போகின்றதோ அதே சவால் சீனாவுக்கு உண்டு என்ற போதிலும் அதற்கான முயற்சியை 15 ஆண்டுகளுக்கு முன்னே தொடங்கி விட்டனர் என்பது தான் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று. ஆப்ரிக்க நாடுகளில் நிலங்களைக் குத்தகை அடிப்படையில் வாங்கி அதில் பயிர் செய்து தங்கள் நாட்டுக்குக் கொண்டு வந்து கொண்டிருக்கிறார்கள். சீனாவின் செயல்பாடுகள் அத்தனையும் நம் அமைச்சர்களுக்குக் கண்களுக்குத் தெரிவதில்லை. காரணம் இவர்களுக்கு உண்மையான வேலை பல இருக்கிறது. இது போன்ற விசயங்களில் கவனம் செலுத்த நேரம் இருப்பதில்லை. [] [] சீனா பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே அணை கட்டுவதன் முக்கிய நோக்கம் மின்சாரத்திற்கு என்றபோதிலும் இந்தத் திட்டத்தின் மூலம் ஆற்றின் நீரை சீனாவின் வறண்ட பகுதிகளுக்குத் திசை திருப்புவதே மற்றுமொரு நோக்கமாகும். ஆனால் இன்று வரைக்கும் இந்தச் செய்தியை சீனா உறுதிப்படுத்தவில்லை. ஊடகங்களில் இது குறித்து வரும் செய்திகள் அத்தனையும் அரசல்புரசல் தான். காரணம் சீன ஆட்சி என்பது இரும்புக்கோட்டையில் இருக்கும் முரட்டுச் சிங்கம். எவருக்கு அருகில் சென்று பார்க்கத் தைரியம் வரும்?. இமயமலையில் இருந்து உற்பத்தியாகும் 19 ஆறுகளில் பிரம்மபுத்திராவும் ஒன்று. செமமயுங்டங் பனிப்பாறைகளில் இருந்து உற்பத்தியாகும் இந்த ஆறு சீனா, பூடான்,இந்தியா, பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் 2900 கிலோ மீட்டர் நீளத்திற்குப் பாய்கிற்து. திபெத்தில் யார்லாஸ் சாங்க்போ என்று அழைக்கப்படுகின்றது. உலகத்திலேயே மிக உயரத்தில் இருந்து பாயும் ஆறுகளில் இதுவும் ஒன்று என்று கூறலாம். இந்த ஆறு பலவிதமான நிலப்பரப்புகளையெல்லாம் கடந்து காடுகளையும் கடந்து பயிர்விளையும் நிலத்தை அடைந்து செழிக்கச் செய்கின்றது. பிரம்மபுத்திரா டெல்டாப் பகுதி 580000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவாகும். இதில் 50 சதவிகிதம் அளவு சீனாவிலும். 33.6 சதவிகிதம் இந்தியாவிலும் 6 சதவிகிதம் பங்களாதேஷ் பகுதியிலும் 7.8 சதவிகிதம் பூடானிலும் உள்ளது. திபெத்திலிருந்து இந்த ஆறு 3500 மீட்டர் உயரத்திலிருந்து பாய்ந்து வருகின்றது. இந்த ஆறு ஓடி வரும் மலைகளுக்கு இடையே உள்ள இடைவெளி என்பது உலகிலேயே மிகப் பெரியதாகும். இந்த நதி இறுதியாக அருணாசலப் பிரதேசத்தில் உள்ள பாஸிகட் என்ற இடத்தில் முடிவடைகின்றது. 3500 மீட்டர் உயரத்தில் இருந்து வரும் இந்த ஆறு இறுதியாக 155 மீட்டர் உயரத்திற்கு வருகின்றது. இதில் மற்றொரு ஆச்சரியம் என்னவென்றால் இந்த ஆறு ஒரு கிலோ மீட்டர் தொலைவில் 17 மீட்டர் என்ற அளவில் சாய்நது பயணித்துக் கொண்டு வருகின்றது. கவுகாத்தி பகுதியில் இதன் அளவு ஒரு கிலோ மீட்டருக்கு 10.செ.மீட்டர் என்ற அளவில் உள்ளது. இந்த நதியை தடுத்து நீரை தங்கள் நாட்டுக்கு திருப்பி விடத்தான் சீனா இப்போது முழுமூச்சாகச் செயலில் இறங்கியுள்ளது. ஏற்கனவே நாம் பார்த்தோமே? கங்கை காவேரி ஆற்றுகளை இணைத்தால் தேசிய பேரழிவு என்று நம்மவர்கள் சொன்னார்களே? அப்படி என்றால் பிரம்மபுத்திரா நதியை அதன் போக்கில் இருந்து மாற்றினால் என்ன ஆகும்? அதனைப் பற்றிப் பின்னால் பார்க்கலாம். கங்கை காவேரி இணைப்புத்திட்டத்தில் உள்ளதை விட ஆயிரம் மடங்கு சவால் நிறைந்த வேலை. எது குறித்தும் அச்சப்படாத வீரனைப் போலத்தான் இந்த நதியின் பயணமும் வேகமும் இருக்கிறது. இந்த வீரனைத் தான் சீனா அணுக்கதிர் என்ற மாயவித்தையைக் கொண்டு தன் வசமாக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள். மொத்தத்தில் நம்மவர்களுக்கு எந்தத் திட்டத்தில் கைவைத்தால் தனக்கு என்ன கிடைக்கும் என்பதில் குறியாக இருப்பவர்கள். ஆனால் சீனாவில் லஞ்சம் ஊழல் இருந்தபோதிலும் ஒவ்வொன்றிலும் தன் நாட்டு நலனை முன்னிறுத்தி முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள். [] 2000வது ஆண்டில் “சீனாவின் தானியப் பிரச்சினை” என்றதொரு அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் “எதிர்காலச் சீன விவசாயம் மற்றும் உணவு பற்றாக்குறை” குறித்த விபரங்களைத் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டு இருக்கிறது. இதன் அடிப்படையிலேயே பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே அணைகட்டும் பணி விரைவாக நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் சர்வதேச சமூகத்தின் பார்வையில் தங்கள் ஆதிக்கத்தில் உள்ள திபெத்க்கு சாலை வசதிகளை உருவாக்கும் பொருட்டே வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது என்று மழுப்பலாகப் பதில் அளித்துக் கொண்டிருக்கிறது. தென் சீனப்பகுதி 700 மில்லியன் மக்கள் தொகை கொண்டது. அங்குப் பயிரிடும் நிலப்பகுதி மூன்றில் ஒரு பங்கு என்றும் ஐந்தில் நான்கு பகுதி நீர்வளம் உள்ளதாகவும் உள்ளது. ஆனால் வடக்குச் சீனப் பகுதியில் 550 மில்லியன் மக்கள் வசிக்கின்றனர். இங்குப் பயிரிடும் நிலப்பரப்பு மூன்றில் இரண்டு பங்கு என்றும், நீர்வளம் ஐந்தில் ஒரு பங்கு உள்ளதாகவும் இருப்பதாகவும் அந்த அறிக்கை தெரிவிக்கின்றது. உலக மக்கள் தொகை கண்க்கெடுப்பின்படி எதிர்காலத்தில் சீனாவின் ஜனத்தொகை 141 கோடி என்று கணித்துள்ளார்கள். ஆனால் சீனா எடுத்துள்ள கணக்கு 160 கோடி மக்கள். இதன் அடிப்படையில் பயிர் செய்யப்பட வேண்டிய நிலத்தின் அளவையும் அதிகப்படுத்தப்பட வேண்டும் என்பதே இப்போதைய சீனாவின் குறிக்கோள். ஆகவே சீனாவின் வட மேற்குப் பகுதியின் பல பகுதிகள் (கோபிப் பாலைவனம் உட்பட) பயிரிடப்படும் நிலமாக மாற்றப்பட வேண்டும். ஆனால் இந்தப் பகுதி துரதிஷ்டவசமாகச் சீனாவின் மொத்தப் பரப்பளவில் 45 சதவிகித அளவில் உள்ளது. ஆனால் நீர்வளம் 7 சதவிகித அளவுக்குத் தான் உள்ளது. இதனைக் கருத்தில் கொண்டே சீனா தனது நாட்டின் எதிர்கால நலனுக்காகப் பிரம்மபுத்திரா நதியை திசை திருப்புவதற்கான திட்டத்தைத் தொடங்கி ஆரம்பக் கட்ட பணிகளை நடத்தி வருகின்றது. இங்கு அணை கட்டப்படுவதோடு மட்டுமல்லாமல் இமயமலையின் பல பகுதிகளைக் குடைநது நீர் செல்ல பாதைகளை அமைக்கவும் திட்டமிட்டு உள்ளனர். இதற்காகச் சீன அரசு தனியாக ஒரு அமைப்பு ஒன்றை நிறுவி உள்ளது. இவர்களின் மேற்பார்வையில் இது நடந்தேறி வருகின்றது. யார்லஸ் சாங்க்போ அணை கட்டப்பட்டு அதில் 26 மின் உற்பத்தி சாதனங்களை அமைத்தால், ஒரு மணி நேரத்திற்கு 40 மில்லியன் கிலோ வாட் அளவிற்கு மின் உற்பத்தி செய்யப்படும். யாங்சே என்னும் இடத்தில் உள்ள மூன்று திட்டங்களில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை விட இது இரண்டு மடங்கு அதிகமாகும். இதைத்தவிரப் பிரம்மபுத்திரா நதியை திசைதிருப்பி விடுவதன் மூலம் வட மேற்குப் பகுதியில் உள்ள வறண்ட நிலப் பகுதிகளுக்கு நீரை அளிக்க முடியும். சீனப்பொறியாளர்களும், விஞ்ஞானிகளும் இதன் சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து இது முடியும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இவர்களின் திட்டப்படி பிரம்மபுத்ர நதியை நம்சா பர்வா என்ற இடத்திற்கு முன் திசைமாற்ற முடியும் என்றும் கூறுகின்றனர். இதற்காக இமயமலையில் 15 கிலோ மீட்டர் தொலைவுக்குக் குடைந்து வழியை உருவாக்க திட்டமிட்டுள்ளனர். 3000 மீட்டர் உயரத்தில் இருந்து தண்ணீர் விழுவதால் மின் உற்பத்தியை மிகுந்த அளவில் ஏற்படுத்த முடியும் என்பதோடு ஆற்று நீர் பயணித்து வரும் 100 கிலோ மீட்டர் தொலைவை 15 கிலோ மீட்டர் தொலைவாகவும் குறைந்துள்ளது. உபரி நீரை 800 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பகுதிகளுக்கு வழங்கவும் முடியும். இந்த ஆறு உற்பத்தியாகும் இடத்திலிருந்து வழியெங்கும் நிலவி வரும் சுற்றுச் சூழல் மற்றும் அவற்றைப் செழிப்பாகும் முறை ஆகியவை வியக்கத்தக்க வகையில் உள்ளது. சீனாவின் திட்டத்தால் மொத்தமாக மாறிவிடும். மேலும் இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்கள் மற்றும் பங்களாதேஷ் ஆகிய இடங்களில் பருவமழை இல்லாத போது பிரம்மபுத்திரா நதியில் இருந்து வரும் நீரே ஆதாரமாக இருக்கிறது. சீனாவின் இந்தத் திசை திருப்பலால் இந்தப் பகுதியின் மொத்த வளமும் பாதிக்கப்படும் ஆற்றின் கீழ் மட்டத்தில் உள்ள நாடுகளுக்கு இதனால் ஏற்படும் பாதிப்புகளைச் சீனா கண்டு கொள்ளத்தயாராய் இல்லை. சர்வதேச அளவில் நாடுகளுக்கான நதிநீர் பங்கீடு குறித்து எவ்விதமான சட்டங்களும் இல்லாத காரணத்தால் பிரம்மபுத்ரா ஆற்றின் குறுக்கே அமைக்கப்படும் அணையினால் சுற்றுசூழல் பாதிக்கப்படுவதோடு 200 மில்லியன் மக்களுக்கும் பாதிக்கப்படும் சூழ்நிலையும் எதிர்காலத்தில் உருவாகும். ஆனால் இந்தியா எப்போதும் போல 2020 வல்லரசு இந்தியா என்ற கனவில் திளைத்துக் கொண்டிருக்கிறது. காரணம் நாம் கனவு காண பிறந்தவர்கள். சீனா கனவுகளைச் செயலில் காட்ட பிறந்தவர்கள் 16 தற்கொலை தந்தை காரல் மார்க்ஸ் சொன்ன ” நிலமென்பது விவசாயிகளுக்கு ஆண்டவன் கொடுத்த சொத்து அல்ல. அதன் வரப்புகள் விவசாயிகளின் கரங்களிலே பூட்டப்பட்டு இருக்கும் விலங்கு” என்ற கருத்து இன்று வரைக்கும் பொருத்தமாகத்தானே இருக்கு. இன்று விவசாயத்தை மட்டுமே நம்பி வாழ்ந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு இந்தியர்களுக்கும் நம்முடைய அரசாங்கத்தின் கொள்கைகள் காரணமாக ஒவ்வொரு நிலையிலும் துன்பங்களை மட்டும் தான் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். [] இந்திய விவசாயத்தைப் பற்றிப் பேசும் வேறு சில விசயங்களையும் நாம் பார்க்க வேண்டும். “இந்தியாவை மானியமும் இலவசமும் தான் கெடுத்து குட்டிச் சுவராக்கிவிட்டது.” “சிறிய அளவில் இருக்கும் விவசாய நிலத்தினால் நாட்டுக்கு எந்தப் பலனும் இல்லை. இதுவே பெரிய நிலங்களாக இருக்கும் போது விவசாயத்தை ஒரு தொழிலாகச் செய்ய வாய்ப்பு அதிகம்.” “எந்தப் பயிரில் பணத்துக்கான வாய்ப்போ அதில் தான் நாம் கவனம் செலுத்த வேண்டும். ஆனால் நம்முடைய விவசாய முறையில் இந்தப் புரிதல் இல்லாத காரணத்தினால் அரசாங்கத்தைக் குறை சொல்வதில் பலன் ஒன்றுமில்லை.” நம்முடைய பொருளாதார அறிஞர்களும், படித்த மேதைகளும் இப்படித்தான் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள். இந்தியா இன்னமும் வளராமல் இருக்க இவைதான் முக்கியக் காரணமா?. ஏன் மானியம்? எதற்காக மானியம்? போன்ற எதையும் நம்மவர்கள் யோசிக் விரும்பதில்லை. விவசாயத்தில் ஒரு பெரிய புரட்சியே நடத்திக்கொண்டிருக்கும் மேலை நாடுகளைப் பார்த்தாயா? என்று நம் அரசாங்கமும் நம்மை ஏமாற்றிக் கொண்டிருக்கிறது. உண்மைகளை அதன் அருகே சென்று கூட எவரும் பார்க்க விருப்பப்படுவதில்லை என்பது தான் உண்மை. ஒவ்வொரு வளர்ச்சியடைந்த நாடுகளும் தங்கள் நாட்டு விவசாயிகளுக்கு இன்று வரைக்கும் மானியம் கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் என்பது எத்தனை பேர்களுக்குத் தெரியும். உலகப் பொருளாதாரக் கொள்கையின்படி மொத்த உள்நாட்டு வளர்ச்சியின் அடிப்படையில் பத்துச் சதவிகிதம் வரைக்கும் தாரளமாக மானியம் கொடுக்கலாம். உலக நாடுகளே ஒத்துக் கொண்ட கணக்கு இது. வளர்ச்சியடைந்த நாடுகளில் அவர்களின் மொத்த வளர்ச்சியில் விவசாயிகளின் எண்ணிக்கை மிகக் குறைவானதாகவே இருக்கிறது. அமெரிக்காவில் உள்ள விவசாயிகளின் எண்ணிக்கை 7 லட்சம் மட்டுமே. ஆனால் இதே அமெரிக்காவில் இரண்டாவது உலகப் போருக்கு முன்னால் 3 கோடி விவசாயிகள் இருந்தனர். கார்ப்ரேட் பாணியில் விவசாயம் என்று சொல்லியே கார்ப்ரேட் நிறுவனங்கள் கைப்பற்ற இன்று அமெரிக்காவில் விவசாயம் என்பது பணக்காரர்களின் தொழிலாக மாறிப்போனது. அமெரிக்கா கொடுக்கும் மானியமும் இவர்களைப் போன்றவர்களுக்குத் தான் போய்ச் சேருகின்றது. முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் அவருடைய ஆட்சி காலத்தில் மட்டும் மானியமாகக் கொடுத்த தொகையின் அளவு ஒன்னரை லட்சம் கோடி. உலகத்தின் மொத்த சந்தையும் பன்னாட்டு நிறுவனங்களின் கைகளில் இருப்பதால் விலைக்கான உரிமையிலும் கை வைத்து ஒரே கல்லில் பல மாங்காய் என்று செழிப்பாக வளர்ந்து கொண்டிருப்பது விவசாயம் அல்ல இந்த விவசாயப் பணக்காரர்கள். ஒவ்வொரு பொருளும் விலையேற வளரும் நாடுகளுக்குப் பேரிடியாக இருக்கிறது. [] ஆனால் இந்தியா போன்ற நாடுகளில் விவசாயத்தை நம்பியே பெரும்பாலானோர் இருப்பதால் மானியத்தொகை என்பது மற்றவர்களுக்குப் பூதாகரமாகத் தெரிகின்றது. ஆனால் இந்தியாவில் விவசாயம் என்ற துறைக்கு வழங்கப்படும் மானியத்தின் அளவு 2.33 சதவிகிதம் மட்டுமே. இந்த இடத்தில் மற்றொன்றையும் நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். அரசாங்கம் கொடுக்கும் மானியத்தொகை அப்படியே விவசாயிகளுக்கு வந்து விடுகின்றதா? ஊழலைப்பற்றிச் சில வார்த்தைகள் இந்த இடத்தில் பேசிவிடலாம். 19 ஆம் நூற்றாண்டில் அமெரிக்கா வளர்நது கொண்டிருந்த சூழ்நிலையில் அங்கேயும் ஊழல் நதி போலத்தான் ஓடிக் கொண்டிருந்தது. சீனாவில் மா வோ வுக்குப் பின்னால் வந்தவர்கள் முதல் இன்று வரைக்கும் அங்கேயும் ஊழல் பெருக்கெடுத்து வெள்ளம் போலப் பாய்ந்து கொண்டு தான் இருக்கிறது. இந்த நாடுகளில் ஊழல் செய்பவர்கள் தாங்கள் செய்யும் வேலைக்காகச் செய்கிறார்கள். அதற்கான உழைப்பையும் கொடுத்துச் சம்மந்தப்பட்ட துறைகளை, தொழில் அதிபர்களையும் வளர்த்து விடுகிறார்கள். ஏறக்குறைய அரசு எந்திரத்தில் போடப்படும் எண்ணெய் போல. ஆனால் ஆப்ரிக்கா நாட்டில் நடக்கும் ஊழல் போலத்தான் இந்தியாவில் போய்க் கொண்டிருக்கிறது. மொத்த தொகையையும் விழுங்கி ஏப்பம் விடுவதால் எந்த வேலையும் நடந்தபாடில்லை. நாடும் வளர்ச்சி அடைந்தபாடில்லை. இந்த ஊழல் தான் இந்திய விவசாயத்துறை முதல் மற்ற அத்தனை துறைகளும் வளராமல் போனதற்கு மிக முக்கியக் காரணமாக இருக்கிறது. உலக அளவில் வளர்ந்து கொண்டிருக்கும் நாடுகள் மொத்தமும் சேர்ந்து தங்கள் விவசாயிகளுக்குக் கொடுக்கும் மொத்த மானியத் தொகையே 19 பில்லியன் டாலர்கள் மட்டுமே. ஆனால் வளர்ச்சியடைந்த நாடுகளின் மானியத் தொகையின் அளவு எவ்வளவு தெரியுமா? 150 பில்லியன் டாலர்கள். ஒவ்வொரு முறையும் உலக வங்கி வளர்ந்து கொண்டிருக்கும் நாடுகளைப் பார்த்து மானியத்தைக் குறைக்க வேண்டும் என்கிறார்களே? ஏன்? அரசாங்கம் கொடுக்கும் மானியத்தை நிறுத்திவிட்டால் விவசாயி இயல்பாகவே விவசாயத்தை விட்டு வெளியே வந்து விடுவான். பிறகென்ன? தேவைப்படும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு நிலங்களை அபகரிக்க வசதியாகத்தானே இருக்கும். கார்ப்ரேட் பாணியில் விவசாயத்தைத் தொடங்கி விடுவார்கள். ஒரே சமயத்தில் ஒரு உணவுப் பொருளின் விலையை ஏற்றலாம், இறக்கலாம், பதுக்கலாம். பக்கத்து நாடுகளுக்கு ஏற்றுமதி கூடச் செய்யலாம். இன்னும் கூடக் கொஞ்சம் உள்ளே நுழைந்து ஒவ்வொரு நாடும் தங்கள் விவசாயிகளுக்கு எந்த அளவு மானியத்தைக் கொடுக்கின்றார்கள் என்பதைப் பார்த்து விடலாம். இது ஹெக்டேர் நிலத்திற்குக் கொடுக்கப்படும் மானியத்தின் அளவு. அமெரிக்கா 32 டாலர் ஜப்பான் 35 டாலர் சீனா 30 டாலர் தென் ஆப்ரிக்கா 24 டாலர் ஆனால் நம்முடைய இந்தியா விவசாயிகளுக்குக் கொடுத்துக் கொண்டிருப்பது வெறுமனே 14 டாலர் மட்டுமே. இது உலக வர்த்தக அமைப்பின் அறிக்கையிலிருந்து எடுக்கப்பட்ட கணக்காகும். [] மற்ற நாடுகளோடு இந்தியா போட்டுள்ள ஒப்பந்தங்களின்படி எண்ணெய் பொருட்களுக்குப் பூஜ்ய வரிவிதிப்பு என்பதால் மற்ற நாடுகளில் உள்ள அத்தனை எண்ணெய்களும் இங்கே வந்து இறக்குமதியாகிக் கொண்டிருக்கிறது. இந்தியாவில் எண்ணெய் ஆலைகள் பெரும்பாலும் மூடு விழாவை நடத்தி விட்டது. உள்நாட்டில் உள்ள பதுக்கல் மூலம் சம்பாரிப்பவர்கள் ஒரு பக்கம். உலக நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் பொருட்கள் மறுபக்கம். பயிர் செய்தவனுக்கு என்ன மிஞ்சம்? தரகு வேலையே தரமான வாழ்க்கை என்று மாறியுள்ள உலகத்தில் நீங்கள் என்ன சொன்னாலும் முட்டாளாகத்தான் பார்க்கப்படுவீர்கள். எள், கடலை சாகுபடி செய்யபவர்கள் உரிய விலை கிடைக்காமல் மாற்றுப்பயிறுக்கு மாற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். உலக நாடுகளின் வற்புறுத்தலின்படி தானிய வகைகளைத் திறந்த அனுமதியின் வாயிலாக (Open General License) இறக்குமதி செய்து கொண்டிருப்பதால் உள்நாட்டில் உள்ள விவசாயிகளுக்கு மரியாதை எங்கே கிடைக்கும்? இது ஒரு உணவுப் பொருளின் நிலைமை. இதே போல ஒவ்வொரு பொருளையும் நினைவில் கொண்டு வரவும். காரணம் வேர்களை அழித்து விட்டு நமது அரசாங்க கொள்கைகள் விழுதுகளைத் தேடிச் சென்று கொண்டு இருக்கிறது. இதன் காரணமாகச் சிறு குறு விவசாயிகள் தாக்கு பிடிக்க முடியாமல் கிடைத்த வரைக்கும் லாபம் என்ற நோக்கில் தங்களிடம் உள்ள நிலங்களை விற்று விட்டு நகர்ப்பகுதிகளுக்கு வந்து விடுகின்றனர். திருப்பூர், சிவகாசி, சென்னை என்று உள்ளே வந்து ஏதோவொரு தொழிற்சாலைக்குள் தங்களைப் பொருத்திக் கொள்கின்றனர். நாளுக்கு நாள் ஆட்களின் வரத்து அதிகமாகத் தொழிலாளர்களின் கூலியும், சம்பளமும் குறையத் தொடங்குகின்றது. நடுத்தரவர்க்கமாக வாழ்ந்து கொண்டிருப்பவர்களும் காலப்போக்கில் விலைவாசி உயர்வை சமாளிக்க முடியாமல் அன்றாட வாழ்க்கையை எப்படி வாழப்போகின்றோம் என்கிற நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். அடிப்படை விவசாயத்தைக் கவனிக்காமல் விட்ட அரசாங்கத்தால் எத்தனை ஊர்களில் எத்தனை தொழிற்சாலைகளைக் கட்டமுடியும்? தனியார் மூதலீடுகள் ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு எத்தனை முக்கியமோ அது சார்ந்த சட்ட திட்டங்கள் முறைப்படுத்த முடியாத போது ஒவ்வொரு தனியார் நிறுவனங்களின் கொள்கை என்பது முடிந்தவரைக்கும் கொள்ளை என்பதாக மாறிவிடுகின்றது. முதலாளிகளை மட்டுமே ஆதரிக்கும் எந்த அரசும் நீண்ட நாட்களாக இருந்ததாகச் சரித்திரம் உண்டா? கண் முன்னால் பார்த்துக கொண்டிருக்கும் ஒவ்வொரு நாட்டின் கிளர்ச்சிக்கும் பின்னாலும் இயல்பான வாழ்க்கை கூட வாழ முடியாத லட்சக்கணக்கான மக்களின் கோபம் தான் வெளியே தெரிகின்றது. இன்று உலகத்தின் மொத்த ஜனத்தொகை 700 மில்லியன் என்கிறார்கள். இந்த ஜனத்தொகையில் ஒரு சதவிகித மக்கள் தான் உலகத்தின் உள்ள பெரும்பான்மையான நிறுவனங்களுக்குச் சொந்தக்காரர்கள். இவர்கள் வைத்ததே சட்டம். அமெரிக்கா போன்ற நாடுகளில் விவசாயம் என்பது ஒரு கார்ப்ரேட் தொழில். ஆனால் இந்தியாவில் இது வாழ்க்கைகான ஆதாரம். இங்குள்ள விவசாயிகளுக்கு வேறு எதுவும் தெரியாது. கலாச்சாரப் பண்பாடுகளுடன் பின்னிப் பிணைந்தே தங்களை வாழ்க்கையை வாழ்ந்த பழகிவிட்ட இந்தியர்களுக்குத் தங்கள் நிலங்களை தெய்வமாக வணங்குவதால் அவர்களால் தங்களை வெளி வாழ்க்கையோடு எளிதில் பொருத்திக் கொள்ள முடிவதில்லை. அரசாங்கம் கூற்றுப்படி இந்திய விவசாயத்தை லாபகரமான தொழிலாக மாற்ற வேண்டுமென்றால் நிலங்கள் பெரிதாக இருக்க வேண்டும் என்கிறார்கள். இதை முதலில் கணக்கு ரீதியாகப் பார்த்து விடலாம். அமெரிக்காவில் 7 டன் அரிசி உற்பத்தியாகும் அளவில் உள்ள நில அளவில் அதைப் போல அளவுள்ள இந்திய நிலத்தில் 2 டன் அளவுக்கே உற்பத்தியாகின்றது. இதற்குக் காரணமாக மேதைகள் சுட்டிக்காட்டுவது அமெரிக்காவில் நிலங்கள் பெரிதாக இருப்பதால் இது சாத்தியமாகின்றது என்கிறார்கள். ஆனால் மேம்போக்காக இப்படிச் சொல்லிவிட்டுச் செல்பவர்கள் இந்த 7 டன் உற்பத்திக்கு அமெரிக்கா அரசாங்கம் எந்த அளவுக்கு மானியம் அளிக்கின்றது என்பதை மறைத்து விடுகிறார்கள். ஒரு வேளை அமெரிக்கா கொடுக்கும் மானியத்தைப் போல இந்திய விவசாயிகளிடமும் கொடுத்தால் அதை விட அதிகமாகவே எடுக்க முடியும். நாம் நாட்டின் இப்போதைய பொருளாதார அடிப்படையில் இப்போது இது சாத்தியமாக இருக்குமா? மொத்த கணக்காகப் பார்க்கப் போனால் அமெரிக்காவில் 1.2 பில்லியன் அமெரிக்கன் டாலர் அளவுக்கு உற்பத்தியாகும் அரிசிக்கு அந்த நாடு கொடுக்கும் மானியத்தின் அளவு எவ்வளவு தெரியுமா? 1.4 பில்லியன் அமெரிக்கன் டாலர்கள். கூட்டிக் கழித்துப் பாருங்க. லாபமா? நட்டமா? காரணம் அமெரிக்கா நாடு பட்டவர்த்தமான முதலாளித்துவ நாடு. அவர்கள் கார்ப்ரேட் முதலாளிகளுக்கு மட்டும் தானே ஆட்சி நடத்துகிறார்கள். [] ஒரு கிராமத்தில் இருக்கும் 50 விவசாயிகளின் விளைபொருட்களால் சுற்றியுள்ள 10 ஊர்களின் தேவைகள் நிறைவேற்றப்படுகின்றது என்பதை ஒரு கணக்காக எடுத்துக் கொள்வோம். இதுவே மொத்த இந்தியாவைக் கணக்கில் எடுத்துக் கொண்டு பார்த்தால் அரசாங்கம் விவசாயப் பொருட்களுக்கு உரிய விலை நிர்ணயம் செய்து கடுமையான சட்டதிட்டஙகளைக் கொண்டு வரும்பட்சத்தில் ஏன் நம்முடைய விவசாயிகளின் வாழ்க்கையில் மறுமலர்ச்சி உருவாகாமல் போய்விடுமா? இவர்களும் செய்யமாட்டார்கள். இடையில் இருக்கும் தரகு கும்பலும் செய்ய விட மாட்டார்கள். அதற்கு மேலும் உள்ளே வந்து கொண்டிருக்கின்ற பன்னாட்டு நிறுவனங்களும் செய்யவும் விடாது. இது தான் எதார்த்தம். இதன் காரணமாகத்தான் விவசாயிகளின் தற்கொலை எண்ணிக்கை வருடத்திற்கு வருடம் அதிகரித்துக் கொண்டேயிருக்கிறது. இந்திய அரசு தரப்பு தகவலின்படி 1993 முதல் 2006 வரைக்கும் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை மட்டும் 1,50,000 பேர்கள். ஆனால் நிச்சயம் உண்மையான எண்ணிக்கை இதை விட அதிகமாகவே இருக்கும். தற்கொலை செய்து கொள்ளும் மாநிலத்தில் நம்முடைய செயல்வீரர் சரத்பவார் மாநிலமான மகாராஷ்டிரா முதன்மையான இடத்தில் இருக்கிறது. தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் தரமாட்டோம் என்று சொல்லிக் கொண்டிருக்கின்ற கர்நாடகா மற்றும் ஆந்திரா அடுத்த இடங்களில் வருகிறார்கள். இதனைத் தொடர்ந்து சத்திஷ்கர், மத்தியப்பிரதேசம் மாநிலங்கள் இந்த இடத்தைப் பிடிக்கின்றன. தமிழ்நாடு அந்த அளவுக்கு மோசமான இடத்தைப் பெறாவிட்டாலும் எதிர்கால நிகழ்வுகள் எங்கே அழைத்துச் செல்லப்போகின்றது எந்தக் கவலை ஒவ்வொருவர் மனதிலும் இயல்பாகவே வந்து போய்க் கொண்டிருக்கின்றது. ஒவ்வொரு வருடத்தின் டிசம்பர் 23 என்பது நமது விவசாயிகள் தினம் என்று நம்முடைய பிரதமர் அறிவித்து இருக்கிறார். அவருக்கு மற்றொரு பெயரும் உண்டு. இந்திய விவசாயிகளைத் தற்கொலை செய்ய வைத்துக் கொண்டிருக்கும் தந்தை என்று கூடச் சொல்லலாம். காரணம் இந்தியாவிற்கு வெள்ளைக்காரர்களின் பொருளாதாரச் சிந்தனைகளே மேலானது என்று இன்று நமக்குப் பாடம் நடத்திக் கொண்டிருக்கும் இந்தப் பொருளாதார மேதை விரும்பும் அந்தத் தத்துவம் எங்கிருந்து பிறந்தது? இந்தியாவிற்குள் முதன் முதலாக வந்த பிரிட்டிஷ் ஆட்சியில் ஆளுமையாக இருந்த இராபர்ட் கிளைவ் என்ற புனித ஆத்மாவைப் பற்றிப் பார்த்து விட்டால் போதுமானது. இவரைத்தான் மேல் நாட்டு வரலாற்றுசிரியர்கள் ” பிரிட்டீஷ் சாம்ராஜ்யத்தை நிறுவியர்” என்று புகழாரம் சூட்டுகிறார்கள். காரணம் நம்முடைய இந்தியா எங்கிருந்து பயணத்தைத் தொடங்கியதோ அங்கே போய் முடிப்பது தானே நல்லது. அப்போது தான் உங்களுக்கு மேலும் சில விசயங்கள் புரியும்? இந்திய விவசாயத்துறை குறித்த இந்தப் பார்வைப் பயணம் அடுத்தப் பகுதியோடு முடிவடைகின்றது. 17 வெள்ளைத் தோல் சிந்தனைகள் மாறுமா? இந்தியாவில் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை நிறுவியவர் என்றழைக்கப்படும் இராபர்ட் கிளைவ் பற்றி உங்களுக்குத் தெரியுமா? [] குறிப்பாக நமது அரசியல்வாதிகள் அத்தனை பேர்களும் மோசம் என்று கருதிக் கொள்பவர்கள் இராபட் கிளைவ்பற்றித் தெரிந்து கொள்வது அவசியமானதாகும். மேலை நாட்டு வரலாற்றாசிரியர்கள் இவரைப்பற்றி வானாளவ புகழ்ந்து எழுதித் தள்ளியிருக்கிறார்கள். வரலாறு என்பது எப்போதும் ஜெயித்தவர்களைக் கொண்டாடுவது வாடிக்கை என்றாலும் ஒழிந்திருக்கும் உண்மைகளை ஒரு நாள் வெளியே வரத் தானே செய்யும். . கிழக்கிந்திய நிறுவனம் தென்னிந்தியாவில் வர்க்கத்தைத் தொடங்குவதற்காக 17 ஆம் நூற்றாண்டின் மத்தியில் முகலாயச் சக்ரவர்த்தியின் அனுமதியை பெற்றுருந்தது. அப்போது ஆங்கிலேயர்கள் நிறுவியது தான் தற்போது தமிழ்நாட்டு மாநில முதலமைச்சரின் அலுவலகமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் புனித ஜார்ஜ் கோட்டை. இந்தக் கோட்டையை அடிப்படையாகக் கொண்டு இப்போது சென்னை என்றழைக்கப்படும் நகரம் வளர்ச்சியடைந்தது. ஏறக்குறைய இந்தக் கோட்டையைச் சுற்றியுள்ள பகுதிகள் மேல்மட்டத்தினர் உலாவும் பகுதியாகவே இருந்தது. [] இந்தக் கோட்டைக்குச் சாதாரண எழுத்தராக 1743ம் வருடம் வேலைக்கு வந்தவர் தான் இராபட் கிளைவ். அப்போது இவருடைய வருட சம்பளம் 15 பவுண்ட். ஆனால் இவர் சில வருடங்களிலேயே ஜெனரலாகப் பிற்காலத்தில் பிரபுவாக (பிலாஸி) தன்னை உயர்த்திக் கொண்டார். இவரைப்பற்றி எழுதிய வரலாற்று ஆசிரியர்கள் மிகச் சிறந்த மதிநுட்பமும், இராணுவ திறமையும் மிக்கவர். இதன் காரணமாகவே வாழ்வில் உயர்ந்து பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் இந்தியாவில் ஆழமாக வேறூன்ற உதவினார் என்றே எழுதியிருக்கிறார்கள். ஆனால் இவரிடம் இருந்த ராணுவ பலம் என்பது வெகு சொற்பமே. மேலும் இவருடன் இருந்த முக்கால்வாசிப் பேர்கள் பொறுக்கிகளும், காலிகள், சமூகக் கழிசடைகள் போன்றவர்களும் தான் இருந்தனர். முகலாயர்களின் வழிவந்த நிலப்பிரபுத்துவ அரசர்கள் தமக்குள் இடைவிடாது சச்சரவு செய்து கொண்டிருந்தார்கள். தன்னிடம் இருந்த விசுவாசமான போக்கிரிகளைத் துணை கொண்டு, இராபர்ட் கிளைவ் தந்திரத்தாலும், வஞ்சகம், சூதுக்களாலும் முறியடித்துப் படிப்பயாக இங்கே சாம்ராஜ்யத்தை விரிவாக்கினார். இந்தியாவின் முதல் தலைமுறை பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள், இன்றைய அரசியல்தலைவர்களின் முன்னோடியாகத் திகழ்ந்தனர். லஞ்சம், ஊழல், பொறாமை, பேராசை, காட்டுமிராண்டித்தனம், எது குறித்தும் அஞ்சாமை போன்றவற்றைக் குணாதிசியமாக வைத்து இந்தியாவை முடிந்தவரைக்கும் சூறையாடினர். இராபட் கிளைவ் கவர்னராக இருந்த போது மற்றொரு காரியத்திலும் கவனமாக இருந்தார். இந்தியாவின் கல்வி முறை, விவசாய முறையையும் நீண்ட ஆராய்ச்சியாக எடுத்துக் கொண்டு முடிவாக இரண்டு தீர்மானத்திற்கு வந்தார். கல்வியை மெக்காலே என்ற புண்ணியவான் எடுத்துக்கொள்ள இவர் விவசாயத்தில் கை வைத்தார் [] கால்நடைகள், மற்றும் பசுக்கள் இந்திய விவசாயத்திற்கு ஆதாரமாக இருப்பதை அழிக்க வேண்டுமென்று கணக்கில் எடுத்துக் கொண்டு 1760 முதல் பசுவதைக்கூடம் நிறுவி நாள்தோறும் கறிக்காக என்ற நோக்கில் 50,000 கால்நடைகளைக் கொல்லும் புனிதப்பணியைத் துவங்கினார். ஒரு ஆண்டில் மட்டும் கொல்லப்பட்ட கால்நடைகளின் எண்ணிக்கை ஒரு கோடியாகும். காரணம் அப்போது இந்தியாவில் இருந்த விவசாயம் நம்முடைய கால்நடைகளின் சாணம், மூத்திரம் இவற்றை அடிப்படையாகக் கொண்டே ஒரு ஏக்கரின் மூலம் 54 குவிண்டால் அரிசியை உற்பத்தி செய்து கொண்டிருந்தது. 1910 வரைக்கும் இரவு பகலாக இந்தப் பசுவதைக் கூடம் இயங்கிக் கொண்டேயிருந்தது. இன்று வரைக்கும் நவீணமாக்கப்பட்டு இந்தத் தொழில் நடந்து கொண்டேதான் இருக்கிறது. இதன் பலன் இன்று கோடிக்கணக்கான பணத்தை இறக்குமதி ரசாயன உரத்திற்குக் கொண்டு போய்க் கொட்டி மானிய விலையில் உழவர்களுக்குக் கொடுக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம். [] பழங்கதை பேசாதே என்று எளிதாகப் பலவற்றைப் புறந்தள்ளி விடுகின்றோம். நமது விவசாயத்தில் இருந்த ஏராளமான சாத்தியக்கூறுகள் இன்று இருந்த சுவடே தெரியாத அளவிற்குக் காணாமல் போய்விட்டது. ஒரு சின்ன உதாரணத்தைப் பார்த்து விடலாம். விதை நெல் கோட்டை என்பது கீழ் தஞ்சை மாவட்ட விவசாயிகளுக்கு நன்றாகத் தெரிந்த வார்த்தை இது. தங்களுக்குத் தேவைப்படும் விதை நெல்லை சேகரிக்கும் முறையைத்தான் இப்படிக் குறிப்பிடுவார்கள். அறுவடை முடிந்ததும் விதை நெல்லை நன்றாக வெயிலில் காய வைத்து சுத்தமான வைக்கோலைக் கொண்டு பிரி (கயிறு போன்று திரித்து) செய்து அதன் மேல் வைக்கோல் பரப்பி அதில் 18 மரக்கால் (55 கிலோ) விதை நெல்லை வைத்து பந்து போல இறுக்கி சுற்றி வைத்து விடுவார்கள். இதற்குப் பெயர் தான் விதை நெல் கோட்டை. இந்தக் கோட்டையின் மேல் காற்றுப் புகாதவாறு பசு மாட்டுச் சாணத்தைப் பூசி நன்றாகக் காய்ந்த பிறகு தனியாக ஒரு பகுதியில் அடுக்கி வைத்து விடுவார்கள். இது போன்று செய்வதால் உள்ளே உள்ள நெல் ஒரே தட்பவெப்ப நிலையில் இருக்கும். எந்தப் பூச்சி புழுவும் அண்டாது. தேவைப்படும் போது இதைத் தனியாக எடுத்து அப்படியே 10 மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து மூன்று நாட்கள் முட்டம் போட வைத்து அப்படியே நாற்றாங்காலில் தெளிக்கப் பயிர்கள் ஜம்மென்று பச்சையாய் சிரிக்கும். ஆனால் சணல் பைக்கு மாறி ப்ளாஸ்டிக் பைக்கு மாறி இன்று இன்னும் பல நவீன வசதிகளுடன் வந்து விட்டது. இன்று பச்சையாய் பயிர் சிரிக்கவில்லை. விவசாயிகளுக்குத் தான் பயிர் பலன் தருவதற்குள் இரத்தம் சிவப்பாய் வருகின்றது. இந்தியாவிலிருந்து பிரிட்டனுக்குச் சென்று கொண்டிருந்த செல்வம் அங்கே தொழிற்துறையை வெகு சீக்கிரமே முன்னேற்ற உதவியது. இந்தியாவுடன் வர்த்தகம் செய்து கொண்டிருந்த பிரிட்டன் தொழிலதிபர்களுக்குக் கிடைத்த அபரிமிதமான லாபத்தைப் போலுள்ள உதாரணத்தை உலகப் பொருளாதார உறவுகளின் வரலாற்றிலேயே பார்க்க முடியாது. உலகத்தின் தொழிற்சாலையாகப் பிரிட்டன் மாறுவதற்கு இராபட் கிளைவ் உதவினார். அத்துடன் தனக்காகச் சேர்த்த சொத்துக்களும் கணக்கில் அடங்காது. நகையாக, பணமாக, பண்ணை வீடுகளாக என்று சேர்த்து குவித்தார். இதையே பிரிட்டன் நாடாளுமன்றத்தில் ” இந்தியர்கள் தங்களுடைய பாதாள அறைகளிலிருந்த தங்கத்தையும் மாணிக்கங்களை எனக்கு முன்னால் குவியலாகக் கொட்ட அந்தக் குவியல்களுக்கிடைய நான் உலாவுவதுண்டு ” என்று ஆணவமாகப் பேசினார். இதைத்தான் நேரு பின்வருமாறு எழுதினார். “அது பகற்கொள்ளையே. அவர்கள் “பண மரத்தை” ஆட்டினார்கள். பயங்கரமான பஞ்சங்கள் வங்காளத்தை அழிக்கும் வரை அந்த மரத்தை திரும்பத்திரும்ப ஆட்டினார்கள்.” [] ஏறக்குறைய இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னால் நடத்திக் காட்டிய இந்த அரசியல் அயோக்கியனுக்கும் இன்றைய அரசியல்வாதிகளுக்கும் என்ன பெரிதான வித்யாசம்? அப்போதும் இப்போதும் எப்போதும் அரசியல் என்பது தந்திரம், சமார்த்தியம், சுயநலம் இந்த மூன்றையும் அடிப்படையாகக் கொண்டு தான் இயங்குகின்றது. அன்று நம்முடைய வளங்கள் பிரிட்டனுக்கு மட்டுமே சென்றது. இப்போது கருப்புப் பணமாகப் பல நாட்டு வங்கிகளுக்கும் சென்று கொண்டுருக்கிறது. தற்போது ஸ்விஸ் வங்கியில் மட்டும் இருக்கும் இந்தியர்களிள் பணம் 25 லட்சம் கோடி. மற்ற வங்கிக் கணக்குத் தொகை எத்தனையோ?. . இந்தியக் கறுப்புப் பணத்தின் அளவு, இந்தியாவின் மொத்தக் கடன் தொகையிலும் அதிகம் என்கிறார்கள். தென்னிந்தியாவின் கதை தான் இப்படி என்றால் இந்தியாவின் அதிபர் மாளிகை எப்படி உருவானது? 1910 ஆம் ஆண்டு முதல் 1916 ஆண்டு வரைக்கும் பல்லாயிரக்கணக்கான இந்திய வேலையாட்களை, ஆங்கிலக் கட்டிடக்கலை நிபுணர்களைக் கொண்டு அப்போது வைசிராயாக இருந்த ஹார்டிங் பிரபு தேர்ந்தெடுத்த இடம் எப்படிப்பட்டது தெரியுமா? 14 ஆம் நூற்றாண்டில் கொடூரமான தைமூர் போரில் கொல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கான இந்தியர்களின் மண்டை ஓடுகளைக் கொண்டு அந்த இடத்தில் ஒரு பிரமீடைக் கட்டியதாகச் சொல்லப்படுவதுண்டு. இந்த இடத்தில் மொகலாயச் சக்கரவர்த்திகள் சிவப்புப் பாறைக் கற்களைக் கொண்டு தங்களுடைய ஆட்சிக்கு நினைவு சின்னங்களான செங்கோட்டை, ஜும்மா மசூதியையும் கட்டினார்கள். ஆனால் ஹார்டிங் பிரபுக்கு இது போன்ற வரலாற்றுப் பின்புலம் பற்றி எதுவும் தெரியாமல் நிர்மாணித்த கட்டிடம் தான் இன்று வரைக்கும் இந்தியாவை ஆட்சி செய்ய உதவி கொண்டிருக்கின்றது. சாம்ராஜ்யங்கள் சாம்பலாகிப் போவதும், மீண்டும் வேறொரு வகையில் உயிர்தெழுவதுமான இந்த நிகழ்வுகள் கால வரலாற்றில் வந்து போய்க் கொண்டேதான் இருக்கிறது. வரலாற்றில் எத்தனையோ பேரரசுகள் வந்து போன சுவடே இல்லாமல் அழிந்தும் போய்விட்டது. பழங்காலத்தில் தோன்றிய வட ஆப்பிரிக்காவில் தோன்றிய பேரரசுகள், மத்திய கிழக்கு ஆசியா, பாரசீகம், கீரிஸ்,ரோம், சிலுவைப் போர்கள், கொலம்பஸ்க்கு பிறகு வந்த ஐரோப்பிய பேரரசுகள் போன்றவற்றின் ஏகாதிப்பத்திய வளர்ச்சியே பெரும்பாலான போர்களுக்கும், உலகில் பசி, பட்டினி, பஞ்சம் போன்றவை உருவாகக் காரணமாக இருந்தது. பல்லாயிரக்கணக்கான மக்களின் கலாச்சாரம், பண்பாடுகளையும் காணாமல் போகவும் வைத்தது. உலகில் அமைதியற்ற சமூகங்களை உருவாக்கிய பேரரசுகள் தங்கள் நாடுகளில் அதிக அளவு போதைப் பழக்கத்தையும் மனோ ரீதியான பிரச்சனைகளும் உடைய நாகரிக மனிதர்களையும் தான் வளர்க்க முடிந்துள்ளது. ஆனால் இன்று வரைக்கும் அமெரிக்கா தனது ஏகாபத்திய வாழ்க்கையை இழந்துவிடத் தயாராய் இல்லை என்பதை இங்கே குறிப்பிடலாம். பிரிட்டன் வரலாற்றை உற்றுக் கவனித்துப் பாருங்கள். எந்த இடத்திலும் ஒரு துளி கூடக் கருணை, காருண்யம், மனிதாபிமானம் என்பதை மருந்துக்குகூடப் பார்க்கமுடியாது. வெறிகொண்ட வேங்கை போலத்தான் வேட்டையாடி தங்களை வளர்த்துக் கொண்டே வந்துள்ளார்கள். ஆனால் அமெரிக்காவை ஆண்டவர்கள் இன்று அமெரிக்காவை அண்டிப் பிழைப்பவர்களாக மாறியுள்ளது காலத்தின் கோலம் தானே? உலக வரலாற்றுச் சரித்திரத்தில் எந்தப் பேரரசும் நீடித்து இருந்ததாகச் சரித்திரமே இல்லை. இன்று வியப்பை தந்து கொண்டிருக்கின்ற அமெரிக்காவின் நிலையும் இதுவே. எந்த நாடும், தனி மனிதனும் மற்றவர்களைச் சுரண்டி நீண்ட காலம் வாழ்ந்ததாக இல்லை. ஆனால் இந்தியா கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாகவும் ஏராளமான பஞ்சம், பசி, பட்டினிகளைத் தாண்டி வந்தபோதிலும் இன்று வரையும் அடிப்படை கட்டுமானம் சிதையாமல் தானே இருக்கிறது? எப்படி? இந்தியா இப்போது 40 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலையை விட உயர்ந்திருக்கிறது. உண்மை தான். முழுமையான கல்வியறிவு தேசம் என்று இல்லாவிட்டாலும் கூட நடுத்தர வர்க்கத்தின் மூளை அறிவு இன்று உலகம் முழுக்க மென்பொருள் துறை முதல் பல்வேறு துறைகளிலும் கொடி கட்டி பறக்கின்றது. இந்தியர்கள் உலகம் முழுக்கப் பரவக் காரணமாகவும் இருக்கிறது.. இதை மற்றொரு வகையில் பார்க்கப் போனால் நவீன அடிமைகளை உருவாக்கி உலகம் முழுக்க அனுப்பிக் கொண்டிருக்கின்றோம்.. இந்தியர்களின் திறமையை உள்நாட்டில் பயன்படுத்த ஆளில்லாத காரணத்தால் எவர் வந்து நம்மைக் கொத்திக் கொண்டு போகமாட்டாரோ என்று ஏக்கத்தில் தான் ஒவ்வொரு துறையிலும் இருப்பவர்களும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். நிறுவன வர்க்கமும் அதிகார வர்க்கமும் உருவாக்கும் கூட்டணியின் மூலம் இந்தப் பரந்த உலகம் ஒரே கூரையின் கீழ் கொண்டு வரப்படுகின்றது. மேல்தட்டு மக்களை அவர்களின் வாழ்க்கையை விளம்பரங்களும், ஊடகங்களும் முன்னிறுத்துகின்றது. நடுத்தர வர்க்கத்தையம் அவ்வாறு ஒருவிதமான வாழ்க்கை வாழ் வேண்டிய அவசியத்தையும் உணர்த்துகிறது. உலகமயமாக்கல், தராளமயமக்கல், பொருளாதார வளர்ச்சி என்பது ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் எல்லாவிதமான வசதிகளையும் பெறுவதும் பின்னால் உள்ளவர்களைச் சுரண்டலுக்கு உட்படுத்திக் கொண்டிருப்பதுமே ஆகும். இதன் காரணமாகவே எனக்கு என்ன லாபம்? என்ற பேராசை என்பது அடித்தட்டு மக்கள் முதல் அதிகாரவர்க்கம் வரைக்கும் ஊடுருவிப் போனதால் எவரிடம் சேவை மனப்பான்மையை எப்படி எதிர்பார்கக முடியும். மாற்றம் என்பது தனிமனிதனில் இருந்து தொடங்குவது என்பதையே நாம் உணராமல் மாற்றத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றோம். இங்கு மதம் முக்கியம். அதற்குள் பிரியும் ஜாதிக்கூறுகள் அதைவிட முக்கியம். பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரிபவராக இருந்தாலும் பள்ளர் எவரும் பறையரை திருமணம் செய்ய விரும்பதில்லை. செட்டியார் எவரும் நாடாரை நினைத்துப் பார்ப்பதில்லை. இதைவிட முக்கியம் அவரவரின் கடவுள் நம்பிக்கை. இந்தியர்களின் பெரும்பாலனோருக்கு இருக்கும் மறுபிறவி நம்பிக்கை ஒன்று தான், நிகழ்கால அவலத்தைப் பொறுத்துக் கொள்ள வைக்கின்றது. விலங்குகள் போல நின்று கொண்டே மூத்திரம் போய்க்கொண்டிருக்கும் சந்தை கடந்து போய்த் தெரு முனையில் இருக்கும் கோவில் தரிசனத்தைப் பயபக்தியுடன் வணங்குவது நம்முடைய பண்பாடு.. ஒழுக்கத்தை விட நமக்குப் பயமே முக்கியம். அந்தப் பயம் ஒவ்வொருவர் மனதிலும் இருந்து கொண்டேயிருப்பதால் இவ்வளவு பெரிய நாட்டை மிகக்குறைவான கண்காணிப்பு மூலம் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடிகின்றது. அவரவர் மத நம்பிக்கைகளின் காரணமாகவே மதத்தால், மொழியால், ஜாதியில், குணத்தால் பிரிந்து வாழும் இந்த அகண்ட தேசம் பலவீனமாகாமல் தொடர்ந்து சிறிதளவேனும் முன்னேறிக் கொண்டிருக்கிறது. .. ++++++++++++++++++++++++++ ஆங்கிலேயர்கள் ஆட்சிக்கு வந்த போது கூடப் பெரும்பாலன மக்கள் தங்கள் அன்றாடக் கடமைகளில் தான் கவனமாக இருந்தார்களே தவிர எவர் ஆட்சி செய்கிறார்கள் எவ்வளவு கொள்ளையடிக்கிறார்கள் என்பதைப் பற்றி எந்த அக்கறையும் இருக்கவில்லை. இப்போதும் அப்படித்தான் இருக்கிறார்கள். ஆனால் அன்று தங்கள் உழைப்பின் மூலம் வாழ்ந்து கொண்டிருந்த மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தார்கள். காந்தி அழைத்தவுடன் பாரபட்சம் இல்லாது சத்தியாகிரகப் போராட்டத்தில் பங்கெடுத்து சுதந்திர பொறியை பற்ற வைத்தார்கள். இப்போது தகுதியான தலைவர்கள் எவரும் இல்லாத போதும் அடிப்படை வாழ்வாதாரமே பாதிப்படைய போகின்றது என்றதும் கம்பம் பகுதியில் தன் எழுச்சியாகக் கேரளவுக்கு எதிர்ப்பை காட்டும் பட்சத்தில் ஒரு லட்ச மக்கள் திரண்டுள்ளார்கள். புரட்சி என்பது எப்போது உருவாகும்?. இன்று வாழ்வாதாரம் பாதிக்கப்போகின்றது என்றதும் லட்சக்கணக்கில் திரளும் மக்கள், நாளை உணவுக்கே பஞ்சம் என்றால் எத்தனை கோடி பேர்கள் இது போன்ற புரட்சியில் இறங்கக்கூடும்?. மாற்றத்தை விரும்புவர்கள் அதிகமாகும் போது இது போன்ற தன்னெழுச்சியான நிகழ்வுகள் நடந்தே தீரும். நமது இந்தியாவை அதிகக் காலம் ஆண்டுள்ள காங்கிரஸ் வந்துள்ள பாதையில் இன்று நாடே திக்குத் தெரியாத பாதையில் போய்க் கொண்டிருக்கின்றது. ஏன்? ++++++++++++++++++++++++ 1929 ஆம் ஆண்டுச் செப்டம்பர் மாதம் காங்கிரஸ் தலைவர் பதவிக்குக் காந்திஜி நேருவை முன்மொழிந்தார். காந்தி தனக்குப் பதிலாக அந்தப் பதவிக்கு மிகப் பொருத்தமானவர் நேரு என்றே தீர்மானமாக நம்பினார். சர்தார் வல்லபாய் படேல், மௌலானா அபுல் கலாம் ஆசாத் மற்றும் வேறு சில செல்வாக்குள் காங்கிரஸ்கார்களுக்கு மிகுந்த ஏமாற்றமாக இருந்தது. மூர்க்கத்தனமான போட்டி பொறாமைகளுக்கிடையே நேரு கூட இந்தப் பதவியை விரும்பவில்லை. காரணம் காங்கிரஸ் கட்சியில் கூடப் பிரிட்டிஷ் அரசாங்கத்தோடு ஒத்து ஊதி காலத்தை ஓட்டிவிடலாம் என்ற மாற்றத்தை விரும்பாதவர்கள் என்ற ஆதிக்கமும் சரிக்குச் சரியாக இருந்தது. இதன் காரணமாகவே காங்கிரஸ் செயற்குழு தலைவராக இருந்த சி.ஆர். தாஸ் பதவி விலகினார். ஆனால் இன்று வரையிலும் இந்தியாவிற்கு மாற்றம் வேண்டும் என்ற எண்ணிக்கை கொண்ட ஆட்சியாளர்கள் அதிகமாகத்தான் இருக்கிறார்கள். ஆனால் இவர்களின் அத்தனை நோக்கமும் ஏதோவொரு நாட்டின் மூலம் இந்த மாற்றம் இருக்க வேண்டும் என்று எண்ணத்தில் முடிவது தான் நாட்டின் பிரச்சனையின் தொடக்கமாக இருக்கிறது. இப்போது மன்மோகன் சிங் நம்பும் அமெரிக்கா உலகத்திற்குச் சொல்ல விரும்பு செய்தியை ஒரே ஒரு உதாரணம் மூலம் நம்மால் சொல்லிவிட முடியும். அமெரிக்கா சமீபத்தில் ஈராக்கில் போர் நடத்த 87 பில்லியன் அமெரிக்கன் டாலர் செலவழித்தது. ஆனால் உலகமக்கள் அணைவருக்கும் சுத்தமான நீரும், போதுமான உணவும் மற்ற அடிப்படை வசதிகளும் கல்வியும் அளிக்க இதில் பாதித் தொகையே தேவைப்படும் என்று ஐ.நா சபை மதிப்பிட்டுள்ளது. உலகத்திற்கே அமைதியை போதிக்கும் அமெரிக்கா ஏன் இவ்வாறு செய்கின்றது? அது தான் அமெரிக்காவிற்கென்றே இருக்கும் அராஜக அரசியல். அமெரிக்கா இந்தியாவின் மேல் வைத்துள்ள கழுகுப்பார்வை என்பது இன்று நேற்றல்ல. சுதந்திரம் பெற்று முதல் பிரதமராக இருந்த நேரு காலத்தில் இருந்தே நடைபெறுகின்றது. உலோகத் தொழில், மின்சார சக்தி உற்பத்தி, இரசாயனம், இயந்திரங்களைக் கட்டுதல், போக்குவரத்து, சுரங்கத் தொழில் போன்ற துறைகளை வளர்க்கப்பட வேண்டும் என்று நேரு கொண்டு வந்த ஐந்தாண்டு திட்டத்தைப் பார்த்து அப்போது டில்லியில் அமெரிக்கத் தூதராக இருந்த ஹென்ரி ஜே. கிரேடி சொன்ன வார்த்தை என்ன தெரியுமா? “இந்தியாவைத் தொழில் வளர்ச்சியடைந்த நாடாக மாற்ற முயற்சிப்பது அதன் பொருளாதார வளர்ச்சியின் “இயற்கையான போக்கை” அழிப்பதில் கொண்டு போய்விடும்” என்று பயமுறுத்தினார். மேலும் நேரு ஒரு மறைமுகக் கம்யூனிஸ்ட் என்று தூற்றினார். இவ்வாறு சொன்ன அமெரிக்கா நேருவை தங்கள் ப்க்கம் கொண்டு வந்தே ஆக வேண்டும் என்று பலவித முயற்சிகளையும் செய்து பார்த்து 1948 ஆம் ஆண்டே அமெரிக்கா வரச்சொல்லி அவருக்கு அழைப்பு விடுத்தது. காலம் கடத்தி ஆனால் உறுதியான நிலைப்பாட்டுடன் அமெரிக்கச் சென்ற போது (1949 அக்டோபர்) வாஷிங்டன் விமான நிலையத்தில் நேருவை வரவேற்ற அதிபர் ட்ரூமன் பின்வருமாறு கூறினார். ” உங்கள் நாட்டுக்குப் புதிய பாதையைக் கண்டுபிடிக்கப் புறப்பட்டவர்கள் எங்கள் நாட்டைக் கண்டுபிடிக்க வேண்டுமென்பது விதியின் முடிவாக இருந்தது. உங்கள் வருகை ஒரு அர்த்தத்தில் அமெரிக்காவைக் கண்டுபிடிப்பதாக இருக்குமென்று நம்புகின்றேன்.” ஆனால் அமெரிக்கா எதிர்பார்த்த எதுவும் நடக்கவில்லை. இந்திய சுதந்திரத்தில் எந்த வித கட்டுப்பாடுகளையும் விதிக்க அமெரிக்காவுக்கு எந்த யோக்கியதையும் இல்லை என்று வெற்றி நடை போட்டு இந்தியர்களை நம்பி இந்தியாவை வடிவமைக்கத் தொடங்கினர். ஆனால் அன்று நேரு காங்கிரஸ் தொடங்கிய பயணம் இன்று இத்தாலி காங்கிரஸ் ஆக மாறி, மறுபடியம் அதே அமெரிக்காவின் காலடியின் சமர்ப்பிப்பதில் முடிந்துள்ளது. இதைத்தான் வாழ்க்கை என்பது ஒரு வட்டம் என்று சொல்கிறார்களோ? (முற்றும்) 1 Free Tamil Ebooks - எங்களைப் பற்றி மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்: மின்புத்தகங்களைப் படிப்பதற்கென்றே கையிலேயே வைத்துக் கொள்ளக்கூடிய பல கருவிகள் தற்போது சந்தையில் வந்துவிட்டன. Kindle, Nook, Android Tablets போன்றவை இவற்றில் பெரும்பங்கு வகிக்கின்றன. இத்தகைய கருவிகளின் மதிப்பு தற்போது 4000 முதல் 6000 ரூபாய் வரை குறைந்துள்ளன. எனவே பெரும்பான்மையான மக்கள் தற்போது இதனை வாங்கி வருகின்றனர். ஆங்கிலத்திலுள்ள மின்புத்தகங்கள்: ஆங்கிலத்தில் லட்சக்கணக்கான மின்புத்தகங்கள் தற்போது கிடைக்கப் பெறுகின்றன. அவை PDF, EPUB, MOBI, AZW3. போன்ற வடிவங்களில் இருப்பதால், அவற்றை மேற்கூறிய கருவிகளைக் கொண்டு நாம் படித்துவிடலாம். தமிழிலுள்ள மின்புத்தகங்கள்: தமிழில் சமீபத்திய புத்தகங்களெல்லாம் நமக்கு மின்புத்தகங்களாக கிடைக்கப்பெறுவதில்லை. ProjectMadurai.com எனும் குழு தமிழில் மின்புத்தகங்களை வெளியிடுவதற்கான ஒர் உன்னத சேவையில் ஈடுபட்டுள்ளது. இந்தக் குழு இதுவரை வழங்கியுள்ள தமிழ் மின்புத்தகங்கள் அனைத்தும் PublicDomain-ல் உள்ளன. ஆனால் இவை மிகவும் பழைய புத்தகங்கள். சமீபத்திய புத்தகங்கள் ஏதும் இங்கு கிடைக்கப்பெறுவதில்லை. எனவே ஒரு தமிழ் வாசகர் மேற்கூறிய “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகளை” வாங்கும்போது, அவரால் எந்த ஒரு தமிழ் புத்தகத்தையும் இலவசமாகப் பெற முடியாது. சமீபத்திய புத்தகங்களை தமிழில் பெறுவது எப்படி? சமீபகாலமாக பல்வேறு எழுத்தாளர்களும், பதிவர்களும், சமீபத்திய நிகழ்வுகளைப் பற்றிய விவரங்களைத் தமிழில் எழுதத் தொடங்கியுள்ளனர். அவை இலக்கியம், விளையாட்டு, கலாச்சாரம், உணவு, சினிமா, அரசியல், புகைப்படக்கலை, வணிகம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு தலைப்புகளின் கீழ் அமைகின்றன. நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகச் சேர்த்து தமிழ் மின்புத்தகங்களை உருவாக்க உள்ளோம். அவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள் Creative Commons எனும் உரிமத்தின் கீழ் வெளியிடப்படும். இவ்வாறு வெளியிடுவதன் மூலம் அந்தப் புத்தகத்தை எழுதிய மூல ஆசிரியருக்கான உரிமைகள் சட்டரீதியாகப் பாதுகாக்கப்படுகின்றன. அதே நேரத்தில் அந்த மின்புத்தகங்களை யார் வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும், இலவசமாக வழங்கலாம். எனவே தமிழ் படிக்கும் வாசகர்கள் ஆயிரக்கணக்கில் சமீபத்திய தமிழ் மின்புத்தகங்களை இலவசமாகவே பெற்றுக் கொள்ள முடியும். தமிழிலிருக்கும் எந்த வலைப்பதிவிலிருந்து வேண்டுமானாலும் பதிவுகளை எடுக்கலாமா? கூடாது. ஒவ்வொரு வலைப்பதிவும் அதற்கென்றே ஒருசில அனுமதிகளைப் பெற்றிருக்கும். ஒரு வலைப்பதிவின் ஆசிரியர் அவரது பதிப்புகளை “யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்” என்று குறிப்பிட்டிருந்தால் மட்டுமே அதனை நாம் பயன்படுத்த முடியும். அதாவது “Creative Commons” எனும் உரிமத்தின் கீழ் வரும் பதிப்புகளை மட்டுமே நாம் பயன்படுத்த முடியும். அப்படி இல்லாமல் “All Rights Reserved” எனும் உரிமத்தின் கீழ் இருக்கும் பதிப்புகளை நம்மால் பயன்படுத்த முடியாது. வேண்டுமானால் “All Rights Reserved” என்று விளங்கும் வலைப்பதிவுகளைக் கொண்டிருக்கும் ஆசிரியருக்கு அவரது பதிப்புகளை “Creative Commons” உரிமத்தின் கீழ் வெளியிடக்கோரி நாம் நமது வேண்டுகோளைத் தெரிவிக்கலாம். மேலும் அவரது படைப்புகள் அனைத்தும் அவருடைய பெயரின் கீழே தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் நாம் அளிக்க வேண்டும். பொதுவாக புதுப்புது பதிவுகளை  உருவாக்குவோருக்கு அவர்களது பதிவுகள்  நிறைய வாசகர்களைச் சென்றடைய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். நாம் அவர்களது படைப்புகளை எடுத்து இலவச மின்புத்தகங்களாக வழங்குவதற்கு  நமக்கு அவர்கள் அனுமதியளித்தால், உண்மையாகவே அவர்களது படைப்புகள் பெரும்பான்மையான மக்களைச் சென்றடையும். வாசகர்களுக்கும் நிறைய புத்தகங்கள் படிப்பதற்குக் கிடைக்கும் வாசகர்கள் ஆசிரியர்களின் வலைப்பதிவு முகவரிகளில் கூட அவர்களுடைய படைப்புகளை தேடிக் கண்டுபிடித்து படிக்கலாம். ஆனால் நாங்கள் வாசகர்களின் சிரமத்தைக் குறைக்கும் வண்ணம் ஆசிரியர்களின் சிதறிய வலைப்பதிவுகளை ஒன்றாக இணைத்து ஒரு முழு மின்புத்தகங்களாக உருவாக்கும் வேலையைச் செய்கிறோம். மேலும் அவ்வாறு உருவாக்கப்பட்ட புத்தகங்களை “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்”-க்கு ஏற்ற வண்ணம் வடிவமைக்கும் வேலையையும் செய்கிறோம். FreeTamilEbooks.com இந்த வலைத்தளத்தில்தான் பின்வரும் வடிவமைப்பில் மின்புத்தகங்கள் காணப்படும். PDF for desktop, PDF for 6” devices, EPUB, AZW3, ODT இந்த வலைதளத்திலிருந்து யார் வேண்டுமானாலும் மின்புத்தகங்களை இலவசமாகப் பதிவிறக்கம்(download) செய்து கொள்ளலாம். அவ்வாறு பதிவிறக்கம்(download) செய்யப்பட்ட புத்தகங்களை யாருக்கு வேண்டுமானாலும் இலவசமாக வழங்கலாம். இதில் நீங்கள் பங்களிக்க விரும்புகிறீர்களா? நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் தமிழில் எழுதப்பட்டிருக்கும் வலைப்பதிவுகளிலிருந்து பதிவுகளை எடுத்து, அவற்றை LibreOffice/MS Office போன்ற wordprocessor-ல் போட்டு ஓர் எளிய மின்புத்தகமாக மாற்றி எங்களுக்கு அனுப்பவும். அவ்வளவுதான்! மேலும் சில பங்களிப்புகள் பின்வருமாறு: 1. ஒருசில பதிவர்கள்/எழுத்தாளர்களுக்கு அவர்களது படைப்புகளை “Creative Commons” உரிமத்தின்கீழ் வெளியிடக்கோரி மின்னஞ்சல் அனுப்புதல் 2. தன்னார்வலர்களால் அனுப்பப்பட்ட மின்புத்தகங்களின் உரிமைகளையும் தரத்தையும் பரிசோதித்தல் 3. சோதனைகள் முடிந்து அனுமதி வழங்கப்பட்ட தரமான மின்புத்தகங்களை நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்தல் விருப்பமுள்ளவர்கள் freetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும். இந்தத் திட்டத்தின் மூலம் பணம் சம்பாதிப்பவர்கள் யார்? யாருமில்லை. இந்த வலைத்தளம் முழுக்க முழுக்க தன்னார்வலர்களால் செயல்படுகின்ற ஒரு வலைத்தளம் ஆகும். இதன் ஒரே நோக்கம் என்னவெனில் தமிழில் நிறைய மின்புத்தகங்களை உருவாக்குவதும், அவற்றை இலவசமாக பயனர்களுக்கு வழங்குவதுமே ஆகும். மேலும் இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள், ebook reader ஏற்றுக்கொள்ளும் வடிவமைப்பில் அமையும். இத்திட்டத்தால் பதிப்புகளை எழுதிக்கொடுக்கும் ஆசிரியர்/பதிவருக்கு என்ன லாபம்? ஆசிரியர்/பதிவர்கள் இத்திட்டத்தின் மூலம் எந்தவிதமான தொகையும் பெறப்போவதில்லை. ஏனெனில், அவர்கள் புதிதாக இதற்கென்று எந்தஒரு பதிவையும்  எழுதித்தரப்போவதில்லை. ஏற்கனவே அவர்கள் எழுதி வெளியிட்டிருக்கும் பதிவுகளை எடுத்துத்தான் நாம் மின்புத்தகமாக வெளியிடப்போகிறோம். அதாவது அவரவர்களின் வலைதளத்தில் இந்தப் பதிவுகள் அனைத்தும் இலவசமாகவே கிடைக்கப்பெற்றாலும், அவற்றையெல்லாம் ஒன்றாகத் தொகுத்து ebook reader போன்ற கருவிகளில் படிக்கும் விதத்தில் மாற்றித் தரும் வேலையை இந்தத் திட்டம் செய்கிறது. தற்போது மக்கள் பெரிய அளவில் tablets மற்றும் ebook readers போன்ற கருவிகளை நாடிச் செல்வதால் அவர்களை நெருங்குவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். நகல் எடுப்பதை அனுமதிக்கும் வலைதளங்கள் ஏதேனும் தமிழில் உள்ளதா? உள்ளது. பின்வரும் தமிழில் உள்ள வலைதளங்கள் நகல் எடுப்பதினை அனுமதிக்கின்றன. 1. www.vinavu.com 2. www.badriseshadri.in 3. http://maattru.com 4. kaniyam.com 5. blog.ravidreams.net எவ்வாறு ஒர் எழுத்தாளரிடம் Creative Commons உரிமத்தின் கீழ் அவரது படைப்புகளை வெளியிடுமாறு கூறுவது? இதற்கு பின்வருமாறு ஒரு மின்னஞ்சலை அனுப்ப வேண்டும். <துவக்கம்> உங்களது வலைத்தளம் அருமை [வலைதளத்தின் பெயர்]. தற்போது படிப்பதற்கு உபயோகப்படும் கருவிகளாக Mobiles மற்றும் பல்வேறு கையிருப்புக் கருவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது. இந்நிலையில் நாங்கள் http://www.FreeTamilEbooks.com எனும் வலைதளத்தில், பல்வேறு தமிழ் மின்புத்தகங்களை வெவ்வேறு துறைகளின் கீழ் சேகரிப்பதற்கான ஒரு புதிய திட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இங்கு சேகரிக்கப்படும் மின்புத்தகங்கள் பல்வேறு கணிணிக் கருவிகளான Desktop,ebook readers like kindl, nook, mobiles, tablets with android, iOS போன்றவற்றில் படிக்கும் வண்ணம் அமையும். அதாவது இத்தகைய கருவிகள் support செய்யும் odt, pdf, ebub, azw போன்ற வடிவமைப்பில் புத்தகங்கள் அமையும். இதற்காக நாங்கள் உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை பெற விரும்புகிறோம். இதன் மூலம் உங்களது பதிவுகள் உலகளவில் இருக்கும் வாசகர்களின் கருவிகளை நேரடியாகச் சென்றடையும். எனவே உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை  பிரதியெடுப்பதற்கும் அவற்றை மின்புத்தகங்களாக மாற்றுவதற்கும் உங்களது அனுமதியை வேண்டுகிறோம். இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்களில் கண்டிப்பாக ஆசிரியராக உங்களின் பெயரும் மற்றும் உங்களது வலைதள முகவரியும் இடம்பெறும். மேலும் இவை “Creative Commons” உரிமத்தின் கீழ் மட்டும்தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் அளிக்கிறோம். http://creativecommons.org/licenses/ நீங்கள் எங்களை பின்வரும் முகவரிகளில் தொடர்பு கொள்ளலாம். e-mail : freetamilebooksteam@gmail.com  FB : https://www.facebook.com/FreeTamilEbooks G +: https://plus.google.com/communities/108817760492177970948   நன்றி. மேற்கூறியவாறு ஒரு மின்னஞ்சலை உங்களுக்குத் தெரிந்த அனைத்து எழுத்தாளர்களுக்கும் அனுப்பி அவர்களிடமிருந்து அனுமதியைப் பெறுங்கள். முடிந்தால் அவர்களையும் “Creative Commons License”-ஐ அவர்களுடைய வலைதளத்தில் பயன்படுத்தச் சொல்லுங்கள். கடைசியாக அவர்கள் உங்களுக்கு அனுமதி அளித்து அனுப்பியிருக்கும் மின்னஞ்சலைfreetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு அனுப்பி வையுங்கள். ஓர் எழுத்தாளர் உங்களது உங்களது வேண்டுகோளை மறுக்கும் பட்சத்தில் என்ன செய்வது ? அவர்களையும் அவர்களது படைப்புகளையும் அப்படியே விட்டுவிட வேண்டும். ஒருசிலருக்கு அவர்களுடைய சொந்த முயற்சியில் மின்புத்தகம் தயாரிக்கும் எண்ணம்கூட இருக்கும். ஆகவே அவர்களை நாம் மீண்டும் மீண்டும் தொந்தரவு செய்யக் கூடாது. அவர்களை அப்படியே விட்டுவிட்டு அடுத்தடுத்த எழுத்தாளர்களை நோக்கி நமது முயற்சியைத் தொடர வேண்டும். மின்புத்தகங்கள் எவ்வாறு அமைய வேண்டும்? ஒவ்வொருவரது வலைத்தளத்திலும் குறைந்தபட்சம் நூற்றுக்கணக்கில் பதிவுகள் காணப்படும். அவை வகைப்படுத்தப்பட்டோ அல்லது வகைப்படுத்தப் படாமலோ இருக்கும். நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகத் திரட்டி ஒரு பொதுவான தலைப்பின்கீழ் வகைப்படுத்தி மின்புத்தகங்களாகத் தயாரிக்கலாம். அவ்வாறு வகைப்படுத்தப்படும் மின்புத்தகங்களை பகுதி-I பகுதி-II என்றும் கூட தனித்தனியே பிரித்துக் கொடுக்கலாம். தவிர்க்க வேண்டியவைகள் யாவை? இனம், பாலியல் மற்றும் வன்முறை போன்றவற்றைத் தூண்டும் வகையான பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டும். எங்களைத் தொடர்பு கொள்வது எப்படி? நீங்கள் பின்வரும் முகவரிகளில் எங்களைத் தொடர்பு கொள்ளலாம். - email : freetamilebooksteam@gmail.com - Facebook: https://www.facebook.com/FreeTamilEbooks - Google Plus: https://plus.google.com/communities/108817760492177970948 இத்திட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் யார்? - Shrinivasan tshrinivasan@gmail.com - Alagunambi Welkin alagunambiwelkin@fsftn.org - Arun arun@fsftn.org -  இரவி Supported by - Free Software Foundation TamilNadu, www.fsftn.org - Yavarukkum Software Foundation http://www.yavarkkum.org/