[] வினவு அறிவியல் பக்கங்கள் http://www.vinavu.com மின்னூல் வெளியீடு : http://FreeTamilEbooks.com சென்னை This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 2.5 India (CC BY-NC-ND 2.5 IN) You are free: - to copy, distribute, display, and perform the work Under the following conditions: - Attribution — You must give the original author credit. - Non-Commercial — You may not use this work for commercial purposes. - No Derivative Works — You may not alter, transform, or build upon this work.   http://creativecommons.org/licenses/by-nc-nd/2.5/in/ This book was produced using PressBooks.com. Contents - வினவு - அறிவியல் பக்கங்கள் - மின்னூல் ஆக்கம் - உரிமை - 1. காற்றாலை, சூரிய மின்சாரம் தடுப்பது யார்? மார்ட்டின் - 2. ஸ்னோடன் : சந்தி சிரித்தது அமெரிக்காவின் யோக்கியதை! குமார் - 3. சூரிய மின்சக்தியிலும் சுயசார்பை அழிக்கும் அமெரிக்கா! தனபால் - 4. சென்னையின் பெருமை ஐசிஎஃப்பை விழுங்கும் தனியார்மயம்! ஜென்னி - 5. கண்காணிக்கப்படுவதால் உங்களுக்கு என்ன இழப்பு? - 6. யார் இந்த ஸ்னோடன்? - 7. எச்சரிக்கை: இணையத்தை கண்காணிக்கிறது இந்திய அரசு! - 8. விதை நெல்: விவசாயிகளுக்கு எதிராக மான்சாண்டோவின் ஏகபோகம்! - 9. உங்களைப் பற்றிய விவரங்கள் விற்பனைக்கு கிடைக்கும்! உஷா ராமநாதன் - 10. சோதனைச்சாலை எலிகளா இந்திய மக்கள்? - 11. வடிவுரிமைச் சட்டத் திருத்தம்: இயற்கைச் செல்வங்களுக்கு ஆபத்து! செல்வம் - 12. இணையப் புரட்சியின் யோக்கியதையும் கூகுள் ரீடரும்! ஆதவன் - 13. கம்பீரம் – ஒரு உண்மைக் கதை! மாடசாமி - 14. இணையத்தில் யார் சம்பாதிக்க வேண்டும் – முதலாளிகள் லடாய்! - 15. இணையத்தில் டவுன்லோட் செய்தால் 10 ஆண்டு சிறை! - 16. அமெரிக்காவில் ஒரு அவுட்சோர்சிங் காமெடி! ஆதவன் - 17. வைரல் மார்க்கெட்டிங் – சமூக வலைத்தளங்களின் கருத்துச் சுதந்திரம்! - 18. அவுட்சோர்சிங் துறையில் ஆட்குறைப்பு! - 19. ஐ.டி துறை ஊழியர்களின் வேலைச்சுமைக்கு காரணம் என்ன? - 20. நாட்டையே திவாலாக்கும் கல்வி! ஆதவன் - 21. ஆப்பிள் – சாம்சங்: தொடரும் ஏகபோகச் சண்டை! - 22. பிளட் பூஸ்டர்: சோதனைச் சாலை எலிகள் யார்? - 23. யாருக்காக வருகிறது Google டிரைவரில்லா கார்? - 24. பேஸ்புக் உங்களை விற்பது தெரியுமா? - 25. கடவுளை நொறுக்கிய துகள்! - 26. ஹிக்ஸ் போசான் துகள்! ஒரு வரலாற்று விளக்கம்!! - 27. வலியில்லா ஊசி! - 28. யூ டூ புரூஸ் வில்லிஸ்??? - 29. ஆப்பிள் அண்ணே, நீ மட்டும்தான் கேஸ் போடுவியா? நாங்களும் போடுவோம்ல…! - 30. காப்புரிமை அநீதியால் காணமல் போகும் கண்டுபிடிப்புகள்! - 31. அணுமின்சாரத்தின் மிகையும், காற்றாலை மின் உற்பத்தியின் உண்மையும்! - 32. ஆர்கானிக் உணவு: சதிக்கு பலியாகும் நடுத்தர வர்க்கம்! - 33. பி.டி உணவுப் பொருள்: தடுப்பார் யாருமில்லை! - 34. இணையம் உருவாக்கியது: முதலாளிகளா, மக்களா? அப்துல் - 35. THE RED MARKET: மனித உடல் உறுப்புகளின் சந்தை! - 36. டர்பன் மாநாடு: ஆடுகள் மீது பழிபோடும் ஓநாய்கள்! - 37. ஐ.ஐ.டி பொலிகாளைகளும் ‘மலட்டு’ச் சமூகமும்! குட்டக்கொழப்பி - 38. அறிவியலின் நெற்றியடி! பைபிளின் மோசடி!! - 39. ஐ.டி. துறை நண்பா உனக்கு ரோஷம் வேணுன்டா!! - Free Tamil Ebooks - எங்களைப் பற்றி - வினவு - அறிமுகம் 1 வினவு - அறிவியல் பக்கங்கள்   [vinavu-science]   வினவு சமூக பண்பாட்டு கட்டுரைகளை வெளியிடும் வலைத்தளம். இது ஜூலை 17, 2008 அன்று தொடங்கப்பட்டது. வினவு என்றால் “கேள்வி கேள்” என்று பொருள். ”வினவு வினை செய்!” அதாவது “கேளுங்கள், செயல்படுங்கள்” என்ற விளக்கத்துடன் இந்த வலைத்தளம் செயல்படுகிறது. வினவு வலைத்தளம் மக்கள் கலை இலக்கிய கழகம் என்ற அமைப்பின் ஆதரவாளர்களால் நடத்தப்படுகிறது. ம க இ க என்று அழைக்கப்படும் மக்கள் கலை இலக்கியக் கழகம், இந்திய பொதுவுடமைக்கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்), மாநில அமைப்புக் குழு, தமிழ்நாடு (State Organizing Commitee, Tamil Nadu) வின் மக்கள் திரள் அமைப்பு ஆகும். வினவு வலைத்தளத்தில் சமூகம், ஈழம், நடப்பு நிகழ்வுகள், சினிமா, இலக்கியம், அரசியல் போன்ற விசயங்கள் குறித்த கட்டுரைகள் வெளியாகின்றன. வினவு தளத்தில் இருந்து சில அறிவியல் கட்டுரைகளை தொகுத்து மின்னூலாக வெளியிடுவதில் மகிழ்ச்சி கொள்கிறோம். கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமத்தில் கட்டுரைகளை வெளியிடும் வினவு குழுவினருக்கு நன்றிகள். ஆசிரியர் : வினவு குழு வலைத்தளம் : http://vinavu.com   படம்: http://www.flickr.com/photos/jesselistoen/4400024223/sizes/l/in/photostream/ 2 மின்னூல் ஆக்கம் மின்னூல் ஆக்கம் : ஜீவ குரு jeevaguru@gmail.com   மின்னூல் வெளியீடு : http://FreeTamilEbooks.com வெளியீட்டாளர் : த . ஸ்ரீநிவாஸன் , தரை தளம் 4, சுபிக்ஷா அடுக்ககம் , 42, வியாசர் தெரு , கிழக்கு தாம்பரம் சென்னை - 600 059 தொ . பே : +91 9 8417 95468 – tshrinivasan@gmail.com   நன்றி : http://pressbooks.com 3 உரிமை [Creative Commons License] This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 2.5 India (CC BY-NC-ND 2.5 IN) You are free: - to copy, distribute, display, and perform the work Under the following conditions: - Attribution — You must give the original author credit. - Non-Commercial — You may not use this work for commercial purposes. - No Derivative Works — You may not alter, transform, or build upon this work.   http://creativecommons.org/licenses/by-nc-nd/2.5/in/ [pressbooks.com] 1 காற்றாலை, சூரிய மின்சாரம் தடுப்பது யார்? மார்ட்டின் http://www.vinavu.com/2013/07/25/wind-solar-energy-barriers/   630 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் திறனுடைய உலகின் மிகப்பெரிய கடல் பரப்பில் இயங்கும் காற்றாலை (offshore Wind farm) தொகுப்பை இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் திறந்து வைத்துள்ளார். லண்டன் வரிசை (London Array) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த தொகுப்பு கடல் மட்டத்திலிருந்து சுமார் 87 மீட்டர் உயரமுள்ள 175 தூண்களில் ஒவ்வொரு தூணிலும் 3.5மெகாவாட் மின்னாற்றல் உற்பத்தி திறனுடைய விசையாழிகளுடன் தேம்ஸ் நதியின் முகத்துவாரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. கென்ட் கடற்கரையிலிருந்து 12-மைல் தொலைவில் கடலுக்குள் நிறுவப்பட்டுள்ள இத்தொகுப்பு சுமார் 40 சதுர மைல் பரப்பளவைக் கொண்டதாகும். [கடல் பரப்பில் காற்றாலை] லண்டனுக்கு அருகில் கடற்பரப்பில் காற்றாலை (படம் : நன்றி கார்டியன்) இன்றைக்கு உலகின் மொத்த மின்சார தேவை 12.5 டெரா வாட் (1.25 கோடி மெகா வாட்) என்றும் 2030-ல் அது 16.9 டெரா வாட்டாக (1.69 கோடி மெகா வாட்) இருக்குமென்றும் கணக்கிடப்பட்டுள்ளது. புதுப்பிக்கப்படக் கூடிய ஆற்றல் வளங்கள் (Renewable Energy) இன்றைய மின் தேவையை விட பலமடங்கு இருக்கின்றன என்றும் அவற்றை சரிவர திட்டமிட்டு பயன்படுத்தினால் தேவையை விட உபரியாகவே மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியுமென்றும் சைன்டிஃபிக் அமெரிக்கன் (Scientific American) இதழில் வெளியான கணிணி மாதிரிகளையும், செயற்கைக்கோள் தகவல்களையும் வைத்து தயாரிக்கப்பட்ட திட்ட வரைவு தெரிவிக்கிறது. குறிப்பாக, 40-லிருந்து 85 டெரா வாட் (4 கோடி முதல் 8.5 கோடி மெகாவாட்) காற்று ஆற்றலும், 580 டெரா வாட் (58 கோடி மெகாவாட்) சூரிய ஆற்றலும் மின்சார உற்பத்திக்கு பயன்படுத்தக்கூடிய வகையில் கிடைக்கின்றன. அதாவது தேவையை விட 30-40 மடங்கு மின்சாரத்தை காற்றாலைகள் மூலமாகவும், சூரிய ஆற்றலை பயன்படுத்தியும் உற்பத்தி செய்ய முடியும். காற்று ஆற்றல் வருடம் முழுவதும் கிடைக்காது என்று வாதிடப்படுகிறது. ஆனால், வருடத்தில் ஒரு பகுதியில் காற்று இல்லாத போது மற்றொரு பகுதியில் வீசும். உதாரணமாக தென்மேற்கு பருவக்காற்று வீசும் போது வடகிழக்கு பருவ காற்று வீசுவதில்லை, வடகிழக்கு பருவக்காற்று வீசும் போது தென்மேற்கு பருவ காற்று வீசுவதில்லை. தொலைநோக்குடன் திட்டமிட்டு பயன்படுத்தினால், இருக்கும் காற்று மற்றும் சூரிய ஆற்றலைக்கொண்டே நாட்டின் மின் தேவையை பூர்த்தி செய்யலாம். ஆனால் இன்று உலகில் காற்றாலை மூலம் சுமார் 20,000 மெகாவாட் (சாத்தியமாகக் கூடியதில் வெறும் 0.8 சதவீதம்) மின்சாரமும் சூரிய ஆற்றல் மூலம் சுமார் 8,000 மெகாவாட் மின்சாரமும் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது. [காற்றாலைகள்] படம் : நன்றி சைன்டிஃபிக் அமெரிக்கன் ஒட்டு மொத்த உலகின் மின் தேவையை பூர்த்தி செய்ய தோராயமாக 38 லட்சம் காற்றாடிகளும், 89,000 சூரிய தகடுகள் தொகுப்பும் தேவைப்படலாம் என்று அதே திட்ட மாதிரி வரைவு தெரிவிக்கிறது. இந்த எண்ணிக்கை மிகப் பெரிதாக தோன்றலாம். ஆனால், போர்த்தளவாடங்களின் உற்பத்தியையும், கார்களின் உற்பத்தியையும் கணக்கிலெடுத்து பார்த்தால் இது ஒன்றுமே இல்லாத எண்ணிக்கைதான். உதாரணமாக, உலகில் ஒரு வருடத்திற்கு சுமார் 7.3கோடி கார்களுக்கு மேல் உற்பத்தியாகின்றன. அவற்றை ஓட்டுவதற்கு எரிபொருள், ஓட்டுவதற்கான சாலைகள் என்று பெருமளவு இயற்கை வளங்களும், மனித முயற்சியும் ஆண்டுதோறும் செலவழிக்கப்படுகின்றன. ஆனால், அருகிப் போய்க் கொண்டிருக்கும் நிலக்கரிக்கும், பெட்ரோலுக்கும் மாற்றாக புதுப்பிக்கக் கூடிய எரிபொருள் வளங்களை பயன்படுத்துவது தொடர்பான ஆராய்ச்சிகளும் முன்னேற்றமும் இதுவரை ஏன் நடக்கவில்லை? சந்தைப் பொருளாதார கட்டமைப்பில் சந்தையில் பொருளை விற்று லாபம் சம்பாதிப்பதுதான் தனியார் நிறுவனங்களின் அடிப்படை குறிக்கோளாக இருக்கிறது. காரை விற்று லாபம் உருவாக்க முடிந்தால், கார் விற்பனைக்கான விளம்பரங்கள், கவர்ச்சிகரமான அம்சங்கள் என்று தேவையில்லாதவர்களுக்குக் கூட காரை விற்று விடும் திறன்தான் ஆதிக்கம் செலுத்துகிறது. இந்த கார்களை ஓட்டுவதற்கு எரிபொருள் எங்கிருந்து வரும், அவை வெளியிடும் நச்சு வாயுக்களால் புவி மண்டலம் மாசு படுவதற்கு யார் பொறுப்பு என்பதெல்லாம் தனியார் நிறுவனங்களுக்கும் சந்தைக்கும் கவலையில்லாத விஷயங்கள். அந்த நோக்கில்தான் கிட்டத்தட்ட 200 ஆண்டுகளாக நிலக்கரி, கச்சா எண்ணெயை எரிபொருளாக பயன்படுத்தும் தனிநபர் நுகர்வுப் பொருட்கள் எந்த கட்டுப்பாடும் இன்றி பெருமளவில் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. இப்போது, அவற்றின் விளைவாக ஏற்பட்ட மாசுபடுதல், பருவநிலை மாற்றங்கள் பற்றிய விழிப்புணர்வு மேற்கத்திய நாடுகளின் மக்களிடையே அதிகரித்திருக்கிறது. அதனால், சூழலை மாசுபடுத்தும் அனல் மின்நிலையங்களுக்கும், கதிர்வீச்சு அபாயம் நிறைந்த அணு உலைகளுக்கு எதிராகவும் மக்கள் போராட்டங்கள் வலுத்துள்ளன. இதனால் அங்கு புதிதாக அனல் மற்றும் அணு மின்நிலையங்களை திறக்க முடியவில்லை. இப்படி கழுத்தில் கத்தியை வைத்து சொன்ன பிறகுதான் முதலாளித்துவ உலகை சீரழிக்கும் முயற்சிகளை கைவிட்டு புதுப்பிக்கக் கூடிய எரிசக்தி வளங்களை பயன்படுத்தும் திசையில் செலுத்த முடிகிறது. இந்தப் பின்னணியில் புவி வெப்பமாதல், சுற்றுச்சூழல் மாசடைவு இவற்றைத் தவிர்க்க மேற்கத்திய நாடுகள் காற்று ஆற்றல், சூரிய ஆற்றல், கடல் அலைஆற்றல் போன்ற புதுப்பிக்கக் கூடிய ஆற்றல் வளங்களைக் கொண்டு மின்னுற்பத்தி செய்வதில் கவனத்தை திருப்பியுள்ளன. இந்தத் தீர்வை முதலாளித்துவ சந்தைப் போட்டி தானாக கண்டுபிடித்து செயல்படுத்தி விடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அரசு இத்திட்டங்களில் நேரடியாக ஈடுபடக் கூடாது என்ற கோட்பாட்டை வகுத்துக் கொண்டிருந்தாலும், இது போன்ற முயற்சிகளில் ஈடுபடுவதற்கு தனியார் முதலாளிகளுக்கு பெருமளவு மானியங்களை மக்கள் வரிப்பணத்திலிருந்து அரசுகள் வாரி வழங்குகின்றன. லண்டன் காற்றாலை வரிசை நிறுவனம் டென்மார்கின் டாங் எரிசக்தி (50%), ஜெர்மனியின் E.On (30%) மற்றும் அபுதாபியின் மஸ்டர் (20%) ஆகிய தனியார் நிறுவனங்களுக்கு சொந்தமாக்க பட்டுள்ளது. இத்திட்டத்தில் தனது பங்கை முதலீடு செய்ய டாங் எரிசக்தி மட்டும் ஐரோப்பிய முதலீட்டு வங்கியமிருந்தும், டென்மார்க்கின் ஏற்றுமதி கடன் நிதியத்திடமிருந்தும் 2.2 பில்லியன் டாலர்களுக்கும் மேல் கடனாக பெற்றுள்ளது. கூடுதலாக, லண்டன் வரிசை காற்றாலை நிறுவனத்திடமிருந்து 1,000 யூனிட்டுகள் மின்சாரத்துக்கு 155 பவுண்டுகள் விலை கொடுத்து வாங்கிகொள்ள அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பிரிட்டனில் மின்சாரத்தின் தற்போதைய சராசரி விலை 1,000 யூனிட்டுகளுக்கு 50 பவுண்டுகளாகும். இதன்படி, கடல் காற்றாலைகளில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் விலை தற்போதைய சந்தை விலையை விட மூன்று மடங்கு அதிகம். இந்த அதிகப்படியான விலையை அரசு அந்நிறுவனத்திற்கு மானியமாக கொடுக்கும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் அடுத்த இருபதாண்டுகளுக்கு லண்டன் வரிசை காற்றாலை நிறுவனம் அரசிடமிருந்து மானியங்களை பெறும். அதாவது மக்கள் வரிப்பணம் மானியமாக காற்றாலை தனியார் நிறுவனங்களின் பாக்கெட்டுக்கு போகும். [மாற்று எரிசக்தி] மார்க் ஜேகப்சன் என்ற விஞ்ஞானியின் கணிப்புப்படி நியூயார்க் மாகாணம் முழுக்க முழுக்க காற்று, நீர், சூரிய மின்சக்திக்கு மாற முடியும். (படம் : நன்றி சைன்டிஃபிக் அமெரிக்கன்) இதே போல 1990-களில் மஹாராஷ்ர மாநில மின்வாரியம் என்ரான் நிறுவனத்திடமிருந்து சந்தை விலையை விட அதிக விலையில் மின்சாரத்தை வாங்கி அதனால் திவாலாகும் நிலைக்கு தள்ளப்பட்டது. 2000-ம் ஆண்டுகளில் லாபத்தில் இயங்கிவந்த தமிழ்நாடு மின்வாரியம், தனியார் மின்னுற்பத்தி நிறுவனங்களிடமிருந்து சந்தை விலையை விட பலமடங்கு அதிக விலையில் மின்சாரத்தை வாங்கி அதை சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கும், பன்னாட்டு நிறுவனங்களுக்கும் சலுகை விலையில் கொடுத்ததில் இன்று நஷ்டத்தில் இயங்கிவருகிறது. புதிய தொழில்நுட்பத்தை, திட்டங்களை செயல்படுத்தும் போது அவற்றிலிருக்கும் நிச்சயமின்மை காரணமாக இம்மாதிரியான சலுகைகளை கொடுக்க வேண்டியுள்ளது என தனியார் மய, தாராள மய ஆதரவாளர்கள் சொல்கின்றனர். இதன்படி சந்தையில் கிடைக்கும் லாபம் தனியார் நிறுவனங்களுக்கு, அதிலுள்ள நிச்சயமின்மையும், பாதகமான பின்விளைவுகளும் சமூகத்துக்கு என்பதுதான் முதலாளித்துவ கோட்பாடு என்பதைப் புரிந்து கொள்ளலாம். பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து உணவு, கல்வி, மருத்துவம், சுகாதாரம் உள்ளிட்ட அனைத்து மக்கள் நலத்திட்டங்களையும் வெட்டி மானியங்களை குறைத்து வரும் உலக நாடுகளின் அரசுகள், தனியார் நிறுவனங்களுக்குக் கொடுத்துவரும் சலுகைகளில் துரும்பளவு கூட குறைப்பதில்லை என்பது மட்டுமல்ல முதலாளிகளுக்கு தாரைவார்த்துக் கொடுக்க வித விதமான கலர் கலரான திட்டங்களை கொண்டு வருகின்றன. உலகத்தில் இந்தியா மட்டுமின்றி எல்லா நாடுகளின் அரசுகளும் எந்த திட்டத்தை கொண்டுவந்தாலும், எந்த தொழில்நுட்பத்தை நடைமுறைப்படுத்தினாலும் அவை தனியால் லாப வேட்டைக்கு படியளக்குமாறு பார்த்துக் கொள்கின்றன. பிரிட்டன் மட்டுமின்றி ஜெர்மனி, டென்மார்க் போன்ற ஐரோப்பிய நாடுகள் 2020-க்குள் தமது பசுமை இலக்கை அடைய மறுசுழற்சி ஆற்றல் மூலங்களான காற்றாலை மின்னுற்பத்தி திட்டங்களை திறந்து வருகின்றன. ஜப்பான்-புக்குசிமா விபத்தை தொடர்ந்து ஜெர்மனி அடுத்த பத்தாண்டுகளுக்குள் தனது அணு உலைகளை மூடிவிடுவதாக அறிவித்துள்ளது. பிரிட்டன் இப்போது 3,300 மெகாவாட் மின்னுற்பத்தி செய்யும் கடல் காற்றாலைகளை இயக்குகிறது. அதை 2020-ம் ஆண்டிற்குள் 18,000 மெகாவாட்டாக உயர்த்தத் திட்டமிட்டுள்ளது. சீனாவில் 44,733 மெகாவாட், அமெரிக்காவில் 40,180 மெகாவாட், ஜெர்மனியில் 27,215 மெகாவாட், ஸ்பெயினில் 20,676 மெகாவாட் மின்சாரம் காற்றாலையின் மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்தியாவில் 19,051 மெகாவாட் (தமிழகத்தில் 7,134 மெகாவாட்) காற்றாலை மூலமாக உற்பத்தி செய்யப்படுகிறது. இது நாட்டின் மொத்த மின் தேவையில் 1.6% மட்டுமே. இத்தகைய தொழில்நுட்பங்களில் கவனம் செலுத்துவதற்கு மாறாக, மேற்கத்திய நாடுகளில் ஒதுக்கித் தள்ளப்பட்ட அனல் மின் நிலைய, அணு மின் நிலைய தொழில் நுட்பங்களை மக்கள் எதிர்ப்புகள் வலுக்காத இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளுக்கு விற்று லாபம் சம்பாதிப்பதிலும் முதலாளிகள் இறங்கியிருக்கின்றனர். நம் நாட்டிலோ ’ட்ரீம் பாய்’ அப்துல் கலாம் 2020க்குள் நாடு வல்லரசாகி விடுமென்று கனவு காணச்சொல்லியும் அதற்கு நாடு மூழுவதும் அணு உலைகளை நட்டுவைக்க வேண்டுமென்றும் பிரச்சாரம் செய்து வருகிறார். அரசு புதுப்பிக்கக் கூடிய ஆற்றல் மூலங்களை பயன்படுத்த எந்த முயற்சியும் எடுப்பதில்லை. மாறாக மற்ற அனல் மற்றும் புனல் நிலையங்களை விடவும் அபாயகரமான, காலாவதியான தொழில்நுட்பத்தில் உருவான அணு உலைகளை நாடுமுழுவதும் நட்டு வைக்க உறுதியுடன் செயல்பட்டு வருகிறது. தங்களது நாடுகளில் பயன்படுத்த முடியாத தொழில்நுட்பத்தை, நமது நாட்டில் குப்பையைப்போல கொட்டிவரும் ஏகாதிபத்திய நாடுகளுக்கும், அணு உலை தயாரிப்பு நிறுவனங்களுக்கும் அடியாளாக, பாதுகாப்பற்ற உலைகளை எதிர்த்து போராடும் மக்கள் மீது தேசத் துரோக வழக்கு உள்ளிட்ட வழக்குகளை போட்டுள்ளதுடன் மக்களின் எதிர்ப்பையும் மீறி அணு உலைகளை இந்த அரசு இயக்கிவருகிறது. இந்தியாவிலும் புதுப்பிக்க கூடிய – மாற்று ஆற்றல் மின்னுற்பத்தி திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டாலும், அவையும் கூட பன்னாட்டு கம்பெனிகளும், இந்திய முதலாளிகளும் மானியம் என்ற பெயரில் மக்கள் வரிப்பணத்தை கொள்ளையடிப்பதாகவே இருக்கின்றன. தமிழ்நாட்டில் இயங்கும் காற்றாலைகளில் பெரும்பகுதி தனியார் முதலாளிகளின் கட்டுப்பாட்டில் இருப்பதால், அவற்றில் உற்பத்தியாகும் மின்சாரத்தை சந்தை விலைக்கு மின்சார வாரியத்துக்கு விற்று லாபம் சம்பாதிக்கின்றனர். அந்த கூடுதல் சுமை மக்களின் தலையில் உயர்த்தப்பட்ட மின் கட்டணமாக விடிகிறது. மக்கள் நலனுக்காக நாட்டின் வளங்களை பயன்படுத்தவும், அணு உலைகளை இழுத்து மூடுவதற்கும், மாற்று எரிசக்தி மின்னுற்பத்தி திட்டங்களை கொண்டு வருவதற்கும் அவற்றில் தனியார் முதலாளிகளின் பகற்கொள்ளையை தடுப்பதற்கும் தனியார்மய தாராளமய கொள்கைகள் பிரதிநிதித்துவப்படுத்தும் முதலாளித்துவத்தை எதிர்த்து போராடுவதைத் தவிர வேறு வழியில்லை. - மார்ட்டின் 2 ஸ்னோடன் : சந்தி சிரித்தது அமெரிக்காவின் யோக்கியதை! குமார் http://www.vinavu.com/2013/07/24/snowen-exposes-us-hypocracy/   அமெரிக்க அரசின் ஒட்டுக்கேட்பு மற்றும் இணையதளக் கண்காணிப்பு சதித் திட்டத்தை எட்வர்டு ஜோசப் ஸ்னோடென் என்னும் இளைஞர் தனது உயிரைப் பற்றிக்கூட கவலைப்படாமல் துணிவுடன் அம்பலப்படுத்தியுள்ளார். இது ஏதோ அமெரிக்க மக்களின் மீதான கண்காணிப்பு மட்டுமல்ல, உலகெங்குமுள்ள மக்களையும் கண்காணிக்கும் அமெரிக்காவின் உலக மேலாதிக்கப் பாசிச சதித் திட்டம். [ஸ்னோடன்] தற்கொலைப்படைத் தாக்குதலைப் போல, தனது வசதியான வாழ்க்கையைத் துறந்து விட்டு பயங்கரவாத அமெரிக்காவுக்கு எதிராகத் துணிவுடன் போராடும் ஸ்னோடன். அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பு ஆணையத்தின் (என்.எஸ்.ஏ.) இத்திட்டத்தின் மூலம் கடந்த மார்ச் 2013-ல் மட்டும் உலகெங்கிலும் ஏறத்தாழ 97 பில்லியன் (9700 கோடி) உளவுத் தகவல்களை அமெரிக்கா திரட்டியுள்ளது. அமெரிக்காவினுள் 3 பில்லியன் (300 கோடி) தகவல்கள் திரட்டப்பட்டிருப்பது மட்டுமின்றி, இரான், பாகிஸ்தான், ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் எனப் பல நாடுகளிலிருந்தும் தகவல்கள் திரட்டப்பட்டுள்ளன. இதில் இந்தியாவிலிருந்து மட்டும் 6.3 பில்லியன் (630 கோடி) உளவுத் தகவல்கள் திரட்டப்பட்டுள்ளன. அமெரிக்கக் கண்காணிப்பு வலையத்தில் இந்தியா ஐந்தாவது இடத்தில் இருக்கிறது. ஏறத்தாழ 12 கோடி ரூபாய் அளவுக்கு சம்பளத்துடன், ஹவாய் தீவில் சொந்தமாகப் பண்ணை வீட்டுடன் வாழ்க்கையை நடத்தி வந்தவர்தான் கணினித் துறையில் வித்தகரான ஸ்னோடென் என்ற 29 வயதான இளைஞர். சிறிது காலம் அமெரிக்க கொலைகார உளவு நிறுவனமான சி.ஐ.ஏ.வில் இயங்கிவந்த அவர், பின்னர் சி.ஐ.ஏ.வுக்கான தனியார் ஒப்பந்த நிறுவனத்தில் பணியாற்றினார். அமெரிக்க தேசியப் பாதுகாப்பு ஆணையத்தின் உளவு நடவடிக்கைகள் விரிவானதாகவும், அனைத்துலகையும் தழுவியதாகவும் இருப்பதைப் புரிந்து கொண்ட அவர், அமெரிக்க உளவுத்துறை உலகெங்கிலும் உள்ள மக்களை வேவுபார்ப்பது தொடர்பான ஆதாரங்களை ஊடகங்கள் மூலம் அம்பலப்படுத்தியுள்ளார். “எனக்குப் பணத்தாசை இருந்தால், இந்த ஆவணங்களைப் பல நாடுகளுக்கு விற்றுக் கோடிகோடியாக நான் சம்பாதித்திருக்க முடியும். ஆனால், இவற்றை மக்கள் முன் அம்பலப்படுத்துவதே எனது நோக்கம்” என்கிறார் ஸ்னோடென். கடந்த ஐந்தாண்டுகளில் அரசமைப்பின் ஊழல்களையும் மோசடிகளையும் அம்பலப்படுத்தியவர்களை ஒபாமா அரசு அடக்கியொடுக்கியதை ஏற்கெனவே பார்த்துள்ள ஸ்னோடன், தான் தெரிந்தே இந்த முடிவை எடுத்துள்ளதாகவும், இதனால் தனக்கும் தனது குடும்பத்துக்கும் ஏற்படப்போகும் தொல்லைகளை அறிந்துள்ளதாகவும் கூறுகிறார். [அசாஞ்சே, பிராட்லி மேனிங்] விக்கிலீக்ஸ் மூலம் அமெரிக்காவின் கோர முகத்தை அம்பலப்படுத்திய ஜூலியன் அசாஞ்சே. விக்கிலீக்சுக்கு தகவல்களைக் கொடுத்த்தாகக் குற்றம் சாட்டி சிறையில் வதைக்கப்படும் இராணுவ வீரர் பிராட்லி மேனிங். உலக மக்களுக்கு எதிரான அமெரிக்க அரசின் கிரிமினல் உளவு நடவடிக்கைகளை அம்பலப்படுத்திய குற்றத்துக்காக ஸ்னோடெனைத் தீவிரவாதியாகச் சித்தரிக்கிறது அமெரிக்கா. அரசு சொத்துக்களைத் திருடியது, தேசியப் பாதுகாப்புத் தகவல்களையும் இரகசிய உளவுத் தகவல்களையும் வெளியிட்டது முதலான குற்றச்சாட்டுகளின் கீழ் அவர் மீது அமெரிக்காவில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தீவிரவாதத்தை முறியடிப்பது என்ற பெயரில் இந்தக் கண்காணிப்பையும் ஒட்டுக்கேட்டல்-உளவு பார்ப்பதையும் அமெரிக்க வல்லரசு நியாயப்படுத்துகிறது. அமெரிக்கா மட்டுமின்றி, அனைத்து ஏகாதிபத்திய நாடுகளும் மேலும் பாசிசமயமாகி வருவதன் வெளிப்பாடு இத்தகைய கண்காணிப்புகள். “கார்டியன்” நாளேட்டின் செய்தியின்படி, அமெரிக்க என்.எஸ்.ஏ.வுக்குப் போட்டியாக பிரிட்டிஷ் உளவுத்துறையானது, உலக மக்களையும் சொந்த நாட்டு மக்களையும் உளவு பார்த்துள்ள விவகாரம் அம்பலமாகியிருக்கிறது. ஆசிய-பசிபிக் பிராந்தியத்தின் முக்கியமான இணைய இணைப்புத் தடங்களை நிர்வகித்து வரும் ஹாங்காங்கிலுள்ள பேக்நெட் நிறுவனத்தின் கண்ணாடி இழை இணைய வலைப்பின்னலை அமெரிக்க அரசு சட்டவிரோதமாக ஊடுருவிப் பார்த்திருக்கிறது; சீனாவின் பிரபல சிங்ஹூவா பல்கலைக்கழகத்தின் முக்கியமான கணினிகளை ஊடுருவி, அவற்றிலுள்ள தகவல்களை அமெரிக்க உளவுத்துறை வேவு பார்த்துள்ளது; கைபேசிகள் வழியாக சீன மக்கள் தங்களுக்குள் பரிமாறிக் கொள்ளும் குறுஞ்செய்திகளைக் கூட அமெரிக்க உளவுத்துறை திரட்டியிருக்கிறது – என்று ஸ்னோடென் ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தியுள்ளார். ஏற்கெனவே தனது நாட்டின் இணையங்களில் ஊடுருவதாகப் பரஸ்பரம் குற்றம் சாட்டிக் கொண்டிருக்கும் அமெரிக்காவுக்கும் சீனாவுக்குமிடையிலான மோதல் இதனால் மூர்க்கமடைந்துள்ளது. ஏகாதிபத்தியங்களுக்கிடையிலான கழுத்தறுப்புப் போட்டியும், மேலாதிக்கத்தை நிலைநாட்ட எதிர்ப்பு சக்திகளை முடமாக்குவதற்கும், மக்களின் அதிருப்திக்கு வடிகால் வெட்டுவதற்கும் உழைக்கும் மக்கள் மீதான இத்தகைய கண்காணிப்புகளும் உளவுபார்த்தலும் ஏகாதிபத்தியவாதிகளுக்கு அவசியமாகின்றன. அறிவியல்-தொழில்நுட்பப் புரட்சி இதனை எளிதாக்குவதால், இணையத்தின் வழியிலான கண்காணிப்பு தீவிரமடைந்து வருகிறது. [ஹாங்காங் ஆர்ப்பாட்டம்] ஸ்னோடனை ஆதரித்து ஹாங்காங்கிலுள்ள அமெரிக்கத் தூதரகம் அருகே நடந்த ஆர்ப்பாட்டம். இந்தியாவிலோ, பயங்கரவாதத் தடுப்பு – கிரிமினல் குற்றத் தடுப்பு என்ற பொய் முகாந்திரங்களை வைத்து மக்கள் மீதான கண்காணிப்பை மத்திய-மாநில அரசுகள் அதிகரித்துவருகின்றன. மத்திய உளவுத் தரவுகளை ஒருங்கிணைக்கும் “நாட்-கிரிட்” என்ற தேசிய உளவு வலைப்பின்னல், “ஆதார்” அடையாள அட்டை, வீதிகளில் நிறுவப்படும் சி.சி.டி.வி. காமெராக்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் வடமாநிலத் தொழிலாளர்களின் தரவுகள் திரட்டப்படுதல் முதலானவை பாசிசம் வெகுவேகமாக நிறுவன மயமாகி வருவதை உணர்த்துகின்றன. இணையக் குற்றத் தடுப்புக்கான 66-ஏ பிரிவின் சட்டப்படி, சுதந்திரமாக இணையத்தில் கருத்து தெரிவித்தவர்கள் கைது செய்யப்படுகின்றனர். பாசிச ஜெயா அரசொ, இணையக் குற்றங்களில் ஈடுபட்டதாக ஒருவரைக் கைது செய்து சிறையிலடைக்கும் வகையில் குண்டர் சட்டத்தை விரிவுபடுத்தியுள்ளது. இவையனைத்தும் இணையத்தின் மூலம் சுதந்திரமாகக் கருத்துக்களை வெளியிட முடியும், அதன் மூலம் புரட்சியையே சாதிக்க முடியும் என்று கருதிக் கொண்டிருக்கும் நடுத்தர வர்க்க அறிவுத்துறையினரது மாயைகளைக் கீழறுத்துப் போடுகிறது. இதற்கு முன் விக்கிலீக்ஸ் மூலம் அமெரிக்காவின் கோர முகத்தை அம்பலப்படுத்திய குற்றத்துக்காக ஜூலியன் அசாஞ்சேவைப் பயங்கரவாதியாகச் சித்தரித்து அவரைப் பிடிக்க பேயாய் அலைந்தது அமெரிக்கா. விக்கி லீக்சுக்கு தகவல்களைக் கொடுத்ததாகக் குற்றம் சாட்டி பிராட்லி மேனிங் என்ற இளம் இராணுவ வீரரைச் சிறையிலடைத்து வதைத்து வருகிறது. இப்போது ஸ்னோடெனைப் பிடிக்க வெறியோடு அலைகிறது. கடந்த மே முதல்நாளில் ஹவாயிலிருந்து ஹாங்காங்கிற்குத் தப்பிச் சென்ற ஸ்னோடென், ஜூன் 25 அன்று ஹாங்காங்கிலிருந்து ரஷ்யாவுக்குத் தப்பிச் சென்றுள்ளார். அங்கிருந்து கியூபாவுக்குச் சென்று, பின்னர் ஈகுவடார் நாட்டில் அவர் தஞ்சமடைய முயற்சிப்பதாகச் செய்திகள் வருகின்றன. மிகக் கொடிய கிரிமினல் குற்றவாளியான அவரை நாடு கடத்தித் தன்னிடம் ஒப்படைக்க வேண்டுமென்று கூச்சலிடுகிறது அமெரிக்கா. ஆனால், கிரிமினல்களை நாடு கடத்தும் ஒப்பந்தம் ஏதும் அமெரிக்காவுடன் எமது நாடு முறைப்படி போட்டுக்கொள்ளவில்லை என்று கூறி, அமெரிக்காவின் முகத்தில் கரிபூசியுள்ளது, ரஷ்யா. ஜெனிவா ஒப்பந்தப்படி, தன்னிடம் அரசியல் தஞ்சம் கோருபவர்களுக்கு அடைக்கலமளிக்க எல்லா நாடுகளுக்கும் உரிமை உண்டு. அமெரிக்காகூடத் தனது உலக மேலாதிக்க நோக்கங்களுக்கு ஏற்ப பல நாடுகளின் சர்வாதிகாரிகளுக்குத் தஞ்சம் அளித்து, அவர்களை ஜனநாயகக் காவலர்களாகச் சித்தரித்துள்ளது. இத்தகைய மனிதகுல விரோதிகளுக்குத் தஞ்சம் அளிக்க அமெரிக்காவுக்கு உரிமை உண்டென்றால், அமெரிக்காவின் உலக மேலாதிக்கப் பயங்கரவாதச் சதிகளை அம்பலப்படுத்திப் போராடி வரும் ஸ்னோடெனுக்குத் தஞ்சமளிக்க எல்லா நாடுகளுக்கும் உரிமை உண்டு. ஏகாதிபத்திய உலகின் கோரமுகத்தை உலகிற்கு அம்பலப்படுத்திக் காட்டியுள்ள ஸ்னோடென் ஒரு முன்னுதாரணமிக்க நாயகனாக உயர்ந்து நிற்கிறார். தற்கொலைப் படைத் தாக்குதலைப் போல, தனது வசதியான வாழ்க்கையைத் துறந்துவிட்டுப் பயங்கரவாத அமெரிக்காவுக்கு எதிராக அவர் துணிவுடன் போராடுகிறார். ஜனநாயகம், மனித உரிமை, தனிநபர் சுதந்திரம் என்றெல்லாம் பசப்பிவரும் முதலாளித்துவ ஜனநாயகத்தின் மகிமையையும், அமெரிக்க பயங்கரவாத அரசின் கோரமுகத்தையும் புரிந்து கொண்டு உலகெங்கிலுமுள்ள உழைக்கும் மக்கள் போராட இன்னுமொரு வாய்ப்பை வழங்கியிருக்கின்றன, ஸ்னோடெனின் துணிச்சலான நடவடிக்கைகள். - குமார். 3 சூரிய மின்சக்தியிலும் சுயசார்பை அழிக்கும் அமெரிக்கா! தனபால் http://www.vinavu.com/2013/06/26/solar-power-us-prevents-self-reliance/   புவி வெப்பமடைதலைத் தடுப்பதற்கு, மரபு சாராத, புதுப்பிக்கக்கூடிய ஆற்றல் வளங்களின் மூலம், தூய்மையான மின்சாரம் தயாரிக்கப்பட வேண்டும் என்று சுற்றுச் சூழலை மாசுபடுத்துவதில் முன்னணியில் உள்ள ஏகாதிபத்தியங்கள் பிரச்சாரம் செய்து வருகின்றன. தூய்மையான மின்சாரம் என்ற பெயரில்தான் அமெரிக்கா தனது காலாவதியான அணு உலைகளை நம் தலையில் கட்ட முயற்சிக்கிறது. அணு மின்சக்தியில் மட்டுமின்றி, சூரிய ஒளி மின்திட்டங்களிலும் சுயசார்பு நிலையை எட்டவிடாமல், காலாவதியான தங்களது தொழில் நுட்பத்தைத்தான் இந்தியா வாங்க வேண்டும் என அமெரிக்க அரசு நிர்ப்பந்தித்து வருகிறது. உள்நாட்டு சூரிய மின் கருவித் தயாரிப்பாளர்களுக்கு இந்திய அரசு முன்னுரிமை அளிப்பதாகவும், இது காட் ஒப்பந்தத்துக்கு எதிரானது என்றும் கூறி, இந்தியாவுக்கு எதிராக உலக வர்த்தகக் கழகத்தில் அமெரிக்க அரசு வழக்கும் தொடுத்திருக்கிறது. [சநாந்த் மின்சக்தி நிலையம்] குஜராத்தில் சர்தார் சரோவர் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள சநாந்த் கால்வாயின் மேல்பகுதியில் அமெரிக்க நிதியுதவியோடு அமைக்கப்பட்டுள்ள சூரிய மின்சக்தி நிலையம். 2022-ஆம் ஆண்டிற்குள் 22 ஆயிரம் மெகாவாட் சூரிய சக்தி மின்சாரம் தயாரிக்க வேண்டும் என்பது மத்திய அரசு நிர்ணயித்திருக்கும் இலக்கு. கடந்த 6 மாதங்களில், ஐந்து மாநிலங்களில் மட்டும் 6 ஆயிரம் மெகாவாட் அளவிற்குப் புதிய சூரிய ஒளி மின்திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் தமிழக அரசு மட்டும் மூன்றே ஆண்டுகளில் 3 ஆயிரம் மெகாவாட் உற்பத்தி செயப் போவதாக அறிவித்துள்ளது. இந்தியா முழுவதும் அறிவிக்கப்படுகின்ற இந்த சூரிய மின்சக்தித் திட்டங்கள் சுயசார்பானவையா என்றால், இல்லை. ஜவஹர்லால் நேரு தேசிய சூரியசக்தி மின்சாரத் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் நிறுவப்பட்டிருக்கும் சூரிய மின்சக்தி நிலையங்களில் 60 சதவீத நிலையங்கள் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கருவிகளை நம்பியே இருக்கின்றன. எடுத்துக்காட்டாக, சூரிய மின்சக்தி உற்பத்தியில் முன்னணியில் இருக்கும் மாநிலம் என்று கூறப்படும் குஜராத் முழுவதும் அமெரிக்க இறக்குமதியை நம்பியே இருக்கிறது. குறிப்பாக ஆசியாவிலேயே மிகப் பெரியதென்று கூறப்படும் 600 மெகாவாட் சூரிய ஒளிப் பூங்காவை சன் எடிசன் என்ற அமெரிக்க நிறுவனம்தான் குஜராத்தில் நிறுவி இயக்குகிறது. சூரிய ஒளியிலிருந்து மின்சாரம் தயாரிக்கப் பயன்படும் போட்டோ வோல்டாயிக் சோலார் செல்களில் இரண்டு வகை; உண்டு. ஒன்று, கிரிஸ்டலைன் செல்கள்; இரண்டாவது வகை, தின்-பிலிம் செல்கள். கிரிஸ்டலைன் செல்கள் எனப்படுவதே நவீன தொழில் நுட்பம். இதில் உலகிலேயே சீனா முன்னிலை வகிக்கிறது. தின்-பிலிம் என்பது உற்பத்தி திறன் குறைந்த தொழில்நுட்பம்; அதன் ஆயுளும் குறைவு. அமெரிக்க கம்பெனிகள் இதையே உற்பத்தி செய்கின்றன. சூரிய மின்சக்தி திட்டத்தின் முதல் கட்டத்தை 2011-இல் அறிவித்த மத்திய அரசு, கிரிஸ்டலைன் செல்களை உள்நாட்டு உற்பத்தியாளர்களிடமிருந்து மட்டுமே வாங்க வேண்டும் எனக் கட்டுப்பாடு விதித்திருந்தது. இந்தக் கட்டுப்பாடு சீன இறக்குமதிகளைக் கட்டுப்படுத்துவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டது. தின்-பிலிம் செல்கள் என்ற அமெரிக்க தொழில்நுட்பத்தின் இறக்குமதிக்குக் கட்டுப்பாடு விதிக்கப்படவில்லை. அமெரிக்க இறக்குமதிக்கு வழிசெய்யும் வகையில் அது பற்றி வேண்டுமென்றே குறிப்பிடாமல் விடப்பட்டிருந்தது. இத்தகைய சாதகமான நிலைமையிலும்கூட, சீனத் தயாரிப்புகளையும், இந்திய சூரிய ஒளி மின்கருவிகளையும் நேருக்கு நேர் போட்டியில் சந்திக்கும் ஆற்றல் அமெரிக்க முதலாளிகளுக்கு இல்லை. இதற்காக அமெரிக்காவின் எக்ஸ்போர்ட்-இம்போர்ட் வங்கி மற்றும் ஓவர்சீஸ் பிரைவேட் இன்வெஸ்ட்மென்ட் வங்கி ஆகிய இரண்டு வங்கிகளையும் அமெரிக்க அரசு களமிறக்கியது. அமெரிக்கத் தயாரிப்புகளை வாங்குபவர்களுக்கு 3% ஆண்டு வட்டியில் முழுத்தொகையும் கடனாகத் தரப்படுவதுடன், கடனைத் திருப்பிச் செலுத்தும் தவணைக்காலமும் 18 ஆண்டுகள் என்று கூறி மின் கருவிகள் வாங்குவோர் அனைவரையும் அமெரிக்க நிறுவனங்கள் கவர்ந்திழுத்தன. அதே நேரத்தில் இந்திய நிறுவனங்களால் தயாரிக்கப்பட்ட சோலார் செல்களை வாங்குவற்கான கடனுக்கு இந்திய வங்கிகள் விதிக்கும் வட்டியோ 14% ஆக இருந்தது. தவணைக்காலமும் குறைவு. மேற்படி அமெரிக்க வங்கிகளால் மட்டும் எப்படி இத்தனை குறைந்த வட்டிக்குக் கடன் தர இயலுகிறது என்று துருவி ஆராய்ந்த அறிவியல் தொழில்நுட்ப நிறுவனம் என்ற தில்லியைச் சேர்ந்த தன்னார்வ நிறுவனம், அமெரிக்காவின் கீழ்த்தரமான மோசடியை வெளிக்கொணர்ந்துள்ளது. [13-solar-3]இவ்விரு வங்கிகளும் தங்களுடைய சொந்தப் பணத்தைக் கடனாகக் கொடுக்கவில்லை, மாறாக, ஐ.நா.வின் ‘பாஸ்ட்-பார்வர்டு’ நிதியை இதற்காக இந்த வங்கிகள் பயன்படுத்தியிருப்பது தெரியவந்துள்ளது. கடந்த 2009-ஆம் ஆண்டு கோபன்ஹேகனில் நடந்த ஐ.நா.வின் உலக தட்பவெட்ப மாற்றங்கள் குறித்த உச்சி மாநாடு, 2011-12 ஆண்டுகளில் ஏழை நாடுகளில் மாற்று எரிசக்தித் துறையின் வளர்ச்சிக்காகச் செலவிட 3 ஆயிரம் கோடி அமெரிக்க டாலர்களை ஒதுக்கியது. இந்த நிதியையே தங்களது வங்கியின் கடன்கள் என்ற பெயரில் வழங்கியது மட்டுமன்றி, கடன் வேண்டுமென்றால், குறிப்பிட்ட சில அமெரிக்க நிறுவனங்களின் சோலார் செல்களை வாங்க வேண்டும் என்று நிர்ப்பந்தப்படுத்தி, காலாவதியான அமெரிக்கத் தொழில்நுட்பத்தை இந்திய வாடிக்கையாளர்களின் தலையில் கட்டியதுடன், ஏழை நாடுகளின் மாற்று எரிசக்தி வளர்ச்சிக்காக என்ற பெயரில் ஒதுக்கப்பட்ட நிதியை அமெரிக்க கம்பெனிகள் திருடித் தின்றிருக்கின்றன. தற்போது இந்த உண்மைகள் எல்லாம் வெளியே வந்து சந்தி சிரித்து விட்டன. சூரிய சக்தி மின்கருவிகளைத் தயாரிக்கும் பெல் நிறுவனம், டாடா உள்ளிட்ட தரகு முதலாளித்துவ நிறுவனங்கள் மற்றும் சிறு உற்பத்தியாளர்களால் அமெரிக்காவின் போட்டியைச் சமாளிக்க முடியவில்லை. பலர் முற்றிலுமாகவே தமது தொழிலை இழுத்து மூடும் நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டதால் கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கத் தொடங்கினர். இதன் காரணமாகத் தேசிய சூரிய மின்சக்தித் திட்டத்தின் இரண்டாவது கட்ட அறிவிப்பை 2012-இல் வெளியிட்ட போது, தின்-பிலிம் செல் தொழில்நுட்பத்துக்கும் சேர்த்துக் கட்டுப்பாட்டை அறிவித்தது இந்திய அரசு. இந்தியாவைப் போன்றே கனடா, பிரான்ஸ், மலேசியா, துருக்கி போன்ற நாடுகள் சோலார் செல் இறக்குமதிக்குப் பல்வேறு தடைகளைப் போட்டுள்ளன. அவ்வளவு ஏன், சீனா தனது நாட்டு சோலார் உற்பத்தியாளர்களுக்கு அதிகமாக மானியம் வழங்குகிறது என்று கூறி சீன இறக்குமதிகள் மீது கடுமையாக வரி விதித்திருக்கிறது, அமெரிக்கா. இருப்பினும், இந்திய அரசு தனது உள்நாட்டு உற்பத்தியாளர்களைப் பாதுகாக்கும் பொருட்டு ஒரு தலைப்பட்சமான முடிவை எடுத்திருப்பதாகவும், இச்செயல் காட் ஒப்பந்த விதிகளை மீறுகிறது என்றும் கூறி உலக வர்த்தகக் கழகத்தில் இந்தியாவிற்கு எதிரானதொரு வழக்கை தொடுத்திருக்கிறது, அமெரிக்கா. சூரிய மின்சக்தி என்பது எதிர்காலத்தின் மிக முக்கியமான ஆற்றல் மூலம். இத்தொழில் நுட்பத்தில் மேலாண்மை செலுத்த வேண்டும் என்ற நோக்கில் அமெரிக்க, ஐரோப்பிய அரசுகள் இது தொடர்பான ஆராய்ச்சிக்குப் பல்லாயிரம் கோடிகளை ஏற்கெனவே செலவிட்டிருக்கின்றன. இருப்பினும், இத்துறையில் சமீபத்தில் நுழைந்த சீனா, கிரிஸ்டலைன் செல்களின் உலகச் சந்தையில் மேலாண்மை பெற்று விட்டது. சீனாவுடன் இந்தத் துறையில் போட்டியிட்டு வெல்ல முடியாத அமெரிக்கா, ஏகாதிபத்தியத்துக்கே உரிய முறையில் கையை முறுக்கிக் காரியம் சாதிக்க முனைந்திருக்கிறது. அதுதான் உலக வர்த்தகக் கழகத்தில் அமெரிக்கா தொடுத்திருக்கும் வழக்கு. இந்திய அரசு இதற்கு எதிராக ஒருபுறம் வாய்ச்சவடால் அடித்துக் கொண்டிருக்கிறது. அதேநேரத்தில் தமிழகம் உள்ளிட்ட மாநில அரசுகள் அறிவிக்கும் சூரிய மின் உற்பத்தி திட்டங்கள் மத்திய அரசின் கொள்கை அறிவிப்பின் படி, பெல் போன்ற உள்நாட்டு நிறுவனங்களுக்குத் தரப்படுவதில்லை. அவற்றை வழக்கம் போல அமெரிக்க நிறுவனங்கள்தான் கைப்பற்றி வருகின்றன. தாமிரவருணித் தண்ணீரை புட்டியில் பிடித்துத் தருவதற்கே “கோக்” கின் தொழில்நுட்பம் தேவைப்படும்போது, சூரிய வெப்பத்தை மின்சாரமாக்கித் தருவதற்கு அமெரிக்க தொழில்நுட்பம் தேவைப்படுவதில் வியப்பென்ன இருக்கிறது? - தனபால் 4 சென்னையின் பெருமை ஐசிஎஃப்பை விழுங்கும் தனியார்மயம்! ஜென்னி http://www.vinavu.com/2013/06/13/icf-privitization-move/   ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து, இந்தியாவின் முதுகெலும்பாக விளங்கும் ரயில் போக்குவரத்து துறைக்கு, ரயில் பெட்டிகளை தயாரிக்கும் பணியையும் தனியாருக்கு தாரைவார்க்கும் வேலைகள் வேகமடையத் துவங்கி விட்டன. [ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலை, பெரம்பூர்] ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலை (ஐசிஎப்), பெரம்பூர் கடந்த பிப்ரவரி 13 அன்று, ஐ.சி.எப் (சென்னை) மற்றும் ஆர்.எப்.சி (கபூர்தலா) தொழிற்சாலைகளின் பொது மேலாளர்களுக்கு, ரயில்வே வாரியம் அனுப்பிய கடிதத்தில், தனியார் நிறுவனங்களின் மூலம் தயாரிக்கவிருக்கும் பல்வேறு வகையான ரயில் பெட்டிகளின் வடிவமைப்பு மற்றும் வரைபடங்களை அந்நிறுவனங்களுடன் பகிர்ந்துக் கொள்வதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. ஐ.சி.எப்-க்கு சொந்தமான தொழில்நுட்ப களஞ்சியங்களான ரயில் பெட்டிகளின் வடிவமைப்பு மற்றும் வரைபடங்கள் மீதான தன்னுரிமைகள், ஐந்து ஒப்பந்த நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக குறிப்படப்பட்டுள்ளது. இந்நிறுவனங்கள் 610 கோடி ரூபாய் செலவில் 400 ரயில் பெட்டிகளை தயாரிக்கப் போவதாக ஒப்பந்தத்தில் திட்டமிடப்பட்டுள்ளது. கொல்கத்தாவில் இயங்கும் மூன்று தனியார் நிறுவனங்களான தீத்தகர் வேகன்ஸ் – 99 குளிரூட்டப்பட்ட மின்சார வண்டிகள், பெஸ்கோ – 8 மின்சார வண்டிகள், ஜெசப் – 59 குளிரூட்டப்பட்ட மின்சார வண்டிகள் தயாரிக்க உள்ளன. பெங்களூரில் உள்ள பொதுத்துறை நிறுவனமான பாரத் எர்த் மூவர்ஸ் – 72 குளிரூட்டபட்ட மின்சார வண்டிகளையும் 160 மின்சார வண்டிகளையும் தயாரிக்கப் போவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 10 வருடங்களுக்கு முன், ஜெர்மன் உற்பத்தியாளர்களிடமிருந்து ஐ.சி.எப் மற்றும் ஆர்.சி.எப் நிறுவனங்கள், 160 கோடி ரூபாய் செலவழித்து எல்எச்பி டிசைன் எனப்படும் ரயில் பெட்டிகளின் வடிவமைப்பு மற்றும் வரைபடங்களை வாங்கியுள்ளன. இப்போது இவற்றின் மதிப்பு 1500 கோடி ரூபாயாகும். தனியார் நிறுவனங்களுடனான ரயில்வே வாரியத்தின் உடன்படிக்கையின்படி வரைபடங்களை அச்சிடுவதற்கான செலவு, முத்திரை வரி மற்றும் பதிவு கட்டணம் என்பதைத் தாண்டி வேறு எந்தவிதமான கூடுதல் வருமானமும் இல்லாமல், தனியார் முதலாளிகளுக்கு இந்த ஆவணங்களை இலவசமாக வாரி வழங்கவுள்ளது. இதை எதிர்க்கும் ஐசிஎப் ஊழியர்களின் கூட்டு நடவடிக்கை குழுவைச் சேர்ந்த ஆனந்தராஜ், “1500 கோடி ரூபாய் மதிப்புடைய ஐ.சி.எப்’ன் அறிவுசார் உடமைகளின் உரிமைகளை இலவசமாக தனியார் நிறுவனங்களுக்கு வாரிவழங்குவது, ஐ.சி.எப் நிறுவனம் மட்டுமல்ல தேச நலனுக்கே எதிரானது” என்று தெரிவித்திருக்கிறார். [ரயில் பெட்டி தொழிற்சாலை, கபூர்தலா] ரயில் பெட்டி தொழிற்சாலை (ஆர்சிஎப்), கபூர்தலா கூட்டு நடவடிக்கை குழுவின் பிரதிநிதிகள், ரயில்வே வாரியத்தின் திட்டத்தின் பின்புலத்தில் சந்தேகத்திற்குரிய நோக்கங்கள் இருக்கின்றன என்றும் ஒப்பந்த நிறுவனத்திற்கு ஸ்டீல் மூலப்பொருட்கள், சக்கர தொகுப்புகள், மின்கலன்கள் மற்றும் மின் இழுக்கை(Traction) சாதனங்களை, ரயில்வே துறை வழங்கவதாக ஒப்பந்த அறிக்கையில் இருக்கும் பட்சத்தில், அரசாங்கத்திற்கு இதனால் பெரும் நஷ்டமே என்றும் கூறுகின்றனர். வெளி நிறுவனங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் வேலையை கொடுத்து வாங்குவதற்கு முக்கியமான காரணம் செலவுகளை குறைப்பதுதான். ஆனால் ரயில்வே துறை அமலாக்கவிருக்கும் இத்திட்டத்தின்படி, ஐ.சி.எப்-ன் மூலம் ஆகக்கூடிய உற்பத்தி செலவுகளை விட, 120 – 160 கோடி ரூபாய்க்கும் மேல் அதிகமாக செலவழியும் என்று தெரிவிக்கிறார் ஐ.சி.எப்-ன் மேற்பார்வையாளர். கூடுதலாக செலவழியவிருக்கும் இப்பணத்தின் ஒரு பகுதியை கொண்டே, சென்னை, கபூர்தலா மற்றும் ரேபரேலியில் இருக்கும் ரயில் பெட்டிகள் தயாரிக்கும் தொழிற்சாலைகளின் உற்பத்தியின் அளவை பல மடங்கு உயர்த்தமுடியும் என்றும் அவர் கூறுகிறார். ரயில் பெட்டிகளின் உற்பத்தியில் பற்றாக்குறை காரணமாக ரயில்வே வாரியம் இம்முடிவினை எடுக்கவில்லை, ஐ.சி.எப் மற்றும் ஆர்.சி.எப் ஆகிய இரண்டு தொழிற்சாலைகள் இணைத்து செயல்பட்டால், குறைந்த செலவில் கூடுதலாக 400-க்கும் அதிகமான ரயில் பெட்டிகளை தயாரிக்கும் அளவிற்கு திறம்படைத்தவை. சென்னை பெரம்பூரில் உள்ள ஐ.சி.எப் ரயில் பெட்டி தொழிற்சாலை, இந்திய ரயில்வேக்கு ரயில் பெட்டிகள் தயாரிக்கும் முதன்மையான உற்பத்தி பிரிவாகும். இத்தொழிற்சாலை 1955-ல் அமைக்கப்பட்டது. இந்நிறுவனத்தில் சுமார் 13,000 தொழிலாளிகள் பணிப்புரிகின்றனர். உள்கட்டமைப்பு மாற்றங்கள் மற்றும் இயந்திரங்கள் நவீனமயமாக்கல் மூலம் வருடத்திற்கு 1,700 க்கும் அதிகமான, பல விதமான தேவைகளுக்கான ரயில் பெட்டிகள் இங்கு தயாரிக்கப்படுகின்றன. மேலும் தாய்லாந்து, பர்மா, தாய்வான், சாம்பியா, பிலிப்பைனஸ், டான்சானியா, உகாண்டா, வியட்நாம், நைஜீரியா, மொசாம்பிக், வங்கதேசம், அங்கோலா, இலங்கை போன்ற வெளிநாடுகளுக்கும் ரயில் பெட்டிகள் இங்கு தயாரித்து ஏற்றுமதி செய்யப்படுகின்றன. [தனியார் உற்பத்திச் செலவு] பொதுத் துறை நிறுவனங்களை விட தனியார் உற்பத்திக்கு அதிக செலவு (படம் : நன்றி தி ஹிந்து) தனது 50 ஆண்டுக்கால அனுபவத்தில் 45,000 ரயில் பெட்டிகளுக்கு மேல் உருவாக்கியிருக்கும் ஐ.சி.எப். நிறுவனம், இதுவரை தனது வருடாந்திர இலக்கினை தவற விட்டதில்லை ஐ.சி.எப் தொழிற்சாலையைப்போல, இந்திய ரயில்வேயினால் நிறுவப்பட்ட இரண்டாவது ரயில் பெட்டி தொழிற்சாலை ஆர்.சி.எப் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள கபூர்தலாவில் இயக்கப்படுகிறது. 1986-இல் துவங்கப்பட்ட இத்தொழிற்சாலை, 16,000 பயணிகள் பெட்டிகள், 51 க்கும் அதிகமான தானியங்கி உந்திச் செல்லும் பயணிகளின் ரயில்களை தயாரித்துள்ளது. இந்திய ரயில்வே வாரியத்தின் 35% ரயில் பெட்டிகள் இங்குதான் தயாரிக்கப்படுகின்றன. 2500 கோடி ரூபாய் முதலீட்டில் புதிய ரயில் பெட்டிகள் தயாரிக்கும் தொழிற்சாலை உத்திரபிரதேசத்தின் ரேபரேலியில், 2012 ஆம் ஆண்டு சோனியா காந்தியால் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. வருடத்திற்கு 2500 ரயில் பெட்டிகள் தயாரிக்கும் அளவிற்கு இத்தொழிற்சாலையின் திறனை உயர்த்தப்போவதாக ரயில்வே திட்டமிட்டுள்ளது. பாலக்காட்டில், காஞ்சிகோடு ரயில்வே பெட்டி தொழிற்சாலை அமைக்கும் திட்டமும், ஐ.சி.எப்-யை விரிவாக்கம் செய்ய இரண்டாவது தொழிற்சாலையை அமைக்க 250 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ள திட்டமும் இன்னமும் பரிசீலனையில் உள்ளன. இப்படிப்பட்ட விரிவான உட்கட்டமைப்பு வசதிகளும், அனுபவமிக்க தொழிலாளர்களும் இருக்கும் போது ரயில் பெட்டி உற்பத்தியை தனியார்வசம் ஒப்படைக்க வேண்டிய அவசியம் துளியும் இல்லை. ஆனால் நாட்டு நலனை விட முதலாளிகளின் நலனே முக்கியமாகிப்போன உலகமய சூழலின் விகிதங்களோ தலைகீழாக மாறியிருக்கின்றன. 2011-ம் ஆண்டு, திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முகுல் ராய் ரயில்வே அமைச்சராக இருந்தபோதே இந்த தனியார்மயமாக்க திட்டத்தின் தயாரிப்புகள் துவங்கின. 2011-12 வரை சுற்றுக்கு விடப்பட்டிருந்த டெண்டர்கள், பிப்ரவரி 2013-ல் இறுதி செய்யப்பட்டன. [மம்தா பானர்ஜி] மம்தா பானர்ஜி மேற்கு வங்கத்தைச் சேர்ந்த, மேற்குவங்க அரசாங்கத்தினாலே தகுதியற்றவை என்று ஒதுக்கப்பட்ட மூன்று தனியார் நிறுவனங்கள்தான் ஒப்பந்த உற்பத்தியில் இணைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. புதிய தொழில்நுட்ப வசதிகளை ஏதுமில்லாமல் தான் இந்த மூன்று தனியார் தொழிற்சாலைகளும் இயங்கிவருகின்றன. இந்நிலையில் ஒப்பந்தத்தில் குறிப்பட்ட ரயில் பெட்டிகள் தயாரிப்பை எண்ணிக்கையிலும், நல்ல தரத்திலும் மூன்று மாத காலத்திற்குள் செய்துமுடிப்பது என்பது கேள்விக்குறியே. மேற்கு வங்க முதல்வர் ம்ம்தா பானர்ஜி (திரிணாமூல் காங்கிரஸ்) ரயில்வே துறையில் செய்து வந்த ஆதிக்கத்திற்கும், அத்துறையை தன் கண்காணிப்பிலேயே வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக அவர் நடத்திய நாடகங்களுக்கும், இம்மூன்று மேற்குவங்க நிறுவனங்கள் ரயில்பெட்டி தயாரிப்பில் திடீரென நுழைந்தற்குமான உறவு தற்செயலானதன்று. ஒவ்வொரு ஆண்டும், உற்பத்தியில் சாதனைகள் செய்துவரும் ஐ.சி.எப். நிறுவனம் 2012 – 2013 ஆண்டிலும் கூட, தன்னுடைய இலக்கையும் தாண்டி 1,620 ரயில் பெட்டிகள் தயாரித்து அடுத்த சாதனைக்கு தயாராக உள்ளது. ஏனைய பொதுத்துறை நிறுவனங்களை சொத்துக்களோடு மலிவாக தனியார்வசம் ஒப்படைத்து அழித்தது போல ரயில் பெட்டி தயாரிக்கும் துறையையும் அழிப்பதற்கான தயாரிப்புகள் ஆரம்பித்திருக்கின்றன. ரயில்வே துறையையே தனியார்வசம் ஒப்படைக்க இது ஒரு வெள்ளோட்டமே. ரயில்வே வாரியத்தின் இவ்வறிக்கையின் விளைவாக, ஐ.சி.எப் ஊழியர்கள் மத்தியில் கிளர்ந்தெழுந்த அதிருப்தி, கருவிகளை கையில் எடுக்காத வேலை நிறுத்தமாக மார்ச் 6 அன்று வெளிப்பட்டது. 12 பேரைக்கொண்ட கூட்டு நடவடிக்கை குழுவின் செயற்குழு தலைமையில், 12,000 ஊழியர்களின் பங்கேற்ற இப்போராட்டம் சில மணி நேரம் நடந்தது அதன்பிறகு ஐ.சி.எப். இன் அறிவுசார் உடமைகள் மற்றும் ஊழியர்களின் நலன்கள் கண்டிப்பாக பாதுகாக்கப்படும் என்று நிர்வாகம் அளித்த உத்தரவாதத்தின் பெயரில் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. எனினும், மீண்டும் ரயில்வே வாரியம் தனியாரை ஊக்குவிக்க ஆர்வம் காட்ட துவங்கிவிட்டது. அவர்களுடன் ஒப்பந்தம் போட்டபின் அதிலிருந்து பின் வாங்க முடியாது என்று கூறி வருகிறது. [ரயில்வே வாரிய தலைவர் நியமன ஊழல்] ரயில்வே வாரிய தலைவர் நியமன ஊழலில் – அமைச்சர் பவன் குமார் பன்சல், அவரது உறவினர். கடந்த மே மாதம் 4 ஆம் தேதி அன்று, இது தொடர்பான பேச்சுவார்த்தையை ரயில்வே போர்டின் உயர் அதிகாரிகள், தொழிலாளர்களின் பிரதிநிதிகளுடன் நடத்தினர். ஆலோசனைகளின் மூலம் பிரச்சினையை தீர்த்துக்கொள்ளலாம் என்று முறையில் நடந்த சந்திப்பு அதிகாரிகளுக்கு தோல்வியைத்தான் தந்தது. ஊழியர்கள் போராட்டப் பாதையை மீண்டும் தேர்ந்தெடுப்பதை தவிர வேறு வழியில்லை என்று கூட்டு நடவடிக்கை குழு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. ”எங்கள் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை, ரயில்வே வாரியம் இரண்டாம் சுற்று பேச்சுவார்த்தை நடத்தப் போவதாக கேட்டிருப்பதால் தான், நாங்கள் போராட்ட நடவடிக்கைகளை ஒத்திவைத்துள்ளோம்” என்று ஐ.சி.எப் ஊழியர் குழுவின் உறுப்பினர் தெரிவித்திருக்கிறார். போராடும் ஐ.சி.எப் மற்றும் ஆர்.சி.எப் ஊழியர்களை கட்டுப்படுத்த கண்துடைப்பு நடவடிக்கையாக இவ்வொப்பந்தங்களை மத்திய புலனாய்வு துறையிடம் (சிபிஐ) ஆய்வு செய்ய வலியுறுத்தியதோடு அப்போதைய ரயில்வே அமைச்சர் பவன் குமார் பனசலிடம் பேச்சுவார்த்தையும் நடத்தி அவரின் பதிலையும் பதிவு செய்து ரயில்வே வாரியத்துக்கு அனுப்பியிருக்கிறார் ராஜ்ய சபை உறுப்பினர் ரங்கராஜன். ஆனால் அமைச்சர் பவன் குமாரே மச்சானை வைத்து கோடிகளில் ஊழல் செய்யும் பெருச்சாளி என்பது தற்போது அம்பலத்திற்கு வந்திருக்கிறது. இந்நிலையில் ஒப்பந்தங்களைப் பற்றி முன்பே அறிந்திருந்தும், எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்காமலிருந்த ரயில்வே நிலைக் குழுவின் தலைவர் டி.ஆர்.பாலு ரயில்வே போர்டின் ஒப்பந்தத்தை இப்போது ரத்து செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். கூட்டு நடவடிக்கை குழுவின் பிரதிநிதிகள் தங்கள் தரப்பு நியாயத்தை தனியார்மயத்தை தாயுள்ளத்துடன் நாட்டு மக்களின் மீது இறக்கிவரும் ஆளும் வர்க்கப் பிரதிநிதிகளான மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ், கப்பல் துறை அமைச்சர் ஜி.கே.வாசன் மற்றும் குருதாஸ் தாஸ்குப்தா ஆகியோரிடமும் தமிழ்நாட்டு முதலமைச்சர் ஜெயாவிடமும் தங்கள் கோரிக்கையை எடுத்துச் செல்ல திட்டமிட்டுள்ளனர். ஆனால், புரட்சிகர தொழிற்சங்கங்கள் தலைமையில் மக்களோடும் ஏனைய தொழிலாளர்களோடும் இணைந்து போராடுவதே இந்தத் தனியார்மயப் பேயை விரட்ட ஒரே வழி! - ஜென்னி 5 கண்காணிக்கப்படுவதால் உங்களுக்கு என்ன இழப்பு? http://www.vinavu.com/2013/06/13/state-surveillance-what-is-at-stake/   தன் உயிரைப் பற்றிக்கூட கவலைப்படாமல் அமெரிக்க அரசின் ஒட்டுக் கேட்பு மற்றும் இணைய கண்காணிப்பு சதித்திட்டத்தை 29 வயது இளைஞர் எட்வர்டு ஜோசப் ஸ்னோடன் ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தியது உலகெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த ஒட்டுக் கேட்பு திட்டத்தில் ஏதோ அமெரிக்க மக்கள் மட்டுமல்ல, உலகெங்கும் உள்ள பல நாட்டு மக்களும் சிக்கியிருக்கிறார்கள். அமெரிக்காவின் கண்காணிப்பு வலையில் இந்தியா 5-வது இடத்தில் உள்ளது. கார்டியன் பத்திரிகை தகவல் படி ஒரு மாதத்தில் மட்டும் இந்திய மக்களுடைய 6.3 பில்லியன் இணைய தகவல்கள் அமெரிக்க அரசால் சேகரிக்கப்பட்டுள்ளன. தனது நாட்டு மக்களுடைய ஜனநாயக உரிமை இப்படி மலிவாக கொல்லப்படுகிறதே என்ற கவலை கூட இந்திய அரசுக்கு இல்லை. அமெரிக்காவின் இந்த உளவு வேலைகள் பொதுவில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருப்பதாகவும், விரிவான தகவல்கள் வந்ததும் விசாரிக்கிறோம் எனவும் இந்திய அரசின் வெளிவிவகாரத்துறை தெரிவித்திருக்கிறது. அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தத்திலேயே நாட்டின் இறையாண்மையை மலிவாக கொடுத்தவர்கள் மக்களது உரிமை பறிபோவதற்கா குரல் கொடுப்பார்கள்? [வெளிப்படைத் தன்மை] ஜனாதிபதி வெளிப்படைத்தன்மை அதிகமாகும் என்று சொன்னது, இதைத்தான் போலிருக்கிறது! ஒருவருடைய செல்பேசி மற்றும் மின்னஞ்சல், கடவுச் சொல், கடன் அட்டை உள்ளிட்ட அனைத்து இணைய பயன்பாடுகளது தகவல்களை சேகரிப்பதால், அல்லது நவீன தொழில்நுட்பங்களின் உதவியுடன் சமூக நடவடிக்கைகளை மேற்கொள்ளும் ஒரு குடிமகனது துல்லியமான டைரிக்குறிப்பை அரசு பதிவு செய்வதால் என்ன பிரச்சினை ஏற்படும்? அமெரிக்க அரசோ இல்லை இந்திய அரசோ தீவிரவாதிகளது தாக்குதல்களை முறியடிக்க வேண்டுமானால் இத்தகைய கண்காணிப்பு தேவைதானே என்று பலர் இயல்பாகவே நியாயப்படுத்தலாம். ஸ்னோடனின் அம்பலப்படுத்தல் வந்த பிறகு அமெரிக்க மக்களிடையே எடுக்கப்பட்ட ஒரு கருத்துக்கணிப்பில் 26% மக்கள் அரசின் கண்காணிப்பை ஆதரித்தும், 59% மக்கள் எதிர்த்தும் தெரிவித்திருக்கின்றனர். மற்றொரு கருத்துக் கணிப்பில் 56% மக்கள் தேசிய பாதுகாப்பு நிறுவனத்தின் (என் எஸ் ஏவின்) கண்காணிப்பை அங்கீகரித்திருக்கின்றனர். இந்தியாவிலும் கூட இத்தகைய கண்காணிப்பு தேவையா என்று கேட்டால் மோடியை ஆதரிக்கும் ‘இந்து’ நடுத்தர வர்க்கம் தேவைதான் என்று சட்டென்று கூறிவிடும். இவர்களைப் பொறுத்தவரை முசுலீம்கள் அனைவரும் கண்காணிக்கப்படவேண்டியவர்கள், தங்களைப் போன்ற பாரத தேசத்தை நேசிக்க கூடியவர்களை கண்காணிப்பதால் எந்த இழப்பும் இல்லை என்று நியாயப்படுத்துவார்கள். இதையே நாட்டின் பாதுகாப்புக்கு இத்தகைய தனிநபர் அந்தரங்கங்களை விட்டுக்கொடுக்கும் தியாகம் தேவை என்று அமெரிக்க அதிபர் ஒபாமாவும் கூறியிருக்கிறார். தனி நபரை விட தேசம் பெரிது, தனி நபரது அந்தரங்கம் பறிபோவதை விட தேசத்தின் பாதுகாப்பு காக்கப்பட வேண்டியது எனவும் இதைப் புரிந்து கொள்ளலாம். தங்களுக்கு ஜனநாயகம், மற்றவர்களுக்கு சர்வாதிகாரம் என இந்தியாவிற்கு ஹிட்லர் போன்ற சர்வாதிகாரிகள்தான் தேவை என்றும் இவர்கள் வாதிடுவார்கள். இந்த வாதங்களைப் போல இத்தகைய கண்காணிப்பு ‘தீவிரவாதிகள், பயங்கரவாதிகளை’ மட்டும்தான் குறிவைக்கின்றதா? தீவிரவாதிகளை பிடிப்பது என்ற பெயரில் இந்தக் கண்காணிப்பு தனது தோற்றத்தை நியாயப்படுத்திக் கொள்கிறது. பயங்கரவாதத்தை ஒழிக்கிறோம் என்ற பெயரில் எந்த வகையான, ஏன் ஜனநாயக ரீதியான அரசு எதிர்ப்பு கூட இடம்பெறக்கூடாது என்பதே இந்த கண்காணிப்பின் இறுதி நோக்கம். 21-ம் நூற்றாண்டில் மேற்கு மற்றும் கிழக்கு நாடுகளின் அரசுகள் மென்மேலும் பாசிசமயமாகி வரும் காலத்தில்தான் அமெரிக்காவின் இந்த கண்காணிப்பு அடக்குமுறை அமலுக்கு வந்திருக்கிறது என்பதை சேர்த்துப் பார்க்க வேண்டும். மேற்கத்திய நாடுகளுக்கு பயங்கரவாதிகளிடமிருந்து வரும் அச்சுறுத்தலை விட பொருளாதார நெருக்கடி தோற்றுவிக்கும் முதலாளித்துவ எதிர்ப்பு போராட்டங்கள்தான் அபாயகரமாக தோன்றுகின்றன. குண்டு வைக்கும் ஒன்றிரண்டு பயங்கரவாதிகளை பிடித்து அழிப்பது சுலபம். ஆனால் நாடு முழுக்க திரண்டு வரும் மக்கள், முதலாளித்துவ அமைப்பிற்கு எதிராக போர்க்குணமிக்க போராட்டங்களை தொடர்ந்து நடத்தும் போது அரசுகளுக்கு சமாளிப்பது பிரச்சினையாகிறது. தனிநபர் சுதந்திரம், அந்தரங்க உரிமை என்று மட்டும் இந்தக் கண்காணிப்பை எதிர்க்கக் கூடியவர்கள் இருக்கிறார்கள். ஒரு குடிமகனது பாலியல் உரிமைகள் கூட கண்காணிப்படுகிறது என்று செக்ஸ் ஸ்பெசலிஸ்ட்டுகளான சில பின் நவீனத்துவ அறிஞர்கள் கவலைப்படலாம். அநேக ‘ஆண்கள்’ கூட இதை ஒத்துக் கொள்ளலாம். அதாவது ஒருவர் 2,3 பெண்களை காதலிப்பது, போர்னோ படங்களை பார்ப்பது, கள்ள உறவுக்கு முயற்சி செய்வது எல்லாம் அமெரிக்காரன் பார்க்கிறானே, நாளை பின்னே இதை நமது மனைவியிடமோ, குடும்பத்தினரிடமோ போட்டுக் கொடுத்து விட்டால் என்ன ஆவது என்று அவர்கள் கவலைப்படலாம். இவர்களைப் பொறுத்தவரை அந்தரங்க உரிமை பறிபோவது என்பது இதுதான். ஆனால் இத்தகைய ‘உரிமை’களை அமெரிக்காவோ, இந்திய அரசோ தடுக்கப் போவதில்லை என்பதோடு உற்சாகப்படுத்தவும் செய்யும். 70களில் வியட்நாம் மீது அமெரிக்கா போர் தொடுத்த போது பண்பாட்டு ரீதியாக வியட்நாம் இளைஞர்களை சீரழிப்பதற்கு நீலப்பட கேசட்டுகள், மஞ்சள் இலக்கியங்களை டன் கணக்கில் இறக்கியது. இதே வேலையை வடகிழக்கு மாநிலங்களில் இந்திய அரசும் செய்திருக்கிறது. போர்னோவின் மெக்காவான அமெரிக்கா ஒரு போதும் இத்தகைய பாலியல் ‘உரிமைகளை’ தடை செய்யாது என்பதோடு அது வளருவதற்கு தன்னாலான அனைத்து உதவிகளையும் செய்யும். சினிமா, செக்ஸ், மொக்கை போன்ற விசயங்கள் இணையத்தில் அதிகம் செல்வாக்கு செலுத்துவது பொருளாதார ரீதியாகவும், பண்பாட்டு ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் ஆளும் வர்க்கங்களுக்கு ஆதாயம். பிறகு எதற்காக கண்காணிக்கிறார்கள்? [மூச்சை நிறுத்தும் பாதுகாப்பு] மக்களின் மூச்சை நிறுத்தும் பாதுகாப்பு போர்வை ஏற்கனவே சொன்னது போல முதலாளித்துவ அமைப்பின் கட்டமைப்பு நெருக்கடிகள் மேற்கு உள்ளிட்டு உலகம் முழுவதும் மக்களை சொல்லணாத் துயரத்தில் ஆழ்த்தும்போது இயல்பாக வரும் எதிர்ப்புணர்வை காயடிப்பதுதான் அவர்களது நோக்கம். இதற்கு பழைய பாணியிலான சிறை, கைது, தண்டனை போன்ற மரபார்ந்த முறைகளை விட இந்த கண்காணிப்பு சிறந்த முறையில் பலனளிக்கும். அரசை எதிர்ப்பவரை சிறையன்றி வேறு எந்த விதத்தில் ஒடுக்க முடியும் என்றொரு கேள்வி உங்களுக்குத் தோன்றலாம். அதற்குப் பதில் உங்களது சமூக பொருளாதார வாழ்க்கையை முடக்குவது என்பதே. அதற்கு தொழில் நுட்பப் புரட்சி வழங்கியிருக்கும் இந்த “பிக் டேட்டா” கண்காணிப்பு முறை எண்ணிறந்த முறையில் உதவி செய்யும். சமீபத்திய இலண்டன் கலவரம் குறித்து கேள்விப்பட்டிருப்பீர்கள். அதில் குற்றம் சுமத்தப்பட்ட ஆயிரக்கணக்கான கருப்பின இளைஞர்கள் சில பல மாதங்கள் சிறை வாழ்க்கைக்குப் பிறகு வெளியே வந்தாலும் அவர்களுக்கு எங்கேயும், எப்போதும் வேலை கிடைக்காது. வாழ்நாள் முழுக்க வேலையற்ற உதிரிகளாக அல்லது ஊதியம் குறைந்த கடுமுழைப்பு வேலைகள் மட்டும்தான் அவர்கள் செய்ய முடியும். லண்டன் போலிசார் இவர்களைப் பற்றிய அடையாளங்கள் படங்களோடு அனைத்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கும் அனுப்பிய பிறகு முடிந்தது அவர்களது வாழ்க்கை. சில மாதங்களுக்கு முன்பு தமிழகத்தில் ஈழத்தமிழருக்காக மாணவர்களிடம் போராட்டம் பரவிய நேரத்தில் க்யூ பிரிவு போலிசார் அளித்த அறிக்கைய நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். அதாவது போராட்டத்தில் முன்னணியாக இருக்கும் மாணவர்களைப் பற்றிய விவரங்களை சேகரித்து அதை போலீஸ் டேட்டா பேசில் பதிவு செய்து பின்னர் எந்தப் போராட்டம் வந்தாலும் அவர்களை பின் தொடர்வது, அவர்களைப் பற்றிய விவரங்களையும் நிறுவனங்களிடம் பகிர்ந்து கொள்வது என்று போலிசார் கூறியிருந்தனர். அதன் பொருள் அந்த மாணவர்கள் தமது அரசியல் உணர்வை துறக்க வேண்டும் அல்லது சொந்த வாழ்க்கை நலன்களை துறக்க வேண்டும். ஆகவே ஒருவருக்கு வேலை கிடைக்காமல் செய்து விட்டால் அதை விட என்ன பெரிய தண்டனை இருக்கப் போகிறது? அமெரிக்கா ‘சாதனை’ படைத்திருக்கும் இந்த இணைய, செல்பேசி கண்காணிப்பு அனைவரையும் 24 மணிநேரமும் பின் தொடரும் உளவாளி என்பதால் இது விரைவிலேயே மற்ற நாட்டு அரசுகளாலும் ஏற்கப்பட்டு அமல்படுத்தப்படும் சாத்தியங்கள் நிறையவே இருக்கிறது. அப்படி நடந்தால் எப்படி இருக்கும்? கோடிக்கணக்கான மக்களது பில்லியன் கணக்கிலான தகவல்களை சேகரித்து பயன்படுத்துவது சாத்தியமா என்று தோன்றலாம். இதெல்லாம் ஆள் போட்டு செய்ய வேண்டிய வேலையில்லை. ஒரு திறமையான மென்பொருள் அரசுக்கும், போலீசுக்கும் தேவையான விவரங்களையும், நபர்களையும் சடுதியில் தந்து விடும். ஈழத்தமிழருக்கான மாணவர் போராட்டத்தை ஆதரித்தும், பங்கேற்றும், லைக் செய்தும், ஷேர் செய்தும் முகநூல், டிவிட்டரில் இயங்கியவர்கள் யார், புலிகள், பிரபாகரன், ஈழம், இலங்கை, தனி ஈழம் போன்ற குறிச்சொற்களை யார் அதிகம் பாவிக்கிறார்கள் என்பதை வைத்தும் ஒரு மாணவர் ஈழப் போராட்டத்தில் ஈடுபாட்டுடன் எந்த தரவரிசையில் இருக்கிறார் என்பதைக் கண்டுபிடிக்க முடியும். பிறகு நாளையே ராஜபக்சே போயஸ் தோட்டம் வந்து ஜெயாவுடன் தேநீர் விருந்தில் பங்கேற்கும் போது இந்த மாணவர்களை முன்னெச்செரிக்கையாக கைது செய்வதில் பிரச்சினை இல்லை. [police-intelligence] 15 வயது முதல் செல்பேசி, இணையம் பயன்படுத்தும் மாணவர் ஒருவர் 25 வயதில் வேலைக்கு போகும் போது இந்த பிக் டேட்டாவின் உதவியுடன் அவர் இந்த 10 ஆண்டுகளில் என்ன செய்தார் என்று கண்டுபிடிக்க முடியும். அவரது அரசியல் ஆர்வம் போராடும் அளவுக்கு இல்லை என்று அந்த விவரங்கள் சொல்லும் பட்சத்தில் அவருக்கு எச்சரிக்கையுடன் வேலை கிடைக்கலாம். இதே போல ஹூண்டாய் தொழிற்சாலையில் வேலைக்கு போகும் ஒரு தொழிலாளி அவர் மாணவராக இருந்த காலத்தில் என்ன செய்தார் என்பதை வைத்து அவரது வர்க்க உணர்வு ஆபத்திற்குரியதா என்று ஹெச் ஆர் கங்காணிகள் முடிவு செய்வார்கள். தற்போதே ஐ.டி துறை மனிதவளத்துறை கங்காணிகள் ஒரு ஊழியர் புதிதாகவோ இல்லை வேறு நிறுவனத்திலிருந்து வரும் போது அவர்களுடைய புகைப்படம் மற்றும் பெயரை வைத்து முகநூலில் ஆய்வு செய்கிறார்கள். அலுவலகத்தில் இருந்து இவர்கள் இணையத்தில் என்ன பார்க்கிறார்கள் எனவும் மதிப்பீடு செய்கிறார்கள். பிக் டேட்டா என்பது இதனுடைய முழுமையான தகவல் வங்கி. அதை வைத்து ஒரு தனிநபருடைய ‘ஜாதக’த்தையே எழுத மட்டுமல்ல, தீர்மானிக்கவும் முடியும். இணையத்தில் மாவோயிஸ்டுகள் போராட்டத்தை ஒருவர் தொடர்ந்து கருத்தளவில் ஆதரித்தார் என்பதை வைத்து அவருக்கு கடன் கிடையாது என்று வங்கி மேலாளர்கள் முடிவு செய்யலாம். ஈழ அகதிகளுக்கு ஒருவர் நன்கொடை கொடுத்தார் என்பதை வைத்து அவரது வங்கிக் கணக்கு முடக்கி வைக்கப்படலாம். பையன் கம்யூனிஸ்டு என்பதால் அப்பா ஆர்.எஸ்.எஸ் ஆக இருந்தாலும் அவரது ஓய்வூதியம் நிறுத்தி வைக்கப்படலாம். மகஇக போராட்டத்தில் கைது செய்யப்பட்டார் என்ற ஒரு காரணத்திற்காகவே ஒருவருக்கு அரசு நலத்திட்டங்கள் மறுக்கப்படலாம். நேபாளத்தில் மன்னராட்சியை எதிர்த்து, மாவோயிஸ்டுகள் போராட்டத்தை ஆதரித்தார் என்பதற்காக ஒருவரது பாஸ்போர்ட் முடக்கப்படலாம். பாலச்சந்திரன் படத்தை கூகிள் பிளசில் ஷேர் செய்தார் என்பதற்காக ஒரு ஐடி ஊழியரின் ஊதிய உயர்வு நிறுத்தப்படலாம். வினவில் உள்ள அமெரிக்க எதிர்ப்பு கட்டுரைகள் அனைத்தையும் படித்திருக்கிறார் என்பதற்காக ஒருவரை தனது நாட்டில் நுழைவதற்கு அமெரிக்கா தடை செய்யலாம். இப்படி எண்ணிறந்த முறையில் அடக்குமுறைகள் வரும். இவை எதிலும் கைது, சிறை இல்லை என்பதையும் குறிப்பிட்ட நபர்களது சமூக வாழ்க்கையை ஆதரவு இன்றி முடக்க முடியும் என்பதையும் நினைவில் கொள்க. இது வேகமாக வேகமாக பரவும் பட்சத்தில் அரசியல் உணர்வும், ஈடுபாடும், பங்கேற்பதும் கூட மாபெரும் பயங்கரவாதச் செயல்கள் போல பாவிக்கப்படும். அப்படி ஒரு சூழ்நிலையை நினைத்துப் பாருங்கள்! மாணவர்கள், தொழிலாளிகள், பெண்கள் என அனைத்துப் பிரிவினரும் போராடாமல், அடிமைத்தனத்தோடு மட்டும் வாழவேண்டும் என்றால் அந்த உலகம் எவ்வளவு கொடூரமாக இருக்கும்? ஏகாதிபத்தியங்கள் தொழில்நுட்ப புரட்சியின் உதவியினால் உருவாக்கியிருக்கும் இந்த பிக் டேட்டா கண்காணிப்பு இப்படி சிறையில்லாமலே ஒருவரை சிறையில் அடைப்பது போன்ற வாய்ப்புகளை வழங்குகிறது. நடக்கும் அநீதிகளை தட்டிக் கேட்க வேண்டும் என்ற எண்ணமே தோன்றி விடாமல் குடிமக்களை முடக்கி விடுவதுதான் இத்தகைய கண்காணிப்புகளின் நோக்கமும் கூட. ஆக ஒரு மனிதனின் தனிநபர் – அந்தரங்க உரிமைகளில் அரசியல் உரிமையே தலையாயதும், முதன்மையானதும் ஆகும். அந்த உரிமையை தடை செய்வதற்காக நமது சமூக பொருளாதார உரிமைகளில் கை வைப்பதற்கு இந்த கண்காணிப்பு பயன்படுகிறது. ஒரு மனிதனின் பொருளாதார வாழ்வை முடக்குவதாக மிரட்டினால் எத்தனை பெரியவரும் சடுதியில் சோர்ந்து சரணடைந்து விடுவார்கள். இதுவே ஒரு சமூகத்தின் யதார்த்தமாக மாறும் போது வரலாற்றின் பக்கங்களில் புதையுண்டிருக்கும் அடிமைகளது வாழ்க்கை மீண்டு வரும். மாட்ரிக்ஸ் திரைப்படத்தில் மெஷின்கள் உலகைக் கட்டுப்படுத்துவது போல இங்கு ஏகாதிபத்தியங்களும், முதலாளிகளும் கட்டுப்படுத்துவார்கள். ஆகவே இந்த கண்காணிப்பு சதித்திட்டத்தை நாம் எண்ணிறந்த முறையில் எதிர்க்க வேண்டும். இந்த விழிப்புணர்வு உலக அளவில் வளர்ந்து இணைய, செல்பேசி நிறுவனங்களுக்கும், அரசுகளுக்கும் நிர்ப்பந்தம் கொடுக்கும் அளவிலும், தொழில் நுட்ப முறையில் இந்தக் கண்காணிப்பு முறைகளை தகர்க்கும் அறிவியல் கண்டுபிடிப்புகளை பரவலாக்கும் முறைகளிலும் வளர வேண்டும். (ஒரு அரசு தனது சொந்த குடிமக்களை கண்காணிக்காமல் ஆள முடியாதா என்று ஒரு தோழர் கேட்டிருந்தார். அதற்கான பதிலை அடுத்த பதிவில் வெளியிடுகிறோம்.) 6 யார் இந்த ஸ்னோடன்? http://www.vinavu.com/2013/06/12/snowden-fights-american-imperialism/   அமெரிக்க அரசியல் வரலாற்றில் மிக முக்கியமான அம்பலப்படுத்தல்களுக்கு காரணமானவரான எட்வர்ட் ஸ்னோடன் பெரும்பாலானோர் பொறாமைப்படும் வேலையில் இருந்தார். அமெரிக்க மத்திய அரசு வேலை, கணினி துறையில் வித்தகர், $2,00,000 (சுமார் ரூ 1.2 கோடி) சம்பளம், ஹவாயில் அவரது துணைவியுடன் பகிர்ந்து கொள்ள சொந்தமாக வீடு என்று அமெரிக்க கனவை நனவாக்கிய வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தார் ஸ்னோடன். ஆனால், தான் வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கை உண்மையில் ஒரு கெட்ட கனவு என்பதை பல ஆண்டுகளாகவே அவர் உணர ஆரம்பித்திருந்தார். உலகெங்கிலும் வாழும் மக்களின் அடிப்படை உரிமைகளையும் இணைய சுதந்திரத்தையும் மறுக்கும் அமெரிக்க அரசின் நடவடிக்கைகளை அவரால் சகித்துக் கொள்ள முடியவில்லை. தனது வசதியான வாழ்க்கை அனைத்தையும் தியாகம் செய்து அமெரிக்க அரசமைப்பை அம்பலப்படுத்த முடிவு செய்தார். [அமெரிக்க சிறப்பு ராணுவப் படைகள்] அமெரிக்க சிறப்பு ராணுவப் படைகள் 29 வயதான ஸ்னோடன் வட கேரலினாவின் எலிசபத் நகரத்தில், 1983-ம் ஆண்டு ஜூன் 21-ம் தேதி பிறந்தவர். அவரது குடும்பம் தேசிய பாதுகாப்பு ஆணையத்தின் தலைமையகம் இருக்கும் மேரிலாண்டுக்கு இடம் பெயர்ந்தது. உயர் நிலைப்பள்ளி பட்டயம் பெறுவதற்காக மேரிலாண்ட் சமூகக் கல்லூரியில் கணினித் துறை வகுப்புகளில் கலந்து கொண்டார். ஆனால், அவர் பள்ளிப் படிப்பை முடிக்கவில்லை. 2003-ம் ஆண்டு அமெரிக்க இராணுவத்தில் சேர்ந்து சிறப்புப் படைகளுக்கான பயிற்சி திட்டத்திற்கு அனுப்பப்பட்டார். ஈராக்கில் ஒடுக்கப்படும் மக்களை விடுதலை செய்வதில் தானும் பங்கு பெற வேண்டும் என்று விரும்பினார். ஆனால், போர் பற்றிய அவரது நம்பிக்கைகள் விரைவிலேயே சிதறடிக்கப்பட்டன. அவருக்கு பயிற்சி அளித்த ராணுவ அதிகாரிகளில் பெரும்பாலானோர் யாருக்கும் உதவுவதை விட ஈராக் மக்களை கொல்வதைப் பற்றியே ஆர்வம் கொண்டிருந்தார்கள். ஒரு விபத்தில் இரண்டு கால்களும் முறியவே, இராணுவத்திலிருந்து விலகினார். மேரிலாண்ட் பல்கலைக் கழகத்தில் இயங்கி வந்த தேசிய பாதுகாப்பு ஆணையத்தின் ரகசிய பிரிவு ஒன்றில் பாதுகாவலராக வேலை கிடைத்தது. அங்கிருந்து சிஐஏவின் தகவல் தொடர்பு பாதுகாப்புத் துறையில் வேலை செய்ய அனுப்பப்பட்டார். இணையம் பற்றிய அறிவும், மென்பொருள் உருவாக்கலில் இருந்த திறமையும் பள்ளி இறுதி வகுப்பைக் கூட முடித்திராத அவர் வெகு வேகமாக முன்னேற உதவின. 2007-ம் ஆண்டு சிஐஏ அவரை தூதரக ஊழியர் வேடத்தில் சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனீவாவுக்கு அனுப்பியது. கணினி இணைய பாதுகாப்பிற்கான பொறுப்பில் இருந்த அவர் பல வகைப்பட்ட ரகசிய ஆவணங்களை பார்க்க முடிந்தது. அதன் மூலம் கிடைத்த விபரங்களும் கிட்டத்த 3 ஆண்டுகள் சிஐஏ அதிகாரிகளுடன் வேலை செய்த அனுபவமும், நடப்பவற்றின் நியாயத்தைப் பற்றிய கேள்விகளை அவர் மனதில் எழுப்பின. [அமெரிக்க உளவுத் துறையின் வேவு பார்க்கும் அறை] அமெரிக்க உளவுத் துறையின் வேவு பார்க்கும் அறை ஒரு ஸ்விஸ் வங்கி அதிகாரியை குடிக்க வைத்து, குடிபோதையில் வண்டி ஓட்ட வைத்து, அவர் போலீசில் சிக்கியதும் அவருக்கு உதவுவதாக முன் வந்த ரகசிய உளவாளி மூலம் அவரை தமது நோக்கங்களுக்கு பயன்படுத்திக் கொண்டது சிஐஏ. இது போன்ற பல நிகழ்வுகள் ஸ்னோடனை சோர்ந்து போக வைத்தன. அமெரிக்க அரசு அமைப்பு பற்றிய அவரது அடிப்படை நம்பிக்கைகள் சிதைந்து போயின. நல்லதை விட பல மடங்கு கெட்டது செய்யும் அமைப்பில் தான் பங்கேற்பதை அவர் புரிந்து கொண்டார். இந்த உண்மைகளை அம்பலப்படுத்த வேண்டியதன் தேவையை உணர்ந்தார். 2008-ம் ஆண்டு பராக் ஒபாமா அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டது அவருக்கு ஓரளவு நம்பிக்கையூட்டியது. ஒபாமா நிர்வாகத்தில் இத்தகைய நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டு சீர்திருத்தப்படும் என்று நம்பினார். 2009-ம் ஆண்டு சிஐஏவை விட்டு விலகி ஒரு தனியார் நிறுவனத்தில் சேர்ந்தார். ஜப்பானில் உள்ள இராணுவ தளத்தில் செயல்படும் தேசிய பாதுகாப்பு ஆணையத்தின் பிரிவில் வேலை செய்ய அனுப்பப்பட்டார். பூஸ் அலன், டெல் போன்ற நிறுவனங்களின் ஊழியராக தேசிய பாதுகாப்பு ஆணையத்தில் பணி செய்தார். மாற்றப்படும் என்று அவர் நம்பிய கொள்கைகள் ஒபாமாவின் ஆட்சியிலும் தொடர்வதை பார்த்து அவர் பெரிதும் ஏமாற்றமடைந்தார். மனித குல வரலாற்றிலேயே மிக முக்கியமான கண்டுபிடிப்பு என்று அவர் கருதிய இணையத்தின் மதிப்பையும், அடிப்படை உரிமைகளையும் அமெரிக்க அரசின் வேவு பார்த்தல் அழித்து வருவதை உணர ஆரம்பித்தார். மக்களுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்ற அவரது உறுதி வளர்ந்தது. தவறுகள் நடப்பதைப் பார்க்கும் போது, “வேறு யாராவது வந்து நிலைமையை சரி செய்வார்கள் என்று காத்திருக்க முடியாது. பிரச்சினைகளை தீர்ப்பதற்கு தலைவர்கள் வருவார்கள் என்று காத்திருக்க முடியாது. நாமே செயல்படுவதுதான் தலைமைப் பண்பு” என்று புரிந்து கொண்டதாக கூறுகிறார் ஸ்னோடன். அடுத்த மூன்று ஆண்டுகளில் தேசிய பாதுகாப்பு ஆணையத்தின் வேவு பார்க்கும் நடவடிக்கைகள் எவ்வளவு விரிவானவை, அனைத்தும் தழுவியவை என்பதை புரிந்து கொண்டார். உலகில் நடக்கும் ஒவ்வொரு உரையாடலையும், ஒவ்வொரு செயல்பாட்டையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற திட்டத்துடன் அவர்கள் செயல்படுகிறார்கள். [உடா கணினி மையம்] உடாவில் உள்ள அமெரிக்க உளவுத் துறை கணினி மையம் அமெரிக்க உளவுத் துறை உலகெங்கிலும் உள்ள பொது மக்களை வேவு பார்ப்பது தொடர்பான ஆவணங்களை பத்திரிகைகளுக்கு வெளியிட அவர் முடிவு செய்தார். தனது நடவடிக்கைகளுக்காக தான் துன்புறுத்தப்படலாம் என்று அவருக்கு தெரிந்திருந்தது. ஆனால், தான் பெரிதும் நேசிக்கும் இந்த உலகை ஆண்டு கொண்டிருக்கும் ரகசிய சட்டங்கள், தடுத்து நிறுத்த முடியாத நிர்வாக அதிகாரம் போன்றவை சிறிதளவாவது அம்பலப்பட வேண்டும் என்று அவர் விரும்பினார். “பணத்தை விட முக்கியமான பல விஷயங்கள் உள்ளன. எனக்கு பணத்தாசை இருந்தால் இந்த ஆவணங்களை பல நாடுகளுக்கு விற்று நினைத்துப் பார்க்க முடியாத அளவு பணத்தை சம்பாதித்திருக்கலாம். ஆனால், அரசு அளவுக்கு மீறிய அதிகாரங்களை தன் கையில் எடுத்துக் கொண்டிருக்கிறது. அவற்றின் மீது பொதுமக்களுக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை. இந்த அமைப்பில் பணி புரியும் என்னைப் போன்றவர்கள் பல வரம்பு மீறல்கள் செய்வதற்கான வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இவற்றை மக்கள் முன் அம்பலப்படுத்துவதுதான் தன் நோக்கம்” என்கிறார் அவர். “நான் எந்தத் தவறும் செய்ய வில்லை என்று எனக்குத் தெரியும். அதனால், மறைந்து வாழும் எண்ணம் எனக்கு இல்லை. ஆனால், விவாதம் என்னை மையமாக கொண்டு நடக்கக் கூடாது. அமெரிக்க அரசின் செயல்களை மையமாக கொண்டிருக்க வேண்டும்” என்கிறார் அவர். [ஸ்னோடன்] அமெரிக்காவால் வேட்டையாடப்படும் ஸ்னோடன் இப்போது ஹாங்காங் ஹோட்டல் ஒன்றில் தங்கியிருக்கும் ஸ்னோடன், யாராவது ஒட்டுக் கேட்டு விடக் கூடாது என்று தன் அறைக் கதவுகளை தலையணைகளால் பொதிந்து வைக்கிறார். அவரது மடிக்கணினியில் பாஸ்வேர்ட் உள்ளிடும் போது தலையை ஒரு சிவப்புப் போர்வையால் போர்த்திக் கொள்கிறார். அவரது பயங்களுக்கு காரணம் இருக்கிறது. அவர் 10 ஆண்டுகளுக்கு மேல் அமெரிக்க உளவுத் துறையில் வேலை செய்திருக்கிறார். உலகின் மிகப்பெரிய, மிக ரகசியமான உளவு அமைப்பான அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆணையம் அவரை தேடிக் கொண்டிருக்கிறது என்று அவருக்குத் தெரியும். தன்னை கைது செய்து அனுப்புமாறு அமெரிக்க அரசு சீன அரசிடம் கேட்கலாம்; அல்லது சீன அரசு அவரை பிடித்து ரகசிய இடத்துக்கு கொண்டு போய் தகவல்களை கறக்க முயற்சிக்கலாம்; அல்லது திடீரென பிடித்துக் கட்டப்பட்டு, விமானத்தில் அமெரிக்காவுக்கு கடத்தப்படலாம். சிஐஏ மூலம் அவர் அழிக்கப்பட்டு விடலாம்; சிஐஏ உளவாளிகளோ, அவர்களுடன் சேர்ந்து பணியாற்றும் பிற நாட்டு உளவாளிகளோ அவரை வேட்டையாட வரலாம். அல்லது ஹாங்காங்கின் புகழ்பெற்ற டிரையாட் எனப்படும் மாபியா கும்பல்களுக்கு பணம் கொடுத்து அவரை கொல்ல வைக்கலாம். அவரது ஹோட்டல் இருக்கும் அதே சாலையில்தான் ஹாங்காங் சிஐஏ அலுவலகம் (ஹாங்காங் அமெரிக்க தூதரகம்) உள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் அரசு அமைப்பின் ஊழல்களை அம்பலப்படுத்தியவர்களை ஒபாமா அரசு அடக்கி ஒழித்ததை ஏற்கனவே பார்த்திருக்கும் ஸ்னோடன், தான் தெரிந்தே இந்த முடிவை எடுத்ததாக சொல்கிறார். அவரது குடும்பத்துக்கு இதனால் ஏற்படப் போகும் தொல்லைகளைக் குறித்து எதையும் செய்ய முடியாத நிலையில் இருப்பதாக அவர் வருந்துகிறார். அதுதான் அவரை தூக்கம் இழக்கச் செய்கிறது. வரலாறு முழுவதும் சர்வாதிகார, சுரண்டல் அமைப்புகளை கட்டி எழுப்பும் ஆளும் வர்க்கங்களுக்கான சவப்பெட்டி ஸ்னோடன் போன்ற சராசரி மனிதர்களால்தான் தயாரிக்கப்படுகின்றன. அமெரிக்க ஏகாதிபத்தியமும் அதன் அடக்குமுறை சாம்ராஜ்யமும் தம் வீழ்ச்சி காலத்தை நெருங்கிக் கொண்டிருக்கின்றன. (இங்கிலாந்தின் கார்டியன் நாளிதழில் கிளென் கிரீன்வால்த், ஏவன் மெக்ஆஸ்கில், லாரா போய்ட்ராஸ் எழுதிய கட்டுரையை தழுவி எழுதியது) 7 எச்சரிக்கை: இணையத்தை கண்காணிக்கிறது இந்திய அரசு! http://www.vinavu.com/2013/06/10/big-brother-is-watching-you/   “உங்கள் மனதில் என்ன இருக்கிறது?” என்பதை பகிர்ந்து கொள்ளச் சொல்லி கேட்கிறது பேஸ்புக். “புதிதாக உள்ளதைப் பகிர்க…” என்று அன்பாகச் சொல்கிறது கூகுள் பிளஸ். நீங்களும் நட்பு, காதல், மொக்கை, சினிமா என்று பகிர்ந்து கொண்டால் பிரச்சினை இல்லை. பெரும்பான்மையினரும் அப்படித்தான் பகிர்ந்து கொள்கிறார்கள். [இணையம்] படம் : நன்றி தி இந்து ஆனால் டாடாவின் கார் தொழிற்சாலைக்கு எதிராக ஏதாவது நினைத்துக் கொண்டிருக்கிறீர்களா? அல்லது போஸ்கோவின் நில அபகரிப்பை எதிர்க்க வேண்டும் என்ற எண்ணம் ஓடுகிறதா? அல்லது காஷ்மீரில் இந்திய ராணுவ ஆக்கிரமிப்பு தவறு என்று நினைக்கறீர்களா? அல்லது ஈழ இனப் படுகொலையை முன்னின்று நடத்திய இந்திய ஆளும் வர்க்கங்களை திட்டிக் கொண்டிருக்கிறீர்களா? இப்படிப்பட்ட பகிர்தல்களை அல்லது அச்சுறுத்தல்களை எல்லாம் கண்காணித்து, அவை அரசுக்கு எதிரான வடிவம் பெற்று விடும் முன்பே, முளையிலேயே கிள்ளி எறிந்து, நாட்டை பாதுகாப்பதற்கு இந்திய அரசு தொடர்ந்து உழைக்கிறது; புதிய, புதிய திட்டங்களை வகுக்கிறது. ஆதார் அட்டை மூலம் குடிமக்களைப் பற்றிய விபரங்களை திரட்டி, அட்டையை பயன்படுத்தி அவர்கள் செய்யும் அனைத்து பரிமாற்றங்களை எல்லாம் பதிவு செய்து வைத்துக் கொள்ளப் போகிறது. ஆனால், ஆதார் அட்டை பயன்படுத்தாமலும் மக்கள் பல பரிமாற்றங்களை செய்கிறார்கள், பல விஷயங்களை நினைக்கிறார்கள், பேசுகிறார்கள். அவற்றால் அரசுக்கும் ஆளும் வர்க்கங்களுக்கும் ஏற்படக் கூடிய அச்சுறுத்துல்களை ஆரம்பத்திலேயே அடையாளம் கண்டு ஒழித்துக் கட்டும் முயற்சிகளின் ஒரு பகுதியாக தேசிய இணைய ஒருங்கிணைப்பு மையம் ஒன்றை மத்திய அரசு ஏற்படுத்தியிருக்கிறது. (NCCC) இணையத்தில் தகவல் பரிமாற்றங்களை கண்காணிப்பதன் மூலம் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை உடனுக்குடன் மதிப்பீடு செய்து, முன் முனைப்புடன் நடவடிக்கை எடுக்க உதவியாக அறிக்கைகளையும் எச்சரிக்கைகளையும் தயாரித்து போலீசுக்கும், மற்ற பாதுகாப்புப் படையினருக்கு வழங்குவது அதன் பொறுப்பாக இருக்கும். இதன் மூலம், நினைத்த நேரத்தில் ஒருவரது மின்னஞ்சல் கணக்கு, பேஸ்புக் கணக்கு, வலைப்பதிவு கணக்கு போன்றவற்றை அணுகி தகவல்களை பெறுவதற்கு அரசு அமைப்புகளுக்கு வழி செய்யப்படும். தேசிய இணைய ஒருங்கிணைப்பு மையம், பல்வேறு இணைய சேவை வழங்கும் நிறுவனங்களின் (ISP-கள்) கணினிகளுடன் தொடர்பு ஏற்படுத்தி, அவற்றின் மூலம் பரிமாறிக் கொள்ளப்படும் தகவல்களை திரட்டி ஒரே கணினியில் சேமித்து வைக்கும். அவற்றை ஆய்வு செய்வதன் மூலம் பாதுகாப்பு அச்சுறுத்தல்களைப் பற்றி உடனுக்குடன் மதிப்பீடுகள் செய்யும் என்று ஒரு ரகசிய அரசுக் குறிப்பு தெரிவிக்கிறது. [பெரிய அண்ணன்] பெரிய அண்ணன் உங்களை பார்த்துக் கொண்டிருக்கிறார். ரூ 1,000 கோடி செலவில் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையின் கீழ் ஏற்படுத்தப்படும் இந்த மையத்தில் தேசிய பாதுகாப்புக் குழு செயலகம் (NSCS), உளவுத் துறை (IB), ரிசர்ச் அண்ட் அனாலிசிஸ் விங் (RAW), இந்திய கணினி அவசர நடவடிக்கை அணி (CERT-In), தேசிய தொழில்நுட்ப ஆய்வு நிறுவனம் (NTRO), பாதுகாப்பு ஆய்வு மற்றும் உருவாக்க நிறுவனம் (DRDO), DIARA, ராணுவம், கடற்படை, விமானப்படை, தகவல் தொழில் நுட்பத் துறை என்று பலதரப்பட்ட அரசு அமைப்புகள் பங்கேற்க உள்ளன. இணைய சேவை வழங்கும் நிறுவனங்களையும் இதில் ஈடுபடுத்தி, இடைவிடாமல் இணையத்தை கண்காணிப்பதை அரசு உறுதி செய்யும். தேவைப்படும் போது மற்ற தனியார் நிறுவனங்களின் சேவைகளும் பயன்படுத்திக் கொள்ளப்படும். தேசிய இணைய ஒருங்கிணைப்பு மையம் இணைய சேவை வழங்கும் அனைத்து நிறுவனங்களுடன் நேரடி தொடர்பு வைத்திருந்து, உள்நாட்டுக்குள்ளும், வெளிநாடுகளுக்கும் பாயும் தகவல்களை நுழைவுப் புள்ளியிலேயே கண்காணிக்கும். ஆதார் திட்டத்தை செயல்படுத்தும் நந்தன் நீலகேணி, அந்த தகவல்களை கட்டுப்படுத்தும் அமைப்பு தன்னிச்சையான லாபம் ஈட்டும் நிறுவனமாக திகழும் என்று சொல்லியிருக்கிறார். அதாவது தனியார் நிறுவனங்களின் வணிகத் தேவைகளை பொறுத்து, அவர்கள் கொடுக்கும் விலையை வைத்து, மக்களைப் பற்றிய விபரங்களை எப்படி பயன்படுத்தலாம் என்பது முடிவு செய்யப்படும். அரசு செயல்பாடுகள் அனைத்திலும் தனியார் பங்களிப்பை வரவேற்கும் இத்தகைய கொள்கையின்படி இணைய தகவல் பரிமாற்றங்களை கண்காணிக்கும் அமைப்பும் தனியார் மயமாக்கப்பட்டு மக்களை கண்காணிப்பதை வர்த்தக நோக்கில் பயன்படுத்தவும் வசதி ஏற்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கலாம். இதன்படி டாடாவுக்கு எதிரான போராட்டக்காரர்கள் குறித்து டாடாவும், அம்பானிக்கு எதிரான போராட்டங்கள் குறித்து ரிலையன்சும் கண்காணித்து நடவடிக்கை எடுக்கலாம். “நீங்கள் எப்போது கண்காணிக்கப்படுகிறீர்கள் என்று தெரியாது. எந்தெந்த அமைப்புகள் மூலம் யாரை, எத்தனை முறை கண்காணிக்கிறார்கள் என்பதை யூகிக்க மட்டும்தான் முடியும். எல்லோரையும் எல்லா நேரங்களிலும் கண்காணிக்கிறார்கள் என்பதும் சாத்தியம்தான். எப்படியிருந்தாலும் உங்கள் இணைப்பை அவர்கள் எந்த நேரத்திலும் ஒட்டுக் கேட்கலாம். ‘நீங்கள் ஏற்படுத்தும் ஒவ்வொரு சத்தமும் ஒட்டுக் கேட்கப்படுகிறது, நீங்கள் செய்யும் ஒவ்வொரு செய்கையும் பதிவு செய்யப்படுகிறது’ என்ற ஊகத்திலேயே வாழ வேண்டியிருந்தது.” கம்யூனிச எதிர்ப்பு அவதூறு பிரச்சாரத்துக்காக அமர்த்தப்பட்ட ஜார்ஜ் ஆர்வெல் என்பவர் எழுதிய 1984 என்ற நாவல் சித்தரித்த சூழலை அமெரிக்காவும், அதன் வழியொற்றி நடக்கும் இந்தியா போன்ற நாடுகளும் உருவாக்கி வருவதுதான் வரலாற்றின் நகைமுரண். ஆனால் இத்தகைய அச்சுறுத்துல்கள் மூலம் மக்கள் போராட்டங்களையும் புரட்சிகர அமைப்புகளையும் ஒழித்து விடலாம் என்று அரசு மனப்பால் குடித்தாலும் அது சாத்தியமில்லை. ஒரு ஊரில் ஓரிருவர் மட்டும் போராளியாக இருந்தால் இந்தக் கண்காணிப்பு மூலம் கைது செய்யலாம். ஊரே போராளியாக இருந்தால் என்ன செய்வார்கள்? குண்டு போட்டு அழித்து விடுவார்களா? 8 விதை நெல்: விவசாயிகளுக்கு எதிராக மான்சாண்டோவின் ஏகபோகம்! http://www.vinavu.com/2013/06/07/monsanto-monopoly-on-agricultural-seeds/   மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளை விற்கும் பன்னாட்டு நிறுவனமான மான்சான்டோ விவசாயிகளை வாழ்நாள் முழுவதும் தனக்கு அடிமையாக வைத்திருக்க முயற்சிக்கிறது என்பதையும், அதற்கு அரசின் சட்டங்களும், நீதி மன்றங்களும் உறுதுணையாக நிற்கின்றன என்பதையும் விளக்கும் ஒரு வழக்கு அமெரிக்காவில் நடந்துள்ளது. வெர்னான் போமேன் என்ற அமெரிக்காவின் இண்டியானா மாநிலத்தைச் சேர்ந்த விவசாயிக்கும், மான்சாண்டோவிற்கும் இடையிலான வழக்கில் அமெரிக்க உச்சநீதி மன்றம் தனது தீர்ப்பை வழங்கியிருக்கிறது. இந்த வழக்கு நவீனயுகத்தின் டேவிட் – கோலியாத் வழக்கு என்று வெர்னான் போமேனின் ஆதரவாளர்களால் அழைக்கப்பட்டது. பயிர்கள் களைக் கொல்லிகளால் பாதிப்படைவதிலிருந்து தடுப்பதற்காக பாக்டீரியாவின் (Agrobacterium tumefaciens) மரபணுவை உட்செலுத்தி மரபணு மாற்றம் செய்யப்பட்ட “ரவுண்ட்அப் ரெடி (Roundup Ready)” விதைகளை மான்சாண்டோ தயாரித்துள்ளது. மான்சாண்டோ இவ்வகை பயிர் விதைகளுக்கு ‘வடிவுரிமை’ வாங்கிவைத்துள்ளது. மான்சாண்டோவின் விதையை வாங்கும் விவசாயி ஆர்ஆர்-விதையை பயன்படுத்தி உண்டாகும் பயிரிலிருந்து அடுத்த முறை சாகுபடி செய்வதற்காக விதையை சேமித்து வைக்கக்கூடாது, ஒவ்வொரு முறையும் மான்சாண்டோவிடமே விதை வாங்க வேண்டும், என்ற சரத்து அடங்கிய காப்புரிமை ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும். [போமேன்] இண்டியானா விவசாயி வெர்னான் போமேன் போமேன் 1999-ம் ஆண்டு முதல் மான்சாண்டோவின் தயாரிப்பான ‘ரவுண்ட்அப் ரெடி’ சோயா பீன்ஸ்-ஐ பயிரிட்டு வருகிறார். போமேன் தனது வயலில் வசந்த கால சாகுபடிக்கு மான்சாண்டோவிடமிருந்து வாங்கிய ’ஆர்ஆர் சோயாவை’ பயிரிட்டு, அறுவடைக்கு பின்னர் நிலத்தில் கோதுமை பயிரிட்டுள்ளார். அதன் பின் வருடத்தின் கடைசியில் குளிர்கால சாகுபடிக்கும் சோயாவையே பயிரிட்டுள்ளார். இந்த குளிர்கால சாகுபடியானது மகசூல் குறைவாக அளிக்கக் கூடியதாதலால் அவர் விலை குறைவான விதையை நாடியிருக்கிறார். உள்ளூரில் அவரிடமும் மற்ற விவசாயிகளிடமும் தானியங்களை கொள்முதல் செய்யும் தானிய கிடங்கியில் சோயா விதை வாங்கி அதை பயிரிட்டுள்ளார். இதை அறிந்த மான்சாண்டோ, போமேன் தனது வடிவுரிமை ஒப்பந்தத்தை மீறிவிட்டதாக கீழமை நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. அதாவது தன் விதையை ஒரு முறை பயன்படுத்தி விட்டால் அந்த விவசாயி வாழ்நாள் முழுவதும் தன்னிடமிருந்துதான் விதைகளை வாங்க வேண்டும் என்பது மான்சாண்டோவின் நியாயம். இவ்வழக்கை விசாரித்த கீழமை நீதிமன்றம் போமேன், மான்சாண்டோ நிறுவனத்திற்கு 84,000 அமெரிக்க டாலர்கள் (சுமார் ரூ 45 லட்சம்) அபராதம் கட்டவேண்டும் என்று தீர்ப்பளித்தது. போமென் இத்தீர்ப்பை எதிர்த்து மாநில நீதிமன்றத்தில் (Federal court) மேல்முறையீடு செய்ததில் அங்கும் கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பு உறுதி செய்யப்பட்டது. இவ்வழக்கை போமேன் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அமெரிக்காவின் உச்ச நீதிமன்றம் வரை போய் ஒரு எளிய விவசாயி வாதிட முடிவது அமெரிக்க ஜனநாயகத்தின் மாண்பை காட்டுகிறது என்று முதலாளித்துவ ஆதரவாளர்கள் கொண்டாடுவார்கள். ஆனால், அந்த ஜனநாயகத்தின் சட்டங்கள் யாருக்குத் துணை நிற்கின்றன என்பதை புரிந்து கொள்ள வேண்டும். போமேன் தான் காப்புரிமை ஒப்பந்தத்தை மீறவில்லை என்றும் அறுவடை செய்த தானியத்திலிருந்து விதைக்காக சேமித்து வைக்கவில்லை என்றும், உள்ளூர் தானிய கிடங்கியில் விலை கொடுத்து வாங்கிய பொருளை எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்த தனக்கு முழு உரிமை இருப்பதாக வாதிட்டார். நமது விதைகளை பாதுகாப்போம் (SOS), உணவு பாதுகாப்பு மையம் (CFS) போன்ற சமூக நல அமைப்புகளும் ஆர்வலர்களும் போமேனுக்கு ஆதரவளித்தனர். மான்சாண்டாவுக்கோ மைக்ரோ சாப்ட் உள்ளிட்ட பன்னாட்டு கம்பெனிகளும், தொழில் கூட்டமைப்புகளும் ஆதரவளித்தன. [எலினா ககன்] உச்சநீதிமன்ற நீதிபதி எலினா ககன் வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றமோ போமேன் உள்ளூர் தானிய கிடங்கியிலிருந்து வாங்கிய சோயா விதைகளில் ஆர்ஆர் மரபணுக்கள் இருக்கலாம் என்று தெரிந்தே தான் வாங்கியிருக்கிறார் என்றும், இதன் மூலம் மான்சாண்டோவிற்கு தெரிந்தே நஷ்டம் ஏற்படுத்தியதுடன், அதன் வடிவுரிமையை மீறியிருக்கிறார் என்றும் கூறியுள்ளது. உச்ச நீதிமன்றம் கீழமை நீதிமன்றங்களின் தீர்ப்பை உறுதி செய்து அபராதம் கட்டவேண்டும் என போமேனுக்கு உத்தரவிட்டதன் மூலம் அமெரிக்க சொர்க்கத்தில் ஜனநாயகம் என்பது கார்ப்பரேட் கம்பெனிகளுக்கான ஜனநாயகமே என்று உறுதிசெய்துள்ளது. இதைப் போல் அமெரிக்காவின் 27 மாநிலங்களில் 410 விவசாயிகள் மற்றும் 56 சிறு வணிக நிறுவனங்களுக்கு எதிராக 142-க்கும் மேற்பட்ட காப்புரிமை மீறல் வழக்குகளை மான்சாண்டோ தொடுத்துள்ளதாக உணவு பாதுகாப்பு மையம் தனது அறிக்கையில் தெரிவிக்கிறது. இதில் மான்சாண்டோவின் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களால் மாசடைந்த (contaminated) அண்டை வயல் விவசாயிகளும் அடக்கம். அதாவது நீங்கள் உங்கள் வயலில் சாதாரண விதைகளை பயிரிட்டுள்ளீர்கள், உங்கள் பக்கத்து வயலின் விவசாயி மான்சாண்டோவின் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களை சாகுபடி செய்கிறார் என்று வைத்துக்கொள்வோம். காற்று, மற்றும் அயல் மகரந்த சேர்க்கையின் காரணமாக உங்கள் பயிர் மான்சாண்டோவின் மரபணுக்களால் மாசடைந்தால் நீங்கள் மான்சாண்டோவின் மீது வழக்கு தொடர முடியாது, மாறாக நீங்கள் காப்புரிமையை மீறியதாக மான்சாண்டோ வழக்கு தொடரும். ஏனெனில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இயற்கையாக நடக்கும் மறுஉற்பத்தி முறைக்கு உங்களிடம் வடிவுரிமை இல்லை. ஆனால், அதன் விளைவுகளை கட்டுப்படுத்தும் உரிமையை மான்சாண்டோவிடம் சட்டங்கள் வழங்கியிருக்கின்றன. உற்பத்தியும் மறு உற்பத்தியும் இயற்கையிலேயே நிகழ்பவை. அவை மனித சமூக வளர்ச்சிக்கு ஆதாரமாக இருக்கின்றன. மனித சமூகம் நாகரீகமடைந்ததில் பயிர்களை மறு உற்பத்தி செய்யும் முறை கண்டுபிடிக்கப்பட்டதும், அதை சார்ந்து விவசாயம் வளர்ந்ததும் முக்கிய பங்கு வகித்தன. பாரம்பரியமாக கோடிக்கணக்கான விவசாயிகளால் பின்பற்றப்பட்டு வரும் பயிர்களை மறு உற்பத்தி செய்யும் முறைக்கு இதுநாள் வரை யாரும் உரிமை கோரவுமில்லை, கோரவும் முடியாது. [அமெரிக்க உச்சநீதி மன்றம்] அமெரிக்க உச்சநீதி மன்றத்துக்கு வெளியே பத்திரிகையாளர்களிடம் பேசும் வெர்னான் போமேன். மான்சாண்டோ போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் வடிவுரிமை என்ற பெயரால், உற்பத்திச் சங்கிலியை கட்டுப்படுத்தி விவசாயிகளின் பாரம்பரிய மறு உற்பத்தி உரிமையை மறுப்பதன் மூலம் கொள்ளை லாபமீட்டுகின்றன. மனித குலம் அனைத்திற்கும் சொந்தமான அறிவை, வளத்தை கட்டுப்படுத்தி சட்ட நுணுக்கங்களால் பித்தலாட்டம் செய்கின்றன. “பன்னாட்டு நிறுவனங்கள் எந்த விதையையும் செயற்கையாக உருவாக்கவில்லை. நிலவி வரும் வடிவுரிமை முறைமைகள் பொதுக் களத்தில் உள்ள, வாழ்வுக்கு இன்றியமையாத வளங்களை தனியார் நிறுவனங்கள் உரிமை கொண்டாட வகை செய்வதன் மூலம் மனித குலத்திற்கு கேடு விளைவிக்கின்றன” என்று நமது விதைகளை பாதுகாப்போம் அமைப்பைச் சேர்ந்த டெப்பி பார்க்கர் கூறியிருக்கிறார். கூடவே உற்பத்தியை தமது கட்டுக்குள் கொண்டு வருவதற்காக மான்சாண்டோ செய்யும் தகிடுதத்தங்கள் மக்கள் ஆரோக்கியத்துக்கும் கேடு விளைவிப்பவை. கடந்த ஆண்டு செய்யப்பட்ட சோதனையில் ஆர்ஆர் வகை சோளம் (NK603) கொடுக்கப்பட்ட எலிகளுக்கு புற்று நோய் கட்டிகள் வந்தது கண்டறியப்பட்டுள்ளது. அமெரிக்க வாந்தியை அப்படியே நகலெடுக்கும் இந்தியாவிலும் இதே மான்சாண்டோ தான் பி.டி. பருத்தியை கொண்டுவந்து லட்சக்கணக்கான விவசாயிகளின் தற்கொலைக்கு காரணமாக இருந்து வருவதுடன், விவசாயச் சந்தையில் பி.டி. கத்திரிக்காயை அறிமுகப்படுத்த காத்திருக்கிறது. பி.டி.கத்திரிக்காயை அறிமுகப்படுத்த முனைப்புடன் செயல்பட்ட மன்மோகன் – ஜெய்ராம் ரமேஷ் கும்பல் நாடு முழுவதும் நடந்த போராட்டங்களால் அதை சிறிது காலத்திற்கு தள்ளி வைத்திருப்பதுடன், மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்தால் ஓராண்டு சிறை, லட்சக்கணக்கில் அபராதம் என சட்டமியற்றி மான்சாண்டோவுக்கு அடியாள் வேலையை செய்துள்ளது. மான்சாண்டோவுக்கு எதிராக கடந்த மே 25 அன்று உலகம் முழுவதும் 36 நாடுகளில் ஆயிரக்கணக்கானோர் பங்கு பெற்ற பேரணி, போராட்டங்கள் நடைபெற்றன. மக்கள் அணிதிரண்டு போராட்டங்களின் மூலம் இந்த கோலியாத்துகளின் அதிகார அமைப்புகளையும் நீதிமன்றங்களையும் நிர்ப்பந்திக்க வேண்டும். அப்படியும் நீதி கிடைக்கவில்லையெனில் கோலியாத்துகளின் தலைகளை –அரசு அமைப்புகளை- வெட்டி எறிவதைத் தவிர வேறு வழியில்லை. 9 உங்களைப் பற்றிய விவரங்கள் விற்பனைக்கு கிடைக்கும்! உஷா ராமநாதன் http://www.vinavu.com/2013/05/22/your-data-on-sale/   தகவல்களை பதிவு செயவதற்கும், தொகுப்பதற்கும், இணைப்பதற்கும், தேவைப்படும் போது எடுப்பதற்கும், அகழ்வதற்கும், பகிர்வதற்கும், ஒருவரை அடையாளம் குறிப்பதற்கும், இன்னும் வேறு வழிகளில் தகவல்களிலிருந்து மதிப்பை உருவாக்குவதற்கான சாத்தியங்களை நவீன தொழில் நுட்பம் உருவாக்கியிருக்கிறது. இந்திய மக்கள் அனைவரையும் பட்டியலிடும் முயற்சியின் ஆரம்ப கட்டங்களில் நிதி ஆதாரங்களை வழங்குவதையும், தனது அதிகாரத்தை பயன்படுத்தி மக்களை தரவு தளத்தில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகளையும் அரசு செய்கிறது. ஆனால், அது ஒரு திடமான செயல்படு நிலையை அடைந்த பின்னர் தகவல்களை தனியார் லாபத்துக்காக ஒப்படைக்கப் போவதன் அறிகுறிகள் வெளியாகியிருக்கின்றன. தனியாரை அனுமதித்தல் [adhaar-1]ஜனவரி 28, 2009 தேதியிட்ட நிர்வாக ஆணை ஒன்றின் மூலம் இந்திய தனித்துவ அடையாள எண் ஆணையம் அமைக்கப்பட்டது. அதற்குத் தேவையான “நடைமுறை வசதிகளையும், திட்டமிடுதலையும், நிதி ஆதாரங்களையும் வழங்கி, ஆரம்பத்தில் செயல்படுவதற்கான அலுவலகமும் நிதி ஆதரவும் வழங்கும்” பொறுப்பு மத்திய திட்ட கமிஷனிடம் தரப்பட்டது. அடையாள ஆணையம் தனது “பங்களிப்பு மற்றும் பொறுப்புகளின்” ஒரு பகுதியாக, “தகவல் தொகுப்புகளை உருவாக்கும் துறைகளுக்கு தேவையான வழிகாட்டுதல்கள் வழங்குதல், திரட்டப்பட்டு கணினி மயமாக்கப்படும் தகவல்களை தகுதரப்படுத்துதல், தனிப்பட்ட அடையாள எண்/ஆதார் தகவல்களை பிற தகவல் தொகுப்புகளுடன் இணைத்து ஒத்திசைவு செய்தல்” ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும். “தேசிய மக்கள்தொகை பதிவேட்டை தனித்துவ அடையாள எண் தகவல்களுடன் இணைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை அது எடுக்க வேண்டும். அடையாள எண் தகவல் தொகுப்பின் உரிமையாளர் என்ற முறையில் இதனை செயல்படுத்த வேண்டும்.” குடிமக்களுடனான தனது பரிமாற்றங்களிலிருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களை பாதுகாவலர் என்ற முறையில்தான் ஒரு அரசு வைத்திருக்க வேண்டும். அவை அரசுக்கு சொந்தமானவை அல்ல. நந்தன் நீலகேணி தலைமையிலான தனித்துவ திட்டங்களுக்கான தொழில்நுட்ப ஆலோசனை குழுவினால் தகவல்களின் உரிமை பற்றிய கோட்பாடு வரையறுக்கப்பட்டது. அந்த குழு ஜனவரி 2011-ல் தனது அறிக்கையை வழங்கியது. பொருட்கள் மற்றும் சேவைகள் வரிக்கான வலையமைப்பு, வரி தகவல்களுக்கான வலையமைப்பு, செலவுகள் பற்றிய தகவல்களுக்கான வலையமைப்பு, தேசிய கரூவூல மேலாண்மை ஆணையம், புதிய ஓய்வீதிய திட்டம் ஆகிய 5 திட்டங்களை மட்டும் நேரடியாக குறிப்பிட்டிருந்தாலும், “இந்திய பொது நிர்வாகத்தில் அதிகரித்துக் கொண்டு வரும் தகவல் தொழில்நுட்பம் விரிவாக பயன்படுத்தப்படும் அனைத்து அமைப்புகளுக்கும் தனது கோட்பாடு பொதுவாக செல்லுபடியாக வேண்டும்” என்று நீலகேணி குழு பரிந்துரைத்தது. நீலகேணி குழுவின் புரிதலின்படி, அரசுக்கு கொள்கை வகுத்தல் செயல்படுத்தல் ஆகிய இரண்டு முக்கிய பணிகள் உள்ளன. செயல்படுத்தல் பலவீனமாக உள்ளது, அதை சரி செய்வதற்கான முறைகளை தேடாமல் அதில் தனியார் வணிக நலன்களுக்கான வாய்ப்பை அந்தக் குழு தேடியது. அதன் விளைவாக தேசிய தகவல் சேவையகங்களை உருவாக்கும்படி பரிந்துரைத்தது. “தேசிய தகவல் சேவையகங்கள் பொது நோக்கத்துடனான தனியார் நிறுவனங்களாக இருக்கும். அவை லாபம் ஈட்டுபவையாக இருந்தாலும், அதிக பட்ச லாபம் தேடுபவையாக இருக்காது.” அவற்றின் மீது அரசிற்கு “நீண்டகால கட்டுப்பாடு” இருக்கும். அதாவது, அரசு தனது நோக்கங்களை அடைவதிலும், விளைவுகளிலும் மட்டும் கவனம் செலுத்துவதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். தகவல் சேவையகங்களை சுதந்திரமாக செயல்பட விட வேண்டும். அவற்றில் குறைந்தது 51 சதவீதம் பங்குகள் தனியார் வசம் இருக்க வேண்டும். அரசாங்கத்திடம் குறைந்தது 26 சதவீத பங்குகள் இருக்க வேண்டும். சேவையகம் திடமான நிலையை அடைந்த பிறகு அரசு அதன் பணம் கொடுக்கும் வாடிக்கையாளராக மாறி விடும். பணம் கொடுக்கும் வாடிக்கையாளராக “அரசாங்கம் தனது வணிகத்தை இன்னொரு தகவல் சேவையகத்துடன் நடத்திக் கொள்ளலாம்”; ஆனால், “பெருமளவிலான ஆரம்ப முதலீடு, பரந்த அளவில் செயல்படுவதன் ஆதாயங்கள், சூழலிலிருந்து கிடைக்கும் வலையமைப்பு ஆதாயங்கள் (இதன் பொருள் என்ன என்று மேலும் விளக்கப்படவில்லை) இவற்றின் காரணமாக தகவல் சேவையகங்கள் அடிப்படையில் இயற்கை ஏகபோகங்களாக உருவாக்கப்படும்”. அதிகார வர்க்கத்தின் ஒத்துழைப்பை உறுதி செய்வதற்கு, “அரசுப் பணியில் இருக்கும் அதிகாரிகள்” சேவையகங்களில் அமர்த்தப்படுவார்கள். சம்பளத்தில் 30 சதவீதம் அவர்களுக்கு கூடுதல் படியாக வழங்கப்படும். அரசு ஒரு வாடிக்கையாளராக “செயல்பாடு ஆரம்பித்த பிறகு அரசின் பங்களிப்பு ஒரு வாடிக்கையாளராக உரு மாறும்,” என்று நீலகேணி குழு பெருமிதத்துடன் குறிப்பிடுகிறது. [aadhar-2]மொத்தத்தில், நீலகேணி குழுவின் அறிக்கையிலிருந்து தெரிய வருவது இதுதான்: தேசிய தகவல் சேவையகங்களை உருவாக்குவதன் மூலம் அரசிடம் சேரும் தகவல்களும் தகவல் தொகுப்புகளும் தனியார்மயமாக்கப்படும். தகவல் சேவையகங்கள் தகவல்களின் உரிமையாளராக இருக்கும். அவை இயற்கையான ஏகபோகங்களாக விளங்கும். அவை தகவல்களையும் தகவல் தொகுப்பையும் லாபம் ஈட்ட பயன்படுததும், ஆனால் அதிகபட்ச லாபம் ஈட்ட பயன்படுத்த மாட்டா. (லாபம் ஈட்டுதல், அதிக பட்ச லாபம் ஈட்டுதல் ஆகியவற்றின் வரையறைகள் இதுவரை தெளிவாக இல்லை). தகவல் சேவையகங்கள் திடமான செயல்பாட்டு நிலையை அடைவது வரை நிதி உதவி அளித்து அரசு அவற்றை ஆதரிக்கும். தகவல்களை திரட்டவும் தகவல் தொகுப்பை உருவாக்கவும் தேவையான நடவடிக்கைகளை அரசு தன் அதிகாரத்தை பயன்படுத்தி எடுக்கும். சேவையகங்களில் அரசு அதிகாரிகள் பணிக்கு அமர்த்தப்பட்டு சம்பளத்துக்கு மேல் 30 சதவீதம் கூடுதல் படியாக பெறுவார்கள். அறிக்கை வெளிப்படையாக குறிப்பிடா விட்டாலும், அதன் மூலம் அவர்களது விசுவாசமும், சேவையகத்தின் நலன்கள் மீதான பற்றுதலும் உறுதி செய்யப்படும். குடிமக்களின் தகவல்களை பாதுகாவலராக அரசு வைத்திருக்கும் கோட்பாடு கைவிடப்பட்டடு, அரசை வாடிக்கையாளராக கொண்ட ஒரு தனியார் அமைப்புக்கு குடிமக்களைப் பற்றிய தகவல்களின் உரிமை வழங்கப்படும். தனியார் நிறுவனங்கள் நமது தரவுகளை சொந்தமாக்கிக் கொள்வது பற்றிய அந்த கோட்பாடு மாநில அரசுகளுடனோ, தகவல்கள் திரட்டப்படும் மக்களுடனோ விவாதிக்கப்படவில்லை. விளக்கம் இல்லாத கோட்பாடுகள் நீலகேணி குழு அறிக்கையை எதிர்காலம் இல்லாத இன்னொரு அறிக்கை என்று நாம் ஒதுக்கி தள்ளியிருக்கலாம். ஆனால், மார்ச் 2012-ல் அப்போது நிதி அமைச்சராக இருந்த பிரணாப் முகர்ஜி சமர்ப்பித்த நிதிநிலை அறிக்கையில், “பொருட்கள், சேவைகள் வரி வலையமைப்பு ஒரு தேசிய தகவல் சேவையகமாக” உருவாக்கப்படும் என்று அறிவித்தார். தகவல் சேவையகம் என்றால் என்ன என்பது நாடாளுமன்றத்தில் விளக்கப்படவில்லை, யாரும் அதைப் பற்றி கேள்வி எழுப்பியதாகவும் தெரியவில்லை. தகவல் சேவையகங்களுக்கான அடிப்படையை இந்திய தனித்துவ அடையாளஎண் ஆணையம் வழங்கியது என்பதற்கு பல கவலை தரும் ஆதாரங்கள் உள்ளன. தகவல் சேவையகங்கள் பற்றிய அறிக்கையில் அடையாள ஆணையமும் அது எப்படி தகவல் சேவையகங்களுக்கு முன் மாதிரியாக செயல்படுகிறது என்பதும் பரவலாக குறிப்பிடப்படுகின்றன. செப்டம்பர் 2009-ல் அடையாள ஆணையம் உருவாக்கிய உயிரிஅளவீட்டு தகுதர குழு தனது அறிக்கையை டிசம்பரில் வழங்கியது. அடையாள ஆணையம், “குடிமக்களின் அடையாள விபரங்களை முதலில் திரட்டுவதற்கும்; அதைத் தொடர்ந்து அடையாளங்களை சரிபார்ப்பதற்கான் சேவையை அரசுக்கும் தனியார் நிறுவனங்களுக்கும் வழங்குவதற்கும் ஒரு தளத்தை உருவாக்கும்” என்று அது அறிவித்தது. ஏப்ரல் 2010-ல் வெளியிடப்பட்ட “அடையாள ஆணையத்தின் நீண்டகால திட்ட மேலோட்டத்தில்” ஆணையம் நிலையான செயல்பாட்டை எட்டியதும் ஆண்டுக்கு ரூ 288.15 கோடி வருமானத்தை ஈட்டும் என்று மதிப்பிடப்பட்டிருந்தது. புதிய தொலைபேசி இணைப்புகள், வருமான வரி கணக்கு அட்டைகள், சமையல் வாயு இணைப்புகள், கடவுச் சீட்டுகள், ஆயுள் காப்பீட்டு ஆவணங்கள், விமான பயண பதிவுகள் போன்றவற்றிற்கு முகவரி சரிபார்த்தலுக்கும் உயிரி அடையாள விபரங்களை சரிபார்த்தலுக்கும் வசூலிக்கும் கட்டணம் மூலம் அந்த வருமானம் ஈட்டப்படும். அப்படி வருமானம் வரும் காலம் வரை, அதற்கு அரசின் நிதி உதவி அளிக்கப்பட வேண்டும். அந்த நிலையை அடைந்த பிறகு, அது ஒரு தனியார் லாபம் ஈட்டும் அமைப்பாகவும், அரசு அதன் வாடிக்கையாளர்களில் ஒருவராகவும் மாறும். தகவல் விலைக்கு திரு நீலகேணி தகவல் தொகுப்பை “வெளிப்படையான கட்டமைப்பு” அன்று அழைக்கிறார். அதாவது, வணிகம் வளர வளர அதிலிருந்து புதிய பயன்பாடுகளை உருவாக்கிக் கொள்ளலாம். அது பயன்படுத்தப்படுவதற்கு எந்த ஒரு வரைமுறையும் எல்லைகளும் இல்லை. ஆதார் எண்ணை சகலமும் தழுவிய, எங்கெங்கும் பயன்படுத்தப்பட வேண்டிய தனித்துவ எண்ணாக அவர் மீண்டும் மீண்டும் விளக்கியிருக்கிறார். விருப்பத்தின் அடிப்படையிலானது என்று சொல்லப்பட்டாலும் எல்லோருக்கும் எல்லா சேவைகளும் நடவடிக்கைகளும் தனிப்பட்ட அடையாள எண்ணை சார்ந்தே இருப்பதாக உருவாக்கும் நோக்கம் அரசுக்கு உள்ளது. அதன் மூலம் தகவல் நிறுவனத்திற்கு தொடர்ச்சியான வருமானம் வருவது உறுதி செய்யப்படும். அடையாள எண் சேர்ப்பு படிவத்தில், “தகவல் பகிர்வுக்கான ஒப்புதல்” என்ற ஒரு கட்டம் உள்ளது. அடையாள ஆணையம் வாழ்நிலை தகவல்களையும் உயிர்அளவீட்டு தகவல்களையும் விலைக்கு விற்பதை அது அனுமதிக்கிறது. இது தொடர்பான சட்டம் ஒன்றை உருவாக்குவதில் மிகக் குறைவான ஆர்வமே இருப்பது ஏன் என்பதை இது விளக்குகிறது. இந்தத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டு ஏறத்தாழ இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நாடாளுமன்றத்தில் ஒரு மசோதா அறிமுகப்படுத்தப்பட்டது. டிசம்பர் 2011-ல் நாடாளுமன்ற நிலைக்குழு அந்த மசோதாவையும் திட்டத்தையும் நிராகரித்த பிறகு சட்டம் குப்பைத் தொட்டிக்குள் போய் விட்டது. தேசிய தனித்துவ அடையாள ஆணையம், நிறுவனங்கள் சட்டத்தின் படி நடத்தப்படும் ஒரு வணிக நிறுவனம். அடையாள ஆவணம் அல்லது எண் இல்லாத ஒரு குடிமகனை தண்டிக்காமல் அவருக்கு வாய்ப்பு அளிப்பதான அரசின் பாதுகாவலர் பங்களிப்பை அங்கீகரிக்கும் சட்டத்தால் நடத்தப்படப் போவதில்லை. இந்திய தனித்துவ அடையாள எண் ஆணையத்தை உருவாக்குவதற்கான 2009-ம் ஆண்டு அரசாணையில் அந்த ஆணையம் “தேசிய மக்கள்தொகை பதிவேட்டையும் தனித்துவ அடையாள எண்ணையும் இணைப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. குடிமக்கள் சட்டம் மற்றும் குடிமக்கள் விதிகள் 2003-ன் கீழ் தேசிய மக்கள்தொகை பதிவேட்டில் பதிவு செய்து கொள்வது கட்டாயமானதாகும். உயிரிஅளவீடுகளை திரட்டுவது தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் பொறுப்பாக இல்லா விட்டாலும் நடைமுறையில் மக்கள் தொகை கணக்கீட்டின் போது போது அவையும் சேகரிக்கப்பட்டன. தேசிய மக்கள் தொகை பதிவேட்டிற்காக வாங்கப்பட்ட தகவல்கள் அடையாள ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டு அதன் சொத்தாக மாறுவது குறித்து அந்த தகவல்களுக்கு சொந்தக்காரர்களான மக்களுக்கு தெரிவிக்கப்படக் கூட செய்யவில்லை. (உஷா ராமநாதன் ஒரு சுதந்திரமான சட்ட ஆய்வாளர். இந்திய அடையாள அட்டை ஆணையத்தின் கொள்கைகளையும் நடவடிக்கைகளையும் 2009 முதலாகவே கண்காணித்து வருபவர்.) இந்து நாளிதழில் வெளியான கட்டுரையின் மொழிபெயர்ப்பு. தமிழாக்கம்: அப்துல் படங்கள் : நன்றி இந்து நாளிதழ் 10 சோதனைச்சாலை எலிகளா இந்திய மக்கள்? http://www.vinavu.com/2013/04/26/mnc-clinical-trials-in-india/   “மேற்கத்திய பன்னாட்டு மருந்து நிறுவனங்களிடம் பணம் இருக்கிறது, அறிவு இருக்கிறது, திறமை இருக்கிறது, அதனால்தான் அவர்களால் புதிய புதிய மருந்துகளை கண்டுபிடித்து சந்தைக்கு கொண்டு வர முடிகிறது. அந்த மருந்துகளே இல்லை என்றால் குறைந்த விலைக்கு கொடு என்று எப்படி கேட்பீர்கள்?” “உழைக்காத சோம்பேறி கூட்டங்கள், 1 ரூபாய் இட்லிக்கு வரிசையில் நிற்கும் ஆட்டு மந்தைகள், இவங்களுக்கு எல்லாம் புற்றுநோய் சிகிச்சை கேக்குதோ” என்று வசை பாடுகிறார்கள் முதலாளித்துவ ஆதரவாளர்கள். பல லட்சம் கோடிகளில் சம்பாதிக்கும் பன்னாட்டு நிறுவனங்கள்தான், ‘கஷ்டப்பட்டு உழைப்பவர்கள், அறிவியலை வளர்த்துச் செல்பவர்கள், மனித குலத்துக்கு தொண்டு செய்பவர்கள்’ என்று புகழ் பாடுகிறார்கள். இந்த பன்னாட்டு நிறுவனங்கள் தொண்டு செய்யும் இலட்சணம்தான் என்ன? இவர்கள் புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தும் முறைக்கு ஒரு உதாரணத்தை பார்க்கலாம். [கிளாக்சோ ஸ்மித்கிளைன் கார்ட்டூன்] கிளாக்சோ ஸ்மித்கிளைன் மருந்து விற்று ஈட்டும் லாபம் விண்ணைத் தொடுகிறது, மருந்தக ஆராய்ச்சிக்கான செலவுகள் பாதாளத்தில் வீழ்கின்றன. மக்கள் தூக்கில் தொங்குகிறார்கள். கடந்த 7 ஆண்டுகளில் இந்தியாவில் பன்னாட்டு மருந்து நிறுவனங்கள் நடத்திய மருத்துவ ஆராய்ச்சிகளில் 2,644 நோயாளிகள் உயிரிழந்துள்ளார்கள் என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. 475 புதிய மருந்துகளை பயன்படுத்தி இந்திய நோயாளிகளிடம் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. அவற்றில் 17 மருந்துகள் மட்டுமே இந்தியாவில் பரிந்துரைக்க அனுமதிக்கப்பட்டவை. உயிரிழந்தவர்களில் 80 பேர் மட்டுமே ஆராய்ச்சிக்கு கொடுக்கப்பட்ட மருந்தின் விளைவாக இறந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டது. 2005 முதல் 2012 வரையிலான 7 ஆண்டு காலத்தில் மருந்து ஆராய்ச்சிகளுக்குட்படுத்தப்பட்ட 57,303 நோயாளிகளில் உயிரிழப்புகளை தவிர 11,972 மோசமான எதிர்விளைவுகள் ஏற்பட்டன எனவும், அவற்றில் 506 மட்டுமே ஆராய்ச்சி மருந்துகளால் ஏற்பட்டவை என்றும் மத்திய சுகாதாரத் துறை செயலர் கேஷவ் தேசிராஜூ நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்தார். பேயர் நிறுவனத்தின் ரிவரோக்சபன், நோவார்டிஸ் நிறுவனத்தின் (அதே புற்று நோய் மருந்து கிலிவெக் புகழ் அதே நோவார்டிஸ்) அலிஸ்கிரின் ஆகிய மருந்துகள் அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தியுள்ளதாக பதிவாகியுள்ளன. ரிவரோக்சபன் ஆராய்ச்சி சோதனைகளில் 2008-ம் ஆண்டு 21 மரணங்களும், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு 125 மரணங்களும் பதிவாகியுள்ளன. இரண்டு கால கட்டங்களிலும் தலா 5 உயிரிழப்புகள் மட்டுமே ஆராய்ச்சி மருந்தினால் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. சென்ற ஆண்டு நோவார்டிஸ் அலிஸ்கிரின் என்ற ஆராய்ச்சி மருந்தை எனலாப்ரில் என்ற மருந்தோடு ஒப்பிடும் ஆராய்ச்சி நடத்தியதில் 47 மரணங்கள் பதிவாகியிருந்தன. அவற்றில் 1 மட்டுமே மருந்தினால் விளைந்தது என்று தெரிவிக்கப்பட்டது. மருந்தக ஆராய்ச்சி பரிசோதனைகளில் ஈடுபடுத்தப்பட்ட நோயாளிகளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை பதிவு செய்வதிலும், அவர்களில் எத்தனை பேர் மருந்தின் நேரடி தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்கள் என்று வகை பிரிப்பதிலும் இருக்கும் நடைமுறை சிக்கல்களை பார்த்தால் இந்த புள்ளிவிபரங்கள் பனிப் பாறையின் விளிம்பு மட்டுமே என்பது தெளிவாகும். புதிய மருந்துகளை ஆய்வுக் கூடங்களில் விலங்கு மற்றும் மனித செல்களிலும், பின்னர உயிருள்ள விலங்குகளிலும் செலுத்தி பரிசோதிக்கப்பட்ட பிறகு மனிதர்கள் மீது அவற்றை செலுத்தி பரிசோதிக்கிறார்கள். இந்த ஆராய்ச்சி பரிசோதனைகள் மூன்று கட்டங்களாக நடைபெறுகின்றன. முதல் கட்டம் – ஆரோக்கியமான தன்னார்வலர்களுக்கு கொடுத்து பரிசோதிப்பது; இரண்டாவது கட்டம்: குறைந்த எண்ணிக்கையிலான நோயாளிகளுக்கு மட்டும் கொடுத்து பரிசோதிப்பது; மூன்றாவது கட்டம்: பெரும் எண்ணிக்கையிலான நோயாளிகளுக்கு பரவலாக கொடுத்து பரிசோதிப்பது. கூடவே மருந்து சந்தையில் விற்பனை ஆரம்பித்த பிறகு பாதுகாப்பு மற்றும் பக்க விளைவுகளுக்கான நான்காவது கட்ட பரிசோதனைகள் சில சமயங்களில் நடத்தப்படுகின்றன. [மருந்தக ஆய்வுகள்]ஆரோக்கியமான தன்னார்வலர்கள் மீது நடத்தப்படும் முதல் கட்ட ஆராய்ச்சி பரிசோதனைகளுக்கு பத்திரிகைகளிலும் பிற ஊடகங்களிலும் விளம்பரப்படுத்தப்பட்டு பங்கு பெறுவோர் அழைக்கப்படுகிறார்கள். பங்கேற்பவர்கள் அனைவருக்கும் ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது. வேறு வேலையின்றி பணத்திற்காக இத்தகைய அபாயங்களை இந்த மக்கள் ஏற்றுக் கொள்கிறார்கள். இந்த பரிசோதனையில் மருந்து உள்வாங்கப்படுதல், வளர்சிதை மாற்றம், உடலிலிருந்து வெளித்தள்ளப்படுதல் இவற்றை அளவிடுவதும், படிப்படியாக மருந்தின் அளவை அதிகரித்து மருந்தின் பாதுகாப்பு மற்றும் சகிப்புத் தன்மையை அளவிடுவதும் செய்யப்படுகின்றன. இரண்டாம் கட்டத்தில் நூற்றுக்கணக்கான நோயாளிகளுக்கு பல மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் வரை மருந்துகள் கொடுத்து பரிசோதிக்கப்படுகின்றனர். இதில் பங்கேற்பவர்கள் அந்த நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள். அவர்களுக்கு பணம், அல்லது இலவச மருத்துவ சிகிச்சை அல்லது இலவச மருந்து வடிவத்தில் ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது. இந்த ஆராய்ச்சி பரிசோதனைகள் மூலம் மருந்தின் பாதுகாப்பும் செயல்படும் திறனும் அளவிடப்படுகிறது. இந்த ஆராய்ச்சிகளில் பங்கேற்பவர்களுக்கும் (நோயாளிகள்) சரி, ஆய்வு செய்பவர்களுக்கும் (மருத்துவர்கள்) சரி, எந்த நோயாளிக்கு மருந்து தரப்படுகிறது, எந்த நோயாளிக்கு வெறும் சர்க்கரை மாத்திரை தரப்படுகிறது என்று தெரிவதில்லை. மூன்றாவது கட்ட ஆராய்ச்சிகள் பல லட்சம் நோயாளிகள் மீது உலக அளவில் நடத்தப்படுகின்றன. இதன் மூலம் மருந்தின் பாதுகாப்புத் தன்மை, திறன், மற்ற மருந்துகளுடன் சேரும் போது ஏற்படும் விளைவுகள், மோசமான பக்க விளைவுகள், கொடுக்க வேண்டிய பொருத்தமான அளவு போன்றவை தீர்மானிக்கப்படுகின்றன. [மருந்தக ஆராய்ச்சி - இந்தியா] பன்னாட்டு மருந்து நிறுவனங்களுக்கு இந்தியா மருந்தக ஆராய்ச்சிக்கு கவர்ச்சிகரமான நாடாக விளங்குவது ஏன்? உலக வர்த்தகக் கழகத்தின் விதிமுறைகளுக்கேற்ப, (பன்னாட்டு மருந்து நிறுவனங்களின் தேவைக்கேற்ப), இந்தியாவின் புதிய மருந்துகளுக்கான சட்டம் 2005-ம் ஆண்டு திருத்தப்பட்டது. ஒரு மருந்துக்கான மருந்தக ஆராய்ச்சி சோதனைகளை மற்ற நாடுகளில் நடக்கும் போதே இந்தியாவிலும் இணையாக நடத்துவதற்கு அந்த சட்டத் திருத்தம் வழி செய்து கொடுத்தது. அதற்கு முன்பு மற்ற நாடுகளில் ஆராய்ச்சி பரிசோதனைகள் முடிக்கப்பட்ட பிறகுதான் இந்தியாவில் ஆராய்ச்சி செய்ய அனுமதிக்கப்பட்டு வந்தது. இதன் மூலம் வளர்ந்த நாடுகளில் மருந்தக ஆராய்ச்சி நடத்துவதற்கு ஒப்புதல் கிடைக்காத மருந்துகளை இந்திய மக்களை பயன்படுத்தி ஆராய்ச்சி செய்வதற்கு பன்னாட்டு நிறுவனங்களுக்கு வழி கிடைத்தது. மேலும் மருந்தக ஆராய்ச்சிகள் நடத்துவதற்கு மேற்கத்திய நாடுகளில் செலவாவதை விட இந்தியாவில் சுமார் 50% தான் செலவாகிறது. இந்தியாவின் பெரும் மக்கள் தொகை, பரவலான மருத்துவமனை வலைப்பின்னல், திறமையான மருத்துவ ஊழியர்கள் இவை அனைத்தும் பன்னாட்டு மருந்து நிறுவனங்களின் கவனத்தை ஈர்த்திருக்கின்றன. மருந்தக ஆராய்ச்சிகளில் பங்கேற்பவர்களுக்கு (நோயாளிகளுக்கு) நடத்தப்படும் ஆராய்ச்சி பற்றிய விபரங்கள், எதிர்பார்க்கப்படும் பக்க விளைவுகள், ரகசிய காப்பு பிரச்சனைகள், உரிமைகள் பற்றி தெளிவாக விளக்கப்பட வேண்டும். ஆங்கிலம் தெரியாத நோயாளிக்கு அவரது தாய்மொழியில் விபரங்கள் தரப்பட வேண்டும். தரப்பட்ட விபரங்களை முழுமையாக படித்து புரிந்து கொள்வதற்கு போதுமான நேரம் கொடுக்கப்பட வேண்டும். அவற்றைக் குறித்து நண்பர்களிடமும் குடும்பத்தாரிடமும் பேசி முடிவு செய்யவும் அவகாசம் அளிக்கப்பட வேண்டும். இது தொடர்பான சந்தேகங்களை தீர்த்துக் கொள்வதற்காகவே மருத்துவர் நோயாளியை சந்திக்க வேண்டும். அதற்கு பிறகுதான் பங்கேற்பவர்கள் ஆராய்ச்சியில் ஈடுபடுத்தப்பட ஒப்புதல் அளிக்க வேண்டும். எந்த நேரத்திலும் காரணம் எதுவும் சொல்லாமல் ஆராய்ச்சியிலிருந்து விலகிக் கொள்ளவும் நோயாளிக்கு உரிமை இருக்க வேண்டும். மருந்தக ஆராய்ச்சிகளில் பங்கேற்பவர்களுக்கு கீழ் வரும் கேள்விகளுக்கு விடை தெரிய வேண்டும். - இது வரை நிரூபிக்கப்படாத மருந்துகள் இந்த ஆராய்ச்சியில் பயன்படுத்தப்பட உள்ளனவா? - இந்த ஆய்வின் நோக்கம் என்ன? - இந்த ஆய்வு எத்தனை காலம் நடத்தப்படும்? - இதன் பக்க விளைவுகள் என்னென்ன? - என்னனென்ன அபாயங்கள் ஏற்படலாம்? - என்னென்ன ஆய்வக சோதனைகள் நடத்தப்படும்? - வேறு விதமான சிகிச்சைகள் உள்ளனவா? - மோசமான விளைவுகள் ஏற்பட்டால் சிகிச்சைக்கான செலவுகளை யார் ஏற்றுக் கொள்வார்கள்? - தனிநபர் விபரங்களும் பதிவுகளும் ரகசியமாக வைக்கப்படுமா? - காப்பீடு உள்ளதா? இருக்கிறது என்றால் எந்த அளவுக்கு? - மருத்துவ நெருக்கடி ஏற்பட்டால் தொடர்பு கொள்வதற்கு பரிசோதனையை நடத்தும் ஊழியர்களின் தொடர்பு எண்கள். - ஒப்புதல் அளித்த அமைப்பின் செயலரின் தொடர்பு எண்கள் - ஒப்புதல் கையொப்பமிட்ட படிவம் நோயாளிக்குத் தரப்படுமா? - போக்குவரத்து, கூடுதல் மருத்துவ செலவுகள் தரப்படுமா? - ஊக்கத் தொகை விபரங்கள் - ஆராய்ச்சிப் பணி முடிந்த பிறகு மருந்து இலவசமாக அல்லது மானிய விலையில் வழங்கப்படுமா? [இந்திய மருத்துவமனை ஒன்றில்] இந்திய மருத்துவமனை ஒன்றில் மருத்துவர்களை கடவுளாக கருதும் இந்தியாவில் நோயாளிகள் மருத்துவர் மீது குருட்டுத்தனமான நம்பிக்கை காட்டுவதையும், மருத்துவர் சொல்லும் எந்த ஆவணத்திலும் கையொப்பமிட தயாராக இருப்பதையும், மருத்துவர் சொல்வதை எல்லாம் செய்வதையும் பார்க்கலாம். மருந்தக ஆராய்ச்சிகளில் பங்கேற்கும் பெரும்பான்மை நோயாளிகள் அவர்களது மருத்துவர்கள் சொன்னதால் மட்டுமே கலந்து கொள்கிறார்கள். என்ன ஏது என்ற விபரங்களை நோயாளிகள் கேட்டு தெரிந்து கொள்வது அரிதாகவே நடக்கிறது. மருந்து நிறுவனம் தருவதாகச் சொல்லும் புகழும் பணமும் பல மருத்துவர்களை கவர்கின்றன. அவை நோயாளிகளை வரைமுறையற்று ஆராய்ச்சிகளில் சேர்த்துக் கொள்வதிலும் சேர்ப்பதிலும், முழு விபரங்களை தெரிவித்து ஒப்புதல் பெறாமல் சேர்ப்பதிலும் கொண்டு விடுகின்றன. ஆராய்ச்சியில் கலந்து கொண்டவருக்கு ஏதாவது மோசமான விளைவுகள் ஏற்பட்டால் மருந்து நிறுவனங்கள், ‘அவை தமது மருந்தினால்தான் ஏற்பட்டது’ என்பதற்கான ஆதாரத்தை கேட்பது வாடிக்கை. அப்படி நிரூபித்தால்தான் சிகிச்சை அளிப்பதற்கான செலவை ஏற்றுக் கொள்வோம் என்றும் சொல்கிறார்கள். நோயாளிக்கு ஏற்பட்ட சிக்கல் ஆராய்ச்சி மருந்து மற்ற மருந்துகளுடன் சேர்வதாலோ அதனுடன் நேரடியாக இணைக்க முடியாத இன்னும் பல காரணங்களாலோ ஏற்பட்டிருக்கலாம் எனும் போது தமது பொறுப்பைத் தட்டிக் கழித்து செலவைக் குறைப்பதுதான் மருந்து நிறுவனங்களின் நோக்கமாக இருக்கிறது. மருந்தக ஆராய்ச்சிகளில் பல விதமான சமரசங்களும் சுரண்டல்களும் நடப்பதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன. ஆராய்ச்சி நடத்தச் சொல்லும் மருந்து நிறுவனத்துக்கும் ஆராய்ச்சியை நடத்தும் மருத்துவருக்கும் இடையே, மருந்து நிறுவனத்துக்கும் நோயாளிக்கும் இடையே, மருத்துவருக்கும் நோயாளிக்கும் இடையே, மருந்து நிறுவனத்துக்கும் ஒழுங்கு முறை அமைப்புக்கும், ஒழுங்கு முறை அமைப்புக்கும் மருத்துவருக்கும் இடையே என்று ஒவ்வொரு மட்டத்திலும் பணமும், நோயாளியின் நலனுக்குப் புறம்பான காரணிகளும் தாக்கம் செலுத்துகின்றன. இலவச மருந்துகள், இலவச சிகிச்சை அல்லது பணம் கொடுப்பதன் மூலம் பலரை கவர்ந்து விடலாம். குறிப்பாக வசதி குறைந்த, படிப்பறிவற்ற ஏழை மக்களை முழு விபரங்களையும் பரிசீலிக்காமலேயே மருந்தக ஆராய்ச்சிகளில் சேர்ந்து கொள்ள தூண்டுவதும் ஆராய்ச்சி விதிமுறைகளிலிருந்து விலகல்கள், மீறல்கள், மாறுதல்கள் இவற்றை ஒழுங்கு முறை அமைப்பு கண்டு கொள்ளாமல் விடுவதும் பரவலாக நடக்கிறது. தொலை தூரத்திலிருந்து வரும் நோயாளிகள் மருந்தக ஆராய்ச்சிகளில் சேர்க்கப்பட்ட பிறகு, ஆராய்ச்சி மருந்து இலவசமாக கொடுக்கப்பட்டாலும், சோதனைகளுக்கான கட்டணங்களும் போக்குவரத்து செலவும் அவர்களுக்கு கொடுக்கப்பட்டாலும், நடைமுறையில் அவர்கள் பரிசோதனையில் கலந்து கொள்ளா விட்டால் செலவாவதை விட அதிகமாகவே செலவழிக்க நேரிடுகிறது. மலிவான, நிரூபிக்கப்பட்ட மருந்தை பயன்படுத்துவதன் மூலம் தேவையற்ற சோதனைகளையும், சிகிச்சைகளையும் தவிர்த்திருக்கலாம். ஆராய்ச்சி தேவைக்காக வாரா வாரம் அல்லது மாதா மாதம் மருத்துவமனைக்கு வருவதற்கு பதிலாக ஆண்டுக்கு ஓரிரு முறை வந்தால் போதுமானதாக இருந்திருக்கும். பன்னாட்டு நிறுவனங்களின் வேட்டைக் காடாக நமது நாட்டை மாற்றி, அவர்களது லாப வெறிக்கு நமது மக்களை பலியாக கொடுப்பதுதான் ஆளும் வர்க்கத்தின் தனியார் மய, தாராள மய, உலக மயமாக்கல் கொள்கைகளின் நோக்கம். அது சீரும் சிறப்புமாக நிறைவேறி வருகிறது என்பதைத்தான் மருந்தக ஆராய்ச்சி பரிசோதனைகள் பற்றிய தகவல்கள் தெரிவிக்கின்றன. 11 வடிவுரிமைச் சட்டத் திருத்தம்: இயற்கைச் செல்வங்களுக்கு ஆபத்து! செல்வம் http://www.vinavu.com/2013/04/25/indian-patent-act-amendments/   இந்தியா உலக வர்த்தகக் கழகத்தில் இணைந்த பொழுது, நமது நாட்டின் 1970ஆம் ஆண்டு வடிவுரிமைச் சட்டத்தைத் தூக்கிப் போட்டுவிட்டு, அதற்குப் பதிலாக அமெரிக்காவில் இருப்பது போன்ற வடிவுரிமைச் சட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டது. சனவரி 1, 2005க்குள் புதிய வடிவுரிமைச் சட்டம் நடைமுறைக்கு வந்துவிட வேண்டும் என்றும் உலக வர்த்தகக் கழகம் காலக்கெடு விதித்திருந்தது. நமது நாட்டின் 1970ஆம் ஆண்டு வடிவுரிமைச் சட்டத்தின்படி, மருந்துப் பொருட்கள், விவசாயத்தில் பயன்படுத்தப்படும் இரசாயனப் பொருட்கள், தாவரங்கள், நுண்ணுயிர்கள், விதைகள் ஆகியவற்றின் மீது வடிவுரிமை கோர முடியாது. [மருந்து சுமை] மருந்து சுமை மருந்துகள், இரசாயன உரங்களைத் தயாரிக்கும் செய்முறைக்கு மட்டும்தான் வடிவுரிமை வழங்கப்படும். ஒரு பொருளைப் பல்வேறு செய்முறைகளைப் பயன்படுத்தி தயாரிப்பதற்கும் இந்தியச் சட்டம் அனுமதி அளித்திருக்கிறது. ஆனால், அமெரிக்கா, பிரிட்டன் போன்ற ஏகாதிபத்திய நாடுகளில் இருக்கும் வடிவுரிமைச் சட்டமோ, பொருட்களின் மீதே வடிவுரிமை வழங்குவதோடு, வடிவுரிமை பெற்ற பொருட்களைப் பல்வேறு செய்முறைகளைப் பயன்படுத்தி தயாரிப்பதைத் தடுத்து விடுகிறது. உலக வர்த்தகக் கழகத்தின் கட்டளைப்படி, இந்திய வடிவுரிமைச் சட்டத்தில் ஏற்கெனவே இரண்டு திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்திய வடிவுரிமைச் சட்டத்தை முற்றிலுமாக அமெரிக்க பாணியில் மாற்றியமைக்கும் அரசாணையை, கடந்த டிசம்பர் மாதம், நாடாளுமன்றத்துக்குக் கூடத் தெரியாமல் மைய அரசு அறிவித்தது. இப்பொழுது, மார்ச் மாதம் நடைபெறவுள்ள பட்ஜெட் கூட்டத் தொடரில் அந்த அரசாணையைச் சட்டமாக மாற்ற முடிவெடுக்கப்பட்டுள்ளது. ஒரு சட்டத்திற்குப் பதில் இன்னொரு சட்டம் வருகிறது என இந்த மாற்றத்தை சாதாரணமாகப் பார்க்க முடியாது. இந்த மாற்றத்தின் மூலம் இந்திய மக்கள் நோய் நொடியின்றி வாழ்வதற்கும் இந்திய அரசுக்கும் சம்மந்தம் கிடையாது. அதைப் பன்னாட்டு மருந்து கம்பெனிகள்தான் தீர்மானிக்கும் என்ற நிலையை உருவாக்கியிருக்கிறார்கள். உதாரணத்திற்குச் சொன்னால், தொற்று வியாதிக்குக் கொடுக்கப்படும் சிப்ரோஃபிளாக்சின் என்ற மருந்து இந்தியாவில் 29 ரூபாய்க்கு (500 மி.கி. கொண்ட 10 மாத்திரைகளின் விலை) விற்கப்படுகிறது. அமெரிக்காவிலோ இந்த 10 மாத்திரைகளின் விலை 2,352 ரூபாய். ‘எய்ட்ஸ்” நோயாளிகள் அமெரிக்க தயாரிப்பு மருந்துகளை வாங்க ஆண்டொன்றுக்கு 5,40,000 ரூபாய் செலவு செய்ய வேண்டியிருந்த பொழுது, இந்திய மருந்து நிறுவனங்கள் அதே மருந்தை 6,300 ரூபாய்க்குத் தயாரித்து விற்றன. இந்தியாவில் பல்வேறு உயிர் காக்கும் மருந்துகள், அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளை விட விலை மலிவாகக் கிடைத்ததற்கு 1970ஆம் ஆண்டு இந்திய வடிவுரிமைச் சட்டம்தான் காரணமாக இருந்தது. இச்சட்டத்தை மாற்றுவதன் மூலம் 1970க்கு முன்பிருந்த நிலையை மருந்துகளின் உற்பத்தியையும், விலையையும் பன்னாட்டு மருந்து கம்பெனிகள் தான் தீர்மானிக்கும் என்ற நிலையை உருவாக்கப் போகிறார்கள். “இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்படும் மருந்துகளுள் ஏறத்தாழ 40 முதல் 60 சதவீத மருந்துகள் இப்புதிய வடிவுரிமை சட்டத்தின் கீழ் சென்று விடும்; சாதாரண தலைவலி, காய்ச்சல் மருந்துகள் கூட 300 சதவீதம் விலை உயரும்” என மருத்துவர்கள் கூறுகிறார்கள். ஒரு மருந்தை, பல்வேறு செய்முறைகளைப் பயன்படுத்தி, பல்வேறு நிறுவனங்கள் தயாரிக்கும் முறையை இப்புதிய வடிவுரிமைச் சட்டம் தடுத்துவிடுவதால், ஆயிரக்கணக்கான இந்திய மருந்து நிறுவனங்கள் இழுத்து மூடப்படும். “அறிவுசார் கண்டுபிடிப்புகளுக்குப் பாதுகாப்பு கொடுக்கவும், அக்கண்டுபிடிப்புகளை மற்றவர்கள் முறைகேடாக ‘காப்பி’யடிப்பதைத் தடுக்கவும்தான் புதிய வடிவுரிமைச் சட்டம் கொண்டு வரப்படுவதாக” உலக வர்த்தகக் கழகம் கூறுகிறது. மாறாக, இச்சட்டம் மருந்து தயாரிக்கும் செய்முறைகளுக்குக் கட்டுப்பாடு விதிப்பதன் மூலம், புதிய பல்வேறு தரப்பட்ட கண்டுபிடிப்புகளுக்கு தடை போடுகிறது; போட்டியாளர்களைச் சந்தையில் இருந்து அகற்றுவதன் மூலம், பன்னாட்டு மருந்து நிறுவனங்களின் இலாபத்திற்குப் பாதுகாப்பு ஏற்படுத்தித் தருகிறது. உலக சுகாதார நிறுவனத்தின் பரிந்துரையின்படி, ஒவ்வொரு நாடும் தனது மொத்த வருவாயில், 5 சதவீதத்தைப் பொது சுகாதாரத்திற்கும், மக்களின் உடல் நலத்திற்கும் செலவழிக்க வேண்டும். ஆனால் இந்திய அரசோ, இதற்குத் தனது வருவாயில் 0.9 சதவீத நிதியைத்தான் ஒதுக்குகிறது. இந்த அற்பமான நிதியையும், இனி பன்னாட்டு மருந்து கம்பெனிகளே தின்று தீர்த்து விடும். உதாரணத்திற்குச் சொன்னால், வெறிநாய்க்கடிக்கு இந்தியாவிலேயே தயாராகும் நரம்புத் திசு தடுப்பு மருந்தின் விலை நான்கு ரூபாய்தான். இந்த ஊசி மருந்தைத் தடை செய்துவிட்டு, அதற்குப் பதிலாக ‘அபய்ராப்” என்ற மருந்தைத்தான் பயன்படுத்த வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் கூறிவிட்டது. பன்னாட்டு நிறுவனங்கள் தயாரித்து விற்கும் ‘அபய்ராப்” மருந்தின் விலை ரூ. 350. சென்னை புறநகர் பகுதியில் உள்ள குரோம்பேட்டை அரசு மருத்துவமனை இப்புதிய நாய்க்கடி மருந்தை வாங்க வேண்டும் என்றால், அதற்கு ஆண்டுக்கு நாற்பது இலட்சம் ரூபாய் தேவைப்படும். ஆனால், அம்மருத்துவமனைக்கு அரசாங்கத்தால் ஒதுக்கப்படும் நிதி ரூ. 25 இலட்சம்தான். இந்த நிதியை புதிய நாய்க்கடி மருந்து வாங்கவே செலவழித்து விட்டால், மற்ற நோய்களுக்கு எப்படி சிகிச்சை அளிக்க முடியும்? ‘பல்வேறு விதமான மருந்துகளின் மீது வடிவுரிமை கேட்டு 5,636 விண்ணப்பங்கள் வந்திருப்பதாகவும்; இவற்றுள் 4,398 விண்ணப்பங்களைப் பன்னாட்டு நிறுவனங்கள் அனுப்பியிருப்பதாகவும்” இந்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்திருக்கிறது. இந்த விண்ணப்பங்கள் எல்லாம் புதிய கண்டுபிடிப்புகளுக்குதான் வடிவுரிமை கோருகின்றன எனச் சொல்ல முடியாது. ஏனென்றால், புதிய வடிவுரிமைச் சட்டம் “கண்டுபிடிப்புகளுக்கு”ப் பல ஓட்டைகளைக் கொண்ட விளக்கத்தைத்தான் தருகிறது. இதனால், பழைய மருந்தைக் கூட புதிய நோய்க்குப் பயன்படுத்த முடியும் எனக் கூறி, வடிவுரிமையைப் பெற்று விடலாம் என இந்திய மருந்து நிறுவனங்களே உண்மையைப் புட்டு வைத்துள்ளன. 1970ஆம் ஆண்டு வடிவுரிமை சட்டத்தில் இப்படி முறைகேடாக வடிவுரிமை பெறுவதைத் தடுக்க வழி இருந்தது. அச்சட்டத்தின்படி, வடிவுரிமை கொடுப்பதற்கு முன்பே, அதனை எதிர்த்து வழக்கத் தொடுக்க முடியும். ஆனால், தற்பொழுது கொண்டு வரப்பட்டுள்ள திருத்தத்தில் இப்பிரிவை நீக்கிவிட்டு, அதற்குப் பதிலாக வடிவுரிமை கொடுத்த பிறகு வழக்கு தொடரலாம் என்ற பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது. அதாவது, தும்பை விட்டு வாலைப் பிடிக்கச் சொல்லுகிறது, மைய அரசு. இப்புதிய வடிவுரிமை சட்டத்தால், மருந்து மாத்திரைகளின் விலை தாறுமாறாக உயர்ந்துவிடும் என்பது ஒருபுறமிருக்கட்டும்; நமது நாட்டிற்குத் தேவைப்படும் அத்தியாவசியமான உயிர் காக்கும் மருந்துகள் தடையின்றிக் கிடைக்கும் என்பதற்குக் கூட இனி எந்த உத்திரவாதமும் கிடையாது. மலேரியா, காலரா, காச நோய், மஞ்சள் காமாலை போன்ற தொற்று நோய்கள்தான் அடித்தட்டு மக்களைத் தாக்குகின்றன. சாதாரண மலேரியா நோயோடு இப்பொழுது மனித மூளையைத் தாக்கும் புதுவகை மலேரியா நோய் கூட வந்துவிட்டது. இதற்குத் தேவையான சிகிச்சைக்கு, மருந்து மாத்திரைக்கு அடித்தட்டு மக்கள் அரசாங்க மருத்துவமனைகளை நோக்கிதான் ஓடுகிறார்கள். அரசாங்கமோ மருந்து மாத்திரைகளுக்கு பன்னாட்டு மருந்து கம்பெனிகளை நம்பியிருக்கிறது. பன்னாட்டு நிறுவனங்களோ, தங்களுக்கு இலாபத்தை அள்ளித் தரும் “வயாகரா”, “எய்ட்ஸ்” பற்றிதான் ஆராய்ச்சி நடத்துகின்றனவேயொழிய, தொற்று நோய்கள் பற்றி அக்கறை காட்டுவது கிடையாது. கொள்ளை நோய்கள் ஒரு நாட்டைத் தாக்கினால், அதற்குத் தேவையான மருந்து மாத்திரைகளுக்குப் பன்னாட்டு மருந்து கம்பெனிகளை நம்ப முடியாது என்பதை உலக வர்த்தகக் கழகம் கூட ஒப்புக் கொண்டுள்ளது. அதனால்தான், தொற்று நோய் தாக்கும் அவசர காலங்களில், வடிவுரிமைச் சட்டத்தை மீறி, தொற்று நோய் தாக்கப்பட்ட நாடே மருந்துகளைத் தயாரித்துக் கொள்ளலாம் என்ற சலுகையை உலக வர்த்தக கழகம் வழங்கியிருக்கிறது. இந்தச் சலுகை நாயிடம் கிடைத்த தேங்காயைப் போன்றது. ஏனென்றால், ஒரு நாடு தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளதா என்பதை உலக வர்த்தகக் கழகம்தான் தீர்மானிக்கும். உலக வர்த்தகக் கழகம் தீர்மானித்த பிறகு, தொற்று நோய் தாக்கப்பட்ட நாடு இந்தச் சலுகையைப் பயன்படுத்தி மருந்துகளைத் தயாரித்து, நோயாளிக்குக் கொடுப்பதற்குள் நிலைமை கையை மீறிப் போய்விடும். எனவே, அடித்தட்டு மக்கள் தங்களை நோயிலிருந்து காத்துக் கொள்ள, பழைய காலம் போல மாந்தரீகம், நாட்டு வைத்தியத்திற்குத் திரும்ப வேண்டியதுதான்! இப்புதிய வடிவுரிமைச் சட்டம் மக்களின் உயிரோடு மட்டும் விளையாடப் போவதில்லை; இந்தியாவின் முதுகெலும்பான விவசாயத்திலும் கைவைக்கப் போகிறது. இப்புதிய வடிவுரிமைச் சட்டத்தின்படி விதைகள், தாவரங்களை வடிவுரிமை செய்து கொள்வதற்கு இனி தடையேதும் கிடையாது. இதற்குத் தகுந்தாற்போல, இந்திய விதைகள் சட்டத்திலும் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. விவசாயிகள் விதைகளைச் சேமித்து வைத்துக் கொள்ளவும்; விதைகளை மறு உற்பத்தி செய்து கொள்ளவும்; விதைகளை சக விவசாயிகளுக்கு விற்கவும் (1966ஆம் ஆண்டு விதைகள்) சட்டம் அனுமதி அளித்திருந்தது. ஆனால், தற்பொழுது இச்சட்டத்தில் கொண்டு வரப்பட்டுள்ள திருத்தத்தின்படி, விதைகளை உற்பத்தி செய்யும் விவசாயிகள், தங்களின் பெயரைக் கட்டாயம் பதிவு செய்து கொள்ள வேண்டும். அதாவது, இனி விதை நெல்லைக் கூட தங்களின் இஷ்டத்திற்கு விவசாயிகள் சேமித்து வைக்கக் கூடாது; அப்படி எடுத்து வைத்தால் அது சட்டவிரோதம் என விவசாயிகளை மிரட்டுகிறது, மைய அரசு. இம்மிரட்டலின் மூலம் வடிவுரிமை பெற்ற பன்னாட்டு நிறுவனங்களின் விதைகளை மட்டுமே விவசாயிகள் பயன்படுத்த முடியும் என்ற நிலையை உருவாக்க முயலுகிறது. இந்திய மக்களின் உணவுத் தேவைக்கும், அவர்கள் நோய் நொடியின்றி வாழ்வதற்கும் ஏகாதிபத்தியங்களை நத்திப் பிழைக்க வேண்டும் என்றால், இந்திய சுதந்திரத்தின் பொருள்தான் என்ன? - செல்வம் __________________________________________________________________________ புதிய ஜனநாயகம் – மார்ச் 2005 __________________________________________________________________________ 12 இணையப் புரட்சியின் யோக்கியதையும் கூகுள் ரீடரும்! ஆதவன் http://www.vinavu.com/2013/03/28/google-reader-sunset/   இணைய உலகில் கோலோச்சி வந்த கூகுள் இணையதளத்தின் சேவையான கூகுள் ரீடர் (கூகுள் படிப்பான்) தன் இறுதி நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறது. [கூகுள் ரீடர் சன்செட்] இணயத்தில் நாம் விரும்பும் வாசிக்கும் இணையதளத்தின் புதிய கட்டுரைகளையும் செய்திகளையும் ஒரே இடத்தில் தொகுத்துப் படிக்க வசதியாக கூகுள் ரீடர் இணைய பக்கம் வடிவமைக்கப்பட்டிருந்தது. இது இலவச சேவை. ஆனால் சில நாட்களுக்கு முன் கூகுள் ரீடரில் நுழைந்த வாசகர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது, நுழைந்தவுடன் ஒரு சேதி “கூகுள் ரீடர் வரும் ஜூன்-30 தேதியுடன் தனது சேவையை நிறுத்திக்கொள்ளும்”. ‘கூகுள் ரீடர் பெரும் எண்ணிக்கையில் புதிய வாசகர்களை ஈர்க்கவில்லை. அதனால் அதை இழுத்து மூடுகிறோம்’ என்று தனது வலைப்பதிவில் தெரிவித்துள்ளது கூகுள் நிர்வாகம். கூகுள் ரீடர்க்கு பழக்கப்பட்ட வாசகர்கள் பிற படிப்பான் சேவைகளை (குறிப்பாக இலவச) தேடுவதும், இதுதான் சாக்கு என்று பிரபல படிப்பான் சேவை தரும் இணையதளங்கள் தங்கள் சேவைகளை கட்டண சேவைகளாக்குவதும் நடந்து வருகிறது. அறிவிப்பு வெளிவந்த 48 மணி நேரத்தில் பிற இணைய படிப்பான் சேவைகளுக்கு 5 லட்சம் வாசகர்கள் மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது. பலர் கூகுள் ரீடரை மூடக் கூடாது என்று கூகுள் நிர்வாகத்திற்கு ஆன்லைனில் விண்ணப்பங்களை அனுப்பி வருகிறார்கள். ‘கூகுள் ரீடர் சேவையை நிறுத்திக்கொள்கிறது, அவ்வளவு தானே மாற்று சேவைகளுக்கு செல்லலாமே, அதில் விவாதிக்க என்ன இருக்கிறது’ என்று பலர் நினைக்கிறார்கள். விவாதிக்க நிறையவே இருக்கிறது. இணைய சேவைகள், இணையம் என்பது 21-ம் நூற்றாண்டின் தகவல் தொடர்பு புரட்சிக்கான களம் என்று பலராலும் நம்பப்படுகிறது, அதனால் இணையத்தில் ‘போராளி’களின் எண்ணிக்கையும் அதிகமாகிவிட்டது. ஃபேஸ்புக் புரட்சி, டிவிட்டர் புரட்சி, இணைய சுதந்திரம், கட்டற்ற சுதந்திரம் என்று பலரும் மல்லுக்கட்டி வாதாடிக் கொண்டிருக்கும் சுதந்திரங்களை பற்றித் தான் நாம் பேச வேண்டும். ஆனால் ‘புரட்சிக்கு வாய்ப்பையும், கட்டற்ற சுதந்திரத்தையும்’ கொடுக்கும் மெய்நிகர் உலகில் தாங்கள் விரும்பிய படிப்பானை தக்க வைத்துக் கொள்வதற்குக் கூட இணைய போராளிகளுக்கு அதிகாரம் இல்லை என்பதுதான் இதிலிருக்கும் சோகம். இணையத்தை இயக்கி ஃபேஸ்புக்கிலும் டிவிட்டரிலும், நுழைந்தவுடனே “ஏ கருணாநிதியே..” “இலை மலர்ந்தால் ஈழம் மலரும்” என ஸ்டேட்டஸ்கள் போட்டு லைக்குகளுக்காக தவம் கிடப்போர் நாளை வருமானமில்லை என்று இந்த வசதியை ஃபேஸ்புக் மூடிவிட்டால் என்ன செய்வர்? ஆர்குட்டில் இருந்து ஃபேஸ்புக்கிற்கு மாறியது போல், ப்ளாகில் இருந்து கூகுள் பஸ்ஸுக்கு போய், கூகுள் ப்ளஸ்ஸுக்கு மாறியது போல் பரதேசியாய் இன்னொரு இணைய சேவையை தேடி செல்ல வேண்டியதுதான். இணைய சேவைகள் முதலாளிகளின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன, அவர்களுக்கு லாபம் வரும் வரையில் அவை தொடர்கின்றன, லாபமில்லை என்றால் ஈவு இரக்கமில்லாமல் கொன்றொழிக்கப்படுகின்றன. கட்டற்ற சுதந்திரம், பேச்சுரிமை, சுதந்திர சந்தையில் வாடிக்கையாளர்தான் ராஜா என்றெல்லாம் முழங்கும் இணைய முற்போக்குவாதிகள் இதை எப்படி எதிர்கொள்வார்கள்? ஃபேஸ்புக்கில் போராளிகள் போடும் ஸ்டேடஸுக்கும், பகிரும் ‘சே குவாரா’ படங்களுகாகவுமா அந்த இணைய தளம் நடத்தப்படுகிறது? ஒவ்வொரு ஃபேஸ்புக் பயனருக்கும் தெரியும் விளம்பரங்களும், பயனர் பற்றிய தகவல்களை விளம்பர நிறுவனங்களுக்கு விற்கப்படுவதிலும் தான் அந்த இணைய சேவை தொடர்கிறது. ஒரே ஒரு வலைப்பதிவு பக்கத்தை தொடங்கி அதில் 100 ஹிட்டுகள் வந்தவுடன் கூகுள் விளம்பரத்தை சந்தில் போட்டு, 2000 ஹிட்டுகளுக்கு பின் வீட்டுமனை விளம்பரத்தை சைடில் போடும் பதிவர்களுக்கு இப்படி ஒரு நப்பாசை என்றால் இந்த சேவையை வைத்து பல லட்சங்களை லாபம் ஈட்டத் திட்டமிடும் பன்னாட்டு முதலாளியின் ஆசை எவ்வளவு இருக்கும்? கூகுளின் ஆசைக்கு ரீடர் சம்பாதிக்கவில்லை, காலி. நாளை கூகுள் மெயில் சம்பாதிக்கவில்லை என்றாலும் காலி. இவை காலி என்பதால் வருமானம் தரும் வேறு சேவைகளை ஆரம்பிப்பார்கள். இத்தகைய சேவைகளை ஏற்கனவே வேறு முறைகளில் பயன்படுத்தி இயங்குபவர்கள் எல்லாம் வேறு வழியின்றி அவர்களது நிபந்தனைக்கு உட்பட்டால்தான் இணைய சேவை வசதிகள் கிடைக்கும். இப்படி இணைய உலகமே முதலாளிகளின் லாப வேட்டையின் வெற்றி தோல்விகளில்தான் இயங்குவதாக மாற்றப்பட்டிருக்கிறது. இணையம் என்பது அவர்கள் லாபமீட்ட உதவும் வங்கியாகவும், இணைய பயனர்களின் அந்தரங்கத்தை திருடி காசு பார்க்கும் புரோக்கராகவும் தான் இருக்கும். அது விடுவிக்கப்படும் போது தான் உண்மையாகவே மக்கள் நலன் சார்ந்த தகவல் தொடர்பு புரட்சியை அது சாதிக்கும். அந்த நிலைமையை இணையத்தின் வளர்ச்சி சாதித்துவிடாது. ஏகாதிபத்தியங்களுக்கும் அவற்றின் உலகமயத்திற்கும் எதிராக உலக மக்கள் அரசியல் களத்தில் நடத்தும் போராட்டத்தின் வெற்றியே உண்மையில் அத்தகைய தகவல் தொடர்பு புரட்சியை கொண்டு வரும். அதுவரை இணையம் என்பது அவர்களின் கையில் கிடைத்திருக்கும் அமுதசுரபி. நாமெல்லாம் அதை தலையில் சுமந்து கொண்டு திரியும் விளம்பர அடிமைகள். அவ்வளவுதான். - ஆதவன் 13 கம்பீரம் – ஒரு உண்மைக் கதை! மாடசாமி http://www.vinavu.com/2013/02/13/gambeeram-short-story/   [கம்பீரம்] “மை நேம் ஈஸ் சவுத்ரி. கப்தான் கங்காதர் சவுத்ரி” அந்த இராணுவ அதிகாரியின் வாயிலிருந்து புறப்பட்ட வார்த்தைகள் ஒவ்வொன்றும் வீரர்களைப் போல் விரைப்பாக ‘அட்டேன்ஷனில்’ அணிவகுத்து வந்தன. அவர் முகத்தில் ஒரு கடுமையும், குற்றம்சாட்டும் தோரணையும் இருந்தது. நாங்கள் மொத்தம் பதினைந்து பேர். நான் உட்பட மற்றவர்களும் அப்போதுதான் பட்டயப் படிப்பை முடித்திருந்தோம். சிலருக்கு இன்னும் மீசை கூட அரும்பியிருக்கவில்லை. எனக்கு இடதுபுறமாக நின்று கொண்டிருந்த சபாபதி என்பவனின் வாய் லேசாக முணுமுணுத்தது. “குமார்…” நடுங்கும் காற்றுக் குரலில் இரகசியமாய் அழைத்தான். “ஷ்ஷ்ஷ்… சும்மா இருங்க. எனக்கும் கெதக்குன்னுதான் இருக்கு”. ஆம். எனக்கு உண்மையிலேயே கொஞ்சம் அச்சமாகத்தானிருந்தது. எங்கள் கிசுகிசுப்புகள் கங்காதரைக் கலைத்தன. சட்டென்று விரைப்பாய்த் திரும்பினார். ஒரு மயான அமைதி அந்த அறையைச் சட்டென போர்த்திக் கொண்டது. அது ஒரு பயிற்சி வகுப்பறை. பெங்களூருவில் இருந்த பன்னாட்டு கணினி நிறுவனம் ஒன்றுக்குச் சொந்தமானது. நாங்கள் படிப்பை முடித்து விட்டு கேம்பஸ் தேர்வில் தேர்வாகி பயிற்சிக்காக வந்திருந்தோம். அன்றுதான் பயிற்சியின் முதல் நாள். அது RISC சர்வர் வகைக் கணினிகளைத் தயாரிக்கும் நிறுவனம். சர்வர் எனப்படுவது பல நூறு கணினிகள் சேர்ந்தால் கிடைக்கும் ஆற்றலை ஒரே பெரிய கணினிக்குள் அடக்கியதைப் போன்றது. இவற்றில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பங்கள் சிக்கலானவை என்றும், புரிந்துகொள்வது சிரமம் என்றும் எங்களுக்கு முன்பே சொல்லப்பட்டிருந்தது. பயிற்சியாளர் வரும் முன் அதைப் பற்றி எங்களுக்குள் பேசிக்கொண்டிருந்த போதுதான் திடீரென அந்த அறைக்குள் இராணுவம் ஊடுருவியிருந்தது. கங்காதர் நின்று கொண்டிருந்த இடத்திலிருந்து அட்டேன்ஷனில் நான் நின்று கொண்டிருந்த இடம் நோக்கி நகரத் துவங்கினார். எனது தொடைகள் எடை குறைந்து போல லேசானது. முழங்காலுக்குக் கீழே பஞ்சு போல் உணர்ந்தேன். தொண்டைக்குள் கசந்தது. இதயத்துடிப்பு எகிறியது. ‘என்னாங்கடா இது! பேசினதெல்லாம் ஒரு குத்தமாடா’ மனதிற்குள் தாறுமாறான சிந்தனைகள் துள்ளிக் குதித்தன. மொத்தம் மூன்று வரிசைகளாக நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. நடுவில் இருந்த வரிசையில் இரண்டாவதாக இருந்த நாற்காலியில் உட்கார்ந்திருந்தேன். மிகச்சரியாக என்னை நோக்கி வந்த கங்காதர், கருவிழிகளை மட்டும் திருப்பிப் பார்த்துக் கொண்டே கடந்து சென்றார். எனக்கு நேர் பின்னே இருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டார். வடிவேலுவைப் போல் உணர்ந்தேன். சற்று நேரத்திலேயே பயிற்சியாளர் ராகேஷ் வந்தார். முதலில் அறிமுகப் படலம். இராணுவத்தையும் சேர்த்து மொத்தம் பதினேழு பேர். இராணுவம் தன்னை முழுமையாக அறிமுகம் செய்து முடித்த போதுதான் எங்களுக்கு விசயமே புரிந்தது. இவர்கள் இராணுவத்தின் தொழில்நுட்பப் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்று. கங்காதர் சவுத்ரி என்று அறிமுகம் செய்து கொண்டவர், இராணுவத்தின் ஏதோவொரு படைப்பிரிவில் கீழ்நிலையில் சேர்ந்து பதவி உயர்வு பெற்று, இப்போது காப்டனாகி இருக்கிறார். நாற்பதுகளின் இறுதியில் அல்லது ஐம்பதுகளின் துவக்கத்தில் இருந்தார். அந்த நிறுவனம் இராணுவத்துக்கு கணினிகளை விற்கும்போது அதோடு சேர்த்து அதை எப்படி இயக்குவது எப்படிக் கையாள்வது என்பதைப் பற்றிய பயிற்சிக்கும் இரண்டு சீட்டுகளை இலவசமாய் கொடுத்து விடும். இந்தப் பயிற்சியில் கலந்து கொள்வதற்காக இராணுவத்தின் தொழில்நுட்பப் பிரிவின் சார்பாக கங்காதரும் அவரது உதவியாளர் நிதின் ஷர்மா என்பவரும் தேர்வாகியிருந்தனர். இதற்காகவே டெஹ்ராடூனில் இருந்து பெங்களூரு வந்துள்ளனர். அந்தப் பயிற்சி பத்து நாட்களுக்கு நடந்தது. அந்த நாட்களில் நாங்கள் தொழில்நுட்பத்தைக் கற்றுக்கொண்டதோடு, இராணுத்தினர் பற்றியும் கொஞ்சம் போல் அறிந்து கொண்டோம் – உபயம் கங்காதர். அவர் எங்களிடம் இராணுவம் என்பதைப் பற்றிய உயர்வான பிம்பம் ஒன்றை உருவாக்க நிறைய மெனக்கெட்டார். ஓசிச் சோறின் விளைவாகவோ, ஓசிச் ‘சரக்கின்’ காரணமாகவோ அவர் பருத்த வயிற்றைப் பெற்றிருந்தார். ஆனால், தானொரு மிடுக்கான அல்லது விரைப்பான பேர்வழி என்பதை உலகுக்கு உணர்த்த கஷ்டப்பட்டு அடிவயிறை எக்கிப் பிடித்துக் கொள்வார். இதன் விளைவாய் இடுப்பு கொஞ்சம் போல் முன்னே இழுத்துப் பிடித்தது போல் நிற்கும். இந்தக் கஷ்டத்தோடு மார்புக்கூட்டை தூக்கலாக வைத்துக்கொள்ள வேண்டும். இத்தனை சித்திரவதைகளுக்கிடையே சிரமமின்றி சுவாசிப்பதைப் போல் நடிக்கவும் வேண்டும். கங்காதர் திறமைசாலிதான்… என்றாலும் மூன்றாவது நாளே கவனக்குறைவான ஏதோவொரு சந்தர்ப்பத்தில் அவர் ஒரு பெரும் தொந்தியர் என்பதை சபாபதி கண்டுபிடித்து, எல்லோருக்கும் ரகசியமாய்ச் சொல்லி விட்டான். அவர் சாதாரணமாக நடக்கும்போது கூட கால் மூட்டு மடங்காமல் அட்டேன்ஷனில்தான் நடந்தார். அதேபோல் பயிற்சி நடந்த நாட்களில் அவர் எப்போதும் அறையின் குறுக்குவாக்கில் நடந்ததே இல்லை; நுழைவாயிலில் இருந்து நூல் பிடித்தது போல் நேராக பத்து தப்படிகள், அப்புறம் மின்னல் போல ஒரு ‘ரைட்டர்ன்’; மீண்டும் நூல் பிடித்தாற் போல் பத்து தப்படிகள் நடை; ஒரு ‘அபவுட்டர்ன்’; அப்புறம் இரண்டு தப்படிகள் பக்கவாட்டில் நகர்ந்து நாற்காலியில் அமர்வார். உட்கார்ந்த பின் அவரது முதுகில் மட்டக்கோலை வைத்துப் பார்த்தால் முதுகெலும்பு நறுக்கென்று கச்சிதமாக நேர்கோட்டில் இருக்கும். பக்கவாட்டில் எதையாவது அல்லது யாரையாவது பார்க்க வேண்டுமென்றால் கூட ஸ்கேல் வைத்து அளந்தது போலத்தான் தலையைத் திருப்புவார். கங்காதர் நிறைய சந்தேகப்படுவார். யாரையும், எதையும் நம்ப மாட்டார். ‘இன்றைக்கு செவ்வாய்க் கிழமை’ என்று அவரிடம் யாராவது சொல்லி விட்டால் கூட அவராக ஒரு முறைக்கு இரண்டு முறை நாள்காட்டியைப் பார்த்து, சரிபார்த்து விட்டுதான் ‘அப்படியா! சரிதான்’ என்று ஒத்துக்கொள்வார். அவ்வளவு முன்னெச்சரிக்கை. ராணுவம் என்றால் சந்தேகப்பட வேண்டும்; நாட்டையே காப்பாற்றுவது என்றால் சும்மாவா என்பதுதான் அதிலிருந்த செய்தி. இராணுவம் பற்றி எங்களுக்கு உருவான சித்திரம் எந்த வகையானது என்று அன்றைய நிலையில் எங்களால் சரியாக கணிக்க முடியவில்லை. ஒரு வேளை அது கேலிச்சித்திரமாக இருக்குமோ என்று கங்காதரே எங்களை சந்தேகப்பட வைத்தார். அதற்கு அவரது உடல் மொழி மட்டும் காரணமல்ல. தொழில்நுட்பத்தில் அவருக்கு ஏற்படும் சந்தேகங்களும் அதைத் தீர்த்துக்கொள்ள அவர் கேட்கும் கேள்விகளும் விநோதமானவை. உதாரணமாக, “மிஸ்டர் ட்ரைனர், உங்களது இந்த கணினியை நேர்மட்டமாகத்தான் நிறுவ வேண்டுமா? கிடைமட்டமாக நிறுவினால் வேலை செய்யாதா?” அல்லது, “மிஸ்டர் ராகேஷ், இந்தக் கணினி வேலை செய்து கொண்டிருக்கும் போது அதன் எலக்ட்ரிகல் வொயரை வெடுக்கென்று பிடித்து இழுத்தால் என்னவாகும்?” ‘கேள்விகள்’ இந்த ரகத்தில் படுபயங்கரமான மொக்கைகளாகத்தான் இருக்கும். அவர் ஒவ்வொரு முறை கேள்விகளைக் கேட்கும்போதும் கையிலிருக்கும் கோப்பு ஒன்றிலிருந்து எதையோ சரிபார்த்துக் கொள்வார். அந்தக் கோப்பை அவர் பயிற்சி நடந்த பத்து நாட்களும் இராணுவ ரகசியம் போல் பாதுகாத்து வந்தார். பயிற்சி இடைவேளைகளில் சிறுநீர் கழிக்கச் செல்லும்போதோ அல்லது யாரோடாவது கைகுலுக்க வேண்டுமென்றாலோ கூட அந்தக் கோப்பை பத்திரமாக கக்கத்தில் அதக்கிக் கொள்வார். யாரும் அதைப் பிரித்துப் பார்த்து விடக் கூடாது என்பதில் தெளிவாக இருந்தார். இராணுவமும் ரகசியமும் ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் என்று நாங்கள் நம்பினோம். கங்காதரின் மேலதிகாரிகள் தினசரி ஐந்து கேள்விகளாவது கேட்க வேண்டுமென்று இலக்கு நிர்ணயித்து அனுப்பியிருப்பார்களோ என்று சபாபதி சந்தேகப்பட்டான். பயிற்சி நடந்த பத்து நாட்களிலும் இதே பாணியில் கேள்விக்கணைகளைத் தொடுத்துக் கொண்டேயிருந்தார். பயிற்சிக்கு வந்த மற்றவர்களோடு சேர்ந்து நாங்கள் உதடு பிரியாமல் சிரித்துக் கொள்வோம். ஆனால், பயிற்சியாளர் ராகேஷ் சிரிக்கவில்லை. கங்காதரின் கேள்விகள் ஒவ்வொன்றுக்கும் பொறுமையாகப் பதிலளிப்பார். எதாவது எடக்கு மடக்காகப் பதில் சொல்லி, அதனால் கங்காதர் ஆத்திரமடைந்து, அதனால் அவரது மேலதிகாரிகள் அதிருப்தியடைந்து, அதனால் அடுத்தமுறை ஆர்டர் கிடைக்காமல் போனால்? அந்த நிறுவனத்தைப் பொறுத்தமட்டில் இராணுவம் ஒரு பொன் முட்டையிடும் வாத்து. இதைக் கொன்று விட்டால் இன்னொரு வாத்துக்கு எங்கே போவார்கள்? எனவே ராகேஷுக்கு தெளிவான உத்திரவுகள் வழங்கப்பட்டிருந்தன. அதன்படி, எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தை விட மூன்று இஞ்சுகள் அதிக உயரம் கொண்ட கங்காதரின் ஈகோவை எந்த சேதாரமும் இல்லாமல் பவுனைப் போல் பாதுகாத்து, பத்திரமாய் முகாமுக்குத் திருப்பி அனுப்ப வேண்டும் என்பதில் ராகேஷ் தெளிவாக இருந்தார். கங்காதர் ஒவ்வொரு முறை கேள்வி கேட்கும் போதும் விரைப்பாக எழுந்து நிற்பார். கங்காதர் எழுந்து நிற்கும் போதெல்லாம் நிதின்ஷர்மாவும் எழுந்து கொள்வார்; அவர் உட்காரும் வரை உட்கார மாட்டார். அதிகாரியல்லவா? அவர் நிற்க, இவர் அமர…. அதெல்லாம் நிதினின் கற்பனையிலேயே இல்லை. கங்காதர் தினசரி இரண்டு முறை நகைச்சுவைத் துணுக்குகளைச் சொல்வார். காலை மற்றும் மதிய உணவு இடைவேளைகளின் போது கங்காதரால் சொல்லப்படும் ‘ஜோக்குகள்’ அவரது கேள்விகளை விடப் படுபயங்கர மொக்கைகளாக இருக்கும். அந்த ஜோக்குகள் அவருக்கு அவரது மேலதிகாரிகளால் சொல்லப்பட்டவை. அவர்களுக்கு அவர்களது மேலதிகாரி, அவர்களுக்கு அவர்களது மேலதிகாரி என்று இது பின்னோக்கி நீண்டுகொண்டே போய் ராபர்ட் க்ளைவின் காலத்தைத் தொடும் அளவுக்கு அரதப்பழசான ஜோக்குகள். இதைக் கேட்டு எல்லோரும் சிரிக்க வேண்டுமென்பதுதான் கங்காதரின் எதிர்பார்ப்பு. இந்த இராணுவ சர்வாதிகாரத்துக்கு ராகேஷையும், நிதினையும் தவிர மற்றவர்கள் யாரும் உட்படவில்லை. சிரிப்பதிலும் ஒரு கட்டுப்பாடு வேண்டுமென்று கங்காதர் எதிர்பார்த்தார். சுமாரான நகைச்சுவை என்றால் மூன்று முறை “ஹஹ்ஹஹ்ஹா” சொல்ல வேண்டும்; சுமாருக்கு மேல் என்றால் நான்கு முறை சொல்ல வேண்டும். இப்படிச் ‘சிரிப்பதை’ நிதின் அளவுக்கு ராகேஷால் நேர்த்தியாகச் செய்ய முடியவில்லை. என்னயிருந்தாலும் இராணுவப் பயிற்சியல்லவா? பயிற்சிக்கு வந்த மற்றவர்கள் கங்காதரின் இந்த எதிர்பார்ப்பைக் கூட மிகுந்த சிரமத்துக்கிடையே சகித்துக் கொண்டார்கள். அவருக்கிருந்த இன்னொரு எதிர்பார்ப்பைத்தான் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. அதாவது, அவர் தன்னை அனைத்தும் அறிந்த மேதாவி என்று கருதிக் கொண்டார். வானத்தின் கீழ் பூமிக்கு மேல் இருந்த சகலத்தைப் பற்றியும் அவருக்கென்றே பிரத்யேகமாக ஏதாவதொரு ‘கருத்து’ இருக்கும். சில சமயம் வானத்தைக் கடந்தும் பூமியின் ஆழத்திலும் இருப்பனவற்றைப் பற்றிக் கூட ‘கருத்து’ சொல்வார். இதை எல்லோரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்த்தார். நிதின் அவரது கீழ்நிலை அதிகாரி என்பதால் வேறு வழியில்லை; ராகேஷ் அனுபவசாலி என்பதால் சமாளித்துக் கொண்டார். ஆனால் நாங்களோ அப்போதுதான் கல்லூரியிலிருந்து வந்திருந்த மாணவர்கள். முழுப் பொய்யையும், முழு உண்மையையும் எதிர்கொள்வது எளிது. பாதி உண்மை – பாதி பொய் என்றால் கொஞ்சம் சிரமம். ஆனால் முழுப் பொய்யை உண்மை என்று ஏற்றுக்கொள்வது போல் நடிக்க வேண்டுமென்றால்? நாங்கள் சொல்லவொண்ணா கொடுமைகளுக்குள்ளானோம். ஒரு வழியாக அந்த பத்து நாட்களும் ஒரு முடிவுக்கு வந்தது. பத்தாவது நாளில்தான் “யானைக்கும் அடி சறுக்கும்” என்பதை நாங்கள் நேரடியாகப் புரிந்து கொண்டோம். அதாவது, கங்காதரை பயிற்சிக்காக தேர்வு செய்து அனுப்பிய அவரது மேலதிகாரிகள், அவரிடம் தினமும் பயிற்சியில் கலந்துகொண்ட மற்றவர்களோடு சேர்ந்து ஒரு புகைப்படம் எடுத்து வர வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர். பயிற்சிக்காக என்று வந்துவிட்டு ஒழுங்காக அதில் கலந்து கொள்ளாமல் மட்டம் போட்டு விட்டு, ஊர் சுற்றி விடுவார்களோ என்று அவர்கள் சந்தேகம் கொண்டிருக்க வேண்டும். இந்த ராணுவத்தினர் யாரையும் நம்புவதேயில்லை. அது ஒரு பக்கம் இருக்கட்டும். கங்காதர் இந்த புகைப்பட சமாச்சாரத்தை ஒன்பது நாட்களாக மறந்து விட்டார் என்பது பத்தாம் நாளில் மாபெரும் பிரச்சினையாக உருவெடுத்தது. இதை எப்படிச் சமாளிப்பது என்று மூளையைப் போட்டு கசக்கி, கடைசியில் ஒரு தீர்வைக் கண்டுபிடித்தார். அதாவது, கங்காதரும், நிதினும் இராணுவச் சீருடை அணிந்தபடி எங்களோடு பத்து புகைப்படங்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு புகைப்படத்திற்கும் நாங்களெல்லாம் வரிசை மாறி நிற்க வேண்டும். அதோடு எங்கள் தோற்றத்திலும் எதாவது ஒரு மாற்றம் செய்துகொள்ள வேண்டும். சட்டையை இன் செய்திருந்தால் எடுத்து விட வேண்டும். தங்களுக்குள் சட்டைகளை மாற்றிக்கொள்ள வேண்டும். தலைமுடியை மாற்றி வகிடெடுத்து சீவிக்கொள்ள வேண்டும். இப்படி சில ‘மரு’ வேஷங்கள் போட்டு சமாளிக்க வேண்டும். வேறு வழியின்றி இந்திய இராணுவத்துக்காக இந்தத் தியாகத்தையும் செய்தோம். இந்த புகைப்படக் கூத்தோடு பயிற்சி ஒரு முடிவுக்கு வந்தது. ஆனால் ராணுவம் பற்றி என்னில் உருவாகி வந்த மனச்சித்திரம் அப்போதைக்கு முழுமை அடைந்திருக்கவில்லை; ஏதோவொன்று குறைவது போலவே இருந்தது. பயிற்சிக்குப் பின் அந்தக் குழுவிலிருந்தவர்கள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் போஸ்டிங் போடப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டார்கள். நான் தில்லிக்குச் சென்றேன். தில்லியின் தால் ரொட்டிக்கும், ஆலு பரோட்டாவுக்கும், அனல் காற்றுக்கும், கடுங்குளிருக்கும் பழக்கப்படத் துவங்கியிருந்த நான்காம் வருடத்தின் முதல் மாதத்தில் எனக்கு எங்கள் தலைமை அலுவலகத்திலிருந்து ஒரு மின்மடல் வந்தது. எங்கள் நிறுவனம் தயாரித்து சந்தைக்கு அனுப்பியிருந்த குறிப்பிட்ட மாடல் கணினியில் சில பிரச்சினைகள் இருப்பது கண்டறியப்பட்டிருப்பதாகவும், அதனால் உலகெங்கும் அந்த மாடல் கணினி எங்கெல்லாம் பயன்பாட்டில் இருக்கிறதோ அங்கெல்லாம் அதனைச் சரிசெய்ய அதன் மென்பொருளில் சில திருத்தங்கள் (bug fix) சேர்க்க வேண்டும் என்றும் அந்த மடலில் குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த மடலின் பின்னிணைப்பாக நாங்கள் திருத்தங்கள் சேர்க்க வேண்டிய கணினிகளின் பட்டியலும், அது நிறுவப்பட்டிருக்கும் முகவரியும், தொடர்புகொள்ள வேண்டிய வாடிக்கையாளர்களின் பெயர் மற்றும் தொடர்பு எண்களும் கொடுக்கப்பட்டிருந்தது. அகர வரிசைப்படியிருந்த பட்டியலில் முதலாவதாக “ஆர்மி ரிசர்ச் சென்டர் – டெஹ்ராடூன்” என்று குறிப்பிடப்பட்டு, அதற்கு நேராக தொடர்புகொள்ள வேண்டி கங்காதரின் பெயரும், அவரது தொலைபேசி எண்ணும் குறிப்பிடப்பட்டிருந்தது. உடனே அதில் குறிப்பிட்டிருந்த தொலைபேசி எண்ணை அழைத்து கங்காதரைப் பிடித்தேன். “ஹலோ! கப்தான் கங்காதர் சௌத்ரி” மறுமுனையில் அதே விரைப்போடு மிரட்டல் கேட்டது. என்னை நினைவூட்டி அறிமுகம் செய்துகொண்ட பின், கணினியில் கண்டறியப்பட்டுள்ள குறைபாட்டை விளக்கி அந்த வார இறுதியில் டெஹ்ராடூன் வருவதாகத் தெரிவித்து, அதற்கான அனுமதியையும் பெற்றுக்கொண்டேன். திட்டமிட்டபடி அந்த வார இறுதியில் கங்காதர் சொன்ன நேரத்துக்கு சரியாக அங்கே இருந்தேன். நேரம் தவறாமையில் கங்காதர் கறார் பேர்வழி. பயிற்சியின் போது ஒரு நாள் கூட அவர் தாமதமாக வந்ததே இல்லை. நிதின் ஷர்மா இன்னமும் உதவியாளராகத்தான் இருந்தார். அவர்தான் எங்களை வரவேற்று அழைத்துச் சென்றார். “சார்! கணினியை எங்கே நிறுவி இருக்கிறீர்கள்?” வேலையைத் தவிர வேறு அநாவசியமான கேள்விகளை இராணுவம் விரும்புவதில்லை. “முதல் தளத்தில்” கேட்ட கேள்விக்கு ஒரு வரி பதிலைத்தான் இராணுவம் அளிக்கும். முதல் தளத்தின் சந்து பொந்துகளைத் தாண்டி ஒரு கண்ணாடி அறையின் முன் அமர்த்தப்பட்டோம். உள்ளே பெரிய பெரிய சர்வர்கள் நிறுவப்பட்டிருந்தன. அங்கே இருந்த சர்வர்கள் ஒவ்வொன்றும் நம் வீடுகளில் பயன்படுத்தும் இரும்பு பீரோக்களின் உயரத்தில் இருந்தன. “கொஞ்சம் பொறுங்கள்! காப்டன் சார் பத்து நிமிடத்தில் வந்து விடுவார்” குளிரூட்டப்பட்ட அறையில் கங்காதரின் வருகைக்காக காத்திருந்தேன். சரியாக ஒன்பது நிமிடம் ஐம்பத்தொன்பதாவது நொடியில் பழக்கப்பட்ட அந்தக் குரல் கேட்டது, “ஹல்லோ யெங்மென்! எப்படிஇருக்கிறீர்கள்?” ஆரவாரமாக அந்த அறைக்குள் நுழைந்த கங்காதர், எனது கையை வலுவாகப் பற்றிச் சுளுக்கினார்.தொடர்ந்து, சுமார் ஒரு மணி நேரம் கணினியில் கண்டறியப்பட்ட தொழில்நுட்பக் கோளாறு பற்றி விரிவாக விளக்கம் கேட்டுப் பெற்றுக்கொண்டார். “ஓக்கே! இதோ இந்த அறையில்தான் நீங்கள் சப்ளை செய்த கணினி இருக்கிறது. பார்த்துக் கொள்ளுங்கள். உங்களோடு நிதின் இருப்பார்” ஒரு வழியாக ஏழு மலை ஏழு கடல் தாண்டி அரக்கனின் அரக்கு மாளிகையில் சிறைவைக்கப்பட்ட லைலாவைக் காணும் சிந்துபாத்தைப் போல் அந்த அறைக்குள் பாய்ந்தேன். நுழைந்ததும் ஒரு கணம் அப்படியே உறைந்தேன். அங்கே அந்தக் கணினி மாலைகளெல்லாம் அணிந்து சந்தனம் குங்குமம் அப்பிக் கொண்டு அய்யனார் கோவில் பூசாரியைப் போல் கம்பீரமாய் நின்றது. அந்த மாலைகள் காய்ந்திருந்தன. ஆனால் அதிர்ச்சிக்கு அது காரணமில்லை. “இதெல்லாம் நாங்க ஆயுதபூசை கொண்டாடும்போது போட்டது” நிதின் கேட்காமலேயே பதில் சொன்னார். “அது பரவாயில்லை.. ஆனால், கணினி இயக்கப்படாமல் ஒட்டடை படிந்துபோய்க் கிடக்கிறதே?” அதிர்ச்சிக்கு இதுதான் காரணம். “அதுவா… இந்தக் கணினியால் எங்களுக்கு ஆக வேண்டியது ஒன்றுமில்லை என்பதால் வாங்கிய நாளிலிருந்து இயக்காமலே வைத்திருக்கிறோம். நீங்கள் அதை இயக்கி வேலையை முடித்தபின் பழையபடி அணைத்து வைத்து விடுங்கள். வேண்டுமானால் ஆட்களை அனுப்பி இதில் படிந்திருக்கும் ஒட்டடைகளை சுத்தம் செய்யச் சொல்லவா?” நிதின் பதறாமல் கேட்டார். “அதுக்கில்லை சார்! இது இயங்காமல் நின்றால் நிறைய உற்பத்தி இழப்பு ஏற்படுமே?”ஆச்சர்யம் தாளாமல் கேட்டேன். “உற்பத்தியா? அதான் சொன்னேனே! வாங்கினதுலேர்ந்து பயன்படுத்தவே இல்லையென்று?” புன்முறுவல் மாறாமல் பேசினார். “ரெண்டு கோடிக்கும் மேல கொடுத்து வாங்கியதை இப்படியா வீணா போட்டு வைப்பீங்க? இந்த மாதிரி கணினிகளை வாங்குகிறவர்கள் இதிலேர்ந்து முடிந்தவரை வேலை வாங்குவாங்க சார்! யாரும் இப்படி சும்மா நிப்பாட்டி வைக்க மாட்டாங்களே!?” “குமார்.. நீங்க டிபென்ஸ் செக்டாரை இப்பத்தான் பாக்கறீங்கன்னு நினைக்கிறேன்! சரியா?” “ஆமா… ஆனா அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?” நிதின் சிரித்துக் கொண்டார். பின் தொடர்ந்தார், “குமார்! இங்க இருக்கிற மற்ற பெரிய சர்வர்கள் எல்லாமும் சாதாரண முப்பதாயிரம் ரூபா கணினிகள் செய்யும் அதே வேலைகளைத்தான் செய்யுது.. நீங்க சப்ளை செய்ததைத்தான் என்ன செய்ய வைக்கிறதுன்னு தெரியாம போட்டு வச்சிருக்கோம். கவர்மெண்ட் செக்டார்ல இதெல்லாம் சாதாரணம்… வருஷா வருஷம் எங்களோட கணினி பிரிவுக்கு பட்ஜெட் ஒதுக்கீடு செய்வாங்க. அதை எதுக்காச்சும் நாங்க பயன்படுத்தியாகணும். ஒரு வருஷம் முழுமையா பயன்படுத்தலைன்னா அடுத்த வருஷம் ஒதுக்கீட்டை குறைச்சிடுவாங்க. அதனால நாங்க வாங்கற கருவிகள் எல்லாத்தையும் அந்த வகையிலேயே காஸ்ட்லியா என்ன இருக்கோ அதைத்தான் வாங்குவோம். நீங்க புதுசில்லே! அதான் திகைச்சுப் போயிட்டீங்க. சரி! வந்த வேலையைப் பாருங்க!” ஒரு வழியாக அதிர்ச்சியை ஜீரணித்துக் கொண்டு, அந்தக் கணினியை இயக்கி அதில் சேர்க்க வேண்டிய மென்பொருள் நிரலை சேர்த்துவிட்டு, மீண்டும் பழையபடி அணைத்து வைத்தேன். அந்தக் கணினி அறைக்குள் இரும்பு பீரோக்கள் போல் நிமிர்ந்து நின்ற மற்ற எல்லா கணினிகளுமே பிச்சையெடுக்கும் கோவில் யானைகளைப் போல் பரிதாபமாய் நின்றன. எத்தனை பொருட்செலவு? அத்தனையும் வீண் விரயம். மாதாமாதம் சம்பளத்திலிருந்து கேட்காமலேயே பிடித்தம் செய்துகொள்ளப்படும் வருமான வரிப்பணம் இப்படி பெருமாள் கோவில் பிச்சைக்கார யானைகளைப் பராமரிக்க வீணடிக்கப்படுவதைக் கண்டு, நீண்ட பெருமூச்சு எழுந்தது. அதற்குள் நிதின் கையில் ஒரு கோப்போடு வந்தார். அதே பழைய கோப்பு. இராணுவ ரகசியமாய் கங்காதர் போற்றிய கோப்பு. “குமார்! இப்ப என்ன செய்தீங்களோ அதை அப்படியே ரிப்போர்ட்டா எழுதி இந்தக் கோப்பில் சேர்த்துடுங்க. ஆடிட் வர்ற மேலதிகாரிங்க இதையெல்லாம் கறாரா சரி பார்ப்பாங்க. நான் ஒரு பத்து நிமிஷத்துல வந்துடறேன்” கையில் கொடுத்துவிட்டுக் கிளம்பினார். ஆர்வத்தோடு திறந்து பார்த்தேன். உள்ளே, அந்தக் கணினி வாங்குவதற்காக வெளியிட்ட டெண்டர் பற்றிய அறிவிப்பிலிருந்து, கங்காதர் மற்றும் நிதினின் பெங்களூரு வருகைக்கான அனுமதிக் கடிதம், ரயில் டிக்கெட்டுகளின் நகல்கள், தங்கிய ஹோட்டலில் கொடுத்த பில்கள் வரை தேதி வாரியாக அடுக்கப்பட்டிருந்தது. இறுதியில் அந்த பத்து புகைப்படங்கள்.. சுத்தமாக வாயடைத்துப் போனேன். இதற்காகவா அத்தனை ஆர்பாட்டங்கள்? பயிற்சிக் காலத்தில் இராணுவம் பற்றி உருவாகத் துவங்கியிருந்த முற்றுப்பெறாத சித்திரம் இப்போதுதான் முழுமையடைந்தது. அதை உற்றுப்பார்த்ததில், நன்கு உருண்டு திரண்டு கொழுத்துப் போன பங்களா நாய் ஒன்று அந்த சித்திரத்தினுளிருந்து முறைத்துப் பார்த்தது. ஆம்! இது ஒரு பிரமாண்டமான பங்களா நாய். பங்களா நாய்கள் தங்கள் எஜமானர்கள் கொடுக்கும் செல்லத்தின் விளைவாய் அதீதமாய்க் கொழுத்துப் போய்விடும். தெரு நாய்களைப் போன்றோ, வேட்டை நாய்களைப் போன்றோ ஓட முடியாது. தன் கொழுத்த உடலை அசைக்க முடியாமல் அப்படியே கிடையாய்க் கிடக்கும். அவ்வப்போது போகிற வருகிறவர்களைப் பார்த்துக் குரைத்தோ அருகில் அகப்பட்டவர்களைக் கடித்தோ தன் எஜமானனைக் குஷிப்படுத்தும். இது வெறும் அலங்காரம்தான். பயனற்றது – ஆனால் ஆபத்தான ஒட்டுண்ணி. மொத்த சமூகத்தின் இரத்தத்தையும், வியர்வையையும் உறிஞ்சிக் கொழுத்துக் கிடக்கிறது. இவற்றின் எஜமானர்கள் கற்பனை செய்து கொள்வதைப் போல் இவை காவலுக்கும் கூடப் பயன்படாது. என்றைக்காவது தெரு நாய்களோடு சண்டை வந்தால் பரிதாபமாய் செத்துப் போகும். ராணுவம் என்பது ஒரு பங்களா நாயைப் போல் இந்தியாவின் மேல் அழுத்திக் கொண்டிருப்பதே என்பதுதான் அந்த சித்திரம் சொல்லும் செய்தி என்பது அன்றைக்கு எங்களுக்குப் புரிந்தது. -மாடசாமி ______________________________________________________________________________________________________ புதிய கலாச்சாரம் – ஜனவரி 2013 ______________________________________________________________________________________________________ 14 இணையத்தில் யார் சம்பாதிக்க வேண்டும் – முதலாளிகள் லடாய்! http://www.vinavu.com/2013/02/04/internet-who-makes-money-quarrel/   - இணையத்தில் பதிவு எழுதுபவர்கள் பலர் தமது வலைப்பதிவில் விளம்பரங்களை காட்டி சம்பாதிக்கின்றனர். இனிமேல், அவர்களது பதிவுகளை படிக்கும் ஒவ்வொரு வாசகருக்கும் ரூ 1 கட்டணமாக செலுத்த வேண்டும் என்றால் எப்படி இருக்கும்? - தனது இணைய தளத்தில் அல்லது பேஸ்புக்கில் அல்லது கூகுள் பிளஸ்சில் அல்லது டுவிட்டரில் ஏதாவது ஒரு செய்தித் தாளில் வெளியான செய்தியின் சுட்டியை கொடுத்து, இரண்டு வரி சுருக்கமும் எழுதி தொடர்புகளோடு பலர் பகிர்ந்து கொள்கிறார்கள். அதற்காக அந்த செய்தித் தாள்களுக்கு ராயல்டி கொடுக்க வேண்டும் என்று சொன்னால் எப்படி இருக்கும்? இப்படித்தான் சிந்திக்கிறார்கள் இவ்வுலகை இயக்குவதாகச் சொல்லிக் கொள்ளும் முதலாளிகள். [இணையம்] ‘நாங்கதான் கஷ்டப்பட்டு கொடுக்க வேண்டியதை கொடுத்து அலைக்கற்றை ஏலம் எடுத்து, கேபிள் பதித்து, வாடிக்கையாளர்களை வலை வீசி பிடித்து இணைய இணைப்பு கொடுக்கிறோம். தங்கள் உள்ளடக்கத்தையும் விளம்பரங்களையும் பயனர்களுக்கு கொண்டு சேர்க்க உதவும் எங்களுக்கு இணைய தளங்கள் காசு கட்ட வேண்டும்’ என்று திருவாய் மலர்ந்திருப்பவர் ஏர்டெல் நிறுவனத்தின் முதலாளி சுனில் மிட்டல். “எங்களது இணைப்பு சேவையை பயன்படுத்தி யூ-டியூப் போன்ற தளங்களில் வீடியோ பார்க்கும் பயனர்கள், பில் அதிகமாகி விட்டதே என்று எங்களைத்தான் கரித்துக் கொட்டுகிறார்கள்” என்று புலம்பியதோடு, “யாராவது அதற்கான செலவை கவர் செய்யத்தானே வேண்டும், அதனால் யாருடைய தளத்தை பயனருக்கு கொண்டு சேர்க்கிறோமோ அவர்கள் எங்களுக்கு காசு தர வேண்டும்” என்று ஒரு தீர்வையும் அவர் சொல்லியிருக்கிறார். அதாவது ‘கூகுள், யூடியூப், பேஸ்புக் போன்று இணைய தளங்களை நடத்துபவர்கள் ஒவ்வொரு முறை அவர்களது படைப்பு பயனர்களை சென்றடையும் போதும், பயனர்களுக்கு இணைய இணைப்பை வழங்கும் தொலைபேசி நிறுவனங்களுக்கு பணம் கட்ட வேண்டும்’ என்பது அவரது கோரிக்கை. பெரும்பான்மை மக்களுக்கு அடிப்படைத் தேவையாக இல்லாத தொலைபேசி சேவைகளுக்கு குறிப்பிட்ட அளவுதான் கட்டணம் வசூலிக்க முடியும். வாடிக்கையாளர்களிடமிருந்து மேலும் மேலும் கறக்க முயன்றால், ‘ஆணியே புடுங்க வேண்டாம்’ என்று பயன்பாட்டை குறைத்து விடும் அல்லது நிறுத்தி விடும் அபாயம் இருப்பதால், காசு பார்க்க வேறு வழிகளை தேடுகின்றனர், மிட்டல் போன்ற தொலைபேசி நிறுவன முதலாளிகள். ஏர்டெல் வாடிக்கையாளர் ஒருவருக்கு பிஎஸ்என்எல் வாடிக்கையாளர் தொலைபேசினால், அந்த அழைப்பை கொண்டு சேர்க்கும் பணிக்காக ஏர்டெல்லுக்கு பிஎஸ்என்எல் ஒரு தொகையை செலுத்துகிறது. தொலைபேசி சேவை நிறுவனங்களுக்கிடையே, இது போன்று உலகளாவிய பண பரிமாற்றங்கள் நடக்கின்றன. தொலைபேசி நிறுவனங்களுக்கு ஏற்கனவே அறிமுகமான இந்த வசூல் முறையை இணையத்துக்கும் கொண்டு வரச் சொல்கின்றனர். ‘தொலைபேசி சேவையிலிருந்து தொழில் நுட்ப அடிப்படையில் வேறுபட்ட இணைய சேவைக்கு இத்தகைய பண வசூல் நடைமுறையில் சாத்தியமில்லை’ என்பதால் கூகுள் போன்ற இணைய நிறுவன முதலாளிகள் தொலைபேசி நிறுவனங்களின் முதலாளிகளின் கோரிக்கையை நிராகரித்து கடுப்பேற்றுகின்றனர். ஆரம்பம் முதலே இது போன்று பழைய முதலாளிகளின் லாப வேட்டைக்கு கடுக்காய் கொடுத்து கொண்டே இருக்கின்றது, இணைய தொழில்நுட்பம். புதிதாக கிளம்பும் முதலாளிகள் இணையத்தில் மேய்பவர்களுக்கு விளம்பரங்கள் காட்டியோ, பொருட்களை விற்றோ வருமானத்தை அறுவடை செய்ய, பழைய முதலாளிகள் கடுப்படைகிறார்கள். 2009ம் ஆண்டு உலகளாவிய ஊடகச் சக்கரவர்த்தியாக தன்னைத் தானே சொல்லிக் கொள்ளும் ரூபர்ட் முர்டோச், ‘தனது நாளிதழ்களில் வெளியாகும் செய்திகளை கூகுள் நியூஸ் பக்கத்தில் காட்டி கூகுள் பணம் சம்பாதிக்கிறது. அதனால் தனது செய்திகளுக்கான சுட்டியையும், முதல் இரண்டு வரிகளையும் கூகுள் நியூசில் சேர்க்க விரும்பினால் அதற்கு கூகுள் ராயல்டி தர வேண்டும்’ என்று முழங்கினார். பாரம்பரியமாக முதலாளித்துவ பத்திரிகைகளின் வருமானத்தில் பெரும்பகுதி விளம்பரங்கள் மூலம் வருகிறது. வாசகர்களுக்கு பொருட்களை விற்க விரும்பும் நிறுவனங்கள், வெளியிடும் விளம்பரங்களுக்காக கட்டணம் வசூலித்து பத்திரிகைகள் லாபம் ஈட்டுகின்றன. இணைய தொழில்நுட்பம் வளர வளர, மேற்கத்திய நாடுகளில் (ஐரோப்பா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா) மேலும் மேலும் மக்கள் இணையத்தில் செய்திகளை படிக்க ஆரம்பித்தார்கள். அச்சுப் பத்திரிகைகளை வாங்குபவர்களின் எண்ணிக்கை குறைந்து நாளிதழ்களின் விளம்பர வருமானம் சரிய ஆரம்பித்தது. தொடர்ந்த லாப வளர்ச்சி இல்லாத நிறுவனங்களுக்கு மூச்சுக் காற்றை நிறுத்தி கொன்று விடுவது என்பதுதான் முதலாளிகள் பின்பற்றும் ஒரே அணுகுமுறை. தனது செய்தித் தாள்களுக்கு வருமானத்தை அதிகரிக்க புதிய வாய்ப்புகளைத் தேடிய போது முர்டோச் கும்பலின் கண்ணில் பட்டதுதான் கூகுள் என்ற புது தொழில்நுட்ப நிறுவனம். ”ஊடக உலகின் சக்கரவர்த்தியான எனது பத்திரிகைகளின் வருமானம் குறைந்து கொண்டிருக்கும் போது நேற்று உருவான இந்த சுண்டைக்காய் பயல், இணையத்தில் விளம்பரங்களை காட்டி கோடி கோடியாக சம்பாதிக்கிறான். இந்த சின்னப் பயலை, நசுக்கி விடுகிறேன்” என்று இது தொடர்பாக வழக்கு தொடரப் போவதாக மிரட்டிய முர்டோச்சிடம், “விருப்பம் இல்லை என்றால் உங்கள் தளத்து சுட்டிகளை சேர்க்க வேண்டாம் என்ற கட்டளையை குறிப்பிட்டு எங்கள் தானியங்கி திரட்டியிலிருந்து விலகிக் கொள்ளலாமே” என்ற நடைமுறையை சுட்டிக் காட்டி அவருக்கு கூகுள் பெப்பே காட்டியது. உண்மையில், கூகுள் நியூசில் வரும் சுருக்கமான செய்தியைப் பார்த்து நாளிதழ் தளத்துக்கு வரும் வாசகர்கள், நாளிதழின் விளம்பரங்களை கிளிக் செய்து வருமானம் ஈட்டித் தருகிறார்கள். கூகுள் நியூசில் வெளியாகா விட்டால், அவர்கள் அந்தச் செய்தியை பார்க்கப் போவதுமில்லை, செய்தித் தாளின் தளத்துக்கு வரப்போவதுமில்லை. அதனால், செய்தித் தாளின் வாசகர் எண்ணிக்கை குறைந்து விடும். அப்படி வாசகர் எண்ணிக்கை குறைந்து பாதிக்கப்பட்ட முர்டோச் குழும பத்திரிகைகள் சென்ற ஆண்டு மீண்டும் கூகுள் நியூசில் சேர்ந்து கொண்டிருக்கின்றன. 2011ம் ஆண்டு உலகளாவிய செய்தித் தாள்கள் விளம்பர வருமானம் 2007ல் இருந்ததை விடக் குறைந்து $76 பில்லியனுக்கு வீழ்ந்தது. செய்தித்தாள்களின் மொத்த விளம்பர வருமானத்தில் 2.2 சதவீதம் மட்டுமே இணைய விளம்பரங்கள் மூலம் வந்தன. இந்த நிலையில், கூகுள் நியூசில் தங்களது சுட்டிகளை காட்டுவதற்கு கூகுளிடம் பணம் வசூலிப்பதற்கான சட்டங்களை நிறைவேற்றுவதற்கு ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ் நாடுகளில் பத்திரிகை முதலாளிகள் அந்தந்த நாட்டு நாடாளுமன்றங்களில் இப்போது ஏற்பாடு செய்து வருகிறார்கள். இணையத் தொழில் நுட்பத்தை செரிக்க முடியாமல் பித்தம் பிடித்த முதலாளிகளுக்கு இன்னொரு உதாரணம் இணைய தளங்களின் உள் பக்கங்களுக்கு லிங்க் கொடுப்பதை தடுக்க முயற்சிப்பது. 1996ம் ஆண்டு ‘ஷெட்லேண்ட் நியூஸ் என்ற பத்திரிகை தனது செய்திகளுக்கான நேரடி சுட்டியை கொடுப்பதன் மூலம் தனக்கு வர வேண்டிய வருமானத்தை தடுத்து நிறுத்துகிறது’ என்று ஷெட்லேண்ட் டைம்ஸ் என்ற இன்னொரு பத்திரிகை ஸ்காட்லாந்தில் வழக்கு தொடுத்தது. ‘நேரடியாக குறிப்பிட்ட செய்தியின் பக்கத்துக்கு லிங்க் கொடுப்பது தனது அறிவுசார் சொத்துரிமையை பாதிக்கிறது’ என்று வாதிட்டது ஷெட்லேண்ட் டைம்ஸ். ‘தனது முகப்பு பக்கத்தில் காட்டப்படும் விளம்பரங்களை பார்க்காமல் வாசகர்கள் செய்தியை படித்து விட்டுப் போவது தனது வருமானத்தை பாதிக்கிறது’ என்பது அதன் வாதம். இதே போன்ற வாதத்தை பயன்படுத்தி 2006ம் ஆண்டு நவுக்ரி டாட் காம் என்ற வேலை தேடும் தளத்தின் உள் பக்கங்களுக்கு பிக்சி என்ற தளம் நேரடி சுட்டிகளை கொடுப்பதை டெல்லி உயர்நீதிமன்றம் தடை செய்தது. பொதுவாக இணைய தளங்களில் ஒரு முகப்பு பக்கமும் ஒரு சில அல்லது நூற்றுக்கணக்கான உள் பக்கங்களும் இருக்கின்றன. ஒரு தளத்தின் முகப்புக்கு வந்து அங்கிருந்து மற்ற பக்கஙளுக்கான சுட்டிகளை கிளிக் செய்து போகலாம். அல்லது நேரடியாக குறிப்பிட்ட பக்கத்தின் சுட்டிக்கு வந்து சேரலாம். வைய விரிவு வலை எனப்படும் wwwன் அடிப்படை வடிவமைப்பில் ஒரு தளத்துக்குள்ளேயே இருக்கும் பக்கங்களை சுட்டும் லிங்குகளுக்கும், இன்னொரு தளத்தின் முகப்பு பக்கத்தையோ அல்லது உள் பக்கங்களையோ சுட்டும் லிங்குகளுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. இணையத்தில் உள்ள எந்த ஒரு பக்கத்துக்கும் எந்த ஒரு பக்கத்திலிருந்தும் சுட்டி கொடுக்கலாம் என்பதுதான் அந்த வடிவமைப்பின் நோக்கம். ‘தேடப்படும் சொல்லுக்கு பொருத்தமான பக்கங்களுக்கு நேரடியான சுட்டியை கொடுப்பது’ கூகுள் போன்ற தேடுபொறிகளை பயன்படுத்தி இணையத்தில் தகவல்களை எளிதாக தேடுவதற்கும் இன்றியமையாதது. தமது லாப வேட்டைக்காக இந்த அடிப்படை நுட்பத்தை முடக்க முயன்றன முதலாளித்துவ நிறுவனங்கள். அறிவியலாளர்களின் புதிய கண்டுபிடிப்புகளை தமது லாப வேட்டை சட்டகத்துக்குள் அடக்க முயலும் முதலாளிகள், பெரும்பான்மை மக்களின் நலனுக்கு தொழில் நுட்பங்களை பலனளிக்காமல் செய்வதோடு அடுத்தக் கட்ட தொழில் நுட்ப வளர்ச்சியையும் முடக்கி விடுகிறார்கள். ‘பூமியில் உள்ள அனைத்து வளங்களும், மனித குலத்தின் அறிவுச் செல்வங்களும் அனைத்து மனிதர்களுக்கும் உரியன’ என்ற அடிப்படையில் கட்டமைக்கப்படும் சோசலிச சமூகம்தான் மனிதகுலத்தின் முன்னேற்றத்துக்கும் முழுமையான தொழில் நுட்ப வளர்ச்சிக்கும் வழிவகுக்கும். தனிச் சொத்துரிமை அடிப்படையிலான முதலாளித்துவம் ஒவ்வொரு கட்டத்திலும் தொழில் நுட்ப வளர்ச்சியை பின்னுக்கு இழுக்கிறது என்பதுதான் வரலாறு சொல்லும் உண்மை. 15 இணையத்தில் டவுன்லோட் செய்தால் 10 ஆண்டு சிறை! http://www.vinavu.com/2013/01/29/jail-for-internet-download/   இங்கிலாந்தில் சட்ட விரோதமாக திரைப்படங்கள், பாடல்கள், புத்தகங்களை டவுன்லோட் செய்பவர்களுக்கு 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனை [Cartoons — ACTA in UK: 10 years in jail for 'illegal downloads']போலிகளுக்கு எதிரான வர்த்தக உடன்பாடு (ACTA), என்பது பெரிய கார்ப்பரேட் பிராண்டுகளின் ஆடைகள், மருந்துகள் போன்றவற்றை நகல் எடுத்து மலிவாக விற்பது, இணையத்தில் காப்புரிமை மீறல் இவற்றை கட்டுப்படுத்துவதற்கான பன்னாட்டு ஒப்பந்தம். இதை ஏற்றுக் கொண்ட நாடுகள் கடும் தண்டனைகள் வழங்குவதற்கான தேசிய சட்டங்களை இயற்ற வேண்டும். அதன்படி இங்கிலாந்து சட்டம் இயற்றியிருக்கிறது. இந்தியாவில் எப்போது? முதலாளிகள் தங்களது வர்த்தக நலனைக் காப்பாற்றிக் கொள்வதற்கு இத்தகைய அடக்குமுறைச் சட்டங்களைத்தான் சார்ந்து நிற்கிறார்கள். உலகின் கனிவளம், இயற்கை வளம், நீர் அனைத்தையும் விற்று காசாக்கும் இவர்களும் கூட இயற்கை வளத்தை டவுண்லோடு செய்துதான் தொழில் செய்கிறார்கள். இவர்களை யார் தண்டிப்பது? 16 அமெரிக்காவில் ஒரு அவுட்சோர்சிங் காமெடி! ஆதவன் http://www.vinavu.com/2013/01/21/american-outsourcing-comedy/   இப்படி ஒரு வேலைக்கு ஆண்டுக்கு ரூ 1.25 கோடி சம்பளம் என்றால் எப்படி இருக்கும்? காலை 9 மணி அலுவலகத்துக்கு வந்து ரெட்இட் தளத்தை படிக்க வேண்டும். சில பூனை வீடியோக்களை பார்க்க வேண்டும் காலை 11.30 மணி மதிய உணவு இடைவேளை மதியம் 1 மணி ஈபே நேரம் மதியம் 2 மணி பேஸ்புக், லிங்க்ட்-இன் மாலை 4.30 மணி நாள் இறுதி அறிக்கை நிர்வாகத்துக்கு அனுப்புதல் மாலை 5 மணி வீட்டுக்கு இப்படி ஒரு கனவு வேலை எல்லோருக்கும் கிடைத்து விடுவதில்லை. ஆனால் சுயமுனைப்பு இருந்தால் அப்படி ஒரு வேலையை உருவாக்கிக் கொள்ளலாம். சில ஆண்டுகளாக இப்படி வேலை செய்து வந்த “பாப்” என்பவரைப் பற்றிய அறிக்கையை வெளியிட்டிருக்கிறது அமெரிக்காவின் பிரபல தொழில் நுட்ப நிறுவனமான வெரிசான். ஆம், 40களின் நடுவிலான வயதுடைய “பாப்”, அமெரிக்காவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப கட்டமைப்பு நிர்வாக சேவை நிறுவனம் ஒன்றில் பணிபுரிகிறார். அவரது ஆண்டு சம்பளம் $250,000 (சுமார் ரூ 1.25 கோடி). சற்றே வேலைப் பளு அதிகம் தான். ஆனால் “பாப்” இதை எளிமையாக கையாண்டார். “பாப்” வேலை செய்த நிறுவனம் ஊழியர்கள் வீட்டிலிருந்தே வேலை செய்வதற்கு வசதியாக வி.பி.என். எனப்படும் மெய்நிகர் தனியார் இணைப்புச் சேவை (VPN)யை இரண்டு ஆண்டுகளாக செயல்படுத்தியிருந்தது. நிறுவனத்தின் பாதுகாப்புப் பிரிவு மே 2012ல் அந்த சேவை தொடர்பான கணினி பதிவுகளை ஆய்வு செய்ததில் சீனாவில் இருக்கும் ஷென்யாங்கிலிருந்து இந்த வசதி பயன்படுத்தப்படுவது தெரிய வந்தது. அதற்கு பயன்படுத்தப்பட்டிருந்த கணக்குக்கு உரிமையாளரான “பாப்” அலுவலகத்தில் கணினி திரையை நோக்கி தனது இருக்கையில் உட்கார்ந்து கொண்டிருக்கிறார். அவர் C, C++, பெர்ல், ஜாவா, ரூபி, பி.எச்.பி., பைதான் போன்ற கணினி மொழிகளில் நிபுணர். நிறுவனத்தில் நீண்ட காலம் பணி புரிபவர். யாரையும் தொந்தரவு செய்யாத அமைதியான குடும்பப் பாங்கான மனிதர். அவருக்கு செல்லமாக “பாப்” என்று பெயர் சூட்டியிருக்கிறது வெரிசான். ‘”பாப்”பின் கணினியில் புகுந்துள்ள ஏதோ ஒரு திருட்டு நிரல் மூலம் யாரோ சீனாவிலிருந்து தங்களது கணினி வலைக்குள் நுழைந்து விட்டார்கள்’ என்று அதிர்ச்சியடைந்த நிறுவனம் இதைப் பற்றி ஆராய்ந்து சரி செய்ய வெரிசான் ஆய்வாளர்களை உதவிக்கு அழைத்தது. வெரிசானின் ஆய்வில், ‘சீனாவிலிருந்து வி.பி.என் பயன்படுத்தப்படுவது புதிதாக நடக்கவில்லை’ என்று தெரிந்தது. கைவசம் இருந்த 6 மாத கணினி பதிவுகளின் படி குறைந்த பட்சம் 6 மாதங்களுக்கு இது நடந்து வந்திருக்கிறது. “பாப்”பின் கணினியில் ஏதாவது நச்சு நிரல் புகுந்திருக்கிறதா என்று ஆய்வு செய்தது வெரிசான். அதற்காக கணினியில் அழிக்கப்பட்டு ஆனால் இன்னும் மறுபடியும் பயன்படுத்தப்படாத சேமிப்பிலிருந்து அழிக்கப்பட்ட பழைய கோப்புகளை மீட்ட போது ஷென்யாங்கில் இருக்கும் ஒரு சீன நிறுவனத்துக்கு அனுப்பிய நூற்றுக் கணக்கான இன்வாய்ஸ்களை கண்டுபிடித்தது வெரிசான். அதாவது, “பாப்” அவருக்குக் கொடுக்கப்படும் வேலையை சீனாவில் உள்ள ஒரு நிறுவனத்திற்கு அவுட்சோர்ஸ் செய்துவிட்டார்- அந்த வேலையைச் செய்ய வருடத்திற்கு $50,000 (சுமார் ரூ 25 லட்சம்) சீன நிறுவனத்திற்கு கொடுத்திருக்கிறார். இதனால் நிறுவனத்துக்கு நடக்க வேண்டிய வேலைகளில் எதுவும் பாதிப்பில்லைதான். கடந்த பல ஆண்டுகளாக அவருக்கு மிகச் சிறந்த மதிப்பீடுகள் கிடைத்திருக்கின்றன. அவரது நிரல்கள் சிறப்பாக எழுதப்பட்டிருந்தன; தெளிவாக இருந்தன; நேரத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு காலாண்டிலும் அவர் அந்த அலுவலகத்தின் மிகச் சிறந்த நிரலாளர் என்று பாராட்டப்பட்டிருந்தார். வங்கியை கொள்ளையடிக்கும் கொள்ளைகாரனிடம் பிக்பாக்கெட் அடித்த திருடனின் கதைதான் “பாப்”பின் கதை. வரும் சம்பளத்தில் கொஞ்சம் அங்கே கொடுத்து வேலையை முடித்துக் கொடுத்தார். சிறந்த, திறமையான பணியாளர் என்று பெயரும் கிடைத்தது. நியாயமாக பார்த்தால் “பாப்”புக்கு பதவி உயர்வு கொடுத்து அந்த நிறுவனத்தின் மேலாளர் ஆக்கி இருக்க வேண்டும். ஆனால், முதலாளித்துவ அறம் இதை குற்றம் என்கிறது. வெரிசானின் இந்த கண்டுபிடிப்புக்குப் பிறகு “பாப்” வேலை நீக்கம் செய்யப்பட்டார். [பூனை] பாப் இந்த உத்தியை தானாக கண்டுபிடிக்கவில்லை. உலகமயமாக்கல் காலகட்டத்தில் குறைந்த கூலிக்கு வெளிநாடுகளில் வேலைகளை செய்து வாங்குவதை முதலாளித்துவ நிறுவனங்கள்தான் அவருக்கு கற்றுக்கொடுத்திருந்தன. இந்த சம்பவத்தைப் பற்றி விசாரணை செய்த வெரிசானின் வேலன்டைன் என்ற அதிகாரி ‘”பாப்” போல இன்னும் பலர் இது போன்று செயல்படுவதாகவும், அவர்களைக் கண்டுபிடிக்க முயற்சித்துக் கொண்டிருப்பதாகவும்’ சொல்லியிருக்கிறார். சீனாவிலிருந்து நேரடியாக அலுவலகத்தில் இணைக்கச் சொல்லாமல் தனது வீட்டுக் கணினி மூலமாக வழி நடத்தியிருந்தால் “பாப்” கூட பிடிபடாமல் தப்பித்திருந்திருக்கலாம். அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் ஊழியர்களுக்கு சரியான கூலி, 8 மணி நேர வேலை, ஊக்கத் தொகை, வசதியான வேலைச் சூழல் மற்றும் இதர சலுகைகள் கொடுக்க வேண்டும். ஊழியர்கள் ஒன்று சேர்ந்து போராடி விடக் கூடாது என்பதற்காக பல சலுகைகளை கொடுத்து உழைக்கும் வர்க்கத்தை அமைதிப்படுத்தி வைத்திருக்க வேண்டியிருந்தது. கம்யூனிசம் வந்து விடக் கூடாது என்று உழைப்பவர்களுக்கு வசதிகளை கொடுத்து வைத்திருந்தால் போராட்டங்களையும் புரட்சியையும் தவிர்த்து விடலாம். ஆனால் முதலாளித்துவத்தின் புனிதமான லாப வேட்டைக்கு அது மிகப்பெரிய ஆப்பாக இருந்தது. அதைத் தாண்டுவதற்கு உலகமயமாக்கல் முதலாளிகளுக்கு உருவாக்கிக் கொடுத்த வழி, ‘குறைந்த கூலிக்கு, மோசமான பணிச் சூழலில், அடிமைகளைப் போல், நேரம் காலம் பார்க்காமல் உழைக்க, வளரும் நாடுகளில் இருக்கும் மக்கள் கூட்டத்தைப் பயன்படுத்தி தேவையான வேலைகளை செய்து வாங்கிக் கொள்வது.’ அமெரிக்காவில் ஒரு சேவையை உருவாக்கும் செலவில் பல மடங்கு குறைவாக சீனாவிலோ, இந்தியாவிலோ, ஆப்பிரிக்காவிலோ வேலையை முடித்து வாங்கி விடலாம். கிளம்பினார்கள் முதலாளிகள். அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் வேலைகள் குறைந்தன, சீனாவிலும் இந்தியாவிலும் மனிதத்தன்மை குறைந்தது. முதலாளிகளின் உற்பத்தியும் லாபமும் உயர்ந்தது. பன்னாட்டு நிறுவனங்களின் அவுட்சோர்சிங்கை கிண்டல் செய்து ஆனியன் இணைய தளம் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஒரு வீடியோவை தயாரித்திருந்தது. அந்தக் கேலி படத்தை நடைமுறையாக மாற்றியதுதான் “பாப்”பின் திறமை. இதையே அந்த நிறுவனம் செய்திருந்தால் அது பொருளாதாரத் திறமை. “பாப்” செய்ததால் துரோகம். அந்த நிறுவனம் இனி வரும் காலத்தில் ருசிகண்ட பூனையாக, தானே இதைத் தான் செய்யப் போகிறது. பன்னாட்டு நிறுவனங்கள் தமது பெருமளவு லாப வேட்டைக்காக நடத்தும் சுரண்டலைப் போல “பாப்” சிறு அளவில் சுரண்டி இருக்கிறார். அழுகிப் போயிருக்கும் முதலாளித்துவம் தன் அழுகிய காயங்களை வெளியே காட்டிகொண்டிருகிறது. பாப் அந்த அழுகலின் ஒரு பக்கம் மட்டும்தான். ‘கம்யூனிச சமூகத்தில் எல்லோரும் சோம்பேறிகள் ஆகி விடுவார்கள்’ என்று அவதூறு பேசினர் முதலாளித்துவ நிபுணர்கள். பொதுவுடமை சமூகத்தில் உழைப்பின் மீதான சலிப்பு ஒழிக்கப்பட்டு ஒவ்வொரு தனிமனிதரும் தனது திறமையை ஆகச் சிறந்த முறையில் வெளிப்படுத்தி உழைப்பை ரசித்து செய்வதற்கான சமூகச் சூழலும் அந்த சமூக உழைப்பின் விளைவுகள் ஒட்டு மொத்த சமூகத்துக்கும் பலன் அளிப்பதாகவும் இருக்கும். ஆனால் முதலாளித்துவ சமூகத்திலோ பிறரின் உழைப்பை சுரண்டி சுயநலமாகவும் சோம்பேறியாகவும் வாழ்பவர்கள்தான் செழிக்கிறார்கள். - ஆதவன் 17 வைரல் மார்க்கெட்டிங் – சமூக வலைத்தளங்களின் கருத்துச் சுதந்திரம்! http://www.vinavu.com/2012/12/10/viral-marketing/   சமூக வலைத்தளங்கள் அனைவரும் தத்தமது கருத்துகளை வெளிடுவதற்கான, கருத்து சுதந்திரத்திற்கான வெளியை ஏற்படுத்தியிருக்கும் மாற்று ஊடகமாக வியந்தோந்தப்படுகின்றன. சமூகவலைத்தளங்களுள் ஒன்றான டிவிட்டரில் ஒரு குறிப்பிட்ட பொருளை, பிரச்சனையை பற்றி பேசி விவாதிப்பதுடன் அதை ஒருங்கிணைக்க # முத்திரை (#Discover – hash tag) பயன்படுத்தப்படுகிறது. அதாவது விவாதிக்கும் விடயத்திற்கு ஒரு பொதுவான பெயர் வைத்து அதன் முன் ’#’ சேர்த்து அனைவரும் அதன் கீழ் விவாதம் நடத்துவார்கள். இதன் உதாரணம் #tnfisherman. [வைரல் மார்க்கெட்டிங் 3] வைரல் மார்க்கெட்டிங் இதே முறையில் மைக்ரோ சாப்ட் #DroidRage என்ற பெயரில் அதாவது Android மீது உங்களின் கட்டுப் படுத்த முடியாத கோபம் என்ற பொருளில் ஒரு விவாதத்தை தொடக்கி வைத்து அதில் ஆன்ராய்டு மென்பொருள் போன்கள் வைரஸினால் பாதிக்கபட்ட கதைகளை எங்களிடம் சொல்லுங்கள், உங்களுக்கு ஆச்சரியமான பரிசுகளை தருகிறோம் என்று சொல்லியிருந்தது. விண்டோசின் காதலர்களும், நலம் விரும்பிகளும் (?) உடனே களத்தில் குதித்து ஆண்ட்ராய்டு மொன்பொருளின் குற்றங்குறைகளை தோண்டியெடுத்து பதிவிட ஆரம்பித்தனர். [வைரல் மார்கெட்டிங் 1] இது Amway போன்ற MLM நிறுவனங்கள் தனது வாடிக்கையாளர்ளிடம் ஆசையைக் காட்டி அவர்களையே தனக்கு விளம்பரம் செய்பவர்களாக பயன்படுத்தும் மலிவான உத்தி தான் என்றாலும், தனது பொருட்களின் நிறையை நம்பி அதன் அனுகூலங்களை விளம்பரப்படுத்துவது என்பது போய் போட்டியாளரின் குறைகளை நம்பி அதை விளம்பரப்படுத்தி ஆதாயமடைவது என்ற கட்டத்தை அடைந்திருக்கிறது. இதைப் பார்த்த Android விரும்பிகள் Microsoft-ன் குறைகள் குறித்து #WindowsRage என்ற பெயரில் எதிர் பதிவு செய்ததும், விண்டோஸ் தான் வைத்த ஆப்பில் தானே சிக்கிக்கொண்டது. விண்டோசுக்கு ஆதரவான, எதிரான இருவகைப் பதிவர்களும் இதன் மூலம் நவீன ஸ்மார்ட் போன் கம்பெனிகளுக்கு இலவச விளம்பரம் செய்திருக்கிறார்கள். இதில் ஸ்மார்ட் போன் தயாரிப்பு நிறுவனங்கள் இருசாரரையும் பலியாக்கி லாபமீட்டும் வேலையைப் பார்க்கின்றன. சந்தையில் இதெல்லாம் சாதாரணம், போட்டியின் அறம் இதுதானென்று என்று சந்தைப் பொருளாதார ஆதரவாளர்கள் வாதிடலாம். இவ்விடயத்தின் பரிணாமம் இத்துடன் முடிவடைந்து விடவில்லை. [] ஒவ்வொரு நிறுவனமும் சந்தை போட்டியில் வகை வகையான விளம்பரங்களை கையாண்டு வருகின்றன. விளம்பரங்களை வெளியிடுவதில் ஊடகங்கள் முக்கிய பங்காற்றுகின்றன. ஒரு புறம் வெகுஜன ஊடகங்கள் மக்களிடையே கருத்து திணைப்பை செய்து வருகின்றன. மறுபுறம் மாற்று ஊடகமாக சொல்லப்படும் சமூக வளைத்தளங்களிலோ, அவர்களுடைய கருத்துக்கள் நம்முடைய வாயால் சொல்லவைக்கப்படுகின்றன. இந்த புதிய விளம்பர முறைக்கு ’வைரல் மர்கெட்டிங்’ (Viral Marketting) என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த வைரல் மார்கெட்டிங்கில் ஒரு குறிப்பிட்ட பொருள் அல்லது விடயம் பரபரப்பாக பேசவைக்கப்படும். அந்த பரபரப்பில் அந்த விடயம் உலகெங்கும் பல லட்சக்கணகானோரின் பொதுக் கருத்தாக்கப்படும். இந்த வகையில் நிறுவனங்களின், விளம்பரப்படுத்துவோரின் MouthPeice ஆக நம்மை மாற்றி அதன் மூலம் இலவச விளம்பரத்தில் அந்நிறுவனங்கள் கொள்ளை லாபமடிக்கின்றன. பீற்றிக்கொள்ளக்கூடிய ‘சமூக வலைத்தளங்களின் கருத்து சுதந்திரம்’ என்பது இந்த லட்சணத்தில் தான் இருக்கிறது. இது தான் கருத்து சுதந்திரம் என்றால், தனது லாபத்திற்க்காக எதையும் செய்யலாம் என்பது தான் சந்தை போட்டியின் அறம் என்றால், அது நிலவும் சமூக அமைப்பின் விழுமியங்களில் பிரதிபலிக்காமல் இருப்பதில்லை. அது தனி மனித நுகர்வே இறுதி மகிழ்ச்சி, கருத்து சுதந்திரம், விழுமியம், நுகர்விற்காக எதையும் செய்யலாம் என்றாகியிருக்கிறது. உலகமே நாடக மேடை, நாமெல்லாம் நடிகர்கள் என்பது ஷேக்ஸ்பியர் காலத்து வழக்கு. இன்றைய உலகமயமாக்கல் சகாப்த்தத்தில் உலகமே சந்தை, நாமெல்லாம் சந்தையின் பரிவர்த்தனை பண்டங்கள், சந்தை போட்டியே அறம் என்றாகிவிட்டது. கருத்து சுதந்திரத்தையும், சமூக பற்றையும் மீட்டெடுக்க வேண்டுமென்றால், இந்த சந்தைப் பொருளாதாரத்தையும், அதன் உயிரையும் வீழ்த்த வேண்டும்.   18 அவுட்சோர்சிங் துறையில் ஆட்குறைப்பு! http://www.vinavu.com/2012/12/06/companies-in-india-firing-employees/   இந்தியாவில் இருந்து அமெரிக்க நிறுவனங்களுக்கு சேவை அளிக்கும் வணிகத்தை முதன் முதலில் ஆரம்பித்து வைத்த அமெரிக்காவின் டல்லாஸை தலைநகரமாக கொண்டு இயங்கும் டெக்சாஸ் இன்ஸ்ட்ரூமென்ட்ஸ் நிறுவனம் இந்தியாவில் ஆட்குறைப்பு நடவடிக்கையை ஆரம்பித்திருக்கிறது. 1985-ம் ஆண்டு செயற்கைக் கோள் வழியாக தகவல் பரிமாறிக் கொள்ளும் வசதியை பெங்களூருவில் நிறுவி இந்தியாவின் ஐடி அவுட்சோர்சிங் துறையை தொடங்கி வைத்த நிறுவனம் டெக்சாஸ் இன்ஸ்ட்ரூமென்ட்ஸ் (டிஐ). அந்நிறுவனம் இந்தியாவில் 1500 பொறியாளர்களை வேலைக்கு வைத்திருக்கிறது. டெக்சாஸ் இன்ஸ்ட்ருமென்ட்ஸ் ஆண்டுக்கு $14 பில்லியன் (சுமார் ரூ 77,000 கோடி) வருமானம் ஈட்டுகிறது. மொபைல் போன் சில்லுகள் உற்பத்தியில் இன்டெல், சாம்சங் நிறுவனங்களுக்கு அடுத்து உலகிலேயே மூன்றாவது இடத்தில் இருக்கிறது. அதன் உலகளாவிய மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக ஒரு வணிகப் பிரிவையே இழுத்து மூடுவதாக டிஐ முடிவு செய்திருக்கிறது. மொபைல் போன், டேப்லட் போன்ற கருவிகளில் பயன்படுத்தப்படும் சில்லுகளிலிருந்து அதிக லாபம் தரும் துறைகளுக்கு கவனத்தை திருப்பப் போவதாக அறிவித்திருக்கிறது. குவால்காம் போன்ற நிறுவனங்களின் கடும் போட்டியாலும், சாம்சங் போன்ற வாடிக்கையாளர்கள் தாமே சில்லுகளை உற்பத்தி செய்து கொள்வதாலும் டிஐ கம்பியில்லா இணைப்புக்கான துறையில் கவனத்தை செலுத்த முடிவு செய்திருக்கிறது. உலகெங்கும் உள்ள ஊழியர்களில் 5 சதவீதம் பேரை (1700 பேர்) வேலை நீக்கம் செய்வதன் மூலம் ஆண்டுக்கு $450 மில்லியன் சேமிப்பு கிடைக்கும் என்று கணக்கு போட்டிருக்கிறது. இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்தியாவில் 300 முதல் 500 வரை பொறியாளர்கள் வேலை இழப்பார்கள். இவர்கள் அனைவரும் 2 முதல் 5 ஆண்டுகள் வரை அனுபவமுடைய மென்பொருள் வல்லுனர்கள். வேலை இழப்பவர்களில் சில உயர் மேலாளர்களும் அடங்குவார்கள். மின்னணு கருவிகள் உற்பத்தி செய்யும் பிற நிறுவனங்களும் இந்தியாவில் ஆட்குறைப்பு நடவடிக்கைகளை ஆரம்பித்திருக்கின்றன. ஏற்கனவே, பிரான்சைச் சேர்ந்த அல்காடெல்-லூசென்ட் 1,000 இந்திய ஊழியர்களை வேலை நீக்கம் செய்யப் போவதாக அக்டோபர் மாதம் அறிவித்திருந்தது. இந்த ஆட்குறைப்பில் பெரும்பகுதி 7,000 பேர் வேலை பார்க்கும் பராமரிப்புப் பணிகள் பிரிவில் செய்யப்படும். உலக அளவில் 5,000 ஊழியர்கள் குறைக்கப்படுவார்கள் என்று அல்காடெல் ஜூலை மாதம் அறிவித்திருந்தது. மேலும் நோக்கியா சீமன்ஸ் நெட்வொர்க்ஸ் நிறுவனம் உலக அளவில் 17,000 ஊழியர்களை ஆட்குறைப்பு செய்யப் போவதாக அறிவித்திருக்கிறது. இந்தியாவில் மொபைல் தொலைபேசி நிறுவனங்களுக்கு சேவை வழங்கி வரும் எரிக்சன்ஸ், ஹூவாவெய், ZTE ஆகிய நிறுவனங்களும் சம்பளக் குறைப்பு, ஆட்குறைப்பு மறு சீரமைப்பு நடவடிக்கைகளில் இறங்கியிருக்கின்றன. உலகளாவிய பொருளாதார சூதாட்டக் குமிழியின் போது ஆயிரக் கணக்கான ஊழியர்களை வேலைக்கு எடுத்த நிறுவனங்கள், குழிழி உடைந்த பிறகு தமது லாபத்தை தக்க வைத்துக் கொள்ள அவர்களை நடுத்தெருவில் விட ஆரம்பித்திருக்கின்றன. ‘சந்தையின் செயல்பாடு இப்படி இருந்தால்தான் நாட்டுக்கு(முதலாளிகளுக்கு) நல்லது’ என்ற மந்திரத்தை முதலாளித்துவ ஆதரவாளர்கள் முணுமுணுக்கலாம். ஆனால் வேலையிழந்த ஊழியர்கள் ஒன்றிணைந்து போராடாவிட்டால் வாழ்க்கை இல்லை! 19 ஐ.டி துறை ஊழியர்களின் வேலைச்சுமைக்கு காரணம் என்ன? http://www.vinavu.com/2012/12/04/truth-about-igate-conspiracy-uncovered-ad/   ஐ-கேட் நிறுவனத்தின் “சதித்திட்டம் அம்பலம்” என்ற விளம்பரத் தொடர் அமெரிக்க கார்ப்பரேட்டுகளுக்கு ஐடி சேவைகளை வழங்கும் அதன் போட்டி நிறுவனங்களுக்கு கடுப்பேற்றியிருக்கிறது. [ஐகேட்] பொதுவாக அமெரிக்க, ஐரோப்பிய கார்ப்பரேட்டுகளுக்கு தகவல் தொழில்நுட்ப சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் time & material எனப்படும் நேரம்& பொருட்செலவு அடிப்படையில் கட்டணம் வசூலிப்பது வழக்கம். தொழிற்சாலைகளுக்கு ஒப்பந்தத் தொழிலாளர்களை அனுப்பும் கான்ட்ராக்டர் போல, வாடிக்கையாளரின் பணியில் ஈடுபடுத்தப்படும் ஊழியர்களின் எண்ணிக்கை, அவர்கள் வேலை செய்த நேரம், கூடுதலாக ஆன செலவுகள் இவற்றை கணக்கிட்டு மாதா மாதம் இன்வாய்ஸ் அனுப்பி பணம் பெற்றுக் கொள்வார்கள். இந்த முறையில் வாடிக்கையாளருக்கு பலன் கிடைத்தாலும் கிடைக்கா விட்டாலும் காண்டிராக்டருக்கு பணம் வந்து விடும். வேலையை முடிக்க அதிக நேரம் பிடித்தால் அதிக பணம் கொடுக்க வேண்டியிருக்கும். சீக்கிரம் முடிந்து விட்டால் குறைந்த அளவுதான் வருமானம் வரும். நிறைய ஆட்கள் வேலையில் ஈடுபட்டால் வருமானம் அதிகம். அமெரிக்காவில் ஊழியர்களை வைத்து சேவை வழங்குவதற்கு கொடுக்க வேண்டிய சம்பளத்தை விட பல மடங்கு குறைவான சம்பளத்தில் இந்திய ஊழியர்களை வைத்து வேலை வாங்கும் கங்காணிகளாகவே இந்த நிறுவனங்கள் வளர்ந்தன. அதனால், அமெரிக்காவில் வேலை இழப்பு அதிகமாகி இந்தியாவில் வேலை வாய்ப்புகள் அதிகமாயின. அமெரிக்க ஊழியர்கள் இந்திய ஊழியர்களுக்கு பயிற்சி கொடுத்து தயாராக்கிய பிறகு வேலையை விட்டு நீக்கப்பட்டார்கள். இந்தியாவில் ஆயிரக்கணக்கான ஊழியர்களை எடுத்து தயார் நிலையில் வைத்திருந்தனர். புதிய பட்டதாரிகளை எடுப்பதற்கு கல்லூரிகளில் மூன்றாம் ஆண்டு, நான்காம் ஆண்டு எஞ்சினியரிங் படிப்பவர்களை எல்லாம் வேனில் போய் அள்ளிக் கொண்டு வருவது வழக்கமாக இருந்தது. ஊழியர்களை ஈர்க்கவும் தக்க வைக்கவும் ஆண்டு தோறும் சம்பள உயர்வுகள், இலவச உணவு, இலவச பானங்கள், உடற்பயிற்சிக் கூடங்கள் என்று வசதிகளை சொரிந்தனர். பெஞ்ச் எனப்படும் முறையில் வாடிக்கையாளர் பணி இல்லாத நேரத்திலும் ஊழியர்களை சும்மா உட்கார வைத்திருந்து சம்பளம் கொடுத்தனர். வாடிக்கையாளர் வேலை எடுத்த உடன் அதில் அதிக எண்ணிக்கையில் ஆட்களை ஈடுபடுத்தி கட்டணம் வசூலிப்பதற்கு அது தேவையாக இருந்தது. இதை ஒரு ‘சதித்திட்டம்’ என்று உருவகிக்கும் ஐ-கேட், தமது நிறுவனம் பலன்களின் அடிப்படையில், அதாவது ‘சாப்பிட்டுப் பார்த்து நல்லா இருந்தா காசு கொடுங்க’ என்ற முறையில் சேவைகளை வழங்கத் தயாராக இருப்பதாக விளம்பரப்படுத்துகிறது. இன்போசிஸ் நிறுவனத்தில் தலைமை விற்பனை மேலாளராக பணியாற்றிய அதிகாரியான பனீஷ் மூர்த்தி 2002ல் அங்கிருந்து வெளியேற்றப்பட்ட பிறகு ஐ-கேட்டை ஆரம்பித்தார். அமெரிக்காவின் கலிபோர்னியாவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் ஐ-கேட் சென்ற ஆண்டு தொடக்கத்தில் $1.2 பில்லியன் விலை கொடுத்து பட்னி கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தை விலைக்கு வாங்கியது. அதன் பிறகு ஆண்டுக்கு $70 பில்லியன் புழங்கும் இந்திய ஐடி சேவைத் துறையில் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள புதிய வாடிக்கையாளர்களை தேட வேண்டி வந்திருக்கிறது. $4 மில்லியன் (சுமார் ரூ 20 கோடி) செலவில் நியூயார்க் டைம்ஸ், பைனான்சியல் டைம்ஸ், வால்ஸ்ட்ரீட் ஜர்னல் போன்ற அமெரிக்க வணிக நாளிதழ்களில் வெளியிட்டுள்ள விளம்பரங்களில், “அமெரிக்க மெகா கார்ப்பரேட்டுகளுக்கு எதிரி பொருளாதாரச் சுணக்கம் இல்லை, நேரம்&பொருட்செலவு அடிப்படையிலான சேவைக் கட்டணம்தான்” என்கிறது ஐ-கேட். தான் மட்டுமே பலன்களின் அடிப்படையில் கட்டணம் வசூலிப்பதாக பெருமைப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆள் பிடித்து கொடுத்து சம்பாதிக்கும் வேலையில் ஈடுபட்டுள்ள இந்திய தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களுக்கு பலன்களின் அடிப்படையில் கட்டணம் பெறுவது ஒரு சவாலாகவே இருக்கிறது. வாடிக்கையாளரின் வணிக நுணுக்கங்களையும், தொழில் நுட்பங்களையும் புரிந்து கொண்டு வேலை செய்யும் திறமை தேவைப்படுகிறது. இன்றும் இன்போசிஸ்சின் மொத்த வருமானம் $7 பில்லியனில் (சுமார் ரூ 35,000 கோடி) 60 சதவீதம் நேரம்&பொருட்செலவு அடிப்படையில் வசூலிக்கப்படுகிறது. எச்சிஎல்லின் வருமானமான $4.3 பில்லியனில் (சுமார் ரூ 23,000 கோடி) 50 சதவீதம் நேரம்&பொருட்செலவு அடிப்படையில் ஈட்டப்படுகிறது. ஆனால், உலகளாவிய பொருளாதார நெருக்கடியின் காரணமாக அமெரிக்க, ஐரோப்பிய கார்ப்பரேட்டுகள் வணிக பலன் அடிப்படையிலான சேவை வழங்குமாறு கட்டாயப்படுத்துகின்றன. அதாவது முன்பு லேபர் காண்டிராக்ட் முறைப்படி வேலைக்கு விட்ட கார்ப்பரேட்டுகள் இப்போது மொத்தமாக தொகை பேசி வேலை கொடுக்கின்றன. தேவையான ஆட்கள், பொருட்கள் எல்லாவற்றையும் அந்தத் தொகைக்குள் செலவு செய்து கொள்ள வேண்டும். இதனால் வேலையை குறுகிய நேரத்துக்குள் குறைந்த ஆட்களை வைத்து சரியான தரத்தில் முடிப்பதற்கான பொறுப்பு இந்திய நிறுவனங்களின் மீது விழுந்திருக்கிறது. எச்.சி.எல் தான் முதல் முறையாக 2000-ம் ஆண்டுகளின் மத்தியிலேயே இத்தகைய முறையை அறிமுகப்படுத்தியதாக சொல்லியிருக்கிறது. விமான உற்பத்தி செய்யும் போயிங் நிறுவனத்துடனான பல மில்லியன் டாலர் ஒப்பந்தம் ரிஸ்க்-ரிவார்ட் அடிப்படையில் போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறது எச்.சி.எல். இன்போசிஸ் தனது இன்போசிஸ் 3.0 சேவை ‘பலன் அளித்தால் கட்டணம்’ என்ற அடிப்படையில் இயங்குவதாக சொல்கிறது. நேரம்-பொருட்செலவு மாதிரியிலிருந்து, வணிகபலன் மாதிரிக்கு படிப்படியாக மாறிக் கொண்டிருப்பதாக சொல்கிறது. விப்ரோ விமான நிலையங்களுக்கான சேவைக்கு பயணிகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் கட்டணம் பெறுவதாக ஒப்பந்தம் போட்டிருப்பதாக தெரிவிக்கிறது. இவர்களைப் போலவே பல முன்னணி நிறுவனங்களும் பலன் அடிப்படையிலான சேவை கட்டணத்துக்கு மாறிக் கொண்டிருக்கின்றனர். முன்பு எவ்வளவுக்கெவ்வளவு அதிகமான பேரை ஒரு புராஜக்டில் ஈடுபடுத்துகிறார்களோ அவ்வளவுக்கவ்வளவு வருமானம் அதிகமாகும், லாபம் அதிகமாகும். இப்போது வரையறுக்கப்பட்ட வருமானத்துக்குள் எவ்வளவுக்கெவ்வளவு குறைந்த ஆட்களை வைத்து முடிக்கிறார்களோ அவ்வளவுக்கு அதிக லாபம் என்று மாறியிருக்கிறது. இதன் விளைவாக ஐடி துறையில் பணி புரிபவர்கள் மீது பல மடங்கு சுமை ஏற்றப்பட்டு வருகிறது. இலவச போக்குவரத்து வசதி, இலவச உணவு, ஆண்டுதோறும் கணிசமான சம்பள உயர்வு, வேலை இல்லாமல் பெஞ்சில் உட்காருவது உட்பட சலுகைகள் அனைத்தும் பறிக்கப்படுகின்றன. வேலைப் பளு 2 மடங்கு ஆனாலும் சம்பளம் அதே அளவில்தான் இருக்கிறது. ‘இஷ்டமில்லை என்றால் வேறு இடம் பார்த்துக் கொள்’ என்று அல்வா கொடுக்கிறார்கள். புதிதாக வேலைக்கு எடுக்கும் போது பார்த்துப் பார்த்து குறைந்த எண்ணிக்கையிலேயே ஆள் எடுக்கிறார்கள். ‘மேற்கத்திய நிறுவனங்களுக்கு ஐடி துறை சேவைகள் அளிப்பது இந்திய இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை அள்ளிக் கொடுத்து, இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் செலுத்தும்’ என்ற கனவு கானல் நீராகிக் கொண்டிருக்கிறது. வேலை கொடுத்த அமெரிக்க/ஐரோப்பிய கார்ப்பரேட்டுகளுக்கும், ஆள் வைத்து வேலை செய்த இந்திய நிறுவனங்களுக்கும் நோக்கம் எப்போதுமே ஒன்றுதான். ஆரம்பத்தில் இந்திய ஊழியர்களின் குறைந்த சம்பளத்தை பயன்படுத்தி அமெரிக்க ஊழியர்களை சுரண்டி லாபம் சம்பாதித்தனர். அப்போது கணிசமான சம்பளம், எளிதான வேலைகள், வேறெங்கும் கிடைக்காத சலுகைகள் என்று இந்திய ஊழியர்களுக்கு தீனி போட்டு வளர்த்தனர். பொருளாதாரச் சூழல் நெருக்கடிக்கு உள்ளானதும், கொழுக்க வைத்த இந்திய ஊழியர்களை வாட்டி சுரண்ட ஆரம்பித்திருக்கின்றனர். வேலை வாய்ப்பு, ஊழியர் நலன், நாட்டின் வளர்ச்சி என்பதுதான் கார்ப்பரேட்டுகளின் நோக்கம் என்று இன்னமும் யாரெல்லாம் நம்புகிறீர்கள்? 20 நாட்டையே திவாலாக்கும் கல்வி! ஆதவன் http://www.vinavu.com/2012/11/23/education-unemployment/   ஜூன் மாதம் வந்துவிட்டால் இந்தியா முழுவதும் மேற்படிப்பு ஜுரம் தொடங்கி விடுகின்றது. உடனடியாக பணம் சம்பாதிக்கும் படிப்பு, சமுக அந்தஸ்துக்கான படிப்பு என விதவிதமான படிப்புகளில் தங்கள் பிள்ளைகளை சேர்த்துவிட வேண்டும் எனப் பெற்றோர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். தன் பிள்ளை படித்து முடித்து ஒரு நல்ல வேலைக்குப் போய் விட்டால் தன் கவலைகள் தீர்ந்துவிடும். அதனால் கடன் வாங்கியாவது படிக்க வைக்க வேண்டுமென பெற்றோர்கள் கருதுகின்றனர். உயர் மத்தியதர வர்க்கம் மற்றும் மத்தியதர வர்க்கப் பெற்றோர்களிடம் முன்பெல்லாம் கோலோச்சிய படிப்பு மருத்துவம் அல்லது பொறியியல் தான். இப்பொழுதோ அது மெல்ல விரிந்து ஃபேஷன் டெக்னாலஜி, ஹோட்டல் மேனஜ்மென்ட், எம்பிஏ, விசுவல் கம்யூனிகேசன், ஃபோட்டொகிராபி எனப் பெருகி விட்டது. இந்தப் படிப்புகளில் ஏதேனும் ஒன்றைப் படித்து விட்டால், பன்னாட்டு, தனியார் பெரு நிறுவனங்களில் நல்ல வேலை, ஐந்திலக்கச் சம்பளம், சொந்த வீடு, கார் என வாழ்க்கையில் உடனே செட்டில் ஆகி விடலாம். இந்த மாயைகளை முதலீடாகக் கொண்டு இன்று பல தனியார் கல்லூரிகள் புற்றீசல் போலப் பெருகி விட்டன. பல லட்சம் ரூபாய் கடன் வாங்கிப் படிக்கும் இந்தப் படிப்புகளால் உண்மையில் இளைஞர்களின் வாழ்க்கை வளம் பெருகிறதா? ஏன் இந்தியாவில் இன்னும் வேலை இல்லாதோரின் சதவிகிதம் இரட்டை இலக்கத்தில் உள்ளது? இந்தப் படிப்புகளினால் இந்தியா முன்னேறுகிறதா? மேற்படிப்பு – தொழிற்கல்வி இப்போது இருக்கும் கல்வி முறைக்கான வித்து பிரிட்டிஷ் காலானியாக நாம் இருந்தபோதே தொடங்குகிறது. காலனிய கால இந்தியாவில் மூலப்பொருட்களை மாத்திரம் கொண்டுசெல்ல வேண்டியிருந்ததால் தொழிற்சாலைகளுக்குத் தேவையான பொறியாளர்கள், வல்லுநர்களின் தேவை குறைவாக இருக்கவே முதலில் நிர்வாகப் பணிக்கான எழுத்தர்களை உருவாக்கவே முக்கியத்துவம் தரப்பட்டது. அடுத்து ராணுவம், போக்குவரத்து மற்றும் ரயில்வே போன்ற துறைகளுக்காக முக்கிய நகரங்களில் மாத்திரம் தொழில்நுட்ப கல்வி நிலையங்கள் ஆரம்பிக்கப்பட்டன. தொழிற் கல்வி 1947 க்குப் பிறகு நாட்டின் கட்டுமானம், தொழிற்சாலை, எந்திரம், மோட்டார் வாகனங்கள் போன்ற துறைகள் வளர வளர அது சார்ந்த படிப்புகளின் தேவை அதிகமாகியது. தேர்ந்த தொழிநுட்ப வல்லுனர்கள் நாட்டின் முன்னேற்றத்திற்கு அவசியம் என ஐஐடிகளை 1957ல் உருவாகியது. மெல்ல மாநில அரசுகள் சேர்ந்துகொண்டன, குறைந்த கட்டணம் மட்டும் வாங்கி மக்கள் வரிப்பணத்தை கொண்டியங்கும் தொழில்நுட்ப கல்லுரிகளை அரசு உருவாக்கியது.1950 களில் 10க்கும் குறைவான தொழில்நுட்ப கல்லுரிகளில் இருந்து 500 க்கும் குறைவான பொறியாளர்கள் வெளிவந்தனர். 1990 ல் உலகமயமாக்கல்- தனியார்மயமாக்கல்- தாராளமயமாக்கல் காலகட்டத்தில் இந்தியாவில் அந்நிய முதலீடு வரத்துவங்கியது. அவுட் சோர்சிங் எனும் ஒருமுறை உலகில் அறிமுகமாகியது. தங்கள் நாட்டில் அதிக சம்பளம் கொடுத்து செய்ய வேண்டிய வேலைகளை எந்த நாட்டில் குறைந்த சம்பளத்திற்கு செய்கிறார்களோ அங்கே வேலைகள் குவியத் தொடங்கின. இதில் இந்தியா, சீனா, பிரேசில் போன்ற நாடுகளில் அந்நிய முதலீடு பெருகியது. மறுபுறம் கல்வியும் தனியார்மயமாக்கப்பட்டு, பல தனியார் பொறியியல் கல்லூரிகள் புற்றீசல் போல தொடங்கப்பட்டன. 70 ஆயிரம் வேலைகள் கார்ப்பரேட் நிறுவனங்களில் இருந்தால், அதைக்காட்டியே பல நூறு பொறியியல் பட்டதாரிகளை உருவாக்கும் கல்லூரிகள் முளைத்தன. 1990 க்கு முன் 400க்கும் குறைவான கல்லூரிகளில் இருந்து 20 ஆயிரம் பொறியியல் பட்டதாரிகள் வெளிவந்த நிலை போய், 2011ல் 1800 கல்லூரிகளில் இருந்து 7.5 லட்சம் பொறியியல் பட்டதாரிகள் வெளிவருகிறார்கள். தமிழ்நாட்டில் மட்டும் 400 கல்லூரிகளிலிருந்து ஓராண்டுக்கு 2 லட்சம் பேர் வரை வெளிவருகிறார்கள். 7.5 லட்சம் பொறியியல் பட்டதாரிகள் ஒரு ஆண்டுக்கு வெளிவந்து என்ன செய்கிறார்கள்? ஏன் இத்தனை பேர்? அவ்வளவு பேருக்கும் வேலை கிடைக்குமா? ஒருவர் பொறியியல் பட்டம் பெற 4 ஆண்டு படிப்பதற்கு 3 லட்சம் முதல் 6 லட்சம் வரை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. அரசு கல்லூரிகளில் 1.5 லட்சத்திற்கும் குறைவாக வசூலிக்கப்படுகிறது. பெரும்பாலும் ஏழை மற்றும் நடுத்தரவர்க்க குடும்பத்தில் கடன் வாங்கி தான் இந்தப் படிப்புகளுக்கு அனுப்புகிறார்கள். பிள்ளை படித்து முடித்து விட்டால் தங்கள் கவலைகள் போய்விடும், கடனும் அடைக்கப்பட்டு விடும் என்பது அவர்கள் நம்பிக்கை. ஐஐடியில் படிப்பவர்களுக்கு படிக்கும்போதே வேலையும் கிடைத்து விடும். இது சில தனியார் பொறியியல் கல்லூரிகளில்தான் சாத்தியம். அனைத்து பொறியியல் கல்லுரிகளுமே தங்கள் மாணவர்கள் 90 சதவீதம் வரை வேலையில் இருப்பதாகப் புளுகுகிறார்கள். 2008 உலகப் பொருளாதார நெருக்கடி வருவதற்கு முன் தனியார் கார்ப்பரேட்டுகள் ஓரளவு வேலை கொடுத்தன. ஆனால் அதன்பிறகு அதுவும் குறைந்து விட்டது. அப்புறம் ஏன் இத்தனை கல்லூரிகள்? இத்தனை மாணவர்கள்? என்ஜினியரிங் சூதாட்டம் அதிக கட்டணம் வாங்கியும் மாணவர்களுக்கு தரமான ஆசிரியர்கள், ஆய்வுக் கூடம், நூலகம், உணவு, தங்கும் வசதி எதுவும் தனியார் பொறியியல் கல்லூரிகளில் சரியாக இருப்பதில்லை. அனைத்து ரவுடிகளும், ஓட்டுப்பொறுக்கிகளும் கல்வி வள்ளலாக இருப்பதால் அதிகாரிகளை சரிக்கட்ட அவர்களுக்கு வழியும் அத்துப்படி தான். மாணவர்களும் கல்விக்கடன் வாங்கிப் படிப்பதால் போராட்டம் அது இதுவென்று போய்விடக் கூடாது என நான்காண்டுகளைக் கெட்ட கனவாக கருதி அடிபணிகின்றனர். படித்து முடித்தவுடன் வேலை, வாழ்க்கையில் செட்டிலாவது என்ற கனவுகள் வேறு அவர்களைத் துரத்துகிறது. ஐஐடி, ஐஐஎம் இல் மக்கள் பணம் கோடிக்கணக்கில் செலவாகிறது. ஆனால் இங்கு படித்த பலரும் வெளிநாட்டு வேலைக்கு சென்று, குடியுரிமையும் பெற்று விடுகின்றனர். கோடிக்கணக்கான மக்கள் வரிப் பணத்தில் ஐஐடியில் படிக்கும் மாணவன் அமெரிக்க நிறுவனமான ஃபேஸ்புக்கிலோ, கூகிளிலோ பல லட்சம் மாதச் சம்பளமாகப் பெற்று அமெரிக்க சென்று விடுகிறான். அவன் படித்த படிப்பால் நாட்டுக்கு ஒரு பயனும் இல்லை. மறுபுறம் சொந்த முதலீட்டில் படிக்கும் மாணவனுக்கு, படித்து முடித்தபின் தான் தன்னைப் போலவே பல லட்சம் பேர் அந்த ஒரு சில வேலைக்காகப் போட்டியிடுவது தெரியவரும். வேலை இல்லை படித்து முடித்து, வேலை தேடும் போது தான் வேலை இல்லை என்ற உண்மை புரியவரும். வாங்கிய கடன் வட்டியுடன் குட்டி போட்டுக் கொண்டிருக்கும். வேலையில்லாத் ஒவ்வொரு நாளும் அதை நினைத்தாலே நெஞ்சு பதறும். ஒரு வேளை தனக்குத்தான் வேலைக்கான தரம் இல்லையோ என சந்தேகப்பட்டு அதனை உயர்த்த சில பயிற்சி நிறுவனங்களில் சேருவார்கள். ஆண்மைக் குறைவு சித்த மருத்துவர்களுக்கு இணையாக சும்மா பார்க்க வரும் பட்டாதாரிகளையும், உங்க இங்கிலீஷே சரியில்ல, நீங்க இருக்கிறதே வீண் என்ற அளவுக்கு முதலில் குழப்புவார்கள். சில ஆயிரம் தாருங்கள், நாங்க பயிற்சி தர்றோம், இதெல்லாம் கிடைக்கப் போற சம்பளத்துல 10% தான பாஸு என்று கூறி குழப்பி ஒருவழியாக உங்களுக்கு பயிற்சி தருவார்கள். பல ஆயிரம் செலவழித்த பிறகுதான் வேலை கிடைக்காத நிலைமை தெரிய வந்தாலும், பயிற்சியளிப்பவனிடம் அதைக் கேட்க முடியாது. வாக்குறுதியிலயே அவன் பயிற்சிதானே தருவேன் என்றான், வேலையைப் பற்றி பேசவில்லையே. ஐடி துறையில் ஒரே மாதத்தில் விண்டோஸ், லினக்ஸ், ஆரக்கிள் கற்றுத்தருவதாகக் கூறி 5 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை கறந்து விடுகிறார்கள். மொத்தத்தில் பணம்தான் பட்டதாரிகளுக்கு விரயமாகிறது. வேலை இல்லை ஏன்? 2000 ல் Y2K பிரச்ச்னையைத் தீர்க்க நிறைய கணிப்பொறிப் பட்டதாரிகள் தேவைப்பட்டார்கள், சொல்லப் போனால் நிறைய பட்டதாரிகள் தேவைப்பட்டார்கள். அந்தக் காலகட்டதில் கணிப்பொறி என்றில்லாமல் எந்திரவியல் முதல் சாதாரண அறிவியல் பட்டதாரிகள் வரை கணிப்பொறி நிறுவனப் பணிகளுக்குச் சென்றனர். ஆனால் Y2K பிரச்சினை முடிந்தவுடன் அனைவருக்கும் வேலை போனது. இதுபோன்ற தற்காலிகத் தேவைகள் பூதாகரப்படுத்தப்பட்டு தனியார் கல்லூரிகள் பல திறக்கபட்டன. குறிப்பாக 80களின் இறுதியில் கல்வியில் தனியார் மையம் தாரளமாக புகுந்தது. அரசியிலில் கடைவிரிக்க வாய்ப்பில்லாதவர்கள் ஒதுங்கி கல்வி வள்ளல்களாக அவதாரம் எடுத்தார்கள். இருக்கும் 80 ஆயிரம் வேலைகளைக் காட்டி பல லட்சம் இடங்களுக்கான ஒப்புதலை வாங்கி விட்டனர். ஒவ்வொரு ஆண்டும் மொத்தம் இருக்கும் அதே 70 ஆயிரம் முதல் 2 லட்சம் வரையிலான பணியிடங்களுக்கு 7.5 லட்சம் பேர் போட்டி இடுகிறார்கள். அடிமை வேலை இந்த ஒரு லட்சம் வேலைக்கு 7.5 லட்சம் பேர் என்பதால் தனியார் நிறுவனங்கள் சம்பளத்தை குறைக்கவும் பேரம் பேசவும் முடிகிறது. வாங்கிய கடனை அடைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் பட்டதாரி சம்பளத்தை உயர்த்திக் கேட்டால் உள்ளதும் போய், வேலையில்லாமல் வெளியே இருப்பவர்களுக்கு வாய்ப்பாகி விடும். சாதரண பட்டதாரியே போதும் இந்தியாவில் செய்யப்படும் பல அவுட்சோர்சிங் பணிகள் சேவைத்துறை சார்ந்தவை. இதற்கு சாதாரண பட்டாதாரிகளே போதும், பொறியியல் பட்டதாரியை வேலைக்கு எடுத்தால் நிறைய சம்பளம் தர வேண்டியிருக்குமே எனப் புலம்புகின்றன நிறுவனங்கள். முன்னர் ஆயிரக்கணக்கில் பொறியியல் பட்டதாரிகளை அள்ளிய டிசிஎஸ், சி டி எஸ், எல் அண்ட் டி, டிவிஎஸ் நிறுவனங்கள் இப்போது பெரும்பாலும் பொறியியல் அல்லாத பட்டதாரிகளையும், பட்டயப்படிப்பு படித்தவர்களையும் மட்டுமே வேலைக்கு எடுக்கிறது. செய்யப்படும் வேலைகளுக்கு இவர்களே போதுமானதாக இருப்பதால் தரமில்லை என்ற வாதமே சொத்தை என்பது நிரூபணமாகிறது. பொருளாதார நெருக்கடி தொடரும் இக்காலத்தில் எல்லா நிறுவனங்களும் ஆட்குறைப்பை நோக்கிச் செல்கின்றது. ஆண்டுக்கு ஆயிரம் பேராக முன்னர் வேலைக்கு எடுத்தவர்களை இன்று 100 ஆக குறைத்து விட்டதால், சாதாரண பட்டதாரிகளுக்கும் வேலை இல்லை. அமெரிக்காவில் அதிக சம்பளம் என இந்தியாவிற்கு கடைவிரித்தனர். இப்போது சீனா மற்றும் பிலிப்பைன்சில் குறைவான சம்பளம் என்பதற்காக எல்லா முதலாளிகளும் அங்கே கிளம்பி விட்டனர். இந்தியர்களுக்குத்தான் ஆங்கிலம் நன்றாக எழுத, பேச வருகிறது என்ற வாதம் அதை சீன, பிலிப்பைன்சு மக்கள் கற்க துவங்கியவுடன் அடிபடத் துவங்கி விட்டது. வேலையே இல்லை எனும் போது அந்த உண்மையை மறைத்து உங்களுக்கு திறமையில்லை; திறமையை வளர்த்துக் கொள்ளுங்கள், உங்களிடம் தரமில்லை; தரத்தை வளர்த்துக்கொள்ளுங்கள், சுய முன்னேற்ற வகுப்புகள், கூட்டம், அதைச் சார்ந்த புத்தகம், டிவிடி என பகல் கொள்ளை அடிக்கும் கூட்டம் ஒன்று உருவாகி செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. வேலை இல்லை, தாங்கள் ஏமாற்றப்படுகிறோம் என்ற உண்மை தெரிந்தால் யாரும் முதலீடு போட்டு படிக்க வர மாட்டார்கள், அவர்களுக்கும் வேலையில்லாத ரிசர்வ் பட்டாளம் குறையும், பட்டதாரிகளுக்கான தேவை அதிகரிக்கும். அதனால் அதிக சம்பளம் கொடுக்க வேண்டும். தனியார் கல்லூரி முதலாளிகளது கல்லா பாதிக்கப்படும். இதனால் கல்வி தனியார்மயமாதல் கேள்விக்குள்ளாக்கப்படும். வேலை, 5 இலக்க சம்பளம் இது தனியார் கல்லூரிகளுக்கு மட்டுமல்ல, தனியார் பள்ளிகளுக்குமான முதலீடு. தன் பிள்ளை மருத்துவர், பொறியாளர் ஆக வேண்டும் என்று தான் தரம் என்ற பெயரில் தனியார் பள்ளிகளில் சேர்க்கிறார்கள். அங்கு படிக்கும எல்லோருக்கும் அப்படிப்பில் இடம் கிடைக்காது என்ற எளிய உண்மை பெற்றோர்களுக்கு உரைக்கும்போது கல்வி தனியார்மயத்திற்கெதிரான போராட்டம் வலுப்படும். குப்பை படிப்புகள் மத்தியதர வர்க்கம், உயர் மத்தியதர வர்க்கத்திடம் விதவிதமான ஆடைகளை வடிவமைக்கும் ஃபேஷன் டெக்னாலஜி, நட்சத்திர ஹோட்டல்களில் உணவைத் தயாரித்து அதை அலங்கரிக்கும் கேட்டரிங் டெக்னாலஜி, விளம்பரம், சினிமா, டி.வி.யில் நுழைய உதவும் விஷுவல் கம்யூனிகேசன் என இவையனைத்தும் பல லட்சம் செலவழித்து கற்றுக்கொள்ளப்படும் கல்விகள். முதலில் இந்தக் கல்வியினால் என்ன பயன்? நம் நாட்டில் 40 கோடி மக்கள் அன்றாடம் ஒரு வேளை சாப்பிடுவதே வாய்ப்பில்லாமலிருக்க, நம் நாட்டிற்கு தேவையான படிப்பு இத்தனை பேருக்கு குறைந்த செலவில் எப்படித் தரமான உணவைத் தயாரிக்க வேண்டும் என்பதாக இருக்க வேண்டும். மாறாக செய்த தயிர்ச்சாதத்தில் வண்ண வண்ணமாக வட்ட வட்டமாக தக்காளி, கரிவேப்பிலை போட்டு அதை அழகு படுத்தும் படிப்பல்ல. இதை விடக் கொடுமை அதை அழகாக புகைப்படம் எடுக்க “உணவு புகைப்படக்கலை” (FOOD PHOTOGRAPHY) என ஒரு படிப்பு. இந்திய வளங்களையும், வனங்களையும் தனியார் முதலாளிகள் அழித்துக் கொண்டிருக்கிறார்கள். அதைத் தடுக்க பழங்குடியினர் போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் நம் மாணவனோ வனத்தையும், வன விலங்குகளையும் அழகாகப் படம்பிடிக்க “காட்டு வாழ்க்கை பற்றிய புகைப்படக்கலை” (­WILD LIFE PHOTOGRAPHY) படிக்க பல லட்சம் செலவு செய்து கொண்டிருக்கிறார்கள். நாட்டில் பல கோடி மக்களுக்கு புதுத்துணி என்பதே கனவு எனும் போது நாட்டு மக்களுக்கு தேவையான அளவு துணியை மிகவும் குறைந்த செலவில், சுற்றுச்சூழலைப் பாதிக்காமல் தருவதைப் பற்றிய படிப்பு தான் நேர்மையான படிப்பாக இருக்கும். ஆனால், நன்றாக இருக்கும் துணியை விதவிதமாகக் கிழித்துப் போடச் சொல்ல ஒரு படிப்பு; அதன் பேர் ஃபேஷன் டெக்னாலஜி யாம். படிக்க கட்டணம் சில லட்சம் ரூபாய் களாம். இந்த குப்பைப் படிப்புகள் எதுவும் இந்திய மக்களுக்கான தற்போதைய தேவை இல்லை. ஆனால் பெரு நிறுவனங்கள், முதலாளிகள், பணக்காரர்கள் அவர்களின் ஆபாச செலவுகளுக்கும், ஆட்டம் பாட்டத்திற்கும் தேவை. அவர்கள் தேவைக்காக மாணவர்கள் சொந்தப் பணத்தைப் போட்டுப் படிப்பது மேலும் ஆபாசமாக உள்ளது. கல்வியில் தனியார்மயத்தின் சாதனைக் கற்கள் இவைதான். இறுதியில் மக்கள் கைக்காசைப்போட்டு செலவழித்து திவாலானதுதான் மிச்சம். இந்திய மக்களின் வாழ்க்கையை முன்னேற்ற வேண்டும் என்ற அடிப்படைத் தேவையில் இங்கே கல்வி இல்லை. பன்னாட்டு நிறுவனங்களுக்குத் தேவையான கல்வி மட்டுமே இங்கே உருவாக்கப்பட்டுள்ளது. விளைவு இரட்டை இலக்கத்தில் வேலையில்லாத் திண்டாட்டம் வளர்கிறது. தாங்கள் மட்டும் முன்னேறி விடலாம் என்று மனப்பால் குடிக்கும் நடுத்தர வர்க்க பெற்றோர்கள் சிந்திக்கட்டும்! - ஆதவன் 21 ஆப்பிள் – சாம்சங்: தொடரும் ஏகபோகச் சண்டை! http://www.vinavu.com/2012/11/21/apple-samsung-monopoly-fight/   ஆப்பிள் ஐபோன், ஐபேட் கருவிகளில் பயன்படும் A6 சில்லுகளின் விலையை 20 சதவீதம் உயர்த்தியிருக்கிறது சாம்சங். முதலில் விலை உயர்வை ஏற்றுக் கொள்ள மறுத்த ஆப்பிள், வேறு சப்ளையர் யாரும் கிடைக்காததால் வேண்டா வெறுப்பாக கூடுதல் விலை கொடுக்க ஒத்துக் கொண்டுள்ளது. [சாம்சங், ஆப்பிள் ஏகபோகச் சண்டை] $17.5 விலைக்கு விற்ற சில்லுகளின் விலையை $3.50 உயர்த்தி $21க்கு ஆப்பிள் வாங்க வேண்டியிருக்கும். இதன் மூலம் ஆண்டுக்கு 10 கோடி கருவிகளை உற்பத்தி செய்யும் ஆப்பிளுக்கு சுமார் $350 மில்லியன் (ரூ 1,800 கோடி) கூடுதல் செலவு பிடிக்கும் அதே நேரத்தில் சாம்சங் நிறுவனத்துக்கு அந்த அளவு வருமானம் அதிகரிக்கும். ஸ்மார்ட் தொலைபேசி கருவிகள் சந்தையில் ஆப்பிள் முதலிடத்திலும், சாம்சங் இரண்டாவது இடத்திலும் உள்ளனர். மற்ற நிறுவனங்கள் அனைத்தும் பெருமளவு பின் தங்கியுள்ளனர். கடந்த காலாண்டில் சாம்சங் 5.7 கோடி ஸ்மார்ட் தொலைபேசி கருவிகள் விற்றதன் மூலம் $4 பில்லியன் (சுமார் ரூ 22,000 கோடி) லாபம் காண்பித்திருக்கிறது. அதே காலத்தில் ஆப்பிள் 2.7 கோடி கருவிகளை விற்று $5.3 பில்லியன் (சுமார் ரூ 28,000 கோடி) லாபம் என்று தெரிவித்திருக்கிறது. அதாவது, ஆப்பிள் ஒவ்வொரு ஸ்மார்ட் தொலைபேசி கருவிக்கும் சுமார் ரூ 10,500 லாபமும், சாம்சங் ஒவ்வொரு கருவியிலும் சுமார் ரூ 3,900 லாபமும் ஈட்டுகின்றன. இந்த லாப வேட்டையில் போட்டி நிறுவனத்தை ஒழித்துக் கட்டி ஏகபோகத்தை கைப்பற்றும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபடுவதுதான் இன்றைய முதலாளித்துவத்தில் நிலவும் ‘போட்டி’. ’2014ம் ஆண்டு முடிவடையும் இந்த சில்லுகளை வழங்கும் ஒப்பந்தத்தை புதுப்பிக்கப் போவதில்லை’ என்று சாம்சங் முடிவு செய்தால் ஆப்பிளின் போட்டியை சந்தையிலிருந்து துரத்தி விடலாம் அல்லது புதிய உற்பத்தியாளரை கண்டு பிடிப்பதில் ஆப்பிளுக்கு பெரும் செலவு வைக்கலாம். அவ்வாறாக ஆப்பிள் கருவிகளின் விலை அதிகமானாலோ விற்பனை குறைந்தாலோ ஸ்மார்ட் தொலைபேசி கருவிகள் சந்தையில் இரண்டாவது இடத்தில் இருக்கும் சாம்சங் அதனால் பெருமளவு ஆதாயம் அடையும். உலகெங்கும் கால் பரப்பி நிற்கும் ஆப்பிள், சாம்சங் போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் புதிய தொழில்நுட்பங்களை தமது லாபத்தை பெருமளவில் அதிகரித்துக் கொள்வதற்கே பயன்படுத்துகின்றன. உயர்ந்த விலை கொடுத்து கருவிகளை வாங்கும் வசதி உள்ள மேட்டுக் குடியினரை குறி வைத்து அவர்களது ஆடம்பர வாழ்க்கைக்கு பயன்படும் வகையில் தொழில் நுட்பங்களை வளைத்து வெளியிடுவது அவர்களது உத்தியாக உள்ளது. அவ்வாறு உருத்திரிக்கப்பட்ட தொழில் நுட்பங்களை உள்ளடக்கி வடிவமைக்கப்படும் கருவிகள் சந்தையை விரிவாக்கும் நோக்கத்தில் சில ஆண்டுகளுக்குப் பிறகு குறைந்த விலைக்கு விற்கப்படுகின்றன. தமது தேவைகளுக்காக வடிவமைக்கப்படாத அத்தகைய கருவிகளை உழைக்கும் மக்கள் எப்படியோ சமாளித்து பயன்படுத்திக் கொள்கின்றனர். இதற்குள் உலகளாவிய நிறுவனங்கள் அடுத்த தொழில்நுட்பத்தின் மூலம் தமது அடுத்த கொள்ளையை ஆரம்பித்திருப்பார்கள். அத்தகைய கருவிகளின் வரிசையில் இப்போது முன்னணியில் இருப்பவைதான் இந்த ஸ்மார்ட் தொலைபேசிகள். உலகமெங்கும் தொழிற்சாலைகளை அமைத்து மேட்டுக்குடியினருக்கான இத்தகைய கருவிகளை உற்பத்தி செய்து சந்தைப்படுத்துகின்றன ஆப்பிளும் சாம்சங்கும். ஒரே நிறுவனமாக செயல்பட்டால் ஆகும் செலவுகளைக் குறைக்கவும், தொழிலாளர் உரிமைகளை மறுக்கவும் பெருமளவு வேலைகளை வெளி நிறுவனங்களிடம் விடுகின்றனர். வழங்கல் சங்கியில் பல்வேறு நிறுவனங்களை நுழைத்துக் கொண்டாலும் அவை பெரும்பாலும் ஆப்பிள், சாம்சங், நோக்கியோ போன்ற பெரும் தொழிற்கழகங்களின் கட்டுப்பாட்டில், அவர்களது சொல் படிதான் செயல்படுகின்றன. அதாவது நேரடிக் கட்டுப்பாட்டில் இருந்தால் ஏற்க வேண்டிய பொறுப்புகள் எதுவும் இல்லாமலே, மறைமுகக் கட்டுப்பாட்டின் மூலம் ஆதாயங்கள் அனைத்தையும் கறந்து கொள்கின்றன கார்ப்பரேட் பெரு நிறுவனங்கள். கூடவே, விரல் விட்டு எண்ணும் எண்ணிக்கையிலான பெரு நிறுவனங்கள் சிறு நிறுவனங்கள் சந்தையில் நுழைய முடியாதபடி சட்ட நடைமுறைகளையும், தொழில் சூழலையும் ஏற்படுத்தியிருக்கின்றன. உதாரணமாக, 1990களில் உருவான கணினி தொழில் நுட்பத்தை பயன்படுத்தி தனி நபர்கள் கூட பாகங்களை வாங்கி மேசைக் கணினி உருவாக்கிக் கொள்ளும் வசதி, இப்போது ஸ்மார்ட் தொலைபேசிகளை செய்து கொள்ள இல்லாமல் ஆகியிருக்கிறது. அவற்றில் பயன்படுத்தப்படும் பாகங்கள் தொடர்பான பேடன்ட் காரணமாக சிறு நிறுவனங்கள் சட்ட பூர்வமாக போட்டி போட முடியாத நிலை உருவாக்கப்பட்டிருக்கிறது. சமீபத்தில் ஓரங்களில் வளைவுகளோடு கூடிய செவ்வக வடிவம் மற்றும் தொடு திரையில் விரல் தீற்றல் மூலம் கைபேசியை அன்லாக் செய்வது உள்ளிட்ட தனது காப்புரிமைகளை மீறியதற்காக சாம்சங் மீது வழக்கு தொடுத்து வெற்றி பெற்றது ஆப்பிள். இப்போது சாம்சங் சில்லுகளின் விலையை அதிகரித்திருப்பதை ஆப்பிள் தன் மீது தொடுத்த வழக்கில் ஆன செலவை ஆப்பிள் மீதே சுமத்தியிருப்பதாக வைத்துக் கொள்ளலாம். இதன் அடுத்த திருப்பமாக ‘ஒரு பொருளுக்கு உற்பத்திச் செலவை விட பல மடங்கு அதிகமாக விலை வைப்பதற்கான காப்புரிமையை ஆப்பிள் வைத்திருக்கிறது’ என்று சாம்சங் மீது வழக்கு தொடரப்பட்டால் ஆச்சரியப்படுவதற்கில்லை. 22 பிளட் பூஸ்டர்: சோதனைச் சாலை எலிகள் யார்? http://www.vinavu.com/2012/10/29/blood-booster/   நவீன மருத்துவ துறையில் நிகழ்த்தப்பட்டிருக்கும் பல உயிர்காக்கும் சாதனைகளின் அடுத்தகட்டமாக இரத்த செயலூக்கி (Blood Booster) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இரத்த சிவப்பணுக்களில் இருக்கும் ஹீமோகுளோபின் உடலின் அனைத்து திசுக்களுக்கும், தசைகளுக்கும் ஆக்சிஜனை சுமந்து செல்கிறது. விபத்துகளில் சிக்கி அதிக இரத்த இழப்பினால் பாதிக்கப்பட்டவர்களின் முக்கிய உடலுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் கிடைக்கப்பெறாததினால், அந்த உறுப்புகள் செயலிழப்பதுடன், இறுதியில் பாதிக்கப்பட்டவர் உயிரிழக்கும் அபாயம் ஏற்படுகின்றது. இதை தவிர்க்க உடனடியாக இரத்தம் ஏற்றப்பட வேண்டும். மிக அதிக காயங்களுடன் இருப்பவருக்கு இரத்தம் ஏற்றுவதில் சில நடைமுறை சிக்கல்கள் இருக்கின்றன. [பிளட்-பூஸ்டர்] இரத்தச் செயலூக்கி அமெரிக்க மருந்துக் கம்பெனியான சங்கார்ட் (Sangart) காலாவதியான இரத்த அணுக்களில் இருந்து MP4OX என்ற புதிய செயலூக்கியை தயாரித்துள்ளது. இது இரத்த சிவப்பணுக்களைப் போன்றே ஆக்சிஜனை சுமந்து செல்லும் திறனைப் பெற்றுள்ளதாகவும், அதிக இரத்த இழப்பு ஏற்பட்டு சிவப்பணுக்கள் குறைவாக இருக்கும் போது கூட அனைத்து உறுப்புகளுக்கும் ஆக்சிஜன் கிடைப்பதை உறுதிசெய்து உடலுறுப்புகள் செயலிழப்பதை இந்த பூஸ்டர் தவிர்க்கும் என்றும் கூறப்படுகிறது. ஆயினும் இந்த பூஸ்டர் செயற்கை இரத்தம் அல்ல, இயற்கை இரத்தத்தின் உயிர்க்குணங்களை இது பெற்றிருக்கவில்லை என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த மருந்து இராயல் லண்டண் மருத்துவமனையில் 50 பேருக்கு கொடுத்து சோதித்துப் பார்க்கப்பட்டுள்ளது. சோதனை வெற்றியடைந்திருப்பதாகவும், இந்த மருந்து கொடுக்கப்பட்ட நோயாளிகள், சாதாரண நோயாளிகளை விட விரைவில் குணமடைந்து வீடு திரும்பியதாகவும் ஆய்வாளர்கள் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளனர். எந்த மருந்தும் தயாரிக்கப்பட்டு முதல் சோதனையிலேயே வெற்றியை, குறிப்பிட்ட பலன்களை தருவதில்லை. இன்று வெற்றியடைந்ததாக அறிவிக்கப்படும் சோதனையின் ஆரம்ப கட்டங்களில், இந்த மருந்து கொடுத்ததால் உயிரிழந்தோரின், பாதிக்கப்பட்டோரின் பட்டியலையும் இதே பெருமிதத்துடன் ஆய்வாளர்களும் வெளியிடவில்லை. நாளை மருந்து கம்பெனி இம்மருந்திற்கு காப்புரிமை பெற்று சந்தைப்படுத்தி கொள்ளை லாபமீட்டும் போது சோதனைக்கு உட்படுத்தப்பட்டோருக்கு லாபத்தில் பங்கு கொடுக்கப்போவதுமில்லை. இது வரை இந்தியா போன்ற மூன்றாம் உலக மற்றும் ஏழை நாடுகளின் மக்கள் தான் மருந்துக் கம்பெனிகளின் சோதனைச்சாலை எலிகளாக பயன்படுத்தப்பட்டு வந்தனர். யார் மீது மருந்துகள் சோதிக்கப்படுகிறதோ அம்மக்களுக்கே அது தெரியாது, சோதனைகள் அந்தந்த நாட்டு அரசுகளின் உடந்தையுடனும், அரசு சாரா தொண்டு நிறுவனங்களின் உதவியுடனும் நடப்பதுடன் இரசியமாக காக்கப்பட்டும் வருகின்றன. இலண்டனில் இந்த மருந்தை சோதித்திருப்பதோடு, சோதனை செய்யப்பட்ட நோயாளிகளுக்கோ, உறவினர்களுக்கோ அல்லது மருத்துவம் பார்த்த மருத்துவருக்கோ இம்மருந்து சோதிக்கப்பட்டது தெரியாது என்பதை பெருமையுடன் பகிரங்கமாக அறிவித்து “பாரம்பரியத்தை” அமெரிக்க மருந்து நிறுவனமும், லண்டன் ராயல் மருத்துவமனையும் தகர்த்திருக்கிறார்கள். மருந்து கம்பெனிகளும், அவற்றின் ஆய்வாளர்களும், மூன்றாம் உலக நாடுகளின் மக்களை மட்டுமல்ல, தனது சொந்த நாட்டு மக்களையும் கூட சோதனைச்சாலை எலிகளாகவும், தனக்கு லாபத்தைக் கொடுக்கும் பண்டமாகவும் மட்டுமே பார்க்கின்றனர். இந்த சோதனை லண்டனில் தானே நடந்திருக்கிறது, நமக்கு என்ன பிரச்சனை என்று நம்மில் பலரும் நினைக்கலாம். இந்த மருந்து உலக அளவில் பல நாடுகளில் பல்வேறு இனக்கூறுள்ள மனிதர்களுக்கும் கொடுத்து சோதிக்கப்பட இருக்கிறது. நினைத்துப் பாருங்கள் நாளை நம்மில் ஒருவரே விபத்தில் சிக்கி, சுயநினைவின்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால், இதே மருந்து நம்மீதும் சோதிக்கப்படாது என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை, அதனால் உயிர் இழந்தாலும் கூட யாருக்கும் ஒன்றும் தெரியப்போவதுமில்லை. 23 யாருக்காக வருகிறது Google டிரைவரில்லா கார்? http://www.vinavu.com/2012/10/17/google-driverless-car/   கற்காலம் முதல் இக்காலம் வரையிலான மனிதனின் பரிணாம வளர்ச்சியின் அங்கமாக, காரணியாக விளங்கும் அறிவியலின் வளர்ச்சி வியக்கத் தக்க வகையில் மாற்றம் பெற்று வருகிறது. நாம் கற்பனையில், ஹாலிவுட் திரைப் படங்களில் மட்டுமே இது வரை பார்த்து வந்த முற்றிலும் ஆளில்லாமல் தானாக இயங்கும் கார் இப்போது நிஜத்தில் வெளி வர இருக்கிறது. இதற்கான அனுமதியை கூகுள் நிறுவனம் பெற்றிருக்கிறது. [கூகிள்-கார்] இதற்காக இந்த காரில் ரேடார், கேமராக்கள், அகச்சிவப்பு கேமரா, லேசர், சென்சார் மற்றும் ஜி.பி.எஸ் GPSபோன்ற தொழில் நுட்பங்கள் பயன்படுத்தப் பட்டுள்ளன. இவை இதனுள் இருக்கும் கணினியுடன் இணைக்கப் பட்டிருக்கும். இதன் ரேடார் கருவி காரை சுற்றி கண்ணுக்கு தெரியாத இடங்களில் இருப்பவற்றை கணினிக்கு தெரிவிக்க உதவுகிறது. இதில் உள்ள கேமராக்கள் சாலையின் எல்லைகளை அறிவிக்க உதவுகிறது. மேலும் இதில் உள்ள அகச்சிவப்பு கேமாரா இருளிலும் சாலையில் வருபவற்றை துல்லியமாக கணினிக்கு அறிவிக்கும். இதன் மேற்புற கூரையில் உள்ள லேசர்கள் காரை சுற்றி 2 செ,மீ க்குள் வருபவற்றை அறிவிக்கும். இதில் உள்ள GPS தொழில்நுட்பம் காரின் தற்போது இருக்கும் இடத்தை கணினிக்கு அறிவிப்பதோடு கூகுள் மேப் உதவியுடன் கார் செல்ல வேண்டிய திசையையும் சரியாக கணினிக்கு அறிவிக்க உதவுகிறது. இதன் மூலம் கார் சரியான இடத்தை சென்றடைவதுடன் வழியில் வருபவற்றை அறிந்து சரியாக நின்று செல்லும் திறனை பெறுகிறது. இதனால் மனிதத் தவறுகளால் ஏற்படும் விபத்துகள் தவிர்க்கப் படுவதோடு போக்குவரத்து நெரிசல்களும் குறையக் கூடும். இதற்கான சோதனைகளுக்கும், ஆய்வுகளுக்கும் முதலீடு செய்திருப்பவர்கள் General Motors, Volkswagen, Volvo, BMW, Audi, Mercedes போன்ற உயர் ரக கார் தயாரிப்பு நிறுவனங்கள். எனவே இது பயன்படுத்தப்படப் போவது அதிக விலை கொண்ட கார்களில் என்பதை அறிந்து கொள்ள முடியும். அதிக விலை கொடுத்து கார்கள் வாங்கும் வர்க்கம் பாதுகாப்பு காரணங்களை காட்டிலும் தங்கள் கவுரவத்திரற்காகவும், அதிவேகத்தில் சென்று தங்கள் பணத்திமிரை காட்டவும் தான் நினைக்கிறது. உலக அளவில் இத்தகைய அதிக விலை கார்களால் நிகழ்ந்த விபத்துகளும், அப்பாவி மக்களின் உயிரிழப்புகளுமே அதற்கு சான்று. அப்படி இருக்கையில் இந்த மேல்தட்டு மக்களுக்கு இந்த கார் எந்த வித பயனை தரும் என்பது கேள்விக்குறி தான். ஒரு வேளை பிற்காலத்தில் இது சாதாண கார்களுக்கும், பொது போக்குவரத்திற்கும் பயன்படுத்த படுமானால் அது பயன் தரக் கூடியதாக இருக்கலாம். ஆனால் இப்போது நடைபெறும் விபத்துகள் மற்றும் போக்குவரத்து நெரிசல்களுக்கு மனிதத் தவறுகள் தான் காரணமா? இன்றைய நுகர்வு கலாச்சாரத்தில் மக்களை பெரு நிறுவனங்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள் சுரண்டுவதற்கு அரசால் ஊக்குவிக்கப் படும் கார் கடன் திட்டங்களால் பல்கிப் பெருகி சென்னை போன்ற பெரு நகரங்களின் சாலைகளை அடைத்து நிற்கும் கார்கள் ஏற்படுத்தாத போக்குவரத்து நெரிசல்களா? ஐந்து முதல் ஆறு பேர் செல்லக் கூடிய இடங்கள் ஒற்றை நபர் கார்களை பயன் படுத்துவதால் அடைத்து செல்லப்படுகிறது. சொகுசுக்காக கார்களில் தனியே செல்லும் இவர்கள் பிழைப்புக்காக ஆட்டோ ஓட்டும் நபர்களை நெரிசலுக்கு காரணம் என குற்றம் சாட்டுவார்கள். அடுத்து அரசு பேருந்துகளின் நிலை என்ன என்பதைப் பார்த்தால் வெறும் கேள்விக்குறி தான் விடையாக கிடைக்கிறது. அதன் பராமரிப்பு என்பது எவ்வளவு கேவலமான நிலையில் உள்ளது என்பதை நடந்திருக்கும் விபத்துகளும் அதில் பயணிக்கும் பொது மக்களுமே சாட்சி. தனியார் பேருந்து நிறுவனங்களில் ஓட்டுனர்களுக்கு கொடுக்கப் படும் பணிச்சுமை, ஓய்வின்மை போன்றவற்றால் பெரும்பாலான விபத்துகள் நடந்திருப்பது நாம் அனைவரும் அறிந்ததே! அதோடில்லாமல் கொள்ளை லாபம் சம்பாதிக்க அதி வேகத்தில் செல்லுமாறு ஓட்டுனர்களை அறிவுறுத்தும் இதன் முதலாளிகள் விபத்துகளின் காரண கர்த்தாக்கள் இல்லையா? இவற்றை எல்லாம் விட இங்கு நம் சாலைகளின் நிலை என்ன என்பது முற்றிலுமான கேள்விக் குறியே? முக்கிய சாலைகளில் கூட குண்டு குழிகள் காணப படுவதுடன் அவைகளும் விபத்துகளுக்கான காரணிகளாக அமைகின்றன. இந்த ஆளில்லா கார் நடைமுறைக்கு வரும் பட்சத்தில் இங்குள்ள வாகன ஓட்டிகளுக்கு மாற்று வேலை ஏற்பாடு செய்து தர இந்த அரசு அமைப்பால் முடியுமா? இத்தனை காரணங்கள் இருக்க விபத்துகளுக்கும், நெரிசல்களுக்கும் வெறும் மனிதத் தவறை காரணமாக சொல்ல முடியுமா? இவற்றை எல்லாம் சரி செய்வது என்பது இத்தகைய ஓட்டு பொறுக்கி அரசியலமைப்பு முறைகளில் சாத்தியமற்ற ஒன்று. இது எதிர்மறையாக வேலையிழப்பை வேண்டுமானால் உருவாக்கும். ஆகவே இந்த தொழில் நுட்பம் எந்த பயனையும் இந்த சமூகத்தில் தரப் போவதில்லை. உயர்தர சாலைகளில் ஆடம்பர கார்களில் பயணிக்கும் உண்டு கொழுத்தோருக்கு மட்டும் இந்த ஆளில்லா கார்கள் பயன்படலாம். இன்னமும் ஒரு மிதிவண்டி கூட வாங்க முடியாமல் தவிக்கும் பெரும்பான்மை உலக மக்கள் இருக்கும் காலத்தில்தான் இத்தகைய அறிவியல் கண்டுபிடிப்புகள் வருகின்றன. 24 பேஸ்புக் உங்களை விற்பது தெரியுமா? http://www.vinavu.com/2012/10/15/facebook-sells-you/   ஃபேஸ்புக் இன்றைய ‘நவீன இளைஞர்’களின் முகவரி. பல் துலக்காமல் கூட இருக்க முடியும், பேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் போடாமல் இருக்க முடியுமா என்ற பழமொழி இணையத்தில் பிரபலம். ஒபாமா அரசியல் முதல் உசிலம்பட்டி டீக்கடை வரை அனைத்தையும் பகிர்ந்து கொள்வதும், தனது படம், பெருமைகளை அப்டேட் செய்வதும் இவற்றுக்கெல்லாம் லைக் போடுவதும் பேஸ்புக்கில் அனிச்சை செயலாக மாறியிருக்கிறது. [பேஸ்புக்] ஒண்ணாம் கிளாஸ் முதல கல்லூரி வரை கூடப் படித்தவர்கள், பழைய தெருக்காரர் முதல் புதிய தெருக்காரர் வரை, நேரில் சிரித்துக் கொள்கிறார்களோ இல்லையோ பேஸ்புக்கில் முகம் கொடுக்காமல் இருக்க முடியாது. நட்பின் இலக்கணத்திற்குள் பேஸ்புக் கணக்கு வைத்திருப்பது ஒரு நிபந்தனையாக மாறி வருகிறது. எனினும் பேஸ்புக்கில் அனைத்து உணர்ச்சிகளும் ஒரு வணிக நோக்கத்திற்காகவே திரட்டப்படுகின்றன. ஒரு கவிதையையோ இல்லை படத்தையோ இல்லை ஒரு கார்ட்டூனையோ பேஸ்புக்கில் போட்டோ பகிர்ந்தோ புரட்சியாளர் ஆனவர்கள் ஆயிரம் பேர். இந்த மாய உலகம் உருவாக்கியிருக்கும் உணர்ச்சி உண்மை உலகத்தோடு உள்ள உறவை மறைத்து வருகிறது. இப்படித்தால் புரட்சியையும், காதலையும் நடப்பையும் கூட உரமாக போட்டு சமூக வலைப் பின்னலை உருவாக்கியிருக்கிறது பேஸ்புக் நிறவனம். இணையம் என்ற நிகர் நிலை உலகில் பேஸ்புக் ஒரு திருவிழாக் கூட்டம் என்றால் மிகை அல்ல. பொதுவாக மக்கள் கூடும் இடங்களில் தமது சரக்குகளை கடை பரப்புவதற்கு வியாபாரிகள் போட்டி போடுவார்கள் என்பது இப்போதைய உலக நடைமுறை. பேஸ்புக் தான் கூட்டிய கூட்டத்தை பயன்படுத்தி காசு சம்பாதிக்க விளம்பரங்களை காட்டுவது, விளையாட்டுகளை அறிமுகப்படுத்துவது என்று பல வழிகளில் முயன்று கொண்டிருந்தது. சமீபத்திய பங்குகள் வெளியீட்டிற்கு பிறகு பேஸ்புக்கின் பங்குகளின் விலை ஆரம்ப விலையிலிருந்து ($38) பாதியாக குறைந்து விட்டிருக்கின்றது. மூன்று மாதங்களுக்கு ஒரு முறை பங்குச் சந்தை எதிர்பார்க்கும் லாப சதவீதத்தை காட்ட வேண்டும் என்று அழுத்தம் பேஸ்புக் நிறுவனத்தின் மீது அதிகமாகிக் கொண்டே போகிறது. பயனர்களின் சமூக உறவுகளை காசாக்குவதற்கான புதிய புதிய வழிகளை தேடினால்தான் பேஸ்புக்கின் வருமானத்தை அதிகரிக்க முடியும். வருமானத்தை அதிகரித்தால்தான் பங்கு விலையை சந்தையில் தூக்கி நிறுத்த முடியும். பேஸ்புக்கில் லைக் என்ற விருப்பத்தை தெரிவிக்கும் பட்டன் அடிப்படையான ஒரு வசதி. அதன் மூலம் குறிப்பிட்ட கருத்து அல்லது ஸ்டேட்டஸை ஆதரிப்பதாக ஒருவர் தெரிவிக்கலாம். இன்னார் இன்ன கருத்தை ஆதரிக்கிறார் என்ற விபரம் அவரது பேஸ்புக் நண்பர்களுக்கு தெரிய வரும். அவர்களும் அதைப் போய் படிப்பார்கள். இப்படி ஒரு சமூக கருத்துப் பரிமாற்றத் தளமாக பேஸ்புக் வளர்ந்துள்ளது. இந்த சமூக உறவு பரிமாற்றத்தை வணிக ரீதியில் அறுவடை செய்யும் முயற்சியில் இப்போது வான்ட் அதாவது தேவை என்ற பட்டனையும் கலெக்ட் அதாவது சேகரி என்ற பட்டனையும் பேஸ்புக் அறிமுகம் செய்திருக்கிறது. பேஸ்புக்குடன் ஒப்பந்தம் போட்டுள்ள நிறுவனங்கள் தமது விற்பனை பொருட்களை தொகுப்புகள் (கலெக்சன்ஸ்) என்ற பெயரில் வெளியிடுவார்கள். அந்தப் பொருட்களுக்கு அருகில் வான்ட் அல்லது கலெக்ட் என்ற பட்டன் காண்பிக்கப்படும். அதை அழுத்தினால் அந்தப் பொருளை தனக்கு தேவை என்று பட்டியலில் சேர்த்துக் கொள்ளவும் அந்தப் பொருளை பேஸ்புக்கின் வழிகாட்டலுடன் விற்பனையாளரின் தளத்திற்கு சென்று வாங்கிக் கொள்ளவும் முடியும். ‘இன்னார் இன்ன பொருள் தேவை என்று பதிவு செய்திருக்கிறார் அல்லது இன்ன பொருளை வாங்கியிருக்கிறார்’ என்று அவரது பேஸ்புக் நண்பர்களுக்கு தெரிய வர இன்னும் அதிகமான பேர் அதை வாங்குவதற்கான சாத்தியம் ஏற்படும். பேப் டாட் காம், மைக்கேல் கோர்ஸ், மேட்டுக் குடியினருக்கான டிபார்ட்மென்ட் ஸ்டோர் நெய்மன் மார்கஸ், பாட்டரி பார்ன், ஸ்மித் ஆப்டிக்ஸ், உள்ளாடைகள் நிறுவனம் விக்டோரியாஸ் சீக்ரட், வேய் பேர் என்ற ஏழு வர்த்தக நிறுவனங்களின் பொருட்கள் இந்தத் திட்டத்தின் கீழ் தற்சமயம் பேஸ்புக்கில் வெளியிடப்பட்டுள்ளன. இந்தத் திட்டத்தின் சோதனை ஓட்டம் அமெரிக்காவில் மட்டும் நடத்தப்படுகிறது. தீனி போட்டு கொழுக்க வைத்த ஆட்டுக் கிடாய்களை ஒவ்வொரு திருவிழாவக்கு ஒன்றாக வெட்டி பொங்கல் வைப்பது போல சமூக வலைப்பின்னலுக்குள் பிடித்து வைத்துள்ள பயனர்களை வணிக நிறுவனங்களுக்கு பொங்கல் வைக்கத் தயாராகிறது பேஸ்புக். கூடிய சீக்கிரத்தில் வணிக அழுத்தம் அதிகமாக அதிகமாக இணையப் புரட்சியாளர்கள் தமது புரட்சியை நடத்த என்ன செய்வார்கள் என்பது கேள்விக்குறி! பேஸ்புக் உங்களையும் உங்களது விருப்பங்களையும் விற்பனை செய்கிறது. அந்த விற்பனை உண்மையில் வணிக நிறுவனங்களின் பொருட்களை விற்பனை செய்ய உதவுகிறது. இறுதியில் பேஸ்புக்கின் உண்மையான உணர்ச்சி இந்த சரக்கு உணர்ச்சிதான் என்றால் முகநூல் புரட்சியாளர்கள் ஒத்துக்கொள்வார்கள? 25 கடவுளை நொறுக்கிய துகள்! http://www.vinavu.com/2012/10/05/god-damned/   [கடவுள்-துகள்] “கடவுள் துகள்” என்ற பெயரில் ஹிக்ஸ் போசோன் அழைக்கப்படும் காரணத்திற்காகவே, “அறிவியலால் கடவுளை வரையறுக்க முடியுமா?” என்ற தலைப்பில் என்.டி.டி.வி ஆங்கிலத் தொலைக்காட்சி ஒரு விவாதத்தை ஒளிபரப்பியது. கடவுள் இருப்பது அங்கீகரிக்கப்பட்ட உண்மை போலவும், அதனை வரையறுக்கும் ஆற்றல் அறிவியலுக்கு இருக்கிறதா இல்லையா என்பது மட்டுமே பிரச்சினை போலவும் காட்டுகின்ற ஒரு பித்தலாட்டத் தலைப்பு! ஜக்கி வாசுதேவ், டில்லி கத்தோலிக்க திருச்சபையின் டொமினிக் இமானுவேல், விவேகானந்தா பல்கலைக்கழக துணைவேந்தர் ஆத்ம பிரியானந்தா – இவர்கள் ஆன்மீகத்தரப்பு. புஷ் பார்கவ், மாலிகுலார் பயாலஜிஸ்ட் மற்றும் பேரா. ராஜாராமன், இயற்பியல் பேராசிரியர் இருவரும் அறிவியல் தரப்பு. முகத்தில் முட்டாள் திமிரும், அசட்டுத் தற்பெருமையும் பளிச்சிட, மிகை நடிப்புத் தோரணையில், “அறிவியலும் தேடுகிறது, ஆன்மீகமும் தேடுகிறது” என்று கார்ப்பரேட் ஆன்மீக வியாபாரிகளுக்கே உரிய சொல்விளையாட்டை தொடங்கினார் ஜக்கி. “நீ தேடுவது வேறு அறிவியல் தேடுவது வேறு, அறிவியல் தேடுகின்ற முறையும் வேறு” என்று நாகரிகமான மொழியில் அதைக் கத்தரித்தார் பார்கவ். “பிரபஞ்சத்தின் 4% மட்டுமே கண்டறியப்பட்டுள்ளதாக அறிவியலாளர்களே கூறியிருக்கிறார்கள். மிச்சமுள்ள 96 விழுக்காடு பிரபஞ்சம் பொருளால் ஆனது அல்ல, அதைத்தான் ஆன்மீகம் என்கிறோம்” என்றார் ஜக்கி. “பட்டா இல்லாதவன் சொத்தெல்லாம் என் சொத்து. கண்டுபிடித்தது அறிவியலுக்கு, கண்டுபிடிக்காததெல்லாம் கடவுளுக்கு” என்று விளக்கும் இந்த தில்லுமுல்லு வாதத்தின் மீது ராஜாராம் காறி உமிழ்ந்த பிறகும் ஜக்கி சளைக்கவில்லை. “அறிவியல் எல்லாவற்றையும் அறுத்து உண்மையைத் தேடுகிறது. அணுவைப் பிளந்து பார்க்கிறது. உங்களை அறுத்துப் பார்த்து நீங்கள் யார் என்பதை தெரிந்து கொள்ள முடியுமா?” என்று பொளந்து கட்டவே, ‘முடியல‘ என்று சரிந்து விட்டனர் அறிவியலாளர்கள். “பிரபஞ்சம் மலை, சிற்றெறும்பாகிய நாம் மலையை எப்படி அறிய முடியும்?” என்றார் துணைவேந்தரான சாமியார். தன் முன் இருப்பது மலை என்பதை தெரிந்து கொள்ள முடிந்த எறும்பால், மலையின் இரகசியத்தை ஏன் தெரிந்து கொள்ள முடியாது என்று அந்த துணைவேந்தருக்கு உரைக்கவில்லை. “அறிவியல் ஒரு துகளோடுதான் போராடிக் கொண்டிருக்கிறது. இன்னும் அது பொருளையே என்னவென்று அறியவில்லை. ஆன்மாவை ஆராய்ந்து பார்ப்பதற்கு அது இன்னும் வெகுதூரம் போகவேண்டும்” என்று மீசையில் மண் ஒட்டாத தோரணையில் பேசினார் இமானுவேல். “அதிருக்கட்டும். பைபிள் கூறும் படைப்புக் கோட்பாடு இனியும் செல்லுபடியாகுமா?” என்று அவரைக் கேட்டதற்கு, “ஆதி ஆகமத்தில் சொன்னபடி 6 நாளில் கடவுள் உலகத்தைப் படைத்திருக்க வேண்டும் என்றில்லை. இப்போது அறிவியல் சொல்வது போல பெருவெடிப்பாக இருக்கலாம். இதுவும் கடவுளின் படைப்புதான்”, கோட்டையில்லே கொடியும் இல்லே, அப்பவும் நான் ராஜா என்றார் கூச்சமே இல்லாமல். புலன்களால் அறிய முடியாதது, கலையைப் போல ஒரு மாறுபட்ட அறிதல் முறை, காதல் போன்றதொரு உள்ளுணர்வு என்று கடவுளுக்கு பலவிதமாக முட்டுக்கொடுத்தார்கள் இந்த ஆன்மீக வல்லுநர்கள் – இது என்.டி.டி.வி விவாதம். இன்னொரு புறம் வாழும்கலை ஸ்ரீஸ்ரீரவிசங்கர்ஜி, அவரது வெள்ளைக்கார பக்தர்கள் மற்றும் ஜீன்ஸ் அணிந்த மாமிகளிடம், பெருவெடிப்பு பற்றி ரிக் வேதத்திலேயே எழுதப்பட்டிருக்கிறதாகவும், தற்போது ஹிக்ஸ் போசோன் பற்றி விஞ்ஞானிகள் விளக்கிய பின்னர்தான், ரிக் வேதத்தின் ஆழமான உட்பொருளை மேலும் தெளிவாகப் புரிந்து கொள்வதாகவும் அரைக்கண்ணை மூடியபடி, அவிழ்த்து விட்டுக் கொண்டிருந்தார். அதாவது ரிக் வேதம் ஏற்கெனவே கண்டுபிடித்துக் கூறியிருப்பதைத்தான், செர்ன் ஆய்வுமையம் தற்போது கண்டுபிடித்திருக்கிறது என்ற உண்மையை, தான் இப்போதுதான் கண்டுபிடித்திருப்பதாக கூறிக்கொண்டிருந்தார் ரவிசங்கர்ஜி. அதிகம் சொல்வானேன். மதம், ஆன்மீகம், தேடல் என்ற பெயர்களில் தமது வணிகத்தை நடத்திவரும் இந்த வல்லுநர்கள் அனைவர்க்குமான ஒரு பொதுத்தன்மை என்னவென்றால், முடிந்தவரை இவர்கள் அறிவியல் பார்வையை ஆதரிப்பவர்கள் போலப் பேசுகிறார்கள். இவர்களுடைய ஆன்மீகத்தை ஆய்வுக்கு உட்படுத்த முயன்றால், அறிவியலின் அளவுகோலால் எங்களை அளக்க முடியாது என்று சீறுகிறார்கள். அறிவியலின் வரம்பு பற்றி எச்சரிக்கிறார்கள். பிரபஞ்ச ரகசியத்தை கண்டுபிடித்துவிட முடியுமா என்று அச்சுறுத்துகிறார்கள். அறிவியலோ, இயற்கையின் ரகசியத்தை கண்டுபிடித்துவிட்டோம் என்று மார்தட்டுவதுமில்லை. பொருத்தமானதொரு விடை கிடைத்து விட்டதென்று, தனது ஆய்வினை நிறுத்துவதுமில்லை. ♠ ♠ [பீட்டர்-ஹிக்ஸ்] பீட்டர் ஹிக்ஸ் ஹிக்ஸ் போசோனுடன் கடவுளை இணைத்து முடிச்சு போடுவதற்கு ஆன்மீகவாதிகளின் கையில் அகப்பட்ட நூல், கடவுள் துகள் என்று பெயரிடப்பட்ட லேடர்மேனின் புத்தகம். ‘விடை இந்தப் பிரபஞ்சம் என்றால், கேள்வி என்ன?‘ என்று அட்டையிலேயே கேட்கிறார் லேடர்மேன். 1993 இல் இயற்கை விஞ்ஞானத்தில் அவர் எழுப்பிய இதே கேள்வியை சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்னர் தத்துவஞானத் துறையில் இந்தியாவில் எழுப்பினார்கள், நமது மரபின் ஆதி முதல் பொருள் முதல்வாதிகளான சாருவாகர்கள். “கடவுள்தான் இந்த உலகத்தைப் படைத்தான் என்போரே, வறுமையும் பசியும் பிணியும் நிறைந்த இந்த உலகத்தை கடவுள் எதற்காகப் படைத்தான்? எதற்காகப் பிறப்பு, எதற்காக இறப்பு? இவையெல்லாம் இறைவனின் லீலையென்போரே, உங்கள் இறைவன் எத்தனை வக்கிரமானவன்?” என்று கேட்டார்கள் சாருவாகர்கள். அறிவியல் கண்ணோட்டத்தின் ஊற்று விடையல்ல, கேள்வி. ஒரு கேள்விக்கு விடையாக பல ஊகங்கள் முன்வைக்கப்படலாம். சோதனையில் எந்த ஊகம் நிரூபிக்கப்படுகிறதோ அது மட்டுமே விடையாகிறது. எல்லா ஊகங்களும் பொய்ப்பிக்கப்பட்டு புதியதோர் விடையும் சோதனையில் கிடைக்கலாம். ஒருவேளை செர்ன் ஆய்வகத்தில் நடைபெற்ற சோதனையில் ஹிக்ஸ் போசோன் என்ற துகள் கிடைத்திருக்கவில்லையானாலும், அதனை தோல்வி என்று அறிவியல் கருதுவதில்லை. பருப்பொருளின் தோற்றம் குறித்த தனது ஆய்வு முயற்சியையும் அறிவியல் கைவிடப்போவதில்லை. அறிவியல் என்பது அறிவியலின் வரலாறாகவும் இருக்கிறது என்பார் வரலாற்றறிஞர் டி.டி.கோசாம்பி. கலீலியோ, நியூட்டன், ஐன்ஸ்டீன், போஸ், ஹிக்ஸ், அப்துல்சலாம் என்று வெவ்வேறு நாடுகளையும் கண்டங்களையும் சேர்ந்த அறிவியலாளர்களின் கண்டுபிடிப்புகள் ஒன்றன் பின் ஒன்றாக ஒரு பொது இழையில் சேர்ந்து மனித குலத்தின் பொதுவான அறிவாக மாறுகின்றன. அவை தொழில்நுட்பங்களாக உற்பத்தியில் ஈடுபடுத்தப்படும்போது, பிரம்மாண்டமான சமூக ஆற்றலாகின்றன. ஆன்மீகம் என்ற பெயரில் தத்துவஞானத் தளத்தில் ஒன்று சேர்ந்து கொள்ளும் மதவாதிகள், உலகம் தோன்றியதெப்படி என்று வேதங்களும், பைபிளும், குர் ஆனும் கூறுவதை நிரூபிப்பதற்கோ, ‘கடவுளுக்குப் பொதுவாக‘ தமக்குள் ஒரு முடிவுக்கு வருவதற்கோ என்றுமே முயன்றதில்லை. ஞாயிறுதோறும் பைபிளை ஜெபித்தாலும் அதிலிருந்து படைப்பின் கோட்பாட்டை யாரும் புரிந்து கொள்வதில்லை. அதே நேரத்தில் நியூட்டனின் மூல நூலைப் படிக்காத ஒரு பள்ளி மாணவனுக்குக் கூட புவி ஈர்ப்பு விசைக் கோட்பாடு புரியாமல் இருப்பதில்லை. இயற்கையின் இயக்கம் குறித்த விஞ்ஞானிகளுடைய கண்டுபிடிப்புகள் அவர்களுடைய தனிநபர் அனுபவங்கள் அல்ல. அவை யார் வேண்டுமானாலும் சோதித்துப் பார்க்கத்தக்க பொது அனுபவங்கள் அல்லது முடிவுகள். இதன் காரணமாகத்தான் ஒரு விஞ்ஞானியின் அறிதல் சமூகத்தின் பொது அறிவாக மாற முடிகிறது. அறிவியலுக்குள் ஒரு வரலாற்று தொடர்ச்சி வந்துவிடுகிறது. நியூட்டனின் ஆப்பிள் நம்முடைய ஆப்பிளாகிவிடுகிறது. தங்களுடைய அறிதல் முறை புலன்சாராத அறிதல் என்று கூறும், மதவாதிகள், ஜக்கி, நித்தி, ரவிசங்கர்ஜிக்களின் அறிதல்கள், கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர் ரகத்தை சேர்ந்தவை. புலனறிவுக்கும், பகுத்தறிவுக்கும் மொழியின் சாத்தியத்துக்கும் அப்பாற்பட்டவையாக அவர்களால் சித்தரிக்கப்படுபவை. எனவே அவை நம்முடைய ஆப்பிளாக முடியாதவை. சமஸ்கிருதத்தில் மர்மமான சொற்களில் முனிவர்கள் எழுதிச் சென்றவைகளுக்கு கவர்ச்சிகரமான ஆங்கிலத்தில் வியாக்கியானம் கூறி, மேற்குலகின் மீது இந்தியாவின் ஆன்மீக மேன்மையை நிலைநாட்டுவதும், காசு பார்ப்பதும் எளிது, என்று இந்தக் கும்பலைத் தோலுரிக்கிறார் கோசாம்பி. இயற்கை விஞ்ஞானம் கடவுளை விண்ணுலகின் கோள்களிலிருந்து விரட்டி விரட்டி அகற்றி வருகிறது. ஆறு நாட்களில் கடவுள் உலகத்தைப் படைத்ததாகக் கூறும் ஆதியாகமத்தை மறுப்பதற்கு ஒருவன் அவிசுவாசியாக இருக்கத் தேவையில்லை. அந்த விடயத்தில் ஆர்ச் பிஷப்புகளே தேவனைக் கைவிட்டு விட்டார்கள். இருப்பினும் கடவுள் ஒழிந்து விடவில்லை. ♠ ♠ [கேலக்சி] சகாரா பாலைவனத்தின் பெரு மணற்பரப்புதான் இந்தப் பிரபஞ்சமென்றால், அதில் ஒரு மணற்துகளே இப்பூமி என்று அறிவியல் அறுதியிட்டுக் கூறிவிட்டது. ஆயினும் என்ன? இந்த மணற்துகளில் பிறந்து வளரும் நுண்ணுயிர்கள் முதல் விலங்குகள் மனிதர்கள் வரையிலான அனைத்து உயிரினங்களின் ஆயுட்காலத்தையும், பெங்களூரு நீதிபதியுடைய பதவிக்காலத்தையும், சொத்துக்குவிப்பு வழக்கின் வாய்தா தேதிகளையும் முன் கூட்டியே தீர்மானித்து இயக்குகின்ற பேரறிவு ஒன்று இருப்பதாகவும், ஒரு ஐயரை வைத்து அந்தப் பேரறிவை சரிக்கட்டுவதன் மூலம் வாய்தா தேதியைத் தள்ளிப்போடமுடியும் என்றும் ஜெயலலிதா நம்புகிறார். அரசன் முதல் ஆண்டி வரை பலரும் பலவிதமாக நம்புகிறார்கள். கடவுள் தகர்க்கப்பட்டு விட்டார். நம்பிக்கையைத் தகர்க்க முடியவில்லை. எனவே நம்பிக்கைக்குள் ஒளிந்து கொள்கிறார் கடவுள். முதலாளித்துவ சமூகம் தோற்றுவிக்கின்ற அனுமானிக்க முடியாத நிச்சயமின்மையும், இச்சமூக உறவுகள் தோற்றுவிக்கும் சிக்கல்களும், கடவுள் என்ற அனுமானத்தை வாழ வைக்கின்றன. வானத்தில் கிடைக்காத இடுக்குகளை கடவுளுக்கு பூமியில் வழங்குகின்றன. இதே இடுக்குகளுக்குள் பாதுகாப்பாகப் பதுங்கியிருக்கும் பழைய புதிய மதவாதிகளும் அறிவியலுக்கு எதிராக ஆர்ப்பரிக்கிறார்கள். “நவீன அறிவியலால் வெளிக்கொணரப்படும் புதிர்களும், பிரபஞ்சத்தின் விதிகளும், கடவுளின் ஆளுமையைத்தான் காட்டுகின்றன” என்கிறார் வாடிகனின் வானவியல் வல்லுநர் கய் கன்சால்மேக்னோ. அவரது கருத்துப்படி கடவுள் எல்லாமறிந்த ஆளுமையாகவே இருக்கட்டும். குவான்டம் இயற்பியல், துகள் இயற்பியல், உயிர் வேதியல் உள்ளிட்ட பல்துறை அறிவு கடவுளுக்கு உண்டு என்பதை, அதாவது விவிலியம் அறிந்திராத தேவனின் மகிமைகளை, நவீன அறிவியல்தானே போப்பாண்டவருக்கு கண்டு பிடித்துச் சொல்ல வேண்டியிருக்கிறது! அறிவியலின் ‘ஆளுமை‘ எவ்வளவு அதிகரிக்கிறதோ, அந்த அளவுக்குத்தானே கடவுளின் ஆளுமை குறித்த திருச்சபையின் புரிதலும் அதிகரிக்கிறது! ‘காட் டெலூஷன்‘ (இறை மயக்கம்) நூலின் ஆசிரியரும் பிரிட்டனின் பிரபல இறை மறுப்பாளருமான பேரா. ரிச்சர்டு டாகின்ஸின் கூற்று, அறியாமையின் செருக்கு நிறைந்த அந்தப் பிதற்றலுக்குப் பொருத்தமான பதிலாக அமைகிறது. “அறிவியல் நமக்கு அளிக்கின்ற பிரமிப்பூட்டும் ஆச்சரிய உணர்ச்சி என்பது, மனித மனம் எட்டிப் பிடிக்கக் கூடிய மிக உன்னதமான உணர்ச்சிகளில் ஒன்று. அற்புதமானதொரு இசையும் கவிதையும் அளிக்கின்ற ஆழ்ந்த அழகியல் உணர்ச்சிக்கு இணையானது அது. இந்த உலகமும், பிரபஞ்சமும் அழகானவை, அற்புதமானவை – அவற்றை எந்த அளவுக்கு நாம் புரிந்து கொள்கிறோமோ அந்த அளவுக்கு! -… அறிவியல் என்பது எதார்த்தத்தின் கவிதை.” அறிவியலையும் பகுத்தறிவையும், வெறுமனே அறுத்துப் பார்க்கும் ஆய்வு முறையாகவும், அழகியல் உணர்ச்சியற்றவையாகவும், இதயமற்றவையாகவும் காட்டும் ஆன்மீகப் பித்தலாட்டத்தின் மீது டாகின்ஸின் கூற்றில் உள்ள உண்மை ஒளிவெள்ளம் பாய்ச்சுகிறது. “தன்னையே தான் அறிதல் என்று கூறிக்கொண்டு, இந்திய முனிவர்கள் மர்மமான மொழியில் சூக்குமமாக எதையோ எழுதி வைத்துவிட்டுப் போயிருக்கிறார்கள். லூயி பாஸ்டர் போன்ற விஞ்ஞானிகளோ தம் உயிரையும் பணயம் வைத்து நுண்ணுயிர் குறித்த புரிதலையும் தடுப்பு மருந்துக் கோட்பாட்டையும் மருத்துவ உலகிற்கு அளித்திருக்கிறார்கள். இதுதான் தவம், இவர்கள்தான் நவீன உலகின் போதி சத்துவர்கள்” என்று அறிவியலின் இதயத்தையும் ஆன்மீகத்தின் இதயமின்மையையும் வேறு விதமாக எடுத்துச் சொல்கிறார் கோசாம்பி. பிரம்மம், ஞானம், அவித்யை என்ற சில சொற்களையே சோழிகளாக உருட்டிப் போட்டு, அதைக்கண்டு வாய்பிளந்து நிற்கும் புளித்த ஏப்ப வர்க்கத்தினரின் மூளைகள் மீது கீழைத்தேயத்தின் ஆன்மீக மேன்மையை நிலைநாட்டி பணம் பண்ணிக் கொண்டிருக்கும் நித்தி, ஜக்கி, ரவிசங்கர்ஜி முதலான ஆன்மீக கழைக்கூத்தாடிகள், அறிவியலுக்கு அடக்கம் வேண்டுமென்று அறிவுரை சொல்கிறார்கள். அறிவியல் ஆணவம் கொண்டு ஆடுவதைப் போலவும், ஆன்மீகத்தை அடக்கத்தின் திருவுருவாகவும் சித்தரிக்கும் ஜக்கி வாசுதேவ், அறியாமையின் தீவிரத்தை உணரவேண்டுமென உபதேசிக்கிறார். அறிவைத் தேடுபவன் மட்டும்தான், தனது அறியாமையின் தீவிரத்தையோ, ஆழத்தையோ புரிந்து கொள்ள முடியும். அறியாமையையே வரப்பிரசாதமாக கருதி வழிபடும் ஆன்மீகம், அறியாமையின் தீவிரத்தை எந்தக்காலத்திலும் உணரமுடியாது. பருப்பொருளின் தோற்றத்தைக் கண்டறியும் முயற்சியில் அறிவியல் ஈடுபட்டிருக்கும் இந்தக் காலத்தில், பெருவெடிப்பையே சிறிய அளவில் நிகழ்த்திப் பார்க்குமளவுக்கு அறிவியல் முன்னேறியிருக்கும் இக்காலத்தில்,அபத்தமானவையும் அருவெறுக்கத் தக்கவையுமான இத்தகைய கருத்துகளை ஆன்மீகம் என்ற பெயரில் எங்ஙனம் கடைவிரிக்க முடிகிறது? ஹிக்ஸூம் ரவிசங்கர்ஜியும் அக்கம்பக்கமாக நிலவுவது எப்படி சாத்தியமாகிறது? ♠ ♠ “உறுதியான தத்துவஞான அடித்தளத்தின் மீது நிற்காத வரை, முதலாளித்துவக் கருத்துகளின் தாக்கத்திலிருந்தும் முதலாளித்துவ உலக கண்ணோட்டத்தின் மீட்டுருவாக்கத்திலிருந்தும், இயற்கை விஞ்ஞானமோ, பொருள்முதல்வாதமோ தன்னைத் தற்காத்துக் கொள்ள முடியாது. தன்னுடைய போராட்டத்தில் சொந்தக் காலில் தாக்குப் பிடித்து நிற்பதற்கும், வெற்றியை சாதிப்பதற்கும், ஒரு இயற்கை விஞ்ஞானி”. இயங்கியல் பொருள்முதல்வாதியாக இருக்கவேண்டும்‘என்பார் லெனின். (தொகுதி-38, பக்கம் 146-47) “இயற்கை விஞ்ஞானம் அதிவேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது. அதன் அனைத்து துறைகளும் தீவிரமான கொந்தளிப்பான மாற்றங்களுக்கு உள்ளாகி வரும் இந்தச் சூழலில் அது தத்துவஞான முடிபுகளைத் தவிர்த்து நிற்கமுடியாது.” (லெனின், தொகுதி-33, பக்கம் 232-34) [லெனின்] இயற்பியல் துறையில் பெரு முன்னேற்றம் கண்ட இருபதாம் நூற்றாண்டின் துவக்க காலத்தில்தான் பருப்பொருளின் மறைவு குறித்துப் பேசிய புறவய கருத்து முதல்வாதமான மாக்கிசம் எனும் கருத்துமுதல்வாத தத்துவப் போக்கு ஐரோப்பாவில் எழுந்தது. இதனை எதிர்த்து மார்க்சியமும் அனுபவ வாத விமரிசனமும் என்ற நூலை எழுதிய லெனின், இயற்பியலின் புதிய கண்டுபிடிப்புகள் பொருளுக்கும் இயக்கத்துக்கும் இடையிலான ஒற்றுமை குறித்த மார்க்சியக் கோட்பாட்டை உறுதி செய்வதை எடுத்துக் காட்டினார். இயற்கையின் இயக்கம் குறித்த விதிகளைக் கண்டறிகிறது நவீன அறிவியல். எனினும் அறிவியலின் இந்தக் கண்டுபிடிப்புகளுக்கும், பழைய வகையிலான சிந்தனை முறைகளுக்கும் இடையில் ஒரு முரண்பாடு இருக்கத்தான் செய்கிறது. முதலாளித்துவ சமூகத்தின் சிந்தனை மரபில் வேரோடியிருக்கும் கருத்துமுதல்வாதமும், இயக்க மறுப்பியல் கண்ணோட்டமும் அறிவியலாளனின் சிந்தனைக்கு உள்ளேயும் கூட ஆழமாக வேரோடியிருக்கிறது. அதனால்தான், முதலாளித்துவ உலகில் அறிவியலின் முன்னேற்றம் என்பது உணர்வு பூர்வமானதாக இருப்பதில்லை என்றும், அது உண்மையை நோக்கி சரியான திசையில் முன்னேறும் சந்தர்ப்பங்களிலும் கூட உண்மைக்கு முதுகைக் காட்டியபடிதான் நகர்ந்து செல்கிறது என்றும் கூறுகிறார் லெனின். (தொகுதி-14, பக்கம்-313) இன்று முதலாளித்துவம் பிரம்மாண்டமாக வளர்ந்து உலகு தழுவியதாக மாறியிருக்கிறது. அறிவியல் ஆய்வை ஒரு அறிவியலாளன் தனித்துச் செய்து பார்த்த காலம் மலையேறி விட்டது. கார்ப்பரேட் நிறுவனங்களின் பணபலமும், பிரம்மாண்டமான ஆய்வகங்களும், பல்துறை ஆய்வாளர்களின் ஒத்திசைவும் இல்லாமல் ஒரு அறிவியல் சோதனை என்பது இன்று சாத்தியமற்றது. 60 களிலேயே ஹிக்ஸ் தனது கண்டுபிடிப்பை காகிதத்தில் வெளியிட்டு விட்டார். செர்ன் ஆய்வு மையத்தைப் போன்றதொரு நிலத்தடி ஆய்வு மையத்தை அமைப்பதற்கான பணிகளையும் 90 களிலேயே தொடங்கியது அமெரிக்கா. உலகத்தை தனது மேலாதிக்கத்தின் கீழ் கொண்டுவருவதற்காக ஆண்டுக்கு 600 பில்லியன் டாலர் ராணுவத்துக்கு செலவு செய்யும் அமெரிக்க அரசு, பிரபஞ்சம் தோன்றியது எப்படி என்று அறிந்து கொள்வதற்கு 10 பில்லியன் டாலர் செலவு செய்வதை வீண் என்று கருதி, தோண்டிய சுரங்கத்தை மூடியது. பின்னர் ஐரோப்பிய நாடுகளின் கூட்டு முயற்சியாகத்தான் செர்ன் ஆய்வு மையம் உருவாக்கப்பட்டது. ஏகாதிபத்திய முதலாளித்துவம், மனிதனுக்கேயுரிய அறிவுத்தாகத்தால் உந்தப்பட்டோ, இயற்கையைப் பேணும் பொருட்டோ, அல்லது இயற்கை இடர்களிலிருந்து மனிதகுலத்தைக் காக்கும் பொருட்டோ அறிவியல் ஆய்வைத் தொடங்குவதில்லை. போர் அல்லது இலாபம் – இவைதான் முதலாளித்துவத்தின் கீழ் அறிவியலை உந்தித் தள்ளுகின்றன. அந்த வகையில், கண்காணிப்பதற்கும், வேவு பார்ப்பதற்கும், அழிப்பதற்கும் மேற்கொள்ளப்பட்ட பல ஆய்வுகள்தான், நவீன மருத்துவக் கருவிகளைப் பிரசவித்திருக்கின்றன. இது போன்றவை முதுகைக் காட்டியபடி நடந்ததில் கிடைத்த முன்னேற்றங்கள். இயற்பியல், வேதியல், வானவியல் உள்ளிட்ட எந்த துறையின் ஆய்வும் தனித்து மேற்கொள்ளப்பட இயலாத அளவிற்கு இன்று அறிவியல் முன்னேறிவிட்டது. எந்த ஒரு ஆய்விலும் ஈடுபடுகின்ற தனித்துறைகளுக்கு இடையே ஒருங்கிணைவும் ஒத்திசைவும் தேவைப்படுகிறது. அந்த ஒத்திசைவு முதலாளித்துவ சமூக அமைப்புடனும், அதன் உலக கண்ணோட்டத்துடனும் நேரடியாக முரண்படுகின்றது. முதலாளித்துவத்திற்கு கடவுள் தேவைப்படுகிறார். ‘ஆன்மீகத் தீர்வுகள்’ என்ற நூலின் ஆசிரியரும், அமெரிக்காவில் வாழும் மருத்துவருமான தீபக் சோப்ரா, அத்வைதத்தை ரீ மிக்ஸ் செய்து தருவதன் மூலம் பொருள்முதல்வாத தத்துவத்திலிருந்து முதலாளித்துவ உலகைக் காப்பாற்றுகிறார்: “இந்தப் பிரபஞ்சம் ஏன் என்ற கேள்வி அறிவியலாளர்களால் மட்டுமே பதிலளிக்க முடிந்தது அல்ல. மாற்று விளக்கத்தின் படி இப்பிரபஞ்சமே உணர்வு (பிரக்ஞை) பூர்வமானது. நம்முடைய பிரக்ஞையின் மூலமும் அதுதான். நாம் வருகிறோம் என்பது இந்தப் பிரபஞ்சத்துக்குத் தெரியும். நாம் கடவுளுடைய பேரறிவின் ஒரு பகுதியே. எனில் கடவுள்தான் இப்போது கடவுள் துகளையும் கண்டுபிடித்திருக்கிறார்.” இதற்கு நேர் எதிராக பிரபஞ்சத்திற்கும் மனிதனுக்குமான உறவை பொருள்முதல் வாத நோக்கில் விளக்குகிறார், பிரபல அமெரிக்க விண்வெளி விஞ்ஞானியும் நாத்திகருமான கார்ல் சாகனின் மாணாக்கரும், வானவியல் இயற்பியல் வல்லுநருமான நீல் டிகிராஸ் டைசன்: ‘நாம் ஒருவரோடு ஒருவர் உயிரியில் ரீதியாகப் பிணைக்கப்பட்டிருக்கிறோம், இப்பூமியுடன் வேதியல் ரீதியாகப் பிணைக்கப்பட்டிருக்கிறோம், பிரபஞ்சத்துடன் அணுவால் பிணைக்கப் பட்டிருக்கிறோம். இதை எண்ணும்போதே நான் முறுவலிக்கிறேன். அகண்டமானவனாக உணர்கிறேன். நாம் பிரபஞ்சத்தினும் மேலானவர்கள் அல்ல, அதன் அங்கமானவர்கள். நாம் பிரபஞ்சத்தில் இருக்கிறோம், பிரபஞ்சம் நம்முள் இருக்கிறது” நவீன விஞ்ஞானம்பெரும் பாய்ச்சலில் முன்னேறத் தொடங்கியிருந்த பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில், இயற்கைக்கும் மனிதனுக்குமான உறவு பற்றி எங்கெல்ஸ் இவ்வாறு எழுதினார்: “இயற்கைக்குப் புறத்தில் நிற்கும் ஒருவனைப் போல இயற்கையின் மீது நாம் எவ்விதத்திலும் ஆளுகை புரியவில்லை என்பதும், அதற்குப் பதிலாக, நமது ரத்தம், சதை, மூளை இவற்றுடன் இயற்கையோடு சேர்ந்தவர்கள் நாம். அதன் நடுவில் நிலைவாழ்கிறோம் என்பதும், இயற்கையின் நியதிகளைக் கற்றுக் கொண்டு அவற்றைப் பொருந்தியவாறு கடைப்படிப்பதில் இதர எல்லாப் பிராணிகளைக் காட்டிலும் நமக்கு அனுகூலம் உள்ளது என்பதிலேயே அதன் மீது நமது ஆளுகை அடங்கியுள்ளது.” இயற்கையின் இயக்கத்தை அறிவியல் பூர்வமாகப் புரிந்து கொள்வது மட்டுமல்ல, தானே உருவாக்கிக் கொண்ட சமூகத்தின் இயக்கத்தையும் அறிவியல் பூர்வமாகப் புரிந்து கொண்டு வினையாற்றும்போதுதான், மனிதன் தானே உருவாக்கிய கடவுளையும் அகற்ற முடியும். அந்த சோதனையில் மோதவிடுவதற்கு புரோட்டான்களோ, ஹாட்ரான் கொலைடரோ தேவையில்லை. ___________________________________________ புதிய கலாச்சாரம், ஆகஸ்டு – 2012 _______________________________________________ 26 ஹிக்ஸ் போசான் துகள்! ஒரு வரலாற்று விளக்கம்!! http://www.vinavu.com/2012/10/02/goddamn-particle-history/   [கடவுள்-துகள்-வரலாறு]கடந்த மாதத்தில் உள்ளூர் பத்திரிகைகள் முதல் உலகப் பத்திரிகைகள் வரை தலைப்புச் செய்தியாக இருந்தது – ‘கடவுள் துகள்’. ஐரோப்பாவின் செர்ன் ஆய்வு மையத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ‘கடவுள் துகளை’க் கண்டுபிடித்து விட்டனர் என்பதே இச்செய்திகளின் சாராம்சம். விஞ்ஞான மொழியில் சொல்வதானால் தற்போது ‘பிடிபட்டிருக்கும்’ துகளை ஹிக்ஸ் போசான் துகள் என்று சொல்லலாம். இதற்கும் கடவுளுக்கும் என்ன தொடர்பு என்பதைப் பற்றிப் பார்க்கும் முன் இந்த ஆராய்ச்சியைப் பற்றியும் அந்தத் துகளைப் பற்றியும் விஞ்ஞானம் சொல்லும் விளக்கங்களைச் சுருக்கமாகப் பார்த்து விடுவோம். இந்தப் பிரபஞ்சம் தோன்றியது எப்படி என்பது ஒரு சுவாரசியமான கேள்வி – சொல்லப் போனால் இந்தக் கேள்விக்கான பதிலில் தான் அந்தக் கடவுளின் உயிரே ஊசலாடிக் கொண்டிருக்கிறது. ஆதியிலே ஒன்றுமில்லாத வெளி இருந்ததாகவும், நேரம் போகாமல் போரடித்துக் கொண்டிருந்த தேவன் எதையாவது படைத்துத் தொலைப்போமே என்கிற படைப்பு அவஸ்தையில் இந்தப் பிரபஞ்சத்தைப் படைத்தார் என்பதும் மதவாதிகள் சொல்லும் விளக்கம். அதாவது, ‘நாம் காணும் சகலமும் அந்த ஆண்டவனின் படைப்புகள்’ என்கிற இந்த ஆறுவார்த்தைகளைத் தாண்டி மதவாதிகளின் மூளைகள் செல்லவில்லை. ஆனால், வரலாறு நெடுக விஞ்ஞானிகள் இந்த அம்புலிமாமா கதையை எள்ளி நகையாடியிருக்கிறார்கள். அவர்கள் இதற்கு மாற்றாக பெரு வெடிப்புக் கொள்கையை முன்னிறுத்தினர். அதன்படி, இன்று நாம் காணும் மொத்த பிரபஞ்சமும் பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன் ஒரு சுருங்கிய வடிவில் அபரிமிதமான வெப்பத்துடனும் கற்பனைக்கெட்டாத அடர்த்தியுடனும் ஒடுங்கியிருந்ததாகவும், அதனுள்ளே ஏற்பட்ட முரண்பாடுகளின் விளைவாக அது வெடித்துச் சிதறி விரிவடைந்து வருவதாகவும் சொன்னார்கள். அப்படிச் சிதறிய துகள்கள் பொருண்மையைப் பெற்றதன் விளைவாகவே பல அண்டங்களும் பேரண்டங்களும், அவற்றினுள் சூரியன்களும் கோள்களும் தோன்றின என்றும் விளக்கினர். வெடித்துச் சிதறிய அதீத வெப்பம் கொண்ட துகள்கள் ஒரு குறிப்பிட்ட விசைப்புலத்தைக் கடக்கும் போது அதன் ஆற்றல் நிறையாக மாறும் என்பதை ஹிக்ஸ் எனும் விஞ்ஞானி சுமார் 50 ஆண்டுகளுக்கு முன் விளக்கினார். அந்த விளக்கம் தான் தற்போதைய சோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ‘கடவுளை’ லாரியில் அடிபட்ட நாயைப் போல் விசிறியடித்துள்ள இந்த விளக்கத்தை மதவாதிகளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவர்கள் பொருள் வேறு ஆற்றல் வேறு என்றனர். ஆற்றலைக் கடவுளாக விளக்கியவர்கள், அந்தக் ‘கடவுள்’ ஏதுமற்ற சூனியத்திலிருந்து இந்த பிரபஞ்சம் மொத்தத்தையும் விரல் சொடுக்கும் நேரத்தில் உண்டாக்கி விட்டாரென்று சொன்னார்கள். அதாவது கருத்து தான் அனைத்துக்கும் மூலம் என்கிற கருத்துமுதல்வாதம் தான் இது. ஆனால், பொருளில் இருந்து தான் சகலமும் துவங்கியது என்று சொன்ன பொருள்முதல்வாதிகளான விஞ்ஞானிகளோ, பொருளிலிருந்து துவங்கும் ஆற்றல் மீண்டும் பொருளாக மாறும் என்றும், அந்த ஆற்றலின் விளைவாய் நிறையைப் பெறும் என்றும் விளக்கினர். இந்த விளக்கத்தை நிரூபிக்க அவர்கள் ஆற்றலில் இருந்து பொருள் எப்படி பொருண்மையைப் பெறுகிறது என்பதை சோதனைப் பூர்வமாக நிறுவ வேண்டியிருந்தது. ஹிக்ஸ் முன்வைத்த கோட்பாட்டு ரீதியிலான விளக்கத்தை ஆய்வுகளின் மூலம் நிரூபிக்க 50 ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கிறது. ஆனால், இந்த காலதாமதத்திற்கு காரணங்கள் இல்லாமலில்லை. சுமார் 20 ஐரோப்பிய நாடுகள் இணைந்து, 6000 விஞ்ஞானிகளோடு, பல பில்லியன் டாலர் செலவில் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்ப வசதிகளோடு தான் இச்சோதனை மோற்கொள்ளப்பட்டுள்ளது. இச்சோதனைக்கு முன்னோட்டமாக இன்னும் சில துகள்கள் கண்டுபிடிக்கப்பட வேண்டியிருந்தது. தோன்றியதிலிருந்து லட்சத்து கோடிக்கோடியில் ஒரு பங்கு விநாடியில் ஹிக்ஸ் போசான் வேறு துகள்களாக மாறிவிடும். அதற்குள் அதைப் படம் பிடித்தாக வேண்டும். அணுவிற்குள் இருக்கும் புரோட்டான் என்ற நேர்மின்சுமையுடைய துகள்களை ஆயிரம் கோடி தடவை எதிரெதிராக மோத விட்டால்தான் ஒரு போசானை பார்க்க முடியும். இதற்காக பூமிக்கடியில் 175 மீட்டர் ஆழத்தில் வட்ட வடிவ பாதையில் 1200 பெரிய காந்தங்களை அடுக்கி அதற்கு நடுவில் இரண்டு இஞ்ச் அகலமுள்ள குழாய் வழியாக புரோட்டானை விநாடிக்கு 3 லட்சம் கிமீ வேகத்தில் (ஒளியின் வேகம்) எதிரெதிர் திசையில் மோத விட்டுதான் இது சாத்தியமானது. இந்த ஆய்வுக்காக அமைக்கப்பட்டுள்ள குழாயின் (Large Hadron Collider) சுற்றளவு 27 கிமி. இதை 100 நாடுகளைச் சேர்ந்த 10,000 விஞ்ஞானிகளும் பொறியாளர்களும் சேர்ந்து 9 பில்லியன் டாலர்கள் செலவில் உருவாக்கியுள்ளனர். பல அணுகுண்டுகள் சேர்ந்து வெடித்தாற்போல நடக்கும் இந்நிகழ்வில் வெளிப்படும் வெப்பத்தை தணிக்க மிகவும் குளிர்ச்சியூட்ட வேண்டி இருக்கும். அதற்காக மிகுந்த பொருட் செலவில் குளிர் சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளது. பிரபஞ்சத்தின் ரகசியங்களைக் கண்டறிய ஒவ்வொரு முறை விஞ்ஞானம் முயற்சி செய்யும் போதும் மதவாதிகள் அதன் கால்களை உடைப்பதை வாடிக்கையாகவே வைத்திருக்கிறார்கள். இந்த சோதனைகள் துவங்குவதற்கு முன்பும் கூட, இதனால் உலகமே அழியப் போகிறதாக்கும் என்றெல்லாம் பூச்சி காட்டிய மதவாதிகள், சோதனையின் முடிவுகள் வந்ததும் அதை எந்தக் கூச்சமும் இன்றி செரித்துக் கொள்ள முடியுமா என்று பார்க்கிறார்கள். எப்படி இருந்தாலும், கண்டு பிடிக்கப்பட்டிருக்கும் துகளுக்குப்பெயர் ‘கடவுள்’ துகள் தானே என்று கூறி அற்பத்தனமாக மகிழ்ந்து போகிறார்கள். உண்மையில், 1993-ம் ஆண்டு ஹிக்ஸ் துகள் பற்றிய தனது நூல் ஒன்றுக்கு விஞ்ஞானி லியோன் லேடர்மேன் ‘விளங்காத துகள்’ என்று பொருள் வரும் வகையில் Goddamn Particle எனப் பெயரிடுகிறார். வியாபார பரபரப்பிற்காக அந்நூலின் தலைப்பை அதன் பதிப்பாளர் GOD particle (கடவுள் துகள்) என்று சுருக்கி வைத்துள்ளார் – இதைத் தவிற ஹிக்ஸ் போசான் துகளுக்கும் ஆண்டவனுக்கும் மயிர் நுனியளவிற்கும் தொடர்பில்லை என்பதே உண்மை. ஆனால், செருப்படி வாங்கியது ராமனென்றாலும் அடித்தவர் பெயர் ராமசாமி (பெரியார்) தானே என்று ஆறுதலடையும் மயிலை பார்த்தசாரதிகளைப் போல் உலகெங்கும் உள்ள மதவாதிகள் தங்கள் கொதிப்பை ஆற்றுப்படுத்திக் கொள்கிறார்கள். மதவாதிகள் விஞ்ஞானத்தை கண்மூடித்தனமாய் எதிர்த்தாலும் அதன் பலன்களை – செல்போனில் இருந்து விமானம் வரை – பயன்படுத்திக் கொள்ள தயங்குவதில்லை; அதற்காக கூச்சப்படுவதுமில்லை. ‘ஆன மட்டும் கழுத்தைப் பிடிப்பது; ஆகாத மட்டில் காலைப் பிடிப்பது’ என்கிற இவர்களின் இந்த பித்தலாட்டத்திற்கு ஒரு நீண்ட வரலாறு உள்ளது. அது பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய டெமாக்ரடிஸின் காலத்திலிருந்து தொடர்ந்து வருகிறது. பண்டைய கிரேக்க பொருள்முதல்வாதிகள் துவங்கி இன்றைய ‘கடவுள்’ துகள் வரை விஞ்ஞானம் அடைந்த படிப்படியான வளர்ச்சியை இப்போது ஒரு பருந்துப் பார்வையில் பார்ப்போம். சுமார் 2500 வருடங்களுக்கு முன் இந்த பிரபஞ்சத்தின் புதிர்கள் விளக்கப்படவே முடியாதவையென்று கருதி வந்த காலத்தில், உலகம் அணுக்களால் ஆனது என்றும், அவ்வணுக்களை இணைப்பது சூன்யம் என்றும், அணுக்களது சேர்க்கை மற்றும் பிரிவினால் தான் பருப்பொருளில் மாற்றம் வருவதாகவும் கிரேக்கத் தத்துவஞானி டெமாக்ரிட்டஸ் முன்வைத்தார். ஏறக்குறைய அதே காலகட்டத்தில் இந்தியாவில் வேதமதத்தை எதிர்க்கும் நாத்திகர்களான சாருவாகர்கள் இந்திய பதிப்பான பார்ப்பன கடவுள் கொள்கை உள்ளிட்ட கருத்து முதல்வாத தத்துவங்களை எதிர்த்துப் போராடுகிறார்கள். சடப்பொருளிலிருந்து தன்மையிலேயே வேறுபட்டதான உயிர்ப்பொருள் எப்படித் தோன்ற முடியும் என்று கேள்வி எழுப்பி, அதன் மூலம் கடவுள் உலகைப் படைத்தார் என்று நிலைநாட்ட முயற்சிக்கிறார்கள் கருத்துமுதல்வாதிகள். பசியை ஆற்றப் பயன்படும் அரிசி, புளிக்கவைக்கப் படும்போது தன்மையிலேயே வேறுபட்டதான மதுவாக மாறி போதையூட்டுவதை உதாரணம் காட்டி, பஞ்ச பூதங்கள் ஒரு குறிப்பிட்ட விதத்தில் ஒன்று சேரும்போது உயிர் தோன்றுகிறது. இறந்த பின் ஆன்மா என்று எதுவும் எஞ்சியிருப்பதில்லை. உடல் மீண்டும் பஞ்சபூதங்களுடன் கலந்து விடுகிறது என்று வாதாடியிருக்கிறார்கள் சாருவாகர்கள். சாருவாகம் என்பது முரணற்ற பொருள்முதல்வாதம். பவுத்தமோ இயங்கியலைப் பேசியது. எரிந்து கொண்டிருக்கும் சுடரைக் காட்டி, சென்ற கணத்தில் நாம் கண்ட சுடரல்ல, இந்தக் கணத்தில் நாம் காண்பது என்று கூறி இயங்கியலை விளக்குகிறது பவுத்த தத்துவம். பஞ்ச பூதங்களால் உலகை விளக்க இவர்களனைவருமே முயன்றனர். அறிவியலும் தொழில் நுட்பமும் வளராத அந்தக் காலத்தில், எளிய நடைமுறை எடுத்துக் காட்டுகள் மூலம், தர்க்க முறையிலும், கோட்பாடாகவுமே பொருள்முதல்வாதத்தை அவர்கள் பேச முடிந்தது. அதன் பின் மிக நீண்ட காலத்திற்கு தத்துவஞானத் துறையில் எந்த முன்னேற்றமும் இல்லை. நிலவுடமை சமூக அமைப்பின் கீழ் உற்பத்தி சாதனங்களிலும், தொழில் நுட்பத்திலும் முன்னேற்றங்கள் ஏற்பட்டிருந்தாலும், தத்துவஞானத்துறையின் குரல்வளை மீது மதபீடங்கள் அமர்ந்திருந்தன. இந்தியாவில் பார்ப்பனீயமும், ஐரோப்பாவில் கிறித்தவமும் அறிவியல் வளர்ச்சியை மறித்து நின்றன. 16-ம் நூற்றாண்டைச் சேர்ந்த கோபர்நிகஸ், டெமாக்ரடிஸுக்கும் முந்தையவரான தாலமி முன்வைத்த புவி மையக் கோட்பாட்டை மறுத்து சூரிய மையக் கோட்பாட்டை முன்வைக்கிறார். இதே கோட்பாட்டை வலியுறுத்திய புரூனோ ரோம் நகரில் திருச்சபையால் தீவைத்து எரிக்கப்படுகிறார். ‘உங்கள் தீர்ப்பைக் கேட்டு நான் அஞ்சுவதைக் காட்டிலும், தீர்ப்பை வழங்கிய நீங்கள்தான் அதிகம் நடுங்குகிறீர்கள்‘ என்று தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளை புருனோ எள்ளி நகையாடியதும், மன்னிப்பு கேட்டு உயிர் பிழைக்க வாய்ப்பளிக்கப்பட்டும் அதனை அவர் மறுத்ததும், ஐரோப்பிய அறிவுத்துறையினர் மத்தியில் புருனோ மேனியாவாக காட்டுத்தீயாய் பரவி, திருச்சபையை அச்சுறுத்தின. தொலைநோக்கி வழியாக சூரிய மையக்கோட்பாட்டை நிரூபிக்கமுயன்ற குற்றத்துக்காக 32 ஆண்டுகள் வீட்டுச்சிறையில் தள்ளப்படுகிறார் கலீலியோ. பின்னர் ஹெப்ளர், தனது தொலைநோக்கிச் சோதனைகளின் மூலம் கோபர்நிகஸின் முடிவுகளை உறுதிசெய்ததோடு கோள்களின் இயக்கத்திற்கான விதிகளையும் வகுத்தளிக்கிறார். இந்த ஆய்வு முடிவுகளும் திருச்சபையின் தணிக்கைக் குழுவினால் நீண்டகாலம் முடக்கப்படுகின்றன. அதன் பின் பேகனும், டெகார்ட்டும் முறையே முன் அனுமானித்துப் பின் தர்க்கித்தலையும், சோதனை அறிவியலையும் வலியுறுத்துகின்றனர். இதனை கணித வடிவத்துடன் இணைத்து அறிவியலாக்கியவன் நியூட்டன். பருப்பொருட்களின் இயக்கத்திற்கான விதிகளையும் வகுத்தளித்த அவரது காலத்தில் பிரபஞ்சத்தின் தோற்றம் பற்றிய ஐயுறவு அப்படியே தான் நீடித்தது. பிரபஞ்சத்தின் தோற்றம் பற்றிய வானவியலின் தேக்கம் மேலும் உடைபட வேறு சில விஞ்ஞான சாத்தியப்பாடுகள் தேவைப்பட்டன. லவாய்ஸியரின் ஆற்றல் அழிவின்மை விதியும் அணுவைப் பிளக்க முடியும் என்கிற ஜேஜே தாம்சனின் கண்டுபிடிப்பும் பிரபஞ்சத்தின் புதிர்களை அவிழ்க்கும் பாதையில் விஞ்ஞானத்தை வெகு வேகமாக அழைத்துச் சென்றன. தாம்சனின் மாணவர்களான ரூதர்போர்டும் சாட்விக்கும் அணுமையத்தை எலக்ட்ரான்கள் வட்டப்பாதையில் சுற்றிவருவதாக கண்டறிந்து சொல்கிறார்கள். அதை இன்னும் வளர்த்துச் செல்லும் நீல்ஸ் போர், அந்த சுற்றுப் பாதை நீள்வட்டமாக இருந்தால் தான் சுழற்சியால் ஏற்படும் ஆற்றல் இழப்பை தவிர்க்க முடியும் என்கிறார். அதனைத் தொடர்ந்து விஞ்ஞானத்தின் வளர்ச்சியில் அணுவைப் பிளக்க முடியும் என்பது நிறுவப்படுகிறது. அணுவின் உள்ளே எலக்ட்ரான்கள், மியூவான்கள், டாவோ மற்றும் இவற்றின் எதிர்த்துகள்கள் 3 உட்பட 12 அடிப்படைத் துகள்களும், 4 நான்கு விசைகளும் இருப்பது கண்டறியப்படுகிறது. ஆனால், இந்த பதினாறும் சேர்ந்தாலும் அணுவின் நிறையைக் கணக்கீடு செய்வதில் குறைபாடு இருந்ததால், பதினேழாவதாக ஒன்று இருக்க வேண்டும் என்கிற கருத்தை இந்திய விஞ்ஞான போஸ் முன்வைக்கிறார் – அதை ஐன்ஸ்டீனும் ஒப்புக் கொள்கிறார். அதே காலகட்டத்தில் ஒளி மற்றும் வெப்பம் பற்றிய விஞ்ஞானமும் வளர்கிறது. டி பிராக்லி ஒளியானது துகளாகவும் அலையாகவும் பரவுவதாகச் சொல்கிறார். அதே நேரத்தில் காந்தம் மற்றும் மின்சாரத்திற்கிடையிலான தொடர்பை ஃபாரடே சோதனை மூலம் நிரூபிக்க, அவ்விரு விசைகளின் தொடர்பை கணிதச் சூத்திரமாக மாற்றுகிறார் மேக்ஸ்வெல். இப்போது பிரபஞ்சத்தின் தோற்றம் பற்றிய புதிரை விளக்கப் போகும் பெருவெடிப்புக் கொள்கையின் முதற்படியான விசை ஒருங்கிணைப்பு கோட்பாடு பிறக்கிறது. அதாவது, மின்விசையும் காந்தவிசையும் இணைந்த மின்காந்த விசை கண்டறியப்படுகிறது. ஒளியும் மின்காந்த அலைகளாக பரவுவதாக ஐன்ஸ்டீன் விளக்குகிறார் – இதிலிருந்து தான் போசான்களுக்கான முன்மொழிவை பெறுகிறார் போஸ். 1963-ல் ஹிக்ஸ் விசைப்புலம் மற்றும் போசான் துகளைக் கோட்பாட்டு ரீதியில் நிறுவுகிறார் ஹிக்ஸ். தன்னளவில் நிறை பெற்றிராத இந்த போசான்கள் அதிக ஆற்றல்லைப் பெறுமாறு தூண்டப்பட்டால் விசைப்புலம் ஒன்று உருவாகி அப்புலமே அத்துகள்களை ஒருங்கிணைத்து நிறையாக மாற்றும் எனக் கணக்கிட்டார். 70களில் பாகிஸ்தான் விஞ்ஞானி அப்துல் சலாம் மற்றும் வெய்ன்பெர்க் எலக்ட்ரானை அணுக்கருவுடன் இணைத்து வைத்திருக்கும் விசைகளை ஒருங்கிணைத்துப் புரிந்துகொள்ள விழைகின்றனர். பெருவெடிப்பின் போது இவையனைத்து துகள்களும் ஒன்றாக இருந்துதானே பிரிந்திருக்கும் என கருதினர். எண்பதுகளிலேயே நிறையை வழங்கும் போசானைத் தவிர மற்ற 3 போசான்கள் கண்டறியப்பட்டு விட்ட நிலையில், தற்போது நிறையை வழங்கவல்ல போசானைக் கண்டுபிடிக்க அப்துல் சலாமின் முன்மொழிவு உதவியுள்ளது. இது தான் பொருட்கள் ஆற்றலை இழந்து நிறை பெற காரணம். 13.7 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் உருவான பிரபஞ்சத்தில் தோன்றிய துகள்கள் பஞ்சால் உறிஞ்சப்படும் நீரைப் போல நிறையைப் பெற்றது இப்படித்தான். இச்சோதனையின் முடிவு பிரபஞ்சத்தின் தோற்றத்தை விளக்கும் பெருவெடிப்புக் கொள்கையை உறுதி செய்துள்ளது. பொருட்களுக்கு நிறை கிடைத்தது எப்படி என்பது முதல், கோள்கள் உருவானது வரைக்குமான நிகழ்வுகளுக்கு விளக்கம் கிடைத்துள்ளதுடன் இயங்கியலின் விதிகளையும் சரியென்று நிறுவியிருக்கின்றது. இந்த ஆய்வின் மூலம் துகள்களை ஒருங்கிணைத்துப் புரிந்து கொள்வது சாத்தியமானாலும், ஈர்ப்பு விசைக்குக் காரணமான க்ராவிட்டான் என்ற துகளும், நமது பிரபஞ்சத்தில் கண்டு ஆராயப்படாத 96% கரும்பொருள் மற்றும் கரும் சக்தி பற்றி இன்னமும் விளக்கங்கள் வரவேண்டியுள்ளது – அது சாத்தியப்படும் காலம் மிக அண்மையில் தான் இருக்கிறது. மதவாதிகள் இதை தங்களது வழமையான குயுக்தியுடனே எதிர்கொள்கிறார்கள் – அதாவது, எதெல்லாம் அறியப்பட்டதோ அதெல்லாம் கடவுளின் துணையால் என்றும் எதெல்லாம் அறியப்படாதததோ அதெல்லாம் சாட்சாத் அந்தக் கடவுளே தானென்றும் சாதிக்கிறார்கள். ஒளியின் கதிர்கள் ஊடுறுவாத இருளின் பலத்தில் வாழும் பரிதாபகரமான நிலையிலேயே ‘கடவுள்’ இருக்கிறார் – விஞ்ஞானம் கொஞ்சம் கொஞ்சமாக வெளிச்சத்தைப் பரவலாக்கி வருகிறது. _____________________________________________ புதிய கலாச்சாரம், ஆகஸ்டு – 2012 _________________________________________________ 27 வலியில்லா ஊசி! http://www.vinavu.com/2012/09/28/laser-powered-needle/   இன்றைய நவீன அறிவியியல் உலகில் கூட ஏராளமான உடல்நல குறைபாடுகளுக்கும், நோய்களுக்கும் இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. அதில் பலவற்றுக்கு நோய்க்கான காரணம் கூட இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த நிலையில் மருத்துவத்துறையில் ’புதிய சாதனையாக’ ஊசி போடும்போது வலி இல்லாமல் இருக்க ‘வலி இல்லா ஊசி’ தென் கொரிய ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. [ஊசி] தோல் சிகிச்சைகளூக்கு பயன்படுத்தப்படும் லேசர் கற்றையின் உதவியால் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பில் ஒரு லேசர் கற்றையை உருவாக்கும் அமைப்பும், உட்செலுத்த வேண்டிய மருந்தை நிரப்பிவைக்கும் அறையும், அத்துடன் சவ்வினால் பிரிக்கப்பட்ட நீரும் இருக்கும். நீர் இருக்கும் அறையினுள் ஒரு வினாடியில் 4000ல் ஒருபங்கு நேரமேயுள்ள லேசர் கற்றை செலுத்தப்படும் போது, அது சவ்விற்கு அப்பாலிருக்கும் மருந்தின் மேல் (சவ்வூடு பரவல்- Osmosis முறையைப் போல) அழுத்தத்தை ஏற்படுத்தும், அந்த அழுத்தத்தால் மிக மிக மெல்லிய முகக்குழாய் (Nozzle) வழியே வெளியேறும் மருந்து மனித தோலை ஊடுறுவி செல்ல போதுமானதாகும். இதை சந்தைக்கு ஏற்ற முறையில் தயாரிக்க ஒரு பன்னாட்டு கம்பெனியுடன் பேச்சுவார்த்தை நடந்துவருகிறது. எதற்காக இந்த கண்டுபிடிப்பு? உலகிலேயே முக்கிய மருத்துவ பிரச்ச்னை, ஊசி போடும் வலி என்பது போலவும், அதற்காக மெனக்கெட்டு கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் இந்த ஊசியால் யார் பயனடையப் போகிறார்கள்? இந்த ஊசி குத்தும் வலியைக் கூட இவர்களால் தாங்கிக்கொள்ள முடியாதா? உலகெங்கிலும் மருத்துவமனைக்கு சென்று வைத்தியம் பார்க்க முடியாத ஏழைகளுக்கா வலியில்லா ஊசி கிடைக்கப்போகிறது? விக்கல் எடுப்பதற்கெல்லாம் ஆஸ்பத்திரிக்கு ஓடும் பணக்காரர்களுக்கு தான் அது முதலில் சாத்தியமாகும். நோயாளிகளுக்கு ஊசி போடுவதால் ஏற்படும் வலி என்பதா இவர்களது அக்கறை? குழந்தைகளுக்கும், ஊசி போடுவதால் ஏற்படும் வலியை தாங்கிக்கொள்ள முடியாதோருக்கும் இந்த கண்டுபிடிப்பு பயன்படும் என்று சிலர் வாதிடலாம். உலகம் முழுவதிலும் தேவையான அடிப்படை மருத்துவம் கிடைக்காமல் ஒரு மணி நேரத்திற்கு சராசரியாக 800 (ஐந்து வயதிற்கு குறைவான) குழந்தைகள் இறந்து போகின்றன என்கிறது உலக சுகாதார நிறுவனத்தின் கணக்கீடு. ஏற்கனவே கண்டுபிடித்திருக்கும் எல்லா மருந்துகளுக்கும் மருந்து கம்பெனிகள் காப்புரிமை வாங்கிவைத்துக் கொண்டு, கொள்ளை லாபம் சம்பாதிக்கின்றன. ஏழைகளுக்கு பயனடையும் வகையில் உள்ளூர் மருந்து கம்பெனிகள் மருந்து தயாரிப்பதை நீதிமன்றங்களில் சண்டமாருதம் செய்து தடை செய்திருக்கின்றன. இதனால், மிகச்சாதாரண நோய்களுக்கு கூட மருந்து கிடைக்காமல் உலகெங்கிலும் பல பச்சிளம் குழந்தைகள் மாண்டுபோகின்றன. சென்ற 2011-ம் ஆண்டில் மட்டும் 69 லட்சம் குழந்தைகள் இறந்துள்ளதாக குறிப்பிடுகிறது உலக சுகாதார நிறுவனத்தின் கணக்கீடு. அதைப்போல் இந்த வலியில்லா ஊசியும் பன்னாட்டு கம்பெனிகள் காப்புரிமை வாங்கி வைத்துகொண்டு லாபமீட்டவும், சாதாரண வயிற்றுவலிக்கு கூட MRI ஸ்கேன் எடுக்க சொல்லும் தனியார் மருத்துவமனைகள் இனி வலியில்லா ஊசி என்று லாபமீட்டவுமே பயன்படும். மருத்துவ ஆய்வுகளும், கண்டுபிடிப்புகளும் சமூக நோக்கத்துடன் இல்லாமல் லாபநோக்குடன் இருப்பதால் தான் இத்தகைய அபத்தங்கள் நிகழ்கின்றன. இந்தியாவில் காலராவுக்கும், மலேரியாவுக்கும், நாய்க்கடிக்கும் கூட போதுமான மருந்துகள் இன்றி பல ஏழைகள் வருடந்தோறும் இறக்கின்றனர். ஒரு வேளை வலியில்லா ஊசி வந்தால் கூட மருந்து இருந்தால்தானே போட முடியும்? நாம் இவற்றை சொன்னதும் காசிருப்பவன் வலியில்லா ஊசி போட்டால் உங்களுக்கென்ன என்றும், விஞ்ஞான கண்டுபிடிப்பை ஏன் எதிர்கிறீர்கள் என்றும் சிலர் கிளம்பி வரலாம். இதில் தற்செயல் ஒற்றுமை என்னவெனில், இந்த புதிய கண்டுபிடிப்பு பரிசோதிக்க தடிமனான பன்றியின் மேல் சோதித்து பார்க்கப்பட்டதில், மருந்து தோலை ஊடுறுவி உட்சென்றிருக்கிறது, இந்த ஊசி தோல் தடிமமானவர்களுக்கானது தான் என்பதில் சந்தேகமில்லை. 28 யூ டூ புரூஸ் வில்லிஸ்??? http://www.vinavu.com/2012/09/27/bruce-willis-apple/   டைஹார்ட் (Die Hard) வரிசைப் படங்களை பார்த்திருப்பீர்கள். அதன் நாயகன் புருஸ் வில்லிஸ் (Bruce Willis) ஒருபக்கம் தனது குடும்ப உறவுகளைக் காப்பாற்ற உயிரை கொடுத்து போராடுவார். மறுபக்கம், அமெரிக்க மக்களை அநியாயத்திலிருந்தும், அக்கிரமங்களில் இருந்தும் காப்பாறியே தீருவது என்று பல்வேறு இன்னல்களுக்கிடையிலும், சளைக்காமல் போராடி வெற்றியும் பெறுவார். இறுதியில் வில்லன்களை வீழ்த்திய வெற்றிக் களிப்புடன் கிறிஸ்மஸ் கொண்டாடுவார்கள். நாட்டைக் காத்த வில்லிஸுக்கு வாழ்த்துக்கள் குவியும்! [ஆப்பிள்-புரூஸ்-வில்லிஸ்] ஆனால் அமெரிக்க தர்மம் அழியும் போதெல்லாம் அவதரிக்கும் கிருஷ்ண பரமாத்மாகளில் ஒருவரான வில்லிஸ்க்கே வந்தது சோதனை! ஆப்பிள் நிறுவனத்தின் ஐ-டியூன் (I-Tune) இசை துணுக்குகளை, பாடல்களை உலகெங்கும் பலரும் வாங்குகிறார்கள். வாங்கும் போது ஆப்பிள் நிறுவனம் முன்வைக்கும் காப்புரிமை ஒப்பந்தத்தின்படி, ஐ-டியூன் வாங்குவதாலேயே வாடிக்கையாளர்களுக்கு அது சொந்தமாகிவிடுவதில்லை, மாறாக ஒருவர் அந்த பாடல்களை வாங்கும் போது அதை தான் மட்டும் கேட்பதற்கு உரிமத்தை வாங்குவதாகவும், மற்றவர்களுக்கு எந்த வகையில் கொடுத்தாலும் அதுதிருட்டு(Piracy), ஒப்பந்தத்தை மீறுதல் எனவும் அதற்கு சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்மூலம், நீங்கள் உங்கள் ஐ-டியூன்களை உங்கள் குழந்தைகளுக்கு கூட கொடுக்க முடியாது என்றாகிறது. அதாவது வேறு வார்த்தைகளில் சொல்வதானால், நீங்கள் ஒரு சாக்லேட் வாங்கினால், நீங்களே சாப்பிட்டு காலி செய்யவேண்டும், அதை வேறொருவருக்கு கொடுக்கக் கூடாது, கொடுக்கவும் முடியாது. ஒரு புதுச் சட்டை வாங்கினால் அதை நீங்கள் மட்டுமே அணியவேண்டும், வேறு யாருக்கும் கொடுக்கக் கூடாது. கொடுத்தால் காப்புரிமையை மீறுகிறீர்கள். சமீபத்தில், புருஸ் வில்லிஸ் தான் சேர்த்து வைத்திருக்கும் ஐ-டியூன் தொகுப்புகளை(Collections) தனக்கு பின் தனது மூன்று மகள்களுக்கு கொடுக்க முடியாது என்று அறிந்தவுடன், கொதித்து போய்விட்டதாகவும், இந்த அநியாயத்தை முறியடிக்க ஆப்பிள் நிறுவனத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க இருப்பதாகவும் முன்னனி நாளேடுகளில் செய்தி வெளிவந்தது. நாம் வாங்கும் பொருட்களை நமது அன்பிற்க்குரியவர்களுக்கு பரிசளிப்பதோ, அல்லது நமக்கு பின்னர் நம் குழந்தைகளுக்கு அதை கொடுப்பதோ ஒரு எளிய நடைமுறை, உலகெங்கிலும் நிலவி வரும் சொத்துடமை மற்றும் இரத்த உறவு சார்ந்த சமூக அமைப்பின் குடும்ப மதிப்பீடும் அதுவே. ஆனால் இன்றைய சந்தைப் பொருளாதாரம், குடும்ப உறவுகள் விழுமியங்கள் எதையும் மதிப்பதில்லை, அது அனைவரையும் தனது நுகர்வோர்களாக மட்டுமே பார்க்கிறது. நீங்கள் வாங்கிய பொருளை உங்கள் குழந்தைகளுக்கு கொடுத்தால் அந்நிறுவனத்திற்கு ஒரு வாடிக்கையாளர் குறைகிறார், லாபம் குறைகிறது. இப்படி அனைத்தையும் பரிவர்த்தனை, லாப அடிப்படையில் மதிப்பீடு செய்வதன் மூலம் சொல்லிக் கொள்ளப்படும் குடும்ப மதிப்பீடுகளை சிதைக்கிறது. குடும்ப மதிப்பீடுகளுக்காவும், அநியாயதிற்கு எதிராகவும் சளையாமல், உயிரையும் பணயம் வைத்து போராடக்கூடிய புருஸ் வில்லிஸ் ஆப்பிள் நிறுவனத்தின் இந்த நியாயமற்ற ஒப்பந்த்தத்தை பார்த்ததும் கொதித்து போய் எதிர்த்து போராடுவது நமக்கு சாதாரணமானதாக தோன்றலாம். ஆனால் அந்த செய்தி வெளியான சிலநாட்களிலேயே அது வெறும், ‘வதந்தி’ என்றும் இன்று வரை புருஸ் வில்லிஸோ அவரது வழக்குறைஞர்களோ இந்த விவகாரம் குறித்து ’எந்த கருத்தையும்’ தெரிவிக்கவில்லை என்றும் செய்திகள் வெளியாயின. திரையில் பல தடைகளையும் இன்னல்களையும் விடாப்பிடியாக போராடி வெற்றிபெறும் ஹீரோக்கள், நிஜத்தில் டம்மி பீஸாக இருப்பது மீண்டுமொருமுறை நிரூபணமாயிருக்கிறது. டை ஹார்டு வரிசைப்படங்களில் கிறிஸ்மஸுக்கு முந்திய நள்ளிரவில் மனைவியையோ, மகளையோ, நண்பனையோ காப்பதற்கு மாபெரும் அதிரடி சண்டைகள் போட்ட ப்ரூஸ் இங்கே நிஜ வாழ்க்கையில் தனது மகள்களுக்கு கேவலம் ஒரு ஐ-டியூன் சமாச்சாரத்தைக் கூட கொடுக்க முடியவில்லை. அதை எதிர்த்து சண்டையும் போட முடியவில்லை. மூலதனத்துக்கு முன்னால் கைகட்டி நிற்கிறது இமேஜ். டை ஹார்டு நான்காவது பாகத்தில் வில்லன்கள் இணையத்தில் புகுந்து பல்வேறு அரசு மற்றும் பங்குச்சந்தை வர்த்தகம் தொடர்பான ஆவணங்களை சிதைக்க முயல்வார்கள். அது நடந்துவிட்டால் அமெரிக்க பொருளாதாரமே சிதறி விடும் என்று வீர வசனம் பேசுவார் இந்த வில்லிஸ். இப்போது அதே அமெரிக்க பொருளாதார விதியே சொந்த மகளுக்கு பாட்டு கொடுக்கக்கூடாது என்று தடை போடுகிறது. அதை சப்தநாடியும் ஒடுங்கும் வண்ணம் ஏற்கிறார் இந்த ஆக்சன் ஹீரோ. வின்னர் கைப்புள்ளையை விட காமடியாக இல்லை இது? இந்த பரமாத்மாக்கள் திரையில் எந்த ’அராஜக’ சக்திகளை, அநியாயத்தை எதிர்த்து போராடுகிறார்களோ அதே அநியாயத்தை வால்ஸ்ட்ரீட் முற்றுக்கை போராட்டத்தில் பங்குகொண்டு நடைமுறையில் நிகழ்த்திவருகிறார்களே, அந்தமக்கள் தான் உண்மையிலேயே அமெரிக்காவின் வீரர்கள், ஹீரோக்கள்! 29 ஆப்பிள் அண்ணே, நீ மட்டும்தான் கேஸ் போடுவியா? நாங்களும் போடுவோம்ல…! http://www.vinavu.com/2012/09/26/apple-legal/   சமீபத்தில் ஆப்பிள் நிறுவனம், சாம்சங் நிறுவனத்தின் மேல் அமெரிக்க நீதிமன்றத்தில் தனது வடிவமைப்பை (Design) அனுமதியின்றி பயன்படுத்துவதாக வழக்கு தொடுத்திருந்தது. ஓரங்களில் வளைவுகளோடு கூடிய செவ்வக வடிவம் மற்றும் தொடு திரையில் விரல் தீற்றல் மூலம் கைபேசியை அன்லாக் செய்வது உள்ளிட்டவை தனது சொந்தக் கண்டுபிடிப்பு என்று உரிமை கோரியிருந்தது ஆப்பிள் நிறுவனம். செவ்வக வடிவத்திற்குக் கூட உரிமை கோரிய இந்த கேலிக்கூத்தான வழக்கில் அமெரிக்க நீதிமன்றம் ஆப்பிள் நிறுவனத்திற்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியது. [ஆப்பிள்] மைக்ரோசாப்ட், வால்மார்ட், கோக் உள்ளிட்ட அமெரிக்க நிறுவனங்களோடு ஆப்பிள் நிறுவனமும் அமெரிக்கப் பெருமிதங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. மேற்படி நிறுவனங்களின் தொழில் வளர்ச்சி மற்றும் சந்தை அணுகுமுறை என்பது அமெரிக்க பாணி முதலாளித்துவத்தின் துலக்கமான வடிவங்கள். திறமையின் மூலம் சந்தைப் போட்டியைச் சமாளிப்பது என்கிற வழக்கமான முதலாளித்துவ மாய்மாலங்கள் மேல்பூச்சுகள் ஏதுமின்றி, வெறி கொண்ட முறையில் தனது எதிரியை ஒழித்துக் கட்டிவிட்டு சந்தையில் ஏக போகத்தை நிறுவிக் கொள்வது தான் இவர்கள் கடைபிடிக்கும் தொழில் தர்மம். காப்புரிமைச் சட்டங்களின் சகல சந்து பொந்துகளிலும் புகுந்து புறப்படுவது, போட்டி நிறுவனங்களைக் காப்புரிமை மீறல் வழக்குகள் போட்டு திணறடிப்பது, ஒட்டு மொத்த நுகர்பொருள் சந்தையை தானே கபளீகரம் செய்வது உள்ளிட்ட சண்டியர்தனங்களில் கலக்கிக் கொண்டிருந்த ஆப்பிள் நிறுவனத்துக்கு இப்போது ஒரு பெரும் சோதனை வந்துள்ளது. சமீபத்தில் சீனத்தைச் சேர்ந்த கைபேசி தயாரிக்கும் நிறுவனம் ஒன்று தனது வடிவமைப்பை ஆப்பிள் நிறுவனம் திருடி விட்டதாகவும் அந்நிறுவனத்தின் மேல் வழக்கு தொடுக்க இருப்பதாகவும் அறிவித்திருக்கிறது. 30 காப்புரிமை அநீதியால் காணமல் போகும் கண்டுபிடிப்புகள்! http://www.vinavu.com/2012/09/25/copyright-woes/   தொழில்நுட்ப வளர்ச்சி ஏற்படுத்தியிருக்கும் பிரமிப்பு அதன் பயன்பாடு, பலரையும் இன்றைய தொழில்நுட்ப சகாப்தத்தில் பிறந்ததற்கும் வாழ்வதற்கும் பெருமைப்பட வைத்திருக்கிறது. தொழில்நுட்பம் சகல துறைகளிலும் பாய்ச்சல் வேகத்தில் முன்னேறியிருப்பதுடன், கடந்த சகாப்தங்களில் சாத்தியமற்றதாக கருதப்பட்ட பலவற்றையும் நிகழ்த்தி காட்டி சாதித்துள்ளது. [காப்பிரைட்] அதே நேரம் தொழில்நுட்பமும், அதன் வளர்ச்சியும், முழுவீச்சுடன் சுதந்திரமாக முன்னேறிச் செல்லவில்லை, இன்றைய காப்புரிமை சட்டங்கள் புதிய தொழில் நுட்ப வளர்ச்சியை தடை செய்கின்றன என்கின்றது ஒரு முதலாளித்துவ பொருளாதார ஆய்வு. பங்கு முதலீட்டாளர்கள், முதலீட்டு கம்பெனிகள் இசைபதிவு நிறுவனங்கள், கம்பெனிகளில் செய்யப்பட்ட ஆய்வு மற்றும் நேர்காணல்களில் இருந்து பல புதிய புரட்சிகரமான தொழில்நுட்பங்கள் காப்புரிமை சட்டங்களால் சந்தைக்கே வரமால் இருந்துவிட்டது தெரியவந்துள்ளது. முதலாளிகளின் லாபத்தை பாதுகாப்பது மட்டுமல்ல அவை வளர்ந்துவரும் தொழில்நுட்பத்திற்கே எதிராக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புதிய தொழில்நுட்பத்தை கண்டுபிடிப்பவர்கள் தனது கண்டுபிடிப்பிற்கு உரிய அங்கீகாரம், பலனை பெற்றுக் கொள்ளவும், அதை பாதுகாப்பதற்காகத்தான் காப்புரிமை சட்டங்கள் இருக்கின்றன, அவை சரியானவை என்று பலரும் கருதுகிறார்கள். ஆனால், ஒரு தொழில்நுட்பம் ஏற்கனவே இருக்கும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அதை செம்மைப்படுத்துவதன் மூலம் தான் உருவாகிறது, உருவாக முடியும் என்பதை யாரும் மறுக்கமுடியாது. ஒரு தொழில்நுட்பம் புதிதாக உருவாகி சந்தைக்கு வரும் போது அது காப்புரிமை சட்டத்தால் கட்டுப்படுத்தப்படுவதன் மூலம் பலரும் அதை பயன்படுத்துவதும், செம்மைப்படுத்துவதும், பரிணாம வளர்ச்சியடைவதும் தடை செய்யப்படுகிறது. உலகில் மனிதனின் முதல் கண்டுபிடிப்புகளான நெருப்பும், சக்கரமும் தான் அனைத்து விஞ்ஞான வளர்சிக்கும், மனித சமூக வளர்சிக்கும் அடித்தளம். நெருப்பும், சக்கரமும் கண்டுபிடிக்கப்படவில்லையெனில் இன்றைய பல கண்டுபிடிப்புகளும், நவீன உலகமும் கூட இல்லை. தனது கண்டுபிடிப்பு என்று புதிய தொழில்நுட்பத்தை மூடிவைத்துக்கொள்ளும் இந்த முதலாளித்துவ நிறுவனங்கள், நெருப்பு, சக்கரத்தின் கண்டுபிடிப்பிற்கு ராயல்டி கொடுப்பதாக இருந்தால் முழு மனித சமூகத்திற்கும் பல பில்லியன் டாலர் கொடுக்க வேண்டும். ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கும் கண்டுபிடிப்பு, காப்புரிமையின் மூலம் மூடிவைக்கப்பட்டிருக்குமேயானால், அதை பயன்படுத்தி அதிலிருந்து புதியதாக ஒன்றையும் தன்னால் கண்டுபிடித்திருக்க முடியாது என்பது வெட்க்ககேடான உண்மை. வளர்ச்சி பெற்றிருக்கும் தொழில்நுட்பத்தின் மூலம் தான் மட்டுமே லாபம் சம்பாதிக்க வேண்டும் என்கிற லாபவெறியால் எதையும் சமூகத்திற்கு அளிக்காமல் “காப்புரிமை” என்ற பெயரில் தடையிட்டும் திரையிட்டும் மறைத்து வைக்கிறது முதலாளித்துவம். தொழில்நுட்பமும், அதன் பயன்பாடும் சமூகத்திற்கு பொதுவாக்கப்படும் போது அது அளப்பரிய சாதனைகளை ஏற்படுத்தும் என்பது ஏற்கனவே சோசலிச ரஷ்யாவிலும், சோசலிச சீனாவிலும், நிருபிக்கப்பட்டுள்ளது. தற்கால சமூகத்திலும், லினெக்ஸ் இயங்குதள அமைப்பு (LINUX Operating Sytem-OS) திறந்த மென்பொருளாகவும் (Open Source), காப்புரிமை கட்டுப்பாடுகளற்ற திறந்த உரிமமுள்ளதாகவும் (Open Licence) இருக்கிறது. இவ்வாறு கட்டுப்பாடுகளற்று இருப்பதால், சமூகத்தில் எவரும் அந்த மென்பொருளை தரவிறக்கம் செய்து பயன்படுத்தலாம், அந்த மென்பொருளின் மேம்பாட்டிற்கும் வளர்ச்சிக்கும் எவரும் பங்களிக்கலாம். இதன் மூலம் இன்று லினெக்ஸ்-இல் பல அளப்பறிய சாதனைகள் நிகழ்த்தப்பட்டு, பீடுநடை போடுகிறது. சமூகரீதியிலான உற்பத்தி மற்றும் தொழில்நுட்ப மேம்பாடு, சமூகரீதியிலான பயன்பாடு என்பதற்கு லினெக்ஸ் சிறந்த உதாரணமாகும். முதலாளித்துவ சமூகத்தில் சொத்துடமை சார்ந்த உற்பத்தி உறவுகள் பெரும்பான்மை மக்களான உற்பத்திசக்திகளுக்கு பொருத்தமில்லாமல் இருப்பதுடன் உற்பத்திசக்திகளின் வளர்ச்சியை தடை செய்யும் விலங்காகவும் மாறிவிடுகின்றன என்றார் மார்க்ஸ். அந்த விலங்கை உடைத்தெறியாத வரை சமூகத்தின் பயன்பாட்டிற்கான சமூக நலனுக்கான தொழில்நுட்பம் வளராது, சமூகமும் அடுத்த கட்டத்திற்கு நகராது. 31 அணுமின்சாரத்தின் மிகையும், காற்றாலை மின் உற்பத்தியின் உண்மையும்! http://www.vinavu.com/2012/09/21/windmill-power-generation/   மின்சார உற்பத்தியில் நவீன தொழில் நுட்பம் என்பது அணு மின்சாரம் மட்டும் தான் என்கிற ரீதியில் மத்திய அமைச்சர் நாராயணசாமி போன்ற பேர் பெற்ற விஞ்ஞானப் பெருந்தகைகள் சொல்லி வருவது அனைவரும் அறிந்த ஒன்றே. ஆனால், ஒரிஜினல் விஞ்ஞான உலகம் அணு மின் உற்பத்தியிலிருந்து மாற்று வழிகளைத் தேடி எத்தனையோ படிகள் முன்னேறிச் சென்று கொண்டிருக்கிறது. [காற்றாலை] கடந்த செப்டம்பர் 9 அன்று வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில் ஒட்டுமொத்த உலகின் மின்னாற்றல் தேவையைவிட நான்கு மடங்கு அதிகமாக காற்றாலை மூலம் மின் உற்பத்தி செய்யுமளவிற்கு காற்று ஆற்றல் அபரிதமாக இருக்கிறது என்று ஆய்வாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள். இந்த புதிய ஆய்வில் காற்றாலை மூலம் உற்பத்தி செய்யமுடிந்த மின்னாற்றல் அதிகபட்ச சாத்தியமான வரைமுறையையும், காற்றாலை மின் உற்பத்தி பருவ நிலையில் ஏற்படுத்தும் தாக்கத்தையும் புவியியற்பியல் அடிப்படையில் சாத்தியங்களை, கணினி மாதிரிகளைக் கொண்டு கணக்கிட்டுள்ளனர். காற்றாலை சுழலிகள் அதிகரிக்க அதிகரிக்க, அவை உற்பத்தி செய்யும் மின்னாற்றலும் அதிகரிக்கும். ஆனால் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் சுழலிகளை நிறுவினால் அவை காற்றின் வேகத்தை குறைப்பதுடன், மின்னுற்பத்தியையும் குறைத்துவிடும். அதே சமயம், காற்றின் வேகம் குறைக்கப்படுவதால் அது பருவநிலையின் மீது சிறிது தாக்கத்தை ஏற்படுத்துமெனினும் காற்றாலைசுழலிகளை கூட்டம் கூட்டமாக தொகுப்பாக நிறுவாமல் பரவலான முறையில்நிறுவினால் அவை உற்பத்தி செய்யும் மினாற்றலை கணக்கிடும் போது, பருவ நிலையின் மீதான தாக்கம் மிக குறைவானதே. இன்றைய ஒட்டு மொத்த உலகின் மின் தேவை தோராயமாக 18டெரா வாட்டாகும் (1Terra watt = 1000 000 Mega Watts). சரிவர திட்டமிட்டு காற்றாலை சுழலிகளை நிறுவினால் இந்த தேவையைவிட அதிகபட்சம் நான்கு மடங்கு அதிகமான மின்சாரத்தை உற்பத்தி செய்யமுடியும் என்கிறது ஆய்வு முடிவுகள். ஆயினும் காற்றாலை திட்டத்தை நடைமுறைப்படுத்துவதையும், நிர்மாணிப்பதையும், இந்த சாத்தியக்கூறு, அதிகபட்ச வரைமுறைகளை விடஉலக அரசியல் பொருளாதார காரணிகளே தீர்மானிக்கின்றன. நமது தமிழகம் இந்தியாவிலேயே மிக அதிக அளவு காற்றாலை மின்னுற்பத்தி செய்யும் மாநிலமாக முதல் நிலையில் உள்ளது. அதிலும் அதிக அளவிலான காற்றாலைகள் நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் தான் நிறுவப்பட்டுள்ளன. அவற்றில் பெரும்பாலானவை தனியார் முதலாளிகளுக்கு சொந்தமானவை. அவை அரசின் மானியம் பெற்று நிறுவப்பட்ட பின்னர் அரசுக்கு அதிக விலையில் மின்சாரத்தை விற்கின்றன. இந்தியாவின் மூன்று படிநிலை அணுசக்தி திட்டம், அணு மின்சக்தி நாட்டின் மின்சார தேவையை ஈடுசெய்யும் என்ற அரசின் பித்தலாட்டங்களையும், அது சாத்தியமற்றது என்பதையும், அணு மின்சக்தி வெறும் 2சதவிகித தேவையை மட்டுமே ஈடு செய்யும் என்றும், யுரேனியம் எரிபொருளுக்காக ஏகாதிபத்தியங்களை சார்ந்திருப்பதன் மூலம் நாட்டை அடிமைப்படுத்தும் திட்டம் என்றும் சுவ்ரத் ராஜு தனது கட்டுரையில் அம்பலப்படுத்தியிருகிறார். மேற்சொன்ன ஆய்வு முடிவுகளின் நாட்டின் படி மொத்த மின் தேவை ஈடு செய்ய முடியாவிட்டாலும், அபரிதமாக இருக்கும் காற்று ஆற்றலை சரிவர பயன்படுத்தினால் 50 சதவிகித தேவையை நிச்சயம் ஈடுசெய்ய முடியும். ஆனால்,இராணுவ மற்றும் அணு சக்தி ஆராய்ச்சிகளுக்கு ஆயிரக்கணக்கான கோடிகளை கொட்டித்தீர்க்கும் இந்த அரசு, காற்றாலை மற்றும் மரபு சாரா ஆற்றல் ஆய்வுகளுக்காக துரும்பையும் கிள்ளிப்போடுவதில்லை. ஏகாதிபத்தியங்களின் நலன்களுக்காக, ஏவல் நாயைப் போல செயல்படும் இந்த அரசு, சுயமான முடிவுடன் காற்றாலை திட்டத்தை மட்டுமல்ல, எந்த மரபு சாரா ஆற்றல் திட்டத்தையும் ஆய்வு செய்யாது, அமல்படுத்தாது. எதிர்த்து போராடினால் அதை ஒடுக்க சீருடை அணிந்த ரவுடிகளை அனுப்பும், போராடாவிட்டால் அணு உலை நின்று கொல்லும்! 32 ஆர்கானிக் உணவு: சதிக்கு பலியாகும் நடுத்தர வர்க்கம்! http://www.vinavu.com/2012/09/18/organic-fad/   நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மருத்துவக் கட்டணம், செலவுகளுடன், ”புதிது புதிதாக” நோய்களும் வந்து நடுத்தர வர்க்கத்தினரை பீதிக்குள்ளாக்குகின்றன. இந்தசூழலில் இவர்கள் தமது உடல் நலன்,சுகாதாரமான, சத்தான உணவு பற்றி அதிக அக்கறை கொள்ளத் துவங்கியுள்ளதோடு, இயற்கை வேளாண் உணவு பொருட்கள் சத்தானவை, சுகாதாரமானவை,வேதி-நச்சுக்கள் இல்லாதவை என்று நம்புகின்றனர். படிக்க - Organic food is not healthier, finds study - Going back to clean, healthy source [ஆர்கானிக்] ஆனால், ஸ்டன்ஃபொர்டு பல்கலைக்கழகத்தின் சமீபத்திய ஆய்வு விளம்பரம் செய்யப்படுவது போல Organic உணவுப் பொருட்களில், வழக்கமான முறையில் பயிரிடப்படும் பொருட்களை விட அதிக சத்தும், விட்டமின்களும் இல்லை என்றும் இயற்கை வேளான் உணவுப் பெருட்கள் என்று விற்கப்படுபவை ரசாயான உரங்கள், பூச்சிக் கொல்லிகளை முற்றிலும் பயன்படுத்தாதவை அல்ல, மாறாக குறைவாக பயன்படுத்தப்பட்டவையே என்றும் சொல்கிறது. கார்ப்பரேட் கம்பெனிகள் நமது மரபுவழி விவசாயத்தை அழித்ததோடு, ரசாயன உரம், பூச்சிமருந்து ஆகியவற்றால் இந்த மண்ணையே விசமாக்கி வைத்திருக்கின்றன. இன்று கார்ப்பரேட் கம்பெனிகள் நமது விளை பொருட்கள் வேதி-நச்சுக்களால் மாசு பட்டிருப்பதாகவும், அதனால் சுத்தமான, வேதி பொருட்களை பயன்படுத்தாத இயற்கை வேளாண் பெருட்களை சந்தைப்படுத்தி கொள்ளை லாபம் சம்பாதிக்கின்றன. பல கம்பெனிகள் கார்ப்பரேட் விவசாய பண்ணைகளையும் அமைத்திருக்கின்றன. பசுமை புரட்சி என்ற பெயரில் பாரம்பரிய விவசாயத்தை பன்னாட்டு கம்பெனிகளுடன் கைகோர்த்து அழித்த அதே அரசு, இந்த ஆர்கானிக் உணவு பெருட்களுக்கும் விதிமுறைகளை நிர்ணயித்திருக்கிறது. உலகின் (இந்தியா உட்பட) பல நாடுகளிலும் அரசால் நிர்ணயிக்கப்பட்டுள்ள ஆர்கானிக் உணவுப் பொருட்களுக்கான விதிமுறைகள் எவற்றிலும் ரசாயான உரங்கள், பூச்சிக்கொல்லிகளை முற்றிலும் பயன்படுத்தக்கூடாது என்று சொல்லப்படவில்லை. உணவுப் பொருட்களின் மீதான அரசின் கண்காணிப்பும் கட்டுப்பாடுகளும் குறிப்பிடத்தகுந்த அளவுக்கு நுகர்வோர் விழிப்புணர்வும் மிகுந்த மேற்குலகில் வேண்டுமானால் அரசின் கட்டுப்பாடுகள் குறைந்தபட்சமேனும் பின்பற்றப்படலாம் – அல்லது அவ்வாறு ஒரு பாவனை காட்டப்படலாம். இந்தியாவில் எந்த ஒரு சட்டத்தையும், விதிமுறையையும் கழிவறை காகிதமாகக்கூட மதிக்காத கார்ப்பரேட் கம்பெனிகள் ஆர்கானிக் உணவுப்பொருட்கள் உற்பத்தியில் மட்டும் விதிமுறைகளை பின்பற்றுவார்கள் என்று நம்புவது எவ்வளவு முட்டாள் தனம்? நடுத்தரவர்க்கத்தின் பயத்தையும் நம்பிக்கையையும் தனது லாப வேட்டைக்கு பயன்படுத்திக் கொள்ள பல இயற்கை வேளான் உணவுப் பெருட்களுக்கான (Organic Food) சங்கிலி தொடர் கடைகள் சென்னையில் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளன. தொடர்ச்சியாக பல பன்னாட்டு கம்பெனிகள் இந்திய நடுத்தர வர்க்கத்தைக் குறிவைத்து களமிறங்க உள்ளன. இந்த வகைகடைகளில் இயற்கை முறையில் பயிரிடப்பட்ட காய்கறிகள், தானியங்கள் மட்டுமல்லாது, இறைச்சி,முட்டைகளும் கிடைக்கும். சாதாரண உணவுப் பொருட்களுக்கும் இவற்றுக்கும் பாரிய அளவிளான வேறுபாடுகள் இல்லை, ஆனால் விலையோ பலமடங்கு அதிகம். [ஆர்கானிக்] படம் நன்றி இந்து நாளிதழ் சென்னையில்,கடந்த மாதம் இயற்கை வேளான்மைஉணவுப் பெருட்களுக்கான ‘உணவு திருவிழா’பாதுகாப்பான உணவிற்கான கூட்டமைப்பினால் (Safe Food Alliance) கொண்டாடப்பட்டுள்ளது. இதில் கலந்துகொண்டோர் பாதுகாப்பான உணவை உட்கொள்வது என்பது ஒவ்வொரு நுகர்வோருடைய உரிமை என்றும் இதற்கு அரசு ஆவண செய்யவேண்டும் என்று யார் பாரம்பரிய விவசாயத்தை அழித்தார்களோ அவர்களிடமே கோரிக்கை வைக்கிறார்கள். நாளொன்றுக்கு ரூ.28 க்கும் குறைவான வருமானமுள்ளோர் அதிகம் வாழும் நாட்டில், ஒருவேளை உணவே பலருக்கு கிடைக்காத நாட்டில் தனக்கு மட்டும் சத்தான, சுகாதாரமான உணவு வேண்டும், என்று கோருவது நியாயமா? இதே ’கனவான்கள்’ நாடு முழுவதும் ரசாயன உயிர்கொல்லி மருந்துகளுக்கு எதிராக நடந்துவரும் எந்த போராட்டத்திலும், உதாரணமாக எண்டோசல்பானுக்கு எதிரான போராடம், பி.டி. கத்திரிகாய்க்கு எதிரான போராட்டம் என எந்த போராட்டத்திலும் கலந்து கொண்டதில்லை. தங்களது சொந்த கோரிக்கையான சத்தான, சுகாதாரமான உணவு என்பதற்கும் இத்தகைய போராட்டங்களுக்கும் இடையிலான தொடர்பை ’மறந்தும் கூட’ யோசிப்பதில்லை.இதே உயர் நடுத்தர வர்க்கம், இப்படி வீட்டில் வேதி நச்சுக்கள் இல்லாத உணவை சமைக்க தேடி கொண்டே, பிசா ஹட், மெக்டோனல், கேஎப்சி, சரவணபவன், தல்ப்பாகட்டு, அஞ்சப்பர் என நாக்கின் சுவைகாக சில ஆயிரங்களை சிதறடிக்கவும் தயங்குவதில்லை. இந்தியாவே மேற்குலகின் குப்பைத்தொட்டியாக மாறி வரும் சூழலில் பல்வேறு மேற்கத்திய நாடுகள் தமது அணுக்கழிவுகள் உள்ளிட்ட கழிவுகளை நமது கடல் எல்லையிலும் நாட்டினுள்ளும் கொட்டி வருகிறார்கள். இந்த விஷத் தொட்டியிலிருந்து அமிர்தம் வேண்டும் என்று கேட்கும் காரியவாதம் ஒருபக்கமென்றால், மறுபக்கம் பன்னாட்டு கம்பெனிகளின் லாபவேட்டைக்கு இரையாதல் என்று செயல்படும் இந்த அறியாமை சுயநலவாதிகள் இருக்கும் வரை, சாத்தியமான ”எல்லா” வழிகளிலும் கார்ப்பரேட் கொள்ளைகள் தொடரத்தான் செய்யும். 33 பி.டி உணவுப் பொருள்: தடுப்பார் யாருமில்லை! http://www.vinavu.com/2012/09/03/bt-foods/   செய்தி -73 [மரபீனி]இந்த வருடம் அமெரிக்க நுகர்வோர் சந்தையில் மரபினி மாற்றப்பட்ட புதிய ரக மக்காச்சோளம் விற்பனைக்கு வந்துள்ளது. மான்சாண்டோவின் தயாரிப்பான இதை, அமெரிக்காவைச் சேர்ந்த சில்லறை வர்த்தக நிறுவனங்களான Whole Foods, Trader Joe’s , General Mills போன்றவை நுகர்வோர் நலக் குழுக்களின் எதிர்ப்பைத் தொடர்ந்து தங்கள் கடைகளில் விற்பனை செய்வதில்லை என்று முடிவு செய்து அறிவித்துள்ளன. ஆனால், உலகின் சில்லறை வர்த்தகத்தின் மிகப்பெரும் பகாசுர நிறுவனமான வால் மார்ட், நுகர்வோர் குழுக்கள் மற்றும் மக்களின் எதிர்ப்புகளை மீறி மரபனு மாற்றம் செய்யப்பட்ட உணவுபொருட்கள் தன் கடைகளில் தொடர்ந்து விற்பனை செய்யப்படும் என்று திமிராக அறிவித்துள்ளது. ஏற்கனவே சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வரும் மரபினி மாற்றம் செய்யப்பட்ட உணவுப் பொருட்களை பி.டி ரகத்தை சேர்ந்தது என்று எந்தவித முத்திரையும் இட்டு விற்பனை செய்யப்படுவதில்லை. நுகர்வோர் நலம் மக்கள் உரிமை என்றெல்லாம் பீற்றிக் கொள்ளும் அமெரிக்காவிலேயே உணவு பொருட்களை அவை மரபணு மாற்றம் செய்யப்பட்டவையா இல்லையா என்று வடிக்கையாளர் அறிந்துகொள்வது கடினம் என்பது முக்கியமானது. பல்வேறு ஆய்வு முடிவுகள் பி.டி உணவு உட்கொண்டால் அது உடல் நல பிரச்சனையை மட்டுமல்ல மரபணு ரீதியான பிரச்ச்னையையும் ஏற்படுத்தும் என்று சொல்கின்றன. 2009-ம் ஆண்டு சர்வதேச உயிரியல் இதழில் வெளிவந்த ஆய்வு முடிவுகள், பி.டி உணவு பொருட்கள் பரிசோதனை செய்யப்பட்ட எலிகளுக்கு சிறுநீரகம், கல்லீரல் பிரச்சனையை ஏற்படுத்தியது உறுதி செய்தது. 2011-ல் கனடாவில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், பி.டி உணவுப்பொருட்களை உட்கொண்டு கருத்தரித்த பெண்களின் ரத்தத்திலும், தொப்புள் கொடியிலும் 80 சதவீதத்திற்கும் மேல் பி.டி. வேதியல் நச்சு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. பி.டி உணவுப்பொருட்கள் நுகர்வோருடைய உடல் நலனுக்கு தீங்கை ஏற்படுத்தாது, அதை விற்பனை செய்யலாம் என்பதற்கு எந்த வித அறிவியல் ஆய்வு முடிவுகளும் ஆதாரமாக இல்லை. சுயாதீனமான முறையில் நீண்ட கால உடல் நல, சுகாதார ஆய்வும் நடத்தப்படவில்லை. மான்சாண்டோவின் ’ஆய்வு’ முடிவுகளையே இவை பெருமளவு சார்ந்திருக்கின்றன. மரபணு மாற்றம் செய்யப்பட்ட உணவுப்பொருட்களை விற்பதற்கு கொள்ளை லாபம் என்கிற பெருளாதார காரணம் தவிர வேறு எந்த காரணமும் இல்லை. அரசும் பன்னாட்டு கம்பெனிகளும் சொல்வது மட்டுமே உண்மை, அதை சந்தேகிக்கவோ எதிர்த்து கேள்வி கேட்கவோ எந்த உரிமையும் வாடிக்கையாளருக்கு அது அமெரிக்காவாக இருந்தாலும் சரி இந்தியாவாக இருந்தாலும் சரி இல்லை. ஓரளவுக்கு நுகர்வோர் நலன் சார்ந்த சட்டங்களும் நடைமுறைகளும் கொண்ட அமெரிக்காவிலேயே மான்சாண்டோ, வால்மார்ட் போன்ற பகாசூர நிறுவனங்கள் இந்தளவுக்கு சட்டாம் பிள்ளைத்தனமாக நடந்து கொள்ளுமென்றால் பன்னாட்டு மூலதனத்தின் காலில் விழுந்து கிடக்கும் இந்தியாவில் எப்படி நடந்து கொள்ளும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். சென்ற ஆண்டு இந்திய அரசு பி.டி கத்திரிக்காய், அதன் தீமை பற்றி பிரச்சாரம் செய்தால் ஓராண்டு சிறை, ஒரு லட்சம் அபராதம் என்று நாடாளுமன்றத்தில் மசோதா கொண்டுவந்தது. இதே அரசு வால்மார்ட்டை சில்லறை வணிகத்தில் அனுமதிக்க முடிவு செய்துள்ளது. மான்சாண்டோ, வால்மார்ட், இந்திய அரசு இவை ஒரே புள்ளியில் சந்திப்பது தற்செயலான ஒற்றுமை அல்ல என்று சொல்லவும் வேண்டுமா? நுகர்வோர் பாதுகாப்பு என்பது பன்னாட்டு கம்பெனிகளின் லாபத்திற்கான பாதுகாப்பு. அறிவியல் ஆய்வு முடிவுகள், அவை எந்த பன்னாட்டு கம்பெனியால் எந்த நலனுக்காக வெளியிடுகிறது என்பதை பொறுத்தே ஏற்றுக்கொள்ளப்படும். மக்கள் நலனுக்காக வெளியிடப்படும் ஆய்வுகள், ஆதாரங்கள் இனி செல்லாது! 34 இணையம் உருவாக்கியது: முதலாளிகளா, மக்களா? அப்துல் http://www.vinavu.com/2012/06/23/internet-belongs-to-us/   [இணையம்-2] இந்த பதிவை எப்படிப் படித்துக் கொண்டிருக்கிறீர்கள்? – இணைய இணைப்பு, வலை உலாவி (புரவுசர்) உங்கள் பக்கம் – இணைய வழங்கி (சர்வர்), வேர்ட் பிரஸ் மென்பொருள் வினவு தளம் இயங்குவதற்கு. – இந்தப் பதிவு பற்றிய விபரத்தை டுவிட்டர், பேஸ்புக், கூகுள் பிளஸ் அல்லது தமிழ்மணம் திரட்டியில் பார்த்து வந்திருக்கலாம் – கூகுள் தேடல் மூலமாக வந்து சேர்ந்திருக்கலாம். – இன்னும் சிலர் ஆர்எஸ்எஸ் ரீடர் மூலம் வந்து சேர்ந்திருக்கலாம். பதிவர் வலைப்பதிவை எழுதி வெளியிட, வாசகர்களுக்கு அது கொண்டு சேர்க்கப்பட, டுவிட்டரில் 140 எழுத்துகளுக்குள் எழுதப்படும் ஒரு செய்தியை மற்றவர்களுக்கு படிக்கத் தர உலகளாவிய ஒரு கட்டமைப்பு செயல்பட வேண்டியிருக்கிறது. இவற்றை எல்லாம் இயக்குவது யார்? ‘முதலாளித்துவத்தின் கொடைதான் இணையம், வலைப்பதிவுகள், சமூக வலைத்தளங்கள்’ என்பதில் எவ்வளவு உண்மை இருக்கிறது? 1970களில் அடித்தளமிடப்பட்ட இணையத்தில் ஆரம்பித்து கடந்த 5 ஆண்டுகளில் பிரபலமடைந்திருக்கும் சமூக வலைத்தளங்கள் வரை அனைத்தையும் சாத்தியமாக்குவதும் இயக்குவதும் உலகளாவிய பெருந்திரளான மக்கள்தான். – இணையம் எந்த ஒரு நிறுவனத்துக்கும், அரசாங்கத்துக்கும் சொந்தமானதில்லை. – இணையத்தில் தேடுதல் வசதி ஒற்றை நிறுவனத்தின் பணியினால் மட்டும் உருவானது இல்லை. – சமூக வலைத்தளங்களின் செயல்பாடு அவற்றில் பங்கு பெறும் பயனர்களால்தான் சாத்தியமாகின்றன. இணையத்தின் தகவல் தொடர்பு முறைமை இணையம் என்பது கணினி வலைப்பின்னல்களின் வலைப்பின்னல். இதில் எந்த ஒரு கணினி அல்லது கணினி வலைப்பின்னல் மையமானது இல்லை. ஒரு கணினி அல்லது கணினி வலைப்பின்னல் துண்டித்துக் கொண்டாலும் மீதி இருக்கும் பகுதிகள் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கும். இதுதான் இணையத்தின் அடிப்படை வடிவமைப்பு கோட்பாடு. போர்க்காலத்தில் நாட்டின் ஏதாவது ஒரு பகுதி பாதிக்கப்பட்டாலும், மற்ற பகுதிகள் தகவல் பரிமாற்றம் செய்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் 1970களில் உருவாக்கப்பட்டதுதான் இணையம். தொலைபேசி இணைப்புக்கும் இணைய இணைப்புக்கும் என்ன வேறுபாடு? சென்னையிலிருந்து ஒருவர் நியுயார்க்குக்கு ஐஎஸ்டி இணைப்பில் பேசினால், சென்னையில் இருக்கும் தொலைபேசியிலிருந்து அவரது தொலைபேசி இணைப்பகத்துக்கு கம்பி வழியாக சிக்னல் போகும், தொலைபேசி இணைப்பகத்திலிருந்து ஸ்விட்சுகள் மூலமாக அமெரிக்காவின் தொலைபேசி சேவை வழங்கும் அமைப்புக்கு செயற்கைக் கோள் அல்லது கடல் அடி கம்பி வழியாக இணைப்பு ஏற்படுத்தப்படும், அமெரிக்க தொலைபேசி சேவை நிறுவனத்தின் தொலைபேசி இணைப்பகத்திலிருந்து நியூயார்க் முனையில் இருக்கும் தொலைபேசிக்கு கம்பி வழியாக இணைப்பு இருக்கும். இப்படி சென்னையில் இருக்கும் வீட்டிலிருந்து நியூயார்க்கில் இருக்கும் வீடு வரை நேரடியான ஒன்றுக்கொன்றான இணைப்பு மூலம்தான் தொலைபேசியில் பேச முடிகிறது. இந்த இணைப்புகளில் ஏதாவது ஒரு இடத்தில் தடை ஏற்பட்டாலும் இணைப்பு உடைபட்டு சேவை செயலிழந்து போய் விடும். மாறாக, ஒருவர் சென்னையில் இருக்கும் தனது கணினியின் இணைய இணைப்பு மூலம் அமெரிக்காவில் இருக்கும் ஒரு இணைய தளத்துடன் தகவல் பரிமாறிக் கொள்கிறார் என்று வைத்துக் கொள்வோம். சென்னை பயனர், தனது இணைய சேவை நிறுவனத்தின் கணினி வலைப்பின்னலில் ஒரு பகுதியாக இணைந்திருப்பார். அந்த வலைப்பின்னல் உலகளாவிய இணையத்தில் இணைந்திருக்கும். கணினியில் இருந்து, அனுப்பப்படும் தகவல் சிறு சிறு பொதிகளாக (பேக்கட்டுகள்) பிரிக்கப்பட்டு, அனுப்பும் கணினி/பெறும் கணினி விபரங்கள் முகவரியாக இடப்பட்டு, அனுப்பப்படும். இதை Internet Protocol (IP) அல்லது இணைய முறைமை என்று அழைக்கிறார்கள். இந்த பொதிகள் அனைத்தும் ஒரே, நேரடி தடத்தில் அமெரிக்கா போய்ச் சேருவது இல்லை. ஒவ்வொரு பொதியும் நெரிசல் குறைவான தடங்களில் வலைப்பின்னல்களின் ஊடே பயணிக்கும். அத்தனை பொதிகளும் அமெரிக்க கணினிக்குப் போய்ச் சேர்ந்த பிறகு அவற்றை ஒன்று சேர்த்து அமெரிக்க கணினி தகவலை புரிந்து கொள்ளும். வழியில் ஏதாவது ஒரு தடம் உடைபட்டாலும் மாற்றுத் தடத்தில் பயணித்து இலக்கை அடைந்து விடுகின்றன பொதிகள். உதாரணமாக சென்னையிலிருந்து அமெரிக்கா செல்லும் தகவலின் சில பொதிகள் சிங்கப்பூர் வழி தடத்திலும் அதே தகவலின் இன்னும் சில பொதிகள் மும்பை வழியான தடத்திலும் பயணிப்பது சாத்தியம்தான். [இணையம்-1] இப்படியாக, உலக கணினி வலையமைப்புகள் அனைத்தும் கை கோர்த்து நிற்பதன் மூலம் உருவாவதுதான் இணையம். யாரும் அதிகார மையத்தில் உட்கார்ந்து கொண்டு இந்த போக்குவரத்தை நிர்வகிப்பது இல்லை. இணைய தளங்கள் செயல்பட்டுக்கான ஒருங்கிணைப்பு இணையத்தின் தொழில்நுட்பங்கள், தகவல் கொள்கைகள், பயன்பாடு இவற்றை தினசரி நிர்வாகம் செய்யும் உலகளாவிய அமைப்பு எதுவும் கிடையாது. அந்தந்த பகுதி கணினி வலையமைப்புகள் தமக்கான கொள்கைகளையும் தொழில்நுட்ப வரையறைகளையும் ஏற்படுத்திக் கொள்கின்றன. இன்டர்நெட் புரோட்டகால் முகவரி (ஐபி அட்ரஸ்) மற்றும் இணையதள பெயர் சேவை (டிஎன்எஸ்) இரண்டையும் மட்டும் நெறிப்படுத்த ஐகான் என்ற கூட்டமைப்பும், இன்டர்நெட் புரோட்டகால் (ஐபி) என்பதை தரப்படுத்த ஐஈடிஎப் (இணைய பொறியியல் செயற் குழு) குழுமமும் பல நாடுகளைச் சேர்ந்த உறுப்பினர்களைக் கொண்டு கூட்டுறவு முறையில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இணையதள முகவரி சொல்லும் சேவை பயனர் ஒருவர் தனது வலை உலாவியில் இணைய தளத்தின் முகவரியை அடித்ததும், இணைய தளத்துக்கான ஐபி முகவரி என்ன என்பதை தெரிவிப்பது அந்த உறவு பற்றிய விபரங்களை சேமித்து வைத்திருக்கும் டிஎன்எஸ் அமைப்பு. இன்ன இணையதளத்துக்கு (உதாரணம் : வினவு.காம்) இன்ன இணைய முகவரி எண் (உதாரணம் : xxx.xxx.xxx.xxx) என்ற உறவு அந்தந்த வகை இணைய தள முகவரிக்கான (.com, .net, .org முதலியன) மூல வழங்கிகளில் சேமிக்கப்பட்டிருக்கும். நாம் இணைய இணைப்பு சேவை பெறும் நிறுவனங்கள் (பிஎஸ்என்எல், ஏர்டெல் போன்றவை) இணைய தள முகவரி<-> இணைய எண் முகவரி உறவுக்கான தரவுத் தளத்தை மூல வழங்கிகளிலிருந்து பெற்று தாமும் சேமித்து வைத்து கொள்ளலாம். இது போன்று டிஎன்எஸ் தரவுத் தளங்களின் ஆயிரக்கணக்கான பிரதிகள் உலகெங்கிலும் பயன்பாட்டில் இருக்கின்றன. திறமையும் ஆர்வமும் இருந்தால் நீங்கள் கூட இலவசமாக சமூக உருவாக்கத்தில் கிடைக்கும் டிஎன்எஸ் மென்பொருளை உங்கள் கணினியில் நிறுவி இணையதள முகவரி விபரங்களை சேமித்து வைத்துக் கொள்ளலாம். ஒரு வேளை மூல வழங்கிகளின் சேவை தடைப்பட்டு போனாலும் இணையத்தின் மற்ற பகுதிகளில் இருக்கும் நகல்களைப் பயன்படுத்தி இணையம் தொடர்ந்து இயங்கும். [இணையம்-1] இணைய பக்கங்களின் தர வரிசை நிர்ணயம் வலை தேடுதலை எடுத்துக் கொள்வோம். 1990களின் பிற்பகுதிகளில் ஒரு இணைய பக்கத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள சொற்களை அடிப்படையாகக் கொண்டு அவற்றை வகைப்படுத்தும் தேடு எந்திரங்கள் செயல்பட ஆரம்பித்திருந்தன. அந்த காலத்தில் இணைய தளங்களை குறிப்பிட்ட வகைகளின் கீழ் அட்டவணைப்படுத்தி வைப்பதுதான் யாஹூவின் அணுகுமுறையாக இருந்தது. இணைய தளம் நடத்தும் ஒருவர் (வினவு) யாஹூவின் தேடல் சேவைக்குப் போய் தனது தளத்தை சமர்ப்பிக்க வேண்டும். தளத்தை எந்த குறிச்சொல்லின் கீழ் வகைப்படுத்த வேண்டும் என்றும் அவர் பரிந்துரைக்கலாம். அதை யாஹூ ஊழியர் ஒருவர் பரிசீலித்து, குறிப்பிட்ட தேடுசொல் எத்தனை முறை தளத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று மதிப்பிட்டு வினவு தளம் எந்த வகையின் கீழ் வரும் என்று முடிவு செய்து யாஹூ தரவுத் தளத்தில் சேர்த்து விடுவார். பயனர் ஒருவர் தேட வரும் போது, யாஹூவின் வகைப்பாடுகளை கிளிக்கிக் கொண்டே போய் தான் தேடும் வலைத்தளத்தைப் போய் அடையலாம்! ஆனால், இப்படி ஒரு வணிக நிறுவனமும், சில நூறு அல்லது சில ஆயிரம் ஊழியர்களும் சேர்ந்து வெகுவேகமாக வளர்ந்து வரும் வலைப் பக்கங்களை வகைப்படுத்தி தேடுபவர்களுக்கு கொண்டு சேர்க்க முடியாது என்பது சீக்கிரமே தெரிய வந்தது. இந்த சிக்கலான உலகளாவிய பணிக்கு உலகளாவிய சமூக உழைப்பை ஈடுபடுத்த வேண்டியிருந்தது. கலிபோர்னியாவின் ஸ்டேன்போர்டு பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டத்துக்கான ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த செர்ஜி ப்ரின், லேரி பேஜ் என்ற ஆராய்ச்சி மாணவர்கள் இணைய பக்கங்களை வரிசைப்படுத்தும் சமூக அடிப்படையிலான முயற்சியை ஆரம்பித்தனர். இணைய பக்கங்களின் வரிசை மதிப்பை அவை மற்ற இணைய பக்கங்களுடன் கொண்டிருக்கும் உறவின் அடிப்படையில் தீர்மானிக்கும் உத்தியை அவர்கள் பரிந்துரைத்தனர். ‘ஒவ்வொரு சொல்லுக்கும் பொருத்தமான இணைய பக்கங்களை திரட்டி அவற்றுக்கு தரவரிசை அளித்து அந்த சொல்லைத் தேடுபவர்களுக்கு தரவரிசையின்படி பக்கங்களை காட்டலாம்’ என்ற அடிப்படையில் தரவரிசையை நிர்ணயிப்பதற்கான விதிமுறைகளை வரையறுத்தார்கள். ஒரு இணைய பக்கத்தின் தரவரிசையை யார் நிர்ணயிப்பார்கள்? மற்ற இணைய தளங்களும், தேடும் பயனர்களும்தான். 1. ‘இணையம்’ என்ற குறிச்சொல் வினவு தளத்தின் ஒரு கட்டுரையில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று வைத்துக் கொள்வோம். ‘இணையம்’ என்ற குறிச்சொல்லுக்கு எதிராக அந்த கட்டுரையின் இணைய முகவரி (யுஆர்எல்) சேர்க்கப்பட்டு விடும். 2. மற்ற இணைய தளங்களிலிருந்து அந்த கட்டுரைக்கு எத்தனை இணைப்புகள் (லிங்குகள்) கொடுக்கப்பட்டுள்ளன என்பதைப் பொறுத்து அதன் தரவரிசை நிர்ணயிக்கப்படும். அதாவது, கட்டுரையின் தரவரிசை, அந்த கட்டுரையின் உள்ளடக்கத்தைப் பொறுத்து மட்டுமின்றி, மற்ற தளங்களிலிருந்து தரப்பட்டுள்ள இணைப்புகளையும் பொறுத்து உள்ளது. 3. அப்படி கொடுக்கப்பட்ட இணைப்புகளில் ‘இணையம்’ என்ற குறிச்சொலுக்கு எதிராக அதிக தரவரிசை மதிப்பீடு உடைய இணைய தளங்களிலிருந்து கொடுக்கப்படும் இணைப்புகள் அதிக மதிப்புடையனவாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். இத்தகைய அடிப்படையில் இணையத்தின் கோடிக்கணக்கான பக்கங்கள் வரிசைப்படுத்தப்பட்டு தரவு தளத்தில் சேமிக்கப்படுகின்றன. ‘இணையம்’ என்ற சொல்லை தேடுபவருக்கு தர வரிசையின்படி பக்கங்கள் காண்பிக்கப்படுகின்றன. 4. ‘இணையம்’ என்ற சொல்லை தேடிய பயனர் குறிப்பிட்ட பக்கத்தை கிளிக் செய்து போனால், அவருடைய தேர்வு அந்த பக்கத்துக்கு கூடுதல் மதிப்பெண்களை ஈட்டித் தரும். இது போன்று ஆயிரக்கணக்கான பயனர்கள் தமது தேர்வுகள் மூலம் பக்க வரிசைகளை மாற்றிக் கொண்டே இருக்கிறார்கள். அதாவது தேடுதல் முடிவுகளின் பக்க வரிசை, அ. பிற இணைய தளங்களிலிருந்து கொடுக்கப்படும் இணைப்புகளாலும் ஆ. தேடுதல் சேவையை பயன்படுத்தும் பயனர்களாலும் தீர்மானிக்கப்படுகின்றன. இணையமும், இணைய தளங்களை தேடி தேவையான விபரங்களை பெறும் முயற்சியும் உலகம் முழுவதும் பரந்திருக்கும் மக்களின் கூட்டு முயற்சியில்தான் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. இந்த தேடுதல் அமைப்புக்கான கட்டமைப்பை உருவாக்கி, இயக்கி, பராமரிக்கும் தேவையான பணியை வணிக நிறுவனங்கள் செய்கின்றன. ஆனால், பயனர்களும் இணையதள உருவாக்குனர்களும்தான் அது செயல்படுவதை சாத்தியமாக்குகிறார்கள். சமூகத்தின் கட்டமைப்பு முதலாளித்துவ அடிப்படையில் இருப்பதால் மட்டுமே முதலாளித்துவ நிறுவனங்கள் பராமரிப்புப் பணியில் ஈடுபடுகின்றன. கூகுளின் படங்கள் தேடும் சேவையை எடுத்துக் கொள்வோம். ஒரு புகைப்படம் அல்லது வரைபடத்தை எந்த குறிச்சொல்லுடன் இணைத்து வைப்பது? படத்தை தனது இணைய தளத்தில் இணைத்திருக்கும் நிறுவனம் அல்லது நபர் சில சொற்களை சேர்த்திருக்கலாம். ஆனால் அதை மட்டும் நம்பியிராமல் பரந்து பட்ட மக்களின் கணிப்பின் அடிப்படையில் படத் தேடலை உருவாக்க கூகுள் ‘பட குறிச்சொல்லிடுதல்‘ (இமேஜ் லேப்லர்) என்ற விளையாட்டை உருவாக்கியது. இரண்டு ஆட்டக் காரர்களுக்கு ஒரே படம் (சச்சின் டெண்டுல்கரின் புகைப்படம் என்று வைத்துக் கொள்வோம்) காண்பிக்கப்படும். அவர்கள் இருவரும் வேறு எந்த வழியிலும் தகவல் பரிமாறிக் கொள்ள முடியாது. ‘அந்தப் படம் எந்தெந்த சொற்களை (சச்சின், டெண்டுல்கர், கிரிக்கெட், இந்தியா) குறிக்கிறது என்று எதிராளி ஊகிப்பார்’ என்று இருவரும் ஊகிக்க வேண்டும். எதிராளி ஊகித்த அதே சொல்லை உள்ளிட்டால் புள்ளிகளை ஈட்டலாம். அடுத்த 5 ஆண்டுகளில் பல ஆயிரக் கணக்கானோர் இந்த விளையாட்டை விளையாடியதன் மூலம் இலட்சக்கணக்கான படங்களுக்கு பொருத்தமான தேடுதல் சொற்களை உருவாக்கிக் கொடுத்தார்கள். அதன் அடிப்படையில் மேம்படுத்தப்பட்டதுதான் கூகுளின் இன்றைய படத் தேடல் சேவை. சமூக வலைத்தளங்களின் பொருளாதார அடிப்படை பேஸ்புக், டுவிட்டர், கூகுள்+ போன்ற சமூக வலைத்தளங்களின் மதிப்பை உருவாக்குவது அவற்றைப் பயன்படுத்தும் பயனர்கள்தான். 1. கூகுள் நிறுவனம் வழங்கும் இணைய தேடுதல் சேவையின் முடிவுகள் காட்டப்படும் போது விளம்பரங்களும் தனியாக காட்டப்படுகின்றன. பயனர் ஒரு விளம்பரத்தைக் கிளிக் செய்து விளம்பரதாரரின் தளத்துக்குப் போனால் கூகுள் விளம்பரதாரரிடமிருந்து வருமானம் ஈட்டுகிறது. 2. இந்த விளம்பரதாரர்களை தேடிப் பிடித்து விற்கும் பணியைக் கூட கூகுள் நிறுவன ஊழியர்கள் செய்ய வேண்டியதில்லை. குறிப்பிட்ட தேடும் சொல்லுக்கு தமது விளம்பரத்தைக் காட்டுவதற்கு ஆயிரக்கணக்கான சிறு-நடுத்தர-பெரிய விளம்பரதாரர்கள் கூகுள் ஆட்வேர்ட்ஸ் மூலம் போட்டி போடுகிறார்கள். உதாரணமாக, ‘சென்னை வீடு வாடகைக்கு’ என்ற பதம் தேடப்படும் போது தனது விளம்பரம் காட்டப்பட ஒரு கிளிக்கிற்கு எவ்வளவு கட்டணம் தரத் தயார் என்று ஒருவர் தனது ஏலத் தொகையை சமர்ப்பிக்க வேண்டும். அதிக தொகை சொல்பவரின் விளம்பரம் முதலில் காட்டப்படும். 3. இந்த விளம்பரங்களை காட்டுவதற்கான களத்தை விரிவாக்க புதிய புதிய சேவைகளுக்கான தளங்களை உருவாக்குகிறது கூகுள். ‘இலவசமாக’ வலைப்பதிவுகள், வீடியோ சேவை, புகைப்படங்கள் சேவை போன்றவற்றை பயனர்களுக்கு வழங்குகிறது. ஒரு வலைப்பதிவில் எழுதப்பட்டிருக்கும் விஷயத்துக்குப் பொருத்தமான விளம்பரங்கள் (எழுப்பட்டிருக்கும் சொற்களின் அடிப்படையில்) அதன் பக்கங்களில் காட்டப்படுதற்கு விளம்பரதாரர்கள் போட்டி போடுவார்கள். அந்த விளம்பரங்களை கிளிக் செய்து போனால் அவர்கள் கூகுளுக்கு கட்டணம் செலுத்துகிறார்கள். அந்த வருமானத்தின் ஒரு பகுதியை வலைப்பதிவர்களுடன், வீடியோ உருவாக்குனர்களுடன் பகிர்ந்து கொள்கிறது கூகுள். இதற்காக ஆட்சென்ஸ் என்ற திட்டத்தை நடத்துகிறது. 4. ‘இலவசமாக’ வழங்கும் மின்னஞ்சல் சேவையில், பயனருக்கு வந்திருக்கும் மின்னஞ்சலை படித்துப் பார்க்கும் கூகுளின் மென்பொருள் மூலம் அதில் இருக்கும் சொற்களுக்குப் பொருத்தமான விளம்பரங்கள் ஆட்வேர்ட்ஸ் மூலம் காண்பிக்கப்படுகின்றன. கிளிக்குகளுக்கு வரும் வருமானம் முழுமையாக கூகுளுக்குப் போய்ச் சேருகிறது. [இணையம்-3] கூகுளின் இந்த வணிக மாதிரியின் இன்னும் விரிவான வெற்றிகரமான செயல்பாடுதான் பேஸ்புக். ‘நெய்க்கு தொன்னை ஆதாரமா, தொன்னைக்கு நெய் ஆதாரமா’ என்று தர்க்கம் செய்த மாணவன், ‘பேஸ்புக்குக்கு பயனர்கள் ஆதாரமா, பயனர்களுக்கு பேஸ்புக் ஆதாரமா’ என்று கேட்டிருந்தால் பயனர்கள் இல்லாமல் பேஸ்புக் இல்லை என்று அறுதியாக சொல்லியிருப்பான். மைதானத்தில் பெரிய பந்தல் போட்டு, ஊரெங்கும் நோட்டிஸ் ஒட்டி பிரபலமாக்குவதுதான் பேஸ்புக்கின் வேலை. கூட்டம் சேர சேர பந்தலை விரிவுபடுத்துவது, கூட்டத்தை ஒழுங்குபடுத்துவது இவைதான் தொடரும் அதன் பணிகள். கூட்டமாக சேர்ந்தவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளத்தான் வந்திருக்கிறார்கள். சிறு சிறு குழுக்களாக குழுமிக் கொள்கிறார்கள். ஒரு குழுவில் நடனம் நடக்கிறது, ஒரு குழுவினர் நாடகம் போடுகின்றனர், ஒருவர் பாட்டு பாடுகிறார், ஒருவர் உரையாற்றுகிறார், ஒருவர் சமையல் செய்கிறார், ஒருவர் குடிநீர் வழங்குகிறார். கூட்டத்தை நடத்துவது வந்திருக்கும் மக்கள்தான். அப்படி கூடும் மக்களுக்கு பொருட்களை விற்க கடை போட வருமாறு வணிகர்களை வரவழைத்து கட்டணம் வசூலித்து வருமானம் பார்ப்பதும் பேஸ்புக்கின் வேலைகளில் ஒன்று. பயனர்களின் புகைப்படங்கள், கருத்துரைகள், தொடர்புகள் அனைத்தும் பேஸ்புக்குக்கு பணம் சம்பாதித்துத் தரும் கறவை மாடுகள்தான். பேஸ்புக்கில் சேர்க்கப்படும் ஒவ்வொரு புகைப்படமும், அதில் எழுதப்படும் ஒவ்வொரு கருத்துரையும், அதில் தொடங்கப்படும் ஒவ்வொரு விவாதக் குழுவும், அதில் செயல்படுத்தப்படும் ஒவ்வொரு விளையாட்டும் பேஸ்புக்கின் விளம்பர சந்தையை விரிவாக்கி அதன் வருமானத்தை பெருக்குகின்றன. அந்த வருமானத்தில் ஒரு பகுதியின் மூலம் உருவாக்கப்பட்டு பராமரிக்கப்படுபவைதான் அதன் சேவைகள். இப்படி தான் பராமரிக்கும் சேவையை பயன்படுத்துகின்ற பயனர்களை பொதிந்து விற்று சம்பாதித்ததுதான் பேஸ்புக்கின் சென்ற ஆண்டு வருமானமான 1 பில்லியன் டாலர் (சுமார் 5,000 கோடி ரூபாய்). அந்த வருமானத்தின் அடிப்படையில் நடக்கும் பங்குச் சந்தை சூதாட்டம்தான் பேஸ்புக் பங்குகளை வெளியிடும்போது தீர்மானிக்கப்பட்ட அதன் மதிப்பான 100 பில்லியன் டாலர் (சுமார் 5 லட்சம் கோடி ரூபாய்). இணையமும் அதில் கிடைக்கும் ‘இலவச’ சேவைகளும் உலகம் முழுவதும் வசிக்கும் மக்கள் தமது சமூக உழைப்பால் உருவாக்கும் சாத்தியங்கள்தான். அதே போல நாம் பயன்படுத்தும் அனைத்து பொருட்களும் சேவைகளும் சமூக உழைப்பின் மூலமே நம்மை வந்தடைகின்றன என்பதை புரிந்து கொள்ள வேண்டும். - அப்துல் 35 THE RED MARKET: மனித உடல் உறுப்புகளின் சந்தை! http://www.vinavu.com/2012/04/30/the-red-market/   [Red Market] நல்ல உடல் வளத்துடன் இருக்கும் நான் ஒரு கோடி ரூபாய்க்கு விலை போவேன் என்கிறார் “The Red Market” புத்தகத்தின் ஆசிரியர் ஸ்கார்ட் கார்னி. அவர் அமெரிக்கக் குடிமகனாக இருப்பதால் தன் உடல் பாகங்களுக்கான உண்மையான சந்தை விலையைச் சொல்கிறார் போலும். ஒருவேளை அவரே இந்தியா மாதிரியான ஏழை நாடுகளில் வாழ்ந்தால் இதில் 100ல் ஒரு பங்கு விலைக்குக் கூட அவரது உடல் பாகங்கள் விற்காது என்ற உண்மையை அவர் எழுதியுள்ள புத்தகமான “The Red Market” ஐ படித்தால் எவராலும் எளிதாகப் புரிந்து கொள்ள முடியும். [The Red Market] உலக அளவில் இன்று உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக நடக்குமளவு மருத்துவத் துறை முன்னேறி இருக்கின்றது. ஆனால் உடல் உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை செய்ய மாற்று உறுப்புகள் வேண்டுமே? அது தான் இன்றைய விற்பனைப் பொருள். சந்தையில் பல பில்லியன்கள் இலாபம் தரும் நல்ல சரக்கு. உலகம் முழுவதும் மனித உறுப்புகளின் களவு, விற்பனை, மோசடி, குறிப்பாக மூன்றாம் உலக நாடுகளில் வாழும் ஏழை மக்களை ஏமாற்றி அவர்களுடைய உடல் பாகங்களைத் திருடும் இதயம் இல்லா பன்னாட்டு நிறுவன வியாபாரிகளைப் பற்றி விரிவாகப் பேசுகின்றது “”The Red Market” . மாற்று உறுப்புகளை யார் விற்பார்கள்? ஏழைகள் தான். ’அமெரிக்காவில் உள்ள ஒரு பணக்காரர் தன் பழுதடைந்த உறுப்புக்கு மாற்று வேண்டும் என்று விளம்பரம் செய்தால் அமெரிக்காவில் இருக்கும் ஒரு ஏழையிடம் இருந்தா அது கிடைத்து விடப் போகிறது? மிக எளிதாகவும், சட்டப்படியும் தெரியும் இந்த வியாபாரத்தின் “சிவப்புப் பக்கங்களை (இது உடல் உறுப்பு சார்ந்த ரத்தமும், தசையுமான கதை என்பதால் சிவப்புச் சந்தை என்று புத்தகத்திற்கு பெயரிடப்பட்டிருக்கிறது) தோலுரித்துக் காட்டுகிறார் அமெரிக்கப் பத்திரிகையாளாரான ஸ்கார்ட் கார்னி. உலகம் முழுவதும் பல பணக்கார நாடுகளின் உடற் தேவைகளை அதாவது ரத்தம் முதல் எலும்பு, தசை, கிட்னி, கண், பெண்ணின் கரு முட்டை, தலைமுடி வரை தேவைப்படும் அனைத்தையும் ஈடு செய்வது மூன்றாம் உலக நாடுகளின் மக்கள் தான், குறிப்பாக இந்தியா. அதோடு இலவசச் சேவையாக பல பன்னாட்டு மருந்து கம்பெனிகளுக்கு சோதனை எலிகளாகவும் இருக்கிறார்கள் இந்திய மக்கள். ஏன்? ’தேவைப்படுபவர் வாங்குகிறார், இருப்பவர் விற்கிறார்’ என்ற சராசரி சந்தைப் பொருளாக நம் உடல் உறுப்புக்களைப் பார்க்க முடியாது. உயிருக்குக் கொடுக்கப்படும் அதே மதிப்பு உடல் உறுப்புகளுக்கும் கொடுக்கப்படுகின்றது. ஒவ்வொரு நாட்டின் காகிதச் சட்டமும் இந்த உடல் உறுப்பு தானத்தை மிக உன்னதமாகக் கருதி, பாதுகாப்பாகவும், சட்டப்பூர்வமாகவும் தானம் செய்ய மக்களை அனுமதிக்கின்றது.   [உடல் உறுப்புகளின் உலக விலைப்பட்டியல் மற்றும் அதை பெறும் வழிமுறை] படத்தை பெரியதாக பார்க்க அதன் மீது அழுத்தவும் அல்லது ரைட் கிளிக் செய்து சேவ் செய்யவும் ஆனால் ஸ்கார்ட் கார்னி இந்தப் புத்தகத்தினூடே பல்வேறு நாடுகளுக்குப் பயணம் செய்து, அந்தந்த நாடுகளில் உடல் உறுப்பு சம்பந்தமான திருட்டு, விற்பனை, அதில் கொள்ளை இலாபம் பார்க்கும் ஏஜெண்டுகள், கண்டுகொள்ளாமல் விடும் அரசுகள் என சகல கருப்புப் பக்கங்களையும் போட்டு உடைக்கிறார். பணத்தின் முன் ஒரு ஏழையின் உடல் என்பது ரத்தமும் தசையுமான விற்பனைப் பண்டம். எப்படி? கொஞ்சம் இதயத்தைக் கடினப்படுத்திக் கொண்டு மேலே தொடருங்கள். நூலுக்கான டிரைலர் http://www.youtube.com/watch?feature=player_embedded&v=wSpmn6CfkV8 எலும்புத் தொழிற்சாலை: [திருப்பதி] அமெரிக்கப் பல்கலைக் கழகங்களில் மருத்துவம் பயிலத் தேவைப்படும் மனித எலும்பு மாதிரிகள் முழுக்கவும் இந்தியாவில் இருந்து அனுப்பப்படுகின்றன. இந்தியாவில் எலும்பு மாதிரிகள் ஏற்றுமதி செய்யும் நிறுவனம் அதை எப்படிச் செய்கின்றது? முதலில் கம்பெனியில் இருக்கும் 4 தொழிலாளிகள் நோட்டம் விட்டு தங்கள் ஊரைச் சுற்றியுள்ள சுடுகாடுகளில் பிணங்கள் வருகிறதா எனத் தெரிந்து கொள்வார்கள். புதைக்கப்பட்ட பிணம் என்றால் அப்படியே அலேக், எரிக்கப்படும் பிணம் என்றால் சொந்தக்காரர்கள் திரும்பிப் பார்க்காமல் சென்ற பின், வெட்டியானிடம் பேசி வைத்துப் பாதி எரியும் போதே தூக்கி விடுவார்கள். தூக்கிய பிணத்திலிருந்து பதப்படுத்தி எலும்புகளை மட்டும் எடுப்பார்கள். அந்த பதப்படுத்தும் முறை கொடூரமாக இருக்கும். பின்பு எலும்புகளை சுத்தமாக பாலிஷ் செய்து பேக்கிங் செய்து விடுவார்கள். ஆன்மாவுக்கு சொர்க்கமோ நரகமோ, அடுத்த பிறவியோ, என்ன கருமமோ, யாருக்குத் தெரியும்? உயிர் கடவுளுக்கு, உடல் அமெரிக்கப் பல்கலைக்கழகத்திற்கு. மேற்கு வங்க மாநிலத்தில் இருக்கும், புர்பஸ்தலி எனும் ஊரில் உள்ள “யங் ப்ரதர்ஸ் (Young Brothers)” என்ற ஏற்றுமதி நிறுவனத்தை நடத்தும் முக்தி பிஸ்வாஸுக்கு குடும்பத் தொழில் இது தான். அந்த யங் ப்ரதர்ஸ் நிறுவனம் என்பது ஒரு எலும்புத் தொழிற்சாலை. 150 ஆண்டு காலப் பாரம்பரியம் உடையது. கொள்ளுத் தாத்தாவுக்குத் தாத்தா காலத்தில் இருந்து இப்பொழுது முக்தி பிஸ்வாஸின் மகன் வரை செய்யும் ஒரே குடும்பத் தொழில். நல்ல இலாபம். அவர்களின் கம்பெனியில் இருப்பு வைக்கப்பட்டுள்ள எலும்புகளின் மதிப்பு மாத்திரம் 70,000 அமெரிக்க டாலர்கள். ஏன் அமெரிக்காவில் கிடைக்காத எலும்புகளா அல்லது அங்கு சாகாத மக்களா? என்று ஒரு கேள்வி எழும். நல்ல கேள்வி! முன்னர் அமெரிக்கா, இங்கிலாந்து முழுவதும் கூட பிணத்திருடிகள் (Grave Robbers) உண்டு. அவர்கள் பிணத்தைத் திருடிப் போனபிறகு அதனை மீட்க பிணைப்பணம் கேட்பார்கள். இது போல் சார்லி சாப்ளினின் பிணத்தையும் திருடி, அதனை மீட்ட கதையெல்லாம் கூட உண்டு. பின்பு அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் கடுமையான சட்டங்கள் வந்து விட்டன. அங்கு உடல் உறுப்பு சம்பந்தப்பட்ட வியாபாரம் என்றால் ’சட்டம் தன் கடமையைச் செய்யும்’! அமெரிக்காவில் தான் இந்தச் சட்டம் கடுமையானது, அதே அமெரிக்க அரசு இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளில் இருந்து வரும் மனித உறுப்புகளைக் கண்டுகொள்வதில்லை. ஒரு பக்கம், ’ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்குச் செய்யும் தொண்டு’ என்று சால்ஜாப்பு. இன்னொரு பக்கம், பணத்தின் மூலம் சட்டத்தை வளைத்து விடுவது. இந்த எலும்புத் தொழிற்சாலைகள் நேர்த்தியான கார்ப்பரேட்டுகளாக இயங்குகின்றன. [வாடகைத்தாய்கள்] மூன்றாம் உலக நாடுகள், குறிப்பாக இந்தியா போன்ற நாடுகளில் இருக்கும் இந்த உடல் உறுப்புச் சந்தையான சிவப்புச் சந்தை பல பில்லியன் டாலர்கள் புழங்குகின்ற ஒரு துறை. சட்டப்படி இதைச் செய்தால் அதிக செலவு பிடிக்கும். அப்படியே சட்டத்துக்குப் புறம்பாகச் செய்தால் நல்ல கமிஷன் கிடைக்கும். கிட்னி சந்தையைப் பார்ப்போம், அப்பொழுது புரியும். கிட்னிவாக்கம்: [கிட்னிவாக்கம்] சென்னை மணலிக்கு அருகில் இருக்கும், சுனாமியில் அடிபட்ட ஒரு குப்பத்தின் பெயர் கிட்னிவாக்கம். அங்கு கிட்னி விற்காதவர்கள் பிறந்த குழந்தைகள் மாத்திரம் தான். சுனாமி நகரில் வாழும் மக்கள் கடற்கரையோரம் வாழ்ந்து, சுனாமியால் வாழ்க்கையை இழந்து, அரசால் மறு-குடியமர்த்தப்பட்டவர்கள். இவர்களைப் பார்த்து புகைப்படம் எடுத்துக்கொண்டு, நலம் விசாரிக்க ஜப்பானின் ஜாக்கிசான் முதல் அமெரிக்காவின் மைக்கல் ஜாக்ஸன் வரை வருவார்கள், நடுநடுவே கிளின்டன், நம்ம ஊர் விஜயகாந்த் கூட வருவார். இத்தகைய மேன்மக்களுக்குக் காட்சிப் பொருளாக இருக்கும் இம்மக்களது வாழ்க்கை நிலைமை மிகவும் மோசம். கலா எனும் பெண்மணியின் கணவர் சுனாமியில் இறந்து விட்டார். அவர்களுடைய தொழிலும் போயிற்று. வரதட்சணை கொடுக்க முடியவில்வில்லை என்பதால் மகள் வாழாவெட்டியாகத் திரும்ப வந்து விட்டாள். அருகில் இருந்த சில கிட்னி ஏஜெண்டுகள் மூலம் தன் கிட்னியை விற்க கலா ஒப்புக்கொண்டார். 50 ஆயிரம் வரும்; பெண்ணுக்கு வரதட்சணை 30,000 போக, மீந்த பணத்தில் இட்லிக் கடை வைத்து சம்பாதித்து விடலாம் என்பது அவரது யோசனை. இப்பொழுது செய்யும் சித்தாள் வேலையை விட்டுவிடலாம். மதுரையில் ஆபரேஷன், முடிந்தவுடன் காசு. மதுரைக்குச் சென்றார் கலா, ஆபரேஷனில் ஏதோ சிறு தவறு. காயம் ஆற ஒரு மாதம் ஆகும் எனச் சொல்லிவிட்டார்கள், சரி பணம்? ஏஜெண்ட் கமிஷன் போக 40 ஆயிரம் ரூபாய் கைக்கு வந்தது. கிட்னி எடுக்கும் ஆபரேஷன் வரை தான் மருத்துவச் செலவு அவர்களுடையது, அதன் பின் கலா தான் பார்த்துக் கொள்ள வேண்டும். கலா அந்தத் தனியார் மருத்துவமனைக்குக் கட்டணம் கட்ட முடியாமல் மதுரை அரசு மருத்துவமனைக்குச் சென்றார். உடலைக் காப்பாற்ற 15 ஆயிரம் செலவானது. 25,000 வரதட்சணைக்குக் கொடுத்து விட்டார். ஆபரேஷனுக்குப் பின், முன் போல சித்தாள் வேலையும் பார்க்க முடியவில்லை. சரி காவல்துறையிடம் புகார் கொடுக்கலாம் என்று போனார். ஏட்டு சட்டத்தை எளிமையாக அவரிடம் எடுத்துச் சொல்லிவிட்டார். “இந்திய சட்டப்படி உங்கள் உடல் உறுப்பைத் தானம் தான் கொடுக்க வேண்டும், விற்பனை செய்தால் விற்றவர் கடுமையான தண்டனை பெற வேண்டும்”. [கிட்னிவாக்கம்] ஏழையால் வேலை செய்து வாழ முடியாத சமுக அவலம், அந்த சமுக அவலத்தைப் பணமாக்கிக் கொள்ளும் இன்னொரு அவலம். இந்த சமூக அவலத்தில் இந்தியாவில் கிட்னி திருட்டும் வியாபாரமும் தழைத்தோங்குகிறது. GDP சேர்த்தால் பல புள்ளிகள் அள்ளலாம். விவசாயிகள் முதல், நெசவாளிகள், மீனவர்கள், மலை வாழ் மக்கள் என பல இலட்சம் பேர் கிட்னி விற்பனை செய்து இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்குப் ’பங்காற்றுகின்றனர்’. இரத்த தானம்? [சுபாஷ்] மேலே பார்த்தோம் அல்லவா ? இந்திய சட்டப்படி இரத்த ‘தானம்’ தான் செய்ய வேண்டும் விற்கக் கூடாது. ஆனால் அப்படித் தானமாகப் பெறப்பட்ட இரத்தத்தை உடம்பில் ஏற்ற பணம் கொடுக்க வேண்டும். தனியார் மருத்துவமனைகளில் ஆபரேஷன் பில்லில் இதர செலவுகளுடன் உங்களுக்கு ஏற்றப்பட்ட ரத்தத்திற்கு கட்டணம் வசூலிக்கப்பட்டிருக்கும். இரத்தம் தானமாகக் கிடைத்திருந்தாலும் காசை வசூலித்து விடுவார்கள். அதாவது உடல் உறுப்புகள் கொடுப்பது இலவசம், ஆனால் அந்த உறுப்பைப் பொருத்த நீங்கள் பணம் கொடுக்க வேண்டும். இதில் முதலில் இலாபம் அடைபவர்கள் தனியார் மருத்துவமனைகள். அவர்கள் இன்று இந்த உறுப்புகளுக்கான சந்தையை ஊட்டி வளர்க்கிறார்கள். இதே உறுப்புகளுக்கு மாற்று உறுப்பைப் பெறுபவரிடம் பல இலட்சங்கள் வாங்கப்படுகிறது. கலாவிடமிருந்து எடுத்த கிட்னி இந்தியாவில் 4 இலட்சம், அமெரிக்காவிலோ 13 இலட்சத்திற்கு விலை போகும். இடையில் புழங்கிய பணம் மருத்துவமனை, ஏஜெண்டுகளின் பையில் அடைந்து கொள்ளும். இதில் ஏஜெண்டுகளாக பல மருத்துவர்களே உள்ளனர். அரசு மருத்துவமனைகள் முதல் தனியார் மருத்துவமனைகள் வரை கொள்ளை இலாபம் புரளும் தொழில் இது. இன்னொரு புறம் இரத்தத் தட்டுப்பாடு இருக்கும் இடங்களில் இரத்தம் கொடுக்க பணம் சட்டப்பூர்வமாகவே வசூல் செய்யலாம். நல்ல விஷயம் தான், ஆனால் அது என்ன விபரீதத்தைக் கொண்டு வந்தது தெரியுமா? கோரக்பூரில் ஒருவன் நான்கு பேரைக் கடத்தி வைத்துக்கொண்டு அவர்களைச் சங்கிலியால் கட்டிப் போட்டு விட்டு, அவர்களுடைய இரத்தத்தை எடுத்து விற்பனை செய்து கொண்டிருந்தான். பிடிபட்டவுடன் நல்ல வேளையாக அவன் இந்தியாவில் இருந்ததால் சட்டம் அவனைக் காப்பாற்றி விட்டது. என்ன ! பணம் கொஞ்சம் செலவாகியிருக்கும்! இந்தப் புத்தகம் முழுவதும் அதன் ஆசிரியர் ஸ்கார்ட் கார்னியின் உழைப்பை நாம் மதிக்கத் தக்கதாகவே உள்ளது, ஏதோ புத்தகம் எழுதுகிறோம் என்பதோடு நில்லாமல். நாடு நாடாக, பல ஊர்கள் சுற்றி உடல் உறுப்புகள் பற்றிய சந்தையைப் பற்றி தகவல்கள் திரட்டி நெற்றிப்பொட்டில் அடிப்பது போல் முன்வைக்கிறார். அவர் மிகச் சுருக்கமாகக் குறிப்பிடுவது “மூன்றாம் உலக நாடுகளின் உயிர்கள் எப்பொழுதும் மலிவானவை. இதுதான் காலனியச் சிந்தனை”. அதை நிரூபிக்கும் அனைத்து ஆதாரங்களையும் தன் புத்தகத்தில் அனைவருக்கும் எளிதாகப் புரியும் வண்ணம் விளக்கியுள்ளார். நாம் மேலே பார்த்ததெல்லாம் அக்கடலில் ஒரு துளிதான். [பாத்திமா] உடல் விற்பனை என்பது, குழந்தைகள் கடத்தல், பெண்கள் விற்பனை, பெண்களின் கரு முட்டை விற்பனை, இரத்தம், கிட்னி, இதயம் உள்ளிட்ட இதர உடல் உறுப்புக்கள், இறந்தவர்களின் தோல், எலும்பு, வாடகைத் தாய் முதல் நம்மூர் திருப்பதியில் இருந்து ஏற்றுமதி ஆகும் தலை முடி வரை எனப் புத்தகம் முழுவதும் அவரின் ஆய்வு விரவிக் கிடக்கின்றது. ஆமாம் திருப்பதியில் ஆண்கள் தலை முடி பேக்கரியில் பயன்படுத்தும் ஏதோ ஒரு ரசாயனப் பொருள் செய்யப் பயன்படுகிறதாம். பெண்களின் தலைமுடி பல பில்லியன் டாலர் புழங்கும் ‘விக்’ வணிகமாம். ஏலு கொண்டல வாடா! நீ எப்படி கோடீசுவரக் கடவுளாக இருக்கிறாய் என்பது இப்போதுதான் புரிகிறது. மனிதன் எனும் சோதனை எலி இதனுடன் இந்த புத்தகம் முடிவடையவில்லை. இதன் இன்னொரு பரிமாணம் என்பது மனித உடல்களைச் சோதனை எலிகளாகப் பயன்படுத்துவது எனும் ஆபத்து பற்றியது. நீங்கள் தமிழில் ஈ என்று படம் பார்த்திருக்கிறீர்களா? சரி அது வேண்டாம். அதன் மூல ஆங்கிலத் திரைப்படமான தெ கான்ஸ்டண்ட் கார்டனர் பார்த்திருக்கிறீர்களா? இந்தப் புத்தகத்தின் 8 ஆம் அத்தியாயம் அந்த அதிர்ச்சியான செய்தியைப் பற்றி தான் பேசுகிறது. பன்னாட்டு மருந்து நிறுவனங்களின் சோதனைக்கூடம் ஏழைகளின் உடல் தான். ஆப்ரிக்கா முதல் இந்தியா வரை வாழும் மூன்றாம் உலக, ஏழை நாடுகளின் மக்கள் தான் சோதனைச்சாலையின் எலிகள். நிறுவனம் புதிதாகத் தயாரிக்கும் மருந்தைச் சந்தைக்குக் கொண்டு வர, தரச் சான்றிதழ் பெற, அதற்கு முன்னரே சோதனை நிலையில் பலர் மேல் அம்மருந்து பிரயோகிக்கப்படுகிறது. கொடுமை என்னவென்றால் அது யார் மீது பிரயோகிக்கப்படுகிறதோ அம்மக்களுக்கே தெரிவதில்லை. [கோமதியின்-குழந்தை] இது ஏதோ ஒரு நிறுவனம், ஒரு நபர் சார்ந்த திருட்டு நடவடிக்கை அல்ல. சில நேரங்களில் அந்த நிறுவனங்கள் அந்த நாட்டின் சுகாதாரத் துறையையே விலைக்கு வாங்கி விடுகின்றன. இந்தக் குற்றம் ஒரு குறிப்பிட்ட அமைச்சரின் தனிப்பட்ட ஒழுக்க நெறி சம்பந்தப்பட்டதல்ல. அந்தந்த மருந்து நிறுவனங்களின் இலாப வெறியும், சந்தைப் போட்டியும் தான் இவற்றுக்கு அடிப்படை. பன்னாட்டு மருந்து கம்பெனிகள் இலாபம் ஒன்றை மாத்திரமே மையமாகக் கொண்டு இயங்கும் வைரஸ்கள், ஒன்றில்லை என்றால் இன்னொன்றைப் பிடித்துக் கொள்கின்றன. ஆனால் இது மனித வைரஸ். கொஞ்சம் புத்திசாலித்தனமானது. தனக்கான அரசையே கூட சில ஆப்பிரிக்க நாடுகளில் அது உருவாக்கி விடுகின்றது. பெரும்பான்மை மக்களின் மருத்துவம் போன்ற துறையில் தனியார் மயம் என்பது தெரிந்தே வைரஸை செலுத்திக் கொண்டது போன்றதுதான். எப்படி புற்றுநோயின் வளர்ச்சி மனிதனை அழிக்கின்றதோ அதே போல்தான் இந்தத் தனியார்மய வளர்ச்சியும் சமூகத்தை அழிக்கிறது. இது கண்ணுக்குப் பருண்மையாகத் தெரிகின்றது. நாம் தான் கண்ணை மூடிக்கொண்டு வளர்ச்சி வளர்ச்சி என்கிறோம். எது வளார்ச்சி என்று சரி பார்த்துக் கொள்வது நல்லது. யோசித்துப் பாருங்கள், நோய் குணமாகும் என்கிற நம்பிக்கையில் மருத்துவமனைக்குச் சென்று பணத்தை அள்ளி இறைத்த பின் ’நீங்கள் ஒரு சோதனை எலி, உங்கள் உடலில் ஒரு மருந்து சோதனைக்காகச் செலுத்தப்பட்டிருக்கிறது. அதனால் உயிர் இழந்தாலும் உங்கள் குடும்பத்தினருக்கு ஒன்றுமே தெரியாது’ என்ற அவல நிலையை? முதலாளித்துவம் மனிதனிடத்தில் இருக்கும் உணர்ச்சிகள் அனைத்தையும் பிடுங்கி ஒரு பண்டமாக மாற்றிவிடும் என்று மார்க்ஸ் சொன்னது எவ்வளவு உண்மை? ! படங்கள் : தி ஒயர்ட் மேகசின், ரெட்மார்கெட் ______________________________________________ - புதிய கலாச்சாரம், மார்ச் – 2012 __________________________________________________ 36 டர்பன் மாநாடு: ஆடுகள் மீது பழிபோடும் ஓநாய்கள்! www.vinavu.com/2012/02/17/durban-climate-change-conference/   [மனித குலத்தைப் பேரழிவில் தள்ளும் ஏகாதிபத்தியங்களின் நோக்கத்துக்கு ஏற்ப நடந்த பருவநிலை மாற்றம் குறித்த டர்பன் மாநாடு.] மனித குலத்தைப் பேரழிவில் தள்ளும் ஏகாதிபத்தியங்களின் நோக்கத்துக்கு ஏற்ப நடந்த பருவநிலை மாற்றம் குறித்த டர்பன் மாநாடு. தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகரில் நடந்த அனைத்துலக நாடுகளின் பருவநிலை மாற்றம் குறித்த மாநாடு, ஏகாதிபத்திய வல்லரசுகளின் நோக்கங்களுக்கு ஏற்ப ஒத்தூதிவிட்டு, வெற்று ஆரவாரத்துடன் முடிந்துள்ளது. அதிகரித்துவரும் புவியின் வெப்பம் மற்றும் பருவநிலை மாற்றம் ஆகியவற்றினால் விளையும் இயற்கைச் சேதங்களைத் தடுக்க வளி மண்டத்தில் பசுமைக்குடில் வாயுக்கள் எனப்படும் கரியமில வாயு, மீத்தேன் போன்றவற்றின் அளவைக் குறைக்க வேண்டும். இதற்காக உலக நாடுகள் 1992ஆம் ஆண்டில் பிரேசில் நாட்டின் தலைநகரான ரியோ டி ஜெனிரோவில் ஐ.நா.மன்றத்தின் சுற்றுச்சூழல் மாநாட்டில் ஒரு ஒப்பந்தத்தை உருவாக்கின. அதன் பிறகு, ஜப்பானில் உள்ள கியோட்டோ நகரில் நடந்த மாநாட்டுக்குப் பின்னர், இந்த ஒப்பந்தம் கியோட்டோ ஒப்பந்தம் என்ற பெயரில் நடைமுறைக்கு வந்தது. வெள்ளம், வறட்சி, அதிவேகப் புயல், கடுங்குளிர், நோய்கள் அதிகரித்தல் எனப் பல கேடுகளும் மனிதகுலப் பேரழிவுகளும் பெருகுவதற்குப் புவி வெப்பமடைதலே முதன்மைக் காரணமாகும். அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ரஷ்யா, ஜப்பான் ஆகிய ஏகாதிபத்திய வல்லரசுகளே பசுமைக்குடில் வாயு வெளியேற்றத்தை அதிகரித்துப் புவி வெப்பமடைதலைத் தீவிரமாக்கும் முதன்மைக் குற்றவாளிகள். 2012ஆம் ஆண்டுக்குள் பசுமைக்குடில் வாயு வெளியேற்றத்தைத் தொழில் வளர்ச்சியடைந்த மேலை நாடுகள் குறிப்பிட்ட அளவுக்குக் குறைக்க வேண்டும்; 2012க்குள் உலகின் வெப்பநிலையை 5 சதவீத அளவுக்குக் குறைக்க உலக நாடுகள் முன்வர வேண்டும் என கியோட்டோ ஒப்பந்தத்தின் மூலம் பெயரளவிலான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. கியோட்டோ ஒப்பந்தம் முடிவடைய இருக்கும் பின்னணியில், இதற்கான அடுத்தகட்ட நகர்வை முன்வைக்கும் நோக்கில் டர்பன் மாநாடு கடந்த ஆண்டில் நவம்பர் 28 முதல் டிசம்பர் 11ஆம் தேதிவரை 13 நாட்கள் நடந்தது. இம்மாநாட்டில் இறுதியாக்கப்பட்ட “மேம்பட்ட செயல்பாடுகளுக்கான டர்பன் மேடை” என்று அழைக்கப்படும் ஒப்பந்தம், கியோட்டோ மாநாட்டின் பெயரளவிலான கட்டுப்பாடுகளுக்கும் சமாதி கட்டியுள்ளது. கியோட்டோ ஒப்பந்தத்தில் ஏகாதிபத்தியங்கள் வெளியேற்றும் பசுமைக்குடில் வாயுப் பெருக்கத்தை ஓரளவு கட்டுப்படுத்தும் விதிகள் அறிவிக்கப்பட்டிருந்தன. அவற்றை நடைமுறைப்படுத்த ஏகாதிபத்தியங்கள் முன்வரவில்லை என்றாலும், இந்த விதிகள் ஏட்டளவிலாவது இருந்து வந்தன. தற்போதைய ஒப்பந்தத்தில் அதுவும் கைவிடப்பட்டுள்ளது. தொழில் வளர்ச்சியடைந்த அமெரிக்காவும், பின்தங்கிய நிலையிலுள்ள ஆப்பிரிக்க கண்டத்தின் ஏழை நாடும் ஒன்றுதான் என்றும், 194 உறுப்பு நாடுகளும் பசுமைவாயு வெளியேற்றம் பற்றிய கட்டுப்பாடுகளை ஏற்க வேண்டும் என்றும் தற்போதைய ஒப்பந்தம் அனைத்து நாடுகளையும் பொதுமைப்படுத்த முயற்சிக்கிறது. இதனால்தான், கியோட்டோ ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்த அமெரிக்கா, டர்பன் மாநாட்டு முடிவுகளை வரவேற்றுள்ளது. ஏழை நாடுகளும் வளரும் நாடுகளும் பசுமைக்குடில் வாயு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்தவில்லை என்று காரணம் காட்டி, ஏகாதிபத்திய நாடுகள் நாங்களும் கட்டுப்படுத்த மாட்டோம் என்று நியாயவாதம் பேசவும், மொத்தத்தில் எவ்வித வரைமுறையின்றி பசுமைக்குடில் வாயுவை வெளியேற்றிவிட்டு, புவி வெப்பமடைதலுக்கு நாங்கள் மட்டும் பொறுப்பல்ல என்று ஏழை நாடுகளையும் குற்றவாளியாக்கிப் பழியைப்போடும் ஏகாதிபத்தியங்களின் திட்டத்திற்கு ஏற்பவே இந்த மாநாடு நடந்துள்ளது. இதற்காக எல்லா ஏழை நாடுகளையும் ஒருங்கிணைத்து விவாதிக்கச் சொல்லி இம்முடிவை ஏற்க வைக்கும் தரகனாக ஐ.நா.மன்றம் செயல்பட்டுள்ளது. அமெரிக்கா போன்ற ஏகாதிபத்திய வல்லரசுகள், அவற்றின் கூட்டாளியாகவும் வட்டார மேலாதிக்க வல்லரசாகவும் உள்ள இந்தியா போன்ற வளரும் நாடுகள், தொழில் வளர்ச்சியில் பின்தங்கியுள்ள ஏழை நாடுகள் எனப் பொதுவில் உலக நாடுகள் மூன்று வகையாக உள்ளன. இந்தியா, சீனா, பிரேசில், தென்கொரியா முதலான நாடுகள் ஒப்பீட்டு ரீதியில் ஏழை நாடுகளை விடத் தொழில் வளர்ச்சி பெற்றுள்ள நாடுகள். ஏகாதிபத்திய நாடுகளைப் போலவே இந்நாடுகளிலும் பசுமைக் குடில் வாயு வெளியேற்றம் அதிகரித்து வருகிறது. ஏகாதிபத்திய நாடுகளின் தேவைக்காகவும் நுகர்வுக்காகவும் இத்தகைய நாடுகளில் ‘தொழில் வளர்ச்சி’ என்ற பெயரில் ஏற்றுமதி அடிப்படையிலான தொழில்கள் தொடங்கப்படுகின்றன. ஏகாதிபத்திய நாடுகளோ சுற்றுச்சூழலை நஞ்சாக்கும் முதலாளித்துவ இலாபவெறி கொண்ட உற்பத்தியைக் கொண்டவை. அதே பாதையைப் பின்பற்றும் இந்நாடுகள், இதனை ‘வளர்ச்சிக்கான பாதை’ என்கின்றன. ‘வளர்ச்சி’ என்ற பெயரில் இயற்கையை நாசமாக்கிப் பேரழிவுகளை விளைவித்து வரும் முதலாளித்துவ உற்பத்தி முறையை இந்தியா போன்ற வளரும் நாடுகள் எதிர்ப்பதுமில்லை. ஏகாதிபத்தியங்கள் மீது கட்டுப்பாடுகளை விதிக்க உருப்படியாக எந்த முயற்சியும் எடுப்பதுமில்லை. இந்தியா போன்ற ஒப்பீட்டு ரீதியில் தொழில் வளர்ச்சியடைந்துள்ள நாடுகளின் ஆளும் வர்க்கமான தரகுப் பெருமுதலாளிகள் ஏகாதிபத்தியங்களுடன் கூட்டுச் சேர்ந்து ஆதாயமடைவதோடு, விரிவடையவும் முயற்சிக்கின்றனர். மறுபுறம், பசுமைக்குடில் வாயு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்தக் கூடுதலாகச் செலவிட வேண்டும் என்பதால், அவற்றைச் செயல்படுத்த மறுக்கின்றனர். தரகுப் பெருமுதலாளிகளின் வர்க்க நலன்தான் இந்திய அரசின் நலனாக உள்ளது. இதற்கேற்ப மற்ற ஏழை நாடுகளைத் தம் பின்னே திரட்டிக் கொண்டும் தம் மீது கட்டுப்பாடுகளை விதிப்பதை இந்தியா எதிர்க்கிறது. இதற்காகவே வெற்று ஏகாதிபத்திய எதிர்ப்புச் சவடாலடிக்கிறது. “எங்கள் நாட்டின் கோடிக்கணக்கான மக்களின் வாழ்வைப் பணயம் வைக்கச் சொல்கிறீர்களா? எங்களைப் பிணைக்கைதியாக்காதீர்கள்” என்று டர்பன் மாநாட்டில் இந்தியச் சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெயந்தி நடராசன் ஆவேசமாகப் பேசியதாக ஊடகங்கள் பரபரப்பாக செய்தி வெளியிட்டன. இப்படியெல்லாம் சவடால் அடித்த அவர், ஏழை நாடுகளுக்கும் பணக்கார நாடுகளுக்குமிடையிலான வேறுபாட்டை மறைத்துச் சுற்றுச்சூழல் தொடர்பாக மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கான பொறுப்பு அனைத்து நாடுகளுக்கும் சமமானதே என்றார். ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் திட்டத்தை ஏற்க மறுப்பது போல முறுக்கிக் கொண்ட அவர், பின்னர் எப்படியாவது மாநாட்டை வெற்றிபெறச் செய்ய சமரசம் காண்பது என்ற பெயரில், ஏகாதிபத்தியங்கள் முன்வைத்த துரோகத் திட்டத்தை இந்திய ஆளும் வர்க்கங்களின் நலனுக்கேற்ப ஏற்றுக் கொண்டுள்ளார். ஏழை நாடுகள் அல்லது ஒப்பீட்டு ரீதியில் தொழில் வளர்ச்சி அடைந்துள்ள நாடுகள் முதலானவற்றில் முதலீடு செய்து ஆலைகளைத் தொடங்கி அவற்றுக்குச் சொந்தம் கொண்டாடும் ஏகாதிபத்தியங்கள், அந்த ஆலைகள் வெளியேற்றும் நச்சுக் கழிவுகளுக்குப் பொறுப்பேற்பதில்லை. இதற்கு ஆலை அமைந்துள்ள நாடும் மக்களும்தான் பொறுப்பேற்க வேண்டும் என்கின்றன. இந்த அநீதியை எதிர்த்துப் போராடுவதற்குப் பதிலாக, ஏகாதிபத்தியங்களின் கூட்டுக் களவாணிகளாக உள்ள இந்தியா, சீனா, பிரேசில் முதலான நாடுகள் ஒருபுறம் ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பதாகச் சவடால் அடித்துக்கொண்டும், மறுபுறம் ஏகாதிபத்தியங்களின் திட்டங்களுக்கு ஏற்பச் சமரசமாகச் சென்று துரோகமிழைத்தும் வருகின்றன. இந்த உண்மையை டர்பன் மாநாடு மீண்டும் நிரூபித்துக் காட்டியுள்ளது. சுற்றுச்சூழலும் உயிரியல் சூழலும் நஞ்சாவதற்கு இலாபவெறியும் போர்வெறியும் கொண்ட ஏகாதிபத்திய உற்பத்திமுறை எனும் பேரழிவுப்பாதையே முதன்மைக் காரணம். சுற்றுச்சூழலை நஞ்சாக்கிவரும் முதன்மைக் குற்றவாளிகளான ஏகாதிபத்தியங்களை மட்டுமின்றி, அவற்றின் கூட்டுக் களவாணிகளாக உள்ள இந்தியா போன்ற வளரும் நாடுகளின் துரோகத்தையும் அம்பலப்படுத்தி முறியடிக்க, அனைத்துலக மக்களும் அணிதிரண்டு போராடுவதே இன்றைய முக்கிய கடமையாகியுள்ளது. ஏகாதிபத்திய உற்பத்திமுறைக்கு எதிரான, மக்கள் நலனையும் சுயசார்பையும் அடிப்படையாகக் கொண்ட தேசிய உற்பத்திமுறையை நிறுவி வளர்க்காத வரை, ஏழை நாடுகள் மீது ஏகாதிபத்தியங்கள் போடும் பழியையும், சுற்றுச்சூழல் பாதிப்பின் கோரமான விளைவுகளையும் தடுத்து நிறுத்தவே முடியாது. _______________________________________________ - புதிய ஜனநாயகம், பிப்ரவரி-2012 _______________________________________________ 37 ஐ.ஐ.டி பொலிகாளைகளும் ‘மலட்டு’ச் சமூகமும்! குட்டக்கொழப்பி http://www.vinavu.com/2012/02/06/iit-sperm-wanted/   [iit-sperm-wanted] சென்னையச் சேர்ந்த தம்பதியினர் தாங்கள் குழந்தை பெற்றுக்கொள்ள செயற்கைக் கருவுறும் முறைக்குச் செல்லவிருப்பதால், தகுதியுள்ள விந்தணு தானம் செய்பவரைத் தேடி வருவதாக ஊடகங்களில் விளம்பரப்படுத்தியுள்ளனர். தகுதியான என்றால்………? ஆரோக்கியமான, புகை மற்றும் இதர கெட்டப் பழக்கங்கள் இல்லாத முடிந்தால் அழகான, வெள்ளையான, உயரமான ஐ.ஐ.டி மாணவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம் போன்ற நிபந்தனைகளைகளை விதித்துள்ளனர். விரைவிலேயே இச்செயற்கைக் கருவுறுதலை செய்யவிருப்பதால், அன்பும் செழிப்பும் பொங்கித் ததும்பவிருக்கும் தங்களது வாழ்க்கையைத் தொடங்க அவசரமாக விந்தணு தானம் தேவை என்றும் கூறியுள்ளனர். (மதிப்பெண்கள் (CGPA) மற்றும் வேலைக்குச் செல்லும் நிறுவனத்தையும் நிபந்தனையாக வைக்க மறந்து விட்டனரோ). இதற்காக தானம் செய்யும் அனைத்து அம்சங்களும் பொருந்திய ஐ.ஐ.டி பொலிகாளைக்கு 20,000 ரூபாய் தரவிருப்பதாகவும் விலை நிர்ணயித்துள்ளனர். படிப்பதற்கு நாராசமாக இருந்தாலும், இது போன்ற விஷயங்கள் சமூகத்தின் பிற தளங்களிலும் பிரதிபலிக்கின்ற காரணத்தால், அது விளைவிக்கவிருக்கும் அபாயத்தையும் இங்கு பரிசிலிக்க வேண்டியுள்ளது. உதாரணத்திற்கு குழந்தையில்லாத் தம்பதியினர் ஒரு குழந்தையைத் தத்தெடுக்கும் போது கூட பல நிகழ்ச்சி நிரல்களை அல்லது பிற்போக்குத்தனங்களை மனதில் நிறுத்தியே தங்கள் கோரிக்கையை அமல்படுத்துவதற்கு உடன்படுகின்றனர். தத்தெடுப்பதற்கு அவர்களின் சொந்த சாதியிலேயே பிறந்த குழந்தை அல்லது சமூகக் கட்டுமானத்தில் அவர்களுக்கு மேலிருக்கிற சாதியில் பிறந்த குழந்தை, நோய் நொடியில்லாமல் அங்க பாதிப்பெதுவும் இல்லாத குழந்தை போன்றவையே பிரதான கோரிக்கையாயிருக்கின்றன. குறிப்பாக இவர்கள் வைக்கிற முக்கியமான நிபந்தனைகள், தத்தெடுக்கப்படும் குழந்தைகள் கண்டிப்பாக தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள், பிச்சைக்காரர்கள் அல்லது தெருவோரங்களில் வசிப்பவர்களுடையதாக இருக்கக் கூடாது என்பதே, இதற்கு அவர்கள் வைக்கிற வாதம் அக்குழந்தைகளைத் தத்தெடுத்து தத்தம் குடும்பச் சூழ்நிலைகளில் வளர்த்தால் கூட அது தனது இரத்த உறவின் சாதிய குணநலன்களையே கொண்டிருக்கும் என்பதே. ஆக சாதியின், வர்க்கத்தின் மேல்நிலையில் உள்ளவர்களே அதிக அறிவைக் கொண்டவர்களாகவும், ஒழுக்கச் சீலர்களாகவும் இவர்களால் முன்னிறுத்தப்படுகிறது. மேலும் இவர்கள் பெண் குழந்தைகளை தத்தெடுப்பதையே வழக்கமாகக் கொள்கின்றனர். இது தத்தெடுத்தவர்கள் இறுதிக் காலங்களில் ஆண் குழந்தைகளை அண்டி வாழ வேண்டிய நிர்பந்தம் வந்துவிடும் என்ற பயத்தினாலும், பெண் என்றால் கல்யாணம் ஆனவுடன் சென்றுவிடுவார்கள், சட்டப்படி சொத்துரிமை கேட்க மாட்டார்கள் என்ற எண்ணத்தினாலும் விளைந்ததே. ஆக எக்காலத்திலும் சொந்தக் குழந்தையானாலும், தன் பொருளாதார, சாதி நலன் சார்ந்தே முடிவெடுக்கிறார்கள். சீரழிந்து வருகிற ஒரு சமூகம் தான் விரும்பும் வாழ்க்கைக்கான விழுமியங்களை எத்தகைய விலை கொடுத்தேனும் தக்கவைத்துக் கொள்ளத் தயங்காது என்பதற்கான ஆதாரமே இது. இதற்குச் சற்றேதும் குறைவில்லாத விழுமியங்களுடன் கொண்ட விளம்பரத்தைத்தான் அத்தம்பதியினரும் கொடுத்துள்ளனர். மேற்கொண்டு இச்செய்தியை அறிவியல் கொண்டு பார்த்தால்………… விளம்பரத்தில் கோரியுள்ளபடியே அத்தம்பதியினர் தாங்கள் விரும்பிய ஐ.ஐ.டி பொலிகாளைகளின் விந்தைப் பெற்று, செயற்கை முறையில் கருவுறுதல் மூலம் குழந்தை பிறந்தால் கூட அக்குழந்தை வளர்ந்து அதன் இலக்கை அடைய முடியுமா என்பது நிச்சயமற்றது. ஏனெனில் சிந்தனை, செயல் மற்றும் வாழ்வு போன்றவை அவரவர் வாழும் புறச்சூழலைப் பொருத்தே அமையும். அதன் தாக்கமே ஒருவர் பகத்சிங்காக மாறுகிறாரா அல்லது எட்டப்பனாக மாறுகிறாரா என்பதை முடிவு செய்யும். அது ஒவ்வொருவரும் தாங்கி நிற்கும் மரபணுக்களைப் பொருத்து அமைய எள்ளளவும் வாய்ப்பில்லை. மரபணுக்கள் மூதாதையரின் உடல் கூறுகளின் தன்மைகளான நிறம், கண்ணின் கருவிழி, உடலின் வாகு போன்றவற்றைத் தான் கடத்தும். அன்றி, கருத்து, சிந்தனைக் கூறுகளை அல்ல. ஆகையால் அது அப்துல் கலாம் விந்தணுவாக இருந்தால் கூட பிறக்கும் குழந்தை அவரைப் போன்று காமடி அறிவாளியாகப் பிறக்கும் என்பது அறிவீனம். இருந்தும் தற்போது நிலவுகிற சமனற்றச் சமூகத்தில் பெருஞ்சுயநலமிக்க பெற்றோர்களின் வளர்ப்பாலும், அவர்களால் ஊட்டப்படுகின்ற சமூகத்தைப் பற்றிய கருத்தோட்டங்களாலும் வளர்ந்து வருபவன் சுயநலம் மிகுந்த பிழைப்புவாதியாக மாறவே வாய்ப்புள்ளது. அரிதும் அரிதான வாய்ப்புகளில் மட்டுமே இவர்கள் சமூகப் பிரக்ஞையுள்ளவர்களாக மாற இயலும். இதுவும் அத்தகைய அரசியல், தொடர்பு, இயக்கங்கள், மூலமே சாத்தியம். ஆக பிறக்கப் போகும் குழந்தையின் திறனை விந்தணுக்களின் மூலம் நிர்ணயிப்பதென்பது அறிவீனம். ஐ.ஐடி மாணவர்கள் மட்டுமே வேண்டும் என்பது, அவர்கள் நன்றாகப் படிக்க கூடிய நல் விழுமியங்களைக் கொண்டுள்ளவர்கள் என்பதைத் தாண்டி பெரும்பாலானவர்கள் பார்ப்பன சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதாலும் இப்படி மறைமுகமாக விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது. இது சைவ உணவுப்பழக்கம் உள்ளவர்களுக்கு மட்டுமே வீடு வாடகைக்கு விடப்படும் என்ற பார்ப்பன மேட்டிமைத்தனமின்றி வேறல்ல. தங்கள் பேச்சு முதல் நடை, உடை, பாவனை, உணவுப்பழக்கம், சாங்கியம் பார்த்தல் வரை அனைத்தையும் பார்ப்பனர்களைப் போலவே (இன்னும் சொல்லப் போனால் அவர்களை விட ஒரு படி மேலே) செய்து கொண்டிருக்கும் பெரும்பான்மையான நடுத்தர வர்க்கப் பெற்றோர்களின் சிந்தனைச் சொரிதலால் வந்த குழந்தையே இது போன்ற விந்து விருப்பம். ஐ.ஐ.டியனர் ஏதோ இயற்கையிலேயே அறிவுச் செழிப்புடன் பிறந்தவர்கள் போலவும் மற்றவர்கள் இவையெதுவும் இல்லாததால்தான் மற்ற கல்லூரிகளில் படிப்பதாகவுமான ஒர் கருத்து இவ்விளம்பரத்தின் மூலம் பிதுங்கி வருவதைக் காணலாம். நடுத்தர, மேல்தட்டு வர்க்கப் பெற்றோர்கள் குறிப்பாக பார்ப்பன பனியா சாதிகளைச் சேர்ந்தவர்கள் சிறுவயதில் இருந்தே தங்கள் குழந்தைகளுக்கு ஐ.ஐ.டி கனவுகளை ஊட்டி அதற்குத் தேவையான பாடங்களை எந்திரகதியில் மனதில் உருவேற்றிவிடுகிறனர். மாணவர்களுக்கோ சிறு வயது முதல் வாழ்வின் அத்துனை அம்சங்களையும் இழந்தாலும் ஐ.ஐ.டி ஒன்றே வாழ்க்கை போன்ற என்ணங்கள் மனதில் பதிய வைக்கப்படுகிறது. தேர்வுகளில் தான் விழுங்கியதைத் துப்பும் வேலையை கச்சிதமாகச் செய்வதால் இடமும் கிடைத்துவிடுகிறது. இதில் அறிவிற்கு என்ன வேலை? பின்தங்கிய சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகள் இது போன்று சிறு வயதில் இருந்தே பயிற்சியெடுக்க வாய்ப்பில்லாமல் போவதாலும் இங்கு இடஒதுக்கீடு இல்லாதபடியாலும் அவர்கள் இங்கு சேர்வதைப் பற்றி யோசிப்பதில்லை. ஆக தான் வாழும் சமூகம் சமூகத்தில் காணப்படுகிற ஏற்றத்தாழ்வுகள் போன்ற எதையும் பார்க்காத/பார்க்க விரும்பாத இவர்களின் குருட்டுக் கண்களுக்கு பணத்தின் இருப்பு மற்றும் அதன் மீதான அதீத காதல் மட்டுமே தேவை என்பதாக கற்பிக்கப்படுகின்றன. குழந்தைகளும் பிற்காலத்தில் அதுவாகவே ஆகின்றனர். எனவே இங்கு சேர்வதற்கான தகுதி திறமை எல்லாம் சாதி வர்க்க ரீதியில் அமைந்தது என்பதையும் கணக்கிலெடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது. அதனால் தான் நன்றாகச் சம்பாதிக்கப் கூடிய, சந்தையில் அதிக விலைபோகும் ஐ.ஐ.டி பொலிகாளைகளை இவ்விளம்பரம் கோருகிறது. இந்த ‘அறிவுஜீவி’களின் யோக்கியதையை, இச்சமூகத்தில் குறைந்த பட்சம் தனது இருத்தலுக்கான போராட்டத்தைக் கூட செய்ய லாயக்கற்ற குப்பைத் தொட்டிகளாக விளங்குவதன் மூலம் காணலாம். தன் கூடப் படித்த சக மாணவன் தற்கொலை செய்து கொள்வதைப் பார்த்து கண்டும் காணாமல் வாய் மூடி ஊமைகளாய் இருக்கும் மாணவர் சமூகத்தை படைப்பதுதான் இந்த ஐ.ஐ.டிக்கள். சமீப காலங்களில் ஐ.ஐ.டிக்களில் நடைபெற்ற மாணவர்களின் தற்கொலைகளும், சென்ற மாதம் இந்திய அறிவியல் கழகத்தில் (IISC- Bangalore) மன உளைச்சல் மற்றும் தனிமை காரணமாக தற்கொலை செய்து கொண்ட பராக் சதாலே என்ற பேராசிரியரைப் பற்றியும் இங்கு குறிப்பிட வேண்டியுள்ளது. அதீத மன உளைச்சல், தனிமை என்றால் சாவு ஒன்றுதான் தீர்வு போல, குறைந்தபட்சம் அதை எதிர்த்துப் போராடக்கூட வக்கில்லாமல் தங்கள் வாழ்வை முடித்துக்கொள்கின்றனர். இவர்கள் இச்சமூகத்தின், இக்கல்விமுறையின் பலிகடாக்கள், அதன் நேரடித் தோல்வியால் ஏற்பட்ட விளைபொருட்கள், ஒட்டுமொத்த வினைகளின் எதிர்வினைகள். [டிசைனர்-பேபி] இது போன்ற விளம்பரங்கள் நமக்கு அதிர்ச்சியூட்டுவனவாக இருந்தாலும் இவ்வகையறா விளம்பரங்கள் மேலை நாடுகளில் பரவலாகக் காணமுடியும். அங்கு அதற்கான ஆராய்ச்சிகளும் நடந்து கொண்டுதான் வருகின்றன. டிசைனர் விந்தணு, டிசைனர் பேபி போன்ற மாய்மால வார்த்தைகள் அங்கு பிரபலம். பிறக்கப் போகும் உங்களுக்கான குழந்தைகளை உங்கள் விருப்பப்படி டிசைன் செய்து கொள்ள வேண்டுமா? நல்ல அறிவுடன், பச்சை நிறக்கண்களுடன், அழகான முடியுடன், பளிச்சென்ற நிறத்துடன், உயரமாக வேண்டுமா ! இது போன்ற சொற்களைத் தாங்கிய விளம்பரங்களும் சர்வ சாதாரணமே. ஆனால் நமக்கு இது போன்ற விளம்பரங்கள் வருவது புதியதாயினும் இலை மறை காயாக அத்தகைய விழுமியங்கள் நம் சமூகத்தில் காலங்காலமாகவே இருந்து வருகின்றன. வெகு நாட்கள் மூடியுள்ள முகத்திரையால் பயனேதும் இல்லை என்பதால் தனது போலி முகத்தை கிழித்தெரிந்துள்ளது அவ்வளவே! தன்னை அடையாளப்படுத்துவதன் மூலம் மக்களின் பொதுப்புத்தியினூடாக இது போன்ற செயல்கள் தவறானதல்ல என்றும், அது தனிமனிதர் விருப்பு வெறுப்பைச் சார்ந்தது என்றும் நிலைநிறுத்தப்படுகிறது. ஏற்கனவே பல ஏற்றத்தாழ்வுள்ள, அசமத்துவப் படிநிலைகளைக் கொண்ட இச்சமூகம் இது போன்ற வீரியமிக்க ஒட்டுரக டிசைனர் குழந்தைகளை உருவாக்கும் பட்சத்தில் (உயிரித் தொழில் நுட்பம் மூலமாக சாத்தியமே என்கிறார்கள் அறிஞர்கள்) அது இச்சமூகத்தில் தனக்கான முரண்பாடுகளை அதிகமாக ஏற்படுத்திக்கொள்ளுமே ஒழிய அதனால் வேறெதுவும் பயனில்லை. இது போன்ற டிசைனர் குழந்தைகள் சமூக, பொருளாதார மற்றும் அறிவுத்தளங்களில் தங்களை உயர்ந்தவர்களாகக் காட்டிக்கொண்டு அசமத்துவத்தின் புதிய படிநிலையில் விட்டு விடும் அபாயமும் உள்ளது. ஆனால் இங்கு விந்தை தானமாகக் கொடுப்பவரின் பின்புலம் பற்றி அறிய சட்டம் இடம் கொடுக்காது என்ற போதிலும் நிலவுகின்ற சட்டத்தின் ஓட்டைகளின் மூலம் தாங்கள் விரும்பும் டிசைனர் விந்துவைப் பெற சாத்தியம் இருக்கவே செய்கிறது. டிசைனர் குழந்தைகள் தங்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற முடியாத பட்சத்தில் அப்பெற்றோர்களால், குழந்தைகள் முற்றிலும் நிராகரிக்கப்படுவதற்கான முகாந்திரங்களும் உள்ளது. மரபணு தொழில்நுட்பம் (Genetic Engineering) இல்லாமல் இயற்கையாகவே டிசைனர் விந்துக்களைக் கொண்டுள்ளதாகக் கற்பிக்கப்படும் பார்ப்பன ஐ.ஐ.டியினர், பொலிகாளைகளாக மாறும்பட்சத்தில், வீரியமற்ற இம்’மலட்டு’ச்சமூகம் மேலும் மலடாகி போகுமே அன்றி அறிவார்ந்த சமூகமாக மலர முடியாது. அறிவும், திறனும், சமூக பிரக்ஞையும் சமூக நடைமுறைகளில்தான் மலருமே அன்றி டிசைனர் விந்துவால் உருவாக்க இயலாது. உடல் ஆரோக்கியத்தின் மேம்பட்ட தன்மையை வேண்டுமானால் டிசைனர் விந்து கொண்டு வரலாம். ஆனால் சமூக ஆரோக்கியத்தை இது வழங்கி விடாது. மூதாதையரின் உடற்கூறுகளைத்தான் மரபணு தாங்கி வருகிறதே அன்றி அவர்களின் சமூக வரலாற்று உணர்வை அல்ல. அது வர்க்கப் போராட்டம் எனும் உலைக்களத்தில் வடிக்கப்படும் ஒன்று. - குட்டக்கொழப்பி 38 அறிவியலின் நெற்றியடி! பைபிளின் மோசடி!! http://www.vinavu.com/2012/01/02/evolution/   [அறிவியலின் நெற்றியடி! பைபிளின் மோசடி!!] டார்வின் கி.பி. 1860-ஆம் வருடம், ஜூன் மாதம். இங்கிலாந்து, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக வளாகம் மக்கள் வெள்ளத்தால் ததும்புகிறது; பற்பல நாடுகளிலிருந்து வருகை தந்திருக்கும் அறிஞர் பெருமக்கள், என்னதான் நடக்கும் என்று கிசுகிசுத்தவாறு அமர்ந்திருக்கும் பிரபு குலத்தவர்கள். நடைபெற இருந்த மாபெரும் விவாதப் போரைப் பற்றி ஆரவாரத்துடன் பேசிக் கொண்டிருக்கும் மக்கள் கூட்டம் என ஆக்ஸ்போர்டு வளாகம் அதிர்ந்து கொண்டிருந்தது. ஆக்ஸ்போர்டின் கலகலப்பிற்கு காரணம் உண்டு, ‘இயற்கைத் தேர்வின் மூலம் உயிரினங்களின் தோற்றம்’ என்ற புத்தகத்தை வெளியிட்டு அன்றைய இங்கிலாந்தில் ஒரு சூறாவளியைக் கிளப்பியவர் சார்லஸ் டார்வின். பரிணாமத் தத்துவத்தை 230 பக்கங்களில் விவரிக்கும் இச்சிறுநூல் ஏற்படுத்திய புயலில் விவிலியமும் பறந்து சென்றது. இறைவனின் மறைவாக்கு கேள்விக்குள்ளாக்கப்படுவதை கிறித்தவ பாதிரிகள் கடுமையாக எதிர்த்தார்கள். பொதுமேடையில் விவாதத்திற்குத் தயாரா என்று டார்வினின் ஆதரவாளர்களுக்கு சவால் விட்டனர். மதத்தின் பிடியிலிருந்து அறிவியலை மீட்கும் கடமையுணர்வுடன் ஆக்ஸ்போர்டு விவாதத்திற்கு வருகை தந்தனர் டார்வினின் ஆதரவாளர்களான ஹக்ஸ்லியும், ஹூக்கரும். அறிவின் அடக்கத்துடன் அமர்ந்திருந்த இவ்வறிஞர்களின் எதிரில் ஆக்ஸ்போர்டு மதத்துறையின் பிரபலமான மதகுரு பிஷப் வில்பர் போர்ஸ் கம்பீரமாகத் தலை நிமிர்ந்து வீற்றிருந்தார். அவரைச் சுற்றி வெண் தூண்களாய் ஆண்டவனடியார்கள் மூளையைச் சாணை பிடித்துக் கொண்டு (!) அமர்ந்திருந்தனர். விவாதம் தொடங்கிற்று. வேத நூலை முத்தமிட்டு, சிலுவை ஏந்திய கரங்களுடன் தொண்டையைக் கனைத்துவிட்டு பேச ஆரம்பித்தார் பிஷப், ”மக்களே! பரமபிதாவின் பெயரால் உங்களை வேண்டுகிறேன். சாத்தானின் அவதாரமான சார்லஸ் டார்வின், நீங்களெல்லாம் குரங்கிலிருந்து தோன்றியவர்கள் என கூசாமல் கூறியிருக்கிறான். பாலூட்டி சீராட்டி வளர்த்த உங்கள் பாட்டன்மார்களும், முப்பாட்டன்மார்களும் குரங்குகளா? இதை ஏற்கப் போகிறீர்களா? எனது கேள்விக்கு இங்கு அமர்ந்திருக்கும் குரங்கின் சீடர்கள் என்ன பதில் தருவார்கள். இவர்கள் குரங்கிலிருந்து உதித்ததாகச் சொல்வது தன் பாட்டன் வழியாகவா, பாட்டி வழியாகவா” என்று கேலி செய்த திருப்தியுடன் இறுதியில் ‘டார்வினின் ஆராய்ச்சி சத்தியமறையின் புனிதக் கொள்கைக்கு எதிராக இருப்பதாகக் கூறி இருக்கையில் அமர்ந்தார். ‘புனித’க் கொள்கையால் உணர்வூட்டப்பட்ட மக்களின் கரவொலியின் நடுவில் பேச வந்தார் டார்வினின் சீடர் ஹக்ஸ்லி. வெறியுட்டப்பட்ட மத உணர்வுகளின் மத்தியில் உண்மையைப் பேசுவதற்கு ஒரு மனிதனுக்கு எத்தனை தைரியம் வேண்டும். மதமெனும் குகையிலிருந்த மக்களை விஞ்ஞான உண்மையெனும் ஒளியை நோக்கி ஈர்ப்பதற்கு அனைத்து அவலங்களையும் சகித்துக்கொண்டார் ஹக்ஸ்லி. டார்வினின் ஆராய்ச்சியை விரிவாக பேசினார். ஒரு பாதி மக்களையாவது உண்மையினை ஏற்கவைத்தார். பொது விவாதம் முடிந்தது. ஆனால் டார்வின் எழுப்பிய புயல் ஓயவில்லை. குரங்குகளை கண்ட இடமெல்லாம் கல்லாலடித்து துரத்தினார்கள் மறை உணர்வு கொண்ட மக்கள். இங்கிலாந்தின் தேவாலயங்களில்,கருப்பு உடை தரித்த பக்த கோடிகள், கால்களின் கீழ் டார்வினின் புத்தகத்தை மிதித்தவாறு இறைவனின் புனிதக் கொள்கையை சாத்தானாகிய டார்வினிடமிருந்து காப்பதாக உறுதி பூண்டார்கள். கி. பி. 1950 – ‘பொதுவுடைமைப் பூதம்’ ஐரோப்பிய நாடுகளைப் பற்றிப் பரவும் காலம், கம்யூனிஸ்ட் சாத்தான்களிடமிருந்து புனிதக் கொள்கையை காப்பதற்க்கு போப்பாயஸ் XII எச்சரிக்கிறார், ”பரிணம வாதத்தை நாம் எதிர்க்கவில்லை. ஆனால் இதைக்கொண்டு பொருள் முதல்வாதிகளும், நாத்திகர்களும் உலகை உருவாக்கிய தேவனின் பங்கை மறைக்கிறார்கள். எந்த உயிரின மூலப்பொருளில் இருந்து மனிதன் தோன்றினானோ, அதைப் படைத்தவன் தேவனே” என்று அருள்மொழிந்து பரலோகம் சென்றார். கி.பி. 1996 – வாடிகன் நடத்தும் கல்வி நிறுவனங்களுக்கு போப் ஜான் பால் II சொல்வதாவது. ‘மனிதன் ஒற்றை அடியில் உருவாக்கப்பட்டவன் என்பதில்லை. தேவனால் படிப்படியாக பரிணாம வளர்ச்சியின் மூலம் உருவானவன் என்பதை ஏற்கலாம்’ சென்ற நூற்றாண்டில் (டார்வினால்) வெளியிடப்பட்ட பரிணாம வளர்ச்சி பற்றிய தத்துவம், ஆய்வுசெய்யும் அறிஞர்களுக்கும், புதிய கண்டுபிடிப்புகளுக்கும் குறிப்பிடதக்க பங்காற்றியிருக்கிறது. ஆனால் அனைத்திற்க்கும் மூலகர்த்தா தேவன்தான் என்று ஏற்கனவே போப் பயஸ் XII அருளியிருப்பது முக்கியமான ஒன்றாகும்”. போப் அவர்களே! காலில் போட்டு மிதித்த சாத்தானின் கருத்தை 137 ஆண்டுகள் கழித்து சிறிது ஏற்கிறோம் என்று ஏன் நடிக்க வேண்டும்? உலகத் தோற்றம் குறித்து பைபிள் கூறுவது நீங்கள் அறியாததல்ல.’ [அறிவியலின் நெற்றியடி! பைபிளின் மோசடி!!] கலீலியோ‘ஐந்து நாட்களில் அண்ட _ பிண்ட சராசரங்களைப் படைத்த பரமபிதா, ஆறாவது நாள் களிமண்ணை உருட்டி ஆதாமையும், அவன் விலா எலும்பிலிருந்து ஏவாளையும் படைத்து விட்டு ஏழாவது நாள் ஓய்வெடுக்கச் சென்றார்.” ஆறு நாட்கள் வேலை, ஏழாவது நாள் விடுமுறை என்பது தொழிலாளி வர்க்கம் போராடிப் பெற்ற உரிமையை உங்கள் பரமபிதாவுக்கு வழங்குவதில் எமக்கு ஆட்சேபணையில்லை. ஆனால் டார்வினின் பரிணாமத் தத்துவத்தை சிறிது ஏற்றுக் கொண்டாலும் பைபிளின் முதல் அத்தியாயம் தவறாகுமே! மாற்ற வேண்டுமே! இல்லை. எதுவும் மாற்ற வேண்டியதில்லை. போப்பின் அறிக்கைகளுக்கு பொழிப்புரை தருகிறார் கத்தோலிக்க திருச்சபையின் தகவல் தொடர்பாளர் பிரான்சிஸ் மானிஸ்கால்கோ. அதாவது போப்பின் பரிணாமத் தத்துவம் பற்றிய கருத்தை, அவர் மதத் தலைவர் என்ற முறையில் கூறியதாகவோ, கத்தோலிக்கர்களுக்கு வழிகாட்டும் கோட்பாடு என்ற முறையில் சொல்வதாகவோ தவறாகப் புரிந்து கொள்ளக் கூடாதாம். எங்களுக்குப் புரிகிறது. ஏன் இந்த இரட்டை வேடம்? விஞ்ஞானிகள் தாங்கள் கண்ட உண்மைகளுக்கு உங்களின் அங்கீகாரத்தை வேண்டி நின்ற காலத்தில் அதை மறுத்தீர்கள். இன்று சந்திரனுக்கு விண்கலம் அனுப்புவது முதல், கணிப்பொறியின் இண்டர்நெட் வரை எந்த விஞ்ஞானியும் உங்களது அக்மார்க் முத்திரைக்கு ஏங்கவில்லை. ஆனால் மதம் உயிர் வாழ்வதற்கும், காலத்திற்கேற்றவாறு புனரமைப்பதற்கும் அறிவியல் தேவைப்படுகிறது உங்களுக்கு. அதிலும் கடுகளவாவது நேர்மை இருக்கிறதா? இவ்வளவு காலம் திருச்சபை அறிவியல் அறிஞர்களைத் தவறாக நடத்தியது _ இனி அப்படிச் செய்யமாட்டோம் என்று குற்றம் புரிந்த உணர்வுடன் பாவமன்னிப்பு பெறுவதுதானே நியாயம்! அறிவியலின் அற்புதங்களை அனுபவித்துக்கொண்டு தேவனின் ‘அற்புதங்களை’ப் பிரச்சாரம் செய்வது; பிறகு தேவனின் மகிமை காப்பதற்கு அறிவியலை அவமதிப்பது என்ற திருச்சபையின் திமிருக்கும், இரட்டை வேடத்திற்கும் நீண்ட வரலாறு உண்டு. மனிதனின் இன்பம் ததும்பும் வாழ்க்கை பரலோகத்தில் மட்டும்தான் என்று மாயை காட்டிய மதவெறியர்களின் கூற்றை பொய்யாக்கி பூமியில் அந்தகைய அற்புதங்களைச் சாதித்திருக்கிறது அறிவியல். நேற்றைய வானொலி முதல் இன்றைய கணிப்பொறி வரை அதன் சாதனைகள் தொடருகிறது. மனித குலத்தின் இத்தகைய பிரம்மாண்டமான அறிவியல் – தொழில் நுட்ப புரட்சிக்கு அடிப்படையான விஞ்ஞான உண்மைகளைக் கண்டவர்கள் மத்திய கால விஞ்ஞானிகள். இயற்கையின் புதிரை விடுவிக்க காட்டிலும், களத்திலும், கடலிலும் திரிந்தார்கள். ஊனையும் – உயிரையும் வருத்தி தான் கண்ட உண்மையை நிருபிக்க தளராமல் போராடினார்கள். மதத்தின் பிடியிலிருந்து மனித சிந்தனையை விடுவிக்க திருச்சபையின் கழுவாய்களுக்கு தங்களது உயிரைக் கொடுத்தார்கள். பேராற்றல் மிக்க சிந்தனையும், போராட்டமும் கொண்ட இவர்களைத்தான் மாபெரும் மனிதர்கள் என்று குறிப்பிடுகிறார் ஏங்கெல்ஸ். இவர்கள் சிந்திய ஒவ்வொரு துளி ரத்தமும் அறிவியல் உலகம் அசுர வேகத்துடன் வளரக் காரணமாயிருந்தது. இவர்களது இழந்து போன வாழ்க்கையில்தான் இருபதாம் நூற்றாண்டின் மனித குல வாழ்க்கை உயிர் வாழுகிறது. இத்தகைய ‘மாபெரும் மனிதர்களுக்கு’ எதிராக போப்பும், திருச்சபையும், ஏனைய பாதிரிகளும் நடத்திய பயங்கரவாத நடவடிக்கைகளை அறியும் நாகரீக உலகின் மனிதர்கள் எவரும் வெட்கப்படவேண்டும்; கோபம்கொள்ள வேண்டும். [அறிவியலின் நெற்றியடி! பைபிளின் மோசடி!!] கோபர்நிகஸ் அறுவை சிகிச்சையின் போதும், பிரசவத்தின் போதும் வலிதெரியாமல் இருப்பதற்காக பயன்படும் குளோராஃபார்ம் எனும் மயக்க மருந்தை இங்கிலாந்தைச் சேர்ந்த ஜேம்ஸ் யங் சிம்ஸன் சென்ற நூற்றாண்டில் கண்டுபிடித்தார். இதற்கு திருமறையில் ஆதாரமிலையே என்று கடுமையாக எதிர்த்தார்கள் பாதிரிமார்கள். ‘கஷ்டத்தில் நீ குழந்தை பெறுவாய்’ எனும் பைபிளின் வாக்கியத்தைக் கொண்டு தாய்மார்கள் பிரசவத்தின் போது மயக்க மருந்து பயன்படுத்தக் கூடாது அப்போதுதான் தாய்ப்பாசம் இருக்க முடியும் என் வற்புறுத்தினார்கள். இரத்தத்தை வகைபிரித்து, இரத்த வங்கியில் சேமிக்கப்படும் முறையினால் உலகமெங்கும் பலகோடி மனித உயிர்கள் காப்பாற்றப்படுகின்றது. மனித ரத்தம் பற்றிய ஆய்வை நடத்திய ‘குற்றத்திற்காக’ செர்வெட்டஸ் எனும் விஞ்ஞானி கழுமரத்தில் ஏற்றி உயிருடன் கொளுத்தப்பட்டார். பரமபிதாவின் புனிதம் காக்க இந்த தண்டனை வழங்கியவர் கால்வின் என்ற புராட்டஸ்டன்ட் பாதிரியார். தேவனின் மகிமை கூறி ஆவியெழுப்ப, விமானமேறி உலகைச் சுற்றி சுற்றி வருகிறார்கள் சுவிசேசத்தின் ஊழியர்கள். தேவனின் செய்தியை திருச்சபையின் விண்கோள்கள் பூமி உருண்டையின் மீது பொழிந்த வண்ணம் உள்ளன. ஆனால் உலகம் உருண்டையானது, தட்டையானதல்ல, பூமி சூரியனைச் சுற்றிவருகிறது என்று சொன்ன கியார்டனே புருனோவை உயிரோடு கொளுத்தினார்கள் கத்தோலிக்க மத குருமார்கள். ‘வானுலகக் கோள்களின் சுழற்சிபற்றிய’ தனது கண்டுபிடிப்பை 36 ஆண்டுகளுக்கு முன்பே நூலாக எழுதியும், திருச்சபையின் கொலை வெறிக்குப் பயந்துபோன கோப்பர்நிகஸ் இறுதியில் தனது மரணப்படுக்கையில் இருந்து வெளியிட்டார். பூமியின் இயக்கத்தையும், சூரியனைச் சுற்றி வருவதையும் கண்டு சொன்ன கலிலீயோ திருச்சபையினால் சித்ரவதை செய்யப்பட்டார். அவரது சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதனால் கலிலீயோ விவிலியத்தின் ‘உலகம் பற்றி உண்மைகளை’ ஏற்று தன் கண்டுபிடிப்புகளை மறுக்க வேண்டியிருந்தது. கலிலீயோவின் தொலைநோக்கியை சாத்தானின் கருவி என்றார்கள் கிறித்தவ பாதிரிகள். கி.பி. 370-இல் அலெக்சாண்டிரியாவில் (இன்றைய கெய்ரோ நகரம்) அரும்பாடுபட்டு சேர்த்துவைத்த நூலகத்தையும், அருங்காட்சியகத்தையும் ஆர்ச் பிஷப் சிரில் தலைமையிலான பாதிரிப்படை சூறையாடிக் கொளுத்தியது. நூலகத் தலைவரும் பெண் விஞ்ஞானியுமான ஹைப்பேஷியாவை சித்திரவதை செய்து கொளுத்தினார்கள். விஞ்ஞானிகளை வேட்டையாடிய திருச்சபையின் ரத்தக்கறை படிந்த வரலாற்றின் ஒரு சில துளிகள்தான் இவை. அனைத்துலக பாதிரிகளின் எண்ணிக்கையை விட அவர்கள் இழைத்த குற்றங்களின் எண்ணிக்கை அதிகமானதாகும். இன்று மதிப்பிட முடியாத அளவுக்கு சொத்துக்களைக் குவித்து வைத்துக்கொண்டு திருச்சபையின் பாதிரிகள் வாழும் உல்லாச வாழ்க்கைக்கு வசதிக்ள செய்தது அறிவியல்தான். விவிலியம் அல்ல. கூன் விழுந்த முதுகுடன், மண்புழுவை மட்டும் மணிக்கணக்காகப் பார்த்துக்கொண்டிருப்பார் டார்வின். தான் கண்ட மயக்க மருந்தை சோதனை செய்ய தன்னுடம்பையே கருவியாக்கி பல தடவை மயக்கமடைந்தார் சிம்ஸன். எந்த உண்மையையும் சோதித்தறிய அலைந்து திரியும் கலிலீயோ தன் சொந்த வாழ்வின் எழிலைத் துறந்தார். மரணப்படுக்கையிலும் கூட கோள்களின் அமைப்பு பற்றி ‘பிதற்றிக்’ கொண்டிருந்தார் கோப்பர்நிகஸ். உயிரோடு கொளுத்தப்பட்ட போதும் விவிலியத்தின் முட்டாள் தனத்தை ஏற்க மறுத்தார் புருணே. எதிர்காலத்தில் திருச்சபை தமக்கு அங்கீகாரம் வழங்கும் என்ற நம்பிக்கையிலா இவர்கள் தங்களை வருத்திக்கொண்டார்கள்? தேவனின் ஊழியர்களே சொல்லுங்கள். யார் பாவிகள், யார் சத்தான்கள். குளிரூட்டப்பட்ட அறையில் நித்திரை கொண்டு, காலை எழுந்து உயர்தர ஒயினைக் குடித்து, வறுத்த முழுக்கோழியை முழுங்கி, பளபளக்கும் வெண்பட்டு அங்கியை உடுத்தி, மாருதி காரில் பவனி வந்து, தேவாலயத்தில் கூடியிருக்கும் மந்தைகள் முன்னால், புளித்த ஏப்பத்துடன், பாதிரி திருவாய் மலர்வார், ”கஷ்டத்தில் ஜீவிக்கின்ற கர்த்தரின் குழந்தைகளே சாத்தான்களிடமிருந்து விலகியிருங்கள்.” எங்கள் விஞ்ஞானிகளின் கால் தூசிகூடப் பெறாத பாதிரிகளே இரண்டாயிரம் ஆண்டுகளாக நீங்கள் செய்துவரும் தேவ ஊழியம் இதுதானே! ‘திருமறையில் ஆதாரமில்லையே’ என்ற எந்த அறிவியல் உண்மைகளை மறுத்து விஞ்ஞானிகளை அழித்தீர்களோ அதே அறிவியலை உங்களுடைய வாழ்க்கையில் வெட்கமில்லாமல் பயன்படுத்தி வருகிறீர்களே. சுவிசேசப் பிரசங்கிகளே பதில் சொல்லுங்கள். [அறிவியலின் நெற்றியடி! பைபிளின் மோசடி!!] புருணோ போயிங் 707 விமானத்தில் அனைத்துப் பாதிரிகளையும் அள்ளிப்போட்டு இமயமலையின் உச்சியில் கொண்டுபோய், பாராசூட் இல்லாமல் தள்ளிவிட்டால் நாங்கள் குற்றவாளிகளல்ல; ஏனென்றால் புவி ஈர்ப்புவிசையை கண்டுபிடித்த நியூட்டன் பைத்தியம் என்று பட்டம் கட்டியது திருச்சபைதான். குடல்வால் அறுவை சிகிச்சைக்காக வாடிகனில் 3 ஆண்டுகள் தலைமறைவாயிருந்த போதுதான் போப் முன்னர் கண்ட அறிக்கையை வெளியிட்டார். சிம்ஸனின் ஆவியும், செர்வெட்டஸின் ஆவியும் போப்பிடம் வந்து நியாயம் கேட்டதோ! குளோரோஃபாமும், ரத்தமும் கிடையாது என மறுத்திருந்தால் போப்பின் கதி என்ன? அறிவியலின் ஒழுக்கம் அவ்வாறு செய்ய அனுமதிக்கவில்லை. ஆனால் கருணையே உருவான கடவுளின் ஒழுக்கம்தான் அதை அனுமதிக்கிறது. இப்படி கொலை பாதக வரலாற்றைத் தெரிந்து கொண்டும் கல்லுளி மங்கன் போல சாந்த சொருபீயாகக் காட்சியளிப்பதற்குத்தான் கிறித்தவப் பாதிரிகளுக்கு பத்தாணாடு கால பயிற்சி கொடுக்கிறார்கள் போலும். ‘கிறித்தவத்தின் மாபெரும் ஞானி (ஏசு கிறிஸ்து) மக்களின் ஆத்மாக்களுக்கு விடுதலை கோரி, தமது உடம்பைத் தியாகம் செய்தார்; நவீனமான, கல்வியறிவு மிகுந்த ஞானியோ (பாதிரி) தனது சொந்த ஆத்மாவின் விடுதலைக்காக மக்களின் உடம்புகளைத் தியாகம் செய்கிறார்’ என்று காரல்மார்க்ஸ் சொன்னதை நிரூபிக்கிறது 2000-ம் ஆண்டு கால திருச்சபையின் வரலாறு. மனித குலத்தின் ஊழியர்களான விஞ்ஞானிகள் உயிர் காக்கும் முறைகளைக் கண்ட போது தேவனின் ஊழியர்களான பாதிரிகளோ கழுமரத்தைக் கண்டுபிடித்தார்கள். எனவேதான் தேவகுமாரனைச் சிலுவையில் ஏற்றியவன் பிலாத்தா, திருச்சபையின் முன்னோர்களா என்ற சந்தேகம் வருகிறது. ஞாயிற்றுக் கிழமைதோறும் கோடிக்கணக்கான மக்களுக்குப் பாவ மன்னிப்பு அள்ளி வீசும் பாதிரி வகையறாக்கள் 2000 ஆண்டுகளாகச் செய்து வரும் குற்றங்களுக்கு யாரிடம் மன்னிப்பு பெறுவார்கள்? ஒருவருக்கொருவர் பாவத்தையும் மன்னிப்பையும், பரிமாறிக்கொள்வார்களா? விவிலியம் இதற்கு என்ன தீர்ப்பு சொல்கிறது? விஞ்ஞானம் வளர்ந்து விட்டதால் பூவுலகின் ஒழுக்கம் கெட்டுப்போய்விட்டது என்று இறுதி அஸ்திரம் ஒன்றை ஏவுகிறார்கள் பைபிளின் ஒழுக்கசீலர்கள். அதாவது களிமண்ணிலிருந்து ஆதாம் தோன்றினான் என்றால் ஒழுக்கம். பரிணாம வளர்ச்சி என்றால் ஒழுக்கக் கேடு. பூமி தட்டை என்றால் ஒழுக்கம். உருண்டை என்றால் ஒழுக்கக்கேடு. அதாவது பொய்யும், முட்டாள்தனமும் ஒழுக்கம். உண்மையும், பகுத்தறிவும் ஒழுக்கக் கேடு. இந்த ‘ஒழுக்கத்தை’ப் பிரச்சாரம் செய்ய அனுமதிக்காததால் முன்னாள் சோசலிச நாடுகளில் கம்யூனிஸ்ட்டுகள் கிறித்துவ மதத்தைக் ‘கொடூரமாக’ ஒடுக்கினார்கள் எனக் கூப்பாடு போடுகிறார்கள். ‘புதிய ஏற்பாட்டின்’ காவலர்கள். ரசியாவிலும், சீனாவிலும் இந்த ‘ஒழுக்கத்திற்கு’க் கிடைத்த வெற்றியைத் தான் திருச்சபையும், தேவனாகிய அமெரிக்காவும் கைகோர்த்துக் கொண்டாடுகிறார்கள். இரத்தக் கறை படிந்த வரலாறு திருச்சபைக்கு மட்டும் சொந்தமானதல்ல; பார்ப்பன இந்து மதமும், இசுலாமும் தனித்தனியே வேத புத்தகங்கள் வைத்திருந்தது போலவே, தங்கள் சொந்தக் கழுமரங்களையும் நிறுவியிருந்தார்கள். அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹவின் திருநாமத்தால் ஆரம்பிக்கும் திருக்குர்-ஆனுக்கு 35 சிறப்புப் பெயர்கள் உண்டு. அதில் ஒன்று அந்நதீர்-அச்சுறுத்தி எச்சரிப்பது. பைபிளில் பரம்பிதா உலகை ஆறுநாட்களில் படைத்தார். குர்-ஆனில் அல்லா உலகை ஆறு கட்டங்களாகப் படைத்தார். பரமபிதா களிமண்ணில் இருந்து ஆதாமைப் படைத்தார். அல்லாஹ் சுட்ட களிமண்ணிலிருந்து ஆதாமைப் படைத்தார். பைபிளுக்கம் குர்-ஆனுக்கும் இடைவெளி 557 ஆண்டுகள். [அறிவியலின் நெற்றியடி! பைபிளின் மோசடி!!] சிம்சன் ஆனால் கடவுள் தங்களை எப்படிப் படைத்தார் என்ற உண்மையைத் திருக்குர் ஆன் விளக்கத்திலிருந்து தெரிந்து கொள்வதற்கு முன்னரே 6 நூற்றாண்டுகளுக்கு முன் இருந்த சிந்து சமவெளித் திராவிடர்கள் கடவுளைப் படைத்து விட்டார்கள் –சுட்ட களிமண்ணைக் கொண்டு. தசாவதார தத்துவத்தை கைவசம் வைத்திருக்கின்ற பார்ப்பனர்களுக்கு படைப்புத் தத்துவம் பற்றி கவலை இல்லை. அப்படி என்றால் டார்வினின் பரிணாம தத்துவம்? தஞ்சை சரபோஜி நூலகத்தில் உள்ள ஓலைச் சுவடிகளிலிருந்து திருடப்பட்டதாக இருக்கலாம். இந்தக் கூற்றை திட்டவட்டமாக சைவர்கள் மறுக்கிறார்கள். தசாவதார நாயகன் விஷ்ணுவைப் படைத்தவன் சிவன் தான் என்கிறார்கள். ஆனால் கோஷ்டிப் பூசலின்றி அவர்கள் ஏற்கும் படைப்புத் தத்துவம் ஒன்று வேதத்தின் புருஷ சூக்தத்தில் இருக்கிறது. விராட் புருஷனின் தலையிலிருந்து பிராமணர்களும், தோளிலிருந்து சத்திரியர்களும், தொடையிலிருந்து வைசியர்களும், பாதத்தில் இருந்து சூத்திரர்களும் தோன்றினார்கள் என்ற ‘உயரிய’ படைப்புத் தத்துவம்தான் அது. ஒரு வேளை டார்வின் தத்துவத்தை அவர்கள் ஏற்றுக் கொள்வதாக இருந்தாலும், தரத்தால் பிரிக்கப்பட்ட நான்கு வகைக் குரங்குகள் அவர்களுக்கு தேவை. ஈரேழு பதினாலு உலகங்களிலிருந்தும் கடவுளைத் துரத்தும் பணியை விஞ்ஞானிகள் செய்து விடுவார்கள். அதில் ஐயமில்லை. ஆனால் கடவுளைத் துரத்துவதைவிடக் கடினமான பணி கடவுளின் ஏஜெண்டுகளைத் துரத்துவதுதான். அதை விஞ்ஞானிகள் செய்ய முடியாது. அதற்குச் சமூக விஞ்ஞானிகள் வேண்டும். ஆம். கம்யூனிஸ்டுகள் வேண்டும். __________________________________________ புதிய கலாச்சாரம், ஜனவரி – 1997. __________________________________________ 39 ஐ.டி. துறை நண்பா உனக்கு ரோஷம் வேணுன்டா!! http://www.vinavu.com/2008/11/14/tmstar5/   ஈழத் தமிழருக்கு அடுத்தபடியாக தமிழ்ப் பதிவுகளை அதிகம் படிக்கும் ஐ.டி. நண்பா, இந்தப் பதிவு உனக்காக எழுதப்படுகிறது. அமெரிக்காவில் வெடித்த பொருளாதார நெருக்கடி கடல் தாண்டி இந்தியாவையும் பாதித்திருப்பதை உன் அனுபவத்தில் உணர்ந்திருப்பாய். சத்யம், இன்போசிஸ், விப்ரோ, எண்ணற்ற மென்பொருள், பி.பி.ஓ, கால் சென்டர் நிறுவனங்களில் ஆட்குறைப்பு அரங்கேறி வருகிறது. [image] சம்பள உயர்வு, இன்சென்டிவ்ஸ், அத்தனையும் நிறுத்தப்பட்டிருக்கிறது. கசக்கி பிழிபடுவதற்கு தயாராக இல்லாத ஊழியர்கள் தயவு தாட்சண்யமின்றி தூக்கி எறியப்படுகின்றனர். புதியவர்கள் சில ஆயிரம் குறைவான சம்பளங்களுக்கு வேறெந்த சலுகையுமின்றி சேர்க்கப்படுகின்றனர். அதிகரித்து வரும் டாலர் மதிப்பினால் முந்தைய ஒப்பந்தப்படி போடப்பட்ட வரவினால் ஏற்படும் நட்டத்தை ஊழியர் தலையில் கட்டுவதற்கு நிறுவனங்களின் மனிதவளத் துறை மேலாளர்கள் புதிது புதிதாக யோசித்து வருகின்றனர். பணிச்சுமையும், நேரச்சுமையும் அதிகமாகக் கொடுக்கப்படுகிறது. முன்பு போல அலுவலக நேரத்தில் பதிவுகளை ஹாயாக படிப்பதற்கு உனக்கு இனி நேரமிருக்காது. இந்த பாதிப்பு ஏன் என்று நீ யோசித்ததுண்டா? அமெரிக்காவிலிருந்து ஆர்டர்கள் போதுமான அளவு வரவில்லை, அதனால் முதலாளிகளுக்கு இலாபம் குறைந்திருக்கிறது என்பதால் இந்த நெருக்கடிகள் என்று நீ பதிலளிக்கக்கூடும். அது உண்மையெனும் பட்சத்தில் அமெரிக்கா நன்றாக இருந்த காலங்களில் உன்னுடைய முதலாளி அந்த இலாபத்தில் ஏன் பங்களிக்கவில்லை என்ற கேள்விக்கு நீ பதிலளிக்க வேண்டும். மாதம் ஒன்றிற்கு பல ஆயிரங்கள் சம்பளம் என்பதைத் தாண்டி உன் நிறுவனத்தின் வரவு செலவு குறித்து உனக்கு ஒன்றும் தெரியாது என்பதோடு அது குறித்து நீயும் பெரிய அளவுக்கு கவலைப் பட்டிருக்கமாட்டாய்? அது தெரிந்து என்ன ஆகப்போகிறது என்று நீ கேட்கக்கூடும். அது தெரியா விட்டால் உனது நிச்சயமற்ற எதிர்காலத்தின் அபாயம் உனது வாழ்க்கையில் ஏற்படுத்தும் அதிர்வுகளை உன்னால் சரி செய்ய முடியாது. அது கிடக்கட்டும் அமெரிக்கா இருமினால் இந்தியா ஏன் வாந்தி எடுக்கவேண்டும்? அமெரிக்க பொருளாதாரம் பாதிப்படைந்தால் இந்தியாவுக்கு ஏன் நெறி கட்டவேண்டும்? ஏதோ அமெரிக்கா நம்மைப் போன்ற பலரை வாழவைத்துக் கொண்டிருக்கிறது என உன்னில் சிலர் நினைக்கக் கூடும். இல்லை நண்பா, அமெரிக்காதான் பல ஏழை நாடுகளைச் சுரண்டி வசதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறது. இந்தச் சுரண்டலில் அமெரிக்காவின் நடுத்தர வர்க்கமும் அவதிப்படுகிறது என்பதையும் நீ புரிந்து கொள்ளவேண்டும். அமெரிக்காவில் ஒரு மணிநேர வேலைக்கு ஒரு தொழிலாளிக்கு கொடுக்கப்பட வேண்டிய பணத்தில் சிறு அளவுதான் இந்தியாவில் அதே வேலைக்கு கொடுக்கப்படுகிறது. இதனால் ஒரு அமெரிக்க தொழிலாளிக்கு வரவேண்டிய வேலை பறிபோகிறது என்பதோடு உனக்கு கொடுக்கப்படும் குறைவான சம்பளத்தின் மூலம் உன்னை உருவாக்கிய இந்த நாடும் சுரண்டப்படுகிறது. இப்படி இரு பக்கமும் இலாபம் அடிப்பதால்தான் அமெரிக்கா பணக்காரர்களுக்கான நாடாக இருக்கிறது. இப்போது அமெரிக்காவில் உள்ள பிரச்சினை என்ன? பல நிறுவனங்கள் திவாலாகியிருக்கின்றன. திவலானதற்குக் காரணம் பொருளாதாரத்தில் அந்த நிறுவனங்கள் நடத்திய சூதாட்டம்தான். இந்த சூதாட்டம் பொழுது போக்கிற்காக நடந்தது அல்ல, அமெரிக்க மற்றும் உலக மக்களின் வருமானத்தை தூண்டில் போட்டு அள்ளுவதற்கு நடந்த பகல் கொள்ளை. இந்தப் பகல் கொள்ளையினால் ஏற்பட்ட இழப்பை சரி செய்ய இந்தியாவும் இழக்க வேண்டுமென்றால் அந்த லாஜிக் சரியா? அமெரிக்காவில் சில முதலாளிகள் வருமானம் பார்க்க நாம் பலிகடா ஆகவேண்டுமென்றால் இந்த அடிமை நிலை இந்தியாவிற்கு நல்லதா? அமெரிக்க சிக்கலுக்கு இந்தியா உதவி செய்வது கடமை என்று உனது பிரதமர் மன்மோகன் சிங் ஜால்ரா தட்டுவதைப் பார்த்து உனக்கு கோபம் வந்ததா இல்லை மகிழ்ச்சி அடைந்தாயா? அமெரிக்காவின் தும்மலால் மும்பைப் பங்கு சந்தைக்கு விக்கல் ஏற்பட்டு 20,000த்தில் இருந்த புள்ளி இப்போது 10,000த்தில் தள்ளாடுகிறது. உடனே நிதியமைச்சர் வங்கிகளின் ரொக்க இருப்பைக் குறைத்து, வட்டி விகிதத்தையும் குறைத்து ரிசர்வ் வங்கி மூலம் இரண்டரை லட்சம் கோடி ரூபாயை பங்குச் சந்தையில் சூதாடுவதற்கு இறக்கி விட்டிருக்கிறார். இதனால் அந்நிய முதலீட்டாளர்கள் தங்கள் முதலீட்டை இந்தியாவில் தொடர்ந்து போட்டு விளையாடுவார்களாம். பத்தாயிரம் புள்ளி இழப்பில் வந்த நட்டம் அனைத்தும் உன்னைப் போன்று கொஞ்சம் ஆசைப்பட்டு பங்குச் சந்தையில் சேமிப்பை முதலீடு செய்த நடுத்தர வர்கக்த்திற்கு ஏற்பட்டது என்றால் நிதியமைச்சரோ வெளிநாட்டு நிறுவனங்கள் குறித்து கவலைப்படுகிறார். இந்த இரண்டரை இலட்சம் கோடி ரூபாயும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்குப் பயன்படப் போவதில்லை. உன்னைப் போன்ற சற்று காசு உள்ளவர்கள் தொடர்ந்து பங்குச் சந்தையில் ஏமாறாலம் என்ற நம்பிக்கை ஏற்படுத்துவதற்குத்தான் இந்த நாடகம் நடத்தப்படுகிறது என்பது உனக்குத் தெரியுமா? பள்ளி, கல்லூரி, மருத்துவமனை ஆரம்பிப்பதற்குப் பணமில்லை என்று எல்லாவற்றையும் தனியாருக்கு தாரை வார்த்து கொடுத்து விட்டு இப்போது முதலாளிகளைக் காப்பாற்றுவதற்கு மட்டும் இவ்வளவு பெரிய பணம் எங்கிருந்து வந்தது, உனக்குத் தெரியுமா? இதெல்லாம் உனக்கேன் தெரியப் போகிறது? அதிக சம்பளம் கொடுத்து அலுவலகப் பணியில் கசக்கிப் பிழிந்து, ஓய்வு நேரத்தையும் பொழுது போக்கு என்ற பெயரில் எடுத்து கொண்டு கொடுக்கப்பட்ட பணத்தை எப்படிச் செலவழிப்பது என்று அதற்கும் ஏற்பாடு செய்து கொடுத்து உன்னை மொத்தத்தில் ஒரு அரசியல் தற்குறியாக மாற்றிவிட்டார்களே என்ன செய்வது? இதனால் நீ கோபப்படலாம். ஆனாலும் மற்றவர்களைப் போல ஐ.டி.துறையில் விவாகரத்து மலிந்து விட்டது, பாலியல் சீரழிவு அதிகரித்து வருகிறது என்று நான் கவலைப்படவில்லை. மாறாக அரசியல் ரீதியில் நீ சீரழிக்கப்பட்டிருப்பது குறித்துத்தான் வருத்தமடைகிறேன். வருடத்திற்கு சில இலட்சம் சம்பளம், வருடத்திற்கு ஒரு முறை வெளிநாட்டு சுற்றுலா, ஒரு இந்திய சுற்றுலா, இருமாதத்திற்கு ஒரு தடவை பிக்னிக், மாதந் தோறும் கேளிக்கைப் பூங்காக்கள், வாரந்தோறும் கேளிக்கை நிகழ்ச்சிகள், நடிகர் நடிகைகளை கூட்டி வந்து சாட்டில் பேசுவது, புதிய படத்திற்கு முதல் காட்சிக்கு அழைத்துச் செல்வது, வெறுமனே ஜாலி மட்டுமல்லாமல் சில நவீன சாமியார்களைக் கூட்டி வந்து தியானம் சொல்லிக் கொடுப்பது, உடலை இளைக்க வைக்க வகுப்புக்கள், அலுவலகத்திலேயே விளையாடுவதற்கு உள்ளரங்குக் களங்கள், கார், அடுக்குமாடிக் குடியிருப்பு வாங்குவதற்கு ஏற்பாடு செய்வது, பல நுகர்வுப் பொருட்களை மாதத் தவணையில் வாங்குவதற்கு அலுவலகத்திற்கே வந்து செய்யப்படும் விற்பனை மேளாக்கள், மாதக் கூப்பன் கொடுத்து பேரங்காடிகளில் பொருள் வாங்குவது, இது போக தாகமெடுத்தால் கோக், பசியெடுத்தால் பிஸா, போரடித்தால் சத்யம் தியேட்டர், இப்படித்தானே நண்பா நீ வாழ்ந்து கொண்டிருக்கிறாய்? இந்த வசதிகளை வழங்கிய உலகமயமாக்கம்தான் இதே காலத்தில் சில இலட்சம் விவசாயிகளை தற்கொலை செய்ய வைத்திருக்கிறது. இந்த முரண்பாட்டுக்கு உன்னுடைய பதில் என்ன? உன்னுடைய ஆடம்பரங்களெல்லாம் நிலையானவை அல்ல நண்பா, அவை எந்நேரமும் உன்னிடமிருந்து பறிக்கப்படலாம். உன் பணிச்சூழல் எப்படி இருக்கிறது என்று பார். வேலைக்கு நேர வரையறை கிடையாது, பதவி ஏற்றத்துக்கும், இறக்கத்துக்கும் எந்த அளவு கோலும் இல்லை, நன்றாக வேலை செய்பவர் நிறுவனத்தை விட்டே துறத்தப்படுவதும், நன்றாக வேலை செய்யாவிட்டாலும் நிறுவனத்தால் தக்கவைக்கப்படுவதற்கும் எந்த தர நிர்ணயமும் இல்லை, ஊழியர் கொள்கையில் பின்பற்றப்படும் இரக்கமற்ற தன்மை, மற்ற தொழிற்சாலைகளில் இருக்கும் எந்த தொழிற்சங்க உரிமையும், பாதுகாப்பும், சலுகைகளும் ஐ.டி.நிறுவனங்களில் செல்லுபடியாகாது என்ற நிலை, நூற்றுக்கணக்கில் ஆட்குறைப்பு செய்தாலும் மறுமொழியின்றி அதை ஏற்றுக் கொள்ளும் அடிமைத்தனம், எந்த நிறுவனத்திலும் நிரந்தரமாக வேலை செய்ய முடியாத நிச்சயமற்ற சூழல், இன்னும் எத்தனை அநீதிகளுக்கு மத்தியில் நீ வேலை செய்கிறாய் என்பதை நான் சொல்லி விளக்கத் தேவையில்லை. ஆனால் இவையெதனையும் நீ அடிமைத்தனம் என்று கருதவில்லை. அதுதான் கவலைக்குறியது நண்பா! உன்னை விட பல மடங்கு குறைவாக சம்பளத்தை வாங்கும் ஹூண்டாய் கார் தொழிற்சாலையில் வேலை செய்யும் ஒப்பந்தத் தொழிலாளி கூட தன்னுடைய பணிப்பாதுப்புக்காக, சுயமரியாதைக்காக தொழிற்சங்கம் கட்டும் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறான். நிர்வாகம் பல தடைகளை அரசின் ஆதரவோடு அமல்படுத்தினாலும் அந்தத் தொழிலாளர்கள் தம்முடைய போராட்டத்தில் உறுதியாக நிற்கின்றனர். இப்போது ஐ.டி துறையில் உனக்கிருக்கும் நிச்சயமற்ற நிலைக்கும், சுயமரியாதை அற்ற சூழலை எதிர்ப்பதற்கும் உனக்கிருக்கும் ஓரே வழி தொழிற் சங்கம் கட்டுவதுதான். உன்னைத் திருத்துவதற்கு மட்டுமல்ல உன்னுடைய முதலாளிகளின் அட்டூழியத்தை தட்டிக் கேட்பதற்கும் அது ஒன்றுதான் வழி. இன்றைய உனது வாழ்க்கை நாளைக்கே கூட இல்லாமல் போய்விடலாம். அமெரிக்காவின் ரத்த ஓட்டத்தில் இணைக்கப்பட்டிருக்கும் உன்னுடைய நிறுவனம் உன்னுடைய நலனுக்காக இயங்குபவை அல்ல. உன்னுடைய நலனும் இந்தியாவின் நலனும் ஒன்றிணையும் ஒரு பொருளாதாரத்தில்தான் உனக்கு மட்டுமல்ல தற்கொலை செய்யும் விவசாயிகளுக்கும் விடிவைத் தரும் வாழ்க்கையை உருவாக்க முடியும். அதற்கு முதல் படியாக உன்னுடைய இடத்தில் தொழிற்சங்கத்தை முதலில் கட்டு. பிறகு பார் அதனுடைய வலிமையை. ஐ.டி.துறை நண்பா, உனக்கு ரோஷம் வேணுன்டா ! 1 Free Tamil Ebooks - எங்களைப் பற்றி   மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்: மின்புத்தகங்களைப் படிப்பதற்கென்றே கையிலேயே வைத்துக் கொள்ளக்கூடிய பல கருவிகள் தற்போது சந்தையில் வந்துவிட்டன. Kindle, Nook, Android Tablets போன்றவை இவற்றில் பெரும்பங்கு வகிக்கின்றன. இத்தகைய கருவிகளின் மதிப்பு தற்போது 4000 முதல் 6000 ரூபாய் வரை குறைந்துள்ளன. எனவே பெரும்பான்மையான மக்கள் தற்போது இதனை வாங்கி வருகின்றனர். ஆங்கிலத்திலுள்ள மின்புத்தகங்கள்: ஆங்கிலத்தில் லட்சக்கணக்கான மின்புத்தகங்கள் தற்போது கிடைக்கப் பெறுகின்றன. அவை PDF, EPUB, MOBI, AZW3. போன்ற வடிவங்களில் இருப்பதால், அவற்றை மேற்கூறிய கருவிகளைக் கொண்டு நாம் படித்துவிடலாம். தமிழிலுள்ள மின்புத்தகங்கள்: தமிழில் சமீபத்திய புத்தகங்களெல்லாம் நமக்கு மின்புத்தகங்களாக கிடைக்கப்பெறுவதில்லை. ProjectMadurai.com எனும் குழு தமிழில் மின்புத்தகங்களை வெளியிடுவதற்கான ஒர் உன்னத சேவையில் ஈடுபட்டுள்ளது. இந்தக் குழு இதுவரை வழங்கியுள்ள தமிழ் மின்புத்தகங்கள் அனைத்தும் PublicDomain-ல் உள்ளன. ஆனால் இவை மிகவும் பழைய புத்தகங்கள். சமீபத்திய புத்தகங்கள் இங்கு கிடைக்கப்பெறுவதில்லை. எனவே ஒரு தமிழ் வாசகர் மேற்கூறிய “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகளை” வாங்கும்போது, அவரால் எந்த ஒரு தமிழ் சமீபத்திய புத்தகத்தையும் இலவசமாகப் பெற முடியாது. சமீபத்திய புத்தகங்களை தமிழில் பெறுவது எப்படி? சமீபகாலமாக பல்வேறு எழுத்தாளர்களும், பதிவர்களும், சமீபத்திய நிகழ்வுகளைப் பற்றிய விவரங்களைத் தமிழில் எழுதத் தொடங்கியுள்ளனர். அவை இலக்கியம், விளையாட்டு, கலாச்சாரம், உணவு, சினிமா, அரசியல், புகைப்படக்கலை, வணிகம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு தலைப்புகளின் கீழ் அமைகின்றன. நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகச் சேர்த்து தமிழ் மின்புத்தகங்களை உருவாக்க உள்ளோம். அவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள் Creative Commons எனும் உரிமத்தின் கீழ் வெளியிடப்படும். இவ்வாறு வெளியிடுவதன் மூலம் அந்தப் புத்தகத்தை எழுதிய மூல ஆசிரியருக்கான உரிமைகள் சட்டரீதியாகப் பாதுகாக்கப்படுகின்றன. அதே நேரத்தில் அந்த மின்புத்தகங்களை யார் வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும், இலவசமாக வழங்கலாம். எனவே தமிழ் படிக்கும் வாசகர்கள் ஆயிரக்கணக்கில் சமீபத்திய தமிழ் மின்புத்தகங்களை இலவசமாகவே பெற்றுக் கொள்ள முடியும். தமிழிலிருக்கும் எந்த வலைப்பதிவிலிருந்து வேண்டுமானாலும் பதிவுகளை எடுக்கலாமா? கூடாது. ஒவ்வொரு வலைப்பதிவும் அதற்கென்றே ஒருசில அனுமதிகளைப் பெற்றிருக்கும். ஒரு வலைப்பதிவின் ஆசிரியர் அவரது பதிப்புகளை “யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்” என்று குறிப்பிட்டிருந்தால் மட்டுமே அதனை நாம் பயன்படுத்த முடியும். அதாவது “Creative Commons” எனும் உரிமத்தின் கீழ் வரும் பதிப்புகளை மட்டுமே நாம் பயன்படுத்த முடியும். அப்படி இல்லாமல் “All Rights Reserved” எனும் உரிமத்தின் கீழ் இருக்கும் பதிப்புகளை நம்மால் பயன்படுத்த முடியாது. வேண்டுமானால் “All Rights Reserved” என்று விளங்கும் வலைப்பதிவுகளைக் கொண்டிருக்கும் ஆசிரியருக்கு அவரது பதிப்புகளை “Creative Commons” உரிமத்தின் கீழ் வெளியிடக்கோரி நாம் நமது வேண்டுகோளைத் தெரிவிக்கலாம். மேலும் அவரது படைப்புகள் அனைத்தும் அவருடைய பெயரின் கீழே தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் நாம் அளிக்க வேண்டும். பொதுவாக புதுப்புது பதிவுகளை உருவாக்குவோருக்கு அவர்களது பதிவுகள் நிறைய வாசகர்களைச் சென்றடைய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். நாம் அவர்களது படைப்புகளை எடுத்து இலவச மின்புத்தகங்களாக வழங்குவதற்கு நமக்கு அவர்கள் அனுமதியளித்தால், உண்மையாகவே அவர்களது படைப்புகள் பெரும்பான்மையான மக்களைச் சென்றடையும். வாசகர்களுக்கும் நிறைய புத்தகங்கள் படிப்பதற்குக் கிடைக்கும் வாசகர்கள் ஆசிரியர்களின் வலைப்பதிவு முகவரிகளில் கூட அவர்களுடைய படைப்புகளை தேடிக் கண்டுபிடித்து படிக்கலாம். ஆனால் நாங்கள் வாசகர்களின் சிரமத்தைக் குறைக்கும் வண்ணம் ஆசிரியர்களின் சிதறிய வலைப்பதிவுகளை ஒன்றாக இணைத்து ஒரு முழு மின்புத்தகங்களாக உருவாக்கும் வேலையைச் செய்கிறோம். மேலும் அவ்வாறு உருவாக்கப்பட்ட புத்தகங்களை “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்”-க்கு ஏற்ற வண்ணம் வடிவமைக்கும் வேலையையும் செய்கிறோம். FreeTamilEbooks.com இந்த வலைத்தளத்தில்தான் பின்வரும் வடிவமைப்பில் மின்புத்தகங்கள் காணப்படும். PDF for desktop, PDF for 6” devices, EPUB, AZW3, ODT இந்த வலைதளத்திலிருந்து யார் வேண்டுமானாலும் மின்புத்தகங்களை இலவசமாகப் பதிவிறக்கம்(download) செய்து கொள்ளலாம். அவ்வாறு பதிவிறக்கம்(download) செய்யப்பட்ட புத்தகங்களை யாருக்கு வேண்டுமானாலும் இலவசமாக வழங்கலாம். இதில் நீங்கள் பங்களிக்க விரும்புகிறீர்களா? நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் தமிழில் எழுதப்பட்டிருக்கும் வலைப்பதிவுகளிலிருந்து பதிவுகளை எடுத்து, அவற்றை LibreOffice/MS Office போன்ற wordprocessor-ல் போட்டு ஓர் எளிய மின்புத்தகமாக மாற்றி எங்களுக்கு அனுப்பவும். அல்லது www.pressbooks.com தளத்தையும் பயன்படுத்தலாம். அவ்வளவுதான்! மேலும் சில பங்களிப்புகள் பின்வருமாறு: 1. ஒருசில பதிவர்கள்/எழுத்தாளர்களுக்கு அவர்களது படைப்புகளை “Creative Commons” உரிமத்தின்கீழ் வெளியிடக்கோரி மின்னஞ்சல் அனுப்புதல் 2. தன்னார்வலர்களால் அனுப்பப்பட்ட மின்புத்தகங்களின் உரிமைகளையும் தரத்தையும் பரிசோதித்தல் 3. சோதனைகள் முடிந்து அனுமதி வழங்கப்பட்ட தரமான மின்புத்தகங்களை நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்தல் விருப்பமுள்ளவர்கள் freetamilebooksteam@gmail.comஎனும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.         இந்தத் திட்டத்தின் மூலம் பணம் சம்பாதிப்பவர்கள் யார்? யாருமில்லை. இந்த வலைத்தளம் முழுக்க முழுக்க தன்னார்வலர்களால் செயல்படுகின்ற ஒரு வலைத்தளம் ஆகும். இதன் ஒரே நோக்கம் என்னவெனில் தமிழில் நிறைய மின்புத்தகங்களை உருவாக்குவதும், அவற்றை இலவசமாக பயனர்களுக்கு வழங்குவதுமே ஆகும். மேலும் இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள், ebook reader ஏற்றுக்கொள்ளும் வடிவமைப்பில் அமையும். இத்திட்டத்தால் பதிப்புகளை எழுதிக்கொடுக்கும் ஆசிரியர்/பதிவருக்கு என்ன லாபம்? ஆசிரியர்/பதிவர்கள் இத்திட்டத்தின் மூலம் எந்தவிதமான தொகையும் பெறப்போவதில்லை. ஏனெனில், அவர்கள் புதிதாக இதற்கென்று எந்தஒரு பதிவையும் எழுதித்தரப்போவதில்லை. ஏற்கனவே அவர்கள் எழுதி வெளியிட்டிருக்கும் பதிவுகளை எடுத்துத்தான் நாம் மின்புத்தகமாக வெளியிடப்போகிறோம். அதாவது அவரவர்களின் வலைதளத்தில் இந்தப் பதிவுகள் அனைத்தும் இலவசமாகவே கிடைக்கப்பெற்றாலும், அவற்றையெல்லாம் ஒன்றாகத் தொகுத்து ebook reader போன்ற கருவிகளில் படிக்கும் விதத்தில் மாற்றித் தரும் வேலையை இந்தத் திட்டம் செய்கிறது. தற்போது மக்கள் பெரிய அளவில் tablets மற்றும் ebook readers போன்ற கருவிகளை நாடிச் செல்வதால் அவர்களை நெருங்குவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். நகல் எடுப்பதை அனுமதிக்கும் வலைதளங்கள் ஏதேனும் தமிழில் உள்ளதா? உள்ளது. பின்வரும் தமிழில் உள்ள வலைதளங்கள் நகல் எடுப்பதினை அனுமதிக்கின்றன. 1. www.vinavu.com 2. http://jayabarathan.wordpress.com/ 3. kaniyam.com 4. blog.ravidreams.net 5. http://mmauran.net/blog 6. http://gnutamil.blogspot.in/ 7. http://tech.neechalkaran.com/p/copyleft.html 8. http://tamilcpu.blogspot.in எவ்வாறு ஒர் எழுத்தாளரிடம் Creative Commons உரிமத்தின் கீழ் அவரது படைப்புகளை வெளியிடுமாறு கூறுவது? இதற்கு பின்வருமாறு ஒரு மின்னஞ்சலை அனுப்ப வேண்டும். <துவக்கம்> உங்களது வலைத்தளம் அருமை [வலைதளத்தின் பெயர்]. தற்போது படிப்பதற்கு உபயோகப்படும் கருவிகளாக Mobiles மற்றும் பல்வேறு கையிருப்புக் கருவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது. இந்நிலையில் நாங்கள் http://www.FreeTamilEbooks.com எனும் வலைதளத்தில், பல்வேறு தமிழ் மின்புத்தகங்களை வெவ்வேறு துறைகளின் கீழ் சேகரிப்பதற்கான ஒரு புதிய திட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இங்கு சேகரிக்கப்படும் மின்புத்தகங்கள் பல்வேறு கணிணிக் கருவிகளான Desktop,ebook readers like kindl, nook, mobiles, tablets with android, iOS போன்றவற்றில் படிக்கும் வண்ணம் அமையும். அதாவது இத்தகைய கருவிகள் support செய்யும் odt, pdf, ebub, azw போன்ற வடிவமைப்பில் புத்தகங்கள் அமையும். இதற்காக நாங்கள் உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை பெற விரும்புகிறோம். இதன் மூலம் உங்களது பதிவுகள் உலகளவில் இருக்கும் வாசகர்களின் கருவிகளை நேரடியாகச் சென்றடையும். எனவே உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை பிரதியெடுப்பதற்கும் அவற்றை மின்புத்தகங்களாக மாற்றுவதற்கும் உங்களது அனுமதியை வேண்டுகிறோம். இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்களில் கண்டிப்பாக ஆசிரியராக உங்களின் பெயரும் மற்றும் உங்களது வலைதள முகவரியும் இடம்பெறும். மேலும் இவை “Creative Commons” உரிமத்தின் கீழ் மட்டும்தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் அளிக்கிறோம். http://creativecommons.org/licenses/ http://creativecommons.org/choose/ நீங்கள் எங்களை பின்வரும் முகவரிகளில் தொடர்பு கொள்ளலாம். e-mail : freetamilebooksteam@gmail.com FB : https://www.facebook.com/FreeTamilEbooks G +: https://plus.google.com/communities/108817760492177970948   நன்றி. மேற்கூறியவாறு ஒரு மின்னஞ்சலை உங்களுக்குத் தெரிந்த அனைத்து எழுத்தாளர்களுக்கும் அனுப்பி அவர்களிடமிருந்து அனுமதியைப் பெறுங்கள். முடிந்தால் அவர்களையும் “Creative Commons License”-ஐ அவர்களுடைய வலைதளத்தில் பயன்படுத்தச் சொல்லுங்கள். கடைசியாக அவர்கள் உங்களுக்கு அனுமதி அளித்து அனுப்பியிருக்கும் மின்னஞ்சலைfreetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு அனுப்பி வையுங்கள். ஓர் எழுத்தாளர் உங்களது உங்களது வேண்டுகோளை மறுக்கும் பட்சத்தில் என்ன செய்வது ? அவர்களையும் அவர்களது படைப்புகளையும் அப்படியே விட்டுவிட வேண்டும். ஒருசிலருக்கு அவர்களுடைய சொந்த முயற்சியில் மின்புத்தகம் தயாரிக்கும் எண்ணம்கூட இருக்கும். ஆகவே அவர்களை நாம் மீண்டும் மீண்டும் தொந்தரவு செய்யக் கூடாது. அவர்களை அப்படியே விட்டுவிட்டு அடுத்தடுத்த எழுத்தாளர்களை நோக்கி நமது முயற்சியைத் தொடர வேண்டும். மின்புத்தகங்கள் எவ்வாறு அமைய வேண்டும்? ஒவ்வொருவரது வலைத்தளத்திலும் குறைந்தபட்சம் நூற்றுக்கணக்கில் பதிவுகள் காணப்படும். அவை வகைப்படுத்தப்பட்டோ அல்லது வகைப்படுத்தப் படாமலோ இருக்கும். நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகத் திரட்டி ஒரு பொதுவான தலைப்பின்கீழ் வகைப்படுத்தி மின்புத்தகங்களாகத் தயாரிக்கலாம். அவ்வாறு வகைப்படுத்தப்படும் மின்புத்தகங்களை பகுதி-I பகுதி-II என்றும் கூட தனித்தனியே பிரித்துக் கொடுக்கலாம். தவிர்க்க வேண்டியவைகள் யாவை? இனம், பாலியல் மற்றும் வன்முறை போன்றவற்றைத் தூண்டும் வகையான பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டும். www.freetamilebooks.com எனும் தளம் தயார் நிலையில் உள்ளதா ? தற்சமயம் இல்லை. கூடிய விரைவில் தயார்நிலைக்கு வந்துவிடும். எங்களைத் தொடர்பு கொள்வது எப்படி? நீங்கள் பின்வரும் முகவரிகளில் எங்களைத் தொடர்பு கொள்ளலாம். - email : freetamilebooksteam@gmail.com - Facebook: https://www.facebook.com/FreeTamilEbooks - Google Plus: https://plus.google.com/communities/108817760492177970948 இத்திட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் யார்? - Shrinivasan tshrinivasan@gmail.com - Alagunambi Welkin alagunambiwelkin@fsftn.org - Arun arun@fsftn.org - இரவி Supported by - Free Software Foundation TamilNadu, www.fsftn.org - Yavarukkum Software Foundation http://www.yavarkkum.org/   2 வினவு - அறிமுகம் http://www.vinavu.com/we/ [http://4.bp.blogspot.com/-ipAW4E57ZOY/T9Mi3SqPERI/AAAAAAAABOw/ZOtDu14kB0E/s200/366169_300.jpg]   வினவு என்பது தனிநபரல்ல. நாங்கள் மக்கள் கலை இலக்கியக் கழகம் என்ற புரட்சிகரப் பண்பாட்டு அமைப்பின் ஆதரவாளர்கள். இயக்கப் பணிகள் மற்றும் வாழ்க்கைப் பணிகளுக்கிடையே பல்வேறு அரசியல் பண்பாட்டுப் பிரச்சினைகள் குறித்த எமது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதே வினவின் நோக்கம். இந்து பத்திரிகைக்கு லெட்டர் டு எடிட்டர் எழுதுபவருக்கும் வலைப்பூவின் பதிவருக்கும் என்ன வேறுபாடு? முன்னவரின் கொள்கை வேகமும், நோக்கமும் பின்னவருக்கு உண்டா? இல்லை என்றுதான் சொல்லவேண்டும். பல குளியலறைப் பாடகர்களை வலைப்பூ, மேடைக் கலைஞர்களாக மாற்றியிருப்பது உண்மையே. எனினும் இந்த வலைப்பூ மோகம் இளம்பருவக் கோளாறாக, சம்சார சாகரத்தில் மூழ்குமுன் இளமைக்கு வாய்க்கப்பெற்ற ஒரு உல்லாசப் படகுச் சவாரியாக ஆகிவிடக்கூடாது என்பதே எம் விருப்பம். வயிற்றுப் பாட்டுக்காக எங்கோ ஒரு ஆப்பிரிக்க நாட்டுக்கு விரட்டப்பட்ட மதுரைக்காரரும், கனடாவில் கோப்பை கழுவும் ஒரு ஈழத்தமிழரும், சென்னையின் ஒரு ஐ.டி தொழிலாளியும் ஒரே நேரத்தில் வினவின் பதிவுகளைப் படிக்கிறார்கள். மொழி எனும் வரம்பைக் கடந்துவிட்டால் ஒரு கருப்பினத் தொழிலாளியும், வெள்ளையினத் தொழிலாளியும் கூட நம் கலந்துரையாடலில் பங்கேற்க முடியும். “உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்” என்றார் கார்ல் மார்க்ஸ். உலகத் தொழிலாளி வர்க்கத்தைச் சூறையாடும் உலக முதலாளித்துவத்தையும், அதன் பங்குச் சந்தை சூதாடிகளையும், உலகப் பணக்கார வர்க்கத்தின் உல்லாச வக்கிரங்களையும் ஒரு சொடுக்கில் பரப்புகிறது இணையம். வங்கி முதலாளிகளின் நிதிமோசடியால் வீடிழந்த அமெரிக்கனின் உணர்வையும், வேலையிழந்த சென்னை ஐ.டி தொழிலாளியின் உணர்வையும் ஒரு வலைப்பூவால் இணைக்க முடியாதா? தேசத்தால், நிறத்தால், இனத்தால் வேறுபட்ட உழைக்கும் வர்க்கத்தின் வாழ்க்கையை, போராட்டத்தை, எதிர்பார்ப்புகளை, ஏமாற்றங்களை, அவை குறித்த கருத்துகளை பரிமாறிக் கொள்வதன் மூலம் பொதுவானதோர் கனவை, இலட்சியத்தை நாம் உருவாக்கிக் கொள்ள முடியாதா? முடியும் என்றே நம்புகிறோம். இது கொஞ்சம் பேராசைதான். இணையம் எனும் இந்த மெய்நிகர் உலகில் (virtual world) ஒரு பதிவர், தன் மெய்யுடலை மறைத்துக் கொண்டு கருத்துகளை மட்டும் உலவச்செய்யலாம் என்ற சாத்தியம், இணையத்தை ஒரு மெய்நிகர் திண்ணையாக்கியிருப்பதையும் காண்கிறோம். எள்ளல், அங்கதம், சம்பிரதாயமின்மை, கலகம் என்ற வண்ணங்களை இழந்து வலைப்பூக்கள் சீருடை அணிவகுப்பு நடத்தத் தேவையில்லை. அதே நேரத்தில் திண்ணைகளுக்கு வண்ணம் தீட்டுவதால் பயனும் இல்லை. அரட்டையாளர்கள் கேள்வி கேட்பதில்லை. பதிலும் அளிப்பதில்லை. அறிவியலின் உன்னதத்தை ‘சொடுக்குப் போட்டு’ அழைக்கும் பல பதிவர்களின் கைகள் அரசையும் மதத்தையும் கைகூப்பித் தொழுகின்றன. சாதியின் விரல் பிடித்து நடக்கின்றன. சமூக அநீதிகள் கண்டு நடுக்கம் கொள்கின்றன அல்லது எனக்கென்ன என்று தோளைக் குலுக்குகின்றன. அரட்டைக்கும் செயலின்மைக்கு இணையம் வழங்கியிருக்கும் இந்த வாய்ப்பை உதறுங்கள் என்று கோருவதற்காகத்தான் எமது வலைப்பூவுக்கு வினவு, வினை செய் என்று பெயரிட்டிருக்கிறோம். மெய்யுலகத்தின் அநீதிகளிலிருந்து மக்களை விடுவிக்கும் பணியை மெய்நிகர் உலகமும் ஆற்ற வேண்டும் என்பதே எம் அவா. மாற்றுக் கருத்து கொண்டோர் உரையாட வருக. ஒத்த கருத்துள்ளோர் வினையாற்ற வருக. நாம் மெய் நிகர் மனிதர்களல்ல, மெய் மனிதர்கள்.