[] 1. Title Page 2. Cover 3. Table of Contents வாழ்க்கை வாழ்க்கை   லியோ டால்ஸ்டாய்     மின்னூல் வெளியீடு : FreeTamilEbooks.com   உரிமை : CC0 கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.   அட்டைப்படம் - லெனின் குருசாமி - guruleninn@gmail.com   மின்னூலாக்கம் - ஐஸ்வர்யா லெனின் - aishushanmugam09@gmail.com   This book was produced using pandoc   பதிவிறக்கம் செய்ய - http://FreeTamilEbooks.com/ebooks/vaazhkai_leo_tolstoy மின்னூல் வெளியீட்டாளர்: http://freetamilebooks.com அட்டைப்படம்: லெனின் குருசாமி - guruleninn@gmail.com மின்னூலாக்கம்: ஐஸ்வர்யா லெனின் - aishushanmugam09@gmail.com மின்னூலாக்க செயற்திட்டம்: கணியம் அறக்கட்டளை - kaniyam.com/foundation Ebook Publisher: http://freetamilebooks.com Cover Image: Lenin Gurusamy - guruleninn@gmail.com Ebook Creation: Iswarya Lenin - aishushanmugam09@gmail.com Ebook Project: Kaniyam Foundation - kaniyam.com/foundation பதிவிறக்கம் செய்ய - http://freetamilebooks.com/ebooks/vaazhkai_leo_tolstoy This Book was produced using LaTeX + Pandoc இந்த மின்னூலைப் பற்றி உங்களுக்கு இம்மின்னூல், இணைய நூலகமான, விக்கிமூலத்தில் இருந்து கிடைத்துள்ளது1 இந்த இணைய நூலகம் தன்னார்வலர்களால் வளருகிறது. விக்கிமூலம் பதிய தன்னார்வலர்களை வரவேற்கிறது. தாங்களும் விக்கிமூலத்தில் இணைந்து மேலும் பல மின்னூல்களை அனைவரும் படிக்குமாறு செய்யலாம். மிகுந்த அக்கறையுடன் மெய்ப்பு செய்தாலும், மின்னூலில் பிழை ஏதேனும் இருந்தால் தயக்கம் இல்லாமல், விக்கிமூலத்தில் இம்மின்னூலின் பேச்சு பக்கத்தில் தெரிவிக்கலாம் அல்லது பிழைகளை நீங்களே கூட சரி செய்யலாம். இப்படைப்பாக்கம், கட்டற்ற உரிமங்களோடு (பொதுகள /குனு -Commons /GNU FDL )2 [3] (http://www.gnu.org/copyleft/fdl.html) இலவசமாக அளிக்கப்படுகிறது. எனவே, இந்த உரையை நீங்கள் மற்றவரோடு பகிரலாம்; மாற்றி மேம்படுத்தலாம்; வணிக நோக்கத்தோடும், வணிக நோக்கமின்றியும் பயன்படுத்தலாம் இம்மின்னூல் சாத்தியமாவதற்கு பங்களித்தவர்கள் பின்வருமாறு: - Fathima kaniyam - Deepa arul kaniyam - Info-farmer - Arularasan. G - Balajijagadesh - Tshrinivasan - HoboJones - Be..anyone - Fleshgrinder - Patricknoddy-commonswiki - Mecredis - Rocket000 - Xato உலகளாவிய பொதுக் கள உரிமம் (CC0 1.0) இது சட்ட ஏற்புடைய உரிமத்தின் சுருக்கம் மட்டுமே. முழு உரையை https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode என்ற முகவரியில் காணலாம். பதிப்புரிமை அற்றது இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர். நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை. இது, உலகத் தமிழ் விக்கியூடகச் சமூகமும் ( https://ta.wikisource.org ), தமிழ் இணையக் கல்விக் கழகமும் ( http://tamilvu.org ) இணைந்த கூட்டுமுயற்சியில், பதிவேற்றிய நூல்களில் ஒன்று. இக்கூட்டு முயற்சியைப் பற்றி, https://ta.wikisource.org/s/4kx என்ற முகவரியில் விரிவாகக் காணலாம். Universal (CC0 1.0) Public Domain Dedication This is a human readable summary of the legal code found at https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode No Copyright The person who associated a work with this deed has dedicated the work to the public domain by waiving all of his or her rights to the work worldwide under copyright law including all related and neighboring rights, to the extent allowed by law. You can copy, modify, distribute and perform the work even for commercial purposes, all without asking permission. This book is uploaded as part of the collaboration between Global Tamil Wikimedia Community ( https://ta.wikisource.org ) and Tamil Virtual Academy ( http://tamilvu.org ). More details about this collaboration can be found at https://ta.wikisource.org/s/4kx. முன்னுரை லியோ டால்ஸ்டாய் மாபெருங் கலைஞர் என்றும், இலக்கிய மேதை என்றும் உலகமே கொண்டாடுகின்றது. நம் நாட்டு அறிவாளரிடையே அவருடைய நூல்கள் அதிகப் புகழ் பெற்றிருக்கின்றன. டால்ஸ்டாய்க்கும் மகாத்மா காந்திக்கும் ஏற்பட்டிருந்த நெருங்கிய தொடர்பாலும், தீமையைப் பலாத்காரத்தால் எதிர்க்கக் கூடாது என்று அவர் போதித்த கொள்கையைக் காந்தியடிகள் பின்பற்றித் தென்னாபிரிக்காவிலும் இந்தியாவிலும் பெரிய இயக்கங்களை நடத்தி வந்ததாலும், அவருடைய நூல்களில் இந்திய மக்கள் அதிகக் கவனம் செலுத்துகின்றனர். முக்கியமாகத் தென்னாட்டில் ஆங்கிலத்திலுள்ள டால்ஸ்டாயின் நூல்களைப் படிப்பவர்கள் பலர் இருக்கின்றனர். இப்போது அந் நூல்களில் சில தமிழிலும் வெளிவந்திருக்கின்றன. அறிஞர் டால்ஸ்டாய் கலைச்சுவை நிரம்பிய பல கதைகளையும் நாவல்களையும் எழுதியுள்ளார். இவை உலகத்தின் இலக்கியச் செல்வத்தோடு சேர்ந்துவிட்டன. அவருடைய நாடகங்களையும் பெர்னார்ட் ஷா போன்ற பல பெரிய ஆசிரியர்களே பாராட்டியிருக்கின்றனர். அவர் எழுதிய கட்டுரைகளும், கடிதங்களும், ஆராய்ச்சிகளும் அனந்தம். பண்பட்ட அவருடைய உள்ளத்திலிருந்து ஒரே வெள்ளமாகப் பெருகிக் கொண்டிருந்த கருத்துக்களும் கற்பனைகளும் பற்பல எழுத்தோவியங்களாக அமைந்திருக்கின்றன. டால்ஸ்டாயின் கதைகளையும் நவீனங்களையும் மக்கள் படிக்கும் அளவுக்கு அவருடைய கட்டுரைகளைப் படிப்பதில்லை. அறிஞர்கள் ஆழ்ந்த கருத்துக்களுக்காக அவைகளைப் படிக்கலாம். காந்தீயவாதிகள் சிலர் கொள்கைக்காக அவைகளைப் போற்றலாம். பொதுவாக மற்றவர்கள் எல்லோரும் அவைகளை ஆர்வத்தோடு படிப்பதில்லை. இக் கட்டுரைகள் மதம், அரசாங்கம், பொருளாதாரம், சமூக அமைப்பு. ஒழுக்கம் முதலிய பல விஷயங்களையும் பற்றியவை. இவைகளில் ரஷ்ய மேதையான டால்ஸ்டாயின் ஆணித்தாரமான அபிப்பிராயங்களைக் காணலாம். ஆனால், கதைகளைப் படிப்பதுபோல் இவைகளை இலேசாகப் படித்துத் தள்ளிவிட முடியாது. இவைகளைப் பொறுமையோடு ஊன்றிப் படிக்க வேண்டியிருக்கும். இத்தகைய கட்டுரைகளில் முக்கியமான ஒன்று ‘வாழ்க்கை’, இது மிகவும் விரிவானது. உலகம், உயிர், உடல், வாழ்வு, மரணம், இன்பம், துன்பம் முதலிய விஷயங்களைப் பற்றி இந்நூலில் விரிவாக ஆராய்ச்சிசெய்யப் பெற்றிருக்கிறது. இது டால்ஸ்டாயின் தனி ஆராய்ச்சி-சமய நூல்கள், புராணங்களிலுள்ள வாக்கியங்களைத் தொகுத்துக் கூறப்பட்டதன்று. ஆசிரியர் தாமாகவே ஆராயாது, உண்மையான மனித வாழ்க்கை எது என்பதை இதில் எடுத்துக் காட்டியிருக்கிறார். டால்ஸ்டாயின் 81-வருட வாழ்க்கை எத்தனையோ மாறுதல்கள் ஏற்பட்டிருந்தன. சிறு வயது முதலே அவருக்குத் தத்துவ ஞானத்தில் பற்றுண்டு. பிறவியிலிருந்தே அவர் கிறிஸ்தவர். ஆனால், பதினாறாவது வயதில் கிறிஸ்தவ மத ஸ்தாபனமான ரஷ்ய சர்ச்சிடம் -அவருக்கிருந்த நம்பிக்கை போய்விட்டது. பின்னர் என்ன என்னவோ ஆராய்ச்சிகள் செய்யத் தொடங்கினார். இறைவனைப் பற்றியும் ஆன்மாவைப் பற்றியும் அவருக்கு அவரும் நம்பிக்கை ஏற்பட்டது. இறுதியாகப் பத்தொன்பதாவது வயதில், அவருக்கு எதிலும் நம்பிக்கையில்லாது போயிற்று. ஆயினும், இருபத்து மூன்றாவது வயதிலிருந்து மறுபடியும் தத்துவ - ஆராய்ச்சியில் அவர் மனம் ஈடுபட்டு வந்தது. இடையில் சில ஆண்டுகள் அவர் பட்டாளத்தில் சேர்ந்து பணியாற்றி வந்தார். இரண்டு பெரிய போர்களில் அவர் நேரில் கலந்துகொள்ள வேண்டியிருந்தது. பின்னால் போர்த் தொழிலையே வெறுத்து இராணுவத்திலிருந்து வெளியேறினார். மனிதரை மனிதர் அரிந்து தள்ளுவதும், சுட்டு வதைப்பதும் மகா பாவம் என்றும் உலகிலேபோரை ஒழித்துவிட வேண்டும் என்றும் அவர் ஒரு பெரிய பிரசாரப் போரை ஆரம்பித்தார். இந்நிலையில் அவர் மறுபடி கிறிஸ்தவ சர்ச்சில் சேரலாம் என்று கருதினார். ஆனால், அக்காலத்தில் ரஷ்யாவில் அந்த ஸ்தாபனம் லேவாதேவிக் கடைபோல் இருந்ததே தவிர, கிறிஸ்துநாதரின் உண்மையான போதனைகளுக்கு அதில் இடமில்லை. ரஷ்யப் புரட்சித் தலைவா லெனின் கூறியிருப்பது போல், பாதிரிமார்கள் நீண்ட அங்கிகள் அணிந்த அரசாங்க உத்தியோகஸ்தர்களாகவும், கிறிஸ்து நாதரின் போலீஸ் படையினராகவும் இருந்தனர். டால்ஸ்டாய் போன்ற அறிஞருக்கும் இவர்களுக்கும் ஒத்துவருமா? கிறிஸ்தவ சபையில் சேர்ந்து பெயரளவில் கிறிஸ்தவராகயிருப்பதைவிட, கிறிஸ்துவின் உண்மையான அடியாராயிருக்கவே டால்ஸ்டாய் விரும்பினார். சர்ச்சுக்கு வெளியில் இருந்துகொண்டே அவர் சமய ஆராய்ச்சி செய்துகொண்டிருந்தார். அவருடைய ஆராய்ச்சிகளையும், கொள்கையும் கண்டு ரஷ்ய சர்ச் அவரைப் ‘பிரஷ்டம்’ செய்து ஒதுக்கிவிட்டது. அக்காலத்தில் டால்ஸ்டாயின் இலக்கியத்தை உலகில் பல நாடுகளும் போற்றி வந்தன. அவர் தமது ஐம்பதாவது வயதில் (1877-இல்) சமய ஆராய்ச்சியில் தீவிரமாக இறங்கிப் பத்து ஆண்டுகளாக அதிலேயே ஈடுபட்டிருந்தார். அந்த ஆராய்ச்சியன் விளைவாக அவர் எழுதிய கட்டுரைகளில் ஒன்று இந்த ‘வாழ்க்கை’. இந் நூலை ரஷ்ய நாட்டில் வெளியிடக் கூடாது என்று அக்காலத்தில் ஜார் சக்கரவர்த்தியின் அரசாங்கம் தடை செய்து விட்டது. பல ஆண்டுகட்குப் பின் இது முதன் முதலாக சுவிட்ஜர்லாந்து தேசத்தில் வெளியிடப் பெற்றது. பின்னர் பிரெஞ்சு மொழியிலும், ஆங்கிலம் முதலிய மொழிகளிலும் வெளி வந்தது. இந்தத் தமிழ் மொழிபெயர்ப்பு ‘ப்ரீ ஏஜ் பிரஸ்’ (Free Age Press) வெளியிட்ட நூலிலிருந்து சுருக்கி எழுதப் பெற்றது. இந் நூலின் ஆரம்பத்தில் ஆசிரியர் ‘வாழ்க்கை என்பது என்ன?’ என்ற கேள்விக்குப் பதில் கூறுகிறார். நூலின் மூடிவில், மரணத்தைப் பற்றி ஆராய்ந்து, ‘மரணம் என்பது என்ன?’ என்பதை விளக்கியுள்ளார். இந் நூல் ஆசிரியரின் அரிய ஆராய்ச்சிகளில் ஒன்று. அவருடைய மற்ற நூல்களுக்கும், அவருடைய வாழ்க்கைக்கும் இதை ஒரு திறவுகோல் என்று சொல்லலாம். இந் நூல் சொல்லுக்குச் சொல்லாக மொழி பெயர்க்கப் பெறவில்லை. ஆசிரியரின் கருத்துக்களையே சுருக்கி எழுதியுள்ளேன். எவ்வளவு தெளிவாக எழுதினாலும், விஷயம் பெரிதாகையால், ஒவ்வொரு வரியையும் படித்த பிறகு சிந்தனை செய்து பார்த்தால்தான் பொருள் விளங்கும். திருநெல்வேலி 25-3-’56 ப ராமஸ்வாமி மானிட வாழ்வின் முக்கிய முரண்பாடு மனிதன் தன் சொந்த இன்பத்திற்காகவே வாழ்கிறான். ஒவ்வொருவனும் தனது நலனுக்காகவே வாழ்கிறான். சொந்த நன்மையில் நாட்டமில்லாமற் போனால் மனிதன் தான் உயிருடன் வாழ்வதாகவே எண்ணுவதில்லை. தன் சுயநலத்தைச் சேர்க்காமல் தனியாக வாழ்க்கையைப் பற்றிச் சிந்திக்கவே அவனால் முடிவதில்லை. தன் நன்மையை நாடுதலும், அதை அடைதலுமே வாழ்க்கை என்பது அவன் கருத்து. மனிதன் தன்னையும் தன் தனித் தன்மையையும் கொண்டே வாழ்க்கையைப் பற்றி உணருகிறான். அதனால் தான் அவன் விரும்பும் நன்மை என்பது தன் தனி நலம் என்று ஆரம்பத்தில் நம்புகிறான். வாழ்க்கை - உண்மையான வாழ்க்கை, தன் சொந்த வாழ்வு மட்டுமே என்று அவனுக்குத் தோன்றுகிறது. மற்ற மக்களின் வாழ்க்கை தன் வாழ்விலிருந்து முற்றும் வேறுபட்டதாக அவனுக்குத் தோன்றுகிறது. அவர்களுடைய வாழ்க்கை வெறுந் தோற்றம் என்று அவன் கருதுகிறான். அவன் விரும்பும் போது தான் மற்றவர் வாழ்க்கையைப் பற்றி எண்ணிப் பார்க்கிறான். ஆனால், தன்னைப் பற்றித்தான் அவனுக்கு நன்றாகத் தெரியும். தான் வாழ்ந்து வருவதை அவன் ஒரு கணமேனும் அறியாமல் இருக்க முடியாது. எனவே, அவனுடைய சொந்த வாழ்க்கையே உண்மையானதாகக் காட்சியளிக்கிறது. அவனைச் சுற்றியுள்ள மக்களின் வாழ்க்கையும் அவனுக்காகவே ஏற்பட்டதென்று தோன்றுகிறது. அவன் மற்றவர்களுக்கு நன்மையோ தீமையோ செய்கிறான் என்றால், அவைகளும் அவனுடைய சொந்த நன்மைக்காகத்தான். பிறருக்கு நன்மை செய்தால் அது தன் நலனைப் பெருக்கும் என்ற காரணத்தாலேயே அவன் அதனைச் செய்கிறான். மற்றவர்கள் துயரப்படுவதைப் பார்த்தால் அவன் நன்மை குலைவதால், அவன் அவர்களுக்குத் தீங்கு நினைப்பதில்லை. அவனுக்கு முக்கியமாக வேண்டியதெல்லாம் தன் நலன் ஒன்று தான். தன் நலன் ஒன்றிலேயே நாட்டமுள்ள மனிதன் அந்த நலனும் மற்றவர்களையே பொறுத்திருப்பதைக் காண்கிறான். அவனைப்போலவே மற்ற மனிதர்களும் விலங்கினங்களும் தம் வாழ்க்கையைப் பற்றி எண்ணுவதையும் அவன் அறிகிறான். ஒவ்வோர் உயிருக்கும் தன் வாழ்வே பெரிது, தன் நலனே முக்கியம் என்ற உணர்ச்சி இருக்கிறது. அப்படியிருந்தும் மனிதன் எல்லா உயிர்களும் தான் சுகத்திற்காகவே அமைந்தவை என்று கருதுகிறான். உலகில் ஒவ்வொரு பிராணியும், தனக்கு அற்ப நன்மை கிடைப்பதற்காக, மற்ற உயிப்பிராணிகளின் நன்மையையும் உயிரையும் கூடப் பறிக்க வேண்டியிருக்கிறது. இதைப் பற்றி ஆராய்ந்து பார்க்கும் மனிதன், தனக்கு மட்டுமே வாழ்க்கை ஏற்பட்டிருந்த போதிலும், தனக்கு எதிராக வேறு பலர் இருப்பதைக் காண்கிறான். உலகமெங்கும் பரவி வாழும் உயிர்கள் பல தங்கள் தங்களுடைய சுய நன்மைக்காக அவனை அழித்துவிட ஒவ்வொரு கணமும் தயாராயிருக்கின்றன. மனிதன் தன் நன்மையை அளவுகோலாகக் கொண்டே வாழ்க்கையை உணர்ந்துகொள்ள முடிகிறது. அந்த நன்மையை அடைவதும் சிரமமாயிருக்கிறது. அடைந்த நன்மையையும் மற்றவர் பறித்துவிடக்கூடும் என்பதும் புலனாகின்றது. மனிதனுக்கு வயது ஆக ஆக, அநுபவம் பெருகப் பெருக, உண்மை நிலைமை தெளிவாகின்றது உலகிலே பல மக்கள் கூடி வாழ்கின்றனர் ; தம்மிலேயே ஒருவரையொருவர் அழிக்கவும் விழுங்கிவிடவும் முயன்று கொண்டிருக்கின்றனர். அவர்களின் நடுவேயுள்ள ஒருவன் தான் தனி மனிதன். ஆகவே, வாழ்வு இன்பமாயிராமல் நிச்சயம் தீமையாகவேயிருக்கும் என்று அவனுக்குத் தோன்றுகிறது. வாழ்க்கைப் போராட்டத்தில் அவன் அபாயங்களை பொய்யா தாண்டி வெற்றி பெறுவதாகவே வைத்துக்கொண்டாலும், வாழ்விலிருந்து அவன் பெறக்கூடிய இன்பங்கள் உண்மையான நன்மைகளா யிருப்பதில்லை. அவை இன்பத்தின் தோற்றங்களாகவே இருப்பதோடு, அவைகளைத் தொடர்ந்து துன்பங்கள் வந்து பெருகுகின்றன. இந்தத் துன்பங்களை அதிகமாக உணர்வதற்காக மட்டுமே சிறு சிறு துளிகளாக வரும் இன்பம் பயன்படுகின்றது. ஆராய்ச்சி அறிவும், அநுபவமும் மனிதனுக்கு இவ்விஷயங்களைப் புலப்படுத்துகின்றன. ஒருவன் வாழ்க்கையில் மேலே போகப் போக, இன்பங்கள் அருகிக்கொண்டே வருகின்றன ; களைப்பும் தெவிட்டுதலும் தோன்றுகின்றன ; கஷ்டங்களும் துன்பங்களும் பெருகிக்கொண்டே யிருக்கின்றன. இவைமட்டுமல்ல, மூப்பு அதிகரிக்க ஆரம்பிக்கும்போது, மற்ற மனிதர்களின் நோய்களும், கிழப் பருவமும், மரணமும் மனிதன் கண்முன்பு தென்படுகின்றன. தனக்கும் அவையே கதி என்பதை அவன் அறிகிறான். ஒவ்வொரு கணமும் அவன் தன் வாழ்வு தேய்ந்துகொண்டே வருவதையும், ஒவ்வொரு கணத்திலும் தான் மூப்பு, தளர்ச்சி, மரணம் ஆகியவற்றை நோக்கிப் போய்க்கொண்டிருப்பதையும் தெரிந்து கொள்கிறான். அவனோடு போட்டியிடும் மற்ற ஜீவன்கள் ஆயிரக் கணக்கான சந்தர்ப்பங்களில் அவனுக்கு அபாயம் விளைக்கத் தயாராக இருக்கின்றன. துன்பங்களும் பெருகிக் கொண்டே வருகின்றன. இத்தனைக்கும் நடுவே வாழ்வு மரணத்தை நோக்கியே யாத்திரை செய்துகொண்டிருக்கிறது. இந்த யாத்திரையில் ஓய்வுமில்லை ; ஒழிவுமில்லை. மரணத்துடன் மனிதனுடைய தனி வாழ்வு முடிவுறும் ; மேற்கொண்டு தனி நன்மை எதுவுமேயில்லாத அழிவு நிலையே அவனை எதிர்பார்த்துக் காத்திருக்கிறது. இந்த நிலைமைகளை அவன் காண்கிறான். மனிதன் தன் தனியான இயல்பே வாழ்க்கை என்று கருதி வருகையில், அவ் வாழ்க்கை உலகம் அனைத்தையும் எதிர்த்து நிற்க வேண்டியிருக்கிறது. ஆனால், உலகத்தையோ யாரும் எதிர்த்து நிற்க முடியாது. இந்நிலையில் மானிடன் பெறவேண்டுமென்று கருதும் இன்பங்கள் வெறும் நிழல்களாக விளங்குகின்றன. இன்பங்கள் எல்லாம் துன்பத்திலேயே முடிவடைகின்றன. இவற்றால், மனிதன் பாதுகாக்க முடியாத ஒரு வாழ்வைத் தான் கட்டிப் பிடித்து வைத்துக்கொள்ள முயல்வது வீணான வேலை என்பது தெளிவாகின்றது. சுக துக்கங்கள் எல்லாம் தனக்கே உரியவை என்று தனித்தன்மை பாராட்டி வருபவனுக்கு, அதுவே நன்மைக்கும் வாழ்க்கைக்கும் முக்கியமான காரணமாயிருக்கிறது. ஆயினும் அந்தத் தனி இயல்பினால் நன்மையையோ, வாழ்வையோ பெற முடியவில்லை. அவன் விரும்பும் இன்பமும் வாழ்வும் அவனை மட்டும் பொறுத்திருக்கவில்லை; அவனுக்குத் தெரியாத அந்நியர்களின் தயவினால் அவை கிடைக்க வேண்டியிருக்கின்றன. அவர்கள் எல்லோரும் தன்னைப் போன்றவர்கள் என்ற எண்ணம்கூட அவனுக்குக் கிடையாது. ‘நான்’, ‘எனது’ என்று கருதிக் கொண்டிருக்கும் வாழ்வுக்கு எது உண்மையான ஆதாரமாகத் தோன்றுகிறதோ, அது அழிந்து, எலும்புகளாகவும் புழுக்களாகவுமே மிஞ்சுகின்றது. எது நிலையானது என்று தோன்றுகிறதோ, அந்தத தனி வாழ்வு முடிவில் அழிவடைகிறது. எது நிலையற்றது என்று தோன்றுகிறதோ, அந்த மக்களின் வாழ்வு நிலைத்து நிற்கிறது. மனிதன் நசித்துப் போகிறான்; ஆனால், மனித சமுதாயம் சிரஞ்சீவியா யிருக்கிறது. தனி மனிதனுடைய வாழ்க்கை என்பது மாயை; அவனுக்கு வெளியேயுள்ளதே உண்மையான வாழ்க்கை. ஆயினும், மனிதன் வெளியேயுள்ள மற்றவர் வாழ்க்கையைப் பற்றி அக்கறை கொள்வதில்லை; கவனிப்பதில்லை தெரிந்து கொள்வதுமில்லை! வாழ்வில் மனிதன் எவைகளை விரும்புகிறானோ அவைகள் அவன் பார்த்து கொள்ளாத வெளியிலுள்ள மக்களின் வாழ்க்கையில்தான் அமைந்திருகின்றன. இந்த உண்மை அவனுக்குப் புலனாகி விட்டாற்போதும், அல்லது பிறர் இதை அவனுக்கு விளக்கி யுரைத்துவிட்டாற் போதும் - இதை அவன் கைவிடவே முடியாது. இது அவன் உணர்விலிருந்தும் அழியாது. ** ஆன்றோரின் அமுத வாக்கு** மானிடன் தன் இன்பமே வாழ்வின் லட்சியம் என்று முதலில் எண்ணுகிறான். ஆனால் கானல் நீர் போன்ற அந்த இன்பம் ஏற்படும்போது, அதை அநுபவிக்க முடியாதபடி அவனுடைய தனி வாழ்வு, ஒவ்வொரு நிமிஷமும், மூச்சு விடுந்தோறும், துன்பம், தீமை, மரணம், அழிவு ஆகியவைகளை நோக்கியே போய்க்கொண்டிருக்கின்றது! இது இளைஞர் முதியோர் யாவருக்கும் தெரிந்ததுதான் ; படித்தோரும் பாமரரும் இதை அறிவர். பண்டைப் பழங் காலத்திலிருந்தே மனித சமூகமும் இதைத் தெரிந்து வந்திருக்கிறது. ‘ஒவ்வொருவரும் தத்தம் நன்மைக்காக ஒருவரையொருவர் அழித்துத் தாமும் அழிந்து போகும் மனிதர் மத்தியிலே ஒரு மனிதன் தன் தனி இன்பத்தையே நாட்டமாய், கொள்ளும் வாழ்க்கை தீயது; உண்மைக்கு முரண்பட்டது’-ஆதிகாலம் முதலே மனிதன் இப்படி கூறிவந்திருக்கிறான். இந்தியா, சீனா, எகிப்து, கிரீஸ் முதலிய தேசங்களிலே தோன்றிய தத்துவ ஞானிகளும், யூத ஞானிகளும் வாழ்க்கையில் அமைந்துள்ள இந்த முரண்பாட்டைப் பற்றித் தெளிவாகவும், மிகவும் அழுத்தமாகவும் விளக்கி யிருக்கிறார்கள். மானிட உள்ளம் அழியாத அமர இன்பத்தைக் கண்டுபிடிப்பதற்காக மிகப் புராதன காலத்திலிருந்தே முயன்று வந்திருக்கிறது; சண்டைகள், பூசல்கள், துன்பங்கள், மரணம் எதுவும் அழிக்க முடியாத நித்தியமான இன்பத்தை நாடி வந்திருக்கிறது. நிலையான இந்த இன்பத்தைத் தெளிவாக அறிந்து கொண்டு வாழ முற்பட்ட காலங்களிலேதான் மனித சமூகம் முற்போக்கடைந்திக்கின்றது. சரித்திர ஆராய்ச்சிக்கு எட்டாத பண்டைக் காலத்திலிருந்தே பல நாடுகளில், பல்வேறு மக்களிடையே தோன்றிய ஞானிகள் வாழ்க்கையைப் பற்றி தெள்ளத் தெளிவா விளக்கியிருக்கிறார்கள்; வாழ்க்கையின் முக்கியமான முரண்பாட்டைத் தெளிவுபடுத்தி யிருக்கிறார்கள். மனிதனுக்கு உண்மையான இன்பமும், உண்மையான வாழ்க்கையும் எவை என்பதையும் அவர்கள் எடுத்துக் காட்டி யிருக்கிறார்கள். உலகில் மக்கள் எல்லோரும் ஒரே மாதிரியாகவே இருக்கிறார்கள்; எல்லோரும் அவரவர் இன்பத்தையே தேடி அலைகிறார்கள்; எல்லோருமே அந்த இன்பம் கிடைக்காமல் தவிக்கிறார்கள். இந்தக் காரணத்தாலேயே மனித சமூகத்தில் தோன்றிய பண்டைப் பெரியார்கள் அனைவரும் உண்மையான வாழ்க்கையைப் பற்றி ஒரே மாதிரியாகவே விளக்கி யிருக்கிறார்கள். ‘வாழ்க்கை ஒரு யாத்திரை ; ஆன்மாக்கள் பக்குவமடைந்து மேலும் மேலும் இன்பப் பேற்றை அடையும் மார்க்கம்’ என்று மிகப் புராதன காலத்திலேயே இந்திய நாட்டு வேதியர் கூறியுள்ளனர். ‘மனித சமூகத்தின் நன்மைக்காக விண்ணகத்திலிருந்து வந்த ஒளி பரவி நிற்பதே வாழ்க்கை’ என்று கன்பூஷியஸ் கூறியுள்ளார். ’நிர்வாண முக்தி பெறுவதற்காக “நான்” என்ற அகங்காரத்தைத் தியாகம் செய்வதே வாழ்க்கை, என்று புத்தர் கூறியுள்ளார். இவர் கன்பூஷியஸ் காலத்தவர். ‘நன்மையை அடைவதற்காக அடக்கமும் பணிவும் கொள்ளும் மார்க்கமே வாழ்க்கை’ என்று லாவோத்ஸே அருளியுள்ளார். இவரும் கன்பூஷியஸ் காலத்தவர். ‘மனிதன் இறைவனுடைய விதியைப் பின்பற்றி நன்மையடைவதற்காக இறைவன் அவன் நாசித் துவாரங்களின் வழியாக ஊதியுள்ளதே வாழ்க்கை’ என்று யூத முனிவர் கூறினர். ஆசைகளை அடக்கி அருந்தவம் இயற்றிய வேறு பெரியார்கள், ‘பகுத்தறிவுக்குப் பணிந்து அதன்படி நடப்பதே வாழ்க்கை ; அது மக்களுக்கு இன்பமளிக்கும்’ என்று தெரிவித்துள்ளனர். கிறிஸ்து பெருமான், முந்திய விளக்கங்களை யெல்லாம் ஒன்று சேர்த்து, ‘ஆண்டவனையும், உன் அண்டையிலுள்ளவரையும் நேசித்தலே வாழ்க்கை. அது மனிதனுக்கு இன்பம் தரும்’ என்று சொன்னார். வாழ்க்கையைப் பற்றிய ஆன்றோர் விளக்கங்கள் இப்படி யிருக்கின்றன. ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக மனித வாழ்வின் முரண்பாட்டை இவை தீர்த்து வைத்திருக்கின்றன. போலியான தனி வாழ்வின் பொய்மையான இன்பத்திற்குப் பதிலாக, உண்மையான, அழிக்க முடியாத இன்பத்தை எடுத்துக்காட்டி, அந்த வாழ்வுக்குப் பொருத்தமான அர்த்தத்தையும் இவை அளித்திருக்கின்றன. இந்த உபதேசங்கள் வெறும் தத்துவங்கள் அல்ல ; கோடிக் கணக்கான மக்கள் இவைகளின் உண்மையைத் தங்கள் வாழ்க்கையிலேயே அநுபவத்தில் கண்டிருக்கின்றனர்; இன்றும் கண்டுகொண்டிருக்கின்றனர். இந்த விளக்கங்களை இன்னும் தெளிவாகவோ, அதிக நுட்பமாகவோ கூற முடியும் என்று ஒருவர் அபிப்பிராய பேதம் கொள்ள முடியுமே அன்றி, இவை வாழ்க்கையின் முரண்பாட்டைத் தீர்த்து வைப்பதையோ, பொருளற்றதாகத் தோன்றும் வாழ்வுக்கும் ஒரு பொருளுண்டு என்று தெளிவுபடுத்துவதையோ யாரும் மறுக்க முடியாது. தனிப்பட்டவரின் சுயநல ஆசை வெறும் ஏமாற்றத்தில் முடிவதை மாற்றி, துன்பங்களும் மரணமும் தொடர முடியாத ஒரு நன்மையை அடைய முடியும் என்பதை முற்காலத்து அறிஞர்கள் நிரூபித்திருக்கிறார்கள். மதிநலம் வாய்ந்த ஞானிகள் வாழ்க்கையைப் பற்றி மானிட சமூகத்திற்கு அறிவுறுத்திய விளக்கங்களை உணர்ந்து அவற்றின்படி அநேகர் நடந்து வந்திருக்கின்றனர். ஆனால் அவைகளை அறியாதவர்களே பெரும்பாலோர், மனித வாழ்வில் முரண்பாடு இருப்பதையே பலர் பார்ப்பதிலை. வாழ்க்கை முழுதிலுமோ, அது ஒரு பகுதியிலோ, மிருகவாழ்க்கையே வாழ்ந்தவர்களும், வாழ்பவர்களும் கோடி கணக்கான மக்கள். இவர்களிலே சிலர், உலகிலே தாங்கள் பெற்ற உயர்ந்த பதவிகளை பயன்படுத்திக் கொண்டு தங்கள் அறியாமையைத் தங்களோடு நிறுத்திக் கொள்ளாமல், மக்கட் சமுதாயத்திற்கு வழிகாட்டவும் முன்வந்து விட்டனர். வழி காட்டுவோருக்கே வாழ்வின் பொருள் தெரியாத நிலையில், மனிதனின் தனி வாழ்வே வாழ்க்கை என்று அவர் போதித்து வந்தனர் ; இன்றும் அப்படியே கூறி வருகின்றனர். இத்தகைய போலிப் போதகர்கள் எப்போதும் இருந்து வந்ததுபோல், இக்காலத்திலும் இருக்கிறனர். இவர்கள் இரு பிரிவினராக உள்ளனர். ஒரு கூட்டத்தார், மனித சமூகத்திற்கு வழிகாட்டிய மேதைகளின் போதனையைப் பெயரளவில் ஒப்புக் கொண்டு, அதன் கருத்தைக் கைவிட்டு விட்டனர். ஆன்றோருடைய போதனை நேரடியாகத் தெய்வத்திடமிருந்து வந்ததென்றும், மரணத்தின் பின்னால் ஏற்படக்கூடிய எதிர்கால வாழ்வைப் பற்றியே அது விளக்குவதென்றும் இவர்கள் மக்களுக்கு உபதேசித்து வரலாயினர். நாளடைவில் மத சம்பந்தமான சடங்குகளையும், வெளி ஆசாரங்களையுமே மக்கள் நிறைவேற்றி வரும்படி இவர்கள் கட்டாயப்படுத்தி வந்தனர். வாழ்க்கை ஆராய்ச்சி அறிவுக்குப் பொருத்தமில்லாதது என்பது இவர்கள் கொள்கை. மறு உலகில் கிடைக்கப் போகும் மகா உன்னதமான வாழ்க்கையை நம்புவதாலேயே இகவாழ்வு திருந்திவிடும் என்று இவர்கள் போதிக்கின்றனர். இரண்டாவது பிரிவினர் இயற்கைக்கு அப்பாற்பட்ட இறைவன், எதிர்கால வாழ்வு, எதையும் நம்புவதில்லை, காட்சிப் பிரமாணமே இவர்களுடைய முக்கியமான அளவுகோல். கண் முன்பு காணும் வாழ்க்கையைத் தவிர, வேறு வாழ்வில் இவர்களுக்கு நம்பிக்கை கிடையாது. மனிதன் பிறப்பதிலிருந்து இறப்புவரை உன்ன மிருக வாழ்வே வாழ்க என்று இவர்கள் வீர முழக்கம் செய்கின்றனர், மனிதனை விலங்காகக் கருதி, அவன் வாழ்வில் ஆராய்ச்சிக்குப் பொருந்தாத விஷயம் எதுவுமில்லை என்பது இவர்கள் துணிபு. மேலே கூறிய ஒரு பிரிவினரும் போலிப் போதகர்கள், இவர்களுடைய போதனைகளுக்கு ஒரே அடிப்படையாக விளங்குவது வாழ்வின் மூலாதாரமான முரணை அறியாமை தான். இரு கூட்டத்தாருக்கும் எப்போதும் பகைமைதான். உலகம் முழுவதையுமே இவர்கள் தங்கள் பூசல்களால் நிரப்பிவிட்டனர். இவர்களுடைய சண்டைகளின் நடுவில், ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே தீர்க்கதரிசிகள் அருள் சுரந்து அறிவுறுத்திய வாழ்க்கை விளக்கங்கள் மறைந்து ஒதுங்கிவிட்டன. இதனால் உண்மையான நன்மைக்குரிய பாதை புலனாகவில்லை. முதலாவது கூட்டத்தார், செத்த பிறகு ஏற்படும் எதிர்கால வாழ்க்கையில் நம்பிக்கை ஊட்டி, மெய்யறிவுக்குரிய போதனைகளை ஒழித்துக் கட்டுகின்றனர். இரண்டாவது கூட்டத்தார், இந்தப் போதனைகள் எல்லாம் பழங்கால அறியாமையால் விளைந்த பழக்கங்களின் சின்னங்கள் என்றும், மனிதனின் உடல் வாழ்வு தவிர வாழ்க்கையைப் பற்றி வேறு கேள்விகளை எழுப்பாமலிருப்பதே சமூக முன்னேற்றப் பாதை என்றும் அறுதியிட்டு உறுதி கூறுகின்றனர். ------------------------------------------------------------------------ 1. ஆரிய ரிஷிகள்↩︎ 2. இவர் சீன தேசத்து ஞானி. இவர் கிறிஸ்து நாதருக்கு 600 ஆண்டுகள் முந்தியவர்.↩︎ 3. இவரும் சீன அறிஞர்.↩︎ தவறான கொள்கைகள் அறிவின் சிகரத்தை அடைந்திருந்த தீர்க்கதரிசிகள் அறிவுறுத்திய கொள்கைகள் தம் ஆழ்ந்த கருத்துக்களால் மக்களின் உள்ளங்களைக் கவர்ந்திருந்தன. அந்த ஞானிகளைச் சாதாரண மக்கள் மானிட நிலைக்கு மேம்பட்ட தெய்வ அம்சங்களாகவே கருதி வருவதைக் கொண்டு அவர்களுடைய அறிவுரைகளின் மகிமையை உணரலாகும். வெறும் மிருக வாழ்க்கையில் நம்பிக்கையுள்ளவர்கள், இதையே காரணமாகக் கொண்டு, இந்தப் போதனைகள் தவறானவை, காலங் கடந்தவை என்று வாதிக்கின்றனர். அரிஸ்டாட்டல், பேகன், காம்டே முதலிய தத்துவ நூலாசிரியர்களின் கொள்கைகள் முக்கியமானவை அல்ல. அவை சிலருடைய ஆராய்ச்சிக்கு மட்டுமே பயன்படுவதைத் தவிர மக்களிடையே பரவ முடியவில்லை. அவை தவறானவை; மக்கள் மனங்களைக் கவர முடியாதவை. மக்கள் அவைகளை ஏற்றுக்கொண்டிருந்தால், அவைகளைச் சுற்றித் தெய்வீகமான கதைகளைக் கட்டிப் போற்றி வந்திருப்பார்கள். ஆனால், அவ்வாறு நடைபெறவில்லை. மக்களால் புறக்கணிக்கப்பட்டுள்ள அந்தக் கொள்கைகளிலேயே உண்மை பொதிந்திருப்பதாக இக்காலத்தில் சிலர் சாதனை செய்கின்றனர். வேத ரிஷிகள், புத்தர், ஜாரதுஷ்டிரர், லாவோத்ஸே, கன்பூஷியஸ், இஸையா, கிறிஸ்து ஆகியோருடைய கொள்கைகள் மூட நம்பிக்கையைச் சேர்ந்தவை என்றும், தவறானவை என்றும் கருதப்படுகின்றன. ஏனெனில், அவை கோடிக் கணக்கான மக்களின் வாழ்க்கையை அடிமுதல் நுனிவரை மாற்றி அமைத்திருக்கின்றன அல்லவா! ‘மூட நம்பிக்கைகள்’ என்று கருதப்படும். அந்தக் கொள்கைகளைப் பின்பற்றிக், கோடானு கோடி மக்கள் வாழ்ந்து வந்திருக்கின்றனர்; இன்றும் வாழ்ந்து வருகின்றனர். அக் கொள்கைகள் காலக் கிரமத்தில் மாறுதலடைந்து சில புதுச் சேர்க்கைகளோடு இருப்பினும், உண்மையான நலன் எது என்பது பற்றி மனிதர் கேட்கும் கேள்விகளுக்கு அவை இப்போதும் விடையளித்து வருகின்றன. பற்பல நூற்றாண்டுகளில் தோன்றும் பேரறிஞர்களின் சிந்தனை ஊற்றை அவைகளே திறந்து வைக்கின்றன; அவர்களுடைய சிந்தனைகளுக்கு உற்ற துணையாகவும் விளங்குகின்றன. எதிர்க் கட்சியார் போற்றும் கொள்கைகளோ, அவர்களிடையிலே மட்டும் உலவி வருகின்றன. பொது மக்கள் அவைகளைத் தீண்டுவதில்லை. அவைகளுக்கு எப்போதும் இடைவிடாமல் ஆட்சேபங்கள் தோன்றிக் கொண்டே யிருக்கின்றன. சில சமயங்களில் அக் கொள்கைகள் பத்து ஆண்டுகள் கூட நிலைத்து நிற்பதில்லை. அவை தோன்றும்போதே மக்கள் அவைகளை மறந்துவிடுகின்றனர். ஆயினும் இந்தக் காரணங்கள் அனைத்தும் எதிர்க் கட்சியாரைச் சிறிதும் பாதிப்பதே யில்லை. மனித சமுதாயத்தைப் பற்றிய இக் கால ஆராய்ச்சிகள் சொல்லும் பாதை தவறாயுள்ளது. பண்டைத் தீர்க்கதரிசிகளின் கொள்கைகளுக்கு இந்த ஆராய்ச்சிகளில் உரிய மதிப்பு அளிப்பதில்லை. எந்தக் கொள்கைகளால் சமுதாயம் நன்கு வாழ்ந்துவந்ததோ, எவைகளால் அது உருவாக்கப்பெற்றதோ, எவைகளைப் பின்பற்றிச் சமுதாயம் இன்றும் வாழ்ந்து உருவாகிவருகின்றதோ, அவைகள் இதுகாலை இகழப்படுகின்றன. உலகத்தைப் பற்றிய செய்திகள், புள்ளி விவரங்கள் அடங்கிய நூல்களில் இப்போது உலக மக்கள் பின்பற்றும் சமயங்கள் ஆயிரம் இருப்பதாகக் குறிக்கப்பட்டிருக்கிறது. பௌத்த தர்மம், இந்து மதம், கன்பூஷியஸ் மதம், டாவோ சமயம், கிறிஸ்தவ மார்க்கம் ஆகியவைகளும் அந்த ஆயிரத்துள் அடக்கம் போலும்! ஆயிரம் சமயங்கள் ! இந்தக் கூற்றை நம் காலத்து மக்களும் நம்புகிறார்கள் ! ‘ஆயிரம் மதங்கள் இருக்கின்றன; எல்லாம் ஆராய்ச்சிக்குப் பொருத்தமில்லாதவை; நாம் ஏன் அவைகளை வீணாகப் பயில வேண்டும்?’- இப்படிக் கூறும் மனிதர்களே, ஸ்பென்ஸர், ஹெம் ஹோல்ட்ஸ் முதலியோர் சமீபத்தில் கூறிய விஷயங்களைக்கூட நாம் அறிந்திராவிட்டால் கேவலம் என்று கருதுகின்றனர். வேத ரிஷிகள், புத்தர், கன்பூஷியஸ், லாவோத்ஸே, எபிக்டெடஸ், இஸையா-இவர்களுடைய பெயர்களையாவது அந்த மனிதர்கள் கேள்விப்பட்டிருப்பார்களோ என்னவோ! இக் காலத்தில் மக்கள் பின்பற்றும் சமயங்கள் ஆயிரமல்ல, மூன்றுதாம் என்பது அவர்களுக்குப் புலனாவதில்லை. சீன மதம், இந்திய மதம், யூத-கிறிஸ்தவம் (இதன் கிளை இஸ்லாம்) என்பவையே அந்த மூன்று சமயங்கள். இந்தச் சமயங்களைப் பற்றிய நூல்களை ஏழெட்டு ரூபாய்க்கு வாங்க முடியும். இரண்டு வாரங்களில் அவைகளைப் படித்து முடிக்கலாம். (காடுகள், ஒதுக்கமான தீவுகள் முதலிய இடங்களில் வசிக்கும்) நூற்றுக்கு ஏழு பேர் நீங்கலாக மற்ற மனித சமுதாயம் முழுதும் இந்த நூல்களைப் பின்பற்றியே வாழ்ந்து வந்திருக்கிறது; இன்றும் வாழ்ந்து வருகின்றது. இந் நூல்கள் மானிட அறிவின் களஞ்சியங்கள். இன்றைய சமுதாயம் அடைந்துள்ள நிலைக்கு இவையே காரணங்கள். இந்த விஷயங்களில் எதுவும் மேற்கூறிய மனிதர்களுக்குப் புலனாவதில்லை. சாதாரண மக்கள் இந்த நூல்களின் கொள்கைகளைப் புரிந்துகொள்வது கடினம் என்றால், அது அவ்வளவு பெரிதன்று. ஆனால், படித்த வகுப்பினரே இவைகளை நுணுக்கமாய்ப் பயிலாமல் அலட்சியம் செய்து தள்ளுகின்றனர். இக் காலத்துத் தத்துவ ஞானிகள் கூட இந் நூல்களைக் கண்ணாலாவது பார்க்க வேண்டுமென்று கருதுவதில்லை. வாழ்க்கையில் முரண்பாடு இருப்பதையே காண முடியாதவர்களுக்கு இவைகளால் என்ன பயன்? கண்களில் பார்வையுள்ளவர்கள் தம் முன்னால் காண்பவைகளை அறிந்து விளக்கிச் சொல்லுவார்கள். ஆனால் குருடனோ, கையிலுள்ள தன் கழியால் தட்டிப் பார்த்துக்கொண்டே நடக்கிறான் ; கழியில் தட்டுப் பட்ட பொருள்களைத் தவிர வேறு எதுவுமே இல்லை யென்று அவன் கூறுவான்! ** போலி விஞ்ஞானிகள் கூற்று** ‘வாழ்க்கை என்பது பிறப்பிலிருந்து மரணம் வரை ஒரு பிராணிக்கு ஏற்படும் நிகழ்ச்சிகள். ஒரு மனிதன், நாய், அல்லது குதிரை பிறப்பதாக வைத்துக் கொள்வோம். ஒவ்வொரு பிராணிக்கும் தனி உடலுண்டு. இந்த உடல் உயிரோடிருந்து, பிறகு மரிக்கின்றது. மரணம் என்பது உடல் பதனழித்து மற்றப் புழுப் பூச்சிகளுக்கு உணவாதலே. இவ்வாறு ஒரு பிராணி உயிரோ டிருந்து தீர்ந்து போகிறது. வாழ்க்கை இருந்தது; வாழ்க்கை முடிந்தது. இதயத் துடிப்பு, மூச்சுப் பைகள் மூச்சு வாங்கி விடுதல், உடல் பதனழியாமல் இருத்தல் ஆகியவற்றால் மனிதன், நாய், அல்லது குதிரை வாழ்வதை நாம் அறிகிறோம். இதயத் துடிப்பு நின்று போகிறது. மூச்சுப்பைகள் சுவாசிப்பதில்லை. உடல் உலைய ஆரம்பிக்கிறது. அப்போது மரணம் வந்துவிட்டது, வாழ்க்கை முடிந்துவிட்டது என்று அறிகிறோம். எனவே, வாழ்க்கை பிறப்புக்கும் சாவுக்கும் நடுவிலுள்ள காலத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளின் தொகுதியே இதைவிட வேறு எது தெளிவாயிருக்க முடியும்?’ விலங்கு நிலையிலிருந்து சற்று மேலே உயர்ந்து வரும் மனிதன், ஆதி முதல் வாழ்க்கையைப் பற்றி இப்படித்தான் கருதி வந்தான். இந்தக் கேவலமான பழைய கருத்தே இக் காலத்தில் விஞ்ஞானத்தின் பெயரால் கூறப்படுகிறது. மனித சமுதாயம் ஆராய்ச்சிக்காகக் கண்டுபிடித்துள்ள நுண்ணிய கருவிகளை யெல்லாம் பயன்படுத்திக் கொண்டு விஞ்ஞானம் கண்டுபிடித்துக் கூறுவது இந்தப் போலிக் கொள்கைதான். ஆயிரக் கணக்கான ஆண்டுகட்கு முன், எவ்வளவோ முயற்சியாலும் உழைப்பாலும், மனிதனை அறியாமை இருளிலிருந்து கரையேற்றி விட்டதை மாற்றி, மறுபடியும் அவனை அதே அந்தகாரத்திற்கு அழைத்துச் செல்வதே இக் கொள்கையின் நோக்கம். வாழ்க்கையை உணர்ச்சியால் விளக்க முடியாதாம். நன்மை அடைய வேண்டும் என்ற ஆவலே நம் உணர்ச்சியில் வாழ்க்கையாகத் தென்படுகிறது என்றால், இந்தக் கொள்கையுடையார் அது வெறும் கானல் நீர் என்பர். உயிருள்ள பொருள்களை விட்டுவிட்டு அஃறிணைப் பொருள்களை ஆராய்ந்து பார்த்தால் தான் வாழ்க்கையை அறிந்து கொள்ள முடியுமாம் ! அந்த ஆராய்ச்சியின் மூலம் அசேதனப் பொருள்களின் விதியை அறிந்து, அந்த விதியின் உதவியால் வாழ்க்கையின் விதியையும், மனித வாழ்வின் விதியையும் கண்டுபிடிக்க முடியும் என்று சொல்லப்படுகிறது. இந்தப் போலிப் போதனையின் அடிப்படையான தவறு இதுதான் : வெளிப்படையாகத் தோன்றும் மனிதனுடைய மிருக வாழ்க்கையை மட்டும் எடுத்துக் கொண்டு, அதுவே அவனுடைய முழு வாழ்க்கை என்று வைத்துக்கொள்கிறது. மனிதன், விலங்குகள், தாவரங்கள், சடப் பொருள்கள் பற்றிய ஆராய்ச்சிகளிலெல்லாம் வெளிப்படையாகத் தெரியும் விஷயங்களையே பரிசீலனை செய்கிறது. உயிர் இயங்குவதால் ஏற்படும் தோற்றங்களை மட்டும் பார்த்துவிட்டு, உயிரையே ஆராய்வதாக இடைவிடாமல் தம்பட்ட மடிக்கிறது. இந்த ஆராய்ச்சி சிக்கலாயும், பல திறப்பட்டதாயும், குழப்பம் விளைப்பதாயும் இருக்கிறது. இதற்காகச் செலவிடும் நேரமும் முயற்சியும் அளவற்றவை. இந்த ஆராய்ச்சி, வாழ்க்கையின் ஒரு பகுதியைப் பற்றியதுதான் என்பதை மக்கள் மறந்து விடுகின்றனர். சடப் பொருள், செடிகள், விலங்குகள் இவைகளின் தோற்றத்தில் தெரியும் குணங்களை ஆராய்வதே வாழ்க்கையின் ஆராய்ச்சி என்று அவர்களும் நம்ப ஆரம்பித்துவிடுகின்றனர். பொம்மலாட்டத்தில் திரைக்குப் பின்னாலிருந்து காட்டும் பொம்மைகளின் நிழல்கள் ஆடுவது தெரிகின்றது. அந்த நிழல்களைத் தவிர வேறு எதையும் பார்க்கக் கூடாது என்றும், முக்கியமாக எவை நிழல்களுக்குக் காரணமானவையோ அந்தப் பொம்மைகளை எட்டிப் பார்க்கக் கூடாது என்றும், பொம்மைகளே இல்லாமல் நிழல்கள் தாமாகவே உண்டாகிவிட்டன என்றும் பொம்மலாட்டக்காரன் கூறுவது எப்படியோ அப்படித்தான் இருக்கிறது இந்த ஆராய்ச்சி! போலி விஞ்ஞானம் இக்காலத்தில் இதைத்தான் செய்து வருகிறது. வாழ்க்கையின் முக்கிய லட்சியம் நன்மையடைதல் என்று மனித உணர்வு எடுத்துக் காட்டுகிறது. அந்த லட்சியத்தை ஒதுக்கி விட்டுப் போலி விஞ்ஞானம் ஆராய்ச்சித் திறனில்லாத பாமர மக்களோடு கைகோத்துக் கொண்டு ஆடுகின்றது. போலி விஞ்ஞானம் கண்டுபிடித்துள்ள வாழ்க்கையின் இலட்சியங்கள் எவை? ஒவ்வொரு மனிதனும் தான் நசித்துவிடாமல் காத்துக்கொள்ளல், மனித சமூகம் நசித்துவிடாமல் காத்தல், உயிர் வாழ்வதற்காகப் போட்டியிடல்- இவைகளே அந்த லட்சியங்கள். இவை மனிதனுடைய இயற்கையான லட்சியங்கள் அல்ல ; ஆனால், இவைகளைப் போலி விஞ்ஞானம் அவன் தலைமீது ஏற்றிவைக்கின்றது. உண்மையை அறிய முடியாத இந்த விஞ்ஞானம் பண்பற்ற பாமர மக்களின் ஆசைக்குத் தக்கபடி தாளம் போடுகிறது. மனிதன் உயிர் வாழ்வதற்காகவும், தன் இனத்தை விருத்தி செய்து கொள்வதற்காகவும், சமூகத்தைப் பாதுகாப்பதற்காகவும் மற்ற மிருகங்களைப் போல் போராடி வருவதே வாழ்க்கை என்று இந்த விஞ்ஞானம் உறுதிப் படுத்துகிறது. மனிதன், தன் அறிவு கொஞ்சம் விருத்தியானவுடனேயே, இக்கொள்கை தன் உணர்ச்சிக்குப் பொருத்தமில்லை என்று உதறிவிட்டான். ** வழக்கமே வழிகாட்டி** போலிப் போதனைகளைக் கேட்டு மயக்கமடைந்த ஜனங்கள், ‘வாழ்க்கையை விளக்க வேண்டிய அவசியமில்லை. எது வாழ்க்கை என்பது எல்லோருக்கும் தெரியும். அதுவே போதும். ஆகையால், நாம் பேசாமல் வாழ்வோம்’ என்று சொல்லலாம். வாழ்க்கையையும், அதன் நன்மை எதிலிருக்கிறது என்பதையும் அறியாமலே, அவர்கள் தாங்களும் வாழ்வதாக எண்ணிக்கொள்வார்கள். வெள்ளத்திலே அலைகள் ஒருவனை அடித்துக் தள்ளிக்கொண்டு போகும்போது, அவன் தான் விரும்பிய இடத்திற்கு நீந்திச் செல்வதாக எண்ணுவது போல் தான் இந்த எண்ணமும். குழந்தை வளர்ந்து வரும்போது அதற்கு வாழ்க்கையின் சிக்கலோ, முரண்பாடோ, எதுவும் தெரியாது. தன்னைச் சுற்றியிருப்பவர்களைப் பார்த்துப் பார்த்து அதுவும் பழகிக்கொள்கிறது. சுற்றியிருப்புவர்கள் போலி விஞ்ஞானக் கொள்கையைப் பின்பற்றினாலும், மத ஆசாரங்களில் வெளிச் சடங்கு மட்டும் பின்பற்றினாலும், குழந்தையும் அவர் அநுசரித்து நடந்துகொள்ளும். அவர்கள் தங்கள் சொந்த வாழ்க்கையில் திருப்தியடைவது போலவே அதுவும் திருப்தியடையும். ஏழைக் குழந்தை தன் பெற்றோர்கயே பின்பற்றும். நிறையப் பணமும் உணவும் கிடைக்க வேண்டும். ஆனால், வேலை குறைவாயிருக்க வேண்டும் -இதுவே வாழ்க்கை என்று அது கருதும். செல்வக் குழந்தை, தன் பெற்றோர்களைப் போல், செல்வங்கள் சேர்ப்பதும், கௌரவங்கள் பெறுவதுமாகக் காலத்தைச் சந்தோஷமாக கழிப்பதே வாழ்க்கை என்று கருதும் இந்த இரண்டு குழந்தைகளின் நோக்கமும் ஒன்று தான் ; முடிந்தவரை தங்கள் வாழ்க்கை சுகமாய் கழிய வேண்டும். ஏழை தன் சுகத்தைப் பெருக்கிக்கொள்ள விரும்புகிறான் ; அதற்குத் தேவையான அறிவைத் தேடி அலைகிறான். பணக்காரனும் தன் சுகத்தைப் பெருக்கிக் கொள்ள விரும்புகிறான் ; தன் களைப்பு நீங்கி, நேரம் இன்பகரமாகக் கழிவதற்காக விஞ்ஞானத்தையும் கலைகளையும் பற்றிய அறிவைத் தேடுகிறான். பிற்காலத்தில் இவர்களுக்குக் குடும்பங்கள் ஏற்பட்டுப் பெருகும்போது, உடல் வாழ்வுக்கு அவசியமான நன்மையை அடைவதற்கு ஆத்திரமும் அதிகமாகின்றது. அந்த ஏழைக்கோ, பணக்காரனுக்கோ ஏதாவது ஒரு சமயம் சந்தேகம் தோன்றலாம் : ‘ஒரு லட்சியமும் அல்லாமல் இது என்ன வாழ்க்கை ? கேவலம் உயிர் வாழ்வதற்காகப் போராடுவது ஏன் ? நம் குழந்தைகளும் அப்படித்தானே போராடியாக வேண்டும்? இன்பங்களைத் தேடித் தேடி ஏமாந்துபோய், முடிவில் துன்பங்களைப் பெறுவது எதற்காக? நமது கதிதானே நம் மக்களுக்கும் ஏற்படும்?’ என்று அவர்கள் சிந்திக்க நேரலாம். இந்தக் கேள்விகளுக்கு ஆயிரக் கணக்கான ஆண்டுகட்கு முன்னரே பதில் கூறப்பட்டிருக்கிறது. மனித சமூகத்திற்கு அறத்தை உணர்த்திய ஆதி மகான்கள் வாழ்க்கையைப் பற்றி அருளிய விளக்கங்களே இவைகளுக்குத் தக்க பதிலாகும். ஆனால், இந்த விளக்கங்களைத் தெரிந்து கொள்ளப் பலருக்கு வாய்ப்புக் கிடைப்பதில்லை. போலி விஞ்ஞானிகள், போலிச் சமயவாதிகளுடைய கொள்கைகள் இந்த விளக்கங்களைக் கவனமாக மூடி மறைத்துவிடுகின்றன. மிகச் சிலரே இவைளைக் காண முடிகிறது. வாழ்க்கையை ஏன் துன்பமயமாக இருக்கிறது ? போலிச் சமயவாதிகள் இந்தக் கேள்விக்குக் கூறும் விடை இது தான் : ‘வாழ்க்கை துன்பமயந்தான். எப்போதும் இப்படியே இருந்து வந்தது ; இனியும் இப்படித்தான் இருக்கும். வாழ்க்கையின் நலன் என்பது இப்போது ஒன்றும் கிடைக்காது. ஒருவனுடைய பிறப்புக்கு முன்னும், மரணத்திற்குப் பின்னாலுமே அது கிடைக்கும். எதிர்காலத்தில் நன்மை கிடைக்க வேண்டுமானால், எங்கள் கொள்கைகளை நம்பி, நாங்கள் விதித்துள்ள சமயச் சடங்குகளை முறையாக நடத்தி வரவேண்டும் ?’ சந்தேகம் கொண்டவனுக்கு இந்தப் பதில் திருப்தியளிப்பதில்லை. அவன் இதை ஆராய்ந்து கூடப் பார்க்காமல் ஒதுக்கிவிடுகிறான். சமயத் தலைவர்களும் தங்கள் வாழ்க்கையில் தன்னைப் போலவே தத்தளிப்பதை அறிந்து, அவன் விஞ்ஞானம் வழி காட்டுமா என்று பார்க்கிறான். போலி விஞ்ஞானிகள் அவன் முன்பு தென்படுகின்றனர். அவர்கள் கூறும் பதில் இதுதான் : ‘வெளிப்படையாகத் தெரியும் மிருக வாழ்க்கை தவிர வாழ்வைப் பற்றிய மற்றப் போதனைகளெல்லாம் அறியாமையால் தோன்றியவை. உன் சந்தேகங்கள் வெறும் கனவுகள். பிரபஞ்சத்திலே அண்டங்கள், பூமி, மனிதன், விலங்கினம், தாவர வர்க்கம் ஆகியவற்றின் வாழ்வு குறிப்பிட்ட நியதிகளின்படியே நடந்து வருகிறது. அந்த விதிகளையே நாங்கள் கண்டுபிடித்துப் போதிக்கிறோம். அண்டங்களின் ஆரம்பம், மனிதன், மிருகங்கள், சகல சடப்பொருள்களின் தோற்றம் ஆகியவை பற்றி நாங்கள் பரிசீலனை செய்கிறோம். இப்போது கொதித்துக் கொண்டிருக்கும் சூரியன் காலக்கிரமத்தில் குளிர்ச்சியடைந்து போனால், உங்களுக்கு என்ன நேரும் என்பதைக்கூட ஆராய்கின்றோம். மனிதன், விலங்கு, செடி கொடிகள் ஆகிய எல்லாவற்றின் முந்திய நிலைமை, இனிவரும் நிலைமை முதலியவற்றை நாங்கள் பரிசீலனை செய்கிறோம். நாங்கள் எதைச் சொன்னாலும் உடனே அதனைக் கண்முன்பு நிரூபித்துக் காட்டமுடியும். எங்களுடைய விஞ்ஞான ஆராய்ச்சிகளால் மனிதனுடைய துன்பம் குறைந்திருக்கிறது. ஆனால், உன் வாழ்க்கையைப் பற்றியோ, நீ நாடும் நன்மையைப் பற்றியோ, உன்னைப் பார்க்கிலும் அதிகமாக எங்களுக்கு ஒன்றும் தெரியாது. ஏதோ நீ உயிரோடு இருக்கிறாய். அவ்வளவு தான்! கூடியவரை நல்ல முறையில் வாழ முயற்சி செய்!’ போலியான சமயவாதிகள், விஞ்ஞானிகள் இரு திறத்தாரிடத்திலும் சந்தேகம் நீங்கக்கூடிய விடை கிடைப்பதில்லை. எனவே மனிதன், தன் பழைய நிலைமை மாறாமல், வாழ்க்கைக்குத் தன் உணர்ச்சிகளையே வழிகாட்டியாகக் கொள்கிறான். காலையிலே துயிலெழுந்து இரவில் மீண்டும் துயிலச் செல்லும்வரை மனிதன் எத்தனையோ செயல்களில் ஈடுபடவேண்டியிருக்கிறது. நூற்றுக் கணக்கான வேலைகளில் செய்து முடிக்க வேண்டியவை எவை என்று ஒவ்வொரு நாளும் தேர்ந்தெடுத்துக் கொள்ளவேண்டியது அவசியமாகின்றது. இதற்கு மேலே கூறிய சமயவாதிகளின் கொள்கையோ, விஞ்ஞானிகளின் கொள்கையோ வழிகாட்ட முடியவில்லை. வழிகாட்டி இல்லாமல் மனிதன் தன் செயல்களைத் தேர்ந்து கொள்வதும் கஷ்டம். ஆகவே அவன் தன் பகுத்தறிவைப் பயன்படுத்தாமல், வெளியிலிருந்து கிடைக்கும் வேறொரு வழிகாட்டியின் உதவியை நாடுகிறான். அந்த வழிகாட்டி என்றும் இருப்பது. இன்றும் எல்லா மக்கட் சமூகங்களிலும் நிலைத்து நிற்கிறது. அதற்கு ஆராய்ச்சி அறிவு எதுவும் தேவையில்லை மக்களுடைய பெரும்பாலான செயல்களுக்கு அதுவே காரணமாயுள்ளது. அதன் பெயர் தான் வழக்கம். வாழ்க்கை என்ன என்பதையே அறியாத மக்களை வழக்கம் முற்றிலும் ஆட்கொண்டு விடுகின்றது. வழக்கத்தைப்பற்றி விளக்கிச் சொல்ல முடியாது. காலத்திற்கும் இடத்திற்கும் தக்கபடி வேறுபட்ட விஷயங்களும் செயல்களும் வழக்கம் என்பதில் அடங்கியிருக்கின்றன. சீன மக்களின் வழக்கம் தம் முன்னோர்களின் கல்லறைகளில் மெழுகுவர்த்திகள் ஏற்றி வைத்தல். முஸ்லிம்களின் வழக்கம் புனிதத் தலங்களுக்கு யாத்திரை செல்லுதல். இந்துக்களின் வழக்கம் பிரார்த்தனை செய்தல். இவ்வாறு இடங்களுக்கும் சமூகங்களுக்கும் தக்கபடி வழக்கம் மாறுபட்டிருக்கும். வாழ்க்கை முழுவதற்கும் உரிய செயல்களை வழக்கமே விதித்துவிடுகின்றது. உணவு தயாரித்தல், வீட்டில் பொருள்களை அடுக்கிவைத்தல், குழந்தைகளின் கல்வி, ஜனனம், மரணம், திருமணம் ஆகிய எந்த விஷயத்திற்கும் வழக்கமே வழிகாட்டியாக விளங்குகின்றது. உலகில் பெரும்பாலான மக்கள் அதையே பின்பற்றுகின்றனர். ஒவ்வொரு மனிதனும் மற்றவர்களைப் பார்த்துத் தானும் அவர்களைப் போலவே நடந்துவருகிறான். வழக்கத்தைப் பின்பற்றுவோர்கள் ஏன் அப்படிச் செய்கிறார்கள் என்றோ, எந்த நோக்கத்தோடு செய்கிறார்கள் என்றோ வினவினால், எல்லாவற்றையும் நன்றாக அறிந்துகொண்டே செய்வதாக நம்பிக்கையுடன் பதில் கூறுவார்கள். ஒருவரைப் பார்த்து ஒருவர் தவறான பாதையில் இறங்குகின்றனர். மக்கள் காரியங்களுக்கு உரிய காரணங்கள் தங்களுக்குப் புரியாவிட்டால், அவைகள் எங்கோ கோபமாயமாய் மறைந்திருப்பதாக நம்புகின்றனர். மொத்தத்தில் வழக்கத்தால் ஏற்படும் செயல்களே ‘கடமைகள்’ என்றும், ‘புனிதமான கடமைகள்’ என்றும் வழங்கி வருகின்றன. புதிதாக உலகத்திலே தோன்றும் குழந்தைகள் வளர்ந்து, வயது வந்த பிறகு, வாழ்க்கை என்ற பெயரால் இங்கே நடைபெற்று வரும் குழப்பத்தைப் பார்க்கின்றனர். இந்தக் குழப்பத்தில் தலை நரைத்த கிழவர்களும் பங்குகொண்டிருப்பதைக் கவனிக்கின்றனர். அறிவற்ற இந்தக் குழப்பமே வாழ்க்கை என்று அவர்கள் திடமாக நம்பவும் முற்படுகின்றனர். அவர்ளும் இவ்வுலகின் வாயிற்படியிலேயே நின்று, வருவார் போவார்மீது மோதிவிட்டுத் தங்கள் காலம் முடிந்தபின் தாங்களும் சென்றுவிடுகின்றனர். ஒரு மண்டபத்தினுள்ளே பொதுக்கூட்டம் ஒன்று நடைபெறுகின்றது. வெளியிலே மண்டப வாயிலிலும் ஜனத்திரள் முண்டி நெருக்கிக்கொண்டு நிற்கிறது. அந்த வெளிக்கூட்டத்தினுள்ளே சிக்கி உதையும் மிதியும் வாங்கிக்கொண்டு திரும்பிய ஒருவன், தானும் சொற்பொழிவில் கலந்துகொண்டதாக எண்ணுவது போல்தான் மேலே கூறியுள்ள அநுபவமும். மலைகளைக் குடைகிறோம்; கடல்களின் வழியே கண்டங்களைச் சுற்றி வருகிறோம்; மின்சாரம், பூதக் கண்ணாடி, தூரதிருஷ்டிக் கண்ணாடி முதலிய கருவிகளைக் கண்டுபிடித்திருக்கிறோம்; போர்கள், சட்ட சபைகள், அறநிலையங்கள், சர்வ கலாசாலைகள், ஆராய்ச்சி மன்றங்கள், கண்காட்சி சாலைகள், அரசியல் கட்சிகள், கட்சிச் சண்டைகள் - இவைகளெல்லாம் வாழ்க்கையல்லவா ? மக்கள் எவ்வளவோ வர்த்தகம் செய்கிறார்கள்; போர்கள் நடக்கின்றன; போக்குவரத்து சாதனங்கள் பெருகுகின்றன; விஞ்ஞானம், கலை முதலியவைகளுக்காக ஜுர வேகத்தில் வேலைகள் நடக்கின்றன. ஆயினும் இவை யாவும் மேலே கூறிய மண்டப வாயிலில் நெருக்குண்ட கும்பலின் அறிவற்ற குழப்பத்தைப் போன்று, வாழ்க்கையின் முன்வாயிலில் நடக்கும் பூசலேயாகும். ------------------------------------------------------------------------ 1. Aristotle↩︎ 2. Bacon↩︎ 3. Comto↩︎ 4. Zoroaster↩︎ 5. Spencer↩︎ 6. Helmholtz↩︎ 7. Epictetus↩︎ 8. உண்மையான விஞ்ஞானம் இப்படிக் கூறுவதில்லை. சக்தி, சடப்பொருள், உயிர் (Force, matter and life) ஆகிய மூன்றும் பரிசீலனைக்கு உரியவையல்ல என்று விஞ்ஞானத்தின் பல பிரிவுகளும் அவைகளை அப்படியே ஏற்றுக்கொண்டுள்ளன. ஆகவே, அவைகளை ஆராயாமல் மேற்கொண்டு செய்ய வேண்டிய ஆராய்ச்சிகளில் இறங்கியுள்ளன. இத்தகைய விஞ்ஞானத்தால் கேடு விளையாது. ஆனால் தத்துவங்களை விளக்க முற்படும் போலி விஞ்ஞானம் அப்படியன்று. சடப்பொருள், சக்தி, உயிர் ஆகியவைகளைப் பற்றி ஆராய்ச்சி மூலமே அறிந்து விடலாம் என்பது அதன் கூற்று. அது சடப் பொருளையோ, சக்தியையோ, உயிரையோ, ஆராயவில்லை. அவைகளின் சம்பந்தங்களையும், உருவங்களையுமே (Relations and forms) ஆராய்ந்து கொண்டிருக்கிறது.↩︎ மிருக வாழ்க்கையும் மனித வாழ்க்கையும் நல்ல வாழ்க்கை வேண்டும்; வாழ்வதில் அர்த்தம் இருக்க வேண்டும் என்பதுதான் ஆன்மாவின் அந்தரங்க வேட்கை. மரணத்துக்குப் பின்பே நல் வாழ்வு உண்டாகும் என்பதை எவ்வளவு அழுத்திச் சொன்னாலும், எத்தனை முறை சொன்னாலும், மனிதனுக்கு நம்பிக்கை ஏற்படுவதில்லை. எதிர்கால வாழ்வில் நம்பிக்கை வைக்க முடியுமா ? இப்போது கிடைத்துள்ள வாழ்வே பொருளற்றதாயிருக்கும் போது, இனி வருவது பொருத்தமான பெருவாழ்வாயிருக்க முடியுமா? அது சரியானதாயிருக்க முடியாது என்றே மனிதன் நம்புகிறான் ஒருவன் தனக்காகவே வாழ்வதா ? தனிப்பட்ட வாழ்க்கை தீமையாயும் பொருளற்றதாயும் இருக்கிறதே! மனிதன் தன் குடும்பத்திற்காக வாழ்வதா, அல்லது தான் வசிக்கும் இராஜ்யத்திற்காகவோ, சமுதாயத்திற்காகவோ வாழ்வதா ? எனது தனி வாழ்க்கை அர்த்தமற்ற துன்ப மயமாக இருப்பதை நான் அறிவேன். இதுபோல்தானே மற்ற மனிதர் ஒவ்வொருவருடைய நிலையும் இருக்கும்? எண்ணற்ற மக்கள் அறிவுக்குப் பொருத்தமில்லாது, பொருள் ஒன்றும் இல்லாது, பயிர்கொண்டு உலவி வருகின்றனர். இவர்கள் அனைவரும் எல்லோருக்கும் பொருத்தமாயுள்ள ஒரே நன்மையான வாழ்வில் ஒன்றுகூடிவிட மாட்டார்கள். தனிப்பட வாழ்தலின் பொருள் என்ன ? இதை அறியாமல், மற்றையோர் செய்வதை நானும் செய்து கொண்டிருக்கிறேன் ஆனால், அவர்களும் என்னைப் போலவேதான் இருக்கிறார்கள் ; அவர்கள் செய்வதை ஏன் செய்கிறார்கள் என்பது அவர்களுக்கும் தெரியாது என்பது எனக்குத் தெரியும். ஒரு காலம் வருகிறது ; அப்போது பகுத்தறிவு உணர்ச்சி போலிக் கொள்கைகளைத் தாண்டி வளர்ந்து விடுகிறது. வாழ்வின் நடுப் பாதையிலே மனிதன் நின்று யோசிக்க ஆரம்பிக்கிறான். வாழ்வின் பொருளைப் பற்றி அவன் வினவுகிறான். போலிக் கொள்கைகள் அம்பலமாகும் காலம் வந்துகொண் டிருக்கிறது. பெரும்பாலான மக்கள் விரைவில் உண்மையைத் தெரிந்துகொள்வர். அப்போது, வறுமையால் கசக்கிப் பிழியப்பட்டவர்களும், போக வாழ்க்கையில் புத்தியைப் பறிகொடுத்தவர்களுமே தங்கள் வாழ்வின் பொருளற்ற தன்மையையும் இழி நிலையையும் உணராமல் இருப்பார்கள். நாளுக்கு நாள் அதிக மக்கள் விழிப்படைந்து வருகின்றனர். மானிட வாழ்வின் அடிப்படையான முரண்பாடு பயங்கரமான தெளிவுடனும், வேகத்துடனும் பெரும்பாலான மக்களுக்கு விளக்கமாகி வருகிறது. விழிப்படைந்த மனிதன் தனக்குத் தானே இவ்வாறு சொல்லிக் கொள்கிறான் : ‘என் வாழ்க்கை முழுதும் எனது சொந்த நலனையே தேடிக்கொண்டிருக்கிறது. அத்தகைய நலன் இருக்க முடியாது என்றும், நான் ஏதேது செய்தாலும், என்னென்ன வெற்றிகள் பெற்றாலும், எல்லாம் முடிவில் துன்பம், மரணம், அழிவிலே போய்த்தான் சேரவேண்டும் என்றும் என் பகுத்தறிவு கூறுகின்றது. நான் விரும்புவதற்கு நேர் மாறாக, என்னிலும், என்னைச் சுற்றிலும், தீமையும், மரணமும், மடமையுமே அடர்ந்திருக்கின்றன. நான் என்ன செய்ய வேண்டும் ? நான் எப்படி வாழமுடியும் ?’ இந்த வினாக்களுக்குப் பதில் எதுவும் தென்படுவதில்லை. அவன் சுற்றிச் சுற்றிப் பார்க்கிறான். மறுமொழி கிடைப்பதில்லை. ஆனால், அவன் கேளாத கேள்விகளும் விடைகள் வந்து குவிகின்றன. விவரம் தெரியாத ஜனக் கும்பல்களில் ஒருவரைப் பார்த்து ஒருவர் ஏதேதோ செய்துகொண்டிருக்கும் சந்தடியே பலமாயிருக்கிறது. அவனுடைய பரிதாப நிலையை எவரும் உணர்வதில்லை. ‘எல்லோரும் அறிவற்றுப் போனார்களா? அல்லது நான் தான் அறிவை இழந்துவிட்டேனா ?’ என்று அவன் சிந்திக்கிறான். பகுத்தறிவோடு கூடிய அவனுடைய உள்மனம் கூறுவது பொருளற்றதாக இருக்க முடியாது என்று அவன் தீர்மானிக்கிறான். ‘உலகம் முழுதும் எதிராக இருந்து, என் உள்மனம் மட்டும் தனித்து நின்றாலும், அதையே நான் நம்புவேன்!’ என்ற முடிவுக்கு வருகிறான். ‘நான்’ என்ற உணர்ச்சியுள்ள அவனுடைய அகம் இரண்டு பிரிவாகக் காட்சியளிக்கிறது : ஒன்று, அவன் வாழவேண்டும் என்று பணிக்கிறது. மற்றது, (பகுத்தறிவு) அவன் வாழ முடியாது என்று கூறுகிறது. மனிதன் தான் இரு பிரிவாகப் பிரிந்திருப்பதை உணர்கிறான். இந்தப் பிரிவு அவனைச் சித்திரவதை செய்து, அவன் ஆன்மாவையே பிளக்கிறது. இந்தப் பிரிவுக்கும் துன்பத்திற்கும் தன் அறிவே காரணம் என்று அவனுக்குத் தோன்றுகிறது. அந்த அறிவு- பகுத்தறிவு-மனிதனுடைய விலை மதிக்க முடியாத தலைசிறந்த செல்வம். அவன் வாழ்வுக்கு அது இன்றியமையாதது. பிறக்கும்போது அவன் நிர்வாணமாக ஒரு கதியுமின்றித் தோன்றியவன். அந் நிலையில், இயற்கையின் கோரமான அழிக்கும் சக்திகளின் நடுவே அவன் உயிரோடு இருக்கவும், உபயோகித்துக் கொள்ளவும் தேவையான பொருள்களை அளிப்பதும் அந்த அறிவு தான். இவ்வாறு உதவியாகவுள்ள அந்த அறிவே அவன் வாழ்வை விஷமாக்குகிறது! அவனைச் சுற்றிலுமுள்ள பிராணிகள் தமக்கு அவசியமான உணர்ச்சிக் கருவிகளை இயற்கையாகவே பெற்றிருக்கின்றன ; அவற்றால் நன்மையடைகின்றன. தாவரங்களும், புழுப் பூச்சிகளும், விலங்குகளும் தமக்கு உரிய நியதிகளுக்கு உட்பட்டு வாழ்கின்றன ; அதனால் இன்பமான, அமைதியான நல்வாழ்வைப் பெறுகின்றன. மனிதனுக்கு மற்ற உயிர்களினும் கூடுதலான ஆறாவது அறிவு ஒன்று கிடைத்திருக்கிறது. அந்த அறிவு அவனுக்கு எவ்வளவு அநுகூலமா யிருந்தபோதிலும், அதுவே அவனைச் சித்திரவதை செய்கிறது ; மனச்சாந்தியே இல்லாமற் செய்கிறது. இது விபரீதமாகவே தோன்றும்! உள்மனத்தில் நடக்கும் இந்தப் போராட்டம் நம் காலத்தில் உச்ச நிலையை அடைந்திருக்கிறது. ** குழப்பத்தால் வந்த முரண்பாடு** மனிதன் இளமைப் பருவத்தைத் தாண்டி வளர்ந்து வருகையில் ஏதாவது ஒரு சமயத்தில் பகுத்தறிவு உணர்ச்சி அவன் உள்ளத்தில் தலைதூக்கி நிற்பதை உணர்கிறான். இவ்வாறு புதிதாக எழுந்துள்ள பகுத்தறிவு உணச்சி அவன் வாழ்வை இரு கூறாக்கி, வாழ்வையே தடைப்படுத்தி நிறுத்துவது போல் அவனுக்குத் தோன்றுகிறது. ஏனெனில், அவன் தனக்குச் சொந்தமில்லாத ஒன்றைத் தன் வாழ்க்கை என்று மயங்கி நிற்கிறான். அந்த ஒன்று என்றுமே அவன் வாழ்க்கையாக இருந்ததில்லை ; இருக்கப் போவதுமில்லை. நவீன உலகிலே நடை பெறும் தவறான போதனைகளே மனிதனின் மயக்கத்திற்குக் காரணமாயுள்ளன. பகுத்தறிவு உணர்ச்சி விழிப்படைந்த பிறகு மனிதன் தன் வாழ்வே மாறிவிட்டதாக எண்ணுகிறான். பிறந்ததிலிருந்து குழந்தையாகவும், வாலிபனாகவும், அறிவு வந்த மனிதனாகவும் இதுவரை தொடர்ந்து வாழ்ந்து வந்ததுபோல் மேற்கொண்டு வாழ முடியாது என்று அவனுக்குச் சந்தேகமின்றித் தெளிவாகிவிடுகின்றது. இத்துடன் அவனுடைய பழைய வாழ்க்கை அறுபட்டு நிற்கிறது. அறுபட்டு நிற்றல் என்பது வெறும் தோற்றந்தான். அதற்கு முன்னால் அவனுக்கு வாழ்க்கையே இருந்ததில்லை. பகுத்தறிவு உணர்ச்சி தோன்றிய பிறகே அவனுக்கு முந்திய வாழ்வு என்ற பிரக்ஞை உண்டாகியுள்ளது. குழவிப் பருவத்தில் மனிதன், வாழ்க்கையைப் பற்றி ஒரு கருத்தும் இல்லாமல், மிருகம் போலவே வாழ்ந்திருந்தான். அவன் சிசுவாகப் பத்து மாதம் மட்டும் வாழ்ந்திருந்தால், தன் வாழ்க்கையைப் பற்றியோ, வேறு வாழ்க்கையைப் பற்றியோ, அவன் என்ன தெரிந்திருக்க முடியும் ? கருவிலேயே மடிந்ததிருந்தால் எப்படியோ, அந்த நிலையில் தான் இருந்திருப்பான். பைத்தியம் பிடித்தவனும், முழுமூடனும் குழந்தையைப் போலவே இருக்கின்றனர் ; அவர்கள் தாம் வாழ்வதையோ, பிற உயிர்கள் வாழ்வதையோ அறியமாட்டார்கள். ஆதலால், அவர்கள் மனிதவாழ்வு பெற்றிருப்பதாய்க் கருத முடியாது. பகுத்தறிவு உணர்ச்சி தோன்றும்போதுதான் மனித வாழ்வு ஆரம்பமாகிறது. அதுவே மனிதனுக்குத் தன் வாழ்வையும், பிறர் வாழ்வையும் எடுத்துக் காட்டுகின்றது ; துன்பங்களும் மரணமும் ஏன் ஏற்படுகின்றன என்பதை விளக்குகின்றது. அதுவே தனிப்பட்ட வாழ்க்கையில் நன்மை இருக்க முடியாது என்று மறுத்து, வாழ்க்கையின் முரண்பாட்டை வெட்ட வெளிச்சமாக்குகின்றது. மனிதன் வாழ்க்கை எவ்வளவு காலம் நிலைத்திருக்கிறது என்பதைக் கணக்கிட்டுப் பார்த்து அதை விளக்க விரும்புகிறான். தன் உடல் எவ்வளவு காலம் நிலைக்கிறது என்று பார்ப்பது போலவே, அவன் வாழ்க்கையையும் காலத்தின் உதவியால் தெளிவு படுத்த ஆசைப்படுகிறான். ஆனால் திடீரென்று அவனிடம் ஒரு புது வாழ்க்கை எழும்போது, ‘இது என் உடல் தோன்றும்போது இல்லையே ! இது எப்பொழுது தோன்றிற்று? இந்தப் புது வாழ்வுக்குக் காரணமான பகுத்தறிவு உணர்ச்சி பிறவியிலிருந்தே என்னுள் மறைந்து இருந்து வந்ததா?’ என்று ஆச்சரியப்படுகிறான். காலத்தையும் இடத்தையும் வைத்தே அவன் எல்லாப் பொருள்களையும் பிரித்து அறிய முடிகிறது. ஆனால், பகுத்தறிவு உணர்ச்சி சம்பந்தமாகக் காலமும் இடமும் அளவுகோல்களாக உதவ முடியாது. மனிதனின் உடல் தோன்றியதை (அவன் பிறந்த தினமாகிய) காலத்தைக் கொண்டு கணக்கிட முடியும். ஆனால், அவனுடைய பகுத்தறிவு உணர்ச்சி தோன்றியதை, அவன் எவ்வளவு தான் ஞாபகப்படுத்திப் பார்த்தாலும் கணக்கிட முடியாது. அந்த உணர்ச்சி எப்போதுமே தனக்கு இருந்து வந்ததாக அவனுக்குத் தோன்றும். அவன் பிறக்கும்போது அது அவனுடன் இருந்ததென்று அவன் அறிய முடியுமா? அவன் உடலின் பிறப்போடு சம்பந்தமில்லாத ஓர் இடத்திலேயே அது இருந்திருக்கிறது. ஆகவே, அவனுடைய உடல் பிறந்ததும், பகுத்தறிவு உணர்ச்சி பிறந்ததும் வேறுபட்ட விஷயங்கள் என்பது அவனுக்குத் தெளிவாகிறது. மனிதன் தன் உடல் வாழ்வு எப்படி வந்தது என்பதை அறிய முடியும். அவன் தன் பகுத்தறிவு வாழ்வு சம்பந்தமாக ஆலோசனை செய்யும்போது தான் தன் பெற்றோர்களின் மைந்தன் என்றோ, பாட்டன் பாட்டிமார்களின் பேரன் என்றோ, தான் இன்ன ஆண்டில் பிறந்தவன் என்றோ கருதுவதில்லை; ஆனால், எந்தவித உறவு முறைகளையும் ஒதுக்கிவிட்டு, காலத்தாலும் இடத்தாலும் அவனிடமிருந்து விலகியுள்ள பகுத்தறிவு பெற்ற மக்களுடைய உணர்வோடு அவனும் ஒன்றிவிடுகிறான். ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால் உலகின் வேறொரு மூலையிலே வாழ்ந்த மக்களுடனும், அகண்டமான பகுத்தறிவு உணர்ச்சியின் மூலம், அவன் ஒன்று சேர்ந்து விடுகிறான். தான் எவ்வாறு தோன்றினான் என்பதைக்கூட அவன் தன் பகுத்தறிவு உணர்ச்சியின் மூலம் தெரிந்துகொள்ள முடிவதில்லை; ஆயினும், காலத்தையும் இடத்தையும் கடந்து, மற்றைப் பகுத்தறிவு உணர்ச்சிகளுடன் தனக்குச் சம்பந்தம் இருப்பதை உணர்கிறான் ; அவைகள் தன்னுள் வந்து சேருவதாகவோ, தான் அவைகளுள் கலந்துகொள்வதாகவோ உணர்கிறான். மனிதனின் அகத்துள்ளே பகுத்தறிவு உணர்ச்சி விழிப்படைவதால் தான் அது வரை வாழ்க்கை என்று அவன் கருதி வந்த வெறுந் தோற்றம் முடிவடைகிறது; அதிலிருந்துதான் உண்மையான வாழ்க்கை ஆரம்பமாகிறது. ** வேற்றுமையும் முரணும் வெறும் தோற்றங்கள்** பகுத்தறிவு உணர்ச்சி விழிப்புற்ற பின்பு மனிதர்கள் அடையும் வேற்றுமை உணர்ச்சிக்கும் வேதனைக்கும் காரணமா யிருப்பவை அவர்கள் முன்னால் பெற்றுள்ள போலிப் போதனைகளே. இவைகளாலேயே வாழ்க்கை இரு துண்டுகளாகப் பிரிந்து விட்டதாகப் பிரமை ஏற்படுகிறது. வாழ்க்கை ஒன்றுதான் என்பதை மனிதன் அறிவான். ஆனால், இரண்டாக உணர்கிறான், உடலின் வாழ்வே வாழ்க்கை என்பது அவன் கற்ற பாடம். பகுத்தறிவு உணர்ச்சியின் துணையால் பின்னால் உண்மையான வாழ்க்கையை அவன் தெரிந்து கொண்டதும், முந்திய (கற்பனை) வாழ்க்கை ஒன்று, உண்மையான வாழ்க்கை வேறு ஒன்று என்று எண்ணுகிறான். பகுத்தறிவு உணர்ச்சி, அவனுடைய சொந்த நன்மைக்கான தனி வாழ்க்கை என்பது பொய் என்றும், வேறு ஒரு நலனுக்காக அவன் ஈடுபட வேண்டும் என்றும் வழிகாட்டும்போது, அது இயற்கைக்கு மாறுபட்டதாக அவனுக்குத் தோன்றுகிறது அதனால் நன்மையில்லை என்றும் என்றும் எண்ணுகிறான். ஆனால், தனி நபரின் நன்மையும், தனிப்பட்ட வாழ்க்கையும் சாத்தியமில்லை என்பதைப் பகுத்தறிவு பெற்ற மனிதன் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது. பகுத்தறிவு உள்ளவன் தனி வாழ்க்கையின் நலனைத் தியாகம் செய்தல், பறவை தன் கால்களால் நடக்காமல் சிறகுகளால் பறப்பது எவ்வளவு இயற்கையான செயலோ அவ்வளவு இயற்கையாகும். பறக்க வேண்டிய பெரிய பறவை ஒன்று கால்களால் ஓடிச்சென்றால், அதிலிருந்து பறத்தலே இயற்கைக்கு மாறுபாடு என்று ஆகிவிடாது. அதுபோல் தான் நம்மைச் சுற்றிலும் வாழும் பகுத்தறிவு விழிப்படையாமலுள்ள மனிதர்கள் நிலையும். அவர்கள் தங்கள் சொந்த நலனே வாழ்க்கை என்று கருதி வந்தால், நாம் அறிவுக்குப் பொருத்தமாக வாழ ஆரம்பித்தல் இயற்கைக்கு முரணாக ஆகிவிடாது. பகுத்தறிவுப் புது வாழ்வு பெறும் மனிதர்கள் அடையும் வேதனை, பருவமடையும் யுவதிக்குரிய லட்சணங்களை அறியாத ஒரு பேதை, தன் உடலின் மாறுதல்களைக் கண்டு பயந்து, துயர்ப்படுவதைப் போன்றது. பின்னால் குடும்ப வாழ்க்கையை ஏற்றுக் கொண்டு, தாய்மையின் கடமைகளைச் செய்யவும், அதன் இன்பங்களை நுகரவும் தகுதி பெற்று வளர்வதை அந்த யுவதி அறியாமல், இயற்கைக்கு மாறான தோற்றங்கள் தன் உடலில் ஏற்பட்டிருப்பதாகவும், தன் ஆரோக்கியம் கெடுவதாகவும் வீணாக வேதனைப் படக்கூடும். இத்தகைய வேதனையையே புது வாழ்வு பெற்ற மனிதர்களும் அநுபவிக்கிறார்கள். ஒரு மிருகம், தன் இயல்பை உணராமல், தான் வெறும் சடப்பொருள் என்று கருதி, ஒரே இடத்தில் படுத்துக் கிடப்பதாக வைத்துக்கொள்வோம். ஆனால், உடலுக்கு உணவு வேண்டிப் பசி எழுந்துவிடும் ; இனப்பெருக்கத்திற்கு வேண்டிய ஆசையும் எழும். இவ்விரண்டும் அதை நெடு நேரம் அசைவற்றுக் கிடக்கும்படி விடுவதில்லை. மிருகம், உயிரற்ற பொருளாக இருக்க முடியாமல், விழிப்படைகிறது. சடமாய்க் கிடந்த வாழ்வு மாறி மிருக வாழ்வு ஆரம்பமாகும் போது, அது திகைப்படைந்து துயரப்படுகின்றது. மிருகம் தன்னைச் சடப்பொருள் என்று கருதியது போலவே, மனிதன் தனக்கென்று தனி வாழ்வு உண்டு என்று கருதி வந்திருக்கிறான். மிருகம் தன் துயரத்தை ஒழிக்க வேண்டுமானால், சடத்திற்கு உரிய விதிகளின்படி நடவாமல், பிராணிகளுக்கு உரிய விதிகளின்படி நடக்க வேண்டும். இது போலவே மனிதனும், மிருகங்களின் விதிகளின்படி நடக்காமல் தன் பகுத்தறிவு உணர்ச்சியின் மூலம் தெரிந்துகொள்ளும் மானிட விதிகளின்படி நடக்க வேண்டும். இதை உணர்ந்ததும், வாழ்க்கையிலே காணப்படும் முரண்பாடு மறைந்துவிடும் ; மனிதன் ‘நான்’ என்று கருதிவரும் தனித்தன்மை பகுத்தறிவு உணர்ச்சிக்குப் பணிந்து அதற்குப் பணியாற்றி வரும்.  ------------------------------------------------------------------------ 1. பொதுவாக உயிர் எப்படி உண்டாயிற்று என்றும், மனித உயிரின் தோற்றம், வளர்ச்சி பற்றியும் விவாதங்கள் நடப்பதை அடிக்கடி காண்கிறோம். விவாதம் செய்பவர்கள் உண்மையை நேரிலே கண்டவர்கள்போல எண்ணிக்கொண்டு பேசுவார்கள். காலத்தை வைத்துக்கொண்டு உயிரின் வளர்ச்சியைப் பற்றி அவர்கள் கூறும் வாதங்களைப் பார்க்கினும் கற்பனை மிகுந்தவை வேறு இருக்க முடியாது. மானிட உயிரின் ஆரம்பத்தை எதிலிருந்து கணக்கிடுவது ? உயிரின் ஆரம்பம் தாயின் கர்ப்பத்திலா, குழந்தை மண்மீது பிறந்தவுடனா. அல்லது பெற்றோர்களின் பிறப்பிலா, அல்லது எல்லாவற்றிற்கும் முன்னால் மனிதன் விலங்கு உருவத்தில் இருந்த நிலையிலா ? அல்லது உயிர் உண்டாவதற்கு ஏற்ற மூலமான சடப்பொருள் என்று கருதப் பெறும் ‘பிராடோ பிளாஸம்’ (Protoplasm) என்பதிலிருந்து உயிர் தோன்றியதாகக் கொள்வதா ? சூரியனிலிருந்து ஒரு பகுதி தெறித்து விழுந்து நாளடைவில் அப்பகுதியின் கொதிப்பு அடங்கிக் குளிர்ந்துவிட்டதாம். அந்தக் குளிர்ச்சியடைந்த பகுதியில் உயிர் உண்டாவதற்கு ஏற்ற ‘பிராடோபிளாஸம்’ ஏற்பட்டதாம். இத்தகைய விவாதங்கள் எல்லாம் அளவுகோல் இல்லாமலே அளக்கும் கற்பனை விஷயங்களேயாகும்.↩︎ உண்மை வாழ்வின் உதயம் பயிரின் வாழ்க்கை ஒரு தானிய மணியில் அடங்கிக் கிடக்கின்றது. செடியின் வாழ்க்கை ஒரு வித்தில் அடங்கியிருக்கின்றது. இதே போல உண்மையான வாழ்க்கை ஆரம்பத்திலிருந்தே மனிதனுள் அடங்கியிருக்கின்றது. ஒரு சமயம் வரும்போது, அது வெளியே தோற்றமாகிறது. தனிப்பட்ட மிருக வாழ்க்கை மனிதன் தன் சொந்த இன்பத்தை நாடும்படி வற்புறுத்துகின்றது ; உண்மையான வாழ்க்கை தனித்த இன்பம் சாத்தியமில்லை என்று வேறோர் இன்பத்தைக் காட்டுகின்றது. அந்த இன்பம் தொலைவிலிருப்பதால், தெளிவாகத் தெரியாமல், இலேசாகத் தென்படுகின்றது. அதை உடனேயே நன்கு தெரிந்துகொள்ள முடியாததால், மனிதன் தான் வழக்கமாகப் போற்றி வந்த தனி வாழ்க்கையை உதறிவிட்டு வெளியேற முடிவதில்லை. ஆயினும், பழைய தனி வாழ்க்கையில் நம்பிக்யை அறவே போய் விடுகிறது. முதலில் தெளிவாகத் தெரியாவிட்டாலும், புதுவாழ்வில் மேலும் மேலும் நம்பிக்கை ஏற்படுகிறது இந் நிலையில் அவன் தன் மிருக வாழ்ககைக்கும் பகுத்தறிவு உணர்ச்சிக்கும் ஒரு புதிய சம்பந்தத்தை அமைத்துக் கொள்கிறான். மனிதன் உண்மையான மானிட வாழ்வில் புக ஆரம்பிக்கிறான். அவன் ஒரு புதுப் பிறவியாகவே தோன்றுகிறான். ஓர் உயிர் உலகிலே தோன்றுவது என்றால், அதற்குக் காரணம் அதன் இச்சையன்று. அது முதிர்ச்சியடைந்து, தன் பழைய நிலையில் தொடர்ந்து இருக்க முடியாததாலேயே பிறப்பு ஏற்படுகின்றது. மனிதன் அறியாமலே பகுத்தறிவு உணர்ச்சி அவனுள் வளர்ந்து வருகிறது; வளர்ந்து தனித்த வாழ்க்கை இயலாதபடி தடுத்துவிடுகின்றது. இதன் பின்பு ஏற்படும் விளைவு, ஒரு விதை முளை விடுவதைப் போன்றது. வித்து பூமிக்குள் மறைந்து தன்னை அழித்துக்கொண்டு முளை வரக் காரணமாயிருக்கிறது. வித்து அழுகி மறையாவிட்டால், முளை வராது. புதிய முளைக்குப் பழைய வித்தே உணவாகிறது. முளை செடியாகி, மலர் பூத்த பிறகு, கனி உண்டாகிறது. கனிதான் புதிய செடி உண்டாவதற்கு வேண்டிய விதை. இவ்வாறு வித்திலிருந்து மறு வித்து உண்டாவதை- அதாவது உயிரின் ஒரு பரிணாம வளர்ச்சியை - நாம் நம் கண் முன்னாலேயே காண்கிறோம். ஆனால், மனிதனிடம் பகுத்தறிவு உணர்ச்சி தோன்றி வளர்வதை நாம் காண முடிவதில்லை. ஏனெனில், நாமே காட்சிப் பொருளாக இருக்கிறோம்; நம்மிடத்திலேயே இந்த வளர்ச்சி ஏற்படுகின்றது. கண்ணுக்குப் புலனாகாத இந்த உணர்வின் பிறப்பே நமது வாழ்க்கை. விதை தானே தன் முளையைப் பார்க்க முடியாதது போல், நம்முள்ளேயே ஏற்படும் பகுத்தறிவு உணர்ச்சியின் தோற்றத்தையும், அதற்கும் மிருக உணர்ச்சிக்கும் உள்ள புதிய சம்பந்தத்தையும் வேற்றுமைப்படுத்தி நாம் அறிந்துகொள்ள முடிவதில்லை. பகுத்தறிவு உணர்ச்சி தன் மறை டத்திலிருந்து வெளியே தோன்றும்போது, நமக்குள் ஒரு முரண்பாடு இருப்பதாகத் தோன்றுகிறது. விதைக்கும் முளைக்கும் முரண்பாடு எதுவும் இல்லாதது போலவே, இதிலும் முரண்பாடு இல்லை; இருப்பதாகத் தோன்றுவது நமது கற்பனையால் தான். விதைக்கும் முளைக்குமுள்ள சம்பந்தத்தைப் போலவே, மிருக வாழ்க்கைக்கும் புதுப் பிறவியான பகுத்தறிவு உணர்ச்சிக்கும் சம்பந்தம் இருக்கிறது. மனிதன், தன்னலமே பேணி, மிருக வாழ்க்கை வாழும் மற்ற மனிதர்களும் தன்னைப் போலவே இருப்பதையும், துன்பங்கள் அவர்களைத் தொடர்ந்து செல்வதையும், கொஞ்சம் கொஞ்சமாக மரித்து வருவதே வாழ்வாக இருப்பதையும், பின்னால், பகுத் தறிவு உணர்ச்சியால் ‘நான்’ என்ற அகமாகிய வித்து அழுகிப் போவதையும் காணும்போது, அவனுடைய தனித் தன்மை என்ற மாயை கழன்று விழுந்து விடுகிறது. அவன் தன் வாழ்வு என்பது புதிதாக அரும்பிவரும் வாழ்வுதான் என்று தெரிந்துகொள்கிறான். விதையிலிருந்து யாதொரு முரணுமின்றி இயற்கையாக முளை வருவது போலவே மனிதனின் அகங்காரத்திலிருந்து புது வாழ்வு வருகின்றது. ** பகுத்தறிவே மனிதனின் விதி** பகுத்தறிவு உணர்ச்சி விழிப்படைவதுதான் மிருக உணர்ச்சி கழிவதற்கு ஆரம்பம். பகுத்தறிவை விளக்கிக் கூறவேண்டியது அவசியமில்லை ; விளக்கவும் முடியாது. ஏனெனில் நாம் அதை அறிவோம்; நமக்கு அதைத் தவிர வேறு எதுவும் தெரியாது. பகுத்தறிவைக் காட்டிலும் உறுதியாக நாம் வேறு எதையும் அறிந்து கொள்ளவில்லை. இந்த அறிவே மற்ற எல்லாவற்றிற்கும் முந்தியது. உலகில் நாம் அறியும் எல்லாப் பொருள்களும், விஷயங்களும் இந்தப் பகுத்தறிவின் விதிகளோடு இயைந்திருப்பதால்தான், அவைகளை அறிய முடிகின்றது. பகுத்தறிவை அலட்சியம் செய்ய முடியாது. பகுத்தறிவாளரான மனிதர்கள் அவசியம் பின்பற்ற வேண்டிய விதியே பகுத்தறிவு. அதுவே வாழ்க்கையைப் பக்குவப்படுத்துகிறது. மிருகம் உணவு அருந்தித் தன் இனத்தைப் பெருக்கிக்கொள்ள விதி இருக்கிறது ; செடி கொடிகள் வளர்ந்து மலர்கள் பூப்பதற்கு விதி இருக்கிறது ; பூமியும் நட்சத்திரங்களும் சுற்றி வருவதற்குக் காரணமான அண்ட கோளங்களின் விதி இருக்கிறது. இந்த விதிகளைப் போலவே, பகுத்தறிவு மனிதனுக்கு விதியாக விளங்குகின்றது. நாம் நமக்குள்ளயே உணர்ந்து கொள்ளும் சட்டமே நம் வாழ்க்கையின் விதி என்பதை அறிவோம். அதுவே உலகின் வெளித் தோற்றங்களான எல்லாப் பொருள்களுக்கும் விதியாகும். நாம் உணர்வதற்கும், வெளியே அந்த விதி நிறைவேறி வருவதற்கும் ஒரு வித்தியாசம் உண்டு. வெளியுலக சம்பந்தமாக அந்த விதி நிறைவேறுவதில் நாம் கலந்து கொள்வதில்லை. நாம் உலகைப் பற்றித் தெரிந்துள்ள அறிவு முழுதும் பகுத்தறிவின் விதிக்கு இயைந்து நடப்பதிலேயே அடங்கியிருக்கிறது. வெளியுலகில் இவ் விதிக்கு இயைந்து நடப்பதைக் கண்ணால் காண்கிறோம்; நமக்குள்ளேயே நாம் இயைந்து நடக்க வேண்டிய சட்டம் இது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். வாழ்க்கையின் நியதி என்பது பகுத்தறிவின் சட்டமேயாகும். மனிதன் மூன்று நியதிகளுக்கு (அல்லது விதிகளுக்கு) உட்பட்டு நடக்கவேண்டியிருக்கிறது. அவன் உடலில் சேர்ந்துள்ள சடப் பொருள்கள் மற்ற உலகிலுள்ள சடப் பொருள்களுக்கு உரிய விதிப்படி நடந்து தீர வேண்டும். உடல் மற்ற மிருகங்களின் உடல்களைப் போன்றதே ; ஆதலால் இது மிருக இயல்புக்கு உரிய விதிப்படி நடந்து தீர வேண்டும். இந்த இரண்டு விதிகளோடு மூன்றாவதான பகுத்தறிவின் விதியும் இருப்பாத மனிதன் ஏற்றுக் கொள்கிறான். மற்ற இரண்டு விதிகளும் மனிதன் விரும்பினாலும், விரும்பா விட்டாலும் நிறைவேறக் கூடியவை. ஆனால், பகுத்தறிவின் விதியை அவனாக நிறைவேற்ற வேண்டும். அதாவது, அவன் தனது மிருக இயல்பு பகுத்தறிவின் விதிக்குப் பணிந்து நடக்கும்படி கவனிக்க வேண்டும். அவ்வாறு செய்யாவிடில், மற்ற மிருகங்களுக்கும் அவனுக்கும் வேற்றுமை யில்லை. மிருகங்கள் தம் இயல்புப்படியே அலைந்து திரிந்து இன்புறுகின்றன. மனிதன் தானும் விலங்கு போல் தனி இன்பத்தை நாடித் திரிந்து கொண்டிருக்க முடியாது. இன்பமெல்லாம் துன்பமாவே முடிவாக மேலே கண்டோம். மிருக வாழ்க்கை நம் வாழ்க்கையாக இருக்கவே முடியாது. மிருகப் பான்மையுள்ள நம் உடல்களையே ‘நாம்’ என்று எண்ணி, உடலுக்கு உரிய சட்டத்தையே நமது வாழ்க்கையின் விதியாகக் கருதுவது தவறாகும். மக்கள் தொன்று தொட்டே இந்தத் தவறுதலைச் செய்து வருகிறார்கள். மக்கள் அறிய வேண்டிய முக்கியமான பொருளை அறிய முடியாமல் இந்தத் தவறு மறைத்துவிடுகின்றது. மிருக இயல்புள்ள நமது அகங்காரத்தைப் பகுத்தறிவுக்குப் பணிந்திருக்கச் செய்வதை அறிந்து கொள்வது தான் அந்த முக்கியமான பொருள். அவ்வாறு பணிந்து நடக்காமலிருந்தால், வாழ்க்கையின் நன்மையை அடைய முடியாது. இந்த நன்மையைப் பெறுதலை ஒதுக்கிவிட்டு, மனிதர் உயிரோடிருப்பதை மட்டும் ஆராய்ச்சி செய்வதில் நாம் தவறாக முற்படுகிறோம். வாழ்வில் இன்பம் அடைவதற்காக நமது மிருக இயல்பு எந்த விதிக்குப் பணிய வேண்டுமோ அதைப்பற்றி ஆராய்வதே முதன்மையான அவசியம் உலகிலுள்ள மற்ற எல்லாப் பொருள்களின் ஆராய்ச்சிகளும் இதற்குப் பின்னால் வரவேண்டியவை. போலி விஞ்ஞானம் இந்த முறையைத் தலைகீழாக மாற்றியுள்ளது. இந்த விஞ்ஞானம் மனிதனின் மிருக வாழ்கையையும், சுக வாழ்வையும் பற்றி ஆராய முற்பட்டு, மூலாதாரமான முதல் ஆராய்ச்சியைக் கைவிடுகின்றது. மனிதனை விலங்காகவே கருதி இது ஆராய முற்படுகின்றது. போலி விஞ்ஞானத்தின் வாதம் இதுதான்: ‘மனிதர்கள் இப்பொழுது வாழ்கிறார்கள் ; நமக்கு முன்னாலும் வாழ்ந்திருக்கிறார்கள். அவர்களுடைய வாழ்க்கை முன்னால் எப்படியிருந்தது என்பதைப் பார்ப்போம் ; காலத்தாலும் இடத்தாலும் அவ் வாழ்க்கை என்னென்ன மாறுதல்களை அடைந்தது என்று கவனிப்போம். சரித்திர பூர்வமான இந்த மாறுதல்களிலிருந்து மானிட வாழ்வின் சட்டத்தைக் கண்டுபிடிப்போம்.’ போலி விஞ்ஞானிகளின் இலட்சியமே- குறிக்கோளே- இத்தகைய ஆராய்ச்சி பயனற்றது என்று தீர்ப்புக் கூறுவதாக இருக்கிறது. ஏனெனில், மனிதன் உண்மையான இன்பத்தை அடைவதற்காக அவனது மிருக இயல்பான அகத்தை ஆண்டு அடக்கவேண்டிய பகுத்தறிவின் விதியை ஆராயாமல், மற்ற ஆராய்ச்சிகளைச் செய்வதால் என்ன பயன் விளையும்? மேலும், மிருக வாழ்க்கைக்கு உரிய பொது விதி ஒன்றினாலேயே மனித வாழ்க்கையும் மாறி வருவதாயிருந்தால், இந்த விதிகளைப் பற்றி ஆராய்வதில் பயனே யில்லை. இந்த விதிகளின்படி மாறியே தீர வேண்டும் என்ற அவசியம் இருந்தால், இவைகளைத் தெரிந்துகொண்டாலும், தெரிந்துகொள்ளாவிட்டாலும் ஒன்றுதான். மண்ணுள் வாழும் எலிகளுக்கும், நீர் நாய் போன்ற மிருகங்களுக்கும் உரிய விதிகளே நம்மையும் ஆட்டிவைக்கின்றனவா ! பகுத்தறிவின் விதியை எங்கே கண்டுபிடிக்க முடியும் ? பகுத்தறிவை மனிதன் எங்கே கண்டுபிடித்தானோ அங்கேயே அதை அறிய முடியும். அதாவது, அவனுடைய பகுத்தறிவு உணர்ச்சியிலேயே அதை அறியலாம்; வேறு எங்கும் காண முடியாது. மனிதனை மிருகமாக எண்ணி எவ்வளவு தான் ஆரய்ந்து பார்த்தாலும், அந்த அறிவு ஏற்பட முடியாது. ‘சரித்திர ஆராய்ச்சி’ என்றும், ‘அரசியல் ஆராய்ச்சி’ என்றும் பல பெயர்களால் நடைபெறும் ஆராய்ச்சிகளின் மூலம் வாழ்க்கையைப் பற்றிக் கண்டுபிடித்துள்ள தத்துவங்கள் பயனற்றவை என்பதற்கு வேறு சான்று வேண்டியதில்லை. மானிட அறிவின் இலட்சியம் ஒன்றுதான். அந்த முக்கியமான குறிக்கோளை மறந்துவிட்டு மற்ற விஷயங்களையே ஆராய்வதில் இன்னொரு பிரிவினர் ஈடுபட்டிருக்கின்றனர். இந்த விஞ்ஞானிகள், கூறுவதைக் கவனிப்போம்: ’மனிதன் மற்ற விலங்கு களைப் போலவே உணவை உட்கொண்டு வளர்கிறான்; தன் வமிசத்தை விருத்தி செய்கிறான்; பின்னால் வயோதிகமடைந்து மரிக்கிறான். ஆனால், அவனுடைய மனது சம்பந்தமான நிகழ்ச்சிகளை மட்டும் புரிந்து கொள்வது கஷ்டமாயுள்ளது. இவை விடுக்க முடியாத சிக்கலை உண்டாக்கி விடுகின்றன. ஆகவே மானஸீக சக்திகள் இல்லாத விலங்குகளையும் தாவரங்களையும் முதலில் ஆராய்ந்து பார்ப்போம். விலங்குகளுக்கு உரிய விதிகள் மனிதர் விதிகளைவிட எளிதில் புரியக் கூடியவை ; அவைகளைப் பார்க்கிலும் சடப்பொருள்களின் விதிகள் மேலும் எளிதானவை. முதலில் சடப்பொருள்களையும் ஆராய்ந்து, பிறகு தாவரங்களையும் விலங்குகளையும் கவனிக்கலாம். மனிதனின் உடல் சடப்பொருள்களால் ஆக்கப்பட்டிருப்பதால், அவைகளைக் கொண்டே மனிதனையும் அறிந்து கொள்ளலாம். சடப் பொருள்களின் விதிகளே அவன் நடவடிக்கைகளுக்கும் காரணமா யிருப்பவை. மிருகங்களிடத்திலும், தாவரங்கள், சடப்பொருள்களிடத்திலும் இல்லாத ஒரு பொருள் மனிதனிடம் இருக்கிறதே என்ற விஷயம் இந்த ஆராய்ச்சியாளரைப் பாதிப்பதில்லை. அந்த ஒரு பொருளைப் பற்றி அறிய வேண்டியதே பயனுள்ள ஆராய்ச்சி என்பதும், அது இல்லாமல் மற்ற அறிவெல்லாம் பயனற்றவை என்பதும் அவர்களுக்குப் புலப்படுவதில்லை. உடலிலுள்ள சடப் பொருளில் ஏற்படும் மாற்றங்கள் மனிதனின் செயல்களைப் பாதிக்கின்றன என்றால், அவன் செயல்களுக்கெல்லாம் பொருளின் இயக்கமே காரணம் என்று கூறிவிட முடியுமா ? வேரடியிலுள்ள மண்ணை எடுத்தால் செடிக்குக் கேடு விளையும். இதனால் மண் ஒன்றினாலேயே செடி உண்டாயிற்று என்று ஆகிவிடாது. சரித்திரத்தின் மூலம் மனித வாழ்வு வெளித் தோற்றத்தில் எப்படி யெல்லாம் இருந்திருக்கிறது என்பதை அறிந்துகொள்வது நல்லதுதான். மனிதனின் மிருக இயல்பு பற்றியும், மற்றைப் பிராணிகள், சடப்பொருள்கள் பற்றியும் தெரிந்துகொள்வதும் நலமே. ஆனல், இவைகளை மட்டும் ஆதாரமாகக் கொண்டு மானிட வாழ்க்கையை அறிந்துவிட முயல்வது, பிரதிபிம்பத்தைப் பார்த்துக் கொண்டே அதற்குக் காரணமான மூலப் பொருளை அறிவது போலாகும். பெளதிகப் பொருள்களின் விதிகளை அறிவது நமக்கு நன்மை பயக்கும். எப்போது? நமது மிருக இயல்பு பகுத்தறிவின் விதிக்குப் பணிந்திருக்க வேண்டும் என்பதை நாம் ஏற்றுக்கொண்ட போதுதான் பயனுண்டு ; அந்த விதியையே நாம் முற்றிலும் அலட்சியம் செய்து தள்ளும்போது பயனில்லை. மேலே கூறிய விதிகளை யெல்லாம் ஒருவன் நன்கு தெரிந்திருப்பதாக வைத்துக் கொள்வோம். ஒரு சமயம் அவன் கையில் ஒரு ரொட்டித் துண்டு இருக்கிறது. அதை என்ன செய்யவேண்டும் என்பதற்கு இந்த அறிவு துளியாவது பயன்படுமா? அவன் ரொட்டித் துண்டைத் தன் மனைவிக்குக் கொடுக்க வேண்டுமா? அல்லது நாய்க்குப் போடவேண்டுமா? அந்நியன் ஒருவனுக்கு அளிக்க வேண்டுமா? அல்லது அவனே உண்ண வேண்டுமா? அதைச் சேமித்து வைக்க வேண்டுமா? அல்லது வந்து கேட்பவருக்கு அளிக்க வேண்டுமா? இந்தக் கேள்விகளுக்கு விஞ்ஞான அறிவு பயன்படுவதில்லை. ஆயினும், இந்த விஷயத்தையும், இது போன்ற விஷயங்களையும் முடிவு செய்வதில்தானே மனித வாழ்க்கை அடங்கியிருக்கிறது! மிருகங்கள், தாவரங்கள், மற்றைச் சடப் பொருள்களின் ஆராய்ச்சி தேவையில்லை என்று சொல்லவில்லை. மனித வாழ்க்கையை அறிந்து கொள்ள அது மிகவும் இன்றியமையாதது. ஆனால், அந்த ஆராய்ச்சி பகுத்தறிவின் விதியை விளக்குவதையே குறிக்கோளாகக் கொண்டிருக்க வேண்டும். பகுத்தறிவின் விதி என்பது வெறும் பிரமையைத் தவிர வேறில்லையென்று நம்பினால், அந்த ஆராய்ச்சி வீண் வேலைதான். நிழலைப் பார்த்தே பொருளை அறிந்து விடலாம் என்று நம்புதல் உண்மையை நேரில் அறிய முடியாமலே மறைத்துவிடும். உண்மை அறிவும் போலி அறிவும் ‘நாம் எவ்வளவு அறிந்திருக்கிறோம், எவ்வளவு அறியாமலிருக்கிறோம் என்பதை அறிந்து கொள்வதே உண்மையான அறிவு. அறியாததை அறிந்துள்ளதாயும், அறிந்ததை அறியாதிருப்பதாயும் எண்ணுவதே போலி அறிவு’ என்று கன்பூஷியஸ் கூறினார். நம்மிடையேயுள்ள போலி அறிவுக்கு இதைப் பார்க்கிலும் சிறந்த விளக்கம் கூறமுடியாது. இக்காலத்துப் போலி விஞ்ஞானம், நாம் அறிய முடியாததை அறிந்துவிட்டதாயும், உண்மையில் நாம் அறிந்துள்ள ஒரே விஷயத்தை அறிய முடியாததாயும் கற்பித்துக் கொள்கிறது. இதனால், மனிதன், காலத்தாலும் இடத்தாலும் தன் முன்பு காணும் எல்லாப் பொருள்களையும் அறிந்திருப்பதாயும், தனது பகுத்தறிவு உணர்ச்சி கூறுவதை மட்டும் அறியாதிருப்பதாயும் கற்பித்துக் கொள்கிறான். நன்மையான விஷயங்களை அவன் அறிந்து கொள்ள முடியவில்லை ; முக்கியமாகத் தனக்கு நன்மையானவற்றையும் தெரிந்துகொள்ள முடியாது என்று கருதுகிறான் ; தனக்குள்ளேயே இருக்கும் பகுத்தறிவு உணர்ச்சியையும் அறிய முடியாது என்பது அவன் எண்ணம். ஆயினும், தன் மிருக இயல்பைப் பற்றி அதிகம் தெரிந்துகொள்ள முடியும் என்றும் பொதுவாக மிருகங்களையும் தாவரங்களையும் பற்றி மேலும் அதிகமாய்த் தெரிந்துகொள்ள முடியும் என்றும், சடப் பொருள்களையும் பலதிறப்பட்ட சேர்க்கைகளாயுள்ள பொருள்களையும் இன்னும் அதிகமாய்த் தெரிந்துகொள்ள முடியும் என்றும் அவனுக்குத் தோன்றுகிறது. மனிதனுடைய கண் பார்வையே ஒரு மாதிரியானதுதான். அவன் பக்கத்திலுள்ள பொருள்களை விட்டுவிட்டுத் தன்னை அறியாமலே வெகு தூரத்திலுள்ள பொருள்களிலே பார்வையைச் செலுத்துவது வழக்கம். அவைகளின் உருவங்களும், நிறங்களும் தெளிவாய்த் தெரிவதாக எண்ணுவான். ஆகாயம், அடிவானம், தூரத்திலுள்ள நிலங்கள், காடுகள் முதலியவைகளைப் பார்த்து, அவன் இவ்வாறு கருதுவது வழக்கம். உண்மை என்னவென்றால், தூரத்துப் பொருள்களின் உருவ அமைப்புக்கள் தெளிவாய்த் தெரிவதில்லை. அவைகளின் நிற வித்தியாசங்களும் புலப்படாமல் ஒரே வர்ணமாகத் தெரியும். ஆயினும், மனிதன், அவைகளைப் பார்ப்பது எளிது என்றும், அருகேயுள்ள பொருள்களைவிட அவைகள் தெளிவாய்த் தெரிகின்றன என்றும் எண்ணுகிறான். ஆகாயத்தையும் அடிவானத்தையும் பார்க்கிலும் அருகிலுள்ள வீடுகளும் மரங்களும் அவனுக்குத் தெளிவு குறைந்து தோன்றுகின்றன. அவனுடைய உள்ளங்கையைக் கண் முன்பு ஆட்டிப் பார்த்தால், அது இன்னும் தெளிவில் குறைந்து தோன்றும். எங்கும் பரந்துள்ள ஒளியைப் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை ; பார்ப்பதற்கே அது மிகவும் கஷ்டமான பொருளாகிவிடும்! மனிதனுடைய போலி அறிவும் இப்படித்தேனே இருக்கிறது! சந்தேகமில்லாமல் அவனுக்குத் தெளிவாகத் தெரியக்கூடிய பகுத்தறிவு உணர்ச்சியை அறிய முடியாத ஒன்று என்று அவன் கருதுகிறான். அதே சமயத்தில், எதை அவன் எளிதில் புரிந்து கொள்ள முடியாதோ, அதை ஆராய்ந்து பார்த்துவிடலாம் என்று முனைந்துவிடுகிறான். சடப்பொருள்-பிரகிருதி-எல்லையற்றது ; என்றும் உள்ளது. அதைக்கூட அறிந்துவிடலாம் என்று அவன் துணிவடைகிறான். இந்த விஷயங்களிலும் தூரத்திலுள்ளது எளிதாகவும், அருகிலுள்ளது கடினமானதாகவும் தோன்றுகின்றன. இந்தத் தோற்றம் தவறானது. உண்மை இதற்கு நேர்மாறானது. ஒவ்வொரு மனிதனும் தான் விரும்பும் நன்மை எது என்பதை நன்றாக அறிவான். மற்ற விஷயங்கள் எல்லாவற்றிற்கும் முன்னதாகவும், மற்றவைகளைப் பார்க்கிலும் நிச்சயமாகவும் அவன் தெரிந்துள்ளது இதுதான். இந்த நன்மையை அவனுக்கு அறிவுறுத்துவது பகுத்தறிவு என்பதும் தெரியும். பகுத்தறிவுக்கு அடங்கியுள்ள மிருக இயல்பைப் பற்றி அடுத்தபடியாக அவன் அறிவான். இதற்குப் பிறகுதான் அவன் காலத்திலும் இடத்திலும் தோன்றும் மற்றைப் பொருள்களை யெல்லாம் காண்கிறான்- காண்கிறானே தவிர, அறிந்துகொள்வதில்லை. மனிதன் தன்னை- தன் மிருக இயல்பை- உணர்ந்து கொள்வதோடு அவனுடைய உண்மையான அறிவு பூர்த்தியாகிறது. அவனுடைய மிருக இயல்பு நன்மையை நாடிச் செல்கின்றது. அது பகுத்தறிவின் விதிக்கு உட்பட்டிருக்கிறது. மிருக இயல்புள்ள உடலில் அவன் தன்னை அறிந்து கொள்கிறான். காலத்திலும் இடத்திலும் அவன் சம்பந்தமுள்ளவன் என்பதால் இந்த அறிவு ஏற்படுவதில்லை. (காலத்திலும் இடத்திலும் தான் பரிணமித்து வந்தவன் என்பதை அவன் கண்டு கொள்ளவே முடியாது.) பகுத்தறிவின் விதிக்கு அடங்கி நன்மையை நாட வேண்டும் என்று அவன் கட்டாயப் படுத்தப்படுகிறான். அதனால் தான் அவன் உண்மையை உணர முடிகின்றது. உடலாகிய மிருகத்தினுள் தான் காலத்தையும் இடத்தையும் கடந்து நிற்பதை அவன் உணர்கிறான். காலத்திலும் இடத்திலும் தனக்குரிய ஸ்தானம் எது என்பதைப் பற்றி அவன் சிந்திக்கும் போது, அவன் இருக்கும் காலத்திலிருந்து இரண்டு பக்கங்களிலும் விரிந்து செல்லும் எல்லையற்ற காலமே அவனுடைய காலமாகத் தோன்றுகிறது ; அவன் இருக்கும் இடத்தை ஒரு மையப் புள்ளியாகக் கொண்டு, அதிலிருந்து எல்லையற்ற வெளியில் எல்லாப் பக்கங்களிலும் விரிந்து பரவும் எல்லையில்லாத பெரிய வட்டமே அவன் இடமாகத் தோன்றுகிறது. அந்த வட்டத்தின் விஸ்தீரணம் எங்கும் இருக்கிறது ; ஓரிடத்திலும் இல்லை. எனவே, காலத்திற்கும் இடத்திற்கும் அப்பாற்பட்டு நிற்கும் தன்னையே மனிதன் உண்மையாக அறிகிறான். ‘நான்’ என்ற தன் தன்மையை அறிவதோடு அவனுடைய உண்மையான அறிவு முற்றுப் பெறுகின்றது. இந்த அகங்கார சம்பந்தமில்லாமல் அவன் எதையும் அறிவதில்லை. வெளியுலகப் பொருள்களை மேலெழுந்தவாரியாக ஓரளவுதான் அவன் காண முடியும் ; கண்டு விளக்க முடியும். மனிதன் மற்ற மனிதர்களைப் பற்றிப் பூரணமாகத் தெரிந்துகொள்ள முடிவதில்லை. ஏனெனில், மக்கள் கோடிக்கணக்காக இருக்கின்றனர். அவன் கண்டும் கேட்டும் இராத எத்தனையோ மக்கள் முற்காலத்தில் இருந்திருக்கிறார்கள் ; இனியும் இருப்பார்கள். எனவே, அவன் தன்னைப் பற்றித் தெரிந்துள்ள அளவுக்கு மற்றையோர்களை அறிந்துகொள்ள இயலாது. விலங்குகளை எடுத்துக் கொண்டாலோ, அவைகளில் எத்தனையோ ஆயிரம் வகைகள் இருக்கின்றன. மனிதன் மற்ற மனிதர்களைப் பார்த்துத் தெரிந்து கொண்டதிலிருந்து, பகுத்தறிவு ஒன்றை மட்டும் நீக்கிவிட்டு, மிருகங்களின் இயல்பு இப்படித்தான் இருக்கும் என்று யூகித்துக்கொள்கிறான். மிருகங்களைப் பார்க்கிலும் குறைவாகவே அவன் தாவரங்களைப் பற்றித் தெரிந்து கொள்கிறான். உலகம் எங்கும் நிறைந்துள்ள உயிரற்ற சடப் பொருள்களைப் பற்றிய அறிவை மேலும் குறைந்த அளவிலேயே பெற முடிகிறது. சடப் பொருள்கள் பற்பல விதமான உருவங்களில், காலத்திலும் இடத்திலும் எல்லையற்றனவாக இருப்பதால், மளிதன் அவைகளையெல்லாம் தான் கண்டுகொள்ள முடியாதென்று மனக்கண்ணாலே கற்பனை மட்டும் செய்துகொள்கிறான். ** மனிதனும் பிற பொருள்களும்** நமக்குத் தெளிவாகப் பொருள் விளங்கக் கூடிய சில வார்த்தைகளைப் பார்ப்போம்: “நாய் வேதனைப்படுகிறது; கன்று என்னிடம் பிரியமாயிருக்கிறது; பறவை இன்பமா யிருக்கிறது ; குதிரை வெருவி ஓடுகிறது; நல்ல மனிதன்; தீய மிருகம்.-” இவைகளைப் பார்க்கிலும் நமக்குத் தெளிவாக விளங்கக் கூடிய சொற்கள் என்ன இருக்கின்றன? ஆயினும், இந்தச் சொற்களைக் காலத்தையோ, இடத்தையோ துணையாகக் கொண்டு விளக்க வேண்டிய அவசியமில்லை. இதற்கு மாறாகக் காலத்தையும் இடத்தையும் கொண்டு மிகவும் துல்லியமாக ஒரு பொருளை விளக்கினால், அதுதான் நமக்குப் புரிவதில்லை; எவ்வளவுக் கெவ்வளவு துல்லியமாக விளக்கப்படுகிறதோ அவ்வளவுக் கவ்வளவு புரியாமற் போகிறது. பூமி, சந்திரன், சூரியன் முதலிய கோணங்களைக் கட்டுப்படுத்தும் பூமியின் ஆகர்ஷண சக்தியின் விதியைப் புரிந்து கொண்டு விட்டதாக யாரேனும் சொல்ல முடியுமா? இதைக்கூடப் புரிந்துகொள்ள முடியாவிட்டாலும், காலத்தையும் இடத்தையும் ஆதாரமாகக் கொண்டு சூரிய கிரகணம் வருவதை முன்னதாக நிர்ணயித்துச் சொல்லிவிட முடிகின்றது. நமது சொந்த வாழ்க்கை, நன்மையை அடைவதில் நமக்குள்ள ஆர்வம், அந்த நன்மையை எடுத்துக் காட்டும் அறிவு ஆகியவைகளைத் தவிர நாம் வேறு எதையுமே பூரணமாய்த் தெரிந்து கொள்ளவில்லை. இவைகளுக்கு அடுத்தபடியாக நமது மிருக உடலைப் பற்றியும், அது தன் நலத்தை நாடுவதையும், அறிவின் விதிக்கு அது அடங்கிச் செல்வதையும், நாம் ஓரளவு அறிகிறோம். இது இரண்டாம் படி. நமது மிருகத் தோற்றத்தைக் காலத்தையும் இடத்தையும் கொண்டு கண்ணால் பார்த்தும், கவனித்தும், ஓரளவுதான் தெரிந்துகொள்கிறோம்; ஆனால், நமது புத்திக்கு அதன் விவரங்கள் அனைத்தும் விளங்கிவிடுவதில்லை. இதற்கு அடுத்தபடியாக மற்ற மனிதர்களைப் பற்றி அறிகிறோம். அவர்களுடைய இயற்கை நம் இயற்கையைப் போல் இருக்கிறது; அவர்களும் நம் உடல்களைப் போன்ற உடல்களைத் தாங்கி நிற்கின்றனர். ஆயினும், அவர்களுடைய வாழ்க்கை எவ்வளவு தூரம் நம் வாழ்க்கையின் விதிகளை அநுசரித்து வருகின்றனவோ, அதோ அளவுக்குத்தான் அதைப்பற்றித் தெரிந்து கொள்கிறோம். காலத்திலும் இடத்திலும் அதிகமாக வெளிப்படும் வாழ்க்கையைப் பற்றி நாம் மிகக் குறைவாகவே அறிந்து கொள்ள முடிகிறது. ஒரு பெரிய மகானைப் பற்றி நாம் அதிகமாய்த் தெரிந்துகொள்ள முடியும். (அவருடைய பெருமை வெளியே காலத்தையோ, இடத்தையோ சார்ந்ததாக இல்லை.) அறிவின் விதிகளோடு அவர் இயைந்து நடப்பதாலே, அவர் நமக்கு மிகவும் நெருங்கியவராக ஆகிவிடுகிறார். மற்ற மக்களைப் பற்றித் தெரிந்கொள்வதற்கு அடுத்தபடியாக மிருகங்களைப் பற்றி அறிகிறோம். நாம் நம் உடல் நலத்தை நாடுவதுபோல், அவைகளும் தத்தம் நலத்தையே நாடுகின்றன. ஆயினும், நம் அறிவுக்கு நிகரான புத்தி அவைகளுக்கு இல்லை. எனவே, அவைகளோடு நம் பகுத்தறிவு உணர்ச்சி மூலம் சம்பந்தம் வைத்துக்கொள்ள வழியில்லை. மிருகங்களுக்கு அடுத்தபடியாகத் தாவரங்களைப் பற்றி நம் அறிகிறோம். இவைகளைக் காலத்தையும் இடத்தையும் கொண்டே அறிய முடியும். நம் அறிவுக்குரிய பொருள்களில் இவைகள் மேலும் அதிகத் தூரத்தில் ஒதுங்கியிருக்கின்றன. தாவரங்களைப் பார்க்கிலும் தொலைவிலுள்ளவை மற்றைச் சடப் பொருள்கள். நமக்கு உள்ளதுபோல் அவைகளுக்கு அகம் ஒன்றுமில்லை. அவை நன்மை எதையும் நாடுவதில்லை. அவைகளையும் காலத்தையும் இடத்தையும் கொண்டே நாம் அறிந்துகொள்ள முடியும். நம்மைக் கொண்டுதான் நாம் பிற பொருள்களை அறிகிறோம். நம்மைப் பற்றி நாம் பெற்றுள்ள அறிவே மற்றவைகளை அறிய உதவுகிறது. மிருகங்களுக்கு உரிய விதிகளைக் கொண்டு தான் அவைகளை அறிய வேண்டும். சடப்பொருள்கள் சம்பந்தமாகவும் இதே முறையைத்தான் பின்பற்ற வேண்டியிருக்கிறது. மனிதன் தன்னை அறிகிறான். அதனாலேயே உலகை அறிய முடிகிறது. அவனுக்கும் உலகத்திற்கும் மூன்றுவித சம்பந்தங்கள் இருக்கிறன: அவனுடைய பகுத்தறிவு உணர்ச்சியின் சம்பந்தம், அவனுடைய மிருக உடலின் சம்பந்தம், அந்த மிருக உடலில் அமைந்துள்ள சடப்பொருளின் சம்பந்தம் இந்த மூன்று சம்பந்தங்களையும் அவன் தன்னிடத்திலே காண்கிறான். இதைக் கொண்டு உலகிலே அவன் பார்க்கின்ற பொருள்கள் அனைத்தையும் கீழ்க் கண்ட மூன்று பிரிவுகளில் அவை எதைச் சேர்ந்தவை என்று பகுத்து அறிகிறான் : (1) அறிவுள்ள பிராணிகள், (2) மிருகங்களும் தாவரங்களும், (3) சடப்பொருள். சடப்பொருளைப் பற்றித் தெரிந்து கொள்வதால் உயிர்ப் பிராணிகளைப் பற்றியும், உயிர்ப் பிராணிகளிலிருந்து மனிதர்களைப் பற்றியும் மனிதன் தெரிந்து கொள்வதில்லை. இதற்கு மாறாகத் தன்னிலிருந்து மற்ற மனிதர்களையும், மனிதர்களிலிருந்து விலங்கினங்கள் தாவரங்களையும், அவைகளிலிருந்து சடப் பொருளையும் அறிகிறான். நாம் நம்மை அறிந்துகொள்ள வேண்டும். உண்மையில் நமக்கு நம்மைப் பற்றித்தான் தெரியும். நம்மைப் பற்றிய அறிவின் பிரதிபிம்பமே மிருகங்கள் தாவரங்களைப் பற்றிய அறிவு. சடப்பொருள்களைப் பற்றிய அறிவு பிரதிபிம்பத்தின் பிரதிபிம்பமே. நமக்கும் நாம் பார்க்கும் பொருள்களுக்கும் உள்ள சம்பந்தத்தைக் கொண்டே நாம் அவைகளைப் பற்றித் தெரிந்துகொள்ள முடிகிறது ; காலத்தையும் இடத்தையும் ஆதரவாய்க் கொள்வதால் மட்டும் அறிய முடியாது. நமக்கு உரிய விதிக்கும், பிற பொருள்களை ஆட்சிபுரிந்து வரும் விதிக்கும் ஒற்றுமை யிருப்பதைக் கொண்டே நாம் பொருள்களை ஓரளவு தெரிந்து கொள்ள முடிகிறது. தூரத்திலுள்ள பொருள்களைப் பார்ப்பது எளிதாகத் தோன்றும் என்பதை மேலே கண்டோம். சடப் பொருள்கள் நம்மிடத்திலிருந்து வெகு தூரத்தில் இருப்பதால், அவைகளை அறிந்து கொள்வது எளிதாகத் தோன்றலாம். அவைகளுக்கு உரிய விதிகள் நம் பார்வைக்கு ஒரே மாதிரியாய்த் தோன்றுவதால், அவைகளை அறிவதில் கஷ்டமே யில்லை என்று எண்ணுகிறோம். மிருகங்களைப் பற்றியும் நாம் இவ்வாறே தவறாக எண்ணுகிறோம். மிருகங்கள் அடங்கி வாழவேண்டிய விதிகள் இருக்கின்றன என்று நாம் பார்க்கிறோமேயன்றி, அந்த விதிகளை உணர்ந்து விட்டதாகச் சொல்ல முடியாது. நமது பகுத்தறிவு உணர்ச்சி மிருக இயல்பின் மீது ஆதிக்கியம் செலுத்துகிறது. மிருக இயல்பு சடப்பொருளின் மீது ஆதிக்கியம் செலுத்துகிறது மிருக இயல்புக்கும், சடப்பொருளுக்கும் மேலாகப் பகுத்தறிவு உணர்ச்சி விளங்குவதால், அதைக் கொண்டு மற்ற இரண்டையும் கண்டுகொள்ள முடிகிறது. இதுபோல் பகுத்தறிவு உணர்ச்சிக்கும் மேலான அறிவைப் பெற்றவர்கள் உலகில் இருந்தால், அவர்களே நமது பகுத்தறிவு உணர்ச்சியைப் பற்றி விவரமாகக் கண்டுகொள்ள முடியும். மனிதன் மிருக உடலைப் பெற்றிருக்கிறான். அதில் சடப்பொருளும் இருக்கின்றது. இதனால், மனிதனுடைய வாழ்க்கையில் அவை இரண்டின் சம்பந்தங்களும் இருப்பதுபோல் தோன்றுகிறது. இந்தச் சம்பந்தங்களை மிருக வாழ்க்கை, சடவாழ்க்கை என்று சொல்வது தவறு. வாழ்க்கை ஒன்றேதான்-மானிட வாழ்க்கை என்பதிலேயே இவ்விரண்டும் அடங்கியவை. வாழ்க்கை என்ற சொல்லைக் கண்டபடி உபயோகித்தல் ஆகாது. நம் உடலிலேயே எத்தனையோ உயிருள்ள அணுக் கூட்டங்கள் இருக்கின்றன. ஆனால், ஒவ்வோர் அணுவும் வாழ்க்கை நடத்துவதாகக் கூறுவது பொருந்தாது. பகுத்தறிவு உணர்ச்சிக்கு நம் மிருக இயல்பைப் பணிய வைத்து நாம் வாழ்வதே வாழ்க்கை எனத் தக்கது. மனிதன் தன் உண்மையான வாழ்க்கையைத் தானே அமைத்துக் கொள்கிறான். அவனே அதை வாழ்ந்தாக வேன்டும். மற்றும் அவனோடு சம்பந்தப்பட்டுள்ள உடலும் சடமும் இயங்குவதில் அவன் பங்கெடுத்துக் கொள்வதில்லை. அவை தாமாகவே இயங்கக் கூடியவை. அவைகளுக்குத் தனியான விதிகள் இருக்கின்றன. ஒரு சமயத்தில் மனிதன் அவைகளும் தான் தான் என்று எண்ணியிருக்கலாம். ஆனால் பகுத்தறிவுச் சுடர் ஒளிவிட ஆரம்பித்ததும், அவன் அவைகளைத் தன்னிடமிருந்து வேறுபடுத்தி அறிந்துகொள்ள முடிகிறது. இவ்வாறு, உடல் வாழ்க்கை, சட வாழ்க்கை என்று முன்பு தவறாக எண்ணி வந்தது முடிந்து, புது மானிட வாழ்க்கை ஏற்படுகிறது. அந்த உண்மை வாழ்க்கையில் அவன் வேலைக்கு உடலும் சடமும் உபகரணமாயும் கருவியாயும் பயன்படுகின்றன. ** இடத்திலும் காலத்திலும் நிகழ்வது உண்மை வாழ்க்கை அன்று** சடப் பொருள் தனக்குரிய விதிகளின்படி அடங்கிக் கிடக்கும். ஆனால், அதே சடப் பொருள் ஒரு மிருகத்தின் உடலில் சேர்ந்திருக்கும் போது, அது தன் விதிகளோடு, அந்தப் பிராணியின் மேலான விதிகளுக்கும் உட்பட்டிருக்கும். இவ்வாறு இருந்தால்தான் அந்தப் பிராணி உயிரோடிருப்பதாகக் கருதப்படும். உயிரின் மேலான விதிகளுக்கு உட்படாமல் இருக்கும் எதையும் வாழ்வதாகச் சொல்ல முடியாது ; சடப் பொருளுக்கு உரிய பூத, பௌதிக, ரசாயன மாற்றங்களையே அதில் காணலாம். ஒரு பிராணி தனக்குரிய விதிகளின்படி நடக்கவேண்டும் என்ற உணர்ச்சியே யில்லாமல், சடம்போல் கிடக்கிறது என்றால், அந்த இடத்தில் உயிரின் மேலான விதிகளின் அமல் ஆரம்பமாகவில்லை என்று கருத வேண்டும். ஒரு பிராணி தனக்குரிய விதிகளின்படி நடந்து வந்து, திடீரென்று அவைகளுக்கு உட்படாமல் சடத்தைப் போல் இருந்த இடத்திலேயே கிடந்தாலும், அல்லது மாண்டு போனாலும், அந்த இடத்தில் மிருகத்திற்கு உரிய விதிகளின் அமல் முற்றுப் பெற்றதாகக் கருத வேண்டும். அதன் உடல் வெறும் சடப் பொருளாகி, சடத்திற்குரிய விதிகளின்படியே நடந்து கொள்ளும். இதுபோலவேதான் நம் வாழ்க்கையும். நாம் பகுத்தறிவு உணர்ச்சியின் விதிக்கு உட்பட்டு நடக்கும் போதுதான் வாழ்க்கை உண்டு. அவ்வாறு அடங்கி நடக்காதபோது வாழ்க்கையும் இல்லை. அதாவது, வெறும் உடலின் மிருக விதிகளின்படியே நடத்தல் மனித வாழ்க்கை ஆகாது. சடத்தில் மிருக வாழ்வு இல்லாதது போலவும், மிருகத்தின் பகுத்தறிவு வாழ்வு இல்லாதது போலவும், பகுத்தறிவின் விதியைப் புறக்கணிக்கும் மனிதனிடம் மனித வாழ்க்கை இல்லாது போகிறது. மரண அவஸ்தையிலுள்ள ஒரு மனிதனிடம் வாழ்க்கை இல்லை. அவன் கை கால்களை எவ்வளவு பலமாக அசைத்தாலும், அந்த நிலையை வாழ்க்கை என்று சொல்ல முடியாது. இதுபோலவே, பைத்தியத்திலும், மயக்கத்திலும், உணர்ச்சி - வெறியால் ஏற்படும் நடுக்கத்திலும் உள்ள ஒருவனுடைய நிலையை வாழ்க்கை என்று கருத முடியாது. அவனுக்கு உயிர் இருக்கிறது என்று மட்டுமே ஒப்புக்கொள்ளலாம். ஆனால், ஒருவன் எவ்வளவு மெலிந்திருந்த போதிலும், எவ்வளவு அசைவற்றுக் கிடந்த போதிலும், அவனுடைய மிருக இயல்பு அறிவுக்கு அடங்கி நடந்தால், அந்த நிலையை வாழ்க்கை என்றே கருத வேண்டும். மிருக இயல்பு அறிவுக்கு அடங்கி நடப்பதே வாழ்க்கை என்ற முறையைத் தவிர, வேறு எந்த முறையிலும் நாம் வாழ்க்கையைப் பற்றிப் புரிந்துகொள்ள முடியாது. இந்த வாழ்க்கை, காலத்திலும் இடத்திலும் வெளித் தோற்றம் கொண்டதாயிருப்பினும், அவைகளின் விதிகளுக்கு அது கட்டுப்பட்டதன்று. வாழ்க்கைக்கு ஒரே விதிதான் உண்டு; அறிவுக்கு ஆணவம் அடங்கி நடத்தலே அவ் விதி. ஆகவே, காலத்தையும் இடத்தையும் கணக்கிட்டு வாழ்க்கையை விவரிக்க முயலுதல், ஒரு பொருளின் அகலத்தையும் நீளத்தையும் வைத்து உயரத்தை விளக்குதலைப் போன்றது. ஆணவம் அறிவின் விதிக்கு அடங்கி நடக்க நடக்க, மனிதன் வெறும் உயிரோடிருத்தல் என்ற நிலைமை மாறி, உண்மையான வாழ்க்கை நன்றாக மலர்ந்து பரிமளிக்கும். காலத்திற்கும் இடத்திற்கும் எல்லை உண்டு அவற்றைக் குறிப்பிட்டுக் காட்ட முடியும். ஆனால், நன்மையை லட்சியமாய்க் கொண்டு, ஆணவம் அறிவுக்குப் பணிந்து நடக்கும்போது, காலம் இடம் ஆகியவற்றிற்கும் எல்லை யில்லாமற் போகிறது. ஒரு மனிதன் மிருக வாழ்க்கையைவிட்டு மேலேறி உண்மையான வாழ்க்கை வாழ ஆரம்பிக்கிறான் என்று வைத்துக்கொள்வோம். முன்னால் பள்ளத்தில் கிடந்தது மாறி, இப்போது உயர்ந்த இடத்திலிருந்து அவன் தன்னைச் சுற்றிலும் பார்க்க முடிகிறது. உயரத்திலிருந்து பார்க்கும்போது, அவன் வாழ்வு மரணத்தோடு தீர்ந்துபோகும் என்பதைப் பார்க்கிறான். காலத்தோடும் இடத்தோடும் பொருந்திய வாழ்வு மலைகளும் மடுக்களும் நிறைந்த அபாய வாழ்வு என்பதையும் காண்கிறான். இவைகளை யெல்லாம் கண்டு அவன் நடுக்கமடைந்து, மீண்டும் தரைக்கு வந்து தன் பழைய மிருக வாழ்க்கையிலேயே இருந்துவிட எண்ணுகிறான். ஆனால், அப்படியும் நிலைத்திருக்க முடிவதில்லை. அடிக்கடி அறிவின் தூண்டுதல்கள் ஏற்படுகின்றன. அவைகளை அவன் எப்போதுமே அலட்சியம் செய்ய முடிவதில்லை. மறுபடி உயரிய வாழ்க்கையை விரும்புகிறான். உறுதியுடனும் தைரியத்துடனும் அவன் மேல் நிலையை அடைந்து அதிலிருந்து இறங்கி வராமலே நிற்றல் வேண்டும். நன்மைக்கும் வாழ்க்கைக்கும் இதைத் தவிர வேறு வழியில்லை. உண்மை வாழ்க்கையில் உறுதியான நம்பிக்கை வேண்டும். வாழ்க்கையின் மேடு பள்ளங்களைத் தாண்டி மேலே எழுவதற்கு மனிதனுக்குப் பகுத்தறிவு அளித்துள்ள சிறகுகள் உண்டு. அவற்றைப் பயன்படுத்திக் கொண்டு, இவன் மேலும் மேலும் பறந்து மேல் நிலைக்குச் செல்வதையே குறிக்கோளாகக் கொள்ள வேண்டும். வாழ்க்கை என்பது உடலின் வாழ்வுதான் என்று எண்ணிக்கொண்டிருப்பவனுக்கும் இடையிடையே அறிவு உணர்ச்சியின் தூண்டுதல்கள் ஏற்படும். அவன் அவற்றை அசட்டை செய்கிறான். சில சமயங்களில் அத் தூண்டுதல்கள் நினைவுக்கு வரும்போது, அவை எந்த நேரங்களில் ஏற்பட்டன என்பது விளங்காது. அறிவு உணர்ச்சி தனக்கு எப்பொழுது முதல் இருந்து வருகிறது என்று அவன் ஆலோசித்துப் பார்ப்பான். தொன்றுதொட்டே தனக்கு அந்த இயல்பு உண்டு என்பதை அறிந்து, இடையிடையே அவன் பெறும் தூண்டுதல்களோடு நில்லாது, எப்போதுமே அறிவு உணர்ச்சியைப் பின்பற்றினால் தான் அவனுக்கு வாழ்க்கை உண்டு. பகுத்தறிவு உணர்ச்சி இருப்பது உண்மை. உண்மையில் இருக்கிறது என்று சொல்லத் தக்கது அது ஒன்று தான். அது எப்போது தோன்றிற்று, எப்போது மறைந்திருந்தது என்று காலத்தைக் கொண்டு அதை ஆராய்தல் தவறு. அதற்கு ஒரு நிமிஷமும் ஐம்பதினாயிரம் ஆண்டுகளும் ஒன்றுதான். அதற்குக் காலக் கணக்குக் கிடையாது. பகுத்தறிவு உணர்ச்சியோ, அதற்கு மனிதன் அடங்கி வாழ்தலோ, காலத்தாலோ, இடத்தாலோ ஏற்படுபவை அல்ல. காலத்திற்கும் இடத்திற்கும் அப்பாற்பட்டு நிறைவேறி வருவதே மனிதனின் உண்மையான வாழ்க்கை.  ------------------------------------------------------------------------ 1. பார்ப்பது வேறு; உணர்வது வேறு. பார்ப்பதை யெல்லாம் உணர முடிவதில்லை. மிருகங்களும் சடப் பொருள்களும் ஏதோ விதிகளின்படி நடப்பதைப் பார்க்கிறோம். ஆனால், நம் பகுத்தறிவு உணர்ச்சியை நாம் பார்ப்பதில்லை, ஆயினும். உணர்கிறோம். நாம் ஏன் பார்ப்பதில்லை என்றால், நாமே நமக்கு வெளியில் ஓரிடத்தில் இருந்து கொண்டு நம்மைப் பார்த்துக்கொள்ள இயலாது.↩︎ 2. குயவனுக்குத் திகிரியும் மண்ணும் போல, மனிதனுக்கு அவனுடைய உடலும் சடப் பொருளும் பயன்படுவதாகக் கொள்ளலாம். -ப. ரா.↩︎ தியாகமே வாழ்வின் வழி வாழ்க்கை நன்மையில் நாட்டங் கொண்டது. நன்மையில் நாட்டங் கொள்வதே வாழ்க்கை. வாழ்க்கையின் பொருள் இதுதான் என்று மனித சமூகம் முழுதும் முற்காலத்தில் உணர்ந்திருந்தது: இப்போதும் உணர்ந்திருக்கிறது ; இனியும் உணரும். சிந்தனையற்ற சாதாரண ஜனங்கள் மனிதனின் நன்மை அவன் உடல் சம்பந்தமான மிருக வாழ்வின் நலன்தான் என்று கருதுவார்கள். வாழ்க்கையில் முக்கியமான நன்மையடைதல் என்ற பகுதியை விட்டுவிட்டுப் போலி விஞ்ஞானம் உடலின் மிருக வாழ்வே வாழ்க்கை யென்று கருதுகிறது. அறிவில்லாத ஜனங்கள் என்ன தவறு செய்கிறார்களோ அதே தவறுதலை விஞ்ஞானமும் செய்கிறது. இந்த இரண்டு கருத்துக்களின் தவற்றுக்கும் காரணம் மிருக வாழ்வையே பகுத்தறிவு உணர்ச்சியென்று கருதி மயங்குதல். பகுத்தறிவு உணர்ச்சியில் உடல் வாழ்வும் அடங்கியதுதான். ஆனால், உடல் வாழ்வில் பகுத்தறிவு உணர்ச்சி அடங்கியிருக்கவில்லை. உடல் பற்றிய தனித் தன்மை விலங்குக்கும் மனிதனுக்கும் பொதுவானது. ஏனெனில், மனிதனும் ஓரளவு மிருக இயல்புடன் இருக்கிறான். ஆனால், பகுத்தறிவு உணர்ச்சி மனிதனுக்கு மட்டுமே உரிய குணம். மிருகம் தன் உடலுக்காகவே வாழலாம். அப்படி வாழ்வதை எதுவும் தடை செய்யவில்லை. அது தனி நிலையில் ஏற்படும் தன் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்கிறது ; ஆனால், அப்படிச் செய்வதாக அது உணர்வதில்லை; தனக்கு ஒரு தனித் தன்மையிருப்பது கூட அதற்குத் தெரியாது. பகுத்தறிவுள்ள மனிதன் தன் உடலுக்காக மட்டும் வாழ முடியாது. ஏன் முடியாதென்றால், தான் ஆணவமுள்ள தனி மனிதன் என்பதையும், தன்னைப்போல் தனித்தன்மை பெற்ற மனிதர்களும் ஜீவராசிகளும் இருப்பதையும், அவர்கள் ஒருவருக்கொருவர் கொண்டுள்ள சம்பந்தங்களின் விளைவுகளையும் அவன் அறிவான். மனிதன் தன் மிருக இயல்பின் நன்மையை மட்டும் நாடுவதானால், அவன் தன்னை மட்டும் நேசிப்பதானால், மற்ற ஜீவன்களும் தங்களை மட்டும் நேசிக்கின்றன என்பதை அறிய முடியாது. (மிருகங்கள் இவ்வாறு உணர்வதில்லை; அந்த நிலையில்தான் அவனும் இருப்பான்.) மற்ற ஜீவன்களும் அவனும் ஒரே லட்சியத்தை நோக்கிப் போவதை அறிந்திருந்தும், சுயநல ஆசை தென்று பகுத்தறிவு உணர்ச்சி எடுத்துக் காட்டிய பின்பும், அவனுடைய வாழ்க்கை தனிப்பட்ட சுயநன்மையை மட்டும் நாடுவதாயிருக்க முடியாது. சில சமயங்களில் மனிதன் உடலின் நலனே தன் நலன் என்று கருதக் கூடும். அதற்குக் காரணம் அவனுடைய மிருக இயல்பின் செயல்களைத் தன் பகுத்தறிவு உணர்ச்சியின் இலட்சியமாகக் கருதி மயங்குதலேயாகும். கனவில் கண்டவைகளை ஆதாரமாக வைத்துக் கொண்டு விழிப்புள்ள நிலையில் ஒருவன் அவைகளைப் பின்பற்றி நடப்பது போன்றது இது. இத்துடன் போலிப் போதனையும் இதையே வற்புறுத்தும்போது, அவன் மனம் குழப்பமடைகிறது. ஆனால், பகுத்தறிவு உணர்ச்சி உடல் வாழ்வின் நன்மை அவனுடைய நலனன்று என்றும், அது அவன் வாழ்க்கையாக இருக்க முடியாது என்றும், இடைவிடாமல் எடுத்துக் காட்டிக்கொண்டே யிருக்கிறது. காலக் கிரமத்தில் அவன் உண்மையான நன்மையையும், வாழ்க்கையையும் அறிந்துகொண்டு, அவை தன் மிருக இயல்புக்கு வெளியேயுள்ளவை என்றும் புரிந்து கொள்கிறான். ஒரு மனிதன் தன் தனி நன்மையைத் தியாகம் செய்தல் வீரமான செயலென்றும், மதிப்புக்குரிய காரியமென்றும் ஜனங்கள் சாதாரணமாக எண்ணுகிறார்கள் சொல்லுகிறார்கள். இது மதிப்புமன்று ; வீரமுமன்று; மனித வாழ்வுக்கு ஏற்பட்ட தவிர்க்க முடியாத விதியே இதுதான். மனிதன் தான் உலகம் முழுவதிலுமிருந்து வேறுபட்டுத் தனித்திருப்பவன் என்று கருதினால், அதே சமயம் தன்னைப் போலவே மற்ற மனிதர்கள் அனைவரும் உலகம் முழுவதிலு மிருந்து வேறுபட்டுத் தனித்தன்மை பெற்றிருப்பதை அவன் காண நேருகிறது ; அதனால் ஒரே மாதிரியாயுள்ள அவனுக்கும் மற்றவர்களுக்கும் இணைப்பு அல்லது சம்பந்தம் ஏற்படுகிறது. இந்த இணைப்பிலிருந்து தனி நன்மை என்பது வெறும் மயக்கம் என்பதையும், உண்மையான நன்மை ஒன்றே பகுத்தறிவு உணர்ச்சியைத் திருப்தி செய்யும் என்றும் அவன் கண்டு கொள்கிறான். மிருகத்திற்குத் தன் நலத்திற்குரிய செயலே லட்சியம் , அப்படி யில்லாவிடின் அதற்கு வாழ்க்கை இல்லாமற் போகும். மனிதனுக்கு இதற்கு நேர்மாறானது; தன் சுய நலத்திற்கான செயல் அவனுக்கு வாழ்க்கையே இல்லாமற் செய்துவிடும். மிருகத்திற்குச் சுயநலம் அவசியம்; மனிதனுக்கு அதுவே தீமை. மிருகம் தன் சுய நலத்தையும், இன விருத்தியையுமே வாழ்வின் முதன்மையான லட்சியமாகக் கொள்கிறது. ஏனெனில், அந்த வாழ்வு தீர்ந்து போகக்கூடியது என்றும், துயரம் நிறைந்தது என்றும் எடுத்துக்காட்டுவதற்கு அதற்குப் பகுத்தறிவு உணர்ச்சியில்லை. ஆனால், மனிதன் விஷயத்திலோ, அவனுடைய உடலின் பண்பு உயிரோடிருப்பது மட்டுமே; அதிலிருந்து வாழ்க்கையின் உண்மையான நன்மை எது என்பதை அவன் அறிந்து கொள்கிறான்; அந்த நன்மையும் உடலின் நன்மையும் ஒத்திராமல் மாறுபட்டிருக்கின்றன. இக் காலத்தில், மனித வாழ்க்கை பிறப்பிற்கும் மரணத்திற்கும் நடுவிலுள்ள இடைக்காலம் என்று கருதப்படுகிறது. ஆனால், இது மனித வாழ்க்கையாகாது; மனிதனின் மிருக இயல்பான ஆணவத்தின் வாழ்க்கை இது. உண்மை என்னவென்றால், சடப் பொருளில் மிருகத்தின் வாழ்க்கை வெளிப்பட்டுத் தெரிவதுபோல், மிருகத்தில் மனித வாழ்க்கை வெளிப்பட்டுத் தெரிகிறது. (சடம் உயிர் பெறும் போது மிருகமாயும், மிருகம் பகுத்தறிவு உணர்ச்சி பெறும்போது மனிதனாயும் விளங்கும்.) மிருக இயல்பின் தேவைகள் தெளிவானவை சாதாரணமானவை. பகுத்தறிவு உணர்ச்சியின் தேவைகளை மனிதனாகக் கண்டுபிடிக்க வேண்டும்! அவை பல சேர்க்கைகளோடு பின்னியிருப்பதால் அவனுக்கு விளக்கமாய்த் தெரிவதில்லை. கண் முன்பு தெரியும் உடல் வாழ்வை உதறி விட்டுக் கண்ணுக்குத் தெரியாத பகுத்தறிவு உணர்ச்சிக்குப் பணிவது மனிதனுக்குப் பயங்கரமாயும், பெருந் துன்பமாயும் இருக்கிறது. குழந்தை பிறக்கும்போது தன் பிறப்பைப் பற்றி அது உணர முடிந்தால் எவ்வளவு திகிலும் துன்பமும் அடையுமோ, அதுபோலவே இந்த மனிதனுக்கும் ஏற்படுகிறது. ஆனால், இதைத் தவிர்க்கவும் முடியாது. ஏனெனில், நன்றாக வெளியே தென்படும் ஸ்தூல வாழ்க்கை மரணத்தில் தானே முடிகிறது! ஆனால் வெளியே தென்படாத அறிவு உணர்ச்சி ஒன்றே உயிரளிப்பதா யிருக்கிறது. ** மிருக இயல்பு வாழ்க்கையின் கல்வி** மனிதனின் உடல் வாழ்க்கை கணந்தோறும் இடைவிடாமல் நசித்துக்கொண்டே வருவதையும் அது மரணத்தை நோக்கி வேகமாய்ச் சென்றுகொண்டிருப்பதையும், இவற்றால் அது அவன் வாழ்க்கையாயிருக்க முடியாது என்பதையும் அவன் கண்டு கொள்கிறான். எத்தனை எதிர்வாதங்கள் கூறினும், இந்த உண்மையை அவனிடமிருந்து மறைக்க முடியாது. மனிதனுடைய உடல் வாழ்வில், குழந்தைப் பருவத்திலிருந்து கிழப் பருவம், மரணம் வரையும், அவ் வாழ்வின் சக்தி செலவழிந்து குறைந்து கொண்டே வருகிறது. இறுதியில் மரணம். ஆகையால், இந்த வாழ்வு அவன் வாழ்வா யிருக்கமுடியாது. படம் வாழ்வின் நோக்கம் தான் அழிவில்லாமல் பெருகிக்கொண்டிருக்க வேண்டும் என்பது. ஆனால் மேய்தும் அழிவும் அந்த நோக்கத்திற்கு நேர் மாறாக எற்படுகின்றன, இத்தகைய வாழ்வு தீமையானது. ஏனென்றால், மனித வாழ்வின் அர்த்தம் அது நன்மையில் நாட்டங் கொள்வதே. மனிதனுக்கு உண்மையில் எது நன்மையாக இருந்த போதிலும், அவன் தன் உடல் வாழ்வின் நலனைத் தியாகம் செய்து தீரவேண்டியிருக்கிறது. உடல் வாழ்வின் நலத் துறப்பதே மனித வாழ்க்கையின் நியதி, சட்டம். சுயேச்சையாகப் பகுத்தறிவு உணர்ச்சிக்குப் பணிந்து இந்தத் தியாகத்தைச் செய்யாவிட்டால், ஒவ்வொரு மனிதனும் மரணத் தறுவாயில் இவ்வாறு செய்யும்படி கட்டாயப்படுத்தப்படுகிறான். அப்போது மனிதன் தன் துன்பச் சுமைகளைத் தாங்க முடியாமல் ஒரே விஷயத்தை வேண்டித் தவிக்கிறான்; தன் உடல் வாழ்வு நசித்துப் போகும் வேதனையான உணர்ச்சியிலிருந்து தான் விடுதலையடைய வேண்டும் என்றும், இந்த நிலைமையிலிருந்து வேறு நிலைக்கு மாறி வாழ வேண்டும் என்றும் விரும்புகிறான். குதிரை ஒன்றை அதன் சொந்தக்காரன் லாயத்தை விட்டு வெளியே கொண்டு வரும்போது, அது தான் அடைபட்டிருந்த நிலையிலிருந்து நல்ல வெளிச்சத்தைப் பார்த்ததும், தனக்கு ஒருவாறு விடுதலை வந்துவிட்டது என்று களிப்படைகிறது. அந்த நேரத்தில் சொந்தக்காரன் அதை வண்டியோடு பிணைக்கிறான்: அதன் வாயிலுள்ள கடிவாளம் இழுக்கப்படுகிறது. அது நடந்து முன்னேற வேண்டும், தான் போவதோடு, பின்னாலுள்ள வண்டியையும் இழுத்துச் செல்ல வேண்டும். லாயத்திற்கு வெளியே வருகையில், தன் விருப்பம் போல் எங்கு வேண்டுமானாலும் திரியக் கூடிய சுதந்திரம் வந்துவிட்டதாக அது எண்ணி யிருந்தால், இப்போது தன் கட்டுக்களை அறுத்துக் கொண்டு ஓடுவதற்காக அது துள்ளிக் குதித்து ஆர்ப்பாட்டம் செய்யும்; சில சமயங்களில் இதனால் உயிர் துறப்பதுமுண்டு. அப்படிச் சாகாமலிருந்தால், பிறகு அதற்கு இரண்டு வழிகள் தாம் உண்டு : முரண்டு செய்யாமல் வண்டியை இழுக்கவேண்டும். பாரம் அதிகமா யில்லாம லிருப்பதைக் கவனித்து, இழுப்பது துயர மென்ற எண்ணத்தைக் கைவிட்டு, அதை ஓர் இன்பமாகக் கொள்ள வேண்டும்; அல்லது இடக்குச் செய்து அடங்காமல் துள்ள வேண்டும். உடனே சொந்தக்காரன் அதை அவிழ்த்து ஒரு சுவர்ப் பக்கம் கொண்டு போய்க் கட்டி, (மாடு கமலை யிழுப்பது போல்) அது மிதி - ரோதையை மிதித்து உருட்டும் படி செய்வான். வண்டியை இழுத்தால் பல இடங்களுக்குச் செல்லலாம்; ரோதை மிதிப்பதில் இருந்த இடத்திலேயேயிருந்து வேலை செய்ய வேண்டும். எப்படியும் சொந்தக்காரனின் உத்தரவு-சட்டம் - நிறை வேறிவிடும். முதலாவது வழியில் குதிரை சந்தோஷமாக வேலை செய்யும். இரண்டாவது வழியில் அது இஷ்டமில்லாமல் வேதனையுடன் வேலை செய்யும். மனிதன் வாழ்க்கையில் பிரவேசிப்பதையும், அந்த வாழ்க்கையையும் இந்தக் குதிரை லாயத்திற்கு வெளியே கொண்டுவரப்படுவதற்கு ஒப்பிடலாம். மிருக இயல்பே வாழ்க்கை என்று கருதும் ஒவ்வொருவரும், ‘இந்த உடல் வாழ்வு எனக்கு எதற்கு ? என் வாழ்க்கைக்காக இதைத் தியாகம் செய்யவேண்டியிருக்கிறதே?’ என்று கேட்கக்கூடும். மனிதனின் உண்மையான வாழ்க்கைக்குத் தடையாக விளங்கும் உடலைப் பற்றிய பிரக்ஞை - உணர்ச்சி-எதற்காக இருக்கிறது ? இதுபோன்ற கேள்வியை ஒரு மிருகமும் கேட்பதாக வைத்துக் கொள்வோம்: ‘என் வாழ்க்கையை நான் கவனித்துக்கொண்டு போவதற்கு இடையூறாக என் உடலில் சடப்பொருள் ஏன் இருக்கிறது ? பூத பௌதிக, ரசாயனம் போன்ற அதனுடைய பல விதிகளோடு நான் பொருதிக் கொண்டிருக்க வேண்டியிருக்கிறதே!’ என்று அது சொல்லும். மிருகம் சடத்தின் விதிகளோடு பொருதுவதும், சடத்தைத் தனக்கு அடங்கியிருக்கும்படி செய்வதும் எதற்காக என்பது நமக்குத் தெளிவாய்த் தெரியும். சட்டமும் சட்டத்தின் விதிகளும் அதற்கு இடையூறாக அமையவில்லை; அதன் நோக்கங்கள் நிறைவேற ஏற்ற கருவியாகவே இருக்கின்றன. உதாரணமாகச் சடமாகிய உணவுப் பொருளை அதன் விதிகளுக்கு ஏற்றபடி ஜீரணித்துக் கொண்டால் தான் மிருகம் வாழமுடியும். மனிதன் விஷயத்திலும் இப்படித்தான். அவன் அடக்கியாள வேண்டிய மிருக இயல்பு இடையூறன்று, உதவியாக வந்துள்ன கருவி; அதன் மூலம், அதை உபயோகித்து, அவன் நன்மையடைய வேண்டும். அதை வைத்துக் கொண்டே அவன் வேலை செய்யவேண்டும். மிருக இயல்பு ஒரு மண்வெட்டி; அதை வைத்துக்கொண்டு மனிதன் தோண்ட வேண்டும். வேலை செய்வதால் அது மழுங்கியும், கூர்மையாகியும் வரவேண்டும் என்பதே விதி. மண்வெட்டி உபயோகத்திற்கே யன்றி, மூலையில் சேர்த்து வைப்பதற்காக அன்று. ’தன் வாழ்க்கையைக் காக்க விரும்புவோன், அதை இழக்கிறான். எவன் வாழ்க்கையை இழக்கிறானோ அவன் அதைக் காண்கிறான். அழிய வேண்டியதை, அழிந்துகொண்டே யிருப்பதை, யாரும் பாதுகாக்க முடியாது; அழியக்கூடியதைத் தியாகம் செய்தே அழியாத உண்மை வாழ்க்கையை அடைய வேண்டும் என்பதை இந்த வாக்கியம் வற்புறுத்துகின்றது. உணவை உற்பத்தி செய்து வாழ்க்கையைக் காப்பாற்றிக் கொள்வதற்காக மண்வெட்டி நமக்குக் கிடைத்திருக்கிறது ; அதை உபயோகப் படுத்தாமலிருந்தால், நமக்கு உணவு மில்லாமல் வாழ்வு மில்லாமல் போகும் என்பதை இந்த வாக்கியம் விளக்குகின்றது. ** புதிய பிறப்பு** ‘நீங்கள் மறுபடி பிறவியெடுக்க வேண்டும்’ என்று கூறினார் கிறிஸ்து நாதர். மனிதன் புதிதாய்ப் பிறக்க வேண்டும் என்று யாரோ கட்டளையிடுவதாக இதற்குப் பொருள் கொள்ளக் கூடாது. அவனுக்கு வாழ்க்கை அவசியமானால், அவன் பகுத்தறிவு உணர்ச்சியுடன் கூடிய வாழ்க்கையில் பிறந்துதான் ஆகவேண்டும். அவனுடைய வாழ்க்கை பகுத்தறிவு உணர்ச்சி அவனுக்கு அறிவுறுத்தும் நலனைப் பெற்றிருக்க வேண்டும் என்பதற்காகவே அவ்வுணர்ச்சி மனிதனுக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. தன் வாழ்க்கை இந்த நலனின் அமைந்திருப்பதை ஒருவன் உணர்ந்தால், அவனே உண்மையான வாழ்க்கையைப் பெற்றவன். இந்த நலனில் தன் வாழ்க்கை இல்லை யென்றும், மிருக இயல்பின் நலத்திலேயே தன் வாழ்க்கை இருக்கிறதென்றும் உணர்பவன் வாழ்க்கையை இழந்தவனாவான். இதுதான் வாழ்க்கையைப் பற்றிக் கிறிஸ்து பெருமான் அருளிய விளக்கம். தங்கள் நலத்திற்காக உழைத்தலே வாழ்க்கை என்று எண்ணும் மனிதர்கள் இந்த வார்த்தைகளைக் கேட்கிறார்கள் ; ஆனால் புரித்து கொள்வதில்லை ! அவர்கள் புரிந்து கொள்ளவும் இயலாது. இந்தச் சொற்களுக்குப் பொருளில்லை என்றும், அல்லது இவை முக்கியமில்லை என்றும், இவை உள்ளம் பரவசமான நிலையில் கூறப்பட்ட வெறும் அருள் மொழிகள் என்றும் அவர்கள் நினைக்கிறார்கள். இந்த வார்த்தைகள் ஒரு நிலையை விளக்குகின்றன; அவர்கள் அந்த நிலையில் இல்லாததால், சொற்களின் பொருளை உணர முடியவில்லை. நிலத்துள் நனைந்து ஊறிய தானியம் முளை விடுவதைக் காய்ந்து கிடக்கும் தானியம் அறிந்து கொள்ள முடியாது. ஊறியிருக்கும் தானியத்தின் மேல் கதிரவன் ஒளி காய்ந்தால், ஏதோ கொஞ்சம் ஒளியும் உஷ்ணமும் அதிகமாயிருப்பதாகக் காய்ந்த தானியம் எண்ணிக்கொள்ளும். ஆனால், ஊறிப் பக்குவமா யிருக்கும் தானியத்திற்குத் தான் உயிர்பெற்று வாழ்வதற்கு அந்த ஒளியே காரணமானது என்பது தெரியும். மிருக இயல்புக்கும் பகுத்தறிவு உணர்ச்சி குறிப்பிடும் இயல்புக்கும் முரண்பாடு ஏற்படாத நிலையிலுள்ள மனிதர்களுக்குப் பகுத்தறிவுச் சூரியனுடைய ஒளி முக்கியமானதாய்த் தெரியாது. முளைகட்டிய விதையின் நிலையில் உள்ளவர்களுக்கே அவ்வொளி உயிரளிக்கும் அமுதமாகும். மனிதர்களிடையிலும், விலங்குகள் தாவரங்களிடையிலும், இந்த முளை விடுதல் எங்கு, எப்பொழுது, எதற்காக, எந்த முறையில் ஏற்படும் என்பதை யாரும் கண்டுபிடிக்க முடியவில்லை. மனிதனிடத்தில் இந்தப் புது வாழ்வு முளைவிடுவதைப் பற்றிக் கிறிஸ்து நாதர் குறிப்பிடுகையில், அது யாருக்கும் தெரியாது, தெரிந்து கொள்ளவும் முடியாது என்று கூறியிருக்கிறார். இந் நிலையில் மனிதன் தன்னிடத்தில் உயிர் முளை விடுதலை எவ்வாறு அறிந்துகொள்ள முடியும் ? உயிர் மனிதர்களின் ஒளி,- உயிர் என்பது உயிரே-அதாவது சகல பொருள்களின் தோற்றத்திற்கும் காரணமானது. இது முளைவிடுவதை மனிதன் எப்படி அறிய முடியும்? உண்மையான வாழ்க்கையைப் பெறாமல், காலத்திலும் இடத்திலும் தோன்றும் உடலே முளைவிடுவதாயும், அழிவதாயும் மனிதன் எண்ணுகிறான். ஆனால் உண்மையான வாழ்க்கை இருக்கிறது; மனிதனுடைய பார்வையில் அது முளைவிடுவதுமில்லை, அழிவதுமில்லை. ** பகுத்தறிவு உணர்ச்சி வேண்டுவது** உலக அமைப்பில் மனிதனுக்குத் தனியான நலன் இருக்க முடியாதென்று அவனுடைய பகுத்தறிவு உணர்ச்சி கூறுகிறது. வாழ்க்கை என்பது தன் நன்மையைப் பெறுவதிலுள்ள ஆசை. ஆனால் இந்த நன்மையைப் பெற முடியாது என்பதை அவன் காண்கிறான்; தனக்கு மட்டுமே நன்மை வேண்டும் என்ற ஆசையே அவன் உயிர் வாழ்வதற்கும் காரணமா யிருக்கிறது. தன் மிருக இயல்பை அடக்கிப் பூரணமான பகுத்தறிவு உணர்ச்சியைப் பெறாத மனிதன், அடைய முடியாத இந்த நன்மையை அடைந்து விடலாம் என்ற நம்பிக்கையிலேயே வாழ்கிறான். அவனுடைய ஒரே இலட்சியம் எல்லா மனிதர்களும், எல்லாப் பிராணிகளும், தான் ஒருவனுடைய இன்பத்திற்காகவும் நன்மைக்காகவும் வாழவேண்டும் என்பது: அவன் துன்பத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் எப்படியாவது தப்பித்துக்கொள்ள வேண்டும். அவன் தன் தனி நன்மையை அடைய முடியாது என்பதையும், சுற்றியுள்ள மனிதர்கள் அவன் நலத்தை நாடாமல், தங்கள் தங்கள் நலத்தையே நாடிச் செல்வார்கள் என்பதையும் அவன் அநுபவத்தில் தெரிந்துகொண்ட பின்பும், அவன் தன் நம்பிக்கையைக் கைவிடுவதில்லை. ‘எல்லாரும் என்னை மட்டும் நேசித்தால்தான் எனக்கு இன்பம் கிடைக்கும். ஆனால், ஒவ்வொருவனும் தன்னை மட்டுமே நேசித்துக் கொள்கிறான். நான் என்ன செய்தும் பயனில்லை. நான் வேறு எதுவும் செய்வதற்கில்லை’ என்று மனிதன் தனக்குள்ளேயே சொல்லிக் கொள்கிறான். எத்தனையோ நூற்றாண்டுகள் கழிந்து செல்கின்றன. வெகு தொலைவிலுள்ள நட்சத்திரங்களையும், சூரியனையும், சந்திரனையும் பற்றி ஆராய்ச்சி செய்து எத்தனையோ விஷயங்களை மனிதர்கள் அறிந்து கொண்டிருக்கிறார்கள். ஆயினும் தங்கள் வாழ்க்கையில் ஏன் இன்பமடைய முடியவில்லை என்பதை அவர்கள் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை! பெரும்பாலான மனிதர்களுக்கு விஷயம் 5000-வருடங்களுக்கு முன்னால் இருந்த நிலையிலேயே இன்றும் இருந்து வருகிறது. மனித வாழ்வில் எப்படி இன்பமடைய முடியும் என்பது வெகு காலத்திற்கு முன்பே விளக்கப்பட்டிருக்கிறது. நாமே அதை உணராமல் உழன்று கொண்டிருக்கிறோம். அதை அறிந்ததும், அது நமக்குப் புதிதாய்த் தோன்றாமல், ஏதோ மறந்த விஷயம் நினைவிற்கு வந்ததுபோல் இருக்கும். கீழே கண்ட நிபந்தனையின் பேரில் தான் மனிதன் வாழ்வையும் இன்பத்தையும் பெறமுடியும் ; அவன் வாழ்க்கையை விஷமாக்கும் தீமைகளை அகற்ற முடியும் ; முரண்பாடுகள் துயரங்கள் முதலியவற்றையும், மரண பயத்தையும் ஒழிக்க முடியும் : ‘எல்லோரும் தங்களைவிட உன்னையே நேசித்து, உனக்காகவே வாழவேண்டும் என்று நீ விரும்புகிறாய். உன் விருப்பம் ஒரே நிபந்தனையின் பேரில் நிறைவேற முடியும் : எல்லா மனிதர்களும் மற்றவர்களின் நன்மைக்காக வாழ்ந்து, தங்களைப் பார்க்கிலும் மற்றவர்களை அதிகமாக நேசிக்க வேண்டும். அப்படியானால் தான் உன்னையும் மற்றவர்களையும் எல்லோரும் நேசிக்க முடியும். அவர்களில் நீயும் ஒருவனாக இருப்பதால் நீ விரும்பும் நன்மையை அடைய முடியும். எல்லா மனிதர்களும் தங்களைப் பார்க்கிலும் மற்றவர்களை நேசித்தால்தான் உனக்கு நன்மை ஏற்படும் என்றால், நீயும் உன்னைப் பார்க்கிலும் மற்றவர்களை மேலாக நேசிக்க வேண்டும்.’ தனி மனிதனின் இன்பம் ஏன் சாத்தியமில்லாமல் இருக்கிறது? முதலாவது காரணம்: ஒவ்வொருவரும் தத்தம் தனி நன்மையை நாடிச் செல்வதால் மனிதர்களிடையே தோன்றும் பூசல். இரண்டாவது காரணம்: இன்பமில்லாதவைகளை இன்பம் எனக்கொண்டு மயங்குதல், இவைகள் வாழ்க்கையை வீணாக்கித் தெவிட்டுதலையும் துயரத்தையும் உண்டாக்குகின்றன. மூன்றாவது காரணம்: மரணம். சுய நலத்திற்காக மனிதர்கள் ஒருவரையொருவர் அழித்துக்கொண்டு மோதிக்கொள்வது அர்த்தமற்ற செயல். ஒவ்வொருவரும் தம் நன்மைக்காகப் போராடுவதை மற்றவர்கள் நன்மைக்காகப் போராடுவதாக மாற்றிவிட்டால், பூசலே இராது. எத்தனையோ விஷயங்களில் மக்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்வதால்தான் நாம் உலகில் வாழ முடிகிறது. தனி மனிதன் தன்னைப் பார்க்கிலும் மற்றவர்கள் நன்மையில் அதிக நாட்டம் கொண்டால் முதலாவது காரணம் தீர்ந்துவிடும். இரண்டாவது காரணம் இன்பங்களைப் பற்றிய மயக்கம். தனி இன்பத்தை மறந்து பிறர் இன்பத்தில் நாட்டங் கொள்ளும்பொழுது, மனிதனுடைய இன்பத் தேட்டம் மறைகிறது. மனிதனுடைய மிருக இயல்பைத் திருப்தி செய்து கொண்டிராமல், பகுத்தறிவு உணர்ச்சியின் விதிகளின்படி நடக்கும் பொழுது, மற்றவர்களுடைய வாழ்க்கைக்காகச் செயலாற்றும்படி நேருகிறது. அதுவே தனி மனிதனுக்கு இன்பமாம். ஆதலால், அவனுடைய துன்பம் குறைந்து மற்றவர்களிடத்தில் அநுதாபம் பெருகுகிறது. இதுவே அவன் இன்பத்திற்கு ஊற்றாகிறது. மனிதனுடைய தனி வாழ்க்கையில் துன்பத்திற்கு மூன்றாவது காரணமா யிருப்பது மரணத்தைப் பற்றிய அச்சம். மனிதன் தன் மிருக இயல்பின் நன்மைக்காகப் பாடுபடுதலில் இன்பமில்லை என்பதையும், மற்றவர்களுடைய இன்பத்திலேயே தனக்கும் இன்பம் இருக்கிறது என்பதையும் காணும் பொழுது மரண பயம் தானாகவே ஒழிகிறது. உடல் மரிக்கும் பொழுது வாழ்க்கையின் இன்பத்தை இழக்க வேண்டுமே என்ற பயத்திலிருந்து தான் மரண பயம் ஏற்படுகிறது. ஆனால், மனிதன் மற்றவர்களுடைய நன்மையிலேயே தன் இன்பம் இருக்கிறது என்று கருதினால்- தன்னை விட மற்றவர்களை நேசித்தால்-மரணம் என்பது இன்பத்தின் முடிவன்று என்பதையும் உணர்ந்து கொள்வான். தனக்காக மட்டும் வாழ்பவனுக்கே மரணத்தில் பயம் இருக்கும். ஒரு மனிதனின் மரணத்தால் மற்றவர்களின் நன்மையும் அழிந்துவிட மாட்டாது. பல சமயங்களில், அவன் தன் உயிரைத் தியாகம் தெய்வதால், மற்றவர்களுக்கு நன்மையே உண்டாகிறது. ** உண்மையான இன்பம்** ‘இதுவா வாழ்க்கை! இது துறவு, தற்கொலை!’ என்று சாதாரண மனித அறிவு கூறும். ஒவ்வொரு மனிதனுடைய இன்பமும் அளவில்லாமல் பெருக வேண்டுமானால், ஒவ்வொருவரும் எல்லோருடைய நன்மைக்காகவும் உழைக்க வேண்டும். எல்லோரும் ஒவ்வொருவருடைய நன்மைக்காகவும் உழைக்க வேண்டும். இந்த விதியின்படியே இன்பமடைய முடியும்’ என்று பகுத்தறிவு உணர்ச்சி கூறும். கொள்கை அளவில் இதை ஏற்றுக் கொண்டாலும், செயலில் இதைக் கடைப்பிடிக்க முடியாது என்று மனிதன் கருதுவான். ஆனால், அவன் பகுத்தறிவு உணர்ச்சி பின்கண்டவாறு அவனை இடித்துக் கூறும் : ’நீ ஏதோ இன்பங்கள் என்று கருதுபவைகளை நீயாகத் தேடக்கூடாது. அவைகளை மற்றவர்கள் உனக்கு அளிக்க வேண்டும். இதற்கு மாறாக, நீயாக அவைகளைத் தேடிக்கொண்டால், இப்பொழுது ஏற்பட்டிருப்பதுபோல் தெவிட்டுதலும் துயரமும் ஏற்படும். மற்றவர்கள் உன்னை விடுவிக்கும் பொழுது தான் உனது கஷ்டம் நீங்கும். ’தனி மனிதனுடைய சுய நல ஆசையால் மற்றவர்களுடைய துவேஷம் ஏற்படுகிறது. எவ்வளவு அதிகமாய்ச் சுய நலத்தை நாடுகிறானோ, அவ்வளவு அதிகமாய்த் துன்பம் பெருகுகிறது. மரணத்திலிருந்து தப்பவேண்டு மென்று அவன் எவ்வளவு முயற்சிக்கிறானோ, அவ்வளவுக்கு அது அதிகப் பயங்கரமாகிறது. ‘மனிதன் வாழ்க்கையின் விதிப்படி நடக்காவிட்டால், அவன் எத்தனை முயற்சிகள் செய்தாலும் நன்மையடைய முடியாது. வாழ்க்கையின் விதி போட்டியும் பூசலும் அல்ல, எல்லா மக்களும் பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டும் என்பதே அவ்விதி.’ சுய நலத்தை விட்டுப் பிறர் நலத்திற்காக உழைக்கும்போது, அறிவுக்குப் பொருத்தமில்லாமலும் துன்பமாயும் விளங்கிய தன் முந்திய வாழ்க்கை, அறிவுக்குப் பொருத்தமாயும் இன்பமாயும் மாறுவதை மனிதன் காண்பான். மற்ற மனிதர்களும் ஜீவன்களும் தன்னைப் போலவே பிறர் நலத்திற்காக வாழ ஆரம்பித்தால், உலகம் முழுவதும் இன்ப மயமாக மாறும் என்பதை அவன் அறிந்து கொள்ள முடியும். அர்த்தமற்ற கொடுமை நிறைந்ததாக முன்னால் காணப்பட்ட உலகமே இப்படி மாறிக் காட்சி தரும். உலக வாழ்க்கை பற்றி ஆராய்ச்சிக்குப் பொருத்தன உண்மைப் பொருள் விளங்கும். உலக வாழ்க்கையின் இலட்சியம் ஒளியை நோக்கி முன்னேறுதல் என்பதும், சகல மக்களும், சகல உயிர்களும் ஐக்கியப்படுதல் என்பதும் தெளிவாகும். ஒவ்வொருவனும் தன்னை இழந்து மற்றவர்களுக்காக வாழும்போது, சமுதாயம் பகைமையும், சண்டையும் நீங்கி, சாந்தியும் இன்பமும் பெறுகின்றது. கொலையே தொழிலாய்க் கொண்டிருந்த போர் வீரர்கள் அதில் பெருமையில்லை என்று உணர்வார்கள். மக்களை அடிமைகளாக விலக்கு வாங்கித் துன்புறுத்தியவர்கள் அடிமைத்தனத்தை அகற்றுவார்கள். மிருகங்களைக் கொன்று வந்தவர்கள் அவைகளைக் கொல்லாமல் வளர்த்துவந்து அவைகளின் மாமிசத்திற்குப் பதிலாக அவைகளின் பாலைக் கறந்து பருகுவார்கள். சரித்திரமும் இந்த நிலைமைக்குச் சான்று கூறும் முற்காலத்தில் புகழ் பெற்ற பெரியோர்கள், நாம் இன்புறுவதை விட்டு, உலகம் இன்புறுவதிலே நாட்டங் கொண்டவர்கள். இன்றைக்கு ஒரு மனிதன் தன் பகுத்தறிவு உணர்ச்சிப்படி நடக்க ஆரம்பித்தால்’ மனித சமூகத்தின் முந்திய வாழ்க்கையே அப்படித் தான் நடந்து வந்திருப்பதைத் தெரிந்து கொள்வான். எல்லாவற்றிற்கும் மேலாக அவனுடைய இதயமும் இதை ஏற்றுக் கொள்ளும். அன்பே இதயத்தின் பாஷை. ** தன்னலமும் பிறர் நலமும்** வாழ்க்கை இப்படித்தான் இருக்க வேண்டுமென்பதை ஆராய்ச்சி அறிவு, சிந்தனை, சரித்திரம், உள்ளுணர்ச்சி ஆகிய எல்லாம் வற்புறுத்துகினறன. ஆயினும் உலகத்தின் கோட்பாடுகளைக் கற்றறிந்த மனிதன் இதை நம்ப மறுக்கிறான். ‘இது வாழ்க்கையையே துறப்பதாகும். நான் என் தனித் தன்மையை எப்படி இழக்க முடியும்? எனது நன்மையை நான் நாடுவது நியாயந்தானே?’ என்று நம் காலத்து நாகரிக மனிதன் கேட்கிறான். சாதாரண மனிதர்களான தொழிலாளர்கள், அறிவை அதிகமாக விருத்தி செய்துகொள்ளாதவர்கள், தங்களுடைய சுய நலங்களையே முக்கியமாகக் கொண்டு பாதுகாப்பதில்லை. இதற்கு நேர்மாறாக சுய நலத் தியாகம் செய்து, பெரும்பாலும் பிறருக்கு உதவுகிறார்கள். ஆனால் பணக்காரர்கள், படித்தவர்கள், நாகரிமானவர்கள் மட்டும் பகுத்தறிவு உணர்ச்சியின் தேவைகளை மறுத்துத் தங்கள் உரிமைகளைப் பாதுகாக்க வாதம் செய்கிறார்கள். படித்து, மெலிந்து சோம்பேறியாயுள்ள மனிதனே தன் தனி உரிமைகளைப் பிடிவாதமாய்ப் பிடித்துக் கொண்டிருப்பான். பசியுள்ள மனிதன், உண்பது அவசியம் என்று நிரூபித்துக்கொண்டிராமல், அது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் என்றும், அதை நிரூபிக்கவோ மறுக்கவோ முடியாது என்றும் கருதி, நேராக உண்ணச் செல்வான். ஏனெனில், படியாதவன் என்று கருதப்படும் சாதாரண மனிதன் தன் வாழ்க்கை முழுவதிலும் மெய்வருந்திப் பாடுபடுகிறான் ; தன் அறிவைப் புகைத்துக்கொள்ளாமல், பரிசுத்தமாகவும் உறுதியாகவும் வைத்துக் கொள்கிறான். இதற்கு மாறாகப் படித்த மனிதன், தன் வாழ் நாள் முழுதும் அற்பமான பயனற்ற விஷயங்களைப் பற்றிச் சிந்தித்துக்கொண் டிருப்பதோடு, மனிதன் இயற்கையாக அறிந்துகொள்ள வேண்டிய விஷயங் களுக்கு அப்பாலும் சிந்தித்துத் தன் அறிவைத் துர்விநியோகப்படுத்திவிடுகிறான். அவன் அறிவு சுதந்திரமா யிருக்கவில்லை. இதனால் தான் அது இயற்கையாகத் தேவையில்லாத விஷயங்களை ஆராய்ந்து கொண்டிருக்கிறது ; தனி உரிமைகளைப் பற்றியும், அவைகளின் வளர்ச்சியைப் பற்றியும், அவைகளைத் திருப்தி செய்யவேண்டிய முறைகளைப் பற்றியுமே எண்ணமிட்டுக் கொண்டிருக்கிறது. நாகரிக மனிதன் தன் தனி நன்மைகளை எண்ணாமல் இருக்க முடியாது. அவன் அந்த நிலைக்கு வந்திருக்கிறான். அவன் அறிவைக்கொண்டு தன் தேவைகளைப் பற்றி ஆராய்ந்து பார்க்கப் பார்க்கத் தேவைகள் அளவு கடந்து பெருகியிருக்கின்றன. உண்மையான வாழ்க்கையின் தேவைகள் எவை என்பதை அறிய முடியாமல் முந்தியவை அவன் கண்களை மறைக்கின்றன. உண்பதற்கு உணவு, பருகுவதற்குப் பானங்கள், சுவாசிப்பதற்குக் காற்று, தசை நார்களுக்கும் நரம்புகளுக்கும் வேண்டிய தேகப் பயிற்சி, வேலை, ஓய்வு, விளையாட்டு, விஞ்ஞானம், கலை, மதம் என்று அவன் தேவைகளை அடுக்கிக்கொண்டே போகலாம். குழந்தைப் பருவத்திலும், வாலிபத்திலும், நடுவயதிலும், வயோதிகத்திலும் எத்தனை எத்தனையோ தேவைகள் ஏற்படுகின்றன. இவைகளை யெல்லாம் விவரித்துக் கூற ஒரு வாழ்க்கையே போதாது. தேவைகளைப் பற்றி எண்ணமிடாம லிருந்தால்தான் அவைகளால் துயரம் ஏற்படாது. ஒரு தேவையைப் பற்றிச் சிந்திக்க ஆரம்பித்தால், அது மிகப் பெரிதாகி, மற்றத் தேவை களை நசுக்கிவிட்டுத் தானும் நசுங்கிவிடும். இதனால் வேதனையே அதிகமாகும். ** மிருக இயல்பை அடக்கிவைத்தல்** சுயநலமான தன் தேவைகளையே ஒருவன் வற்புறுத்திக் கொண்டிருந்தால், மிருக வாழ்க்கையின் இயல்பே அவனை ஆட்கொண்டுவிடும். உண்மையான மனித வாழ்க்கை அவன் கண்ணுக்குப் புலப்படாது. நம் காலத்தில் நாம் வேறு எதைத்தான் எதிர்பார்க்க முடியும்? நாகரிகமான தேவைகளைப் பெற்றிருப்பவனே கண்யமான மனிதன் என்றும், மனித சமூகம் தன் தேவைகளைப் பூர்த்தி செய்வதே இன்பம் என்றும் நம் ஆசிரியர்களே போதிக்கிறார்கள். இந்தப் பாடத்தைக் கற்றவர்கள் பகுத்தறிவு உணர்ச்சியின் போதனைகளை எப்படிக் கவனிக்க முடியும்? அவர்களுடைய அறிவு முழுதும் தங்கள் தேவைகளைப் பெருக்கிக் கொள்வதிலேயே பயன்படுகிறது. தனி மனிதனின் தேவைகள் அவனுடைய மிருக வாழ்க்கைக்கு உரியவை. மிருக இயல்பின் அவசியமான தேவைகளைப் பூர்த்தி செய்வதும் எளிது. ஆனால் மனிதன் தன் அறிவைக் கொண்டு இவைகளை ஆராய்ந்து பெருக்கிக் கொள்வதால், இவை எல்லை யில்லாமல் விரிவடைகின்றன. முறையான வாழ்க்கைக்குத் தேவையானவை எல்லாம் கிடைக்கக் கூடியவை. பறவைகளும் தாவரங்களும் கூட இவைகளைப் பெறுகின்றன. இந்த மிருக இயல்பையே வாழ்க்கை என்றும், இன்பம் என்றும் கொள்வதால் தான் மனிதனின் துயரம் அதிகரிக்கிறது. தேவைகளையே வாழ்க்கையின் இலட்சியம் என்று கருதுவதில் தான் தவறு ஏற்பட்டிருக்கிறது. மனிதன் தன் தனிப் பண்பாட்டைத் துறக்க வேண்டியதில்லை. ஆனால் அதன் இன்பத்தை மட்டும் துறக்கவேண்டும். அதுவே வாழ்க்கை யென்று கருதவும் கூடாது. அவன் எதிர்பார்க்கும் இன்பம் கிடைக்க வேண்டுமானால், அவன் இதைத்தான் செய்யவேண்டும். தன் தனித் தன்மையே வாழ்க்கை என்று எண்ணுவது வாழ்க்கையின் அழிவு என்றும், உண்மையான வாழ்க்கையை அடைவதற்குத் தனி நலனைத் துறக்க வேண்டும் என்றும் மானிட சமூகத்தின் மகா ஞானிகள் ஆதிகாலத்திலிருந்தே போதித்து வந்திருக்கிறார்கள். ‘இது பௌத்த தர்மமல்லவா! இது நிர்வாணம்’ என்று இக்காலத்து மனிதர்கள் பதில் சொல்லுவார்கள். இப்படிச் சொல்லிவிட்டால், நாம் உண்மையை மறைத்துவிட முடியாது. தனி மனிதனின் வாழ்க்கை துயரமானது, பொருளற்றது என்பது உண்மையல்லவா ? தனி நலன்களுக்காக வாழ்க்கையைத் தத்தம் செய்தல் பயனற்று விபரீதமாக முடிகிறது. இதிலிருந்து தப்புவதற்குத் தனி நலன்களைத் தியாகம் செய்தலே சிறந்த வழி. பெரும்பாலான மக்கள் வாழ்க்கையை இவ்வாறு தான் உணர்ந்திருக்கிறார்கள். பெரிய மேதாவிகளும் இவ்வாறே அறிந்திருக்கிறார்கள். ஒற்றைக் காலில் நின்று தவம் செய்யும் ஓர் இந்து இக்காலத்து நாகரிக ஐரோப்பியர்களைவிட உயர்ந்தவன். தன் தனி நலனைத் துறந்து முக்தி பெறவேண்டும் என்று அவன் தவம் செய்கிறான். நாம் மிருகங்களின் வாழ்க்கைக்குத் திரும்பி யிருக்கிறோம்; இரும்புத் தண்டவாளங்களின்மீது உலகெங்கும் சுற்றுகிறோம். நம் மிருகத் தன்மையை மின்சார வெளிச்சத்தால் உலகிற்கு அறிவிக்கிறோம். அந்த இந்து வாழ்க்கையில் தனித் தன்மைக்கும் பகுத்தறிவு உணர்ச்சிக்கும் முரண்பாடு இருப்பதை அறிந்திருக்கிறான். அதை நீக்குவதற்கே அவன் தனக்குத் தெரிந்த முறையைக் கையாளுகிறான். நம் காலத்து நாகரிக மக்கள் இந்த முரண்பாட்டைப் புரிந்து கொள்ளவில்லை; முரண்பாடு இருப்பதாகக்கூட நம்பவில்லை. தனி மனிதன் உயிரோடு இருப்பதுமட்டும் வாழ்க்கையாகாது என்ற உண்மையை மனித சமூகம் ஆயிரக் கணக்கான வருடங்களாக ஆராய்ந்து கண்டிருக்கிறது. மனிதன் மிருகம் அல்லன் என்று கருதுவோர்கள் இந்த உண்மையை ஏற்றுக் கொள்கிறார்கள். உலகம் உருள்வதும், பூமி ஆகர்ஷண சக்தியைப் பெற்றிருப்பதும் எவ்வளவு உண்மையோ, அவற்றைவிட அசைக்க முடியாத உண்மையாக இதைக் கருதுகிறார்கள். பாமரர்களும், பண்டிதர்களும், கிழவர்களும், குமரர்களும், குழந்தைகளும்- எல்லோரும் இதை உணர்ந்து ஏற்றுக் கொள்கிறார்கள். ஆபிரிக்காவிலும், ஆஸ்திரேலியாவிலுமுள்ள சில காட்டு மிராண்டிகளுக்கு மட்டுமே இது விளங்காமலிருக்கும். ஆனால் ஐரோப்பியத் தலை நகரங்களிலும், பட்டணங்களிலும் நல்ல செல்வத்தோடு வாழும் மனிதர்களுக்கும் இது விளங்கவில்லை. இவர்களும் காட்டு மிராண்டிகளாக ஆகிவிட்டார்கள். தனி மனிதன் உயிரோடு இருப்பதுதான் வாழ்க்கை என்ற கருத்தை மனித சமூகம் கைவிட்டு வெகுகாலம் ஆகிவிட்டது. இனி அதை மறுபடி மேற்கொள்ள முடியாது. மேலும் தனி மனிதனின் வாழ்க்கைக்கு அர்த்தமே யில்லை என்பதையும் மறக்க முடியாது. நாம் என்ன எழுதினாலும், பேசினாலும் எவைகளை யெல்லாம் கண்டு பிடித்தாலும், தனி வாழ்வை எவ்வளவு தான் செம்மைப்படுத்தினாலும், மனிதனுக்குத் தனி இன்பம் இல்லை என்ற அசைக்க முடியாத உண்மையை மறுக்க இயலாது. பழைய விஞ்ஞானிகள் கண்டுபிடித்த உண்மையை நாம் மறுக்க வேண்டியதில்லை. அவைகளை மறுபடியும் கண்டுபிடிக்க வேண்டியதில்லை. ஆனால் நமக்கு வேண்டிய பாடங்களை அவைகளிலிருந்து கற்றுக் கொள்ள வேண்டும். அது போலவே தனி மனிதன் இன்பமடைய முடியாது என்று வேதரிஷிகளும், புத்தரும், லாவோத்ஸேயும், ஸாலமனும், மற்ற ஞானிகளும் கண்டுபிடித்துக் கூறிய உண்மையிலிருந்து நமக்கு வேண்டிய பாடங்களைக் கற்றுக்கொள்வோம். ------------------------------------------------------------------------ 1. மிதி - ரோதையில் கால்கள் வைப்பதற்குப் படிகள் அமைந்திருக்கும். அந்தப் படிகளை மிதிப்பதால் ரோதை உருளும்.↩︎ 2. பௌத்தர்கள் கூறும் முக்தி நிலை.↩︎ அன்பின் உதயம் பகுத்தறிவுள்ளவன் தன் தனி இன்பத்திற்காக வாழ்க்கையைக் கழித்து கொண்டிருக்க முடியாது. ஏனெனில் அவனுக்கு எல்லாப் பாதைகளும் அடைக்கப்பட்டிருக்கின்றன. பகுத்தறிவு உணர்ச்சி அவனுக்கு வேறு இலட்சியங்களையும் நோக்கங்களையும் எடுத்துக் காட்டுகிறது. இவ்விரண்டிற்கும் நடுவே அவன் திண்டாடித் துயருறுகிறான். மனிதன் ‘நான்’ என்று தன் மிருக இயல்பை கருதுகிறான். மற்றோர் இயல்பான பகுத்தறிவு உணர்ச்சியும் ‘நான்’ என்று சொல்லுகிறது. முதலாவது ‘நான்’ கீழ்த்தரமானது, இரண்டாவது ‘நான்’ உயர்வானதைக் குறிக்கிறது. மிருக இயல்பை ‘நான், என்று கொண்டால், உயிர் வாழ்வதிலும் இன்பங்களிலும் ஆசை ஏற்படுகிறது. ஆனால் அதை நிறைவேற்ற முடியவில்லை. நிறைவேற்ற முயன்றால் துன்பமே ஏற்படுகிறது. பகுத்தறிவு உணர்ச்சியை ’நான்’ என்று கொண்டால், உயிர் வாழ்வதில் ஆசை யில்லாமற் போகிறது. ஏனெனில், ஒருவன் தனக்கு மட்டும் இன்பம் தேடிக்கொண்டிருத்தல் அறிவீனம் என்று தெரிகிறது. இந்தக் குழப்பமான நிலைக்குத் தான் இக்காலத்துப் போலி ஆசிரியர்கள் நம்மைக் கொண்டு விடுகிறார்கள். இதனால் மனிதன், அறிவுக்குப் பொருத்தமில்லாத மிருக இயல்பைத் தள்ளி விட்டால், வாழ்க்கையில் வேறு எதுவுமே மிஞ்சவில்லை யென்று எண்ணுகிறான். உண்மை என்னவென்றால், தனி மனிதனின் தேவைகளை ஒதுக்கிய பின்பு மிஞ்சியிருப்பதே வாழ்க்கையாகிறது. ஒளி இருளில் பிரகாசிக்கிறது. ஆனால் இருள் அதை உணர முடியவில்லை. ஆனால் நன்மையான மார்க்கம், சத்திய மார்க்கம் என்று கருதப்படும் ஆன்றோர்களின் போதனை உண்மையான வாழ்க்கையை முன்பே விளக்கிக் காட்டியிருக்கிறது. தனி நலனை நாடுதல் ஏமாற்றத்தில் முடியும் என்றும், உண்மையான நலனை, இவ்வுலகிலேயே. இப்பொழுதே, அடைய முடியும் என்றும் அது எடுத்துக்காட்டுகிறது. நவ நாகரிகத்தின் அபரிமிதமான தேவைகளால் மயக்கமடையாத சாதாரண மக்களின் உள்ளங்கள் தாமாகவே இந்த நன்மையை நாடிச் செல்கின்றன. மிருக வாழ்வின் நன்மைகளை எவ்வளவுக் கெவ்வளவு தியாகம் செய்கிறோமோ, அவ்வளவுக் கவ்வளவு இந்த நன்மை பெருகுகிறது. வாழ்க்கையின் முரண்பாடுகள் எல்லாவற்றையும் தீர்த்துவைக்கும் உணர்ச்சியை எல்லா மனிதர்களும் அறிவார்கள் ; அதுவே மனிதனுக்கு எல்லையற்ற நன்மையை அளிக்கின்றது ; அதுதான் அன்பு. மிருக இயல்பு பகுத்தறிவு உணர்ச்சியின் விதிக்கு அடங்கித் தொழில் செய்வதே வாழ்க்கை. அன்பு செய்தலே அறிவுக்குப் பொருத்தமான மனிதனின் தொழில். மிருக இயல்பு தன் நலனை நாடும் பொழுது, அறிவு அதைத் தடுத்து, அன்பு நெறியைக் காட்டுகிறது. அன்பு நெறியில் மற்றவர்களோடு போராட வேண்டியதில்லை; மரணத்தைப் பற்றிய பயம் முதலியவையும் இல்லை. நன்மையான பாதைக்கு ஏற்ற ஒரே திறவுகோல் இந்த அன்பு உணர்ச்சிதான். மனிதனுக்கு இந்த ஒரு வழிதான் உண்டு. அன்புணர்ச்சி மனிதனை மற்றவர்களுக்காக வாழும்படி செய்கிறது. இதனால் மிருக இயல்பு துன்பமடைவது இயற்கையே, இந்தத் துன்பமும் இதற்குரிய பரிகாரமும் அன்பின் விளைவுகள். மிருக இயல்பின் நன்மையையே இலட்சியமாகக் கொண்டால், ஒவ்வொரு கணத்திலும், நாம் மூச்சு விடுந்தோறும், மரணத்தை நோக்கியே செல்கிறோம். மரணம் ஏற்படுமே என்ற பயம் வாழ்வு முழுவதையுமே பாழாக்கித் தனி மனிதனின் இன்பங்களைச் சிதறச் செய்கிறது. ஆனால் அன்புணர்ச்சியோ மரணபயத்தை ஒழிக்கிறது. மனிதன் மற்றவர்களுக்காகத் தன் உடலையே தியாகம் செய்யவும் தூண்டுகிறது. வாழ்க்கையின் முரண்பாடுகள் அனைத்தையும் தீர்த்துவைக்கக்கூடிய ஆற்றல் அன்புக்கு உண்டு என்பதையும், அதுவே வாழ்க்கையின் இலட்சியத்தை அளிக்கக் கூடியது என்பதையும் ஒவ்வொரு மனிதனும் அறிவான். ஆனால் வாழ்க்கையைப் புரிந்து கொள்ளாத மனிதர்கள், அன்பு இடையிடையே ஏற்படும் உணர்ச்சி என்றும், சிறிது காலத்திற்குப் பின் நீங்கிவிடுகிறது என்றும், பின்னால் மேலும் துன்பங்கள் பெருகிவிடுகின்றன என்றும் குறை கூறுவார்கள். இவர்களுக்கு அன்பு ஒன்றே வாழ்க்கையின் நியாயமான மலர்ச்சி என்று தெரிவதில்லை. மனிதனின் வாழ்க்கையில் ஏற்படுகிற எத்தனையோ ஆயிரம் விஷயங்களில் இதுவும் ஒன்று என்று இவர்கள் கருதுகிறார்கள். ** வாழ்க்கையை உணர்ந்தோரே அன்பை அறிவர்** ஒவ்வொரு மனிதனும் தன் குழந்தை, தன் மனைவி, தன் நண்பர்கள், தன் தேசத்தார் ஆகியவர்களை மற்றவர்களின் குழந்தைகள், மனைவியர், நண்பர், தேசத்தார்களைப் பார்க்கிலும் அதிகமாக விரும்புகிறான். இந்த விருப்பத்தையே அன்பு என்று கருதுகிறான். அன்பு என்பதற்குப் பொதுவாக நன்மை செய்தல் என்று பொருள். நான் என் குழந்தையையும், மனைவியையும், தேசத்தையும் நேசிக்கிறேன் என்றால், மற்றக் குழந்தைகள், ஸ்திரீகள், தேசங்களைப் பார்க்கிலும் அவர்களின் நன்மையையே அதிகமாக விரும்புகிறேன். ஆயினும் அவர்களிடம் மட்டுமே எனக்கு அன்பு இருக்கிறது என்பதில்லை. பொதுவாக மற்ற மனிதர்களையும் நான் நேசிக்கிறேன். இது போல்தான் மற்ற மனிதர்களும் தங்கள் அன்புக்குப் பாத்திரமானவர்களின் நன்மைகளையே நாடுகிறார்கள். ஆனால், ஒருவரின் நன்மையை நாடும்பொழுது, மற்றவர்களுடைய நன்மை குறைகிறது ; சில சமயங்களில் மற்றவர்களுக்குத் தின்மையாகவும் முடிகிறது. ஆகவே, இதிலிருந்து வேறு கேள்விகள் எழுகின்றன. எந்த அன்புக்காக ஒருவன் வேலை செய்ய வேண்டும்? எந்த முறையில் செய்ய வேண்டும்? எந்த அன்பிற்காக மற்ற அன்பைத் தியாகம் செய்ய வேண்டும்? மனைவி, குழந்தைகள், நண்பர், தேசம் - இவர்களில் யாரிடத்தில் மிக அதிகமாக அன்பு செலுத்த வேண்டும்? அருமையான தாய் நாட்டிற்குச் சேவை செய்ய வேண்டுமானால், மனைவி, குழந்தைகள், நண்பர்கள் அன்பைக் கெடுத்துக் கொள்ளாமல் முடியுமா? எல்லாவற்றிற்கும் மேலாக ஒருவன் தன் சொந்த நலத்தைக் குறைத்துக் கொண்டால் தான் மற்றவர்களுக்கு உதவி செய்ய முடியும். அவன் சொந்த நலத்தை எவ்வளவு குறைத்துக் கொள்ள வேண்டும் ? பிறர் நலத்திற்காக எவ்வளவு உழைக்க வேண்டும்? அன்புணர்ச்சியை விளக்கமாகப் புரிந்து கொள்ளாதவர்களுக்கு இந்தக் கேள்விகள் மிகவும் சாதாரணமானவை என்று தோன்றும். ஆனால், இவை தீர்க்க முடியாத கடினமான கேள்விகள். இவைகளைப் போன்றகேள்வியைத் தான் கிறிஸ்து பெருமானிடம், ‘எனது அண்டை வீட்டுக்காரன் யார்?’ என்று ஒரு வழக்கறிஞர் கேட்டார். ‘உங்களைப் போலவே உங்கள் அண்டை வீட்டுக்காரர்களையும் நீங்கள் நேசிக்க வேண்டும்’ என்று பெருமானார் உபதேசித்தது யாருக்கும் எளிதில் விளங்கும். ஆனால், அதன் உட்பொருளை அறியாமல் ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்தால், முதலில் அண்டை வீட்டுக்காரன் யார் என்று தெரிய வேண்டியிருக்கிறது. மனிதன் சிலரையே தேர்ந்தெடுத்துக் கொண்டு அவர்களிடம் மட்டும் அன்பு செலுத்துவதாக வைத்துக்கொண்டாலும், அவன் ஒருவரை மட்டுமே நேசித்துக்கொண் டிருக்கவில்லை. அவன் தன் தாய், மனைவி, குழந்தை, தேசம், மற்ற மக்கள் எல்லோரையுமே நேசிக்கிறான். அன்பு என்பது வெறும் சொல்லன்று ; அது செயல். மற்றவர்களின் நன்மைக்காக நடைபெறுவது. ஆனால், இந்தச் செயலில் வித்தியாசங்கள் ஏற்படுகின்றன. அதிக அன்புக்குப் பாத்திரமானவர்களையே நாம் முதலில் கவனிக்கிறோம் ; மற்றவர்களை அடுத்தபடியாகத்தான் கவனிக்கிறோம். பசியால் வாடும் ஒரு கிழவன் என்னிடம் வந்து, என் குழந்தைகளுக்காக நான் வைத்திருக்கும் உணவைக் கேட்கிறான். உணவை இப்போது வந்து கேட்கும் கிழவனுக்கு அளிக்க வேண்டுமா, அல்லது வைத்திருந்து பின்னால் குழந்தைகள் வரும்பொழுது அவர்களுக்குக் கொடுக்க வேண்டுமா ? இத்தகைய கேள்விகள், ‘என் அண்டை வீட்டுக்காரன் யார்?’ என்ற கேள்வியைப் போன்றவை. நான் யாருக்குத் தொண்டு செய்ய வேண்டும் என்பதை எப்படித் தீர்மானிப்பது? மனிதர்களுக்கா தாய் நாட்டிற்கா, என் நண்பர்களுக்கா ? என் மனைவிக்கா, அல்லது என் தந்தைக்கா, அல்லது என் குழந்தைகளுக்கா ? அல்லது எனக்கா? நான் நன்றாயிருந்தால்தான் மற்றவர்களுக்கும் சேவை செய்ய முடியும் என்பதால், எனக்காக உழைப்பதும் அன்பு மார்க்கமாகிறது! அன்புக்காகச் செய்ய வேண்டிய காரியங்கள் எத்தனையோ இருக்கின்றன. அவை ஒன்றோடொன்று பின்னிக்கொண் டிருக்கின்றன. அவற்றில் சிலவற்றைச் செய்ய முடியவில்லை. பின்னால் எனக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு உடை வேண்டியிருக்குமே என்ற கருத்துடன், இப்போது பனியில் நடுங்கிக் கொண்டிருக்கும் ஒரு குழந்தைக்கு நான் உடையளிக்க மறுத்தால், இது போலவே மற்ற விஷயங்களிலும் எதிர்காலத்தைக் கருதி நிகழ் காலத்தை இழக்க வேண்டியிருக்கும். இது என்னையே நான் ஏமாற்றிக் கொள்வதாகும். எதிர்கால அன்பு என்பது கிடையாது. இப்போது நடைபெறும் செயலே அன்பு. நிகழ் காலத்தில் அன்பு காட்டாதவனிடம் அன்பே இல்லை என்று அர்த்தம். வாழ்க்கையைச் சரியாகப் புரிந்து கொள்ளாத மனிதர்கள் அன்பு என்று சொல்வது, அவர்கள் தங்கள் மனைவியர், குழந்தைகள், நண்பர்கள் முதலியோரிடம் அன்பு செலுத்துவதாகச் சொல்வது, மனைவியர், மக்கள், நண்பர்கள் மூலம் தாங்கள் நன்மையடைய வேண்டும் என்று கருதுவதையே குறிக்கும். மிருக இயல்பின் நலனைக் கருதுவதாலேயே இந்த இடர்ப்பாடு ஏற்படுகிறது. இத்தகைய உணர்ச்சியை அன்பு என்று சொல்ல முடியாது. அன்பின் முக்கியமான குணம் பிறருடைய நன்மைக்காகச் செயல்புரிதலே. அன்பு செலுத்துவதில் வேற்றுமை காட்டி ஒரு வரைப் பார்க்கிலும் வேறு சிலரிடம் அன்பு செலுத்தல் உண்மையான அன்பாகாது. அது காய்க்காத காட்டுமரம் போன்றது. அதில் உண்மையான அன்பை ஒட்டுப் போட்டால் தான் கனிகள் உண்டாகும். அன்பில் பாரபட்சம் கிடையாது. அதில் வேற்றுமை பாராட்டினால், நன்மைக்குப் பதிலாகத் தீமையே விளையும். ஆகவே மனைவி, மக்கள், நண்பர்கள் முதலியோரிடமும், விஞ்ஞானம், கலை, தேசம் முதலியவைகளிடமும் அன்பு செலுத்துவதாகச் சொல்வது, மனிதர்கள் தங்கள் மிருக வாழ்க்கையில் அநுபவிக்க விரும்பும் இன்பங்களையே குறிக்கும். ** சுயநலனைத் துறத்தலின் விளைவே** அன்பு மனிதன் தன் மிருக இயல்பின் நலனைத் துறக்கும் போது தான் அன்பு ஏற்பட முடியும். தன் மிருக இயல்புக்குத் தனி நலன் இல்லை என்பதை மனிதன் அறிந்து கொள்ளும் போது தான், அன்பு அரும்ப ஆரம்பிக்கும். அப்போதுதான், ஒட்டுப் போட்ட செடி வளர்வதுபோல், உண்மையான அன்பு என்னும் கனியளிக்கும் செடி, மிருக இயல்பாகிய பழைய காட்டுச் செடியோடு ஒட்டிக்கொண்டு, அதன் ஜீவசக்தியை யெல்லாம் தான் பயன்படுத்திக்கொண்டு வளம் பெற்று வளரும்; வளர்ந்து கனிகளை அளிக்கும். கனி அளிக்காத கிளைகள் வெட்டித் தள்ளப்படும் என்று கிறிஸ்து நாதர் கூறியதை நினைவில் கொள்ள வேண்டும். ‘உயிரைப் பாதுகாத்துக் கொள்பவன் அதை இழப்பான். என் பொருட்டு உயிரைத் தியாகம் செய்பவனே அதைக் காத்துக்கொள்ள முடியும்’ என்ற கிறிஸ்துவின் உபதேசத்தைப் புரிந்து கொண்டு, தன் வாழ்க்கையிலும் அதன் உண்மையைக் கண்டு கொண்டவனுக்கே உண்மையான அன்பு என்ன என்பது தெளிவாகும். ‘இந்த உலகில் தன் உயிரை வெறுப்பவனே நித்தியமான வாழ்வுக்கு அதைக் காத்துக் கொண்டவனாவான்’ என்று கூறியுள்ளதை உணர்ந்து கொண்டவனே உண்மையான அன்பை அறிவான். ‘என்னைப் பார்க்கிலும் அதிகமாகத் தந்தையையும் தாயையும் நேசிப்பவன் எனக்கு உரியவனல்லன். எவன் என்னைப் பார்க்கிலும் மகனையும் மகளையும் நேசிக்கிறானோ, அவன் எனக்கு உரியவனல்லன். ’ஏனெனில், உங்களை நேசிப்பவர்களை நீங்கள் நேசித்தால், அது அன்பன்று; உங்கள் பகைவர்களை நேசியுங்கள் ; உங்களை வெறுப்பவர்களை நேசியுங்கள்.’ தந்தை , மகன், மனைவி, நண்பர்கள் ஆகியோரிடம் கொள்ளும் அன்பினால் மனிதர் தங்கள் தனி நலன்களைத் தியாகம் செய்வதாக அநேக சாதாரணமாக எண்ணுவர். உண்மை அதுவன்று. மனிதர்கள் தங்கள் தனி வாழ்வின் தற்பெருமை வீணான என்று உணர்வதாலும், அவ் வாழ்வுக்கென்று தனி நலனை அடைய முடியாது என்றும் உணர்வதாலுமே தன்னலத் தியாகம் ஏற்படுகிறது. ஆகவே, தன்னலத் தியாகத்தின் மூலமே மனிதன் உண்மையான அன்பை அடைகிறான்; அதனால் தந்தை , மகன், மனைவி, குழந்தைகள், நண்பர்களை உண்மையாக நேசிக்க முடிகிறது. நமக்கும் மேலாக மற்ற உயிர்களை நேசிப்பதே அன்பு-அதாவது நமது மிருக இயல்பின் தனி நலனுக்கு மேலாக அவைகளின் நலனை நாடுவதிலே அன்பு உதயமாகிறது. பின்னால் சுயநலத்தை அடைவதற்காக இப்போது அதைத் தியாகம் செய்து வைத்தல் தேர்ந்தெடுத்த சிலரிடம் மட்டும் அன்பு செலுத்துவதைப் போன்றது. தன்னலத் தியாகமாக முதிர்ச்சி பெறாததை அன்பென்று சொல்லுதல் பொருத்தமன்று. அன்பு என்பது உணர்ச்சியின் கொந்தளிப்பு என்றும், அது பகுத்தறிவை மறைத்துவிடும் என்றும் ஜனங்கள் எண்ணுவது சரியன்று. இதற்கு மாறாக, அன்பு பகுத்தறிவிலிருந்தே விளைவது; தெளிவானது; அமைதியான இன்ப நிலையே அதன் இயல்பு. குழந்தைகளுக்கும் பகுத்தறிவுள்ள பெரியவர்களுக்கும் இது இயல்பாயுள்ளது. எல்லா மக்களுக்கும் பரோபகரமான இந்த நிலை குழந்தைகளுக்கும் ஏற்படுகிறது; வயது வந்தவர்களுக்குத் தங்கள் சுயநலத் தியாகத்தின் அளவுக்குத் தக்கபடி ஏற்படுகிறது. ‘எல்லாம் எனக்கு ஒன்றுதான் ; எனக்காக எதுவும் வேண்டியதில்லை’ என்று மனிதர்கள் அடிக்கடி சொல்லக் கேட்கிறோம். இப்படிச் சொல்லும் பொழுதே, அவர்கள் மற்றையோரிடம் வெறுப்புக் கொண்டிருப்பதை நாம் அறிகிறோம். ஆனால், சுயநலமான ஒவ்வோர் ஆசையையும் அடக்கி, ஒரு நிமிஷ நேரமாயினும் ஒருவன் அந்த வாக்கியத்தை உண்மையாகவே மனத்திற்கொண்டு சொல்லிப் பார்க்கட்டும். அவனுடைய சுயநலத் தியாகத்தின் அளவுக்குத் தக்கபடி வெகு வேகமாக மற்றவரிடமுள்ள வெறுப்பு மறைந்துவிடும். பிறகு, எல்லா மக்களிடமும் பரந்து நிறையும் அன்பு இதுவரை அடைபட்டிருந்த அவன் உள்ளத்திலே பெருக ஆரம்பிக்கும். உண்மையில், தன்னைப் பார்க்கினும் மற்றவர்களை விரும்புதலே அன்பு; இப்படித்தான் நாம் அன்புக்குப் பொருள் கொள்கிறோம்; வேறு பொருள் கொள்ளவும் முடியாது. நமது அன்பின் அளவு, நம் சொந்த நலனை எவ்வளவு தியாகம் செய்கிறோம் என்பதைப் பொறுத்தது. தியாக விஷயத்தைக் கவனியாமலே, உலகில் அன்பைக் கணக்கிட்டுக் கூறுவது வழக்கமாயிருக்கிறது. தன்னலத் தியாகத்திலேயே அன்பு தளிர்விடுகிறது. பொதுவான அன்பிலிருந்தே குறிப்பிட்ட சில மனிதர்களிடத்தும், அந்நியர்களிடத்தும், நண்பர்களிடத்தும் அன்பு தோன்றுகிறது. இத்தகைய அன்புதான் வாழ்க்கையின் உண்மையான நலன் ; இதுவே மிருக உணர்ச்சிக்கும் பகுத்தறிவு உணர்ச்சிக்குமுள்ள முரண்பாட்டைத் தீர்மானிக்கிறது. ‘தான்’ என்ற எண்ணத்திலிருந்து பிறக்கும் தன்னலத் தியாகத்தைத் தியாகம் செய்வதிலிருந்து ஏற்படாத அன்பு, அதன் பயனாக எல்லா மக்களின் நலனையும் நாடாத அன்பு, மிருக வாழ்வைச் சேர்ந்ததாகும். அன்பே இல்லாவிட்டால் ஏற்படக்கூடிய துன்பங்கள் துயரங்களைக் காட்டிலும், இந்தப் போலி அன்பினால் அதிகத் தீமைகள் விளையும். பாரபட்சமான அன்பு - சிலரிடம் மட்டும் அன்பு வைத்தல் - வாழ்வின் சிக்கல் எதையும் தீர்ப்பதில்லை. ஏனெனில், மனிதர் தங்கள் சுய நலத்திற்காக நடத்தும் வாழ்க்கைப் போராட்டத்தை அது நிறுத்துவதில்லை; மரணத்திலிருந்தும் காப்பதில்லை. அதனால் வாழ்வு அதிக இருள்மயமாகிறது; வாழ்க்கைப் போராட்டம் அதிகரிக்கிறது. தனி மனிதனின் இன்ப வேட்கை பெருகுகிறது; மரணபயன் அதிகமாகிறது. மிருக இயல்பே வாழ்க்கை என்று கொள்பவன் தன் மிருக இயல்பின் நன்மை அதிகரிப்பதற்குத் தேவையானவைகளைத் தேடுவதில் தன் நேரம் முழுவதையும் செலவழிக்கிறான்; செல்வங்களைத் தேடிப் பாதுகாக்க விரும்புகிறான்; தன் இன்பத்திற்காக மற்றவர்களுக்கு உதவிபுரிகிறான்; தன் நலத்திற்கு அதிகமாக உதவி செய்தவர்களுக்குத் தானும் அதிக உதவிகள் செய்கிறான். அவன் வாழ்க்கையே மற்றவர்களின் உதவிகளால் நடக்கும்போது, அவன் தன் வாழ்க்கையை எப்படித் தியாகம் செய்வான்? அவன் தன் வாழ்க்கையைத் தியாகம் செய்வதற்கு, முதலாவது தான் மற்றவர்கள் மூலம் தேடி வைத்திருக்கும் பொருளைத் துறக்க வேண்டும்; அது முடியாத காரியம்; பிறகு தன்னோடு வாழும் மக்களில் எவர்களுக்குத் தன் வாழ்க்கையை அர்ப்பணம் செய்ய வேண்டும் என்பதைத் தீர்மானிக்கவேண்டும். ஆனால், அவன் அன்பு செலுத்துவதற்கு முன்னால், அதாவது பிறருக்கு நன்மை செய்வதற்காகத் தன்னைத் தியாகம் செய்வதற்கு முன்னால், அவன் வெறுப்பைக் கைவிட வேண்டும். அதாவது தீமை செய்வதை விட வேண்டும்; சிலரை மட்டும் குறிப்பிட்டு அன்பு செலுத்துவதையும் விட்டொழிக்க வேண்டும். அத்தகைய மனிதனின் நலன் அன்பினாலேயே ஏற்படும். செடியின் நலன் சூரியனின் ஒளியில் இருப்பதுபோல், அவன் நலன் அன்பில் இருக்காது. திறந்த இடத்திலுள்ள செடிதான் எந்தப் பக்கங்களில் வியாபித்து வளர வேண்டும் பாபிய. என்றோ ஒளி நல்லதா, வேறு நல்ல ஒளி கிடைக்கிறவரை காத்திருக்கலாமா என்றோ கேட்டுக்கொண்டிருப்பதில்லை. உலகெங்கும் பரவிக் கலந்துள்ள ஒளியை அது பெற்றுக்கொண்டு அதையே நோக்கி வளர்கிறது. இது போலவே சுய நலத் தியாகம் செய்தவன், மற்றவர்களிடமிருந்து தான் பெற்று வந்தவைகளில் எவற்றைத் திரும்ப அளிக்க வேண்டும் என்றோ எவர்களுக்கு அளிக்க வேண்டும் என்றே ஆராய்ந்து கொண்டிருப்பதில்லை. ஆனால், தன்னை முழுவதும் அர்ப்பணம் செய்து, தன் கண்முன்பு தோன்றும் அன்புக்காக வாழ்க்கையைச் செலவழிக்கிறான். இதுத்தகைய அன்புதான் மனிதனுடைய அறிவின் இயல்புக்கு பூரணத் திருப்தி யளிக்கும். ** அன்பே உண்மையான வாழ்க்கையின் செயல்முறை** ஒரு நண்பனுக்காக ஒருவன் தன் வாழ்க்கையை அளிப்பதே அன்பு. தன்னைத் தியாகம் செய்தலே உண்மையான அன்பு. ஒருவன் மற்றொருவனுக்காகத் தன் நேரத்தையும் வலிமையையும் அளிப்பதோடு அவனுக்காகத் தன் உடலை வாட்டி வருத்தியும், தன் உயிரையே அர்ப்பணம் - செய்தும் வந்தால் தான் நாம் அன்பென்று கொண்டாட முடியும். அத்தகைய அன்பிலேதான் அன்பினால் விளையும் இன்பத்தை நாம் காண்கிறோம். அத்தகைய அன்பு மக்களிடம் இருப்பதால் தான் உலகம் வாழ்கிறது. தாய் குழந்தைகளுக்குப் பால் கொடுப்பதில் அவைகளின் வளர்ச்சிக்காகத் தன்னையே அளித்து வருகிறாள். இது அன்பு. இது போலவே, மற்றவர்களின் நன்மைக்காக ஒரு தொழிலாளி தன் உடலை வருத்தி அரும்பாடுபட்டு உயிர்போகும் நிலைவரை உழைத்து வருதல், மற்றவர்கள் வாழ்வதற்காகத் தன்னையே அளிப்பதாகும். அவனுக்கும், எவர்களுக்காகத் தியாகம் செய்கிறானோ அவர்களுக்கும் இடையில் தியாகம் செய்வதற்குத் தடையாக எதுவும் இல்லாதிருந்தால் தான், இந்த அன்பு ஏற்பட முடியும். தாதியிடம் தன் குழந்தையைக் கொடுத்து வளர்க்கச் செய்யும் தாய் அதனிடம் அன்பு செலுத்த முடியாது; செல்வங்களைத் தேடி வைத்துக்கொண்டிருக்கும் மனிதனும் அன்பு செலுத்த முடியாது. “தான் ஒளியிலிருப்பதாய்ச் சொல்லிக்கொண்டு, தன் சகோதரனை எவன் வெறுக்கிறானோ, அவன் இப்போதும் இருளில் தான் இருக்கிறான். தன் சகோதரனை நேசிப்பவன் ஒளியிலேயே இருக்கிறான். அவன் இடறி விழுவதற்குக் சந்தர்ப்பமே யில்லை. ஆனால், தன் சகோதரனை வெறுப்பவன் இருளிலேயே இருக்கிறான், இருளிலேயே நடக்கிறான், இருள் அவன் கண்களை மூடிவிட்டதால் அவன் எங்குச் செல்கிறான் என்பது அவனுக்குத் தெரியாது…….. சொல்லால்; நாவால் மட்டும் நாம் அன்பு செலுத்தக் கூடாது, செயலில், உண்மையாகவே அன்பு செலுத்த வேண்டும். இதனால் நாம் உண்மையின் பக்கம் இருக்கிறோம் என்று நம் இதயத்தைத் திருப்தி செய்துகொள்ள முடியும்……. இதனால் நம்மிடம் அன்பு பரிபூரணமான நிலையை அடைகிறது; இதன் மூலம் தீர்ப்பு நாளன்று நாம் தைரியமாயிருக்க முடியும்; ஏனெனில், அவரைப் போல நாமும் இவ்வுலகில் இருப்போம். அன்பில் பயம் எதுவுமில்லை; உண்மையான அன்பு அச்சத்தை அகற்றுகிறது. ஏனெனில், அச்சம் துன்பந் தருவது : பயமுள்ளவன் அன்பில் பூரணனா யிருக்க முடியாது.” இத்தகைய அன்புதான் மனிதனுக்கு உண்மையான வாழ்வை அளிக்கிறது. ‘உங்கள் கர்த்தனான இறைவனை உங்கள் முழு இதயத்துடனும், ஆன்மாவுடனும், உள்ளத்துடனும் நேசிக்க வேண்டும். இதுவே முதலாவதும் முதன்மையானதுமான கட்டளை.’ இரண்டாவது உபதேசமும் இதைப் போன்றது. ‘உங்கள் அண்டை வீட்டுக்காரரையும் உங்களைப் போல் நேசியுங்கள்’ என்று கிறிஸ்துவிடம் வழக்கறிஞர் கூறினார். இதற்குக் கிறிஸ்து நாதர், ‘சரியாகப் பதில் சொன்னீர்கள் : இந்தப்படி செய்யுங்கள்-கர்த்தனையும், உங்கள் அண்டை வீட்டுக்காரரையும் நேசியுங்கள். நீங்கள் வாழ்வடைவீர்கள்!’ என்று மறு மொழி கூறினார். உண்மையான அன்பே வாழ்க்கை ; அன்புடையோனே வாழ்பவன். கிறிஸ்து நாதரின் கொள்கைப்படி, அன்பே வாழ்க்கை. அவ் வாழ்க்கை அறிவுக்குப் பொருத்தமில்லாத, துயரம் நிறைந்த அழியும் வாழ்க்கையன்று ; ஆனால், நித்தியமான இன்ப வாழ்க்கையாகும். அன்பு அறிவினால் கற்பனை செய்யப் பெற்றதன்று ; அது ஒரு செயலின் விளைவன்று ; அதுவே செயலாகும், நம்மைச் சூழ்ந்துள்ள வாழ்வின் மிகவும் இன்பகரமான செயல் அன்பே. குழந்தைப் பருவத்திலிருந்து நாம் இதை உணர்ந்திருக்கிறோம். ஆனால், பின்னால் உலகின் போலிப் போதனைகளால் இதை நாம் உணர முடியவில்லை. குழந்தைப் பருவத்தில் இன்பகரமான இந்த உணர்ச்சி நம்மைச் சுற்றியிருக்கும் சகலரையும் தந்தை, தாய், உடன்பிறந்தோர், நல்லவர்கள், கெட்டவர்கள், பகைவர்களோடு, நாய், குதிரை, புல்லின் பசுமையான இதழ் ஆகியவைகளைக்கூட நேசிக்கும் படி செய்திருக்கிறது. எல்லோரும் நன்றாயிருக்க வேண்டும், எல்லோரும் இன்பமாயிருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் நடந்து கொள்ளும்படி நம்மைச் செய்வித்திருப்பதும் இதுதான். எல்லோரும் இன்பமாயும் திருப்தியாகவும் இருப்பதற்காக நம்மையே தியாகம் செய்வதுதான் அன்பு. இதில் தான் மனித வாழ்க்கை இருக்கிறது. இந்த அன்பு மனித ஆன்மாவில் தளிர்விட்டு வளரும் பொழுது, இதைச் சுற்றி வேறு காட்டுச் செடிகளும் வளர்கின்றன. அவைகளையே அன்பென்று கொண்டு நாம் உண்மையான அன்புச் செடியை வாடி மடியவிட்டு விடுகிறோம். அன்பு குருத்துவிட்டு வளரும்போது, மிகவும் மென்மையான செடியா யிருக்கும். அதைப் பலமாகப் பிடித்து அழுத்தி, ‘இதோ அன்பைக் கண்டுபிடித்து விட்டோம்! அன்பு! அன்பு!’ என்று கூவி அதைக் கசக்கிவிடக் கூடாது. அது மலர்ச்சி பெற்று முதிர்ந்தால் தான் வலிமை பெறும். மனிதர்கள் அதைக் கெடுத்து விடுகின்றனர். அதற்குத் தேவையானது அறிவுச் சூரியனின் ஒளிதான் அதனாலேயே அது வளர்ச்சி பெறுகிறது. ** முடியாத முயற்சிகள்** மிருக வாழ்க்கை வெறும் தோற்றம். மாயை என்பதையும், உண்மையான அன்பு நிறைந்த வாழ்க்கையையும் மனிதன் கண்டு கொள்ளும் பொழுது, அவனுக்கு நன்மை உண்டாகிறது. இந்த நன்மையை அடைய மனிதன் என்ன செய்ய வேண்டும் ? சுயநல வாழ்வில் மனிதன் ‘நான்’ என்று கருதும் தனித் தன்மை நாளுக்கு நாள் அழிந்து மரணத்தையே அடைகிறது. இவ்வாறு அழியக்கூடிய மிருக வாழ்வுக்காகவும், ஆசைகளைத் திருப்தி செய்வதற்காகவுமே வாழ்ந்து வரும் மனிதர் வாழ்க்கையின் ஒரே நன்மையான அன்பைப் பெறமுடியாமல் இழக்கின்றனர். வாழ்க்கையைப் புரிந்து கொள்ளாத இந்த மனிதர், தங்கள் வாழ்க்கை முழுதும் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காகப் போராடுவதிலும், இன்பத்தை நாடுவதிலும், துன்பத்தை நீக்குவதிலும், தங்களால் தவிர்க்க முடியாத மரணத்தை விலக்குவதிலும் கழிக்கிறார்கள். ஆனால், இன்பத் தேட்டம் வாழ்க்கைப் போராட்டத்தை அதிகப்படுத்துகிறது ; துன்ப உணர்ச்சியைப் பெருக்குகிறது; மரணம் நெருங்கி வருவதை அதிகப் பயங்கரமாக்குகிறது. மரணம் நெருங்கி வருவதை மறைத்து வைத்துக்கொள்ள ஒரே வழிதான் இருக்கிறது இன்பத்தை இடைவிடாது அதிகப்படுத்திக் கொண்டே வரவேண்டும். ஆனால், இன்பத்தின் பெருக்கம் தன் எல்லையை அடைந்ததும், தேங்கி நின்றுவிடுகிறது; மேலும் மேலும் பெருக்க முடியாத இன்பம் வேதனையாக மாறுகிறது. இந்த வேதனை உணர்ச்சியும் மரண பயமுமே அதிகரித்து வருகின்றன. நாம் ஒரு விஷமச் சக்கரத்துள் அகப்பட்டுக் கொள்கிறோம்; ஒன்று மற்றொன்றுக்குக் காரணமாகிறது. ஒன்று மற்றொன்றை வளர்க்கிறது. வாழ்க்கையைப் புரிந்து கொள்ளாத மனிதர் செல்வங்களை அநுபவித்து இன்பமடைய வேண்டும் என்று கருதுகின்றனர். இந்தச் செல்வங்களை எல்லா மக்களுக்கும் சமமாகப் பங்கிட்டுக் கொடுக்க முடியாது. எனவே, ஒருவர் மற்றவர்களிடத்திலிருந்து இவைகளைப் பறித்துக் கொள்ளவேண்டி யிருக்கிறது. பலாத்காரத்தாலும் கேடு செய்வதாலுமே இவைகளைப் பறிக்க முடியும். இந்த வழியில் பிறர் நலம் பேணுதல் அறவே ஒழிகிறது. அதிலிருந்து வளரக்கூடிய அன்பும் தோன்ற முடிவதில்லை. ஆகவே, இன்பங்கள் அன்புக்கு நேர் எதிரானவை. அவை பெருகப் பெருக, அன்பு குறையும்; அவை வலிமை பெற்று வளர்வதற்குத் தக்கபடி, அன்பு நலிந்து கொண்டே வரும். இதனால் மனிதன் தான் அடைய வேண்டிய ஒரே நன்மையான அன்பை அடைய முடியாமற் போகிறது. மிருக வாழ்க்கையின் நலன் என்பது ஒரு பூஜ்யம். அதை எத்தனை எண்களால் பெருக்கினாலும் முடிவு பூஜ்யமாகவே இருக்கும். இக்காலத்து மக்கள் தாங்கள் பெற்றுள்ள போதனைகளால் இந்த உண்மையை உணர முடியாமல் இருக்கிறார்கள். மனிதனுக்குப் புறம்பாகவுள்ள நிலைமைகளால் இன்பம் ஏற்படாது. ஒவ்வொரு மனிதனுடைய மிருக இயல்பும் ஒரே மாதிரியான துன்பத்தில் ஆழ்ந்திருக்கிறது. ஸ்தூல வாழ்க்கையில் உடல் வாழ்க்கையில் - ஒருவரைவிட ஒருவர் அதிக இன்பம் பெறுதல் இயலாத காரியம். ஓர் ஏரியில் தண்ணீர் எந்த இடத்திலும் ஒரே மட்டத்தில் நிலையாக நிற்கும்; ஓரிடத்தில் உயர்ந்தும் மற்றோரிடத்தில் தாழ்ந்தும் இருப்பதில்லை. இதைப் போன்ற ஒரு சட்டமே மக்கள் வாழ்க்கையை ஆட்சி செய்கிறது. தண்ணீர் மட்டத்தை உயர்ந்தும் தாழ்ந்தும் இருக்கும்படி செய்ய முடியாதது போல், மனிதர் ஒருவரைப் பார்க்கிலும் ஒருவர் அதிகமாக இன்பமடையவும் முடியாது. உலகத்தில் ஓர் ஏழைத் தொழிலாளி, அல்லது ஒரு நோயாளி துன்பத்தால் அழிவுறுவதைப் பார்த்து, மனிதர் தாங்கள் செல்வத்தோடும் ஆரோக்கியத்தோடும் இருந்தால் இன்பமாக வாழலாம் என்று எண்ணுகின்றனர். வமிச பரம்பரையாக இத்தகைய எண்ணம் ஏற்பட்டு வருகிறது. ஆயினும், மக்களுடைய இதயங்களில் பகுத்தறிவின் குரலையும், அன்பின் ஒளியையும், அறவே ஒழித்துவிட முடிவதில்லை. அறிவோடும் அன்போடும் பொருந்திய வாழ்க்கை சாத்தியமாயிருப்பினும், அதை மறந்து விட்டுப் பெரும்பாலான மக்கள் அல்லற்படுகிறார்கள். ஒரு கட்டடத்தில் நெருப்புப் பற்றிக் கொள்ளும்பொழுது, அதிலுள்ள ஆடுகளை வெளியேற்ற முயற்சி செய்கையில், அவைகள் தங்களை நெருப்பிலே தள்ளிவிடக்கூடும் என்று எண்ணித் தங்கள் முழு பலத்துடன் வெளியேற மறுப்பது போலவே இவர்களுடைய நிலை இருக்கின்றது. மரண பயத்தினாலேயே மனிதர் மரணத்தை விட்டுத் தப்ப விரும்பவில்லை ; துன்பத்தைக் கண்டு பயந்து, அவர்கள் துன்பத்திலேயே ஆழ்ந்துவிடுகிறார்கள். இதனால் உண்மையான வாழ்க்கை நலனையும் அவர்கள் இழக்கிறார்கள். ------------------------------------------------------------------------ 1. பரி. யோவானின் சுவிசேஷம்.↩︎ வாழ்வும் மரணமும் சத்தியத்தின் குரல், ‘மரணம் கிடையாது!’ என்று மனிதர்களுக்குச் சொல்லுகிறது. இயேசுவும் இதையே சொன்னார் : ‘நானே வாழ்வும், மறு பிறப்பும்; என்னிடம் நம்பிக்கையுள்ளவன் இறந்தவனாயினும் அவன் வாழ்பவனாவான். எவர்கள் வாழ்க்கையிலிருந்து கொண்டே என்னிடம் நம்பிக்கை வைக்கிறார்களோ, அவர்கள் ஒருபோதும் மரிப்பதில்லை.’……. ‘மரணம் கிடையாது’ என்றே உலகின் மாபெரும் ஞானிகள் கூறியுள்ளார்கள். இப்போதும் கூறுகிறார்கள். வாழ்க்கையின் பொருளை அறிந்த லட்சக்கணக்கான மனிதர்களும் அதையே சொல்லுகிறார்கள். அதைத் தங்கள் வாழ்க்கையின் மூலம் மெய்ப்பிக்கிறார்கள். உயிர் வாழும் ஒவ்வொரு மனிதனும், உணர்ச்சி தெளிவாயுள்ள நேரத்தில், அதையே தன் அந்தராத்மாவில் உணர்கிறான். ஆனால், வாழ்க்கையைப் புரிந்து கொள்ளாத மனிதர்கள் மரணத்தை எண்ணிப் பயப்படாமல் இருக்க முடியாது. மரணத்தை அவர்கள் பார்க்கிறார்கள் ; அதை நம்புகிறார்கள். இந்த மனிதர்கள், ‘மரணம் இல்லையா! இது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதாகும்! மரணம் நம் கண் முன்பு இருக்கிறது; கோடிக் கணக்கான மக்களை அது அரிந்து தள்ளிவிட்டது. நம்மையும் அப்படியே அரிந்து தள்ளிவிடும்! நீங்கள் என்ன சொன்ன போதிலும், அது இங்கே இருக்கிறது!’ என்று ஆத்திரத்தோடும் கோபத்தோடும் கூவுவார்கள். பைத்தியம் பிடித்தவன் கற்பனை உருவங் ளைக் கண்டு அஞ்சுவது போல், அவர்கள் மரணத்தைக் கண்டு நடுங்குகிறார்கள். பைத்தியக்காரன் தான் பயப்படும் உருவத்தைத் தொட்டுப் பார்த்ததில்லை. அதுவும் அவனைத் தீண்டியதில்லை. ஆயினும், அவன் மனக் கற்பனையால் திகில் ஏற்பட்டு அவனுக்கு வாழ்க்கையே இல்லாமற் செய்து விடுகிறது. மரணத்தைப் பற்றிய விஷயமும் இப்படித்தான். மனிதன் தன் மரணத்தைப் பற்றி அறியான்; அறியவும் முடியாது. அது அவனைத் தீண்டியதில்லை; அதன் நோக்கங்கள் என்ன என்பதும் அவனுக்குத் தெரியாது. பின் அவன் எதற்காகப் பயப்படுகிறான் ? தன்னை அது பிடித்துக் கொள்ளவில்லை. எனினும், நிச்சயமாகப் பிடித்துக் கொள்ளும் என்று கருதியே அவன் பயப்படுகிறான். பூத உடல் அழிவதைத் தினந்தோறும் பார்த்துக் கொண்டிருந்த பின்னும், நம் உடல்களிலும் அந்த மாற்றம் ஏற்படுவதில் பயங்கரமான விஷயமோ, வெறுக்க வேண்டிய விஷயமோ என்ன இருக்கிறது ? நான் மரிக்கத்தான் செய்வேன். இதில் பயங்கரம் என்ன இருக்கிறது? உடலின் வாழ்வில் எத்தனையோ மாறுதல்கள் ஏற்பட்டிருக்கின்றன. அவைகளை யெல்லாம் கண்டு நான் அஞ்சவில்லை. இன்னும் ஏற்படாத இந்த ஒரு மாறுதலை மட்டும் எண்ணி, நான் ஏன் அஞ்ச வேண்டும்? இந்த மாறுதல் சரியானது என்றே என் அறிவும் அனுபவமும் ஒப்புக் கொள்கின்றன. இதில் எனக்குப் புரியாத விஷயம் ஒன்றுமில்லை ; பல தடவை நான் இதைக் கண்டு இது இயற்கை என்று என் வாழ்வில் உணர்ந்திருக்கிறேன். மிருகங்களும், மனிதர்களும் மரித்தல் அவசியம் என்றும், பல சமயங்களில் வாழ்க்கையில் அதுவும் ஒரு நன்மை என்றும் கருதி வந்திருக்கிறேன். பிறகு அதில் என்னதான் பயங்கரம் இருக்கிறது ? வாழ்க்கையைப் பற்றி ஆராய்ச்சிக்குப் பொருத்தமான இரண்டு அபிப்பிராயங்களே இருக்க முடியும். ஒன்று தவறானது; இதன்படி பிறப்பிலிருந்து மரணம் வரை என் உடலில் ஏற்படும் அவஸ்தைகளே வாழ்க்கை. மற்றது உண்மையானது ; அதன்படி வாழ்க்கை என்பது நான் என்னுள்ளே அதைப் பற்றிக் கொண்டுள்ள உணர்ச்சியே. இவ்விரண்டில் ஒன்று தவறானது; மற்றது உண்மையானது. ஆனால் இரண்டும் ஆராய்ச்சிக்குப் பொருத்தமானவை. மனிதர் தமக்குப் பிடித்ததை வைத்துக்கொள்ளலாம். ஆனால், இரண்டிலும் மரண பயத்திற்கு இடமில்லை. முதலாவது கருத்து, உலகம் தோன்றிய நாள் முதலே இருந்து வருவது. அதைச் சுருக்கமாக இவ்வாறு குறிப்பிடலாம்: ‘காலத்திலும் இடத்திலும் தோன்றும் சடப்பொருளில் அடங்கியுள்ள சக்திகள் செயற்படும்போது உயிர் தானாகத் தோன்றுகிறது. நமது பிரக்ஞை அல்லது உணர்ச்சி என்று நாம் கூறுவது வாழக்கையன்று. அந்த உணர்ச்சியில் வாழ்க்கை இருப்பதாகத் தோன்றுவதற்குக் காரணம் ஐம்புலன்களால் ஏற்படும் மயக்கமே. சில நிலைமைகள் ஏற்படும்போது அந்த உணர்ச்சி என்ற அனற்பொறி சடப்பொருளில் தென்படுகிறது. அந்தப் பொறி சுடர்விட்டு எரிந்து, பிறகு குறைந்து, முடிவில் முற்றிலும் அணைந்து விடுகிறது. உயிரும் பிரக்ஞையாகிய உணர்ச்சியும் சடத்திலிருந்து தோன்றியவையே. பின்னால் சடப்பொருள் மாறும்போது, இவைகளும் ஒன்றுமில்லாமல் அழிந்து விடுகின்றன. சடமே மறுபடி வேறு உருவத்தில் மிஞ்சுகிறது. குறிப்பிட்ட ஒரு நிலையில் சடப்பொருள் தானாக உயிர் பெற்று இயங்குவதால் உயிர் என்பது சடத்தின் ஒரு நிலையே யாகும்.’ இந்தக் கருத்து ஆராய்ச்சிக்கு முற்றிலும் பொருந்தியதுதான். வாழ்க்கையைப் பற்றிய மற்றக்கருத்து வருமாறு: உயிர் என்பது நான் என்னிடத்திலேயே கண்டு உணர்வதுதான். நான் எப்படியிருந்தேன் என்றோ, எப்படியிருப்பேன் என்றோ எண்ணாமல், இப்போது நான் உள்ள நிலையில் எனது உயிரைப்பற்றி எனக்கு உணர்ச்சி யிருக்கிறது. இந்த உயிருக்கு ஆரம்பமுமில்லை; அந்தமுமில்லை. நான் உயிரைப் பற்றிக் கொண்டுள்ள உணர்ச்சியுடன் காலமும் இடமும் சம்பந்தப்படவில்லை. ஆனால், காலத்திலும் இடத்திலும் என் உயிர் தோற்றமளிக்கிறது. ஆனால், நான் அறிந்துள்ள உயிர் காலத்திற்கும் இடத்திற்கும் அப்பாற்பட்டது. உயிரைப் பற்றிய உணர்ச்சி மயக்கமானதன்று, காலத்திலும் இடத்திலும் தோற்றமளிக்கும் பொருளே மாயை. ஆகவே, காலத்திலும் இடத்திலும் உடல் வாழ்தல் தீர்ந்துபோவது, அதாவது மரணம் - உண்மையானதன்று. அது என் உண்மையான வாழ்க்கையைத் தடுத்து நிறுத்தவோ அதில் சலனங்களுண்டாக்கவோ முடியாது. இந்தக் கருத்துப்படி மரணம் இல்லை என்று ஏற்படுகிறது.’ மேலே கூறிய இரண்டு கருத்துக்களின் படியும் மரணத்தைப் பற்றிய பயமில்லை என்று ஏற்படுகிறது. முதல் கருத்துப்படி மரணம் சடப்பொருளில் ஒரு மாறுதல் தான். இரண்டாவது கருத்துப்படி உயிருக்குத் தோற்றமோ, அழிவோ இல்லை; அது நித்தியமானது. தோற்றமும் அழிவும் - சடப்பொருளான உடலுக்கே. எனவே, மனிதன் மிருக இயல்பைக் கருதினாலும், பகுத்தறிவு உணர்ச்சியைக் கருதினாலும், அவன் மரணத்திற்கு அஞ்சுவதற்கு இடமேயில்லை. மிருகத்திற்கு உயிர் இருப்பதான உணர்ச்சி கிடையாததால், அது மரணத்தைப் பார்ப்பதில்லை. பகுத்தறிவுள்ள மனிதன் உயிரைப்பற்றிய உணர்ச்சி பெற்றிருப்பதால், மிருக உடல் மரிப்பது இயற்கையான, இடைவிடாத சடத்தின் உருமாறுதலைத் தவிர வேறில்லை என்று அறிவான். மனிதன் தான் அறியாத மரணத்திற்காக அஞ்சவில்லை; ஆனால், அவனுடைய மிருக வாழ்வும் பகுத்தறிவு வாழ்வுமே தெரிந்துள்ள வாழ்க்கையைக் கண்டு தான் அவன் அஞ்சுகிறான். கோளாறுள்ள மனத்திற்குப் பயங்கர உருவங்கள் தோன்றுவதுபோலவே, மரணத்தைப் பற்றிய பயமும் வாழ்க்கையின் முரண்பாட்டினால் ஏற்படுவதுதான். ‘நான் தீர்ந்துபோவேன். எனக்கு மரணம் நிச்சயம். எனது வாழ்க்கை என்று சொல்லக்கூடிய எல்லாம் மாண்டுவிடும்’ என்று ஒரு குரல் மனிதனுக்கு அறிவுறுத்துகிறது. ‘நான் இருக்கிறேன்; நான் மரிக்க முடியாது; மரிக்கவும் கூடாது’ என்று மற்றொரு குரல் அறிவுறுத்துகிறது. பயம் மரணத்திலன்று; வாழ்க்கையிலுள்ள முரண்பாட்டிலேயே இருக்கிறது. பின்னால் வரக்கூடிய மரணத்திற்கு மனிதன் அஞ்சுகிறான் என்றால், இப்போதுள்ள மரண நிலையை அவன் பின்னால் ஒத்திப்போட்டுப் பார்த்து அஞ்சுகிறான் என்றே பொருள்படும். மரணத்தைப் பற்றிய எண்ணத்தால் அவன் பயப்படவில்லை. எத்தகைய வாழ்க்கையை அவன் பெறவேண்டும் என்று விரும்புகிறானோ அதைப் பெறுவதற்காகவே பயப்படுகிறான். கல்லறைக்குள் இருப்பவன் மீண்டும் உயிர் பெற்றால், ‘உயிர் இருக்கிறது. ஆனால், நான் மரணத்திலிருக்கிறேன்; இங்கே மரணம் இருக்கிறது!’ என்று கூறுவது போலவே அவன் உணர்ச்சியும் இருக்கிறது. எது இருக்கிறதோ, எது இருக்க வேண்டுமோ, அது அழிக்கப்படுவதாகத் தோன்றுகிறது. மானிட உள்ளம் வழி தவறிவிடுகிறது; பயத்தால் நடுங்குகிறது. மரண பயம் உண்மையிலேயே மரணத்தைக் கண்டு ஏற்படும் பயமில்லை என்பதற்கு முதன்மையான உதாரணம், மனிதர் பயத்தினால் தங்களைத் தாங்களே வதைத்துக் கொள்வதைக் கூறலாம். இதனால், அவர்கள் உண்மையான மரணத்திற்கு அஞ்சவில்லை என்பதும், போலி வாழ்க்கையையே அஞ்சுகின்றனர் என்பதும் தெளிவாம். தங்கள் வாழ்வு முடிந்தது என்று மக்கள் அஞ்சவில்லை. ஆனால், உடலின் அழிவு அவர்கள் பெற்றிராத உண்மையான வாழ்க்கையின் அவசியத்தையே எடுத்துக் காட்டுகிறது. மக்கள் மரணம் என்பது இருள், ஒன்றுமில்லாத சூனியம் என்று கருதுவதாலே அதற்கு அஞ்சுகிறார்கள்; இருளையும் சூனியத்தையும் மட்டுமே அவர்கள் காண்பதற்குக் காரணம், அவர்கள் உண்மை வாழ்க்கையைக் காணாமையே. மரணத்தைப் பற்றிய பயங்கரங்கள் வெறும் கற்பனையைத் தவிர வேறில்லை. தைரியமாக இவைகளைப் பற்றிச் சிந்திக்கும் மனிதர்களுக்கு உண்மை விளங்கி விடும். ‘நான்’ என்று கருதி வந்த உடல் மண்ணில் மறைந்து மண்ணாய்ப் போய்விடுமே என்பது தான் மரண பயம். உண்மையில் ‘நான்’ என்பது எது ? என் உடலையே ‘நான்’ என்று பல ஆண்டுகளாக நான் எண்ணி வந்திருக்கிறேன். ஆனால், என் வாழ்க்கையில் எப்பொழுதாவது ஒரு நேரத்தில் ‘நான் யார்?’ என்று என்னையே கேட்டுக் கொண்டால், என்ன பதில் கூறுவேன்? ‘சிந்தனை செய்து உணரக்கூடிய தன்மையுள்ளவனே நான்’ என்று பதிலுரைப்பேன். இதன் பொருள் என்ன? எனக்கு மட்டும் சிறப்பாகவுள்ள ஒரு முறையில் உலகத்தோடு சம்பந்தப்பட்டவன் நான். நான் எங்கு, எப்பொழுது தோன்றினேன் என்பதையும், எங்கு, எப்பொழுது சிந்திக்கத் தொடங்கினேன் என்பதையும் பற்றி எனக்கு நிச்சயமாக எதுவும் தெரியாது. நான் உயிரோடு இருக்கிறேன் என்பதையும், நான் இருக்கும் உலகத்தோடு எனக்குச் சம்பந்தமுண்டு என்பதையும் என் பிரக்ஞை எனக்குக் கூறுகிறது. என் பிறப்பு, வளர்ப்பு, இளமை, முதலியவைபற்றி எனக்கு அநேகமாக எதுவும் நினைவிலில்லை. வாழ்க்கையைப் பற்றி ஏதாவது நினைவுக்கு வந்தாலும், அது மற்றொருவருடைய வாழ்க்கையைப் பற்றி எண்ணுவது போலவே இருக்ககிறது. எனவே, எனது வாழ்க்கை முழுதிலும் ‘நான்’ என்பது ஒரே நானாக இருக்கவில்லை. என் உடல் எந்நேரத்திலும் மாறிக்கொண்டேயிருக்கிறது. உடல் முழுதும் ஒவ்வொரு பத்து வருட காலத்தில் பூரண மாற்றமடைகிறது. பழைய உறுப்புக்களில் எதுவும் இப்போதில்லை; தசை நார்கள், எலும்புகள், மூளை முதலிய யாவும் மாறிவிட்டன. இப்படிப் பூரணமாக மாறிவிட்ட உடலா ‘நான்?’ இந்த மாற்றங்களையெல்லாம் பார்த்துக் கொண்டே, தான் மட்டும் மாறாமலிருக்கும் ஒன்றுதான் ‘நான்.’ இதனால் தான் உடல் மாறி வரினும், சிறு வயது முதல் பல உடல்கள் ஏற்பட்டுவரினும், நான் ஒரே உடலைப் பெற்றிருப்பதாகக் காண முடிகிறது. இப்படிக் காண்பது உள்ளேயுள்ள உணர்ச்சியால் சாத்தியமாகிறது. இந்த உணர்ச்சியாவது தொடர்ச்சி அறாமல் என்றும் ஒரே நிலையில் இருந்து வருகிறதா? உறக்கத்தில் சில சமயங்களில் உணர்ச்சியே அற்றுப்போகிறது. தினந்தோறும் உறங்கும்போது உணர்ச்சியற்றும், விழிக்கும்போது அது புதுப்பிக்கப்பட்டும் வருகிறது. இந்த உணர்ச்சி நின்று போனதும், உடல் மடிந்து அழிவுறும் என்று தோன்றுகிறது. ஆனால், இயற்கையான உறக்கத்திலோ, செயற்கையாக மருந்துகளால் ஏற்படும் உறக்கத்திலோ, அப்படி நடப்பதில்லையே! உணர்ச்சியும் ஒரேயடியா யில்லாமல் உடலைப் போல் மாறிக்கொண்டே வருகிறது. மூன்று வயதுக் குழந்தையா யிருந்தபோது நான் பெற்றிருந்த உணர்ச்சி அறவே மாறி, இப்போது வேறு புதிய உணர்ச்சியைப் பெற்றிருக்கிறேன். முப்பது வருடங்களுக்கு முன்னால் முற்றிலும் வேறான உணர்ச்சியை பெற்றிருந்தேன். எனவே, வாழ்க்கை முழுவதும் உணர்ச்சி ஏற்பட்டிருக்கவில்லை; ஒன்றுக்கு மேலான பல உணர்ச்சிகள் வெவ்வேறு சமயங்களில் தோன்றியிருக்கின்றன. ஆயினும், ‘நான்’ என்ற கருத்து என்றும் படித்தாக இருந்து வருகிறது. அடிக்கடி பாரி அழிந்து கொண்டும், வளர்ந்து கொண்டும் வரும் உடல் ‘நான்’ என்று கருத முடியாது. அடிக்கடி மாறிவரும் உணர்ச்சியும் அப்படிக் கருத முடியாது. பிறகு, ‘நான்’ என்று எப்போதுமுள்ள என் கருத்துக்குக் காரணமானது யாது? இது பெரிய தத்துவம் நிறைந்த கேள்விபோல் தோன்றுகிறது. ஆனால், சிறு குழந்தைகூட இதற்குப் பதில் கூறிவிட முடியும். ஒவ்வொரு நாளும் குழந்தை, ‘இதை நான் விரும்புகிறேன். ஆனால், அதை நான் விரும்பவில்லை’ என்று பல தடவை சொல்லக் கேட்கிறோம். இந்த வாக்கியத்திலேயே உண்மை அடங்கியிருக்கிறது. இந்த வார்த்தைகள் மிகச் சாதாரணமானவை. இவையே பல்வேறு சமயங்களில் ஏற்படும் உணர்ச்சிகளையெல்லாம் ஒன்று சேர்த்து, ‘நான்’ என்ற உணர்வைக் கொடுப்பவை. நான் இதை விரும்புகிறேன். ஆனால், அதை விரும்பவில்லை. ஏன் இதை விரும்புகிறேன், ஏன் அதை விரும்பவில்லை என்பதற்கு யாருக்குமே காரணம் தொரியாது. ஆயினும், ஒன்றை விரும்பி, மற்றதை விரும்பாத இந்த நிலையே மனிதன் உணர்ச்சிகளை ஒன்றாகத் தொகுத்து ‘நான்’ என்ற அகத்தை நிலைக்கச் செய்கிறது. உலகையும் அதிலுள்ள பொருள்களையும் கண்டு மக்களின் உள்ளங்களில் சில கருத்துக்கள் ஏற்படுகின்றன. ஆனால், ஒருவர் கருத்து மற்றவர்கள் கருத்துக்களைப் போலில்லை. ஒவ்வொருவரும் வெவ் வேறு கருத்துக் கொள்கின்றனர். இதற்குக் காரணம் அவரவருடைய விருப்பமே. ஒவ்வொருவரும் வெவ்வேறு விதமான விருப்பமுடையவர். ஒன்றில் அதிக ஆசையும், மற்றொன்றில் குறைந்த ஆசையும் கொள்வதே மனிதனின் தனிப் பண்புக்கு, அதாவது ‘நான்’ என்ற உணர்வுக்குக் காரணமாகிறது. ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு விதமான பண்பைப் பெற்றிருப்பதாலே ஒருவருக்கும் மற்றவர்களுக்கும். வேற்றுமை தெரிகிறது. இந்த விருப்பம், அல்லது ஆசை, அல்லது அன்பு காலத்தையும் இடத்தையும் பொறுத்ததன்று; உடலைப் பொறுத்ததன்று; உடல் தோன்றுமுன்பே இது இருப்பது. என் விருப்பத்திற்கு இயைந்த முறையில் நான் இந்த உலகத்தோடு சில சம்பந்தங்களைப் பெற்றிருக்கிறேன்; இது போலவே மற்ற மனிதர்களும் வேறுவித சம்பந்தங்களைப் பெற்றிருக்கின்றனர். மக்களோடு நெருங்கிப் பழகுவதில் நாம் வெளித் தோற்றங்களையே பார்த்துக் கொண்டிருப்பதில்லை. அவர்களின் சிந்தனைகள், விருப்பங்களையே அறிய முயற்சிக்கிறோம். அவைகளைக் கொண்டு அவர்கள் உலகத்தோடு எத்தகைய சம்பந்தம் கொண்டிருக்கின்றனர் என்பதை அறிகிறோம். அவர்கள் எவைகளை விரும்புகிறார்கள், எவைகளை விரும்பவில்லை என்பதிலிருந்து அவர்களின் தன்மையை அறிய முடிகிறது. இது போலவே குதிரை, நாய், பசு முதலிய விலங்கினங்களின் இயல்பையும் அறியலாம். விலங்குகளில் ஒவ்வோர் இனமும் வெவ்வேறு விருப்பங்களைக் கொண்டிருப்பதை ஆதாரமாக வைத்துக் கொண்டு, சிங்கங்கள், மீன்கள், குதிரைகள் என்று இனங்களை நாம் பிரித்துப் பார்க்கிறோம். எனவே, ஒவ்வோர் இனமும் உலகத்தோடு என்ன சம்பந்தம் பெற்றிருக்கிறது- எதை விரும்புகிறது, எதை விரும்பவில்லை - என்ற ஆதாரத்திலேயே பகுத்துப் பார்க்க முடிகிறது. இது ஸ்தூலமான உடலையோ, பொருள்களையோ பற்றிய விஷயமன்று, உள்ளே நிகழும் குணம். எனக்குச் சில உயிர்ப் பிராணிகள் உலகத்தோடு பெற்றுள்ள சம்பந்தங்கள் தெரியவில்லை என்றால், அவைகளின் விருப்பு வெறுப்புகளை நான் அறிய முடியவில்லை என்றே கொள்ளவேண்டும். என்னைப் பற்றியும் உலகைப் பற்றியும் நான் பெற்றுள்ள சகல அறிவுக்கும் அடிப்படை, நான் இந்த உலகத்தோடு கொண்டுள்ள விசேஷ சம்பந்தமே. இதன் மூலம் மற்ற உயிர்களும் என்னைப் போலவே உலகத்தோடு கொண்டுள்ள சம்பந்தங்களை நான் கண்டுகொள்ள முடிகிறது. ஆனால், உலகத்தோடு எனக்குள்ள விசேஷ சம்பந்தம் இந்த வாழ்க் கையில் ஏற்பட்டதன்று; எனது உடலிலிருந்தோ , அல்லது வெவ்வேறு காலங்களில் தோன்றிய என் உணர்ச்சிகளிலிருந்தோ இது ஆரம்பிக்கவில்லை. என் உடல் எத்தனை மாறுதல்கள், அடையினும், அவைகளை ஒன்று சேர்த்து ஏகமாகச் செய்வது வெவ்வேறு காலங்களில் தோன்றும் என் உணர்ச்சி. இத்தகைய உடல் அழிக்கப்படலாம்; என் உணர்ச்சியுமே அழிக்கப்படலாம். ஆனால், உலகத்தோடு எனக்குள்ள சம்பந்தத்தை மட்டும் அழிக்க முடியாது. அந்தச் சம்பந்தத்தின் மூலமே ‘நான்’ என்ற உணர்ச்சி எனக்கு ஏற்பட்டது. அதுவே உலகில் நிலைத்துள்ள சகல பொருள்களையும் நான் அறியும்படி செய்துள்ளது. அதை ஏன் அழிக்க முடியாதென்றால், அது ஒன்றுதான் நிலைத்து நிற்கிறது. அது இல்லாவிட்டால், பல சமயங்களில் தோன்றும் என் உணர்ச்சிகளையோ, என் உடலையோ, என் வாழ்க்கை வாழ்க்கையையோ, அல்லது பிறர் வாழ்க்கையையோ நான் அறிந்து கொள்ளவே முடியாது. ஆகவே, உடல் அழியினும், உணர்ச்சி அழியினும் உலகத்தோடு எனக்குள்ள விசேஷ சம்பந்தமும் அழியும் என்பதற்கு, இவை சான்றாக மாட்டா-அந்தச் சம்பந்தம் இந்த வாழ்க்கையில் ஆரம்பிக்கவில்லை; இதிலிருந்து தோன்றவுமில்லை. ** மரண பயம்** உடல் அழியும்போது ‘நான்’ என்று கருதுவோனும் அழிகிறானா? உடல் மாறினும், உன மாறினும், இந்த ‘நான்’ என்பது ஒரே மனிதன் என்ற தன்மையை உணர்த்துகிறது. ஒரு தற்காலிக உணர்ச்சி நின்றுவிட்டால், எல்லா உணர்ச்சிகளையும் ஒன்று சேர்த்துத் தொகுத்துக் காட்டும் ‘நான்’ அழிந்து விட முடியாது. உறக்கத்தில் உணர்ச்சி அறவே போய்விடுகிறது. விழிக்கும்பொழுது உணர்ச்சி வருகிறது. முந்தியிருந்த உணர்ச்சியையும்; விழித்தெழுந்த பின் ஏற்படும் உணர்ச்சியையும் ஒன்றுசேர்ப்பது ‘நான்’ ஆகவே, தூக்கத்தில் உடல் அசைவற்றுக் கிடக்கலாம், உணர்ச்சியும் ஒடுங்கலாம். இப்படியிருந்தும் மனிதர்கள் தூங்குவதற்கு அஞ்சுவதில்லை. ஏன்? முன்னால் பல சமயங்களில் தூங்கியபின் எழுந்திருந்தது போல விழிப்பு நிச்சயம் வந்துவிடும் என்று மனிதன் நம்புவதாக விடை கூறலாம். இது சரியான ஆராய்ச்சியன்று. ஏனெனில், ஆயிரம் தடவை தூங்கி விழித்தவன், ஆயிரத்தோராம் தடவை விழித்து எழாமலே இருந்து விடக்கூடும். அதை அறிந்திருந்தும் மனிதன் உறங்கச் செல்வதற்கு அஞ்சுவதில்லை. ஏனெனில், உறக்கத்தில் உடலும் உணர்ச்சியும் ஒடுங்கினாலும், ‘நான்’ ஒடுங்குவதுமில்லை; அழிவதுமில்லை. இத்நிலையில் மனிதன் மரணத்திற்கு மட்டும் ஏன் பயப்படவேண்டும்? மரணத்தில் ‘நான்’ என்று கருதுவதும் அழிந்து விடுவதாக எண்ணுவதால்தான். உடலின் இயக்கமே வாழ்க்கை என்று கருதி வந்ததன் விளைவாக இந்த எண்ணம் ஏற்படுகிறது. உடலின் இயக்கம் காலத்தையும் இடத்தையும் நிலைக்களனாகக் கொண்டது. ‘நான்’ என்பது காலத்திற்கும் இடத்திற்கும் அப்பாற்பட்டது. அதற்கு அழிவு ஏது? விசேஷமாக ‘நான்’ என்று சொல்வது எனக்கும் உலகுக்கும் உள்ள சம்பந்தமே - நான் விரும்புவதிலும் வெறுப்பதிலும் இந்தச் சம்பந்தம் அடங்கியிருக்கிறது. எனது விருப்புக்கும் வெறுப்புக்கும் காரணமான இயல்பு எனக்கு எங்கிருந்து வந்தது? உலகில் பிறப்பதற்கு முன்பே இது ஏற்பட்டிருக்க வேண்டும். இது என் பெற்றோரிடமிருந்தே எனக்கு வந்திருக்க வேண்டும் என்று முதலில் எனக்குத் தோன்றுகிறது. அவர்களுக்கு அவர்களுடைய பெற்றோர்களிடமிருந்து வந்திருக்கவேண்டும். இவ்வாறே ஆராய்ந்துகொண்டு போனால், இவ்வியல்பு காலத்திற்கும் இடத்திற்கும் அப்பாலேயே ஏற்பட்டிருக்க வேண்டும் என்று புலப் படும். இதைத்தான் ‘நான்’ என்று கருதுகிறேன்; உணர்ச்சியால் அறிகிறேன். இந்த ‘நான்’ அழிவதில்லை மரணத்தின் பின்னும் இது நிலைத்திருக்கிறது. மனிதன் தன் உடலிலும் உணர்ச்சியிலும் ஏற்படும் மாறுதல்களைக் கண்டு அஞ்சுவதில்லை. அவைகளை வரவேற்கிறான். இளமைப் பருவத்திலிருந்து அவன் பெரியவனாக விரும்புகிறான். தனக்கு ஏற்பட்ட புண்கள் ஆறவேண்டுமென்றும் விரும்புகிறான். ஒரு சமயம் ஒன்றுமே தெரியாமல் வயிறு பசிக்கும் பொழுது மட்டும் அழுதுகொண்டிருந்த குழந்தையாகத் தோன்றிய மனிதன், இப்போது தாடியும் மீசையும் பெற்று, ஆராய்ச்சி அறிவுடன் விளங்குகிறான்; ஸ்திரீயா யிருந்தால் வயதுவந்த தன் மக்களைக் கண்டு பரவசப்படுகிறான். மாற்றங்கள் மனிதனைப் பயமுறுத்துவதில்லை எனினும், மரணத்தினால் ஏற்படும் மாறுதலுக்கு மட்டும் மனிதன் அஞ்சுகிறான். வாழ்க்கை முழுவதையும் அவன் சேர்த்துப் பாராமல், உடலை மட்டுமே பார்ப்பதால், இந்த அச்சம் தோன்றுகிறது. பைத்தியம் பிடித்த ஒருவன் தன் உடல் கண்ணாடியால் செய்யப்பெற்றது என்று எண்ணிக் கொண்டான். ஒரு சமயம் அவன் கீழே விழுந்து விட்டான். விழுந்ததும், ‘எல்லாம் நொறுங்கி விட்டது!’ என்று கூவினான். அப்படியே மரித்து விட்டான்! உடல் இயக்கத்தை மட்டும் முழு வாழ்க்கையாகக் கொள்வது இதைப் போன்ற செயலேயாகும். வாழ்க்கை முழுமையையும் எடுத்துக் கொள்பவனுக்கு மேலும் கிடைக்கும்; அதில் பகுதியை மட்டும் பற்றிக்கொண் டிருப்பவனுக்கு உள்ளதும் போய்விடும். ** மரணத்தால் ஏற்படும் புதிய சம்பந்தம்** வாழ்க்கை உலகத்தோடு கொள்ளும் ஒருவிதத் தொடர்பு அல்லது சம்பந்தம் என்பதைத் தவிர வேறு முறையில் அதைப்பற்றி நாம் கருத முடியாது. நம் வாழ்க்கையும் அப்படித்தான். மற்ற ஜீவன்களின் வாழ்க்கையையும் அப்படியே கருதுகிறோம். ஆனால், நம் வாழ்க்கையில் இந்தச் சம்பந்தம் ஒரு முறை ஏற்பட்ட நிலையிலேயே இல்லை என்றும், அவ்வப்போது புதிய சம்பந்தங்களை ஏற்படுத்திக் கொள்கிறோம் என்றும் நாம் தெரிந்து கொள்கிறோம். மனிதனின் மிருக இயல்பு பகுத்தறிவு உணர்ச்சிக்கு அதிகமாய்க் கட்டுப்பட்டு வரும்போது- அன்பு மலர்ந்து பெருகும்போது- இந்த மாற்றங்கள் ஏற்படுகின்றன. உடல் வாழ்வு அழிவது நிச்சயம் என்பதால், உலகத்தோடு நம் தொடர்பு ஒரே நிலையில் இல்லாமல் மாறிவருவது தெளிவாகும். புதுத் தொடர்புகளை நாம் மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. இந்தப் புதுத் தொடர்புகளை அமைத்தல் - அதாவது வாழ்க்கையின் இயக்கம் மரணத்தைப் பற்றிய கருத்தை அழித்து விடுகிறது. உலகத்துடன் பகுத்தறிவுக்குப் பொருத்தமான புதுத் தொடர்புகளை அன்பினால் ஏற்படுத்திக் கொள்ளாதவனுக்கே மரணத்தைப் பற்றிய எண்ணம் தோன்றும். அவன் ஆதியில் உலகத்தோடு என்ன சம்பந்தம் பெற்றிருந்தானோ அதே நிலைமையில் இருப்பவன். அவனுக்கு மரணம் பின்னால் மட்டும் வரும் என்பதில்லை ; இப்போதே அதை அநுபவிக்கிறான். குழந்தைப் பருவம் மாறி, வயது முதிரும் போது உடலில் பெரிய மாற்றம் ஏற்படுகிறது. மனிதன் வளர்ச்சி யடையாமல், சிறு வயதில் அவனுக்கிருந்த வளைந்து கொடுக்கும் தன்மையும் ஜீவசக்தியும் குறைந்து கொண்டே வருகின்றன. உடல் முதிர்ச்சிபெற்று, வயோதிகத்தால் தள்ளாட்டமும், முடிவில் மரணமும் ஏற்படாம லிருக்கவேண்டும் என்பதற்காக அவன் செய்யும் - முயற்சிகளே வாழ்க்கை முழுதும் நிறைந்திருக்கும். இவை யாவும் பயனற்றவை. வாழ்க்கையை உணர்ந்தவன் நிலை இதுவன்று அவன் ஒன்றை விரும்பி மற்றொன்றை வெறுத்தல் என்ற நிலையை மாற்றி, விருப்பத்தை- அன்பை பெருக்கிக் கொண்டே யிருக்கிறான். அவன் வாழ்க்கை தேங்கிக் கிடக்காமல், இயங்கிவருகிறது. வாழ்க்கையின் இயக்கத்திலே - அன்பின் பெருக்கத்திலேதான் - வாழ்வு இருக்கிறது என்பதை அவன் காண்கிறான். அன்பின் பெருக்கால் அவனுக்கும் நன்மை பெருகுகிறது. தனக்குப் புலப்படாத பெருமையிலிருந்தே கிடைத்திருக்கும் வாழ்க்கை இடை விடாமல் வளர்ந்து வருவதை இவன் உணருகிறான். அமைதியோடும் ஆனந்தத்தோடும் அவன் அதைத் தனக்குப் புலப்படாத எதிர் காலத்திற்கும் கொண்டு செல்கிறான். பிணி, பசி, மூப்பு, துன்பம் ஆகியவை மனிதனின் உணர்ச்சியையும் வாழ்க்கையையும் அழித்து விடுவதாக ஜனங்கள் சொல்லுகிறார்கள். எந்த மனிதனின் வாழ்க்கையை அழிக்கின்றன? பரி. யோவான் முதுமைப் பருவமடைந்திருந்த நிலையை நான் கற்பனை செய்து பார்ப்பதுண்டு. அவர் முடிவில் ‘சகோதரர்களே, ஒருவரை யொருவர் நேசியுங்கள்!’ என்ற சொற்களையே கூறியதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இருந்த இடத்திலிருந்து அசைய முடியாத நிலையில் கண்களில் நீர் மல்கி நிறைந்து, இந்த வயோதிகர் மூன்றே வார்த்தைகளை முணுமுணுத்துச் சொன்னார் ’ஒருவரை யொருவர் நேசியுங்கள்!’ இத்தகைய மகான்களுடைய வாழ்க்கையில் உடலின் மிருக வாழ்வு. உலகத்தோடு கொண்ட புதுத் தொடர்புடன் ஐக்கியமாகி விடுகிறது. இத்தகையவர்களின் வாழ்க்கையை எது அழிக்க முடியும்? உண்மையான வாழ்க்கையை உணர்ந்த மனிதன், தான் ஒளியை நெருங்கிச் செல்லும் போது, தன் நிழல் குறைந்து கொண்டே வருவதில் சந்தோஷமே அடைவான். பூரணமான வெளிச்சத்தில் நிற்கும் போது நிழலே இல்லாமற்போகும். ஆனால் உடலின் இயக்கமே வாழ்வென்று கழுதுவோன், ஒளியை நெருங்க நெருங்க நிழல் குறைவதையும், முடிவில் அது இல்லாமலே போவதையும் கண்டு துயரப்படுவான். இவனுக்கு நிழலே வாழ்க்கை, ஒளியன்று! மரணமும் இது போன்றதே. நிழலின் மறைவைக் கொண்டு, அதற்குக் காரணமான பொருளே அழிந்து விட்டதாக எண்ணுவது தவறு. காலத்திலும் இடத்திலும் நிகழும் தன் உடல் வாழ்வையும், உலகத்தோடு அன்பின் மூலம் தன் தொடர்பு வளர்ந்து வருவதையும் கொண்டு தன்னை நன்கு அறிந்து கொண்டவனுக்கு நிழல் மறைவது அதிக ஒளி வருவதையே குறிக்கும். அவன் அதை அழிவு அல்லது மரணம் என்று கருத மாட்டான். வாழ்க்கை உலகத்தோடு தான் கொண்ட தனித் தொடர்பு என்பது அவனுக்குத் தெரியும். அது அவன் பிறக்கும்போது கூட வந்தது. வாழ்க்கையில் அன்பின் வளர்ச்சியால் அவன் அதை மேலும் வளர்த்து வந்திருக்கிறான். இத்தகைய மனிதன் தான் அழிந்து போகக் கூடியவன் என்பதை நம்பவே மாட்டான். ஸ்தூல உலகத்தின் விதிகளை யெல்லாம் தெரிந்த ஒருவன், தன்னைத் தாய் பெற்றெடுக்கவில்லை என்றும், திடீரென்று கீரைப் பாத்தியிலிருந்து கண்டெடுத்தாள் என்றும் நம்புவானா? தன் உடல் திடீரென்று எங்கோ தெரியாத இடத்திற்குப் பறந்து ஓடிவிடும் என்றால் நம்புவானா? இதைப் போலவே வாழ்க்கையின் விதிகளை அறிந்தவன், மரணத்தால் தான் அழிந்து விடுவதாகச் சொல்வதை நம்பவே மாட்டான்.  இறந்த பின்னும் வாழ்க்கை உண்டு வாழ்க்கையின் சாராம்சத்தை நாம் நன்றாகக் கவனித்தால், மரணம் ஒரு மூட நம்பிக்கை என்று தெரியும். என்னிடம் மிகுந்த அன்போடு பழகிய என் சகோதரன், என்னைப் போலவே வாழ்ந்து வந்தவன், இப்போது இந்த வாழ்க்கையில் இல்லை. அவனுடைய வாழ்க்கை அவனுடைய உணர்ச்சியில் இருந்தது; அந்த உணர்ச்சி உடலோடு மறைந்து விட்டது. காலத்திலும் இடத்திலும் அவ்வுணர்ச்சி மீண்டும் மலர்ச்சியடைய முடியாது. என் சகோதரன் உயிரோடிருந்தான்; அவனோடு நான் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தேன். இப்போது அவன் இல்லை, அவன் எங்கேயிருக்கிறான் என்பதும் எனக்குத் தெரியவில்லை: ‘இதுதானே மரணம்!’ என்று ஜனங்கள் சொல்வார்கள். வாழ்க்கையைப் புரிந்து கொள்ளாதவர்களே இப்படிச் சொல்லக் கூடும். வெளியுலகில் ஒருவனின் தொடர்பு இல்லாமற் போவதை வைத்துக் கொண்டு அதுவே மரணத்திற்கு மறுக்க முடியாத சான்று என்பார்கள். என் சகோதரன் இறந்து போய்விட்டான். அவன் உலகத்தோடு பெற்றிருந்த தொடர்பின் வெளித் தோற்றம் என் கண்ணுக்குப் புலனாகாமல் மறைந்துவிட்டது. காலத்திலும் இடத்திலும் அதை நான் இதுவரை கண்டு வந்தேன். இப்போது காண முடியவில்லை. என் சகோதரனுடைய உடல் மறைந்ததால், அவனைப்பற்றிய எல்லாமே அழிந்து போய் விட்டனவா? வண்ணாத்திப்பூச்சி முதலில் சிறுபுழுக்குரம்பையாயிருந்து பின்னால் தான் அதிலிருந்து வெளி வருகிறது. பூச்சி வெளியேறுமுன், ஒரு குரம்பை, பக்கத்திலே காலியாய்க் கிடக்கும் மற்றொரு குரம்பையைப் பார்த்து, ‘ஐயோ! ஒன்றுமே யில்லையே! எல்லாம் காலியாகிவிட்டது!’ என்று சொல்லக்கூடும். இது பொருத்தமானது தான்; ஏனெனில், அது தன் கூட்டாளியோடு இனிமேல் தொடர்பு கொள்ள முடியாது. மனிதரைப்போல அதற்கு அறிவில்லை. வேறுவகையில் சம்பந்தம் வைத்துக்கொள்ள அதற்கு ஆற்றலில்லை. ஆனால் மனிதனுடைய நிலை இப்படியில்லை. என் சகோதரன் இறந்து போய்விட்டான்; அவனுடைய குரம்பையாகிய உடல் உண்மையிலேயே காலியாகி விட்டது; இதுவரையில் நான் அவனை எந்த உருவத்தில் கண்டு வந்தேனா அதை இனிக் காண முடியாது. ஆனால் அவன் என் கட்புலனுக்குத் தென்படாமற் போனது அவனிடம் எனக்குள்ள தொடர்பை-உறவை-அழித்துவிடவில்லை. அவனுடைய நினைவு இருக்கிறது. இந்த நினைவு, அவனுடைய கைகள், முகம், கண்களைப்பற்றிய நினைவன்று; அவனுடைய சூட்சும உருவத்தின் நினைவே யாகும். இந்த நினைவு எது? என் சகோதரன் காட்டி வந்த அன்பின் அளவுக்குத் தக்கபடி இது அதிகமா யிருக்கிறது. அவனைப் பற்றிய நினைவு என் வாழ்க்கையை இப்போதும் பாதித்து வருகிறது. அவன் மண்ணுலகில் இருக்கும் போது நடந்தது போலவே, அவன் நினைவால் இப்போதும் என் வாழ்க்கை மாறுதலடைகிறது. என் சகோதரனிட மிருந்த ஜீவ சக்தி அழியவில்லை; குறையவில்லை; உருமாறியிருக்கிறது-அவ்வளவுதான். முன்னைவிட அதிக சக்தியுடன் அது என்னைப் பாதித்து வருகிறது. உயிரோடிருக்கும் மற்ற ஜீவன்கள் என்னைப் பாதிப்பது போலவே, அவன் நினைவும் பாதித்து வருகிறது. எனக்கு அதன் தொடர்பு அற்றுப் போகவில்லை. இப்போது அவன் எங்குள்ளான் என்பது எனக்குத் தெரியாது என்பதால், அவனே இல்லை, ஒன்றும் பாக்கியில்லாமல் முற்றிலும் அழிந்து விட்டான் என்று நான் சொல்ல முடியுமா? அவனுக்கும் எனக்கும் ஏற்பட்டிருந்த தொடர்புகள் இப்போதுதான் அதிகப்பட்டிருக்கின்றன. அவை என்னை ஊடுருவி நிற்கின்றன. அவன் உலகத்தோடு பெற்றிருந்த தனித் தொடர்போடு என் தொடர்பும் ஒன்றாகவே தோன்றுகிறது. என் கண்ணுக்கு அவன் புலனாகா விட்டாலும், என்னை அவன் கவர்ச்சி செய்து இழுத்துக் கொள்கிறான். அவன் வாழ்க்கை முடிவடைந்து விடவில்லை. இதே போல, உலகத்தோடு அவன் கொண்டிருந்த சம்பந்தமும் அற்று ஒழியவில்லை. அது மனிதர்களின் செயலைப் பாதித்துக் கொண்டே தான் இருக்கிறது. கிருஸ்துநாதர் இறந்து வெகுகாலமாகிவிட்டது; அவர் பூத உடலோடு வாழ்ந்தது சொற்ப காலமே; ஆனால், அறிவின் நியதிப்படியும் அன்பு நெறியிலும் நிகழ்ந்த அவருடைய வாழ்க்கை இன்று உலகில் கோடிக்கணக்கான மக்களின் மீது , ஆதிக்கியம் கொண்டிருக்கிறது. இவர்கள் அவர் உலகத்தோடு கொண்டிருந்த தொடர்பை ஏற்றுக் கொண்டு, அதைப் போலவே தங்கள் வாழ்க்கையையும் அமைத்துக் கொள்கிறார்கள். கிறிஸ்துநாதருடைய வாழ்கையின் பயன் இது என்று சொல்வது பொருந்தாது. பூமிக்குள் மறைந்த வித்து, செடியாகி, மரமாகிறது என்று சொல்லாமல், வித்து அழிந்துவிட்டது, வித்து இருந்ததன் விளைவு அல்லது பயன் தான் மரம் என்று சொல்வது போல்தான் இப்படிக் காரணம் கூறுவதும். கிறிஸ்து பெருமானின் வாழ்க்கையே அவர் உலகத்தோடு வைத்துக்கொண் டிருந்த தொடர்பே-மக்களின் வாழ்க்கையை ஊடுருவி நிற்கிறது. காய்ந்த சருகுகளில் நெருப்பு எரிகிறது. நெருப்பின் ஒளிக்கு என்ன காரணம் என்று எனக்குத் தெரியாது. சருகுகள் தீர்ந்து போய்விட்டன. உடனே நெருப்பு அழிந்துவிட்டது என்று நான் சொல்ல முடியுமா? இப்போதும் அது ஒரு காட்டிலோ, அல்லது எனக்குத் தெரியாத வேறு இடத்திலோ, எரிந்து கொண்டுதான் இருக்கிறது. நெருப்பே அழிந்து விட்டது என்று முடிவு செய்ய இடமில்லை. எனக்கு முன்னால் இருந்த சகல மனிதர்கரின் வாழ்க்கையையும் வைத்தே என் வாழ்க்கை அமைந்திருக்கிறது. மிருக இயல்பைப் பகுத்தறிவு உணர்ச்சிக்கு அடங்கிக் கிடக்கும்படி செய்து அன்பு காட்டி வாழ்ந்தவர்கள் அனைவரும் இப்போதும் மற்ற மக்களிலே-அவர்கள் வாழ்க்கையில் - தாங்களும் வாழ்கிறார்கள். இது மட்டும் எனக்குத் தெரிந்திருந்தால் போதும் -மரணத்தைப் பற்றிய மூட பயம் என்னை விட்டு அகன்று விடும். கிறிஸ்து, தமது உயிரின் பொய்த் தோற்றம் மறைந்த பின்னும், தாம் தாழ்வதாகச் சொன்னார். ஏனெனில், உடலோடு இருக்கும்போதே அவர் உண்மையான நித்திய வாழ்க்கையுள் நுழைந்து விட்டார். அவர் பெற்றிருந்த ஒளி சுற்றியிருந்த மக்களின் மனங்களையும் ஒளி செய்தது. தனிப் பண்பைத் துறந்து, அறிவுக்குப் பொருத்தமான அன்பு வாழ்க்கை வாழும் ஒவ்வொரு மனிதனும் இத்தகைய ஒளியைக் காண்கிறான். ஒருவருடைய வாழ்க்கையில் சிலருடன் தொடர்பு கொண்டோ, அல்லது பல்லாயிரம் மக்களுடன் தொடர்பு கொண்டோ, செயல் புரிவதில் அளவு முக்கியமில்லை. ஆனால், பகுத்தறிவுக்குப் பொருத்தமான முறையில் மற்றவர் நலன்களைப் பேணி, அன்பைப் பெருக்கிக்கொண்டு வந்தால், அவர் கிறிஸ்துவா யிருந்தாலும், நல்ல மனிதரா யிருந்தாலும், பிரசித்தி பெறாதவரா யிருந்தாலும், கிழவராயினும் சிறுவயதினராயினும், ஸ்திரீயாயினும், அவருக்கு, மரணமில்லை. ஏனெனில், உடலோடு இருக்கும் பொழுதே, அவர் உலகத்துடன் ஒரு தொடர்பு கொண்டு விடுகிறார்; அந்தத் தொடர்புக்கு மரணம் கிடையாது. அந்தத் தொடர்பை ஏற்படுத்திக் கொள்வதே எல்லா மனிதர்களுக்கும் இவ் வாழ்க்கையில் முக்கியமான காரியம். நித்தியமான வாழ்க்கையைப் பற்றி ஒவ்வொருவருக்கும் நம்பிக்கை ஏற்பட்டு விடாது. இந்த நம்பிக்கை ஏற்படுவதற்கு முன்பே அழியா வாழ்வு அமைந்திருக்க வேண்டும். அதற்கு நமது வாழ்க்கையைச் சிரஞ்சீவியாக்குவது எது என்பதை நாம் உணர வேண்டும். எதிர்கால வாழ்க்கையில் நம்பிக்கை கொள்வதற்கு, ஒருவன் தன் வாழ்க்கையில் செய்ய வேண்டியதைச் செய்து முடித்திருக்க வேண்டும்; இந்த வாழ்கையிலேயே உலகத்துடன் இதற்கு முன் இல்லாத புதுத் தொடர்பை அமைத்துக் கொண்டிருந்தால் தான் அது சாத்தியமாகும் ** உலகத் தொடர்புகளில் குழப்பம்** மனிதனுடைய பகுத்தறிவு உணர்ச்சி, மிருக உணர்ச்சி, உடலாகிய சடப்பொருள் ஆகிய மூன்றின் மூலமும் மனிதன் உலகத்தோடு தொடர்பு கொள்கிறான். பகுத்தறிவு உணர்ச்சியின் தொடர்பு ஒன்று தான் தனது வாழ்க்கை என்பதை அவன் அறிவதில்லை. மற்ற இரண்டு தொடர்புகளும் வாழ்க்கையைச் சேர்ந்தவை என்று அவன் கருதுகிறான். சடப் பொருளே பரிணாம வளர்ச்சியில் மிருக உணர்ச்சியாயும், பின்னர் பகுத்தறிவு உணர்ச்சியாயும் உயர்ந்த நிலையை அடைந்திருப்பதாகச் கருதுகிறான். பகுத்தறிவு உணர்ச்சி உச்ச நிலையை அடைந்த பிறகு, கீழிறங்க ஆரம்பித்து, மிருக உணர்ச்சியாக மாறி, அதன் பின் மீண்டும் சடமாக மாறுவதாக எண்ணுகிறான். இந்தத் தவறான கருத்தினால், மிருக உணர்ச்சி அழிவில்லாததாகிறது; ஏனெனில் மிருகம் தன் இனம் அழிவில்லாதவரை நிலைத்திருப்பதாகத்தானே கொள்ள வேண்டும்! உலகத்தோடு சடப்பொருள் கொண்டுள்ள தொடர்பும் அழிவில்லாததாக ஆகின்றது. ஆனால், எல்லாவற்றிலும் முக்கியமான பகுத்தறிவு உணர்ச்சி, நித்தியமானதாயில்லாமல், சடத்திலிருந்து விளைந்த ஒன்றாகவே முடிகிறது! ஆயினும், மனிதன் இது உண்மையா யிருக்க முடியாது என்று உணருகிறான். இதனால் சாவைப் பற்றிய அச்சம் வருகிறது. பகுத்தறிவு உணர்ச்சி உலகத்தோடு கொண்டுள்ள தொடர்பே வாழ்க்கை என்று நம்பாதவர்களுக்கு, மற்ற இரண்டு தொடர்புகளையும் பற்றி நம்ப இயலாது. மனிதன், தான் முன்னாலேயே இருந்திராவிட்டால், ஒன்றுமில்லாத சூனியத்திலிருந்தே அவன் தோன்றிப் பின் மடிவதானால், விசேஷமாகத் தான் கருதும் ‘நான்’ என்ற அகம் நிலைத்திருக்காது என்பதை அறிகிறான். அவன் தான் ஒரு போதும் பிறக்கவில்லை என்றும், தான் எப்போதும் இருந்தவன் என்றும், இருப்பவன் என்றும், இருக்கப் போகிறவன் என்றும் உணரும்போது, தான் நித்தியமானவன் என்பது புலப்படும். அவனுடைய வாழ்க்கை தனித்த ஓர் அலையன்று என்றும், இந்த வாழ்வில் ஓர் இயக்கம் என்றும் தெரிந்து கொள்ளும்வரை மனிதன் தன் நித்தியத்துவத்தை நம்ப மாட்டான். உடலின் அழிவுக்கு மனிதன் பயப்பட முடியாது ஏனெனில் சடப்பொருள் சடத்தோடு சேர்ந்து விடுகிறது. அதன் உருவம் மாறுவதைத் தவிர சேதம் ஒன்றும் இல்லை. தன் உணர்ச்சி - தான் என்ற ‘அகம்’ மடிகிறது என்று கருதினால், இந்த உணர்ச்சி வாழ்வில் எத்தனையோ முறை மாறியதுதானே! சிறு வயதிலிருந்த உணர்ச்சி பின் வாழ்வில் இல்லை. இந்த மாற்றத்திற்கெல்லாம் வருந்தாமல், மரணத்தினால் மாறுவதற்கு மட்டும் வருந்துவானேன்? உண்பது, உடுப்பது, பருகுவது, மக்களைப் பெறுவது, வீடுகள் அமைப்பது போன்ற செயல்களும், மற்ற மனிதர்கள் விலங்குகளுடன் சில முறைகளில் தொடர்புகள் கொண்டதும் போய்விடுமே என்று அவன் கருதவும் இடமில்லை. ஏனெனில் அவன் போகும் போது மானிட இனமும் போய்விடாது. கோடிக் கணக்கான மனிதர் அவனைப் போலவே உலகத்தோடு தொடர்புகள் கொண்டிருப்பர். தன் பகுத்தறிவு உணர்ச்சி உலகத்தோடு கொண்டிருந்த சம்பந்தம் அழிந்துவிடுமே என்றும் மனிதன் கவலைப்பட இடமில்லை. அவ்வுணர்ச்சி அவனுடைய பிறப்புக்கு முன்னாலேயே ஏற்பட்டது. அவன் பிறப்புக்குப் புறம் பான ஒன்று. அவன் மரணத்தோடு அது அழியவும் முடியாது. ** உயிரின் இயக்கத்தில் இந்த வாழ்க்கை ஒரு பகுதி** நானும், மற்ற எல்லா மனிதர்களும் உலகத்துடன் குறிப்பிட்ட ஒரு தொடர்பு கொண்டு இங்கே இருக்கிறோம்; ஒவ்வொருவரும் ஓரளவு அன்பு கொண்டிருக்கிறோம். இந்த அன்பு நாம் பிறக்கு முன்பே உள்ளது; பிறக்கும்போது நாம் அதைக் கொண்டு வருகிறோம். பிறப்பதற்கு முன்னாலுள்ள நிலையை நாம் அறிய முடியாதது போலவே, மரணத்திற்குப் பின்பு ஏற்படும் நிலையும் நமக்குப் புலனாவதில்லை ; ஆனால் இடையில் நம் வாழ்க்கை முழுதும் இந்த அன்பு வளர்ந்து முதிர்ந்து வருவதைப் பார்க்கிறோம். உலகில் சிலர் நீண்ட காலம் வாழ்கின்றனர்; சிலர் குறுகிய காலத்திலேயே மரணமடைகின்றனர். ஏன்? வாழ்க்கை பிறப்பில் ஆரம்பமாகவுமில்லை; மரணத்தோடு தீர்ந்து போவதுமில்லை. பிறப்புக்கு முன்னாலும், மரணத்திற்குப் பின்னாலும் எட்டிப் பார்க்கக் கூடிய ஆற்றல் நமக்கு இப்போது (இந்த உடலோடு விளங்குகையில்) இல்லை. என் வீட்டுச் சாளரத்தின் வழியாக வெளியே நடந்து செல்பவர்களை நான் பார்க்கிறேன். சாளரத்தின் அருகில் வந்து காட்சி தரும் மனிதர் அதுவரை இல்லாதிருந்தனர் என்று சொல்ல முடியுமா? அவர்கள் இருந்தனர்; சாளரத்தின் பக்கம் வரும்வரை நான் அவர்களைப் பார்க்க முடியவில்லை. அதுபோலவே, சாளரத்தைத் தாண்டி அப்பாலே சென்று விட்டவர்களும் இல்லாமற் போகின்றனர் என்று சொல்ல முடியுமா? சாளரத்திற்கு அப்பால் பார்க்கிற ஆற்றல் எனக்கு இல்லாததால், அந்த மனிதர்களே இல்லாமற் போனார்கள் என்று சொல்லுதல் தவறு. மற்றவர்கள் பிறக்கும்போது வாழ்க்கையில் என்ன தத்துவங்களைக் கொண்டு வந்தார்கள் என்பது நமக்குத் தெரியாது; உயிரின் இயக்கம் அவர்கள் வாழ்க்கையில் என்னென்ன சாதிக்கவேண்டுமென்று இருந்தது என்பதும் நமக்குத் தெரியாது. காரணங்களால் வாழ்க்கையிலுள்ளவர்கள் அடுத்த, வாழ்வுக்குத் தயாராகி விட்டார்கள் என்று தோன்றுகிறது என்பதும் நமக்கு விளங்குவதில்லை. நம் கண்களின் பார்வையால் இந்த உலக வாழ்க்கையிலுள்ளவைகளையே காண முடிகிறது. இவற்றிற்கு அப்பாலும் இப்பாலும் பார்க்க ஆற்றலில்லாததால், மரணத்திற்கு அப்பாலுள்ள வாழ்க்கையையோ, பிறப்புக்கு முன்னாலுள்ளதையோ நாம் அறிய முடிவதில்லை. நம் ஆராய்ச்சி அறிவினால் இவ்வளவு தான் தெரிந்து கொள்ள முடியும். எனக்குக் கண்ணுக்கு முன்னால் சமீபத்திலுள்ள பொருள்களே தென்படுகின்றன; தொலைவிலுள்ளவை தென்படுவதில்லை. எந்த ஆற்றல் அவசியம் தேவையோ, அது மட்டுமே கண்ணுக்கு இருக்கிறது. தூரத்தைப் பார்க்கும் ஆற்றல் கண்ணுக்கு ஏற்பட்டால், சமீபத்திலுள்ளதைப் பார்க்க முடியாது போய்விடும். இது போலவே உலக வாழ்வில் அவசியம் காணவேண்டியவைகளை ஆராய்ச்சி அறிவு கண்டு கொள்கிறது. மேற்கொண்டு அறிய அதற்குச் சக்தியில்லை. மனிதன் இறப்பது மேற்கொண்டு இந்த உலகில் அவனுடைய உண்மையான வாழ்வின் நலன் அதிகரிக்க முடியாது என்பதால்-ஏதோ நோயினாலோ, துப்பாக்கிக் குண்டு பட்டோ, மடிகிறான் என்பதன்று. இவை மிகவும் சமீபமான அண்மைக் காரணங்களாயிருக்கலாம். ஆனால், மூலமான காரணம் மேலே குறித்தது தான். மனிதன் மரிப்பதில் ஆச்சரியமில்லை; ஆனால் உலகில் அவன் உடலோடு வாழ்வது தான் ஆச்சரியம். உடலுக்கு அபாயம் விளைக்கக் கூடிய எத்தனையோ நிலைமைகளுக்கும், எத்தனையோ விஷக் கிருமிகளுக்கும் நடுவே, அவன் வாழ்வது பெரும் வியப்புத்தான். ஆகவே, நாம் வாழ்கிறோம் என்றால், நம்மைப் பற்றி முன்னெச்சரிக்கையோடு இருப்பதாலன்று. ஆனால் உயிரின் காரியம், நம்மில், நம் மூலம், நடைபெறுவதற்காகவே இருக்கிறோம். உடலைப் பேணுவதால் நாம் வாழவில்லை. வாழ்க்கையின் வேலையை நாம் நிறைவேற்றி கொண்டிருப்பதாலேயே நாம் வாழ்கிறோம். இந்த வேலை முடிவடைந்ததும், மனிதனின் மிருக வாழ்வு அழிந்து கெடுவதை எதுவும் தடை செய்ய முடியாது. இந்த அழிவு ஏற்படுகையில் சமீபத்தில் தோன்றும் நோய் நோக்காடு போன்ற சிறு காரணமே நமக்கு முழுக் காரணமாகத் தோன்றும். வெளியுலகில் எல்லா விஷயங்களிலும் காரணத்தையும் காரியத்தையும் நாம் பார்க்க முடிகிறது. ஆனால், நம் உண்மையான வாழ்க்கையின் காரணத்தையும் காரியத்தையும் நாம் காண முடியாதிருப்பது நம்மைக் கஷ்டப்படுத்துகிறது. ஒவ்வொரு மனிதனும் பலதிறப்பட்ட திறமைகளுடன் ஏன் தோன்றுகிறான்? ஒருவனுடைய வாழ்க்கை நீடித்துக்கொண்டிருக்கும்போது, மற்றொருவனுடைய வாழ்க்கை ஏன் நசித்துப் போகிறது? இந்தக் கேள்விகளுக்குப் பதில் கிடைக்காததால் நாம் வருந்துகிறோம். ஆனால், எங்கு, எப்போது, நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை எடுத்துக் காட்ட நமது ஆராய்ச்சி அறிவுக்குத் திறமை இருக்கிறது. வாழ்க்கையின் நலனைப் பெற நம் தனி மிருகப் பண்பு பகுத்தறிவு உணர்ச்சிக்கு அடங்கிச் செல்லும்படி செய்யவே அவ்வறிவு நமக்குப் போதிக்கிறது; இதுவே அழியா நலன்களைப் பெறும் மார்க்கம் என்று காட்டுகிறது. ------------------------------------------------------------------------ 1. குரம்பை - கூடு.↩︎ வாழ்வின் துயரங்கள் மனிதன் மரண பயத்தை உதறிவிட்டு, மரணத்தைப்பற்றிய நினைவில்லாமல் இருப்பதாக வைத்துக் கொள்வோம். பின்னும் அவன் அநுபவிக்கும் கொடுந் துன்பங்களைப் பார்த்தால், அவைகளுக்கு நியாயமான காரணமும் இல்லை; அவைகளைத் தவிர்க்கவும் முடியாது. அவன் வாழ்க்கைக்கு ஏதேனும் அர்த்தமிருக்கிறது என்று கருதுவதைக்கூட இத் துன்பங்களே ஒழித்துவிடக் கூடும். நான் பிறருக்குப் பயனுள்ள ஒரு நல்ல காரியத்தைச் செய்து கொண்டிருக்கிறேன். திடீரென்று ஒரு நோய் ஏற்பட்டு, என் வேலையைத் தடைசெய்து, என்னைப் பலவீனப் படுத்தித் துயரத்தில் ஆழ்த்துகிறது. இதற்குக் காரணமே யில்லை. புகை வண்டித் தண்டவாளத்தில் ஓர் ஆணி துருப்பிடித்துக் கழன்று விழுந்து விடுகிறது. தண்டவாளத்தின் மீது ஓடிய வண்டி கவிழ்ந்து விடுகிறது. வண்டியில் ஓர் அறையில் ஒரு தாய்-யாதொரு பாவமும் அறியாதவள்- அவள் கண்முன்பு அவளுடைய குழந்தைகள் நசுக்கபட்டுக் கிடக்கின்றன. பூகம்பத்தால் நகரங்கள் அழிந்து, பல்லாயிரம் மக்கள் சொல்லொணாக, துன்பங்களை அடைகின்றனர். இவற்றிற்கெல்லாம் என்ன அர்த்தம்? இவைகளும், மற்றும் மக்களை திணறச் செய்யும் பல்லாயிரம் பயங்கரமான துன்பங்களும் என்ன நன்மைக்காக ஏற்படுகின்றன? என் நோய்க்குக் காரணமாக, விஷக்கிருமிகள் என் உடலுக்குள் சில பகுதிகளில் புகுந்து விட்டதைக் கூறலாம்; குழந்தைகள் தாயின் முன்பு நசுங்கியதற்கு, இரும்பு ஆணியில் ஈரம் பட்டுத் துருவேறியதைக் கூறலாம்; பூகம்பங்களுக்குப் பூமியின் இயற்கை பற்றிய விதிகளைக் காரணமாகக் காட்டலாம், அவசியம் தெரியவேண்டிய விஷயம் வேறு வேறு ஆட்களுக்கு ஏற்படாமல், இந்த மனிதர்களுக்கு மட்டும் இந்தக் கோரமான துயரங்கள் ஏன் ஏற்பட்டன; இவை ஏற்படாமல் ஒருவன் எப்படித் தப்பித்துக் கொள்ளலாம்? இதற்குப் பதிலில்லை. ஒருவன் மற்றொருவனைப் பார்க்கினும் அதிகமாய்த் துன்புறுவதற்கு எத்தகைய விதி இருக்க முடியும்? அத்தகைய நியதி கிடையாது என்று என் அறிவு தெளிவாக எடுத்துக் காட்டுகிறது. தங்கள் தனித்தன்மையையே வாழ்க்கையாகக் கருதுபவர்கள், இத்தகைய துயரங்களைக் கண்டும். அநுபவித்தும், ஒரு நிமிஷங்கூட வாழ விரும்ப மாட்டார்கள். கொடுமையான வேதனைகள் ஏற்படுவதை விளக்கவும் முடியவில்லை. இவைகளைக் கண்டு பயந்து நடுங்கி எந்த மனிதனுமே உயிர் வாழ முடியாத அளவுக்கு இவைகள் பெருகியிருக்கின்றன. இருந்தபோதிலும், மக்கள் வாழத்தான் செய்கின்றனர். உயிரை மாய்த்துக் கொள்ள எத்தனையோ வழிகள் தெரிந்திருந்தும், இன்னலும் இடுக்கணும் நிறைந்த வாழ்க்கையை அவர்கள் துறப்பதில்லை. தங்களாகக் குறை சொல்லிக் கொள்கிறார்கள்; துயரங்களுக்காக வருந்துகிறார்கள் - ஆயினும் தொடர்ந்து வாழ்கிறார்கள்! வாழ்வில் துன்பங்களைவிட இன்பங்கள் அதிகமாயிருப்பதால், மக்கள் வாழ விரும்புவதாகச் சொல்வது தவறு. ஏனென்றால், வாழ்க்கையைப் பற்றிய சாதாரண ஆராய்ச்சியிலும், தத்துவ ஆராய்ச்சியிலும், மண்ணுலக வாழ்க்கை ஒரே துக்க பரம்பரை என்று தெளிவாகத் தெரிகின்றது. துன்பங்களின் அளவுக்கு இங்கே இன்பங்கள் இல்லை. இந்த விசித்திர முரண்பாட்டிற்கு ஒரே விடை தான் உண்டு. எல்லாத் துன்பங்களும் எப்போதும் அவசியமானவை. தங்கள் வாழ்வின் நன்மைக்கு இன்றியமையாதவை என்று மக்கள் தங்கள் அந்த-ராத்மாவில் உணர்வதாலேயே மீண்டும் வாழ விரும்புகின்றனர். பல சமயங்களில் இந்தத் துயரங்களைக் கண்டு ஆற்றாமல் அவர்கள் எதிர்த்து நிற்கிறார்கள் என்றால், அதற்குக் காரணம் அவர்கள் தங்களுடைய தனி வாழ்வே முழு வாழ்க்கையென்று கருதுவதுதான். பிறப்பதிலிருந்தே துயரமா யிருக்கிறது. வாழ் நாள் முழுவதும் துயரந்தான். மனிதன் தானாகத் துன்பமடைகிறான்; மற்றவர்களையும் துன்பப்படுத்துகிறான். துன்பமும் துயரமும் அவனுக்கு வழக்கமாகி விட்டன. ஆயினும், அவன் துன்பத்தைக் கண்டு அஞ்சுகிறான்; அது ஏன் ஏற்படுகிறது என்று கேட்கிறான். நம் இன்பங்கள் எல்லாம் பிறர் துன்பங்களால் விளைந்தவை. மனிதனின் இன்பங்களுக்கு அவன் துன்பங்கள் எல்லாம் அவசியமானவை. துன்பமில்லாமல் இன்பமில்லை. துன்பமும் இன்பமும் ஒரே பொருளின் இரண்டு எல்லைகள். இவை ஒன்றுக் கொன்று அவசியமானவை. எனினும், மனி தன், ‘எதற்காக? ஏன்?’ என்று கேட்கிறான். துன்பமும் இன்பமும் ஒன்றாகச் சேர்த்துப் பிணைக்கப்பட்டிருப்பது தெரிந்திருந்தும், இக் கேள்விகள் கேட்கப்படுகின்றன; ஆனால், ‘ஏன் இந்த இன்பம், என்ன காரணத்திற்காக?’ என்ற கேள்விகள் மட்டும் எழுவதில்லை. மிருகத்தின் வாழ்வு முழுவதும், சங்கிலித்தொடர் போல், பல துன்பங்களின் சேர்க்கையாகவே யிருக்கிறது; மனிதனுடைய மிருக இயல்பு முழுதும் அப்படியே யிருக்கிறது. மிருகமும் மனிதனும் பூரணமாகச் செயற்படுவதற்கு-தொழில் செய்வதற்கு- இந்தத் துன்பமே தூண்டுகோலாயுள்ளது. துன்பம் ஒரு வேதனை உணர்ச்சி; அது செயல் புரியத் தூண்டுகிறது; செயல், வேதனை உணர்ச்சியை விரட்டிவிட்டு, இன்ப நிலையை உண்டாக்குகிறது. மிருகத்தின் வாழ்வும், மனிதனின் வாழ்வும், துன்பத்தால் சலனமடைந்து சிதைவதில்லை. வாழ்வின் இலட்சியமே அதன் மூலம் நிறைவேறுகிறது. எனவே, வாழ்வுக்குத் தூண்டுகோலாக அமையும் துன்பங்கள் இருந்தே தீரவேண்டும் என்று ஏற்படுகிறது. இப்படியிருந்தும் மனிதன் ‘ஏன் எதற்காக, இந்தத் துன்பம்?’ என்று கேட்பதன் பொருள் என்ன? மிருகம் இந்தக் கேள்வியைக் கேட்பதில்லை. பெரிய மீன் சின்ன மீனை வதைக்கும் போதும், சிலந்திப்பூச்சி ஈயை வதைக்கும் போதும், ஓநாய் ஆட்டை வதைக்கும் போதும் அவை தாம் செய்ய வேண்டியதையே (கடமைப்பட்டதையே) செய்வதாக எண்ணுகின்றன; என்ன நடக்கிறதோ அது நடந்தே தீரவேண்டிய காரியமென்று எண்ணுகின்றன. இதே போல், பெரிய மீன், சிலந்தி, ஓநாய் ஆகியவற்றை அவைகளைவிட வலிமையுள்ள பிராணிகள் வதைக்க வரும்போது, அவைகள் தாங்கள் எப்படியும் தப்பித்து ஓடவேண்டு மென்று எண்ணுகின்றன. இதைச் செய்வதே தங்கள் இயற்கை என்று எண்ணுகின்றன. எனவே, அவைகள் தங்களுக்கு ஏற்படும் நிகழ்ச்சிகள் ஏற்பட்டுத் தீரவேண்டியவை என்று கருதுகின்றன. ஆனால், மனிதன் மட்டும் அப்படி எண்ணுவதில்லை. மனிதன் போர்க்களத்தில் பல மனிதர்களுடைய அங்கங்களை முறித்தெறிகிறான்; ஆனால், தன் அங்கங்கள் காயமடைந்ததும், அதே களத்திலிருந்து கொண்டு அவைகளுக்குச் சிகிச்சை செய்கிறான். அவன் உணவுக்காக ஆயிரக்கணக்கான விலங்குகளை வதைக்கிறான் ஆனால், தன்னைக் கொல்ல வரும் ஓநாய்களை எதிர்த்து விரட்டித் தான் தப்பித்துக்கொள்ளவே விரும்புகிறான். இத்தகைய மனிதன் தனக்கு நேரும் சகல விஷயங்களும் ஏற்பட்டுத் தீரவேண்டியவை என்று கருதுவது கஷ்டம். அவன் இதை ஒப்புக் கொள்ள முடியாது. நேர்ந்தவை நேர்ந்திருக்கக் கூடாதென்றே அவன் கருதுகிறான். அவன் வேறு என்ன தான் செய்யவேண்டும்? பகுத்தறிவுள்ள அவன் தன் இயற்கைக்கு ஏற்ற முறையில் தன்னைக் காத்துக்கொள்ள என்ன தான் செய்யவேண்டும்? துன்பத்திற்குக் காரணமான தன் பாவத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்; அதற்கு வருந்திக் கழுவாய் தேடவேண்டும்; உண்மையை உணர வேண்டும். மிருகம் நிகழ்காலத்தில் மட்டும் துன்பப்படுகிறது; அதற்காக அது இப்போது உடனடியாகச் செய்யும் வேலையே அதற்குத் திருப்தியளிக்கும். ஆனால் மனிதன் முந்திய காலத்திலும், நிகழ்காலத்திலும், வருங்காலத்திலும் துயரப்படுகிறான்; எனவே, நிகழ்காலத்திற்குத் தேவையான செயல் மட்டும் அவனுக்குத் திருப்தி யளிக்காது. இப்போது ஏற்படும் துயரத்திற்குரிய முந்திய காலத்துள்ள காரணத்தையும் துயரத்தின் எதிர்கால விளைவையும் எண்ணியே அவன் செயல் புரிய வேண்டும். அதுவே அவனுக்குத் திருப்தி யளிக்கும். நான் காயப்படுகிறேன், சிறைப்படுகிறேன், அல்லது விலங்குகளால் தாக்கப்படுகிறேன் என்றால், இவற்றால் ஏற்படும் துயரம் நான் அநுபவிக்கும் துயரத்தின் ஒரு சிறு பகுதிதான். இப்போதைய துயரத்திற்கு என் வாழ்க்கையின் முந்திய பகுதியில் நான் காரணத்தைத் தேடுகிறேன்; மற்ற மனிதர்களுடைய செயல்களின் காரணங்களை ஆராய்கிறேன்; துயரத்தின் காரணத்தைக் கண்டுபிடிக்க - நான் முன் செய்த தவறுகள் அல்லது பாவங்களைக் கண்டுபிடிக்க - நான் முயற்சி செய்கிறேன்; அப்படியானால் தான் துயரத்திலிருந்து விடுபட முடியும். ஆகவே, துயரம் எனக்கு இயற்கையாக ஏற்பட்டுத் தீரவேண்டிய விஷயமென்று தோன்றுவதில்லை. நான் கற்பனை செய்து கொள்வதில் சிறு அளவாயுள்ள துயரமும் பெரிய அளவில் பயங்கரமாகிவிடுகிறது. மிருகத்தின் துன்பம் மிருக வாழ்வின் சட்டத்தை மீறி நடப்பதால் வருகிறதென்று அது உணரும்; இந்த மீறுதலால் வேதனை ஏற்படுகிறது. வேதனையை நீக்க அது உடனே செயலை மேற்கொள்கின்றது. துன்பத்தின் காரணம் வாழ்க்கையின் சட்டத்தை மீறியதன் விளைவு என்று பகுத்தறிவு உணர்ச்சிக்குத் தெரிகிறது. இதற்குக் காரணமான பாவத்தை உணருவதில், அப்பாவத்தை நீக்குவதே பரிகாரமென்றும் விளங்குகிறது. அதற்குரிய செயலைச் செய்வதே மனிதன் கடமை. மிருகம் தனக்கு ஏற்பட்ட துன்பத்தைக் குறைத்துக் கொள்ள உடனே ஏதாவது செய்துகொள்கிறது. மனிதன் தன் துன்பத்தின் காரணத்தை அறிந்து அதையே நீக்க முற்படுகிறான். இந்த முயற்சி அல்லது செயலே துன்பத்தின் வேதனையைத் தீர்க்கின்றது. துன்பத்தால் மனிதன் செயல் புரியத் தூண்டப் படுவதையும், அச் செயலால் துன்பத்தின் வேதனை நீங்குவதையும் புரிந்து கொள்ளாததால் தான் துன்பம் ஏன் வருகிறதென்று அவன் மனம் கேட்கிறது. மிருக இயல்பே வாழ்க்கை யென்று கருதுவோருக்குத் துன்பங்கள் அர்த்தமற்றவை, காரணமில்லாமல் ஏற்படுபவை என்று தோன்றும். பகுத்தறிவு உணர்ச்சியின் விதிப்படி மிருக இயல்பை அடக்கி வாழ்பவர்களுக்குத் துன்பமும், அவர்கள் முன் செய்த தவறும் தொடர்புடையவை என்பது விளங்கும். அதனால் தவறு அல்லது பாவத்தை ஒப்புக் கொண்டு, அதிலிருந்து அவர்கள் தங்களை விடுவித்துக் கொள்வார்கள். மிருகம் தன் துன்பத்தையும் அதற்குரிய தவறுதலையும் இடத்திலும் காலத்திலும் நிகழ்ந்ததைக் கொண்டு உணரும்; ஆனால், மனிதர்கள் துன்பத்தையும் அத்துன்பத்தின் காரணத்தையும் உள்ளுணர்ச்சியிலேயே தேடிக் காண்பார்கள். பாவத்தினால் துன்பம் ஏற்படுகிறது. பாவத்திற்காகக் கழிவிரக்கம் கொள்வதே துன்பத்திலிருந்து விடுவித்து நன்மையளிக்கும் என்று நம்புவார்கள். உலக வாழ்க்கையோடு தொடர்பு கொள்ளாமல், தான் செய்த பாவங்களால் உலகில் துன்பங்களைக் கொண்டு வந்ததை அறியாமல், தான் நிரபராதியென்று கருதிக் கொண்டு துன்பங்களை எதிர்த்து நிற்கும் மனிதன் துன்பங்களின் வேதனைகளை முழுதும் அநுபவிக்கிறான். துன்பத்தின் காரணம் பாவம் என்று பகுத்தறிவு எடுத்துக் காட்டுகிறது. வாழ்க்கையின் ஒரே கடமையாக விளங்கும் அன்பு இதை உறுதிப்படுத்துகிறது. மனிதனின் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்கள் தவறுகளின் விளைவுகள் என்பதை அறிந்து, அவன் தன் அன்புக்குப் பாத்திரமானவர்களின் துன்பங்களைக் களைவதிலும் குறைப்பதிலும் ஈடுபடும் பொழுது அவனுடைய துன்பங்களில் பாதி ஒழிந்துவிடுகின்றன. குறைந்த அன்புள்ளவன் அதிகத் துன்பத்தை அனுபவிக்கிறான். ஆனால் முற்றிலும் காரண காரியப் பொருத்தத்துடன் அன்பின் காரணமாகவே சகல செயல்களையும் புரிபவனுக்கு எவ்விதத் துன்பமும் இருப்பதில்லை. மனிதர்கள் தங்கள் முன்னோர்களுக்கும், சந்ததியார்களுக்கும், தங்களோடு வாழும் மற்றவர்களுக்கும் காட்டிவரும் அன்பென்னும் சங்கிலித் தொடரை அறுக்க முயலும்போதுதான் துன்பத்தின் வேதனை ஏற்படுகிறது. அன்பே மானிட வாழ்க்கையை உலக வாழ்க்கையோடு பிணைத்து நிற்கிறது. ** துன்பங்கள் வாழ்வுக்கு அவசியம்** ‘என்ன இருந்தாலும் துன்பம், சரீரத் துன்பம் இருக்கிறதே! இந்தத் துன்பம் எதற்காக? ஏன்?’ என்று மனிதர் கேட்கின்றனர். இந்தத் துன்பம் மனித வாழ்வுக்கும் நலனுக்கும் அவசியம். துன்பமில்லாவிட்டால் வாழ முடியாது. இந்தத் துன்பத்திலிருந்து முதன்மையான நலன்கள் பெருகுகின்றன. வேதனை நமது தனி மிருக இயல்பைப் பாதுகாக்கிறது. மிருகங்களும் குழந்தைகளும் அடையும் வேதனையை உடனேயே மறந்துவிடுகின்றன. ஆனால், அறிவு பெற்ற மனிதன் மறக்கவும் முடிவதில்லை; அதைக் கற்பனை செய்தும் பெருக்கிக் கிறான். பகுத்தறிவு உணர்ச்சி விழிப்படையாத நிலையிலுள்ள மனிதனுக்கு வேதனை மிக அதிகமா யிராது. ஆனால், பகுத்தறிவு உணர்ச்சி தோன்றிய பிறகு மிருக இயல்பை அறிவுக்குப் பொருத்தமாக நடக்கும் படி கட்டுப்படுத்த இந்த வேதனையே உதவுகிறது. இந்த உணர்ச்சி வளர வளர, வேதனை குறைந்து கொண்டே வருகிறது. பகுத்தறிவு உணர்ச்சியைப் பூரணமாய்ப் பெற்றிருக்கும் போதுதான் நாம் துன்பங்களைப் பற்றிப் பேச முடிகிறது. ஏனெனில், இந்த நிலையிலிருந்துதான் வாழ்க்கையே ஆரம்பமாகிறது. இதன் பின்புதான் துன்பங்கள் என்ற நிலைகள் ஆரம்பமாகின்றன. இந்த நிலையில் வேதனையைப் பற்றிய உணர்ச்சி மிக உச்ச நிலையை அடைய முடியும். அதே மிகக் குறைந்த நிலையையும் அடைய முடியும். இரண்டும் நம் உணர்ச்சியைப் பொறுத்திருக்கின்றன. வேதனை ஓர் அளவில் தான் ஏற்படுகிறது. என்றாலும், அதைப்பற்றிய நம் உணர்ச்சியினால் வளர்ந்தோ குறைந்தோ தோன்றுகிறது. வேதனையை உடல் உணருவதற்கு ஓர் எல்லையுண்டு; அதற்குமேல் எல்லையைத் தாண்ட முடியாது. இது எல்லோருக்கும் தெரியும். அளவுக்கு மேல் வேதனை ஏற்பட்டால் நம் பிரக்ஞை நின்றுபோகிறது; மயக்கம் ஏற்பட்டுவிடுகிறது; அல்லது கடுமையான ஜுரம் ஏற்படுகிறது; அல்லது மரணம் சம்பவிக்கிறது. வேதனையின் எல்லை இவ்வளவுதான். ஆனால் இதைப்பற்றி நாம் எண்ணுவதில், வேதனை உணர்ச்சியை அளவில்லாது பெருக்கிக் கொள்ளவும் முடியும். மிக மிகக் குறைவாக்கிக் கொள்ளவும் முடியும். வேதனை வாழ்க்கையில் அவசியந்தானென்று கருதி, அதை வரவேற்றுக் கொண்டு, அதைத் தான் உணராமலே தாங்கிக் கொள்ள முடியுமென்றும், அதிலேயே இன்பமடைய முடியுமென்றும் ஒவ்வொரு மனிதனும் அறிவான். உயிரையே தியாகஞ் செய்பவர்களும், இன்பமாகப் பாடிக்கொண்டே தூக்குமேடை ஏறுபவர்களும் ஒரு புறமிருக்க, சாதாரண மனிதர்களும் தங்கள் தைரியத்தைக் காட்டுவதற்காகச் சிறிதும் முணுமுணுக்காமல் பல்லைக் கடித்துக் கொண்டு கொடிய துன்பங்களைத் தாங்குவதை நாம் பார்க்கிறோம். வேதனை அதிகரிப்பதற்கு ஓர் எல்லையுண்டு. வேதனையைப் பற்றிய உணர்ச்சியை எவ்வளவு வேண்டுமானாலும் நாம் குறைத்துக்கொள்ளவும் முடியும். ஆனால், மனிதன் தன் மிருக இயல்பையே வாழ்க்கையாக எண்ணி, எதைக் கொண்டு வேதனை உணர்ச்சியைக் குறைத்துக்கொள்ள வேண்டுமோ, அதைக் கொண்டே பெருக்கிக் கொள்கிறான். பிளேட்டோநாள் மோசமாகிக் கொண்டு வந்ததைக் கண்டு, அவர் பழைய கட்டளையை மாற்றி, மனிதர்கள் தாங்கள் மரண மடையுங் காலத்தை அறிய முடியாமலிருக்கும்படி செய்துவிட்டார். இப்போது நாம் அதே நிலையிலிருக்கிறோம். இந்தக் கதையை நாம் சிறிது மாற்றிக்கொண்டு பார்ப்போம். ஆதியில் மனிதர்கள் வேதனையான உணர்ச்சிகளை அறிய முடியாத நிலையிலிருந்தார்கள். ஆகையால், துன்பமே தோன்றாம லிருந்தது. ஆனால், நாளுக்கு நாள் அவர்கள் நிலைமை மோசமாகி விட்டதும், அவர்களுடைய நன்மைக்காக வேதனை உணர்ச்சிகளை அறியும் உணர்வு அவர்களுக்கு ஏற்படுத்தப்பட்டது. இக்கதை வாழ்வுக்கு வேதனை அவசியமென்பதைத் தெளிவாக்கும். வேதனை உணர்ச்சி யில்லாமலே மனிதர்கள் படைக்கப்பட்டிருந்தால், அவர்களாகவே சீக்கிரத்தில் அது வேண்டுமென்று பிரார்த்தித்திருப்பார்கள். பிரசவவேதனை யில்லாவிட்டால், ஸ்திரீகள் உயிர் வாழவே தகுதியில்லாத பல குழந்தைகளையே பெறுவர். குழந்தை நெருப்பைத் தீண்டினால் கையைச் சுட்டு விடுகிறது; இந்த வேதனையால் அது மறுபடி நெருப்பைத் தீண்டாமல் தப்பித்துக் கொள்கிறது. எனவே, வேதனை யில்லாவிட்டால், குழந்தைகளும் இளைஞர்களும் தங்கள் உடல்களை அழித்துக்கொண்டு விடுவார்கள். வேதனை யில்லாவிட்டால், மனிதர்கள் தங்கள் தவறுகளையோ மற்றவர் தவறுகளையோ அறியவே முடியாது- அவர்கள் இந்த வாழ்க்கையில் என்ன செய்ய வேண்டும் என்பதை அறிய முடியாமற் போகும். அவர்களுடைய செயலுக்கு அறிவுக்குப் பொருத்தமான இலட்சியம் இராது. உடல் அழிவதையே தங்கள் மரணமென்று பயந்து நடுங்குவதை மாற்ற முடியாது: அவர்கள் அன்பு பெறவும் முடியாமற் போகும். வேதனை யில்லாவிட்டால், மனிதனின் மிருக இயல்பு தன் விதியை மீறிச் செல்வதை எச்சரிக்க முடியாது: பகுத்தறிவு உணர்ச்சி துன்பத்தை அநுபவிக்கா விட்டால், மனிதன் உண்மையை உணர முடியாமல், தன் வாழ்க்கையின் நியதியை - சட்டத்தை - அறியாமலே இருந்து விடுவான். தனி மனிதர்களின் துன்பங்களையும். மானிட வர்க்கத்தின் தவறுகளின் காரணங்களையும், இவைகளைக் குறைப்பதற்காக என்னென்ன செய்ய வேண்டும் என்பதையும் உணர்வதே மனித வாழ்வின் கடமை. நான் என்னைப் போன்ற மற்றவர்களின் துயரங்களைப் புரிந்துகொள்ள வேண்டும்; என் பகுத்தறிவு உணர்ச்சியால், தனி மனிதர்கள் அடையும் துயரங்களிலிருந்து எல்லாவற்றிற்கும் பொதுவான காரணத்தைக் கண்டுபிடித்து, அதைத் துடைக்க வேண்டும். துயரப்படுவோருக்கு உதவியாகச் செல்லும்படி அன்பு நம்மைத் தூண்டுகின்றது; துயரத்தின் பொதுக் காரணங்களைக் கண்டு துடைக்கும்படி அது நம்மை ஏவுகின்றது. இதைச் செய்வதே மனிதன் தன் வாழ்க்கையில் நலனை அடையும் மார்க்கம். மனிதனின் வாழ்க்கை துக்க மயம். ஒரே ஒரு விஷயந்தான் மனிதனின் துயரத்திற்குக் காரணமாயுள்ளது. அவன் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும், அவனது நன்மை எந்த வாழ்க்கையில் இருக்கிறதோ, அதை வாழும்படி அவனை எது தூண்டுகிறதோ, அதுவே துயரத்திற்கும் காரணமானது. உலகின் தவறுகளோடு நானும் கலந்துகொள்வதாலும், என் தவறுகளை நான் உணராததாலும், என் துன்பத்தை நானே அதிகப்படுத்திக் கொள்கிறேன். என் வாழ்க்கையிலும் உலகின் வாழ்க்கையிலுமுள்ள உண்மையை உணராம லிருப்பதால், வாழ்வதற்கு வேண்டிய வல்லமையை நான் இழக்கிறேன். உண்மையான வாழ்க்கையைப் பற்றிய உணர்வும் அவ் வாழ்க்கையின் செயல் முறையுமே துன்பத்தைக் குறைக்கின்றன. தனி மனிதனின் வாழ்வுக்கும் அவனது இலட்சியத்திற்கும் இடையேயுள்ள அளவு கடந்த வேற்றுமையை அவை குறைத்து இரண்டையும் சமரசப்படுத்த உதவுகின்றன. மனிதன் விரும்பினாலும் விரும்பா விட்டாலும், ஜனனத்திலிருந்து மரணம் வரையே நிலைத்திருக்கும் அவனது தனித் தன்மையில் வாழ்க்கை அடங்கவிடவில்லை என்பதை உணரவேண்டும். அவனது இலட்சியத்தைப் பற்றி அவனுக்கு ஓரளவு தெரிந்ததைக் கொண்டு, அதை அடைய முடியுமென்று நம்ப வேண்டும். அவன் வாழ்க்கையின் செயல் முறையும், உலக வாழ்க்கையின் செயல் முறையும், பிரிக்க முடியாமல் ஒன்றாகவே யுள்ளவை- இலட்சியத்தை நோக்கியே சென்று கொண்டிருக்க வேண்டும் என்பதுதான் அந்தச் செயல் முறை. மனிதன் விரும்பினாலும் விரும்பா விட்டாலும், அவன் வாழ்க்கையின் ஒரே உண்மையான பாதையில் செல்லும்படி உந்தப்படுகிறான். பகுத்தறிவு உணர்ச்சி அவனைத் தூண்டுகிறது; இல்லாவிட்டால், அவனுடைய தவறுகளால் ஏற்படும் துயரம் தூண்டுகிறது. அந்த உண்மைப் பாதையில் மேன்மேலும் பெருகிக் கொண்டிருக்கும் நன்மையே நிறைந்திருக்கிறது. அந்த நன்மையை எதுவும் அசைக்க முடியாது; அதற்கு ஆதியுமில்லை, அந்தமுமில்லை. ** முடிவுரை** நன்மையை நாடிச் செல்வதே மனிதனின் வாழ்க்கை; அவன் நாடுவதே அவனுக்குக் கிடைக்கிறது. உடல் சம்பந்தமான மிருக வாழ்வையே தன் வாழ்க்கையாகக் கொள்ளும்போது மனிதன் மரணத்தையும் துன்பங்களையும் தீமையாகக் காண்கிறான். அவன் விலங்குப் பான்மையில் தன்னைத் தாழ்த்திக் கொள்ளும்போதுதான் மரணமும் துன்பங்களும் அவனுக்குப் பிரமாதமாகத் தோன்றுகின்றன. கத்தரித் தோட்டத்துப் பொம்மைகளைக் கண்டு பறவைகள் பயப்படுவதுபோல், அவன் இவைகளைக் கண்டு அஞ்சுகிறான். அஞ்சி, உண்மை வாழ்க்கைக்கு ஓடி வருகிறான். உண்மையான வாழ்க்கை பகுத்தறிவின் சட்டத்திற்கு அடங்கி, அன்பின் மூலம் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது. மனிதன் தன் வாழ்க்கையின் சட்டத்தை மீறுவதே மரணமும் துன்பமும். இந்தச் சட்டப்படி வாழ்பவனுக்கு மரணமுமில்லை, துன்பமுமில்லை. உழைத்துக் களைத்தவர்களும் பாரத்தைச் சுமப்பவர்களும் என்னிடம் வாருங்கள்; நான் உங்களுக்கு ஓய்வளிக்கிறேன். எனது பாரத்தை நீங்கள் ஏற்றுக் கொண்டு என்னைப் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்; ஏனெனில், நான் அடக்கமும் தாழ்மையுங் கொண்ட இதயமுடையவன். நீங்கள் உங்கள் ஆன்மாக்களுக்குச் சாந்தி பெறுவீர்கள். எனது பாரம் எளிதானது; இலேசானது.’ (பரி. மாத்யூ.) நன்மையை நாடுதலே மனிதனின் வாழ்க்கை. அவன் நாடுவதையே அடைகிறான்: மரணமற்ற வாழ்க்கையையும், தீமையற்ற நன்மையையும் அவன் அடைகிறான். FREETAMILEBOOKS.COM மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்: மின்புத்தகங்களைப் படிப்பதற்கென்றே கையிலேயே வைத்துக் கொள்ளக்கூடிய பல கருவிகள் தற்போது சந்தையில் வந்துவிட்டன. Kindle, Nook, Android Tablets போன்றவை இவற்றில் பெரும்பங்கு வகிக்கின்றன. இத்தகைய கருவிகளின் மதிப்பு தற்போது 4000 முதல் 6000 ரூபாய் வரை குறைந்துள்ளன. எனவே பெரும்பான்மையான மக்கள் தற்போது இதனை வாங்கி வருகின்றனர். ஆங்கிலத்திலுள்ள மின்புத்தகங்கள்: ஆங்கிலத்தில் லட்சக்கணக்கான மின்புத்தகங்கள் தற்போது கிடைக்கப் பெறுகின்றன. அவை PDF, EPUB, MOBI, AZW3. போன்ற வடிவங்களில் இருப்பதால், அவற்றை மேற்கூறிய கருவிகளைக் கொண்டு நாம் படித்துவிடலாம். தமிழிலுள்ள மின்புத்தகங்கள்: தமிழில் சமீபத்திய புத்தகங்களெல்லாம் நமக்கு மின்புத்தகங்களாக கிடைக்கப்பெறுவதில்லை. ProjectMadurai.com எனும் குழு தமிழில் மின்புத்தகங்களை வெளியிடுவதற்கான ஒர் உன்னத சேவையில் ஈடுபட்டுள்ளது. இந்தக் குழு இதுவரை வழங்கியுள்ள தமிழ் மின்புத்தகங்கள் அனைத்தும் PublicDomain-ல் உள்ளன. ஆனால் இவை மிகவும் பழைய புத்தகங்கள். சமீபத்திய புத்தகங்கள் ஏதும் இங்கு கிடைக்கப்பெறுவதில்லை. சமீபத்திய புத்தகங்களை தமிழில் பெறுவது எப்படி? அமேசான் கிண்டில் கருவியில் தமிழ் ஆதரவு தந்த பிறகு, தமிழ் மின்னூல்கள் அங்கே விற்பனைக்குக் கிடைக்கின்றன. ஆனால் அவற்றை நாம் பதிவிறக்க இயலாது. வேறு யாருக்கும் பகிர இயலாது. சமீபகாலமாக பல்வேறு எழுத்தாளர்களும், பதிவர்களும், சமீபத்திய நிகழ்வுகளைப் பற்றிய விவரங்களைத் தமிழில் எழுதத் தொடங்கியுள்ளனர். அவை இலக்கியம், விளையாட்டு, கலாச்சாரம், உணவு, சினிமா, அரசியல், புகைப்படக்கலை, வணிகம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு தலைப்புகளின் கீழ் அமைகின்றன. நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகச் சேர்த்து தமிழ் மின்புத்தகங்களை உருவாக்க உள்ளோம். அவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள் Creative Commons எனும் உரிமத்தின் கீழ் வெளியிடப்படும். இவ்வாறு வெளியிடுவதன் மூலம் அந்தப் புத்தகத்தை எழுதிய மூல ஆசிரியருக்கான உரிமைகள் சட்டரீதியாகப் பாதுகாக்கப்படுகின்றன. அதே நேரத்தில் அந்த மின்புத்தகங்களை யார் வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும், இலவசமாக வழங்கலாம். எனவே தமிழ் படிக்கும் வாசகர்கள் ஆயிரக்கணக்கில் சமீபத்திய தமிழ் மின்புத்தகங்களை இலவசமாகவே பெற்றுக் கொள்ள முடியும். தமிழிலிருக்கும் எந்த வலைப்பதிவிலிருந்து வேண்டுமானாலும் பதிவுகளை எடுக்கலாமா? கூடாது. ஒவ்வொரு வலைப்பதிவும் அதற்கென்றே ஒருசில அனுமதிகளைப் பெற்றிருக்கும். ஒரு வலைப்பதிவின் ஆசிரியர் அவரது பதிப்புகளை “யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்” என்று குறிப்பிட்டிருந்தால் மட்டுமே அதனை நாம் பயன்படுத்த முடியும். அதாவது “Creative Commons” எனும் உரிமத்தின் கீழ் வரும் பதிப்புகளை மட்டுமே நாம் பயன்படுத்த முடியும். அப்படி இல்லாமல் “All Rights Reserved” எனும் உரிமத்தின் கீழ் இருக்கும் பதிப்புகளை நம்மால் பயன்படுத்த முடியாது. வேண்டுமானால் “All Rights Reserved” என்று விளங்கும் வலைப்பதிவுகளைக் கொண்டிருக்கும் ஆசிரியருக்கு அவரது பதிப்புகளை “Creative Commons” உரிமத்தின் கீழ் வெளியிடக்கோரி நாம் நமது வேண்டுகோளைத் தெரிவிக்கலாம். மேலும் அவரது படைப்புகள் அனைத்தும் அவருடைய பெயரின் கீழே தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் நாம் அளிக்க வேண்டும். பொதுவாக புதுப்புது பதிவுகளை  உருவாக்குவோருக்கு அவர்களது பதிவுகள்  நிறைய வாசகர்களைச் சென்றடைய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். நாம் அவர்களது படைப்புகளை எடுத்து இலவச மின்புத்தகங்களாக வழங்குவதற்கு  நமக்கு அவர்கள் அனுமதியளித்தால், உண்மையாகவே அவர்களது படைப்புகள் பெரும்பான்மையான மக்களைச் சென்றடையும். வாசகர்களுக்கும் நிறைய புத்தகங்கள் படிப்பதற்குக் கிடைக்கும் வாசகர்கள் ஆசிரியர்களின் வலைப்பதிவு முகவரிகளில் கூட அவர்களுடைய படைப்புகளை தேடிக் கண்டுபிடித்து படிக்கலாம். ஆனால் நாங்கள் வாசகர்களின் சிரமத்தைக் குறைக்கும் வண்ணம் ஆசிரியர்களின் சிதறிய வலைப்பதிவுகளை ஒன்றாக இணைத்து ஒரு முழு மின்புத்தகங்களாக உருவாக்கும் வேலையைச் செய்கிறோம். மேலும் அவ்வாறு உருவாக்கப்பட்ட புத்தகங்களை “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்”-க்கு ஏற்ற வண்ணம் வடிவமைக்கும் வேலையையும் செய்கிறோம். FREETAMILEBOOKS.COM இந்த வலைத்தளத்தில்தான் பின்வரும் வடிவமைப்பில் மின்புத்தகங்கள் காணப்படும். PDF for desktop, PDF for 6” devices, EPUB, AZW3, ODT இந்த வலைதளத்திலிருந்து யார் வேண்டுமானாலும் மின்புத்தகங்களை இலவசமாகப் பதிவிறக்கம்(download) செய்து கொள்ளலாம். அவ்வாறு பதிவிறக்கம்(download) செய்யப்பட்ட புத்தகங்களை யாருக்கு வேண்டுமானாலும் இலவசமாக வழங்கலாம். இதில் நீங்கள் பங்களிக்க விரும்புகிறீர்களா?  நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் தமிழில் எழுதப்பட்டிருக்கும் வலைப்பதிவுகளிலிருந்து பதிவுகளை எடுத்து, அவற்றை LibreOffice/MS Office போன்ற wordprocessor-ல் போட்டு ஓர் எளிய மின்புத்தகமாக மாற்றி எங்களுக்கு அனுப்பவும். அவ்வளவுதான்! மேலும் சில பங்களிப்புகள் பின்வருமாறு: 1. ஒருசில பதிவர்கள்/எழுத்தாளர்களுக்கு அவர்களது படைப்புகளை “Creative Commons” உரிமத்தின்கீழ் வெளியிடக்கோரி மின்னஞ்சல் அனுப்புதல் 2. தன்னார்வலர்களால் அனுப்பப்பட்ட மின்புத்தகங்களின் உரிமைகளையும் தரத்தையும் பரிசோதித்தல் 3. சோதனைகள் முடிந்து அனுமதி வழங்கப்பட்ட தரமான மின்புத்தகங்களை நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்தல் விருப்பமுள்ளவர்கள் freetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.  இந்தத் திட்டத்தின் மூலம் பணம் சம்பாதிப்பவர்கள் யார்? யாருமில்லை. இந்த வலைத்தளம் முழுக்க முழுக்க தன்னார்வலர்களால் செயல்படுகின்ற ஒரு வலைத்தளம் ஆகும். இதன் ஒரே நோக்கம் என்னவெனில் தமிழில் நிறைய மின்புத்தகங்களை உருவாக்குவதும், அவற்றை இலவசமாக பயனர்களுக்கு வழங்குவதுமே ஆகும். மேலும் இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள், ebook reader ஏற்றுக்கொள்ளும் வடிவமைப்பில் அமையும். இத்திட்டத்தால் பதிப்புகளை எழுதிக்கொடுக்கும் ஆசிரியர்/பதிவருக்கு என்ன லாபம்? ஆசிரியர்/பதிவர்கள் இத்திட்டத்தின் மூலம் எந்தவிதமான தொகையும் பெறப்போவதில்லை. ஏனெனில், அவர்கள் புதிதாக இதற்கென்று எந்தஒரு பதிவையும்  எழுதித்தரப்போவதில்லை. ஏற்கனவே அவர்கள் எழுதி வெளியிட்டிருக்கும் பதிவுகளை எடுத்துத்தான் நாம் மின்புத்தகமாக வெளியிடப்போகிறோம். அதாவது அவரவர்களின் வலைதளத்தில் இந்தப் பதிவுகள் அனைத்தும் இலவசமாகவே கிடைக்கப்பெற்றாலும், அவற்றையெல்லாம் ஒன்றாகத் தொகுத்து ebook reader போன்ற கருவிகளில் படிக்கும் விதத்தில் மாற்றித் தரும் வேலையை இந்தத் திட்டம் செய்கிறது. தற்போது மக்கள் பெரிய அளவில் tablets மற்றும் ebook readers போன்ற கருவிகளை நாடிச் செல்வதால் அவர்களை நெருங்குவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். நகல் எடுப்பதை அனுமதிக்கும் வலைதளங்கள் ஏதேனும் தமிழில் உள்ளதா? உள்ளது. பின்வரும் தமிழில் உள்ள வலைதளங்கள் நகல் எடுப்பதினை அனுமதிக்கின்றன. 1. http://www.vinavu.com 2. http://www.badriseshadri.in  3. http://maattru.com  4. http://www.kaniyam.com  5. http://blog.ravidreams.net  எவ்வாறு ஒர் எழுத்தாளரிடம் CREATIVE COMMONS உரிமத்தின் கீழ் அவரது படைப்புகளை வெளியிடுமாறு கூறுவது? இதற்கு பின்வருமாறு ஒரு மின்னஞ்சலை அனுப்ப வேண்டும். துவக்கம் உங்களது வலைத்தளம் அருமை (வலைதளத்தின் பெயர்). தற்போது படிப்பதற்கு உபயோகப்படும் கருவிகளாக Mobiles மற்றும் பல்வேறு கையிருப்புக் கருவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது. இந்நிலையில் நாங்கள் http://www.FreeTamilEbooks.com எனும் வலைதளத்தில், பல்வேறு தமிழ் மின்புத்தகங்களை வெவ்வேறு துறைகளின் கீழ் சேகரிப்பதற்கான ஒரு புதிய திட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.  இங்கு சேகரிக்கப்படும் மின்புத்தகங்கள் பல்வேறு கணிணிக் கருவிகளான Desktop,ebook readers like kindl, nook, mobiles, tablets with android, iOS போன்றவற்றில் படிக்கும் வண்ணம் அமையும். அதாவது இத்தகைய கருவிகள் support செய்யும் odt, pdf, ebub, azw போன்ற வடிவமைப்பில் புத்தகங்கள் அமையும். இதற்காக நாங்கள் உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை பெற விரும்புகிறோம். இதன் மூலம் உங்களது பதிவுகள் உலகளவில் இருக்கும் வாசகர்களின் கருவிகளை நேரடியாகச் சென்றடையும். எனவே உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை  பிரதியெடுப்பதற்கும் அவற்றை மின்புத்தகங்களாக மாற்றுவதற்கும் உங்களது அனுமதியை வேண்டுகிறோம். இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்களில் கண்டிப்பாக ஆசிரியராக உங்களின் பெயரும் மற்றும் உங்களது வலைதள முகவரியும் இடம்பெறும். மேலும் இவை “Creative Commons” உரிமத்தின் கீழ் மட்டும்தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் அளிக்கிறோம். http://creativecommons.org/licenses/  நீங்கள் எங்களை பின்வரும் முகவரிகளில் தொடர்பு கொள்ளலாம். e-mail : FREETAMILEBOOKSTEAM@GMAIL.COM  FB : https://www.facebook.com/FreeTamilEbooks  G plus: https://plus.google.com/communities/108817760492177970948    நன்றி. முடிவு மேற்கூறியவாறு ஒரு மின்னஞ்சலை உங்களுக்குத் தெரிந்த அனைத்து எழுத்தாளர்களுக்கும் அனுப்பி அவர்களிடமிருந்து அனுமதியைப் பெறுங்கள். முடிந்தால் அவர்களையும் “Creative Commons License”-ஐ அவர்களுடைய வலைதளத்தில் பயன்படுத்தச் சொல்லுங்கள். கடைசியாக அவர்கள் உங்களுக்கு அனுமதி அளித்து அனுப்பியிருக்கும் மின்னஞ்சலைFREETAMILEBOOKSTEAM@GMAIL.COM எனும் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.  ஓர் எழுத்தாளர் உங்களது உங்களது வேண்டுகோளை மறுக்கும் பட்சத்தில் என்ன செய்வது? அவர்களையும் அவர்களது படைப்புகளையும் அப்படியே விட்டுவிட வேண்டும். ஒருசிலருக்கு அவர்களுடைய சொந்த முயற்சியில் மின்புத்தகம் தயாரிக்கும் எண்ணம்கூட இருக்கும். ஆகவே அவர்களை நாம் மீண்டும் மீண்டும் தொந்தரவு செய்யக் கூடாது. அவர்களை அப்படியே விட்டுவிட்டு அடுத்தடுத்த எழுத்தாளர்களை நோக்கி நமது முயற்சியைத் தொடர வேண்டும்.   மின்புத்தகங்கள் எவ்வாறு அமைய வேண்டும்? ஒவ்வொருவரது வலைத்தளத்திலும் குறைந்தபட்சம் நூற்றுக்கணக்கில் பதிவுகள் காணப்படும். அவை வகைப்படுத்தப்பட்டோ அல்லது வகைப்படுத்தப் படாமலோ இருக்கும்.  நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகத் திரட்டி ஒரு பொதுவான தலைப்பின்கீழ் வகைப்படுத்தி மின்புத்தகங்களாகத் தயாரிக்கலாம். அவ்வாறு வகைப்படுத்தப்படும் மின்புத்தகங்களை பகுதி-I பகுதி-II என்றும் கூட தனித்தனியே பிரித்துக் கொடுக்கலாம்.  தவிர்க்க வேண்டியவைகள் யாவை? இனம், பாலியல் மற்றும் வன்முறை போன்றவற்றைத் தூண்டும் வகையான பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டும்.  எங்களைத் தொடர்பு கொள்வது எப்படி? நீங்கள் பின்வரும் முகவரிகளில் எங்களைத் தொடர்பு கொள்ளலாம்.  - EMAIL : FREETAMILEBOOKSTEAM@GMAIL.COM   - Facebook: https://www.facebook.com/FreeTamilEbooks   - Google Plus: https://plus.google.com/communities/108817760492177970948   இத்திட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் யார்? குழு – http://freetamilebooks.com/meet-the-team/    SUPPORTED BY கணியம் அறக்கட்டளை http://kaniyam.com/foundation     கணியம் அறக்கட்டளை []   தொலை நோக்கு – Vision தமிழ் மொழி மற்றும் இனக்குழுக்கள் சார்ந்த மெய்நிகர்வளங்கள், கருவிகள் மற்றும் அறிவுத்தொகுதிகள், அனைவருக்கும்  கட்டற்ற அணுக்கத்தில் கிடைக்கும் சூழல் பணி இலக்கு  – Mission அறிவியல் மற்றும் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு ஒப்ப, தமிழ் மொழியின் பயன்பாடு வளர்வதை உறுதிப்படுத்துவதும், அனைத்து அறிவுத் தொகுதிகளும், வளங்களும் கட்டற்ற அணுக்கத்தில் அனைவருக்கும் கிடைக்கச்செய்தலும்.   தற்போதைய செயல்கள் - கணியம் மின்னிதழ் – http://kaniyam.com - கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் இலவச தமிழ் மின்னூல்கள் – http://FreeTamilEbooks.com   கட்டற்ற மென்பொருட்கள் - உரை ஒலி மாற்றி –  Text to Speech - எழுத்துணரி – Optical Character Recognition - விக்கிமூலத்துக்கான எழுத்துணரி - மின்னூல்கள் கிண்டில் கருவிக்கு அனுப்புதல் – Send2Kindle - விக்கிப்பீடியாவிற்கான சிறு கருவிகள் - மின்னூல்கள் உருவாக்கும் கருவி - உரை ஒலி மாற்றி – இணைய செயலி - சங்க இலக்கியம் – ஆன்டிராய்டு செயலி - FreeTamilEbooks – ஆன்டிராய்டு செயலி - FreeTamilEbooks – ஐஒஎஸ் செயலி - WikisourceEbooksReportஇந்திய மொழிகளுக்ககான விக்கிமூலம் மின்னூல்கள் பதிவிறக்கப் பட்டியல் - FreeTamilEbooks.com – Download counter மின்னூல்கள் பதிவிறக்கப் பட்டியல்   அடுத்த திட்டங்கள்/மென்பொருட்கள்   - விக்கி மூலத்தில் உள்ள மின்னூல்களை பகுதிநேர/முழு நேரப் பணியாளர்கள் மூலம் விரைந்து பிழை திருத்துதல் - முழு நேர நிரலரை பணியமர்த்தி பல்வேறு கட்டற்ற மென்பொருட்கள் உருவாக்குதல் - தமிழ் NLP க்கான பயிற்சிப் பட்டறைகள் நடத்துதல் - கணியம் வாசகர் வட்டம் உருவாக்குதல் - கட்டற்ற மென்பொருட்கள், கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் வளங்களை உருவாக்குபவர்களைக் கண்டறிந்து ஊக்குவித்தல் - கணியம் இதழில் அதிக பங்களிப்பாளர்களை உருவாக்குதல், பயிற்சி அளித்தல் - மின்னூலாக்கத்துக்கு ஒரு இணையதள செயலி - எழுத்துணரிக்கு ஒரு இணையதள செயலி - தமிழ் ஒலியோடைகள் உருவாக்கி வெளியிடுதல் - http://OpenStreetMap.org ல் உள்ள இடம், தெரு, ஊர் பெயர்களை தமிழாக்கம் செய்தல் - தமிழ்நாடு முழுவதையும் http://OpenStreetMap.org ல் வரைதல் - குழந்தைக் கதைகளை ஒலி வடிவில் வழங்குதல் - http://Ta.wiktionary.org ஐ ஒழுங்குபடுத்தி API க்கு தோதாக மாற்றுதல் - http://Ta.wiktionary.org க்காக ஒலிப்பதிவு செய்யும் செயலி உருவாக்குதல் - தமிழ் எழுத்துப் பிழைத்திருத்தி உருவாக்குதல் - தமிழ் வேர்ச்சொல் காணும் கருவி உருவாக்குதல் - எல்லா http://FreeTamilEbooks.com மின்னூல்களையும் Google Play Books, GoodReads.com ல் ஏற்றுதல் - தமிழ் தட்டச்சு கற்க இணைய செயலி உருவாக்குதல் - தமிழ் எழுதவும் படிக்கவும் கற்ற இணைய செயலி உருவாக்குதல் ( aamozish.com/Course_preface போல)   மேற்கண்ட திட்டங்கள், மென்பொருட்களை உருவாக்கி செயல்படுத்த உங்கள் அனைவரின் ஆதரவும் தேவை. உங்களால் எவ்வாறேனும் பங்களிக்க இயலும் எனில் உங்கள் விவரங்களை  kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.   வெளிப்படைத்தன்மை கணியம் அறக்கட்டளையின் செயல்கள், திட்டங்கள், மென்பொருட்கள் யாவும் அனைவருக்கும் பொதுவானதாகவும், 100% வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கும்.இந்த இணைப்பில் செயல்களையும், இந்த இணைப்பில் மாத அறிக்கை, வரவு செலவு விவரங்களுடனும் காணலாம். கணியம் அறக்கட்டளையில் உருவாக்கப்படும் மென்பொருட்கள் யாவும் கட்டற்ற மென்பொருட்களாக மூல நிரலுடன், GNU GPL, Apache, BSD, MIT, Mozilla ஆகிய உரிமைகளில் ஒன்றாக வெளியிடப்படும். உருவாக்கப்படும் பிற வளங்கள், புகைப்படங்கள், ஒலிக்கோப்புகள், காணொளிகள், மின்னூல்கள், கட்டுரைகள் யாவும் யாவரும் பகிரும், பயன்படுத்தும் வகையில் கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் இருக்கும். நன்கொடை உங்கள் நன்கொடைகள் தமிழுக்கான கட்டற்ற வளங்களை உருவாக்கும் செயல்களை சிறந்த வகையில் விரைந்து செய்ய ஊக்குவிக்கும். பின்வரும் வங்கிக் கணக்கில் உங்கள் நன்கொடைகளை அனுப்பி, உடனே விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.  Kaniyam Foundation Account Number : 606 1010 100 502 79 Union Bank Of India West Tambaram, Chennai IFSC – UBIN0560618 Account Type : Current Account   UPI செயலிகளுக்கான QR Code []   குறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும். Note: Sometimes UPI does not work properly, in that case kindly use Account number and IFSC code for internet banking.   ------------------------------------------------------------------------ 1. பிளேட்டோ - புகழ் பெற்ற கிரேக்க தத்துவ ஞானி.↩︎