[] []   வாழ்க்கையில்(ன்) வினாக்கள் : விடைகள் !   சிவகுமாரி ஆவுடையப்பன்   sivakumaritsa29@gmail.com        மின்னூல் வெளியீடு : FreeTamilEbooks.com   உரிமை : CC-BY-SA கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.   மின்னூலாக்கம், அட்டைப்படம் - த. சீனிவாசன் , tshrinivasan@gmail.com      FreeTamilEbooks.com ன் பொறுப்புத் துறப்பு    FreeTamilEbooks.com மருத்துவ ஆலோசனைகளை வழங்குவதில்லை. எந்த ஒரு மதத்தையும் கடவுளையும் போதிப்பதில்லை. FreeTamilEbooks.com ல் மருத்துவம் தொடர்பான பல மின்னூல்கள் இருப்பினும், அவை மிகவும் திருத்தமான தகவல்கள்தான் என்பதற்கு எந்தவொரு உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. மருத்துவ சம்பந்தமான எந்தவொரு கட்டுரையிலும் கூறப்பட்டிருக்கும் அல்லது மேற்கோளாக காட்டப்பட்டிருக்கும் எந்தவொரு கூற்றும் உண்மையானது, சரியானது, திருத்தமானது, அல்லது தற்கால நடைமுறையிலுள்ளது என்பதற்கு எந்தவொரு உறுதி மொழியும் வழங்க முடியாது. இப்படியான அனேகமான கட்டுரைகள் பகுதியாகவோ அன்றேல் முழுமையாகவோ உத்தியோகபூர்வமற்றவர்களால் எழுதப்படுகிறது. மருத்துவ சம்பந்தமான ஒரு கூற்று மிகச் சரியானதாக இருந்தாலும் கூட, அந்தக் கூற்றானது, தங்களது நோய்க்கோ அல்லது அறிகுறிகளுக்கோ உபயோகிக்க முடியாததாக இருக்கலாம். FreeTamilEbooks.com ன் மின்னூல்களில் காணப்படும் மருத்துவ ரீதியான குறிப்புக்கள் பொதுவான தகவல்களாக இருக்க முடியுமேயன்றி, ஒரு உத்தியோக பூர்வமான மருத்துவருடைய ஆலோசனையை எந்த விதத்திலும் பிரதியீடு செய்ய முடியாதது ஆகும்.  FreeTamilEbooks.com மின்னூல்கள் மருத்துவர் அல்ல என்பதை கவனத்தில் கொள்ளவும்.  மருத்துவ ஆலோசனை வழங்குவதோ அல்லது மருத்துவ தொழிலில் ஈடுபடுவதற்கான முயற்சியோ, FreeTamilEbooks.com திட்டத்தின் நோக்கம் அல்ல என்பதை கவனத்தில் கொள்ளவும்.  போலவே, FreeTamilEbooks.com திட்டம் எந்த மதம் சார்ந்ததும் அல்ல. ஆன்மிக வரலாறுகளுக்கு சான்றுகள் இருப்பதில்லை. இங்கு வெளியாகும் ஆன்மிகம் சார்ந்த மின்னூல்களை, முழுமையாக நம்ப வேண்டாம். அவற்றின் உண்மைத் தன்மையை சோதித்து வெளியிடுதல் என்பது இயலாது. நூலாசிரியர்களின் உழைப்புக்கும், அவர்களது இறை நம்பிக்கைக்கும் மரியாதை செலுத்தும் விதமாகவே அவற்றை வெளியிடுகிறோம். ஆன்மிக நூல்களில் உள்ள கருத்துகளை நம்பும் முன் அவற்றை நன்கு கேள்வி கேட்டுத் தெளிய வேண்டுகிறோம். FreeTamilEbooks.com வெளியிடும் மின்னூல்களில் காணப்படும் மருத்துவம்/ஆன்மிகம் தொடர்பான எந்தவொரு தகவலையும் பாவிப்பதனாலோ அல்லது பின்பற்றுவதனாலோ ஏற்படக்கூடிய விளைவுகளுக்கு அல்லது முடிவுகளுக்கு, FreeTamilEbooks.com திட்டத்திற்கு பங்களிப்பு செய்யும் எந்தவொரு தனி நபரோ, அமைப்பு இயக்குனர்களோ, பரப்புரை செய்பவர்களோ, நன்கொடை வழங்குபவர்களோ அல்லது FreeTamilEbooks.com திட்டத்துடன் தொடர்புடைய எவருமோ எந்தவொரு பொறுப்பும் ஏற்க மாட்டார்கள்.              வாழ்க்கையில்(ன்) வினாக்கள் : விடைகள் !   இந்தப் புத்தகத்தைப் பற்றி ஒரு சிறு விளக்கம் :   வாழ்க்கை…   அன்பால் ஆனதா ? அதிகாரத்தால் ஆனதா ?   அறிவுபூர்வமானதா ? உணர்ச்சி பூர்வமானதா ?   அமைதியானதா ? ஆர்ப்பட்டமானதா ?   பண்பால் ஆனதா ? பயம் அல்லது பயமுறுத்தலால் ஆனதா ?   எளிமையானதா ? சிக்கலானதா ?   களிப்பினால் ஆனதா ? கடுமையால் ஆனதா ?   தெளிவானதா ? குழப்பமானதா ?   தெளிந்த நீரோடை போன்றதா ? குழம்பிய குட்டை போன்றதா ?   கருணை மிகுந்ததா ? கோபம் மிகுந்ததா ?   சந்தோஷம் நிறைந்ததா ? சந்தேகம் நிறைந்ததா ?       இப்படி ஆயிரெத்தெட்டுக் கேள்விகள் !   இந்த எளியவள் நினைவு தெரிந்த நாளிலிருந்து.. பதின்மூன்றரை வயது வரை பட்டாம்பூச்சியாப் பறந்து கொண்டு இருந்தவள்.    பதின்மூன்றரை வயதில் குடும்பம் என்னும் கூட்டுக்குள் கூட்டுப் புழுவாக அடைக்கப்பட்டவள்.   சமையல்.. வீட்டுப் பராமரிப்பு.. விருந்தோம்பல்.. மகப்பேறு பார்த்தல்.. மருந்து தயாரித்தல்.. இப்படி நுகத்தடி பூட்டப்பட்டவள். இடையில் பட்டப்படிப்பு.   அதன் பின் திருமணம் .   31 வயதில் ஒரு நல்ல தொண்டு நிறுவனத்துடன் இணைப்பு.   இப்படியான வாழ்க்கையில் வீட்டிலும் வெளியுலகிலும் பார்த்த.. அறிந்த.. தெரிந்து தெளிந்த அனுபவங்கள்.. அவை கற்பித்த (பெரும்பாலும்) கசப்பான ஆனால் உண்மையான பாடங்கள் தான்.. இந்தப் புத்தகத்தில் விடைகளாக விழுந்திருக்கின்றன.     பொருளாதாரம்.. படிப்பு.. முதல் பண்பு.. பழகும் விதம்.. அவை ஏற்படுத்தும் தாக்கங்கள் போன்ற எல்லா வகையான விஷயங்களும் அடித்தட்டு முதல் மேல்தட்டு வரை அநேகமாக ஒரே போல் தான் இருக்கின்றன. அதாவது நிகழ்வுகள் ஒன்றே ! அவற்றை எதிர்கொள்ளும் மனிதர்கள் தான் வேறுபடுகிறார்கள்.   இது எனது வாழ்க்கை அனுபவம் என்று அறுதியிட்டுக் கூற முடியும்.   அதனால் தான் இந்த எளியவளிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு.. ஆற்றொழுக்காய்… துளியும் தயக்கமோ.. பயமோ இன்றி விடைகளை எழுத முடிந்தது.   எழுதியிருக்கும் விடைகளை அடிப்படையாக வைத்துக் கொள்ளலாம். அவரவர் சூழலுக்கு ஏற்ப.. கூட்டிக் குறைத்துப் பயன்படுத்தி பலன் அல்லது தீர்வு காணலாம்.   இந்த எளியவளின் எழுத்துக்களை வெளியே நாலு பேர் அறிய வைத்தது freeTamilEbooks.comஎனது 3 புத்தகங்களை வெளியிட்ட அவர்களே வாழ்க்கை குறித்த கருத்துக்களின் தொகுப்பான இந்தப் புத்தகத்தையும் வெளியிட முன் வந்திருப்பதற்கு அந்தக் குழுவில் உள்ள அனைத்துப் பிள்ளைகளுக்கும்.. நண்பர்களுக்கும் இந்த எளியவளின் தலை தாழ்ந்த நன்றிகள்.    அவர்கள் அனைவரும் நல்ல உடல் மற்றும் உள நலன்களோடு தங்களின் இந்த மேலான தொண்டை தொடர்ந்து செய்ய எல்லாம் வல்ல இறைவன் அருள வேண்டி எப்போதும் பிரார்த்திக்கும் 73 வயது அன்பு அம்மா.   இதைப் படிக்கும் நண்பர்கள் தங்களின் மேலான கருத்துகளைக் கட்டாயம் பகிர வேண்டும் என்று மிகவும் பணிவுடன் விண்ணப்பிக்கிறேன்   தவறான கருத்து ஏதும் இருப்பின் தயங்காமல் தெரிவிக்கவும் வேண்டுகிறேன். அதற்கு விடை அளிக்கவும் தயாராக இருக்கிறேன்.   அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றிகளும் நல்வாழ்த்துக்களும் அன்பு நண்பர்களே ! நலமே விழைவு..நலமே விளைவு !      -- சிவகுமாரி ஆவுடையப்பன்  நூலாசிரியரின் பிற இலவச மின்னூல்கள்     https://freetamilebooks.com/authors/sivakumari-avudaiyapan/        [] [] []   பொருளடக்கம் 1 வாழ்க்கை சார்ந்த விதிகள்! 10  2 வாழ்க்கைக்கு எது முக்கியம்? 11  3 உடலைக் கட்டுக் கோப்பாக வைத்துக் கொள்ள…! 13  4 50+லும் நலமே வாழ.. 15  5 மனதை ஒருநிலைப் படுத்த என்ன வழி! 16  6 கோபத்தைக் கட்டுப்படுத்த சில வழிகள்! 19  7 எனக்கு எல்லாமே தெரியும் என்ற கர்வத்தை அழிக்க என்ன வழி? 22  8 ஒரு வீட்டில் எப்போதும் சண்டையாக இருந்தால் என்ன ஆகும் ? 25  9 என் நெருங்கிய தோழியும் (வயது 39) அவர் கணவரும்… 27  10 அறிவியல் கடவுளை ஏற்றுக் கொள்கிறதா? 28  11 எதை மிகவும் தைரியமாகச் சமாளித்தீர்கள் ? 29  12 தமிழச்சிகளுக்குப் பயம் என்பது என்றுமே கிடையாது ! 31  13 மாதம் ₹.50,000 லாபம் தரக்கூடிய தொழில்கள் இருக்கின்றனவா ? 33  14 கணவன் இல்லாமல் ஒரு பெண்ணால் தனியாக வாழ முடியுமா? 35  15 சேமிக்கும் பழக்கம் எப்போதும் வேண்டும்! 37  16 கர்மா என்று ஒன்று உள்ளதா? கடவுளும் கர்மாவும் ஒன்றா? கர்மாவிலிருந்து தப்ப முடியுமா? 41  17 எதிர்காலத்தைப் பற்றிய பயத்தை எப்படிப் போக்குவது? 46  18 ஒரு பெண் கணவர் மற்றும் பிள்ளைகளுக்காக எதையெல்லாம் விட்டுக் கொடுக்கலாம்? 48  19 IKIGAI 49  20 வேலையா? வணிகமா? எது சிறந்தது? 52  21 பிறப்பும் இறப்பும் நம் கையில் இல்லை 55  22 கொரோனா கற்றுக் கொடுத்த பாடங்கள் ! 57  23 ஆவிகளுடன் பேசுவது என்பதை நம்பலாமா? 59  24 தப்பான செயல்களை மனதால் நினைத்தாலும் பாவம் சேருமா? 61  25 கழுகிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய குணாதிசயங்கள்! 64  26 நேர மேலாண்மை! 68  27  வாழ்க்கை முழுவதும் சலிப்பு இல்லாமல் வாழ.. 70  28 வீட்டில் ஒட்டடை உருவாகாமல் எப்படித் தடுப்பது ? 71  29 பெற்றோரை வீட்டில் வைத்துப் பராமரியுங்கள் இளைஞர்களே! 72  30 வசதியாக இருந்தவர்கள் நூறிலிருந்து பூஜ்ய நிலைக்கு வந்து விட்டால் என்ன செய்ய வேண்டும்? 75  31 அண்ணன் தம்பிகள் இருந்தும் அனாதையாக இருக்கும் மனிதர்களின் வாழ்க்கை எப்படி இருக்கும் ? 77  32 ஆறாத மனத் தழும்பு ஆற... மறக்க 79  33 நல்ல நண்பன்! 80  34 தேர்வுக்கு இன்னும் இரண்டு வாரம்.. படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை 82  35 திருமணம் ஆகி ஒரு வருடம்… அதற்குள் சண்டை... தற்கொலை எண்ணம்… 84  36 காலையில் முழிப்பு வந்ததும் மறுபடியும் படுத்துத் திரும்பவும் தூங்கி விடுகிறேன் என்றான் ஒரு பிள்ளை. அவனுக்குச் சொன்ன ஒரு ஆலோசனை ! 86  37 நல்ல மனமே நல்ல வழிகாட்டி ! 87  38 மனச் சிதைவிலிருந்து (Depression) வெளியே வர… 90  39 கண்ணால் காண்பதும் பொய்! காதால் கேட்பதும் பொய் ! தீர விசாரிப்பதே மெய்! 91  கணியம் அறக்கட்டளை 96    வாழ்க்கை சார்ந்த விதிகள்!   1.உண்மை (Sathyam) 2. நேர்மை (Straightforwardness) 3. ஆய்ந்து… ஆராய்ந்து புத்திசாலித்தனம் நிறைந்த வேலை பார்க்கும் முறை (Smart Work) 4. உண்மையான அன்பு (Real Affection) 5. விட்டுக் கொடுத்துப் போதல் .(Adjustment) 6. எதையும் ஒத்துக் கொள்ளுதல். குறிப்பாக நல்லவைகளை (Acceptance) 7. அடுத்தவர் செய்யும் நல்ல காரியங்களைப் பாராட்டுதல். (Appreciation) 8. எதிலும் ஒரு ஒழுங்கு (Discipline) 9. ஒரு அக்கறையோடு செய்யும் செயல் (Devotion -அது ஆன்மீகத்திற்கு மட்டுமல்ல.. நாம் செய்யும் எந்த நல்ல வேலைக்கும் பொருந்தும்). 10. முடிவெடுக்கும் திறன் (Decision) எண்ணித் துணிக கர்மம் என்பது 11. உறுதியான போக்கு (Determination) 12. செய்யும் செயல்களில் அர்ப்பணிப்பு உணர்வு (Dedication) இயன்ற வரை பின்பற்றுவோம் !                                                     +++++++++++++++ வாழ்க்கைக்கு எது முக்கியம்?   1. ஆரோக்கியம் 2. அன்பு  3. குடும்பம் 4. அன்பான குடும்பம் அள்ளித் தரும் மகிழ்ச்சி 5. குடும்பத்தை நிம்மதியாக நடத்த ஒரு நல்ல வேலை 6. அந்த வேலை தரும் ஊதியம் : அதாவது பணம் இவை அனைத்தும் ஒரு நல்ல குடும்பத்திற்கு அவசியம்! அதனால் தான் நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் என்றார்கள் ! நல்வாழ்த்துகள் அன்பு நண்பரே !                         ******************************* உடலைக் கட்டுக் கோப்பாக வைத்துக் கொள்ள…!   1. அதிகாலை 4.00 - 4.30 துயில் நீக்கி எழுதல்.    2. அரைமணி நேரமாவது வேர்க்க வேர்க்க உடற்பயிற்சி செய்தல்.   3. கூடுமானவரை குளிர்ந்த நீரில் தலை குளிரக் குளிரக் குளித்தால் உடல் உஷ்ணம் கட்டாயம் மட்டுப்படும்.  4. நாள்தோறும் ஒரு பத்து நிமிடமாவது ஆண்டவனுடன் ஒன்றிப் போதல்.  5. முறையான‌... அளவான உணவுப் பழக்கம் மற்றும் தண்ணீர் அருந்துதல்.  நமது பாரம்பரிய உணவு முறைகளைக் கடைப்பிடித்தல்.துரித உணவுகள் மற்றும் பாட்டிலில் அடைக்கப்பட்ட பானங்களை இயன்றவரை தவிர்த்தல். 6. மனதை உற்சாகப்படுத்தும் பாடல்கள் கேட்டல். இல்லை என்றால் தோட்ட வேலை போன்ற உங்களுக்கு உற்சாகம் தரும் வேலை ஏதாவது ஒன்றைச் செய்தல்.‌மனம் உற்சாகமாக இருந்தால் உடலும் ஊக்கமாக வேலை செய்யும்.   7. இரவு ஒரு குறிப்பிட்ட நேரத்தில் உறங்குதல்.  8. இவற்றிற்கு எதிரான விஷயங்களைக் கைவிடுதல் ஒரு மனிதன் ஆரோக்கியமாக வாழ உதவும் என்பது இந்த எளியவளின் கருத்து.  நலமே வாழ நல்வாழ்த்துகள் அன்பு நண்பரே!                            ****************************************** 50+லும் நலமே வாழ..   1.சூரியன் உதிக்கும் முன் துயில் எழுதல். 2.ஓரளவாவது உடற் பயிற்சி. 3.உடலுழைப்பு. உடற் பயிற்சி வேறு: உடல் உழைப்பு வேறு . உடல் உழைப்பு இல்லாதவர்கள் தான் ஏதாவதொரு உடற்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். உடலால் வேர்க்க.. வேர்க்க உழைப்பவர்களுக்கு‌ அதுவே உடற்பயிற்சியாகவும் ஆகிப் போகிறது. 4.முறையான உணவுப் பழக்கம். 5.முடிந்த அளவு ஏதாவது உதவி வேண்டி நம்மை அணுகும் மனிதர்களுக்கு உதவுதல். சில நேரங்களில் நம்மை அணுகாதவர்களுக்கும் மனதார உதவுதல். 6.நல்ல எண்ணங்கள். நல்ல எண்ணங்கள் தான் நல்ல வாழ்க்கைக்கு அடிப்படை. அதனால் தான் " எண்ணம் போல் வாழ்வு " என்கிறார்கள். 7.எல்லாவற்றிற்கும் மேல் அவனன்றி ஓரணுவும் அசையாது என்பதை மனதில் ஆழமாகப் பதிய வைத்துக் கொள்ளுதல். நலமே வாழ நல்வாழ்த்துக்கள் அன்பு நண்பரே!                            ************************************ மனதை ஒருநிலைப் படுத்த என்ன வழி!        காலங்காலமாகக் கேள்வியாகவே நிற்கும் ஒரு கேள்வி நண்பரே இது! முடிந்தவரை இந்த எளியவள் விடையளிக்க முயற்சிக்கிறேன்.  முற்றும் துறந்த ஞானிகள் கூட மனதை ஒரு நிலைப்படுத்தக் கடும் தவங்கள் இருந்திருக்கின்றனர் என்று நம் பெரியவர்கள் நமக்குச் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள்.   உங்கள் கேள்விகளுக்கு இரண்டு எடுத்துக் காட்டுகள் மூலம் விடை பகர்கிறேன்.   முதலாவது வணக்கத்துக்குரிய அபிராமி பட்டர் அவர்கள். திருக்கடையூர் கோவிலில் அம்பிகையின் தரிசனத்தில் மெய்மறந்து அமர்ந்து இருந்தவரிடம் அங்கு வந்த அரசன் "இன்று என்ன திதி என்று கேட்க.. அந்த நேரத்தில் அம்பிகையின் தாடங்க தரிசனம் செய்து கொண்டு இருந்த பட்டர் அவர்கள் அந்தத் தாடங்கத்தின் ஒளி வெள்ளத்தில் மூழ்கி இருந்ததனால்.." இன்று பௌர்ணமி " என்கிறார்.  அந்த ஞானியின் மனது அந்த அளவு அம்பிகையுடன் ஒரு நிலைப்பட்டு விட்டது. அடுத்து " ஆதி பராசக்தி " என்ற ஒரு பழைய திரைப்படம்.   அதில் ஒரு முனிவராக நடிக்கும் திரு. நம்பியார் அவர்கள்.. ஒரு கட்டத்தில் தண்ணீரில் நின்று கொண்டு ஜபம் செய்து கொண்டு இருப்பார்.  மீனவனாக அந்தப் படத்தில் வரும் திரு. சுருளி ராஜன் அவர்கள் ஒரு முனிவராக நடிக்கும் நம்பியார் அவர்களிடம் “ரொம்ப நேரமாத் தண்ணிக்குள்ள நின்னு என்னா சாமி மொணமொணான்னு ஏதோ சொல்லிட்ருக்கே." என்று வெள்ளந்தியாகக் கேட்பார். அதற்கு நம்பியார் " ஒனக்கு அதெல்லாம் புரியாது.. நான் அம்பாளைத் தரிசிக்கச் தவம் செய்கிறேன்.." என்று மிகவும் திமிராகப் பதில் சொல்வார். " அம்பாள்னா‌ யாரு சாமி...? ". என்று சுருளி கேட்பார். " அட மூடனே ! அவதாண்டா நம்மப் படச்சவ.. நமக்குச் சோறு போடறவ..." என்று பதில் சொல்வார். " அட... நம்ம காளியாத்தாவச் சொல்றியா சாமி? அவள நாமப் பாக்க முடியுமா சாமி? " என்று கேட்பார். " மனசு ஒன்றி வேண்டினாப் பாக்க முடியும் " என்பார் நம்பியார். உடனே சுருளி " மாரியாத்தா.. காளியாத்தா.. மாரியாத்தா.. காளியாத்தா... " என்று மனதார ஜபிக்கத் தொடங்க அம்பிகை அவருக்குக் காட்சி கொடுப்பாள். " இதோ பார் சாமி... அம்மா...! " என்று மகிழ்ச்சியில் துள்ளிக் குதிப்பார் சுருளி. ஆனால் கர்வத்துடன் ஜபம் செய்து கொண்டு இருந்த நம்பியாருக்கு அம்பாளின் தரிசனம் கிடைக்காது. ஆக மனதை ஒரு நிலைப்படுத்தவும் சுயநலமில்லா.. தான் என்ற அகங்காரம் அற்ற ஒரு மனது... நல்ல எண்ணம் வேண்டும் போல் தெரிகிறது.   " அனைத்தும் நீதான் " என்று வணக்கத்துக்குரிய மணிவாசகப் பெருமான் சொன்னது போல்... " வேண்டும் பரிசு ஒன்று உண்டென்னில் அதுவும் உந்தன் விருப்பன்றே " என்று பரிபூரண சரணாகதி அடைந்து விட வேண்டும். வணக்கத்துக்குரிய இராமகிருஷ்ண பரமஹம்சர் காளியுடன் உரையாடினார் என்பதும்.. அருணகிரிநாதருக்கு "முத்தைத்தரு பத்தித் திருநகை " என்று வயலூர் முருகன் அடியெடுத்துக் கொடுத்ததும் வரலாறு நண்பரே !    அந்த அளவுக்கு ஒரேயொரு சிந்தனை மட்டுமே அவர்களுக்கு இருந்தது. இறை வழிபாடு என்று இல்லை. எந்த வேலையானாலும் நம் கவனத்தை முற்ற முழுக்க அதில் செலுத்தினால் அது தான் மனதை ஒருமுகப்படுத்துதல் நண்பரே ! இதைத் தான் total concentration என்று ஆங்கிலத்தில் சொல்கிறார்கள்.‌ வேறு சிந்தனை எதுவுமற்ற நிலை!   தன் ஆராய்ச்சிக்கு விடை கிடைத்ததும் ஆர்க்கிமிடீஸ் குளித்துக் கொண்டிருந்தவர் அப்படியே ஆடையின்றி ஓடினார் என்று படித்திருக்கிறோம் அல்லவா நண்பரே ?   இன்னும் எளிதாகச் சொல்வதானால் நாம் வேலை பார்க்கும் கம்பெனியில் முக்கியமான தணிக்கை நடக்கப் போகிறது என்று வைத்துக் கொள்வோம். அந்தத் தேதி தீர்மானம் ஆன நாள் முதல் நம் எண்ணத்தில் அதுதானே முக்கியமாக இடம் பிடித்துக் கொள்கிறது? நாம் என்னவெல்லாமோ அன்றாட வேலைகள் செய்தாலும் " அந்தத் தணிக்கை" தானே உண்ணும் போதும் உறங்கும் போதும் எண்ணத்தில் அலைமோதிக் கொண்டு இருக்கிறது?   அதேபோல் வீட்டில் யாருக்கேனும் மிகவும் உடல் நலம் சரியில்லை என்றால்.. எத்தனை வேலைகள் செய்து கொண்டு இருந்தாலும் நம் மனது அவர்களைப் பற்றியே நினைத்துக் கொண்டு இருக்கிறது பாருங்கள்..   ஆக... ஒன்றையே நினைத்து.. அதிலேயே மூழ்கிப் போவது தான் மனதை ஒரு நிலைப் படுத்த வழி என்று இந்த எளியவளுக்குத் தோன்றுகிறது.   " நம் ஆத்மாவும் பரமாத்மாவும் இரண்டல்ல... ஒன்றே! " என்ற அத்வைத நிலையே மனதை ஒருநிலைப் படுத்த வழி! பார்ப்போம்... இதைப் படிக்கும் அன்பர்கள் வேறு வழி என்ன சொல்கிறார்கள் என்று… நலமே வாழ நல்வாழ்த்துக்கள் அன்பு நண்பரே!                                 ******************************** கோபத்தைக் கட்டுப்படுத்த சில வழிகள்!   முக்கால்வாசி நேரங்களில் கோபத்தின் அடிப்படை இயலாமையாக இருக்கிறது அன்பு நண்பரே! சில நேரங்களில் சரியான காரணத்துடனும் கோபம் வருகிறது. எதுவானாலும் "எடுத்தேன்..‌கவிழ்த்தேன் என்று செயல்படுவது எந்த ஒரு நல்ல பலனையும் தராது… தரவில்லை என்பது எங்கள் வாழ்க்கை அனுபவம். கோபத்தைக் பொக்கிஷம் என்கிறான் கண்ண பெருமான். " சினம் எனும் சேர்ந்தாரைக் கொல்லி " என்கிறார் வள்ளுவப் பெருந்தகை. ஆகவே வாழ்க்கையில் பல சந்தர்ப்பங்களில் கோபத்தைக் கட்டுப்படுத்தத் தான்  வேண்டியுள்ளது.   இந்த எளியவள் கடைப்பிடித்த சில வழிகள்: 1.அந்த இடத்தை விட்டு ஏதோவொரு காரணத்தைக் காட்டி உடனே நகர்ந்து விடுவது.  நம் கோபத்திற்குக் காரணமானவர்களை அடுத்த முறை… அதற்கு அடுத்த முறை பார்க்கும் போது எதுவுமே நடக்காதது போல் சாதாரணமாகப் பேசுவது.. பழகுவது. அவர்களுக்கு நம்மைவிட நெருங்கிய நட்பு அல்லது உறவு இருந்தால் அவர்கள் மூலம் நமது கோபத்திற்கான காரணத்தைத் தக்க சமயத்தில் எடுத்துச் சொல்ல வைப்பது. அதன் பின் அவர்களாக இது விஷயமாக நம்மைத் தேடி வரும் போது அவர்களின் தவறை அல்லது தப்பை அவர்களுக்குப் பொறுமையாகப் பேசி புரிய வைத்து மேற்கொண்டு ஆக வேண்டியதைப் பார்க்கச் சொல்வது. 2.நிதானமாக ஒரு டம்ளர்தண்ணீர் குடிப்பது.   3.காற்றாடக் கொஞ்ச நேரம் திறந்த வெளியில் நடப்பது.  4.வேறு முக்கியமில்லாத வேலைகளில் கவனம் செலுத்துவது.    இந்த அணுகுமுறைகள் தான் இந்த எளியவள் தொண்டு செய்த நிறுவனத்தில் கிட்டதட்ட 20க்கும் மேற்பட்ட எங்கள் ஊழியர்களைப் (staffs - அவர்களும் ஏதோவொரு வகையில் பாதிக்கப்பட்டே எங்கள் நிறுவனத்திற்கு வந்து சேர்ந்திருப்பார்கள்) பொறுமையுடன் கையாள வைத்தது.   இந்த அணுகுமுறை தான்.. இந்த எளியவள் அந்த நிறுவனத்தை விட்டு விலகிப் 10 ஆண்டுகள் ஆன நிலையிலும்.. இன்றும் இந்த எளியவளைத் தேடி அங்கு வேலை செய்த பிள்ளைகளை வர வைத்துள்ளது நண்பரே! மூத்த மருமகளான இந்த எளியவள் குடும்பத்திலும் இதே அணுகுமுறைகளைத் தான் பின்பற்றினேன்.   கல்கண்டு பத்திரிகை ஆசிரியர் திரு. தமிழ்வாணன் அவர்கள் கோபம் வரும் போது நம் முகத்தைக் கண்ணாடியில் பார்க்கச் சொல்வார். " செல்லாக் கோபம் பொறுமைக்கு அழகு " என்பார் என் அம்மா. அதாவது எங்கே நம் கோபம் செயல்படவில்லையோ அங்கே பொறுமையாகத் தான் போக முடியும்.. வேண்டும்.   கோபம்.. பாபம்.. சண்டாளம் என்பார்கள். கோபம் நம்மைத் தூண்டிச் சண்டாளத்தனமான (கொடுமையான) பாவத்தைச் செய்ய வைக்கும் என்பது இதன் பொருள். ஆகவே நம் கோபத்தைப் பொக்கிஷம் போல் காப்போம்.. அந்தப் பொக்கிஷம் ஒரு கட்டத்தில் அடுத்தவர்க்கு நிச்சயம் நம்மைப் புரிய வைக்கும் அன்பு நண்பரே!                         ************************************* எனக்கு எல்லாமே தெரியும் என்ற கர்வத்தை அழிக்க என்ன வழி?   " நான் "ஐ முதலில் விட வேண்டும் அன்பு நண்பரே! கற்றது கை மண் அளவு என்பதை மனதார ஒத்துக் கொள்ள வேண்டும். கற்றது கைம் மண்ணளவு கல்லாதது உலகளவென்(று) உற்ற கலை மடந்தை ஓதுகிறாள் – மெத்த வெறும் பந்தயம் கூற வேண்டாம் புலவீர் எறும்புந்தன் கையாலெண் சாண்! என்கிறாள் நம் ஔவைப் பாட்டி. கலை மடந்தை - கலைமகள். அவளே இன்னும் படித்துக் கொண்டிருக்கும் போது நாமெல்லாம் எம்மாத்திரம் நண்பரே ?   “செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்து ஆற்றின் அடங்கப் பெறின் “‌ என்கிறார் வள்ளுவப் பெருந்தகை.   ஒரு சூஃபி ஞானியிடம் ஒரு இளைஞன் வந்து " நான் உங்களிடம் பாடம் கற்றுக் கொள்ள வந்திருக்கிறேன்.. என்னையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.." என்று கேட்டானாம்.    அந்த ஞானி "முதலில் கொஞ்சம் தேநீர் சாப்பிடலாம் " என்று சொல்லித் தன் மாணவன் ஒருவனிடம் இருவருக்கும் தேநீர் கொண்டு வரச் சொன்னாராம். தேநீர் வந்ததும் ஒரு கோப்பையில் முதலில் ஊற்றி விட்டு.. இரண்டாவது கோப்பையை அவன் பக்கம் நகர்த்தி அதில் தேநீரை ஊற்றத் தொடங்கினாராம்.   அந்தக் கோப்பை நிறைந்து தேநீர் வெளியே வழியத் தொடங்கியும் நிறுத்தாமல் ஊற்றிக் கொண்டே இருந்தாராம்.   அவர் கவனிக்காமல் ஊற்றுகிறார் என்று நினைத்த அவரிடம் மாணவனாகச் சேர வந்த இளைஞன் சில நிமிடங்கள் பொறுத்து விட்டுப் பதறிப் போய் சொன்னான் – " குருவே! தேநீர் வெளியே வழிந்தோடிக் கொண்டிருக்கிறது.. நீங்கள் ஊற்றிக் கொண்டே இருக்கிறீர்கள்.."   அந்த ஞானி ஒரு மென் சிரிப்புடன் அவனிடம் சொன்னாராம் . " இந்தக் கோப்பை போல் தான் நீ இருக்கிறாய்.. எனக்கு எல்லாம் தெரியும் என்ற எண்ணங்கள் உன் மனதில் நிறைந்து இருக்கின்றன. அப்படி இருக்கும் போது நான் ஏதாவது கற்றுக் கொடுத்தால் அது இப்படித்தான் கீழே வழிந்தோடி வீணாகப் போகும்...". தன் தப்பை உணர்ந்த அந்த இளைஞன் அவர் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டானாம்.   கல்வி கரையில: கற்பவர் நாள் சில - இதையும் மனதில் ஆழமாகப் பதித்துக் கொள்ள வேண்டும். இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்பது போல.. கொஞ்சம் தெரிந்த விஷயத்தையும் ஒன்றுமே நமக்கு அதைப்பற்றித் தெரியாது என்ற எண்ணத்துடன் பார்க்க.. படிக்க.. கேட்கப் பழக வேண்டும் அன்பு நண்பரே!   எங்கள் நெருங்கிய நண்பர் எப்போதும் சொல்வார்: ஒவ்வொரு நாளும் ஒவ்வொருத்தரிடம் இருந்தும் ஒவ்வொன்று கற்றுக் கொள்கிறோம்!   உண்மை தானே அன்பு நண்பரே?                               **************************************** ஒரு வீட்டில் எப்போதும் சண்டையாக இருந்தால் என்ன ஆகும் ?   வீட்டில் உள்ள அனைவரின் நிம்மதி போகும். இதற்கு அடிப்படை என்னவென்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா நண்பரே? அந்த வீட்டில் எதிர்மறை எண்ணங்கள் நிறைந்து இருக்கின்றன என்று பொருள்.   சீனத் தத்துவமான தாவோ (Dao) சொல்வதாக டாக்டர் திரு. உதயமூர்த்தி அவர்கள் சொல்வார்கள் : தேவையில்லை என்று நீங்கள் நினைக்கும் பொருட்களை உடனடியாகக் கழித்துத் தூக்கி எறிந்து விட வேண்டும். வாசல் மிதியடிகள் மேல் செருப்புகளைக் கழட்டிப் போடக் கூடாது. இப்படி இன்னும் சில விஷயங்கள் சொல்லி இருப்பார். நினைவில் இல்லை.. மன்னிக்கவும். வணக்கத்துக்குரிய காஞ்சிப் பெரியவர் சொன்னதாகச் சமீபத்தில் படித்தேன். அன்பர் ஒருவர் மஹா பெரியவரிடம் " எல்லா வசதிகளும் இருந்தும்.. வீட்டில் நிம்மதியே இல்லை..." என்று மனம் கலங்கி முறையிட்ட போது ஸ்வாமிகள் சொன்னார்களாம். " வீட்டைச் சுத்தமாக வச்சுக்கோ..‌‌கண்டதைக் கண்டபடிப் போடாதே.. "   முறையிட்டவருக்குத் தூக்கிவாரிப் போட்டதாம். அவர் வீட்டில் அப்படித்தான் கண்டபடி இருக்குமாம். களைந்த துணிகள் ஒருபுறம்.. துவைத்த துணிகள் மடிக்கப் படாமல் ஒருபக்கம்.. சமையல் மேடை பிசுபிசுவென சரியாகத் துடைக்கப்படாமல் ... துலக்காத பாத்திரங்கள் காய்ந்து போய்…   எங்கள் வீடுகளில் இரவு படுக்கப் போகும் முன் சமைக்கும் இடத்தைச் (அப்போதெல்லாம்… விறகு அடுப்பு..கரியடுப்பு தான்) சுத்தப்படுத்தி.. அடுப்பைச் சாணி கொண்டு மெழுகி.. கோலம் போட்டுத் தொட்டுக் கும்பிட்டு நன்றி சொல்லி விட்டுத்தான் வர வேண்டும்.   அதேபோல் காலையில் குளித்து விட்டுத் தான் சமைக்கப் போக வேண்டும். அப்போதும் அடுப்பைத் தொட்டுக் கும்பிட்டு விட்டுத்தான் அடுப்பைப் பற்ற வைக்க வேண்டும்!   " அடுப்பு அக்னி பகவான் " என்பது எங்களுக்கு அடிப்படைப் பாடம் நண்பர்களே ! இன்று gas stove ல் சமைக்கிறேன். இன்றும் இரவு அடுப்பைத் துடைத்து ஒரு கும்பிடு போட்டு நன்றி சொல்லி விட்டுத்தான் படுக்கப் போகிறேன்.   அதேபோல் வெளியே எங்கும் போய்விட்டு வந்தால்.. வந்த உடனே கைகால்களைக் கழுவச் சொல்வார்கள்… சிறு பிள்ளைகளாக இருந்தால் கூட அதுதான் விதி (rule) அதேபோல் இந்த எளியவளைச் செதுக்கிய இன்றும் என் வணக்கத்துக்குரிய திருமதி. ஷாபுன் என்ற இஸ்லாமிய அன்னை சொன்னது காதில் ஒலித்துக் கொண்டு தான் இருக்கிறது: " வெளியே போய்விட்டு வந்தால் எதற்குக் கைகால்களைக் கழுவச் சொல்கிறோம்? கண்டதையும் மிதித்து விட்டு வந்திருப்போம்… அதில் உள்ள தீமைகள் எதுவும் நம்மைப் பாதிக்காமல் இருக்கத் தான்.. அதோடு வெளியே போய்விட்டு வந்தவர்கள் வீட்டில் யாரும் சாப்பிட்டுக்கொண்டு இருந்தால் அவர்கள் அருகில் போகக் கூடாது என்பதும் அதற்காகத்தான் " என்பார்கள்.   அன்பு நண்பரே ! ஆண்டுக்கொரு முறை போகிப் பண்டிகையன்று தேவையற்ற பொருட்களை எரிப்பது மற்றும் இதே தத்துவத்தின் அடிப்படையில் தான்!   உடல் சுத்தமாக இல்லை என்றால் அரிப்பு எடுக்கும். வீடு சுத்தமாக இல்லை என்றால் எதிர்மறை எண்ணங்கள் பெருகும். அதன் காரணமாகச் சண்டை சச்சரவுகள் பெருகும். " சுத்தம் சோறு போடும் " என்று இப்போது சொன்னால் "அப்ப எது குழம்பு ஊற்றும்?" என்று இக்காலத்து அறியாப் பிள்ளைகள் கிண்டல் செய்கிறார்கள்.   நாள்தோறும் காலை மாலை விளக்கேற்றி வழிபாடு செய்ய வேண்டும் என்பதே வீட்டில் நிம்மதியும் மகிழ்ச்சியும் உற்சாகமும் ததும்ப வேண்டும் என்பதற்காகத்தான்!   ஆனால் இந்த அவசர யுகத்தில் காலை வேளைகளில் விளக்கேற்றுவோரும் கூட அதை ஒரு வேலையாகத் தான் செய்கிறார்கள்.. ஏனென்றால் வேலைக்குப் போக வேண்டும்... பஸ் அல்லது ரயிலைப் பிடிக்க வேண்டும் …  இந்த எளியவள் குறை சொல்வதாக நினைத்தாலும் பரவாயில்லை.. நம் வீட்டு முன்னோர்கள் வைத்தது போல்..வீட்டை மங்களகரமாக வைத்துக் கொள்ளப் பழகுங்கள் . எல்லாம் நல்லபடியாக நடக்கத் தொடங்கும்! நம் வீட்டின் அமைதி… மகிழ்ச்சி எல்லாம் நம் கைகளில் தான் அன்பு நண்பர்களே!                               *************************************     என் நெருங்கிய தோழியும் (வயது 39) அவர் கணவரும்…   என் நெருங்கிய தோழியும் (வயது 39) அவரது கணவரும் 10 வருடங்களாக தாம்பத்திய வாழ்க்கை வாழ்வதில்லை. வாய் வார்த்தை கூடப் பேசுவதில்லை. ஒரு ஆண்  அவளை விரும்புவதாக 3 வருடமாகச் சொல்கிறார். அவரை ஏற்கலாமா ? அது சரியா ? தெளிவான பதில் தேவை .                                            வாய் வார்த்தை கூடப் பேசாமல் இருந்தால் அதன் பேர் வாழ்க்கையா நண்பரே? தாம்பத்ய வாழ்க்கையும் இல்லை. இரண்டு வீட்டுப் பெரியவர்களுக்கு இது குறித்துத் தெரியுமா? அவர்கள் என்ன சொல்கிறார்கள்? உங்கள் தோழி வேலைக்குப் போகிறாரா? அவருடைய பொருளாதார நிலை என்ன? உங்கள் தோழியை விரும்புவதாகக் கூறும் நபர் திருமணம் ஆனவரா? அவருக்கு உங்கள் தோழியின் இப்போதைய பிரச்னைகள் முழுவதும் தெரியுமா? இத்தனைக்கும் விவரங்கள் தெரிந்தால் தான் ஏதாவது வழி காட்டுதல்கள் சொல்ல முடியும். இது வாழ்க்கைப் பிரச்சினை.. பொத்தாம் பொதுவாக ஏதும் சொல்ல இந்த அம்மா விரும்பவில்லை.   வாழ்க்கையை நல்ல முறையில் வாழக் கற்றுக் கொள்ள வேண்டும் அன்புப் பிள்ளைகளா!                        **************************************** அறிவியல் கடவுளை ஏற்றுக் கொள்கிறதா?   அந்த அறிவியலைப் படைத்ததும் கடவுள் தான் அன்பு நண்பரே! அறிவியல் தன்னை ஏற்றுக் கொண்டதா இல்லையா என்றெல்லாம் கடவுள் எண்ணுவதில்லை. அண்ட சராசரங்கள் ஒரு ஒழுங்கில் இயங்குவதற்குக் காரணமே அந்தக் கடவுள் தான்! எல்லாவற்றையும் படைத்த அவனே எல்லாவற்றினுள்ளும் இருக்கிறான். உணர்ந்தவர்கள் ஞானிகள்! உணராதவர்கள் நம்மைப் போல் கேள்விகள் கேட்டுக் கொண்டிருக்கிறோம். ஒரு கணம் யோசித்துப் பாருங்கள். நம்மால் எதற்காவது உயிர் கொடுக்க முடியுமா? எந்த விண் மீனையாவது திசை மாற்ற முடியுமா? இவற்றையெல்லாம் எது செய்கிறது? அல்லது யார் செய்கிறார்கள்? அது அல்லது அவர் - அங்கே இருக்கிறான் கடவுள்! அனைத்தின் உள்ளும் இருப்பவன்: அதேநேரத்தில் அனைத்தையும் கடந்து நிற்பவன்! அறிவியலுக்குப் புலப்படாத எத்தனை எத்தனையோ கோடிக்கணக்கான விஷயங்கள் இன்னும் இயற்கையில் உள்ளன. அந்த இயற்கை தான் இறைவன் அன்பு நண்பரே!                      ************************************** எதை மிகவும் தைரியமாகச் சமாளித்தீர்கள் ?      ஏற்கனவே இதற்கு இந்த எளியவள் வாழ்க்கையில் செய்த மிகத் தைரியமான செயல் எது? என்ற கேள்விக்கு விடை அளித்துள்ளேன். அதைச் சில திருத்தங்களுடன் இங்கே மீள்பதிவு செய்கிறேன் அம்மா!  15.08.1974 — திருமணமாகி பத்து மாதம். ஏழரை மாதத்தில் குறைப் பிரசவத்தில் பிறந்த குழந்தையைப் பறிகொடுத்து ஒன்றரை மாதம்.    அம்மா நோயில் தத்தளிக்கிறார்.   கணவர் எப்படிப்பட்டவர்? ஓரளவு கூடத் தெரியாது. நாம் அம்மாவுக்கு மருத்துவச் செலவுக்காகக் கேட்டால் ஏதாவது தருவாரா? தெரியாது! கையில் பணம் பத்து பைசா கிடையாது. "அமாவாசை நாலைந்து நாளில் வருகிறது.. முடிந்து விடும்.. வெட்டியாக ஆஸ்பத்திரிக்குப் போக வேண்டாம் “- எங்கள் வீட்டில் அனைத்து விதமான சலுகைகள்.. உபசரிப்புகள் என்று எல்லாவற்றையும் அனுபவித்த என் அக்கா கணவர் கட்சி கட்டுகிறார்.   ஓய்வு பெற்ற பின் என் திருமணத்தை ஒரு வழியாக நடத்தி விட்டு.. என் அக்கா (என் அக்கா கணவருக்கு பெற்றோர்... உடன் பிறந்தோர் யாரும் கிடையாது. எதுவானாலும் நாங்கள் தான் பார்க்க வேண்டும்) கணவரால் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் பணப் பிரச்னைகளால் திணறிக் கொண்டிருக்கும் என் அப்பா எதுவும் பேச முடியாமல் தத்தளிக்கிறார்... பொருள் வசதி குறைந்த வேதனை அவர் முகத்தில்...   நண்பர் ஒருவரின் துணையுடன் அம்மாவைக் கொண்டு போய் ஒரு பிரபல மருத்துவமனையில் சேர்த்து விட்டேன். 17 நாட்கள் வைத்திருந்து வீட்டுக்குக் கூட்டி வந்தேன்.   அதே வருடம் அக்டோபர் 21ல் அம்மா இறைவனடி சேர்ந்த போது நிம்மதிப் பெருமூச்சு விட்டேன். எப்படிச் சமாளித்தேன்...??? இன்றுவரை இதோ இதை எழுதிக் கொண்டு இருக்கும் இந்த நொடியில் கூட அந்தக் கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை. அன்றைய காலகட்டத்தில் யார் கேள்விக்கும் பதில் சொல்லவில்லை. யாரிடமும் குரலை உயர்த்திப் பேசவில்லை...   அந்தத் தைரியம் எப்படி வந்தது... யார் கொடுத்தது??? தெரியவில்லை… ஆனால் தைரியத்துடன் அந்த நாட்களைக் கடந்து வந்திருக்கிறேன் என்பது மட்டும் ஆண்டவன் அறிய உண்மை! எந்த இக்கட்டான சூழ்நிலையிலும் மனத் துணிவை கைவிடாமல் பார்த்துக் கொண்டது இறைவன் கருணை என்று தான் ஒவ்வொரு பிரச்னையிலிருந்தும் மீண்டு வரும் போது நினைத்துக் கொள்வது வழக்கம் அன்பு மகளே! " நெஞ்சில் துணிவிருந்தால் நிலவுக்கும் போய் வரலாம் “! நேர்மையான துணிவு நிச்சயம் நினைத்ததை நடத்திக் கொடுக்கும் என்பது இந்த எளியவளின் வாழ்க்கை கற்றுக் கொடுத்த அனுபவப் பாடம் அன்பு மகளே! நலமே வாழ நல்வாழ்த்துக்கள் அன்பு மகளே!                      **********************************************              தமிழச்சிகளுக்குப் பயம் என்பது என்றுமே கிடையாது  !   புலியை முறத்தால் அடித்து விரட்டிய பெண் குறித்துப் பாடல் உண்டு. “இருந்து முகம் திருத்தி ஈரொடு பேன் வாங்கி விருந்து வந்தது என்று விளம்ப வருந்தி மிக ஆடினாள் பாடினாள் ஆடிப் பழ முறத்தால் சாடினாள் ஓடோடத் தான்” இது ஒரு பழம் பாடல். தனது 10 வயது மகனைப் பூவிட்டுப் பொட்டிட்டு மங்கல ஆரத்தி எடுத்துப் போருக்கு வழியனுப்பிய தாய் பற்றிய பாடலும் உண்டு.  தன் கணவன் (அரசன்) வஞ்சகமாகக் கொல்லப்பட்ட பின் துவளாது போருக்குப் போன அரசியும் ஒரு பெண்ணே ! உண்மையான தமிழ்ப் பெண்கள் ஓடி ஒளிய மாட்டார்கள்.   மருத்துவச் செம்மல்களாக எத்தனை எத்தனையோ பெண்மணிகள். தேவதாசி முறை ஒழியக் காரணமாக இருந்த வணக்கத்துக்குரிய டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி அவர்கள் முதல்.. சமீப காலம்வரை வாழ்ந்த அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் வணக்கத்துக்குரிய டாக்டர். சாந்தா அவர்கள் வரை.   LAFTI என்ற அமைப்பை உருவாக்கி விவசாயக் கூலித் தொழிலாளர்களுக்கு நிலம் கிடைக்கச் செய்த வணக்கத்துக்குரிய திருமதி. கிருஷ்ணம்மாள் ஜெகன்னாதன் அவர்கள்...   நானும் என் கணவரும் 20 ஆண்டுகளுக்கு மேல் திக்கற்ற பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கான ஒரு நல்ல தொண்டு நிறுவனத்தில் தொண்டு செய்தோம். அதை 1954ல்‌ தொடங்கியவரும் ஒரு மிகச் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணி தான்... எங்கள் நிறுவனம் தொடங்கிய 2 ஆண்டுகளுக்குளேயே தன்னை அதனுடன் இணைத்து விட்டுத் தன் வாழ்க்கையையே அதற்க்கு அர்ப்பணித்த இன்னொரு பெண்மணியும் மிகச் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணியே!      வஞ்சகம் நிறைந்த அரசியலில் தன் கண் அசைவில் தனது கட்சித் தலைவர்கள் அத்தனை பேரையும் அடிபணிய வைத்த முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா பற்றி இந்த எளியவள் கூறியா நீங்கள் அறிந்து கொள்ளப் போகிறீர்கள்?   இவர்கள் அனைவரின் வாழ்வுமே கடுமையான போராட்டங்கள்... விமர்சனங்கள் ஆகியவற்றைக் கடந்து தான் சாதனைகளைப் புரிந்திருக்கின்றன நண்பரே ! அதனால் தான் பெண்ணைச் சக்தியின் உருவமாகப் போற்றினர் நம் முன்னோர்!   இப்படி எழுதத் தொடங்கினால் ஒரு பெரிய புத்தகமே போடலாம் அன்பு நண்பரே!                          ********************************* மாதம் ₹.50,000 லாபம் தரக்கூடிய தொழில்கள் இருக்கின்றனவா ?             நிறைய இருக்கின்றன! ஆனால் கடும் உழைப்பை முதலீடு செய்ய வேண்டும். அதற்கு நீங்கள் தயாரா அன்பு நண்பரே?  நாலைந்து கை தேர்ந்த ஆட்களை வேலைக்கு வைத்துக் கொண்டு முறுக்கு சீடை தட்டை மற்றும் இனிப்புத் தின்பண்டங்களை நமது பாரம்பரிய முறையில் தயாரித்து ஏற்றுமதி செய்யும் பெண் தொழில் முனைவோர்கள் இருக்கின்றனர்.   அதேபோல் சின்னச்சின்ன வீட்டு விசேஷங்களுக்கு ஆர்டர் எடுத்துத் தொடர்ந்து டிஃபன் மற்றும் சாப்பாடு செய்து கொடுத்து நல்ல வருமானம் பார்க்கும் ஆட்களும் தற்போது பெருகி வருகிறார்கள். ஏனெனில் இப்போது குடும்பத்துடன் தங்கள் பிள்ளைகள் விடுமுறைக்கு வந்தால் கூட வெளியே ஆர்டர் கொடுத்து வாங்கிச் சாப்பிடும் குடும்பங்கள் நிறைய இருக்கின்றன.   எங்களுக்குப் பால் ஊற்றுபவர் மாதம் எல்லாச் செலவுகளும் போக ₹.45,000 நிற்கும் என்கிறார். அவரும் அவர் தம்பியும் சேர்ந்து பால் வியாபாரம் செய்கின்றனர். ஆனால் ஒரு நாள் விடாமல் நாள்தோறும் காலை மாலை இரு வேளையும் கிட்டத்தட்ட 200 கி.மீ. மொபெட் வண்டியில் ஒரு பெரிய பால் கேன் மற்றும் இரண்டு சிறிய கேன்களுடன்.. வெயில் மழை பனி காற்று பாராது அலைய வேண்டும்.    " இட்லி இனியவன் " என்று கூகுளில் தேடிப் பாருங்கள். அதோடு " டெல்டா பிஸினஸ் " என்று யுட்யூபில் தேடிப் பாருங்கள். பல்வேறு வகையான சிறுதொழில் முனைவோர்களின் வியாபார அனுபவங்களை நீங்கள் பார்க்கலாம்.   அடுத்து... போட்டி இல்லாத என்று கூட நீங்கள் கேட்கவில்லை.. " போட்டியே " என்று ஏகாரத்தைச் சேர்த்திருக்கிறீர்கள்.. அப்படிப் போட்டியே இல்லாத தொழில்கள் இருக்க வாய்ப்பே இல்லை. தெருவோரம் உணவுப் பொருட்கள்.. பழங்கள்... காய்கறிகள்... பூக்கள் இப்படி எதை விற்க முனைந்தாலும் போட்டிகள் நிச்சயமாக உண்டு!   அதேபோல் நஷ்டமே வரக் கூடாது என்ற எதிர்பார்ப்பும் சரியன்று! எந்தத் தொழிலிலும் ஒரு கட்டத்தில் நஷ்டம் ஏற்படும்... ஏற்படத்தான் செய்கிறது என்பது எங்கள் வாழ்க்கை அனுபவம்! அதோடு எந்தத் தொழிலானாலும் 10% wastage allowed என்பதையும் மனதில் கொள்ள வேண்டும்.   நீங்கள் உங்கள் தொழிலில் உண்மை நேர்மை இவற்றைத் தாரக மந்திரமாக வைத்துக் கொண்டு தரமான பொருட்களை வியாபாரம் செய்தீர்கள் என்றால்... நிச்சயமாக படிப்படியாக நிரந்தர வளர்ச்சி உங்களுக்கு ஏற்படும். மாதம் ₹.50,000 என்ன... ₹ 5 லட்சம் கூட லாபம் பார்க்க முடியும் ஐயா!   அந்தந்த மாவட்டத் தொழில் மையங்களில் உங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் இலவச பயிற்சிப் பட்டறைகள் மூலம் கிடைக்கின்றன.   எல்லாவற்றிற்கும் மேல் எந்த வகையான பிரச்னைகள் வந்தாலும் அவற்றைத் துணிவுடன் சமாளிக்கும் மனோதிடம் வியாபாரம் செய்பவர்களுக்குக் கட்டாயம் வேண்டும். வாடிக்கையாளரோடு எப்போதும் ஒரு உண்மையான நல்ல தொடர்பு வைக்கவும் தெரிந்து கொண்டு அதை விடாது கடைப்பிடிக்க வேண்டும்.   நல்ல தொழில் முனைவோராக நீங்கள் விரைவில் வளர இந்த அம்மாவின் நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துக்கள் அன்பு நண்பரே! ‌              +++++++++++++ கணவன் இல்லாமல் ஒரு பெண்ணால் தனியாக வாழ முடியுமா?   நிச்சயமாக முடியும் அன்பு நண்பரே! முடியும் என்று வாழ்ந்து காட்டிக் கொண்டு இருந்தார்கள்... இருக்கிறார்கள்.. இருப்பார்கள் பெண்கள்!   ஒரு உண்மை நிகழ்வு: 2010 — மனைவிக்கு எதுவுமே தெரியாது என்று நினைத்த.. எதையுமே அவளிடம் பகிராத... சிறு தொழிற்சாலை நடத்திக் கொண்டிருந்த ஒரு நண்பர் சாலை விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கல்லூரியில் படிக்கும் ஒரு பெண்: +2 படிக்கும் ஒரு பெண்: 7வது படிக்கும் ஒரு பெண் குழந்தை. தொழில் தொடர்பாக ஏதாவது கடன்.. வர வேண்டிய பாக்கித் தொகை... வீடு மற்றும் நிலப் பத்திரங்கள் எங்கு இருக்கின்றன... எதுவும் எதுவும் தெரியாது!   கிடைத்ததைச் சுருட்டப் போட்டி போடும் கணவனின் சகோதரர்கள்.   அந்தப் பெண்ணின் நெருங்கிய தோழி துணிச்சலான... விவரமான... வண்டி ஓட்டத் தெரிந்த ஒரு பெண். அவளைத் துணைக்கு வைத்துக் கொண்டு... அகால மரணமடைந்த அந்த நண்பரின் தொழில் முறையில் நெருங்கிய இரண்டு நண்பர்களையும் துணைக்குச் சேர்த்துக் கொண்டு ஆக வேண்டிய காரியங்களை மளமளவென அந்தப் பெண்ணைச் செய்ய வைத்தோம்.   களத்தில் இறங்கிய பிறகு தான் தெரிகிறது... பிரச்னைகளின் விஸ்வரூபம்!   தன் அண்ணன் பெண்ணின் பெயரும் மனைவியின் பெயரும் ஒன்று என்பதால் தன் மனைவியின் பெயரை மாற்றி வங்கிக் கணக்கு முதல் முக்கியமான எல்லா இடங்களிலும் பதிவு செய்திருந்தார் அந்தப் பிரகஸ்பதி!   கெஸட்டில் கொடுத்து இவள் பெயரை மாற்றி... இப்படி ஒவ்வொன்றும் ஒவ்வொரு herculean task ஆக இருந்தது.   2வது மகள் +2 முடித்ததுமே உறவினர்களின் வற்புறுத்தலால் அவள் சொந்த ஊரான கோவையில் சென்று settle ஆகி விட்டாள். அடுத்தடுத்து... ஒரு வீடு கட்டினாள்: பிள்ளைகள் மூன்று பேரையும் நல்லாப் படிக்க வைத்து நல்ல இடங்களில் திருமணமும் செய்து வைத்து விட்டாள்.   இரண்டு பேர் அமெரிக்காவில்... கடைசிப் பெண் சிங்கப்பூரில். இவள் இங்கு கோவையில்.. இன்னும் முடியாத... கணவரின் விபத்துக் காப்பீடு பெறுவது தொடர்பாகப் பத்து நாட்களுக்கு முன் இங்கு வந்திருந்தாள். "எப்படீம்மா இருக்கே...?" என்ற என் கேள்விக்கு அவள் எப்போதும் சொல்லும் பதிலையே சொன்னாள்:   " நானா எதுவும் plan பண்றதில்லக்கா... காலம் இழுத்துட்டுப் போற பாதையிலப் போய்ட்ருக்கேன்...!"   சரி... இவளுக்கு பணவசதி இருந்தது.. அதுவும் இல்லாவிட்டால் ...?   அப்படி ஒரு பெண்தான் என் வீட்டில் வேலை செய்கிறாள். பதின்ம வயதுக் கோளாறினால் தானாகத் திருமணம் செய்து கொண்டிருக்கிறாள்: ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை. பெண் குழந்தைக்குப் பத்து மாதம் இருக்கும் போது விட்டுவிட்டுப் போன கணவன் இன்று வரை திரும்பவில்லை. இப்போது அவளுக்கு ‌‌‌‌43 வயது. வீடுகளில் வேலை செய்து இரண்டு குழந்தைகளையும் வளர்த்துக் கல்யாணமும் செய்து கொடுத்துப் பேரன்... பேத்தி எடுத்து விட்டாள்.   **இதனால் தான் பெண்ணுக்குப் பெயர் சக்தி என்று வைத்திருக்கிறார்கள் நமது முன்னோர்கள்! **   எங்கள் கிராமத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள் : " ஓரூர்த் தாய் ஆறூர்ப் பிள்ளைகளை வளர்த்து விடுவாள். ஆனால் பொண்டாட்டி செத்தாப் புது மாப்பிள்ளை..!"   அடுத்து…. நீங்கள் தாம்பத்ய உறவு பற்றிய நோக்கில் கேட்டிருந்தால்.. குடும்ப நலனை மட்டுமே கருத்தில் கொள்ளும் பெண்கள் தங்கள் தனிப்பட்ட விருப்பங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்பது என் அனுபவம்!   எந்த இடத்தில் பெண்களுக்கு ஒரு நல்ல மதிப்பு கொடுக்கப்படுகிறதோ அந்த இடம் எல்லா வகையிலும் நன்றாக இருக்கும் அன்பு நண்பரே! +++++++++++++   சேமிக்கும் பழக்கம் எப்போதும் வேண்டும்!   " வரவு எட்டணா செலவு பத்தணா அதிகம் ரெண்டணா கடைசியில் துந்தணா " என்று ஒரு பழைய திரைப்படப் பாடல். ஏன் துந்தணா போட வேண்டும்? ஏன் வரவுக்குள் செலவை அடக்கக் கூடாது? ஏன் சேமிப்பு என்ற ஒன்றைச் செய்யக் கூடாது?   " ஒனக்கென்ன... நீ பாட்டுக்கு எழுதுவே... இன்னிக்கு இருக்குற வெலவாசியில " கையில வாங்குனேன்.. பையில போடல... காசு போன எடம் தெரியலே" ன்னு இரும்புத் திரை படத்துல தங்கவேலு பாடுனாப்புல பாட வேண்டியது தான் " ன்னு நீங்கள் என்னைத் திட்டத் தொடங்குவது காதில் விழுகிறது.   ஆனால் ஒன்றைத் தயவுசெய்து புரிந்து கொள்ளுங்கள் நண்பர்களே! 1970.. 80..90களில் நாங்களும் இதேபோல் தான் இருந்திருக்கிறோம். நடுத்தர... கீழ் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த மக்களுக்கு எப்போதும் Economic Status ஒரே போல் தான் இருந்திருக்கிறது... இருக்கும்!   ஆனால் கட்டாயம் ஒரு தொகையைச் சேமித்தே ஆக வேண்டும் என்று நாம் முடிவு கட்டி விட்டால் அது ஒன்றும் நடக்கவே நடக்காத விஷயம் அல்ல.   என் அம்மா எப்போதும் சொல்வார் : மாதப் பட்ஜெட் போடத் தொடங்கும் போது முதலில் கோவிலுக்கு.. இரண்டாவது சேமிப்புக்கு... அப்புறம் தான் உப்பு புளி மிளகாய்க்குக்‌ கூட... "   அதை இன்று வரை இந்த எளியவள் கடைப்பிடித்து வருகிறேன். நானும் கீழ் நடுத்தர வர்க்கம் தான் நண்பரே !   எங்கள் காலத்தில் (1970களில்) சேமிப்பு என்பது ₹.10 முதல் ₹.50 வரை அவரவர் சம்பளத்தைப் பொறுத்து தனியார் ஒருவரிடம் சீட்டுப் போடுதல்...‌ அஞ்சல் அலுவலகத்தில் ₹.10 முதல் ₹.50 வரை மாதாமாதம் தொடர் வைப்புத் தொகை (R.D. என்ற Recurring Deposit) என்பதோடு நின்று விடும். வெகு சிலர் மட்டுமே பங்குச் சந்தையில் சில பங்குகளை வாங்குவார்கள்.   என்னைப் பொறுத்தவரை மனம் இருந்தால் மார்க்கம் உண்டு கண்டிப்பாக. இந்த எளியவள் பின்பற்றிய சில வழிமுறைகள் : சம்பளம் கைக்கு வந்ததும் ஒரு 10 ரூபாயை எடுத்துத் தனியே வைத்தல்...   நாள்தோறும் காய்கறிகள் வாங்குவதில் மீதமாகும் சில்லறைக் காசுகளை ஒரு பக்கமாகக் கண்ணில் படாமல் போட்டு வைத்தல்.   எங்கள் காலத்தில் 1... 2… ‌5... 10 பைசா நாணயங்கள் உண்டு. எட்டணா நாணயம் கிடைத்தால் அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும்! அதைத் தனியாகப் போட்டு வைத்தல்… மாதாமாதம் இப்படிச் சேர்த்து.. வசதி குறைவான இரண்டு பெண் பிள்ளைகளை Type Writing and Shorthand in both Tamil and English Lower and Higher படிக்க வைத்திருக்கிறோம். எவ்வளவு அவர்கள் இரண்டு பேருக்கும் ஃபீஸ் தெரியுமா? 7.50 + 7.50 = 15 ரூபாய். 1976...77...78ல் எங்களுக்கு அது ஒரு பெரிய தொகை. ஏனெனில் திருச்சி - திருநெல்வேலி பஸ் கட்டணம் ₹. 9.50 மட்டுமே! புரிகிறதா நண்பரே?   கிராமங்களில் "சிறுவாட்டுக் காசு" என்று சொல்வார்கள்.   அதாவது ஏழெட்டுக் கோழிகள் வைத்திருப்பவர்கள்… அவை விடும் முட்டைகள் மூலம் ஒரு வருமானம். வீட்டில் இருக்கும் முருங்கை மரத்தின் மூலம் ஒரு வருமானம். கீரைகள்… காய்கறிகள் போட்டிருந்தால் அதன் மூலம் ஒரு வருமானம்.. இவையெல்லாம் சிறுகச் சிறுக நாள்தோறும் சேர்ந்து ஒரு குறிப்பிட்ட தொகையை நமக்குக் கொடுத்து விடும். வீட்டு ஆம்பளையை எதிர்பார்க்காமல் ஆத்திரம் அவசரத்துக்கு செலவு செய்ய இவை உதவும். இன்றும் நான் 5 ரூபாய் நாணயத்தைச் சேமிக்கும் பழக்கத்தை வைத்திருக்கிறேன்.   ஆனால் இன்றைய காலகட்டத்தில் இவ்வளவு பாடெல்லாம் இல்லை. நாம் நினைப்பது போல் சிறிதும் பெரியதுமாக நிறைய வழி முறைகள் இருக்கின்றன. ஒவ்வொன்றாகப் பார்ப்போம்:   1.அரசின் தேசிய சேமிப்பு பத்திர திட்டம்(National Savings Certificate), 2.பொது வருங்கால வைப்பு நிதி 3.ஊழியரின் வருங்கால வைப்பு நிதி (EPF) 4.தேசிய ஓய்வூதிய திட்டம் — இப்படி நிறைய இருக்கின்றன. கூகுளில் தேடிப் பாருங்கள் நண்பரே !   முதலில் அஞ்சலகம் சேமிப்பு:   மாதாந்திர வருமான கணக்கு திட்டம் தற்போது தபால் அலுவலக மாதாந்திர வருமான திட்ட கணக்கிற்கு 7.7 சதவீத வட்டி விகித லாபம் அளிக்கப்படுகிறது. ஒரு கணக்கில் அதிகபட்சம் 4.5 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம்.   அஞ்சலக தொடர் வைப்புக் கணக்கு இதில் வெறும் ₹.10‌ கூட மாதாமாதம் சேமிக்கலாம். 5 வருடங்கள் கழித்து வட்டியுடன் கிடைக்கும்   போஸ்ட் ஆபீஸ் டைம் டெபாசிட் போஸ்ட் ஆபீஸ் டைம் டெபாசிட்டுகளில் 6.7% வரை வட்டி கிடைக்கின்றது. இது மிக பாதுகாப்பான ஒரு முதலீடாகவும் சேமிப்பாகவும் பார்க்கப்படுகிறது. இங்கு 1, 2, 3, 5 வருடங்கள் வரை டைம் டெபாசிட் உண்டு. 5 வருட டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்யும் போது பிரிவு 80சி கீழ் விலக்கு உண்டு.   அடல் பென்ஷன் யோஜனா மத்திய அரசு அறிவித்த திட்டங்களில் ஒன்று தான் இந்த அடல் பென்ஷன் யோஜனா (Atal pension Yojana - APY). இது கடந்த 2015 - 2016ல் அறிமுகப்படுத்தியது. இந்த திட்டம் அமைப்பு சாரா துறையில் வேலை செய்பவர்களுக்கு இது உதவுகிறது.   எங்களுக்குத் தெரிந்த சித்தாள் வேலை செய்யும் ஒருவர்.. முடி திருத்தும் தொழிலாளி ஒருவர்.. தையல் தொழில் செய்யும் மூன்று பெண்கள் மற்றும் மூன்று ஆண்கள் இதன் மூலம் பயன் பெற்று வருகிறார்கள்.   செல்வ மகள் சேமிப்பு திட்டம் அரசின் கிசான் விகாஸ் பத்திரம் — இப்படி நிறைய இருக்கின்றன.   மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத் திட்டம்   மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத் திட்டம் 60 வயது நிரம்பிய மூத்த குடிமக்கள் இந்தத் திட்டத்தில் குறைந்தபட்சம் 1,000 ரூபாயும், அதிகபட்சமாக 15 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்யலாம். இந்தக் கணக்கினை ஜாயிண்ட் கணக்காகவும் திறக்கலாம். வருமான வரிச் சட்டம் பிரிவு 80சி கீழ் வரி விலக்கும் அளிக்கப்படுகிறது. முதிர்வு காலம் 5 வருடம். ஆண்டுக்கு 8.3 % சதவீத லாபத்தினை அளிக்கிறது. இது வயதான காலத்தில் ஒரு பாதுகாப்பினை வழங்குகிறது என் மகன் என் கணவரின் மறைவுக்குப் பிறகு எனக்கு இதைப் போட்டுக் கொடுத்திருக்கிறான். மூன்று மாதத்திற்கு ஒருமுறை நாம் எந்த வங்கிக் கணக்கில் வட்டியைப் போடச் சொல்கிறோமோ அதில் போட்டு விடுகிறார்கள். எல்லாவற்றையும் விட பங்குச் சந்தையின் தந்தை என்று அழைக்கப்படும் ‌‌திரு. Warren Buffett என்பவர் கூறி இருப்பதைப் பின்பற்ற முயலுங்கள் நண்பரே !   On Earning: Never depend on Single income. Make investment to create a Second source. ஒரே வருமானத்தை நம்பி இருக்காதீர்கள்.‌ இரண்டாவது வருமானம் கிடைக்க எதிலாவது முதலீடு செய்யுங்கள்.   On Spending: If you buy things you don't need, soon you will have to sell the things you need. உங்களுக்குத் தேவையில்லாத பொருட்களை வாங்கிக் கொண்டே இருந்தால் ஒரு கட்டத்தில் உங்களுக்குத் தேவையான பொருட்களை விற்க நேரிடும் .   On Savings: Don't save what is left after spending, but spend what is left after Saving. செலவு செய்த பின் மீதம் இருப்பதைச் சேமிக்கலாம் என்று நினைக்காதீர்கள்.. சேமித்த பின் மீதம் இருப்பதைச் செலவு செய்யப் பழகுங்கள்.   On Investment: Don't put all eggs in one basket. எல்லா முட்டைகளையும் ஒரே கூடையில் வைக்காதீர்கள். .அதாவது சிறு சேமிப்பு கொஞ்சம்.. குறுகிய கால சேமிப்பு கொஞ்சம்… நீண்ட கால சேமிப்பு கொஞ்சம்… பிள்ளைகளின் படிப்பு மற்றும் திருமணம் ஆகியவற்றிற்குக் கொஞ்சம்.. மருத்துவச் செலவுகளுக்குக் கொஞ்சம்… (இப்போது நிறைய மருத்துவக் காப்பீடு திட்டங்கள் உள்ளன).   இப்படி ஒரு திட்டம் போட்டுச் சேமிக்கப் பழகிப் பாருங்கள்.. சில ஆண்டுகளிலேயே அவற்றில் சேரும் தொகை " நீ‌ கவலையே படாதே.. நாங்கள் இருக்கிறோம் உன்னைக் காப்பாற்ற... " என்று ஆதரவுக் கரம் நீட்டும்.   சேமித்தால் நாம் பணத் தேவைக்காக யாரையும் நம்பி இருக்க வேண்டாம் என்பது இந்த எளியவளின் வாழ்க்கை அனுபவம் அன்பு நண்பரே!   சேமிக்கப் பழகுங்கள்… சிறப்புடன் வாழுங்கள்! +++++++++++++   கர்மா என்று ஒன்று உள்ளதா? கடவுளும் கர்மாவும் ஒன்றா? கர்மாவிலிருந்து தப்ப முடியுமா?   நிச்சயமாக கர்மா என்று ஒன்று உள்ளது. இந்த எளியவள் படித்து மற்றும் பலப்பல பெரியவர்கள் சொல்லக் கேட்டுள்ளபடி கர்மா வேறு ! கடவுள் வேறு! கடவுள் படைத்த மனிதனுக்குத் தான் கர்மா! கடவுளுக்கே அல்ல! " எந்தக் குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே... " என்று எழுதினார் மதிப்பிற்குரிய கவிஞர் திரு. புலமைப் பித்தன் அவர்கள்.   கோடீஸ்வரர் வீட்டில் பிறந்த குழந்தையோ… கூலி வேலை செய்பவர் வீட்டில் பிறந்த குழந்தையோ.. முதல் சில ஆண்டுகளுக்கு எந்த விதமான கள்ளமும் கபடமும் அற்றுத் தான் வளர்கின்றன... நடந்து கொள்கின்றன. பிறகு அவரவர் சூழ்நிலைக்கேற்ப அவர்களின் பேச்சுகள் மற்றும் செயல்பாடுகள் மாறத் தொடங்குகின்றன. இதை நாம் அனைவருமே பார்க்கிறோம்.    இதைத் தான் வள்ளுவப் பெருந்தகை " பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்..‌‌‌‌‌‌‌‌ சிறப்பொவ்வா செய் தொழில் வேற்றுமையான் " என்றார்.   அதாவது பிறப்பு எல்லோருக்கும் ஒரே மாதிரி தான். ஆனால் அவரவர் செய்யும் தொழில்களுக்கு அதாவது செயல்களுக்கு ஏற்ப அவரவர்களுக்குச் சிறப்பு கிடைக்கிறது அல்லது கிடைக்காமல் போகிறது என்கிறார். அப்படி வரும்போது நாம் ஒவ்வொரு பிறவியிலும் செய்யும் வினைகளுக்கேற்ப  (செயல்களுக்கு ஏற்ப) நமக்கு கர்மா உருவாகிறது.. தொடர்கிறது என்கின்றனர் நமது முன்னோர்கள்.   இந்த இடத்தில் ஒன்று குறிப்பிட விரும்புகிறேன் நண்பரே !   எங்களுக்கு மறுபிறவியில் எல்லாம் நம்பிக்கை கிடையாது என்று விதண்டாவாதம் பேசுவோர் இப்போது நிறைய. அவர்கள் Many Masters and Many Lives‌ என்ற தலைப்பிலும்.. அதைத் தொடர்ந்து Messages from the Masters என்ற தலைப்பிலும் Dr. Brain Wess என்ற அமெரிக்க ஹிப்னாடிஸ்ட்‌ எழுதிய புத்தகங்களைப் படிக்க வேண்டும்.   என் நினைவு சரியாக இருக்குமானால் தனது 81 வது பிறவியைப்பற்றி ஒரு இளம் பெண் சொல்வதை அடிப்படையாகக் கொண்டு தான் Many Masters and Many Lives புத்தகத்தை அவர் எழுதி இருக்கிறார். அதை எழுதும் முன் நமது பாரத நாட்டிற்கு வந்து பல விதமான ஆராய்ச்சிகளை மேற்கொண்ட பின் தான் அதை எழுதி இருக்கிறார். பிறகு அதன் தொடர்ச்சியாக Messages from the Masters புத்தகத்தை எழுதி இருக்கிறார் அந்த அமெரிக்க ஹிப்னாடிஸ்ட். சரி விஷயத்திற்கு வருவோம்.   கர்மாவிலிருந்து தப்ப வழி உள்ளதா? நிச்சயமாக இல்லை! வணக்கத்துக்குரிய திரு. ராம் சுரத்குமார் யோகி அவர்களைப் பற்றிக் கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? அவரைச் சிரட்டைச் சாமியார் என்றும் அழைப்பார்கள்.   திருவண்ணாமலையில் நீண்ட காலம் வாழ்ந்த ஒரு மகான். திரு. ரஜினிகாந்த் அவர்கள் கூட " அவரை நான் அப்பாவாகத் தத்தெடுத்து கொள்கிறேன் " என்று சில மாதங்கள் தன் வீட்டில் கொண்டு போய் வைத்திருந்தார் என்று ஒரு செய்தி கூட உண்டு.   எங்களின் நீண்ட கால மருத்துவ நண்பர் ஒருவர் ஒருமுறை திருவண்ணாமலை போன போது அவரைத் தரிசனம் செய்யும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.   எங்கள் நண்பர் போன போது அந்த மகான் கையில் இருந்த ஒரு புண்ணில் ஈக்கள் மொய்த்துக் கொண்டு இருந்திருக்கின்றன. அதைப் பார்த்த எங்கள் நண்பர் " I'm a doctor by profession. If you permit me, shall I clean this wound... apply some medicine and dress it up? " என்று மிகவும் பணிவுடன் கேட்டிருக்கிறார். . அதற்கு அந்த மகான் பெரிதாகச் சிரித்து விட்டு…" you mean this? Just see " என்று சொல்லி விட்டுத் தன் பக்கத்தில் வைத்திருந்த ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌சிரட்டையிலிருந்து (கொட்டாங்கச்சி) சிறிது நீரைக் கையில் எடுத்து.. கண்ணை மூடி ஓரிரு நிமிடங்கள் ஏதோ ஜபம் செய்து விட்டு அந்தப் புண்ணின் மேல் தெளிக்க... அது காணாமல் போய் விட்டதாம்.   எங்கள் நண்பருக்கு தன் கண்களையே நம்ப முடியவில்லையாம்.   பிறகு மீண்டும் அதேபோல் இன்னொரு முறை அந்த மகான் செய்ய அந்தப் புண் திரும்பவும் அவர் கையில் தோன்றி விட்டதாம்.   " This is my Karma... I have to bear it… live and suffer with it.. " என்று சிரித்துக் கொண்டே சொன்னாராம் அந்த மகான்.   இதைச் சொல்லிச் சொல்லி மாய்ந்து போவார் எங்கள் நண்பர். ஏனெனில் அவர் அவ்வளவு எளிதாக எந்தச் சாமியாரையும் ஏற்றுக் கொள்ள மாட்டார்.   பல சித்துகள் தெரிந்த இவரைப் போன்ற மகான்களால் தங்கள் நோய் எதுவானாலும் அதைக் குணப்படுத்திக் கொள்ள முடியாதா?   அதேபோல் வணக்கத்துக்குரிய மகான்கள் இராமகிருஷ்ண பரமஹம்சர் மற்றும் ரமண மகரிஷி ஆகியோரும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள். அவர்கள் நினைத்திருந்தால் அதிலிருந்து மீண்டிருக்கலாம் அல்லவா? அதற்கு அவர்கள் முயற்சி எடுத்தார்களா? இல்லவேயில்லை! ஏன்? அவர்களுக்கு மிக நன்றாகத் தெரியும்.. " இது நமது கர்மா என்று.. நமது கர்ம வினைப்பயன்.. அதை நாம் அனுபவித்தே கழிக்க வேண்டும் " என்று!   என் அப்பா மற்றும் என் கணவர் தங்கள் வாழ்நாளில் நல்லவைகளை மட்டுமே செய்து வந்தவர்கள்.   என் அப்பாவிற்கு வயிற்றில் புற்றுநோய். உணவுப் பழக்க வழக்கங்கள் மற்றும் நல்ல நெறிகளை மிகவும் ஒழுங்காகக் கடைப்பிடித்தவர். அதனாலோ என்னவோ நோய் ஆரம்ப நிலையில் தெரியாமல் முற்றிய நிலையில் தான் தெரிந்தது. ஒரு ஆண்டு படிப்படியாக உடல் நலம் குன்றி சில நாட்கள் மட்டுமே அவஸ்தைப் பட்டார். ஆண்டவன் அழைத்துக் கொண்டு விட்டான்.   தனது சுமாரான வருமானத்திலும் எத்தனை எத்தனையோ வசதி குறைந்த பிள்ளைகளைப் படிக்க வைத்தவர் என் அப்பா!   என் கணவருக்கு 2012ல் முதல் heart attack. தொடர்ந்து சிறுநீரகத் தொற்று! அதன் பின் தொடர்ச்சியாகப் பல பிரச்னைகள். கடைசி ஒன்றரை மாதம்…. 22.02.2022 அன்று இறைவனடி சேரும் வரை படாதபாடு பட்டுப் போனார்.   நானும் என் கணவரும் 20 ஆண்டுகளுக்கு மேல் திக்கற்ற பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கான ஒரு நல்ல தொண்டு நிறுவனத்தில் தொண்டு செய்தோம். அந்த நிறுவனத்தின் பல்வேறு வளர்ச்சிகளில் என் கணவருக்கு மிக முக்கியப் பங்கு உண்டு.   அந்தத் தொண்டு நிறுவனத்தைத் தொடங்கிய இருவரில் ஒருவர் திருமணமே செய்து கொள்ளாமல் தன் வாழ்க்கையை முழுவதும் அந்தத் தொண்டு நிறுவனத்திற்கே அர்ப்பணித்தவர். அவரை நாங்கள் அனைவருமே அக்கா என்று தான் அழைப்போம்.   அவருக்கு எத்தனை வியாதிகள் தெரியுமா? தைராய்டு… சுகர்... low B.P. இதய நோய் காரணமாக இதயத்தில் stent... மார்பகப் புற்றுநோய்… நன்றாகச் சமைப்பார். ரசித்துச் சாப்பிடுவார்... எல்லோருக்கும் சாப்பிடக் கொடுப்பார். ஆனால் அவரின் கடைசிக் காலத்தில் ஒரு துண்டு இட்லி கூடச் சாப்பிட முடியவில்லை. அவ்வளவு ஏன்? இறுதி ஒரு வருடம் தண்ணீர் கூட முழுங்க முடியாத அவஸ்தை!   தங்களால் முடிந்த உதவிகளை அடுத்தவருக்குத் தெரியாமல் செய்து கொண்டே இருந்த என் அப்பா மற்றும் கணவருக்கும்.. தொண்டு செய்வதே தன் வாழ்வு என்று இருந்த எங்கள் அக்காவுக்கும் ஏன் இந்த அவஸ்தை?    நம்மையே எடுத்துக் கொள்ளுங்கள்... சில சமயங்களில் சிலர் ஏதாவது ஒரு தப்புக்கு வசமாக மாட்டும் போது "செஞ்ச பாவம்.. சும்மா விடுமா?" என்கிறோம் அல்லவா ? அந்தப் "பாவம்" தான் கர்மா! நமது தமிழக அரசியல்வாதிகள் சிலர் தங்கள் கர்மாவினால் தான் கோடி கோடியாகக் கொள்ளையடித்துச் சொத்து சேர்த்தும் சிகிச்சைகள் பலனின்றி படாதபாடு பட்டு இறந்தார்கள்.   ஆகவே நண்பரே! இதுபோல் நிறைய விஷயங்களுக்கு நமது புண்ணிய பாரதத்தில் விளக்கங்கள் உள்ளன ஐயா! தேடித் தேடிப் படித்துப் பாருங்கள்.   தீதும் நன்றும் பிறர் தர வாரா! இதைக் கேள்விப்பட்டிருப்பீர்கள் தானே?   இந்தப் பிறவியில் செய்யும் நன்மைகள் சென்ற பிறவிகளில் செய்த பாவங்களை ஓரளவு சரி கட்டும்… அதாவது கழித்து விடும். மீதம் இருப்பது நோய்… பகை… கடன் - இவை மூலம் தீருகின்றன (அதாவது நாம் செய்த தீமைகள் விலகுகின்றன)‌ என்கிறார்கள் பெரியவர்கள்.   பிறவி என்பது ஊர் சுற்றிப் பார்ப்பது போல. பயணம் முடிந்ததும் நம் வீட்டிற்கு நாம் திரும்பி விடுகிறோம் அல்லவா? அது போல் பயணம் முடிந்ததும் நம் அப்பாவாகிய ஆண்டவன் இருக்கும் வீட்டிற்குப் போய் விட வேண்டும். அதனால் தான் " வீடு பேறு " (அதாவது - பேறு என்றால் பெறுவதற்கு அரியதைப் பெறுவது என்றனர்.    இந்தச் சுற்றுப் பயணத்தில் இறைவனுக்குப் பயந்து நல்ல விஷயங்களைச் செய்தால் நாம் செய்த தீய செயல்களுக்கான தண்டனை குறைந்து கொண்டே வரும். இப்போதும் தீயவைகளையே செய்தோமென்றால் தண்டனையும் கூடிக் கொண்டே போகும்.. அவ்வளவுதான் !   "இன்னும் எத்தனை ஜென்மம் எடுத்து இந்தக் கடனைக் கழிக்கப் போகிறேனோ..தெரியலையே.. இன்னும் எத்தனை ஜென்மம் எடுத்து நன்றி சொல்லப் போகிறேனோ தெரியலையே…" என்று பேசுவதைக் கேட்டிருப்பீர்கள். இது மிகப்பெரிய பேசு பொருள். எழுதினால் நிறைய எழுதலாம்.   சுருக்கமாகச் சொன்னால்: மறுபிறவி… அது… இது… எல்லாவற்றையும் விட்டு விடுவோம்.. நமது வாழ்வில் நல்லது செய்ய முயற்சிப்போம்.. ஔவைப் பாட்டி சொன்னது போல் நாம் "அறம் செய ‌விரும்புவோம்! " நல்ல மனிதராக வாழ முயல்வோம். நல்லதே நடக்கும்.. சரியா ஐயா?   நம் பெரியோர்கள் நமக்குச் சொல்ல நினைத்ததும் அதுதான்.. சொல்லிச் சென்றதும் அதுதான்! ஓரளவாவது உங்களுக்குப் புரிகிறார் போல் சொல்லி இருக்கிறேனா ஐயா? சுகுமார் பாபு என்ற நண்பர் கோராவில் கருத்துப் பகுதியில் பகிர்ந்தது : (15. 02. 2023) Many Masters Many Lives என்னிடம் உள்ளது. என் நண்பர் ஒருவருக்கு ஸொரியாஸிஸ் நோயின் தாக்கம் அதிகரித்து போது, தான் குருவாய் ஏற்றுக்கொண்ட தர்கா பாபா அவர்களை அணுகி தீர்வு கேட்டார். பாபா கர்மாவைப் பற்றி விளக்கிய பிறகு சொன்னார். "இது உனது கர்மா என்னும் கடனைக் கழிக்க கிடைத்த வாய்ப்பு. இதிலிருந்து உன்னை விடுவிப்பது மிகச் சுலபம்.ஆனால் உன் கர்மாவைக் கழிக்க வேறு வகையான இன்னல் வரும். அது இன்னமும் கடுமையானதாகவும் இருக்கலாம். உன் விருப்பத்தைக் சொல்" எனக் கூற என் நண்பர் வணங்கி விடை பெற்றார்.இருபது வருடங்களுக்குப் பிறகு நோய் சிகிச்சை இல்லாமலேயே மறைந்துவிட்டது. +++++++++++++   எதிர்காலத்தைப் பற்றிய பயத்தை எப்படிப் போக்குவது?   நீங்கள் சூஃபி தத்துவம் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா ? இந்த நொடி… அதுவும் கடந்து கொண்டே இருக்கும் இந்த நொடி மட்டுமே வாழ்க்கை என்பதை வலியுறுத்தும் ஒரு அருமையான தத்துவம். அதாவது ஒவ்வொரு நொடியும் நாம் வாழ்கிறோம்… வாழத்தான் வேண்டும். இது இறைவன் கருணையுடன்‌ கூடிய‌ கட்டளை!   சரி... அதற்காக எதிர்காலத்தைப் பற்றி நினைக்க வேண்டாமா அல்லது கூடாதா? 2004ல் சென்னையில் எழும்பிய சுனாமி நினைவிருக்கிறதா நண்பரே? அந்த நாளின் அதிகாலை வரை அங்கிருந்த மக்கள் அப்படி ஒன்று நடக்கும் என்று நினைத்திருப்பார்களா? ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்க்கையைப் புரட்டிப் போட்ட அது இன்று வந்து விடுமோ.. நாளை வந்து விடுமோ என்று அதன் பிறகும் மக்கள் நினைத்துக் கொண்டேவா இருந்தார்கள்… இருக்கிறார்கள்? அல்லது மீனவ நண்பர்கள் தான் பயந்து கொண்டு கடலுக்குள் பிழைப்புக்காகப் போகாமல் இருக்கிறார்களா? யோசியுங்கள்...! அதேபோல் தான் பூகம்பம்… புயல் வெள்ளம் எல்லாமே. சாதாரண மனிதன் தன் குடும்ப நலன் கருதி.. எதிர்காலத்தைப் பற்றிச் சிந்திக்கத் தான் வேண்டும்.. திட்டமிடத் தான் வேண்டும். இதில் பயப்பட ஒன்றுமேயில்லை!   இறப்பு மட்டும் அல்ல.. பல நேரங்களில் நம் வாழ்வில் நடக்கும் நடப்புகளும் கூட.. எவ்வளவு தான் திட்டமிட்டுச் செயல் பட்டாலும்.. நம் கையில் இல்லாதது போல் தான் தோன்றுகின்றன. அதற்காகப் பயந்து கொண்டு எதையும் செய்யாமல் இருந்து விட முடியுமா நண்பரே?   ஆண்டவனை வழி காட்ட வேண்டிக் கொண்டு.. அவன் நமக்குக் கொடுத்திருக்கும் புத்தியைப் பயன்படுத்தி நமது கடமைகளைச் செய்யப் பழகிக் கொண்டால்… நமது பயம் தன்னால் விலகும் நண்பரே ! எதிர்காலத்தில் எப்படி இருப்பேன் என்று நிகழ்காலத்தில் பயப்பட்டுக் கொண்டிருந்தால் நிகழ்கால நிம்மதியும் போய் விடும் ஐயா ! அதனால் தான் " துணிந்து நில்.. தொடர்ந்து செல்.. தோல்வி கிடையாது தம்பி.." என்று சொல்கிறது ஒரு பழையத் திரைப்படப் பாடல் ! அனாவசிய பயத்தை விடுத்து.. அவசியமானவற்றைத் தொடர்ந்து செய்து நலமே வாழ நல்வாழ்த்துக்கள் அன்பு நண்பரே!  +++++++++++++ ஒரு பெண் கணவர் மற்றும் பிள்ளைகளுக்காக எதையெல்லாம் விட்டுக் கொடுக்கலாம்? கேள்வியே தவறு... எதையெல்லாம் விட்டுக் கொடுக்கவில்லை? என்று கேட்டால் எளிதாக விடை அளித்து விடலாம் அன்பு நண்பரே! தன் குடும்பத்தை உண்மையாக நேசிக்கும்... அதுதான்… அதன் அமைதி.. மகிழ்ச்சி.. நிம்மதி தான் தனக்கு மிகவும் முக்கியம் என்று நினைக்கும் ஒவ்வொரு பெண்ணும் விட்டுக் கொடுத்தவை… கொடுத்துக் கொண்டு இருப்பவை : தனக்குப் பிடித்த உணவு: தேவையான ஓய்வு மற்றும் தூக்கம்: பிடித்த பொழுதுபோக்கு - பாட்டு.. நடனம்… ஓவியம் வரைதல் இப்படி.. எங்கள்   வளர்ப்பு மகளும்.. நாத்தனார் பேத்தியும் மிக நன்றாக வரைவார்கள். இப்போது குடும்பப் பொறுப்புகள் துரத்திக் கொண்டே இருக்க… பேப்பர் பென்சிலைக் கூட அவர்களால் கையில் எடுக்க முடியவில்லை.   நெருங்கிய தோழிகளுடன் நேரம் செலவிடுதல்: இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். இவ்வளவு ஏன்? எழுத்தில் ஓரளவு பயிற்சி உடைய இந்த எளியவள் கதைகள் கவிதைகள் என்று எழுதியதெல்லாம் சமையல் அறையில் வைத்திருக்கும் பேப்பர் பேனாவில் குறிப்பு எழுதி.. குறிப்பு எழதித் தான் அன்பு நண்பரே! ஆனால் எவ்வளவு விட்டுக் கொடுத்துப் போனாலும் ஏதாவது ஒரு வகையில் குறை பேசும் குடும்பத்தினர் இருப்பது தான் மிகவும் வருந்தத்தக்க விஷயம். ஆயினும் அந்த உண்மையான குடும்பத் தலைவிக்கு மனதில் உறுத்தலோ.. பயமோ துளியும் இருக்காது என்பது இந்த எளியவளின் வாழ்க்கை அனுபவம். குடும்பம் கணவன் மனைவி பிள்ளைகள் மற்றும் உறவினர்கள் ஒன்று கூடிக் களிப்புடன் வாழும் ஒரு அழகிய கூடு ... அங்கே…   விட்டுக் கொடுத்தல் வீணான பிரச்சனைகளைக் குறைத்து விடும் அன்பு நண்பரே ! +++++++++++ IKIGAI   இது ஒரு ஜப்பானிய வாழ்க்கைத் தத்துவம். நமது முன்னோர்கள் சொல்லி வைத்திருப்பதைத் தான் இந்தத் தத்துவமும் பறை சாற்றுகிறது என்பதை இந்தப் புத்தகத்தைப் படிக்கத் தொடங்கிய கொஞ்ச நேரத்திலேயே புரிந்து கொள்ள முடிந்தது அன்பு நண்பரே! ஆனால் அருமையான புத்தகம்! அதில் படித்ததில் இருந்து ஒரு சுருக்கத்தைத் (synopsis) தருகிறேன். ‌நீங்கள் அந்தப் புத்தகத்தை வாங்கிப் படித்து விரிவாகத் தெரிந்து கொள்ளுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்.   ஒவ்வொரு தனி மனிதனுக்கும் ஒரு வேட்கை‌ (Passion): தொழில் (Profession): குறிக்கோள் (Mission): தனக்கேற்ற தொழில் அல்லது வாழ்க்கை முறை (Vocation) என்று எண்ணங்கள் இருக்கும்.. இருக்க வேண்டும்.   இன்னும் கொஞ்சம் விளக்கமாக இவற்றைப் பார்ப்போம். வேட்கை - Passion - அதாவது ஒருவருடைய ஒரு பொருள் அல்லது செயலின் மேல் ஒருவருக்கு இருக்கும் ஆழமான நினைப்பு.. நேசம் போன்றவை.   தொழில் - Profession   குறிக்கோள் - Mission அதாவது நாம் எதை அடைய நினைக்கிறோமோ.. அதை அடைய என்ன செய்யப் போகிறோம் என்பதை நிர்ணயித்தல். நமக்கேற்ற தொழில் அல்லது வாழ்க்கை முறை - Vocation. அதாவது தனிப்பட்ட முறையில் நம்மால் எதைச் சிறப்பாகச் செய்ய முடியும் என்று தீர்மானித்தல்.   இதில் … Passion and Mission - What you love வேட்கையும்.. குறிக்கோளும் நாம் விரும்புவது Mission and Vocation - What the World needs - குறிக்கோளும் நமது தொழில் மற்றும் வாழ்க்கை முறையும் உலகத்திற்கு ஏதோவொரு வகையில் உதவுவது Profession and Vocation - What you can be paid for - தொழில் மற்றும் வாழ்க்கை முறையிலிருந்து நாம் திரும்ப ஏதோவொன்றைப் பெறுகிறோம். சரிதானே நண்பரே? Profession and Passion - What you are Good at.‌ அதாவது நமது தொழில் மற்றும் குறிக்கோளில் நாம் கரை கண்டவர்களாக ஆகிறோம்.. ஆக வேண்டும்.   IKIGAI யின் 10 விதிகள்: 1.எப்போதும் சுறுசுறுப்பாக இரு: ஓய்வு எடுக்காதே!  நாம் மிகவும் விரும்பிய செயல்களைச் செய்ய முடியாமல் போகும்போது நமது வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் இல்லாமல் போய் விடுகிறது. அதனால் நமக்கும் நம்மைச் சுற்றி உள்ளவர்களுக்கும் மதிப்பு தரக்கூடிய.. பயன்படக்கூடியச் செயல்களைச் செய்யும் போது நம் வாழ்க்கை மெருகேறுகிறது. அதன் மூலம் ஒருவரோடு ஒருவர் ஒத்துழைத்து நல்ல விஷயங்களைச் செய்யும் போது நம்மைச் சுற்றியுள்ள பகுதி நல்ல முன்னேற்றம் அடைகிறது. நாம் பணி ஓய்வு பெற்ற பின்னரும் கூட இதைச் செய்ய முடியும். கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளில் பத்ம விருதுகள் வாங்கிய பல நல்ல மனிதர்கள் 70... 80… 90‌ வயதானவர்கள் என்பதை இந்த இடத்தில் நினைவு படுத்துகிறேன் நண்பரே!   2. பதறாத காரியம் சிதறாது என்பதை மனதில் கொள்ளுங்கள்  நிதானமாகச் செயல்படும் போது நம் வாழ்வும் நேரமும் புதிய பரிமாணத்தை அடையும்.   3. அளவோடு சாப்பிடுங்கள். நம் முன்னோர் சொல்லி வைத்திருக்கிறார்கள் பாருங்கள்.. அரை வயிறு உணவு : கால் வயிறு தண்ணீர் : கால் வயிறு காற்று என்று. அதைப் பின்பற்றினால் ஆரோக்கியமாக வாழ முடியும்.    4. நல்ல நட்பு வட்டம் ஒன்று கட்டாயம் வேண்டும். Friends are the Best Medicine என்பார்கள்: நம் இன்ப துன்பங்களைப் பகிர... ஜாலியாக அரட்டை அடிக்க… நமக்குத் தேவையான ஆலோசனைகளைப் பெற நல்ல நட்பு அவசியத் தேவை.    5. அன்றாட உடற்பயிற்சி அத்தியாவசியத் தேவை என்பதை உணர வேண்டும்.  தேங்காமல் ஓடும் தண்ணீர் எப்படித் தூய்மையானதோ அதுபோல் அன்றாட உடற்பயிற்சி நம் உடலை நன்றாக வைத்திருக்கும்.   6. மனதை மகிழ்ச்சியாக வைத்திருக்கப் பழக வேண்டும். அது நல்ல நட்பையும் ஏற்படுத்திக் கொடுப்பதோடு.. எது வந்தாலும் ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவத்தையும் அடைய வைக்கும்.    7. இயற்கையோடு இயைந்த வாழ்க்கை வாழ முயல வேண்டும். அப்போது நாம் நல்ல புத்துணர்ச்சி பெற முடியும்.    8. நன்றி உணர்வுடன் வாழ வேண்டும்.  நமது முன்னோர்களுக்கு: நமக்கு உணவு முதல் அனைத்தையும் அளிக்கும் பஞ்ச பூதங்களுக்கு: நம் வாழ்வை இனிமையாக்கும் அத்தனை பொருட்களுக்கும்: நம் குடும்பம் மற்றும் நட்பு வட்டத்திற்கு நன்றிகள் சொல்ல நாள்தோறும் ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்க வேண்டும்.   9. கடந்த காலக் கஷ்டங்களை மறந்து… எதிர்கால பயத்தை விடுத்து.. நிகழ்காலத்தில் சிறப்பாக வாழ முற்பட வேண்டும்.    10. உன்னுடைய தனித்துவமான உனக்குள் கனன்று கொண்டிருக்கும் வேட்கையைப் பயன்படுத்தி வாழ்வின் இறுதி வரை அர்த்தமுள்ள ஒரு வாழ்க்கையை வாழ முற்பட வேண்டும்.    அன்பு நண்பரே! இவை எல்லாவற்றையும் நமது நாட்டு முன்னோர்களும் எப்போதோ சொல்லி வைத்திருக்கிறார்கள்: வாழ்ந்தும் காட்டி இருக்கிறார்கள்.   பொதுவாகக் கீழை நாடுகள் வெறும் பணம்.. பதவி… பகட்டான வாழ்க்கை - இவற்றிற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்ததில்லை.   " இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்.. இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும் !" என்று ஒரு மனிதன் வாழ்வதுதான் வாழ்க்கை:   தன்னையும் உயர்த்திக் கொண்டு சுற்றி இருப்போரையும் உயர்த்தி… "எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் யாதொன்றும் யாம் அறியோம் பராபரமே”  என்று வாழ்வது தான் வாழ்க்கை என்று ஆணித்தரமாகச் சொல்லி வைத்த அதே கருத்துக்களைத் தான் இந்த IKIGAI தத்துவமும் வலியுறுத்துகிறது.   உயர்ந்த எண்ணம் உடையோர் எங்கிருந்தாலும் ஒரே மாதிரி தான் சிந்திக்கிறார்கள் என்பது இதிலிருந்து தெளிவாகத் தெரிகிறது அன்பு நண்பரே ! +++++++++++   வேலையா? வணிகமா? எது சிறந்தது?   இரண்டுமே சிறந்தது தான் என்பது இந்த எளியவளின் கருத்து.   இந்தக் காலத்தில் நல்ல கல்வி நிறுவனத்தில் சேர்ந்து படித்து… நல்ல மதிப்பெண்கள் எடுத்து… பெரிய நிறுவனங்களில் campus placement ஆகும் பிள்ளைகளும் இருக்கிறார்கள். அவர்கள் தங்களின் திறமை மற்றும் உழைப்பின் மூலம் மென்மேலும் பதவி உயர்வு பெறுகிறார்கள். பலர் அந்த நிறுவனத்தின் மூலமே வெளிநாடு செல்லும் வாய்ப்பையும் அடைகிறார்கள். பெரும்பாலான பெற்றோர்களும் இதைத் தான் விரும்புகிறார்கள் என்பதையும் மனதில் கொள்ள வேண்டியுள்ளது. அதாவது படித்து முடித்து ஒரு நல்ல வேலையில் அமர்தல்.   மாறாகச் சிலர் " கட்டாயம் நான் ஏதாவது ஒரு தொழில் தான் செய்வேன் " என்று முனைப்புடன் இறங்கி ஏதாவது ஒரு தொழில் செய்வோரும் உள்ளனர்.   வேலை என்றால் ஒரு குறிப்பிட்ட மாத ஊதியம் நிச்சயம் .  தொழிலில் அப்படி எதிர்பார்க்க முடியாது. என் கணவர் பார்த்துக் கொண்டிருந்த கட்டுமானக் கம்பிகள் தயாரிக்கும் தொழிற்சாலை மூடப்பட வேண்டிய சூழ்நிலை வந்த போது.. (1993) அதற்கு மேல் எங்கேயும் வேலைக்குப் போக விருப்பம் இன்றி.. மிகச் சிறிய அளவில் அவருக்குத் தெரிந்த பழைய இரும்பைக் கடைகளில் இருந்து பழைய இரும்புகளை வாங்கிக் கட்டுமானக் கம்பிகள் தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்குக் கமிஷன் அடிப்படையில் அனுப்பத் தொடங்கினார். ஓரிரண்டு ஆண்டுகளில் நல்ல முன்னேற்றம் தெரிந்தது. இறுதி வரையில் அதைத் தான் செய்து வந்தார்.   எங்களின் நீண்ட கால நண்பர் பழைய இரும்புகளை வாங்கிக் கட்டுமானக் கம்பிகள் தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கு விற்கும் கடைகள் வைத்து வியாபாரம் செய்பவர். பையன் B.E. 82% and M.C.A. 85%. ஆனால் அவன் அப்பா அவனை வேலைக்கு அனுப்ப விரும்பவில்லை. அவர் " இவன் வேலைக்குப் போய் ஏ.சி. ரூம் சுகம் கண்டு கொண்டான் என்றால் என் கடையில் அமர்ந்து வேலை செய்யத் தயங்குவான்.. அதனால் என்னுடன் அவன் கடையிலேயே இருந்து தொழிலைக் கற்றுக் கொள்ளட்டும்" என்று கூறிவிட்டார். அவனும் அதற்குச் சம்மதித்தான்: இன்று ஒரு திறமையான வணிகனாகி விட்டான். இவனிடம் " நாம் நிறையப் படித்திருக்கிறோம்" என்ற மனப்பான்மை துளியும் இல்லை. அவன் படிப்பு கடைகளைத் திறம்பட நடத்த உதவுகிறது.   அதேபோல் இன்னொரு நண்பரின் மகன் 9வதுடன்‌ பள்ளிப் படிப்பை நிறுத்தி விட்டு.. அவனுடைய அப்பா வைத்திருந்த கடையைக் கவனிக்கத் தொடங்கினான். பழைய இரும்பு..பழைய பிளாஸ்டிக் வாங்கி விற்கும் கடை. தொழிலாளியாகவே தன் அப்பா கடையில் சில ஆண்டுகள் வேலை பார்த்துத் தொழில் நுணுக்கங்களைக் கசடறக் கற்றுக் கொண்டு விட்டான். சில ஆண்டுகளுக்குப் பிறகு மதுரையில் cold storage களும் தொடங்கினான். இன்று அவன் ஒரு நல்ல முதலாளி.   " மதுசந்தன் மாண்டியா " என்று கூகுளில் தேடுங்கள். அமெரிக்காவில் லட்சங்களில் சம்பாதித்தவர் எப்படி ஒரு கட்டத்தில் தாய் மண்ணுக்குத் திரும்பி.. தங்கள் பகுதி இயற்கை முறையில் விவசாயம் செய்பவர்களின் பொருட்களை நல்ல முறையில் சந்தைப்படுத்த உதவுகிறார் என்று தெரியும்.   யுட்யூபில் டெல்டா பிஸினஸ் என்று போட்டுப் பாருங்கள்.   பெரிய படிப்புப் படித்தவர்கள்… படிக்காதவர்கள்: வேலைக்குப் போய் பிடிக்காமல் வெளியே வந்தவர்கள்: தொடக்ககால முதலே தொழில் செய்வதில் ஆர்வமுடன் இறங்கி… அடிபட்டு… மிதிபட்டுப் பாடம் கற்றுக் கொண்டு.. ஒரு கட்டத்தில் எல்லாவற்றையும் சமாளிக்கும் திறமையை வளர்த்துக் கொண்டு சிறந்த தொழிலதிபர்களாக விளங்குகிறார்கள் என்று விலாவாரியானத் தகவல்கள் கிடைக்கும்   சென்னை வசந்த் & கோ. சரவணா ஸ்டோர்ஸ்… ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் - இவர்களின் வரலாறுகளையும் படித்துப் பாருங்கள் நண்பரே !   எழுதினால் நிறைய எழுதலாம். சுருக்கமாகச் சொன்னால் வேலை என்பது ஒரு பாதுகாப்பான கூடு.   தொழில் என்பது அலையடிக்கும் கடல். எப்போது புயல் வரும்… எப்போது சுனாமி வரும் என்று தெரியாது. எதற்கும் தயாராக இருக்க வேண்டும்.. எதையும் சமாளிக்கும் மனோதிடம் மற்றும் அடுத்தவர்களிடம் தன்மையாகப் பழகும் திறன் போன்றவை அவசியம் வேண்டும்.    திரு. கிரேஸி மோகன் அவர்கள் பல நேர் காணல்களில் சொல்லி இருக்கிறார் :   திரைத்துறைக்கு வராமல்… நான் வேலை பார்த்த அரசு அலுவலகத்திலேயே தொடர்ந்து வேலை பார்த்திருந்தால்.. தினமும் காலை வேலைக்குப் போய்..மாலை திரும்பி வந்து மனைவி கொடுக்கும் டிஃபனைச் சாப்பிட்டு விட்டு.. அக்கடான்னு டிவி பார்த்து விட்டுத் தூங்கிப் போயிருப்பேன். வாழ்க்கையின் சவால்கள் எதுவும் எனக்குத் தெரியாமலே போயிருக்கும்! உண்மை தானே ஐயா? No Pain... No Gain!   " வேலையில் மட்டும் சவால்கள் பிரச்னைகள் இல்லையா ? " என்று நீங்கள் கேட்கலாம். ஒரு அலுவலக வேலை என்பது ஒரு கூட்டுப் பொறுப்பு. ஆனால் தொழில் என்பது அப்படியல்ல. வாழ்ந்தாலும் நீங்கள் தான் வாழப் போகிறீர்கள்.. தாழ்ந்தாலும் உங்கள் வாழ்க்கை மட்டுமே பாதிக்கப்படப் போகிறது. மொத்தத்தில் வேலையோ தொழிலோ… நேர்மையைக் கடைப்பிடித்தல் - Straightforwardness உண்மையான உழைப்பு – Smart Work நேரந் தவறாமை – Time Consciousness திட்டமிட்டுப் பணி முடித்தல் – Pre Planned Work என்று வரையறுத்துக் கொண்டு வாழ முற்பட்டால் வெற்றி நிச்சயம் என்பது எங்கள் வாழ்வில் பல்வேறு மனிதர்களின் மூலம் கற்றுக் கொண்ட ஆகச் சிறந்த பாடம் ஐயா ! +++++++++++     பிறப்பும் இறப்பும் நம் கையில் இல்லை   என் தந்தை நீரிழிவு நோய் பரிசோதனை 10 மாதங்கள் செய்யவில்லை . பின்னர் மாரடைப்பு ஏற்பட்டு 10 நிமிடத்தில் உயிரிழந்தார் . இது எங்களுடைய கவனமின்மையா ? இல்லையேல் கோவிட் - 19 ஊசி இரண்டாவது தவணை காரணமா ? எந்தவித கெட்ட  பழக்கமும்  இல்லை , என்ன காரணம் ?    பிறப்பும் இறப்பும் நம் கையில் இல்லை அன்பு நண்பரே!    உங்கள் தந்தையின் வயதை நீங்கள் குறிப்பிடவில்லை. என் கணவருக்கு அவருடைய 60வது வயதில் நீரிழிவு நோய் வந்தது. தனது 73+ வயதில்.. கடந்த 22.02.2022 ல் அவர் இறைவனடி சேர்ந்தார். நீரிழிவு நோய்க்கு இயற்கை முறை (வெந்தயம்.. கருவேப்பிலைப் பொடி.. மஞ்சள் தூள்.. ஒரு சிறு துண்டு லவங்கப்பட்டை) மருந்தே எடுத்துக் கொண்டார்.   அவர் sales line ல் ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌இருந்தவர். எப்போதாவது நண்பர்களுடன் drinks அடிக்கும் பழக்கம் உண்டு. 2012 அக்டோபரில் முதல் massive heart attack வரும் வரை chain smoker என்று சொல்வார்களே… அந்த ரகம் ! ஆனால் அந்த attackகிற்குப் பிறகு இரண்டுமே சுத்தமாகத் தானாகவே நின்று போய் விட்டன. 2012 நவம்பரில் heartல் medicated stent வைக்கப்பட்டது. 2013 ஜனவரி இறுதி வாரத்தில் kidney infection கண்டறியப்பட்டது. இறுதி வரை அது தொடர்ந்தது. 2015ல்‌ second heart attack. 2021 March இறுதியில் கோவிட் தொற்று ஏற்பட்டது. 2021 August இறுதி வாரத்தில் மருத்துவர்களின் அனுமதி பெற்று கோவிட் தடுப்பூசி முதல் டோஸ் ஒரு சனிக்கிழமை போடப்பட்டது. அடுத்த மூன்றாவது நாளில் அதாவது செவ்வாய்க் கிழமை காலை ஆறு மணிக்கு மறுபடியும் massive heart attack. அதன் பின் படிப்படியாக அவர்களின் உடல் நிலை மளமளவென சீர் குலையத் தொடங்கி விட்டது. அதுவரை எட்டு ஆண்டுகளுக்கு மேல் இதய மற்றும் சிறுநீரக பாதிப்புக்குக் கொடுக்கப்பட்ட எந்த மருந்தும் அப்போது வேலை செய்யவில்லை. உடல் மருந்துகளை ஏற்பதை நிறுத்தி விட்டது.   இன்னொரு தகவல்: 2012ல் பெங்களூருவில் (எங்கள் மகன் அங்கு தான் வேலை பார்க்கிறான்) என் கணவருக்கு stent வைப்பதற்காக நாங்கள் மருத்துவ மனையில் இருந்த போது அடுத்தடுத்த அறைகளில் இருந்த 3 பேர்கள் 73…71...56 வயதுகளில் இதய நோய் சிகிச்சைக்காக வந்தனர். மூன்று பேரும் clean slate ... அதாவது நீங்கள் சொன்னது போல் எந்த விதமான கெட்ட பழக்கங்களும் இல்லாதவர்கள். மூன்று பேருக்கும் bye pass surgery தான் செய்தார்கள். இதற்கு என்ன சொல்வீர்கள்? அதன் பின் தான் " உங்களின் சிகரெட் பழக்கம் தான் உங்களுக்கு heart attack வரக் காரணம் " என்று அவரைத் திட்டிக் கொண்டே இருந்த நான் திட்டுவதை நிறுத்தினேன்.   எதற்கு இவ்வளவு விலாவாரியாகச் சொல்கிறேன் என்றால்.. கெட்ட பழக்கங்களுக்கும்… இதய மற்றும் சிறுநீரக நோய்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பது 2012லிருந்து நாங்கள் மருத்துவ மனையில் இருந்த போதெல்லாம் எங்களுக்குத் தெரிய வந்த உண்மை. 2013 — 2020 வரை சிறுநீரகத் தொற்றுப் பிரச்னைக்காக 10க்கும் மேற்பட்ட முறைகள் என் கணவருக்கு மருத்துவ பாஷையில் procedures என்று சொல்லப்படும் சிறிய அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டன. ஆனால் நீரிழிவு நோய்க்கு அவர் எடுத்துக் கொண்ட இயற்கை மருந்தால் முற்றிலும் அது கட்டுக்குள்ளே தான் இருந்தது.   ஒரு தகவல் நண்பரே! இதய நோய் மட்டும் இருப்பவர்கள் நிறையப் பேருக்குக் கோவிட் தடுப்பூசி ஒத்துக் கொள்ளவில்லை என்பது நிதர்சனம்! சிலருக்குத் தங்களின் தந்தைக்கு நேர்ந்தது போல் நேர்கிறது: அல்லது வேறு விதமான தீவிரமான பிரச்னைகள் அவரவர் உணவுப் பழக்கம்.. புகைபிடித்தல்..மது அருந்துதல் போன்றவற்றால் ஏற்படுகின்றன என்பதையும் நாங்கள் மருத்துவ மனையில் இருந்த போதெல்லாம் பார்த்தோம். எனவே தயவுசெய்து வருத்தப் படாதீர்கள்.. நமது பிழையோ.. கவனக் குறைவோ இதில் இல்லை ஐயா! உங்களுக்கு இறைவன் மன ஆறுதலைத் தர வேண்டும் என்று வேண்டிக் கொள்ளும் அன்பு அம்மா. ++++++++++++   கொரோனா கற்றுக் கொடுத்த பாடங்கள் !   பணத்தால் மட்டுமே எதையும் சாதிக்க முடியாது என்பதை அறிந்து கொண்டோம். மனிதன் நல்ல மனிதனாக இருந்தால் இயற்கை நன்றாக இருக்கும் ! ஏனெனில் ஆறுகள் தூய்மை ஆகின. காற்று மாசுபாடு குறைந்தது. வீடு மற்றும் சுற்றுப்பறச் சுத்தம் எவ்வளவு முக்கியம் என்பதைத் தெளிவாகப் புரிந்து கொண்டோம். கடைகளில் வரிசையில் நிற்க வேண்டிய அவசியம் வந்த போது ஒரு ஒழுங்கைக் கற்றுக் கொண்டோம் . பொருளாதார ரீதியாக வசதி குறைந்த மனிதர்களின் பசியை உணர்ந்தோம்.. உதவ முன் வந்தோம். நமது மஞ்சள் வேப்பிலை இஞ்சி எலுமிச்சம்பழம் போன்றவற்றின் அருமைகளை மிக நன்றாக உணர்ந்தோம். நமது அக்னிஹோத்ரம் போன்ற யாக பூஜைகள் எப்படி சுற்றுப்புறச் சூழ்நிலையைத் தூய்மை ஆக்குகிறது என்பதை புரிந்து கொண்டோம். உடலை எப்படிச் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதைக் கற்றுக் கொண்டோம். எல்லாவற்றிற்கும் மேலாக… ஆச்சாரம் என்றால் ஆரோக்கியம் என்பதை மிகத் தெளிவாகக் கற்றுக் கொண்டோம்.   கொரோனாவைப் பற்றி இந்த எளியவள் எழுதிய ஒரு கவிதை:   கொரோனா(வை)க் கண்டு பயந்தோடும் கோழை மாந்தரே நில்லுங்கள்… உங்களைச் சுற்றி நடப்பது என்ன ஒரு நொடி பாருங்கள்…   கோழிக்கும்.. குருவிக்கும் காக்கைக்கும் இங்கே கொரோனா பயமில்லையே… கோடியில் காசு சேர்க்கும் மனிதனைக் கொரோனா விடவில்லையே… ஏனென்று ஒரு நொடி சிந்தித்துப் பாருங்கள் எந்தன் தோழர்களே… இயற்கையை விட்டு விலகி வந்ததன் பரிசிது தோழர்களே… காலன் யாரையும் விடுவதுமில்லை காசுகள் நம்மைக் காப்பதுமில்லை...   ஆச்சாரம் என்றால் ஆரோக்கியம் என்று பெரியோர் வகுத்தார்கள்… ஆச்சாரம் என்றால் தீண்டாமை என்று சிறியோர் பிரித்தார்கள்… உண்மையை அறியா மாந்தர்கள் அழகு வார்த்தையில் வீழ்ந்தார்கள்… உள்ளதை இழந்து நலமெலாம் குலைந்து நலிந்தே போனார்கள்... உங்கள் சுத்தம்.. உங்கள் வாழ்க்கை... உங்கள் கையில்..வாழ்வதும் தாழ்வதும் !   கை வாய் மூக்கு சுத்தம் என்பது மட்டும் போதுமா? கட்டாயமாக அக்கம்பக்கச் சுத்தம் வேண்டாமா? புகையிலை மதுவும் போதையும் நீங்கள் விலக்கிட வேண்டாமா? பாரத நாட்டின் நலத்தை நீங்கள் நினைத்திட வேண்டாமா? உங்கள் வீடு… உங்கள் உரிமை! உங்கள் நாடு... உங்கள் கடமை! +++++++++++++ ஆவிகளுடன் பேசுவது என்பதை நம்பலாமா?   என் அப்பா இதையெல்லாம் துளியும் நம்பாதவர். அவர் நண்பர் ஒருவர் இதில் தீவிர ஈடுபாடு கொண்டவர். ஒரு முறை அந்த நண்பர் தான் ஆவியுடன் பேசுவதற்கு ஏற்பாடுகளைச்‌ செய்து விட்டு என் அப்பாவை மிகவும் வற்புறுத்தி அங்கே இருக்க வைத்து விட்டார். இதில் நம்பிக்கையுள்ள சிலரும் கேள்விகள் கேட்பதும் பதில் பெறுவதுமாக நேரம் நகர… திடீரென்று ஆவிகளுடன் இணைப்பில் இருந்தவர்…" இங்கு சோமநாதன் என்பவர் யார்.. ஒரு ஆவி அவரிடம் பேச வந்திருக்கிறது.. " என்று கேட்க.. என் அப்பா ஆடிப் போய் விட்டாராம். " அப்பா… நான் கார்த்தி வந்திருக்கம்ப்பா.. நான் நல்…லா இருக்கம்ப்பா.. நீங்க கவலப் படாதீங்கப்பா.. " என்று பேச… பிறக்கும் போதே மஞ்சள் காமாலையோடு பிறந்து நாலரை வயதில் இறைவனடி சேர்ந்து விட்ட தன் அன்பு மகனின் குரல்… உயிரோடு இருக்கும் போது எப்படி இருக்குமோ அதேபோல் அப்படியே கேட்டதும் என் அப்பா திகைத்துப்போய் ஒன்றுமே பேசாதிருக்க… மீண்டும் அந்தக் குரல்.. "அப்பா..." என்று கூப்பிட… என் அப்பா " கார்த்தீ… " என்று பெருங்குரலெடுத்து அழது விட்டாராம். " சரீப்பா… நீங்கல்லாம் நல்லாருப்பீங்க.. நான் போறேன் " என்று சொல்லி விட்டுப் போய் விட்டதாம். இது நடந்தது 1958ல். அதன் பிறகு தான் " இதெல்லாம் நடக்கக் கூடியது தான் என்று நம்பத் தொடங்கினேன் " என்பார் என் அப்பா!   நமது நாட்டின் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மதிப்பிற்குரிய திரு. ஜஸ்டிஸ் கிருஷ்ணய்யர் அவர்களின் " மரணத்திற்குப் பின்னால் " என்ற புத்தகத்தை முடிந்தால் வாசித்துப் பாருங்கள் நண்பரே ! இறைவனடி சேர்ந்து விட்ட தன் மனைவியின் ஆவியுடன் பேச அவர் எங்கெங்கெல்லாம் அலைந்தார்..‌‌ இறுதியில் லண்டனில் ஒரு மீடியா மூலம் தன் மனைவியின் ஆவியுடன் பேசியதை விவரித்திருப்பார்.   அதேபோல் அமெரிக்க Hypnotist ஆன Mr. Brain Wess அவர்கள் எழுதிய Messages from the Masters புத்தகத்தையும் படியுங்கள். யுட்யூபில் ஆவியுலக ஆராய்ச்சியாளர் திரு. விக்கிரவாண்டி ரவிச்சந்திரன் அவர்களின் ஆவிகள் உலகம் சேனலின் காணொலிகளையும் விருப்பம் இருந்தால் பாருங்கள்.   நமது அறிவுக்கு அப்பாற்பட்ட எத்தனை எத்தனையோ விஷயங்கள் உலகத்தில் இருக்கின்றன… நம்புவதும் நம்பாததும் அவரவர் இஷ்டம். நலமே வாழ நல்வாழ்த்துக்கள் அன்பு நண்பரே!                        ********************************************** தப்பான செயல்களை மனதால் நினைத்தாலும் பாவம் சேருமா?   தப்பான செயல்களைச் செய்யத் தூண்டுவது தப்பான எண்ணங்கள் தானே.. அந்த எண்ணங்கள் தோன்றும் இடம் பெரும்பாலும் நமது மனது தான் அன்பு நண்பரே! அதனால் தான் மனம் (எண்ணம்) வாக்கு (சொல்) காயம் (உடல்) மூன்றினாலும் நல்லவற்றையே நினைக்க... செய்ய வேண்டும் என்று சொல்லி வைத்துள்ளனர் நம் முன்னோர்கள்! அதிலும் குறிப்பாக மனதில் நல்ல எண்ணங்கள் தான் தோன்ற வேண்டும் என்கிறார்கள். ஏனென்றால் செயலுக்கு அடிப்படையே எண்ணம் தான் !   நமது வணக்கத்துக்குரிய சில பெரியவர்களின் வாக்குகளைப் பார்ப்போம் வாருங்கள்!   1." பூட்டைத் திறப்பது கையாலே நல்ல மனம் திறப்பது மதியாலே!  மனதில் உறுதி வேண்டும்! உள்ளத்தில் உண்மை ஒளி உண்டாயின் வாக்கினிலே ஒளியுண்டாகும்..   மனமெனும் பெண்ணே! வாழி நீ கேளாய்! ஒன்றையே பற்றி ஊசல் ஆடுவாய்.. அடுத்ததை நோக்கி அடுதடுத்து உலாவுவாய்.. நன்றையே கொள் எனில் சோர்ந்து கை நழுவுவாய் விட்டுவிடு என்றதை விடாது போய் விழுவாய்.. தொட்டதை மீள மீளவும் தொடுவாய்! " என்றெல்லாம் பேசுகிறார் நமதருமை முண்டாசுக் கவி பாரதியார் !   2.. வெள்ளத்தனைய மலர் நீட்டம் மாந்தர்தம்  உள்ளத்தனையது உயர்வு உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்..   மன நலம் மன்னுயிர்க்கு ஆக்கம் (மனத்தின் தூய்மை உலக இனத்துக்கு எல்லாம் நன்மையும் இனிமையும் தரும்)   மன நலத்தின் ஆகும் மறுமை... (நல்ல மனம் உடையாருக்கு மறுமையிலும் இன்பம் கிட்டும்)   எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார் திண்ணியராகப் பெறின்! (ஏனெனில் எண்ணம் மனதின் குழந்தை)   மனம் தூய்மை செய்வினை தூய்மை இரண்டும் இனம் தூய்மை தூவா வரும்...   மனம் தூயார்க்கு எச்சம் நன்றாகும்! (தூய மனம் உடையாருக்கு நல்ல பிள்ளைகளும் புகழும் எஞ்சும்) என்பவை வள்ளுவப் பெருந்தகை வாக்குகள்!   3. குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்.  மனம் போல மாங்கல்யம்! அகத்தின் அழகு முகத்தில் தெரியும் இவை தமிழ் பழமொழிகள்!   4." உள்ளியது முடிக்கும் உரனுடை உள்ளத்து " என்கிறது புறநானூற்றுப் பாடல் ஒன்று!  மனம் போன போக்கெல்லாம் போகவேண்டாம் – உலக நீதி " கண் போன போக்கிலே கால் போகலாமா? கால் போன போக்கிலே மனம் போகலாமா? மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா? " என்ற பழைய திரைப்படப் பாடல் நினைவுக்கு வருகிறதா நண்பரே?   5. தம்மபதத்தில் புத்தர் சொல்கிறார்:  மனம் அலை பாயக்கூடியது; நிலையற்றது. அது இஷ்டப்பட்ட இடத்திற்குச் சிறகடித்துப் பறக்கும். மனதைக் கட்டுப்படுத்துவது கடினம். ஆனால் அப்படிக் கட்டுப்படுத்துவது மிகவும் நல்லது. கட்டுப்படுத்தப்பட்ட மனதானது, இன்பத்தில் உறைவிடம் ஆகும்.   6." நினைமின் மனனே நினைமின் மனனே  சிவபெருமானைச் செம்பொன் அம்பலவனை நினைமின் மனனே நினைமின் மனனே " என்று மனதிற்கு அறிவுரை சொல்கிறார் வணக்கத்துக்குரிய பட்டினத்தடிகள்   7. சிந்தையை அடக்கியே சும்மா இருக்கின்ற திறம் அரிது சத்தாகி என் சித்தமிசை குடி கொண்ட தேசோ மயானந்தமே " என்றும்….  " காடும் கரையும் மனக்குரங்கு கால் விட்டோட அதன்பிறகு ஓடும் தொழிலால் பயனுளதோ ஒன்றாய்ப் பலவாய் உயிர்க்குயிராய் ஆடும் கருணைப் பரஞ்ஜோதி அருளைப் பெறுதற்கு அன்பு நிறை தேடும் பருவம் இதுகண்டீர் சேரவாரும் ஜெகத்தீரே!" என்று மனதைக் குரங்கோடு ஒப்பிட்டும் திட்டுகிறார் வணக்கத்துக்குரிய தாயுமானவர் சுவாமிகள் இன்னொரு பாடலில்..   8. வாய்கொண்டு உரைத்தல்அரிது என் செய்கேன்  என்செய்கேன் வள்ளல் உன் சேவடிக்கண் மன்னாது பொன்னாசை மண்ணாசை பெண்ணாசை வாய்ந்துழலும் எனது மனது பேய்கொண்டு கள்உண்டு கோலினால் மொத்துண்டு பித்துண்ட வன்குரங்கோ பேசுறு குலாலனாற் சுழல்கின்ற திகிரியோ பேதைவிளை யாடுபந்தோ – இதில் மனதை வன்குரங்கு என்று சாடுகிறார் வணக்கத்துக்குரிய வள்ளலார் பெருமான் .   9." மனம் எனும் தோணி பற்றி, மதி எனும் கோலை ஊன்றி  சினம் எனும் சரக்கை ஏற்றி செறி கடல் ஓடும்போது மதன் எனும் பாறை தாக்கி மறியும் போது, அறிய ஒண்ணாது உனை உனும் உணர்வை நல்காய், ஒற்றியூர் உடைய கோவே ! " என்று சிவபெருமானிடம் மன்றாடுகிறார் வணக்கத்துக்குரிய அப்பர் சுவாமிகள் தனது தேவாரப் பதிகம் ஒன்றில்!   10. “சிந்தா நாஸ்தி கில – தேஷாம் சிந்தா சிந்தா நாஸ்தி கில  சமதம கருணா சம்பூர்ணாணாம் சாது சமாகம சங்கீர்ணானாம்..” என்கிறார் வணக்கத்துக்குரிய மகான் சதாசிவ பிரம்மேந்திரர் ஐயா அவர்கள்! (நல்ல குணங்கள், சாதுக்களின் தொடர்புடையோருக்கு மனக்கவலை இல்லை)   11. உத்தரேத் ஆத்மனாத்மானம் – பகவத் கீதை (6-5)  ஒருவன் தன் மனதின் உதவியுடன் தன்னை உயர்த்திக் கொள்ள வேண்டும் .   12. " உன்னையல்லால் ஒரு பெண்ணை இனி நான்  உள்ளத்தினாலும் தொட மாட்டேன் " என்று ஒரு பழைய திரைப்படப் பாடலில் கவிஞர் திரு. கண்ணதாசன் அவர்கள் எழுதி வைத்துள்ளார். இப்படி நிறைய இருக்கின்றன! எத்தனை எத்தனையோ ஞானிகள் நமக்கு எவ்வெவ் வழியில் எல்லாமோ மனதைக் கட்டுப்படுத்த அறிவுரைகள் கூறியுள்ளனர் : கூறியது மட்டுமின்றி வாழ்ந்தும் காட்டி இருக்கின்றனர். அவற்றை முடிந்த வரை பின்பற்றி மனதை ஓரளவாவது கட்டுக்குள் வைத்து நலமே வாழ முயற்சிப்போம் அன்பு நண்பரே!                       *************************************** கழுகிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய குணாதிசயங்கள்!   பிரச்னைகள் வரும் போது அதை எதிர்கொள்ள வேண்டும். அல்லாது உடனே "எனக்குத் தான்.. எனக்கு மட்டுமே தான் இப்படியெல்லாம் நடக்கிறது.. தற்கொலை தான் இதற்கு முடிவு ‌!" என்று சோர்ந்து போகும் மனநிலை உள்ளவர்கள் தயவுசெய்து தயவுசெய்து… 5 நிமிடங்கள் ஓடக்கூடிய ஒரு ஆங்கிலக் காணொலியைப் பார்த்தேன். அந்தக் காணொலியில் உள்ள விஷயத்தைத் தான் தமிழாக்கம் செய்து வெளியிட்டிருக்கிறேன் இந்த அம்மா! அந்தக் காணொலி மிகவும் எளிமையாக வாழ்க்கைப் பாடத்தை மனிதர்களுக்குக் கற்றுக் கொடுக்கிறது.            கழுகிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய குணாதிசயங்கள் !    1.Eagles fly alone at high altitude. 2.Eagles have vision. 3.Eagles are fearless. 4.Eagles are tenacious. 5.Eagles never eat dead things. 6.Eagles prepare for training. 7.Eagles possess vitality.   1.Eagles fly alone at high altitude. கழுகுகள் தனியாகத் தான் உயரத்தில் பறக்கும். அதிகமாகப் பேசும் கிளியால் உயரமாகப் பறக்க முடியாது ! மௌனமாக இருக்கும் கழுகோ வானத்தையே தொடும் அளவிற்கு மிக உயரத்தில் பறந்து கொண்டு இருக்கிறது . கழுகுகள் பெரும்பாலும் தனியாகத் தான் வானில் பறக்கின்றன. அல்லது கழுகுகளோடு மட்டுமே தான் பறக்கின்றன. அவை சின்னச்சின்னப் பறவைகளான காக்கைகள்..‌ சிட்டுக் குருவிகள் போன்றவற்றுடன் சேர்ந்து பறப்பதில்லை..   அதாவது குறுகிய மனப்பான்மை உள்ள மனிதர்களிடமிருந்தும்.. நம்மை மனதளவில் பலவீனப்படுத்தும் ஆட்களிடமிருந்தும் நாம் விலகி இருக்க வேண்டும் என்பதை இது உணர்த்துகிறது. Circumstances make a man என்ற வாசகத்தைக் கேள்விப்பட்டு இருப்பீர்கள் தானே? அதாவது உன்னைச் சுற்றி உள்ளவர்கள் தான் உன் வாழ்க்கையை நிர்ணயிக்கிறார்கள். ஆகவே நல்ல மனிதர்களைத் துணை கோலுதல் நல்லது. இந்த இடத்தில் இதையும் நினைவு கூறுங்கள்: Tell me Your Friend, I'll tell You Who are You? நாம் கிளியாக வாழ வேண்டுமா அல்லது கழுகாகவா ? நாம் தான் அதை முடிவு செய்ய வேண்டும்!   2.Eagles have vision கழுகுகளுக்குப் பார்வைத் திறன் மிக அதிகம். 5 கி.மீ. தள்ளி இருக்கும் இரையைக் கூட அவைகளால் துல்லியமாகப் பார்க்க முடியுமாம். அந்த இரையை மட்டுமே கழுகு குறி வைக்கும். அதில் மட்டுமே கவனம் செலுத்தும். இரையைப் பிடிக்கும் வரை.. எந்தவிதமான தடைகள் வந்தாலும் கவலைப்படுவதில்லை. இதையேதான் மகாபாரதமும் சொல்கிறது. மதிப்பிற்குரிய துரோணாச்சாரியார் தனது பாண்டவ.. கௌரவ சீடர்களுக்கு வில் வித்தை கற்றுத் தருகிறார்.   ஒரு பறவை பொம்மையை மரத்தில் வைக்கிறார். அதன் கண்ணைப் பார்த்து அம்பை எய்யச் சொல்கிறார். எல்லோரும் தயாரானதும் எல்லோரையும் பார்த்து " உங்கள் கண்களுக்கு என்ன தெரிகிறது ? " என்று கேட்கிறார். மரம்.. கிளை.. இலைகள்.. பறவை என்று ஒவ்வொருவரும் சொல்லிக் கொண்டே போக.. அர்ஜுனன் ஒருவன் தான் "பறவையின் கண்" என்கிறான். அதுதானே குரு சொன்ன இலக்கு ? அதனால் தான் ஒரு செயலில் இறங்கும் போதுஉங்களது நோக்கம் அர்ஜுன இலக்காக இருக்க வேண்டும் என்று குறிப்பிடும் பழக்கம் வந்தது. அதுபோல் உங்கள் குறிக்கோளை நிர்ணயம் செய்து அதில் மட்டுமே கவனம் செலுத்தி வெற்றி பெற எல்லா முயற்சிகளையும் மேற் கொள்ளுங்கள். தடைகளைத் தகர்த்தேறியும் மனப் பக்குவத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்.   3.Eagles are fearless. கழுகுகள் பயப்படுவதில்லை. தன் இரை எவ்வளவு பெரியது.. பலம் வாய்ந்ததாக இருந்தாலும் அதை தனதாக்கிக் கொள்ள முடிவு செய்து விட்டால்.. கழுகுகள் போராடத் தயங்குவதில்லை.. பின் வாங்குவதில்லை. தனது எல்லையைக் காப்பதிலும் அப்படித்தான். அதேபோல் உங்கள் பிரச்சினை எவ்வளவு பெரியதாக இருந்தாலும் நேருக்கு நேர் எதிர் கொள்ளுங்கள்.. ஒருபோதும் பின் வாங்காதீர்கள்.. நீங்கள் கவனித்துப் பார்த்தீர்கள் என்றால்.. வெற்றி பெற்ற மனிதர்களுக்கு பயம் இருந்ததில்லை. எவ்வளவு பெரிய பிரச்சனையாக இருந்தாலும் அதை அவர்கள் நேருக்கு நேர் எதிர் கொள்கிறார்கள்.   4.Eagles are tenacious. கழுகுகள் மன உறுதி மிக்கவை. அவை புயலை நேசிக்கின்றன. மேகங்கள் ஒன்று கூடும் போது அவை உற்சாகமடைகின்றன. மேகங்களுக்கு மேலே பறக்க அவை புயல் காற்றைப் பயன்படுத்திக் கொள்கின்றன. அந்த நிலையில் அப்படியே வழுக்கிக்கொண்டு போவது போல் (gliding) எளிதாகப் பறக்கின்றன... அதனால் அவைகளின் இறக்கைகளுக்கு ஒரு ஓய்வு கூடக் கிடைக்கிறது. ஆனால் இந்தப் புயல் சூழலில் மற்ற பறவைகள் மரங்கள்.. கிளைகள் என்று பதுங்கிக் கொள்கின்றன. சாதனையாளர்கள் சவால்களைக் கண்டு பயப்படுவதில்லை.. மாறாக அவற்றை ரசிக்கிறார்கள்.. அவற்றைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி வெற்றி பெறுகிறார்கள்.   5.Eagles never eat dead things கழுகுகள் இறந்து போய் விட்ட எதையும் உண்பதில்லை. தான் வேட்டையாடிக் கொன்றவற்றின் மாமிசத்தை மட்டுமே உண்கின்றன. இந்த இடத்தில் பதிவாளர் கோடிட்டுக் காட்டுவது " கடந்த காலம் திரும்பப் போவதில்லை.. past is past!" பழைய வெற்றியைப் பற்றியே நினைத்துக் கொண்டிராமல்.. புதிதாக வெற்றி கொள்ள வேண்டிய எல்லையை நிர்ணயம் செய்யுங்கள்.   6.Eagles prepare for training. தங்கள் குஞ்சுகளைப் பறக்க வைக்க கழுகுகள் தங்களின் கூட்டில் இருக்கும் மென்மையான இறகுகள்… தழைகள் போன்றவற்றைக் கழித்து விடுகின்றன. அங்கிருக்க முடியாமல் வெளியே வரும் குஞ்சுகள் பறந்தே ஆக வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகின்றன.. பறக்கத் தொடங்குகின்றன. அதுபோல் நீங்களும் உங்களின் சுகமான வட்டத்தை (comfort zone) விட்டு வெளியே வாருங்கள். சவால்கள் இல்லாத அந்த வட்டம் உங்களை முன்னேற விடாது. மனதில் இதை ஆழமாகப் பதிய வைத்துக் கொள்ளுங்கள்.   7.Eagles possess vitality. கழுகுகள் ஆற்றல் மிகுந்தவை. கழுகுகளுக்கு வயதாகும் போது அவைகளின் இறக்கைகள் வலுவிழந்து போய் விடுகின்றன. அதனால் அவை நினைத்த உயரத்தில் பறக்கவோ… வேகமாகப் பறக்கவோ முடிவதில்லை. அவைகள் தனது பலவீனத்தை உணர்கின்றன. அதை அவற்றால் தாங்கிக் கொள்ள முடிவதில்லை. (நம்மில் சிலரைப் போல) சாவது மேல் என்று கூட அவைகள் நினைக்கத் தொடங்குகின்றன. ஆனால் மன உறுதியை விட்டு விடுவதில்லை. அந்த நிலையில் அந்தக் கழுகுகள் மலைகளில் ஒரு தனியான இடத்தைத் தேர்வு செய்கின்றன. அங்கே போய்த் தங்களது வலுவிழந்த இறக்கைகளைத் தானே பிய்த்து எரிகின்றன. தனது அலகையும்.. தனது கூர்மையான கால் நகங்களையும் பாறைகளில் உரசி உரசி உடைத்துக் கொண்டு விடுகின்றன. எவ்வளவு வலி மிகுந்த.. இரத்தம் வழியும் முறைகள் பாருங்கள்.. இறுதியில் ஒன்றுமில்லாமல் ஆகி விடுகின்றன. அதன் பின் புதிய அலகு.. கால் நகங்கள்.. இறக்கைகள் மீண்டும் முளைக்கும் வரைக்கும் அவைகள் அந்த மறைவிடத்திலேயே வாழ்கின்றன. அவைகள் முளைத்து வந்ததும் முன்னை விட உயரமாக அவை வான வெளியில் பறக்கத் தொடங்குகின்றன.   அதேபோல் தான் நாமும் பழக்கப்பட்ட சில விஷயங்களை உதறிவிட்டு வர வேண்டும். அதை விடுவது மிகக் கஷ்டம் என்று நினைத்தாலும் மன உறுதியுடன் அவைகளை உதறி விட வேண்டும். நம் வாழ்க்கைக்குச் சுமையாக இருக்கின்ற.. எந்த வகையான மதிப்பையும் ஏற்படுத்தாத விஷயங்களை விட்டு வெளியே வரத் தயங்கக் கூடாது. இந்த எளியவளின் சார்பிலும் உங்கள் சார்பிலும் இந்த அருமையான காணொலியை பதிவு செய்த அன்பருக்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். வாழ்வது ஒரு முறை ! வாழ்த்தட்டும் தலைமுறை ! **************************   நேர மேலாண்மை!   M.B.A. படிக்கும் மாணவர்களுக்கு அடிப்படைப் பாடம் ஒன்று : ஆனால் அது எல்லோரும் பொருந்தும் என்பது என் கருத்து. Urgent — Important Urgent — Not Important Not Urgent — important Not Urgent — Not Important. அதாவது அவசரம் — முக்கியம் அவசரம் — முக்கியம் இல்லை அவசரம் இல்லை — முக்கியம் அவசரமுமில்லை — முக்கியமும் இல்லை . இந்த வகையில் வேலைகளை வரிசைப்படுத்திச் செய்து பாருங்கள். நேரத்தை நேர்த்தியாக நம்மால் கையாள முடியும். இந்த எளியவள் தொண்டு செய்த நிறுவனத்தில் நாங்கள் வெளியே கட்டாயம் போக வேண்டிய நேரத்தில்.. தாங்க முடியாத பிரச்னைகளோடு யாரும் வந்தால் முதலில் அவர்களைத் தான் கவனிப்போம். அவர்களுடன் பேசி ஓரளவு அவர்களுக்கு ஆறுதல் கூறிவிட்டு நாங்கள் வெளியே போய் எங்கள் வேலைகளை முடித்து விட்டு மீண்டும் அவர்களிடம் பேசத் தொடங்குவோம். ஆக இந்த எடுத்துக் காட்டில் மனம் நொந்து வந்திருக்கும் அந்த நபர் தான்.. அவருக்கு ஆறுதல் சொல்ல வேண்டியது தான் அவசரம் மற்றும் முக்கியம் (Urgent — Important) எங்களைப் பொறுத்தவரை. ஏனெனில் பாதிக்கப்பட்டப் பெண்களுக்குத் தொண்டு செய்யத் தான் நாங்கள் களத்தில் இருக்கிறோம்… இல்லையா நண்பரே?   இதே தாங்கள் சேருவதற்காக ஏதாவது விசாரிக்க வந்தவர் என்றால் எங்கள் ஊழியர்கள் சிலரிடம் விளக்கங்கள் கேட்டுக் கொள்ளுங்கள் என்று சொல்லி விட்டு எங்கள் வேலையைப் பார்க்க வெளியே கிளம்பி விடுவோம். இது அவசரம்.. ஆனால் முக்கியம் இல்லை (Urgent — Not Important) என்ற பிரிவில் அடங்கும்.   சில கடிதங்கள் எழுத வேண்டும் என்றால் அதைச் சில மணி நேரங்கள் தள்ளி வைத்து விட்டு எங்கள் வேலையைப் பார்க்கப் போவோம். இது அவசரம் இல்லை ஆனால் முக்கியம் (Not Urgent — Important) என்ற வகையில் அடங்கும்.   மற்றவை அதாவது சில அன்றாட வேலைகள் கடைசி வகையில் அவசரமும் இல்லை — முக்கியமும் இல்லை (Not Urgent — Not Important) அடங்கும்.   இப்படி முயன்று பாருங்கள். இன்னொரு முக்கியமான விஷயம்: எந்த வேலையையும் தள்ளிப் போட்டுக் கொண்டே போகக் கூடாது. என் அம்மா இதற்கு ஒரு எடுத்துக்காட்டு சொல்வார்கள் : "நாசியால் போற சீவனைக் கோடாலி போட்டு வெட்டாதே.." என்று. அதாவது எளிதாக நேரத்தோடு செய்ய வேண்டியதைச் செய்யாமல் விட்டு விட்டால் — காலந் தாழ்த்தி செய்தோமானால் - அதற்குப் பெரிய அளவில் முயற்சி எடுக்க வேண்டி வரும். எங்கள் தொண்டு நிறுவனத்தை நிறுவிய அம்மா சொல்வார்கள் : "அன்னு செய்யாதது ஆறு மாசம் " அதாவது அன்றே முடிக்க வேண்டிய வேலையை அன்றே செய்யாமல் விட்டால் ஆறு மாதங்கள் ஆனாலும் அந்த வேலை அப்படியே பாக்கி நிற்கும். மேலே சொன்ன இந்த இரண்டு கருத்துக்களும் நேர மேலாண்மையில் (time management) மிகவும் முக்கியம் நண்பரே! இதையே தான் வள்ளுவப் பெருந்தகை கீழ்க்கண்டவாறு கூறி வைத்துள்ளார். அருவினை யென்ப உளவோ கருவியான் காலம் அறிந்து செயின். இக்குறளின் பொருள் : காலம் அறிந்து செய்தால்... செய்வது மிகவும் அரிது என்று எந்தச் செயலும் இல்லை. ஞாலம் கருதினுங் கைகூடுங் காலம் கருதி இடத்தாற் செயின். இக்குறளின் பொருள்: காலத்தைச் சரியாகக் கணக்கிட்டுக் காரியத்தில் இறங்கினால்.. உலகத்தையே வளைத்துப் போட வேண்டும் என்று நினைத்தாலும் அதைச் செய்து விடமுடியும் ! கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன் குத்தொக்க சீர்த்த இடத்து. இக்குறளின் பொருள் : தன் உணவான மீனுக்காகக் காத்திருக்கும் கொக்கு போல் தகுந்த காலத்திற்காக நாம் காத்திருக்க வேண்டும். சரியான நேரம் வந்து விட்டால் அந்தக் கொக்கு எப்படிப் பாய்ந்து ஒரே கொத்தில் மீனைப் பிடிக்கிறதோ அதுபோல் நாமும் காரியத்தை முடிக்க வேண்டும். இந்த எளியவள் பின்பற்றிய நேர மேலாண்மையைத் தங்களிடம் பகிர்ந்துள்ளேன். முயன்று பாருங்கள். நலமே வாழ நல்வாழ்த்துக்கள் அன்பு நண்பரே !                        ***************************************            வாழ்க்கை முழுவதும் சலிப்பு இல்லாமல் வாழ..   எதையும்.. எங்கேயும்.. எப்போதும்.. யாரிடமும் எதிர்பார்க்காமல் வாழத் தெரிந்தால்.. இருப்பதைக் கொண்டு சிறப்பாக.. நிம்மதியாக வாழத் தெரிந்தால்..  கடமைகளைச் செய்து விட்டுப் பலனைத் துளியும் எதிர்பாராமல் அடுத்த வேலைக்குப் போய்க் கொண்டே இருந்தால் , வாழ்க்கை முழுவதும் எந்தச் சலிப்பும் இல்லாமல் வாழ முடியும். அதற்கு நமதருமை முண்டாசுக் கவி சொன்னது போல் " திண்ணிய நெஞ்சம் வேண்டும்.. தெளிந்த நல் அறிவு வேண்டும்.." என்பதோடு சலனமற்ற நெஞ்சமும் வேண்டும். இது எனது வாழ்க்கை அனுபவம். நலமே வாழ நல்வாழ்த்துகள் அன்பு நண்பரே !                    *********************************** வீட்டில் ஒட்டடை உருவாகாமல் எப்படித் தடுப்பது ?   ஒட்டடை உருவாகாமல் இருந்தால் கண்ணுக்குத் தெரியும் மற்றும் தெரியாத சிறுசிறு பூச்சிகளால் உங்கள் வீடு அதிகமாகப் பாதிக்கப்படும்.. பரவாயில்லையா நண்பரே?   வீடு காற்றோட்டமாக இருந்தாலும் ஒட்டடை ஏற்படத்தான் செய்யும். சிலந்திப் பூச்சியின் வீடு தான் ஒட்டடை.. அந்தச் சிறு உயிரினம் தன் வீட்டில் சிறுசிறு பூச்சிகளைப் பிடித்து வைத்து நம் வீட்டைப் பாதுகாக்கிறது. தயவுசெய்து இதைப் புரிந்து கொள்ளுங்கள் நண்பரே !   உயிரியல் சுழற்சியில் ஒரு உயிர் இன்னொரு உயிருக்கு உணவு.‌ இதைத் தாங்களும் படித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். ஆனால் மனிதன் மட்டும் தான்.. மனிதன் மட்டுமே தான் உலகில் உள்ள எந்த உயிரினத்துக்கும் எதிரி…   உணவுக்காக…‌ உடைக்காக.. தலை முதல் கால் வரை அணியும் அணிகலன்களுக்காக..‌ வீட்டை அழகுபடுத்தும் அலங்காரப் பொருட்களுக்காக.. எதையும் எந்த வேளையிலும் வேட்டையாடும் ஈவிரக்கமற்ற உயிர் ! இந்த எளியவளைப் பொறுத்தவரை இறைவன் மனிதனைப் படைக்காமல் விட்டிருந்தால் " அவனுடைய " மற்ற பிள்ளைகள் இந்த உலகில் நிம்மதியாக வாழ்ந்திருக்கும் !   ஓரிரண்டு நாட்களுக்கு முன் ஒரு காணொலி பார்த்தேன் நண்பரே ! வெயில் தாளாமல் இருந்த ஒரு பொழுதில் யானை ஒன்று ஒரு குட்டிச் சிங்கத்தைத் தனது துதிக்கையில் லாவகமாய்.. பத்திரமாகத் தூக்கிக் கொண்டு போகிறது.. தாய்ச் சிங்கம் யானையில் அருகில் நடந்து போய்க் கொண்டு இருக்கிறது. இதைத்தான் நமதருமை பாரதி "உயிர்களிடத்தும் அன்பு வேண்டும்" என்று சொல்லி வைத்துப் போயுள்ளான் நண்பரே!                                                             ++++++++++++++ பெற்றோரை வீட்டில் வைத்துப் பராமரியுங்கள் இளைஞர்களே!   அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம். மாதா பிதா குரு தெய்வம் ! அவர்கள் இல்லையேல் நாம் இல்லை. இந்த அடிப்படைக் கருத்தை மனதில் கொள்ள வேண்டும்.   கருத்து வேறுபாடுகள் வரத்தான் செய்யும்.. பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும். நம் அம்மா அப்பாவிடம் தானே பேசப் போகிறோம்? என் வயது 72. நாங்கள் வளர்ந்த விதம்… சூழ்நிலை இப்போது முற்றிலும் மாறி இருக்கிறது. எங்கள் ஆச்சி தாத்தாவும் எங்கள் பெற்றோரிடம் இதையே தான் சொல்லி இருப்பார்கள். அதைத் தான் தலைமுறை இடைவெளி (Generation Gap) என்கின்றனர். இது தவிர்க்க முடியாதது.   ஆனால் தாய் தந்தை என்ற ஸ்தானத்தில் இருப்பவர்கள் எல்லாத் தலைமுறையிலும் ஒரே போல் தான் இருந்திருக்கிறார்கள்.. இருக்கிறார்கள்… இருக்கப் போகிறார்கள்…   சில விதி விலக்குகள் இருக்கலாம்… இருக்கின்றன. அதில் மாற்றுக் கருத்து இருக்க வாய்ப்பு இல்லை. ஆனால் பொதுவாக எல்லா அம்மா அப்பாவுக்கும்.. தங்களை விடத் தங்கள் பிள்ளைகள் எல்லாவகையிலும் நன்றாக இருக்க வேண்டும். அது ஒன்று தான் அவர்களுக்கு முக்கியம்… கனவு… குறிக்கோள் எல்லாம்… இதில் வசதி குறைந்தவர்கள்… வசதியானவர்கள் என்றெல்லாம் பாகுபாடு கிடையாது.   இது எங்களின் அனுபவப் பாடம்.                 ஒரு குரங்கும் முதலையும் நண்பர்களாக இருந்ததாம். முதலை உண்மையான நட்போடு இல்லை என்று குரங்குக்குப் பாவம்.. தெரியவில்லை.   ஒரு முறை " உனக்கு என்ன சாப்பிட நான் கொண்டு வர வேண்டும் " என்று குரங்கு கேட்க.. அதற்கு முதலை " உன் அம்மாவின் நெஞ்சுக் கூட்டைக் கொண்டு வா" என்று முதலை சொல்லியதாம். அந்த மட்டிக் குரங்கு தன் தாயைக் கொன்று அவள் இதயத்தைக் கொண்டு செல்லும் போது.. வழியில் தடுக்கி விழ.. அந்தத் தாயின் இதயம் சற்றே தள்ளி விழ.. தன் குழந்தை விழுந்து விட்டதைத் தாங்க முடியாமல் "மகனே ! ரொம்ப வலிக்குதா ?" என்று கேட்டதாம். எங்கள் கிராமத்துப் பாட்டி ஒருவர் பெற்றோரிடம் தேவையில்லாமல் சண்டை போடும் பிள்ளைகளிடம் இந்தக் கதையை அடிக்கடி சொல்வார். கற்பனைக் கதைதான்.. சாத்தியம் இல்லாத ஒரு நிகழ்வு கொண்ட கதை தான். ஆனால் அது சொல்லும் பாடம்?   அதேபோல் தான் தந்தையும். எத்தனை பேர் இன்றும் தனது தேவைகளை எவ்வளவு முடியுமோ அவ்வளவு குறைத்துக் கொண்டு... வங்கியில் கடன் வாங்கியாவது தங்கள் பிள்ளைகளை மேற்படிப்புப் படிக்க வைக்கின்றனர்… அதை அடைக்க over time work பார்க்கின்றனர்? யோசியுங்கள்… தாங்கள் தலை நிமிர்ந்ததும் எத்தனை பிள்ளைகள் தாய் தந்தையை மதித்து.. கவனித்துப் பேணி வருகின்றனர்?   இந்தக் காலத்தில் இதன் விழுக்காடு மிகவும் குறைவு. திருமணம் ஆனதும் மாறிப் போய் விடுபவர்கள்.. வேண்டாம் ஐயா! வேண்டாம்! மனது மிகவும் வலிக்கிறது. சில மாதங்களுக்கு முன் அமெரிக்காவில் இருந்து வந்த மகன் சொத்தை எல்லாம் எழுதி வாங்கி விட்டு தாயைச் சென்னை விமான நிலையத்தில் அம்போ என்று விட்டு விட்டுத் தான் மட்டும் விமானம் ஏறிப் பறந்து விட்ட செய்தி உங்களுக்குத் தெரியுமா?   இவ்வளவு ஆதங்கத்துடன் அதேநேரம் கடுமையாக ஏன் எழுதுகிறேன் என்றால்… நானும் என் கணவரும் 20 ஆண்டுகளுக்கு மேல் தொண்டு செய்த திக்கற்ற பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கான ஒரு நல்ல தொண்டு நிறுவனத்துடன் இணைந்த இலவச மற்றும் பணம் கட்டித் தங்கும் முதியோர் இல்லத்தில் 5 ஆண்டுகள் பொறுப்பாளராக இருந்து தொண்டு செய்தவள் இந்த எளியவள்.    ஒவ்வொருவர் பின்னாலும் ஓராயிரம் கண்ணீர்க் கதைகள். அவர்களைத் தேற்றிக் கொண்டு வருவது மிகப்பெரிய சவால் எங்களுக்கு ! அதனால் பெற்று வளர்த்து ஆளாக்கியவர்களைப் பேணிப் பாதுகாக்க வேண்டியது பிள்ளைகளின் தலையாய கடமை. " சாப்டீங்களா… தூங்குனீங்களா…‌‌‌‌‌‌‌ நா இப்ப வெளியே போறேன்.. ஏதாவது உங்களுக்கு வேணுமா " என்று கேட்டுப் பாருங்கள்… அப்படியே நீங்கள் ஏதோ கோடி ரூபாய் கொடுத்தது போல் குளிர்ந்து போய் விடுவார்கள்.   முக்கால் வாசிப் பேர் எதுவும் வேண்டாம் என்று தான் சொல்வார்கள்.. அவர்களுக்கு நீங்கள் கேட்டதே மகா பெரிய திருப்தியை.. ஆனந்தத்தைத் தந்து விடும்.   உடல் நலம் இல்லாத போது ஆறுதலாக இருங்கள்... முடிந்தவரை அவர்களுடன் சில மணித் துளிகளாவது பக்கத்தில் இருந்து பேசுங்கள்… " நான் பாத்துக்குறேன்ப்பா.. பாத்துக்குறேன்மா… " என்று வாய் விட்டுச் சொல்லுங்கள்.   எழுதினால் நிறைய எழுதலாம்.. மனமில்லை… இன்றைய உறவுகள்.. பெற்றோர் — பிள்ளைகள் உறவு கூடச் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. இந்தப் பதிவை எழுதிக் கொண்டிருக்கும் போது கூட ஒரு தம்பதி வந்து வருத்தப்பட்டு விட்டுப் போகிறார்கள். என்னாலான ஆறுதலைச் சொல்லி அனுப்பி விட்டுத் தான் மீண்டும் பதிவை எழுதுகிறேன். இந்த எளியவளின் அனுபவத்தைப் பகிர்ந்து விட்டேன். இதில் இருக்கும் ஒவ்வொரு எழுத்தும் உண்மை. இதைப் படிப்பவரை எந்த வகையிலாவது பாதித்திருந்தால் அதற்கு இன்றைய நடப்புகள் தான் காரணம்.. இந்த எளியவள் அல்லவே அல்ல. உங்கள் பெற்றோரை உங்கள் வீட்டிலேயே வைத்து.. இறுதி வரை பராமரிக்க மிகவும் பணிவோடு உங்களை வேண்டும் 72 வயது அம்மா!                                                              ++++++++++++++ வசதியாக இருந்தவர்கள் நூறிலிருந்து பூஜ்ய நிலைக்கு வந்து விட்டால் என்ன செய்ய வேண்டும்?   எங்கள் குடும்பத்திலேயே மிக நெருங்கிய உறவினர் ஒருவரால் இந்த விஷயத்தில் அதிகம் பாதிக்கப்பட்டவள் இந்த எளியவள் அன்பு நண்பரே! இந்த நிலைக்கு வந்து விட்டவர்கள் அவர்களின் ஆடம்பரச் செலவுகளை முற்றிலும் விட்டு விட வேண்டும். யாராவது இவர்களுக்கு உதவினால்.. உதவி செய்பவர்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு.. சில நேரங்களில் தங்களின் தேவைகளைக் குறைத்துக் கொண்டு கூட உதவுகிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.   கடுமையாக உழைக்கத் தயாராக இருக்க வேண்டும்.‌   வேலையோ தொழிலோ எது செய்தாலும் தனது இன்றைய நிலையை உணர்ந்து பணிவுடன் நடந்து கொள்ள வேண்டும்.   பிள்ளைகள் இருந்தால் குடும்ப நிலைமையை அவர்களுக்கும் புரியும்படி எடுத்துச் சொல்லி.. பதின்ம வயதுப் பிள்ளைகள் என்றால் அவர்களையும் சிறுசிறு வேலைகள் செய்து பணம் ஈட்டப் பழக்க வேண்டும்.   எ.கா. : அக்கம் பக்கம் தெரிந்தவர்களுக்குக் கடைக்குப் போவது.. மின் கட்டணம் மற்றும் தொலைபேசிக் கட்டணம் கட்டுவது.. பேப்பர் மற்றும் பால் பாக்கெட்டுகள் போடுவது போன்ற வேலைகளைக் குறிப்பிட்ட நேரத்தில் செய்வது போன்றவை.   நாங்கள் படிக்க உதவிய ஒரு பையன் இதுபோல் சிறுசிறு வேலைகள் செய்து தனது வீட்டிற்கு உதவிகரமாக இருந்ததைப் பார்த்த போது நாங்கள் நெகிழ்ந்து போன தருணங்கள் உண்டு.   இன்னொரு பதின்ம வயதுப் பெண் காலை நேரத்தில் கடைகளின் வாசல்களில் தண்ணீர் தெளித்து கோலம் போடத் தன் அம்மாவுடன் போய் உதவி செய்யத் தொடங்கி.. பின் அவளே மேலும் சில கடைகளை வாடிக்கையாகப் பிடித்துக் கொண்டாள்.   நன்றாகப் படிப்பாள் என்று எங்கள் வீட்டில் வேலை செய்யும் பெண் அவளைக் கூட்டி வந்து… அவள் படிப்பதற்கு உதவி செய்யச் சொன்னாள் : செய்தோம் : இன்று ஒரு தனியார் வங்கியில் வேலை செய்கிறாள்.   கவனியுங்கள்.. இந்த இரண்டு வீட்டுப் பெற்றோருமே நீங்கள் சொன்னது போல் நூறிலிருந்து பூஜ்யத்திற்கு வந்தவர்கள்.   அவர்களுடைய தந்தைகள் தங்களின் பழைய பொருளாதார நிலையை மனதில் கொள்ளாமல் முதலில் கிடைத்த வேலைகளைச் செய்து வந்தனர்.   அவர்கள் வீட்டுப் பெண்களும் கௌரவம் பார்க்காமல் கிடைத்த வேலைகளைச் செய்தனர்.   தாங்களும் சிக்கனத்தைக் கடைப்பிடித்து.. பிள்ளைகளையும் கடைப்பிடிக்க வைத்தனர்.   அதில் ஒரு குடும்பத் தலைவி பலகாரங்கள் ருசியாகச் செய்வார்.   அதையே மூலதனமாக வைத்து முதலில் அக்கம் பக்கம் உள்ளவர்களுக்குச் செய்து கொடுத்ததில் வியாபாரம் சூடு பிடிக்க.. இப்போது தள்ளுவண்டியில் காலை மாலை இரண்டு நேரமும் இதன் மூலம் வருமானம் பார்த்துத் தேறி வருகின்றனர்.   இன்னொரு குடும்பத் தலைவி தையல் தெரிந்ததனால் தனது தோழி ஒருத்தியின் கடையிலேயே வேலைக்குப் போய்க்கொண்டு இருக்கிறார்.   வரட்டுக் கௌரவம் பார்க்காமல் நேர்மையாக உழைக்கவும்.. நேர்மை தவறாமல் இருக்கவும் இவர்கள் கற்றுக் கொண்டால்.. பூஜ்யத்திலிருந்து மீண்டும் நூறுக்குப் பயணப்பட்டு விடலாம் என்பதை நான் குறிப்பிட்டுள்ள இரண்டு குடும்பங்கள் இந்த எளியவளுக்கு உணர்த்திக் கொண்டிருக்கும் உண்மை.   மனம் இருந்தால் மார்க்கம் உண்டு அன்பு நண்பரே !                                                         ++++++++++++++   அண்ணன் தம்பிகள் இருந்தும் அனாதையாக இருக்கும் மனிதர்களின் வாழ்க்கை எப்படி இருக்கும் ?   உங்களுக்கு மட்டும் இல்லை.. உலகில் கோடிக்கணக்கான பேர்களுக்கு இந்த நிலைமை இருக்கிறது.   இந்த எளியவள் அறிந்த வரை.. வாழ்க்கையின் ஓட்டத்தில்.. குடும்பமும்.. தொண்டு செய்த நிறுவனமும் கற்றுக் கொடுத்த முக்கியமான பாடம் : யாரும் உலகில் அனாதை இல்லை.   ஒரு கட்டம் வரை அனாதை என்ற சொல்லைப் பயன்படுத்திய அரசாங்கமே அந்தச் சொல்லைத் "திக்கற்ற" (destitute) என்று மாற்றி விட்டது.   " எப்படி நாங்கள் நடந்து கொண்டாலும் எங்களுக்கு நீங்கள் உதவி செய்தே ஆக வேண்டும் " என்று நினைத்த சகோதரிகள்.. அவர்கள் பேச்சைக் கேட்டு மனம் மாறிய என் அப்பா :   குடும்பக் கடமைகளை நிறைவேற்ற மட்டுமே மூத்த மகனும் மருமகளும் என்று நினைத்த புகுந்த வீடு :   இதுதான் எங்கள் குடும்பம்.   ஆனால் இறைவன் அருளிய கொடை: 20 ஆண்டுகளுக்கு மேல் திக்கற்ற பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கான ஒரு நல்ல தொண்டு நிறுவனத்தில் தொண்டு செய்ய வைத்த வாய்ப்பு.   அதுவும் ஒரு பெ…ரீ….ய குடும்பம் தான். சாதாரண குடும்பத்தில் இருக்கும் எல்லா விதமான பிரச்னைகளும் அங்கேயும் நிறைய இருக்கும்.   ஆனால் " நீயும் நானும் ஒரே இனம்.. உனக்கு நான் இருக்கிறேன்.. எனக்கு நீ இருக்கிறாய் " என்ற ஒரு பெரிய எதிர்பார்ப்பு இல்லாத அன்பு இழை ஒன்று கண்ணில் பட்டுக் கொண்டே இருக்கும் : அடிநாதமாக ஒலித்துக் கொண்டே இருக்கும் !   பத்துப் பேரால் பந்தாடப்பட்டவர்களுக்கு படைத்தவன் பல நூறு உறவுகளைக் கொடுத்தான் ஐயா!   பெற்றால் தான் பிள்ளையா என்று ஒரு வரி உண்டல்லவா ? அதுபோல் ஒரு தாய் வயிற்றில் பிறந்தால் மட்டுமே சகோதர சகோதரிகள் என்று இல்லை நண்பரே..   நம் மீது உண்மையான அன்புடன் அக்கறை காட்டி வழி காட்டும்.. துயரத்தில் தோள் கொடுக்கும் யாரானாலும் நமது அண்ணன் தம்பிகளே.. அக்கா தங்கைகளே என்ற மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளுங்கள் !   Tell me your Friend... I'll tell you who are you என்ற வரியைக் கேள்விப்பட்டு இருப்பீர்கள் என்று நினைக்கிறேன். இந்த வரியில் அப்பா அம்மா அக்கா தங்கை அண்ணன் தம்பி தாத்தா பாட்டி என்றா சொல்லி இருக்கிறது? நல்ல நண்பனைத் தான் சொல்லி இருக்கிறது!   அப்படிப்பட்ட உங்கள் நண்பர்களை நீங்கள் உங்கள் அண்ணன் தம்பியாக நினைக்கத் தொடங்குங்கள்.. அதாவது அணுகும் முறையை மாற்றுங்கள்: அனைத்தும் இனியதாகி விடும்.   உங்கள் மனக்கவலை பஞ்சாய்ப் பறந்து விடும் !                                                         ++++++++++++++ ஆறாத மனத் தழும்பு ஆற... மறக்க   மிகவும் கடினம் தான் அன்பு நண்பரே ! ஆனால் முயன்றால் முடியும் !   முற்றிலும் இல்லாவிட்டாலும் ஓரளவாவது கட்டாயம் முடியும்.   நம்மை நல்ல விஷயங்களில் நிறைய நாள்தோறும் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்!   நாலு பேருடன் மனம் விட்டுப் பேச வேண்டும்.   அப்போது நமக்குத் தெரியவரும்.. நமது கோடு மிகவும் சின்னக் கோடு என்று !   இந்த எளியவள் அப்படித்தான் பல வலிகளை.. அவை ஏற்படுத்திய ஆறாக் காயங்களை.. உள்ளுக்குள் புரையோடிப் போன புண்களைக் கடந்து வந்திருக்கிறேன் எனது வாழ்க்கையில்.   குமைந்து போனால் குறுகிப் போய் விடுவோம்!   " இதுவும் கடந்து போகும்! " என்பது வெறும் சொற்கள் அல்ல.. அது ஒரு மிகப்பெரிய சக்தி வாய்ந்த மந்திரம்!   எங்கள் கிராமத்துப் பாட்டிகள் சொல்வார்கள்: நீராத்துனாலும் ஆத்தும்: தீயாத்துனாலும் ஆத்தும் ! அதாவது நாம் குடிக்கும்.. குளிக்கும் தண்ணீர் நம்மைத் தண்மைப் படுத்தக் கூடியது. நாம் உண்ணும் உணவு நெருப்பில் வேக வைக்கப்படுவது . நெருப்பு எதையும் அழிக்க வல்லது!   அதனால் தான் நம் பெரியோர்கள் எவ்வளவு பெரிய துயரத்தையும் நாம் திடீரென எதிர் கொள்ளும் போது கூட " சரி..சரி.. குளிச்சிட்டு ஒரு வாய் சாப்பிடு.. அப்புறமா ஆக வேண்டியதைப் பார்ப்போம் " என்பார்கள்.   அந்த நீரையும் தீயையும் கொண்டு காலம் என்னும் மருத்துவன் எந்தத் தழும்பின் வலியையும் குறைத்து விடுவான்.. கவலையை விடுத்து.. உங்களுக்கு உற்சாகம் தரும் செயல்களில் ஈடுபட படிப்படியாக முயற்சி செய்யுங்கள்!                             **************************** நல்ல நண்பன்!   கவலை வேண்டாம். இன்னும் உங்களுக்கு நிறையக் காலம் இருக்கிறது. You have to Smile to get a Smile என்பது ஒரு ஆங்கிலப் பழமொழி! நல்ல நட்பு என்பது நாம் பிறருடன் பழகும்… பேசும் விதத்தில் தான் உள்ளது. சுயநலமின்றி உங்களைச் சுற்றி உள்ளவர்களிடம் பேசத் தொடங்குங்கள்.   உங்கள் அக்கம் பக்கத்தில் இருப்பவர்களைப் பார்க்கும் ஒவ்வொரு நாளும்… நேரமும் ஒரு வணக்கம் சொல்லுங்கள். இதுதான் நட்பு தொடங்க முதல் படி. சில நாட்கள் பார்க்கவில்லை என்றால்: " வணக்கம்… நல்லாருக்கீங்களா? எங்கே…நாலைந்து நாளா எங்களைப் பாக்க முடியலே.. ?" என்று ஒரு நட்புக் கரம் நீட்டுங்கள்…   “Man is a Social Animal " என்கிறார்கள் ஆங்கிலத்தில். அதாவது மற்ற உயிரினங்கள் தன்னிச்சையாக வாழ முடியும்... மனிதனால் மட்டும் முடியவே முடியாது.. அவனுக்கு ஒவ்வொரு கட்டத்திலும் சாய்வதற்கு ஒரு தோள் கட்டாயம் தேவை. யாருடையது முகமாவது வாடி இருந்தால் " ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க… சொல்லலாம் என்றால் சொல்லுங்க" என்று வலியப் பேசிப் பாருங்கள்…   உங்கள் கேள்விக்காகவே காத்திருந்தது போல் சிலர் அப்படியே கொட்டி விடுவார்கள். சிலர் தயங்குவார்கள். உங்களிடம் சொல்வோருக்கு உங்கள் மனதார ஆறுதல் சொல்லுங்கள். அங்கே நட்பு என்னும் நல்ல விதை ஒன்று நடப்படும் ...    சொல்லத் தயங்குபவர்களிடம் "வீட்டுக்கு வீடு வாசப்படிங்க.. தைரியமா இருங்க.. எல்லாம் சரியாயிடும் " என்று பொத்தாம் பொதுவாகப் பேசி விட்டு அகன்று விடுங்கள். அவர்கள் ஒரு கட்டத்தில் உங்களின் ஆறுதலான வார்த்தைகளைத் தேடி வருவார்கள். இது எங்கள் வாழ்க்கை அனுபவம் அன்பு மகனே! படிப்படியாக முயற்சி செய்து பாருங்கள்! மேம்போக்காகப் பழகுபவர்களை அடையாளம் கண்டு கொள்ளுங்கள். அவர்களிடம் ஒரு "ஹலோ " வோடு நிறுத்திக் கொள்ளுங்கள். தொடர்ந்து பழக நினைப்பவர்களின் மனப் போக்கையும் கணிக்கத் தெரிய வேண்டும்.   சிலர் தங்கள் காரியத்திற்காக மட்டுமே நம்மைத் தேடி வருவார்கள். சிலர் உங்களைச் சில நாட்கள் பார்க்கவில்லை என்றால் உங்களைக் கட்டாயம் ஏதோவொரு வகையில் தொடர்பு கொள்வார்கள்.   நமது இக்கட்டான சூழ்நிலையில் உங்களுக்குத் தோள் கொடுப்பவனும்.. நாம் தப்பு அல்லது தவறு செய்யும் போது கண்டித்துத் திருத்த முயற்சிப்பவனே உண்மையான நண்பன்!                                                                ++++++++++++   தேர்வுக்கு இன்னும் இரண்டு வாரம்.. படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை   அன்பு மகனே! கவலையை விடுங்கள்... தேர்வை நோக்கிக் கவனத்தைச் செலுத்துங்கள். நமது வணக்கத்துக்குரிய திரு. அப்துல்கலாம் ஐயா சொன்ன ஒரு விஷயம்.. உண்மையில் நடந்ததாம்.   பொருளாதார ரீதியாக வசதி குறைவான ஒரு பத்து வயதுச் சிறுவன் ஒருவரிடம் வேலை கேட்டிருக்கிறார். " ஒனக்குச் சைக்கிள் ஓட்டத் தெரியுமா… அப்படீன்னா காலையில் பேப்பர் போடுற வேல தரேன் " என்று அவர் கூறியுள்ளார். அந்தச் சிறுவன் " தெரியும் " என்று சொல்ல.. " நாளைலேருந்து வேலைக்கு வா " என்று கூறி விட்டார் வேலை தருகிறேன் என்றவர்.   அன்று இரவு சுமார் எட்டு மணி போல் நமது கலாம் ஐயா ஓரிடத்திற்குப் போய்க் கொண்டு இருந்த போது அந்தச் சிறுவன் தட்டுத் தடுமாறி.. கீழே விழுந்து… எழுந்து… குரங்கு பெடல் போட்டுச் சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொண்டிருப்பதைப் பார்க்க.. அவனைக் கூப்பிட்டு விசாரிக்க… " எனக்குக் கட்டாயம் அந்த வேலை வேணும்… எப்படியும் விடியறதுக்குள்ளக் கொஞ்சம் சைக்கிள் ஓட்டக் கத்துக்குவேன்: நாலஞ்சு நாள்ள நல்லா ஓட்டிருவேன்... " என்று தன்னம்பிக்கையுடன் சொன்னதைக் கேட்ட கலாம் ஐயா நெகிழ்ந்து போய் விட்டாராம். அவனை மனதார வாழ்த்தி இருக்கிறார் கலாம் ஐயா! (அவனுக்கு அவர் ஏதோ உதவி செய்ததாகப் படித்த நினைவு). புரிகிறதா இளைஞரே? தேவைதான் கண்டுபிடிப்புக்கு அடிப்படை… (Necessity is the mother of Invention!) உங்களுக்கு இப்போதைய தேவை உங்கள் தேர்வுகளை நன்றாக எழுதுவது மட்டுமே ! உங்கள் வாழ்க்கை உங்கள் கையில்! மறந்து விடாதீர்கள் மகனே! எதிலும் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்று நினைக்கத் தொடங்கினால்.. கண்டிப்பாக உங்கள் உடல்.. மனம் அனைத்தும் உங்களுக்கு ஒத்துழைக்கும். இதைத்தான்… " மெய் வருத்தம் பாரார்; பசி நோக்கார்; கண் துஞ்சார் எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார் - செவ்வி அருமையும் பாரார்; அவமதிப்பும் கொள்ளார் கருமமே கண்ணாயினார் " என்கிறார் வணக்கத்துக்குரிய குமரகுருபர சுவாமிகள் !   இன்னொன்றையும் உங்களிடம் சொல்ல விரும்புகிறேன்… தயவுசெய்து தப்பாக நினைத்துக் கொள்ள வேண்டாம்.. படிக்க ஆர்வம் இருந்தும் படிக்க முடியாத குழந்தைகள் இன்றும் நிறையப் பேர் இருக்கிறார்கள்.   உங்களுக்கு ஆண்டவன் படிக்கும் வாய்ப்பை அளித்திருக்கிறான். அதற்கு நன்றி சொல்லி உங்கள் கவனத்தைப் படிப்பு மற்றும் அது தொடர்பான தேர்வில் மட்டுமே கவனம் செலுத்துங்கள் ஐயா!   உங்களின் அர்ஜுன இலக்காக இப்போதைக்கு உங்கள் தேர்வு மட்டுமே இருக்கட்டும் என்று மனதார வாழ்த்துகிறாள் இந்த 72 வயது அம்மா!                                                    +++++++++++++++ திருமணம் ஆகி ஒரு வருடம்… அதற்குள் சண்டை... தற்கொலை எண்ணம்…   திருமணம் ஆகி ஒரு வருடம்.. அதற்குள் சண்டை.. தற்கொலை எண்ணம்… தப்பும்மா..ரொம்பத் தப்பு !   தயவுசெய்து தப்பாக நினைத்துக் கொள்ள வேண்டாம் மகளே.. பெற்றோர் பார்த்து நடத்தி வைத்த திருமணமா அல்லது நீங்களாகச் செய்து கொண்டதா ? எதுவானாலும் உணர்ச்சி வசப்பட்டு வார்த்தைகளைக் கொட்டாதீர்கள்...   ஜாதகத்தை அப்புறம் பாருங்கள்: முதலில் உங்கள் சண்டைக்கான காரணங்களைக் கண்டு பிடியுங்கள் மகளே !   பொதுவாக சண்டை வரக் காரணமாக இருப்பவை:   உணவு அதாவது சமையல் தெரியாமல் இருத்தல்.   விட்டுக் கொடுத்துப் போகாதிருத்தல்.   ஆடம்பரச் செலவுகள்.   கணவன் மனைவி இருவரும் ஒருவர் பெற்றோரை அடுத்தவர் மதியாமல் இருத்தல்.   நண்பர்களைக் குறை சொல்லுதல்.   குழந்தை பிறப்பு.   இன்றைய காலகட்டத்தில் பலர் planning என்று கூறிக் கொண்டு இப்போது குழந்தை வேண்டாம் என்று முடிவு செய்வதையும்…   அதற்காக இயற்கையான வழி முறையைப் பின்பற்றாமல் மாத்திரை அது இது என்று பயன்படுத்தும் போது உடல் நலம் மட்டுமல்ல.. உள நலமும் கெட்டு அடிக்கடி சண்டையில் முடிவதையும் இந்த 72 வயது முதியவள் என்னைச் சுற்றிப் பார்த்துக் கொண்டே இருக்கிறேன்.   மேற் சொன்னவற்றில் எவை எவை உங்கள் சண்டைகளுக்குக் காரணமாக இருக்கின்றன என்று யோசித்துப் பார்த்து இருவரும் மனம் விட்டுப் பேசுங்கள் : சண்டைகள் தன்னால் குறையத் தொடங்கும் மகளே !   எல்லாவற்றிற்கும் மேலாக எந்த விஷயமும் உடனே நடந்து விட வேண்டும் என்று இருவருமே நினைக்காதீர்கள்.   அமைதியாக யோசித்து நல்லதொரு முடிவுக்கு வந்து மகிழ்ச்சியாக வாழப் பிரார்த்திக்கும் அன்பு அம்மா!            ‌                                              ++++++++++++++   காலையில் முழிப்பு வந்ததும் மறுபடியும் படுத்துத் திரும்பவும் தூங்கி விடுகிறேன் என்றான் ஒரு பிள்ளை. அவனுக்குச் சொன்ன ஒரு ஆலோசனை !   முழிப்பு வந்ததும் உடனே படுக்கையை விட்டு எழுந்து விடுங்கள். ஆண்டவனுக்கு மனதார ஒரு வணக்கத்தைப் போட்டு விட்டு.. நீங்கள் முகத்தைக் கழுவிப் பல் துலக்கும் போதே மனது அன்றையப் பொழுதின் அட்டவணையை மனக் கண்ணில் காட்டி விடும்.    கூடுமானவரை இரவு நாம் தூங்கப் போகும் முன் மறுநாள் நாம் செய்ய வேண்டிய வேலைகளைத் திட்டமிட்டுக் கொண்டு (priority based) படுத்தால்.. மறுநாள் மளமளவென வேலை ஆகும் என்பது என் அனுபவம்.   நாம் படுக்கையை விட்டு எழும் அந்தச் சில நொடிகளைத் தாண்டி விட்டால் நீங்கள் சொல்வது போல் நடக்காது.   இன்னொன்று.. சில நாட்களில் உடலுக்கு அந்த ஓய்வு தேவையாக இருந்தால் நம்மை அறியாமல் மீண்டும் தூங்கி விடுகிறோம். இதுவும் சில நேரங்களில் நல்லது தான்! முயன்று பாருங்கள்! நல்வாழ்த்துகள் அன்பு நண்பரே! !                                                        +++++++++++++ நல்ல மனமே நல்ல வழிகாட்டி !   தப்பான செயல்களைச் செய்யத் தூண்டுவது தப்பான எண்ணங்கள் தானே.. அந்த எண்ணங்கள் தோன்றும் இடம் பெரும்பாலும் நமது மனது தான் அன்பு நண்பரே ! அதனால் தான் மனம் (எண்ணம்) வாக்கு (சொல்) காயம் (உடல்) மூன்றினாலும் நல்லவற்றையே நினைக்க.. செய்ய வேண்டும் என்று சொல்லி வைத்துள்ளனர் நம் முன்னோர்கள் ! அதிலும் குறிப்பாக மனதில் நல்ல எண்ணங்கள் தான் தோன்ற வேண்டும் என்கிறார்கள். ஏனென்றால் செயலுக்கு அடிப்படையே எண்ணம் தான் ! நமது வணக்கத்துக்குரிய சில பெரியவர்களின் வாக்குகளைப் பார்ப்போம் வாருங்கள்!   1." பூட்டைத் திறப்பது கையாலே **நல்ல மனம்** திறப்பது மதியாலே !  **மனதில் **உறுதி வேண்டும் ! **உள்ளத்தில் **உண்மை ஒளி உண்டாயின் வாக்கினிலே ஒளியுண்டாகும்.. **மனமெனும் **பெண்ணே! வாழி நீ கேளாய் ! ஒன்றையே பற்றி ஊசல் ஆடுவாய்.. அடுத்ததை நோக்கி அடுதடுத்து உலாவுவாய்.. நன்றையே கொள் எனில் சோர்ந்து கை நழுவுவாய் விட்டுவிடு என்றதை விடாது போய் விழுவாய்.. தொட்டதை மீள மீளவும் தொடுவாய்! " என்றெல்லாம் பேசுகிறார் நமதருமை முண்டாசுக் கவி **பாரதியார் !**   2 “வெள்ளத்தனைய மலர் நீட்டம் மாந்தர்தம்  உள்ளத்தனையது உயர்வு   “உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்… “மன நலம் “மன்னுயிர்க்கு ஆக்கம் (மனத்தின் தூய்மை உலக இனத்துக்கு எல்லாம் நன்மையும் இனிமையும் தரும்)   **மன நலத்தின் **ஆகும் மறுமை.. (நல்ல மனம் உடையாருக்கு மறுமையிலும் இன்பம் கிட்டும்)   **எண்ணிய **எண்ணியாங்கு எய்துப எண்ணியார் திண்ணியராகப் பெறின்! (ஏனெனில் எண்ணம் மனதின் குழந்தை)   **மனம் தூய்மை** செய்வினை தூய்மை இரண்டும் இனம் தூய்மை தூவா வரும்… **மனம் தூயார்க்கு** எச்சம் நன்றாகும்! (தூய மனம் உடையாருக்கு நல்ல பிள்ளைகளும் புகழும் எஞ்சும்) என்பவை **வள்ளுவப் பெருந்தகை வாக்குகள்!**   3.**. குற்றமுள்ள **நெஞ்சு **குறுகுறுக்கும் .  **மனம் **போல மாங்கல்யம்! **அகத்தின் **அழகு முகத்தில் தெரியும் இவை **தமிழ் பழமொழிகள்! **   4." உள்ளியது முடிக்கும் உரனுடை உள்ளத்து " என்கிறது புறநானூற்றுப் பாடல் **ஒன்று !  **மனம் **போன போக்கெல்லாம் போகவேண்டாம் – **உலக நீதி** " கண் போன போக்கிலே கால் போகலாமா? **கால் போன போக்கிலே மனம் போகலாமா? ** **மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா? " **என்ற பழைய திரைப்படப் பாடல் நினைவுக்கு வருகிறதா நண்பரே?   5. தம்மபதத்தில் புத்தர் சொல்கிறார்**: **மனம் அலை பாயக்கூடியது; **நிலையற்றது. அது இஷ்டப்பட்ட இடத்திற்குச் சிறகடித்துப் பறக்கும். மனதைக் கட்டுப்படுத்துவது கடினம். ஆனால் அப்படிக் கட்டுப்படுத்துவது மிகவும் நல்லது. கட்டுப்படுத்தப்பட்ட மனதானது, இன்பத்தில் உறைவிடம் ஆகும்.   6." **நினைமின் மனனே நினைமின் மனனே**  சிவபெருமானைச் செம்பொன் அம்பலவனை நினைமின் மனனே நினைமின் மனனே " என்று மனதிற்கு அறிவுரை சொல்கிறார் வணக்கத்துக்குரிய **பட்டினத்தடிகள்**   7.**சிந்தையை **அடக்கியே சும்மா இருக்கின்ற திறம் அரிது சத்தாகி என் சித்தமிசை குடி கொண்ட தேசோ மயானந்தமே " என்றும்  " காடும் கரையும் **மனக்குரங்கு **கால் விட்டோட அதன்பிறகு ஓடும் தொழிலால் பயனுளதோ ஒன்றாய்ப் பலவாய் உயிர்க்குயிராய் ஆடும் கருணைப் பரஞ்ஜோதி அருளைப் பெறுதற்கு அன்பு நிறை தேடும் பருவம் இதுகண்டீர் சேரவாரும் ஜெகத்தீரே !" என்று **மனதைக் குரங்கோடு ஒப்பிட்டும் திட்டுகிறார் வணக்கத்துக்குரிய தாயுமானவர் சுவாமிகள் இன்னொரு பாடலில்..**   8. **வாய்கொண்டு உரைத்தல்அரிது என் செய்கேன்  என்செய்கேன் வள்ளல் உன் சேவடிக்கண் மன்னாது பொன்னாசை மண்ணாசை பெண்ணாசை **வாய்ந்துழலும் எனது மனது** பேய்கொண்டு கள்உண்டு கோலினால் மொத்துண்டு பித்துண்ட வன்குரங்கோ பேசுறு குலாலனாற் சுழல்கின்ற திகிரியோ பேதைவிளை யாடுபந்தோ – இதில் **மனதை வன்குரங்கு என்று சாடுகிறார் ****வணக்கத்துக்குரிய வள்ளலார் பெருமான் அருள்வாக்கு.   9. **மனம் எனும் தோணி பற்றி, மதி எனும் கோலை ஊன்றி**  **சினம் எனும் சரக்கை ஏற்றி செறி கடல் ஓடும்போது** **மதன் எனும் பாறை தாக்கி மறியும் போது, அறிய ஒண்ணாது** **உனை உனும் உணர்வை நல்காய், ஒற்றியூர் உடைய கோவே! " என்று சிவபெருமானிடம் மன்றாடுகிறார் வணக்கத்துக்குரிய அப்பர் சுவாமிகள் தனது தேவாரப் பதிகம் ஒன்றில்! ** 10. **சிந்தா **நாஸ்தி கில – தேஷாம் சிந்தா சிந்தா நாஸ்தி கில  சமதம கருணா சம்பூர்ணாணாம் சாது சமாகம சங்கீர்ணானாம் என்கிறார் வணக்கத்துக்குரிய மகான் சதாசிவ பிரம்மேந்திரர் ஐயா அவர்கள் ! (நல்ல குணங்கள், சாதுக்களின் தொடர்புடையோருக்கு மனக்கவலை இல்லை) 11. **உத்தரேத் **ஆத்மனாத்மானம் – **பகவத் கீதை (6-5)  ஒருவன் தன் **மனதின் உதவியுடன் **தன்னை உயர்த்திக் கொள்ள வேண்டும் . 12. " உன்னையல்லால் ஒரு பெண்ணை இனி நான்  **உள்ளத்தினாலும் **தொட மாட்டேன் " என்று ஒரு பழைய திரைப்படப் பாடலில் கவிஞர் திரு. கண்ணதாசன் அவர்கள் எழுதி வைத்துள்ளார்.   இப்படி நிறைய இருக்கின்றன. எத்தனை எத்தனையோ ஞானிகள் நமக்கு எவ்வெவ் வழியில் எல்லாமோ மனதைக் கட்டுப்படுத்த அறிவுரைகள் கூறியுள்ளனர் : கூறியது மட்டுமின்றி வாழ்ந்தும் காட்டி இருக்கின்றனர். அவற்றை முடிந்த வரை பின்பற்றி மனதை ஓரளவாவது கட்டுக்குள் வைத்து நலமே வாழ முயற்சிப்போம் அன்பு நண்பரே!                ++++++++++++++++   மனச் சிதைவிலிருந்து (Depression) வெளியே வர…   வீட்டை விட்டு வெளியே வாருங்கள். சமூகம் கொடுமையானது மட்டுமல்ல.. முயன்றால் இனிமையானதாக நமது வாழ்க்கையை மாற்ற முடியும் என்கிற நம்பிக்கை பிறக்கும்..   கூலி வேலை செய்பவர் முதல் கோடீஸ்வரன் வரை பல வகைகளில் மன அழுத்தம் இருந்து கொண்டு தான் இருக்கிறது என்பது உங்களுக்குப் புரியும்.   உங்களால் ஆன உதவிகளை தேவைப் படும் உயிர்களுக்கு.. கவனியுங்கள்.. மனிதர்களுக்கு என்று நான் சொல்லவில்லை.. உயிர்களுக்கு செய்ய மெல்ல மெல்லப் பழகுங்கள்.   மனதில் ஒரு தெம்பு வரும்!   " வந்த துன்பம் எதுவென்றாலும் வாடி நின்றால் ஓடுவதில்லை.. உனக்கும் கீழே உள்ளவர் கோடி... நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு "   நமதருமை கண்ணதாசன் ஐயா அவர்களின் இந்த வரிகளை திரும்பத்திரும்ப எண்ணத்தில் உருப் போடுங்கள்.. விரைவில் நீங்கள் எல்லா வகையிலும் நலம் பெற இந்த அம்மாவின் நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துக்களும்… பிரார்த்தனைகளும் !   ‌‌                                                            ++++++++++++   கண்ணால் காண்பதும் பொய்! காதால் கேட்பதும் பொய் ! தீர விசாரிப்பதே மெய்! நானும் என் கணவரும் 20 ஆண்டுகளுக்கு மேல் திக்கற்ற பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கான ஒரு நல்ல தொண்டு நிறுவனத்தில் தொண்டு செய்தோம்.   2008 என்று நினைவு. ஒருநாள் மாலை நேரம் ஒரு கார் வந்தது. ஒரு தம்பதியர் மற்றும் இருபதுகளில் இருக்கும் ஒரு பெண் ஆகியோர் வந்தார்கள்.   விஷயம் இது தான்: பண வசதி மிக்க பெற்றோர் சம்மதம் இல்லாமல் அந்தப் பெண் ஒரு கடையில் சாதாரண வேலை பார்க்கும் பையனை கல்யாணம் செய்திருக்கிறாள். சில மாதங்களிலேயே கருத்து வேறுபாடு: இப்போது பெற்றோரைத் தேடி வந்து விட்டாள்.   " அந்தப் பையன் பணம் கேட்டு எங்கள் பெண்ணை மிரட்டுகிறான்.. எங்கள் பெண் சில மாதங்கள் இங்கு இருக்கட்டும்.. விஷயத்தின் வேகம் தணியட்டும்.. நாங்கள் கூட்டிக் கொண்டு போய் விடுகிறோம் " என்கிறார் அப்பெண்ணின் அப்பா.   எங்கள் நிறுவனத்திற்கு மனதோடு பல வருடங்களாக உதவிக் கொண்டிருக்கும் நாங்கள் மிகவும் மதிக்கும் எங்கள் donor ஒருவரின் யோசனைப்படியே இங்கு கூட்டி வந்தேன் என்கிறார்.    இந்த இடத்தில் உங்கள் கவனத்திற்கு: எங்கள் நிறுவனம் மத்திய அரசின் Ministry of Social Defense and Empowerment க்குக் கீழ் வரும் அரசு நிதி உதவி பெறும் நிறுவனம். அதனால் நாங்கள் அப்படியெல்லாம் யாரையும் சேர்த்துக் கொள்ள மாட்டோம்.    ஒன்று ஒரு பிரச்னைக்கு ஆலோசனை (counselling) கேட்க வரலாம்: கேட்டு விட்டுப் போய் விடவேண்டும்.‌ ஒரு இரவு கூடத் தங்கவும் அனுமதிக்க மாட்டோம்.   அல்லது through proper channel — அதாவது மாவட்ட ஆட்சியர் அல்லது மாவட்ட சமூக நல அலுவலர் ஆகியோரின் help line மூலம் வர வேண்டும். அப்போதுதான் அனுமதிப்போம்.   சரி… விஷயத்திற்கு வருவோம். எல்லாவற்றையும் கேட்டு விட்டு நான் மேலே சொன்ன தகவல்களை பெற்றோரிடம் விளக்கியும் அவர்கள் அவர்கள் நிலையிலேயே இருக்கிறார்கள். நேரம் தான் போகிறது.   இறுதியில் எங்கள் நிறுவனர் " சரி.. நீங்கள் இப்போது எதாவது ஒரு ஹோட்டலில் தங்கி விட்டு காலை பத்து மணிக்கு மேல்‌ வாங்க.. என்ன செய்யலாம் என்று பார்க்கலாம் " என்று சொல்லி அனுப்பி வைத்தார்.   அந்தப் பெண் முகத்தில் துளியேனும் வேதனையோ பயமோ இல்லை என்பதை அவர்களிடம் பேசிக் கொண்டிருந்த போதே நாங்கள் கவனித்து விட்டோம்.   மறுநாள் ஒன்பது மணிக்கே வந்து விட்டனர். அதற்குள் நாங்கள் எங்கள் donorஇடமும் பேசி விட்டோம். அவரோ " எனக்கு உங்கள் நிலைமை நன்றாகத் தெரிகிறது.. அவர் எனக்கு மிக நெருங்கிய நண்பர். அதனால்தான் அந்தப் பெண்ணிற்கு ஒரு நல்ல பாதுகாப்பு வேண்டி உங்களிடம் அனுப்பினேன். இப்போதைக்கு வைத்துக் கொள்ளுங்கள்.. விரைவில் இதற்கு ஒரு முடிவு எடுப்போம் "என்று ஒரு ஆதங்கத்தோடு பணிவாகச் சொன்ன போது மறுக்க முடியவில்லை.   பிறகு நாங்கள் எங்கள் வழியில் விசாரித்த போது தப்பு முழுவதும் இந்தப் பெண்ணின் மேல். பதின்ம வயது ஈர்ப்பு : பார்க்க நன்றாக இருந்த அந்தப் பையனிடம் பழகி.. திருமணம் வரை போய் விட்டாள். பெற்றோர் சொன்னதைக் கேட்கவில்லை.   " தெய்வீகக் காதல் "என்ற டயலாக் எல்லாம் வேறு : சில மாதங்கள் கூட வசதிக் குறைவான வாழ்க்கையை அவளால் வாழ முடியவில்லை.   ஆனால் பாவம்.. அந்தப் பையன் அவளை மனதார நேசித்திருக்கிறான். இவளை நன்றாக வைத்துக் கொள்ள எண்ணி ஒரு நாளைக்குப் பனிரெண்டு மணிகளுக்கு மேல் உழைத்திருக்கிறான்.   ஆனால் அந்தப் பெண்ணுக்கு அதெல்லாம் துளியும் புரியவில்லை. சண்டை போட்டு விட்டு வந்து விட்டாள் பெற்றோரிடம்..   இன்னொரு விஷயம்: அந்தப் பெண் பள்ளிக்கூடம் படிக்கும் காலத்தில் இருந்தே வேறு சில பையன்களிடமும் பழகி வந்திருக்கிறாள் என்ற ஆதாரபூர்வமான தகவல்கள் எங்களுக்குக் கிடைத்த போது நாங்கள் ஆச்சரியப்படவில்லை. ஏனெனில் அவள் வந்தது முதலே அவள் பாவனை (Body Language) எங்களுக்கு அதைக் காட்டிக் கொடுத்திருந்தது.   எங்கள் donor வார்த்தைகளுக்கு மதிப்புக் கொடுத்து ஆறு மாதங்கள் வைத்திருந்தோம். அதற்குள்ளாகவே அவளுடைய சுயரூபம் எங்களுக்கு நன்கு புரிந்து விட்டது.   நிறுவன வேலையாக எங்கள் நிறுவன ஊழியர்கள் வெளியே போகும்போது இவளையும் அனுப்பினால் அவளுடைய நடவடிக்கை சரியில்லை என்று எங்களுக்குத் தகவல்கள் வரத் தொடங்கின.   அதற்கு மேல் வைத்திருந்தால் எங்கள் பிள்ளைகள் சிலரை இவள் திசை மாற்றி விடுவாள் என்ற ஐயம் வலுப்பட்டது.   எங்கள் donor அவர்களுக்கும் நிலைமையை விளக்கி விட்டு அவள் பெற்றோர் அவளை அழைத்துக் கொண்டு போக வைத்து விட்டோம்.   இனி உங்கள் கேள்விகளுக்கு வருகிறேன்.   கண்ணால் காண்பதும் பொய்:   அந்தப் பெண்ணின் பெற்றோர் பணக்காரர்கள் தான். ஆனால் ஏகப்பட்ட கடனில் தத்தளித்துக் கொண்டு இருந்தனர்.   காதால் கேட்பதும் பொய்:   தங்கள் பெண் தானாகத் திருமணம் செய்தது உண்மைதான். ஆனால் அந்தப் பையன் எங்களிடம் பணம் வாங்கிக்கொண்டு வரும்படி வற்புறுத்திக் கொண்டே இருந்தான். (அவர்களுக்கு எங்கள் வழிகளில் அந்தப் பெண்ணைப் பற்றி நாங்கள் விசாரித்த அத்தனை விஷயங்களும் தெரிந்தே இருந்திருக்கின்றன.) ஆனால் எங்களிடம் தங்கள் பெண் ஏமாந்து விட்டது போல் ஒரு build up கொடுத்தனர்.   தீர விசாரிப்பதே மெய்:   நாங்கள் தீர விசாரித்ததில் எல்லா உண்மைகளும் கூட்டை விட்டு வெளியே வந்து விட்டன.   இதில் வருந்தத்தக்க விஷயம் என்னவென்றால்… எங்கள் donor நண்பரிடமும் இவர்கள் முழு உண்மையைச் சொல்லவில்லை. பின்னர் இது குறித்து அவர் எங்களிடம் மன்னிப்புக் கேட்காத குறையாக மிகவும் வருத்தப்பட்டார்.   பதிவின் இறுதியில் நண்பர்கள் அனைவருக்கும் இந்த 72 வயது அம்மாவின் பணிவான வேண்டுகோள் ஒன்றே ஒன்றுதான்.   உங்கள் பிள்ளைகளை அதிலும் பதின்ம வயதுப் பிள்ளைகளிடம் நாள்தோறும் இயல்பாகப் பேசுங்கள்.   " வெளியே எது நடந்தாலும் எங்களிடம் சொல்.. நாங்கள் இருக்கிறோம் உனக்குத் துணையாக" என்று அவர்கள் மனதில் ஆழமாகப் பதிய வைத்து விடுங்கள்.   ஆண் பெண் உறவு முதல் அனைத்தையும் நாசூக்காக அவர்களிடம் கோடிட்டுக் காட்டி விடுங்கள்.   என் கணவர் எங்கள் மகனின் நண்பர்களிடம் அப்படித்தான் இயல்பாகப் பேசுவார். எங்கள் அனுபவத்தில் அந்தப் பிள்ளைகளும் எங்கள் இருவரிடமும் எதுவானாலும் மனம் விட்டுப் பேசுவார்கள்.   நல்ல விஷயங்களை இளமையிலேயே பிள்ளைகள் மனதில் பதிய வைத்து விட்டால்.. அவர்கள் சூழ்நிலை காரணமாக சற்றே தடம் மாறினாலும் விரைவில் மீண்டும் ராஜபாட்டைக்கு வந்து விடுகிறார்கள் என்பது எங்கள் வாழ்க்கைப் பாடம்.   இன்னொரு விஷயம்: இன்றைய இளம் பெற்றோர்களே! நீங்கள் உங்கள் பிள்ளைகளை மட்டும் வளர்க்கவில்லை… எதிர்கால பாரதத்தை வளர்க்கிறீர்கள். தயவுசெய்து இதை மனதில் கொள்ளுங்கள்.   நான் விவரித்தது எல்லோர் கையிலும் கைபேசி இல்லாத 2008... ஆனால் இன்று 2022ல்‌ குஞ்சு குளுவான் எல்லார் விரல் நுனியிலும் உலகம் உட்கார்ந்து கொண்டு இருக்கிறது. கண்டதையும் காட்டிக் கொண்டு இருக்கிறது. கவனத்தில் கொள்ளவும்.   நல்வாழ்த்துகள் அன்பு நண்பர்களே!                           ******************************   கணியம் அறக்கட்டளை []   தொலை நோக்கு – Vision தமிழ் மொழி மற்றும் இனக்குழுக்கள் சார்ந்த மெய்நிகர்வளங்கள், கருவிகள் மற்றும் அறிவுத்தொகுதிகள், அனைவருக்கும் கட்டற்ற அணுக்கத்தில் கிடைக்கும் சூழலை உருவாக்குதல். பணி இலக்கு – Mission அறிவியல் மற்றும் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு ஒப்ப, தமிழ் மொழியின் பயன்பாடு வளர்வதை உறுதிப்படுத்துவதும், அனைத்து அறிவுத் தொகுதிகளும், வளங்களும் கட்டற்ற அணுக்கத்தில் அனைவருக்கும் கிடைக்கச்செய்தலும். எமது பணிகள் - கணியம் மின்னிதழ் - kaniyam.com  - கணிப்பொறி சார்ந்த கட்டுரைகள், காணொளிகள், மின்னூல்களை இங்கு வெளியிடுகிறோம். - கட்டற்ற தமிழ் நூல்கள் - FreeTamilEbooks.com  - இங்கு யாவரும் எங்கும் பகிரும் வகையில், கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமையில், தமிழ் மின்னூல்களை இலவசமாக, அனைத்துக் கருவிகளிலும் படிக்கும் வகையில் epub, mobi, A4 PDF, 6 inch PDF வடிவங்களில் வெளியிடுகிறோம். - தமிழுக்கான கட்டற்ற மென்பொருட்கள் உருவாக்கம் - தமிழ் ஒலியோடைகள் உருவாக்கி வெளியிடுதல் - விக்கி மூலத்தில் உள்ள மின்னூல்களை பகுதிநேர/முழு நேரப் பணியாளர்கள் மூலம் விரைந்து பிழை திருத்துதல் - OpenStreetMap.org ல் உள்ள இடம், தெரு, ஊர் பெயர்களை தமிழாக்கம் செய்தல்.   மேற்கண்ட திட்டங்கள், மென்பொருட்களை உருவாக்கி செயல்படுத்த உங்கள் அனைவரின் ஆதரவும் தேவை. உங்களால் எவ்வாறேனும் பங்களிக்க இயலும் எனில் உங்கள் விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.     வெளிப்படைத்தன்மை கணியம் அறக்கட்டளையின் செயல்கள், திட்டங்கள், மென்பொருட்கள் யாவும் அனைவருக்கும் பொதுவானதாகவும், முழுமையான வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கும். https://github.com/KaniyamFoundation/Organization/issues இந்த இணைப்பில் செயல்களையும், https://github.com/KaniyamFoundation/Organization/wiki இந்த இணைப்பில் மாத அறிக்கை, வரவு செலவு விவரங்களுடனும் காணலாம். கணியம் அறக்கட்டளையில் உருவாக்கப்படும் மென்பொருட்கள் யாவும் கட்டற்ற மென்பொருட்களாக மூல நிரலுடன், GNU GPL, Apache, BSD, MIT, Mozilla ஆகிய உரிமைகளில் ஒன்றாக வெளியிடப்படும். உருவாக்கப்படும் பிற வளங்கள், புகைப்படங்கள், ஒலிக்கோப்புகள், காணொளிகள், மின்னூல்கள், கட்டுரைகள் யாவும் யாவரும் பகிரும், பயன்படுத்தும் வகையில் கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் இருக்கும். நன்கொடை உங்கள் நன்கொடைகள் தமிழுக்கான கட்டற்ற வளங்களை உருவாக்கும் செயல்களை சிறந்த வகையில் விரைந்து செய்ய ஊக்குவிக்கும். பின்வரும் வங்கிக் கணக்கில் உங்கள் நன்கொடைகளை அனுப்பி, உடனே விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.    Kaniyam Foundation Account Number : 606 1010 100 502 79 Union Bank Of India West Tambaram, Chennai IFSC – UBIN0560618 Account Type : Current Account